Archive for the ‘ஸ்ரீ.வில்லிபாரதம்’ Category

ஸ்ரீ.வில்லிபாரதம் – முதல் பாகம் -9. காண்டவ தகனச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 16, 2023

இனிய பால் முகந்து ஒழுக்கும் ஆகுதி என இலங்கு முப்புரி நூலும்,
தனது வெஞ் சிகைக் கொழுந்து எனப் புறத்தினில் தாழ்ந்த
செஞ் சடைக் காடும்,
புனித வெண் புகை மருங்கு சுற்றியதெனப் புனைந்த
ஆடையும், ஆகி,
மனித வேதியர் வடிவுகொண்டு, அவர் எதிர், வன்னி
வானவன் வந்தான்.அக்கினிதேவன் அந்தணவடிவுகொண்டு அங்குவருதல்.

வன்னி வானவன் – அக்கினிதேவன்,- இனிய பால் முகந்து ஒழுக்கும்
ஆகுதி என – இனிமையான பாலை மொண்டெடுத்து ஆகுதியாகச் சொரியுந் தாரை
போல, இலங்கும் – விளங்குகிய, முப்புரி நூல்உம் – பூணூலையும், தனது வெம்
சிகைகொழுந்து  என – தன்னுடைய உஷ்ணமான சுவாலையின்கொழுந்து போல,
புறத்தனில் தாழ்ந்த – பின்புறத்திலே தொங்குகிற, செம் சடைகாடு உம் –
செந்நிறமானசடைத்தொகுதியையும், புனிதம் வெள்புகை மருங்கு சுற்றியது என –
பரிசுத்தமானவெண்ணிறமுள்ள புகை இடையிற் சுற்றினாற் போல, புனைந்த
ஆடைஉம் – தரித்தவஸ்திரத்தையும், ஆகி – உடையவனாய், மனித வேதியர்
வடிவு கொண்டு -மானுடமுனிவர் வடிவங்கொண்டு, அவர் எதிர் வந்தான் –
அந்தக் கிருஷ்ணன்அருச்சுனன் என்ற இருவரது எதிரிலேவந்தான்;

     அக்கினிபகவான் ஓர்இருடியின் வடிவங்கொண்டு ஸ்ரீகிருஷ்ணார்ச்சுனர்களின்
முன்னிலையில் வந்தன னென்பதாம். சந்தர்ப்பத்துக்கு ஏற்ற உவமையை
எடுத்துக்கூறிவருணித்தல் கவிசமத்காரமாதலால் அக்கினிதேவன் தரித்தவெள்ளிய
முப்புரிநூலுக்கு -அவ்வக்கினியில் மந்திரபூர்வமாகச்சொரியும் பால்தாரையையும்,
அவனது முடியிற்சிவந்து விளங்குகிற சடைக்கு – அவ்வாகுதி சொரிதலால்
மேலெழுந்துதோன்றுகிறசெந்நிறச்சுவாலையின் நுனியையும், அவன் இடையில்
உடுத்த ஆடைக்கு -அங்ஙனஞ் சொலித்தெரிகிற அக்கினியின் வெண்புகையையுமே
ஒப்பாகக் குறித்தார்;தற்குறிப்பேற்றவணி. ஓமதூமம் பரிசுத்திகர மானதால்,
‘புனிதவெண்புகை’ எனப்பட்டது. ஆகுதி – ஓமாக்கினியிற் சொரிவது. ‘சடைக்காடு’
என்றது, அடர்த்திபற்றி.வேதியர் – வேதத்தை ஓதுதலோடு ஓதுவித்தற்கும் உரியவர்.

     இதுமுதல் இருபத்தைந்துகவிகள்- முதற்சீர் மாச்சீரும் ஈற்றுச்சீர் காய்ச்சீரும்,
மற்றவை விளச்சீர்களுமாகிவந்த அறுசீராசிரிய விருத்தங்கள்

வந்த அந்தணன் வரவு கண்டு, இருவரும் வந்து, எதிர்
வணங்கி, தம்
சிந்தை அன்பொடு, வேதிகை எனத் திகழ் செம்பொனின்
தவிசு ஏற்ற,
அந்தணாளனும், குழிந்த பொற் கண்ணினன், அவி மணம்
கமழ் வாயன்,
‘உந்து வெம் பசி பெரிது; வல்லே எனக்கு ஓதனம்
இடுக!’ என்றான்.அவ்வந்தணன் தன்னைஉபசரித்த
கிருஷ்ணார்ச்சுனர்களை உணவுவேண்டல்.

வந்த அந்தணன் வரவுகண்டு – வந்த அம்முனிவனுடைய
வரவைப்பார்த்து, இருவர்உம் – (கிருஷ்ணன் அருச்சுனன் என்னும்) இரண்டுபேரும்,
எதிர் வந்து வணங்கி – எதிர்கொண்டு வந்து நமஸ்கரித்து, தம் சிந்தை அன்பொடு –
தங்கள்மனத்திற் கொண்ட அன்புடனே, வேதிகை என திகழ் செம் பொனின் தவிசு
ஏற்ற – வேதிகைபோல விளங்குகிற மாற்றுயர்ந்த பொன்னினாலாகிய ஆசனத்தில்
(அவனை) இருத்த,- குழிந்த பொன் கண்ணினன் – குழிந்துள்ள பொன் நிறமான
கண்களையுடையவனும், அவி மணம் கமழ் வாயன் – அவிசின் பரிமளம் வீசுகிற
வாயை யுடையவனுமான, அந்தணாளன்உம் – அந்த முனிவனும், (அவர்களை
நோக்கி), ‘உந்து வெம் பசி பெரிது – மேன்மேல்வளர்கிற கொடியபசி (எனக்கு)
அதிகமாயிருக்கிறது: வல்லே – விரைவாக, எனக்கு ஓதனம் இடுக –
எனக்குஉணவுதருவீராக, ‘ என்றான் – என்று வேண்டினான்; (எ-று.)

  வேதிகை – யாகம் முதலிய வைதிகச்சடங்குகளில் இடும்மேடை; இங்கு,
ஓமவேதிகையென்றபடி. வேதிகையுவமை, அவ்விடத்தின் மேன்மையையும்
தூய்மையையும் விளக்கும். பெரும்பசியில் கண்கள்குழிந்து ஆழ்ந்து நிறம்வேறுபடுதல்
இயல்பு. அவி – மந்திர பூர்வகமாக ஓமஞ்செய்யப்படும் நெய்ம்முதலியஉணவு.
‘அவிமணங்கமழ்வாயன்’ என்றது அக்கினிதேவனுக்கு உரிய அடைமொழி

கரிய மேனியர் இருவரும், ‘செய்ய பொற் காய மா முனி! உண்டற்கு
உரிய போனகம் இடுதும், இக் கணத்து’ என, உவகையோடு
உரைசெய்தார்;-
அரியஆயினும், வழங்குதற்கு ஏற்றன அல்லஆயினும்,
தம்மின்
பெரியஆயினும், அதிதிகள் கேட்டன மறுப்பரோ,
பெரியோரே?வேண்டிய உணவை அளிப்போம்’ என்று
அவ்விருவரும் உறுதிமொழி கூறல்.

(அதுகேட்டு), கரிய மேனியர் இருவர்உம் – கருநிறமுள்ள
வடிவத்தையுடையவரான கிருஷ்ணார்ச்சுனர்களிரண்டுபேரும், (அம்முனிவனை
நோக்கி), ‘செய்ய பொன் காயம் மா முனி – சிவந்த பொன்னிறமான
உடம்பையுடையமகாமுனிவனே! உண்டற்கு உரிய போனகம்- (நீ) உண்ணுதற்கு
உரியதாகும் உணவை,இ கணத்து இடுதும் – இந்தக்ஷணத்திலே தருவோம், என –
என்று, உவகையோடுஉரை செய்தார் – மனமகிழ்ச்சியோடு சொன்னார்கள்; அரிய
ஆயின்உம் – பெறுதற்குஅரியனவானாலும், வழங்குதற்கு ஏற்றன அல்ல
ஆயின்உம் – தருதற்கு இயைந்தனவல்ல வானாலும், ஏற்றன அல்ல ஆயின்உம் –
(தருகிற) தம்மைக்காட்டிலும்பெரியனவானாலும், அதிதிகள் கேட்டன – விருந்தினர்
வேண்டிய பொருள்களை, பெரியோர்-,மறுப்பர்ஓ- இல்லையென்று சொல்வரோ?

     நீ வேண்டும் உணவை வேண்டியவாறே நினக்கு இப்பொழுதே அளிப்போம்
என்று கிருஷ்ணார்ச்சுனர்கள் உறுதிமொழி கூறின ரென்ற சிறப்புப் பொருளை,
பின்னிரண்டடியிற்கூறும் பொதுப்பொருள் கொண்டுவிளங்கியதனால்,
வேற்றுப்பொருள்வைப்பணி. (பெரியோர் அதிதிகள்கேட்ட அரிய வழங்குதலை –
தான்அரிதிற் பெற்ற அமிழ்தமயமான நெல்லிக்கனியை ஒளவைக்கு ஈந்த அதிகமான்
முதலியோரிடத்தும், வழங்குதற்கேற்றனவல்லன வழங்குதலை – தூர்த்தப்பிராமண
வேடங்கொண்டுவந்த சிவபிரானுக்குத் தம் மனைவியையீந்த இயற்பகைநாயனார்
முதலியோரிடத்தும், தம்மிற்பெரிய வழங்குதலை- போர்க்களத்தில் தான்
குற்றுயிராய்க்கிடக்கும்போது முனிவடிவங் கொண்டுவந்த கண்ணபிரானுக்குத்
தனதுபுண்ணியங்களை யீந்தகர்ணன் முதலியோரிடத்துங்காண்க.) இருவரும்,
கரியமேனிய ராதலால் ‘கிருஷ்ணர்’ என்று பெயர் பெறுவர்.

‘அளித்தும்’ என்ற சொல் தன் செவிப் படுதலும்
பெற்றனன்போல் ஆகி,
‘ஒளித்து வந்தனன்; இரு பிறப்பினன் அலேன்;
உதாசனன் என் நாமம்;
களித்து வண்டு இமிர் தொடையலீர்! எனக்கு உணாக்
காண்டவம் எனும் கானம்;-
குளித்து அருந்துதற்கு இடம் கொடான்-அவ் வனம் கொண்டல்
வாகனன் காவல்.-உடனேஅவ்வந்தணன் தான் இன்னானென்று
உண்மை தெரிவித்துக் காண்டவவனத்தைத் தனக்கு
இரையாக அளிக்குமாறு வேண்டுதல்.

இதுமுதல், மூன்று கவிகள் – குளகம்.

     (இ-ள்.) அளித்தும் என்ற சொல் – ‘தருவோம்’ என்று (அவர்கள்)
சொன்னவார்த்தை, தன் செவி படுதலும் – தனது காதிற் புக்கவுடனே,
(அக்கினிதேவன்), பெற்றனன் போல் ஆகி – (தான்விரும்பிவந்தபொருளைப்)
பெற்றவன்போல் மகிழ்ச்சி கொண்டு, (அவர்களைநோக்கி),-“வண்டு களித்து இமிர்
தொடையலீர் – வண்டுகள் (மிகுதியாகத்தேனையுண்டதனாற்) களித்து
ஆரவாரிக்கப்பெற்றபூமாலையை யுடையவர்களே! ஒளித்துவந்தனன் –
(யான்என்வடிவத்தை) மறைத்துவந்தேன்; இருபிறப்பினன் அலேன் – அந்தணன்
அல்லேன்; உதாசனன் என்நாமம் – அக்கினி யென்பது எனது பெயர்; எனக்கு
உணா-எனக்கு (இப்பொழுது) உணவாகவேண்டியது, காண்டவம் எனும் கானம் –
காண்டவமென்னுங் காடாம்; அ “வனம் – அந்தக் காடு, கொண்டல் வாகனன்
காவல் -மேகங்களை வாகனமாக வுடையவனான இந்திரனது பாதுகாப்பிலுள்ளது;
குளித்துஅருந்துதற்கு இடம் கொடான் – (நான்) பிரவேசித்து உண்ணுதற்கு
(அவன்)இடங்கொடுக்கமாட்டான்; (எ-று.)- இக்கவியில் ‘ஆகி ‘ என்ற வினையெச்சம்,
மேல்  25-ஆம் கவியில்’ என்றான்’ என்ற முற்றைக் கொள்ளும்.

     நிஜவடிவத்தோடு வந்து கேட்டால், இந்திரனக்குரிய அவ்வனத்தை
யெரித்தற்குஅவ்விந்திரன்மகனான அருச்சுனனும் அவ்விந்திரனுக்குத் தம்பியாகிய
உபேந்திரனதுதிருவவதாரமான கண்ணபிரானும் அநுமதிசெய்யா ரென்னுங்
கருத்தினால், அக்கினிஒளித்துவந்து வேண்டின னென்க. மேகங்களைத் தான்
வேண்டியவாறே செலுத்துந்தன்மையனாதலால் என்மேல் மேகங்களையேவி
மழைபொழிவித்து என்னைஅவித்துவிடுவா னென்னுங் கருத்துத் தோன்ற
இந்திரனை ‘கொண்டல்வாகனன்’ என்றது கருத்துடையடைகொளியணி. வண்டுகள்
வேண்டியவாறு தேனைநிரம்பஉண்டு மகிழ்தற்கு இடமான மாலையை யுடையீ
ரென்று விளித்தது, என்போலவந்து இரப்பவர்க்கு வேண்டியவாறு உணவளிக்குந்
திறமுடையீரென்று குறித்தவாறாம்.காண்டவன் என்பது –
இந்திரன்பெயர்களுள்ஒன்றென்று சப்தார்ணவ மென்னும்வடமொழிநிகண்டிற்
கூறியிருத்தலால், காண்டவவனம் என்பதற்கு – இந்திரனதுகாடுஎன்று
பொருள்கொள்ளலாம்; அது காண்டவமென வழங்கிற்று. ‘இருபிறப்பினன் –
இரண்டுவகைப் பிறப்பை யுடையவன்; தாய்வயிற்றிற் பிறத்தலாகிய
இயற்கைச்சன்மதத்தோடு பின்பு உபநயநச் சடங்கினால்வருகிற ஞானசன்மமும் ஒரு
பிறப்பா மென்பது நூற்கொள்கையாதலால் இருபிறப்பினன் என்று பெயர்.
ஹு தாஸநன் என்ற பெயர்= ஹு தஅஸந என்று பிரிந்து, (தன்பக்கல்) ஹோமஞ்
செய்யப்பட்டபொருளை உணவாகக்கொள்பவனென்று பொருள்படும்

மிடைந்த நால் வகை மகீருகங்களும், நெடு
வெற்புஇனங்களும் துன்றி,
அடைந்த தானவர், அரக்கர், பேர் உரகருக்கு
ஆலயங்களும் ஆகி,
குடைந்து சோரி கொள் வாள் உகிர் அரி முதல்
கொடு விலங்கினம் மிக்கு,
கடைந்த கூர் எயிற்று ஆல தக்ககனும் வாழ்
கானனம் அது கண்டீர்!-அவ்வனத்தின் தன்மை.

அது – அக்காண்டவமென்பது,- மிடைந்த – நெருங்கிய, நால்வகை
மகீருங்கள்உம் – நான்குவகைப்பட்ட விருட்சவரக்கங்களும், நெடு வெற்பு
இனங்கள்உம் – பெரியமலைக் கூட்டங்களும், துன்றி – நிறைந்து, அடைந்த தானவர்
அரக்கர் பேர் உரகருக்கு ஆலயங்கள்உம் ஆகி – (தன்னிடத்தில்வந்து) சேர்ந்த
அசுரர்கள் இராக்கதர்கள் பெரிய நாகர்கள் என்னும் இவர்களுக்கு இருப்பிடங்களும்
அமையப்பெற்று, குடைந்து சோரி கொள் – அகழ்ந்து இரத்தத்தைக் கொள்ளுகிற,
வாள் உகிர் – வாட்படைபோலக் கூரிய நகங்களையுடைய, அரி முதல் கொடு
விலங்குஇனம் – சிங்கங்கள் முதலான கொடிய மிருகசாதிகள், மிக்கு – மிகுந்து,
கடைந்த கூர்எயிறு ஆலம் தக்ககன்உம் வாழ் – கடைந்தாற்போன்ற கூரிய பற்களில்
விஷத்தையுடைய தக்ஷக னென்னும் மகாநாகமும் வசிக்கிற. கானனம் – காடாகும்;
கண்டீர் -அறிவீரன்றோ? (எ-று.)

     கண்டீர்என்ற முன்னிலைப்பன்மை முற்று, இடைச்சொல் தன்மைப் பட்டு,
முன்னிலையசையாகியும் தேற்றப்பொருள்தந்தும் நிற்கும். நால்வகை மகீருகங்கள் –
மரம், கொடி, செடி, புல் என்பன; வித்து வேர் கிழங்கு கொடிகளில்தோன்றுவன
என்பாரு முளர்; மற்றுஞ் சிலவகையாகவும் உரைக்கலாம். மஹீருஹம் – மஹீ –
பூமியில், ருஹம் – முளைப்பது. தக்ஷகன் – அஷ்டமகாநாகங்களுள்
ஒன்று;(அவையாவன – அநந்தன், கார்க்கோடகன், குளிகன், சங்கபாலன், தக்ஷகன்,
பதுமன், மகாபதுமன், வாசுகிஎன்பன.) சொரிவது சோரி எனக் காரணக்குறி

புகுந்து யான் முகம் வைக்கின், ஏழ் புயலையும்
ஏவி, அப் புருகூதன்
தொகும் தராதல இறுதிபோல் நெடும் புனல் சொரிந்து
அவித்திடும் என்னை;
முகுந்தன் ஆநிரை புரந்தவாறென ஒரு முனைபட
விலக்கின் பின்,
மிகுந்த தாகமும் எண்ணமும் முடிந்திடும்; வேண்டுவது
இது’ என்றான்.இந்திரன்செய்யும் இடையூற்றுக்கு இடையூறுசெய்ய வேண்டுமென்று
அக்கினிதேவன் தன்வேண்டுகோளைத் தெரிவித்தல்.

யான் புகுந்து முகம் வைக்கின் – நான் பிரவேசித்து (அவ்வனத்தை
உண்ண) வாய்வைத்தால், அ புருகூதன் – அவ்வனத்தைக் காவல்செய்பவனான
இந்திரன், ஏழ் புயலைஉம் ஏவி-. ஏழுமேகங்களையும் அனுப்பி, (அவற்றைக்
கொண்டு), தொகும் தராதலம் இறுதிபோல் நெடு புனல் சொரிந்து – நெருங்கிய
உலக முடிவுகாலத்திற்போல மிக்கமழைநீரை (என்மேற்) சொரிந்து, என்னை
அவித்திடும் – என்னைத் தணித்துவிடுவான்; முகுந்தன்ஆன் நிரை புரந்த ஆறு
என – கண்ணபிரான் (கோவர்த்தனமென்னும்) மலையையெடுத்துக் குடையாகப்பிடித்து
மழையைத்தடுத்துப்) பசுக்கூட்டங்களைப் பாதுகாத்தருளியவிதம்போல, ஒருமுனை
பட விலக்கிற்பின் – ஒருமுகமாக (அம்மழையைத்) தடுத்துவிடுவதானால், மிகுந்த
தாகம்உம் எண்ணம்உம் முடிந்திடும் – அதிகமான (எனது) ஆசையும் கருத்தும்
நிறைவேறும்: வேண்டுவது இது – (யான்) வேண்டுவது இதுவே,” என்றான் – என்று
சொன்னான், (அக்கினி தேவன்); (எ-று.)

     முகம் – வாய். புருஹூதனென்பது – புருஹூதன் என்று பிரிந்து,
(யாகங்களில்)மிகுதியாக அழைக்கப்படுபவனென்றும், புருவென்னும் அசுரனைக்
கொன்றவனென்றும்பொருள்படும். சொரிந்த – சொரிவித்து எனப்
பிறவினைப்பொருளில் வந்த தன்வினை.தாகம் என்பது – இங்கு இலக்கணையாய்ப்
பசியென்னும் பொருளில் வந்ததெனினுமாம்.

     சுவேதகி யென்ற பிரசித்தனாய்ச் சிறந்த அரசன் எப்போதும் யாகங்கள்
செய்தலிலேயே விருப்பமுடையவனாய் அநேகயாகங்கள் செய்துமுடித்து
மேலும்மேலும் இடைவிடாது யாகஞ்செய்யத் தொடங்குகையில், உடனிருந்து
யாகத்தைநடத்துபவரான இருத்துவிக்குகள் புகையினால் மிகக்கலங்கிய
கண்களையுடையராய்மிகவருந்தி ‘இனி எம்மாலாகாது’ என்று அவ்வரசனைக் கை
விட்டனர். அரசன்எவ்வளவுவேண்டியும் கண்கலங்கிய அவர்கள் வாராராகவே
அவர்களநுமதிபெற்றுவேறு இருத்துவிக்குகளை உதவிகொண்டு தொடங்கிய
வேள்வியை முடித்தனன். பின்புஒரு கால் அவன் நூறு வருஷகாலஞ்
செய்யத்தக்கதொரு பெருயாகத்தைப் புரியவிரும்ப, அவனுக்கு இருத்து
விக்குகளெவருந் துணை வந்திலர். அம்மன்னவன்சாமமுந்தானமுமாகிய
உபாயங்களால் மிகமுயன்று பார்த்தும் துணை வராத அந்தஇருத்துவிக்குகளை
நோக்கி ‘என்மேல் யாதொரு குற்றமும் இல்லாமலிருக்கையில்என்னை நீங்கள்
கைவிடுதல் முறைமையன்றே. நீங்கள் என்னைக் கைவிட்டால்யான்வேள்வி
செய்வித்தற் பொருட்டு வேறு இருத்துவிக்குகளைத் துணைக்கொள்வேன்’
என்று கோபத்தோடு கூறியதற்கு அவர்கள் ‘வேள்வி செய்வித்துச்செய்வித்து
வலியொடுங்கி மிக இளைத்த எங்களை நீ விட்டிடு; நீ விரைவில் வேள்விசெய்ய
வேண்டுவையாயின் சிவபிரான்பக்கற் செல்: அப்பெருமான் உன்னை வேட்பிப்பன்’
என்று சொல்லினர். இங்ஙனம் மறுத்துச் சொன்ன சொற்கேட்ட வேந்தன் உடனே
கைலாசபருவதத்தை யடைந்து கடுந்தவம் புரிய, அதற்கு இரங்கித் தரிசனந்தந்த
சங்கரபகவான் ‘யாது வரம் வேண்டுதி? என்ன, அவ்விராசரிஷி என்னைநீ
வேட்பித்தருளவேண்டும்’ என்றான். அதுகேட்டருத்திரமூர்த்தி, புன்சிரிப்போடு
‘யான்அதற்கு உரியனல்லேன்; நீ செய்த நற்பெருந்தவமும் பழுதுபடலாகாது; நான்
சொல்லுகிறபடி செய்வையாயின், பின்பு உன்னை வேட்பிப்பேன்:
பன்னிரண்டுவருஷகாலம் இடைவிடாமல் அக்கினியை நெய்த்தாரைகளால் திருப்தி
செய்வையாயின், நின்கருத்தை நிறைவேற்றுவேன்’ என்றுசொல்ல, சுவேதகிராசன்
அவ்வாறே செய்து முடித்துப் பன்னிரண்டு வருஷங்கடந்தவுடனே மீண்டுஞ்
சிவபெருமானையடைந்து வேள்வி செய்வித்தற்கு அழைக்க, அக்கடவுள் ‘அது
அந்தணர் தொழில்; ஆதலால், அதனை நான் செய்யமாட்டேன்: எனது அம்சமான
துருவாசமகாமுனிவன் உன்னைவேட்பிப்பன்’ என்று சொல்லி, அரசனை வேள்விக்கு
வேண்டிய உபகரணங்களைச்சேர்க்கச் சொல்லி,அவற்றை அவன் சேர்த்தவுடனே
துருவாசமுனிவனை யழைத்து ‘இவனை நீவேட்பிப்பாய்’ என்றுகட்டளையிட,
அவ்வாறே அம்முனிவன் வந்து உதவியதனால் அப்பெருவேள்வி ஒருகுறைவுமின்றி
நிறைவேறிற்று; இங்ஙனம் நெடுநாள் மிக்க நெய்ம்முதலியவற்றை யுண்டதனால்
அக்கினிதேவன் நோயடைந்து ஒளி மழுங்கி வாட்டமுற்று வலியொடுங்கிப்
பிரமனையடைந்து ‘என்னை நோய் தவிர்த்தருளுக’ என்று வேண்ட படைத்தற்கடவுள்
பன்னீராண்டு இடைவிடாது நெய்பருகியதனால் நினக்கு நேர்ந்த வாட்டம்
ஒழிந்திடும்; அசுரர்கட்கு இருப்பிடமான காண்டவமென்னும்வனத்தை முன்பு ஒருகால்
தேவர்கள் கட்டளையால் நீ எரித்தனையன்றோ? பின்பு அதில் பலவகைப்பிராணிகள்
வசித்துவருகின்றன; நீ சென்றுஅக்காட்டை மீண்டும் எரிப்பையாயின்,
அப்பிராணிகளின் உடற்கொழுப்பினால்திருப்தனாகி நோய்நீங்கி முந்தின
நிலையையடைவாய்’ என்று அருளிச்செய்ய, உடனேதீக்கடவுள்வெகு வேகத்தோடு
ஓடி அவ்வனத்தைப்பற்றி யெரிக்கத்தொடங்க,அங்கிருந்த யானை முதலிய
பிராணிகளெல்லாம் மிகமுயன்று துதிக்கை முதலியவற்றால்விரைவாக நீர்கொணர்ந்து
சொரிந்து நெருப்பை நனைத்து அவித்திட்டன. இவ்வாறேஒருமுறைபோல ஏழுமுறை
முயன்றும் அவ்வனத்தை யெரிக்கமாட்டாமற்போன பின்புஅக்கினிபகவான் மீண்டும்
பிரமனை யடைந்து செய்திகூற, அப்பிரமன் சிறிதுபொழுதுஆலோசித்து
‘நரநாராயணர்களின் அவதாரமான கிருஷ்ணார்ச்சுனர்கள்காண்டவவனத்தினருகில்
ஒருங்கு கூடியுள்ளார்: நீ சென்று வேண்டிஅவர்களுதவியைப் பெற்றால் –
அவ்வனத்தைத் தவறாமலெரித்திடலாம்’ என்றுசொல்ல, அங்ஙனமே அக்கினி
அவர்களை யடுத்துத் தந்திரமாகத் தன் கருத்தைத்சொல்லிக் காரியத்தை முடித்துக்
கொள்ளலானான் என்று முதனூலிற்கூறப்பட்டவரலாறு உணரத்தக்கது.

என்ற போதில், ‘உன் இச்சையின்படி உணா ஈந்தனம்,
இமைப் போழ்தில்;
சென்று கொள்க!’ எனத் தனஞ்சயன் கூறலும், சிந்தை
கூர் மகிழ்வு எய்தி,
மன்றல் அம் துழாய் மாயவன் அருளினால், வடிக்
கணை மாளாமல்
துன்று தூணியும், சாபமும், இரதமும், சுவேத
வாசியும், ஈந்தான்.‘நீ வேண்டியபடிகொள்க’ என்று அநுமதிதந்த
அருச்சுனனுக்கு அக்கினிதேவன் கண்ணனருளால்
வில்முதலியன அளித்தல்.

என்ற போதில் – என்று (அக்கினிதேவன்) சொன்ன பொழுதில்,-
தனஞ்சயன் – அருச்சுனன், ‘உன் இச்சையின்படி உணா ஈந்தனம் – உனது
விருப்பத்தின்படி உணவை அளித்தோம்; இமை போழ்தில் சென்று கொள்க –
ஒருமாத்திரைப்பொழுதிலே (நீ) போய் (அவ்வனத்தை)க் கைக்கொள்வாயாக’, என
கூறலும் – என்று சொன்னவுடனே,- (அவ்வக்கினிபகவான்), சிந்தை கூர் மகிழ்வு
எய்தி- மனத்தில் மிக்க மகிழ்ச்சியையடைந்து,- மன்றல் அம் துழாய் மாயவன்
அருளினால்- நறுமணமுள்ள அழகிய திருத்துழாய்மாலையையணிந்த
கண்ணபிரானதுஅருளினால்,- வடிகணை மாளாமல் துன்று தூணிஉம் –
கூர்மையான அம்புகள்எடுக்க எடுக்கக் குறையாமல் நிறைகிற (இரண்டு)
அம்பறாத்தூணிகளையும், சாபம்உம் -வில்லையும், இரதம்உம் – தேரையும்,
சுவேதவாசிஉம் – (நான்கு)வெள்ளைக்குதிரைகளையும், ஈந்தான் –
(அருச்சுனனுக்குக்) கொடுத்தருளினான்;(எ-று.)

      ‘உன் இச்சையின்படி உணாவீந்தனம்’ என்று அருச்சுனன் வாக்குத்தத்தஞ்
செய்யவே அருச்சுனனது தவறாத வாய்மையையும் துணிவையும் நோக்கியதனாலான
வியப்பினாலும், இனித் தனது எண்ணம் முடிந்ததென்று நிச்சயத்தினாலும், அக்கினி
தேவன் மிக மகிழ்ந்து, அவன் விருப்பின்படி வில்முதலியவற்றை அன்போடு
தருபவனானான். ஸ்ரீகிருஷ்ணன் தூண்ட, அருச்சுனன் அக்கினிபகவானிடத்துக்
காண்டீவம் முதலியவற்றைக் கேட்டு அவன் தரப்பெற்று அடைந்தனனென்பது
தோன்ற, ‘மாயவனருளால் வடிக்கணை மாளாமல் நின்று தூணியும்சாபமும் ***
வாசியுமீந்தான் என்றது. கணைமாளாமல் துன்று தூணி – அக்ஷய தூணீரம்.
இங்குக்குறித்த வில், காண்டீவமென்னும் பெயருள்ளது. சுவேதவாசி –
சாதியொருமை;அடுத்தகவியில் ஈரரிரண்டிவுளி ‘என வருதல் காண்க. அக்கவியில்
‘ஈந்தவானரப்பதாகை நட்டு’ எனக் கூறுதலால், குரங்குவடிவமெழுதிய துவசத்தையும்
உடன் கொடுத்தன னென்பது விளங்கும், கண்ணபிரானை உளப்படுத்தி ‘ஈந்தனம்’
என்றான். தெளிவுபற்றி எதிர்காலம் இறந்தகாலமாயிற்று; காலவழுவமைதி

ஈந்த வானரப் பதாகை நட்டு, ஈர்-இரண்டு இவுளியும்
உடன் பூட்டி,
ஆய்ந்த வன் தொழில் பாகனும் அருணனில்
அழகுறும்படி தூண்ட,
காய்ந்த சாயக நாழிகை கட்டி, அக் காண்டிவம்
கரத்து ஏந்தி,
வேய்ந்த மாமணிக் கவசமும் அருக்கனில் அழகுற
மேற்கொண்டான்.அருச்சுனன் போர்க்கோலங்கொண்டு தேரேறுதல்.

ஆய்ந்த – ஆராய்ந்தறிந்த, வல் தொழில் -(போருக்கு ஏற்ற) வலிய
(குதிரைத்) தொழிலையுடைய, பாகன்உம் – தேர்ப்பாகனும், ஈந்த வானரம் பதாகை
நட்டு – (அக்கினிதேவன்) கொடுத்த குரங்குக்கொடியை நாட்டி, ஈர் இரண்டு
இவுளிஉம் உடன் பூட்டி – நான்கு (வெள்ளைக்) குதிரைகளையும் ஒருங்கு (தேரிற்)
பூட்டி, அருணனில் அழகு உறும்படி தூண்ட – (சூரியனது தேர்ப்பாகனான)
அருணன்போல அழகுமிகும்படி தேர்செலுத்த,- (அருச்சுனனும்), காய்ந்த சாயகம்
நாழிகை கட்டி – (பகைவர்களைக்) கொல்லுகிற அம்புகளையுடைய தூணிகளை
(இரண்டு தோட்புறத்திலுங்) கட்டிக் கொண்டு, அ காண்டிவம் கரத்து ஏந்தி- அந்தக்
காண்டீவ மென்னும் வில்லைக் கையிலெடுத்துக்கொண்டு, வேய்ந்த மா மணிகவசம்
உம் (ஏந்தி)- இழைத்த சிறந்த இரத்தினங்களையுடைய கவசத்தையுந் தரித்துக்
கொண்டு, அருக்கனில் அழகுஉற மேற்கொண்டான் – சூரியன்போல அழகுமிகும்படி
அத்தேரின்மேல் ஏறினான்; (எ-று.)

     அருச்சுனனுக்கு – சூரியனையும், அவன் தேர்ப்பாகனுக்கு – அருணனையும்
உவமைகூறினார். அருச்சுனன் வலக்கையினால்மாத்திரமின்றி இடக்கையினாலும்
அம்புதொடுக்குந் திறமுடையனாய்ச் சவ்வியசாசியென்று பேர்பெற்றவ னாதலால்,
அதற்கு ஏற்ப இரு புறத்தும் இரண்டு அம்பறாத்தூணிகளைக் கட்டிக்கொண்டன
னென்க: இரண்டு அக்ஷயதூணீரங்களைத் தந்தனனென்றுமுதனூலாசிரியர்
வெளிப்படையாக் கூறியுள்ளார்.

நெஞ்சில் மேலிடும் ஊக்கமோடு, அணி திகழ் நெடும்
புயம் பூரித்து,
சிஞ்சினீமுகம் தெறித்தனன்; தெறித்தலும், தெறித்த
பேர் ஒலி, கானின்
விஞ்சி வாழ்வன சத்துவம் அடங்க, உள் வெருவுற,
உகாந்தத்து
மஞ்சின் நீடு உரும் ஒலி எனப் பரந்தது, வான்
முகடுற மன்னோ!-அருச்சுனன் நாணியைக் கைவிரலால் தெறித்து ஒலியெழுப்புதல்.

(அருச்சுனன்), நெஞ்சில் மேலிடும் ஊக்கமோடு – மனத்தில்
அதிகப்படுகிற உற்சாகத்துடனே, அணி திகழ் நெடு புயம் பூரித்து –
அழகுவிளங்குகின்ற நெடிய தோள்கள் (அவ்வுற்சாகத்தாற்) பூரிக்கப் பெற்றவனாய்,
சிஞ்சினீமுகம் தெறித்தனன் – (தான் கைக்கொண்ட வில்லினது) நாணியினிடத்தை
(க்கைவிரலால்) தெறித்தான்; தெறித்தலும் – அங்ஙனம்தெறித்தவுடனே, தெறித்த –
(அதனினின்று) வெளிப்பட்ட, பேர்ஒலி – மிக்க  ஒலியானது,- கானின் –
அக்காண்டவவனத்தில், விஞ்சி வாழ்வன – மிகுதியாக வாழ்வனவாகிய, சத்துவம்
அடங்க – பிராணிகளெல்லாம், உள்வெருவுற – மனமஞ்சும்படி, உக அந்தத்து
மஞ்சின்நீடு உரும் ஒலி என – யுக முடிவு காலத்திற் பெருமழை சொரிகிற
மேகத்தினின்றுமிகுதியாக உண்டாகிற இடியினது ஓசைபோல, வான் முகடு உற –
மேலுள்ளஆகாயமுகட்டையளாவ, பரந்தது – பரவிற்று; (எ-று.)-மன், ஓ –
ஈற்றசைகள்.

     அருச்சுனன் வில்நாணியைத் தெறித்த ஒலியானது காட்டு மிருகங்களெல்லாம்
அஞ்சியோட யுகாந்தகாலத்து மேகத்தினிடிபோல வானமுகட்டை யளாவியதென்க.
சிஞ்சினீமுகம் – நாணியினிடம். வாழ் வன சத்துவம் என்றும் பிரிக்கலாம்

ஆழிவாய் ஒரு வடவையின் முகத்திடை
அவதரித்தனன் என்ன,
ஊழிவாய் உலகு அனைத்தையும் உருக்குமாறு
உடன்று எழுந்தனன் என்ன,
‘வாழி, வாழி!’ என்று அருச்சுனன் கரத்தையும் வார்
சிலையையும் வாழ்த்தி,
பாழி மேனியை வளர்த்தனன், பாவகன்; பவனனும்
பாங்கானான்.-அக்கினி வளர்ந்து அவ்வனத்தை யெரிக்கத்
தொடங்குதல்.

பாவகன்- அக்கினிதேவன்,- ஆழிவாய் – கடலில், ஒரு வடவையின்
முகத்திடை – ஒரு பெண்குதிரையின் முகத்தில், அவதரித்தனன் என்ன – பிறந்தவன்
போலவும்,- ஊழிவாய் – ஊழிக்காலத்தில், உலகு அனைத்தைஉம் முருக்கும் ஆறு –
உலகங்களை யெல்லாம் அழிக்கும்படி, உடன்று எழுந்தனன் என்ன –
உக்கிரங்கொண்டு எழுந்தவன்போலவும்,- அருச்சுனன் கரத்தைஉம்
வார்சிலையைஉம்வாழி வாழி என்று வாழ்த்தி – அருச்சுனனது கையையும்
(அக்கையிலுள்ள) நீண்டவில்லையும் ‘வாழ்க வாழ்க’ என்று வாழ்த்திக்கொண்டே,
பாழி மேனியை வளர்த்தனன்- வலிமையையுடைய (தன்) உடம்பை வளரச்செய்தான்;
பவனன்உம் பாங்கு ஆனான்- (அவள்வளர்ந்து தொழில்செய்தற்கு) வாயுவும்
உதவியாய் நின்றான்; (எ-று.)

     படபாமுகாக்கினி போலவும் ஊழித்தீப்போலவும் அக்கினிதேவன் அப்பொழுது
வளர்ந்தெழுந்தனன்: அவனுக்கு அநுகூலமாகக் காற்றும் அமைந்து உதவுவததாயிற்று
என்பதாம். கடலிடையிலுள்ளதொரு பெண்குதிரையின் முகத்தில் ஒரு பெருந்தீ
யமைந்துள்ளதென்றும், அது கடல்நீரை மழைமுதலியவற்றால் மிகாதபடி
உறிஞ்சிநிற்பதென்றும், அத்தீக் கற்பாந்தகாலத்து மேலெழுந்து வெளிப்பட்டு
உலகங்களையெரிப்பதென்றும் நூற்கொள்கை. 

மூள மூள, வெம் பசியொடும் சினத்தொடும் முடுகி,
வெய்துற ஓடி,
வாளமாக ஒர் பவள மால் வரை நெடு வாரியை
வளைந்தென்ன,
காள மா முகில் ஊர்தி நந்தனம் நிகர் காண்டவம்தனை,
அண்ட
கோளமீது எழ வளைந்தனன், வரை படி கொண்டலும்
குடர் தீய.-அக்கினி அவ்வனத்தை வளைத்துக்கொள்ளுதல்.

ஒர் பவளம் மால் வரை – பவழமயமானதொரு பெரிய மலை, நெடு
வாரியை வாளம் ஆக வளைத்து என்ன – பெரிய கடலை வட்டமாக வளைந்து
சூழ்ந்தாற்போல, (அக்கினியானவன்), மூளமூள வெம் பசியொடுஉம் சினத்தொடுஉம்
முடுகி வெய்து உற ஓடி – கொடிய பசியும் கோபமும் மேன்மேல் அதிகப்பட
அவற்றுடனே விரைவாக (க் காண்பார்க்கு) அச்சம்மிகும்படி ஓடி, காளம் மா முகில்
ஊர்தி நந்தனம் நிகர் காண்டவந்தனை- கரிய பெரிய மேகங்களை
வாகனமாகவுடையவனான இந்திரனது நந்தவனத்தை யொத்த காண்டவ வனத்தை,
வரை படி கொண்டல்உம் குடர் தீய – (அதிலுள்ள) மலைகளிற் படிந்துகிடக்கிற
மேகங்களும் குடல்கருகும்படி, அண்ட கோளம் மீது எழ வளைந்தனன் –
அண்டகோளத்துக்கும் மேலே உயர்வாக வளைந்துகொண்டான்; (எ-று.)

     நந்தனம் – சுவர்க்கலோகத்திலுள்ள இந்திரனதுபூந்தோட்டம் சினம்
மேன்மேல்மூளுதற்குக் காரணம், முன்புபலமுறை அவ்வனத்தை அக்கினிதேவன்
தான்எரிக்கத்தொடங்கியபொழுது அதிலுள்ள பிராணிகள் எதிர்த்து மாறுசெய்து
தன்னையடக்கிவிட்டமை. கரிய பெரிய கட்டைப் பெரிதாயெழுந்த சிவந்த நெருப்பு
வளைதற்கு,கடலைப் பவழமலை வளைதல் ஒப்பாக் குறிக்கப்பட்டது

ஆன ஆகுலம்தன்னொடு தப்புதற்கு அணிபடப்
பறந்து ஓங்கும்
தூ நிறத்தன கபோதம் ஒத்தன, இடை இடை
எழும் சுடர்த் தூமம்;
கான மேதியும், கரடியும், ஏனமும், கட கரிக்
குலம்தாமும்,
வானில் ஏறுவ போன்றன, நிரை நிரை வளர்தரு
கருந் தூமம்.-இதுவும், அடுத்த கவியும் – அக்கினியின் பலநிறப் புகைகளின்
வருணனை. 

இடை இடை எழும் – இடையிடையே மேலெழுகிற, சுடர் தூரம் –
சிறிதுஒளியோடுகூடிய [வெள்ளிய] புகைகள்,- ஆன ஆகுலம்தன்னொடு –
(தீப்பற்றியதனால் தமக்கு) உண்டான வருத்தத்துடனே, தப்புதற்கு – (அதனினின்று)
தப்பிப்பிழைத்தற் பொருட்டு, அணிபட பறந்து ஓங்கும் – வரிசையாகப் பறந்துயர்ந்து
மேலெழுகிற, தூ நிறத்தன கபோதம் – சுத்தமான நிறத்தையுடையனவாகிய
புறாக்களை,ஒத்தன – போன்றன; நிரை நிரை வளர்தரு – வரிசைவரிசையாக
மேலெழுகிற, கருந்தூமம் – கருநிறமான புகைகள்,- வானில் ஏறுவ – (சுற்றிலும்
வளைந்துகொண்டஅந்நெருப்பினின்று தப்புதற்கு) மேலெழுவனவான, கானம்
மேதிஉம் -காட்டெருமைகளையும், கரடிஉம் – கரடிகளையும், ஏனம்உம் –
பன்றிகளையும், கடகரி குலம்உம் – மதயானைக்கூட்டங்களையும், போன்றன-;

     வெண்புகை கபோதத்தை யொத்திருக்க, கருந்தூமங்கள் வானிலேறுங்
கானமேதிமுதலியனபோலுமென்றார்: தற்குறிப்பேற்றவணி. ஆகுலந்தன்னொடு என்பதில், ‘ஒடு’ – அடைமொழிப்பொருளது.

வரைத் தடம்தொறும் கதுவிய கடுங் கனல் மண்டலின்,
அகல் வானில்
நிரைத்து எழுந்த செம் மரகத கனக வாள் நீல
வெண் நிறத் தூமம்,
தரைத் தலத்தினின்று அண்டகோளகை உறச் சதமகன்
தடஞ் சாபம்,
உரைத்த தன் வளைவு அற நிமிர்ந்து, அழகுற
ஓடுகின்றது போலும்.

வரை தடம் தொறுஉம் – மலைகளி னிடந்தோறும், கதுவிய
கடுங்கனல் மண்டலின் – பற்றிய கொடிய அக்கினி நெருங்குதலினால், அகல்
வானில்நிரைத்து எழுந்த – அகன்ற ஆகாயத்தில் வரிசையாக எழுந்த, செம்
மரகதம் கனகம்வாள் நீலம் வெள் நிறம் தூமம் – செம்மை பசுமை பொன்மை
கருமை வெண்மையென்னும் ஐவகை நிறங்களையுடைய புகையானது,- தட சதமகன்
சாபம் – பெரியஇந்திரதனுசு. உரைத்த தன் வளைவு அற நிமிர்ந்து –
(பிரசித்தமாகச்) சொல்லப்படுகிறதனது வளைவு நீங்க நிமிர்ந்து, தரைத்தலத்தினின்று
அண்டகோளகை உற -பூமியினிடத்தினின்று அண்டகோளத்தின் மேன்முகட்டை
யளாவ, அழகு உறஓடுகின்றது – அழகுமிக நீண்டுசெல்வதை, போலும் – ஒக்கும்;
(எ-று.)

     மலைகளிலுள்ள பலவகைப்பொருள்களை நெருப்பு எரிக்கும் போது,
அவ்வெரிக்கப்படும்பொருளுக்குஏற்பப் புகையின்நிறம் மாறுபடுதல், , இயல்பு.
இங்ஙனம்பலவர்ணங்களையுங் கொண்டு விரவப்பெற்றதான இந்திரவில்லை
உவமைகூறுவர், புகையின்நேரெழுச்சிக்கு ஒப்பாதற்பொருட்டு, ‘வளைவற நிமிர்ந்து
தரைத் தலத்தினின்றுஅண்டகோளகையுற ஓடுகின்றது போலும்’ என்றார். செம் –
செம்மையென்னும் பண்பினடி. மரகதம், நீலம் – அவற்றின் நிறத்துக்கு,
இலக்கணை.      

கருதி, ‘ஆயிர கோடி வெம் புயங்கம் இக் கானிடை
உள’ என்று,
பருதி சூழ்வர வெருவு பல் குவடுடைப் பருப்பதங்களின்
சாரல்,
சுருதி வேள்வி நூறு உடையவன் சிறகு அறத் துணித்த
வாய்தொறும் பொங்கிக்
குருதி பாய்வன போன்றன, கொளுந்திய கொழுந் தழற்
கொழுந்து அம்மா!இதுமுதல் மூன்று கவிகள் – அக்கினிச்சுவாலையின் வருணனை.

பரிதி – சூரியன், ஆயிரம் கோடி வெம் புயங்கம் இ கானிடை உள
என்று கருதி – ஆயிரகோடி கொடியபாம்புகள் இந்தக்காட்டிலுள்ளன என்று எண்ணி,
சூழ்வர வெருவு – பிரதக்ஷிணமாகச்செல்வதற்கு அஞ்சும்படியான, பல் குவடு உடை
பருப்பதங்களின் சாரல் – பல சிகரங்களையுடைய மலைகளின் சாரல்களில்,
கொளுந்திய – பற்றிய, கொழுந் தழல் கொழுந்து – கொழுமையான
அக்கினிச்சுவாலைகள்,- கருதி வேள்வி நுறு உடையவன் – வேத விதிப்படி
செய்யப்பட்ட நூறு (அசுவமேத) யாகங்களை யுடையவனான இந்திரன், சிறகு அற
துணித்த – (அம்மலைகளின்) இறகுகள் அறும்படி வெட்டிய, வாய்தொறுஉம் –
இடங்களிலெல்லாம், பொங்கி பாய்வன – மேன்மேற்கிளர்ந்து பாய்வனவான,
குருதி – இரத்தப்பெருக்குக்களை, போன்றன – ஒத்தன; (எ-று.)

     காண்டவவனத்துப் பருப்பதச்சாரல்களிற் பற்றியெரியும் அக்கினிச் சுவாலைகள்
இந்திரன் மலைச்சிறகுகளை வெட்டிவீழ்த்தின வாய்களினின்று பெருகும்
இரத்தம்போலுமெனக் குறித்தனர், தற்குறிப்பேற்றவணி. இராகு கேதுவென்னும்
பாம்புகள் தனக்குப் பகையாதல்பற்றிக் கொடியபாம்புகட்கெல்லாஞ்சூரியன்
அஞ்சினன்.நூறு அசுவமேதயாகங்களைச் செய்து இந்திரபதவி பெறுதலால்,
‘வேள்விநூறுடையவன் ‘என்றார். அம்மா – ஈற்றசை; வியப்புமாம். 

கோத்திரங்களின் கவானிடைக் கதுமெனக் கொளுந்தி
உற்று எரிகின்ற
தீத் திறங்கள், செங் காந்தளும், அசோகமும்,
செங் குறிஞ்சியும், சேரப்
பூத்த ஒத்தன; அன்றியும், குலிக நீர் பொழி
அருவியும் போன்ற;
பார்த்த கண்கள் விட்டு ஏகலா வகை நிறம் பரந்த
தாதுவும் போன்ற.

கோத்திரங்களின் கவானிடை – மலைகளின் இடைப்பகுதிகளிலே,
கதுமென கொளுந்தி உற்று எரிகின்ற – விரைவாகப்பற்றி மிகுந்து எரிகிற, தீ
திறங்கள் -அக்கினிச்சுவாலைகளின் பகுதிகள்,- செம்காந்தள்உம் அசோகம்உம் செங்
குறிஞ்சிஉம் சேரபூத்த ஒத்தன – செங்காந்தளும் அசோகமும் செங்குறிஞ்சியும்
ஒருங்குபூத்தனவற்றை யொத்தன;அன்றிஉம் – இதுவல்லாமலும், குலிகம் நீர்பொழி
அருவிஉம் போன்ற -இங்குலிகம்கலந்த நீரைச் சொரிகிற மலையருவியையும்
ஒத்தன; பார்த்த கண்கள் விட்டுஏகலாவகை – (தன்னைப்) பார்த்தகண்கள் (தன்னை
விட்டு) (வேறொன்றினிடத்தே)சொல்லாதபடி நிறம் பரந்த – செந்நிறம் பரந்த,
தாதுஉம் – காவிக்கல்லையும், போன்ற- ஒத்தன; (எ-று.)

     மலையிடைப்பற்றியெரியும் அக்கினிச்சுவாலையின் வருணனை, இது:
செந்நிறமும்,மலையின்மேல் விளங்குதலும் பற்றியஉவமை. கவான் – இலக்கணையாய்
மலையின்இடைப்பகுதியையுணர்த்திற்று. கதுமென-விரைவுக்குறிப்பிடைச் சொல்.
செங்கந்தாள்முதலிய மூன்றும் விருக்ஷவர்க்கங்கள். குலிகம் – இங்குலிகமென்பதன்
முதற்குறைவிகாரம்; அது, சாதிலிங்கமெனப்படுஞ் செந்நிறச்சரக்கு. ‘பார்த்தகண்கள்
விட்டேகலாவகை நிறம்பரந்த’ என்றது, மலைத்தாதுவின் அழகை யுணர்த்தும்;
இதனை,சிந்தாமணியில் ‘கண் வாளறுக்குங்கமழ்தார்’ என்றார் போலக் கொள்க.
மலை -காண்டவ வனத்தினிடைப்பட்ட தென்க.  

தளைத்த பாதவத் தலைதொறும் பற்றின சருகு
உதிர்த்து, இளவேனில்
கிளைத்து, மீளவும் பொறி அளி எழ வளர்
கிசலயங்களும் போன்ற;
திளைத்த வேர் முதல் சினை உற எரிவன
தீப சலமும் போன்ற;–
வளைத்த கானிடை மெலமெல உள் புகு வன்னியின்
சிகா வர்க்கம்.

வளைத்த கானிடை – (தன்னால்) வளைக்கப்பட்ட அக்காட்டிலே,
மெலமெல உள் புகு – மெல்லமெல்ல உள்ளேபுகுகிற, வன்னியின் சிகா வர்க்கம் –
அக்கினியினது சுவாலையின் தொகுதிகள்,- தளைத்த பாதவம் தலைதொறும் பற்றின-
(தம்மைப் பார்ப்பவர்களுடையகண்களையும் மனத்தையும்வேறொன்றிற்செல்ல
வொட்டாமல் தம்மிடத்திற்) கட்டுகின்ற [மிக அழகிய] மரங்களின் நுனிகளிற்
பற்றினவையாய், (அந்நிலையில்), சருகு உதிர்த்து – (பின் பனிக்காலத்தில்]
சருகுகளையுதிரச்செய்து, இளவேனில் – இளவேனிற்காலத்திலே, பொறி அளி எழ
மீளஉம் கிளைத்து வளர் – புள்ளியையுடைய வண்டுகள் மொய்த்தெழும்படி
மீண்டுந்தோன்றி வளர்கிற, கிசலயங்கள்உம் போன்ற – செந்தளிர்களையும்
போன்றன; (மற்றும்அவ்வக்கினிச்சுவாலைகள்), திளைத்த வேர்முதல் சினை உற
எரிவன  – நெருங்கியவேர்முதற் கிளைவரையிலும் (மரங்களில்)
முற்றும்பற்றியெரிபவையாய், (அந்நிலையில்),தீபசாலம்உம் போன்ற – விளக்குகளின்
கூட்டங்களையும் போன்றன; (எ -று.)

     அக்கினிச்சுவாலையின் வருணனை, இது. முன்னிரண்டடிகளில் மரங்கள்
பற்றியெரியும்போது சருகுகளெல்லாம் உதிர்ந்து புதியசெந்தளிர் வெடிக்கப்பெற்ற
மரங்கள் போன்றன என்றார்: தன்மைத்தற்குறிப்பேற்றவணி: நிறமும்வடிவும்
பற்றியது.சுவாலைகளின் மேலிருந்து அனற்பொறிகளோடு எழுகிற புகைகள்,
பொறிகளையுடையவண்டுகள்போலு மென்பார், ‘பொறியளியெழவளர் கிசலயம்’
என்றார். தீபசாலம் -எரிமரங்களின் தொகுதியென்பாருமுளர். ‘சாபவெங்கணை
தைத்துகுசோரியால்தீபமென்னவும்’ என்பர்மேல் முதற்போர்ச்சருக்கத்தும்.
செந்தழலொளியிற் பொங்கும்தீபமா மரங்கள்’ என்றது பெரிய புராணம்

தழைத்த பேர் ஒளித் திவாகரன் கரங்கள் போய்த் தடவி,
அவ் அடவிக்கண்
பிழைத்த கார் இருட் பிழம்பினை வளைந்து, உடன் பிடித்து,
எரிப்பன போலும்-
முழைத்த வான் புழை ஒரு கரத்து, இரு பணை, மும் மதப்
பெரு நால் வாய்,
மழைத்த குஞ்சர முகம்தொறும் புக்கு, உடன் மயங்கிய
பொறி மாலை.-அனற்பொறிகளின் வருணனை.

முழைத்த – மலைக்குகையின் தன்மையைக்கொண்ட, வான்புழை-
பெரியதுளையையுடைய, ஒரு கரத்து – ஒரு துதிக்கையையும், இருபணை – இரண்டு
தந்தங்களையும், மும் மதம் – மூன்று வகை மதஜலத்தையும், பெரு நால் வாய் –
பெரிய தொங்குகிற வாயையு முடைய, மழைத்த குஞ்சரம் – மேகத்தின்
தன்மையுள்ளயானைகளின், முகம் தொறும் – முகங்களிலெல்லாம், புக்கு – போய்ச்
சேர்ந்து, உடன்மயங்கிய – உடனே (அவற்றிற்) பற்றியெரிவனவான, பொறி மாலை
– தீப்பொறிகளின்வரிசைகளானவை,- அ அடவிக் கண் – அந்தக்
காண்டவவனத்திலே, பிழைத்த -(தமக்கு) அஞ்சித் தப்பிச்சென்று ஒளித்துவாழ்ந்த,
கார் இருள் பிழம்பினை – கரியஇருட்டொகுதிகளை, போய் தடவி வளைந்து
உடன்பிடித்து எரிப்பன – விடாதுபின்சென்று தடவிச்சூழ்ந்து உடனேபிடித்து
எரிப்பனவான, தழைத்த பேர் ஒளிதிவாகரன் கரங்கள் – நிறைந்த சிறந்த
ஒளியையுடைய சூரியனதுகிரணங்களை, போலும்- ஒக்கும்; (எ-று.)

     குஞ்சர முகந்தொறும் புக்குமயங்கிய பொறிமாலை திவாகரன் கரங்கள்
காரிருட்பிழம்பினைத் தடவி வளைந்தெரிப்பனபோலுமென்றார்:
தன்மைத்தற்குறிப்பேற்றவணி. இருட்பிழம்பு – யானைக்கும், சூரியகிரணம் –
அனற்பொறி நிரைக்கும் உவமை. பகைவர்க்கு அஞ்சினவர் காட்டிற்புக்கு ஒளித்த
லியல்பாதலால், ‘அடவிக்கட் பிழைத்த காரிருட்பிழம்பு’ எனப்பட்டது. கைகளென்றும்
ஒரு பொருள் தோன்ற ‘கரங்கள்’ என்றதற்கு ஏற்க ‘தடவி’ என்றார்;
கண்ணுக்குத்தெரியாத இடத்தில் இருட்டில் ஒளிந்துள்ள பொருளைத்
தேடுவோர் கைகளைநீட்டி அவற்றால் தடவிப்பிடிக்கும் இயல்பு இங்குக்
குறிக்கப்பட்டது. மூன்றாமடியில் ஒன்று இரண்டு மூன்று நான்கு என்ற
தொகைச்சொற்கள் முறையே அமையவைக்கப்பட்டது, ஓர் அழகாம்; இது,
ரத்நாவளியலங்காரமெனப்படும்.  

அரி எனும் பெயர் பொறாமையின்போல் விரைந்து அழல்
கொழுந்து உளை பற்ற,
கிரி முழைஞ்சுகள்தொறும் பதைத்து ஓடின, கேசரிக்
குலம் எல்லாம்;
விரி உரோம வாலதிகளில் பற்றலின், விளிவுடைச்
சவரங்கள்
எரிகொள் சோக வெங் கனலினால் நின்று நின்று
இறந்தன, சலியாமல்.-அவ்வனத்திலுள்ள பலவகைப்பிராணிகள் பலவாறு எரிபட்டு
அழிதலை இதுமுதல் ஏழுகவிகளிற் கூறுகின்றார்.

அழல் கொழுந்து – அக்கினிச்சுவாலையானது, அரி எனும் பெயர்
பொறாமையின் போல் – (தனக்குஉள்ள) அரியென்னும்பெயர் (சிங்கத்துக்கும்)
இருத்தலைப் பொறாததனாற் போல, விரைந்து உளை பற்ற – விரைவாக
(அச்சிங்கங்களின்) பிடரிமயிரிற் பற்றிக்கொள்ள,- (அதனால்), கேசரி குலம்
எல்லாம் -சிங்கக்கூட்டங்கள்யாவும், பதைத்து – துடிப்புற்று, கிரி முழைஞ்சுகள்
தொறு உம் ஓடின- மலைக்குகைகளிலெல்லாம் ஓடிச்சென்றன; விழைவு உடை
சவரங்கள் – (வாலின்மயிரில்) விருப்பத்தையுடைய கவரிமான்கள்,- விரி உரோமம்
வாலதிகளில் பற்றலின் – மிக்கு வளர்ந்த மயிர்களையுடைய (தங்கள்) வால்களில்
(அக்கினிச் சுவாலை) பற்றியதனால், எரி கொள் சோகம் வெம் கனலினால் –
(புறத்திற் பற்றிய அக்கனல் தம்மையெரித்தற்குமுன்னமே அகத்திற் பற்றி)
எரிதலைக்கொண்ட சோகமாகிய வெவ்விய அக்கினியினாலேயே, சலியாமல் –
புடைபெயராமல், நின்று நின்று இறந்தன- (அவ்வவ்விடங்களில்) நின்று நின்று
மரித்தன: (எ-று.)

     சிங்கத்தின்மேல் தீப்பற்றியதற்கு, தனக்குஉள்ள அரியென்னும் பெயர்
சிங்கத்துக்கும் இருத்தலை அவ்வக்கினிபொறாமல் அது காரணமாகக்கோபித்து
அச்சிங்கத்தை யெரித்தழிக்கத் தொடங்கினாற்போலுமென்று கவிகற்பித்துக்
கூறியதனால்ஏதுத்தற்குறிப்பேற்றவணி. அரியென்னும்பெயர் – அக்கினி சிங்கம்
என்னும்இரண்டையுங் குறிக்கும் போது, ஹரி யென்ற வடசொல்லின் விகாரம்,
“மயிர்நீப்பின்வாழாக்கவரிமா வன்னார்” என்றபடி தன் மயிர்த்திரளில் ஒருமயிர்
நீங்கினாலும்உயிர்வாழாது உடனே இறந்துபடுதல் கவரியென்னும் மானின் சாதிக்கு
இயல்புஆதலால், அச்சாதிமான்களின் வால்மயிரில் தீப்பற்றியவளவிலே தம்
அகத்திற்பற்றியசோகாக்கினி தம்மை யெரித்தலினாலேயே இறந்தன; அவை,
தம்வாலிற்பற்றிய புறத்தீமுறையே யெரிந்து வந்தது தம்மை யழித்தலா
லிறந்தனவல்ல; ஆனதுபற்றி, அவை,(சிங்கங்கள்போலத்) தப்பிஓடி உயிர்தப்புதற்குச்
சிறிதும் முயலாமல் வால்மயிரில்தீப்பட்ட அவ்வவ்விடத்திலேயே புடைபெயராது,
நின்றநின்றநிலையில் இறந்துகிடந்தனஎன்பதாம்: இது, தன்மைநவிற்சியணி.
கேஸரம் – பிடரிமயிர்; அதனையுடையது,கேஸரீ யென ஆண்சிங்கத்துக்குக்
காரணக்குறி, விளிவுடைச்சவரங்கள் என்றும்பாடம். 

எப் புறத்தினும் புகுந்து தீச் சூழ்தலின், ஏகுதற்கு
தப்புதல் கருத்து அழிந்து, பேர் இரலையோடு
உழைஇனம் தடுமாற,
மெய்ப் புறத்து வெண் புள்ளி செம் புள்ளி ஆய்விடும்படி,
விரைந்து ஓடி
அப் புறத்து வீழ் பொறிகள், அவ்வவற்றினை அலங்கரித்தன
அன்றே.

தீ – நெருப்பானது, எ புறத்தின்உம் புகுந்து சூழ்தலின் –
எல்லாப்பங்கங்களிலும் புகுந்து சூழ்ந்துகொண்டதனால், ஏகுதற்கு இடம் இன்றி –
தப்பியோடிப்போதற்குவழியில்லாமல், தப்புதல் கருத்து அழிந்து –
தப்பியுய்யவேண்டுமென்ற எண்ணம் அழிந்து, பேர் இரலையோடு உழை இனம்
தடுமாற – பெரிய ஆண் மான்களுடனே பெண்மான்கூட்டங்களும்
நிலைகலங்குகையில்,- விரைந்து ஓடி அ புறத்து வீழ் பொறிகள் – வேகத்தோடு
சென்று அந்த மான்களின் உடம்பின்மேல் விழுகிற தீப்பொறிகளானவை,  மெய்
புறத்துவெள் புள்ளி செம் புள்ளி ஆய்விடும்படி அவ்வற்றினை அலங்கரித்தன –
அவற்றினுடம்பின்மேல் (இயல்பாயுள்ள) வெண்ணிறப்புள்ளிகள் செந்நிறப்புள்ளிகளாய்
மாறிவிடும்படி அந்த ஆண்மான்களையும் பெண்மான்களையும் அலங்காரஞ்
செய்தன;(எ -று.)

     வெண்ணிறமான மானினுடற்பொறிகள் அனற்பொறிகளால் செந்நிறம் பெற்றன
என்றார்: இது, பிறிதின்குணம்பெறலணி. இரலை யென்பது, மானின்
ஆண்பாற்பெயர், ‘இரலை’ என வந்ததனால் ‘உழை’ என்பது – அதன்
பெண்பாலின்மேல் நின்றது. இனி, இரலை உழை யென்பவற்றை மானின்சாதி
பேதமெனலுமாம்.  

காழுடைப் புறக் கழைகளின் துளைதொறும் கால்
பரந்து இசைக்கின்ற
ஏழ் இசைக்கு உளம் உருகி, மெய் புளகு எழ,
இரைகொளும் அகணங்கள்,
தாழ் அழற் சுடர் சுடச் சுட, வெடித்து எழு சடுல
ஓசையின் மாய்ந்த;
ஊழியில் புயல் உருமினால் மடிந்திடும் உரகர்தம்
குலம் போன்ற.

காழ் உடை புறம் – வயிரமுள்ள புறத்தையுடைய கழைகளின் –
மூங்கில்களின், துளை தொறும் – துவாரங்களிலெல்லாம், கால் பரந்து – காற்றுப்
பரவுதலால், இசைக்கின்ற – ஒலித்தெழுகிற, ஏழ் இசைக்கு –
ஏழுவகைச்சுரங்களையுங்கேட்டு அவற்றிற்கு, உளம் உருகி – மனம் கரைந்து,
(அவ்வானந்தத்தால்), மெய் புளகு எழ – உடம்பில் மயிர்ச்சிலிர்ப்பு உண்டாக,
(அந்தஇசையைக்கேட்டதனாலான ஆனந்தத்தாற்பரவசப்பட்டு அங்கு நின்று
புடைபெயராமல்), இரை கொளும் – (அந்தஇசையையே) உணவாகக்கொள்ளுகிற,
அசுணங்கள் – அசுணமென்னும்பறவைகளானவை -, தாழ் அழல் சுடர் – மிகுகிற
அக்கினிச்சுவாலைகள், சுட சுட – மேன்மேற் சுடுதலால், வெடித்து எழு –
(அம்மூங்கில்கள்) வெடித்ததனால் ஒலித்தெழுகிற, சடுலம் ஓசையின் – பயங்கரமான
ஓசையினாலேயே, மாய்ந்த – இறந்தன; (அங்ஙனம் ஒலியின்கடுமைபற்றியே யிறந்த
அவை), ஊழியில் – கற்பாந்த காலத்தில் தோன்றுகிற, புயல் மேகங்களின்,
உருமினால்- இடியோசையினால், மடிந்திடும் – இறந்திடுகிற, உரகர்தம் குலம் –
நாகசாதியாரின்கூட்டங்களை, போன்ற – ஒத்தன; (எ-று.)

     இனியஇசையொலிகளைக்கேட்டவளவில் மகிழ்ந்துகளித்தலும், கடுமையான
பறையொலிபோன்ற ஒலிகளைக் கேட்டவளவிலே பொறாமல் வருந்தியிறத்தலும்,
அசுணமென்னும் பறவைச்சாதியின் இயல்பு; காண்டவவனத்திலுள்மூங்கிற்காட்டில்
துளையுள்ள மூங்கில்களின்மீது காற்று அடிக்கும்போது இயல்பாகவுண்டாகிற ஒலி
இன்னிசையா யமைய, அதனை யறிந்து அசுணப் பறவைகள்
அம்மூங்கில்களினருகில்வந்துகூடி அவ்வொலியைக்கேட்டு ஆனந்தங்
கொண்டிருந்தன; அச்சமயத்தில்அம்மூங்கில்களைத்தீப்பற்றி யெரித்தலால் அவை
வெடிக்கையிலுண்டான கடியஓசையைக் கேட்டு அம்மாத்திரத்திலே அதனாலேயே
அப்பறைவைகள் இறந்தன:தம்மேல் தீப்பற்றியெரிக்குமளவும் உயிர்வாழ்ந்து பின்பு
தீயெரித்தலா லிறந்தனவல்ல;இங்ஙனம் அவை, வேறோர்ஊறும் படாதிருக்கையிலே
இறந்துபடுதற்கு,கற்பாந்தகாலத்திற் பெருமழை பொழிந்து உலகங்களை யழித்தற்கு
வானத்திலெழுகிறமேகங்களின் இடியோசையைக் கேட்டமாத்திரத்திலே கீழுலகில்
இருந்தபடியேயிறந்தொழிகிற நாகசாதியாரை உவமைகூறினார்.
(காற்றடித்தலாலொலிக்கிற மூங்கில்கள்,வடமொழியில் ‘கீசகம்’ எனப்படும்.)

     மேல்வைரமாத்திரமேயுடையவை – பனை, தெங்கு, மூங்கில் முதலிய: அவை –
புறக்காழன புன்மரம் பெண்மரம்என்று கூறப்படுதலால், ‘காழுடைப் புறக் கழைகள்’
என்றார். (உள்வயிரமுள்ள மரங்கள் – அகக்காழன வன்மரம் ஆண்மரம் என்று
கூறப்படும்.) தீப்பற்றி யெரிதலாலுண்டாகிற ஓசை, சடுலவோசையெனப்படும்

அனைய போதில், அவ் விபின சாலங்களின்
ஆர் தருக்களின் நீண்ட
சினைகள்தோறும் வாழ் சிகாவல கலாபமேல்
செறிதரு தீச் சோதி,
பனையின் நீள் உடல் பணிகளை அலகினால் பற்றலின்
படர் பந்திப்
புனையும் மா மணி நிழல் பரந்து எழுந்தெனப் பொலிந்து
இலங்கின மாதோ.

அனையபோதில் – (அம்மகாவனத்தைத் தீப்பற்றி யெரிக்கிற)
அப்பொழுதில், அ விபின சாலங்களின் – அந்தக் காடுகளின் கூட்டங்களில்,
ஆர் -பொருந்திய, தருக்களின் – மரங்களினுடைய, நீண்ட சினைகள் தோறுஉம் –
நீண்டகிளைகளிலெல்லாம், வாழ் – தங்குகிற, சிகாவலம் – மயில்களின், கலாபம்
மேல் -தோகையில், செறி தரு – நன்றாகப் பற்றுகிற, தீ சோதி –
அக்கினிச்சுவாலைகளானவை,- பனையின் நீள் உடல் பணிகளை – பனைமரம்
போன்றநீண்ட உடம்பையுடைய பாம்புகளை, அலகினால் பற்றலின் – (அம்
மயில்கள் தம்)வாயலகினாற் கௌவுதலினால், படம் பந்தி புனையும் மா மணி
நிழல்பரந்துஎழுந்துஎன – (அந்நாகங்களின்) படவரிசையிலுள்ள அழகிய
சிறந்தமாணிக்கத்தினதுஒழுங்காகப் பரவுந்தன்மையுள்ள ஒளி (அம்மயில்களின்
தோகைமேற்) பரவி விளங்கினாற்போல, பொலிந்து இலங்கின – மிகுதியாய்
விளங்கின;(எ-று.)

     மயிலின் தோகையிற் பற்றிய சிவந்த அக்கினிச்சுவாலையின் விளக்கத்தை,
மயில்களால் அலகிற் கௌவப்பட்ட நாகங்களினுடைய மாணிக்கத்தின் சிவந்தஒளி
அம்மயில்களின் தோகைமேற் பாய்ந்து விளங்குதல் போலு மென்றார்;
தற்குறிப்பேற்றம். ஸிகாவல மென்பதற்கு சிகையையுடைய தென்று பொருள்;
ஸிகா -உச்சிக் கொண்டை: வலம் என்பது, வடமொழிவிகுதி. படர்பந்தி என்றும்
பாடம்.    

ஆசுகன்தனோடு அடவியை வளைத்தனன், ஆசுசுக்கணி;
மேன்மேல்
வீசுகின்றன புலிங்க சாலமும்; புகல் வேறு எமக்கு
இலது’ என்று
பாசிளங் கிளி, பூவைகள், வெருவி மெய் பதைத்து,
உளம் தடுமாறிப்
பேசுகின்ற சொல் கேட்டலும், நடுங்கின, பிற பறவைகள்
எல்லாம்.

ஆசுசுக்கணி – அக்கினிதேவன், ஆசுகன்தனோடு – (தனது
நண்பனாகிய) வாயுதேவனுடனே, அடவியை வளைத்தனன் – இக்காட்டை
(எப்புறத்தும்) வளைத்துக்கொண்டான்; புலிங்க சாலம் உம் – அனற்பொறிகளின்
கூட்டமும், மேல் மேல் வீசுகின்ற – மேலும் மேலும் வீசுகின்றன;  எமக்கு வேறு
புகல்இலது – நமக்கு வேறு புகலிடமில்லை,’என்று-,பசு இளங் கிளிபூவைகள் –
பசுநிறமுள்ள இளமையான கிளிகளும் நாகணவாய்ப்பறவைகளும், வெருவி மெய்
பதைத்து உளம் தடுமாறி பேசுகின்ற – அஞ்சி உடல்நடுங்கி மனம் நிலைகலங்கிப்
பேசுகிற, சொல் – சொல்லை, கேட்டலும் – கேட்டவளவிலே, பிற பறவைகள்
எல்லாம்நடுங்கின – மற்றைப்பக்ஷிகள்யாவும் நடுக்கமுற்றன; (எ-று.)

     பறவைகளிற் கிளிக்கும் பூவைக்குமேபேசுந்திறமிருத்தலும்மற்றவைகட்கு
அத்திறமில்லாமையுந் தோன்ற, இங்ஙனங் கூறினார். மற்றைப்பறவைகள்
அவற்றின்பேச்சொலியைச் செவியுள்ளவளவே யன்றி அப்பேச்சின் பொருளை
யுணருந்திறமில வாயினும், அவை உடல் பதைத்துப்பேசுங் குறிப்பினால்
அக்கருத்தையுணர்ந்தன வென்க. ஆசுகன்தனோடு அடவியை வளைத்தனன்
ஆசுசுக்கணியென்றது, நெருப்பு மேன்மேற்பற்றிவளர்தற்கு அனுகூலமாகக் காற்று
வீசுகிறதன்மையை எடுத்துக்கூறியது: இது, இங்ஙனம் நம்மையெரித்தழிக்கத்
தொடங்கியஅக்கினிக்கு நண்பனான வாயு, நாம் இவ்விடத்தை விட்டு
விரைந்துபறந்தோடுதற்குஉதவான்’ என்பது குறித்தற்குப் போலும். ஆஸு கன்என்ற
வடமொழிப்பெயர் -விரைவாகச் செல்பவ னென்றும், ஆஸு ஸு க்ஷணி என்ற
வடமொழிப்பெயர் நன்றாகஎரிக்க விரும்புபவனென்றும் உறுப்புப் பொருள்படும்.

நெஞ்சில் ஈரமும் நீதியும் குடி புகா நிருதர்
சென்னியில் வன்னி,
குஞ்சி நீடுற வளர்வபோல், அசைந்து செங் கொழுந்து
விட்டன, மேன்மேல்;
வஞ்சி நேர் இடை அரக்கியர் நக முழு மதி சிவப்பு
உறத் தீட்டும்
பஞ்சி போன்றன, அவர் அவர் பத யுகம் பற்றிய
சிகை வன்னி.

நெஞ்சில் ஈரம்உம் நீதிஉம் குடிபுகா – மனத்தில் அன்பும் நீதியும்
வந்துதங்குதலில்லாத, நிருதர் – (அவ்வனத்திலுள்ள கொடிய)அரக்கர்களுடைய,
சென்னியில்- தலையிற்பற்றிய, வன்னி – அக்கினிச்சுவாலைகள்,- நீடுற வளர்வ
குஞ்சி போல் -நீண்டுவளர்வனவான (அவர்களுடைய) செம்பட்டமயிர்கள்போல,
அசைந்து மேல்மேல் செம் கொழுந்து விட்டன – அசைந்து மேலும் மேலும்
செந்நிறமான ஒளியைவெளிவீசி யெழுந்தன; அவர் அவர் பத யுகம் பற்றிய –
அந்தந்த அரக்கியர்களுடையகால்களிரண்டிலும் பற்றிய, சிகை வன்னி [வன்னிச்
சிகை] – அக்கினிச் சுவாலைகள்,-வஞ்சிநேர் இடை அரக்கியர் நகம் முழு மதி
சிவப்பு உற தீட்டும் பஞ்சி போன்றன – வஞ்சிக்கொடிபோன்ற மெல்லிய
இடையையுடைய அவ்விராக்கதஸ்தீரிகள் (தங்கள்) நகங்களாகிற பூர்ணசந்திரர்கள்
செந்நிறம்பொருந்தும்படி (அவற்றிற்கு) ஊட்டுகிற செம்பஞ்சுக் குழம்புகளை
யொத்தன; (எ-று.)

     அரக்கர்களுடைய தலையிற் பற்றிய அக்கினிச்சுவாலை – அவர்கள்
முடியிலுள்ள செம்பட்டமயிர்களையும், அவ்விராக்கத மாதர்களுடைய கால்
நுனிகளிற்பற்றிய அக்கினிச்சுவாலை – அவர்கள் தங்கள் வெண்ணிறமான நகம்
செந்நிறமடைந்துவிளங்கும்படி யூட்டுஞ் செம்பஞ்சுக் குழம்புகளையும் ஒக்குமென்றார்.
நக முழுமதி -சந்திரமண்டலம் போன்ற நகங்களென்று முன்பின்னாகத்தொக்க
உவமைத்தொகையாகவுங் கொள்ளலாம்.   

முப்புரங்களை முக்கணன் முனிந்த நாள், மூவர் அம்
முழுத் தீயில்
தப்பினார் உளர்; காண்டவ அடவி வாழ் தானவர்
யார் உய்ந்தார்?
பைப் புறத்து அணி மணி ஒளி பரந்தெனப் பல்
தலைகளில் பற்றி
வெப்பு உறுத்தலின், உரகரும் தங்கள் வாய் விடங்கள்
கொன்றென வீழ்ந்தார்.

முப் புரங்களை – திரிபுரங்களை, முக் கணன் – சிவபிரான், முனிந்த
நாள் – கோபித்து எரித்த காலத்தில், அ முழு தீயில் தப்பினார் – அந்தப்
பெருந்தீயினின்று தப்பிப்பிழைத்தவர், மூவர் உளர் – மூன்று அசுரராயினும் உண்டு;
காண்டவம் அடவி வாழ் தானவர் யார் உய்ந்தார் – இக்காண்டவவனத் (தை
யெரித்தகாலத்தில் இ) தில் வாழ்ந்த அசுரரில் தப்பிப்பிழைத்தவர் எவர்?
[எவருமில்லை; எல்லாவசுரரும் இறந்துபட்டன ரென்றபடி]; உரகர்உம் –
நாகர்களும்,- பை புறத்துஅணி மணி ஒளி பரந்து என – (தமது) படங்களின்
மேலுள்ள அழகியமாணிக்கத்தின்செந்நிறமான ஒளி பரவினாற்போல, பல்
தலைகளில் பற்றி வெப்பு உறுத்தலின் -(தங்கள்) தலைகள் பலவற்றிலும்
நெருப்புப்பற்றிச் சுடுவதனால், தங்கள் வாய் விடங்கள்கொன்றுஎன வீழ்ந்தார் –
தங்கள்வாயிலுள்ள விஷங்களே (தங்களைக்) கொன்றார்போலஇறந்து
கீழ்விழுந்தார்கள்; (எ-று.)

     மிச்சமின்றி அசுரநாசம் நிகழ்ந்த தன்மையில் திரிபுரதகனத் தினுங்காண்டவ
தகனத்துக்கு உள்ளமேன்மையை முன்னிரண்டடிகளி லெடுத்துக்காட்டினர்;
வேற்றுமையணி. திரிபுரவாசிகளான அசுரர்களில் மூவர் தப்பியது கீழ் வாரணாவதச்
சருக்கத்து 131 ஆஞ்செய்யுளினுரையிற் கூறப்பட்டது. பல் + தலை = பஃறலை

புகை படப் படக் கரிந்தன, பொறியினால் பொறி
எழுந்தன, வானின்
மிகை படைத்த அச் சுரபதி ஆயிரம் விழிகளும்,
கணப் போதில்;
தகைவு அறக் கழை முதலிய தருக்களின் சடுல
ஆரவம் மிஞ்சி,
திகை அனைத்தினும் பரத்தலின், செவிகளும்
செவிடு பட்டன, சேர.காண்டவவனத்தில் தீப்பற்றிய செய்தியை இந்திரன்
உணர்தல்.

(இங்ஙனந் தீப்பற்றியவளவிலே), கணம் போதில் –
ஒருக்ஷணப்பொழுதிலே, வானில் – மேலுலகத்திலுள்ள, அ சுரபதி – அந்த
(க்காண்டவவனத்தைக் காவல் செய்பவனான) இந்திரனுடைய, மிகை படைத்த
ஆயிரம்விழிகள்உம் – அதிகமாகவுள்ள ஆயிரங்கண்களும், புகை பட பட –
(அவ்வக்கினியின்) புகை (மேற் சென்று) மிகுதியாகப் படுதலால், கரிந்தன – கருகின
[பெருங்கோபங் கொண்டன் ];பொறியினால்-(அவ்வக்கினியின்) பொறிகள் மேற்
சென்றுபடுதலால், பொறி எழுந்தன – (கோபாக்கினியின்) பொறிகள் கிளம்பப்
பெற்றன;கழைமுதலிய தருக்களின் – மூங்கில் முதலிய மரங்களில் (நெருப்புப்பற்றி
யெரிதலாலுண்டாகிய), சடுலம் ஆரவம் கடுமையான ஒலி, மிஞ்சி-மிகுந்து, தகைவு
அற -தடையில்லாமல். திகை அனைத்தின்உம் பரத்திலின் – திக்குக்களிலெல்லாம்
பரவியதனால், செவிகள்உம் சேர செவிடு பட்டன – (அவ்விந்திரனுடைய)
காதிரண்டும்ஒருசேரச்செவிடாயின; (எ – று.)

     அத்தீயின் புகையும் பொறிகளும் ஆரவாரமும் மேலேழுந்து
இந்திரலோகமளவுஞ் செல்ல, அவற்றை இந்திரன் கண்ணினாலுங் காதினாலும்
உணர்ந்தமாத்திரத்திலே வருந்திக்கண்கள் தீப்பொறி யெழப் பெருங்கோபங்
கொண்டனனென்பதாம் இவ்வருணனையிற் பொறிமுதலியவற்றின் மிகுதியும் செயலுந்
தோன்றும், கண்ணி ரண்டேயன்றிக்காட்சிப்புலனுக்கு வேண்டாதனவான
மற்றைக்கண்களெல்லாம் புகைபடுதலாலும் பொறிபடுதலாலும் வருந்துதற்கே
காரணமாதலால் அநாவசியமென்று அச்சமயத்திற் கருதும்படியிருந்தனவென்பது
தோன்ற, ‘மிகைபடைத்த ஆயிரம்விழிகள் ‘என்றார்.

விரதம் மேற்கொண்டு செம் பொன் மால் வரையை விரி
சுடர் சூழ்வருவதுபோல்,
இரதம் மேற் கொண்ட அநுசனும் சுதனும் இமைப்பினில்
பன் முறை தேர்ந்து,
சரதம் மேற்கொண்டு சரிப்பதும், தனது தாவகம்
பாவகன் புகுந்து
பரதம் மேற்கொண்டு நடிப்பதும், கருதிப் பார்த்தனன்,
பாகசாதனனே.-கிருஷ்ணார்ச்சுனர் காண்டவவனத்தையெரிப்பித்தலை
இந்திரன் கண்ணுறல்.

விரி சுடர் – பரந்த கிரணங்களையுடைய சூரியன், விரதம் மேல்
கொண்டு -(தவறாத) நியமத்தை மேற்கொண்டு, செம் பொன்மால் வரையை
சூழ்வருவதுபோல் -மாற்றுயர்ந்த பொன்மயமான பெரியமகாமேருமலையைப்
பிரதட்சிணஞ்செய்துவருவதுபோல, இரதம் மேல்கொண்ட அநுசன்உம் சுதன்உம் –
தேரின்மேலேறிய(தனது) தம்பியான கிருஷ்ணனும் (தனது) மகனான அருச்சுனனும்,
இமைப்பினில்-ஓர்இமைப்பொழுதினுள்ளே, பல்முறை – பலமுறை, தேர்ந்து –
ஆராய்ந்து, சரதம்மேற்கொண்டு – (அக்கினிதேவனுக்குத் தாம் துணைசெய்வதாக
உறுதிமொழிகூறிய)சத்தியத்தை மேற்கொண்டு, சரிப்பதுஉம்- (அவ்வனத்தைச்)
சூழ்ந்துசெல்லுதலையும், தனதுதாவகம் – தன்னுடைய காட்டில், பாவகன் – அக்கினி,
புகுந்து – பிரவேசித்து, பரதம்மேற்கொண்டு நடிப்பதுஉம் – பரதசாஸ்திர விதியைத்
தவறாமற்கொண்டுகூத்தாடுவதையும், பாகசாதனன் – இந்திரன், கருதி பார்த்தனன் –
கருத்தோடுநோக்கினான்;  (எ-று.)

     வானத்தையளாவி யுயர்ந்தெழுந்து விளங்குகின்ற மேருமலை –
வானத்தையளாவிப் பற்றியெரிகிற காண்டவவனத்துக்கும், அம் மேருகிரியை
ஆயிரங்கிரணனான சூரியன்தேர்மேற்கொண்டு இடைவிடாது சூழ்வருதல்-
அவ்வனத்தைக் கிருஷ்ணார்ச்சுனர் தேரிலேறி இடைவிடாது சூழ்வருதற்கும்
உவமையெனக் காண்க. எப்புறத்திலும் எவரும் அவ்வக்கினிக்கு இடையூறு
செய்யாதிருத்தற்பொருட்டும், அவ்வனத்திலுள்ள பிராணிகள் தப்பியோடி
வெளிச்செல்லாதபடி தவிர்த்தற்குமாக இருவரும் இங்ஙனம் குறிக்கொண்டு
சூழ்வருவாராயினர். விரதமாவது – இன்னவாறுசெய்வேனென்றுதனது ஆற்றலுக்கு
ஏற்பவரைந்துகொள்வது. அருச்சுனன்போர்க்கோலங் கொண்டுதேரேறினதையே
கீழ்க்கூறினராயினும், கண்ணன் அங்ஙனந்தேரேறினதையும் உபலக்ஷணத்தாற்
கொள்க. (கீழ் 27 – ஆம் கவியின் இரண்டாமடிக்கு – கண்ணபிரான்
அருச்சுனனுக்குத்தேர்ப்பாகனாயமர்ந்து தேர்செலுத்த என்று உரைப்பாரு முளர்;
அது, முதனூலோடுபொருந்தாது. இருவரும் இரண்டு தேரிலேறி
யுத்தசந்நத்தராயிருந்தனரென்றுவியாசபகவான் கூறியுள்ளார். முன்னொருகாலத்தில்
இந்திரன் அசுரர்கள் நலிதலால் வருந்தித் திருமாலைச் சரணமடைய, ஸ்ரீமாகவிஷ்ணு,
அதிதிதேவியின் வயிற்றில் அவ்விந்திரனக்குத் தம்பியாய்ஓர் அவதாரமெடுத்து
உபேந்திரனெனப் பெயர்கொண்டு அவனது துயரைத்தீர்க்கலாயின னென்பதை அறிக.

     பாவம், ரஸம், தாளம் இம்மூன்றையுமுடைமைபற்றி இம் மூன்றுசொற்களின்
முதலெழுத்துக் குறிப்பினால், பரதம் என்று நாட்டியத்திற்குப் பெயராயிற்றென்பர்.
‘பரதமேற்கொண்டு நடிப்பது’ என்றது, எழுந்தெழுந்து கிளர்ந்து எரிதலை. சரதம்
மேற்கொண்டு என்பதற்கு – விளையாட்டைமேற்கொண்டு என்றலுமொன்று. தாவம்,
தாவகம் என்பன – காட்டுத்தீயென்ற பொருளன: அவ்வடசொற்கள், சிறுபான்மை
காடுஎன்ற பொருளிலும் வரும்.

     இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் – பெரும்பாலும்இரண்டு நான்கு
ஏழாஞ்சீர்கள் மாச்சீர்களும், மற்றைநான்கும்விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்குகொண்ட எழுசீராசிரியவிருத்தங்கள்.

முந்தி வார் சிலைக் கைப் பற்குனன் தொடுத்த முரணுடை
மூரி வெங் கணைகள்
உந்தி, வாள் உரகர் சூடிகா மகுட கோடிகள் உடைத்தலின்,
உடைந்து,
சிந்தி மீது எழுந்த மணிகளும், அனலின் சிகைகளில்
தெறித்து எழு பொறியும்,
இந்திராலயத்திற்கு ஏற்றிய தீபம் என்ன நின்று
இலங்கின, எங்கும்.-இந்திரன் பார்த்தபொழுது அங்கு நிகழ்ந்த நிகழ்ச்சி.

வார் சிலை கை பற்குனன் – நீண்ட வில்லை யேந்திய
கையையுடையஅருச்சுனன், முந்திதொடுத்த – விரைவாகச்செலுத்திய, முரண்
உடை மூரி வெம்கணைகள் – வலிமையையுடைய பெரிய கொடிய அம்புகள்,
உந்தி -வலிமையோடுசென்று, வாள் உரகர் சூடிகா மகுட கோடிகள் –
ஒளியையுடையநாகர்களின் உச்சிக்கொண்டையையுடைய முடிகளின் நுனிகளை,
உடைத்தலின் – உடைத்தலினால், உடைந்து சிந்தி மீது எழுந்த – உடைப்பட்டுச்
சிதறிமேலேயெழுந்த, மணிகள்உம் – (அம்முடிகளிலுள்ள) மாணிக்கங்களும்,
அனலின்சிகைகளின் தெறித்து எழு பொறிஉம் – அக்கினியின் சுவாலைகளினின்று
தெறித்துமேலெழுந்த பொறிகளும், இந்திர ஆலயத்துக்கு ஏற்றிய தீபம் என்ன –
அவ்விந்திரனுடைய இருப்பிடத்துக்குஏற்றிய விளக்குக்கள்போல, எங்குஉம் நின்று
இலங்கின – (வானத்தில்) எவ்விடங்களிலும் பிரகாசித்துநின்றன;

     இந்திரன் கருத்தோடு பார்த்தபொழுது, தப்பிவெளியேயோட முயல்கிற
நாகர்களை அருச்சுனன் அம்புகொண்டு ஊறுபடுத்தி அத்தீயினுள்ளேயே
விழுத்துதல்இலக்காயிற் றென்பது, இப்பாட்டின் உட்கோள். அருச்சுனனது
அம்புகள் வலியத்தாக்க, உரகரின் முடிமணிகளும் தீப்பொறிகளும் வானத்திலெழுந்து
தேவலோகத்துக்குவைத்த தீபங்கள்போன்றன என்றார்; தற்குறிப்பேற்றவணி.
சூடிகாமகுடகோடி, இந்த்ராலயம் – வடமொழித்தொடர்கள். சூடிகா –
உச்சிக்கொண்டை. 

‘தானவர் புரங்கள் நீறு எழ முனிந்த தமனியச் சிலைக் கை
வெள் ஊர்தி
ஆனவன் நமது புரத்தையும் சுடுவான் அழன்றனன்
போலும்!’ என்று அஞ்சி,
வானவர் நடுங்க,-வானவர்க்கு அரசு ஆம் வலாரியும்
மனன் உறத் தளர்ந்து,
‘கானவருடனே தக்ககன் என்னும் கட்செவி கெடும்’
எனக் கரைந்தான்.இந்திரன் தக்ஷகனைக்குறித்துக் கவலைப்படுதல்.

தானவர் – அசுரர்களுடைய, புரங்கள் – (முப்) புரங்களும், நீறு
எழ -சாம்பராய்ச்சிதறும்படி, முனிந்த – கோபித்து எரித்த, தமனியம் சிலை கை –
பொன்மயமான (மேரு) மலையாகிய வில்லையேந்தியகையையுடைய, வெள் ஊர்தி
ஆனவன் – வெண்ணிறமான ரிஷப வாகனத்தையுடையவனான சிவபிரான், நமது
புரத்தைஉம் சுடுவான் அழன்றனன் போலும் – (தேவர்களான) நமது நகரத்தையும்
எரிக்கும்படிகோபங்கொண்டனன்போலும், ‘ என்று – என்று எண்ணி, வானவர் அஞ்சி
நடுங்க – மேலுலகத்தார்பயந்து (உள்ளமும் உடலும்) நடுக்கமடைய,- வானவர்க்கு
அரசு ஆம் வலாரிம் – அத்தேவர்கட்கு அரசனான இந்திரனும், கானவருடனே
தக்ககன் என்னும் கட்செவி கெடும் என – ‘அக்காட்டி லுள்ளாருடனே (அங்கு
வசிப்பவனான)தக்ஷகனென்னும் பாம்பு அழிந்திடுமே! ‘ என்று சிந்தித்து, மனன் உற
தளர்ந்து கரைந்தான் – மனம் மிகத்தளர்ந்து உருகினான்; (எ-று.)

     சிவபிரான் காலாக்கினிசொரூபி யாதலால் அந்நெருப்பைச் சிவசொரூபமாகக்
கருதின ரென்றும், காண்டவமெரிக்கிற தீயை முன்பு முப்புரமெரித்த சிவபிரானது
நகைத்தீப் போன்றதெனக் கருதின ரென்றுங்கொள்க. இரட்டுறமொழித லென்னும்
உத்தியால் சிலை யென்பதற்கு மலையென்றும், வில்லென்றும் இரு பொருள் ஒருங்கு
கொள்ளப்பட்டன. வெள்ளூர்தி-அன்மொழித்தொகை. தமனியம் = தபநீயம்;
நெருப்பில்தபிக்கப்பட்டு விளங்குவதென்றும், வலாரியென்பது – வலனென்னும்
அசுரனுக்குப்பகைவனாய் அவனை யழித்தவனென்றும் பொருள்படும். கட் செவி –
கண்களையேகாதுகளாக வுடையது; பண்புத்தொகையான்மொழி: பாம்புக்கு,
கண்ணென்னும்பொறியொன்றிலேயே செவிப்புலனாகிய கேள்வியும் இருக்கு
மென்ப.     

பரந்து எழு புகையால் தம் தம வடிவம் பண்டையின்
பதின் மடங்கு ஆகச்
சுரந்திடும் புயல்கள் அனைத்தையும், ‘நெடு நீர் சொரிந்து,
அவித்திடுக!’ எனச் சொல்லி,
நிரந்தரம் அருகு விடாது தன் நிழல்போல் நின்ற
வானவரையும் ஏவி,
புரந்தரன்தானும் ஈர்-இரு மருப்புப் பொருப்பின் வெம்
பிடர்மிசைப் புகுந்தான்.-இந்திரன்தீயையவிக்கும்படி மேகங்களையேவித் தான்
தேவசேனையுடன் போர்க்குப்புறப்படுதல்.

புரந்தரன் – இந்திரன்,- பரந்து எழு புகையால் தம்வடிவம்
பண்டையின்பதின்மடங்கு ஆக சுரந்திடும் புயல்கள் அனைத்தைஉம் –
பரவியெழுகிறஅவ்வனற்புகையினால் தங்கள் தங்களுடைய உருவம்முன்னையினும்
பத்து மடங்குஅதிமாக வளர நீர் சுரக்கப்பெற்ற மேகங்களெல்லாவற்றையும்நோக்கி,
நெடு நீர்சொரிந்து அவித்திடுக என சொல்லி- ‘(நீங்கள்) மிக்க நீரைச் சொரிந்து
(அக்கினியைத்) தணிப்பீர்களாக ‘ என்று கட்டளைகூறி,- நிரந்தரம் அருகு விடாது
தன் நிழல் போல்நின்ற வானவரைஉம் – எப்பொழுதும் தன்பக்கத்தை விடாது தனது
நிழலைப்போல் அடுத்துநிற்பவரானதேவர்களையும், ஏவி – (போர்க்குப்புறப்படும்படி)
கட்டளையிட்டு, தானும்-, ஈர் இரு மருப்பு பொருப்பின் வெம் பிடர் மிசை
புகுந்தான் -நான்குதந்தங்களையுடைய மலைபோன்றவடிவமுள்ள (ஐராவத)
யானையினதுவிரும்பத்தக்க [அழகிய] பிடரியின் மேல் ஏறினான்;

     அக்கினி மிகுதியாகப் புகையையெழுப்ப அப்புகைமிகுதியால் மேகங்கள்
பதின்மடங்கு உடல் பூரித்தன என்க. மேகவாகனனாதலால்,
மேகங்களையேவலானான்.

ஏ அக விருத்தச் செவ்வியின் தனுவுக்கு ஏற்ற நாண்
முறுக்கி விட்டென்ன,
சேவக இமையோர் எண் திசா முகத்தும் செஞ் சுடர்
வாள் விதிர்த்தென்ன,
பாவகன் பகு வாய் நா விதிர்த்தென்ன, பரந்த
அப் பாவகற்கு உணவு ஆம்
தாவகம் முழுதும் வளைந்துகொண்டு எழுந்த,
சலதர சஞ்சலா சாலம்.-இந்திரன் கட்டளைப்படி யெழுந்து பரந்த மேகங்களில் மிகுதியாகத்
தோன்றிய மின்னல்களின் வருணனை.

அ பாவகற்குஉணவுஆம் – அந்த அக்கினிதேவனுக்கு உணவாகிய,
தாவகம் முழுதுஉம் – காடு முழுவதையும், வளைந்து கொண்டு – சூழ்ந்து கொண்டு,
எழுந்த – மேற்பரவிய, சலதரம் – மேகங்களில் (தோன்றிய), சஞ்சலா –
மின்னல்களின்,சாலம் – கூட்டங்களானவை,- ஏ அகம் – அம்பைத்தன்னிடத்தே
தொடுத்தற்கு உரிய,விருத்தம் – வட்டமாகிய [நன்குவளைந்த], செவ்வியின்
தனுவுக்கு – அழகிய (இந்திர)வில்லுக்கு, ஏற்ற – இயைவதான, நாண் – நாணியை,
முறுக்கி விட்டு என்ன -திரித்துவிட்டாற் போலவும்,- சேவகம் இமையோர் –
வீரத்தன்மையையுடையதேவர்கள், எண்திசாமுகத்துஉம் – எட்டுத்திக்குக்களிலும்,
செம் சுடர் வாள் விதிர்த்துஎன்ன – செந்நிறமான ஒளியையுடைய வாளாயுதங்களைச்
சுழற்றினாற் போலவும்,-பாவகன் – அக்கினி, பகு வாய் நா – (தனது) திறந்த
வாயிலுள்ள நாக்குக்களை,விதிர்த்து என்ன – வெளிச் செலுத்தியசைத்தாற்
போலவும், பரந்த – பரவின; (எ-று.)

     செந்நிறமாய் அசைந்துவிளங்குதல் பற்றி உவமை. அக்கினியினது
சுவாலைகளேழும் அவனுக்கு நா எனப்படும். ‘எழுநா’ என்று அக்கினிக்கு
ஒருபெயர். சஞ்சலா – அசையுமியல்புள்ளது என மின்னற்குக் காரணக்குறி. 

ஏறிய களிறு பிளிறு நீடு ஒலியும், எடுத்த வில் தெறித்த
நாண் ஒலியும்,
சூறிய இமையோர் பெரு நகை ஒலியும், துந்துபிக்
குழாம் அதிர் ஒலியும்,
கூறிய அனலன் சடுல வல் ஒலியும், குறை பட,
திசைதொறும் மிகுந்த-
ஊறிய புவன பவன வேகத்தோடு உருமுடை
முகிலின்வாய் ஒலியே.-அம்மேகங்களின் இடிமுழக்கத்தின் வருணனை.

ஊறிய புவனம் பவனம்  வேகத்தோடு – மிகுதியாக அமைந்த
நீரோடும்காற்றின்விசையோடும், உரும் உடை -இடியையு முடைய, முகிலின் வாய் –
மேகங்களினிடத்தில் (உண்டாகிய), ஒலி – முழங்கங்களானவை, – ஏறிய களிறு
பிளிறு நீடு ஒலிஉம்- (இந்திரன்) ஏறிவந்த (ஐராவத) யானை கர்ச்சிக்கின்ற
பேரொலியும், எடுத்த வில் நாண் தெறித்த ஒலிஉம் -(அவன்) கையிலேந்திய
வில்லின் நாணியை (விரலால்) தெறித்தலினாலாகிய ஓசையும்,சூறிய இமையோர்
பெரு நகை ஒலிஉம் – சூழ்ந்த தேவர்களுடைய பெருஞ் சிரிப்பினொலியும், துந்துபி
குழாம் அதிர் ஒலிஉம் – (தேவர்கள் முழக்குகிற) துந்துபியென்னும் வாத்தியங்களின்
கூட்டம் முழுங்குகிற முழக்கமும், கூறிய அனலன் சடுலம்வல் ஒலிஉம் – கீழ்க்
கூறப்பட்ட அக்கினியினுடைய வலிய கடுமையான ஓசையும்,குறைபட – குறையும்படி,
திசை தொறுஉம் மிகுந்த – திக்குக்கள் தோறும் மிகுந்தன;(எ-று.) -ஏ – ஈற்றசை.

     எல்லாவோசைகளையும் அடக்கி மேககோஷங்கள் மிக்குத் தோன்றின
என்பதாம். சூறுதல் – சுழலுதலாதலை, சுழல்காற்று ‘சூறை’ எனப்படுமிடத்துங்
காண்க.பெருநகை – அட்டகாசம். சடுல வோசை, 39- ஆம் கவியினும், 44- ஆம்
கவியினும்சொல்லப்பட்டதனால், ‘கூறிய’ என்ற அடைமொழி கொடுத்தார்.
வாயொலி – வாயினின்றெழுகிற ஒலி யென்ற பொருளுந்தோன்றும். இச்செய்யுளில்,
‘ஒலி’ என்ற ஒருசொல்ஒருபொருளிற் பலமுறைவந்தது –
சொற்பொருட்பின்வருநிலை. புவநம் – நீர்:வடசொல்

தூமமும் எமது; பவனனும் எமது தோழன்;
அத் தோயமும் எமதே;
யாமும் இங்கு இவற்றோடு ஒன்றுதல் ஒழிதும்; ஈர்-இரு
பொருள்களும் பிரிந்தால்,
மா முகில் எனும் பேர் எங்குளது? அடர்த்து, வாசவன்
என் செயும், எம்மை?
ஆம் முறை அறிதும்’ என்று கொண்டு அறவும் அகங்கரித்தனன்,
வெகுண்டு அழலோன்அப்பொழுது அக்கினிதேவன் கொண்ட செருக்கு.

அழலோன் – (மேகங்கள் தன்னை யவிக்கவந்ததைக் கண்ட)
அக்கினிதேவனானவன்,- ‘தூமம்உம் எமது – புகையும் எம்முடையது: பவனம்உம்
எமது தோழன் – வாயுவும் எம்முடைய நண்பன்: அ தோயம்உம் எமதுஏ – அந்த
நீரும் எம்மிடத்தினின்று தோன்றியதே: யாம்உம் இங்கு இவற்றோடு ஒன்றுதல்
ஒழிதும்- நாமும் இப்பொழுது இந்தமூன்று பொருள்களுடனேசேர்தலை
நீங்குவோம்: ஈர் இருபொருள்கள்உம் பிரிந்தால் – இந்த நான்கு பொருள்களும்
(தம்மிற் காலவாமற்)பிரிந்துவிட்டால், மாமுகில் எனும் பேர் எங்கு உளது – பெரிய
மேகமென்னும்பெயர்எவ்விடத்திலுள்ளது? [எங்குமில்லையென்றபடி]: (அது
இல்லையாகவே), வாசவன்அடர்த்து எம்மை என் செயும் – இந்திரன் பொருது
எம்மை என்செய்யமாட்டுவான்?ஆம் முறை அறிதும் – (இனி) ஆகும் வகையை
அறிவோம்,’ என்று கொண்டு -என்று எண்ணி, வெகுண்டு அறஉம்
அகங்கரித்தனன் – கோபித்து மிகவும் செருக்குப்பாராட்டினான்; (எ-று.)- ‘பவனனும்’
என்ற பாடம் சிறக்கும்.

     புகை, நெருப்பு, நீர், காற்று என்னும் நான்கின் கலப்பினாலாகியது
மேகமாதலால், அக்கினி இங்ஙனஞ்செருக்கினான்; (“தூம ஜ்யோ திஸ்ஸலில மருதாம்
ஸந்நிபாத: க்வமேக;” என்றார், காளிதாஸரும்.) எம்மையவித்தற்கு இன்றியமையாத
துணையாகக்கொள்ளப்பட்ட முகில்கள் எம்மாலழிந்தால் இந்திரன் நம்மை
வெல்லுமாறு வேறில்லையென்று கருதி அக்கினி செருக்கினனென்பதாம். பூதங்கள்
தோன்றும் முறையால் அக்கினியினின்று நீர்தோன்றிற்று என்று வேதங் கூறுகின்றது;
அதுபற்றியே ‘அத்தோயமும் எமதே’ என்றான். இச்செய்யுளின் தன்மைப்பன்மைகள்,
செருக்குப் பற்றியன. முதலிலுள்ள உம்மைகள் நான்கும், எச்சப்பொருளன. ஐந்தாவது
உம்மை – முற்று. ஆறாவது உம்மை- உயர்வுசிறப்பு. 

மூண்ட வெங் கனலை உருமின் வெங் கனலால் முருக்கி,
எம் கால் கையால் நெருக்கி,
ஆண்டவன் களிற்றின் கரம் நிகர் தாரை அருவியின்
கணங்களால் அவித்து,
பாண்டவன் பகழி தொடுக்கினும், கண்ணன் பருப்பதம்
எடுக்கினும், எங்கள்
காண்டவம் புரத்தும்’ என்று கொண்டு இழிந்து பொழிந்தன,
கணம் படு கனங்கள்.மேகங்கள் செருக்கி மழைபொழிதல்.

கணம் படு கனங்கள் – கூட்டமாகக் கூடிய மேகங்களானவை,- ‘மூண்ட
வெம் கனலை – மூண்டெரிகிற வெவ்விய அக்கினயை, உருமின் வெம் கனலால்
முருக்கி- (எங்களது) இடியிலுண்டாகும் வெவ்விய அக்கினியால் அழித்து, எம்கால்
கையால் நெருக்கி – எங்கள் கால்களாலும் கைகளாலும் அடர்த்து, ஆண்டவன்
களிற்றின் கரம் நிகர் தாரை அருவியின் கணங்களால் அவித்து – (எங்கள்)
தலைவனான இந்திரனுடைய (ஐராவத) யானையின் துதிக்கையை யொத்த
பெருந்தாரையாகிய மழைநீரருவியின் தொகுதிகளால் தணித்து, பாண்டவன் பகழி
தொடுக்கின்உம் கண்ணன் பருப்பதம் எடுக்கின்உம் எங்கள் காண்டவம் புரத்தும் –
பாண்டு குமாரனான அருச்சுனன் அம்புகளைத் தொடுத்துத் தடுத்தாலும் கிருஷ்ணன்
(முன்புகோவர்த்தனமலையைஎடுத்ததுபோல) மலையை யெடுத்து (க் குடையாகப்
பிடித்து)த் தடுத்தாலும் (தடுக்கமாட்டாதபடி முனைந்து) எங்களுடைய
காண்டவவனத்தைப் பாதுகாப்போம்,’ என்று கொண்டு – என்று உட்கொண்டு,
இழிந்து -(செருக்கோடு) இறங்கி, பொழிந்தன – மழைபொழிந்தன;

     “உஷ்ணம் உஷ்ணேந ஸாம்யதி= வெப்பம் வெப்பத்தால் தணிகிறது”
‘என்ற நியாயத்தால், மூண்ட வெங்கனலை யுருமின் வெங்கனலான் முருக்கி’
எனப்பட்டது. ‘கால்கையால்’ என்பது – மேல்நோக்கில் தொடர்மொழியாகக்
கால்கைகளால் என்று பொருள் பட்டாலும், உள்நோக்கில் தனிமொழியாக
‘காலுதலால்’ என்று பொருள்படும்; கால்கை – கைவிகுதிபெற்ற தொழிற்பெயர்:
பொழிதலென்றுபொருள். தமதுதலைவனாகிய இந்திரனாற் காக்கப்படும்
உரிமையைப்பாராட்டி, ‘எங்கள்காண்டவம்’ என்றது

காலைவாய் அருக்கன் பனி நுகர்ந்தென்ன, கட்டு
அறக் காண்டவம் என்னும்
பாலைவாய் உள்ள சராசரம் அனைத்தும் நுகர்தலின்,
பைம் புனல் வேட்டோன்,
வேலை ஏழையும் மொண்டு ஏழு மா முகிலும் விதம்
படப் பொழிந்த தாரைகளால்,
தாலு ஏழினையும் நனைத்தனன்; நனைத்தும், தணிந்ததோ,
தன் பெருந் தாகம்?மேகங்கள் சொரிந்த மழைஅவ்வளவும் கனலை
அவிக்கமாட்டாமை.

(அக்கினிதேவன்),- காலைவாய் அருக்கன் பனி நுகர்ந்து என்ன –
உதயகாலத்திற் சூரியன் பனியை முற்றும் விழுங்கினாற் போல, காண்டவம்
என்னும்பாலைவாய் உள்ள சர அசரம் அனைத்துஉம் கட்டுஅற நுகர்தலின் –
காண்டவமென்னும் கொடியகாட்டிலுள்ள ஜங்கமமும் தாவரமுமான
எல்லாப்பொருள்களையும் தடையில்லாமல் ஒருங்குஉண்டதனால், பைம்புனல்
வேட்டோன்-(தாகசாந்திசெய்தற்பொருட்டுக்) குளிர்ந்த நீரை விரும்பியவனாய்,
ஏழு மாமுகில்உம் வேலை ஏழைஉம் மொண்டு விதம் பட பொழிந்த
தாரைகளால் – ஏழுபெரிய மேகங்களும் கடல்களேழையும் முகந்து
பலவகையாகச்சொரிந்தமழைத்தாரைகளினால், தாலு ஏழினைஉம் நனைத்தனன் –
(தனது) ஏழுநாக்குக்களையும்நனைத்துக்கொண்டான்; நனைத்துஉம் – (அவ்வாறு)
நனைத்தும், தன் பெரு தாகம்தணிந்ததுஓ – அவனுடைய அதிகமான தாகம்
அடங்கிற்றோ? (எ -று.)

     மேகங்களெல்லாஞ் சொரிந்த மிக்கமழைநீர்த்தாரைகளால் அக்கினிச்
சுவாலைகள்சிறிதுநனைந்தமாத்திரமே யன்றி அதனால் அக்கினியின் உக்கிரம்
சிறிதுந் தணிந்திலதுஎன்பதாம். அதிக தாகங்கொண்டவனுடைய நாவிற்பட்ட நீர்
உடனே வறண்டுவிடுதல்போல அந்நெருப்பின் மேல்விழுந்த நீர்த்தாரைகள்உடனே
வறண்டு போயினவென்க. மனிதசஞ்சாரமில்லாமை பற்றி, ‘காண்டவமென்னும் பாலை’
எனப்பட்டது. முகில்கள் ஏழுவிதத்தனவாதலால், அவற்றின் தாரைகட்கு ‘விதம்படப்
பொழிந்த’ என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது. அருக்கன் பனி நுகர்தல் –
முற்றும் எளிதில்வறண்டதற்கு உவமை. கட்டழல் காண்டவமென்னும் என்ற
பிரதிபேதம்.   

பு’எக் கடல்களினும் இனிப் பசை இலது’ என்று, ஏழ்-இரு
புவனமும் நடுங்க,
தொக்க அடல் உருமோடு எழும் எழு கொண்டல் சோனை
அம் சுருவையால், முகந்து
மைக் கடல் வெளுக்கக் கறுத்த மெய்ம் மகவான் வழங்கிய
ஆகுதி அனைத்தும்,
நெய்க் கடல் சொரிந்தது என்னுமாறு அருந்தி, நீடு வான்
முகடு உற நிமிர்ந்தான்.மேகங்கள் செருக்கி மழைபொழியவும் அனல்
பின்னும் மிகுதல்.

மை கடல் வெளுக்க கறுத்த மெய் மகவான் – கரிய கடலும்
வெண்ணிறமான தென்னும்படி மிகக்கறுத்த உடம்பையுடைய இந்திரனாகிய
யாகஞ்செய்பவன், எழும் எழு கொண்டல் அம் சுருவையால் – மேலெழுகிற
ஏழுவகைமேகங்களாகிய அழகிய சுருவையென்னும் ஓமக்கருவியைக் கொண்டு, எ
கடல்களின்உம் இனி பசை இலது என்று ஏழ் இரு புவனம்உம் நடுங்க முகந்து –
எல்லாக்கடல்களிலும் இனி நீர்ப்பசையு மில்லையென்றுபதினான்கு
உலகங்களிலுமுள்ளஉயிர்கள் திடுக்கிடும்படி (அக்கடல்களை முற்றும்) மொண்டு,
தொக்க அடல்உருமோடு வழங்கிய – நிறைந்த வலிய இடியோசையுடனே
மிகுதியாகச் சொரிந்த, சோனை ஆகுதி அனைத்துஉம் – விடாப் பெருமழையாகிய
ஆகுதிகளையெல்லாம், (அக்கினிதேவன்), நெய்கடல் சொரிந்தது என்னும் ஆறு
அருந்தி – நெய்க்கடல் சொரியப் பட்டாற்போல உண்டு, நீடு வான் முகடு உற
நிமிர்ந்தான் – பெரிய ஆகாயமுகட்டை யளாவ ஓங்கியெரிந்தான்; (எ -று.)

     கடல்களை நெய்ப்பாத்திரமாகவும், அவற்றின் நீர்முதலியவற்றை
அப்பாத்திரத்தில்நிறைந்த நெய்யாகவும், கடல்களினின்று நீர்முதலியவற்றைக்கொண்ட
மேகத்தை அப்பாத்திரத்தினின்றுநெய்யை முகக்குஞ் சுருவை யெனுங்கருவியாகவும்,
மேகம் நெருப்பில்மழைத் தாரைசொரிதலைச் சுருவைநெருப்பில்
நெய்த்தாரைசொரிதலாகவும் இந்திரனைஓமஞ்செய்பவனாகவும் உருவகப்படுத்தினார்.
மேகம் எதிர்த்து மழைசொரிந்தவளவில் அக்கினிகோபங்கொண்டுமிக்கெரிதல், நெய்
சொரிந்தவளவில் நெருப்பு மிக்கெரிதலாகக் கொள்ளப்பட்டது: உருவகவணி.
‘பெருநெருப்புக்குஈரமில்லை’ என்றபடி அம்மழை அந்நெருப்பைச்சிறிது
தணிக்கவும்மாட்டிற்றில்லையென்பது, இப்பாட்டின் தாற்பரியம். மகவாந் –
ஐசுவரியங்களை யுடையவன்; (மகம் – ஐசுவரியம்.) இச்சொல்.
வேள்விசெய்பவனையுங்குறிக்கும். மகவானாகியமகவான் என, இங்கு ‘மகவான்’
என்றது – சிலேடையுருவகம். ‘தொக்கடலுருமோடு’ என்றதற்குஏற்ப,
உபமேயத்தில்வேதமந்திர கோஷத்தோடு எனக்கொள்க; இது ஏகதேசவுருவகம்.
கறுப்போடுநோக்க வெளுப்புக்கு எவ்வளவு வேறுபாடு உண்டோ, அவ்வளவு
வேறுபாடு இந்திரனது கருநிறத்தோடுநோக்கக் கடலினது கருநிறத்துக்குஉள்ள
தென்பது, ‘மைக்கடல் வெளுக்கக் கறுத்த மெய்’ என்றதன் கருத்து; பிரசித்தமான
கடலின்கருமையினும் மிக்க கருமையையுடைய மெய்யென்க. 

தொழு தகு விசயன், தாலு ஏழ் உடையோன் சுடர் முடி
நனைந்திடுவதன் முன்,
எழு முகில்இனமும் பொழிதரு மாரி யாவையும்
ஏவினால் விலக்கி,
முழுது உலகமும் தன்னிடத்து அடக்கிய வான் முகடு உற
முறை முறை அடுக்கி,
குழுமு வெங் கணையால் கனல்-கடவுளுக்குக் கொற்ற வான்
கவிகையும் கொடுத்தான்.-அருச்சுனன் அம்பெய்து மழையைத்தடுத்துச்
சரக்கூடங்கட்டுதல்.

தொழு தகு விசயன் – (யாவராலும்) வணங்கத்தக்க
[மிக்கசிறப்பையுடைய] அருச்சுனனானவன், தாலுஏழுஉடையோன் சுடர் முடி
நனைந்திடுவதன் முன் – ஏழுநாக்குக்களை யுடையவனான
அக்கினியினதுஒளியையுடைய முடி நனைதற்குமுன்னே, எழுமுகில் இனம்உம்
பொழிதரு மாரி யாவைஉம் ஏவினால் விலக்கி – ஏழுவகை முகிற்சாதிகளுஞ்
சாரிகிறமழைகளையெல்லாம் (தனது) அம்புகளால் தடுத்து,- முழுது உலகம்உம்
தன் இடத்துஅடக்கிய வான் முகடு உற – பூலோகம்ழுவதையுந் தன்கீழ் அடக்கிய
ஆகாயத்தினதுமேன்முகட்டை யளாவ, குழுமு வெம் கணையால் முறை முறை
அடுக்கி – கூட்டமானகொடிய அம்புகளை ஒழுங்காக அமையும்படிசெலுத்தி,
(அந்தஅம்புகளின் பரப்பினால்),கனல்கடவுளுக்கு – அக்கினி தேவனுக்கு, வான்
கொற்றம் கவிகைஉம் கொடுத்தான் – பெரியகொற்றக் குடையையுங் கொடுத்தான்;
(எ-று.)

     அவ்வக்கினயின்மேல் மழைத்துளி சிறிதும் வீழாதபடி அம்புகளை
அடத்தியாகத்தொடுத்துச் சரக்கூடங் கட்டினனென்பதாம். அக்கினிக்குமுடி –
சுடர்க்கொழுந்து.அனற்கடவுள் புனற்கடவுளால் வெல்லப்படாதென்பதை
இவ்வம்புக்குடை நன்குவிளக்குதலால், ‘கொற்றவான்கவிகை’ எனப்பட்டது. கவிகை –
கவிந்திருப்பதெனக்குடைக்குக் காரணக்குறி. ‘கவிகையும்’ என்ற உம்மை –
உணவைக் கொடுத்ததுமன்றிஎன எச்சப்பொருளது.

ஆழ் தரு பரவை ஏழும் வற்றிடுமாறு அழித்த கார்
உமிழ்ந்திடு நெடு நீர்
தாழ்தரு சரத்தால் மேய்ந்ததற்கு இடை ஓர் தனித்
திவலையும் பொசியாமல்,
வீழ்தரும் அருவி, பாவகன்தனக்கு விசயன் அன்று அளித்த
பொன்-குடைக்குச்
சூழ்தர நிரைத்துத் தூக்கிய முத்தின் சுடர் மணித் தொடையல்
போன்றனவே.இதுவும், அடுத்த கவியும் – அந்தச்சரக்கூடத்தின் வருணனை.

ஆழ் தரு பரவை ஏழ்உம் – ஆழமாகவுள்ள ஏழுகடல்களும்,
வற்றிடும்ஆறு – வற்றிவிடும்படி, அழித்த – (பருகி) ஒழித்த, கார் – மேகங்கள்,
உமிழ்ந்திடு -சொரிகின்ற, நெடு நீர் – மிக்க நீர், தாழ் தரு சரத்தான் மேய்ந்ததற்கு
இடை -நிலைபெற்ற அம்புகளினால் வேய்ந்த கூடத்திற்கு இடையே, ஓர் தனி
திவலைஉம்பொசியாமல் – ஒருசிறுதுளியும் பொசியமாட்டாமையால், வீழ்தரும் –
(அச்சரக்கூட்டத்திற்கு வெளியிற் சுற்றிலும்) விழுகிற, அருவி – நீரருவிகளானவை,-
பாவகன்தனக்கு விசயன் அன்று அளித்த பொன் குடைக்கு – அக்கினிதேவனுக்கு
அருச்சுனன்அப்பொழுதுகொடுத்த அழகிய அக்குடைக்கு, சூழ்தர நிரைத்து
தூக்கிய -சுற்றிலும்வரிசையாகக் கட்டித் தொங்கவிட்ட, முகத்தின் சுடர்மணி
தொடையல் -முத்துக்களினாலாகிய ஒளியுள்ள அழகியமாலைகளை, போன்றன –
ஒத்தன; (எ-று.)

     கவிகைபோற் சரக்கூடத்தை அருச்சுனன் கட்டியதனால் இடையே நீர்
சிறிதும்விழாமல் சுற்றிலும் நீர்விழுவது, அருச்சுனன் அக்கினிதேவனுக்கு அளித்த
சரக்கூடமாகிய கவிகைக்கு முத்துத்தொடையல் போன்றிருந்ததென்க;
தன்மைத்தற்குறிப்பேற்றவணி.
 (குடையின்சுற்றிலும் தொங்குகிற சரங்கள்,
ஜாலரென்றுஉலகில் வழங்கப்படும்.) வீழும் மழைநீர் அருவிபோலுதலால்,
அருவியெனப்பட்டது. ‘வேய்ந்ததற்கு’ என்றும் பாடமுண்டு. 

மண்டி மீது எழுந்த வன்னியின் சிகைகள், இந்திரன்
மதலை வாளிகளால்
கண்ட கூடத்திற்கு அமைத்த செம் பவளக் காண் தகு
தூண் திரள் காட்ட,
அண்ட கூடத்திற்கு இந்திரன் பளிங்கால் அமைத்த
பல் ஆயிர கோடி
சண்ட தூணங்கள் போன்றன, பரந்து தனித்தனி
முகில் பொழி தாரை.

 மண்டிமீது எழுந்த வன்னியின் சிகைகள் – நெருங்கி மேலெழுந்த
அக்கினிச்சுவாலைகள்,- இந்திரன் மதலை வாளிகளால் கண்ட கூடத்திற்கு அமைத்த
காண்தகு செம்பவளம் தூண்திரள் காட்ட – இந்திர குமாரனான அருச்சுனன்
அம்புகளினுலுண்டாக்கிய மண்டபத்தின் மேற்பகுதிக்கு (ஆதாரமாகக்கீழே) அமைத்த
அழகிய சிவந்த பவளத் தூண்களின் கூட்டங்களை யொத்திருக்க,- முகில் பரந்து
தனி தனி பொழி தாரை – மேகங்கள் பரவித் தனிச் தனிச் சொரிகின்ற
மழைநீர்த்தாரைகள், அண்ட கூடத்திற்கு இந்திரன் பளிங்கால் அமைத்த பல்
ஆயிரம்கோடிசண்டம்தூணங்கள் போன்றன – அண்டத்தின்மேல்முகட்டுக்கு
(ஆதாரமாக) இந்திரன் படிகக் கல்லினாற்செய்தமிகப்பலவலியதூண்களையொத்தன;

     இந்திரன்கட்டளையால் மேகங்கள் வந்து மிக்கமழையைச் சொரியவும்,
அவன்மகனது உதவியினால் அக்கினி இடையூறு சிறிதுமின்றிச் சொலித்தெரிந்த
தென்பதாம். பூமியிலிருந்துபார்ப்பவர்க்குச் சரக்கூடம்வரையும் தாவியெரியும்.
சுவாலைகள் – சரக்கூடமே ஒருமண்டபமாக, அதன்பவழத்தூண்களைப்
போன்றிருந்தன: சரக்கூடத்தின் மேனின்று பார்ப்பவர்க்கு வான்முகட்டிலிருந்து
மழைநீர்த்தாரைபொழிவன – அண்டத்தின் மேன்முகட்டிற்கு வைத்த பளிங்குத்
தூண்போன்றனவென்க: தற்குறிப்பேற்றவணி. மழைத்தாரையின் பருமையை
விளக்குவார், அதற்குத் தூணை உவமைகூறினார். மேகங்களையேவி
மழைபொழிவித்தவன் இந்திரனாதலால், ‘இந்திரன் அமைத்த தூணம்’ என்றது.

தக்ககன்தன்னைக் கூயினர் தேடி, சாயக மண்டபம் சுற்றி,
மிக்க விண்ணவர்கள் திரிதர, அவன்தன் மெல்லியல்,
மகவையும் விழுங்கி,
அக் கணம்தன்னில் அந்தரத்து எழலும், விழ்த்தினான்,
அம்பினால் துணித்துச்
செக் கனல் உருவச் சென்னியை-உரகர் கன்னியைத்
திருமணம் செய்தான்.தட்சகன்மனைவியை அருச்சுனன்
அம்பெய்துவீழ்த்துதல்.

மிக்க விண்ணவர்கள் – மிகுந்த தேவர்கள், தக்ககன் தன்னை கூயினர்
தேடி – (தங்கள் அரசனான இந்திரனது நண்பனாகிய) தக்ஷகனென்னும்நாகராசனைக்
கூவியழைத்துத் தேடிக் கொண்டு, சாயகம்மண்டபம் சுற்றி திரிதர –
(அருச்சுனனமைத்த) சரக்கூடத்தைச் சூழ்ந்து திரிய,- அவன் தன்மெல்லியல் -அந்தத்
தக்ஷகனுடைய மனைவி, மகவைஉம் விழுங்கி – (தனது) குட்டியான சிறுநாகத்தையும்
வாயினுட்கொண்டு, அந்தரத்து எழலும் – (தப்பிப் பிழைத்தற்பொருட்டு)
வானத்தின்மீதுபறந்தெழுந்த வளவில்,- உரகர் கன்னியை திருமணம் செய்தான் –
நாககன்னிகையைவிவாகஞ்செய்து கொண்டுள்ளவனான அருச்சுனன், அ
கணந்தன்னில் -அந்தக்ஷணத்திலே, செம்கனல் உருவம் சென்னியை – சிவந்த
அக்கினிபோன்றநிறத்தையுடைய (அந்த நாகமாதின்) தலையை, அம்பினால்
துணித்து – (தான் எய்த)பாணத்தினால் துண்டித்து, வீழ்த்தினான் –
(அப்பெண்பாம்பைக்) கீழே தள்ளினான்; (எ-று.)

     சிலகாலத்துக்கு முன்னே ஒருநாககன்னிகையை விரும்பி மணஞ்செய்து
கொண்டவன், அக்கினிக்குத் தான் உறுதிமொழி யளித்ததையே முக்கியமாகக்
கொண்டு,ஒருநாகமாதை அம்பினால் துணித்துவீழ்த்தின னென அருச்சுனனது
பட்சபாதமற்றஉறுதி நிலையை விளக்கினார். உரகர் கன்னி – உலூபி. அருச்சுனன்
அம்பினால் துணித்து வீழ்த்தியபோது அந்நாகமாதின் தலையும் உடலும் வேறாகித்
தலை அக்கினிக்குவெளியிலும் உடல் அக்கினிக்கு உள்ளுமாக விழந்ததனால்,
தாய்இறக்க, அதன்வாயிலுள்ளமகன் மாத்திரம் வால்துணிப்புண்டவளவோடு
பிழைத்தன னென்று அறிக. செக்கர் தீநடுவட்சென்னியை என்று பிரதிபேதம்

மருவு அயில் சதகோடியின் இறை, ஐராவதத்தின் மும்
மதத்தினால் நனைத்து,
கரு வயிற்று எழிலித் தாரையால், வருணக் கடவுள்தன்
கணைகளால், அவித்து,
செருவயின் புரள ஒதுக்கி, அத் தோழன் சிறுவனைச் சென்று
எடுத்து அணைத்தான்;
ஒருவயின் பிறந்தோன் ஆதலின், மகவானுடன் உடன்றிலன்,
உதாசனனே.தட்சகன்மகவை இந்திரன் அரிதிற் பாதுகாத்தல்.

(உடனே), மருவு அயில் – பொருந்திய கூர்மையைக் கொண்ட,
சதகோடியின் – வச்சிராயுதத்தையுடைய, இறை – (தேவ) ராசனான இந்திரனானவன்,-
சென்று – (அருகிற்) போய், ஐராவதத்தின் மும் மதத்தினால் நனைத்து – (அந்த
நாகமாதின் துணி பட்டதலையைத் தான் ஏறிய) ஐராவதமென்னும்யானையின்மூன்று
வகை மதநீரினால் நனைத்து, கரு வயிறுஎழிலி தாரையால் வருணக் கடவுள் தன்
கணைகளால் அவித்து – சூல்கொண்ட  வயிற்றையுடைய மேகங்களின்
மழைத்தாரைகளாலும்  வாருணாஸ்திரங்களினாலும் (அதிற்பற்றிய தீயைத்) தணித்து,
செருவயின் புரள ஒதுக்கி – அப்போர்க்களத்தினின்று புரண்டுவிலகும்படி
(அத்தலையை) ஒதுக்கி, அ தோழன் சிறுவனை எடுத்து அணைத்தான் –
(அதனுள்ளேயிருந்து பிழைத்த) தனதுநண்பனான தக்ஷகனது குமாரனை எடுத்து
அணைத்துக்கொண்டான்; (அங்ஙனம் அருகில் வருகையில் இந்திரனை அக்கினி
சுடாதிருந்த காரணம் என்னெனின்,-) உதாசனன் – அக்கினிதேவன், மகவானுடன் –
இந்திரனுடன், ஒரு வயின் பிறந்தோன் ஆதலின் – ஓரிடத்திற் பிறந்தவனாதலால்,
உடன்றிலன் – (இவனைப்) பகைத்துச் சுட்டானில்லை; (எ-று.)

     அக்கினி, இந்திரனுடன் பிறந்தவனாதலால், அவ்வுடற்பிறப்பலாகிய அன்புபற்றி
அவனை  யெரித்தில னென்று தற்குறிப்பேற்ற வகையாற் கவி காரணங்
கற்பித்துக்கூறினார். திருமாலினதுமுகத்தினின்று இந்திரனும் அக்கினியும் தோன்றின
ரென்று (முகாதிந்த்ரஸ்சாக்னிச்ச) வேதம் கூறும். ஐராவதத்தின்மே லேறியுள்ள
இந்திரன்அருகிற் சென்றபோது, அந்த யானையின் மதநீர் அந்தப் பாம்புத்தலையின்
மேற்சொரிந்ததனால் ‘ஐராவதத்தின் மும்மதத்தினால் நனைத்து ‘ என்றார்.

அன்னை வாயொடு தன் வாலதி துணியுண்டு அலமரும்
அச்சுவசேனன்-
தன்னை வாசவன் போய் வீடு கண்டுழி, அத் தனஞ்சயன்,
தனது வெங் கணையால்,
முன்னை வானவரை முனை முகந்தன்னில் முதுகிட
முதுகிட முருக்கி,
பின்னை வாரிதங்கள் ஏழையும் பொருது, பின்னிடப்
பின்னிடப் பிளந்தான்.அதுகண்ட அருச்சுனன் கோபாவேசங்கொண்டு பொருதல்.

அன்னை வாயொடு தன் வாலதி துணியுண்டு அலமரும் – (தனது)
தாயின் தலை துணிப்புண்டபோது (அதன் நெஞ்சினுள்ளேயிருந்த) தனது வாலும்
(அதனோடு) துணிக்கப்பட்டுத் துடிக்கின்ற, அச்சுவசேனன் தன்னை –
அசுவசேனனென்னும்பெயருள்ள தக்ஷகபுத்திரனை, வாசவன் போய் வீடு கண்ட
உழி -இந்திரன் சென்று (இவ்வாறு) விடுவித்தபொழுது, அ தனஞ்சயன் –
(அதுகண்டுபெருங்கோபங்கொண்ட) அவ்வருச்சுனானவன், தனது வெம்
கணையால்-தன்னுடையகொடிய அம்புகளினால், முன்னை – முதலில், வானவரை –
(தன்னையெதிர்த்த) தேவர்களை, முனை முகந்தன்னில் முதுகுஇட முதுகுஇட
முருக்கி- போர்க்களத்தில் மேன்மேற் புறங்கொடுக்கும்படி பொருது, பின்னை –
(அதன்) பின்பு,வாரிதங்கள் ஏழைஉம் – ஏழுமேகங்களையும், பொருது –
போர்செய்து, பின்னிடபின்னிட பிளந்தான் – மேன்மேற் பின்னிடும்படி
பிளந்திட்டான்; (எ-று.)

     வாய் – தலைக்கு, ஆகுபெயர். அலமரும், அலமா – பகுதி. கண்டுழி –
தொகுத்தல், அடுக்குக்கள், தொடர்ச்சிபற்றியன.

தீர மால் பொருது வீடு கண்டதன் பின், செக்கர் மெய்த்
தக்ககன் பயந்த
பார மாசுணம், ‘அவ் விசயனுக்கு யாவர் பகை?’ எனப்
பலரையும் வினவி,
‘சூரன் மா மதலை சரணமே அரணம் நமக்கு’ எனத்
தொழுது போய் எய்தி,
வீர மா முனை வெம் பகழி ஆகியது; எம் மேதினியினும்
பெரு வார்த்தை.அசுவசேனன் அஸ்திரமாய்க் கர்ணனை யடைதல்.

மால் தீரம் பொருது வீடு கண்டதன்பின் – இந்திரன் தைரியத்தோடு
போர்செய்து (அசுவசேனனை) விடுவித்தபின்பு,- செக்கர் மெய் தக்ககன் பயந்த
பாரம்மாசுணம் – செந்நிறமான உடம்பை யுடையனும் தக்ஷகன்பெற்றதுமான பருத்த
அப்பாம்பானது, அ விசயனுக்கு யாவர் பகை என பலரைஉம் வினவி – (தனது
தாயைக் கொன்று தன்னையும் வாலறுத்த) அந்த அருச்சுனனுக்குப் பகையாயுள்ளவர்
யாரென்று பலரையும் விசாரித்து, (அவனுக்குப் பகைவன் கர்ணனே யென்று
பலருஞ்சொல்லக்கேட்டறிந்து), சூரன் மா மதலை சரணம்ஏ நமக்கு அரணம் என
போய் தொழுது எய்தி – சூரியனது சிறந்தகுமாரனான அக்கர்ணனுடைய
பாதங்களேநமக்குப் புகலிடமென்று எண்ணிச் சென்று வணங்கி (அவனைச்)
சரணமடைந்து, வீரம்மா முனை வெம் பகழி ஆகியது – உக்கிரங்கொண்ட சிறந்த
நுனியையுடைய கொடியஅம்பாய் அமைந்தது; எ மேதினியின்உம் பெரு வார்த்தை
– (இது) எவ்வுலகத்திலும்பிரசித்தமாகச் சொல்லப்படும் விஷயமாம்; (எ-று.)

      ‘மால்’ என்பது – இந்திரனுக்கு ஒருபெயராதலைத் திவாகரத்தாலும் அறிக.
அவ்வனத்தினின்று ஓருயிரையும் பிழைக்கவிடுவதில்லை யென்று அருச்சுனன்
செய்கிறமுயற்சிக்கு இந்திரன்நெருங்கி வந்து மாறுசெய்ததும் வாருணாஸ்திரம்
பிரயோகித்ததுமே, ‘பொருது’ எனப்பட்டன. பாண்டவர்களும் துரியோதனாதியர்களும்
துரோணாசாரியரிடத்தில் கற்றுத்தேர்ந்த பின்பு தம் தம் திறங்காட்டியபோது கர்ணன்
தான் இடையில் வலியப்பிரவேசித்துத் தன் திறங்காட்டி அருச்சுனனோடு மாறுபட்டு
“முனைந்த போரில் முடி துணித்து உன் முகசரோருகத்தினாற் சினந்தணிந்து அரங்க
பூசை செய்வன்” என்று சபதங்கூறியுள்ளானாதலால், அவன் அருச்சுனனுக்குப் பகை
யென்பது பிரசித்தம். வீரம்மா முனை என்பதற்கு – பராக்கிரமத்துக்கு இடமான
பெரிய போருக்கு உரிய எனினும்அமையும். திருமாலாற் கொல்லப்பட்ட
மதுகைடபரென்னும் அசுரர்களுடைய மேதசினால் [உடற்கொழுப்பினால்] நனைந்தமை
பற்றி, பூமிக்கு, மேதிநீ என்று பெயர்: அதன் திரிபு ஆகிய மேதினி என்பது –
இங்கு, பொதுப்பட, உலகமென்றமாத்திரமாய் நின்றது

தோழன் மா மகனைக் கண்டபின், தனது தோழனை
ஒருவயின் காணான்,
வேழ மா முகத்தில் கைத் தலம் புடைத்தான், விழிகள்
ஆயிரங்களும் சிவந்தான்;
யாழ மாதிரத்தின் எதிர்ஒலி எழுமாறு எயிற்று இள நிலவு
எழ நகைத்தான்;
தாழ மா நிலத்தில் நின்று அமர் விளைக்கும் தன்
பெருந் தனயனை முனிந்தான்.இந்திரன் அங்குத் தட்சகனைக் காணாமல் அருச்சுனன்மீது
கோபித்தல்.

(இந்திரன்), தோழன் மா மகனை கண்டபின் – (தனது நண்பனான)
தக்ஷகனுடைய சிறந்த குமாரனாகிய அசுவசேனனைக் கண்டபின்பு, தனது தோழனை
ஒரு வயின் காணான் – தனது நண்பனான அத்தக்ஷகனைஓரிடத்துங் காணாதவனாய்,
(அவ்வருத்தத்தால்,) வேழம் மா முகத்தில் கைத்தலம் புடைத்தான் – (தான் ஏறிய)
ஐராவதயானையின் பெரியமத்தகத்தின்மேற் கையைப் புடைத்து, விழிகள்
ஆயிரங்கள்உம் சிவந்தான் – (கோபத்தால்) ஆயிரங்கண்களுஞ் சிவக்கப்
பெற்றவனாய்,மாதிரத்தின் எதிர் ஒலி எழும் ஆறு – திக்குக்களிற் பிரதித்தொனி
யுண்டாகும்படி,எயிறு இள நில எழ நகைத்தான் – (தனது) பற்களின்
இளநிலாப்போன்ற வொள்ளொளிவெளிவீசத் சிரித்து, தாழ மா நிலத்தில் நின்று
அமர்விளைக்கும் தன் பெருந்தனயனை- கீழே பெரிய பூமியில் நின்று – (அங்கு
நின்றபடியே) பெரும்போர் செய்கிற தனதுசிறந்தபுத்திரனான அருச்சுனனை,
முனிந்தான் – கோபித்தான்; (எ-று.) -யாழ -முன்னிலையசை யாகற்பாலது
அசைநிலையாய் நின்றது.

     தான்பெற்ற சிறந்த புதல்வன்மீது கோபிக்கும்படி தக்ஷகனிடம் இந்திரனுக்கு
இருந்த நண்பின்சிறப்பு, இதில் விளங்கும். தாழ – கீழாக. தான்கீழ்நின்றபடியே
மேலுள்ளாரை வெல்லுமாறு போர் செய்தலின் அருமைதோன்ற, ‘தாழ மாநிலத்தில்
நின்று அமர் விளைக்கும்’ என்றார். கையைக் கீழேபுடைத்தல் – கோபாவேசத்தின்
காரியம். கண்சிவத்தல் – கோபக்குறி.

மேக சாலங்கள் இளைத்ததும், திளைத்து மேலிடு
விண்ணவர் அணிந்த
யூக சாலங்கள் உடைந்ததும், கண்டான், உருத்து எழுந்து
உள்ளமும் கொதித்தான்,
ஏக சாபமும் தன் ஏக சாயகமும் இமைப்பு அளவையின்
விரைந்து எடுத்தான்,
பாகசாதனனும்; ஏனைய திசையின் பாலரும் பகடு
மேற்கொண்டார்.இந்திரனும் மற்றைத் திக்குப்பாலகர்களும்
போர்க்கு எழுதல்.

பாகசாதனன்உம் – இந்திரனும்,- மேக சாலங்கள் இளைத்தது உம் –
(தான் ஏவிய) மேகக்கூட்டங்கள் இளைப்படைந்ததையும், திளைத்து மேலிடு
விண்ணவர் அணிந்த யூகம் சாலங்கள் உடைந்ததுஉம் – இடைவிடாது நெருக்கிச்
சென்றெதிர்த்த தேவர்கள் வகுத்த படைவகுப்பின் கூடங்கள் அணிகுலைந்ததையும்,
கண்டான் – பார்த்து, உருத்து எழுந்து உள்ளம்உம் கொதித்தான்- கோபித்துப்
பொங்கி மனமும் வெதும்பப்பெற்று, தன் ஏக சாபம்உம் – ஒப்பற்றதனதுவில்லையும்,
(தன்) ஏக சாயகம்உம் – ஒப்பற்ற தனது அம்பையும், இமைப்புஅளவையின் விரைந்து
எடுத்தான் – கண்ணிமைப் பொழுதிலும் விரைவாக எடுத்துக்கொண்டான்; ஏனைய
திசையின்பாலர்உம் – மற்றைத் திக்பாலகர்களும், பகடுமேல்கொண்டார் – (தம் தம்)
வாகனங்களில் ஏறிக்கொண்டார்கள்; (எ-று.)

     இந்திரன், அக்கினி, யமன், நிருருதி, வருணன், வாயு, குபேரன், ஈசாநன்
என்னும் எண்மரும் அஷ்டதிக்பாலகர்; இவர்களைக் கிழக்கு முதலாக முறையே
கொள்க. இவர்களில் அக்கினிக்கு ஆட்டுக்கடாவும், யமனுக்கு எருமைக்கடாவும்,
வருணனுக்கு ஆண்முதலையும், வாயுவுக்கு ஆண்மானும், குபேரனுக்கு ஆண்
குதிரையும், ஈஸாநனுக்கு எருதும் வாகனங்களாம்; ஆதலால், விலங்கின்
ஆண்பெயராகிற ‘பகடு’ என்ற சொல்லாற் குறித்தார். ‘சுருங்கச் சொல்லல்’ என்னும்
அழகு பொருந்த இங்ஙனம்கூறியதில், உபலக்ஷணவிதியால், நிருருதிக்கு
வாகனமாகியநரனும் அடங்கும். ஏகசாயகமுமிந்திரதனுவும் என்று பிரதிபேதம்

தேவரும், கோடி தேவருக்கு ஒருவர் சிரங்களாய்
நின்ற முப்பத்து
மூவரும், தம்தம் வாகம் மேற்கொண்டு முந்துற வந்து
வந்து அணிந்தார்;
யாவரும் புவனத்து, ‘இன்றுகொல் உகத்தின் இறுதி!’
என்று இரங்கினர் நடுங்க,
மே வரும் மனிதர் இருவரோடு அநேக விபுதரும் வெகுண்டு
போர் விளைத்தார்.மற்றுமுள்ள தேவர்களும் வந்துபொருதல்.

தேவர்உம் – (முப்பத்துமுக்கோடி) தேவர்களும், கோடி தேவருக்கு
ஒருவர் சிரங்கள் ஆய் நின்ற முப்பத்துமூவர்உம் – ஒவ்வொருகோடி தேவர்களுக்கு
ஒவ்வொருவர் தலைமையாய்நின்றமுப்பத்துமூன்று தேவர்களும், தம் தம் வாகம்
மேல்கொண்டு – தங்கள் தங்களுக்கு உரிய வாகனங்களில் ஏறிக்கொண்டு, முந்துற
வந்து வந்து அணிந்தார் – முற்பட வந்துவந்து அணிவகுத்தார்கள்; (பின்பு),
புவனத்துயாவர்உம் – உலகங்களிலுள்ள எல்லோரும், உகத்தின் இறுதி இன்றுகொல்
என்றுஇரங்கினர் நடுங்க – கற்பமுடிவு காலம் இப்பொழுதுதானோ என்று பரிதபித்து
அஞ்சும்படி, அநேக விபுதர்உம் – (இங்ஙனம்கூடிய) தேவர்கள் பலரும், மேவரு
மனிதர் இருவரோடு – கூடிநின்ற (கிருஷ்ணார்ச்சுனராகிய) மனிதரிருவருடனே,
வெகுண்டு போர் விளைத்தார் – கோபித்துப் போர்செய்தார்கள்; (எ-று.)

     முப்பத்துமூவரென்று இயற்கை யெண்பற்றிக்கூறினாராயினும், ஏற்புழிக்
கோடலால், முப்பத்துமூவரில், அஷ்டவசுக்களைச்சேர்ந்த ஒருவன் சாபத்தினால்
வீடுமனாகப்பிறந்திருத்தலால் அவனை நீங்கி அவரைமுப்பத்திருவரென்றே
கொள்ளுதல் சாலும். யான் முன்னே யான்முன்னே யென்று மிக்க உற்சாகத்தோடு
ஒருவரினும் ஒருவர் முற்பட்டு விரைந்துபோர்க்குவருதல் சிறந்தவீரரது
இயல்பாதலால்’ முந்துற வந்து வந்து அணிந்தார் ‘என்றார். 

பச்சை வாசிகளும் செய்யன ஆக, பாகரும்
பதங்களே அன்றித்
தச்ச வாளிகளால் கரங்களும் இழந்து, தனிப்
பெருந் திகிரியும் தகர,
உச்ச மா மகத்தில் பண்டு ஓடிந்து ஒடியாது ஒழிந்தன
பற்களும் ஒடிய,
அச்சமே துணையா, அருக்கனும் ஒழிந்த அருக்கர்
பன்னொருவரும் அகன்றார்.-துவாதசாதித்தர் தோற்றோடுதல்.

பச்சை வாசிகள்உம் செய்யன ஆக – (தங்கள் தேரிற்பூட்டிய)
பச்சைநிறக்குதிரைகளும் (அம்புபட்டு இரத்தங்குழம்பியதனாற்)
செந்நிறமுடையனவாகவும் பாகர்உம்-(தங்கள்) தேர்ப்பாகர்களான அருணர்களும்,
பதங்கள்ஏ அன்றி – (இயல்பாகக்) கால்களின்றி யிருத்தல் மாத்திரமேயன்றி,  தச்ச
வாளிகளால் கரங்கள்உம் இழந்து – தைத்த அம்புகளினாற் கைகளையும் இழக்கவும்,
பெருதனி திகிரிஉம் தகர-பெரிய ஒற்றைச்சக்கரங்களும் உடையவும், பண்டு உச்சம்
மாமகத்தில் ஒடிந்து ஒடியாது ஒழிந்தன பற்கள்உம் ஒடிய-முன்பு உயர்ந்த பெரிய
(தக்ஷமுனிவனது) யாகத்தில் ஒடிந்தவை போக ஒடியாது மிச்சப்பட்ட பற்களும்
ஒடியவும், அருக்கன்உம்-(பூஷா என்னுஞ்) சூரியனும், ஒழிந்தஅருக்கர்
பன்னொருவரும்- மற்றைச் சூரியர் பதினொரு பேரும், அச்சம்ஏ துணை ஆ
அகன்றார்-பயமே(தமக்குத்) துணையாக அமைய ஓடிப்போனார்கள்; (எ-று.)

     துவாதசாதித்தியராவார் – இந்திரன், தாதா, பர்ஜந்யன், த்வஷ்டா, பூஷா,
அரியமா, பகன், விவஸ்வான், விஷ்ணு, அம்சுமான், வருணன், மித்ரன் என்னும்
பெயரினர். இவர்களில் பூஷாவென்னும் சூரியன் தஷமுனிவன் செய்த யாகத்தில்
வீரபத்திரக் கடவுளாற் பல்லொடிந்தமை பற்றி, அவனைத் தனியே யெடுத்துக்கூறி,
மற்றையோரை ‘ஒழிந்தபன்னொருவர்’ என்றார். தனது திருமகளாய்த்திருவவதரித்த
அம்பிகையைப் பரமசிவனுக்குத்திருமணஞ்செய்து கொடுத்த தக்ஷப்பிரஜாபதி,
மாமனாகிய தனக்குத் தக்க மரியாதை செய்தில னென்ற காரணத்தாலும் மற்றுஞ்
சிலகாரணங்களாலும் சிவபிரான்மேற் சினங்கொண்டு அவ்வுமாமகேசுரர்களை
வரவழையாது அவிர்ப்பாகமுங் கொடாமல் அவமதித்து
மற்றைத்தேவர்முனிவராதியோருடனே பெரியதொருயாகத்தைச் செய்யாநிற்கையில்,
தாக்ஷாயணி தனது தாய்தந்தையரையும் தங்கை தமக்கை முதலிய சுற்றத்தாரையும்
ஒருங்கு கண்டு கூடிக் குலாவலாமென்னுங் கொள்கையால் தான் மாத்திரம்
அவ்வேள்விக்குச் சென்று அங்கு அம்முனிவன் தன்னை அலட்சியஞ்செய்து
தன்பதியையும் பழித்ததனால் அக்கினிபிரவேசஞ்செய்து தஷபுத்திரியான உருவத்தை
யொழிக்க,  அதுகேட்டுச்சுடுசினங்கொண்ட உருத்திரமூர்த்தி தனது சடையைக்
கீழேயடித்து அதனினின்று தோன்றிய வீரபத்திரக்கடவுளை நோக்கி
‘நீசென்றுதக்கன்வேள்வியை அழித்து வருக’ என்று கட்டளையிட, அவ்வீரன்,
அம்பிகையின் அமிசமான காளியோடும்பலவகைப்பூதகணங்களோடும் புறப்பட்டுப்
போய் யாகசாலையில் தீப்பற்றவைத்து, யூபஸ்தம்பத்தை ஒடித்துவிட்டு, அங்கு
எதிர்ப்பட்ட தேவேந்திரனை வெள்ளையானையுடனே அள்ளியெடுத்து
நிலத்திலரைத்தும், அக்கினியின்கைகளையும் நாக்கையும் அறுத்தும், யமனை எலும்புந்
தசையும் அழியச் சிதைத்தும், நிருருதியின் கைகளைத்தறித்தும், வருணனைக் கடலில்
வீசியும், வாயுவை அண்டகோளகைமுகட்டி லடித்தும், குபேரனைச் செண்டாடியும்,
பகனென்னுஞ் சூரியனது கண்களைப் பறித்தும், அரியமாவென்னும் ஆதித்யனது
தோள்களையறுத்தும், பூஷாவினது பற்களை யுதிர்த்தும், சந்திரனைத்
தரையில்தேய்த்தும், வசுக்களையும் மருத்துவரையும் இரத்தஞ் சிந்தப்புடைத்தும்,
மானுருக்கொண்டு ஓடின யாகபுருஷனது கொம்புகளைப் பிடுங்கியெறிந்தும், பிருகு
முனிவனது நெற்றிமயிரைப் பறித்தும் பங்கஞ்செய்து, தக்ஷமுனிவனையுந்
தலைதுணித்துவேள்வியை யழித்து மீண்டனனென்பது, இங்கு அறியவேண்டிய கதை.
‘அருக்கன்’ என்றது-அந்த மாதத்துக்குஉரிய சூரியனையும், ஒழிந்த அருக்கர்
பன்னொருவரென்றது-  மற்றைப் பதினொரு மாதங்கட்கும் உரிய சூரியர்களையுமெனினுமாம். பச்சைநிறக்குதிரையும் இடைக்குக்கீழ்ப்பட்ட
உறுப்பில்லாத அருணனாகிய பாகனும்,ஒற்றைத் தனியாழித்தேரும் ஆதித்தனுக்கு
உரியனவாதலாற் கூறப்பட்டன. தச்ச-தைத்த:போலி. பன்னொருவர்=பதினொருவர்
மரூஉ.  

மாறு பட்டுழி அப் பற்குனன் கணையால் மழுக்களும்
சூலமும் உடைய,
நீறுபட்டு உடலில் நீற்றுடன் படிய, நெடுங் கொடி
ஊர்தி ஏறுகளும்,
ஏறுபட்டு அழிய, சடையில் வார் நதியால் ஏறிய
தூளி வான் நெறியும்
சேறு பட்டிடுமாறு ஓடினார் மீள, பதினொரு திறல்
உருத்திரரும்.ஏகாதசருத்திரர்கள் தோற்றோடுதல்.

திறல் பதினொரு உருத்திரர்உம் – வலிமையையுடைய
ஏகாதசருத்திரர்களும்,-மாறுபட்ட உழி – எதிர்த்துப்போர்செய்தபோது, அ பற்குனன்
கணையால் – அந்தஅருச்சுனனது அம்புகளால், மழுக்கள்உம் சூலம்உம் உடைய –
(தம்தமது ஆயதங்களாகிய) மழுவும்சூலமும் உடைபடவும்,  நீறுபட்டு உடலின்
நீற்றுடன் படிய- (அந்தஉடைந்த ஆயுதங்கள்) நீறாகப்போய் (அந்தப்பொடி)
தங்களுடம்பிலே (இயல்பாகப்பூசியுள்ள) விபூதியுடனேபடியவும்,- நெடுங்கொடி
ஊர்திஏறுகள்உம் ஏறுபட்டு அழிய – (தங்கட்கு) உயர்ந்த துவசமும் வாகனமுமான
எருதுகளும் பின்னப்பட்டு அழியவும், – (தாங்கள் ஓடிச்செல்லுங்காலத்து),
சடையில்வார்நதியால் – (தங்கள்) சடையினின்றுவழிகின்ற  கங்கைநதிப்
பொருக்கினால்,ஏறிய தூளி – (போரில்) மேற்கிளம்புகிற புழுதி, வான் நெறிஉம்
சேறுபட்டிடும் ஆறு -தேவலோகத்து வழியளவும் சேறுபட்டிடும்படியும், மீள
ஓடினார்-(தம்மிடத்துக்குத்)திரும்பும்படி புறங்கொடுத்தோடினார்கள்;

      ‘நீறுபட்டுடலினீற்றுடன்படிய’ என்றும், ‘ஏறுகள் ஏறுபட்டழிய என்றும்
கூறியது-கவிசமத்காரம். ஏறு-ரிஷபம். ஏறுபட்டு என்றவிடத்து ‘ஏறு’ –
படைக்கலத்தழும்பு: வாளேறு, வில்லேறு என வருதலுங்காண்க.

எண்ணிய வசுக்கள் எண்மரில் கங்கை என்னும் யாய்
வயிற்றில் உற்பவித்த
புண்ணியன் ஒழிந்தோர் எழுவரும், தங்கள் புய வலிமையின்
பொருதிடுவார்
நண்ணிய அமரில், விசயன் வெங் கணையால் நாப் புலர்ந்து,
உள்ளமும் நடுங்கி,
அண்ணிய நிலயம் புகுந்தனர் என்றால், நிற்பரோ,
ஆயுள்வேதியரே?வசுக்களும் அசுவிநீதேவரும் தோற்றோடுதல்.

எண்ணிய வசுக்கள் எண்மரில் – எண்ணித்தொகையிடப்பெற்ற
வசுக்களெட்டுப்பேரில், கங்கை என்னும் யாய் வயிற்றின் உற்பவித்த புண்ணியன்
ஒழிந்தோர்எழுவர்உம் – கங்கையென்னுந் தாயின் வயிற்றில் (வீடுமனாய்த்)
தோன்றியுள்ளநல்வினையுடையோனான பிரபாசனென்பவ னொழிந்தவரான
ஏழுபேரும்,- தங்கள் புயம் வலிமையினாற் போர்செய்திடுபவர்களாகி,
நண்ணியஅமரின்-நேர்ந்தயுத்தத்தில், விசயன் வெம் கணையால் – அருச்சுனனது
கொடிய அம்புகளினால், நாபுலர்ந்து – நா ஈரம்வறளப்பெற்று, உள்ளஉம் நடுங்கி –
மனமும் நடுங்கி, அண்ணியநிலயம் புகுந்தனர் – (தாம்) தங்கியுள்ள இடத்துக்குப்
போய்ச்சேர்ந்தார்கள்,  என்றால்-என்று சொன்னால், ஆயுள்வேதியர் நிற்பர்ஓ-தேவ
வைத்தியர்களானஅசுவிநீதேவர்கள் (ஓடாது) நிற்கமாட்டுவரோ? (மாட்டார்; ஓடின
ரென்றபடி); (எ- று.)

     புயவலிமையாற் பொருதிடுபவரான வசுக்களேபுறங்கொடுத்து ஓடின ரென்றால்,
வைத்தியஞ்செய்தலையே தம்தொழிலாகவுடையவரான அசுவிநீதேவர்கள்
அருச்சுனன்முன் போருக்கு நிற்கமாட்டுவரோ? என்பதாம்.இங்ஙனம்
ஒருபொருளைச்சொல்லி அதுகொண்டு கைமுதிகநியாய மென்னும்
தண்டாபூபிகாநியாயத்தால் மற்றொரு பொருளைச் சாதிப்பது –
தொடர்நிலைச்செய்யுட்பொருட்பேறணி. தலைமைத்தேவர்களில் ஆதித்தர்
பன்னிருவரும் உருத்திராபதினொருவரும் வசுக்களெழுவரு மாகிய முப்பதுபேர்
போரிற்பல் முதலிய சிதைய அடிபட்டுத் தம் வீடுசேர்ந்தன ரென்றால்,
தேவர்கட்குவைத்தியஞ்செய்தற்கே யமைந்தவர்களான அசுவிநீ தேவரிருவர்
அவ்வாதித்தர் முதலியோர்க்கு நோய்தீர்க்குமாறுவைத் தியஞ்செய்தற்குச்
செல்லக்கடவரே யன்றிப் போரில் நிற்கக்கடவரோ? என்ற பொருளும் இதில்
தோன்றும்.  

அருண வெங் கனலோன் கனலொடு கலந்தான்; ஆசுகன்
அவற்கு நண்பு ஆனான்;
கருணை இல் யமனும் கானிடை மடியும் கணத்திலே
கவலை உற்றனனால்;
வருணனும் கடல்கள் வறத்தல் கண்டு அழிந்தான்; மதியும்,
அம் மதி முடித்தவனும்,
இருள் நிற அரக்கன்தானும், ‘இங்கு இவரோடு எங்ஙனம்
பொருதும்!’ என்று இளைத்தார்.திக்பாலகர்கள் போர்செய்ய மாட்டாமை.

அருணம் வெம் கனலோன் -செந்நிறத்தையுடைய வெவ்விய
அக்கினிதேவன், கனலொடு கலந்தான் – (அவ்வனத்தை யெரிக்கிற) அக்கினியோடு
சேர்ந்தான்: ஆசுகன் – வாயுதேவன், அவற்கு நண்பு ஆனான் -(வனத்தையெரிக்கிற)
அந்த அக்கினிக்குத் துணையாய்விட்டான்; கருணை இல் யமன்உம் –
அருளில்லாதவனான யமனும், கானிடை மடியும் கணத்திலே கவலைஉற்றனன் –
அக்காண்டவவனத்தில் மிகுதியாக அழிகிற சீவராசிகளைக் கவர்தலிலேயேகவலை
மிக்கவனானான்; வருணன்உம்-, கடல்கள்வறத்தல் கண்டு அழிந்தான்-(எழுவகை
மேகங்களும் ஒருங்குமுகந்துகொள்ளுதலாற்) கடல்களெல்லாம் வற்றுதலைக்கண்டு
மனமழிந்தான்; மதிஉம்-குபேரன்உம், அம் மதி முடித்தவன்உம் – அழகியசந்திரனை
முடியிற்பூண்டவனாகிய சிவனும், இருள் நிறம் அரக்கிதான்உம் – கரிய
நிறத்தையுடைய நிருருதியும், இங்கு இவரோடு எங்ஙனம் பொருதும் என்று
இளைத்தார்-இப்பொழுது இந்தக் கிருஷ்ணார்ச்சுனர்களோடு (நாம்) எவ்வாறு
போர்செய்வோமென்று இளைப்படைந்து போனார்கள்; (எ – று.) – ஆல் –
ஈற்றசை.தான் – அசை.

     அறுபத்துமூன்றாஞ் செய்யுளில் ‘ஏனையதிசையின்பாலர்’ எனப்பட்ட
எழுவருடைய நிலைமையை இச்செய்யுளிற்கூறுகின்றாரென்க. ஸோமன் என்ற
வடசொற்போலவே அதன்பரியாயநாமமான மதியென்பதும் சந்திரனுக்கேயன்றிக்
குபேரனுக்கும் வழங்கும். எழுவரில் நால்வர் வேறுபட்டுப்போர்செய்ய
முனையாமையால் மற்ற மூவரும், ‘இனிநாம் மாத்திரம் என்செய்வோம்?’
என்று இளைத்தன ரென்க. இது ‘இங்கு’ என்பதானால் விளங்கும்;  இங்ஙனம் எம்
இனத்தவரான நால்வர் வேறுபட்டுச்சென்ற இப்பொழுது என்றபடி. இத்திக்பாலகர்
வரிசையினிடையிலேயே சந்திரனைப் புகுத்திச் சொல்லுதல் பொருந்தா தாதலால்,
மதியும்என்ற விடத்து மதியென்பதற்கு – சந்திரனெனப் பொருள் கூறலாகாது.
மதியொடுவைச்சிரவணனுமென்றபாடமும், இருணிறவரக்கன்றானும் என்ற பாடமும்
பொருத்தமானவை யல்ல.

சொல் மழை பொழிந்து, நாள்தொறும், தனது தோள்வலி
துதிக்கும் நாவலர்க்குப்
பொன் மழை பொழியும் கொங்கர் பூபதிதன் பொற் பதம்
பொருந்தலர் போல,
கல் மழை பொழியும் காள மா முகிலும், கடவுளர்த்
துரந்தவன் கரத்தில்
வில் மழை பொழிய, கற்களும் துகளாய், மேனியும்
வெளிறி, மீண்டனவே.அருச்சுனனது அம்புகளினால் மேகங்கள் சிதறுதல்.

நாள்தொறும்உம் – தினந்தோறும், சொல் மழை பொழிந்து –
சொன்மாரியைச் சொரிந்து, தனது தோள் வலி துதிக்கும் – தன்னுடைய
தோள்களின்வலிமையைப் புகழ்கிற, நாவலர்க்கு – புலவர்களுக்கு, பொன்மழை
பொழியும் -பொன்மாரியைச் சொரிகின்ற, கொங்கர் பூபதிதன் – கொங்கர்குலத்துத்
தோன்றியவரபதியாட்கொண்டானென்னும், அரசனுடைய, பொன்பதம் – அழகிய
பாதங்களை,பொருந்தலர்போல – சரணமடையாத பகைவர்கள் (அவனுக்குப்
புறங்கொடுத்தோடுதல்)போல,-கல்மழை பொழியும் காளம் மா முகில்உம் –
கல்மழையைச் சொரிகிற கரியபெரிய மேகங்களும், கடவளர் துரந்தவன் கரத்தில்
வில்மழை பொழிய – தேவர்களைத் துரத்தியவனான அருச்சுனன் கையிற் கொண்ட
(காண்டீவ) வில்லைக்கொண்டு (அம்பு) மழை சொரிதலால், கற்கள்உம் துகள் ஆய் –
(தம்மிடத்துஉள்ள) கற்களும், பொடியாகப் பெற்று, மேனிஉம் வெளிறி –
உடம்பும்வெளுத்து, மீண்டது – திரும்பிச்சென்றது; (எ – று.) – ஏ – ஈற்றசை.

     உவமையணி. சொல்மழை பொழிதல் – நற்பொருள்விளைக்கும் இனிய
சொற்களைத் தட்டுத்தடையின்றி உபயோகித்தல். நாவலர் – கவிபாடுதலும்
உரைகூறுதலும் பிரசங்கஞ் செய்தலுமாகிய நாவின்வன்மையையுடையவர்.
பொன்மழைபொழிதல் – எதிருதவியை யெதிர்பாராமற் புலவர்கட்குப்
பொன்னைமிகுதியாகத்தருதல். கடுமையாகப் போர்செய்து வந்த
வரபதியாட்கொண்டானது பகைவர்கள் தம்மிடத்து உள்ள ஆயுதம்முதலிய
பொருள்கள்உதவாது ஒழிய அச்சத்தால் உடல்வெளுத்து மீண்டுசெல்லுதல்போல,
கன்மழைபொழியுங் காளமேகங்கள் கற்கள்துகளாய்த் தம்மிடத்து உள்ள நீர்
ஒழிந்ததனால் வெண்ணிறம்பெற்று விலகின என்க; உடல் வெளுத்தல் – அச்சக்குறி.
மணி நீர் பொன் பூ மண் கல் தீ என்றவற்றைப் பொழிகிற சம்வர்த்தம் முதலிய
ஏழனுள் காளமுகி யென்பதே ‘கன்மழை பொழியுங்காளமாமுகில்’ என்று இங்குக்
குறிக்கப்பட்டதாதலின், ‘மீண்டதுவே’ என்று ஒருமைமுடிபு கொடுத்தார்.
பாகையுந்தனதுசூரமுந் துதிக்குநாவலர்க்கு என்றும் பாடம்

மாயவன்தனக்கு நேய மைத்துனனாம் மைந்தன் அத்
தந்தையை மதியான்,
தூய வெங் கணையால் அவன் இடித் துவசம் துணித்து, அமர்
தொடங்கும் அவ் அளவில்,
காயம் எங்கணும் நின்று ஒலி எழப் பரந்து, காயம் இல்
கடவுள், அக் கடவுள்-
நாயகன்தனக்குப் பரிவுடன் நவை தீர் நல்லுரை
நவின்றதை அன்றே:அருச்சுனன் இந்திரனை யெதிர்த்து உக்கிரமாகப்
போர்தொடங்குகையில் ஆகாயவாணி யெழுதல்.

மாயவன் தனக்கு – கண்ணபிரானுக்கு, நேயம் மைத்துனன் ஆம் –
அன்புள்ள மைத்துனனாகிய, மைந்தன் – (இந்திர) குமாரனான அருச்சுனன், அ
தந்தையைமதியான்-(தனது) பிதாவாகிய அவ்விந்திரனை லக்ஷ்யஞ்செய்யாதவனாய்,
தூய வெம்கணையால் – சுத்தமான கொடிய அம்பினால், அவன் இடி துவசம்
துணிந்து- அவ்விந்திரனுடைய இடியின் வடிவமெழுதிய கொடியைத் துண்டித்து,
அமர்தொடங்கும் அ அளவில் – (மேலும்) போர்தொடங்குகிற அச்சமயத்திலே,-
காயம்இல்கடவுள் – அசரீரியானது, காயம் எங்கண்உம் நின்று ஒலி எழு பரந்து –
ஆகாயமெங்கும் நின்று ஒலியெழும்படி பரந்து, அ கடவுள் நாயகன் தனக்கு –
தேவராசனான அந்த இந்திரனுக்கு, பரிவுடன்-அன்போடு, நவை தீர் நல் உரை
நவின்றது – குற்றம்நீங்கிய நல்ல வார்த்தைகளைச் சொல்லிற்று; (எ-று.) – அதனை,
மேற்கவியிற் காண்க.

     மைத்துனன் என்ற சொல், இங்கு, அத்தையின்மகனை யுணர்த்தும், அவன்
துவசம் இடி துணித்து என்று இயைத்து – அவ்விந்திரனுக்குக்கொடியாகிற இடியைத்
துண்டித்து என்றும் பொருள் கொள்ளலாம். காயம்இல் கடவுள் – சரீரமில்லாத
சொற்றெய்வம். ‘காயமெங்கணும் நின்று ஒலியெழப்பரந்து காயமில் கடவுள்’
என்றதில், சொல்லினால் முரண்தொடை அமைந்திருத்தல் காண்க. அருச்சுனனோடு
பகைமைகொண்டதனால் இந்திரனுக்கு உளதாகும் அவமானத்தைப் போக்கி
அமைதியைவிளைக்கும் மொழியாதலால், ‘நசைதீர் நல்லுரை’ எனப்பட்டது.
நவின்றதை, ஐ-சாரியை. அன்றே – ஈற்றசை.

‘தமரினும் இனிய தக்ககன் முதலே தப்பினன்,
குரு நிலம் சார்ந்தான்;
குமரனும், நும்மால் உய்ந்தனன்; தூமக் கொடியனும்
கொண்டலுக்கு அவியான்;
நமர்களில் இருவர், நரனும் நாரணனும்; நமக்கும் இங்கு
இவர் சிறிது இளையார்;
அமரினை ஒழிமின், அமரினை ஒழிமின், அமரரும்
அமரர் நாதனுமே!’அந்த அசரீரிவார்த்தை.

இரண்டுகவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.)  தமரின்உம் இனிய தக்ககன்-(உங்கட்குச்) சுற்றத்தாரினும்
இனியவனானதக்ஷகன், முதல்ஏ குருநிலம் சார்ந்தான் தப்பினன்-முன்னமே
குருக்ஷேத்திரத்தையடைந்துள்ளானாதலால் (அக்கினிக்குத்) தப்பிப்பிழைத்தான்;
குமரன்உம் – (அவனுடைய) புத்திரனான அசுவசேனனும், நும்மால் உய்ந்தனன் –
உங்களால் தப்பிப்பிழைத்திட்டான்; தூமம் கொடியன்உம்-புகைக்கொடியை
யுடையவனான அக்கினியும், கொண்டலுக்கு அவியான் – மேகத்துக்குத்
தணியமாட்டான்; நரன்உம் நாரணன்உம்-அருச்சுனனும் கிருஷ்ணனுமாகிய
இவ்விருவரும், நமர்களில் இருவர் – நம்மவர்களில் (தேவர்களில்) சேர்ந்த இருவரே,
இங்கு இவர்உம் நமக்கு சிறிது இளையார் – இத்தன்மையரான இவர்களும் நமக்குச்
சிறிதும் இளைக்கமாட்டார்; (ஆதலால்), அமரர்உம் அமரர் நாதன்உம்-தேவர்களும்
தேவராஜனுமான நீங்கள், அமரினை ஒழிமின் அமரினை ஒழிமின் –
(இவர்களோடுசெய்யும்) போரை ஒழியுங்கள் போரை ஒழியுங்கள்; (எ-று.)

     நீங்கள் இவ்வளவு கோபித்துக் கடும்போர்தொடங்குவதற்கு ஏற்றகாரணம்
இல்லை யென்றும்,  உங்கள் முயற்சி சிறிதுபயன்பெற்ற தாதலால் அவ்வளவோடு
மகிழ்ந்து விலகுதல் தகுதியென்றும், இதற்குமேற்செய்யும் முயற்சிகள் எவ்வாற்றலும்
பயன்படாவென்றும் அசரீரிவார்த்தையால் விளங்கும். தக்ககன் ***கெடுமென்று
இந்திரன் கரைந்ததாக 47-ஆங் கவியில்வந்தது, அவன்குருநிலஞ்சேர்ந்ததை
யறியாமையாலாகும். அக்கினிக்குப்புகை அறிகுறி யாதலால், அவனுக்கு
‘தூமக்கொடியன்’ என்று ஒரு பெயர். 

என்றுகொண்டு உரைத்த மொழி செவிப்பட்ட எல்லையில்,
இரவி முன் இருள்போல்
துன்று தன் சேனைச் சுர கணம் சூழச் சுரபதி துறக்கம்அது
அடைந்தான்;
வென்று வெங் களம் கொண்டு அருச்சுனன் தனது வெற்றி கொள்
சங்கமும் குறித்தான்;
அன்று செந்திருமால் அருச்சுனன் பொருத ஆண்மை
கண்டு அதிசயித்தனனே.அதுகேட்டு இந்திரன் போரொழிய, அருச்சுனன்
வெற்றிச் சங்கம் முழக்குதலும் கண்ணன் அருச்சுனன்
திறத்தை வியத்தலும்

என்று கொண்டு உரைத்த மொழி-என்று (அசரீரி) சொன்ன வார்த்தை,
செவி பட்ட எல்லையின்-காதிற் பட்டவளவில்,-சுரபதி-தேவராசனான இந்திரன்,
துன்றுதன் சேனை சுர கணம் சூழ – நெருங்கிய தனது சேனையான தேவர்கள்
கூட்டம்(தன்னைச்) சூழ்ந்து வர, இரவி முன் இருள் போல்-சூரியன் முன்னிலையில்
இருள்(ஒழிதல்) போல, துறக்கம் அது அடைந்தான்-(அருச்சுன னெதிரில்நில்லாமல்
தனது)சுவர்க்கலோகத்தையடைந்தான்; (பின்பு), அருச்சுனன்-, வென்று- (இவ்வாறு
தேவர்களைச்) சயித்து, வெம் களம் கொண்டு-கொடிய போர்க்களத்தைக் கொண்டு,
தனது வெற்றி கொள் சங்கம்உம் குறித்தான்-ஜயத்தைக்கொண்ட
தன்னுடையசங்கத்தையும் ஊதிமுழக்கினான்; செம் திருமால்-செந்நிறமுள்ள
இலக்குமிக்குக்கணவனான கண்ணபிரான், அன்று அருச்சுனன் பொருத ஆண்மை
கண்டு அதிசயித்தனன் – அன்றையதினத்தில் அருச்சுனன் போர்த்திறமையைப்
பார்த்துஆச்சரியப்பட்டான்; (எ-று.)

     பகைவரை வென்றொழித்தபின்பு தமது பெருமிதந்தோன்றப்
போர்க்களங்கொண்டு தமதுவெற்றிக்கு அறிகுறியாகத் தம்சங்கத்தை முழுக்குதல்,
வீரரியல்பு.    

வட மதுரையினும் தென் மதுரையினும் மதிகுல நிருபர்
கன்னியரைக்
கடி மணம் புரிந்தோன் வின்மையின் வன்மை கண்ணுறக்
கண்ட வானவரும்,
‘புடவியில் ஒருவரொடும் இனிப் பூசல் பொரேன்!’ எனப்
போன வாசவனும்,
முடி சடை மவுலி நாரதன் முதலாம் முனிவரும், முடிவு
அறப் புகழ்ந்தார்.தேவர்களும் இந்திரனும் முனிவர்களும் அருச்சுனனைப்
புகழ்தல்.

வடமதுரையின்உம் தென்மதுரையின்உம் – வடக்கிலுள்ள
மதுராபுரியிலும்தெற்கிலுள்ள மதுராபுரியிலும், மதிகுலம் நிருபர் கன்னியரை –
சந்திரகுலத்துஇராசகன்னிய ரிருவரை, கடிமணம் புரிந்தோன் – சிறப்பாக
விவாகஞ்செய்துகொண்டவனான அருச்சுனனுடைய, வின்மையின் வன்மை –
விற்றொழிலின் வலிமையை, கண் உற கண்ட – கண்ணெதிரிலே பொருந்தக்கண்ட,
வானவர்உம்-தேவர்களும், புடவியில் ஒருவரொடுஉம் இனி பூசல் பொரேன் என
போன வாசவன்உம் – பூமியில் ஒருவரோடும் இனிப் போர்செய்யயமாட்டே னென்று
சென்ற இந்திரனும், முடி சடை மவுலி நாரதன் முதல்ஆம் முனிவர்உம் – முடித்த
சடைமுடியையுடைய நாரதன் முதலான இருடிகளும், முடிவு அற புகழ்ந்தார் –
(அருச்சுனனை) அளவின்றிப் புகழ்ந்தார்கள்; ( எ-று.)

     மதிகுலநிருபர் கன்னியர் – வசுதேவர்மகளான சுபத்திரையும்,
சித்திரவாகனபாண்டியன் மகளான சித்திராங்கதையும், முதலில் மதுவென்னும்
அசுரன்கைக்கொண்டிருந்தமை பற்றியும், கண்ணுக்கு இனிமையானதுபற்றியும்,
பின்புமதுவென்னுஞ் சந்திரகுலத்து அரசனாற் சீர்திருத்தி யாளப்பட்டமை பற்றியும்,
*வடமதுரைக்கு ‘மதுரா’ என்று பெயர்; வடசொல்; இது, வடநாட்டில் யமுநாநதிதீரத்தி
லுள்ளது. + தென்மதுரைக்கு அப்பெயர்
 வந்த காரணம் – குலசேகர பாண்டியன்
காடுகெடுத்து நகராக்கி அந்நகரத்திற்குச் சாந்திசெய்யக் கருதியபொழுது.
சோமசுந்தரக்கடவுள் தமது சடையிலுள்ள சந்திரனிடத்தினின்று அமிருதத்தை உகுக்க,
அவ்வமுதம் சென்று அந்நகர்முழுவதும் பரவிச் சாந்தி செய்து
மதுரமயமாக்கியதனாலாகும்; இது, தென்னாட்டில் வையையாற்றங்கரையி லுள்ளது.
நிலவுலகத்தவனான அருச்சுனனோடு பொருது தோற்றதனால், இந்திரன் ‘புடவியி
லொருவரொடு மினிப் பூசல் பொரேன்’ என்பவனானான். 

மாசுணத்து அரசன் மந்திரம் அமைத்த வனத்திடை
இருந்த மா மயனை
ஆசுசுக்கணி சென்று அடர்த்தலும், வெருவி, ‘அருச்சுனா,
அபயம்!’ என்று அரற்ற,
தேசுடைத் திகிரிச் செங் கண் மால் கருணை
செய்தனன்-தீவினை உறினும்,
பேசுதற்கு அரிய பெரியவர் நினைக்கின், யார்கொலோ
பிழைத்திடாதவரே?கிருஷ்ணார்ச்சுனரது அருளால் மயன் அத்தீயினின்று
தப்பியுய்தல்.

மாசுணத்து அரசன் மந்திரம் அமைத்த வனத்திடை இருந்த மா
மயனை- சர்ப்பராசனான தக்ஷகனது அரண்மனை அமைக்கப்பட்டுள்ள
அக்காட்டிலே யிருந்தசிறந்த மயனென்பவனை, ஆசுசுக்கணி சென்று அடர்த்தலும் –
அக்கினி போய்நெருக்கி வருத்தியவளவிலே, (அந்த மயன்), வெருவி – அஞ்சி,
அருச்சுனா அபயம்என்று அரற்ற – ‘அருச்சுனனே! (நான் உனக்கு) அடைக்கலம்’
என்று சொல்லிக் கதற, தேசு உடை திகிரி செம் கண் மால் – ஒளியையுடைய
சக்கராயுதத்தையேந்தியசிவந்தகண்களையுடையனான கண்ணபிரான், கருணை
செய்தனன் – (அவன்பிழைக்கும்படி) அருள் செய்தான்; தீ வினை உறின்உம் –
கொடிய துன்பம்நேர்ந்தாலும், பேசுதற்கு அரிய பெரியவர் நினைக்கின் –
சொல்லுதற்கு முடியாதபெருந்தன்மையையுடைய மகான்கள் நினைத்தால்,
பிழைத்திடாதவர் -(அத்துன்பத்தினின்று) நீங்கிஉய்யாதவர், யார் கொல் ஓ –
யார்தான்? (எ-று.)

     கொடிய தீயி லகப்பட்ட மயன், கண்ணன் திருவுளத்திற் கருணைசெய்ததனால்
அழிவடையாது தப்பிப்பிழைத்தனன் என்ற சிறப்புப்பொருளை
‘தீவுனையுறினும்பேசுதற்கரியபெரியவர் நினைக்கின் யார்கொலோ பிழைத்திடாதவர்’
என்ற பொதுப்பொருள் கொண்டு விளக்கியது – வேற்றுப்பொருள்வைப்பணி.
தக்ஷகனுடைய மாளிகையினின்று நெருப்புக்குப் பயந்து ஓடின மயன் ‘அருச்சுனா!
அபயம்’ என்று அரற்ற, அருச்சுனன் அபயங் கொடுக்க, அம்மயனைக் கொல்லும்படி
கோபத்தாற் கண்சிவந்து சக்கராயுதத்தையெடுத்த கிருஷ்ணனும்
அருச்சுனன்பயங்கொடுத்ததைக்கண்டுதானும் அவன்பக்கற் கருணைசெய்தா னென்பது
விளங்க ‘திகிரிச் செங்கண்மால் கருணைசெய்தனன்’ என்றார். நெருப்பின் தொழில்
நெருங்கினாலும் என்னும் ஒருபொருள் சமத்காரமாய்த் தோன்றுமாறு ‘தீவினை
உறினும்’ என்றார்; பாவப்பயன் நேர்வதாயிருந்தாலும் என்ற பொருளும்
தொனிக்கும்.கிருஷ்ணார்ச்சுனர்  நோக்கத்தைக்கண்டு, அக்கினியும் மயனைத்
தகித்திலனென முதனூல் கூறும். மயன், அசுரசிற்பியெனப்படுவன்.

அழைத்து அடல் விசயன்தனை, ‘துணை செய்க!’ என்று
ஆறு-பத்து யோசனை ஆகித்
தழைத்த அவ் வனத்தை, கனத்தை வென்கண்டு,
தழலவன் நுகர்ந்திடுகாலை,
பிழைத்தவர், மயனும், தக்ககன் மகவும், பெருந் தவன்
ஒருவன் முன் கருப்பம்
இழைத்த நுண் சிறகர்க் கருநிறக் குரீஇயின் இனங்களும்,
அன்றி, வேறு இலரால்.அக்கினியினின்று தப்பியவர்கள்.

தழலவன்-அக்கினிதேவன்,-அடல் விசயன் தனை-வலிமையுள்ள
அருச்சுனனை, துணை செய்க என்று அழைத்து – (எனக்கு) உதவி
செய்வாயென்றுகூப்பிட்டு, ஆறுபத்து யோசனை ஆகி தழைத்த அ வனத்தை-
அறுபதுயோஜனை விஸ்தீர்ணமுடையதாகித் தழைத்துள்ள அந்தக்காண்டவவனத்தை,
கனத்தை வென்கண்டு நுகர்த்திடு காலை – மேகத்தைப் புறங்கண்டு [வென்று]உண்ட
[எரித்திட்ட] போதில்,-பிழைத்தவர் – (அந்த அக்கினியினின்று) தப்பிப்பிழைத்தவர்,-
மயனும்-,தக்ககன்மகவுஉம்-தட்சகனுடைய மகனாகிய அசுவசேனனும்,
பெருந்தவன்ஒருவன் முன்கருப்பம் இழைத்த நுண் சிறகர் கருநிறம் குரீஇயின்
இனங்கள்உம்-மிக்கதவமுடைய ஒப்பற்றவனான மந்தபாலமுனிவனால் முன்கருவாகித்
தோன்றிய நுண்ணிய சிறகுகளையுடைய கருநிறக்குருவியின் கூட்டங்களும், அன்றி –
இவையல்லாமல், வேறுஇலர்-;  

   பெருந்தவனொருவன் முன்கருப்பம்இழைத்த குரீஇயினினங்கள்-மந்தபாலனருளாற்
றோன்றிய நான்கு இளையசார்ங்கப்பறவைக் குஞ்சுகள் என்று முதனூலால்
தெளியப்படும்: அந்தச்சார்ங்கப் பறவைக்குஞ்சுகள் அக்கினியைப்
பிரார்த்தித்ததனாலும்அந்த மந்த பாலமுனிவனது விருப்பத்தைத் தழுவியதனாலும்
அக்கினிபறவைக்குஞ்சுகளை எரியாதுவிட்டன னென்பர். யோசனை – காதம்.
கீழ் 43-ஆம் பாடலில் “தானவரியாருய்ந்தார்” என்று தானவரெவரும்
உய்யாமையைக் கூறிய கவி,இங்குஉய்ந்தவரை இன்னாரெனக் கூறினரென்க.
பிழைத்தவர் மயனும் மகவம்குரீயிஇனினங்களும் – சிறப்பால் உயர்திணை
முடிபைக்கொண்டது.   

என் பிற புகல்வது?-ஈர்-எழு புவனம் எம்பிரான்
அருந்தியது என்ன,
தன் பசி தணியக் காண்டவ வனத்தில் சராசரம்
உள்ளவை அனைத்தும்
வன்புடன் அருந்தி, உதரமும் குளிர்ந்தான்; வன்னி, தன்
வடிவமும் குளிர்ந்தான்;
அன்புடை இருவர்க்கு ஆசியும் புகன்றான்; அசைந்து போய்த்
துறக்கமும் அடைந்தான்.அக்கினி திருப்தியடைந்து கிருஷ்ணார்ச்சுனர்களை
வாழ்த்திச் செல்லல்.

பிற புதல்வது என்-மற்றும் (நாம்) சொல்வது என்ன? ஈர் எழு
புவனம்எம்பிரான் அருந்தியது என்ன – பதினான்குஉலகங்களையும் திருமால்
(பிரளயகாலத்தில்) விழுங்குதல் போல, வன்னி – அக்கினிதேவன்,
காண்டவவனத்தில்சர அசரம் உள்ளவை அனைத்துஉம் – அக்காண்டவவனத்திலே
ஜங்கமமும் ஸ்தாவரமுமாக வுள்ள பொருள்களையெல்லாம், தன் பசி தணியவன்புடன்
அருந்தி -தனது பசித்தீத்தணியும்படி வலிமையுடன் உண்டு, (தன்) உதரம்உம்
குளிர்ந்தான்-தனதுவயிறுங் குளிர்ந்தவனாய், தன் வடிவம்உம் குளிர்ந்தான்-
தனதுஉருவமும் ஆறி,அன்புஉடை இருவர்க்கு ஆசிஉம் புகன்றான் –
அன்பையுடையவர்களான அந்தக்கிருஷ்ணார்ச்சுனரிருவர்க்கும் ஆசீர்வாதத்தையுஞ்
சொல்லி, அசைந்துபோய் -அசைந்தசைந்துசென்று, துறக்கஉம் அடைந்தான் –
விண்ணுலகத்தையுஞ்சாரர்ந்தான்; (எ-று.)

     வயிறுநிரம்ப உண்டாதனாலும், நோய் நீங்கியதனாலாகிய சுகாநுபவத்தாலும்,
அக்கினி அசைந்தசைந்துசென்றனனென்க. வன்புடன் அருந்தி-முன்பு தன்னால்
எளிதில்உண்ண இயலாமையாயற் கிருஷ்ணார்ச்சுனர்களுடைய உதவிபற்றி
வலியஉண்டுஎன்க.   

அமரரை முதுகு கண்ட காவலரும் அவர்அவர்
ஆண்மைகள் உரைசெய்து,
அமரில் அன்று எடுத்த பல் பெருங் கொடியால் அலங்கரித்து
அமைத்த தம் தேர்மேல்,
தமருடன் துணைவர் நால்வரும், நகரச் சனங்களும்,
மகிழ்ந்து எதிர்கொள்ள,
தமர மும் முரசும் முழங்க, வெண் சங்கம் தழங்க, வந்து,
அணி நகர் சார்ந்தார்.கிருஷ்ணார்ச்சுனர் இந்திரப்பிரத்தநகரஞ் சார்தல்.

அமரரை முதுகு கண்ட காவலர்உம் – தேவர்களைப் புறங்கண்ட
கிருஷ்ணார்ச்சுனர்களாகிய அரச ரிருவரும், அவர் அவர் ஆண்மைகள் உரை
செய்து- (தேவர்களோடு நடத்தியபோரில்) தாம்தாம்செய்த ஆண்மைத்
தொழில்களைச்சொல்லிக்கொண்டு, அமரில் அன்று எடுத்த பல் பெருங்கொடியால்
அலங்கரித்துஅமைத்த தம் தேர்மேல்-போரில் அன்றைத்தினத்தில் மேலுயர்த்திய
பலபெரியகொடிகளினால் அலங்காரஞ்செய்து சித்தஞ் செய்யப்பட்டுள்ள
தங்கள்தேர்களின்மேலேறினபடியே, தமருடன் துணைவர் நால்வர்உம் நகரம்
சனங்கள்உம் மகிழ்ந்து எதிர்கொள்ள – (தங்கள்) சுற்றத்தார்களுடனே
துணைவர்களானதருமன்முதலிய நால்வரும் அந்நகரத்திலுள்ள ஜனங்களும்
மகிழ்ந்து வந்துஎதிர்கொள்ளவும், தமரம் மும் முரசுஉம் முழுங்க – ஒலியையுடைய
மூன்றுவகைமுரசவாத்தியங்களும் முழுங்கவும், வெள் சங்கம் தழங்க-வெண்ணிறமான
சங்கவாத்தியங்கள் ஒலிக்கவும், வந்து அணி நகர் சார்ந்தார் – மீண்டுவந்து அழகிய
இந்திரப்பிரத்த நகரத்தை யடைந்தார்கள்;

     பல் பெருங்கொடி – கிருஷ்ணனது கருடக்கொடியும், அருச்சுனனது
அநுமக்கொடியும்; ஒன்றல்லாததெல்லாம் பலவாதல்பற்றி, இவ்விரண்டுமே ‘பல்’
எனப்பட்டன. மும்முரசு – வெற்றிமுரசுகொடைமுரசு  மங்கலமுரசு என்பன

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ.வில்லிபாரதம் – முதல் பாகம் -8. வசந்த காலச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 16, 2023

நனி ஆடல் அனற்கடவுள், யமன், நிருதி, நண்ணு திசை,
நாள்கள்தோறும்
முனியாமல் நடந்து இளைத்து, ‘முன்னையினும் பரிதாபம்
முதிர்ந்தது’ என்று,
தனி ஆழித் தனி நெடுந் தேர்த் தனிப் பச்சை நிறப் பரியை,
சயில ராசன்
பனியால் அவ் விடாய் தணிப்பான், பனிப்பகைவன் பனி
செய்வோன் பக்கம்சேர்ந்தான்.-சூரியன் தட்சிணாயனத்தைவிட்டு உத்தராயணத்தில்
வருதல்.

பனி பகைவன் – பனிக்குப் பகைவனாகிய சூரியனானவன்,- நனி
ஆடல்- மிக்ககொடுமையையுடைய, அனல் கடவுள் – அக்கினியும், யமன் –
யமனும், நிருதி- நிருருதியும், (என்னும் இவர்கள்), நண்ணா – பொருந்திய, திசை –
(தெற்குத்) திக்கில்,நாள்கள் தோறுஉம் – தினந்தோறும், முனியாமல்நடந்து –
வெறுப்புக்கொள்ளாமல்நடந்ததனால், (தனதுதேர்க்குதிரை),முன்னையின்உம்
இளைத்து பரிதாபம் முதிர்ந்தது -வெப்பம் அதிகப்பட்டு முன்பு இருந்த
நிலையினின்று மாறிச்சோர்வடைந்து விட்டது,என்று – என்று எண்ணி, – தனி
ஆழி தனி நெடு தேர் தனி பச்சை நிறம் பரியை -ஒற்றைச் சக்கரத்தையுடைய
ஒப்பற்ற பெரிய (தனது) தேரிற்பூட்டியதனித்தபசுமைநிறத்தையுடைய
அக்குதிரையை, சயிலராசன் பனியால் அ விடாய் தணிப்பான் -மலையரசனாகிய
இமயமலையிலுள்ளபனியினால் அந்தத் தாபந்தணியச்செய்தற்பொருட்டு, பனி
செய்வோன்பக்கம் சேர்ந்தான் – பணியைச்செய்பவனானஅவ்விமய
மலையிருக்கிறவடக்குப்பக்கத்தை யடைந்தான்; (எ-று.)

     ஆடிமாசமுதல் மார்கழிமாசம் வரையில் ஆறுமாசம் தக்ஷிணாயனமும்,
தைமாசம்முதல் ஆனிமாசம்வரையில் ஆறுமாசம் உத்தராயணமுமாம். சூரியன்
தென்புறமாகச்சஞ்சரிக்கும் காலம், தக்ஷிணாயனம். அவன் வடபுறமாகச்சஞ்சரிக்கும்
காலம், உத்தராயணம். ஆயினும், வடக்கினின்றுமீண்டு தென்புறமாகவும்
தெற்கினின்றுமீண்டு வடபுறமாகவும் வரும்போது தெற்குத்திசைப்பாகமாகவேனும்
வடக்குத்திசைப்பாகமாகவேனும் ஒதுங்காமல் இடையில் நிற்குங்காலம் விஷு வ
மெனப்படும். சித்திரைமாதத்திற்கு  உரிய மேஷராசியிற் சூரியன் வருகையிலும்,
ஐப்பசிமாதத்துக்கு உரிய துலாராசியிற் சூரியன்வருகையிலும், விஷு வமென்கிற
காலம் உண்டாகின்றது; அதுதான், ஏற்றத்தாழ்வில்லாத இராப்பகல்களையுடையது.
இளவேனிற்பருவம் வரலாயிற் றென்று கீழ்ச்சருக்கத்தின் முடிவிற் கூறினவர்,
அந்தப்பருவத்தின் ஆரம்பமான சித்திரைமாதத்தொடக்கத்தை இங்குக்கூறுகிறாரென
அறிக.

     தைமாசமுதல் தெற்கினின்று ஒதுங்கிவந்த சூரியன் உத்தராயணத்தின்
மத்தியபாகமாகிய சித்திரைமாசத் தொடக்கத்தில் நடுவில் வந்து அதுமுதல்
வடபுறமாகஒதுங்குகின்றனன்: இங்ஙனம் இயல்பாற் சூரியன் தென்திசையினின்று
வடதிசையிலொதுங்குதற்குக் கவி தானாக ஒரு காரணத்தைக் கற்பித்துக்
கூறியதனால், இச்செய்யுள்- ஏதுத்தற்குறிப்பேற்றவணி; அக்கினி தென்கிழக்குத்
திக்குப் பாலகனாகவும்,பிராணிகளையெல்லாம் கண்ணோட்டமின்றிக் கொல்லுகிற
யமன்தெற்குத்திக்குப்பாலகனாகவும், இராக்கதர்குலத்துக்கு ஆதிபுருஷனாதலாற்
கொடியவனாகிற நிருருதி தென்மேற்குத்திக்குப் பாலகனாகவும் அமைந்துள்ளதனாற்
கொடியதாகிற தென்திசையிற் பலநாள் நடந்ததனால் தனதுதேர்க்குதிரை மிக்க
தாபமடைந்து இயல்பாகவுள்ளவலிமை குன்றிச் சோர்ந்துவிட்டது என்று எண்ணிச்
சூரியன் இனி அக்குதிரையை இமயமலையிலுள்ள பனியைக்கொண்டு அத்தாபத்தைத்
தணிக்கக்கருதி அம் மலையிருக்கிற வடபுறத்தைச்சேரலாயின னென்றார். பகற்
சஞ்சாரம் தக்ஷிணாயனத்தில் விரைவாகவும் உத்தராயணத்தில் மந்தமாகவும்
இருத்தல்,இயல்பு; அது, தக்ஷிணாயனத்தில் பகற்பொழுது குறைவாகவும்
உத்தராயணத்தில்பகற்பொழுது மிகுதியாகவும் இருத்தலால் விளங்கும். இங்ஙனம்
தக்ஷிணாயனத்திலுள்ளவேகம் பின்பு குறைதல், கொடியவர்கள் பொருந்திய கொடிய
தென்திசையிற் பலநாள்வெறுப்பின்றி நடந்ததனால் தனதுகுதிரை தாபமுதிர்ந்து
முன்னையினும்இளைத்ததென்று சூரியன் கருதியதற்குக் காரணமென்னலாம்.

     ஆடல் – அடலென்பதன் நீட்டல்விகாரம். அனற்கடவுள் – அக்கினிதேவன்.
சூரியனது தேர் சம்வற்சரரூபமான ஒற்றைச்சக்கரத்தையுடைய தென்று புராணம்கூறும்.
சூரியனது தேர்க்குதிரைகள் ஏழு என்பர், ஒருசாரார்; மற்றொருசாரார், ஏழு [ஸ்ப்த]
என்று பெயர்பெற்ற குதிரை ஒன்றே யென்பர்; இக்கொள்கையே இங்குக்
கொள்ளப்பட்டது. பரிதாபம் – பெருவெப்பம்: வடசொல், “பரிதாபம்
ராதவாஜிநாம்நிஜாநாம் ஹிமவத்பவநைரிவாபநேதும் – திநநாதோ திஸமுத்தராம்
ப்ரதஸ்தே” என்றது பாலபாரதம்.

     இதுமுதற்பத்தொன்பதுகவிகள், பெரும்பாலும் முதல்நான்கு சீரும்
காய்ச்சீர்களும்,மற்றை இரண்டும் மாச்சீர்களுமாகிய அறுசீராசிரியவிருத்தங்கள்

கலக்கம் உற, இள வேனில் கலகம் எழுந்திடும் பசுந் தண்
காவு தோறும்,
சிலைக்கு அணி நாண் முறுக்குவபோல் தென்றலின் பின்
சூழல் அளிகள் சேர ஓட,
உலைக் கனலில் கருங் கொல்லன் சிறு குறட்டால் தகடு
புரிந்து ஒதுக்கி, மாரன்
கொலைக் கணைகள் சமைப்பனபோல், குயில் அலகால்
பல்லவங்கள் கோதுமாலோ!-வசந்தகால வருணனை.

கலக்கம்உற – கலக்கம் மிகுதியாக உண்டக, இளவேனில் கலகம்
எழுந்திடும் – வசந்தகாலத்துக்குஉரிய போர் மூளுதற்கு இடமான, பசுந் தண் காவு
தோறுஉம் – பசுமையானகுளிர்ந்த சோலைகளிலெல்லாம்,- சிலைக்கு அணி நாண்
முறுக்குவ போல் – (மன்மதனுடைய) வில்லுக்கு அழகிய நாணியை முறுக்குதல்
போல,சுழல் அளிகள் தென்றலின் பின் சேர ஓட – சுழலுந்தன்மையனவான
வண்டுகள்தென்றற்காற்றின்பின்னே ஒரு சேர ஓட, – கரு கொல்லன் –
கருநிறமுடையகொல்லனானவன், உலை கனலில் – உலைக்களத்துள்ள
நெருப்பில், தகடு புரிந்து -தகடுகளைச் செய்து, (அவற்றை) சிறு குறட்டால்
ஒதுக்கி – சிறிய குறடுஎன்னுங்கருவியினால் ஒதுக்கி, மாரன் கொலை கணகள்
சமைப்பன போல் -மன்மதனுக்குஉரிய கொலைத்தொழிலைச்செய்யும் அம்புகளைச்
செய்தல்போல, குயில் -குயில்கள், அலகால் – (தம்) வாயலகினால், பல்லவங்கள்
– தளிர்களை, கோதும்-; (எ-று.)

     இங்ஙனங் காமனோடு நண்புகொண்ட வசந்தகாலத்துக்கு உரிய போராவது –
அக்காலத்தில் மன்மதன் ஸ்திரீபுருஷர்களைச் சிற்றின்பவசப்படுமாறு தூண்டுதல்.
அதற்கு இடமான சோலை யென்றது – மைந்தரும் மகளிருங் காதல்கொண்டு
கூடிவிளையாடுதற்கு ஏற்ற ரமணீயமான சோலை யென்றவாறாம். அச்சோலைகளில்
வசந்தகாலத்திலே நறுமணமளாவி உலாவுகிற தென்றலின் பின்னே அதனை
நுகர்தற்குச்சுழலுமியல்போடுசெல்லுகிற கருநிறமான வண்டுகளின் ஒழுங்கை,
மன்மதனதுவில்லின்நாணியாதற்கு முறுக்கியகயிறு போன்ற தென்றார். மன்மதனது
கரும்பு வில்லுக்குவண்டொழுங்கு நாணி யெனப்படுதலை “ஆலைக் கரும்பு சிலை
ஐங்கணை பூ நாண்சுரும்பு” என்ற இரத்தினச்சுருக்கத்தாலும் அறிக. ‘கலக்கம் உற’
என்றது -ஸ்திரீபுருஷர்களுடைய மனத்திட்டம் நிலைகுலைய என்றபடி.
பின்னிரண்டடியில்கருநிறமுடைய குயிலுக்கு – கருங்கொல்லனும், அதன்
அலகுக்கு – சிறு குறடும்,தளிராற்செம்மைபெற்ற மரச்செறிவுக்கு – உலைக்கனலும்,
விரிந்த தளிர்க்கு – பரந்ததகடும், அலகினால் அதனைச் சுருட்டிக் கோதுதற்கு –
குறட்டினால் தகட்டை ஒதுக்கிஅம்புவடிவாக அமைத்தலும் ஒப்புஆம்;
தற்குறிப்பேற்றவணி. இங்ஙனம் கசி தன்மனோபாவத்தால் அமைத்துக்கூறுவதை
உவமையணி யென்னலாகாது.வணிடினொழுங்கும், குயிலும் தளிரும் தம்மைக்
காண்பவர்க்கு வேட்கை விளைக்குங்காமோத்தீபகப்பொருள்களாதலால், இங்ஙனங்
கூறப்பட்டன.  

செங் காவி, செங் கமலம், சேதாம்பல், தடம்தொறும் முத் தீக்களாக,
பைங் காவின் நெடுஞ் சினைக் கை மலர் நறுந் தேன்
ஆகுதிகள் பலவும் வீழ்க்க,
உங்கார மதுகரங்கள் ஓங்காரச் சுருதி எடுத்து ஓத, வேள்வி
வெங் காமன் இரதியுடன் புரிந்து, தன தென்றல் அம் தேர்மேற்
கொண்டானே!-மன்மத னுலாவல்.

செங் காவி – செங்கழுநீர்மலரும், செங் கமலம் – செந்தா
மரைமலரும்,சேது ஆம்பல் – செவ்வாம்பல்மலரும், (ஆகிய இவை மூன்றும்),- தடம்
தொறுஉம் -நீர்நிலைகளாகிய குண்டந்தோறும் முத் தீக்கள் ஆக – காருகபத்தியம்
ஆகவனீயம்தட்சிணாக்கினி என்ற மூன்று அக்கினிகளாகவும், பைங் காவின் –
பசுமையானசோலையின், நெடுஞ் சினை – நீண்டகிளைகளாகிய, கை – கையின்,
மலர் – மலர்களினின்று,நறுந்தேன் – நறுமணமுள்ளதேனாகிய, ஆகுதிகள் பல
உம் – ஓமங்கள்பலவற்றையும்,வீழ்த்த – வீழுமாறுசெய்யவும், உங்காரம் மதுகரங்கள்
– உங்காரத்தைச் செய்கின்றவண்டுகள், ஓங்காரம் சுருதி எடுத்துஓத – ஓங்காரமாகிய
சுருதியை எடுத்துச்சொல்லவும், வேள்வி – யாகத்தை, வெங் காமன் – விருப்பத்தை
யுண்டாக்கவல்லமன்மதன், இரதியுடன் – இரதீதேவியுடனிருந்து, புரிந்து –
செய்துவிட்டு, தன தென்றல்அம் தேர் மேற்கொண்டான் – தனது தென்றலாகிய
அழகியதேர்மேலேறிக்கொண்டான்; (எ-று.)

     முத்தீவளர்த்து ஆகுதிசெய்து வேள்வியை முடித்தபின்பு யாகஞ்செய்தவன்
தன்பத்தினியோடு தேர்மீது ஏறி யாகசாலையினின்று இருப்பிடத்துக்குச்
செல்லுவதுபோல, மன்மதன் ரதீ தேவி யுடனே பட்டணப்பிரவேசஞ்
செய்யப்புறப்பட்டா னென்பதாம். காவி முதலியவற்றை முத்தீமுதலியனவாக
உருவகஞ்செய்ததனால் மன்மதனையும் இரதீதேவியையும் யஜமாநனும் யாக
பத்தினியுமாகஉருவகஞ் செய்யவேண்டிற்று: இது அவயவஉருவகம். தடம் –
நீர்நிலையாகியகுண்டமெனச் சிலேடையுருவகம். சினையைக் கையென்றதற்கு
ஏற்ப, மலரைக்கைத்தலமாகவும் தேனை நெய்யாகவும் கொள்க.

தேவியரும் திருமாலும், செழு மலர்த் தார்த் தனஞ்சயனும்
தேவிமாரும்,
மேவி, அனந்தரம், வேனில் விழவு அயர்வான் முரசு
அறைந்து, வீதிதோறும்,
ஓவியமும் உயிர்ப்பு எய்த, உபேந்திரனும் இந்திரனும்
உவமை சால,
பூஇனமும் சுரும்பும் எனப் புரம் முழுதும் புறப்பட,
வண் பொங்கர் சேர்ந்தார்.-கிருஷ்ணார்ச்சுனர் வேனில்விழாவயரத்
தேவியரோடுஞ் சோலைசேர்தல்.

திருமால் உம் – ஸ்ரீக்ருஷ்ணனும், தேவியர்உம் – (அவனுடைய)
தேவிமாரும், செழு மலர் தனஞ்சயன்உம் – செழிப்புள்ள மலர்கொண்டு
தொடுக்கப்பட்ட மாலையையணிந்த அருச்சுனனும், தேவிமார்உம் – (அவனுடைய)
தேவிமாரும், மேவி – மனமொன்றி, அனந்தரம் – பிறகு, வேனில் விழவு
அயர்வான் -வசந்தோற்சவம் கொண்டாடும்படி (கருதி), முரசு அறைந்து –
பேரிகையறைந்து(நகரிற்செய்திதெரிவித்து), வீதிதோறும்உம்-, ஓவியம்உம்உயிர்ப்பு
எய்த -சித்திரப்பதுமைகளும் பெருமூச்சுவிடும்படி,- உபேந்திரன் உம் இந்திரன்உம்
உவமைசால – உபேந்திரனும் இந்திரனுமே உவமையாகப்பொருந்த, பூஇனம்உம்
சுரும்புஉம்என புரம்முழுதுஉம் புறப்பட – பூவின் தொகுதியும்
வண்டுமேயென்னுமாறுநகரத்தவரனைவரும் புறப்பட, வண் பொங்கர் சேர்ந்தார் –
வளப்பமுள்ள சோலையையடைந்தார்கள்;(எ-று.)

     க்ருஷ்ணார்ச்சுனர்கட்கு உபேந்திரனும் இந்திரனும் உவமையாவர். பூவினம்
உள்ளஇடத்தைநாடிச் சுரும்புகள்தொடர்வதுபோல க்ருஷ்ணார்ச்சுனர் தேவிமாருடன்
இருக்குமிடத்தை நாடிப் புரமுழுதும் புறப்பட்டதென்க. அவர்களின் அழகைக்கண்டு
இவ்வாறு நமக்கு அழகு வாய்க்கவில்லையே யென்று கருதிச் சித்திரம் பெருமூச்சு
விடுவதாயிற் றென்க; இனி, ஜநங்களின் உற்சாக மிகுதியை விளக்குவார்
‘ஓவியமுமுயிர்ப்பெய்த’ என்றாரென்பாருமுண்டு. சோலை யமுனைக்கரையிலுள்ள
தென்பது, பிறநூலாற் புலப்படும்

கொண்டல் எழ, மின் நுடங்க, கொடுஞ் சாபம் வளைவுற,
செங் கோபம் தோன்ற,
வண் தளவும் நறுங் குமிழும் வண்டு அணி காந்தளும்
மலர, மலைகள்தோறும்
தண் தரள அருவி விழ, தையலார் வடிவுதொறும்-சாயல்
தோகை-
கண்டு, ‘நமக்கு இளவேனில் கார்காலம் ஆனது’ எனக்
களிக்குமாலோ!-இளவேனிலில் மயில்களித்தல்.

சாயல் தோகை – மகளிரின் சாயலையுடைய மயில்கள்,- கொண்டல்
எழ- மேகங்களெழுவதையும், மின் நுடங்க – மின்னல் சலித்துத் தோன்றுவதையும்,
கொடுஞ் சாபம் வளைவுஉற – கொடிய வில் வளைவுபொருந்தி நிற்பதையும், செங்
கோபம் தோன்ற – செந்நிறமுள்ள இந்திரகோபப்பூச்சிகள் தோன்றுவதையும்,
வண் தளவுஉம் நறுங்குமிழ்உம் வண்டு அணி காந்தள்உம் மலர – வளப்பம்
பொருந்தியமுல்லையும் நறுமணமுள்ள குமிழமலரும் வண்டுகளாலலங்கரிப்பப்
பெற்றகாந்தள்மலரும் மலர்வதையும், மலைகள்தோறும் – மலைகளிலெல்லாம், தண்
தரளம்அருவி விழ – குளிர்ந்த முக்தா ஹாரம் அருவி போலவிழுவதையும்,
தையலார்வடிவுதொறுஉம் கண்டு – மடவாரின் வடவுகளிலெல்லாங்கண்டு,
நமக்கு-,இளவேனில் – இளவேனிற் காலமானது, கார்காலம் ஆனது –
கார்காலமாயிற்று,என-,களிக்கும்-; (எ-று.)- ஆல் வியப்பைக்குறிக்கும்.

     மடவாரின் கூந்தல் தோற்றம் கொண்டலெழுதலையும், இடை நுடக்கம் மின்
நுடங்குதலையும், புருவவளைவு சாபம்வளைவுறுதலையும், இதுழின்தோற்றம்
செங்கோபந்தோன்றுதலையும், பற்கள் மூக்கு கைகள் என்ற இவற்றின் மலர்ச்சி
தளவுகுமிழ் காந்தள் என்ற இவற்றின் மலர்தலையும், தனங்களில் முத்தமாலை
தொங்குவதுமலைகடோறும் அருவிவிழுதலையும் போலுதலால், அவற்றைச்
சோலையிற் கண்டமயில்கள், இளவேனிலே நமக்குக் கார்காலத் தோற்றமானதெனக்
கருதிக்களிக்குமென்றார்; இது மயக்கவணி. கொண்டலெழுதல் முதலியன,
கார்காலத்துக்குஉரியன. கோபம்= இந்திரகோபம்: முதற்குறை

பாராமல், நகையாமல், பாடாமல், ஆடாமல், பாதம் செங்கை
சேராமல், முக ராகம் வழங்காமல், இகழாமல்,
செவ் வாய் ஊறல்
நேராமல், நிழல் அதனை நிகழ்த்தாமல், மலர்ந்து, அழகு
நிறைந்த நீழல்
ஆராமம்தொறும், தங்கள் அவயவம் போல்வன கொய்தார்-
அணங்கு போல்வார்.-மகளிர் பூக்கொய்தல்.

அணங்கு போல்வார் – தெய்வமகளிர் போன்ற மாதர்கள்,- பாராமல்-
(தாங்கள்) பாராமலும், நகையாமல் – சிரியாமலும், பாடாமல் – இசைபடாமலும்,
ஆடாமல் – நர்த்தனம் ஆடாமலும், பாதம் செம் கை சேராமல் – காலையும்
சிவந்தகையையும் சேராமலும், முக ராகம் வழங்காமல் – நட்புச்செய்யாமலும்,
இகழாமல் – இகழாமலும், செம் வாய் ஊறல் நேராமல் – சிவந்தவாயினால்
எச்சிற்படச்சுவையாமலும், நிழலதனை நிகழ்த்தாமல் – நிழலைச்
செய்யாமலுமிருக்கையிலே, மலர்ந்து-, அழகு நிறைந்த நீழல் ஆராமம் தொறும்
தங்கள் அவயவம் போல்வன-அழகுநிறைந்த நிழலையுடைய சோலைகளிலெல்லாம்
தங்களுடைய உறுப்புக்கள் போலஉள்ளனவான மலர் அரும்பு தளிர் முதலியவற்றை,
கொய்தார் – பறித்தார்கள்; (எ-று.)

     உத்தமவிலக்கணமுடைய மகளிர் பார்க்க மாமரமும், அவர்கள் நகைக்க
முல்லையும், பாடக் குருக்கத்தியும், ஆடப் புன்னையும், உதைக்க அசோகமும்,
அணைக்கக் குராவும், நட்புற ஏழிலைம்பாலையும், நிந்திக்கப் பாதிரியும், சுவைக்க
மகிழும், நிழல்படச் சண்பகமும் தளிர்த்து அரும்பிப் பூப்பன வென்றல், கவிஞர்மரபு.
இவை மகளிரால்மலர்மர மெனப்படும். “ஏடவிழ்மகிழ் சுவைக்க வேழிற்பாலை
நண்புகூடப், பாடல நிந்திக்கத் தேம்படிமுல்லை நகைக்கப் புன்னை, ஆடநீள்குரா
வணைக்க வசோகுஉதைத்திட வாசந்தி, பாடமாப் பார்க்க வார்சண்பக நிழற்படத்
தளிர்க்கும்” என்ற சூடாமணிநிகண்டையுங் காண்க. இங்கு அம்மரங்கள்
மகளிர்பார்த்தல் முதலியன செய்யாமலிருக்கையிலேயே இயல்பாய்த் தளிர்த்து
அரும்பிப்பூத்துச்செழித்தன, இளவேனிலாதலி னென்க. பாதம்சேராமல் செங்கை
சேராமல் எனத்தனித்தனி யியைத்து, உதையாமலும் அணையாமலும் எனப்
பொருள்கொள்க. முக ராகம் வழங்குதல் – முகமலர்ச்சி காட்டி அன்புபாராட்டுதல்;
எனவே, நண்பு செய்தலாயிற்று: ராகம் – ஆசை. தளிர் அரும்பு பூ என்பவை
நிறமும்மேன்மையும் அழகும் பற்றி, மகளிர் உறுப்புக்கு உவமையாம். அவ்வுபமான
உபமேயத்தன்மையைமாற்றி ‘தங்கள் அவயவம்போல்வன’ என்றது –
எதிர்நிலையணி
. ‘தங்கள்அவயவம் போல்வன கொய்தார்’ என்றதொடரின்
போக்கினால், ஒப்பற்ற தங்கள்அவயவங்கட்குப் போலியாதல் பற்றிப் பகைத்து
அவற்றைப் பறிப்பராயின ரென்றபொருள் தொனிக்கும்

மாற்றாத பனிநீரால், மான்மத குங்கும மலய வாசச் சந்தின்
சேற்றால், அச் சோலை எலாம், செங்கழுநீர்த் தடம் போன்ற;
சிந்தைத் தாபம்
ஆற்றாத காதலருக்கு அமுதான இளநீரால், அடர்ந்த பூகத்
தாற்றால், அம் மரகதச் செந் துகிரால், அப் பொழில்போன்ற,
தடங்கள் எல்லாம்.சோலை நீர்நிலைஎன்ற இவற்றின் வருணனை.

அ சோலைஎலாம் – அவர்கள்சென்ற அந்தச்சோலை முழுதும்,
மாற்றாதபனிநீரால் – மாறுபடுத்தாத [சுத்தமான]பனி நீராலும், மான்மதம் குங்குமம்
மலயம்வாசம் சந்தின் சேற்றால் – கஸ்தூரி குங்குமம் மலயமலையில் தோன்றிய
நறுமணமுள்ள சந்தனம் என்ற இவற்றின் சேற்றினாலும், செங்கழுநீர் தடம்
போன்ற – செங்கழுநீர்தோன்றப்பெற்ற நீர்நிலையை யொத்தன: தடங்கள் எல்லாம் –
நீர்நிலைகளெல்லாம்,- சிந்தை தாபம் ஆற்றாத காதலருக்கு- மனத்திற்கொண்ட
தாபத்தைத் தாங்கமாட்டாத காதலைக்கொண்ட ஆடவருக்கு, அமுது ஆன –
அழுதம்போலினிமையான, இளநீரால் – இளநீரினாலும், அடர்ந்த பூகம் தாற்றல் –
நெருங்கிய கமுகங்குலையினாலும், அம் மரகதம் செந்துகிரால் – அழகிய
மரகதத்திற்கலந்திருக்கிற செம்பவழத்தாலும், அ பொழில் போன்ற – அந்தச்
சோலையையொத்தன; (எ-று.)

     சோலை தடத்தையும், தடம் சோலையையும் போலுமென்று, ஒன்றன்
தன்மையைமற்றொன்று மாற்றிக்கொண்டாற்போலக் கூறிய நயம் பாராட்டுதற்கு
உரியது. தடத்திற்குநீரும் சேறும் உரியன. சோலையில் ஆடவரும் மடவாரும்
ஒருவர்மீது ஒருவர் தூவியபனிநீரும், மான்மதச்சேறுமுதலியனவும் கீழேசிந்துதலால்,
சோலை நீரையும்சேற்றையுமுடையதாயிற்றென்க. பொழிலுக்கு உரியவை,
இளநீர்முதலியன.மடவார்தடங்களிற் குடைந்து புனலாடுகையில், அவர்களுடைய
கொங்கைள்முதலியவற்றைத்தட மெல்லாம் பெறுதலால். அவை பொழில்போன்ற
என்றார்.தனங்கள் இளநீரையும், கூந்தல் பூகத்தாற்றையும், மரகதமேனியிலுள்ள
செவ்வாயிதழ்மரகதச்செந்துகிரையும் போலுமென்க: சோலைக்கு மரகதச் செந்துகிர்,
பசுமையிற்செந்நிறமும்படவெடிக்கும் இளந்தளிரென்க; பொழிலைச்சேருமிடத்தும்
மரகதச்செந்துகிரென்றது- ஆகுபெரேயாம்

மெய் கொண்ட மொழி விசயன் மெய்யின் எழில் இமையாமல்
மேன்மேல் நோக்கும்
மை கொண்ட குழல் ஒருத்தி, மற்று அவன் செங் கையில் சிவிறி
மழை கண்டு அஞ்சிப்
பொய்கொண்டு வகுத்தனைய மருங்கு அசைய, தனபாரம் புளகம் ஏற,
கைகொண்டு முகம் புதைத்து, தன் விரல் சாளரங்களிலே
கண்கள் வைத்தாள்.-இதுமுதல் ஐந்துகவிகள் – அருச்சுனனும் அவனது தேவியரும்
நீர்விளையாடுதலைக் கூறும்.

மெய் கொண்ட மொழி – உண்மையைக் கொண்ட பேச்சையுடைய,
விசயன் – அருச்சுனனது, மெய்யின் – உடம்பின், எழில் – அழகை, இமையாமல் –
கண் கொட்டாமல், மேல்மெல் நோக்கும் – பின்னும்பின்னும் பார்க்கின்ற, மை
கொண்டகுழல் ஒருத்தி – கருநிறத்தைக்கொண்ட கூந்தலையுடைய ஒருத்தி, அவன்
செங்கையில் சிவிறி மழை கண்டு அஞ்சி – அந்த அருச்சுனனுடைய
செங்கையிலுள்ள(நீரை விசிறவீசுங்கருவியான) துருத்தியினின்று வெளிப்படும்
நீர்த்தாரையைக்கண்டுபயந்து, பொய் கொண்டு வகுத்து அனைய மருங்கு
அசைய -பொய்யைக்கொண்டு வகுத்தாற்போன்ற [இல்லையென்றுசொல்லும்
நிலையையடைந்துள்ள] இடை நுடங்காநிற்கவும், தனபாரம் புளகம் ஏற –
கொங்கையாகிய சுமையிலே மயிர்ச்சிலிர்ப்புமிகவும், கைகொண்டு முகம் புதைத்து –
(தன்) கையினால் (தன்) முகத்தைமூடிக்கொண்டு, தன் விரல் சாளரங்களில் –
(அங்ஙன்மூடிய) கையின் விரல்களினிடைவழியாக, கண்கள் வைத்தாள் – (தன்)
கண்பார்வையை வெளியேசெலுத்தினாள்; (எ-று.)

     அருச்சுனன் சிவிறியால் நீரைத்தூவ அது  தன்முகத்தில் நேரே விழும்போது
அவனைக் காணவெட்டாமற் செய்வதால், ஒருத்தி அந்நீர்வீழ்ச்சிக்கு அஞ்சித்
தன்முகத்தைத் தன்கையால் மூடியவண்ணம் விரற்சந்தினால் அவ்வருச்சுனனழகைப்
பார்க்க லாயின ளென்பதாம். மருங்கசைதலும் தனபாரம் புளகமேறுதலும்
நீர்வீழ்ச்சியினா லாயினவை. 

நங்கை அங்கு ஓர் கொடிஅனையாள் வதன மதி சல
மதியாய் நடுங்குமாறு
பங்குனன் தன் திருச் செங் கைப் பங்கயத்தின் சிவிறியினால்,
பரிவு கூர,
குங்குமம் கொள் புனல் விடவும், இமையாமல், புனல்வழியே
கூர்ந்த பார்வை
செங் கலங்கல் புதுப் புனலுக்கு எதிர் ஓடி விளையாடும்
சேல்கள் போலும்!

அங்கு அவ்விடத்தில் [அப்பொழுது], கொடி அனையாள் –
பூங்கொடிபோன்றவளான, ஓர் நங்கை – ஒரு சிறந்தமகளினது, வதனம் மதி –
முகமாகிய சந்திரன், சலம் மதி ஆய் – நீரினுள்ளே தோன்றுஞ் சந்திரபிம்பத்தைப்
போன்று, நடுங்கும் ஆறு – மிக அசையும்படி, பங்குனன் – அருச்சுனன், தன் திரு
செம்கை பங்கயத்தின் சிவிறியினால் – தனது அழகிய சிவந்த தாமரை மலர்போன்ற
கையிலுள்ள  நீர்த்துருத்தியைக்கொண்டு, பரிவுகூர- (அவட்கு) வருத்தம்மிகும்படி,
குங்குமம் கொள் புனல் விடஉம் – குங்குமத்தைக் கரைத்த நீரை விசையோடு
மேல்வீசவும், இமையாமல் – இமைகொட்டாமல், புனல் வழிஏ கூர்ந்த –
நீரினிடையேநுண்ணிதாய்ப்பார்த்த, பார்வை – (அவளுடைய) கண்கள், செம்
கலங்கல் புதுபுனலுக்கு எதிர்ஓடி விளையாடும் சேல்கள் போலும் – சிவந்த
கலக்கமுள்ள புதியநீர்வெள்ளத்துக்கு எதிரே ஓடிவந்து விளையாடுகிற சேல்
மீன்களை ஒக்கும்; (எ-று.)

     அருச்சுனன் ஓர் மெல்லியலாளின் முகத்தின்மேல் துருத்தி கொண்டு
விசையாகக்குங்குமங் கலந்த நீரைத் தூவினான்; அதைப் பொறுக்கமாட்டாமல்
அவள் முகத்தைமிகுதியாக அசைக்கலானாள்; அச்சமயத்தில், சந்திர மண்டலம்
போன்ற அவளுடையமுகமண்டலம் நீரினுள்ளே நடுங்கியது, நீரினுள்ளே
காணப்படுகிற சந்திரமண்டலத்தினதுபிரதிபிம்பம் அந்நீரின் அசைவினால்
அசைந்து தோன்றுவதைப் போன்றது; இங்ஙனம்தனக்கு வருத்தம் மிகுமாறு
அருச்சுனன் மேல்மேல் நீர்வீசிக்கொண்டிருக்கவும் அவள்அவன்பக்கலுள்ள
ஆசையாற்கண்கொட்டாமல் அவனைப் பார்த்தபடியே யிருந்தாள்;அவ்வாறுநீரிற்கு
எதிராக நுட்பமாய்ப் பார்வையைச் செலுத்துகிற அவளுடையகண்கள்,செங்கலங்கற்
புதுவெள்ளத்திற்கு எதிரோடி விளையாடுஞ் சேல்மீன்கள் போன்றனஎன்பதாம்;
தற்குறிப்பேற்றவணி. பரிவு கூர என்பதற்கு – ஆசைமிக என்று
பொருள்கொள்ளினும் அமையும்; அருச்சுனன் தனக்கு அவளிடம்
ஆசைமிகுதலால்அவள்மேற் புனல்வீசின னென்றும், தனது காதலனான அவன்
கைச்சிவிறிகொண்டுவீசியநீர் தன் உடலிற்பட்டபோது அவள் அவன்கையால்
தீண்டினாற் போலஇன்பமிக்கனளென்றும் கொள்க.  

நறை கமழ் தண் துழாய் மாலை நாரணற்கு நண்பான
நரனார் செங் கை,
உறையும் மலர்ச் செந்திருவும் ஒவ்வாத பொற்புடையாள்
ஒரு பொற்பாவை
நெறி தரு பைங் குழலின்மிசை வீசிய நீர், பெருக்கு ஆற்றின்
நிறை நீர் வற்றி,
அறல் படு நுண் கரு மணலின் அரித்து ஒழுகும் சின்னீரோடு
அமைந்தது அம்மா.

நறை கமழ் – வாசனை வீசுகிற, தண் – குளிர்ச்சியான, துழாய்
மாலை -திருத்துழாய்மாலையையுடைய, நாரணற்கு – நாராயணனது
திருவவதாரமானகண்ணபிரானுக்கு, நண்பு ஆன – சிநேகிதனான, நரனார் –
அருச்சுனன், செம் கை -(தனது) சிவந்த கையினால், மலர் உறையும் செம்திருஉம்
ஒவ்வாத பொற்பு உடையாள்- செந்தாமரைமலரில் வாழ்கிற செந்நிறமுள்ள
இலக்குமியும் ஒப்பாகாத அழகையுடையவளாகிய, ஒரு பெண்பாவை –
பொன்மயமான பிரதிமையைப் போன்ற ஒருபெண்ணினது, நெறி தரு
பைங்குழலின்மிசை – நெறித்த கருநிறமான கூந்தலின்மேல்,வீசிய-, நீர்- நீரானது-
பெருக்கு ஆற்றில் நிறை நீர் வற்றி – வெள்ளப்பெருக்கையுடைய நதியில் நிறைந்த
நீர்  குறைந்துபோக, அறல் படு நுண் கருமணலின் அரித்துஒழுகும் – அறுப்புப்
பொருந்திய நுண்ணிய கருமணலில் அரித்துப் பாய்கிற, சில்நீரோடு – சொற்பமான
நீரோடு, அமைந்தது – ஒத்தது; (எ-று.)

     தற்குறிப்பேற்றவணி. நெறித்தகருநிறமான கூந்தல் அறல்பட்ட நுண்ணிய
கருமணலையும், அக்கூந்தலின்மேல் வீசிய நீர் அக்கருமணலில் அரித்தொழுகுஞ்
சொற்பநீரையும் போலு மெனக் காண்க. பசுமை, கருமை நீலம் என்ற நிறங்களில்
ஒன்றற்கொன்றுள்ள சிறிதுவேறுபாட்டை முக்கியமாகக்கொள்ளாமல் அவற்றை
அபேதமாகக்கூறுவது கவிமரபு ஆதலால், கருங்குழல் ‘பைங்குழல்’ எனப்பட்டது.
அம்மா – ஈற்றசை.

     முன்னொருகாலத்தில் குருசிஷ்யகிரமத்தை உலகத்தில் அனைவருக்கும்
விளக்கும்பொருட்டு நாராயணனென்னுங் குருவும் நரனென்னுஞ் சிஷ்யனமாகப்
பதரிகாச்சிரமத்தில் தோன்றிச் சீடனுக்குக் குரு தத்துவப்பொருள்களை
உபதேசிக்கின்றதன்மையாய் வீற்றிருக்கிற திருமாலின் இருமூர்த்திகள்தாமே இங்கு
முறையே கண்ணனும் அருச்சுனனுமாக அவதரித்ததனால் ‘நாரணற்கு நண்பான
நரனார்’ என்றார். ‘நரனுநாரணனுமானோம்’ என முதற் போர்ச்சருக்கத்தும் கூறுவர்.

விளிந்து மயில் புறங்கொடுக்கும் மெல்லியலாள் ஒருத்தி,
நெடு வேயும் பாகும்
சுளிந்து வரும் கட களிற்றுச் சுவேதவாகனன் கடகத்
தோளின் மீது,
தெளிந்த நறுங் கத்தூரிச் சேறு படு சிவிறியின் நீர்
சிந்தும் தோற்றம்,
களிந்த கிரிமிசைக் கடவுள்-காளிந்தி பரந்ததெனக்
கவினும் மாதோ!

மயில் விளிந்து புறம் கொடுக்கும் – மயில் (ஒப்பாக முன்னிற்க
மாட்டாமல்) தோற்று முதுகுகாட்டிச் செல்லும்படியான, மெல் இயலாள் –
மென்மையான சாயலை யுடையவளாகிய, ஒருத்தி – ஒரு பெண், நெடுவேய்உம்
பாகுஉம் சுளிந்து வரும் – நீண்ட முட்கோலையும், பாகனையும் (துரத்திலே
கண்டாலுங்)கோபித்து வருகிற, கடகளிறு – மதங்கொண்ட ஆண்யானைபோன்ற,
சுவேத வாகனன் – அருச்சுனனது, கடகம் தோளின்மீது – கடகமென்னும் வளையை
யணிந்ததோள்களின்மேல், நறு கத்தூரி சேறு படு தெளிந்த நீர் – நறுமணமுள்ள
கஸ்தூரிக்குழம்பு கலந்த தெளிவான நீரை, சிவிறியின் சிந்தும் – துருத்தியைக்
கொண்டுதூவிய, தோற்றம் – காட்சியானது,- களிந்த கிரிமிசை – களிந்தமென்னும்
மலையின்.மேல், கடவுள் காளிந்தி பரந்தது என – தெய்வத்தன்மையையுடைய
யமுனாநதிபரவியதுபோல, கவினும் – அழகியதாய்விளங்கும்; (எ-று.)

     தற்குறிப்பேற்றவணி. கருநிறமுடைய அருச்சுனனது வலியபெரிய
தோளுக்கு – கருநிறமுடையவலிய பெரிய களிந்தகிரியும், கஸ்தூரிக் குழம்பு
கலந்ததனாற் கருநிறம்மிக்க தெளிவான நீர்க்கு- கருநிறமுள்ள தெளிந்தயமுனா
நதியின்நீர்ப்பெருக்கும் ஒப்பா மெனக் காண்க. மயில் விளிந்து புறங்கொடுக்கும்
மெல்லியலாள்- மயிலினதுசாயலினும் மிக அழகியதாய்ச் சிறந்த சாயலையுடையாள்
என்றபடி.கத்தூரி-கஸ்தூரியென்னும் ஒருவகைமானினதுபெயர். அதன் வயிற்றினின்று
எடுக்கப்படுங் கொழுப்புக்கு முதலாகுபெயராம். தோன்றுவது தோற்றம்.
யமுனாநதிக்குத்தெய்வத்தன்மை – தன்னிடத்தில் நீராடியவரது அருவினை
தொலைத்து அவர்களைநற்கதியிற் செலுத்துதலும் கண்ணபிரான் திருவிளையாடல்
செய்யப்பெற்றபாக்கியமுடைத்தாதலும், மாது, ஓ – ஈற்றசைகள். அருச்சுனன்
தேவியர்மீதுநீர்சிந்தியதை வருணித்தவர், தேவியர் அருச்சுனன்மீது நீர்சிந்துவதை
இருகவிகளில்வருணிக்கின்றார்.

பிறை அனைய திலக நுதல் பேதை இளம் பிடி ஒருத்தி,
பிடித்த செங்கை
நறை கமழும் பொலஞ் சிவிறி நண்ணிய செஞ் சிந்தூர
நாரம் வீச,
அறை கழல் வெஞ் சிலைத் தடக் கை அருச்சுனன்தன் திரு
முகத்தில் ஆனபோது,
நிறைமதிமேல் வாள் இரவி கரங்கள் நிரைத்து ஓடுவபோல்
நிறத்த மாதோ!

பிறை அனைய – இளஞ்சந்திரன் போன்ற, திலகம் நுதல் –
திலகத்தையணிந்த நெற்றியையுடைய, இளம் பிடி – இளமையான பெண்யானை
போன்றவளாகிய, பேதை ஒருத்தி – ஒரு பெண், செம் கை பிடித்த – (தனது)
சிவந்தகையிற் பிடித்த பொலம் சிவிறி – அழகிய துருத்தியில், நண்ணிய –
பொருந்திய, செம்சிந்தூரம் நறை கமழும் நாரம் – சிவந்த சிந்தூரப்பொடியைக்
கரைத்த வாசனைவீசும்நீரை, வீச – சிந்த,- (அந்நீர்ப்பெருக்குக்கள்),- அறை கழல்
வெம் சிலை தட கைஅருச்சுனன்தன் திரு முகத்தில் ஆன போது –
ஆரவாரிக்கின்ற வீரக்கழலையும்பயங்கரமான வில்லை யேந்திய பெரிய
கையையுமுடைய அருச்சுனனது அழகியமுகமண்டத்தின்மேற் சென்று
பொருந்தியபொழுது, வாள் இரவி கரங்கள் நிறை மதிமேல் நிரைத்து ஓடுவ போல்
நிறத்த – ஒளியையுடைய சூரியனது கிரணங்கள் பூர்ணசந்திரன்மேல் வரிசையாக
ஓடுவன போல விளங்கின; (எ-று.)

     தற்குறிப்பபேற்றவணி. அருச்சுனனது முகமண்டலத்துக்கு –
சந்திரமண்டலமும்,அதன்மேற்  சிந்தூரங்கலந்தநீர் மேன்மேற் செல்லுதற்கு-சந்திர
மண்டலத்தின்மேற்செந்நிறமான சூரியகிரணங்கள் வரிசையாகச்சென்று பாய்தலும்
ஒப்பா மெனக் காண்க.சூரிய கிரணங்கள் மேன்மேற்பாய்ந்து சந்திரனது
ஒளியைநிறைக்கின்றவென்பது, நூற்கொள்கை. குளிர்ந்த ஒளியும், அழகும், வளைந்த
வடிவமும் பற்றி, மகளிர்நெற்றிக்குப் பிறை உவமம். நுதற்குத் திலகங் கூறினதற்கு
ஏற்ப, பிறைக்குக்களங்கம் கொள்க.  

பாண்டு மதலையும் காதல் பாவையரும், துழாயோனும்
பாவைமாரும்
ஈண்டு பெருஞ் சனத்துடனே இவ்வண்ணம் இடம்தோறும்
இனிதின் ஆடி,
ஆண்டு, வரி சிலை மதனும் அவன் படையும் சேவிப்ப,
அழகு கூர,
மீண்டு, தம மனைதோறும் நிரை நிரை வாள் விளக்கு
ஏந்த மேவினாரே.-கிருஷ்ணார்ச்சுனர் மகளிர்விளக்கேந்தமடவாரோடு
தம்மனைக்குச் செல்லுதல்.

பாண்டு மதலைஉம் – பாண்டுவின் புதல்வனாகிய அருச்சுனனும்,
காதல்பாவையர் உம் – (அவனுடைய) அன்பிற்கு உரியரான மகளிரும்,
துழாயோன்உம் -திருத்துழாய்மாலைக்கு உரிய திருமாலின் அவதாரமான
ஸ்ரீகிருஷ்ணனும்,பாவைமார்உம் (அவனுடைய அன்பிற்குஉரிய) மகளிரும், ஈண்டு
பெருஞ் சனத்துடனே- நெருங்கிய நகரத்துச்சனங்களுடனே, இ வண்ணம் –
இவ்வாறு, இடந்தோறு உம் -(அச்சோலையிலுள்ள) நீர்த்தடங்களிலெல்லாம்,
இனிதின் ஆடி – இனிதாக நீராடி,ஆண்டு – அங்கே, வரி சிலை மதன்உம் –
கட்டமைந்த வில்லையுடைய மன்மதனும்,அவன் படைஉம்- அவனுடைய
பரிவாரமாகிய மகளிரும், சேவிப்ப – அந்தவசந்தோத்ஸவத்தைக் கண்டு களிக்க,
அழகு கூர – அழகுமிக, மீண்டு -(அச்சோலையினின்று) திரும்பி, நிரை நிரை
வாள்விளக்கு ஏந்த -(போகும்வழியிடையே) வரிசை வரிசையாக (ப் பணிப்
பெண்கள்) ஒளிபொருந்தியவிளக்கை யேந்திநிற்க, தம மனை தோறுஉம் –
தம்தமக்குரிய வீடுதோறும், மேவினார்- சென்று சேர்ந்தார் (எ-று.)

     வாள்விளக்கேந்த என்பதற்கு ஏற்ற எழுவாய் வருவிக்க. தம – ஆறனுருபு
ஏற்றபெயர். தம்மனையென்றது – யமுனைக்கரையில் அவரவர்கட்கு என்று
அமைத்தமனையை

நெடு வேனில் புகுதர மேல், இளவேனில் அகன்றதற்பின்,
நிகர் இல் கஞ்சப்
படு ஏய் வெள் வளையமும், தண் பட்டு ஆலவட்டமும்,
செம்படீரச் சேறும்,
உடு ஏய் நித்திலத் தொடையும், ஊடு உறு மண்டபத் தடமும்,
ஒழுகி நீண்ட
வடு ஏய் கண் மடந்தையர்க்கும் மகிழ்நருக்கும் அமைந்தன,
வான்மனைகள் எல்லாம்.-இதுமுதல் மூன்றுகவிகள் – முதுவேனிற்பருவ வருணனை.

இளவேனில் அகன்றதன் பின் – இளவேனிற்பருவங் கழிந்ததன்பின்பு,
மேல் நெடுவேனில் புகுதர – அதற்கு அடுத்ததான முததுவேனிற் பருவம் வர,- படு
ஏய் – நீர்நிலைகளில் உண்டாகிற, கஞ்சம் – தாமரையினது, நிகர் இல் – ஒப்பில்லாத
[மிகச் சிறந்த], வெள் வளையம்உம் – வெண்ணிறமான இளந்தளிர்ச்சுருள்களும், தண்
பட்டு ஆலவட்டம்உம் – குளிர்ச்சியான பட்டினாற்செய்த பெருவிசிறிகளும், செம்
படீரம் சேறுஉம் – செஞ்சந்தனக்குழம்பும், உடு ஏய் நித்திலம் தொடைஉம் –
நக்ஷத்திரகணத்தை யொத்த முத்து மாலைகளும், ஊடு உறு மண்டபம் தடம்உம் –
நடுவிற் பொருந்திய மண்டபத்தையுடைய தடாகங்களும்,- ஒழுகி நீண்ட வடு ஏய்
கண் மடந்தையர்க்குஉம் மகிழ்நருக்குஉம் – நெடுந்தூரமளவும் நீண்ட
மாம்பிஞ்சினுட்பிளவை யொத்த கண்களையுடைய மாதர்களுக்கும் அவர்கள்
கணவரான ஆடவர்களுக்கும், வான் மனைகள் எல்லாம் அமைந்தன – உயர்ந்த
வீடுகள்தோறும் (சீதோபசாரத்தின்பொருட்டு) அமைக்கப்பட்டன; (எ -று.)

     இளவேனில் – இளமையான வெயில்வெப்பத்தையுடைய காலம்;
நெடுவேனில் -முதிர்ச்சியானவெயில்வெப்பத்தையுடைய காலம். கிரீஷ்ம
காலமென்றும்கோடைகாலமென்றுங் கூறப்படுகிற முதுவேனிற்கு உரிய மாதங்கள் –
ஆனியும்ஆடியும். வெப்பம்மிக்க அப்பருவம் வந்தவுடனே அதன்தாபத்தைத்
தணித்துக்குளிர்ச்சிசெய்தற்பொருட்டுச் சீதளகரமான தாமரையுட்சுருள் முதலியன
வீடுகள்தோறுஞ்சித்தஞ்செய்யப்பட்டன வென்பதாம். காலவியல்பை
வருணித்ததனால்,தன்மைநவிற்சியணி. ஆலவட்டம் – ஆலிலைபோன்ற
வடிவமுள்ள ஒருவகைவிசிறி:இனி, தாலவ்ருந்தம் என்பதன் சிதைவு என்ப. ஊடுறு
மண்டபத்தடம் – நீராழிமண்டபத்தைநடுவிலேயுடைய தடாகங்கள்; அத்தடாகத்தி
னிடையிலுள்ள மண்டபத்தில்வசித்தல், வெப்பந்தீர்ந்து தட்பம் பெறுதற்குக்
காரணமாம். வடு – மாவடு; இங்கு,அதனுட்பிளவுக்கு ஆகுபெயர்: அது –
மகளிர்கண்ணுக்கு வடிவிலுவமம்.

     ஒழுகி நீண்ட – ஒருபொருட்பன்மொழி; மிகநீண்ட என்றபடி: “தண் செவியுறப்
போந்தகன்றனவே” என்றபடி காதளவும் நீண்டோடிய என்க.  

திலக நுதல் குறு வியர், தம் செவிப் பூவில்
அளிஇனத்தின் சிறகர்க் காற்றால்
புலர, மது நுகர் மாதர் புன்முறுவல் இதழ் ஊறல்
புதிதின் மாந்தி,
இலகு பரிமள புளக ஈர முலைத் தடம் மூழ்கி,
இரதி கேள்வன்
கலகமிடும் பரிதாபம் அகற்றினார்-இனிமையுடன்
கலந்த கேள்வர்.-கணவர் மடவாரைக் கலத்தல்.

இனிமையுடன் – இன்பம்பெற, கலந்த – மடவாரைக் கூடின,
கேள்வர் -கணவர்,- திலகம் நுதல் குறு வியர் தம் செவி பூவில் அளி இனத்தின்
சிறகர் காற்றால்புலர மது நுகர் மாதர்- திலகந்தீட்டிய நெற்றியிலே தோன்றிய
அற்பமாகிய வேர்வைநீர்தம்முடைய செவியிலணிந்த பூவிலே மொய்க்கின்ற
வண்டுக்கூட்டங்களின்சிறகுகளிலிருந்து தோன்றுஞ் சிறுகாற்றால் உலராநிற்க
மதுவைப்பருகுகின்றமாதராரின்,புல்முறுவல் இதழ் ஊறல் – புன்சிரிப்பைக் கொண்ட
வாயிதழினின்று ஊறும்நீரை,புதிதில் மாந்தி – புதுமைபெறப்பருகி, இலகு பரிமளம்
புளகம் ஈரம் முலை தடம் மூழ்கி- விளங்குகின்ற நறுமணத்தையுடைய
மயிர்க்கூச்சைக் கொண்டு ஈரமுள்ளமுலையாகிறதடத்திலே படிந்து, இரதிகேள்வன்
கலகம் இடும் பரிதாபம் – இரதிக்குக் கணவனாகியமன்மதன் மலரம்புகொண்டு
பொருதலினாலாகிய துன்பத்தை, அகற்றினார் -போக்கினார்; (எ-று.)

     ஆடவரும் பிரிந்தநிலையில் வருந்திய மடவாரும் ஒன்று கூடி
அவ்வருத்தம்நீங்கி இனிது இன்பந் துய்த்தனரெனபதாம்.   

மார வசந்தனை அகன்று, வயங்குறு வெங் கோடையினால்
மறுகி, ஆற்றாது,
ஆர் அமளி மது மலரில், ஆர வடங்களில், பனிநீர்
ஆரச் சேற்றில்
ஈர நெடுங் குழல் இசையில், இயங்கிய சாமரக் காற்றில்,
இள நிலாவில்,
பேர் அழலும் புகுந்தது எனப் பிணங்கினார்-தம்
கேள்வர்ப் பிரிந்த மாதர்.பிரிந்தமகளிர்.

தம் கேள்வர் பிரிந்த மாதர் – தம்கணவரைப்பிரிந்த மகளிர்,-
மாரவசந்தனை அகன்று – மன்மதனுக்குத் தோழனான வசந்தனை [இளவேனிற்
பருவத்தை] நீங்கி, வயங்குஉறு வெம் கோடையினால் – விளங்கித் தோன்றிய
கொடியகோடைக்காலத்தினால் [முதுவேனிற்பருவத்தால்], மறுகி – கலங்கி,
ஆற்றாது -வெம்மையைத் தாங்கமுடியாமல்,- அமளி ஆர் மது மலரில்[மது மலர்
ஆர்அமளியில்]- தேன்கொண்ட பூக்களாலான படுக்கையிலும், ஆரம் வடங்களில்-
முத்தாஹாரங்களிலும், பனிநீர் ஆரம் சேற்றில் – பனிநீர்கலந்த சந்தனச்சேற்றிலும்,
ஈரம்நெடுங் குழல் இசையில் – மனக் கசிவையுண்டாக்கும் பெருமைமிக்க
புள்ளாங்குழலிசையிலும், இயங்கிய சாமரம் காற்றில் – சஞ்சரித்தலையுடைய
சாமரங்களினின்று வெளிப்படும் காற்றிலும், இளநிலாவில் – தோன்றிய நிலாவிலும்,
(குளிர்ச்சியேயன்றி), பேர் அழல்உம் – பெரிய அனலின் பிணங்கினார் –
மாறுபட்டார்;(எ-று.)

     கலந்தார்க்குக் குளிர்ந்தே தோன்றும் மலரமளிமுதலியவற்றைக் குறித்து,
அவற்றிலும் இக்காலத்தின்வெம்மை புகுந்திட்டது என்று கலந்தவரோடு
மாறுபடக்கூறினர் பிரிந்தமகளி ரென்க.

கோடை வெயில் சுடச் சுட மெய் கொளுந்தி இறந்தன
போல, கொண்டல், கோடை,
வாடை, சிறு தென்றல், எனும் மாருதங்கள் எம் மருங்கும்
வழக்கம் இன்றி,
ஆடையில், வெண்சாமரத்தில், ஆலவட்டத்தினில், உயிர்ப்பில்,
அழகு ஆர் நெற்றி
ஓடை முக மத கயத்தின் தழை செவியில், பல் இறகில்,
ஒளித்தமாதோ.-கோடைக்காலத்திற் காற்றில்லாமை.

கொண்டல் கோடை வாடை சிறு தென்றல் எனும் மாருதங்கள் –
கீழ்காற்று மேல்காற்று வடதிசைக்காற்று இளந்தென்றங்காற்று என்கிற
நாற்றிசைக்காற்றுக்களுக்கும்,- கோடை வெயில் சுட சுட மெய் கொளுந்தி இறந்தன
போல – அக்கோடைக் காலத்து வெயில் மிகச்சுடுதலால்உடல்கொளுத்தப்பட்டு
ஒடுங்கின போல, எ மருங்குஉம் – எந்தப்பக்கத்திலும், வழக்கம்இன்றி –
இயங்குதல் இல்லாமல்,- ஆடையில் – வஸ்திரத்திலும், வெள் சாமரத்தில் –
வெண்ணிறமான சாமரத்திலும், ஆலவட்டத்தினில் – ஆலவட்டத்திலும்,
உயிர்ப்பில் -சுவாசத்திலும், அழகு ஆர்நெற்றி ஓடைமுகம் மத கயத்தின் தழை
செவியில்- அழகுமிக்க நெற்றிப் பட்டத்தை யணிந்த முகத்தையுடையமத
யானையினது தழைத்தகாதுகளிலும், பல் இறகில் – பலவகைப்பட்ட பறவை
இறகுகளிலும், ஒளித்த -ஒளித்தன; (எ-று.)- மாது, ஓ – ஈற்றசைகள்.

     மாருதங்கள் இறந்தனபோல வழக்கமின்றி ஒளித்தன என இயையும்:
ஆடைமுதலிய இவற்றின்றுமாத்திரமே காற்று இயங்கின என்பதாம். ஆடையையும்
சாமரத்தையும் ஆலவட்டத்தையும் வீசும்போதும், சுவாசம் விடும்போதும், யானைகள்
தமது பெரிய காதுகளை இயல்பாக அசைக்கும்போதும் பறைவைகள் பறத்தற்கு
இறகுகளைப் பரப்பி அடித்துக்கொள்ளும்போதுமே காற்று வெளியெழுதலால்
அவற்றில்ஒளித்தன வென்றார். ‘கோடை வெயில்
சுடச்சுடமெய்கொளுந்தியிறந்தனபோல’ என்றது, தற்குறிப்பேற்றவணி. மந்தகதியாக
வீசுதல் தென்றலின் இயல்பாதலால், ‘சிறுதென்றல்’ எனப்பட்டது.

தாழி நறுங் குவளை அம் தார்த் தருமன் மகன் அருட்
புனலும், தரங்க வேலை
ஊழி நெடும் பெரும் புனலும், உடலில் உறு வெயர்ப்
புனலும், ஊறி ஊறிப்
பாழிதொறும் இறைக்கின்ற பைம் புனலும், அல்லது,
வெம் பருவம்தன்னால்
பூழி படு கமர் வாய நானிலத்துப் புகலுதற்கு ஓர்
புனலும் உண்டோ?-அக்கோடைக்காலத்து நீர்வறட்சி.

தாழி – நீர்நிலைகளிலுண்டாகிற, நறு – வாசனைவீசுகிற, குவளை –
குவளைமலர்களினாலாகிய, அம் தார் – அழகிய மாலையை யணிந்த, தருமன்
மகன் -யமதருமராசனது புத்திரனான யுதிட்டிரனது, அருள் புனல்உம் –
அருளாகியநீர்ப்பெருக்கும், தரங்கம் வேலை – அலைகளையுடைய கடலி லுள்ள,
ஊழி நெடும்பெரும் புனல் உம் – யுகாந்தகாலத்திலும் வற்றாத மிக்க நீரும்,
உடலில் உறு – உடம்பில்மிகுதியாக உண்டாகிற, வெயர் புனல் உம் –
வியர்வைநீரும், பாழி தொறுஉம் ஊறிஊறி இறைக்கின்ற – நீரூற்றுக்
குழிகளிலெல்லாம் மேன்மேலூறி இறைக்கப்படுகின்ற,பைம் புனல்உம் – புதிய
தண்ணீரும், (என்னும் இவையே), அல்லது – அல்லாமல்,வெம் பருவம் தன்னால்
பூழி படு கமர் வாய நால் நிலத்து – வெவ்வியகோடைக்காலத்தாற் புழுதிபட்டதும்
வெடிப்பைத் தன்னிடத்திலுடையதுமான(பூமியிலுள்ள) நால்வகை நிலங்களிலும்,
புகலுதற்கு ஓர் புனல்உம் உண்டுஓ -எடுத்துச்சொல்லுதற்கு வேறொருநீரும்
உள்ளதோ? [இல்லை யென்றபடி]; (எ – று.)

     அருள், நீர்போலக் குளிர்ந்து பிறருடைய தாபத்தைத் தணிக்குந்தன்மைய
தாதலால், அதனை, உருவகவகையால் ‘அருட்புனல்’ என்றார். காப்பியத்தலைவனான
தருமபுத்திரனது அருள் மிகச் சிறத்தலாலும், என்றும் மாறாததாலும், அது இங்கு
எடுத்துக் கூறப்பட்டது. அவ்வருட்புனல் முதலிய நால்வகைப்புனலுமேயன்றி
உலகத்தில்நால்வகைநிலத்திலும் எங்கும் வேறுபுனல் இல்லையென்பதாம்.
நால்வகைநிலங்கள் -முல்லை, குறிஞ்சி மருதம், நெய்தல் என்பன. பாலைநிலம்,
பிராணிசஞ்சாரத்துக்குஉரியதன் றாதலால் விலக்கப்பட்டது. அன்றியும், பாலைக்குத்
தனியே நிலமில்லையென்றும், மற்றை நான்குநிலங்களும்தம் இயல்புதிரிந்தவிடத்தே
பாலையாமென்றுங்கொள்கை யுண்டு. தாழ்ந்துள்ளது தாழி எனக் காரணக்குறி;
(தாழ்தல் – ஆழ்தல்.) இனி,தாழிக்  குவளை யென்பதற்கு – சாடியிலுண்டாக்கப்பட்ட
குவளை யென்றலும் ஒன்று; “தாழிவாய மறைக்குந் தண்ணென் தடம்பெருங் குவளைக்
கண்ணார்” என்றார் சிந்தாமணியாரும்.பைம்புனல் என்பதில், பசுமை – புதுமையின்
மேலும், குளிர்ச்சியின்மேலும் நின்றது. ‘தாழினறுங்குவளை’, ‘நானிலத்தும்’ என்றும்
பாடம்.    

நீகாரம் மழை பொழிய, நித்தில வெண் குடை நிழற்ற,
நீல வாள்-கண்,
பாகு ஆரும் மொழி, மடவார் மணிக் கவரி இரு
மருங்கும் பயில வீச,
கார்காலம் புகுந்து செழுங் காள முகில் இரண்டு
ஒருபால் கலந்ததென்ன
ஆகாரம் அழகு எறிப்ப, இருவரும் ஆங்கு உடன் இருந்தார்,
ஆவி போல்வார்.-கண்ணனும் அருச்சுனனும் ஒருசேர இருத்தல்.

நீகாரம் மழை பொழிய – பனிநீர்மழை சொரியவும்,- வெள் நித்திலம்
குடை நிழற்ற – வெண்ணிறமான முத்துக்குடை நிழச்செய்யவும்,- நீலம்வாள்கண் –
கருங்குவளைமலர் போன்ற பிரகாசமான கண்களையும், பாகு ஆரும் மொழி –
கருப்பஞ்சாற்றுப்பாகை யொத்த இன்சொல்லையுமுடைய, மடவார்- இளமகளிர், மணி
கவரி – அழகிய சாமரங்களை, இருமருங்குஉம் – இரண்டு பக்கத்திலும், பயில வீச-
பொருந்த வீசவும்,- ஆவி போல்வார் இருவர்உம் – (ஒருவர்க்கொருவர்)
உயிர்போன்றநண்பர்களான கிருஷ்ணார்ச்சுன ரிரண்டு பேரும், கார் காலம்
புகுந்து செழு காளம்முகில் இரண்டு ஒருபால் கலந்தது என்ன – கார்காலம் வரச்
செழுமையான காளமேகங்களிரண்டு ஓரிடத்துக் கலந்தாற் போல, ஆகாரம் அழகு
எறிப்ப – உடம்புஅழகை வீச,- ஆங்கு – அவ்விடத்தில் [அவ்யமுனைக்கரையின்
சோலையில்], உடன்இருந்தார் – ஒருங்கு இருந்தார்கள்; (எ-று.)

     நீகாரமழைபொழிதல் முதலிய மூன்றும், அக்கோடைக்காலத்து வெப்பத்தைத்
தணிக்கும் சைத்தியோபசாரமாக நிகழ்ந்தன வென்க. நீஹாரம் – வடசொல்: பனி
யென்று பொருள். ‘நீகார மழை பொழிய’ என்றது – பனிநீரென்னும் ஒருவகை
வாசனைநீரைச்சொரிய வென்றவாறு. பயில வீசுதல் – வெப்பந்தணித்தற்கு வேண்டிய
காற்று உண்டாகும்படி இடைவிடாது விசையோடுவீசுதல். கார் காலத்து நீர்கொண்ட
கருநிறமான மேகம் – கிருஷ்ணார்ச்சுனரது வடிவத்துக்கு நிறத்தால் உவமம்.
கார்காலம்’ என்பது – ரகரம் இடையிட்டு வந்த ஆசெதுகை. ‘கார்காலம்’ என
வலிமிகாதது, வருமொழி வடமொழியாதலி னென்க.

     இச்சருக்கத்தில் இதுவரை கிருஷ்ணார்ச்சுனர்களுடையசெய்தி கூறும்
முகத்தால்ருதுவர்ணனை, பொழில்விளையாட்டு, நீர்விளையாட்டு, பூக்கொய்தல்
என்னும்பெருங்காப்பிய இலக்கணங்களைக் கூறினர்; இச்சருக்கத்தில் எடுத்துக்
கொண்டபொருளான காண்டவதகனவரலாறு இனிக் கூறப்படுகிறது. அதற்குத்
தோற்றுவாய்செய்தவாறாகும் இச்செய்யுள்.

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ.வில்லிபாரதம் – முதல் பாகம் -7. அருச்சுனன் தீர்த்த யாத்திரைச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 16, 2023

துன்பம், பயம், மிடி, நோய், பகை, சோரம், கொலை, எய்தாது;
இன்பம், பொருள், அறன், யாவையும் இயல்பு ஆதலின் எய்தி;
தன் பைங் குடை நிழல் மன்பதை, தரியார் முனை மதியா
வன்பன், தனை நிகர் வாழ்வு உற வரு நாள்களில் ஒருநாள்–தருமபுத்திரனது நீதிதவறாத அரசாட்சி.

இதுவும் அடுத்த கவியும் – குளகம்.

     (இ-ள்.) தரியார் முனை மதியா வன்பன் – பகைவர்களுடைய
போர்த்திறத்தைப் பொருள்செய்யாத வலிமையையுடையவனான தருமபுத்திரன்,-தன்
பைங் குடை நிழல் – தனது குளிர்ந்த குடை நிழலின்கீழுள்ள, மன்பதை-சனங்கள்,
துன்பம் பயம் மிடி நோய் பகை சோரம் கொலை எய்தாது-துன்பம் அச்சம் வறுமை
வியாதி பகை களவு கொலை ஆகிய இத்தீங்குகளை அடையாமல், இன்பம் பொருள்
அறன் யாவைஉம் இயல்பு ஆதலின் எய்தி-இன்பம் செல்வம் தருமம் ஆகிய
இவையனைத்தையும் இயல்பாக அடைந்து, தனை நிகர் வாழ்வு உற-தன்னையொத்த
இனியவாழ்க்கையையடையும்படி, வரும்-அரசுசெய்துவருகிற, நாள்களில் –
தினங்களுள், ஒரு நாள் -ஒருதினத்தில்,-(எ-று.)- “திருவாயின்மருங்கே***
ஒருவைதிகமுனி வந்து புகுந்தான்” என் அடுத்த கவியோடுமுடியும்.

     நீதிதவறாத ஆளுகையைக்  குடைநிழ லென்றல்  மரபு:  தனை
நிகர்வாழ்வுஎன்பது – அரசனாகிய தருமனது  வாழ்க்கையையொத்த
வாழ்க்கை யென்றும், வேறு ஒப்புமையில்லாமையால் தன்னைத் தானே யொத்த
வாழ்க்கை யென்றும்பொருள்படும்.

     இனி இருபது கவிகள்-பெரும்பாலும் நான்காஞ்சீரொன்று மாச்சீரும்,
மற்றவைமூன்றும் மாங்கனிச்சீர்களுமாகிவந்த கலிவிருத்தங்கள்.

அறை ஓத வனம் சூழ் புவி அரசு ஆன அனைத்தும்
திறையோடு இடம் அற நிற்பது ஒர் திரு வாயில் மருங்கே,
இறையோடு உயர் இரு கையும் எடுத்து, எண்ணுற, ‘முறையோ,
முறையோ!’ என, ஒரு வைதிக முனி வந்து புகுந்தான்-தருமனது அரண்மனைவாயிலில்  ஓர் அந்தணன்வந்து
முறையிடல்.

அறை – ஒலிக்கின்ற, ஓதம் – அலைகளையுடைய, வனம்- (கடலின்)
நீரினால், சூழ் – சூழப்பட்ட, புவி-பூமியில், அரசு ஆன அனைத்துஉம் –
அரசர்களாகவுள்ள எல்லோரும், திறையோடு – (தாம்-தாம் செலுத்தவேண்டிய)
திறைப்பொருள்களுடனே, இடம் அற நிற்பது – வெற்றிடமில்லாதபடி
[இடம்போதாதபடி] (நெருங்கி) நிற்கப்பெற்ற, ஒர்-ஒப்பற்ற, திரு வாயில்மருங்குஏ-
சிறந்த அரண்மனைவாயிலின் புறத்தே, – ஒரு வைதிக முனி-
வேதவொழுக்கத்தையுடையவனான  ஓர் அந்தணன், இறையோடு-
வருத்தத்துடனே, உயர் இரு கைஉம் எடுத்து -இரண்டுகைகளையும் உயர எடுத்து,
எண் உற – (காண்பவர் இது என்னகாரணம் பற்றியதோ? என்று)
ஆலோசிக்கும்படி, முறையோ முறையோ  என- ‘இது முறையோ’ என்று
குறைகூறி முறையிட்டுக்கொண்டு, வந்து புகுந்தான்- வந்துசேர்ந்தான்; (எ-று.)

   ‘இறையோடுயரிருகையுமெடுத்து’ என்பதற்கு-தலைமேற் கை தூக்கிக்கொண்டு
என்றும் உரைக்கலாம்; இறை-தலை. இறையோடுயர் என்பதற்கு-
கைரேகையாற்சிறந்த என்றாருமுளர். முறையோ முறையோ, அடுக்கு-
அவலம்பற்றியது. வேதவிதிப்படிஒழுகுபவன்- வைதிகன். 

கடை காவலர் குறை கூறலும், விசயன், கடிதில், தன்
புடை காவலர் தொழ வந்து, புவித்தேவனை, ‘மறையின்
தொடை காவல! இது என்?’ என, அவனும், ‘தொடு கழலோய்!
விடை காவலர் நிரை கொண்டனர், வில் வேடுவர்’ என்றான்.-அருச்சுனன் வந்து வினாவ, அந்தணன் செய்திகூறுல்.

கடைகாவலர் – அரண்மனை வாயில்காவலாளர்கள், குறை கூறலும்-
(அந்த அந்தணனது) முறைப்பாட்டை (அரண்மனையினுட்சென்று) சொன்னவுடனே,
விசயன்-அருச்சுனன், கடிதின்- விரைவாக, தன் புடை காவலர் தொழ வந்து –
தனதுபக்கங்களில் அரசர்கள் வணங்க வந்து, புவிதேவனை-
பூதேவனாகியபிராமணனை, (நோக்கி), மறையின் தொடை காவல இதுஎன் என-
‘வேதங்களின் தொடர்ச்சியைப் பாதுகாத்தலில்வல்லவனே! நீ இங்ஙனம்முறையிடுவது
என்னகாரணத்தால்?’ என்றுவினாவ, அவன்உம்-அந்த அந்தணனும், விடை –
(அவ்வினாவிற்கு) விடையாக, ‘தொடு கழலோய்- அணிந்தவீரக்கழலையுடையவனே!
வில் வேடுவர் நிரை காவலர் கொண்டனர்-வில்லின் திறத்தையுடைய வேடர்கள்
(எனது) பசுக் கூட்டங்களை (அவற்றை)க் காக்கின்ற இடையர்களிடத்தினின்று
கொள்ளைகொண்டார்கள்.’ என்றான்-என்றுசொன்னான்; (எ-று.)

     விடைஎன்றான்-என்றுவிடைகூறினா னென்க. என்றான் என்பது-என்று
சொன்னானென்றுபொருள்படுதலால், சொல்லெச்சம். எதிர்த்த இடையர்களைப்
பொருது வென்றகருவியை யுடைமை தோன்ற, ‘வில்வேடுவர்’ என்றான்.
விடைகாவலர்- இடையர்என்றாரு முண்டு. தொடை – ஒழுக்கமெனினுமாம்.

அஞ்சாது ஒழி, முனி! நீ; உனது ஆனின் கணம் இன்றே
எஞ்சாவகை தருவேன்’ என, ஏவுக்கு ஒரு திலகன்,
வெஞ் சாபம் எடுப்பான் வரு விசயன், தருமனுடன்
மஞ்சு ஆர் பொழில் விளையாடிடு மயில் சீறடி கண்டான்-அருச்சுனன் அந்தணனுக்கு அபயமளித்துவில்லெடுக்கச்
சென்றவிடத்துத் தருமனுடனே திரௌபதியைக் காணுதல்.

முனி -முனிவனே! நீ-, அஞ்சாதுஒழி – அஞ்ச வேண்டா; உனது
ஆனின் கணம் – உன்னுடைய பசுக்கூட்டத்தை, இன்றுஏ- இப்பொழுதே, எஞ்சா
வகைதருவேன்-(ஒன்றுங்) குறையாதபடி(யான்மீட்டுக் கொணர்ந்து) கொடுப்பேன்,’
என- என்று (அந்தணனுக்கு அபயமளித்து) உறுதிமொழிகூறி, வெம் சாபம்
எடுப்பான்வரு – கொடிய (தனது) வில்லையெடுத்தற்கு (ஆயுதசாலையில்) வந்த,
ஏவுக்கு ஒருதிலகன் விசயன் – பாணப் பிரயோகவித்தைக்கு ஒரு திலகம்போல
அழகுசெய்பவனான அருச்சுனன், தருமனுடன் மஞ்சு ஆர்பொழில் விளையாடிடு
மயில் சிறுஅடிகண்டான் – தருமபுத்திரனுடனே மேகம்படிந்த [உயர்ந்த]
சோலையில்விளையாடுகிற மயில்போன்றதிரௌபதியினுடைய சிறிய பாதங்களை
அங்குப் பார்த்தான்; (எ-று.)

     “நுதலடிநுசுப்பென மூவழிச் சிறுகி” என்றபடி மகளிர்க்குக் கால்சிறுத்திருத்தல்
உத்தமவிலக்கணம். மஞ்சார் பொழில் விளையாடிடு மயில் – அடையடுத்த
உவமையாகுபெயர்.   

காணா, மெய்ந் நடுங்கா, ஒளி கருகா, மனம் மிகவும்
நாணா, விரைவொடு சாயக நாண் வெஞ் சிலை கொள்ளா,
சேணாம் நெறி செல்லா, நனி சீறா, அமர் வெல்லா,
மாண் ஆநிரை மீளா, ஒர் இமைப்போதினில் வந்தான்.-அருச்சுனன் வேடர்களைவென்று நிரைமீட்டல்.

காணா – (தருமனுடன் திரௌபதியைக்)கண்டு, மெய் நடுங்கா-
(அந்தத்தோஷத்தால்) உடம்புநடுங்கி, ஒளிகருகா- முகத்தில் ஒளிகுன்றி, மனம்
மிகவும்நாணா- மனத்தில் மிகவும்வெட்கங் கொண்டு, சாயகம் நாண் வெம்சிலை
விரைவொடுகொள்ளா – அம்புகளையும் நாணியையுடைய கொடியவில்லையும்
விரைவாகஎடுத்துக் கொண்டு, சேண் ஆம் நெறி செல்லா – நெடுந்தூரமாகியவழியிற்
போய்,நனி சீறாஅமர்வெல்லா-மிக்ககோபங்கொண்டு போர்செய்து(வேடர்களை)
வென்று,மாண் ஆ நிரை மீளா – மாட்சிமைப்பட்ட பசுக்கூட்டங்களை மீட்டு, ஒர்
இமைபோதினில் வந்தான் – ஒருமாத்திரைப்பொழுதிலே மீண்டு வந்து சேர்ந்தான்;
(எ-று.)

     பசுக்களுக்கு மாட்சி- ஓமத்துக்கு வேண்டிய பால் தயிர் நெய் முதலியவற்றை
அளித்தல் முதலியன. மிகவும், உம்மை – சிறப்பு. ஸாயகம் – வடசொல்.
‘விரைவொடுசாலையினாண்’ என்றும் பாடம்.

தொறுக் கொண்டவர் உயிரும், தொறு நிரையும், கவர் சூரன்,
மறுக்கம்படு மறையோன் மனம் மகிழும்படி நல்கி,
பொறுக்கும் தவ முனி சொல்படி, புனிதப் புனல் படிவான்,
நிறுக்கும் துலை நிகர் தம்முனை நிகழ்வோடு, பணிந்தான்.-அருச்சுனன் தீர்த்தயாத்திரைக்குத் தருமனிடம் விடைபெறுதல்.

தொறு கொண்டவர் உயிர்உம் – பசுக்கூட்டங்களைக் கவர்ந்து
கொண்டுசென்ற வேடர்களுடைய உயிரையும், தொறு நிரைஉம்-பசுக்கூட்டத்தையும்,
கவர்-கவர்ந்துகொண்டுவந்த,சூரன்- வீரனாகிய அருச்சுனன்,-மறுக்கம் படு
மறையோன் மனம் மகிழும் படி நல்கி – கலக்கமடைந்த அந்த முனிவனது மனம்
மகிழும்படி (பசுக்கூட்டத்தை அவனுக்குக்) கொடுத்து, (உடனே), பொறுக்கும் தவம்
முனி சொல் படி புனிதம் புனல்படிவான் – தாங்கியதவத்தை யுடைய நாரதமுனிவனது
சொல்லின்படி புண்ணியதீர்த்தங்களில் ஸ்நாநஞ் செய்தற்பொருட்டு [தான்
தீர்த்தயாத்திரை செல்லும் பொருட்டு விடைபெறுதற்காக], நிறுக்கும் துலை நிகர்
தம்முனை நிகழ்வோடு பணிந்தான்-(பொருள்களை) நிறுத்து வடையறுக்கின்ற
துலாக்கோலை யொத்த [நடுவுநிலைமைதவறாத] தமையனான தருமனைப் பி
யாணசந்நாகத்தோடு வணங்கினான்;(எ-று.)

     அருச்சுனன் தீர்த்தயாத்திரை செய்யும்படி தருமனைவணங்கி
விடைபெற்றுக்கொண்டா னென்றபடி. நிரை கவர்தல்-பொருளிலக்கணத்தில்
வெட்சியென்னுந் திணையும், நிரைமீட்டல்- கரந்தை யென்னுந் திணையுமாம்.
புனிதம்=பூதம்:வடசொல். நிறுக்குந்துலை நிகர் தம்முன்-தனதுநாட்டுக்குடிகளை
முறைதவறாது நடத்தல்போலவே தாங்களும் நடக்கும்படி நிஷ்பக்ஷபாதமாக நீதி
செய்பவ னென்க. ‘நினைவோடு பணிந்தான்’ என்றும் பாடம்.

ஆடம்பர மன் வேடம் அகற்றி, தொழுதகு தொல்
வேடம் பெறு மறையோருடன் விசயன், புரவிசயன்
சூடம் தரு பாகீரதி தோய் காலையில், அவணே,
சேடன் தல மடவார் புனல் அயர்வான் எதிர் சென்றார்.-இதுமுதல் அருச்சுனனது தீர்த்தயாத்திரை.7.- அருச்சுனன் கங்கையில் நீராடுகையில், நாககன்னியரும் நீராடவருதல்.

ஓடும் கயல் விழியாரில் உலூபிப் பெயரவளோடு,
ஆடும் புனலிடை நின்றவன், அநுராகம் மிகுந்தே,
நாடும் பில வழியே அவள் பின் சென்று, நலத்தால்
நீடும் கொடி மணம் எய்தினன், முகில் போலும் நிறத்தான்.-அருச்சுனன் உலூபியை மணஞ்செய்து கொள்ளல்.

முகில் போலும் நிறத்தான்-மேகம் போலுங் கருநிற முடையவனாகிய,
ஆடும் புனலிடை நின்றவன் – ஸ்நானஞ்செய்கிற அக்கங்கைநீரில் நின்றவனான.
அருச்சுனன், ஓடும்கயல்விழியாரில் – (அங்குநீராட வந்த காதளவும்) ஓடுகிற
கயல்மீன்போன்றகண்களை யுடையவர்களான நாககன்னிகைகளுள், உலூபி
பெயரவளோடு- உலூபியென்னும் பெயரையுடையவளுடனே, அநுராகம் மிகுந்து-
காதல்மிகுந்து, நாடும் பிலம் வழியே அவள் பின்சென்று – ஆராய்ந்து செல்லத்தக்க
பிலத்துவாரவழியாக அவள்பின்னேசென்று, (பாதாளஞ்சேர்ந்து அங்கு), நலத்தால்
நீடும் கொடி மணம் எய்தினன்- அழகினால் மிக்க பூங்கொடி போன்ற அவளை
மணந்தான்; (எ-று.)

     நீராடும்போது அந்நீரினிடையே உலூபியை அருச்சுனன் கண்டானாக,
காதல்கொண்ட அன்னாள், பிலவழியே நாகலோகத்துத் தன்மாளிகைக்கு அவனை
அழைத்துக்கொண்டு போயினாளென்று பாரதங்கள் கூறும். அநுராகம்- வடசொல்.
புதிதாகச்செல்லும் மனிதருக்குப் பிலவழி இயங்குதற்கு அரிய நெறியென்பது
தோன்ற, ‘நாடும்பிலவழி’ எனப்பட்டது. ‘முகில்போலு நிறத்தான்’ என்று
அருச்சுனனது கறுப்பிலழகை விளக்கியவாறு.

இம்மென்று அளி முரல் பாயலில் இன்பத்தை வளர்த்தும்,
பொம்மென் பரிபுர நாள்மலர் பொன் சென்னியில் வைத்தும்,
செம் மென் கனி இதழாளொடு சில்நாள் நலம் உற்றான்;
அம் மென்கொடி அனையாளும் இராவானை அளித்தாள்.-அருச்சுனன் நாகலோகத்திற் சிலநாள் இருந்து,
இராவானைப் பெறுதல்.

(அவ்வருச்சுனன்),- இம் என்ற அளி முரல் பாயலில் –
இம்மென்னும்ஒலிபடவண்டுகள் ஒலிக்கின்ற மலர்ப்படுக்கையில், இன்பத்தை
வளர்த்துஉம் – (அவளோடு) சுகத்தை  மிகுதியாகப்பெற்றும்,-பொம்மென் பரிபுரம்
நாள் மலர் – பொம்மென்று ஒலிக்கிற சிலம்பென்னும் அணியை யணிந்த
அன்றுபூத்ததாமரை மலர்போன்ற அவளுடைய பாதங்களை,
பொன்சென்னியில்வைத்து உம் – அழகிய தனது சிரசின்மீது கொண்டும்,-
செம் மெல்கனி இதழாளொடு – சிவந்த மென்மையான கொவ்வைப்பழம்போன்ற
அதரத்தையுடைய அவளுடனே, சில் நாள் நலம்உற்றான்-சிலநாள் இன்பத்தை
அனுபவித்தான்; (பின்பு), அம் மெல்கொடி அனையாள் உம்- அழகிய
மென்மையானபூங்கொடியைப் போன்ற அவ்வுலூபியும், இராவானை அளித்தாள்-
இராவானென்றபுதல்வனைப்பெற்றாள்;

     இம்மெனல், பொம்மெனல்-ஓசை யநுகரணம். அருச்சுனன் அவளுடைய
பாதத்தைச் சிரமேற்சூடுதல், அவள் ஊடல்கொண்ட காலத்தில் அதனைத்
தணிவித்தற்குஎன்க: ஊடலாவது- ஆடவரும் மகளிரும் இன்பநிலையில்
அவ்வின்பத்தைமிகுவிக்கும்பொருட்டு ஒருவரோடொருவர் சிறிது கொள்ளும்
பிணக்கம்: புலவியென்றுகூறப்படும். இராவாந்-வடமொழிப் பெயர்; அராவானெனப்
பெயர் குறித்தல்வடநூலுக்கு முரணாம். ‘இம் மென்றளிமுரல்’ என்ற
அடைமொழியால், பாயல் -மலர்ப்பள்ளியாயிற்று.

நாகாதிபன் மகள் மைந்தன் நலம் கண்டு, மகிழ்ந்து,
நாகாதிபன் மகன், மீளவும், நதியின் வழி வந்து,
நாகாதிபன் வண் சாரலின் நல் நீர்கள் படிந்து,
நாகாதிபன் விடும் மும் மதம் நாறும் திசை புக்கான்.-அருச்சுனன், நாகலோகத்தினின்று மீண்டு கிழக்கு நோக்கிச் செல்லுதல்.

நாக அதிபன் மகன் -சுவர்க்கலோகத்துக்குத் தலைவனான
இந்திரனதுமகனாகிய அருச்சுனன், நாக அதிபன் மகள் மைந்தன் நலம் கண்டு
மகிழ்ந்து-ஒருநாகராசனது மகளான உலூபியிடத்துத் தோன்றிய அந்தப்புத்திரனது
அழகைக் கண்டுசந்தோஷித்து, மீளஉம் நதியின் வழி வந்து- மீண்டு பிலவழியாய்க்
கங்காநதிக்குவந்து, நாக அதிபன் வண் சாரலின் நல்நீர்கள் படிந்து-மலையரசனாகிய
இமயமலையினது அழகிய சாரலிலுள்ள சிறந்த புண்ணிய தீர்த்தங்களில் நீராடி,
(அவ்வடதிசையினின்று), நாக அதிபன் விடு மும்மதம் நாறும் திசை புக்கான் –
யானைகளுக்குத் தலைவனான ஐராவதமென்னும்யானை சொரிகிற மூன்றுவகை
மதஜலங்கள் மணம்வீசப்பெற்ற கிழக்குத்திசையையடைந்தான்;

     கிழக்குத்திசையென்ற பொருளை ‘நாகாதிபன்விடுமும்மத நாறுந்திசை’
எனவேறுவகையாற் கூறினது – பிறதினவிற்சியென்னும் பொருளணி; இச்செய்யுளின்
அடிதோறும் ‘நாக’ என்ற சொல் வெவ்வேறுபொருளில்வந்தது – யமகமென்னுஞ்
சொல்லணி. நாக மென்ற வடச்சொல் – மலையென்ற பொருளில் சலியாதது என்றும்,
யானை யென்ற பொருளில் நகத்தில் [மலையில்] வாழ்வது என்றுங்
காரணப்பொருள்படும்.

நெளிந்து ஆடு அரவு-அணை ஐயன் நிறம் போல நிறக்கும்
களிந்தா நதி முதலாகிய கடவுள் நதி பலவும்,
முளிந்து ஆர் அழல் எழு கான் நெறி, முக் கோலினர் ஆகித்
தெளிந்து ஆறிய பெரியோரொடு சென்று, ஆடினன் அன்றே.-யமுனை முதலிய தீர்த்தங்களில் நீராடுதல்.

முக்கோலினர் ஆகி – திரிதண்டத்தை யேந்தியவர்களாய்,
தெளிந்து-(தத்துவஞானத்தால்) மனந்தெளிந்து, ஆறிய- (சாந்தகுணத்தால்)
அடங்கியிருக்கிற, பெரியேரொடு- சிறந்த முனிவர்களுடனே, முளிந்து ஆர் அழல்
எழு கான் நெறி சென்று – கொதித்துவளர்கிற நெருப்பு ஓங்கியெரியப்பெற்ற
[கொடிய]காட்டு வழியிலே போய், நெளிந்து ஆடு அரவு அணை ஐயன் நிறம்
போல நிறக்கும்- உடல்நெளிந்து படமெடுத்தாடுந் தன்மையுள்ள ஆதிசேஷனைச்
சயனமாகக்கொண்ட திருமாலினது திருநிறம்போலக் கருநிறங்கொண்டுள்ள, களிந்தா
நதி முதல் ஆகிய-யமுனாநதி முதலிய, கடவுள் நதி பலஉம் – தெய்வத்தன்மையுள்ள
நதிகள் பலவற்றிலும், ஆடினன்- நீராடினான்; (எ-று.)

     யமுனை, களிந்த மென்னும் மலையினின்றுந் தோன்றிக் காளிந்தி யென
ஒருபெயர் பெறுதலால், ‘களிந்தாநதி’ எனப்பட்டது. ‘முளிந்தாரழல்’ என்றது-
காட்டுத்தீயை; இதனால், அக்காட்டின் செல்லுதற்கு அருமை கூறியவாறு.
திரிதண்டம்-மூன்றுகோல் ஒன்றாகச் சேர்த்துக்கட்டப்பட்டது, இதுமுதல் 35-ஆம்
பாடல்வரையிலுள்ள தலங்கள் பாலபாரதத்துக் கூறப்படவில்லை, அன்றே=ஈற்றசை.

பத்திக்கு வரம்பாகிய பார்த்தன், பல தீர்த்தம்
அத் திக்கினும் எத் திக்கினும் ஆம் என்றவை ஆடி,
சித்திக்கு ஒரு விதை ஆகிய தென் நாட்டினை அணுகி,
தத்திச் சொரி அருவித் தட அரவக்கிரி சார்ந்தான்.-தென்றிசைநோக்கிவந்து திருவேங்கடமலை சேர்தல்.

பத்திக்கு வரம்பு ஆகிய – பக்திக்கு ஓர் எல்லையாகவுள்ள,
பார்த்தன்-அருச்சுனன், – அ திக்கின்உம் – அந்தக் கீழ்த் திசையிலும், எ
திக்கின்உம் -பலவிடங்களிலுமுள்ள, ஆம் என்றவை- விசேஷமுடையனவாமென்று
சொல்லப்பட்டவையான, பல தீர்த்தம் – அநேக தீர்த்தங்களில், ஆடி – நீராடி,-
(பின்பு),-சித்திக்கு ஒரு விதை ஆகிய -கருதியபயன் கைகூடுதற்கு ஒப்பற்ற
மூலமாயுள்ள, தென்நாட்டினை – தட்சிணபூமியை, அணுகி – அடைந்து, தத்தி
சொரிஅருவி தட அரவக்கிரி-குதித்துப்பாய்கின்ற அருவிகளையுடைய
பெரியதிருவேங்கடமலையை, சார்ந்தான்-;

     தென்திசையிலே சோளதேசத்தைக்கடந்து பாண்டியனது *மணலூருபுரத்தில்
வனச்சோலையிலே சித்திராங்கதையைக்கண்டு மணந்து இன்புற்றுச் சேதுவைக்
கண்டுமீண்டு கருக்கொண்டிருந்த அந்தச் சித்திராங்கதையையடைந்து அவள்
கருவுயிர்த்தஆண்மகவை மாமனாரின்விருப்பின்படி அவற்குத்தத்துக்கொடுத்து
அவனுடையமகவில்லாக்குறையை நீக்கி மேலைத்திசையில் தீர்த்தங்களைச்
சேவித்துவிட்டுக்கோகர்ணக்ஷேத்ர மடைந்தான் என்ற இவ்வளவே
பாலபாரதத்திலுள்ளது.பரதகண்டத்திலே தக்ஷிண தேசமாகிய தமிழ்நாடு,
திருவேங்கடம் திருவரங்கம்அத்திகிரி முதலிய பல விஷ்ணுஸ்தலங்களுக்கும்,
சிதம்பரம் காஞ்சீபுரம் முதலியபலசிவஸ் தலங்களுக்கும் இடமாய்,
அடியார்கட்குக்கருதிய பயன் கைகூடுதற்குஉரியதானமாக இருத்தலால், ‘சித்திக்
கொரு விதையாகிய தென்னாடு’ எனப்பட்டது. தென்னாட்டுக்கும் வடநாட்டுக்கும்
இடையெல்லை திருவேங்கட மென்பது தோன்ற, ‘தென்னாட்டினை யணுகி
அரவக்கிரி சார்ந்தான்’ என்றார். (அரவம் – பாம்பு; இங்கே, ஆதிசேஷன்)
திருவேங்கடமலை சேஷகிரி யென்று ஒரு பெயர் பெறுதலால், ‘அரவக்கிரி’
எனப்பட்டது. பரமபதநாதனது ஆஜ்ஞையின்படி ஆதிசேஷனேமலையுருவ
மானதனாலும், மேரு மலையிலிருந்து ஆதிசேஷனுடனே வாயுவினாற்
கொணரப்பட்டதனாலும், இதற்கு இப்பெயர் வாய்த்தது: இது- திருமாலினது
திவ்வியதேசங்கள் நூற்றெட்டனுள் ஒன்றும், வடநாட்டுத்திருப்பதிகள்
பன்னிரண்டில்முதலதுமாகிய தலம். ‘தத்திச் சொரி யருவி’ என்ற அடைமொழியால்,
அத்திருமலையில் ஆகாசகங்கை, பாபவிநாசம், பாண்டவதீர்த்தம், குமாரதாரை,
தும்புருதீர்த்தம், கோனேரி, – ஆழ்வார்தீர்த்தம் முதலிய பல புண்ணியதீர்த்தங்கள்
இருத்தல் தோன்றும்.  

இச்சைப்படி தன் பேர் அறம் எண்-நான்கும் வளர்க்கும்
பச்சைக்கொடி, விடையோன் ஒரு பாகம் திறை கொண்டாள்,
செச்சைத் தொடை இளையோன் நுகர் தீம் பால் மணம் நாறும்
கச்சைப் பொரு முலையாள், உறை கச்சிப் பதி கண்டான்-காஞ்சீபுரத்தை யடைதல்.

தன் இச்சைப்படி – தனது விருப்பத்தின்படியே, பேர் அறம்
எண்ணான்குஉம் – சிறந்த முப்பத்திரண்டு தருமங்களையும், வளர்க்கும் –
வளர்க்கின்ற, பச்சை கொடி – பசியநிறமுள்ள கொடி போன்றவளும், விடையோன்
ஒருபாகம் திறைகொண்டாள் – விருஷபவாகனனாகிய சிவபிரானது (திருவுருவத்தில்)
வாமபாகத்தைத் (தனக்குஉரிய) திறைப்பொருளாக [தங்குமிடமாக]க்கொண்டவளும்,
செச்சை தொடை – வெட்சிப்பூமாலையையுடைய, இளையோன் –
இளையகுமாரனானமுருகக்கடவுள், நுகர் – அமுதுசெய்த [உண்ட], தீம்பால்-இனிய
பாலினது, மணம் -வாசனை, நாறும் – பரிமளிக்கின்ற, கச்சை பொரு முலையாள் –
(அணிந்த) கச்சினைமோதுகின்ற [பருத்த] தனங்களை யுடையவளுமான
காமாட்சியம்மை, உறை -எழுந்தருளியிருக்குமிடமான, கச்சிபதி – காஞ்சீபுரியை,
கண்டான் – அடைந்தான்;(எ-று.)

     கச்சிப்பதி – தொண்டைநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று: இது, முத்திதரும்
நகரம்ஏழனுள் ஒன்றாம்; (மற்றவை – அயோத்தி, மதுரை, மாயை, காசி, அவந்தி,
துவாரகை என்பன.) கச்சி – காஞ்சி என்ற வடசொல்லின்சிதைவு. ஒருகாலத்தில்
திருக்கைலாசத்திலே உத்தியானவனத்தில் உமாதேவி பரமசிவனது
பின்னேவந்துவிளையாட்டாக அப்பிரானுடைய திருக்கண்களைத் தனதுஇரண்டு
திருக்கைகளாலும்  ஒருகணப்பொழுது மறைக்க, அம்மாத்திரத்தில்
சந்திரசூரியராதியர்அனைவருடையஒளிகளும் ஒழிந்துஎங்கும் இருள் மூடி
யுகங்கள் பலகழிந்துமன்னுயிர்மிகவருந்த, அவ்வருத்தத்தை நெற்றிக்கண்ணின்
ஒளியால் நீக்கியசிவபெருமான், பின்பு உமாதேவியை நோக்கி ‘நீ செய்தஇக்குற்றந்
தீரக் காஞ்சீபுரியிற்சென்று தவம்புரிந்து புனிதையாவாய்’ என்று கட்டளையிட,
அங்ஙனமேகன்னிகைவடிவமாய்க் காஞ்சீபுரத்திற்கு வந்த காமாட்சியம்மை, அங்கு
முப்பத்திரண்டுதருமங்களையும் வளர்த்தன ளென்றும், அதற்காகச் சிவபிரான்
அக்ஷயபாண்டம்ஒன்றையும், இரண்டு சராவங்களையும், இருநாழிநெல்லையும்
அவட்குக்கொடுத்தருளின னென்றும் வரலாறு அறிக. முப்பத்திரண்டு தருமங்க
ளாவன-கோதானம், பூமிதானம், கன்னிகாதானம், சத்திரங்கட்டுதல்,
குளம்வெட்டுதல்,சாலையமைத்தல், தண்ணீர்ப்பந்தல்வைத்தல், ஆவுரிஞ்சுதறி
நாட்டல், மட்டங்கட்டுதல்,வீடுகட்டிக்கொடுத்தல்,பசுவுக்குப்புல்லிடுதல், விலங்குகட்டு
இரைகொடுத்தல்,பறவைகட்கு இரையளித்தல், மகப்பெறுவித்தல், மகவளர்த்தல்,
மகவுக்கு பாலளித்தல்,மகவுக்குச்சோறளித்தல், ஓதுவார்க்குஉணவு அளித்தல்,
ஏழைகட்கு அன்னமிடுதல்,நோய்க்குமருந்துதருதல், விலைகொடுத்து உயிர்காத்தல்,
ஆடையழுக்ககற்றவண்ணாரைவைத்தல், கௌரத்திற்குநாவி தரை வைத்தல்,
தாம்பூலந்தருதல், அணிகலன் அளித்தல், தலைக்கு எண்ணெய்தருதல், பிறர்கடன்
தீர்த்தல், பிச்சையிடுதல், அகதிப் பிணஞ்சுடுதல், ஆடையளித்தல்,
திண்பண்டம்நல்கல்,துயல் தீர்த்தல் என்பன; இவற்றிற்சில, வேறுவேறாகவுங்
கூறப்படும். செச்சை யென்பது – வெட்சியென்னும்பொருள தாதலையும்,
அம்மலர்மாலை முருகனுக்கு உரிய தாதலையும், “செச்சைக்கண்ணியன்” எனத்
திருமுருகாற்றுப்படையிலுங் காண்க. மூத்தகுமாரனாகிய விநாயகனைவிலக்குதற்கு
‘இளையோன்’ என்றும், சரவணப்பொய்கையில் தோன்றிய
இளங்குழந்தைவடிவானகுமாரக்கடவுளுக்குச் சிவபிரான் கட்டளைப்படி உமாதேவி
முலைப்பால் கொடுத்தமைபற்றி ‘இளையோனுகர்தீம்பான்மணநாறு முலை’ என்றும்,
காஞ்சீபுரத்தில் காமாட்சியம்மைக்கு உள்ளதலைமைதோன்ற ‘அவளுறையுங்
கச்சிப்பதி’ என்றுங் கூறினார்.  

அயனார் புரி மக சாலையும், அணி அத்திகிரிக்கே
மயனார் செய் திருக் கோயிலும், மா நீழலின் வைகு எண்
புயனார் உறை மெய்க் கோலமும், உள் அன்பொடு போற்றி,
பயன் ஆர் புனல் நதி ஏழும், அந் நகரூடு படிந்தான்.-அந்நகரிலுள்ள திருமாலையும்சிவபிரானையும்வணங்கல்.

இச்செய்யுளின் இடையிரண்டடிகள், பலஏட்டுப்பிரதிகளில்

           “மயனார்செய்திருக்கோயிலுமாமின்னினொடமரும்
புயனாரணர்மெய்க்கோலமுமுள்ளன்பொடுபோற்றி”

அயனார் புரி மகசாலை உம் (அங்குப்) பிரமதேவர் செய்த
யாகசாலையையும், அணி அத்திகிரிக்குஏ மயனார் செய் திருகோயில்உம்-அழகிய
அத்திகிரியிலே மயன் செய்த திருக்கோயிலையும், மா நீழலின் வைகு எண் புயனார்
உறை மெய் கோலம்உம் – மாமரத்தின் நிழலிலே வீற்றிருக்கின்ற
எட்டுத்தோள்களையுடைய சிவபிரான் காட்சிகொடுக்கிற திருமேனிக் கோலத்தையும்,
உள் அன்பொடு போற்றி- மெய்யன்போடு வணங்கி, அ நகரூடு – அந்த
நகரத்திலுள்ள, பயன் ஆர் புனல் நதி ஏழுஉம் – (தம்மில்மூழ்குவார்க்கு)
நற்பயன்மிகும்படியான புண்ணியதீர்த்தத்தையுடையஏழு நதிகளிழும், படிந்தான் –
நீராடினான்; (எ-று.)- இதிற்குறித்த திருமால்திருநாமம் – வரதராசர்; தாயார்
திருநாமம்- பெருந்தேவி; சிவபிரான் திருநாமம் – ஏகாமிரநாதர்; அம்பிகை
திருநாமம் -காமாட்சியம்மை.

     நெடுநாள் தவஞ்செய்தும் மனத்தூய்மைபெறாத பிரமதேவன்
ஆகாயவாணிகூறியபடி பூலோகத்தில் புண்ணியக்ஷேத்திரங்களெல்லாவற்றுள்ளும்
உத்தமமானதும்ஒன்று ஆயிரமாகப்பயன் தருவதுமாகிய சத்தியவிரதக்ஷேத்திரத்தை
யடைந்து அங்கு அநந்தசரசின் கரையிலுள்ள அஸ்திகிரியை உத்தரவேதியாகக்
கொண்டு யாகசாலையமைப்பித்து அசுவமேதயாகஞ்செய்து அதனால்
ஸ்ரீமந்நாராயணனை ஆராதிக்க, அந்த யாகாக்கினியிலிருந்து எழுந்த என்றுகாணப்படுகின்றன. மா மின்னினொடு அமரும் புயல்நாரணர் மெய்கோலம்
என்பதற்கு – திருமகளாகிய மின்னலினுடனே பொருந்திய மேகம்போன்ற
திருமாலினது திருமேனிக்காட்சி யென்று பொருள். புண்ணியகோடி விமானத்தில்
தேவராசனான திருமால் பிரசன்னனாயின னென்றும்,தெய்வத்தச்சரில் ஒருவனான
மயன் பிரமன் கட்டளையால் அங்கு எம்பெருமானுக்குத்திருக்கோயில்
கட்டியமைத்தன னென்றும் அறிக. அயன் – அஜன்என்றவடசொல்லின்திரிபு.
ஹஸ்திகிரி – வடசொற்கள். இந்திரனது யானையாகியஐராவதம் நெடுநாள்
தவஞ்செய்து மலைவடிவங்கொண்டு எம்பெருமானைத்தரித்தலால்அம்மலைக்கு
‘ஹஸ்திகிரி’ என்று பெயராயிற்றென்றும், கசேந்திராழ்வான்
பூசித்துப்பேறுபெற்றமலையாதலால் அப்பெயர் நிகழ்ந்ததென்றுங் காரணங் கூறுவர்;
ஹஸ்தி -யானை.

     மாநீழலின்வைகெண்புயனார் – ஏகாம்ரநாதஸ்வாமி. காஞ்சீபுரத்தில்
வேதவடிவமான ஒருமாமரத்தின்கீழ்ச் சிவபிரான் சிவலிங்கவடிவமாய் எழுந்தருளி
யிருக்கின்றன னென்க. இது, பஞ்ச சிவலிங்க ஸ்தானங்களுள் பிருதிவிலிங்க
ஸ்தாந்ம்.நதியேழ்- கம்பை, பம்பை, மஞ்சனி, பிச்சி, கலிச்சி, மண்ணி, வெஃகா
என்பன.  

பெற்றாள் சகத் அண்டங்கள் அனைத்தும், அவை பெற்றும்
முற்றா முகிழ் முலையாளொடு முக்கண்ணர் விரும்பும்
பற்றாம் என, மிக்கோர் இகழ் பற்று ஒன்றினும், உண்மை
கற்றார் தொழும் அருணாசலம் அன்போடு கை தொழுதான்-திருவண்ணாமலையைத் தொழுதல்.

 சகத் அண்டங்கள் அனைத்துஉம் பெற்றாள் – உலக வுருண்டைக
ளெல்லாவற்றையும் பெற்றவளும், அவை பெற்று உம் முற்றா முகிழ் முலையாளொடு
– அவற்றையெல்லாம் பெற்றும் முதிராத அரும்புபோன்ற [இளமை மாறாத]
தனங்களையுடைய மங்கையுமாகிய உமாதேவியுடனே, முக்கண்ணர் –
மூன்றுதிருக்கண்களையுடையவரான சிவபிரான், விரும்பும் – திருவுள்ளமுவந்து
எழுந்தருளியிருக்கிற, பற்று ஆம் – ஸ்தலமாகும் (இது), என – என்ற காரணத்தால்,
உண்மை கற்றார் – மெய்ப்பொருளறிந்த ஞானிகள், மிக்கோர் இகழ் பற்று
ஒன்றின்உம்- (தக்கதன்றென்று) மேலோர் இகழ்கிற இவ்வுலகப்பற்று
பொருந்தியகாலத்திலும்,தொழும் – வணங்கப்பெற்ற, அருணாசலம் –
திருவண்ணாமலையை, அன்போடுகைதொழுதான் – பக்தியுடன் கைகூப்பி
வணங்கினான்; (எ-று.)- இத்தலத்துச்சிவபிரான் திருநாமம் – அருணாசலேசுவரர்;
அம்பிகை திருநாமம் -உண்ணாமுலையம்மை.

     ஜகதண்டம் – அண்டகோளம். சிவபிரான் தன்னுடைய பராசக்தியான
அம்பிகையினது உதவியைக்கொண்டே பிரபஞ்சங்களைப் படைத்தருளுதலாலும்,
இச்சாமாத்திரத்தால் அவையனைத்தும் உண்டாதல் பற்றி அவற்றைப் பெற்றதனாற்
கன்னித்தன்மை அம்பிகைக்கு மாறாததனாலும், ‘பெற்றாள்சக தண்டங்களனைத்தும்
அவை பெற்றும் முற்றாமுகிழ் முலையாள்’ என்றார்; இது முரண்விளைந்தழிவணி.
‘முக்கண்ணன்’ என்றும் பாடம்.

     உலகப்பொருட்பற்று முத்திபெறுதற்குத் தடையாதல்பற்றி
ஒழிக்கத்தக்கதாதலால் ‘மிக்கோரிகழ்பற்று’ எனப்பட்டது. பற்று ஒன்றினுந்
தொழுதலாவது – பிரபஞ்சசம்பந்தமான உண்ணல், உடுத்தல், உறங்கல் முதலிய
தொழில்களைச்செய்யும் பொழுதும் இடைவிடாது சிந்தித்தல். இது தன்னை
நினைத்தமாத்திரத்தில் முத்தியளிக்குந் தலமாதலால், அவ்வுண்மையுணர்ந்தோரால்,
பற்றற்றே தொழவேண்டு மென்ற நியதி யில்லாமல், பற்று அறாத பொழுதும்
தொழப்படு மென்க. தாம்தாம் கடவுளென்னுங் கருத்துக்கொண்டு ஒருவர்க்கொருவர்
பகைமைபூண்டு போர்தொடங்கிய பிரம விஷ்ணுக்களின்மாறுபாட்டை
ஒழிக்கும்பொருட்டுப் பரமசிவன் அவ்விருவருக்கும் நடுவில் ஒரு பெரிய
சோதிமலைவடிவமாய்த் தோன்றி நின்றன னென்றும், பின்பு சுருங்கிய அந்த
அக்கினிமலையே திருவண்ணாமலை யென்றும், அது அழல்வண்ணமாய்ச்
சிவந்திருத்தலால் ‘அருணகிரி’ எனப் பெயர் பெற்றதென்றும் சைவநூற்கொள்கை.
அருணாசலம் -அருண + அசலம்: தீர்க்க சந்திபெற்ற வடமொழித்தொடர். அசலம்
– சலியாதது: மலை.      

உருகும் கமழ் நெய் பால் இரு பாலும் கரை ஒத்துப்
பெருகும் துறை ஏழ் ஏழு பிறப்பும் கெட மூழ்கி,
கருகும் கரு முகில் மேனியர், கவி ஞானியர் கண்ணில்
பருகும் சுவை அமுது ஆனவர், பாதம் தலை வைத்தான்-பெண்ணையாற்றில் நீராடி, திருக்கோவலூர்ப் பெருமானைத் தொழுதல்.

உருகும் – உருகுகிற, கமழ் – நறுமணம் வீசுகிற நெய் – நெய்யும்,
பால்- பாலும், இரு பால்உம் – இரண்டுபக்கங்களிலும், கரை ஒத்து பெருகும் –
கரையினளவுக்குச்சரியாகப் பெருகப்பெற்ற, துறை – (பெண்ணையாற்றின்) துறையிலே,
ஏழ் ஏழு பிறப்புஉம் கெட மூழ்கி- எழுமையையுடைய எழுவகைப்பிறப்பும்
ஒழியும்படிநீராடி,-கருகும் கரு முகில் மேனியர் – மிகக்கறுத்த காளமேகம் போன்ற
திருமேனிநிறத்தை யுடையவரும், கவி ஞானியர் கண்ணின் பருகும் சுவை அமுது
ஆனவர் – கவிபாடவல்லவர்களும் தத்துவஞானமுடையவர்களுமான முதலாழ்வார்
மூவரும் தம்கண்களால் பிரதியக்ஷமாகக் கண்டு நுகர்ந்த இன்சுவையுடைய
அமிருதம்போன்றவருமான திருக்கோவலூ ரெம்பெருமானுடைய, பாதம் –
திருவடிகளை,தலைவைத்தான்-(தனது) முடியின் மேற்கொண்டு வணங்கினான்;
(எ-று.)

     திருக்கோவலூரென்பது – நடுநாட்டிலுள்ள திருமாலின் திருப்பதி இரண்டனுள்
ஒன்றும், தென்பெண்ணையாற்றின் தென்கரையிலுள்ளதுமாகிய திவ்வியதேசம்.
இங்குப்பெருமாள் திருநாமம் – தேகளீசன், திரிவிக்கிரமன், ஆயனார்; தாயார்
திருநாமம்-பூங்கோவல் நாச்சியார், பூங்கோயிலாள். ஏழேழுபிறப்பு- “எழுமையெழு
பிறப்பு” என்றார், திருக்குறளில்: ஒருபிறப்பிற் செய்த வினையின் பயன்
ஏழுபிறப்புவரையிலும்தொடருமென்பது நூற்கொள்கை. வினைவசத்தால்
உயிர்கட்கு நேரக்கூடியஏழுவகைப்பிறப்பு-தேவர், மனிதர், மிருகம், பறவை,ஊர்வன,
நீர்வாழ்வன, தாவரம்என்பன. ‘ஏழேழுபிறப்புங்கெட’ என்றது- இனி
எந்தப்பிறப்பிலும் ஒருகாலும் பிறந்து வருந்தாதபடி என்றவாறு. கண்ணிற்பருகும் –
நாவின்வினையைக் கண்ணின் மேல் ஏற்றியது, ஒருவகையுபசாரவழக்கு; தாகங்
கொண்டவன் ஆதரத்தோடு நீர்பருகுவதுபோல மிக்க அன்போடு கண்களாற்
காணும் என்க. பால் என்ற சொல் வெவ்வேறு பொருளில் அடுத்துவந்தது-மடக்கு
என்னுஞ் சொல்லணி.

     ஒளவையார் திருக்கோவலூர்க்குச் செல்லும்பொழுது, அங்குப்
பெண்ணையாற்றங்கரையிலுள்ள பாரி யென்னும் இடையனது குடிசைக்குள் நுழைய,
மழையில் நனைந்து குளிர்நடுக்கங்கொண்டு வந்த அந்த ஒளவையார்க்கு,
அக்குடிசையிலிருந்த அவன்பெண்களான அங்கவை சங்கவை யென்றமங்கையர்
இருவரும் அன்போடு ஆடையும் உணவும் கொடுத்து உபசரிக்க, அதனால்
மகிழ்ச்சிகொண்ட ஒளவையார் அவர்கட்குச்செல்வம் பெருகும்படி கவிபாடியதோடு,
அக்கன்னிகைகளைத் தக்கவரனுக்கு மணம்புரிவிக்க விரும்பி, தெய்விகனென்னும்
அரசனுக்குக் கொடுப்பதாக நிச்சயித்துச் சேரசோழ பாண்டியர்களைச்
சீட்டுக்கவியெழுதி யனுப்பி வருவித்து, விவாகத்திற்குவேண்டியன வெல்லாஞ்சித்தஞ்
செய்து மணத்தைச் சிறப்பாக நடத்தும்பொழுது பெண்ணைநதியை நோக்கி, இம்
மணவிருந்துக்கு வேண்டிய பால் நெய்யாகப் பெருகிவரும்படி “முத்தெறியும்
பெண்ணை முது நீரதுதவிர்ந்து, தத்திய நெய்பால் தலைப்பெய்து -குத்திச்,
செருமலைதெய்வீகன்றிருக்கோவ லூர்க்கு, வருமளவிற் கொண்டோடி வா” என்ற
ஒருவெண்பாப்பாட, அத்தெய்விகவாக்கின்படி அந்நதி நிறைய நெய்யும் பாலும்
பெருகியதென்பது. இங்கு குறித்த கதை.

     பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்ற முதலாழ்வார் மூவரும்,
ஓடித்திரியும் யோகியர்களாய், செஞ்சொற்கவிகளுமாகி, தம்மில் ஒருவரையொருவர்
அறியாமல் தனித்தனியே பலவிடத்தும் சஞ்சரித்து வருகையில், ஒருநாள்
சூரியாஸ்தமன மானபின் பொய்கையாழ்வார்  திருக்கோவலூரையடைந்து, அங்கு
மிருகண்டு முனிவரது திருமாளிகையிற் சென்று அதனது இடைகழியிற்
சயனித்துக்கொண்டிருந்தார். பின்னர்ப் பூதத்தாழ்வாரும் அவ்விடத்திலே சென்று
சேர,பொய்கையாழ்வார், ‘இவ்விடம் ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம்’
என்றுசொன்னபின், அவ்வாறே அவ்விருவரும் அங்கு இருந்தனர். அதன்பிறகு
பேயாழ்வாரும் அவ்விடத்தை அடைந்திட, முன்னையரிருவரும் ‘இவ்விடம்
ஒருவர்படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்’ என்று கூற, அங்ஙனமே
அம்மூவரும் அவ்விடத்திலே நின்றுகொண்டு எம்பெருமானுடைய
திருக்கலியாணகுணங்களை ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டும்
கேட்டுக்கொண்டும் மகிழ்ந்திருந்தனர். அவர்களை ஆட்கொண்டு அவர்களால்
உலகத்தை உய்விக்கவேண்டுமென்று நினைத்து அம்மூவரையும் ஓரிடத்திற் சேர்த்த
திரிவிக்கிரமமூர்த்தி அவர்களை அநுக்கிரகிக்கும் பொருட்டு அப்பொழுது
பேரிருளையும் பெருமழையையும் உண்டாக்கிப் பெரியவடிவத்தோடு
அவர்களுடன்சென்று நின்று பொறுக்கவொண்ணாத அதிக நெருக்கத்தைச்
செய்தருளினான். அவர்கள் ‘முன் இல்லாத நெருக்கம் இப்பொழுது உண்டானது
என்ன? பிறர் எவரேனும் இந்த இடைகழியிற் புகுந்தவர் உண்டோ?’ என்று
சங்கிக்கையில், பொய்கையாழ்வார், பூமியாகிய தகழியில் கடல்நீரையே
நெய்யாகக்கொண்டு சூரியனைவிளக்காக ஏற்ற, பூதத்தாழ்வார் அன்பாகிய தகழியில்
ஆர்வத்தைநெய்யாகவும்சிந்தையைத் திரியாகவுங் கொண்டு ஞான தீபத்தை ஏற்ற,
இவ்விரண்டின் ஒளியாலும்இருள் அற்றதனால், பேயாழ்வார் பெருமானைத் தாம்
கண்டமை கூறியவளவிலே,மூவரும் எம்பெருமானுடைய சொரூபத்தைக்
கண்ணாரக்கண்டு சேவித்து அனுபவித்துஆனந்தமடைந்து, அப்பெருங்களிப்பு
உள்ளடங்காமையால் அதனைப் பிரபந்தமுகமாக வெளியிட்டு உலகத்தாரை
வாழ்விக்கக்கருதி, பொய்கையாழ்வார் “வையந்தகளியா” என்று தோடங்கி
முதல்திருவந்தாதியைப் பாடியருள, பூதத்தாழ்வார் “அன்பே தகளியா” என்று
தொடங்கி இரண்டாந்திருவந்தாதியை அருளிச் செய்ய,பேயாழ்வார்
“திருக்கண்டேன்” என்று  தொடங்கி மூன்றாந்திருவந்தாதியைத்
திருவாய்மலர்ந்தருளினார் என்பது பின்னிரண்டடியிற் குறித்த கதை

ஐஆனனன் இயல் வாணனை அடிமைக் கொள, மெய்யே
பொய் ஆவணம் எழுதும் பதி பொற்போடு வணங்கா,
மெய் ஆகம அதிகைத் திரு வீரட்டமும், நேமிக்
கையாளன் அகீந்திரபுரமும் கண்டு, கை தொழுதான்.-திருவெண்ணெய்நல்லூரையும், திருவதிகையையும்
திருவயிந்திரபுரத்தையும் தரிசித்தல்.

ஐ ஆனனன் – ஐந்து திருமுகங்களை யுடையவனான சிவபிரான்,
இயல்வாணனை – இயற்றமிழ்ப்புலவரான சுந்தரமூர்த்தி நாயனாரை,- அடிமை
கொள -ஆட்கொள்ளும்பொருட்டு, பொய் ஆவணம் – பொய்யாகிய
அடிமையோலையை,மெய் ஏ எழுதும் – மெய்போலவே எழுதிய, பதி – தலத்தை
[திருவெண்ணெய்நல்லூரை], பொற்போடு வணங்கா – அழகா வணங்கி,- மெய்
ஆகமம் அதிகை திரு வீரட்டம்உம் – உண்மையான ஆகமங்களிற் கூறப்பட்ட
விதிப்படி அர்ச்சிக்கப்படுகிற திருவதிகை வீரட்டானத்தையும், நேமி கை ஆளன்
அகீந்திரபுரம்உம் – சக்கராயுதத்தையேந்திய திருக்கையை யுடையவனான
திருமாலினது திருவகீந்திரபுரத்தையும், கண்டு – தரிசித்து, கை தொழுதான் –
கைகூப்பி வணங்கினான்; (எ-று.)

     திருவெண்ணெய்நல்லூர்ச் சிவபிரான் திருநாமம் – தடுத்தாட் கொண்ட
ஈசுவரர்;அம்பிகை-வேற்கண்மங்கையம்மை. திருவதிகைச் சிவபிரான் திருநாமம்
வீரட்டானேசுவரர்; அம்பிகை – திருவதிகை நாயகி; திருவகீந்திரபுரத்துத் திருமால்
-தேவநாதன்; தாயார் – ஹேமாப்ஜவல்லி.

     திருப்பதிகளைக் கூறினும், திருப்பதிகளிலுள்ள பெருமான்களை
வணங்கினதாகவே கருத்து. இத் தலங்கள் – நடுநாட்டிலுள்ளவை.

     ஆவணம் – உரிமைப்பத்திரம். ஆகமம் -ஆதிகாலத்தில் சிவபிரானது ஐந்து
திருமுகங்களினின்று தோன்றியவையும், அச்சிவபிரானைப்பூசித்தல் முதலியவைகளை
விவரமாகக்கூறுபவையுமான காமிகம் முதலிய இருபத்தெட்டு நூல்கள். சிவபிரானது
பராக்கிரமம் விளங்கும் இடமான எட்டுத் தலங்கள் அட்டவீரட்ட மென்றும்,
அட்டவீரட்டான மென்றும் பெயர் பெறும். வீரட்டம், வீரட்டானம்=வீரஸ்தாநம்.
அவற்றில் திருவதிகை திரிபுரத்தையெரித்த தலம்; (திருநாவுக்கரசு நாயனாரைச்
சூலைநோய் தவிர்த்து ஆட்கொண்ட தலம் இதுவே.) “பூமன்சிரங் கண்டியந்தகன்
கோவல் புரமதிகை, மாமன் பறியல் சலந்தரன் விற்குடி மா வழுவூர், காமன்
குறுக்கையமன்கடவூர் இந்தக்காசினியில், தேமன்னுகொன்றையுந் திங்களுஞ் சூடி
தன்சேவகமே” என்றதனால் அட்டவீரட்டத்தின் தன்மை யறிக. ஆகமம், நேமி,
அஹீந்த்ரபுரம் – வடசொற்கள். அஹி-நாகங்களுக்கு, இந்திரன் – தலைவனான
ஆதிசேடன்: ஆதியில் ஆதிசேடனால் நிருமிக்கப்பட்டதால், இவ்வூர்க்கு
அகீந்திரபுரமென்று பெயர்; இது, கருடநதியின் கரையது; விஷ்ணுதலம்.

     சுந்தரமூர்த்திநாயனாரென்ற நம்பியாரூரர், புத்தூரிலிருக்கிற சடங்கவி
சிவாசாரியருடைய புத்திரியை விவாகஞ்செய்து கொள்ளுஞ் சமயத்தில், சிவபிரான்
அவரைப் பிரபஞ்சவாழ்க்கையில்மயங்க விடாமல் தடுத்து ஆட்கொள்ளும்
பொருட்டுஅவர் தமக்குப் பரம்பரையாக அடிமையென ஓர் அடிமையோலையைக்
கற்பித்துக்கொண்டு ஒருகிழப்பிராமணவடிவத்தோடு அவ்விடத்தில் எழுந்தருளி
விவாகத்தைத்தடுத்து ‘இந்த நம்பியாரூரன் எனக்கு அடியவன்’ என்று வழக்குக்
கூறிஅதற்கு ஆதாரமாக நம்யாரூரருடைய பாட்டனார் தமக்கு எழுதித்தந்த
அடிமையோலையின்படி எழுதிய பிரதியோலையென்று ஓர் ஓலையை
அவ்விவாகசபையார் முன்னிலையிற்காட்டி  மெய்ப்பிக்கத் தொடங்கும்போது,
அவ்வோலையை அந்த ஆரூரர் பறித்துக் கிழித்துவிட, பின்பு சிவவேதியர்
வாதிட்டுஆதியிலெழுதிய மூலவோலையைக் காட்டிச் சாதிப்பதாகச்சொல்லி
அவரைத்திருவெண்ணெய்நல்லூர்க்கு அழைத்துக்கொண்டுபோய் அங்கு உள்ள
அந்தணர்சபைமுன் மூல வோலையைக் காட்ட, அதில், ‘திருநாவலூரிலிருக்கின்ற
ஆதிசைவனாகிய ஆரூரனென்கிற நான், ‘திருவெண்ணெய்நல்லூரிலிருக்கிற
பித்தனுக்குப்பரம்பரைத்தொண்டு செய்வதற்கு உள்ளும்புறமும் ஒப்ப உடன்பட்டு
எழுதிக் கொடுத்தேன்: இப்படிக்கு ஆரூரன்’ என்று எழுதியிருந்ததை வாசித்துப்
பார்த்த அவ்வந்தணர்கள், அதில் இட்ட கையெழுத்து அவர் பாட்டனாரின்
கையெழுத்தே யென்றும் அதிலிருந்த சாட்சிகளின் கையெழுத்துக்களும்
சரியானவையேயென்றும் நிச்சயித்து, ‘இப்பித்தனுக்கு இவ்வாரூரன்
அடிமைசெய்வதேகடமை ‘ என்றுமுடிவு செய்தபின், கிழவந்தணரை நோக்கி
‘இவ்வூரில் உமது இருப்பு எங்கே? ‘ என்று வினாவ, பிராமணவடிவங்கொண்ட
கடவுள் ‘காட்டுகிறேன, வாருங்கள்’ என்று சொல்லி, சுந்தரமூர்த்தியும்
அந்தணர்களும்பின்னே வர, தாம் அவ்வூரிலிருக்கின்ற திருவருட்டுறை யென்னும்
திருக்கோயிலுட்புக்கு மறைந்தருள, அனைவரும் அதிசயிக்க,
சிவபிரானதுகட்டளைப்படி சுந்தரமூர்த்தி அவர்க்கு அடியவராய்
வன்தொண்டரென்று பெயர்பூண்டு விவாகந்தவிர்ந்து திருப்பதிகங்கள்
பாடுவாராயினரென்பது, தடுத்தாட்கொண்டவரலாறு.  

இன்னம் பல பல யோனியில் எய்தா நெறி பெறவே,
முன்னம், பலர் அடி தேடவும் முடி தேடவும் எட்டா,
அன்னம் பல பயில் வார் புனல் அணி தில்லையுள் ஆடும்,
பொன் அம்பல நாதன் கழல் பொற்போடு பணிந்தான்.-சிதம்பரஞ்சேர்ந்து நடராசப்பெருமானைத் தரிசித்தல்.

முன்னம் – முற்காலத்தில், பலர் – பல தேவர்கள் அடி தேடஉம்
முடிதேடஉம் – திருவடியைத் தேடவும் திருமுடியைத் தேடவும், எட்டா –
(அவர்கட்கு)எட்டாமல் பெருவடிவங் கொண்டிருந்தவரும், அன்னம் பல பயில்
வார் புனல் அணிதில்லையுள் ஆடும் பொன் அம்பலம் நாதன் – அன்னப்
பறவைகள் பல தங்கப்பெற்றமிக்க நீர்வளத்தையுடைய அழகிய சிதம்பர தலத்திலே
திருநடனஞ்செய்கின்றகனகசபைக்குத் தலைவருமான சிவபிரானுடைய, கழல் –
திருவடிகளை, (அருச்சுனன்), இன்னம் பல பல யோனியில் எய்தா நெறி பெறஏ –
தான் மீண்டும் பற்பலவகைப்பட்டபிறப்புக்களிற் பிறவாத தன்மையை அடையும்படி
[முத்திபெறும்படி], பொற்போடு பணிந்தான் – அழகிதாக வணங்கினான்; (எ-று.)-
இங்குச் சிவபிரான் திருநாமம் – சபாநாயகர்; அம்பிகை-சிவகாமியம்மை.

     தில்லை யென்ற தலம் -எல்லாச் சிவதலங்களுள்ளும் தலைமையானது;
கோயிலென்னும் மறுபெயருடையது: சோழநாட்டில் காவேரிக்கு வடக்கில் உள்ளது;
இச்சிதம்பரதலமுள்ள இடம், ஆதியில் தில்லையென்னும் மரம் அடர்ந்த
காடாயிருந்ததனால், ‘தில்லை ‘ என்று பெயர்பெறும். பிரமன் அன்னப்
பறவைவடிவமாய் முடியைக்காண விண்பறந்தும், விஷ்ணு பன்றியுருவமாய்
அடியைக்காண மண்ணிடத்துஞ் சென்று பலகாலம் தேடியும் முடியடிகளைக்
காணாமற்போயின ரென்ற கதையை உட்கொண்டு இரண்டாமடி வந்தது. இங்கு
இவர்களை ‘பலர்’ என்றது, தமிழ்முறையால். இச்செய்யுளின் இரண்டாமடி
“முன்னம்பலர்நறுமாமலர் முறைதூய் மகிழ்வெய்த” என்று ஏடுகளிற்
காணப்படுகிறது.பொன்னம்பலம் – பொன்மயமான சபை; இது, பஞ்சசபைகளுள்
ஒன்று: அவையாவன- கனகசபை சிதம்பரத்திலும், இரசதசபை மதுரையிலும்,
தாமிரசபைதிருநெல்வேலியிலும், இரத்தினசபை திருவாலங்காட்டிலும், சித்திரசபை
திருக்குற்றாலத்திலு மெனக் காண்க.

இலங்காபுரி முன் செற்றவன் இரு போதும் வணங்க,
துலங்கு ஆடு அரவு-அணைமேல் அறி துயில்
கொண்டவர் பொன்-தாள்,
பொலம் காவிரி இருபாலும் வர, பூதல மங்கைக்கு
அலங்காரம் அளிக்கும் தென் அரங்கத்திடை, தொழுதான்.-திருவரங்கஞ் சேர்ந்து, நம்பெருமாளைத் திருவடி தொழுதல்.

இலங்காபுரி முன் செற்றவன் -இலங்கை நகரத்தை முன்பு
அழித்தவனான இராமபிரான், இருபோதுஉம் – (காலைமாலை யென்னும்)
இரண்டுசந்தியாகாலங்களிலும், வணங்க – சேவிக்க, துலங்கு ஆடு அரவு
அணைமேல்அறிதுயில் கொண்டவர் – விளங்குகிற படமெடுத்தாடுந்தன்மையுள்ள
ஆதிசேஷனாகிய சயனத்தின்மேல் யோகநித்திரை செய்தருளுகிற
எம்பெருமானுடைய, பொன்தாள் – அழகிய திருவடிகளை,- பொலம் காவிரி
இருபால்உம் வர – அழகியகாவேரிநதி இரண்டுபக்கங்களிலும் பிரிந்து பெருகிவர,
பூதலம் மங்கைக்கு அலங்காரம் அளிக்கும் – பூமிதேவிக்கு அழகைச் செய்கின்ற,
தென் அரங்கத்திடை – அழகிய ஸ்ரீரங்கத்தில், தொழுதான் – வணங்கினான்;
(எ-று.)இங்குப்பெருமாள் திருநாமம்-ஸ்ரீரங்கநாதன்; பிராட்டி-ஸ்ரீரங்கநாயகி.

     திருவரங்கம் – நூற்றெட்டுத் திருமால்திருப்பதிகளுள் தலைமை பூண்டது;
சோழநாட்டில் உபயகாவேரிமத்தியில் உள்ளது: கோயிலென்றும்,
பெரியகோயிலென்றும் மறுபெயருடையது: பூலோக வைகுண்ட மெனப்படுகிற
மகிமையையுடையது. (ஸ்ரீவைகுண்டம் திருப்பாற்கடல் யோகியரது உள்ளக்கமலம்
என்னும் இவையனைத்தினும் பிரியமான தென்று திருமால்) திருவுள்ளமுவந்து
எழுந்தருளியிருக்கும் இடமாதல்பற்றி, ‘ரங்கம்’ என்று அவ்விமானத்துக்குப் பெயர்:
அது, அரங்கமென வந்தது.

     இலங்காபுரியை யழித்தவன் என்றதன் பொருள் – தென்கடலிடையிலுள்ள
அவ்விலங்கைத்தீவைத் தனக்கு இராசதானியாகக் கொண்டு அதனை அரசாண்ட
இராட்சசராசனான இராவணன் முதலிய அரக்கர்களை வேரொடு
அழித்தவனென்பது;இவ்வரலாறு இராமாயணத்திற் பிரசித்தம். அறிதுயில் –
எல்லாவற்றையும்அறிந்துகொண்டே செய்யும் நித்திரை

வளவன் பதி முதலாக வயங்கும் பதிதோறும்
துளவம் கமழ் அதி சீதள தோயங்கள் படிந்தே,
இள வண் தமிழ் எழுது ஏடு முன் எதிர் ஏறிய துறை சூழ்,
தளவம் கமழ் புறவம் செறி, தண் கூடல் புகுந்தான்.-பல தீர்த்தங்களில் நீராடி மதுரை சேர்தல்.

வளவன் பதி முதல் ஆக – சோழனது இராசதானியான உறையூர்
முதலாக, வயங்கும் – சிறப்புப்பெற்றுவிளங்குகிற, பதி தோறுஉம் –
விஷ்ணுஸ்தலங்களிலெல்லாம், துளவம் கமழ் அதி சீதள தோயங்கள் படிந்துஏ –
(அத்திருமாலுக்குஉரிய) திருத்துழாயின் திருமணம் வீசப்பெற்ற மிகக்குளிர்ச்சியான
தீர்த்தங்களில் நீராடிக்கொண்டே,- இள வண் தமிழ் எழுது ஏடு முன் எதிர் ஏறிய
துறை சூழ்- இளமையையும் வண்மையையுமுடையதமிழ்ப் பாஷை எழுதப்பெற்ற ஏடு
முன்பு கரையெதிர்த்துச்சென்ற (வையையாற்றின்) துறையை யடுத்ததும், தளவம் கமழ்
புறவம் செறி – முல்லைமலர் மணம்வீசப்பெற்ற வனம் சார்ந்ததுமான, தண்கூடல் –
குளிர்ந்த மதுரையினுள், புகுந்தான்- சென்று சேர்ந்தான்; (எ-று.)– உறையூரில்
எழுந்தருளியிருக்கிற பெருமாள் திருநாமம் – அழகியமணவாளன்; பிராட்டி –
உறையூர்நாச்சியார்.

     சோழராசர்களுக்குஉரிய இராசதானிகள் *ஐந்தனுள் உறையூர் ஒன்றாதலாலும்,
அது திருவரங்கத்தையடுத்த திருமால் திருப்பதி யாதலாலும் ‘வளவன்பதி’
என்றதற்கு- உறையூரென்று பொருள்கொள்ளப்பட்டது. ‘வளவன்பதி முதலாக
வயங்கும்’ என்றதையும், ‘துளவங்கமழதிசீதள தோயங்கள் படிந்தே’ என்பதையும்
நோக்கி, ‘பதிதோறும்’ என்பதற்கு – விஷ்ணுஸ்தலங்களிலெல்லாமென்றே
பொருள்கொள்ளவேண்டியதாயிற்று. எம்பெருமானது திருமஞ்சன திவ்விய
தீர்த்தத்தின்சம்பந்தம் பெறுதல் தோன்ற ‘துளவங்கமழ்தோயம்’ எனப்பட்டது.
நிலவளம் முதலிய பலவளங்களுக்குங்காரணமாகி நீர்வளம் மாறாமைக்குங்
காரணமான காவிரிநதி பாயும் நாடுடையனாய்ச் செல்வவளத்திற் சிறத்தலால்,
வளவனென்று சோழனுக்கு ஒருபெயர். ‘முதலாக’ என்றது-திருக்கரம்பனூர்,
திருவெள்ளறை முதலியவற்றை.

     மூன்றாமடியிற் குறித்த கதை.- திருஞானசம்பந்தமூர்த்திநாயனார்
சமணர்களைவென்று சைவமதத்தை நிலைநிறுத்தும்பொருட்டுப் பாண்டிய
நாட்டுக்குச்சென்றபொழுது சமணர்கள் அரசன் முன்னிலையில் ‘நாம் இரு
திறத்தேமும் நமதுசமயசித்தாந்தத்தை யெழுதிய ஏட்டை ஓடுகின்ற வையை
யாற்றிலே இடுவோம்;அவற்றில் எதிர்ந்துசெல்லும் ஏடே மெய்ப்பொருளை
யுடையது’ என்றுசொல்ல, அதற்கு நாயனார் உடன்பட்டபின், சமணர்கள் “அஸ்தி,
நாஸ்தி” என்னுந்தங்கள்மதக்கோட்பாட்டை எழுதிய ஏட்டை நதிப்பெருக்கில்
இடுதலும், அதனைஅப்பெருக்கு அடித்துக்கொண்டுபோய்விட்டவுடனே, நாயனார்
“வாழ்கவந்தணர்” என்று தொடங்கும் பாசுரத்தைப் பாடி ஏட்டிலெழுதி அதே
ஏட்டைத் தமதுகையினால் வைகைநதியில் இட, அவ்வேடு நதியிலே எதிர்ந்து
நீரைக்கிழித்துக்கொண்டு சென்ற தென்பதாம்; நாலடியாரைப்பற்றிய கதையைக்
கொள்வாருமுளர்.

     தமிழுக்கு இளமை – நாள்தோறும் வளர்ச்சிபெறும் நிலைமை; “கன்னித்தமிழ்”
என்பதுங் காண்க. அதற்கு வண்மை-வேண்டின சொற்பொருட்
கருத்துக்களையெல்லாம் குறைவறத் தன்னிற் கொண்டிருத்தலோடு, வேறுபல
பாஷைகள் தன்னினின்று உற்பவித்தற்கு இடமாயிருத்தல். தமிழ் – இங்குத்
தமிழ்பாட்டுக்கு ஆகுபெயர். புறவம் – கொல்லை; முல்லைநிலம்; காடும், காடு
சார்ந்தஇடமும். ஒரு காலத்தில் வருணன் சோமசுந்தரக் கடவுளோடு மாறுபட்டு
ஏழுமேகங்களையும் அளவின்றி மழைபொழிந்து மதுரையை யழிக்கும்படி ஏவ.
அங்ஙனமே வந்த ஏழுமேகங்களையும். தடுக்கும்பொருட்டு அக்கடவுள்
கட்டளையால் அவரது சடையிலுள்ள நான்குமேகங்களும்மேலுயர்ந்து நான்கு
மாடமாகக் கூடப் பெற்றதனால், மதுரை, நான்மாடக்கூடல்என்றும், கூடலென்றும்
பெயர்பெறும்; கன்னி கரியமால் காளி ஆலவாய் என்பவரின் மாடங்கள்
கூடியதனால்வந்த பெயருமாம்.                                 (651)


* இச்செய்யுளின் பின், அடியில் வருகிற செய்யுள் சிலபிரதிகளிற் காணப்படுகிறது:-

           “ஆங்கப்பணவத்துட்பொருளரி தாளிணைதொழுது
பாங்கர்ப்புதுவெயில்வீசுபல்பருமாமணி குயிலா
வோங்கிக்கிளர்பொலன்மண்டபமொருதன்பெயராலத்
தூங்கற்கரிநடையிந்திரசுதனொன்றுபடைத்தான்.”

     (ஸ்ரீரங்கத்தில் அம்மண்டபம், அருச்சுனமண்டபமென்று வழங்கும்.)

*சோழர்கட்கு உரிய இராசதானிகள் – காவிரிப்பூம்பட்டினம், கருவூர்,
திருவாரூர்,உறையூர், திருச்சேய்ஞலூர் என ஐந்து.

குன்றில் இள வாடை வரும் பொழுது எல்லாம் மலர்ந்த
திருக் கொன்றை நாற,
தென்றல் வரும் பொழுது எல்லாம் செழுஞ் சாந்தின் மணம்
நாறும் செல்வ வீதி,
நன்று அறிவார் வீற்றிருக்கும் நான்மாடக் கூடல் வள
நகரி ஆளும்,
வென்றி புனை வடி சுடர் வேல், மீனவனை வானவர்
கோன் மதலை கண்டான்.-அருச்சுனன் மதுரையிற் பாண்டியராசனைக் காணுதல்.

குன்றில் – கைலாசகிரியிலிருந்து, இள வாடை வரும் பொழுது
எல்லாம்- இளமையான வடதிசைக்காற்று வரும்பொழுதெல்லாம், மலர்ந்த திரு
கொன்றை நாற- மலர்ந்த சிறந்த கொன்றை மலர் வாசனைவீச, தென்றல் வரும்
பொழுது எல்லாம் -(பொதிய மலையிலிருந்து) தென்றற் காற்று வரும்பொழு
தெல்லாம், செழுஞ் சாந்தின்மணம் நாறும் – செழிப்பான சந்தனத்தின் வாசனை
வீசப் பெற்ற, செல்வம் வீதி -செல்வவள மமைந்த வீதிகளை யுடைய, நன்று
அறிவார் வீற்றிருக்கும்நான்மாடக்கூடல் வளம் நகரி – நன்மையையறியும்
மேன்மக்கள் வீற்றிருக்கப்பெற்றநான்மாடக்கூடலென்னும் ஒருபெயரையுடைய சிறந்த
மதுராபுரியை, ஆளும் -அரசாளுகிற, வென்றி புனை வடி சுடர் வேல் மீனவனை-
வெற்றிபொருந்தியதும்கூர்நுனியுள்ளதும் ஒளியையுடையதுமான வேலாயுதத்தை
யேந்திய பாண்டியராசனை,வானவர் கோன் மதலை – தேவராசனான இந்திரனது
குமாரனாகிய அருச்சுனன்,கண்டான் – பார்த்தான்;

     மீனவன் – மீன்வடிவமெழுதிய கொடியை யுடையவன். அப்பொழுது
அரசாண்ட பாண்டியராசனது பெயர், சித்திரவாகநனென்பது. “விடையா
வடந்தைசெய்வெள்ளியம் பொருப்பினும்” என்று பிறரும் வாடைக்காற்றைக்
கைலாசத்தினின்றுவருவதெனக் கூறினமை காண்க. சங்கப்புலவர்கள் போன்றவரை
யுடைமைதோன்ற,”நன்றறிவார்வீற்றிருக்கும்” எனப்பட்டது.

     இதுமுதல் இருபத்தொரு கவிகள் – பெரும்பாலும் முதல் நான்கு சீரும்
காய்ச்சீர்களும், மற்றையிரண்டும் மாச்சீர்களுமாகிய அறுசீராசிரியவிருத்தங்க

அந் நிலத்தினவர் அல்லா அந்தணரோடு இவன்
அவனுக்கு ஆசி கூற,
‘எந் நிலத்தீர்? எப் பதியீர்? எத் திசைக்குப் போகின்றீர்?’
என்று போற்றி,
சென்னியர்க்கும் வில்லவர்க்கும் மணிமுடி ஆம் கனை கழல்
கால் செழியன் கேட்ப,
‘கன்னியைக் கண்ணுற்று, ஆட வந்தனம்’ என்றனன்,
மெய்ம்மைக் கடவுள் போல்வான்.-அருச்சுனனுக்கும் பாண்டியனுக்கும் நிகழ்ந்த சம்பாஷணை.

இவன் – இந்த அருச்சுனனானவன், அ நிலத்தினவர் அல்லா
அந்தணரோடு – அப்பாண்டியநாட்டவரல்லாத [தன்னுடன் வந்த
வெவ்வேறுநாட்டினரான] அந்தணர்களுடன் (சென்று), அவனுக்கு ஆசி கூற –
அந்தப்பாண்டியனுக்கு வாழ்த்துச்சொல்ல,- சென்னியர்க்குஉம் வில்லவர்க்குஉம்
மணிமுடி ஆம் கனை கழல் கால் செழியன்-சோழராசர்களுக்கும்
சேரரராசர்களுக்கும்(முடிமேற்கொள்ளும்) இரத்தினகீரிடம் போன்ற ஒலிக்கின்ற
வீரக்கழலையணிந்தபாதங்களையுடைய பாண்டியராசன், போற்றி-(அவ்வருச்சுனனை)
வணங்கித் துதித்து,எந்நிலத்தீர் எப்பதியீர் எத்திசைக்கு போகின்றீர் என்று கேட்ப- ‘(நீவிர்)எத்தேயத்தீர்?’ என்று (மரியாதையாக) வினாவ,- மெய்ம்மை கடவுள்
போல்வான் – சத்தியத்து உரியஅதிதேவதைபோல்பவனான அருச்சுனன்,
கன்னியை கண்ணுற்று ஆட வந்தனம்என்றனன் – ‘கன்னியைப் பார்த்து ஆடுதற்கு
வந்தோம்’ என்று சொன்னான்; (எ-று.)

     வைதிகமுனிவேஷம் பூண்டு சென்றன னாதலால் அந்தவேஷத்திற்கு ஏற்ப
க்ஷத்திரியனான பாண்டியனுக்கு ஆசீர்வாதஞ்செய்து அவன் தன்மை
வணங்கப்பெற்றன னென்க. சென்னியர் – தலைமை பெற்றவர்; சென்னி- தலை.
வில்லவர் – வில்வடிவமெழுதிய  கொடியையுடையோர். செழியன்   –
செழுமையையுடையவன். ‘கன்னியைக்கண்ணுற்று ஆடவந்தனம்’ என்பது –
குமரியெனப்படும் நதியைத் தரிசித்து அதில் நீராடுதற்கு வந்தோம் என்று
வெளிப்படைப் பொருள் பாடுவதோடு, உனதுமகளான கன்னிகையைப் பார்த்து
அவளோடு லீலை செய்ய வந்தோம் என்று உள்ளுறைபொருளும் படுதல் காண்க.
இங்ஙனம் மனத்திலுள்ள கருத்து அமைய உண்மையாகப் பேசுஞ் சொற்சாதுரிய
முடைமையால், ‘மெய்ம்மைக் கடவுள் போல்வான்’ என்றார். சீவகசிந்தாமணியில்
சீவகனுக்கும் சுரமஞ்சரிக்கும் நடந்தசம்பாஷணையைக் கூறுமிடத்து
“வந்தவரவென்னை யென வாட்கண்மடவாய்கேள், சிந்தைநலிகின்ற
திருநீர்க்குமரியாட, அந்திலதனாய பயனென்னைமொழிகென்றாள், முந்திநலிகின்ற
முதுமூப்பொழியு மென்றான்” என்றது, இங்கு நோக்கத்தக்கது, மற்றும்,
கந்தபுராணத்து “ஈண்டு  நும்வரைக்குமரியெய்தியினிதாட, வேண்டிவருகின்றனன்”
என்றதும்நோக்குக. குமரியென ஓர் நதியா யிருந்தது பிற்காலத்தில் கடல்
கொள்ளப்பட்டுக்கன்னியாகுமரி யென்னும் முனையாகியது.  

வெய்தின் மகபதி முடியில் வளை எறிந்து, மீண்ட நாள்,
விண்ணின் மாதர்
கொய்து மலர் தொலையாத குளிர் தருக்கள் ஒரு கோடி
கொண்டு போந்து,
மை தவழ் தன் தடங் கோயில் வரூதமதன் ஒரு மருங்கு
வைத்த காவில்,
கைதவர் கோன், மற்று அவர்க்குப் போனகம் செய்து,
அருந்தும் இடம் கற்பித்தானே.-அருச்சுனன் முதலியோர்க்குச் சோலையில் பாண்டியன்
விருந்துசெய்தல்.

வெய்தின் – விரைவாக [அல்லது கடுமையாக], மகபதி முடியில்
வளைஎறிந்து – (உக்கிரகுமாரபாண்டியன்) இந்திரனுடைய முடியிலே வளை
யென்னும்ஆயுதத்தை வீசி, (அதனால் அவனை மகுடபங்கப்படுத்து வென்றது),
மீண்ட நாள்-(தனது நகரத்துக்குத்) திரும்பியகாலத்தில், விண்ணின் மாதர் கொய்து
மலர்தொலையாத குளிர் தருக்கள் ஒரு கோடி கொண்டு போந்து-தேவ மகளிர்
(பூக்களைக்) கொய்தும் பூக்கள் குறைவுபடாத [மேன்மேற் பூக்கும் மிக்கமலர்களை
யுடைய] குளிர்ந்த (கற்பகம் முதலிய) மிகப் பல தேவதருக்களை (ச்
சுவர்க்கலோகத்திலிருந்து) பெயர்த்துக் கொண்டுவந்து, மை தவழ் தன் தட
கோயில்அவரோதம் மனை படப்பை வைத்த – (மிக்க உயர்ச்சியால்) மேகங்கள்
தவழப்பெற்றதனது பெரிய அரண்மனையின் அந்தப்புரத்துத்தோட்டக்கூறாக
வைக்கப்பெற்றதான,காவில்-சோலையிலே, கைதவர் கோன் – பாண்டியர்
தலைவனான சித்திரவாகனன், அவர்க்கு – அந்த அருச்சுனன் முதலானவர்க்கு,
போனகம் செய்து அருந்தும் இடம்கற்பித்தான் – உணவுசித்தஞ்செய்து
உண்ணுமிடத்தை நியமித்தான்; (எ-று.)

     மலயத்துவசபாண்டியனது மகளாகிய தடாதகைப்பிராட்டியைச்
சுந்தரபாண்டியவடிவாகி மணம்புரிந்துகொண்ட சிவபெருமான் அவளிடந் தனக்குப்
பிறந்த குமாரனாகிய உக்கிரபாண்டியனுக்கு முடிசூட்டி அவனுக்குப் பகையாகும்
கடலையும் இந்திரனையும் மேருமலையையும் முறையே வெல்லுமாறு அவனுக்கு
வேலும் வளையும் செண்டும் அளித்துப்போயினன்; பின்பு
உக்கிரபாண்டியன்ஒருகாலத்தில்தன் நாட்டில்மழை பொழியவில்லையென்ற
காரணத்தாற்கோபங் கொண்டு, பொதியமலையில் மேய்ந்திருந்த மேகங்களைப்
பிடித்துத்தளைசெய்து சிறையி லிட, அதனையறிந்த இந்திரன் எதிர்த்து வந்து
கொடும்போர்புரிய, அப்போரிற்பாண்டியன் தன்கையிலிருந்த வளையைச் சுழற்றி
இந்திரன்மேல்வீச, அது இந்திரனுடைய வச்சிராயுதத்தை வீழ்த்தி அவனது
கீரிடத்தைக்கீழேதள்ளிச் சிதைக்க இந்திரன் அஞ்சித் தோற்றோடினனென்பது,
இங்குக்குறித்தகதை. அங்ஙனம் அவன் இந்திரனைவென்ற நாளில் இந்திரனது
செல்வமானகற்பகம் முதலிய  தேவதருக்களைத் தேவலோகத்தினின்று
வலியக்கவர்ந்து தனதுநகரத்து அரண்மனையைச்சார்ந்த பூஞ்சோலையில்
நாட்டினனென்பதை, கண்ணன் இந்திரனைவென்றுபாரிசாத தருவைச்
சுவர்க்கத்தினின்றுவலியக்கொணர்ந்து துவாரகையிற்சத்தியபாமை
வீட்டுப்புறங்கடைத் தோட்டத்தில்நாட்டினமைபோலக்கொள்க.

     மகபதி -வடசொல்: யாகங்கட்குத் தலைவன்; (நூறு அசுவமேத) யாகஞ்
செய்துஇந்திரபதவிபெற்றவன். ‘கோயில்வரூத மதனொருமருங்கு’ எனவும் பாடம்:
வரூதம் -தங்குமிடம். கை தவர் – பாண்டியர். மற்று, ஏ – அசைகள்

வேதியரோடு அக் காவில் இளைப்பாறி இருந்த அளவில்
மின் குழாம்போல்
தாதியரும் சேடியரும் தற் சூழ, சிலை மதனன் தனி சேவிக்க,
சோதி அரிச் சிலம்பு அரற்ற, துணைநெடுங் கண் செவி
அளப்ப, தொடித் தோள் வீசி,
ஆதி அரவிந்தை என, நிருபன் மகள் விளையாடற்கு ஆங்கு வந்தாள்.-பாண்டியனது மகள் அச்சோலையில் விளையாடவருதல்.

வேதியரொடு அ காவில் இளைப்பு ஆறி இருந்த அளவில்-
(விருந்துண்ட அருச்சுனன்) பிராமணர்களுடன் அந்தச்சோலையில் இளைப்புத்
தணிந்துகொண்டிருந்த சமயத்தில்,- நிருபன் மகள் – பாண்டியராசனுடையபெண்,
மின்குழாம்போல் தாதியர் உம் சேடியர்உம் தன்சூழ – மின்னற்கூட்டம்போல
அடிமைப்பெண்களும் தோழிப்பெண்களும் தன்னைச் சூழ்ந்து வரவும், சிலைமதனன்
தனி சேவிக்க-(கரும்பு) வில்லையுடைய மன்மதன் தனியே வழிபடவும், சோதி அரி
சிலம்பு அரற்ற – ஒளியையும் பரலையுமுடையசிலம் பென்னுங்காலணிகள் ஒலிக்கவும்,
துணைநெடுங்கண்செவி அளப்ப – (வேறுஒப்புமைஇல்லாமல்) ஒன்றோடொன்றுஒத்த
நீண்டகண்கள் காதுகளை யளாவவும், தொடி தோள் வீசி –
தொடியென்னும்வளையலை யணிந்த கைகளை வீசிக்கொண்டு, ஆதி அரவிந்தை
என- மேன்மையையுடைய திருமகள்போல, விளையாடற்கு ஆங்குவந்தாள் –
விளையாடும்பொருட்டு அவ்விடத்திற்கு வந்தாள்; (எ-று.)

     மிக்க அழகும் உரிய பருவமும்பெற்றுக் கண்டவர்கண்கவர்ந்து அவர்கட்குக்
காதல்விளைக்குந் தன்மையிற் சிறத்தலால், அவளைக் காமக்கடவுள் வழிபடுவ
னென்க. அரி – சிலம்பின் பருக்கைக்கல். அரிச்சிலம்பு – தவளையினொலிபோன்ற
ஒலியையுடைய சிலம்பு எனினுமாம். சீவகசிந்தாமணியில் “வஞ்சியிடைநுடங்க மயில்
கைவீசி நடந்ததே” என்றாற்போல ‘தொடித்தோள் வீசி வந்தாள்’ என்றார்;
அங்குநச்சினார்க்கினியர் ‘கைவீசியென்று வருந்தாமைகூறினார்’ என்றதை உணர்க.
அரவிந்தம் – தாமரை: அரவிந்தை – தாமரை மலரில் வாழ்பவள். சிந்தாமணியில்
“தாமரைத்திருமகளிவளென” என்றவிடத்துநச்சினார்க்கினியர் ‘திருஉவமம்-வடிவிற்கும்,
நல்வினையுடையோனிடத்து ஏகுந் துணையும் பொதுவாயிருத்தற்கும்’ என்றார்.
பாண்டியன்மகள்பெயர், சித்திராங்கதை யென்பது.

பச்சென்ற திரு நிறமும், சேயிதழும், வெண் நகையும்,
பார்வை என்னும்
நச்சு அம்பும், அமுது ஊற நவிற்றுகின்ற மட மொழியும்,
நாணும், பூணும்,
கச்சின்கண் அடங்காத கன தனமும், நுண் இடையும்,
கண்டு சோர்ந்து,
பிச்சன்போல் ஆயினன்-அப் பெண்கொடி மெய்ந்நலம்
முழுதும் பெறுவான் நின்றான்.–அருச்சுனன் அவளைக்கண்டு பெருங்காதல் கொள்ளுதல்.

அ பெண் கொடி மெய் நலம் முழுதுஉம் பெறுவான் நின்றான் –
அந்தப்பூங்கொடிபோன்ற பெண்ணினது உடம்பைத் தழுவுதலாலாகும் இன்பம்
முழுவதையும் இனிப் பெறுபவனாய் நின்றவனான அருச்சுனனானவன்,-
(அவளுடைய), பச்சென்ற திரு நிறம்உம் – பசுமையான அழகிய நிறத்தையும், சேய்
இதழ் உம்-செந்நிறமான அதரத்ததையும், வெள் நகைஉம் – வெண்ணிறமான
பற்களையும், பார்வை என்னும் நஞ்சு அம்புஉம் – கண்ணின்பார்வை யென்கிற
விஷந்தீற்றிய அம்பையும், அமுது ஊற நவிற்றுகின்ற மட மொழிஉம் –
அமிருதம்போன்ற மிக்க இனிமை மேல்மேலுண்டாகப் பேசுகின்ற அழகிய
பேச்சுக்களையும், நாண்உம்- நாணமென்னுங் குணத்தையும், பூணும்கச்சின்கண்
அடங்காத கன(ம்) தனம்உம் – தரிக்கிற கச்சுக்கு அடங்காத பருத்த தனங்களையும்,
நுண் இடைஉம்- நுண்ணியஇடையையும், கண்டு- பார்த்து, சோர்ந்து- மனந்தளர்ந்து,
பிச்சன் போல் ஆயினன் – பித்துக்கொண்டவன் போலாயினான்; (எ-று.)

     தன்வசந்தப்பிக் காமவசத்தனாயினனென்பது, ‘பிச்சன்போலாயினன்’ என்பதன்
கருத்து. ‘சுருங்கச்சொல்லல்’ என்னும் அழகு பற்றி ‘கண்டு’ எனப் பொதுப்படக்
கூறினாராயினும், ‘ஏற்புழிக் கோடல்’ என்னும் உத்தியால், மொழிகண்டு –
பேச்சைகேட்டு எனக்கொள்க. பார்வையின் கொடுமையும் கூர்மையும் பற்றி,
நச்சம்பென்றார்; அன்றியும், கரிய மை யிட்ட கூரிய கண்ணுக்குக் கரியநஞ்சுதீற்றிய
கூரிய அம்பு உவமையாம்

புத்திரர் வேறு இல்லாது, புரிவு அரிய தவம் புரிந்து, பூழி வேந்தன்,
சித்திரவாகனன் பயந்த சித்திராங்கதை என்னும் செஞ் சொல் வஞ்சி
பத்திரமும், நறு மலரும், அவயவம்போல் விளங்குவன
பலவும் கொய்து,
மித்திர மா மகளிருடன் விரவி, ஒரு செய்குன்றில் மேவினாளே.-சித்திராங்கதை பூக்கொய்து ஒருசெய்குன்றிற் சேர்தல்.

பூழிவேந்தன் சித்திரவாகனன் – பாண்டியகுலத்துக்குத் தலைவனான
சித்திரவாகன னென்னும் அரசன், புரிவு அரிய தவம்புரிந்து-செய்தற்கு அருமையான
தவத்தைச்செய்து, புத்திரர் வேறு இல்லாது பயந்த-வேறுபுதல்வரில்லாமற்
பெற்ற[தனிமகளான], சித்திராங்கதை என்னும் செம் சொல் வஞ்சி- சித்திராங்கதை
யென்னும் பெயருள்ள இனிய சொற்களையுடைய வஞ்சிக் கொடிபோன்ற
பெண்ணானவள்,-அவயவம் போல் விளங்குவன பத்திரம்உம் நறுமலர்உம் பலஉம்
கொய்து – (தனது) உறுப்புக்கள் போல விளங்குவனவான தளிர்களும்நறுமணமுள்ள
பூக்களுமாகிய பலவற்றையும் பறித்துக்கொண்டு, மா மித்திரம் மகளிருடன் விரவி –
சிறந்த தோழிப்பெண்களுடன் கூடி, ஒருசெய்குன்றில் மேவினாள்- ஒரு செய்குன்றிற்
போய்ச்சேர்ந்தாள்; (எ-று.)

     பூழியர்-பாண்டியர். சித்ரவாஹநன்என்ற வடமொழிப்பெயர் –
அழகியவாகனத்தை யுடையவ னென்றும், சித்ராங்கதா என்ற வடமொழிப்பெயர் –
அழகிய தோள்வளைய யுடையவ ளென்றும் பொருள்படும். செய்குன்று –
இயற்கையாக அமைந்த மலையன்றிப் பிற்காலத்தில்விளையாட்டுக்காக மலைபோல்
அமைக்கப்பட்ட இடம்.

முன் உருவம்தனை மாற்றி, முகில் வாகன் திரு மதலை
மோகி ஆகி,
தன் உருவம்தனைக் கொண்டு, சாமனிலும் காமனிலும்
தயங்கும் மெய்யோன்,
பொன் உருவம் என மலர்ந்து பொலிந்தது ஒரு சண்பகத்தின்
பூந் தண் நீழல்,
மின் உருவ நுண் இடையாள் விழி களிக்கும்படி
நின்றான், வீரர் ஏறே.-அருச்சுனன் அவளெதிரில் தனியே சென்று நிற்றல்.

முகில் வாகன் திரு மதலை – மேகத்தை வாகனமாகவுடையவனான
இந்திரனுடைய சிறந்தகுமாரனும், வீரர் ஏறு – வீரர்கட்குச் சிங்கம் போன்றவனுமான
அருச்சுனன், மோகி ஆகி-(அச்சித்திராங்கதையினிடம்) மோகங்கொண்டவனாய்,
முன்உருவம்தனை மாற்றி- முன்பு தான் கொண்டுள்ள தவவேடத்தையொழித்து,
தன்உருவம்தனை கொண்டு – தனது நிஜவடிவத்தைக்கொண்டு, சாமனில்உம்
காமனில்உம் தயங்கும் மெய்யோன்-சாமனைக்காட்டிலும் (அவனது தமையனான)
மன்மதனைக் காட்டிலும் அழகியதாய் விளங்குகிற வடிவத்தை யுடையவனாய்,
பொன்உருவம் என மலர்ந்து பொலிந்தது ஒரு சண்பகத்தின் பூ தண்நீழல்-
பொன்னின்வடிவம்போல மலர்ந்துவிளங்குகிற ஒருசண்பகமரத்தினது அழகிய
குளிர்ந்த நிழலில், மின் உருவம் நுண் இடையாள் விழி களிக்கும்படி நின்றான் –
மின்னலின்வடிவம்போன்ற நுண்ணிய இடையை யுடையவளான அவள்
(தன்னைக்கண்டு) கண்கள் களிக்கும்படி நின்றான்;

     மோஹம் – ஆசைமயக்கம்; அதனையுடையவன், மோஹீ: வடசொல்.
சிந்தாமணியில் “காமனுஞ் சாமனு மென்னுங் காட்சியே” என்றவிடத்து
நச்சினார்க்கினியர் ‘சாமான், காமன் தம்பி’ என்றதை உணர்க.  

வண்டானம் திரி தடத்து வரி வண்டின் இனம் பாட,
மயில்கள் ஆட,
தண் தார் மெய்க் கிளிக் கூட்டம் சான்றோர்கள் உரை
பயிற்ற, தமிழ்கள் மூன்றும்
கொண்டாடி, இளம் பூவைக் குழாம் தலை சாய்த்து,
உளம் உருகும் குன்றின் ஆங்கண்,
கண்டாள் அக் குமரனை, தம் கொடிக் கயலைப் புறம்
காணும் கண்ணினாளே.-சித்திராங்கதை தனிப்பட்டு அருச்சுனனைக் காணுதல்.

வண்டானம் திரி தடத்து-வண்டானமென்னும் ஒரு சாதி நாரைகள்
(நீர்வள மிகுதியால்) திரியப்பெற்றபக்கங்களில், வரி வண்டின் இனம்பாட-
உடற்புள்ளிகளையுடைய வண்டுகளின் கூட்டம் பாட, மயில்கள் ஆட-மயில்கள்
கூத்தாட, தண் தார் மெய் கிளி கூட்டம் சான்றோர்கள் உரை பயிற்ற –
குளிர்ச்சியான[கண்ணுக்குஇனிய] ஆரம்போன்றகழுத்தினிரேகையுள்ள
உடம்பையுடைய கிளிகளின்கூட்டம் தண் தமிழ்ச் சான்றோர்களான சங்கப்
புலவர் முதலியோருடையசொற்களைப் பழகிச்சொல்ல, இளம் பூவை குழாம்
தமிழ்கள்மூன்றுஉம்கொண்டாடிதலை சாய்த்துஉளம் உருகும் – இளமையான
நாகணவாய்ப்பறவைகளின் கூட்டம் அந்த மூவகைத்தமிழையுங்
கொண்டாடித்தலையைச்சாய்த்துமனமுருகப் பெற்ற, குன்றின் – அந்தச்செய்குன்றில்,
ஆங்கண் – அவ்விடத்தில் [சண்பகநிழலில்], தம்கொடி கயலை புறங்காணும்
கண்ணினாள்-தங்கள்கொடியாகியகயல்மீனைவென்று முதுகுகாணுங்கண்களையுடைய
அச்சித்திராங்கதை, அ குமரனைகண்டாள்-இளவீரனான அவ்வருச்சுனனைக்
கண்டான்; (எ-று.)

     தடம் – மலைப்பக்கம், வரிவண்டு – இசைப்பாட்டையுடைய வண்டுமாம்.
தமிழ்கள் மூன்று – இயல், இசை,  நாடகம் என்பன. பாண்டியர் மீன்வடிவ
மெழுதியதுவசமுடைய ராதலால், ‘தம் கொடிக்கயல்’ எனப்பட்டது

செந்திருவை அனையாளும், திருமாலை அனையானும், சிந்தை ஒன்றாய்,
வந்து இருவர் விலோசனமும் தடை இன்றி உறவாடி,
மகிழ்ச்சி கூர்ந்து,
வெந்து உருவம் இழந்த மதன் மீளவும் வந்து இரதியுடன்
மேவுமாபோல்,
கந்தருவ முறைமையினால், கடவுளர்க்கும் கிடையாத
காமம் துய்த்தார்.-அருச்சுனனும் சித்திராங்கதையும் கந்தருவமுறையாற் கூடி
இன்பம்நுகர்தல்.

செந் திருவை அனையாள்உம் – அழகிய இலக்குமியையொத்த
சித்திராங்கதையும், திருமாலை அனையான்உம் – புருஷோத்தமனான
விஷ்ணுவையொத்த அருச்சுனனும், (ஆகிய இருவரும்),- சிந்தை ஒன்று
ஆய்வந்து-(தம்) மனம் ஒன்றிவரப்பெற்று, இருவர் விலோசனம்உம் தடைஇன்றி
உறவு ஆடி -அவ்விருவரின் கண்களும் தடையில்லாமல் உறவு ஆடப்பெற்று,
மகிழ்ச்சிகூர்ந்து-மகிழ்ச்சிமிக்கு,- உருவம் வெந்து இழந்த மதன்மீளஉம்வந்து
இரதியுடன் மேவும் ஆபோல் – (தன்னுடைய) சரீரம் (சிவபெருமானுடைய
நெற்றிக்கண்ணினால்)வெந்ததனால்ஒழியப்பெற்றமன்மதன்மீண்டும் (அச்சரீரம்)
வரப்பெற்று இரதிதேவியுடன்சேர்ந்திருக்கும் விதம் போல, கந்தருவ
முறைமையினால் கடவுளர்க்குஉம் கிடையாதகாமம் துய்த்தார் – கந்தருவ
முறைமையினால் (தம்மிற்கூடித்) தேவர்கட்கும்கிடைக்காத காமவின்பநுகர்ச்சியை
நுகரலானார்கள்; (எ-று.)

     கந்தருவமார்க்கத்தாற் கூடிய அருச்சுனனும் சித்திராங்கதையும்,
இன்பநுகர்ச்சிக்கேயுரியதேவர்களினும்மிகஇன்பம் நுகர்ந்தன ரென்பதாம். சிந்தை
யொன்றாய் என்பதனால் – மனவொற்றுமை [மநஸ்ஸங்கதி]யும், இருவர்
விலோசனமும்உறவாடி என்றதனால் – கண்ணிணையின்நோக்கு ஒத்தலும்
[சக்ஷு ஷ்ப்ரீதியும்]கூறப்பட்டன. மணலூரில் அருச்சுனன் சென்றபோது ஆங்குத்
தன் விருப்பின்படிசெல்லும் சித்திரவாகனன்மகளைக்கண்டு காதல் கொண்டவனாய்
அவள்தந்தையைக்கண்டு தன்விருப்பத்தைத்தெரிவிக்க, அவனும் தன்மகளைக்
காதலிப்பவன்அருச்சுனனென்று அறிந்து உவந்து, தன்மகளுக்குப் பிறக்கும்
புத்திரனைத்தனக்குத்தத்த குமாரனாகத்தரும்ஏற்பாட்டுடன்
மணஞ்செய்துகொடுத்தானென்றுவியாசபாரதத்திலுள்ளது. மணலூருபுரத்தில்
வனமத்தியில்முகூர்த்தகாலத்தில்மணந்துகொண்ட மலயத்துவசபாண்டிய
புத்திரியான சித்திராங்கதையோடு வெகுகாலம்மகிழ்ந்திருந்தானென்றது,
பாலபாரதம். புத்திரனைப் பாண்டியனுக்குத்தத்துக்கொடுத்தது எல்லாவற்றிலும்
ஒருபடிப்பட உள்ளது.  

கூடி இருவரும் ஒருவர் என இதயம் கலந்ததற்பின்,
குறித்த தூநீர்
ஆடிய வந்ததும், தன்னை அருச்சுனன் என்பதும்,
இளமான் அறியக் கூறி,
‘ ‘நீடியது’ என்று ஐயுறுவர்; நீ இனி ஏகு’ என உரைப்ப,
நெடுங்கண்ணாள் போய்,
சேடியருக்கு, அஞ் ஞான்று நிகழ்ந்த எலாம், மகிழ்ந்து
உருகிச் செப்பினாளே-பின்பு சித்திராங்கதை அச்செய்தியைத் தன்தோழியர்க்குச் சொல்லுதல்.

இருவர்உம் ஒருவர் என கூடி இதயம் கலந்ததன் பின் –
(அக்குமாரனும்குமாரியுமாகிய) இரண்டுபேரும் ஒருவர்போலத் தம்மிற் கூடி
மனங்கலந்த பின்பு, (குமாரன்), குறித்த தூநீர் ஆடிய வந்ததுஉம் – நியமிக்கப்பட்ட
பரிசுத்தமான தீர்த்தயாத்திரைசெய்தற்கு (த் தான்) வந்ததையும், தன்னை அருச்சுனன்
என்பதுஉம்- தான் அருச்சுனன் என்பதையும்,  இள மான் அறியகூறி- இளமையான
மான்போன்ற அச்சித்திராங்கதை அறியும்படி சொல்லி, நீடியது என்று ஐயுறுவர் நீ
இனி ஏகு என உரைப்ப- ‘(இங்குப்)பொழுது நீட்டித்ததென்று (உன்னைச்சேர்ந்தவர்)
சங்கைகொள்வார்: நீ இனிப்போ’ என்று சொல்ல,-நெடுங் கண்ணாள்-
நீண்டகண்களையுடையவளான அவள், போய்-, அஞ்ஞான்றுநிகழ்ந்த எலாம்
சேடியருக்கு மகிழ்ந்து உருகிசெப்பினாள் – அப்பொழுதுநேர்ந்தசெயல்கள்
முழுவதையும் தோழியர்களுக்கு மனமகிழ்ந்து உருகிச்சொன்னாள்;

     இருவரும் ஒருவரெனக் கூடி–“எரிமாமணி மார்பனும் ஏந்திழையும்,
அருமாமணி நாகரி னாயினரே” என்றாற்போலக் கொள்க. தனக்கு நேர்ந்த
இன்பத்தைநினைக்குந்தோறும் மகிழ்ந்தமை தோன்ற, ‘மகிழ்ந்துருகி’ யென்றார்

கவுரியர் கோன் திருமகளைக் கண் அனையார்
கொண்டுபோய், கன்னிமாடத்து
அவிரும் மணிப் பரியங்கத்து ஐஅமளி ஏற்றிய பின்,
அனங்கன் போரால்,
நவிருடை மா மயல் உழந்து, நயனங்கள் பொருந்தாமல்,
நாண் உறாமல்,
‘தவிர்க!’ எனவும் தவிராமல், தன் விரகம் கரை அழிந்து,
தளர்ந்தாள் மன்னோ.-இரண்டு கவிகள்-சித்திராங்கதையின் விரகதாபம் கூறும்.

கவுரியர் கோன் திரு மகளை – பாண்டியர் தலைவனான
சித்திரவாகனனுடைய அழகியபெண்ணான அவளை, கண் அனையார் –
அவள்கண்போன்றவர்களான தோழியர்கள், கொண்டு போய் – கொண்டு சென்று,
கன்னிமாடத்து – கன்னிமாடத்தில், அவிரும் மணி பரியங்கத்து – விளங்குகிற
இரத்திரனங்கள்பதித்தகட்டிலில், ஐ அமளி – பஞ்சசயனத்தில், ஏற்றிய பின் –
ஏற்றினபின்பு,(அவள்), அனங்கன் போரால்-மன்மதனுடைய போரினால்
[காமவேதனையினால்], நவிர் உடை மா மயல்உழந்து -புன்மையையுடைய மிக்க
மோகத்தை யடைந்து, நயனங்கள் பொருந்தாமல்-கண்கள் இமைமூடித்
துயில்கொள்ளாமலும், நாண் உறாமல் – நாணமில்லாமலும், தவிர்க எனஉம்
தவிராமல்- ‘(இத்துன்பம்) ஒழிக’ என்று (தோழியர் தனிவு) கூறவும் ஒழியாமலும்,
தன் விரகம்கரைஅழிந்து தளர்ந்தாள்- தனதுகாதல் நோயினால் எல்லைகடந்து
வருந்தினாள்;(எ-று.)-மன், ஓ-ஈற்றசை.

     கவுரியர்=கௌரியர்; பாண்டியர்; முதற்போலி. கன்னிமாடம்- அரண்மனை
யந்தப்புரத்தில் கலியாணமாகாத பெண்கள் வசிக்குமிடம். ஐ அமளி-
இலவம்பஞ்சு,செம்பஞ்சு,வெண்பஞ்சு,கம்பளமயிர், அன்னத்தூவி என்னும்
இவ்வைந்துபொருள்களைத் தனித்தனி கொண்டு அமைத்துச்செய்த ஐவகைமெத்தை;
இனி, வேறுவகையும் கூறுப: இவற்றை ஒன்றன்மேலொன்றாக அடுக்கி அமைத்தல்,
மரபு. தவிர்கென-தொகுத்தல். விரஹம்- பிரிவு.  

தங்கள் மலைச் சந்தனத்தை, ‘தழல் குழம்போ, இது!’
என்னும்; தாபம் தோன்ற,
தங்கள் கடல் தண் முத்தைக் கண் முத்தால் நீறு
ஆக்கும்; தக்கோர் ஆய்ந்த
தங்கள் தமிழ்க் குழல் இசையைத் தன் செவிக்கு, ‘விடம்!’
என்னும்; தபனன் ஏக,
தங்கள் குலக் கலை மதியை, ‘தபனன்’ எனும்; என்
பட்டாள் தனி பொறாதாள்!

(சித்திராங்கதை),-தாபம் தோன்ற- (தாபபரிகாரம் எது செய்தாலும்
அதனால் தனது) விரகதாபம் (சிறிதுந்தணியாமல் மேல் மேல்) உண்டாக,- தங்கள்
மலை சந்தனத்தை தழல் குழம்புஓ இதுஎன்னும் – தங்கள் பொதியமலையிலுள்ள
சந்தனத்தின் குழம்பை ‘இது அக்கினிக்குழம்போ!’ என்று சொல்வாள்; தங்கள்
கடல்தண் முத்தை கண் முத்தால் நீறு ஆக்கும் – தங்கள் கடலிலுண்டாகிய
குளிர்ந்தமுத்தை முத்துப்போன்ற (தனது) கண்ணீர்த்துளியினாற் சாம்பராம்படி
செய்திடுவாள்;தக்கோர் ஆய்ந்த தங்கள் தமிழ் குழல் இசையை தன் செவிக்கு
விடம் என்னும் -(சங்கப்புலவர்கள் முதலிய) பெரியோர்கள் ஆராய்ந்த தங்கட்கு
உரிய தமிழ் நூலின்முறைமைப்படி பாடிய புள்ளாங்குழலின் கீதத்தைத் தனது
காதுக்கு விஷமென்றுசொல்வாள்; தபனன் ஏக தங்கள் குலம் கலை மதியை
தபனன் எனும்-தபிக்குந்தன்மையனான சூரியன் அஸ்தமித்தபின்பு (தோன்றிய)
தங்கள் குலத்துக்குஆதிபுருஷனான கலைகள்நிறைந்த பூர்ணசந்திரனை ‘இது
சூரியன்’ என்பாள்; தனிபொறாதாள் என்பட்டாள்- தனிமையைப் பொறாதவளாய்
(அவள்) என்னபாடுபட்டாள்! [மிகத் தவித்தா ளென்றபடி]; (எ-று.)

     இயல்பிற் குளிர்ச்சியையுந் இனிமையையுஞ் செய்கிற சந்தனக் குழம்பு,
முத்துமாலை, வேய்ங்குழலிசை, சந்திரன் என்பன பிரிவுத் துன்பமுடையார்க்கு
அத்தாபந்தீர்த்துக் குளிர்ச்சியையும் இனிமையையுஞ் செய்யமாட்டாமையோடு
காமோத்தீ்பகமாய் அத்தாபத்தை மிகுவிப்பனவு மாதலால், அவற்றை விரகிகள்
வெறுக்குந்தன்மை இங்கு உணரத்தக்கது. பாண்டியநாட்டைச்சார்ந்த கடலில்
முத்துக்கள் மிகுதியாக உண்டாவது, பிரசித்தம். தமிழ்பாஷைபாண்டியராசர்களாற்
போற்றிவளர்க்கப்பட்டமைபற்றி, ‘தங்கள் தமிழ்’ என்றார். ‘கண்முத்து’ என்றவிடத்து,
‘முத்து’ என்றது – நீர்த்துளிக்கு உவமையாகுபெயர். விரகிகளுடையகண்ணீர்த்துளி
அத்தாபத்தால் மிக வெவ்விதாயிருத்தலால் ‘தண்முத்தைக் கண்முத்தால் நீறாக்கும்’
என்றார். 

அங்கு உயிர்போல் இரு மருங்கும் ஆய மட மகளிர் இருந்து,
ஆற்ற ஆற்ற,
கங்குல் எனும் பெருங் கடலைக் கரை கண்டாள்; கடல்புறத்தே
கதிரும் கண்டாள்;
இங்கு இவள் போய், மலர்க் காவின், எழில் விசயற்கு ஈடு
அழிந்த இன்னல் எல்லாம்,
சங்கு எறியும் தடம் பொருநைத் துறைவனுக்குச்
செவிலியராம் தாயர் சொன்னார்.-அச்செய்தியைச் செவிலித்தாயர் அரசனிடஞ் சொல்லுதல்.

அங்கு- அவ்விடத்தில், உயிர்போல்-, இரு மருங்கு உம் –
இரண்டுபக்கத்திலும், ஆயம் மட மகளிர்- தோழியராகிய இளம் பெண்கள்,
இருந்து-,ஆற்றஆற்ற- (தங்கள்செய்யும்சைத்திய உபசாரங்களினால் தாபத்தைத்)
தணிக்கத்தணிக்க, (சித்திராங்கதை), கங்குல் எனும் பெருங் கடலை கரை
கண்டாள் – இராத்திரிகாலமாகிய பெரியகடலைக் கரைகண்டவளாய் [இரவை
அரிதிற் கழித்து], கடல்புறத்தே கதிர்உம் கண்டாள் – கீழ் கடலின். மீதே
சூரியனையும் (உதிக்கக்) கண்டாள்:இங்கு-இவ்வாறு, இவள் – இச்சித்திராங்கதை,
போய்-, மலர் காவின் -பூஞ்சோலையிலே, எழில் விசயற்கு – அழகிய
அருச்சுனனுக்கு, ஈடு அழிந்த -மனவலிமை யழிந்த, இன்னல் எல்லாம் – துன்பம்
முழுவதையும், சங்கு எறியும் தடபொருநை துறைவனுக்கு – சங்குகளை வீசுகிற
பெரிய பொருநையாற்றின்துறையையுடையவனான அப்பாண்டியராசனுக்கு,
செவிலியர் ஆம் தாயர்-(அச்சித்திராங்கதையினது) செவிலித்தாய்மார், சொன்னார்-
சொன்னார்கள்; (எ-று.)

     விரகிகளுக்கு இராப்பொழுது நீட்டித்ததாய்த்தோன்றிக் கழித்தற்கு
அரிதாதல்பற்றி, ‘கங்குலெனும் பெருங்கடல்’ எனப்பட்டது. பெருநை –
தாமிரபரணி.கண்டாள் என்ற சொல் இரண்டில்முந்தினது முற்றெச்சம்.
செவிலியர்-வளர்த்த தாயர். ஆயம் – தோழியர் கூட்டம். 

ஐந் தருவின் நீழலில் வாழ் அரியுடனே ஓர் அரியாசனத்தில் வைகி,
புந்தி உற ஒருவரும் முன் பூணாத மணி ஆரம் பூண்ட கோமான்
அந்த உரை செவிப்படலும், ‘அதி தூரம் விழைவுடன் சென்று
ஆடு தீர்த்தம்
வந்தது, நம் தவப் பயன்’ என்று உட்கொண்டான், மகோததியும்
வணங்கும் தாளான்.-அருச்சுனனது வரவையறிந்து பாண்டியன் மகிழ்தல்.

ஐந் தருவின் – பஞ்சகற்பக தருக்களின், நீழலின் – நிழலில், வாழ் –
வாழ்கின்ற, அரியுடனே-இந்திரனுடனே, ஓர் அரி ஆசனத்தில்வைகி –
ஒருசிங்காதனத்திலே உடன்வீற்றிருந்து, முன் ஒருவர்உம் பூணாத மணி ஆரம்
புந்திஉற பூண்ட – முன்பு ஒருவரும் அணிந்திராத இரத்தினவாரத்தை
மனம்மகிழஅணிந்துகொண்ட, கோமான்-தலைவனும், மகா உத்திஉம் வணங்கும்
தாளான்-பெருங் கடலும் வணங்கும் பாதங்களை யுடையவனுமான
அப்பாண்டியராசன்,- அந்தஉரைசெவி படலும்-(செவிலித்தாயர் சொன்ன)
அவ்வார்த்தை (தன்) காதிற்பட்டவுடனே, அதிதூரம் விழைவுடன் சென்று ஆடு
தீர்த்தம் வந்தது நம் தவம்பயன்என்று உள்கொண்டான் –
வெகுதூரம்விருப்பத்தோடுசென்றுஸ்நானஞ்செய்யுந் தீர்த்த யாத்திரையைக் கருதி
(அருச்சுனன் இங்கு) வந்தது நமது தவத்தின்பயனே என்று எண்ணி மகிழ்ந்தான்;
(எ-று.)

     ஐந்தரு-ஸந்தாநம், மந்தாரம், பாரிஜாதம், கற்பகம், அரிசந்தநம் என்பன.
அதிதூரம், மஹோததி – வடமொழித்தொடர்கள்.

     முருகக்கடவுளின் அமிசமான உக்கிரகுமாரபாண்டியன் அரசாளும் நாளில்,
தமிழ்நாடுமுழுவதும் பன்னீராண்டு மழைபொழியாது ஒழியப் பஞ்சமுற்று வருந்துதல்
கண்டு, சேரசோழபாண்டியரென்னும் அரசர் மூவரும்பொதியமலையிற்சென்று
அகஸ்தியமுனிவரைக் அவரருளியபடி நோன்புநோற்றுஆகாயமார்க்கமாகச் செல்லுந்
திறம் பெற்று, மழைபெய்விப்பவனான இந்திரனதுசுவர்க்கலோகத்திற் சென்று சேர,
இவர்கள்வரவையறிந்து இந்திரன் இவர்களிருக்கும்பொருட்டுத் தன்ஆசனத்தில்
தாழத் தனியே மூன்றுசிங்காதனம் இடுவித்தான்; இவர்களுட் சேரனும் சோழனும்
இந்திரன் காட்டிய அவ்வாசனங்களில் வீற்றிருக்க, உக்கிரபாண்டியினோ
அங்ஙனமின்றி இந்திரனுடைய சிங்காசனத்தில் ஏறி அர்த்தாசனத்திற்
சமமாகவீற்றிருந்தான்; அதுகண்டு பொறாமைகொண்ட தேவராஜன்,
மற்றையிருவரையும் வந்த காரியம் விசாரித்து, உடனே அவர்கள்நாடுகளில்
மழைபொழியுமாறு வரங்கொடுத்து, அவர்கட்குப் பலசிறப்புகள் செய்து அனுப்பிய
பின்பு, பாண்டியனைச் செருக்கடக்குமாறு கருதி ஒருசூழ்ச்சிசெய்து அவனுக்கு
மிகஉயர்வாகிய வரிசைசெய்வான்போல, எண்ணிறந்த பலர் தாங்கி மிகமெலிந்து
வருந்தும்படியான மிக்கபாரமுள்ளதொரு பெரிய ஆரத்தை அவனுக்குக் கொடுக்க,
உடனே அவன் அதனைத் தனது திறமையால் எளிதில்வாங்கிப் பூமாலைப்போல்
தன்கழுத்திலே தரித்துக்கொள்ள, இந்திரன் அதுகண்டு அதிசயங்கொண்டு,
‘இன்றுதொட்டுஉன்னை ஆரந்தாங்குபாண்டியனென்று உலகமெல்லாம்
நன்குமதிக்கக்கடவது’ என்றுசொல்ல, பாண்டியன் மதுரைக்கு மீண்டனன் என்பது,
முன்னிரண்டடியிற் குறித்தகதை. ‘மகோததியும் வணங்குத் தாளான்’ என்ற
விவரம் – உக்கிரபாண்டியன் அநேகஅசுவமேதயாகங்கள் செய்ததுகண்டு
பொறாமைகொண்ட இந்திரன், கடலரசனானவருணனை யழைத்து ‘நீ சென்று
மதுரையை யழிப்பாய்’ என்ன, அங்ஙனமேநடுநிசியிற் கடல் பொங்கி மதுரையைச்
சமீபித்தபோது, பாண்டியன்,தனதுதந்தையினால் முன்பு தனக்குக் கொடுக்கப்பட்ட
வேற்படையை எறிய, அதுபட்டவுடனே கடல் வறண்டு வலிமைகெட்டு, தோற்ற
பகைவர் வென்றவன்காலில்விழுந்து வணங்குதல் போலப் பாண்டியனது காலின்
மட்ட மாயிற்று என்பது.இக்குலத்துமுன்னோனான உக்கிரபாண்டியனது வரலாற்றை
இவன்மே லேற்றிக்கூறினார்; இங்ஙனங் கூறுதல், ஒருவகைக் கவிமரபு. 

வழுதி திரு மகள் கொடுத்த மையலினால், வடிவமும்
தன் மனமும் வேறா,
பொழுது விடிவளவும், மதன் பூசலிலே கருத்து அழிந்து,
பூவாம் வாளி
உழுத கொடும் புண் வழியே ஊசி நுழைந்தெனத்
தென்றல் ஊர ஊர,
விழி துயிலா விசயனும், அவ் விபுதருடன் துயிலுணர்ந்து,
விதியும் செய்தான்.-சித்திராங்கதைசென்றபின் அருச்சுனன் மனவேதனையில் இரவு
கழித்து அந்தணருடன் துயிலுணர்ந்து காலைக் கடனைச் செய்தல்.

வழுதி திருமகள் – பாண்டியன் குமாரியான சித்திராங்கதை,
கொடுத்த -உண்டாக்கிய, மையலினால் – காமமயக்கத்தினால், தன் வடிவம்உம்
மனம்உம்வேறுஆ-தன்மேனியும் மனமும் மாறுபட்டு, பொழுதுவிடிவுஅளவும்-, மதன்
பூசலில்ஏ- மன் மதன் செய்யும்போரிலே, கருத்து அழிந்து -மனம்வருந்தி, பூ ஆம்
வாளி உழுத- (அந்தமன்மதனுடைய) புஷ்பபாணம் (தன்னுடம்பிலே) இடைவிடாது
பாய்தலாலான, கொடும் புண்வழிஏ-கொடிய புண்ணிருந்த இடத்திலே, ஊசி
நுழைந்துஎன- ஊசிநுழைந்தாற் போல, தென்றல் ஊர ஊர- தென்றற்காற்று மிகவும்
உட்புக, (இங்ஙன்மதனவேதனையினால்), விழி துயிலா விசயன்உம்- (அந்தச்
சித்திராங்கதையைக்கூடிப்பிரிந்த அந்தநாளிரவில்) கண்துயிலாத [உறக்கம்பிடிக்காத]
அருச்சுனனும், அவிபுதருடன் – அந்த அந்தணருடனே, துயில்உணர்ந்து –
கண்விழித்தான்போன்று,விதிஉம் செய்தான் – காலைக்கடனையுஞ் செய்திட்டான்;
(எ-று.)

     வடிவம் வேறாதல் – மேனிநிறம்மாறுதல். மனம்வேறாதல் – மகிழ்ந்திருந்த
தன்மை நீங்கிப் பிரிவுத்துயரையுடையதாதல். பூதேவராதலால், அந்தணரை ‘விபுதர்’
என்றார்.

பஞ்சவரின் நடுப்பிறந்தோன் பஞ்சவன் பேரவை
எய்திப்பஞ்ச பாண,
வஞ்சகன்செய் வஞ்சனையால் மதிமயங்கி இருந்துழிஅம்
மதுரை வேந்தன்,
சஞ்சரிக நறுமலர்த்தார் தனஞ்சயன் என்று அறிந்து எழுந்து தழீஇக்
கொண்டு ஆங்கண்,
அஞ்சல் இனி உனக்குரியள் யான் பயந்த கடற்பிறவா அமுதம்
என்றான்.-பாண்டியன் அருச்சுனனை நோக்கி ‘என்மகளை உனக்கு மணஞ்
செய்விப்பேன்’ என்றல்.

பஞ்சவரில் நடு பிறந்தோன் – பஞ்ச பாண்டவர்களுள்
(மூன்றாமவனாய்) நடுவிற் பிறந்தவனான அருச்சுனன், பஞ்சவன்பேர் அவை
எய்தி -பாண்டியனுடைய பெரியசபையை அடைந்து, பஞ்ச பாண வஞ்சகன் செய்
வஞ்சனையால் மதி மயங்கி இருந்த உழி- ஐந்து அம்புகளையுடையவனாய்
(அனைவரையும்) மயக்கித் தன்வசப்படுத்துகிறவனான மன்மதன் செய்த மோகத்தால்
அறிவுமயங்கி இருந்தபொழுது, அ மதுரை வேந்தன் – (பாண்டியநாட்டு
ராஜதானியாகிய) மதுரைக்குத் தலைவனான அப்பாண்டியராஜன்,- ஆங்கண் –
அவ்விடத்தில், சஞ்சரிகம் நறு மலர் தார் தனஞ்சயன் என்று அறிந்து எழுந்து
தழீஇக்கொண்டு – (அவனை) வண்டுகள் மொய்க்கிற வாசனை வீசும்
மலர்மாலையையுடைய அருச்சுனனென்று அறிந்து எழுந்து தழுவியுபசரித்து,
‘அஞ்சல்- அஞ்ச வேண்டா: யான் பயந்த கடல் பிறவா அமுதம் – யான் பெற்ற
மகளும்பாற்கடலினின்று தோன்றாததோர் அமிருதம் போன்றவளுமான
சித்திராங்கதை, இனிஉனக்கு உரியள் – இனி உனக்கு உரியவள்,’ என்றான்- என்று
சொன்னான்; (எ-று.)

     பஞ்சவர்-ஐவர்; ஐந்து என்னும் பொருள்தரும் ‘பஞ்ச’ என்னும் வடமொழி
யெண்ணுப்பெயரினடியாப்பிறந்த பெயர்: இங்கே, தொகைக்குறிப்பு. மன்மதனது
பஞ்சபாணம் தாமரைமலர், அசோகமலர், மாமலர், முல்லைமலர், நீலோற்பலமலர்
என்பன. அவ்வம்புகளை மறைந்துநின்று மனத்திலெய்து அதனையு முட்பட
வருத்தலால், மன்மதனை ‘வஞ்சகன்’ என்றார். சஞ்ரீகம் என்ற வடமொழிப்பெயர் –
எப்பொழுதுந் திரிவது என்று பொருள்படும். தீர்த்தயாத்திரைக்குவந்த
தவவேடமுடையானொருவனுக்கு அரசன் தன்மகளைக் கொடுக்க இசைவனோ
என்றும், தந்தையின் உடன்பாடின்றி மகளைத் தன்வசப்படுத்திக்கொண்டமை
தெரிந்துஅத்தந்தை என்ன மாறுபாடுகொள்வனோ என்றும் அஞ்சவேண்டா
வென்பான், ‘அஞ்சல்’ என்றான். 

கேண்மதி, ஓர் மொழி: முன்னம் கேண்மையின் நம் குலத்து
ஒருவன் கிரீசன் தன்னைத்
தாள் மலர் அன்புறப் பணிந்து தவம் புரிந்தான், மகப்
பொருட்டால்; தரித்த கொன்றை
நாள்மலரோன் வெளி நின்று, அந் நரபதிக்கு, ‘நின் குலத்து
நரேசர் யார்க்கும்,
வாள் மருவும் கரதலத்தோய்! ஓர் ஒரு மா மகவு’ என்று
வரமும் ஈந்தான்.-இதுவும், அடுத்த கவியும்- ஒருதொடர்: பாண்டியன்
அருச்சுனனிடம் ஒருவரம் வேண்டிப் பெறுதல்.

ஓர் மொழி கேள்மதி -(யான் சொல்லும்) ஒருவார்த்தையைக்
கேட்பாயாக:- முன்னம் – முற்காலத்தில், நம் குலத்து ஒருவன்-நமது குலத்துத்
தோன்றியிருந்த ஓரரசன், மகப்பொருட்டால்-புத்திரபாக்கியத்தின்பொருட்டு, கிரீசன்
தன்னை-சிவபிரானை, கேண்மையின் – உரிமையோடு, அன்பு உற – அன்பு மிக,
தாள் மலர் பணிந்து – திருவடித்தாமரைகளில் வணங்கி, தவம் புரிந்தான் – தவஞ்
செய்தான்: தரித்த கொன்றை நாள் மலரோன் – அன்று மலர்ந்த [புதிய]
கொன்றைமலர்களைத் தரித்தவனான அச்சிவபிரான், வெளி நின்று – வெளிப்பட்டுத்
தரிசனந் தந்துநின்று, ‘வாள் மருவும் கரதலத்தோய் – வாளாயுதம்பொருந்திய
கையையுடையவனே! நின் குலத்து நரேசர் யார்க்குஉம் ஓர் ஒரு மா மகவு –
உனதுகுலத்திலரசரெல்லார்க்கும் ஒவ்வொரு சிறந்தகுழந்தையே (தவறாமல்)
உண்டாகுக,’ என்று-, அ நரபதிக்கு – அந்த அரசனுக்கு, வரம்உம்  ஈந்தான் –
வரத்தையுங் கொடுத்தான்; (எ-று.)

     வரம்பெற்ற பாண்டியனதுபெயர் பிரபஞ்சநனென்று வியாசபாரதத்தினால்
விளங்குகின்றது. சிவபிரான் சுந்தரபாண்டியனாகி இக்குலத்தைப் பெருமைப்படுத்தி
இதனிடத்து அன்புகொண்ட உரிமைபற்றி, ‘கேண்மையின்’ என்றார்.
‘எங்குலத்தொருவன்’ என்றும் பாடமுண்டு.

அன்று உரைத்த வரத்தின் வழி அனேகர் அவனிபரும் மகவு
அளித்தார், ஒன்று ஒன்று;
ஒன்று உரைக்க மறாது ஒழி நீ; ஒரு மகவும் பெண் மகவாய்
உதித்தது, என்பால்;
நன்று உரைக்கும் மொழியாய்! என் நவ்வி பெறும் மகவு எனக்கே
நல்க வேண்டும்’
என்று உரைத்தான்; மன்றல் பெற இருந்தோனும், மாமன் உரைக்கு
இசைந்தான் அன்றே.

அன்று உரைத்த வரத்தின் வழி – அந்நாளிற் (சிவபிரான்)
சொல்லியருளிய வரத்தின்படியே, அவனிபர் அநேகர் உம் – (எம்குலத்து)
அரசரெல்லோரும், மகவு ஒன்று ஒன்று அளித்தால் – பிள்ளைஒவ்வொன்றைப்
பெற்றார்கள்; என்பால் – என்னிடத்தில், ஒரு மகவுஉம் – அவ்வொருகுழந்தைதானும்,
பெண் மகவு ஆய் உதித்தது – பெண்குழந்தையாய்ப் பிறந்தது; நன்று உரைக்கும்
மொழியாய் – நல்லனவாகவே பேசும் பேச்சுக்களை யுடையவனே! ஒன்று உரைக்க
நீமறாதொழி- (யான்) ஒருவேண்டுகோளைச் சொல்ல (அதனை) நீ மறுக்காம
லிருப்பாய்; (அவ்வேண்டுகோள் யாதெனின்),- என் நவ்வி பெறும் மகவு எனக்குஏ
நல்கவேண்டும்- மான்போன்ற எனதுமகள் பெறும் ஒற்றைப்பிள்ளையை எனக்கே
(எனதுசந்ததிவிருத்தியின்பொருட்டு அபிமான புத்திரனாகக்) கொடுக்கவேண்டும்,
என்றுஉரைத்தான்-என்று (சித்திரவாகநபாண்டியன்) சொன்னான்; மன்றல் பெற
இருந்தோன்உம் -(சித்திராங்கதையின்) விவாகத்தைப் பெற இருந்தவனான
அருச்சுனனும், மாமன் உரைக்கு இசைந்தான் – (தனக்கு) மாமனாராகும்
அவ்வரசனுடைய அச்சொல்லுக்கு இணங்கினான்; (எ-று.)- அன்றே – ஈற்றசை;
அப்பொழுதேயெனினுமாம்.அவனிபர் – வடசொல்; பூமியைக்காப்பவர்

தெண்திரை கை தொழு கழலோன் திருமகட்கு வதுவை என,
சேர சோழர்,
எண் திசையின் முடி வேந்தர் எல்லோரும் முனி கணத்தோர்
எவரும் ஈண்ட,
அண்டர் பிரான் அளித்த சிலை ஆண்தகையை அலங்காரம்
அனைத்தும் செய்து,
மண்டபம் ஒன்றினில் அறு கால் வண்ண மணிப்
பலகையின்மேல் வைத்தார் அன்றே–இதுமுதல் மூன்றுகவிகள்-அருச்சுனனுக்கும், சித்திராங்கதைக்கும்
நடந்தவிவாகத்தைக் கூறும்.

தெள் திரை கை தொழு கழலோன் – தெளிவான
அலைகளையுடையதான  கடலரசனாற்    கைகூப்பிவணங்கப்பட்டபாதங்
களையுடையவனான பாண்டியராசன், திருமகட்கு வதுவை என – (தனது)
சிறந்தபெண்ணுக்கு விவாகமென்று எங்குஞ் செய்தி தெரிவிக்க,- சேர சோழர் –
சேரநாட்டரசனும் சோழநாட்டரசனும், எண் திசையின் முடிவேந்தர் எல்லோர்உம் –
எட்டுத்திக்குகளிலுமுள்ள கிரீடாதிபதிகளான மற்றும் அரசர்களனைவரும், முனி
(அவ்விவாகத்தின் பொருட்டு மதுரைக்கு வந்துசேர்ந்து) நெருங்க, -அண்டர்பிரான்
அளித்த சிலை ஆண் தகையை – தேவராஜனான இந்திரன் பெற்ற வில்வீரனான
அருச்சுனனை, அலங்காரம் அனைத்து உம் செய்து – எல்லா அலங்காரங்களையுஞ்
செய்து, மண்டபம் ஒன்றினில் – ஒருமண்டபத்தில், அறுகால் வண்ணம் மணி
பலகையின்மேல்- ஆறுகால்களையுடைய அழகிய இரத்தினமயமான பீடத்தின்மேல்,
வைத்தார் – இருக்கச்செய்தார்கள்; (எ-று.)

      ‘வைத்தார்’ என்ற முற்றுக்குஉரிய எழுவாய், ‘புரோகிதன் முதலியோர்’ என
வருவிக்க. தெண்டிரை – பண்புத்தொகை யன்மொழி. உக்கிரபாண்டியன் கடல்சுவற
வேல்விட்டபோது வற்றிய சமுத்திரராசனான வருணன் தோற்று, அவனை
வணங்கினனென்க அன்றே – ஈற்றசை.  

கோ மடந்தை களி கூர, புகழ் மடந்தை களி கூர,
கொற்ற விந்தை
மா மடந்தை களி கூர, மண வினை ஒப்பனைக்கு
உரிய மடந்தைமார்கள்
பூ மடந்தை அனையாளைப் பூட்டிய வெண் தரள
மணிப் பூண்களாலே
நா மடந்தை நிகர் ஆக்கி, நாயகன்தன் வலப் பாகம்
நண்ணுவித்தார்.

கோ மடந்தை களி கூர – ராஜலக்ஷ்மி களிப்பு மிகவும், புகழ்
மடந்தைகளிகூர – கீர்த்திலக்ஷ்மி களிப்புமிகவும், கொற்றம் விந்தை மா மடந்தை
களி கூர -வெற்றியையுடைய வீரலக்ஷ்மியாகிய சிறந்தபெண் களிப்பு மிகவும், மணம்
வினைஒப்பனைக்கு உரிய மடந்தைமார்கள்-கலியாணத்துக்குஏற்ற அலங்காரங்களைச்
செய்தற்கு உரியவர்களான மாதர்கள், பூமடந்தை அனையாளை-(செந்நிறமுடைய)
லக்ஷ்மிபோன்றவளான அச்சித்திராங்கதையை, பூட்டிய வெள் தரளம்மணிபூண்களால்-
(அவளுக்குத்தாங்கள்) அணிவித்த வெண்ணிறமான முத்துக்களாலும் வேறு
இரத்தினங்களினாலுமாகிய ஆபரணங்களினால், நாமடந்தை நிகர் ஆக்கி –
சரசுவதிக்குச் சமானமாம்படி யலங்கரித்து, நாயகன் தன்வலம்பாகம் நண்ணுவித்தார்-
கணவனான அருச்சுனனுடைய வலப்பக்கத்தில் இருக்கவைத்தார்கள்; (எ-று.)

     வெண்ணிறமான ஆடையாபரணங்களைத் தரித்த வெண்ணிறமுள்ள
சரஸ்வதிபோலாம்படி, சித்திராங்கதையை, பூட்டிய வெண்தரளமணிப்பூண்களாற்
செய்தன ரென்க. உத்தமவிலக்கணம் நிறைந்தவளான இவள் தன்னை
மணஞ்செய்துகொண்டவனுக்கு அரசும் புகழும் வெற்றிவீரமும் சிறக்கும்படியான
பாக்கியத்தை யுடையளாதலால், இவளை அருச்சுனனது பக்கத்தில் விவாகத்தின்
பொருட்டு இருத்துகையில் கோமடந்தையும் புகழ்மடந்தையும் விந்தைமடந்தையும்
களிகூரலாயின ரென்க

இந்திரனும் சசியும் என, இறையோனும் உமையும் என,
எம்பிரானும்
செந் திருவும் என, காமதேவும் இரதியும் என,
வெஞ் சிலைவலோனும்
சந்து அணி பூண் முலையாளும், சதுர் மறையோர் சடங்கு
இயற்ற, தழல் சான்று ஆக,
துந்துபியின் குலம் முழங்க, சுரிசங்கின் குழாம் தழங்க,
துலங்க வேட்டார்.

துந்துபியின் குலம் முழங்க – பேரிகையின் கூட்டங்கள் ஒலிக்கவும்,
சுரிசங்கின் குழாம் தழங்க – வளைவுள்ள சங்கின் கூட்டம் ஒலிக்கவும்,-
இந்திரன்உம்சசிஉம் என – இந்திரனும் இந்திராணியும் போலவும், இறையோன்உம்
உமைஉம் என- சிவபெருமானும் பார்வதியும்போலவும், எம்பிரான்உம் செந்திருஉம்
என -திருமாலும் அழகிய இலக்குமியும்போலவும், காமதேஉம் இரதிஉம் என –
மன்மதனும்இரதீதேவியும்போலவும், வெம் சிலை வலோன்உம் சந்து அணி பூண்
முலையாள்உம்- கொடிய வில் தொழிலில் வல்லவனான அருச்சுனனும்
சந்தனத்தையணிந்துஆபரணங்களைப்பூண்ட முலையை யுடையவளான
சித்திராங்கதையும்,சதுர்மறையோர் சடங்கு இயற்ற – நான்குவேதங்களில்
வல்லவர்களான அந்தணர்கள்(நூன்முறைப்படி) விவாகச்சடங்கைச்செய்விக்க,
தழல் சான்றுஆக -அக்கினிசாட்சியாக, துலங்க – விளக்கமுற [சிறப்பாக],
வேட்டார் – விவாகஞ்செய்துகொண்டார்கள்.

நோக்கிய கண் இமையாமல் நோக்கி நோக்கி, நுண்ணிய மென்
புலவியிலே நொந்து நொந்து,
தேக்கிய செங் கனி இதழ் ஆர் அமுது உண்டு உண்டு,
சேர்த்திய கைந் நெகிழாமல் சேர்ந்து சேர்ந்து,
தூக்கிய பொன் துலையின் அநுராகம் மேன்மேல் தொடர,
அரும் பெரும் போகம் துய்த்தார்; முன்னைப்
பாக்கியம் வந்து இருவருக்கும் பலித்தது அல்லால், பாயல்
நலத்து இப்படி யார் பயன் பெற்றாரே?-இருவரும் கூடி இன்ப மனுபவித்தல்.

நோக்கிய கண் இமையாமல் நோக்கி நோக்கி-பார்த்த கண்
இமையாதபடி (ஒருவரையொருவர்) இடைவிடாதுபார்த்துப் பார்த்தும், நுண்ணிய
மெல்புலவியிலே நொந்து நொந்து – நுட்பமான மெல்லிய ஊடலிலே
இடையிடையேவருந்திவருந்தியும், தேக்கிய செம் கனி இதழ் ஆர் அமுது
உண்டுஉண்டு -(ரசம்)நிறைந்தசிவந்தபழம்போன்ற அதரத்திற் பொருந்திய
அமிருதத்தைஅடுத்தடுத்துப்பருகியும், சேர்த்திய கை நெகிழாமல்சேர்ந்து
சேர்ந்து – அணைத்த கைநெகிழாதபடி பன்முறை இறுகத்தழுவியும், பொன்
தூக்கிய துலையின் அநுராகம் மேல்மேல் தொடர – பொன்னைநிறுக்கின்ற
தராசுகோல்போல (இருதலையிலுஞ்சமமாக)ஆசை மேலும்மேலும் இடைவிடாது
அமைய, அரும்பெரும்போகம் துய்த்தார் -அருமையான சிறந்த கலவியின்பத்தை
அனுபவித்தார்கள்; முன்னை பாக்கியம் வந்துஇருவருக்குஉம் பலித்தது அல்லால்-
(மிக்கநன்மைக்குஏதுவான) முற்பிறப்பிற் செய்தநல்வினை (இங்ஙனம்) வந்து
இவ்விருவருக்கும் வாய்த்ததேயல்லாமல், பாயல் நலத்துஇப்படி யார் பயன்
பெற்றார் – படுக்கையிலடையுஞ்சிற்றின்பத்தில் இவ்வாறுமேம்பட்ட பயன் பெற்றவர்
வேறு யார் உளர்?

     அடுக்குக்கள் – பன்முறைப்பொருளன. தலைமகனும் தலைமகளும் ஒரு
சயனத்திற்கூடி யிருக்கையில் அவனிடத்துப் புலவி கொள்ளுதற்குக் காரணமான
குற்றம் யாதும் இல்லையாகவும் ஆசை விஞ்சுதலால் நுண்ணியதோர் காரணம்
உள்ளதாக உட்கொண்டு அதனை அவன்மேல் ஏற்றி அவள் புலவிகொள்ளுத
புலவி’ என்றார். மென்புலவி – இன்பஞ்செய்தற்கு வேண்டுமளவினதாகக் கொண்டு
அவ்வளவோடு தணியும் புலவி யென்றபடி; “நினைத்திருந்து நோக்கினுங்காயும்
அனைத்தும் நீர், யாருள்ளிநோக்கினீ ரென்று” என்றபடி தனது ஒப்பில்லாத அழகை
நினைந்து தன்னையே நாயகன் இமையாது நோக்கும்போதும் ‘நும்மாற்
காதலிக்கப்படாருள் யாரை யொப்பே னென்று என்னை நோக்கினீர்?’ என நாயகி
புலவி நுணுக்கங்கொள்ளும் இயல்பு தோன்ற, ‘நோக்கியகண் இமையாமல்
நோக்கிநோக்கி’ என்றதை யடுத்து ‘நுண்ணிய மென்புலவியிலே நொந்துநொந்து’
என்றார்.

     இதுமுதற் பதினாறுகவிகள் – திரௌபதி மாலையிட்ட சருக்கத்தின் 48-ஆம்
கவிபோன்ற எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தங்கள்.   

பல் நாளில் நெடும் போகம் பயின்ற பின்னர், பப்புருவாகனன்
என்னும் பைதல்-திங்கள்
அன்னானை அவள் பயந்தாள்; பயந்த போதே, அம் மகவை
உவகையுடன் அவனும் ஈந்தான்;
தென்னா என்று அளி முரல, வேம்பின் தண் தார்த் தேம் பரிசில்
வழங்கு புயத் தென்னர் கோவும்,
‘நின்னால் என் மரபு நிலை பெற்றது!’ என்று, நேயமுடன் கவர்ந்து,
துயர் நீங்கினானே.-அருச்சுனன் சித்திராங்கதையினிடமாகப் பெற்ற
புதல்வனைச் சித்திரவாகனனுக்குக் கொடுத்தல்

 பல் நாளில் நெடும் போகம் பயின்ற பின்னர் – (இவ்வாறு)
பலநாள்பெரியஇன்பத்தை (இருவரும்) அனுபவித்தபின்பு அவள்-அச்சித்திராங்கதை,
பப்புருவாகனன் என்னும் பைதல் திங்கள் அன்னானை பயந்தாள் – பப்புருவாகன
னெனப் பெயர் பெறும் இளம்பிறைச்சந்திரன்போன்ற புத்திரனைப் பெற்றாள்;
பயந்தபோதே- பெற்றபொழுதே, அவன்உம் உவகையுடன் அ மகவை ஈந்தான் –
அவ்வருச்சுனனும் மகிழ்ச்சியோடு அப்பிள்ளையை (முன்புகுறித்தபடி சித்திரவாகன
பாண்டியனுக்கு)க் கொடுத்தான்; தென்னா என்று அளிமுரல- ‘தென்னா ‘ என்று
வண்டுகள் ஒலித்து இசைக்க, வேம்பின் தண் தார் தேம் பரிசில் வழங்கு –
(தானணிந்த) குளிர்ந்த வேப்பம்பூமாலையிலுள்ளதேனை (அவ்வண்டுகளுக்கு)
வெகுமதியாகக் கொடுக்கின்ற, புயம் – தோள்களையுடைய, தென்னர் கோஉம் –
பாண்டியர்தலைவனான சித்திரவாகனனும், நின்னால் என் மரபு நிலைபெற்றது
என்று- ‘உன்னால் எனதுசந்ததி அழிவின்றி நிலைத்தது’ என்று (அருச்சுனனைநோக்கி
உபசாரவார்த்தை) சொல்லி, நேயமுடன் கவர்ந்து-அன்போடு (அப்பிள்ளையை)
வாங்கிக்கொண்டு, துயர் நீங்கினான்-(புத்திரசந்ததியில்லா திருந்ததனாலாகிய தனது)
துன்பம்  ஒழியப்பெற்றான்;(எ-று.)

     வண்டுகள் தென்னாவென்று ஒலிக்கும் இசைக்குறிப்புவாய்பாடும், ‘தென்னன்’
என்பது ஈறுதிரிந்து ஈற்றயல்நீண்ட விளியாய்த் தென்னனே யென்று பொருள்படும்
ஆடுஉமுன்னிலையுமாக இருபொருள் இரட்டுறமொழித லென்னும் உத்தியால்
ஒருங்கே யமைய ‘தென்னாவென்று அளிமுரல’ என்றார்: ‘தென்னா’ என்று
பாண்டியனை விளித்து முன்னிலைப்படுத்தி இசைபாடிவரும் பாணர்களுக்கு
அவர்கள்வேண்டிய இன்னுணவுமுதலிய பரிசுகளை இருகையாலும்வழங்கும்
பாண்டியரியல்பின்படி, ‘தென்னா’ என்று இசை பாடி வந்தவண்டுகளுக்குப்பிரியமான
தேனைத் தோள்களில் தரித்த வேப்பம்பூமாலையினின்றுவழங்கும் பாண்டிய னென்று
பொருள்படுமாறு ‘தென்னா வென்றளிமுரல வேம்பின்றண்டார்த் தேம்பரிசில் வழங்கு
புயத்தென்னர்கோ’ என்றார்: ஆறறிவுடைய மக்கட்குப்போலவே
அவ்வறிவிற்குறைபாடுடையஉயிர்கட்கும் தன்னைச்சார்ந்தவிடத்துப் பரிசுகொடுக்கும்
பெருங்கொடையாளனென்பது விளங்கும். பாணர்க்கு வண்டு உவமமாதலை, சிலப்.
காதை-5, வரி 200-203-இலும் காணலாம். தென்னர் -பரதகண்டத்தின்
தென்னாடாகியபாண்டிய நாட்டை யாள்பவர். பப்ருவாஹநன்  என்றவட
மொழிப்பெயர் -பிங்கலவர்ணமான குதிரைகளை யுடையவ னென்று
பொருள்படும்

பார்த்தன், அருச்சுனன், கரியோன், விசயன், பாகசாதனி,
சவ்வியசாசி, பற்குனன், பார்
ஏத்து தனஞ்சயன், கிரீடி, சுவேத வாகன், எனும் நாமம்
படைத்த பிரான், யாழோர் இன்பம்
வாய்த்த இதழ் அமுத மொழிப் பேதை தாதை மனை இருக்க,
திரு வழுதி வள நாட்டு உள்ள
தீர்த்தம் முழுவதும் ஆடி, அன்பால் தென்பால் திருமலையும்
கை தொழுது சிந்தித்தானே.-அருச்சுனன் பிராயணப்பட்டுத் திருமாலிருஞ்சோலை மலையைத்
தரிசித்தல்.

பார்த்தன்-, அருச்சுனன்-, கரியோன் – கருநிறமுடையவன்
[கிருஷ்ணன்], விசயன்-, பாகசாதனி – பாகசாஸநி, சவ்வியசாசி – ஸவ்யஸாசீ,
பற்குனன்-பல்குநன்,பார் ஏத்து தனஞ்சயன் – உலகத்தவர் புகழும் தநஞ்சயன்,
கிரீடி -கிரீடி, சுவேதவாகன்-, எனும் நாமம் – என்கிற (பத்துப்) பெயர்களையும்,
படைத்த -பெற்ற, பிரான் – அரசனான அருச்சுனனானவன்,- யாழோர் இன்பம்
வாய்ந்த(அமுதம்) இதழ் அமுதம் மொழிபேதை தாதை மனை இருக்க –
காந்தர்வவிவாகம்பெற்ற அமிருதம்போன்ற அதரத்தையும் அமிருதம்போன்ற
இன்சொற்களையுமுடையஇளம் பெண்ணான சித்திராங்கதை (தனது)
தந்தையின்வீட்டிலேயிருக்க [அவளை அங்குஇருத்தி], திருவழுதி வளம் நாடு
உள்ளதீர்த்தம் முழுவதுஉம் ஆடி- சிறந்தவளப்பமுடைய பாண்டியநாட்டிலுள்ள
புண்ணியதீர்த்தங்களெல்லாவற்றிலும் தான் ஸ்நாநஞ் செய்பவனாய் (ப் புறப்பட்டு),
அன்பால் – அன்போடு, தென்பால் திருமலைஉம் கைதொழுது சிந்தித்தான் –
தென்திசையிலுள்ள அழகர்திருமலையையுங் கைகூப்பி வணங்கித் தியானித்தான்;
(எ-று.)

     இத்தலத்திலுள்ள பெருமாள் திருநாமம் – அழகர். பிராட்டிமார் –
சுந்தரவல்லி,பூதேவி. பாகஸாஸநன் – இந்திரன்; அவனது மகன்,
பாகஸாஸநிஎனத்தத்திதாந்தநாமம். ஸவ்யஸாசீ – வலக்கையினால்
மாத்திரமன்றிஇடக்கையினாலும் அம்புதொடுப்பவன். கிரீடி – பாசுபதம்பெற்றபின்பு
இந்திரலோகத்துக்குச் செல்லும்போது அவ்விந்திரனாற் சுவர்க்கத்தில் இளவரசு
முடிசூட்டப் பெறுபவன். ஸ்வேதவாஹன் – வெண்ணிறமானகுதிரைகளையுடையவன்:
காண்டவதகனஞ்செய்யுமாறு அநுமதி தரும்போது அக்கினிபகவானாற்
கொடுக்கப்படும் நான்குவெள்ளைக்குதிரைகளைப் பூண்ட தேரைப் பெறுதலால்,
இவனுக்கு இப்பெயர். 

கன்றிய வெங் கரன் முதலோர் களத்தில் வீழ, கவி குல
நாயகன் இதயம் கலங்கி வீழ,
ஒன்று பட மரம் ஏழும், உததி ஏழும், ஊடுருவச் சரம்
தொடுத்த ஒரு வில் வீரன்,
துன்றி எழுபது வெள்ளம் குரங்கின் சேனை சூழ் போத,
வாய்த்த திருத் துணைவனோடும்
சென்ற வழி, இன்று அளவும் துளவம் நாறும் சேது, தரிசனம்
செய்தான், திறல் வல்லோனே..-அருச்சுனன் அப்பாற்சென்று சேதுதரிசனஞ் செய்தல்.

கன்றிய வெம் கரன் முதலோர் களத்தில் வீழ – கோபித்த கொடிய
கரன்முதலான இராக்கதர்கள் போர்க்களத்தில் இறந்துவிழவும், கவி குலம் நாயகன்
இதயம் கலங்கி வீழ – குரங்குக் கூட்டத்துக்குத் தலைவனான வாலி மனங்கலங்கி
விழவும், மரம் ஏழ் உம் உததிஏழ்உம் ஒன்றுபடஊடுருவ – ஏழுமராமரங்களும்
ஏழுகடல்களும் ஒருசேர ஊறுபடவும், சரம் தொடுத்த – அம்பைச் செலுத்திய, ஒரு
வில் வீரன் – ஒப்பற்ற வில்வீரனான ஸ்ரீராமபிரான், எழுபது வெள்ளம் குரங்கின்
சேனை துன்றி சூழ் போத- எழுபது வெள்ளமென்னுந் தொகையுள்ளவானர
சேனைநெருங்கி (த்தன்னைச்) சூழ்ந்து வர, வாய்த்த திரு துணைவனோடுஉம் –
(தனக்கு) இயைந்த சிறந்த தம்பியான இலக்குமணனுடனே, சென்ற – கால்களால்
நடந்து போன, வழி – வழியாதலால், இன்று அளவும் துளவம் நாறும் –
(அவ்விராமபிரானது திருவடிகளில் அன்பர்கள் அர்ச்சித்த) திருத்துழாயின்வாசனை
இன்றைவரையிலும் வீசப்பெற்ற, சேது- சேதுவை, திறல் வல்லோன் –
போர்த்திறத்தில் வல்லவனான அருச்சுனன், தரிசனம்செய்தான் – பார்த்தான்; (எ-று.)

     சேது தன்னைத் தரிசித்தமாத்திரத்திலே எல்லாப்பாவங்களையும் போக்கி
எல்லாநன்மைகளையும் தருந் தன்மைய தாதலால், ‘சேது தரிசனஞ்செய்தான்’
என்றார்.சேது – இராமபிரான் வாநர சேனையுடன் இலங்கைசேருரம் பொருட்டு
இடையிலுள்ளதென் கடலைக் கடத்தற்காக அதில் வானரர்களைக் கொண்டு
மலைகளைக்கொணர்வித்து அவற்றாற் கட்டுவித்த அணை. இராமபிரான்
அன்பர்களிட்டதிருத்துழாயின் நறுமணம் நீங்காத திருவடிகளால் மிதித்து நடந்து
சென்றதனால்,அத்துழாயின்நறுமணம் இப்பொழுதும் ஒழியாது அங்குச்
செறிந்திருக்கு மென்றார்.திருத்துழாய் திருமாலுக்கு உரியது.

     கரன் என்ற வடமொழிப்பெயர் – கொடியவனென்று பொருள்படும்; இவன்-
இராவணனுக்குத் தம்பிமுறையாகும் ஓர் அரக்கன்: தண்டகாரணியத்திலே
இராவணன்தங்கையான சூர்ப்பணகை வசித்தற்கென்று அவ்விராவணன் குறித்த
ஜநஸ்தாநமென்னுமிடத்தில் அவளுக்குப் பாதுகாவலாக அவனால்
நியமித்துவைக்கப்பட்டபெரியஅரக்கர்சேனைக்கு முதல் தலைவன். சூர்ப்பணகை
தனது சில உறுப்புக்களையறுத்திட்ட இராமலக்ஷ்மணர்மீது கறுக்கொண்டு சென்று
கரன்காலில்விழுந்துமுறையிட, அவன் மிகப்பெரியசேனையோடும் அறுபதுலக்ஷம்
படைவீரரோடும் சேனைத்தலைவர் பதினால்வரோடும் தூஷணன் திரிசிரா என்னும்
முக்கியசேனாதிபதிகளோடும் புறப்பட்டுவந்து போர்தொடங்குகையில், இராமன்
லக்ஷ்மணனைச் சீதைக்குக் காவலாகப் பர்ணசாலையில் நிறுத்தித் தான் தனியே
சென்று எதிர்த்துப் பெரும்போர்செய்து பலரையும் அழித்து முடிவிற் கரனையுந்
துணித்து வெற்றிகொண்டனன்.

     வாலி – இந்திரன்மகன்; சுக்கிரீவனது தமையன். சீதையைத்
தேடிக்கொண்டுவந்த இராமலக்ஷ்மணர்களோடு அநுமான் மூலமாக நண்புகொண்ட
சுக்கிரீவன் தனக்குப் பல இடையூறியற்றிய தன் தமையனான வாலியைக்கொன்று
உதவிபுரியுமாறு இராமனைவேண்ட, அதற்கு இரங்கிய பெருமான், சுக்கிரீவனை
வாலியோடு வலியப்போர் செய்யச்சொல்லி, அங்ஙனம் அவ்விருவரும் பொரு
கையில் மறைவிலிருந்து அம்புதொடுத்து வாலியை வதைத்தனன்.

     இராமலக்ஷ்மணரை அநுமான் மூலமாகச்சுக்கிரீவன் சிநேகித்த பிறகு,
தனதுபகைவனான வாலியைக் கொல்லும் வல்லமை இராமனுக்கு உண்டோ
இல்லையோ என்று ஐயமுற்றுத் தன்சந்தேகந் தீரும்படி ‘எதிரிலிருந்த
ஏழுமராமரங்களையும் ஏககாலத்தில்தொளைபடும்படி எய்யவேண்டும்’ என்று
சொல்ல, உடனே இராமபிரான் ஒரே அம்புதொடுத்து அம்மரங்களேழையும்
தொளைப்படுத்தினன்.

     இராவணனாற் கவரப்பட்ட சீதாபிராட்டி இலங்கையிலிருக்கிற செய்தியை
அநுமான் சென்று அறிந்துவந்து சொன்னபின்பு இராமபிரான் வாநரசேனையுடனே
புறப்பட்டுச் சென்று கடற்கரையையடைந்து, கடலைக்கடக்கஉபாயஞ்சொல்ல
வேண்டுமென்று அக்கடலரசனாகிய வருணனைப் பிரார்த்தித்துஅங்குத்
தருப்பசயனத்திலே படுத்து ஏழுநாளளவும் பிராயோபவேசமாகக் கிடக்க,
சமுத்திரராஜன் அப்பெருமானது மகிமையை அறியாமல் உபேக்ஷையாயிருக்க,
ஸ்ரீராமன் அதுகண்டு கோபங்கொண்டு, அனைவரும் நடந்துசெல்லும்படி கடலை
வற்றச்செய்யவேனென்று ஆக்நேயாஸ்திரத்தைத்தொடுக்கத் தொடங்கியவளவிலே,
அதன்உக்கிரத்தால் வருணன் அஞ்சி நடுங்கி ஓடிவந்து அப்பெருமானைச்
சரணமடைந்து கடல்வடிவமான தன்மேல் அணைகட்டுதற்கு உடன்பட்டு ஒடுங்கி
நிற்க, பின்பு இராமமூர்த்தி, வாநரங்களைக்கொண்டு மலைகளாற் சேதுபந்தனஞ்
செய்தனன்.     

வன் திரை வெங் களிற்று இனங்கள் இரண்டு பாலும் மலையாமல்
இடும் கணையமரனே போலும்;
தன் தலைகள் அமிழாமல் எடுப்பான், மேருத் தாழ் கடலில்
நீட்டியது ஓர் தடக் கை போலும்;
அன்றி இரு பூ தலமும் இரு தட்டாக, அகத்தியன் வாழ்
குன்றினையும், அணி முக்கோணக்
குன்றினையும், சீர்தூக்கி நிறுப்பதாக, கோகனதன் அமைத்த
துலைக் கோலும் போலும்.-சேதுவின் வருணனை.

(அந்தச்சேதுவானது) வல் திரை – பெரிய அலைகளாகிய, வெம்
களிறுஇனங்கள் – வெவ்வியமதயானைகள், இரண்டு பால்உம் மலையாமல் –
இரண்டுபக்கத்திலும் (ஒன்றோடொன்று) போர்செய்யாதபடி, இடும் – (இரண்டுக்கும்
நடுவிலே) இட்ட, கணையம் மரன்ஏ -கணையமரத்தையே, போலும் – ஒக்கும்;
(மற்றும்), மேரு – மகாமேருமலை, தன் தலைகள் அமிழாமல் எடுப்பான் –
(வாயுவினாற் பறித்தெறியப்பட்ட) தனது சிகரங்கள் அமிழாமல் (அவற்றை)
எடுத்தற்கு,தாழ் கடலில் நீட்டியது- ஆழமான கடலில் நீட்டியதான, ஓர் தட கை –
ஒருபெரியகையை, போலும் – ஒக்கும்; அன்றி – இவைகளல்லாமல், இரு
பூதலம்உம் இருதட்டு ஆக – (ஜம்பூத்வீபமும் இலங்காத்வீபமும் என்னும்) இரண்டு
பூமியினிடங்களும்இரண்டு தட்டுக்களாக அமைய, (அவற்றின்மேல் வைத்து),
அகத்தியன் வாழ்குன்றினைஉம் அணி முக்கோணம் குன்றினைஉம் சீர்தூக்கி
நிறுப்பதுஆக -அகஸ்தியமுனிவன் வாழிடமான பொதிய மலையையும் அழகிய
திரிகோணமலையையும் (இவற்றில் எது கனம் பொருந்திய தென்று) நிறுத்து
வரையறை செய்யுமாறு, கோகநதன் அமைத்த – பிரமன் நாட்டிய, துலை கோல்உம்
– தராசுகோலையும், போலும் – ஒக்கும்; (எ-று.)

     தற்குறிப்பேற்றவணி. இரண்டுபக்கத்தும் அலைபிரிந்து மோத இடையிலே
பொருந்திய நீண்ட சேது, இருதிறத்துயானைகள் ஒன்றோடொன்று மோதாதபடி
அவற்றினிடையிலிட்ட காவல்தடை மரம்போலுமென்க. பாலபாரதத்திலும்
“உபயோரபிபாகயோர ஜஸ்ரம் – மிலதாம் அர்க்களம் ஊர்மிகுஞ்ஜராணாம்
லவணாம்புநிதௌ விலோக்யஸேதும்” என்று இங்கு முதலடியிற்குறித்த உவமை
வந்துள்ளது. வாயுதேவன் பெயர்த்துத் தள்ளிய மேருமலையின் மூன்று சிகரங்களே
இலங்கைநகர்க்கு இருப்பிடமான திரிகூடமென்பது இரண்டாமடியில் அறிதற்குரியது.

     முக்கோணக்குன்று – திரிகோணாசலம்; இது – இலங்கைத்தீவிலுள்ள தேவாரம்
பெற்ற சிவதலமிரண்டில் ஒன்று. அகஸ்தியமகாமுனிவன் சிவபிரானோடொத்த
மகிமையுடையவனாதலால், அவனிருக்கிற பொதியமலையும் சிவபிரானிருக்கிற
கைலாசகிரியின் கொடு முடியான திரிகோணமலையும் தம்மிலொத்தனவாய்ச்
சீர்தூக்குதற்கு ஏற்றன வென்க. கோகநதம் – தாமரை; இவ்வடசொல் கோகம் –
சக்கரவாகப்பறவைகள், நதம் – கூவியொலித்தற்கு இடமானது என்று பொருள்படும்.
கோகநதன் – தாமரையில் வாழ்பவன்

அண்டர், ‘தம கங்கையினும் வரன் உண்டு’ என்று என்று,
அரம்பையரோடு அவனியில் வந்து, ஆடும் கன்னித்
தண் துறையும், தண் பொருநைப் பாவ நாசத் தடந் துறையும்
படிந்து, நதித் தடமே போந்து,
பண்டு மழுப் படையோன் அம் மழுவால் கொண்ட பாக்கிய
பூமியும், சேரன் பதிகள் யாவும்,
கண்டு, மனம் களி கூரச் சென்று, மேலைக் கடல் கண்டான்,
உரகதலம் கண்டு மீண்டான்.-அருச்சுனன் சிலதீர்த்தங்களில் நீராடி மேல்கடல் சேர்தல்.

உரக தலம் கண்டு மீண்டான் – நாகலோகத்துக்குச் சென்று
அதனைக்கண்டு திரும்பிவந்தவனான அருச்சுனனானவன்,- அண்டர் –
தேவர்கள்,தம கங்கையின்உம் வரன் உண்டு என்று என்று –
தங்களுடையகங்காநதியைக்காட்டிலும் மேன்மையுள்ள தென்று எண்ணியும்
சொல்லியும், அரம்பையரோடு அவனியில் வந்து ஆடும்-தேவமாதர்களுடனே
பூமியில் வந்து ஸ்நாநஞ்செய்யப்பெற்ற, கன்னி தன் துறைஉம்-
கன்னியாகுமரியென்னும் நதியினது குளர்ச்சியான துறையிலும், தண் பொருநை
பாவநாசம் தட துறை உம் – குளிர்ச்சியான பொருநையாற்றினது பாவநாசமென்கிற
பெரிய துறையிலும், படிந்து – நீராடி, நதி தடம்ஏ போந்து – அந்நதியின்கரை
வழியாய்ச் சென்று, பண்டு மழு படையோன் அ மழுவால் கொண்ட பாக்கியம்
பூமிஉம்-முற்காலத்தில் பரசுராமன் (தனது) பரசு என்னும் ஆயுதத்தாற் கொண்ட
சிறந்தபூமியையும், சேரன் பதிகள் யாஉம்- மற்றும் சேரராசனுடைய
ஊர்களெல்லாவற்றையும், கண்டு – பார்த்து, மனம் களி கூர – மனத்திற் களிப்பு
மிக, சென்று -(பூமிப்பிரதக்ஷிணமாக அப்பால்) நடந்து, மேலை கடல்கண்டான் –
மேற்குத்திக்கிலுள்ள கடலைப் பார்த்தான்; (எ-று.)

     கன்னி – குமரிதீர்த்தம்; இது, பின்னர்க் கடலாற் கொள்ளப்பட்ட தென்ப.
மழுப்படையோன் – மழுவாகிய ஆயுதத்தை யுடையவன்; பரசுராமன். இவன்,
இருபத்தொருதலைமுறை அரசர்களைப் பொருதழித்துத் தன்வசப்படுத்திய
பூமிமுழுவதையும் காசியப முனிவனுக்குத் தானஞ்செய்தபின்னர், அம்முனிவன் ‘நீ
எனக்குக் கொடுத்துவிட்டதான பூமியில் வசித்தல் தகுதி யன்று’ என்ன,
இப்பரசுராமன் ‘அங்ஙனமே யாகுக’ என்று கடற்கரைசேர்ந்து தனக்கு
இடங்கொடுக்கும்படிஅக்கடலை வேண்டி, அதன் அனுமதிப்படி அதில் தனது
கோடாலிப்படையைவீசியெறிய, அது சென்று விழுந்த பன்னிரண்டுயோசனைதூரம்
கடல் விலகி விட,அப்பூமியில் அப்பெருமான் வசித்தனன்; அவ்விடம் பரசுராம
க்ஷேத்திர மென்றுபெயர்பெறும்: அது, மலைநாட்டின் முக்கியமான பாகமாம்.
அருச்சுனன்உரகதலம்கண்டு மீண்டமை, உலூபியை மணஞ்செய்தபொழுது

அந்த நெடுந் திசைப் புனல்கள் ஆடும் நாளில், ஐந்து தடத்து
அரம்பையர் ஓர் ஐவர் சேர,
இந்திரன் வெஞ் சாபத்தால், இடங்கர் ஆகி, இடர் உழந்தோர்
பழைய வடிவு எய்த நல்கி,
சிந்து திரை நதி பலவும் சென்று தோய்ந்து, திங்களுடன் அரவு
உறவு செய்யும் வேணிக்
கொந்து அவிழும் மலர் இதழித் தொடையோன் வைகும் கொடி
மதில் சூழ் கோகன்னம் குறுகினானே.-ந்துதேவமாதர்களின் சாபத்தை நீக்கிக் கோகர்ணஞ் சேர்தல்.

அந்த நெடுந் திசை புனல்கள் ஆடும் நாளில் – அந்தப் பெரிய
மேற்குத்திக்கிலுள்ள தீர்த்தங்களில் ஸ்நாநஞ்செய்கிற காலத்தில்,- இந்திரன் வெம்
சாபத்தால் – இந்திரன்காரணமாக வந்த கொடியசாபத்தினால், ஐந்து தடத்து – ஐந்து
தடாகங்களில், சேர – ஒருசேர, இடங்கர் ஆகி இடர் உழந்தோர் – முதலைகளாகித்
துன்பமனுபவித்துவருகிறவர்களான, அரம்பையர் ஓர் ஐவர் – ஐந்து தேவமாதர்கள்,
பழைய வடிவு எய்த – (சாபத்தினாலாகிய முதலைவடிவம்நீங்கிப்) பழமையான
தங்கள்நிஜவடிவத்தை யடையும்படி, நல்கி – அருள்செய்து,- சிந்து திரை நதி
பலஉம் சென்றுதோய்ந்து – வீசுகிற அலைகளையுடைய நதிகள்பலவற்றிலும்
போய்த் தீர்த்தமாடி,-திங்களுடன் அரவு உறவு செய்யும் வேணி – சந்திரனுடனே
பாம்பு நண்பாகஒருங்குவசிக்கப்பெற்ற சடைமுடியிலே, கொந்து அவிழும் இதழி
மலர் தொடையோன்- கொத்துக்கொத்தாக மலருங் கொன்றைப்பூமாலையை
யணிந்தவனான சிவபிரான்,வைகும் – வீற்றிருக்கின்ற, கொடி மதில் சூழ்
கோகன்னம்- துவசங்களை நாட்டியமதில்கள் சூழ்ந்த திருக்கோகர்ணமென்ற
தலத்தை, குறுகினான் – போய்ச் சேர்ந்தான்;(எ-று.)

     அருச்சுனன், தீர்த்தயாத்திரைசெய்கையில் ஸௌபத்ரதீர்த்தம்,
பௌலோமதீர்த்தம், காரந்தமதீர்த்தம், அசுவமேதபலதீர்த்தம், பாரத்வாஜதீர்த்தம்
என்னும் ஐந்துபுண்ணிய தீர்த்ததங்களைக் கண்டு, அவற்றில் ஐந்து முதலைகள்
இருந்து இறங்குபவரையெல்லாங் கவர்தலால் அவை எவராலும் நீராடாது
விடப்படுகின்றன என்று அறிந்து அம்முதலைகளைத் தொலைக்கக் கருதி,
மிக்கதைரியத்தோடு அவற்றில் அகஸ்தியதீர்த்தமான ஸௌபத்திரத்தில் இறங்கி
நீராட,அதிலிருந்த பெரியமுதலை அருச்சுனனைப் பற்றிக் கொண்டது; அவன்
அதனைவிடாமல் தனதுவலிமையினால் இழுத்துக் கரையிற் சேர்த்தவளவில்,
அம்முதலை,திவ்வியசௌந்தரியமுடைய ஒரு தேவமாதாக மாறிற்று; அதுகண்டு
வியந்தஅருச்சுனன் ‘நீ யார்? உன் வரலாறு என்ன?’ என்றுவினாவ, அவள்
கூறுவாள்:-குபேரனுக்குப் பிரியமானவளான வர்க்கையென்னும் அப்சரப் பெண்
யான்.ஸௌரபேயீ, ஸமீசீ, புத்புதா, லதா என்ற எனது தோழியர் நால்வருடன்
யான்செல்லுகையில் மிக்க அழகுள்ள ஒரு முனிவன் பெருந்தவஞ்செய்தல் கண்டு
அத்தவத்துக்கு இடையூறு செய்யக் கருதி. நாங்களைவரும் ஆடல் பாடல் முதலிய
விநோதங்களால் அவன் மனத்தைக் கலக்கத்தொடங்கியபோது, நிலைகலங்காத
அவன் எங்களை முதலைக ளாகும்படி சபித்தான். உடனே நாங்கள் அவனையே
சரணமடைந்து எங்கள்பிழையைப் பொறுத்தருளுமாறு பிரார்த்திக்க, ‘நூறுவருஷம்
கழிந்தவளவில் உங்களை ஓர் உத்தமபுருஷன் நீரினின்று கரையேற்றுவன்:
அப்பொழுது உங்கட்கு இச்சாபவடிவம் ஒழியும்’ என்று சாபவிடை கூறியருளினான்:
அதுமுதல் நாங்கள் முதலைகளாய் இந்தஐந்து தீர்த்தங்களிலும் வசிக்கிறோம்.
என்னைப்போலவே மற்றைநால்வரையும் நீ சாபந்தவிர்த்தருளுக’ என்றுகூற,
அருச்சுனன் அங்ஙனமே மற்றையதீர்த்தங்களிலும் இறங்கி அம்முதலைகளையும்
இழுத்து வெளியேவிட, அவையும் தேவமாதர்களாய்ச் சென்றன. பின்பு அனைவரும்
அச்சமின்றி அத்தீர்த்தங்களில் இறங்கி நீராடலாயினர் என்றவரலாற்றின் விவரத்தை
முதனூலால் அறிக. இந்தவரலாற்றுவிஷயம் பாலபாரதத்திற் குறிக்கப்பட்டிலது.
தவவேள்விகள்செய்வார்க்குப் பெரும்பாலும் இடையூறுசெய்விப்பவன்
இந்திரனாதலால், அவன் கட்டளையால் அவர்கள் அம்முனிவனது தவத்துக்கு
இடையூறுசெய்கையிற்சாபம்நேர்ந்த தென்றுகொண்டு, ‘இந்திரன்வெஞ் சாபம்’
எனப்பட்ட தென்க. அன்றி,இந்திரனென்பது தலைவனென்றபொருளில்வருதலால்,
இங்கு முநீந்திரன் அதாவதுமுனிவர்தலைவன் என்றுகொள்ளுதல் பொருந்தும்.

     சந்திரனுக்கும் இராகுகேதுக்களாகிய பாம்புகளுக்கும்பகைமை யுள்ளதனால்,
அப்படிப்பட்ட பகைமை இங்கு இல்லையென்பது தோன்ற, ‘திங்களுடன் அரவு
உறவுசெய்யும் வேணி‘ என்றார். கொந்து=கொத்து:மெலித்தல். கோகர்ணம் –
துளுவநாட்டிலுள்ள சிவதலம். இராவணன் தவஞ்செய்து தனது இலங்கை அழியா
திருத்தற்பொருட்டு அங்குத் தாபித்துப் பூசித்தற்காகப் பெற்றுச் சென்றசிவலிங்கம்,
விநாயகமூர்த்தியைக்கொண்டு தேவர்கள்செய்த சூழ்ச்சியால் இடையில் தங்கி,
இராவணன் இருபதுகைகளாலும் பற்றியிழுக்கவும் பசுவின்காதுபோலக் குழைந்து
காட்டியதால், இது கோகர்ணமெனப்படும்; கோகர்ணம் – பசுவின் காது

ஆகன்னம் உறச் செம் பொன் வரை வில் வாங்கி, அவுணர்
புரம் கட்டழித்தோன் அடியில் வீழ்ந்து,
கோகன்ன வளம் பதியில் தன் பின் வந்த குல முனிவர்தமை
இருத்தி, கோட்டுக் கோட்டு
நாகு அன்னப் பெடையுடனே ஆடும் கஞ்ச நறை வாவி வண்
துவரை நண்ணி, ஆங்கண்,
பாகு அன்ன மொழிக் கனிவாய் முத்த மூரல் பாவை நலம் பெற
முக் கோல் பகவன் ஆனான்.-அருச்சுனன் துவாரகைசார்ந்து சந்நியாசிவேஷங் கொள்ளல்.

ஆகன்னம் உற – காதளவும்பொருந்த, செம் பொன் வரை வில்
வாங்கி-சிவந்த பொன்மயமான மேருமலையாகிய வில்லை வளைத்து
(ஆதிசேஷனாகிய நாணியை இழுத்து விஷ்ணுவாகிய அம்பைத் தொடுத்து),
அவுணர்புரம் கட்டு அழித்தோன் – அசுரர்கள்வசித்த திரிபுரத்தை முற்றும்
அழித்தவனான சிவபிரானது. அடியில் – திருவடிகளில், வீழ்ந்து – விழுந்து
[சாஷ்டாங்கமாகநமஸ்கரித்து], (அருச்சுனன்), கோகன்னம் வளம் பதியில் –
வளப்பமுடைய அந்தக் கோகர்ணமென்ற திருப்பதியிலே, தன் பின் வந்த குலம்
முனிவர் தமை இருத்தி – தன்னைத்தொடர்ந்துவந்த சிறந்தமுனிவர்களை
இருக்கச்செய்து,- கோடு- நீர்க்கரைகளிலுள்ள, கோடு நாகு – சங்கின்
பேடைகள், அன்னம் பெடையுடனே ஆடும்-அன்னப் பேடைகளுடனே
விளையாடப்பெற்ற, கஞ்சம் நறை வாவி – தாமரை மலர்களின்
நறுமணத்தையுடைய தடாகங்கள் பொருந்திய, வள்துவரை – வளப்பமுள்ள
துவாரகாபுரியை, நண்ணி – சார்ந்து, ஆங்கண்- அவ்விடத்தில், பாகு அன்ன
மொழிகனி வாய் முத்தம் மூரல் பாவை நலம் பெற – கருப்பஞ்சாற்றின்
பாகைப்போன்ற[இனிய] சொற்களையும் கொவ்வைப்பழம் போலச் சிவந்த வாயை
போலஅழகியவளான சுபத்திரையினது இன்பத்தைப் பெற, (விரும்பி
அதைக்குறித்து),முக்கோல் பகவன் ஆனான் – திரி தண்டத்தையுடைய
சன்னியாசியாயினான்; (எ-று.)

     கோகர்ணத்துச் சிவபிரான் திருநாமம் – மகாபலேசுவரர். அம்பிகை –
பெரியநாயகியம்மை. ஆகன்னம்=ஆகர்ணம்:வடசொற்றொடர் விகாரப் பட்டது.
நீர்வாழ்வனவான சங்கும் அன்னமும் உடன் விளையாடு மென்க. கஞ்ஜம்-வடசொல்;
நீரில்தோன்றுவது; (கம்-நீர்.) கோகர்ணத்திலிருந்து பிரபாசகட்டத்தை அடைந்து
அருச்சுனன் உடன்வந்தோரை அங்குவிட்டு, சுபத்திரையைப் பெறத் துறவிவேடம்
பூண்டு க்ருஷ்ணபகவானை நினைக்க, அப்பிரான்வந்து இவ்வருச்சுனனை
ரைவதககிரியிலிருத்தித் துவாரகை சேர்ந்தா னென்று பாலபாரதத்தி லுள்ளது

வெங் கதிர் போய்க் குட திசையில் வீழ்ந்த பின்னர், வீழாமல்
மாலையின்வாய் மீண்டும் அந்தச்
செங் கதிர் வந்து எழுந்தது என, மீது போர்த்த செய்ய
ஆடையும் தானும், தீர்த்த வாரிச்
சங்கு அதிரும் மணி வீதி நகரி சூழ்ந்த தடஞ் சாரல்
இரைவதக சயிலம் நண்ணி,
பொங்கு அதிர் பைம் புயல் எழுந்து பொழியும் கங்குல் போய்,
ஒரு நீள் வட தருவின் பொதும்பர் சேர்ந்தான்.-அருச்சுனன் ரைவதககிரியில் ஓர் ஆலமரத்தினடியிற்
சேர்தல்.

 வெம் கதிர் உஷ்ணமான கிரணங்களையுடையவனாகியசூரியன்,
போய்-,குடதிசையில் வீழ்ந்த பின்னர் – மேற்குத் திக்கில் விழுந்து மறைந்தபின்பு
[சூரியாஸ்தமனமானபின்பு]-அந்த செங் கதிர்- சிவந்தகிரணங்களையுடையனான
அச்சூரியன் தானே, வீழாமல் மாலையின்வாய் மீண்டும் வந்து எழுந்தது என-
அஸ்தமித்தொழியாமல் மாலைக்காலத்தில் திரும்பவும் வந்து உதித்தது போல, மீது
போர்த்த செய்ய ஆடைஉம் தான்உம்-உடம்பின்மேல்
தரித்தசெந்நிறமானகாஷாயவஸ்திரமும் தானுமாக, (அருச்சுனன்), தீர்த்தம் வாரி
சங்குஅதிரும் அணி வீதி நகரி சூழ்ந்த தட சாரல் இரைவதக சைலம் நண்ணி –
கடல்நீரிலுள்ள சங்குகள் ஒலிக்கும் அழகியவீதிகளையுடைய துவாரகாபுரியைச்
சார்ந்தவிசாலமான சாரல்களையுடைய ரைவதகமென்னும்மலையை அடைந்து,
பொங்கு அதிர் பைம் புயல் எழுந்து பொழியும் கங்குல் போய் – பொலிவு பெற்று
ஆரவாரிக்கிற காளமேகங்கள் மேலெழுந்து மழைபொழிகின்ற இராக்காலத்திலே
போய், ஒரு நீள் வடதருவின் பொதும்பர் சேர்ந்தான்- உணர்ந்ததோர்
ஆலமரத்தினது செறிவை அடைந்தான்;

     செந்நிறவாடைபோர்த்துமேற்றிசையில் தோன்றும் அருச்சுனனுக்கு
மேற்றிசையிலுதித்த சூரியனை உவமைகூறினார். செய்ய ஆடை – காவி
தோய்ந்தஉடை. ‘தீர்த்தவாரிச்சங்கதிருமணிவீதி’ என்ற தொடர் – வெற்றிச்சங்கு
மங்கலச்சங்கு கொடைச்சங்கு என்ற சங்கவாத்தியங்கள் அந்நகரத்து
வீதிகளில் எங்கும் எப்பொழுதும் முழங்குதலையும், அந்நகரம்
கடல்சூழ்ந்ததாதலாற்கடல்வாழுயிரான சங்குகள் தவழ்ந்து சென்று
அந்நகர்வீதிகளிலுலாவுதலையுங் குறிக்கும்

இந்திரற்குத் திருமதலை மன்றல் எண்ணி, யாதவர்கோன் வளம்
பதியில் எய்தினான்’ என்று,
அந்தரத்தை நீலத்தால் விதானம் ஆக்கி, அண்டம் உற இடி
முரசம் ஆர்ப்ப ஆர்ப்ப,
வந்து இரட்டை வரி சிலையால் பஞ்ச வண்ண மகர தோரணம்
நாட்டி, வயங்கும் மின்னால்
முந்துறத் தீபமும் எடுத்து, தாரை முத்தால், முழுப் பொரி சிந்தின,
கால முகில்கள் அம்மா.--இரண்டுகவிகள் – மழைக்காலவருணனை.

காலம்முகில்கள்-கார்காலத்து மேகங்களானவை,- இந்திரற்கு
திருமதலைமன்றல் எண்ணி யாதவர் கோன் வளம் பதியில் எய்யினான்என்று-
(தங்களைவாகனமாகக்கொண்டு செலுத்துந் தலைவனான)
இந்திரனுடையசிறந்தகுமாரனானஅருச்சுனன்விவாகத்தைக் குறித்து
யதுகுலத்தார்க்குத்தலைவனானகண்ணபிரானுடையவளப்பம்பொருந்தியநகரத்திற்கு
வந்தானென்னு அறிந்து, (அவ்விவாகத்தின் பொருட்டு), அந்தரத்தை நீலத்தால்
விதானம் ஆக்கி – ஆகாயத்தை நீலநிறமுள்ள பட்டினால் மேற்கட்டி யமைத்து
அலங்கரித்து, இடி முரசம் அண்டம்உற ஆர்ப்ப ஆர்ப்ப – இடிகளாகிய
பேரிகைவாத்தியங்கள் ஆகாயத்தையளாவ மிகுதியாக ஒலிக்க, வந்து-, இரட்டை
வரி சிலையால் பஞ்சவண்ணம் மகரதோரணம் நாட்டி – இரட்டையாகவிளங்குகிற
நீண்ட இந்திரவில்லின்தோற்றத்தால் ஐவகை நிறங்களையுடையமகர
தோரணங்களைக்கட்டி நிறுத்தி, வயங்கும் மின்னால் முந்துற தீபம்உம் எடுத்து –
விளங்குகிற மின்னல்களினால் முற்பட விளக்குகளையும் ஏந்தி, தாரை
முத்தால்முழுபொரி சிந்தின – தாரையாகச்சொரியும் மழைத்துளிகளினால்
முழுப்பொரிகளையுஞ்சிந்தின; அம்மா – ஆச்சரியம்! (எ-று.)

     நீலநிறமான மேகங்கள் வானத்தில் இடைவிடாதுபரவி அவ்விடத்தை
மறைத்ததையே ‘நீலத்தால் விதானமாக்கி’ என்றார். பஞ்சவர்ணம் – வெண்மை,
கருமை,செம்மை, பொன்மை, பசுமை என்பன. மகரதோரணம் –
சுறாமீன்வடிவமையத்தூக்குந்தோரணம். இந்திரவில்லில் பலவகைநிறங்களும்
இருத்தல்பற்றி, ‘சிலையாற் பஞ்சவண்ணமகர தோரணம் நாட்டி’ என்றார்.
தீபமேந்துதல்- அஷ்டமங்கலத்துள் ஒன்று. நெற்பொரி சிந்துதலும், மணத்துக்கு
உரியது. முழுப்பொரி- முரிவில்லாதபொரி. உருவகத்தை யங்கமாகக்
கொண்டுவந்த தற்குறிப்பேற்றவணி. 

யாம் கருதி வரும் கருமம் முடிப்பான் எண்ணில், இராமன் முதல்
யது குலத்தோர் இசையார்’ என்று,
பாங்குடனே தனக்கு உயிர் ஆம் துளப மௌலிப் பரந்தாமன்தனை
நினைந்தான், பார்த்தன், ஆக,
பூங் கமல மலர் ஓடை அனையான், தானும், பொன் நெடுந்
தேர்ப் பாகனுமே ஆகப் போந்து,
நீங்கு அரிய நண்பினனாய், நெடு நாள் நீங்கு நேயத்தோன்
நினைவின்வழி நேர்பட்டானே.-அருச்சுனன்  கண்ணனை நினைக்க, அப்பெருமான் அங்குத்
தோன்றுதல்.

எண்ணில் – ஆலோசிக்குமிடத்து, யாம் கருதி வரும் கருமம்
முடிப்பான் – நாம் நினைத்துவந்த காரியத்தை நிறைவேற்றுதற்கு, இராமன் முதல்
யதுகுலத்தோர் இசையார் – பலராமன் முதலிய யதுவமிசத்தரசர்கள்
உடன்படார்’, என்று- என்று ஆலோசித்து, பார்த்தன் – அருச்சுனன்,
பாங்குடனே -உரிமையுடனே, தனக்கு உயிர் ஆம் துளபம் மௌலி பரந்தாமன்
தனை நினைந்தான்ஆக – தனக்கு உயிர்போன்றவனான
திருத்துழாய்மாலையைத்தரித்த முடியையுடையஸ்ரீகிருஷ்ணனை நினைத்தானாக, பூ
கமலம் மலர் ஓடை  அனையான்-பொலிவுள்ளதாமரைமலரோடையைப்
போன்றவனான அப்பெருமான், தான்உம் பொன் நெடுந் தேர்பாகன் உம் ஏ ஆக
போந்து – தானும்பொன்மயமானபெரிய (தனது) தேரைச்செலுத்துகிற சாரதியுமேயாக
(ஏகாந்தமாய்ப்) புறப்பட்டு, நீங்கு அரிய நண்பினன் ஆய்நெடு நாள் நீங்கும்
நேயத்தோன் நினைவின்வழிநேர்பட்டான் – பிரிதற்கு அரியநண்பனாய்
பலநாளாக (த் தன்னை)ப்பிரிந்திருந்த அன்புடையோனான அருச்சுனன்
நினைத்தபடியே அவனெதிரில் வந்து தோன்றினான்; (எ-று.)

     பரந்தாமன் – எல்லா ஒளிகளிலும் மேம்பட்டஒளியையுடையவ னென்றும்,
எல்லாஇடங்களிலும் மேலான இடத்தை யுடையவனென்றும் பொருள்படும்.
திருக்கண்கள் திருக்கைகள் திருவடிகள் திருநாபி முதலிய பலஉறுப்புகள்
தாமரைமலர்போலிருக்கப் பசுஞ்சாமத் திருமேனிநிறம்தாமரையிலை போலுதலால்,
‘பூங்கமல மலரோடையானையான்’ என்றார். இடருற்றுத்தன்னையடைந்தோர்க்கு
அவ்விடர் தவிர்த்துக் குளிர்ந்தகருணைசெய்பவ னென்பது, ‘ஓடையனையான்’
என்றதனால் விளங்கும்.

யதி ஆகி அவண் இருந்த தோழன்தன்னை யது குல நாயகன்
பரிவோடு இறைஞ்ச, அன்பால்
அதியான நெடுஞ் சுருதி ஆசி கூறி, ஆகம் உறத் தழீஇ,
மகிழ்வுற்று, ஆல நீழல்
மதி ஆர் செஞ் சடை முடியோன் என்ன வைகி, வந்தவாறு
உரைப்ப, நெடுமாலும் கேட்டு,
துதியாடி, ‘காலையிலே வருதும்’ என்று, சொற்று, இமைப்பில்
மீளவும் போய், துவரை சேர்ந்தான்.-கண்ணன் அருச்சுனனை வந்த காரியம் வினவித்
துவாரகை சேர்தல்.

யதி ஆகி அவண் இருந்த தோழன் தன்னை – சன்னியாசியாய்
அவ்விடத்திலேயிருந்த நண்பனான அருச்சுனனை, யது குலம் நாயகன் –
யதுகுலத்துக்குத் தலைவனான கண்ணன், பரிவோடு இறைஞ்ச – அன்போடு
வணங்க,(அவ்வருச்சுனன்), அன்பால் – அன்போடு, அதி ஆன நெடுஞ் சுருதி
ஆசி கூறி -மிகுதியான பெரிய வேதவாக்கியங்களைக்கொண்டு (கண்ணனுக்கு)
ஆசீர்வாதஞ்செய்து, ஆகம்உற தழீஇ மகிழ்உற்று – (தன்மார்பிலே அவன்) மார்பு
பொருந்தத்தழுவி மகிழ்ச்சியுற்று, ஆலம் நீழல் மதி ஆர் செம் சடை முடியோன்
என்ன வைகி -ஆலமரத்தினது நிழலிலே சந்திரன் பொருந்திய சிவந்த
சடையையுடையனானசிவபிரான்போல் வீற்றிருந்து, வந்தஆறு உரைப்ப – (தான்)
வந்தகாரியத்தைச் சொல்ல, நெடுமால்உம் – மகாவிஷ்ணுவாகிய கண்ணபிரானும்,
கேட்டு -(அதனைக்) கேட்டு, துதி ஆடி – கொண்டாடி, காலையில் வருதும்
என்றுசொற்று – ‘மறுநாளுதயகாலத்தில் வருவோம்’ என்று சொல்லி, இமைப்பில்
மீளஉம் போய் துவரைசேர்ந்தான் – இமைப்பொழுதிலே திரும்பவும் சென்று
துவாரகையை யடைந்தான்;

     தக்ஷிணாமூர்த்திவடிவமான சிவபெருமான் கைலாசகிரியிற் கல்லாலமரத்தின்
கீழ்வீற்றிருத்தலை நூல்கள் கூறும்.

ஆதவன் வந்து உதிப்பதன் முன் மற்றை நாளில் அணி நகர்
வாழ் சனம் அனைத்தும் அந்தக் குன்றில்
மாதவனது ஏவலினால், மழைக் காலத்து, வாசவற்கு விழா
அயர்வான் வந்தகாலை,
யாதவரில் போசரில் மற்று உள்ள வேந்தர் யாவரும் சூழ்வர,
நறுந் தார் இராமன் வந்தான்;
சூது அடர் பச்சிளங் கொங்கை, பச்சை மேனி, சுபத்திரையும்
தோழியர்கள் சூழ, வந்தாள்.-மறுநாள்விடியுமுன் அம்மலையில் இந்திரவிழவுக்காகப் பலவேந்தர்
சூழப் பலராமன் வருதலும் தோழியருடன்
சுபத்திரை வருதலும்.

ஆதவன் வந்து உதிப்பதன் முன் – சூரியன்வந்துதோன்றுவதற்கு
முன்னம் [பொழுதுவிடியுமுன்னமே], மற்றை நாளில்-, அணி நகர் வாழ்
சனம் அனைத்துஉம் – அழகிய துவாரகையில் வசிக்கின்ற சனங்களெல்லாம், அந்த
குன்றில் – அந்த இரைவதகமலையிலே, மாதவனது ஏவலினால் –
க்ருஷ்ணனுடையகட்டளையினாலே, மழைக்காலத்து வாசவற்கு விழா அயர்வான் –
மழைக்காலத்திலே செய்யப்படுகிற இந்திரபூசையைச் செய்யும்பொருட்டு, வந்தகாலை
– வந்தபோது,- யாதவரில் – யதுகுலத்தாரிலும், போசரில் – போசகுலத்தாரிலும்,
மற்றுஉள்ள வேந்தர் – மற்றுமுள்ளவேந்தரிலுமுள்ள, யாவர்உம் – எல்லோரும்,
சூழ்வர – சூழ்ந்திருக்க, நறுந்தார் இராமன் – நறுமணமுள்ள மாலையையணிந்த
பலராமன், வந்தான்-: சூது அடர் பசு இளங் கொங்கை பச்சை மேனி சுபத்திரைஉம்
– சூதாடுகருவியை வெல்லுகின்ற பசிய இளைய தனங்களையும் பசிய
உடலையுமுடைய சுபத்திரையும், தோழியர்கள் சூழ – தோழிமார்கள் சூழ, வந்தாள்
– (அங்கே) வந்தாள்; (எ -று.)

     அருச்சுனன் சுபத்திரையை மணத்தல் எளிதில் நிகழ்வதற்கு ஸ்ரீகிருஷ்ணன்
இந்திரவிழா என்ற ஒருவியாஜம்வைத்து இங்ஙன் யாவரையும் கூடுமாறு
ஏவினனென்க. 

முக்கோலும், கமண்டலமும், செங்கல் தூசும், முந்நூலும்,
சிகையுமாய் முதிர்ந்து தோன்றும்
அக் கோலம் அனைவரும் கைதொழுது, நோக்கி, அருள் நலம்
பெற்று அகன்றதன் பின், அனைத்து உலோகத்து
எக் கோல யோனிகட்கும் உயிராய், தோற்றம் ஈர்-ஐந்தாய்,
பாற்கடலினிடையே வைகும்
மைக் கோல முகில் வண்ணன்தானும் எய்தி, மன வணக்கம்
புரிவோனை வணங்கினானே.-அனைவரும் அருச்சுனசன்னியாசியை வணங்கின பின்பு கண்ணன்
வந்து வணங்குதல்.

முக்கோல்உம் – திரிதண்டமும், கமண்டலம்உம் – ஜலபாத்திரமும்,
செங்கல் தூசுஉம் – காவிவஸ்திரமும், முந்நூல்உம் – பூணூலும், சிகைஉம் –
குடுமியும்,(ஆகிய வைஷ்ணவசன்னியாசிகளுக்கு உரிய ஐந்து அடையாளங்களும்),
ஆய் -பொருந்தி, முதிர்ந்து தோன்றும் – பூர்ணமாய் விளங்குகிற, அ கோலம் –
அந்தத்துறவிவடிவத்தை, அனைவர்உம் -(கீழ்ச்சொன்ன பலராமன் முதலியோர்)
எல்லோரும்,நோக்கி – பார்த்து [தரிசித்து], கைதொழுது – கைகூப்பிநமஸ்கரித்து,
அருள் நலம்பெற்று – (அச்சன்னியாசியினுடைய) கருணையாகிய நல்ல
அநுக்கிரகத்தைப் பெற்று,அகன்ற தன் பின் – நீங்கின பின்பு, அனைத்து
லோகத்து – சகலலோகங்களிலுமுள்ள,எக் கோலம் யோனிகட்கும்உம் –
பலவகைவடிவமுள்ள எல்லாப்பிறப்புக்களிலும்வாழ்கிற உயிர்களனைத்துக்கும்,
உயிர் ஆய் – உயிராகி, தோற்றம் ஈர்ஐந்து ஆய் -பத்துவகைப்பிறப்புக்கள்
கொண்டு, பாற்கடலின் இடையே வைகும் – திருப்பாற்கடலின் நடுவிலே
(வியூகமூர்த்தியாய்) எழுந்தருளியிருக்கிற, மை கோலம் முகில்வண்ணன்
தான்உம் -கருநிறமான அழகிய மேகம்போன்ற திருமேனி நிறத்தையுடையவனான
ஸ்ரீகிருஷ்ணனும், எய்தி – அருகில் வந்து, மனவணக்கம் புரிவோனை
வணங்கினான் -(தன்னை) மனத்தால்வணங்குதல்செய்பவபனான அருச்சுனனை
(த்தான்காயத்தால் )வணங்கினான்; (எ-று.)

     முக்கோலும் கமண்டலமும் செங்கல்தூசும் முந்நூலும்சிகையும் என்ற இவை
‘துறவிகள் பஞ்சமுத்திரை’ எனப்படும்; அங்கிராவென்னும் முனிவர் கூறின
யதிலக்ஷணம் இத்தன்மைத்தே: வட மொழி மகாபாரதத்திலும்இங்ஙனமே
யதிலக்ஷணம் கூறப்பட்டுள்ளது. ‘தோற்றமீரைந்து’ என்றது – மத்ஸயம்,கூர்மம்,
வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், தசரதராமன், பலராமன்,கிருஷ்ணன்,
கல்கி என்ற தசாவதாரங்களை யுணர்த்தும். கர்மவசத்தால்ஜீவாத்மாக்களுக்கு நேர்கிற
ஜந்மங்கள் போலன்றி இவ்வவதாரங்கள் பரமாத்மாவினால்துஷ்ட
நிக்கிரகசிஷ்டபரிபாலனத்தின் பொருட்டு இச்சாமாத்திரத்தாற் கொள்ளப்படுகின்றன
வென்பதனை யறிக. திருமாலுக்கு மற்றும் பற்பல அவதாரங்கள் நூல்களிற்
கூறப்படினும் இப்பத்துமே முக்கியவவதாரங்களாமென உணர்க. திருப்பாற்கடலி
லெழுந்தருளியிருக்கிற வியூகமூர்த்திகள் – வாசுதேவன், சங்கர்ஷணன்,ப்ரத்யும்நன்,
அநிருத்தன் என நான்காம்.

துன்னி இருவரும் ஒருப்பட்டு இருந்தகாலை, சுபத்திரை
அத் தடங் குன்றின் சூழல் ஓர் சார்,
மின்னிய பைம் புயலின் எழில் இரேகை போல வெளிப் படலும்,
மெய் புளகம் மேன்மேல் ஏறி,
கன்னி இளந் தளிர்க் கடம்பு மலர்ந்தது என்னக் கண்ட விழி
இமையாத காட்சி காணா,
மன்னிய மா தவத்தோனை மந்த மூரல் மாதவன்
மைத்துனமையினால் மகிழ்ச்சி கூர்ந்தே,-இதுவும், அடுத்த கவியும் – குளகம்; கண்ணன் அருச்சுனனுக்குச்
சூழ்ச்சிசொல்லிச் சுபத்திரையை அம்முனிவனுக்குப் பணிவிடை புரியுமாறு
பணித்தல்.

இருவர்உம் – (அருச்சுனன் கிருஷ்ணன் என்ற) இரண்டுபேரும்,
துன்னி- சந்தித்து, ஒருப்பட்டு – (மனம்) ஒருமைப்பட்டு, இருந்தகாலை –
(ஏகாந்தத்தில்)இருந்தபொழுது,- சுபத்திரை-, அ தட குன்றின் சூழல் ஓர்சார் –
பெரிய அந்த ரைவதகமலையின் சாரலில் ஓரிடத்தில், பைம் புயலின் மின்னிய
எழில் இரேகைபோலவெளிப்படலும் – காளமேகத்தில் மின்னிய (மின்னலின்)
அழகியதோற்றம்போலத்தோன்றியவளவில், (அருச்சுனன்), மெய் மேல்மேல்
புளகம்ஏறி- உடம்பு மேல்மேல் மிகுதியாக மயிர்ச் சிலிர்ப்புகொள்ளப்பெற்று,
கன்னி இளந் தனிகடம்பு மலர்ந்தது என்ன – மிகவும் இளமையான ஒருகடப்பமரம்
மலர்ந்தாற்போல,கண்ட விழி இமையாத – (அவளைப்) பார்த்த கண்கள்
இமையாதபடி யிருக்கிற, காட்சி- தோற்றத்தை, காணா- கண்டு,- மந்தம் மூரல்
மாதவன் – புன்சிரிப்பையுடையனானகண்ணபிரான், மைத்துனமையினால் – (தனக்கு
அவன்) மைத்துனனாகும்முறைமையினால், மகிழ்ச்சிகூர்ந்து – (அவன்விஷயத்தில்)
மகிழ்ச்சி மிகுந்து, மன்னியமா தவத்தோனை – பொருந்திய சிறந்த
தவவேடத்தையுடையனானஅவ்வருச்சுனனைநோக்கி,- (எ-று.)- ‘கூறி’ (57)
எனத்தொடரும்.

     ஸு பத்ரா – மங்களகரமான நல் லிலக்கணமமைந்தவ ளென்க. மைத்துனமை –
கண்ணனுக்கு அருச்சுனன் அத்தைமகனாகும் உரிமை; அருச்சுனன் கண்ணனது
தந்தையான வசுதேவனுக்கு உடன்பிறந்தவளான குந்தியின் குமாரனாதல் காண்க.
அருச்சுனன் கொண்டுள்ள கபடசன்னியாசிவேஷத்தின்நிலைமையைத்
திருவுள்ளம்பற்றிக் கண்ணபிரான் புன்முறுவல் கொண்டனன்.

அடிகள் திருவுளத்து எண்ணம் எம்மனோர்கள் அறியின்
இசையலர்; பலர் இங்கு அறிவுறாமல்,
கடி அயர்வுற்று உம் பதி கொண்டு அடைக!’ என்றும், ‘காவலர்க்குக்
கடன்’ என்றும், கசியக் கூறி,
கொடி இடை வெங் களப முலைக் கன்னி மானைக் கூய், ‘அணங்கே!
மெய்ம்மை உறக் கொண்ட கோலப்
படிவ முனிக்கு இரு பருவம் பணித்த ஏவல் பரிவுடன் நீ புரி’
என்று பணித்திட்டானே..

அடிகள் திருஉளத்து எண்ணம் – சுவாமிகளுடைய திருவுள்ளக்
கருத்தை, எம்மனோர்கள் அறியின் – எம்மவர்கள் அறிந்தால், பலர் இசையலர் –
(அதற்குப்) பலர் இணங்கமாட்டார்: (ஆதலால்), இங்கு – இவ்விடத்தில், அறிவு
உறாமல்(அவர்கள்) அறியாதபடி [ரகசியமாக], கடி அயர்வுஉற்று – (சுபத்திரையை)
விவாகஞ்செய்துகொண்டு, உம் பதி கொண்டு அடைக – உமது நகரத்துக்கு
(அவளை)உடன் அழைத்துக்கொண்டு சென்று சேர்வீராக’, என்றும்-, காவலர்க்கு
கடன்என்றும்- ‘(இங்ஙனம் பலருமறியாதபடி ஒரு கன்னிகையை மணந்து
உடன்கொண்டு செல்லுதல்)அரசர்கட்கு முறைமையே’ என்றும், கசியகூறி –
(அவ்வருச்சுனது மனம்) மகிழும்படி(ஏகாந்தத்திற்) சொல்லி,- கொடி இடைவெம்
களபம்முலைகன்னிமானைகூய் -பூங்கொடிபோன்ற [நுண்ணிய] இடையையும்
விரும்பப்படுங் கலவைச்சந்தனமணிந்ததனங்களையுமுடைய இளமையான
மான்போன்ற சுபத்திரையையழைத்து, ‘அணங்கே – பெண்ணே! மெய்ம்மை உற
கொண்ட கோலம் படிவம்முனிக்கு – உண்மையாகக்கொண்ட அழகிய
சன்னியாசிவேஷத்தையுடையஇம்முனிவனுக்கு, நீ-, இரு பருவம் – நான்கு
மாசகாலம், பரிவுடன் -அன்போடு,பணித்த ஏவல் புரி – நியமித்த குற்றேவல்களைச்
செய்வாய்,’ என்றுபணித்திட்டான்-என்று கட்டளையிட்டான்; (எ-று.)

     சுபத்திரையை துரியோதனனுக்கு மணஞ்செய்விக்கவேண்டு மென்பது
மூத்தவனான பலராமனது உத்தேச மாதலால், ‘அடிகள் திருவுளத்து எண்ணம்
எம்மனோர்கள் அறியின் இசையலர்பலர்’ என்றான். கண்ணனுக்கு
அருச்சுனன்பக்கலுள்ள சினேகவாற் சலியம் விளங்க ‘கசியக்கூறி ‘ என்றார்.
ஒருநாளுக்கு மேல் ஓர் ஊரில் தங்காமல்கிராமைகராத்திரமாய்த்திரியும்
முறைமையையுடையரான சன்னியாசிகள் மழைக்காலமாகிய நான்கு மாசங்களில்
மாத்திரம் ஒரேயிடத்தில் வசித்திருக்கலா மென்பது, நூற்கொள்கை; அந்தச்
சாதுர்மாஸ்யஸங்கல்பவிதிப்படி இத்துறவி இப்பொழுது இங்கு நான்குமாசகாலம்
இருப்பா னென்றுகொண்டு, ‘இருபருவம்’ என்றான். பருவம், இருது என்ன –
ஒருபொருளன.  

உள் அடங்கிய காம வெங் கனல் புறத்து ஓடிக்
கொள்ளை கொண்டு உடல் மறைத்தென, கூறையும் தானும்
மெள்ள வந்து, தன் கடி மனை மேவிய வேடக்
கள்ள வஞ்சனை அறிந்திலள், கற்புடைக் கன்னி.-சுபத்திரை அருச்சுனனுடைய கள்ளவேடத்தை
யறியாமை.   

உள் அடங்கிய மனத்திற்குள் அடங்கியிருக்கிற, காமம் வெம் கனல் –
காமமாகிய கொடியநெருப்பு, புறத்துஓடி-  வெளியேசென்று, கொள்ளைகொண்டு –
கவர்ந்துகொண்டு, உடல் மறைத்துஎன – உடலைமறைத்தாற்போல, கூறைஉம் –
காவிவஸ்திரமும், தான்உம் – தானுமாக, மெள்ளவந்து-, தன் கடி மனை மேவிய –
தன்னுடைய சிறப்புள்ள மனையிலேபொருந்திய, கள்ளம்வேடம்வஞ்சனை –
பொய்யாகச் சன்னியாசிவேடம்பூண்டுள்ள வஞ்சகத்தையுடையனான அருச்சுனனை,
கற்புஉடை கன்னி – கற்பினையுடைய கன்னிகையான சுபத்திரை, அறிந்திலள் –
அறித்தாளில்லை; (எ-று.)

     சன்னியாசிவேடம்பூண்டுவந்துள்ளவன் அருச்சுனனே யென்பது
சுபத்திரையாலறியப்படவில்லையென்பதாம். காஷாயவஸ்திரந் தரித்திருப்பதை,
உள்ளேயிருக்கிற காமக்கனல் புறத்திலும்வந்து அருச்சுனனைக்கொள்ளை
கொண்டதோஎன்னுமாறுள்ளது எனத் தன்மைத்தற்குறிப்பேற்றவணிபடக் கூறினார்.
கனலும் காவியாடையும் செந்நிறமாதல், இங்கன் வருணித்தற்கு ஒருகாரணம்.
சுபத்திரையைப் பிறரறியாமல்மணப்பதற்கே இந்தவேடம்பூண்டிருத்தலால்,
‘கள்ளவேடவஞ்சன்’ என்றது.

     இதுமுதல் இருபத்தொரு கவிகள் – பெரும்பாலும் முதற்சீரும் ஐந்தாஞ்சீரும்
மாச்சீர்களும், மற்றை மூன்றும்விளச்சீர்களுமாகிய கலிநிலைத்துறைகள்

ஈங்கு வந்தது என் தவப் பயன்’ என்று கொண்டு எண்ணி,
ஆங்கு உவந்து ஒரு மனையிடை அருந் தவன் துயில,
தூங்கு கண்ணினள் சுபத்திரை, தோழியர் பலரும்
பாங்கு வைக, மற்று ஒரு மனை புகுந்து கண்படுத்தாள்.-இரவில் அருச்சுனன்ஓரறையிற் படுக்க, மற்றோரறையிற்
சுபத்திரை தன்பாங்கியருடன் துயிலுதல்.

‘ஈங்கு – இங்கே, வந்தது- (சுபத்திரை) வந்தது, என்தவம் பயன்,-
‘என்றுகொண்டு எண்ணி – என்று நினைத்து, அருந்தவன் – அரிய
சன்னியாசிவேடம்பூண்ட அருச்சுனன், ஆங்கு – அங்கே, உவந்து – மகிழ்ந்து,
ஒருமனையிடை – ஓரறையிலே, துயில – நித்திரைசெய்வான்போலிருக்க,-
சுபத்திரை-,தூங்கு கண்ணினள் – நித்திரைக்குறிப்புத்தோன்றியகண்ணினளாக,
(உடனே), மற்றொருமனைபுகுந்து – வேறோரறையிலே சேர்ந்து, தோழியர்
பலரும்-, பாங்கு வைக -அருகே தங்கியிருக்க, கண்படுத்தாள் – துயில்பவளானாள்;
(எ-று.)-என்றுகொண்டுஎன்பதில், ‘கொண்டுஎன்பது அசைநிலை.

புடவி எங்கணும் புதைய, வான் பொழிதரு புனலால்,
அடவி ஆர் அழல் அவியவும், அவிந்திலது, ஐயோ!-
தடவி வாடை மெய் கொளுத்திட, தனஞ்சயற்கு அணங்கின்
விட விலோசனக் கடை தரு விரக வெங் கனலே.-இதுமுதல்மூன்றுகவிகள் – அருச்சுனனுடைய காம
தாபத்தைத் தெரிவிக்கும்.

வாடை – வாடைக்காற்று, மெய்-உடலை, தடவி-, தனஞ்சயற்கு –
அருச்சுனனுக்கு, கொளுத்திட – தாபத்தைமிகுவியாநிற்க, அணங்கின் –
தெய்வப்பெண்போன்ற சுபத்திரையின், விடம் விலோசனம்கடை – விடத்தின்
தன்மையைக்கொண்ட[வருத்துகின்ற] கடைக்கண்பார்வை, தரு – தந்த,
விரகம்வெம்கனல் – பிரிவுத்துயராலாகிய நெருப்பானது, புடவி எங்கண்உம்
புதைய -பூமிமுழுவதும்மறைந்திருக்கும்படி, வான் – மேகம், பொழிதரு – பொழிந்த,
புனலால் -நீரினால், அடவி – காட்டிலுள்ள, ஆர் அழல் – நிரம்பிய அக்கினி,
அவியஉம் -அவிந்திடாநிற்கவும், அவிந்திலது-: ஐயோ-!!(எ-று.)

     மழைக்காலமாதலால் பூமியெங்கணும் நீரில் அமிழ்ந்திடா நிற்கவே
அவிதற்கரியகாட்டுத்தீயும் அவியவும், அருச்சுனனுக்குச் சுபத்திரையின்
கடைக்கண்பார்வையால்தோன்றிய காமத்தீ அவிந்திலதே! அந்தோ!! என்று இரங்கிக்
கூறியவாறு. காட்டுத்தீயும் அவியுமாறு புனல் பொழிந்திடவும், (விரக) வெங்
கனலவியவில்லை யென்ற இது – காரணமிருக்கவும் காரியந்தோன்றாமையாகிய
சிறப்புநவிற்சியணி [விஸேஷோக்தி] யாகும். ஐயோ – இரக்குக்குறிப்பு.

மதன லீலையில் பழுது அற வழிபடும் பாவை
வதன வாள் மதி வந்து முன் நிற்கவும், மருண்டு, அச்
சதனம் மேவரும் தபோதனன்தனக்கு, வெம் மோக
விதன வல் இருள் விடிந்திலது, ஆர் இருள் விடிந்தும்.

ஆர் இருள்விடிந்துஉம் – (கழிதற்கு) அரியதாயிருந்த கங்குற் போது
புலர்ந்தும், மருண்டு – காமமயக்கத்தைக்கொண்டு அ சதனம் மேவரும் –
அந்தமனையிலே தங்கியிருக்கிற, தபோதனன் தனக்கு – சன்னியாசிவேடம்பூண்ட
அருச்சுனனுக்கு, மதன(ன்) லீலையில் பழுது அற வழிபடும் பாவை –
மன்மதலீலையிலே குற்றமற்ற வழிபாடும் செய்தற்கும் உரியளான
சித்திரப்பிரதிமைபோன்ற சுபத்திரையின், வதனம் வாள்மதி – முகமாகியஒளியுள்ள
[பதினாறு கலைகளும் நிரம்பிய] சந்திரன், வந்து-, முன்நிற்கஉம்-, வெம் மோகம்
விதனம் வல் இருள் – கொடிய காமமோகத்தினால் நேர்ந்த விதனமாகிய கொடிய
இருள், விடிந்திலுது – நீங்கிற்றில்லை; (எ -று.)

     மதிநிற்கவும்இருள்விடிந்திலது என்றது – முன்னையசெய்யுளிற் போலவே சிறப்புநவிற்சியணியாம். இதற்கு – வதனவாண்மதி, விதன வல்லிருள் என்ற உருவகவணிஅங்கமாய்வந்தது

அற்றை நாள் முதல் அநேக நாள், அகில் மணம் கமழும்
கற்றை வார் குழல் கன்னிகை வழிபடக் கருத்தால்,
‘இற்றை மா மதன் பூசலுக்கு என் செய்வோம்!’ என்று என்று,
ஒற்றை அன்றில்போல் மெய்ம் மெலிந்து, உள்ளமும், உடைந்தான்.

அற்றை நாள்முதல் – அன்றைத்தினமுதல், அனேகம் நாள் –
பலநாள்,அகில் மணம் கமழும் கற்றை வார் குழல் கன்னிகை – அகிலின் வாசனை
வீசுகின்றதொகுதியானநீண்டகூந்தலையுடைய கன்னிகையாகிய சுபத்திரை,
கருத்தால் -மனப்பூர்வமாக, வழிபட – (க்ருஷ்ணன்மொழிப்படியே) வழிபாடு
செய்யாநிற்கையில்,- ‘இற்றை மா மதன் பூசலுக்கு – இப்போது கொடிய மன்மதன்
விளைக்கின்ற போருக்கு, என் செய்வோம் – என்னசெய்யக்கடவோம்?’ என்று
என்று – என்றுசிந்தைகொண்டு, (அருச்சுனன்),- ஒற்றை அன்றில் போல் –
பேடையைப்பிரிந்திருக்கும் ஆணன்றில்போல, மெய் மெலிந்து – உடல்தளர்ச்சியுற்று,
உள்ளம் உம் உடைந்தான் -மனமும் வருந்தினான்;(எ -று.)

     அன்றிற்பறவையின் ஆண் தன் பேடையைக் கணப்போது பிரிந்தாலும்
அத்துயரத்தைப்பொறாமல் இரண்டு மூன்றுதரம் கத்திக்கூவி, பின்பும்
அத்துணையைக்கூடாவிடில்உடனேயிறந்துபடும்.  

நல் இலக்கணம் பலவுடை அவயவ நலத்தால்,
வில் இலக்கணத் தழும்புடைக் கரங்களால், மிகவும்
தொல் இலக்கணம் பலவுடைச் சுபத்திரை, ஒரு தன்
இல்லில் அக் கணவனை, ‘இவன் யார்கொல்!’ என்று அயிர்த்தாள்.-சில அடையாளங்களாற் சுபத்திரை
அச்சன்னியாசியைக் குறித்துச் சங்கித்தல்.

தொல் இலக்கணம் பல உடை சுபத்திரை – (நூல்களிற் கூறப்பட்டுத்)
தொன்றுதொட்டுவருகிற உத்தமஸ்திரீலக்ஷணங்கள் பலவற்றையுமுடைய
சுபத்திரையானவள்,- நல் இலக்கணம் பல உடை அவயவம் நலத்தால் –
(ஆடவர்க்குஉரிய) உத்தமலக்ஷணங்கள் பலவற்றையுமுடைய (அத்துறவியினது)
உறுப்புக்களின் அழகினாலும்,இலக்கணம் வில் தழும்பு உடை
கரங்களால் – நல்லிலக்கணமமைந்த வில்லின் தழும்புகளைக்கொண்ட
கைகளினாலும், ஒரு தன் இல்லில் அ கணவனை – ஒப்பற்ற தன் வீட்டில்
தனியனாயிருக்கிற (தனக்குக்)கணவனாகும் அவனை, இவன் யார் கொல் என்று
மிகவும் அயிர்த்தாள்- “இவன்யாரோ” என்று மிகவும் சந்தேகித்தாள்; (எ-று.)

     வில்தழும்பு – சீவகசிந்தாமணியில் தடமித்தனென்னும் அரசன் சீவகனது
கைகளின் வில்தழும்புகண்டே அவனை விற்றொழிலில்வல்லவ னென்று
நன்குமதித்தமை கூறுமிடத்து ‘முன்கைச்சந்துக்கும் முழங்கைக்கும் இடையில்
முன்கைச்சந்தைச் சேர்ந்து உத்தமவிலக்கணத்தையுடைய கைவிரல்களைந்துக்கு
அருகேயானைத் தோலிற் சுண்ணாம்பையுரைத்ததுபோலக் காழ்ப்பேறி
வெண்ணிறங்கொண்டுசிறுமீன்வடிவமாய்த் தோன்றுகிற மூன்று விரல் நீளமுள்ள
சிலைத்தழும்பு’ என்றதுமுதலிய காண்க. 

மங்கை, அங்கு ஒரு நாள், அவன் மலர் அடி வணங்கி,
‘எங்கும் வண் புனல் ஆடுதற்கு ஏகினீர் எனினும்,
தங்கும் மா நகர் யாது?’ என, தபோதனன்தானும்,
‘எங்கள் மா நகர் இந்திரப்பிரத்தம்’ என்று இசைத்தான்.-இரண்டுகவிகள் – சுபத்திரைக்கும்  அருச்சுனனுக்கும்
நடந்த சம்பாஷணையைக் கூறும்.

மங்கை – மங்கைப்பருவமுடையளான சுபத்திரை, அங்கு –
அவ்விடத்தில், ஒருநாள்,- அவன் மலர் அடி வணங்கி – அம்முனிவனுடைய
தாமரைமலர்போன்ற பாதங்களை நமஸ்கரித்து, வண் புனல் ஆடுதற்கு எங்குஉம்
ஏகினீர் எனின்உம் – சிறந்த புண்ணியதீர்த்தங்களில் நீராடுதற்கு எல்லாவிடங்களிலும்
சென்றீராயினும், தங்கும் மா நகர் யாது – தேவரீர் எழுந்தருளி யிருக்கும்
சிறந்தநகரம் எது? என – என்றுவினாவ,-தபோதனன் தான்உம் – அம்முனிவனும்,
எங்கள் மா நகர் இந்திரப்பிரத்தம் என்ற இசைத்தான் – எமது சிறந்தநகரம்
இந்திரப்பிரத்த மென்று விடைகூறினான்; (எ-று.)

     மங்கைப்பருவத்திற்கு வயதெல்லை- பன்னிரண்டு பதின் மூன்று பிராயங்கள்.
தபோதநன் – வடசொல்; தவத்தை தனமாக வுடையவன்; அனைவரும் செல்வத்தை
விரும்பி ஈட்டிப் பாதுகாத்தல் போலத் தவத்தை விரும்பியீட்டிப் பாதுகாப்பவன்.

என்ற காலையில், இந்திரன் மதலையை ஒழிய,
நின்ற பேரை அந் நெடுங் கணாள் வினவலும், நிருபன்,
‘வென்றி மன்னவர் யாரையும் வினவினை; மின்னே!
மன்றல் அம் தொடை விசயனை மறந்தது என்?’ என்றான்.

என்றகாலையில் – என்று (முனிவன்) விடைகூறிய பொழுது,- அ
நெடுங்கணாள் – நீண்டகண்களையுடையளான அச்சுபத்திரை, இந்திரன் மதலையை
ஒழியநின்ற பேரை வினவலும் – அருச்சுனனைத்தவிர மற்றைத்தருமன்
முதலியோரைக்குறித்து (யோகக்ஷேமம்) விசாரித்தவளவிலே,- நிருபன் –
அருச்சுனன்.- (அவளை நோக்கி), ‘மின்னே -மின்னல்போன்றவளே! வென்றி
மன்னவர்யாரைஉம் வினவினை – வெற்றியையுடைய அரசரெல்லோரையுங் குறித்து
வினாவினாய்; மன்றல் அம் தொடைவிசயனை மறந்ததுஎன் – வாசனையுள்ள
அழகியமலர்மாலையையுடைய அருச்சுனனை (நீ) மறந்ததுயாதுகாரணத்தால்?’
என்றான்- என்றுவினாவினான்.

யாழின் மென் மொழி, எங்கள் நாயகி இவள், அவனுக்கு
ஊழின் அன்புடை மன்றலுக்கு உரியள்ஆதலினால்,
வாழி வெஞ் சிலை விசயனை மறைத்தனள்’ என்னா,
தோழி நின்றவள் ஒருத்தி, கை தொழுதனள், சொன்னாள்-இதுவும் அடுத்த கவியும் – தோழிவார்த்தை.

நின்றவள் தோழி ஒருத்தி – (அப்பொழுது அங்கு) நின்ற
சுபத்திரையின் தோழியொருத்தி, கை தொழுதனள் – (துறவியைக்) கைகூப்பி
வணங்கி,- ‘யாழின் மொல்மொழி எங்கள் நாயகி இவள் – வீணையினிசைபோல
மெல்லிய [இனிய]சொற்களையுடைய எங்கள் தலைவியாகிய இவள், அவனுக்கு –
அவ்வருச்சுனனக்கு,ஊழின் அன்பு உடை மன்றலுக்கு உரியள் ஆதலினால் –
முறைப்படி யமைந்தஅன்புடைய விவாகத்துக்கு உரியவளாதலால், வெம் சிலை
விசயனை மறைத்தனள் -கொடியவில்லையுடைய அருச்சுனனைக்குறித்து
(வினவாமல்) மறைத்தாள்,’ என்னா -என்று, சோன்னாள்-; (எ-று.)

     இவள் அருச்சுனனை மணஞ்செய்துகொள்ளும் விருப்புடைய ளாதலால்,
நாணம்பற்றி, அவனை வினாவில ளென்றனளென்பதாம். வாழி – அசை

‘பங்குனன் பெருந் தீர்த்த நீர் படிவதற்காகப்
பொங்கு தெண் திரைப் புவி வலம் போந்தனன்’ என்றே,
அங்கு நின்று வந்தவர் உரைத்தனர்; அவன் இப்போது
எங்கு உளான் எனத் தெரியுமோ, அடிகளுக்கு?’ என்றாள்.

பங்குனன் – அருச்சுனன், பெருந் தீர்த்தம்நீர் படிவதற்கு ஆக –
சிறந்தபுண்ணியதீர்த்தங்களில் நீராடும்பொருட்டு, பொங்கு தெள் திரை புவி வலம்
போந்தனன்- பொங்குகிற தெளிவான அலைகளையுடைய கடலினாற் சூழப்பட்ட
பூமியிற்பிரதக்ஷிணமாகச் சென்றனன்’, என்று-, அங்கு நின்று வந்தவர்
உரைத்தனர் -அவ்விந்திரப்பிரத்தநகரத்தினின்று வந்தவர்கள் சொன்னார்கள்;
அவன் இப்போது எங்குஉளான் என அடிகளுக்கு தெரியும்ஓ – அவன் இப்பொழுது
எவ்விடத்திலிருக்கிறானென்று சுவாமிகளுக்குத் தெரியுமோ? என்றாள்-என்றும்
வினாவினாள்;

   சங்கித்த சுபத்திரையே வினவியதாகப் பாலபாரத்தி லுள்ளது. ‘என’ என்ற
செயவெனெச்சத்துக்கு ‘என்பது’ எனத் தொழிற்பெயராகப் பொருள் கொண்டு,
அதனை ‘தெரியுமோ’ என்ற வினைமுற்றுக்கு எழுவாயாக்குக

பாங்கி நல் உரை தன் செவிப் படுதலும், ‘விசயன்
தீங்கு இலன்; பல திசைகளும் சென்று, நீராடி,
கோங்கு இளங் கொழு முகை நிகர் கொங்கையாள் பொருட்டால்,
ஈங்கு வந்து நும் இல்லிடை இருந்தனன்’ என்றான்.-வினவிய பாங்கிக்கு அருச்சுனன் கூறிய விடை.

பாங்கி நல் உரை – தோழிகூறிய நல்லவார்த்தை, தன் செவி
படுதலும் -தன்காதிற் பட்டவுடனே, விசயன்- அருச்சுனன்,- பல திசைகள்உம்
சென்று நீர் ஆடி- பலதிக்குக்களிலும் சென்று புண்ணிய தீர்த்தங்களில்
ஸ்நாநஞ்செய்து, தீங்குஇலன் -யாதோரூறுபாடும் இன்றி இனிதுவாழ்பவனாகி,
கோங்கு இளங் கொழு முகை நிகர்கொங்கையாள் பொருட்டால் – கோங்கினது
இளைய வளப்பமுள்ள அரும்பையொத்ததனங்களையுடையாளின் [சுபத்திரையின்]
பொருட்டாக, ஈங்குவந்து -இந்தப்பதியிலேவந்து, நும் இல்லிடை –
உம்முடையவீட்டில்தானே, இருந்தனன்-, என்றான் – என்று உத்தரமளித்தான்;
(எ-று.)

     தன்னை இன்னானென்று தெரிவித்தற்கு ஏற்றதாயிருந்ததனால் ‘நல்லுரை’
என்றார். தன்னைப்படர்க்கையாற் கூறி அருச்சுனன் தெரிவித்தா னென்க.  

யதி உரைத்த சொல் கேட்டலும், யாதவி நுதல் வாள்
மதி வியர்த்தது; துடித்தது, குமுத வாய் மலரும்;
புதிய கச்சு அணி குரும்பைகள் அரும்பின, புளகம்;-
பதி இடத்து அரிவையர்க்கு உளம் ஆகுலம் படாதோ?-அந்தச்சொல்லால் யதியை அருச்சுனனேயென்று
அறிந்து சுபத்திரை காமக்குறிப்புக் கொள்ளுதல்.

யதி – அந்த அருச்சுன சன்னியாசி, உரைத்த – கூறிய, சொல் –
சொல்லை,கேட்டலும் – கேட்டவுடனே, யாதவி – யதுகுலத்திற் பிறந்தவளான
சுபத்திரையின், நுதல் வாள் மதி – நெற்றியாகிய ஒளியுள்ள சந்திரன், வியர்த்தது-;
வாய்குமுதம் மலர்உம் – வாயாகிய செவ்வாம்பல்மலரும், துடித்தது-; புதிய கச்சு
அணிகுரும்பைகள் – புதிய கச்சையணிந்த குரும்பை போன்ற தனங்கள், புளகம்
அரும்பின- மயிர்க்கூச்சு எறிந்தன; பதிஇடத்து – நாயகன் சமீபத்திலிருக்கும்போது,
அரிவையர்க்கு – மகளிர்க்கு, உளம் – மனம், ஆகுலம்படாதுஓ –
சஞ்சலமாதலையடையாதோ? (எ-று.)

     அருச்சுனன் அருகிலிருத்தலாற் சுபத்திரையின்மனம் கலக்கமுற்றதென்று
முதல்மூன்றடிகளிற் கூறிய பொருளை ஈற்றடியிற் கூறிய பொதுப்பொருளாற்
சமர்த்தித்தார்; வேற்றுப்பொருள்வைப்பணி. நுதல் வாண்மதிவியர்த்தது,
வாய்க்குமுதமலர்துடித்தது என்பன – பரிணாமாலங்காரமென்னும் திரிபுஅணி:
நுதலைவாண்மதியாகவும் வாயைக் குமுதமாகவும் உருவகஞ்செய்தாரெனின்,
அவைவியர்த்தல் துடித்தல்என்ற தொழில்நிகழ்ச்சிக்கு ஏற்றனவாகாமை காண்க.
கச்சணிகுரும்பை – உருவகநவிற்சி.

உகவை முத்த மென் பவளமும் நீலமும் ஒளிர,
அகவு பச்சிளந் தோகைபோல் நின்ற அவ் அணங்கை,
மிக விருப்ப நோய் வளர்தலின், மெலிந்த தோள் விசயன்,
தகவுடைத் தன தடக் கையால் வளைக் கரம் தகைந்தான்.-அச்சமயத்தில் அருச்சுனன் சுபத்திரையைக்
கைப்பிடித்தல்.

உகவை – மகிழ்ச்சியினால், முத்தம்மெல் பவளம்உம் –
முத்துக்களையுடைய மென்மையான பவழம்போன்றசிவந்த வாயும், நீலம்உம் –
நீலோற்பலமலர்போன்ற கண்களும், ஒளிர – விளங்க, அகவு பசு இள
தோகைபோல்நின்ற – (கார்ப்பருவத்தில்) ஆடுகின்ற பசுநிறமான
இளமயில்போல (க் களித்து) நின்ற,அ அணங்கை – அந்தப்பெண்ணை
[சுபத்திரையை], விருப்பம் நோய் – மிகவளர்தலின் மெலிந்த தோள் விசயன் –
ஆசைநோய் மிகுதியாகவளர்ந்ததனாலிளைத்த தோள்களையுடைய அருச்சுனன்,
தகவு உடை தன தடகையால் – அழகையுடைய தனது நீண்ட கையினால், வளை
கரம் தகைந்தான் -வளையலை யணிந்த கையைப் பிடித்தான்;

     வாயிற் பல்லினொளிசிறிது வெளித்தோன்றும்படி யுண்டான புன்னகையிலும்
பார்வையிலும் காதற்குறிப்பு நன்குவெளிப்பட வென்பது, முதலடியின் கருத்து.
‘முத்தம் ‘என்றது, பற்களை. பவளம், நீலம் – உவமையாகுபெயர்கள்.

தகைந்தபோது, உயிர்ச் சேடியர், ‘தவிர்க!’ எனச் சில சொல்
பகர்ந்து போய், ஒரு மாதவிப் பந்தரில் புகுந்து,
புகுந்த நீர்மையைத் தேவகி அறியுமா புகன்றார்;
அகைந்த பல் பெருங் கிளைஞரில் ஆர் கொலோ, அறிந்தார்?-அச்செய்தியைத் தோழியர் தேவகிக்குத் தெரிவித்தல்.

தகைந்த போது – (இவ்வாறு அருச்சுனசன்னியாசி சுபத்திரையைக்)
கைப்பிடித்த போது, உயிர்சேடியர் தவிர்க – உயிர்போன்ற தோழியரே!
(இத்தன்மையைத்) தவிர்ப்பீராக,’ என சில சொல் பகர்ந்து போய் – என்று சில
வார்த்தைகளைச் சொல்லி விலகிச் சென்று, ஒரு மாதவி பந்தரில் புகுந்து –
(அச்சுபத்திரை விசயனுடனே) குருக்கத்திப்பந்த லொன்றிலேபிரவேசிக்க, (பின்பு),
புகுந்தநீர்மையை தேவகி அறியும் ஆ புகன்றார் – நடந்தசெயலை (அவள் தாயான)
தேவகிஅறியும்படி சொன்னார்கள்; அகைந்த பல் பெரு கிளைஞரில் ஆர் கொல்ஓ
அறிந்தார்- (இங்ஙனம் நிகழ்ந்த அச்செய்கையைத் தேவகியொருத்தி அறிந்தனளே
யன்றி)நெருங்கின பல பெரியசுற்றத்தாரில் எவர்தாம் அறிந்தவர்? (எ-று.)

     புகுந்து – எச்சத்திரிபு. தவிர்க=தவிர்க்க: பிறவினையில்வந்த தன்வினை. இனி,
இங்ஙன் கொள்ளாமல், உயிர்ச்சேடியர் தவிர்கெனச் சன்னியாசியை நோக்கிச்
சொல்லி,சுபத்திரையுடனே மாதவிப் பந்தரிற் புகுந்து பின்பு தேவகிக்குத்
தெரிவித்தாரென்றுஉரை கூறுவதும் உண்டு. 70-ஆம் செய்யுள் முதல்
நான்குசெய்யுள்கள்அந்தாதித்தொடையமையவுள்ளன

அறிவு உறாவகை, அலாயுதன் முதல் வடமதுரை
செறியும் யாதவர் யாரையும் தன்னுடன் சேர்த்து,
மறி கொள் செங் கையன் விழா அயர்வான், பெருந் தீவில்,-
உறியில் வெண் தயிர் உண்டவன்-கொண்டு சென்றுற்றான்.-அந்நாளிற் கண்ணன் யாதவர் அனைவரையும் வேறுவியாஜத்தால்
வேற்றிடத்துக்கு அழைத்துக்கொண்டு
செல்லுதல்

அறிவு உறா வகை – (இச்செய்தியை) அறியவெண்ணாதபடி,
அலாயுதன்முதல் வடமதுரை செறியும் யாதவர் யாரை உம் – பலராமன் முதலாக
வடமதுரையில்(முன்பு) இருந்தவர்களான யதுகுலத்துவீரர்களெல்லாரையும்,
தன்னுடன்சேர்த்து -தன்னோடு கூட்டி, மறி கொள் செம் கையன் விழா அயர்வான்
பெருந் தீவில்கொண்டு சென்று உற்றான் – மானை யேந்திய சிவந்த
கையையுடையனானசிவபிரானுக்குத் திருவிழாச் செய்யும் பொருட்டு மகாத்வீப
மென்ற இடத்துக்குஅழைத்துக்கொண்டுபோய்ச் சேர்ந்தான்: (யாவனெனில்),-
உறியில் வெள் தயிர்உண்டவன் -(கோபஸ்திரீகள்) உறியில் வைத்திருந்த
வெண்ணிறமான தயிரைஇளமையிற் களவாடி அமுதுசெய்தவனான கண்ணபிரான்;
(எ-று.)

      ‘வடமதுரை’ என்றது, தென்மதுரையினின்று பிரித்துக்காட்டுதற்கு; இனம்
விலக்கவந்த அடைமொழியடுத்த பெயர். த்வாரகையிலுள்ளார் யாவரும்
வடமதுரையினின்று வந்தவ ராத லறிக. ஈற்றடி- கண்ணபிரான் ஏமாற்றுந்
தன்மையனென்பதைத் தெரிவிக்கும்.

உற்ற கங்குலில் யாவரும் தணந்தவாறு உணர்ந்து,
பெற்ற தன் பெரும் பிதாவினை முன்னினன், பெரியோன்;
சிற்றிடைப் பெருங்கொங்கையும் தம்முனைத் தியானம்
முற்ற முன்னினள்; இருவரும் முன் முன் வந்துற்றார்.-அருச்சுன சுபத்திரைகள் பிதாவையும் அண்ணனையும்
நினைக்க, இந்திரனும் கிருஷ்ணனும் அங்கு சேர்தல்.

உற்ற – பொருந்திய, கங்குலில் – அவ்விரவில், யாவர் உம்-, தணந்த
ஆறு – வேறுகாரணத்தாற் சென்றிட்டவகையை, உணர்ந்து-, பெரியோன் –
பெருமையுள்ள அருச்சுனன், பெற்ற தன்பெரும் பிதாவினை முன்னினன் –
(தன்னைப்)பெற்ற பெருமையுள்ள பிதாவாகிய இந்திரனை நினைந்தான்; சிறு இடை
பெருங்கொங்கைஉம் – சிறிய இடையையும் பெரியதனங்களையுமுடையளான
சுபத்திரையும்,தம்முனை – தன் அண்ணனாகிய க்ருஷ்ணனை, தியானம் முற்ற
முன்னினள் -தியானநிலை நிரம்ப (மனத்தினால்) தியானித்தாள்: இருவர்உம் –
(க்ருஷ்ணன் இந்திரன்என்ற) அவ்விருவரும், முன் முன்வந்து உற்றார் –
(அவ்விருவருக்கும்) முன்னாகவந்து சேர்ந்தனர்.

இந்திராணியோடு எய்திய இந்திரன்தன்னை
இந்திராபதி எதிர் கொள, துவரை மா மூதூர்ச்
சந்திராதவ மண்டபத்து இடு பொலந் தவிசில்
வந்து இரா, வணங்கிய திருமகனுடன் மகிழ்ந்தான்.-தேவேந்திரனைக் கண்ணபிரான் எதிர்கொள்ளுதல்.

இந்திராணியோடு எய்திய இந்திரன் தன்னை – இந்திராணியுடனே
வந்தஇந்திரனை, இந்திராபதி எதிர்கொள – இலக்குமிக்குக்கணவனான கண்ணன்
எதிர்கொள்ள, (அவன்), துவரை மா  முது ஊர் – பெரிய பழமையான
அத்துவாரகாபுரியில், சந்திர ஆதவர் மண்டபத்து இடு பொலம் தவிசில் வந்து
இரா -சந்திரசூரியர் போல விளங்குகின்ற மண்டபத்திலே யிட்ட பொன்மயமான
ஆசனத்தில்வந்து வீற்றிருந்து, வணங்கிய திருமகனுடன் மகிழ்ந்தான் – (தன்னை)
வணங்கின(தனது) சிறந்தகுமாரனான அருச்சுனனுடன் கூடி மகிழ்ந்தான்; (எ-று.)

     இந்திராணி – இந்த்ராணீ: இந்திரன்மனைவி. இந்த்ரன், இந்திரா என்ற
பெயர்கள்,ஐசுவரியமுடையவ ரென்று பொருள்படும். 

பொரு அரும் புருகூதனும், புலோம கன்னிகையும்,
இருவரும் தம கலன்களால் இவர் இருவரையும்
மரு வரும்படி அணிதலின், அணி கெழு வனப்பால்,
ஒருவரும் பிறர் ஒப்பலர் என்னுமாறு உயர்ந்தார்.-இந்திரனும் இந்திராணியும் தமது ஆபரணங்களினால்
முறையே அருச்சுனனையும்சுபத்திரையையும் அலங்கரித்தல்.

பொருவு அரும் புருகூதன்உம் புலோமகன்னிகைஉம் இருவர்உம் –
ஒப்பற்றவர்களான இந்திரனும் புலோமா என்பவனது மகளான இந்திராணியும்
ஆகியஇரண்டு பேரும், தம கலன்களால்- தங்கள் ஆபரணங்களினால், இவர்
இருவரைஉம் -(அருச்சுனனும் சுபத்திரையுமாகிய) இவர்கள் இரண்டுபேரையும்,
மருவரும்படிஅணிதலின் – பொருத்தமாக அலங்கரித்ததனால், (அவ்விருவரும்),
அணி கெழுவனப்பால் – (தங்கள்) இயற்கையழகின்மீது நிறைந்த செயற்கையழகினால்,
ஒருவரும் பிறர் ஒப்பு அலர் என்னும் ஆறு உயர்ந்தார் – பிறரொருவரும் (தங்கட்கு)
உவமையாகா ரென்னும்படி சிறப்புற்றார்கள்; (எ-று.)

பால், அருந் ததி, நறு நெய், ஆய்ப் பாடியில் கள்ளத்-
தால் அருந்து அதி விரகனது அருளினால், விரைவில்
சால் அருந்ததி தலைவனும், தலைபெறும் பல நுண்
நூலரும், ததி உறப் புகுந்து, ஆசிகள் நுவன்றார்.-கண்ணனது சங்கல்பத்தால் வசிஷ்டன் முதலிய
முனிவர்கள் அங்குவந்துசேர்தல்.

ஆய்ப்பாடியில் – இடைச்சேரியில், பால் – பாலையும் அருந்ததி –
அருமையான தயிரையும், நறு நெய் – நறுமணமுள்ள சிறந்த வெண்ணெயையும்
நெய்யையும், கள்ளத்தால் அருந்து – களவினா லெடுத்து உண்ட, அதிவிரகனது –
மிக்கதந்திரமுடையவனான கண்ணபிரானது, அருளினால்-, சால் அருந்ததி
தலைவன்உம் – (கற்பினால்) நிறைந்த அருந்ததியின் கணவனான வசிஷ்டனும்,
தலைபெறும் பலநுண் நூலர்உம் – தலைமைபெற்ற பல நுட்பமான நூல்களை
யுணர்ந்த முனிவர்களும்,விரைவில் – விரைவாக, ததி உற புகுந்து – கூட்டமாக
வந்து, ஆசிகள் நுவன்றார் -ஆசீர்வாதங்களைச் சொன்னார்கள்; (எ-று.)

     ததி – தயிர்: தற்பவமான வடசொல். ததி – வரிசை: தற்சம வடசொல்.
இச்செய்யுளில் ‘திரிபு’ என்னும் சொல்லணி காண்க.    

தொடங்கி நாத வெம் முரசுடன் சுரிமுகம் தழங்க,
சடங்கினால் உயர் ஆகுதித் தழலவன் சான்றா,
விடங்கினால் மிகு விசயன் அக் கன்னியை வேட்டான்;
மடங்கினார் தம பதிதொறும், அவ்வுழி வந்தார்.-சுபத்ராகல்யாணம்,

நாதம் வெம் முரசுடன் – ஓசையையுடைய விரும்பப்படும்
முரசவாத்தியங்களோடு, சுரி முகம் – சங்கவாத்தியங்கள், தழங்க – ஒலிக்க,
சடங்கினால்உயர் ஆகுதி தழலவன் சான்று ஆ – வைதிகச் சடங்கினாற் சிறந்த
ஆகுதியையுடைய அக்கினி தேவன் சாக்ஷியாக, விடங்கினால் மிகு விசயன் அ
கன்னியைதொடங்கி வேட்டான் – அழகினால் மிக்க அருச்சுனன் அச்சுபத்திரையை
முயன்றுமணஞ்செய்தான்; (பின்பு), அ உழி வந்தார் தம பதிதொறும் மடங்கினார் –
அவ்விடத்தில் வந்த இந்திரன் முதலியோர் தம்தம் இருப்பிடங்கட்கு மீண்டு
சென்றார்கள்; (எ-று.)

     மணமுரசு என்றதற்கு, ‘வெம்முரசு’ என்றார்; ‘வெம்மை வேண்டல்’. சுரிமுகம் –
சுழிந்தமுகமுடைய தெனப் பொருள்படும் காரணக்குறி; விணைத்தொகையன்மொழி.
சடங்கினாலுயர் ஆகுதித் தழலவன் – ஓமாக்கினி.  

முன்னம் யாவையும் முடித்தருள் மொய் துழாய் முடியோன்,
கன்னன் ஆர் உயிர் கொள வளர் காளையைத் தழீஇக்கொண்டு,
‘அன்ன மென் நடை அரிவையர்பொருட்டு நீ இன்னம்
என்ன என்ன மா தவ உருக் கொள்ளுதி!’ என்றான்.-மணவினை முடித்தபின்பு கண்ணன் அருச்சுனனை
நகையாடுதல்.

முன்னம் யாவைஉம் முடித்தருள் – முன்நின்று (இவ்விவாகத்துக்கு
உரியவை) எல்லாவற்றையும் நிறைவேற்றி யருளிய, மெய் துழாய் முடியோன் –
நெருங்கிய திருத்துழாய்மாலையை யணிந்த திருமுடியையுடையவனான கண்ணன்,
கன்னன் ஆர் உயிர் கொள வளர்காளையை தழீஇக்கொண்டு – கர்ணனுடைய
அருமையான உயிரைக் கவர வளர்கிற இளவீரனான அருச்சுனனைத்
தழுவிக்கொண்டு, ‘நீ-, அன்னம் மெல் நடை அரிவையர் பொருட்டு –
அன்னப்பறையினது மந்தகதிபோன்ற மென்மையான நடையையுடைய மகளிரைத்
தழுவுதற்காக, இன்னம் என்ன என்ன மாதவம் உரு கொள்ளுதி- இன்னமும்
என்னஎன்ன பெரிய தவவேடத்தைக்கொள்வாயே?’ என்றான் – என்று நகையாடிச்
சொன்னான்; (எ -று.)

     காரியத்தைமுடித்தபின்புஉண்டான களிப்பினாலும், மைத்துனமையினாலும்,
இங்ஙனம் தகுதியாகப் பரிகசித்தன னென்க. முன்னம் – எண்ணமுமாம்

காமற் பயந்தோன்தனது ஏவலின், காம பாலன்
வாமப் பதிதன்னினும் வாசவ மா பிரத்த
நாமப் பதியே திசை ஆக நடக்கல் உற்றான்,
தாமக் குழலாள் தனித் தேர் விட, சாப வீரன்.கண்ணன்கட்டளையால் சுபத்திரை தேர்செலுத்த,
அருச்சுனன் துவாரகாபுரியினின்று இந்திரப்பிரத்தநகர்
நோக்கிச் செல்லுதல்.

காமன் பயந்தோன் தனதுஏவலின் – மன்மதனைப் பெற்றவனான
கண்ணபிரானது கட்டளையினால், சாபம் வீரன் – வில்வீரனான அருச்சுனன்,-
தாமம்குழலாள் தனி தேர் விட – மாலையை யணிந்த கூந்தலை யுடையவளான
சுபத்திரைஒப்பற்ற தேரைச் செலுத்த, காமபாலன் வாமம் பதி தன்னின்உம் –
பலராமனுடையஅழகிய துவாரகாபுரியினின்றும், மா வாசவ பிரத்தம் நாமம் பதிஏ
திசை ஆக நடக்கல்உற்றான் – பெரிய இந்திரப்பிரத்த மென்னும் பெயரையுடைய
நகரமே (தான்)நோக்கிச்செல்லுந்திசையாகச் செல்பவனானான்; (எ-று.)

     பலராமன் கண்ணனுக்குத் தமையனாதலாலும் கண்ணன் அவன் கீழ்
அடங்கியொழுகியதனாலும், துவாரகை ‘பலராமனுடைய ஊர்’ எனப்பட்டது.
காமபாலன்என்ற வடமொழிப்பெயர் – காமத்தை [அடியார்களுடைய
விருப்பத்தை]க்காப்பவனென்று பொருள்படும்.(ராஜஸ்திரீகள்சிலர் தேர்செலுத்த
வல்லராதலை,சம்பராசுரனோடு பொருகையில் தசரதசக்கவர்த்திக்குக் கைகேயி
தேர்செலுத்தினளென்றவரலாற்றினாலும் அறிக). மன்மதன் திருமாலின்மகனாதலும்,
மன்மதாம்சமானபிரத்யும்நன் கண்ணன் மகனாதலும் பற்றி, கண்ணனுக்கு ‘காமற்
பயந்தோன்’ என ஒருபெயர் கூறினார்.

     இதுமுதல் இச்சருக்கம் முடியு மளவும் பன்னிரண்டுகவிகள் –
திரௌபதிமாலையிட்ட சருக்கத்து 73 – ஆம் கவிபோன்ற கலிநிலைத்துறைகள்

வென்றித் துவரை நகர் காவலர்தம்மை வென்று,
மன்றல் குழலின் இளையாளை வலிதின் எய்தி,
குன்றச் சிறகர் அரிந்தோன் மகன் கொண்டுபோனான்’
என்று, அப் பலற்குக் கடல்வண்ணன் இயம்பினானே.-அச்செய்தியைக் கண்ணன் பலராமனுக்கு ஒருவாறு தெரிவித்தல்.

குன்றம் சிறகர் அரிந்தோன் மகன் – மலைகளின் சிறகுகளைத்
துணித்திட்டவனான இந்திரனுடைய குமாரனாகிய அருச்சுனன், வென்றி
துவரைநகர்காவலர் தம்மை வென்று – வெற்றியையுடைய துவாரகாபுரியைக்
காவல்செய்தவர்களான வீரர்களை(ப் போரினாற்) சயித்து, மன்றல் குழலின்
இளையாளை – நறுமணமுள்ள கூந்தலையுடைய (நமது) தங்கையை, வலிதின்
எய்திகொண்டு போனான் – பலாத்காரமாகவந்துகொண்டுபோயினான்,’ என்று-,
அ பலற்கு -அந்தப்பலராமனுக்கு, கடல் வண்ணன் இயம்பினான் – கடல்
போலுங்கருநிறமுடையனான கண்ணன் செய்திகூறினான்; (எ-று.)

     பலன் என்ற பெயர் – பலமுடையவ னென்று பொருள்படும். பலபத்ரன்,
பலதேவன், பலராமன் என்ற பெயர்களும் இதுபற்றியனவே. 

சேல் ஆம் பிறப்பின் திருமால் இது செப்பும் முன்னே,
காலாந்தகனும் வெருவும் திறல் காளைதன்னை,
நீலாம்பரனும், யது வீர நிருபர் யாரும்,
நால் ஆம் படையோடு எதிர் சூழ்ந்து, அமர் நாடினாரே.-உடனே பலராமன் சேனையுடன் அருச்சுனனைத் தொடர்ந்து
போகுதல்.

சேல் ஆம் பிறப்பின் திருமால் இது செப்பும் முன்ஏ –
மத்ஸ்யாவதாரஞ்செய்தவனான கண்ணபிரான் இவ்வார்த்தையைச் சொல்லு
முன்னே[சொன்னவுடன் விரைவிலே], நீல அம்பரன் உம் – நீலவஸ்திரத்தை
யுடையவனானபலராமனும், யது வீர நிருபர் யார்உம் – (மற்றும்)
யதுகுலத்துவீரர்களானஅரசர்களெள்லோரும், நால் உம் ஆம் படையோடு –
நால் வகைப்பட்டசேனையுடனே, கால அந்தகன் உம் வெருவும் திறல் காளை
தன்னை -பிரளயகாலத்து யமனும் அஞ்சும்படியான வலிமையையுடைய வீரனான
அருச்சுனனை,எதிர் சூழ்ந்து அமர் நாடினார் – எதிர்த்துச் சூழ்ந்து போர் செய்யத்
தொடங்கினார்கள்;(எ – று.)

     யாதவவீரருடன் கூடிய பலராமன் அருச்சுனனுடன் பொர வேணுமென்று
பெருஞ்சீற்றங்கொள்ள ஸ்ரீக்ருஷ்ணன்வார்த்தையாற் சாந்தநிலையை யடைந்தா
னென்றுபாரதங்கள்கூறும். முன்னொருகாலத்திலே பிரமதேவன் கண்துயிலுகையில்,
சோமகனென்னும் அசுரன் வேதங்களை யெல்லாங் கவர்ந்துகொண்டு கடலினுள்
மறைந்துசெல்ல, பிரமன்முதலிய தேவர்களின் வேண்டுகோளினால் திருமால்
ஒருபெருமீனாகத் திருவவதரித்துக் கடலினுட்புக்கு அவ்வசுரனைத் தேடிப்பிடித்துக்
கொன்று, அவன் கவர்ந்துசென்ற வேதங்களை மீட்டுக்கொணர்ந்து, பிரமனுக்குக்
கொடுத்தனன் என்பது, மத்ஸ்யாயவதாரகதை. தனது நிலையைக்குலைத்தாயினும்
துஷ்ட நிக்கிரகசிஷ்டபரிபாலனஞ் செய்யும் திருவருட்சிறப்புடையா னென்பது,
‘சேலாம்பிறப்பிற்றிருமால்’ என்றதனால் விளங்கும்

அஞ்சேல்! அமரில் நுமர்தம்மையும் ஆவி கொள்ளேன்;
செஞ் சேல் அனைய விழியாய்!’ எனத் தேற்றி, அந்த
மஞ்சே அனைய தடந் தேர் அவள் ஊர, வந்த
வெஞ் சேனை முற்றும் புறம்தந்திட, வென்று, போனான்.-அருச்சுனன் சுபத்திரைக்குத் தேறுதல்கூறி
அனைவரையும் வெல்லுதல்.

செம் சேல் அனைய விழியாய் – செம்மையான சேல் மீன்போன்ற
கண்களை யுடையவளே!  அஞ்சேல் – அஞ்சாதே; அமரில் – போரில், நுமர்
தம்மைஉம் ஆவி கொள்ளேன் – நின்சுற்றத்தாரையும் உயிர்கவரேன்,’ என
தேற்றி -என்று (சுபத்திரைக்குத்) தேறுதல் கூறி, அந்த மஞ்சுஏ அனைய தட தேர்
அவள் ஊர- (விரைவினாலும் பரப்பினாலும்) மேகத்தையே போன்ற பெரிய
அத்தேரைஅச்சுபத்திரையே செலுத்த, வந்த வெம் சேனைமுற்றுஉம் புறம்தந்திட
வென்றுபோனான் -(தொடர்ந்தெதிர்த்துப் போர்க்கு) வந்தபயங்கரமான அந்த
யாதவசேனைமுழுவதும் (தோற்று) முதுகு கொடுக்கும்படி (அதனைச்) சயித்துச்
சென்றான். (அருச்சுனன்);

     ஒருவரையுங் கொல்லாமலே அனைவரையும் அஞ்சியோடும்படி செய்து
வெல்லும் அருந்திறமை, இங்கு விளங்கும். தனது கணவன் தனது பிறந்தகத்துச்
சுற்றத்தார் என்ற இருதிறத்தாரில் எவர்க்கேனும் தீங்குநேர்ந்திடுமே யென்று
இருதலைக்கொள்ளியினிடைப்பட்ட எறும்புபோல அஞ்சிய தனதுகாதலியினது
வருத்தத்தைத் தவிர்த்தற்கு, ‘அஞ்சேல்’ என அபயங் கூறினான். ‘நுமர் தம்மையும்
ஆவிகொள்ளேன்’ என்ற எச்சவும்மையால், எம்மையும் பாதுகாத்துக்கொள்வே
னென்றதைப் புலப்படுத்தினான்.

மடை பட்ட வாளை அகில் நாறும் மருத வேலி
இடை பட்ட தங்கள் வள நாடு சென்று எய்தி, ஆங்கு,
தொடை பட்ட திண் தோள் அறன் காளை துணைவரோடு
நடைபட்டு உருகி, எதிர்கொள்ள, நகரி புக்கான்-தருமன்முதலியோர் எதிர்கொள்ள அருச்சுனன்
இந்திரப்பிரத்தஞ் சேர்தல்.

மடை பட்ட வாளை – நீர்பாயும் மடையிற் பொருந்திய
வாளைமீன்கள்,அகில் நாறும் – அகிற்கட்டையின் நறுமணம் வீசப் பெற்ற, மருதம்
வேலி இடை -கழனிகளாகிய மருதநிலத்துக்கு இடையிலே, பட்ட – பொருந்திய,
தங்கள் வளம் நாடு -வளப்பம் மிக்க தங்கள்நாட்டை, (நெடுநாளைக்குப்பின்),
சென்று எய்தி -போய்ச்சேர்ந்து, ஆங்கு – அவ்விடத்தில், தொடை பட்ட திண்
தோள் அறன் காளைதுணைவரோடு உருகி நடைப்பட்டு எதிர்கொள்ள –
பூமாலைபொருந்திய வலிய தோள்களையுடைய தருமபுத்திரன் தம்பியர்மூவருடனே
(அன்பினால்) மனமுருகி நடந்து வந்து எதிர்கொள்ள, நகரி புக்கான் –
இந்திரப்பிரத்தநகரை யடைந்தான்;

     யாற்றுநீர் மலையினின்று அகிலை அடித்து வருதலால், அந்நீர் பாயும்
மடையிலுள்ள வாளை அதன்மணம் நாறு மென்க. நியமங் கொண்டு பன்னிரண்டு
வருஷகாலம் தீர்த்தயாத்திரை செய்தனனென முதனூல் கூறும். 

முன் போர் விளைத்த முசலப் படை மொய்ம்பினானும்,
தன்போல் உயர்ந்தோர் இலன் ஆன தடங் கண் மாலும்,
பின் போய், இனிய மொழி ஆயிரம் பேசி, மன்றற்கு
அன்போடு உதவும் உபசாரம் அனைத்தும் ஈந்தார்.-கண்ணன், பலராமனுடன்சென்ற அருச்சுனனைச் சமாதானப்படுத்தி
அந்தமணமகனுக்கும் மணமகளுக்கும் மணச்சிறப்புக்கள் கொடுத்தல்.

முன் போர் விளைத்த முசலம் படை மொய்ம்பினான் உம் –
தலைமையாய் நின்று (அருச்சுனனுடன்) போர்செய்தஉலக்கைப் படையையுடைய
பலராமனும், தன் போல் உயர்ந்தோர் இலன் ஆன தட கண் மால்உம்
தன்னைப்போலச் சிறந்தவரை வேறு பெறாதவனான விசாலமான கண்களையுடைய
கண்ணபிரானும், பின் போய் – (அருச்சுனனுக்குப்) பின்னே சென்று, இனிய மொழி
ஆயிரம் பேசி – மிகப்பலவான இன்சொற்களைச் சொல்லி, மன்றற்கு அன்போடு
உதவும் உபகாரம் அனைத்துஉம் ஈந்தார் – விவாகத்துக்கு அன்போடு
கொடுக்குந்தன்மையனவான காணிக்கைப் பொருள்களை யெல்லாம் (அவர்கட்குக்)
கொடுத்தார்கள்; (எ-று.)                                          (715)

     மொய்ம்பு – பலம்: அதனை யுடையவன், மொய்ம்பினான்; எனவே, ‘பலன்’
என்ற வடமொழிப்பெயரின் பரியாயநாமமாயிற்று; மூசலத்தை
ஆயுதமாகவுடைமையால், பலராமனுக்கு ‘முசலீ’ என்ற ஒருபெயர் வழங்கும்.
உபகாரம் – உபஹாரம்: காணிக்கைப்பொருள்: வடசொல். உபசாரமென்றும்
பாடம். 

ஞாலத் தெரிவை களி கூர நடாத்து செங்கோல்
தாலத் துவசன் துவராபதிதன்னில் வைக,
நீலக் கடல்கள் இரண்டு ஆம் என, நெஞ்சொடு ஒத்த
சீலத்தவனோடு அவண் வைகினன், செங் கண் மாலே.பலராமன் துவாரகைக்கு மீள, கண்ணன்
அருச்சுனனுடன் இந்திரப்பிரத்தத்தில் வாழ்தல்.

ஞாலம் தெரிவை – பூமிதேவி, களி கூர – களிப்புமிகும்படி,
நடாத்து -நடத்துகிற, செம் கோல் – நீதி தவறாத அரசாட்சியையுடைய, தாலம்
துவசன் -பனைமரத்தின் வடிவ மெழுதிய கொடியை யுடையவனான பலராமன்,
துவாரபதிதன்னில் வைக – (மீண்டு சென்று) துவாரகாபுரியில் இருக்க,- செம் கண்
மால்- சிவந்ததிருக்கண்களையுடைய கண்ணபிரான், நெஞ்சொடு ஒத்த
சீலத்தவனோடு -(தன்) மனத்தோடொத்த ஒழுக்கமுடையவனான அருச்சுனனோடு,
நீலம் கடல்கள்இரண்டு ஆம் என – நீலநிறமுள்ள இரண்டுகடல்கள் போலு
மென்று (தங்கட்குஉவமை) சொல்லு மாறு, அவண் வைகினன் – அவ்விந்திரப்
பிரத்தநகரத்திலே இருந்தான்; (எ-று.)- தாலத்துவசன் – வடமொழிப்பெயர்

பல் நாள் இவர் இப் பதி சேர்ந்த பின், பங்க சாத
மின் ஆளும் மார்பற்கு உயிர் போலும் விசயன் என்பான்
நல் நாளில் நன்மை தரும் ஓரையில், நல்க, வஞ்சி
அன்னாளிடத்தில் அபிமன்னு அவதரித்தான்.சுபத்திரையினிடமாக அபிமந்யு பிறத்தல்.

இவர் பல் நாள் இ பதி சேர்ந்த பின் – இந்தக்கிருஷ்ணார்ச்சுனர்கள்
பலநாள் இவ்விந்திரப்பிரத்தத்திலேசேர்ந்து இருந்த பின்பு,- பங்கசாதம் மின்
ஆளும்மார்பற்கு உயிர் போலும்விசயன் என்பான் – தாமரைமலரில் வாழ்கிற
மின்னல்போன்றஇலக்குமி இடமாகக்கொண்டுவீற்றிருக்கப்பெற்ற திருமார்பை
யுடையனான கண்ணனுக்கு உயிர்போன்றவனான அருச்சுனன், நல்க –
கர்ப்பாதானஞ் செய்ய, நல்நாளில் – சுபதினத்திலே, நன்மை தரும் ஓரையில் –
நன்மைவிளைக்குஞ்சுபமுகூர்த்தத்திலே, வஞ்சி அன்னாள் இடத்தில் அபிமன்னு
அவதரித்தான் – வஞ்சிக்கொடி போன்றவளான சுபத்திரையினிடத்தில் அபிமந்யு
என்னுங்குமாரன் தோன்றினான்;

     பங்கஜாதம் – வடசொல்; சேற்றி லுண்டாவது. ஓரை – ஹோரா என்ற
வடசொல்லின் விகாரம். அபிமந்யு என்றவட மொழிப்பெயர்க்கு, பயமில்லாதவனும்
கோபமுடையவனு மாயிருப்பவ னென்று முதனூலிற்  காரணப்பொருள்
கூறப்பட்டிருக்கிறது.

வேதம் சிறக்க, மனு நீதி விளங்க, இப் பார்
ஆதங்கம் ஆற, வரும் ஐவரின் ஐவர் மைந்தர்,
பூதங்கள் ஐந்தில் குணம் ஐந்தும் பொலிந்தவாபோல்,
ஓது அங்கியில் உற்பவித்தாள்வயின் உற்பவித்தார்.-உபபாண்டவ ருற்பத்தி.

வேதம் சிறக்க – வேதங்கள் சிறப்படையவும், மனுநீதி விளங்க –
மநுதர்மசாஸ்திரத்திற்கூறிய நீதிகள்விளக்கமடையவும், இ பார் ஆதங்கம் ஆற –
இந்தப்பூமியினது துன்பம் நீங்கவும், வரும் – பிறந்த, ஐவரின் –
பஞ்சபாண்டவர்களினின்று, ஐவர் மைந்தர் – ஐந்துபுத்திரர்கள், பூதங்கள்
ஐந்துஉம்குணம் ஐந்தின் பொலிந்த ஆ போல் – பஞ்சபூதங்களும்
ஐந்துகுணங்களாற்சிறத்தல்போல, ஓது அங்கியில் உற்பவித்தாள்வயின்
உற்பவித்தார் -சிறப்பித்துச் சொல்லப்படுகிற யாகாக்கினியினின்று பிறந்த
திரௌபதியினிடமாகப்பிறந்தார்கள்; (எ-று.)

     வைதிககிரியைகள் தவறாதுநடைபெறுதலால் வேதம் சிறப்புறும். தருமன்
முதலியபாண்டவரைவர்க்கும் முறையேபிரதிவிந்தியன், சுதசோமன், சுருதகர்மா,
சதாநீகன்,சுருதஸேநன்என்றஐவர் வருஷத்திற்கு ஒருவராய்ப் பிறந்தனரென்று
முதனூலினா லறிக.இவர்கள், உபபாண்டவரென்றும், பஞ்ச திரௌபதேயரென்றுங்
கூறப்படுவர்.பிருதிவிக்கு மணமும், அப்புக்குச் சுவையும், தேயுவுக்கு ஒளியும்,
வாயுவுக்கு ஊறுவும்,ஆகாயத்துக்கு ஒலியும் குணமாம். ‘பூதங்களைந்திற் குணமைந்தும்
பொலிந்த வா போல்’ என்றும் பாடம். வயின் – வயிறுமாம். மநுநீதி –
வடமொழித்தொடர்; மநு – அவ்வரசனாற் செய்யப்பட்டநூலுக்குக்
கருத்தாவாகுபெயர்   

அம் மாதுலனும், பயந்தோரும், அழகில் மிக்க
இம் மா மகாருக்கு இயற்றும் விதி ஏய்ந்த பின்னர்,
தெம் மாறு வின்மை முதலாய செயல்கள் யாவும்
கைம் மாறு கொண்டு நனி கைவருமாறு கண்டார்.-அபிமந்யுவும் உபபாண்டவர்களும் படைக்கலந்
தேர்தல்.

அழகின் மிக்க இ மா மகாருக்கு – அழகிற்சிறந்தஇந்தப்
பெருமையுடைய (அபிமந்யுமுதலிய) குமாரர்களுக்கு, இயற்றும் விதி ஏய்ந்த
பின்னர் -செய்யவேண்டிய (ஜாதகருமம் நாமகரணம் அந்நப்பிராசநம் சௌளம்
முதலிய)கடமைகள் (சாஸ்திரவிதிப்படிஉரியகாலங்களிற்) செய்து முடிந்தபின்பு, அ
மாதுலன்உம்பயந்தோர்உம் – அந்தமாமனான கண்ணனும்பெற்றதந்தையரான
பாண்டவர்களும்,தெவ் மாறு வின்மை முதல் ஆய செயல்கள் யாஉம் –
பகைவர்கள்அழிதற்குக்காரணமான வில்வித்தை முதலான ஆயுதத்
தொழில்களெல்லாவற்றையும்,கை மாறுகொண்டு நனி கை வரும் ஆறு கண்டார் –
கற்பிப்பவரிடத்தினின்று(கற்பவரிடத்தே) மாறி நன்றாகப்பழகித் தேர்ச்சியடையும்படி
செய்தார்கள்; (எ-று.)

     மாதுலன் – வடசொல்; மாதாவினுடன் பிறந்தவன் – கண்ணன்
அபிமந்யுவுக்குமாதுலனாவன். கை – இடம். கை மாறுகொண்டு – ஒருவர்க்கொருவர்
போட்டிபோட்டுக்கொண்டு என்றுமாம். இனி, கைம்மாறு கொண்டு – கையிலே
பிரம்புகொண்டுஎன்றுபொருள் கொண்டால், மிக்க இளமைக்கு ஏற்ப
விளையாட்டில்ஊக்கஞ்செல்லாதிருத்தல் வேண்டியும், மாமனும் தாதையருமாகிற
நெருங்கியஉறவுரிமைகாரணமாகப் பராமுகஞ்செய்யா திருத்தல்வேண்டியும்
அச்சுறுத்தற்குக்கையில் மாறுகொண்டு கற்பித்தன ரென்க

அரிதில் பயந்த அறுவோருளும், ஆண்மைதன்னால்
இருதுக்களின்மேல் இள வேனிலின் தோற்றம் ஏய்ப்ப,
மருதுக்கு இடை போம் மதுசூதன் மருகன், ‘வெம் போர்
விருதுக்கு ஒருவன் இவன்’ என்ன விளங்கினானே.-அவ்வறுவரில் அபிமந்யு சிறத்தல்.

இருதுக்களின்மேல் இளவேனிலின் தோற்றம் ஏய்ப்ப – ஆறுவகை
ருதுக்களுள் மேலான வசந்தருதுவினது தோற்றம்போல,- அரிதின் பயந்த
அறுவோருள்உம் – அருமையாகப்பெற்ற அந்த ஆறுபுதல்வருள்ளும், மருதுக்கு
இடைபோம் மதுசூதனன் மருகன் – (இரட்டை) மருதமரத்தினிடையே தவழ்ந்து
சென்றகண்ணனது மருமகனான அபிமந்யு, ஆண்மை தன்னால் –
ஆண்மைத்திறத்தினால்,வெம் போர் விருதுக்கு இவன் ஒருவன் என்ன
விளங்கினான் – கொடியபோர்வெற்றிக்கு இவனே ஒப்பற்றவ னென்னும்படி
(சிறப்புற்று) விளங்கினான்; (எ-று.)

   மதுஸூதநன் என்ற வடமொழிப்பெயர் – மது என்ற அசுரனைக் கொன்றவ
னென்றுபொருள்படும். மருதுக் கிடை போன கதை:- கண்ணன்
குழந்தையாயிருக்குங்காலத்தில் துன்பப்படுத்துகின்ற பலதிருவிளையாடல்களைச்
செய்யக் கண்டு கோபித்த நந்தகோபர் மனைவியான யசோதை ஒருநாள்
கிருஷ்ணனைத் திருவயிற்றிற் கயிற்றினாற் கட்டி ஓர் உரலிலே பிணித்துவிட,
கண்ணன் அவ்வுரலை யிழுத்துக்கொண்டு தவழ்ந்து அங்கிருந்த இரட்டை
மருதமரத்தின் நடுவிலே எழுந்தருளியபொழுது, அவ்வுரல் குறுக்காய் நின்று
இழுக்கப்பட்டபடியினாலே அம்மரங்களிரண்டும் முறிந்து விழுந்த வளவில்,
முன்புநாரதர்சாபத்தால் அம்மரங்களாய்க் கிடந்த நளகூபரன் மணிக்கிரீவன்
என்னுங்குபேரபுத்திரரிரு வரும் சாபந்தீர்ந்து சென்றன ரென்பதாம். இந்தக்
குபேரபுத்திரர்கள்முன்பு ஒருகாலத்திற் பலதெய்வமகளிருடனே ஆடையில்லாமல்
ஒரு நீர்நிலையிலே ஜலக் கிரீடை செய்துகொண்டிருக்கையில் நாரதமகாமுனிவர்
அங்கு எழுந்தருள,அதுகண்டு மங்கைய ரனைவரும் நாணங்கொண்டு
ஆடையெடுத்து உடுத்துநீங்க, இந்தமைந்தர்மாத்திரம் மதுபாநமயக்கத்தால்
நிர்வாணமாகவே யிருக்க, நாரதர் கண்டுகோபங்கொண்டு ‘மரங்கள்போ லிருக்கிற
நீங்கள் மரங்களாவீர்’ என்று சபித்து உடனேஅவர்கள் வேண்டியதற்கு இரங்கி
‘நெடுங்காலஞ் சென்றபின்பு திருமால்உங்களையடையுஞ் சமயத்தில் இவ்வடிவம்
ஒழிந்து முன்னையவடிவம் பெற்று மீள்வீர்’ என்று சாபவிடை கூறிப்போயின ரென
அறிக

உரனால், அழகால், உரையால், மற்று உவமை இல்லா
நர நாரணர்க்கு நலம் கூர்தரு நண்பு போல்வான்,
அரனார் விழியால் அழிந்து அங்கம் அநங்கம் ஆன
மரனாருடன் நண்பு இசைந்தன்று, வசந்த காலம்.-ஒருகால் இளவேனிற்பருவத்தின் வரவு.

உரனால் – வலிமையினாலும், அழகால் – அழகினாலும்,
உரையால் -சொல்லினாலும், மற்று உவமை இல்லா – (தமக்குத்
தாமேயன்றி)வேறுஉவமை பெறாத,நர நாரணர்க்கு – அருச்சுனனுக்கும்
கிருஷ்ணனுக்கு முள்ள, நலம் கூர்தரு நண்பு -நன்மைமிக்க சிநேகத்தை,
போல்வான் – ஒக்கும் பொருட்டு, வசந்தகாலம் -இளவேனிற்பருவமானது,
அரனார் விழியால் அழிந்து அங்கம் அநங்கம் ஆனமரனாருடன் –
சிவபிரானுடைய நெற்றிக்கண்ணால் வெந்து உடம்பு அருவமான
மன்மதனுடனே, நண்பு-, இசைந்தன்று – கூடிவந்தது; (எ-று.)

     மன்மதனது முயற்சியாலாகுந் தொழிலாகிற சிற்றின்பவிளையாட்டுக்கள்
வசந்தகாலத்தில் மிகுதலால், அவன், அக்காலத்துக்கு நண்ப னெனப்படுவன்;
மன்மதனுக்கு ‘வேனிலான்’ என்று ஒரு பெயர் வழங்குதலும் காண்க. இங்ஙனம்
காமோத்தீபகமான வசந்தகாலம் இயல்பாகக் காமனோடு கூடிவருதலை,
கிருஷ்ணார்ச்சுனர்களுக்கு உள்ள சிநேகத்தை யொக்கும்பொருட்டுக் கூடிவந்த
தென்றது, தற்குறிப்பேற்றவணி. மரன் – மாரன் என்பதன் குறுக்கல்

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ.வில்லிபாரதம் – முதல் பாகம் -6. இந்திரப்பிரத்தச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 14, 2023

அத்தினபுரியில் ஐ-இரு பதின்மர் ஐவர், என்று இரண்டு அற, தம்மில்
ஒத்தனர் மருவ, தெவ்வர் மெய் வெருவ, உளம் மகிழ் நாளில்,
மற்று ஒரு நாள்,
மைத்துனன் முதலாம் தமரையும், தக்க மந்திரத்தவரையும், கூட்டி,
எண்ணினான், இகலோன்.-திருதராட்டிரன் தருமனுக்கு முடிசூட்ட நிச்சயித்தல்.

அத்தினபுரியில் – அஸ்தினபுரத்திலே, ஐ இரு பதின்மர் ஐவர்
என்றஇரண்டு அற – நூற்றுவரும் ஐவரும் என்ற இரண்டு பகுப்பு இல்லாமல்
[அந்தநூற்றைவரும்], தம்மில் ஒத்தனர் மருவ – தங்களுள் ஒற்றுமையுடையராய்க்
கூடிவாழ,தெவ்வர் மெய் வெருவ – (அதனால்) பகைவர்கள் உடம்புநடுங்க,
உளம்மகிழ் நாளில்- (அனைவரும்) மனம்மகிழ்ந்திருந்த நாள்களில், ஒரு நாள்-
ஒருதினத்தில்,-இகலோன்- வலிமையையுடையனான திருதராட்டிரன், –
மைந்துனன் முதல் ஆம்தமரைஉம் – (தன்) மைத்துனனாகிய சகுனி முதலான
பந்துக்களையும், தக்கமந்திரத்தவரைஉம்-தகுதியையுடைய மந்திரிகளையும், கூட்டி-
ஒருங்கு வரவழைத்துச்சபை சேர்த்து (ஆலோசித்து), இ தினம்உயர்ந்த
தினம்எனமகுடம்சூட்டுதற்குஎண்ணினான் – இந்தத்தினமே உத்தமமான தினமென்று
குறிப்பிட்டு (அன்றைக்கே)தருமனுக்கு) முடிசூட்ட நிச்சயித்தான்;

     மந்திரிகளுக்குத் தகுதி -அறிவு, முயற்சி, இராசகாரியங்களில் தேர்ச்சி,
அரசனுக்கு இடித்திடித்துக் கட்டுரை கூறும் வன்மை, பழுதெண்ணாமை, தவறாது
ஆலோசிக்குந்திறம் முதலியன. 

செழு முரசு உயர்த்த வேந்தனுக்கு இன்று திரு அபிடேக நாள்’ என்று,
முழு முரசு அறைந்து, நகரி கோடித்து, முடி புனை கடி கொள்
மண்டபத்தின்
எழு முரசு அதிர, பகீரதி முதலாம் எத் துறைப் புனல்களும் இயற்றி,
தொழு முரசுடன் வெள் வலம்புரி முழங்க, சுருதி மா முனிவரும்
தொக்கார்.-இதுமுதல் நான்குகவிகள்-தருமபுத்திரனது
பட்டாபிஷேகம் கூறும்.

(திருதராட்டிரன்), ‘செழு முரசு உயர்த்த வேந்தனுக்கு-
மாட்சிமையுடையமுரசவாத்தியத்தின் வடிவத்தையெழுதிய கொடியை உயரநாட்டிய
தருமாராசனுக்கு, இன்று – இத்தினம், திரு அபிடேகம் நாள்-சிறந்த
பட்டாபிஷேகம்செய்வதற்குஉரியநாள்,’ என்று-என்றுசொல்லி, முழுமுரசு அறைந்து-
பெரிய முரச வாத்தியங்களைஅடிப்பித்து எங்குந்தெரிவித்து, நகரி கோடித்து-
அந்நகரத்தை அலங்கரிப்பித்து, முடிபுனை கடி கொள் மண்டபத்தின்-
முடிசூட்டுதற்கு உரியவிளக்கத்தைக்கொண்ட(பட்டாபிஷேக) மண்டபத்திலே,
எழு முரசு அதிர பகீரதி முதல் ஆம் எ துறைபுனல்கள் உம் இயற்றி-ஒலியெழுகிற
முரசவாத்தியங்கள் முழங்கக் கங்கை முதலியஎல்லாப்புண்ணிய தீர்த்தங்களினின்று
நீர் கொணர்வித்து, தொழு முரசுடன் வெள்வலம்புரி முழுங்க-(யாவராலுங்)
கொண்டாடப்படுகிற முரசவாத்தியங்களுடனேவெண்மையான வலம்புரிச்
சங்குகளையும் முழங்குவிக்க, சுருதி மா முனிவர்உம்தொக்கார் –
வேதங்களையறிந்தபெரிய இருடிகளும்வந்து கூடினார்கள்;

     முதலடியில், முரசு – ஆகுபெயர். முழு முரசு –  முரசுக்குஉரிய
இலக்கணத்திற்குறையாத முரசு. அறைந்து, கோடித்து, முழுங்க- பிறவினைப்
பொருளில் வந்ததன்வினை. மங்கலவாத்தியம் வாசிப்போர் அதனைத்தொழுது
தொடங்கும் மரபுபற்றி, ‘தொழுமுரசு’ என்றதாகவும் கொள்ளலாம்; அன்றியும்,
வாத்தியம் வாசித்தல் என்றபொருளில் ‘வாத்தியம் சேவித்தல்’ எனப் பரிபாஷையாக
வழங்குதற்கு ஏற்ப, ‘தொழுமுரசு’ என்றதாகவுங் கொள்ளலாம்.

அத்தியின் பலகை நவமணி அழுத்தி, ஆடகத்து அமைத்து,
அரி முகத்தால்
பத்தி கொள் பீடத்து அழகுற இருத்தி, பசும் பொனின்
தசும்புகள் நிறைந்த
சுத்த நீர் வியாதன் தௌமியன் முதலோர் சொரிந்தனர்-சோமன்
வந்து உதித்து,
சித்திர கிரியின் நெடு நிலா வெள்ளம் சீருடன் வழிய,
வார்த்தெனவே.

வியாதன் தௌமியன் முதலோர் – வியாசனும் தௌமியனும்
முதலானமுனிவர்கள்,-அத்தியின் பலகை- அத்திமரத்தின் பலகையின்மேல்,
ஆடகத்துஅமைத்து-பொன்னினால் தொழில்செய்து, நவ மணி அழுத்தி-
நவரத்தினங்களைப்பதித்து, அரி முகத்தால் பத்தி கொள் பீடத்து-சிங்கத்தின்
முகம்தோன்ற ஒழுங்காகச்சித்திரிக்கப்பட்ட சிங்காதனத்திலே. அழகு உற இருத்தி-
(தருமபுத்திரனை)அழகாகவீற்றிருக்கச்செய்து, (அவனது முடியின்மேல்), பசும்
பொனின் தசும்புகள்நிறைந்த சுத்தம் நீர் – பசும்பொன்னாலாகிய குடங்களில்
நிறைந்துள்ள பரிசுத்தமானபுண்ணியதீர்த்தங்களை,-சோமன் வந்து உதித்து
சித்திரகிரியில் நெடு நிலாவெள்ளம்சீருடன் வழியவார்த்து என – சந்திரன்வந்து
உதித்து அழகிய மலையின்மேல் மிக்க நிலாப்பெருக்கை அழகோடு வழியும்படி
வார்த்தாற்போல, சொரிந்தனர் – சொரிந்தார்கள்;

     தௌமியன் முதலியோர் பொற்குடங்களினின்று புண்ணிய தீர்த்தங்களை
அபிஷேகஞ்செய்யுமாறு ஊற்றுவது, மலையிலிருந்து எழுகின்ற உதயசந்திரன்
நிலாவைப்பொழிதலையொக்குமென்க: சந்திரமண்டலம் வெண்ணிறமுடையதாயினும்
உதிக்கும்போது செந்நிறமுடையதுபோலத் தோன்றுதல்இயல்பு. இனி, சுத்தனான
சந்திரன்-பரிசுத்தரான முனிவர்களுக்கும், நிலாப்பெருக்கு – புண்ணிய
தீர்த்தப்பெருக்குக்கும், மலை-தருமனுக்கும் உவமை யென்பாரும் உளர்;
தற்குறிப்பேற்றவணி. பீடமமைத்தற்கு அத்திப்பலகை சிறத்தலால், அதனை
யெடுத்துக்கூறினார். “ஒளதும்பரம்தத்ர நரேந்த்ரஸூநௌ-ப்ரஸ்த மாதஸ்துஷி
பத்ரபீடம்” என்றது, பாலபாரதம். 

உதய மால் வரையில் உதய ராகத்தோடு உதித்த தேர்
உதயன் என்று உரைப்ப,
துதை அளி ததைந்த மாலையான் சென்னிச் சோதி மா மகுடமும் சூட்டி,
பத யுகம் அரசர் முடிகளால் சிவப்ப, பகர் விதி முடித்தபின், பலரும்
இதயம் ஒத்து அமிர்த மொழியவர் அடைவே இரு கை
நீராசனம் எடுத்தார்.

மால் உதயம் வரையின்-பெரிய உதயகிரியின்மீது, ‘ உதயம்
ராகத்தோடும்உதித்த – உதிக்குங்காலத்து (மிக்கவிளங்குகிற) செந்நிறத்தோடு
தோன்றிய,  தேர் உதயன்-(ஒற்றைத் தனியாழித்) தேரையுடைய சூரியன், ‘ என்று
உரைப்ப-என்று உவமை சொல்லும்படி, துதை அளி ததைந்த மாலையான் சென்னி-
நெருங்கிய வண்டுகள் மொய்க்கிற மாலையையுடையனான தருமபுத்திரனதுசிரசில்,
சோதி மா மகுடம்உம் சூட்டி-ஒளியையுடைய சிறந்த கிரீடத்தையும் கவித்து, பதம்
யுகம் அரசர் முடிகளால் சிவப்ப – (அவனுடைய) இரண்டுபாதங்களும் (அவற்றை
வணங்குகிற) அரசர்களுடைய முடிகள் படுதலாற் சிவக்க, பலர் விதி முடித்த பின் –
(நூல்களில்) விதிக்கப்பட்ட பட்டாபிஷேகச்சடங்கை நிறைவேற்றிய பின்பு, அமிர்தம்
மொழியவர் பலர்உம் – அமிருதம்போல் இனிய சொற்களையுடைய பல மகளிர்,
இதயம் ஒத்து – (தம்மில்) மனங்கலந்து [அன்புடனும் மகிழ்ச்சியுடனும்), அடைவே-
முறையே, இருகை – இரண்டுகைகளாலும், நீராசனம் – மங்களவாலத்தியை,
எடுத்தார்-; (எ-று.)

     உதயகிரி-தருமபுத்திரனுக்கும், அதன் சிகரம்-அவனது சிரசுக்கும்.
உதயசூரியமண்டலம் – கிரீடத்துக்கும் ஒப்பு எனக்காண்க. மகுடஞ்சூட்டுதல்,
விதிமுடித்தல் இவற்றுக்கு எழுவாய் – கீழ்க்கவியில் வந்த ‘வியாதன், தௌமியன்
முதலோர்’ என்பது. மகுடமுஞ்சூட்டி, உம் – இறந்தது தழுவியது

ஒற்றையோடு இரட்டை வலம்புரி மிழற்ற, ஒரு குடை
மதி என நிழற்ற,
கொற்றவர் முன் பின் போதர, மடவார் குழுப் பொரி சிந்தி
வாழ்த்து எடுப்ப,
இற்றை நாள், எவரும், வாய்த்தவா! என்ன, ஏழ் உயர்
இராச குஞ்சரமேல்,
மற்றை நால்வரும் தன் சூழ்வர, தருமன்-மைந்தன்
மா நகர் வலம் வந்தான்.–தம்பியர் சூழ, யானைமீது தருமன் நகர் வலம் வருதல்

ஒற்றையோடு இரட்டைவலம்புரி மிழற்ற-மூவகைச் சங்க
வாத்தியங்கள் முழங்க, ஒரு குடை மதிஎன நிழற்ற-ஒற்றை வெண்கொற்றக்குடை
சந்திரமண்டலம்போல ஒளிசெய்ய, கொற்றவர் முன் பின் போதர-வெற்றியையுடைய
அரசர்கள் முன்னும் பின்னும் போக, மடவார் குழு பொரிசிந்தி வாழ்த்துஎடுப்ப-
மகளிர் கூட்டம் (மங்களார்த்தமான) நெற் பொரிகளைச்சிந்தி வாழ்த்துக் கூற,
எவர்உம்இற்றை நாள் வாய்த்த ஆ என்ன – ‘இந்தநாள் வாய்ந்த வகை
(வியக்கத்தக்கது) ‘என்று அனைவரும் கொண்டாட, மற்றை நால்வர்உம் தன்
சூழ்வர – வீமன் முதலியதம்பியர் நால்வரும் தன்னைச் சுற்றிலும்வர,
தருமன்மைந்தன் – தருமபுத்திரன்,ஏழ்உயர் இராச குஞ்சரம்மேல் –
ஏழுமுழம்உயர்ந்தபட்டத்து யானையின்மேல் ஏறி,மா நகர் வலம்வந்தான் –
பெரிய அந்நகரைப் பிரதஷிணமாகப் பவனிவந்தான்; (எ-று.)

ஒற்றையோடிரட்டை வலம்புரி-வெற்றிச்சங்கு மங்கலச்சங்குகொடைச்சங்கு
என்பன; முன்னொற்றை யிருசங்க முடனூத” என்பர், விராடபருவத்தும். இனி,
ஒற்றையோடு – ஊதுகொம்புகளுடனே, இரட்டை வலம்புரி – மங்கலச்சங்கும்
வெற்றிச்சங்கும் எனினும் அமையும். குஞ்சரம்-மலைப்புதர்களிற் சஞ்சரிப்பதென்று
உறுப்புப்பொருள்படும்; குஞ்சம் – புதர். இராசகுஞ்சரம் – அரசுவாவெனப்படும்

மா நகர் வலமாய் வந்து, தன் குரவர் மலர்ப் பதம்
முறைமையால் வணங்கி,
கோ நகர் இருக்கை அடைந்தனன்; ஒரு நாள், கொற்றவன்
ஏவல் கைக்கொண்டு,
பேய் நகர் எனுமாறு யாவரும் வழங்காப் பிறங்கு நீள்
கானிடை அழிந்த
தூ நகர் முன்னோர் இருந்தது ஒன்று, அந்தத் தொல் நகர்
வைகுமா துணிந்தான்.-பின்பு திருதராட்டிரனேவலால் தருமன் காண்டவப்
பிரத்தம் சேரத் துணிதல்.

மா நகர் வலம் ஆய் வந்து – (இவ்வாறு பெரிய அந்நகரத்தைப்
பிரதட்சிணமாக ஊர்கோலம் வந்து, தன் குரவர் மலர் பதம் முறைமையால்
வணங்கி -தனக்குஉரிய பெரியோர்களுடைய தாமரைமலர்போன்ற பாதங்களை
முறைப்படிவணங்கி, கோ நகர் இருக்கை அடைந்தனன் – தலைமையான
அவ்வத்தினாபுரியில் அரசு வீற்றிருத்தலைப் பொருந்தினான், (தருமன்); (அவன்),
ஒருநாள் – பின்பு ஒருநாள், கொற்றவன் ஏவல் கைக்கொண்டு –
திருதராட்டிரனுடையகட்டளையைப் பெற்று, பேய் நகர் எனும் ஆறு-பேய்கள்
எவரும் சஞ்சரியாமலுள்ள,பிறங்கு நீள்கானிடை-அடர்ந்த பெரிய காட்டில்,
முன்னோர் இருந்தது அழிந்த தூநகர் ஒன்று அந்த தொல் நகர் – பழைய
அரசர்கள் இருந்ததான நல்ல நகரமொன்று(பின்பு) அழிபட்டதாக
அந்தப்பழையஊரில், வைகும் ஆக-இருக்கும்படி, துணிந்தான்- நிச்சயித்தான்;
(எ-று.)

     துரயோதனாதியரின் துர்ப்போதனையினாற் பாண்டவரைக்
காண்டவப்பிரத்தத்திற்குச் செல்லுமாறு திருதராட்டிர னேவினானென்பது,
முதனூலால்விளங்கும். இங்கு ‘தன்குரவர்’ எனப்பட்டவர் – கிருபன் துரோணன்
வீடுமன்திருதராட்டிரன் விதுரன் குந்தி காந்தாரி யென்பவர். முறைமையால்
வணங்குதல்-ஒருவரை வணங்கியபின் ஒருவரையாக முறையே வணங்குதலும்,
அஷ்டாங்க முறைப்படிவணங்குதலும், மங்கலச்சடங்குமுடிந்தபின் பேரியோரை
வணங்குதலென்றவழக்கின்படி வணங்குதலுமாம். 

அம் கண் மா ஞாலம் முழுவதும் கொடுத்தற்கு ஆயர்தம்
பதியின் அங்குரித்த
செங் கண் மால் முதலாம் கிளைஞரும், வயிரத் தேர்மிசைச்
சேனையும், தாமும்,
வெங் கண் மாசுணத்தோன் எண்ணம் எத் திசையும் வெளிப்பட,
வேந்தர் ஐவரும் போய்,
தங்கள் மா தவத்தால் காண்டவப் பிரத்தம் என்னும்
அத் தழல் வனம் அடைந்தார்.-பாண்டவர் கண்ணபிரானுடன் காண்டவப்பிரத்தஞ்
சேர்தல்.

வேந்தர் ஐவர்உம்-பாண்டவராசர்ஐந்துபேரும்,-அம்கண் மா ஞாலம்
முழுவதுஉம் கொடுத்தற்கு- அழகிய இடமகன்ற பெரியபூமிமுழுவதையும் (தங்கட்குக்)
கொடுக்கும்படி, ஆயர்தம்பதியின் அங்குரித்த – திருவாய்ப்பாடியி லவதரித்த, செம்
கண்மால்-சிவந்தகண்களையுடைய திருமாலை [கண்ணனை], முதல் ஆம்-
முதலாகக்கொண்ட, கிளைஞர்உம் – சுற்றத்தார்களும், வயிரம் தேர் முதல்சேனைஉம்
வைரம்பொருந்தியதேர்முதலிய சேனைகளும், தாம்உம்-தங்களுமாக,-வெம் கண்
மாசுணத்தோன் எண்ணம் எ திசைஉம் வெளிப்பட – கொடியகண்களையுடைய
பெரும்பாம்பின் வடிவமெழுதிய கொடியையுடைய துரியோதனனது எண்ணம் எங்கும்
வெளிப்படும்படி, தங்கள் மா தவத்தால் – தாங்கள் முற்பிறப்பிற்செய்த பெருந்
தவத்தின் பயனால், காண்டவப்பிரத்தம் என்னும் அ தழல்வனம் போய்
அடைந்தார்-காண்டவப்பிரத்தமென்று சொல்லப்படுகிற அந்தக்கொடியகாட்டிற்
போய்ச்சேர்ந்தார்கள்; (எ – று.)

     இனிநிகழும்மகாபாரதயுத்தத்தில்பகையெல்லாம் தொலைத்துக் கண்ணபிரான்
தருமனுக்கு நிலவுலகமுழுவதையுங் உரியதாகச் செய்தல்தோன்ற, ‘ஞாலமுழுவதுங்
கொடுத்தற்கு அங்குரித்தமால்’ என்றார். கண்ணன் திருவவதரித்தது மதுரையிலாயினும்
ஆதியிற் சிலபிராயமளவும் அத்தன்மைவெளிப்படாமலே உடனே
திருவாய்ப்பாடிசேர்ந்து அங்குப்பிறந்தவனாகவே பிரசித்தி பெற்று வளர்ந்தன
னாதலால், ‘ஆயர்பதியினங்குரித்த’ என்றார். ஆயர்பதி-கோகுலம். பாண்டவர்.
காண்டவப்பிரத்தமடைந்தபின், அதனை இந்திரப்பிரத்தமென்னுஞ் சிறந்த நகரமாக
அமைத்து அதில் வீற்றிருந்து அரசுபுரிதல், நாரதமுனிவனருள்பெற்றுக்
குடும்பகலகமின்றிவாழ்தல், அருச்சுனனது தீர்த்தயாத்திரையாலும் காண்டவ
தகனத்தாலுமாகிய பெருமைகளை யடைதல், உபபாண்டவரும் அபிமந்யுவுமாகிய
புத்திரரைப்பெறுதல். இராசசூயயாகஞ்செய்து மேம்படுதல் முதலிய
பேறுகளையடைதலால், ‘தங்கள்மாதவத்தால் அத்தழல்வனம் அடைந்தார்’ என்றார்.
மிக்கபொறாமை கொண்ட துரியோதனன் தனது  சூழ்ச்சிக்கு இணங்கிய
தந்தையைக்கொண்டு ஏவி முன்பு இவர்களை வாரணாவதத்துக்கு
அனுப்பியமைபோலவேஇப்பொழுதும் காண்டவப்பிரதத்துக்குச் செலுத்தினனென்ற
கொடுமை பிரசித்தமாகவென்பது, மூன்றாமடியிற் குறித்தது. தேர்முதற்சேனை –
இரத கச துரக பதாதி. ‘வயிரத் தேர்மிசைச்சேனையும்’ என்றும் பாடம்.

போய் அவண் புகுந்த பொழுது, பைங் கடலும், பூவையும்,
புயலும், நேர்வடிவின்
மாயவற்கு, ‘எவ்வாறு, இவ்வுழி இவர்கள் வாழ்வது?’
என்று, ஒரு நினைவு எய்தி,
நாயகக் கடவுள்தன்னை முன்னுதலும், நாக நாயகனொடும் நடுங்கி,
மேய கட்புலன்கள் களித்திட, திருமுன் நின்றனன்,
விச்சுவகன்மா.-அங்கு நகர்செய்தற்குக் கண்ணன் இந்திரனோடு
விசுவகர்மனைவருவித்தல்.

போய் அவண் புகுந்தபொழுது போய் அவ்விடத்திற் சேர்ந்த
பொழுது,-பைங் கடல்உம் பூவைஉம் புயல்உம் நேர் வடிவின் மாயவற்கு-
பசியகடலையும்காயாம்பூவையும் மேகத்தையும் ஒத்த திருமேனியையுடைய
கண்ணபிரானுக்கு,இவர்கள் இ உழி வாழ்வது எ ஆறு என்று ஒரு நினைவு எய்தி-இவர்கள்இவ்விடத்தில் வாழ்வது எப்படி யென்று ஓர் எண்ணம் உண்டாக,
(அதனால் அப்பெருமான்), நாயகம், கடவுள் தன்னை முன்னுதலும் – தலைமைத்
தேவனான[தேவராசனான] இந்திரனை நினைத்தவுடனே, (அங்கு வந்துசேர்ந்த),
நாகர்நாயகனொடு-தேவர் தலைவனான இந்திரனுடனே, விச்சுவகன்மா-
விசுவகர்மாவும்,நடுங்கி-அச்சங்கொண்டு, மேய கண்புலன்கள் களித்திட திருமுன்
நின்றனன்-பொருந்திய (தனது) கண்களாகிய பொறிகள் களிப்படைய
(அப்பெருமானது) திருமுன்பே வந்துநின்றான்; ( எ- று.)

     காண்டவப்பிரத்தத்தில் முன்னோர் இருந்த தொன்னகரம் முன்னமே
அழிந்துவிட்டதாதலின் அங்குப் பாண்டவர் எங்ஙனம் வசித்தற்கு இயலும் என்று
திருவுளம்பற்றிய கண்ணபிரான் அங்குத் தேவத்தச்சனான விசுவகர்மனைக்கொண்டு
காடுகெடுத்து நாடாக்கி ஒருதிருநகரஞ்செய்விக்கக்கருதி அதன் பொருட்டுத் தேவர்
தலைவனான இந்திரனைச் சிந்தித்தவளவிலே, அவன் வந்து சேர,
அவனதுபரிவாரங்களில் ஒருவனான விசுவகர்மனும் அவனுடனே வந்துநின்றன
னென்பதாம். இந்திரனுக்கும் விசுவகர்மாவுக்கும் கண்ணபிரானிடத்துஉள்ள
பயபக்திவிசுவாசங்களைக் குறிக்க ‘நாயகனொடுநடுங்கி’ என்றார். விசுவகர்மா-
அஷ்டவசுக்களில் எட்டாமவனான பிரபாசனுக்குப் பிரகஸ்பதியினுடன் பிறந்தாளிடம்
பிறந்தபிள்ளை. இவன்விசித்திரங்களான அநேகசிற்பகருமங்களை அறிந்தவனாய்த்
தேவர்களுக்குத் தச்சனாகி அநேகதிவ்வியாபரணங்களையும், விமாநாதிகளையும்
அவர்கட்கு நிருமித்துக்கொடுப்பவன்

நுண்ணிதின் உணர்ந்தோர் உணர்தரும் சிற்ப நூல் அறி
புலவனை நோக்கி,
திண்ணிதின் அமரர் சேகரன் மொழிந்தான்: ‘தேவரும்
மனிதரும் வியப்ப,
மண்ணினும், புயங்கர் பாதலம் முதலாம் மற்று உள
உலகினும், நமதாம்
விண்ணினும், உவமை இலதென, கடிது ஓர் வியல் நகர்
விதித்தி, நீ’ எனவே,-இந்திரன் விசுவகர்மனைநோக்கி ‘இங்கு ஓர்நகர் செய்’
என்னல்.

அமரர் சேகரன்-தேவர் தலைவனாகிய இந்திரன்,
நுண்ணிதின்உணர்தோர் உணர்தரும் சிற்பம் நூல் அறி புலவனை நோக்கி-
நுட்பமாக(க்கருவி நூற்பொருள்களை) அறிந்தவர் அறியத்தக்க சிற்பசாஸ்திரத்தை
யறிந்த தேர்ந்த அறிவுடையானாகிய விசுவகர்மாவைப்பார்த்து,- ‘தேவர்உம்
மனிதர்உம் வியப்ப – தேவர்களும் மனிதர்களும் கண்டு அதிசயிக்க, மண்ணின்உம்
புயங்கர் பாதலம் முதல்ஆம் மற்று உள உலகின்உம் நமது ஆம் விண்ணின்உம்
உவமை இலது என -பூலோகத்திலும் சர்ப்பசாதியாரது பாதாளலோகம் முதலாகிய
மற்றுமுள்ள உலகங்களிலும் நம்முடையதாகிய சுவர்க்க லோகத்திலும் ஒப்பில்லை
யென்று சொல்லும்படி, ஓர் வியல் நகர்-ஒரு பெரிய நகரத்தை, நீ கடிது விதித்தி-நீ
வரைவில் இயற்றுவாயாக, ‘ என-என்று, திண்ணிதின் மொழிந்தான்-உறுதியாகக்
கட்டளை கூறினான்; ( எ-று.)

     கண்ணபிரானது திருவுள்ளத்தை அறிந்து அதற்குஏற்ப இந்திரன் கம்மியர்
தலைவனுக்குக் கட்டளையிட்டன னென்க. கண்ணனதுதிருவுள்ளமுவத்தலை
வேண்டுபவனாதலின், ‘நமதாம்விண்ணினும் உவமை யிலதென
நகர்விதித்தி’ என்றான்

தேவினும், தேவ யோனியில் பிறந்த திரளினும், சிறந்த யாவர்க்கும்,
பூவினும், எவ் எவ் உலகினும், முன்னம் புந்தியால்
இயற்றிய புரங்கள்
யாவினும், அழகும் பெருமையும் திருவும் இன்பமும்
எழு மடங்கு ஆக,
நாவினும் புகல, கருத்தினும் நினைக்க, அரியது ஓர் நலம்
பெறச் சமைத்தான்.-அக்கட்டளைப்படி விசுவகர்மன் சிறந்ததொரு
நகரத்தையமைத்தல்.

தேவின்உம் – தேவசாதியிலும், தேவயோனியில் பிறந்த திரளின்உம்-
அத்தேவசாதியிற் சம்பந்தப்பட்ட [அசுரர் முதலிய) கணங்களிலும், சிறந்த
யாவர்க்குஉம்-சிறப்புற்ற (இந்திரன் முதலிய) பலர்க்கும், (பயன்படும்படி), பூவின்உம்-
பூலோகத்திலும், எ எ உலகின்உம்-மற்றும் எந்தெந்த லோகங்களிலும், முன்னம் –
முன்பு, புந்தியால் இயற்றிய-(தனது) மனத்தால்நினைத்துநிருமித்த, புரங்கள்
யாவின்உம்-நகரங்கள் எல்லாவற்றைக்காட்டிலும், அழகு உம் பெருமைஉம் திருஉம்
இன்பம்உம் எழு மடங்கு ஆக-அழகும் பெருமையும் செல்வமும்
இன்பமும்ஏழுமடங்குமிகுதியாக அமையும்படி, நாவின் புகலஉம் கருத்தின்
நினைக்கஉம் அரியது ஓர் நலம்பெற-நாவினாற்சொல்லுதற்கும்
மனத்தினால்நினைப்பதற்கும் அரியதான ஒப்பற்ற சிறப்பைப் பெற, சமைத்தான் –
(விசுவகர்மன் ஒரு நகரத்தை) உண்டாக்கினான்; (எ-று.)

     நினைத்தமாத்திரத்தில் தன்சக்தியால் நிருமிக்குந்தன்மையும், தனது
புத்திவிசேஷங்களை யெல்லாங் காட்டுமாறு செய்தமையும் தோன்ற,
‘புந்தியாலியற்றிய’ என்றார். தேவயோனியிற் பிறந்ததிரள். – அசுரர் கந்தருவர்
கின்னரர் வித்தியாதரர்யக்ஷர் கருடர்கிம்புருடர் சித்தர் உரகர் முதலியோர்

மரகதம், கோமேதகம், துகிர், தரளம், வைரம், வைதூரியம், நீலம்,
எரி மணி, புருடராகம், என்று இவற்றிற்கு ஆகரம் இந்த
மா நகர்’ என்று,
அரி முதல் இமையோர் அனைவரும் புகழ்ந்தார்; ‘ஆடகப்
பொருப்பினை அழித்து,
தரணியில் நகர் ஒன்று அமைத்தவா!’ என்று, தபதியர்
யாவரும் வியந்தார்.-அந்நகரச்சிறப்பை அனைவருங்கொண்டாடுதல்.

மரகதம் கோமேதகம் துகிர் தரளம் வைரம் வைதூரியம் நீலம் எரி
மணி புட்பராகம் என்றஇவற்றிற்கு-மரகதம் கோமே தகம் பவழம் முத்து வச்சிரம்
வைடூரியம் நீலம் விளங்குகிற மாணிக்கம் புட்பராகம் என்ற
இந்தநவரத்தினங்களுக்கும், இந்த மா நகர் ஆகாம் – இந்தப்பெரியநகரம்
உறைவிடமாம், ‘ என்று-என்று சொல்லி, அரி முதல் இமையோர் அனைவர்உம்
புகழ்ந்தார்: – திருமால்முதலிய தேவர்க ளெல்லோரும் கொண்டாடினார்கள்; –
ஆடகம்பொருப்பினை அழித்து – பொன்மயமான மலையாகியமகா
மேருவைவடிவழித்து,தரணியில் நகர் ஒன்று அமைத்த ஆ – பூமியில் ஒரு
நகரமாகச் செய்தவிதம்என்னே! ‘ என்று-, தபதியர் யாவர்உம் வியந்தார் –
சிற்பிகளெல்லோரும்ஆச்சரியப்பட்டார்கள்; (எ-று.)

     இந்நகரம் பொன்மயமாகப் பெரிதாய் அமைந்துள்ளதனால் பொன்மலையை
யழித்துச் செய்ததென்று வியக்கவும், எல்லாவகை யிரத்தினங்களும் இந்நகரில்
எங்கும்நிறைந்திருத்தலால் நவரத்தினங்களுக்கும் ஆகரமென்று புகழவும் ஆயிற்று.
தெய்வத்தச்சன் இந்திரனேவலால் தான் வந்திருப்பதையும், இந்திரன் பாண்டவர்க்குத்
தன்பெயரால் ஒருநகரை நிருமிக்குமாறு தனக்குக் கட்டளையிட்டிருப்பதையும்
ஸ்ரீக்ருஷ்ணனிடம் தெரிவித்து, அவ்வாறே சிறப்புற நகரியற்றினானென்ற இவ்வளவே
பாரதங்களிலுள்ளது. இங்குநின்று 26-ஆம் பாடல் வரையிலுள்ள வருணனைகள்
பாலபாரதத்திலில்லை. பெரும்பாலும் வருணனைப்பகுதிகளை இந்நூலாசிரியர்
தம்கற்பனையாற் கூறுகின்றார். தபதி=ஸ்தபதி: வடசொல். ‘புருடராகம்’ , ‘நகரென்று’
என்றும் பாடம்.  

என் பதி அழகு குலைந்தது’ என்று எண்ணி, இந்திரன்
வெறுக்கவும், இயக்கர்
மன், ‘பதி பொலிவு சிதைந்தது’ என்றிடவும், மற்றுள வானவர், ‘பதிகள்
புன் பதி ஆகிப் போயின’ எனவும், ‘புரை அறு புந்தியால், புவிமேல்
நன் பதி இது ஒன்று இயற்றினான்’ என்று, நாரணாதிகள் துதித்திடவும்.-அந்நகரத்தின் சிறப்பு.

இதுவும் அடுத்த கவியும் – குளகம்.

     (இ-ள்.) இந்திரன்-தேவேந்திரன், என் பதி அழகு குலைந்தது என்று
எண்ணி – ‘எனது நகரமாகிய அமராவதி (இந்நகரத்துக்கு முன்) அழகுகெட்டதாம்’
என்றுநினைத்து, வெறுக்கஉம் – (அதனை) வெறுக்கும்படியாகவும், இயக்கர் மன் –
யஷர்களுக்கு அரசனான குபேரன், பதி பொலிவு சிதைந்தது என்றிடஉம் – ‘(எனது)
நகரமாகிய அளகை (இந்நகரத்திற்குமுன்) அழகுகெட்டதாகும்’ என்று
சொல்லும்படியாகவும், மற்று உள் வானவர்-மற்றுமுள்ள (வருணன் முதலிய)
தேவர்கள், பதிகள் புல் பதி ஆகி போயின எனவும் – ‘எங்கள்) நகரங்கள்
(இந்நகரத்திற்குமுன்) இழிந்தநகரங்களாய்விட்டன’ என்று சொல்லும்படியாகவும்,-
‘புரைஅறு புந்தியால் – குற்றமற்ற (தனது) மனத்தின் செயலால், புவிமேல் –
பூமியில், நல்பதி இது ஒன்று இயற்றினான் -சிறந்த இந்நகரமொன்றை (விசுவகர்மன்)
செய்தான், ‘என்று-, நாரண ஆதிகள் துதித்திடஉம் – திருமால் முதலானவர்கள்
புகழவும்,-(எ -று.)- ‘சமைத்த’ என அடுத்த கவியோடு தொடரும்.

     இச்செய்யுளில் அழகுகுலைந்தது, பொலிவுசிதைந்தது, புன்பதியாகிப்போனஎன
ஒருபொருளைத்தருஞ்சொற்கள் வெவ்வேறு வந்தது பொருட்பின்வருநிலையணி.
இயக்கர்-யக்ஷர் என்ற வடசொல்லின் திரிபு, நாரணாதி – நாரயாணாதி என்ற
வடமொழித் தொடரின் விகாரம்

சந்திராதபமும் தினகராதபமும் இரு பொழுதினும் எழச் சமைத்த
மந்திராதிகளும், மஞ்சமும், மதிலும், மகர தோரண மணி மறுகும்,
கொந்து இராநின்ற சோலையும், தடமும், கொற்றவன்
கோயிலும், நோக்கி,
இந்திராபதி, அவ் இந்திரன் பெயரால், ‘இந்திரப்பிரத்தம்’
என்று இட்டான்.-அந்நகரத்துக்குக் கண்ணன் இந்திரப்பிரத்தமென்று
பேரிடுதல்.

சந்திர ஆபதம்உம் – சந்திரனுக்கு ஆபத்தும், தினகர
ஆபதம்உம் -சூரியனுக்கு ஆபத்தும், இருபொழுதின்உம் எழ – (இராபகல்என்ற),
இரண்டுகாலங்களிலும் உண்டாகும்படி, சமைத்த- (விசுவகர்மன்) நிருமித்த, மந்திர
ஆதிகள்உம் – மாளிகை முதலியவற்றையும், மஞ்சம்உம் – கட்டில்களையும்,
மதில்உம்-மதில்களையும், மகர தோரணம் மணி மறுகுஉம்-மகரதோரணங்கள்
அடர்ந்த அழகிய விதிகளையும், கொந்து இராநின்ற சோலைஉம் – பூங்கொத்துக்கள்
பொருந்திய சோலைகளையும், தடம்உம் – தடாகங்களையும், கொற்றவன்
கோயில்உம்- அரசன் வசித்தற்குஉரிய அரண்மனையையும், இந்திராபதி -திருமகள்கணவனானகண்ணபிரான், நோக்கி-பார்த்து, அ இந்திரன் பெயரால்
இந்திரப்பிரசித்தம் என்றுஇட்டான் – அந்நகரத்தைச் செய்வித்த இந்திரனுடைய
பெயரினால் (அதற்கு)இந்திரப்பிரஸ்த மென்று பெயரிட்டருளினான்; (எ-று.)

     பிரஸ்த மென்ற வடிசொல் – தங்குமிடமென்று பொருள்படும். இந்நகரம்
அமைத்தற்கு இந்திரன் ஏவுதற்கருத்தாவாயினாதலால், அவன்பெயரால் இதற்கு
இந்திரப்பிரஸ்த மென்று பெயரிடப்பட்டதென்க. இந்நகரத்து உபரிகைமுதலியன
மிகவும் உயர்ந்துள்ளதனால் சந்திரசூரியர்களுக்கு எப்பொழுதும் தடையுண்டாகின்ற
தென்பது, முதலடியின் கருத்து: தொடர்புயர்வுநவிற்சியணி. சந்த்ராபதம்,
திநகராபதம்,மந்திராதி, மகரதோரணம், இந்திராபதி, இந்திரன் – வடசொற்றிரிபுகள்.
திந கரன் -பகலைச் செய்பவன். மகரதோரணம் – கறாமீன்வடிவமையச்
சித்திரரிக்கப்பட்டதோரணம். கொந்து=கொத்து: மெலித்தல்

இமையவர் பதியில் உள்ளன யாவும் இங்கு உள; இங்கு மற்று உள்ள
அமைவுறு பொருள்கள் அங்கு இல’ எனுமாறு, அமைத்த வான்
தொல் பதி அழகைச்
சமைவுற விரித்துப் புகழ்வதற்கு உன்னில், சதுர் முகத்தவனும்
மெய் தளரும்;
நமர்களால் நவில முடியுமே? முடியாது; ஆயினும், வல்லவா நவில்வாம்:-அந்நகரச்சிறப்பைக் கூறத்தொடங்கல்.

இமையவர்பதியில் உள்ளன யாஉம் – தேவலோகத்திலுள்ள
சிறந்தபொருள்களெல்லாம், இங்குஉள – இந்நகரத்தில் உள்ளன: மற்று-, இங்கு
உள்ளஅமைவு உறு பொருள்கள் – இந்நகரத்திலுள்ள சிறந்தபொருள்கள் (பல),
அங்கு இல- அத்தேவலோகத்தில் இல்லை,’ எனும் ஆறு – என்று சொல்லும்படி,
அமைத்த-உண்டாக்கிய, ‘வான் தொல் பதி – சிறந்த பெரிய அந்நகரத்தினது,
அழகை-,சமைவுஉற விரித்து புகழ்வதற்கு உன்னில் – தகுதியாக விரித்துச்
சொல்லுதற்கு எண்ணினால், சதுர்முகத்தவன்உம் மெய்தளரும் – நான்கு
முகங்களையுடையவனான பிரமனும் மனம் தளர்வான்; (அங்ஙனமாயின்),
நமர்களால் நவில முடியும்ஓ- எம்போலியரால்சொல்லமுடியுமோ? முடியாது;-
ஆயின்உம் –  ஆனாலும், வல்ல ஆ – (எமக்கு) இயன்றவளவு, நவில்வாம்-
வருணித்துக்கூறுவோம்; (எ-று.)- அதனை, அடுத்தபதினொருகவிகளிற் கூறுகிறார்.
மற்று – வினைமாற்று.

     மேற்கூறப்படும் நகரவருணனைக்குஇது ஓர் அவையடக்கமாய் அமைந்தது.
நான்குமுகங்களையுடையவனுக்கும் முடியாதசெயல் ஒருமுகத்தையுடைய நம்மவர்க்கு
(மனிதர்கட்கு) முடியாதுஎன்ற கருத்தை, ‘சதுர்முகத்தவன்’ என்ற பெயர்
உட்கொண்டதனால், கருத்துடையடைகொளியணி. 

விதி மறை முறையில் சாந்தி செய் கடவுள் வேதியர்
ஆரவம் ஒரு சார்;
மதி முறை தவறா அமைச்சர் சொல் விழையும் மன்னவர்
ஆரவம் ஒரு சார்;
நிதி கெழு செல்வத்து அளகையோர் நெருக்கால் நிறைந்த பேர்
ஆரவம் ஒரு சார்;
பதிதொறும் உழவர் விளை பயன் எடுக்கும் பறை கறங்கு
ஆரவம் ஒரு சார்;-இதுமுதற் பதினொருகவிகள்-இந்திரப்பிரத்தவருணனை.

மறைவிதி முறையின் – வேதங்களிற்கூறிய விதிவாக்கியங்களின்
முறைமைப்படி, சாந்திசெய் – (நகரப்பிரவேசத்திற்காகச் சிலதோஷ)
சாந்திச்சடங்குகளைச் செய்கிற, கடவுள்வேதியர் – தெய்வத்
தன்மையையுடையபிராமணர்களது, ஆரவம் – மந்திர முழக்கம், ஒரு சார்-
ஒருபக்கத்திலும்,-மதி முறைதவறா -அறிவுடைமையால் நீதிதவறாத, அமைச்சர்-
மந்திரிகளுடைய, சொல் – சொற்களை, விழையும் – விரும்பிக்கேட்டொழுகுகிற,
மன்னவர் – அரசர்களுடைய, ஆரவம்-பேரொலி, ஒரு சார்-ஒருபக்கத்திலும்,- நிதி
கெழு செல்வத்து-நிதிபோல் நிறைந்த செல்வத்தையுடைய, அளகையோர் –
அளகாபுரிக்குஉரியோராகிய வைசியர்களுடைய, நெருக்கால்-நெருக்கத்தினால்,
நிறைந்த-, பேர் ஆரவம் – பெரிய ஆரவாரம், ஒரு சார்-ஒருபக்கத்திலும்,-
பதிதொறுஉம் – ஊரின்இடந்தோறும், உழவர் விளை பயன் எடுக்கும்-வேளாளர்
(ஆங்காங்கு) விளையும்பயன்களை யெடுத்துக்கொள்ளும்போது (களிப்பினால்)
முழங்குகிற, பறை-வாத்தியங்கள், கறங்கு-ஒலிக்கிற, ஆரவம்-முழக்கம், ஒரு
சார்-ஒருபக்கத்திலும், (அந்நகரிலுள்ளன); (எ-று.)- ‘உள்ளன’ என் வினைமுற்று
வருவிக்க; மேல்3-கவிகளிலும் இவ்வாறே.

     கவிகள் தாம் வருணிக்கும் நாடு நகரம் மலை முதலிய இடங்களில் பலவகை
முழக்கமுள்ளன என்று வருணனை கூறுதல், ஒருமரபு. இச்செய்யுளில் அடிதோறும்
ஈறெழுத்து ஒத்துவந்தது, இயைபுத்தொடை.

     இங்கே ‘சாந்தி’ என்றது, நகரப்பிரவேசகாலத்தில் தோஷநிவாரணமாகச்செய்யும்
சடங்கைக்குறிக்கும்.  குபேரனது இராசதானியான அளகாபுரியைச் செல்வமிகுதிக்கு
உரியவர்களாகிய வைசியர்க்கு உரியதெனக்கூறுதல், கவிசமயமாதலால், இங்குவைசியர்
‘அளகை யோர்? எனப்பட்டனர்; திருவிளையாடற்புராணத்து,வன்னியுங் கிணறு
மிலிங்கமுமழைத்தபடலத்தில் “பொன்னாட்டின் மடவாரைப்புணர்வதற்கோ
நம்மளகாபுரத்துவேந்த, னன்னாட்டின்மடவாரை மணப்பதற்கோ”
என்றதுகொண்டும் இதனையுணர்க; பந்தனந்தாதியில், பந்தனென்ற வைசியன்
“பொன்னளகைப்பந்தன்,” “அளகைகோன்,” “அளகைச்சேய்” என்று
கூறப்படுதலுங்காண்க;  ஆதியில் அளகாபுரியினின்றுவைசியர்கள் பிறஇடங்கட்கு
வந்தனரென ஒருகதைகூறுதலும்உண்டு. பதிதொறும்உழவர் விளைபயன் எடுத்தல்-
“கதிர்படுவயலினுள்ள கடிகமழ்பொழிலி னுள்ள, முதிர் பலமரத்தினுள்ள, முதிரைகள்
புறவினுள்ள, பதிபடுகொடியினுள்ள படிவளர்குழியினுள்ள மது வனமலரிற்
கொள்ளும்வண்டெனமள்ளர்கொள்வார்” எனக் கம்பர்கூறியவாறுகாண்க.
அங்ஙனம்பயன்கொள்ளுபொழுது களிப்புமிகுதல்காரணமாகப்பறைகறங்குதல்
இயல்பு, நெருக்கு-நெருங்குஎன்றமுதனிலை திரிந்த தொழிற்பெயர்

தோரண மஞ்சத் தலம்தொறும் நடிக்கும் தோகையர்
நாடகம் ஒரு சார்;
பூரண பைம் பொன் கும்பமும், ஒளி கூர் புரி மணித்
தீபமும் ஒரு சார்;
வாரணம், இவுளி, தேர், முதல் நிரைத்த வாகமும்
சேனையும் ஒரு சார்;
நாரணன் வனச பத யுகம் பிரியா நலம் பெறும்
மா தவர் ஒரு சார்;

தோரணம் – தோரணங்களையுடைய, மஞ்சம் தலம் தொறுஉம்-
மாளிகைகளின் உபரிகையிடங்களிலெல்லாம், நடிக்கும்- நாட்டியஞ்செய்கிற,
தோகையர்-அழகியமகளிர்களுடைய, நாடகம் -நர்த்தனங்கள், ஒரு சார்-
ஒருபக்கத்திலுள்ளன: பைம்பொன்பூரணகும்பம்உம்-பசும்பொன்னாலாகிய
நிறைகுடங்களும், ஒளி கூர் புரி மணி தீபம்உம்-ஒளிமிக்க அழகியஇரத்தின
தீபங்களும், ஒருசார்-ஒருபக்கத்திலுள்ளன: வாரணம் இவுளி தேர் முதல்-யானை
குதிரை தேர்முதலாக, நிரைத்த-அணியணியாகத்தொகுக்கப்பட்ட, வாகம்உம் –
வாகனங்களும், சேனைஉம் – காலாட்சேனையும், ஒருசார்-ஒரு பக்கத்திலுள்ளன:
நாரணன்-திருமாலினுடைய,  வனசம் பத யுகம்- தாமரைமலர்போன்ற
திருவடியிணையை, பிரியா – இடைவிடாது தியானிக்கிற, நலம் பெறு-நன்மையைப்
பெற்ற, மா தவர்-சிறந்த தவத்தையுடைய முனிவர்கள், ஒருசார்-
ஒருபக்கத்திலுள்ளார்கள்;

     தோரணம்-கட்டுவாயில்: மங்களார்த்தமாக மாவிலைமுதலியவற்றாற்
கட்டப்படுவனவுமாம். மஞ்சம் – மேனிலை. ‘நாடகம்-கதை தழுவிவருங் கூத்து’
என்பது சிலப்பதிகாரவுரை. பூர்ணகும்பமும், தீபமும் -அஷ்டமங்கலங்களிற்
சேர்ந்தவை. நால்வகைப்படையுள்முந்தினமூன்றும்முதலிற்கூறப்பட்டதனால்.
பின்புசேனையென்றது- பதாதியைக்குறிக்கும்.நாராயண னென்றதிருநாமம்-
நாரஅயநஎனப்பிரிந்து, சிருஷ்டிப்பொருள்களுக்கெல்லாம் இருப்பிடமான
வனென்றும், சிருஷ்டிப்பொருள்களைத் தனக்குஇருப்பிடமாகவுடையவனென்றும்,
பிரளயப்பெருங்கடலைத் தனக்குஇடமாகக்கொண்டவனென்றும்.
மற்றும்பலவாறும்பொருள்படும். வநஜம்-நீரிற்பிறப்பதெனக்காரணப்பொருள்
படுவது: தாமரைக்கும் காரணவிடுகுறி. 

சிற்ப வல்லபத்தில் மயன்முதல் உள்ள தெய்வ வான்
தபதியர் ஒரு சார்;
வெற்புஅகம் மருவி வீற்று வீற்று இருக்கும் விஞ்சையர்
கின்னரர்ஒரு சார்;
அற்புத வடிவின் உருப்பசி முதலாம் அழகுடை
அரம்பையர் ஒரு சார்;
பொற்புடை அமரர் புரியும் மெய்ம் மகிழ்ந்து பொழிதரு
பொன் மலர் ஒரு சார்.

சிற்பம் வல்லபத்தின்-சிற்பத்தொழில் வல்லமையையுடைய, மயன்
முதல்- மயன் முதலாக, உள்ள-, வான் தெய்வம் தபதியர் பெருமையையுடைய
தெய்வத்தச்சர்கள், ஒரு சார் – ஒரு  பக்கத்திலும்,-வெற்பு அகம் மருவி-
மலையிடங்களிற் பொருந்தி, வீற்றுவீறு இருக்கும்-வெவ்வேறாகச் சிறப்புடனிருக்கிற,
விஞ்சையர்-வித்தியாதரர்களும், கின்னரர்-கின்னரர்களும், ஒரு சார்- ஒரு
பக்கத்திலும்,- அற்புதம் வடிவின்-(காண்பவர்க்கு) அதிசயத்தை விளைக்கிற
வடிவத்தையுடைய, உருப்பசி- முதல் ஆம் – ஊர்வசி முதலான, அழகுஉடை
அரம்பையர்-அழகையுடைய தேவமாதர்கள், ஒருசார்-ஒருபக்கத்திலும்,
(அந்நகரத்திலுள்ளார்கள்); பொற்பு உடை – அழகையுடைய, அமரர்-தேவர்களும்,
பதிஉம்- (அவர்கட்குத்) தலைவனான இந்திரனும், மெய் மகிழ்ந்து பொழிதரு-
மனம்மகிழ்ந்துசொரிகிற, பொன் மலர்-பொன்மயமான (கற்பக விருட்சத்தின்)
மலர்கள், ஒரு சார்-(அந்நகரத்து) ஒருபுறத்திலுள்ளன; (எ-று.)

     சிற்பம்-கோயில் வீடு முதலியன கட்டுந்தொழில். மயன்-அசுரர்களதுசிற்பி.
வித்தியாதரரும் கின்னரரும் மலையில்வாழ்பவராதலால், அவர்கட்கு
‘வெற்பகமருவிவீற்றுவீற்றிருக்கும்’ என்றஅடை மொழி கொடுக்கப்பட்டது. வீற்று-
வேறுபாடு. வீறு-வேறொருவர்க்கில்லாத சிறப்பு. கின்னரர் –
கிந்நரமென்னும்வாத்தியத்தைக் கையிற்கொண்டு பாடித்திரியும்தேவசாதியார்.
ரம்பையென்று ஒரு தேவமாதின்பெயராதலால், அதன் பன்மையாகிய
அரம்பையரென்பது தேவமாதர்க்குப் பெயராக வழங்கும். பொன்னுலகமாகிய
சுவர்க்கலோகத்தில் உள்ளவை யாவும் பொன்மயமாயுள்ளவையாதலால், அங்கு
உள்ளதேவதருக்களின்மலர் பொன்மலரெனப்பட்டது. இந்நகரத்தின் சிறப்புப்பற்றி,
பலரும்தம்தம் அழகிய நகரங்களை விட்டு இதில்வந்து தங்குகின்றன ரென
அறிக.அமராபுரியும் என்றும் பாடம். 

வரை எலாம், அகிலும், சந்தனத் தருவும், மான்மத நாவியின் குலமும்;
திரை எலாம், முத்தும், பவள வண் கொடியும், செம் மணிகளும்,
மரகதமும்;
கரை எலாம், புன்னைக் கானமும், கண்டல் அடவியும்,
கைதை அம் காடும்;
தரை எலாம், பொன்னும், வெள்ளியும், பழன வேலி சூழ்
சாலியும், கரும்பும்.

 வரை எலாம்-இந்நகரத்தைச்சார்ந்த)மலைகளிலெல்லாம், அகில்உம்-
அகில்மரங்களும், சந்தனம் தருஉம்-சந்தனமரங்களும், மான்மத நாவியின் குலம்உம்-
கஸ்தூரிகளின் கூட்டங்களும், திரைஎலாம்-(இந்நகரத்தைச் சேர்ந்த)
கடல்களிலெல்லாம், முத்துஉம் – முத்துக்களும், வள் பவளம் கொடிஉம்-
சிறந்தபவழக்கொடிகளும், செம்மணிகள்உம் – சிவந்தமாணிக்கங்களும், மரகதம்உம் –
பச்சையிரத்தினங்களும்,-கரை எலாம்-(அக்கடற்) கரைகளிலெல்லாம்,
புன்னைகானம்உம் – புன்னைமரங்களின் தொகுதியும், கண்டல் அடவிஉம்-
வெண்டாழைக்காடும், அம் கைதை காடுஉம் – அழகிய செந்தாழைக்காடும்,
தரைஎலாம் -(இந்நகரத்தைச் சார்ந்த) இடங்களிலெல்லாம், பொன்னும் வெள்ளியும்-,
பழனம்வேலி – (இந்நகரத்தைச்) சூழ்ந்த மருதநிலங்களிலெல்லாம், சூழ் சாலிஉம்
கரும்புஊம்- நிறைந்த நெற்பயிர்களும் கரும்புகளும் (உள்ளன): (எ-று.)

     முதலடியிற் குறித்தவை-குறிஞ்சிநிலப்பொருள்கள். இரண்டு முன்றாமடிகளிற்
குறித்தவை-நெய்தல் நிலப்பொருள்கள். நான்காமடியின் இறுதியிற் குறித்தவை-
மருதநிலப்பொருள்கள். பொன்னும் வெள்ளியும் மலையில் தோன்றுதலால்
குறிஞ்சிநிலப்பொருள்களேயாயினும், அங்குநின்று யாற்றுநீர்ப்பெருக்கால்
கொணர்ந்துகொழிக்கப்பட்டனவென மருதநிலத்தைச் சார்த்திக் கூறுதலும் உண்டு.
இந்திரப்பிரஸ்தத்துக்குக் கடல் நெடுந்தூரத்திலுள்ளதாயினும், இவ்வாறு
சார்த்திக்கூறியஇதற்குக் கருத்து-இந்நகரின் எல்லை கடலினளவு மெனக்
கொள்ளவேண்டும்.கண்டல், கைதை என்பன-தாழையின் சாதிபேதம்.

ஆலையில் கரும்பின் கண்களில் தெறித்த ஆரம், அவ் வயல்
புறத்து அடுத்த
சோலையில் பயிலும் குயிலையும், சுருதிச் சுரும்பையும், நிரை
நிரை துரப்ப;
வேலையில் குதித்த வாளைஏறு உம்பர் வியன் நதி கலக்கி,
வெண் திங்கள்
மாலையில் பயிலும் வானமீன் கொடிபோல், வாவியில்
குளிக்கும்-மா மருதம்.

மா மருதம் – (அந்நகரத்தைச் சார்ந்த) பெரிய மருத நிலங்களில்,-
ஆலையில்-ஆலையென்னும் யந்திரத்தில், (இட்டு ஆட்டிச் சாறுகொள்ளப்படுகிற),
கரும்பின்-கரும்புகளின், கண்களின் -கணுக்களினின்று, தெறித்த-(நெடுந்தூரமளவும்)
வெளிச்சிதறிய, ஆரம் – முத்துக்கள், அ வயல்புறத்து அடுத்த சோலையில் பயிலும்-
அந்தக்கழனிகளின் அருகிற்பொருந்தியுள்ளள சோலைகளிலிருக்கிற, குயிலைஉம்-
குயில்களையும், சுருதி சுரும்பைஉம் – சுருதிகூட்டுவது போல ரீங்காரஞ்செய்கிற
வண்டுகளையும், நிரைநிரை துரப்ப-வரிசை வரிசையாக ஓட்டுவன; வேலையில்
குதித்த-(அந்நகரத்தைச் சார்ந்த) கடலினின்று துள்ளியெழுந்த, வாளை ஏறு-சிறந்த
வாளைமீன்கள், உம்பர் வியன் நதி கலக்கி-மேலுலகத்திலுள்ள பெரிய
தேவகங்காநதியைக்கலக்கி, வெள் திங்கள் மாலையில் பரவும் வானம் மீன்கொடி
போல்-வெண்மையாகிய இளம்பிறைதோன்றுவரிசைபோல, வாவியில் குளிக்கும் –
(அந்நகரைச்சார்ந்த) தடாகங்களிலே மூழ்கும்; (எ-று.)

     முதிர்ந்தஉயர்ந்தசாதிக்கரும்புகளின் கணுக்களினின்று முத்துப்பிறக்குமென்றல்,
கவிமரபு, சுருதியாவது-முதல் நாதமாகிய ஷட்ஜத்தோடு பஞ்சமமென்னுஞ் சுவரத்தை
மநோரஞ்சநமாம்படி சுத்தமாகப் பொருத்தல். கடல் நெய்தலும், வாவி-மருதமுமாம்;
கடலினின்று குதித்த வாளை வாவியிற்குளிக்கும் எனக் கூறவே, திணைமயக்கமாயிற்று.
ஏறு ஆண்மைப்பெயர்; மீனுக்கு ஏறு என்னும் பெயர் உரியதாதலை, “மீனேறுயர்த்த
கொடிவேந்தன்” என்ற சிந்தாமணியாலும் அறிக. ‘வானமீன்கொடிபோல் என்ற
உவமையால், சிலவாளைமீன்களின் பின்னே சிலவாளைமீன்களாக
வரிசையாகச்சென்றமைபெறப்படும். மாலையிற்பயிலும் எனவும் பாடம்.

புரிசையின் குடுமிதொறும் நிரை தொடுத்த பொற் கொடி
ஆடையின் நிழலைக்
கிரிமிசைப் பறக்கும் அன்னம் என்று எண்ணி, கிடங்கில் வாழ்
ஓதிமக் கிளைகள்,
விரி சிறைப் பறவின் கடுமையால் எய்தி, மீது எழும்
மஞ்சு எனக் கலங்கி,
பரிசயப்படு தண் சததளப் பொகுட்டுப் பார்ப்பு உறை
பள்ளிவிட்டு அகலா;

புரிசையின்-(அந்நகரத்து) மதில்களின், குடுமிதொறுஉம் –
சிகரங்களிலெல்லாம், நிரை தொடுத்த – வரிசையாகக் கட்டப்பட்ட, பொன் கொடி
ஆடையின்நிழலை – அழகியகொடிச்சீலைகளின் தோற்றத்தை, கிரிமிசை பறக்கும்
அன்னம் என்று எண்ணி-மலைகளின்மேற் பறக்கிற அன்னப்பறவைகளென்று கருதி,
கிடங்கில் வாழ் ஓதிமம் கிளைகள்-அகழியில்வாழ்கின்ற அன்னப்பறவைகளின்
கூட்டங்கள், விரி சிறை பறலின் கடுமையால் எய்தி-விரிந்த சிறகுகளைக்கொண்டு
பறத்தலின் விசையால் எழுந்துமேற்சென்று (அங்கு அக்கொடித்தோற்றத்தைக்
கண்டவுடனே), மீது எழும் மஞ்சு என கலங்கி – மலைமீதுஎழுகிற
வெண்ணிறமேகமென்றுஎண்ணிக் கலக்கமுற்று, பரிசயம் படு தண் சததளம்
பொகுட்டுபார்ப்பு உறை பள்ளி விட்டு அகலா – (தாம்) பழகுதல் பொருந்திய
குளிர்ந்ததாமரைமலர்களின் பொகுட்டாகிய தம்குஞ்சுகளிருக்கின்ற சயனத்தைவிட்டு
நீங்காவாயின; (எ-று.)

     அந்நகரத்துமதிற்புறத்திலுள்ள அகழியில் வசிக்கின்ற அன்னப்பறவைகள்
அம்மதிலின்சிகரங்களில் அசைந்து விளங்குங்கொடிச்சீலைகளைத் தங்களினமான
அன்னப்பறவைகளென்று மாறுபடக்கருதி அவற்றோடு கூடிக்குலாவலா
மென்றகருத்தினால் சிறகுகளை அடித்துக்கொண்டு விசையோடு மேலெழுந்தன;
அங்ஙனம் சென்று நோக்குகையில் அக்கொடிவரிசையை மேகமென்று மீண்டும்
வேறுவகையாக மாறுபடக்கருதி அச்சங்கொண்டு மீண்டு தாமரைப்பொகுட்டில்
தங்குகிற தம்குஞ்சுகளை விட்டு நீங்காது காப்பனவாயின வென்பதாம்.
வெண்ணிறமேகத்தைக் கண்டு அஞ்சி யொடுங்குதல், அன்னத்திற்கு இயல்பு.
மயக்கவணி. கொடியாடையின் நிழல் – நீரிற் காணப்படும் கொடிச்சீலையின்
பிரதிபிம்பமுமாம்; மதில்மீதுள்ளகொடிச்சீலையின்சாயையை நீரிற்கண்டு
அவற்றைமலைமீதுபறக்கும் அன்னங்களின் நிழலென்று கருதின வென்க.
பறல்-பறத்தலென்பதன் விகாரம். சிறைப்பாலின் எனவும் பாடம்.

கயல் தடஞ் செங் கண் கன்னியர்க்கு இந்து- காந்த வார்
சிலையினால் உயரச்
செயல்படு பொருப்பின் சாரலில், கங்குல் தெள் நிலா
எறித்தலின் உருகி,
வியப்பொடு குதிக்கும் தாரை கொள் அருவி விழைவுடன்
படிவன சகோரம்,
நயப்புடை அன்னச் சேவல், பேடு என்று நண்ணலால்
உளம் மிக நாணும்.

கயல் தட செம் கண் கன்னியர்க்கு-கயல்மீன்போலப் பிறழ்கிற
பெரியசெவ்வரிபரந்த கண்களையுடைய இளம்பெண்கள் வினையாடுதற்பொருட்டு,
வார்இந்துகாந்தம் சிலையினால் உயர செயல்படு – பெரியசந்திரகாந்தக்கற்களால்
உயரமாகச் செய்யப்பட்ட, பொருப்பின்-செய்குன்றுகளின், சாரலில் – பக்கங்களிலே,
கங்குல் – இராப்பொழுதில், தெள்நிலா எறித்தலின்-தெளிவான சந்திரகாந்தி
வீசுதலினால், உருகி – (அக்கற்கள்) உருக (அவற்றினின்று), வியப்பொடு குதிக்கும்-
(காண்பவர்) அதிசயிக்கும்படியான தன்மையோடு பாய்கிற, தாரை கொள் அருவி –
தாரையாகவுள்ள நீரருவிகளில், விழைவுடன்படிவன – விருப்பத்தோடு
முழுகுகின்றனவான, சகோரம் – சகோரபட்சிகளை, நயப்பு உடை அன்னம்
சேவல் – விருப்பத்தையுடைய ஆணன்னப்பறவைகள், பேடு என்று
நண்ணலால் – (தம்) பேடையாகிய அன்னப்பறவைக ளென்று எண்ணிச்
சமீபித்ததனால், உளம் மிக நாணும் – (அவ்வன்னங்கள்) மனம் மிகவெள்கும்;

     சந்திரகாந்தம் – சந்திரனொளிபட்டதனால் நீரை யுமிழுங் கல்; சகோரம் –
நிலாவை வாயிலேற்று உண்ணும் பறவை. சகோரம் நிலவையுண்டு வாழும் பறவை
யாதலால், நிலாத்தோற்றத்தால் சந்திரகாந்தக் கல்லினின்றுபெருகும்நீரில்
களிப்போடுமூழ்கி விளையாடிக்கொண்டிருந்தன. வெண்ணிறமான அந்நீரில்படிந்து
வெண்ணிறமாகக் காணப்படுதலாலும், நீரில் விளையாடுதலாலும், அவற்றைப்
பெண்ணன்னங்களென்று  ஆணன்னங்கள் மாறுபடக்கருதி ஆதரத்தோடு
அருகில்வந்து தாம் கருதிக் காதலித்த அன்னப்பேடுகளல்லவென்று
தெரிந்ததனால்,நாணமுற்றன; மயக்கவணி.

கயல் தடஞ் செங் கண் கன்னியர்க்கு இந்து- காந்த வார்
சிலையினால் உயரச்
செயல்படு பொருப்பின் சாரலில், கங்குல் தெள் நிலா
எறித்தலின் உருகி,
வியப்பொடு குதிக்கும் தாரை கொள் அருவி விழைவுடன்
படிவன சகோரம்,
நயப்புடை அன்னச் சேவல், பேடு என்று நண்ணலால்
உளம் மிக நாணும்.

கயல் தட செம் கண் கன்னியர்க்கு-கயல்மீன்போலப் பிறழ்கிற
பெரியசெவ்வரிபரந்த கண்களையுடைய இளம்பெண்கள் வினையாடுதற்பொருட்டு,
வார்இந்துகாந்தம் சிலையினால் உயர செயல்படு – பெரியசந்திரகாந்தக்கற்களால்
உயரமாகச் செய்யப்பட்ட, பொருப்பின்-செய்குன்றுகளின், சாரலில் – பக்கங்களிலே,
கங்குல் – இராப்பொழுதில், தெள்நிலா எறித்தலின்-தெளிவான சந்திரகாந்தி
வீசுதலினால், உருகி – (அக்கற்கள்) உருக (அவற்றினின்று), வியப்பொடு குதிக்கும்-
(காண்பவர்) அதிசயிக்கும்படியான தன்மையோடு பாய்கிற, தாரை கொள் அருவி –
தாரையாகவுள்ள நீரருவிகளில், விழைவுடன்படிவன – விருப்பத்தோடு
முழுகுகின்றனவான, சகோரம் – சகோரபட்சிகளை, நயப்பு உடை அன்னம்
சேவல் – விருப்பத்தையுடைய ஆணன்னப்பறவைகள், பேடு என்று
நண்ணலால் – (தம்) பேடையாகிய அன்னப்பறவைக ளென்று எண்ணிச்
சமீபித்ததனால், உளம் மிக நாணும் – (அவ்வன்னங்கள்) மனம் மிகவெள்கும்;

     சந்திரகாந்தம் – சந்திரனொளிபட்டதனால் நீரை யுமிழுங் கல்; சகோரம் –
நிலாவை வாயிலேற்று உண்ணும் பறவை. சகோரம் நிலவையுண்டு வாழும் பறவை
யாதலால், நிலாத்தோற்றத்தால் சந்திரகாந்தக் கல்லினின்றுபெருகும்நீரில்
களிப்போடுமூழ்கி விளையாடிக்கொண்டிருந்தன. வெண்ணிறமான அந்நீரில்படிந்து
வெண்ணிறமாகக் காணப்படுதலாலும், நீரில் விளையாடுதலாலும், அவற்றைப்
பெண்ணன்னங்களென்று  ஆணன்னங்கள் மாறுபடக்கருதி ஆதரத்தோடு
அருகில்வந்து தாம் கருதிக் காதலித்த அன்னப்பேடுகளல்லவென்று
தெரிந்ததனால்,நாணமுற்றன; மயக்கவணி.

அரி மணிச் சிலையின் சலாகையால் வட்டம் ஆகவே
அமைத்த சாலகம்தோறு,
எரி மணிக் குழையார் வதன மண்டலத்தில் எழிலுடன் மிளிரும்
மைத் தடங் கண்-
விரி மணிக் கதிரோன் அளிக்க முன் களிந்த வெற்பிடை
வீழும் மா நதியின்
புரி மணிச் சுழியில் துணையொடும் உலாவிப் பொருவன
கயல்களே போலும்!

அரிமணி-நீலரத்தினமாகிய, சிலையின்-கல்லினுடைய, சலாகையால்-
சலாகைகளை வைத்து, வட்டம் ஆகவே அமைத்த – வட்டவடிவமாகவே
செய்யப்பட்ட, சாலகம் தோறு-(அந்நகரத்து மாளிகைகளின்) பலகணிகள் தோறும்,
எரிமணி குழையார் வதன மண்டலத்தில்-சொலிக்கிற இரத்தினங்கள் பதித்த
குழையென்னுங் காதணியையுடைய மகளிரதுமுகமண்டலத்திலே, எழிலுடன்மிளிரும்,-
அழகோடு பிறழ்ந்து விளங்குகிற, மை தடகண்-மையிட்ட பெரியகண்கள்,-விரி மணி
கதிரோன் முன் அளிக்க – பரந்த அழகிய கிரணங்களையுடைய சூரியன்
முற்காலத்திற் பெற, களிந்த வெற்பிடை வீழும் – களிந்தமலையினின்று விழுகிற, மா
நதியின்-பெரியயமுநாநதியினது, புறமணிசுழியில்-சுற்றுதலையுடையநீலநிறமுள்ள
சுழியிலே, துணையொடுஉம் உலாவி பொருவன-ஆணும்பெண்ணுமாக
(ஒன்றோடொன்று) மோதி விளையாடுவனவான, கயல்கள்ஏ-கயல்மீன்களையே,
போலும் – ஒக்கும்; (எ-று.)

     யமுநாநதியின் நீர்ப்பெருக்குக் கருதிநிறமுடைய தாதலால்,
நீலரத்தினக்கற்கொண்டு வட்டமாக அமைத்த சாளரம் யமுனையின் நீர்ச்சுழி
போலுமெனவும், அச்சாளரத்தில் விளங்கும் மகளிர் கண்ணிணை அச்சுழியில்
விளையாடும் இணைக்கயல் போலு மெனவும் வருணித்தார்: தற்குறிப்பேற்றவணி,
சலாகை-நாராசம். அரிமணி – இந்திரநீலம்: அரி – இந்திரன்

இனத்தினால் உயர்ந்த இந்திரபுரியும், இந்திரப்பிரத்தமும்,
இரண்டும்,
தனத்தினால், உணர்வால், கேள்வியால், அழகால், தக்கது
ஒன்று யாது?’ எனத் துலைகொள்
மனத்தினால் நிறுக்க, உயர்ந்தது ஒன்று; ஒன்று மண்மிசை
இருந்தது; மிகவும்
கனத்தினால் அன்றித் தாழுமோ? யாரும் கண்டது கேட்டது
அன்று இதுவே.

இனத்தினால்உயர்ந்த – (ஒன்றுக்கு ஒன்று) இனமாய்
(மற்றையெல்லாநகரங்களினுஞ்) சிறந்த, இந்திரபுரிஉம் இந்திரப்பிரத்தம்உம்
இரண்டுஉம்- இந்திரனது அமராவதிநகரமும் இந்த இந்திரப்பிரத்தநகரமும்
ஆகிய இரண்டனுள், தனத்தினால் உணர்வால் கேள்வியால் அழகால் தக்கது
ஒன்று யாது – செல்வம்அறிவு நூற்கேள்வி அழகு என்னும் இவற்றுக்கு
இடமாதலால்மேன்மையுடையதுஎது? என-என்று,  துலைகொள் மனத்தினால்
நிறுக்க-(இந்திரன்) தராசின்தன்மையைக்கொண்டமனத்தினால் நிறுத்துப் பார்க்க,
ஒன்று உயர்ந்தது – (அமராவதியாகிய) ஒரு நகரம் உயர்ந்தது: ஒன்று மண்மிசை
இருந்தது-மற்றொன்றாகியஇந்திரப்பிரத்தநகரம் பூமியில் தங்கியது:  மிகஉம்
கனத்தினால் அன்றி தாழும்ஓ – மிகவும்பாரமுடைமையாலன்றி ஒன்று தாழ்வது
உண்டோ? இது யார்உம் கண்டது – இது எவரும் கண்ணாற்கண்டதே: கேட்டது
அன்று – காதினாற் கேள்வியுற்றதுமாத்திரமன்று;

     பெரிய நகரங்கள் பலவற்றுள்ளும் சிறந்தவையென்று ஓரினப்படுத்தி ஒருங்கு
கூறப்படுகிற அமராவதி இந்திரப்பிரஸ்தம் என்ற இரண்டனுள் மகிமைவாய்ந்தது
எதுவோ என்ற தன் ஐயத்தை அகற்றக்கருதி நடுநிலைமை தவறாத இந்திரன் தன்
மனத்தையே தராசுக்கோலாக நாட்டி அதன் தட்டு இரண்டிலும் இவ்விரண்டு
நகரங்களையும் வைத்துத் தூக்கிப்பார்க்கையில், அமராவதி பெருமைக்குறைவால்
மிகஇலேசுபட்டு வானத்தின்மீது நெடுந்தூரம் உயர, இந்திரப்பிரத்தம்
பெருமைமிகுதியால் அதிககனம் பெற்று நிலத்தில் தாழ்ந்து நின்றதென்க.
இவ்விரண்டனுள் ஒன்று மேலும் ஒன்று கீழுமாக இருத்தலை ஆதாரமாகக்கொண்டு
இக்கற்பனையைக் கூறுகின்றா ராதலால், ‘மிகவுங்கனத்தினா லன்றித் தாழுமோ’
என்றார். கனம் குறையக்குறைய உயர்தலும், கனம் அதிகப்பட அதிகப்படத்
தாழ்தலுமாகிய இயல்பைவிளக்கியவாறு. பிரதியக்ஷப்பிரமாணத்தால் தெளியக்கூடியது
இது,  ஆப்த வாக்கியப்பிரமாணங்கொண்டே நம்பவேண்டிய தன்று என்றபடி. ‘இது’
என்பதற்கு- மிகவும் கனத்தினாலன்றித் தாழ்தல்எனப்பொருள் கொண்டால், ‘யாருங்
கண்டது கேட்டதுஅன்று’ என்பதற்கு – (அத்தன்மை) எவரும் கண்டது மன்று
கேட்டது மன்று என்று உரை கூறலாம். இந்திரபுரி, இந்திரப்பிரத்தம் என்ற
பெயர்களில் இந்திரனது சம்பந்தத்தின் ஒற்றுமையும், மற்றை நகர மனைத்தினுஞ்
சிறந்திருத்தலும் இவ்விரண்டிற்கும் உள்ளதனால், ‘இனத்தினாலுயர்ந்த இந்திரபுரியும்
இந்திரப்பிரத்தமுமிரண்டும்’ என்றார், வசிப்பவரது உணர்வும் கேள்வியும்
நகரின்மேல்வைத்துக்கூறப்பட்டன, நிறுக்க என்றவினையைநோக்கி, மனமாகிய
துலாக்கோலினால்என்று உருவகமாகப்பெருள் காண்க. இச்செய்யுள், உருவகத்தை
அங்கமாகக்கொண்டதற்குறிப்பேற்றவணி.

நிறக்க வல் இரும்பைச் செம்பொன் ஆம்வண்ணம்
இரதமே நிகழ்த்திய நிகர்ப்ப,
பிறக்கமும் வனமும் ஒழித்து, அவண் அமைத்த பெரும்
பதிக்கு உவமையும் பெறாமல்,
மறக் கடுங் களிற்றுக் குபேரன் வாழ் அளகை வடக்கு
இருந்தது; நெடு வானில்
துறக்கமும் ஒளித்தது; இலங்கையும் வெருவித் தொடு
கடல் சுழிப் புகுந்ததுவே.

வல் இரும்பை – வலிய இரும்பை, நிறக்க செம் பொன் ஆம்
வண்ணம்-மாற்றுயர்ந்து சிவந்ததாய் விளங்கச்சிறந்த பொன்னாகும்படி, நிகழ்த்திய-
செய்த, இரதம்ஏ நிகர்ப்ப-இரசகுளிகையே போல, வனம்உம் பிறக்கஉம் ஒழித்து
அவண் அமைத்த- (விசுவகருமன்) காண்டவவனத்தையும் அதைச்சார்ந்த
மலையையும் அழித்து அவ்விடத்தில் தகுதியாக நிருமித்த, பெரும்பதிக்கு – பெரிய
அந்தநகரத்துக்கு, உவமைஉம் பெறாமல்-(தான்) ஒரு புடையொப்பும் ஆகமாட்டாமல்,
மறம் கடு களிறு குபேரன் வாழ் அளகை-வலிமையையுடைய உக்கிரமான
மதயானையையுடைய குபேரன் வாழ்கிற அளகாபுரி, வடக்கு இருந்தது-; துறக்கம்உம்
– சுவர்க்கலோகமும், நெடுவானில் ஒளித்தது – நெடுந்தூரத்ததான ஆகாயத்தில்
மறைந்துவிட்டது; இலங்கைஉம் – இலங்காபுரியும், வெருவி – அஞ்சி, தொடு கடல்
சுழி புகுந்தது-தோண்டப்பட்ட கடலினிடை யிடத்தை யடைந்தது; (எ-று.)

     இயல்பில் வடதிசையில் நெடுந்தூரத்திலுள்ளதான அளகாபுரியையும்,
வானத்தில்நெடுந்தூரத்துக்கு அப்பாலுள்ள தாய் மனிதர் கண்ணுக்குப்புலனாகாத
அமராவதிநகரையும், தென்கடலில் நூறுயோசனைக்கு அப்பாலுள்ளதான
லங்காபுரியையும், இந்நகரத்திற்குத் தாம் ஒப்பாகமாட்டாமல் தோற்றுவெள்கி அஞ்சி
வடக்கிருத்தலும் வானத்திற்சேர்ந்துவிடுதலும் தென்கடலினி டைவிழுந்திடுதலும்
செய்தனவாக வருணித்தார்; ஏதுத்தற்குறிப்பேற்றவணி. வடக்கிருத்தல்
என்றதொடர்-வடதிசையிலேதங்குதலென்றபொருளோடு, உயிரைத்துறப்ப
தென்றதுணிவுடன் வடதிசைநோக்கித் தருப்பைப்புல்லிற் கிடத்தலாகிய
பிராயோபவேசமென்ற பேர் பூண்டஒருவிரதத்தையுங் காட்டவல்லதாதலறிக.
இரும்பைப் பொன்னாக்குதல் -இரசவாதமென்னும்வித்தை; ஸ்பர்ஸவேதி யென்னும்
மகா மூலிகையின் இரசத்தைஇரும்பின் மேற்பிழிந்தால் அதுபொன்னாகுமென்பர்.
இரசம்=ரஸம்: சாறு.இரும்பைப்பொன்னாக்கு மிரசம் போல, வனத்தை நகராக்கின
விசுவகருமனென்க.பிறக்கம்-நெடுந்தூரத்திலுள்ளாருங் காணும்படி விளங்குவது:
மலை, ‘வடக்கிரிந்தது’ எனவும் பாடம். 

வாவியும், புறவும், சோலையும், மலர்ந்த மலர்களும்,
மணிகளின் குழாமும்,
மேவி எங்கு எங்கும் மயங்கலின் தம்தம் வேரியும்
வாசமும் தூதா,
பூஇனம் சுரும்பை அழைக்கும் வண் பழனப் புது வளம்
சுரக்கும் நாடு அனைத்தும்
ஓவியம் குறித்துப் பூமகள் வடிவை ஒப்பனை செய்தவாறு
ஒக்கும்.

பூ இனம் – பலவகை மலர்களாகிய மகளிர், தம்தம் வேரிஉம்
வாசம்உம்தூது ஆ – தம்தமது தேனையும் நறுமணத்தையும் தூதாகக்கொண்டு,
(அவற்றால்),சுரும்பை அழைக்கும் – வண்டுகளாகிய தம்கணவரை அழைக்கப்பெற்ற,
வண்பழனம்- வளப்பமுள்ள மருதநிலத்தின், புது வளம் – புதுமையான
வளப்பங்கள், சுரக்கும் -மேன்மேல் மிகப்பெற்ற, நாடு அனைத்துஉம்
அந்நாடுமுழுவதிலும்,-வாவிஉம் -குளங்களும், புறவுஉம் – கொல்லைகளும்,
சோலைஉம் – சோலைகளும், மலர்ந்தமலர்கள்உம்- மலர்ந்த பூக்களையும்,
மணிகளின் குழாம்உம் – இரத்தினங்களின்கூட்டத்தையும், மேவி – பொருந்தி,
எங்கு எங்குஉம் மயங்கலின் -எல்லாவிடங்களிலுஞ் செறிந்திருத்தலால், (அச்செறிவு),
பூமகள்வடிவை ஓவியம்குறித்து ஒப்பனை செய்த ஆறு ஒக்கும்-பூமிதேவியின்
வடிவைச் சித்திரமெழுதிஅலங்கரித்த தன்மையைப் போலும்;

     அந்நாடுமுழுவதிலும், குளங்களும் கொல்லைகளும் சோலைகளும்,
பலவகைமலர்களையும் பலவகையிரத்தினங்களையும் உடையனவாயிருத்தல்,
பூமிதேவியின்வடிவத்தைச் சித்திரமெழுதி அலங்கரித்தாற்போலுமென்பதாம்:
தற்குறிப்பேற்றவணி. மணிகள், மலையருவியாற் கொணர்ந்து கொழிக்கப்பட்டவை.
தூதா அழைக்கும் என்ற சொற்களின்குறிப்பால், பூவினத்தினிடத்து மகளிரினத்தின்
தன்மையும், சுரும்பினிடத்து நாயகரின் தன்மையும் ஏற்பட்டன; இது, குறிப்புருவகம்.
தூதுபோலத் தேனும் மணமும் நெடுந்தூரமளவுஞ் செல்கின்ற வியல்பை யறிக.

பரிமள, மதுபம் முரல், பசுந் தொடையல் பாண்டவர் ஐவரும், கடவுள்
எரி வலம் புரிந்து, முறை முறை வேட்ட இன் எழில்
இள மயில் அன்றி,
வரிசையின் அணுகி உரிமையால் அவனி மயிலையும்
மன்றல் எய்தினர்போல்,
புரி வளை தரளம் சொரி புனல் அகழிப் புரிசை
சூழ் புரம் குடி புகுந்தார்.பாண்டவர் நகரப்பிரவேசஞ் செய்தல்.

பரிமளம்-வாசனையையுடையனவும், மதுபம் முரல் – வண்டுகள்
ஒலிக்கப்பெறுவனவும் ஆகிய, பசுந் தொடையல்-பசியபூமாலைகளையணிந்த,
பாண்டவர் ஐவர்உம் – பாண்டவர்கள் ஐந்து பேரும், கடவுள் எரி வலம் புரிந்து
முறை முறை வேட்ட இன்எழில் இள மயில் அன்றி – தெய்வத்தன்மையையுடைய
அக்கினியைப் பிரதட்சிணஞ்செய்து (அக்கினிசாட்சியாக) முறையே தாங்கள்
மணஞ்செய்துகொண்ட இனிய அழகையுடைய இளமையானமயில்போலுஞ் சாயலுள்ள
திரௌபதியையே யல்லாமல், உரிமையால் அவனி மயிலைஉம் வரிசையின் அணுகி
மன்றல் எய்தினர்போல் – உரிமையினால் பூமிதேவியையும் முறையே அடைந்து
மணஞ்செய்துகொண்டவர்போல்,-புரி வளை தரளம் சொரி புனல் அகழி புரிசை
சூழ்புரம் குடி புகுந்தார் – உட்சுழிதலையுடைய சங்குகள் முத்துக்களைச்
சொரியப்பெற்ற நீர்நிறைந்த அகழியையுடைய மதில் சூழ்ந்த அந்த
இந்திரப்பிரத்தநகரத்திற்குடிபுகுந்தார்கள்; (எ- று.)

     பாண்டவரைவரும் ஒருவர்பின் ஒருவராய்த் துருபதன்மகளை மணந்ததுமன்றி
மண்மகளையும் மணப்பார்போல அந்நகரினுள் முறையே பிரவேசித்தன ரென்பதாம்;
தற்குறிப்பேற்றவணி. மதுபம்-தேனைக்குடிப்பதுஎன வண்டுக்குக் காரணக்குறி.
கடவுளெரி-அக்கினிதேவன். மயில்-உவமையாகுபெயர். அகழப்படுவது அகழியெனக்
காரணக்குறி.      

உரம் குடி புகுந்த திண் தோள் உதிட்டிரன் முதலியோர் அப்
புரம் குடி புகுந்து, தங்கள் பொன் எயில் கோயில் எய்த,
திரம் குடி புகுந்த கல்விச் சிற்ப வித்தகன், தன் நெஞ்சால்
கரம் குடி புகாமல் செய்த கடி நகர் காட்டலுற்றான்.-பாண்டவர்க்கு விசுவகருமன் அந்நகரத்தைக்
காட்டுதல்.

உரம் குடி புகுந்த – வலிமை (தனக்கு) இடமாகக் கொண்டு
தங்கப்பெற்ற, திண் தோள் – வலிய தோள்களையுடைய, உதிட்டிரன் முதலியோர் –
தருமபுத்திரன் முதலானவர்கள், அ புரம் குடிபுகுந்து – அந்நகரத்தில்
புதிதாகச்சேர்ந்து, தங்கள் பொன் எயில் கோயில் எய்த – பொன்மயமான
மதில்சூழ்ந்த தங்கட்கு உரிய அரண்மனையை அடைய,- திரம் குடி புகுந்த சிற்பம்
கல்விவித்தகன் – உறுதிக்கு இடமான சிற்பத்தைப்பற்றிய சாஸ்திரத்தில்
தேர்ச்சியுடையவனான விசுவகருமன், கரம் குடி புகாமல் தன் நெஞ்சால் செய்த கடி
நகர் காட்டல்  உற்றான்-கையினால் தொடுதலுமில்லாமல் தனது மனத்தில்
நினைத்தமாத்திரத்தினாற் செய்த புதிய அந்நகரத்தை (அவர்கட்குக்)
காட்டுபவனானான்;

     பட்டணத்தின்வளத்தைக் காண விரும்பி அரண்மனையின் மேலேறியிருந்த
தருமனாதியர்க்கு விசுவகருமன் அந்நகரத்தினழகைக் காட்டலுற்றன னென்க.
திரங்குடிபுகுந்த கல்வி-நிலைபெற்ற கல்வியுமாம்.

     இதுமுதல் இச்சருக்கம்முடியுமளவும்இருபதுகவிகள்-கீழ்ச்சருக்கத்தின்
முதற்கவிபோன்ற அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள்.

நா புரப்பதற்கே ஏற்ற நவிர் அறு வாய்மை வேந்தர்,
கோபுரத்து உம்பர், மஞ்ச கோடியில் நின்று, தங்கள்
மா புரத்து உள்ள எல்லை வள மனை யாவும், மாதர்
நூபுரத்து அரவ வீதி அகலமும், நோக்கினாரே. பாண்டவர்கள் கோபுரத்தின்மேலிருந்து அந்நகர்ச்
சிறப்பைக்காணுதல்.

நா புரப்பதற்குஏ ஏற்ற-நாவைப் பாதுகாப்பதற்கே இயைந்ததான,
நவிர்அறு வாய்மை – குற்றமில்லாத சத்தியத்தையுடைய, வேந்தர் –
அந்தப்பாண்டவராசர்கள்,- கோபுரத்து உம்பர் மஞ்சம் கோடியில் நின்று-
கோபுரத்தின்மீதுள்ள மேனிலையின்முகப்பில் நின்றுகொண்டு,- தங்கள் மா புரத்து
உள்ள எல்லை வளம் மனை யாஉம் – தங்களுடைய பெரிய அந்நகரத்தின்
எல்லையிலுள்ள வளம்பொருந்திய மாளிகைகளெல்லாவற்றையும், மாதர் நூபுரத்து
அரவம் வீதி அகலம்உம் – (சஞ்சரிக்கிற) மகளிர்களுடைய சிலம் பென்னுங்
காலணியின் ஆரவாரத்தையுடைய வீதியின்பரப்பையும், நோக்கினார்-பார்த்தார்கள்;
(எ – று.)

     விசுவகர்மன் காட்டப் பாண்டவர் நகரச்சிறப்பைக் கண்டனரென்க.
பொய்ம்மைநாவை அபரிசுத்தப்படுத்த, மெய்ம்மையே நாவைப் பழுது படாமல்
தூய்தாகவைத்தலால், ‘நாபுரப்பதற்கேயேற்ற வாய்மை’ என்றார். நிகழ்ந்ததுகூறலாகிய
அவ்வாய்மை தானும் பிறஉயிர்க்குத் தீங்குவிளையாமலிருந்தால்மாத்திரமே மெய்ம்மை
யென்று கொண்டாடப்படுதலால், ‘நவிரறு வாய்மை’ என்றார். எப்பொழுதும் மகளிர்
உல்லாசமாக உலாவும் வீதி யென்பது, ‘மாதர் நூபுரத்தரவவீதி என்றதன் கருத்து.

அரவின் வெஞ் சுடிகை கொண்ட அவிர் மணிச் சோதி மேன்மேல்
விரவி வந்து எறிப்ப, பச்சை மெய் சிவப்பு ஏறிற்று ஆக,
இரவிதன் இரதம் பூண்ட எழு பெயர்ப் பவன வேகப்
புரவியை ஐயுற்றேகொல், புரி வலம் புரிவது?’ என்பார்.-இதுமுதல் எட்டுக்கவிகளில், அந்நகரச்சிறப்பைப் பாண்டவர் பலவாறு
வியந்துகூறுதலைத் தெரிவிக்கின்றார்.

இந்நகரத்து மாளிகைகளிற் பதித்துள்ள), அரவின் வெம்சுடிகை
கொண்ட அவிர் மணி-நாகங்களின் வெவ்விய உச்சிக் கொண்டையிற் பொருந்திய
விளங்குகின்ற மாணிக்கங்களின், சோதி-சிவந்த ஒளி, மேல் மேல் விரவி வந்து
எறிப்ப- மேலும் மேலும் மிகுதியாக அடர்ந்துவந்து வீசுதலால், பச்சை மெய்
சிவப்பு ஏறிற்றுஆக-(சூரியனுடைய தேர்க்குதிரையினது) இயற்கையிற் பசுநிறமான
உடம்புசெந்நிறம்மிக்கதாய்விட, இரவி – (அச்செந்நிறத்தைக்கண்ட) சூரியன், தன்
இரதம்பூண்ட எழு பெயர் பவனம் வேகம் புரவியை ஐயுற்றுஏகொல்-தனது தேரிற்
பூட்டப்பட்டுள்ள ஏழென்னும் பெயரையுடைய வாயுவேகம்பொருந்திய குதிரையைச்
சந்தேகித்ததனாலேதானோ, புரிவலம்புரிவது-(அவன்) இந்நகரத்தைப் பிரதட்சிணஞ்
செய்வது, என்பார்-என்று சொல்வார்கள்; (எ-று.)-இதற்கு எழுவாய்-கீழ்க்கவியில்
வந்த ‘வேந்தர்’ என்பதே; அடுத்த ஏழுகவிகளுக்கும் இங்ஙனமே காண்க.

     மேருமலையை வலம்வருகிற சூரியனை இந்நகரத்தின் பரப்பையுணர்த்தும்
பொருட்டு இந்நகரை வலம்வருகிறவனாகக் கற்பித்து, அங்ஙனம் வலம்வருதற்குக்
காரணம் யாதெனின்,-அவன் இந்நகரத்தின் அருகில் வரும்பொழுது
அவனதுகுதிரையினுடம்பு இயற்கையான பசுமைநிறம்மாறிச்
செந்நிறம்பொருந்தியதனால் அதனை வேறொருகுதிரை யென்றுகருதித்
தன்குதிரையைத் தேடுதற்கு இந்நகரை வலம்வருகின்றனன்போலும் என்று
உத்பிரேக்ஷித்தவாறாம்; தற்குறிப்பேற்றவணி. எழு-ஏழு என்பதன்விகாரம்; இது
‘ஸப்த’ என்னும் வடசொல்லின் பரியாயநாமமாய் நின்றது. சூரியனது தேர்க்குதிரை
ஒன்றே அதற்கு ‘ஏழு’ என்றுபெயர் என்பர் ஒருசாரர்; மற்றொருசாரார்
‘அவ்வொருகுதிரைக்கு ஏழுபெயர்க ளுள்ளன’ என்பர்; அவ்விருவகையும்
‘எழுபெயர்ப்புரவி’ என்ற தொடரில் அமையும். இந்திரப்பிரத்தத்தின் சிறப்பை
விசுவகர்மா தருமனுக்குக் காட்டுவதாகவே 10 – ஸ்லோகங்கள் இங்குப்பாலபாரதத்து
உள்ளன: ஆங்குள்ள வருணனைகளும் இதிலுள்ள வருணனைகளும்
ஒப்புமைப்பட்டவை சிலவேயாகும். விரவிவந்தெறித்து எனவும் பாடம்

அருளுடை அறத்தின் வாழ்வாம் அந் நகர் இல்லம் எங்கும்
இருளுடை இந்த்ரநீலத்து இயன்ற சாளரங்கள் நோக்கி,
‘உருளுடை ஒற்றை நேமி உறு பரித் தேரோன் சீற,
தெருளுடைத் திமிரம் போன சில் நெறி போலும்!’ என்பார்.

அருள் உடை அறத்தின் வாழ்வு ஆம் – கருணையையுடையதான
தருமத்தின் வாழ்க்கை யமைந்த, அ நகர் – அந்த நகரத்திலுள்ள, இல்லம்
எங்குஉம்-மாளிகைகளிற் பலவிடத்துமுள்ள, இருள் உடை இந்த்ர நீலத்து இயன்ற
சாளரங்கள்-மிக்ககருநிறமுடைய இந்திரநீலரத்தினங்களாலமைந்த பலகணிகளை,
நோக்கி-பார்த்து,- ‘உருள் உடைஒற்றை நேமி உறுபரி தேரோன் சீற-
உருளுதலையுடைய ஒற்றைச்சக்கரமமைந்த குதிரை பூண்ட தேரையுடையவனான
சூரியன் உக்கிரங்கொண்டுஅழித்தலால், தெருள் உடை திமிரம் போன –
தடுமாற்றத்தையுடைய இருள் நுழைந்துஓடிச்சென்ற, சில் நெறி போலும் சிறுவழிகள்
போலும்,’ என்பார்-; (எ- று.)

     இந்திரநீலரத்தினத்தினாலாகியதனால் நீலநிறமுடையனவாயிருக்கிற
சாளரங்களை,இரவிக்கு அஞ்சி இருள் இரிந்து சென்ற சிறுவழிக ளென்று குறித்தார்;
தற்குறிப்பேற்றவணி. ‘சின்னெறி’ என்பதில், சின்மை-சிறுமை. 

சமர் முகப் பொறிகள் மிக்க தட மதில் குடுமிதோறும்
குமர் உறப் பிணித்த பைம் பொன் கொடித் துகில் அசைவு நோக்கி,
‘நமர் புரக் கிழத்தி, உம்பர் நாயகன் புரத்தினோடும்
அமர் பொரப் பற் பல் கையால் அழைப்பதுபோலும்!’ என்பார்.

சமர் முகம் பொறிகள்-போர்செய்தற்குஉரிய தோற்றத்தையுடைய
யந்திரங்கள், மிக்க-நிறைந்துள்ள, தட மதில் – பெரிய அந்நகரத்து மதிலின்,
குடுமிதோறும்உம்-சிகரங்களி லெங்கும், குமர் உற பிணித்த – அழிவின்மைபொருந்த
(உறுதியாக)க் கட்டப்பட்டுள்ள, பைம் பொன் கொடி துகில்-பசும்பொற்காம்பையுடைய
கொடிச்சீலைகளின், அசைவு-காற்றிலசையுந் தன்மையை, நோக்கி-பார்த்து,-நமர் புரம்
கிழத்தி- ‘நம்முடைய இந்நகரத்துக்கு உரிய தேவதை, உம்பர் நாயகன்
புரத்தினோடுஉம்அமர் பொர-தேவராசனான இந்திரனது அமராவதிநகரத்தோடு
போர்செய்ய(க்கருதி);பற் பல் கையால் அழைப்பது போலும்-(தனது) மிகப்பலவாகிய
கைகளினால்(அந்நகரத்தை) அழைப்பதையொக்கும்,’ என்பார்-என்றுசொல்லுவார்கள்;
(எ-று.)

     துவசங்களின் சீலைகள் அசைதலை, அந்நகரம் தேவநகரத்தைத் தன்னுடன்
போர்செய்ய வரும்பொருட்டுக் குறிப்புக் காட்டித்தனது கைகள் பலவற்றாலும்
அழைப்பதுபோலு மெனக்குறித்தார்; இதுவும் தற்குறிப்பேற்றவணியே. எளியாரை
வலியார் போருக்கு வலிய அழைத்தலாகிய இயல்பின்படி, இந்நகரம் தேவநகரத்தைத்
தன்னுடன் வலியப் போருக்கு அழைக்கும்கொழுமை வாய்ந்த தென்பது போதரும்.
போருக்குஉரிய பலவகையந்திரங்களை மதிலில் அமைத்துவைத்தல் இயல்பு. குமர்-
அழியாமை, நகரதேவதை பெண்பாலாயிருத்தல்பற்றி ‘புரக்கிழத்தி’ என்றார்.

தசும்பு உறும் அகிலின் தூபம், சாறு அடு கரும்பின் தூபம்,
அசும்பு அறா மடையின் தூபம், அவி பெறும் அழலின் தூபம்,
விசும்புற நான்கு திக்கும் மிசை மிசை எழுதல் நோக்கி,
‘பசும் புயல் ஏழு அன்று; இன்னும் பல உளவாகும்’ என்பார்.

தசும்பு உறும் – குடங்களிலிட்டுப் புகைக்கின்ற, அகிலின்-
அகிற்கட்டைகளினின்று எழுந்த, தூபம்-புகையும், கரும்பின் சாறு அடு –
கருப்பஞ்சாற்றைக் காய்ச்சுதலினா லுண்டாகிற,தூபம்-புகையும், அசும்பு அறா-
கால்வழுக்குதல்நீங்காத, மடையின் ‘மடைப்பள்ளியினின்று எழுகிற, தூபம் –
சமையற்புகையும், அவிபெறும்-அவி சொரியப்படுகிற, அழலின்-
ஓமாக்கினியின்றுஎழுகிற, தூபம் – புகையும், (ஆகிய இவை), விசும்புஉற,-
ஆகாயத்தைஅளாவ, நான்கு திக்குஉம் – எல்லாப்பக்கங்களிலும், மிசை மிசை
எழுதல்-மேன்மேல்எழுதலை, நோக்கி – பார்த்து,- ‘பசும்புயல் ஏழ்அன்று-
கருநிறங்கொண்ட மேகங்கள்ஏழுமாத்திரமே யல்ல: இன்னும்பல உள ஆகும்-,’
என்பார்-என்று சொல்வார்கள்; (எ- று.)

     அந்நகரத்திற்பலவிடங்களிலும் மிகுதியாயெழுகிறபலவகைப்புகைகளைப்
பார்த்துப் பற்பலமேகங்களென மாறுபடக்கருதிக் கூறியது-மயக்கவணி. புயல்ஏழ்-
சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலாவர்த்தம், சங்கிருதம், துரோணம், காளமுகி,
நீலவர்ணம் எனப்படும், எப்பொழுதும் சமைத்தல்தொழில் நீங்காத தென்றற்கு,
‘அசும்பறாமடை’ என்றார். அசும்பு-வழுக்குநிலம். மடை – சமைத்தல். இது –
ஆகுபெயரலாய், சமையலிடத்தைக் குறித்தது. விரைவில் புகை
தணியாதிருத்தற்பொருட்டு, அகிலைக் குடத்திலிட்டுப் புகைப்பரென்க. 

அடுக்குற நிலம் செய் மாடத்து அணி உறு பெரும் பதாகை,
மிடுக்கினால் அனிலன் எற்றி, விசையுடன் எடுத்து மோத,
உடுக்களும் நாளும் கோளும், உள்ளமும் உடலும் சேர
நடுக்கு உறுகின்ற, இந்த நகர் வழி போக’ என்பார்.

‘அடுக்கு உற-(ஒன்றன்மே லொன்று) அடுக்காகப் பொருந்த, நிலம்
செய் – நிலைகளை யமைத்துச் செய்யப்பட்ட, மாடத்து-மளிகைகளின்மேல்,
அணிஉறு-வரிசையாகப் பொருந்திய, பெரும் பதாகை-பெரியகொடிச்சீலைகளை,
அனிலன்-வாயுதேவன், மிடுக்கினால் எற்றி-(தன்) வலிமையால் வீசி, விசையுடன்
எடுத்து மோத -வேகத்தோடு உயர்த்தியடித்தலால்,-உடுக்கள் உம் நாள்உம்
கோள்உம்-மிகப்பலவாகிய தாரகைகளும் (அசுவினி முதலிய இருபத்தேழு)
நட்சத்திரங்களும் (சூரியன் முதலிய ஒன்பது) கிரகங்களும், இந்த நகர் வழி
போக-இந்த நகரத்தின்வழியே செல்லுதற்கு, உள்ளம்உம் உடல்உம் சேர நடுக்கு
உறுகின்ற-(அச்சத்தால்) மனமும் உடம்பும் ஒருசேர நடுக்கமடைகின்றனவாம்;
என்பார்-; (எ- று.)

     இந்நகரத்தின் உபரிகைகளின் மீது நாட்டிய கொடிகளின் மிக்க உயர்வை
உணர்த்துதற்கு, ‘அக்கொடிகளின் சீலைகளைக் காற்று விசையோடு வலிய அடித்து
அசைத்தலால் அவை தம் மீது தாக்கி வருத்து மென்ற கருத்தால் சகலகிரகநட்சத்திர
தாரகைகளும் இந்நகரத்தின் மேலாகச்செல்லுதற்கு அஞ்சும்’ என்றார்:
உயர்வுநவிற்சியணி. நாள்-நாளையுணர்த்துகிற நட்சத்திரத்திற்கு ஆகுபெயர்.
கோள் -(காலத்தை அளந்து) கொள்வது: கிரகம்.   

துதை அளி முரலும் வாசச் சோலையின் பொங்கர்தோறும்,
விதம் உற எழுந்து, காள மேகங்கள் படிதல் நோக்கி,
‘கதிர் மணி அகழி மா மேகலையுடை நகர மாதின்
புகை நறு மலர் மென் கூந்தல் போலுமா காண்மின்!’என்பார்.

துதை அளி முரலும் – நெருங்கிய வண்டுகள் ஒலிக்கின்ற, வாசம்
சோலையின்-நறுமணமுள்ள சோலைகளின், பொங்கர்தோறும்-மரக்கொம்புகளின்மே
லெல்லாம், விதம் உற எழுந்து காளமேகங்கள் படிதல்-பலபகுப்பாக எழுந்து
கருநிறமான மேகங்கள் படிந்திருத்தலை, நோக்கி- பார்த்து,- ‘(இது), கதிர் மணி
அகழி மா மேகலை உடை நகரம் மாதின் – ஒளியைக்கொண்ட
இரத்தினங்களையுடைய அகழியாகிய பெரிய மேகலாபரணத்தை யுடைய
இந்நகரமாகிய பெண்ணினது, புகை நறு மலர் மெல் கூந்தல் போலும்
ஆ(று)-அகிற்புகையூட்டிய நறுமணமுள்ள மலர்களைச் சூடிய மெல்லிய கூந்தலை
யொத்திருக்குந் தன்மையை, காண்மின் – காணுங்கள்,’ என்பார் – என்று (தம்மில்
ஒருவரை நோக்கி யொருவர்) சொல்வார்கள்;(எ- று.)

     அந்நகரத்துச்சோலைகளின் மரங்கள்மீது படிகின்ற காளமேகங்களை,
அந்நகரமாகிய பெண்ணின் கரிய கூந்தல்மயிர்கள் போலுமென்றார்;
தற்குறிப்பேற்றவணி. அகழிக்கு இரத்தினம், கரைகளிற் பதிக்கப்பட்டவை.
மேகலை-எட்டுக்கோவையுள்ள இடையணி: இடையணியென்ற மாத்திரமாய்
நின்றது.  

ஈட்டிய மணியும் பொன்னும் எழில் பெற, புடைகள்தோறும்
பூட்டிய சிகரி சாலப் புரிசையின் புதுமை நோக்கி,
‘கோட்டிய நகரி என்னும் குலக் கொடி மன்றல் எய்த,
சூட்டிய சூட்டுப் போலத் துலங்குமா காண்மின்!’ என்பார்.

ஈட்டிய – தொகுக்கப்பட்ட, மணிஉம்-இரத்தினங்களையும்,
பொன்உம்- பொன்னையும், எழில்பெற – அழகு உண்டாக, புடைகள் தோறுஉம்
பூட்டிய – பக்கங்களிலெல்லாம் அமைத்து வைக்கப்பெற்ற, சிகிரி- மேலுறுப்பு,
சால்-பொருந்திய, அ புரிசையின்-அந்த மதிலின், புதுமை- அதிசயத்தை,
நோக்கி-பார்த்து,- ‘(இது), கோட்டிய நகரி என்னும் குலம் கொடி –
அலங்கரிக்கப்பட்ட அந்நகமாகிய ஓர் உயர்குலமங்கை, மன்றல் எய்த-
விவாகமடைய, சூட்டிய-(கோலஞ்செய்வார் அம்மகளின்நெற்றியிற்) சூட்டிய,
சூட்டுபோல-சூட்டென்னும்நெற்றிமாலை போல, துலங்கும்-விளங்குகிற, ஆ(று) –
தன்மையை, காண்மின்-பாருங்கள்,’ என்பார்-என்று (தம்மிற்) சொல்லிக்
கொள்வார்கள்; (எ-று.)

     அந்நகரத்துமதிலின் மேலுள்ளசிகரியென்னும்உறுப்பு, பொன்மயமாய்
இரத்தினங்கள் பதிக்கப்பெற்றுவிளங்குவதை, அந்நகரமாகியபெண் அரசனாகிய
தலைமகனை மணஞ்செய்துகொள்ளுஞ் சமயமாதலால், அதற்கு ஏற்ப, அம்மகளின்
நெற்றியின் மேற்பகுதியிற் கோலஞ்செய்வார் சூட்டிய நூதலணிமாலை
போலுமென்றார்;தற்குறிப்பேற்றவணி. யிகரீ-வடசொல். 

பணைஇனம் பலவும் ஆர்ப்ப, பைங் கொடி நிரைத்த செல்வத்
துணை மணி மாடம் மன்னும் தோரண வீதி யாவும்,
புணை வனம் நெருங்க நீடி, பொழி புயல் கிழிக்கும் சாரல்
இணை வரை நடுவண் போதும் யாறு போல் இலங்கும்!’ என்பார்.

பணை இனம் பலஉம் ஆர்ப்ப-வாத்தியவகைகள் பலவும் ஒலிக்க,
பைங் கொடி நிரைத்த – செழுமையான துவசங்கள் அணியணியாக நாட்டப்பெற்ற,
செல்வம் – செல்வவளத்தையுடைய, துணை-(வேறுஒப்புமையில்லாமையால்)
தமக்குத்தாமே நிகரான, மணி மாடம் – இரத்தினங்கள் பதித்த [அழகிய]
மாளிகைகள்,மன்னும் – (இருபாலும்) அமையப்பெற்ற, தோரணம் வீதி யாஉம்
தோரணங்களையுடைய வீதிகளெல்லாம்- புணை வனம்நெருங்கநீடி-மூங்கிற்காடுகள்
அடர்த்தியாகவளர்ந்து, பொழி புயல்கிழிக்கும்-மழை பொழிகிற மேகங்களைக்
கிழிக்கின்ற, சாரல் – சாரலையுடைய, இணைவரை – இரண்டுமலைகளின், நடுவண் –
நடுவிலே, போதும்-பாய்ந்து வருகிற, யாறுபோல் – நதிபோல, இலங்கும்-விளங்கும்.
என்பார்-;

     இருமருங்குமுள்ள ஓங்கியமாளிகைகளுக்கு  -இரண்டுமலைகளையும்,
அம்மாளிகைவரிசையின் நடுவிலுள்ள வீதிக்கு -அம்மலைகளின் இடையே
வருகிற நதியையும் ஒப்புமை குறித்தார்; தற்குறிப்பேற்றவணி. மாடங்களின்
மீதுள்ள கொடிவரிசைகளுக்கு ஏற்ப மலைக்குமூங்கிற்காடு கூறினார்.
‘பணையினம் பலவுமார்ப்ப’ என்றது – செல்வ வளத்தைவிளக்கும். மூன்றாம்
அடி – அதிசயோக்தி. 

கண்ணுறு பொருள்கள் யாவும் கண்டு கண்டு உவகை கூர,
எண் உறு கிளைஞரோடும், யாதவ குமரரோடும்,
பண் உறு வேத வாழ்நர் பலரொடும், வைகி, ஆங்கண்,
விண் உறு தபதிக்கு அம்ம, விடை கொடுத்தருளினானே.-தருமன் விசுவகருமனுக்கு விடையளித்தல்.

கண்உறு பொருள்கள்யாஉம் – எதிர்ப்படுகிறபொருள்களையெல்லாம்,
கண்டு கண்டு – பார்த்துப்பார்த்து, உவகை கூர-மகிழ்ச்சிமிக,
எண்உறுகிளைஞரோடுஉம் – பெருமைபொருந்திய (தன்) சுற்றத்தாருடனும், யாதவ
குமரரோடுஉம் – (கண்ணபிரானுடன் வந்த) யதுகுலகுமாரர்களுடனும், பண் உறு
வேதம் வாழ்நர் பலரொடுஉம் – ஸ்வரமமைந்த வேதங்களுக்கு உரியராய்
வாழ்கின்றபல  அந்தணர்களுடனும், ஆங்கண் வைகி – அந்நகரினிடத்திற்சேர்ந்து
தங்கி,(பின்பு), விண் உறு தபதிக்கு விடை கொடுத்தருளினான் – தேவலோகத்திற்
பொருந்திய சிற்பியான விசுவகருமனுக்கு அருளோடு அனுமதிதந்து அவனை
அனுப்பினான்; (எ-று.)-இங்குச் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப தருமனென்ற எழுவாய்
வருவிக்க. அம்ம – உரையசை.

கேசவன் முதலா உள்ள கிளைஞரும், கேண்மை தப்பா
வாசவன் முதலினோரும், மன்னு தம் பதிகள் புக்கார்;
ஓச வன் திகிரி ஓச்சி, உதய பானுவுக்கும் மேலாம்
தேசவன்தானும், வையம் திசை முறை திருத்தி ஆண்டான்.-கண்ணன்முதலியோர் செல்லுதலும், தருமனது
அரசாட்சியும்.

கேசவன் முதல் ஆ (க) உள்ள – திருமாலின் திருவவதாரமான
கண்ணபிரான் முதலாகவுள்ள, கிளைஞர்உம் – சுற்றத்தார்களும், கேண்மை தப்பா
வாசவன் முதலினோர்உம் – உறவுமுறைமைக்குஉரிய உதவியில் தவறுதலில்லாத
இந்திரன் முதலானவர்களும், மன்னு தம் பதிகள் புக்கார் – நிலைபெற்ற தம் தமது
நகரங்களுக்குச் சென்றார்கள்; உதயபானுவுக்குஉம் மேல் ஆம் தேசவன்தான்உம்-
உதித்துவிளங்குகிற சூரியனினும் மேலான ஒளியையுடையவனாகிய தருமனும்.
ஓசம்வல்திகிரி ஓச்சி – ஒளியையும் வல்லமையையுமுடைய (தனது)
ஆஜ்ஞாசக்கரத்தைச் செலுத்தி, வையம்-பூமியை, திசை முறை திருததி ஆண்டான்
-எங்கும் நீதி முறைமை ஒழுங்காக நடக்கச்செய்து அரசாண்டான்; ( எ- று.)

     தன்மகனான அருச்சுனனுக்கும், அவனது உடன்பிறந்தவர்களான தருமன்
முதலியோர்க்கும் உதவுமாறு. இந்திரன் நகரமமைப்பித்தமைபற்றி, ‘கேண்மைதப்பா
வாசவன்’ என்றார். கேஸவ னென்ற வடமொழி – பிரமனையும் சிவனையும் தன்
அங்கத்திற்கொண்டவ னென்றும் (க-பிரமன், ஈசன்-சிவன்) மயிரழகையுடையவ
னென்றும் (கேசம்-மயிர்), கேசியென்னும் அசுரனைக்கொன்றவனென்றும் [கேசி-
கண்ணனைக்கொல்லும்படிகம்சனால்ஏவப்பட்டுக் குதிரைவடிவத்தோடுவந்த ஓர்
அசுரன்) பொருள்படும். ஓசம், தேசு=ஓஜஸ், தேஜஸ் என்ற வடசொற்களின்
விகாரம்.கேசவன் பதி-துவாரகை. வாசவன்பதி-அமராவதி

யாய் மொழி தலைமேல் கொண்டும், இளையவர் மொழிகள் கேட்டும்,
வேய் மொழி வேய்த் தோள் வல்லி மென் மொழி விரும்பலுற்றும்,
வாய்மொழி அறத்தின் மைந்தன் மா நகர் வாழும் நாளில்,
ஆய் மொழிப் பாடல் யாழ் ஓர் அந்தணன் ஆங்கண் வந்தான்.-ஒருநாள் நாரதமாமுனிவன் அங்குஎழுந்தருளல்.

வாய்மொழி அறத்தின்மைந்தன் – உண்மைச்சொற்களையுடைய
தருமபுத்திரன் யாய்மொழி தலைமேல்கொண்டுஉம் – தாயாகிய
குந்தியினதுவார்த்தையைச்சிரமேற்கொண்டுநன்குமதித்தும், இளையவர் மொழிகள்
கேட்டுஉம் – [வீமன்முதலிய] தம்பியர்களுடைய வார்த்தையைக் கேட்டு
அவற்றின்படிநடந்தும், வேய் மொழி-அழகிய சொல்லையும், வேய்தோள்-
மூங்கில்போன்றதோள்களையுமுடைய வல்லி-பூங்கொடிபோன்ற திரௌபதியினது,
மெல்மொழி-மென்மையான சொற்களை, விரும்பல் உற்றுஉம்-விருப்பத்தோடு
கேட்டும், மா நகர்வாழும் நாளில்-பெரிய அந்நகரத்தில்வாழ்கின்ற நாட்களில்,
(ஒருநாள்),-ஆய்மொழிபாடல் – ஆராய்ந்த (சிறந்த) சொற்களையுடைய
இசைப்பாட்டைக்கொண்ட, யாழ்-மகதீயென்ற வீணையையுடைய, ஓர்
அந்தணன் – ஒருமுனிவன் [நாரதன்], ஆங்கண்வந்தான் – அவ்விடத்தில்
வந்தனன்; (எ-று.)

     இம்முனிவன் நாரதனாவன். வேய்மொழி-வினைத்தொகை: வேய்தல் –
அழகுசெய்தல்; இனி, கரும்புபோல்  இனியமொழியெனின், வேய்என்றசொல்-
கழையென்றதன்பரியாயமாய்க்கரும்பைக் குறித்த தென்க. ‘பாடலோடோரந்தணன்’
எனவும் பாடம்.  

இந்த நாரதனைப் போற்றி, இரு பதம் விளக்கி, வாசச்
சந்தனாகருவின் தூபம் தவழ் மணித் தவிசின் ஏற்றி,
வந்தனா விதியில் சற்றும் வழு அற வழிபாடு எய்தி,
அந்த நால்வரும் அவ் வேந்தும், ஆதி வாசவர்கள் ஆனார்.- பாண்டவர் நாரதனை உபசரித்தல்.

இந்த நாரதனை போற்றி-இங்ஙனம்வந்த நாரத முனிவனை
நமஸ்கரித்து,இருபதம்விளக்கி-(அவனுடைய) இரண்டு திருவடிகளையும்
தீர்த்தங்கொண்டு) கழவி,வாசம் சந்தனம் அகரு இன்தூபம் தவழ் மணி தவிசின்
ஏற்றி-பரிமளத்தையுடையசந்தனக்கட்டையும் அகிற்கட்டையும் ஆகியஇவற்றின்
இனியபுகை யூட்டப்பெற்ற இரத்தினம்பதித்த சிங்காசனத்தில் (அவனை)
எழுந்தருள்வித்து,வந்தனாவிதியில் சற்றுஉம் வழு அற வழிபாடுஎய்தி – வழி
பாட்டுக்கு உரியவிதிமுறைமையிற் சிறிதும் தவறுதலில்லாதபடி உபசரித்தலைச்
செய்து, அந்தநால்வர்உம் அவேந்துஉம்-(வீமன் முதலிய)அந்தத்தம்பிமார்
நால்வரும்அந்தத்தருமராசனும், ஆதி வாசவர்கள் ஆனார் – (தங்கள்)
பூர்வசன்மமாகிய பழையஇந்திரர்களையே போன்றார்கள்;(எ-று.)

     தேவவிருடியாகிய நாரதன் தன்பக்கல் எழுந்தருள அவனுக்கு மகிழ்ச்சியோடு
விசேஷஉபசாரங்களைச் செய்து மேன்மைபெறுதல் இந்திரனுக்கு இய்லபாதலால்,
இங்ஙனம் கூறினார். சந்தநாகரு, வந்தநாவிதி, ஆதிவாவர் –
வடமொழித்தொடர்கள்

வரம் மிகு கற்பினாளும் மாமியும் வணங்கி நிற்ப,
சரிகமபதநிப் பாடல் தண்டு தைவரு செங் கையோன்,
இரு செவி படைவீடு ஆக, எம்பிரான் அளிக்கப் பெற்ற
பெரு முனி, அவர்க்கு ஓர் வார்த்தை பெட்புறப் பேசுவானே:-நாரதன் அவர்கட்கு ஒருகதை கூறத்தொடங்கல்.

இங்ஙனம் வணங்கிவழிபட்ட பாண்டவர்களுடனே), வரம்
மிகுகற்பினாள்உம் – மேன்மைமிக்கபதிவிரதா தருமத்தையுடையவளான
திரௌபதியும்,மாமிஉம் – (இவளுக்கு) மாமியாரான குந்திதேவியும்,
வணங்கிநிற்ப -(அம்முனிவனை) நமஸ்கரித்துநிற்க,- சரிகமபதநி பாடல் தண்டு
தைவரு செம்கையோன் – சரிகமபதநி என்னும் ஏழுசுரங்களையும்
அமைத்துப்பாடுதற்கு உரியவீணாதண்டத்தைத் தடவி இயக்குகின்ற சிவந்த
கைகளை யுடையவனும். எம்பிரான்இரு செவி படை வீடு ஆக அளிக்கப்பெற்ற
பெருமுனி – நமக்கெல்லாந்தலைவனான திருமால் (தமது) இரண்டு
திருச்செவிகளையும் (தனது) இசைப்பாட்டிற்குத் தங்குமிடமாகக்கொடுக்கப்பெற்ற
பெருமையுடைய முனிவனுமானநாரதன், அவர்க்கு ஓர் காதை பெட்புஉற
பேசுவான் – அவர்கட்கு ஒருகதையைவிருப்பமிகக் கூறுபவனானான்; (எ-று.)-
அதனை, மேலிரண்டுகவிகளிற் காண்க. ‘ஓர்வார்த்தை’ என்றும் பாடம்.

     ஸரிகமபதநி என்பன-ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம்,
தைவதம், நிஷாதம் என்ற ஏழுசுரங்களுக்கும் முறையே உரிய அக்ஷரங்களாம்.
தண்டு- தண்டமென்ற வடசொல்லின் விகாரம். படைவீடு – சேனை தங்குமிடம்;
இங்கு,தங்குமிடமென்ற மாத்திரமாய் நின்றது. ‘எம்பிரான்’ – சிவபிரானெனினுமாம்

முராரியை, முராரி நாபி முளரி வாழ் முனியை, முக் கண்
புராரியை, நோக்கி, முன் நாள், புரி பெருந் தவத்தின் மிக்கார்
சுராரிகள்தம்மில் சுந்தோபசுந்தர் என்று இருவர், தங்கள்
திராரி ஏவலினால் வந்த திலோத்தமைதன்னைக் கண்டார்.-இதுவும் அடுத்த கவியும் – சுந்தோபசுந்தர் வரலாறு.   

முராரியை – திருமாலையும், முராரி நாபி முளரி வாழ்முனியை –
அத்திருமாலின் திருநாபித்தாமரைமலரில் வாழ்கிற பிரமனையும், முக்கண்
புராரியை -மூன்றுகண்களையுடையவனான சிவபிரானையும், நோக்கி – குறித்து,
முன் நாள் -முற்காலத்தில் [இளமையில்], புரி-செய்த, பெரு தவத்தில் – பெரிய
தவத்தில், மிக்கார்-சிறந்தவர்களான, சுராரிகள் தம்மில் சுந்தஉபசுந்தர் என்ற
இருவர் – அசுரர்களுள்சுந்தனும் உபசுந்தனு மென்றஇரண்டுபேர்,- தங்கள் திர
அரி ஏவலினால்வந்ததிலோத்தமைதன்னை கண்டார் – தங்களுக்குவழிப்பகையாகிய
இந்திரனதுகட்டளையினால் (தங்களெதிரில்) வந்த திலோத்தமை யென்பாளை
(ஒருசமயத்தில்)பார்த்தார்கள்; (எ-று.)

     முராரி, புராரி,  ஸு ராரி, ஸ்திராரி – தீர்க்கசந்திபெற்ற வட சொற்கள்.
சுந்தோபசுந்தர் – குணசந்திபெற்ற வடமொழித் தொடர்; பன்மைவிகுதிபெற்ற
உயர்திணையும்மைத்தொகை. என்றிருவர் – விகாரம். திலோத்தமை=திலோத்தமா;
உலகத்தில் அழகுடைமங்கையரது உடம்பிற் சிறந்த அழகை எள்ளளவு எள்ளளவாக
எடுத்துத் திரட்டி அதுகொண்டு அமைக்கப்பட்ட பெண்: திலம்-எள், உத்தமா-
மேலானவள்.    

காண்டலும், அவள்மேல் வைத்த காதலால் உழந்து, நெஞ்சில்
ஈண்டிய துயரத்தோடும் இருவரும் நயந்த போழ்து, அப்
பூண் தகு பொலிவினாள்தன்பொருட்டு அமர் தம்மில் பூண்டு
மாண்டனர் என்னும் வார்த்தை மா நிலம் அறியும் அன்றே?

இருவர்உம் – அந்த இரண்டு அசுரர்களும், காண்டலும் -(அவளைக்)
கண்டவுடனே, அவள்மேல் வைத்த காதலால் – அவளிடத்திற் கொண்ட
ஆசையினால், உழந்து – வருந்தி, நெஞ்சில் ஈண்டிய துயரத்தோடுஉம் -மனத்தில்
மிகுந்த காமவேதனையுடனே, நயந்த போழ்து-(ஒருங்கு அவளை)
விரும்பிவரித்தபொழுது, அபூண்தகு பொலிவினாள்தன் பொருட்டு-ஆபரணங்கள்
(தன்னால் அணியப்படுதலால்) பெருமையடைதற்குக் காரணமான
மேனியழகையுடையஅவள்பொருட்டு, தம்மில் அமர் பூண்டு – தமக்குள் போர்
புரிந்து, மாண்டனர் -இறந்தார்கள், என்னும் – என்கிற, வார்த்தை – வரலாற்றை,
மா நிலம் அறியும்அன்றே – பெரிய உலகத்திலுள்ளார் அறிவார்களன்றோ?
(எ-று.) ‘காதலாலழிந்து’ என்றும்பாடம்.

     இவ்விரண்டுகவிகளிற் குறித்த கதையின் விவரம்:-இரணியகசிபு என்ற
அசுரராசனது குலத்தில் நிகும்பனென்றவனது புத்திரகளாய்த் தோன்றிய சுந்தன்
உபசுந்தன் என்ற இருவரும் தம்மில் மிக்கமனவொற்றுமையுடையராய்
எப்பொழுதும்ஒருவரையொருவர் விட்டுப்பிரியாராய்த் தமது சுகதுக்கங்களைச்
சமமாகப்பாவித்துவந்தனர். அவர்கள் இளமையில் மூவுலகத்தையும் வெல்லக்கருதி
விந்திய மலையைச்சேர்ந்து திரிமூர்த்திகளைக்குறித்து நெடுங்காலம் அரிய
பெரியதவத்தைச் செய்கையில்,அத்தவத்தின் கடுமையைக் கண்டு அஞ்சிய
தேவர்கள் மாயையினால் பல மகளிரையேவி அவர்களுடைய தவத்துக்குப்
பலவாறு பங்கஞ்செய்ய முயன்றும்முடியவில்லை. பின்பு பிரதியக்ஷமான
திருமூர்த்திகள் அச்சுந்தோபசுந்தர்வேண்டியபடியெல்லாம் அவர்கட்கு
வரங்களைக் கொடுத்து வருகையில்,அவ்வசுரர்கள் ‘நாங்கள்
எவராலும்கொல்லப்படாதவராகவேண்டும்’ என்று வரம்வேண்டினர். அதற்கு
ஆதிதேவர்கள், ‘உங்களிருவர்க்கும் பிறவுயிர்களெவற்றாலும்மரணமில்லை’
என்று வரமளித்தார்கள். பின்பு அவ்விருவரும் மிகச் செருக்கி
மூவுலகையும் வெல்லத்தொடங்கி இந்திராதி தேவர்களுக்கும், பற்பல
முனிவர்களுக்கும், மனிதர்களுக்கும், மற்றும் பலர்க்கும் மிக்கதுன்பத்தை
விளைத்துஅநேகம் பிராணிகளை அழித்து வந்தனர். பிறகு தேவர்களும்
முனிவர்களும்பிரமனைச் சரணமடைந்து செய்திகூற, அக்கடவுள் விசுவகர்மாவைக்
கொண்டுதிலோத்தமையை யுண்டாக்கி அவளைச் சுந்தோபசுந்தர் இருக்கிற
இடத்திற்குஅனுப்பினான். விந்தியமலையின் தாழ்வரையில் அவ்விருவரும்
உல்லாசமாகவீற்றிருக்கையில் அம்மங்கையைக் கண்டு அவளழகை வியந்து
ஒருங்கு காமுற்றுஅருகிற் சென்று அவளுடைய வலக்கையைச் சுந்தனும், இடக்கையை
உபசுந்தனுமாகப் பிடித்துக்கொண்டார்கள். இயல்பில் மிக்ககொழுப்புடைய
அவ்விருவரும் காமக்களிப்புற்றுத் தம்மில்மாறுபட்டு அண்ணன் தம்பியைநோக்கி
‘தமையனாகிய’ என்னாற் காதலிக்கப் பட்ட இவள் உனக்குத் தாய்முறையன்றோ?
இவளை நீ விரும்புதல் தகுதியோ?  என்ன, அதற்கு ஏற்பத் தம்பி தமையனை
நோக்கி ‘தம்பியாகிய என்னாற் காதலிக்கப்பட்ட இவள் உனக்கு மருமகள்
முறையன்றோ? இவளை நீ வீரும்பாலாமோ?’ என்று கூறிக் கோபங் கொண்டு
தம்கையிலுள்ள கதாயுதத்தால் ஒருவரை யொருவர் அடித்துக்கொண்டு போர்செய்து
இருவரும் ஒருங்கே ஒருவரால் ஒருவர் அழிந்தனர் எனக் காண்க.

     இவ்வரலாற்றைநாரதமுனிவன் இங்குப் பாண்டவர்க்கு எடுத்துக்கூறினது,
திரௌபதியொருத்தினிடம் காதல்கொள்ளுகிற பாண்டவரைவரும் ஒருவர்க்கொருவர்
எக்காலத்தும் மனவொற்றுமை கெடாதிருக்கும்படி ஒருநியமத்தைச்
செய்துகொள்ளவாகும்.

நீவிரும் விதியால் வேட்ட நேயம் உண்டேனும், மன்றல்
ஓவியம் அனையாள்தன்னை ஓர் ஒர் ஆண்டு ஒருவர் ஆக
மேவினிர் புரியும்; அங்ஙன் மேவும் நாள், ஏனையோர் இக்
காவி அம் கண்ணினாளைக் கண்ணுறல் கடன்அது அன்றே.-இரண்டுகவிகள்-ஒருதொடர்: நாரதன் திரௌபதி
சம்பந்தமாகப் பாண்டவர்க்குக் கூறிய ஒருநியமம்.

நீவிர்-நீங்கள்ஐவிரும், உம் விதியால்-உங்கள் முற்பிறப்பின் வினையால்,
வேட்ட-(ஒருங்கு) விவாகஞ்செய்துகொண்ட, நேயம்-காதல், உண்டு ஏன்உம் –
(திரௌபதியொருத்தியினிடத்தே) உள்ளதானாலும், ஓவியம் அனையாள்
தன்னை-சித்திரத்திலெழுதிய பாவைபோல மிக்க அழகையுடையளான
அத்திரௌபதியை, ஓர் ஓர் ஆண்டு ஒருவர் ஆக மேவினிர் மன்றல் புரியும்.
ஒவ்வொரு வருடத்துக்கு (உங்களில்) ஒவ்வொருவராக விரும்பிக் கூடி வாழுங்கள்:
அங்கன் மேவும் நாள்-அவ்வாறு (ஒருத்தரோடு) சேர்ந்திருக்கும்போழுது,
ஏனையோர்-மற்றைநால்வரும், இ காவி அம் கண்ணினாளை கண்ணுறல் –
கருங்குவளைமலர்போன்ற அழகிய கண்களையுடைய இவளைக் காணுதல், கடனது
அன்று-முறைமை யுடையதன்று; (எ-று.)

எண் உறக் காணில், ஓர் ஆறு இருதுவும் வேடம் மாறி,
புண்ணியப் புனல்கள் ஆடப் போவதே, உறுதி’ என்று,
வண்ண வில் திறலினார்க்கு வாய் மலர்ந்து அருளி, மீண்டு,
பண்ணுடைக் கீத நாத பண்டிதன் விசும்பில் போனான்.

எண் உற மனம் பொருந்த, காணில்-(அப்பொழுது இவளைக்)
கண்டால், (கண்டவர்), ஓர் ஆறுஇருதுஉம் – ஆறுஇருது (ஒரு வருஷம்) அளவும்,
வேடம் மாறி-வடிவம் மாறி, புண்ணியம் புனல்கள் ஆடபோவதுஏ –
(அத்தோஷத்துக்குப் பரிகாரமாகப் புண்ணிய தீர்த்தங்களில் நீராடச் செல்லுதலே,
உறுதி – நன்மையைத்தருவது, என்று-,வண்ணம் வில் திறலினார்க்கு வாய்மலர்ந்து
அருளி-அழகிய வில்லின் வலிமையையுடைய அப்பாண்டவரகட்குச் சொல்லியருளி,
மீண்டு-பின்பு, பண் உடை கீதம் நாத பண்டி தன் – சுரங்களையுடைய
பாட்டினிசையில் வல்லவனான நாரத முனிவன், விசும்பின் போனான்-ஆகாய
மார்க்கமாகச் சென்றான்; (எ-று.)

     ருது – வடசொல்; இரண்டு மாதங் கொண்ட பொழுது. அது-ஆறாகும்;
அவற்றிற்கு முறையே, சித்திரை முதல் இவ்விரண்டு மாதங்கொள்க. அவை முறையே
இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி எனப்படும்.

சொன்ன நாள் தொடங்கி, ஐந்து சூரரும், தேவர் நாளுக்கு
இன்ன நாள் அவதி என்றே எண்ணி, ஆங்கு, இரதி கேள்வன்
அன்ன நாள் மலர்ப் பைந் தாமத்து அறன் மகன் ஆதி ஆக,
மின்னனாள்தன்னை வேட்ட முறையினால் மேவினாரே.-அங்ஙனம் முறைப்படி ஐவரும் மனைவியும் வாழ்தல்.

சொன்ன நாள் தொடங்கி – (இந்த நாரத மாமுனிவன்) சொன்ன தினம்
முதலாக, ஐந்து சூரர்உம்-(அந்த) ஐந்துவீரர்களும், தேவர்களுக்குஒருநாளாகிய
மானுடவருஷம்ஒன்றுக்கு இன்னநாள் எல்லை யென்று அறிந்து, அங்கு –
அவ்விடத்தில் (இந்திரப்பிரத்தத்தில்), இரதிகேள்வன் அன்ன நாள் மலர் பைந்
தாமத்து அறன் மகன் ஆதி ஆக – ரதீ தேவிக்குக் கணவனான மன்மதன் போன்ற
(மிக்கஅழகையும்) அன்றுமலர்ந்த (புதிய) மலர்களாலாகிய பசிய மாலையையு முடைய
தருமபுத்திரன் முதலாக, மின் அனாள்தன்னை வேட்ட முறையினால் மேவினார்
-மின்னல்போன்ற திரௌபதியை (த் தாம்) விவாகஞ்செய்த முறைப்படியே
கூடிவாழ்ந்தார்கள்.

  ——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ.வில்லிபாரதம் – முதல் பாகம் -5. திரௌபதி மாலை இட்ட சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 14, 2023

இங்கு, இவர், இவ்வாறு இந்த இருக்கையில் இருக்கும் நாளில்,
அம் கண் மா ஞாலம் எங்கும், ‘அரக்கு மாளிகையின் வீந்தார்,
பங்கம் இல் குணத்தால் மிக்க பாண்டவர்’ என்று மாழ்க,
துங்க வேல் துருபதன்தான் சூழ்ந்தது சொல்லல் உற்றாம்:-கவிக்கூற்று: சருக்கத்துக்குத் தோற்றுவாய் செய்தல்.-துருபதன் தன் மகளுக்குச் சுயம்வரநாள் குறித்தலும்,
அரசிளங் குமரர் வந்து திரளுதலும்

இவர் – இப்பாண்டவர்கள், இ ஆறு – இந்தவிதமாய், இங்கு –
இவ்விடத்தில் [வேத்திரகீயத்தில்], இந்த இருக்கையில் – கீழ்க்கூறிய அந்தணன்
மாளிகையில,் இருக்கும் நாளில் – தங்கியிருகுங் காலத்தில்,- அம்கண் மா ஞாலம்
எங்கும் – அழகிய இடமகன்ற பெரிய பூமிமுழுவதிலுமுள்ளோரெல்லோரும்,
பங்கம் இல் குணத்தால் மிக்க பாண்டவர் அரக்குமாளிகையில் வீந்தார்
என்றுமாழ்க – ‘குற்றமற்ற நற்குணங்களாற்சிறந்த பாண்டவர்கள் அரக்கு
மாளிகையில் இறந்தார்கள்’ என்றுகருதி மனம்வருந்த,- துங்கம் வேல் துருபதன்
சூழ்ந்தது – சிறந்த வேலாயுதத்தையுடையதுருபத

 “குண்டலமிலங்கச்சங்குமாழியுங்குலவுகாந்தி
மண்டலந்துதிக்குந்திங்களிரவிமேல்வடிவந்தூண்ட
விண்டலத்திலங்குபீதவவுணனைவெறுத்துவீழ்த்த
புண்டரிகங்கள்பூத்தபுயலினைப்போற்றிசெய்வாம்”

என்கிற செய்யுளொன்று, இச்சருக்கத்துக் கடவுள்வாழ்த்தாகச் சிலபிரதிகளிற்
காணப்படுகிறது. மகாராசன் ஆலோசித்துச்செய்த செயலை, சொல்லல் உற்றாம் –
இனிச்சொல்லத்தொடங்கினோம்; (எ-று.)- அதனை, அடுத்தகவி முதற் காண்க.
தான் – அசை.

     இதுமுதல் முப்பத்தொரு கவிகள் – பெரும்பாலும் முதற்சீரும்
நான்காஞ்சீரும் விளச்சீர்களும், மற்றவை மாச்சீர்களுமாகிய அறுசீராசிரிய
விருத்தங்கள்.  

வரத்தினால் பிறந்தவாறும், வான்மொழி புகன்றவாறும்,
சிரத்தினால் வணங்கிக் கேட்பத் தேசிகன் உரைத்தவாறும்,
உரத்தினார் கெடாதவாறும், உணர்ந்து, தன் பேதை இன்னம்
சரத்தினால் உயர்ந்த வின்மைத் தனஞ்சயற்கு உரியள்’ என்னா,-துருபதனது உட்கருத்து.

இதுவும், அடுத்த கவியும் – குளகம்.

     (இ-ள்.) (துருபதமகாராசன்),- வரத்தினால் பிறந்தஆறுஉம் – (தான்)
வரம்வேண்டியபடி (திரௌபதி) தோன்றிய தன்மையையும், வான் மொழி புகன்ற
ஆறுஉம் – (அங்ஙனந்தோன்றிய (பொழுது) ஆகாயவாணி சொன்ன
தன்மையையும், சிரத்தினால் வணங்கி கேட்ப தேசிகன் உரைத்த ஆறுஉம் –
(தனது) தலையால் வணங்கி வினாவ (அதற்குத் தன்) குரு சொன்னதன்மையையும்,
உரத்தினார் கெடாத ஆறுஉம் – வலிமையையுடைய பாண்டவர்கள் இறவாத
தன்மையையும், உணர்ந்து – ஆலோசித்து,- ‘ தன் பேதை – தனது மகளான
அத்திரௌபதி, இன்னம் – இன்னமும், சரத்தினால் உயர்ந்த வின்மை தனஞ்சயற்கு
உரியள் – அம்பினாற் சிறந்த வில்லின் தொழிலில் வல்ல அருச்சுனனுக்கே
உரியவளாவள், ‘ என்னா – என்று கருதி,- (எ-று.)- “காவலர்க்கோலை போக்க”
என அடுத்த கவியோடு தொடரும்.

     இக்குளகச்செய்யுள்களில் ‘உணர்ந்து’, ‘என்னா’, ‘போக்க’ என்ற
வினையெச்சங்களுக்கு, ‘துருபதன்’ என்றுதோன்றாஎழுவாய் வருவிக்க.
‘அருச்சுனனுக்கு மணஞ்செய்து கொடுத்தாற்பொருட்டு ஒருபுத்திரிவேண்டும்’
என்று யாசன்உபயாசன் என்னும் முனிவர்களிடம் துருபதன் வரம்வேண்ட,
அப்படியே அவர்கள் அநுக்கிரகித்துப் புத்திரகாமயாகஞ் செய்வித்ததனால்
திரௌபதி தோன்றியமை, பிரசித்தம். அக்காலத்தில் தெய்வத் தன்மையுள்ள
அசரீரி வாக்கு ‘இவள் பாண்டவர்க்கு உரியளாய்ப் பல அரசர் இறத்தற்கு
மூலமாவாள்’ என்று வானத்தில் உரைத்தமையும்; பாண்டவர் மூலமாவாள்’ என்று
வானத்தில் உரைத்தமையும்; பாண்டவர் அரக்குமாளிகையில்
இறந்துபோயினரென்ற உலகவதந்தியைக் கேட்டவுடனே மிகவுங்கவலைகொண்ட
துருபதன் தன்குவைச்

* “மறைவழாமுனிவர்நின்றமரபினைநோக்கிமன்னன்
இறையெனுமைவர்மாண்டாரேந்திழைக்கினிமைகூர்தன்
முறைமையாதென்னப்பொய்யார்முந்துவரைவரென்னக்
குறைவிலதென்னவிண்ணின்வாணியுங்கூறக்கேட்டான்”

என்கிற செய்யுளொன்று, இச்செய்யுளுக்குமுன் சில ஏட்டுப்பிரதிகளிற்
காணப்படுகிறது. 
சரணமடைந்து ‘இனி என் செய்வது?’ என்று வினாவ, அவன்
தனது ஞானக்கண்ணால் உண்மையையுணர்ந்து ‘அவர் இறந்திலர்’ என்று கூறித்
துருபதனைத் தேற்றியமையும்; பாண்டவர்மிக்க பலசாலிகளாதலால் பகைவர்களால்
எவ்வகையாலும் எளிதில் அழிக்கப்படுவரல்ல ரென்று துருபதன் துணிந்தமையும்
– இங்குக் குறிக்கப்பட்ட விஷயங்கள். ‘இன்னம்’ என்றதனால், துருபதன் செய்த
முயற்சி ஒன்றினாலும் அவர்கள் கிடைத்தில ரென்பது பெறப்படும்.
இங்ஙனமிருக்கவும் துருபதன் ஆஸ்திக னாதலால், வரம், வான் மொழி,
குருமொழி இவற்றில் மிக்கநம்பிக்கை கொண்டு அதனால் இன்னும் இவள்
அருச்சுனனையே மணஞ்செய்து பெயர் – உலூகமுனிவனென்ப. ‘வான்மொழிகேட்ட
வாறும்,’ ‘தேசிகருரைத்தவாறும்,’ ‘உரத்தினாற் கெடாதவாறும் என்று பிரதிபேதம்

‘தான் வரித்தவற்கே எய்த உரியள் என் தனயை’ என்று,
கான் வரிச் சுரும்பு உண் மாலைக் காவலர்க்கு ஓலை போக்க,
மான் வரிக் கண்ணிக்கு ஏற்ற வதுவை நாள், மலர் பூஒன்றைத்
தேன் வரித்தென்ன வந்து, திரண்டது, குமரர் சேனைதுருபதன் சுயம்வரநாள் குறித்தலும், அரசர் திரளலும்.

என் தனயை – எனதுமகள், தான்வரித்தவற்குஏ எய்தஉரியன் –
(சுயம்வரத்தில்) அவள் தானாக விரும்பிக்கொள்ளும் புருஷனுக்கே பெறுதற்கு
உரியள், ‘ என்று-, கான் வரி சுரும்பு உண் மாலை காவலர்க்கு ஓலைபோக்க-
இசைப்பாட்டையும் உடம்பிற் புள்ளிகளையு முடைய வண்டுகள் (மொய்த்துத்)
தேனுண்ணுகிற பூமாலையைத் தரித்த அரசர்களுக்கு (த் துருபதன்) திருமுகம்
அனுப்ப,- மான் வரி கண்ணிக்கு ஏற்ற வதுவை நாள் – மானின் பார்வைபோன்ற
செவ்வரிபரந்த கண்களையுடைய அத்திரௌபதிக்கு இயைந்த அந்தச் சுயம்வர
தினத்தில்,- மலர் பூ ஒன்றை தேன் வரித்து என்ன – மலர்ந்த ஒருபூவை
வண்டுக்கூட்டம் (தனித்தனி தம்தமக்கென்று கொண்டு)
விரும்பிவந்துமொய்த்தாற்போல, குமரர்சேனை – இராசகுமாரர்களுடையகூட்டம்,
(திரௌபதியொருத்தியை விரும்பி), வந்துதிரண்டது -; (எ-று.)

     திரௌபதிக்குச் சுயம்வரமென்று உலகமெங்குந்தெரிவித்தால் அவளைப்
பெறும்விருப்பத்தாற் பலரும் வரும்போது பாண்டவரும் வருவ ரென்று கருதிச்
சுயம்வரம்நாட்டி அதற்குஉரிய பத்திரிகையைத் தூதர்மூலமாக
எல்லாத்தேசத்தரசர்க்கும் அனுப்பினனென்க. சுயம்வரமாவது – (ஓர்
இராசகன்னிகை ஓரிடத்திலே வருவித்துச் சேர்க்கப்பட்ட இராசகுமாரர்பலருள்
தனக்குப்பிரியமான ஒருவனைத்) தானே கணவனாக ஏற்படுத்திக்கொள்ளுதல்.
பெருந்திரளென்பதை உணர்த்தற்கு ‘சேனை’ என்றார்

ஆங்கு அது நிகழ்ந்த மாற்றம், அந்தணன் ஒருவன் வந்தோன்
ஈங்கு இவர்க்கு உரைப்ப, மைந்தர் ஐவரும் யாயும் கேட்டு,
பாங்குடைப் பதியில் வாழும் பார்ப்பன மாக்களோடும்
தாங்க அருங் கொடிய கானம், தம் மனத் தேரில் போனார்.-சுயம்வரத்தைச் செவியுற்றவுடன் பாண்டவர்
பிரயாணப்படுதல்

ஆங்கு அது நிகழ்ந்த மாற்றம் – அவ்விடத்தில்
[பாஞ்சாலநகரத்தில்] அந்தச்சுயம்வரம் அமைந்த செய்தியை, வந்தோன்
அந்தணன் ஒருவன் ஈங்கு இவர்க்கு உரைப்ப – (அங்கு நின்று) வந்தவனாகிய
ஒருபிராமணன் இவ்விடத்தில் [வேத்திரகீயத்தில்] இருக்கிற இந்தப்பாண்டவர்க்குச்
சொல்ல,- மைந்தர் ஐவர்உம் யாய்உம் கேட்டு – குமாரர்களாகிய பாண்டவர்
ஐவரும் அவர்கள் தாயான குந்தியும் (அச்சொல்லைச்) செவியுற்று,- பாங்கு
உடை பதியில் வாழும் பார்ப்பன மாக்களோடுஉம் – அழகுள்ள அவ்வூரில்
வாழ்கிற பிராமணர்களுடனே (புறப்பட்டு), தாங்கு அரு கொடிய கானம் –
பொறுத்தற்கு அரிய கொடுமையையுடைய காட்டு வழியிலே, தம் மனம் தேரின்
போனார் – தங்கள்மனமாகிய தேரிற் சென்றார்கள்; (எ-று.)

     ஒருவர் பலவிடத்தும் திரிதற்குத் தேர் துணையாவதுபோல மனத்தைப்
பலவிடத்தும் செல்லும்படி ஆசை செய்தலால், அவ்விருப்பத்துக்கு ‘மநோரதம்’
என்று வடமொழியிற்பெயர்: அச் சொற்பொருளைத் தழுவி, தம்இச்சைப்படி
விரைவாகச்சென்றார்க ளென்றபொருளில் ‘தம்மனத்தேரிற்போனார்’ என்றார்:
திரௌபதியைத் தாம்பெறலாகுமென்றகாதல்தூண்டச் சென்றனரென்று கருத்து.
இக்கருத்தை யுட்கொண்டு, அந்தணவடிவத்தோடு மறைந்துவசிக்கிற இவர்கள்,
திரௌபதிவிவாககாலத்தில் நடக்கும் போசனத்தையுண்டு அங்குக்கொடுக்கிற
தட்சிணையைப்பெற்று அங்குநிகழும் பலவகைவிநோதங்களைக் கண்டு மகிழலா
மென்ற கருத்துடன் புறப்பட்ட அந்தணர்களுடனே பிரயாணமாயின ரென்க.
தாங்கு – முதனிலைத்தொழிற்பெயர். ‘ஐவரும்யாவுங்கேட்டு’, ‘தாங்களும்’ என்று
பிரதிபேதம்.  

சார தந்திரத்தில் மிக்க தபோதனன், சதுர் வேதங்கள்
பாரதம்தன்னோடு ஐந்தாம் படியினால் பகர்ந்த மூர்த்தி,
நாரத முனியை ஒப்பான், நராதிபர் நடந்து செல்லும்
நீரத நெறியில், வாவி நிறைந்த நீர் என்ன, நின்றான்.-அவ்வனத்தில் பாண்டவரெதிரில் வியாசமுனிவன்
வந்து தோன்றல்.

சாரம் தந்திரத்தில் மிக்க – சாரமான நூலறிவிற் சிறந்தவனும்,
தபோதனன் – தவத்தையே செல்வமாகவுடையவனும், சதுர் வேதங்கள் – நான்கு
வேதங்கள், பாரதந்தன்னோடு ஐந்துஆம் படியினால் – பாரதத்தோடு சேர்ந்து
ஐந்தாகும்படி, பகர்ந்த – (அவ்வேதங்களைவகுத்துப் பாரதத்தைச்)
சொல்லியருளிய, மூர்த்தி – பெரியோனும், நாரதமுனியை ஒப்பான் –
நாரதமுனிவனை யொப்பவனுமாகிய வியாசமுனிவன்,- நர அதிபர்
நடந்துசெல்லும் நீரதம் நெறியில் – அரசர்களாகிய அப்பாண்டவர்கள்
நடந்துசெல்லும் நீரற்ற அக்காட்டுவழியில், வாவி நிறைந்த நீர் என்ன –
குளத்தில் நீறைந்தநீர்போல, நின்றான்; (எ-று.)

     நீரற்றகாட்டுவழியிற் செல்வோர்க்கு நீர்நிறைந்ததொருகுளம் எதிரில்
தோன்றினால் மிக்கமகிழ்ச்சியைத்தந்து  அவர்களுடைய தாகத்தைத்
தணிவித்து ஆற்றுவதுபோல, பாண்டவர்க்கு  மகிழ்ச்சியைவிளைவித்து வருத்தத்தை
ஆற்றுபவனாய் வியாசன் வந்து நின்றன னென்க. வேதங்களிலுள்ளவைபோன்ற
சாரமான பலவிஷயங்கள் பொருந்துதலால் அனைவரும் ‘ஐந்தாம் வேதம்’ என்று
கொண்டாடும்படி இவன் பாண்டவ சரித்திரத்தைப் பாரதம் என்ற இதிகாசமாகச்
செய்தது பாண்டவர்காலத்தின் பின் நடந்த செயலாயினும், பிற்பட்டவராகிய கவி,
அதனையுஞ் சேர்த்து ‘சதுர்வேதங்கள் பாரதந்தன்னோ டைந்தாம்படியினாற் பகர்ந்த
மூர்த்தி’ என்றார். சாரதந்திரம் – எல்லாச் சாஸ்திரங்களினுஞ் சிறந்ததான வேதாந்தம்.
பிரமனது மனத்தினின்று தோன்றிய குமாரனாய்த்  தேவவிருடியாகியநாரதன்
தத்துவஞானத்திலும் தவவொழுக்கத்திலும் லோகோபகாரஞ் செய்தலிலும்
மிகச்சிறந்ததலால், வியாசனுக்கு அவனை உவமைகூறினார். நாரதர் என்ற பெயர்-
ஆத்தும ஞானத்தை உபதேசிப்பவனென்றும், மனிதர்களுக்கு உள்ள
ஒற்றுமையைக்கெடுப்பவ னென்றுங் காரணப்பொருள்படும். நரன்-ஆத்மா,
அதற்குஉரிய  ஞானம் – நாரம்; த-கொடுத்தல், நீரஸம்-நிர்+ரஸம், ரஸம் -நீர்: அது
இல்லாதது, நீரஸம்: வடமொழிப்புணர்ச்சி: அது நீரதம் எனத் திரிந்தது, 

வணங்கலும், வாழ்த்தி, ‘முந்த வந்து நீர் வாழ்வு செய்தீர்;
இணங்கி, நும் கேண்மை கொள்வான் இச்சையால், யாகசேனன்,
அணங்கினை அன்று வேள்வி அழலிடை அளித்தான்; அந்தச்
சுணங்கு அணி முலையாள் நாளைச் சூட்டுவள், தொடையல் மாதோ.-வியாசன் பாண்டவர்க்கு இனி நடக்குஞ்செய்தியைக்
குறிப்பாகக்கூறல்.

இதுவும், அடுத்த கவியும்-ஒருதொடர்.

     (இ-ள்.) வணங்கலும்-(அப்பெழுது பாண்டவர்கள்) வணங்கினவுடனே,-
(வியாசமுனிவன்), வாழ்த்தி- ஆசீர்வாதஞ்செய்து, (அவர்களைநோக்கி), ‘நீர் முந்த
வந்து வாழ்வு செய்தீர் – நீங்கள் முன்னேவருதலால் வாழ்வுபெற்றீர்கள்; யாகசேனன்
– துருபதராசன், இணங்கி நும் கேண்மை கொள்வான் இச்சையால் – (உங்களோடு)
சம்பந்தஞ்செய்து உங்களுறவைக் கொள்ளக்கருதிய விருப்பத்தால், அன்று-
அக்காலத்தில், வேள்வி அழலிடை- யாக அக்கினியிலே, அணங்கினை-சிறந்தமகளை
(திரௌபதியை), அளித்தான் – பெற்றான்; அந்த சுணங்கு அணி முலையாள் –
தேமல் படர்ந்த தனங்களையுடைய அக்கன்னிகை, நாளை –  நாளைக்கே,
தொடையல் சூட்டுவள் – மணமாலையைச் சூட்டுவாள்; (எ-று.)-மாது, ஓ –
ஈற்றசைகள்.

      ‘முந்தவந்து நீர் வாழ்வு செய்தீர்’ என்பதற்கு – திரௌபதி மணமாலை
சூட்டும் தினம் நாளைக்கே யாதலால் நீங்கள் முந்திவந்ததனால்வாழ்வுபெற்றவராவீர்
என்பது கருத்து. வாழ்வுசெய்தீர் என்றது, எதிர்காலம் இறந்தகாலமாகக்
சொல்லப்பட்ட காலவழுவமைதி, அணங்கு – மோகினி யென்னும் பெண்தெய்வம்;
இச்சொல்-இலக்கணையாய், அழகிற்சிறந்த பெண்ணை யுணர்த்தும், சுணங்கு –
நிறவேறுபாடு: பொன்னுரைபோலச் சிறிதும் பெரிதுமாகப் படர்வது

இப் பகல் இரவும் வைகாது ஏகி, ஆங்கு எய்தும்; அங்கண்,
அப் பகல் மன்றல் பெற்றால், தோற்றுதல் ஆண்மை’ என்று,
செப்பியே முனிவன் போக, சிறுவரும் பெரிய கங்குல்,
மைப் புறப் பார்த்தன் செங் கை மணி விளக்கு ஆர, போனார்.

இ பகல் இரவுஉம் வைகாது – இன்றைப் பகலும் இராத்திரியும்
எங்குந்தங்காமல், ஏகி – விரைவாகநடந்து, ஆங்கு எய்தும் – அவ்விடத்துக்கு
[சுயம்வரமண்டபத்துக்கு)ப் போய்ச்சேருங்கள்; அங்கண் – அவ்விடத்தில், அ
பகல் -அத்தினத்தில், (நாளைக்கு), மன்றல் பெற்றால்-(திரௌபதியின்)
மணமாலையைப்பெற்றபின்பு, தோற்றுதல் – (அங்கு உங்கள் உண்மைவடிவத்துடன்)
வெளிப்படுதல்,ஆண்மை – ஆண்தன்மைக்குஉரிய செயலாம், என்று செப்பி-
என்றுசொல்லி,-முனிவன் – அவ்வியாசமுனிவன்,  போக-செல்ல,-சிறுவர்உம் –
யௌவனபருவமுடையவராகிய பாண்டவர்களும், பெரிய கங்குல் – நீண்ட
அவ்விராப்பொழுதில், மைபுறம் பார்த்தன் செம் கை மணி விளக்கு
ஆரபோனார் – கருநிறமானஉடம்பையுடைய அருச்சுனனது சிவந்தகையில்
அழகியவிளக்குப் பொருந்தச்சென்றார்கள்; (எ-று.)

     அவ்விரவில் மிக்கதைரியசாலியான அருச்சுனன் வெளிச்சத்துக்காகக்கையில்
தீக்கோல்பிடித்து முன்னேவழிகாட்டிக்கொண்டு செல்ல, மற்றையோர் அவன்பின்
சென்றன ரென்பதாம், நீங்கள் அந்தணவேடத்தோட சென்று வில்வளைத்து
இலக்கைஎய்து திரௌபதியின்மணமாலையைப்பெற்றால்,
அவ்விஷயத்திற்பொறாமை கொண்டவராய் அரசரனைவரும் எதிர்த்துப்
பொருவராதலின் அவர்களைவென்றபின்னரே வெளிப்படுதல், நெடுநாளாக
மறைந்திருந்தஉங்களது ஆண்மைஉங்கள் பகைவர்முதலியோர்க்கு நன்கு
புலப்படுதற்கு ஏற்றவழி யென்னுங் கருத்தால், ‘அப்பகல்மன்றல் பெற்றால்
தோற்றுதலாண்மை’ என்றான். திரௌபதியின் மணத்திற்கருத்தூன்றிய அவர்கட்கு
இடையேநேர்ந்த அவ்விராப் பொழுதுநீட்டித்ததாகத்தோன்றிய தென்பதுபட,
பெரியகங்குல்’ என்றார். இங்கே, ‘சிறுவர்’ என்றது -இளமைப்
பருவமுடையோரென்றபொருளோடு, அவ்வியாசமுனிவனது பௌத்திர
ரென்ற கருத்தையுங் காட்டும். மன்றல்-விவாகம்; இலக்கணையாய்
அதைநிச்சயித்தற்குஉரிய சுயம்வரமாலையை உணர்த்திற்று

புத்திரன் பேரர், கங்கைப் பூந் துறை அடைந்த போதில்,
குத்திர விஞ்சை வேந்தன் குறுகி, வெங் கொடும் போர் செய்ய,
சித்திரத்தேரோன்தன்னை, தேவர் கோன் மதலை, செந் தீ
அத்திரத்து, இருந்தைத் தேரோன் ஆக்கினன், இமைப்பின் அம்மா!சித்திரரதனென்னும்கந்தருவனை அருச்சுனன்
வெல்லுதல்.

கங்கை பூ துறை-கங்காநதியினது பொலிவுள்ள நீர்த்துறையை, புத்திரன்
பேரர்-(அக்கங்கையினது) குமாரனாகிய வீடுமனுடைய பௌத்திரராகிய
அப்பாண்டவர்கள், அடைந்த  போதில் -அடைந்தசமயத்தில்,-குத்திரம் விஞ்சை
வேந்தன் – வஞ்சனையையுடைய மாயவித்தையையுடைய தலைவனாகிய
(சித்ரரதனென்னும்) கந்தருவன், குறுகி – நெருங்கிவந்து, வெம் கொடு போர் செய்ய-
மிகக்கொடியபோரைச் செய்ய,-(அப்போரில்), தேவர் கோன் மதலை – தேவர்கட்கு
அரசனான இந்திரனது குமாரனாகிய அருச்சுனன், இமைப்பின் – ஒருமாத்திரைப்
பொழுதிலே, சித்திரம் தேரோன் தன்னை-அழகிய தேரையுடைய
அந்தச்சித்திரரதனை,செம் தீ அத்திரத்து-சிவந்த நெருப்பு மயமான ஆக்கி
நேயாஸ்திரத்தினால், இருந்தைதேரோன் ஆக்கினன்-கரிபட்ட
தேரையுடையவனாகச்செய்தான்[அவனதுதேரைக்கரியாகுமாறு எரித்தான்
என்றபடி]; (எ-று.) – அம்மா – வியப்பிடைச்சொல்,

     பாண்டவர் கங்கையைச்சார்ந்து அதன் துறையிலிறங்குமளவில், அங்குப்
பலமகளிருடனே  ஜலக்கிரீடை செய்துகொண்டிருந்த சித்திரரத னென்னும்
மறுபெயர்கொண்ட அங்காரபர்ணனென்னும் கந்தர்வன், இவர்கள்வருகை தன்
நீர்விளையாட்டுக்குத் தடையாதலை நோக்கிக் கோபங்கொண்டவனாய், இவர்களை
‘இங்கு வரலாகாது’ என்று தடுத்து வீரவாதங்கூறி  மாயப்போர் தொடங்க,
அப்போரில்முன்நின்ற அருச்சுனன் ஆக்கிநேயாஸ்திரத்தால் அவன்மாயைகளை
ஒழித்ததோடுஅவனதுதேரையும் கரியாக்கின னென்பதாம். “ஸ்த்ரைணக்லுப்த
ஜலகேலிம் உத்த தம்-தத்ரசித்ரரத மாஹி தாஹவம் – ஆததாந தநயஸ் ஸசீபதே:-
ஆஸு தக்தரதம்அஸ்த்ரவஹ்நிநா” என்றது பாலபாரதம். இவனை மாயவித்தை
வல்லவனென்றும்கந்தர்வனென்றும் வியாசபாரதங் கூறுவதற்கு ஏற்ப,
விஞ்சைவேந்தனென்பதற்கு -வித்தியாதர ராசனென்று கொள்ளாமல்
மாயவித்தையில்வல்ல கந்தர்வ ராஜனென்றுபொருள் கூறப்பட்டது. இருந்தை-
கரி.   

தோற்றவன் திரிந்து மீண்டு, தோழன் அவ் விசயற்கு ஆக,
ஆற்ற அரும் புனலும் யாறும் அவன் துணையாக நீந்தி,
சாற்றும் உற்கச தீரத்துத் தௌமிய முனியைக் கண்டு,
போற்றி, மற்று அவன்தனோடும் புன் நெறிப் புறம் விட்டாரேசித்திரரதன்சொற்படி பாண்டவர் தௌமியனுடன்
வழிகடத்தல்

தோற்றவன்-(இவ்வாறு அருச்சுனனிடம்) தோல்வியடைந்த சித்திரரதன்,
மீண்டு திரிந்து-பின்பு பகைமை நீங்கி, அ விசயற்கு தோழன் ஆக – அந்த
அருச்சுனனுக்கு நண்பனாக,-(அதன்பின் பாண்டவர்கள்), ஆற்று அரு புனல்உம்
யாறுஉம்- கடத்தற்கு அரிய நீர்நிலைகளையும் நதிகளையும், அவன் துணை ஆக
நீந்தி – அந்தச்சித்திரரதனைத் துணைவனாகக்கொண்டு அவனுதவியாற்கடந்து,-
சாற்றும் உற்கசதீரத்து தௌமியமுனியை கண்டு போற்றி -(அந்தக்கந்தர்வனாற்)
கூறப்பட்ட உற்கசதீர்த்தத்தின் கரையிலே தௌமியனென்னும் முனிவனைக்
கண்டுவணங்கி, மற்று – பின்பு, அவன்தனோடுஉம் புல் நெறி புறம் விட்டார் –
அந்தத்தௌமியனுடனே சென்றுசிறிதுமிச்சமாய்நின்ற வழியினெல்லையைக்
கடந்தார்கள்; (எ -று.)

     அருச்சுனன் சித்திரரதனது தேரைக் கரியாக்கியபின்  அந்த
அஸ்திரத்தினாலேயே அவனது அம்புகளையும் உடல்வலிமையையும் ஒடுங்கச்செய்து
அவனைத் தலைமயிர்பற்றியிழுத்துவந்து தருமபுத்திரனது பாதத்திற்போகட,
தருமபுத்திரன் அவன்மனையாளான கும்பீநசியின் வேண்டுகோளின்படி
அருள்கொண்டு அவனை விடுவிக்க, அவன் இவர்கள் பாண்டவரென்று அறிந்து
தன்பிழையைப் பொறுக்கும்படி வேண்டிச் சரணமடைந்து அபயமளிக்கப்பெற்றபின்
நண்புபூண்டு சிறந்த ஐந்நூறு குதிரைகளைக்கொடுப்பதாக வாக்களித்துத் தானறிந்த
மாயவித்தையை அருச்சுனனுக்குக் கற்றுக்கொடுத்து அதற்கு ஈடாக அவனிடமிருந்து
ஆக்கிநேயாஸ்திரத்தை உபதேசம்பெற்று அதன்பின் அவர்களைநோக்கி
‘உங்களுக்குப் புரோகிதனொருவன் இருத்தல் வேண்டும்’ என்று சிலகதைகளை
யெடுத்துக்காட்டிக் கூறி, ‘அதற்கு ஏற்றவன் நீங்கள் செல்லும்வழியிலுள்ள
உற்கசமென்னுந் தீர்த்தத்தின் கரையி லிருக்கிறவனும் தேவலமுனிவனது தம்பியுமான
தௌமியமுனிவனே’ என்றும் சொல்லி, இடையிலுள்ள ஆற்று  நீர்ப்பெருக்கைக்
கடத்தற்குவெண்டியநாவாயையும் உதவி, அப்பாற் செல்லுதற்கு நல்வழியையும்
அடையாளத்தோடுசொல்லி அனுப்பியபின், அவ்வாறே, பாண்டவர் இடைவழியில்
அம்முனிவனைக் கண்டு வணங்கித் துதித்து வேண்டிப்புரோகிதனாகக்கொண்டு
அப்பால் அவன் வழிகாட்டிக்கொண்டு முன்செல்ல அவனைத்தொடர்ந்து
நடப்பாராகிஅவன் கூறும் இனியவார்த்தைகளால் வழிநடை வருத்தந் தெரியாமலே
அரியவழியை எளிதிற்கடந்து சென்றனரென்ற விவரத்தைப் பிறநூல்களால்அறிக.
‘திரிந்து ‘என்றவிடத்து ‘தெரிந்து’ என்றும்படமுண்டு

புலர்ந்தன, கங்குல் போதும், பொழிதரு பனியும்; சேர
மலர்ந்தன, மனமும் கண்ணும்; வயங்கின, திசையும் பாரும்;
அலர்ந்தன, தடமும் காவும்; ஆர்த்தன, புள்ளும் மாவும்;
கலந்தன, குருகும் பேடும்; கலித்தன, முரசும் சங்கும்.-சூரியோதய வருணனை.

கங்குல் போதுஉம்-இராப்பொழுதும், பொழிதருபனிஉம்-(அவ்விரவிற்)
சொரிகிற பனியும், சேர புலர்ந்தன-ஒழுங்கு நீங்கின;(அப்பொழுது), மனம்உம்
கண்உம்- (நிலவுலகத்தாரது) மனமும், கண்களும், மலர்ந்தன-மலர்ச்சிபெற்றன;
திசைஉம்பார்உம்-எட்டுத்திக்குக்களும் பூமியும், வயங்கின – விளக்கம்பெற்றன;
தடம்உம்காஉம்-தடாகங்களும் சோலைகளும், அலர்ந்தன – மலர்ச்சி
பெற்றுவிளங்கின; புள்உம்மாஉம் – பறவைகளும் விலங்குகளும், ஆர்த்தன –
ஆரவாரஞ்செய்தன; குருகுஉம்பேடுஉம்-சக்கரவாகப் பறவைகளும் அவற்றின்
பேடைகளும், கலந்தன-(ஒன்றோடொன்று) கூடின; முரசும் சங்கும்-, கலித்தன-
முழங்கின; (எ-று.)

     கங்குற்போதுக்குப் புலர்தல்-விடிதல். பனிக்குப் புலர்தல்- அழிதல். மனத்துக்கு
மலர்ச்சி-உணர்வுறுதல், கண்ணுக்கு மலர்ச்சி – விழிப்பு. திசைகளுக்கும் பாருக்கும்
வயங்குதல்-வெளிச்சம்பெறுதல். தடாகம் அலர்தல்-சூரியனுதித்தவளவிலே
தாமரைமலரப்பெறுதலும், நீர்தெளிவும், சோலையலர்தல் – ஒடுக்கமொழிதல்.
சக்கரவாகப்பறவை  இரவில் ஆணும் பெண்ணும் பிரிந்திருந்து பகலிற் கூடும்
இயல்பின தாதலால், அத்தன்மையை ‘கலந்தன குருகும் பேடும்’ என்றார்.
உதயகாலத்தில் மங்களகரமாக முரஜ சங்கங்களை முழக்குதல், இயல்பு.
இரண்டிரண்டுபொருளின் வினைகளுக்கு உடனிகழ்ச்சி கூறியது- உடனவிற்சியணி.
இதனோடு தன்மைநவிற்சியணி கலந்துவந்தது. இதுமுதல் குலாலனது இருக்கையைச்
சேர்தற்குமுன் வரையிலுள்ள வருணனைகள் பாலபாரதத்தில் இல்லை

குன்றமும் கொடிய கானும், கூர் இருள் கங்குல், நீங்கி,
நன்றுநன்று, உதவ வந்தீர்; நடந்து, நீர் இளைத்தீர்போலும்!’
என்று கொண்டு, உவகையோடும், இன் மலர்க் கழுநீர் வாச
மன்றல் அம் தென்றல் வீசி, வழி விடாய் தணித்தது அன்றே.-உதயகாலத்துத் தென்றல் இனிமையாக வீசுதல்

மன்றல் அம் தென்றல் – நறுமணத்தையுடைய இனிய
தென்றற்காற்றானது, – (பாண்டவர்களைநோக்கி), ‘கூர் இருள் கங்குல்-
மிக்கஇருளையுடைய இரவிலே, குன்றம்உம் கொடிய கான்உம் நீங்கி-மலைகளையும்
கொடுமையையுடைய காடுகளையுங் கடந்து, உதவ வந்தீர்-(எனதுநண்பனாகிய
அக்கினியின் மகளான திரௌபதியை மணம்புரிந்து). உதவுதற்கு வந்தீர்கள்; நன்று
நன்று-(உங்கள்வரவு) மிகவும்நல்லது; நீர் நடந்து இளைத்தீர்போலும் – நீங்கள்
வழிநடந்துவருவதால் இளைப்படைந்தீர்போலும்’, என்று கொண்டு – என்று
சொல்லிக் கொண்டு, உவகையோடும் – மகிழ்ச்சியுடனே, இன் மலர் கழுநீர் வாசம்
வீசி-இனிய செங்கழுநீர்மலர்களின் வாசனையை மேல்வீசி, வழிவிடாய் தணித்தது-
(அவர்களுடையவழிநடைவருத்தத்தைத் தணியச்செய்தது;

     காலையில் இயல்பாக மந்தகதியோடு இனிது வீசுகிற தென்றலை, பாண்டவர்
வழிவிடாயைத் தணித்தற்கென்றே வீசுவதாக ஒருபயனைக்கற்பித்துக்கூறியது –
பயன்தற்குறிப்பேற்றவணி. இங்ஙன்இனியதென்றல்வீசியது. பாண்டவர்க்குச்
சுபசூசகம்.நன்று நன்று-அடுக்கு, மகிழ்ச்சிபற்றியது. அன்று, ஏ – ஈற்றசைகள்

வெறி படு முளரி மொக்குள் விரி பதம் நோக்கிச் சுற்றும்
பொறி வரி வண்டின் ஈட்டம் புறத்து இருந்து இரங்க,
வண்டு ஒன்று
இறகரால் வீசி, உள் புக்கு, இன் மது நுகர்தல் கண்டு,
நெறியில் நல் நிமித்தம் ஆக, நெஞ்சுற நினைந்து, சென்றார்.-ஐந்துகவிகள்-பாண்டவர்க்குநிகழும் நன்னிமித்தங்
கூறும்.

வெறி படு – தேன்பொருந்திய, முளரி மொக்குள் – தாமரையரும்பு,
விரிபதன் – மலருஞ் சமயத்தை, நோக்கி – எதிர் பார்த்துக்கொண்டு, பொறி வரி
வண்டின் ஈட்டம்-உடற்புள்ளிகளையும் இசைப்பாட்டையுமுடைய வண்டுகளின்
கூட்டங்கள், புறத்து சுற்றுஉம் இருந்து இரங்க-வெளியிலே சுற்றிலும் இருந்து
ஆரவாரிக்க,-வண்டு ஒன்று -ஒருவண்டானது, இறகரால் வீசி உள்புக்கு-(தன்)
சிறகுகளால் (அத்தாமரையரும்பின் இதழ்களை) நெகிழ்த்தி அதனுள்ளே புகுந்து,
இன் மது நுகர்தல் – இனிய தேனையுண்ணுதலை, கண்டு – (பாண்டவர்கள்) பார்த்து,
– நெறியில் நல் நிமித்தம் ஆக நெஞ்சு உற நினைத்து சென்றார்-(அதனைத் தமக்கு)
வழியிலே நேர்ந்த நற்குறியாக மனத்திற்பொருந்த நினைத்து வழிச்சென்றார்கள்;
(எ-று.)

     திரௌபதியைக் கருதி வந்த பலர்  வாளாசூழ்ந்துநிற்கத்தாம் தடையறச்
சென்றுஅவளைப் பெறுதல் கூடு மென்பதற்கு, வண்டின்செயலை ஓர் அறிகுறியாக
எண்ணிச்சென்றனரென்க

வண் துறை மருங்கின், ஆங்கு, ஓர் மாங்கனி வீழ்தல் கண்டே,
தண் துறை மீன்கள் எல்லாம் தம்தமக்கு இரை என்று எய்த,
விண்டு உறை கிழிய ஓடி, வென்று, ஒரு வாளை தன் வாய்க்
கொண்டு உறை வலிமை நோக்கி, குறிப்பினால் உவகை கூர்ந்தார்.

ஆங்கு-அவ்வழியிலே வண் துறை மருங்கின்-செழிப்பான ஒரு
நீர்த்துறையின் ஓரத்திலே, ஓர் மாங்கினி வீழ்தல் -ஒரு மாம்பழம் விழுந்ததை,
கண்டு-,தண் துறை மீன்கள் எல்லாம்-குளிர்ச்சியான அந்நீர்த்துறையிலுள்ள
மீன்கள்யாவும்,தம் தமக்கு இரை என்று எய்த-(அதனைத்) தங்கள் தங்களுக்கு
இரையாகக்கடவதென்று எண்ணி(க் கவர்தற்கு) வர, ஒரு வாளை – ஒரு
வாளைமீன், உறைவிண்டு கிழிய ஓடி – நீர் கிழிந்துபிரியும்படி ஓடிவந்து, வென்று-
(அம்மீன்களையெல்லாம்) பயன் பெறாதொழியச்செய்து, தன் வாய்  கொண்டு உறை-
(அம்மாங்கனியைத்) தன் வாயினாற் கவர்ந்துகொண்டிருந்த, வலிமை-வல்லமையை,
நோக்கி-(பாண்டவர்கள்) பார்த்து,-குறிப்பினால் – அந்தக்குறிப்பினால், உவகை
கூர்ந்தார்-; (எ-று,)

     திரௌபதியைக்குறித்துத் தம் தமக்கு உரியளாகக்கடவளென்ற விருப்பத்தோடு
பற்பல அரசர்வந்து சூழ்ந்துநிற்கத் தாம் தடையறச்சென்று அவர்களைப்
பயன்பெறாதொழிபவராக்கி அவனைக் கைக்கொண்டு கவலையற நுகர்ந்து வாழலா
மென்பதற்கு, மாங்கனியை மீன்களுக்குஇல்லாமல் வாளைமீன் கவர்ந்த இச்செயலைச்
சூசகமாகக்கண்டு மிகமகிழ்ந்தனர்.    

‘மாக் குரல் அளக வல்லி வதுவையின் அழகு காண,
தாக்கு உரல் அடி கொள் யானைத் தரணிபர் எவரும் வந்தார்;
வீக்கும் நல் மிளிர் பொன் பூணீர்! விரைவுடன் வம்மின்!’ என்று,
கூக்குரல் விளிப்ப போலும், கோகிலக் குரலும் கேட்டார்.

மா-கருநிறமான, குரல் அளகம் – கூந்தலையுடைய, வல்லி-
பூங்கொடிபோன்ற திரௌபதியினது, வதுவையின் அழகு-கலியாணக்காட்சியை, காண
– காணுதற்கு, தாக்கு உரல் அடி கொள் யானை தரணிபர் எவர்உம் வந்தார் –
(பகைவரைத் தாக்குகின்ற உரல்போன்ற கால்களைக் கொண்ட யானைச்
சேனையையுடைய அரசர்களெல்லோரும்வந்தார்கள்; வீக்கும் நல் மிளிர் பொன்
பூணிர்தரித்த நல்ல விளங்குகிற பொன்னணிகளையுடையர்களே! விரைவுடன்
வம்மின் – (நீங்கள் அவளைமணஞ்செய்தற்கு) விரைவாக வாருங்கள், ‘என்று-,
கூக்குரல் விளிப்ப போலும் – உரத்துக்கூவுகிற குரலால்  (தம்மை) அழைப்பன
போன்ற, கோகிலம் குரல்உம் – குயில்களின் குரலையும், கேட்டார் –
(பாண்டவர்கள்) கேட்டார்கள்;

     இது,  தற்குறிப்பேற்றவணி. பாண்டவர்தவிர  மற்றைய அரசர்களின்
வருகைதிரௌபதியை மணஞ்செய்துகொள்ளுதற்கன்றி அவளது மணக்கோலத்தைப்
பார்த்தற்காகவே முடிவதனால், ‘வதுவையினழகு காணத் தரணிபரெவரும், வந்தார்’
எனப்பட்டது. ‘வீக்குநன்மிளிர்பொற்பூணீர்’ என்றது, முன்னையநிலைமையைப்பற்றியது.
மா-கருமை. குரலளகம்-ஒருபொருட்பன்மொழி; இரண்டும், பெண்மயிரென்னும்
பொருளன. மாக் குர லளகம் – வண்டுகள் ஒலிசெய்யும் கூந்தலெனினுமாம்

நீடுதல் இல்லை; இன்றே, நிருபதி கன்னி மன்றல்
கூடுதல் இவர்க்கு உண்டாகும்; கொற்றவர் குறை பொறாதே,
ஓடுதல் உண்மை’ என்னா, தோகைகள் ஓகையோடும்
ஆடுதல் நோக்கி நோக்கி, அகம் மகிழ்ந்து, ஏகினாரே.

நிருபதி கன்னி மன்றல்-(பாஞ்சால) ராசனுடைய புத்திரியான
திரௌபதியின் விவாகம், நீடுதல் இல்லை-நீட்டித்தவில்லை; இன்றுஏ-இன்றைக்கேயாம்;
இவர்க்கு கூடுதல் உண்டாகும் –  இப்பாண்டவர்கட்கு (அவ்விவாகம்)
கைகூடும்;(அதனால்), கொற்றவர்-மற்றையரசர்கள், குறை பெறாது-(தமக்கு நேர்ந்த)
அவமானத்தைப் பொறுக்காமலே, ஓடுதல் – ஓடிப்போதல், உண்மை – நிச்சயம், ‘
என்னா-என்றுகருதி, (அதனால்), தோகைகள்-மயில்கள், ஓகையோடும் ஆடுதல் –
மகிழ்ச்சியோடு கூத்தாடுதலை,  நோக்கி நோக்கி, ‘ (பாண்டவர்கள்) அகம் மகிழ்ந்து
ஏகினார்-மனமகிழ்ந்து சென்றார்கள்; (எ – று.) நிருபதி=ந்ருபததி.

     இதுவும்-தற்குறிப்பேற்றவணியே. மயில்கள் ஆடுதலை, இங்ஙனம்
கருதியாடுவனவாக இவர்கள்கொண்டனரென்க. நோக்கி நோக்கி-அடுத்தடுத்துப்
பலவிடத்தும் உற்றுப்பார்த்து என்றபடி.   

பூ எலாம் சுரும்பு மொய்ப்ப, புனல் எலாம் புள்ளு வைக,
மா எலாம் துணையின் மேவ, மரன் எலாம் வல்லி புல்ல,
ஏ எலாம் பயின்ற விற் கை ஏற்று இளஞ் சிங்கம் போல்வார்
கா எலாம், மருங்குதோறும் கண்டு, கண் களித்துப் போனார்.

கா எலாம்-(இடைவழியிலுள்ள) சோலைகள்யாவும், மருங்கு
தோறுஉம் -தம் இடங்களிலெல்லாம், பூ எலாம் சுரும்பு மொய்ப்ப –
மலர்களிலெல்லாம் வண்டுகள்மொய்க்க, புனல் எலாம் புள்ளு வைக-நீரிலெல்லாம்
பறவைகள் தங்க, மா எலாம்துணையின் மேல்-விலங்குகளெல்லாம் (தத்தமக்குரிய)
துணியான பெண்பாலுடனேபொருந்த, மரன் எலாம் வல்லி புல்ல –
மரங்களிலெல்லாம் கொடிகள் தழுவ,-ஏஎலாம் பயின்ற வில்  கை ஏறு
இளஞ்சிங்கம் போல்வார் – அம்புத்தொழில்களை யெல்லாம்பழகியவில்லை
யேந்துங்கையையுடைய, இளமையான ஆண்சிங்கத்தைப்போன்ற பாண்டவர்கள்,-
கண்டு-(அவற்றைப்) பார்த்து, -கண் களித்து நின்றார்- (சுபசூசகமாகக் கருதியதால்)
கண்கள்  களிப்படையப்பெற்று நின்றார்கள்; (எ-று.)

     வண்டு மலரில்மொய்த்துத்தேனையுண்ணுதலையும், பறவைகள் நீரிற் குடைந்து
விளையாடுதலையும்,விலங்குகள் துணையோடு மேவுதலையும், மரங்களைக் கொடிகள்
தழுவுதலையும், தாம் திரௌபதியைப்பெற்றுக்  கூடிக்கலந்து இன்பமனுபவித்தலை
முந்தித்தெரிவிக்கும் நன்னிமித்தமாகக்கொண்டனர், ‘ஏவெலாம்’ -பெயர்ச்சொல்
ஏகாரத்தின்முன் வகரவுடம்படுமெய் தோன்றிற்று. பாண்டவர் ஐவராதற் கேற்ப
நன்னிமித்தங்கூறும் பாடல்களும் (செ.12-16) ஐந்தாக அமைத்தார்போலும்

வாரண மாயை சூழ்ந்த மாயவன் தோற்றம் போலப்
பேர் ஒளி பம்பி ஆர்க்கும் பேசஅருஞ் சிறப்பிற்று ஆகி,
பூரண கும்பம், பொற் கோபுரங்களால் பொலிந்து தோன்றும்,
ஆரவம் மிகுந்த பல் புள் அகழி சூழ் புரிசை கண்டார்.-பாண்டவர் பாஞ்சாலநகரத்தின் மதிலைக் காணுதல்.

வாரணம் மாயை சூழ்ந்த – (பொருள்களை) விளங்கவொட்டாது)
மறைக்குந்தன்மையுள்ள மாயையாற்சூழப்பட்ட, மாயவன் தோற்றம்போல-
திருமாலினதுசொரூபம்போல, போ ஒளிபம்பி-மிக்கஒளிசிறந்து, யார்க்குஉம் பேசு
அரு சிறப்பிற்றுஆகி-எத்துணைவல்லோர்க்கும் சொல்லுதற்கரியசிறப்பையுடையதாய்,
பூரண கும்பம்பொன் கோபுரங்களால் பொலிந்து தோன்றும் – பூர்ண
கும்பங்களினாலும் அழகியகோபுரங்களினாலும் விளக்கமுற்றுத் தோன்றுகிற,
ஆரவம் மிகுந்து பல் புள்அகழி சூழ் புரிசை-ஆரவாரம் மிக்க பல
நீர்ப்பறவைகளையுடைய அகழியினாற்சூழப்பட்டதான் (அந்நாகரத்தின்) மதிலை,
கண்டார்-(பாண்டவர்கள்)பார்த்தார்கள்;

     ஒளிமயமாய் மனமொழிமெய்களுக்கு எட்டாததாய் எங்கும் வியாபகமாயிருப்பது,
பரப்பிரமமென்கிற திருமாலினுடைய சொரூபம், மூலப்பிரகிருதியும் சீவனும் காலமும்
பிரபஞ்சமும் சராசரங்களும், அந்தப்பகவானுடைய உருவங்களாம்.
தத்துவங்களையெல்லாம் தனக்குள் அடக்கிக்கொண்டிருக்கிற அந்தப்பரமாத்மாவினது
பிரபஞ்சவடிவமான சொரூபத்தை, மாயையென்றும் அவ்யக்தமென்றும்
பிரதானமென்றும் மறுபெயர்களையுடையபிரகிருதிசூழ்ந்திருக்கின்றதென்ப. இங்கு,
சர்வவியாபகமான  பகவானது சொரூபத்தை- மிகவுயர்ந்த மதிலுக்கு உவமையாகவும்,
வியக்தமான பிரபஞ்சசொருபத்தைச் சூழந்த அவ்யக்தமான பிரகிருதி சொரூபத்தை-
அம்மதிலை அடிப்புறத்திலேசூழ்ந்துள்ள அகழிக்குஉவமையாகவும் கூறினார்.
அன்றியும், எம்பெருமானது திவ்வியசொரூபத்தை அனைவரும் எளிதில்
அடையவொண்ணாதபடி சூக்ஷ்மரூபமான மாயை இடைநின்று
தடைசெய்கின்றதுபோல, மதிலை அனைவரும் எளிதிற் சேரவொண்ணாதபடி
தடைசெய்கின்றது அகழியென்றுங் கொள்ளலாம்; வாரணம் – தடை அலங்காரஞ்
செய்யப்பட்டகுடங்களை நீர்நிறைத்து மங்களகரமாக முன்வைத்தல் மரபு.

மங்கல முழவம் விம்ம, மன்னு பல் இயங்கள் ஆர்ப்ப,
சங்குஇனம் முழங்க, எல்லாத் தானையும் பரந்து சூழ,
எங்கணும் நெருங்கி வைகும் இராச மண்டலங்களோடும்,
துங்க வேல் துருபதன்தன் தொல்லை மா நகரி புக்கார்.-பாண்டவர் பாஞ்சாலநகரத்தினுட் புகுதல்.

மங்கலம் முழவம் விம்ம – மங்கள முரசங்கள் ஒலிக்க, மன்னு
பல்இயங்கள் ஆர்ப்ப-(மற்றும்) பொருந்தியபலவகைவாத்தியங்கள் முழங்க, சங்கு
இனம் முழங்க – சங்குக்கூட்டங்கள் ஆரவாரிக்க, எல்லாம் தானைஉம் பரந்து சூழ-
நால்வகைச்சேனையும்பரவிச் சூழ்ந்துநிற்க, எங்கண்உம் நெருங்கி வைகும்-
அந்நகரத்தில் எல்லாவிடத்திலும் நெருங்கியிருக்கின்ற, இராச மண்டலங்களோடுஉம்-
அரசர்கூட்டங்களுடனே, (பாண்டவர்களும்), துங்கம் வேல் துருபதன்தன் தொல்லை
மா நகரி புக்கார்-சிறந்தவேலையுடைய துருதனது பழைய பெரிய அந்நகரத்தினுட்
சென்றார்கள்; (எ-று.)

     பல்இயம்-கொட்டுவன ஊதுவனமுதலியன. விம்மஆர்ப்பமுழங்க என்று
ஒருபொருளிற்பன்மொழிகள்வந்தமை, பொருட்பின்வருநிலையணி. 

தொடங்கியும், தொடக்கம் தொட்டுத் துகள் அற வளர்ந்தும், மீள
மடங்கியும், செல்லுகின்ற மன்னுயிர் உலகம் எல்லாம்,
முடங்கிய சார்ங்கச் செங் கை முகுந்தன் வாய்ப் புகுந்து காலத்து,
அடங்கிய உதரம் போன்றது, அந்த மா நகரி அம்மா!அந்நகரம் அப்பொழுது இருந்த தோற்றம்.

அந்த மா நகரி-பெரிய அந்தப்பாஞ்சாலநகரமானது, தொடங்கிஉம் –
தோன்றியும், தொடக்கம் தொட்டு துகள் அறவளர்ந்துஉம்-அத்தோன்றிய
காலம்முதல்பழுதறவளர்ந்தும், மீளமடங்கிஉம் – பின்பு அழிந்தும், செல்லுகின்ற-
(இவ்வாறு)நடைபெற்றுவருகிற, மன் உயிர் – மிக்க பிராணிகளையுடைய, உலகம்
எல்லாம் -உலகங்கள் யாவும், முடங்கிய சார்ங்கம் செம் கை முகுந்தன் வாய்
புகுந்த காலத்து -வளைந்து சார்ங்கமென்னும்வில்லையேந்திய சிவந்த
திருக்கையையுடைய திருமாலினதுவாயினுட்  புகுந்த பொழுது, அடங்கிய-
(அவையாவும்) அடங்கப்பெற்ற,உதரம்-(அவ்வெம்பெருமானது) திருவயிற்றை,
போன்றது – ஒத்தது; (எ-று.)

     அம்மா – வியப்பிடைச்சொல். யாவும் அழியும் யுகாந்த காலத்திலே,
பிரளயசமுத்திரத்திலே மகாவிஷ்ணு அண்டங்களையெல்லாம் தன்வயிற்றிற்கொண்டு
சிறுகுழந்தைவடிவமாய் ஆதிசேஷனது அமிசமானதோ ராலிலையின்மீது
பள்ளிகொண்டிருந்த பின்பு பிரளயம் நீங்கியவுடன் அவ்வுலகங்களை யெல்லாம்
வெளிப்படுத்தியருளுகின்றன னென்பது, வரலாறு. அப்பொழுதுஉலகத்திலுள்ள
சகலசராசரங்களும் அடங்குகின்ற திருமாலின் திருவயிற்றை, உலகத்து உயிர்கள் பல
வந்து கூடி நெருங்கியுள்ள பாஞ்சாலநகருக்கு உவமை கூறினார். காலவசத்தால்
சிருஷ்டி ஸ்திதி சங்காரங்கள் பிரவாகம் போல அவிச்சிந்நமாக நடந்து வருதலும்,
உயிர்கள் மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து இருந்து இறத்தலும், முன் இரண்டு
அடிகளில் விளங்கும். முகுந்தன்- முத்தியுலகவின்பத்தையும் இவ்வுலகவின்பத்தையும்
(தன் அடியார்க்குத்) தருபவ னென்று பொருள்படும்.

குழைப் புறம் கடந்த செங் கண், குறு நகை,
கொவ்வைச் செவ் வாய்,
இழைப் பொலி, முலையினாளுக்கு இற்றைநாள் வதுவை’ என்று,
மழைப் புற மாடம் ஏறி, வருநரை மலர்க் கை காட்டி,
அழைப்பன போன்ற, வீதி அணி கொடி ஆடை எல்லாம்.-அந்நகரத்து வீதிகளில் நாட்டிய துவசங்களின்
வருணனை.

வீதி அணி கொடி ஆடைஎல்லாம் – அந்நகரத்து வீதிகளின்
அலங்காரமாக நாட்டப்பட்ட துவசங்களின் சீலைகளெல்லாம்,-குழை புறம் கடந்த –
காதின்புறத்தைக் கடந்து சென்ற [மிகநீணட,]. செம் கண் – சிவந்தகண்களையும்,
குறுநகை – புன்சிரிப்பையும், கொவ்வை செம்வாய் – கொவ்வைப் பழம்போலச்
சிவந்த வாயையும், இழை பொலி முலையினாளுக்கு -(தம்மிடத்து அணிந்த)
ஆபரணங்கள் விளங்குதற்குக் காரணமான தனங்களையுமுடைய திரௌபதிக்கு,
இற்றை நாள் வதுவை என்று-இன்றைத்தினம்  சுயம்வரமென்று தெரிவித்து, மழை
புறம் மாடம் ஏறி – மேகங்களைத் தம்மேலுடையனவான [மிகவுயர்ந்த]
மேல்மாளிகைகளின்மீது ஏறி, வருநரை மலர் கை காட்டி அழைப்பன போன்ற-
(அவ்விவாகத்தின்பொருட்டு) வருகின்றபாண்டவர்களை (விரைந்து வருமாறு)
மலர்போன்ற கைகளைக்காட்டியழைப்பன போன்றன;

     இங்கு ஆடைகளைக் கைகளாகவும், கொடிகளை அக்கைகளையுடையராகவும்
கொள்க. தற்குறிப்பேற்றவணி. திரௌபதியின் கண்கள் மிக நீண்டுள்ளன என்ற
கருத்தை விளக்க, ‘குழைப்புறங் கடந்த செங்கண்’ என்றார். குழை-ஒருவகைக்
காதணி; இலக்கணையாய், காதை யுணர்த்திற்று. 

விண் தலம் புதைத்த பைம் பொன் துகில் இடு விதான நீழல்,
மண்டு அகில் புகையில் மூழ்கி, ஆவண மறுகில் செல்வம்
கண்டு கண்டு, அரிஏறு ஆனின் கவினுடை நெடுந் தோல்
போர்த்துக்
கொண்டன செயலார், ஆங்கு, ஓர் குலாலனது இருக்கை சேர்ந்தார்.-பாண்டவர் அவ்வூரில் ஒருகுயவன்வீட்டில்
இடங்கொள்ளுதல்.

அரி ஏறு – ஆண்சிங்கம், ஆனின் கவின் உடை நெடு தோல்
போர்த்துக்கொண்டு அன-பசுவினுடைய அழகுள்ள நெடியதோலைப்
போர்த்துக்கொண்டாற் போன்ற, செயலார்-செய்கையையுடையவர்களாகிய
பாண்டவர்கள்,- விண்தலம்புதைத்த- ஆகாயத்தினிடம்முழுதையும் மூடிய, பைம்
பொன் துகில் – பசும்போன்சீலையினால், இடு – இடப்பட்ட,விதானம் மேற்கட்டியின்
நீழல்-நிழலிலே (கடந்துசென்ற), மண்டு அகில் புகையில் மூழ்கி- (அங்கு)
நெருங்கியஅகிற்புகையிலே, முழுகி, ஆவணம் மறுகில் செல்வம் கண்டு கண்டு –
கடைவீதியிலுள்ள செல்வங்களைப் பார்த்துக்கொண்டே, ஆங்கு ஓர் குலாலனது
இருக்கை சேர்ந்தார் – அந்நகரில் (பார்க்கவனென்னும்) ஒரு குயவனுடைய வீட்டிற்
சேர்ந்தார்கள்; (எ-று.)

      ‘அந்தணர் குயவர்மனையில் தங்கலாம்’ என்பது, நூற்கொள்கை.
பராக்கிரமம்மிகுந்த பாண்டவர் அத்திறத்தை வெளிக்காட்டாது
நீறுபூத்தநெருப்புப் போல உள்ளடக்கிச் சாந்தகுணமுடைய அந்தணர்களின்
வடிவத்தைமேற்கொண்டுள்ளாராதலின், சிங்கம் பசுவின்தோலைப் போர்த்தாற்
போன்றசெய்கையரென்றார்.

ஆங்கண், நல் தவத்தால் மிக்க அன்னையை இருத்தி, மைந்தர்
தாங்கள் முன் துணையாய் வந்த தாபதர்தம்மோடு எய்தி,
தூங்கணங்குரீஇயின், மஞ்சத் தலம்தொறும் தூங்குகின்ற
தேம் கள் மாத் தெரியல் வேந்தர் சேர்ந்த
பேர் அவையில் ஆனார்.-பாண்டவர் சுயம்வரமண்டபஞ் சேர்தல்.

மைந்தர் – புதல்வர்களாகிய பாண்டவர்கள், நல் தவத்தால் மிக்க
அன்னையை – சிறந்த தவத்தினால் மேம்பட்ட தங்கள் தாயான குந்திதேவியை,
ஆங்கண்  இருத்தி-அவ்விடத்திலே  (அக்குயவன்வீட்டிலே) இருக்கச்செய்து,-
தாங்கள்-,துணை ஆய் முன் வந்த தாபதன்தன்னோடு எய்தி – (தங்களுக்குத்)
துணையாய் முன்னேவந்ததௌமியமுனிவனுடனேகூடி,- தூங்கணங்குரீஇயின் மஞ்சம்
தலம்தொறும் தூங்குகின்ற தேம் கள் மா தெரியல்வேந்தர் சேர்ந்த பேர் அவையில்
ஆனார் – தூக்கணங்குருவி (ஒடுங்கியிருத்தல்) போலச் சிங்காசனங்களில்
(வேட்கைமிகுதியாற்) சோர்வுற்றிருக்கிற இனியதேனையுடைய சிறந்தமாலையைத்
தரித்த   அரசர்கள் கூடிய பெரிய சுயம்வரசபையிற் சென்று சேர்ந்தார்கள்;

     தாபதர் தம்மோடெய்தி என்ற பாடத்துக்கு-முன்னமேதொடங்கித் தமக்குத்
துணையாய்வந்த வேத்திரகீயநகரத்து அநதணர்களோடு கூடி யென்று உரைக்க.

ஆதியில் குந்தி மைந்தர் ஐவர்க்கும் உரியள் ஆம்’ என்று
ஓதிய விதியினால், நெஞ்சு உலப்புறா உவகை கூர்வாள்;
‘சோதிடம் பொய்யாது’ என்றும், ‘தோன்றுவர், உரியோர்’ என்றும்,
தாதியர் தேற்றத் தேற்ற, தன் மனத் தளர்வு தீர்வாள்;-பாண்டவர்க்காக இரங்குகிற திரௌபதி, தாதியரால்
தேறுதல்.

நான்குகவிகள்-ஒருதொடர்.

     (இ – ள்.) ஆதியில் – முன்பு, குந்திமைந்தர் ஐவர்க்குஉம்உரியள் ஆம் என்று
ஓதிய – குந்தியின் குமாரர்களான பாண்டவரைவர்க்கும் (இவள்) உரியவளாவளென்று
(தன்னைக்குறித்துச் சோதிடர்) கூறிய, விதியினால் – அச்சாஸ்திரப்பயனைத் தான்
கேட்டதனால், நெஞ்சுஉலப்புறா உவகை கூர்வாள்-(அதுமுதல்) மனத்தில்
நீக்கமில்லாதமகிழ்ச்சி மிகுபவளும்,-சோதிடம் பொய்யாது  என்றுஉம்-(பாண்டவர்
அரக்குமாளிகையில் இறந்தில ரென்று ஆய்ந்து கூறிய) சோதிடசாஸ்திரக்கொள்கை
பிழைபடா தென்றும், உரியோர் தோன்றுவர் என்றுஉம் – (உனக்கு) உரிய
கொழுநராகிய அவர் வந்து தோன்றுவ ரென்றும், தாதியர் தேற்ற தேற்ற –
(தனது) தோழியர் அடிக்கடி தேறுதல்கூறுதலால், தன் மனம் தளர்வு தீர்வாள்-
(பாண்டவர் அரக்குமாளிகையில் இறந்தனரென்று கேள்வியுற்றதனால்)
தன்மனத்திற்கொண்ட தளர்ச்சி நீங்குபவளும்,-(எ-று.)-கூர்வாள், தீர்வாள் என்ற
இரண்டும், 26-ஆம் கவியில்வரும் ‘நுதலாள்’ என்பதற்கு அடைமொழி: அடுத்த
இரண்டுகவிகளிலும் இவ்வாறே.

     இந்தக் குளகச்செய்யுள் திரௌபதியின் தன்மையைத் தெரிவிக்கும்,
ஆதிமுதல்திரௌபதி பாண்டவரிடம் காதல்கொண்டிருந்தமையும், அவர்க்கு
அபாயம்நேர்ந்ததென்று கேள்வியுற்ற பின்பும் அந்தஅன்பு குறையாதிருந்தமையும்,
இதில்நன்கு விளங்கும். சோதிடம் – சூரியன்முதலிய கிரகங்கள் அசுவினி முதலிய
நட்சத்திரங்கள் என்பவற்றின் சஞ்சாரத்தைக்கொண்டு பயன்வகுத்துக் கூறும் நூல்;
ஜ்யோதிஸ் – ஒளி.    

சூட்டிய தொடையல் மாலைத் தோழியர், வைகல்தோறும்,
தீட்டிய படங்களும் தம் சிந்தையும் பொலிவு கொள்ள,
கோட்டிய சிலையினோடும், கொடி மணித் தேரினோடும்,
காட்டிய கோலம் அன்றி, பிறிது ஒன்றும் காண்கிலாதாள்;-திரௌபதி அருச்சுனன்மீது காதல்கொண்டிருத்தல்.

சூட்டிய-(கூந்தலிற்) சூட்டப்பட்ட, தொடையல்மாலை-தொடுத்த
பூச்சரங்களையுடைய, தோழியர் – தோழிகள், வைகல் தோறுஉம்-நாள்தோறும்,
தீட்டிய-எழுதிய, படங்கள்உம்-சித்திரப்படங்களும், தம் சிந்தைஉம்-
(அவற்றையெழுதிக்காட்டுகிற) அவர்களுடைய உள்ளக்கருத்துக்களும், பொலிவு
கொள்ள – மிகுதியடைய,–(அந்தப்படங்கள்பலவற்றுள்ளும்), கோட்டியசிலையினோடு
உம் கொடி மணி தேரினோடுஉம் காட்டிய கோலம் அன்றி-வளைத்தவில்லோடும்
கொடிகட்டிய அழகிய தேரொடும் காண்பித்த (அருச்சுனனுடைய)
வடிவமொன்றையேயன்றி, பிறிதுஒன்று உம் காண்கிலாதாள்-வேறு எந்த
வடிவத்தையும்ஆசையோடுபாராதவளும்,-

     திரௌபதிக்கு விவாகத்திற்குஉரிய பருவம் வந்தவளவிலே அவளுடைய
தோழிகள் அநேக அரசர்களின் உருவத்தைப் படத்திற் சித்திரித்து அவளுக்குக்
காட்டினராக, அவற்றுள் அருச்சுனனொருவனது உருவத்திலேயே திரௌபதி
அன்புநோக்கைச் செலுத்தினாளென்பதாம். அங்ஙன் மிகப்பல உருவங்களையெழுதிக்
காட்டுவாரது கருத்தும் அதற்கு ஏற்ப மிகப்பலவா மாதலால், ‘படங்களுந்
தஞ்சிந்தையும் பொலிவுகொள்ள’ என்றார். ‘மாலை தோழியர்’ எனவும்
பாடம்   

‘ஆண்டு, எரிப் பிறந்த போதே, அன்பினால் எந்தை நேர்ந்த
பூண் தெரி மார்பன், இன்று, இப் பொன் அவை பொலியத்
தோன்றி,
ஈண்டு எரி முன்னர் மன்னர் இழிவுற, வேட்டிலானேல்,
மீண்டு எரி புகுவன்’ என்னும் எண்ணமே விழையும் நீராள்;-அருச்சுனனையன்றிப் பிறரைமணஞ்செய்யேன்’
என்று திரௌபதி துணிவுகொண்டிருத்தல்.

ஆண்டு – அக்காலத்தில், எரி பிறந்த போதுஏ- (நான்)
யாகாக்கினியில்தோன்றியபொழுதே, அன்பினால் எந்தை நேர்ந்த – அன்போடு
எனது தந்தை(எனக்குக் கொழுநனாக) நிச்சயித்த, பூண் தெரி மார்பன் – ஆபரணம்
விளங்குதற்குக்காரணமான மார்பின்பொலிவையுடைய அருச்சுனன், இன்று –
இன்றைத்தினத்தில், இ பொன் அவை பொலிய தோன்றி – இந்த அழகிய
சுயம்வரசபைபொழிவடையும்படி (இதில்) வந்து தோன்றி, மன்னர் இழிவு உற-மற்றையரசர்கள்அவமானமடைய, ஈண்டுஎரிமுன்னர் வேட்டிலான் ஏல்-சொலிக்கிற
அக்கினியின்முன்னிலையிலே (என்னை) விவாகஞ்செய்யாதொழிவனானால், மீண்டு
எரி புகுவன்-திரும்ப நான் அக்கினியிலே பிரவேசித்துவிடுவேன், ‘ என்னும்-
என்றுதுணிகிற,எண்ணமே-நினைப்பே, விளையும்-முதிர்கிற, நீராள்
தன்மையையுடையவளும்,-(எ-று.)- “(ஆகிய) பிறை நுதலாடன்னை” (26) என்க.

     எரியினின்று பிறந்தவ ளாதலால், ‘மீண்டு எரிபுகுவன்’ என்றாள்.
அக்கினிசாக்ஷியாக விவாகஞ்செய்தல், மரபு.

கோண் பிறை நுதலாள்தன்னைக் கோதையர் பலரும் கூடி,
சேண் புனல் பல கொண்டு ஆட்டி, செழுந் துகில்
தொழுது சேர்த்தி,
பூண்பன இசையப் பூட்டி, புகை கமழ் தாமம் சூட்டி,
காண்பவர் ஆண்மை தேய, காமவேள் கலகம் செய்தார்.-தோழியர் திரௌபதிக்கு அலங்காரஞ்செய்தல்.

கோண் பிறை நுதலாள்  தன்னை- வளைவாகியபிறைச் சந்திரன்
போன்றநெற்றியையுடையளான திரௌபதியை, கோதையர் பலர்உம்கூடி-
தோழிப்பெண்கள்பலருஞ் சேர்ந்து, சேண்புனல் பல கொண்டு ஆட்டி-சிறந்த பல
நதிகளினின்று(கொணர்ந்த) புண்ணியதீர்த்தங்களைக்கொண்டு ஸ்நாநஞ்செய்வித்து,
செழுதுகில்தொழுது சேர்த்தி-சிறந்த புதிய பட்டாடையை வணக்கத்தோடு (அவட்கு)
உடுத்தி,பூண்பன இசைய பூட்டி – பூணுதற்கு உரிய ஆபரணங்களை (அவட்கு)த்
தகுதியாகஅணிவித்து, புகை கமழ் தாமம் சூட்டி – (அகிற்) புகை மணம்வீசுகிற
மலர்மாலையை(அவட்கு முடியிற்) சூட்டி,-  காண்பவர் ஆண்மை தேய
காமவேள்கலகம் செய்தார்-(அவளைக்) காணும் ஆடவர்கள் ஆண்தன்மை
குறையும்படி மன்மதனது போரைவிளைத்தார்கள்; (எ-று.)

     அவளது இயற்கையழகோடு செயற்கையழகின் பொலிவையும் காணும்
ஆடவர்கள் அவளிடத்தே காதல்மிக்கு அதனால் அறிவு முதலிய
ஆண்மைக்குணங்கள் குன்றும்படி  அலங்கரித்தன ரென்பதாம். ஆண்மை – அறிவு
நிறை ஓர்ப்பு கடைப்பிடி யென்பன; இவை, ஆடூஉக்குணம் எனப்படும்.

வந்தனர் குமரர் யாரும் வருக!’ என மகிழ்ந்து போற்றி,
சந்து அணி முலையினாளை, தாயினும் பரிவு கூர்ந்தோர்,
கந்தனும் உவமை ஆற்றாக் காவலர் காமத் தீயில்
இந்தனம் இடுவது ஏய்ப்ப, வேத்தவை ஏற்றினாரே.-திரௌபதியைச் செவிலித்தாயர் சுயம்வர
மண்டபத்துக்கு அழைத்து வருதல்.

தாயின்உம் பரிவு கூர்ந்தோர்- (அவளிடத்துப்) பெற்றதாயினும்
அன்புமிக்கவர்களான செவிலியர்,-சந்து அணிமுலையினாளை –
சந்தனக்குழம்பையணிந்த தனங்களையுடைய அத்திரௌபதியை,-குமரர் யார்உம்
வந்தனர் வருக’ என மகிழ்ந்து போற்றி – ‘இராசகுமாரரெல்லோரும்
(சுயம்வரமண்டபத்திற்கு) வந்துசேர்ந்தார்கள்: – (நீயும்) வருவாயாக’ என்று
மகிழ்ச்சியோடு உபசாரமாகக்கூறி,-கந்தன்உம் உவமை ஆற்றா காவலர் காமம் தீயில்
இந்தனம் இடுவது ஏய்ப்ப – முருகக்கடவுளும் ஒப்பாகாத (மிக்க அழகையும்
ஆற்றலையுமுடைய) அரசர்களுடையகாமாக்கினியில் விறகிடுதலைப்போல, வேந்து
அவை ஏற்றினார் – (அவளை) இராசசபையில் அழைத்துக்கொண்டு வந்து
சேர்ந்தார்கள்; (எ-று.)

     பாஞ்சாலியின் அழகுமிகுதியைக் கேள்வியுற்றதனாலேயே மிக்க காதல்
கொண்டுள்ளஅரசர்கள் அவ்வழகை நேரே கண்டு பின்னும் மிக்கமோகத்தை
யடையும்படிசெவிலியர் அவர்களெதிரிற் கொணர்ந்தன ரென்பார், ‘காவலர்காமத்தீயில்
இந்தனமிடுவதேய்ப்ப வேத்தவை யேற்றினார் என்றார். 

வெங் கழல், படைக் கை, வேந்தர் விழிகளால், விளங்கும் மேனிப்
பொங்கு அழல் பிறந்த பாவை பொற்பினைப் பொலிய நோக்கி,
பைங் கழைத் தனுவோன் செங் கைப் பகழியால் பாவம் எய்தி,
அங்கு அழல் பட்ட நெய்போல் அனைவரும் உருகினாரே.-திரௌபதியைக் கண்டவளவிலே அரசர்கள்
மோகித்தல்.

வெம் கழல்-(பகைவர்க்கு) அச்சந்தருகிற வீரக்கழலையும், படை
கை – ஆயுதங்களையேந்திய கையையுமுடைய, வேந்தர் அனைவர்உம் –
அரசர்களெல்லோரும்,-விளங்கும் மேனி- ஒளி வீசிவிளங்குகிற வடிவத்தையுடைய,
பொங்கு அழல் பிறந்தபாவை-சொலிக்கிற யாகாக்கினியில் தோன்றிய
சித்திதரப்பதுமைபோன்ற திரௌபதியினது, பொற்பினை – அழகை, விழிகளால்
பொலிய நோக்கி-(தங்கள்) கண்களால் நன்றாகப் பார்த்து, அங்கு – அப்பொழுது-
பைங் கழை தனுவோன் செம் கை பகழியால் பாவம் எய்தி – பசிய கரும்பை
வில்லாகவுடைய மன்மதனது சிவந்த கையினாலெய்யப்பட்ட அம்புகளினால்
நிலைவேறுபாட்டை யடைந்து, அழல் பட்ட நெய்போல்-தீப்பட்டநெய்போல
(நேகிழ்ந்து), உருகினார்-;(எ-று.)

     பாவம்-பாவம்:  வடசொல்; அதாவது மெய்ப்பாட்டுக்குறிப்பு; இங்கு சிந்தனை,
அசைவின்றி நிற்றல், தோள்மெலிதல், ஒடுங்கல், நெஞ்சழிதல், மயிர்சிலிர்த்தல்,
உடல்வியர்த்தல், நிறம்வேறுபடுதல், நெடுமூச்செறிதல், மொழிபலபிதற்றல், கலக்கம்
முதலிய காமவிகாரத்தாலாகுஞ் செய்கைகள். மன்மதனுக்குக் கரும்பு வில்லென்றும்,
தாமரை முதலிய மலர்கள் அம்புகளென்றும் கூறுப. வேந்தர்களுடைய வெம்மையைக்
கழலின்மெலேற்றி ‘வெங்கழல்’ என்றார்; இது; ஒருவகை உபசாரவழக்கு,
அழலிற்பிறந்தபாவையைக் கண்டவுடனே அழற்பட்டநெய்போ லாயின ரெனச்
சமத் காரந்தோன்றக் கூறியவாறு.-

மங்குலின் மங்குல் மூடி, வயங்கு ஒளி மறைந்து தோன்றாச்
செங் கதிர்ச் செல்வன் போல, சீர் கெழு வடிவம் மாறி,
அங்கு அவர் இருந்த தன்மை அறிந்ததோ-செறிந்த பொய்கைப்
பங்கயம் போன்றதால், அப் பரிவுறு பாவை பார்வை?திரௌபதி அச்சபையில் பாண்டவர்வரவை
எதிர்பார்த்தல்.

மங்குலின் – வானத்தில், மங்குல் – மேகம், மூடி – மூடுதலால்,
வயங்குஒளி மறைந்து-விளங்குகிற (தனது) ஒளி மறைபட்டு, தோன்றா-
வெளித்தோன்றாத,செம் கதிர் செல்வன் போல- சிவந்தகிரணங்களின்
வளத்தையுடைய  சூரியன்போல,அவர்-அப்பாண்டவர்கள், சீர் கெழு வடிவம்
மாறி – சிறப்புமிக்க (தங்கள்)உருவம்மாறி, அங்கு இருந்த தன்மை-அச்சபையில்
வந்து வீற்றிருந்த தன்மையை, அபரிவு உறு பாவை பார்வை – (அவர்களிடம்)
அன்புமிக்க அந்தத்திரௌபதியினுடைய கண், அறிந்ததுஓ-தெரிந்துகொண்டதோ?
செறிந்த பொய்கைபங்கயம் போன்றது – நீர்நிறைந்த தடாகத்திலுள்ள
தாமரைமலரை யொத்திருந்தது;(எ-று.)-ஆல்-ஈற்றசை.வானத்தில் மேகம் படர்ந்து
மறைத்தலால் விளங்காமல் மறைந்து நின்றாலும், தாமரைஅச்சூரியன்
உதயமாகித்தோன்று தலையே எதிர்பார்த்திருக்கும்; அவ்வாறேதிரௌபதியின்
பார்வை தனக்குஉரிய கணவராகிய பாண்டவர் உண்மைவடிவத்துடன்
அங்கு வெளிப்படுதலை எதிர்நோக்கியிருந்த தென்க.

மனக் கடுங் காதல் விம்ம, மாலை தாழ் புயங்கள் வாட,
‘எனக்கு எனக்கு’ என்று என்று ஏமாந்து இருந்த காவலரை நோக்கி,
சினக் கடம் ஒழுகும் கன்னக் களிற்றினான் திட்டத்துய்மன்,
நினைக்கவும் அரியது ஒன்றை நினைவினோடு உரைசெய்வானே:-அப்பொழுது திருஷ்டத்யும்நன் ஒன்றுகூறுத்
தொடங்குதல்.

மனம் கடு காதல் விம்ம – மனத்திற் பேராசை மிக, மாலை தாழ்
புயங்கள் வாட-(அதனால்) மலர்மாலைதொங்கும் தோள்கள் மெலிய, எனக்கு எனக்கு
என்று என்று ஏமாந்து இருந்த – ‘(திரௌபதி) எனக்கு (உரியளாக்கடவள்) எனக்கு
(உரியளாகக்கடவள்)’ என்று தனித்தனி (கருதி) மிகுகளிப்புக்கொண்டிருந்த, காவலரை
நோக்கி – (சுயம்வரத்துக்குவந்த) அரசர்களைப்பார்த்து, சினம் கடம் ஒழுகும் கன்னம்
களிறு அனான் திட்டத்துய்மன்- சீற்றத்தையும் மதசலம்ஒழுகுங்
கன்னங்களையுமுடைய ஆண்யானையைப் போன்றவனான திருஷ்டத்யும்நன்,
நினைக்கஉம் அரியது ஒன்றை நினைவினோடு உரைசெய்வான் – நினைத்தற்கும்
அரிய ஒரு வார்த்தையைக் கருத்தோடு சொல்பவனானான்; (எ-று.)-அதனை அடுத்த
கவியிற் காண்க.

     இவன் கூறிய வார்த்தை சுயம்வரத்திற்குவந்த அரசர்கள் சிறிதும் எதிர்பாராத
தென்பதும், பாண்டவரை உளரோ இலரோ எனக் காணுங் கருத்தோடு ஏற்படுத்திக்
கூறிய தென்பதும் விளங்கும். த்ருஷ்டத்யும்நனென்றபெயர் – காம்பீரியமும்
பாதுகாத்தல்தொழில்வன்மையு முடையனாய் ஆற்றல் முதலியவற்றோடு
சிறப்பாகப்பிறந்தவனென்னுங் காரணம் பற்றியதென்று வியாச பாரதம் கூறுகின்றது,
‘களிற்றினான்’ என்றும் பாடம்.

சிலை இது; சிலீமுகங்கள் இவை; கடுந் திரிகை வேகத்து
இலை முகத்து உழலுகின்ற எந்திரத் திகிரி நாப்பண்
நிலை இலா இலக்கும் அஃதே; நெஞ்சுற யாவன் எய்தான்,
கலை வலீர்! அவற்கே அந்தக் கன்னியும் உரியள்’ என்றான்.-குறியைத்தவறாது எய்தாற்குத் திரௌபதி
உரியள்’ எனல்.

கலை வலீர்-கலைஞானங்களில் வல்லவர்களே! சிலை இதுவில்
இதோஇருக்கிறது; சிலீமுகங்கள் இவை – அம்புகள் இதோ இருக்கின்றன; கடுந்
திரிகைவேகத்து – முறுக்கிவிட்டவிசையையுடைய (குயவனது) சக்கரத்தின்
வேகம்போன்றவேகத்தோடு, இலைமுகத்து உழலுகின்ற-ஆர்களின் நுனியமைந்த
விளிம்பிற்சூட்டையுடையதாய்ச் சுழலுகின்ற, எந்திரம் திகிரி – சக்கரவடிவமான
யந்திரத்தினது,நாப்பண்-நடுவிலே, நிலைஇலா – நிலைப்படாமலிருக்கிற, இலக்குஉம்
-குறியும்,-அஃதுஏ – இதோகாணப்படுகிறது; (அந்த இலக்கை), நெஞ்சுஉற
யாவன்எய்தான் – மனம்அமைய (உங்களில்) எவன் எய்துவீழ்த்துவனோ,
அவற்குஏ – அவனுக்கே இந்தகன்னிஉம் உரியள்-கன்னிகையான இத்திரௌபதியும்
உரியவளாவள், ‘ என்றான்-; (எ-று.)

     பதினெட்டு வித்தைகளுள்ளும், அறுபத்து நான்கு கலைகளுள்ளும்
வில்வித்தைஒன்றாதலால், அதில் தேர்ந்தவர்களேயென்று உயர்த்திவிளிப்பான்
‘கலைவலீர் ‘என்றான். வில்லேற்றினான் இவளை எய்துமென்றஇது, எண்வகை
மணத்துள்ஆசுரமாம். சிலீமுகம் – வடசொல்; கூர்மையுள்ள நுனியை
யுடையதென்பது பொருள்,திரிகை-திரியுந்தன்மையது. ‘எய்தான்’ – இயல்பினால்வந்த
காலவழுமைதி ‘வேகத்திலையமொத்து’ என்று பாடம்

இச் சொல் பழனப் பாஞ்சாலர்க்கு இறைவன் புதல்வன்
இயம்புதல் கேட்டு,
அச் சொல் தம்தம் செவிக்கு உரும்மேறு ஆகக் கலங்கும்
அரவு அன்னார்,
கச்சைப் பொருது, புடை பரந்து, கதித்து, பணைக்கும், கதிர் ஆரப்
பச்சைக் குரும்பை இளமுலைமேல் பரிவால், நாணம் பிரிவுற்றார்.-இரண்டுகவிகள்-அதுகேட்டு அரசர்கள் கலங்கினும்
ஆசையொழியாமை கூறும்.

இ  சொல் – இந்தவார்த்தையை, பழனம் பாஞ்சாலர்க்கு இறைவன்
புதல்வன்- கழனிகள் சூழ்ந்த பாஞ்சாலதேசத்திலுள்ளார்க்கு அரசனான துருபதனது
குமாரனாகிய திட்டத்துய்மன், இயம்புதல் – சொல்லியதை, கேட்டு-செவியுற்று,
அச்சொல்தம் தம் செவிக்கு உரும் ஏறு ஆக கலங்கும் -அந்த வார்த்தை தம்
தம்காதுகளுக்குப் பேரிடிபோலாக (அதனாற்) கலங்கிய, அரவு அன்னார் –
பாம்புபோன்றவர்களாகிய அரசர்கள்,-கச்சைபொருது-கஞ்சுகத்தை மொதி, புடை
பரந்து – பக்கங்களிற் பரந்து, கதித்து – வளர்ந்து, பணைக்கும் – பருத்துள்ள, கதிர்
ஆரம் பச்சைகுரும்பை இள முலைமேல் – ஒளியையுடைய முத்தாரங்களை யணிந்த
பசிய தென்னங்குரும்பைபோன்ற இளைய தனங்களையுடையதிரௌபதியினிடத்துக்
கொண்ட, பரிவால் – ஆசையினால், நாணம்பிரிவுற்றார் – வெட்கம்நீங்கினார்கள்;
(எ-று.)

     இடியோசையைக் கேட்டவளவில் நாகம் அஞ்சுதல் இயல்பு; அதுபோல
அவன்கம்பீரமாக உரத்தகுரலோடுசொன்ன இச்சொல்லைக் கேட்டு அரசர்கள்
அஞ்சினர்.அங்ஙன்  அஞ்சினும் ‘ஆசை வெட்கமறியாது’ என்றவாறு
அரியகுறியைஎய்யத்தமக்கு இயலாதாயின் மானக்கேடு நேருமே யென்பதைச்
சிறிதும் ஆலோசியாமலேதிரௌபதியினுடங் கொண்ட காதல்மிகுதியால்
அரசர்களெல்லோரும் அந்தஇலக்கைஎய்ய முயலுங் கருத்தின  ராயின் ரென்பதாம்.
த்ருஷ்டத்யும்நன்அங்ஙன்சொல்லிவிட்டுத் திரௌபதிக்கு ஆங்குவந்திருந்தத
மன்னரைக்காட்டினானென்று பாரதங்களிற் காண்கின்றது.

     இதுமுதற்பதினாறு கவிகள் – பெரும்பாலும் மூன்று ஆறாஞ்சீர்கள்
காய்ச்சீர்களும், மற்றையவைமாச்சீர்களுமாகிய அறுசீராசிரியவிருத்தங்கள்

கண்போல் அம்பும் நுதல் போலும் கடுங் கார்முகமும்,
காண்தொறும், அத்
திண் போர் வேந்தர் மனக் கலக்கம் செப்பும் தகைத்து அன்று;
ஆனாலும்,
விண் போய் உழன்று சுழல் இலக்கை மெய்யே எய்து, வீழ்த்தி,
மலர்ப்
பெண் போல்வாளைக் கைப்பிடிக்கும் பேராசையினால், பேதுற்றார்.

கண் போல் – (திரௌபதியின்) கண்பார்வை போன்ற, அம்புஉம் –
அம்புகளையும், நுதல் போலும் – (அவளுடைய) புருவம் போன்ற, கடு கார்முகம்உம்
– வலியவில்லையும், காண்தொறும்-பார்க்குந்தோறுஉம். அ திண் போர் வேந்தர்-
வலிய போர் செய்யவல்ல அவ்வரசர்களுக்கு உண்டான. மனக்கலக்கம்-, செப்பும்
தகைத்து அன்று – (எவராலும்) சொல்லுந்தன்மையுடைத்தன்று (மிக அதிகமானது
என்றபடி); ஆனால் உம் – அங்ஙனமிருக்கவும், (அவர்கள்), விண் போய் உழுன்று
சுழல் இலக்கை -மிக்கவுயரத்திற்பொருந்தி விரைவாகக் சழல்கிற அக்குறியை, எய்து
மெய்ஏ வீழ்த்தி – (அம்பு) எய்து தவறாது வீழ்த்தி, மலர்ப்பெண் போல்வாளை கை
பிடிக்கும் -தாமரைமலரில் வாழுந் திருமகள்போன்ற அத்திரௌபதியை மணஞ்செய்து
கொள்ளவேண்டுமென்ற, பேர் ஆசையினால்,- பேது உற்றார் – மதிமயங்கி
அம்முயற்சியை மேற்கொண்டார்கள்; (எ-று.)

     இங்கே பேதுறுதல் –  இயலாதகாரியத்தை ஆலோசியாது செய்யத்
தொடங்குதல். சுயம்வரத்தில் தன்னடைவிலே மணஞ்செய்து கொள்ளலாமென்றுகருதி
வந்த அரசர்கட்கு அக்கருத்து நிறைவேறுதற்கு இடையூறாய் நிற்றலால்,
அம்பும்வில்லும் வருத்தஞ்செய்தலே யன்றி, அவை பாஞ்சாலியின் கண்போலவும்
நுதல்போலவும் இருத்ததாலும் வருத்தஞ் செய்தன என நயந்தோன்றக் கூறினார்.
‘கண்போலம்பும் நுதல்போலுங் கடுங்கார்முகமும்’ என்றது-எதிர்நிலையணி

திருந்து ஆர் மன்றல் குழல் அணங்கின் செவிலித் தாயர்,
கடல் கடைந்து
வருந்தா அமுதம் நிகர்வாளை மயில்போல் கொண்டு,
மன் அவை புக்கு
இருந்தார், இருந்த காவலரை, ‘இன்னோர் இன்னோர் இவர்’ என்று,
முருந்து ஆர் பவளத் துவர் இதழ் வாய் முகிழ் வாள் நகைக்கு
மொழிகின்றார்:செவிலித்தாயர் திரௌபதிக்கு அரசர்களை இன்னா
ரின்னாரென்று கூறத்தொடங்கல்.

கடல் கடைந்து வருந்தா-(சிரமப்பட்டுப்) பாற்கடலைக்கடையாமலே
பெற்ற, அமுதம்-அமிருதத்தை, நிகர்வாளை-ஒப்பவளான  அத்திரௌபதியை, மயில்
போல் கொண்டு-மயில்போல அழைத்துக்கொண்டு, மன் அவை புக்குஇருந்தார்-
இராசசபையிற் சென்று சேர்ந்தவர்களாகிய, திருந்து ஆர் மன்றல் குழல் அணங்கின்
செவிலித்தாயர்-ஒழுங்காக அலங்கரித்தல் அமைந்த நறுமணமுள்ள கூந்தலையுடைய
அவளது செவிலித்தாய்மார்,- இருந்தகாவலரை-(அங்கு) வீற்றிருந்த அரசர்களை,
இவர்இன்னோர் இன்னோர் என்று-இவர் இன்னார் இன்னாரென்று, பவளம் துவர்
இதழ்வாய் முருந்து ஆர் முகிழ் வாள் நகைக்கு மொழிகின்றார்-பவழம் போலச்
சிவந்த இதழ்களையுடைய வாயையும் மயிலிறகின் அடிக்குருத்தையொத்த
முல்லையரும்புபோன்ற ஒள்ளியபற்களையுமுடைய அவளுக்கு (ச் சுட்டிக்காட்டி)ச்
சொல்லுகின்றவரானார்கள்; (எ-று.) -அதனை மேலிற்காண்க. திருந்து-
முதனிலைத்தொழிற்பெயர்.

மாற்றம் பிறிது ஒன்று உரையான், இவ் வன் போர் வில்லின்
வலி நோக்கி,
சீற்றம் சிந்தை கொண்டு அழல, பொய்யே மலர்ந்த
திருமுகத்தான்,
‘ஏற்றம்தன்னில் வேறு ஒருவர் இப் பேர் உலகில் இலர்’ என்னத்
தோற்றம் படைத்தோன்தனைக் காட்டி, ‘துரியோதனன், மற்று
இவன்’ என்றார்.-இது, துரியோதனனைக் குறித்தது.

 ‘இ பேர் உலகில்-இந்தப்பெரிய உலகத்திலே, தன்னில் வேறு ஒருவர்
ஏற்றம் இலர்-தன்னைப்போல வேறொருத்தர் உயர்வுள்ளவர் இல்லை,’ என்ன-என்று
தோற்றம் படைத்தோன்தனை-எண்ணங்கொண்டவனான வணங்காமுடிமன்னனை,
காட்டி-(செவலித்தாயர் திரௌபதிக்குச்) சுட்டிக்காண்பித்து,-இ வல் போர் வில்லின்
வலி நோக்கி-வலியப்போருக்குஉரிய இந்த வில்லின் வலிமையைப்பார்த்து, சிந்தை
சீற்றம் கொண்டு அழல – (அதனையெடுத்துவளைக்குந் திற மில்லாமையால்) மனம்
கோபங்கொண்டு கொதிக்க, மாற்றம் பிறிது ஒன்று உரையான்-
யாதொருவார்த்தையையுஞ் சொல்லாதவனாய், பொய்ஏ மலர்ந்த திருமுகத்தான் –
(திறமையுடையான்போலப்) பொய்யாக மலர்ச்சிகொண்ட அழகிய
முகத்தையுடையவனாகிய, இவன்-, துரியோதனன்-, என்றார்-;

     சுயம்வரத்திற்கு என்று சபைகூட்டியவிடத்தில் குறியெய்வதென்ற
ஒருசெயலைக்குறித்துக் கூறியது தகுதியன்றென்றுகூறக் கருதினனாயினும், அங்ஙனம்
தான் மாறுகூறினால் மற்றோர் யாது கருதுவார்களோ என்று ஒன்றுஞ்சொல்லாது
சும்மாஇருந்தனனென்பது, ‘மாற்றம் பிறிதொன் றுரையான்’ என்றதன் கருத்து.
தன்மனத்திலுண்டான எண்ணத்தை மறைக்கவேண்டு மென்ற கருத்தோடு முகத்தில்
பொய்யாக மலர்ச்சிகாட்டுகின்றன னென்பதும், அந்த அசட்டுத்தனத்தைக்
குறிப்பறியவல்ல செவிலித்தாயர் அறிந்தாரென்பதும் இங்கு விளங்கும். பொய்யே
மலர்ந்த திரு முகத்தான்-பொய்யையேபேசும் வாயையுடையான்என்றுமாம்

மணியின் கிரண வெயில் எறிப்ப, மண் ஏழ் தாங்கும்
நச்சு எயிற்றுப்
பணியின் முடி நாயகத் தலையின் பாங்கே நிரைத்த
பல் தலைபோல்,
துணியும் கொடுமை வகிர் அன்ன துணைவர், துச்சாதனன்
முதலோர்,
அணியும் கழற் கால் சுயோதனனுக்கு அருகு ஆசனத்தர்,
இவர்’ என்றார்.-இது. துரியோதனன் தம்பியரைக்குறித்தது.

மணியின் கிரணம் வெயில் எறிப்ப – (தம்மிடத்து  உள்ள)
மாணிக்கங்களின்ஒளியாகிய வெயில் வீச, மண் ஏழ் தாங்கும் நஞ்சு எயிறு
பணியின்முடி நாயகம்தலையின் பாங்கு நிரைத்த- ஏழுலகங்களையும்(கீழிருந்தும்)
தாங்குகிறவிஷமுள்ளபற்களையுடைய ஆதிசேஷனது சுடிகையையுடைய
பிரதானமானதலையினதுபக்கங்களில் வரிசையாகவுள்ள, பல் தலைபோல்-
பல தலைகள்போல,அணியும் கழல் கால் சுயோதனனுக்கு அருகு ஆசனத்தர் –
அணிகிறவீரக்கழலையுடைய காலையுடைய துரியோதனனுக்குப்பக்கத்து
ஆசனங்களில்வீற்றிருக்கின்றவர்களான, இவர்-இவர்கள், துணியும் கொடுமை வகிர்
அன்னதுணைவர்- துணிபட்ட கொடுமையின் துண்டுகள் போன்ற அவன்
தம்பியராகிய,துச்சாதனன்முதலோர்-, என்றார்-; (எ-று.)

     ஆதிசேஷனது நடுநாயகத்தலை துரியோதனனுக்கும், அதனையடுத்துள்ள
மற்றைத்தலைகள் அவனையடுத்துள்ள அவன்தம்பியர்தொண்ணூற்றொன்பதின்
மருக்கும் உவமை. இவ்வுவமையால்,  அவர்களுக்குள்இருக்கிற ஒற்றுமை
விளங்கும். மண் ஏழ் – ஏழு தீவுகளாகவுள்ள பூமியென்றுமாம்.ஆதிசேஷன்
தலைக்குச்சுடிகை போல அரசர்கள் தலைக்குக் கீரீடம் அமையும்.
துரியோதனன் தம்பிமார் கொடியவர்களாதலால், கொடுமை பல துண்டுகளாகத்
துணிப்பட்டதுபோன்றவ ரெனப்பட்டார்; தற்குறிப்பேற்றவணி. துச்சாதனன்
முதலியோரின் கொடுமையைக் கற்போர்க்கு அறிவிக்கக் கவி கூறியதன்றிச்
செவிலியர் ‘கொடுமைவகிரன்னதுணைவர் ‘ எனக்கூறினாரெனக் கொள்ளற்க

உலைவந்து அயரும் சூல் மந்திக்கு உருகா, நிலம்
கீண்டு, உதவு குலக்
கலை, வன் பலவின் சுளை கீறி, களிப்போடு அளிக்கும் காந்தாரத்
தலைவன் சகுனி இவன் கண்டாய்; தக்கோர் ஆடாச் சூதுக்கும்,
நிலை வஞ்சனைக்கும், தரணிபரில் யாரே இவற்கு நிகர்?’ என்றார்இது, சகுனியைக் குறித்தது.

உலைவந்து அயரும்-மெலிந்து தளர்கிற, சூல்மந்திக்கு-கருப்பம்முதிர்ந்த
பெண்குரங்குக்கு, உருகா – மனமுருகி, உதவு-(இரை தேடிக் கொணர்ந்தளித்தல்
முதலிய) உதவிசெய்கிற, குலம் கலை – உயர்ந்த சாதி ஆண்குரங்கு, நிலம் கீண்டு –
தரையைத்தோண்டி, வல் பலவின் சுளை கீறி – வலிய பலாப்பழத்தைக் கீண்டு
(அதன்) சுளையையெடுத்து, களிப்போடு அளிக்கும் – களிப்போடு கொடுக்கிற,
காந்தாரம் – காந்தாரதேசத்துக்கு, தலைவன் – அரசனாகிய, சகுனி – சகுனியென்றும்
பெயருடையான், இவன்-, கண்டாய் – அறிவாய்; தக்கோர் ஆடா சூதுக்குஉம் –
பெரியோர் ஆடாத சூதாட்டத்திலும், நிலை வஞ்சனைக்குஉம் – நிலையான
வஞ்சனைசெய்வதிலும், தரணிபரில் இவற்கு யார்ஏ நிகர் – அரசர்களுள் இவனுக்கு
எவர்தாம் ஒப்பாவர், என்றார்-; (எ – று.)

     முன்னிரண்டடிகளிற் கூறிய நாட்டின் வருணனையால், காந்தாரநாட்டரசனான
இவன் தனக்குரிய மகளிர்பால் மிக்கஅன்புடையா னெனத் தொனிப்பித்தவாறாம்.
ஆயினும் அவன் தீக்குணங்களின் மிக்கா னென்றது, இறுதிவாக்கியம். இங்கு, பலா-
வேர்ப்பலா. நிலைவஞ்சனை- எவராலும் மாற்றமுடிகளாத வஞ்சனை

பேசாது ஒடுங்கும் பேர் அறிவால், பெரும் போர் வலியால்,
பிறப்பால், மெய்த்
தேசால், இயற்றும் பல படையால், திண் தோள் வலியால்,
செஞ் சிலைக் கை
ஆசான் மைந்தன் இவன்தனக்கு இங்கு, யாரே உவமை? அமரரிலும்
ஈசானனை மற்று ஒரு சிறிது ஒப்பு எனலாம்; அல்லது இலை’ என்றார்.-இது, அசுவத்தாமனைக் குறித்தது.

பேசாது – (பயனில்லாதபலவார்த்தைகளைப்) பேசாமல், ஒடுங்கும் –
அடங்கியிருக்கிற, பேர் அறிவால் – மிக்க அறிவினாலும், பெரு போர்வலியால்-
பெரியபோரைச் செய்யும் வல்லமையினாலும், பிறப்பால்-பிறப்பின் சிறப்பினாலும்,
மெய்தேசால்-உடம்பின் ஒளியாலும், இயற்றும் பல படையால் – செய்யும் பல
படைக்கலத்தொழிலினாலும், திண் தோள் வலியால் – உறுதியுள்ள தோள்களின்
வலிமையினாலும்,செம் சிலை கை ஆசான் மைந்தன் இவன்  தனக்கு இங்கு
ஆர்ஏ உவமை -சிறந்தவில்லையேந்திய கையையுடைய துரோணாசாரியனது
குமாரனாகிய இந்தஅசுவத்தாமனுக்கு இவ்வுலகில் எவர்தாம் ஒப்பாவர்?
அமரில்உம் -(அவ்வுலகத்திலுள்ள) தேவர்களுள்ளும், ஈசானனை ஒரு சிறிது ஒப்பு
எனல் ஆம்அல்லது – சிவபிரானை (இவனுக்கு) ஒருசிறிது ஒப்பாவனென்று
கூறலாமே யல்லாமல்,மற்றுஇலை-வெறுஒப்பவர் இல்லை, என்றார் – என்று
சொன்னார்கள்; (எ-று.)

     இவன் பிராமண சாதியனாயினும், இவன் தந்தையான துரோணன்
அரசன்போலஒழுகியதனாலும், தன்மாணாக்கனாகிய அருச்சுனனைக்கொண்டு
வெல்லப்பட்டதுருபதனுடைய இராச்சியத்திற்பாதியைக் கைக்கொண்டு அதற்குத்
தலைமைபூண்டதனாலும், அரசரிடை இவனைக் கூறினார்.

பெண்மைக்கு இரதி என வந்த பெண் ஆர் அமுதே! பேர் உலகில்
உண்மைக்கு இவனே; வலிக்கு இவனே; உறவுக்கு இவனே;
உரைக்கு இவனே;
திண்மைக்கு இவனே; நெறிக்கு இவனே; தேசுக்கு இவனே;
சிலைக்கு இவனே;
வண்மைக்கு இவனே;-கன்னன் எனும் மன்னன் கண்டாய்
மற்று இவனே!இது, கர்ணனைக் குறித்தது.

பெண்மைக்கு – பெண் தன்மையில், இரதி என-ரதீ தேவிபோல்வா
ளென்று சொல்லும்படி, வந்த – தோன்றிய, பெண் ஆர் அமுதே-பெண்களுள்
பெறுதற்கு அரிய அமிருதம்போலச் சிறந்தவளே! பேர் உலகில் – பெரிய உலகத்தில்,
உண்மைக்கு-சத்தியத்துக்கு,  இவனே-; வலிக்கு – பலத்துக்கு, இவனே-; உறவுக்கு-
சிநேக தருமத்துக்கு, இவனே-; உரைக்கு-புகழுக்கு, இவனே-; திண்மைக்கு –
கலங்காத நெஞ்சுறுதிக்கு, இவனே-; நெறிக்கு-; நல்லொழுக்கத்திற்கு,  இவனே-;
தேசுக்கு – ஒளிக்கு, இவனே-; சிலைக்கு – விற்றொழிலுக்கு, இவனே-; வண்மைக்கு-
தானத்துக்கு,  இவனே-;- இவன்-,  கன்னன் எனும் மன்னவ-கர்ணனென்று
சொல்லப்படும் அரசன்; கண்டாய் – காண்பாய் (என்றுசொன்னார்கள்); (எ-று.)-மற்று-
அசை.

      ‘என்றார்’ என்பதை வருவித்துக்கொள்க; இன்னும் சிலசெய்யுள்களுக்கும் இது
கொள்க. செய்யுளாதலின், ‘இவன்’ என்ற சுட்டுப்பெயர் ‘கன்னன்’ என்ற
இயற்பெயரின்முன் வந்தது; “செய்யுட்குஏற்புழி” என்றார், நன்னூலார்.
இவனேயென்பதற்கு-இவனே சிறந்தவ னென்றும், இவனல்ல தில்லை யென்றுங்
கருத்து.     

அலத்தால் முன்னம் பிளந்த பகை அடர்ப்பான் கருதி,
பிளப்புண்ட
சலத்தால் யமுனை பிணித்ததெனத் தயங்கும்படி சேர்
தானையினான்,
குலத்தால் உயர்ந்த வசுதேவன் குமரன், களபக் கொங்கையர்
மெய்ந்
நலத்தால் மகிழும் சிந்தையினான், நறுந் தார் இராமன் இவன்’
என்றார்.-இது, பலராமனைக் குறித்தது.

யமுனை – யமுநாநதி, முன்னம் அலத்தால் பிளந்த பகை
அடர்ப்பான்கருதி – முன்பு (தன்னை இவன்) கலப்பையைக்
கொண்டுபிளந்தபகைமைக்குஎதிர்செய்து வெல்லக்கருதி, பிளப்புண்ட சலத்தால்
பிணித்தது – பிளவுபட்ட நீரினால்(இவனைச்) சூழ்ந்திட்டது ‘, என-என்று
சொல்லும்படி, தயங்கும் படி சேர்-(நீலநிறமாய்)விளங்குந் தன்மையைக் கொண்ட,
தானையினான் – ஆடையையுடையவனாகிய,இவன்-, குலத்தால் உயர்ந்த
வசுதேவன் குமரன் – குடிப்பிறப்பினாற் சிறந்தவசுதேவனுடைய புத்திரனும்,
களபம் கொங்கையர் மெய் நலத்தால் மகிழும்சிந்தையினான்-
கலவைச்சந்தனத்தையணிந்த தனங்களையுடைய மகளிரது உடம்பைத்
தழுவும் இன்பத்தால் மகிழும் மனத்தையுடையவனுமாகிய, நறுந் தார் இராமன் –
நறுமணமுள்ளமாலையையணிந்த பலராமன் என்றார்-; (எ – று.) 

     பலராமன் – கண்ணனுக்குத் தமையன்; திருமாலின்  எட்டாம் அவதாரம்.
வசுதேவனுடைய பத்தினியருள் தேவகியின் கருப்பத்தில் ஆறுமாசமும்,
ரோகிணியின்கருப்பத்தில் ஆறுமாசமும் இருந்து பிறந்தவன். இவன், நீலநிறமான
ஆடையை யுடுப்பவனாதலால் நீலாம்பர னென்று பெயர்பெறுவன், இவன், ஒரு
சமயத்தில் துவாரகையினின்று கோகுலத்துக்கு எழுந்தருளி, தன்னிடங் காதல்
கொண்டகோபஸ்திரீகளுடன் விளையாடுபவனாகி யமுநாநதிக்குச் சமீபத்திலுள்ள
ஒருசோலையைச் சேர்ந்து, வருணனால் அனுப்பப்பட்ட வாருணியென்னும்
மதுவைப்பானஞ்செய்து களித்தவனாய், ஜலக்கிரீடை செய்யக்கருதி,
பக்கத்திலோடுகின்றயமுநாநதியைநோக்கி ‘ஓ யமுனாய்! நீ இங்கே வா, என்று
அழைக்க, அவ்யமுனை ‘இவன்மதுபானவெறியால் இப்படிச்சொல்லுகின்றான்’  என்று
அக்கட்டளையைப்பொருள்செய்யாது அங்கேவாராதொழிய, இவன் வெகுண்டு தனது
கலப்பையின் நுனியால் அந்நதியை இழுக்க, அந்த ஆறு மீறிப்போகும்
ஆற்றலில்லாமையால் தான் செல்லும் வழியை விட்டு அவன் எழுந்தருளியிருக்கும்
வனத்தில் வந்துபெருகியதன்றித் தன்னுடைய தெய்வவடிவத்தோடு அவனெதிரில்
வந்து தன்பிழையைப் பொறுக்கும்படி மிகவும்பிராத்தித்துத் திவ்வியமான
ஒருமாலையையும் இரண்டு நீலவஸ்திரங்களையுங் சமர்ப்பிக்க, பின்பு இவன்
கோபந்தணிந்து நீராடியபின் அந்நதியை விட்டிட்டன னென்பது, வரலாறு.
இங்ஙனம்பலராமனால் வெல்லப்பட்ட யமுனாநதி தன்னைவென்ற அவனைத்
தான்வென்றுபழிதீர்த்துக்கொள்ளக் கருதி இரண்டுபிரிவாகப் பிரிந்து
அவனுடம்பை வளைந்துகொண்டாற் போன்றது, அவன் அரையிலும் மேலும்
சாத்திய நீல ஆடைகளெனவருணித்தவாறு;  யமுநாநதியின்நீர் கருநிறமுடைய
தாதலால், இங்ஙனம்கற்பிக்கப்பட்டது; தற்குறிப்பேற்றவணி,

     சலம்=ஜலம்; சலம் என்ற வடசொல்லின் திரிபுஎனக்கொண்டால், கோபமாம்.
வசுதேவன்-யதுகுலத்தில் சூரனென்பவனது குமாரன். வசுதேவன் என்பது –
ஐசுவரியங்களால் விளங்குபவனென்று பொருள்படும்.

இந்தக் குரிசில் யது குலத்துக்கு எல்லாம் திலகம் எனுமாறு
வந்து உற்பவித்து, பொதுவருடன் வளரும் கள்ள மா மாயன்;
முந்த, கஞ்ச மாமன் உயிர் முடித்தான்; இவற்கு முகில் ஊர்தி
அந்தப் புரத்தில் ஆராமம், அந்தப்புரத்துக்கு ஆராமம்.-இது, கண்ணபிரானைக் குறித்தது.

இந்த குரிசில்-இந்த உத்தமபுருஷன், யது குலத்துக்கு எல்லாம்
திலகம்எனும் ஆறு வந்து உற்பவித்து – யதுவமிசமுழுவதுக்கும் ஒரு திலகமென்று
சொல்லும்படி அலங்காரமாய் அக்குலத்தில் வந்து திருவவதரித்து, பொதுவருடன்
வளரும் – இடையர்களுடனே வளர்ந்த, கள்ளம் மா மாயன்-(எவரும்)
அறியவொண்ணாத பெரிய மாயையையுடைய கண்ணபிரான்; முந்த முன்னமே
(இளம்பருவத்திலேயே), கஞ்சன் மாமன் உயிர் முடித்தான் இவற்கு – கம்சனாகிய
மாமனுடைய உயிரை யொழித்தவனாகிய இவனுக்கு, முகில் ஊர்தி அந்த புரத்தில்
ஆராமம்-மேகங்களை வாகனமாகவுடையவனான இந்திரனது அந்த
அமராவதிநகரத்திலுள்ள கற்பகச்சோலை, அந்தப்புரத்தில் ஆராமம் – (தனது
மனையாள்வசிக்கும்) அந்தப்புரத்திலிருக்குஞ் சோலையாம்.

     திலகம் நெற்றிக்கு அழகுசெய்வதுபோல, கண்ணன் யதுகுலத்துக்குச்
சிறப்புத்தந்தன னென்க. வசுதேவனும் தேவகியும்  கம்சனால் வடமதுரையில்
தளைபூண்டிருக்கையில் திருமால் தேவகியினிடம் எட்டாவதுகருப்பத்திற்
கண்ணனாய்அவதரிக்க, அந்தக் குழந்தையைக் கம்சன் கொல்லக்கூடுமென்கிற
அச்சத்தால்தாய்தந்தையர் அத்தெய்வக்குழவியின் அனுமதிபெற்று அந்தச் சிசுவை
அதுபிறந்தநடுராத்தியிலேயே திருவாய்ப்பாடியிலிருக்கிற
நந்தகோபனதுதிருமாளிகையில் இரகசியமாகக் கொண்டுசேர்த்துவிட்டு,  அங்கு
அவன்மனைவியான யசோதைக்கு மாயையின் அமிசமாய்ப் பிறந்திருந்ததொரு
பெண்குழந்தையையெடுத்துக்கொண்டு வந்துவிட, அதுமுதல்
கம்சனைக்கொல்லுகிறவரையில் கண்ணபிரான் அக்கோகுலத்திலேயே
இடையர்களுடன் திருவிளையாடல்கள் புரிந்து வளர்ந்தருளினன். கம்ஸன் –
தேவகிக்குத் தமையனாதலால், கண்ணனுக்கு மாமனாவன். தன்னைக்கொல்லப்
பிறந்ததேவகீ புத்திரன் யசோதையினிடம் ஒளித்துவளர்தல் முதலிய
விருந்தாந்தங்களைநாரதர் சொல்லக் கேட்டுக் கம்சன் அதிககோபங்கொண்டு
கிருஷ்ணனைக்கொல்லநிச்சயித்து வில்விழாவென்கிற வியாஜம்வைத்து
வடமதுரைக்கு வரவழைத்துப்பலவகையில்  வதைக்க வழிதேடுகையில்,
கம்சசபையில்கிருஷ்ணபகவான் வேகமாகஎழும்பிக் கம்சனது மஞ்சத்தின்மேலேறி
அவனதுகிரீடம் கழன்றுகீழேவிழும்படிஅவனைத் தலைமயிரைப் பிடித்துத் தரையில்
தள்ளி அவன்மேல் தான் விழுந்துஅவனைக் கொன்று ஒழித்தன னென்பது,
மூன்றாமடியிற் குறித்த கதை.

     ஈற்றடியிற் குறித்த கதை;-  கண்ணன் நரகாசுரனையழித்தபின்பு அவனால்
முன்புகவர்ந்துபோகப்பட்ட (இந்திரன் தாயான) அதிதிதேவியின் குண்டலங்களை
அவளுக்குக் கொடுக்கும்பொருட்டுச் சத்தியபாமையுடனே கருடன்தோளின்மேலேறித்
தேவலோகத்துக்குச் செல்ல, அங்கு இந்திராணி சத்தியபாமைக்குச்
சகலஉபசாரங்களைச்செய்தும் தேவர்க்கேயுரிய பாரிஜாதபுஷ்பம் மானுடப்
பெண்ணாகியஇவளுக்குத் தகாதென்று சமர்ப்பிக்கவில்லை யாதலின், அவள்
அதனைக் கண்டுவிருப்புற்றவளாய்ச் சுவாமியைப் பார்த்து ‘பிராணநாயகனே!
இந்தப் பாரிசாததருவைத்துவாரகைக்குக் கொண்டுபோகவேண்டும்’ என்ன,
கண்ணன் உடனேஅந்தவிருட்சத்தை வேரோடு பெயர்த்துக் கருடன் தோளின்மேல்
வைத்தருளி, அப்பொழுது இந்திராணி தூண்டிவிட்டதனால்வந்து மறித்துப்
போர்செய்த இந்திரனைச்சகலதேவசைனியங்களுடன் சங்கநாதத்தினாலே
பங்கப்படுத்தி, பின்புபாரிசாதமரத்தைத் துவாரகைக்குக்கொண்டுவந்து
சத்தியபாமைவீட்டுப் புறங்கடைத்தோட்டத்தில் நாட்டியருளின னென்பதாம்.

     இச்செய்யுளின் ஈற்றடியில் அந்தப்புரம் என்பது வெவ்வேறு பொருளில்
வந்தது,மடக்கு என்னுஞ் சொல்லணி

தண்ணம் துளவோன்தனக்கு இளவல் இவன்காண்-மின்னே!-
சாத்தகி என்று
எண்ணும் போச குலத் தலைவன், எவரும் சூழ
இருக்கின்றான்;
கண்ணன்தன்னை அவமதித்துக் கழறும் புன்சொல்
கார்முகத்தைத்
திண்ணென் கருத்தான், ஈங்கு இவன்காண் சேதிப் பெருமான்,
சிசுபாலன்.–இது, சாத்தகியையும் சிசுபாலனையும் குறித்தது.

மின்னே-மின்னல்போன்றவளே! இவன்-,- தண் அம்துளவோன்
தனக்குஇளவல் – குளிர்ந்த அழகிய திருத்துழாய்மாலையையுடைய
கண்ணபிரானுக்குத்தம்பியாகிய, சாத்தகி என்று  எண்ணும் போசகுலம் தலைவன் –
சாத்தகியென்று(எவராலும்) நன்குமதிக்கப்படுகிற போசகுலத்துக்குத்தலைவன்,
காண் – அறிவாய்:ஈங்கு – (அவனுக்கு) இப்பால், எவர்உம் சூழ இருக்கின்றான்- பல
அரசர்கள்(தன்னைச்) சுற்றிலும் இருக்க இடையில் வீற்றிருக்கின்றவனாகிய, இவன்,-
கண்ணன்தன்னை அவமதித்து கழறும் – கிருஷ்ணனை அவமதித்துச் சொல்லுகிற,
புன்சொல் – இழிவான சொற்களாகிய, கார்முகத்தை – வில்லை, திண்ணென் –
வலியதென்று எண்ணுகிற, கருத்தான் – எண்ணத்தையுடையவனும், சேதி பெருமான் –
சேதி தேசத்து அரசனுமாகிய, சிசுபாலன்-; காண் – அறிவாய்; (எ-று.)

     சாத்தகி – ஸாத்யகி: சத்தியகனது புத்திரன். யதுகுலத்தரசர்களுள்
வசுதேவனுக்கு உடன்பிறந்தமுறையாகிறவனும் சினியென்பானது மகனுமான
சத்தியகனது குமாரனான சாத்தகி, பிராயத்திற் கண்ணனினும் இளையவனாதலால்,
கண்ணனுக்குத் தம்பி முறையாவன். இவனுக்குச் சிலதலைமுறைகளுக்குமுன்
இக்குலத்தில் தோன்றின மகாபோசனென்கிற அரசன் அதிக
தருமிஷ்டனாயிருந்தனால்அவன்வமிசத்திற்பிறந்தவர்கள் போசரென்று
பிரசித்திபெறுவர்.

     பாலபாரதத்தில் பகதத்தனைக்கூறியபின் சிசுபாலன் கூறப்பட்டுள்ளான்.
சிசுபாலன் – வசுதேவனது உடன்பிறந்தவளும், சேதி தேசத்து அரசனாகிய
தமகோஷனுக்குப் பத்தினியுமாகிய சுருதசி-வை யென்பவளுடையமகன்.-
திருமாலினதுவைகுண்டலோகத்தின் துவராபாலகராகிய ஜயவிஜயரென்பவர்
ஒருசமயத்தில் ஆங்குஉட்செல்லவந்த சநகாதியோகிகளைத் தடுத்தமைபற்றி
அவர்கள் வெகுண்டுகூறியசாபமொழியால் மூன்றுபிறப்புத் திருமாலுக்குப்
பகைவராய்ப் பூமியிற் பிறப்பெடுத்துஅத்திருமாலின் கையாலிறப்பவராகி முதலில்
இரணிய இரணியாக்ஷராகவும், அதன்பின்இராவண கும்பகர்ணராகவும், அப்பால்
சிசுபால தந்தவக்கிரராகவும் தோன்றினரெனஅறிக: இச்சிசுபாலன், பிறந்தபொழுது,
நான்கு கைகளையும் மூன்றுகண்களையுமுடையவனாயிருந்தான்; அப்பொழுது
ஆகாயவாணி ‘யார் இவனைத் தொடுகையில்இவனது கைகளிரண்டும்,
மூன்றாம்விழியும் மறைகின்றனவோ, அவனால் இவனுக்குமரணம்’ என்று கூறிற்று;
அவ்வாறே பலரும் தொடுகையில் மறைபடாத கைகளும்கண்ணும், கண்ணபிரான்
தொட்ட வளவிலே மறைபட்டன; அதனால், இவனைக்கொல்பவன்
கண்ணனேயென்று அறிந்த இவன் தாய் ‘யாதுசெய்யினும் என்மகனைக்
கொல்லலாகாது ‘ என்று கண்ணனை வேண்ட, அந்த அத்தையின் நன்மொழிக்கு
ஒருசார் இணங்கிய கண்ணன் ‘இவன் எனக்கு நூறுபிழை செய்யுமளவும்
இவன்பிழையை நான்பொறுப்பேன்’ என்று கூறியருளினன். பின்பு சிசுபாலன்,
தனக்குக் கண்ணன் சத்துருவென்பதை இளமையிலேயே அறிந்து அதனாலும்
முந்தினசன்மங்களின் தொடர்ச்சியாலும் மிக்கபகைமையைப் பாராட்டி எப்பொழுதும்
அவ்வெம்பெருமானை நிந்திப்பதே தொழிலாகஇருந்தான். இவன், தான் கண்ணன்
விஷயமாகப் பலவாறுகூறம் தூஷணைச்சொல்லையே அவனை வெல்லப் போர்
தொடுக்கும் வலிய கருவியாகக் கருதியிருந்தனனென்பதுதோன்ற, ‘கண்ணன்
தன்னையவமதித்துக் கழறும் புன்சொற் கார்முகத்தைத் திண்ணென்கருத்தான்’
எனப்பட்டான்

தார் வண்டு இமிரத் தேன் ஒழுகும் தடந் தோள் வீரன்
சராசந்தன்,
போர் வெஞ் சரத்தால் யாவரையும் புறம் கண்டு அன்றிப்
போகாதான்;
சீர் வண் மதுராபுரி விடுத்து, துவாரகையினில் சென்று ஒதுங்க,
கார்வண்ணனையும் நெடுங் காலம் வென்றான், இவன்காண்!’
என்றாரே.-இது, சராசந்தனைக் குறித்தது.

தார் – மாலையில், வண்டு இமிர – வண்டுகள் ஒலிக்க, தேன்
ஒழுகும்-(அதனினின்று) தேன்வழியப்பெற்ற, தட தோள்-பெரிய தோள்களையுடைய,
வீரன் – இந்தவீரன், போர் – போரில், வெம்சரத்தால் – கொடிய அம்புகளால்,
யாவரைஉம் – எதிரிகளெல்லோரையும், புறம்கண்டு அன்றி –
முதுகுகொடுக்கச்செய்தல்லாமல், போகாதான் – (அப்போரினின்று)
மீண்டுசெல்லாதவனான, சராசந்தன்-; கார் வண்ணனைஉம் – காளமேகம் போலும்
திருநிறமுடைய கண்ணனையும், சீர் வள் மதுராபுரி விடுத்து துவராபதியில் சென்று
நெடு காலம் ஒதுங்க – சிறந்த அழகிய மதுராபுரியைவிட்டுத் துவாரகையிற் போய்
நெடுங்காலம் ஒதுங்கும்படி, வென்றான் – சயித்தவன், இவன்-; காண்- அறிவாய்;
என்றார் – என்று (செவிலித்தாயர்) சொன்னார்கள்; (எ-று.)

     மகததேசத்து அரசனான பிருகத்ரத னென்பவன் மைந்தனில்லாக்குறையால்
வனத்திற்சென்று சண்டகௌசிக முனிவனைவணங்கி வரம்வேண்ட, அவன்
மாமரத்தின் கனியொன்றைக் கொடுக்க, அதனை அவ்வரசன்
தன்மனைவியரிருவர்க்கும் பகிர்ந்து கொடுத்தான். அதனால் அவ்விருவரிடத்தும்
பாதிபாதியாகக் குழந்தை பிறந்தது. அவற்றை அவன் ஊர்ப்புறத்தி லெறிந்து
விடும்படிகட்டளையிட,  அங்ஙனம் எறியப்பட்ட அப்பிளவுகளை
அந்தக்கிராமதேவதையாகியஜரையென்பவள் இரவில் ஊர்வலம் வருகையில் கண்டு
எடுத்துப் பொருத்திப்பிழைபித்து, தன்னாற் பொருத்தப்பட்ட காரணத்தால் ஜராசந்த
னென்று பெயரிட்டுவளர்க்கும்படி அக்குழந்தையைத் தந்தையினிடம் கொடுத்துப்
போயினள். அங்ஙனம்வளர்ந்து, அந்நாட்டில் கிரிவிரசமென்னும் நகரத்தில்
அரசாண்டு செருக்குக் கொண்டுபற்பல அரசர்களைப் போரிற் கொன்று அநேக
அரசர்களை வென்று சிறையில்வைத்திருந்த சராசந்தன்,  அஸ்தி, பிராஸ்தி
யென்னும் தனது பெண்களிருவரைக்கண்ணனதுமாமனாகுங் கம்சனுக்கு
மணஞ்செய்வித்திருந்தான். பின்பு கண்ணன்கம்சனைக்கொன்றது  காரணமாகச்
சராசந்தன் வெகு கோபங்கொண்டு கிருஷ்ணனை வமிசத்தோடு கொல்ல
வேண்டுமென்று அநேகம்பெருஞ்சேனையோடு எதிர்த்து வந்து கண்ணன்
எழுந்தருளியிருந்த மதுராபுரியை வளைத்துப் பெரும் போர்செய்து
பலராமகிருஷ்ணர்களாலும் யாதவசேனையாலும் தானும் தன்சேனையும்
வெல்லப்பட்டவனாய் ஓடிப்போயினான்; இங்ஙனம் பதினெட்டுமுறை மீண்டும்
வருவதுபொருவது தோற்பது ஓடுவதாய்ப் பங்கப்பட்டபின் கோபாவேசமுற்றுப்
பலமானபெருஞ்சேனையைத் திரட்டிக்கொண்டு ஒருகால் போருக்கு வந்தான்.
அச்சமயத்திலேயே, யவன தேசாதிபதியான காலயவனன் பலபராக்கிரமங்களாற்
செருக்குக்கொண்டு கிருஷ்ணபல ராமர்களையே தான் எதிர்த்தற்குஏற்ற
பலவான்களென நாரத முனிவரால் அறிந்து சேனையைச் சித்தஞ்செய்துகொண்டு
போரின் பொருட்டு மதுரைக்கு வந்தான். அப்பொழுது கண்ணன் ஏக காலத்தில்
இருதிறத்தாரோடு பெரும்போர்செய்தால் யாதவ சேனைக்கு நாசமுண்டாகக்
கூடுமென்று நினைத்துச் சமுத்திரராசனைப் பன்னிரண்டுயோசனை தூரம்
இடம்விடும்படி கேட்டு மேல்கடலிடையே பகைவர் உட்புகவொண்ணாதபடி
மிகவும் பாதுகாவலுடையதான துவாரகாநகரத்தை நிருமித்து மதுரையிலிருந்த
சனங்களை யெல்லாம் அந்நகரத்திற்கொண்டுசேர்த்துத் தானும் துவாரகைசேர்ந்து
அங்கேயே எழுந்தருளியிருந்தன னென்பது  வரலாறு. கண்ணன் இங்ஙன் செய்தது,
பகைக்குப்பயந்து பங்கப்பட்டதாகவே முடிதலால், சராசந்தனுக்கு அஞ்சிக் கண்ணன்
மதுரைவிட்டுத் துவாரகைக்கு ஓடின னென்று ஓரபவாதம் பரவியது.

     மது என்னும் அரசனால் முதலிற் சீர்திருத்தி யாளப்பட்டதாலும், கண்ணுக்கு
இனியதாயிருத்தலாலும், மதுரா என்று பெயர். இங்குக் குறித்தது,வடமதுரை.த்வாரவதீ
என்ற வடசொல், துவாரபதி யெனவிகாரப்பட்டது. (துவரை எனவும் திரியும்.)
இவையிரண்டும் முத்திதரும் நகரினுட்சேர்ந்தவை. ‘போர்வந்தெதிர்த்தால்’ என்பதும்,
‘துவாரகையினில்’ என்பதும் பாடம்.  

பனைக்கைப் பிறை வெண் கோட்டு அயிராபதமே போலும்
                                 பகட்டில் இவன்
வினைக்கண் புகுந்தால், எதிர் நின்று வேறு ஆர் இவனை
                                 வெல்கிற்பார்?
முனைக்கண் செங் கண் தீ உமிழும் முகத்தான்-மாதே!-
                                 பகதத்தன்;
தனக்குத் தானே நிகர் என்னத் தருக்கொடு ஈண்டே
                                 இருக்கின்றான்.-இது, பகதத்தனைக் குறித்தது.

மாதே-அழகியபெண்ணே! தனக்கு தான்ஏ நிகர் என்ன –
தனக்குத்தானே ஒப்புமை (தனக்கு ஒப்பாவர் யாருமில்லை) என்று எண்ணி,
தருக்கொடு – செருக்குடனே, ஈண்டுஏ இருக்கின்றான் – இங்கே இருக்கின்றவன்,
பகதத்தன்-; முனைக்கண்-போர்க்களத்திலே, செம் கண் தீ உமிழும் – (மிக்க
கோபத்தாற்) சிவந்தகண்களினின்றும் நெருப்புப்பொறியைச் சொரிகின்ற, முகத்தான்-
முகத்தையுடையவனாகிய, இவன்-, பனை கை – பனைமரம்போன்ற துதிக்கையையும்,
பிறை வெள் கோடு – பிறைச்சந்திரன் போன்ற வெண்மையான  தந்தங்களையுடைய,
அயிராவதம்ஏபோலும் – ஐராவதமென்ற அரசயானையையே ஒத்த, பகட்டில்-
யானையின் மேலேறி, வினைக்கண் புகுந்தால் -போர்த்தொழிலிலே பிரவேசித்தால்,
வேறு எதிர் நின்று இவனை வெல்கிற்பார் ஆர் -இவனுக்குப் பகையாய்
இவனெதிரில்நின்று இவனைவெல்லவல்லவர் யாவருளர்?

     பகதத்தன்-நரகாசுரனதுமகன்; கண்ணன் நரகாசுரனைக்கொன்றபின்
அப்பெருமானால் அவனது பிராக்சோதிஷமென்னும் பட்டணத்தில்
இராச்சியப்பட்டாபிஷேகஞ் செய்யப்பட்டவன். ஒருகாலத்தில் தேவாசுர யுத்தத்தில்
தோல்வியடைந்த தேவேந்திரன், இவனைத் துணைவேண்ட, இவன் சென்று பொருது
அசுரரை யொழித்து இந்திரனுக்கு அரசாட்சியை நிலைநிறுத்தினன். அக்காலத்தில்
நூறாயிரம்யானை பலமுடைய சுப்பிரதீகமென்னும் தெய்வயானை இந்திரனால்
இவனுக்கு அளிக்கப்பட்டதென்றும்  அதனைப்பதினாயிரம் யானையை
யொத்தவனாகிய இவன் பட்டத்துயானையாகக் கொண்டுஅதன்மேல்
ஏறிப்பொருது தவறாதுபகைவென்றுவந்தனனென்றும் அறிக. இவன்,
யானைப்போரில் வல்லவன். ஐராவதமென்பது – இந்திரனது  பட்டத்துயானை;
வெண்ணிறத்தையும் நான்குதந்தங்களையும் உடையது, எட்டுத்திசையானைகளுள்
கீழ்திசைக்கு உரியதும் இதுவே

இவன், சல்லியன் என்று உரை சான்ற, இகல் வேல்
மன்னர்க்கு ஏறு அனையான்;
இவன், தன் பகைவர் யாவரையும் இமையோர் ஆக்கும்
எழில் நீலன்;
இவன், தண் தமிழ் தேர் அடல் வழுதி; இவன், தேர்
இரவிகுல வளவன்;
இவன், செந் தழலோன் மரபு ஆகி, ஈர்-ஏழ் உலகும்
புகழ் சேரன்.-இது சல்லியனையும் நீலனையும் சேரசோழ
பாண்டியரையும் குறித்தது.

இவன்;- சல்லியன் என்று உரை சான்ற – சல்லியனென்று பேர்பெற்ற,
இகல்வேல் மன்னர்க்கு ஏறு அனையான் – வலியவேலாயுதத்தையுடைய
அரசர்களுக்குச்சிங்கம்போன்றவன்; இவன்;-, தன் பகைவர் யாவரைஉம் இமையோர்
ஆக்கும்-தன்பகைவர்களெல்லோரையும் தேவர்களாகச்செய்கின்ற, எழில் நீலன் –
அழகையுடையநீலனென்பவன்; இவன்-; தண்தமிழ் தேர் அடல் வழுதி-இனிய
தம்ழிப்பாஷையைஆராய்ந்துதேர்ந்த வலிமையையுடைய பாண்டியன்; இவன்-,
தேர் இரவிகுலம்வளவன் – தேரையுடைய சூரியனது குலத்தில் தோன்றிய சோழன்;
இவன்-,செம் தழலோன்மரபு ஆகி ஈர் ஏழ் உலகுஉம் புகழ் சேரன்-சிவந்த
அக்கினியினதுகுலத்தில் தோன்றியவனாய்ப் பதினான்கு உலகத்தாரும் புகழ்ப்பெற்ற
சேரன்;   (எ-று.)

     சல்லியன் – (பகைவர்க்கு) அம்பு நுனிபோல் (வருத்தஞ்செய்)பவன்; சல்யம் –
அம்புமுனை. இவன் மத்திரிநாட்டரசன்; பாண்டுமகாராசனது இரண்டாவது
மனைவியாகிய மாத்திரிக்கு உடன் பிறந்தவன், நீலனென்பவன் பிரசித்தரான
அரசர்களில் ஒருவனாக முதனூலிலுங் குறிக்கப்பட்டுள்ளான். இவனை
மாஹிஷ்மதீநாதனென்று பாலபாரதம்கூறுகிறது. போரிற் புறங்கொடாது. இறந்தவர்,
உடனே தேவர்களாகி வீரசுவர்க்கம் புகுகின்றனரென்பது நூல்துணிபாதலால்,
பகைவர்களைத் தவறாதுகொல்கிற என்ற பொருளில் ‘இமையோர்க்கும்’ என்றார்;
இது, பிறிதினவிற்சியணி. பாலபாதத்தில் தமிழ்மன்னரைக் கூறவில்லை.

வில் ஆண்மையினால் வெங் கருப்பு வில்லோன்தனக்கே
நிகர் என்னப்
பல்லார் புகழும் பான்மையினால், பதினெண் புவிக்கும்
பதியாய
எல்லா அரசும், நின்பொருட்டால், ஈண்டே திரண்ட-இன்
அமுதச்
சொல்லாய்! நல்லாய்! மென் பூவாய்! தோகாய்! பாவாய்!
துரௌபதியே!இதுபல அரசர்களைப் பொதுப்படக் குறித்தது.

இன் அமுதம் சொல்லாய்-இனிய அமிருதம்போன்ற
சொற்களையுடையவளே!நல்லாய்-அழகையும் நற்குணநற்செய்கைகளையு
முடையவளே!  மெல் பூவாய்-(இன்குரலாற் பேசுதலில்)  மெல்லிய நாகணவாய்ப்புள்
போன்றவளே! தோகாய் -(சாயலில்) மயில்போன்றவளே! பாவாய் – (அழகில்)
சித்திரப் பதுமையையும்(அருமையில்)கண்மணிப்பாவையையும் (மோகிப்பித்தலில்)
கொல்லிப்பாவையையும்போன்றவளே1 திரௌபதியே-! வில்ஆண்மையினால் –
விற்கொண்டு போர்செய்யுயுந்திறத்தினால், வெம் கருப்பு வில்லோன் தனக்கே
நிகர் – கொடிய கரும்புவில்லையுடைய மன்மதனுக்கே ஒப்பு, என்ன-என்று, பல்லார்
புகழும் பான்மையினால்- பலரும் புகழுந் தன்மையோடு, பதினெண் புவிக்கும் பதி
ஆய எல்லா அரசுஉம் -பதினெட்டுத்தேசங்களுக்கும் தலைவர்களாகிய
எல்லாவரசர்களும், நின்பொருட்டால்-ஈண்டேதிரண்ட-இங்கே வந்து கூடியுள்ளார்;
(எ-று.)

     எளியகரும்பை வில்லாக்கொண்டு அதில்மெல்லியமலரம்புகளைத்
தொடுத்துஎய்து காமப்போரை நடத்திப் பிரமன்முதல் எறும்புஈறாக
எல்லாவுயிர்களையும் தன்வசப்படுத்துதலால், மன்மதன், சிறந்தவில்வீர
னெனப்படுவன்.கருப்புவில்லோன் றனக்கே, ஏ – உயர்வுசிறப்போடு பிரிநிலை.
பதினெட்டுத்தேசங்கள்திரவிடம், சிங்களம் சோனகம், சாவகம், சீனம், துளுவம்,
குடகம், கொங்கணம்,கன்னடம், கொல்லம், தெலுங்கம், கலிங்கம், வங்கம்,கங்கம்
மகதம், கடாரம், கௌடம், குசலம் என்பன; பிறவாறும் உரைத்தல் உண்டு. புவி –
வடசொல்; இதுஅந்தப்பாஷையில் ஏழாம்வேற்றுமைவிரியாயினும்
தமிழில்பெயர்மாத்திரமாய் நிற்கும்,

இவரில், தனது தோள் வலியால் அரிஏறு என்ன
எழுந்திருந்து, அத்
தவரில் புரி நாண் உற ஏற்றி, தழல் கால் முனை
வெஞ் சாயகத்தால்
பவரின் செறிய நிரைத்து உருளும் பல்வாய்த் திகிரிப்
பயில் இலக்கைக்
கவரின், செழுந் தார் புனைந்து அவனைக் கைக்கொண்டிடு
நீ கடிது’ என்றார்.-இவர்களுள் இலக்குஎய்பவன் உனக்கு உரியான்’
எனல்.

இவரில் – இந்த அரசர்களுள், (எவனாயினும்), அழ ஏறு என்ன
எழுந்திருந்து – ஆண்டுசிங்கம்போல எழுந்து, தனது தோள் வலியால்- தன்னுடைய
புஜபலத்தால், அ தவரில் – அந்த வில்லில், புரி நாண் உற ஏற்றி-நாணிக்கயிற்றைப்
பொருந்தப் பூட்டி, தழல் கால் முனை வெம் சாயகத்தால் – நெருப்பைச் சொரிகிற
நுனியையுடைய கொடிய அம்பினால், பவரின் செறிய நிரைத்து உருளும் பல்
வாய் திகிரி பயில் இலக்கை – ஆர்களால் நெருங்க நிரைக்கப்பட்டு உருளுகின்ற
பலநுனிகளையுடைய யந்திரசக்கரத்திற் பொருந்திய இலட்சியத்தை, கவரின் –
எய்துதள்ளினால், செழு தார் புனைந்து – செழிப்பான மணமாலையை (அவனுக்கு)ச்
சூட்டி, அவனை நீ கடிது கைக்கொண்டிடு – அவனை நீ விரைந்து (கணவனாகக்)
கைக்கொள்வாய்,  என்றார்-என்று  (செவிலித்தாயர்) சொன்னார்கள்; (எ-று.)

முத்த நகை, பவள இதழ், குளிர் வெண் திங்கள் முகத்தாளைக்
கைத்தாயர் மொழிந்தகாலை,
சித்திரம் ஒத்து உணர்வு அழிந்து, தம்தம் பைம் பொன் திகழ்
அரியாசனத்து இருந்தார் சிற்சில் வேந்தர்;
அத் தனுவின் பெருமையையும், இலக்கத்து உள்ள அருமையையும்,
கருதாமல் ஆண்மை கூறி,
எத்தனை எத்தனை வேந்தர், ஆசை கூர, ‘யான், யான்’ என்று
எழுந்திருந்தார், யானைபோல்வார்!–சில அரசர்கள் சோர்வுறச் சில அரசர்கள்
ஊக்கங்கொண்டு எழுதல்.

முத்தம் நகை – முத்துப்போன்ற பற்களையும், பவளம் இதழ் –
பவழம்போன்ற வாயிதழையும், குளிர் வெள் திங்கள் முகத்தாளை – குளிர்ந்த
வெண்ணிறமான பூர்ணசந்திரன் போன்ற முகத்தையுமுடைய திரௌபதியைநோக்கி,
கைத்தாயர் – செவிலித் தாய்மார், மொழிந்த காலை – (இவ்வாறு) சொன்னபொழுது,-
சிற் சில் வேந்தர் – (அந்தச்சுயம்வரசபையிலிருந்த) சில சில அரசர்கள்,
(அவ்வில்லின்வலிமையையும் இலக்கின் அருமையையும் ஆலோசித்து),  உணர்வு
அழிந்து -அறிவுஒடுங்கி, சித்திரம் ஒத்து- சித்திரப்பதுமை போன்றவர்களாய்
(செயலற்று), தம்தம் பைம் பொன் திகழ் அரி ஆசனத்து இருந்தார் –
பசும்பொன்னாற் செய்யப்பட்டுவிளங்குகிற தங்கள் தங்கள் சிங்காசனங்களில்
இருந்தபடியே இருந்தார்கள்; (இதுநிற்க); யானைபோல்வார்-யானைபோலக்
கொழுத்தவர்களாகிய, எத்தனைஎத்தனை வேந்தர்-எத்தனை  எத்தனை அரசர்கள்,
ஆசை கூர -(திரொபதியின்மேல்) ஆசை   மிகுதலால், அ தனுவின்
பெருமையைஉம் இலக்கத்துஉள்ள அருமையைஉம் கருதாமல் – அந்த வில்லின்
பெருமையையும்அக்குறியிலுள்ள எய்தலில் அருமையையும் ஆலோசியாமல்,
ஆண்மை கூறி -வீரவார்த்தை சொல்லிக்கொண்டு, யான் யான் என்று
எழுந்திருந்தார் – யான் யான்என்று சொல்லி (ஒருவர்முன் ஒருவர்)
எழுந்திருந்தார்கள்! (மிகப்பலர் எழுந்தனர்); (எ -று.)

     மதயானை களிப்புமிகுதியால் செய்வது தவிர்வது அறியாது அடக்கமின்றி
ஒன்றைச்செய்யத்தொடங்கி அழிவதுபோல, இவர்களும் வேட்கை விஞ்சுதலால்
ஆலோசியாமல் துணிந்தெழுந்து விற்றிறங்காட்டத்தொடங்கிப் பங்கப்படுதலால்;
‘யானைபோல்வார்’ எனப்பட்டார்.

     இதுமுதற் பதினைந்து கவிகள்-பெரும்பாலும் ஒன்றுஇரண்டு ஐந்து
ஆறாஞ்சீர்கள் காய்ச்சீர்களும், மற்றையநான்கும் மாச்சீர்களுமாகியகழிநெடிலடி
நான்குகொண்ட எண்சீராசிரியவிருத்தங்கள்.

தனு எடுத்து, நாண் பிணிப்பான் கிளரா நின்ற தன் குலத்தில்
அவனிபரைத் தடுத்து, வேதப்
பனுவலுக்கும் தவத்தினுக்கும் உரிய வேள்விப் பார்ப்பன
மாக்களின் இடையே, பாண்டு மைந்தர்
அனு உருக்கொண்டு, உரு மாறி, இருந்த தன்மை அறிந்தருளி,
அலாயுதனோடு அருளிச்செய்தான்-
மனு முறைக்கு வரம்பு ஆகி, வருத்தம் வீட, மா நிலமீது
அவதரித்த வாசுதேவன்.-கண்ணன் பலராமனுடன்சொல்லித் தன்குலத்தாரைத்
தடுத்தல்.

மனு முறைக்கு வரம்பு ஆகி – மனுதர்மசாஸ்திரத்திற் கூறப்பட்ட
நீதிநெறிக்கு எல்லையாகி, மா நிலம்மீது –  பெரிய பூமியின்மேல், வருத்தம் வீட-
(அப்பூமிதேவியின்) துன்பம் நீங்க, அவதரித்த-தோன்றியருளிய, வாசுதேவன் –
வசுதேவகுமாரனான கண்ணபிரான்,-வேதம் பனுவலுக்குஉம் தவத்தினுக்குஉம் உரிய-
வேதங்களாகிய, நூல்களுக்கும் தவத்துக்கும்உரிய, வேள்வி – யாகங்களையுடைய,
பார்ப்பன மாக்களின் இடையே – அந்தணர்களின் நடுவே, பாண்டு மைந்தர் –
பாண்டவர்கள், அனு உரு கொண்டு-(அந்த அந்தணர்களுக்கு) ஒத்த
உருவத்தைக்கொண்டு, உரு மாறி இருந்த தன்மை – தம்வடிவம்மாறி வீற்றிருந்த
தன்மையை, அறிந்து அருளி-, தனு எடுத்து நாண் பிணிப்பான் கிளராநின்ற தன்
குலத்தில் அவனிபரை தடுத்து – வில்லையெடுத்து நாணியைப்பூட்டுதற்கு
ஊக்கங்கொண்டெழுகிற தனது (யது) குலத்து அரசர்களை (நீங்கள்
எழவேண்டாவென்று) தடுத்து, அலாயுதனோடு அருளிச்செய்தான்-
(பாண்டவர்கள்மாறுவேடங்கொண்டு வந்திருக்கிற தன்மையைப்) பலராமனுடன்
கூறினார்; (எ-று.)

     கூறுதலென்ற பொருளில் அருளிச்செய்தல் என்றல், ஒரு வகை மரபு.
துஷ்டர்கள் மிக்கதனால் உண்டான பூமிபாரத்தைநிவிருத்திசெய்யும்பொருட்டும்,
அவர்களால் உலகத்தில் வரம் பழிந்த தருமத்தை நிலைநிறுத்தற்பொருட்டும்,
திருமால்வசுதேவகுமாரனாய்க் கண்ணனாகத் திருவவதரித்தானாதலறிக. அநு
ரூபம்என்றவடமொழி, அனுவுரு எனச் சிதைந்துவந்தது; ஒத்த வடிவமென்பது
பொருள். ஹலாயுதன் – கலப்பையை ஆயுத மாகயுடையவன், 

பலரும் உடன் அகங்கரித்து, மேரு சாரப் பார வரி சிலையின்
நிலை பார்த்து மீண்டார்;
பலரும் ஒரு கையில் பிடிக்க அடங்கா வில்லின் பருமைதனைக்
குறித்து, மனம் பதைக்கப் போனார்;
பலரும் மலர்க் கைப் படுத்திப் பெயர்க்க மாட்டார், பணைத்
தோள் நொந்து, ‘அமையும்’ என, பயந்து நின்றார்;
பலரும் எடுத்து, அணி மணி நாண் பூட்ட வாராப் பரிசொடு
மற்று அதன் வலிமை பகர்ந்தே, விட்டார்.-பல அரசர்கள் விற்றிறங்காட்டமுயன்று மாட்டா
தொழிதலை, இது முதல் நான்குகவிகளிற் கூறுகிறார்.

பலர்உம் – பல அரசர்கள், உடன் – ஒருசேர, அகங்கரித்து-
செருக்குக்கொண்டு, (அருகில் வந்து), மேரு சார் பாரம்வரி அ சிலையின் நிலை
பார்த்து மீண்டார்-மகாமேருகிரியையொத்த பாரமான கட்டமைந்த அந்தவில்லின்
தன்மையைப் பார்த்து (அஞ்சி)த்திரும்பினார்கள்; பலரும் – பல அரசர்கள், ஒரு
கையின் பிடிக்க அடங்கா வில்லின் பருமைதனை குறித்து-ஒரு கையினாற்
பிடித்தற்கு அடங்காத அவ்வில்லின் பருத்ததன்மையைக்கருதி, மனம் பதைக்க
போனார் – (தம்தம்) மனம் திடுக்கிடத் திரும்பிப் போய்விட்டார்கள்; பலரும் – பல
அரசர்கள், மலர் கை படுத்தி – தாமரைமலர்போன்ற (தம்) கைகளாற் பிடித்து,
பெயர்க்க மாட்டார் – அசைக்கவும் மாட்டாதவர்களாய், பணை தோள் நொந்து –
பருத்த தோள்கள் நோவப்பெற்று, அமையும் என பயந்து நின்றார்-இதுபோதுமென்று
அஞ்சி நின்றார்கள்; பலரும் -பல அரசர்கள், எடுத்து-(அவ்வில்லைக் கையாற்
பிடித்து) நிலைபெயரச்செய்து, (அவ்வளவிலே), அணி மணி நாண் பூட்ட வாரா
பரிசொடு அதன் வலிமை பகர்ந்தே -அழகிய உறுதியான நாணியைப்பூட்ட (த்
தம்மால்) இயலாத தன்மையையும் அவ்வில்லின்வலிமையையுஞ் சொல்லிக்கொண்ட,
விட்டார் -(அம்முயற்சியைக்) கைவிட்டார்கள்; (எ- று.)-மற்று – அசை;
வினைமாற்றுமாம்.

     இதுமுதல் நான்கு கவிகளில், மேன்மேலுயர்ச்சியணி தோன்ற
ஒன்றன்மேலொன்று உயர்த்திச்சொல்லிக்கொண்டு செல்கின்றனராதலால்,
அதற்குஇணங்க, ‘எடுத்து’ என்பதற்கு-நிலைபெயர்த்து என்று உரைத்து, அதனை
‘பகர்ந்து’  என்பதனோடு இயைக்க.  இச்செய்யுளின் முதலடியிற் கூறியவர்,
செருக்கிச்சென்று அந்தவில்லின் நிலைமையைப் பார்த்தமாத்திரத்தோடுமீண்டவர்;
இரண்டாமடியிற் கூறியவர், பார்த்துக் கையிற்பிடிக்கக்கருதி அதன்
கைக்கடங்காப்பருமையைக்குறித்து மனம்வருந்தி மீண்டவர்; மூன்றாமடியிற் கூறியவர்,
கைகளாற்பிடித்து அதனை நிலைபெயர்க்க மாட்டாமல் தோள்நொந்து அஞ்சி
மீண்டவர்; நான்காமடியிற் கூறியவர், கைகளாற்பிடித்து நிலைபெயர்த்துப் பின்பு
யாதொன்றுஞ் செய்யமாட்டாமையால் தமதுவலிமையின்மையையும் அதன்
வலிமையையுங் கூறிக்கொண்டே கைவிட்டவர் எனக்காண்க

வல்லியம்போல் நடந்து, தனு இரு கையாலும் வாரி எடுத்து,
எதிர் நிறுத்தி, மல்லல் வாகுச்
சல்லியனும் நாண் ஏற்ற முடியாது, அந்தத் தனுவுடனே
தன் தனுவும் தகர, வீழ்ந்தான்;
வில்லியரில் முன் எண்ணத் தக்க வின்மை வேந்து அடு
போர்ப் பகதத்தன், வில் வேதத்தில்
சொல்லியவாறு எடுத்து ஊன்றி, மற்றைக் கையால் தொல்
வலி நாணியும் எடுத்து, தோளும் சோர்ந்தான்.

மல்லல் – வலிமையைக்கொண்ட, வாகு-தோள்களையுடைய,
சல்லியனும்-, வல்லியம் போல் நடந்து – புலிபோல (வலிமையோடு) சென்று, தனு-
வில்லை, இருகையால்உம் வாரி எடுத்து எதிர் நிறுத்தி – இரண்டுகைகளாலும்
வாரியெடுத்து (த் தன்)  எதிரிலே நிற்கச்செய்து, (அதன்மேல்), நாண் ஏற்ற
முடியாது -நாணியைப்பூட்ட முடியாமல், அந்த தனுவுடனே-அவ்வில்லுடனே, தன்
தனுஉம் தகரவீழ்ந்தான் – தனது உடம்பு நொருங்கக் கீழ் வீழ்ந்திட்டான்;
வில்லியரில் முன்எண்ணத்தக்க வின்மை – வில் வீரர்களுள் முதலில்வைத்து
எண்ணத்தக்க வில்லின்திறமையையும், வேந்து அடு போர்-அரசர்களை
அழிக்கின்ற போரையுமுடைய,பகதத்தன்-, வில் வேதத்தில் சொல்லிய ஆறு
எடுத்துஊன்றி- தனுர்வேதத்திற்சொல்லியுள்ளபடி ஒருகையால் (வில்லை) எடுத்து
நிறுத்தி, மற்றை கையால் தொல்வலி நாணிஉம் எடுத்து – மற்றொருகையினால்
முதிர்ந்தவலிமையையுடைய நாணியையும்எடுத்து, தோள்உம் சோர்ந்தான் –
(அவ்வளவில்) கைசோர்ந்து விட்டிட்டான்;

     சல்லியன் தன்வலிமையைக்கொண்டு இரண்டுகைகளாலும் அவ்வில்லைத்
தழுவியெடுத்து எதிர்நிறுத்தியிட்டன னாயினும் அதன்பின் ஒருகையில் விற்பிடித்து
மற்றொருகையால் நாணியை எடுத்து ஏற்ற இயலாமல் அதற்கு உரிய முயற்சி
செய்தவளவிலே வில்லோடு  வீழ்தலால் தன் உடம்பு நன்கு நொருங்கும்படி
சாய்ந்திட்டா னென்றும். பின்பு பகதத்தன் ஒருகையால் வில்லை யெடுத்து நிறுத்தி
மற்றொருகையால் நாணியையும் எடுத்து அவ்வளவில் தோள்சோர்ந்தான் என்றும்
மேன்மேலுயர்ச்சியணி காண்க. தனுர் வேதமாவது -ஆயுதங்களிற்பயிலும்
வகைகளையும், பகை வெல்லுதற்கு உரிய மந்திரம்முதலியவற்றின்
பிரயோகங்களையும் தெரிவிக்கிற சாஸ்திரம். தனு – வில்என்றபொருளில் தநுஸ்
என்ற  வட சொல்லின் விகாரமும், உடம்பைக்குறிக்கும்போது தநு
என்ற வடசொல்லின் விகாரமுமாம். ‘வேந்தடுபோர்ச்சராசந்தன்’ என்ற பாடம்
பொருந்தாது, அடுத்தசெய்யுளில் ‘மாகதன்’ எனப்படுபவன் சராசந்த னாதலால்.
தனுவும் உம்மை-அசைநிலை: உயர்வு சிறப்புமாம். எச்சவும்மையாக, வில்லுந்தகரஎன
உரைத்தலாகாது தனுவுடனே வீழ்ந்தானென இயையும்.

பூ கதன் ஆகிய அன்றே, பகைவர் எல்லாம் போற்ற வளர்ந்து,
உலகு ஆளப் புனைந்த மௌலி
மாகதனும் வில் எடுத்து, வரி நாண் வில்லின் மார்பளவும்
போக்கினான்; வன் போர் நீலன்,
‘சாகதன்’ என்று அவை துதிக்க, நெடு நாண் கொற்றத் தனு ஒரு
சாண் எனக் கொணர்ந்தான்; ‘சாணே அல்ல,
வேக தனு நால் விரல்’ என்று உரைக்க, நாணி வீக்கினான்,
வலம்புரித் தார் வேந்தர் வேந்தே.

பூ கதன் ஆகிய அன்றுஏ – பூமியைஅடைந்தவனான
அப்பொழுதே(பிறந்தபொழுதே தொடங்கி என்றபடி), பகைவர் எல்லாம் போற்ற –
பகைவர்களெல்லோரும் கீழ்ப்படிந்துவணங்கித் துதிக்கும்படி, வளர்ந்து-, உலகு
ஆள-உலகத்தை அரசாளுமாறு, புனைந்த – அணிந்த, மௌலி-கிரீடத்தையுடைய,
மாகதன்உம் – மகததேசத்து அரசனான சராசந்தனும்,வில்எடுத்து-(ஒரு கையால்)
வில்லையெடுத்து நிறுத்தி, (மற்றொருகையால்), வரி நாண்- நீண்ட நாணியை,
வில்லின் மார்பு அளவுஉம் போக்கினான் – அவ்வில்லின் நாணிபூட்டுங் கோடியின்
ஒருமார்புதூரம்வரையிலும் கொண்டுபோய் அதற்குமேல் இயலாதவனானான்;
வல்போர் நீலன்- வலிய போரையுடைய நீலனென்னும் அரசன், சாகதன் என்று
அவை துதிக்க – அருஞ்செயல்செய்பவ னென்று சபையிலுள்ளோர் தன்னைக்
கொண்டாடும்படி, நெடு நாண் – நீண்டநாணியை, கொற்றம் தனு ஒரு சாண் என
கொணர்ந்தான் – வெற்றியையுடைய அவ்விற்கோடி ஒருசாண்தூரத்திலுள்ளதென்ற
அளவும் கொண்டுபோய் அதற்குமேல் இயலாதவனானான்: வலம்புரி தார்வேந்தர்
வேந்து – நஞ்சாவட்டைப் பூமாலையையணிந்த அரசர்க்கரசனாகிய துரியோதனன்,
வேகம் தனு – உக்கிரமானஅவ்வில்லின் கோடி, சாணே அல்ல – ஓருசாணளவுதூரமு
மில்லை, நால் விரல்-நாலுவிரல்தூரமே யுள்ளது, என்று உரைக்க- என்று
சொல்லுமளவும், நாணி வீக்கினான் – நாணியைக் கொண்டுபோய் அதற்கு
மேல்இயலாதவனானான்; (எ – று.)

     சராசந்தனது நாடு-மகதமும், நகரம்-கிரிவிரசமும்;மேல் சபாபருவத்தில்
“கிரிவிரசநக ரெய்திக்கிரித்தடந்தோள் மகதேசன்கிளருங்கோயில்” என்பதனாலும்
உணர்க. சாகதன்=ஸாஹஸன்: ஸாஹஸத்தையுடையவன்; ஸாஹஸம்-துணிச்சலான
அருஞ்செயல். 

கலை வருத்தம் அறக் கற்ற கன்னன் என்னும் கழற் காளை,
அரன் இருந்த கயிலை என்னும்
மலை வருத்தம் அற எடுத்த நிருதன் என்ன, மன் அவையில்
வலியுடனே வந்து தோன்றி,
நிலை வருத்தம் அற நின்று, பரிய கோல நீள் வரி நாண்
மயிர்க்கிடைக்கீழ் நின்றது என்ன,
சிலை வருத்தம் அற வளைத்து, வளைந்த வண்ணச் சிலைக் கால்
தன் முடித் தலையைச் சிந்த, வீழ்ந்தான்.

கலை – நூல்களை, வருத்தம், அற கற்ற-வருத்தமில்லாமல் கற்றறிந்த,
கன்னன் என்னும் – கர்ணனென்கிற, கழல் காளை – வீரக்கழலையுடைய இளவீரன்,-
அரன் இருந்த-சிவபிரான் வீற்றிருக்கிற, கயிலை என்னும் மலை – கைலாசமென்னும்
மலையை, வருத்தம், அற எடுத்த -வருத்தமில்லாமல் (எளிதில்) பெயர்த்தெடுத்த,
நிருதன் என்ன- அரக்கனாகிய இராவணன் போல, மன் அவையின் வலியுடன்ஏ
வந்து தோன்றி – இராசசபையினின்று  வலிமையோடு எழுந்து முன்வந்து, நிலை
வருத்தம் அற நின்று – (வில்வீரர்க்குஉரிய) நிலையிலே வருத்தமில்லாமல்
நிலைநின்று, பரிய கோலம் நீள் வரி நாண்-பருத்த அழகையுடைய
நீண்டமுறுக்குள்ளநாணி, மயிர்க்கிடை கீழ் நின்றதுஎன்ன-ஒருமயிரினளவுதூரத்தின்
கீழ்நின்றதென்றுசொல்ல, (அதுவரையிலும்), சிலை வருத்தம் அற வளைத்து –
வில்லைவருத்த மில்லாமல் (எளிதில்) வளைத்து  நின்று, (அவ்வளவிலே), வளைந்த
வண்ணம்சிலை கால் தன் முடி தலையை சிந்த-வளைத்த அழகிய அவ்வில்லின்
கால்(நிமிர்ந்து) தனது கிரீடமணிந்த தலையைத் தாக்க, வீழ்ந்தான்-; (எ- று.)

     கர்ணன் அவ்வில்லை எளிதில் எடுத்துவளைத்து நாணேற்றி விரைவாக
அம்பைத்தொடுத்து எய்யச் சித்தனானவளவில் திரௌபதி உரத்தகுரலோடு ‘நான்
பாகன்மகனை விவாகஞ்செய்துகொள்ளேன்’ என்று மறுத்துக் கூறவே, அவன்
உடனேவருத்தத்தோடு வில்லை எறிந்துவிட்டு மீண்டன னென  முதனூல்கூறும்.
“சாபம்மஹாந்தம் தபநஸ்யஸூநௌ – அதிஜ்யமாதந்வதி ரோமமாத்ரே ஸ தம்
விசிக்ஷேப” என்றது, பாலபாரதம். நிருதன் – நிருருதியென்னுந் திக்பாலகியினது
மரபினன். மகாபலசாலியான கர்ணனுக்கு ராக்ஷசராசனான இராவணனும், இவன்
எளிதாக எடுத்தபருத்த பாரமான வில்லுக்கு  அவன் எளிதில் எடுத்து பெரிய
கைலாசகிரியும்உவமை. இராவணன் தனது பலத்தால் அலட்சியமாகக்
கைலாசத்தைப்பெயர்த்துஎடுத்தபொழுது உடனேபங்கப்பட்டமை போல, இவனும்
அலட்சியமாகவில்லையெடுத்து வளைத்தபொழுது உடனே பங்கப்படுதலால்,
உவமை ஏற்கும். நிலை- அம்புஎய்வார் நிற்றற்குஉரிய நிலை: அது-பைசாசம்,
மண்டலம், ஆலீடம், பிரதியாலீடம் என நான்கு. இவற்றுள், ஒருகால்நின்று
ஒருகால்முடக்கல்-பைசாசநிலை: இருகாலும் பக்கல்வளைய மண்டலித்தல் –
மண்டலநிலை; வலக்கால் மண்டலித்து இடக்கால்  முந்துறல் – ஆலீடநிலை;
வலக்கால்முந்துற்று இடக்கால்மண்டலித்தல்-பிரதியாலீடநிலை

அரவ நெடுங் கொடி உயர்த்தோன் முதலா உள்ள அனைவரும்
அங்கு ஒரு தனுவுக்கு ஆற்றார் ஆகி,
உரவு மெலிந்து, எழில் மாழ்கி, செயல் வேறு இன்றி, உள்ளம்
அழிந்து, இருந்ததன்பின், உரும் ஏறு என்ன,
கரவுடன் அந்தணர் நாப்பண் இருந்த கொற்றக் கரு முகில்
வாகனன் புதல்வன், கரிய மேனி
இரவிகுலச் சிறுவனைப்போல் எழுந்து, மன்றல் இளங்கொடி
தம்முனை நோக்கி, இயம்பினானே:-அந்தணவடிவங்கொண்டிருந்த அருச்சுனன்
எழுந்துபேசலுறல்.

அரவம் நெடு கொடி உயர்த்தோன் முதல் ஆ உள்ள அனைவர்உம்
– பாம்பின்வடிவமெழுதிய நீண்டகொடியை உயரநாட்டிய துரியோதனன் முதலாக
அங்குஉள்ள அரசர்கள் எல்லோரும், அங்கு-அவ்வாறு, ஒரு தனுவுக்கு ஆற்றார்
ஆகி – ஒப்பற்ற அவ்வில்லில் திறங்காட்டமாட்டாதவர்களாய், உரவு மெலிந்து –
வலிமை குன்றி, எழில் மாழ்கி-மனவெழுச்சி சோர்ந்து, செயல் வேறு இன்றி –
ஒன்றுஞ்செய்யமாட்டாமல், உள்ளம் அழிந்து இருந்ததன் பின்-மனமழிந்து
இருந்தபின்பு,- அந்தணர் நாப்பண்- பிராமணர்களுக்கு நடுவிலே, கரவுடன் இருந்த –
மறைந்தவடிவத்தோடு வீற்றிருந்த, கொற்றம் – வெற்றியையுடைய, கரு முகில்
வாகனன் புதல்வன் – கருநிறமுள்ள மேகத்தை வாகனமாகவுடைய இந்திரனது
குமாரனாகிய அருச்சுனன்,- இரவி குலம் கரிய மேனி சிறுவனை போல் எழுந்து –
சூரியகுலத்தில் திருவவதரித்த கரிய திருமேனியையுடைய இராசகுமாரனான
இராமபிரான் போலஎழுந்து நின்று, மன்றல் இள கொடி தம்முனை நோக்கி –
விவாகத்துக்கு உரிய இளமையான பூங்கொடிபோன்ற திரௌபதியினது தமையனான
திட்டத்துய்மனைப் பார்த்து, உரும் ஏறு என்ன இயம்பினான் – சிறந்த இடிபோலக்
கம்பீராமான உரத்தகுரலோடு ஒன்று  சொல்வானானான்; (எ-று.)-அவ்வார்த்தையை,
அடுத்த கவியிற் காண்க.

     மன்றல் என்பதற்கு – நறுமணமென்றும் பொருள்கொள்ளலாம்; அது –
உபமானமாகியபூங்கொடிக்கும், உபமேயமாகிய திரௌபதிக்கும் ஏற்கும்: திரௌபதி
உத்தமஸ்திரீசாதிலக்ஷணமான நறுமணத்தைத்தன்உடம்பில் மிகுதியாகவுடையளாயி
ருந்தனளென்று பலவிடத்தும் முதனூல் கூறும். 

‘மன் மரபில் பிறந்து, இரு தோள் வலியால், இந்த மண் ஆளும்
அவர்க்கு அன்றி, மறை நூல் வாணர்
தொல் மரபில் பிறந்தவரும் இலக்கு வீழ்த்தால், சூட்டுமோ
தொடையல், இளந்தோகை?’ என்ன,
தன் மரபுக்கு அணி திலகம் ஆன வீரன், ‘தகவு அன்றோ?
மன்றலுக்குத் தாழ்வோ?’ என்றான்;
வில் மரபில் சிறந்த நெடு வில்லை, ஈசன் மேரு கிரி
எடுத்ததென, விரைவில் கொண்டான்.-அருச்சுனன் திட்டத்துய்மனிடம்அநுமதிபெற்று
வில்லையெடுத்தல்.

மன் மரபில் பிறந்து – க்ஷத்திரியசாதியிலே பிறந்து, இரு தோள்
வலியால் இந்த மண் ஆளும் அவர்க்கு அன்றி – (தங்கள்) தோள்களிரண்டின்
வலிமையினால் இந்தப்பூமியை ஆளுகிற அரசர்களுக்கே யல்லாமல், மறை நூல்
வாணர் தொல் மரபில் பிறந்தவர் உம் இலக்கு வீழ்த்தால் – வேதங்களாகிய
நூல்களுக்கு உரிமை பூண்டஅந்தணர்களுடைய தொன்றுதொட்டுவருகிற சாதியிலே
தோன்றியவர்களும் குறித்த இலக்கைஎய்துவிழுத்தினால், (அவர்க்கும்,) இள
தோகை -இளமையானமயில்போன்றசாயலுள்ள திரௌபதி, தொடையல் சூட்டும்ஓ –
சுயம்வரமாலையைச் சூட்டுவளோ? என்ன – என்று (அருச்சுனன்) வினாவ,-
தன்மரபுக்கு அணிதிலகம் ஆன வீரன் – தான்பிறந்த சோமககுலத்துக்கு
அழகியதிலகம்போல மேன்மைவிளைப்பவனான வீரனாகிய திட்டத்துய்மன்,
‘மன்றலுக்கு தாழ்வுஓ – (அது) விவாகத்துக்குக் குறைவோ? தகவு அன்றுஓ- (அது)
பெருமையன்றோ? என்றான் – என்று சொன்னான்; (உடனே அருச்சுனன்), வில்
மரபில் சிறந்த நெடு வில்லை – வில்லின் இனங்களுட் சிறந்த நீண்ட அவ்வில்லை,
ஈசன் மேருகிரி எடுத்தது என – சிவபிரான் மகாமேருமலையாகிய
வில்லைஎடுத்ததுபோல, விரைவில் கொண்டான் – விரைவில் எடுத்தான்; (எ-று.)

     அந்தணன் இராசகன்னிகையை மணத்தல் அப்பெண்ணின் குலத்தார்க்குப்
பெருமையாகுமே யன்றி இழிவாகா தென்று சொல்லித் திட்டத்துய்மன்
அருச்சுனனதுகொள்கையைமகிழ்ச்சியோடு அங்கீகரித்தன னென்க. ஈசன்
மேருகிரியெடுத்தது, திரிபுரசங்காரகாலத்தில். 

கிளர் மகுட வய வேந்தர் நாண்கள் எல்லாம் கீழாக,
தனி நெடு நாண் கிளர ஏற்றி,
தளர்வு அறு சாயகம் தொடுத்து, கற்றோர் யாரும், ‘தனு நூலுக்கு
ஆசிரியன் தானே’ என்ன,
உளர் திகிரிச் சுழல் இலக்கை, அவையோர்தங்கள் ஊக்கமுடன்
விழ, எய்தனன் உரவுத் தோளான்.
வளரும் அருந் தவ வேள்வி முனிவர் ஆர்த்தார்; வாச நறு மலர்
சொரிந்து, வானோர் ஆர்த்தார்.அருச்சுனன் இலக்கைஎய்ய, முனிவரும் தேவரும்
மகிழ்தல்.

உரவு தோளான் – வலிமையையுடைய தோள்களையுடையவனான
அருச்சுனன்,- கிளர் மகுடம் வய வேந்தர்நாண்கள் எல்லாம் கீழ் ஆக தனி நெடு
நாண் கிளர ஏற்றி – விளங்குகிற கிரீடத்தை யணிந்த வலிமையையுடைய
அரசர்களின்நாண்களெல்லாம் கீழ்ப்பட்ட ஒப்பற்றநீண்டநாணியைமேலாம்படி
உயரப்பூட்டி, தளர்வுஅறு சாயகம்தொடுத்து-தளர்ச்சியில்லாத(மிகவலிய)
அம்பைத்தொடுத்து, கற்றோர்யார்உம் தனு நூலுக்கு ஆசிரியன் தான் ஏ என்ன –
படித்தவர்களெல்லோரும் ‘வில்வித்தைக்கு ஆசாரியன் இவனே’ என்று
(தன்னைக்குறித்துக்கூறிக்) கொண்டாடும்படி, உளர்திகிரி சுழல்இலக்கை
அவையோர் தங்கள் ஊக்கமுடன் விழ எய்தான்-சுழலுகிறயந்திரசக்கரத்திற்
பொருந்திச் சுழல்கிறஇலக்கை அச்சபையிலுள்ள அரசர்களுடைய உற்சாகத்தோடு
கீழ்விழும்படி அடித்துத்தள்ளினான்; (அதுகண்டு), வளரும் அரு தவம் வேள்வி
முனிவர் ஆர்த்தார் – (மேன்மேல்) வளர்கிற அரிய தவத்தையும். யாகத்தையு
முடைய அந்தணர்கள் (மகிழ்ந்து) ஆரவாரித்தார்கள்; வானோர் – தேவர்களும்,
வாசம் நறு மலர் சொரிந்து-பரிமளமுள்ள  நல்ல பூக்களை மேற்சொரிந்து,
ஆர்த்தார்-; (எ- று.)- ‘தழல் வேள்வி’ எனவும் பாடம்.

     இலக்கைத் தங்கள் சாதியானொருவன் எய்துவீழ்த்தியப்பெருமையுற்றன
னென்றுகருதியதனால், அந்தணர்கள் மகிழ்ந்து  ஆரவாரித்தார்கள். நிலவுலகத்தில்
விசேஷமான செய்கைகள் நடக்கும்போது அவற்றை மேலிருந்துகாணுதலும்
மலர்மாரிசொரிதலும்,  தேவர்களியல்பு.  இரட்டுறமொழிதல் என்னும் உத்தியால்
முதலடிக்கு – கீழ் அரசர்கள் விற்கோடியை யெட்ட  நாணியைக் கொண்டுசென்ற
மார்பளவு சாணளவு விரலளவு மயிரளவு என்னும் எல்லைகளெல்லாம் கீழ்ப்பட்ட
அவற்றின்மேல் உரிய இடத்தில்தான் நாணியைப்பூட்டியென்றும், அவ்வரசர்களுடைய
நாணங்கள் இழிவு பெற (அவர்கட்கு மானபங்க முண்டாம்படி) தான் நாண்பூட்டி
யென்றும் கருத்துக்கொள்க. அரசர்களால் எய்துவிழுத்த முடியாத இலக்கை இவன்
எய்து வீழ்த்துமளவிலே அவர்களுடைய மனவெழுச்சி ஒழிதலால், ‘இலக்கை
யவையோர் தங்களூக்கமுடன் விழவெய்தான்’ என்றார்; இது, புணர்நிலையணி.
‘ஆர்த்தார்’ என்ற சொல் ஒருபொருளிலேயே மீண்டுவந்தது.
சொற்பொருட்பின்வருநிலையணி. 

தாம் சாரற்கு அரிய தனு வளைத்தான்’ என்று, தரணிபர்தம்
முகம் கருக, தனுவினோடும்
பூஞ் சாரல் மணி நீல கிரிபோல் நின்ற பூசுரனை, ‘இவன்
அவனே போன்ம்’ என்று எண்ணி,
பாஞ்சாலர் பதி கன்னி இரு தன் செங் கண் பங்கயத்தால்
பாங்காகப் பரிந்து நோக்கி,
தேம் சார நறுங் கழுநீர்ச் செய்ய தாமம் செம் மணி கால்
அருவிஎனச் சேர்த்தினாளே.-திரௌபதி அருச்சுனனுக்கு மணமாலை சூட்டுதல்.

தாம் சாரற்கு அரிய – தாங்கள் அருகிற்செல்லுதற்கு அருமையான,
தனு – வில்லை, வளைத்தான்-(இவன்) வளைத்திட்டான், ‘ என்று – என்ற
காரணத்தால், தரணிபர் தம் முகம் கருக – அரசர்கள் தங்கள்முகம் கருகிவாட,
தனுவினோடுஉம்- (கையிற்பிடித்த) வில்லுடனே, பூ சாரல் மணி நீலகிரி போல்நின்ற-
பொலிவுள்ள சாரல்களையுடைய அழகிய நீலமலைபோல நின்ற, பூசுரனை – அந்த
அந்தணனை, பாஞ்சாலர்பதி கன்னி – பாஞ்சாலதேசத்தார்க்கு அரசனாகிய
துருபதனுடைய பெண்ணான திரௌபதி, இவன் அவன்ஏ போன்ம் என்று எண்ணி-
`இவன் அந்த அருச்சுனனேயாவன்’ என்று நினைத்து, இரு தனசெம் கண்
பங்கய்ததால் பாங்கு ஆக பரிந்து நோக்கி – தாமரைமலர்போன்ற சிவந்ததனது
இரண்டு கண்களாலும் நன்றாக அன்புகொண்டு பார்த்து, தேம் சாரம் நறு கழுநீர்
செய்ய தாமம்-இனிய தேனையுடைய வாசனை வீசுகிற செங்கழுநீர் மலர்களால்
தொடுக்கப்பட்ட சிவந்த மாலையை,  செம்மணி கால் அருவி என – சிவந்த
மணிகளைக் கொழித்துக்கொண்டுவருகிற மலையருவிபோலத்தோன்ற,
சேர்த்தினாள்-(அவன் மார்பில்) இட்டாள்; (எ-று.)

     மாலைக்கு அருவியை உவமைகூறியதற்கு ஏற்ப,  தோளையும் மார்பையும்
மலையெனக்கொள்க, நீலகிரிபோல்நின்ற பூசுரன்’ என்றதுங் காண்க. இவன் நின்ற
நிலையைக் காண்கையிலேயே அரசர்கள் முகம் கருகுதலை இவனது மேனியின்
நீலநிறம் மேல்விழுதலாற் கருகுவதுபோலுமென்ற கற்பனை தொனிக்க, ‘தரணிபர்
தம்முகம்கருக நீலகிரிபோல்நின்ற’ என்றார். பூஸு ரன் – வடசொல், சாரம்=ஸாரம்:
தேன்புஷ்பத்தின் சாரமாதல் காண்க.

அந்தர துந்துபி முழங்க, சங்கம் ஆர்ப்ப, ஆனக துந்துபி
முதல்வன் ஆதி ஆக
வந்திருந்த பேர் அவையை மதியான் ஆகி, மாலை இடு
பசுஞ் செம்பொன் மாலையோடும்,
சந்திரனும் உரோகிணியும் என்ன, முன்னர், தான் வளைத்த
தடஞ் சிலை கைத்தலத்தில் ஏந்தி,
இந்திர சூனுவும் எழுந்து, ஆங்கு ஏகலுற்றான்- இரு புறமும்
துணைவர் வர, இணை இலாதான்.-அருச்சுனன் திரௌபதியோடும் உடன்பிறந்தாரோடும்
செல்லல்.

அந்தரம் துந்துபி முழங்க – வானத்தில் (தேவர்கள் முழக்கிய)
துந்துபிவாத்தியம் ஆரவாரிக்க, சங்கம், ஆர்ப்ப – சங்க வாத்தியங்கள் ஒலிக்க,
இந்திரசூனுஉம் – இந்திரனதுகுமாரனான அருச்சுனனும், ஆனகதுந்துபி புதல்வன்
ஆதிஆக வந்திருந்த பேர் அவையை மதியான் ஆகி – வசுதேவகுமாரனான
பலராமன்முதலாக வந்திருந்த பெரிய அந்தச்சபையிலுள்ளோரை மதியாதவனாய்,
மாலை இடுபசு செம் பொன்மாலையோடுஉம் – (தனக்கு) மணமாலையையிட்ட
பசிய சிறந்தபொன்னலாகிய மாலைபோல் விளங்குகிற திரௌபதியுடனே,
சந்திரன்உம்உரோகிணிஉம்என்ன -சந்திரனும் (அவன்மனைவியாகிய)
உரோகிணிதேவியும்போல,முன்னர் தான் வளைத்த தட சிலை கைத்தலத்தில்
ஏந்தி – முன்பு தான் வளைத்தபெரிய அந்தவில்லைக் கையிலெடுத்துக்கொண்டு,
துணைவர் இரு புறம்உம் வர-(தனது) உடன்பிறந்தவர்நால்வரும் தனது
இரண்டுபக்கத்திலும் உடன்வர, இணைஇலாதான் – ஒப்பில்லாதவனாய், ஆங்கு
எழுந்து ஏகல் உற்றான் -அவ்விடத்தினின்று புறப்பட்டுச் செல்லத்தொடங்கினான்;
(எ- று.)

      ‘ஆனக துந்துபி புதல்வன்’ என்பதற்கு – கண்ணன் என்று உரைத்தலும்
ஒன்று ‘ஆனகதுந்துபி முதல்வன்’ என்றும் பாடமுண்டு; அப்பொழுது தனது
நிசரூபத்தைமறைத்து வேற்று வடிவங் கொண்டிருத்தலால், கண்ணனையுமுட்பட
மதியாதுசென்றான், வெளிப்படாதிருத்தல் வேண்டியென்க. வசுதேவர் பிறந்த
காலத்தில்,தேவர்கள், பின்பு இவரிடத்துத் திருமால் கண்ணனாகத்திருவவதாரஞ்
செய்வதையறிந்து,ஆனகம் துந்துபி  என்கிற  வாத்தியங்களை முழக்கினார்க
ளாதலால், வசுதேவர்க்கு ‘ஆனகதுந்துபி’ என்று ஒருபெயராயிற்று. சீவசிந்தாமணியில்
“செம்பொன்வரைமேற்பசும்பொன் னெழுத் திட்டதே போல்” என்ற இடத்து,
ஆசிரியர் நச்சினார்க்கினியர் ‘செம்மை பசுமை – தொடை முரண்;  ஈண்டு
வண்ணவேறுபாடு இன்று’ என்றுஉரைத்தது, இங்கு ‘பசுஞ் செம்பொன்மாலை’ என்ற
விடத்துங் கொள்ளத்தக்கது.பசுஞ்செம்பொன்மாலை – உவமையாகுபெயர்

பார்ப்பான் வந்து, ஒரு கோடி அரசைச் சேரப் பரிபவித்து,
பாஞ்சாலன் பயந்த தெய்வச்
சீர்ப் பாவைதனை வலியால் கொண்டுபோக, செயல் இன்றி
இருந்தீர்! என் செய்தீர்?’ என்று,
வேர்ப்பு ஆடு நுதல் சிவந்த விழியன் ஆகி, விழியிலான் மகன்
கழற, வெகுண்டு, மேன்மேல்,
ஆர்ப்பாகக் கொதித்து எழுந்தது, உகாந்த காலத்து ஆர்க்கும்
மகராலயம்போல், அரசர் ஈட்டம்.-துரியோதனன் தூண்டுதலால் அரசர்கள் போர்க்கு
எழுதல்.

விழி இலான் மகன் – கண்களில்லாத (பிறவிக்குருடனாகிய)
திருதராட்டிரனது புத்திரனான துரியோதனன், வேர்ப்பு ஆடுநுதல் சிவந்த விழியன்
ஆகி – (பொறாமையாலாகிய கோபத்தால்) வேர்வைநீர் தளும்புகிற நெற்றியையும்
சிவந்தகண்களையுமுடையவனாய், (மற்றையரசர்களைநோக்கி), ‘பார்ப்பான்-
பிராமணனொருவன், வந்து-,ஒருகோடி அரசை-கோடிக்கணக்கான (மிகப்பல)
அரசர்களை, சேர பரிபவித்து-ஒருசேர அவமானப்படச்செய்து, பாஞ்சாலன் பயந்த
தெய்வம் சீர் பாவைதனை- பாஞ்சாலராஜன்பெற்ற தெய்வத்தன்மையுள்ள சிறந்த
பாவைபோன்ற திரௌபதியை, வலியால் கொண்டு போக-(தன்) வலிமையால்
உரிமையாக்கிக்கொண்டு செல்ல, செயல் இன்றி இருந்தீர்- (அதற்கு மாறான)
செய்கை யொன்றுஞ்செய்யாமல் இருந்தீர்கள்; என்செய்தீர்-என்ன
காரியஞ்செய்தீர்கள், என்று-, கழற – உறுத்திக்கூற,-(அத்தூண்டுதலால்,
அரசர்ஈட்டம் – அரசர்களுடையகூட்டம், வெகுண்டு – கோபங்கொண்டு, உக
அந்தகாலத்து ஆர்க்கும் மகராலயம்போல்- கல்பாந்தகாலத்திற் கொதித்தெழுந்து
ஆரவாரிக்கிற கடல்போல, மேல்மேல் ஆர்ப்பு ஆக கொதித்து எழுந்தது-
மேல்மேல் ஆரவாரமுண்டாக (மனங்) கொதித்து (ப்போருக்கு) எழுந்தது; (எ- று.)

‘பரிவித்து’ என்னும் பாடத்துக்கு வருத்தி யென்றுபொருள்.
சுயம்வரத்தில்மாலைசூட்டியபின் மற்றையோர் மணமாலை பெற்றவனை
எதிர்த்துப்பொருதலும், அங்ஙன் பொருவாருள் எவனேனும் அவனை
வெல்வானாயின் அவன் அக்கன்னிகைக்கு உரியனாதலும்,  அங்ஙனம்
பொருவாரையெல்லாம் வென்றிபின்பே மாலைசூட்டப்பெற்றவன் அவளை
மணஞ்செய்துகொள்ளுதலும், இயல்பு,

முருத்து வாள் நகை, துவர்வாய், முகத்தினாளை மூத்தோன்
பின் நிறுத்தி, அமர் முருக்குமாறு,
மருத்துவான் திரு மகனும் மருத்தின் செல்வ மைந்தனுமே
புரிந்திட்டார்; மறையோர் உள்ளார்
உருத்து, வாய் மடித்து எழுந்து, கோகு தட்டிட்டு, ஊன்றிய தண்டு
எதிர் ஓச்சி, உடன்ற வேந்தர்
கருத்து வார்தக வெருக்கொண்டு ஓட ஓட, கை உரம் காட்டினர்,
வளர்த்த கனலே அன்னார்.-வீமனும், அருச்சுனனும் அரசர்களை எதிர்க்க
இருக்கையில், அந்தணர் போர்செய்யத்தொடங்கல்.

முருந்து  – மயிலிறகின் அடிக்குருத்தைப் போன்ற, வான் நகை-
ஒள்ளிய பற்களையும், துவர்வாய்-பவழம்போன்றவாயையுமுடைய, முகத்தினாளை –
முகத்தையுடையவளான திரௌபதியை, மூத்தோன் பின் நிறுத்தி – தமையனாகிய
தருமனுக்குப் பின்னேநிற்க வைத்து, மருத்துவான் திருமகன்உம் மருத்தின்செல்வம்
மைந்தன் உம்ஏ-இந்திரனது சிறந்தகுமாரனாகிய அருச்சுனனும் வாயுவினது
செல்வப்பிள்ளையான வீமனும் ஆகிய இருவருமே,  அமர் முருக்கும் ஆறு
புரிந்திட்டார்-போர்செய்து (அப்பகைவர்களை) அழிக்கும்படி சித்தரானார்கள்;
(அதற்குள்ளே), மறையோர் உள்ளார் – (அங்கு) உள்ளவர்களான
அந்தணர்கள்,உருந்து-கோபங்கொண்டு, (அக்கோபமிகுதியால்), வளர்த்த கனல்ஏ
அன்னார்-(தாந் நாள்தோறும் வைதிகமாக நெய்ம்முதலியன கொண்டு வளர்க்கிற
அக்கினியையே போன்றவர்களாய், வாய் மடித்து-உதட்டைமடித்துக்கொண்டு
எழுந்து- போர் செய்யப்புறப்பட்டு, கோகு தட்டிட்டு – (வீராவேசத்தால்)
தோள்தட்டிஆரவாரஞ்செய்துகொண்டு, ஊன்றிய தண்டு எதிர் ஓச்சி – (தாங்கள்)
ஏந்தியதண்டங்களை எதிரேஉயரஎடுத்து, உடன்ற வேந்தர் கருத்து வார் தக வெரு
கொண்டுஓட ஓட – பகைத்த அரசர்கள் மனத்தில் மிகுதியாக அச்சங்கொண்டு
விரைந்தோடும்படி, கை உரம் காட்டினர் – (தங்கள்) கைவலிமையைக் காட்டத்
தொடங்குபவரானார்கள்; ( எ- று.)

     ஓரந்தணன் கன்னிகையைக் கைக்கொண்டதற்காகப் பொறமைகொண்டு
அரசர்கள் போர்க்குஎழுவதை நோக்கி, சாதியபிமானத்தால் அந்தணரெல்லாரும்
கோபங்கொண்டு அரசரை எதிர்ப்பாராயினரென்க. கோகுஎன்பது புயமென்ற
பொருளில்வருதலை “கொற்றவன்றன் கோகின்மேல் வீரவாளின் வீசினான்”
என்றசூளாமணியிலும் காண்க. இனி கோகு தட்டிட்டு – தங்கள் குடுமியைத்
தட்டிமுடிந்துகொண்டு என்று உரைப்பாருமுளர். அந்தணர் கோபாவேசங்
கொள்ளுங்கால் தமது சிறியகுடுமிநெகிழ்ந்து அவிழ்தலைத் தட்டி உறுதியாக
முடிந்துகொண்டு எதிர்க்கச்செல்லுதல் சாதியியல்பு, வளர்த்தகனலேயன்னார்’ – தாம்
வளர்க்கிற ஆகவனீயம் காருகபத்தியம் தக்ஷிணாக்கினி என்ற வைதீக அக்கினிகள்
போலப் பரிசுத்தமூர்த்திகளாகிய என்றுஉரைத்த, மறையோர்க்கு
அடைமொழியாக்கினுமாம். மருத்வான் – தேவர்களை யுடையவனென்று
உறுப்புப்பொருள்படும் வடசொல். மருத்-தேவர்.

மிகைத்த முனிவரர் முனிந்த உறுதி நோக்கி, வென்று எடுத்த
வில் தடக் கை விசயன், சற்றே
நகைத்து நகைத்து, அவர் அவரை விலக்கி, ‘என் முன் நமன்
வரினும் பிளப்பல்’ என நவிலாநின்றான்;
புகைத்த கனல் விழிக் கன்னன் தருக்கால் எள்ளி, பூசுரன் என்று
அவமதித்து, புனை வில் வாங்கி,
உகைத்த பகழியும் உகைத்தான்; உரனும், தன் கை ஒரு கணையால்
உடன் பிளந்தான், உரும்ஏறு ஒப்பான்.-அந்தணரை விலக்கி அருச்சுனன் கர்ணனை வெல்லல்.

உரும் ஏறு ஒப்பான் – (பகைவர்க்குப்) பேரிடிபோல்பவனாகிய,
வென்றுஎடுத்த  வில் தட கை விசயன் – (எல்லா வரசர்களையுங்) கீழ்ப்படுத்தித்
தான்எடுத்த வில்லையேந்திய பெரிய கையையுடைய அருச்சுனன்,-மிகைத்த
முனிவரர்முனிந்த உறுதி நோக்கி-மிக்க அந்தப்பிராமணசிரேஷ்டர்கள்
கோபங்கொண்டதுணிவைப் பார்த்து, சற்றுஏ நகைத்து நகைத்து –  சிறிது சிரித்துச்
சிரித்து, அவரவரைவிலக்கி – அவர்களையெல்லாம் தடுத்து, என் முன் நமன்
வரின்உம் பிளப்பல் எனநவிலாநின்றான் – ‘என்எதிரிலேநமன் (போர்க்கு) வந்தாலும்
(அவளை நான்) பிளந்துவிடுவேன் ‘ என்று (அவர்கட்குத் துணிவு) கூறிநின்றவனாய்,
– புகைத்த கனல் விழி கன்னன் – புகைகின்ற கோபாக்கினியை வெளிப்படுத்துகின்ற
கண்களையுடைய கர்ணன், தருக்கால்எள்ளி-செருக்கினால் இகழ்ந்து, பூசுரன் என்று
அவமதித்து – பிராமணனென்று(தன்னை) அலட்சியஞ்செய்து, புனை வில் வாங்கி-
அழகியவில்லை வளைத்து,உகைத்த- (தன்மேற்) செலுத்தின, பகழிஉம் –
அம்புகளையும், உகைத்தான் உரன்உம்- (அம்பு) செலுத்தினவனான அவனுடைய
மார்பையும், தன் கை ஒரு கணையால் -தனதுகையினா லெய்யப்பட்ட
ஓரம்பினால், உடன் பிளந்தான் – ஒருசேரப்பிளந்திட்டான்; (எ-று.)- ‘மிகைத்து’
என்றும் பாடம்; அளவுகடந்து என்றுபொருள்.

குன்றால் மெய் வகுத்தனைய வீமன், தன்மேல் கொல்
இயல் செய் சல்லியனைக் குத்தி வீழ்த்தி,
கன்றால் முன் விளவு எறிந்த கண்ணன் என்ன, கால்
முடியோடு உற வளைத்து, வான்மேல் வீசி-
நின்றான்; மற்று அவன் அயலே தெறித்து வீழ்ந்து, நெஞ்சு
ஒடிந்தான்; இருவரும் முன் நில்லார் ஆகி,
‘வென்றாலும், தோற்றாலும், வசையே, வெம் போர்
வேதியரோடு உடற்றல்!’ என, மீண்டு போனார்.-வீமன் சல்லியனை வெல்ல, அவனும் கர்ணன்
போலவே ஓடுதல்.

குன்றால் மெய் வகுத்து அனைய வீமன் – மலையினால் உடம்பைச்
செய்தமைத்தாற்போன்ற (மிகவலிய பேருடலையுடைய) வீமசேனன், தன்மேல் கொல்
இயல் செய் சல்லியனை குத்திவீழ்த்தி – தன்னைஎதிர்த்துப் பெரும்போரைசெய்த
சல்லியனைக் (கையினாற்) குத்திக்கீழேதள்ளி, கன்றால்முன் விளவுஎறிந்த
கண்ணன்என்ன – (முன்பு பசுவின்) கன்றைக்கொண்டு விளாமரத்தின்மே  லெறிந்த
கிருஷ்ணன் போல, கால் முடியோடு உற வளைத்து வான்மேல் வீசி நின்றான் –
கால்தலையோடு பொருந்த அவனுடம்பை வளைத்து அதனை வானத்தில்
வீசிநின்றான்;(அதனால்), அவன் – அச்சல்லியன், அயல் தெறித்து வீழ்ந்து –
பக்கத்திலே தெறித்துவிழுந்து, நெஞ்சு ஒடிந்தான் – நெஞ்சமுறிந்தான்: (உடனே),
இருவர்உம் -(அந்தக்கர்ணண்சல்லியன் என்ற) இரண்டுபேரும், முன் நில்லார்
ஆகி – எதிரில்நிற்கமாட்டாதவர்களாய், வென்றால்உம் தோற்றால் உம்
வெம்போர் வேதியரோடுஉடற்றல் வசைஏ என – ‘சயிப்பதானாலும்
தோற்பதானாலும் கொடியபோரைஅந்தணர்களோடுசெய்தல் இகழ்ச்சியேயாம்’
என்றுசொல்லிக் கொண்டே,மீண்டுபோனார் – திரும்பிச்சென்றார்கள்; (எ-று.)-
மற்ற – அசை.

     அந்தணவடிவத்தி லிருக்கும் வீமார்ச்சுனரிடம் தம்வலிமையைக்
காட்டமாட்டாதுதோற்ற சல்லியகர்ணர்கள் வெம்போர் வேதியரோடுடற்றலால்
வென்றாலும் தோற்றலும்வசையே என்று முன் நில்லாராகிச் சென்றனரென்க.
‘குன்றால் மெய் வகுத்தனைய’ என்றது – தன்மைத்தற்குறிப்பு. ‘கொல்லியல்’
என்றது – கொல்லுந்தன்மையுடையதென வினைத்தொகையன்மொழியாய்ப்
போரைக் குறிக்கும். இங்குப்பாலபாரதத்தில், கர்ணனோடு அருச்சுனனும்
சல்லியனோடு வீமனும்,பொருகையில், மற்றையரசர் அவர்கள் திறத்தைக்
கொண்டாடியவண்ணம்வானவரைப்போலப் போரைக் காண்பவரானார்க்
ளென்றுஉள்ளது. கன்றால் விளவெறிந்த கதை – கம்சனால் ஏவப்பட்ட
கபித்தாசுரன், விளாமரத்தின்வடிவமாய், கண்ணன் தன்கீழ்வரும்போது தான்
மேல்விழுந்து கொல்வதாக எண்ணிவந்துநிற்க, அதனையறிந்து கிருஷ்ணபகவான்
அவ்வாறே தன்னை முட்டிக்கொல்வதாகக் கருதி ஒருகன்றின் வடிவங்கொண்டு தான்
மேய்க்குங் கன்றுகளோடு கலந்திருந்த வல்ஸாசுரனைப் பின்னங்கால்களைப்பிடித்து
எடுத்துச்சுழற்றி விளாமரத்தின்மேலேறிய, இருவரும் இறந்து தமது அசுரவடிவத்துடன்
விழுந்திட்டனரென்பதாம்.  

வண்ண நூல் முனிவர் அல்லர்; மருத்துவான், மருத்து, நல்கும்
அண்ணல் அம் குமரர் ஆம்’ என்று அயிர்ப்புறும் அரசர் யாரும்,
கண்ணனால் விலக்கப்பட்டு, கடி நகர்தோறும், தங்கள்
எண்ணமும் பயனும் வேறா எய்தினர் என்ப மன்னோ.-கண்ணன்விலக்கவே, மற்றையரசர்கள் தம்தம்ஊர்
சேர்தல்.

இவ்விருவரும்), வண்ணம் நூல் முனிவர் அல்லர் – அழகிய
பூணூலையுடைய அந்தண ரல்லர்; மருத்துவான் மருத்து நல்கும் அண்ணல் அம்
குமரர் – இந்திரனும் வாயுவும் பெற்ற பெருமையையுடைய அழகிய புத்திரர்களாகிய
அருச்சுனனும் வீமனுமாவர்,’ என்று-, அயிர்ப்பு உறும் – சற்தேகங்கொண்ட,  அரசர்
யார்உம் – மற்றையரசர்களெல்லோரும், (பின்பு), கண்ணனால் விலக்கப்பட்டு –
கிருஷ்ணனால் (இனிப் போர்வேண்டாவென்று) விலக்கப்பட்டு, தங்கள் எண்ணம்உம்
பயன்உம் வேறு ஆ – தங்கள் நினைப்பும் அதன் பயனும்வேறாக, கடிநகர்
தோறுஉம் எய்தினர் – பாதுகாவலையுடைய தம்தம்  நகரத்திற் சென்று
சேர்ந்தார்கள்;(எ-று.)-என்ப, மன் ஓ – அசைகள்,

     திரௌபதியைச் சுயம்வரத்தில் மணஞ்செய்துகொள்ள விரும்பிவந்த தங்கள்
எண்ணமும், இங்குத் தங்களுக்குநேர்ந்த அவமானமும் மாறுபாடுடைமையால்,
‘எண்ணமும் பயனும்வேறா’ என்றார். மன்னவர்கள் துருபதனோடு பொருமாறு
மாறுபட, போரக்குச் சித்தராகி அருச்சுனனும் வீமனும் கர்ணசல்லியரைவெல்ல,
தருமன் முதலியோர் துரியோதனாதியரை வென்றனராக, மீண்டும் அரசர்கள்
குழுமிப்போர்வளைக்க  முனைகையில் ஸ்ரீக்ருஷ்ணபகவான் அப்போரை
விலக்கினனென்றுவியாசபாரதம் கூறும்.

     இதுமுதல் பத்துக் கவிகள் – இச்சருக்கத்தின் முதற்கவிபோன்ற
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தங்கள். 

அன்று இலக்கு எய்த கோவும், துணைவரும், ஆன வெம் போர்
வென்று, கொற்றவையோடு ஒக்கும் மின்இடைப் பொன்னும் தாமும்
சென்று, மட்கலம் செய் கம்மி செழு மனை முன்றில் எய்தி,
‘இன்று பெற்றனம், ஓர் ஐயம்; என் செய்வது, இதனை?’ என்றார்.-பாண்டவர் குந்தியிடஞ்சென்று ‘இன்று ஒருபிச்சை
பெற்றோம்’ எனல்.

அன்று இலக்கு எய்த கோஉம் – அன்றைத்தினத்தில் இலக்கையெய்த
சிறப்புள்ள அருச்சுனனும், துணைவர்உம் – மற்றை அவனுடன்பிறந்தவர்களும், –
ஆன வெம் போர்வென்று-நிழந்தத கொடிய போரிற்பகைவென்றபின்,
நோற்றவையோடுஒக்கும் மின் இடை பொன்உம் தாம்உம் – வீரலஷ்மியோடு
ஒத்தமின்னல்போன்ற இடையையுடைய செல்வப் பெண்ணான திரௌபதியும்
தாங்களும், சென்று – போய், மண் கலம் செய் கம்மி செழுமனை முன்றில் எய்தி –
மட்பாத்திரங்களைச்செய்யுந்தொழிலையுடையகுயவனது செழுமையான வீட்டின்
முற்றத்தை யடைந்து, (அவ்வீட்டினுள்ளே யிருந்த தங்கள் தாயைக் குறித்து), ‘இன்று
ஓர் ஐயம் பெற்றனம் – இன்றையத்தினத்தில் நுகரப்படும்பொருளொன்றைப்
பெற்றுவந்தோம்; இதனை என் செய்வது – இதனைஎன்ன செய்வது?’ என்றார்;(எ-று.)

     சிலகாலமாய் அந்தணவடிவங்கொண்டுள்ள இவர்களில் அருச்சுனனும்
வீமனும்நாள்தோறும் வெளிச்சென்று தமது சாதிக்கு உரிய இரத்தல் தொழிலால்
உணவைஈட்டிக்கொணர்ந்து மீண்டுவந்தடனே தம்தாயை நோக்கி
‘இன்றுபிக்ஷைகொணர்ந்தோம்’ என்றுசொல்லி அவளனுமதிபெற்று அதனைத்
தமையன் தம்பியருடன் உண்ணும் வழக்கத்தின்படி, திரௌபதியைக் கொணர்ந்த
தினத்தலும் கூறுகின்றார்களாதலால், ‘இன்று பெற்றனமோரையம் ‘ என்றார்.
பகைவென்று கைக்கொள்ளப்பட்டமையின் திரௌபதிக்குக் கொற்றவை உவமை
கூறப்பட்டனள்,- ‘கன்மிசெழுமனை’ என்றும்பாடம்.

உள் இருந்து, அன்னை, மைந்தர் உரைத்த சொல் கேட்டு, ‘தேவர்
தெள் அமுது என்ன, மக்காள்! சேர நீர் அருந்தும்’ என்னா,
புள்ளினம் ஒடுங்கும் மாலைப் பொழுது இவள் புறம்பர் எய்தி,
கள் அவிழ் கூந்தலாளைக் கரும்பு என விரும்பி, கண்டாள்.-அதனை அனைவரும் உண்ணும் ‘ என்று கூறியபின், குந்தி
திரௌபதியைப் பார்த்தல்.

மைந்தன் உரைத்த சொல் – (தன்) பிள்ளைகளான பாண்டவர்கள்
சொன்ன வார்த்தையை, அன்னை – தாயாகியகுந்தி,  உள் இருந்து கேட்டு –
(தான்) உள்ளே யிருந்துகொண்டே கேட்டு, (அப்பிள்ளைகளை நோக்கி),
‘மக்காள் – புத்திரர்களே! நீர் – நீங்கள், தெள்தேவர் அமுது என்ன –
தெளிவானதேவாமிருதத்தைப்போல  (மிகவும் இனிமையாக), சேர அருந்தும் –
ஒருங்குஉண்ணுங்கள்,’  என்னா -என்றுசொல்லி, (பின்பு), அவள்-அந்தக்குந்தி
தேவியானவள், புள் இனம் ஒடுங்கும் மாலைபொழுது – பறவைக்கூட்டங்கள்
(தம் தம் கூடுகளில்) ஒடுங்கும்படியான (அந்த) மாலைக்காலத்திலே, புறம்பர்
எய்தி – (உள்ளிருந்து) வெளியே வந்து, கள் அவிழ்கூந்தலாளை –
(சூடியமலர்களின்று) தேள்சொரியுங் கூந்தலையுடைய திரௌபதியை, கரும்பு என –
கரும்பைப்போல, விரும்பிகண்டாள் – மகிழ்ந்துகாண்பவளானாள்; (எ-று.)
‘பொழுதிவன்’ என்றும்பாடம்.

‘என் நினைந்து, என் சொன்னேன்! மற்று என் செய்தேன்!’
என்று சோரும்
அன்னையை வணங்கி, ‘நின்சொல் ஆரணப் படியது ஆகும்;
நின் நினைவு அன்றால்; எங்கள் நெஞ்சிலும் நினைவு உண்டு’
என்றான் –
தன் நிகர் இலாத கேள்வி சான்ற சீர்த் தருமன் என்பான்.-கழிவிரக்கமுற்ற குந்திக்குத் தருமன்தேறுதல்கூறல்

என் நினைந்து-என்ன நினைந்து, என் சொன்னேன் –
யாதுசொன்னேன்! என் செய்தேன்-என்னகாரியஞ்செய்திட்டேன்,’ என்று –
என்றுசொல்லி, சோரும்-(பின்பு மனந்) தளர்கிற, அன்னையை – தாயான குந்தியை,
தன்நிகர் இலாத கேள்வி சான்ற சீர் தருமன் என்பான்- தனக்கு ஒப்பில்லாத
நூற்கேள்விமிக்க புகழையுடைய தருமபுத்திரன்,  வணங்கி-நமஸ்கரித்து, (அவளை
நோக்கி),  நின் சொல்-உனது வார்த்தை, ஆரணம் படியது ஆகும் – வேதத்தின்
தன்மையதாம்; ‘நின் நினைவு அன்று – (இது) நீ நினைத்துக் கூறியது அன்று
(தற்செயலாய் உன்வாயில்வந்த வார்த்தை); (அன்றியும்), எங்கள் நெஞ்சில்உம்
நினைவுஉண்டு-எங்கள்மனத்திலும் இந்த எண்ணம் உண்டு,’ என்றான் – என்று
சொன்னான்; (எ- று.)

      ‘என்செய்கேன்’ என்றும் பாடம். தாய்வார்த்தை வேதவாக்கியம்போலக்
காரணங்கருதாமலே விதிரூபமாக அங்கீகரிக்கத்தக்கதென்பான், ‘நின்சொல்
ஆரணப்படியதாகும்’ என்றான். சாஸ்திர விரோதமானதைச் சொல்லத்தக்கவனல்லாத
தருமன் ஒரு பெண்ணை நாங்கள் ஐவரும் மணஞ்செய்துகொள்ளக்
கருதுகின்றோமென்றல் அப்பெண்ணினிடத்து வைத்த காதல்பற்றியேயன்று
விதிவயத்தனா யென்பது விளங்க, ‘தன்னிகரிலாதகேள்விசான்ற சீர்த்தருமனென்பான்’
என்றார். மற்று-அசை; விளைமாற்றுமாம்,

பார் அனைத்தினும் தன் நாமம் பரப்பிய பார்த்தன் என்னும்
வீரனைப் பயந்த பாவை, ‘விதிவழி இது’ என்று எண்ணி,
மாரனுக்கு அரசு நல்கும் மங்கையும் தானும், அந்தக்
கார் இருள் கங்குல், மைந்தர் கட்டுரை கசிந்து கேட்டாள்.-குந்தி  ஒருவாறுதேறுதலும், இரவுகழிதலும்.

பார் அனத்தின்உம் – பூமி முழுவதிலும், தன் நாமம் – தனது
பெயரை,பரப்பிய – (புகழாற்) பரவச்செய்த, பார்த்தன் என்னும் வீரனை-
அருச்சுனனென்கிறவீரனை, பயந்த-பெற்ற, பாவை-பெண்ணாகியகுந்திதேவி, இது
விதிவழி என்று எண்ணி – (தான் கூறியதும் தருமன் கூறுகிறதுமாகிய இச்செயல்)
ஊழ்வினைவசத்ததாமென்று நினைத்து,-மாரனுக்கு அரசு நல்கும் மங்கைஉம்
தான்உம்-மன்மதனுக்கு அரசாட்சியைக்கொடுக்கின்ற இளம்பெண்ணான
திரௌபதியும்தானுமாக, அந்த கார் இருள் கங்குல்- கரிய இருளையுடைய
அவ்விரவில், மைந்தர்கட்டு உரை கசிந்துகேட்டாள் – தன்) பிள்ளைகளான
அப்பாண்டவர்கள் கூறும்பொருளுள்ள மொழிகளை அன்புகொண்டு கேட்டாள்;
(எ-று.)

     விற்றிறம் போர்த்தொழில் முதலிய வீரர்க்குஉரிய வார்த்தைகள் பலவற்றை
அவர்கள் இரவிற் சொல்லிக்கொண்டிருக்க, அவற்றைக் குந்தியும் திரௌபதியும்
கேட்டனரென்க. பாவைதானும் மங்கையும் கேட்டாள்-இரண்டு
பெண்பாற்பெயர்கள்சிறப்பினால் ஒரு முடிபை ஏற்றன; (நன் பொது-27.) 

பொன் தொடி, கனக மாலை, பொலங் குழை, பூவைதன்னைப்
பெற்ற பூபதி அவ் வீரர் பெருமித வாய்மை எல்லாம்
ஒற்றரால் உணர்ந்து, நெஞ்சத்து உவகையோடு, ஐயம் இன்றி,
மற்றை நாள் வந்து, கொற்ற வாழ் மனை கொண்டு புக்கான்.–அங்குநிகழ்ந்த செய்திகளைத் துருபதன் ஒற்றரால் அறிந்து
மறுநாள் அவர்களைத் தன்மனைக்கு அழைத்தல்.

பொன் தொடி – பொன்னலாகிய தொடியென்னும் வளையையும்,
கனகம் மாலை-பொன்னாலாகிய ஆரத்தையும், பொலம்குழை – பொன்னலாகிய
குழையென்னுங் காதணியையுமுடைய, பூவைதன்னை – பூவைபோன்ற திரௌபதியை,
பெற்ற-, பூபதி – அரசனாகிய யாகசேனன், அ வீரர் பெருமிதம் வாய்மை எல்லாம்-
அந்தப்பாண்டவர்களுடைய வீரத்தைவிளக்கும் வார்த்தைகளையெல்லாம், ஒற்றரால்
உணர்ந்து – ஒற்றர்களால் அறிந்து, ஐயம் இன்றி-சந்தேகமில்லாமல், நெஞ்சத்து
உவகையோடு – மனமகிழ்ச்சியுடனே, மற்றை நாள் – மறுநாளில், வந்து -(அவர்கள்
தங்கியிருக்கும் இடம்) வந்து, கொற்றம் வாழ் மனை கொண்டு புக்கான் –
வெற்றியையுடைய (தான்) வாழ்கிற மாளிகைக்கு (அவர்களை) உடன்கொண்டு
சென்றான்; (எ- று.) -வாண்மனை என்றுமாம்.

     ஒற்றராவார் – வேண்டிய இடங்களில் உரியபடி சென்று உள்ளபடி
செய்தியறிந்துவந்துகூறுபவர். திருஷ்டத்யும்நன் தானே மறைவாக அவர்கள்
பின்சென்று பதிவிருந்து அங்குநிகழ்ந்தவையனைத்தையும் அறிந்துவந்து தந்தைக்குக்
கூறின னென்றும்,  பின்னும் ஐயந்தீர்தற்பொருட்டுத் துருபதன் தனதுபுரோகிதனை
அனுப்பிப் பின்பு தூதன்மூலமாக அவர்களைத் தன்மனைவிக்கு வருவித்தானென்றும்
முதுனூல் கூறும். அரசனது வெற்றியை அவனது அரண்மனைமேலேற்றி
‘கொற்றமனை ‘ என்றார்.  

அடுத்த பல் பொருளும் வைக்க, ஆயுதம் அன்றி வேறு ஒன்று
எடுத்திலர் என்றும், வேத முனிவரர் அல்லர் என்றும்,
கொடுத்தன சிறப்பினோடும் குரு மணித் தவிசின் ஏற்றி,
தொடுத்த தார்க் குருக்கள் என்றே துணிந்தனன், யாகசேனன்.-அவர்களைச் சோதனையால் துருபதன் பாண்டவர்களென்றே
நிச்சயித்து உபசரித்தல்.-

இதுவும், அடுத்த கவியும் – குளகம்.

(இ-ள்.) அடுத்த பல் பொருள்உம் வைக்க-பொருந்திய பல பொருள்களையும் (கொணர்ந்து அவர்கள் முன்னிலையில்) வைக்க, (அவர்கள்), ஆயுதம் அன்றி வேறு
ஒன்று எடுத்திலர் – ஆயுதங்களையேயன்றி வேறொருபொருளையும்
எடுத்தார்களில்லை, என்றும்-, (அதனால்), வேதம் முனிவரர் அல்லர் என்றுஉம்-
வேதத்துக்கு உரிய அந்தணர்களல்லரென்றும், (அறிந்து),-யாகசேனன் – துருபதன்,-
தொடுத்த தார் குருக்கள் என்றுஏதுணிந்தனன்-தொடுக்கப்பட்ட மாலையையணிந்த
குருகுலகுமாரர்களாகிய பாண்டவர்களென்றே (அவர்களை) நிச்சயித்து,
கொடுத்தனசிறப்பினோடுஉம் – (தான்) கொடுத்த பலவகைச்சிறப்புக்களுடனே,
குருமணிதவிசின் ஏற்றி-நிறம் விளங்குகிற இரத்தினங்கள் பதித்த ஆசனத்தில்
(அவர்களை) வீற்றிருக்கச்செய்து,-(எ-று.)- ‘என்ன’ (70) என்க.

     துருபதன் பின்னும்தெளிந்து கொள்ளுதற்பொருட்டுத்தனது பரிசனர்களை
யேவி அவர்களெதிரில்பலவகைப் பொருள்களைக் கொணர்ந்துவைக்கச் சொல்ல,
அவர்கள் அவற்றில் படைக்கலங்களைத் தவிர வேறொன்றையும் எடுத்துக்
கொண்டிலராக, அச்செய்தியை அறிந்தபின் அரசன் அவர்களைப்பாண்டவரென்றே
துணிவு கொண்டனனென்க. பின்பு அவர்களும் துருபதனது வேண்டுகோளின்படி
தாம் இன்னாரென்று உள்ளபடி உணர்த்தித் தமது நிஜரூபத்தைக் கொண்டு
அரக்குமாளிகை யிருப்பின்பின் நிகழ்ந்த வரலாற்றை அவனுக்குக் கூறின ரென
முதனூலால் அறிக.

கை வரு சிலையின் வென்று கைப் பிடித்தவனுக்கு இன்றே
மை வரு கண்ணினாளை வதுவை செய்திடுதும்’ என்ன,
நெய் வரு முனை கொள் கூர் வேல் நிருபனை நோக்கி, ‘யாங்கள்
ஐவரும் வேட்டும்’ என்றான், அசைவு இலா அறத்தின் மைந்தன்.-துருபதன்மணவினைதொடங்க, தருமன் ‘நாங்கள் ஐவரும்
இவளை மணப்போம்’ என்றல்.

கை வரு சிலையின் -(தனக்குக்) கைவந்த விற்நொழிலினால்,
வென்று-(பிறரைக்) கீழ்ப்படுத்தி, கை பிடித்தவனுக்கு – கைப்பற்றின அருச்சுனனுக்கு,
இன்றே -இன்றைத்தினமே, மைவரு கண்ணினாளை – மையிட்ட கண்களையுடைய
திரௌபதியை, வதுவை செய்திடுதும் – கலியாணஞ்செய்விப்போம்,’ என்ன – என்று
(யாகசேனன்) சொல்ல,-அசைவு இலா அறத்தின் மைந்தன் – (தருமத்தினின்று)
சோர்தலில்லாத  தருமபுத்திரன், நெய் வரு முனை கொள் கூர் வேல் நிருபனை
நோக்கி –  நெய்பூசிய நுனியைக் கொண்ட கூரியவேலாயுதத்தையுடைய
அவ்வரசனைநோக்கி, யாங்கள் ஐவர்உம் வேட்டும் என்றான்- ‘நாங்கள்
ஐந்துபேரும்(இவ்வொருத்தியை) மணஞ்செய்துகொள்வோம்’ என்று சொன்னான்;

     யாங்கள் ஐவர்-தன்மையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி: ‘யாங்கள்ஐவேம்’
என்று இருப்பின் வழாநிலையாம்,    

தருமன் மா மதலை சொல்லால் தளர்வுறு காலை, ‘மாலை
நிருப! நின் மனத்தில் ஐயம் நீக்குக! நீக்குக!’ என்னாத்
துருபதன் முன்னர் வந்து தோன்றினன்- சுருதி யாவும்
விரை மலர் விதியின் மிஞ்ச விதித்தருள் வியாதன் என்பான்.-அதற்குஉடன்படாத துருபதனுக்கு வியாசர்
அறிவுறுத்தலுறல்.

தருமன் மா மதலை சொல்லால் – (இங்ஙனம்கூறிய) யமதருமராசனது
சிறந்த புத்திரனாகிய யுதிட்டிரனது வார்த்தையைக்கேட்டதனால், தளர்வுஉறு காலை-
(துருபதன்) வருத்தமடைந்த  சமயத்தில்,- ‘மாலை நிருப – மாலையையணிந்த
அரசனே! நின்மன்றத்தில் ஐயம்நீக்குக நீக்குக-உன் மனத்தில் சந்தேகத்தை
நீக்குவாயாகநீக்குவாகாயக,’ என்னா-என்றுசொல்லிக்கொண்டே, விரைமலர்விதியின்
மிஞ்ச சுருதியாஉம் விதித்து அருள்வியாதன் என்பான்-வாசனையையுடைய
(திருமாலின் நாபித்) தாமரைமலரில் தோன்றிய பிரமனினும் மேலாக
வேதங்களையெல்லாம் வகுத்தருளியவியாசனென்று பெயர்பெற்ற முனிவன்,
துருபதன் முன்னர் வந்து தோன்றினன் – அந்தத்துருபதராசனுக்கு எதிரிலே
வந்துதோன்றினான்; (எ-று.)

     நீக்குக நீக்குக – அடுக்கு, துணிவுப்பொருளது, ஸ்ருதி என்ற வடசொல் –
எழுதாக்கிளவியாய்க் குருசிஷ்ய கிரமத்திலே கர்ணபரம்பரையாக வழங்குவ தென்று
காரணப் பொருள்படும். 

தொழுது பொன்-தவிசின் ஏற்றி, சூழ்ந்தனர் இருந்து கேட்ப,
முழுது உணர் கேள்வி ஞான முனி குலத்து அரசு போல்வான்,
‘பழுது அறு கன்னிதன்னைப் பாண்டவர் ஐவருக்கும்
எழுதஅரு மறையின் வேள்வி இயற்றுதற்கு இயற்கை கேண்மோ:-ஒருத்தியை ஐவர்மணத்தற்குக் காரணங் கேட்பாயென்று
வியாசர் கூறலுறல்.

பதினாறுகவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) (இங்ஙனம் எழுந்தருளிய வேதவியாசமுனிவனைத் துருபதராசன்),
தொழுது – நமஸ்கரித்து, பொன் தவிசின் ஏற்றி- பொன்மயமான சிங்காசனத்தில்
எழுந்தருளப்பண்ணி, சூழ்ந்தனன் இருந்து-(அவனைப்) பிரதக்ஷிணஞ்செய்து
இருந்துகொண்டு, கேட்ப-கேட்க,-முழுது உணர் கேள்வி ஞானம் முனி குலத்து
அரசுபோல்வான் – எல்லாவற்றையும் அறிந்த நூற்கேள்வியையும்
தத்துவஞானத்தையுமுடைய முனிவர்கூட்டத்துக்கு ஓர் அரசன்போல்
தலைமைபெற்றவனான அம்முனிவன்,-பழுது அறு கன்னிதன்னை – குற்றமற்ற
கன்னிகையான இந்தத்திரௌபதியை, பாண்டவர் ஐவருக்குஉம் – பாண்டவர்கள்
ஐந்துபேருக்கு, எழுது அரு மறையின் – எழுதுதற்கு அரிய (எழுதாக்கிளவியாகிய)
வேதத்தின் விதிப்படி, வேள்வி இயற்றுதற்கு – மணஞ்செய்வித்தற்கு(க்காரணமான),
இயற்கை – இயல்பை, கேண்மோ – கேட்பாயாக; (எ- று.)- ‘சூழ்ந்தனரிருந்து’ என்றும்
பாடம்.

     இச்செய்யுளில், கேட்ப, போல்வான் என்றவற்றிக்கு முடிக்குஞ்சொல்,
மேல் 87-ஆங்கவியில் வருகிற ‘என்று’ என்பது

மூள் ஆர் அழல் உற்பவித்தாள் இவள், முன் பவத்தில்,
நாளாயணி என்று உரை சால் பெரு நாமம் மிக்காள்;
வாள் ஆர் தடங் கண் அவட்கு, ஆரணவாணர்க்கு என்றும்
கேள் ஆன மௌற்கல்லியன் என்பவன், கேள்வன் ஆனான்.-இனி, 15-கவிகள்-திரௌபதியின் முற்பிறப்புவரலாறு
கூறும்.

மூள்-மூண்டெரிகிற, ஆர்-நிறைந்த, அழல்-யாகாக்கினியில்,
உற்பவித்தாள் – தோன்றியவளான, இவள் – இத்திரௌபதி, முன் பவத்தில்-
முற்பிறப்பில், நாளாயணி என்று உரை சால் பெரு நாமம்மிக்காள் –
நாளாயணியென்றுபுகழ் நிறைந்தபெருமையையுடைய பெயரினாற் சிறந்தவள்; வாள்
ஆர் தட கண் அவட்கு – வாட்படைபோன்றபெரிய கண்களையுடைய அவளுக்கு,
ஆரணவாணர்க்கு என்றும் ஆன மௌற்கல்லியன் என்பவன் – அந்தணர்களுக்கு
எப்பொழுதும் தலைவனான மௌத்கல்ய னென்னும் முனிவன், கேள்வன் ஆனான்-
கணவனாயினான்; (எ – று.)

     உரைசால்பெருமை-கற்பினாலாகிய புகழ்ச்சி; “தகைசான்ற சொற்காத்துச்
சோர்விலாள் பெண்” என்றது காண்க.

     இதுமுதல் இருபத்தைந்து கவிகள்-பெரும்பாலும்மூன்றாஞ்சீர் மாங்கனிச்சீரும்,
மற்றையவை மாச்சீர்களுமாகிய கலிநிலைத்துறைகள்.

காதில் கலந்த கடைக் கண்ணிதன் கற்பும் அன்பும்
சோதித்தல் உன்னி, தணியாத துவக்கு நோயன்,
கோதித்த நெஞ்சன், பெரு மூப்பினன், கூர்ந்து நாளும்
வாதித்தல் அன்றி, மகிழா மனை வாழ்வு பூண்டான்.

 (அவன்),  காதில் கலந்த கடைக்கண்ணிதன் – காதையளாவிய
கண்ணின்கடையையுடைய அம்மனைவியினது, கற்புஉம்-பதிவிரதாதருமத்தையும்.
அன்புஉம்-(தன்னிடம்அவளுக்கு உள்ள) அன்பையும், சோதித்தல் உன்னி-(தான்)
பரிசோதித்தறியநினைத்து, தணியாத துவக்கு நோயன்-குறையாத (மிக்க)
குட்டநோயைக்கொண்டவனும், கோதித்த நெஞ்சன்-(எப்பொழுதும்)
கோபத்தையேகொண்டமனத்தையுடையவனும், பெருமூப்பினன் – முதிர்ந்த
முதுமையையுடையவனுமாய்,-நாள்உம் – தினந்தோறும், கூர்ந்து வாதித்தல் அன்றி-
மிகுதியாக (மனையாளை)வருத்தப்படுத்துதலேயல்லாமல், மகிழா-
(ஒருபொழுதாயினும்) மகிழ்ச்சிக்குஇடமில்லாத,மனை வாழ்வு-இல்லறவாழ்க்கையை,
பூண்டான்-மேற்கொண்டான்;

     அந்த மௌற்கலியன், அவளதுகற்பின் உறுதியையும், அன்பின்நிலையையும்
சோதிக்கக்கருதி, மிகுந்த குஷ்டநோயும், அதனாற் சிதைந்த வடிவமும், மிக்க
கிழத்தனமும், எப்பொழுதும், பெருங்கோபமும், உடம்பில் துர்க்கந்தமு
முடையவனாகக் தன்னைக்  காட்டியதோடு மனையாளை மிகவும்
வருத்துதலுஞ்செய்தனன் என்பதாம். துவக்குநோய்- உடல்நோய்: த்வக் – வடசொல்;
தோல்: உடம்புக்கு இலக்கணை. கோதித்த-க்ரோதம் என்ற வடசொல்லின் திரிபான
கோதம்என்பதனடியாப்பிறந்த பெயரெச்சம். “குழைப்புறங்கடந்த செங்கண்”
என்றார்போல, ‘காதிற்கலந்த கடைக்கண்ணி’ என்றார்; “கண் செவியுறப்போந்
தகன்றனவே” என்றார் சிந்தாமணியாகும்.

கச்சிற்கு அடங்கா முலையாள்-அக் கணவன் உண்ட
மிச்சில்புறத்து விரல் வீழவும், வீழ்தல் மிஞ்சி,
குச்சித்தல் இன்றி, நுகர்ந்தாள்-கொடுங் காம நோய்கொண்டு
இச்சித்த இன்பம் நுகராமல் இளைத்த மெய்யாள்.

கொடுங் காமம் நோய் கொண்டு இச்சித்தஇன்பம் நுகராமல் இளைத்த
மெய்யாள்-கொடிய காமநோயைப் பொருந்தி விரும்பிய சிற்றின்பத்தை
அனுபவியாமல்மெலிந்தஉடம்பையுடையவளான, கச்சிற்கு அடங்காமுலையாள்-
கச்சுக்குஅடங்காத(பருத்த) தனங்களையுடைய அந்த நாளாயணி, அ கணவன்
உண்ட மிச்சில் புறத்துவிரல் வீழஉம்-அந்தக்கணவன் உண்ட அந்நசேஷத்தில்
(அவன்) கைவிரல்அழுகிவிழுந்துகிடக்கவும், குச்சித்தல் இன்றி-
அருவருப்புக்கொள்ளுதலில்லாமல்,வீழ்தல் மிஞ்சி நுகர்ந்தாள்- விருப்பம்மிக்கு
(அந்தச்சேடித்த அன்னத்தை) உண்டாள்;( எ- று.)

     மௌற்கல்யன் அங்ஙன் பலவாறு கொடுமைசெய்யவும் நாளாயணி
அவன்பக்கல் அன்புசிறிதுங்குறையாமல் பலவகை உபசாரங்களையும் வழுவாது
நன்மனத்தோடு புரிந்து முறைப்படி அவன் உண்டுமிகுந்த எச்சிலைத்தான் உண்டு
வாழ்ந்திருக்கையில்ஒருநாள் அவன்உண்ட மிச்சிலில் அவனுடைய கைவிரலொன்று
அற்றுவிழுந்துகிடக்கக் கண்டும் சிறிதும் அருவருப்புக்கொள்ளாமல் அவ்வுணவை
அன்போடு உண்டனளென்பதாம்.     

அன்பன் தெரிவை வழிபாடு கண்டு, ஆர்வம் எய்தி,
துன்பம் பயந்த பிணியால் அழி தோற்றம் மாற்றி,
தன் பங்கை ஈசன் திறை நல்க முன் சாபம் வாங்கும்
வன்பன் தனக்கும் கிடையாத வடிவு கொண்டான்

அன்பன்-கணவனான  அம்முனிவன், தெரிவை வழிபாடு கண்டு-(தன்)
மனைவி (தன்னை) வழிபட்டுவந்த விதத்தைப் பார்த்து, ஆர்வம் எய்தி-(அவளிடத்து)
அன்புபொருந்தி, துன்பம் பயந்த பிணியால் அழி தோற்றம் மாற்றி-துன்பத்தைத்தந்த
பெருவியாதியினால் இயல்பழிந்த தன்வடிவத்தை மாற்றி, ஈசன் முன் தன் பங்கை
திறை நல்க சாபம் வாங்கும் வன்பன் தனக்குஉம் கிடையாத வடிவு கொண்டான்-
சிவபிரான் முன்பு தன் வாம பாகத்தை(த்தன்மனைவியான பார்வதிக்கு)
உரியபொருளாகக் கொடுக்கும்படி (தன் கரும்பு) வில்லை வளைத்துப் போர்செய்த
வலிமையையுடைய மன்மதனுக்கும் பெறுதற்கு அரிய (மிக்க அழகையுடைய)
வடிவத்தைக் கொண்டான்; ( எ- று.)

     அங்ஙனம் அவள் நிலைகுலையாது வழிபட்டுவந்ததை அவன் பார்த்து மிகுந்த
திருப்பதிகொண்டு தனதுநோய்வடிவத்தை யொழித்துத் தவமகிமையாற் காமனினுஞ்
சிறந்த கட்டழகுடைய வடிவத்தைக் கொண்டனனென்பதாம். மன்மதன் சிவபிரான்
நெற்றிக் கண்ணினால் எரிபட்டானாயினும், பின்பு அக்கடவுள் பார்வதியினிடம்
காதல்கொண்டு அவளை மணம்புணர்ந்து அவளை என்றும் பிரியாது
அர்த்தநாரீசுவரமூர்த்தியாயினமைபற்றி, ‘தன்பங்கை யீசன் திறை நல்க
முன்சாபம்வாங்கும் வன்பன்’ என்றார். சிவபிரான் உமைக்குக் கொடுத்த
இடப்பாகம்,மன்மதனுக்குத் தோற்றுத்தந்த திறைப்பகுதியாகக் கற்பிக்கப்பட்டது.

“மின்னே! உனக்கு மிகு கற்புடை மீனும் ஒவ்வாள்;
இன்னே, வரம் வேண்டுவ வேண்டுக, ஈண்டை!’ என்ன,
‘நின் நேயம் என்றும் பிரியா நலன் நேர்க!’ என்றாள்,
தன் நேர் இலாத மனைவாழ்வில் தவத்தில் மிக்காள்.

மின்னே – மின்னல்போன்றவளே! மிகு கற்பு உடைமீன்உம் –
மிக்கபதிவிரதாதருமத்தையுடைய நக்ஷத்திரரூபமுள்ள அருந்ததியும், உனக்கு
ஒவ்வாள்- நினக்கு(க் கற்பில்) நிகராகாள்; இன்னே – இப்பொழுதே, ஈண்டை
இவ்விடத்தில்,வேண்டுவரம் வேண்டுக-(நீ) விரும்பும் வரங்களை (என்னிடம்)
வேண்டிப்பெற்றுக்கொள்வாயாக,’ என்ன – என்று (மௌற்கலியன் நாளாயணியை
நோக்கிச்)சொல்ல,- தன் நேர் இலாத மனை வாழ்வில் தவத்தில் மிக்காள். தனக்கு
ஒப்பில்லாத இல்லறவாழ்க்கையிலிருந்து செய்யுந்தவத்திற் சிறந்தவளான அவள், நின்
நேயம் என்றுஉம் பிரியாநலன் நேர்க என்றாள் – உனதுஅன்பு எந்நாளும்
நீங்காமையாகிய நல்லவரத்தை (எனக்கு) உடன்பட்டுத் தருவாயாக ‘என்று
(கணவனை வரம்) வேண்டினாள் (எ – று.)

     அவன் மிக்க அன்போடு அவளைக் கொண்டாடி ‘நினக்கு வேண்டும் வரம்
வேண்டுவாயாக’ என்று சொல்ல, அவள் வேறொருவரத்தையும் வேண்டாமல் ‘உன்
அன்பு எப்பொழுதும் நீங்காதாகுக’ என்று வேண்டினள் என்பதாம்.

குன்றும் நதியும், மரனும் பைங் கொடியும், ஆகி,
துன்றும் துணையாய்ப் பல யோனிகள்தோறும் எய்தி,
நின்றும், சரித்தும், அரும் போகம் நெடிது துய்த்தார்,
என்றும் பிரியாது இருவோரும் இதயம் ஒத்தே.

அவன் அங்ஙனம் வரங்கொடுத்தபின்பு), -இருவோர் உம்-
(கணவனும்மனைவியு மாகிய) அவ்விருவரும், ‘இதயம் ஒத்து-மனங்கலந்து,
குன்றுஉம் நதிஉம்மரன்உம் பைங்கொடிஉம் ஆகி-மலையும் (அதனைச்சார்ந்து
பெருகுகிற) நதியும்மரமும் (அதன்மேற்படரும்) பசியபூங்கொடியுமாய்,
துன்றும்துணை ஆய் பலயோனிகள் தோறும் எய்தி – இங்ஙனமே இன்றியமையாது)
பொருந்திய துணையாகிப்பலவகையுருவங்களிற் பொருந்தி, நின்றுஉம் சரித்துஉம் –
(ஓரிடத்து) நின்றும்(பலவிடங்களிற்) சஞ்சரித்தும், என்றுஉம் பிரியாது –
எப்பொழுதும் (ஒருவரையொருவர்) பிரியாமல், நெடிது – நெடுங்காலம், அரு
போகம்-அரிய இன்பத்தை,துய்த்தார் – அனுபவித்தார்கள் (எ – று.)

     அவன் குன்றாக வடிவுகொள்ள இவள் நதியாகவடிவுகொண்டு அதனைச்
சார்ந்தும், அவன் மரவடிவுகொள்ள இவள் கொடிவடிவு கொண்டு அதனைத்
தழுவியும், இவ்வாறு பற்பல யோனிபேதங்களிற் புக்கு அவ்விருவரும் சுகானுபவஞ்
செய்தன ரென்க.    

இந்தப் பிறப்பில் நலம் எய்தி, இறந்த பின்னும்,
சிந்தித்தவண்ணம் இவள் இந்திரசேனை ஆகி,
அந்தப் பதியை அடைந்தாள்; மற்று அவனும் அஞ்சி,
வந்தித்த தொல்லை அரு மா தவம் மன்னி நின்றான்.

இந்த பிறப்பில் – (நாளாயணயாகிய) இந்தச்சன்மத்திலே, நலம்
எய்தி-(இப்படிப் பலவாறு) இன்பத்தை அனுபவித்து, இறந்த பின்னும்-, இவள்-,
சிந்தித்தவண்ணம்-நினைத்தபடியே, இந்திரசேனை ஆகி-(அடுத்தபிறப்பில்)
இந்திரசேனை யென்பவளாய், அந்த பதியை அடைந்தாள் -(முன்பிறப்பிற்
கணவனான) அந்த மௌத்கலியனையே அடுத்தாள்; (அப்பொழுது) அவனும்-,
அஞ்சி- (முத்திப்பேரின்பத்தில் விருப்பத்தால் இவளைச்சேர்ந்து சிற்றின்பம்
நுகர்தற்குப்) பயந்து, வந்தித்த தொல்லை அரு மா தவம் மன்னி நின்றான்-
(கடவுளை)வணங்கிச் செய்கிற தொன்றுதொட்டு வருகிற அரியபெரிய
தவவொழுக்கத்திற்பொருந்திநின்றான்; (எ- று.) மற்று – வினைமாற்று.

     உடம்புநீங்குங்காலத்து அடுத்த வினையும், அதுகாட்டுகங் கதி நிமித்தங்களும்,
அக்கதியினிடத்து அவாவும், உயிரினிடத்துமுறையேவந்து உதிக்க, அறிவை மோகம்
மறைக்க, அவ்வுயிரை அவ்வவா அக்கதியிற் கொண்டுசெலுத்து மாதலால், ‘சிந்தித்த
வண்ணம் அந்தப்பதியையடைந்தாள்’ என்றார். மௌத்கல்யன் இல்லறவாழ்க்கைக்கு
அஞ்சித் துறவறஞ்சேர்ந்தன னென்க. 

அன்னோன் அகல, அவன்மேல் அவள் ஆசை விஞ்சி,
‘என்னோ புரிவது, இனி?’ என்றலும், ஏந்தல் கூற்றால்,
தன் ஓர் வடிவின் ஒரு கூறு ஒரு தையல் ஆளும்
முன்னோனை நோக்கித் தவம் செய்தனள், மூரல் வாயாள்.

அன்னோன் அகல-(தன்கருத்துக்கு இணங்காமல்) அந்த
மௌத்கல்யன் விலகிச்செல்லுமளவில்,- அவள் – அந்த இந்திரசேனை, அவன்மேல்
ஆசைவிஞ்சி-அவனிடம் விருப்பம் மிக்கு, இனிபுரிவது என்னோ என்றலும்,-
(உன்னைப்பிரிந்து) இனி (நான்) செய்வது யாதோ?’ என்று வினாவிய வளவிலே,-
ஏந்தல் கூற்றால், அக்கணவன்சொன்ன வார்த்தையின்படி, மூரல் வாயாள்-
புன்சிரிப்புக்கொண்டவாயையுடைய அவள், தன் ஓர் வடிவின் ஒரு கூறு ஒரு தையல்
ஆளும் முன்னோனை நோக்கி-தனது ஒருவடிவத்திலே ஒருபாதியில் ஒருபெண்ணை
(அம்பிகையை)க்கொண்டுள்ள கடவுளான சிவபிரானைக் குறித்து, தவஞ்செய்தனன்-;
(எ- று.)

     தவத்திற்கு இடையூறாக இந்திரசேனை தன்னைமணந்து கொள்ளுமாறு
வேண்டவே, அன்னோன் ‘நீ என்தவத்திற்கு இடையூறுபுரிவதனால்
துருபதபுத்திரியாய்ப் பிறக்க, உன்னை ஐவர் மணப்பர்’ என்று சபித்தானாக, பிறகு
சிவனை நோக்கித்தவம்புரிந்தாளென்று வியாசபாரதமும், தவம்புரியுமாறு
மௌத்கல்யன் கூறியதாகப் பாலபாரதமும் கூறும். மிஞ்சி என்றும் பாடம்

ஐந்து ஆனனத்தோன் அருள் செய்ய, அழகில் மிக்காள்,
ஐந்து ஆன சொல்லால், ‘கணவன்-தருக, ஐய!’ என்றாள்;
ஐந்து ஆன சொல்லான் அளித்தான், மற்று அவனும்-முன் நாள்,
ஐந்து ஆன போகம் இவள் எய்தியவாறு அறிந்தே.

ஐந்து ஆனனத்தோன்-ஐந்துமுகங்களையுடையவனான சிவபிரான்,
அருள் செய்ய-கருணைசெய்ய (பிரசன்னனாய்ப் பிரதியக்ஷமாக), அழகில் மிக்காள் –
அழகிற் சிறந்தவளான இந்திரசேனை, ஐந்து ஆன சொல்லால் கணவன் தருக ஐய
என்றாள் – ‘சுவாமி! (எனக்குக்) கணவனைத் தருவாயாக’ என்று ஐந்துமுறை சொல்லி
வேண்டினாள்; அவன்உம்-பஞ்சாநந மூர்த்தியான அச்சிவபிரானும், இவள் முன்
நாள் ஐந்து ஆன போகம் எய்திய ஆறு அறிந்து- இவள் முற்பிறப்பில் (தன்
புருஷனது) ஐந்துவடிவங்களோடுகூடி இன்பம் அனுபவித்த தன்மையைத்
திருவுள்ளத்திற் கொண்டு, ஐந்து ஆன சொல்லான் அளித்தான் – ‘அங்ஙனமே
ஆகுக’ என்று ஐந்துமுறைகூறி அருள்செய்தான்; (எ-று.)-மற்று – அசை.

     இவள் தவத்துக்குஉகந்த அப்பிரான் கட்புலனாக, இவள் ‘எனக்குஏற்ற
கணவனைத் தருக’  என்று ஆதரத்தால் ஐந்துதரம் அடுக்கிச்சொல்லிவேண்ட,
சிவபிரானும் ‘அப்படியே ஆகுக’ என்று ஐந்துதரம்கூறி, அவள் ஐந்துகொழுநரைப்
பெறும்படி அனுக்கிரகித்தனன் என்பதாம். ‘வேண்டும் வரம் வேண்டும்’ என்று
மௌற்கலியன் சொன்னபோது ‘ஐந்து’ வடிவுகொண்டு கிரீடிப்பாய்’ என்று நாளாயணி
வரம் வேண்ட, மௌற்கலியன் அவ்வாறே கிரீடித்தா னென்பதை முதனூலா
லறியலாம். சதாசிவமூர்த்தியாகிய சிவபிரானுக்குச் சத்தியோசாதம், வாமதேவம்,
அகோரம், தற்புருடம், ஈசாநம் என் ஐந்துமுகங்க னென்று அறிக.

முன் நின்ற தேவன் மொழியின்படி, கங்கை மூழ்கி,
தன்னந்தனி நின்று அழுகின்ற அத் தையல் கண்ணீர்
பொன் அம் கமல வனம் ஆன புதுமை நோக்கி,
‘என்?’ என்று, இவளை இமையோர் பதி எய்தினானே.

முன் நின்ற தேவன் மொழியின்படி – தனக்கு முன்னே
எழுந்தருளிநின்றுகாட்சி தந்த சிவபிரான் கட்டளை கூறியபடி, கங்கை மூழ்கி-
கங்காநதியில் நீராடி,தன்னந் தனி நின்று அழுகின்ற – ஒரு துணையுமில்லாமல்
தனியேநின்று அழுகின்ற,அதையல் – அந்தப்பெண்ணினுடைய, கண் நீர்,
கண்களினின்று சொரியும்நீர்த்துளிகள், பொன் அம் கமலம் வனம்ஆன –
பொன்மயமான அழகியதாமரைமலர்களின் தொகுதியாய்ப் பரிணமித்த,  புதுமை-
அதிசயத்தை, நோக்கி-பார்த்து, இமையோர் பதி-தேவராசனான இந்திரன், என்
என்று இவளை எய்தினான் -இது என்னவென்று வினவிக்கொண்டே இவளைச்
சமீபித்தான்; (எ – று.)

     சிவபிரான் ஐந்துகொழுநரைப் பெறும்படி அனுக்கிரகித்ததற்கு இவள் மகிழாமல்
தக்கஒருநாயகனைப் பெறும்படி பிரார்த்திக்க, பரமசிவன் ‘நீ ஐந்துதரம் வேண்டியபடி
நான் உனக்கு ஐந்துதரம் அருளியது தவறாது; ஆனால் அவ்வரத்தை மறுபிறப்பில்
அனுபவிக்கும்படி அருள்செய்கிறோம்’ என்று அனுக்கிரகித்து அவளைக்
கங்காநதியில் மூழ்கிவரும்படியும் அங்ஙனம்மூழ்கி வரும்பொழுது
எதிரில்தோன்றும் புருஷனைத் தன்னிடம் அழைத்துவரும்படியும் கூறியனுப்ப,

அவ்வாறே சென்ற அவள் அப்பொழுதே ஒருபதியைப் பெறாமல் மறுபிறப்பில்
ஐந்துபதிகளைப் பெறவேண்டுமேயென்று கொண்ட சோகத்தோடு கங்கையில்
முழுகியெழுகையில், அவளது விழிகளினின்றுபெருகிய கண்ணீர் கங்கையில்விழுந்து
பொற்றாமரையானசெயலை அங்குவந்ததேவேந்திரன் பார்த்து ‘இது என்ன?’ என்று
வினாவிக்கொண்டு அவளை அடுத்தனனென்பதாம்.

     முன்னொருகாலத்தில் நைமிசாரணியத்திலே தேவர்கள் யாகஞ்செய்கையில்,
யமன்தீட்சிதனாய் நெடுநாள் வைதிகச்சடங்கிலிருந்ததனால் தனது அதிகாரத்
தொழிலைச்செலுத்தாதொழியவே, பூமியில் சனங்கள் மரணமில்லாமல்
மிகுதிப்பட்டுக் கொழுத்திட,அதுகண்டு அஞ்சிய இந்திரன் சந்திரன் வருணன்
குபேரன் முதலிய தேவர்கள்பிரமனைச் சரணமடைந்து செய்தி கூறலும், அக்கடவுள்
‘உங்கள் வீரியத்தால்வளர்ந்த யமனுடைய வேறொரு சொரூபம் அச்சனங்களைக்
கொல்லும்’ என்றுகூறியனுப்பியவுடனே அவர்கள் மேலுலகிலிருந்து பூலோகத்து
நைமிசாரணியத்தைக்குறித்து வருகையில் கங்கையிலே ஒரு பொற்றாமரைமலரைக்
கண்டு அதிசயிக்க, அவர்களுள் இந்திரன் அம்மலரினருகில்நின்ற மங்கையைநோக்கி
‘இதுஎன்?, என்று வினாவினா னென முதனூலால் விவரம்உணர்க.

அவனை, ‘ தொடர்பால் வருக!’ என்ன, அவனும், ஆங்கண்
சிவனைச் சிறிதும் மதியாது, எதிர் சென்றகாலை,
‘இவனுக்கு என் மேன்மை?’ எனச் சீறலும், எஞ்சினான்போல்,
புவனத்து எவரும் நகையாட, புலம்பி வீழ்ந்தான்.

அவனை – அங்ஙனம் தன்முன்வந்த இந்திரனை, தொடர்பால் வருக
என்ன – என்பின்னே வருவாயாக என்று (இந்திரசேனை) அழைக்க, அவன்உம் –
அவ்விந்திரனும், ஆங்கண்-அவ்வாறே அவளைத்தொடர்ந்து சென்றஇடத்தில்,
சிவனைசிறிதுஉம் மதியாது – (எதிர்பட்ட) சிவபிரானைச் சிறிதும்இலட்சியஞ்
செய்யாமல்,எதிர் சென்ற காலை – அவனெதிரிலே சென்ற பொழுது,
(அப்பெருமான்), இவனுக்குமேன்மை என் என சீறலும்- ‘இவனுக்கு இவ்வளவு
செருக்கு என்ன?’ என்று கருதிக்கோபங்கொண்ட வளவிலே, (அவ்விந்திரன்),
எஞ்சினான் போல் – இறந்தவன்போல,புவனத்துஎவர்உம் நகையாட
புலம்பிவீழ்ந்தான் – உலகத்திலுள்ளோரெல்லோரும்(தனதுநிலையைக் கண்டு)
பரிகசிக்கும்படி வருந்திக் கீழ்விழுந்தான்; ( எ- று.)

     அங்ஙனம்வினாவியவனை அவள் தன்னுடன்வந்து செய்தியறிந்துகொள்ளும்படி
சொல்லி அழைக்க, அவ்வாறே அந்த இந்திரன் அவளைத் தொடர்ந்து
செல்லுகையில், அங்கு மனைவியுடன் சூதாடிக்கொண்டிருந்த சிவபிரானை மதியாது
அலட்சியஞ்செய்து செருக்கிப்பேச, உருத்திரமூர்த்தி கோபித்துச் சிரித்துக்கொண்டே
அவனைநோக்கிய மாத்திரத்தில் அவன் தபிக்கப்பட்டவனாய் மரம்போல நின்றிட,
பின்பு சிவபிரான் சூதாட்டம்முடிந்தவுடன், அழுது கொண்டுநின்ற இந்திரசேனையை
நோக்கி ‘இவனை அருகிற்கொண்டு வா; இனி, இவன் செருக்குறான்’ என்றுகூற
அங்ஙனமே அவள் போய் அவ்விந்திரனைத் தொட்டவளவில், அவன்
உடல்நடுங்கித்தரையில் விழுந்திட்டன னென்பதாம். 

வெவ் ஆயுதங்கள் உதவாமல் விபுதநாதன்
இவ்வாறு வீழ, மழுவாளி, இமைப்பில் மீண்டும்,
அவ் வாசவற்குப் பிலம் ஒன்றில் அடைத்த வச்ரக்
கை வாசவர்கள் ஒரு நால்வரைக் காட்டினானே.

வெம் ஆயுதங்கள் உதவாமல் – கொடிய (வச்சிரம் முதலிய தனது)
ஆயுதங்கள் ஒன்றும் பயன்படாமலே, விபுதநாதன்-தேவராசனான இந்திரன்,
இமைப்பின் – ஒருமாத்திரைப் பொழுதிலே, இ ஆறு வீழ-இப்படிக் கீழ்விழுந்திட,-
மழுஆளி-மழுவையுடையவனாகிய சிவபிரான்,-மீண்டுஉம்-பின்பு, அ வாசவற்கு-
அவ்விந்திரனுக்கு, பிலம் ஒன்றில்  அடைந்த வச்ரம் கை  வாசவர்கள் ஒரு
நால்வரை- ஒருபிலத்தினுள் (முன்புதான்) அடைத்து வைத்திருந்த வச்சிரமேந்திய
கையையுடைய இந்திரர் நால்வரை, காட்டினான்-காண்பித்தான்; (எ – று.)

     சிவபிரான் இந்திரனை நோக்கி ‘இனி இப்படி ஒருபொழுதும் உபேக்ஷை
செய்யாதே’ என்று அறிவுகூறி ஒருமலையிடையிலுள்ள ஒருகுகையைக் காட்டி
‘உன்னைப்போன்றவர்கள் அடங்கிய இதற்குள் நீயும் செல்’ என்றுசொல்ல, அவன்
அப்பிலவாயிலைத்திறந்து அதனுள் அடைபட்டிருப்பவர்களை நோக்கி ‘நான்
இங்ஙனம் ஆகாதிருக்க வேண்டும்’ என்று கருதுமளவிலே, உருத்திர ‘மூர்த்தி
சினங்கொண்டு உறுக்கி விழித்துப்பார்த்து ‘நீ இளமையினால் என்னை
அவமதித்ததுபற்றி, இதற்குள் நுழை’ என்று அதட்டி வலியப்புகுத்த,
கூப்பியகையனாய்அவன் உட்புகுவானாயினன் என முதனூலில் விவரம் காண்க.
பிலம்-பாதாளஅறை.  

வன் பாதலத்தில் வரு நால்வரும், வானின் வந்த
புன் பாகசாதனனும், தன் அடி போற்றி நிற்ப,
‘அன்பால் மகிழ்நர் இவட்கு ஐவரும் ஆதிர்!’ என்று,
மென் பாவை பங்கன் விதிக்க, புவிமீது வந்தார்.

வல் பாதலத்தில் வரும்-கொடியபிலத்தில் முன்னமே பொருந்திய,
நால்வர்உம்-நான்குஇந்திரர்களும், வானில் வந்த புல் பாகசாதனன்உம் –
(அப்பொழுது) சுவர்க்கலோகத்தினின்று வந்த எளிமையையுடைய இந்திரனும், தன்
அடி போற்றி நிற்ப –  தனது திருவடிகளை வணங்கிநிற்க, மெல் பாவை பங்கன்-
மென்மையையுடைய அழகிய உமாதேவியை வாமபாகத்திலுடைய
சிவபெருமான், (அவர்களை நோக்கி), அன்பால் ஐவர்உம் இவட்கு மகிழ்நர்
ஆதிர்என்று விதிக்க – ‘அன்போடு நீங்கள் ஐந்துபேரும் இவளுக்குக் கணவராவீர்’
என்று கட்டளையிட, (அவ்வாறே அந்தஐந்து இந்திரர்களும்), புவிமீது வந்தார்-
பூமியில் வந்து பிறந்தார்கள்;

     அங்ஙனமே அந்த இந்திரர்கள் ஐவரும் பிறப்பவராயின ரென்பதாம்.
அங்ஙனம்பிலத்தினுட் புகுகிற இந்திரன் சிவபிரானைத் துதிக்க, அப்பெருமான்
அவனையும்மற்றைநால்வரையும் நோக்கி, “என்னைமதியாத குற்றத்தால்,
நீங்களைவரும்பூலோகத்தில் மனுஷ்யராசராய்ப் பிறந்து, இராசகன்னிகையாக
மறுபிறப்பெடுக்கும்இவளொருத்தியை மணம்புரிந்துகொண்டு,
துஷ்டநிக்கிரகசிஷ்டபரிபாலனஞ் செய்துகுற்றந்தீர்ந்து மீண்டும்
விண்ணுலகமடைவீர்” என்று கட்டளையிட,அவ்விந்திரர்ஐவரும் ‘நாங்கள்
மானுடப் பிறப்பெடுக்கையில் எங்கட்கு யமனும்வாயுவும் இந்திரனும்
அசுவிநீதேவர்களும் தந்தையராகுக’ என்றுவேண்ட, முக்கட்கடவுள் அங்ஙனமே
அருள்செய்து அவர்கட்கு இம்மங்கையைமனையாளாகுமாறு நியமித்தான் என்ற
விவரத்தை முதனூலிற் காணலாம். முந்தியஇந்திரர்நால்வர் விஸவபுக், பூததாமா,
ஸிபி, ஸாந்தி எனபவர்; பிந்திய இந்திரன் பெயர்,தேஜஸ்வீ என்பது. பாகஸாஸநன்
என்ற பெயர்-பாகனென்ற அசுரனைஅழித்தவனென்று பொருள்படும்;
பாகன் விருத்திராசுரனுடன் பிறந்தவன்.

தருமன், பவனன், தினநாதன் தனயர்தம்பால்
வரும் இந்த நால்வர், அவர் நால்வரும்; மாலை மார்பா!
தெருமந்த இந்தச் சிலை வீரன், இத் தேவர்க்கு எல்லாம்
பெரு மன்; பிறப்பிற்கு அவனே முன் பிதாவும் ஆனான்.

மாலை மார்பா-மாலையையணிந்த மார்பையுடைய துருபதராசனே!
தருமன் – யமதருமராசனும், பவனன்-வாயுதேவனும், தினம் நாதன் தனயர் தம்பால்-
பகற்பொழுதுக்குத் தலைவனாகிய சூரியனுடைய புத்திரர்களான அசுவினீதேவர்களும்
ஆகிய இந்நால்வர்களின் சம்பந்தத்தால், வரும்-பிறந்த, இந்த நால்வர் -யுதிட்டிரன்
வீமசேனன் நகுல சகதேவர்கள் என்கிற நான்குபேரும், அவர் நால்வர்உம்-முன்னமே
பிலத்தில் அடைபட்டிருந்த அந்த நான்கு இந்திரர்களுமாவர்; தெருமந்த இந்த சிலை
வீரன்-(பகைவர்மனம்) சுழலுதற்குக் காரணமான இந்த வில்லைக் கையிலேந்திய
வீரனான அருச்சுனன், இ தேவர்க்கு எல்லாம் பெருமன்-கீழ்க்கூறிய
தேவர்களுக்கெல்லாம் அரசனான இந்திரன்: பிறப்பிற்கு – இவன் பிறந்ததற்கு
அவனே-இந்திரனே, முன்-முன்பு, பிதாஉம் ஆனான்- தந்தையுமாயினான்;
(எ- று.)

     தேவவைத்தியர்களாகிய அசுவினீதேவர், பெண்குதிரைவடிவங் கொண்டு
வனத்திலொளித்திருந்த சமிஜ்ஞைஎன்னும் மனைவியினிடத்துக் குதிரைவடிவமாய்ச்
சேர்ந்த சூரியனுக்குப் பிறந்த இரட்டைப்பிள்ளைகளாதலால், ‘தினநாதன்தனயர்’
எனப்பட்டனர். ‘தம்மால்’ என்றும் பாடம் உண்டு.   

இம் மாது, தொல்லை அரு மா தவத்து எல்லை கண்ட
அம் மாது; இவள் காதலர் ஐவரும் ஆக!’ என்று,
தெவ் மாதர் முன் பூண் கவர் மன்னன் தெளியுமாறு
வெம் மா தவத்தோன் பெரு ஞான விழியும் ஈந்தான்.

இ மாது-இந்தப் பெண் (திரௌபதி),-தொல்லை-முற்பிறப்பில்,
அரு மாதவத்து எல்லை கண்ட-அரிய பெரிய தவத்தின் எல்லையைக் கண்ட
(தவத்தைமுற்றுஞ்செய்த), அ மாது- அந்த இந்திரசேனையென்னும் பெண்ணாவள்:
(ஆதலால்),ஐவர்உம்-இந்தப்பாண்டவர் ஐந்துபேரும், இவள் காதலர் ஆக-
இவளுக்குக்கணவராகக்கடவர், என்று-என்று சொல்லி, தெவ் மாதர் முன் பூண்
கவர் மன்னன்தெளியும் ஆறு-பகைவர்களுடைய மனைவியர்களின், மங்கலநாணைக்
களைகின்றபாஞ்சாலராசன் நன்குதெளியும்படி, வெம்மாதவத்தோன்-
கொடிய(செய்தற்கரிய)பெருந்தவத்தைச்செய்தவனான அந்த வியாசமுனிவன்,
பெருஞான விழிஉம் ஈந்தான் – (அவ்வரசனுக்குச்) சிறந்தஞானக்கண்ணையுங்
கொடுத்தருளினான்;

     பாண்டவரைவரும் திரௌபதியும் என்ற இவர்களது முற்பிறவி வரலாற்றை
வியாசன் துருபதனுக்கு எடுத்துக்கூறித் தெளிவித்ததுமல்லாமல், இவ்வுண்மையை
அத்துருபதன் தானே தெளிந்துகொள்ளும்படி அவனுக்குத்திவ்வியமான
ஞானக்கண்ணையும் தனது தவமகிமையால் அருளின னென்பதாம். இவ்வரலாறு
முழுதையும் வியாசன் துருபதனைத் தனியே அழைத்துச் சென்று
அவனுக்குமாத்திரமே கூறின னென முதனூல் தெரிக்கும்.

     மாங்கலியசூத்திரம் ‘முற்பூண்’ எனப்பட்டது. பகைவர்களைத் தவறாது
கொல்பவனென்ற பொருளில் ‘தெம்மாதர்முற்பூண் கவர் மன்னன்’ என்றது –
பிறிதினவிற்சியணி. ‘மெய்ம்மாதவத்தோன்’ என்றும் பாடம்

ஓதாது உணர்ந்து, மறை நாலும் உருவு செய்த,
வேதாவும் ஒவ்வா, வியாதன் மொழி வெள்ள நீரால்,
கோதான நெஞ்சைக் குளிப்பாட்டினன்; கோடி கோடி
தூதான வண்டு துதை மாலை கொள் சோமகேசன்.-வியாசர்வார்த்தையால் துருபதன் மனந்தெளிதல்.

ஓதாது உணர்ந்து-(எவரிடத்தும்) கற்காமலே(எல்லாநூல்களையும்)
தானாகஅறிந்து, மறைநால்உம்-நான்குவேதங்களையும், உருவுசெய்த-(வகுத்து)
ஒழுங்குபடுத்திய, வேதாஉம் ஒவ்வாவியாதன்-பிரமனும் உவமையாகமாட்டாத
வியாசமுனிவனுடைய, மொழி-வார்த்தையாகிய, வெள்ளம் நீரால் –
நீர்ப்பெருக்கினால்,- தோது ஆன கோடிகோடி வண்டு துதை மாலைகொள்
சோமகேசன் – வரிசையாகவருகின்ற பலகோடிக்கணக்கான வண்டுகள் நெருங்கிய
பூமாலையைத் தரித்த சோமககுலத்தார்க்குத் தலைவனாகிய துருபதன், கோது ஆன
நெஞ்சை குளிப்புஆட்டினன் – களங்கங்கொண்ட (தன்) மனத்தை
நன்றாகக்கழுவினான்; ( எ- று.)

     மாசுபடிந்த உடம்பை நீரினாற்குளிப்பாட்டித் தூயதாக்குதல் போல,
கலக்கங்கொண்ட தன்மனத்தை வியாசர்வார்த்தையாற் சீர்ப்படுத்தி் அக்களங்கத்தை
யொழித்தன னென்பதாம்; உருவகவணி, வியாதன் வகுத்த மறைவகுப்புக்களின் பெயர்
– இருக்கு, யசுர், சாமம், அதர்வணம்என்றும், இவன்வகுத்தற்கு முன் தைத்திரியம்,
பௌடியம், தலவகாரம், சாமம்என வேதம் நான்காகவழங்கிய தென்றும் கூறுப.
உலகோருணரும்படி வேதத்தைப்பகுத்துக் கொடுத்ததனால், வியாதனுக்கு வேதாவும்
ஒவ்வானென்க, ‘தூதானவண்டு’ எனப் பாடமோதி-இவனிடத்துக் காதல்கொண்ட
மகளிர் தூதாக அனுப்பிய வண்டுகளெனப் பொருள் உரைத்தலும் ஒன்று.

வியப்போடு தொல்லை முனி சொல் தலைமீது கொண்டு,
பயப்போன், மகள்மேல் புரிகின்ற பரிவினுக்கும்,
வயப் போர் நிருபர் பெருமைக்கும் வலிக்கும், ஈடா,
நயப்போடு மன்றல் அயர்வித்தனன், நன்கு ஓர் நாளில்.-துருபதன் தன்மகளை ஐவர்க்கும்மணம்புரிவிக்கத்
தொடங்கல்.

பயப்போன் – (திரௌபதியைப்) பெற்றவனான யாகசேனன்,
தொல்லைமுனிசொல்-பழமையான வியாசமுனிவனுடைய வார்த்தையை, வியப்போடு
தலைமீதுகொண்டு-ஆச்சரியத்தோடு (தனது) முடியின் மேற்கொண்டு [நன்குமதித்து],
மகள்மேல்புரிகின்ற பரிவினுக்குஉம் – (தனது) பெண்ணாகிய அத்திரௌபதியினிடம்
(தான்)வைத்திருக்கிற அன்புக்கும், வயம் போர் நிருபர் பெருமைக்குஉம்-
வெற்றியையுடையபோர்செய்யவல்ல அரசர்களாகிய அப்பாண்டவர்களுடைய
பெருமைக்கும்,வலிக்குஉம் – (தனது) சக்திக்கும், ஈடு ஆ-தகுதியாக, நன்கு ஒர்
நாளில் – நல்ல ஒருசுபதினத்தில், நயப்போடு மன்றல் அயர்வித்தனன் –
விருப்பத்தோடுவிவாகஞ்செய்விப்பவனானான்; (எ-று.)

பாடும் சுருதி மறைவாணரும், பாரில் உள்ள
சூடும் கனக முடி வேந்தரும், தொக்கு நிற்ப,
நீடும் கதிர் மா மணித் தூண்கள் நிரைத்த பத்தி
ஆடும் கொடி மண்டபம் எய்தினர், அண்டர் போல்வார்.-பாண்டவரைவரும் கலியாணமண்டபஞ் சேர்தல்.

பாடும்-ஸ்வரத்தோடு சொல்லுகிற, சுருதி-வேதங்களையுடைய, மறை
வாணர்உம் – வைதிகபிராமணர்களும், பாரில் உள்ள – பூமியிலுள்ள, சூடும் கனகம்
முடி வேந்தர்உம் – தரித்த பொன்மயமான கிரீடத்தையுடைய அரசர்களும், தொக்கு
நிற்ப – திரண்டுநிற்க,-அண்டர் போல்வார்-தேவர்கள்போன்ற பஞ்சபாண்டவர்கள்,-
நீடும் கதிர் மா மணி, தூண்கள் நிரைத்த பத்தி – நெடுந்தூரஞ்சென்றுவிளங்குகிற
ஒளியையுடைசிறந்த இரத்தினங்கள் பதித்ததூண்களைவரிசையாகவைத்த
ஒழுங்கையுடைய, ஆடும் கொடி மண்டபம் – அசைகின்றகொடிகள் கட்டிய
மண்டபத்தை, எய்தினர் – அடைந்தார்கள்; (எ-று.)- ‘கனமாமணி’ என்றும்பாடம்.

குறிக்கும் பணிலம் முதல் ஆயிரம் கோடியாகப்
பிறிக்கும் கருவி இடம்தோறும் பிளிறி ஆர்ப்ப,
செறிக்கும் கழற் கால் அறன் மைந்தனைச் செம்பொன் வேதி
எறிக்கும் கிரண மணிப் பீடம்அது ஏற்றினாரே.-தருமனுக்கும் திரௌபதிக்கும் நடந்த விவாகத்தை இதுமுதல்
ஐந்து கவிகளிற் கூறுகிறார்.

குறிக்கும் பணிலம் முதல் – ஊதப்படுகிற சங்கவாத்தியம்முதலாக,
ஆயிரம் கோடி ஆக பிறிக்கும் கருவி – மிகப்பலவாகப் பகுக்கப்படுகிற
வாத்தியங்கள், இடம் தோறுஉம் பிளிறி ஆர்ப்ப – பலவிடங்களிலும் மிகுதியாக
முழுங்க,-செறிக்கும் கழல் கால் அறன் மைந்தனை – உறுதியாக அணிந்த
வீரக்கழலையுடைய பாதத்தையுடைய ‘தருமபுத்திரனை, செம்பொன் வேதி- சிவந்த
பொன்னினாற் செய்யப்பட்ட விவாகவேதிகையிலுள்ள, எறிக்கும் கிரணம் மணி
பீடம்அது -வெளிவீசுகிற கிரணங்களையுடைய இரத்தினங்கள் பதித்த ஆசனத்தில்,
ஏற்றினார்-இருக்கவைத்தார்கள்;

     இதற்குஎழுவாய், முன்நின்று மணத்தைநடத்தும் புரோகிதன் முதலியோர்:
அடுத்தகவியில் “வலத்தில் வைத்தார்” என்பதற்கும் 94-ஆம் கவியில்
“தீவலஞ்செய்வித்தார்” என்பதற்கும், இங்ஙனமே காண்க. கருவி – தோற்கருவி,
துளைக்கருவி, கஞ்சக்கருவி, நரப்புக்கருவி என நால்வகைப்படும்

இடத் தோள் இவட்கும், வலத் தோள் இவ் இறைவனுக்கும்,
திடத்தோடு உரைத்த குறியின் பயன் சேர்ந்து தோய,
விடத்தோடு அமுதம் கலந்தென்ன மிளிரும் வேற்கண்
வடத்தோடு விம்மும் முலையாளை வலத்தில் வைத்தார்.

இவட்கு இடம் தோள்உம் – இந்தத்திரௌபதியின் இடத்தோளும்,
இ இறைவனுக்கு வலம் தோள்உம்-இந்தத் தரும புத்திரனது வலத்தோளும்,
திடத்தோடு உரைத்த குறியின் பயன் சேர்ந்து – உறுதியாகச்சொல்லப்பட்ட
உத்தமஇலக்கணங்களுக்கு உரிய பயனை யடைந்து, தோய -(ஒன்றோடொன்று)
பொருந்தும்படி,-விடத்தோடு அமுதம் கலந்து என்ன மிளிரும்வேல்கண் வடத்தோடு
விம்மும் முலையாளை – விஷத்துடனே அமிருதங் கலந்தாற்போலவிளங்குகிற
வேல்போலுங் கண்களையும் ஆரத்தோடுபூரிக்கிற தனங்களையுமுடையவளான
திரௌபதியை, வலத்தில் வைத்தார்-(தருமபுத்திரனது) வலப்பக்கத்தில்
இருக்கவைத்தார்கள்; (எ- று.)

     மணமகனது வலப்பக்கத்தில் மணமகள் இருக்கும்போதுமணமகனது
வலத்தோளும் மணமகளது இடத்தோளும் ஒன்றோடொன்று பொருந்துகிற
இயல்பைவிளக்குவார், ‘இடத்தோளிவட்கும் வலத்தோளிவ்விறைவனுக்குந்தோய
முலையாளைவலத்தில்வைத்தார்’ என்றார். ஆடவருக்கு வலப்பக்கத்து
உறுப்புக்களிலும் மகளிர்க்குஇடப்பக்கத்து உறுப்புக்களிலும் உத்தமவிலக்கணம்
சிறத்தலாகிய இயல்பின்படிஇவர்கள்தோள்களிற் காணப்பட்ட நல்லிலக்கணங்கள்
இப்பொழுது பலிக்க என்றது, ‘குறியின் பயன்சேர்ந்து’ என்றதன் கருத்து. திடத்தோடு
உரைத்த குறி-சாமுத்திரகசாஸ்திரலக்ஷணம் அறிந்தவர்கள் நன்குஆராய்ந்து இவை
இன்னபயன்தருமென்று எடுத்துக்கூறியஉத்தமலக்ஷணங்கள். கண்களிற் சுற்றிலு
மிருக்கிறவெண்ணிறத்தையும், இடையிலுள்ள விழியின் கருநிறத்தையுங் கருதி,
‘விடத்தோடமுதங்கலந்தென்ன மிளிருங் கண்’ என்றார். 

கேள்விக்கு ஒருவன் எனும் தௌமியன் கீத வேத
வேள்விக்கு வேண்டுவன யாவும் விதியின் ஈட்டி,
மூள்வித்த செந் தீக் கரி ஆக, முரசு உயர்த்த
வாள் வித்தகற்கு வரமான சடங்கு செய்தான்.

கேள்விக்கு – நூ£ற்கேள்வியில், ஒருவன் எனும் –
ஒப்பில்லாதவனென்று சொல்லப்படுகிற, தௌமியன் – தௌமியமுனிவன்,-கீதம்
வேதம் வேள்விக்கு வேண்டுவன யாஉம்-சுவரங்களோடுகூறப்படுகிற வேதங்களின்
விதிப்படி செய்யப்படுகிற விவாகத்துக்கு வேண்டுவனவான பொருள்களை யெல்லாம்,
விதியின் ஈட்டி – சாஸ்திரவிதிப்படி தொகுத்துவைத்துக்கொண்டு, மூள்வித்த செம் தீ
கரி ஆக – (மந்திரபூர்வமாகச்) சுவலிக்கச்செய்த சிவந்த அக்கினி சாட்சியாக
(ஓமாக்கினியின் முன்னிலையிலே), முரசுஉயர்த்த தாள் வித்தகற்கு-முரசவாத்தியத்தின்
வடிவத்தையெழுதினகொடியை உயரநாட்டிய முயற்சியையும்
ஞானத்தையுமுடையவனான தருமபுத்திரனுக்கு, வரம் ஆன சடங்கு செய்தான் –
மேன்மையான விவாகத்துக்கு உரியதான மங்கலச்சடங்கைச் செய்வித்தான்; (எ- று.)

     வேள்விக்கு வேண்டுவன – சமித், தர்ப்பம், பொரி, தீர்த்தம், நெய், அக்ஷதை,
அம்மி, பாலிகை முதலியன. வாள்வித்தகற்கு எனவும்பாடம்

பல் மங்கலமும் உடன் வைகிய பண்பினாளை
நல் மங்கலப் பூண் துகிலோடு நயந்து சாத்தி,
தன்மம் கலந்த மனத்தோனை அத் தையலோடும்
தொல் மங்கலச் செஞ் சுடர்த் தீ வலம் சூழுவித்தார்.

 பல் மங்கலம்உம்-பலமங்களங்களும்,உடன் வைகிய-ஒரு சேரத்
தங்கிய,பண்பினாளை – தன்மையையுடையளான திரௌபதிக்கு, துகிலோடு –
புதியபட்டாடையுடனே, நல் மங்கலம் பூண் – திரு மங்கலியத்தை, நயந்துசாத்தி –
விரும்பியணிவித்து, தன்மம் கலந்த மனத்தோனை -தருமம்
பொருந்தியமனத்தையுடையனான தருமபுத்திரனை, அ தையலோடுஉம் –
அந்தப்பெண்ணினுடனே, தென்மங்கலம்செம்சுடர் தீவலம்செய்வித்தார்-
அழகியமங்களகரமான சிவந்த சுவாலையையுடைய
ஓமாக்கினியைப்பிரதட்சிணஞ்செய்வித்தார்கள்;

     பாணிக்கிரகணத்தின்பின் மணமகன் தன்கையால்மணமகளது
கையைப்பற்றிக்கொண்டு அக்கினியை வலம்வருதல், ஒருசடங்கு. துகில்-
கூறையென்றுசிறப்பித்துச்சொல்லப்படும். சாத்தி-சாத்துவித்து, ‘தென்மங்கலஞ்
செஞ்சுடர்தீவலஞ்சூழுவித்தார்’ என்றும், ‘தொன்மங்கலச்
செஞ்சுடர்த்தீவலஞ்சூழுவித்தார்’ என்றும்பாடம்.

கங்குல், பவள வனம்மீது கடல் தரங்கம்
பொங்கி, தரளத் திரள் சிந்திப் பொழியுமாபோல்,
அங்கிப் புறத்து, திருக் காப்பு அணி அம் கை ஏந்தி,
செங் கண் கரிய குழலாள் பொரி சிந்தினாளே.

கங்குல் – இராப்பொழுதில், கடல் தரங்கம் – கடலின் அலை,
பொங்கி- பொங்கியெழுந்து, பவளம் வனம்மீது-பவளக்கொடிகளின்தொகுதியின்மேல்,
தரளம்திரள் – முத்துக்களின் கூட்டத்தை, சிந்தி பொழியும் ஆபோல்-
வீசிச்சொரியும்விதம் போல,-செம்கண்கரிய குழலாள் – சிவந்தகண்களையும்
கரியகூந்தலையுமுடையளான திரௌபதி, திரு காப்பு அணி அம்கைஏந்தி –
மங்கலகரமான ரக்ஷாபந்தனத்தை யணிந்த அழகிய (தன்) கைகளில் எடுத்து,
அங்கிப்புறத்து பொரிசிந்தினாள் – அக்கினியில் நெற்பொரியைச்சொரிந்தாள்;
(எ- று.)

     லாஜஹோமம் (பொரிகொண்டு ஓமஞ்செய்தல்) என்றவிவாகச்சடங்கு, இதிற்
கூறப்பட்டது. கருநிறமுடைய திரௌபதிசெந்நிறமுடைய தீயில்
வெண்ணிறமுடையபொரியைக்கையாற்சொரிதற்குக் கருங்கடல் பவளக்காட்டில்
முத்துத்திரளை அலையாற் சொரிதலை உவமைகூறினார். திருக்காப்பு – கங்கணம்.
காப்பு – காவல்; பாதுகாவலுக்காக அணியப்படுவதான விவாககங்கணத்துக்கு இங்கு
ஆகுபெயர். ‘கங்கிற் பவளவனம்’ என்றும் பாடம். 

இவ்வாறு மன்றல் அயர்வித்தபின், ஈன்ற காதல்
வெவ் ஆர் அழலில் முறை மூழ்கினள் மீண்டு தோன்ற,
மை வார் அளக வடமீன் நிகர் கற்பினாளை
அவ்வாறு மற்றை ஒரு நால்வரும் அன்று வேட்டார்.-இவ்வாறே பின்பு திரௌபதிக்கும் வீமன் முதலிய நால்வர்க்கும்
தனித்தனிநிகழ்ந்த விவாகச் சடங்குகளை இதில் கூறுகிறார்.

இ ஆறு – இவ்வாகையாய், மன்றல் அயர்வித்த பின்- (தருமனுக்கும்
திரௌபதிக்கும்) விவாகஞ்செய்வித்தபின்பு. – (திரௌபதி), ஈன்ற காதல் வெவ் ஆர்
அழலில் – (தன்னைப்)பெற்றதான அன்பையுடைய வெவ்வியநிறைந்த ஓமாக்கினியில்,
முறை மூழ்கினள் –  முறையே மூழ்கி, மீண்டுதோன்ற-மீண்டும்எழுந்துவர, மை வார்
அளகம் வடமீன் நிகர் கற்பினாளை – கரிய நீண்ட கூந்தலையுடைய அருந்ததி
போன்ற கற்புநிலையையுடையளான திரௌபதியை, அ ஆறு – கீழ்க்கூறியபடியே,
மற்றை ஒருநால்வர்உம் – (வீமன் முதலிய) மற்றைநான்குபாண்டவர்களும், அன்று –
அன்றைத்தினத்திலேயே, வேட்டார்-மணஞ்செய்துகொண்டார்கள்;

      ‘முறை’ என்றதனால், நால்வரையும் மணஞ்செய்யும்போது ஒவ்வொருவர்க்கு
ஒவ்வொருமுறை அக்கினிபிரவேசஞ்செய்து மீண்டு எழுந்தனளென்க.
அக்கினிபிரவேசஞ்செய்து மீண்டசெய்கை, வியாசபாரதத்திலாவது
பாலபாரதத்திலாவதுகாணப்படவில்லை. “பபூவகந்யைவகதேகதேஹநி” என்று
வியாசபாரதத்தில்வருவதையொட்டி இங்ஙன்கூறினர்போலும். ஒவ்வொருவரையும்
மணஞ்செய்யும்போது கன்னிகையாயிருத்தல் வேண்டுமாதலால், அதன் பொருட்டு,
தீக்குதித்து எழுந்தன ளென்க. முன்பு தீயினின்றுபிறந்தவள் மீண்டு மீண்டும்
தீயினின்றே – பிறந்த தன்மை தோன்ற ‘ஈன்ற அழல்’ எனப்பட்டது. இவள்
தீக்குதித்தபொழுது இவளுடம்பைத் தீ எரித்துஒழித்திடாமைபற்றி, ‘காதலழல்’
என்றார்.பல ஆடவரை மணஞ்செய்தவிடத்தும் அதனால் அவள்கற்பிற்குக்
குறைவில்லையென்பார்’ வடமீனிகர்கற்பினாள்’ என்றார்.

மாரன் கரும்பு வளரும்படி வார்த்த நீரால்
ஈரம் புலராக் கரத்தோருக்கு, யாகசேனன்,
‘தேரும், பரியும், களிறும், திரள் சேனை யாவும்,
பாரும், தனமும், உமது’ என்று பலவும் ஈந்தான்.-துருபதன், மருமக்களுக்குப் பலவகைவரிசைகளை
அளித்தல்.

மாரன் கரும்பு வளரும்படி – மன்மதனுடைய(வில்லாகிய) கரும்பு
வளரும்படி,வார்த்த – (தான்) தாரைவார்த்துத் தத்தஞ்செய்து, நீரால் – நீரை
ஏற்றுக்கொள்ளுதலால், ஈரம் புலரா-ஈரம் நீங்காத, கரத்தோருக்கு – கையையுடைய
பாண்டவர்க்கு, யாகசேனன் – துருபதன், தேர்உம் – தேர்த் தொகுதியையும்,
பரிஉம் -குதிரைக்கூட்டத்தையும், களிறுஉம் – யானைத்திரளையும், திரள்சேனை –
திரண்டகாலாட்சேனையையும், யாஉம் – ஆகச் சதுரங்கசேனைகளையும், பார்உம் –
பூமியையும், தனம்உம்-செல்வத்தையும், பலஉம்-மற்றும் பலவற்றையும், உமது
என்று – உங்கட்கு உரிய தென்று (தனித்தனி) கூறி, ஈந்தான் – கொடுத்தான்;
(எ- று.)

     கன்னிகையின் தந்தை மந்திரபூர்வமாகத் தானநீரைத் தன்கையால் மருமகன்
கையில் வார்த்துக் கன்னிகா தானஞ்செய்ய, அதனை அவன் ஏற்றல் இயல்பு. ஒருவன்
தன்மகளை ஒருவனுக்குக் கன்னிகாதானஞ்செய்தபின், அவர்கள் தம்மிற்கூடி
வாழ்தலால், ‘மாரன் கரும்பு வளரும்படி வார்த்த நீர்’ என்றார்;  மன்மதனது
வில்லின்தொழில், வாழ்க்கையின்பமாம்.  

ஆண்டு மன்றல் பெற்று அங்குரித்தார், இகல்
பாண்டு மைந்தர்’ எனும் சொல் பரவலும்,
தாண்டு வெம் பரித் தேர்த் தார்த்தராட்டிரர்
மீண்டும் வந்து, அவர்மேல் வினை செய்யவே.-பாண்டவரின் செய்தியை யறிந்த துரியோதனாதியர் மீண்டுவந்து
அவரோடு பொருதல்.

இதுவும், அடுத்த கவியும்-குளகம்.

     (இ-ள்.) ‘இகல் பாண்டு மைந்தர்-வலிமையையுடையபாண்டுவின் குமாரர்கள்,
ஆண்டு – அவ்விடத்தில் (பாஞ்சாலநகரத்தில்), மன்றல் பெற்று-விவாகத்தைப்
பெற்று,அங்குரித்தார்-(மீண்டும்) முளைத்துத் தோன்றினார்கள்,’ எனும்-என்கிற,
சொல்வார்த்தை, பரவலும்-(எங்கும்) பரவியவளவிலே,-தாண்டு வெம் பரி தேர்
தார்த்தராட்டிரர்-தாவிச்செல்லுகிறவேகமுள்ள குதிரைகள்பூண்ட தேரையுடைய
திருதராட்டிரன் பிள்ளைகள் (துரியோதனாதியர்), மீண்டும்உம் வந்து – திரும்பி
வந்து ‘அவர்மேல் வினைசெய்ய – அப்பாண்டவர்கள்மேல் போரைத் தொடங்கிச்
செய்ய,-(எ-று.)- ‘வென் கண்டது’ என அடுத்த கவியோடு முடியும்.

     தார்த்தராஷ்ட்ரர் – வடசொல்; த்ருதராஷ்ட்ர னென்பதன்மேல் வந்த தந்தி
தாந்தநாமம்.

     இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும்-பெரும்பாலும் முதற்சீரொன்று மாச்சீரும்,
மற்றவை விளச்சீர்களுமாகியகலிவிருத்தங்கள்

சென்ற சேனையும், திட்டத்துய்மன்னுடன்
நின்ற சேனையும், நேர் உறு பூசலில்,
கொன்ற சேனை ஒழி குரு சேனையை
வென்ற சேனை வெகுண்டு, வென் கண்டதே.-துருபதன்சேனை துரியோதனன்சேனையை வெல்லல்.

சென்ற சேனைஉம் – (துரியோதனாதியர் கொண்டு) சென்ற (கௌரவ)
சேனையும், திட்டத்துய்மன்னுடன் நின்ற சேனைஉம்-(துருபதகுமாரனான)
திருஷ்டத்யும்நனுடனே நின்ற(பாஞ்சால) சேனையும், நேர்உறு-(தம்மில்)
எதிர்த்துச்செய்த, பூசலில் – பெரும்போரில், கொன்ற சேனை ஒழி குரு சேனையை
-கௌரவசேனையில் கொல்லப்பட்ட பகுதியொழிய எஞ்சிநின்ற பகுதியை, வென்ற
சேனை வெகுண்டு வென் கண்டது-வெற்றி கொண்ட பாஞ்சால சேனை
கோபங்கொண்டு முதுகு கொடுக்கச்செய்தது; ( எ- று.)

     திட்டத்துய்மன் சேனைத்தலைவனாய்ப் போர்நடத்தியதனால்,
‘திட்டத்துய்மன்னுடன் நின்ற சேனை’ எனப்பட்டது.    திட்டத்துய்மன்னுடன்,-
விரித்தல், ‘கண்டவே’ என்றும் பாடம். 

சாலும் வஞ்சச் சகுனியொடு எண்ணிய
நாலு மைந்தரும் நச்சு எயிறு ஆகவும்,
வாலும் மெய்யும் வருக்கங்கள் ஆகவும்,
ஆலும் வெம் பகை ஆடு அரவு ஆனதே.-துரியோதனாதியர்தொகுதிக்குப் பாம்பின்வடிவோடு
ஒப்பு.

சாலும் வஞ்சம்-மிக்க வஞ்சனையையுடைய, சகுனியொடு-சகுனியுடன்,
எண்ணிய-(சேர்த்து) எண்ணப்படுகிற, நாலுமைந்தர்உம்-நான்கு வீரர்களும் (சகுனி
கர்ணன் துரியோதனன் துச்சாதனன் என்ற நால்வரும்), நஞ்சு எயிறு ஆகஉம்-
விஷப்பற்களாகவும், வருக்கங்கள்-(துரியோதனனது) மற்றைத்தம்பியர்வரிசை,
மெய்உம்வால்உம் ஆகஉம்-உடம்பும் வாலுமாகவும், ஆலும்வெம்பகை-
ஆரவாரிக்கின்றகொடிய பகைவர்தொகுதி, ஆடு அரவு ஏ ஆனது-படமெடுத்து
ஆடுகின்றநாகப்பாம்பையே போன்றது;

     உருவகவணி, நாகம் பிறரைவருத்துதற்குக் காளி காளாத்திரி யமன்
யமதூதிஎன்ற நான்கு விஷப்பற்களே கருவியாதல் போல, சகுனி முதலிய
துஷ்டசதுஷ்டர்களே இத்தொகுதிக்குத்தலைவராய் நிற்றலால், ‘நாலு மைந்தரு
நச்செயிறு’ எனப்பட்டது. வருக்கம்- அணிவகுப்பு என்றாருமுளர். ஆனதே, ஏ-
தேற்றம். ‘வரூதினியாகவும்,’ வெம்படை என்றும் பாடம். 

அந்த நாகம் அழல் உமிழ் கண் விடம்
சிந்த, மேல் விடு சீற்றமும் தோற்றமும்,
முந்த, வார் சிலைக் கைம் முகில் வாகனன்
மைந்தன் வாளி மழைகளின் மாய்ந்தவே.-அப்பகைத்தொகுதியை அருச்சுனன் சிதறடித்தல்

அந்த நாகம் -(கீழ்க்கூறியபகைத்தொகுதியாகிய) அப்பாம்பு, அழல்
உமிழ் கண் விடம் சிந்த-நெருப்பைக்கக்குகிற கண்கள் விஷத்தைச்சொரிய, மேல்
விடு- எதிரிகளின்மேல்வெளியிட்ட, சீற்றம்உம்-கோபமும், தோற்றம்உம்-
(அதன்பயங்கரமான) தோற்றப்பொலிவும், (ஆகிய இரண்டும்), வார் சிலை கை
முகில்வாகனன் மைந்தன் வாளி மழைகளின் முந்த மாய்ந்த – நீண்ட வில்லைக்
கையிலேந்திய மேகவாகனனான இந்திரனது குமாரனாகிய அருச்சுனன் (முன்நின்று
விரைவாகச் சொரிந்த) அம்புமழைகளினால் உடனே அழிந்தன; ( எ- று.)

     இடியோடு மேகம் சொரியும் மழையினால் நாகம் உக்கிரம் அழிந்து
ஒடுங்குதல்போல, அருச்சுனன் சொரிந்த அம்புத்தொகுதியால் அப்பகைத்திரள்
ஆற்றலொடுங்கி உறுதிநிலை கெட்ட தென்க; உருவகவணி. திருஷ்டி
விஷமென்னும்நாகசாதி கண்விழித்து விஷத்தை வெளிப்படுத்தி
அவ்விஷப்பார்வையாற்பிறரையழிக்கும் தன்மையை தாதலால், ‘நாக மழலுமிழ்
கண்விடஞ் சிந்த மேல்விடுசீற்றம்’ என்றார். தோற்றம் வலிமையுமாம். நாகம்
என்றவடசொல்-நகத்தில்வாழ்வதென்று பொருள்படும்; நகம் – மரமும், மலையும்,
‘மேலிடு’ என்றும் பாடம். 

சமர வேழ முகாசுரன் சாய்ந்தனன்
குமரனால் என, கோ நகுலன்தனால்,
அமரில் யானை அணி முகத்தோடு மெய்
தமர் பட, புறம்தந்தனன், கன்னனே நகுலன் கர்ணனைப் புறங்கொடுத்தோடச்செய்தல்.

குமரனால் – முருகக்கடவுளால், சமரம் வேழம் முக(ம்) அசுரன் –
போர்வல்லயானைமுகத்தையுடைய தாரகாசுரன், சாய்ந்தனன் என-அழிந்தாற்போல,
கோநகுலன்தனால் – தலைமையையுடைய நகுலனால், கன்னன் – கர்ணன், அமரில்
-போரிலே, யானை அணி முகத்தோடு மெய் கமர் பட – (தான் முற்செலுத்திய)
யானையின் அழகிய முகமும் தன்உடம்பும் பிளப்படைய, புறந்தந்தனன்-
முதுகுகொடுத்தான்; (எ-று.)

     அசுரேசன்மகளாகிய மாயை யென்னும் பெயர்பெற்று சுரசையென்பவள்
காசியபமகாமுனிவரைக்கூடிப்பெற்ற புத்திரர்களாகிய சூரபதுமன் சிங்கமுகன்
தாரகன்என்ற மூவரும் பற்பலவகையாக உலகத்தை வருத்தினவளவில்,
அத்துன்பம்பொறுக்கமாட்டாத தேவர்களின் வேண்டுகோளின்படி சிவபிரான்
குமாரக்கடவுளைஉண்டாக்கி யனுப்ப, அக்கடவுள் தனக்கு உரிய கணங்களுடனே
புறப்பட்டுப்போருக்குச்செல்லும் வழியில், யானைமுகமுள்ளவனான தாரகாசுரன்
கிரௌஞ்சகிரியில்
 நின்றுமாயையாற் கடும்போர்செய்ய, முருகமூர்த்தி,
அவ்வசுரனது துதிக்கையையும் தந்தங்களையும் துணித்து முடிவில்
அவ்வசுரனையும்அழித்தனன் என்பது, இங்குக் குறித்த வரலாறு;காசியபமுனிவனும்
அவனுக்குமனைவியான மாயையும் ஆண்யானை பெண்யானைவடிவங் கொண்ட
காலத்தில் அவர்களுக்குப்பிள்ளையாய் யானைமுகத்தோடுபிறந்தவனாதலால்,
தாரகன் ‘வேழமுகாசுரன்’ எனப்பட்டான். தமர்பட, சமர்படஎன்றும் பாடம்.

முன்னிடச் சமர் மோதும் சகுனியை,
மின்னிடைப் புயங்கம் வெருக் கொண்டென,
தன் இடக் கைத் தனுவொடும் தேரொடும்
பின்னிடப் பொருதான், அவன் பின்னவன்சகதேவன் சகுனியைப் புறங்கொடுத்தோடச்
செய்தல்.

அவன் பின்னவன் – (கீழ்க்கூறிய) நகுலனது தம்பியான சகதேவன்,-
முன் இட சமர் மோதும் சகுனியை – முற்படப்போர்செய்த சகுனியை, மின் இடை
புயங்கம் வெரு கொண்டுஎன- மின்னலினால் (இடியினால்) பாம்பு
அச்சங்கொண்டாற்போல, தன் இடக்கை தனுவொடுஉம் தேரொடுஉம் பின்னிட –
தனது இடக்கையிலேந்தியவில்லோடும் தேரோடும் புறங்கொடுக்கும்படி,
பொருதான் -போர்செய்தான்; ( எ- று.)

     மின்னிடை, இடை – மூன்றனுருபின்பொருளில் வந்தது; உருபுமயக்கம்

தண் மதிக் குடைத் தம்முனும், தம்பியும்,
எண்ணும் மற்றை இளைஞர்கள் யாவரும்,
கண் உறக் களம் காணும் முன், தீயினால்
வெண்ணெய் ஒத்து உடைந்தார், விறல் வீமனால்.-துரியோதனாதியர் நூற்றுவரையும் வீமன் வெல்லல்.

தண் – குளிர்ந்த, மதி – சந்திரமண்டலம்போன்ற, குடை –
ஒற்றைவெண்கொற்றக்குடையையுடைய, தம்முன்உம் – தமையனான துரியோதனனும்,
தம்பிஉம் – (அவனுக்கு) அடுத்த தம்பியாகிய துச்சாதனனும், எண்ணும் மற்றை
இளைஞர்கள் யாவர்உம் – மற்றும்(வரிசையாக) எண்ணப்படுகிற
தொண்ணுற்றெட்டுப்பேரும்,-கண்உற களம் காணும் முன்-கண்களினால் நன்றாகப்
போர்க்களத்தை (எதிரிற்) காண்பதற்குமுன்னே, விறல் வீமனால் –
வலிமையையுடையவீமசேனனால், தீயினால்வெண்ணெய் ஒத்துஉடைந்தார்-
நெருப்பினால் வெண்ணெய்உடையுந்தன்மைபோல உடைந்தோடினார்கள்; (எ-று.)

     நெருப்பு அடுத்தவுடனே வெண்ணெய் உடைந்து நெகிழ்ந்து
உருகியோடுதல்போல, வீமன் அருகில்வந்தவுடனே துரியோதனாதியர் உறுதிகெட்டு
நெகிழ்ந்துஓடின ரென்பதாம்; உவமையணி. அத்தன்மையையே,
கண்ணுறக்களங்காணுமுன் உடைந்தாரென்று அதிசயோக்திதோன்றக்
கூறினார்.  

விரோசனக் கதிர் மைந்தனும், வேந்தனும்,
சரோசனத் திறல் தம்பியும், மாமனும்,
புரோசனப் பெயர்ப் புன்மதிதன்னை நொந்து,
அரோசனத்துடன் அத்தினம் நண்ணினார்.-இங்ஙனந் தோற்ற பகைவரனைவரும் தம்ஊருக்கு
மீளுதல்.

விரோசனன் கதிர் மைந்தன்உம் – விரோசனனென்று
ஒருபேரையுடைய சூரியனது மகனான கர்ணனும், வேந்தன்உம்-இராசராசனான
துரியோதனனும், சரோசனன் திறல் தம்பிஉம் – கோபத்தோடுகூடிய
வலிமையையுடைய தம்பியான துச்சாதனனும், மாமன்உம் – (துரியோதனாதியர்க்கு)
மாமனான சகுனியும்,-புரோசனன் பெயர் புன்மதி தன்னை நொந்து –
புரோசனனென்னும்பெயருள்ள துர்ப்புத்தியையுடைய மந்திரியை வெறுத்துக்
கொண்டே,அரோசனத்துடன் – பிரகாசமில்லாமையோடு, அத்தினம் நண்ணினார்-
அத்தினாபுரியைஅடைந்தார்கள்; (எ-று.)- ‘அந்நகர்கண்ணினார்’ என்றும் பாடம்.

     பாண்டவர்களை அரக்குமாளிகையில் எரிக்கும்படிஏவியனுப்பப்பட்ட
புரோசனனென்ற துர்மந்திரி அங்ஙனஞ்செய்துமுடிக்காமல் அஜாக்கிரதைப்பட்டு
இறந்துபோய்விட்டதைப்பற்றி இப்பொழுது துரியோதனாதியர்கள் கழிவிரக்கத்தோடு
வெறுப்பாராயினர். மனவருத்தத்தாலும் உடல் புண்பட்டதனாலும்
ஒளிமழுங்கச்சென்றனரென்க. துஷ்டசதுஷ்டர் நகர்கண்ணியதையே தலைமைபற்றி
இங்குக்கூறின ராயினும், மற்றைத் தம்பியர் நகர்நண்ணியதையும் இங்குத் தம்பி
என்றதில் உபலக்ஷணத்தால் அடக்கிக்கொள்க, விரோசனன் + கதிர்=
விரோசனக்கதிர்; புரோசனன் + பெயர் = புரோசனப் பெயர். விரோசநனென்ற
வடமொழிப்பெயர்-விசேஷமாய் விளங்குபவ னென்று அவயவப்பொருள்படும்.
கதிர் – சினையாகுபெயராய், கதிரோனை யுணர்த்தும். ரோஷணம்-கோபித்தல்;
அதனோடு கூடுதல்-ஸரோஷணம்; அது தமிழில் சரோசனம்எனத் திரிந்தது.
ரோசநம்-பிரகாசித்தல்: அதன்எதிர்மறை – அரோசனம். அரோசனத்துடன்
என்பதற்கு – மகிழ்ச்சியின்மையோடு எனினுமாம். 

முந்து போரில் முதுகிடும் வேந்தரால்,
விந்தைதன்னையும் மேதக வேட்டபின்,
அந்த மா நகர் ஐவரும், மாமனும்,
வந்த கண்ணனும், அன்புடன் வைகினார்.-பாண்டவர் பாஞ்சாலநகரிற் சிறப்புட னிருத்தல்.

முந்து போரில் – எதிர்த்துச்செய்த யுத்தத்திலே, முதுகு இடும்-
புறங்கொடுத்த, வேந்தரால் – (துரியோதனன் முதலிய) அரசர்களால்,
(பாண்டவர்கள்),விந்தைதன்னைஉம்-ஜயலஷ்மியையும், மேதக வேட்டபின்-
மேன்மைபொருந்தமணஞ்செய்தபின்பு, ஐவர்உம் -அந்தப்பஞ்சபாண்டவர்களும்,
மாமன்உம் -அவர்கள்மாமனான துருபதனும், வந்த கண்ணன்உம் – (அன்போடு
பாண்டவர்களிடம்) எழுந்தருளிய கண்ணபிரானும், அந்த மாநகர்-
அந்தப்பெரியபாஞ்சாலநகரில், அன்புடன் வைகினார் – (ஒருவர்க்கொருவர்)
அன்போடு பொருந்தி யிருந்தார்கள்; (எ- று.)

     துருபதன் கொடுக்கத் திரௌபதியைப் பெற்று மணஞ்செய்தாற்போலத்
துரியோதனாதியர்  கொடுக்கச் சயலஷ்மியைப் பெற்று மணஞ்செய்தன ரென்பது
முன்னிரண்டடிகளின் கருத்து ‘வன்புடன்’ என்றும் பாடம், 

தும்பை சூடிய வேல் துரியோதனன்
வெம்பு போரில் முதுகிட்டு மீண்டபின்,
தம்பி கூறு தருமனுக்கு ஈயுமாறு,
அம்பிகேயன் அமைச்சரொடு எண்ணினான்.-பின்பு திருதராட்டிரன் தருமனுக்கு அரசளிக்கக்
கருதுதல்.

தும்பை – தும்பைப்பூமாலையை, சூடிய – தரித்த, வேல் –
வேலாயுதத்தையுடைய, துரியோதனன்-, வெம்பு போரில்-கொடிய போரிலே,
முதுகுஇட்டு – (பாண்டவர்க்குப்) புறங்கொடுத்து, மீண்டபின் – திரும்பிவந்தபின்பு,
-அம்பிகேயன்-அம்பிகையின்மகனான திருதராட்டிரன், தம்பிகூறு தருமனுக்கு
ஈயும்ஆறு- (தன்) தம்பியாகிய பாண்டுவினது (இராச்சிய) பாகத்தை
(அவன்மகனான)தருமபுத்திரனுக்குக் கொடுக்கும்படி, அமைச்சரொடு எண்ணினான்-
(தன்)மந்திரிகளுடனே ஆலோசித்தான்;

     தும்பைப்பூமாலை, போர்செய்வார்க்கு உரிய அடையாளப்பூ மாலையாம்.
தம்பிகூறு – பாதிராச்சியம்: இங்ஙனமே பாலபாரதத்தும் வியாசபாரத்தும் உள்ளது.
அம்பிகேயன் – வடமொழித் தத்திதாந்தநாமம்.     

தாதினால் பொலி தார் வரை மார்பரை,
தூதினால், தங்கள் தொல் பதி சேர்த்தினான்-
‘காதினால் பயன் இன்று’ என, கண்கள்போல்
கோதினால் தெரியா மனக் கோளினான்.-திருதராட்டிரன் பாண்டவர்களை அத்தினாபுரிக்கு
வரவழைத்தல்.

கண்கள் போல் – (தன்) கண்கள் (இயல்பில் எவற்றையும்
உணராமை)போலவே, கோதினால் தெரியா – குற்றமுடைமையால் (நன்மை
தீமைகளைப்)பகுத்தறியாத, மனம் கோளினான் – மனத்தின்தன்மையை
யுடையவனானதிருதராட்டிரன்,-தாதினால் பொலி தார் வரை மார்பரை –
பூந்தாதினாற்பொலிகின்றமாலையை யணிந்த மலைபோன்ற மார்பையுடைய
பாண்டவர்களை, காதினால் பயன்இன்று என – கொலைசெய்ய முயலுதலாற்
பயனில்லையென்று (எந்தஉபாயத்தினாலும்வெல்லத்தக்கவரல்லரென்று) நிச்சயித்து,
(தருமபுத்திரனை அவனுக்கு உரியஅர்த்தராச்சியத்திற் பட்டாபிஷேகஞ்செய்யத்
தீர்மானித்து), தூதினால் தங்கள் தொல்பதி சேர்த்தினான் – தூதனைக்கொண்டு
தங்களுடைய பழமையான அத்தினாபுரிக்குவருவித்தான்; (எ-று.)

விதுரனையனுப்பி வரவழைத்ததாகப் பாரதங்களி லுள்ளது.

வீடுமற்கும் விதுரற்கும் ஏற்க, அந்
நாடு முற்றும் நரபதி நல்கவே,
ஆடு பொற்கொடி அந் நகர் வைகினார்-
நீடு வில்-திறலோர் நெடுங் காலமே.–பாண்டவர் அரசுபெறுமாறு அத்தினாபுரியில்
நெடுநாள் வாழ்தல்.

நர பதி – திருதராட்டிமகாராசன், வீடுமற்குஉம் விதுரற்குஉம்
ஏற்க -வீடுமனுக்கும் விதுரனுக்கும் இயைய, அ நாடு முற்றுஉம்நல்க –
(பாண்டவர்க்குஉரிய)அந்நாட்டின்பகுதிமுழுவதையும் (அவர்கட்குக்)
கொடுக்குமாறு,-நீடு வில் திறலோர் -நீண்ட வில்லின் வலிமையையுடைய
அவர்கள், ஆடு பொன் கொடி அ நகர்நெடுங்காலம் வைகினார்-அசைகிற
அழகிய கொடிகளையுடைய அந்தஅத்தினாபுரியில் நெடுங்காலம் இருந்தார்கள்;
(எ – று.)

     வீடுமற்கும் விதுரற்கும் ஏற்க – அவ்விருவர்மனத்திற்கும் திருப்தியாக
என்றபடி;இதனால், திருதராட்டிரன் அவர்களுடைய மனக்கருத்திற்கு ஏற்பப்
பாண்டவர்க்குஅரசு தரப்போகிறானே யன்றித் தன்மனமொப்பித் தருபவனல்ல
னென்பதுதொனிக்கும். இனி, இப்பாடலுக்கு – திருதராட்டிரன் தருமபுத்திரனுக்கு
மீண்டும்இளவரசுகொடுத்தானென்று முதலிரண்டு அடிகள் கூறும் என
உரைவகுப்பாருமுளர்.ஏகாரம் இரண்டும்-ஈற்றசை.

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ.வில்லிபாரதம் – முதல் பாகம் -4. வேத்திரகீயச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 13, 2023

தோள் கரம் புறம்தன்னில், அன்னையும், துணைவர் நால்வரும்,
தொக்கு வைகவே,
கோள் கரந்த பல் தலை அரா என, குகர நீள் நெறிக் கொண்டு
போய பின்,
தாள்களின் கதித் தாள் பறிந்து வீழ் தரு வனத்தது ஓர் சாரல்
மன்னினான்-
மூள் கடுங் கொடுஞ் சின அனல் கண் மா மும் மதக் களிறு
அனைய மொய்ம்பினான்.–வீமன்துணைவரையுந் தாயையும் கொண்டு ஒருவனஞ் சேர்தல்.

மூள் கடு கொடு சினம் – (மனத்திற்) பற்றியெழுகிற மிகக்கொடிய
கோபத்தையும், அனல் கண் – அக்கோபாக்கினியைச் சொரிகிற கண்களையும்,
மும் மதம் – மூன்றுவகை மதங்களையுமுடைய, மா களிறு – பெரிய
ஆண்யானையை, அனைய – ஒத்த, மொய்ம்பினான் – வலிமையையுடையவனான
வீமசேனன்,- தோள் கரம் புறம் தன்னில் – (தனது) தோள்களிரண்டிலும்
கைகளிரண்டிலும் முதுகு ஒன்றிலும், அன்னைஉம் துணைவர் நால்வர்உம்
தொக்குவைக – (தனது) தாயான குந்தியும் (தனது) உடன்பிறந்தவர் நால்வரும்
பொருந்தியிருக்க, கொண்டு – எடுத்துக்கொண்டு,- கோள் கரந்தபல் தலை அரா
என – வலிமையோடு (புற்றினுள்ளே) மறைந்து செல்லுகிற
பலதலைகளயுடையதொரு நாகம் போல, குகரம் நீள் நெறி –
மலைக்குகைபோன்ற நீண்ட சுரங்கவழியாக, போய பின் – சென்ற பின்பு,-
தாள்களின்கதி – (தனது) கால்களின் நடைவேகத்தால், தாள் பறிந்து வீழ் –
அடிபெயர்ந்து கீழ்விழப்பெற்ற, தரு – மரங்களையுடைய, வனத்தது – காட்டினது,
ஓர் சாரல் – ஒரு பக்கத்தை. மன்னினான்- சேர்ந்தான்; (எ-று.)

     மூன்றாம் அடி – வீமனது வலிமையையும் விசையையுங் காட்டும், உடன்
பிறந்தவரின் தலைகளும் தாயின் தலையும் வீமன் தலையும் ஒருசேர
விளங்குகின்றமையின், பஃறலையராவை உவமை கூறினார். பாலபாரதத்தை
நோக்குமிடத்துச் சாரலென்றவிடத்துச் சரசு என்றுபாடமிருக்குமோ என்று
கருதவேண்டியிருக்கிறது. குஹரம்-வடசொல், மும்மதம்-கன்னமிரண்டு,
குறியொன்று ஆக  மூன்றிடத்தினின்றும் பெருகுவன. புறந்தம்மில் என்றும்
பாடம்.

அவ் வனத்தில் வாழ் அரமடந்தை என்று ஐயம் எய்த, ஓர்
அடல் அரக்கி வந்து,
‘இவ் வனத்தில், இந் நள் இயாமம், நீ என்கொல் வந்தவாறு?
இவர்கள் யார்?’ என,
செவ் வனத்து இதழ்க் கூர் எயிற்று எழும் தெள் நிலாவினில்
திமிரம் மாறவே,
வெவ் அனல் சுடர்க்கு ஒத்த ஓதியாள், வீமசேனனோடு உரை
விளம்பினாள்.-அங்கு இடிம்பி வந்து வீமனைச் சில வினாவுதல்

வெம் அனல் சுடர்க்கு ஒத்த – வெவ்விய அக்கினியின்
சுவாலைக்குச் சமமான, ஓதியாள் – செம்பட்டமயிரையுடையவளான, ஓர் அடல்
அரக்கி – வலிமையையுடைய ஒரு இராக்கதப் பெண்,- அ வனத்தில் வாழ்
அரமடந்தை என்ற ஐயம் எய்த வந்து – அந்தக் காட்டில்வாழும் தெய்வமகளோ
வென்று (பார்த்தவர்கள்) சந்தேகமடையும்படி (அருகில்) வந்து,- செம் வனத்து
இதழ் கூர் எயிறு எழும் தெள் நிலாவினில் திமிரம் மாற – செந்நிறத்தையுடைய
வாயிதழினுள் கூரிய பற்களினின்று வெளியெழுகிற தெளிவான சந்திரகாந்தி போன்ற
வெள்ளொளியால் இருளொழிய,- ‘இ வனத்தில் இ நள் யாமம் நீ வந்த ஆறு
என்கொல் – இக்காட்டில் இந்தநடுராத்திரியில் நீ வந்தவிதம் என்ன காரணத்தாலோ?
இவர்கள் யார்-?’ என – என்று, வீமசேனனோடு உரைவிளம்பினாள் – வீமசேனனை
நோக்கி வினாவினாள்; (எ-று.)

      ‘வெவ்வனற்சுடர்க்கொத்த வோதியாள்’ என்றது – அவளது இயல்பாகவுள்ள
வடிவை விளக்கும். ‘அவ்வனத்தில் வாழர மடந்தை யென் றைய மெய்த வந்து’
என்றது மாயையினால் அழகிய வடிவ மெடுத்து வந்தமை விளக்கும்.
பாலபாரதத்திற்குஏற்ப, வனத்தில் வாழரமடந்தை என்பதற்கு – வனதேவதை
யென்று பொருள் கொள்ளலாம். அரமடந்தை – அமரமடந்தையென்பதன்
விகாரம். திமிரம் – வடசொல். பீமஸேநன் – பயங்கரமான
சேனைகளையுடையவன். மூன்றாமடியில், வனம் – வர்ணம்; வடசொல்

யானும் வந்தவாறு உரைசெய்கேன், நினக்கு; உரைசெய் நீ எனக்கு,
யார்கொல்?’ என்னலும்,
தானும் அங்கு அவன்தன்னொடு ஓதுவாள், தழுவும் ஆதரம்
தங்கு சிந்தையாள்:
‘ஊன் உகந்து தின்றிடும் இடிம்பன் என்று ஒருவன் இங்கு
இராவணியை ஒத்து உளான்;
மானுடம் கொள் மெய்க் கந்தம் ஊர்தலால், வரவு அறிந்தனன்,
வாள் அரக்கனே.-இதுமுதல் நான்குகவிகள் – வீமனுக்கு இடிம்பி கூறும்
விடை.

இதுமுதல் ஏழுகவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) (அதுகேட்டு வீமன் அவளை நோக்கி), ‘யான்உம் வந்த ஆறு
நினக்கு உரை செய்கேன் – நானும் இங்கே வந்தவகையை உனக்குச்
சொல்லுவேன்; நீ யார்கொல் எனக்கு உரைசெய் – நீ யார்? (அதனை) எனக்கு
முந்திச்சொல்வாய், ‘என்னலும் – என்று கூறியவளவிலே, தழுவும் ஆதரம் தங்கு
சிந்தையாள்தான்உம் – (அவனைப்) புணரும் ஆசை பொருந்திய மனத்தையுடைய
அவ்விடிம்பியும், அங்கு அவன் தன்னொடு ஓதுவாள் – அப்பொழுது
அவ்வீமனுடன் சொல்லுவாள்;- ஊன் உகந்து தின்றிடும் இடிம்பன் என்று –
தசையை விரும்பியுண்கிற இடிம்பனென்று பேர்பிரசித்தனாய், ஒருவன் வாள்
அரக்கன் – கொடிய ஓரிராக்கதன், இராவணியை ஒத்து – இராவணன் மகனான
இந்திரசித்தைப் போன்று, இங்கு – இவ்வனத்தில்,உளான் – இருக்கின்றான்;
(அவன்), மானுடம் மெய் கொள் கந்தம் ஊர்தலால்- மனித சரீரத்தின்
சம்பந்தமான வாசனை வீசுதலால், வரவு அறிந்தனன் – (உங்கள்) வருகையை
அறிந்தான்;

     வீமனுக்கு விடைகூறலுற்றதன் காரணம், அவள் கொண்ட காதலே
யென்பது தோன்ற, ‘தழுவுமாதரந் தங்கு சிந்தையாள்’ என்றார். ராவணி –
வடமொழித் தத்திதாந்தம்; இவனது பலபாராக்கிரமங்களும், மாயைவல்லமையும்,
கொடுமையும், இராமயணத்தில் பிரசித்தம். வாள் – கொடுமைக்கு, இலக்கணை.
‘ஒருவனுண்டிராவணியை’ என்றும் பாடம். 

எம்முன் ஏவலால், யான் மலைந்திடற்கு எய்தினேன்; நினைக்
                                               கொன்றும் என் பயன்?
அம்ம வெற்பு இரண்டு அனைய பொன் புயத்து அழகு எறிக்கும்
                                               நீடு ஆர மார்ப! கேள்:
‘கொம்மை வெம் முலைத் தெரிவையர்க்கு உளம் கூசும், ஆசை
                                               நோய் கூறுகிற்பது’ என்று
எம்மனோர்களும் சொல்வர்; யான் உனக்கு எங்ஙனே கொலாம்,
                                               இறுதி கூறுகேன்?

எம்முன் ஏவலால் – எனது தமையனான அவனது
கட்டளையினால், யான் மலைந்திடற்கு எய்தினேன் – நான் (உங்களைப்)
பொருதுகொல்லுதற்காகவே (முதலில்) வந்தேன்; நினைகொன்று உம் என் பயன்
– உன்னைக் கொல்லுதலால்தான் (நான்) அடையும் பிரயோசனம் என்ன? வெற்பு
இரண்டு அனைய பொன் புயத்து அழகு எறிக்கும் நீடு ஆரம் மார்ப –
இரண்டுமலைகள் போன்ற அழகிய தோள்களையுடை அழகுமிக்க நீண்ட
இரத்தினமாலையை யணிந்த மார்பைமுடையவனே! கேள் – (யான் சொல்வதைக்)
கேட்பாயாக: கொம்மை வெம் முலை தெரிவையர்க்கு – திரட்சியுள்ள
விரும்பப்படுந் தனங்களையுடைய மகளிர்க்கு, ஆசைநோய் கூறுகிற்பது –
(தம்முடைய) காமநோயை(ப் பிறர்க்கு) எடுத்துச்சொல்லுதற்கு, உளம் கூசும் –
மனம்நாணும், என்று-, எம் அனோர்கள்உம் சொல்வர்- (நாணமில்லாத)
எம்மவர்களும் [அரக்கியர்களும்] சொல்லுவார்கள்; (அங்ஙனமாக), யான்-,
உனக்கு-, எங்ஙனே – எப்படி, இறுதிகூறுகேன்- (என்கருத்தின்) முடிவைச்
சொல்வேன்! (எ-று.)

     இராமயணத்தில் “தாமுறு காமத்தன்மை தாங்களே யுரைப்பதென்பது,
ஆமென லாவதன்றா லருங்குல மகளிர்க்கம்மா” என்றது, இங்கு ஒப்பு
நோக்கத்தக்தது. அம்ம வென்பது – உரையசை. உன்னைக் கொல்லுதலன்று
யான்கருதிய பயனென்பாள் ‘நினைக்கொன்று மென்பயன்’ என்றாள்.

பெருஞ் சுழிப் படக் கரை புரண்டு எழப் பெருகும் யாறு, பின்,
பிறழ் கலங்கல் போய்,
அருஞ் சுவைப் படும் தெளிவினோடு சென்று, ஆழி வேலைவாய்
அணையுமாறு என,
பொருஞ் சினத்துடன் கொன்று தின்றிடப் போதரும் தொழில்
பேதை நான் மெலிந்து,
இருஞ் சிறைச் சுரும்பு இசைகொள் மாலையாய்! இன்ப மால் உழந்து,
உன்னை எய்தினேன்.

இருஞ் சிறை சுரும்பு இசை கொள் மாலையாய் – பெரிய
இறகுகளையுடைய வண்டுகள் கீதம்பாடப்பெற்ற பூமாலையையுடையவனே! பெரு
சுழி பட கரை புரண்டு எழ பெருகும் யாறு – பெரிய சுழிகளுண்டாகவும்
கரைபுரண்டு வெள்ளமெழவும் நீர்பெருகுகிற நதியானது, பின் – பின்பு, பிறழ்
கலங்கல் போய் – மாறுபட்ட கலக்கம் நீங்கி, அரு சுவைபடும்
தெளிவினோடுசென்று – அருமையான இன்சுவை பொருந்திய
தெளிதலோடுபோய், ஆழி வேலைவாய் அணையும் ஆறு என – ஆழ்ந்தகடலிற்
சேரும்விதம் போல,- பொரும் சினத்துடன் கொன்று தின்றிட போதரும் தொழில்
பேதைநான் – மோதுகிற கோபத்துடனே கொன்று தின்னவந்த
கொடுந்தொழிலையுடைய அறிவில்லாமகளாகிய யான்,(பின்பு), மெலிந்து –
அக்கடுமை நீங்கி, இன்பம் மால்உழந்து – காமமோக மடைந்து, உன்னை
எய்தினேன் – உன்னை யடைந்தேன்;(எ-று.)

     மழைக்காலத்திற் கலக்கத்தோடுபொருந்திய யாறு வெயிற் காலத்தில்
கலக்கம் தணிந்து கடலிற் புகுவதுபோல, கோபத்தோடு வந்தயான் பின்பு
கோபந்தணிந்து உன்னைச் சேர்ந்தே னென்றாள். எனக்கு நீயேகதியும் கொழுநனும்
என்றன ளென்க. ஆசையோடு விரைந்துசார்ந்த வண்டுகளுக்குப் பசி தாகந்தீரும்படி
தேனூட்டிக் களிப்புண்டாக்கும் மாலையுடைய நீ, ஆசையோடு விரைந்து
உன்னைச்சேர்ந்த எனக்கு இந்நோயைநீக்கி மகிழ்ச்சி யளிப்பா யென்பாள்,
‘இருஞ்சிறைச்சுரும்பிசைகொள்மாலையாய்’ என்றாள்

நீடி இங்கு நான் நிற்கின், மாரனாம் நிருதன் நிற்க, அந் நிருதன்
வெம்மையோடு,
ஓடிவந்து, எனைக் கொல்லும்; உம்மையும், ஒரு கணத்திலே
உயிர் செகுத்திடும்;
நாடி என்கொல், மற்று? உய்ந்து போகலாம்; நம்பி, என்னை நீ
நலன் உறத் தழீஇக்
கோடி; அம்பரத்திடை எழுந்து, உனைக் கொண்டு போவல், ஓர்
குன்றில்’ என்னவே.

நான் இங்கு நீடி நிற்கின் – நான் இவ்விடத்தில் நீட்டித்து நின்றால்,
மாரன் ஆம் நிருதன் நிற்க – மன்மதனாகிய இராக்கதன் (என்னைக்
கொல்லுதற்கு அமைந்து) நிற்க, (அவனுக்கும் முந்தி), அ நிருதன் – அந்த
இடிம்பனாகிய இராட்சசன், வெம்மையோடு ஓடி வந்து – கடுமையுடனே
ஓடிவந்து, எனை கொல்லும் – என்னைக் கொல்லுவான்; உம்மைஉம் ஒரு
கணத்தில் உயிர் செகுத்திடும் – உங்களையும் ஒருகணப்பொழுதிலே
உயிர்நீக்கிவிடுவான்: நாடிமற்று என்கொல் -(அதனைக்குறித்து) வேறு சிந்தித்து
ஆவதென்ன? உய்ந்து போகல் ஆம் – (ஓருபாயத்தால் நாம்) தப்பிச்செல்லலாம்:
(எங்ஙனமெனின்),- என்னை நீ நம்பி நலன் உற தழீஇக் கோடி – நீ என்னை
விரும்பி இன்பம்மிகத் தழுவிக்கொள்வாய்; அம்பரத்திடை எழுந்து உனை ஓர்
குன்றில்கொண்டு போவல் – (நான்) வானத்திலெழும்பி உன்னை
ஒருமலையினிடத்தே கொண்டுசெல்வேன், என்ன – என்றுசொல்ல,- (எ-று.)-
‘காளை இயம்பலும்(9) என்று இயையும்.

     என்னை நீ தழுவுதல், மன்மதனாகியஅரக்கனினின்று நானும்,
இடிம்பனாகிய அரக்கனினின்று நீயும்நானும் ஆகிய இருவரும் தப்பியுய்தற்குக்
காரணமா மென்றாள். ‘உம்மை’ என்றது, மற்றைப் பாண்டவரையும் குந்தியையும்
உட்படுத்து மென்னலாம். நம்பி யென்பதை ஆடவரிற்சிறந்தவனே யென
அண்மைவிளியாக் கொள்ளினும் பொருந்தும். சிறிதும் இரங்காது வருந்துதலால்,
மன்மதனை ‘அரக்கன்’ என்றாள். ‘மாரனாநிருபன்’ என்றும் பாடம்.

‘இரக்கம் இன்றியே, தனி வனத்திலே இளைஞர், எம்முன், யாய்,
இவரை விட்டு, ‘எமைப்
புரக்க வல்லள்’ என்று, ஒரு மடந்தைபின், போவது ஆடவர்க்கு
ஆண்மை போதுமோ?
வரைக்கண் வாழ்வு கூர் நும்முன், எம் முனே மலைய எண்ணி,
மேல் வந்தபோது பார்!
அரக்கன் ஆகில் என்? அவுணன் ஆகில் என்? அவனை ஓர்
கணத்து, ஆவி கொள்வனே.-அவள்வேண்டுகோளை மறுத்து வீமன் தனது
ஆண்மைகூறல்.

இரக்கம் இன்றி – இரக்கமில்லாமல், வனத்தில் – காட்டிலே,
இளைஞர் எம் முன் யாய் இவரை – எமது தம்பியர்தமையன் தாய் ஆகிய
இவர்களை, தனி விட்டு – தனியே விட்டிட்டு, எமை புரக்க வல்லள் என்று ஒரு
மடந்தைபின்போவது எம்மைக்காக்கவல்லவளென்பதுபற்றி ஒரு பெண்ணின் பின்னே
செல்வது, ஆடவர்க்கு ஆண்மை போதும்ஓ – புருஷர்க்கு உரியஆண்திறமைக்குத்
தகுமோ?[தகாதென்றபடி]; வரைக்கண் வாழ்வு கூர் நும்முன் – மலையில்
வாழ்தல்பொருந்திய உன்தமையன், எம்முன் மலைய எண்ணி மேல் வந்தபோது –
எமது எதிரே போர்செய்யக்கருதி எம் மேல் எதிர்த்து வரும்பொழுது, பார் – (நீ)
காண்பாய்; அரக்கன் ஆகில் என் அவுணன் ஆகில் என் – இராக்கதனானாலென்ன
அசுரனானாலென்ன? அவனை ஓர் கணத்து ஆவிகொள்வன்- அவனை
ஒருகணப்பொழுதிலே உயிர்கவர்வேன்; (எ -று.)

      ‘அரக்கனாகிலென் அவுணனாகிலென்’ என்றது, அலக்ஷ்யத்தாற் கூறினது.
அரக்கர், அவுணர் – பதினெட்டுத் தேவகணங்களுட் கொடிய சிலவகை, ஈற்று
ஏகாரம் – தேற்றம்; மற்ற ஏகாரங்கள் – அசை   

இடிம்பைதன் மனம் கொண்ட காளை, இங்கு இவை இயம்பலும்,
நவை இடிம்பனும்,
கொடும் பெருஞ் சினம் கதுவு கண்ணினன், குருதி நாறு புண்
கூர் எயிற்றினன்,
உடம்பு பெற்றது ஓர் இருள் முகத்திலே ஓர் இரண்டு
வெஞ் சுடர் உதிக்கவும்,
நெடும் பிறைக் கொழுந்து ஓர் இரண்டு வால் நிலவு எறிக்கவும்,
நின்ற நீர்மையான்.–இதுவும், அடுத்தகவியும் – இடிம்பன்தன்மையும்
வரவுங்கூறும்.

இடிம்பை தன் மனம் கொண்ட காளை – இடிம்பையினது
மனத்தை(த் தனது அழகினாற்) கவர்ந்த இளவீரனான வீமன், இங்கு இவை
இயம்பலும் – கீழ்க்கூறிய இவ்வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டிரா
நின்றவளவிலே, கொடு பெருஞ்சினம்கதுவு கண்ணினன் – கொடியபெரிய
கோபக்கனல் வெளித்தோன்றும் கண்களையுடையவனும், குருதி நாறு புண் கூர்
எயிற்றினன் – இரத்தம்நாறப்பெற்ற தசைதோய்ந்த கோரதந்தங்களையுடையவனும்,
(அதனால்), ஓர் உடம்புபெற்றது இருள் – ஒருபுருஷவடிவத்தைப்பெற்ற
இருளானது, முகத்திலே – (தன்) முகத்திலே, ஓர் இரண்டு வெம்சுடர் உதிக்கஉம்
– வெவ்விய சூரியர் இருவர் தோன்றிவிளங்கவும், நெடு பிறைகொழுந்து ஓர்
இரண்டு வாள் நிலவு எறிக்கஉம் – நீண்ட இளம்பிறைகளிரண்டு ஒளியுள்ள
நிலாவை வீசவும், நின்ற – நின்றாற்போன்ற, நீர்மையான் –
தன்மையையுடையவனாகிய, நவை இடிம்பன்உம் – குற்றங்களையேயுடைய
இடிம்பனென்பவனும்,- (எ-று.) – ‘கூவிக் குறுகினான்’ என வருங்கவியோடு
முடியும்.

     பின்னிரண்டடி – இல்பொருளுவமை. அவ்வரக்கனது மிகக்கரிய வடிவத்தை
உடம்புபெற்ற இருளாகவும், அவன்முகத்திலுள்ள கோபாக்கினிச் சுவாலை வீசுகிற
கொடிய சிவந்த இரண்டுகண்களை இரண்டு சூரியராகவும், அவனது கடைவாயில்
வெளிப்பட்டு விளங்குகிற வளைந்தவெண்மையான இரண்டு கோரப்பற்களை
இரண்டு பிறைகளாகவுங் குறித்தார்; இதனை, தன்மைத்தற்குறிப் பேற்றமென்னலாம்.
குருதியும்தசையும், தின்ற உடம்புகளினின்று பற்றியவை. ‘புன்கூர்’ ‘வானிலவு’
எனவும் பாடம்.  

இடி படுத்து எழுந்து, எழிலி மின்னுமாறு என்ன, நீடு குன்று
எதிர் ஒலிக்கவே,
வெடி படச் சிரித்து, இரு புறத்து நா மிளிர, உள் புகைந்து,
ஒளிரும் வாயினான்,
நெடி படுத்த வெங் கானம் எங்கணும் நிழல் படுத்தி வான்
உற நிமர்ந்துளான்,
கொடி படுத்த நுண் இடை இடிம்பையைக் கூவி, அவ் இடைக்                                                குறுகினான்அரோ.

எழிலி – மேகம், எழுந்து – (வானத்தில்) எழுந்து, இடி படுத்து –
இடியை வெளிப்படுத்திக்கொண்டு, மின்னும் ஆறு என்ன – மின்னும்
விதம்போல, நீடு குன்று எதிர் ஒலிக்க வெடிபட சிரித்து – பெரியமலை
பிரதித்தொனிசெய்யும்படி பெருமுழக்கமுண்டாகச் சிரித்து, இரு புறத்துஉம் நா
மிளிர – இரண்டு வாயோரங்களிலும் நாக்குப் பிறழ்ந்துதோன்ற, உள் புகைந்து
ஒளிரும் – உள்ளேபுகை கொண்டு விளங்குகிற, வாயினான்-
வாயையுடையவனாய்,- நெடில்படுத்த வெம் கானம் எங்கண்உம் – மூங்கில்கள்
அடர்ந்த வெவ்விய காடு முழுவதிலும், நிழல் படுத்தி – நிழலை
யுண்டாக்கிக்கொண்டு, வான் உற நிமிர்ந்துளான் – ஆகாயத்தையளாவ உயர்ந்து
எழுந்தவனாய்,- கொடிபடுத்த நுண் இடை இடிம்பையை கூவி – பூங்கொடியை
(த் தனக்கு ஒப்பாகாதென்று) கீழ்ப்படுத்திய நுண்ணிய இடையையுடைய
இடிம்பையைக் கூப்பிட்டுக்கொண்டு, அ இடை குறுகினான் – அவ்விடத்தில்
வந்து சமீபித்தான்; (எ-று.)

     கரியபெரிய அரக்கனுக்குக் காளமேகமும், அவனது பெருஞ்
சிரிப்பொலிக்கு இடிமுழக்கமும், நா மிளிர்வுக்கு மின்னலொளியும் உவமை
யெனக்காண்க. ‘நெடிபடுத்த’ என்ற பாடத்துக்கு – சிள்வீடுகள் பொருந்திய என்க.
“கொழுநற் றொழு தெழுவாள்” என்றதில், ‘தொழுது’ என்றதற்குப்போல,
‘இடிபடுத்து, நிழல் படுத்தி ‘கூவி’ என்ற இறந்தகாலவினையெச்சங்களுக்கு
நிகழ்காலப் பொருள் கொள்ளவேண்டும். வானுற நிமிர்ந்த பெருவடிவத்தாற்
காடெங்கும் நிழலுண்டாகுமென்க, நாக்கைப் பிறழவைத்தல், கோபக்குறி.
வாயினுட் புகைதல், கொடுமைபற்றியது. அரோ- ஈற்றசை

உணவின் ஆசையால் கொல்ல வந்த நீ, உவகை ஆசையால்
உள் அழிந்து, ‘இவன்
கணவன் ஆம்’ எனக் காதலிப்பதே! கங்குல்வாணர்தம் கடன்
இறப்பதே?
அணவு வெம் பசிக் கனல் அவிந்து போய், அநங்க வெங் கனல்
கொளும் அடல் புலிப்
பிணவை அன்பினின் கலை நயப்பதே? பேதை! மானுடன்
பேசுகிற்பதே?இடிம்பன்வார்த்தை: தங்கையைக் கோபித்துக் கூறியது.

மூன்றுகவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) உணவின் ஆசையால் கொல்லவந்த நீ – உணவில் விருப்பத்தாற்
கொல்லுவதற்குவந்த நீ, உவகை ஆசையால் உள் அழிந்து – காமவிருப்பத்தால்
மனமிழிந்து, இவன் கணவன் ஆம் என காதலிப்பதுஏ – இவன் (எனக்குக்)
கணவனாவ னென்று ஆசைப்படுவதா! கங்குல் வாணர்தம் கடன் இறப்பதுஏ –
இராக்கதர்க்குஉரிய முறைமையினின்று தவறுவதா! அணவு வெம் பசி கனல்
அவிந்து போய் – பொருந்திய வெவ்விய பசித்தீ அடங்கிப் போக, அனங்க
வெம் கனல் கொழும் – வெவ்விய காமாக்கினியைக் கொண்ட, அடல் புலி பிணவு –
வலிமையையுடைய ஒரு பெண்புலி, அன்பினில் கலையை நயப்பதுஏ – ஓர்
ஆண்மானை அன்பினால் விரும்புவதா! பேதை – அறிவில்லாதவளே! மானுடன்
பேசுகிற்பதுஏ – (அரக்கியாகிய உன்னோடு) ஒரு மனிதன் பேசுவதா? (எ-று.)

     முன்னிரண்டடிகட்கு ஏற்ப அடற்புலிப்பிணவைக்கலை நயப்பதே என்ற
இடத்து உருபுபிரித்துக்கூட்டப்பட்டது:எடுத்துக் காட்டுவமையணி. ஏகாரங்கள்
நான்கும் – வினாவகையால், வியப்பையும் தகுதியின்மையையும்விளக்கும்.
‘உணவினாசையாற்கொல்ல வந்த நீ’ என்றதனால் – நீ மானுடராற்சேர்த்துக்
கொள்ளத்தக்கவளல்லையென்றும், ‘கங்குல்வாணர்தங் கடனிறப்பதே’ என்றதனால்
இப்போது அரக்கராலும் பஹிஷ்காரஞ்செய்யத்தக்கவளானா யென்றும் அரக்கியை
மருட்டியவாறு. கங்குல்வாணர் – இரவில் மிக்கவலிமையுடையவராய்த் திரிபவர்:
அரக்கர்க்கு வடமொழியில் ‘நிசாசரர்’ என ஒருபெயர் வழங்குதல் காண்க. இங்கே
‘கங்குல் வாணர் கடன்’ என்றது, மனிதரை உணவாகக்கொள்ளுதலை. பிணவு –
பெண்மைப்பெயர்; இது, பிணா என்பதன் விகாரம்.

வார், அடா! உனக்கு யாதுதானர்தம் மகள் அடுக்குமோ? வான
மாதர் தோள்
சேர் அடா; மலைந்து, உயிரை, மெய்யினைத் தின்று, தேவர் ஊர்
சேருவிப்பன் யான்;
போர் அடாது, உ(ன்)னோடு; ஆளிஏறு புன் பூஞைதன்னுடன்
பொர நினைக்குமோ?
பார் அடா, என் ஆண்மையை! அரக்கர் கைப் பட்ட போதில் யார்
பாரில் வைகினார்?’இதுவும் அது: வீமனை நோக்கிய வீரவாதம்.

வார் அடா – அடேஎ! (போருக்கு) வா; உனக்கு-, யாது தானர்தம்
மகள் – இராக்கதப்பெண், அடுக்கும்ஓ – தகுவளோ? யான்-, மலைந்து –
போர்செய்தழித்து, மெய்யினை தின்று – (உன்) உடம்பைத் தின்று, உயிரை –
(உன்) உயிரை, தேவர் ஊர் சேருவிப்பன் – தேவலோகத்திற் செலுத்துவேன்:
(அப்பொழுது அங்கு), வானம் மாதர் தோள் சேர் அடா – (உனக்கு உரியராகுந்)
தெய்வ மகளிரது தோளைத் தழுவடா; உனோடு போர் அடாது – உன்னுடன்
போர்செய்தல் (எனக்குத்) தகாது: ஆளி ஏறு புல் பூஞைதன்னுடன் பொர
நினைக்கும்ஓ – ஆண்சிங்கம் எளிய பூனையுடனே போர் செய்ய நினைக்குமோ?
என் ஆண்மையை பார் அடா – என்னுடைய வீரத்தைப்பாரடா; அரக்கர்
கைபட்ட போதில் யார் பாரில் வைகினார் – இராக்கதரது கையில்
அகப்பட்டபொழுது பூமியில் உயிருடன் இருந்தவர் ஆர்? [எவருமில்லை];
(எ-று.)

     மூன்றாமடியில் எடுத்துக்காட்டுவமையணியும், நான்காமடியில்
வேற்றுப்பொருள்வைப்பணியும் காண்க. போரிற் புறங்கொடாது இறந்தவர்
வீரசுவர்க்கமடைந்து தேவமாதரைக் சேர்வரென்பது நூற்றுணிபு. வா  அடா
என்பது எதுகைநோக்கி இடையில் ரகர மெய்விரிந்து ‘வாரடா’ என நின்றது.
அடா – இகழ்ச்சிவிளக்கும் இடைச்சொல்; முன்னிலையாண்பால் விளியடையாய்
வரும்; இதன் பெண்பால் – ‘அடி’. யாதுதாநர்-வடசொல். யாதுவென்னும்
ஒருபெயரையுடையவரென்று உறுப்புப் பொரு

என்று, சீறி, மற்று இவன் அடுத்தல் கண்டு, இணை இலா
விறல் துணைவர் நால்வரும்,
நின்ற யாயும், மற்று ஒரு புறத்திலே நிற்க, மையல் கூர்
நிருதவல்லியும்,
வென்றி நல்குமா வந்த விந்தைபோல், விழி பரப்ப, மேல்
வீமசேனனும்
சென்று, கைகளால் பற்கள் நாவுடன் சிதற, வாயினில் சென்று
குத்தினான்.-இதுவும் வருங் கவியும் – வீமனுக்கும் இடிம்பனுக்கும்
நிகழ்ந்த போர் கூறும்.

என்று – என்று சொல்லிக்கொண்டு, சீறி – கோபித்து, இவன் –
இந்த இடிம்பன், அடுத்தல் – சமீபித்தலை, கண்டு-, இணை இலா விறல்துணைவர்
நால்வர்உம் – ஒப்பில்லாத வலிமையையுடைய உடன் பிறந்தவர் [பாண்டவர்]
நால்வரும், நின்ற யாய் உம் – (கலங்கி) நின்ற தாயும் [குந்தியும்], மற்று ஒரு
புறத்திலே நிற்க வேறொரு  பக்கத்திலே ஒதுங்கிநிற்க,-மையல் கூர் நிருத
வல்லிஉம் – காம மயக்கம்மிக்க இராக்கதப்பெண்ணும் [இடிம்பியும்], வென்றி
நல்கும் ஆ (று) வந்த விந்தைபோல்-(வீமனுக்கு) வெற்றியைக் கொடுக்கும்படி
வந்த வீரலக்ஷ்மிபோல, விழி பரப்ப – கண்களைப் பரப்பிப்
பார்த்துக்கொண்டுநிற்க,- வீமசேனனும்-, மேல் சென்று – (அவ்வரக்கனை)
எதிர்த்துச் சென்று, பற்கள் நாவுடன் சிதற- (அவனுடைய) பற்கள் நாவோடு
சிதறும்படி, கைகளால் வாயினில் சென்று குத்தினான் – (தன்னுடைய) கைகளால்
(அவனுடைய) வாயிலே நெருங்கிக்குத்தினான்; (எ -று.) மற்று – அசை.

     வல்லி – பூங்கொடி; மகளுக்கு உவமவாகுபெயர். வீமனிடத்துக்
காதல்கொண்ட இடிம்பை அப்பொழுது வீமன் இடிம்பனை வெல்ல வேண்டு
மென்னுங் கருத்தோடு அவனது வெற்றியை எதிர்பார்த்து நின்றமையால்,
‘வென்றிநல்குமா வந்த விந்தைபோல் விழிபரப்ப’ என்று குறித்தார்;
தற்குறிப்பேற்றவணி. பழித்ததனால், வாயில் முதலி லடித்தான்

குத்தினான், இவன்; குணபவல்சி தன் கூர் நகக் கரம் கொண்டு
வீமன்மேல்
மொத்தினான்; முனைந்து, இருவரும் பொறார், முரணுடன்
சினம் மூளமூளவே,
தத்தினார்; பிடுங்கிய மரங்களால் சாடினார்; புய சயிலம்
ஒன்றொடு ஒன்று
ஒத்தினார்-இரண்டு அம்புதங்கள் வான் உரும் எறிந்தது ஒத்து,
ஓசை மிஞ்சவே.

இவன் – வீமன், குத்தினான்-;குணபம் வல்சி – பிணங்களை
உணவாக வுடைய [அரக்கனாகிய] இடிம்பன், தன் கூர் நகம் கரம்கொண்டு –
கூரிய நகங்களையுடைய தன் கையால், வீமன்மேல் மொத்தினான் –
வீமனுடம்பில் அடித்தான்; (இங்ஙனம்), இருவர்உம் – இவ்விரண்டுபேரும்,
பொறார் – மனம்பெறாதவர்களாய், முரனுடன் முனைந்து – வலிமையோடு
முயன்று, சினம் மூள மூள – கோபம் மிக அதிகப்பட, தத்தினார்- பாய்ந்து
தாக்கினார்கள்; பிடுங்கிய மரங்களால் சாடினார் – மரங்களைப் பெயர்த்தெடுத்து
அவற்றைக்கொண்டு அடித்தார்கள்; இரண்டு அம்புதங்கள் வான்உரும் எறிந்தது
ஒத்து -இரண்டுமேகங்கள் வானத்தில் இடியிடித்ததைப் போன்று, ஓசை – விஞ்ச
– ஒலிமிக, புயம் சயிலம் ஒன்றொடு ஒன்று ஒத்தினார் – மலைகள் போன்ற
தோள்களை ஒன்றோடொன்று (படத்) தாக்கினார்கள்; (எ-று.)

     குணபவல்சி யென்பது – பண்புத்தொகையன்மொழியாய், அரக்கனுக்கு
ஒருகாரணக்குறியாயிற்று; குணபம் – வடசொல்,வல்சி – சோறு. அம்புதம் –
நீரைக் கொடுப்பது, மேகம்: வடசொல். 

வளர்ந்த திண் கருங் குன்று காந்தளை மலர்வது என்னவே,
வானகம் படக்
கிளர்ந்த செம் புண்நீர் பொசியும் மெய்யினன், கேத நெஞ்சினன்,
கோத வாய்மையன்,
தளர்ந்து வீழ் நிசாசரனும், ஆடகன்-தன்னை ஒத்தனன்; பின்னை
முன் உறப்
பிளந்த கோள் அரிதன்னை ஒத்தனன், பிரதை என்னும் மின்
பெற்ற காளையே.-வீமன் இடிம்பனை வதைத்தல்.

வளர்ந்த திண் கருங் குன்று – ஓங்கிவளர்ந்த வலிய கரிய
ஒருமலை, காந்தளை மலர்வது என்ன – செங்காந்தட்பூப் பூக்கப் பெற்றது
போலவே, செம் புண் நீர் பொசியும் – சிவந்த இரத்தநீர் வழியப்பெற்ற, வானகம்
பட கிளர்ந்த மெய்யினன் – ஆகாயத்தை அளாவ ஓங்கிவளர்ந்த
உடம்பையுடையவனுமாம், கேதம் நெஞ்சினன் – துன்பமுற்ற மனத்தை
யுடையவனும், கோத வாய்மையன் – பழுதுபட்ட சபதத்தையுடையவனுமாய்,
தளர்ந்து வீழ் – சோர்ந்து கீழ் விழுந்த, நிசாசரன்உம் – இராக்கதனாகிய
இடிம்பனும், ஆடகன் தன்னை ஒத்தனன் – இரணியாசுரனைப் போன்றான்:
பின்னை – பின்பு, பிரதை என்னும் மின் பெற்ற காளை – பிரதையென்னும்
பெண் [குந்தி] பெற்ற சிறந்தவீரனான வீமன், முன் உற பிளந்த கோள் அரி
தன்னை ஒத்தனன் – முற்காலத்தில் (அவ்விரணியனை) நன்றாகப் பிளந்த வலிய
நரசிங்கமூர்த்தியைப் போன்றான்; (எ-று.)

     பாலபாரதத்தில் மதுவைக்கொன்ற திருமாலை வீமனுக்கு உவமையாகக்
கூறியுள்ளது. வீமனைக்கொல்வே னென்று கூறிய இடிம்பன் வார்த்தை
வீண்பட்டதனால், ‘கோதவாய்மையன்’ என்றார். குன்று (செங்) காந்தளை
மலர்வது – ஒன்றன்வினை மற்றொன்றன்மேல் ஏற்றப்பட்டது; உபசார வழக்கு,
புண் நீர் – தசையின் சம்பந்தமான நீர்.கோத – கோது என்னும்
பகுதியின்மேற்பிறந்தகுறிப்புப் பெயரெச்சம். இரணியன் என்ற பெயர் –
பொன்னிறமானவ னென்னும் பொருளதாதலால், ஆடகனென்றது – அதன்
பரியாயநாமமாய் நின்றது. ‘பிளந்தளைந்த கோளரியையொத்தனன்’ என்றும்
பாடமுண்டு. மின் – உவமவாகுபெயர். 

வன் திறல் இடிம்பனை, வயக் கையால், உடல்
ஒன்று இரண்டு ஆகுமாறு உடன்ற மைந்தனை,
அன்று கண்டனள், யாய்-அரியின் பேடு தன்
கன்று திண் கரி பொரக் கண்டது என்னவேஅத்தகைய வீமனது ஆற்றலைக் குந்தி மகிழ்ச்சியோடு
காண்டல்.

வல் திறல் இடிம்பனை – மிக்கவலிமையையுடைய இடிம்பனை, வய
கையால் – வலிய (தனதுவெறுங்) கைகளால், உடல் ஒன்று இரண்டு ஆகும் ஆறு
உடன்ற – ஓருடம்பு இரண்டு துண்டாம் படி போர்செய்துபிளந்த, மைந்தனை –
வீரனான வீமனை,- அன்று – அப்பொழுது,- யாய் – தாயாகிய குந்தி, அரியின்
பேடு – பெட்டைச் சிங்கம், தன் கன்று திண் கரி பொர கண்டது என்ன – தனது
கன்றாகிய சிங்கக்குட்டி வலிய பெரிய யானையைப் பொருது அழிக்கக்
கண்டதுபோல, கண்டனள் – (மகிழ்ச்சியோடு) கண்டாள்; (எ -று.)

     கன்று – இளமைப்பெயர்; இது சிங்கத்துக்கு உரியதாதலை, “யானையும்”
என்ற தொல்காப்பியச் சூத்திரத்து ‘உரிய’ என்றதனாற் கொள்க.

     இதுமுதல் இருபத்திரண்டு கவிகள் – கீழ்ச்சருக்கத்தின் முதற் கவி போன்ற
கலிவிருத்தங்கள்.  

இளைஞரும் தம்முனும், ‘இவன் அரும் பகை
களைகுவன், இனி’ என, கண் களித்தனர்;
விளைவு உறு காதலால் மெலிந்த பாவையும்,
உளைவுடன் உவகையும் ஒருங்கின் எய்தினாள்.-அப்போது தருமன் முதலியோர் மகிழ்ச்சியும்,
இடிம்பியின்நிலையும்.

இளைஞர்உம் – தம்பியரான (அருச்சுனன் முதலிய) மூவரும்,
தம்முன்உம் – தமையனான தருமனும், இவன் இனி அருபகை களைகுவன் என
– இவ்வீமன் இனிமேல் அரிய (நமது) பகைவர்களை அழித்திடுவா னென்று
தெளிந்து, கண் களித்தனர் – கண் களிப்படைந்தார்கள்; விளைவுறு காதலால்
மெலிந்த பாவைஉம் – மிக்க ஆசைநோயால் மெலிவடைந்து அழகிய
பெண்ணான இடிம்பையும், உளைவுடன் உவகைஉம் ஒருங்கின எய்தினாள் –
வருத்தத்தோடு மகிழ்ச்சியையும் ஒருசேர அடைந்தாள்; (எ-று.)

     தருமன்முதலியோர் மிகவலிய அரக்கனைக்கொன்ற செயலைக்
கண்ணெதிரிற் கண்டதனால், வீமன் இனி அரியபெரிய பகைவரனை வரையுந்
தவறாது கொல்வா னென்று நிச்சயித்துக் களித்தன ரென்க. தமையனிறந்ததனால்
வருத்தமும், தன்னாற் கணவனாக வரிக்கப்பட்ட வீமனை இடையூறின்றிச் சேரலா
மென்னும் ஓர் கருத்தினால் மகிழ்ச்சியும் இடிம்பிக்கு ஒருங்கு நிகழ்ந்தனவென்க.
உளைவை முன்னும் உவகையைப் பின்னுமாக நிறுத்தியதனால், இவளுக்குச்
சோகம் தோன்றிக் கழிய முந்திய காதலே நிலைத்து நின்ற தென்க.

பெருந் திறல் நிசாசரப் பிணத்தை, அவ் வனத்து
இருந்துள பறவைகட்கு இருள் செய் கங்குலின்
விருந்து இடக் கொளுத்திய விளக்கு எனும்படி,
அருந் திசை பொலிவுற, அருக்கன் தோன்றினான்.-சூரியோதய வருணனை.

பேருந் திறல் நிசாசரன் பிணத்தை-வலிமையையுடைய அவ்வரக்கனது
உயிர்நீங்கியபேருடலை, அ வனத்துஇருந்துளபறவைகட்டு-அக்காட்டில்
தங்கியுள்ள (பருந்துகழுகுமுதலிய)  பறவைகளுக்கெல்லாம்.இருள்செய் கங்கலின்
விருந்து இட- இருளைச்செய்கிற அவ்விராப்பொழுதிலேவிருந்துணவாக இடுதற்
பொருட்டு, கொளுத்திய – ஏற்றிய, விளக்குஎனும்படி-, அருக்கன் – சூரியன்,
அரு திசை பொலிவு உற – மேன்மையான கிழக்குத் திக்கு விளக்கமடையும்படி,
தோன்றினான் – உதித்தான்; (எ-று.)

     இரவு இருக்கையில் சூரியனாகிய விளக்குக் கொளுத்தப் படவே, அது
பகலாய்விட்ட தென்க; தற்குறிப்பேற்றவணி.   

கரங்களால் நிசாசர இருளைக் காய்ந்துகொண்டு,
இரங்கி, நீள் வனத்திடை இரவில் மாழ்கிய,
வரங் கொள் தாமரை முகம் மலர்த்தும் நீர்மையால்,
உரங் கொள் வீமனுக்கு எதிர், உதய பானுவே.-வீமனைச் சூரியனோடு உவமித்தல்.

கரங்களால் – (தனது) கைகளால் [தன்கிரணங்களால்], நிசாசர
இருளை – அரக்கனாகிய இருட்டை [இரவிற்பொருந்தும் இயல்பினதாகிய
இருட்டை], காய்ந்துகொண்டு – அழித்து,- நீள் வனத்திடை இரவில் இரங்கி
மாழ்கிய வரம் கொள் தாமரை முகம் மலர்ந்தும் நீர்மையால் – பெரிய காட்டிலே
இராப்பொழுதிலே (இவனுக்கு என்னாகுமோ வென்று), பரிதபித்து வாடிய
(தருமன் முதலியோரது) மேன்மைகொண்ட தாமரைமலர் போன்ற முகத்தை
(மகிழ்ச்சியால்) மலரச்செய்யுந் தன்மையினால் [பெரியநீர் நிலையிலே இரவில்
குவிந்து வாடிய மேன்மைகொண்ட தாமரை மலர்களின் இதழை மலர்த்துந்
தன்மையினால்],- உதயம் பானு – உதித்த சூரியன், உரம் கொள் வீமனுக்கு
எதிர்- வலிமைகொண்ட வீமனுக்கு ஒப்பாவன்; (எ-று.)

     இங்குச் சூரியனுக்கும் வீமனுக்கும் ஒப்புமையைச் சொற் பொதுமை
கொண்டு காட்டியதனால், செம்மொழிச்சிலேடையுவமையணி; ‘தாவதுத்திதகர:
தமோமயம் – ராக்ஷஸம்விசகலய்யபாநுமாந்” பீமஸேநஇவ பார்த்த மாநஸாநி –
அம்புஜாநி தத்ருசே விகாஸயந்” என்றது, பாலபாரதம், கரமென்பது – கையுங்
கிரணமும். வனமென்பது – காடும் நீருமாம். ‘காய்ந்து கொண்டு’ என்பதில்
‘கொண்டு’ என்பது – அசைநிலை

எண் தகு கவர் மனத்து இடிம்பை, மன்மதன்
மண்டுஎரி சுடுதலின், வாடும் மேனியள்,
கொண்ட வெங் காதலின் குறிப்பை, அவ் வழிக்
கண்டனன்-காணலற் செற்ற காளையே.-வீமன் இடிம்பையின் குறிப்பை நோக்குதல்.

மண்டு மன்மதன் எரி சுடுதலின் – மிக்க காமனாகிய அக்கினி
சுடுதலினால், வாடும் – வாட்டமுற்ற, மேனியள் – மேனியையுடையளாகிய எண்
தகு கவர் மனத்து இடிம்பை – ஆலோசனை மிக்க கவர்ந்த [சஞ்சலப்பட்ட]
மனத்தையுடைய இடிம்பை, கொண்ட – (தன்மீது) கொண்ட, வெம் காதலின் –
வெவ்விய ஆசையினது, குறிப்பை-, காணலன் செற்ற காளை – பகைவனாகிய
இடிம்பனைக் கொன்ற வீமன், அ வழி கண்டனன்-அப்போது நோக்கினான்;
(எ-று.)

     தமையனைக் கொன்றபின்பும் காதல் கைவிஞ்சி ‘என்னை இவன் மணப்பனோ,
மாட்டானோ?’ என்று கவலைகொண்ட இடிம்பையின் நிலைமையை அப்போது
வீமன் கவனித்தா னென்க. காமத்துக்கு உரிய தலைவன் மன்மத னாதலால், ‘மன்
மதனெரி’ எனப்பட்டது; இச்சருக்கத்துப் பதினோராங்கவியில்
“அனங்கவெங்கனல்” என வந்ததுங் காண்க. 

மாய்ந்தவன் துணைவி! கேள்: வதுவை இன்னமும்
ஏய்ந்திலன், எம்முனும்; யாங்கள் மானுடர்;
ஆய்ந்துகொள் முறைமையால் அரக்கர் பாவை நீ;
காய்ந்தமை அறிதி, முன், கணை இராமனே.-வீமன் இடிம்பையை மணம் மறுத்தல்.

மாய்ந்தவன் துணைவி – இறந்தவனான இடிம்பனது தங்கையே!
கேள்-: எம்  முன்உம் – எங்கள் தமையனும், இன்னம் உம் வதுவை ஏய்ந்திலன்
– இன்னமும் மணஞ்செய்திலன்;) (அன்றியும்,) யாங்கள் மானிடர் – நாங்கள்
மனிதர்; நீ அரக்கர் பாவை – நீ இராக்கதப்பெண்: முறைமையால் ஆய்ந்து
கொள் – (இவற்றை) முறைமையால் ஆராய்ந்து (நான்உன்னைமணஞ்செய்தல்
தகுதியன்றென்று) கொள்வாய்; (மற்றும்), முன் – முற்காலத்தில், கணை இராமன் –
அம்பு செலுத்தலில்வல்ல [க்ஷத்திரியவீரனான] ஸ்ரீராமபிரான், காய்ந்தமை –
(சூர்ப்பணகை யென்னும் இராக்கதப் பெண்ணை மணம்மறுத்து) வெறுத்ததனை,
அறிதி – அறிவாயாக; – (எ-று.)- என்று இடிம்பையை நோக்கி வீமன் கூறின
னென்க.

      ‘மாய்ந்தவன் துணைவி’ என்ற விளி, உடன்பிறந்தவன் இறந்ததுபற்றி நீ
சோகிக்கவேண்டிய காலத்தில் அவனைக்கொன்ற என்னைக் காதலித்து
மணஞ்செய்யக் கருதுதல் அடாது என்ற  குறிப்பினது. ‘தமையன்
விவாகமின்றியிருக்கையில் தம்பி விவாகஞ் செய்துகொள்ளலாகாது’ என்ற
தருமசாஸ்திரக்கொள்கையை, ‘வதுவை இன்னமும் ஏய்ந்திலன் எம்முன்’ என
எடுத்துக் கூறினான். அரக்கரை மனிதர் மணக்கலாகா தென்பதை “வருத்த
நீங்கரக்கர் தம்மின் மானுடர் மணத்தல் நங்கை, பொருத்தமன் றென்று சாலப்
புலமையோர் புகல்வர்” என்ற இராமயணத்தாலும் அறிக. ராமலட்சுமணரைக்
காதலித்த சூர்ப்பணகை அங்கபங்கப் பட்டசெய்தி, ராமாயணத்திற் பிரசித்தம்.

ஆசை கொள் அரக்கியோடு அனிலன் காதலன்
பேசிய கட்டுரை கேட்ட பெற்ற தாய்,
‘ஓசை கொள் மைந்தரோடு உசாவி, நண்பினால்,
ஏசு அற உரைத்தனள், இனிமை கூரவே:.-இதுவும், அடுத்தகவியும் – குளகம்: இடிம்பையை
மணக்கும்படி வீமனுக்குக் குந்தி அநுமதி செய்தல்.

ஆசை கொள் அரக்கியோடு – (தன்மீது) காதல் கொண்ட
இடிம்பையுடனே, அனிலன் காதலன் – வாயுகுமாரனான வீமன், பேசிய-, கட்டுஉரை
– உறுதிமொழிகளை, கேட்ட,- பெற்ற தாய் – (வீமனைப்) பெற்ற தாயான குந்தி,
ஓசைகொள் மைந்தரோடு உசாவி – புகழ்பெற்ற தனதுமற்றைக்குமாரர் நால்வருடனும்
கலந்து ஆலோசித்து, நண்பினால் – அன்பினால், ஏசுஅற – குற்றம் நீங்க, –
இனிமை கூர – இனிமைமிக, உரைத்தனள் – (வீமனைநோக்கிச் சில) கூறினாள்;
(எ – று.)- அவற்றை, அடுத்த கவியிற் காண்க.

     நண்பினால் என்பதற்கு – அவர்களுடைய மனவொற்றுமையால் என்க.
பாலபாரதத்தில் “பாண்டுஸூநுருபலப்யமாத்ருத:*** பீமமா ப்ரஸவம் ஆதிசத்ஸு
தீ:” என்று வருவதற்கு ஏற்பவும்,” உறத்தகும் இவளை நீ யும்முன்வாய்மையால், ‘
“அன்னையுந்தம்முனுமறைந்த வாசகம்” என்று மேற்செய்யுள்களில்
வருவதற்கேற்பவும் ‘மைந்தனோடுசாவி’  என்று பாடம்இருக்கலாம்

மறுத்து உரைப்பது கடன் அன்று; மாந்தருக்கு
அறத்து இயல், ஆர்கணும் அமைதல் வேண்டுமால்;
உறத் தகும் இவளை நீ, உம்முன் வாய்மையால்;-
கறுத்தவர் உயிர் கவர் காளை!’ என்னவே.

கறுத்தவர் உயிர் கவர் காளை – கோபித்த பகைவர்களுடைய
உயிரை (உடம்பினின்று) கவர்கிற மகனே! மறுத்து உரைப்பது கடன் அன்று –
(தம்மிடத்துக் குறைவேண்டியவரை) மறுத்துப் பேசுவது முறைமையன்று;
மாந்தருக்கு ஆர்கண்உம் அறத்து இயல் அமைதல் வேண்டும் –
மனிதர்க்குஎவரிடத்தும் தருமத்தினியல்பு பொருந்தவேண்டும்; உம்முன்
வாய்மையால் இவளை நீ உற தகும் – உனது தமையன் சொற்படி இவளை நீ
மணஞ் செய்தல் தகும்,’ என்ன – என்று,- (எ-று.)- ‘உரைத்தனள்’ (22) என
கீழ்க் கவியோடு இயையும். ஆல் – ஈற்றசை.

     தமையன் விவாகமின்றியிருக்கையிலும் அவன் அனுமதி செய்தால் தம்பி
மணஞ்செய்துகொள்ளலா மென்பது நூற்கொள்கையாதலால், ‘இவளை நீ
உம்முன்வாய்மையால் உறத்தகும்’ என்றாள். பகைத்தவரை அழித்தல் போலவே
அன்பு கொண்டு சரணமடைந்தவரை ஆதரித்து அருள்வதும் தகுதி என்பாள்
‘கறுத்தவருயிர்கவர் காளை மறுத்துரைப்பது கடனன்று’ என்றும்,
இம்முறைமையை அரக்கர்விஷயத்திலும் ஒழியலாகா தென்பாள் ‘மாந்தருக்கு
அறத்தியல் ஆர்கணும் அமைதல் வேண்டும்’ என்றுங் கூறினாள்.

அத் தினத்து, அவர்வயின் அவலம் நீக்குவான்,
மெய்த் தவப் பழ மறை வியாதன் வந்தனன்;
பத்தியின் சிறுவரும் பணிந்து போற்றினார்;
முத்தி பெற்றவரினும் முற்றும் சிந்தையார்.-அங்கு வியாசமுனி எழுந்தருள, பாண்டவர் உபசரித்தல்.

அ தினத்து – அந்நாளில், அவர்வயின் அவலம் நீக்குவான் –
அவர்களுக்குநேர்ந்த வருத்தத்தை நீக்கும்பொருட்டு, மெய் தவம்
பழமறைவியாதன் வந்தனன் – உண்மையான தவத்தை யுடையவனும் பழமையான
வேதங்களை வகுத்தருளியவனு மாகிய வியாசமுனிவன் (அங்கு) வந்தருளினான்;
(அதுகண்டு), சிறுவர் உம் – இளம்பிள்ளைகளான பாண்டவர்களும், முத்தி
பெற்றவரின் உம் முற்றும் சிந்தையார் – மோக்ஷமடைந்தவர்களினும் (ஆனந்தம்)
மிக்கமனத்தையுடையவர்களாய், பத்தியின் பணிந்து போற்றினார் – பக்தியோடு
(அவனை) வணங்கித் துதித்தார்கள்; (எ-று.)

     அவலம் நீக்குதல் – துரியோதனனது சூழ்ச்சியால் நேர்ந்த மனவருத்தத்தைத்
தணித்தல். மெய்த்தவம் – ஒழுக்கத்திலும் பயனிலும் தவறாத தவம். ‘முந்துஞ்
சிந்தையார்’ என்றும் பாடம்.    

தனி வனம் இகந்து, நீர் சாலிகோத்திர
முனி வனம் சில பகல் வைகி, முந்துற,
மனன் உறப் பார்ப்பன மாக்கள் ஆகியே,
இனிமையின் வேத்திரகீயம் எய்துவீர்!‘-வியாசன் பாண்டவர்க்குக் கூறிய நன்மொழி.

இரண்டுகவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) நீர் – நீங்கள், தனி வனம் இகந்து – தனிமையான காட்டைக்
கடந்து, முந்துற – முந்தி, சாலிகோத்திர முனி வனம் சில பகல் வைகி –
இங்குள்ளசாலிகோத்திரனென்னும் முனிவனது வனத்தில் சிலநாள் இருந்து,
(பின்பு), மனன் உற பார்ப்பனமாக்கள் ஆகி – (கண்டார் எவரும்) மனத்தால்
நம்பும்படி பிராமண வேடங்கொண்டு, வேதத்திரகீயம் இனிமையின் எய்துவீர் –
வேத்திரகீயத்தை இனிது சேர்வீராக; (எ-று.)

     தனிவனம் – மநுஷ்யசஞ்சார மில்லாத வனம், துரியோதனாதியரால் இன்னா
ரென்று அறிந்து இடரிழைக்க வொண்ணாதபடி வேற்றுவேடங்கொள்ளச் சொல்லின
னென்க. புருபுண்ணிய னென்னும் முனிவன் இல்லறம் நடத்துகையில் பிள்ளை
யில்லாக் குறையால் சாஸ்திர விதிப்படி சாலியஜ்ஞத்தைப் புரிகையில் பிரதியட்சமான
திருமாலின் அநுக்கிரகத்தாற் பிறந்த குமாரனுக்குச் சாலிகோத்திரனென்ற பெயர்
அத்திருமால் கட்டளையின் படி வைக்கப்பட்டது என வரலாறு அறிக;
சாலிஹோத்ரன் – சாலி யென்ற நெல்லின் ஹோமத்தினால் தோன்றியவன்.

எனத் தம படர் ஒழித்து, இமையவன் செல,
வனத்தை விட்டு அவ் வனம் மருவி வைகினார்-
வினைப்படுத்து, யாழினோர் முறையின் வேள்வி செய்
கனக்குழல் கன்னிதன் காதலானொடே.-பாண்டவர்கள் சாலிகோத்திரவனம் சேர்தல்.

என – என்றுசொல்லி, தம படர் ஒழித்து – தங்களுடைய
மனத்துயரத்தை நீக்கி, இமையவன் – வியாசமாமுனிவன், செல – செல்ல,-
(தருமன் முதலியோர்),- வினை படுத்து – மேற் செய்யவேண்டிய தொழிலில்
மனம்பொருந்தி,- யாழினோர் முறையின் – காந்தருவமுறைப்படி, வேள்விசெய் –
மணஞ்செய்த, கனம் குழல் கன்னி தன் – மேகம்போன்ற கரிய கூந்தலையுடைய
இளம் பெண்ணான இடிம்பியினது, காதலானொடே – கணவனானவீமனுடனே, –
வனத்தை விட்டு – அவ்விடிம்பவனத்தைவிட்டு, அ வனம் மருவி வைகினார் –
அந்தச் சாலிகோத்திரமுனிவனத்தைச் சேர்ந்து அங்கு வசித்தார்கள்;(எ-று.)

     நல்வினைப்பயனால் தனியே ஒருவரையொருவர் சந்தித்துக் கூடுகிற
கந்தர்வர்களின் வழக்கத்தைத் தழுவிய மணமாதலால், இது, காந்தர்வ மென்று
பெயர்பெறும்: இதற்கு ‘யாழோர்கூட்டம்’ என்று தமிழிற் பெயர். கந்தர்வர்
வீணைகைக்கொண்டு இசை பாடுந் தன்மைய ராதலால், ‘யாழினோர்’ எனப்
பட்டனர். திருமாலினது திருவவதாரமூர்த்தி யாதலால், வியாசன், ‘இமையவன்’
என்று சிறப்பித்துக் கூறப்பட்டான். அன்றியும், சிறந்த முனிவர் சிறுபான்மை
‘கடவுளர்’ என வழங்கப்படுவர். இடிம்பை அழகிய வடிவங்கொண்டு
வந்ததனால், ‘கனக்குழற்கன்னி’ எனப்பட்டாள்.

குந்தியை, இரவும் நன் பகலும், கோது இலா
வந்தனை புரிதலின், மகிழ் இடிம்பையும்,
வெந் திறல் வீமனும் விழைந்து, வள்ளியும்,
கந்தனும் என, பெருங் காதல் கூரவே.-இதுவும், அடுத்த கவியும் – குளகம்: வீமனும் இடிம்பியும்
உல்லாசமாகக் கூடிக்குலாவல்.

இரவுஉம் – இராத்திரியிலும், நல்பகல்உம் – நல்ல பகற்
காலத்திலும் [எப்பொழுதும் என்றபடி], குந்தியை – (தனது மாமியாகிய)
குந்திதேவிக்கு, கோது இலா வந்தனை புரிதலின் – குற்றமில்லாத வந்தனை
வழிபாடுகளைச் செய்தலிலே, மகிழ் – மகிழ்ச்சி கொண்ட, இடிம்பையும்-, வெம்
திறல் – (பகைவர்க்குக்) கொடிய வலிமையையுடைய, வீமனும்,- வள்ளிஉம்
கந்தன்உம் என – வள்ளியம்மையும் முருகக்கடவுளும்போல, விழைந்து – (ஒருவரை
யொருவர்) விரும்பி, பெரு காதல் கூர – மிக்க அன்பு வளர,- (எ-று.)- ‘மணம்
புணர்ந்தனர்’ என் வருங் கவியோடு முடியும்.

     முருகக்கடவுள் வள்ளிமலையில் வந்து அங்குவளர்ந்துவந்த
வள்ளியம்மையைக்காந்தருவமணம் புணர்ந்து மலைச்சாரலில் சுனைக்கரையிலும்
தினைப்புனத்திலும் மலர்ப்பொழிலிலும் அவளுடன் கூடிக்குலாவியமை,
புராணங்களிற் பிரசித்தம். வள்ளி – முருகக் கடவுளின் மனைவியரிருவருள்
ஒருத்தி; (மற்றொருத்தி – தேவயானை.) வள்ளிக்கிழங்கு தோன்றிய குழியிலே
பிறந்தமை பற்றி, இவளுக்கு வள்ளியென்று பெயர். 

மான்மதம் கமழ் கொடி மந்திரம்தொறும்,
கான் மணம் கமழ் தடங் கா அகம்தொறும்,
தேன் மிகு சுனை நெடுஞ் சிலம்பு அகம்தொறும்,
மேல் மணம் புரிந்தனர், வேட்கை விஞ்சவே.

மான்மதம் கமழ்-கஸ்தூரிமணம் வீசப்பெற்ற, கொடி மந்திரம்
தொறுஉம் – கொடிவீடுகளிலும், கான் மணம் கமழ் – மிக்க நறுமணம் வீசுகிற,
தட கா அகம் தொறுஉம் – பெரியசோலைகளினிடங்களிலும், தேன் மிகும் சுனை
– தேன்மிக்க சுனைகளையுடைய, நெடு சிலம்பு அகம் தொறுஉம் – பெரிய
மலைகளினிடங்களிலும், வேட்கை விஞ்ச – ஆசைமிக, மேல் மணம் புணர்ந்தனர்
– மேன்மையான கலவியின்பத்தை அனுபவித்தார்கள்; (எ-று.)

     மான்மதம் – கஸ்தூரியென்னும் ஒருசாதிமானினது கொழுப்பு: இது, குறிஞ்சி
நிலப்பொருள்களுள் ஒன்றாதலின், இங்குக் கூறப்பட்டது. கொடிமந்திரம் –
பூங்கொடிகளின் படர்ச்சியால் வீடுபோல் அடர்ந்த இடம், லதாக்ருஹ
மெனப்படும், சுனையில்தேன், நீர்ப் பூக்களினின்றும் கரைமரங்களினின்றும்
பெருகியவை. ‘மணம் புரிந்தனர்’ என்றும் பாடம் உண்டு.

நிறம் திகழ் இருட் பிழம்பு என்ன நீண்டு, அறப்
புறம் தரும் உரோமமும், பொருப்புத் தோள்களும்,
மறம் தரு கனை குரல் வாயும், ஆகவே,
பிறந்தனன்-கடோற்கசன் என்னும் பேரினான்.-இடிம்பை கடோற்கசனென்ற மகனைப் பெறுதல்.

அற புறம் தரும் உரோமம்உம் – மிகுதியாக முதுகிலே பொருந்திய
மயிர்களும், பொருப்பு தோள்கள்உம் – மலைகள் போன்ற தோள்களும், மறம்
தரு கனை குரல் வாய்உம் ஆக – பெரு வலிமையைக் காட்டுகிற கர்ச்சிக்கும்
ஒலியையுடைய வாயும் பொருந்த,- நிறம் திகழ் இருள் பிழம்பு என்ன நீண்ட –
கருநிளம் விளங்குகிற இருளின் தொகுதிபோல(க் கரியதாய்) வளர்ந்த
வடிவமுடையனாய்,- கடோற்கசன் என்னும் பேரினான் – கடோத்கசனென்னும்
பெயரையுடைய மகன், பிறந்தனன் – (இடிம்பையினிடம்) தோன்றினான்;

     கடம் – குடம்: உத்கசம் மயிரில்லாதது: இவனுடைய, குடம் போன்றதலை
மயிரின்றி யிருந்ததனால், கடோத்கசனென்று இவனுக்குப் பெயரிடப்பட்டதென்று
வடநூல் கூறும். ‘இருட்பிழம்பென்ன நீண்டு’ என்று அவனது கரியபெரியவடிவுக்கு
உவமைகூறினார். 

காதிய திறல் நரகாசுரன்தனை,
ஆதி வெங் கோலம், அன்று அளித்த ஆறுபோல்,
மேதினி மதித்த போர் வீமன் நல்கிய,
சோதி அம் புதல்வனும் தொழுது சொல்லுவான்:-கடோற்கசன் பாண்டவரை வணங்குதல்.

வெம் ஆதி கோலம் – வெவ்விய ஆதிவராகமூர்த்தி, காதிய திறல்
நரகாசுரன்தனை – (அனைவரையும்) தாக்கியழிக்கவல்ல வலிமையையுடைய
நரகாசுரனை, அன்று – அக்காலத்தில் [முன்பு] அளித்த ஆறுபோல் – பெற்ற
விதம்போல, மேதினி மதித்த போர் வீமன் நல்கிய – பூமியிலுள்ளோர் யாவரும்
கொண்டாடும் போரையுடைய வீமன்பெற்ற, சோதி அம் புதல்வன்உம் –
ஒளியையுடைய புத்திரனான கடோற்கசனும், தொழுது சொல்லுவான் –
(பாண்டவர்களை) வணங்கி (அவரைநோக்கிச்) சொல்லுவான்; (எ -று.)- அதனை,
அடுத்த கவியிற் காண்க.

     பிரளயசலத்தில் முழுகியிருந்த பூமியைத் திருமால் வராகாவதாரஞ்செய்தருளிக்
கோட்டு நுனியாலே யெடுத்தபொழுது அத்திருமாலினது பரிசத்தாற் பூமிதேவியினிடம்
ஒரு குமாரன் பிறந்தனனென்றும், அஸமயத்திற் சேர்ந்து பெறப்பட்டதனால் அவன்
அசுரத்தன்மைபூண்டு நரகனென்று பெயர்பெற்று எல்லாப் பிராணிகளையும் மிகவும்
வருத்திவந்தன னென்றும், பின்பு அவனைத் திருமால்தானே
க்ருஷ்ணாவதாரத்திற்கொன்றருளின னென்றும் உணர்க. முன்னொருகாலத்திற்
சிவபிரான் அளித்த வரத்தின்படி, இராக்கத ஸ்திரீகளுக்குப் பிறக்கும் பிள்ளைகள்
பிறந்தபொழுது தாயினவ்வளவு பருவவளர்ச்சியுறுதலால், கடோத்கசன் பிறந்தவுடனே
பாண்டவரைத்தொழுது பேசுவானாயினனென அறிக. சோதியம் புதல்வன், அம் –
சாரியை.      

நிறையுடைத் தந்தையர்! நீர் நினைத்த போது,
உறைவு இடத்து எய்தி, ஆங்கு உரைத்த செய்குவேன்;
இறைவ! இப் பணி, விடை, தருக!’ என்று ஏகினான்,
பிறை எயிற்று யாயொடும், பெற்ற பிள்ளையே.-பாண்டவரிடம் விடைபெற்றுக் கடோற்கசனும்
இடிம்பியும்சேறல்.

நிறை உடை தந்தையர் – நற்குணநிறைவையுடைய தந்தையர்களே!
நீர் நினைத்த போது – நீங்கள் (என்னை) நினைக்கும் பொழுது, உறைவு இடத்து
எய்தி – (நீங்கள்) வசிக்குமிடத்தில் (நான்) வந்து, ஆங்கு உரைத்த செய்குவேன்
– அவ்விடத்து (நீங்கள்) சொன்னவற்றைச் செய்வேன்; இறைவர் – தலைவர்களே!
இ பணிவிடை தருக – இந்தக்கட்டளையையும் விடையையும் (எனக்குத்)
தந்தருள்வீராக’, என்று – என்றுவேண்டி,- பிறை எயிறு யாயொடுஉம் –
பிறைச்சந்திரன் போன்ற கோரதந்தங்களையுடைய (தன்) தாயாகிய இடிம்பையுடன்,
பெற்ற பிள்ளை – அவள்பெற்ற மகனான கடோற்கசன், ஏகினான் –
(இடிம்பவனத்துக்குச்) சென்றான்;

     வீமன், இடிம்பையை மணக்கும்போது கூறிய வாக்குப்படியே மகன்
பிறந்தபின் அவள் அவனைவிட்டு நீங்கின ளென்பதை, முதனூலால் அறிக.
இங்கே, ‘பிறையெயிற்றியாய்’ என்றது, அவளது இயல்பாகிய அரக்கிவடிவத்தை.
‘இறைவ’ என்றும், ‘இப்படி விடைதருக’ என்றும் பாடமுண்டு.

சாத்திரம் மறை தெரி முனிவர் தன்மையின்
காத்திரம் மாறி, அக் காவல் வேந்தரும்,
கோத்திரம், சூத்திரம், குடி, உரைத்துளார்,
வேத்திரகீய மா நகரில் மேயினார்.-பாண்டவர் பிராமணவேடங்கொண்டு வேத்திரகீயஞ் சார்தல்.

அ காவல் வேந்தர்உம் – (பூமிமுழுவதையுங்) காக்குந் தொழிலுக்கு
உரிய அரசர்களாகிய அந்தப்பாண்டவர்களும், சாத்திரம் மறை தெரி முனிவர்
தன்மையின் காத்திரம் மாறி – சாஸ்திரங்களையும் வேதங்களையும் அறிந்த
அந்தணர்களுடைய வேடமாக வடிவம்மாறி, கோத்திரம் சூத்திரம் குடி
உரைத்துளார்- (அவ்வேடத்திற்கு ஏற்றபடி) ஒரு கோத்திரத்தையும்
சூத்திரத்தையும் குடிப் பெயரையும் கற்பித்துச் சொல்லிக்கொண்டு, வேத்திரகீயம்
மா நகரில்-, மேயினார் – போய்ச் சேர்ந்தார்கள்; (எ-று.)

     வேத்திரகீயநகரத்திற் சேர்ந்தாரென்று பாலபாரதமும் கூறும். பாண்டவர்
சேர்ந்தநகரம் ஏகசக்கரநகரமென்பதும், அங்கு இவர்களுறைந்தஇடம்
வேத்திரகீயமெனப்படுமென்பதும் வியாசபாரதத்தாற் பெறப்படும். ஆகவே,
வேத்திரகீயமா நகரம் என்பதற்கு – வேத்திரகீயம் என்ற இடத்தைத் தன்னிற்
கொண்ட ஏகசக்கரநகரமெனப் பொருள்காணலாம். சாஸ்திரம் – தருக்கம்
வியாகரணம் வேதாந்தம் முதலியன. கோத்திரம் – பாரத்வாஜம், ஆத்ரேயம்
போல்வன. சூத்திரம் – ஆபஸ்தம்பம், ஆச்வலாயநம் போல்வன. குடிப்பெயர்
ஏற்றபடி  கண்டுகொள்க.

அந்தணர் ஐவரும், யாயும், அந் நகர்
வந்துழி, அதிதியர் வரவு காண்டலும்,
முந்துபு முந்துபு முகமன் கூறினார்,
செந் தழல் வேள்வி கூர் ஆதிதேயரே.-அவர்கள்வரவுக்கு அவ்வூரந்தணர் மகிழ்தல்.

அந்தணர் ஐவர்உம் – பிரமணராகிய பாண்டவர் ஐந்துபேரும்,
யாய்உம் – அவர்கள் தாயும், அ நகர் வந்த உழி – அந்த நகரத்திற்கு வந்த
பொழுது,- அதிதியர் வரவு காண்டலும் – அந்த விருந்தினர்களுடைய
வருகையைக் கண்டவளவிலே, செம் தழல் வேள்வி கூர் ஆதிதேவர் –
செந்நிறமான அக்கினியினிடத்து யாகஞ் செய்தலில் மிக்கவர்களான [சிறந்த]
பிராமணர்கள், முந்துபு முந்துபு முகமன் கூறினார் – ஒருவரினும் ஒருவர்
முற்பட்டு எதிர்கொண்டு வந்து உபசாரவார்த்தை சொன்னார்கள்; (எ-று.)

     ஆதிதேயரே என்ற பாடத்துக்கு அதிதிபூசையைச் செய்பவரென்க.
இச்செய்யுள் வியாசபாரதத்தையொட்டி யெழுதியது.   

நல் மனைவாழ்க்கையில் நயந்த சிந்தையான்,
மன் மனை அனைய தன் மனையில், ஓர் முனி,
தன்மனை, ‘அம்மனை தம்பிமாரொடும்
என் மனை வருக!’ என எதிர்கொண்டு ஏகினான்.-அவர்களை ஓரந்தணன் தன்மனைக்கு அழைத்துச் செல்லுதல்.

நல் மனை வாழ்க்கையில் நயந்த சிந்தையான் – சிறந்த
இல்லறவாழ்விலே விரும்பிய மனத்தையுடையனாகிய, ஓர் முனி – ஓர்
அந்தணன்,- தன்மனை – தருமபுத்திரனை, அம்மனை – தாயோடும்,
தம்பிமாரொடும்- என் மனை வருக என – என்வீட்டுக்கு வருவீராக
என்றுசொல்லி, எதிர்கொண்டு-எதிர்சென்று உபசரித்து, மன் மனை அனைய
தன்மனையில் – இராசமாளிகையைப்போன்ற தன்வீட்டில், ஏகினான் –
அழைத்துச்சென்றான்;(எ-று.)

     இல்லறம் அனைவர்க்கும் உதவக்கூடியதாய்ச் சிறத்தலால், ‘நன்
மனைவாழ்க்கை’ எனப்பட்டது. பொருள்வளத்திலும் பெருமையிலும் மிக்க வீடு
என்றதற்கு, இராசகிருகத்தை உவமை கூறினார். 

ஒரு தினத்து அமுது என, உள்ள நாள் எலாம்,
வரும் முறைப்படி விருந்து அயின்று வைகினார்;-
அரு நெறிக் கடவுளர்க்கு அமுதம் ஊட்டுதல்
இருபிறப்பாளருக்கு என்றும் தன்மையே.-பாண்டவர்கள் அவ்வூரில் விருந்துண்டு காலங்
கழித்தல்

ஒரு தினத்து அமிழ்து என – ஒருநாளையுணவுபெற்றாற்
போலவே, உள்ள நாள் எலாம் – மற்றுமுள்ள எல்லாநாள்களிலும், வரு முறை
படி – (பிராமணசாதிக்குத் தொன்றுதொட்டு) வருகின்ற முறைமைப்படி, விருந்து
ஆகி வைகினார் – (பாண்டவரும் குந்தியும்) விருந்தினராய் (அவ்வூரில்)
தங்கியிருந்தார்கள்; அரு நெறி கடவுளர்க்கு அமுதம் ஊட்டுதல் –
அருமையானவழியில் (நடந்து தேசாந்தரிகளாய்) வந்த அந்தணர்களுக்கு இனிய
உணவை உண்பித்தல், இருபிறப்பாளருக்கு என்றுஉம் தன்மைஏ –
அந்தணர்களுக்கு என்றுமுள்ள இயல்பேயாம்; (எ-று.)

     ஒருநாள்போலவே அவ்வூரில் இருந்த நாள்களிலெல்லாம் அவர்கள்
ஒவ்வொருவீட்டில் ஒவ்வொருநாளைக்கு விருந்தினராய்ச் சென்று அவ்வவ்வீட்டுக்கு
உரிய அந்தணரால் உபசாரத்தோடு இன்னுண வளிக்கப்பெற்று வாழ்ந்தன ரென்ற
சிறப்புப்பொருளை, வழிப்போக்கராய்நேர்ந்த அந்தணர்க்கு விருந்திட்டு உதவுதல்
பிராமண சாதியார்க்கு இயற்கையே யென்ற பொதுப்பொருள்கொண்டு
விளக்கியதனால், வேற்றுப்பொருள்வைப்பணி. ‘வருமுறைப்படி’ என்பதற்கு –
நாள்தோறும் முறையே ஒவ்வொரு வீட்டுக்குச்சென்று என்றுமாம். பூமியில்
தேவர்போலக் கொண்டாடப்படுதலால், அந்தணர், ‘கடவுளர் எனப்பட்டனர்.
தாய்வயிற்றிற் பிறத்தலாகிய இயற்கைச் சன்மத்தோடு உபநயநச்சடங்கினால்வருகிற
ஞானசன்மமும் ஒருபிறப்பாமென்பது நூற்கொள்கையாதலால், இருபிறப்பாள
ரென்றது. அமுதென, விருந்தயின்று என்று பாடபேதங்கள்.

பொன்னகர் அணுகினர் போல நெஞ்சுற,
தம் நகர் எனும்படி, தாயும் மைந்தரும்,
இந் நகர் அநேக நாள் இருந்த எல்லையில்,
அந் நகர் புரிந்தது ஓர் ஆண்மை கூறுவாம்:-அக்காலத்து அங்கு நடந்த ஓர்செய்தி கூறத்
தொடங்கல்: கவிக்கூற்று

தாய்உம் மைந்தர்உம் – குந்தியும் பாண்டவர்களும், தம் நகர்
எனும்படி – தங்களுடைய (சொந்த) நகர மென்றுசொல்லும்படி, இ நகர் –
இந்தவேத்திரகீயநகரத்தில், பொன் நகர் அணுகினர் போல நெஞ்சு உற –
பொன்மயமான (தேவலோகத்து) அமராவதிநகரத்தை யடைந்தவர்கள் போல
மனம்மகிழ, அநேகம் நாள் இருந்த எல்லையில்-, அ நகர் புரிந்தது ஓர்
ஆண்மை -அந்நகரத்திற்செய்த ஒருவீரத்தை,கூறுவாம்-(யாம்) இனிச்சொல்லுவோம்;
(எ-று.)- அதனை, இச்சருக்கம்  முடியுமளவுங் காண்க

மறையும் உருவினொடு அரிய குரு குல மகிபர்
நெடு வன சரிதராய்,
உறையும் வள மனை உடைய மடவரல், உருகு
பிரதைதன் உயிரனாள்,
குறைவு இல் பொலிவினள்; விரத நெறியினள்; குழுவு
நிதியினள்; கொடுமையால்,
இறையும் ஒழிவு அற இரு கண் அறல் வர, எரி கொள் கொடி
என இனையினாள்.-பாண்டவர் வசிக்கிற வீட்டுக்கு உரிய பார்ப்பனி
ஒருநாள்புலம்புதல்.

அரிய குரு குல மகிபர் – அருமையான குருகுலத்து
அரசர்களாகிய பாண்டவர்கள், மறையும் உறைவினொடு – மறைந்த
வடிவத்துடனே [மாறுவேடங்கொண்டு], நெடு வனம் சரிதர் ஆய் – பெரிய
காட்டிற் சஞ்சரிப்பவர்களாகி, உறையும் – (அவ்வூரில்) வசித்திருக்கிற, வளம்
மனை – செல்வவளம்நிறைந்த வீட்டுக்கு, உடைய -உரிமையுடைய, மடவரல் –
பெண்,- உருகு பிரதைதன் உயிர்அனாள் – (கருணையால்)
மனமுருகுந்தன்மையுள்ள – குந்தியின் உயிர்போன்றவள்: குறைவு இல்
பொலிவினள் – குறைவில்லாத [நிறைந்த]அழகுடையவள்; விரதம் நெறியினள் –
நோன்புகளைத்தவறாமல் அனுட்டிக்கும் முறைமையுடையவள்: குழுவு நிதியினள்
– மிகுதியாகத் திரண்ட செல்வத்தையுடையவள்; (அவள்), கொடுமையாள் –
(பகாசுரனால்நிகழுங்) கொடுமைகாரணமாக,- இறைஉம் ஒழிவு அற இரு கண்
அறல் வர – சிறிதும் இடைவிடுதலில்லாமல் (தனது) இரண்டு கண்களினின்றும்
சோகநீர் சொரிய,- எரி கொள் கொடி என – தீப்பற்றிய பூங்கொடி போல,
(தவித்து), இளையினாள்-வருந்தினாள்;

     துயருறுங் கணவனுடைய மடியிலிருக்கும் இருமக்களைத் தழுவிக்கொண்டு
அந்தணி யழ, குந்திதேவி வினாவின ளென விவரம் காண்க. பாண்டவரோடு
குந்தியைத் தன்மனையிலிருத்தி மிகவும் உபசரித்து வந்தமைபற்றிக் குந்தியினால்
உயிர்போலப் பாவித்து மிகவும் அன்புசெய்யப்பட்டு நின்றவளென்பார், ‘உருகு
பிரதைதனுயிரனாள்’ என்றார்.

     இதுமுதற் பதின்மூன்றுகவிகள் – பெரும்பாலும் ஒன்று மூன்று
ஐந்தாஞ்சீர்கள் மாச்சீர்களும், மற்றைநான்கும் விளச்சீர்களுமாகிவந்த
எழுசீராசிரியச்சந்தவிருத்தங்கள், தனன தன தன தனன தனதன தனன தனதன
தனதனா என்பது, இதுமுதல் மூன்று கவிகளுக்குச் சந்தக்குழப்பு

மறுகி அழுவது என்? மொழிக, முனிவரன் மனைவி!’ என
இவள் வினவலும்,
குறுகி, அவளுடன் உரைசெய்குவள், உறு குறையை உளம்
நனி குறையவே:
‘முறுகு சின அனல் பொழியும் விழியினன், முகன் இல் பகன்
எனும் முரணுடைத்
தறுகண் நிசிசரன், உளன்; இவ் வள நகர் தழுவும் வனன்
உறை தகுதியான்;-இதுமுதல் ஆறுகவிகள் – ஒருதொடர்: ‘புலம்புவானேன்?’
என்று வினவிய குந்திக்குப் பார்ப்பனி
பகன் செய்தியைக் கூறல்.

முனிவரன் மனைவி – சிறந்த அந்தணனுடைய மனைவியே! மறுகி
அழுவது என் – (நீ) கலங்கிப் புலம்புவதுயாதுகாரணத்தால்? மொழிக –
சொல்வாயாக’, என -, இவள் வினவலும் – இக்குந்தி கேட்டவளவிலே,-
(அப்பார்ப்பனி), குறுகி – அருகில்வந்து, உறு குறையை – (தனக்கு) நேர்ந்த
மனக்குறையை, உளம் நனி குறைய – மனம்மிகவும் மெலிய, அவளுடன்
உரைசெய்குவள் – அக்குந்தியுடள் கூறுவாள்:- முறுகுசினம்
அனல்பொழியும்விழியினன்- மிக்க கோபாக்கினியைச் சொரிகின்ற
கண்களையுடையவனாகிய, முகன் இல் பகன் எனும் – கண்ணோட்டமில்லாத
பகனென்கிற, முரண் உடை தறுகண் நிசிசரன் – வலிமையுடைய
வன்கண்மையுள்ளவனாகிய இராக்கத னொருவன், இ வளம் நகர் தழுவும் வனன்
உறை தகுதியான் – வளன்களையுடைய இந்த நகரத்தைச்சார்ந்த காட்டில்
வசிக்கும் உரிமையுடையவனாய், உளன் – இருக்கின்றான்;

     முகன் – இலக்கணையாய், அன்போடு முகங்கொடுத்தலைஉணர்த்தும். இந்நகரத்தையடுத்தயமுனைக்கரையில் அரக்கன் வசிக்கின்றா னென்று
பாலபாரதம் கூறும். வனன் =வனம்

அருள் இல் இதயமும், நெறி இல் சரிதமும், அழகு இல்
உருவமும், அதிர் குரல்
பொருள் இல் உரைகளும், உடையன்; முழுது உடல் புலவு
கமழ்தரு பொறியினன்;
மருளும் நரியொடு கழுகு தொடர்தர, வலிய பிணம் நுகர்
சுவை அறாது,
இருளின்மிசை இரு பிறைகள் என வளை எயிறு நிலவு
எழும் இதழினான்;

(அவ்வரக்கன்),- அருள் இல் இதயம்உம்-கருணையில்லாத
மனத்தையும், நெறி இல் சரிதம்உம் – நல்வழியில்லாத ஒழுக்கத்தையும், அழகு
இல் உருவம்உம் – அழகில்லாதகோரரூபத்தையும், அதிர் குரல் – முழங்குகிற
கர்ச்சனையொலியையும், பொருள் இல் உரைகள்உம் – பயனில்லாத
பேச்சுக்களையும், உடையன் – உடையவன்; முழுது உடல் – உடம்பு முழுவதும்,
புலவு கமழ் தரு – புலால் நாற்றம் வீசுகிற, பொறியினன் –
அடையாளத்தையுடையவன்; மருளும்நரியொடு கழுகு தொடர்தர –
(காண்பவர்மனம்) வெருளும்படியுள்ள நரிகளும் கழுகுகளும் விடாதுதொடர,
வலிய பிணம் நுகர் சுவை அறாது – வலிய பிணங்களைத் தின்னும் உருசி
நீங்காமல், இருளின்மிசை இரு பிறைகள் என வளை எயிறு நிலவுஎழும் –
இருளின்மேல் இரண்டுபிறைகள் (விளங்கினாற்) போல வளைந்த கோரதந்தங்கள்
(இரண்டு கடைவாயிலும்) வெள்ளொளி வீசப் பெற்ற, இதழினான் –
வாயிதழையுடையவன்; (எ-று.)

     தொடர்தர அறாது எழும் இத ழென்க. நரியுங் கழுகுந்தொடர்தல்,
தசையினிடத்து நசையால். கரியவடிவத்தில் விளங்கும் பற்களுக்கு,
இருளின்மிசைப் பிறைகள் உவமையாம். ‘உடல் முழுதும் புலால்நாறும் பொறி’
என்றது, உயிர்நீங்கிய உடல்களை மிகுதியாகத் தின்னும்போது அவற்றினின்று
மேலேதெறித்த இரத்தம் முதலியவற்றால் ஆகிய அடையாளங்களைக் குறிக்கும்.
பீபத்ஸரஸ மெனப்படும் இழிப்புச்சுவைக்கு இச்செய்யுள் உதாரணமாம்.
‘பொறியிலன்’ என்றும் பாடம். 

அந்தகனும் மிக அஞ்சி முதுகிடும் அந்த நிசிசரன், இந்த ஊர்
வந்து, குடியொடு கொன்று, பலரையும் மன்ற மறுகிடை தின்ற நாள்,
எந்தை முதலிய அந்தணரும், அவன் இங்கு வருதொழில் அஞ்சியே,
சிந்தை மெலிவுற நொந்து, தலைமிசை சென்று குவிதரு செங் கையார்

அந்தகண்உம் மிக அஞ்சி முதுகு இடும் – யமனும் மிகப்பயந்து
(முன்நின்று எதிர்க்கமாட்டாமல்) புறங்கொடுக்கும் படியாகவுள்ள, அந்த நிசிசரன்
– அந்த அரக்கன், இந்த ஊர் வந்து – இந்த ஊரினுள்ளேவந்து, பலரைஉம் –
இவ்வூரார் பலரையும், குடியொடு- (அவரவர்) குடும்பத்துடனே, மன்ற –
மிகுதியாக, கொன்று-, மறுகிடை – தெருவுகளிலே, தின்ற நாள் – தின்ற
நாளிலே,- எந்தை முதலிய அந்தணர்உம் – எனது தந்தைமுதலான
பிராமணர்களும், அவன் இங்கு வரு தொழில் அஞ்சி – அவன் இங்கேவந்த
செயலுக்குப்பயந்து, சிந்தை மெலிவு உற நொந்து – மனம்சோர்வடைய வருந்தி,
தலைமிசை சென்று குவிதரு செம்கையார்- (அச்சமிகுதியால் தாமாகவே)
தலைமேற் சென்றுகுவிந்து தொழுகிற சிவந்த கையையுடையவர்களாய்,-(எ-று.)-
‘என்றலும்’ என அடுத்த கவியோடு குளகமாய்த் தொடரும்.

     அந்தகன் – பிராணிகளுக்கு அந்தத்தைச் செய்பவன்; அந்தம் – அழிவு.
தலைமிசைக் குவி தரு செங்கையராய்ச் சென்று எனக்கூட்டி யுரைப்பினும்
அமையும். மறுகிடைதின்ற – சந்தவின்பத்திற்காக வலிமிகவில்லை.

     தந்த தனதன தந்த தனதன தந்த தனதன தந்தனா என்பது, இந்தக்
கவிக்குச் சந்தக்குழிப்பாம்

‘ஒன்றுபட, எதிர் கொன்று, பலர் உயிர் உண்பது அறநெறி அன்று, நீ;
இன்றுமுதல் இனி என்றும், முறை முறை எங்கள் மனைதொறும்,
விஞ்சையோர்
குன்றம் என ஒரு பண்டி அறு சுவை கொண்ட அடிசிலும், நம் குலம்
துன்றும் நரபலி ஒன்றும், இவை திறை தொண்டு புரிகுவம்’ என்றலும்,

‘நீ-, ஒன்றுபட – ஒருசேர, எதிர் – எங்கள் எதிரிலே, பலர் உயிர்
கொன்று உண்பது – பலருடைய உயிரைநீக்கி (உடலைப்) புசிப்பது, அறம் நெறி
அன்று – தருமமார்க்கமன்று; இன்று முதல் இனி என்றும் – இன்றைநாள்முதல்
இனிமேல் என்றைக்கும், முறை முறை எங்கள் மனைதொறுஉம் – வரிசைக்கிரமப்படி
எங்கள் வீடுதோறும், விஞ்சையோர் குன்றம் என் அறுசுவை கொண்ட ஒரு பண்டி
அடிசில்உம் – வித்தியாதரர்வசிக்கும் மலை யென்றுசொல்லும்படி அறுவகையுருசியும்
அமைந்த ஒருபண்டிசோறும், நம் குலம் துன்றும் நரன் பலி ஒன்றுஉம் – எங்கள்
குலத்திற்பொருந்திய ஒரு மனிதனாகிய பலியும், இவை – ஆகிய இவற்றை, திறை
– (உனக்குத்) திறைப்பொருளாகச்செலுத்தி, தொண்டு – அடிமையை, புரிகுவம் –
செய்வோம் ‘, என்றலும் – என்றுசொன்னவளவிலே,-(எ-று.) ‘அன்று முதல் ***
தின்றுதிரிகுவன்’ என அடுத்த கவியில் முடிபு காண்க.

     நாங்களே நாளுக்குஒருவீடாக முறைவட்டம் ஏற்படுத்திக் கொண்டு
ஒருவண்டிச்சோற்றையும், ஓராளையும் உனக்கு உணவாக இடுவோமென்று
ஊரந்தணர் கூறி அவனைச் சாந்தப்படுத்தினரென்க. விஞ்சையோர்=
வித்தியாதரர்; மாயவித்தைகளைத் தரித்தவர்; இவர்கள், பதினெட்டுத்
தேவகணங்களுள் ஒரு சாதியார். இவர்களுக்கு உறைவிடம்
வெள்ளிமலையாதலை, சிந்தாமணி சூடாமணிகளிற் காணலாம். நரபலி –
வடமொழித்தொடர்.

     தன்ன தனதன தன்ன தனதன தன்ன தனதன தன்னனா என்பது, இனி
மூன்று செய்யுட்களுக்குச் சந்தக்குழிப்பு.

அன்றுமுதல் அடல் வஞ்சகனும், இறை அன்பினொடு
பெறு வன்பினால்,
என்றும் நிலைபெற, உண்டியுடன் மனை எங்கும்
இடுபலி எஞ்சுறத்
தின்று திரிகுவன்; இன்று என் மனை முறை; சென்று பணி
கவர் திங்கள்போல்
நின்று தளர்வுறுகின்றது எனது உயிர்; நெஞ்சம் இலது, ஒரு தஞ்சமே

அன்று முதல் – அந்நாள்முதலாக, அடல் வஞ்சகன் உம் –
கொடியவஞ்சகனான அவ்வரக்கனும், இறை அன்பினொடு – சிறிது அன்புடனே,
பெறு வன்பினால் – (தான்) பெற்ற வலிமையால், என்றுஉம் நிலை பெற –
எந்நாளும் நிலையாக, மனை எங்குஉம் உண்டியுடன் இடு பலி – வீடுதோறும்
உணவோடுசெலுத்தும் நரபலியை, எஞ்சுற தின்று திரிகுவன் – ஒழியும்படி தின்று
திரிவான்; (அந்த நியமித்தின்படி, இன்ற என் மனை முறை – இன்றைக்கு என்
வீட்டின் முறை; (ஆதலால்), எனதுஉயிர்-, பணி சென்று கவர் திங்கள் போல் –
(இராகுகேதுவாகிய) பாம்பினால் (அருகிற்) சென்று பிடிக்கப்பட்ட சந்திரன்போல,
நின்று தளர்வு உறுகின்றது – தளர்ச்சி பொருந்தி நிற்கின்றது; நெஞ்சம் ஒரு
தஞ்சம் இலது – என்மனம் ஒரு பற்றுக்கோடுமில்லாதிருக்கின்றது; (எ-று.)

     உயிர் அழியாது துயருறுதல்பற்றி, அதற்கு, பணிகவர்திங்கள் உவமை.
எஞ்சுற – (நாளடைவிலே ஊரில் ஆள்) குறைய என்றுமாம்.

கன்னி இவள் பிறர் பன்னி; எனது இரு கண்ணின்
மணி நிகர் சன்மனும்,
மன்னு குல முதல்; பின்னை ஒருவரும் மண்ணின்
உறு துணை இன்மையால்,
இன்னல் பெரிது உளது; என்ன புரிகுவது என்ன அறிகிலன்;
அன்னை! கேள்:
முன்னை மனை நிகழ் தன்ம முனிவனை முன்னில், இடர்
நனி துன்னுமால்.’

கன்னி இவள் – (எனது) இந்த இளம்பெண், பிறர் பன்னி –
வேறொருவரது உடைமையாகிய மனைவி: எனது இரு கண்ணின் மணி நிகர்
சன்மன்உம் – எனது இரண்டுகண்களிலுள்ள கருமணியை யொத்த அருமைப்
புதல்வனும், மன்னு குலம் முதல் – நிலையானவமிசத்துக்குஓர் அடியாயுள்ளான்;
மண்ணின்உறு துணை பின்னை ஒருவர்உம் இன்மையால் – பூமியிற் பொருந்திய
துணை வேறொருவரும் இல்லாமையால், இன்னல்பெரிது உளது – (எனக்குத்)
துன்பம்மிகுதியாயுண்டாயிற்று: என்ன புரிகுவது என்ன அறிகிலன்-யாது
செய்வதென்று அறியேன்; அன்னை கேள் – தாயே! கேள்; முன்னை மனை
நிகழ் தன்மம் முனிவனை முன்னில் – இவ்வீட்டுக்கு முதன்மையாய்
இல்லறவாழ்க்கையை நடத்துகிற (என்கணவனாகிய) அந்தணனை (ப்பலிசெலுத்த)
நினைத்தாலோ, இடர் நனி துன்னும் – துன்பம் மிகுதியாக உண்டாகிறது; (எ-று.)-
என்று பார்ப்பனி இடர்க்காரணத்தைக் குந்தியிடம் கூறிமுடித்தா ளென்க.

     எனதுமகளைப் பலிசெலுத்தலா மென்றால், அவள் ஒருபுருஷனுக்கு
வாழ்க்கைப்பட்டு அவனுக்குஉரிய பொருளாய்விட்டதனால். அவளைச்செலுத்த
இடமில்லை; எனதுமகனோ, ஏகபுத்திரனாதலால் அவனைச்செலுத்திவிடின்
சந்ததியின்றி வமிசம் அழியும்: என்னையே செலுத்துவதென்றால், வேறொருவர்
உதவுவாரில்லை; அதனால், என்கணவன் விரும்பகில்லான்; என்கொழுநனைச்
செலுத்தும் விஷயத்தில் உண்டாகிற துயரத்துக்கு எல்லையில்லை என்று
பலவகையிலும் தன் துயரத்துக்குப் பரிகாரமில்லாமையைக் கூறினள். ஜந்மம் –
பிறப்பு: அதனையுடையவன், சன்மன் : மகன்.

ஏதம் அற உறவான மனைமகள் யாவும் உரைசெய, யாதவன்
தீது இல் குலமகள் ஆர்வமுடன் அவள் தேற ஒரு மொழி கூறுவாள்:
‘ஆதி அனுமனொடு ஓதும் உவமையன், ஆடல்
வலியுடை ஆண்மையான்,
மோதி, மிகு திறல் யாம சரிதனை, மூளை உக, உடல் கீளுமே.-இருகவிகள் – அதுகேட்டுக் குந்தி தனது மக்களில்
ஒருவனைஅனுப்பலாமென்றல் கூறும்.

நான்கு கவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) ஏதம் அற உறவு ஆன – களங்கமில்லாமல் (குந்தியோடு)
நண்புரிமைபூண்ட, மனை மகள் – அந்தவீட்டுக்குஉரிய பார்ப்பனி, யாஉம்
உரைசெய – (இங்ஙனம்) எல்லாவற்றையும் சொல்ல, யாதவன் தீது இல் குலம்
மகள் – யதுகுலத்திற்பிறந்த சூரராசனது குற்றமற்ற குலத்துக்கு உரியமகளாகிய
குந்திதேவி, ஆர்வமுடன் – அன்புடனே, அவள் தேற ஒரு மொழி கூறுவாள் –
அப்பார்ப்பனி தேறுதலடையும்படி ஒருவார்த்தைசொல்வாள்:- ஆதி அனுமனொடு
ஓதும் உவமையன்-பழமையான அநுமானோடு சொல்லத்தக்க ஒப்புமையுடையவனும்,
ஆடல் வலி உடை ஆண்மையான் – போர்வலிமையோடுகூடிய பராக்கிரமசாலியும்
ஆகிய என்மக்களில் ஒருவன், இருள் இடையாமசரிதனை – இருளையுடைய
நள்ளிரவிற் சஞ்சரிப்பவனான [இராக்கதனாகிய]அந்தப்பகனை, மோதி – தாக்கி,
மூளை உக – மூளை சிதறும்படி, உடல் கீளும் – உடம்பைப்பிளந்திடுவான்.

     பாலபாரதத்திற் கூறியதற்குஏற்ப, ஆடல் வலியுடையாண்மையான்
என்பதற்கு – பௌருஷத்தோடுபகையடவல்ல மந்திரசக்தியை யுடையவனெனினுமாம்.
அனுமானது பலபராக்கிரமச்செயல்கள், இராமயணத்து மிகப்பிரசித்தம்.
இரவுக்குஉரிய நான்குயாமங்களுள் ஒருயாமகாலம் பிராணிசஞ்சாரம்
முதலியவற்றாற்பகல் போலுதலால், யாமத்தில் இப்படி விசேஷமுடைய இரவி,
யாம மெனச் சிறப்பாக வழங்கப்படும். மோதிமிகுதிறல் என்றும் பாடம்.

     தான தன தன தான தனதன தான தனதன தானனா என்பது,
இதற்குச்சந்தக்குழிப்பு.

கொவ்வை இதழ் மட நவ்வி! அலமரல்; குவ்வின்                                                அனலினும் வெவ்வியோர்,
ஐவர் உளர், சுதர்; கை வில் விறலினர்; அவ்வியமும் இலர்;
செவ்வியோர்;
இவ் இவரில் எமை உய்வு கொளும் அவன், எவ் எவ்
உலகையும் வவ்வு திண்
பௌவம் என, நனி தெய்வ முனிவரர் பைதல் அற,
நெறி செய்வனே.

கொவ்வை – கொவ்வைக்கனிபோலச் சிவந்த, இதழ் –
வாயிதழையுடைய, மடம் நவ்வி – (கண்ணின்நோக்கத்தால்) இளமையான
மான்போன்றவளே! அலமரல் – (நீ மனங்) கலங்க வேண்டா; குவ்வின் –
இந்நிலவுலகத்தில், அனலின்உம் வெவ்வியோர் – (பராக்கிரமத்தால்)
அக்கினியினும் கொடியவர்களும், கை வில் விறலினர் – கைதேர்ந்த வில்லின்
வல்லமையை யுடையவர்களும், அவ்வியம்உம் இலர் – பொறாமையில்லாதவர்களும்,
செவ்வியோர் – நற்குண முடையவர்களுமாகிய, அய்வர்சுதர் – ஐந்துபிள்ளைகள்
உளர் – (எனக்கு) இருக்கிறார்களன்றோ? இ இவரில் – இத்தன்மையான
ஐந்துபுத்திரர்களுள், எமை உய்வு கொளும் அவன் – மற்றை
யெங்களெல்லோரையும் உயிருய்யச்செய்பவனான அந்த ஒரு குமாரன், எ எ
உலகைஉம் வவ்வு திண் பௌவம் என நனி தெய்வம் முனிவரர் பையுள்அற – உலகங்களெல்லாவற்றையுங்கவர்கிற வலிய சமுத்திரம் போல (அளவின்றி)
மிகுகிற தெய்வத்தன்மையுள்ள சிறந்த அந்தணர்களுடைய வருத்தம் நீங்க, நெறி
செய்வன் – (அதற்குஉரிய) முறைமையைச் செய்வான்;(எ -று.)- ஏ – தேற்றம்.

     சிஷ்டர்களாகிய முனிவர்களைப் பரிபாலிக்கும்பொருட்டுத் துஷ்டனாகிய
அவ்வரக்கனை அழித்தொழித்திடுவ னென்பதாம். இங்கு ‘அவன்’ என்றது
வீமனை. அவன் அரக்குமாளிகையினின்று தங்களையெல்லாம் உய்வித்தமையை
யுட்கொண்டு, அவனுக்கு ‘எமை யுய்வுகொளும்’ என்ற அடைமொழி
கொடுத்தாள். நவ்வி – உவமவாகுபெயர். அலமரல் – எதிர்மறை
யொருமையேவல்: அலமா – பகுதி. கு. பூமி: வடசொல். அய்வர் = ஐவர்.

     இச்செய்யுள் – கீழ்க்கூறியவகையில் வகரச்சந்தத்தாற் பெரும்பாலும்
வந்தது. ‘தைய தனதன தைய தனதன தைய தனதன தையதா’ என்பது. இதற்குச்
சந்தக்குழிப்பு. ‘பைதலற’ என்ற பாடம், சந்தத்துக்குச் சிறவாது.

அவனை இடு பலி அருளுக!’ என மொழி அளவில்,
மறலியும் உளைவுறச்
சிவனை வழிபடும் மகவை அருளிய செனக செனனியர்
நிகர் என,
தவனில் முதிர்தரு முனியும், வழுவு அறு தனது இல் அறனுடை
வனிதையும்,
துவனி அற, மன மகிழ்வொடு, இனிது அறு சுவைகொள் அமுது
அடு தொழிலராய்,அதுகேட்டு மகிழ்ந்து அவ்வீட்டார் சமையல்செய்யத் தொடங்கல்.

அவனை – அப்புதல்வனை, இடு பலி அருளுக –
(அவ்வரக்கனுக்கு) இடவேண்டிய நரபலியாகச் செலுத்துவையாக, என – என்று,
மொழிஅளவில் – (குந்தி) சொன்னவளவில்,- மறலிஉம் உளைவு உற சிவனை
வழிபடு மகவை அருளிய செனக செனனியர் நிகர் என – யமனும் வருந்தும்படி
சிவபிரானைப் பூசித்த (மார்க்கண்டேயனென்ற) குமாரனைப் பெற்ற தந்தையும்
தாயும் போல, தவனில் முதிர் தரு முனிஉம்வழு அறு தனது இல் அறன்உடை
வனிதைஉம் – தவவொழுக்கத்தில் முதிர்ந்த (அவ்வீட்டுக்குஉடையவனான)
அந்தணனும் தவறில்லாத அவனது இல்லறவாழ்க்கையையுடைய மனைவியும்,
மனம் மகிழ்வொடு – மனமகிழ்ச்சிகொண்டவர்களாய், துவனி அற – (அழுகை)
ஒலி நீங்க, அறு சுவை கொள் அமுது இனிது அடு தொழிலர்ஆய் –
ஆறுவகைஉருசியும்பொருந்திய உணவை இனிமையாய்ச் சமைக்குந்தொழிலை
யுடையவராக,- (எ-று.)-“பண்டி கெழுமிய பண்டமே” என வருங் கவியோடு
முடியும். ஆய் – ஆக என்ற எச்சத்தின் திரிபு.

      ‘மறலியு முளைவறச் சிவனை வழிபடு மகவு’ என்பததிற் குறித்த கதை:-
மிருகண்டுமுனிவனது தவப்பயனால் பதினாறுபிராயமே யுடையவனாகச் சிவபிரான்
வரமளிக்கப் பிறந்த மார்க்கண்டேயன் இடைவிடாது சிவபூசனை செய்துகொண்டு
வளர்ந்து வருகையில், பதினாறுபிராயம் முற்று மளவிலே மாதாபிதாக்கள் ‘இனி
இவனுக்கு யமனால் இறுதிநேருமே!’ என்று மிகக்கலங்கிநிற்க, அந்தமார்க்கண்டேயன்
சிவபூசை செய்கையில் கூற்றுவன் வந்து காலபாசத்தாற் கட்டியிழுக்க, அவன்
அப்பொழுது பரமசிவனைச் சரணமடைய, அப்பெருமான் யமனைக் காலால்
உதைத்துத்தள்ளி முனிமகனுக்கு என்றும் பதினாறாகத் தீர்க்காயுசு
கொடுத்தருளினனென்பது. அக்குமரன் சிவானுக்கிரகத்தால் ஊழ்வினையையும் கடந்து
உய்வு பெற்றதனால், அத்தாய்தந்தையர் துயரம் நீங்கி மிகவும் மனமகிழ்வுற்றார்.

     மறல் – கொடுமை; அதனையுடையவன் – மறலி. ஜநகஜநநீ என்ற
வடசொற்கள் – தமிழில் சனக சனனி எனத் திரிந்து, மோனைப் பொருத்தத்திற்காக
‘செனக செனனி’ என எகரம் பெற்றன. இல்லறம் – ‘இலறம்’ எனச் சந்தவின்பம்
நோக்கித் தொகுத்தல் விகாரப்பட்டது. இச்செய்யுள் – குறுஞ்சீர்வண்ண முடையது;
அதாவது – குற்றெழுத்துப்பயில்வது. 38,39,40, இச்செய்யுகளிலும் இதுகாண்க.
இதற்குச் சந்தக்குழிப்பு 38- ஆங் கவிக்குக் கூறியவாறே கொள்க

தண் தரள மலை, வெண் கயிலை மலை, சங்க மலை, என நங்கைமார்
மொண்டு சொரிதருகின்ற அடிசிலும், முந்து கறிகளும், வெந்த பால்,
மண்டு நறு நெ(ய்)யொடு அந்த விடலையும், மைந்தர் அனைவரும்,
உண்டு, தம்
பண்டி நிறைவுறு பின்பு, பிறிதொரு பண்டி கெழுமிய, பண்டமே.-அப்பொழுது சமைக்கப்பட்ட உணவின் மிகுதி

தண் தரளம் மலை – குளிர்ச்சியான முத்தின்மயமான தொருமலை,
வெள் கயிலைமலை – வெண்மையான [வெள்ளிமயமாகிய] கைலாசமலை, சங்கம்
மலை – சங்குமயமானதொரு மலை, என – என்று (கண்டவர் உவமை) கூறும்படி,
நங்கைமார் மொண்டு சொரிதருகின்ற – (சமையல் செய்யும்) மகளிர்
(பாத்திரங்களினின்று) முகந் தெடுத்துத் தொகுதியாய்ச்சொரிகின்ற, அடிசில்உம் –
அன்னத்தையும், முந்து கறிகள்உம் – சிறந்த கறிகளையும், வெந்த பால் மண்டு நறு
நெ(ய்) யொடு – காய்ந்த பாலோடும் மிக்க நறுமணமுள்ள நெய்யோடும், அந்த
விடலைஉம் மைந்தர் அனைவர்உம் – கீழ்க்குறித்த வீரனான வீமனும் மற்றைப்
புதல்வரெல்லோரும், உண்டு-புசித்து, தம் பண்டி நிறைவு உறுபின்பு – தங்கள்
வயிறுநிறைந்தபின்பு, பண்டம் – அவ்வுணவுப்பொருள்கள், பிறிது ஒரு பண்டி
கெழுமிய – வேறொரு வண்டி நிறைந்தன; (எ-று.) – கெழுமிய – பலவின்பால்முற்று

     வெண்மையும் பெருந்தொகுதியும்பற்றி, அன்னத்திரளுக்கு முத்துமலை
வெள்ளிமலை சங்குமலைகளை உவமை கூறினார். பண்டி என்பது வயிறென்னும்
பொருளதாதலை, “உதரமோ டகடு குக்கியுடன் பண்டி வயிற்றின் பேராம்” என்ற
நிகண்டினாலும் அறிக.

     இதற்குச் சந்தக்குழிப்பு – 41 – ஆங் கவியிற் கூறியதே

வையம் முழுதுடை ஐயன் இளவலும், வைகலுடன்,
மனை வைகுவோர்
உய்யும் வகை புகல் ஐயை உரையினை ஒய்யென்
விரைவொடு கைகொளா,
வெய்ய பகன் உடல் பெய்த குருதியின், மெய்யை எழில்
அணி செய்தனன்-
செய்ய மலர்கொடு, செய்ய துகில்கொடு, செய்ய கலவையின்
மொய் கொடே.-வீமன் சித்தனாய்த் தன்னை அலங்கரித்துக்
கொள்ளுதல்.

வய்யம் முழுது உடை – பூமிமுழுவதையும் (தனக்கு உரியதாக)
உடைய, ஐயன் – தலைவனான தருமனது, இளவல்உம் – தம்பியான வீமனும்,-
மனை வைகுவோர் உய்யும் வகை புகல் ஐயை உரையினை – (தங்கட்குத் தங்க
இடங்கொடுத்து) வீட்டிலிருப்பவர் எல்லோரும் பிழைத்திருக்கும்படி
உபாயங்கூறிய (தனது) தாயான குந்தியின் வார்த்தையை, ஒய்யென் விரைவொடு
கை கொளா – மிக்கவிரைவோடு அங்கீகரித்து,- வைகலுடன்- பொழுதோடே
[பலிசெல்லுங்காலம் கடவாமல்],- செய்ய மலர்கொடு-செந்நிறமுள்ள
பூக்களைக்கொண்டும்,செய்ய துகில் கொடு- செந்நிறமுள்ள ஆடையைக்கொண்டும்,
செய்ய கலவையின் மொய் கொடு – செந்நிறமுள்ள கலவைச்சாந்தின்
மிகுதியைக்கொண்டும்,- மெய்யை – (தன்) உடம்பை, வெய்ய பகன் உடல் பெய்த
குருதியின் – கொடியபக னென்னும் அவ்வரக்கனது உடம்பு சொரியும் இரத்தத்தால்
(பின்புபூசப்படுவது) போல, எழில் அணி செய்தனன் – அழகிய அலங்காரஞ்
செய்துகொண்டான்; (எ-று.)

     செவ்வணி செய்தல், பலிப்பொருளுக்கு உரியதென அறிக. தாயின்
கட்டளையை நிறைவேற்றுதலிற் கொண்ட விரைவோடு, போர்நேர்கிறதென்ற
களிப்பினாற் கொண்ட விரைவையுங் காட்டுதற்கு, ‘ஒய்யென் விரைவு’ எனப்
பலசொல் கொடுத்தார். வீமனை ‘தருமன் தம்பி’ என்றது, தனது சிரமம் பாராமல்
நல்லோரைக் காக்கும் உதவியைச் செய்யுங் கருத்தை யுடையவ னென்று காட்டுதற்கு.
கைகொளா என்பதில், கை என்பது-தமிழுபசர்க்கம். இனிப் பெய்யுங்குருதியை
‘பெய்த குருதி’ என்றது – இயல்புபற்றிவந்த காலவழுவமைதி; தெளிவுபற்றிய
தெனினுமாம். வய்யம் = வையம். கலவை – (பலவகைவாசனைப்பொருள்களோடுங்)
கலந்த சந்தனம். பின்னிரண்டடி – தற்குறிப்பேற்றம். இக்கவி – பெரும்பாலும்
தையச் சந்தத்தால் வந்தது

துற்ற பல கறி செற்றி அமலை செய் துப்பு, ஒர் இமகிரி ஒப்பென,
சற்றும் இடன் அற மொய்த்த சகடு இரு சக்ர உருளைகள்
உய்க்கவே,
உற்ற நிரைநிரை பத்திபட வலி ஒத்த பகடுகள் கட்டினான்;
நெற்றிமிசை ஒரு கொற்ற அடல் அரி நிற்பதென ஒளிர் பொற்பினான்வீமன் சோற்றுவண்டியில் ஏறிச்செல்லுதல்.

துற்ற – மிகுதியாய்ப் பொருந்திய, பல கறி – பலவகைக் கறிகளை,
செற்றி – இடையிடையே இட்டு, அமலை செய் – பெருந்திரளாகச்செய்த, துப்பு –
சோறு, ஓர் இமம் கிரி ஒப்பு என – (வெண்ணிறத்தாலும் பெருவடிவாலும்)
இமயமலைக்குச் சம மென்று சொல்லும்படி,சற்றுஉம் இடன் அற மொய்த்த –
சிறிதும் வெற்றிடமில்லாதபடி நெருங்கப்பெற்ற, சகடு-வண்டியை, இருசக்ரம்
உருளைகள்-வட்டவடிவமான இரண்டுசக்கரங்கள், உய்க்க – இயங்கும்படி, பத்தி
பட – ஒழுங்காக, நிரை நிரை உற்ற – வரிசைவரிசையாய்ப் பொருந்திய, வலி
ஒத்த பகடுகள் – வலிமையில் ஒன்றுக்கொன்று சமமான கடாக்களை, கட்டினான்
– கட்டி,- நெற்றி மிசை- (அவ்வண்டியின்) முற்பக்கத்திலே, ஒரு கொற்றம் அடல்
அரி நிற்பது என – வெற்றியைத் தரும் ஓர் ஆண்சிங்கம் நிற்பது  போல, ஒளிர்
– விளங்கி நிற்கிற, பொற்பினான் – பொலிவையுடையவனானான்; (எ-று.)

     ஹிமகிரி – வடசொல். சகடு – ஸகடம்: பத்தி = பங்க்தி: வட சொல்லின்
விகாரங்கள். இரட்டையிரட்டையாய்ப் பலபகடுகள் கட்டினானென்பார் ‘நிரைநிரை
பத்திபடக் கட்டினான்’ என்றார், ‘சக்கிர வுருளை’ என்ற பாடம் சந்தத்திற்கு
முரணாம்.

     தத்த தனதன தத்த தனதன தத்த தனதன தத்தனா என்றது இதற்குச்
சந்தக்குழிப்பு.  

மண்டலம் கொள் வடிவுடன், அடல் பரிதி, மண்ணில்
வந்ததென, மறுகினில்
கண்ட கண்ட முனி குலம் அடங்க இரு கண் களிக்க
வரு காட்சியான்,
வெண் தரங்கம் என வீசு பேய்இரதம் மிஞ்சு கானநெறி மீது
போய், அண்டர்
அண்ட முகடு உற வளர்ந்தனன், அரக்கன் நின்ற உழி அறியவே.-வீமன் வனத்திற்சென்று பகனை நாடுதல்.

அடல்-வலிமையையுடைய, பரிதி – சூரியன், மண்டலம் கொள்
வடிவுடன் – வட்டவடிவத்தைக்கொண்ட (தனது) உருவத்துடனே, மண்ணில்
வந்தது என – பூமியில் வந்தமைபோல, மறுகினில் கண்ட கண்ட முனிகுலம்
அடங்க இரு கண் களிக்க வரு – வீதியிலே பார்த்தபார்த்த அந்தணர்கள் கூட்ட
மெல்லாம் இரண்டு கண்களுங் களிப்படையும்படி வருகிற, காட்சியான் –
தோற்றத்தை யுடையவனான வீமன்,-வெள் தரங்கம்என வீசு பேய்இரதம்விஞ்சு
கானம் நெறி மீது போய் – வெண்மையான அலைகள் வீசுவது போல்
தோன்றுகிற கானல்மிகுந்த காட்டுவழியிலே சென்று,- அரக்கன் நின்ற உழி
அறிய – பகன்நின்ற இடத்தை அறியும் பொருட்டு, அண்டர் அண்டம் முகடு உற
வளர்ந்தனன் – தேவர்கள் வசிக்கிற அண்டகோளத்தின்மேலிடத்தை அளாவ
நிமிர்ந்தான்;

     திரிவிக்கிரமனைப்போலவளர்ந்தானென்றுகொள்ளற்க: அரக்கனிருக்குமிடம்
காண ஓங்கியதை உயர்வுநவிற்சியாற் கூறியதென்க. செந்நிறமுள்ள மலர் துகில்
கலவைகளால் தன்னை அலங்கரித்துக்கொண்டு விளங்குகிற வீமனுடைய
பருத்தவடிவத்துக்கு, சூரிய மண்டலம் உவமை. சூரியனுக்கு அடல் – நெடுந்தூரம்
ஒளியைச் செலுத்தி இருளை அறக்கெடுக்கும் வலிமை. கண்களாற்கண்டு
மனங்களித்தலையே கண்ணின்மே லேற்றி ‘கண்களிக்க’ என்றார்: இது,
ஒருபொருளின் வினையை மற்றொரு பொருளின்மேலேற்றிக் கூறும்
உபசாரவழக்கு. பேயிரதம் – பேய்த்தேர்.

     இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் பதினைந்து கவிகள் – பெரும்பாலும்
ஒன்று மூன்று ஐந்தாஞ்மாச்சீர்களும்  ஏழாஞ்சீர் விளச்சீரும்மற்றயவை
விளங்காய்ச்சீர்களுமாகிய எழுசீராசரியவிருத்தங்கள்

களிந்த வெற்பு உதவு நீல மா நதி அடுத்த குன்றில்
ஒரு கழிமுழை,
தெளிந்த பற்களொடு நாவை மென்று நனி தின்று, வெம் பசி
கொள் தீயினால்,
முளிந்து முற்றும் மனம் வேவவேவ, நெடு மூச்சு எறிந்து,
புகை முகனுடன்,
விளிந்தது ஒத்து வழி குழிய நின்று, சுழல் விழி நிரைத்து,
அயரும் வெகுளியான்.-இதுமுதல் மூன்று கவிகள் – ஒருதொடர்: வீமன் பகனைக்
காணுதலும், சோற்றை உண்ணுதலும்.

மூன்று கவிகள் – ஒரு தொடர்.

     (இ-ள்.) களிந்தம் வெற்பு உதவு – களிந்தமலையினாற் பெறப்பட்ட, நீலம்
மா நதி – நீலநிறமுடைய பெரிய யமுனாநதியை, அடுத்த – அடுத்துள்ள, குன்றில்
– ஒருமலையிலே, ஒரு கழி முழை – ஒருபெரிய குகையிலே, கொள் வெம் பசி
தீயினால் – (தான்) கொண்ட கொடிய பசியாகிய வயிற்றழிலினால், தெளிந்த
பற்களொடு நாவை நனி மென்று தின்று – வெண்மையாய் விளங்குகிற
பற்களொடு நாக்கை மிகுதியாக மென்றுதின்றுகொண்டு, மனம் முற்றுஉம் முளிந்து
வேவ வேவ – (இன்னும் இரைவாராமையா லாகிய கோபத்தால்) மனம்
முழுவதும் காய்ந்து மிகவும் வேவ,  நெடு மூச்சுஎறிந்து-பெரு மூச்சு
விட்டுக்கொண்டு, புகை முகனுடன் – புகை வெளிக்கிளம்பப்பெற்ற முகத்தோடு,
விளிந்தது ஒத்து வழி குழியநின்று – மறிந்தாற்போல (த் தான் செல்லும்) வழியும்
குழிபடும்படிநின்று, சுழல் விழி நிரைத்து – சுழலுகிற கண்ணின் நோக்கங்களை
எல்லாப்புறமுஞ் செலுத்தி, அயரும் வெகுளியான்-(தன்னையும்)   மறந்த
கோபத்தை   யுடையவனாய்,- (எ-று) “உற்றுநின்றநிலை” (53) என்க. ‘முழை’
என்றதற்கும் ‘உற்றுநின்ற’ என்பதே முடிக்குஞ்சொல்.

     அரக்கன் தன்மையை இனிது வருணித்தது, தன்மைநவிற்சியணி. களித்த
மலையினின்று உற்பத்தியாதலால், யமுனைக்கு, ‘காளிந் தீ’ என்றுபெயர்;
அந்நதியின்நீர், நீலநிறமுடையது. விளிதல் – பூகம்பம் முதலிய காரணங்களால்
தரை இயல்புகெடுதல். கழி – உரிச்சொல்.

வெற்று எலும்பின் உயர் ஆசனம்தனில், விகங்க
நீழலிடை மேவர,
சுற்றும் நின்று பல சம்புகங்கள் துதி சொல்ல, அல்லல்
மிகு துன்முகன்
உற்று நின்ற நிலை கண்டு, உகந்து, ‘இவனை உயிர்
ஒழிந்திட உடற்றினால்,
இற்றை உண்டி கெடும்’ என்று, பண்டியில் எடுத்த வல்சி
நுகர் இச்சையான்

வெறு எலும்பின் உயர் ஆசனந்தனில் – தசைப்பற்றிலாத
எலும்புகளினா லாகிய உயர்ந்த ஓர் ஆசனத்தில், விகங்கம் நீழலிடை – (கழுகு
பருந்து முதலிய) பறவைகளின் நிழலிலே, மேவர – (அப்பறைகள்) விரும்பவும்,
பல சம்புகங்கள் சுற்றுஉம் நின்று துதிசொல்ல – அநேக நரிகள் சுற்றிலும் நின்று
தோத்திரங்களைச்சொல்லவும், அல்லல் மிகு துன்முகன் – (காண்பவர்களுக்குத்)
துன்பம் மிகுதற்குக் காரணமான கெட்டமுகத்தையுடைய பகனென்ற
அவ்வரக்கன், உற்றுநின்ற – பொருந்திநின்ற,- நிலை- நிலைமையை, கண்டு –
பார்த்து,உகந்து – மனம்மகிழ்ந்து,- இற்றை இவனை உயிர் ஒழிந்திட உடற்றினால்
உண்டி கெடும் என்று – இப்பொழுதே இவனை உயிர் நீங்கும்படி கொன்றால்
பின்பு இவ்வுணவு அசுத்தமாய் வீணாய்விடு மென்று எண்ணி, பண்டியில் எடுத்த
வல்சி நுகர் இச்சையான் – பண்டியில் ஏற்றிய உணவை (அவனைக்
கொல்லுமுன்னமேதான்) உண்ணும் ஆசையை யுடையவனாய்,- (எ-று.)-
“அருந்தினான்” என அடுத்த கவியோடு முடியும்.

     வெற்றெலும்பு, இவன் நாள்தோறும் கொன்றுதின்ற பிராணிகளினுடையவை.
இவனைச் சிலகொடிய பறவைகள் விரும்பிவட்டமிடுவதற்கும், பல நரிகள் சூழ்ந்து
துதித்தற்குங் காரணம் – இவன் தசை பெற்று உண்ணுங்கால் தமக்கும் ஏதேனுஞ்
சிறிது மிச்சில்கிடைக்கு மென்ற அவா. நீழல் – நீட்டல். நரிகள்
ஊளையிடுவதையே துதிகூறுதலாகக் குறித்தார். வீமன் போரின்றித் தினவு
கொள்ளுந்தோளை யுடையவனாதலால், கொடிய அவ்வரக்கனைக்
கண்டவளவிலே மகிழ்ச்சியுற்றான். ‘சுற்றின்று’ என்றும் பாடம்

வன்பினால் உரக பதி அளித்த நெடு வாரி ஆர் அமுதம்
உண்ட கோ,
முன் பின் ஆக உயர் சகடு இருந்து, எதிர் முகந்துகொண்டு,
வரை முழையுளே
அன்பினால் அடையும் அன்னம் என்ன, நிறை அன்னம்
முற்றவும் அருந்தினான்;
பின்பின் ஆக இது கண்டு, வெம் பசி கொள் பகனும் எய்தி,
இவை பேசுவான்:

வன்பினால் – (தனது) வலிமையைக்கண்டதனால், உரக பதி
அளித்த – சர்ப்பராசனாகிய வாசுகி (தனக்குக்) கொடுத்த, நெடுவாரி ஆர்
அமுதம் – பெரிய பாற்கடலினின்று (முன்பு) தோன்றிய பெறுதற்கரிய அமிருதத்தை,
உண்ட-, கோ அரசனான வீமன், உயர் சக – உயர்ந்த அவ்வண்டியிலே, முன்பின்
ஆக எதிர்  இருந்து – முன்பின்னாகத் திரும்பியிருந்து,- வரை முழைஉளே
அன்பினால் அடையும் அன்னம் என்ன – மலைக்குகையினுள்ளே அன்போடு புகும்
அன்னப்பறவைபோல, நிறை அன்னம் முற்றஉம் முகந்து கொண்டு அருந்தினான் –
(அவ்வண்டியிலே) நிறைந்த அச்சோறுமுழுவதையும் அள்ளியெடுத்து (த் தனது
பெருவாயினுள்ளேபுகும்படி) புசித்தான்; பின் – பின்பு: வெம்பசிகொள் பகன்உம் –
கொடியபசியைக் கொண்ட பகனென்பவனும், இதுகண்டு – இவன் இவ்வாறு உண்ணு
தலைப் பார்த்து, பின் ஆகஎய்தி – வீமன்பின்னே வந்து, இவை – இச்சொற்களை,
பேசுவான்-; (எ-று.)- அவற்றை மேலே காண்க.

     வெண்மையான சோற்றுத்திரளை நெடியபெரிய வாயினுள்ளே விரையச்
செல்லுதற்கு, வெண்ணிறமான அன்னப்பறவை நெடிய பெரிய
மலைக்குகையினுள்ளே விருப்பத்தோடு செல்லுதல் உவமை. வண்டியில் வீமன்
முன்பின்னாக மாறியிருந்து உண்கின்றதனால், எதிர்வந்த அரக்கன் வீமனுக்குப்
பின்னாயின னென்க. அன்னம் – பறவையைக் குறிக்கும்போது ஹம்ஸம்என்ற
வடசொல்லின் திரிபும், சோற்றைக் குறிக்கும்போது அந்நம் – என்ற
வடசொல்லின் திரிபுமாம். 

புலிதனக்கு இடு விடக்கை நின்றது ஒரு பூஞை
தின்னுமது போல, நீ
பலி அனைத்தையும் விழுங்கினால், இது பலிக்குமோ?
எளிமை பார்!’ எனா,
ஒலி படக் கிரியில் உரும் எறிந்ததென, ஓடி வந்து,
பிடர் ஒடியவே,
வலி படப் பணை விறல் தடக் கை கொடு மாறி
மாறி முறை வீசினான்.-பகன்வீரவாதங்கூறிக்கொண்டு வீமனைக் கைகளாற்
புடைத்தல்.

‘புலிதனக்கு இடு விடக்கை – புலிக்கென்று இட்டு வைத்த
இறைச்சியை, நின்றது ஒரு பூஜை – அருகில் நின்றதொரு பூனை, தின்னுமது
போல – தின்பதுபோல, நீ-, பலி அனைத்தைஉம் விழுங்கினால்- (எனக்கென்று
செலுத்திய) உணவுமுழுவதையும் உண்டால், இது பலிக்கும்ஓ – இது
சித்திக்குமோ? எளிமை பார் – (எனது) எளிமையைப் பார்’, எனா –
என்றுசொல்லி, ஓடிவந்து-, (பகன்), கிரியில்  உரும் எறிந்ததுஎன – மலைமேல்
இடி இடித்தாற் போல, ஒலி பட – பேரோசை யுண்டாக, பிடர் ஒடிய –
(வீமனுடைய) பிடரி ஒடியும்படி, பணை விறல் தட கை கொடு – பருத்த
வலியபெரிய (தன்) கைகளால், வலி பட – பலமாக, முறை மாறிமாறி – முறையே
மாறிமாறிப் புடைத்து, சீறினான் – கோபங்காட்டினான்; (எ-று.)

     நீ என்னிடத்துக் கருதிய எளிமையை எனது தொழிலால் அங்ஙனமன்றெனக்
காட்டுவே னென்பான், ‘எளிமைபார்’ என்றான்; இது – குறிப்புமொழி. கைகொடு
முறை மாறி மாறி – ஒரு கைமாற்றி ஒருகையால் விடாதுஅடித்து என்க

பக்கமும் பிடரும் ஒக்க முட்டிகள் படப் பட,
கவள பாரமாய்
விக்க நின்றன, வயிற்று இரண்டு அருகும் வீழ வீழ,
முன் விழுங்கலும்,
‘புக்க பண்டமுடன் உன் உடல் தசை புசிப்பன்; எங்ஙன்
இவை போவது?’ என்று,
அக் கடுங் கையும் இளைத்து, வெஞ் சினமும் ஆறி
நின்றனன், அரக்கனே.அப்புடையல்களைச் சிறிதும் இலட்சியஞ்செய்யாமல்
வீமன்புசித்துக்கொண்டிருத்தல்.

பிடர்உம் – பிடரியிலும், பக்கம் உம் – விலாப்புறத்திலும்,
முட்டிகள் – (பகனது) முட்டியாகப்பிடித்த கைக்குத்துகள், (அதனால்) கவளம்
பாரம் ஆய் விக்க நின்றன வயிறு இரண்டு அருகும் வீழ வீழ – (முன்பு) பருத்த
கவளங்களாய் (உட்புகாது) விக்கும்படி நின்றவைகள் வயிற்றின் இரண்டு
பக்கங்களிலும் விழ விழ, முன்விழுங்கலும் – (வீமன் அவற்றை) விரைவாக விழுங்கு
மளவிலே,- அரக்கன் – பகன்,- ‘புக்க பண்டமுடன் உன் உடல் தசை புசிப்பன் –
(உன்வயிற்றினுட்) புக்க உணவுகளுடனே உனது உடம்பின் தசையை யுண்பேன்:
இவை போவது எங்ஙன் – இவை எங்கே போவது?’ என்று – என்று சொல்லி, அ
கடு கைஉம் இளைத்து – (குத்திய) அந்தக் கடினமான (தன்) கைகளும்
இளைக்கப்பெற்று, (அதனால்), வெம் சினம்உம் ஆறி நின்றனன் – கொடியகோபமும்
சிறிது குறைந்து நின்றான்; (எ-று.)

     கவளம் – கையளவுகொண்ட உணவு; அல்லது, வாயளவு கொண்ட உணவு.
முஷ்டிகள்படுதலாகிய தீயசெயலையே சிறிது தடைப்பட்ட கவளங்கள் எளிதில்
உட்புகுதலாகிய நன்மைக்குக் காரணமாகக் கூறியது- தகுதியின்மையணி:
வடநூலார் ‘விஷமாலங்காரம்’ என்பார். ‘புக்க பண்டமுட னுன்னுடற்றசைபுசிப்ப
னெங்ஙனிவைபோவது’ என்ற இதில், பலிபண்டங்களையுண்ட உன்னை
யுண்பதால் பண்டத்தையும் உன்னையும் தனித்தனியே புசித்தலாகிய
இரண்டுவேலையில்லாமற் போய்விடுகிற தென்று பாராட்டினமை தோன்றும்.
போவது – தொழிற்பெயர்

அச் சகட்டினில் ஒர் எள்துணைச் சுவடும் அற்றபின்,
சிறிதும் அச்சம் அற்று,
உச்சம் உற்ற வெயில் அர்க்கன் ஒத்து, அவனொடு உத்தரித்து,
உரைசெய்து ஒட்டினான்:
‘மெச்ச மெச்சும் உலகத்து அரக்கர்களில் விக்ரமத்
திறலின் மிக்க நீ,
கச்ச கச்ச பல கத்தை விட்டு, உனது கட்டு உரத்தினொடு
கட்டுவாய்.-இதுவும், அடுத்த கவியும் – வீமன் வீரவாதங்கூறிப்
போர்தொடங்கல்.

அ சகட்டினில் – அந்தப் பண்டியிலே, ஓர் எள்துணை
சுவடுஉம்அற்றபின் – ஓர் எள்ளின் அளவு (அன்னத்தின்) அடையாளமும்
இல்லாது தீர்ந்தபின்பு, (வீமன்), சிறிதுஉம் அச்சம் அற்று – சிறிதும்
பயமில்லாமல், உச்சம்உற்ற வெயில் அர்க்கன் ஒத்து – (வானத்து)
உச்சியையடைந்த உக்கிரமான உஷ்ணகிரணங்களையுடைய சூரியன்போல
(உக்கிரங்கொண்டு எழுந்துநின்று), உத்தரித்து இவனொடு உரைசெய்துஒட்டினான்
– தருக்குக்கொண்டு பகனோடு இங்ஙன்கூறி வீரவாதஞ்செய்தான்:- மெச்சும்
மெச்சும் உலகத்து அரக்கர்களில் – (எல்லோராலும்) மிகவுங்கொண்டாடி
வியக்கப்படுகிற உலகத்துஉள்ள அரக்கர்களுள், விக்ரமம் திறலில் மிக்க –
பராக்கிரமத்தோடு கூடிய வலிமையில் மேம்பட்ட,நீ-, கச்சகச்ச பல கத்தை விட்டு
– மிகவும் வெறுக்கத்தக்க பல வேற்றொலியை [பயனில் சொற்களைப் பேசுதலை]
விட்டு, உனது கட்டு உரத்தினொடு கட்டுவாய் – (என்னோடு)
சமமாகப்பொரும்பொருட்டு உனது கச்சுக்கட்டை வலிமையோடு கட்டிக்கொண்டு
சித்தப்படுவாய்; (எ-று.)

     போர்செய்யச் சிறிதும்பின்னிடாமல் மிகஊக்கங்கொண்டென்பார், ‘சிறிதும்
அச்சமற்று’ என்றார். உத்தரித்து – (வயிற்றைத் தடவியுண்டதைச் சரித்துக்கொண்டு)
என்று கூறலுமாம்: உத்தரித்து உரைசெய்து – உத்தரமான வார்த்தையைச்சொல்லி
என்பாரு முளர். கச்சகச்ச – அடுக்கு, மிகுதிப்பொருளது: கச்ச – கைத்த என்பதன்
போலி : இனி, ‘கச்ச கச்ச’ என்பதை, வடமொழி ஒருமையேவலாகக் கொண்டு,
‘போ போ’ என்று உரைப்பாரும் உளர். கத்து – கத்துதல்: பிதற்று: முதனிலைத்
தொழிற்பெயர். கட்டு – இடைக்கட்டு.

     இச்செய்யுள் – ‘தத்த தத்தனன தத்த தத்தனன தத்த தத்தனன தத்தனா’
என்ற சந்தக்குழிப்புக்கு ஏற்ப வந்தது. இதில் வல்லோசைமிக்குவந்தது –
வல்லிசை வண்ணம்.    

சொல்லி என் பயன்? அரக்கன் நீ; மனிதன் யான்; உனக்கு
உரிய தொழில்களாம்
மல்லினும், படை விதத்தினும், செருவில் வல்ல வல்லன
புரிந்து, போர்
வெல்ல நெஞ்சம் உளதுஆகில், வந்து பொரு; விறல் இடிம்பனையும்
வென்று, உனைக்
கொல்ல வந்தனன்’ எனப் புகன்று, இரு கை கொட்டி,
வாகுமிசை தட்டினான்.

 சொல்லி என் பயன் – வீண்வார்த்தை பேசிப் பயனென்ன? நீ
அரக்கன் – நீ (இயல்பில் வலிய) இராக்கதன்: யான் மனிதன் – யான் (இயல்பில்
எளிய) மனிதன்: (ஆயினும்), செருவில் – யுத்தத்தில், உனக்கு உரிய தொழில்கள்
ஆம்-உனக்குஉரியசெயல்களாகிய, மல்லின்உம் – மற்போர்த்தொழிலிலும்,
படைவிதத்தின் உம்- பலவகை ஆயுதத் தொழில்களிலும், வல்ல வல்லன – (நீ)
தேர்ந்தவற்றையெல்லாம், புரிந்து – செய்து, போர் வெல்ல – போரில் (என்னை)
வெல்லுதற்கு, நெஞ்சம் உளது ஆகில் – (உனக்கு) மனத்துணிவு உள்ளதானால்,
வந்துபொரு – எதிர்வந்து போர்செய்: விறல் இடிம்பனைஉம் வென்று –
வல்லமையுடைய இடிம்பனையுஞ் சயித்து, உனை கொல்ல வந்தனன் – உன்னைக்
கொல்லுதற்கு வந்தேன், என புகன்று – என்று வீரவாதங் கூறி, (அவ்வீமன்), இரு
கை கொட்டி – (தனது) இரண்டுகைகளையுந்தட்டி, மார்பின்மிசை குத்தினான் –
(பகனுடைய) மார்பிலே குத்தினான்; (எ-று.)

     மனம்போனபடி வாயில்வந்தவற்றைச் சொல்லுதலிற் பயனில்லை; தொழிலில்
திறங்காட்டவேண்டு மென்பான் ‘சொல்லி யென்பயன்’ என்றான். கைகொட்டுதல்
– மற்போர் தொடங்கற்கு அறிகுறி, வந்தனனெனப்புகுந்து என்றுபாடம்

பட்டவர்த்தனர்கள் பொன் சிரத்தின் மலர் பொற்புடைச்
சரணபற்பனும்,
நெட்டிருள்சரனும், வெற்பு வெற்பினொடு நிச்சயித்து
உடல நிற்பபோல்,
வட்டம் வட்டம் வர, ஒட்டி ஒட்டி, உறு மல் தொழில்
செருவில் மட்டியா,
முட்டி யுத்த நிலை, கற்ற கற்ற வகை முற்ற முற்ற,
எதிர் முட்டினார்.-இதுவும், அடுத்தகவியும் – இருவருஞ்செய்யும் போர்த்
திறத்தைக்கூறும்.

பட்டம் வர்த்தனர்கள் – பட்டந்தரித்து அரசாளும் அரசர்களுடைய,
பொன் சிரத்தின் – பொன்முடியையணிந்த தலைகளின்மீது. மலர் – மலர்கிற, பொற்பு
உடை சரணம் பற்பன்உம் – அழகுள்ள பாததாமரைமலரையுடையவனான வீமனும்,
நெடு இருள் சரன்உம் – நெடிய நிசிசரனாகிய பகனும்,- வெற்பு – வெற்பினொடு,
உடல் நிச்சயித்து நிற்ப போல் – மலை மலையோடு போர்செய்ய நிச்சயித்து
நிற்பதுபோல,- வட்டம் வட்டம் வர – மண்டலகுதியால் மாறி மாறி வர, ஒட்டி
ஒட்டி – (ஒருவரோடொருவர்) கலந்து கலந்து, உறு – செய்கிற, மல் தொழில்
செருவில் – மல்லுத்தொழிலாகிய போரிலே, மட்டியா – தொடங்கி, முட்டி யுத்தம்
நிலை – கைக்குத்துச்சண்டை நிலைகளில், கற்ற கற்ற வகை முற்ற முற்ற – தாம்
தாம் அறிந்த வகைகள் எல்லாவற்றாலும், எதிர் முட்டினார் – (ஒருவரையொருவர்)
எதிரே குத்தினார்கள்; (எ-று.)

     பட்டாபிஷேகம் பெற்று அரசாளும் பல சிறந்த அரசர்களைப் போரில்
வென்று அவ்வெற்றிக்கு அறிகுறியாக அவர்கள் தலைமீது தன்கால்களை
வைப்பவ னென்பது, அவ்வரசர்களால் தங்கள் தலை தன்கால்களிற்படும்படி
சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்கப்படுபவ னென்பதும், முதலடியின் கருத்து.
வட்டம் என்றமண்டல கதியில், வலசாரி இடசாரியாகிய கதிவிசேடங்களும்
அடங்கும். முட்டி யுத்தம் – குத்துச்சண்டை. இச்செய்யுளிலும் 57 – இல்போல
வல்லிசைவண்ணமும் சந்தப்பொருத்தமுங் காண்க

கரம் கரத்தொடு பிணங்கவும், தமது கால்கள்
கால்களொடு கட்டவும்,
சிரம் சிரத்தினொடு தாக்கவும்,-கொடிய சிங்க ஏறு
அனைய திறலினார்-
உரங்கள் இட்டும், வளர் தோள்கள் இட்டும், எதிர் ஒத்தி,
மல்-சமர் உடன்றபின்,
மரங்கள் இட்டும், உயர் கற்கள் இட்டும், நெடு வாதினோடு
இகலி மோதினார்.

கொடிய சிங்கம் ஏறு அனைய திறலினார் – கொடிய
ஆண்சிங்கத்தை யொத்த வலிமையையுடைய அவ்விருவரும்,- தமது கரம்
கரத்தொடு பிணங்கஉம் – தங்கள் கைகள்கைகளோடு பின்னவும், கால்கள்
கால்களொடு கட்டஉம் – கால்கள் கால்களோடு பிணங்கவும், சிரம் சிரத்தினொடு
தாக்கஉம் – தலை தலையோடுமோதவும், உரங்கள் இட்டுஉம் – மார்புகளைச்
சேர்த்தும், வளர்தோள்கள் இட்டுஉம் – வளர்ந்த புயங்களைச் சேர்த்தும், எதிர்
ஒத்தி – (ஒருவரை யொருவர்) எதிரிலேதாக்கி, மல் சமர் உடன்ற பின் –
மற்போரை உக்கிரமாகச் செய்தபின்பு, மரங்கள் இட்டுஉம் – மரங்களைப்
பெயர்த்து மேலெறிந்தும், உயர் கற்கள் இட்டுஉம் – பெரிய கற்களை யெடுத்து
மேல்வீசியும், நெடு வாதினோடு – மிக்க வீரவாதத்துடனே, இகலி – மாறுபட்டு,
மோதினார் – போர் செய்தார்கள்; (எ-று.)

    உயர்கல்-வினைத்தொகை,வாது-வாதம் என்ற வடசொல்லின்திரிபு.
‘உடன்றுபின்’ என்றும் பாடம்.  

உலா வரும் தனது தாதை ஒத்த வலி உடைய காளை
கழல் உதையினால்,
விலா ஒடிந்து, தட மார்பு ஒடிந்து, மிடல் வெரிந் ஒடிந்து,
படு வெம் பிணப்
புலால் அளைந்த இரு கவுள் ஒடிந்து, பொரு புயம் ஒடிந்து,
கடை ஒத்த வாய்
நிலா எழும் கொடிய எயிறு ஒடிந்து, செயல் இன்றி வாள்
நிருதன் நிற்கவே,-வீமன் உதைக்கப்பகன் ஒடுங்கிச் சோர்ந்து திகைத்தல்.

இதுவும் அடுத்த கவியும் – குளகம்.

     (இ-ள்.) உலா வரும் – (எங்குந் தடையின்றி) இயங்குந்தன்மையுள்ள, தனது
தாதை – தனது தந்தையாகிய வாயுவை, ஒத்த-, வலிமை உடைய –
வலிமையையுடைய, காளை – இளவீரனான வீமனது, கழல் – கால்களின்,
உதையினால் – உதையால்,- வாள் நிருதன் – கொடிய அவ்வரக்கன், விலா ஒடிந்து
– விலாப்புறம்முறிந்து, தடமார்பு ஒடிந்து – பரந்தமார்புமுறிந்து, மிடல் வெரின்
ஒடிந்து – வலிமையையுடைய முதுகு முறிந்து, படு வெம் பிணம் புலால் அளைந்த
இரு கவுள் ஒடிந்து – உயிரற்ற பயங்கரமான பிணங்களின் தசை பொருந்திய
இரண்டு கன்னங்களும் முறிந்து, பொரு புயம்ஒடிந்து – போர்செய்கிற தோளும்
ஒடிந்து, ஒத்த கடைவாய் நிலா எழும் கொடிய எயிறு ஒடிந்து,- (தம்மில்
ஒன்றோடொன்று) ஒத்த கடைவாய்களில் வெள்ளொளி விளங்குகிற கோரதந்தங்கள்
முறிந்து, செயல் இன்றி நிற்க – ஒருசெயலுமில்லாமல் நிற்க,- (எ-று.)- ‘விழுத்தி’ என
வருங் கவியோடு தொடரும்.

      ‘விலாஒடிந்து … நிருதன் நிற்க’ – சினைவினை முதல்வினை கொண்டு
முடிந்தது. உலாவரும் = உலாவும்; வா – துணைவினை: ‘உலாவிவரும்’ என்பது
விகாரப்பட்டதெனினுமாம். விலா – வயிற்றின்பக்கம். ‘வெரிந்’, ‘புலாலளைந்த
விருகை யொடிந்து ‘, ‘கடை பொய்த்தவாய்’ என்றும் பாடம்

உண்டி அற்று அயரும் யாதுதானன் அடி-யுண்டு,
மெய்த் தளர்வு ஒழிந்தபின்,
மண்டியிட்டு, எதிர் விழுத்தி, மார்பின், இப மத்தகத்திடை
மடங்கலின்,
திண் திறல் பெரு மிடற்றை வன்பினொடு திருகி வீசி,
ஒரு செங் கையால்,
பண்டியில் கடிதின் இட்டு, மாருதி புகுந்தனன்,
பழைய பதியிலே.-பகனைக் கொன்று வீமன் ஊருக்கு மீளுதல்.

உண்டி அற்று அயரும் யாது தானன் – உணவில்லாமற் சோரும்
அரக்கனாகிய பகன், அடி உண்டு – (இவ்வாறு வீமனது) காலடி [உதை] பட்டு,
மெய் தளர்வு ஒழிந்த பின் – உடம்பின் சோர்வு நீங்கின பின்பு, மாருதி –
வாயுகுமாரனான வீமன், இபம் மத்தகத்திடை மடங்கலின் – யானையின்
தலையில் சிங்கம் (பாய்தல்) போல, எதிர் விழுத்தி மார்பின் மண்டி இட்டு –
(அவனை) எதிர்த்துக் கீழே தள்ளி அவன் மார்பின்மேல் மண்டியிட்டு
உட்கார்ந்துகொண்டு, ஒரு செம் கையால்- (தனது) சிவந்த ஒருகையினால், திண்
திறல் பெரு மிடற்றை வன்பினொடு திருகி வீசி – மிக்கவலிமையையுடைய
(அவனது) பெரிய கழுத்தை வலிமையோடு திருகியெறிந்து, கடிதின் பண்டியில்
இட்டு – (அவனுடைய உடம்பை) விரைவாகப் பண்டியிலே போகட்டு, பழைய
பதியில் புகுந்தனன் – பழமையான அவ்வேத்திரகீயநகரத்துக்குத் திரும்பிவந்தான்;
(எ-று.)

     உணவில்லாததனாலேயே சோர்வுற்ற அவ்வரக்கன் அதன்மேல்
உதையும்பட்டுத் தளர்ந்து நிற்கிற நிலையில் அவனை மேலுந்தாக்கி வதைத்தல்
நீதியன் றென்று வீமன் சிறிதுபொழுது போரொழிந்து நின்று, அவன்சோர்வு
தீர்ந்த பின்னரே மீண்டும் எதிர்த்தன னென்க. மண்டியிடுதல் – இருகால்
முடக்கிநிற்கும் நிலை.  வேத்திரகீயநகரத்திலுள்ளார் பார்த்துத் துன்பம்நீங்கி
மனம்மகிழ்தற்பொருட்டு அவ்வரக்கனுடலைப் பண்டியிலிட்டுக் கொணர்பவனானான்.
எதிர் = எதிர்த்து: வினைப்பகுதியே வினையெச்சப்பொருள்தந்தது; இனி, எதிரிலே
என்றும் பொருள்கொள்ளலாம். அடியுண்டு என்ற விடத்து ‘உதையுண்டு’ என்றும்
பாடமுண்டு.  

ஏக சக்ர வனத்து இருந்த திறல் யாதுதானனை இமைப்பினில்
சாக, முட்டியின் அடர்த்து, மா முனிவர்-தம் பதிப்புறன் அடுத்தது ஓர் வே கரிக் கடு வனத்தில் இட்டு, மலர் ஓடை மூழ்க,
விறல் வீமனும்;
மோகரித்து அவுணரைத் தடிந்து, கடல், முளரி நாயகனும் மூழ்கினான்.-வீமன்மங்களஸ்நாநஞ்செய்தலும்,
சூரியன்அஸ்தமித்தலும்.

விறல் வீமன்உம் – வலிமையையுடைய வீமனும், ஏக சக்கரம்
வனத்து இருந்த திறல் யாதுதானனை – ஏகசக்கரமென்னும் பெயரையுடைய
காட்டிலிருந்த வலிமையையுடைய அரக்கனாகிய பகனை, இமைப்பினில் –
ஒருமாத்திரைப் பொழுதிலே [மிக விரைவிலே], சாக இறக்கும்படி, முட்டியின்
அடர்த்து – முஷ்டியுத்தஞ்செய்து கொன்று, (பின்பு அவனுடலை), மா முனிவர்தம்
பதி புறன் அடுத்தது வே கரி கடு ஓர் வனத்தில் இட்டு – சிறந்த அந்தணர்கள்
வசிக்கிற அந்த வேத்திரகீயநகரத்தின் வெளிப்புறத்தைச் சார்ந்ததான
(பிணங்கள்) வெந்த கரிகளையுடைய கொடிய ஒரு காட்டிலே [மயானத்திலே]
போகட்டு, மலர் ஓடை மூழ்க – பூக்களையுடைய ஒரு நீரோடையிலே
ஸ்நாநஞ்செய்ய,- முளரி நாயகன்உம் – தாமரைக்குத் தலைவனான சூரியனும்,
அவுணரை மோகரித்து தடிந்து – (மந்தேகரென்ற) அசுரர்களை
வீராவேசங்கொண்டு கொன்று, கடல் மூழ்கினான் – (மேல்) கடலில்
நீராடினான் [அஸ்தமித்தனனென்றபடி]; (எ-று.)

     வீமன் அரக்கனைக் கொன்றுஓடையில்நீராடுமளவிலே, சூரியன்
அஸ்தமித்தானென்றவாறு. வீமன் பகனைப்பொருது கொன்ற பொழுது அசுத்தி
நீங்கும்பொருட்டு ஏற்றநீரில் மூழ்கியமைபோல, சூரியன் அசுரர்களைப்பொருது
கொன்றபொழுது அசுத்தி நீங்கும் பொருட்டு நீரில்முழ்குவானாயின னென
உவமையணி தொனித்தலை யுணர்க. முன்பு வீமனுக்கு உதயசூரியனையும் [செ-
19], உச்சசூரியனையும் [செ-57] உவமைகூறியவர், இங்கு அஸ்தமனசூரியனை
உவமை கூறினார். ஏகசக்கரவனம் – ஏகசக்கர நகரத்தைச்சார்ந்தவனமென்ன
இடமுண்டு.

     மந்தேகாருணம் என்னும் தீவில் வாழும் மந்தேகர் என்னும் அரக்கர்கள்
உக்கிரமான தவத்தைச் செய்து பிராமனிடத்து வரம் பெற்று அதனாற் செருக்கி
எப்பொழுதுஞ் சூரியனை வளைந்து எதிர்த்துத்தடுத்துப்
போர்செய்கின்றனரென்றும், அந்தணர்கள் சந்தியாகாலங்களில் மந்திரபூர்வமாகக்
கையில் எடுத்துவிடும் அருக்கிய தீர்த்தங்கள் வச்சிராயுதம்போலாகி
அவர்கள்மேல் விழுந்துஅவர்களை அப்பால்தள்ளிச் சூரியனது சஞ்சாரத்துக்குத்
தடையில்லாதபடி செய்கின்றனவென்றும், அப்படி அந்தணர்கள்செலுத்தும்
அருக்கியத்தின் ஆற்றலால் சூரியமண்டலத்தினிடையே ஒரு செந்தீ எழுந்து
சொலிக்க அத்தீயில் அவ்வரக்கர்கள் விளக்கில் விட்டில்போலவிழுந்து
ஒழிகின்றனரென்றும் நூல்கள்கூறும். ‘முளரிநாயகன் அவுணரை மோகரித்துத்
தடிந்து’ – அந்தணர்கள் அருக்கியப்பிரதானஞ்செய்ய அதனால்
தன்னிடம்எழுந்துவிளங்கும் சுவாலையைக்கொண்டு சூரியன் அவ்வரக்கர்களை
அழித்து என்க.

வாச மா மணி விளக்கு எடுப்ப, இவன் வந்து, தாம் உறையும்
மனை புகுந்து,
ஈசனோடு உமை எனத் தவம் புரியும் இருவர்
தாள்களும் இறைஞ்சியே,
நேசம் ஆன அருள் அன்னையைத் தொழுது, தம்முனைத்
தொழுது, நெஞ்சுறத்
தேசினோடு இளைஞர் தொழ, மகிழ்ச்சியொடு தழுவினான்,
முறைமை திகழவே.-வீமன், மாளிகைக்குவந்து பந்து மித்திரரோடு அளவளாவுதல்.

வாசம் – வாசனையுள்ள [நறுநெய்கொண்டு ஏற்றிய], மா மணி
விளக்கு – சிறந்த அழகிய விளக்குகளை, எடுப்ப – (நகரத்தார் எங்கும்) ஏற்ற,
இவன் – வீமன், வந்து-, தாம் உறையும் மனை புகுந்து- தாங்கள் வசிக்கும்
வீட்டிற்புக்கு,- முறைமை திகழ – (அவரவர்க்கு உரிய) முறைமை விளங்க,-
ஈசனோடு உமை என தவம் புரியும் இருவர் தாள்கள்உம் இறைஞ்சி- சிவபிரானும்
பார்வதி தேவியும் போலத் தவவொழுக்கத்தைநடத்துகிற அவ்வீட்டு அந்தணனும்
அவன் மனைவியுமாகிய இருவருடைய பாதங்களையும் நமஸ்கரித்து, நேசம்
ஆன அருள் அன்னையை தொழுது – அன்புமிக்க கருணையையுடைய தன்
தாயாகிய குந்திதேவியை வணங்கி,-தம்முனை தொழுது-தமையனாகிய தருமனை
வணங்கி, இளைஞர் தேசினோடு நெஞ்சுஉற தொழ – (தனது) தம்பியர்
பெருமையோடு மனப்பூர்வமாக (த் தன்னை) நமஸ்கரிக்க, மகிழ்ச்சியொடு
தழுவினான் – சந்தோஷத்தோடு (அவர்களைத்) தழுவினான்;(எ-று.)

     இல்லறத்தில் நின்றபடியே நல்லொழுக்கத்தை மிக்கசிறப்பாக நடத்துதற்கு
ஈசனும் உவமையும் உவமைகூறப்பட்டனர். ஈசன் –
எல்லாஐசுவரியமுமுடையவன். பார்வதி ஐந்துபிராயமான வளவிலே பரமசிவனை
மணம்புரிதற்குத் தவஞ்செய்யவிரும்பியவளாய்த் தன் கருத்தைப் பெற்றோர்க்குத்
தெரிவிக்கையில், ‘உ! மா [அம்ம! வேண்டா] ‘ என்று கூறினமையால், அவளுக்கு
உமையென்று பெயராயிற்று

அகம் மலர்ந்து முனி ஆசி சொற்றிடவும், அன்னை ஆர்வ
உரை கூறவும்,
முகம் மலர்ந்து உரிய துணைவர் ஆண்மை நிலை மொழியவும்,
சமர மொய்ம்பனை,
‘சகம் மலர்ந்த திரு உந்தி மால்கொல், இவன்!’ என்று, மற்று
உள சனங்களும்,
மிக மலர்ந்து, புனல் ஓடையின் குழுமி, நனி வியந்து, இசை
விளம்பினார்.-நகரத்திலிருந்த பலரும் வீமனைப் பாராட்டியமை.

சமரம் மொய்ம்பனை – போர்வீரனானவீமனை,- முனி –
(இருந்தவீட்டிற்குஉரிய) அந்தணன், அகம்மலர்ந்து – மனங் களித்து, ஆசி
சொற்றிடஉம் – வாழ்த்துக்கூறவும்,- அன்னை – தாய் [குந்தி], ஆர்வம் உரை –
அன்பைத்தெரிவிக்கும்பேச்சுக்களை, கூறஉம் – சொல்லவும்,- உரிய துணைவர் –
உரிமைபூண்டசகாயரான உடன்பிறந்தோர், முகம்மலர்ந்து – முகமலர்ச்சிகொண்டு,
ஆண்மை நிலைமொழியஉம் – பராக்கிரமச்செயலைப்பாராட்டிக் கூறவும்,-
மற்றுஉள சனங்கள்உம் – மற்றும் அந்நகரத்திலிருந்த சனங்களெல்லாம்,- ‘இவன்-,
சகம் மலர்ந்த திருஉந்தி மால்கொல்-உலகத்தைவெளிப்படுத்திய
அழகியநாபியையுடைய திருமாலோ? ‘ என்று – என்றுசங்கித்து, மிக மலர்ந்து –
மிகவும் மனம் மகிழ்ந்து, புனல் ஓடையின் குழுமி – நீர் ஓடையில் திரளுதல்போல
ஒன்றுகூடி, நனி வியந்து – மிகவும் கொண்டாடி, இசை விளம்பினார்-
(அந்தவீமசேனனுடைய) புகழைக் கூறினார்கள்; (எ -று.)

     துஷ்டநிக்கிரகஞ்செய்து சிஷ்டரைப்பரிபாலிக்குஞ் செயல்இவ்வீமனுக்கும்
இருத்தலால், ‘மால்கொல் ‘ என்றனர். ஓடையில்புனல் திரண்டு தாமரைமலர்
மலர்ந்திருத்தல்போல, இந்நகரில் சனங்கள் திரண்டு மகிழ்ச்சியால் தம் கண்கள்
மலர்ந்திருந்தன ரென்க.  

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ.வில்லிபாரதம் – முதல் பாகம் -3. வாரணாவதச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 12, 2023

ஆங்கு அவர் அம் முறை அயரும் ஆயிடை,
தீங்கு ஒரு வடிவமாம் திறல் சுயோதனன்,
‘பாங்கு இவன், நமக்கு’ எனப் பரிதி மைந்தனை
வாங்குபு, தழீஇயினன், வலிமை கூரவே.-துரியோதனன் கர்ணனைத் தனக்கு உற்றதுணையாகக்
கொள்ளுதல்.

ஆங்கு – அவ்விடத்தில் [அஸ்திநாபுரியில்], அவர் – அவர்கள்
[பாண்டவர்களும் துரியோதனாதியர்களும்], அ முறை – அவ்வாறு, அயரும் –
விளயைாடுகிற, அ இடை – அப்பொழுது,- தீங்கு ஒரு வடிவம் ஆம் திறல்
சுயோதனன் – தீக்குணமே ஒரு மனித வடிவங்கொண்டாற் போன்ற
[மிகக்கொடிய] வலிமையையுடைய துரியோதனன், வலிமைகூர – (தனக்கு)
வலிமை மிகும்படி, பரிதி மைந்தனை – சூரியனுடைய மகனான கர்ணனை, இவன்
நமக்கு பாங்கு என – இவன் நமக்கு உரியநண்ப னென்று கருதி, வாங்குபு
தழீஇயினன் – அழைத்துச் சேர்த்துக்கொண்டான்; (எ-று.)

     வீமனுடைய வலிமைக்கு ஆற்றாத துரியோதனன், தங்களுக்குப் பக்கபலம்
மிகுதற்பொருட்டு, பலபராக்கிரமங்களிற்சிறந்த கர்ணனை வரவழைத்துத் தனக்கு
ஏற்றதுணைவனாக்கிக்கொண்டனன் என்பதாம். வாங்குபு – செய்பு என்னும்
வாய்ப்பாட்டு வினையெச்சம்.  

ஒரு பகல், நிலமகள் உய்ய, மங்குலின்
வரு பகீரதிநதி வாச நீர் படிந்து,
இரு திறப் புதல்வரும் இயைந்த கேண்மையால்,
கரை அடைந்தனர், இளங் கடவுளோர் அனார்.–பாண்டவரும் துரியோதனாதியரும் கங்கையில் நீர்
விளையாட்டு நிகழ்த்தல்.

இளங் கடவுளோர் அனார் – தேவகுமாரர்கள் போன்றவர்களாகிய,
இரு திறம் புதல்வர்உம் – (பாண்டு திருதராஷ்டிரன் என்பவர்களின்)
புத்திரர்களான இரண்டுவகுப்பினர்களும்,- இயைந்த கேண்மையால் – பொருந்திய
நண்புடனே,- ஒருபகல் – ஒருநாள்,- நிலமகள் உய்ய மங்குலின் வரு பகீரதி நதி –
பூமிதேவி வாழ்வுபெறும்படி ஆகாயத்தினின்றுவந்த கங்காநதியினது, வாசம் நீர் –
நறுமணமுடைய தீர்த்தத்திலே, படிந்து – தோய்ந்து விளையாடி, கரை
அடைந்தனர் – (பின்பு அந்நதியின்) கரையை அடைந்தார்கள்; (எ-று.)

     கங்கைக்கு ‘நிலமகளுய்யவரு’ என்ற அடைமொழிகொடுத்தது,
பூலோகத்தவர்கள் தன்னில் நீராடி அருவினைதீர்ந்து உயர்கதி பெறும்படி வந்தது
என்ற கருத்தது. கங்காநதியின்நீர் பற்பல திவ்வியமலர்களை அடித்துக்கொண்டு
வருதலால், அதன் நீர் ‘வாசநீர்’ எனப்பட்டது: “பத்மகந்திநி” என்றது,
பாலபாரதம். வாஸம் – வடமொழி. குருகுலகுமரர்க்குத் தேவகுமாரருவமை
சிறப்பிற்கும் ஒளிக்கும் இன்பத்திற்கு மென்க. 

தைவரும் நவமணிச் சயிலம் என்னவே
ஐவகை நிறங்களும் அமைத்து இயற்றிய
தெய்வ ஆடக மனை, செல்வப் போனகம்
கைவர நுகர்ந்த பின், கண்ணும் துஞ்சினார்.-பாண்டவ கௌரவரது உண்டாட்டு.

(அன்றியும்), தைவரு – (மாசுதீரத்) துடைக்கப்பட்ட, நவமணி –
ஒன்பதுவகை யிரத்தினங்களையுடையதொரு, சயிலம் என்னவே – மலை யென்று
(கண்டவர்) சொல்லும்படியாகவே, ஐவகை நிறங்கள்உம் அமைத்து இயற்றிய –
ஐந்துவகை நிறங்களையும் பொருத்திச் செய்யப்பட்ட, தெய்வம் ஆடகம் மனை –
தெய்வத்தன்மையையுடைய [மிகச்சிறந்த] பொன்னின்மயமான மாளிகையிலே,
(இருதிறப்புதல்வர்களும்), செல்வம் போனகம் – செல்வச்சிறப்புக்கு உரிய சிறந்த
உணவை, கைவர நுகர்ந்த பின் – கையார உண்ட பின்பு, கண்உம் துஞ்சினார் –
நித்ரையையுஞ்செய்தார்கள்; (எ-று.)

     நவமணி – கோமேதகம், நீலம், பவழம், புஷ்பராகம்,மரகதம், மாணிக்கம்,
முத்து, வைடூரியம், வைரம் என்பன. ஐவகைநிறம் – பஞ்சவர்ணம்; அவை –
கருமை, செம்மை, பசுமை, பொன்மை, வெண்மை, ஐவகை நிறங்களும்
அமைத்தியற்றிய ஆடகம்மனை – ஐந்துவகை நிறங்களையுடைய
ஆடைகளாலமைத்துப் பொன்னணியணியப்பெற்ற மாளிகையெனினுமாம். சயிலம்
– முதற்போலி: சைலமென்பது, சிலைமயமான தெனக் காரணப்பொருள்படும்:
சிலை – கல். போனகம் = போஜநம்

கண்படைக் கங்குலில், கன்ன சௌபலர்,
எண் படைக் குமரனோடு எண்ணி, பாவகன்
நண்பன் மெய்ப் புதல்வனை, நார் கொள் வல்லியால்,
திண் பதத்தொடு புயம் சிக்க யாத்தபின்.-தூங்குகின்ற வீமனைத் துரியோதனாதியர்
கொடிகளாற் கட்டுதல்.

இதுவும், அடுத்த கவியும்-குளகம்.

     (இ – ள்.) கண் படை கங்குலில் – நித்திரைசெய்கின்ற இரவிலே, கன்ன
சௌபலர் -கர்ணனும் சகுனியும், எண் படை  குமரனோடு எண்ணி –
எண்ணங்களின்தொகுதியையுடைய இராசகுமாரனான துரியோதனனோடு
ஆலோசித்து, (பிறகு), பாவகன் நண்பன் மெய் புதல்வனை – அக்கினியின்
தோழனான வாயுவினது மெய்யன்புக்கு உரிய மகனாகிய வீமனை, நார்கொள்
வல்லியால் – கயிற்றின் தன்மையைக்கொண்ட நீண்டகொடிகளால், திண் பதத்தொடு
புயம் சிக்க யாத்தபின் – வலிய கால்களும் கைகளும் இறுகும்படி கட்டிய பின்பு,-
(எ-று.)- ‘பெருநதியூடு வீழ்த்தினான்’ என வருங்கவியோடு முடியும்.

     கண்படை – கண்டுபடுதல், கண்மூடியுறங்குதல். எண்படைக்குமரன்
என்பதற்கு – எண்ணத்தக்க தம்பிமாரின் தொகுதியையுடைய துரியோதனனென்று
உரைத்தலுமொன்று. நெருப்புப் பற்றியெரிதற்குக் காற்று உதவியாதல்பற்றி,
காற்றுக்கு அக்கினிசகாய னென்று ஒருபெயர் வழங்கும். சிக்க – திசைச்சொல்.
‘ஆர்த்தபின்’ என்றும் பாடமுண்டு.  

அரவினில் பிணித்து, எழும் அரவம் பொங்கிட,
உரனுடைப் பொருப்பை, அன்று, உம்பர் நாயகன்
பரவையில் செறித்தென, பயன் இல் செய்கையால்,
விரவும் அப் பெரு நதியூடு வீழ்த்தினார்.–துரியோதனன் வீமனைக் கங்கையில் எறிதல்.

உம்பர் நாயகன் – தேவர்களுக்கெல்லாந் தலைவனான திருமால்,
அன்று – முன்னொருகாலத்தில், உரன் உடைபொருப்பை – வலிமையையுடைய
மந்தரமலையை, அரவினில் பிணித்து – (வாசுகி யென்னும்) பாம்பினாற் கட்டி,
எழும் அரவம் பொங்கிட – மிக்க ஓசை யுண்டாம்படி, பரவையில் செறித்து என
– (பாற்) கடலில் இட்டாற்போல,- (வீமனை), பயன் இல் செய்கையான் –
பிரயோசன மற்ற செயலையுடைய துரியோதனன், விரவும் அ பெருநதியூடு
வீழ்த்தினான் – பொருந்திய அந்தப் பெரிய கங்கை நதியின் நடுவிற்
போகட்டான்; (எ-று.)

     “ஆயதாபிரஹிதம் ஸு யோதந:-தம்ஸு ஸு ப்தமவபத்யவல்லிபி;
போகிபத்தமிவ மந்தரம்  ஹரி:- ஸிந்துகர்ப்பபயஸிந்யபாதயத்” என்றதற்கு ஏற்ப –
உம்பர்நாயகன்-திருமால் எனப்பட்டது. மேல் வீமன் தனது வலிமையால்
தப்பியெழுதலின் ‘பயனில் செய்கையான் வீழ்த்தினான்’ என்றரென்னலாம்.
‘ஆர்வம்பொங்கிட’ ‘பயனில்செய்கையால்’, ‘வீழ்த்தினார் என்றும் பாடம்

வீழ்ந்தவன்,-அனந்தரம் நிமிர்ந்து, மெய் உறச்
சூழ்ந்த அப் பிணிகளைத் துணிகள் ஆக்கியே,
ஆழ்ந்திலன், ஏறி, மீண்டு, அவசத்தோடு அவண்
தாழ்ந்திலன்;-இராகவன் தம்பி போன்று உளான்.-வீமன் கட்டு விடுவித்துக் கரையேறுதல்.

இராகவன் தம்பி போன்றுஉளான் – இராமனது தம்பியான
இலக்குமணனையொத்துள்ளவனாகிய, வீழ்ந்தவன் – (கங்கைப் பெருக்கில்)
விழுந்தவீமன்,- அந்தரம் நிமிர்ந்து –  மேலெழுந்து, மெய் உற சூழ்ந்தன
பிணிகளை துணிகள் ஆக்கி – (தன்) உடம்பை அழுந்தச்சுற்றியுள்ள கட்டுக்களை
(த் தன் உடல்வலியால்) துண்டுகளாக்கிவிட்டு, ஆழ்ந்திலன் – (அந்தநீர்ப்பெருக்கில்)
ஆழாமலே ஏறி – கரையேறி, மீண்டு – திரும்பி, அவசத்தோடு –
(துயில்மிகுதியாலாகிய) பரவசத்துடனே, அவண் தாழ்ந்தனன் – அங்குதானே
படுத்தான்;(எ-று.)

     இராமராவண யுத்தத்தில் இந்திரசித்தினது நாகபாசபந்த்தினின்று விடுபட்டு
எழுந்த இலக்குமணண்போல, இப்பாசபந்தத்தினின்று விடுபட்டு வீமன்
பிழைத்தெழுந்தன னென்னுங் கருத்துப்பட, இவ்வுவமை கூறினரென்னலாம்.
ராகவன் என்ற வடசொல்லுக்கு ரகுவென்னும் அரசனது குலத்திற் பிறந்தவ
னென்று பொருள்; தத்திதாந்தநாமம்- ‘அனந்தர நிமிர்ந்து’ என்றும், ‘தாழ்ந்திலன்’
என்றம், ‘இராவணன் றம்பி’ என்றும்பாட முண்டு

வாள் இரவியை ஒளி மறைக்கும் வெஞ் சினக்
கோள் அரவினை அன கொடிய நெஞ்சினன்,
நீள் அரவுஇனங்களால், நித்திராலுவை
மீளவும் கொல்லுவான், வீரன் ஏவினான்.-பின்பு துரியோதனன் வீமன்மேற் பாம்புகளைக்
கடிக்கவிடுதல்.

வாள் இரவியை ஒளி மறைக்கும் – ஒளியை [கிரணங்களை]
யுடைய சூரியனது ஒளியை மறைக்கின்ற, வெம்சினம் கோள் அரவினை –
கொடியகோபத்தையுடைய கிரகமாகிய (இராகு கேது என்னும்) பாம்பை, அன –
ஒத்த, கொடிய நெஞ்சினன் – கொடு மனத்தையுடையவனாகிய, வீரன்
துரியோதனன்,- நித்திராலுவை – தூங்கிக்கொண்டிருக்கிற வீமனை, நீள் அரவு
இனங்களால் – நீண்ட பாம்புகளின் கூட்டத்தைக்கொண்டு, மீளஉம் கொல்லுவான்
– மீண்டுங் கொல்லத்துணிபவனாய், ஏவினான்- (அவன்மேல் அவற்றை)
ஏவினான்; (எ-று.)

     வீமன்மீது பாம்புகளைக் கடிக்கவிட்டு அவனைக் கொல்லுமாறு பிடாரர்களை
ஏவினானென்பது கருத்து. பாம்புவடிவமான இராகுகேது வென்னுங் கிரகத்தின்
வாய்ப்பட்ட சூரியன் விரைவில் அத்துயரொழிந்து எளிதில்வெளியப்படுதல்போல,
பாம்பின்வாய்ப்பட்ட வீமன் உடனே அத்துய ரொழிந்து அழிவின்றி
இனிதுஎழுந்தன னென்னுங் கருத்துப்படவந்தது இவ்வுவமை. வீரத்தாலன்றி
வஞ்சனையால் வீமனைக் கொல்லத்துணிந்தவனை, ‘வீரன்’ என்றது,
இகழ்ச்சிக்குறிப்பு. ரவி, நித்ராலு, வீரன் – வடசொற்கள். ‘கோளரவனையன
கொடியநஞ்சின’ என்றும் பாடம்.

கடித்தன பன்னகம், நகம் கொள் கைகளால்,
துடித்திட, மற்குணத் தொகுதிபோல் பிசைந்து,
இடித்திடும் முகில் என எழுந்து, மா நகர்
வடித்த வேல் துணைவரோடு எய்தி, மன்னினான்.-பாம்புகளை அழித்திட்டு வீமன் உயிர்பிழைத்தல்.

கடித்தன பன்னகம் – (அவ்வேவலின்படி தன்னைக்) கடித்திட்ட
பாம்புகளை, (வீமன்), நகம் கொள் கைகளால் – (கூரிய) நகங்களைக்கொண்ட
(தன்) கைகளால், துடித்திட – துடிக்கும்படி, மற்குணம் தொகுதிபோல் பிசைந்து –
மூட்டுப்பூச்சிக்கூட்டங்களைப் போல (எளிதிலே) பிசைந்தொழித்துக்கொண்டே,
இடித்திடும் முகில் என எழுந்து – இடியிடிக்கிற மேகம்போல (முழக்கஞ்செய்து
கொண்டு) எழுந்து, வடித்த வேல் துணைவரோடு எய்தி – கூரிய
வேலாயுதத்தையுடைய அந்த உடன்பிறந்தவர்களுடனே கூடி, மா நகர் மன்னினான்
– பெரிய அஸ்திநாபுரியைச் சேர்ந்தான்;

     தூங்கும்போது கடிக்கும் மூட்டுப்பூச்சிகளைப் பிசைந்திடுவது போலப்
பாம்புகளை வீமன் பிசைந்தா னென்க. பந்நகம் என்ற வடமொழி – பத் ந கம்
எனப்பிரிந்து, கால்களால் நடவாதது [மார்பினாற்செல்வது] என்றும், பந்நம் கம்
எனப்பிரிந்து, வளைந்து வளைந்து செல்வதென்றும் அவயவப்பொருள்படும்.
மற்குணம், மா, நகர் – மத்குணம், மஹா, நகரம் என்ற வடசொற்களின் திரிபு.
வடித்தல் – நெருப்பிலிட்டுக்காய்ச்சி யடித்துக் கூராக்குதல்.

வேறு ஒரு பகல், கழு நிரைத்து, வீமனோடு
ஆறு பாய்ந்து, இருவரும் ஆடும் வேலையில்,
தேறலான் வஞ்சகம் தேறி வண்டினால்,
ஏறினான் கடந்து, அரிஏறு போன்றுளான்.-துரியோதனன் வீமனைக் கழுவில்விழுத்த அவன் அறிந்துஉய்தல்.

வேறு ஒரு பகல் – மற்றொருநாளில், தேறலான் – பகைவனான
துரியோதனன், கழு நிரைத்து – (வெளித்தெரியாதபடி நீரினுள்ளே) கழுக்களை
வரிசையாக நாட்டி, வீமனோடு – வீமனுடனே, ஆறு பாய்ந்து – கங்காநதியிலே
குதித்து, இருவர்உம் ஆடும் வேலையில் – இவ்விருவரும்
விளையாடும்பொழுதில்,- அரி ஏறு போன்றுளான் – ஆண்சிங்கத்தை
யொத்துள்ளவனான வீமன்,- வஞ்சகம் வண்டினால் தேறி – (அவன்செய்த)
வஞ்சனையை (க் கழுமுனையில் தங்கிய) வண்டுகளினால் அறிந்து, கடந்து –
(அக்கழுவைக்) கடந்து குதித்து, ஏறினான் – கரையேறினான்;     (எ-று.)

     மற்றொருநாள் துரியோதனன் கங்கைத்துறையில் இரும்பினாலும்
செம்மரத்தாலும் கூரிய கழுக்களை நீரின்மேல்தோன்றாதபடி உள்நாட்டச்செய்து
வீமனை ‘நீரில்விளையாடலாம் வா’ என்று வஞ்சனையாக அழைத்துப்போய்
‘இங்கிருந்து நீ நீரில் குதிக்கிறாயா பார்ப்போம்’ என்ன, அப்பொழுது கண்ணன்
கருவண்டினுவருவங் கொண்டு கழுமுனைதோறும் உட்கார்ந்திருக்க, வீமன்
அதனை நோக்கி ‘இதுஎன்ன நீரோட்டத்தில் வண்டுகள்
உட்கார்ந்திருக்கின்றனவே!’ என்று உற்றுப்பார்க்கும்போது அவற்றின்கீழ் வசிகள்
நாட்டியிருக்கக்கண்டு் தன்சங்கேதப்படி அவைநாட்டியிராத இடம் பார்த்துக்
குதித்துக் கரையேறி மீண்டானென்பது, இங்குக் குறித்த வரலாறு. இந்தவிடத்து
இவ்வரலாறு மாகாபாரதத்திலாவது பாலபாரதத்திலாவது காணப்படவில்லை.
பாய்ந்து ஆடுதலாகிய வினை துரியோதனனுக்கும் உள்ளதனால், ‘நிரைத்து’ என்ற
செய்தெனெச்சத்தைத் தன்கருத்தாவின் வினைகொண்ட தென்னலாம்,
‘கடகரியேறு’ என்றும் பாடம்.

பின்னரும் ஒரு பகல், பெற்றம் பெற்றவன்-
தன்னை, அம் மகீபதி தனயன், ஆதரித்து
இன் அமுது அருத்துவான் போல, யாவையும்
துன்னிய விடங்களால் துய்ப்பித்தான்அரோ.-மற்றொருநாள் துரியோதனன் வீமனுக்குவிஷமூட்டுதல்.

பின்னர்உம் – பின்பும், ஒரு பகல் – ஒருநாள், அ மகீபதி தனயன்
– திருதராட்டிரமகாராசனுக்குக்குமாரனான அத்துரியோதனன், பெற்றம் பெற்றவன்
தன்னை – வாயுதேவனாற் பெறப்பட்ட குமாரனான வீமனை, ஆதரித்து இன்
அமுது அருத்துவான்போல – அன்புகொண்டு இனியநல்லுணவை
உண்பிப்பவன்போல, துன்னிய விடங்களால் யாவைஉம் துய்ப்பித்தான் – செறிந்த
நஞ்சுகளோடு எல்லாவுணவுகளையும் உண்பித்தான்; (எ-று.)

     உண்பன தின்பன பருகுவன நக்குவன எனப் பலவகைப்படுகிற சோறு கறி
பாயசம்முதலிய உணவுகளிலெல்லாம் வீமனுக்குத் தெரியாதபடி மிக்க
விஷங்கலந்து உண்பித்தனனென்பார், ‘யாவையுந் துன்னியவிடங்களால்
துய்ப்பித்தான்’ என்றார். கருப்பம் ஆடவர்வயிற்றில் இரண்டுமாதம் தங்கிப்
பின்னர் பெண்டிர் வயிற்றில் சேர்கிறதென்னும் நூல்வழக்குப்பற்றியும், ஒருவனது
மனைவியின் வயிற்றில்தோன்றியவரை அவன்வயிற்றில் தோன்றியவரென்னும்
வழக்குப்பற்றியும் ‘பெற்றம்பெற்றவன்’ என்றார் ‘அரோ – ஈற்றசை.

விடத்திலே அழிந்து, அறிவு ஒழிந்த வீமனை,
வடத்திலே பிணித்தனன், கங்கை வாரியின்
இடத்திலே அமிழ்த்தினன்-இதயம் ஒத்தவர்
திடத்திலே முதிர்ந்த கிங்கரர் திறங்களால்.-துரியோதனன் வீமனைக்கயிற்றாற்கட்டிக்
கங்கையில் அமிழ்த்துதல்.

 விடத்தில் அழிந்து அறிவு ஒழிந்த வீமனை – நஞ்சுண்டதனால்
நிலைகுலைந்து அறிவழிந்த வீமசேனனை, (துரியோதனன்),- இதயம் ஒத்தவர் –
(தன்) கருத்துக்கு ஒத்தகருத்துடையவர்களான, திடத்தில் முதிர்ந்த கிங்கரர்
திறங்களால் – வலிமையில் மிக்க வேலைக்காரர்களுடைய
கூட்டங்களைக்கொண்டு, வடத்தில் பிணித்தனன் – கயிற்றாற்கட்டி.
கங்கைவாரியின் இடத்தில் அமிழ்த்தினன் – கங்கை நீரிலே அமிழப்பண்ணினான்;
(எ-று.)

     துரியோதனன் நூற்றுக்கணக்கான சூலங்களைநாட்டிய கங்கையின் நீரிலே
விஷவேகத்தால் மயங்கியுள்ள வீமனைக் கயிற்றாற்கட்டிக் கிங்கரரைக்கொண்டு
வீழ்த்தினனாக, ஊழ்வினையின்   வலியால்  சூலமுனையாற் புண்படாமல்
பாதாளஞ்சேர்ந்தானென்று பாலபாரத்திலுள்ளது: வியாசபாரதம் இங்ஙனே கூறும்.
தனது அந்தரங்கமான செயல்களைப் பிறர்க்கு வெளியிடாதவரென்பது,
‘இதயமொத்தவர்’ என்பதனாற் பெறப்படும். ‘திடத்திலே முதிர்ந்த’ என்ற
அடைமொழி, உடல்வலிமைமிகுதியோடு நெஞ்சுறுதியின் மிகுதியையுங்
காட்டும். 

ஓத வான் கடலிடை ஒளித்த வெற்பு எனப்
பாதலம்தனில் விழு பவன சூனுவை,
வேதனைப்படுத்தினர், விடம் கொள் கூர் எயிற்று
ஆதவப் பண மணி அரவின் அம் சிறார்.-பாதாளஞ்சென்ற வீமனை அங்குள்ள நாகங்கள்
கடித்தல்.

ஓதம் வான் கடலிடை ஒளித்த வெற்பு என – அலைகளையுடைய
பெரியகடலிலே மறைந்த மலைபோல, பாதலந்தனில் விழு – (கங்காநதியிலுள்ள
பிலத்துவாரத்தின் வழியாய்ப்) பாதாளலோகத்திற் போய்விழுந்த, பவன சூனுவை
– வாயுகுமாரனான வீமனை,- (அங்குள்ள), விடம்கொள் கூர் எயிறு –
விஷம்பொருந்திய கூரிய பற்களையும், ஆதவம் பணம் மணி – சூரியகாந்திபோல
விளங்குகிற படத்திலுள்ள மாணிக்கத்தையுமுடைய, அரவின் அம்சிறார் –
நாகர்களின் அழகிய பிள்ளைகள் [பாம்புக்குட்டிகள்], வேதனைப்படுத்தினர் –
கடித்துவருத்தினார்கள்; (எ-று.)

     ஆதவம்= ஆதபம்; வெயில். நாகராவார் – படமும் வாலுமுடையராய்
மனிதவடிவமுந் தெய்வப்பிறப்புமானதொரு சர்ப்பசாதியார்.

முற்படு கொடு விடம், முளை எயிற்று உகும்
பிற்படு விடத்தினால் பெயர்ந்து போதலின்,
மல் படு புயகிரி வடப் பிணிப்பும் அற்று,
அல் படும் இருள் புலர் அலரி ஆயினான்.-அப்பாம்புகளின் விஷத்தால் முந்தின விஷம்
நீங்குதல்.

முன் படு கொடு விடம் – (வீமனுடம்பில்) முன்பு பொருந்திய
கொடிய (உணவின்) விஷம், முளை எயிறு உகும் பின் படு விடத்தினால் –
(சிறுநாகங்களின்) முளைத்த பற்களினின்று சொரிந்த பிந்தின விஷத்தால்,
பெயர்ந்து போதலின் – நீங்கிப் போனதனால்,- (வீமன்),- மல் படு புயம் கிரி
வடம் பிணிப்புஉம் அற்று- வலிமை மிக்க மலைகள்போன்ற (தனது) தோள்களிற்
கயிற்றாற்கட்டிய கட்டும் (தனது உடல்வலிமையால்) துணிபடப்பெற்று, அல் படும்
இருள் புலர் அலரி ஆயினான் – இரவில் உண்டாகும் இருளைக்கெடச்செய்த
சூரியன் போன்றான்; (எ-று.)

     கொடுவிடமும் கடும்பிணிப்பும் அற விளங்கிய வீமனுக்கு, இருளறவிளங்கிய
சூரியனை உவமைகூறினார். ஸ்தாவரவிஷமான நஞ்சுணவிற்குச் சங்கம விஷமான
அரவினங்கடித்துஏற்றிய விஷம் மாற்றாயிற்றென்க. புயகிரி –
முன்பின்னாகத்தொக்க உவமத்தொகை. ‘முனையெயிற்று’ என்றும் பாடம்.

வாசுகிதனக்கு இவன் வரவு உணர்த்தலும்,
ஆசுகன் மதலை என்று அறிந்து, மற்று அவன்
தேசு உறு பொற்குடம் தெரிந்து, பத்தினால்,
ஏசு அறும் அமுது எலாம் இனிதின் ஊட்டினான்வீமனுக்கு வாசுகி அன்போடு அமிருதமூட்டுதல்

வாசுகிதனக்கு இவன் வரவு உணர்த்தலும் – (நாகராசனான)
வாசுகிக்கு இந்த வீமனது வருகையை (நாகங்கள்) அறிவித்தவுடனே,- அவன்-
அந்த வாசுகி, ஆசுகன் மதலை என்று அறிந்து – (இவனை) வாயுவின்
குமாரனென்று அறிந்துகொண்டு, தேசு உறு பொன்குடம் தெரிந்து – ஒளிமிக்க
பொன்மயமான (அமிருத) கலசங்களைத் தேர்ந்தெடுத்து, பத்தினால் –
அக்குடங்கள் பத்திலேயுள்ள, ஏசு அறும் அமுது எலாம் – குற்றமில்லாத
அமிருதம் முழுவதையும், இனிதின் ஊட்டினான்-இனிமையாக உண்பித்தான்;
(எ-று.)

     குந்தியின் தாய்மரபினரோடு வாசுகிக்கு உறவுமுறைமை உள்ளதனால்,
ஆர்யகனென்ற நாகமாதாமகனான அரசன் மொழிப்படி, வாசுகி வீமனுக்கு
ஆயிரம்யானைவலிமைதரவல்ல திவ்யரசத்தைப் பானஞ் செய்வித்தனனென்று
வியாசபாரதத்திற் கூறியுள்ளது. தன்சாதியாகிய பாம்புகளுக்கு உணவாய் அவற்றை
வளர்க்கிற வாயுவின் மகனென்ற சம்பந்தத்தாலும், பல நாகங்கள் கடித்தும்
விஷம் உறைக்காத அவனது உடல் வலிமையைக்  கண்டதனாலாகிய
ஆச்சரியத்தாலும், வீமனுக்கு வாசுகி அமிழ்து ஊட்டின னென்பாருமுளர்.
‘பற்றினால்’ என்றும் பாடம்.  

வெங் கனல் கொளுந்தலின் வெந்த வான் புலம்
மங்குல் பெய் மாரியால் வயங்குமாறுபோல்,
அங்கு எரி விடம் நுகர்ந்து அழிந்த பேர் உடல்,
இங்கு அமுது அருத்தலால், எழில் புரிந்ததே.-அமிருதமுண்டதனால் வீமனது உடல் எழிலுறுதல்.

வெம் கனல் கொளுந்தலின் வெந்த – வெவ்வியநெருப்புப்
பற்றுதலால் எரிந்துபோன, வான் புலம் – பெரிய காடு, மங்குல் பெய் மாரியால் –
மேகம்பொழிந்த மழையால், வயங்கும் ஆறுபோல் – தழைத்து
விளங்குந்தன்மைபோல,- அங்கு ஏரி விடம் நுகர்ந்து அழிந்த பேர் உடல் –
அவ்விடத்தில் [துரியோதனனிடத்தில்] கொடியவிஷத்தை யுண்டதனால் தன்
நிலைகுலைந்த (வீமனது) பெரிய உடம்பு, இங்கு அமுது அருத்தலால் எழில்
புரிந்தது – இவ்விடத்தில் அமிருதம் உண்பிக்கப்பெற்றதனால் அழகுசெய்தது;

     முதலிரண்டடிக்கு – உஷ்ணமான நெருப்புப்போன்ற சூரியகிரணஞ்
சுடுதலால் தீந்துபோனபெரியபயிர்நிலம் மழையால் தழைத்துச் செழித்தல்போல என்றுமாம். ‘கொளுத்தலின்’ எனவும்பாடம்.   

ஆயிரம் பதின் மடங்கு அரசுஉவாக்களின்
மா இருந் திறல் வலி மலிந்த மேனியான்,
ஏய் இருந் தவப் பயன் என்ன, எண் பகல்
மேய் இருந்தனன், பணிவேந்தன் கோயிலே.-வீமன் வாசுகியின் மாளிகையில் எட்டுநாள்
தங்கியிருத்தல்.

ஆயிரம் பதின் மடங்கு அரசு உவாக்களின் – பதினாயிரம்
அரசயானைகளினுடைய, மா இரு திறல் வலி – மிகவும் அதிகமான பெரிய
வலிமை, மலிந்த – பொருந்திய, மேனியான் – உடம்பை யுடைய வனானவீமன்,
ஏய்இரு தவம் பயன் என்ன-பொருந்திய மிக்க தவத்தின் பயனினாற்போல,
பணிவேந்தன் கோயில்-நாகராசனான  வாசுகியினது சிறந்தமாளிகையிலே, எண்பகல்
மேய் இருந்தனன்-எட்டு நாள் தங்கியிருந்தான்; (எ-று.)

     இன்பத்திற்சிறந்த நாகலோகத்தில் மனிதவுடம்போடு சென்று சிலநாள்
தங்குதல்அரிதிற்செய்த பெரியதவயோகத்தின் சித்தியினாலன்றி இயலாதாதலால்,
‘ஏயிருந்தவப்பயனென்ன’ என்றார். அரசு உவா – சிறந்தயானை; சிறந்ததை
அரசென்றல், மரபு. உவா – யுவா என்ற வடசொல் விகாரப்பட்டது. அரசுவாவின்
இலக்கணம் – நான்கு கால்களும் துதிக்கையும் கோசமும் வாலுமாகிய ஏழுறுப்பு
நிலத்தில் தோய்ந்து, பாலையும் சங்கையும் போன்ற வெண்ணிறம் வாய்ந்த கால்
நகமுடையதாய், நான்கு கால்கள் துதிக்கை உடம்பு வால் தந்தம் இரண்டு ஆகிய
ஒன்பது உறுப்புக்களாலுங் கொல்லவல்லதாய், ஏழு முழம் உயர்ந்து ஒன்பதுமுழம்
நீண்டு பதின்மூன்று முழச்சுற்றளுவுடையதாகி, தீயுமிழுஞ் சிறிய கண்களையும்
சிவந்தபுள்ளிகளையுமுடைத்தாய், முன்பக்கம் உயர்ந்து பின்பக்கம்
தாழ்ந்திருப்பதாம். மாயிரு – உரிச்சொற்புணர்ச்சி. திறல்வலி –
ஒருபொருட்பன்மொழி

இவனை அந் நதியிடை இட்ட பாவியும்,
தவனனை உததியில் சாய்த்த மாலைபோல்,
அவனிபன் நகரியின் அரச வெள் வளைத்
துவனி செந் தழல் விளக்கு எடுப்பத் துன்னவே,-வீமனின்றித் துரியோதனன்மாத்திரம் நகர் சேர்தல்.

இதுவும், அடுத்தகவியும் – குளகம்.

     (இ-ள்.) இவனை அ நதியிடை இட்டபாவிஉம் – வீமனை அங்கங்கா
நதியின் நடுவிலே போகட்ட தீவினையுடையவனான துரியோதனனும்,- தவனனை
உததியில் – சாய்த்தமாலை போல் – சூரியனைக் கடலில்வீழ்த்திய
மாலைக்காலம்போல,- அரசர் வெள் வளைதுவனி – அரசர்களுக்குரிய
வெண்மையான சங்கத்தின் முழக்கத்தோடு, செம் தழல் விளக்கு எடுப்ப –
சிவந்த அக்கினியினாலாகிய தீபத்தை (நகரத்தவர்) எடுக்காநிற்க,- அவனிபன்
நகரியின் துன்ன – திருதராட்டிர மகாராசனுடைய நகரத்தில் [அத்தினாபுரியில்]
சேர்ந்திடவே,- (எ-று.)- குந்தி கண்டிலள் விண்டிலளென வருங் கவியோடு
முடியும்.

     துரியோதனன் மாலைப்பொழுதில் அத்தினாபுரிக்கு வந்தானென்பது, இதன்
கருத்து. செந்நிறமுடைய சூரியன் கடலில் மறைந்திடுதற்குக் காரணமான கரிய
இருட்பொழுதாகியமாலையை, செம்மையுடைய வீமன் கங்கைப்பெருக்கில்
மூழ்கியிடுதற்குத் தூண்டுகோலான கறுத்த களங்க சித்தமுடைய துரியோதனனுக்கு
உவமைகூறினமை நன்குபொருந்தும். அன்றியும், சூரியனைக் கடலிற் சாய்த்த
மாலை அவன் அழியாதுநிற்கச் சிறிதுபொழுதிலேதான் அழிதல்போல, வீமனை
நதியில் ஆழ்த்திய துரியோதனனும் அவன் இறவாதுநிற்கத் தானே விரைவில்
அழிந்திடுதலையும் நோக்குக. காலை மாலையாகிய இரண்டு சந்தியிலும்
இராசநகரியிற் சங்கொலித்தலும், மாலையில் விளக்கு எடுத்தலும் இயல்பு.
இராசகுமாரனான துரியோதனன் நகர்க்கு மீளுகையில் அங்குள்ளார் அவனுக்கு
மரியாதையாக மங்களசங்கத்தை முழக்குதலும், அஷ்டமங்கலத்துள் ஒன்றான
விளக்கை ஏந்துதலும் இயல்பே.

கண்டிலள், உதிட்டிரன் கனிட்டற் கண் உற;
உண்டிலள்; தரித்திலள்; ஓர் இராவினும்
கொண்டிலள், துயில்; இளங் குமரர்தம்மொடும்
விண்டிலள் உரை;-உளம் விம்மு குந்தியே.-வீமனைக் காணாது குந்தி மிகவருந்துதல்.

உதிட்டிரன் கனிட்டன் – தருமபுத்திரனது தம்பியான வீமனை, கண்
உற கண்டிலள்- (தன்) எதிரில்வரக் காணாதவளாய் உளம் விம்மு – மனம்
ஏங்குகிற, குந்தி – குந்திதேவியானவள், – உண்டிலள் – உணவு நுதர்ந்திலள்:
தரித்திலள்- (மகப்பிரிவினாலான துன்பத்தைச்) சிறிதும் பொறுக்கமாட்டிற்றிலள்;
ஓர் இராவின்உம்-(அவனைக்காணாத தினங்களுள்) ஓரிரவிலாயினும், துயில்
கொண்டிலள்-நித்திரைகொண்டிலள்; இள குமரர்தம்மொடுஉம் உரை விண்டிலள் –
இளமைப்பருமுடைய (தனதுமற்றைக்) குமாரர்களுடனும் யாதொரு பேச்சும்
பேசிற்றிலள்; (எ-று)

வீடினன் ஆம்’ எனத் துணைவர் வேறுவேறு
ஓடினர்; கான், நதி, ஓடை, எங்கணும்
தேடினர்; ‘காண்கிலம்; செய்வது என்?’ என,
நாடினர்; நடுங்கினர், நடுக்கு இல் சிந்தையார்.-தருமன் முதலிய நால்வரும் வீமனைத் தேடிக்காணாது
வருந்துதல்.

நடுக்கு இல் சிந்தையார் – கலக்கமற்ற மனத்தை யுடையவர்களான,
துணைவர் – (யுதிட்டிரன் முதலிய) உடன்பிறந்த நால்வரும், வேறுவேறு ஓடினர்
– வெவ்வேறாய் ஓடிச்சென்று, கான் நதி ஓடை எங்கண்உம் தேடினர் – காடு நதி
ஓடை ஆகிய எவ்விடங்களிலுந் தேடி, காண்கிலம் செய்வது என் என நாடினர் –
‘(எங்குங்) காண்கின்றிலோம்: இனிச்செய்யக்கடவதுஎன்ன!’ என்று சிந்தித்து,
வீடினன் ஆம் என (வீமன்) இறந்தான் போலுமென்று சங்கித்து, நடுங்கினர் –
மிகவும் அஞ்சினார்கள்;(எ-று.)

     “காநநேஷு  ஸரஸீஷு  ஸிந்துஷு ” என்று பாலபாரதத்தில் வருதற்கு ஏற்ப,
கான் – காட்டில் எனப்பட்டது.   

கூற்று அன சுயோதன குமரனே, இவன்
ஆற்றலின் வெரீஇ, அழுக்கற்ற சிந்தையான்;
ஏற்றதை உணர்கிலம்’ என்று, தந்தையாம்
காற்றினும் அலமரும் கருத்தர் ஆயினார்.-தருமன் முதலியோர் சிந்தைப்படும் விதம்.

கூற்று அன – யமனையொத்த, சுயோதன குமரன்ஏ –
துரியோதனனாகிய இராசகுமாரனே, இவன் ஆற்றலின் வெரீஇ –
இவ்வீமனுடைய வலிமையினின்று அஞ்சி, அழுக்கற்ற – (இவனிடம்)
பொறாமைப்பட, சிந்தையான் – மனத்தையுடையவன்: (இவ்வளவேயன்றி),
ஏற்றதை உணர்கிலம் – (வீமனுக்கு) நேர்ந்த நிலையை அறியோம்’, என்று –
என்று எண்ணி, தந்தை ஆம் காற்றின்உம் அலமரும் கருத்தர் ஆயினார்-
(தருமன் முதலிய நால்வரும் அவ்வீமனது) தந்தையாகிய காற்றைக்காட்டிலும்
விரைந்து சுழலுகின்ற மனத்தையுடைவரானார்கள்;(எ-று.)- இக்கவிக்கு எழுவாய்,
கீழ்க்கவியில் வந்த ‘துணைவர்’ என்பதே.

     துரியோதனனே இவன்மேற் பொறாமையுடையவனாதலால், அவன் இவனை
யாதுசெய்தனனோ என்று சங்கித்தன ரென்பதாம். சிறிதேனும் ஒருநிலை
நில்லாமல் எப்பொழுதுஞ் சஞ்சரிக்குந் தன்மையையுடைய காற்றினும் மிகுதியாக
மனஞ்சலித்தன ரென்பது, ஈற்றடியின்  கருத்து. பிராணிகளின் உடம்பையும்
உயிரையும் வெவ்வேறு கூறாகப் பிரித்தலால், யமனுக்குக் கூற்று என்று பெயர்;
இதற்கு – பொதுப்படச்செல்லுங்காலத்தைப் பிராணிகளுக்கு ஏற்பக் கூறுபடுத்துபவ
னென்று காரணப்பொருளுரைத்தலும் உண்டு. அழுக்கறுத்தல் – பிறராக்கம்
பொறாமை. அழுக்கறு என்பது – ஒருசொல்; இனி, அழுக்கு அறுஎனப்பிரிந்து,
குற்றம் நீங்குதலென்று பொருள்படும். இது, குற்றமுடைமையாகிய பொறாமைக்கு
எதிர்மறையிலக்கணையாய் வழங்கியதென்றலும் ஒன்று. இது முதனிலைதிரிந்த
தொழிற்பெயராய் அழுக்காறு எனநிற்கும்.

ஊதை இல் பூதம் ஒத்து உள்ளம் வெம்பிய
தாதை இல் சிறுவரை, தாதைதாதைபால்,
கோதை இல் குழலினாள் கொண்டு சேறலும்,
‘வாதை இன்று அவற்கு’ என வருத்தம் மாற்றினான்.-மக்களுடன் வருந்திய குந்திக்கு வீடுமன் தேறுதல்
கூறல்.

ஊதை இல் பூதம் ஒத்து – வாயுவையொழிந்த மற்றை நான்கு
பூதங்கள் போன்று, உள்ளம்வெம்பிய – (வீமனைக்காணாது) மனந்தவித்த, தாதை
இல் சிறுவரை – தந்தையை யிழந்த மைந்தரான (தருமன் முதலிய) நால்வரையும்,
கோதை இல் குழலினாள் – (அமங்கலியாதலால்) மாலையில்லாத கூந்தலையுடைய
குந்திதேவியானவள், தாதை தாதைபால் – (அக்குமாரர்களின்) தந்தையான
பாண்டுவினது (பெரிய) தந்தையாகிய வீடுமனிடத்தில், கொண்டு சேறலும் –
அழைத்துக்கொண்டு போனவளவிலே,- (அவ்வீடுமன்), அவற்கு வாதை இன்று
என – அவ்வீமனுக்கு வருத்தமொன்று மில்லையென்று (தன் ஞானக்கண்ணால்
உணர்ந்து)கூறி, வருத்தம் மாற்றினான் – (அவர்களடைய) துன்பத்தை நீக்கினான்;
(எ-று.)

     ஒன்றற்கொன்று தொடர்புடைய ஐம்பெரும்பூதங்கள் தம்மில் ஒன்றாகிய
வாயு ஒழிந்தால் தமது நிறைவு குறைந்து நான்காய் நிற்றல்போல, உள்ளும்
புறமும் ஒத்த உடன்பிறந்தவரான பஞ்சபாண்டவர்கள் தம்மில் ஒருவனான
வீமனை யிழத்தலால் குறைகொண்டு நின்றன ரென்பது, ‘ஊதையில் பூதமொத்த
சிறுவர்’ என்பதன் கருத்து. இங்கே, பூதம் – நிலம், நீர், தீ, வானம்.
வாயுகுமாரனுக்கு அவ்வாயுவையே உவமை கூறினார். இனி, ஊதையில் பூதமொத்த
சிறுவர் – உயிர்ப்பில்லாத பிராணிகள் போன்று வீமனை யிழத்தலால் அழிவடைந்த
மற்றைநால்வரென்றலும் ஒன்று. ‘தாதைதாதைபால் சிறுவரைக் கொண்டு சேறலும்’
என்றமையால், வீமனில்லாக் குறையைத் தெரிவித்தமை பெறப்படும்

தரும மன்னனும், நகர்ச் சனங்கள் யாவையும்,
தெருமரல் தேற்றவும், தெய்வம் கூறவும்,
பெருமித நிமித்தங்கள் பெற்றி பேசவும்,
‘வரும், வரும்!’ என மனம் மறுகி, வைகினாள்.-பலருந் தேற்றவும் குந்தி தேறாதுநிற்றல்

வரும் வரும் என – (வீமன்) வருவான் வருவானென்று கூறி,
தருமமன்னன்உம் – யம தருமராசனது அமிசமான விதுரராசனும், நகர் சனங்கள்
யாவைஉம் – பட்டணத்துச் சனங்களெவையும், தெருமரல் தேற்றஉம் –
மனக்கலக்கத்தைத் தெளிவிக்கவும், தெய்வம் – தெய்வங்கள், கூறஉம் –
ஆவேசப்பட்டுச் சொல்லவும், பெருமிதம் நிமித்தங்கள் – நல்ல சகுனங்கள்,
பெற்றி பேசஉம்- (அவன் வருவதற்கு உரிய) அடையாளங்களைக் கூறவும்,
(குந்திதேவி), மனம் மறுகிவைகினாள் – (தேறாமல்) மனங்கலங்கியே இருந்தாள்;
(எ-று.)

     விதுரன் யம தருமராசனது அமிசமாதலைக் கீழ்ச் சம்பவச் சருக்கத்தில்
வந்ததனால் அறிக. சனமென்றது – பொருளால் உயர்திணையாயினும் சொல்லால்
இருதிணைக்கும் பொதுவாதலால், ‘சனங்கள் யாவையும்’ என
அஃறிணைப்பாற்படுத்துக் கூறினார். பெரும் இதம் நிமித்தங்கள் எனப்பிரித்து –
மிக்க நன்மைக்கு உரிய சகுனங்களெனினுமாம். பேச – உணர்த்த என்றபடி: இது
– ஒருவகை உபசாரவழக்கு. வரும்வரும் என்ற அடுக்கு – துணிவையும்
விளக்குவது. ‘வைகுநாள்’, ‘வைகினார்’ என்றும் பாடம்.

இருந்து, இளைப்பு அகன்றபின், இவனை மற்றை நாள்,
அருந் திறல் போகிகள், அரசன் ஏவலால்,
வருந்தி உற்று எடுத்து, முன் வந்த நீர் வழிப்
பொரும் திரைக் கங்கையின் கரையில் போக்கவே.-வீமனை நாகங்கள் சுமந்து கங்கைக்கரையிற்கொண்டு சேர்த்தல்

இதுமுதல் மூன்று கவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) இருந்து – (வீமன் வாசுகியின் மாளிகையில் எட்டுநாள்)
தங்கியிருந்து, இளைப்பு அகன்றபின் – இளைப்பாறியபின்பு, மற்றைநாள் –
அடுத்தநாளில், அரு திறல் போகிகள் – (பிறவுயிர்க்கு) அரிய
வலிமையையுடையநாகங்கள், அரசன் ஏவலால் – (தங்கள்) அரசனான
வாசுகியினது கட்டளையினால், இவனை வருந்தி உற்று எடுத்து – இவ்வீமனை
வருந்திச் சுமந்தெடுத்து, முன் வந்த நீர் வழி – முன்பு (இவன்) வந்த நீரின்
வழியாய்க் (கொண்டுவந்து), பொரும் திரை கங்கையின் கரையில் போக்க –
மோதுகின்ற அலைகளையுடைய கங்கா நதியின் கரையிலே செலுத்திவிட,-
(எ-று.) -“மேனியான் [வீமன்] ஆயினான்” என 26- ஆங் கவியோடு முடியும்.

     இக்கவி, கீழ்ப்பதினேழாங்கவியோடு தொடர்புடையது. வீமன் பதினாயிரம்
அரசயானைகளின் வலிமையுடையவனாதலால், அருந்திறற்போகிகள் வருந்தியுற்று
எடுத்தனவென்க. போகீ என்ற வடசொல் – போகத்தையுடையதென்று
பொருள்படும்; போகமென்று பாம்பினுடலுக்குப்பெயர்

பாழி அம் புய கிரிப் பாண்டவன் தனைச்
சூழ் இகல் பணிக் குலம் சுமக்க வல்லவோ?-
வாழி அக் குலங்களின் மன்னன் அல்லனோ,
ஏழ்-இரு புவனமும் இனிதின் ஏந்துவான்!கவிக்கூற்று: வீமனைச் சுமக்கும் ஆற்றல் நாகங்கட்கு
உண்டுஎன்றல்.   

பாழி – வலிமையையுடைய, அம் – அழகிய, புய கிரி – மலைகள்
போன்ற தோள்களையுடைய, பாண்டவன்தனை – வீமனை, சூழ் இகல் பணிகுலம்
– மண்டலமிடுந்தன்மையுள்ள வலிமையையுடைய பாம்புகளின் கூட்டங்கள்,
சுமக்க வல்லஓ – சுமத்தற்கு வல்லமையுடையனவோ? (எனின்),- ஏழ் இரு
புவனம்உம் இனிதின் ஏந்துவான்- பதினான்கு உலகங்களையும் எளிதாகச்
சுமப்பவனான ஆதிசேடன், அ குலங்களின் மன்னன் அல்லன்ஓ –
அப்பாம்புக்கூட்டங்களின் அரசனல்லனோ? (எ-று.)- ஆதலால், அவைகளும்
இவனைத் தாங்கவல்லன என்பதாம். வாழி – அசை.

     வீமனைச்சுமக்கவல்ல வலிமை நாகங்கட்கு உள்ளது என்ற கருத்தைக் கவி
தாமே தடைவிடைகளால் விளக்கினார். பாண்டவன் – பாண்டுவின் மகன்;
வடமொழித்தத்திதாந்தநாமம். இப்பொதுப்பெயர் – சிறப்பாய், இங்கே வீமனை
யுணர்த்திற்று. ஏழிரு புவனம் – பூலோகம் புவர்லோகம் சுவர்லோகம்
மஹர்லோகம் ஜநலோகம் தபோலோகம் சத்தியலோகம் என்ற
மேலேழுலகங்களும், அதலம் விதலம் சுதலம் தராதலம் ரஸாதலம் மஹாதலம்
பாதாளம் என்ற கீழேழுலகங்களும். சர்ப்பராசனான ஆதிசேஷன் உலகங்களின்
கீழிலிருந்து அவற்றைத் தாங்குகின்றன னென்பது, நூற்கொள்கை.
கீழ்ச்செய்யுளில், ‘இவனைப் போகிகள் எடுத்து’ என வந்ததன்கண் உண்டான
ஐயத்தை அகற்றுதலால், இச்செய்யுள் – இடைப்பிறவரலாய்,
குளகச்செய்யுள்களின் நடுவில் நின்ற தென்று உணர்க. ‘பாண்டுமைந்தனை’
எனவும்பாடம்.   

விதியினால் ஒளித்தலின் உயங்கி, மீளவும்
நதியினால் வருதலின் நலம் கொள் மேனியான்,
பதியினால் விளங்கும் மென் பங்கயங்களும்,
மதியினால் குளிர் நெடு வானும் ஆயினான்.-வீமன் முன்னினும் மிகவிளங்குதல்.

விதியினால் – (முற்பிறப்பிற்செய்த) வினையின் பயனால்,
ஒளித்தலின் – (யாற்றில் தள்ளப்பட்டு) அழுந்தியதனால், உயங்கி –
வாட்டமுற்று, மீளஉம் நதியினால் வருதலின் நலம் கொள் – பின்பு
அந்நதியின்வழியால் மீண்டுவந்ததனால் நல்லவிளக்கத்தைக் கொண்ட,
மேனியான் – உடம்பையுடையவனான வீமன்,- பதியினால் விளக்கும் மெல்
பங்கயங்கள்உம் – (தனது) தலைவனான சூரியன் (மறைதலாற் குவிந்து அவன்)
உதித்தலால் மலர்ந்த மெல்லிய தாமரைமலர்களும், மதியினால் குளிர் நெடு
வான்உம் ஆயினான் – (சூரியனால் வெப்பமடைந்து) சந்திரனாற் குளர்ச்சியடைந்த
பெரிய ஆகாயமும் போல்ஆனான்; (எ-று.) – பங்கயங்கள் என்ற பன்மைக்குப்பயன்
இல்லை.

     சூரியன்கண்டபொழுது தாமரை மலர்தலும் காணாதபொழுது குவிதலுமாகிய
இயல்புபற்றி, தாமரையாகியபெண்ணுக்குச்சூரியனைக் கணவனென்ப.
நலங்கொள்மேனியாள்….. வானுமாயினாள்என்றும் பாடம்.

வேதியர், குரவர், வில் விதுரன், வீடுமன்,
ஆதியர், துணைவர் அந் நகர் உளார்கள் என்று
ஓதிய சனங்களுக்கு உவகை நல்கினான்-
ஞாதியர் கிளைக்கு எலாம் நடுக்கம் நல்கியே.-வீமன் உற்றார்க்கு மகிழ்ச்சியையும் உறாதார்க்கு அச்சத்தையும்
விளைத்தல்.

 (இத்தன்மையனான வீமன்),- ஞாதியர்கிளைக்கு எலாம் நடுக்கம்
நல்கி – பங்காளிகளாகிய துரியோதனாதியரது கூட்டத்துக்கெல்லாம் மிக்க
அச்சத்தைக்கொடுத்து,- வேதியர் – பிராமணர்களும், குரவர் – (தாயும்
தமையனும்முதலிய) பெரியோர்களும், வில் விதுரன் வீடுமன்ஆதியர் –
வில்வித்தையில் தேர்ந்த விதுரன் பீஷ்மன் முதலானவர்களும், துணைவர் –
(தனது) தம்பிமாராகிய (அருச்சுனன்முதலிய) மூவரும், அ நகர் உளார்கள் –
மற்றும் அந்நகரத்திலுள்ளவர்களும், என்ற ஓதிய – என்று சொல்லப்பட்ட,
சனங்களுக்கு – சனங்களுக்கெல்லாம், உவகை நல்கினான் – மகிழ்ச்சியைக்
கொடுத்தான்; (எ-று.)

     குரவர் என்பதற்கு – ஐம்பெருங்குரவரிற்சேர்ந்த தாயும் தமையனும்
குலகுருவும் கொள்க. உவகைநல்கினான் நடுக்க நல்கி – தொடைமுரண்

குந்தியை மகிழ் உரை கூறி, கற்பினால்
அந்திமீன் அனையவள் அருளின் வாழ்த்தவே,
செந் திருமகள் உறை செல்வ மா நகர்
வந்து, இவன் முன்புபோல் வளரும் நாளிலே,-வீமன் அத்தினாபுரிசேர்ந்து தாயைத் தேற்றி வாழ்தல்.

இதுமுதல் மூன்றுகவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) இவன் – இந்த வீமன்,- செம் திருமகள் உறை செல்வம் மாநகர்
வந்து – செம்மையுடைய இலக்குமி வசிக்கின்ற செல்வங்கள் நிறைந்த பெரிய
அத்தினாபுரிக்கு வந்து, குந்தியை மகிழ்உரை கூறி – (தனது தாயாகிய)
குந்தியைநோக்கி (அவளுக்கு) மகிழ்ச்சியைத்தரும் இனியவார்த்தைகளைச்
சொல்லி, கற்பினால் அந்தி மீன் அனையவள் அருளின் வாழ்த்த –
பதிவிரதாதருமத்தால் அருந்ததியையொத்த அக்குந்திதேவி அருளோடு(தன்னை)
வாழ்த்த, முன்பு போல் வளரும் நாளில்ஏ – முன்போல வளர்கின்ற காலத்திலே,
– (எ-று.) – “கிருபனென்றுளான் (29) “இவன் குருகுலருமாரரை சிலையும் வேலும்
வாளமும் பயிற்றினான்” (30) என முடியும்.

கோதமன் மகன் மகன், குனி வில் ஆதியாம்
மேதகு படைக்கலம் யாவும் வீறொடு அம்
மா தவன்வயின் பயில் வரதன், வன் திறல்
கேதம் இல் சிந்தையான், கிருபன் என்று உளான்.-கிருபாசார்யனது வரலாறு.

கோதமகன் மகன் மகன் – கோதமமுனிவனது குமாரனாகிய
சரத்துவான் என்னும் முனிவனதுபுத்திரன்,- குனிவில் ஆதி ஆம் –
வளைக்கப்படுகின்ற வில் முதலாகிய, மே தகு படைக்கலம் யாஉம் –
மேன்மைமிக்க ஆயுதங்களையெல்லாம், வீறொடு – மிக்க சிறப்போடு, அ
மாவதன்வயின் பயில் – பெருந்தவமுடைய அச்சரத்துவந்த முனிவனிடத்துக்
கற்றுத்தேர்ந்த, வரதன் – (தன்னை வேண்டினார்க்கு) வரம் அருளத்தக்க
சிறப்புடையவனும், வல் திறல் – மிக்க வலிமையையும், கேதம் இல் சிந்தையான்
– களங்கமில்லாதமனத்தையு முடையவனும் ஆகிய, கிருபன் என்று –
கிருபாசாரியனென்று பெயர் கூறப்பட்டு, உளான் – (ஓர் அந்தணன்) உள்ளான்;
(எ-று.)

     கோதமனென்னும் முனிவனது குமாரனும், தான்பிறந்த பொழுது
அம்புகளுடனே பிறந்ததனால் ‘சரத்வாந்’ என்ற பெயர் பெற்றவனுமான (சரம் –
அம்பு) முனிவன் இளமையில் வேதமோதுதலினும் வில்வித்தை தேர்தலில் மிக்க
விருப்புற்று அதில் நன்குதேர்ந்து பின்பு பெருந்தவஞ்செய்துவருகையில், தனது
தவத்தைக் கெடுத்தற்பொருட்டு இந்திரனா லேவப்பட்டுவந்த ஜாநபதீயென்னும்
தேவகன்னிகையைக் கண்டு காமுற்றதனால், அவன்விருப்பத்திற்கு ஏற்ப
அருகிலுள்ள நாணற்கட்டையில் ஓராண்மகவும் ஒருபெண்மகவும் உண்டாயின.
தனது தவநிலை குலைந்ததற்குக்கழிவிரக்கங்கொண்ட அம்முனிவன் உடனே அக்
குழந்தைகளையும் தனதுவில் அம்புகளையும் அங்கே விட்டிட்டு
அப்பாற்சென்றான். பின்பு வேட்டைக்குச் சென்ற சந்தனுமகாராஜன் கதியற்றிருந்த
அக்குழந்தைகளைக் கிருபையோடு எடுத்துவந்து வளர்த்ததனால், அவர்கட்கு
முறையே கிருபனென்றும் கிருபியென்றும் பெயர்கள் உண்டாயின. பிறகு ஒருகால்
அந்தச் சரத்வானென்ற முனிவன் அத்தினாபுரிக்குவந்து தன் மகனான
கிருபனுக்கு வில்வித்தை முழுவதையும் கற்பித்துக் கொடுத்துச்சென்றா னாதலால்,
கிருபன் சிறந்த வில்லாசிரியனாய் அங்கு விளங்கின னென வரலாறு அறிக.

     கௌதமகுலத்தார் ஆதியில் க்ஷத்திரியசம்பந்தமுடையராதலால், க்ஷத்திரியத்
தன்மையோடு கூடின பிராமணர்களா யிருந்தார்களாதலின், வில்முதலிய
படைக்கலங்கட்கு உரியராயினரென அறிக.

மற்று இவன் சந்தனு மைந்தன் ஏவலால்,
கொற்றவர் அருள் குருகுல குமாரரை
வெற்றி கொள் சிலையும், வெவ் வேலும், வாளமும்,
பற்றலர் வெருவரும்படி பயிற்றினான்.-கிருபன் கௌரவர்க்கும் பாண்டவர்க்கும் வில்வித்தை பயிற்றல்.

இவன் – இந்தக்கிருபன்,- சந்தனுமைந்தன் ஏவலால் –
சந்தனுவென்னும் அரசனது குமாரனான வீடுமனது கட்டளையால், கொற்றவர்
அருள் குருகுல குமாரரை – வெற்றியையுடைய (திருதராட்டிரன் பாண்டு என்ற)
அரசர்கள் பெற்ற குருகுலத்துக்கு உரிய மக்களாகிய நூற்றைவரையும்,
வெற்றிகொள் சிலைஉம் வெம் வேல்உம் வாளம்உம் – சயத்தைக் கொள்ளுகிற
விற்படையையும் கொடிய வேற்படையையும் வாட்படையையும்,
பற்றலர்வெருவரும்படி பயிற்றினான் – பகைவர்கள் அஞ்சும்படி கற்பித்தான்;
(எ-று.)

பரிவுடன் இவன் படை பயிற்ற, பின்னரும்,
குருபதி வேறு ஒரு குருவைத் தேடினான்;-
இருள் அற மதி நிலவு எறித்ததாயினும்,
பரிதியை நயக்கும், இப் பரவை ஞாலமே.-வீடுமன் கிருபனினுஞ் சிறந்த ஒரு குருவை நாடுதல்.

இவன் – இந்தக்கிருபன், பிரிவுடன் – அன்புடனே, படை பயிற்ற –
ஆயுதவித்தையைக் கற்றுக் கொடுத்துவரவும், பின்னர் உம் – பின்பும், குருபதி –
குருகுலத்துக்குத் தலைவனான வீடுமன், வேறு ஒரு குருவை தேடினான் –
(இவனினுஞ் சிறந்த) வேறோராசிரியனைத் தேடுபவனானான்; மதி – சந்திரன்,
இருள் அற நிலவு எறித்தது ஆயின்உம் – இருளொழியும்படி (தனது) ஒளியை
வீசிவந்ததாயினும், இ பரவை ஞாலம் – கடல்சூழ்ந்த இந்நிலவுலகம், பரிதியை
நயக்கும் – (அச்சந்திரனினும் மிக்க வொளியையுடைய) சூரியனை விரும்பு
மன்றோ! (எ-று.) – இச்செய்யுள் – எடுத்துக்காட்டுவமை

பரத நாத வேத பரத்துவாசன் என்பான்,
விரத வேள்விதன்னில், மேனகையால் ஆன
சுரத தாது வீழ்ந்த துரோணகும்பம்தன்னில்,
வரதன் ஒருவன் வந்தான், வசிட்ட முனியை ஒப்பான்.-இதுவும், அடுத்த கவியும் – துரோணன்வரலாறு.

பரதம் – தாளவகையோடு சம்பந்தமுடைய, நாதம்-
இசையோடுபொருந்திய, வேதம் – வேதங்களைவல்ல, பரத்துவாசன் என்பான் –
பரத்துவாச னென்னும் முனிவன், விரதம் வேள்வி தன்னில் – விரதானுட்டானத்தோடு
கூடிய யாகஞ் செய்துகொண்டிருக்கையில், மேனகையால் – மேனகையென்னுந்
தேவமாதைக்கண்டு காமுற்றதனால், ஆன – ஆகிய, சுரத தாது – இன்பமயமான
வீரியம், வீழ்ந்த – விழப்பெற்ற, துரோணகும்பந்தன்னில் – பதக்களவு
கொண்டதொரு பாத்திரத்தினின்று, வசிட்டமுனியை ஒப்பான் வரதன் ஒருவன்
வந்தான் – வசிஷ்டமகாமுனியைப் போன்ற ஒரு முனிவன் தோன்றினான்; (எ-று.)

     அங்கிரஸ் என்னும் முனிவனது குலத்தில் தோன்றிய பரத்துவாசமாகாருஷி
கங்கைத்தலைப்பில் யாகஞ்செய்துகொண்டிருக்கையில் அங்கு நீராடவந்த
ஒருதேவமாதின் கட்டழகைக் கண்டு காதல்கொண்டு நெகிழ்ந்து உருக, அவனது
விருப்பத்தால் ஒருதுரோண கலசத்திலிருந்து ஒருகுமாரன் பிறந்தான்; அவனுக்குத்
துரோணனென்று பெயராயிற்று என்று அறிக. அந்தத் தேவமாதின் பெயர்
கிருதாசி என்ற வடநூல்கூறும். பரதநாதவேத பரத்வாஜன், வ்ரதம், மேநகா,
ஸுூரததாது, த்ரோணகும்பம், வரதன்,வசிஷ்டமுநி – வடசொற்கள். பரதமென்ற
நாட்டியசாஸ்திரத்தின் பெயர் – இங்கே இலக்கணையாய், நாட்டியத்தின்
அங்கமான தாளத்தைத் குறித்தது. வேதம் – உதாத்தம் முதலிய நால்வகை
சுவரத்தோடு கூடியிருத்தலேயன்றி ‘வேத கீதம், ‘ஸாமகாநம்’ என்றபடி மற்றும்
இசை வகைக்கும் உரியதாய் நிற்றலால், ‘நாதவேதம்’ எனப்பட்டது.
பரத்வாஜன்என்ற பெயருக்கு – பிரசைகளைப் பாதுகாப்பவ னென்று பொருள்
கூறுவர்; பரத் – பரிப்பவன், வாஜம் – ஜனம். துரோணம் – இரண்டு மரக்கால்.
வசிஷ்டன் என்பதற்கு – (இந்திரியங்களை) வசப்படுத்தியவ னென்பது உற்பத்தி
யருத்தம். முநி – மநநசீலன்: எப்பொழுதுங் கடவுளைத் தியானஞ் செய்பவன்.
மேனகையான் மெலிந்து என்றும் பாடம்.                               

      இதுமுதற் பதினாறு கவிகள் – எல்லாச்சீரும் மாச்சீர்களாய்வந்த
கழிநெடிலடிநான்கு கொண்ட அறுசீராசிரிய விருத்தங்கள்

ஈர்-ஏழ் விஞ்சைத் திறனும் ஈன்றோன்தன்பால் எய்தி,
நீர் ஏழ் என்ன யாவும் நிறைந்த கேள்வி நெஞ்சன்,
பார் ஏழ் எண்ணும் படைகள் பரசுராமன்தன்பால்
ஓர் ஏழ் பகலின், உலகுக்கு ஒருவன் என்ன, கற்றான்.

அந்தத்துரோணன்),- ஈர் ஏழ் விஞ்சை திறன்உம் – பதினான்கு
வித்தைகளின் வகைகளையும், ஈன்றோன் தன்பால்எய்தி (தனது) தந்தையான
பரத்துவாச முனிவரிடத்திலே பெற்று [கற்றறிந்து], நீர் ஏழ்என்ன கேள்வி யாஉம்
நிறைந்தநெஞ்சன – ஏழு கடல்போல நூற்கேள்விக ளெல்லாம் நிரம்பின
மனத்தையுடையவனாய், பரசுராமன் தன்பால் – பரசுராமனிடத்தில், பார் ஏழ்
எண்ணும் படைகள் – ஏழுலகத்தாரும் மதிக்கத்தக்க அஸ்திரங்களை, ஓர் ஏழ்
பகலின் – ஏழுநாளிலே, உலகுக்கு ஒருவன் என்ன கற்றான் – உலகத்திற்கு
(இவன்) ஒருவனேயென்று சொல்லும்படி பயின்று தேர்ந்தான்; (எ-று.)

     இந்தத்துரோணன் அக்நிவேசனென்னும் முனிவனிடத்தும் படைக்கலந்
தேர்ந்தன னென்பது, மேல் 38-ஆங் கவியில் விளங்கும். (“இடையிருவகையோ
ரல்லது நாடிற், படைவகை பெறாஅரென் மனார்புலவர்” என்ற
தொல்காப்பியச்சூத்திரத்தின் உரையில் ‘நாடின் என்பதனால் ஒருசார் அந்தணரும்
படைக்கு உரியரென்பது கொள்க: அவர் இயமதங்கியாரும், துரோணனும், கிருபனும்
முதலாயினாரெனக் கொள்க’ என்றது காண்க. பதினான்கு வித்தைகள் – ருக் யசுஸ்
சாமம் அதர்வணம் என்ற வேதம் நான்கு, சிஷை வியாகரணம் சந்தஸ் நிருக்தம்
சோதிடம் கல்பம் என்ற வேதாங்கம் ஆறு, மீமாம்சை தர்க்கம் புராணம்
தர்மசாஸ்திரம் என்ற உபாங்கம் நான்கு என இவை. விஞ்சை = வித்யா:
வடசொல் – பரசுராமன் – கோடாலியை ஆயுதமாகவுடைய இராமன். ராமனென்ற
வடமொழி – (தனது குணஞ் செயல்களால் உலகத்தைக்) களிப்பிப்பவ னென்று
காரணப்பொருள்படும். வில்லையும் கலப்பையும் ஆயுதமாகவுடைய தசரதராம
பலராமர்களினும் வேறுபாடு விளங்கப் பரசுராமனென்று பெயர்பெற்ற இவன்,
விஷ்ணுவின் ஆறாம் அவதாரம்; ஜமதக்னி முனிவனது குமாரன்: மூவுலகையும்
வென்ற இராவணனைச் சயித்திட்ட கார்த்தவீரியார்ச்சுனனைக் கொன்றவன்;
உலகத்துச் செருக்குக்கொண்ட அரசர்பலரையும் அழித்தொழித்தவன்

வெற்பின் வலிய திண் தோள் வேந்தன் ஏவும் தூதால்,
அற்பின் மிக்க சிந்தை அறம் சால் மொழி அவ் ஆசான்,
கற்பின் பன்னியோடும், கையின் மதலையோடும்,
பொற்பின் அமராவதியே போலும் நகரி புக்கான்.–வீடுமன் துரோணனை வரவழைத்தல்.

அற்பின் மிக்க சிந்தை – அன்பினால் நிறைந்த மனத்தையும்,
அறம் சால் மொழி – தருமம்நிறைந்த சொல்லையுமுடைய, அ ஆசான் – அந்தத்
துரோணாசாரியன், வெற்பின்வலிய திண் தோள்வேந்தன் ஏதும் தூதால் –
மலையினும் மிகவலிய தோள்களையுடைய வீடுமராசன் அனுப்பின தூதனால்,-
கற்பின் பன்னியோடுஉம் – கற்பையுடைய தன் மனைவியாளுடனும், கையின்
மதலையோடுஉம்- சிறுமையையுடைய குழந்தையோடும், பொற்பின் அமராவதிஏ
போலும் நகரி புக்கான் – அழகினால் அமராவதி நகரத்தையே போன்ற
அஸ்திநாபுரியை அடைந்தான்; (எ-று.)

     இச்செய்யுள், கீழ் முப்பத்தோராஞ்செய்யுளோடு கதைத்
தொடர்புடையதாதலால் இங்கே ‘வேந்தன்’ என்ற பொதுப் பெயர் –
வீடுமனைக்குறித்தது. துரோணன்மனைவி கிருபி; மதலை அசுவத்தாமன். கை –
சிறுமை மேலது: கையின் மதலை – சிறுவன்: மேல் 42, 59- ஆம்
பாடல்களையூன்றிப்பார்த்தால், கையின் மதலை – கைக்குழந்தை யென்றல்
பொருந்தாமை புலப்படும். குருகுலகுமாரர்களைப்பின்னும்
பயிற்றுவித்தற்பொருட்டுத் துரோணனை வீடுமன் வரவழைக்க வேணுமென்று
விரும்பியபோது, அந்தத்துரோணன் தானே அத்தினாபுரியைச்சேர்ந்தானென்று
பிறநூல்கள் கூறும். ஆசான், பன்னி = ஆசார்யன், பத்நீ: வடசொற்கள். பொற்பு
– பொன் பு எனப்பகுதியும் விகுதியுமாகப் பிரிந்து, பொன்னின் தன்மையெனக்
காரணப்பொருள்படும். அமராவதீ என்பதற்கு – தேவர்களைத் தன்னிடத்தில்
உடையதென்பது ஏதுப்பொருள்; இது, சுவர்க்கலோகத்து இராசதானி

வந்தான் வரதன் எனலும், மந்தாகினியாள் மைந்தன்,
பைந் தார் அசைய எதிர் போய், பணிந்து, பூசை பண்ணி,
சிந்தாசனத்தோடு ஒக்கும் சிங்காசனத்தின் ஏற்றி,
‘எந்தாய்! வர நீ, அடியேன் என்ன தவத்தேன்!’ என்றான்.வீடுமன் துரோணனை எதிர்கொண்டு உபசரித்தல்.

வரதன் வந்தான் எனலும் – துரோணாசாரியன் வந்தா னென்று
(தூதர்) சொல்ல அறிந்தவுடனே,- மந்தாகினியாள் மைந்தன் – கங்காதேவியினது
குமாரனான வீடுமன், பைந் தார் அசைய எதிர்போய் – பசுமையான (தனது)
பூமாலை அசைய எதிர் கொண்டு சென்று, பணிந்து – வணங்கி, சிந்தாசனத்தோடு
ஒக்கும் சிங்காசனத்தின் ஏற்றி – (தனது) மனமாகிய ஆசனத்தோடு ஒத்ததொரு
சிங்காசனத்திலே (அவனை) எழுந்தருளப்பண்ணி, பூசை பண்ணி – பூசித்து,-
எந்தாய் – சுவாமி! நீ வர -நீ (இங்கே) எழுந்தருளுதற்கு, அடியேன் என்ன
தவத்தேன் – நான்  என்ன தவஞ் செய்திருந்தேனோ!’ என்றான் – என்று
(உபசாரமொழி) கூறினான்; (எ-று.)

     வீடுமன் துரோணனை வில்வித்தையில் மிகச்சிறந்தவனென்று நன்கு
மதித்துஎப்பொழுதுஞ் தனதுமனத்தில் நீங்காது வைத்திருந்தனன் என்பதுபற்றி,
அவ்வீடுமன் துரோணனுக்குச் சமர்ப்பித்த சிங்காதனத்துக்கு அவன் மனமாகிய
ஆசனத்தை உவமைகூறினார். இதுவரையிலுந் தன்மனத்தில் வைத்திருந்தது
போல, அப்பொழுது சிங்காசனத்தில் வைத்தன னென்க. தேவலோகத்திலுள்ள
கங்கைக்கு மந்தாகினியென்றும், பூலோகத்தில் வந்ததற்குக் கங்கையென்றும்,
கீழுலகத்திற் பாய்வதற்குப் போகவதி யென்றும் பெயரென அறிக

மூசி வண்டு மொய்க்கும் முருகு ஆர் செவ்வி மாலை,
வாசி வான் தேர், வெம் போர், மன்னர் மன்னன்தன்னை,
ஏசு இல் கடவுள் வாய்மை இருக்கால் எண் இல் கோடி
ஆசி அன்பால் ஓதி, அருள்செய்து, இருந்த பின்னர்,-துரோணன் வீடுமனுக்கு வாழ்த்துக் கூறல்.

இதுவும் அடுத்த கவியும்-குளகம்.

(இ-ள்.) வண்டு மூசி மொய்க்கும் – வண்டுகள் நெருங்கி மொய்க்கப்பெற்ற,
முருகு ஆர் செவ்வி மாலை – தேன்நிறைந்த அழகிய பூமாலையைத்தரித்த, வாசி
மான் தேர் வெம் போர் மன்னர்மன்னன் தன்னை – குதிரையாகிய
விலங்குபூண்ட தேரையுடையவனும் கொடிய போரைச் செய்யவல்லவனும்
அரசர்கட்கு அரசனாகிய வீடுமனை, ஏசு இல் கடவுள் வாய்மை இருக்கால் –
குற்றமில்லாத தெய்வத்தன்மையையுடைய சத்தியமானவேதமந்திரங்களைக்
கொண்டு, எண் இல் கோடி ஆசி அன்பால் ஓதி அருள் செய்து – அளவற்ற
கோடிக்கணக்கான ஆசீர்வாதங்களை அன்போடு சொல்லி அனுக்கிரகித்து,
இருந்தபின்னர் – வீற்றிருந்தபின்பு,- (எ-று.)-“வேதமுனிவன் . . . புன்மை
மொழியென்றுரைப்பான்” என வருங் கவியோடு முடியும்.

     வாஜிஎன்ற வடசொல் திரிந்துவந்தது. வாசிமான் – இருபெயரொட்டு.
ஆசிஸ் என்ற வடசொல், ஆசியென விகாரப்பட்டது

வேத முனிவன், இருந்த வேத்து முனியை நோக்கி,
பூதம்தன்னில் நிகழ்ந்த புன்மை மொழி ஒன்று உரைப்பான்:
‘ஏதம் மெய் பெற்றனைய யாகசேனன் என்பான்,
போதம் இல்லான், என்பால் பூட்டும் நண்பு பூண்டான்;–இதுமுதல் ஒன்பது கவிகள் – ஒருதொடர்: துருபதன்
செய்தியைத் துரோணன் வீடுமனுக்குக் கூறல்.

வேதம் முனிவன் – வேதம்வல்ல அந்தணனாகிய துரோணன்,
இருந்த வேந்து முனியை நோக்கி – (தனது) அருகிலிருந்த ராசருஷியான
வீடுமனைநோக்கி, பூதந்தன்னில் நிகழ்ந்த புன்மை மொழி ஒன்று உரைப்பான் –
கழிந்தகாலத்தில் நடந்த எளிமையைப் புலப்படுத்தும் ஒருசொல்லைச்
சொல்பவனானான்:- ஏதம் மெய் பெற்று அனைய – தீமைதானே ஒருவடிவ
மெடுத்தாற் போன்ற, யாகசேனன் என்பான் – யாகசேன னென்னும்
பெயரினனான, போதம் இல்லான் – அறிவில்லாதவன், என்பால் – என்னிடத்தில்,
பூட்டும் நண்பு பூண்டான் – தொடர்பையுண்டாக்கும் நட்பைப்பொருந்தினான்;

     யாகசேனன் – பாஞ்சாலதேசத்து அரசன்: துருபதனென்னும்
மறுபெயருடையவன்; சோமகனது மகனான பிருஷதனென்பவனது குமாரன்.
பரத்துவாசமகாமுனிவனும் பிருஷதமகாராஜனு ஒருவர்க்கொருவர் மனங்கலந்த
நண்பராதலால், பரத்துவாசகுமாரனான துரோணனிடத்துப் பிருஷத குமாரனான
துருபதன் இளமையில் நண்புகொண்டிருந்தானென அறிக

யானும் அவனும், முறையால், இளையோம் ஆன எல்லை,
பானு நிகர் தொல் அங்கிவேசன் பாதம் பணிந்து,
வானும் மண்ணும் வியக்க, மற வெம் படைகள் கற்று,
தானும் வல்லன் ஆகி, தன்போல் என்னை வைத்தான்.

யான்உம் அவன்உம் – நானும் அந்த யாகசேனனும், இளையோம்
ஆன எல்லை – இளமைப்பருவமுடையோமா யிருந்தகாலத்தில், பானு நிகர்
தொல் அங்கிவேசன் பாதம் பணிந்து – (பிரமதேஜசினால்) சூரியன்போல
விளங்குகின்றபழைய அக்கினிவேசனென்னும் முனிவனது திருவடிகளை வணங்கி,
வான்உம் மண்உம் வியக்க – விண்ணுலகத்தோரும் மண்ணுலகத்தோரும் கண்டு
அதிசயிக்கும்படி, மறம் வெம் படைகள்- வலிமையையுடைய கொடிய
படைக்கலங்களை, முறையால் – முறைமைப்படி, கற்று – பயின்றுவர,-
(அவ்யாகசேனன்), தான்உம் வல்லன் ஆகி – (என்னைப்போலவே) தானும்
வல்லவனாய், தன்போல் என்னை வைத்தான் – (இராசகுமாரனாகிய) தன்னைப்
போலவே (எளியவனாகிய) என்னையும் பாவித்தான்; (எ-று.)

அங்கிவேசன் – வடமொழித்திரிபு; இவன் அக்கினியினின்று பிறந்தவ
னென்றும், பரத்துவாச முனிவனிடமிருந்து ஆக்நேயாஸ்திரம் பெற்றுப் பின்பு
அந்த அஸ்திரத்தைத் துரோணனுக்குக் கொடுத்தன னென்றும்வடநூலால்
விளங்கும், ‘சொல்லங்கிவேசன்,’ ‘மறைவெம்படைகள்’ என்றும் பாடம்.  

பின்னை, இரவும் பகலும், பிரியேம் ஆகித் திரிய,
தன்னை அடைந்த நண்பின் தகவால் மிக ஆதரியா,
‘என் ஐ வானம் எய்தி, யானே இறைவன்ஆனால்,
உன்னை ஆள வைப்பேன், உலகில் பாதி’ என்றான்.

 பின்னை – பின்பு, இரவுஉம் பகல்உம் – எப்பொழுதும்’ பிரியேம்
ஆகி திரிய – (நாங்கள் ஒருவரையொருவர்) பிரியாதவர்களாய் ஒழுக,-
(அவ்யாகசேனன்), தன்னை அடைந்த நண்பின் தகவால் – தன்னை (நான்)
அடைந்த சிநேகத்தின் விசேடத்தால், மிக ஆதரியா – (என்னிடத்து) மிகவும்
அன்புகொண்டு, (என்னைநோக்கி), ‘என் ஐ வானம்எய்தி – என்தந்தை
சுவர்க்கமடைய [இறந்த பின்பு], யான்ஏ இறைவன் ஆனால் – நானே
அரசனானால், (அப்பொழுது), உலகில் பாதி ஆள உன்னை வைப்பேன் –
(எனது) நாட்டிற் பாதியை (நீ) அரசாளும்படி உன்னை அரசனாக்கிவைப்பேன்,’
என்றான் – என்று சொன்னான்; (எ -று.)

நன்று, நன்று! உன் வாய்மை, நன்று ஆம் நண்புக்கு இனியாய்!’
என்று போந்து, நானும் இயன்ற தவத்தின் இருந்தேன்;
வென்று கொண்ட புவியை வேந்தன் மகவுக்கு அளித்து,
சென்று, வானம் புகுந்தான்; சிறுவன் தலைவன் ஆனான்.

அப்பொழுது), நானும்-, (அவனைநோக்கி) ‘நன்று ஆம் நண்புக்கு
இனியாய் – நல்லதான சினேகத்திற்கு இனியவனே!  உன் வாய்மை நன்று நன்று
– உன்வார்த்தை நல்லது நல்லது!’ என்று – என்று (உபசாரமொழி) கூறி, (பின்பு),
போந்து – (குருவினிடத்தை விட்டுத் தனியே) சென்று, இயன்ற தவத்தின்
இருந்தேன் – (எனதுசாதிக்குப்) பொருந்தின தவத்தைச் செய்தலில் இருந்து
விட்டேன்: வேந்தன் – (யாகசேனனுடைய தந்தையான) பிருஷதமகாராசன்,
வென்று கொண்ட புவியை- (பகைவரை) வென்ற அரசாண்டுவந்த இராச்சியத்தை,
மகவுக்கு அளித்து – (தன்) மகனுக்குக் கொடுத்து, சென்று வானம் புகுந்தான் –
இறந்து சுவர்க்கத்தை யடைந்தான்: (ஆகவே), சிறுவன் தலைவன் ஆனான் –
யாகசேனன் அரசனானான்; (எ-று.)- சிறுவனென்றது, அவனது இளமையோடு
இழிகுணத்தையும் உணர்த்தும்.

தனத்தில் ஆசை இன்றி, ‘தவமே தனம்’ என்று எண்ணி,
வனத்தில் உண்டி கொண்டே, மகிழ்வுற்று, ஒரு சார் வைகி,
சனத்தில் அருளால், இல் வாழ் தருமம் தவறாவண்ணம்
இனத்தில் மிக்க கிருபற்கு இளையாள் இவளை வேட்டேன்

தனத்தில் ஆசை இன்றி – செல்வத்தினிடத்து ஆசை இல்லாமல்,
தவம்ஏ தனம் என்று எண்ணி – தவத்தையே செல்வமென்று நினைத்து,
வனத்தில் உண்டி கொண்டே – காட்டிற்கிடைக்கிற உணவுகளை உட்கொண்டே,
மகிழ்உற்று – திருப்தியடைந்து, ஒருசார் வைகி – (அக்காட்டில்) ஓரிடத்திலிருந்து,
சனத்தில் அருளால் – சனங்களிடத்தில் நிகழ்ந்த கருணையினால், இல் வாழ்
தருமம் தவறா வண்ணம் – இல்லறவாழ்க்கை தவறாதபடி, இனத்தில் மிக்க கிருபற்கு
இளையாள் இவளை வேட்டேன் – குலத்திற் சிறந்த கிருபனது தங்கையாகிய இவளை
விவாகஞ் செய்து கொண்டேன்; (எ-று.)

     பிரமசாரி வாநப்பிரஸ்தன் ஸந்யாஸீ என்ற மற்றை மூன்று
ஆச்சிரமத்தார்க்கும், கதியற்றவர் ஏழைகள் முதலானவர்களுக்கும் உணவு இடம்
முதலிய வேண்டுவன கொடுத்து உதவுதற்கு உரிமை கிருகத்தாச்சிரமத்தினர்க்கே
இருக்கின்றமையைக்கருதி அதனிமித்தம் இல்வாழ்க்கை பூண்டேனென்பான்,
‘சனத்திலருளால்’ என்றான். “துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்,
மற்றையவர்கள் தவம்” என்ற குறளை நோக்குக.   

கந்த மகவை ஈன்ற காளகண்டன் அருளால்,
வந்த மகவு இம் மகவும், வறுமை வளர, வளர்ந்தான்;
இந்த மகவும் ஐஆண்டு இளமை அறியாது; எனலால்,
தந்த மகவை நோக்கி, தாயும் பெருகத் தளர்ந்தாள்.

இ மகவுஉம் – இந்தக் குழந்தையும், கந்தன் மகவை ஈன்ற காள
கண்டன் அருளால் வந்த மகவு – முருகக்கடவுளாகிய மைந்தனைப் பெற்ற
சிவபிரானது கருணையினாற் பிறந்த குழந்தை: இந்த மகவுஉம் – இக்குமாரனும்,
வறுமை வளர – தரித்திரம் அதிகப்பட, ஐ ஆண்டு – ஐந்து பிராயமளவும்,
இளமை அறியாது – இளமைப் பருவத்துக்கு உரிய யாதோரின்பத்தையும்
அறியாமலே, வளர்ந்தான்-: எனலால் – இக்காரணத்தால், தந்த மகவை நோக்கி
தாய் உம் பெருக தளர்ந்தாள்- (தான்) வளர்த்துவந்த பிள்ளையைப் பார்த்துத்
தாயும்மிகவருந்தினாள்;(எ-று.)

     குழந்தைப்பருவத்துக்கு இன்றியமையாத பசுவின்பால் முதலிய.
நுகர்ச்சியொன்றையும் அறியானென்பதுபட ‘இளமையறியாது வளர்ந்தான்’
என்றது. இளமை  – அப்பருவத்து நுகர்ச்சிக்குப் பண்பாகுபெயர். காளகண்டன் –
வடசொல்: (விடமுண்டதனாற்) கறுத்த கழுத்தையுடையவன். மூன்றாமடியில்
‘இன்மையறியாது’ என்றும் பாடம்.

     துரோணன் மனைவியாகிய கிருபியின் கட்டழகைக்கேட்டும் ஒரு கால்
கண்டும் அவளிடம் மிகக்காமுற்ற சிவபிரானது அருளினால் ஒரு
குதிரையினிடமாக ஒரு ஆண்குழந்தை தோன்றிற்றென்றும், அதன்பெயர்
அசுவத்தாமனென்றும் அறிக. துரோணனுக்குக் கிருபியினிடம்
சிவாமிசமாகப்பிறந்த பிள்ளை அசுவத்தாமனென்றும் நூற்கொள்கை உண்டு.
கந்தன் + மகவு= கந்தமகவு: “சிலவிகாரமாமுயர்திணை.” கந்தன் –
ஸ்கந்தனென்ற வடசொல்லின் திரிபு: இதற்கு – (பகைக்கடலை) வற்றச்செய்பவ
னென்றும், உமாதேவியினாற் சேர்க்கப்பட்டவனென்றும், பிறவாறும் பொருள்
உரைக்கப்படும்: சூரபதுமன் முதலிய அசுரர்கள் செய்துவந்த உபத்திரவங்களைப்
பொறுக்க மாட்டாத தேவர்கள் முதலியோரது வேண்டுகோளால் அவ்வசுரர்களை
அழிக்கும்பொருட்டுச் சிவபிரான் தனது அமிசமாகக் குமாரக்கடவுளைத்
தோற்றுவித்தன னென அறிக. தருதல் -வளர்த்தற்பொருளதாயிற்று

மாவின் பாலே அன்றி, மரபுக்கு உரிய மைந்தன்,
ஆவின் பால் கண்டு அறியான்; அதனால் வருந்தி, அந்தக்
கோவின்பால் எய்துதலும், கோமான், ‘யார் நீ?’ என்ன,
நாவின்பாலால், நடுங்கி, ‘நான் உன் நண்பன்’ என்றேன்.

மரபுக்கு உரிய மைந்தன் – (எனது) வமிசத்துக்கு உரிய
அப்புதல்வன், மாவின் பால்ஏ அன்றி – மாப்பாலையே யல்லாமல், ஆவின் பால்
கண்டு அறியான் – பசுவின்பாலைக் கண்டும் அறியான்: அதனால் –
அந்தக்காரணத்தால், (நான்), வருந்தி – மனம்வருந்தி, அந்த கோவின்பால்
எய்துதலும் – (ஒருபசுப்பெற்றுவரக்கருதி) அந்த யாகசேனராசனிடத்திற்
சென்றவளவிலே, கோமான் – அவ் வரசன், யார் நீ என்ன – ‘நீ யார்?’ என்று
(முகமறியாதவன் போல என்னை) வினவ,- (அதுகேட்டவுடனே), நடுங்கி –
மிகக்கூசி, நாவின் பாலால் நான் உன் நண்பன் என்றேன்- (எனது) வாயால்
‘நான் உன் சிநேகிதன்’ என்று சொன்னேன்; (எ-று.)

     மாவின்பால் – மாவைக் கரைத்துக் காய்ச்சிப் பால்போலச் செய்த உணவு;
ஒருவகைக் கஞ்சி: முதனூலிலும் ‘பிஷ்டரஸம்’ என்றே கூறப்பட்டிருக்கின்றது.
‘நாவின்பாலால்’ எனவேண்டாது கூறியது, என் நா இங்ஙன் எளிமை கூறுதற்கு
உரியதன் றெனற்கு: இனி, நாவின்பாலால் நடுங்கி எனஎடுத்து, இங்ஙன் பேசின
அவனது நாவின் செயலால் யான் நடுங்கி யெனவுமாம்.  

‘ ‘மன்னன் யான்; நீ முனிவன்; மரபால் எனக்கும் உனக்கும்
என்ன நண்பு உண்டு?’ என்ன ஏசி, நகைசெய்து, இகழ்ந்தான்;
அன்ன துருபன்தன்னை அவையில் அரசர் கேட்ப,
‘சொன்ன வாய்மை நீயே சோர்ந்தாய்; யானோ சோரேன்;

இதுவும் அடுத்த கவியும் – குளகம்

     (இ – ள்.) (அதுகேட்டு அந்தயாகசேனன் என்னை நோக்கி). ‘மரபால் –
சாதியினால், மன்னன் யான் – நானோ அரசன்: நீ முனிவன் – நீயோ
அந்தணன்: எனக்குஉம் உனக்குஉம் என்ன நண்புஉண்டு – எனக்கும் உனக்கும்
என்னசிநேகம் இருக்கிறது?’ என்ன – என்றுசொல்லி, ஏசி – பழித்து, நகை
செய்து – சிரித்துப் பரிகாசம் பண்ணி, இகழ்ந்தான் – அலட்சியஞ் செய்தான்:
அன்ன துருபதன் தன்னை – அந்தத் துருபதராசனை நோக்கி, (நான்), அவையில்
அரசர் கேட்ப – அவன் சபையிலுள்ள அரசர்களெல்லாங் கேட்கும்படி,
‘சொன்ன வாய்மை நீஏ சேர்ந்தாய் – சொன்னவார்த்தையை நீயே தவறினாய்:
யான்ஓ சோரேன் – நானோ தவறேன்; (எ-று.) – இச்செய்யுளில் ‘துருபன்
தன்னை’ என்பதும், ‘கேட்ப’ என்பதும், அடுத்த செய்யுளில் வரும் ‘என்றேன்’
என்னும் முற்றைக் கொள்ளும்.

     நீ முன்பு எனக்குப் பாதியரசுகொடுப்பதாக வாக்குத்தத்தஞ் செய்ததைத்
தவறினையே யாயினும், நான் இப்பொழுது உன் விஷயமாகச் சொல்லும்
சபதத்தைத் தவறாது நிறைவேற்றுவேன் என்பது, ஈற்றடியின் கருத்து:
துருபதனென்பது, யாகசேனனுக்கு வழங்கும் வேறொருபெயர். துருபன் =
துருபதன்: விகாரம். ஏ – பிரிநிலை. ஓ – தெரிநிலை. ‘அன்ன நிருபன்’ எனவும்
பாடம். 

‘புகன்றபடி நீ ஆளும் புவியும் பாதி கொள்வேன்;
இகன்ற சமரில் உன்னை இரதத்துடனே கவர்வேன்;
அகன்ற மெய்ம்மை உடையாய்! அறிதி’ என்றேன்’ என்று,
சுகன்தன் ஞானம் பெற்ற துரோணன் சொல்லக் கேட்டான்.–44

அகன்ற மெய்ம்மை உடையாய் – நீங்கின உண்மை யுடையவனே!
புகன்ற படி- (நீ முன்பு எனக்குச்) சொன்னபடி, நீ ஆளும் புவிஉம் பாதி
கொள்வேன் – நீ அரசாளும் நாட்டிலும் பாதியைக் கைக்கொள்வேன்:
(அன்றியும்), இகன்ற சமரில் – பகைமை கொண்டுசெய்யும் போரில், உன்னை
இரதத்துடனே கவர்வேன் – உன்னைத் தேர்க்காலுடனே கட்டிக்
கைக்கொள்வேன்; அறிதி – (இதனை) அறிவாய், என்றேன் – என்று சொல்லிச்
சபதஞ்செய்தேன், என்று-, சுகன்தன் ஞானம் பெற்ற துரோணன் சொல்ல –
சுகமுனிவனுக்குஉள்ள தத்துவ ஞானம்போன்ற தத்துவஞானத்தைப்பெற்றவனான
துரோணாசாரியன் சொல்ல, கேட்டான் ;(எ-று.)

     அகன்றமெய்ம்மையுடையாய் என்றது, வடமொழிநடை; சத்தியத்தை
விட்டவனே யென்று கருத்து. துரோணன் தன் வரலாறு கூறும்முகத்தால், தான்
அந்நகரியிலிருக்க உடன்பட்டதைக் குறிப்பித்தானென்க. சுகன் –
வியாசமுனிவனது புத்திரன்: அவ்வியாசபகவானின்மேம்பட்டவைராக்கியத்தையும்
உண்மையுணர்வையும் உடையவன்; பகவானது அமிசமானவன்;
பரமபாகவதர்களில் ஒருவன்; சுகப்பிரஹ்மமென்று சிறப்பித்துக் கூறப்படுபவன்.
“சுகனிகர் துரோணனொடு” என்பார், மேற்பதின்மூன்றாம்போர்ச் சருக்கத்திலும்.  

கேட்ட வீடுமன், குருகுலக் குமரரைக் காட்டி,’ நீ
இவர்க்குப் படைக்கலப் பயிற்சி அளித்து, உன்
வஞ்சினமும் முடி’ என்று கூறி, துரோணனுக்கு
அரசர்க்கு உரிய வரிசைகள் அளித்தல்

கேட்ட அரசன் அழைக்க, கிருபனுடன் வந்து இறைஞ்சும்,
பூட்டு வரி வில் தடக் கைப் புதல்வர் புதல்வர்தம்மைக்
காட்டி, ‘நீயே இவரைக் கடிதில் படைமைக் கல்வி
மூட்டி, நின் வஞ்சினமும் முடித்தி’ என்று மொழிந்தான்கௌரவ பாண்டவரை வீடுமன் துரோணனிடம்
ஒப்பித்தல்.

கேட்ட – (இங்ஙனந் துரோணன் சொல்லக்) கேட்ட, அரசன் –
வீடுமன், அழைக்க – வரவழைத்ததனால், கிருபனுடன் வந்து இறைஞ்சும் –
(ஆசிரியனாகிய) கிருபாசாரியனுடனே வந்து வணங்கின, பூட்டு வரி வில் தட கை
புதல்வர் புதல்வர்தம்மை – நாணேற்றிய கட்டமைந்த வில்லையேந்திய பெரிய
கையையுடைய தனது பேரப்பிள்ளைகளை, காட்டி – (அவ்வீடுமன்
துரோணனுக்குக்) காண்பித்து, ‘நீயேஇவரை கடிதில் படைமை கல்வி மூட்டி –
(இனி) நீயே இவர்களுக்கு விரைவில் ஆயுதவித்தையைக் கற்றுக் கொடுத்து, நின்
வஞ்சினம்உம் முடித்தி – (இவர்களைக்கொண்டு) உன்சபதத்தையும்
முடித்துக்கொள்வாய்,’ என்று மொழிந்தான் – என்ற சொன்னான்; (எ-று.)

     புதல்வர் புதல்வர் – தன் தம்பியாகிய விசித்திரவீரியனது குமாரர்களாகிய
திருதராட்டிரன் பாண்டுஎன்பவரது புத்திரர்கள். படைமை, ‘மை’ – பகுதிப்பொருள்
விகுதியாம். வஞ்சினம் – துருபதனரசிற் பாதிகொள்ளலும், அவனை உயிரோடு
கட்டிக்கொணர்தலும்.

‘முனி நீ, ஐயா! இதற்கு முன்னம்; இன்று முதலா,
இனி, இவ் உலகுக்கு அரசாய், எம்மில் ஒருவன் ஆகி,
குனி வில் வலியால் அமரும் கோடி’ என்று கொடுத்தான்-
பனி வெண் குடையும், நிருபற்கு உரிய வரிசை பலவும்.-அரசர்க்கு உரிய வரிசைகளை வீடுமன் துரோணனுக்கு அளித்தல்.

‘ஐயா – சுவாமீ! இதற்கு முன்னம் முனி நீ – இதற்கு முன்பு நீ
அந்தணன்: இன்று முதல் ஆ – இன்றைத்தினம் முதற்கொண்டு, இனி –
இனிமேல், (நீ), இ உலகுக்கு அரசு ஆய் – இந்த இராச்சியத்துக்குத்
தலைவனாய், எம்மில் ஒருவன் ஆகி – எங்களில் ஒருத்தனாய், குனி வில்
வலியால் அமர்உம் கோடி – வளைந்தவில்லின் வலிமையாற் போர்செய்தலையும்
மேற்கொள்வாய்,’ என்று – என்று சொல்லி, (வீடுமன் துரோணனுக்கு), பனி
வெள்குடைஉம் – குளிர்ச்சி தரும் வெண்கொற்றைக் குடையையும், நிருபற்கு
உரிய வரிசை பல உம் – (மற்றும்) அரசர்க்கு உரிய பல சிறப்புச்
சின்னங்களையும், கொடுத்தான்-; (எ-று.)

      ‘மாணாக்கரது உடைமை யெல்லாம் குருவுக்கு உரியன’ என்ற கருத்தால்,
‘இவ்வுலகுக்கு அரசாய்’ என்றான். ‘குருகுலத்தவர்க்கு இராச்சியம் முதலிய
செல்வம் எவ்வளவு உண்டோ அவ்வளவுக்கும் நீயே அரசன்’ என்று வீடுமன்
துரோணனுக்கு உபசாரமொழிகூறினதாக முதனூல் கூறுவதையும் உணர்க. வரிசை
பல – தேர், கொடி விருது, கழல் முதலியன. “படையுங்கொடியும் குடையும்
முரசும், நடை நவில் புரவியும் களிறும் தேரும், தாரும் முடியும் நேர்வன
பிறவும்… செங்கோலரசர்க்குஉரிய” என்றது காண்க. 

அன்று முதலாக வரி வெஞ் சிலை முதல் படைகள் ஆனவை
அனைத்தும், அடைவே,
தொன்று படு நூல் முறையின், மறையினொடு, உதிட்டிர சுயோதனர்கள்
ஆதி எவரும்,
ஒன்றிய துரோணன் அருளாலும், வலியாலும், முயல் உணர்வு
உடைமையாலும், முதலே
நின்ற குறையாலும், ஒருவர்க்கு ஒருவர் கல்வியின் நிரம்பினர்-
வரம்பு இல் நிதியோர்.- கௌரவபாண்டவர் அன்றுமுதல் துரோணனிடம் கல்விதேர்தல்.

வரம்பு இல் நிதியோர் – எல்லையில்லாத செல்வங்களை
யுடையவர்களான, உதிட்டிர சுயோதனர்கள் ஆதி எவர்உம் – தரும புத்திரனும்
துரியோதனனும் முதலிய ஐவரும் நூற்றுவரும்,- அன்று முதல் ஆக – அந்த
நாள் முதலாக, ஒன்றிய துரோணன் அருளால்உம் – (தங்களிடத்துப்)
பொருந்திய துரோணசாரியனது கருணையினாலும், வலியால்உம் – (தங்கள்)
உடல் வலிமையாலும், உயர் உணர்வு உடைமையால் உம் – (தாங்கள்) சிறந்த
இயற்கை யறிவை யுடைமையாலும், முதல்ஏ நின்ற குறையால்உம் –
முற்பிறப்பிலே கற்றுநின்ற சேஷத்தாலும்,- வரி வெம்சிலைமுதல் படைகளானவை
அனைத்துஉம் – கட்டமைந்த பயங்கரமான வில் முதலிய ஆயுதங்களெல்லாவற்றிலும்,
கல்வியின் – (அவற்றின்) சாஸ்திரத்திலும், தொன்று படுநூல் முறையின் –
பழமைபொருந்திய நூல்களிற்கூறிய முறைப்படியே, மறையினொடு –
(அஸ்திரங்களுக்கு உரிய) மந்திரங்களோடு, அடைவே – முறைமையாக, ஒருவர்க்கு
ஒருவர் நிரம்பினர் – ஒருத்தர் போலவே அனைவரும் தேர்ச்சியுற்றார்கள்; (எ-று.)

     பிரயத்தின பூர்வமாக மறைக்கத்தக்கதாதலால், மந்திரம், மறையென்று
பெயர்பெறும்; செயப்படுபொருள்விகுதி புணர்ந்து கெட்டது. ‘முயலுணர்வு’ என்ற
பாடமோதி, ஊக்கம் விளைவிக்கும் அறிவென்று உரைப்பாருமுளர்.
கல்விமுற்றக்கற்றல் முற்பிறப்பிற் பரிசயமுடையார்க்கன்றிமுடியாதாதலால்
‘முதலேநின்ற குறையாலும்’ என்றார்; இனி, இதற்கு – முதலிற்
கிருபாசாரியனிடத்துக் கற்றுநின்ற சேஷத்தாலும் என்று உரைத்தலும் ஒன்று,
‘கல்வியு நிரம்பினர்’ என்ற பாடத்துக்கு – இயல்பிலே பொருட் செல்வம்
நிறைந்தவர் இப்பொழுது கல்விச்செல்வமும் நிறைந்தனரென்க.

     இதுமுதற் பதின்மூன்றுகவிகள் – பெரும்பாலும் முதலைந்துசீர்கள்
விளங்காய்ச்சீர்களும், மற்றையவை மாச்சீர்களுமாகிய எழுசீராசிரியவிருத்தங்கள்.

வெஞ் சிலையினால் இவன் இராகவனை ஒக்கும்’ என விசயன்
விசயத்தின் மிகவே,
எஞ்சிய குமாரர்கள் பொறாமையின் மிகுத்தனர்கள், இரவி எதிர்
மின்மினிகள்போல்;
அம் சொல் முனிதானும், இவன்மேல், எவரினும் பெருக
அன்புடையன் ஆகி, அகலான்;-
நெஞ்சு உற அருங் கலைகள் கற்குமவர்தம் அளவில் நேயம்
நிகழாதவர்கள் யார்?அவர்களில் அருச்சுனன்சிறந்து குருவுக்குப்பிரியனாதல்.

விசயன் – அருச்சுனன்,- வெம் சிலையினால் இவன் இராகவனை
ஒக்கும் – என கொடிய வில்லின் தேர்ச்சியால் இவன் (பகைவர்க்கு)
இராமபிரானைப்போல்வா னென்று (அனைவரும்) சொல்லும் படி,
விசயத்தில்மிகஏ – கல்வித்தேர்ச்சியில்மேம்படவே,- (அதுகண்டு), எஞ்சிய
குமாரர்கள்- ஒழிந்த துரியோதனாதியர்கள், இரவி எதிர் மின் மினிகள்போல் –
சூரியனெதிரில் மின்மினிப்பூச்சிகள் போலாகி, பொறாமையில் மிகுந்தனர்கள் –
(இவனிடத்துப்) பொறாமைகொள்ளுதலில் மேம்பட்டார்கள்: அம்சொல் முனி
தான்அம்- அழகிய சொற்களையுடைய துரோணாசாரியனும், எவரின்உம்பெருக
இவன்மேல் அன்பு உடையன் ஆகி – மற்றை மாணாக்க
ரெல்லோரிடத்தினும்பார்க்க இவ்வருச்சுனனிடத்தில் மிக அம்புடையவனாய்,
அகலான்- (அந்த அன்பினின்று என்றும்) நீங்காதவனானான்; அரு கலைகள்
நெஞ்சு உற கற்குமவர் தம் அளவில் – அரியகல்விகளை மனத்தில் ஊன்றப்
படிக்குமவரிடத்து, நேயம்நிகழாதவர்கள் – அன்புகொள்ளப்பெறாத ஆசிரியர்,
யார் – யாவர்? (எ-று.)

     மற்றையோரினுங் கல்வியில் நன்கு தேர்ந்த அருச்சுனனிடம் துரோணன்
மற்றையோரிடத்தினும் மிக்க அன்பு வைத்தானென்ற சிறப்புப் பொருளை,
நன்றாகக் கல்விதேர்பவரிடம் அன்பு கொள்ளுதல் ஆசிரியர்க்கு இயல்பேயென்ற
பொதுப்பொருள் கொண்டு விளக்கியதனால், வேற்றுப்பொருள்வைப்பணி. விசயன்
தனக்கு உரிய விசயத்தில் மிக, துரியோதனாதியர் தமக்குஉரிய பொறாமையில்
மிக்கார்கள் என அவரவரியல்பு தோன்ற வேறுபாடு எடுத்துக் காட்டியவாறு.
ஏற்புழிக்கோடலென்ற உத்தியால், ‘எஞ்சியகுமாரர்கள்’ என்றது,
துரியோதனாதியரையே குறிக்கும். ‘இரவியெதிர் மின்மினிகள் போல் பொறாமையில்
மிகுந்தனர்கள்’ என்றது, தமக்கும் அவனுக்கும் சிறிதும் ஒப்புமை யில்லாமல்
மிக்கவேறுபாடு இருக்கையிலும் பொறாமையுற்ற தன்மையை உணர்த்தியபடி.
விஜயன் – விசேஷமான வெற்றியையுடையவன் என்று காரணப்பொருள்படும்.
மின்மினி – காரணப்பெயர். விசயன் வினயத்தின்மிகவே என்று பிரதிபேதம்

ஏகலைவன் என்று ஒரு கிராதன், முனியைத் தனி இறைஞ்சி, இவன்
ஏவலின் வழான்-
ஆகலை அடைந்து, மிகு பத்தியொடு, நாள்தொறும் அருச்சுனனை
ஒத்து வருவான்,
மேகலை நெடுங் கடல் வளைந்த தரணிக்கண் ஒரு வில்லி என
வின்மை உடையான்,
மா கலை நிறைந்து, குரு தக்கிணை வலக்கையினில் வல் விரல்
வழங்கியுளனால்.–ஏகலவ்ய னென்ற வேடனது செய்தி.

ஏகலைவன் என்ற ஒரு கிராதன் – ஏகலவ்யனென்ற
பெயரையுடைய ஒருவேடன், முனியை தனி இறைஞ்சி – துரோணாசாரியனைத்
தனியே வணங்கி, மிகு பத்தியொடு – மிக்கபக்தியுடனே, இவன் ஏவலின் வழான்
ஆகலை அடைந்து – இத்துரோணனது கட்டளையினின்று தவறாதவனாயிருத்தலை
அடைந்து, (அவ்வழிபாட்டின் பயனால்), நாள்தொறுஉம் அருச்சுனனை
ஒத்துவருவான் – தினந்தோறும் (கல்வித்தேர்ச்சியில்) அருச்சுனனை
ஒத்துவருபவனாய், மேகலை நெடு கடல் வளைந்த தரணிக்கண் ஒரு வில்லி என
வின்மை உடையான் – மேகலையென்னும் இடையணியாகப் பெரிய கடலாற்
சூழப்பட்ட பூமியிலே ஒப்பற்ற தனி வில்வீரனென்று (அனைவரும் தன்னைச்)
சொல்லும்படியே விற்றொழிலில் வன்மையுடையவனாகி, மா கலை நிறைந்து –
பெரிய தநுர்வித்தை முழுவதும் நிரம்பப்பெற்று, (பின்பு), குரு தக்கிணை –
அந்தக்குருவுக்குத் தக்ஷிணையாக, வலக்கையினில் வல் விரல் – (தனது) வலக்கைப்
பெருவிரலை, வழங்கி உளன் – கொடுத்திட்டான்; (எ – று.)- ஆல் ஈற்றசை.

     கீழ்க்கூறியபடி துரோணன் அருச்சுனனிடத்து மிக்க அன்பு கொண்டு
அவனைநோக்கி ‘உன்னினும் மேம்பட்டமாணாக்கர் எனக்கு எவரும் இல்லை’
என்றுகூறி அனைவர்க்கும் கல்விகற்றுக்கொடுத்து வருகையில் இரணியதநுஸ்
என்ற வேடர் தலைவனது குமாரனான ஏகலவ்யனென்பவன் துரோணனையடுத்து
‘எனக்கு வில்வித்தை கற்றுக்கொடுக்கவேண்டும்’ என்றுகேட்க, அக்குரு
இல்வேட்டுவக் குமரனைக் கற்பித்தால் இவன்மாணாக்கரெவரினும்
மேம்படுவனென்று அவனுக்குக் கற்பிக்க விரும்பாமல், ‘பயிற்சியில் மேம்படும்
நீ என் மாணாக்கனே: உனக்கு அனுமதிகொடுத்தேன்: போகலாம்’ என்று
சொல்ல, அவன்வணங்கி விடைபெற்றுத் தான்இருக்கும் வனத்திற் சென்று
தன்குடிசையில் துரோணனைப்போல் ஒரு பிரதிமை செய்து வைத்து அவ்வுருவையே
துரோணனாகப் பாவித்துக் குருவாகக் கொண்டு மிகுந்தபக்தியோடு
அவ்விக்கிரகத்துக்குப் பூசைபண்ணி அப்பூஜையின் பலனால் அஸ்திர சஸ்திரப்
பயிற்சிவகை யனைத்தும் தன் மனத்தில் தானே தோன்றப்பெற்றுத் துரோணனுக்குத்
தெரியாமலே வில்வித்தையில் அருச்சுனனினும் தேர்ந்துவந்தான்; இங்ஙனம்
இருக்கையில், துரோணன் கட்டளைப்படிவேட்டைக்குச்சென்ற குருகுலகுமாரர்கள்
தம்முடன்சென்ற ஒரு நாயின்வாயில் குரைக்க முடியாதபடி ஒருவனால் ஒருங்கே
ஏழம்புகள் பிரயோகிக்கப்பட்டமையைக் கண்டு வியந்து நாணி அங்ஙனம்
பிரயோகித்தவனை நாடிக் கண்டு விசாரித்துத் துரோண சிஷ்யனென்று அறிந்து
மீண்டும் நகருக்குவந்து நிகழ்ந்தசெய்தியனைத்தையுங் குருவினிடம் கூறினர்; பின்பு
அருச்சுனன் ஏகலவ்யனையே சிந்தித்தவனாய் ஏகாதந்தத்தில் துரோணனையடுத்து
‘என்னினும் மேம்பட்ட சிஷ்யன் இருக்காமல் என்னைக்கற்பிப்பதாக முன்பு நீர்
சொல்லியிருக்க, இங்ஙனம் ஒருவன் உளனே’ என்று குறைகூற, துரோணன்
சிறிதுசிந்தித்துத்தேர்ந்து அருச்சுனனை அழைத்துக்கொண்டு ஏகலவ்யனிடம் வந்து,
தன்னை வணங்கி யுபசரித்த அவனைநோக்கி ‘சிஷ்யனாகிய நீ குருவாகிய எனக்குத்
தக்ஷிணை கொடுக்கக்கடவாய்’ என்ன, அதற்கு அவன் ‘என்ன வேண்டும்?
கட்டளையிட்டது எதுவாயினும் கொடுப்பேன்’ என்ற வளவிலே, துரோணன் ‘உன்
வலக்கைக் கட்டைவிரலைக் கொடுப்பாய்’ என்றுகூறு, ஏகலவ்யனும்
வாக்குத்தவறாமல் மகிழ்ச்சியோடு அவ்விரலைத் துணித்துக் குருதக்ஷிணை
கொடுத்தனன்; பின்பு அவன் மற்றைவிரல்களால் அம்புதொடுக்கலானானாயினும்
முன்போலச்சிறப்புறானாயினான்; அதனால் அருச்சுனன் மகிழத் துரோணனும்
அருச்சுனனுக்கு முன்புசொன்னசொல் தவறாதவனாயினன் என வரலாறு அறிக.

     அருச்சுன னென்பதற்கு – வெண்ணிறமுடையவ னென்று பொருள்; இது –
முதலில், இந்நிறமுடைய கார்த்தவீரியமகாராசனுக்குப் பெயராயிருந்து, பின்பு,
அவனைப்போன்ற சௌரியதைரியங்களை யுடைய இப்பார்த்தனுக்கு
இட்டுவழங்கப்பட்டது: பார்த்தன் கருநிறமுடையவ னாதலால், அவனுக்கு
அருச்சுனனென்பது நிறம்பற்றி வந்த இயற்பெயரென்றல் பொருந்தாது. இனி,
அருச்சுனன் என்பதற்கு – பசுமைநிறமுடையோனென்று பொருள் கூறுவாருமுளர்.
அன்றியும், பார்த்தன்,(பார்வதிபோலப்) பிறந்தபொழுது
வெண்ணிறமுடையவனாயிருந்தது பின்பு கருநிறமடைந்தா னென்று கூறலும்
உண்டு, கடலை, பூமியாகிய பெண்அணியும் மேகலையணி ளெனக் கூறதல்,
கவிமரபு.

அங்குலிகம் ஒன்று புனல் ஆழ்தரு கிணற்றில் விழ, அந்த முனி,
‘தேடுமின்’ என,
புங்கமொடு புங்கம் உற எய்து, இவன் எடுத்தமை புகன்று, அருகு
நின்றவரை, ‘நீர்
இங்கு இதன் இலைத் தொகைகள் யாவும் உருவப் பகழி ஏவுமின்’
எனாமுன், விசயன்,
துங்க வில் வளைத்து, ஒரு கணத்தினில் வடத்து இலை துளைத்தனன்,
இலக்கு இல் தொடையால்.-அருச்சுனனது வில்திறத்தின் சிறப்பு.

அங்குலிகம்ஒன்று – மோதிரமொன்று, புனல் ஆழ் தரு கிணற்றில்
– ஆழ்ந்தநீரையுடையதொரு கிணற்றிலே, விழ – விழுந்திட,- அந்தமுனி –
துரோணாசாரியன், தேடுமின் என – (குருகுல குமாரரை நோக்கி அதனை
நீங்கள்) தேடியெடுங்களென்றுசொல்ல, -(மற்றையோரால் இயலாமற்போகவே),
இவன் புங்கமொடு புங்கம் உற எய்து எடுத்தமை – அருச்சுனன் அம்புடனே
அம்பு பொருந்தும்படி பாணப்பிரயோகஞ்செய்து (அதனால் இம்மோதிரத்தை)
எடுத்தமைக்கு, புகன்று – மகிழ்ந்து,- (துரோணன் பின்பு), அருகு நின்றவரை –
பக்கத்தில்நின்ற அம்மாணாக்கரனைவரையும்நோக்கி, ‘நீர் – நீங்கள், இங்கு –
இங்குஉள்ள, இதன் – இந்த ஆலமரத்தினது, இலை தொகைகள் யாஉம் –
இலைகளையெல்லாம், உருவ – ஊடுருவித்துளைக்கும்படி, பகழி ஏவுமின் –
அம்புதொடுங்கள்’, எனாமுன் – என்று கட்டையிடும்முன்னே [கட்டளையிட்டவுடனே,
விரைவில் என்றபடி], (மற்றையோரால் ஆகாமற்போகவே), விசயன் – அருச்சுனன்,
துங்கம் வில் வளைத்து – சிறந்த (தனது) வில்லைவளைத்து, இலக்கு இல்
தொடையால் – எதிரில்லாத அம்பைஎய்து அதனால், ஒரு கணத்தினில் வடத்து
இலை துளைத்தனன் – ஒருகணப்பொழுதிலே அவ்வால மரத்தின்
இலைகளெல்லாவற்றையும் துளைப்படுத்தினான்; (எ -று.)

     பாஞ்சாலனோடு மாறுபட்ட துரோணாசாரியன் அத்தினபுரியில் பிறரா
லறியப்படாது வசிக்கையில், ஒருகால் விளையாடச்சென்ற குருகுலக்குமரர்
கிணற்றில் வீழ்ந்திட்ட மோதிரம் பந்து இவைகளை யெடுக்கத் தெரியாமல்
விழிக்க, அருகு இருந்த இந்தத்துரோணன் தான் கற்ற இஷீகாஸ்த்திரத்தின்
வல்லமையால் அவற்றையெடுக்க, அவர்கள் வியப்புற்றுப் பணிந்து அவரை
இன்னாரென்று அறிந்து வீடுமனிடம் தெரிவிக்க, பின்பு ஆசிரியரானாரென்பதும்:
மாணாக்கர்க்குப் பயிற்சிமுற்றியபின் ஒருகால் ஒருமரத்தில் பாஸமென்ற
பட்சியையமைத்து அந்தக் குருகுலக்குமரரை யெய்யுமாறு துரோணாசார்யர்
கட்டளையிட, எய்யவேண்டிய நிலையில் மற்றையோர் மரத்தையும் குருவையும்
உடன்காண்பதாக ஆசிரியரிடஞ்சொல்லி ஆசிரியரால் அவமதிப்புப்பெற,
அருச்சுனன்மாத்திரம் எய்யும் நிலையில் பாஸபட்சியின் சிரசையே
காண்பதாகக்கூறி ஆசிரியரின்கட்டளைப்படி இலட்சியத்தை வீழ்த்தினா
னென்பதும் வியாசபாரதத்திலுள்ளவை: இப்பாடலிற்குறித்தவை
பாலபாரதத்திலில்லை.

     அங்குலிகம் – அங்குலீயக மென்றவடசொல்லின் திரிபு; விரலில்
அணியப்படுவ தென்பது அவயவப்பொருள்: அங்குலி – விரல். புங்கம், துங்கம்,
வடம் – வடசொற்கள்

முத்தி முனி தாள் இணையை, நீர் படி தடந் துறையில்,
முதலை கவர்வுற்றது’ எனலும்,
சித்திர வில் வீரர் பலரும் தம வெறுங் கையொடு சென்று,
அருகு நின்று விடவே,
பத்தியின் விரைந்து, பொதுவே இபம் அழைக்க ஒரு பறவைமிசை
வந்த நெடுமால்
கைத் திகிரிபோல் கணையின், விசயன், அதனைப் பழைய கார்
முதலையின் துணிசெய்தான்.–அருச்சுனன் துரோணனை முதலையினின்று உய்வித்தல்.

முத்தி முனி – வீடுபெறுதற்குஉரிய [ஞானவொழுக்கங்களிற் சிறந்த]
துரோணாசாரியன், நீர் படி தட துறையில்- நீராடுகிற பெரிய நீர்த்துறையிலே,
தாள் இணையை – (தனது) கால்களிரண்டையும், முதலை கவர்வுற்றது –
ஒருமுதலை பிடித்துக் கொண்டது, எனலும் – என்று சொன்ன வளவிலே,- சித்திரம்
வில் வீரர் பலர்உம் – அழகிய வில்லை யேந்திய வீரர்களான குருகுல
குமாரர்கள் எல்லோரும், தம வெறு கையொடு – தங்கள் வெறுங்கைகளுடனே,
அருகு சென்று – பக்கத்திற் போய் நின்று, விட- (திகைத்துச்) சும்மாநின்றுவிட,
விசயன் – அருச்சுனன்,- இபம் – ஒருயானை [கஜேந்திராழ்வான்], பத்தியின் –
பக்தியோடு, விரைந்து – விரைவாக, பொதுவே அழைக்க – (ஆதிமூலமேயென்று)
பொதுவாகக் கூப்பிட, (அதனைப் பாதுகாக்கும்பொருட்டு), ஒரு பறவைமிசை
வந்த – ஒப்பற்ற கருடவாகனத்தின் மேல் ஏறிவந்த, நெடு மால் –
பெருமைக்குணமுடைய திருமாலினது, கை – கையினால் எறியப்பட்ட, திகிரி –
சக்கராயுதத்தை, போல் – ஒத்த, கணையின் – ஒருபாணத்தால்,- அதனை-
அம்முதலையை, பழைய கார் முதலையின் – (அச்சக்கரம் பிளந்த) பழைய கரிய
முதலையைப்போல, துணி செய்தான் – பிளந்து தள்ளினான்; (எ -று.)

     ஒருநாள் துரோணன் மாணாக்கர்களுடனே சென்று கங்கைத் துறையில்
நீராடுகையில் வலியதொருமுதலை அவனது பாதங்களை முழங்காலளவும்
பிடித்துக்கொள்ள, அவன் அதனை விடுவித்துக் கொள்ள வல்லவனாயினும்,
சிஷ்யர்களைப் பரீட்சிக்கும் பொருட்டு அவர் அனைவரையும் நோக்கி
‘முதலையைக்கொன்று என்னை விடுவியுங்கள்’ என்று விரைந்துகூற,
மற்றையாவரும் இன்னது செய்வதென்று அறியாமல் திகைத்துநிற்க, உடனே
அருச்சுனன் கூரிய சிறந்த அம்பு தொடுத்து முதலையைக் கொன்று குருவைக்
காத்தனனென அறிக. முதலைவாய்ப்பட்ட காலுக்கு யாதொரூறுபாடுஞ் செய்யாது
அதனைப் பற்றிய முதலையின் வாயையே துணித்துக் குறிக்கொண்டு காத்த
திறத்தை வியந்து ‘மால்கைத்திகிரிபோல் கணை’ என்று கூறினார். 

சிலைக் குரு, ‘விறல் குருகுலக் குமரருக்கு வரு சிரம நிலை காண்மின்’
எனவே,
அலைத் தலை நிலா எழு சரித் புதல்வனுக்கும் நல் அறக்
கடவுளுக்கும் உரையா,
நிலைப்படு விசால மணி அணி திகழ் அரங்கின்மிசை நிகழ் பலி
கொடுத்து, அரியுடன்
கலைப்புரவி ஊர் திருவையும் தொழுது, புக்கனன் -அகத்து உணர்வு
மிக்க கலையோன்.-துரோணன் மாணாக்கர்கல்வியை அனைவர்க்குங் காட்டலுறல்.

அகத்து உணர்வு மிக்க – மனத்தில் அறிவுமிகுந்த, கலையோன் –
எல்லாக்கல்வியையு முணர்ந்தவனாகிய, சிலை குரு – வில்லாசிரியனான
துரோணன்,- ‘விறல் குருகுலம் குமரருக்கு வரு – வலிமையையுடைய குருகுல
குமாரர்களுக்குக் கைவந்த, சிரமம் நிலைஆயுதப் பயிற்சியின் நிலைமையை,
காண்மின் – பாருங்கள்’, என – என்று அலை தலை நிலா எழு சரித்
புதல்வனுக்குஉம் – அலைகள் ஒரு நிலையில் நில்லாமல் (மேன்மேல் மிக்கு)
எழப்பெற்ற கங்காநதியினது குமாரனான வீடுமனுக்கும், நல் அறம்
கடவுளுக்குஉம் – சிறந்த யமதருமராசனது அமிசமான விதுரனுக்கும், உரையா –
சொல்லி,- நிலைப்படு விசாலம் மணி அணி திகழ் அரங்கின்மிசை – நிலையாகப்
பதிக்கப்பட்ட பெரிய இரத்தினங்கள் அழகுவிளங்கப்பெற்ற யுத்தரங்கத்திலே,-
நிகழ் பலி கொடுத்து – கொடுத்தற்கு உரிய பலியைக் கொடுத்து,- அரியுடன்
கலை புரவி ஊர் திருவைஉம் தொழுது – சிங்கத்துடனே கலைமானாகிய
வாகனத்தை ஏறிநடத்துகிற துர்க்கையை வணங்குதலுஞ் செய்து, புக்கனன் –
பிரவேசித்தான்; (எ-று.)

     அரங்கு – ரங்க மென்ற வடசொல்லின் திரிபு: இது – படைக்கலத் திறங்
காட்டுதற்கு நிருமிக்கப்பட்ட இடம். துர்க்கை படைக்கலங்கட்கும் போருக்கும்
உரிய தலைவி யாதலால்,யுத்தரங்க பூமியிற்புகும்போது வேண்டியபலி கொடுத்துத்
துர்க்கையை வணங்கிச் செல்லுதல், மரபு. பலிகொடுத்துத் துர்க்கையை வணங்கியதாக
இங்குக் கூறியது, பாரதங்களில்லை. துர்க்கைக்குச் சிங்கமும் கலை மானும்
வாகனமாம். ‘மகளிர்யாவரும் இலக்குமியின் சொரூபம்’ என்ற சித்தாந்தத்தைத்
தழுவி, துர்க்கையை ‘திரு’ என்றார்: திரு என்ற பெயர் மகளென்றமாத்திரமாய்
நின்றதென்றுங் கொள்ளலாம்: அன்றியும், துர்க்கைக்கு வீரலக்ஷ்மி யென்று
ஒருபெயரும் உண்டு. ‘அலைக்கலை நிலாவெழு கதிர்ப்புதல்வருக்கும்’ என்ற
பாடத்துக்கு – (தனக்கு உரிய பதினாறு) கலைகளோடும் (தனது) ஒளியாகிய
நிலாவினுடனும் கடலினின்றுஉதிக்கிற சந்திரனென்னுஞ்சுடரினது குலத்திற் பிறந்த
குமாரர்களான வீடுமனுக்கும் திருதராட்டிரனுக்கும் எனப் பொருளாம்.

புரியில் அறிவோர், சனபதத்தில் அறிவோர், புவி புரக்குமவர்தம்மில்
அறிவோர்,
வரி பட வயங்கு கொடி மஞ்ச விதம் எங்கணும் வனப்பு உற இருந்த
பொழுதில்,
தெரிவுறு விமானமனைதோறும் உறை தேவர் பலர், சித்தர், முதலோர்,
பரனொடும்
கரிய நெடுமால், பிரமன், இந்திரன், முதல் பலர் கலந்த அகல்
வான் நிகருமே.அந்த யுத்தரங்கபூமியில் அனைவரும் வந்துசேர்தல்.

புரியில் அறிவோர் – நகரத்திலுள்ள அறிஞர்களும், சனபதத்தில்
அறிவோர் – நாட்டிலுள்ள அறிஞர்களும், புவி புரக்குமவர் தம்மில் அறிவோர் –
பூமியை ஆளும் அரசர்களில் அறிஞர்களாயுள்ளவர்களும், (ஆகிய
அனைவரும்), வரி பட வயங்கு கொடி மஞ்சம் விதம் எங்கண்உம் –
(அந்தரங்கபூமியில் அமைக்கப்பட்டு) வரிசைப்பட விளங்குகிற ஒழுங்கான
ஆசனங்களின் வகைகளிலெல்லாம், வனப்பு உற இருந்த பொழுதில் –
அழகுபொருந்த வீற்றிருந்த சமயத்தில்,- (அச்சபையானது),- தெரிவுறுவிமானம்
மனைதோறுஉம் – விளங்குகிற விமானங்களாகிய மாளிகைகளில், உறை –
வசிக்கிற, தேவர் பலர் – தேவர்கள்பலரோடும், சித்தல் முதலோர் பலரோடுஉம் –
சித்தர்கள் முதலிய தேவகணத்தவர் பலரோடும், கரிய நெடுமால் பிரமன்
இந்திரன் முதல் பலர் – கருமைநிறமும் பெருமைக்குணமுமுடைய திருமாலும்
பிரமனும் இந்திரனும் முதலிய பல சிறந்த தேவர்கள், கலந்த – வந்து
செறியப்பெற்ற, அகல் வான் – பரந்த ஆகாயத்தை, நிகரும் – ஒக்கும்; (எ -று.)

     ஜநபதம் – வடசொல்; சனங்கள் வசிக்குமிடம் மென்று பொருள்படும்.
‘அறிவோர்’ என்றது, இங்கு, யானை குதிரை தேர் படைக்கலம் என்றவற்றின்
நூல்களை யறிந்தவரைக் குறிக்கும். சித்தர் – அணிமா முதலிய யோக
சித்திகளைப் பெற்றவர். ‘புரிவிலறிவோர்’ என்றும், ‘இயங்குகொடி’ என்றும்
பாடம். ‘பலரொடும்’ என்ற விடத்து, ‘பரரொடும்’ என்று பிரதிபேதம்

ஆற்றின் வழுவா மனுமுறைத் தருமன் மைந்தன் முதல் ஆகிய
குமாரர் அடைவே,
போற்றி அடல் ஆசிரியர் இருவரையும், அன்பின் உயர் பூசை பல
செய்து, புரி நாண்
ஏற்றிய சராசனம் வணக்கி, வடி வாளியின் இலக்கம்அவை
நாலு வகையால்,
மாற்றினர், பிளந்து-பெரு வண்மை, சிறு நுண்மை, சலம், நிச்சலம்,
எனச் சொல் வகையே.-யுதிட்டிரன் முதலியோர் தம்தமது வில்திறங் காட்டுதல்.

ஆற்றின் வழுவா – நல்நெறியில் தவறாத, மனுமுறை  மநுதர்ம
சாஸ்திரத்திற் சொல்லப்பட்ட நீதியையுணர்ந்த, தருமன் மைந்தன் –
தருமபுத்திரன், முதல் ஆகிய – முதலான, குமாரர் – குரு குல குமாரர்கள்,
அடைவே – முறையே,- அடல் ஆசிரியர் இருவரை உம் – வலிமையையுடைய
(கிருபன் துரோணன் என்னும் தமது) ஆசிரியர் இருவரையும், போற்றி வணங்கி,
அன்பின் – அன்போடு, உயர் பூசை பல செய்து – சிறந்த பூசைகள்
பலவற்றைச்செய்து, புரி நாண் ஏற்றிய சராசனம் வணக்கி – முறுக்குள்ள
நாணியை ஏற்றும்படி வில்லை வளைத்து, வடி வாளியின்  – கூரிய
அம்புகளைக்கொண்டு, பெருவண்மை சிறு நுண்மை சலம் நிச்சலம் என சொல்
வகை இலக்கம் அவை நால்உம் – பெருவண்மையும்சிறு நுண்மையும் சலமும்
நிச்சலமும் என்று சொல்லப்பட்ட நான்குவகை லக்ஷியங்களை யெல்லாம்,
வகையால் பிளந்து மாற்றினர் – (அதற்குஉரிய) வகைப்படி பிளந்து
தள்ளினார்கள்; ( எ-று.)

     பெருவண்மை – மிகப்பெரிய இலக்கு. சிறுநுண்மை – மிகச்சிறிய இலக்கு.
சலம் – அசையும் இலக்கு. நிச்சலம் – அசையாத இலக்கு. அம்பைக்
கையாளும்வகை – எடுத்தல் தொடுத்தல் விடுத்தல் மீட்டல் என நான்கு: இனி,
மேனோக்கியெய்தல் நேரேயெய்தல் எனச் சில வகைகளும் கூறுப.
‘நாலுவகையான்’ என்று பிரதிபேதம். 

ஆயுதம் அநேக விதம் ஆனவை எனைப் பலவும் அழகுற
இயற்றியும், மதம்
பாயும் இபம், மா இரதம், வாசி, ஒருவர்க்கு ஒருவர் பல கதி
வரக் கடவியும்,
சேய் உயரும் மாட நிலை தெற்றியின் இருந்தவர் தெளிந்து உளம்
மகிழ்ந்து, ‘நவை தீர்
வாயு கதி அல்லது மனித்தர் கதி அல்ல!’ என வல்லன
புரிந்தனர் அரோ.மற்றும் படைக்கலத்திறமும், யானைதேர்குதிரை
நடத்துந்திறமுங் காட்டுதல்.

எனை அநேகவிதம் ஆனவை – மற்றும் பலவகைப்பட்டவையான,
ஆயுதம் பலஉம் – படைக்கலங்களை யெல்லாம், அழகு உறஇயற்றிஉம் –
அழகாக உபயோகித்தும்,- சேய் உயரும் – மிகவும் உயர்ந்துள்ள, மாடம் நிலை
– மாளிகைகளின் உபரிகைகளிலும், தெற்றியின் – மண்டபங்களிலும், இருந்தவர் –
(இக்காட்சி காண்டற்கென்று) வந்திருந்தவர்கள், தெளிந்து – கண்டு, உளம்
மகிழ்ந்து-, நவை தீர் வாயு கதி அல்லது மனித்தர் கதி அல்ல என – (இக்கதி
விசேடங்கள்) குற்றமற்ற வாயுவுக்குஉரிய கதிகளே யல்லது மனிதர்களுக்கு உரிய
கதிகளல்லவென்று சொல்லும்படி,- மதம்பாயும்இபம் – மதசலம் பெருகப்பெற்ற
யானைகளையும், மா இரதம் – பெரிய தேர்களையும்,  வாசி – குதிரைகளையும்,
ஒருவர்க்கு ஒருவர் – ஒருவரினும் ஒருவர் மிகுதியாக, பல கதி வர –
அநேகவிதமான நடைவிகற்பங்கள் உண்டாக, கடவிஉம் – செலுத்தியும்,- வல்லன
புரிந்தனர் – (தாம்) தேர்ந்த கல் வித்திறங்களைச் செய்து காட்டினார்கள்; (எ-று.)-
அரோ – ஈற்றசை.

     எனை – ஏனை யென்னும் இடைச்சொல்லின் குறுக்கல். கீழ்க்கவியில் வில்
கூறியதனால், மற்றையபடைக்கலங்களைக் குறித்தற்கு ‘ஏனை’ என்றார்.
‘மாடநிலைதோ’ றவையிருந்தவர் ‘ என்ற பாடத்துக்கு – மாடங்களினிடந்தோறும்
கூடியிருந்த பெரியோர்களென்க. மனித்தர் = மநுஜர்: வடசொல். தெற்றி –
சித்திரகூடமுமாம்

ஒத்த வலியோர் வலியும், ஒத்த திறலோர் திறலும், ஒத்த வினையோர்
வினையும், வன்
சித்தம் அனல் மூள முக அம்புயம் மலர்ந்து, அரசன் மகனும்,
அனிலன் சிறுவனும்,
கைத்தலம் அமர்ந்த கதை கொண்டு எதிர் நடந்தனர்-களிப்புடன்,
இரண்டு தறுகண்
மத்த கயம், வேரொடு மராமரம் எடுத்து, அமர் மலைந்தனைய
கோல மறவோர்.-துரியோதனனும் வீமனும் கதைப்போர் தொடங்குதல்.

வலிஉம் – உடல்வலிமையைக் குறித்து நோக்கினாலும், ஒத்த
வலியோர் – (ஒருவர்க்கொருவர்) சமமான தேகபலமுடையவர்களும், திறல்உம் –
பராக்கிரமத்தை யுடையவர்களும், வினைஉம் – படைக்கலத் தொழில்வகைகளைக்
குறித்து நோக்கினாலும், ஒத்த திறலோர்-சமமான பராக்கிரமத்தை
யுடையவர்களும், வினைஉம்- படைக்கலத் தொழில்வகைகளைக் குறித்து
நோக்கினாலும், ஒத்த வினையோர் – சமமான தொழில்திறமுடையவர்களும்
ஆகிய, அரசன் மகன்உம் அனிலன் சிறுவன்உம் – திருதராட்டிர மகாராசனது
புத்திரனான துரியோதனனும் வாயுகுமாரனான வீமனும், தறுகண் மத்த கயம்
இரண்டு – அஞ்சாமையையுடைய மதம்பிடித்த யானைகள் இரண்டு, களிப்புடன் –
அம்மதக்களிப்புடனே, மராமரம் வேரொடு எடுத்து – மராமரங்களை வேருடனே
(துதிக்கையாற்) பெயர்த்து எடுத்துக்கொண்டு, அமர் மலைந்து அனைய –
(ஒன்றோடொன்று) போர்செய்தாற்போன்ற, கோலம் மறவோர் – காட்சியையும்
யுத்தாவேசத்தையுமுடையவர்களாய்,- வல் சித்தம் அனல் மூள – வலிய தங்கள்
மனத்திலே கோபாக்கினி எழுந்துபொங்க, முக அம்புயம் மலர்ந்து – (தங்கள்)
முகமாகிய தாமரைமலர்கள் மலரப்பெற்று, கைத்தலம் அமர்ந்தகதைகொண்டு
எதிர்நடந்தனர் – கைகளிற் பொருந்திய கதாயுதத்தை யெடுத்துக்கொண்டு
(ஒருவரையொருவர்) எதிர்த்துச் சென்றார்கள்;

     இருவரும் பதினாயிரம் யானைபலம்கொண்டவராதலால், ‘ஒத்த வலியோர்’
எனப்பட்டனர்: (துரியோதனன், வீமன், கீசகன், சராசந்தன், பகாசுரன் என்ற
இவ்வைவரும் சமபலமுடையவரென்பதை அறிக.) கதாயுதத்தைக்கொண்டு நிற்கும்
இவ்விருவர்க்கு, ஸாலவ்ருட்சத்தைக்கொண்டு நிற்கும் மதக்களிறுகள்உவமை

தண்டின் முனை ஒன்றினுடன் ஒன்று உரும் எறிந்தனைய
தன்மையொடு உடற்ற, விலகு
மண்டல விதங்களும் வியப்புற நடந்தபின், மறத்தொடு செயிர்த்து,
வயிரம்
கொண்டு, இருவரும் பொருதல் உன்னுபொழுதத்து, அவர் குறிப்பினை
இமைப்பு அளவையில்
கண்டு, குருவின் சிறுவன், வன்பொடு விலக்கினன், மெய் கல்வி
கரை கண்ட பெரியோன்.-அவர்கள் போரில்மிகுதலை அசுவத்தாமன் விலக்குதல்.

தண்டின் முனை ஒன்றினுடன் ஒன்று-கதையின் நுனி
ஒன்றோடொன்று, உரும் எறிந்து அனைய தன்மையொடு உடற்ற – இடியிடித்தாற்
போன்ற தன்மையோடு தாக்க, விலகு மணடல விதங்கள்உம் – (அக்கதைகள்
தம்மேல் தாக்காதபடி) விலகுகிற மண்டலகதிவகைகளும், வியப்புற நடந்தபின்-
(காண்பவர்) அதிசயிக்கும்படி நிகழ்ந்தபின்பு, இருவர்உம் – (துரியோதனன்
வீமனென்னும்) இரண்டுபேரும், மறத்தொடு செயிர்த்து வயிரம் கொண்டு –
வீரத்தோடு கோபித்து உட்பகைமைகொண்டு, பொருதல் உன்னு பொழுதத்து –
போர்செய்யக்கருதியபொழுது,- அவர் குறிப்பினை – அவர்களுடைய
உட்கருத்தை, இமைப்பு அளவையில் கண்டு – ஒரு மாத்திரைப்பொழுதிலே
அறிந்து,- மெய் கல்வி கரை கண்ட பெரியோன் குருவின் சிறுவன் –
உண்மையான கல்விகளை முழுவதும் அறிந்த பெருமையுடையவனாகிய
குருபுத்திரனான அசுவத்தாமன், வன்பொடு விலக்கினன் – வலிமையோடு
விலக்கினான்; (எ-று,)

     மண்டலவிதம் – வலசாரி, இடசாரி, மண்டலம், பவுரி என்பன.
செய்யுளோசையின்பம் நோக்கி, மெய்கல்வி, என வலியியல்பாய் நின்றது: இனி,
மெய்யுங் கல்வியுமாகியவற்றைக் கரைகண்ட என்றும் உரைக்கலாம்.
‘அன்பொடுவிலக்கினன்’ என்றும் பாடம்.

மீளி மகவான் மதலை ஆயுதபுரோகிதன் விலோசனம் உணர்ந்து,
அவன் மலர்த்
தாளில் முடி வைத்து, எதிர் தரித்தனன், இடங்கை வரி சாப
கவசத்தினன், இபம்,
யாளி, அரவம், கருடன், வன்னி, சலிலம், திமிரம், இரவி,
இவையே கடவுளாம்
வாளியின் வினோதம் உற எய்தனன், இருந்த முடி மன்னவர்
மதிக்கும் வகையே.அருச்சுனன் தனது வில்லின் திறமையைக் காட்டுதல்.

மீளி – வீரத்திற் சிறந்தவனான, மகவான் மதலை – இந்திர
குமாரனாகிய அருச்சுனன்,- ஆயுத புரோகிதன் விலோசனம் உணர்ந்து –
ஆயுதவித்தைக்குக் குருவான துரோணாசாரியனது கண்ணின்குறிப்பை யறிந்து,
அவன் மலர் தாளில் முடிவைத்து – அவனுடைய தாமரை மலர்போன்ற
திருவடிகளிலே தனது தலையை வைத்து [சாஷ்டாங்கமாக விழுந்து தண்டனிட்டு],
எதிர் – அவனெதிரிலே, இடம் கை வரி சாபம் தரித்தனன் – இடக்கையில்
கட்டமைந்த வில்லை ஏந்தியவனாய், கவசத்தினன் – (உடம்பில் தரித்த)
கவசத்தையுமுடையவனாய், இபம் யாளி அரவம் கருடன் வன்னி சலிலம் திமிரம்
இரவி இவைஏ கடவுள் ஆம் வாளியின் – யானையும் (அதற்குப்பகையான)
சிங்கமும் பாம்பும் (அதற்குப் பகையான) கருடனும் அக்கினியும் (அதற்குமாறான)
ஜலமும் இருளும் (அதற்குமாறான) சூரியனும் ஆகிய இவற்றின் விதமான
தெய்வத்தன்மையுள்ள அம்புகளினால் [ஒன்றற்கொன்று பகையாகிய பல திவ்விய
அஸ்திரங்களால்], வினோதம்உற -(காண்பவர்க்கு) வியப்புஉண்டாக, இருந்த
முடிமன்னவர் மதிக்கும் வகை – (அவ்வரங்கத்தில்) இருந்த கிரீடத்தாரிகளான
அரசர்கள் (தன்னை) நன்குமதிக்க, எய்தனன்-; (எ -று.)

     முன்பு தானே ஓர் அஸ்திரத்தை எய்து அதன்திறத்தை வெளிக்காட்டி
வியப்பு உண்டாக்கி உடனே அதற்குப் பகையான அஸ்திரத்தைக் கொண்டு
தணித்து இங்ஙனமே மிக்கவிநோதக் காட்சிகளைவிளைத்தன னென்க. மகவாந்
என்ற வடசொல் – யாகங்களை யுடையவனென்று பொருள்படும்; நூறு
அசுவமேதயாகங்களைச் செய்து இந்திர பதவிபெறுதலால் அவனுக்கு இப்பெயர்.

மங்குல் சூழ் விமான முன்றில் மஞ்ச கோடி திகழவே,
அம் கண் வான மீனம் என்ன, அவை இருந்த அரசர்முன்,
சிங்கம் என்னுமாறு எழுந்து, சிங்கநாதமும் செய்தான்-
பங்கசாத பரிமளம் கொள் பானுராச சூனுவே.-அப்பொழுது கர்ணன் எழுந்து சிங்கநாதஞ் செய்தல்.

மங்குல் சூழ் விமானம் முன்றில் – மேகங்கள் படியப் பெற்ற
(மேல்நிலையையுடைய) மண்டபத்தின் முன்னிடத்திலுள்ள, மஞ்சம் கோடி –
மஞ்சங்களின் வரிசை, திகழ – (தாம்வீற்றிருத்தலால்) விளங்கும்படி, (அந்த
மஞ்சங்களில்), அம் கண் வானம் மீனம் என்ன – அழகிய இடத்தையுடைய
வானத்திற்பொருந்திய நக்ஷத்திரங்கள் போல,அவை இருந்த -சபையாகத்
திரண்டு வீற்றிருந்த, அரசர் முன் – அரசர்களுடையமுன்னிலையிலே,-
பங்கசாதபரிமளம்கொள் பானுராச சூனு – தாமரைமலர்களை
மலர்த்துந்தன்மையுள்ள சூரியனாகிய தலைவனது மகனான கர்ணன்,- சிங்கம்
என்னும் ஆறு எழுந்து – சிங்கம் (தனக்கு உவமை) என்று சொல்லும்படி
(கம்பீரமாக) எழுந்து, சிங்கநாதம்உம் செய்தான் – சிங்கநாததத்தையுஞ் செய்தான்;
சிங்கநாதத்தையுஞ் செய்தான்;

     இங்கே, விமானம் – மண்டபத்தின் மேல்நிலையையும், முன்றி லென்றது –
வடமொழியில் ப்ரேக்ஷாகார மெனப்படும் காட்சிச்சாலையின் முன்னிடத்தையும்
காட்டும். அலர்த்தலாகிய காரணம், பரிமளங் கொள்ளுதலாகிய காரியமாக
உபசரிக்கப்பட்டது. பரிமளங்கொள் பாநு – தாமரைகள் மலர்ந்து
வாசனைவீசுதற்குக் காரணமாகுஞ் சூரிய னென்க. ஓர் உத்தமபுருஷன் உயர்ந்த
பதுமினி சாதிஸ்திரீயின் மேனிநறுமணத்தை மோந்து உட்கொள்ளல் போல,
சூரியனாகிய தலைவன் தனது தலைவியாகிய தாமரையின் மணத்தைக்
கொள்ளுகின்றனனென்பது தொனிக்கும். கோடி, ஸிம்ஹநாதம், பங்கஜாத பரிமளம்,
பாநுராஜஸூநு – வடமொழித்தொடர்கள். ‘விசாலமுன்றில்’ என்றும் பாடம்.

     இதுமுதல் இருபத்திரண்டு கவிகள் – பெரும்பாலும் ஈற்றுச் சீரொன்று
விளச்சீரும், மற்றையாறும் மாச்சீர்களுமாகிய எழுசீராசிரியவிருத்தங்கள்.
இவற்றை, முதல் ஆறு சீர்களையும் மூன்று பெருஞ் சீராகப் பிரித்துக் கலிவிருத்த
மென்னவேண்டுமென்பது, ஒருசாரார் கொள்கை

சிந்தை அன்புடன் பணிந்து, தேசிகேசன் அருளினால்
வந்து, வெஞ் சராசனம் வணக்கி, வீர வாளியால்,
இந்திரன் குமாரன் முன் யாது யாது இயற்றினான்,
அந்த அந்த நிலையும் ஏவும் அவனின் விஞ்சல் ஆயினான்.-அருச்சுனனினும் சிறப்பாகக் கர்ணன் தனது
வில்திறங்காட்டுதல்.

தேசிக ஈசன் அருளினால் வந்து – (அவ்வரங்கிற்குத் தலைவனாக
விளங்கும்) குருசிரேஷ்டனான அந்தத் துரோணனது அனுமதிபெற்று (அதனால்)
வந்து, சிந்தை அன்புடன் பணிந்து – (அவனை) மனப்பூர்வமான பக்தியோடு
வணங்கி, வெம் சராசனம் வணக்கி – கொடிய வில்லை வளைத்து,-
இந்திரன்குமாரன் முன் வீரவாளியால் யாது யாது இயற்றினான் அந்த அந்த
நிலைஉம் ஏஉம் அவனின் விஞ்சல் ஆயினான் – இந்திரனது மகனான
அருச்சுனன் முன்பு திறமையுடைய அம்புகளால் எந்தெந்தவகைத்தொழிலைச்
செய்தானோ அததற்குஉரிய நிலையிலும் அந்தந்த அம்பைச் செலுத்துதலிலும்
அவ்வருச்சுனனினும் மேம்படுதலை உடையவனானான்; (எ-று.)

     “அர்ச்சிதேந குருணாநுமோதிதோ – தாரயந் தநு ரதிஜ்யதாம் கதம்
அத்புதம் வ்யதித யத்யத் அர்ஜு ந:- தத்த தப்யதிகம் ஆததாந ஸ:” என்ற
பாலபாரதத்தை யொட்டி இப்போது கூறிய பொருளே யேற்றதாதலறிக.
தேசிகன் -பரசுராமனென்பாருமுளர்.

கணைகள் போய் இலக்கு அடைந்த உறுதி கண்டு, கண் களித்து,
‘இணை இல் வீரன்’ என்றது, அன்று இருந்த ராச மண்டலம்;
பிணையல் மாலை விசயன் அண்ணல் பெற்றி பற்றி நாணினான்,
துணைவரோடு வரி கழல் சுயோதனன் களிக்கவே.-அதுகண்டு அனைவரும்வியக்கத் துரியோதனன்களிக்க
அருச்சுனன்நாணுதல்.

கணைகள் – (கர்ணனுடைய) பாணங்கள், போய் – சென்று, இலக்கு
அடைந்த- (குறித்த) இலக்கில் தவறாதுபட்ட, உறுதி – திறத்தை கண்டு –
பார்த்து,- அன்று இருந்த ராசமண்டலம் – அப்பொழுது (அச்சபையில்) இருந்த
அரசர்களதுதிரள், கண்களித்து – கண்கள் களிப்பப்பெற்று, இணை இல் வீரன்
என்றது- (அவனை) ஒப்பற்றவீரனென்று கொண்டாடிற்று: (அதனால்), வரி கழல்
சுயோதனன் – கட்டிய வீரக்கழலையுடைய துரியோதனன், துணைவரோடு –
(தனது) தம்பிமார்களுடனே, களிக்க – களிப்படைய,- பிணையல் மாலை விசயன்
– பின்னல்மாலையைத் தரித்த அருச்சுனன், அண்ணல் பெற்றி பற்றி நாணினான்
– பெருமையிற்சிறந்தவனான அக்கர்ணனது திறமையைக்குறித்து
வெட்கமடைந்தான்; (எ-று.)

     “தம்மினுங், கற்றாரைநோக்கிக் கருத்தழிக கற்றவெல்லாம், எற்றேயிவர்க்கு
நாமென்று” என்றபடி, வில்திறத்தில் தேர்ந்த அருச்சுனன் தன்னினும் மேம்பட்ட
கர்ணனதுதிறத்தைக் கண்டு நாணங்கொண்டன னென்க. இலக்கு= லக்ஷ்யம்.
அண்ணல் – (தனது) தமையன் எனக்கொள்ளினுமாம்.

மருவ நின்று அருக்கன் மைந்தன், வானநாடன் மகனை, ‘நாம்
இருவரும் தனுக் கொள் போர் இயற்ற வம்மின்’ என்றலும்,
குருகுலம் தழைக்க வந்த குமரன், அன்பு கூரவே
உருகி, ‘நன்று!’ எனத் தழீஇ, உகந்து, உளம் தருக்கினான்.-கர்ணன் அருச்சுனனைத்தன்னோடு தொந்தயுத்தஞ்
செய்யஅழைத்தல்.

அருக்கன் மைந்தன் – சூரியபுத்திரனான கர்ணன், மருவநின்று –
சமீபமாக வந்துநின்று, வானநாடன் மகனை – தேவலோகத்துக்குத் தலைவனான
இந்திரனது குமாரனாகிய அருச்சுனனைநோக்கி, நாம் இருவர்உம் தனுகொள்
போர் இயற்ற வம்மின் என்றலும்- ‘நாம் இரண்டுபேரும் விற்போர்செய்யுமாறு
(நீர்) வருக’ என்று கூப்பிட்டவளவிலே,- குருகுலம் தழைக்க வந்த குமரன் –
குருவென்னும் அரசனது குலம் செழிக்கும்படி பிறந்த மகனான துரியோதனன்,
அன்பு கூர – அன்புமிக, உருகி – (அந்தக்கர்ணன் விஷயத்தில்)
மனவுருக்கங்கொண்டு, நன்று என – இதுநல்லதென்று (அவன்செயலைக்)
கொண்டாடி, தழீஇ – (அவனைத்) தழுவியணைத்து, உளம் உகந்து –
மனமகிழ்ந்து, தருக்கினான் – பெருமை பாராட்டினான்; (எ -று.)

     துரியோதனனை ‘குருகுலந்தழைக்கவந்த குமரன்’ என்றது,
நூற்றுவரெனத்தொகையால் மிக்கதனாலேயே யென்க.  

அனந்தரம், ‘பொரற்கு நீகொல் அந்தரம் எனக்கு?’ எனா,
தனஞ்சயன் செயிர்த்தல் கண்டு, தபனன் மைந்தன் மீளவும்,
‘முனைந்த போரின் முடி துணித்து, உன் முக சரோருகத்தினால்,
சினம் தணிந்து, அரங்க பூசை செய்வன்’ என்று சீறினான்.-அருச்சுனனுக்கும்கர்ணனுக்கும் நிகழும் வீரவார்த்தை.

அனந்தரம் – பின்பு, தனஞ்சயன் – அருச்சுனன்,
(கர்ணனைநோக்கி), ‘பொரற்கு – போர்செய்தற்கு, நீ கொல் எனக்கு அந்தரம் –
நீயாஎனக்கு எதிர்? ‘ எனா – என்றுசொல்லி, செயிர்த்தல் – கோபித்தலை, கண்டு
– பார்த்து,- தபனன் மைந்தன் – சூரியபுத்திரனான கர்ணன்,- மீளஉம் – பின்பும்,
‘முனைந்த போரில் – பகைத்துச் செய்யும் போரிலே, முடி துணித்து – (உன்)
தலையை வெட்டி, சினம் தணிந்து- (அதனால் எனது) கோபமாறி, உன் முக
சரோருகத்தினால் -உனது முகமாகிய தாமரைமலரைக்கொண்டு, அரங்கபூசை
செய்வன்- யுத்தரங்கத்துக்குப் பூசைசெய்வேன், ‘ என்று – என்று சொல்லி,
சீறினான் – மிகவுங் கோபித்தான்; (எ-று.)

     தருமபுத்திரன் இராசசூயயாகஞ் செய்யவேண்டியபொழுதில், அருச்சுனன்
வடக்கிற்சென்று பல அரசர்களைச் சயித்து அவர்கள் செல்வத்தைத்
திறைகொணர்தலால், அவனுக்குத் தநஞ்சய னென்று ஒருபெயர்; இனி,
இப்பெயர்க்கு – வெற்றியைச் செல்வமாகவுடையவனென்றும் ஒருபொருள்
கொள்ளலாம். ஸரஸ் + ருஹம்= ஸரோருஹம்; குளத்தில் முளைப்பது:
தாமரைக்குக் காரணவிடுகுறி

அதிருகின்ற எழிலிபோல் அருச்சுனன்தனைக் குறித்து
எதிருகின்ற வன்மை கண்டு, யாவரும் திகைக்கவே,
முதிருகின்ற மெய்யன் ஆகி முன் இருந்த கௌதமன்,
உதிருகின்ற அமுத விந்து ஒக்கும் என்ன, உரைசெய்வான்:-அதுகண்டு அனைவருந் திகைக்கக் கிருபன் நீதிகூறத்
தொடங்குதல்.

அதிருகின்ற எழிலி போல் – இடிமுழங்குகின்ற மேகம் போல,
அருச்சுனன்தனை குறித்து எதிருகின்ற – அருச்சுனனைக் குறித்து (க் கர்ணன்)
எதிர்த்து நிற்கிற, வின்மை – வில்வலிமையை, கண்டு – பார்த்து, யாவர்உம் –
எல்லோரும், திகைக்க – பிரமித்து நிற்க, – முதிருகின்ற மெய்யன் ஆகி முன்
இருந்த கௌதமன் – மூப்படைந்த உடம்பையுடையவனாய் (அச்சபையில்) முன்னே
வீற்றிருந்த கிருபாசாரியன், உதிருகின்ற அமுத விந்து ஒக்கும் என்ன உரைசெய்வான்
– சிந்துகிற அமிருதத்துளிகள்போலு மென்னும்படி சொல்பவனானான்; (எ-று.)-
அவற்றை. அடுத்த கவியிற் காண்க.

     இப்பொழுது கிருபன் பேசும் பேச்சு, துரியோதனன் முதலிய சில
தீயோர்க்கு வருத்தம் விளைப்பினும், நீதிமுறைமையுணர்ந்த நல்லோர்பலர்க்கும்
இன்பத்தை விளைத்தல்பற்றி, அச்சொற்களுக்கு அமிருதத்துளிஉவமை.
வன்மைகண்டு என்றும் பாடம்.   

சூதன் மைந்தன் வேலை ஏழும் சூழும் மேதினிக்கு எலாம்
நாதன் மைந்தனுடன் வெகுண்டு நவிலுதற்கு நண்ணுமோ?
ஏதம் உண்டு சால’ என்ன, ராசராசன் இகலி, அக்
கோதமன்தனக்கு உளம் கொதிக்குமாறு கூறுவான்:-கிருபன் நீதிகூறத் துரியோதனன் அதனை மறுக்கத் தொடங்குதல்.

சூதன் மைந்தன் – தேர்ப்பாகனது மகன், வேலை ஏழு சூழும்
மேதினிக்கு எலாம் நாதன் மைந்தனுடன் – ஏழுகடல்கள் சூழ்ந்த பூமி
முழுதுக்கும் அரசனது குமாரனோடு, வெகுண்டு நவிலுதற்கு நண்ணும் ஓ –
கோபித்து வீரவாதம் பேசுதற்குத் தகுமோ? [தகாது என்றபடி]; சால ஏதம் உண்டு
– (இங்ஙனம் பேசுதல்) மிகவுங்குற்றமுடைத்து, ‘என்ன – என்று (கிருபன்)
சொல்ல,- ராச ராசன் – அரசர்க்கரசனாகிய துரியோதனன், – இகலி – மாறுபட்டு,-
அ கோதமன் தனக்கு உளம் கொதிக்கும் ஆறு கூறுவான் –
அந்தக்கிருபாசாரியனுக்கு மனம் கொதிக்கும்படி (மறுமொழி) கூறுபவனானான்;
(எ-று.)- அவற்றை, அடுத்த இரண்டு கவிகளிற் காண்க.

     நவிலுதற்கு என்ற குகரவீற்று வினையெச்சம், தொழிற்பெயர்த்
தன்மைப்பட்டு ‘நண்ணும்’ என்ற முற்றுக்கு எழுவாயாய்நிற்கும். கோதமன் என்றது,
கௌதம னென்ற வடசொல்லின் விகாரம்.

கற்றவர்க்கும், நலம் நிறைந்த கன்னியர்க்கும், வண்மை கை
உற்றவர்க்கும், வீரர் என்று உயர்ந்தவர்க்கும், வாழ்வுடைக்
கொற்றவர்க்கும், உண்மையான கோது இல் ஞான சரிதராம்
நற்றவர்க்கும், ஒன்று சாதி; நன்மை தீமை இல்லையால்.-துரியோதனன் மறுமொழி: இன்னாரின்னார்க்குச்
சாதிபேதம்கருதத்தக்கதன் றென்றல்.

மூன்றுகவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) கற்றவர்க்குஉம் – படித்தவர்களுக்கும், நலன் நிறைந்த
கன்னியர்க்குஉம்- அழகுநிறைந்த கன்னிகைகளுக்கும், வண்மைகை உற்றவர்க்குஉம்
-ஈகைக்குணம் கைவந்தவர்களுக்கும், வீரர் என்று உயர்ந்தவர்க்குஉம் –
வீரர்களென்று சிறப்பாக மதிக்கப்பட்டவர்களுக்கும், வாழ்வு உடைகொற்றவர்க்கும்உம்
– செல்வவாழ்க்கையையுடைய அரசாட்சி பூண்டவர்களுக்கும், உண்மை ஆனகோது
இல் ஞானசரிதர் ஆம் நல் தவர்க்குஉம் – உண்மையானகுற்றமற்ற தத்துவ
ஞானத்தையும் (அதற்குஏற்ற) ஒழுக்கத்தையும் உடையவர்களாகிய நல்ல
தவஞ்செய்யும் முனிவர்களுக்கும், ஒன்று சாதி – சாதி ஒன்றே;  நன்மை தீமை
இல்லை – (அதில்) உயர்வு தாழ்வு என்னும் பகுப்பு இல்லை; (எ-று.)- ஆல் –
ஈற்றசை; தேற்றமுமாம்.

     எந்தச்சாதியிற்பிறந்திருப்பினும் கற்றவர் முதலியோர் மேன்மைபெறக்
கல்லாதவர் முதலியோர் கீழ்மையுறுவராதலால் இவர்கட்குச் சாதிவேற்றுமை
குறிக்கத்தக்க தன்றென்பது இதன் கருத்து.

‘அரி பிறந்தது, அன்று, தூணில்; அரனும் வேயில் ஆயினான்;
பரவை உண்ட முனியும், இப் பரத்துவாசன் மைந்தனும்,
ஒருவயின்கண், முன் பிறந்தது; ஒண் சரத்தின் அல்லவோ,
அரிய வென்றி முருகவேளும் அடிகளும் பிறந்ததே?‘-இதுவும் அது: பிறப்பினால் இழிவின்மைக்குச் சில உதாரணம்.

அன்று – முற்காலத்தில், அரி பிறந்தது – திருமால் அவதரித்தது,
தூணில் – தூணினிடத்தேயாம்; அரன்உம் – சிவபிரானும், வேயில் ஆயினான் –
மூங்கிலில் தோன்றினான்; பரவை உண்ட முனிஉம் – கடலைப்பருகிய
அகத்தியமகாமுனிவனும், இ பரத்துவாசன் மைந்தன்உம் – பரத்துவாசமுனிவனது
குமாரனான இந்தத்துரோணாசாரியனும், முன் பிறந்தது – முன்பு தோன்றினது,
ஒருவயின்கண் – (கும்பமாகிய) ஓரிடத்திலேயாம்; அரிய வென்றி முருகவேள்உம்
– (பிறரால்வெல்லுதற்கு)அரிய வெற்றியையுடைய முருகக்கடவுளும், அடிகள்உம்
– தேவரீரும், பிறந்தது – தோன்றினது, ஒள் சரத்தின் அல்லஓ – விளங்குகின்ற
நாணலிலே யன்றோ?

     மேன்மையுடைய திருமால் முதலியோர் பிறந்த இடங்காரணமாக
இழிக்கப்படாமை போலவே, இக்கர்ணனும் சாதிபற்றிஇழித்தற்கு உரியனல்ல
னென்க. திருமால் தூணில்தோன்றினது, நரசிங்காவதாரகாலத்தில்.

     சிவபிரான் மூங்கிலில் தோன்றிய கதை:- எல்லாம் அழியும்
பிரளயகாலத்தில் தமக்கும் அழிவுநேரிடுமென்று கவலையுற்று வேதங்கள் பலநாள்
சிவனைக்குறித்துத் தவம்புரிந்து அப்பிரானது தரிசனத்தைப்பெற்று ‘பிரளய
காலத்தில் நீ தாமிரசபையில் நின்று செய்யுந் திருநடனத்தை நாங்கள்
தரிசிக்கவேண்டும்; பிரளயத்திலும் அழிவில்லாத அத்தலத்தில் நாங்கள்
மூங்கிலாய் நின்று எப்போதும் நிழலைச் செய்ய, நீ எங்களிடம்
முத்தாய்த்தோன்றி எங்களுக்குப் பிள்ளையுமாகவேண்டும்’ என்று வரங்கேட்க,
சிவபிரான் அதற்கு இணங்கித் திருநெல்வேலியில் வேணுவனத்தில் மூங்கில்
முத்தாகி அம்மூங்கிலின்கீழ் எழுந்தருளியிருக்கின்றன னென்பதாம். இதனால்,
அத்தலத்துச் சிவபிரானுக்கு வேணுவன நாதனென்று திருநாமம்.

     ஏககாலத்தில் ஊர்வசியைக்கண்டு அவளிடங் காதல் கொண்ட மித்திரன்
வருணன் என்னுந் தேவர் இருவரது விருப்பத்தால் அருகிலிருந்ததொரு
குடத்தினின்று பிறந்தவர் அகஸ்தியரென அறிக. (அதனால், கும்பசம்பவர்,
கலசயோநி என்றபெயர்கள் அவர்க்கு வழங்கும்.) துரோணர்
துரோணகும்பத்திற்பிறந்து அது காரணமாகப் பெயர்பெற்றமை, கீழ்க்கூறப்பட்டது.
(கும்பசம்பவர், கலசயோநி என்று துரோணரை வழங்குதலும் உண்டு.) தேவர்கள்
வேண்டியபடி சூரபதுமன் முதலிய கொடிய அசுரர்களை அழித்தற்பொருட்டு ஒரு
குமாரனை யுண்டாக்கக்கருதிய சிவபிரானது திருமேனியினின்று வெளிப்பட்ட
திவ்வியதேஜசை அக்கினியும் வாயுவும் கங்கையிற் செலுத்த, அதனது ஒரு மடுவாய்
நாணற்காட்டை யடுத்துள்ள சரவணப்பொய்கையினின்று சுப்பிரமணியமூர்த்தி
தோன்றினனென வரலாறு அறிக. கிருபர் நாணற்கட்டையிற் பிறந்தமை,
முன்கூறப்பட்டது. நாணலிற் பிறந்ததனால், முருகனுக்கும் கிருபனுக்கும் ‘சரஜந்மா ‘
என்று பெயர். உயர்ந்தோரை ‘அடிகள்’ என்றல், மரபு.

     அகத்தியர் கடல் குடித்த கதை:- இந்திரன் முதலிய தேவர்கள் தம்
பகைவனாகிய விருத்திராசுரன் மற்றும்பல அசுரர்களுடனே கடலிற்புக்கு
ஒளித்துக்கொண்டபோது, அகத்தியமகாமுனிவனையடைந்து பிரார்த்திக்க, அவன்
அக்கடல்நீரைத் தனது ஒரு கையால் முற்றும் முகந்து பருகியருளி, உடனே
ஒளித்திருந்த அவ்வசுரனை இந்திரன் கொன்றபின், தேவர்கள்
வேண்டுகோளின்படி நீர்முழுவதையும் உமிழ்ந்தன னென்பதாம்.

என்று நல்ல உரை எடுத்து இயம்பி, ஏனை இழிவினோடு
ஒன்றி நின்ற ஆடகத்தை ஓட வைக்குமாறுபோல்,
அன்று சூதன் மதலைதன்னை அங்க ராசன் ஆக்கினான்,
மின் தயங்கு முடி கவித்து, வேந்து எலாம் வியக்கவேதுரியோதனன் கர்ணனை அங்கதேசத்துக்கு
அரசனாக்குதல்.

என்று நல்ல உரை எடுத்து இயம்பி – என்று இவ்வாறு நல்ல
வார்த்தைகளை எடுத்துச்சொல்லி,- (துரியோதனன்),- ஏனை இழிவினோடு ஒன்றி
நின்ற ஆடகத்தை ஓட வைக்கும் ஆறு போல் – மற்றையிழிந்தலோகம்
முதலியவற்றோடு கலந்து நின்ற பொன்னைப் புடமிட்டுச் சுத்தமாக்குந்
தன்மைபோல,- அன்று- அப்பொழுது, சூதன் மதலை தன்னை – தேர்ப்பாகன்
மகனான கர்ணனை,- வேந்து எலாம் வியக்க- அரசர்களெல்லாருங்
கொண்டாடும்படி, மின் தயங்குமுடி கவித்து – ஒளிவிளங்குகின்ற கிரீடத்தைச்
சூட்டி, அங்கராசன் – அங்கதேசாபதியாக, ஆக்கினான்-; (எ-று.)

      ‘அருச்சுனன் அரசனுடனேயே போர்செய்தற்கு உரியா னென்று
கருதுகின்றதனால், அதன்பொருட்டு, கர்ணனை இக்கணத்திலேயே
அரசனாக்குகிறேன்’ என்று சொல்லித் துரியோதனன், மாசுநீங்கித் தூயதாய்
ஒளிமிகும்படி பொன்னைப்புடமிடுதல்போல, தேர்ப்பாகன் மகனான கர்ணனை
அவ்விழிவு தீர்ந்து பெருமையுறுமாறு முடிசூட்டினன். நல்லவுரை – கர்ணனுக்கும்
தனக்கும் அனுகூலமான நீதிவார்த்தை. சிவபிரானால் எரிக்கப்பட்ட மன்மதனது
அங்கம் விழுந்த இடம், அங்கதேசமாயிற்று. இழிவு ஆகுபெயர்.

தான் இருந்த அரிமுகம் செய் தாள் சுமந்த தவிசின்மேல்,
ஊன் இருந்த படையினானை உடன் இருத்தி, வண்டு சூழ்
தேன் இருந்த மாலை வாகு சிகரம்மீது, தெண் திரைக்
கான் இருந்த மண்டலம், கருத்தினால், இருத்தினான்.-துரியோதனன் கர்ணனுக்கு அர்த்தாசனங்
கொடுத்தல்.

(இ-ள்.)(துரியோதனன்),- தான் இருந்த – தான் வீற்றிருந்த, அரிமுகம் செய்
தாள் சுமந்த தவிசின்மேல் – சிங்கத்தின் வடிவந் தோன்றச் சித்திரித்துச்
செய்யப்பட்ட கால்கள் சுமந்த பீடத்தின் மேல்[சிங்காதனத்தின்மீது], ஊன்
இருந்த படையினானை – (பகைவரது) தசைதோய்தற்குஉரிய (வேல் முதலிய)
ஆயுதங்களையுடைய கர்ணனை, உடன் இருத்தி – தன்னுடன் ஒருங்கு
வீற்றிருக்க வைத்து, – வண்டு சூழ் தேன் இருந்த மாலை வாகு சிகரம்மீது –
வண்டுகள் சூழுந் தேன்பொருந்திய மாலையை யணிந்த (அவனுடைய)
தோள்களாகிய மலையின்மேல், தெள் திரை கான் இருந்த மண்டலம் –
தெளிவான அலைகளின் தொகுதியையுடைய கடலின் நடுவிலேயுள்ளதான
பூமியின் பாரத்தை, கருத்தினால் – (தன்) மனக்கருத்தோடு இருத்தினான்-;
(எ -று.)

     தன் ஆசனத்தில் அர்த்தாசனமளித்து அதில் தன்னுடன் இருத்துதல்,
அரசர்செய்யும் ஒருபெருமரியாதை, தோள்வலிமையால் பெரிய இராச்சியத்தை
அரசாள வைத்தன னென்பது, பின்னிரண்டடியின் கருத்து. துரியோதனன்
கர்ணனுதவியைக்கொண்டு பின்பு பாண்டவரைவென்று
தனியரசாட்சிசெய்யலாமெனக் கருதினனென்பது விளங்க ‘கருத்தினா
லிருத்தினான்’ என்றார். இனி, இச்செய்யுளுக்கு – (துரியோதனன்) தானிருந்த
தவிசில் கர்ணனை உடன் இருத்திக் கௌரவித்து (அதனாற்) கடல்சூழ்ந்த
நிலவுலகத்து அரசாட்சிமுழுவதையும் தன்தோளில் இருப்பதாகக் கருதினான்
என்று பதவுரைகூறினும் அமையும். பாஹு சிகரம் – வடமொழித்தொடர்.
‘தெண்டிரைக்கான் ‘- அன்மொழித்தொகையாய், கடலைக்குறித்தது.

தவனன் மைந்தனும் சுயோதனனும் இசைந்து, தனதனும்
சிவனும் என்ன நண்பு கொண்டு, திறலுடன் சிறந்துளார்;
பவனன், உம்பர் நாயகன், பயந்த வீரர் அஞ்சவே,
‘அவனி எங்கும் நமது’ எனக் கொள் பெருமிதத்தர் ஆயினார்.-கர்ணனும் துரியோதனனுங் கூடிச் செருக்குறுதல்.

தவனன் மைந்தன்உம் – சூரியன்மகனான கர்ணனும்,
சுயோதனன்உம் – துரியோதனனும்,- இசைந்து – கலந்து, தனதன் உம் சிவன்உம்
என்ன நண்புகொண்டு – குபேரனும் சிவபிரானும் போலச் சினேகங்கொண்டு,  –
திறலுடன் சிறந்துளார் – வலிமையிற் சிறந்தவர்களாய்,- பவனன் உம்பர்நாயகன்
பயந்த வீரர் அஞ்ச – வாயுவும் தேவேந்திரனும் பெற்ற வீரர்களாகிய வீமசேனனும்
அருச்சுனனும் அஞ்ச, அவனி எங்குஉம் நமது என கொள் பெருமிதத்தர் ஆயினார்
– பூமிமுழுவதும் இனி நம்முடையதேயென்று எண்ணிய செருக்கை
யுடையவராயினார்கள்; (எ-று.)

     குபேரன் முன்னொருகாலத்தில் கைலாசகிரியின் ஒருசாரலிலிருந்து
பெருந்தவஞ்செய்து சிவதரிசனம்பெற்று அப்பிரானருளால் அவனுக்கு
நண்பனாயினன். கொடையாளியாகுங்கர்ணனுக்கு – தனதனாகியகுபேரனும்,
கர்ணனுக்கு அரசு அளித்த ராசராசனான துரியோதனனுக்கு – குபேரனுக்கு
வரமளித்த தலைவனான சிவபிரானும் உவமை. முறைநிரனிறைப்பொருள்கோள்.

ஆன காலை, ‘எண்ணுகின்ற ஆயுதங்கள் யாவையும்,
யானை, வாசி, இரதம், ஆன யானம் உள்ள யாவையும்,
சேனையோடு தெவ்வரைச் செகுக்க வல்ல வீரமும்,
மான வீரர் வல்லர்’ என்று, மறைவலாளன் மகிழ்வுறா,-கௌரவ பாண்டவர்களது திறங்கண்டு துரோணன்
மகிழ்தல்.

இதுவும், மூன்று கவியும் – குளகம்.

     (இ-ள்.) ஆனகாலை – (இவையெல்லாம்)நிகழ்ந்த அப்பொழுது,-
மறைவலாளன் – வேதம்வல்லவனான துரோணாசாரியன்,- எண்ணுகின்ற
ஆயுதங்கள் யாவைஉம் – எண்ணப்படுகிற படைக்கலங்களெல்லாவற்றிலும்,
யானை வாசி இரதம் ஆன யானம் உள்ள யாவைஉம் – யானை குதிரை தேர்
ஆகிய வாகனங்களாயுள்ளவை எல்லாவற்றிலும், சேனையோடு தெவ்வரை
செகுக்கவல்ல வீரம் உம் – சேனையுடனே பகைவர்களை யழிக்கவல்ல
வீரத்திலும், மானம் வீரர் – மானத்தையுடைய இந்தவீரர்கள், வல்லவர் –
தேர்ந்தவர், என்று-, மகிழ்வு உறா- மகிழ்ச்சியடைந்து,- (எ-று)- ‘இயம்ப’ (75) என்ற
எச்சத்தைக் கொள்ளும்.

     ஆயுதங்கள்என்றது – அவற்றை உபயோகித்தலையும், யான மென்றது –
அவற்றைச் செலுத்துதலையுங்குறிக்கும்: இலக்கணை.

வம்மின், ஆதி குருகுலம் தழைக்க வந்த மைந்தர்காள்!
தம்மின் நாளையே, எமக்கு அளிக்க நின்ற தக்கிணை;
எம் இனான் ஒருத்தன், வேறு, யாகசேனன் என்று உளான்;
நும்மின் நாடி, அவனை இம்பர் நோதல் செய்து, கொணர்மினே.’-துரோணன் அவர்களிடம் தனக்குஉரிய குருதட்சிணை
இன்னதெனல்.

ஆதி குருகுலம் தழைக்கவந்த மைந்தர்காள்- முதன்மை பெற்ற
குருகுலம் செழிப்படையும்படி வந்துதோன்றிய குமாரர்களே!-வம்மின் –
வாருங்கள்: எமக்கு அளிக்க நின்ற தக்கிணை – எமக்கு (நீங்கள்)
கொடுக்கும்படியுள்ள குருதட்சிணையை, நாளைஏ தம்மின்- நாளைக்கே
தாருங்கள்: (அத்தக்கிணை), வேறு- வேறு வகைத்து; (அது என்னவெனின்),-
யாகசேனன் என்று எம் இனான் ஒருத்தன் உளான் – யாகசேனனென்று
எம்பகைவனொருவன் இருக்கிறான்; அவனை-, நும்மில் நாடி – உங்களுள்
(யாவரேனும்) சென்று, நோதல் செய்து – (கொல்லாமல்) வருத்தி [போரில்
உயிருடனே தேரோடு பிணித்து], இம்பர் கொணர்மின் – இவ்விடத்திற்குக்
கொண்டுவாருங்கள்: (இவ்வளவே); (எ -று.)- ‘என்றுஇயம்ப’ என அடுத்த
கவியோடு தொடரும்.

     தக்கிணை=தக்ஷிணா: வடசொல். இனான் = இன்னான்:
இனியவனல்லாதவனென்று பொருள். நாளையே என்றது, விரைவு குறித்தற்கு.

என்று தம் சிலைப் புரோகிதன் கனன்று இயம்பவே,
அன்று அவன் பதம் பணிந்து, அளித்த சொல் தலைக்கொளா,
வென்றி நீடு படைகளோடும், விரவும் அங்கம் நாலொடும்,
சென்று, தங்கள் நாடு அகன்று, தெவ்வு நாடு குறுகினார்.-அதனைமுடித்தற்கு அக்குமாரர்கள் பாஞ்சாலநாடு
செல்லுதல்.

என்று-, தம் சிலை புரோகிதன் – தங்கள் வில்லாசிரியனாகிய
துரோணன், கனன்று இயம்ப – (யாகசேனன்மீது) கோபங்கொண்டு சொல்ல,-
(அக்குருகுல குமாரரனைவரும்), அன்று- அப்பொழுது, அவன் பதம் பணிந்து –
அத்துரோணனது பாதங்களை வணங்கி [விடைபெற்று], அளித்த சொல் தலைக்
கொளா – (அவன்) கட்டளையிட்டருளிய வார்த்தையைத் தலைமேற்கொண்டு
[மிகவும் நன்குமதித்து], வென்றி நீடு படைகளோடுஉம் – வெற்றி மிக்க
ஆயுதங்களோடும், விரவும் அங்கம் நாலொடுஉம் – பொருந்திய சதுரங்க
சேனையோடும், சென்று – புறப்பட்டு, தங்கள் நாடு அகன்று –
தங்களுடையகுருநாட்டை நீங்கி, தெவ்வு நாடு குறுகினார் – (தமது
குருவுக்குப்பகைவனாதலால் தமக்கும்) பகைவனான யாகசேனனது
பாஞ்சாலதேசத்தைச்சமீபித்தார்கள்; (எ-று.)- அங்கம் நால் – யானை தேர்
குதிரை காலாள். தங்கள்நாடு – குருநாடு. ‘தெவ்வனாடு’ என்றும் பாடம்

ஆளி மொய்ம்பர் அம் முனைக்கண் ஆன போது, அனீகினித்
தூளி கண் புதைத்த, சென்று; செவி புதைத்த, துவனி போய்;
ஒளி கொண்ட செம் பொன் வெற்பின் உடல் புதைத்த எழிலிபோல்,
வாளி கொண்ட விருதர், மா மதில் புறம் புதைக்கவே.-அக்குமாரர்கள் பாஞ்சாலனரண்மனையை முற்றுகை செய்தல்.

இதுவும், அடுத்த கவியும் – குளகம்.

     (இ-ள்.) ஆளி மொய்ம்பர் – சிங்கம்போலும் வலிமையுடையவர்களாகிய
அக்குமாரர்கள், அ முனைக்கண் ஆன போது – போர்செய்தற்குரிய
அவ்விடத்திலே சென்று சேர்ந்தபொழுது,- அனீகினி தூளி – (அவர்களுடைய)
சேனையால் மேலெழுப்பப்பட்ட (பூமியின்) துகள், சென்று – முன்சென்று  கண்
புதைத்த – (யாகசேனனது) கண்களை மறைத்தன: துவனி – (சேனையின்)
போராரவாரங்கள், போய் – முன்சென்று, செவி புதைத்த – (அவனது) காதுகளை
அடைத்தன; (பின்பு), செம் பொன் வெற்பின் உடல் புதைத்த – சிவந்த
பொன்மயமான மேருமலையின் வடிவை மூடிய, ஓளிகொண்ட எழிலி போல் –
வரிசைப்பட்ட மேகங்கள் போல, வாளிகொண்ட விருதர் – அம்பு
கைக்கொண்ட (அக்குருசேனை) வீரர்கள், மா மதில் புறம் புதைக்க – (அவ்
யாகசேன நகரத்தின்) பெரியமதிலில் வெளியிடத்தை நெருங்கிச் சூழ்ந்திட,- (எ-
று.)- “வளைத்த” என வருங்கவியோடு தொடரும்.

     இவர்கள் செல்லுமுன்னே இவர்கள் சம்பந்தமான தூளியும் தொனியும்
சென்று அவனுக்கு இடர்விளைத்தன எனச் சமத்காரந் தோன்றக் கூறினார். ஓளி
– ஒழுங்கு; இனி, நீட்டல் விகாரமாக, ஒளியெனினுமாம்.

வளைத்த சேனை, யானை, வாசி, வாயில் நின்று குமுறவே,
உளைத்து எழுந்து முழையை விட்டு உடன்ற சிங்க ஏறுபோல்,
திளைத்த தன் பதாதியோடு மோக யாகசேனனும்,
இளைத்த நெஞ்சன் அன்றி, நீடு புரிசை வாயில் எய்தினான்அதனையுணர்ந்து யாகசேனன் போருக்கு வருதல்.

வளைத்த – (இங்ஙனம் மதிற்புறத்து) முற்றுகைசெய்த, சேனை –
குருசேனையிலுள்ள, யானை வாசி – யானைகளும் குதிரைகளும், வாயில் நின்று
– (யாகசேனநகரத்து) வெளிவாயிலில்நின்று, குமுற – ஆரவாரஞ்செய்ய,-
உளைத்து – கர்ச்சித்துக்கொண்டு, முழையை விட்டு எழுந்து உடன்ற – (தான்
இருக்கிற) மலைக்குகையை விட்டுப் புறப்பட்டுக் கோபித்துவருகிற, சிங்கம்
ஏறுபோல் – ஆண்சிங்கம் போல, மோக யாகசேனன்உம் – மிக்க
ஆசையையுடைய துருபதராசனும், இளைத்த நெஞ்சன் அன்றி – சோர்வடைந்த
மனத்தை யுடையவ னாகாமல், திளைத்த தன்பதாதியோடு – நெருங்கிய தனது
சேனையோடு, நீடு புரிசை வாயில் எய்தினான் – உயர்ந்த மதில்வாயிலை
அடைந்தான்; (எ-று.)

     பதாதி – காலாட்படை; இங்கே, சேனையென்றமாத்திரமாய் நின்றது.
கொடுப்பதாகச்சொன்ன அர்த்தராச்சியத்தைக்கெடாமல் அதில் ஆசை
கொண்டதனால், ‘மோகயாகசேனன்’ என்றார்.

சோமகர்க்கும், முடுகு சேனை சூழ வந்த குருகுலக்
கோமகர்க்கும், வெஞ் சமர் விளைந்தது, ஆண்மை கூரவே;
பூமகற்கும் மிக்க மா முனிக்கு வாய்மை பொய்த்த அம்
மா மகற்கும், விசயனுக்கும், மன்னு போர் வயங்கவே,-சோமகரோடு கௌரவர்க்கும், யாகசேனனோடு
அருச்சுனனுக்கும் போர் நிகழ்தல்.

இதுவும் அடுத்த கவியும் – குளகம்.

     (இ-ள்.) சோமகர்க்குஉம் – சோமககுலத்து அரசர்களுக்கும், முடுகுசேனை
சூழவந்த குருகுலம் கோ மகர்க்குஉம் – விரைந்து நெருங்கிய சேனைகள் சூழ
வந்த குருகுலவரசகுமாரர்களுக்கும், ஆண்மை கூர – வலிமைமிக, வெம் சமர்
விளைந்தது – கொடிய போர் உண்டாயிற்று; பூமகற்குஉம் மிக்க மாமுனிக்கு –
பிரமதேவனினும்  மேம்பட்ட பெருமையையுடைய துரோணாசாரியனுக்கு,
வாய்மை பொய்த்த – சொன்ன வாக்குத் தவறின, அ மா மகற்குஉம் – அந்தச்
செல்வ மகனான யாகசேனனுக்கும், விசயனுக்குஉம் – அருச்சுனனுக்கும், மன்னு
போர் வயங்க – பெரும்போர் மிக,- (எ-று.)- ‘குமரர் நகரி நோக்கினார் ‘ என
வருங்கவியோடு முடியும்.

     பாஞ்சாலராசர்கள், சோமகனென்னும் அரசனது குலத்தவராதலால்,
சோமகரெனப்பட்டனர்; சோமகன் – துருபதனது பாட்டான்

தூறு கொண்டு கணை பொழிந்து சோமகேசர் பொருதலால்,
நூறு கொண்ட குமரர் தங்கள் நகரி மீள நோக்கினார்;
மாறு கொண்டு விசயன் வீசு வண்ண வாளி வலையினால்,
வீறு கொண்டு எதிர்ந்த மன் விலங்கர் ஈடுபட்டதே.-துரியோதனாதியர் பின்னிட அருச்சுனன்துருபதனை
அகப்படுத்தல்.

சோமக ஈசர் – சோமக குலத் தலைவர்கள், தூறு கொண்டு –
கூட்டமாகத் திரண்டு, கணை பொழிந்து – அம்புமழையைச் சொரிந்து,
பொருதலால் – போர்செய்ததனால்,- நூறு கொண்ட குமரர் – நூறு என்னும்
எண்ணைக் கொண்ட குருகுல குமாரர்களான துரியோதனாதியர், தங்கள் நகரி
மீள நோக்கினார் – (தோற்று முதுகுகொடுத்துத்) தங்கள் நகரத்துக்குத் திரும்பிப்
போனார்கள்; மாறு கொண்டு விசயன் வீசு – பகைமைகொண்டு அருச்சுனன்
வீசிய, வண்ணம்வாளி வலையினால் – மேன்மைபெற்ற அம்புகளாகிய
வலையினால், வீறுகொண்டு எதிர்ந்த மன் விலங்கர் – மிக்கபெருமிதங்கொண்டு
வந்து எதிர்த்த யாகசேனராசனாகிய  சிங்கம், ஈடுபட்டது –
அகப்பட்டுக்கொண்டது; (எ-று.)

     எண்ணில் மிக்கிருப்பினும் ஆற்றலில் மிக்கிலர் என்ற இகழ்ச்சி விளங்க,
‘நூறுகொண்டகுமரர் தங்கள்நகரி மீள நோக்கினார்’ என்றார். ஈடுபட்டது
என்பதற்கு – வலியழிந்தது என்ற பொருளும் உண்டு. வாளிவலையினால்
மன்விலங்கர் ஈடுபட்டது – உருவகவணி. விலங்கு – விலங்கர் என,
மென்றொடர்க் குற்றியலுகரத்துக்கு ‘அர்’ வந்தது.  

தகப் படும் சராசனத் தனஞ்சயன் கை வாள் வெரீஇ,
அகப்படும் தராதிபன்தன் அற்ற வில்லின் நாணினால்,
மிகப் படும் தடங் கொள் தேர்மிசைப் பிணித்து, விசையுடன்,
நகப்படும் செயற்கை செய்து, குருவின் முன்னர் நணுகினான்அருச்சுனன் யாகசேனனைக் கட்டிக் குருவின்முன் கொணர்தல்.

தக படும் சராசனம் – தகுதியாகப் பொருந்திய
[பெருமைபொருந்திய] வில்லையுடைய, தனஞ்சயன் – அருச்சுனன்,- கை வாள்
வெரீஇ – (தனது) கையிற்கொண்ட படைக்கு அஞ்சி, அகப்படும் –
அகப்பட்டுக்கொண்ட, தரா அதிபன் தன் – யாகசேனராசனது, அற்ற வில்லின்
நாணினால் – (தனது அம்புகளால்) துணிபட்ட வில்லின் நாணியைக் கொண்டே,
மிக படும் தட கொள் தேர்மிசை பிணித்து – மிகுதியாகப்பொருந்திய
பெருமையைக் கொண்ட(தனது) தேரிலே கட்டி, நகப்படும் செயற்கை செய்து-
(பலராலும் அவமதித்துச்) சிரிக்கப்படுஞ் செய்கையைச் செய்து, விசையுடன் –
வேகத்தோடு, குருவின் முன்னர் நணுகினான் – துரோணன் முன்னிலையில்
வந்தான்; (எ -று.)

     அவன்கையில்நாணைக்கொண்டே அவனைக் கட்டின னென, அருச்சுனனது
திறத்தை எடுத்துக் கூறினார். வாள் – இங்கு ஆயுதமென்றபொருளது.
இனி, ‘தராதிபன்றனைத் தன்வில்லினாணினால்’ என்றும் பாடமுண்டு

முறுவல் கொண்டு, கண்ட சாப முனியும், ‘நாண, எம்மை, நீ
உறுவது ஒன்றும் உணர்கலாது, உரைத்த புன் சொல் அறிதியே?
மறு இல் அந்தணாளன் யானும்; மன்னன் நீயும்; வாசவன்
சிறுவன் வென்று உனைப் பிணித்த சிறுமை என்ன பெருமையோ?துரோணன் யாகசேனனைப் பரிகசித்தல்.   

இரண்டுகவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) கண்ட சாபம் முனிஉம் – (அருச்சுனன் துருபதனைக்
கட்டிக்கொணர்ந்ததைக்) கண்ட வில்லாசிரியனான துரோணாசாரியனும், முறுவல்
கொண்டு – இகழ்ச்சிச்சிரிப்புக் கொண்டு, (அவனை நோக்கி), ‘நீ-, உறுவது
ஒன்றுஉம் உணர்கலாது – பின்புநேரும் பயனைச் சிறிதும் அறியாமல், நாண
எம்மை உரைத்த – வெட்கப்படும்படி எம்மை அவமதித்துப்பேசிய, புல் சொல் –
இழிமொழியை, அறிதிஏ – அறிவாயன்றோ? யான்உம் மறு இல் அந்தணாளன்-
நானும் குற்றமற்ற பிராமணன்: நீ உம் மன்னன் – நீயும் க்ஷத்திரியன்: வாசவன்
சிறுவன் வென்று உனை பிணித்த சிறுமை – இந்திரனது மகன்[அருச்சுனன்]
உன்னைச் சயித்துக் கட்டினஎளிமை, என்ன பெருமைஓ- (உனக்கு)
என்னபெருமையோ! (எ-று.)- ‘முறுவல் கொண்டு’ என்றது, அடுத்த கவியில் வரும்
‘என்ன உயிரும் வாழ்வும் உதவினான்’ என்பதைக் கொண்டு முடியும்.

      ‘மறுவிலந்தணாளன் யானும் மன்னன்நீயும்’ என்றது – க்ஷத்திரியனென்று
பெருமைபாராட்டிய உன்னை அந்தணனென்று உன்னால் இகழப்பட்ட யான்
மாணாக்கனைக்கொண்டு வென்று கவர்ந்து சபதத்தை நிறைவேற்றிக்
குறைவற்றவனான திறத்தைப் பார் என்று அவன்மனத்தில் உறைக்க ஏசியவாறாம்.
தனக்கு அடைமொழி கொடுத்துக்கூறி, அவனுக்கு ‘மன்னன் நீயும்’ என்று
வாளாகூறினதில், நீ சொன்ன வாய்மைதவறி இங்ஙனந் தோல்வியுமுற்று
க்ஷத்திரியாதமனாயினை யென்ற இகழ்ச்சிதோன்றும்

‘அன்று எனக்கு நீ இசைந்த அவனி பாதி அமையும்; மற்று
இன்று, உனக்கு நின்ற பாதி யான் வரைந்து தருகுவன்;
குன்று எனக் குவிந்து இலங்கு கொற்ற வாகு வீரனே!
உன்தனக்கு வேண்டும்’ என்ன, உயிரும் வாழ்வும் உதவினான்.-துரோணன் துருபதனுக்கு உயிர்வாழ்க்கையோடு
பாதியரசும்அளித்தல்.

குன்று என குவிந்து இலங்கு – மலைபோலந் திரண்டு விளங்குகிற,
கொற்றம் வாகு – வெற்றிபொருந்திய தோள்களையுடைய, வீரனே-! நீ அன்று
எனக்கு இசைந்த – நீ முன்பு எனக்குத் தருவதாக உடன்பட்ட, அவனி பாதி –
பாதியிராச்சியம், அமையும்- (எனக்குப்) போதும்: மற்று நின்ற பாதி –
(எஞ்சிநின்ற) மற்றொரு பாதி யிராச்சியத்தை, இன்று-, உனக்கு-, யான்-, வரைந்து
தருகுவன் – பங்கிட்டுக் கொடுப்பேன்; (அன்றியும்), உயிர் உம் வாழ்வுஉம்
உன்தனக்கு வேண்டும் – உன் உயிரும் வாழ்க்கையும் உனக்கு
இருக்கவேண்டும்,’ என்ன – என்றுசொல்லி, உதவினான் – (அம்மூன்றையும்
துரோணன் அவனுக்குக்) கொடுத்தான்;

     இப்பொழுது என் மாணாக்கனைக்கொண்டு வென்றதனால், உன்
இராச்சியமுழுவதும் எனக்கு உரியதே யாய்விடினும்,” சொன்ன வாய்மை நீயே
சோர்ந்தா யானோ சோரேன்”, “புகன்றபடி நீ யாளும் புவியும் பாதி கொள்வேன்”
என்று நான் சபதங் கூறியதனால், அந்த வாக்குத்தவறாமல் ஒருபாதியையே
கொண்டு மற்றப்பாதியை உனக்கே பிரித்துக் கொடுத்திடுவேன் என்பது,
முன்இரண்டடியின் கருத்து. பாஞ்சாலதேசத்தில் கங்காநதியின்
தெற்கிலுள்ளபகுதியைத் துருபதனுக்குக்கொடுத்து வடக்கிலுள்ள பகுதியைத்
துரோணன் தனக்கு உரியதாகக் கொண்டனனென முதனூலால் அறிக. அன்று –
அங்கிவேசமுனிவனிடத்துக் கல்வி கற்றகாலத்து. ‘கொற்ற வாகுவீரனே ‘- இகழ்ச்சி.
வாகு வீரவேகு எனவும் பாடம்

புயங்கம் பருகி உமிழ் மதியம் போல்வான், மீண்டு, பூசுரன்தன்
வயங்கும் சுருதி வாய்மையினால் மன்னும் குருக்கள் பதி நீங்கி,
தயங்கும் சிலைக் கை வாள் விசயன் சயமும், பிறர் முன் தான்
அகப்பட்டு
உயங்கும் செயலும், நினைந்து நினைந்து, உள்ளம் சுடப் போய்
ஊர் சேர்ந்தான்.–யாகசேனன் விடுபட்டு அவமானத்தோடு ஊர்சேர்தல்.

புயங்கம்- (இராகு கேது வென்னும்) பாம்பினால், பருகி- விழுங்கி,
உமிழ் -(உடனே மீண்டும்), வெளியுமிழப்பட்ட, மதியம் – சந்திரனை, போல்வான்
– ஒப்பவனாய், (யாகசேனன்),- பூசுரன் தன் – துரோணாசாரியனது, வயங்கும்
சுருதி வாய்மையினால் – விளங்குகிற வேதம்போன்ற தவறாத வாய்மொழியினால்,
மன்னும் குருக்கள் பதி நீங்கி – நிலைபெற்ற குருகுலத்தாரது
நகரத்தை[அஸ்தினாபுரியை] விட்டு நீங்கி,- தயங்கும் சிலை கை வாள் விசயன்
சயம்உம் – விளங்குகின்ற வில்லையேந்திய கையையும் ஒளியையுமுடைய
அருச்சுனனது வெற்றியையும், பிறர் முன் தான் அகப்பட்டு உயங்கும் செயல்உம்
– பிறர் முன்னியிலையே தான் (அவனிடத்து) அகப்பட்டுக்கொண்டு வருந்திய
செய்கையையும், நினைந்து நினைந்து – நினைத்து நினைத்துக் கொண்டே,
உள்ளம் சுட – (அந்நினைவு) தன் மனத்தைத் தபிக்க, மீண்டுபோய் ஊர்
சேர்ந்தான்-;(எ-று.)

     அருச்சுனனாற்கட்டுண்டு பின்பு அதுநீங்கியமைபற்றி, புயங்கம் பருகி
உமிழ்மதி, யாகசேனனுக்கு உவமையாயிற்று. பருகி – இங்கே ‘உண்டு ‘ என்ற
பொருளது. வில்லைக்கொண்டுவென்று வாளைக்கொண்டு அச்சுறுத்திக்
கைப்பற்றியமைபற்றி, ‘தயங்குஞ் சிலைக் கை வாள் விசயன் சயம் ‘ என்ற
தென்பாருமுளர்.

     இதுமுதற்பன்னிரண்டுகவிகள் – பெரும்பாலும் மூன்று ஆறாஞ்சீர்கள்
காய்ச்சீர்களும், மற்றையவை மாச்சீர்களுமாகிய அறுசீராசிரியவிருத்தங்கள்.

மறுகில் பணிலம் தவழ் பழன வள நாடு உடையான், எதிர் வணங்கி,
முறுகிப் புரி வெங் கலைக்கோட்டுமுனியே போலும் முனிவரரை,
தறுகண் குருவின் தலை துணிக்கத் தக ஓர் மகவும்,
தனஞ்சயன் தோள்
உறுகைக்கு ஒரு பூங் கன்னியையும், பெறுவான் வேண்டி
உற்று இரந்தான்.-துரோணனைக்கொல்ல ஒருமகனையும், அருச்சுனனை
மணக்கஒருமகளையும் துருபதன் வேண்டுதல்

மறுகில் – வீதிகளிலே, பணிலம் தவழ் – சங்குகள் தவழும்படியான,
பழனம் வளம் – கழனிகளின் நீர்வளத்தையுடைய, நாடு – பாஞ்சாலதேசத்தை,
உடையான் – உடையவனான யாகசேனன்,- தறுகண் குருவின் தலைதுணிக்க தக
– வன்கண்மையையுடைய துரோணாசாரியனது தலையை வெட்டுதற்குத்
தகுதியாக, ஓர்மகஉம் – ஓர் ஆண்பிள்ளையையும், தனஞ்சயன்தோள் உறுகைக்கு
(தக)- அருச்சுனன் தோள்களை அணைதற்குத் தகுதியாக, ஒரு பூ கன்னியைஉம்
– அழகிய ஒரு பெண்ணையும், பெறுவான் – பெற, வேண்டி – விரும்பி,- முறுகு
புரி வெம் கலைக்கோட்டு முனிஏ போலும் முனிவரரை- மிகவும் முறுக்குள்ள
அழகிய கலைமானினது கொம்பு போன்ற ஒரு கொம்பைத் தலையிலுடைய
ரிசியசிருங்கமுனிவனையே யொத்த சிறந்தமுனிவர்களை, உற்று – நாடியடைந்து,
எதிர்வணங்கி- (அவர்களை) எதிரிலே நமஸ்கரித்து, இரந்தான் – பிரார்த்தித்தான்;

     தனது முகத்தின்மேலே மான்கொம்பு போன்ற கொம்பொன்றையுடைய
ஒருமுனிவர்க்கு, அக்காரணத்தால், வடமொழியில் ரிச்யச்ருங்கரென்றும், தமிழிற்
கலைக்கோட்டுமுனி யென்றும்பெயர்; அவர் – காசியபமுனிவனது குமாரர்களுள்
ஒருவராகிய விபாண்டகரென்பவரது குமாரர்; கல்விகேள்விகளிலும்
தவவொழுக்கத்திலும் வைராக்கியத்திலும் மிகச்சிறந்தவர்: கோசலதேசத்தில்
அயோத்தியாநகரத்தில் அறுபதினாயிரம் வருஷம் அரசாண்ட தசரதசக்கரவர்த்தி
புத்திரபாக்கியமின்றி வருந்தியபொழுது, தனது குலகுருவாகிய வசிஷ்டர்
சொன்னபடி அக்கலைக்கேட்டு முனிவரைக் கொண்டு அசுவமேதயாகம்
புத்திரகாமயாகமுஞ் செய்விக்க, அம்முனிவரருளால் சக்கரவத்திக்கு இராமபிரான்
முதலிய சிறந்த குமாரர் நால்வர்தோன்றின ரென்ற வரலாறு, இராமாயணத்திற்
பிரசித்தம். அம்முனிவர்போலவே உயர்ந்த மக்களை யாக மூலமாக
உண்டாக்கவல்ல மகாமுனிவர்களைநாடி வேண்டின னென்பார்,
‘கலைக்கோட்டுமுனியேபோலுமுனிவரரை யுற்றிரந்தான்’ என்றார்; அம்முனிவர்கள்
பெயர், அடுத்த கவியில் விளங்கும். ‘மறுகிற் பனிநித்திலந்தவழும் வளநாடு’ என்றும்
பாடம். 

ஆறுமுகனைப் பயந்த நதி அலையால் குளிர்வது ஒரு கானில்,
ஈறு இல் தவத்தோர் உபயாசன், யாசன், எனும் பேர் இருவோரும்,
கூறும் முறையில் சடங்கு இயற்றி, கோவின் வழக்கப் பெரு வேள்வி,
நூறுமகத்தோன் நிகர் அரசை நோன்மைக்கு இசைய, புரிவித்தார்.-உபயாசனும் யாசனும் துருபதனுக்காக வேள்விசெய்தல்.

ஆறுமுகனை பயந்த நதி – ஆறுமுகங்களையுடைய சுப்பிரமணிய
மூர்த்தியைப் பெற்ற கங்காநதியினது, அலையால் – அலைகளினால், குளிர்வது –
குளிர்ச்சிபெறுவதான, ஒருகானில் – ஒரு காட்டில், ஈறுஇல் தவத்தோர் –
எல்லையில்லாத தவத்தைச் செய்பவர்களான, உபயாசன் யாசன் எனும்பேர்
இருவோர்உம் – உபயாசனென்றும் யாசனென்றும் பெயரையுடைய இரண்டு
முனிவர்களும், கூறும் முறையின் சடங்கு இயற்றி – (வேதசாஸ்திரங்களிற்) கூறப்பட்ட
விதி முறைப்படிஉரிய சடங்குகளைச் செய்து, கோவின் வழக்கம் பெரு வேள்ளி –
அரசர்க்குஉரிய வழக்கமாகிய பெரியபுத்திரகாமயாகத்தை, நூறு மகத்தோன் நிகர்
அரசை – நூறு அசுவமேதயாகங்களைச் செய்தவனான தேவேந்திரனைப் போன்ற
யாகசேனராசனை, நோன்மைக்கு இசைய புரிவித்தார் – அவன் பெருமைக்குத்
தக்கபடி [மிகச் சிறப்பாகச்] செய்வித்தார்கள்; (எ -று.)

     கங்காதீரத்திலுள்ள அந்தணர் பலர் வசிக்கும் இடத்தில் யாஜன் உபயாஜன்
என்ற இரண்டு பிரமவிருடிகள் தவவொழுக்கத்திற் சிறந்து இருந்தனரென்றும்,
அவர்களுள் மூத்தவனான யாஜன் தலைவனாய் நின்று, இளையவனான
உபயாஜனைப் புரோகிதனாகக் கொண்டு, யாகஞ்செய்வித்தன னென்றும்
முதனூலால் விளங்கும். சடங்கு என்பது – ஷடங்க மென்னும் வடசொல்லின்
விகார மென்றும், (வேதத்தின்) ஆறு அங்கங்களிற்கூறிய முறைக்கு ஏற்பச்
செய்யப்படுந் தொழிலென்று ஏதுப்பொருள் படுமென்றுங்கூறுவர்

புரிந்த மகப்பேற்று அழல் வேள்விப் பொன்றா ஓமப்
பொருள் மிச்சில்,
பரிந்து, விபுதர் அமுது ஏய்ப்பப் பைம் பொற் கலத்தில்
நிறைத்து, ஆங்குத்
தெரிந்த மணிப் பூணவன் தேவிக்கு அளிக்க, தீண்டாள் ஆகியபின்,
சொரிந்து கனலின், உபயாசன், இமைப்பில் சுதனைத் தோற்றுவித்தான்உபயாசன் புத்திரகாமயாகத்தை முடித்தல்.

புரிந்த – இவ்வாறுசெய்த, மகப்பேறு வேள்வி – புத்திரகாம
யாகத்தில், அழல்ஓமம் – அக்கினியில் ஓமஞ்செய்த, பொன்றா பொருள் –
குறைபாடில்லாத பொருளினது [ஹவிஸ்என்னும் தேவருணவினது], மிச்சில் –
சேஷத்தை, விபுதர் அமுது ஏய்ப்ப – தேவாமிருதத்தைப்போல, பைம்பொன்
கலத்தின் நிறைத்து – பசிய பொன்னினாலாகிய பாத்திரத்திலேவைத்து, ஆங்கு –
அப்பொழுது, தெரிந்த மணி பூணவன் தேவிக்கு பரிந்து அளிக்க –
தேர்ந்தெடுத்த இரத்தினாபரணங்களை யணிந்த அவ்யாகசேனராசனது
மனையாளுக்கு அன்போடு கொடுக்கப்புக, தீண்டாள் ஆகிய பின் – (அவள்
அதனைச் செருக்கினால்) வாங்கிக்கொள்ளாதவளாக அதன் பின்பு, உபயாசன்-,
கனலின் சொரிந்து – (சேடித்த அந்த ஹவிஸையும்)அக்கினியிலே ஆகுதிசெய்து,
(அதனால்), இமைப்பில் – ஒரு நொடிப்பொழுதிலே, சுதனை தோற்றுவித்தான் –
புத்திரனைப் பிறப்பித்தான்; (எ-று.)

     ஓமசேடத்தைக் கொடுக்குஞ்சமயத்தில் அரசன்மனைவி செருக்குக்கொண்டு
அவனை வாங்கியுண்ணுதற்கு மறுக்க, முனிவன் மந்திரசுத்தமான அந்த ஹவிசை
அனலிற்பெய்து அங்குநின்று மகனை யுண்டாக்கலானா னென்க. முதனூலிற்குஏற்ப,
இவ்வாறு பொருள்கொள்ளப்பட்டது. பாலபாரதத்தும் இவ்வாறே உள்ளது.
இச்செயலை யாஜன்செய்ததாகமுதனூல்கூறுகின்றது. தீண்டாள் ஆகியபின்
என்பதற்கு – பூப்படைந்தாளாக அதன்பின் என்று கூறுவாருமுளர், விபுதர் –
விசேஷ புத்திமான்க ளென்று காரணப் பெயர். 

வலையம் பிறழ, முடி தயங்க, மணிக் குண்டலம் பேர் அழகு எறிப்ப,
சிலையும் கையும், மெய்யும் வயம் திகழ் போர் வயிரக் கவசமுமாய்,
கொலை வெஞ் சிங்கக் குருளை பொலங் குன்றின்புறத்துக்
குதிப்பதுபோல்,
தலைவன் களிக்க, தடந் தேர்மேல் தனயன் ஒருவன்
தலைப்பட்டான்.-திருஷ்டத்யும்நன் தோன்றுதல்

வலையம் பிறழ – தோள்வளைகள்  விளங்கவும், முடிதயங்க –
கீரீடம் பிரகாசிக்கவும், மணி குண்டலம் பேர் அழகு எறிப்ப – இரத்தின
குண்டலங்கள் மிக்க அழகைச் செய்யவும், சிலைஉம் கை உம் – வில்லும்
கையுமாய், மெய்உம் வயம் திகழ் போர் வயிரம் கவசம்உம் ஆய் – உடம்பும்
வீரம் விளங்கும் போருக்குஉரிய வச்சிரகவசமும் பொருந்தி, பொலம் குன்றின்
புறத்து குதிப்பது கொலை வெம் சிங்கம் குருளை போல் – பொன்மயமான
மேருமலையின்மீது குதிப்பதொரு கொலைத்தொழிலில்வல்ல கொடிய
சிங்கக்குட்டிபோல, தட தேர்மேல் தனயன் ஒருவன் – பெரிய தேரின்மீது ஒரு
குமாரன், தலைவன் களிக்க தலைப்பட்டான் – யாகசேனராசன் களிப்பை
யடையுமாறு (ஓமாக்கினியினின்று) வெளிப்பட்டான்; (எ -று.)

     கையில் வில்லேந்திக் கவசந்தரித்த உடம்புடன் என்பது, இரண்டாமடியின்
பொருள். பொற்றேராதலால், பொன்மலை உவமை.

தேரோடு அருக்கன் அருண மணிச் சிமயத்து உதிப்ப, செவ்வியுடன்
நீர் ஓடையில் செந்தாமரைகள் நிறம் பெற்று அலர்ந்து
நின்றனபோல்,
வீரோதயன் வந்து உதிப்பளவில், மேன்மேல் மகிழ்ந்து,
மெய் சிலிர்த்து,
பாரோர் கண்கள் களித்தனவால், பார்க்கும்தோறும் பரிவுற்றே.-அதுகண்டு அனைவருங் களித்தல்.

அருக்கன் – சூரியன், தேரோடு – தேருடனே, அருணம் மணி
சிமயத்து – சிவந்த அழகிய உதயகிரியில், உதிப்ப – உதிக்க, (அதனால்),
நீர்ஓடையில் – நீர்நிலைகளிலே, செம் தாமரைகள் – செந்தாமரைமலர்கள்,
செவ்வியுடன் நிறம் பெற்று அலர்ந்து நின்றன போல் – அழகுடனே நிறத்தையும்
பெற்று மலர்ந்துநிற்பனபோல,- வீர உதயன் வந்து உதிப்பு அளவில் –
வீரத்தன்மை உதித்தற்கு இடமாயுள்ள அக்குமாரன் (தேரோடு சிவந்த
ஓமாக்கினியினின்று மேலெழுந்து) வந்து தோன்றியவளவிலே,- பாரோர் –
பூமியிலுள்ளவர்கள், பார்க்கும் தோறுஉம் பரிவு உற்று- (அக்குமரனைப்)
பார்க்குந்தோறும் அன்புமிக்கு, மேல் மேல் மகிழ்ந்து – மிகவும் அதிகமாக
மகிழ்ச்சிகொண்டு, மெய் களித்து – மனம்களிக்க, கண்கள் களித்தன- (அவர்கள்)
கண்கள் களிப்புத்தோன்ற மலர்ந்தன; (எ – று.)

     மெய்களித்து – உடல்பூரித்து என்றுமாம்; அப்பொழுது, களித்தல்-
காரியத்தைக் காரணத்தாற் கூறிய உபசாரவழக்கு; மெய் சிலிர்த்து
என்றுங்கூறலாம். ஆல் – ஈற்றசை: தேற்றமுமா

சங்கச் சங்கம் மிக முழங்க, சாந்தும் புழுகும் எறிந்து ஆர்த்து,
துங்கக் கொடியும் தோரணமும் தொடையும் பரப்பி, சோமகன் நாடு
அம் கண் சயந்தன் அவதரித்த அமராவதிபோல் ஆர்வம் எழ,
திங்கட் குழவி உற்பவித்த திசை போன்றன, எண் திசை எல்லாம்நாடெங்கும் விழாக்கொண்டாடுதலும்,
திசைவிளங்குதலும்.

சோமகன் நாடு – சோமககுலத்தானான யாகசேனனது
பாஞ்சாலதேசம்,- சங்கம் சங்கம் மிக முழங்க – சங்குக்கூட்டங்கள்
மிகுதியாகஒலிக்க, சாந்துஉம் புழுகுஉம் எறிந்து ஆர்த்து – சந்தனக் குழம்பையும்
புழுகெண்ணெயையும் (ஒருவர்மேல் ஒருவர்) வீசி ஆரவாரித்து, துங்கம்
கொடிஉம் தோரணம்உம் தொடைஉம் பரப்பி – உயர்ந்த துவசங்களையும்
தோரணங்களையும் மாலைகளையும் மிகுதியாக அமைத்து (அலங்கரித்து), அம்
கண் சயந்தன் அவதரித்த அமராவதிபோல் – அழகிய கண்களையுடைய
சயந்தன் [தேவேந்திர குமாரன்] அவதரிக்கப்பெற்ற அமராவதிநகரம்போல,
ஆர்வம் எழ – அன்பு மிக,- எண் திசை எல்லாம் – எட்டும்
திக்குகள்முழுவதும், திங்கள் குழவி உற்பவித்த திசை போன்றன – இளம்பிறை
உதிக்கப் பெற்ற திக்குக்கள்போலத் தாமாக விளங்கின; (எ -று.)

     இந்திரகுமரன் பிறந்தபொழுது அமராவதிநகரத்தில் தேவர்கள் களிப்புற்று
விழாக்கொண்டாடியதுபோல, துருபதகுமாரன் தோன்றியபொழுது
பாஞ்சாலநகரத்துச்சனங்கள் மகிழ்ச்சிமிக்கு விழாக் கொண்டாடினரென்பது
மூன்றாமடியின்கருத்து. சாந்தும் புழுகும் போல்வனவற்றை மகிழ்ச்சிக்களிப்பால்
ஒருவர்மேல் ஒருவர் தூவி உத்ஸவங் கொண்டாடுதல் இயல்பு. சங்கம் என்பது –
சங்கைக் குறிக்கும்போது சங்கமென்றவடசொல் திரிந்ததும், கூட்டத்தைக்
குறிக்கும்போது ஸங்க மென்ற வடசொல் திரிந்ததுமாம். 

பின்னும், கடவுள் உபயாசன் பெருந் தீப்புறத்து, சுருவையினால்,
மன்னும் கடல் ஆர் அமுது என்ன வழங்கு சுருதி அவி நலத்தால்,
மின்னும் கொடியும் நிகர் மருங்குல், வேய்த்தோள், முல்லை
வெண் முறுவல்
பொன்னும் பிறந்தாள், கோகனகப் பூமீது எழுந்த பொன்
போல்வாள்.-பின்பு திரௌபதி தோன்றுதல்.

பின்னும் – அதன்பின்பும், கடவுள் உபயாசன் – தெய்வத்
தன்மையையுடைய உபயாசனென்னும் அம்முனிவன், பெருந் தீப்புறத்து- பெரிய
யாகாக்கினியிலே, சுருவையினால் – சுருவை யென்னும் ஓமத்துடுப்புக்கருவியைக்
கொண்டு, மன்னும் கடல் ஆர் அமுது என்ன வழங்கு – பெருமைபொருந்திய
பாற்கடலில் தோன்றிய அருமையான அமிருதம்போல ஆகுதிசெய்த
[மிகஇனியதேவருணவாகிய], சுருதி அவி – வேதமுறைமை தவறாத
அவிர்ப்பாகத்தினது, நலத்தால் – நற்பயனால்,- மின்உம் கொடிஉம் நிகர்
மருங்குல் – மின்னலையும் பூங்கொடியையும் போன்ற இடையையும், வேய்
தோள் – மூங்கில் போன்ற தோள்களையும், முல்லை வெள் முறுவல் –
முல்லையரும்பு போன்ற வெண்மையான பற்களையுமுடைய, பொன்உம் –
பொன்போல் அருமையான அழகிய ஓர் பெண்ணும், கோகனகம்மீது எழுந்த
பொன்போல்வாள் – செந்தாமரைமலரினின்று மேலெழுந்த திருமகளை
யொப்பவளாய், பிறந்தாள் – தோன்றினாள்; (எ-று.)

     கோகநதமென்ற வடசொல் திரிந்தது; கோகம் – சக்கரவாகப் பறவைகள்,
நதம் – கூவியொலித்தற்கு இடமானது என்று பொருள்படும் . செல்வத்துக்குரிய
தலைவியாதலாலும், பொன்னிறமுடைமையாலும், பெறுதற்கருமையாலும், பொன்
என்று திருமகளுக்கு ஒரு பெயர். சுருவையினால் வழங்கு என்றும், நலத்தாற்
பிறந்தாளென்றும் இயையும்.

மண்மேல் ஒருத்தி அரக்கர் குலம் மாளப் பிறந்தாள்;
வாமன் நுதல்
கண்மேல், இன்றும் இவள் பிறந்தாள், கழல் காவலர்தம்
குலம் முடிப்பான்;
எண் மேல் என்கொல் இனி?’ என்று, ஆங்கு எவரும் கேட்ப,
ஒரு வார்த்தை
விண்மேல் எழுந்தது, அவன் புரிந்த வேள்விக் களத்தினிடை
அம்மா!அப்பொழுது ஆகாயத்திலெழுந்த ஓர் அசரீரிவாக்கு.

‘ஒருத்தி – ஒருபெண், அரக்கர் குலம் மாள – இராக்கதர் குலம்
அழியும்படி, மண்மேல் பிறந்தாள்- (முன்பு) பூமியினின்று தோன்றினாள்;
இன்றுஉம் – இப்பொழுதும், இவள் – இப்பெண், கழல் காவலர்தம் குலம்
முடிப்பான் – வீரக்கழலையணிந்த அரசர்களுடைய குலத்தை
அழிக்கும்பொருட்டு, வாமன் நுதல் கண்மேல் – சிவபிரானது நெற்றிக்கண்ணாகிய
அக்கினியினின்றும், பிறந்தாள்; இனி மேல் எண் என்கொல் – இனிமேல்
ஆலோசனை யாதுஉளது?’ என்று-, ஒரு வார்த்தை – ஓர் அசரீரிவாக்கு, ஆங்கு
– அப்பொழுது, அவன் வேள்வி புரிந்த களத்தினிடை எவரும் கேட்ப –
அந்தயாகசேனன் யாகஞ்செய்த சாலையிலுள்ள எல்லோரும் கேட்க, விண்மேல்
எழுந்தது – ஆகாயத்தில் உண்டாயிற்று: அம்மா – ஆச்சரியம்! (எ-று.)

     சனகமகாராசா யாகஞ்செய்தற்பொருட்டுச் சாலையமைத்தற்காகக்
கலப்பையைக்கொண்டு பூமியை உழுதபொழுது அவ்வுழு படைச்சாலினின்று
பூமியில் தோன்றிய பெண்ணான சீதையால் ராக்ஷசகுலம் முழுவதும்
நாசமாயிற்றென்பது, இராமாயணத்தில் பிரசித்தம். அங்ஙனமே, யாகாக்கினியில்
தோன்றிய இந்தத் திரௌபதி ஒருசமயத்தில் துரியோதனனைப் பரிகசித்து
இகழ்ச்சி தோன்றச் சிரித்ததனால் அவன்மனத்திற் பெருஞ்சினத்தைமூட்டி
அதுகாரணமாக அவனால் சபையில் மானபங்கப்படுத்தப்பட்டுப் பின்பு அது
நிமித்தமாகப் பாரதயுத்தத்தில் பல அரசர்களும் பந்துமித்திரபரி வாரங்களுடன்
இறத்தற்கு மூலமாய் நிற்றல், பாரதத்தில் பிரசித்தம். ‘இனிமேல் எண் என்கொல்’
என்றது, இந்நிகழ்ச்சி எவராலுந் தடுத்தற்கரியதெனத் தேற்றக் கருத்தை
விளக்கும். அம்மா – வியப்பிடைச்சொல். வாமன்-அழகியவனென்று
பொருள்படும். வலக்கண் சூரியனும், இடக்கண் சந்திரனும், நெற்றிக்கண்
அக்கினியுமாக இறைவனுக்குக் கண் மூன்றும் முச்சுடராதலால், நெருப்பை,
‘வாமனுதற்கண்’ என்றது. ‘கண்மேனின்றும்’ என்றும் பாடம்.

முன் தோன்றிய தன் குல முதலால் முரண் போர் முனிக்கு
முடிவும், அவன்
பின் தோன்றிய அக் கன்னிகையால் விசயன் தனக்குப்
பெரு நலமும்,
உற்று ஓர்ந்து, உள்ளம் மிகத் தருக்கி, உவந்து ஆங்கு
அமைந்தான்;-உயர் மகத்தால்
பெற்றோன் பெற்ற பேறு, மகப் பெற்றார் தம்மில் பெற்றார் யார்?மகனையும் மகளையும்பெற்றதனால் துருபதன்
மனமகிழ்தல்.

உயர் மகத்தால் பெற்றோன் – சிறந்த யாகஞ்செய்ததனால்
(இப்படிப்பட்ட பிள்ளைகளைப்) பெற்ற யாகசேனன்,- முன் தோன்றிய
தன்குலம்முதலால் – முதலிற்பிறந்த தனது குமாரனால், முரண் போர் முனிக்கு
முடிவுஉம் – வலிய போரையுடைய துரோணாசாரியனுக்கு அழிவுஉண்டாதலையும்,
அவன் பின் தோன்றிய அ கன்னிகையால் -அவனுக்குப்பின்புபிறந்தஅப்
பெண்ணால், விசயன் தனக்கு பெரு நலம்உம் -அருச்சுனனுக்குச் சிறந்த
இன்பமுண்டாதலையும், உற்று ஓர்ந்து – (கருத்தில்)ஊன்றி ஆராய்ந்து, ஆங்கு –
அதனால், உள்ளம் மிக தருக்கி – மனம்மிகக்களித்து, உவந்து அமைந்தான் –
மகிழ்ந்துநிரம்பிநின்றான்[திருப்திபெற்றான்]: பெற்ற பேறு-(அவன்) பெற்ற
பாக்கியத்தை,மக பெற்றார் தம்மில் பெற்றார் யார் – பிள்ளைகளைப்
பெற்றவர்களுள்அடைந்தவர் எவர்?

     துருபதன் தான் கருதியபடி பகைவெல்லுதற்கு மகனையும் மணம்
முடித்தற்கு மகளையும் தகுதியாகப்பெற்றான் என்ற பொருளை, ‘பெற்றபேறு
மகப்பெற்றார் தம்மிற்பெற்றார் யார்’ என்று விளக்கினார்

கரணம் மறு அற்று இலங்கு திறல் கலைசொல்பவன்பால்,
கனல் பயந்தோன்,
சரண மலர் தன் தலைக் கொண்டு, ‘தனுநூல் எனக்குத் தருக!’
என்றான்;
‘மரணம், இவனால் தனக்கு’ என்பது உணர்ந்தும், குருவும் மறாது,                                                அளித்தான்;-
அரணியிடத்தில் செறிந்து அன்றோ அதனைச் செகுப்பது அழல்
அம்மா!-திட்டத்துய்மனுக்குத் துரோணன்வில்வித்தை முற்றக் கற்பித்தல்

கனல் பயந்தோன் – அக்கினியிற் பெறப்பட்டவனான
அக்குமாரன்,- கரணம் மறு அற்று இலங்கு – அந்தக்கரணமான மனத்தில்
களங்கமில்லாது தூய்மையுடையவனாய் விளங்குகிற, திறல் – வல்லமையிற்
சிறந்த, கலச உற்பவன்பால்-கலசத்தினின்று தோன்றியவனான
துரோணாசாரியனிடத்தில் (சென்று), சரணம்  மலர் தன் தலைக்
கொண்டு- (அவனது) திருவடித் தாமரை மலர்களைத் தன்
தலையின்மேற்கொண்டு [காலில் விழுந்து வணங்கி], எனக்கு தனுநூல் தருக
என்றான் – ‘எனக்கு வில்வித்தையைக் கற்பித்துக் கொடுப்பாயாக ‘ என்று
வேண்டினான்; (வேண்ட,) குரு உம் – அந்தத் துரோணாசாரியனும், இவனால்
தனக்கு மரணம் என்பது உணர்ந்துஉம் – இவனால் தனக்கு மரணம்
நிகழுமென்பதை யறிந்தும், மறாது அளித்தான் – மறுக்காமல் (தனுர்வித்தையைக்)
கற்பித்துக் கொடுத்தருளினான்; அழல் அரணியிடத்தில் செறிந்து அன்றுஓ
அதனை செகுப்பது – நெருப்பு அரணிக்கட்டையினின்று பிறந்தன்றோ அதனை
அழிப்பது! அம்மா – ஆச்சரியம்! (எ-று.)

     அரணி – தீக்கடைகோல்; அத்திக்கட்டை முதலிய சில. ‘நெருப்பு
அரணியினின்று தோன்றியே அவ்வரணியை அழிக்கின்ற தன்றோ? என்ற
உபமானம், திட்டத்துய்மன் துரோணனிடத்தினின்று வில்வித்தை கற்றே பின்பு
அவனை அழிப்பவனாகிறான் என்ற உபமேயக் கருத்தை விளக்குதலால்,
பிறிதுமொழிதலென்னும் அணி. சிறப்புப் பொருளைப் பொதுப்பொருள்
சமர்த்திப்பதாக இல்லாமையால், இது, வேற்றுப்பொருள்வைப்பணியாகாது.
துரோணன் தனக்குத் திட்டத்துய்மனால் மரண மென்று தெரிந்தும், விதிப்பயன்
தவறாதென்பதை நோக்கியும், அவனுக்குத்தான் கல்வி கற்பித்துக்
கொடுக்கமாட்டே னென்றால் அவனுக்கு அஞ்சினானென்ற பழிமாத்திரமே
மிஞ்சுமென்று கருதியும் மனத்திற்களங்கமின்றி அவனுக்கு வில்வித்தை
முழுவதையுங் கற்பித்தன னென்க. ‘கலைசொல்பவன்பால்’ என்றும்பாடம்

இவ்வாறு அமைந்து, ஆங்கு ஐவருடன் ஈர்-ஐம்பதின்மர் நனி வளர,
மை வான் மீனின் பல் கோடி மன் வந்து இறைஞ்சிப் புடை சூழ,
தெவ் ஆறிய வெம் பெருஞ் சேனைத் திருதராட்டிரனும்,                                                தம்பியும், ‘மற்று
ஒவ்வார் இவற்கு’ என்று, உதிட்டிரனை ஒழுக்கத்து அழகால்
உட்கொண்டார்.திருதராட்டிரனும் விதுரனும் தருமனை இளவரசுக்கு உரியனென
மதித்தல்.

இ ஆறு அமைந்து – (யாகசேனனுடைய செயல்கள்) இங்ஙனம்
நிகழ,- ஆங்கு – அவ்விடத்தில் [அஸ்தினாபுரியில்], ஐவருடன் ஈர் ஐம் பதின்மர்
– பஞ்சபாண்டவர்களும் துரியோதனாதியர் நூற்றுவரும், நனி வளர – நன்றாய்ச்
செழித்து வளர்ந்துவர,- மைவான் மீனின் – கருநிறமுள்ள வானத்திற்
காணப்படும் நக்ஷத்திரங்கள் போல, பல்கோடி மன் – அநேக கோடிக்கணக்கான
அரசர்கள், வந்து இறைஞ்சி புடை சூழ – திரளாகவந்து வணங்கிப் பக்கங்களிற்
சூழ்ந்து நிற்க, தெவ் ஆறிய வெம் பெரு சேனை – பகைவர்கள்
அடங்குதற்குக்காரணமான கொடி பெரிய சேனையையுடைய, திருதராட்டிரனும்-,
தம்பிஉம்- அவன் தம்பியான விதுரனும், இவற்கு மற்று ஒவ்வார்என்று –
இவனுக்கு வேறு எவரும்ஒப்பாக மாட்டாரென்று, உதிட்டிரனை –
தருமபுத்திரனை, ஒழுக்கத்து அழகால் உள்கொண்டார் – (அவனது)
நல்லொழுக்கத்தின் அழகினால் மதித்தார்;

     அமைந்து – அமைய: எச்சத்திரபு. ஐவர், ஈரைப்பதின்மர் –
தொகைக்குறிப்பு. ‘தெவ்வாற்றிய’, ‘திருதராட்டிரனுந்தந்தையும்’ என்றபிரதிபேதம்

பூதி நலம் திகழ் பூரு குலத்திற்கு
ஆதிபன் ஆகி, அநங்கனை வென்றோன்,
‘நீதியினாலும் நிறைந்தனன், நுண் நூல்
ஓதிய கேள்வி உதிட்டிரன்’ என்னா,-வீடுமன் தருமபுத்திரனை மதித்தல்.

இதுவும், அடுத்த கவியும் – குளகம்.

     (இ-ள்.) பூதி நலம் திகழ் – செல்வமும் மற்றைநன்மையும் விளங்கப்பெற்ற,
பூரு – பூருவென்னும் அரசனது, குலத்திற்கு – வமிசத்திற்கு, ஆதிபன் ஆகி –
தலைவனாய், அனங்கனை வென்றோன் – (பெண்ணாசையை ஒழித்ததனால்)
மன்மதனை வென்றவனான வீடுமன்,நுண் நூல் ஓதிய – நுட்பமாகச்
சாஸ்திரங்களைக் கற்றறிந்த, கேள்வி – நூற்கேள்விகளையுமுடைய, உதிட்டிரன் –
தருமபுத்திரன், நீதியினால்உம் நிறைந்தனன் – நீதியாலும் நிறைந்தவன், என்னா –
என்று எண்ணி,- (எ-று.)- ‘அளித்தான்’ என வருங் கவியில் முடியும்.

     பூதி – ஐசுவரியம்: வடசொல். தன் தந்தை மகிழ்ந்து அளித்த வரத்தின்படி
அரசாட்சிச்செல்வத்துக்குத் தலைமைபூண்டதனால், பூரு, ‘பூதி நலந்திகழ் பூரு’
எனப்பட்டான்.

     இதுமுதல் பதினான்கு கவிகள் – பெரும்பாலும் நான்காஞ்சீரொன்று
மாச்சீரும், மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள்

மைந்தருடன் செயல் வழு அற எண்ணி,
குந்தி பயந்தருள் குரிசிலை, ‘இவனே
இந்த நிலக்கு இனி இளவரசு’ என்று, ஆங்கு
அம் தண் மதிக்குடை முடியொடு அளித்தான்.

மைந்தருடன் – (உடன்பிறந்தவனது) மக்களாகிய திருதராட்டிரன்
விதுரன் என்பவர்களோடு, செயல் வழு அற எண்ணி – செய்யவேண்டிய
காரியத்தைத் தவறில்லாதபடி ஆலோசித்து,- குந்தி பயந்தருள் குரிசிலை – குந்தி
அன்போடுபெற்ற தலைப்பிள்ளையான தருமனை (நோக்கி), இவன் ஏ இனி இந்த
நிலக்கு இளவரசு என்று-, ஆங்கு – அப்பொழுது, அம் தண் மதி குடை
முடியொடு அளித்தான் – அழகியகுளிர்ந்த பூரணசந்திரன்போன்ற
வெண்கொற்றக்குடையையும் கிரீடத்தையும் கொடுத்தான்; (எ-று.)- ஆங்கு –
அசையுமாம். நிலக்கு என்றதில், அத்துச் சாரியை தொக்கது.

சந்தனுவின் திரு மரபு தயங்க,
செந் திரு மேவரு சிறுவனும், அப்போது,
இந்துவொடு ஆதபன் இருவரும் அன்பால்
வந்து தழீஇ, மெய் வயங்கினன் ஒத்தான்.-தருமபுத்திரன் குடையும் முடியும் பெற்று விளங்குதல்.

சந்தனுவின் திரு மரபு தயங்க – சந்தனுவினது மேன்மையான
குலம் விளங்க, செந் திரு மேவரு – செந்நிறமுடைய திருமகளோடு [இளவரசாட்சிச்
செல்வத்தோடு] கூடிய, சிறுவன் உம் – இராசகுமாரனான தருமபுத்திரனும்,-
அப்போது-, இந்துவொடு ஆதபன் இருவர்உம் அன்பால் வந்து தழீஇ மெய்
வயங்கினன் ஒத்தான் – (குடையையும் முடியையும் பெற்றதனால்) சந்திரனும்
சூரியனுமாகிய இருவராலும் அன்போடு வந்து தழுவப் பெற்று மேனி விளங்குபவன்
போன்றான்; (எ-று.)

     சந்தனுவமிசம் அநீதியுடைய துரியோதனனால் விளங்காது, நீதிநெறியுடைய
தருமனாலேயே விளங்குவது பற்றி, ‘ ‘சந்தனுவின் திருமரபு தயங்கச்
செந்திருமேவருசிறுவன்’ என்றார். தழீஇ-காரணப்பொருட்டு.  

துன்மதியான சுயோதனன்-மாழ்கி,
தன் மதியால், அருள் தந்தையை எய்தி,
புன் மதி ஆம் உரை சிற்சில் புகன்றான்-
மன் மதி யாதும் மதித்தல் இலாதான்.-அதுகண்டு துரியோதனன் மிகப் பொறாமை
கொள்ளுதல்.

துன்மதி ஆன – துர்ப்புத்தியைக்கொண்ட, சுயோதனன்-, மாழ்கி –
(தருமனது யுவராச பட்டாபிஷேகத்தைக்கண்டு) வருந்தி, மன் மதி யாதுஉம்
மதித்தல் இலாதான் – இராசநீதியைச் சிறிதும் ஆலோசியாதவனாய், அருள்
தந்தையைஎய்தி – (தன்னைப்) பெற்ற தந்தையான திருதராட்டிரனை அடைந்து,
தன் மதியால் – தனது எண்ணத்திற்கு ஏற்ப, புல்மதி ஆம் உரை சிற்சில்
புகன்பவனானான்;(எ-று)- அவற்றை, அடுத்த கவியிற்காண்க. துர்மதி –
வடசொல். மதி – நீதிக்கு, ஆகுபெயர்.

‘உன் பதம் யாவும் உதிட்டிரனுக்கே
மன்பதையோடு வழங்கினை, எந்தாய்!
அன்புஅது இலா அவன் அனுசர் மதத்தால்,
என் பதம் அம்ம இறந்ததை இன்றே!‘-துரியோதனனது பொறாமைவார்த்தை

எந்தாய் – எமது தந்தையே! உன் பதம் யாஉம் – உனது
அரசாட்சி யுரிமையெல்லாவற்றையும், உதிட்டிரனுக்குஏ – தருமபுத்திரனுக்கே,
மன்பதையோடு – மக்கட்பரப்புடனே, வழங்கினை – கொடுத்திட்டாய்: அவன்
அன்புஅது இலா அனுசர் மதத்தால் – அவனுடைய அன்பு இல்லாத தம்பியரின்
செருக்கினால், என்பதம் இன்றுஏ அம்ம இறந்தது – எனது நிலைமை
இன்றைக்கே அந்தோ அழித்திட்டது! (எ -று.)-” என்றலும்” என அடுத்த
கவியோடு தொடரும்.

     இன்றே யிறந்தது – விரைந்துணிவும்பற்றிய காலவழுவமைதி. ஏ –
பிரிநிலை. அம்ம – இரக்கக்குறிப்பு.ஐ – அசை.  

என்றலும், மைந்தனை, ‘இந்து குலத்தோய்!
நின்றிலையால், மனு நீதியில், ஐயா!
பொன்றிய எம்பி பதம் புதல்வர்க்கே
அன்றி, நுமக்கு அரசு ஆளுதல் ஆமோ?இரண்டுகவிகள் – அதற்குத் திருதராட்டிரன் கூறும் சமாதானம்.

என்றலும் – என்று (துரியோதனன்) சொன்ன வளவிலே,-
மைந்தனை- (தன்) மகனான அவனை நோக்கி,- (திருதராட்டிரன்), ‘இந்து
குலத்தோய்- சந்திரகுலத்தவனே! ஐயா-! மனு நீதியில் நின்றிலை –
மனுதர்மசாஸ்திரத்திற்கூறப்பட்ட நீதி முறைமையில் நீ நின்றாயில்லை; பொன்றிய
எம்பி பதம் – இறந்துபோன எமது தம்பியான பாண்டுவுக்கு உரியதாயிருந்த
இராச்சியத்தை, அரசு ஆளுதல்-, புதல்வர்க்குஏ அன்றி – அவன்பிள்ளைகளான
பாண்டவர்க்கே யல்லால், நுமக்கு – (என்மக்களான) உங்கட்கு, ஆம்ஓ – தகுமோ?
(எ-று.)- இக்கவியில், ‘என்றலும்’, ‘மைந்தனை’ என்றவை ‘என்றான்’ (101)
என்றமுற்றைக் கொள்ளும். ஆல் – ஈற்றசை.

     தான் பாண்டுவினும் மூத்தவனாயினும் ‘மூத்தவன் அங்க வீனம் முதலிய
குறைபாடுடையவனா யிருந்தால் அரசுரிமை அவனை விட்டு அவன் தம்பியைச்
சாரும்’ என்ற நீதிநூல் முறைமைப்படி, அரசாட்சி பிறவிக்குருடனான தனக்கு
உரியதன்றித் தன் தம்பியான பாண்டுவுக்கே உரியதானதனால், திருதராட்டிரன்
‘பொன்றியவெம்பிபதம்’ என்றான். தொன்றுதொட்டு உலகத்தில் மிகப்பிரசித்தமான
சந்திரகுலத்திற் பிறந்திருந்தும் இராசாங்கநீதிமுறையில் நீ நிலை நின்று
பேசினாயில்லை யென்ற இழிவு விளங்க, ‘இந்துகுலத்தோய்! மனுநீதியில்
நின்றிலை’ என்றான்

நீதி இலா நெறி எண்ணினை, நீ; இங்கு
ஓதிய வாய்மையின் உறு பொருள் இன்றால்;
ஆதிபர் ஆயவர் ஐவரும் நீரும்
மேதினி ஆளுதல் வேத்து இயல்பு’ என்றான்.

நீ-, நீதி இலா நெறி – நியாயமில்லாத வழியை, எண்ணினை –
நினைத்தாய்: இங்கு ஓதிய வாய்மையின் – (அவ்வாறு எண்ணி) இப்பொழுது (நீ)
சொன்ன வார்த்தையில், உறு பொருள் இன்று – பொருந்திய சாரமொன்றும்
இல்லை; (ஆகவே இனி), ஆதிபர் ஆயவர் ஐவர்உம்- (அரசாட்சிக்குத்)
தலைவர்களான அப்பஞ்சபாண்டவர்களும், நீர்உம் – நீங்களும், (ஒற்றுமைப்பட்டு,
மேதினி ஆளுதல் – பூமியை ஆளுதலே, வேந்து இயல்பு – இராசநீதிமுறைமை, ‘
என்றான் – என்று கூறினான்; (எ-று.)- வேத்தியல்பு. மென்றொடர்
வன்றொடராயிற்று.

இகல் மிகு கன்னனும், என் இளையோரும்,
சகுனியும், உண்டு, தகும் துணை; நெஞ்சில்
உகவை இலாரொடு உறேன் இனி’ என்றே,
முகம் முகுரம் புரை முதலொடு சொன்னான்.-அதனை மறுத்துத் துரியோதனன் கூறுதல்.

இகல் மிகு – வலிமைமிக்க, கன்னன்உம் – கர்ணனும், என்
இளையோர்உம் – எனது தம்பிமார்களும், சகுனிஉம் – (என்மாமனான) சகுனியும்
ஆகிய, தகும் துணை – தக்க துணை, உண்டு – (எனக்கு) உண்டு; (ஆதலால்,
யான்), நெஞ்சில் உகவை இலாரொடு இனி உறேன்-மனத்தில் (என்பக்கல்)
நண்பில்லாத அப்பாண்டவர்களோடு இனிச் சேரமாட்டேன், என்று-, முகம்
முகுரம் புரை முதலொடு சொன்னான்-முகம் கண்ணாடியையொத்த தனது
தந்தையான திருதராட்டிரனுடனே (துரியோதனன்) கூறினான்; (எ-று.)

     பகையொழிக்கக் கர்ணனும், கூடிக்குலாவி இன்புறத் தம்பியரும், சமயத்துக்கு
ஏற்ற புத்தியுக்திகளைத் தந்திரமாகக்கூறச் சகுனியும் தக்கதுணையாயுண்டு
என்றனனென்க. ஏ – தேற்றம். நான்காமடி – ‘மகன்முதிரம்பிகைமகனொடு
சொன்னான்’ என்று சில ஏடுகளிற் காணப்படுகின்றது. முதல்= முதல்வன்.

பாதகன் அன்று பகர்ந்த மொழிக்கே
பேதகன் ஆன பிதா மருள் எய்தா,
மேதக வாழ்வுறு வில் விதுரற்கும்,
நா தகு நல் உரை நதிமகனுக்கும்,-திருதராட்டிரன் மனம் மாறுபடுதல்.

இதுமுதல் நான்கு கவிகள்-குளகம்

(இ-ள்.) பாதகன் – பாவியான துரியோதனன், அன்றுபகர்ந்த- அப்பொழுது
சொன்ன, மொழிக்குஏ – சொல்லினாலே, பேதகன் ஆன – மனம்)
மாறுபட்டவனாய்விட்ட, பிதா – அவன்தந்தையான திருதராட்டிரன்,- மருள்
எய்தா- (இன்னது செய்வதென்று அறியாமல்)திகைப்படைந்து,- மேதக வாழ்வுறு
வில் விதுரற்குஉம் – மேன்மைமிக வாழுகின்ற வில்வித்தையில்தேர்ந்த
விதுரனுக்கும், நா தகு நல் உரை நதிமகனுக்குஉம் – நாவில் தக்க
நல்லவார்த்தைகளையே யுடைய கங்காபுத்திரனான வீடுமனுக்கும்,- (எ-று.)- 106-
ஆங் கவியில் வரும் ‘கூறலும்’ என்றதைக் கொள்ளும்.

     இங்கிருந்து 125 – ஆம் பாடல்வரையில் பாலபாரதத்துக்கும் இதற்கும்
வேறுபாடு காண்கின்றது: புரோசனனோடு ஆலோசித்த விவரமும், தபதி கூறிய
செய்தியும் அதிற் குறிக்கப்படவில்லை. இவ்விடம், வியாசபாரதத்தைப்
பெரும்பாலும் ஒட்டிக்கூறப்பட்டுள்ளது. மேதகு என்றும் பாடம்

ஈண்டு இனி என் செய்வது? எண்ணுமின்!-இங்ஙன்
பாண்டவரோடு பயின்று உறையாது,
தூண்டு பரித் துரியோதனன் முதலோர்
பூண்டனர் வெம் பகை, வாழ்வு பொறாதார்.-இரண்டுகவிகள் – திருதராட்டிரன் விதுரனிடத்தும் வீடுமனிடத்தும்
கூறும் வார்த்தை.

தூண்டு பரி துரியோதனன் முதலோர் – விரைவாகச்
செலுத்தப்படுங் குதிரையையுடைய துரியோதனன் முதலிய என் பிள்ளைகள்,
இங்கன் – இங்கே, பாண்டவரோடு பயின்று உறையாது – பாண்டுகுமாரர்களோடு
கலந்திராமல், வாழ்வு பொறாதார் – (அவர்களுடைய) செல்வவாழ்க்கையைப்
பொறுக்கமாட்டாதவர்களாய், வெம் பகை பூண்டனர் – (அவர்களிடத்துக்)
கொடிய பகைமையைக் கொண்டார்கள்; ஈண்டு இனி செய்வது என் – இங்கே
இப்பொழுது (நாம்) செய்யவேண்டுவது யாது?; எண்ணுமின் – ஆலோசனை
செய்யுங்கள்; (எ-று.)- வாழ்வு- பாண்டவரில் மூத்தவன் இளவரசனானமை

ஒரு திறன் இந் நகர் உறைதரின் ஒன்றாது,
இரு திறன் மைந்தரும் இகலுவர், மேன்மேல்;
அருகு அணுகாவகை அகல இருந்தால்,
மறுவுறும் நண்பு வளர்ந்திடும்’ என்றே,

இரு திறன் மைந்தர்உம் – (துரியோதனாதியரும் பாண்டவருமாகிய)
இரண்டு வகைப் புதல்வர்களும், இ நகர் – இந்த நகரத்தில், ஒரு திறன்
உறைதரின் – ஒருசேர வசித்தால், ஒன்றாது – ஒற்றுமைப்படாமல், மேல்மேல்
இகலுவர் – மேலும்மேலும் பகைமை கொள்வார்கள்; அருகு அணுகாவகை –
(ஒருதிறத்தாரோடு மற்றொரு திறத்தார்) சமீபத்தில் நெருங்காதபடி, அகல
இருந்தால்- (இரு திறத்தாரும்) தூரத்தில் வெவ்வேறாக இருந்தால், மருவுறும்
நண்பு வளர்ந்திடும் – மனங்கலக்கிற சினேகம் (அவர்கட்குள்) வளரும், என்று-,-
(எ-று.)- ‘கூறலும்’ என வருங்கவியோடு தொடரும்.

      ‘சேரவிருப்பிற் செடியும்பகை’, ‘அகலவிருக்கிற் பகையும் உறவாம்’ என்பன
– பழமொழிகள். ஒருதிறலென்றும் பாடம்

இம் மொழி கூறலும், இருவரும் எண்ணி,
‘தெம் முறை ஆயினர், சிறு பருவத்தே;
எம் உரை கொள்கலர்; இனி அவர் மதி ஏது,
அம் மதியே மதி ஆகுவது’ என்றார்.–அதற்கு அவர்கள் கூறும் விடை.

இ மொழி கூறலும் – இந்த வார்த்தையை (த் திருதராட்டிரன்)
சொன்னவளவிலே,- இருவர்உம்- (விதுரன் வீடுமன் என்ற) இரண்டுபேரும்,
எண்ணி – ஆலோசித்து,- ‘சிறு பருவத்து ஏ தெவ் முறை ஆயினர் –
(துரியோதனாதியர்கள்) இளம்பிராயத்திலேயே பகைத்தன்மை கொண்டிட்டார்கள்;
எம் உரை கொள்கலர் – எங்கள் வார்த்தையைக்கேட்டு நடக்கமாட்டார்கள்: இனி
– இனிமேல், அவர் மதி ஏது அ மதிஏ மதி ஆகுவது – அவர்களறிவு எதுவோ
அந்த அறிவே (அவர்கட்கு உரிய) அறிவாவது’, என்றார்-; (எ-று.)

      ‘எம்முறைகேளார்’ என்றபாடத்துக்கு – நாங்கள் சொல்லும் நீதி
முறைகளைக் கேட்கமாட்டார்களென்று பொருளாம். தெவ் + முறை = தெம்முறை:
“தெவ்வென்மொழியே தொழிற்பெயரற்றே, மவ்வரின் வஃகான்
மவ்வுமாகும்.”அவர்மதிஏது அம்மதியே ஆகுவது: (இதனை நீ) மதி என்றுமாம்.  

விதுரனும், வார் கழல் வீடுமனும், தம்
இதயம் நிகழ்ந்தது இயம்பிய பின்னர்,
பொதுமை இலாத புரோசனன் என்னும்
மதியுடை மந்திரி, ‘வருக!’ என வந்தான்பின்பு திருதராட்டிரன் புரோசனனென்னும்
மந்திரியை வருவித்தல்.

 விதுரனும்-, வார் கழல் – நீண்ட வீரக்கழலையுடைய வீடுமனும்-,
தம் இதயம் நிகழ்ந்தது இயம்பிய பின்னர் – தங்கள் மனத்தில் தோன்றிய
கருத்தைச்சொன்னபின்பு, (திருதராட்டிரன்),- பொதுமை இலாத புரோசனன்
என்னும் மதி உடை மந்திரி – நடுவுநிலைமையில்லாத புரோசநனென்னும் பேருள்ள
அறிவுடைய மந்திரியை, வருக என – வருவாயாகவென்று அழைக்க, வந்தான் –
(அவன் அருகில்வந்து) சேர்ந்தான்; (எ -று.)

     பொதுமை – பகைவர் நண்பர் அயலார் என்னும் முத்திறத்தாரிடத்தும்
தருமத்தின் வழுவாமல் ஒப்பநிற்கும் நிலைமை. ‘மதியுடைமந்திரி’ என்றது,
வஞ்சனையாகத்தொழில் செய்தற்குஉரிய தந்திரங்களை அறிந்தவ னென்றவாறு

வந்த அமைச்சனும், மைந்தனும், மற்று அத்
தந்தையும், அங்கு ஒரு தனிவயின் எய்தி,
சிந்தனை செய்தனர், தீமை மனத்தோர்-
குந்தி மகார் உயிர் கோடல் புரிந்தே.-திருதராட்டிர துரியோதனர் புரோசனனுடன்
சதியாலோசனை செய்தல்.

வந்த அமைச்சன்உம் – வந்த மந்திரியான புரோசனனும்,
மைந்தன்உம் – இராசகுமாரனான துரியோதனனும், அ தந்தைஉம் – அவன்
தந்தையான திருதராட்டிரனும், தீமைமனத்தோர் – கொடிய மனத்தை
யுடையவர்களாய், அங்கு ஒரு தனிவயின் எய்தி – அவ்விடத்தில்
[அரண்மனையில்] ஏகாந்தமான ஓரிடத்தை யடைந்து, குந்தி மகார் உயிர்
கோடல்புரிந்து – பாண்டவர்களுடைய உயிரைக் கொள்ளவிரும்பி,
சிந்தனைசெய்தனர்-;

     நகுலசகதேவர்களையும் சேர்த்து ‘குந்திமகார்’ என்றது குந்தி மாத்திரிக்குச்
சொல்லிக்கொடுத்த மந்திரத்தின் பலத்தினாலேயே அவ்விருவரும் பிறந்தன
ராதலாலும், குந்தியேவளர்த்து வந்தன ளாதலாலுமாம். மற்று – அசை

ஆரணாதிபர் ஆரும் புகழ்வது,
நாரணாதியர் நண்ணும் சிறப்பது,
தோரணாதி துலங்கு பொன் கோபுர
வாரணாவத மா நகர்; அங்கணே,-இரண்டுகவிகள் – குளகம். அவர்கள் செய்த
துராலோசனைமுடிவு.

ஆரண அதிபர் ஆர்உம் புகழ்வது – வேதங்கட்குத்
தலைவர்களான அந்தணர்களெல்லோராலும் புகழப்படுவதும், நாரண ஆதியர்
நண்ணும் சிறப்பது – திருமால் முதலிய தேவர்கள் எழுந்தருளிவாழும்
மகிமையையுடையதும், தோரண ஆதி துலங்கு – தோரணம் முதலியவை
விளங்கப்பெற்றதும், பொன் கோபுரம் – பொன்னாலாகிய
கோபுரத்தையுடையதுமான, வாரணவதம் மாநகர் அங்கண்ஏ –
வாரணவதமென்னும் பெரிய நகரத்தினிடத்திலே,- (எ-று.)- ‘சென்றிருக்கத்
திருவாய்மலர்க’ என அடுத்தகவியோடு தொடரும். வாரணாவதம் – காசியென்ப.

     இதுமுதல் ஒன்பதுகவிகள் – பெரும்பாலும் முதற்சீரொன்று மாச்சீரும்,
மற்றவை விளச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள்.

சென்று இருக்கத் திருவாய் மலர்க!’ என,
ஒன்றுபட்டு, மகன் தொழுது ஓதினான்;
அன்றுதொட்டு உயிர் அன்ன அமைச்சனால்,
நன்று பட்டது, அந் நல் நகர் எங்குமே

சென்று இருக்க – போய் வசித்திருக்கும்படி, திருவாய் மலர்க –
(பாண்டவர்க்கு) கட்டளை கூறியருள்வாயாக, என – என்று மகன் –
துரியோதனன், தொழுது ஓதினான் – (தன் தந்தையான திருதராட்டிரனை)
வணங்கிச் சொன்னான்; ஒன்றுபட்டு – (அதற்கு அவன்) உடன்பட,
அன்றுதொட்டு – அன்றைத்தினம்முதல், அ நல் நகர் எங்குஉம் – சிறந்த அந்த
வாரணாவதநகரமுழுவதும், உயிர் அன்ன அமைச்சனால் – (திருதராட்டிரனுக்கும்
துரியோதனனுக்கும்) உயிர் போன்ற மந்திரியான அப்புரோசனனால்,
நன்றுபட்டது-நன்றாகப் புதுப்பிக்கப்பட்டது; (எ-று.)

சிற்ப நூலில் திருந்திய மாக்களால்,
பொற்பு அமைந்து பொலிந்தது, அப் பொன் நகர் –
கற்பகாடவி அல்லது, கண்டவர்,
‘அற்பம்’ என்ன, அமராவதியையே.-வாரணாவதநகரம் விசேஷமாக
அலங்கரிக்கப்பட்டமை.

கண்டவர் – பார்த்தவர்கள், கற்பக அடவி அல்லது –
கற்பகச்சோலையொன்றினா லல்லாமல், (மற்றையவற்றால்), அமராவதியை அற்பம்
என்ன – (தேவலோகத்து) அமராவதிநகரத்தை (இந்நகரத்தினும்) இழிவானது
என்று சொல்லும்படி,- அ பொன் நகர் – (இயல்பிலேயே) அழகுடைய
அவ்வாரணாவதநகரமானது,- சிற்பம் நூலில் திருந்திய மாக்களால் –
சிற்பசாஸ்திரத்திற் கைதேர்ந்த மனிதர்களால், பொற்பு அமைந்து பொலிந்தது –
(புதுப்பக்கப்பட்டுச்) செயற்கையழகு பொருந்தி விளங்கிற்று; (எ – று.)

     கற்பகச்சோலையையுடைமை ஒன்றே யன்றி மற்றைப்படி செல்வவளம்
முதலிய எவற்றாலும் அமராவதி வாரணாவதத்தினுந் தாழ்ந்ததே யென்று
கண்டவர் சொல்லும்படி அப்பொழுது அந்நகரம் புதுப்பிக்கப்பட்ட தென்பதாம்.
இக்கவி – உயர்வுநவிற்சியணி.   

அறத்தின் மைந்தனுக்கு, ஆங்கு ஒரு நாள், அவைப்
புறத்து இருந்து, புகன்றனன், காவலன்-
‘திறத்து நின் இளையோரொடும் சென்று, தோள்
மறத்தினால், தனி வாழுதி’ என்னவே.-திருதராட்டிரன் பாண்டவரை வாரணாவதஞ் செல்லச்சொல்லுதல்.

ஆங்கு – அதன்பின்பு, ஒரு நாள் – ஒருதினத்தில், காவலன் –
திருதராட்டிர மகாராசன்,- அவைப்புறத்து இருந்து – சபையில் வீற்றிருந்து,
அறத்தின் மைந்தனுக்கு – தருமபுத்திரனை நோக்கி, ‘திறத்து நின்
இளையோரொடும் – வல்லமையுடைய உன் தம்பிமார்களுடனே, சென்று – போய்,
தோள் மறத்தினால் – புயவலிமையினால், தனி வாழுதி – தனித்து
(வாரணாவதநகரத்தில்) வாழ்வாயாக’, என்ன – என்று, புகன்றனன் –
சொன்னான்; (எ-று.)

     உனக்குத் தம்பியர்வலிமையும் தோள்வலிமையையும் மிக்கிருத்தலால்
அவையேபோதும்; வேறுசேனைமுதலியனவும் மிகுதியாக வேண்டா என்பது,
உட்கோள். தருமத்தினின்று தவறினவர்களுக்குத் தக்க தண்டனை செய்து
தருமத்தைக் காத்தலால், யமனுக்கு ‘தருமன்’ என்று பெயர்: அப்பெயரே இங்கு
அறமெனக் குறிக்கப்பட்டது; ‘தேவர்களை இருதிணையாலுங் கூறலாம்’ ஆதலால்,
இங்கு அஃறிணையாற் கூறினார்.     

புகன்ற கேள்விப் புரோசனன்தன்னை, ‘இம்
மகன்தனக்கு நீ மந்திரி ஆகியே,
இகன்றவர்ச் செற்று, இனியோர்க்கு இனிமை செய்து,
அகன்ற ஞாலம் இவன் வழி ஆக்குவாய்.‘-திருதராட்டிரன் புரோசனனைத் தருமனுக்கு
மந்திரியாக்குதல்.

இதுவும்அடுத்த கவியும் – குளகம்.

     (இ-ள்.) (இங்ஙனம் சொன்னபின்பு திருதராட்டிரன்), புகன்ற கேள்வி
புரோசனன் தன்னை – சிறப்பித்துச்சொல்லப்பட்ட நூற்கேள்வியையுடைய
புரோசனனை நோக்கி,- ‘நீ-, இ மகன் தனக்கு மந்திரி ஆகி –
(இனி)இத்தருமபுத்திரனுக்கு மந்திரியாய், இகன்றவர் செற்று – (இவனது)
பகைவர்களை அழித்து, இனியோர்க்கு இனிமைசெய்து- (இவனது) நண்பர்களுக்கு
நன்மையைச் செய்து, அகன்ற ஞாலம் இவன் வழி ஆக்குவாய் – பரந்த
நிலவுலகத்தை இவன்வழிப்படுத்துவாய் ‘,- (எ-று.)- ‘என்ன’ என வருங் கவியோடு
இயையும்.

     இனி, பின்னிரண்டடிகளுக்கு வேறொருபொருள் வருமாறு:- இகன்றவர்ச்
செற்று – பகைவர்களான அப்பாண்டவர்களை அழித்து, இனியோர்க்கு
இனிமைசெய்து – வேண்டியவர்களான துரியோதனாதியர்க்கு நன்மைசெய்து,
அகன்ற ஞாலம் – பரந்த இராச்சியம் முழுவதையும், இவன்வழி ஆக்குவாய்-
இத்துரியோதனனுக்கு உரியதாம்படி செய்திடுவாய் என்பதாம். இங்ஙன் இரு
பொருள்படக்கூறினன் திருதராட்டிர னென்க. 

என்ன, ஆங்கண் இறைஞ்சி, அனந்தரம்
சொன்ன சொற்படி, சூழ் படை வேண்டுவ
என்னவும் கொண்டு, இளவரசோடும் அப்
பொன் நகர்க் கொடு போயினன் என்பவே.-புரோசனன் பாண்டவருடன் வாரணாவதஞ் செல்லுதல்.

என்ன – என்றுசொல்ல,- (புரோசனன்), ஆங்கண் – அப்பொழுது,
இறைஞ்சி – (அத்திருதராட்டிரனை) வணங்கி, அனந்தரம் சொன்ன சொல்படி
சூழ்படை வேண்டுவ என்னஉம் கொண்டு – பின்பு (அத்திருதராட்டிரன்) சொன்ன
சொல்லின்படி சூழ்ச்சிசெய்தற்குரிய ஆயுதங்களிலும் சேனை முதலிய
பரிவாரங்களிலும் வேண்டியவை யெல்லாவற்றையும் உடன்கொண்டு,-
இளவரசோடுஉம் – இளவரசனான தருமனுடனே, (மற்றை நால்வரையுங்
குந்தியையும்), அ பொன் நகர் கொடு போயினன் – அழகிய அந்த
வாரணாவதநகரத்துக்கு அழைத்துக்கொண்டு சென்றான்;

     என்ப – அசை. மூன்றாமடியிலுள்ள ‘என்ன’ என்பது – எவன் என்ற
அஃறிணைப்பொதுவினாப்பெயரின் விகாரம்: அது இங்கே எஞ்சாமை யுணர்த்தும்.
தலைமைபற்றி இளவரசைக் கூறினும் மற்றையோரையுங் குறிக்கும். 

ஆர மார்புடை ஐவரும், குந்தியும்,
பூர ஞான புரோசன நாமனும்,
சேர வெண் பிறைச் செஞ் சடை வானவன்
வாரணாவதம் சென்று வணங்கினார்.-பாண்டவரும் குந்தியும் புரோசனனுடன்
வாரணாவதஞ்சென்று சிவதரிசனஞ் செய்தல்

ஆரம் மார்பு உடை ஐவர்உம் – மாலையையணிந்த மார்பையுடைய
பஞ்சபாண்டவரும், குந்தியும்-, பூரம் ஞானம் புரோசனன் நாமன்உம் – நிறைந்த
அறிவையுடைய புரோசனனென்னும் பெயருள்ள அம்மந்திரியும், சேர – ஒருசேர,
வெண்பிறை செம் சடை வானவன் வாரணாவதம் சென்று – வெண்மையான
கலை குறைந்த சந்திரனை யணிந்த சிவந்த சடையையுடைய தேவனான
சிவபிரான்  எழுந்தருளியிருக்கிற வாரணாவதநகரத்திற்போய், வணங்கினார் –
(அக்கடவுளைத்) தொழுதார்கள்; (எ-று.)

     வாரணாவதநகரத்தில் பிரசித்தமாகக் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கிற
சிவபிரானது திருவிழாவைத் தரிசிக்கவேண்டுமென்ற ஒருவிருப்பம்
தருமபுத்திரன்மனத்தி லுண்டாம்படி துரியோதனன் சில மந்திரிகளைக்கொண்டு
தூண்ட, அங்ஙனமே தருமன் அங்குச்செல்ல விருப்பங்கொண்டதுவே
வியாஜமாகக் திருதராட்டிரன் பாண்டவரை வாரணாவதத்துக்குச்
செலுத்தினனென்ப. ஆரம் – பதக்கம்: சந்தனமுமாம். ‘ஆரவெண்குடை’
என்றும்பாடம்.

அங்கு அவன்தன் அருள் பெற்று, அமைச்சன் அங்கு
இங்கிதத்தொடு இயற்றிய நீள் கொடி
மங்குல் தோய் மணி மாளிகை எய்தினார்-
சங்கம் விம்ம, முரசம் தழங்கவேபாண்டவர் வாரணாவதத்திற் கிருகப்பிரவேசஞ்
செய்தல்.

அங்கு அவன் தன் அருள் பெற்று-அவ்வாரணாவத
நகரத்திலெழுந்தருளியுள்ள அச்சிவபிரானது கருணையைப் பெற்று, அமைச்சன்
அங்கு இங்கிதத்தொடு இயற்றிய – புரோசனன் அவ்விடத்தில் (தங்களைக்
கொல்லவேண்டு மென்னும்) குறிப்போடு கட்டியமைத்துவைத்த, நீள் கொடி
மங்குல் தோய்மணி மாளிகை- உயர்ந்த துவசங்களில் மேகங்கள்படியப்பெற்ற
இரத்தினங்கள் பதித்த மாளிகையை,- சங்கம் விம்ம முரசம் தழங்க எய்தினார் –
சங்குகள் ஒலிக்கப் பேரிகைகள் ஆரவாரிக்க (ப்பாண்டவர்கள்) அடைந்தார்கள்;
(எ-று.) – அருள்பெற்றழகுற என்று பிரதிபேதம்.

ஆவி அன்ன அமைச்சன் மொழிப்படி
மேவி, அத் திசை வேந்தர் குழாம் தொழ,
கோவின் ஆணை நடத்தி, குவலயத்
தேவி மெய் களிக்க, சிறந்தார்அரோ.-பாண்டவர் அங்கு அரசுவீற்றிருத்தல்.

ஆவி அன்ன அமைச்சன் மொழி படி – உயிரை யொத்த
(புரோசன னென்னும்) அந்த மந்திரியின் சொற்படி, மேவி – (அம்மாளிகையிற்)
சேர்ந்து,- அத்திசை வேந்தர் குழாம் தொழ- அந்தத்திக்கிலுள்ள அரசர்களுடைய
கூட்டம் (தம்மை) வணங்க, கோவின் ஆணை நடத்தி – அரசாட்சிக்கு உரிய
கட்டளையைச் செலுத்திக் கொண்டு, குவலயம் தேவி மெய் களிக்க சிறந்தார் –
பூமிதேவி உடம்புகளிப்படையும்படி (பாண்டவர்கள்) சிறப்புற்றிருந்தார்கள்; (எ-று.)

     பாண்டவர் தன்னை மிக இனியனென்று கருதும்படி தந்திரமாக
நடந்தமைபற்றி, ‘ஆவியன்னவமைச்சன்’ என்றார். அரோ – ஈற்றசை

மன்னர் ஐவரும் வாரணாவதம்தனில் மருவி,
துன்னலார் தொழத் தொல் நிலம் புரந்திடும் நாளில்,
பின்ன நெஞ்சுடைப் புரோசனன் பேது உறு மதியால்,
முன்னமே இனிது அமைத்திடும் மனைச் செயல் முன்னாமூன்றுகவிகள் – குளகம்: பாண்டவர் அரக்கு மாளிகையைக்
கவனித்துப் புரோசனன்மீது சங்கை கொள்ளுதலைக் கூறும்.

மன்னர் ஐவர்உம் – பாண்டவராசர் ஐந்துபேரும்,
வாரணாவதந்தனில் மருவி – அவ்வாரணாவதநகரத்தில் வசித்து, துன்னலார்
தொழ – பகைவர்கள் வணங்க, தொல் நிலம் புரந்திடும் நாளில்,-
தொன்றுதொட்டு வந்த இராச்சியத்தை அரசாளும் நாளில்,- பின்னம் நெஞ்சு
உடை புரோசனன் – மாறுபட்டமனத்தையுடைய புரோசனன், பேது உறு மதியால்
– மாறுபாடுகொண்ட (தன்)அறிவினால்,முன்னம்ஏ இனிது அமைத்திடு-(தாங்கள்
அந்நகரத்துக்கு வரும்) முன்னமே (தங்களுக்கென்று) அழகிதாகக்கட்டி
யமைத்துவைத்த, மனை – அரக்குமாளிகையின், செயல் அமைப்பை, முன்னா –
கருதி,- (எ-று.)-“என்றார்” என் 120- ஆங் கவியோடு முடியும்.

     பாண்டவர்கள் அரக்குமாளிகை யமைப்பை நுட்பமாக ஊகித்து உணர்ந்து
அதனால் புரோசனன்வஞ்சனையை அறியலானாரென்க. பிந்நம் – வடசொல்.
பின்னநெஞ்சு – புறமாகிய சொற்செயல்களோடு ஒற்றுமைப்படாத அகம்.அமைத்த
மன் என்று பிரதிபேதம்.

     இதுமுதல் இச்சருக்கமுடியுமளவும் – பெரும்பாலும் முதற்சீரும்
ஐந்தாஞ்சீரும் மாச்சீர்களும், மற்றவை விளச்சீர்களுமாகிய கலிநிலைத்துறைகள்

மெழுகினால் நமக்கு ஆலயம் வகுத்ததும் விரகே;
ஒழுகுகின்ற தன் ஒழுக்கமும் வஞ்சனை ஒழுக்கே;
எழு கடல் படை யாவையும் இவன் வழியனவே;
தொழுத கையுளும் படை உள; சூழ்ச்சியும் பெரிதால்.

மெழுகினால் நமக்கு ஆலயம் வகுத்ததுஉம் விரகுஏ –
நமக்கு(இவன்) மெழுகினால் சிறந்தமாளிகையை அமைத்து வைத்ததும்
வஞ்சனையேயாம்; ஒழுகுகின்ற தன் ஒழுக்கம்உம் வஞ்சனை ஒழுக்குஏ –
(இனியவன்போல) ஒழுகுகிற இவனுடைய ஒழுக்கமும் வஞ்சகமான
நடத்தையேயாம்: எழுகடல் படை யாவைஉம் இவன் வழியனஏ –
ஏழுசமுத்திரம்போன்ற [மிகவும் அதிகமான] சேனைகளெல்லாம் இவன்
வசத்திலுள்ளனவே: தொழுத கையுள் உம் படை உள – (பகைவர்களுடைய)
குவித்து அஞ்சலிசெய்கிற கைகளினுள்ளம் ஆயுதங்கள் இருக்குமன்றோ!
சூழ்ச்சிஉம் பெரிது – (அவர்களுடைய) சதியாலோசனையும் மிக்கதேயாம்;

     “தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னா, ரழுதகண்ணீரு
மனைத்து” என்ற திருக்குறளும், ‘பகைவர் தம் மென்மை காட்டித் தொழினும்
அழினும், அவர் குறிப்பையே நோக்கிக் காக்க வென்பதாம்’ என்ற
பரிமேலழகருரையும், “தொழுததங்கையினுள்ளுந் துறுமுடியகத்துஞ் சோர,
அழுதகண்ணீரினுள்ளு மணிகலத்தகத்தும் ஆய்ந்து, பழுதுகண் ணரிந்து
கொல்லும்படையுடனொடுங்கும் பற்றா, தொழிக யார்கண்ணுந் தேற்றந்
தெளிகுற்றார் விளிகுற்றாரே” என்ற சீவகசிந்தாமணியும் உணரத்தக்கன.
ஆல் -அசை.

சங்கை உண்டு; இனி, உண்டியும், சாந்தமும், பூணும்,
பொங்கு நுண் இழைத் துகிலும், அம் தாமமும், பூவும்,
இங்கு இவன் பரிந்து இயற்றிய கோடலம்’ என்றார்-
கங்கை நீர் தவழ் கழனி சூழ் பழன நாடு உடையார்.

சங்கை உண்டு – (இவனிடத்து நமக்குச்) சந்தேகமுள்ளது: இனி –
இனிமேல், இங்கு இவன் பரிந்து இயற்றிய – இவ்விடத்தில் இவன் (நம்பக்கல்)
அன்புடையான்போன்று அமைக்கின்றவான, உண்டிஉம் – உணவுகளையும்,
சாந்தம்உம் – சந்தனத்தையும், பூண்உம் – ஆபரணங்களையும், பொங்கு நுண்
இழை துகில்உம் – சிறந்து விளங்குகின்ற நுண்ணிய நூலினாலாகிய
ஆடைகளையும், அம் தாமம்உம் – அழகிய மாலைகளையும், பூஉம் –
மலர்களையும், கோடலம் – (ஆராயாது) கொள்ளோம்,’ என்றார் – என்று
(தமக்குள்) நிச்சயித்தார்கள்: (யாவரெனில்),- கங்கை நீர் தவழ் கழனி சூழ்
பழனம் நாடு உடையார் – கங்காநதியின்நீர் பாய்கிற கழனிகள் சூழ்ந்த
மருதநிலத்தையுடைய குருநாட்டுக்கு உரியவர்களான பாண்டவர்கள்; (எ-று.)

     அடிசில் நீர்முதலிய உண்ணப்படும் பொருள்களில், தீங்கு வராமற்
காத்தற்குஅவற்றைக் கருங்குரங்கிற்கு இட்டு ஆராய வேண்டுமென்றும்,
சந்தனம் முதலியவற்றை அரசவன்னப் பறவையின் கண்ணிலும்
சக்கரவாகப்பறவையின் முகத்திலும் உறுத்தித் தூய்மைகண்டல்லது
கைக்கொள்ளலாகாதென்றும், நஞ்சுகலந்திருப்பின் குரங்கு உண்ணாது, அன்னம்
கண்களினின்று இரத்தஞ்சொரியும், சக்கரவாகம் முகங்கடுக்கும் என்றும், இன்னும்
இதுபோலவும் சிந்தாமணி முதலிய நூல்களிற் கூறப்பட்டுள்ள விஷயம் இங்கு
அறியத்தக்கது. (“பூந்துகில் மாலை சாந்தம் புனைகலம் பஞ்சவாசம், ஆய்ந்தளந்
தியற்றப்பட்டவடிசில்நீ ரின்னவெல்லாம், மாந்தரின் மடங்க லாற்றற் பதுமுகன்
காக்கவென்றாங், கேந்துபூண்மார்ப னேவ வின்னண மியற்றி னானே” என்ற
சீவகசிந்தாமணிச் செய்யுள், இங்கு ஞாபகத்துக்கு வருகின்றது.

ஐயம் உற்று இவர் இருப்புழி, மயனினும் அதிகன்,
சையம் ஒத்த தோள் வலனுடைத் தபதியன் ஒருவன்,
வையம் முற்றுடை வீமனை ஒரு தனி வணங்கி,
‘ஐய! பட்டதை அறிந்தருள், ஆம் முறை!’ என்றான்சிற்பியொருவன் வீமனிடம் வந்து ஒரு செய்தி
சொல்லத்தொடங்கல்.

இவர் – இந்தப் பாண்டவர்கள், ஐயம் உற்று இருப்பு உழி –
(இவ்வாறு புரோசனனிடத்திற்) சந்தேகங் கொண்டிருக்கும் பொழுது,- மயனின்உம்
அதிகன் – (சிற்பத்தில் அசுரத்தச்சனான) மயனைக்காட்டிலும் மேம்பட்டவனான,
சையம் ஒத்த தோள் வலன் உடை தபதியன் ஒருவன் – மலைபோன்ற
தோள்களின் வலிமையையுடைய சிற்பியொருத்தன், வையம் முற்று உடை
வீமனை ஒரு தனி வணங்கி – பூமிமுழுவதையும் ஆளுதற்கு உரியவனான
வீமனை ஏகாந்தமான இடத்தில் (தான்) தனியனாய்வந்து கண்டு வணங்கி, – ‘ஐய
தலைவனே! பட்டத்தை – நடந்ததொருசெய்தியை, ஆம்முறை – நடந்தபடியே,
அறிந்தருள் – (நான் சொல்லக்கேட்டு) அறிந்தருள்வாயாக, ‘என்றான்-என்று
சொன்னான்;(எ-று.)- அச்செய்தி, அடுத்த மூன்றுகவிகளில் விவரமாகக்
கூறப்படும்.

     ஸ்தபதி யென்ற வடசொல், தபதியென விகாரப்பட்டது; அதன்மேல் அன் –
ஆண்பால்விகுதி. பாண்டவர்க்கு அனுகூலமாக விதுரனிட்ட கட்டளையைப் பிறர்
அறியாமல் நிறைவேற்றிய வல்லமையையுடைய சிற்பியாதலின், இவனை,
‘மயனினுமதிகன்’ என்று விசேடித்துக்கூறினார். ‘வையமுற்றுபடை’ என்று
வீமனுக்குக்கொடுத்த அடைமொழியால், ஆற்றலிற் சிறந்த அவனே
பாண்டவரைவரையுங் காக்கும் உபாயத்தைக் கூறக்கேட்டற்கு உரியவ னென்பது
தோன்றும்.  

‘நுந்தை ஏவலின், கம்மியர் நூதனமாக
இந்த மா நகர்த் திருமனை இயற்றிடு நாளின்,
வந்த மந்திரி வஞ்சனை அறிந்து, அறன் வடிவாம்
தந்தை என்னையும் ஏவினன், தன்மையின் உணர்ந்தே.-இதுமுதல் மூன்றுகவிகள் – ஒருதொடர்: அச்சிற்பி
கூறும்விவரம்

நுந்தை – உமது பெரிய தந்தையாகிய திருதராட்டிரனது, ஏவலின் –
கட்டளையினால், கம்மியர் – சிற்பிகள், நூதனம் ஆக – புதுமையாக, இந்த மா
நகர் திரு மனை இயற்றிடு நாளின் – பெரிய இந்த வாரணாவதநகரத்திலே
அழகிய இந்த மாளிகையைச்செய்தபொழுது, அறன் வடிவு ஆம் தந்தை –
தருமசொரூபியாகிய (உமது) சிறிய தந்தையான விதுரன், வந்த மந்திரி வஞ்சனை
அறிந்து – (மாளிகை கட்டுவித்தற்கு) வந்த புரோசனனென்னும் மந்திரியினது
வஞ்சனையை அறிந்து, என்னைஉம் தன்மையின் உணர்ந்து ஏவினன் –
என்னையும் என்குணத்தால் நம்பத்தக்கவனென்று அறிந்து (இம் மாளிகையமைக்குஞ்
சிற்பிகளுள் ஒருவனாயிருந்து தொழில் செய்யும் படி) கட்டளையிட்டனுப்பினான்:
(எ-று.)

      ‘அறன்வடிவாம்’ என்றது – யமனது அமிசமானவனென்ற கருத்தையும்
விளக்கும். கர்மம் – சிற்பம் முதலிய தொழில்: அதனையுடையவன், கர்மீ: இது
திரிந்து பலர்பாலில் கம்மியரென வந்தது

அடியனேனும், மற்றவருடன், அரக்கு மாளிகை இப்
படியினால் இயற்றிய தொழில் பயன் எலாம் குறித்து,
நெடிய கானகத்து அளவும் நீள் நிலவறை நெறி போய்
முடியுமாறு, ஒரு மண்டபம் கோட்டினேன், முழைபோல்

அடியனேன்உம் – (உங்கட்கு) அடியவனானநானும்,
மற்றவருடன் – மற்றைய சிற்பிகளுடனிருந்து, அரக்கு மாளிகை இ படியினால்
இயற்றிய தொழில்பயன் எலாம் குறித்து – அரக்கினால் ஒருமாளிகையை
இவ்வாறு செய்த தொழிலினால் இனிநிகழும் பயன்களை யெல்லாம் ஆலோசித்து,
நீள் நிலவறை நெறி முழை போல் போய் நெடிய கானகத்து அளவு முடியும்
ஆறு- நீண்ட நிலவறையின் வழி மலைக்குகைபோலச் சென்று நீண்ட
காட்டினிடம் வரையில் முடியும்படி, ஒரு மண்டபம் கோட்டினேன் –
(இந்தமாளிகையில்) ஒருமண்டபத்தைச் செய்தேன்; (எ-று.)

     நிலவறைநெறி – பிறர் அறியாதபடி தரையினுள் அமைந்த சுரங்க வழி.
இம்மாளிகையில் பாண்டவர்களை நம்பிக்கையுடன் இனிதுவீற்றிருக்கச்செய்து
பின்பு தீப்பற்றவைத்து அழிக்கக்கருதிய கருத்தை அறிந்தேனென்பான்,
‘தொழிற்பயனெலாங்குறித்து’ என்றான்.  

வேறு ஒருத்தரும் அறிவுறா விரகினால், ஒரு தூண்,
மாறுபட்டு நீ பறிக்கலாம்வகை வழி வகுத்தேன்;
தேறுதற்கு இது தகும் எனத் திருவுளத்து அடக்கி,
ஊறு பட்டபோது எழுந்தருள்க!’ எனப் பணிந்து உரைத்தான்

வேறு ஒருத்தர்உம் அறிவுறா விரகினால் – மற்றுஒருவரும்
அறியாத உபாயத்தால், ஒரு தூண் – (அம்மண்டபத்தில்) ஒரு துணை, நீ
மாறுபட்டு பறிக்கல் ஆம் வகை  – நீ வலிமைகொண்டு பெயர்த்தெடுத்து
விடும்படி, வழிவகுத்தேன் – அந்நிலவறைவழியைச் சார
அமைத்துவைத்துள்ளேன்; இது தேறுதற்கு தகும் என திரு உளத்து அடக்கி –
இச்செய்தி நம்பத்தக்கதென்று (உனது) திருவுள்ளத்திலே கொண்டு,
ஊறுபட்டபோது எழுந்தருள்க – தீங்கு நிகழ்ந்தபொழுது (அவ்வழியாகத்
தப்பியுய்ந்து) சென்றருள்வாயாக, என – என்று, பணிந்துஉரைத்தான் –
வணங்கிச்சொன்னான், (அந்தச்சிற்பி); (எ-று.)

     மூன்றாம்அடியில், எளிய இந்த எனதுவார்த்தை இகழத்தக்கதன்றென்றும்,
இவ்வுபாயம் அலட்சியஞ்செய்தற்கு உரியதன்றென்றும், இதனைப் பிறர்
அறியாதபடி இரகசியமாக வைத்திட வேண்டுமென்றுங் கூறியவாறாம்

தச்சரில் பெருந் தலைவனுக்கு, உரிமையின், தனங்கள்
பிச்சரின் கொடுத்து, அவன் விடைகொண்டதன் பின்னர்,
அச்சம் அற்று, ‘இவன் நம் மனைக்கு அம்மனை வழங்கும்;
நிச்சம்; இன்றுகொல், என்றுகொல்?’ என நினைந்து இருந்தான்வீமன் அவனுக்குப் பரிசளித்துப் பின்
ஜாக்கிரதையுடையனாயிருத்தல்.

(வீமன்), தச்சரில் பெருந் தலைவனுக்கு – (இவ்வாறு உய்யும்வழி
கூறிய) சிறந்த அச்சிற்பிக்கு, உரிமையின் – தகுதியினால், தனங்கள் –
செல்வங்களை, பிச்சரின் கொடுத்து – பித்தர்போலத் தலைதெரியாது
(மிகுதியாகக்) கொடுத்து,- அவன் விடை கொண்டதன் பின்னர் – அச்சிற்பி
விடைபெற்றுக்கொண்டு சென்றபின்பு,- அச்சம் அற்று – பயம் ஒழிந்து,- ‘இவன் –
இப்புரோசனன், நம் மனைக்கு அம்மனை வழங்கும் – நாம் வசிக்கும் இந்த
மாளிகையில் அக்கினியை வைப்பான்: நிச்சம் – (இது) நிச்சயம்: இன்று கொல்
என்று கொல் (இது செய்யும் நாள்) இன்றைக்கோ என்றைக்கோ? ‘ என
நினைந்துஇருந்தான் – என்று எண்ணிக்கொண்டு கவனிப்புடன் இருந்தான்;
(எ-று.)

     தச்சர் – இச்சிறப்புப்பெயர், சிற்பிகளென்றபொருளில் வந்தது.
அம் மனைக்கு – நெருப்பிற்கு, அ மனை – அந்த மாளிகையை, வழங்கும் –
ஒப்பிப்பான் என்று கூறுதலும் ஒன்று. அம்மனையென்பது- (அம் – நீர், மனை –
இடம்) நீர் பிறத்தற்குக் காரணமாயுள்ளதென்ற பொருளால்,
நெருப்பிற்குவந்ததோர் ஏதுப்பெயராம்; நெருப்பினின்று நீர் தோன்றியதென
வேதமுங் கூறும்.    

விடவி வன் சினை நெடுங் கொடி தழுவலின் மிடைந்த
அடவி எங்கணும், வேட்டையால், தங்கள் பேர் ஆண்மை
நடவி, நன் பகல் இரவு கண் துயிலலர், நடந்தார்-
புடவி தங்கள் வெண்குடை நிழல் குளிருமா புரப்போர்.-பாண்டவர் பகலில் வேட்டையாடி இரவில்
விழிப்புடன் இருத்தல்.

தங்கள் வெள் குடை நிழல் – தங்கள் வெண்கொற்றக் குடையின்
நிழலினால், புவி குளிரும் ஆ – பூமிமுழுவதுங்குளிர்ச்சியடையும்படி, புரப்போர்
– பாதுகாக்கவல்லவரான பாண்டவர்கள்,- நல் பகல் – நல்ல பகற் காலத்தில்,
விடவி வல் சினை நெடுகொடி தழுவலின் மிடைந்த அடவி எங்கண்உம் –
மரங்களின்வலிய கிளைகளிலே நீண்டகொடிகள் தழுவிப்படர்தலால்,
அடர்ந்துள்ள காடு முழுவதிலும், வேட்டையால் – வேட்டையாடுதலால்,
தங்கள்போர் ஆண்மை நடவி – தங்களுடைய சிறந்த ஆண்தன்மையை [பல
பராக்கிரமங்களை]ப் பரவச்செய்து, இரவு – இராத்திரியில், கண்துயிலலர் நடந்தார்
– கண்மூடி யுறங்காதவர்களாய் ஒழுகினார்கள்; (எ-று.)

     வேட்டையென்ற வியாஜத்தினாற் பகலையும், கண்விழிப்பினால் இரவையும்
போக்கினார் பாண்டவரென்க: இங்ஙன் இவர் செய்தது, எக்காலத்துப்
புரோசனனால் தீங்குவிளையுமோ என்ற அச்சத்தினாலாகும் விடவி= விடபீ:
விடபம் – கிளை: அதனையுடையது விடபீ. பெண்பாலாகிய கொடி
ஆண்பாலாகிய மரத்தின்கிளையைக் கொள் கொம்பாகக் கொண்டு தழுவும்
இயல்பை முதலடிவிளக்கும். ‘துயிலற’ என்றும் பாடம் உண்டு.  

பாந்தளோடு ஒரு மனைவயின் பயில்பவர் போல,
வேந்தர் ஐவரும், மந்திர வலியினால் மிக்கோர்,
காந்து நெஞ்சுடை அமைச்சனைக் கைவிடார் அணுகி,
தாம் தம் மெய் என உயிர் எனத் தனித்தனி சார்ந்தார்.-சிலகாலம் புரோசனனுடன் பாண்டவர் வசித்தல்.

மந்திரம் வலியினால் மிக்கோர் – ஆலோசனை வலிமையினால்
மேம்பட்டவர்களாகிய, வேந்தர் ஐவர்உம் – பாண்டவராசர் ஐந்துபேரும்,-
பாந்தளோடு ஒரு மனைவயின் பயில்பவர் போல – பாம்புடன் ஒருவீட்டில்
வசிப்பர்போல, காந்தும் நெஞ்சு உடை அமைச்சனை கைவிடார் அணுகி –
கொதிக்கிற மனத்தையுடைய அந்தமந்திரியை விலக்கிவிடாமல் அருகிற்கொண்டு,
தாம் தம் மெய்என உயிர் என தனி தனி சார்ந்தார் – தங்களில் தாங்கள்
உடம்பும் உயிரும் போல ஒருவரோடொருவர் கலந்திருந்தார்கள்; (எ-று.)

     ஒருவருர்க்கொருவர் இன்றியமையாத அன்பின ரென்பது நான்காமடியின்
கருத்து. மந்திரவலிமிக்கவர், பாம்போடு ஒருமனையிற் பயிலக் கூடு மென்க,
“உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள், பாம்போடுடனுறைந் தற்று” என்ற
குறள் கருத்து, முதலடியிற் காணத்தக்கது.  

ஆங்கு ஓர் கங்குலின் அழைத்து, நீடு அரசியல் உசாவி,
‘ஈங்கு, நீ துயில் வைகுதி, எம்முடன்’ என்ன,
பாங்கர் மெல் அணைப் பள்ளியும் பரிவு உற வழங்கி,
தாங்களும் பொலஞ் சேக்கையில் தங்கினர் அன்றே.-பாண்டவர் ஒருநாளிரவிற் புரோசனை அருகிற்
படுக்கவைத்தல்.

ஆங்கு-அங்ஙனம்நிகழும் நாள்களுள், (பாண்டவர்கள்), – ஓர்
கங்குலின் – ஓர் இரவில், அழைத்து – (புரோசனனை) அழைத்து, நீடு
அரசுஇயல் உசாவி – பெரிய அரசாட்சிமுறைமையைக் குறித்து (வெகுநேரம்
அவனுடன்) ஆராய்ந்து,(பின்பு), நீ ஈங்கு எம்முடன் துயில் வைகுதி என்ன – ‘நீ
இவ்விடத்தில் எங்களோடு நித்திரை செய்வாய்’ என்றுசொல்லி,- பாங்கர் –
(தங்கள்) பக்கத்தில், மெல் அணை பள்ளிஉம் பரிவு உற வழங்கி – மெல்லிய
மெத்தைப்படுக்கையையும் அன்புமிகக்கொடுத்து, தாங்களும்-, பொலம்
சேக்கையில் தங்கினர் – அழகிய படுக்கையிற் படுத்தார்கள்;(எ-று.)

     காரணமின்றி யழைத்து ‘எம் அருகிற் பள்ளிகொள்க’ என்று கூறின்
ஐயமுறுவா னென்றுகருதி, அரசியலுசாவுவார் போன்று அழைத்து நெடும்பொழுது
உசாவிப் பின்பு அங்ஙன் கூறினரென்க.

உணர்வு அறத் துயில் உற்ற போது, அற்றம் அங்கு உணரா,
துணைவரை, ‘திருத் தாய் பதம் தொழுக!’ எனச் சொல்லி,
அணி கொள் கோயிலைத் தாதை நண்பனுக்கு இரை அளித்தான்-
இணை இலா அமுது உரகர் கோனிடை நுகர்ந்து இருந்தான்வீமன் அரக்குமாளிகையில் தீப்பற்றவைத்தல்.

உணர்வு அற துயில் உற்ற போது – (புரோசனன்) உணர்ச்சி நீங்க
நித்திரை செய்தபொழுது,- இணை இலா அமுது உரகர் கோனிடை நுகர்ந்து
இருந்தான் – ஒப்பற்ற அமிருதத்தைச் சர்ப்பராசனான வாசுகியினிடத்தில் (பெற்று)
உண்டு (அவன்நகரத்திற் சிலநாள்) இருந்தவனான வீமசேனன்,- அங்கு அற்றம்
உணரா – அப்பொழுது சமயமென்று அறிந்து,- துணைவரை திருதாய்பதம் தொழுக
என சொல்லி – (தனது) உடன்பிறந்தவர்களைச் சிறந்த தாயாகிய குந்தியினது
பாதங்களை வணங்குவீராக வென்று சொல்லி, – அணிகொள் கோயிலை –
அழகுபொருந்திய அந்த மாளிகையை, தாதை நண்பனுக்கு இரை அளித்தான் –
தனது பிதாவாகிய வாயுவினது சிநேகிதனான அக்கினிதேவனுக்கு உணவாகக்
கொடுத்தான்; (எ-று.)

     எரித்தா னென்ற பொருளை ‘தாதைநண்பனுக்கு இரையளித்தான்’ என
வேறு வாய்பாட்டாற் கூறினது, பிறிதினவிற்சியணி. தனது தந்தையின்
ஒருநண்பனான வாசுகியினிடத்து அமிருதம் பெற்று உண்ட வீமன் அத்தகைய
கடப்பாடுவழுவாமல் தனது தந்தையின் மற்றொரு நண்பனுக்கு
உணவளித்தனனென ஒருவகைச் சமத்காரம் நிகழக் கூறுவார், ‘தாதைநண்பனுக்
கிரையளித்தான் இணையிலா வமுது உரகர்கோனிடை நுகர்ந்திருந்தான்’ என்றார்.
தனது உடன்பிறந்தவர் நால்வரையும் தாயையும் ஒருங்கே உடன்கொண்டு
வெளிச்செல்லக் கருதின னாதலின், தனித்தனி படுத்திருந்த அவர்களை ஒருங்கே
தாயிருக்குமிடத்திற் சேர்த்தற்கு, ‘தாய்பதந்தொழுக’ என்றுசொல்லினான்

முடியுடைத் தடங் கிரியினை முளி கழைதொறும் உற்று,
அடிநிலத்து உறச் சூழ்வருமாறுபோல், அழலோன்,
கொடி நிரைத்த பொன் கோபுரப் புரிசை சூழ் கோயில்
இடி இடித்தென வெடிபடச் சிரித்து எழுந்து, எரித்தான்.-அரக்குமாளிகை எரிந்தொழிதல்.

அழலோன் – அக்கினிதேவன்,- முடி உடை தட கிரியினை –
சிகரத்தையுடைய பெரியமலையை, முளி கழைதொறும் உற்று – (அதிலுள்ள)
உலர்ந்த மூங்கில்களி லெங்கும்பொருந்தி, அடி நிலத்து உற – அடிப்பரப்பிலே
பொருந்த, சூழ்வரும் ஆறு போல் – சூழ்ந்திடும் விதம்போல,- கொடி நிரைத்த
பொன் கோபுரம் புரிசை சூழ் கோயில் – கொடிகள் வரிசையாகக் கட்டப்பட்ட
அழகிய கோபுரத்தையுடைய மதில்சூழ்ந்த அந்த இராசகிருகத்தை, இடி இடித்து
என வெடி பட சிரித்து எழுந்து எரித்தான் – இடியிடித்தாற்போலப்
பேரொலியுண்டாக நகைத்து எழுந்து எரித்திட்டான்;

     மலையின் தாழ்வரையில் சுற்றிலுமுள்ள காய்ந்த மூங்கிற்காட்டில் தீப்பற்றி
யெரிதல்போல், உயர்ந்த அம்மாளிகையைச் சுற்றிலுமுள்ள கொடிகள் கட்டிய
மதில்களி லெங்கும் தீப்பற்றி யெழுந்து அம்மாளிகையை எரித்ததென்க.
அங்ஙனம் எரிக்கையில் உண்டாகிற போரொலியையே வீரத்தெழுந்த
வெகுளிநகையாகக் கற்பித்து வருணிப்பார், ‘இடியிடித்தென வெடிபடச்
சிரித்தெழுந்தான்’ என்றார்; தற்குறிப்பேற்றம். 

அக் கணத்திடை, அன்னையில் அணுகி, ஆங்கு அவரை,
தொக்க சித்திரத் தூண் அடித் துவாரமே வழியா,
பொக்கெனக் கொடு போய், அகல் வனத்திடைப் புகுந்தான்-
முக் கண் அற்புதன் முனிந்த ஊர் மூவரோடு ஒப்பான்.-வீமன் துணைவரையுந் தாயையும் உடன்கொண்டு செல்லல்.

முக்கண் அற்புதன் முனிந்த ஊர் மூவரோடு ஒப்பான் – மூன்று
திருக்கண்களையுடைய விசித்திரசக்தியுடையவனான சிவபிரான் கோபித்து எரித்த
திரிபுரத்தில் (எரியாது தப்பிய) மூன்று அரசர்களோடு ஒப்பவனாகிற வீமசேனன்,
அ கணத்திடை – அந்தக் கணப்பொழுதிலே, அன்னையில் அணுகி –
தாயினிடஞ்சென்று, ஆங்கு அவரை – அவ்விடத்திலுள்ள அவரெல்லோரையும்,
பொக்கென கொடு – விரைவாக உடன்கொண்டு, தொக்க சித்திரம் தூண் அடி
துவாரம்ஏ வழி ஆ போய்-மிக்க சித்திரங்களையுடைய ஒரு தூணின் கீழுள்ள
சுரங்கமே வழியாகச் சென்று, அகல் வனத்திடை புகுந்தான் – பரந்த
இடிம்பவனத்திற் சேர்ந்தான்; (எ-று.)

     அவரைக் கொடுபோய் அகல்வனத்திடைப் புகுந்த விவரம் அடுத்த
சருக்கத்தின் இரண்டாங்கவியில் விளங்கும். சிவபிரான் திரிபுரசங்காரஞ்
செய்தபொழுது மற்றை யசுரர்கள்போலச் சினனது உபதேசத்தாலும் புத்தனது
போதனையாலும் சிவத்துவேஷிகளாகாமல் சிவபக்திமுதிர்ந்திருந்ததனால் சுதர்மன்
சுசீலன் சுபுத்தி என்ற மூன்று அசுரர்கள் அந்நகைத்தீக்கு இலக்காகாமல் தப்பிப்
பிழைத்துச் சிவபிரானை வேண்டி அக்கடவுளருளால் அவனது கோயில்வாயில்
காக்கும் பணியைப் பெற்றன ரென்று அறிக. “முப்புரங்களை முக்கணன்
முனிந்தநாள் மூவரம்முழுத்தீயில், தப்பினருளார்” என்பர், மேல்
காண்டவதகனச்சருக்கத்தும். அம்மூவர் திரிபுரத் தெரியினின்று தப்பியுய்ந்தமை
போல, வீமன் அரக்கு மாளிகைத்தீயினின்று தப்பியுய்தலால், ‘முக்கணற்புதன்
முனிந்தவூர் மூவரோடொப்பான்’ என்றார். 

புரிந்த தீயினைக் கண்ணின் நீர் அவித்திடப் புகுந்து,
பரிந்த நெஞ்சினை மீண்டும் அப் பாவகன் சுடவே,
கரிந்த கோயிலில் கார் இருள் புலர்ந்த பின் கண்டோர்,
‘எரிந்து வீழ்ந்தனர், ஐவரும் யாயும், ஈண்டு’ என்றார்.-கண்டவர் பாண்டவரும் குந்தியும் எரிந்தன
ரென்றல்.

கார் இருள் புலர்ந்த பின் – கரிய இருள் நீங்கிப்
பொழுதுவிடிந்தபின்பு-, புரிந்த தீயினை கண்ணின் நீர் அவித்திட-பற்றிய
நெருப்பை(த் தங்கள்) கண்களினின்று பெருகும் சோகநீர் தணிக்கும்படி,
கரிந்தகோயிலில் புகுந்து – தீந்துபோன அம்மாளிகையினுள்ளே பிரவேசித்து,-
மீண்டுஉம் – அங்ஙனம் அவிந்தபின்பும், அ பாவகன் – அந்த அரக்குமாளிகை
நெருப்பு, பரிந்த நெஞ்சினை – (பாண்டவர்பக்கல்) அன்புகொண்ட (தங்கள்)
மனத்தை, சுட – வருத்த, கண்டோர் – பார்த்தவர்களெல்லோரும்,- ஐவர்உம்
யாய்உம் ஈண்டு எரிந்து வீழ்ந்தனர் என்றார்- ‘பஞ்சபாண்டவர்களும் அவர்கள்
தாயான குந்தியும் இங்கு எரிந்தொழிந்தனர்’ என்றே சிந்தித்தார்கள்; (எ-று.)

     பொழுதுவிடிந்தபோது எரிந்துபோன மாளிகையை வந்து பார்க்கையில்,
ஊரவர்களின் கண்களினின்று பெருகிய நீரினால் அந் நெருப்பு அவிந்தது என்ற
உயர்வுநவிற்சியணியால், பாண்டவர்கள் பக்கல் மிக்க அன்பு கொண்ட
அந்நகரத்துச் சனங்களது சோகக்கண்ணீர்ப்பெருக்கின் மிகுதியைக்கூறியவாறு.
வேடர் ஐவரும் அவர்கள் தாயும் எரிந்துகிடந்ததைக்கண்டு பாண்டவரைவரும்
குந்தியும் எரிந்து கிடந்தன ரென்று கருதின ரென்க; அத்தன்மை, அடுத்த கவியில்
விளங்கும். இறந்தனரென்ற பொருளில் ‘வீழ்ந்தனர்’ என்றது, மங்கலவழக்கு.
இரண்டாம் அடிக்கு – நெருப்பு மாளிகையைச் சுட்டதன்றி, மீண்டும் இரங்கிய
தம்மனத்தைச் சுட என்று நயந்தோன்றக்கூறினார்.

விருந்தராய், விடம் இடச் செல் ஐவேடரும், தாயும்,
இருந்த தீ மதி அமைச்சனோடு இறந்தமை உணரார்,
திருந்து மா மதிப் பாண்டவர் செயலும் மற்று அறியார்,
வருந்தினார், தமது உயிர் இழந்தென-புவி மன்னர்.-இச்செய்தியறிந்து அரசர்கள்பலரும் வருந்துதல்.

புவி மன்னர் – பூமியிலுள்ள அரசர்கள்,- விருந்தர் ஆய் விடம்
இட செல் – புதியவர்களாய் (த் துரியோதனன் கட்டளையின்படி பாண்டவர்க்கு)
விஷங்கொடுக்க வந்த, ஐ வேடர்உம் – ஐந்து வேடர்களும், தாய்உம் –
(அவர்கள்) தாயான வேட்டுவச்சியும், இருந்த தீ மதி அமைச்சனோடு –
(முன்னமே அங்கு) இருந்த துர்ப்புத்தியுடைய மந்திரியாகிய புரோசனனுடனே,
இறந்தமை – மரித்ததை. உணரார் – அறியாவர்களாய்,- மற்று -மற்றும், திருந்து
மா மதி பாண்டவர் செயல்உம் அறியார் – திருத்தமுற்ற சிறந்த அறிவையுடைய
பாண்டவரது செய்கையும் அறியாதவர்களாய், – தமது உயிர் இழந்து என
வருந்தினார் – (பாண்டவரை யிழந்தோ மென்றே கருதியதனால்) தமது உயிரை
யிழந்தாற்போல வருந்தினார்கள்;

     பாண்டவர்க்கு விஷங்கலந்த தேனைக் கொடுத்துக் கொல்லும் படி
துரியோதனனால் அனுப்பப்பட்ட ஐந்து வேடர்களும் அவர்கள் தாயும் அன்று
அங்கு வந்திருந்து தீயின்வாய்ப்பட்டு இறந்தன ரென்பதை இதனால் அறிக.
விருந்தர் = விருந்தினர். மற்று – வினை மாற்றுமாம். பாண்டவர்செயல் –
அரக்குமாயிகையைத் தீக்கொளுவித் தப்பிச்சென்று உய்ந்தமை

போது பட்டு, இருள் புகுந்து, ஒளி போன வானகம்போல்,
மாது பட்ட பார்மடந்தைதன் மதிமுகம் மழுங்க,
தீது பட்டது, குருகுலச் செல்வம்!’ என்று இரங்கி,
ஏது பட்டன, முனிவரர் முதலினோர் இதயம்!-இச்செய்தியறிந்த முனிவர்கள் முதலியோர் வருத்தம்.

முனிவரர் முதலினோர் இதயம் – சிறந்த இருடிகள்
முதலானவர்களுடைய மனங்கள், ‘போது பட்டு – பொழுது சாய [சூரியன்
அஸ்தமிக்க], இருள்  புகுந்து – இருள் வர, ஒளி போன – ஒளி நீங்கிய, வான்
அகம் போல்-ஆகாயம்போல, மாது பட்ட பார் மடந்தை தன் மதி முகம் மழுங்க
– அழகுபொருந்திய பூமிதேவியினது சந்திரன்போன்ற முகம் ஒளிமழுங்கும்படி,
குருகுலம் செல்வம் தீதுபட்டது – குருகுலத்தினது செல்வம் பழுதுபட்டது,’
என்று-, இரங்கி – விசனமுற்று, ஏது பட்டன – என்ன பாடுபட்டன! (எ-று.)

     பாண்டவர் அழிவை, குருகுலச்செல்வம் அழிந்ததெனக் குறித்தார்; செல்வம்
– சிறந்தசந்ததி. பட்டு, புகுந்து – எச்சத்திரிபு.

கொட்பு அனல் சுட இறந்தமை கேட்டலும், குருக்கள்
துட்பதத்துடன் அழுதிடும் சுயோதனன் முதலோர்,-
உள் பனித்து, மேல் வெயில் உற வெதும்பு நீர் ஒத்தார்-
பெட்பு உறப் புவி முழுவதும் பெறும் கருத்து உடையோர்.-இச்செய்தியறிந்த துரியோதனாதியர் நிலை.

கொட்பு அனல் சுட – சூழ் தலையுடையதீ எரிக்க, இறந்தமை –
(பாண்டவர்) இறந்த செய்தியை, கேட்டலும் – கேட்டறிந்தவுடனே, –
துட்பதத்துடன் அழுதிடும் – கொடிய கோட்பாட்டோடு புலம்புகின்ற, சுயோதனன்
முதலோர் குருக்கள் – துரியோதனன் முதலியகுருகுலகுமாரர்கள்,- பெட்பு உற
புவிமுழுவதுஉம் பெறும் கருத்து உடையோர் – ஆசைமிகப் பூமிமுழுவதையும்
பெறும் எண்ணத்தை யுடையவர்களாய், வெயில் உற உள் பனித்து மேல்
வெதும்பும் நீர் ஒத்தார்- (மேலே) வெயில்படுகையில் உள்ளே குளிர்ந்து
மேலேசுடும் இயல்பையுடைய நீரைப் போன்றார்கள்;

     துரியோதனாதியர் அகத்தில் மகிழ்ச்சிகொண்டு புறத்தில் தபிப்புக்காட்டினர்
என்பதாம். அப்பொழுது அவர்கட்கு மகிழ்ச்சி இயற்கையும், சோகம்
செயற்கையுமாய் நின்றமை, உவமையால் விளங்கும். துஷ்பதம் -வடசொல்–

பொன் நலம் கொள, மெழுகினால் ஆலயம் புனைந்து,
துன்னு வெங் கதைப் படை மருச் சுதனையே சுடுவான்,
என்ன ஆண்மைகொல் எண்ணினான்? எண்ணினும், சுடுமோ,
வன்னி தன் பெயர் மருச்சகன் என்பது மறந்தே?உண்மையிற்பாண்டவர் எரிந்திடாமைப்பற்றிய
கவிவர்ணனை.

பொன் நலம் கொள – (வெளியே)பொன்னுக்குஉரிய அழகு
விளங்கும்படி, மெழுகினால் ஆலயம் புனைந்து – அரக்கினால் மாளிகையைச்
செய்து, துன்னு வெம் கதை படை மருத் சுதனைஏ சுடுவான் – பொருந்திய
கொடிய (சத்துருகாதினியென்னும்) கதாயுதத்தையுடைய வாயுகுமாரனாகிய
வீமனையே சுடும்படி, எண்ணினான் – (துரியோதனன்) கருதினான்: (அங்ஙனங்
கருதியது), என்ன ஆண்மைகொல் – என்ன ஆண்திறமையோ? எண்ணின்உம் –
(அவ்வாறு அவன்) நினைத்தாலும், வன்னி – அக்கினி, தன் பெயர் மருத்தசகன்
என்பது மறந்து – தனது பெயர் காற்றின் சகாயனென்பதை மறந்து, சுடும்ஓ –
(அவ்வாயுகுமாரனை) எரித்திடுமோ? (எ-று.)

     துரியோதனனுக்கு நேரெதிரியான வீமன் தப்பியுய்ந்தன னென்ற
உண்மையை, காற்றின் நண்பனான அக்கினிதேவன் அக்காற்றின் மகனை
எரித்திடானென வருணித்தார்; இது – ஏதுத்தற்குறிப்பேற்றவணியின் பாற்படும்.
மருத்ஸு தன், மருத்ஸக: என்ற வடமொழிப்பெயர்கள் திரிந்தன.

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ.வில்லிபாரதம் – முதல் பாகம் -02. சம்பவச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 10, 2023

இறந்த மைந்தனுக்கு உரிய, தென்புலத்தவர் யாவரும்
களி கூர,
சிறந்த நான்மறை விதியினால், உலகியல் செய்தபின்,
செழுந் திங்கள்
மறைந்த யாமினி நிகர் எனக் குருகுல மன் மயக்குறும்
எல்லை,
அறம் தவாவகை துறந்த வாள் அரசனுக்கு அன்னை, மற்று
இது சொன்னாள்;-வீடுமனிடம் தாய் சத்தியவதி தேவர நீதியில் கொழுந்தியர்க்கு மகவு அளிக்கக் கூறல்–இறந்தமைந்தனுக்குச் செய்யவேண்டிய சடங்குகளைச் செய்தபின், வீடுமன் வருந்துகையில், தாய் கூறத் தொடங்கல்.

இறந்த மைந்தனுக்கு – (க்ஷய ரோகத்தால்) இறந்திட்ட
விசித்திரவீரியனுக்கு, உரிய – செய்யவேண்டிய சடங்குகளை, 
தென்புலத்தவர்
யாவர்உம் களி கூர – தென்திசையிலுள்ளவரான பிதிருதேவதைகள்எல்லாரும்
மகிழ்ச்சிமிக, சிறந்த நான்மறை விதியினால் – சிறப்புற்ற வேதவிதிப்படி,உலகு இயல்
– உலகில் நிகழும் இயல்பின்படியே, செய்தபின்-,- செழுந்திங்கள்மறைந்த யாமினி
நிகர் என – விளங்குந் தன்மையுள்ள சந்திரன் மறையப் பெற்ற இரவுஒப்பு
என்னுமாறு, குரு குலம் மன் – குருகுலத்தலைவனான வீடுமன், மயக்குஉறும்எல்லை
– சோகமயக்கத்தை அடையும்போது,- அறம்தவா வகை – (பிதாவின்விருப்பத்தை
நிறைவேற்றுதலென்ற) தருமம் தவறாதவாறு, துறந்த -(மண்பெண்ணாசைகளைத்)
துறந்தவனான, வாள் – ஒளிபொருந்திய, அரசனுக்கு -வீடுமராசனுக்கு, அன்னை –
சந்தனுவின் மனைவியான காளி. மற்று-பின்பு, இது-இவ்வார்த்தைகளை,
சொன்னாள்-; (எ -று.)- அன்னை சொல்லியதை, மேலிருகவிகளிற் காண்க.

     உரிய – பெயர்: பெயரெச்சமெனக்கொண்டு, உலகியல் – சடங்கு என்றுமாம்.
விசித்திரவீரியனிறந்த துயரினால் மயங்கும் வீடுமனுக்கு, சந்திரன் நீங்கியதனாலான
இருளினால் விளக்கமற்றிருக்கும் யாமினி உவமை. துறந்து வாழரசனுக்குஎன்றும்பாடம்.  

மைந்த! கேட்டி: நின் துணைவன் வான் அடைந்தபின்,
‘மதி முதல்’ எனத் தக்க
இந்த மா மரபு, அரும் பனிப்பகைச் சிரத்து எழிலிஒத்தது
மன்னோ!
முந்தை நான்மறை முதலிய நூல்களின் முறைமை
நீ உணர்கிற்றி;
எந்த நீர்மையின் உய்வது? என்று அறிகிலேன்; இடரினுக்கு
இருப்பு ஆனேன்.-இதுவும் அடுத்த கவியும் – ஒருதொடர்:காளி கொழுந்தி
யரிடத்து மகவை யுண்டாக்குமாறு வீடுமனிடம் சொல்ல,
வீடுமன் மறுத்துக்கூறலைத் தெரிவிக்கும்.

மைந்த – குமாரனே! கேட்டி – கேட்பாய்: நின் துணைவன் – உனது
உடன்பிறந்தான், வான் அடைந்தபின் – விண்ணுலகத்தை யடைந்தபின்பு, ‘மதி
முதல்சந்திரனே குலமுதல்வன்,’ என தக்க – என்று சொல்லுந் தகுதிபெற்ற, இந்த
மா மரபு – இந்தச்சிறந்தவமிசமானது, (இடையறாமைக்குக் காரணமான
புதல்வரையில்லாமையால்),எழிலி சிரத்து – முகிலின்மேல், [மேகத்தினால்
மறைக்கப்பட்ட என்றபடி], அரும்பனிபகை-சூரியனை, ஒத்தது – நீ-, முந்தை
நான்மறை முதலிய நூல்களின் முறைமைஉணர்கிற்றி-பழமையான நான்குவேதம்
முதலிய நூல்களின்முறைமையையுணரவல்லாய்: எந்த நீர்மையின் உய்வது –
எந்தமுறைமையினால்(இந்தக்குலம்) அழியாமல் நிற்கவல்லது? என்று –
என்பதைபற்றி, அறிகிலேன் -அறியும்வல்லமையில்லேன்: (அதனால்), இடரினுக்கு-
துன்பத்திற்கு, இருப்பு ஆனேன்- இருப்பிடமானேன்; (எ-று.)- மன்ஓ – அசை.

     சூரியன் மேகத்தினால் மறைப்புண்டு மழுங்கிக்கிடப்பதுபோல, உன் தம்பி
யிறந்தபின் இந்தச்சந்திரகுலம் மழுங்கிக்கிடக்கின்றதென்பது,
முதலிரண்டடியின்பொருள். “அரும்பனியச்சிரத்து” என்ற பாடத்துக்கு –
பனியைக்கொண்ட முன்பனிக்காலத்து,எழிலி [மேகத்தை] யொத்தது என்க:
முன்பனிக்காலம் பனியால்மூடி மழுங்கியிருக்குமென்க.அச்சிரம் – முன்பனிக்காலம்

‘ஈண்டு தேவர நீதியின் கொழுந்தியர் எழில் மகப்
பெற, நின்னால்
வேண்டுமால்; இது, தாயர் சொல் புரிதலின் விரதமும்
கெடாது’ என்ன,
மூண்டு வான் உருமு எறிந்த பேர் அரவு என முரிந்து,
இரு செவி பொத்தி,
‘மீண்டு மா நதி வயின்மிசைப் புரியின், என் விரதமும்
தபும்’ என்றான்.

( ‘இந்த எனதுதுன்பம்நீங்க), ஈண்டு – இப்போது, தேவரநீதியின் –
தேவரனால் [கணவனுடன்பிறந்தவனால்] சந்ததியை வளர்த்தாலாகிற ஓர்
முறைமைப்படியே, நின்னால்-, கொழுந்தியர் – உடன்பிறந்தானுடையமனைவிமார்,
எழில் மக பெறவேண்டும் – அழகிய புத்திரரைப் பெறவேண்டும்: இது –
இச்செயல்,தாயர் சொல் புரிதலின் – தாய்சொல்லியதைச் செய்யுஞ்செயலாதலால்,
விரதம்உம்கெடாது – (பெண்களைமணவாமையாகிய) உன்னுடைய நோன்பும்
கெட்டிடாது,’ என்ன- என்று கூற,- வான் உருமு- மேகத்தினின்று தோன்றும்
இடி, மூண்டு-, எறிந்த-எறியப்பட்ட, பேர் அரவுஎன – பெரியசருப்பம்போல,
முரிந்து – (மனம்) கெட்டு, இருசெவி பொத்தி – (தனது) இரண்டுகாதுகளையும்
(கைகளால்) மூடிக்கொண்டு, மீண்டு மாநதி வயின்மிசை – மறுபடியும்
சிறந்தநதியாகிய கங்கையின் வயிற்றிலே, புரியின் -விரும்பிச் சென்று
பிறப்பதனால், (அப்போது), என் விரதம்உம் தபும் – இந்தஎன்விரதமும் ஒழியும்,
என்றான் – என்ற கூறினன், (வீடுமன்); (எ -று.) – ஆல் -அசை.

     பூமியிற்சென்று பெண்ணின்பமற்றிருக்குமாறு சாபம்பெற்ற நான்
பெண்ணின்பமடைந்தால், இந்தப்பிறவியால் சாபத்தின் பயனை நுகராமையால்,
சாபத்தின்பயனைப்பெறுமாறு மீண்டும் பிறக்கவேண்டுவதே யென்றனன் வீடும
னென்க. நெருப்பு தன்வெம்மையை விடுமானால் அப்போது கங்கை மகன்
தன்பிரதிஜ்ஞையைவிடுவான்என்று கூறியதாகப் பாலபாரதத்திலுள்ளது.
தேவரநீதியென்பது – கணவனையிழந்துமகப்பெறாத கைம்பெண்ணானவள்
சந்ததிவிருத்தியின்பொருட்டுத் தேவரனோடு[தேவரன் – கணவனுடன் பிறந்தவன்]
சேர்ந்து மகப்பெறலா மென்ற முறைமை.

மழு எனும் படை இராமனால் மனுகுலம் மடிந்துழி,
அவர் தம்தம்
பழுது இல் மங்கையர் முனிவரர் அருளினால் பயந்தனர்
மகவு என்பர்;
எழுது நல் நெறி முறைமையின் விளைப்பதே இயற்கை’
என்று இரு கையால்
தொழுது, சொன்னபின், மனம் தெளிந்து, அன்னையும்
தோன்றலுக்கு உரைசெய்வாள்:-‘முனிவரால் மகப் பேறு அடைதலே முறை’ என வீடுமன் உரைத்தல்-பரசுராமனால் க்ஷத்திரியகுலம் அற்றுப்போவதாயிருந்த நிலையில் முனிவரால் அரசமாதர் மகவைப்பெற்றாற்போற் செய்விப்பதே முறையென்று வீடுமன் தெரிவித்தல்.

மழு என்னும் படை இராமனால் – மழுவெனப்படுகின்ற
படைக்கலத்தையுடைய பரசுராமனால், மனு குலம் மடிந்தஉழி –
மனுவினிடத்துநின்றுதோன்றிய குலம் அழிந்திட்டபோது, அவர் தத்தம் பழுது
இல் -மங்கையர் – அந்தமனுக்குலத்தைச்சேர்ந்த மன்னவருடைய குற்றமற்ற
மனைவிமார்,முனிவரர் அருளினால் – முனிச்சிரேஷ்டரின் கருணையினால், மகவு
பயந்தனர் என்பர் – மகவைப் பெற்றுக்கொண்டனரென்றுகூறுவர்: எழுது –
(ஸ்மிருதிகளில்) எழுதியுள்ள, நல் நெறிமுறைமையின் – நல்லவழியின்
முறைமையினால், விளைப்பதுஏ- (சந்ததியைக்) கிளைக்கச்செய்வதே, இயற்கை –
இயற்கையானசெயலாம்: என்று-, இருகையால் தொழுது- (தன்) இரண்டுகைகளாலும்
(தாயை) வணங்கி, சொன்னபின் – சொன்ன பிறகு,- மனம் தெளிந்து –
மனந்தெளியப்பெற்று, அவனைஉம் – தாயும், தோன்றலுக்கு- விளங்குபவனான
வீடுமனுக்கு, உரைசெய்வாள் – பின்வருமாறு சொல்பவளானாள்;(எ-று.)- அன்னை
சொல்வதை, மேல் நான்குகவிகளிற் காண்க.

     இருபத்தொருகால் அரசகுலத்தைக் கருவறுத்தபரசுராமனால் மனுகுலம்
மடிவதாயிருந்த நிலையில், முனிவரரைக்கொண்டு அந்தக் குலத்தை
அழிவுறாதவாறுமகவை அரசமகளிர் பெற்றதுபோலக் குலத்தையுண்டாக்குவதே
முறை யென்றுவீடுமன் சொன்னானாக, காளியும் மனந்தெளிந்து வீடுமனிடம் தான்
கருதியதைக்கூறலாயின ளென்க. க்ஷத்திரியமகளிர் காமவிச்சையினாலன்றிக் குல
விருத்திக்காகமுனிவரைச்சேர்ந்தது சாஸ்திரசம்மதமாதலால் கற்புக்கிழுக்காகாது
ஆதலால், அவரை ‘பழுதின் மங்கையர்’ என்றது.

பருதி தந்த மா நதி மருங்கு, ஒரு பகல், பராசரன்
மகப்பேறு
கருதி வந்து, கண்டு, என்னையும் எனது மெய்க் கமழ்
புலவையும் மாற்றி,
சுருதி வாய்மையின் யோசனைப் பரப்பு எழு சுகந்தமும்
எனக்கு ஈந்து,
‘வருதி நீ’ எனப் பனியினால் மறைத்து, ஒரு வண் துறைக்
குறை சேர்ந்தான்.-சத்தியவதி தனக்குப் பிறந்த முதற் புதல்வன்
வியாதனைக் குறித்துக் கூறுதல்- மூன்றுகவிகளால், காளி தன் பாலியசரிதைசொல்லி வியாசனாற்
குலத்தையுண்டாக்கிக்கொள்ளக் கருதியமை கூறுகின்றாள்:-

நான்குகவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) பரிதி தந்த மா நதி மருங்கு – சூரியன்பெற்ற சிறந்த நதியாகிய
யமுனையினருகே, ஒருபகல் – ஒருநாள், பராசரன் – பராசரனென்றமுனிவன், மக
பேறுகருதி – ஒருமகனைப்பெறுதலை யெண்ணி, வந்து-, என்னைஉம் கண்டு –
என்னைப்பார்த்து, எனது மெய் கமழ் புலவைஉம் மாற்றி – எனது உடம்பிலிருந்து
வீசுகின்ற புலால் நாற்றத்தையும் போக்கி, சுருதி வாய்மையின் – வேதம் போன்ற
(தனது) உண்மைவாக்கினால், யோசனை பரப்பு எழு சுகந்தம்உம் – யோசனை
யகலம்வீசுகின்ற நறுமணமும், எனக்குஈந்து – எனக்குக்கொடுத்து, நீ வருதி என –
நீஇங்குவருக என்று (என்னைத்தன்னருகு) அழைத்து, பனியினால் மறைத்து –
பனியினால் (பிறருக்குத் தெரியாதவாறு) மறையும்படிசெய்து, ஒரு வள்துறை குறை-
ஒருவளப்பமுள்ள நீரிறங்கு துறையோடுகூடிய திட்டில், சேர்ந்தான் – (என்னுடன்)
கலந்தான்; (எ-று.)

     மச்சத்தின்வயிற்றிற் பிறந்ததனால் மச்சகந்தியாயிருந்த என்னைப் பராசரன்
யோசனகந்தியாக்கி, என்னை யமுனைத்திட்டிற் கூடினனென்பதாம். அத்தீவு
கருநிறமுள்ளது ஆதலால், ‘க்ருஷ்ணத் வீபம்’ எனப்படும்: அந்தத்தீவில்
தோன்றியதனால், வியாசர் க்ருஷ்ணத்வைபாயநர்’ எனப்படுவர்

முரண் நிறைந்த மெய்க் கேள்வியோன் அருளினால்
முஞ்சியும், புரிநூலும்,
இரணியம் செழுங் கொழுந்து விட்டனவென இலங்கு
வேணியும், தானும்,
தரணி எங்கணும் வியாதன் என்று உரை கெழு தபோதன
முனி அப்போது
அரணியின் புறத்து அனல் என, என்வயின் அவதரித்தனன்
அம்மா!

முரண் நிறைந்த – வலிமை மிகுந்த, மெய் கேள்வி யோன் –
உண்மையான நூற்கேள்வியையுடையனான அந்தப்பராசரனது, அருளினால் –
கருணையினால், முஞ்சிஉம் – (இடையிற்கட்டிய) முஞ்சிப்புல்லினாலாகிய நாணும்,
புரிநூல்உம் – வெண்புரி நூலும், இரணியம் செழு கொழுந்து விட்டன என
இலங்குவேணிஉம் – சுவர்ணம் செழுமையோடு கொழுந்துவிட்டெரிகின்றன
என்றுசொல்லும்படி. விளங்குகின்ற ஜடையும், (ஆகிய இவற்றுடனே), தான்உம் –
தானுமாக,தரணி எங்கண்உம் – பூமிமுழுவதிலும், வியாதன் என்று –
வ்யாஸனென்றுபேர்சொல்லப்பட்டு, உரை கெழு – கீர்த்தி விளங்கிய,
தபோதனமுனி -தவத்தையேசெல்வமாகக் கொள்ளும் முனிவன், அப்போது-,
அரணியின் புறத்துஅனல் என – அரணிக்கட்டையின்வெளியிலே
(அதனிடத்தினின்று) அனல்தோன்றுவதுபோல, என் வயின் – என்னிடத்தினின்று,
அவதரித்தனன்-; (எ-று.)

     காளிவயிற்றினின்று வெளிப்பிறந்த வியாசனுக்கு,அரணிக்
கட்டையினின்றுதோன்றிய அனல் உவமையாகும். அரணி – தீக்கடைகோல்.
அம்மா – வியப்பிடைச்சொல்: பிறக்கும்போதே பிரமசாரியர்க்குரிய வேஷத்துடனே
அத்துணைவளர்ந்த புதல்வனாகத் தோன்றியமைபற்றி  வியந்தவாறு.

சென்னியால் எனை வணங்கி, ‘யாதொரு பகல் சிந்தி;
நீ சிந்திக்கும்
முன், யான் அருகு உறுவல்’ என்று உரைசெய, முனிமகன்;
முனி, ‘மீளக்
கன்னி ஆக’ என விதித்து, உடன் கரந்தனன்; கையறு
கனிட்டன்தன்
பன்னியானவரிடத்தினில் அவன் வரின், பலித்திடும் நினைவு
அன்றே,

முனிமகன் – அந்தப்பிறந்த ரிஷிகுமாரன், சென்னியால் – (தனது)
சிரசினால், எனைவணங்கி – என்னைப்பணிந்திட்டு, ‘யாது ஒருபகல் சிந்தி-(நான்
வரவேணுமென்று) ஏதேனும் ஒரு பகலிலே (நீ என்னைக்) கருதுவாய்: நீ
சிந்திக்கும்முன் – நீ கருதுவதற்கு முன்னம், யான் அருகு உறுவல் – நான் (உன்)
சமீபத்திலேவந்து சேர்வேன்,’ என்று-, உரைசெய – சொல்ல, முனி – பராசர
முனிவன், ‘மீள -மறுபடியும், கன்னி ஆக – கன்னிகையே யாகுவாய்,’ என -,
விதித்து -கட்டளையிட்டு, உடன் – மகனுடனே, கரந்தனன்- மறைந்திட்டான்: கை
அறு-(கணவனையிழந்ததனாலான சோகத்தினாற்) செயலற்ற, கனிட்டன் தன்
பன்னிஆனவரிடத்தினில் – (உன்) இளையோனுடைய
பத்தினிமாரானவர்களிடத்தில், அவன்வரில் – அந்த வியாசன் வருவனேயானால்,
நினைவி-(என்) எண்ணம்.பலித்திடும்-பயன் விளைத்திடும்:(எ-று)-  அன்றே-
தேற்றம்.  அன்றேபலித்திடும்-அன்றைக்கே பலிக்குமெனினுமாம்

எனக்கு, மைந்த! கேள்: நினைவு இது; உன் துணைவன் என்
ஏவலும் மறான்; இவ்வாறு
உனக்கு நெஞ்சு உற வருங்கொலோ அறிகிலேன்; உண்மை
நீ உரை’ என்ன,
‘மனக்கு இசைந்தது’ என்று, அவன் வியந்து ஏகலும், வழு
அற மனம் செய்ய,
கனக் கருங்குழல் மகிழ்வுற, முதல் பெறு காதல் மைந்தனும்
வந்தான்.-வீடுமன் ஒருப்பட, சத்தியவதி வியாதனைச்
சிந்தித்து, வரச் செய்தல்-தன்நினைவைக்கூறிய காளி வீடுமனதுஉடன்பாட்டைப்
பெற்று வியாதனைச் சிந்தித்து வரச்செய்தல்.

மைந்த – மைந்தனே! கேள் – கேட்பாயாக: எனக்கு நினைவு இது –
எனக்கு எண்ணம் இங்ஙன்செய்வது: உன் துணைவன் – உன் சகோதரனாகிய அந்த
வியாசன், என் ஏவல்உம் மறான் – என் கட்டளையையும் மறுத்துக்கூறான்; இ
ஆறு -இந்தவழி, உனக்கு நெஞ்சுஉற வரும்கொல்ஓ – உன் மனத்துக்கு ஏற்ற
தாகத்தோன்றுகின்றதோ? இல்லையோ, அறிகிலேன் – (அதனை) யான் அறியேன்: நீ
உண்மை உரை – நீ (உன்கருத்தை) மெய்ம்மையாகக் கூறுவாய், என்ன – என்று
(அந்தக்காளி) வினாவ, – மனக்கு – (என்) கருத்துக்கு, இசைந்தது – (நீ
இப்போதுகூறியது) உடன்பாடானதேயாகும், என்று-, அவன் – அவ்வீடுமன்,
வியந்து -(தாய்வார்த்தையை உடன்பட்டுக்) கொண்டாடி, ஏகலும் – சென்றவுடனே,-
கனம் கருங்குழல் – மேகம்போன்ற கரிய கூந்தலையுடைய அந்தக்காளி, வழு
அற -குற்றமில்லாமல், மனம் செய்ய – (அந்தவியாசனை) மனத்தினால்நினைக்க,-
மகிழ்வுஉற- (அன்னாள்) மகிழ்ச்சியடையும்படி, முதல் பெறு காதல் மைந்தன்உம் –
முன்னமேபெற்ற அன்பிற்கு உரிய புதல்வனாகிய வியாசனும், வந்தான்-; (எ-று.)

தொழுது, நெற்றியில் விபூதியால் அன்னைதன் துணை
அடித் துகள் நீக்கி,
விழுதுடைத் தனி ஆல் என இருந்த தொல் வியாதனை
முகம் நோக்கி,
‘பழுது பட்டது, இக் குருகுலம்; மீள நின் பார்வையால்,
கடல் ஞாலம்
முழுதும் உய்த்திடும் மகவு அருள்’ என, பெரு முனியும்
அக் குறை நேர்ந்தான்.-வந்தவியாதன் தன்தாயை வணங்கி நிற்க. தாய் ‘குரு
குலத்தை யுண்டாக்குவாய்’ என்ன, அவனும் இசைதல்.

தொழுது வணங்கி, நெற்றியில் விபூதியால் – (தன்)
நெற்றியிலணிந்துள்ளவிபூதியினாலே, அன்னை தன் – தாயினுடைய, துணை அடி
துகள் நீக்கி -உபயபாதங்களிற் படிந்துள்ள தூளியைப் போக்கி, விழுது உடை தனி
ஆல் எனஇருந்த தொல் வியாதனை – (தன்னுடைய தொங்குகின்ற சடைமுடியினால்)
விழுதைக்கொண்ட ஒப்பற்ற ஆலமரம்போல இருந்த பழமையான வியாச
முனிவனை, முகம்நோக்கி – முகத்தைப்பார்த்து, ‘இ குருகுலம் பழுதுபட்டது-
இந்தக் குருகுலமானதுகேடு அடைந்திட்டது: மீள – அந்தப் பழுது நீங்கும்படி,
நின் பார்வையால் -உன்னுடைய (கருணை கொண்ட) பார்வையினாலே, கடல்
ஞாலம் முழுதும்உய்த்திடும்-கடலாற் சூழப்பட்ட பூமிமுழுவதையும் தாங்கவல்ல,
மகவு- குமாரனை,அருள் – தந்தருள்வாய்,’ என – என்று (தன்கருத்தை அந்தக்காளி)
தெரிவிக்க,- பெருமுனிஉம்-பெருமைபெற்ற முனிவனாகிய அந்த வியாசனும்,
அகுறை நேர்ந்தான் – அந்த வேண்டுகோளை நிறைவேற்றுமாறு
ஒப்புக்கொண்டான்; (எ-று.)

     “ப்ரணாமலக்நேந லலாட பஸ்மநா – ப்ருசம் பவித்ரீக்ருத பாத பங்கஜா”
என்று பாலபாரதத்தில் வருவதற்கு ஏற்ப, ‘நெற்றியில்விபூதியால் அன்னைதன்
றுணையடித்துகணீக்கி’ என்றார்: நெற்றிவிபூதியால் அன்னையின் பாதத்தைப்
பரிசுத்தமாக்கினான் வியாசனென்பது, துணியடித்துகணீக்கி என்பதன் பொருள்

அழைத்த மா மகன், அப்பொழுது, ‘அவருழை அணுகுவம்’
எனப் போக,
தழைத்த நெஞ்சினள், அனந்தரம், இழந்த பொன்-தாலி
மாதரைத் தேற்றி,
உழைத்த துன்பமும், முன் உளோர் பலர் உலகியற்கையும்,
உறக் காட்டி,
இழைத்த பாவையின் இருந்தவர்க்கு அந் நினைவு
இசையுமாறு இசைவித்தாள்.–காளி தன்மருமகளிரை வியாசமுனிவனாற்
சந்ததிவளர்க்க இசைவித்தல்.

அழைத்த மாமகன் – (தன் தாயினால்) அழைக்கப்பட்ட சிறப்புற்ற
குமாரனான அந்த வியாசன், அப்பொழுது-, ‘அவருழை அணுகுவம் – (உரிய
பருவத்தில்) அந்த நங்கைமாருடன் சேருவோம்,’ என – என்று சொல்லி, போக –
போய்விட,- அனந்தரம் – பிறகு, தழைத்தநெஞ்சினள் – மகிழ்ச்சியால்மலர்ந்த
மனத்தையுடைய காளி,- இழந்த பொன் தாலி மாதரை – பொற்றாலியை யிழந்த மரு
மகளிரான அம்பிகை அம்பாலிகைகளை, தேற்றி – சமாதானப்படுத்தி, உழைத்த-
துன்பம்உம் – (அப்போது) நேரிட்டுள்ள துன்பத்தையும், முன் உளோர் பலர் உலகு
இயற்கைஉம் – முன்னுளோர்பலர் நிகழ்த்திய உலகோரியற்கையையும், உற –
(அவர்கள் மனத்திற்) பதியும்படி, காட்டி – எடுத்துச்சொல்லி, இழைத்த பாவையின்
இருந்தவர்க்கு – செய்யப்பட்டுள்ள பாவை போன்று நிச்சலமாக இருந்தவரான அந்த
மகளிர்க்கு, அ நினைவு – (தான் கருதிய) அந்த எண்ணத்தை, இசையும் ஆறு-
உடன்படும்படி இசைவித்தாள் – செய்தாள்; (எ-று.)

கருத் தரிப்பதற்கு ருதுகாலமே ஏற்றதாகையால் அக்காலத்து
வருவேனென்பதுபட வியாசமுனிவன் கூறினனென்பது ‘அவருழையணுகுவ
மெனப்போக’ என்ற இடத்துப் பெறப்படும்

கனையும் நீடு இருள், அணைமிசை, இருவரும் கணவனை மறவாது
நினையும் நெஞ்சினர், பயின்றுழி, புல்மணம் நிறைந்து, ஒளி
குறைந்து ஒல்கப்
புனையும் மெய்யொடும், பொழுதொடும், புரி தவன் போதலும்,
மிக அஞ்சி,
அனைய காலையில், அம்பிகை மலர்ந்திலள், அம்பகம் ஒருக்காலும்.-அம்பிகை அச்சத்தினால் கண்மூடியவண்ணம்
வியாசனைச் சேர்தல்

கனையும் நீடு இருள் – செறிந்த மிக்க இருட்போதிலே, அணைமிசை –
படுக்கையின்மீது, இருவர்உம் – (அம்பிகை அம்பாலிகை என்ற) இரண்டு மாதரும்,
கணவனை-, மறவாது-, நினையும் நெஞ்சினர் – நினைக்கின்ற நெஞ்ச முடையவராய்,
பயின்ற உழி – தங்கியபோது,- பொழுதொடுஉம் – உரியசமயத்திலே, புல் மணம்
நிறைந்து – புல்லின் மணம்மிக்கு, ஒளி குறைந்து ஒல்க புனையும் மெய்யொடுஉம்-
ஒளிகுறைந்து சுருங்கப் பூண்ட சரீரத்துடனே, புரி தவன் – தவம் புரிபவனாகிய
வியாசமுனிவன், போதலும் – வருதலும்,- மிக அஞ்சி – மிகவும் அச்சங்கொண்டு,
அனைய காலையில் – 
அப்போது, அம்பிகை-, அம்பகம் – (தன்) கண்கள்,
ஒருக்காலும் சிறிதும், மலர்ந்திலள்- திறத்தாளில்லை; (எ-று.)

     வியாசமுனிவன்  வந்து சேரும்போது அம்பிகை அச்சத்தால் தன் கண்களை
மூடியவண்ணமே யிருந்தனளென்பதாம். புன்மணம் நிறைந்து என்பதற்கு –
கலவைச்சந்தனம் முதலியவற்றின் நன்மண மில்லாமல் என்று கருத்துக்காணலாம்:
“அஹ்ருத்யகந்தம்” என்று பாலபாரதத்திலுள்ளது. ஒளிகுறைந்தொல்கப்புனையுமெய்
என்றது- உடம்பு விளக்கமுறாதவாறு மீசை தாடி உடல்மயிர் முதலியவற்றோடு
கூடியவனாய் என்றவாறு. பொழுது – ருதுஸ்நாநம்செய்த பின் பன்னிரண்டு
நாள்களுக்குஉட்பட்ட கருக்கொள்ளுதற்கு உரியகாலம்.

பராசரன் தரு முனி நினைவொடு கருப் பதித்து, மீளவும் சென்று,
நிராசை நெஞ்சினன், ‘அவசரத்து அவளிடை நிகழ்ந்த
மெய்க் குறிதன்னால்,
கராசலம் பதினாயிரம் பெறு வலி காயம் ஒன்றினில் பெற்று, ஓர்
இராச குஞ்சரம் பிறந்திடும்; விழிப்புலன் இல்லை மற்று
அதற்கு’ என்றான்.-கருத்தோற்றுவித்து, வியாசன் விழிப்புலனில்லாமகவு உதிக்குமென்று
தாயினிடம் தெரிவித்தல்.

பராசரன் தரு முனி – பாராசரமுனிவன் பெற்ற புதல்வனான வியாசன்,
நிராசை நெஞ்சினன் – ஆசையற்ற மனமுடையவனாய், நினைவொடு – கருத்தோடு,
கரு பதித்து – கருப்பத்தைப் பதியச்செய்து, மீள உம் சென்று – மீண்டும்
தாயினிடம்போய், அவசரத்து – (தான்) சென்றபோது, அவளிடை-அந்த
அம்பிகையினிடத்திலே,நிகழ்ந்த-, மெய் குறி தன்னால் – உடலினடையாளத்தினால்,
‘காயம் ஒன்றினில் – தன்னோருடம்பில், கராசலம் பதினாயிரம் பெறு வலி –
பதினாயிரம் யானை கொண்டுள்ள பலத்தை, பெற்று – அடைந்து, ஓர் இராச
குஞ்சரம்- ஒரு ராஜசிரேஷ்டன், பிறந்திடும் – பிறப்பான்: அதற்கு – அந்த
அரசமகவுக்கு, விழிபுலன்இல்லை – கண்ணாகியபொறி இருக்க மாட்டாது, ‘
என்றான் – என்று கூறினான்;(எ-று.)

     நிராசைநெஞ்சினன் என்றது – தாய்மொழியின்படி நடக்கவேணு மென்பதானால்
அம்பிகையைச் சேர்ந்தானேயன்றிக் காமவசத்தனாய்ச் சேர்ந்தவனல்ல னென்பதைக்
குறிப்பிக்கும். நிகழ்ந்த மெய்க்குறி தன்னால் என்றானென்க. இராசகுஞ்சரம்
என்பதற்குஏற்ப அதற்கு என்று அஃறிணையாற் கூறினார். கராசலம் – கைம் மலை
யென்பது,பொருள்: அசலமென்பது கரமென்ற அடைமொழியின் குறிப்பால்
யானையென்றுபொருள்படும். அவஸரம் – வேளையென்று பொருளுள்ள வடசொல்:
பொற்றோளிராசகுஞ்சரம் எனவும் பாடம். 

மீளவும், தலைப்புதல்வனை நோக்கியே, மிக மகிழ்வு உறா அன்னை,
‘தூள வண் சடைத் தோன்றல்! அம்பாலிகை சுதன் ஒருவனை நல்க;
நாள பங்கயப் பதி என, மதி என நலம் திகழ் கவிகைக் கீழ்
ஆள அம் புவி அவன் என நினைந்து, இனி அளிக்க’
என்று, அருள்செய்தாள்.-அம்பாலிகையினிடம் பூமியைக்காக்கவல்ல
ஒருபுதல்வனைத் தருமாறு வேண்டுதல்.

தலைபுதல்வனை – (தனது) முதற்புதல்வனாகியவியாசமுனிவனை,
மீளஉம் நோக்கி – மறுபடியும் பார்த்து, மிகமகிழ்வுஉறா – (பிறவிக் குருடனாம்
புதல்வன் பிறப்பானென்ற மொழியைக்கேட்டதனால்) மிக்க மகிழ்ச்சியடையாத,
அன்னை – தாயான காளி,- ‘தூள வள் சடை தோன்றல் – தூளியைக்கொண்ட
வளப்பமுள்ள சடையையுடைய குமாரனே! அம்பாலிகை-, சுதன் ஒருவனை நல்க –
ஒரு புத்திரனைப் பெறட்டும்: நாளம் பங்கயம் பதி என – (நீண்ட) தண்டையுடைய
தாமரைக்குக் கணவனான சூரியன்போலவும், மதிஎன – சந்திரன் போலவும்
(விளக்கமுடையவனாகித்தோன்றுகின்ற),-அவன்-அப்புதல்வன், அம்புவி –
அழகியபூமியை, நலம் திகழ் – அழகு விளங்குகின்ற, கவிகைக்கீழ் – வெண்கொற்றக்
குடையின் கீழ், ஆள-ஆட்சி செய்க, என-என்று, நினைந்து-, இனி அளிக்க – இனி
அளித்தருள்வாய், ‘ என்று-, அருள்செய்தாள் – கூறினாள்; (எ-று.)

     இங்குப் பாலபாரதத்தில் “குமாரமுத்பாதய தத்ர தாத்ருசம் – விஜேஷ்யதே
பூவலயம் புஜேந ய: [தன்தோள்வலியால் பூமண்டலத்தை வெற்றிகொள்ளவல்ல
அப்படிப்பட்ட புதல்வனை அந்த அம்பாலிகையினிடம் உண்டாக்குக]” என்று
கூறியிருப்பதுகாண்க. தூள் – விபூதியுமாம். தூள – குறிப்புப்பெயரெச்சம். நல்க,
ஆள -செயவெனெச்சமாகக் கொண்டு கூறினுமாம்

கிளைத்திடும் துகிர்க் கொடி நிகர் சடையவன் கேட்டு, நுண்
இடையேபோல்
இளைத்திடும் கவின் மெய் உடையவள் மனை எய்தலும்,
இவனைக் கண்டு,
உளைத்திடும் கருத்துடன் வெரீஇ, வரு பயன் ஒன்றையும் நினையாது,
விளைத்திடும் கரு
விளையும் முன், மடவரல் மெய் எலாம் விளர்த்திட்டாள்.-தாய்சொற்படியே வியாசன் அம்பாலிகை மனை சேர அவள்
அம்முனிவனைக் கண்டு கருத்தோன்றுமுன் நாணத்தாலும் அச்சத்தாலும் உடல் வெளுத்தல்

கிளைத்திடும் – பலபிரிவுகொண்டு விடுகின்ற, துகிர் கொடி நிகர் –
பவழக்கொடியையொத்த, சடையவன் – சடையையுடைய வியாசன், கேட்டு – (தாய்
கூறியதைக்) கேட்டு, நுண் இடைஏ போல் இளைத்திடும் கவின் மெய் உடையவள் –
நுண்ணியஇடையே போல இளைத்துள்ள அழகிய உடம்பைக்கொண்டவளான
அம்பாலிகையின், மனை – வீட்டை, எய்தலும் – அடைந்தவுடனே,- இவனை – இந்த
முனிவனை, கண்டு-, உளைத்திடும் கருத்துடன் – (நாணத்தினால்) வருந்திய
மனத்துடனே, வெரீஇ – அச்சங்கொண்டு, வரு பயன் ஒன்றை உம் நினையாது –
தனக்கு நேரக்கூடிய பயனொன்றையும் எண்ணாமல், விளைத்திடும் – (அம்முனிவன்)
உண்டாக்கப்போகின்ற, கரு – கருப்பம், விளையும் முன் – பலிப்பதற்குமுன்னமே,
மடவரல்- அந்த அம்பாலிகையென்ற பெண், மெய்எலாம் விளர்த்திட்டாள்-
உடம்புமுழுவதும் வெளுத்திட்டாள்; (எ -று.)

     இங்குப் பாலபாரதத்தில் “விலோக்ய ஸாசைந முவாஹலஜ்ஜிதா –
விபாண்டுரத்வம் புரஏவ தௌஹ்ருதாத் [அந்த அம்பாலிகையும் இவனைப் பார்த்து
நாணமுற்றுக் கருக்கொள்ளுமுன்னமே வெண்ணிறமுடைமையை மேற்கொண்டாள்]”
என்ற கூறியிருப்பது காண்க.  

அருந் தபோநிதி அவளிடத்தினும் கரு அருளி, அக் கணத்து ஏகி,
இருந்தவாறு தன் அன்னையோடு இனிது உரைத்து, இமையவன்
எனச் சென்றான்-
‘பெருந் தராதலம் திறலினால் ஒரு தனி பெறும் முறையவன், பெற்ற
முருந்த வாணகை மருட்சியால், விளர்த்திடும் முழுவதும்
உடல்’ என்றே.-அம்பாலிகையிடம் கருவளித்த வியாசன்
தாயினிடத்துச் சென்று அருந்திறற்குமாரன் வெண்ணிறத்
தோடு பிறப்பானென்று தெரிவித்தல்.

அருந் தபோநிதி – அரியதவத்திற்கு உறைவிடமான அந்த விசயன்,
அவளிடத்தின்உம் – அந்த அம்பாலிகையினிடத்திலும், கரு அருளி – கருப்பத்தை
யுண்டாக்கியருளி,- அ கணத்து – அந்த நொடியிலேயே, ஏகி – (தன்தாயிருந்த
இடத்துச்) சென்று, ‘பெருந் தரா தலம் – பெரியபூமியை, திறலினால் – (தன்)
வல்லமையினால், ஒரு தனி பெறும் – தன்னந்தனியே பெற்று  ஆளவல்ல,
முறையவன் – முறைமையையுடைய குமாரன், பெற்ற முருந்தம் வாள்நகை –
(தன்னை)ஈன்ற மயிலிறகினடிபோன்ற ஒளிபொருந்திய பற்களையுடையவளான
தாயின்,மருட்சியால் – மருண்டு உடல் விளர்த்த தன்மையால், உடல்முழுவதும்
விளர்த்திடும் -உடல் முழுவதும் வெளுத்திருப்பான்,’ என்றே-, இருந்த ஆறு-
(தான் சென்றபோதுஅம்பாலிகை) இருந்த வகையை, தன் அன்னையோடு – தன்
தாயினிடம், இனிதுஉரைத்து – இனிதாகச்சொல்லிவிட்டு, இமையவன் என
சென்றான் – தேவன்போலமறைந்திட்டான்; (எ-று.)

வேதபுங்கவன் அகன்றுழி, வலியுடை விழி இல்
மைந்தனும், யாரும்
பாதபங்கயம் தொழத் தகும் திறலுடைப் பாண்டு
என்பவன் தானும்,
பூதலம் பெருங் களிப்புற, குருகுலம் பொற்புற, பொழுது உற்றுச்
சாதர் ஆயினர்; அவ் இரு மகவையும் சத்தியவதி கண்டாள்.-திருதராட்டிரனும் பாண்டுவும் பிறக்க, அவர்களைச் சத்தியவதி
காணுதல்.

 வேதபுங்கவன் – வேதம்வல்ல அந்தவியாசன், அகன்ற உழி –
சென்றிட்டபின், வலி உடை – (பதினாயிரம்யானை) வலியுள்ள, விழி இல்
மைந்தன்உம்- கண்ணில்லாத குமாரனாகிய திருதராஷ்டிரனும், யார்உம் –
பாதபங்கயம் தொழ தகும்- எப்படிப்பட்ட பகைவரும் (தன்) பாததாமரையை
வணங்கத்தக்க, திறல்உடை -வலிமையையுடைய, பாண்டு என்பவன் தான்உம் –
பாண்டுவென்பவனும்,- பூதலம்பெருங் களிப்பு உற – பூமி பெருமகிழ்ச்சியடையவும்,
குருகுலம்  பொற்புஉற -குருகுலம் அழகுறவும், பொழுது உற்று- (ஈனுங்) காலம்
வரவே, சாதர் ஆயினர் -தோன்றினவரானார்கள்: அ இருமகவைஉம் – இந்த
இரண்டு புத்திரரையும், சத்தியவதி- (அப்புத்திரரின் பாட்டியான)
சத்தியவதியென்பவள், கண்டாள் – பார்த்தாள்; (எ-று.)

     சத்தியவதியென்பதும், சந்தனுவின் இரண்டாம்மனைவியாகிய யோசனகந்தியான
காளிக்குஒருபெயர். புங்கவன் – புருஷசிரேஷ்டன். ஜாதர் – வடசொல்

காணலும் பெரிது உவகை அற்று, ‘இன்னமும் கருதுதும்’
என எண்ண,
சேண் அடைந்த மா முனிவரன் வருதலும், சிந்தனை
உறச் சொல்ல,
நாண் நலம் திகழ் அம்பிகையிடத்து இவன் நண்ணலும்,
அவள் அஞ்சி,
பூண் நலம் பெறு தோழி மற்று ஒருத்தியைப் பூ அணை
அணைவித்தாள்.-உவகை அற்ற சத்தியவதி மீண்டும் வியாதனை
அழைத்து மகவு அருளவேண்டுதலும், அம்பிகையிடம் வியாதன் செல்ல, அவள் தனது தோழியை அனுப்புதலும்-மீண்டும் காளி வியாசனை நினைத்து, வந்த அவனிடத்துத் தன் கருத்தைச்சொல்ல, அந்தரிஷியைக் கண்டு அஞ்சிய அம்பிகை தோழியை அணையிற்செல்ல ஏவுதல்.

காணலும் – (அக்குழந்தைகளைக்) கண்டபின்பு, பெரிது உவகை
அற்று -மிக்கமகிழ்ச்சியின்றி, ‘இன்னமும்-, கருதுதும் – (நம்முதற் புதல்வனாகிய
வியாசனை)நினைப்போம்,’ என – என்று (மனத்திற்) கருதி, எண்ண-
(அவ்வாறே)நினைக்க, சேண்அடைந்த மா முனிவரன் – வெகுதூரத்துச்சென்றிருந்த
சிறந்தமுனிச்சிரேஷ்டன்[வியாசன்], வருதலும் – (தன்முன்) வந்தவுடனே,
(அந்தக்காளி),சிந்தனை – (தன்) கருத்தை, உற சொல்ல – நன்குதெரிவிக்க,- (தன்
தாயின்சொற்படியே), இவன் – இந்த வியாசமுனிவன், நாண் நலம் திகழ்
அம்பிகையிடத்து-நாணின் நன்மை விளங்குகின்ற அம்பிகை யென்பாளைச்
சேரவேண்டுமிடத்திலே,நண்ணலும் – கிட்டவும்,- அவள் – அம்பிகை, அஞ்சி –
அச்சங்கொண்டு, பூண் நலம்பெறு தோழி மற்று ஒருத்தியை –
ஆபரணங்களினாலழகு பெற்ற (தன்னினும்) வேறானஒரு தோழியை, பூ அணை
அணைவித்தாள் – பூப்போன்ற மெல்லிய படுக்கையிலேசேருமாறு செய்தாள்; (எ-று.)

     பூணலம்பெறு தோழி என்றதனால், அந்தப்பரிசாரிகைப் பெண் தன்னை
யினிதாகஅலங்கரித்துச் சென்றா ளென்பது பெறப்படும்: பாலபாரதத்தில்
“விதக்தநைபத்யவதீததந்திகம்யயௌ” என்று உள்ளது. 

வந்த காலையில் மனம் கலந்து, அநங்க நூல் மரபின்
மெய் உறத் தோய்ந்து,
சந்தனாகருப் பரிமளத் தன தடம் தயங்கு மார்பினில்
மூழ்க,
இந்திராதிபர் போகம் உற்று இசைதலும், இன்பம் முற்றிய
பின்னர்,
அந்தணாளன் அவ் இரவிடை மீள வந்து, அன்னையோடு
உரைசெய்வான்:–விதுரன் பிறத்தல்-அவளோடு இன்பந்துய்த்தபின் வியாசமுனி தாயினிடம் வருதல்.

வந்த காலையில் – (அம்பிகையின்தோழி) வந்தபோது, மனம் கலந்து –
மனம் (அன்னாளிடம்) பொருந்தப்பெற்று, அநங்க நூல் மரபின் –
காமசாஸ்திரத்திற்கூறிய முறைப்படி, மெய்- (அவளுடைய) உடலை, உற தோய்ந்து –
நன்கு கலந்து,- சந்தன அகரு பரிமளம் தன தடம் – சந்தனக்குழம்பு அகில்தேய்வை
இவற்றின் நறுமணம் பொருந்திய (அவளுடைய) கொங்கைத்தலம், தயங்கு
மார்பினில் -விளங்குகின்ற (தன்) மார்பிலே, மூழ்க – அழுந்த, இந்திராதிபர்
போகம் -தேவேந்திரராகிய தலைவர் நுகரும் காமவின்பத்தை, உற்று – அடைந்து,
அந்தணாளன்- வியாசன், இசைதலும் – மனம் பொருந்தியிருத்தலும், இன்பம்
முற்றியபின்னர் -அவ்வின்பம் பூர்த்தியாயின பின்பு, அஇரவிடை – அந்த இரவில்,
மீள வந்து – மீளவும்வந்து, அன்னையோடு – தாயுடனே, உரை செய்வான்-; (எ-று.)

     முதன் மூன்றடிகள் – தோழிப்பெண் அந்தமுனிவன் மனத்தைக் கவர, அவன்
பரவசனாகி இன்பமனுபவித்த தன்மையை விவரிக்கும்: “கீதத்தினால் மான்
வசப்படுவதுபோல அந்தப்பரிசாரிகைப் பெண்ணால் ஐம்புலனைவென்ற அந்த
மஹர்ஷி வசீகரிக்கப்பட்டான்” என்று பாலபாரதம் கூறும்.

அம்பிகைக்கொடி தோழியை விடுத்தனள்; அவள் புரி
தவம்தன்னால்,
உம்பரில் பெறு வரத்தினால், தருமன் வந்து உதித்திடும்
பதம் பெற்றாள்;
வெம் படைத் தொழில் விதுரன் என்று அவன் பெயர்; மேல்
இனி மகவு ஆசை
எம் புணர்ப்பினான் ஒழிக!’ என, வன நெறி ஏகினன், விடை
கொண்டே.–நிகழ்ந்தசெய்தியைத்தாய்க்குச்சொல்லி, ‘யமனமிசமாகப்பிறக்கும்
இம்மகப்பெயர் விதுரன்’ என்றும் ‘இனிப் புத்திரர் பொருட்டு என்னை
நினையற்க’ என்றும் கூறி வியாசன் செல்லுதல்.

‘அம்பிகை கொடி – அம்பிகையென்ற பெண், தோழியை
விடுத்தனள் -(என்னோடு சேரும்படி தன்) தோழியை யனுப்பினாள்: அவள்-,புரி –
(முன்)செய்துள்ள, தவந்தன்னால் – தவத்தினாலும், உம்பரில் பெறு வரத்தினால் –
தேவர்களிடத்துப் பெற்ற வரத்தினாலும், தருமன் வந்து உதித்திடும் பதம் பெற்றாள்-
(தன்வயிற்றிலே) அறக்கடவுளானயமன் வந்துதோன்றும்பதவியைப் பெற்றாள்:
அவன்பெயர்-,-, வெம் படை தொழில் – கொடிய படைக்கலத்தொழிலிலேவல்ல,
விதுரன் என்று – விதுரனென்பது: இனி மேல்-, எம் புணர்ப்பினான் – எம்முடைய
சம்பந்தத்தினால், மகவு ஆசை – குழந்தையைப்பெறுதலில் ஆசையை, ஒழிக-,’ என-
என்று சொல்லி, விடைகொண்டு – (தாயிடம்) விடைப்பெற்றுக்கொண்டு,
(அந்தவியாசன்), வனம் நெறி ஏகினன் – காட்டுவழியே சென்றான்;

     ஆணிமாண்டவ்யமுனிவனதுசாபத்திற்கு விஷயமான யமன், விதுரனென்று
இந்தப்பரிசாரிகைப் பெண்ணுக்குப் பிறக்கப்போகிறானென்று வியாசமுனிவன்
கூறியதாகப் பாலபாரதத்துஉள்ளது.  

மரு வரும் குழல் தாசி பெற்றெடுத்த இம் மைந்தனும்,
முதல் பெற்ற
இருவரும், குருகுலப் பெருங் கிரிமிசை இலங்கு
முக் குவடு என்ன,
பொரு அருந் திறல் படைகளும், களிறு தேர் புரவியும்,
புவி வேந்தர்
வெருவரும்படி பல கலைவிதங்களும், வீடுமனிடம் கற்றார்.–மூன்றுபுத்திரரும் பலகலைகளையும் வீடுமனிடம் கற்றல்.

மரு வரும் குழல் – நறுமணம்பொருந்திய கூந்தலையுடைய, தாசி –
பரிசாரிகைப்பெண், பெற்று எடுத்த-, இ மைந்தன் உம் – (விதுரனென்ற)
இந்தப்புதல்வனும், முதல் பெற்ற இருவர்உம் – முன்னமே அம்பிகை
அம்பாலிகைகளாற் (பெறப்பட்ட) திருதராட்டிரன் பாண்டு என்ற இரண்டு புத்திரரும்,
குருகுலம் பெருங்கிரி மிசை – குருகுலமாகிய பெரிய மலைமீது, இலங்கும்
முக்குவடுஎன்ன – விளங்குகின்ற மூன்றுசிகரம்போல (த்தோன்றியவண்ணம்),- பொரு
அரு திறல் படைகள்உம் – ஒப்பற்றவலிமையையுடைய [வலிமை கொண்டு
பயன்படுத்தக்கூடிய] படைக்கலங்களையும், களிறு தேர் புரவிஉம் – யானை இரதம்
குதிரை என்ற இவைகளையும், புவிவேந்தர் வெருவரும்படி – பூமிக்குத்தலைவரான
அரசர் அஞ்சும்படி, பலவிதம் கலைகள்உம் -, வீடுமனிடம்-, கற்றார்-; (எ-று.)   (176)

ஆன திக்கு இரு-நாலும் வந்து அடி தொழ, அம்பிகை
மகன்தன்னை,
வான்நதித் திருமகன், ஒரு தினத்தினில் மங்கல
முடி சூட்டி,
‘பால் நிறத் திறல் பாண்டுவே சேனையின் பதி;
முழு மதி மிக்க
கான் நிறத் தொடை விதுரனே அமைச்சன், இக் காவலற்கு’
என வைத்தான்.-வீடுமன் நல்லநாளில் திருதராட்டிரனுக்கு முடிசூட்ட, பாண்டுவைச்
சேனாபதியும் விதுரனை அமைச்சனுமாக வைத்தல்

வான் நதி திரு மகன் – கங்காநதியின் புத்திரனாகிய வீடுமன்,- ஒரு
தினத்தினில் – ஒப்பற்ற சிறந்த நாளிலே, ஆன – பொருந்திய, திக்கு இரு நாள்
உம் -எட்டுத்திக்கிலுள்ளவரும், வந்து-, அடி தொழ – அடிதொழுமாறு, அம்பிகை
மகன்தன்னை – அம்பிகையின் குமாரனான திருதராட்டிரனை, மங்கலம் முடி
சூட்டி -மங்களமாகிய ராஜகீரிடத்தைக் கவித்து, ‘இ காவலற்கு-இந்தத்திருதராட்டிர
மகாராஜனுக்கு,- பால் நிறம் திறல் பாண்டுஏ – பால்போன்ற வெண்ணிறத்தையும்
பராக்கிரமத்தையுமுடைய பாண்டுவென்பானே, சேனையின் பதி – சேனாபதியாவன்:
முழு மதி மிக்க – நிரம்பிய புத்தியினால் மேம்பட்ட, கான் நிறம் தொடை
விதுரன்ஏ -நறுமணத்தையும் (கண்கவரும்) நிறத்தையுமுடைய மாலைசூடிய
விதுரனென்பானே, அமைச்சன்-,’ என – என்று, வைத்தான் – ஏற்படுத்தினான்;(எ-று.)

     திருதராட்டிரன் முடிசூட்டப்பட்டானாயினும், கண்ணில்லாதவனாதலால்,
சேனாபதியான பாண்டுவே ராஜாவாக ஆண்டனனென்று, வியாசபாரதம் கூறும்

நதிஅளித்தவன் ஏவலின், தூதர் போய் நயந்து, உடன்,
‘காந்தார
பதி அளித்த மெய்க் கன்னியைத் தருக, பூபதிக்கு’ என,
மணம் நேர்ந்தார்;
‘மதி அளித்த தொல் குலத்தவன், விழி இலா மகன்’
எனத் தமர் சொல்ல,
‘விதி அளித்தது’ என்று, உளம் மகிழ்ந்தனள், வடமீன்
எனத் தகும் கற்பாள்.– வீடுமனேவலினால் தூதர்போய்க் காந்தாரபதியைக் கண்டு எமது
அரசனுக்கு நின்கன்னியைத் தருகென, அவனும் இசைதல்.

நதி அளித்தவன் – கங்காநதி பெற்ற புதல்வனான வீடுமனுடைய,
ஏவலின் – கட்டளையினால், தூதர்,- உடன் – உடனே, போய் –
(காந்தாரதேசத்தை)அடைந்து, ‘காந்தாரபதி அளித்த மெய் கன்னியை – காந்தார
தேசத்துக்குத் தலைவனான சுபலன் பெற்ற நல்ல வடிவையுடைய காந்தாரியை,
பூபதிக்கு தருக – (எமது) அரசனுக்குத் தருக,’ என – என்று, நயந்து – இனிது பேசி,
மணம் நேர்ந்தார்- (தம்மரசன் அன்னாளை) மணஞ்செய்து கொள்ள
உடன்பட்டிருப்பதைத் தெரிவித்தனர்: ‘மதி அளித்த தொல் குலத்தவன் – சந்திரன்
தோற்றுவித்த பழையகுலத்திலே தோன்றின திருதராட்டிரன், விழி இலா மகன் –
கண்ணில்லாதமகனாவான்,’ என – என்று, தமர் – சுற்றத்தார், சொல்ல-,-
‘விதி-கடவுள், அளித்தது – கொடுத்ததாகும் (இந்தவரன்),’ என்று-, வட மீன் என
தகும் கற்பாள் – (வானத்து) வடக்கின்கண் நட்சத்திர வடிவமாக (க் கணவனைப்
பிரியாது) நிற்கும் அருந்ததியைப்போன்ற கற்பினையுடையளான அந்தக்காந்தாரி,
உளம் மகிழ்ந்தனள்-;

      ‘மணநேர்ந்தான்’ என்று பாடமாயின் காந்தாரபதி என எழுவாய் வருவிக்க.
பெருங்கற்பினளாதலால், கண்ணிலானென்று சொல்லியும் உளம் வருந்தாது
மகிழ்ந்தனள் காந்தாரியென்க.

இமைத்த கண் இணை மலர்ந்து, இனி நோக்கிலேன் யான்
ஒருவரை’ என்று,
சமைத்த பட்டம் ஒன்றினில் பொதி பெதும்பையைத் தந்தையும்,
தனையோரும்,
அமைத்து, அருங் குல முனிவரும், மறை முறை அருங் கடி
விளைத்திட்டார்;
சுமைத் தராபதி மதி, இவள் உரோகிணி என்னவே
தொழத் தக்காள்.-இனி யானொருவரையும் கண்ணாற்காணேனென்று
காந்தாரி தன் கண்ணைப் பட்டத்தாற் புதைக்க, தந்தை
முதலியோர் அவளைத் திருதராட்டிரனுக்கு மணஞ்செய்வித்தல்.

யான்-, இனி-, இமைத்த கண் இணை மலர்ந்து –
இமைக்குந்தன்மையுள்ள (என்) இரண்டுகண்களை மலரவிழித்து, ஒருவரை- வேறொரு
புருஷரை, நோக்கலேன் – பாரேன்’, என்று – என்று கருதி, சமைத்த – செய்வித்த,
பட்டம் ஒன்றினில் – பொற்பட்டத்தால், பொதி – மறைத்த, பெதும்பையை –
பெதும்பைப்பருவத்தளான காந்தாரியை, தந்தைஉம் – அவள் தந்தையான
சுபலனென்றகாந்தாரபதியும், தனயோர்உம் – (அவனது புத்திரராகிய) சகுனி
முதலியோரும்,அருங்குலம் முனிவர்உம் – சிறந்தகுலத்தில் பிறந்தவரான இருடியரும்,
அமைத்து-(கலியாணத்துக்கு) வேண்டும்பொருளைச் சித்தஞ் செய்துகொண்டு,- மறை
முறை-வேதவிதிப்படி, அருங் கடி – அருமையான விவாகத்தை, விளைத்திட்டார் –
செய்துமுடித்தார்: சுமை – (பூமியைத்) தாங்குதலையுடைய, தராபதி மதி – அரசனாகிய
சந்திரனுக்கு, இவள் -, உரோகிணி என்ன தொழ தக்காள் – உரோகிணி போலக்
கொண்டாடத்தக்கவளானாள்; (எ -று.)

     சந்திரனுக்குஅசுவினி முதலிய மற்றைப் பல நட்சத்திரங்களும்
மனைவியராகஇருப்பினும் உரோகிணி சிறத்தல்போல, திருதராட்டினுக்குப் பல
மனைவி மாரிருப்பினும்காந்தாரியே யாவரினும் மிக்கவளானாளென்க. “அகச்சத்
அந்த: புரிகாஸு  முக்யதாம்” என்று பாலபாரதத்து வருவதும் காண்க

புந்தியால் அருங் கலைமகள், பொற்பினால் பூந் திரு, புனை
கற்பால் அந்திவாய் அருந்ததி,
பெரும் பொறையினால் அவனிமான், நிகர்’ என்ன,
குந்திபோசர் இல், சூரன் என்பவன் மகள் குருகுலம்
தழைத்து ஓங்க,
வந்து, யாவரும் ‘பிரதை’ என்று அடி தொழ, மதி என
வளர்கின்றாள்.-இனிக் குந்தியைப்பற்றிய சரிதை:-
சூரன்மகளாகிய குந்தி,குந்திபோசரில்லத்து வளர்தல்.

சூரன் என்பவன் மகள் – சூரனென்று ஒருபேரையுடைய யதுகுலத்தரனுடைய மகள், -புந்தியால் அருங்கலை மகள்-  புத்தியினால்
அருமையான  கலைக்குரிய மகளான சரசுவதியும், பொற்பினால் பூ திரு –
அழகினால் மலரிலுறைபவளாகிய இலக்குமியும், புனை கற்பால் –
அலங்காரத்தையுண்டாக்குகின்ற கற்பினால், அந்தி வாய் அருந்ததி – இராக்காலத்துத்
தோன்றும் வட மீனாகிய அருந்ததியும், பெரும் பொறையினால் – மிக்க
பொறுமையினால், அவனிமான் – பூமிதேவியும், நிகர் – ஒப்பாவள், ‘ என்ன – என்று
(பலரும்) சொல்லிக் கொண்டாடவும், குருகுலம் தழைத்து ஓங்க – குருகுலம் செழித்து
வளரவும், குந்திபோசர் இல் வந்து – குந்திபோசனென்பானுடைய இல்லத்திலே
(அவனுக்கு ஸ்வீகார புத்திரியாக) வந்து,  பிரதை என்று யாவர்உம் அடி தொழ –
பிரதை யென்றுபாராட்டி யாவரும் வணங்கித்தொழ, மதி என – பிறைச்சந்திரன்போல,
வளர்கின்றாள் – வளர்பவளானாள்; (எ-று.)

     அத்தைகுமாரனான குந்திபோசனுக்கு மகவில்லாக்குறையைப் போக்க,
யதுகுலத்துத்தோன்றலான சூரனென்பவன் தன் பெண்ணான பிரதை யென்பவளை
வளர்க்குமாறு கொடுத்தான் : அவளே குந்திபோசனால் வளர்க்கப்பட்டதுபற்றி,
குந்தியென்று வழங்கப்படுவாளாயினாள்.

அந்த மாது இள மட மயில் என விளையாடும்
எல்லையில், என்றும்
முந்த மா தவம் புரி துருவாச மா முனியும் அவ் வழி
வந்தான்;
வந்த மா தவன் அடி பணிந்து, ‘இவனை நீ வழிபடுக!’
என, தந்தை,
இந்த மா தவன் மொழிப்படி புரிந்து குற்றேவலின் வழி நின்றாள்.-குந்தி அங்கு அரண்மனைவந்த துருவாசமுனிவனுக்கு
வளர்ப்புத்தந்தையின் சொற்படிகுற்றேவல்புரிதல்.

அந்த மாது – அந்தப்பிரதையென்பவள், இள மடம் மயில் என –
இளமையையுடைய மடப்பங்கொண்ட மயில்போல, விளையாடும் எல்லையில் –
விளையாடுகின்ற காலத்தில்,- என்றுஉம் முந்த மாதவம் புரி – எப்போதும்
(யாவரினும்)மேற்படச் சிறந்த தவத்தைச் செய்பவனான, துருவாசமாமுனிஉம் –
துருவாசமுனிவனும்,அ வழி – அவ்விடத்து, வந்தான்-; தந்தை – குந்திபோசன்,
வந்த – (அங்கனம்) வந்த,மா தவன் – பெருந்தவத்தனான துருவாச முனிவனுடைய,
அடி – பாதங்களை, பணிந்து – வணங்கி, ‘நீ இவனை வழிபடுக -நீ இவனை
உபசரிப்பாயாக’, என – என்று(பிரதையென்பாளைநோக்கிச்) சொல்ல,- இந்த
மாதவன் மொழி படி – இந்தத்துருவாசமாமுனிவன் கூறுகின்ற மொழியின்வழியே,
புரிந்து – பணிவிடைசெய்துகொண்டு, குறு ஏவலின்வழி – (அவனுடைய) சிறிய
ஏவலின்வழியிலேயே,நின்றாள் – நடந்துகொண்டாள்; (எ-று.)

கழங்கு கந்துகம் அம்மனை ஆடலும், கனக மென்
கொடி ஊசல்,
வழங்கு தண் புனல், ஆடலும், துறை வரி வண்டல்
ஆடலும், மாறி
முழங்கு சங்கினம் தவழ்தரு பனி நிலா முன்றிலும்,
செய்குன்றும்,
தழங்கு செஞ் சுரும்பு எழு மலர்ச் சோலையும், தனித்தனி
மறந்திட்டாள்.-முனிவனுடைய குற்றேவலில் மனம்பதிந்த பிரதை, தன்
இளமையாடலை மறத்தல்.

கழங்கு கந்துகம் அம்மனை ஆடல்உம் – கழற்சிக்காய் பந்து
அம்மானை என்ற இவற்றை யாடுவதையும், கனகம் மெல்கொடி ஊசல் –
பொன்மயமான மெல்லியகொடிகளாலியன்ற ஊஞ்சலிலாடுவதையும், வழங்கு
தண்புனல் ஆடல் உம் – இடைவிடாது செல்கின்ற குளிர்ந்தநீரிலே
விளையாடுதலையும்,- துறை வரி வண்டல் ஆடல்உம் – நீர்த்துறைகளிலே அழகிய
மணலைக்கொண்டு (சிற்றிலிழைத்தல்முதலிய) ஆடல்புரிதலையும், மாறி – நீங்கி,-
முழங்கு சங்குஇனம் தவழ்தரு பனி நிலா முன்றில்உம் – ஒலிக்கின்ற சங்குகளின்
கூட்டம் தவழப்பெற்ற குளிர்ந்த நிலாவைக்கொண்ட வீட்டின் முன்னிடமும்,
செய்குன்றுஉம் – (வினோதார்த்தமாகச் சமைத்த) கட்டுமலைகளும், தழங்கு செம்
சுரும்பு எழு மலர் சோலை உம் – ஒலிக்கின்ற அழகிய சுரும்பினம்
மொய்த்தெழப்பெற்ற பூஞ்சோலையும், தனித்தனி-, மறந்திட்டாள்-; (எ-று.)

     வேற்றிடத்து மனஞ்செல்லாமல் திருந்திக் கடவுள் முனிவரின் பூசனையிலேயே
கருத்தாயிருந்தனள் குந்திபோசன்புதல்வியென்க. 

தொழுது, தாளினைச் செய்ய பஞ்சு எழுதினும், தோளினைச்
செழுந் தொய்யில்
எழுதினும், பொறா இளமையள், முதுக்குறைந்து, யாது
யாது உரைசெய்தான்,
முழுது நெஞ்சு உறு கோபமே மிக மிகும் முனிவரன்
மகிழ்வு எய்த,
பழுது இல் அன்புடன் இயற்றினள், ஒன்றுபோல் பன்னிரு
மதி சேர.–துருவாசன் மகிழ்வுற, பிரதை பன்னிரண்டுமாதம்
பணிவிடை புரிதல்.

தோழிமார்), தொழுது – வணங்கி, தாளினை – பாதங்களில், செய்ய
பஞ்சு எழுதின்உம் – செம்பஞ்சுக்குழம்பை யெழுதினாலும், தோளினை – தோளில்,
செழுந் தொய்யில் எழுதின்உம் – அழகிய தொய்யிலை யெழுதினாலும், பொறா –
தாங்கமாட்டாத, இளமையள் – இளமையை யுடையவளாகிய அந்தப்பிரதை,- நெஞ்சு
முழுவதுஉம் உறு கோபம்ஏ மிக மிகு முனிவரன்- நெஞ்சுமுழுவதும் மிக்ககோபமே
மிகுந்துள்ள ரிஷித்தலைவனாகிய துருவாசன், யாது யாது உரைசெய்தான் –
எதைஎதைச்சொன்னானோ, (அவற்றையெல்லாம்), மகிழ்வு எய்த – (அம்முனிவரன்)
மகிழ்ச்சியடையும்படி, முதுக்குறைந்து – பேரறிவுமிகுந்து, பழுது இல் அன்புடன் –
குற்றமில்லாத அன்புடனே, ஒன்றுபோல் – ஒரேவகையாக, சேர – பொருந்த,
பன்னிருமதி – பன்னிரண்டுமாதம், இயற்றினள் – செய்தாள்;

     யாதுயாதுஉரைசெய்தான் என்றதனால், அவனேவியசெயல் செய்தற்கரியது
என்பது பெறப்படும்: “ஸ யத்யத் ஆஜ்ஞாபய திஸ்ம துஷ்கரம்” என்று
பாலபாரதத்தில்வருவதும், மேற்செய்யுளில் “எனதேவ லரிதெனாது” என்று
வருவதும்காண்க. 

பிரதைதன்னை அத் தபோநிதி, ‘வருக!’ என, பெரிது
உவந்து, ‘எனது ஏவல்
அரிது எனாது நீ இயற்றினை; நெடுங் கடல் அவனிமேல்
யார் வல்லார்?
தெரிவை, கேள்!’ எனச் செவிப்படுத்து, ஒரு மறை, ‘தேவரில்
யார் யாரைக்
கருதி, நீ வர அழைத்தனை, அவர் அவர் கணத்து நின்
கரம் சேர்வார்;-இரண்டுகவிகள் – பிரதையின் பணிவிடையால்
மனமுவந்த துருவாசன் ஒருமந்திரத்தையுபதேசித்துச்
செல்ல, பிரதையும் தன்மனைசேர்தலைத் தெரிவிக்கும்.

அ தபோநிதி – அந்தமுனிவன், பெரிது உவந்து –
(பன்னிருமாதம் பிரதைசெய்த பணிவிடையால்) மிகவுஞ் சந்தோஷித்து, வருக என
– வருவாயாக என்றுசொல்லி, பிரதை தன்னை – அந்தக் குந்தியைநோக்கி,
‘எனது ஏவல் – என்னுடைய கட்டளையை, அரிது எனாது-, நீ-, இயற்றினை –
செய்தாய்: நெடுங்கடல் அவனி மேல் யார் வல்லார் – (உன்னைப்போற்
பணிவிடை செய்யப்) பெரிய கடலினாற் சூழப்பட்ட இந்தப்பூமியில்
யாவர்வல்லார்? தெரிவை – பெண்ணே! கேள்-,’ என – என்று, ஒரு மறை –
ஒருவேதமந்திரத்தை, செவிப்படுத்து – (அந்தப் பிரதையின்) காதிலேயோதி,
தேவரில் – தேவர்கட்குள்ளே, யார் யாரை-, கருதி-, ‘நீ-, வர அழைத்தனை –
(இந்த மந்திரத்தைச்சொல்லி) வருமாறு கூப்பிடுவாயோ, அவர் அவர் –
அந்தந்தத் தேவர், கணத்து – ஒருகணப்போதில், நின் கரம் சேர்வார் –
உன்கையைச் சேர்வார்கள் [உன்வசமாவார்கள்]; (எ-று.)

     தன்தையின் மனையில் துருவாசமுனிவரை யுபசரித்து அம்முனிவரருளைப்
பெற்ற குந்தி தனக்கென்றுள்ள செல்வமனையைச் சேர்ந்தாளென்க

தம்மை ஒப்பது ஒர் மகவையும் தருகுவர்; தவப் பயன்
எனப்பெற்ற இம் மறைப் பயன்
இம்மையில் உனக்கு வந்து எய்தியது’ எனக் கூறி,
அம் முனிப் பெருங் கடவுளும் தபோவனம் அடைந்தனன்;
அவளும் தன்
செம் மனத்தொடு பயின்று, அரமகள் என, செல்வ மா மனை
சேர்ந்தாள்.

அன்றியும்) தம்மை ஒப்பது – தம்மையொத்துள்ளானாகிய, ஒர்
மகவைஉம் – ஒருபுத்திரனையும், தருகுவர் – :(யான்), தவம் பயன்என பெற்ற –
தவத்தின்பயனாகு மென்னுமாறு அரிதிலடைந்த, இ-இந்த, மறை-வேதத்தின், பயன்-,
இம்மையில் – இப்பிறவியில்தானே, உனக்கு வந்து எய்தியது – உனக்கு
வந்துசேர்ந்தது,’ என கூறி – என்றுசொல்லி,- அ கடவுள் பெரு முனிஉம்- அந்தத்
தெய்வத் தன்மையுள்ள பெருமுனிவரும், தபோவனம் – (தான்) தவம்புரியும்
வனத்தை, அடைந்தனன்-; அவள்உம் – அந்தப்பிரதையும், தான்-, செம் மனத்தொடு
– நல்ல மனத்தோடு, பயின்று – பொருந்தி, அரமகள் என – தெய்வமாதுபோல,
செல்வம் மா மனை – (தனக்குரிய) செல்வமுள்ள சிறந்தமனையிலே, சேர்ந்தாள்-;
(எ-று.)

     தன்தையின் மனையில் துருவாசமுனிவரை யுபசரித்து அம்முனிவரருளைப்
பெற்ற குந்தி தனக்கென்றுள்ள செல்வமனையைச் சேர்ந்தாளென்க.

ததையும் வண்டு இமிர் கருங் குழற் கன்னி அத் தனி மறைப்
பயன் காண்பான்,
சுதை நிலா எழு மாளிகைத் தலத்திடை, தூ நிலா எழு முன்றில்,
இதைய மா மலர் களிக்க நின்று, அன்பினோடு இயம்பலும் எதிர் ஓடி,
உதைய பானுவும், மலர்மிசை அளி என, ஒரு கணந்தனில் வந்தான்.-மறைப்பயனைக் காணக் கன்னிகை குந்தி நிலா
முற்றத்திலே அம்மந்திரத்தைச் சூரியனைக்கருதி யுச்சரிக்க, அன்னான்அங்குவருதல்.

ததையும் நெருங்கிய, வண்டு – வண்டுகள், இமிர் – ஒலிக்கின்ற,
கருங்குழல் – கரிய கூந்தலையுடைய, கன்னி-, அ தனி மறை பயன் காண்பான் –
அந்த ஒப்பற்ற வேதமந்திரத்தின் பயனை யறிய வேண்டி, சுதை நிலா எழு –
(பூசிய) சுண்ணாம்பினால் வெண்ணிலாத் தோன்றுகின்ற, மாளிகை தலத்திடை –
மாளிகையில், தூ நிலா எழு முன்றில் – பரிசுத்தமான நிலாத் தோன்றுகின்ற
முற்றத்திலே [மேன்மாடத்திலே], இதையம் மாமலர் களிக்கநின்று – இதயமாகிய
சிறந்தமலர்மகிழுமாறு இருந்துகொண்டு, (சூரியனைக்கருதி), அன்பினோடு-,
இயம்பலும்- (அந்த மந்திரத்தை) உச்சரித்தவுடனே, எதிர் ஓடி-
(அந்தப்பிரதைக்கு) எதிராகவிரைந்துவந்து, உதையம்பானுஉம் –
உதயகாலத்துச்சூரியனும், மலர்மிசை அளி என – மலரில்வண்டுமொய்ப்பது
போல,ஒரு கணந்தனில் – ஒரு கணப்போதில், வந்தான்-; (எ-று.)

    மேன்மாடத்திலே நிலாமுற்றத்திலிருந்து பிரதை துருவாச முனிவ
னுபதேசித்த வேதமந்திரத்தை யுச்சரித்து உதித்த சூரியனை நினைக்க உடனே
அங்கு அவன் தோன்றினா னென்க.

செம் பொன் ஆடையும், கவச குண்டலங்களும், திகழ்
மணி முடி, ஆரம்,
பைம் பொன் அங்கதம் புனை அவயவங்களும், பவள
மேனியும், ஆகி,
வம்பு அறாத மெய்ப் பதுமினி என, செழு மறை நுவல் மடப் பாவை
அம்புயானனம் மலர்வுறக் கரங்களால் அணைத்தனன், அழகு எய்தவந்த சூரியன் அந்தப்பிரதையை அணைத்தல்.

செம் பொன் ஆடைஉம் – செந்நிறமுள்ள பொற்பட்டாடையும்
[பீதாம்பரமும்], கவசம் குண்டலங்கள்உம்-,திகழ்மணி முடி – விளங்குகின்ற
இரத்தினகிரீடமும், ஆரம் – ஆரமும், பைம் பொன் அங்கதம் புனை
அவயவங்கள்உம்- பசும்பொன்னாலியன்ற தோள்வளையலையணிந்த புயங்களும்,
பவளம் மேனி உம் – பவழம் போன்ற செந்நிறத்திருமேனியும் ஆகி –
பெற்றுவந்து,- வம்பு அறாத மெய் பதுமினி என – நறுமணம் நீங்காத உடல்
படைத்த பதுமினியைப்போல, செழு மறை நுவல் மடம் பாவை – பயன்
விளைக்குந் தன்மையுள்ள வேதமந்திரத்தைக் கூறிய அந்த மடந்தையின்,
அம்புயம் ஆனனம் – தாமரைபோன்ற முகம், மலர்வு உற – மலர்ச்சிடைய,
கரங்களால்-, அழகுஎய்த – அழகு பொருந்த, அணைத்தனன்-;

     சூரியன் தனதுகிரணங்களால் நறுமணம்நீங்காத தாமரை யோடையின்
தாமரை முகம்மலரத் தழுவுவதுபோல, தன்னுடலில் நறுமணம்நீங்காத
பதுமினியென்னும் உத்தமசாதிமாதரான குந்தியின் தாமரைபோன்றமுகம்
மலர்ச்சியடையத் தன்கைகளாலணைத்தன னென்பதாம். சிலேடையையும்
உருவகத்தையும் அங்கமாகக் கொண்டுவந்த உவமையணி. மாதராரில், பதுமினி
சித்ரிணி அத்தினி சங்கினி என்று நான்குசாதியுள்ளன என்பதை, வாத்ஸ்யாயனம்
முதலிய நூல்களா லறியலாம். பதுமினிசாதிமாதின் உடல் நறுமணம் வீசு
மென்பது, நூற்கொள்கை.  

‘கன்னி, கன்னி; என் கை தொடேல்; மடந்தையர் கற்பு நீ அறிகிற்றி!’
என்ன மெய் குலைந்து, அலமர, நாணினாள்; இதயமும் வேறு ஆகி
அன்ன மென்னடை அஞ்சினள் அரற்றலும், அருகு உறான்,
விடப்போய் நின்று,
‘உன்னி என்னை நீ அழைத்தது என்பெற?’ என உருத்தனன்,
உரைசெய்வான்மடந்தையரின் கற்பை யறிபவனான நீ என்னைத்
தொடாதே’ என்று பிரதை கூற, சூரியன் கோபித்துக்
கூறலுறுதல்.

அன்னம் மெல் நடை – அன்னப்பறவையின் நடை போன்ற
மெல்லியநடையையுடையபிரதை,- மெய்குலைந்து அலமர – உடம்பு நடுங்கிக்
குலைய,- நாணினாள் – நாணங்கொண்டு, இதயம் உம்வேறு ஆகி-,- அஞ்சினள்
– அச்சங்கொண்டவளாய், ‘கன்னி கன்னி – (நான்) கன்னிகையாவேன்
கன்னிகையாவேன்: என் கை தொடேல் – என்கையைத் தீண்டாதே: மடந்தையர்
கற்பு – மடந்தைமாரின் கற்பை, நீ-, அறிகிற்றி- அறிவாயன்றோ!’ என்ன –
என்று, அரற்றலும் – கதறவும்,- (சூரியன்), அருகு உறான் – (அவளுடைய)
சமீபத்தை யடையாதவனாய்,- விட போய் நின்று – சற்ற விலகிப் போயிருந்து,
(அந்தப்பிரதையைநோக்கி),- ‘உன்னி- நினைத்து, என்னை-, நீ-, அழைத்தது-,
என் பெற – என்னபயனைப் பெறும் பொருட்டு?’ என – என்று, உருத்தனன் –
கோபித்தவனாய்,- உரை செய்வான்- (பின்னுஞ்) சொல்பவனானான்; (எ-று.)

உருக் கொள் சாயையும் உழையும் அங்கு அறிவுறாது, ஒளித்து
நான் வரவே, நீ
வெருக் கொளா எனை மறுத்தனை; உனக்கு முன் மெய்ம் மறை
உரைசெய்த
குருக்கள் என்படான்? என்படாது அரிவை நின் குலம்?’ என,
கொடித் திண் தேர்
அருக்கன் மெய்யினும் மனம் மிகக் கொதித்தனன், ஆயிரம்
மடங்காக,-இரண்டுகவிகள் – சூரியன் பின்னுங்கூறியன தெரிவிக்கும்.

‘உரு கொள் சாயைஉம் – உருவத்தைக்கொண்ட சாயா தேவியும்,
உழை உம் – உஷாதேவியும், அங்கு – வானில், அறிவுறாது – அறியாதபடி,
ஒளித்த-, நான்-, வரஏ – வந்திருக்கவும்-, நீ-, வெருக்கொளா – அஞ்சி, எனை –
என்னை, மறுத்தனை – (உடன்சேரவொட்டாமல்) மறுத்திட்டாய்: உனக்கு-
(இப்படிப்பட்ட) உனக்கு, முன் – முன்பு, மெய் மறை –
தவறாமற்பலிக்குந்தன்மையுள்ள வேதமந்திரத்தை, உரைசெய்த – சொல்லிய,
குருக்கள் – குருமார், என்படார் – என்னபாடு படமாட்டார்? [நீ இப்போது
மறுத்ததன் பயனாக உனக்கு உபதேசித்த குருமாரைச் சபித்திடுவேன் என்றபடி]:
அரிவை – பெண்ணே! நின் குலம் – நீ பிறந்தகுலம், என்படாது – என்ன தீங்கை
யடைந்திடாது [என் சாபத்தினால் நின்குலமே யழிந்திடும் என்றபடி] ‘, என –
என்று, கொடி திண்தேர் அருக்கன் – கொடி கட்டிய வலிய தேரையுடைய
சூரியன், மெய்யின்உம் – தன்னுடம்பைவிட, ஆயிரம் மடங்கு ஆக-, மிக –
மிகவும், மனம் கொதித்தனன்-; (எ-று.)

     உழை சாயையென்பவர் சூரியனுடைய மனைவிமாராவர். சாயை யென்பது –
நிழலென்னும்பொருளையு முடைய தாதலால், அதனினும் வேறுபாடு தோன்ற,
‘உருக்கொள் சாயை’ என்றது. “கரோமியாவத்தவ மந்த்ரதாயிநம் – மதீய
சாபோரகவேஷ்டிதம்முநிம்” என்று பாலபாரதத்தில் வருதற்கு ஏற்ப, ‘மறையுரை
செய்தகுருக்களென்படார்’ என்பதற்குச் சாபத்தினாலழிவ ரென்று
உரைக்கப்பட்டது.  

உனை அளித்தவன் முனியும் என்று அஞ்சல் நீ; உடன்படும்
உணர்வால். ‘நல்
வினை அளித்தது’ என்று அணைதியேல், இன்பமும்
விழைவுறும்படி துய்த்தி;
எனை அளித்த தொல் அதிதியின் உனக்கு இசை எய்துமாறு
இகல் மைந்தன்-
தனை அளித்தி; மற்று என்னினும் இரு நிலம் தாள்
தொழத் தக்கோனே.’

உனை அளித்தவன் – உன்னைப்பெற்றவன், முனியும்- சினப்பான்,
என்று-, அஞ்சல் – பயப்படாதே: நீ-, உடன்படும் – சம்மதிக்கின்ற, உணர்வால் –
உணர்ச்சியோடு, நல் வினை அளித்தது என்று – நல்வினை (இவனைத்)
தந்ததென்றுகருதி, அணைதி ஏல் – (என்னைச்) சேர்வையானால், இன்பம்உம்-,
விழைவுஉறும்படி- (மனத்தில்) விருப்பமுண்டாகும்படி, துய்த்தி – நுகர்வாய்:
எனை அளித்த தொல் அதிதியின்-என்னைப்பெற்ற பழமையான அதிதிபோல,
உனக்கு-, இசை – புகழ், எய்தும் ஆறு – உண்டாகும்படி, இகல்
மைந்தன் தனைஉம் – வலிமையுள்ள மைந்தனையும், அளித்தி –
உண்டாக்குவாய்: மற்று – மேலும், (அந்தப்புதல்வன்), என்னின்உம் –
என்னைக்காட்டிலும், இரு நிலம் – பெருவுலகத்தாரால், தாள் தொழதக்கோன் –
தாளில் விழுதற்குரிய மேன்மையுடையவனாவன், (என்றும் கூறினான்); (எ -று.)

      ‘உனை யளித்தவன் முனியுமென்றஞ்சல்’ என்பதற்கு – நீ
இப்போதிருப்பதுபோலவே கன்னிகையேயாய்விடுவாய் என்று கருத்துக்
காணலாம்: “ந கந்யகாபாவம் இமஞ்ச ஹாஸ்யஸி” என்று பாலபாரதத்தில்
வருவது காண்க: “சூரன தருளினாற் றுலங்கு கன்னிகையாகி” என்று இவரே
பின்னர்க் கூறுவர்.   

ஆயிரம் கரத்து அதிபதி புகழ்ந்து, நூறு ஆயிரம் முகமாகப்
போய் இரந்து, இவை உரைத்தபின், மதர் விழிப் புரிவும்
மூரலும்நல்கி,
வேய் இருந் தடந் தோள் இடம் துடித்திட, மெல்லியல்,
‘மதன் வேதப்
பாயிரம்கொல்!’ என்று ஐயுற, அவனொடும் பனி மலர்
அணை சேர்ந்தாள்.-சூரியனது புகழ்ச்சியுரைகேட்டுப் பிரதை மலரணை
சேர்தல்.

ஆயிரம் கரத்து அதிபதி – ஆயிரங்கிரணங்களையுடைய
(ஒளிகட்கெல்லாம்) அதிபதியான சூரியன், நூறு ஆயிரம் முகம் ஆக புகழ்ந்து –
பலபாடியாகப் புகழ்ந்துகூறி, போய் இரந்து – மிகவும் இரந்து, இவை
உரைத்தபின் – இவ்வார்த்தைகளைக் கூறியபின்,- மெல்லியல் – அந்தப்பிரதை,
மதர் விழி பிரிவுஉம் – மதர்த்தகண்ணின் மூலமாக(த் தன்) விருப்பத்தையும்,
மூரல்உம் – புன்சிரிப்பையும், நல்கி – தந்து,- வேய் இருந் தட தோள் இடம்
துடித்திட – மூங்கில்போன்ற மிகப்பெரியதோள் இடப்புறந் துடிக்க,- ‘மதன் வேதம்
பாயிரம் கொல் – மன்மத வேதத்தின் பாயிரமோ (இது)?’ என்று-, ஐயுற – ஐயம்
மனத்திலுண்டாக, அவனொடுஉம் – அந்தச் சூரியனோடும், பனி மலர் அணை –
குளிர்ந்த புஷ்பசயனத்திலே, சேர்ந்தாள்-; (எ-று.)

     பாயிரமென்பது – நூற்குப் புறம்பானது; நூலுக்குத்தோற்றுவாயாவது.
மதன்வேதம் என்பது இங்கேயிலக்கணையால், காம சாஸ்திரத்திலுணர்த்தப்படும்
காரணங்களுக்கு ஆகுபெயர். இடந்துடித்தது. இனி விரைவிற்
புணர்வுநிகழுமென்பதைக் குறிப்பிப்பதாதலால். அது மதனவேதத்தின் பாயிரமென
ஐயுறத்தக்கதாயிற்று.   

தினகரன் சுடர் வடிவமும் அமிர்து எழு திங்களின் வடிவாக,
தன தடம் திருமார்பு உறத் தழீஇயபின், தையல் தன்
நினைவு எய்த,
மனம் மகிழ்ந்ததும், வந்ததும், மணந்ததும், வரம் கொடுத்ததும்,
எல்லாம்
கனவு எனும்படி, கரந்தனன் பெருந்தகை; கன்னியும்
கருக் கொண்டாள்.-புணர்ச்சியில் அவசமாகிய பிரதை பின் தன்வசமாக,
சூரியன் கரத்தலும் அவள் கருக்கொள்ளுதலும்.

தினகரன் – சூரியன், சுடர் வடிவம்உம் – (தன்) தேஜோ மயமான
வடிவமும், அமிர்து எழு திங்களின் வடிவுஆக – அமிருதம் தோன்றப்பெற்ற
சந்திரனுடைய வடிவுபோன்றிருக்க,- தன தடம் திரு மார்பு உற –
(அந்தப்பிரதையின்) கொங்கைத்தலம் (தன்) அழகிய மார்பிலே பொருந்த,
தழீஇயபின் – தழுவிப்புணர்ச்சி நிகழ்த்திய பின்,- தையல் – அந்தப்பிரதை, தன்
நினைவு எய்த – தன்வசத்தையடைய, – மனம்  மகிழ்ந்ததும் – (தன் இசைவால்
அந்தச்சூரியன்) மனமகிழ்ச்சி யடைந்ததும், வந்ததுஉம் மணந்ததுஉம்-வந்து
(தன்னை அச்சூரியன்) கூடியதும், வரம்கொடுத்ததுஉம் – (அந்தச் சூரியன்
கன்னிகை யாவாயென்று) வரங்கொடுத்ததும், எல்லாம்-, கனவு எனும்படி-,
பெருந்தகை – பெருமைக்குணமுள்ள அந்தச் சூரியன், கரந்தனன் – மறைந்தான்;
கன்னிஉம் – அந்தக்கன்னிகையான பிரதையும், கருக் கொண்டாள் –
கருப்பமடைந்தாள்; (எ-று.)

      தன – தன்னுடைய, தட திருமார்பு – விசாலமான அழகிய மார்பு
என்றுமாம். வரம் – துருவாசன் உபதேசித்த சிறந்த மந்திரம் என்பாருமுளர்.
பெருந்தகை – அன்மொழித்தொகை: பெருந்தகைக் கன்னி எனின், கன்னிக்கு
விசேடணம்.

அந்தி ஆர் அழல் எனப் பரிதியின் ஒளி அடைந்த பின்,
அணி மாடக்
குந்திபோசன் மா மட மகள் எழில் நலம் கொண்ட
கொள்கையள் ஆகி,
இந்திராதிபர் அவர் அவர் முகம் மலர்ந்து இரந்தன
தரத் தக்க,
மைந்தனானவன் ஒருவனைப் பயந்தனள், மாசு இலா
மணி என்ன.-குந்தி மைந்தனொருவனைப் பெறல்.-பெற்ற மகனைக் குந்தி பெட்டியில்
பொதிந்து கங்கையில் விடுதல்

பரிதியின் ஒளி – சூரியனுடைய ஒளிமயமாகிய கருப்பம், அடைந்த
பின் – (தன்வயிற்றைச்) சேர்ந்தபிறகு, அணிமாடம் குந்தி போசன் மா மடம்
மகள் – அழகிய மாடத்திலிருந்த குந்தி போசனுடைய சிறந்த மடப்பத்தையுடைய
மகளாகிய அந்தக் குந்தி,- அந்தி ஆர் அழல் என – அந்திக்காலத்து (ச் சிகை)
நிரம்பிய அக்கினிபோல, எழில் நலம் கொண்ட – அழகின்சோபையைப் பெற்ற,
கொள்கையள் ஆகி – தன்மையை யுடையவளாய்,- இந்திர ஆதியர் அவர்
அவர் இரந்தன முகம்மலர்ந்து தரத்தக்க – இந்திரன் முதலிய அந்த அந்த
இரப்பாளர் இரந்தவற்றை முகம் மலர்ந்து கொடுத்தற்கு  உரிய, மைந்தன்
ஆனவன் ஒருவனை – ஒப்பற்ற ஒரு மைந்தனை, மாசு இலா மணி என்ன –
(சமுத்திரக்கரை) சிந்தாமணியைப்பெற்றதுபோல, பயந்தனள்- பெற்றாள்:எ-று.)
அமருண்கட்குந்தி என்றும் பாடம்.

     “அநுப்ரவேசாத் அயம் ஆத்மதேஜஸ:- சிகாமிவாக்நேரதிகோஜ்
ஜ்வாலக்ருதிம்…..  அதேப்ஸிதார்த்த ப்ரதிபாதநார்ஹதாம் – உபேயிவாம்ஸம் ஸு ர
பர்த்து ரர்த்திந: அஸூதசிந்தாமணி மூடதேஜஸம் – ஸமுத்ரவேலேவ
ந்ருபாத்மஜாஸு தம்” என்ற பால பாரதத்தால், இங்குக்கூறிய உரையைத் தெளிக.
இந்தக் கர்ணன் இந்திர னிரக்கத் தன் கவசகுண்டலங்களைக் கொடுத்த
வரலாற்றை உத்தியோகபருவத்திற் காணலாம். மாலைக்காலத்துச் சூரியனொளியை
அக்கினி பெறுகிறானென்ப.   

சூரன் மா மகள், சூரனது அருளினால், துலங்கு
கன்னிகை ஆகி,
வார மா மணிக் கவச குண்டலத்துடன் வரும் மகன்
முகம் நோக்கி,
பார மா மரபினில் பிறந்தவர் மொழிப் பழுதினுக்கு
அழுது, அஞ்சி,
பூர மா நதி, பேடகத்திடை நனி பொதிந்து, ஒழுக்கினள்
மன்னோ.-சூரன்பெண்ணாகிய குந்தி மகப்பெற்ற அப்புதல்வனை உலகப்
பழிப்புக்கு அஞ்சி ஒருபெட்டியில் வைத்து நதிப் பெருக்கிலே
விட்டிடுதல்.

சூரன் மா மகள் – சூரனுடைய சிறந்த பெண்ணாய் பிறந்த பிரதை,
சூரனது அருளினால் – சூரியனுடைய கருணையினால், துலங்கு கன்னிகை ஆகி
– விளங்குகின்ற கன்னிப்பருவத்தை யடைந்து, வாரம்- (தன்) அன்பிற்குரிய, மா
மணி கவசகுண்டலத்துடன்வரும் மகன் – சிறந்தமணிகளழுத்திய
கவசகுண்டலத்துடன் தோன்றிய மைந்தனுடைய, முகம் – முகத்தை, நோக்கி-,
பாரம் மா மரபினில் பிறந்தவர் மொழி பழுதினுக்கு – பெருமைபெற்ற
சிறந்தவமிசத்திலே பிறந்தவர் கூறும் பழிமொழிக்கு, அஞ்சி – பயந்து, அழுது-,
பேடகத்திடை நனி பொதிந்து – பெட்டியிலே வைத்து நன்குமூடி, மா நதி பூரம் –
சிறந்த நதியின் பெருக்கில், ஒழுக்கினள் – (தனக்கு அந்தரங்கரான
தோழியர்மூலமாகச்) செலுத்தினாள்; (எ-று.)

     “ஸு ரஸ்ரவந்த்யாம் அபவாதசங்கிதா – ஸகீபி ராப்தாபி ரஸாவமோசயத்”
என்று கங்கைப்பெருக்கில்விட்டதாகப் பாலபாரதமும் அசுவநதியிலே விட, அது
சர்மண்வதி நதியிலும், அது யமுனையிலும், அதுகங்கையிலும் சேர்ப்பித்தனவாக
வியாச பாரதமும் கூறும்.

குஞ்சரத்து இளங் கன்று என, சாப வெங் கோளரி என,
பைம் பொன்
பஞ்சரத்திடை வரு திரு மதலையைப் பகீரதி எனும்
அன்னை,
அம் சரத் திரைக் கரங்களால் எடுத்து எடுத்து, அசையவே
தாலாட்டி,
வெஞ் சரச் சிலைச் சூதநாயகன் பதி மேவுவித்தனள்
அன்றே.பாகீரதி அந்தப்பெட்டியைச் தலைமைச்சாரதியின்
நகரிற்சேர்ப்பித்தல்.

குஞ்சரத்து இள கன்று என – யானையின் இளங்கன்று போலவும்,
பைம் பொன் பஞ்சரத்திடை வரு சாபம் வெம்கோள் அரி என –
பைம்பொன்மயமான கூட்டினிடையே வருகின்ற குட்டியான கொடிய
கொல்லுந்தன்மையுள்ள சிங்கம்போலவும், (பெட்டியிலிருந்தபடியே வந்த),
திருமதலையை – சிறந்த அந்தக்குழந்தையை, பகீரதி எனும் அன்னை – பாகீரதி
யென்கிற தாய், அம் சரம் திரை கரங்களால் – அழகிய சலிக்குந்தன்மையுள்ள
அலையாகிறகைகளால், எடுத்து எடுத்து-, அசைய (ஊஞ்சலிலாடுவதுபோல்)
அசையுமாறு, தாலாட்டி-, என்று ஏ-(ஆற்றில்விட்ட) அந்தத்தினத்திலேயே, வெம்
சரம் சிலை சூத நாயகன் – கொடுஞ்சரங்களைக்கொண்ட வில்லை யேந்திய
தேர்ப்பாகர் தலைவனான அதிரதனென்பானுடைய, பதி – நகரத்தில், மேவுவித்தனள்
– சேர்பித்ததாள்;(எ-று.)

     பெட்டியிலிருக்கும் மதலைக்குக் கூட்டிலிருக்கும் சிங்கக்குட்டி யுவமை:
“க்ரமேணமஞ்ஜூஷிகயா த்ருதம்தயா – சிசும் ஹரே. பஞ்ச ரவர்த்திநம்யதா
தரங்கடோலாந்தரலாலிதம் சநை:- நிநாய தம்ஸூ தபுராந்திகம் நதீ” என்ற
பாலபாரதம் காண்க. சஞ்சரத்திரை என்றும் பாடம்.அன்றே – அசையுமாம்

கோடு அகப்பட வரும் புனல் விழைவினால், குளிர் துறை
மருங்கு உற்றோர்,
பேடகத்திடை ஒழுகிய தினபதி பெருங் குமரனைக் கண்டு,
சூடகக் கை அம்புய மலர் இராதையும், சூத புங்கவன்தானும்,
ஆடகக் குலம் அடைந்தது ஒத்து, அரும் பெறல் ஆதரத்தொடு
கொண்டார்.-கரைமருங்கையடைந்த சாரதியும் அவன்மனைவியும்
நதிப்பெருக்கில் வந்தபெட்டியிற் குமரனைக்கண்டு
பெருமகிழ்ச்சியடைதல்.

கோடு அகம்பட – இரு கரையும் தன்னுட்பொருந்த, வரும் –
வந்த, புனல் – நீர்ப்பெருக்கைக்காண்பதில், விழைவினால் – விருப்பினால்,
குளிர்துறை மருங்கு – குளிர்ந்தநீர்த்துறையினருகே, உற்றோர் –
அடைந்தவராகிய, சூடகம் கை அம்புயம் மலர் இராதை உம் சூதபுங்கவன்
தான்உம் – சூடகமணிந்த கையாகிய தாமரை மலரையுடைய
இராதையென்பவளும் பாகர்தலைவனாகிய அதிரத னென்பானும், ஒழுகிய –
(நதிப்பெருக்கிலே) அடித்துக்கொண்டு வரப்பெற்ற, பேடகத்திடை – பெட்டியிலே,
தினபதி பெருங் குமரனை கண்டு – சூரியனுடைய சிறந்தகுமாரனைப் பார்த்து,
ஆடகம் குலம் அடைந்தது ஒத்து – (வறியோர்) பொற்குவியலைப்பெற்றாற்
போன்று, அரும்பெறல் ஆதரத்தொடு.பெறுதற்கு அரிய பிரீதியோடு, கொண்டார்
– (அந்தப்புதல்வனையெடுத்து வளர்க்குமாறு) கொண்டார்கள்;

     இராதை – அதிரதன்மனைவி. பெட்டியில் குழந்தையுடனே ரத்னங்களையும்
வைத்து நதிப்பெருக்கிற் குந்திதேவி விட, அதிரதன் அந்தப் பெட்டியை
எடுத்தபோது இரத்தினங்களுடனே பெற்றானாதலால், அந்தப்புதல்வனுக்கு வஸு
ஷேணன் [சம்பத்தின்தொகுதியையுடையவன்] என்று பெயரிட்டான்.
குண்டலக்காதனாய்த் தோன்றியதனால், கர்ணனென்று பெயர். இப்பெயர் சூரியன்
அசரீரிவாணியாய் வழங்கியதென்பர், மேல் கிருட்டிணன் தூது சருக்கம் செய்யுள்
154-இல். 

அதிரதன் திருமனையினில் விழைவுடன் அரும்பிய பனிக் கற்றை
மதி எனும்படி வளர்ந்து, திண் திறல் புனை மழுவுடை வர ராமன்
பதயுகம் தொமூஉ, வரி சிலை முதலிய பல படைகளும் கற்று,
‘கதிரவன் தரு கன்னன்’ என்று, உலகு எலாம் கைதொழும்
கவின் பெற்றான்.-அதிரதன்மனையில் வளர்ந்த கர்ணன் பரசுராமனிடம்
வில்முதலியன கற்று விளங்குதல்.

அதிரதன் திரு மனையினில் – அதிரதனுடைய சிறந்த வீட்டிலே,
விழைவுடன் – விருப்போடு, அரும்பிய பனி கற்றை மதி எனும்படி – தோன்றிய
குளிர்ச்சியின் தொகுதியையுடைய பிறைச் சந்திரனென்னுமாறு, வளர்ந்து-, திண்
திறல் புனை – மிக்கவலிமை பூண்ட, மழு உடை – மழுப்படையையுடைய, வர
ராமன் – சிறந்த பரசுராமனது, பத யுகம் தொழூஉ – இருதாள்களிலும் வணங்கி,
வரிசிலை முதலிய பல படைகள்உம் கற்று – கட்டமைந்த வில் முதலிய பல
படைக்கலங்களையும் பயின்று, கதிரவன் தரு – சூரிய பகவான் பெற்ற, கன்னன்
என்று – கர்ணனென்று, உலகு எலாம் கை தொழும் கவின் – உலகத்தாரெல்லாராலுங்
கைகுவிக்கத்தக்க அழகை, பெற்றான்-; (எ-று.)

     இந்தக்கர்ணன் அந்தணவடிவங்கொண்டு பரசுராமனைத் தொழுது அஸ்திர
சஸ்திரங்களிற் பயின்றானென்ப. பலபடைகளும் என்ற இடத்து உம்மையை
முற்றுப்பொருளாகவன்றி எச்சப் பொருளதாகக்கொண்டு, ஏனைக்கலைகளுங் கற்று
என்ப.  

கன்னற் பயந்த கதிர் வெம் முலைக் கன்னிதன்னை
முன்னர்ப் பயந்தோன் முகவோலை உவகையோடு
மன்னர்க்கு எழுத, ‘மடப் பாவை வரிக்கும்’ என்று,
செல் நல் படை வேல் முடி மன்னவர் சென்று சேர்ந்தார்.-அந்தப்பிரதைக்குச் சுயம்வரம் ஏற்படுத்தவே,
மன்னவர்திரளுதல்.

கன்னன் பயந்த – கன்னனைப்பெற்ற, கதிர் வெம்முலை கன்னி
தன்னை – ஒளிபொருந்திய விரும்பத்தக்க முலையையுடைய கன்னிகையை
[பிரதையென்பாளை], முன்னர் பயந்தோன் – முன்பு பெற்றவன், முகம் ஓலை –
[சுயம்வரத்தைப்பற்றிய] திருமுகவோலையை, உவகையோடு – மகிழ்ச்சியோடு,
மன்னவரக்கு எழுத-,- ‘மடம்பாவை – மடமைக்குணமுள்ள பாவைபோன்ற
அந்தப்பிரதை, வரிக்கும் – (நம்மை) விரும்பி மாலைசூட்டுவாள், ‘ என்று -, செல்
நல் வேல்படை முடி மன்னர் – (போரிற்) செல்லவல்ல சிறந்த
வேற்படையையேந்திய முடிசூடிய அரசர், (அந்தச் சுயம்வரத்தின்பொருட்டு),
சென்று சேர்ந்தார்-; (எ-று.)- சென்னற்படிவேல் என்றும் பாடம்.

     இதுமுதல் இருபத்துநான்கு கவிகள் – பெரும்பாலும் மூன்றாஞ் சீரொன்று
காய்ச்சீர் அல்லது கனிச்சீரும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிவந்த
கலிநிலைத்துறைகள். இந்தப் பகுப்பில் அடிக்குப் பதினான்கெழுத்துக்கள் அல்லது
பதினைந்தெழுத்துக்களைக்கொண்டு செய்யுள்கள் உள்ளன.

உருவம் சிறந்து, பல கோளும் உதிக்குமேனும்,
மருவும் குமுதம் மதி கண்டு மலருமாபோல்,
பருவம் செய் பைம் பொன் கொடி அன்னவள் பாண்டு என்னும்
நிருபன்தனக்கே மணம் கூர் பெரு நேயம் உற்றாள்.-குந்தி பலமன்னரிடையே மணமாலையைப்
பாண்டுவுக்கே சூட்டுதல்.

உருவம் சிறந்து – வடிவத்தினான் மேம்பட்டு, பல கோள்உம் –
பலகிரகங்களும், உதிக்கும் ஏன்உம் – தோன்றுமானாலும்,- மருவும்-
(நீர்நிலையிற்) பொருந்திய, குமுதம் – ஆம்பல், மதி கண்டு – சந்திரனைக்
கண்டு, மலரும் ஆபோல் – மலரும் விதம் போல,- பருவம்செய்- யௌவன
பருவத்தையடைந்த, பைம் பொன் கொடி அன்னவள் – பசும்பொற்கொடி
போன்றவளான அந்தக்குந்தி, பாண்டு என்னும் – பாண்டு என்கிற, நிருபன்
தனக்குஏ – அரசன்திறத்தில்தானே, மணம் – விவாகஞ் செய்து கொள்ளுதற்கு, கூர்
மிக்க, பெருநேயம் – பெருத்த அன்பை, உற்றாள் – பொருந்தினாள்; (எ-று.

தானே உவந்து, தனித் தார் புனை தையல், வென்றி
ஆன் ஏறு அனையான் உயிர்க்கு ஆர் அமிர்து ஆன பின்னர்,
‘யானே தருவன்’ என, மத்திர ராசன் நல்க,
மானே அனைய விழியாளை வதுவைசெய்தான்.-மத்திரராசன் தன்புதல்வியைத் தானே தர, அவளையும் பாண்டு
மணத்தல்.

தான்ஏ – சுயமாகவே, உவந்து – மனமகிழ்ந்து, தனி தார் புனை –
ஒப்பற்ற சுயம்வரமாலையைச் சூட்டிய, தையல் – பெண்ணாகிய குந்தி, வென்றி
ஆன்ஏறு அனையான் – வெற்றிபொருந்திய இடபத்தை யொத்தவனாகிய
பாண்டுவின், உயிர்க்கு-, ஆர் அமிர்து ஆன  பின்னர் – அருமையான
அமிர்தம்போலான பிறகு,- மத்திரராசன்-, யானே தருவன் என நல்க-நானே
(என்மகளை இந்தப் பாண்டுவுக்கு மனைவியாகத்) தருவேன் என்று
சொல்லிக்கொடுக்க,- மான்ஏ அனையவிழியாளை – மானையேயொத்த
கண்ணையுடையவளான மாத்திரியையும், வதுவைசெய்தான்-(அந்தப்பாண்டு)
மணந்தான்;

     இந்த மாத்திரி மத்திரதேசாதிபதியான ருதாயன னென்பவனுக்கு மகள்:
சல்லியனுக்குத் தங்கை. பாலபாரதத்தில், வீடுமன் தன்வில்வலியாற் கவர்ந்து
கொண்டுவந்து மாத்திரியைப் பாண்டுவுக்கு மனைவியாக்கினா னென்று உள்ளது.
வியாசபாரதத்தில் வீடுமன் சென்று மாத்திரியைப் பாண்டுவுக்குத் தருமாறுகேட்க,
மத்திரபதி இசைந்தானென்று உள்ளது.  

எண் உற்ற சூரன், இகல் மத்திர ராசன், என்ன
மண் உற்ற சீர்த்தி வய மன்னர் மகளிரோடும்
கண் உற்ற கானில் விளையாடல் கருதி, அம் பொன்
விண் உற்ற சாரல் இமயப் புறம் மேவினானே.-பாண்டுமன்னவன் வேட்டையாடுமாறு இவ்விரு
மங்கையரோடும் இமயமலைப்புறத்தைச் சார்தல்.

கண்உற்ற – எதிர்ப்பட்ட, கானில் – காட்டிலே, விளையாடல் –
வேட்டையாடுவதை, கருதி – எண்ணி,- (பாண்டுமன்னன்),- எண் உற்ற – நல்ல
மதிப்புப் பொருந்திய, சூரன் – சூரனும், இகல்மத்திரராசன் – பராக்கிரமமுடைய
மத்திரராசனும், என்ன – என்று, மண் உற்ற சீர்த்தி வயமன்னர் – பூமியிலே
பொருந்திய கீர்த்தியை யுடையவலிமைபொருந்திய அரசரின், மகளிரோடும்-,
அம்பொன் – அழகிய பொன்னைக்கொண்ட, விண் உற்ற சாரல் –
வானத்தையளாவிய தாழ்வரையோடுகூடிய, இமயம் – இமயமலையின் – புலம் –
பக்கத்தை, மேவினான் – அடைந்தான்; (எ-று.)

     மகளிரோடும் விளையாடல் கருதி இமயமலைப்புறத்தை யடைந்தானென்று
கூறலாமெனினும், ‘ஆகேடவிஹாரகௌதுகீ – 
ஸபோஜ மத்ராதிபகந்யகாஸக:- யயௌ
வநம் ஹைமவதம் மஹா ரத:” என்று பாலபாரதத்தில் வருவதனாலும், கலைமானினம்
முதலியவற்றை வேட்டையாடினா னென்று மேற்பாடலில் வருவதனாலும்
இங்ஙன்பொருள் கூறப்பட்டது. கண்ணுற்ற – இடமகன்ற எனினுமாம். 

கானத்தில் உள்ள கலைமான்இனம், காட்சி ஆமா,
ஏனத் திரள், வெம் புலி, எண்குடன், யாளி, சிங்கம்,
தானப் பகடு, முதலாய சனங்கள் எல்லாம்
மானச் சரத்தால் கொலைசெய்தனன், வாகை வில்லான்பலமிருகங்களையும் பாண்டு வேட்டையாடுதல்.

வாகைவில்லான் – வெற்றிமாலைசூடிய வில்லையேந்தியவனாகிய
பாண்டு;- கானத்தில் உள்ள – காட்டிலிருக்கின்ற, கலை மான் இனம் –
கலைமானின் கூட்டமும், காட்சி- (கண்ணுக்கு) அழகிய, ஆ மா – காட்டுப்பசுவும்,
ஏனம் திரள் – பன்றியின்கூட்டமும், வெம் புலி – கொடியபுலிகளும், எண்குடன் –
கரடியுடனே, யாளி – யாளியும், சிங்கம் – சிங்கமும், தானம் பகடு –
மதசலத்தையுடைய களிறும், முதல் ஆய – முதலாகிய, சனங்கள் எல்லாம் –
(விலங்கின்) திரள்களையெல்லாம், மானம் சரத்தால் – பெருமைபொருந்திய
அம்பினால், கொலைசெய்தனன் – வேட்டையாடினான்: (எ-று.)- கற்கியாமா என்று
பிரதிபேதம். கூட்டமென்ற பொருளில், சனம் என்றார்.

மெய்யில் தெறித்த குருதித் துளி மேருவில்லி
சையத்து அலர்ந்த கமழ் குங்குமத் தாது மான,
கையில் சிலையோடு உலவும் கழல் காளை கேதம்,
பையத் தணித்தான், இமநாக பவனன் என்பான்.-வேட்டையிளைப்பை இமவானினின்றுதோன்றிய
வாயுபகவான்போக்குதல்.

வேட்டையாடுகையில்), மெய்யில் – உடம்பிலே, தெறித்த-, குருதி
துளி – இரத்தப்பொட்டு, மேருவில்லி சையத்து அலர்ந்த கமழ் குங்குமம் தாது
மான – மேருவைவில்லாகக் கொண்ட சிவபிரானுடைய கைலாசமலையிலே
மலர்ந்த நறுமணம் வீசுகின்ற குங்குமப்பூவின் இதழையொத்துத் தோன்ற,-
கையில் சிலையோடு உலவும் கழல் காளை – கையிலே வில்லுடனே உலாவுகின்ற
வீரக் கழலையணிந்த காளைப்பருவத்தானாகிய அந்தப் பாண்டுவின், கேதம் –
(வேட்டையாடியதனாலுண்டாகிய) இளைப்பை, இமநாகம் பவனன் என்பான் –
இமயமலையினின்றுதோன்றிய வாயுபகவான், பைய – மெல்ல, தணித்தான்-; (எ-று.)

     வெண்ணிறவுடம்பிற் செந்நிறக்குருதித்துளி சிந்தியது – வெள்ளிமயமான
கைலாஸமலையிற் குங்குமப்பூவின் தாது சிந்தியதை யொக்கும்: பவனனென்பான்,
என்பான் – முதல்வேற்றுமைச் சொல்லுருபு. பவனன் என்பதற்கு ஏற்ப,
தணித்தானென ஆண்பாற் பயனிலை வந்தது. சையம் – சைலமென்பதன் திரிபு:
ஸஹ்யமென்பதன் திரிபு என்றால், சிறப்புப்பெயர் பொதுப்பொருளில்
வந்ததென்க.  

பொன் அம் கழலான் எதிர், அவ் இடை, போகம் வேட்டு,
மன்னும் கலையும் பிணைமானும் மகிழ்ச்சி கூர,
மின்னும் கணையால் இவன் எய்திட வீழ்ந்த போதில்,
முன் நின்றது, அந்த உயிர், வந்து ஒர் முனிவன் ஆகி,-மானுருவங்கொண்டு கிரீடித்த கிந்தமனென்ற
முனிவனைப்பாண்டுமன்னன் அம்பினால் விழுத்தல்.

அ இடை – அவ்விடத்து, அம் பொன் கழலான்எதிர் – அழகிய
பொற்கழலைப்பூண்டவனான அந்தப்பாண்டுவின்எதிரிலே, போகம வேட்டு –
புணர்ச்சியை விரும்பி, மன்னும் – வேடம்பூண்ட, கலைஉம் – ஆண்மானும்,
பிணைமான்உம் – பெண்மானும், மகிழ்ச்சிகூர- மகிழ்ச்சி மிகாநிற்க,- இவன் –
இந்தப்பாண்டு, மின்னும் கணையால் – ஒளிவிடுகின்ற அம்பினாலே, எய்திட –
(கலைமான்மீது) தொடுத்து விட, (அதனால்), வீழ்ந்த போதில் –
விழுந்தபொழுதில், அந்த உயிர் – இறந்திடும் அந்தப்பிராணி, ஒர் முனிவன்
ஆகிவந்து முன் நின்றது-; (எ-று.)

      ‘போகம்வேட்டு மகிழ்ச்சிகூர’ என்றமையால், அவ்விரண்டும்
புணர்ச்சியின்பத்தி லாழ்ந்திருந்த தென்பதும், வீழ்ந்தபோது முனிவனாகி
முன்னின்ற தென்றமையால், இந்தப் பாண்டுவின் அம்புபட்டது கலைமானின்மே
லென்பதும் பெறப்படும்.  

நாரிக்கு ஒரு கூறு அரனார், முதல், நல்க, எய்த
வேரிக் கணையால் மிக நொந்துழி, வேடம் மாறி,
பூரித்த காமநலம் எய்து பொழுது, நின் கைச்
சோரிக் கணையால் அறையுண்டு உயிர் சோர்ந்து வீழ்ந்தேன்.-இதுவும் அடுத்தகவியும் – ஒருதொடர்: மானுடவடிவம் ஆன
முனிவன் தன் வரலாறுகூறி மன்னவனைச் சபித்தமை தெரிவிக்கும்.

நாரிக்கு ஒரு கூறு அரனார் – உமாதேவிக்கு (த் தமது)
வாமபாகத்தைக் கொடுத்தவரான சிவபிரான், முதல் – முற்காலத்திலே, நல்க
(நெற்றிவிழிக்கனலால் எரிப்புண்ட மன்மதனை) அருள் செய்து பிழைப்பிக்கவே,
(அந்தமன்மதன்), எய்த-, வேரி கணையால்- தேனைக்கொண்ட மலரம்புகளினால்,
மிகநொந்த உழி – மிகவும் (உடல்) நொந்ததனால், (நான்), வேடம் மாறி –
மானுஷவேஷம்மாறி, (மான் வேஷத்தைக்கொண்டு), பூரித்த காமம் நலம் – மிக்க
காமசுகத்தை, எய்தும் பொழுது – அடைந்தபோது, நின் கை சோரி கணையால் –
உன்கையிலுள்ள இரத்தக்கறையுள்ள அம்பினாலே, அறையுண்டு – மோதப்பட்டு,
உயிர்சோர்ந்து – உயிர்தளர்ந்து [இறந்து], வீழ்ந்தேன்-வீழ்ந்திட்டேன்;(எ-று.)

     நாரிக்கொருகூறரனார் முதனல்கவெய்தவேரிக்கணை யென்றதனால்,
கடவுளரையும் மயக்கவல்லது அந்தமன்மத பாணமென்க.  

என் போல இன்பத்திடை நீயும் இறத்தி!’ என்னா,
அன்போடு இறந்தான், முதல் கிந்தமன் ஆன பேரோன்;
தன்போல் மகிழ்நனுடனே செந்தழலின் எய்தி,
பின் போயினள், மென் பிணை ஆன அப் பேதைதானும்.

என்போல – என்போலவே, இன்பத்திடை – காமவின்பத்தை
யனுபவிக்கும்போதில்தானே, நீ உம்-, இறத்தி – இறந்திடுவாய், என்னா- என்று,
அன்போடு – காதலோடு, கிந்தமன் ஆன பேரோன் – கிந்தமனென்று
பேரையுடைய அம்முனிவன், இறந்தான்-; மெல் பிணை ஆன அ பேதை
தான்உம் – (ஆண்மானான அந்தக் கிந்தமனோடு கிரீடிக்கும்பொருட்டு)
மெல்லியபெண்மானான அந்த அவன் மனைவியும், தன்போல் மகிழ்நனுடனே-
தனக்கு ஒத்த கணவனுடனே, செந் தழலின் எய்தி – செந்நிறத்தீயிற் சேர்ந்து,
பின் – (அவனைத்) தொடர்ந்தே, போயினள்-;(எ-று.)

     கிந்தமுனிவன் பாண்டுவுக்குச் சாபங்கொடுத்து இறந்தபின் அவன் மனைவி
சிதையடுக்கி அதில் அவனுடம்பையேற்றி நெருப்பு வைத்து அத்தழலில்
தன்னுடம்பை நீத்தாளென்க. கணவனுடன் தீப்பாய்ந்தவர், அவன்புக்க உலகம்
புகுவரென்பது இங்கு அறியத்தக்கது.      

நினைவு அற்ற சாப நிலை பெற்ற பின், நெஞ்சின் வேறு ஓர்
இனைவு அற்று, ‘நன்மை இதுவே இனி’ என்று தேறி,
மனை வைத்த காதல் மடவாருடன், மன்றல் வேந்தன்,
முனை வைத்த வாய்மை முனிக் கானம் முயன்று சேர்ந்தான்.-இதுவும் அடுத்தகவியும் – பிறகு பாண்டு பத்தினிமா
ரோடுதபோவனஞ்சேர்ந்து அருந்தவஞ் செய்தமை கூறும்.

நினைவு அற்ற – நினைவு நீங்கிய [புத்திபூர்வகமாக வல்லாமற்
செய்த செயலின் பயனாகநேர்ந்த], சாபம் நிலை – சாபத்தின் நிலைமையை,
பெற்ற பின் – அடைந்தபின்,- நெஞ்சின் – (தன்) மனத்திலே, வேறு ஓர் இனைவு
அற்று – வேறொரு வருந்தத்தக்க விஷயத்தை யெண்ணுதலைத் தவிர்ந்து, இனி
நன்மை இது ஏ என்று தேறி – இனி (நமக்கு) நன்மை தருவது இந்தத்தவநெறியே
யென்று  தெளிந்து,- காதல் வைத்த மனை மடவாருடன்- (தன்னாற்)
காதலிக்கப்பெற்ற மனைவிமாருடனே, மன்றல் வேந்தன்- (அவர்களை)
மணஞ்செய்துகொண்டவனான பாண்டுராசன், முனை வைத்த வாய்மை –
(நல்லவற்றுள்) முதன்மையாக் கணிக்கப்பட்ட மெய்ம்மையையுடைய, முனி –
இருடிக்குரிய, கானம் – காட்டை, முயன்று -(தவத்தில்)முயற்சியெடுத்துக்கொண்டு,
சேர்ந்தான்-;

     நன்மைபெறுதற்குரியமார்க்கம் தவமே யென்ற காரணத்தால், நன்மை
யிதுவேயினியென்றுதேறினான். “யாமெய்யாக்கண்டவற்றுளில்லையெனைத்
தொன்றும், வாய்மையினல்லபிற” என்ப ஆதலால், ‘முனைவைத்தவாய்மை’
என்றாரென்னலாம். “நிராசா பரமம் ஸு கம்” என்றபடி ஆசையையொழிக்கவே
துன்பம் நீங்கி இன்பமுண்டாகுமாதலால், ஆசையையொழித்து என்ற பொருளில்,
‘நெஞ்சின்வேறோரினைவற்று’ என்றது. மனைவிமாரைத்துறந்து
தவஞ்செய்யவிரும்பிய பாண்டுமன்னன் அம்மனைவியரின் வேண்டுகோளினால்
அன்னாருடன் தவஞ்செய்யச் செல்லலாயினனென்று வியாசபாரதத்தாற் பெறப்படும்.
வனைவற்றகாதல், முனைவற்ற வாய்மை என்பன பாடாந்தரங்கள்.

காண்டற்கு அரிய மணிப் பைம் பொற் கலனொடு, ஆடை,
வேண்டற்கு அரிய விடயங்களின் வேடம் மாற்றி,
தீண்டற்கு அரிய திருமேனியன், தேவராலும்
பூண்டற்கு அரிய பெரு மா தவம் பூண்டுகொண்டான்.-பாண்டுவின் தவ நிலை

தீண்டற்கு அரிய திரு மேனியன் – (பிறராற்) பெறுதற்கரிய
ஒளியை(த் தன்) உடம்பிற்கொண்டவனாயிருந்த அந்தப் பாண்டு,- காண்டற்கு
அரிய – காண்பதற்கு அருமையான [அருமைப்பட்டுத் தேடியடைதற்குரிய], மணி
– இரத்தினங்களினாலும், பைம்  பொன் – பசும்பொன்னினாலுமியன்ற, கலனொடு
– அணிகலன்களுடனே, ஆடை- பொற்பட்டாடையும், வேண்டற்கு அரிய –
வேண்டிப்பெறுதற்கு அருமையான, விடயங்களின் – ஐம்புலன்களினோடு, வேடம்
– (தன் அரசக்) கோலத்தையும், மாற்றி – ஒழித்திட்டு,- தேவராலும்,- பூண்டற்கு
அரிய – மேற்கொள்ளுதற்கு அருமையான, பெரு மா தவம் – பெருமைபெற்ற
சிறந்த தவத்தை, பூண்டு கொண்டான்-; (எ-று.)

     அணிகலன்களை அணிதலை யொழித்துச் சடைமுடி மரவுரி முதலிய
தவக்கோலத்தைப்பூண்டு,  பாண்டு தவஞ்செய்யலாயின னென்பதாம். பாண்டு
சதச்ருங்கபர்வத்தில் தவம்புரிந்தானென்று நூல்கள் கூறும்.    

உற்றுப் புறத்துப் பகை ஆடி உடன்ற எல்லாம்
செற்று, புவியில் தனி ஆழி செலுத்து நீரான்,
பற்று அற்ற யோகப் படையால், உட்பகைகள் ஆறும்
முற்றத் துறந்து, பெரு ஞான முதல்வன் ஆனான்.-பாண்டு ஞானமுனியாதல்.

புறத்து – வெளியிலே, பகை உற்று – பகையாகப்பொருந்தி, ஆடி –
(எதிரிலே) சஞ்சரித்து, உடன்ற எல்லாம் – மாறுபட்ட எல்லாரையும், செற்று –
அழித்து, புவியில் – பூமியிலே, தனி ஆழி – ஒப்பற்ற ஆஜ்ஞாசக்கரத்தை,
செலுத்தும் – நடத்திய, நீரான் – தன்மையனாயிருந்த பாண்டு மகாராசன்,- பற்று
அற்ற – நசையென்பதை நீக்குவதனாற் பெறுகின்ற, யோகம் படையால் –
யோகமென்று சொல்லப்படுகின்ற ஆயுதத்ததால், உட்பகைகள் ஆறுஉம் – காமம்
குரோதம் லோபம் மோகம் மதம் மாற்சரியம் என்னும் ஆறுபகைகளையும், முற்ற
– முழுவதும், துறந்து – ஒழித்து, பெருஞானம் முதல்வன் –
பெருத்தஞானத்தைப்பெற்ற முதல்வனாக, ஆனான்-; (எ-று.)

     புறப்பகையைவென்று ஆஜ்ஞாசக்கரத்தைச் செலுத்திய தலைவனான
பாண்டு, இப்போது அகப்பகையையொழித்து ஞானத்தைச்செலுத்தும்
முதல்வனானானென்க: ஒருவனிடத்து மாறன இருநிலைதோன்றியனவெனக் கூறியது
– முறையிற்படர்ச்சியணி எனப்படும் பரியாயவணியாம் . காமம்முதலியவற்றைப்
பகையென்றதற்கு ஏற்ப, யோகத்தைப் படையென்றார்: இயைபுருவகம்

ஆரக் குழம்பில் அளைந்து, ஆரம் அணிந்து, விம்மும்
பாரக் குசங்கள் பல தைவரும் பான்மை நீங்கி,
நாரக் கமல கர சோதி நகங்கள், மீள,
ஈரக் குசங்கள் கிழிக்கும் தொழிற்கு ஏற்றவாலோ!இரண்டுகவிகள் – பாண்டுவின் தவநிலைமை கூறும்.

ஆரம் குழம்பில் – சந்தனக்குழம்பிலே, அளைந்து – துழாவி,
ஆரம் அணிந்து – முக்தாஹாரத்தை யணிந்து, விம்முன்- பருக்குந்
தன்மையுள்ள, பாரம் குசங்கள் பல – பலவான பாரமாகிய கொங்கைகளை,
தைவரும்-திளைக்கிற, பான்மை-தன்மையை,நீக்கி-,நாரம் கமலம் கரம் சோதி
நகங்கள் – நீரிலுள்ள தாமரைபோற் பொலிகின்ற கையிலேயுள்ள சோதியுள்ள
நகங்கள், மீள – மீண்டும், ஈரம் குசங்கள் கிழிக்கும் – ஈரமுள்ள
தருப்பைப்புற்களைப் பறிக்கின்ற, தொழிற்கு-, ஏற்ற – ஏற்பனவாயின; (எ-று.)-
ஆல் – வியப்பைக் குறிக்கும் இடைச்சொல்: நிலைமாறியது குறித்து வியந்தபடி.
இதுவும், கீழ்ச்செய்யுளிலுள்ள அணியே, குசும் – தருப்பை

நாமக் கலவி நலம் கூர நயந்து, நாளும்
காமக் கனலை வளர்க்கின்ற கருத்து மாற்றி,
தாமக் குழலார் இருவோரொடு தானும் ஒன்றி,
ஓமக் கனலே வளர்த்தான், உணர்வு உண்மை கண்டான்

நாமம் – பிரசித்தமான, கலவி நலம் – கலவியின்பம், கூர – மிக,-
நயந்து – விரும்பி, நாள்உம் – நாடோறும், காமம் கனலை – காமாக்கினியை,
வளர்க்கின்ற-, கருத்து- எண்ணத்தை, மாற்றி – நீக்கி,- தாமம் குழலார்
இருவோரொடு – மாலையணிந்த கூந்தலையுடையரான (குந்தி மாத்திரி என்ற)
இருமனைவிமாருடனே, தான்உம்-, ஒன்றி – கூடியிருந்து, ஓமம் கனல்ஏ
வளர்த்தான் – ஓமஞ் செய்தற்குரிய அக்கினியையே வளர்த்தவனாய், உண்மை
உணர்வு – தத்துவ ஞானத்தை, கண்டான் – பெற்றிருந்தான்; (எ-று.)

     கனலைவளர்த்தது – அதனிடையிலிருந்து தவஞ்செய்ய என்னலாம்: இனி,
யோகத்துக்கு அங்கமாகச் செய்யப்படுஞ் சடங்குக்கு என்பாரு முளர்.

இவ்வாறு அரிய தவம் நாள்தொறும் ஏறும் எல்லை,
கை வாள் ஒழிந்து, சமித்து ஏந்திய காவல் மன்னன்,
மை வாள் நெடுங் கண் வர சூரன் மகளை நோக்கி,
செவ் வாய் மலர்வான், புவிமேல் உறை தெய்வம் அன்னான்இங்ஙன் தவம்புரிந்துவருகையில், ஒருகால் குந்தியை
நோக்கிப் பாண்டுமன்னவன் கூறத்தொடங்குதல்.

புவிமேல் உறை தெய்வம் அன்னான் – பூமிமீதுவாழ்கின்ற
தெய்வத்தை யொப்பவனான, கை வாள் ஒழிந்து சமித்து ஏந்திய – கையிலே
வாட்படையை நீங்கிச் சமித்தைத் தாங்கிய, காவல் மன்னன் -காத்ததற்றொழிலை
யுடைய பாண்டுராசன்,- இ ஆறு – இவ்விதமாக, அரிய தவம் – அருமையான
தவம், நாள் தொறும் ஏறும் எல்லை – தினந்தோறும் ஏறிவருதற்கு இடனான
பொழுது,- (ஒருகால்), மை வாள் நெடுங் கண் – மை தீட்டியதும் வாள்போன்ற
வடிவினதுமாகிய நீண்டகண்ணைப்படைத்த, வர சூரன் மகளை நோக்கி –
சிறந்தவனான சூரனுக்குப்புத்திரியான குந்தியைநோக்கி, செவ் வாய் மலர்வான்-
(தன்னுடைய) சிவந்த வாயைத் திறந்து பேசுபவனானான்;

     பாண்டுமன்னவன் சதசிருங்கபருவதத்திற் கடுந்தவம் புரியா நிற்கையில்,
ஆங்குள்ள முனிவரோடும் நட்புக்கொண்டிருந்தான். ஒருகாலத்துச் சில இருடியர்
பிரமலோகத்துக்குத் திரண்டு போகலானார்கள்: அதுகண்ட பாண்டு
‘மகப்பேறில்லாதவனாயினும் நான் செய்யும் பெருந்தவத்தாற் பிரமலோகம்
புகுவேன்’ என்றானாக, அங்கிருந்த இருடியர் ‘உனக்கு மகவுண்டாகும் என்பதை
நாங்கள் ஞானக்கண்ணா லறிந்துள்ளோம்’ என்று கூறிச் சென்றனர்: பிறகு
‘முனிவனது சாபத்தைப்பெற்ற எனக்கு மகவு எப்படி யுண்டாகும்?’ என்று
பாண்டுமன்னவன் சிந்தையிலாழ்ந்திருந்தான்: அக்காலத்து வியாச முனிவரைப்
பூசித்ததன் பயனால் காந்தாரி கருக்கொண்டாள்: அதை யறிந்து பாண்டு மிக்க
வருத்தங்கொண்டு, பிறகு, புத்திரரைப் பெற வேணுமென்று விருப்பம்மிக,
பத்தினிமாரை நோக்கிச் சொல்லலானானெக் கதாசந்தர்ப்பம் காண்க

பூந் தார் வியாதமுனி தாள் இணை போற்றி, அன்பு
கூர்ந்து, ஆர்வம் முற்றி, அவன்பால் வரம் கோடல் எய்தி,
காந்தாரி நூறு மகவு ஆன கருப்பம் ஒன்று,
வேந்து ஆதரிக்கத் தரித்தாள், வடமீனொடு ஒப்பாள்.--இதுமுதல்மூன்றுகவிகள்-பாண்டுமன்னவன்குந்திதேவி
யினிடம்மகப்பேற்றின் சிறப்பைச் சொல்லுதலைக்கூறும்.-ஐந்து கவிகள் – ஒருதொடர்.

   (இ – ள்.) பூந் தார் வியாதமுனி தாள் இணை போற்றி – அழகிய
தாமரைமாலையையணிந்த வியாசமுனிவனுடைய உபய பாதங்களைத் துதித்து,
அன்பு கூர்ந்து -அன்பு மிக்கு, ஆர்வம் முற்றி – பக்திமிகுந்து, அவன் பால் –
அந்தமுனிவனிடத்தில், வரம் கோடல் எய்தி – வரம் பெறுதலை யடைந்து,
வடமீனொடு ஒப்பாள் – அருந்ததி போல்பவளாகிய, காந்தாரி-,-
(அவ்வரத்தின்பயனாக)-, நூறு மகவு ஆன கருப்பம் ஒன்று –
நூறுமகவைக்கொண்டதான ஒரு கருப்பத்தை, வேந்து ஆதரிக்க – திருதராட்டிரன்
ஆதரம்பொருந்த, தரித்தாள் – தாங்குபவளானாள்; (எ-று.)

     நீயும் அந்தக்காந்தாரிபோலவே கருப்பத்தைத் தாங்கவேணுமென்று மேலே
குறிக்கப்போவதனால், இங்கு இச்செய்தி கூறப்பட்ட தென்னலாம்.

கல்லா மழலைக் கனி ஊறல் கலந்து கொஞ்சும்
சொல்லால் உருக்கி, அழுது ஓடி, தொடர்ந்து பற்றி,
மல் ஆர் புயத்தில் விளையாடும் மகிழ்ச்சி மைந்தர்
இல்லாதவர்க்கு, மனைவாழ்வின் இனிமை என் ஆம்?

கல்லா – கற்காத [இயற்கையாய்த் தோன்றுகின்ற], மழலை –
குதலைச்சொல்லை, கனி ஊறல் – கொவ்வைக்கனிபோன்ற வாயினின்று
ஊறும்சொள்ளோடு, கலந்து – சேர்த்து, கொஞ்சும் – கொஞ்சிப்பேசுகின்ற,
சொல்லால் – சொல்லினால், உருக்கி – (கேட்போரை) உருகச்செய்து, (எங்கேனும்
பெற்றோர் சென்றால் அவர்களை), அழுது தொடர்ந்து ஓடி – அழுதுகொண்டே
விரைந்து பின் சென்று, பற்றி – பிடித்துக்கொண்டு, மல் ஆர் புயத்தில் – வலிமை
பொருந்திய தோளிலே, விளையாடும் – விளையாடுவதனாலான, மகிழ்ச்சி –
சந்தோஷத்தைவிளைக்கின்ற, மைந்தர் – புதல்வரை, இல்லாதவர்க்கு –
பெறாதவர்க்கு, மனை வாழ்வின் இனிமை – இல்லற வாழ்க்கையினிமை, என்ஆம்
– யாதுஆகும்? (எ-று.)

     புத்திரரைப்பெறாதோரால் இல்வாழ்வினினிமை பெறமுடியாதென்பதாம்.
கல்லாமழலை – கற்கமுடியாத மழலை யெனினுமாம்.தன்மைநவிற்சியணி.

மெய், தானம், வண்மை, விரதம், தழல் வேள்வி, நாளும்
செய்தாலும், ஞாலத்தவர் நற்கதி சென்று சேரார்;
மை தாழ் தடங் கண் மகவின் முகம் மன்னு பார்வை
எய்தாது ஒழியின், பெறும் இன்பம் இவணும் இல்லை.

மெய் – உண்மையே பேசுதலும், தானம்- (சற்பாத்திரத்தில்)
கொடுத்தலும்,வண்மை விரதம் – வளப்பமுள்ள பலவகை விரதத்தை
மேற்கொள்ளுதலும், தழல்வேள்வி – அக்கினியில் யாகம்புரிதலும்,
(ஆகியசெயல்களை), நாள்உம்செய்தால்உம் – நாடோறும்செய்துவந்தாரேயாயினும்,-
ஞாலத்தவர் -இவ்வுலகத்துப்பிறந்தவர்,- மை தாழ் – அஞ்சனம் பெருகுகின்ற, தட
கண் -விசாலமான கண்களையுடைய, மகவின் – குழந்தையின், முகம் – முகத்திலே,
மன்னு – பொருந்திய, பார்வை – கண்ணின்பார்வையை, எய்தாது ஒழியின் –
அடையாமற் போவாரேயானால், (அன்னார்), நற்கதி சென்று சேரார்-; இவண்
பெறும் இன்பம்உம் – இவ்வுலகத்திற் பெறுகின்ற இன்பமும், இல்லை – (அவர்கட்கு)
உண்டாகாது;மகப்பெறாதோர் இம்மைமறுமைகளை யிழப்ப ரென்றவாறு.

மென் பாலகரைப் பயவாதவர், மெய்ம்மையாகத்
தென்பாலவர்தம் பசித்தீ நனி தீர்க்கமாட்டார்;
என்பால் நிகழ்ந்த வினையால் இடர் எய்தி நின்றேன்;
நின்பால் அருள் உண்டுஎனின் உய்வன், நெடுங் கண் நல்லாய்!இரண்டுகவிகள் – பாண்டு குந்தியினிடம் ‘நீ புத்திரப்
பேறுஉண்டாக்கிக்கொள்ள அருள்புரிக ‘ என்றதைத் தெரிவிக்கும்.

நெடுங் கண் நல்லாய் – நீண்டகண்களையுடைய பெண்ணே! மெல்
பாலகரை – மெல்லிய குழந்தைகளை, பயவாதவர் – பெறாதவர், மெய்ம்மை ஆக
– உண்மையாக, தென்பாலவர்தம் – தெற்கேயுள்ளவரான பிதிரர்களின், பசி தீ –
பசியாகிய தீயை, நனி – மிகவும், தீர்க்கமாட்டார்- போக்கும்
வல்லமையில்லாதவராவர்; என்பால் நிகழ்ந்த வினையால் – என்னிடம் தோன்றிய
தீவினையால், இடர் (மகப்பெறாமையாகிய) துன்பத்தை, எய்திநின்றேன்-
அடைந்துள்ளேன்; நின்பால் அருள் உண்டுஎனின் – உன்னிடம்
கருணையுண்டாகுமானால், உய்வன் – (நான்) ஈடேறுவேன்; (எ – று.)

     என்பால் நிகழ்ந்தவினை என்றது – கிந்தம முனிவரின் சாபத்தை. நான்
சாபவசத்தினனாதலால், என் அனுமதியினால், முனிவர் மூலமாகவோ
தேவர்மூலமாகவோ நீ சந்ததியை யுண்டாக்கிக்கொள்க என்றவாறு

இல்வாழ்பவர்க்கு மடவார் அலது யாவர், இன்ப
நல் வாழ்வு, தேசு, புகழ், யாவும் நடத்துகிற்பார்?
தொல் வானவரின், மறையோரின், துறக்க பூமி
செல்வார் பெறும் பேறு இனி நீ அருள்செய்தி’ என்றான்.

இல் வாழ்பவர்க்கு – கிருகஸ்தராயிருப்பவர்க்கு, மடவார் அலது –
(அவர்களுடைய) மனைவிமாரேயல்லாமல், இன்பம் – இன்பமும், நல் வாழ்வு –
நல்லவாழ்க்கையும், தேசு – ஒளியும், புகழ் – புகழும், யாஉம் – (ஆகிய)
எல்லாவற்றையும், நடத்துகிற்பார் – உண்டாக்கக்கூடியவர், யாவர் – வேறுயாவர்?
இனி-, நீ-, தொல்வானவரின் – பழமையான தேவர்களாலோ, (அல்லது), மறை
யோரின்-வேதம்வல்லோரான அந்தணராலோ,துறக்கம் பூமி செல்வார்  பெறும்
பேறு அருள்செய்தி – சுவர்க்கலோகத்தையடைபவர் பெறுகின்ற பேற்றை (நான்)
அடையும்படி செய்வாய், என்றான்-; (எ -று.)

     தேவர்மூலமாகவோ வேதியர்மூலமாகவோ நீ மகப்பெறின், அதனால் யான்
தீக்கதிசேராது நற்கதிசேரவே னாதலால், அவ்வாறு நிகழ்த்த
மனம்புரியவேண்டுமென்று பாண்டுவேண்டியவாறு.     

பொற்பாவை, கேள்வன் மொழி கேட்டலும், பொன்ற நாணி,
‘சொற்பால அல்லாப் பழி கூர் உரை சொல்வது என்னே?
வெற்பு ஆர் நதிகள் சிறு புன் குழி மேவின் அன்றோ,
இற்பாலவர்க்குப் பிறர்மேல் மனம் ஏற்பது?’ என்றாள்.–குந்தி மறுத்துக் கூறுதல்.

பொன் பாவை – பொன்னாலியன்ற பிரதிமைபோல்பவளான குந்தி,-
கேள்வன் மொழி- (தன்) கணவனுடையசொல்லை, கேட்டலும்,- கேட்டவுடனே,
பொன்ற நாணி – உயிரழிந்தான்போன்று நாணங்கொண்டு, ‘சொல் பால அல்லா –
சொல்லுதற்கு ஏற்றன வல்லாத, பழி கூர் உரை – பழி மிக்க வார்த்தையை,
சொல்வது – (நீ) சொல்லுகின்ற இது, எனே்ன – என்னோ? வெற்புஆர் நதிகள் –
மலியிற்றோன்றுதல் பொருந்திய ஆறுகள், சிறு புன்குழி – மிகச் சிறியகுட்டையில்,
மேவின் அன்றோ – பாய்ந்துநின்றாலன்றோ, இல் பாலவர்க்கு – வீட்டிலிருந்து
தொழில்பார்ப்பவரான மனைவிமார்க்கு, பிறர்மேல் – (தன்கணவர் தவிர)
மற்றையோர்மேல், மனம்-ஏற்பது – சென்றிருப்பதாம், ‘ என்றாள்- என்று
கூறினாள்; (எ-று.)

    நதிக்குக் கடலிற்புகுதலே பெரும்பாலும் இயற்கையாதல் காண்க.

பின்னும் பலகால் வருட்டி, பிறர் பெற்றி காட்டி,
மன்னன் புகல, மட மாது மறுக்கமாட்டாள்,
கன்னன் பிறந்தது ஒழிய, செழுங் கன்னி ஆகி,
முன்னம் பெறு மா மறை மேன்மை மொழிந்திட்டாளே.-பின்னும் வற்புறுத்திப் பிறர்செயலையும் பாண்டு
காட்ட,மறுக்கமாட்டாமல் குந்தி, துருவாசரிடம் பெற்ற மந்திரமேன்மை தெரிவித்தல்.

பின்னும்-, பலகால் – பலமுறை வருட்டி-வசப்படுமாறு சொல்லி,
பிறர் பெற்றி காட்டி – அயலாருடைய தன்மையையும் எடுத்துக்காட்டி, மன்னன் –
பாண்டுராசன், புகல – சொல்ல,- மடம் மாது – மடப்பமுள்ள அந்தக்குந்தி,
மறுக்கமாட்டாள் – மறுத்துச்சொல்ல முடியாதவளாய்,- கன்னன் பிறந்து ஒழிய –
கர்ணனென்பவன் (தனக்குப்புத்திரனாக விவாகம் நிகழ்வதற்கு முன்னமே)
பிறந்ததைத் தவிர்த்து, செழு கன்னி ஆகி முன்னம் பெறு மாமறை மேன்மை –
சிறந்தகன்னிகையாயிருந்து முன்புபெற்ற சிறந்த மந்திரத்தின் மேன்மையை,
மொழிந்திட்டாள் – சொன்னாள்;

     ஸௌதாஸன் மதயந்தியென்ற தன்மனைவியிடம் வசிஷ்ட முனிவர்
மூலமாய் அச்மகனென்ற புத்திரனைப்பெற்றதையும், திருதராஷ்டிரன் முதலிய
தாங்களும் வியாசர்மூலுமாகப் பிறந்ததையும் பாண்டுமன்னன் குந்திதேவிக்கு
நிதரிசனமாக எடுத்துக்காட்டினனென விவரங் காண்க. ‘பலகால்வருந்தி’ என்றும்
பாடம். ‘மொழிந்திட்டாளே’ என்பது இன்னோசையாயிராமையால் இங்கு
‘மொழிந்து நின்றாள்’ என்றாற்போன்றுபாடமிருக்கலாம்.

மரு மாலை வல்லி உரை கேட்டு, மகிழ்ச்சி கூரும்
பெரு மா தவத்தோன் பணித்து ஏவிய பின்னர், முன்னர்த்
தருமாதிபனைக் கருத்தால் மடத் தையல் உன்னி,
அரு மா மறையால் அழைத்தாள்; மற்று அவனும் வந்தான்அதுகேட்டு மந்திரத்தால் மகப்பெறுமாறு பாண்டு அநுமதிதரவே,
தருமராசனை மந்திரத்தால் குந்திதேவியழைக்க அன்னான் வருதல்.

மருமாலை வல்லி – மணம்பொருந்திய மாலையையணிந்த
கொடிபோன்ற குந்திதேவியின், உரை – வார்த்தையை, கேட்டு-, மகிழ்ச்சிகூரும் –
மகிழ்ச்சிமிக்க, பெரு மா தவத்தோன் – மிக்கசிறந்த தவமுடையவனாகிய
பாண்டுராசன், பணித்து- (தன் உடன்பாட்டைச்) சொல்லி, ஏவிய பின்னர் –
(மகப்பெற்றுக்கொள்ளக்) கட்டளையிட்டபின்பு,- முன்னர் – முதலில், மடம்
தையல் – மடமைக்குணத்தைக் கொண்ட பெண்ணாகிய குந்திதேவி,
தருமாதிபனை கருத்தால் உன்னி  – யமதருமராசனை மனத்தினாலெண்ணி, அரு
மா மறையால் அழைத்தாள் – (துருவாசமுனிவனுபதேசித்த) அரிய சிறந்த வேத
மந்திரத்தாள் கூப்பிட்டாள்: அவனும் வந்தான்-; (எ-று.)

வந்தித்த தெய்வம் எதிர் வந்துழி, மன்னு கேள்வற்
சிந்தித்த சிந்தையினளாய், மலர்ச் சேக்கை சேர்ந்து,
குந்தித் தெரிவை, நிறை மா மதிக் கூட்டம் உற்ற
அந்தித் தெரிவை நிகர் என்ன, அழகின் மிக்காள்.-வந்தயமதருமராசனோடு சேர்ந்து குந்திதேவி அழகுமிக்காளாதல்.

வந்தித்த – (தான் மந்திரத்தினால்) வணங்கிய, தெய்வம்-, எதிர்
வந்தஉழி – எதிரேவந்தபோது, குந்தி தெரிவை – குந்தியென்ற பெண்,- மன்னு –
பொருந்திய, கேள்வன்- (தன்) கணவனை, சிந்தித்த – எண்ணிய, சிந்தையினள்
ஆய் – எண்ணமுடையவளாய்,- மலர் சேக்கை சேர்ந்து – மலர்ப்படுக்கையிற்
சேர்ந்திருந்து,- நிறை மா மதி கூட்டம் உற்ற – பதினாறுகலைகளும் நிரம்பிய
சிறந்த சந்திரனோடு சேர்தலைப்பொருந்திய, அந்தி தெரிவை நிகர் என்ன –
மாலைச் சந்தியாகிய பெண்ணுக்கு உவமையாவளென்னும்படி, அழகில் மிக்காள் –
அழகினால் மேம்பட்டவளானாள்;(எ-று.)

சிவம் உற, முகூர்த்தம், வாரம், தினம், திதி, கரணம், யோகம்,
நவம் என வழங்கு கோளும் நல் நிலை நின்ற போதில்,
‘அவனியை ஒரு கோல் ஓச்சி ஆளும்’ என்று, அறிவின் மிக்க
தவ நெறி முனிவர் கூற, பிறந்தனன், தருமன் மைந்தன்.-தருமபுத்திரன் பிறத்தல்.

முகூர்த்தம் – முகூர்த்தமும், வாரம்-வாரமும், தினம் –
நட்சத்திரமும், திதி – திதியும், கரணம் – கரணமும், யோகம் – யோகமும்,
(ஆகிய இவை), சிவம் உற – மங்களகரமாகப்பொருந்த,- நவம் என வழங்கும் –
ஒன்பது என்று சொல்லப்படுகின்ற, கோள்உம் – கிரகங்களும், நல் நிலை நின்ற
போதில் – நன்மையைத்தரக்கூடிய இடத்திலிருக்கையில்,-அவனியை ஒரு கோல்
ஓச்சி, ஆளும் என்று அறிவின் மிக்க தவம் நெறி முனிவர் கூற – இந்தப்பூமியை
(த் தன்) ஒப்பற்ற செங்கோலைச் செலுத்தி ஆள்வான் என்று அறிவினால் மிக்க
தவநெறியையுடைய முனிவர் சொல்ல,- தருமன் மைந்தன் பிறந்தனன் –
தருமபுத்திரன் பிறந்தான்; (எ-று.)

     பாவஞ்செய்வாரை நரகத்திற்செலுத்தித் தருமத்தை நிலை நிறுத்தலால்,
யமன் தருமன் எனப்படுவான்; இந்த மகன் அந்தத் தருமனுடைய அருளாற்
பிறந்தவ னாதலால், இவனைத் தருமபுத்திரனென்றே உலகோர் வழங்குவர்:
இவன் பெயர், யுதிஷ்டிரன்: இவன், ஐப்பசி மாதத்தில் வளர்பிறையில்
பஞ்சமியன்று கேட்டை நட்சத்திரத்தில் அபிசித்திற் பிறந்தா னென்று முதனூல்.

     இனி முப்பத்துமூன்று கவிகள் – பெரும்பாலும் முதற்சீரும் நான்காஞ்சீரும்
விளச்சீர்களும், மற்றைய மாச்சீர்களுமாகிய அறுசீராசிரிய விருத்தங்கள்

உதிட்டிரன் பிறந்தகாலை, உலகினில் உயர்ந்தோர் யாரும்,
வதிட்டனை முதலா எண்ணும் முனிவரும், வான் உளோரும்,
நிதிப் பயன் பெற்றார் போல நேயமோடு உவகை கூர்ந்தார்;
மதித்தன நிமித்தம் யாவும் மங்கலம் நிகழ்ந்த அன்றே!யுதிஷ்டிரன் பிறந்தபோது நன்னிமித்தம் தோன்றுதல்.

உதிட்டிரன் பிறந்த காலை – யுதிஷ்டிரன் பிறந்தபோது உலகினில்-,
உயர்ந்தோர் யார்உம் – உயர்ந்தவர்யாவரும், வதிட்டனை முதல் ஆ எண்ணும்
முனிவர்உம் – வசிட்டனை முதல்வனாகக்கொண்டு எண்ணப்படுகிற இருடியரும்,
வான்உளோர்உம் – தேவர்களும், நிதிபயன் பெற்றார்போல-நிதியாகிய பயனை
யடைந்தவர்போல,நேயமோடு – சினேகத்தோடு, உவகை கூர்ந்தார் – மகிழ்ச்சி
மிக்கவரானார்கள்: மதித்த – சிறந்தனவாக எண்ணப்பட்ட, நல் நிமித்தம் யாஉம்
– நல்ல நிமித்தங்களெல்லாம், மங்கலம் நிகழ்ந்த – மங்கலமாக நேர்பட்டன;
(எ-று.) – அன்றே – ஈற்றசை: தேற்றமுமாம்.

     உதிட்டிரன் = யுதிஷ்டிரன்: போரில் நிலையாக நிற்பவன் என்று
காரணப்பொருள்படும். உயர்ந்தோரென்றது – சாமானியமாய் உலகத்து
மேன்மையுற்றோரை.  

தண் பிறை எழுச்சி கண்ட சலநிதி எனவே, மைந்தன்
பண்புடை வதனம் நோக்கி, பார்த்திவன் பாண்டு என்பான்,
கண் பனி துளிப்ப, நெஞ்சம் கனிந்து இனிது உருக, மேனி
வண் புளகு அரும்ப, மேன்மேல் வரம்பு இலா மகிழ்ச்சி கூர்ந்தான்பாண்டு, மைந்தன்முகம்நோக்கி மகிழ்தல்

தண் பிறை எழுச்சி கண்ட – குளிர்ந்த பிறைச்சந்திரனது
தோற்றத்தைக் கண்ட, சலநிதி என – சமுத்திரம்போல, மைந்தன் பண்பு உடை
வதனம் நோக்கி – குழந்தையின் நல்லிலக்கணமமைந்த முகத்தைநோக்கி,
பார்த்திவன் பாண்டுஎன்பான் – அரசனாகிய பாண்டு என்பவன், கண் பனி
துளிப்ப – (தன்) கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரியவும், நெஞ்சம் இனிது
கனிந்து உருக – மனம் நன்கு கசிந்துருகவும், மேனி வள் புளகு அரும்ப – தன்
உடலில் மிக்கமயிர்க் கூச்சுதோன்றவும், வரம்பு இலா மகிழ்ச்சி – எல்லையில்லாத
மகிழ்ச்சியை, மேன்மேல் கூர்ந்தான் – மேன்மேல் மிகப்பெற்றான்; (எ-று.)

     சலநிதி =  ஜலநிதி: வடசொல். மதிகண்ட கடல் பொங்குதல் இயல்பு.
பிறையை யுவமை கூறியதால், வளருந்தன்மையனாதல் பெறப்படும். 

அற்றனள் துயரம் எல்லாம்; அருந் தவப் பயனால், மைந்தற்
பெற்றனள், குந்தி’ என்னும் பேர் உரை கேட்ட அன்றே,
உற்றனள் பொறாமை; கல்லால் உதரம் உள் குழம்புமாறு
செற்றனள், தனது கேடும் ஆக்கமும் சிந்தியாதாள்.–குந்திமகப்பெற்றதைக் கேள்வியுற்ற காந்தாரி
பொறாமைகொண்டு வயிறு உள்ளேகுழம்புமாறு கல்லால் மோதிக்கொள்ளுதல்.

குந்தி-,- அரு தவம் பயனால் – அருமையான தவத்தின் பயனால்,
மைந்தன் பெற்றனள் – மைந்தனைப் பெற்றாள்: (அதனால்), துயரம் எல்லாம்
அற்றனள் – துன்பமெல்லாம் நீங்கினள், ‘ என்னும் – என்கிற, பேர் உரை –
எங்கும் பயின்ற வார்த்தையை, கேட்டஅன்றே – கேட்ட அப்போதே,-
(காந்தாரி), பொறாமை உற்றனள் – பொறாமை யடைந்தவளாய், தனது கேடுஉம்
ஆக்கம்உம் சிந்தியாதாள்- (தான் செய்யப்போகிற செயலால்) தனக்குக்  கெடுதி
நேரிடுமோ அல்லது நன்மை நேரிடுமா என்பதையும் கருதாதவளாய், – உதரம்
உள் குழம்பும் ஆறு கல்லால் செற்றனள்- (தன்) வயிறு உள்ளேகுழம்பும்வகை
(அவ்வயிற்றைக்) கல்லால் மோதினாள்; (எ-று.)

     நூறுமகவைக்கொண்ட கருப்பமாதலால் அப்பிண்டம் இரண்டு யாண்டு
சென்றும் கெட்டியாயிருக்கவே, குந்தி மகவைப்பெற்றதிற் பொறாமை கொண்டு
காந்தாரி கல்லால் வயிற்றை மோதிக்கொண்டனளென்க. 

மை அறு சுபலன் கன்னி வயினிடைக் கருப்பம், சேர,
பையொடு குருதி பொங்கப் பார்மிசை விழுந்ததாக,
செய்யவன் விழுந்த திக்கில் செக்கர் வான் என்ன, சென்று,
மெய்யுடை அரிய கேள்வி வேள்வி கூர் வியாதன் கண்டான்.-காந்தாரியின்கரு பையோடு குருதிபொங்கப்பூமியில்
விழ, வியாசன் சென்று அதனைக் காணுதல்.

மை அறு சுபலன் கன்னி – குற்றமற்ற (கங்ந்தார தேசத்ததிபனான)
சுபல னென்பானுடைய பெண்ணின், வயினிடை – வயிற்றிலேயுள்ள, கருப்பம்-,
செய்யவன் விழுந்த திக்கில் செக்கர்வான் என்ன-சூரியன் அஸ்தமித்த திக்கிலே
செவ்வானந்தோன்றுவது போல, பையொடு – கருப்பப்பையுடனே, குருதி பொங்க
– இரத்தம்மேல் வழிய, பார்மிசை – பூமியின்மீது, சேர விழுந்தது ஆக –
ஒருசேரவிழுந்திட, சென்று – (கருப்பம் விழுந்த இடத்திலே) சென்று, மெய்உடை
அரிய கேள்வி வேள்வி கூர் – உண்மையையுடையவனும் அருமையான
கேள்வியையுடையவனுமாகி வேள்வியினான் மிக்கவனான, வியாதன் –
வியாசமுனிவன், கண்டான்-; (எ-று.)

     குருதிபொங்கவிழுந்த பைக்குச் செக்கர்வானம் உவமை; இவ்வுவமை
பாலபாரதத்திலும் வந்துள்ளது, இனி, செய்யவன் – சூரியனானவன், விழுந்த –
(தான்) விரும்பிய, திக்கில் – திக்கிலே, செக்கர்வான் என்ன – செக்கர்வானைக்
காண்பதுபோல, வியாதன் விழுந்த கருப்பையைக் கண்டான் என்றலும் ஒன்று.

சஞ்சலமான கோசத் தசையினைத் தாழிதோறும்
எஞ்சல ஆக நூறு கூறு செய்து, இழுதில் ஏற்றி,
நெஞ்சு அலர் கருணையாளன் நின்ற அக் குறையும் சேர்த்தி,
‘அம் சில் வார் குழலி ஆக!’ என்று ஆங்கு ஒரு கடத்தில்
வைத்தான்.–வியாசன் கோசத்தசையை நூறுகூறுசெய்து நெய்ந்
நிரம்பிய நூறு கும்பங்களிலிட்டு, மிச்சமான மாமிசப்
பகுதியை ஒருகலசப்பானையிலிட்டு வைத்தல்.

நெஞ்சு அலர் கருணை ஆளன் – நெஞ்சிலே நிரம்பிய
கருணையையுடைய வியாசன்,- சஞ்சலம் ஆன – குழம்பிப்போய்விட்ட, கோசம்
தசையினை – கருப்பையிலேயிருந்த மாமிசத்தை, எஞ்சல ஆக –
குறைதலில்லாதனவாக, நூறு கூறு செய்து – நூறு பாகமாகச் செய்து, தாழிதோறும்
– தாழிகளிலெல்லாமுள்ள, இழுதில் – நெய்யிலே, ஏற்றி-,- நின்ற அ குறைஉம் –
எஞ்சிநின்ற அந்தக் குறையும், அம் சில் வார் குழலி ஆக என்று – அழகிய
சில்லென்னும் அணியை யணிதற்குரிய நீண்ட கூந்தலைக்கொண்ட கன்னியாகுக
என்று, ஆங்கு – அங்குத்தானே, ஒருகடத்தில் – ஒருபானையிலே, சேர்த்தி
வைத்தான் – இட்டுவைத்தான்; (எ – று.)

     இதனால், இழுதைக் கொண்ட நூறு தாழியிலும் அந்தக்
கோசத்தசையினையிட்டமை பெறப்படும்.

கரு உறு தாயை நோக்கி, ‘கையறும் என்று, கன்றி
வெருவுறல், கற்பின் மிக்காய்! வேறு செய் தசைகள் யாவும்
உரு உற நிரம்பி, தாமே உற்பவிப்பளவும், கையால்
மருவுறல்; வழுவுறாது, என் வரம்’ என, வரதன் போனான்.-வியாசன் காந்தாரியைநோக்கி ‘என்வரத்தால் தசைகள்
உருவுபெற்று நிரம்பும்வரையிற்சேமித்துவை’ என்று சொல்லிப்போதல்.
   

கரு உறு தாயை நோக்கி – கருவுற்ற தாயைப்பார்த்து,
கற்பின்மிக்காய்-! கையறும் – (நம்முடைய கருப்பம்) அழிந்திடும் என்று-, கன்றி
– மனம்வாடி, வெருவுறல் – அஞ்சாதே: வேறு செய் தசைகள் யாஉம் –
நூறுகூறுசெய்த தசைகளெல்லாம், உரு உற – ரூபத்தைப் பொருந்த, நிரம்பி –
பூர்ணமாகவளர்ந்து, தாம்ஏ உற்பவிப்பு அளவுஉம் – தாமே தோற்றுங்காலம்
வரையிலும், கையால் மருவு உறல் – கையால் (அத்தசைக் கூற்றைத்) தொடாதே:
என்வரம் வழுஉறாது – என்னுடையவரம் பழுதுபடாது, ‘ என – என்று சொல்லி
விட்டு, வரதன் – வரத்தைக் கொடுத்தவனான வியாசன், போனான்;

     தாழியிற்பெய்த தசைகள் உறுப்புநிரம்பித் தாமே அந்தத் தாழியைப்
பிளந்துகொண்டு வெளிவரும் வரையிற் பாதுகாப்பாயென்று சொல்லிச் சென்றனன்
வியாசனென்க. தாய் – காந்தாரி.  

காம்பு என நிறத்த தோளாள், கரு வயிற்று இருப்பது ஒப்ப,
தேம் பயில் நறு நெய் பெய்த கலங்களைச் சேமமாக
ஆம் பரிவுடனே ஆற்றி, ஈற்று அளை அடைந்து வைகும்
பாம்பு எனப் பருவம் நோக்கி, இருந்தனள், பழுது இலாதாள்.-காந்தாரி தாழிகளிலிட்ட தசைக்கூறுகளைப் பாது
காத்து உற்பவிக்கும் பருவத்தை நோக்கியிருத்தல்

பழுது இலாதாள் – குற்றமற்றவளான, காம்பு என நிறத்த
தோளாள்-பசியமூங்கில்போலவுள்ள நிறத்தையுடைய தோளையுடையவளான
காந்தாரி, கரு – கருப்பம், வயிறு இருப்பது ஒப்ப – (தன்) வயிற்றில்தானே
இருப்பதையொப்ப, தேம் பயில் நறு நெய் பெய்த கலங்களை – இனிமை
பொருந்திய நறுமணமுள்ளநெய் யூற்றிய கலங்களை, சேமம் ஆக – பத்திரமாக,
ஆம் பரிவுடன் ஆற்றி – பொருந்திய மனப்பரிவோடு பாதுகாத்து,- ஈற்று அளை
அடைந்து வைகும் – ஈன்றமுட்டையைக்கொண்ட புற்றையடைந்து தங்குகின்ற,
பாம்பு என – பாம்புபோல, பருவம் நோக்கி இருந்தனள்-; (எ-று.)

     உவமையாற் கொடுமை தொனிக்கும். ஈற்று – ஈனப்பட்டது:
செயப்படுபொருள் விகுதி புணர்ந்துகெட்டுத் திரிந்த பெயர்

ஈண்டு உறு நிகழ்ச்சி கேட்டே, யாதவன் மகளை நோக்கி,
பாண்டுமன் இரந்து பல்கால் பணித்தலும், பவனன்தன்னை
மீண்டும் அம் மறையால் உன்னி, அழைத்தனள்; விரைவின் ஓடி,
ஆண்டு வந்து, அவனும் பூத்த கொடி அனாள் ஆகம் தோய்ந்தான்.-அதனையறிந்தபாண்டு குந்தியைமீண்டுபலமுறை
இரந்துவேண்ட, அன்னாள்மீண்டும் மந்திரத்தால் வாயு தேவனை வரவழைத்துக்கூடுதல்.

ஈண்டு – இங்கே [காந்தாரியிடத்தில்], உறு – நடந்த, நிகழ்ச்சி –
செய்தியை, கேட்டு – கேள்வியுற்று,- பாண்டு மன் – பாண்டுராசன்,- யாதவன்
மகளை நோக்கி – யதுகுலத்தில் தோன்றிய [சூரன் மகளான] குந்தியைப்பார்த்து,
பல் கால் இரந்து பணித்தலும் – பல முறை வேண்டி (த் தன் கருத்தை)ச்
சொல்லுதலும்,- (குந்திதேவி), – பவனன் தன்னை – வாயுதேவனை, மீண்டுஉம்-,
அ மறையால் – (முன்பு தருமராசனையழைத்த) அந்தமந்திரத்தினால், உன்னி-
நினைத்து, அழைத்தனள்-: ஆண்டு – அப்போது அங்கே, அவன் உம் –
அந்தவாயுதேவனும், விரைவின் ஓடி வந்து-, பூத்த கொடி அனாள் –
பூத்தக்கொடிபோன்றவளான குந்தியின், ஆகம் – மார்பில், தோய்ந்தான் –
படிந்தான்; (எ-று.)

நெஞ்சு உற மணந்து, மீள நெடுங் கலைவாகன் ஏக,
செஞ் சுடர் உச்சி எய்திச் சிறந்தது ஓர் முகூர்த்தம்தன்னில்,
அஞ்சனை அளித்த பொன்- தோள் அனுமனே உவமை என்ன,
வெஞ் சின வீமன்தன்னைப் பயந்தனள், விரதம் மிக்காள்நல்லமுகூர்த்தத்தில் வீமனைப் பெறுதல்.

நெஞ்சு உற – மனம்பொருந்த, மணந்து – (அந்தக் குந்தி
தேவியைக்) கூடி, நெடுங் கலை வாகன் – பெருமைபெற்ற ஆண்மானை
வாகனமாகவுடைய அந்தவாயுதேவன், மீள ஏக – மீண்டு செல்ல,- விரதம்மிக்காள் –
சிறந்தநோன்பினை நோற்றிருப்பவளான குந்திதேவி,- செஞ் சுடர் உச்சி எய்தி
சிறந்தது ஓர் முகூர்த்தம் தன்னில் – செவ்வியசுடரையுடைய சூரிய தேவன்
உச்சியையடைந்ததனாற் சிறந்த ஒரு முகூர்த்தத்தில், அஞ்சனை அளித்த
பொன்தோள் அனுமன்ஏ உவமை என்ன – அஞ்சனாதேவி பெற்ற அழகிய
தோள்வலிமையுடைய அனுமனே உவமையாவனென்று (உலகோர்) சொல்லுமாறு,
(பெருவலிபடைத்த), வெம்சினம் வீமன் தன்னை – கொடிய சினத்தையுடைய
வீமசேனனை, பயந்தனள் – பெற்றாள்; (எ-று.)

     செஞ்சுடருச்சி யெய்திச்சிறந்த முகூர்த்தம்- ‘அபிஜித்’ எனப்படும்: “அபிஜித்
ஸர்வதோஷக்ந:” என்ற மேற்கோள் இங்குக்காணத்தக்கது.அஞ்சனை –
கேசரியென்னும் வானரராசன் மனைவி: அந்த அஞ்சனையோடு வாயுதேவன்
கலந்துபெற்ற வானரப்புதல்வன் அனுமான். இவன் பிறந்தபோது பசியால்
இளஞ்சூரியனைக் கனியென்று கருதிப் பாய்ந்து இந்திரனால் தாக்கப்பட்டு முறிந்த
கவுளையுடைய னானதனால், ‘அனுமான்’ எனப்பட்டான்.

தண் பரிமளம் மென் சாயல் தந்தையும், திசைகள்தோறும்
எண் பெறும் உயிர்கட்கு எல்லாம் இதம் உறு பொலிவின் வீச,
நண்புடை அனலன்தானும், நலம் மிகு நண்பு தோன்ற,
பண்பு உற வலம் வந்து ஓங்கி, பரிவுடன் விளக்கம் செய்தான்.-அப்போது நன்னிமித்தந் தோன்றுதல்.

தண் பரிமளம் மெல் சாயல் – குளிர்ந்த நறுமணத்தையும் மெல்லிய
பரிசத்தையுமுடைய, தந்தைஉம் – வாயுதேவனும், திசைகள் தோறுஉம் –
திக்குகள்தோறும், எண் பெறும் உயிர்கட்கு எல்லாம் – (மதியாற்றலுடையனவான)
மதிக்கப்படுகிற பிராணிகட்கெல்லாம் [மனிதர்கட்கெல்லாம்], இதம் உறு
பொலிவின் வீச – இனிமையாகத் தோன்றுமாறு நன்குவீச,- நண்பு உடை
அனலன் தான் உம் – (அந்தவாயுதேவனோடு) நட்பையுடைய அக்கினிதேவனும்,
நலம் மிகு நண்பு தோன்ற – நன்மைமிகுந்த நட்புத் தோன்றும்படி, பண்புஉற –
நல்லநிமித்தமாக, வலம்வந்து ஓங்கி-வலப்புறமாகச்சுழலும் சுவாலையுடன்கிளர்ந்து,
(ஆங்காங்கு ஓமஞ்செய்பவர் மனையில்), பரிவுடன் – அன்போடு,
விளக்கம்செய்தான் – விளங்குதலைப் பொருந்தினான்;(எ-று.)

     இனிதுகாற்றுவீசுதலும், அக்கினிவலப்புறமாகச்சுழலும்  சுவாலையைப்
பெற்றிருத்தலும் நன்னிமித்தங்களாம். ‘வலந்திரியாப்பொங்கி,’ (200) என்றது
புறப்பொருள் வெண்பா மாலை.

அன்ன நாள் அனிலன் மைந்தன் பிறந்தனனாக, அற்றை
முன்னை நாள் அருக்கன் வேலை முழுகிய முகூர்த்தம்தன்னில்,
‘இன்ன நாள் உருவம் முற்றி, எழில் பெறும்’ என்று, முன்னோன்
சொன்ன நாள் வழுவுறாமல், சுயோதனன் தோன்றினானேவீமசேனன்தோன்றியதற்கு முன்னாளில் இழுதுதாழியி
லிட்டதசை முற்றித் துரியோதனன் தோன்றுதல்,

அன்ன நாள் – அந்த [ச்சிறந்த] நாளில், அனிலன் மைந்தன்
பிறந்தனன்ஆக – வாயுதேவனுடையபுத்திரன் பிறந்தானாக,- அற்றை முன்னை
நாள் -அன்றைக்கு முன்னாளில், அருக்கன் வேலை முழுகிய முகூர்த்தந்தன்னில்-
சூரியன் கடலிலே முழுகின [அஸ்தமித்த] முகூர்த்தத்தில், இன்ன நாள் உருவம்
முற்றி எழில் பெறும் என்று முன்னோன் சொன்ன நாள் வழுஉறாமல் –
இந்தநாளிலே உருவம் முற்றுப்பெற்று அழகிய குழந்தையாகுமென்று
வியாசமுனிவன் சொன்னநாள் தவறாதபடி, சுயோதனன்,- தோன்றினான்-;

     இதனால், தருமபுத்திரனுக்குப்பின் வீமசேனனுக்குமுன் தோன்றியவன்,
துரியோதன னென்க. ஸு யோதநன் என்ற வடசொல் – நன்கு[வெற்றியுண்டாகப்]
பொருபவ னென்று பொருள்படும்.  

வாரியின் அதிர்ந்து விம்மும் மங்கல முழவம் மேன்மேல்
ஓரியின் குரலால் ஓதை ஒடுங்கின; இடங்கள்தோறும்
பாரிய குலத்தோர் கண்ணின் உவகை நீர் பனிக்கும் முன்னே,
சோரி அந்தரத்தினின்றும் சொரிந்தது, சோனை மேகம்.–துரியோதனன் தோன்றியபோது தீநிமித்தங்கள்
தோன்றுதல்.

வாரியின் – கடல்போல, அதிர்ந்து விம்மும் – அதிர்ந்துஒலிக்கின்ற,
மங்கலம்முழவம் – மங்கலமுரசு, மேன்மேல்-, ஓரியின் குரலால் – நரியின்
ஊளையிடுங்குரலினால், ஓதைஒடுங்கின – ஓசையடங்கின; இடங்கள்தோறும்-
(அஸ்தினாபுரியின்) பல இடங்களிலும், பாரிய குலத்தோர் கண்ணின் –
பெருமைபெற்ற குலத்தவரின் கண்களிலே, உவகை நீர் பனிக்கும் முன்னே –
ஆனந்தக் கண்ணீர் துளிக்கும் முன்னே, சோனை மேகம் – (உற்பாதமாகத்
தோன்றி) இடைவிடாமற் பொழியும் மேகமானது, அந்தரத்தில் நின்றும் சோரி
சொரிந்தது – ஆகாசத்திலிருந்து இரத்தத்தைப் பொழிந்தது;(எ-று.)

     பாரிய, ‘பருமை ‘ என்றபண்பின்மேல் வந்த குறிப்புப்பெயரெச்சம்.
‘ஓதையடங்கின ‘ எனவும் பாடம். 

கோள்களின் நிலையால் தீமை கொண்டன முகூர்த்தம்தன்னில்,
தேள்களின் கொடிய மற்றைச் சிறுவரும் சேர, ஓர் ஓர்
நாள்களில் பிறந்த பின்னர், நங்கையும் ஒருத்தி வந்தாள்,
தோள்களின் கழையை வென்ற துச்சளை என்னும் பேராள்.-மற்றும் துரியோதனன்தம்பியரும் துச்சளையும்
தோன்றுதல்.

கோள்களின் நிலையால் – கிரகங்கள் நிற்கின்ற நிலைமையினால்,
தீமைகொண்டன – தீங்கைக்கொண்டனவான, முகூர்த்தந் தன்னில் –
முகூர்த்தங்களிலே,- தேள்களின் கொடிய மற்றை சிறுவர்உம் –
தேளைக்காட்டிலும் கொடுமையையுடைய மற்றைத்தம்பிமாரும், சேர – அடுத்து,
ஓர் ஓர்நாள்களில் பிறந்த பின்னர் – ஒவ்வொருநாளிற் பிறந்தபின்பு, தோள்களின்
கழையை வென்ற துச்சளை என்னும் பேராள் நங்கை ஒருத்திஉம் –
தோள்களினால் மூங்கிலை வென்ற துச்சளையென்னும் பேரையுடைய
ஒருபெண்ணும், வந்தாள் – தோன்றினாள்; (எ-று.)

    இதனால், துரியோதனன் தம்பிமாரெல்லாம் வீமசேனனுக்குப் பின்
பிறந்தவராவரென்பதை யறியலாம். துரியோதனன் பிறந்த நாளுக்கு அடுத்தநாள்
துச்சாதனன் அடுத்தநாள் மற்றொருவன் இவ்வாறாகத் துரியோதனன் தம்பிமார்
தொண்ணூற்றொன்பதின்மரும் தோன்றினரென்க, 

பின்னிய புதல்வராலும், பிறந்த மென் புதல்வியாலும்,
துன்னிய மகிழ்நனாலும், துலங்கிய சுபலன் பாவை
தன் நிகர் பரிதியாலும், சத இதழாலும், செம் பொன்
கன்னிகையாலும், சோதி கலந்த செங் கமலம் போன்றாள்.–காந்தாரி பெருமகிழ்ச்சிகொண்டு விளங்குதல்.

பின்னிய புதல்வரால்உம் – நெருங்கிய பலபுத்திரராலும், பிறந்த
மெல் புதல்வியால்உம் – பிறந்த மென்மையான புத்திரியாலும், துன்னிய
மகிழ்நனால்உம் – நெருங்கியகணவனாலும், துலங்கிய – விளங்கிய, சுபலன்
பாவை – சுபலனுடைய பெண்ணாகிய காந்தாரி, தன் நிகர் பரிதியால்உம் –
தனக்குத்தானே ஒப்பான சூரியனாலும், சதம் இதழாலும் – (தான் பெற்றுள்ள)
நூறுஇதழ்களாலும், செம் பொன் கன்னிகையால்உம் – செம்பொன்னிறமான
பொகுட்டாலும், சோதி கலந்த – ஒளிபொருந்திய, செம் கமலம் – செந்தாமரையை,
போன்றாள் – ஒத்தாள்;(எ-று.)

     சதவிதழ் புதல்வர்க்கும், கன்னிகை புதல்விக்கும், பரிதி மகிழ்நனுக்கும்,
கமலக்கொடி காந்தாரிக்கும் உவமை யெனக் காண்க. கன்னிகை – கர்ணிகா:
தாமரைப்பூவினிடையிலுள்ள பொகுட்டு எனப்படும்உறுப்பு. பாலபாரதத்தில் “ஸு ப
லஸ்ய கந்யகா ஆமுக்த பார்ச்வஸ்திதி ராத்மஜைர்பபௌ – சதேநபத்ரை
ரிவபத்மகர்ணிகா” என்று காந்தாரிக்குக் கர்ணிகையும், புதல்வர்கட்கு
இதழ்களுமே உவமையாகக் கூறப்பட்டுள்ளன.

பால்மொழிக் குந்தி மீண்டும் பாண்டுவின் ஏவல் பெற்று,
வான் மொழி மறையால் உன்னி, வானவர்க்கு அரசை நோக்க,
மேல் மொழிவது மற்று என்கொல்? விடுவனோ? விரைவின் வந்து, அத்
தேன்மொழித் தெரிவை மெய்யும் சிந்தையும் களிக்கச் சேர்ந்தான்மீண்டும் பாண்டுவின் ஏவற்படி மந்திரத்தாற் குந்தி
இந்திரனையெண்ண, அவன் அவளைக் கூடுதல்.

பால் மொழி குந்தி – பால்போலினிய பேச்சையுடைய
குந்தியென்பாள், மீண்டும்உம் – மறுபடியும், பாண்டுவின் ஏவல்பெற்று –
பாண்டுமன்னவனுடைய ஏவலையடைந்து, வான் மறை மொழியால் – சிறந்த
வேதமந்திரச் சொல்லால், வானவர்க்கு அரசை உன்னி நோக்க – தேவேந்திரனை
(மனத்தினாற்) சிந்தித்துப்பார்க்க,- மற்று- இனி, மேல் மொழிவது என்கொல் –
(நாம்) மேலே நிகழ்ந்ததைச் சொல்லவேண்டுமோ? விடுவன்ஓ –
(மறைமொழியாற்சிந்தித்து நோக்கியபின் அந்தத்தேவேந்திரன் வாராது) விடுவனோ?
விரைவின் வந்து-, தேன் மொழி தெரிவை – தேன்போன்ற பேச்சையுடைய
அந்தப்பெண்ணின், மெய்உம்சிந்தைஉம்களிக்க-, சேர்ந்தான்-; (எ-று.)- ‘
‘வந்தத்தேன்மொழி’ எனவும் பாடம்.

எங்கும் நல் நிமித்தம் செல்ல, இரு நிலம் மகிழ்ச்சி கூர,
பங்குனி, நிறைந்த திங்கள் ஆதபன் பயிலும் நாளில்,
வெங் குனி வரி வில் வாகை விசயனும் பிறந்தான்; வென்றிப்
பங்குனன் என்னும் நாமம் பகுதியால் படைத்திட்டானேபங்குனியுத்தரத்தில் அருச்சுனன் பிறத்தல்.

எங்குஉம் – எல்லாவிடத்திலும், நல் நிமித்தம் செல்ல- நல்ல
நிமித்தங்கள்தோன்றவும்,இரு நிலம் மகிழ்ச்சிகூர – பெரிய நிலவுலகத்திலிருப்பவர்
மகிழ்ச்சி மிகவும், பங்குனி – பங்குனிமாதத்தில், நிறைந்த திங்கள் –
பதினாறுகலைகளோடும் நிரம்பிய சந்திரனைக் கொண்ட, ஆதபன் பயிலும்
நாளில் – சூரியன் தோன்றிய நாளில் [பங்குனியுத்தரநாளில்], வெம் குனி வரி
வில் வாகை விசயன்உம் – கொடிய வளையுந்தன்மையுடைய கட்டமைந்த
வில்லை யேந்திய வாகைப்பூமாலையைச் சூடிய அருச்சுனனும், பிறந்தான்-:
வென்றி பங்குனன் என்னும் நாமம் – வெற்றியையுடைய பல்குனன் என்னும்
பேரை, பகுதியால் – (பிறந்ததினத்தின்) தன்மையால், படைத்திட்டான் – (பிறந்த
அக்குமரன்) பெற்றான்;  (எ-று.)

     பங்குனியுத்தரத்திற் பிறந்ததனால், பிறந்த அக்குமரனுக்குப் பல்குநன் என்று
பேராயிற்று: பல்குநன் என்ற இச்சொல். பங்குனன் என்ற இச்சொல், பங்குனன்
என்று திரித்து வரும். உத்தரத்துக்குச் சூரியன் தேவதையாதலால், அந்நாளை
‘ஆதபன் பயிலுநாள்’ என்றார். ‘வரிவில் வாழ்க்கை’ எனவும் பாடம்

கற்பக மலர்கள் சிந்திக் கடவுளர் கணங்கள் ஆட,
வெற்பக முனிவர் ஈண்டி மங்கல வேதம் பாட,
பொற்பு அக முழவு விம்ம, புரி வளை முழங்கி ஆர்ப்ப,
‘நற் பகல் இது!’ என்று எல்லா உலகமும் நயந்த அன்றே.-அப்போது பல நன்னிமித்தங்கள் தோன்றுதல்.

கடவுளர் கணங்கள் – தேவர்களின் திரள், கற்பகம் மலர்கள்
சிந்தி-, ஆட – ஆனந்தக்கூத்தாடவும்,- வெற்பு அகம் முனிவர் ஈண்டி –
(அருச்சுனன்பிறந்த) மலையினிடத்தே இருடியர் திரண்டு, மங்கலம் வேதம்பாட –
மங்கலமானவேதங்களைப்பாடவும்,- பொற்பு அகம் முழவு விம்ம – அழகைத்
தம்மிடத்துக்கொண்ட முரசங்கள் ஒலிக்கவும், புரி வளை முழங்கி ஆர்ப்ப –
உட்சுழிவுள்ள சங்கவாச்சியங்கள் பேரொலிசெய்து ஒலிக்கவும், இது  நல் பகல்
என்று – இது நல்ல பகற்காலமென்று, எல்லாம் உலகம்உம் –
உலகத்தவரெல்லாம், நயந்த – (அந்நாளை) விரும்பிக்கொண்டாடினர்; (எ -று.)

     வேதத்தில் மங்களமான பகுதி, ஸ்வஸ்திவாசனம் போல்வன. பாண்டு
தவஞ்செய்த சதச்ருங்கமலையில்தானே இந்தப் பாண்டு புத்திரர் தோன்றினரென
அறிக.அன்றே – ஈற்றசை; தேற்றமுமாம்.

இறைவனும் மகிழ்ந்து, பின்னும் யாதவிக்கு உரைப்ப, அந்த
மறையினை முறையின் பெற்ற மத்திர ராசன் கன்னி,
‘குறைவு அற இருவர் வேண்டும், குமரர்’ என்று உன்னி நின்றாள்;
நிறையுடை இரவி மைந்தர் இருவரும் நினைவின் வந்தார்மன்னன் கட்டளைப்படி குந்தி அந்த மந்திரத்தை
மாத்திரிக்கு உபதேசிக்க, அவள் வேண்டியபடி அசுவினீ தேவர்கள்வருதல்.

இறைவன்உம் – பாண்டுராசனும், மகிழ்ந்து – மகிழ்ச்சி கொண்டு,
பின்னும் – மேலும், யாதவிக்கு உரைப்ப – குந்திதேவியினிடம் (அந்த
மந்திரத்தை மாத்திரிக்கு உபதேசிக்குமாறு) சொல்ல, – அந்த மறையினை – அந்த
வேதமந்திரத்தை, முறையில் பெற்ற- முறைமையாக அடைந்த, மத்திரராசன்
கன்னி – மத்திரராசனுடைய பெண்ணான மாத்திரி, ‘குறைவு அற – குறைநீங்க,
குமரர் இருவர் வேண்டும் – இரண்டு குமாரர்வேண்டும் ‘, என்று-, உன்னி
நின்றாள் – (அசுவினீதேவர்களை) நினைத்து நின்றாள்: நிறை உடை –
(நற்குணங்கள்) நிறைதலையுடைய, இரவி மைந்தர் இருவர்உம் – சூரியகுமாரரான
அசுவினீதேவதைகளிரண்டுபெரும், நினைவின் வந்தார்- (அந்த மாத்திரியின்)
நினைவின்படியே வந்தார்கள்; (எ-று.) – அசுவினீதேவர்கள், இரட்டையரானவர்.

மரு வரும் குழலி ஆயும் மறையினால், வரிசை பெற்ற
இருவரும் ஒருவர் போல இன்புற மணந்த போதில்,
பருவரல் யாதும் இல்லாப் பாலகர் இருவர் சேரக்
கரு விளைந்து உதித்தார்; யாரும் கண் எனக் காணும் நீரார்.-மாத்திரிக்கு இரண்டுபுத்திரர் ஒருசேரப் பிறத்தல்.

மரு வரும் குழலி – நறுமணம் பொருந்திய கூந்தலை யுடையளான
மாத்திரி, ஆயும் மறையினால் – தியானித்துக் கூறிய வேதமந்திரத்தினால், வரிசை
பெற்ற இருவர்உம் – சிறப்புப்பொருந்திய (தேவவைத்தியர்களாகிய) அசுவினீதேவ
ரிரண்டுபேரும், ஒருவர் போல – ஒருத்தர்போல (வந்து), இன்புறமணந்த போதில்
– (மாத்திரி) இன்பமடைய (அவளைச்) சேர்ந்தசமயத்தில், பருவரல் யாதுஉம்
இல்லா – துன்பமென்பது சிறிதுமில்லாமல், பாலகர் இருவர்சேர கரு
விளைந்துஉதித்தார்-இரண்டு குழந்தைகள் ஒரு சேரக் கருப்பத்திலே முதிர்ந்து
வெளிப்பட்டார்கள்: யார்உம்கண் என காணும் நீரார் – (அந்தக் குழந்தைகள்)
யாவராலும் கண்ணெனக் கருதும்படியான நற்குணமுள்ளவர்; (எ-று.)

சசி குல நகுலன் என்றும், தம்பி சாதேவன் என்றும்,
விசயனோடு எண்ணும் வீமன், மேதகு தருமன் என்றும்,
அசைவு அறு சிங்க சாபம் அனையவர் ஐவராலும்,
வசை அறு தவத்தின் மிக்கான், மகிழ்ச்சியால் வாழ்வு பெற்றான்.–ஐந்துமைந்தரால் பாண்டு மகிழ்ச்சியடைந்து வாழ்தல்.

சசிகுலம் – சந்திரகுலத்துத்தோன்றிய, நகுலன் என்று உம் தம்பி
சாதேவன் என்றுஉம் – (அவன் ) தம்பியாகிய சகதேவனென்றும், விசயனோடு –
அருச்சுனனுடனே, எண்ணும் – (யாவராலும்) மதிக்கப்படுகின்ற, வீமன் – வீமனும்,
மேதகு தருமன் என்றுஉம் – மேன்மைபெற்ற தருமபுத்திரனும் என்றும், அசைவு
அறு சிங்கசாபம் அனையவர் ஐவரால்உம் – சோர்தலில்லாத சிங்கக்குட்டியை
யொத்தவரான ஐந்துகுமாரர்களாலும், வசை அறுதவத்தின் மிக்கான் – குற்றமற்ற
தவத்தினால் மிக்கவனான பாண்டு, மகிழ்ச்சியால் – மகிழ்ச்சிகொண்டு, வாழ்வு
பெற்றான்-; (எ-று.)

தாதியர் மருங்கும், தந்தை தட மணி மார்பும், பெற்ற
பேதையர் கரமும், நீங்காப் பெற்றியின் வளர்ந்த பின்னர்,
போதகம், மடங்கல், புல்வாய், புலி, முதல் விலங்கொடு ஓடி,
வேதியர் முன்றில்தோறும் விழை விளையாடல் உற்றார்குமாரர்கள் விளையாடுதல்.

(சிலகாலத்தில்), தாதியர் மருங்குஉம் – செவிலித்தாயரின்
இடுப்பையும், (சிலகாலத்தில்), தந்தை தட மணி மார்புஉம் – தந்தையாகிய
பாண்டுவின் விசாலமான அழகியமார்பையும், (சிலகாலத்தில்), பெற்ற பேதையர்
கரம்உம் – (தம்மைப்) பெற்ற பேதைமைக் குணமுடையவரான
தாய்மாரின்கையையும்,  நீங்கா – நீங்காத, பெற்றியின் – தன்மையோடு,
வளர்ந்தபின்னர் – வளர்ந்த பின்பு,- போதகம் – யானைக்கன்றும், மடங்கல் –
சிங்கமும், புல்வாய் – மானும், புலி – புலியும், முதல் – முதலிய, விலங்கொடு –
மிருகங்களுடனே, ஓடி- (தொடர்ந்து) விரைந்து சென்று, வேதியர் முன்றில்
தோறுஉம் – பிராமணருடைய வீட்டின் முன்னிடங்கடோறும், விழை – (கண்டவர்)
விரும்புகின்ற, விளையாடல் – விளையாடலை(ச்செய்தற்கு), உற்றார் – (அக்குமாரர்)
தொடங்கினார்கள்;(எ-று.)

     குழந்தைகள் நடக்கும் பருவத்திற்கு முன்னே வளர்ந்தமையை
முன்னிரண்டடிகள் தெரிவிக்கும், நடக்கும்பருவத்தில்தானே அக்குழந்தைகள
மிக்கவீரமும் சுறுசுறுப்பும் பெற்றிருந்தமையைப் பின்னிரண்டடிகள் தெரிவிக்கும்:
மருங்கு-இடை, இடுப்பு; “எடுத்துக்கொள்ளில் மருங்கையிறுத்திடும்” என்றதும்
காண்க. இனி, மருங்கு – சமீபம் எனினுமாம். 

செய் தவ முனிவர்தம்மால் சிகையுடன் புரிநூல் சாத்தி,
கைதவம் இன்றி எண்-எண் கலைக் கடல் கரையும் கண்டு,
மெய் தவம் விளங்க, வேழவில்லியும் விழைந்து நோக்க,
மை தவழ் சிகரி அன்ன வளர்ச்சியின் வனப்பின் மிக்கார்.–அக்குமாரர்கள் பூணூல்பூண்டு விச்சைபயின்று
யௌவனபருவத்தை யடைதல்.

செய் தவம் முனிவர் தம்மால் – செய்த தவத்தையுடைய
முனிவரால், சிகையுடன் – குடுமிவைக்குஞ் சடங்குடனே, புரிநூல் சாத்தி –
வெண்புரிநூலும் அணிவிக்கப்பெற்று, (அக்குமாரர்கள்), கைதவம் இன்றி
வஞ்சனையில்லாமல், எண் எண்கலை கடல் கரைஉம் – அறுபத்துநான்கு
கலைகளாகிய கடலின் கரைகளையும், கண்டு-, மெய்தவம் விளங்க –
உண்மையான தவம் விளங்க, வேழம் வில்லிஉம் விழைந்து நோக்க –
கரும்பைவில்லாகவுடைய மன்மதனும் விரும்பிப்பார்க்க,- மை தவழ் சிகரி அன்ன
வளர்ச்சியின் – மேகந் தவழ்கின்ற மலையையொத்த வளர்ச்சியோடு, வனப்பின்
மிக்கார் – அழகில் மிக்கவரானார்கள்; (எ -று.)

     முற்பிறவியிற்செய்த நல்வினையினாலேயே இப்பிறவியில் கல்வி முதலியன
கைகூடு மாதலால் ‘கலைக்கடற்கரையுங்கண்டு மெய்தவம் விளங்க’ என்றது.
செய்யுணோக்கி, ‘மெய்தவம்’ என்றது இயல்பாயிற்று. மலைபோன்ற பெருந்தோற்ற
முடையவராய் வளர்ந்து யௌவனப்பருவம் வந்ததனால் அழகினால்
மிக்கவரானார், அந்தப் பாண்டு புத்திரர்க ளென்க. “க்ரமேணதேஷாம்-
ப்ரஸாதயாமாஸவ பூம்ஷி யௌவநம்” என்றது, பாலபாரதம்

மார்பினும் அகன்ற, கல்வி; வனப்பினும் நிறைந்த, சீர்த்தி;
போர் வரு தெரியல் மாலைப் புயத்தினும் உயர்ந்த, கொற்றம்;
சீர் தரு வாய்மை மிக்க, கண்ணினும்; செங் கை வண்மை
பார் வளம் சுரக்கும் செல்வப் பரப்பினும் பரந்த அன்றே.-ஐம்புதல்வரிடத்தும் தோன்றிய நற்பண்புகள்.

கல்வி – (அந்தப்பாண்டு புத்திரர்களுடைய) கல்வியானது,
மார்பின்உம் – (அவர்களுடைய) மார்பைக்காட்டிலும் அகன்ற-; சீர்த்தி –
சீர்த்தியானது, வனப்பின்உம் – (அவர்களுடைய) அழகைக்காட்டிலும், நிறைந்த –
நிறைந்தன: போர் வரு தெரியல் மாலை புயத்தின்உம் – போரிற் பூணப்படுகின்ற
விளங்குதலையுடைய வெற்றிமாலையையணிந்த புயத்தைக்காட்டிலும், கொற்றம்
உயர்ந்த – (அவர்களது) வெற்றி மிக்கன: சீர்தரு வாய்மை – சிறப்புப் பொருந்திய
சத்தியமானது, கண்ணின்உம் மிக்க – (அவர்களின்) கண்ணைக் காட்டிலும் மிக்கன:
செங் கை வண்மை-(அன்னாரின்) செவ்விய கையினாற் செய்யப்படும் தானம், பார்
வளம் சுரக்கும் செல்வம் பரப்பின்உம் – பூமியிலே செழிப்பினாலுண்டாகின்ற
செல்வப்பரப்பைப் காட்டிலும்,  பரந்த – மிக்கன; (எ-று.)

     அகன்றமுதலியவை – பலவின்பால் முற்றுக்கள்: ஐவர்மாட்டும்
உளவாதற்கேற்ப வந்தன. “சீர்த்திமிகுபுகழ்.” கண்ணின் மிகுதல் –
அருமைகொண்டு பாராட்டுதல்.   

ஆரமும், ஆரச் சேறும், அரும் பனிநீரும், பூவும்,
ஈர வெண் மதி நிலாவும், இதம் பெறு தென்றற் காலும்,
ஓர் உயிர் இரண்டு மெய்யாய் உருகுவார் உருகும் வண்ணம்,
மாரனை மகுடம் சூட்ட, வந்தது, வசந்தகாலம்.–வசந்தகாலம் வருதல்.

ஆரம் உம் – முக்தாஹாரமும், ஆரம் சேறுஉம் – சந்தனக்
குழம்பும், அரும்பனி நீர்உம் – அருமையான பனிநீரும், பூஉம் – புஷ்பங்களும்,
ஈரம் வெள் மதி நிலாஉம் – குளிர்ச்சிபொருந்திய வெண்ணிறமுள்ள
சந்திரனுடைய நிலவும், இதம் பெறு தென்றல் கால்உம்- இதமாக வீசுதல்
பொருந்திய தென்றற்காற்றும், ஓர் உயிர் இரண்டு மெய் ஆய் உருகுவார் –
ஓருயிரும் இரண்டுமெய்யுமாகி(க் காதலுடையராய்க் கூடாது பிரிந்து)
மனங்கசிந்துநிற்பவர், உருகும் வண்ணம் – பின்னும் உருகும்படி, மாரனை
மகுடம் சூட்ட – மன்மதனை மகுடஞ் சூட்டுமாறு, வசந்தகாலம் வந்தது-;

     பிரிந்திருப்போர் மிகவும் மனம்உருக வசந்தகாலம் வந்தது; வசந்தகாலம்
வரவே,  மன்மதன் முடிசூடித் தன்செங்கோலைச் செலுத்தலாயினன்.
மூன்றாமடிக்கு – ஓருயிர் இரண்டு சரீரத்திலும் பொருந்த உருகுகின்ற
ஆடவர்களும் மகளிரும் கலவிவேட்டுருகும் படி என்று உரைத்தலும் ஒன்று.

விது நலம் பெறு கா எங்கும் மெய் சிவப்பு ஏற, வண்டு
புதுமையின் முரன்று மொய்ப்ப, புது மணம் பரந்து உலாவ,
கதுமெனத் தலை நடுங்க, கால் தடுமாறிற்று அம்மா!-
மது அயர்ந்தவரில் யாவர், மண்ணின்மேல் மயக்குறாதார்?-மூன்றுகவிகள் – வசந்தகாலத்துச் சோலைவருணனை.

விது – சந்திரனால், நலம் பெறு – நன்மைபெற்ற,கா சோலை,
எங்குஉம் மெய்சிவப்புஏற – எல்லாவிடங்களையும் தன்னுடலிலே (புதுத்தளிர்
வெடித்தலால்) செந்நிறம்மிகவும், வண்டு – வண்டென்னும்பறவை, புதுமையின்
முரன்று மொய்ப்ப புதுமையினலொலித்து மொய்க்கவும், புது மணம் பரந்து உலாவ
மணம் பரவியுலாவவும், கதுமென தலைநடுக்க – விரைவாக மேலிடம் நடுங்கவும்,
கால் தடுமாறிற்று – கால் தடுமாறலாயிற்று மேல் – பூமியின்மீது, மது அயர்ந்தவரில் –
கள்ளைப்பருகியப் பருகியவரில், மயக்குறாதார் யாவர்-? (எ -று.) – அம்மா –
வியப்புக்குறிக்கும்.

     காவினிடத்துக் கள்ளுண்டவரின் தன்மை ஏற்றிக் கூறப்பட்டது. மதுவயர்தல் –
வேனிற்பருவத்தைப் பெறுதலும், கட்பருகுதலும்: தலைநடுங்குதல் – மேலிடம்
நடுங்குதலும், தலையென்ற உறுப்பு நடுங்குதலும்: கால்தடுமாறல் –
காற்றுவீசுதலும், காலென்னும் உறுப்புத் தடுமாறலும். கட்பருகுவோர்க்கு உடலில்
சிவப்பு நிறந் தோன்றுதலும், கள்ளின் புதுமணத்திற்காக வண்டு மொய்த்தலும்,
புதுமணம் உலாவுதலும், தலைநடுங்குதலும், கால் தடுமாறுதலும் நிகழ்வதுபோல,
வேனிற்பருவத்தைப்பெற்ற காவுக்குப் புதுத்தளிரால் மெய்சிவப்பேறுதலும்,
புதுத்தேன் பொருட்டு வண்டு மொய்த்தலும், புத்தரும்புகள் அலர்வதால்
புதுமணம் பரந்துலாவுதலும், மேற்புறம் அசைதலும், கால்தடுமாறலும் [காற்றுத்
தடுமாறுதலும்] தோன்றினவென்க. இச்செய்யுள் – சிலேடையை
யங்கமாகக்கொண்டுவந்த வேற்றுப்பொருள்வைப்பணியாகும்

பைந் தடந் தாளால் முன்னம் பருகிய புனலை, மீளச்
செந் தழல் ஆக்கி, அம் தண் சினைதொறும் காட்டும் சீரால்,
முந்திய அசோகு, சூதம், முதலிய தருக்கள் எல்லாம்,
இந்திரசாலம் வல்லோர் இயற்கையின் இயற்றுமாலோ!

பைந் தட தாளால் முன்னம் பருகிய புனலை மீள செந்தழல்
ஆக்கி – பசிய பெரிய தாளினால் முன்பு உட்கொண்ட நீரை மீளவும்
செந்நிறத்தழலாகச்செய்து, அம் தண் சினை தொறு உம் காட்டும் சீரால் –
அழகிய குளிர்ந்த கிளைதோறும் காட்டுகின்ற சீர்மையினால், முந்தியஅசோகு
சூதம் முதலிய தருக்கள் எல்லாம் – (சோலையில்) முற்பட்டுள்ள அசோகு மா
முதலிய விருட்சங்கள்யாவும், இந்திரசாலம்வல்லோர் இயற்கையின் – இந்திரசால
வித்தையில் வல்லவர்கள் செய்யும் தன்மைபோல, இயற்றும் – தொழிலைச்
செய்வனவாம்: (எ -று.) ஆல்ஓ – வியப்பைக் குறிக்கும் இடைச்சொற்கள்.

     தாளாலுண்டபுனலைக் கிளைதோறும் செந்தழலாக்கிக்காட்டுவதால்,
இந்திரசாலம்வல்லோர்செய்கைபோலும் இத்தருக்களின் செய்கையென்றார்.
இந்திரசாலம் – மாயவித்தை. கிளைதோறும் செந்நிறத்தளிர்கள் தோன்றியதைச்
செந்தழலாக்கிக்காட்டுஞ்சீர் என்றது – தற்குறிப்பேற்றவணி. ‘மீள’
என்றசொல்லாற்றலால், ‘அக்நேராப:’ [தீயிலிருந்து நீர்] என்ற
காரணகாரியமுறைமாறியமைதொனி.

பரந்து எழு சூத புட்ப பராகம், நல் இராகம் மிஞ்ச,
முரண்படு சிலை வேள் விட்ட மோகனச் சுண்ணம் போன்ற!
புரிந்த தொல் யோக மாக்கள் புந்தி நின்று உருக, தொட்ட
அருந் தழல் கணைகள் போல அலர்ந்தன, அசோக சாலம்!

பரந்து எழு – பரவியெழுகின்ற, சூதபுட்ப பராகம் – மாம்பூவின்
தூளிகள், நல் இராகம் மிஞ்ச – சிறந்த காதல் விஞ்சும் படி, முரண்டு படு சிலை
வேள் – மாறுபட்ட வில்லையேந்திய மன்மதன், விட்ட – (யௌவனப்
பருவத்தையுடையார்மேல்) எய்த, மோகனம் சுண்ணம்போன்ற – மோகனாஸ்திரத்தின்
பொறியைப்போலும்: அசோககாலம் – அசோகமலர்த்திரள்,- புரிந்த தொல் யோகம்
மாக்கள் – செய்த சிறந்த பழமையான யோகத்தையுடைய மானுடர், புந்தி நின்று
உருக – அறிவு குன்றியுருகும்படி, தொட்ட – (மன்மதன்) தொடுத்துவிட்ட, அரு
தழல் கணைகள் போல – அரிய ஆக்நேயாஸ்திரத்தைப்போல, அலர்ந்தன –
மலர்ந்தன;

     மோகனச்சுண்ணம் – மேலேபட்டமாத்திரத்தில் மோகத்தை யுண்டாக்குஞ்
சூர்ணமெனினுமாம். அசோகம் யோகிகட்கும் காமத்தை யுண்டாக்கிற்றென்பது
பின்னடிகளின் பொருள். இனி, யோகம் என்பதை வியோகமென்பதன் முதற்குறை
எனக்கொண்டு, பிரிவு என்று உரைப்பினுமாம்: பாலபாரதத்தில் “புஷ்பம்
அசோகசாகிந: ப்ரஸூநபாணேந ருஷா வியோகிஷி – ப்ரயுக்தம் ஆக்நேய
மிவாஸ்த்ரம் ஆபபௌ” என்றது காண்க. யோகம் – புணர்ச்சியென்பாருமுளர்.
இதுவும் – தன்மைத்தற்குறிப்பேற்றவணியே.

வேனிலின் விளைவினாலும், வேனிலான் விழவினாலும்,
மா நலம் திகழும் மூரல் மாத்திரி வனப்பினாலும்,
தான் நலம் உறுதல் எண்ணி, சாபமும் மறந்து, மற்று அப்
பானல் அம் கண்ணாளோடும் பாண்டுவும் பரிவு கூர்ந்தான்.-அப்போது மாத்திரியினிடத்துப் பாண்டு
காதல்பூணுதல்.

வேனிலின் விளைவினால்உம் – இளவேனிற்காலந்
தோன்றியதனாலும், வேனிலான் விழவினாலும் – மன்மதன் காதல் நோயை
விளைத்தலாலும், மா நலம் திகழும் மூரல் மாத்திரி வனப்பினால்உம் – மிக்க
அழகினால் விளங்குகின்ற புன்சிரிப்பையுடைய மாத்திரியின் அழகினாலும்,- தான்
நலம் உறுதல் எண்ணி – தான் காமவின்பத்தையடையவெண்ணி,- சாபம்உம்
மறந்து – (கிந்தம முனிவன்) சாபத்தையும் மறந்து, மற்று – பின்னும், அ பானல்
அம் கண்ணாளோடுஉம் – கருங்குவளை மலர்போன்ற அழகிய
கண்களையுடையவளான அந்த மாத்திரியினிடம், பாண்டுவும்-, பரிவு கூர்ந்தான் –
காதல்மிகுந்தான்; (எ-று.) – பாண்டுவும் என்ற உம்மை –  உயர்வுசிறப்போடு
எச்சப் பொருளுமுடையது.

அருந் தளிர் நயந்து நல்கி, அலகுடன் அலகு சேரப்
பொருந்தும் முன் அவசம் ஆகி, போகம் மென் குயிலும் பேடும்
இருந்து மெய் உருகும் காவில், இரதியும் மதனும் என்ன,
வருந்திய காதலோடும் மாதவிப் பந்தர் சேர்ந்தார்சோலையில் பாண்டுவும் மாத்திரியும் மாதவிப்பந்தர் சேர்தல்.

அருந் தளிர் – அருமையான தளிரை, நயந்து நல்கி – விரும்பி
(த்தன்) பேடைக்குக் கொடுத்து, அலகுடன் அலகுசேர – (பெட்டையின்)
அலகுடனே (ஆண்பறவையின்) அலகுசேரா நிற்க, பொருந்து முன் – கூடும்
முன்னே, [கூடியவுடனேயென்றபடி], அவசம் ஆகி – பரவசமாகி, போகம் மெல்
குயில்உம் பேடுஉம் – போகத்தினால் இளகிய ஆண்குயிலும் அதன் பேடையும்,
இருந்து-, மெய் உருகு- உடலுருகுகின்ற, காவில் – சோலையிலே, இரதிஉம்
மதன்உம் என்ன – ரதிதேவியும் மன்மதனும்போல, வருந்திய காதலோடு –
வருத்தமுறுதற்குக்காரணமான காமவிச்சையுடனே, மாதவிபந்தர் – குருக்கத்திக்கொடி
பந்தர்போற் படர்ந்திருந்த இடத்தை, சேர்ந்தார் – (பாண்டுவும் மாத்திரியும்)
அடைந்தார்கள்; (எ-று.)

     இவர்கள் கொண்ட காதல் பின் வருத்தமுறுதற்கு ஏதுவாதல் காண்க

பஞ்சின் மெல் அடியினாளும் கணவனும், பழங் கணோட்டம்
நெஞ்சினை நலிய, மேன்மேல் நேயம் உற்று உருகி, ஆங்கண்,
‘எஞ்சிய காலம் எல்லாம் என்செய்தேம்!’ என்று என்று எண்ணி,
வெஞ் சிலை அநங்க வேத முறைமையால் மேவினாரே.–அங்கேஇருவரும் இன்பமனுபவித்தல்.

பஞ்சின் மெல் அடியினால்உம் – பஞ்சுபோல்மெல்லிய
பாதங்களையுடையளான மாத்திரியும், கணவன்உம்-, (தாம்கொண்டிருந்த),
பழங்கணோட்டம் – பழமையான [நெடுநாளாகவுள்ள] இச்சை, நெஞ்சினை –
மனத்தை, நலிய – வருத்த,- மேல்மேல் நேயம் உற்று- மேலும்மேலும் அன்பு
பூண்டு, உருகி-, ஆங்கண் – அந்த வனத்திலே ‘எஞ்சிய – கீழேகழிந்திட்ட,
காலம் எல்லாம்-, என்செய்தேம் – என்ன செய்திட்டோம்! [இவ்வாறு
இன்பமனுபவியாது வாளாகழித்திட்டோம்!],’ என்று என்று எண்ணி – என்று
பலமுறையெண்ணமிட்டு, வெம் சிலை அநங்கவேதம் – கொடிய
வில்லையுடையனான மன்மதனுடைய வேதத்திற்சொல்லிய கரணங்களை,
முறைமையால்-, மேவினால் – நுகரலானார்கள்; (எ-று.)

     வேதம் – வேதத்திற்கூறிய கரணங்களுக்கு இலக்கணை. கண்ணோட்டமென்பது
– இங்கே, விருப்பமென்றபொருளது. அநங்க வேதம் – காமசாஸ்திரம். 

பூ இயல் அமளி பொங்க, புணர் முலை புளகம் ஏற,
மேவிய கலவி இன்பம் மெய் உறு மகிழ்ச்சி முற்றி,
காவி அம் கண்ணி, கேள்வன் கமழ் வரை மார்பின், அன்போடு,
ஓவியம் எனவே, உள்ளம் உருகினள், அயர்ந்து வீழ்ந்தாள்மாத்திரி அவசையாகிப் பாண்டுவின்மார்பிலே வீழ்தல்.

பூ இயல் அமளி பொங்க – பூவினாலியன்ற படுக்கை பொலிவு
பெறவும், புணர் முலை புளகம் ஏற – நெருங்கியுள்ள கொங்கைகளில்
மயிர்க்கூச்சு மிகவும், மேவிய – நுகர்ந்த, கலவி இன்பம் – புணர்ச்சியின்பத்தினால்,
மெய் உறு மகிழ்ச்சி முற்றி – உடம்பிலே பொருந்திய மகிழ்ச்சி முதிர்ந்து,- காவி
அம் கண்ணி – கருங்குவளை மலர்போன்ற அழகியகண்களையுடையாளான மாத்திரி,
கேள்வன் – (தன்) கணவனாகிய பாண்டுவின், கமழ் வரை மார்பின்- (கலவைச்
சாந்தின்நறுமணங்) கமழ்கின்ற மார்பிலே, அன்போடு – அன்புடனே, ஓவியம்
என்ன – சித்திரப்பதுமைபோல, உள்ளம் உருகினள் – மனமுருகி, அயர்ந்து –
பரவசையாகி, வீழ்ந்தாள்-; (எ-று.)

அரும்பிய விழியும், தொண்டை அமுது உறு பவள வாயும்,
விரும்பிய சுரத போகம் மேவரு குறிப்பும், ஆகி,
பொரும் படை மதனன் அம்பால் பொன்றினன் போல, மன்றல்
சுரும்புஇனம் இரங்கி ஆர்ப்ப, தோன்றலும் சோர்ந்து வீழ்ந்தான்பாண்டு சாபத்தினால் உயிர்சோர்ந்துவிழுதல்.

அரும்பிய விழிஉம் – சிறிதுமலர்ந்த கண்ணும், தொண்டை அமுது
உறு பவளம் வாய்உம் – தொண்டையிலுள்ள நீர் வெளியேயூறுகின்ற பவழம்போன்ற
வாயும், விரும்பிய சுரதம் போகம் மேவரு குறிப்புஉம் – (தான்) விரும்பின புணர்ச்சி
பற்றிச் செல்லுகின்ற எண்ணம் புலப்படுகின்ற முகக்குறிப்பும், ஆகி –
உடையவனாகி,- பொரும் படை மதனன் அம்பால் பொன்றினன்போல-
போர்செய்கின்ற மன்மதனுடைய அம்பினால் உயிர் நீங்கினவன் போல, மன்றல்
சுரும்பு இனம் இரங்கி ஆர்ப்ப – மணத்திற்செல்லும் வண்டுகளின்கூட்டம்
இரக்கங்கொண்டு ஒலிப்பதுபோல் ஒலிக்க,- தோன்றல்உம்- பாண்டுராசனும்,
சோர்ந்து – உயிரொடுங்கி, வீழ்ந்தான்;

     இறந்தபோதைய பாண்டுவின்நிலை, இங்கு இனிது கூறப்பட்டிருத்தல்
காண்க. புணர்ச்சியே இந்தப்பாண்டுவின் உயிரொழிவுக்குக் காரணமாதலால்,
‘பொரும்படைமதனனம்பாற் பொன்றினன்போல’ என்றது;
ஏதுத்தற்குறிப்பேற்றவணி.   

கொஞ்சு கிளி அன்ன மொழி குமுத இதழ் அமுதால்,
எஞ்சினன் நராதிபதி; ஈது என வியப்போ?
அஞ்சுதரு தீ வினையின் ஆர் அமுதும் நஞ்சு ஆம்;
நஞ்சும் அமுது ஆம், உரிய நல் வினையின் மாதோ!பாண்டு காமவின்பத்தாலிறந்ததுபற்றிய கவிக்கூற்று.

கொஞ்சு கிளி அன்ன மொழி – கொஞ்சுகின்ற கிளியை யொத்த
மொழியையுடையளான மாத்திரியின், குமுதம் இதழ் அமுதால் –
ஆம்பல்மலர்போன்ற வாயிதழினின்றுதோன்றிய அமிருதத்தினால், நர அதிபதி –
பாண்டுமகாராசன், எஞ்சினன் – உயிரொடுங்கினான்: ஈது என வியப்புஓ – இது
என்ன ஆச்சரியமோதான்! அஞ்சு தரு தீவினையின் – அஞ்சத்தக்க
தீவினையினால், ஆர் அமுதுஉம் நஞ்சு ஆம் – அருமையான அமிருதமும்
விஷமாகும்: உரிய நல்வினையின்- உரிமையாகக்கொள்ளத்தக்க
நல்வினையினாலே, நஞ்சுஉம் அமுது ஆம் – நஞ்சமும் அமிருதமாகும்; (எ-று.)

     முன்னிரண்டடியை மூன்றாமடி சமர்த்தித்துநின்றது: சிறப்புப் பொருளைப்
பொதுப்பொருளாற் சமர்த்தித்துநின்ற வேற்றுப்பொருள்வைப்பணி. தீவினையால்
அமுதமும் நஞ்சாம்என்று கூற வந்தவர், நான்காமடியால் அதன்
மறுதலைப்பொருளையும் உடன் கூறினார். நர அதிபதி – மனிதர்க்குத்தலைவன்.
மாதோ – ஈற்றசை.

     இதுமுதற் பதினொருகவிகள் பெரும்பாலும் ஈற்றுச்சீரொன்று மாச்சீரும்,
மற்றைமூன்றும் காய்ச்சீர்களுமாகிவந்த கலிவிருத்தங்கள்

சித்திரை வசந்தன் வரு செவ்வியுடன் மகிழா,
மத்திரி எனும் கொடிய வாள் கண் விடம் அன்னாள்,
முத்திரை உணர்ந்திலள், ‘முயக்கம் உறும் இன்ப
நித்திரைகொலாம்!’ என நினைந்து, அருகு இருந்தாள்.-மாத்திரி பாண்டுநித்திரையிலிருப்பதாகவே நினைத்தல்.

சித்திரை – சித்திரைமாதத்தில், வசந்தன் – வசந்தருதுவினால், வரு
– தோன்றுகின்ற, செவ்வியுடன் – அழகோடு, மகிழா – (கணவனுடன்) மகிழ்ந்து,
மத்திரிஎனும் – மாத்திரியென்கிற, கொடியவாள் கண்விடம் அன்னாள் –
கொடியவாள்போன்ற கண்களையுடைய விடத்தையொத்தவள், முத்திரை
உணர்ந்திலள் – (பாண்டுவுக்கு) இறப்புக்குறிதோன்றியதை யறியாதவளாய்,
(இந்நிலை), முயக்கம் உறும் இன்பம் நித்திரை கொல் ஆம் – தழுவுதலா லுண்டான
இன்பவசத்தால் தோன்றிய நித்திரைபோலும், என – என்று, நினைந்து-, அருகு
இருந்தாள் – சமீபத்திலேயிருந்தாள்;

     மத்திரி – குறுக்கல். மன்னவனிறப்புக்குக் காரணமானதனால்,
‘விடமன்னாள்’ என்றது.   

செயிர்த்தவரை ஆவி கவர் தீ உமிழும் வேலான்
உயிர்த்திலன், விழித்திலன், உணர்ந்தும் இலன்’ என்னா,
அயிர்த்தனள்; அழைத்தனள் அரற்றினள்; இரங்கா,
வயிர்த்தனள், நிலத்தின் உயர் வானம் இனிது என்பாள்.–பின்புகணவன் இறந்தான்போலுமென்று மாத்திரி அரற்றுதல்.

செயிர்த்தவரை – பகைவரை, ஆவி கவர் – உயிரைக் கவர்கின்ற,
தீ உமிழும் வேலான் – நெருப்பைக்கக்குகின்ற வேற்படையையுடையவனான
பாண்டுராசன், (இத்துணைநேரமாயும்), உயர்த்திலன் – மூச்சுவிட்டானில்லை:
விழித்திலன் – கண்களைத் திறந்தானில்லை, உணர்ந்துஉம்  இலன் –
உணர்ச்சிபெற்றானுமில்லை, என்னா – என்றுகருதி, அயிர்த்தனள் –
(உயிரொழிந்தானோ என்று) சந்தேகித்தாள்: அழைத்தனள் அரற்றினள் –
கூவியழுதாள்: இரங்கா – இரக்கமிக்கு, நிலத்தின் உயர் வானம் இனிது என்பாள்
– மண்ணுலகில் தான்இருப்பதைவிட மேலிடத்துள்ள வானத்திற்செல்வதை
இனிதெனக்கருதுபவளாகி, வயிர்த்தனள்- (இறப்பதாகத்) தீர்மானங்கொண்டாள்;
(எ-று.)

     மாத்திரி ரிஷியின் சாபத்தை நினைந்து தடுக்கவும், வலியக் கூடிப் பாண்டு
உயிரிழந்தானாக, உணர்ந்த மாத்திரி கோவென்று கதறி யழுததாகப் பாலபாரதம்
கூறும்.  

புந்தி இலள், மன்றல் பெறு, பூவை குரல் கேளா,
‘முந்திய கடும் பழி முடிந்ததுகொல்!’ என்னா,
குந்தியும் விரைந்து தன குமரரொடு புக்காள்,
அந்தி அரவிந்தம் என அணி குலை முகத்தாள்அரற்றொலிகேட்டகுந்தி புத்திரருடன் அங்குவருதல்.

புந்தி இலள் – (சாபத்தைப்பற்றிய) அறிவு இல்லாதவளாய், மன்றல்
பெறு – (கணவனோடு) சேர்க்கையைப்பெற்ற, பூவை – நாகணவாய்ப்
பறவைபோன்ற மாத்திரியின், குரல் – குரலை, கேளா – கேட்டு,- ‘முந்திய –
முற்பட்டுநேர்ந்துள்ள, கடும்பழி – கொடிய சாபம், முடிந்தது கொல் – (இன்று)
பயனைவிளத்திட்டதோ?’ என்னா – என்று சங்கைகொண்டு,- குந்திஉம் –
குந்திதேவியும், விரைந்து-, தன் குமாரரொடு – தன்புத்திரிருடனே, அந்தி
அரவிந்தம் என அணிகுலை முகத்தாள் – மாலைக்காலத்துத்தாமரை போல
அழகுகுறைந்த முகத்தையுடையவளாய், புக்காள் (அங்கு வந்து) சேர்ந்தாள்;
(எ-று.)

உற்றதும், அருங் கொழுநன் உயிர் உறும் நலத்தால்
இற்றதும், உணர்ந்து, இவள் இரங்கி அழும் எல்லை,
குற்றம் அகலும்படி குணங்களை நிறுத்தும்
நல் தவர் புகுந்து, உருகி, நைந்து, உளம் நெகிழ்ந்தார்.-குந்தியென்பாள் அழும்போது நற்றவரும் உருகி
உளம்நெகிழ்தல்.

உற்றதுஉம்- (தனக்கு) நேர்ந்ததாகிய கைக்மையையும், அருங்
கொழுநன்உயிர் – (தன்னுடைய) அரிய கணவனுயிர், உறும் நலத்தால் – (தான்)
அனுபவித்தஇன்பத்தினால், இற்றதுஉம் – அழிந்ததையும்,உணர்ந்து-, இரங்கி-,
இவள் – இந்தக் குந்தி, அழும் எல்லை- அழும்போது,- குற்றம் அகலும்படி –
குற்றம்தீரும்படி (நோற்று), குணங்களை நிறுத்தும் – குணங்களை (த் தம்மிடத்து)
நிலை நாட்டும், நல் தவர் – சிறந்த தவத்தையுடைய முனிவர், புகுந்து – (அங்கு)
வந்து, உளம் – மனம், நைந்து-, உருகி-, நெகிழ்ந்தார் – இளகப்பெற்றார்;
(எ-று.)

அழு குரல் விலக்கியபின், ஐம் மகவையும் கொண்டு,
எழு கடல் நிலத்து அரசை ஈம விதி செய்ய,
புழுகு கமழ் மைக் குழலி, பொற்புடை முகத்தாள்,
முழுகினள் அனற்புனலில், மொய்ம்பனை விடாதாள்.–புதல்வரைக்கொண்டு முனிவர் அந்திமக்கடனை நடத்தலும்,
மாத்திரி சிதையனலிற் குளித்தலும்

(வந்தமுனிவர்), அழு குரல் – அழுகுரலை, விலக்கிய பின் –
தவிர்த்தபிறகு, ஐ மகவைஉம் கொண்டு – ஐந்துபுத்திரரையுங் கொண்டு, எழு
கடல் நிலத்து அரசை – ஏழுகடலைக்கொண்ட பூமிக்கு அரசனான
பாண்டுமன்னவனுக்கு, ஈமம் விதி – அந்திமக்கடனை, செய்ய-,- புழுகு கமழ் மை
குழலி – புழுகுமணம்வீசுகின்ற கறுத்த கூந்தலையுடையவளும், பொற்பு உடை
முகத்தாள் – அழகையுடைய முகத்தையுடையவளுமான மாத்திரி, மொய்ம்பனை
விடாதாள் – (தன்) கணவனைப் பிரிந்திருக்கமாட்டாதவளாய், அனல் புனலின்
முழுகினள் – சிதையனலாகிய நீரிலே முழுகினாள்; (எ-று.)

     நீர்க்கயத்துமுழுகுவதுபோல் மனமகிழ்ச்சியோடுதீயிற்குளித்திட்டாள் மாத்திரி
யென்க. “காதலன்வீயக்கடுந்துயரெய்திப், போதல் செய்யா வுயிரொடு புலந்து,
நளியிரும்பொய்கையாடுநர் போல, முளியெரிபுகூஉம்முதுக்குடிப்பெண்டிர்,”
“பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற, வள்ளிதழவிழ்ந்ததாமரை,
நள்ளிரும் பொய்கையுந்தீயுமோரற்றே” என்பன காண்க. தன்பிழையால் கணவன்
இறந்திட்டதுபற்றி, மாத்திரி, தன் புதல்வரையும் காக்குந் தொழிலைமேற்கொண்டு
இருக்குமாறும் தான் அனலிற் குளிக்குமாறும் குந்திதேவியிடம்
அநுமதிவேண்டிப்பெற்று, புதல்வரைத் தழுவி உச்சிமோந்து அந்தக்குந்தியின்
கையிலொப்பித்து மகிழ்வோடு தீப்பாய்ந்தன ளென்று பாலபாரதம் கூறும். செய்ய
= செய்விக்க: பிறவினையில்வந்ததன்வினை

தங்கை அவள், வான் உலகு தலைவனுடன் எய்தி,
கங்கை வனம் மூழ்கி, உயர் கற்பவனம் வைக,-
பங்கய நெடுந் துறை படிந்து, தன் மகாரால்,
மங்கை இவளும், கடன் முடித்தனள், வனத்தேமாத்திரிசுவர்க்கம்புக, குந்தி கணவனதுஈமக்கடனை முடித்தல்.

தங்கையவள் – தனக்குப்பின் கணவனுக்கு வாழ்க்கைப்பட்டவளான
மாத்திரி, வான் உலகு – சுவர்க்கலோகத்தை, தலைவனுடன் – கணவனுடனே,
எய்தி – அடைந்து, கங்கை வனம் மூழ்கி – ஆகாச கங்கையின் நீரிலே முழுகி,
உயர் கற்பவனம் வைக – சிறந்த (வானுலகத்துக்) கற்பகவனத்து நிழலிலே
தங்கினளாக,- மங்கை இவள்உம் – குந்தியென்கிற இந்த மடத்தையும், பங்கயம்
நெடுந் துறைபடிந்து – தாமரையையுடைய பெரிய நீர்த்துறையிலே மூழ்கி, தன்
மகாரால் – தன் புத்திரரைக்கொண்டு, வனத்தே – அந்தக்காட்டில், கடன் – (தன்
கணவனுடைய) ஈமக்கடனை, முடித்தனள் – நிறைவேற்றினாள்; (எ – று.)

     மாத்திரி கங்கைநீரில்மூழ்கிக் கற்பகவனத்தே தங்க, குந்தியும்
பங்கயத்துறைநீரில் மூழ்கி வனத்தே தங்கினா ளென ஒரு நயந்தோன்றக்
கூறியவாறு.     

காசிபன் முதல் கடவுள் வேதியர் கருத்தால்,
ஆசி பெறும் அப் புதல்வர் ஐவரொடும் அன்றே,
ஏசு இல் பிரதைக் கொடியை இறை நகரின் உய்த்தார்-
தேசிகரின் முன் தொழுதகும் சதசிருங்கர்.–சதசிருங்கமுனிவர்கள் குந்தியை மக்களோடு
அஸ்தினாபுரியிற் சேர்த்தல்.

தேசிகரின் – ஆசிரியரைப்போல, முன் தொழுதகும் –
முதலில்தொழத்தக்க, சதசிருங்கர் – சதசிருங்கபருவதத்தில் வசிப்பவரான,
காசிபன் முதல் கடவுள் வேதியர் – காசிபன் முதலாகிய கடவுளர் போன்ற
அந்தணர்,- கருத்தால் – (தம்) மனப் பூர்வமாகக் கூறும், ஆசி வாழ்த்தை,
பெறும் – பெற்ற, அ புதல்வர் ஐவரொடுஉம் – அந்த ஐந்துபுத்திரரோடும்,-
ஏசுஇல் பிரதைகொடியை- குற்றமற்ற கொடி போன்ற பிரதையென்பாளை, இறை
நகரின் – அரசனுடைய அஸ்தினாபுரியிலே, உய்த்தார் – கொண்டுசேர்த்தார்;
(எ-று.)

     சதசிருங்கரென்பார் புத்திரரோடு பிரதையை வேதியர்கருத்தால்
அத்தினபுரியில் உய்த்தாரென்று இச்செய்யுளுக்குப் பொருள் கூறுதல்
முதனூலுக்குப்பொருந்தாது. அன்றே – ஈற்றசை: பாண்டுவின் அந்திமக்கடன்
முடிந்த அன்றைக்கே எனினுமாம். பாண்டவர் அத்தினாபுரியைச் சேர்ந்தபோது
தருமபுத்திரனுக்கு வயசு பதினாறு, வீமனுக்குப் பதினைந்து, அருச்சுனனுக்குப்
பதினான்கு, இரட்டையர்க்குப் பதின்மூன்று என்றும், பாண்டுவின் தகன
ஸம்ஸ்காரமே சதசிருங்கபர்வதத்தில் நடந்ததாக மற்றை உத்தரகிரியைகள்
அஸ்தினாபுத்திலே திருதராஷ்டிரன் முதலியோராற் செய்விக்கப்பட்டன வென்றும்
வியாசபாரதத்தால் விளங்கும்.

இறந்த துணைவற்கு உளம் இரங்கும் நிலமன்னன்
சிறந்த சரணத்தில் விழு சிறுவரை எடுத்து,
புறம் தழுவி, அப்பொழுது புண்ணிய நலத்தால்,
பிறந்த பொழுது ஒத்து மகிழ் பெற்றியினன் ஆனான்.–திருராஷ்டிரன் வணங்கிய புத்திரரையெடுத்துத் தழுவிமகிழ்தல்.

இறந்த – உயிர்நீங்கிய, துணைவற்கு – தம்பியான பாண்டுவின்
பொருட்டு, உளம் இரங்கும் – மனத்தில் இரக்கங்கொண்ட, நிலம் மன்னன் –
நிலத்துக்குஉரியமன்னனான திருதராட்டிரன்,- சிறந்த சரணத்தில்-(தன்னுடைய)
சிறப்புற்ற பாதங்களிலே, விழு – வீழ்ந்து வணங்கிய, சிறுவரை – புதல்வரை,
எடுத்து-, அப்பொழுது-, புறம் தழுவி- (அவர்களுடைய) முதுகைத்
தடவி,புண்ணியம் நலத்தால் பிறந்த – புண்ணியப்பயனால் அவர்கள் பிறந்த,
பொழுது – வேளையை, ஒத்து – ஒப்ப, மகிழ் பெற்றியினன் ஆனான் –
மகிழ்ச்சியுற்ற தன்மையனானான்; (எ -று.)

     தம்பியின்மரணத்தால் வருந்துகின்ற அந்தத்திருதராஷ்டிரன்
அத்தம்பியினுடைய குமாரர் தன்பாதங்களில் விழ, அவர்களை யெடுத்து
அணைத்து அவர்கள் பிறந்தபோது பெற்றோர் அடைந்த மகிழ்ச்சியொப்ப
மகிழ்ச்சி  யடையலாயின னென்பதாம். மகிழ் – முதனிலைத் தொழிற்பெயர்.

வியன் நதிமகன், சிலை வல் விதுரன், முதல் உள்ளோர்,
பயனுடை விசும்பு பயில் பாண்டுவை நினைந்தும்,
சயம் நிலைபெறும் தகைய தனயரை உகந்தும்,
நயனம் இரு பைம் புனலும் நல்கினர் நயந்தார்.–வீடுமன் முதலியோர் பாண்டுவையும் அவன்
மக்களையும் நினைந்து இருவகைக்கண்ணீரைச் சொரிதல்.

வியன் நதி மகன் – கங்கைநதியின் மகனாகிய வீடுமன், சிலை வல்
விதுரன் – வில்லில்வல்ல வலியவிதுரன், முதல் – முதலாக, உள்ளோர்-,- பயன்
உடை விசும்பு – புண்ணியப்பயனாக அடைதலையுடைய சுவர்க்கத்தில், பயில் –
சென்ற, பாண்டுவை நினைந்துஉம் – பாண்டுவைச் சிந்தித்தும், சயம் நிலைபெறும்
தகைய தனயரைஉகந்து உம் – வெற்றிநிலைபெறுந் தன்மையையுடைய
(அந்தப்பாண்டுவின்) புதல்வரைக்கண்டு மகிழ்ந்தும், நயனம்- (தம்) கண்களில்,
இரு பைம் புனல்உம் நல்கினர் – (சோகக்கண்ணீர் ஆனந்தக் கண்ணீர் என்ற)
இருவகையான புதிய கண்ணீர்களையும் விட்டவராய், நயந்தார் – (தம்முடைய)
விருப்பத்தைக் காட்டினார்; (எ-று.)

     ஆகாசம் என்று பொருளுள்ள வியத் என்பது வியன் என்று திரிந்தது:
வியன்+நதி = வியனதி: வானதி கங்கை. வியன் – பெருமையெனக்கூறித்
தமிழ்ச்சொ லென்றலும் ஒன்று.   

அனுச நிருபன் புதல்வர் ஐவரும், மகீபன்
தனயர் ஒரு நூற்றுவரும், அன்பினொடு தழுவி,
கனகுலம் முகந்து பெய் கருங் கயம் நெருங்கும்
வனசமலரும் குமுதமலரும் என வளர்வார்.பாண்டுபுத்திரரும் திருதராட்டிரன் புத்திரரும்
ஓரிடத்துவளர்தல்.

அனசநிருபன் புதல்வர் ஐவர்உம் – (திருதராட்டிரனுடைய)
தம்பியான பாண்டுமன்னவனுடைய புத்திரர் ஐந்து பேரும், மகீபன் தனயர் ஒரு
நூற்றுவர்உம் – திருதராட்டிர மன்னவனுடைய புத்திரர் நூறுபேரும்,-
அன்பினொடு தழுவி – அன்போடு தழுவிக்கொண்டு,- கன குலம் முகந்து பெய்
– மேகக்கூட்டம் (கடலில்) முகந்துகொண்டு பெய்வதனால் நிறைகின்ற, கருங்
கயம் – பெரிய நீர்நிலையிலே, நெருங்கும் – நெருங்கியுள்ள, வனச மலர்உம்
குமுதமலர் உம் என – தாமரைமலரும் ஆம்பல்மலரும்போல, வளர்வார்
வளர்பவராயினர்; (எ-று.)

     சிறந்துதோன்றும் தாமரைமலர் பாண்டவர்க்கும், குமுதமலர்
துரியோதனாதியர்க்கும் உவமை.   

இன்னணம் வளரும்காலை, எறி கடல் உடுத்த அல்குல்,
மின் எனும் மருங்குல், கொங்கை வெற்புடை, வேய் கொள்
மென் தோள்,
பொன் எனும் நிறத்தினோடும் பொற்பு அழி ஆகுலத்தாள்-
தன் எணம் முடிப்பான் வந்த தலைவனைத் தந்த கோமான்,–இதுவும் அடுத்தகவியும் – ஒருதொடர்: வசுதேவன்
முதலியோர் அத்தினாபுரிக்கு வருதலைத் தெரிவிக்கும்.

இன்னணம் – இவ்வாறு, வளரும்காலை – (பாண்டவரும்
துரியோதனாதியரும்) வளராநிற்கையில்,- எறி கடல் உடுத்தஅல்குல் –
அலைவீசுகின்ற கடலை உடையாகச் சுற்றியுள்ள நிதம்பதேசத்தையும், மின் எனும்
மருங்குல் – மின்னலென்னும் இடையையும், வெற்பு கொங்கை – வெற்பாகிய
கொங்கையையும், வேய்கொள் மெல்தோள் – மூங்கிலினாற்கொண்ட
மெல்லியதோளையும், உடை – உடைய, பொன் எனும் நிறத்தினோடு பொற்புஉம்
அழி – பொன்னெனத்தக்க நிறுத்தினோடு தன் அழகும் அழிந்ததனால்,
ஆகுலத்தாள் தன் – துன்பமடைந்தவளான பூமிதேவியினுடைய, எ(ண்)ணம் –
(பாரந்தீர்க்கவேண்டுமென்று கருதிய) எண்ணத்தை, முடிப்பான் –
முடிப்பதன்பொருட்டே, வந்த – (பூமியிலே) அவதரித்தவனாகிய, தலைவனை –
தலைவனாகிய ஸ்ரீக்ருஷ்ணனை, தந்த – பெற்ற, கோமான் – தலைவனாகிய
வசுதேவனும்,- (எ-று.)- இச்செய்யுளில் ‘வளருங்காலை’ என்பது,
அடுத்தசெய்யுளில் ‘அத்தினாபுரிவந்துற்றார்’ என்பதனோடு இயையும்.

     இதுமுதல் எட்டுக்கவிகள்- இச்சருக்கத்து 67 – ஆங் கவி போன்ற
அறுசீராசிரிய விருத்தங்கள்.

குந்திபோசன்தன் தெய்வக் குலத்துளோர்களும், அநேக
இந்திரர் அவனிதன்னில் எய்தினர் ஆகும் என்ன,
கந்த வான் கொன்றை தோயும் கங்கையாள் குமரன் வைகும்,
அந்தம் இல் சுவர்க்கம் அன்ன, அத்தினாபுரி வந்து உற்றார்

குந்திபோசன் தன் தெய்வம் குலத்துஉளோர்கள் உம் –
குந்திபோசனும் அவனுடையசிறப்புற்ற குலத்துத்தோன்றியவர்களும், அனேக
இந்திரர் – அனேக இந்திரர்கள், அவனிதன்னில் – பூமியிலே, எய்தினர் –
வந்துள்ளார், என்ன – என்று சொல்லுமாறு, கந்தம் வான் கொன்றை தோயும்
கங்கையாள் குமரன் – நறுமணமுள்ள சிறந்த கொன்றைமலரிற் படிந்த
கங்காதேவியின் குமாரனான வீடுமன், வைகும் – தங்கியுள்ள, அந்தம் இல்
சுவர்க்கம் அன்ன – அழிதலில்லாத சுவர்க்கலோகத்தையொத்த, அத்தினாபுரி –
அத்தினாபுரியை, வந்துஉற்றார் – வந்துசேர்ந்தார்; (எ-று.)-ஆகும் – அசை.

     பாண்டுஇறக்க, குந்தியும் அவளுடைய புத்திரரும் அவனுடைய அந்திம
கருமங்களைச் செய்துமுடித்திட்டுக் காட்டிலிருந்து நாட்டில் இப்போதுதான் வந்து
சேர்ந்தன ராதலால், உறவின் முறையாரான வசுதேவன் முதலியோர் அவர்களைக்
காணுமாறு வந்தனரென்க.    

வெண் நிற மதியம் அன்ன விடலையும், கரிய மேக
வண்ணனும், வள்ளல்தன்னைத் திரு வயிற்று உதித்த மாதும்,
எண் இலா உவகையோடும் குந்தியை எய்தி, எல்லாப்
புண்ணிய நலமும் எண்ணி, பூமி ஆள் முறையும் கோத்தார்.-கிருஷ்ணன்முதலியோரும் குந்தியைக்கண்டு புண்ணியநலனை
யெண்ணிப் பூமியாளும்முறையையும் ஆலோசித்தல்.

வெள் நிறம் மதியம் அன்ன விடலைஉம் – வெண்ணிறமுடைய
சந்திரனை யொத்த ஆண்களிற் சிறந்தோனாகிய பலராமனும், கரிய மேகம்
வண்ணன்உம் – கருநிறமுள்ள மேகநிறத்தனாகிய க்ருஷ்ணனும், வள்ளல்தன்னை
திரு வயிறு உயிர்த்த மாதுஉம் – அந்த ஸ்ரீகிருஷ்ணனை (த் தன்) திருவயிற்றிலே
தோன்றுமாறு செய்த பெண்ணாகிய தேவகியும், எண் இலா உவகையோடுஉம் –
அளவில்லாத மகிழ்ச்சியுடனே, குந்தியை எய்தி – குந்தியையடைந்து, புண்ணியம்
நலம்எல்லாம்உம் எண்ணி – புண்ணியத்தினால் விளைந்த நன்மைகளையெல்லாம்
கருதிப்பார்த்து, பூமி ஆள் முறைஉம் – (இனிப்) பூமியையாள வேண்டியமுறையையும்,
கோத்தார் – கருதினார்கள்; (எ -று.)

பாண்டு சாபவசத்தனானபின்பும் அவனுடைய சந்ததியற்றுப் போகாமல்
தேவர்களருளால் முளைத்தது புண்ணியத்தினால் விளைந்த நன்மையாதல்
காண்க. பூமிபாரம்  தீர்ப்பதற்கே திருவவதரித்த க்ருஷ்ணன், பூமியாள் முறையை
உடனிருந்துகருதியமை ஏற்றதாதல் காண்க

எம்பிரான், ஆதிமூலம், இந்திரன் முதலோர்க்கு எல்லாம்
தம்பிரான், பாண்டு ஈன்ற தருமதேவதையை நோக்கி,
‘அம்புராசிகள் உட்பட்ட அவனிகள் அனைத்தும் நாமே,
இம்பர் நோய் அகற்றி, எல்லா எண்ணமும் முடித்தும்’ என்றான்தருமபுத்திரனைநோக்கி ஸ்ரீக்ருஷ்ணன் கூறியது.

எம்பிரான் – எமதுசுவாமியும், ஆதிமூலம் – மூலப்பொருள்கட்கும்
மூலமானவனும், இந்திரன் முதலோர்க்கு எல்லாம் தம்பிரான் – இந்திராதியர்க்கும்
சுவாமியுமான ஸ்ரீக்ருஷ்ணன், பாண்டு ஈன்ற – பாண்டுமகாராசனுக்குப்
புத்திரனாகப்பிறந்த, தருமதேவதையை நோக்கி – தருமதேதையான யுதிஷ்டிரனைப்
பார்த்து,- அம்புராசிகள் உட்பட்ட அவனிகள் அனைத்துஉம் – சமுத்திரத்துக்கு
உட்பட்ட பூமிமுழுவதையும்பற்றி, இம்பர் நோய் – இங்குவரக்கூடிய துன்பத்தை,
அகற்றி – போக்கி, எல்லாம்எண்ணம்உம் – எல்லாவெண்ணத்தையும், நாம்ஏ
முடித்தும் – நாமே தீர்த்துவைப்போம், என்றான்-; (எ-று.)

     எல்லாவெண்ணமும் என்றது – பூபாரந் தீர்க்கவேணுமென்று தான்
கருதியிருப்பதும், பாண்டவர்க்கு ஞாதியரால் நேரக்கூடியனவாகக்கருதும்
பலவகையிடையூறுகளும் ஆகிய பலவற்றையும் காட்டும். தர்மிஷ்டனாதலால்
தருமபுத்திரனை, ‘தருமதேவதை’ என்றார். இம்பரேயகற்றி யென்றும் பாடம்.

முகுரவானனனும், வேத்து முனிவனும், மனம், சொல், காயம்,
பகிர்வு இலா விதுரன்தானும், பாந்தள் ஏறு உயர்த்த கோவும்,
நிகர் இலாத் துணைவர்தாமும், நீரொடு நீர் சேர்ந்தென்ன,
தகைவு இலா அன்பினோடும் தழுவினர் கெழுமினாரே.திருதராஷ்டிரன் முதலியோர் வந்தவரோடு
அளவளாவுதல்.

முகுரவானனன்உம் – திருதராட்டிரனும், வேந்து முனிவன்உம் –
அரசனாயிருந்தே முனிவனாயிருக்கும் வீடுமனும், மனம் சொல் காயம் பகிர்வு
இலா விதுரன்தான்உம் – மனசு வாக்கு காயம் என்னும் திரிகரணங்களும்
வேறுபடுதலில்லாத [ஒன்றுபட்டுள்ள] விதுரனும், பாந்தள் ஏறு உயர்த்த கோஉம்
– சர்ப்பத்தை உயரக் [கொடியிற்] கொண்டவனாகிய துரியோதனனும், நிகர் இலா
துணைவர்தாம்உம் – ஒப்பற்றவரான அவனுடைய தம்பிமாரும், நீரொடு நீர்
சேர்ந்துஎன்ன – நீரோடு நீர் சேர்த்தாற்போல (வேறுபாடின்றி ஒரு
தன்மையராய்), தகைவு இலா அன்பினோடுஉம் – தடைப்படுதலில்லாத
அன்புடனே, தழுவினர் – (வந்த அந்தவசுதேவன் முதலியோரைத்)
தழுவினவராய், கெழுமினார் – உரிமை பாராட்டினார்கள்; (எ-று.)

     முகுரவானனன் என்றபெயர்க்கு – கண்ணாடிபோன்ற முகமுடையவனென்று
பொருள்: முகுரம் – கண்ணாடி: ஆனனம் – முகம்: கண்ணாடி தான்
பிறராற்காணப்பட்டுப் பிறரைத் தான் காணும் உணர்ச்சியில்லாதுபோல,
தான்பிறராற் காணப்பட்டுப் பிறரைத் தான் காணாத பிறவிக்குருடான முகத்தை
யுடையவனென்றவாறு: இனி, கண்ணாடிபோல விளக்கமுடைய
முகமுடையவனென்றுமாம்: “வயக்குறுமண்டிலம் வடமொழிப்பெயர்பெற்ற,
முகத்தவன்” என்றார், கலித்தொகையிலும். ‘நீரொடுபால்சேர்ந் தென்ன’ என்றும்
பாடம். 

தன் பதி வந்தோர்தம்மை, தாதைதன் தாதை ஆன
முன்புடைக் கங்கை மைந்தன் முதலிய முதல்வர் எல்லாம்,
அன்பொடு கண்டு கண்டு, கண் களித்து, ஆர்வம் மிஞ்சி,
மன்பதை மகிழ்ச்சி கூர, வரம்பு இலா விருந்து செய்தார்.–வந்தவர்க்கு வீடுமன் முதலியோர் விருந்துசெய்தல்

தன் பதி வந்தோர் தம்மை – தருமபுத்திரனுடைய நகராகிய
அத்தினபுரத்தை வந்தடைந்தவராகிய வசுதேவர்முதலியோரை, தாதை தன்
தாதைஆன – பாட்டன் முறையாகுபவனான, முன்பு உடை கங்கை மைந்தன்
முதலிய – வலிமையையுடைய கங்கா புத்திரன் [வீடுமன்] முதலான, முதல்வர்
எல்லாம் – முதன்மைபெற்றவரெல்லாம், அன்பொடு – அன்போடு, கண்டு கண்டு
– பார்த்துப் பார்த்து, கண்களித்து – கண்கள் மகிழ்வுறப் பெற்று, ஆர்வம் விஞ்சி
– பிரீதிமிகுந்து,- மன்பதை மகிழ்ச்சி கூர – (செய்யும் உபசாரத்தைக்கண்ட)
மனிதர்திரள் மகிழ்ச்சிமிக, வரம்புஇலா விருந்துசெய்தார் – மிக அதிகமாக
விருந்தினர்க்குச் செய்யும் உபசாரத்தைச் செய்தார்கள்; (எ-று.)

நூற்றுவர், ஐவர், என்னும் நுதியுடைச் சமர வை வேல்
கூற்றுவர் அனையோர்க்கு யாரும் கொடுங் கடும்
போரில் ஆற்றார்;
ஆற்றுவரேனும், உங்கள் உதவி உண்டு; அருளும் உண்டு;
தோற்றமும் உண்டு; நுங்கள் சுமை, இவர் சுமையும்’ என்றார்.வீடுமன் முதலியோர் வந்த அவர்களிடம் கூறிய
முகமன்.

நூற்றவர் ஐவர் என்னும் – நூற்றுவரும் ஐவரும் என்று
சொல்லப்படுகின்ற, சமரம் வை நுதி உடை வேல் கூற்றுவர் அனையோர்க்கு –
போர்க்குரிய கூரிய நுனியைக்கொண்ட வேற்படையையுடைய யமனை
யொத்தவர்கட்குமுன்னே, யார்உம்-, கொடும் கடும் போரில் ஆற்றார் – கொடிய
கடியபோரைச்செய்யும் வல்லமையுள்ளவரல்லர்: ஆற்றுவர்ஏன்உம் –
(எவரேனும்துணிவு கொண்டு) போர்செய்வாரேனும், உங்கள் உதவி உண்டு –
உங்களுடைய உதவி (இவர்கட்கு) உண்டு: அருள்உம்உண்டு – அருளும்
இருக்கின்றது: தோற்றஉம் உண்டு – (உங்கள்சம்பந்தத்தினாலான) மேன்மையும்
உண்டு: இவர் சுமைஉம் – இவர்களுடைய பாரமும், நுங்கள் சுமை –
உங்கள்பாரமே, ‘ என்றார் – என்று முகமனுரை கூறினார்கள்; (எ-று.)

      ‘கங்கைமைந்தன் முதலிய முதல்வரெல்லாம்’ என்று கீழ்ச் செய்யுளில்
வந்ததே, இச்செய்யுளில் ‘என்றால்’ என்பதற்கு எழுவாய்

இனிமையின் பலவும் மாற்றம் யாவர்க்கும் யாவும் சொல்லி,
தினகரன்-தொழுத பின்னர், தேர், பரி கரிகள்தோறும்
மனன் உறத் தக்க செல்வம் வகைதொறும் வழங்கி, அன்றே
தனதனைப் போல்வார்தம்மைத் தம் பதி அடைவித்தாரேவந்தவரை வீடுமன் முதலியோர் உபசரித்து
விடைகொடுத்தனுப்புதல்.

யாவர்க்குஉம் – வந்தவர் எல்லோர்க்கும், இனிமையின் –
இனிமையாக, பல மாற்றம்உம் யாஉம் – பலவார்த்தைகளையும் மற்றுஞ்
சொல்லவேண்டுவனவற்றையும், சொல்லி-,- தினகரன் தொழுத பின்னர் –
சூரியனை நமஸ்கரித்தபின்பு,- தேர் பரி கரிகள் தோறுஉம் – இரதம் குதிரை
யானை என்னும் இவைகளிலெல்லாம், மனன் உற தக்க செல்வம் – மனசு
விரும்பத்தக்க செல்வத்தை, வகை தொறும் – பலவகையிலும் வழங்கி –
கொடுத்து, தனதனை போல்வார்தம்மை – குபேரனைப்போலப் பெருஞ்செல்வரான
அந்த வசுதேவன்முதலியோரை, தம் பதி அடைவித்தார் – தமது ஊருக்குச்
செல்லுமாறு விடைகொடுத்து அனுப்பினார்கள்; (எ -று.)

     பலவும், உம் – அசையென்னலாம். மனனுறத்தக்கசெல்வம் – தேர்பரிகரி
முதலியவை யென்று கொள்ளலும் இரத்தினம் முதலியவை யென்று கொள்ளலும்
ஆம். தினகரற்றொழுதல் – சூரியோபஸ் தாநம் என்னலாம்

எயில் நலம் புனை கோபுர மா புரத்து, எழுது மாளிகைதோறும்,
வெயில் நிலா உமிழ் கனக நீள் வீதியில், விலாசம்
உற்றிடும் நாளில்,
பயினன் மேல் வரு கல் எனச் செறிந்த மெய்ப் பவனன்
மைந்தனும் ஒத்தான்,
வயினதேயனை; காத்திரவேயரை, மன்னன் மைந்தரும் ஒத்தார்.துரியோதனாதியரும் பாண்டவரும் சிறுவராய்
விளையாடுகையில், வீமசேனன் துரியோதனாதியரோடு
மனவொற்றுமையின்றி யிருத்தல்.

நலம் எயில் புனை – அழகிய மதிளால் அலங்கரிக்கப் பெற்ற,
கோபுரம் – கோபுரங்களையுடைய, மா புரத்து – பெரிய அந்த அத்தினாபுரியிலே,
எழுது – கட்டப்பட்டுள்ள, மாளிகைதோறுஉம்-, வெயில் நிலா உமிழ்-
(பதித்துள்ள மணிகளினொளியால்) வெயில் போன்ற ஒளியையும் நிலாப்போன்ற
ஒளியையும் வெளிப்படுத்துகின்ற, கனகம் நீள் வீதியில் – பொன்மயமான
அல்லது பொன்னணிகளைக்கொண்ட நீண்டவீதியிலே, விலாசம் உற்றிடும் நாளில்
– (பாண்டவரும் துரியோதனாதியரும்) விளையாடல்களைச் செய்துவரும்
நாளிலே,- பை இனன் மேல் வரு கல்என செறிந்த மெய் பவனன் மைந்தன்உம்
– படங்களின் திரள் (தன்மீது) வரப்பெற்ற (மேருஎன்ற) மலைபோல
அழுத்தமுள்ள உடலைப்படைத்த வாயுகுமாரனான வீமனும், வயினதேயனை –
கருடனை, ஒத்தான்-: மன்னன் மைந்தர்உம் – திருதராட்டிரனுடைய குமாரரான
துரியோதனாதியரும், காத்திரவேயரை – கத்துருவின்புத்திரரான நாகங்களை,
ஒத்தார்-; (எ-று.)

     உவமையால், வீமனுக்கும் துரியோதனாதியர்க்கும் பகைமை
தோன்றியமையும், துரியோதனாதியர் வீமனைவெல்லும் ஆற்றலில ரென்பதும்
பெறப்படும். வயினதேயன் = வைநதேயன்: விநதையின் புதல்வனான கருடன்:
காத்திரவேயர்= த்ரவேயர்: கத்துருவின்புத்திரரானநாகர்கள்: இவையிரண்டும்
தத்திதாந்தம்: பை – படம் கல் – மலைக்கு, இலக்கணை.ப[பை] யினன்
மேல்வருகல் – பசுமையான [இளைய] சூரியன் தன்மேல் உதயமாகிவரப்பெற்ற
உதயமலை யென்றலும் ஒன்று.

     காசிபமுனிவருடைய மனைவிமாருள் விநதையென்பாளுக்கும் கத்துரு
வெண்பாளுக்கும் வானத்துச்சென்ற உச்சைக்சிரவமென்னும்
குதிரையின்நிறத்தைப்பற்றி விவாதமுண்டாக, கத்துரு தன் புத்திரனான
கருநாகங்களை அந்த உச்சைச்சிரவமென்னும் குதிரையின் உடலைச்
சுற்றிக்கொள்ளுமாறு ஏவி அதனால் அந்த விநதையையும் விநதைகுமாரனையும்
அடிமையாக்கிகொள்ள, அந்த அடிமைத் தன்மையினின்று தம்மை
விடுவித்துக்கொள்ளுமாறு கருடன் அந்நாகங்களின் மொழிப்படியே அமிருதத்தைக்
கொணர்ந்ததோடு, அந்நாகங்களை யுண்ணுமாறும் தேவேந்திரனிடம் வரம்பெற்று
வந்து அடிமையினின்று நீங்கி, அந்நாகங்களை அமிருதத்தை யுண்ணும் பொருட்டு
நீரில்மூழ்கிவருமாறு தந்திரமாகச்சொல்ல, அவ்வேளையில் தேவேந்திரன்
அமிருதத்தைக் கவர்ந்து சென்றான்: பிறகு அமிருதகலசம் வைத்திருந்த
தர்ப்பையை நக்கியதனால் அந்நாகங்களின் நாக்குப் பிளவுண்டன என்ற
சரித்திரமும், ஒருகால் வாயுபகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் தம்முள் யார்
பலசாலியென்று விவாதமுண்டாக, அப்போது தனது ஆயிரம்படங்களாலும்
ஆதிசேஷன் மேருவின் ஆயிரங்கொடுமுடிகளையும் கவிந்துகொண்டு நிற்க,
வாயுபகவான் அந்த மேருவின் ஆயிரஞ்சிகரங்களுள் மூன்று சிகரங்களைப்
பறித்திட்டான் என்பதும் இங்கு அறியத்தக்கன.

     இச்செய்யுள் – முதற்சீர் மாச்சீரும் ஈற்றுச்சீர் காய்ச்சீரும் மற்றைநான்கும்
விளச்சீர்களுமாகிவந்த அறுசீராசிரியவிருத்தம்.

————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ.வில்லிபாரதம் – முதல் பாகம் -01. குருகுலச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 10, 2023

ஆக்குமாறு அயனாம்; முதல் ஆக்கிய உலகம்
காக்குமாறு செங் கண் நிறை கருணைஅம் கடலாம்;
வீக்குமாறு அரனாம்; அவை வீந்த நாள், மீளப்
பூக்கும் மா முதல் எவன்? அவன் பொன் அடி போற்றி!–முதற் கடவுளின் வாழ்த்து

எவன்-, ஆக்கும் ஆறு – படைக்கும்படி, அயன் ஆம் –
பிரமனாவனோ: முதல் ஆக்கிய உலகம் – முதலிற் படைக்கப்பட்ட அவ்வுலகத்துப்
பிராணிகளை; காக்கும் ஆறு – பாதுகாக்கும்படி, செங்கண் நிறை கருணை –
(செந்தாமரை மலர்போன்று) செந்நிறமான கண்களிலே நிறைந்த கருணையாகிய,
அம் -நீரைக்கொண்ட, கடல் ஆம் – கடல் போன்ற திருமாலாவனோ: வீக்கும்
ஆறு – (காப்பாற்றப்பட்ட உயிர்களை) அழிக்குமாறு, அரன் ஆம் – சிவனாவனோ:
அவை வீந்த நாள் – அவைஅழிந்த காலத்தில், மீள பூக்கும் – மீண்டும்
படைக்கின்ற, மா முதல் (ஆம்)- சிறப்புற்றமுதற்கடவுள் ஆவனோ: அவன் – அந்த
முதற்கடவுளின், பொன் அடி – அழகியதிருவடிகள், போற்றி – வாழ்க; (எ – று.)

      ‘எவன்’ என்பது- ‘அயனாம்’ முதலிய நான்கனோடும் இயையும் அம் –
அழகியஎனினுமாம். “அவை வீந்த நாளுந்திப்பூக்குமா முதல்” என்றும்
பாடமுண்டு. போற்றி -போற்றிய என்ற வியங்கோளின் ஈற்றுயிர்மெய் சென்றது.

     இதுமுதல் ஆறுகவிகள் – முதற்சீரும் ஐந்தாஞ்சீரும் மாச்சீர்களும் மற்றை
மூன்றும் விளச்சீர்களுமாகி வந்த கலிநிலைத்துறைகள். மேல் குருகுலச்சருக்கத்து
முதல்முப்பத்திரண்டு கவிகளும், இந்தக் கலிநிலைத்துறையேயாகும்.    

ஏழ் பெருங் கடல் மா நிலம் எங்கும் நல் அறமே
சூழ்க! வண் தமிழ் ஓங்குக! தேங்குக, சுருதி!
வீழ்க, பைம் புயல்! விளங்குக, வளம் கெழு மனு நூல்!
வாழ்க, அன்புடை அடியவர் மன்னு மா தவமே!அறம் முதலியவற்றின் வாழ்த்து

ஏழ் பெருங் கடல் மா நிலம் எங்குஉம் – ஏழு பெரிய கட்டலாற்
சூழப்பட்ட பெரிய பூமி முழுவதும், நல் அறம் ஏ சூழ்க – சிறந்த தருமமே
பரவியிருக்கட்டும்: வள் தமிழ் ஓங்குக – வளப்பம் பொருந்திய தமிழ்மொழி
யோங்கிநிற்கட்டும்: சுருதி – வேதங்கள், தேங்குக – (எங்கும்) நிறைந்திருக்கட்டும்:
பைம்புயல் – கரியமேகம், வீழ்க – (வானத்தினின்று மழைநீரைப்)
பொழியட்டும்; வளம் கெழுமனு நூல் – பல விஷயங்களும் நன்கு விளங்குகின்ற
மனுதருமசாத்திரம், விளங்குக -(அதனிற் கூறப்பட்டுள்ள தருமங்கள் நடத்தப்
பெறுதலால்) விளக்க முறட்டும்:அன்புஉடை – (கடவுளிடத்து) மெய்யன்புடைய,
அடியவர் – அடியார்கள், மன்னு -மேற்கொண்டுள்ள, மா தவம் – சிறந்த தவம்,
வாழ்க – வாழட்டும்; (எ -று.)

     கடவுள் வாழ்த்துக் கூறிய கவி, இதனால், அறம் முதலியவற்றைச் செழிக்க
வாழ்த்துகின்றார். உலகத்துக்கு நல்ல நெறியைப் போதித்தலே காவியத்துக்குப்
பயனாதலால், அக்கருத்துத் தோன்ற ‘எங்கும் நல்லறமே சூழ்க’ என்பது
முதலாகக்கூறினா ரென்னலாம்.

கன்ன பாகம் மெய் களிப்பது ஓர் அளப்பு இல் தொல் கதை முன்
சொன்ன பாவலன், துகள் அறு சுகன் திருத் தாதை!
அன்ன பாரதம்தன்னை, ஓர் அறிவிலேன் உரைப்பது
என்ன பாவம்! மற்று என்னை இன்று என் சொலாது, உலகே!அவையடக்கம்

அவையடக்கமாவது – அவையோர்க்குத் தான் அடங்கியிருக்கை:
அவையத்தார்க்கு மனவெறுப்புமுதலியனதோன்றாமல் அன்னாரை அடங்குமாறு
செய்தலெனினுமாம்: அங்ஙன் அவையடக்கத்தைத் தெரிவிக்கும் பாடல்,
அவையடக்கமெனப்படும்.

கன்னபாகம் – காதின் பகுதி, மெய் களிப்பது – உண்மையான
மகிழ்ச்சியை யடைதற்குக் காரணமான, அளப்பு இல் – அளவில்லாத (மிக்க), ஓர்
தொல் கதை – ஒரு பழமையான கதையை, முன் – முன்னே, சொன்ன-, பாவலன் –
கவி, துகள் அறு சுகன் திருத்தாதை – குற்றமற்ற சுகனுடைய சிறப்புற்ற தந்தையான
வியாசனாவன்; அன்ன பாரதம் தன்னை – அந்தப் பாரதத்தை, ஓர் அறிவுஇலேன்
உரைப்பது – சிறிது அறிவும் இல்லாத நான் சொல்லுவது,- என்ன பாவம் – என்ன
தீச்செயல்! இன்று – இப்போது, உலகு – உலகோர், என்னை – (தகாத செயலில்
மூண்டுள்ள) என்னை, என் சொலாது – என்ன சொல்லமாட்டார்? ( எ -று.)

     கன்னபாகம் = கர்ணபாகம்: வடசொற்றொடர். மெய் – உடலுமாம். பாவம் –
பாபம் என்ற வடசொல்லின் திரிபு: பாவம் என்ற வடசொல்லின் திரிபு
எனக்கொண்டு,என்ன அபிப்பிராயம் என்றுமாம். மற்று -அசை.  

மண்ணில் ஆரணம் நிகர் என வியாதனார் வகுத்த
எண் இலா நெடுங் காதையை யான் அறிந்து இயம்பல்,
விண்ணில் ஆதவன் விளங்கு நீடு எல்லையை, ஊமன்,
கண் இலாதவன், கேட்டலும் காண்டலும் கடுக்கும்.–அவையடக்கம்

மண்ணில் – பூமியிலே, ‘ஆரணம் – வேதத்துக்கு, நிகர் – ஒப்பு
ஆகும், ‘ என – என்னுமாறு, வியாதனார் – வியாச முனிவர், வகுத்த – விரிவாகச்
சொல்லியருளிய, எண் இலா – அளவில்லாத (மிகப் பெரிய), நெடுங் காதையை –
நீண்ட(பரந்த) கதையை, யான் அறிந்து இயம்பல் – யான் தெரிந்துகொண்டு
சொல்லுதல்,- விண்ணில் – ஆகாயத்திலே, ஆதவன் – சூரியன், விளங்கு –
விளங்குகின்ற, நீடுஎல்லையை – நீண்டவரம்பை, ஊமன் கேட்டல்உம் –
ஊமையானவன் வினவியறிதலையும், கண் இலாதவன் – குருடன், காண்டல்உம் –
கண்டறிதலையும், கடுக்கும் – ஒத்திருக்கும்; (எ – று.)

     ஊமன் கண்ணிலாதவன் கேட்டலும் காண்டலும் கடுக்கும்-
முறைநிரனிறைப்பொருள்கோள்.        

முன் சொலாகிய சொல் எலாம் முழுது உணர் முனிவன்-
தன் சொலாகிய மாப் பெருங்காப்பியம்தன்னைத்
தென்சொலால் உரைசெய்தலின், செழுஞ் சுவை இல்லாப்
புன்சொல்ஆயினும், பொறுத்து அருள்புரிவரே, புலவோர்.–அவையடக்கம்

முன் சொல் ஆகிய சொல் எலாம் – முற்பட்ட சொல்லாகிய
வேதம்முழுவதையும், முழுதுஉணர் – ஒன்றுவிடாமல் நன்கு அறிந்த,
முனிவன்தன் -வியாசமகரிஷியின், சொல்ஆகிய – வாக்காகிய, மாபெருங்
காப்பியந்தன்னை – சிறந்தபெரிய காப்பியமாகிய பாரதத்தை, தென் சொலால் –
தமிழ்மொழியினால், உரைசெய்தலின் – சொல்லுதலினால், செழுஞ்சுவை இல்லா
புல் சொல் ஆயின்உம்-(என்னுடைய சொல்) மிக்க சுவையில்லாத இழிவாகிய
சொல்லாயிருப்பினும், புலவோர் -வித்துவான்கள், பொறுத்து அருள்புரிவர் –
பொறுமைகொண்டு கருணை செய்வார்கள்;(எ – று.)

     நித்தியமாதலால், வேதம் ‘முன்சொல்’ எனப்பட்டது. என்சொல்
இழிவானதேயானாலும் வடமொழியிலுள்ள மாப்பெருங்கதை தமிழிலெழுதப்
படுவதென்றகாரணங்கொண்டு, சொல்லப்படும் பொருளின் மேன்மையால்
பொறுத்துப் புலவர்என்மீது அன்பு கொள்ளுவ ரென்று அவையோர்க்கு
அடக்கங் கூறியவாறு.   

——–

முன்னும் மா மறை முனிவரும், தேவரும், பிறரும்,
பன்னும் மா மொழிப் பாரதப் பெருமையும் பாரேன்;
மன்னும் மாதவன் சரிதமும் இடை இடை வழங்கும்
என்னும் ஆசையால், யானும் ஈது இயம்புதற்கு இசைந்தேன்.  —பாடலுற்ற காரணம்

முன்னும் மாமறை – நினைத்து ஓதப்படும் சிறந்த வேதங்களில்
வல்ல,முனிவர்உம் தேவர்உம் பிறர்உம் – முனிவர்களும் தேவர்களும்
மற்றையோரும்.பன்னும் – ஆராய்கின்ற, மா மொழி – சிறந்த மொழிகளைக்
கொண்ட, பாரதம்பெருமைஉம் – பாரதத்தின் சிறப்பையும், பாரேன் –
ஆலோசிக்கமாட்டேன்: ‘மன்னும் -பெருமை பொருந்திய, மா தவன் – திருமகள்
கொழுநனான திருமாலின்[ஸ்ரீக்ருஷ்ணபகவானின்], சரிதம் உம் – சரித்திரமும்,
இடைஇடை – இந்நூலின்நடுநடுவே, வழங்கும் – வழங்காநிற்கும்’, என்னும் –
என்கின்ற, ஆசையால் -விருப்பத்தினால், யான்உம்- (ஏற்ற திறமையில்லாத)
நானும், ஈது – இந்தச் சரிதத்தை,இயம்புதற்கு – (தமிழ்ப்பாடலாற்) சொல்லுதற்கு,
இசைந்தேன் – சம்மதித்தேன்; (எ – று.)

     “நாராயணகதாமிமாம்” என்றார், வேதவியாசரும். ஆசை பற்றிக்
கூறியதாதலால்,என் குற்றம் பொறுக்கத்தக்கது என்ற அவையடக்கமும் இதில்
தோன்றும்.     

——    

எங்கள் மாதவன் இதய மா மலர் வரும் உதயத்
திங்கள் மா மரபினில் பிறந்து, இசையுடன் சிறந்தோர்,
அம் கண் மா நிலத்து அரசர் பல் கோடி; அவ் அரசர்-
தங்கள் மாக் கதை, யான் அறி அளவையின், சமைக்கேன்.–திங்கள் மரபில் சிறந்தோர் கதை

எங்கள் மா தவன் – எமது இலக்குமிக்குத் தலைவனாகிய
திருமாலின்,இதயம் – நெஞ்சமாகிய, மா மலர் – சிறந்த தாமரை மலரினின்று,
வரும் – தோன்றிய,உதயம் – தோற்றத்தையுடைய, திங்கள் – சந்திரனுடைய,
மாமரபினில் – சிறந்தவமிசத்திலே, பிறந்து -, அம் கண் மாநிலத்து – அழகிய
இடம் பொருந்திய (இந்தப்)பெரு நிலத்திலே, இசையுடன் சிறந்தோர் –
கீர்த்தியோடு மேம்பட்டவராகிய, அரசர்-,பல்கோடி – பலகோடிக்
கணக்கினராவர்: அ அரசர் தங்கள் மா கதை -அவ்வரசர்களின் சிறந்த
கதையை, யான் அறி அளவையின் – யான் அறிந்தஅளவினால், சமைக்கேன் –
அமைத்துக் கூறவேன்; (எ – று.)

     இதனால், சந்திரகுலத்துத்தோன்றிய அரசர் பலரின் சிறந்த கதையைப்
பாரதமென்று பேர்கொண்ட இந்நூன்முகத்தாற் கூறுவே னென்பதாம். “சந்த்ரமா
மநஸோ ஜாத:” என்று சந்திரன் திருமாலின் மனத்தினின்று தோன்றியவனெனக்
கூறியிருத்தல் காண்க. தமது வழிபடுகடவுளிடத்துக்கொண்ட ஈடுபாடு தோன்ற,
‘எங்கண் மாதவன்’ என்றார். மாதவன் – மா -இலக்குமிக்கு, தவன் – கணவனென்று
உறுப்புப்பொருள். கோடி – இங்குஎண்ணலளவை யாகுபெயர்: பெயர்ப்பயனிலை.

———-

பொருந்த வான் உறை நாள்களை நாள்தொறும் புணர்வோன்,
அருந்த வானவர்க்கு ஆர் அமுது அன்புடன் அளிப்போன்,
திருந்து அ(வ்) வானவர்க்கு அரியவன் செஞ் சடை முடிமேல்
இருந்த வானவன்,-பெருமையை யார்கொலோ, இசைப்பார்?

வான் – ஆகாயத்திலே, பொருந்த-, உறை – தங்குகின்ற,
நாள்களை -(அசுவினி முதலிய) நட்சத்திரங்களை, நாள் தொறு உம் –
தினந்தோறும், புணர்வோன்- சேர்பவனும்,- வானவர்க்கு – தேவர்கட்கு,
அருந்த – உண்ணுமாறு, ஆர் அமுது -அருமையான அமிருதத்தை,
அன்புடன் – அன்போடு, அளிப்போன் – தருபவனுமாகி,திருந்து அ வானவர்க்கு
அரியவன் – செம்மை பெற்ற அந்தத் தேவர்கட்குள்ளேஅருமைப்பாட்டை
யுடையவனாகிய சிவபெருமானது, செஞ்சடை முடிமேல் -செந்நிறமுள்ள
ஜடையைக்கொண்ட திருமுடிமேலே, இருந்த – தங்கியிருக்குந்தன்மைவாய்ந்த,
வானவன் – கடவுட் சந்திரனது, பெருமையை-, இசைப்பார் – அறிந்துசொல்ல
வல்லவர், யார்கொல்ஓ – யாவர் கொலோ? (எ – று.)

     சந்திரன் அசுவினி முதலிய இருபத்தேழு நட்சத்திரங்களில் முறையே எந்த
எந்தநட்சத்திரத்துடனிருக்கின்றானோ, அந்தந்த நட்சத்திரநாளாக அத்தினம்
வழங்கப்படுவதுகாண்க: சந்திரன் தன்னுடைய அமுதகலைகளை இரவி முதலிய
தேவர்களுக்குத் தினம்ஒரு கலைவீதம் கொடுக்கின்றானென்பதும், அதனால்தான்
தேய்பிறையில் தினமானம்ஒவ்வொரு கலை குறைந்து வருகின்ற தென்பதும்,
சிவபெருமானுடைய சடைமுடிமேல்பிறைச் சந்திரன் எப்போதும்
தங்கிநிற்கின்றானென்பதும் நூற்கொள்கை. சிவபெருமான்முடிமேல் தங்குதல் தன்
கலைகளைத் தேவர்க்கு உணவாகக் கொடுத்தல் முதலியமேம்பாடு உடைமையால்,
சந்திரன் பெருமையை முழுதும் அறிந்து இசைக்கமுடியாதென்றார். திருந்த
என்று எடுத்து, திருந்த இருந்த என்றுஇயைப்பினுமாம்.   

——–

மண்டலம் பயில் உரகர் பேர் உயிர்ப்பினால் மயங்கி,
மண்டு அலம் பொர வருந்திய பெருந் துயர் மாற,
மண்தலம்தனை நிழல் எனும் மரபினால், தனது
மண்டலம் பொழி அமிழ்தின், மெய் குளிரவே வைத்தோன்;

அன்றியும் அந்தச் சந்திரன்), – மண்டலம் பயில் –
மண்டலகதியாகச்செல்லுகின்ற, உரகர் – பாம்புகளின், பேர்உயிர்ப்பினால் –
பெருமூச்சினோடு, மயங்கி – கலந்து, மண்டு அலம் பொர- மிக்க விஷமானது
மோதுவதனால், வருந்திய – வருத்தமடைந்த, பெருந்துயர் – மிக்கதுன்பம், மாற –
நீங்கும்படி – மண் தலந்தனை- மண்மயமாயமைந்த இந்தப்பூமியை, நிழல் எனும்
மரபினால்- (தனது) சாயையென்கின்ற [நிலாவெனப்படுகின்ற]முறைமையினாலும்,
தனது மண்டலம் பொழி அமிழ்தின் – தன்வட்டவடிவமானஉருவம்பொழிகின்ற
அமிருதத்தினாலும், மெய் குளிர – உடல் குளிரும்படி, வைத்தோன் -வைத்தவன்;
(எ -று.)

     பாம்புகளின் நெட்டுயிர்ப்போடு விஷமும் கலக்கப்பெற்றதனால், இந்தப் பூமி
மிக்கவெதுப்பையடைய, அவ்வெம்மையைத் தனது நிலவினாலும்
தன்அமுதகலைகளினாலும்போக்கிக் குளிர்ச்சி யடையச் செய்பவன் சந்திரனென்க,
யமகவணி. மண்டு அலம்பொர மயங்கி வருந்திய பெருந்துயர் எனக் கொண்டு
கூட்டி யுரைப்பாரு முளர். அலம் =ஹாலம்.  

———

பைம் பொன் மால் வரை மத்தினில் பணி வடம் பிணித்திட்டு,
உம்பர்-ஆனவர் தானவருடன் கடைந்திடவே,
தம்பம் ஆனதும் அன்றி, அத் தழல் விடம் தணிய,
அம்புராசியின் ஆர் அமுதுடன் அவதரித்தோன்;

(அன்றியும் அந்தச்சந்திரன்),- பைம் பொன் மால் வரை
மத்தினில் -பசும்பொன்மயமான பெரியமலையாகிய மந்தரகிரி யென்னும்
மத்திலே, பணிவடம் -ஆதிசேஷனாகிய கடைகயிற்றை, பிணித்திட்டு-கட்டி,
உம்பர் ஆனவர் – தேவர்கள்,தானவருடன் – அசுரருடனே (கூடி), கடைந்திட –
கடையாநிற்க,- (அப்போது), தம்பம்ஆனதுஉம் அன்றி -(தயிர்கடையும்) மத்துக்கு
அடை தூணாக அமைந்ததல்லாமல், அதழல் விடம் தணிய – அங்குத் தோன்றிய
தழல்போன்ற [மிகவெப்பமான] விடத்தின்கொடுமை தணியும்படி, அம்புராசியின்-
அந்தத் திருப்பாற்கடலிலே, ஆர் அமுதுடன்- அருமையான அமிருதத்துடனே,
அவதரித்தோன் – தோன்றியவன்;(எ – று.)

     தேவர்கள் தாம் இழந்தசெல்வத்தை மீண்டும் பெறும் பொருட்டு
விட்டுணுவின்மொழிப்படியே திருப்பாற்கடலில் மந்தர கிரியை மத்தாகநாட்டி
வாசுகியென்னும் நாகத்தைக்கடைகயிறாகப் பூட்டிக் கடையும்போது அந்தச்சந்திரன்
அந்தமந்தரகிரியாகிய மத்துக்கு அடைதூணாக அமைந்தான்: அன்றியும்
கடைகின்றபோது முதன்முதலில் அந்தக் கடலிலிருந்து நஞ்சுதோன்ற
அந்தவெப்பத்தைத் தணிக்குமாறு அமிருதத்துடனே அந்தச்சந்திரனுந் தோன்றின
னென்பதாம். மேரு மந்தரம் இமயம் என்ற இந்தமலைகளை அபேதமாகக்கூறுவது
கவிசமயமாதலால், மந்தரமலையை இங்கு ‘பொன்மால்வரை ‘ என்றார். பணி – பணீ:
வடசொல்:படத்தை யுடையதென்பது அவயவப்பொருள்.அம்புராசி – ஜலத்தின்
திரளையுடைய தெனக் கடலுக்குக் காரணப்பெயர்; பாற்கடலுக்கு இலக்கணை.

————

பத்து இரட்டியில் ஈர்-இரண்டு ஒழிந்த பல் கலையோன்;
மித்திரற்கு அவை கொடுத்து முன், மீளவும் கவர்வோன்;
அத்திரிப் பெயர் அந்தணன் அம்பகம்தனிலும்,
சித்திரக் கனல் முகத்தினும், பிறந்து, ஒளி சிறந்தோன்.

அன்றியும் அவன்),- பத்து இரட்டியில் – இருபது என்னும்
எண்ணில்,ஈர் இரண்டு ஒழிந்த – நான்குகுறைந்த[பதினாறாகிய], பல்கலையோன்-
பலவானகலைகளை யுடையவன்: மித்திரற்கு – சூரியனுக்கு, அவை – அந்தப்
பதினாறுகலைகளையும், முன்-, கொடுத்து-, மீளஉம் – மறுபடியும், கவர்வோன் –
பெற்றுக்கொள்பவன்: அத்திரி பெயர் அந்தணன் – அத்திரியென்ற பெயரைக்
கொண்டஅந்தணாளனுடைய, அம்பகந்தனில்உம் – கண்ணிலும், சித்திரம் கனல்
முகத்தின்உம் -விசித்திரமான (கிரணங்களையுடைய) அக்கினியின் முகத்திலும்,
பிறந்து-, ஒளிசிறந்தோன் – ஒளிவிஞ்சியிருப்பவன்; (எ – று.)

     சந்திரன் தனது கலைகளைத் தேய்பிறையில் தினம்ஒவ்வொன்றாகச்
சூரியனுக்குக்கொடுத்து, அமாவாசையில் அக்கடவுளோடு ஒன்றியிருந்தது,
வளர்பிறையில் தினம்ஒவ்வொன்றாக அக்கலைகளைக் கொள்கின்றானென்பது
ஒருசார் நூற்கொள்கை.அத்திரிமுனிவரின் விழியினிற் சந்திரன் தோன்றிய
வரலாறு:-
 உபப்பிரமராகியஅத்திரி முனிவர் இந்திரியநிக்கிரகஞ் செய்து
மூவாயிரம்வருடம் தவம்புரிகையில்,தேஜோரூபியாகிய அவருடைய
கண்களிலிருந்து பத்துத்திக்குக்களிலும் பேரொளிவீசிக்கொண்டு நீர் பெருகவே,
அந்தக் கருப்பத்தைத் திக்தேவிகள் பதின்மரும்வகிக்கத்தொடங்கிப் பின்பு
தங்களாற் பொறுக்கமுடியாமல் சந்திரரூபமான அந்தக்கருப்பத்தோடு பூமியில்
விழ, அப்பால் நான்முகக்கடவுள் அந்தச் சந்திரனைவேதமயமான தேரின்மீது
ஏற்ற, ஸப்தரிஷிகள் வேதவாக்கியங்களைக் கொண்டுதுதித்ததனால் அச்சந்திரன்
மிக்க ஒளிபெற்று உலகத்துக்குப் பேரொளியைத்தருபவனாயின னென்பதாம்.
இங்குக்கூறிய சந்திரன்பிறப்பினுள் நெருப்பினின்றுதோன்றிய வரலாறு
தெரியவில்லை: வந்தவிடத்துக் கண்டுகொள்க. சித்திரக்கனல்முகத்து என்பதற்கு –
ஒருசார் விசித்திரமான சோதியையுடைய சூரியனிடத்து என்றுகூறுவாராயினும்,
“மித்திரற்கவைகொடுத்து முன் மீளவும் கவர்வோன்” என்றதையேகுறிப்பதாகு
மாதலாற் கூறியதுகூறலாம். மித்திரர்க்கு என்று பாடமாயின், நண்பராகிய
தேவர்கட்கு என்று பொருளாம்.

———–

அந்தி ஆரண மந்திரத்து, அன்புடன் இவனை
வந்தியாதவர் மண்ணினும் வானினும் இல்லை.
புந்தியால் உயர் புதன் எனும் புதல்வனை மகிழ்வால்
தந்து, யாவரும் களிப்புற, இருக்கும் நாள்தன்னில்,–புதன் பிறப்பு

அந்தி – மாலைப்போதில், ஆரணம்மந்திரத்து –
வேதமந்திரத்தால்,அன்புடன் – அன்போடு, இவனை – இந்தச்சந்திரனை,
வந்தியாதவர் – வணங்காதவர், மண்ணின்உம் – இந்தநிலவுலகத்திலும், வானின்உம்
-மேலுலகத்திலும், இல்லை-: (இப்படிப்பட்டசந்திரன்),- புந்தியால் உயர் –
புத்தியினான்மேம்பட்ட, புதன்எனும் புதல்வனை – புதனென்னும்
பேரையுடையபுத்திரனை, மகிழ்வால் தந்து – மகிழ்ச்சியோடு (தாரையினிடமாகப்)
பெற்று, யாவர்உம்களிப்புஉற – (அந்தப் புதனுடைய நுண்ணறிவைக்கண்டு)
எல்லாரும் மகிழ்ச்சியடைய, இருக்கும் நாள் தன்னில்-, -(எ-று.)-
மநுவருண்மைந்தன்… … இளையெனும் பெயர்மடவரலாயினனென்ப” என்று
அடுத்த கவியோடு தொடர்ந்துமுடியும்.

     வியாழனென்னுந் தேவகுருவின் பத்தினியான தாரையைச் சந்திரன் கண்டு
காதல்கொண்டு அன்னாளோடுகூடிப் புதனென்ற புதல்வனைப் பெற்றானென்க.
தந்தியாவரும் – குற்றியலிகரம்.” உந்தியாரழகுடைய பேருரோகிணிவயிற்றிற்,
புந்தியாலுயர் புதனையப் புண்ணியன் பயந்தான்” என்று சிறுபான்மையாகக்
காணப்படும் பாடம், புராணகதையோடு மாறுபடுதலாற் கொள்ளத்தக்கதன்று.
மாலைச்சந்தியைத்தொழுவதைச் சந்திரனைத்தொழுவதாகக்கொண்டு கூறினார்
போலும்.  

————

வளை நெடுஞ் சிலைக் கரத்தினன் மநு அருள் மைந்தன்,
உளை எழும் பரித் தேரினன், உறு
விளை அருந் தவ விபினம் உற்று, அம்பிகை விதியால்,
இளை எனும் பெயர் மடவரல் ஆயினன் என்ப.–மநு மகன் இளை என்னும் மடவரலாதல்

வளை நெடுஞ் சிலை கரத்தினன் – வளைந்துள்ள
நீண்டவில்லைக்கையிலேந்தியவனான, மநு – மனுவென்றஅரசன், அருள் –
பெற்ற, மைந்தன் -புதல்வனான இளனென்பவன், உளை எழும் பரி தேரினன் –
பிடரிமயிர்ஓங்கிவளரப்பெற்ற குதிரையைப்பூட்டிய தேரின்மீது ஏறிச்செல்பவனாய்,
உறுவது-(அங்குச் சென்றால் தனக்கு) நேரிடக் கூடிய தீங்கை, ஒன்று – சிறிதும்,
உணரான் -அறியாதவனாகி,- விளை அரு தவம் விபினம் உற்று – முதிர்ந்த
அருமையானதவத்திற்குரிய காட்டையடைந்து, அம்பிகை விதியால் – உமாதேவி
கட்டளையிட்டிருந்ததனால், இளை எனும் பெயர் மடவரல் – இளையென்று
பெயர்கொண்ட ஒருபெண்ணாக, ஆயினன்-, என்ப – என்று கூறுவார்; (எ – று.)

     மநுபுத்திரனான இளனென்பான் ஒருகால் தேரின்மீது ஏறிக்கொண்டு
காடுசென்றவன், ‘இங்குவருபவர் பெண்ணாய்விடுக’ என்று பார்வதிதேவி
ஏற்படுத்தியிருந்த ஓரிடத்து அதனை யறியாமையாற் சென்றுசார, அந்தப்
பார்வதிதேவியின் ஏற்பாட்டின்படியே பெண்ணுருவம் அந்த இளனைச் சேர,
அவன்இளையென்று யாவரும் பேரிட்டழைக்கும் பெண்ணாயினனென்பதாம்.
அம்பிகை=அம்பிகா.மடவரல் – மடமைக்குணம் வருதலையுடையவள். இளையை
வைவஸ்வதமநுவின் மகவாக மகாபாரதத்திற் கூறியிருக்கின்றது. (பாலபாரதத்திலோ
கர்த்தமரிஷியின் மகவாகக் கூறியுள்ளது.)     

———— 

மார காகளம் எழுவது ஓர் மது மலர்க் காவில்,
தாரகாபதி புதல்வன் அத் தையலைக் காணா,
வீர காம பாணங்களின் மெலிவுற, மயங்கி,
தீர காமமும் செவ்வியும் மிகும்படி, திளைத்தான்–புதனும் இளையும்

மாரன்காகளம் – மன்மதனதுவெற்றிச்சின்னமாகிய குயிலின் ஓசை,
எழுவது- (தன்னிடத்து) ஓக்கம்பெற்றிருப்பதாகிய, ஓர் மதுமலர் காவில் –
ஒப்பற்றதேன்நிறைந்த மலர்களைக்கொண்ட சோலையிலே, தாரகாபதி  புதல்வன் –
சந்திரனுக்குப்புத்திரனாகிய புதனென்பவன், அ தையலை காணா – அந்த
இளையென்றபெண்ணைக்கண்டு, வீரம்காமம்பாணங்களின் – வீரத்
தன்மையையுடைய காமபாணங்களினாலே, மெலிவுஉற – (தன்உடம்பு)
மெலிவடைய,- மயங்கி – புத்தியில்மோகங்கொண்டு, தீரம் காமம்உம் – மிக்க
காமமும், செவ்விஉம் – அழகும், மிகும்படி- (அத்தையலுக்கு) மிகுமாறு,
திளைத்தான்- (அவளைக்) கூடினான்; (எ -று.)

     காகளம் – ஒருவகையூதுகருவி: குயில் மன்மதனுக்குக் காகள மெனப்படும்:
இங்கு அச்சொல் – மன்மதனது ஊதுகருவியாகக்கொள்ளப்படும் குயிலைக்காட்டி,
ஆகுபெயராய், அந்தக்குயிலினோசையைக் காட்டிற்று.

———–

புதனும், அந்த மென் பூவையும், புரூரவாவினைத் தம்
சுதன் எனும்படி தோற்றுவித்தனர். அவன் தோன்றி,
இத நலம் பெறும் அழகினும் திறலினும் இலங்கி,
மதனனும் கலை முருகனும் எனும்படி, வளர்ந்தான்.

புதனும்-, அந்த மெல் பூவைஉம்- அந்தமெல்லிய பூவைபோன்ற
இளையும், புரூரவாவினை – புரூரவஸ்என்பவனை, தம் சுதன் எனும்படி –
தம்முடையபுதல்வனென்று (யாவரும்) சொல்லும்படி, தோற்றுவித்தனர் –
உண்டாக்கினார்கள்:அவன் – அந்தப்புரூரவசு, தோன்றி – பிறந்து, இதம் –
நன்மைக்குணத்துடனே,நலம்பெறும் அழகின்உம் – சிறப்புப்பொருந்திய அழகிலும்,
திறலின்உம் -வலிமையிலும், இலங்கி – விளங்கி, மதனன்உம் – மன்மதனும்,
கலை முருகன்உம் -போர்க்கலையில்வல்ல முருகக்கடவுளும், எனும்படி – என்று
(கண்டோர்) கூறும்படி,வளர்ந்தான்-; (எ – று.)

     அழகிற்கு மன்மதனும், அழகு திறல் என்ற இரண்டிற்கும் முருகக்கடவுளும்
உவமையாவர்: இனி, மெல்லிய மலர்களைக்கொண்டு மூவுலகத்து
ஆடவர் மகளிரையெல்லாம் வெல்லும் வல்லமை பெற்றுள்ளான் மன்மதனென்ற
காரணத்தால், அழகு திறல் என்ற இருதன்மையிலுமே இருவரும்
உவமையாவரென்றலும் ஒன்று. பின்னிரண்டடியை முறைநிரனிறையாகக்
கொள்வாருமுளர். பூவை – நாகணவாய்ப்புள்: அதுபோல் இன்குரலையுடைய
பெண்ணுக்கு, உவமவாகுபெயர்.

மதனனும் கலை முருகனும் எனும்படி, வளர்ந்தான்.–புரூரவா தோன்றுதல்

பொருப்பினைச் சிறகு அரிந்தவன் புரத்து மங்கையருள்
உருப்பசிப் பெயர் ஒண்டொடி, உருவினின் சிறந்தாள்,
தருப் பொழில் பயில் காலையில், தானவர் காணா,
விருப்பு உறக் கவர்ந்து ஏகினர், அவளுடன் விசும்பில்.புரூரவா உருப்பசியை மணத்தல்

இதுமுதல் மூன்றுகவிகள் – அசுரர்கவர்ந்துசென்ற உருப்பசியைப்
புரூரவா மீட்டு, இந்திரன் தூதினாற் பூமியில் மணந்திருந்தமை கூறும்.

பொருப்பினை சிறகு அரிந்தவன் – மலைகளின் சிறகை
(வச்சிராயுதத்தினால்) அரிந்திட்டவனான தேவேந்திரனுடைய, புரத்து –
அமராவதிபட்டணத்திலே வாழ்கின்ற, மங்கையருள் – அப்ஸரஸ்
ஸ்திரீகளுக்குள்ளே,உருவினில் சிறந்தாள்-வடிவழகினால் மேம்பட்டவளான
உருப்பசி பெயர்ஒள் தொடி – உருப்பசியென்று பேர்பெற்ற
அழகிய தொடியினைப்பூண்டவளாகிய பெண், தரு பொழில் பயில் காலையில் –
மரங்களைக்கொண்டசோலையிலே சஞ்சரிக்கும்போது, தானவர் காணா – சில
அசுரர்கள் (அவளைக்)கண்டு, விருப்பு உற – (அவளிடத்து)
விருப்பந்தோன்றியதனால், கவர்ந்து- (அவளைக்)கவர்ந்துகொண்டு, விசும்பில் –
ஆகாயவழியே, அவளுடன் ஏகினர்-அவளுடன்சென்றார்கள்; (எ-று.)

     முற்காலத்தில் மலைகளெல்லாம் சிறகுடையனவாயிருந்து, ஊர்களின்
மேலிருந்துஅழித்துவருதல்கண்டு முனிவர் முதலியோர் முறையிட, இந்திரன் தன்
வச்சிராயுதத்தால்அவற்றின் சிறகுகளை யறுத்திட்டானென்ற கதைபற்றி,
‘பொருப்பினைச் சிறகரிந்தவன்’ என்றது. உருப்பசி உருவாற் சிறந்திருந்தது,
அன்னாளை அசுரர் கவர்தற்கு ஏதுவாயிற்றென்க. உருப்பசி – ஊர்வசீயென்ற
வடசொல்லின் திரிபு. பதரிகாச்சிரமத்தில் திருமால்நாராயணரூபியாயிருந்து
தவஞ்செய்ய அத்தவத்தைக் கெடுக்கும்படி மேனைமுதலியதேவமாதர் வர,
நாராயணமுனிவர் தமது ஊருவினின்றும் [தொடையினின்றும்] ஓர்
கட்டழகியைப் படைத்தனுப்ப, அங்ஙனம் படைக்கப்பட்ட அம்மாதின்
கட்டழகைக்கண்டு அத்தேவமாத ரெல்லாம் வெள்கிப் பின் அவளைத் தம்முடன்
சேர்த்துக்கொண்டன ரென்பது வரலாறு. அங்ஙனம் நாராயண முனிவரின்
உருவினின்று தோன்றிய காரணம்பற்றி, அம்மாது ஊர்வசி யென்று பேர்பெற்றாள்.
மித்திரனென்ற சூரியனது சாபத்தால் இவள் பூமியில் புரூரவஸோடு வசிக்குமாறு
நேர்ந்ததென்ப. ஒண்டொடி – பண்புத்தொகையன்மொழி. தானவர் –
கசியபமுனிவர்மனைவியருள் தனு என்பாளிடம் தோன்றியவர்.

கொண்டு போதலும், ‘அபயம்!’ என்று உருப்பசி கூவ,
அண்டர் யாவரும் அஞ்சினர், அவருடன் அடு போர்.
வண்டு சூழ் குழல் அணங்கை, இம் மதிமகன் மகனும்
கண்டு, தேர் நனி கடவினன், அசுரர் மெய் கலங்க.

கொண்டு போதலும் – (அசுரர்கள் உருப்பசியை அவ்வாறு)
கொண்டுபோனவளவிலே, உருப்பசி – உருப்பசியென்ற அந்தத் தெய்வமங்கை,
அபயம்என்று-, கூவ – கதற,- (அதுகேட்டு), 
அண்டர்யாவர்உம் – தேவர்க
ளெல்லாரும், (அந்த ஊர்வசியை மீட்கும் பொருட்டு),அவருடன் – அந்த
அசுரர்களுடனே, அடு போர் – (உயிரைக்) கொல்லவல்லபோரைச்செய்வதற்கு,
அஞ்சினர் – பயந்தார்கள்: வண்டு சூழ் குழல் அணங்கை -வண்டுகள் மொய்க்கப்
பெற்ற கூந்தலையுடைய தெய்வமகளாகிய அந்த ஊர்வசியை, இமதி மகன் மகன்உம்
– இந்தச்சந்திரனுடைய புத்திரனாகியபுதனுக்கு மகனானபுரூரவசும், கண்டு- (அசுரர்
கவர்ந்து செல்வதைப்) பார்த்து, அசுரர் மெய் கலங்க -(தான் வருகின்ற நிலையைக்
கண்டே) அந்த அசுரர்கள் உடல் நடுங்கும்படி, தேர் -(தன்னுடைய) இரதத்தை, நனி
கடவினன் – மிகவும் வேகமாகத் தூண்டி(அசுரர்செல்லுமிடத்து)ச் செலுத்தினான்;
(எ -று.)

     அபயம் என்ற வடசொல் – அச்சமில்லாமற் காக்கவேண்டிய பொருளாவேன்
யான் என்பதைக் குறிப்பிக்கும். போதலும் – உம் மீற்று வினையெச்சம்.
தனிகடவினனென்றும் பாடமுண்டு

நிறம் தரும் குழல் அரிவையை நிறுத்தி, வாள் அவுணர்
புறந்தரும்படி புரிந்தபின், புரந்தரன் தூதால்
மறம் தரும் கழல் மன்னவன் மண்மிசை அணைந்து,
சிறந்த அன்பொடு அத் தெரிவையை நலம் பெறச் சேர்ந்தான்.-

நிறம் தரும் – ஒளிபொருந்திய, குழல் அரிவையை –
கூந்தலழகியளாகிய அந்த உருப்பசியை, நிறுத்தி – (அசுரர் கொண்டு
போகமுடியாதபடி)தடுத்து,- வாள் அவுணர் – வாள்போற் கொடியவரான அந்த
அசுரர்கள், புறம்தரும்படி – முதுகுகொடுத்து ஓடும்படி, புரிந்தபின் – செய்தபின்,
புரந்தரன் தூதால் -இந்திரனுடைய தூதுவனால், மறம் தரும் கழல் மன்னவன் –
(தன்)வீரத்தைக்காட்டியவனான வீரக்கழலையணிந்த அந்தப்புரூரவமன்னவன்,
மண்மிசைஅணைந்து – பூமியின்மீது சேர்ந்து, சிறந்த அன்பொடு –
மிக்ககாதலோடு, அதெரிவையை – அந்த உருப்பசி நங்கையை, நலம் பெற –
இன்பமுண்டாக, சேர்ந்தான்-(அன்னாளோடு) கூடி யிருந்தான்.

     ஊர்வசியைப் புரூரவாமீட்டதனையறிந்த இந்திரன், ஒரு தூதுவனை அந்தப்
புரூரவசினிடம் அனுப்பி அவளைமணந்து சிலகாலம் பூமியில் வாழ்ந்திருக்குமாறு
பணிக்க, அந்தப்பணியின்படியே அந்த ஊர்வசியை அம்மன்னவன் மணந்து
சுகித்திருந்தன னென்க. நலம் – ஆகுபெயரால், நல்ல இன்பத்தைக் காட்டிற்று

மாயன் ஊருவின் வந்தருள் அந்த மான் வயிற்றில்
ஆயு என்று ஒரு செம்மலை அம் மகன் அளித்தான்.
தேயுவும் பல தேவரும் மகிழ, மற்று இவனே
மேய வண் புகழ் வேந்தரில் வேள்வியால் மிக்கோன்.–புரூவரசுக்கு அந்த ஊர்வசியினிடம் ஆயுவென்பவன்
பிறத்தல்

அ மகன் – அந்த புரூரவசு,- மாயன் ஊருவின் வந்தருள் அந்த
மான்வயிற்றில் – மாயைக்குணமுடையவனாகிய திருமாலின் தொடையினின்று
தோன்றியஅந்த மான்போன்ற (பார்
வையையுடையவளான) உருப்பசியின் வயிற்றிலே,
ஆயு என்றஒரு செம்மலை – ஆயுவென்று பேர்படைத்த செம்மைக்குணமுடைய ஒரு
புத்திரனை, அளித்தான் – தந்தான்: வண் புகழ் மேய வேந்தரில்- சிறந்த புகழ்
பொருந்திய அரசர்களுக்குள், இவன்ஏ – இந்தஆயுவே, தேயுஉம் – அக்கினிதேவனும்,
பல தேவர்உம் – பல தேவர்களும், மகிழ – உவகைகொள்ளுமாறு, வேள்வியால்
மிக்கோன் – யாகத்தினால்மேம்பட்டவன்; (எ-று.) – மற்று – அசை.

     வேள்வியை இந்தப் புரூரவன் புத்திரனான ஆயுவென்பவன் மிகுதியாகச்
செய்தானாதலால், தமக்கு அவியுணா மிகுதியாகக் கிடைப்பதுபற்றித் தேவரும்,
வேள்வியில் தலைமையிருத்தலால் அந்த அனற்கடவுளும் மகிழ்வாராயினர்.
மான் -உவமையாகுபெயர். ஊரு – தொடை: தற்சம வடசொல்.

முகுடமும், பெருஞ் சேனையும், தரணியும், முற்றும்
சகுட நீர் எனச் சத மகம் புரி அருந் தவத்தோன்,
நகுடன், நாம வேல் நராதிபன், நாகருக்கு அரசாய்
மகுடம் ஏந்திய குரிசில், ஆயுவின் திரு மைந்தன்.-ஆயுவின்மைந்தன் நகுட னென்பவன்.

முகுடம் உம் -(தான் அணிந்திருந்த) கிரீடமும், பெருஞ்
சேனைஉம் -(ஆளுவதற்குக் கருவியான) மிக்கசேனையும், தரணிஉம் –
(ஆளப்படும்) உலகமும்,முற்றுஉம் – (ஆகிய) யாவற்றிலும், சகுடம் நீர் என –
சேம்பினிலையில் நீர்போல,(பற்றற்றவனாய்), – சதமகம்புரி- நூறு அசுவமேத
யாகங்களைச் செய்த, அருந்தவத்தோன் – அருமையான
நோன்பினையுடையவனாகிய, நகுடன் நாமம் வேல்நராதிபன் –
நகுடனென்றுபேர்பெற்ற வேற்படையையுடைய மன்னவனாகி, நாகருக்கு
அரசு ஆய் – தேவலோகத்தார்க்கும் அரசனாகி, மகுடம் ஏந்திய குரிசில் –
தேவேந்திரன் முடியைத்தரித்த சிறந்தோன்,- ஆயுவின் திரு மைந்தன் – அந்த
ஆயுவின் சிறந்த புதல்வனாவன்; (எ -று.)

     ஆயுவின் புத்திரன் நஹுஷன் இவன் பற்றற்றுநின்று தவத்தைச்செய்து நூறு
அசுவமேதயாகமுஞ் செய்த முற்றியதனால், தேவேந்திரபதவி பெற்று
வானவர்க்கரசனுமாயினா னென்பதாம். சேம்பிலையில் நீர் இருந்தும் சேம்பு அதில்
ஒட்டின்றியிருப்பது போல இந்நகுஷனிடத்து முகுடம் சேனை முதலியன இருந்தும்
அவற்றிற் பற்றுவையாதிருந்தமை முன்னிரண்டடிகளில் விளக்கப்பட்டது. முகுடம்-
கிரீடத்தினோருறுப்பு. அது – ஆகுபெயரால், கிரீடத்தைக் காட்டிற்று.சகுடம் –
சேம்பு:அதன் இலைக்கு முதலாகுபெயர். நராதிபன் – தீர்க்கசந்திபெற்ற
வடமொழித்தொடர்.  

புரந்தரன் பதம் பெற்றபின், புலோமசை முயக்கிற்கு
இரந்து, மற்று அவள் ஏவலின் யானம் உற்று ஏறி,
வரம் தரும் குறுமுனி முனி வாய்மையால் மருண்டு,
நிரந்தரம் பெரும் புயங்கம் ஆனவனும், அந் நிருபன்.-நகுடன் அகத்தியசாபத்தாற் சர்ப்பமாதல்.

புரந்தரன் பதம் – இந்திரபதவியை, பெற்ற பின் – (அந்த நகுடன்)
பெற்றபின்பு. புலோமசை முயக்கிற்கு – இந்திராணியைத் தழுவுதலை, இரந்து –
வேண்டி, மற்று – பிறகு, அவள் ஏவலின் – அந்த இந்திராணியின்
கட்டளைப்படியே,யானம் – பல்லக்கை, உற்று – பொருந்தி, ஏறி-, வரம் தரும் –
வரங்கொடுக்கவல்ல,குறு முனி – அகத்தியமுனிவன், முனி – சினந்துகூறிய,
வாய்மையால் – (வெகுளிச்) சொல்லால், மருண்டு – மனமயக்கங்கொண்டு,
நிரந்தரம் – நிலையாக, பெரும் புயங்கம்ஆனவன்உம் – பெரிய சர்ப்பமானவனும்,
அ நிருபன் – அந்த நகுடமன்னவன்; (எ -று.)

     புரந்தரன் – பகைவரின் புரத்தை[உடலை அல்லது பட்டணத்தை]ப்
பிளப்பவனென்று அவயவப்பொருள்படும். புலோமஜா என்ற வடசொல் –
புலோமனென்றஅசுரனிடத்தின்று பிறந்தவளென்று பொருள்படும்: இது,
இந்திராணியின் பெயராகும்.புஜங்கமென்ற வடசொல் – மார்பினாற்
செல்வதென்றேனும், வக்கிரமாகச்செல்வதென்றேனும் உறுப்புப்பொருள்படும்.
சந்திரகுலத்தவனான நகுடனென்றஇவன் நூறு அசுவமேதயாகஞ்செய்து
இந்திரபதவிபெற்றுச் சிவிகையேறிச் செல்கின்றகாலத்து இந்திராணிமேல் வைத்த
காதல்மிகுதியால் தன் சிவிகையைத் தாங்கிச்செல்கின்றஏழுமுனிவர்களுள்
குறுமுனிவராதலால் மெதுவாய்நடந்த அகத்தியரைநோக்கி,விரைவிற்செல்க
என்பான் ‘ஸர்ப்ப ஸர்ப்ப’ [ஓடு ஓடு] என்று கூறினானாக, அகஸ்தியர்
வெகுண்டு ‘நீ சர்ப்பமாகுதி’ என்று சபிக்க, அவன் அவ்விந்திரபதவியிழந்து
உடனேபாம்பாகி நிலத்திற்கிடந்தா னென்பது வரலாறு. 

மற்று அவன் திரு மைந்தன், வில் மைந்தினால் உயர்ந்த
கொற்றவன், திறல் கொற்றவைக்கு இரு புயம் கொடுத்தோன்,
முற்ற வன் பகை முகம் கெட முகம்தொறும் திசையில்
செற்றவன், பெருஞ் செற்றம் இல் குணங்களில் சிறந்தோன்,-நகுடன்புதல்வன் யயாதி.

அவன் திரு மைந்தன் – அந்த நகுடனது சிறந்த புத்திரன்,- வில்
மைந்தினால்உயர்ந்த கொற்றவன் – வில் வலிமையினால் மிக்க
வெற்றியையுடையவன்:திறல் கொற்றவைக்கு இரு புயம் கொடுத்தோன் –
வலிமைக்கு உரிய தேவதையாகியவீரலட்சுமிக்கு (த்தன்னுடைய) இரண்டு
தோள்களையும் வாழுமிடமாகக் கொடுத்தவன்:வல் பகை முற்ற – (தன்னுடைய)
வலிய பகைவர்யாரையும், திசையில் முகந்தொறுஉம்முகம் கெட – எல்லாத்
திக்குக்களினிடங்களிலும் சிதைந்தோடும்படி, செற்றவன் -அழித்தவன்:
பெருஞ்செற்றம் இல் குணங்களில் சிறந்தோன் – (கொடுமை) மிக்க சின
மென்ற துர்க்குணத்தைப் பெறாமல் நற்குணங்களினால் மிக்கவன்: (எ-று.)- இவன்
பெயர் யயாதிஎன்பது, மேற்செய்யுளிற் பெறப்படும்.

     கொற்றவை – வெற்றிக்குரியதேவதை ஆதலால், அவளை வீரர்களின்
புயத்தில்வாழ்பவளெனக் கவிஞர் கூறுவர். பகை – ஆகுபெயர்.
வேன்மைந்தினிலுயர்ந்துஎன்றும் பாடம்.      

யயாதி’ என்று கொண்டு, இவனையே எவரினும் சிறக்க
வியாதனும் புகழ்ந்து உரைத்தது. மற்று இவன், மேல்நாள்,
புயாசலங்களுக்கு இசையவே, புகரவன் புதல்வி
குயாசலம் தழீஇ, இருவர் வெங் குமரரை அளித்தான்.-யயாதி சுக்கிராசாரியரின் மகள் தேவயானையை
மணந்து, இரு குமரரைத் தருதல்

இவனைஏ – இந்த நகுடனது புத்திரனையே, யயாதி
என்றுகொண்டு -யயாதியென்றுபாராட்டிக்கொண்டு, எவரின்உம் சிறக்க –
யாவரினும்மேன்மைபெறும்படி, வியாதன்உம் – வியாசமகரிஷியும், புகழ்ந்து
உரைத்தது – புகழ்ந்துகூறியது: மேல்நாள் – முற்காலத்தில், இவன் – இந்தயயாதி,
புய அசலங்களுக்குஇசைய – (தன்னுடைய)  மலைபோன்ற புஜங்களுக்குஏற்க,
புகரவன் புதல்வி -சுக்கிராசார்யருடைய புத்திரியின், – குய அசலம் தழீஇ –
மலைபோன்ற தனங்களைத்தழுவி, வெம் குமரர் இருவரை – கொடுங்குணமுடைய
இரண்டு புத்திரர்களை,அளித்தான்-; (எ -று.)

     புயாசலங்களுக்குஇசையக் குயாசலந் தழுவினா னென்று நயம் காண்க:
மலையோடு மலை சேர்த லியல்பாதல் அறிக. யயாதியின் உபாக்கியானம்
வியாசபாரதத்து விரிவாகக் கூறப்பட்டிருத்தலால், யயாதியென்றுகொண்டு
வியாதனும்புகழ்ந்துரைத்தது இவனையே யென்றார். புகரவன் புதல்வியின் பெயர்,
தேவயாநீயென்பது. இருவர்குமரர் – யது துருவசுஎனப்படுவர்.
வெங்குமரரென்றது- இவர்கள்தந்தைசொல்லைக்கேளாதவராதலால்; இத்தன்மை,
மேல் இருபத்துமூன்றாங் கவியில்விளங்கும். மற்று – அசை

அன்ன காலையில், இவள்தனது ஆர் உயிர்த் துணையாய்,
முன் இசைந்த பேர் இசைவினால், ஏவலின் முயல்வாள்,
நல் நலம் திகழ் கவிதனக்கு உரைகெழு நண்பாம்
மன்னவன் தரு மடவரல், இவனுழை வந்தாள்.-இதுவும் அடுத்த கவியும் – தேவயானைக்குப் பணிப்பெண்ணும்
விடபன்மனென்னும் அசுரமன்னன்மகளுமான சன்மிட்டையை, யயாதி,
கந்தருவமணத்தாற் சேர்ந்தமை கூறும்.

அன்ன காலையில் – அக்காலத்தில், இவள் தனது – இந்தத்
தேவயானையின், ஆர்உயிர்துணை ஆய் – அரியஉயிர்த்தோழியாய், முன்
இசைந்தபேர் இசைவினால் ஏவலின் முயல்வாள் – முன்னம் உடன்பட்ட மிக்க
உடன்பாட்டின்படியே (அந்தத்தேவயானையின்) ஏவலைமுயன்றுசெய்பவளான, நல்
நலம் திகழ் கவி தனக்கு உரை கெழு நண்பு ஆம் மன்னவன் தரும் மடவரல் –
மிக்கநற்குணத்தால் விளங்குகின்ற சுக்கிராசாரியனுக்குப் புகழ்ந்து கூறப்படும்
நண்பனான(வ்ருஷபர்வனென்ற) அசுரமன்னவன் பெற்ற பெண், இவனுழை –
இந்தயயாதியினிடத்து, வந்தாள்-; (எ – று.)

     சன்மிட்டையென்பவள் – அசுரகுருவான சுக்கிராசார்யர்க்கு நண்பனான
வ்ருஷபர்வன்மகள்: சுக்கிராசார்யரின்புத்திரி தேவ
யானையும் விடபன்மன்மகளான
சன்மிட்டையும் உயிர்ப்பாங்கியராயிருந்தனர். ஒருகால்சன்மிட்டை தன்னைச்
சினந்துபழித்த தேவ யானையைக் கிணற்றில் தள்ளினளாக,அதனையறிந்த
விடபன்மன் தன்மகளைத் தேவயானையின் விருப்பிற்கு ஏற்ப அன்னாளுக்குப்
பணிப்பெண்ணாக்கினான்: சன்மிட்டையும் தன்தந்தைகூறியபடிஅந்தத்தேவயானைக்கு
ஏவல்செய்தொழுகுபவளாயினாளென்ற விஷயம்,முன்னிரண்டடிகளில் அறியத்தக்கது.
கவியென்பது சுக்கிராசார்யரின் பெயர்களுள்ஒன்று.  

ஆழி மன்னன், அவ் அணங்கினை அணங்கு எனக் கண்டு,
பாழி வன் புயம் வலம் துடித்து, உடல் உறப் பரிந்து,
வாழி தன் மனை மடவரல் அறிவுறாவண்ணம்,
யாழினோர் பெரும் புணர்ச்சியின் இதயம் ஒத்து இசைந்தான்.

ஆழி மன்னன் – ஆஜ்ஞாசக்கரத்தையுடைய யயாதியரசன், அ
அணங்கினை – அந்த அழகிய சன்மிட்டையை, அணங்கு என கண்டு –
தெய்வப்பெண்போற் கட்டழகியாளாகப்பார்த்து, பாழி வல் புயம் வலம் துடித்து –
மிக்கவலிமைபொருந்திய தோள்களில் வலத்தோள் துடிக்கப்பெற்று, உடல் உற
பரிந்து -(அவளுடைய) உடம்பைச் சேர மனத்திற்கருதி, தன் மனை மடவரல்
அறிவுறாவண்ணம் – தன்மனைவியாகிய தேவயானை அறியாதபடி, யாழினோர்
பெரும்புணர்ச்சியின் – கந்தருவர்களின் பெருமை பெற்ற மணத்தினால், இதயம்
ஒத்துஇசைந்தான்- மனமொத்து மணந்தான்; (எ -று.)- வாழி – அசை.

     மிக்க கட்டழகியான அந்தச் சன்மிட்டையை ஒருகால் யயாதி மன்னவன்
கண்டுகாதல்கொண்டு, தன்மனைவியறியாதபடி அவளை மணக்கவேண்டுமென்ற
கருத்தினால்காந்தர்வவிவாகத்தினால் மணந்துகொண்டானென்பதாம்.
சுக்கிராசார்யன்தேவயானையை யயாதிக்கு மணஞ்செய்து கொடுக்கும்போது
அவளுக்குத்தோழியும்பணிப்பெண்ணுமான சர்மிஷ்டையையும் போஷிக்குமாறும்,
ஆனால்மணக்கக்கூடாதென்றும் சொல்லிக்கொடுத்தானென்று வியாசபாரதத்தி
லுள்ளது.”அறநிலையொப்பே பொருள்கோடெய்வம், யாழோர்கூட்ட
மரும்பொருள் வினையே,யிராக்கதம்பேய்நிலை யென்றிக்கூறிய, மறையோர்
மன்றலெட்டிவை” என்பதனால்,எண் வகைமணம் இன்ன வென்றும், அவற்றுள்
யாழோர் கூட்டமென்பதொன்றுஎன்றும் அறியலாம்:  இவ்வெண்வகை மணத்துள்
யாழோர்கூட்டமாவது -ஆணும்பெண்ணுமாகிய இருவர் ஒத்தார் தாமே கூடுங்
கூட்டம்: இது,காந்தர்வவிவாஹமெனச் சிறப்பித்துச் சொல்லப்படும்.
வலம்புயம்துடித்தல்,அண்மைக்காலத்தில் நிகழ விருக்குஞ் சுபத்தைத் தெரிவிக்கும்
முற்குறியாகியநன்னிமித்தம்.  

சாரும் அன்பினின், கற்பினின், சிறந்த சன்மிட்டை,
சேரும் மைந்தினும், உயர்வினும், தேசினும், சிறந்து,
‘மேரு’ என்றிட, மேதினி யாவையும் தரிப்பான்,
பூரு என்று ஒரு புண்ணியப் புதல்வனைப் பயந்தாள்.-சன்மிட்டை பூருவைப் பெறுதல்

சாரும் – பொருந்தியுள்ள, அன்பினின் – அன்பினாலும்,
கற்பினின் -கற்பினாலும், சிறந்த – மேம்பட்டிருந்த, சன்மிட்டை – சர்மிஷ்டா
என்பவள்,- சேரும்மைந்தின்உம் உயர்வின்உம் தேசின்உம் சிறந்து –
(தன்னிடத்துப்) பொருந்தியவலிமையினாலும் மேன்மையினாலும் ஒளியினாலும்
மேம்பட்டவனாய், மேரு என்றிடமேதினி யாவைஉம் தரிப்பான் – மேருமலை
யென்று சொல்லுமாறு பூமிமுழுவதையும்தாங்குபவனான, பூரு என்ற ஒரு
புண்ணியப் புதல்வனை – பூருவென்று பேர்கொண்டஒப்பற்ற
புண்ணியசாலியானபுத்திரனை, பயந்தாள் – பெற்றாள்; (எ -று.)

     மலைகள் பூமியின்மீதிருந்து பூமியைத் தாங்குவதனால், ‘பூதரம்’ எனப்
பெயர்பெறும்: அங்ஙன் அதனைத்தாங்கும் மலைகளுள் மிக மேம்பட்டதாகிப்
பூமியின்நடுவிலிருப்பதான மேருவெனப்படும் மலை, பூமியைத்தாங்குபவற்றில்
தலைமைபெற்றதென்பது சொல்லாமலே விளங்கும். யயாதியின் புதல்வனான
இந்தப்பூரு, தன் தோள்வலிமையாற் பூமிமுழுவதுந் தாங்குவதால், அவனை
‘மேரு வென்றிடமேதினியாவையுந்தரிப்பான்’ என்றது. மேரு வென்றிட என்றே
பிரிப்பினுமாம்.தகப்பனாரின் சொல்லை மீறாது நடப்பவனாதல் பற்றி
‘புண்ணியப்புதல்வன்’ என்றது.இவன் மூத்தவனல்லாதவனாயினும்,
தந்தைக்குக்கீழ்ப்படிந்து அவனருள்பெற்றுஇராச்சியத்துக்கு உரியனாயினானென்ற
பொருள் இங்குப்புலப்படும்.

மருவு இளங் கொடி அனைய மென் மருங்குலாள், பின்னும்
இருவர் மைந்தரைப் பயந்தனள். இறை மனை காணா,
‘உரு விளங்கிய உலகுடை நிருபனுக்கு இவள்மேல்
திருவுளம்கொல்?’ என்று அழன்று, தன் தாதை இல் சென்றாள்.–சன்மிட்டையின் புதல்வரால் அன்னாளைத்தன்கணவன்
காதலியாகக்கொண்டதை யூகித்துச் சீறித் தந்தையில்லத்தைத் தேவயானை சார்தல்.

மருவு இளங் கொடிஅனைய மெல் மருங்குலாள்- பொருந்திய
இளங்கொடியையொத்த மெல்லிய இடையையுடையவளாகிய சன்மிட்டை,
பின்னும் -பூருவைத்தவிர, இருவர் மைந்தரை பயந்தனள் – இரண்டு புதல்வரைப்
பெற்றாள்: இறைமனை அரசன் தேவியாகிய தேவயானை, காணா –
(அந்தப்புதல்வரைப்) பார்த்து,(அவர்கள் தன்கணவனது சாயையுடையவரா
யிருந்ததனால்), உரு விளங்கிய உலகுஉடை நிருபனுக்கு – வடிவத்தினால்
விளங்குபவனாகி  உலகங்களையெல்லாம்தன்னதாகக்கொண்ட அரசனுக்கு
[யயாதிக்கு], இவள்மேல் திருவுளம் கொல் – இந்தச்சன்மிட்டையின்மீது
கருத்துப்போலும், என்று – என்றுகருதி, அழன்று – (யயாதிமன்னவனைச்)
சினந்து, தன் தாதை இல் சென்றாள் – தன்னுடைய தந்தையாகிய
சுக்கிராசாரியரின் வீட்டினையடைந்தாள்; (எ – று.)

     பூருவைத்தவிர இன்னும் இரண்டுபுத்திரரைச் சன்மிட்டை பெற, அந்தப்
புதல்வரிடத்துத் தன் கணவனது சாயையைக் கண்டு, இந்தச்சன்மிட்டைமீது
நம்கணவன்காதல்கொண்டு இப்புத்திரரைப் பெற்றான்போலு மென்று
ஊகித்துணர்ந்துதேறி, 
தான் இருக்கையில் வேறோருத்தியை மணந்த காரணத்தினால்
மன்னவனிடத்துச் சினந்து தன்தந்தையுன் வீட்டைத் தேவயானை
சேர்ந்தனளென்பதாம். பூருவைத் தவிர,சன்மிட்டையின் மற்றை யிருபுதல்வர் –
த்ருஹ்யு அனு என்பவர். பூரு – சன்மிட்டையின்ஈற்றுப் புதல்வனாவனென்பது
வியாசபாரதத்துப் பெறப்படும் இறைமனை -இறைவனுக்கு மனைவி: நான்காம்
வேற்றுமைத்தொகை: முறைப்பொருளது, மனை -மனைவிக்குஇடவாகுபெயர்

சென்று, தாதையைப் பணிந்து, இது செப்பலும், சின வேல்
வென்றி மன்னனை விருத்தன் ஆம்வகை அவன் விதித்தான்.
அன்றுதொட்டு இவன் ஐம் முதல் பிணியினால் அழுங்கி,
‘இன்று நூறு’ என, நரை முதிர் யாக்கையோடு இருந்தான்.-தேவயானை தன்தந்தையினிடம் யயாதி மன்னவ
னொழுக்கத்தைச்சொல்ல, அந்தச்சுக்கிரனுடைய சாபத்தால் யயாதி முதுமை யடைதல்.

தேவயானை), சென்று – (தாதையின்வீட்டைச்) சேர்ந்து,
தாதையைபணிந்து – (தன்) தந்தையான சுக்கிரனை வணங்கி, இது செப்பலும்-
(தன்கணவன்சன்மிட்டையைமணந்த) இதைச் சொல்லுதலும்,- சினம் வேல் வென்றி
மன்னனை -சினத்தைக்கொண்ட வேற்படைதாங்கிய வெற்றியையுடைய
யயாதியரசனை, விருத்தன்ஆம் வகை – முதுமையுடையோனாகுமாறு, அவன் –
அந்தச் சுக்கிராசாரியன்,விதித்தான் – கட்டடையிட்டான்[சபித்தான்]:
அன்றுதொட்டு (சுக்கிரன் சபித்த)அந்தநாள்முதல், இவன்- இந்த யயாதி
மன்னவன், ஐ முதல் பிணியினால் – சிலேட்டுமத்தைத் தலைமையாகக்கொண்ட
நோயினால், அழுங்கி – வருந்தி, இன்று நூறு என -இப்போது (இவனுக்கு)
நூறுவயசு (ஆய்விட்டது) என்று (இவன் முதுமைகண்டுயாவரும்) சொல்லும்படி,
நரை முதிர் யாக்கையோடு – கிழத்தனத்தினால் முதிர்ந்தசரீரத்துடனே,
இருந்தான்-; (எ – று.)

அந்த மன்னவன் மைந்தரை அழைத்து, ‘எனக்கு உசனார்
தந்த மூப்பை நீர் கொண்மின், நும் இளமை தந்து’ என்ன,
மைந்தர் யாவரும் மறுத்திட, பூரு, மற்று அவன்தன்
இந்த மூப்பினைக் கவர்ந்து, தன் இளமையும் ஈந்தான்யயாதி தன் மைந்தர்களொவ்வொருவரையும்
இளமையைத் தந்து தன் முதுமையைப் பெறுமாறுகேட்க, பூருவே இசைதல்.

அந்த மன்னவன் – அந்தயயாதியரசன், மைந்தரை – (தன்)
புத்திரரானயதுமுதலியோர்களை, அழைத்து-, ‘எனக்கு-, உசனார் –
சுக்கிராசார்யர், தந்த -(சாபமூலமாகக்) கொடுத்த, மூப்பை – முதுமையை, நும்
இளமை தந்து – உங்களுடையஇளமையைக் 
கொடுத்திட்டு, நீர் கொண்மின் – நீங்கள்
கைக்கொள்ளுங்கள், ‘ என்ன – என்றுவேண்ட,- மைந்தர் யாவர்உம் மறுத்திட-
(பூருவை யொழிந்த மற்றைப்) புதல்வர்யாவரும் (அவ்வேண்டுகோட்கு இசையாது)
மறுத்துவிட,- பூரு – பூருவென்பவன், அவன்தன் – அந்த யயாதியினுடைய,
இந்தமூப்பினை – இந்த முதுமைப்பருவத்தை, கவர்ந்து – பெற்றுக்கொண்டு, தன்
இளமைஉம் ஈந்தான் – தன்இளமைப் பருவத்தையும் (அந்தத் தந்தைக்குக்)
கொடுத்தான்; (எ -று.)

     சுக்கிராசாரியர் சபித்தபோது யயாதிமன்னவன் சாபவிமோசனங்கேட்க,
அவர்வேண்டுமானால், இந்த ஜரையை[மூப்பை] அயலார்க்குப்
பண்டமாற்றுப்போற்கொடுக்குமாறு அருள்புரிந்தா ரென்று வியாசபாரதத்திற்
கூறியுள்ளது. உசனார் – ‘ஆர்’ உயர்த்தற் கண்வந்தது: சபித்திட்டமைபற்றிய
வெகுளியினால் இழித்தற்கண் வந்த தென்பாருமுளர். உசன் = உசநஸ்.

விந்தை, பூமகள், முதலிய மடந்தையர் விரும்ப,
முந்தை மா மணம் யாவையும் பல பகல் முற்றி,
சிந்தை ஆதரம் தணிந்தபின், சிந்தனை இன்றி,
தந்தை, மீளவும் இளமை தன் தனயனுக்கு அளித்தான்.-பூருவினிளமைகொண்ட யயாதி, மனஞ்சலிக்கக் காமவின்ப
நுகர்ந்து பின் அந்தப்பூருவுக்கு இளமையைத் தந்திடுதல்

விந்தை – வீரலட்சுமியும்,பூமகள் – பூமிதேவியும், முதலிய-,
மடந்தையர்- பெண்டிரும், விரும்ப – விருப்பங்கொள்ள, (இளமையைப்பெற்று),
தந்தை – (பூருவின்)தகப்பனான அந்த யயாதி, முந்தை மா மணம் யாவைஉம் –
பழமையான(வாத்ஸ்யாயநம் என்ற நூலிற் கூறிய) சிறந்த
கரணங்களெல்லாவற்றையும், பல பகல்முற்றி – பல தினங்களில் நுகர்ந்து
திருத்தியடைந்து, சிந்தை ஆதரம் தணிந்த பின் -மனத்திலிருந்த இச்சை
அடங்கிய பின்பு, சிந்தனை இன்றி- (காமவின்பத்தில்) நசையற்று,
மீளஉம் – மீண்டும், இளமை – (தான் பூருவினிடத்துப்பெற்ற) இளமையை, தன்
தனயனுக்கு அளித்தான் – தன்புத்திரனாகிய அந்தப் பூருவுக்கே கொடுத்திட்டான்;
(எ-று)

     இளமைப்பருவம் வந்ததற்கு ஏற்ப, வீரம் முதலியனவும் உடம்பில்
தோன்றியதனால்,வீரத்துக்குஉரிய தேவதையாகிய வீரலட்சுமியும்,
வீரத்தினாற்காக்கப்படுபவளாகியபூமிதேவியும் ஆகிய இம்மடந்தையரும்
சன்மிட்டைபோலவே இந்த யயாதியினிடத்து.விருப்பங் கொள்ளலானார்களென்பது
முதலடியின் பொருள். வீரலட்சுமிவிந்தியமலையில் வசிப்பவளென்ற
காரணத்தினால் “விந்த்யவாஸிநீ” என்று ஒரு பெயர்பெறுவள்: அச்சொல் ‘விந்தை’
என்று சிதைந்து வந்தது. மணமென்பது – மகளிரோடுகூடும் கல்வி வகைகளை:
அவை கரணங்க ளெனப்படும்

இடியும் மாறுகொள் நெடு மொழி யயாதி, அன்று இவற்கே
முடியும், மாலையும், முத்த வெண் கவிகையும், முரசும்,
படியும், யாவையும் வழங்கி, ‘எம் பனி மதி மரபிற்கு
அடியும் நீ, இனி’ என மகிழ்ந்து, அளியுடன் அளித்தான்.–பின்பு அரசவுரிமை முதலியவற்றை யயாதி பூருவுக்கே அளித்தல்.

இடிஉம் ஆறு கொள் நெடுமொழி – இடியும் தணியும்
கம்பீரத்தொனிகொண்ட சொற்களையுடைய, யயாதி-, அன்று – (இளமையைத்
திருப்பிப்கொடுத்த) அப்போது, (அந்தப் பூருவை நோக்கி), ‘எம் பனி மதி
மரபிற்கு -எம்முடையதான குளிர்ந்த சந்திரனிடத்துவந்த (இந்த) வமிசத்துக்கு,
அடிஉம் -காரணமா யிருப்பவனும், இனி, – நீ-; என – என்று சொல்லி,
மகிழ்ந்து – உவகைகொண்டு,- ‘இவற்கு ஏ- இந்தப் பூருவுக்கே, முடிஉம் –
(பரம்பரையாக வந்த)அரசகிரீடமும், மாலைஉம் – (தன் மரபினர்க்குரிய)
அடையாளப் பூமாலையும், வெள்முத்தம் கவிகைஉம் – வெள்ளிய
முத்துக்குடையும். முரசும்-, படிஉம்- பூமியும்,யாவைஉம் -(ஆகிய) எல்லாமும்,
(உரியன என்று),’ வழங்கி – சொல்லி, அளியுடன் -அன்போடு, அளித்தான் –
கொடுத்தான்; (எ -று.)

     அரசர்க்குஉரிய தசாங்கத்தில் ஈண்டுக்கூறியன ஒழிந்த மற்றவை ‘யாவையும்’
என்பதனாற் குறிக்கப்பட்டன. தன் முதுமையைக்கொண்டு இளமையைத் தன்
விருப்பின்படி தந்து மன விருப்பத்தை நிறைவேற்றியதனால் மனமுவந்த தந்தை
‘சன்மிட்டையின் குமாரனான பூருவுக்கும் அவன் சந்ததியார்க்குமே இராச்சியம்
உரியதாகுக’ என்று சொல்லி, தன்னுடைய அரசாட்சியை அந்தப் பூருவுக்கே
கொடுத்தனனென்க.  

விரதம் மிஞ்சிய வேள்வியால் கேள்வியால் மிக்கான்,
சுரத மங்கையர் முலைக் குவடு அணை வரைத் தோளான்,
பரதன் என்று ஒரு பார்த்திவன், பரதமும் இசையும்
சரதம் இன்புற, அக் குலம்தனில் அவதரித்தான்.–பூருவின் குலத்திலே பரதன் என்று ஒரு மன்னவன்  தோன்றுதல்.-பரதன் தோற்றமும் ஏற்றமும்

விரதம் மிஞ்சிய – விரதத்தை மிகுதியாகக்கொண்ட,
வேள்வியால் -யாகத்தினாலும், கேள்வியால் – கேள்வியினாலும், மிக்கான் –
மேம்பட்டவனும், சுரதம்மங்கையர் – சுரதத்திற்கு உரிய மகளிரின், முலை குவடு
அணை – முலையினுச்சிஅணையப்பெற்ற, வரை தோளான் – மலைபோன்ற
தோளையுடையவனுமான, பரதன்என்ற ஒரு பார்த்திவன் – பரதனென்று
பேர்பூண்ட ஓரரசன், பரதம்உம் – நாட்டியசாஸ்திரமும், இசைஉம் – சங்கீத
சாஸ்திரமும், சரதம் இன்புற – இனிதி னின்பமடைய,அ குலம் தனில் – அந்தப்
பூருவின் குலத்திலே, அவதரித்தான் – பிறந்தான்;(எ-று.)

     பூருவின் வமிசத்தில் தோன்றிய பரதன் வேள்வி கேள்விகளில் மிக்கவனாக
இருந்ததுபோலவே, சங்கீதம் நாட்டியம் என்னும் இவற்றிலும் மிக்கவனாகியிருந்தா
னென்க. இந்தப் பரதன் துஷ்யந்த மகாராசனுக்குச் சகுந்தலையினிடம்
தோன்றியவன்.கேள்வி – ச்ருதி யென்ற வடசொல்லின் பொருளது எனினுமாம்.
பார்த்திவன் -பிருதிவிக்குத்தலைவனென்று பொருள்படும்

சுர சமூகமும் சுராரிகள் சமூகமும் சூழ,
விரசு பூசலின் வாசவன் நடுங்கி, வெந்நிடு நாள்,
அரசர் யாவரும் அறுமுகக் கடவுள் என்று அயிர்ப்ப,
புரசை நாகம் முன் கடவினன், நாகமும் புரந்தோன்.-பரதமன்னவன் சிறப்பு.

சுர சமூகம்உம் – தேவர்களின் கூட்டமும், சுர அரிகள்
சமூகம்உம்-தேவர்களின்பகைஞரான அசுரருடைய கூட்டமும், சூழ – சுற்றிநிற்க,
விரசு -(ஒருவரோடொருவர்) நெருங்கிச்செய்த, பூசலின் – பெரும்போரிலே,
வாசவன் -இந்திரன், நடுங்கி-, வெந் இடும் நாள் – புறங்கொடுத்தோடினபோது,-
அரசர் யாவரும்-,அறுமுகக்கடவுள் என்று அயிர்ப்ப – தேவசேனாபதியாகிய
சண்முகமூர்த்தியோ என்றுஎண்ணிச் சந்தேகிப்ப, புரசை நாகம் முன் கடவினன் –
கழுத்திடுகயிற்றையுடையயானையை முன்னே தூண்டிச் செலுத்தினவனாகி,
நாகம்உம் புரந்தோன்-தேவலோகத்தையும் பாதுகாத்தான், (அந்தப்பரதன்);(எ-று.)

     இவன் இங்ஙன் வீரனாக இருந்ததனால்தான் இவன் வமிசத்தவர்
பாரதரென்றும்,அவர்கள் செய்த போர் பாரதப்போர் என்றும் கூறப்படும்.
அசுரரை வென்று, சுரரைத்தேலோகத்தில் நிலைநாட்டியதனால், இவனுக்கு
அறுமுகக்கடவுள் ஒப்பாவன்.       

முக் குலத்தினும் மதிக் குலம் முதன்மை பெற்றது’ என்று,
எக் குலத்தினில் அரசும் வந்து இணை அடி இறைஞ்ச,
மைக் குலத்தினில் புட்கலாவர்த்தமாம் எனவே,
அக் குலத்தினில் அத்தி என்பவன் அவதரித்தான்.–அத்தியின் பிறப்பும், அத்தினாபுரி அமைப்பும்

முக் குலத்தின்உம் – (சூரிய சந்திர அக்கினியர் என்னும்)
மூவரிடத்தினின்று தோன்றிய அரசவமிசம் மூன்றுக்குள்ளும், மதி குலம் – சந்திர
குலமானது, முதன்மை பெற்றது – தலைமையை யடைந்தது, என்று-, எ
குலத்தினில்அரசுஉம் – எந்தக் குலத்திலுதித்த அரசரும், வந்து-, இணை அடி –
(தன்னுடைய)இரு தாள்களில், இறைஞ்ச – வணங்கிநிற்க,- மைகுலத்தினில்
புட்கலாவர்த்தம் ஆம்எனஏ – மேகக்கூட்டங்களுள் புட்கலாவர்த்தம் சிறந்து
தோன்றுவதுபோல, அகுலத்தினில் – அந்தப்பரதகுலத்திலே, அத்தி என்பவன் –
ஹஸ்தியென்ற அரசன்,அவதரித்தான்- தோன்றினான்; (எ -று.)

     அத்தி =ஹஸ்தீ: இவன் ஸு ஹோத்ர னென்பானுடைய புத்திரன்.
புட்கலாவர்த்தம்மேகங்களுள் பொன்மழைபொழிவதென்ப.     

கொண்டல்வாகனும் குபேரனும் நிகர் எனக் குறித்து,
புண்டரீகன் முன் படைத்த அப் புரவலன் அமைத்தது,
எண் திசாமுகத்து எழுது சீர் இயக்கர் மா நகரும்,
அண்டர் தானமும், உவமை கூர் அத்தினாபுரியே.

கொண்டல் வாகன்உம் – மேகத்தை வாகனமாகவுடைய இந்திரனும்,
குபேரனும்-, நிகர்- (இவனுக்கு) ஒப்பாவார்,’ என – என்று, குறித்து- எண்ணி,-
புண்டரீகன் – தாமரையில் வாழ்பவனாகிய பிரமதேவன், முன்-, படைத்த –
சிருஷ்டித்த, அ புரவலன் – அந்த அத்தியென்ற அரசன், அமைத்தது- (தனக்கு)
இராசதானியாகப்படைத்த நகரம்,- எண்திசா முகத்து – எட்டுத்திக்கிலும், எழுது –
எழுதிய,சீர் – கீர்த்தியையுடைய, இயக்கர் – இயக்கரின், மா நகர்உம் – சிறந்த
நகரமும்[அளகையும்], அண்டர் தானம்உம் – தேவர்கள் வாழிடமான
அமராவதிநகரமும்,உவமை கூர் – உவமையாக மிகப்பெற்ற, அத்தினாபுரி –
அத்தினாபுரியென்றபட்டணமாகும்;

     செல்வத்தினால் யட்சராஜனான குபேரனது ராஜதானியாகிய அளகாபுரியும்,
அழகினால் தேவேந்திரராஜதானியான அமராவதியும் போலும் அத்தினாபுரியென்க.
அத்தியென்பவனாலேற்படுத்தப்பட்டதுபற்றி, இந்நகரம் அத்தினாபுரியெனப்
பெயர்பெற்றது: இனி, யானைச்சேனையை மிகுதியாக வுடையதாக
இவ்விராசதானியையமைத்தனாதல் வந்த பெயருமாம். 

[மீனம் ஆகிய விண்ணவன், விநதை முன் பயந்த
யானமீது எழுந்தருளி வந்து, இரு பதம் வழங்க,
கான நாள் மலர்க் கயத்திடைக் கயமும், வெங் கராமும்,
ஆன மானவர் இருவரும் அக் குலத்தவரே.]கஜேந்திரனும் முதலையுமானவரும் இக்குலத்து உதித்தவரே.

மீனம் ஆகிய – மச்சாவதாரஞ்செய்த, விண்ணவன் –
திருமாலாகிய தேவன், விநதை முன் பயந்த யானம்மீது – விநதை யென்பவள்
முன்புபெற்ற(கருடனாகிய) வாகனத்தின்மேல், எழுந்தருளிவந்து-, இருபதம்
வழங்க – (தன்னுடைய)தாளிணைகளைக் காட்சிகொடுக்குமாறு, கானம் நாள் மலர்
கயத்திடை – நறுமணம்பொருந்தி யன்றுமலர்ந்த தாமரைமலரைக்கொண்ட
பொய்கையிலேயிருந்த, கயம்உம் -யானையும், வெம் கராம்உம் – கொடிய
முதலையும், ஆன-, மானவர் இருவர்உம்-பெருமையுள்ளோரிருவரும்,
அகுலத்தவர்ஏ – அந்தக் குலத்திற்பிறந்தவரே யாவர்;(எ-று.)

     யானையானவனை இந்திரத்யும்நனென்றும், முதலையானவனை அநுரு
என்றும்கூறுப. இந்தக் குருகுலச்சருக்கத்து இந்த ஓரிடந்தவிரச்
சந்திரன்முதல்விசித்திரவீரியனென்ற அரசன்வரையில் பாலபாரதத்திற் கூறிய
முறையும் இந்நூலிற்கூறியமுறையும் ஒத்திருக்கின்றன: அத்தியென்ற அரசனைக்
கூறியபின் குருஎன்ற அரசனே பாலபாரதத்திற் கூறப்பட்டுள்ளான்: கயமும்
முதலையும் ஆனஅரசரைப்பற்றி, அந்தப் பாலபாரதத்திற் கூறப்பட்டிலது.
ஒருகுலத்தின் சிறப்புத்தோன்றப்பொறுக்கிக் கூறுமிடத்து அந்தக்குலத்தினில்
தவறுசெய்து சாபமடைந்தவரைப்பற்றிச்சொல்லுவது சிறவாதாதலாலும், இங்ஙன்
சாபமடைந்தவராகக் கூறப்படுவார் இந்தக்குலத்தவரேயென்று நிச்சயமாகக்
கூறுதற்கு ஏற்ற மேற்கோள் கிடையாமையாலும்,ஒருகால் இந்தப்பாடல்
இடைச்செருகலாயிருக்குமோ என்றுதோன்றுகின்றது

பொரு பெரும் படைத் தொழில் வயப் புரவி, தேர், மதமா,
மருவ அருந் தொழில் மன்னர் நீதியின் தொழில், வளம் கூர்
சுருதியின் தொழில், முதலிய தொழில் அனைத்தினுக்கும்
குரு எனும் புகழ்க் குருவும், அக் குலத்தில் அங்குரித்தான்.–குருவும் குருகுலமும்-அந்தக்குலத்து உதித்தவனே ‘குரு’ என்பவன்.

பொரு – போர்செய்யும், பெரும் படைத்தொழில் – மிக்க
சேனைகளின் தொழில்களிலேவல்லனவான, வயம் புரவி – வெற்றி பொருந்திய
குதிரையும், தேர் – இரதமும், மதம் மா – மதம் பொருந்திய யானையும், (ஆகிய
இவற்றுடனே), மருவுஅரு தொழில் மன்னர் நீதியின் தொழில் – கிட்டுதற்கு அரிய
போர்த்தொழிலிலே வல்ல அரசருடைய நீதியின் தொழின்முறையிலும், வளர் கூர்-
வளமைமிக்கவனாகி,- சுருதியின் தொழில் முதலிய தொழில் அனைத்தினுக்குஉம் –
வேதத்திற்கூறிய தொழில்முதலிய எல்லாத் தொழில்கட்கும், குரு – (இவன்)
குருவாவன்,எனும் – என்று சொல்லத்தக்க, புகழ் – புகழையுடைய, குருஉம்-குரு
என்றஅரசனும், அ குலத்தில்- அந்தக் குலத்திலே, அங்குரித்தான்-
தோன்றினான்; (எ -று.)

     அரசநீதித்துறையிலும் வேள்வித்துறையிலும் குருஎன்று சொல்லுமாறு
மிகச்சிறந்துநின்றனன், இந்தக்குரு என்ற சந்திரகுலத்தரச னென்க. சுருதியின்தொழில்
-வேதத்தில்விதித்திருக்கிற தொழில்: அஃதாவது – யாகஞ்செய்தல். குருஎன்று
அம்மன்னவன் பெயர்படைத்ததற்கு ஒருகாரணங் கற்பித்துக் கூறுவார் போன்று,
‘மன்னர்நீதியின்றொழில் ‘சுருதியின்றொழில் முதலிய தொழிலனைத்தினுக்குங்
குருவெனும்புகழ்க்குருவும்’ என்றார். இவன் பிதா சவ்வருணன், வசிட்டமுனிவனருளால்இவனைப் பெற்றானென்ப.   

வரு குலத்தவர் எவரையும், வரிசையால், இன்றும்
குருகுலத்தவர் எனும்படி, பேர் இசை கொண்டான்;
இரு குலத்தினும், மாசு அறு தேசினால், இவனுக்கு
ஒரு குலத்தினும் உரைப்பதற்கு உவமை வேறு உண்டோ?குருமன்னவன் சிறப்பு.

இவன்),- வரு- (தனக்குப்பின்னே) தோன்றிய, குலத்தவர் –
குலத்திலுள்ளவரான, எவரையும்-, வரிசையால் – சிறப்பாக, இன்றுஉம் –
இப்போதும்,குருகுலத்தவர் – குருகுலத்திலேபிறந்தவர், எனும்படி –
என்றுசொல்லும்படி, பேர் இசைகொண்டான் – மிக்ககீர்த்திபெற்றவன்: இரு
குலத்தின்உம்- (இந்தச்சந்திரகுலந்தவிரமற்றைச் சூரியகுலம் அக்கினிகுலம் என்ற
இந்த) இரண்டுகுலங்களிலேனும்,ஒருகுலத்தின்உம்- வேறுள்ள எந்த
ஒருகுலத்திலேனும், மாசு அறு தேசினால்-குற்றமற்ற தேஜசினால், இவனுக்கு-,
உவமை உரைப்பதற்கு – உவமையாகச்சொல்வதற்கு, வேறு உண்டுஓ –
வேறொருவர் உளரோ?

     இவன் தனக்குத் தானே ஒப்பாவனன்றி, இவனுக்கு உவமையாகச்
சொல்லத்தக்கவர் வேறு எந்தக்குலத்திலும் இல்லையென்ப
தாம். இருகுலம் – தாய்
தந்தையர்குலம் என்றும் கொள்ளலாம். ஒரு குலத்தின்உம் என்பதற்கு –
சிற்றரசர்தோன்றிய எந்த ஒரு குலத்திலும் என்று உரைத்தாருமுளர்

அந்த நல் மரபினில், அமுத வெண் திரைச்
சிந்துவின்மிசை வரு திங்கள் ஆம் என,
சந்தனு எனும் பெயர்த் தரணி காவலன்
வந்தனன்; அவன் செயல் வகுத்துக் கூறுவாம்:—கவிக்கூற்று: குருகுலத்தில் சந்தனு என்று ஒருவன் தோன்றினான்:
இனி, அவன் செயலைக் கூறுவேனெனல்.

அந்த நல் மரபினில்- சிறந்த அந்தக் குருவமிசத்தில், அமுதம் –
பால்மயமானதாய், வெள் திரை சிந்துவின் மிசை – வெண்மையான
அலைகளையுடையபாற்கடலின்மீது, வரு – தோன்றுகின்ற, திங்கள் ஆம் என –
சந்திரனொப்பாவானென்று சொல்லும்படி, சந்தனு எனும் பெயர் தரணிகாவலன் –
சந்தனுஎன்று பேர் கொண்டபூமியைக் காப்பவனான அரசன், வந்தனன் –
தோன்றினான்; அவன் செயல் -அவனுடைய செய்தியை, வகுத்து கூறுவாம்-
விவரித்துச் சொல்லுவோம்; (எ -று.)

     ப்ரதீபனென்ற அரசன் சிபிவமிசத்தில் தோன்றிய சுகந்தீ யென்பவளை
மணக்க,அவர்களுக்குத் தேவாபி சந்தனு பாஹ்லிகன் என்று மூன்றுகுமாரர்
தோன்றினர்.முதல்வன் இளையனாயிருக்கும்போதே கானகஞ் சென்றிட்டான்.
அதனால், இந்தச்சந்தனு குருகுலத்துப்பிரதானனானான்: இவன்
வயதுமுதிர்ந்த எவரெவரைக்கையால்தொடுகின்றானோ அவர் யாவரும் யௌவன
மடைபவரும்,சுகமனுபவிப்பவருமாயினர்: இதனால் இவனுக்குச் சந்தனு
எனப்பெயரென்று முதனூல்கூறும். குருகுலத்திற்குப் பாற்கடலும், அக்குலத்திலே
தோன்றிய சந்தனுவுக்கு ஆங்குத்தோன்றிய சந்திரனும் உவமை. மகிழ்ந்து
கேண்மினோ என்றும் பாடம்.

     இதுமுதல் நாற்பத்தாறு கவிகள் – பெரும்பாலும் மூன்றாஞ் சீரொன்று
மாச்சீரும்,மற்றையவை விளச்சீர்களுமாகிவந்த கலிவிருத்தங்கள்.

வேனிலான் இவன்’ என, விளங்கு காலையில்,
கானக வேட்டை போய் இளைத்த காவலன்,
ஆன மென் குளிர் புனல் ஆசையால், மணித்
தூ நிறக் கங்கையாள் சூழல் எய்தினான்.—வேட்டையாடி யிளைப்புற்ற சந்தனு கங்கைக்கரை  சேர்தல்.

இவன்-, வேனிலான்- மன்மதனேயாவன்,’ என – என்று (கண்டவர்)
நினைக்கும்படி, விளங்கு காலையில் – (மிக்க அழகோடு) விளக்கமுற்றிருந்த
காலத்தில்,கானகம் வேட்டை போய் – காட்டிற் செய்யப்படும்
வேட்டைக்குச்சென்று, இளைத்த -சோர்வடைந்த, காவலன் – அந்தச்
சந்தனுராசன்,- குளிர். 
ஆன மெல் புனல் ஆசையால் – குளிர்ச்சி பொருந்திய
மெல்லிய நீரில் விருப்பத்தினால், மணி தூ நிறம் கங்கையாள் – அழகிய
வெண்மைநிறம் பொருந்தியகங்காநதியின், சூழல் – கரையிலே, எய்தினான் – போய்ச்
சேர்ந்தான்; (எ – று.)

     வேட்டையாடி யிளைத்ததனால், தண்ணீரில் விருப்புக் கொண்ட
சந்தனுராசன்கங்கைக்கரையை யடைந்தா னென்க. காமவின்பத்தை மிகுவித்தற்கு
ஏற்றவேனிற்காலத்திற்கு உரியவ னாதலால், மன்மதன் ‘வேனிலான்’
எனப்படுவன்.மணி -முத்துமாம். ஆனமெய் குளிர் புனல் என்றும் பாடம்

மரு வரும் குழல், விழி, வதனம், வார் குழை,
இரு தனம், தோள், கழுத்து, இதழொடு இன் நகை,
புருவம், வண் புறவடி, பொற்ப, பாவையர்
உருவு கொண்டனள், தனது உடைமை தோன்றவே.-அப்போது கங்காநதி அங்குப் பெண்வடிவு கொண்டிருத்தல்.

(அப்போது கங்காநதி),- மரு வரும் குழல்- நறுமணம்
வெளிவருகின்றகூந்தலும், விழி – கண்களும், வதனம் – முகமும், வார் குழை –
நீண்டகாதும், இருதனம் – இரண்டுமுலைகளும், (இரு) தோள்- (இரண்டு)
தோள்களும், கழுத்து -கழுத்தும், இதழொடு – வாயிதழும், இன் நகை – இனிய
பற்களும், புருவம் -புருவங்களும், வள் புறம் அடி – வளப்பமுள்ள புறவடிகளும்,
(ஆகியஇவ்வுறுப்புக்கள்), பொற்ப – அழகு பெற்றிருக்க, தனது உடைமை
தோன்ற – தான்பெண்வடிவ முடையவளாயிருப்பது தெரியும்படி, பாவையர்
உருவு – பெண்களின்வடிவத்தை, கொண்டனள்- ; (எ-று.)

     குழையென்பது – ஒருவகைக் காதணியையே யன்றி, காது என்னும்
பொருளைக் காட்டுவதை “மணித்தோடுங் குழையி லாட” என்ற இடத்துங் காண்க:
குழைந்திருப்பதுகுழை எனக் காதுக்குக் காரணவிடுகுறி.     

கங்கையின் வெள்ளம்மேல் கருத்து மாறி, இம்
மங்கைதன் பேர் ஒளி வனப்பின் வெள்ளமே,
தங்கிய சோகமும் தாபமும் கெட,
பங்கய விழிகளால் பருகினான் அரோ.-கங்கையின் பெண்தெய்வம் தோன்றியதைச் சந்தனு காணுதல்.

கங்கையின் வெள்ளம் மேல் – கங்காநதியின் வெள்ளத்தின் மீது
(சென்ற), கருத்து- (தன்) மனம், மாறி – மாறப்பெற்று, இ மங்கை தன் – இந்தக்
கங்காநதியின் பெண்தெய்வத்தின், பேர் ஒளி வனப்பின் வெள்ளம்ஏ – மிக்க
ஒளியைக்கொண்டுள்ள அழகின் பெருக்கையே, தங்கிய சோகமும் தாபமும் கெட-
(தன்) மனத்துப் பொருந்திய சோகதாபங்கள் கெட்டொழிய, பங்கயம் விழிகளால்-
தாமரை மலர்போன்ற கண்களினால், (சந்தனு), பருகினான்-; (எ -று.)

     நீர் பருகவேணுமென்ற எண்ணத்தோடு வந்த சந்தனுவின் கருத்து
அங்குத்தோன்றிய கங்காநதியின் பெண் தெய்வத்தின் அழகுவெள்ளத்திற்
செல்லவே,அவனுடைய சோகதாபங்கள் அகன்றனவென்க.    

‘வையகமடந்தைகொல்! வரைமடந்தைகொல்!
செய்ய பங்கயமலர்த் திருமடந்தைகொல்!
துய்ய வண் கலைவிதச் சொல்மடந்தைகொல்!
ஐயமுற்றனன், ‘இவள் ஆர்கொல்!’ என்னவே.–கங்கையைக் காட்சியிற் கண்ட சந்தனுவின் ஐயம்.

வையகம் மடந்தை கொல் – (இவள்)பூமிதேவிதானோ? வரை
மடந்தைகொல் – மலைமகளோ? செய்ய பங்கயம் மலர் திருமடந்தை கொல் –
செந்நிறமுள்ளதாமரைமலரில் வீற்றிருக்கின்ற திருமகள்தானோ? துய்ய வள் விதம்
கலை சொல்மடந்தை கொல் – வெண்ணிறமுள்ள செழிப்பான பலவகைப்பட்ட
கலைகளுக்கும்உரிமை பூண்ட சொல்லுக்குஉரிய தெய்வமான சரசுவதிதானோ?
(அல்லது), இவள்ஆர் கொல் – இவள் வேறு எவளா யிருப்பாளோ? என்ன –
என்ற, (அந்தக்கங்கையின் பெண் தெய்வமான மகளைக்குறித்து), ஐயம்
உற்றனன்- (சந்தனு)சந்தேகித்தான்; (எ-று.)

     மிக்க பொறுமையுடையாள் போலுதலால் ‘வையகமடந்தை கொல்’ என்றும்,
கற்புடையாள்போலத் தோன்றுதலால் ‘வரை மடந்தைகொல்’ என்றும்,
பேரழகுபெற்றுப்பாக்கியவதியாயிருத்தலால் ‘திருமடந்தைகொல்’ என்றும்,
பேரறிவுடையாள்போலத்தோன்றுதலால், ‘சொல்மடந்தைகொல்’ என்றும் ஐயுற்று,
அன்னார் இங்கு வருவதற்குக்காரணந் தெரியாமையால், ‘ஆர்கொலோ’ என்று
துணிவுபிறவாது கூறினான்சந்தனுவென்க. அகத்திணைக் கோவைகளில் முதலில்
காட்சியும் பின்னர் ஐயமும்கூறப்படுவது போலவே, இங்கும் கீழ்ச் செய்யுளாற்
காட்சியும், இச்செய்யுளால் ஐயமும்கூறப்பட்டன. 

கண் இமைத்து, இரு நிலம் காலும் தோய்தலால்,
பெண் இவள் மானுடப் பிறப்பினாள்’ என
எண்ணம் உற்று, அவள் அருகு எய்தி, ‘யாவர் செய்
புண்ணியம் நீ? எனப் புகழ்ந்து போற்றினான்.–தெளிந்து போற்றுதல்-தெளிவும் வினாவுதலும்.

கண் இமைத்து – கண்கள் இமைக்கப்பெற்று கால் உம் –
பாதங்களும்,இரு நிலம் தோய்தலால் – பெரியபூமியிற் படிதலால், பெண்இவள் –
பெண்ணாகியஇவள், மானுடம் பிறப்பினாள் – மனிதப் பிறவியைச் சேர்ந்தவள்,
என – என்று, (கண்டமாதின் திறத்தில்), எண்ணம் உற்று- (ஐயவறிவு நீங்கித்
தெளிவான)எண்ணத்தையடைந்து, அவள் அருகு எய்தி – அவளுடைய சமீபத்திற்
போய், நீ-,யாவர் செய் புண்ணியம் – யார் செய்த புண்ணியப் பயனாகத்
தோன்றியவள்?” என -என்று, புகழ்ந்து போற்றினான்-;

     கண்ணிமைத்தல், பாதங்கள்பூமியிற்படிதல், அணிந்த மலர் மாலை வாடுதல்
என்ற இன்னோரன்னவை, தேவரினும் மானிடர்க்குள்ள வேறுபாடுகளென்றறிக.
‘தெய்வமகளோ?’ என்று ஐயுற அவ்வளவு பேரழகு பெற்ற ஒருத்தி ஒருத்தற்கு
மகளாகவாய்ப்பது புண்ணியப் பயனே யாதலால், ‘யாவர்செய் புண்ணியம் நீ’
என்றான்,

போற்றிய குரிசில் மெய் புளகம் எய்தவே,
ஏற்றிய விழியினள், இளகு நெஞ்சினள்,
‘சாற்றிய மலர் அயன் சாபம் இவ் வழித்
தோற்றியது’ என, உறு துயரம் நீங்கினாள்.–அந்தக் கங்கா நதிப்பெண் சந்தனுவைக்கண்டு தன் துயர் நீங்குதல்.

போற்றிய – (அந்தக்கங்காநதிப்பெண்ணைப்) புகழ்ந்து கூறின,
குரிசில்- ஆண்களிற்சிறந்தவனான சந்தனுராசனுடைய, மெய் – உடம்பானது,
புளகம் எய்த -மயிர்க்கூச்சையடைய, ஏற்றிய- செலுத்திய, விழியினள் –
கண்களையுடையவளும்,இளகும் நெஞ்சினள்- (அந்தச்சந்தனுராசனிடத்துக்)
குழைந்தநெஞ்சையுடையவளுமாகி,- மலர் அயன் சாற்றிய சாபம்- (திருமாலின்
உந்திக்)கமலத்தில் வீற்றிருக்கின்ற பிரமதேவன் கூறிய சாபமொழி, இவ்வழி –
இவ்விடத்து,தோற்றியது – காண்கின்றது, என – என்று, உறு துயரம் – (தான்)
கொண்டதுயரத்தை,நீங்கினாள்-; (எ -று.)

     வருணதேவனே பிரமனது சாபத்தினால் சந்தனுவாய்ப் பிறந்தானென்றும்,
தான் மணக்கவேண்டியவன் இவன்தான் என்றும் கங்காநதியின் பெண்தெய்வம்
உணர்ந்தாளாதலால், அவனைக் கண்டதும் ஒருவாறு துயரம் நீங்கப்
பெற்றாளென்க. சாபவரலாறுமேல் 56- ஆம் பாடல்முதல் கூறப்படும். அன்பு
கொண்டு பார்த்தபார்வைபட்டதனால், மெய், புளகம் எய்துவதாயிற்று. மேற்புளக
மெய்தவே என்றும்பாடம்.   

பொங்கிய மதர் விழிப் புரிவும், ஆதரம்
தங்கிய முகிழ் முலைத் தடமும், நோக்கியே,
‘இங்கித முறைமை நன்று` என்று, வேந்தனும்,
அங்கு இதமுடன் அவட்கு அன்பு கூரவே,–சந்தனு அன்பு கூர்ந்து அவள் எண்ணம் வினாதல்-சந்தனுவும் அவளிடத்து ஆதரங் கூர்தல்.

பொங்கிய – மிக்க, மதர் – களிப்பினையுடைய, விழி புரிவுஉம் –
கண்ணின் செயலாகிய குறிப்புநோக்கமும், ஆதரம் தங்கிய – விருப்பந்தங்கப்பெற்ற,
முகிழ் முலை தடம்உம் – (தாமரை) மொட்டையொத்த கொங்கைத் தலமும்
[கொங்கைபூரித்தலையும்], நோக்கி – பார்த்து,- இங்கிதம் முறைமை நன்று –
(என்விஷயத்து இவளுடைய) குறிப்புச்செயலின் முறை இனிதாக வுள்ளது, என்று-
,வேந்தன்உம்-  சந்தனுராசனும், அங்கு – அப்போது, இதமுடன் – இதமாக,
அவட்கு -அந்தக்கங்கையாள் திறத்தில், அன்பு கூர – அன்பு மிக,- (எ -று.)
“உசாவினான்” எனஅடுத்த கவியோடு முடியும். இங்கிதம் – குறிப்பால் நிகழும்
உறுப்பின் தொழில்.

கன்னியேயாம் எனில், கடி கொள் பான்மையை;
என்னின் மற்று உயர்ந்தவர் இல்லை, மண்ணின்மேல்;
உன் நினைவு உரை’ என உசாவினான் — இகல்
மின் இலை வடி கொள் வேல் வேந்தர் வேந்தனே.-சந்தனு, ‘நீ கன்னிகையாயின் என்னை மணக்கவிருப்ப முண்டோ,’ என்று கங்கையாளைக் கேட்டல்.

இகல் – போர்க்குஉரியதும், மின் இலை – மின்னல் போன்ற
இலையைக்கொண்டதும், வடி கொள் – கூர்மையைக் கொண்டதுமான, வேல் –
வேற்படையையுடைய, வேந்தர் வேந்தன் – அரசர்க்கரசனான சந்தனு, (கங்கையின்
பெண்தெய்வத்தை நோக்கி),- ‘கன்னிஏ எனில் – (நீ) கன்னிகையேயானால்,
கடிகொள்பான்மையை – விவாகஞ்செய்து கொள்ளுதற்கு உரிமையுடையாய்:
மண்ணின்மேல் -பூமியின்மீது, என்னில்- என்னைக்காட்டிலும், உயர்ந்தவர் –
சிறந்தவர், இல்லை-:(என்னை மணந்துகொள்ளும் விஷயத்தில்), உன் நினைவு –
உனது எண்ணத்தை, உரை – சொல்லுவாய், ‘என – என்று, உசாவினான் –
வினாவினான்; (எ-று.) -பான்மையை – முன்னிலை யொருமைக்குறிப்புமுற்று

நாணினளாம் என, நதிமடந்தையும்,
பூண் உறு முலைமுகம் பொருந்த நோக்கினள்,
சேண் உறு தனது மெய்த் தேசுபோல் நகை
வாள் நிலவு எழ, சில வாய்மை கூறுவாள்கங்கையின் நிபந்தனை-அந்தக் கங்கை நாணமுற்றிருந்து பிறகு பேசலுறுதல்.

நதி மடந்தைஉம் – நதியின் பெண்தெய்வமான கங்கையும்,
நாணினள்என – வெட்கமடைந்தவள்போல, பூண் உறு – ஆபரணங்கள்
பொருந்திய, முலைமுகம் – தனங்களின்முகத்தை, பொருந்த-, நோக்கினள் –
பார்த்தவளாய்[தலைகவிழ்ந்தவண்ணம் இருந்துகொண்டு என்றபடி], சேண்உறு –
தூரத்தேவிளங்குகின்ற, தனது மெய் தேசு போல் – தனது உடம்பினொளிபோல,
நகை- (தன்) சிரிப்பினின்று, வாள் நிலவு எழ – ஒளி பொருந்திய நிலவு
[வெள்ளொளி]தோன்ற, சில வாய்மை – சில வார்த்தைகளை, கூறுவாள் –
சொல்பவளானாள்; (எ-று.)- அவற்றை மேலே காண்க.

     தலையைக் கவிழ்த்துக்கொண்டிருத்தல் நாணங் கொண்டுள்ளாளென்பதைக்
குறிப்பிக்கும் ஆதலால், ‘நாணினளாமென முலை முகம்பொருந்த நோக்கினள்’
என்றது. கங்கை வெண்ணிறத் தவளென்பது, பிரசித்தம்.சேண் – ஆகாயமுமாம்.
சிரிக்கும்பற்களிலிருந்து வெள்ளொளி வெளிப்படுதலால், ‘மெய்த்தேசுபோல் நகை
வாணிலவெழ’ என்றது. ஆம் – அசை. நாணின ளொடுங் கினணதி மடந்தையும்
என்றுபிரதிபேதம். 

இரிந்து மெய்ந் நடுங்கிட, யாது யாது நான்
புரிந்தது, பொறுத்தியேல், புணர்வல் உன் புயம்;
பரிந்து எனை மறுத்தியேல், பரிவொடு அன்று உனைப்
பிரிந்து அகன்றிடுவன், இப் பிறப்பு மாற்றியே.இதுவும் அடுத்தகவியும்- ஒரு தொடர்: கங்கை
‘நான்என்னசெய்யினும் கேட்பதில்லையென்றால் மணப்பேன்’ என்ன, மன்னவனும் உடன்படுதல்.

இரிந்து – அஞ்சி, மெய் நடுங்கிட – உடல்நடுங்கும்படி, நான்
புரிந்ததுயாது யாது- நான்செய்வது எது எதுவோ, (அவற்றையெல்லாம்),
பொறுத்திஏல் -பொறுப்பாயென்றால், உன் புயம் 
புணர்வல் – உனது தோளைச்
சேர்வேன் [உன்னை மணந்துகொள்வேன்] பரிந்து- இரக்கங்கொண்டு, எனை –
என்செயலை, மறுத்தி ஏல் – மறுப்பாயானால், அன்று -(என்றைக்கு மறுக்கின்றாயோ)
அன்றைக்கு, பரிவொடு – மனவருத்தத்தோடு, இ பிறப்புமாற்றி – இந்தப் பிறவியை
மாற்றிக்கொண்டு, உனை – உன்னை, பிரிந்து -, அகன்றிடுவன்- நீங்கிவிடுவேன்;
(எ-று.) – புரிந்ததுஎன்பது – இயல்பினால் வந்த காலவழுவமைதி. 

மெய் தரு விதியினேன் விரதம் மற்று இவை
எய்த அரிது ஒருவரால்; எய்த வல்லையேல்,
கைதருக!’ என, பெருங் காதலாளனும்,
‘உய்வு அரிது!’ என இசைந்து உடன்படுத்தினான்.

மெய் தரு விதியினேன் – உண்மையாகப் பொருந்திய
நியமத்தையுடைய எனது, விரதம் – கொள்கைகளாகிய, இவை – இவைகள்,
ஒருவரால்- ஒருத்தரால், எய்த – செய்தல், அரிது – அருமையானது: எய்த
வல்லைஏல் -(இதனைச்) செய்ய வல்லமை யுடையையே யானால், கை தருக –
பாணிக்கிரகணஞ்செய்துகொள்க,’ என – என்று (அந்தக்கங்காநதியன்
பெண்தெய்வம்)கூற,- பெருங்காதலாளன் உம் – (அம்மங்கையினிடத்து)
மிக்ககாதல் கொண்டவனானசந்தனுவும், ‘உய்வுஅரிது- (இவள் கூறும்
நிபந்தனைக்கு இசைந்தாவது இவளைமணம்புரியவேண்டும்: இல்லாவிட்டால்)
உயிர் பிழைத்தல் முடியாது, ‘ என – என்றுகருதியதனால், இசைந்து –
(அவளுடைய நிபந்தனைகட்கு) உடன்பட்டு, உடன்படுத்தினான் – (தனக்கு
மனைவியாகுமாறு அவளை) இசைவித்தான்; (எ -று.)

     விவாகமென்பது – வடமொழியில் பாணிக்கிரகணமென்று பெயர் பெறுதலால்,
மணக்கஎன்ற பொருளில், ‘கை தருக’ எனப்பட்டது; ஒன்றை நிச்சயிப்பவர்
கையறைந்து தருதல் இயற்கை யாதலால், கங்கையாள் என்நிபந்தனைக்கு நீ
உடன்பட்டமைவிளங்குமாறு கையெறிந்து தருக என்றபொருளில், ‘கை தருக’
என்றாளென்றலும்ஒன்று. இங்குச் சந்தனுவைப் பெருங்காதலாளன் என்ற பெயராற்
குறித்தது-பெருங்காதலையுடையவனா யிருந்ததனால்தான் அந்தக் கங்கைகூறிய
கடியநிபந்தனைக்கு உட்பட்டு அவளை மணந்தானென்ற கருத்தைப் புலப்படுத்தும்.

எனது உயிர், அரசு, வாழ்வு, என்ப யாவையும்
நினது; நின் ஏவலின் நிற்பன் யான்’ என,
வனிதையை மருட்டினான் -மன்றல் எண்ணியே,
தனதனும் நிகர் இலாத் தன மகீபனே.-தன்னை மணத்தற்குக் கங்கையாளை உடன்படுமாறு
சந்தனு கூறுதல்.

தன தன்உம் நிகர் இலா தனம் மகீபன் – குபேரனும்
ஒப்பாதலில்லாதபெருஞ்செல்வத்தையுடைய சந்தனுராசன்,- வனிதையை –
அந்தக்கங்கையின்பெண்தெய்வத்தை, மன்றல் எண்ணி- விவாகஞ்செய்து
கொள்ளவேணுமென்பதைநினைந்து,- ‘எனது உயிர் – என்னுடைய உயிரும், அரசு –
இராச்சியமும், வாழ்வு- வாழ்வும், என்ப – என்றுசொல்லப்படுபவையான,
யாவைஉம் -எல்லாமும், நினது – உன்னுடையது: யான்-, நின் ஏவலில் நிற்பன்-
உன்
னுடைய கட்டளையின்கீழ் அடங்கிநிற்பேன்,’ என – என்று சொல்லி,
மருட்டினான் -(தன்திறத்தில்) மனம் மயங்கச் செய்தான்; (எ -று.)

     சந்தனுவின் பணிமொழியால் கங்கையாள் அந்த அரசனிடத்து
விருப்பங்கொண்டன ளென்றவாறு. என்ப – பலவின்பாற்பெயர். என்பயாவையும்
நினது- ஒருமைப்பன்மைமயக்கம். தநதன்= செல்வத்தைத் (தன்னிடத்துத்)
தாங்குபவன்.      

அரு மறை முறையினால், அங்கி சான்று என,
திருமணம் புரிந்து, உளம் திகழ வைகினான்-
‘இரதியும் மதனனும் அல்லது இல்லை, மற்று
ஒருவரும் உவமை’ என்று, உலகு கூறவே.சந்தனுவும் கங்கையும் அக்கினிசாட்சியாக மணம் புரிந்து மகிழ்தல்.

அரு மறை முறையினால் – (அறிதற்கு) அரியவேதத்திற் கூறிய
முறைப்படி,அங்கி சான்று என – அக்கினிதேவன் சாட்சியாக அமைய, திருமணம்
புரிந்து-விவாகஞ்செய்து கொண்டு, இரதி உம் மதனன்உம்-இரதிதேவியும்
மன்மதனும், அல்லது- அல்லாமல், மற்று ஒருவர்உம் உவமை இல்லை வேறு
ஒருவரும் உவமையில்லை,என்று-, உலகு- உலகத்தவர், கூற-,- உளம் திகழ –
மனம்மகிழ, வைகினான் – (சந்தனு)இருந்தான்; (எ -று.)

மருவுறச் சில பகல் மணந்து, ‘மான்விழி
கரு உயிர்த்தனள்’ எனக் களி கொள் காலையில்,
பருவம் உற்று, அன்புடன் பயந்த மைந்தனைப்
பொரு புனல் புதைத்தனள், புவனம் காணவே.-கங்கையாள் கருக்கொண்டு பெற்றமைந்தனைக் கங்கை நீரிலெறிதல்.

சில பகல் – சிலநாள்கள்,- மருவு உற மணந்து –
பொருந்தக்கூடியிருந்து, ‘மான் விழி – மான்போன்ற கண்பார்வையையுடைய
கங்கையென்பாள், கருஉயிர்த்தனள் – (கருப்பம் கொண்டிருந்து) ஈன்றாள்,’ என –
என்று, (சந்தனுமகாராசன்), களிகொள் காலையில் – மனம் மகிழும்போது,-
(அம்மகிழ்ச்சிகெட),- பருவம் உற்றுஅன்புடன் பயந்த மைந்தனை – கரு
முதிரும்பருவத்தையடைந்து[பத்துமாதம்வயிற்றிற்கொண்டிருந்தபின்] அன்போடு
பெற்ற குமாரனை, புவனம் காண -உலகத்தவர் பார்த்துக்கொண்டிருக்கையில்
தானே, பொரு புனல் – அலைமோதுகின்றநதியின் நீரில், புதைத்தனள் – வீசி
யெறிந்தாள், (அந்தக்கங்கையாள்); (எ -று.)

     புனலில் புதைத்தல் – நீரில் மறைந்திடும்படி வீசி யெறிந்திடுதல். மான்விழி-
உவமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை.     

கண்டு உளம் வெருவி, முன் கதித்த வாசகம்
கொண்டு உரையெடுத்திலன், கொண்ட காதலான்;
ஒண்டொடியுடன் மணந்து உருகி வைகினன்,
பண்டையின் எழு மடி பரிவு கூரவே.–வருந்தினானாயினும், சந்தனு பெருங்காதலால் ஒன்றும் பேசாது,
முன்னிலும் அவளிடம் அன்புகொண்டிருத்தல்.

 கண்டு – (தன் மனைவியின் கொடுஞ்செயலைப்) பார்த்து
(முதலில்),உளம் வெருவி – மனத்தில் வெறுப்புக்கொண்டு நின்று (பிறகு), முன்
கதித்தவாசகங்கொண்டு – மணந்தபோது (நிபந்தனையாகக்) கூறிய வாசகத்தினால்,
உரைஎடுத்திலன் – (அவள் பெற்ற குழந்தையைக் கங்கையாற்றில் எறிந்தது
குறித்து) ஒருபேச்சும் தெரிவியாதவனாய்,- கொண்ட காதலான் – (அந்தக்
கங்கையாளிடத்துப்)பெருங்காதல்கொண்ட சந்தனு,- பண்டையின்- முன்பு
இருந்ததைவிட, எழு மடி பரிவுகூர – ஏழுமடங்கு அன்பு மிக, ஒள் தொடியுடன்-
ஒள்ளிய தொடியென்னும்அணிபூண்டவளான அந்தக் கங்காதேவியுடன், மணந்து-
கூடி, உருகி – மனம்கரைந்து, வைகினன் – தங்கியிருந்தான்; (எ -று.)

     கொண்ட காதலான் – கருத்துடையடைகொளியணி. கதித்த என்ற
பெயரெச்சத்தில் ‘கத்’ என்பது – வடமொழியான வினையடி. 

பின்னரும் அறுவரை, பெற்ற தாய், மனம்
முன்னரின் மும் மடி முரண்டு மாய்க்கவே,
மன்னவன் அவற்றினும் வாய் திறந்திலன்,
நல் நகர்ச் சனம் எலாம் நடுநடுங்கவே.–பின்னும் ஆறு குழந்தைகளை ஆற்றில் எறிதல்

பின்னர்உம் – பின்னும், அறுவரை – ஆறு மக்களை, பெற்ற –
ஈன்ற,தாய் – (கங்காதேவியாகிய) தாயானவள், முன்னரின்-
முன்பிருந்ததைக்காட்டிலும்,மனம்-, மும்மடி முரண்டு – மூன்று மடங்கு மாறுபட்டு,
மாய்க்க – (குழந்தைகளைப்பெற்றபோதே கங்கை நீரிலெறிந்து) உயிர்போக்கவும்,
(அச்செயலைக்கண்டு), நல் நகர்சனம் எலாம் – சிறந்த நகரத்துச் சனங்களெல்லாம்,
நடுநங்க- நடுங்காநிற்கவும்,மன்னவன் – சந்தனுராசன், அவற்றின்உம் –
அவ்வக்காலங்களிலெல்லாம், வாய்திறந்திலன் – (அந்தக் கங்கையாளிடத்து
அவள் செய்யுங் கடுஞ்செயலைக் குறித்து)வாய் திறந்து பேசினானில்லை; (எ-று.)

     முன்னரின் – ஐந்தாம் வேற்றுமைப்பொருள் தந்ததோரிடைச்சொல்:
இவ்வாறுவருவதனை வடநூலார் விபக்திப்ரதிரூபகம் அவ்யயம் என்பர்

வழு அறு குருகுல மன்னன் மைந்தர் ஓர்
எழுவரை முருக்கினள், ஈன்ற தாய்!’ என,
பழுது அறு மகப் பல பயந்த மங்கையர்
அழுதனர், கண் புனல் ஆறு பாயவே.-கங்கையின் செயல் குறித்து மங்கையர் அழுதல்

‘வழு அறு – குற்றமற்ற, குருகுலம் மன்னன் – குருகுலத்தில்
தோன்றிய அரசனான சந்தனுவின், மைந்தர் ஓர் எழுவரை ஏழுமைந்தரை, ஈன்ற
தாய்- பெற்ற தாய், முருக்கினள்- 
(ஆற்றுவெள்ளத்தில் வீசியெறிந்து) கொன்றாள்,’
என – என்று சொல்லி,- பழுது அறு -குற்றமற்ற, பல மக – பல பிள்ளைகளை,
பயந்த – பெற்ற, மங்கையர் – கண் -(தம்முடைய) கண்களிலிருந்து, புனல் –
சோகக்கண்ணீர், ஆறு பாய – நதிவெள்ளம்போற் பெருக, அழுதனர் –
புலம்பினார்கள்; ( எ -று.)

      ‘வழுவறு’ என்று குருகுலமன்னவனுக்கு அடைமொழி கொடுத்ததனால்,
‘பெற்றபிள்ளையைக் கொல்லும் பெரும்பாதகியை மனைவியாகக்கொண்டிருக்கின்றா
னென்ற பெரும்பழி இவனுக்கு நேருமே!’ என்று அன்னார் இரக்கங்கொண்டு
கருதலாயின ரென்பது, தோன்றும். வழுவறுஎன்பதை மைந்தர் என்பதனோடு
இயைத்து – உறுப்புக்குறைமுதலிய குற்றமில்லாத [பேரழகையுடைய] மைந்தரென்று
உரைப்பினுமாம்: “நிறை மகவுடையவர் நெறிசெலைம்பொறிக், குறைமகக்குறையினும்
கொடுப்பராமுயிர்” என்றவாறு பலபுதல்வரை யுடையோரும் தமது மகவுள்
பொறிக்குறையையுடைய ஒருமகவு உயிர்நீங்கினும் தம்முயிரை மாய்ப்பது
இயல்பாயிருக்க, பெற்ற தாயான இவள் தான்பெற்ற புதல்வர் குற்றமற்ற
பேரழகரெனக்கண்டும் ஒருவரிருவரல்ல எழுவரைச் சிறிதும் அருளின்றி
வதைத்தனளே! என்று புலம்பினரென்பார், ‘வழுவறு மைந்தர் ஓரெழுவரை
முருக்கினளீன்றதாயென ‘மங்கையர் அழுதனர்’ என்றார்.

கங்கை என்று உலகு எலாம் கைதொழத் தகும்
மங்கை, அங்கு அனந்தரம், வயிறு வாய்த்துழி,
வெங் கய கட கரி வேந்தன் மா மனப்
பங்கயம் துறந்தது, பழைய இன்பமே.–கங்கை எட்டாம் முறை கருக்கொள்ளல்

கங்கை என்று – கங்கைகங்கைஎன்று சொல்லிக் கொண்டு,
உலகுஎலாம் – உலகத்தவரெல்லாராலும், கைதொழதகும் – கைகூப்பித்
தொழுதற்குத்தக்க, மங்கை – (கங்கைநதியின் தெய்வமான) பெண்,- அனந்தரம்-
பிறகு, வயிறுவாய்த்த உழி-கருக்கொண்டபோது, வெம் கய கடகரி –
உக்கிரத்தைக்கொண்டு பெருமைபெற்ற மதயானையைக்கொண்ட, வேந்தன் –
சந்தனுமன்னவனுடைய, மாமனம் பங்கயம் – பெருமைபெற்ற மனத்தாமரை,
பழைய இன்பம் துறந்தது -முன்னையனுபவித்துவந்த இன்பத்தை வெறுத்திட்டது;
(எ -று.) – அங்கு – அசை.

     மன்னவன்மனம், முன்போலச் சிற்றின்பத்திற் பெருவிருப்புக் கொள்ளாது
சிறிதுவெறுப்புக் கொண்ட தென்க. பங்கயம்= பங்கஜம்: சேற்றில் முளைப்பது எனப்
பொருள்படும் வடசொல்திரிபு. கய – பெருமை: உரிச்சொல். கடம் –
யானையின்கன்னம்: அங்கு நின்றுபெருகும் மதநீருக்கு ஆகுபெயர். கரி = கரீ:
கையையுடைய விலங்கு என யானைக்குக் காரணக்குறி

மதலையைப் பயந்தனள், மடந்தை’ என்றலும்,
கதுமெனச் சென்று, தாய் கைப்படாவகை
இதம் உறப் பரிவுடன் எடுத்து, மற்று அவள்
பதயுகத் தாமரை பணிந்து, பேசுவான்:-சந்தனு மைந்தனை எடுத்துக்கொண்டு கங்கையை வேண்டல்

மடந்தை – கங்காதேவியென்னும்பெண், மதலையை பயந்தனன் –
ஓராண்மகவை யீன்றாள்,’ என்றலும் – என்று (பணியாளர் தன்னிடம்வந்து)
கூறியவுடனே, (சந்தனுமன்னவன்),- கதுமென சென்று- விரைந்துபோய் (பிறந்த
அக்குழந்தை), தாய் கை படாவகை-(பெற்ற) தாயின் கையில் அகப்படாதபடி,
இதம் உற- (அந்தக்குழந்தைக்கு) நன்மையுண்டாகுமாறு, பரிவுடன் – அன்போடு,
எடுத்து-, மற்றுஅவள் – மாறுபட்ட [பெற்ற குழந்தையைக் கங்கையில்
வீசிமாய்க்குங் குணமுடைய]அந்தத்தேவியின், பத யுகம் தாமரை – தாமரை
மலர்போன்ற உபயபாதங்களில்,பணிந்து – வணங்கி, பேசுவான் –
சொல்வானானான்; (எ – று.) – பேசுவதை மேலேகாண்க.

     தன்தேவியைத் தன்கருத்துக்கு இசைவிக்கவேணுமென்று எண்ணிப்
பேசுவதனால், மன்னவன் பேசும்போது, தன்தேவியின் பதயுகத்தாமரையிற்
பணிவானாயினான். குழந்தையைப் பெற்றவுடன் விரைவுடன்சென்று எடுத்தது,
முன்னைய குழந்தைகளைப் போலவே இந்தக் குழந்தையையும் கங்கையில்
எறியாமலிருக்கும் பொருட்டு.   

நிறுத்துக, மரபினை நிலைபெறும்படி!
வெறுத்து எனை முனியினும், வேண்டுமால் இது;
‘மறுத்தனன் யான்’ என மனம் செயாது, இனிப்
பொறுத்து அருள்புரிக, இப் புதல்வன்தன்னையே!‘-அந்தப்புதல்வனைக் கொன்றிடாதிருக்குமாறு
மன்னவன் தேவியை வேண்டுதல்.-மூன்று கவிகள்- ஒருதொடர்

மரபினை – வமிசத்தை, நிலைபெறும்படி – (அழியாது)
நிலைபெற்றிருக்கும்படி, நிறுத்துக – நிற்கச்செய்வாய்: வெறுத்து எனை
முனியின்உம் -வெறுப்புக்கொண்டு என்மீதுகோபித்தாலும், இது வேண்டும் –
இச்செய்கை செய்தேதீரவேண்டும்: யான் மறுத்தனன் என –
(உன்மனப்போக்கின்படி செய்யமுடியாதவாறு)நான் தடுத்தேனென்று, மனம்
செயாது – மனத்திற் (கொடுமை) கொள்ளாது, இனி -இப்போது, பொறுத்து –
பொறுமைகொண்டு, இ புதல்வன்தன்னை – இந்தஆண்மகவை, அருள்புரிக –
கருணைசெய்க;

     கருணைபுரிகஎன்றது – ஆற்றுவெள்ளத்தில் வீசியெறிந்து மரித்திடச்
செய்யாமல்புதல்வனுக்கு உயிர்ப்பிச்சை தரவேணுமென்றுவேண்டியபடி.
இப்புதல்வனை அருள்புரிகஎன்று மன்னவன் வேண்டினானாயினும், நீ
உடன்படாவிடினும் நான் இம்முறைநதிப்புனலிலே ஈன்ற மகவை யெறிதற்கு
ஒருப்படேனென்ற தன் 
மனவுறுதியைத் தெரியப்படுத்த, ‘வெறுத்தெனை முனியினும்
இதுவேண்டும்’ என்கின்றானென்க. ஆல் – அசை. 

என்று பற்பல மொழி இவன் இயம்பவே,
‘நன்று நன்று, அவனிப! நவின்ற வாசகம்!
இன்று நின்று இரங்கினை; எழுவர் மைந்தரைக்
கொன்ற அன்று என் செய்தாய்? கொடியை!’ என்னவே,-கங்கை சந்தனுவைக் கண்டித்தல்

என்று-, பல் பல மொழி – பலபடியான வார்த்தைகளை, இவன் –
இந்தச்சந்தனுராசன், இயம்ப – சொல்ல,- (அது கேட்ட கங்காதேவி மன்னவனை
நோக்கி),-‘அவனிப – மன்னவனே! நவின்ற – (நீ) கூறிய, வாசகம் – சொல், நன்று
நன்று – மிகநன்றாயிருந்தது: இன்று-, நின்று – மனத்திலுறுதிகொண்டிருந்து,
இரங்கினை- (பிள்ளை யிறப்பதற்கு) இரக்கமுற்றாய்: எழுவர் மைந்தரை கொன்ற
அன்று-ஏழுபுத்திரர்களை (நதிப்புனலிலே வீசியெறிந்து) கொன்ற அவ்வப்போது,
என் செய்தாய்- என்னசெய்தாய்? கொடியை – கொடுமையையுடையாய்,’ என்ன –
என்றுபழித்துக்கூற,- (எ-று.) “அரசனுமுணர்ந்து” என மேற்கவியோடு குளகமாகத்
தொடரும்.

     எழுவர்மைந்தரைக் கொன்றஅன்று என்செய்தாய் என்றது – இப்போது
எட்டாவது குழந்தைக்காகக்கொண்ட இரக்கம் அப்போது எல்லாம்
எங்கே போய்விட்டது? என்றவாறு. அரசன் கங்கையைப் பழித்தாற்போலக்
கூற,அன்னாள் மறித்துப்பழித்தாளென்க. நன்று நன்று – இகழ்ச்சிக்குறிப்பு: அடுக்கு,
வெகுளிபற்றியது.

அரசனும் உணர்ந்து, ‘நீ யார்கொல்? பாலரைத்
திரை செறி புனலிடைச் செற்றது என்கொலாம்?
உரைசெயவேண்டும்’ என்று உரைப்ப, வஞ்சியும்
வரிசையின் உயர்ந்த தன் வரவு கூறுவாள்:-சந்தனு கங்கையின் வரலாறு வினாதல்

அரசன்உம் – சந்தனுவும், உணர்ந்து -உணர்ச்சியடைந்து
[மனத்திடையாராய்ச்சி தோன்றப்பெற்று என்றபடி], ‘நீ யார் கொல்-?
பாலரை – (பெற்ற) புதல்வரை, திரை செறி புனலிடை – அலைநெருங்கிய
வெள்ளநீரிலே, செற்றது – உயிர்நீங்குமாறு எறிந்தது, என் கொல் ஆம் –
என்னகாரணம்பற்றியாகும்? உரை செய வேண்டும் – (இவ்விஷயங்களைக்)
கூறவேண்டும்’ என்று உரைப்ப – என்று கூற, வஞ்சிஉம்- வஞ்சிக்கொடிபோன்ற
கங்காதேவியும், வரிசையின் உயர்ந்த – பெருமையினால் மேம்பட்ட, தன் –
தன்னுடைய, வரவு – (இவ்வுலகத்து) வந்துபிறந்த சரிதையை, கூறுவாள் –
சொல்பவளானாள்; (எ -று.)

     வரவு – தொழிலாகுபெயரால், வருதலைக்கொண்ட சரிதையையுணர்த்தும்

வால் முக மதியமும், புதிய மாலிகைக்
கான் முக இதழியும், கமழும் கங்கையாள்
தேன் முகம் பொழிதரு செய்ய தாமரை
நான்முகன் பேர் அவை நண்ணினாள்அரோ.-இதுமுதற் பதினெட்டுக்கவிகள் – ஒருதொடர்: கங்காதேவி
தன்சாபவரலாறு முதலியவற்றைச் சந்தனுவிடம் கூறுதலைத்தெரிவிக்கும்.

 வால் – வெள்ளிய, முகம் மதியம்உம் – ஆரம்பமான
(ஒற்றைக்கலைப்பிறையான) சந்திரனும், புதிய மாலிகை கான் முகம் இதழிஉம் –
புதிய மாலையாகக்கட்டப்படுகின்ற நறுமணத்தைத் தன்னிடத்தேயுடைய
கொன்றையும், கமழும் -நறுமணம்வீசுகின்ற, கங்கையாள் – கங்காதேவி,-
தேன்முகம் பொழிதரு – தேனை (த்தன்) வாயினின்று பெருக்குகின்ற, செய்ய
தாமரை – செந்தாமரை மலரில்(வீற்றிருப்பவனான), நான்முகன் –
பிரமதேவனுடைய, பேர் அவை – பெருமைபெற்றசபையை, (ஒருகாலத்து),
நண்ணினாள் – கிட்டினாள்;(எ-று.)- இச்செய்யுள் கங்காதேவியின் பெண்தெய்வம்
சத்திய லோகத்திலே பிரமனதுசபையிலே சென்றமை கூறியது.

     சிவபெருமானது சடைமுடியில் கங்கை உறைபவளாதலால், அவளிடத்து
மதியமும் இதழியும் கமழுமென்க. கங்கையாள், முன் நிகழ்ந்த சரித்திரம் கூறத்
தன்னைப் படர்க்கையாகவைத்துப் பேசுகின்றாள். இதழிகமழுங்கங்கையாள் என்பது
ஏற்குமாயினும், ‘மதியங் கமழும் கங்கையாள்’ என்றது – உபசாரவழக்காகும். முக
மதியம் – முகத்துக்கு உவமையாகுஞ் சந்திரனென்றும், வான் – வானத்திலுள்ள
என்றும் உரைப்பாருமுளர். அரோ – ஈற்றசை.

இருங் கலை இமையவர், எதிர் இறைஞ்சுவாள்
மருங்கு, அலை மதியினை மதிக்குமாறுபோல்,
அருங் கலை அயல் உற அதிர்ந்து வீசினான்,
பொருங் கலை எனும் இகல் புரவி வீரனே.

பொரும் – போர்செய்யவல்ல, கலை எனும் – கலைமானென்கிற,
இகல்புரவி – வலிமையுள்ள வாகனத்தைக் கொண்ட, வீரன் – வீரனாகிய
வாயுதேவன், இருகலை இமையவர் – மிக்க கல்வியையுடைய தேவர்களின்,
அலை மதியினை -சஞ்சலமான புத்தியை, மதிக்கும் ஆறுபோல் – அளவிட்டு
அறியுந் தன்மைபோல,-எதிர்- பிரம தேவனெதிரிலே, இறைஞ்சுவாள் –
வணங்குபவளான கங்கையினுடைய,மருங்கு – இடையிலே தரித்துள்ள, அருகலை-
அருமையான ஆடையை, அயல்உற- (உள் அவயவந்தெரியும்படி) அப்பாற்
செல்ல [சிறிதுவிலக] அதிர்ந்து -ஒலிசெய்துகொண்டு, வீசினான்-; (எ -று.)

     தேவர்களின் புத்தி எவ்வாறாயுள்ளது என்று மதித்து அறிதற்கு
அந்தக்கங்காதேவியின் உடுத்த ஆடையை வாயுதேவன் விலகச்செய்வது
காரணமாகுமாதலால், இமையவர் மதியினைமதிக்கு மாறுபோலென்று
பயன்தற்குறிப்பேற்றவணியாகக் கூறினார். மூன்றாமடியில், கலை – வஸ்திரம்.
மானத்தைக் காத்து நிற்பதாதலால், ‘அருங்கலை’ எனப்பட்டது. வாயுதேவனுக்குக்
கலைமான் வாகனமாதலால், அவனை ‘கலையெனுமிகற்புரவிவீரன்’ என்றார். குதிரை
யென்ற சிறப்புப்பொருளையுடைய புரவி என்ற சொல் – ஊர்தியென்னும் பொதுப்
பொருளைத்தந்தது. இச்செய்யுளில், முதலெழுத்து வேறுபட்டிருக்க இரண்டு
முதலிய சிலஎழுத்துக்கள் ஒன்றிநின்று பொருள்வேறுபட்டது திரிபு
என்னுஞ்சொல்லணி. இரண்டாமடியில் மருங்கலை அலையினை மறிக்குமாறுபோல்
என்றும் பாடம்.மாறுபோல் என்று பதம்பிரித்தால், இரண்டாமடி முற்றுமோனையாம்.
மாறுவிதமென்னும் பொருளதாதலை “விளங்கக்கேட்டமாறுகொல்” (புறம் – 50)
என்றவிடத்துங் காண்க.  

திருத் தகும் அவயவம் திகழ்ந்து தோன்றவே,
கருத்துடன் அவைக்கணோர் கண் புதைக்கவும்,
மருத்தினை மனனுற மகிழ்ந்து, காதல் கூர்
உருத் தகும் உரிமையோடு ஒருவன் நோக்கினான்.

திரு தகும் அவயவம் – அழகுவிளங்குகின்ற உள் அவயவம்,
(அப்போது), திகழ்ந்து தோன்ற – விளக்கித் தோன்றியதனால், அவைக்கணோர் –
சபையிலிருந்தவரான தேவர்கள்யாவரும், கருத்துடன் – நல்லெண்ணத்துடன், கண்
புதைக்கஉம் – (தம்) கண்ணைமூடிக்கொள்ளாநிற்கவும்,- மருத்தினை
மனன்உறமகிழ்ந்து- (கங்கையாளின் ஆடையைவிலகுமாறுசெய்த) வாயுதேவனை
மனப்பூர்வமாகக்கொண்டாடி, காதல் கூர்உரு – ஆசைமிகுதற்குக் காரணமான
அந்தஅவயவத்தை, தகும் உரிமையோடு – பார்த்தல் தகுமென்ற உரிமையோடு,
ஒருவன்-,நோக்கினான்-; (எ-று.) நோக்கிய ஒருவன் இன்னா னென்பது அடுத்த
செய்யுளில்விளங்கும்.

நோக்கிய வருணனை, நுவலும் நான்மறை
ஆக்கிய முனி உருத்து அழன்று, ‘பார்மகள்
பாக்கியம் என்ன உற்பவிக்க, நீ!’ என,
தாக்கிய உரும் எனச் சபித்த காலையே,

நோக்கிய – (ஆடைவிலகியதும் கங்காதேவியின் உள்
அவயவத்தைப்)பார்த்த, வருணனை – நீர்க்கடவுளை,- நுவலும் – (மூன்று
வருணத்தவரும்) ஓதுதற்குஉரிய, நால் மறை ஆக்கிய முனி –
நான்குவேதங்களையும் (பரம்பொருளினிடம் கற்று) வெளியாக்கிய முனிவனாகிய
பிரமதேவன், உருத்து அழன்று – மிகக் கோபித்து, ‘நீ-,பார்மகள் பாக்கியம்
என்ன – பூமிதேவிசெய்த நல்வினைப்பயன் என்று (கண்டவர்)கருதுமாறு,
உற்பவிக்க – (பூமியிற் சிறப்புடன்) தோன்றுவாய்,’ என – என்று, – தாக்கியஉரும்
என – (மேல்) மோதிய இடிபோல (பெருவருத்தமுண்டாகும்படி), சபித்த காலை-
சபித்தபோது,-(எ – று.)- “வானிடைநதியையும் தந்தை யேவினான்” என்க.

     இட்சுவாகு வமிசத்தவனான மஹாபிஷக் என்ற அரசனே தான் செய்த
தவவேள்விகளால் சத்தியலோகத்தைச் சேர்ந்திருந்தானாக, அவனே கங்கையின்
அவயவத்தைக் கண்டதனாற் சபிக்கப்பட்டா னென்று வியாசபாரதத்து உள்ளது:
பாலபாரதத்திலும் அங்ஙனமேயுள்ளது.    

‘கோனிடம் நினைவொடு குறுகி, நீயும், நல்
மானிட மடந்தையாய், மணந்து மீள்க!’ என,
வானிடை நதியையும், வழுவினால், அவள்-
தான் இடர் உறும்வகை, தந்தை ஏவினான்

‘நீஉம்-, கோன் இடம் – அரசனாகப்பிறக்கும் வருணனிடம்,
நினைவொடு – (அன்புகொண்ட) மனத்தொடு, நல் மானிடம் மடந்தை ஆய் –
அழகியமானிடமகளாய். குறுகி- கிட்டி, மணந்து – (அவனைக்) கூடி (ச்சில
காலந்தங்கியிருந்து),மீள்க – மீண்டு (உன்சுய) வடிவத்தையடைவாய், ‘ என –
என்று, வானிடை நதியைஉம்- ஆகாயத்திற் செல்லும் கங்கைநதியின்
பெண்தெய்வத்தையும், வழுவினால் – (அவள்செய்த) தவற்றினால், அவள் இடர்
உறும் வகை – அக்கங்கை மனத்துயரமடையும்படி,தந்தை – படைத்தற் கடவுளான
அந்தப்பிரமன், ஏவினான் – (சாபமிட்டு) அனுப்பினான்;(எ – று.)

     வானிடைநதியின் வழு – தன்னைக் காதல்கொண்டுநோக்கின வருணனைப்
பிரமசபையிற் காதலோடு தானும் பார்த்தது. நினைவொடு குறுகி என்பதற்கு –
முற்பிறப்புணர்ச்சியோடு கிட்டி என்று உரைத்தலும் ஏற்கும். தந்தை –
யாவற்றையும்தந்தவன் என்ற காரணத்தினாற் படைத்தற்கடவுளைக் காட்டிற்று.
தான் – அசை,    

‘பாரினும் நமக்கு ஒரு பதம் உண்டு’ என்று, அவள்
ஈரம் உற்று இழிதரும் எல்லை, வானகத்து
ஓர் இடை, உடன்விழும் உற்கைபோல், முக
வார் ஒளி மழுங்கினர் வசுக்கள் தோன்றினார்.–ங்கை வழியிடை வசுக்களைக் கண்டமை

பாரின் உம் – பூமியிலும், நமக்கு-, ஒரு பதம் – ஒரு ஸ்நாதம்,
உண்டு- இருக்கின்றது,’ என்று-, அவள் – அந்தக்கங்கா தேவி, ஈரம்உற்று –
கசிவுகொண்டு.இழிதரும் -(பூலோகத்தை நோக்கி) இறங்குகின்ற, எல்லை –
போதினில்,- வானகத்து -ஆகாயத்திலே, ஓரிடை – ஓரிடத்திலே, உடன் விழும்
உற்கை போல் -ஒருசேரவிழுகின்ற கொள்ளிக்கட்டைபோல, முகம் வார்ஒளி
மழுங்கினர் -முகத்தினுடைய மிக்கவொளி மழுங்கினராகி, வசுக்கள் –
வசுக்களென்னும்தேவகணங்கள், தோன்றினார் – காணப்பட்டார்;

     இது, கங்கை பூமியிலிறங்கும்போது, வானகத்திலே ஓரிடத்திலே வீழும் பல
விண்வீழ்கொள்ளிபோல முகவொளி மழுங்கி வானத்திலிருந்து இறங்கும் வசுக்கள்
அந்தக் கங்காதேவியாற் காணப்பட்டமை கூறுகின்றது.ஆகாசகங்கையா
யிருந்தவளுக்குப் பூமியிலும் பகீரதனாற்கொணரப்பட்டு இருக்குமிடம்
ஏற்பட்டதனால், ‘பாரினும் நமக்கு ஒருபதமுண்டு’ எனக்கருதினாள்;
அங்ஙனங்கருதியதனால் மனத்திற் சிறிது தேறுதலுண்டாயிற் றென்க. 

என்னை இங்கு இழிந்த ஆறு, எங்கள் மா நதி
அன்னை?’ என்று, அவள் அடி, அவர் வணங்கலும்,
தன்னை அங்கு அயன் இடு சாபம் கூறினாள்.
பின்னை, அங்கு அவரும் தம் பெற்றி பேசுவார்:

 ‘மாநதி – சிறந்தநதியாகிய, எங்கள் – எங்களுடைய, அன்னை –
தாயே!இங்கு – இங்கே, இழிந்த ஆறு – இறங்கிய காரணம், என்னை – யாதோ?’
என்று-,அவள் அடி – அந்தக்கங்காநதியின் பெண்தெய்வத்தின் பாதங்களிலே,
அவர் -அந்தவசுக்கள், வணங்கலும் – தொழுதவளவில்,- (அந்தக் கங்காதேவி),
தன்னை -தனக்கு, அங்கு – பிரமலோகத்தில், அயன் இடு – பிரமதேவனிட்ட,
சாபம் – சாபத்தை,கூறினாள் – சொல்லினாள்: பின்னை – பின்பு, அவர்உம் –
அந்தவசுக்களும், அங்கு -அப்போது, தம்பெற்றி – தம்முடைய நிகழ்ச்சியை,
பேசுவார் – சொல்பவரானார்கள்; (எ- று.)- வசுக்கள் தம் பெற்றி பேசுவதை
மேல் ஆறுகவிகளிற் காண்க.

     இது, வசுக்கள் வினவவே, கங்காதேவி தன் சாபத்தைத் தெரிவித்தமை
கூறியது.அன்னை – அண்மைவிளி: இயல்பு. அயன் – அஜன்: ஸ்வயம்பூ
என்றதன்பொருளையுடைய வடசொல்: இனி, அகாரவாச்சியனான
திருமாலினிடத்தினின்றுதோன்றியவனென உரைத்தலு முண்டு.    

உற்று உறை எங்களுள் ஒருவன், தன் மனைப்
பொற்றொடிக்கு அழிந்து, அவள் புன்மை வாய்மையால்,
சற்றும் மெய் உணர்வு அறத் தகாது ஒன்று எண்ணினான்;
மற்று எழுவரும் அவன் வயத்தர் ஆயினேம்.-வசுக்களின் சாப வரலாறு்

உற்று – (வானத்துப்) பொருந்தி, உறை – வசிக்கின்றவரான,
எங்களுள்-,ஒருவன் – ஒருத்தன் [பிரபாசனென்பவன்], தன் மனை –
தன்னுடைய மனைவியாகிய,பொன் தொடிக்கு – பொன்னாலாகிய வளைய
யணிந்தவள்திறத்தில், அழிந்து -(மனவுறுதி) தப்பி, அவள் புன்மை வாய்மையால்
– அவள்கூறிய இழிவை யுடையபேச்சினால், சற்றுஉம் – சிறிதும், மெய்உணர்வுஅற
– மெய்யுணர்வென்பதுஇல்லாதுநீங்க, தகாது ஒன்று – தகாததொருசெயலை,
எண்ணினான் – (செய்யக்)கருதினான்: மற்று எழுவர்உம்- மற்றைஏழுபேரும்,
அவன் வயத்தர் ஆயினேம் -(தகாதஇச்செயலைச் செய்தல் வேண்டாஎன்று
தடுக்காமல்) அந்தப்பிரபாசனுக்குஉடந்தையராக ஆயினோம்; (எ-று.)-
ஆறுகவிகள் – ஒரு தொடர்: வசுக்களின்சாபவரலாறு.

பொற்றொடி -வேற்றுமைத்தொகையன்மொழி. எழுவராவார் – அனலன்
அனிலன் ஆபன் சோமன் தரன் துருவன் ப்ரத்யூஷன் என்பவர்.

தூநகை மொழிப்படி சோரர் ஆகியே,
வானவர் வணங்கு தாள் வசிட்டன் வாழ் மனைத்
தேனுவை, இரவினில் சென்று, கைக்கொளா,
மீன் நெறி கரந்தென, மீள ஏகினோம்.

தூ நகை – வெள்ளியசிரிப்பையுடைய (பிரபாசனென்றவசுவினுடைய)
மனைவியின், மொழிப்படி – பேச்சின்படி, சோரர் ஆகி – திருடராகி, – வானவர்
வணங்கு தாள் வசிட்டன் வாழ் – தேவர்களும் வணங்குகின்ற
பாதங்களையுடையனானவசிஷ்டமுனி வன்வாழ்கின்ற, மனை – மனையிலேயுள்ள,
தேனுவை – பசுவை,இரவினில் சென்று – இராத்திரியிற்போய், கைக்கொளா –
கவர்ந்து கொண்டு, மீன் நெறிகரந்து என – மீன்சென்றவழி ஒளித்ததுபோல (ச்
சென்ற அடிச்சுவடும் தெரியாதபடி), மீள ஏகினோம் – மீண்டு (எம்மிடத்துக்குச்)
சென்றிட்டோம்; (எ -று.)

     நீரிற் சஞ்சரிக்கும்போது மீன் சென்று மீண்ட இடம் தெரியாமற்போவதனால்,
அவ்வாறுசென்றுமீண்ட தம்நெறிக்கு மீனின் நெறியை உவமை கூறினார். தூநகை
-பண்புத்தொகையன்மொழி. தேநு – வடசொல். வானவர் – வானத்திலுறைபவர்:
தேவர்.வசிட்டன் – இந்திரியத்தை வென்றவன்: தேஜசுள்ளவனென்றுமாம்.
‘மீனெறிகவர்ந்தென ‘எனவும்பாடம்.         

‘பசுக் கவர்ந்தனர்’ என, பயிலும் மா தவ
முசுக் குலம் அனைய மெய்ம் முனிவர் கூறலும்,
‘சிசுக்களின் அறிவு இலாச் சிந்தை செய்தவர்,
வசுக்கள்’ என்று அருந்ததி மகிழ்நன் எண்ணினான்.

பயிலும் மாதவம் – பழகுகின்ற பெருந்தவத்தையுடையரான, முசு
குலம்அனைய – முசுவென்னும்வானரசாதியை யொத்த மெய் – உடம்பையுடைய,
முனிவர் -முனிவர்கள், ‘பசு கவர்ந்தனர் – பசுவை (யாவரோ) திருடிக்கொண்டு
போய்விட்டார்கள்,’ என – என்று, கூறலும் – சொன்னவளவில்,- அருந்ததி
மகிழ்நன்-அருந்ததிக்குக்கணவனான வசிஷ்டமாமுனிவன், ‘சிசுக்களின் – சிறு
குழந்தைகள்போல, அறிவுஇலா- ஆராய்ச்சியில்லாமல், சிந்தை செய்தவர் –
(திருடுமாறு) எண்ணியவர், வசுக்கள் – வசுக்களாவர்,’ என்று-, எண்ணினான் –
ஞானதிருஷ்டியினாலறிந்தான்;(எ-று.)

     மயிர்வளர்ந்திருத்தலும் உடம்பு ஒட்டியிருத்தலும்பற்றியும், குந்தியிருக்கும்
தன்மைபற்றியும், முசுக்குலம், முனிவர்க்கு உவமை. முனிவர்கள்மீதுள்ள
வெகுளியால் ‘முசுக்குலமனைய ‘ என்றனர். முசு – குரங்கன்சாதிபேதம். இலா –
இல்லாமல்: ஈறுகெட்ட எதிர்மறைக் குறிப்புவினையெச்சம்: இது சிந்தைசெய்தவர்
என்ற விடத்திலுள்ளசெய்தவரென்பதில் செய்என்ற வினையுடன் தொடரும்.
அருந்ததி -வசிஷ்டமுனிவரின்மனைவி

உம் பதம் இழந்து, நீர் உததி மண் உளோர்-
தம் பதம் பெறுக!” எனச் சாபம் கூறலும்,
“எம் பதம் பெறுவது என்று, இனி?” எனா, அவன்
செம் பதம் எமது பூஞ் சென்னி ஏந்தினேம்.

தனது ஞானதிருஷ்டியினால் வசுக்கள் தேனுவைக் களவாடியதை
யறிந்த வசிட்டமுனிவன்),- ‘நீர்-, உம்பதம் – உமது பதவியை
[வசுக்களாயிருப்பதை], இழந்து-, உததி மண் உளோர் தம் – சமுத்திரத்தினாற்
சூழப்பட்ட பூமியிலேயிருப்பவருடைய, பதம் – நிலையை, பெறுக – அடைவீராக,’
என-, சாபம் கூறலும்-,- ‘எம்பதம் – எமக்குஉரிய பதவியை
[வசுக்களாயிருப்பதை], பெறுவது – (நாங்கள்)மீண்டும் அடைவது, இனி – இனி
மேல், என்று – எப்போது? ‘ எனா – என்றுவினவி,அவன் செம் பதம் –
அந்தவசிஷ்ட முனிவனின் அழகிய திருவடிகளை, எமது பூ 
சென்னி ஏந்தினோம் –
எமது மலரை முடித்தற்குஉரிய சென்னியில் தாங்கினேம்; (எ – று.)

     எமதுசாபத்திற்கு ஒருவிமோசனம் ஏற்படுமாறு திருவருள் புரியவேணுமென்று
வசிஷ்டமுனிவன் பாதங்களில் வணங்கினோ மென்றவாறு. உததி – நீரையுடையது:
கடல்: வடசொல். 

அன்புடை முனி முனிவு ஆறி, ‘மானுடப்
புன் பிறப்பு எழுவரும் புரிந்து மீளுதிர்;
மின் புரை தெரிவை சொல் விழைந்த நீ, அவண்
இன்பம் அற்று, அநேக நாள் இருத்தி’ என்னவே,

அன்புஉடை – கருணையையுடைய, முனி – அவ்வசிட்ட
முனிவன்,முனிவு ஆறி – கோபந்தணிந்து, “எழுவர்உம் – (தேனுவைக் கவர்தற்கு
உடந்தையாயிருந்த) ஏழுபேரும், புல் மானுடம் பிறப்பு புரிந்து மீளுதிர் –
புல்லியமானிடப்பிறவியையெடுத்து (உடனே உமது பதவிக்கு) வந்துவிடுங்கள்: மின்
புரை தெரிவை சொல் விழைந்த – மின்னலைப் போன்ற [பேரொளிபடைத்த]
மனைவியின் சொல்லை விரும்பிக் கேட்டுக் களவைப் பிரதானனாகஇருந்து
செய்த, ‘நீ-, அவண் – அந்தப்பூமியில், இன்பம் அற்று – பெண்ணின்பத்தை நீங்கி,
அநேகம்நாள் இருத்தி – வெகுகாலம் இருப்பாயாக”, என்ன – என்றுகூற,
-(எ-று.) – “செல்வமும்…எண்மருமிழந்தனம்…என” என்று அடுத்த கவியோடு
தொடரும்.

     தெரிவையின்சொல்லை விழைந்து களவாடிய பிரபாசனுக்கு மானுடனாகித்
தெரிவையின்பம்நீங்கி மண்ணுலகிற் பலநாளிருந்து பிறகு தன்
பதவியையடையுமாறும், அவனுக்கு உடந்தையாயிருந்த மற்றையெழுவர்க்கும்
பூமியில் மானுடப்பிறவி யெடுத்துஉடனே மீளுமாறும் சாபவிடை தந்தனன்
வசிட்ட முனிவனென்க.

விண் வரு செல்வமும், விழைவும், மேன்மையும்,
எண்மரும் இழந்தனம்; என்செய்வேம்!” என,
மண் வரு தையலை வணங்க, தையலும்,
பண் வரு மொழி சில பகர்ந்து, தேற்றினாள்:

இங்ஙனம் வசிட்டமுனிவன் சபித்ததனால்), எண்மர் உம் –
(வசுக்களாகிய நாங்கள்) எட்டுப்பேரும்,- விண் வரு செல்வம்உம் –
சுவர்க்கலோகத்துப்பெறுமாறுவருகின்ற ஐசுவரியத்தையும், விழைவு உம்-
போகத்தையும், மேன்மைஉம் -சிறப்பையும், இழந்தனம்- இழந்திட்டேம்:
என்செய்வேம்- (இனி) என்செய்யமாட்டுவேம்? என – என்று, மண் வரு
தையலை வணங்க – பூமியிலிழிகின்றகங்காதேவியை வணங்க, தையல்உம் –
அந்தத் தேவியும், பண் வருமொழிசில -இராகத்தையொத்த சிலசொற்களை,
பகர்ந்து – சொல்லி, தேற்றினாள்- (அவர்களுடையமனவருத்தத்தைச் சிறிது)
ஆறச் செய்தாள்; (எ -று.) – கங்கையாள் தேற்றுவதைமேலிரண்டு செய்யுள்களிற்
காண்க.

வலத்து உயர் தடம் புய வருணனும் குரு-
குலத்தினில் அயன் வரம்கொண்டு தோன்றுமால்;
நலத்துடன் அவன் மனை நண்ணும் எல்லையில்,
நிலத்திடை என்வயின் நீரும் தோன்றுவீர்.-கங்கை வசுக்களைத் தேற்றினமை

வலத்து – வலிமையினால், உயர் – மிக்க, தட புயம் – பெருமை
பெற்ற தோளையுடைய, வருணன்உம்-, குருகுலத்தினில் – குருகுலத்திலே, அயன்
வரங்கொண்டு – அயனுடைய விருப்பத்தினால் [பிரமசாபத்தினால்], தோன்றும் –
உதிப்பான்: (யான்), நலத்துடன் – சிறப்புடனே, அவன் மனை – அவனுடைய
மனைவியாக, நண்ணும் எல்லையில் – (அவனைச்) சேரும்போது, நீரும்-, நிலத்திடை-நிலவுலகத்திலே, என்வயின் – என்னிடத்து, தோன்றுவீர் –
புத்திரராகப் பிறப்பீராக; (எ-று.)- இதுவும், அடுத்தகவியும் – கங்கையாள்
வசுக்களைத் தேற்றியதைத்தெரிவிக்கும். வரம் – விருப்பம். அயன் வரம் –
பிறமனிட்டசாப மென்க.

‘அஞ்சன்மின்; உம்மை நான் அவனி தோயும் முன்
எஞ்ச வீட்டிடுவன்; இவ் இறைவன்தன்னையும்
நெஞ்சு உறத் தந்தைபால் நிறுத்தி, நானும் அவ்
வஞ்சகப் பிறப்பினை மாற்றுவேன்’ என்றாள்.

அஞ்சன்மின் – (பூமியில் எவ்வாறு வசிப்பதென்று)
அஞ்சவேண்டா:நான்-, உம்மை-, அவனி தோயும் முன் – பூமியில் படுவதற்கு
முன்னமே [பூமியில் நீர்பிறந்தவுடனே], எஞ்ச – உயிரொடுங்கும்படி, வீட்டிடுவன்
– இறக்கச்செய்வேன்: இஇறைவன் தன்னைஉம் – பிரபாசனென்கிற தலைமைபெற்ற
இவனையும், நெஞ்சு உற -(பிதாவின்) மனத்திற்குப் பொருந்துமாறிருக்க,
தந்தைபால் – தந்தையினிடத்தில், நிறுத்தி- நிற்கச்செய்து,- நான்உம்-, அ
வஞ்சகம் பிறப்பினை – தீமையால்விளைந்த அந்த(என்னுடைய)
மானுடப்பிறவியை, மாற்றுவேன் – போக்கிடுவேன், என்றாள் – என்று
கூறினாள்; (எ – று.)

     எஞ்ச – சாபங் கழியும்படி யெனினுமாம். அஞ்சன்மின் – ஏவற் பன்மை
வினைமுற்று. அவனி = அவநீ: காத்தற்கு உரியது: பூமி.   

நால்-இரு வசுக்களும் நதிமடந்தை சொல்-
பால் இரு செவிப்பட, படாத நல் தவம்
சால் இரு நிலத்து இழி தாயை, அன்புடன்,
கால் இரு கரத்தினால் கசிந்து, போற்றினார்.-வசுக்கள் கங்கையை வணங்கினமை

நால் இரு வசுக்கள்உம் – வசுக்கள் எண்மரும், நதி மடந்தை –
கங்காதேவியின், சொல் பால் – சொல்லமுதம், இரு செவி பட – (தமது)
இரண்டுகாதிலே விழ, படாத நல்தவம் சால் – அழியாத சிறந்த தவப்பயன்
பொருந்திய,இருநிலத்து இழி – பெரிய பூமியிலே யிழிகின்ற, தாயை –
கங்கையாளை, கசிந்து -மனமுருகி, அன்புடன் – அன்போடு, கால் –
பாதங்களிலே, இரு கரத்தினால் – (தமது)இரண்டு கைகளினாலும், போற்றினார் –
வணங்கினார்கள்;(எ-று.)

     எப்படிப்பட்டவரும் தவப்பயனைப் பெறுதற்குரிய புண்ணிய பூமி
பூதலமே யாதலால், ‘படாத நற்றவஞ்சா லிருநிலம்’ என்றது. ‘படர்ந்தநல்லறம்’
என்றும்பாடம். போற்றுதல் – வணங்குதல்: “வந்தித்தல்போற்றல்வணங்கலாகும்”
என்றது, பிங்கலந்தை.     

சதைய மீன் கடவுளும், சசிகுலத்து நல்
விதை என மேதினிமீது தோன்றினான்;
துதை அளி செறி குழல் தோகை ஆயினாள்,
இதையம் உற்று உயர் நதி என்னும் மின்னுமே.-வருணனும் கங்கையும் மண்ணில் தோன்றினமை

சதையம் மீன் கடவுள்உம் – சதயமென்ற நட்சத்திரத்துக்கு உரிய
கடவுளான வருணதேவனும், சசிகுலத்து – சந்திரகுலத்திலே, நல்விதை என –
சிறந்தவித்துப்போல, மேதினிமீது – பூமியின்மேல், தோன்றினான் – பிறந்தான்;
இதையம்உற்று – நன்மனம் பொருந்தி, உயர் – மேன்மைபெற்ற, நதி என்னும் –
நதியென்கிற,மின் உம் – மின்னல்போன்ற பெண்ணும், துதை – நெருங்கிய,
அளி – வண்டுகள்,செறி – நெருங்கிய, குழல் – கூந்தலையுடைய, தோகை
ஆயினாள் -மானுடப்பெண்ணானாள்;    (எ – று.)

     இது, வருணன் பூமியில் குருகுலத்திற் பிறக்க, கங்கையாளும்
மானுடமகளாதலைக் கூறும். பிரதீபமன்னனுக்குப் பிறந்தகுமாரருள் சந்தனு,
இரண்டாமவனாயிருந்தும் முதல்வனான தேவாபிபோல இளமையிலேயே
கானகஞ்செல்லாது இல்லறத்தைப் பூண்டு ஒழுகியதனால் வீடுமன் முதலியோர்
தோன்றிக் குருகுலம் பெருக்கியமையின், ‘சசிகுலத்து நல்விதை யென’ என்று
கூறியதென்பர். சசி = சசீ: முயலை (முயல்போன்றகறையை) யுடையது:
காரணப்பெயர். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு தேவதையுண்டு : சதய
நட்சத்திரத்திற்கு வருணன் தேவதை : ஆதலால், வருணனை ‘சதையமீன்கடவுள்’
என்றார். மேதினி = மேதிநீ: மதுகைடபர்களின் மேதசினால்[உடற்கொழுப்பினால்]
நனையப்பெற்ற தென்று அவயவப்பொருள். வண்டுகள்மொய்த்தல் தேவமாதர்க்கன்றி,
மானுடமகளுக்கே யுரியதாதலால், ‘துதையளி செறிகுழல்தோகை’ என்றதனால்
மானிட மகளென்பது பெறப்படும். தோகை, மின் – ஆகுபெயர்கள்

தவம் உறக் குட திசைத் தலைவன் தாரமாம்
அவள் வயிற்று உதித்தனர், அந்த எண்மரும்;
உவகையின், பெரும! நீ உணர்ந்துகொள்க!’ என,
இவள் திருக் கணவனும் இன்ன கூறுவான்:-கங்கையின் வயிற்றில் வசுக்கள் பிறந்தமை

தவம் உற – நல்வினை பொருந்துதலால், குடதிசை தலைவன்
தாரம்ஆம் – மேற்குத்திக்குக்குத் தலைவனான வருணதேவனுக்கு மனைவியான,
அவள்வயிற்று – அந்தக் கங்காதேவியின் வயிற்றிலே, அந்த எண்மர்உம்
உதித்தனர் – அந்தஅஷ்ட வசுக்களும் (முறையே) பிறந்தார்கள்: பெரும-
பெருமையுடையோனை! நீ-,உவகையின் – மகிழ்வோடு, உணர்ந்துகொள்க-
(இச்செய்தியை)  அறிந்துகொள்க, என -என்று (கங்கையாள்) கூறி நிற்க,- இவள்
திரு கணவன்உம் – இந்தக் கங்கையாளின்சிறந்த கணவனான சந்தனுவும்,
இன்ன – இவ்வாறான வார்த்தைகளை, கூறுவான் -சொல்பவனானான்; (எ-று.) –
கணவன் கூறுவன மேற் செய்யுளிற் காணப்படும்.

     வருணன் மனைவியான கங்கையாளிடத்து வசுக்களெண்மரும்
தோன்றினாரென்று கங்கையாள் தான் கூறிய வரலாற்றினை முடிக்க, பின்பு சந்தனு
கூறத்தொடங்கினா னென்பதைத் தெரிவிப்பது, இது. கங்கையாள்தன் பழஞ் சரித்திரங்
கூறிய முகத்தால், சந்தனுவை இன்னானென்றும், தன்னாற்கொல்லப்பட்ட குழந்தைகள்
எழுவரும் வசுக்களென்றும், ஈற்று மகவு பிரபாசனென்றவசு என்றும், மன்னவன்
இத்துணைநாள்பெற்ற குழந்தைகளைக் கொன்றதற்குஇரங்காது இப்போது
இரங்கித்தடுத்ததற்குக் காரணமும் கூறியவாறு காண்க. 

அறப் பயன் என்னுமாறு, அறிவு இலா எமைப்
பிறப்பு உணர்த்தினை, மகப்பேறு செய்து நீ;
இறப்பவர் எழுவரோடு ஏகலா உயர்
சிறப்புடை இனையவன் செய்வது என்?’ என்றான்.-எட்டாம் மகன் தன்மை-பிறப்பு உணர்த்தியமைக்குக் கொண்டாடி,சந்தனு கங்கையாளை இச்சிறுவன்செய்வதென்னென்று வினாவுதல்.

அறம்பயன் என்னும் ஆறு – தருமத்தின் பயனென்று கருதுமாறு
(வந்து), நீ-, மகப்பேறு செய்து – புத்திரப்பேற்றை (எனக்கு) உண்டாக்கி, அறிவு
இலாஎமை – பிறப்புணர்ச்சியற்றிருந்த எங்களை, பிறப்பு உணர்த்தினை –
(எங்கள்)பிறப்பையும் அறிவித்தாய்: இறப்பவர் எழுவரோடு –
இறந்துபடுதலையுடையரான ஏழுவசுக்களுடனே, ஏகலா – (தன்பதவிக்குச்)
செல்லுதற்கு உரியவனல்லாத, உயர் சிறப்புஉடை – மிக்க சிறப்பினையுடைய,
இனையவன் – இந்தக் குமாரன், செய்வது -செய்யவேண்டுவது, என் – யாது?’
என்றான் – என்று வினாவினான்; (எ-று.) -புதல்வனையும் உளப்படுத்தி ‘எமை’
என்றது.

முக் குலத்து அரசினும் முதன்மையால் உயர்
இக் குலத்து, இவன் அலாது இல்லை மா மகார்;
அக் குலத் தவ முனி அருளினால், இவன்
மெய்க் குலத் தந்தையாம் விழைவும் இல்’ என்றாள்.–கங்கையாள் எட்டாங்குழந்தையின் தன்மையைப்பற்றி மன்னவனிடங்கூறுதல்.

முக்குலத்து அரசின்உம் – (சூரியன் சந்திரன் அக்கினி என்ற)
மூன்றுக்ஷத்திரியகுலங்களி னரசருள்ளும், முதன்மையால் உயர் – முதல் தரமான
தன்மையைக்கொண்டு மேம்பாடுபெற்ற, இ குலத்து – இந்தக் குலத்திலேபிறந்த,
இவன்அலாது – இவனையல்லாமல், மா மகார் – பெருமைபெற்ற புதல்வர்,
இல்லைவேறொருவரும் இல்லை: அ – அந்த  [பிரசித்தமான], குலம் –
சிறப்புள்ள, தவம் முனிஅருளினால் – தவத்தைக்கொண்ட வசிட்ட முனிவனது
கருணையினால், இவன் -இந்தக் குமாரன், மெய் குலம் தந்தை ஆம் விழைவுஉம்
– உண்மையையுடையகுலத்திலே தந்தையாதற்கு ஏற்ற விருப்பமும், இல் –
உடையவனாகான், ‘என்றாள் -என்று (அந்தக் குமாரன் செய்தியைக் கங்கையாள்)
தெரிவித்தாள்; (எ -று.)

     தேனுவைக்கவர்ந்த பிரபாசனென்ற வசுவைப் பெண்ணின்ப மற்றிருக்கும்படி
வசிட்டமுனிவன் சபித்தா னாதலால், ‘தந்தை யாம் விழைவும்
குலத்தவமுனியருளினால்இவனுக்கு இல்’ என்றாள். சாபத்தை ‘அருள்’ என்றது-
இங்ஙன்சாபம் தராவிடில்அந்தத் தீவினைப்பயனை வேறு வகையாக நுகரவேண்டி
வருமாதலாலும், அங்ஙன்இல்லாதபடி செய்ததனாலுமாம்.
‘அக்குலத்தவமுனியருளினால்’ என்றது – முன்னும்பின்னும் இயைதலால்,
மத்திமதீபம். ‘தந்தையால்’ எனவும்பாடம்

மன்னவர் தொழு கழல் மன்னன், ‘மைந்தனோடு
இன்னமும் ஒருவனை இனிது அளித்து, நாம்
பன்னக நெடு முடிப் பார் களிக்கவே,
பொன்னகர் இருவரும் போதும்’ என்னவே,–மன்னவன் விருப்பம்–இன்னமொரு புதல்வனைப்பெற்றபின் விண்ணுலகு சேரலாம்’ என்று
மன்னவன் கங்கையாளிடம் கூறுதல்.-மூன்று கவிகள் – ஒருதொடர்.

மன்னவர் தொழு கழல் மன்னன் – அரசர்கள் வந்து
வணங்குகின்றபாதங்களையுடைய சந்தனுராசன், ‘மைந்தனோடு –
இந்தப்புதல்வனுடனே, பன்னகம்நெடு முடி பார் களிக்க – ஆதி சேஷனுடைய
நெடிய தலைமீதிருக்கும் பூமிகளிக்கும்படி, இன்னமும்-, ஒருவனை –
ஒருபுத்திரனை, இனிது அளித்து – இனிதுதந்து, (பிறகு), நாம்-, இருவரும்-,
பொன் நகர் – தேவலோகத்துக்கு, போதும் -போவோம்,’ என்ன – என்று (தன்
கருத்தைத்) தெரிவிக்க-; (எ -று.) இச்செய்யுளில்,என்ன என்பது மேல் 78 ஆம்
கவியில் வரும் ‘எனா’ என்பதோனோடு இயைய, அது ‘தழீஇ ஏகினாள்’ என்று
தொடர்ந்து முடியும்.

     இப்போது பிறந்துள்ளபுதல்வன் பெண்ணின்பமற்று வைராக்கியசாலியாக
இருத்தற்கு உரியவனாதலால், சந்ததி விருத்தி செய்பவனாய்ப் பூமியை யாளுதற்கு
ஏற்றமற்றொருபுதல்வனைப் பெற்றபின் இருவரும் விண்ணுலகஞ் செல்வோமென்று
கங்கையாளிடம் சந்தனு தன் கருத்தினைத் தெரிவித்தானென்க. ‘அளித்தும்’ என்று
எடுப்பின், தன்மைப்பன்மை வினைமுற்றாம். ஆதிசேஷன் உலகின் கீழிலிருந்து
தாங்குகின்றானென்ற ஒருசார் நூற்கொள்கைபற்றி, ‘பன்னகநெடுமுடிப்பார்’ என்றது.

போய் இருந்து என் பயன்? போகம் பல்வகை-
ஆய் இருந்தன எலாம் அருந்தி, இன்னமும்
மா இருந் தரணியில் மன்னு சில் பகல்
நீ இருந்து, அரசியல் நிறுத்தி, மீளுவாய்.-கங்கையின் அறிவுரை

நீ-, போய் – (விரைவிலே விண்ணுலகத்திற்குச்) சென்று, இருந்து –
அங்கேயிருந்து, என் பயன் – யாதுபயன்? [யாதொருபயனுமில்லை]: பல் வகை
ஆய்இருந்தன போகம் எலாம் அருந்தி – பலவகையாயிருந்த
போகங்களையெல்லாம்அனுபவித்து, இன்னமும்-, மா இரு தரணியில் –
மிகப்பெரிய பூமியிலே, மன்னு சில்பகல் இருந்து – பொருந்திய சிலநாள்
தங்கியிருந்து, அரசியல்நிறுத்தி – அரசாட்சியைநிலைநிறுத்தி, மீளுவாய் –
(பின்பு) திரும்பிவருவாய்; (எ -று.)

     இந்தச்சந்தனுவுக்கு இப்போதே இவ்வுலகத்தை விட்டிடும்படி மனத்தில்
விழைவுஅறாமையால், ‘போயிருந்தென்பயன்’ என்றாள்: இதனால், தான்
இப்போதேசெல்வதைக் குறிப்பித்தாளாயிற்று. (எ – று.) 

இப் புதல்வனும் இனி என்னொடு ஏகியே,
மெய்ப் படு காளையாம் பதத்து, மீள நின்
கைப்படுத்துவல்’ என, கணவனைத் தழீஇ,
அப் பெரும் புதல்வனோடு அவளும் ஏகினாள்.–பெற்ற மகனோடு கங்கை பிரிந்து செல்லுதல்

இ புதல்வன்உம் – இந்தப்புத்திரனும், இனி என்னோடு ஏகி –
இப்போதுஎன்னுடன் வந்து, மெய்படு காளை ஆம் பதத்து – உடம்பிற்
காணப்படுகின்றகாளைப்பருவத்தில், மீள – (உன்னிடம்) திரும்பி வருமாறு, நின்
கை படுத்துவல் – உன்கையிற் சேரச்செய்வேன், எனா – என்று சொல்லி,-
கணவனை தழீஇ- (தன்)கணவனைத் தழுவிக்கொண்டு, அ பெரு புதல்வனோடு –
பெருமைபெற்றஅந்தப்புத்திரனோடு, அவள்உம் – அந்தக் கங்கையாளும்,
ஏகினாள் – சென்றாள்; (எ- று.)

அன்று தொட்டு இவனும் அகன்ற பூங்கொடியை அழகுற எழுதி
முன் வைத்தும்,
ஒன்றுபட்டு உவமைப் பொருள்களால் கண்டும், உரைத்தவை
எடுத்து எடுத்து உரைத்தும்,
மன்றலில் தலைநாள் விழைவொடும் மணந்த மடந்தையர்
வதனமும் நோக்கான்,
‘என்று இனிக் கிடைப்பது?’ என்று உளம் வருந்தி, எண்ணும் நாள்
எல்லை ஆண்டு இருந்தான்.காவலன் வருந்தி வைகுதல்

அன்று தொட்டு – அன்று முதல், இவண்உம் – இந்தச்
சந்தனுவும்,அகன்ற – (தான்) பிரிந்த, பூங் கொடியை – பூங்கொடி போன்ற
கங்கையாளை, அழகுஉற எழுதி – அழகுபொருந்த (ப்படத்திலே) எழுதி,
முன்வைத்துஉம் – (தன் ) முன்னேவைத்துக்கொண்டு தரிசித்தும், ஒன்றுபட்டு-
(மனம்) ஒருமித்து, உவமை பொருள்களால்- உபமானமாதற்கு உரிய
பொருள்களாலே, கண்டுஉம் – (அவளை) ஒருவாறுகண்டும்,உரைத்தவை –
(அவள் தன்னுடன்) கூறியபேச்சுக்களை, எடுத்துஎடுத்து உரைத்துஉம் –
பலமுறையெடுத்துச் சொல்லியும், தலைநாள் விழைவொடுஉம் மன்றலில் மணந்த
மடந்தையர்வதனம்உம் நோக்கான் – முற்காலத்திலே விரும்பிக்
கலியாணஞ்செய்துகொண்டுமணந்த பெண்களின் முகத்தையும் கண்ணெடுத்துப்
பாராதவனாய்,- என்று கிடைப்பதுஇனி என்று- ‘(அந்தக்கங்கையாளின் தரிசனம்)
இனிக்கிடைப்பது எப்போதோ?’ என்றுநினைந்து, உளம் வருந்தி – மனம்
வருத்தமடைந்து, எண்ணும்நாள் எல்லை -எண்ணுதற்கு உரிய கால
வெல்லையிலே, ஆண்டு – அரசுபுரிந்து, (தன்நகரில்),இருந்தான்-; (எ -று.)

     முன்மணந்த மடந்தையரைக் கண்ணெடுத்துப்பார்த்தலும் செய்யாது,
கங்கையாளின் எண்ணமே மனத்துநிற்கத் தன்நாளை வருத்தத்துடன்
கழித்துவருவானாயினன் சந்தனுவென்க. உவமைப் பொருள்களால் காணுதல் –
மின்னல்மயில் வஞ்சிக்கொடி என்று இன்னோரன்ன பொருளைக் கண்டு
அந்தக்கங்கையாளைக் கண்டாற்போன்று சிறிதுமனந்தேறுதல். கங்கையாள்
‘காளையாம் பதத்து மீள நின் கைப்படுத்துவல்’ என்று கூறிச்
சென்றிட்டாளாதலால்,அதையே மன்னவன் மனத்தில் எண்ணிக்
கொண்டிருத்தலால், அந்தக்காலவெல்லையை ‘எண்ணுநாளெல்லை’ என்றது.
இருபத்தாறியாண்டுகள் சென்றபின், வீடுமனைக் கூடினானென்று பாலபாரதத்திற்
கூறப்பட்டுள்ளது.

     இது முதலிருபத்தெட்டுக்கவிகள் – இரண்டு நான்கு ஏழாஞ் சீர்கள்
மாச்சீர்களும், மற்றை நான்கும் விளச்சீர்களுமாகிவந்த எழுசீராசிரியவிருத்தங்கள். 

பின் ஒரு தினத்தில், அமைச்சரும், பிறரும், பெரும் படைத்
தலைவரும், சூழ;
முன் ஒரு தினத்தின் வனத்து மா வேட்டை முன்னினன்
முயன்று போய், முற்றி;
மின் ஒரு வடிவு கொண்டெனச் சிறந்த மெல்லியல், மீண்டு
உறை மறையும்
தன் ஒரு மதலை, ஆக்கமும் கருதி; சானவித் தடங் கரை
அடைந்தான்.சந்தனு கங்கைக் கரையை அடைதல்

பின்பு ஒரு தினத்தில் – பின்பு ஒரு நாள், அமைச்சர்உம்
பெரும்படைத்தலைவர்உம், பிறர்உம் சூழ – மந்திரிமார்களும் சேனாபதிகளும்
மற்றையோரும் சூழ்ந்துவர, முன் ஒரு தினத்தின் – முன்பு ஒரு தினத்தில்
(வந்ததுபோல), வனத்து – காட்டில், மா வேட்டை – மிருக வேட்டையை,
முன்னினன்- செய்யக் கருதியவனாய், (அதன் பொருட்டு), முயன்று போய்-,
முற்றி- (வேட்டையை)முடித்திட்டு, (பிறகு), மின் ஒரு வடிவுகொண்டு என சிறந்த
மெல்லியல் – மின்னல்ஒருவடிவத்தைக் கொண்டாற்போலச்  சிறந்தமடவாளையும்,
மீண்டு -(தன்னிடத்தினின்ற)நீங்கி, உறை மறையும் – நீரினுள்ளே மறைந்து
சென்ற, தன் ஒரு மதலை -தன்னுடைய ஒப்பற்ற புதல்வனுடைய, ஆக்கம்உம் –
வளர்ச்சியையும், கருதி – நினைந்து, சானவி தட கரை – கங்கையின் பெரிய
கரையிலே, அடைந்தான் – போய்ச்சேர்ந்தான்;

     முன்பு ஒருமுறை வேட்டையாடச் சென்றதுபோலவே இப்போதும் அமைச்சர்
முதலியோர் சூழ வேட்டையாடி அத்தொழிலை 
முற்றிய சந்தனு தன்மனைவியையும்,
குமாரன் இப்போது எவ்வாறு வளர்ந்துள்ளான்என்பதையும் காணக்கருதி, மீண்டும்
கங்கைக் கரையை அடைந்தன னென்க. ‘கங்கைக்கரையைச் சேர்ந்தால் ஒருகால்
கங்கையாளையும் வளர்ந்த தன்புதல்வனையும் காண நேருங்கொல்லோ? என்று
அங்கு மன்னவன் சென்றானென்றவாறு.  சானவி-ஜாஹ்நவீயென்ற வடசொல்லின்
திரிபு: பகீரதசக்கரவர்த்தியின்பின்னேசென்ற கங்கை வழியிடையே ஜஹ்நுமுனிவரின்
வேள்வியை யழிக்க,அவர்பருகி அந்தப்பகீரதனது வேண்டுகோளினால் தமது
காதியின்வழியாகவிட்டதனால், கங்கைக்குச் சானவியென்று பெயர். அமைச்சர் –
அமாத்யரென்றவடசொல்லின் திரிபென்பர்.

பண்டு, தான் அவளை எதிர்ப்படும் கனகப் பைங் கொடிப் பந்தர் வான் நிழலும்,
வண்டு அறா நறைப் பூஞ்சோலையும், தடமும், மருங்கு அலை மலய மாருதமும்
புண்டரீகமும் செங் காவியும் கமழும் புளினமும், புள் இன மென் துறையும்,
கண்டு, ‘காரிகையை இம்மையில் இன்னும் காண்குமோ!’ என,மனம் கசிந்தான்.

பண்டு – முன்பு, தான்-, அவளை – அந்தக் கங்கையாளை,
எதிர்ப்படும் – எதிர்ப்பட்ட, கனகம் பைங்கொடி பந்தர் வான் நிழல் உம் –
பொன்போலருமையான பசிய பூங்கொடிப் பந்தரின் சிறந்த நிழலும், வண்டு
அறா நறைபூஞ் சோலைஉம் – வண்டுகள் நீங்காத வாசனையுள்ள
பூஞ்சோலையும், தடம்உம் -கங்கைக்கரையும், மருங்கு அலை மலயமாருதம்உம்
பக்கத்திலே வீசுகின்ற தென்றற்காற்றும், புண்டரீகம்உம் செங் காவிஉம் கமழும்
புளினம்உம் – தாமரையும்செந்நிறக்காவியும் நறுமணம்வீசுகின்ற மணற்குன்றும்,
புள் இனம் மெல் துறைஉம் -பறவைக்கூட்டங்கள் தங்குகின்ற மெல்லிய
நீர்த்துறையும், கண்டு-, காரிகையை -பெண்ணை, இம்மையில் – இப்பிறப்பில்,
இன்னும் காண்கும் ஓ என – இன்னும்காண்போமா! என்று, மனம் கசிந்தான் –
மனமுருகினான்;  (எ-று.)

     இதனால், மன்னவன் வேறொன்றிலும் மனஞ்செல்லாது
கங்கையாளிடத்துத்தானேமனம்பற்றியிருந்தமை வெளியாம். மலயமாருதம் –
மலய மலையினின்று வீசுங்காற்று:தென்றல். ‘எதிர்ப்படும்’ என்றது –
இயல்பினால்வந்த காலவழுவமைதி. செங்காவி -செங்கழு நீர் மலர்

பிரிந்த நாள் எண்ணி, பகீரதிப் பெருக்கைப் பேதுறும் குறிப்பொடு நோக்கி,
கரிந்த பாதவம்போல் நின்ற அப் பொழுதில், கால் பொரக் குனித்தகார்முகமும்,
தெரிந்து மேன்மேலும் தொடுத்த சாயகமும், சிலம்பு எனத் திரண்ட தோள் இணையும்,
விரிந்த நூல் மார்பும், ஆகி முன் நடந்தான், விழி களித்திட, ஒரு வீரன்.சந்தனு தேவவிரதனைக் கண்டு வியத்தல்

பிரிந்த நாள் எண்ணி – (கங்கையாளைப்) பிரிந்த நாளைக்
கணக்கிட்டு,- பகீரதி பெருக்கை – கங்கையின் வெள்ளத்தை, பேது
றும் குறிப்பொடு
– கலக்கமுற்ற எண்ணத்தோடு, நோக்கி – பார்த்து, (சந்தனுமன்னவன்), கரிந்த
பாதவம்போல் – தீய்ந்த மரம்போல, நின்ற – வாடிநின்ற, அ பொழுதில்-, -கால்
பொர குனித்த கார் முகம்உம் – (இரண்டு) முனையும் பொருந்த வளைத்தவில்லும்,
தெரிந்து – ஆராய்ந்து எடுத்து, மென்மேலும்-, தொடுத்த – பிரயோகித்த,சாயகம்உம்
– அம்பும், சிலம்பு என திரண்ட தோள் இணைஉம் – மலைபோலத்திரண்டுள்ள
தோள்கள் இரண்டும், விரிந்த – பரந்த, நூல் மார்புஉம் – பூணூலைப்பூண்ட மார்பும்,
ஆகி – உடையவனாகி, விழி களித்திட – (தன்) கண்கள் களிப்ப, ஒருவீரன்-, முன்
நடந்தான் – எதிரே வந்தான்; (எ -று.)

     சந்தனு மனக்கலக்கத்தோடு அந்தக்கங்கைப்பெருக்கைப் பார்த்துக் கொண்டு
வாட்டமுற்று நின்ற சமயத்தில், அங்கு ஒரு வீரன் அவ்வரசன் கண்களிக்கும்படி
எதிரேவந்தன னென்க. பகீரதி = பாகீரதி: பகீரதனாற் பூமியிற் கொணரப்பட்டவள்.
கார்முகம் – போர்த் தொழிலிற் சிறப்பது. பகீரதிநோக்கிப் பெருந்தகை
பெருந்திகைப்பெய்தி என்றும் பாடம்.  

வியந்திட வரும் அக் குரிசிலை, ‘இவனே விடையவன் குமரன்!’
என்று அயிர்க்கும்;
‘வயந்தனில் உலவும் மதன்கொலோ!’ என்னும்; ‘வாசவன் மதலை!’
என்று எண்ணும்;
‘உயர்ந்தவர் இவனின் வின்மையின் இல்லை ஒருவரும்
உலகின்மேல்!’ என்னும்;
பயந்த தன் வடிவின் படி எனத் திகழும் பான்மையை நினைந்திலன்,
பயந்தோன்!

 பயந்தோன்- (அந்தக் குமாரனைப்) பெற்ற மன்னவன், பயந்த –
பெற்ற, தன் – தன்னுடைய, வடிவின்படி என – வடிவத்தின் மாதிரிவடிவம் என்று,
திகழும் – விளங்குகின்ற, பான்மையை – தன்மையை, நினைந்திலன் –
நினையாதவனாகி, – வியந்திட – கொண்டாடும்படி, வரும் – வருகின்ற, அ
குரிசிலை -அந்த வீரனைப்பற்றி, ‘இவன்-, விடையவன் குமரன் ஏ –
விருஷபத்தைவாகனமாகவுடைய சிவபெருமானுடைய குமரன் தானோ?’ என்று-,
அயிர்க்கும் -சந்தேகிப்பான்: ‘வயந்தனின் – வசந்த காலத்திலே, உலவும் –
சஞ்சரிக்கின்ற, மதன்கொல்ஓ – மன்மதனோ? என்னும் – என்பான்: வாசவன்
மதலை (கொல்) என்றுஎண்ணும் – ‘இந்திரகுமாரன்தானோ?’ என்று எண்ணுவான்:
‘வின்மையின் – வில்தொழிலில், இவனின் உயர்ந்தவர் – இவனைக்காட்டிலும்
மேம்பட்டவர், உலகின்மேல் – இவ்வுலகில், ஒருவரும்-, இல்லை-,’ என்னும் –
என்பான்; (எ – று.)

     குமரன் = குமாரன்; மன்மதனையும் குற்சிதனாக [இழிந்தவனாக] (த்
தன்வடிவழகினாற்) செய்பவனென்பது, உறுப்புப்பொருள்: இவ்வடசொல் – முதலில்
முருகக்கடவுளுக்குஆகி, பிறகு அவன் போல் அழகுஆற்றல்களையுடையபுத்
திரனைக்காட்டும். வயந்தன் = வஸந்தன். வயந்தம் – சித்திரை
வைகாசிமாதங்கள். வயந்தனின் உலவுமதன்கொலோஎன்பதற்கு – தென்றலாகிய
தேரிலே யுலாவுகின்ற மன்மதனோ? என்ற பொருள்கொள்ளினுமாம்; இவ்வுரைக்கு,
வயந்தன் – தென்றல். மதன் – மன்மதன்என்பதன் நாமைகதேசம்: இனி,
மதன் – மதத்தை [காமக்களிப்பை] யுண்டாக்குபவனுமாம். வாசவன் –
வசுக்களுக்குத்தலைவன்: இந்திரன்: வசு – ஒருதேவசாதி இவன்
விடையவன்குமரனே என்றுஏகாரத்தைமாற்றி வினாப்பொருளாக உரைக்க

தந்தை என்று இவனை உணர்கிலா மதியால், சராசனம் தழுவுற
வளைத்து,
மைந்தனும், ஒரு போர் மோகனக் கணையால் மறையுடன் மார்பு
உற எழுதி,
இந்திர தனுவோடு இந்திரன் எழிலி- இடை மறைந்தனன் என,
புடையே
சிந்திய திவலைச் சிந்துவின் மறைந்தான்; அரசனும் மகிதலம்
சேர்ந்தான்.-மகன் கணையால் மன்னன் மயங்கி வீழ்தல்

மைந்தன்உம் – அந்தக்குமாரனும்;- இவனை –  இந்தச் சந்தனு
மன்னவனை, தந்தைஎன்று – தகப்பனென்று, உணர்கிலா – அறியமாட்டாத,
மதியால் -புத்தியினால் [மன்னவனைத் தன் தந்தையென
அறியமாட்டாமையினால்], சராசனம் -வில்லை, தழுவுற – (இரண்டுமுனையும்)
தழுவுதல்பொருந்த, வளைத்து-, ஒரு -ஒப்பற்ற, போர் – போருக்குஉரிய,
மோகனம்கணையால் – மோகத்தையுண்டாக்கவல்லஅம்பை
[மோகனாஸ்திரத்தினால்], மறையுடன் – (அதற்கு உரிய) மந்திரத்துடனே,
மார்புஉற எழுதி – (அம்மன்னவனுடைய) மார்பிலே அழுந்தித்தைக்குமாறு
தொடுத்து,(பிறகு) இந்திரதனுவோடு இந்திரன்எழிலியிடைமறைந்தனன்என –
இந்திரதனுசுடனேஇந்திரன் மேகத்திலே மறைந்தனன்போலுமென்னும்படி,
புடையே சிந்தியதிவலை -பக்கத்திற்சிந்துகின்ற நீர்த்திவலைகளையுடைய,
சிந்துவின் – கங்காநதியிலே,மறைந்தான்-; அரசன்உம் – (மோகனக்கணையால்
தீண்டப்பட்ட) அரசனும், மகிதலம்சேர்ந்தான் – பூமியிலே சேர்ந்தான்
[மூச்சொடுங்கித் தரையிலே விழுந்திட்டானென்றபடி]; (எ -று.)

     மோகனக்கணையை மன்னவனது மார்பிலே யழுந்தித்தைக்க எய்திட்டு,
அக்குமாரன் யாற்றுநீர்ப்பெருக்கிலே மறைந்தானாக. மன்னவன் தன்னிலை தப்பிப்
பூமியில் விழுந்தன னென்க.

காதலன் அயர்வும், திருமகன் புனலில் கரந்ததும், கண்டு,
உளம் உருகி,
மேதகு வடிவு கொண்டு, மற்று அந்த வெஞ் சிலை
விநோதனும் தானும்,
ஓத வெண்திரையின் மதியுடன் உதித்த ஒண் மலர்க் கொடி என ஓடி,
தூதுளங்கனிவாய் மலர்ந்து, இனிது அழைத்து, சூடகச் செங் கையால்
எடுத்தாள்.–கங்கை காவலனைத் தெளிவித்தல்

காதலன் அயர்வு உம்-(தனது) அன்பிற்கு உரியனான சந்தனு
மூர்ச்சித்திருத்தலையும், திருமகன் புனலில் கரந்ததுஉம் – சிறந்தபுத்திரன் தன்
வெள்ளநீரிலே மறைந்ததையும், கண்டு -, (கங்கையாளும்), உளம் உருகி –
மனங்கரைந்து, மற்று – பிறகு, மேதகு வடிவுகொண்டு – மேன்மைதக்க
வடிவத்தையெடுத்துக்கொண்டு, 
அந்த வெம் சிலை வினோதன்உம் – அந்தவெவ்விய
சிலையைக் கொண்டு விளையாடுபவனாகிய புத்திரனும், தான்உம்-,- ஓ தம்
வெள்திரையின் மதியுடன் உதித்தஒள் மலர் கொடி என – பெருக்கைக் கொண்ட
வெண்ணிறமுள்ள அலைகளையுடையபாற்கடலினின்று சந்திரனுடனேயுதித்த அழகிய
மலரைக் கொண்ட கொடிபோன்றஇலக்குமிபோல், ஓடி – விரைந்துவந்து, தூதுளைகனி
வாய் மலர்ந்து -தூதுளங்கனியையொத்த [செந்நிறமான] வாயைத் திறந்து, இனிது
அழைத்து  -இனிமையாகக் கூப்பிட்டு, (அந்தச்சந்தனுவை), சூடகம் செம் கையால்
– சூடகமென்றவளையலை யணிந்த (தன்னுடைய) அழகிய கைகளால்,
எடுத்தாள்-; (எ -று.)

     ஓதவெண்டிரை – பாற்கடலுக்கு அன்மொழித்தொகைப் பன்மொழித்தொடர்:
ஒண்மலர்க்கொடி யென்பதும்அவ்வாறே. வெண்ணிறமுள்ள கங்கைநீர்
வெள்ளத்தினின்றுகலைகள்நிரம்பிய புத்திரனுடனே கங்கையாள் வந்தது –
பாற்கடலினின்றுபதினாறுகலைகளும் நிரம்பிய சந்திரனுடனே இலக்குமி
வெளிவந்ததுபோலுமென விரித்துப் பொருள் காணலாம். “நிதிநேவலக்ஷ்மீ:” என்று
பாலபாரதத்திலிருப்பதற்குஏற்ப, ‘நிதியுடனுதித்த வொண்மலர்க்கொடி’ எனப்
பாடமிருப்பினுமாம். இனி,சிலைவினோதனும் தானும் எடுத்தாள் – பால் விரவிச்
சிறப்பினால் ஒருமுடிபைப்பெற்றது. 

வாடிய தருவில் மழை பொழிவதுபோல் மடவரல் கருணைநீர் பொழிய,
கூடிய உணர்வோடு எழுந்த காவலனைக் கொங்கை மார்புறத்
தழீஇக்கொண்டு,
‘நாடிய கருமம் வாய்த்தது!’ என்று உவகை நலம் பெற, தந்தை
பைங் கழற் கால்
சூடிய மகவைக் கைக் கொடுத்து, இவளும் தோன்றலோடு இவை
இவை சொன்னாள்:–மகனை மன்னனிடம் கொடுத்துக் கங்கை மறைதல்

வாடிய தருவில் – (வெயிலின் வெப்பத்தினால்) வாட்ட
மடைந்தமரத்தினிடத்து, மழைபொழிவதுபோல்-, (மூர்ச்சித்துக் கிடக்கும்
மன்னவன்மீது),மடவரல் – கங்காதேவியாகிய பெண், கருணை நீர் பொழிய –
(தான்)கருணைநீரைச்சொரிய, கூடிய – மீண்டு வந்து சேரப்பெற்ற. உணர்வோடு –
உணர்ச்சியுடனே, எழுந்த-, காவலனை – அந்தச்சந்தனுமன்னவனை, கொங்கை
மார்புறதழீஇக் கொண்டு – ஸ்தநங்களோடுகூடிய மார்பிலே கட்டி யணைத்துக்
கொண்டு, ‘நாடிய கருமம் வாய்த்தது – (நாம்) கருதிய காரியம் சித்தித்தது,’
என்று-, உவகை -மகிழ்ச்சியோடு, நலம்பெற – அழகு பொருந்த, தந்தை பைங்
கழல் கால் சூடிய மகவை- தந்தையின் பசும்பொன்னாலியன்ற
வீரக்கழலையணிந்த பாதங்களைச்சூடியஅந்தவீரனாகிய புத்திரனை, கைக்கொடுத்து
– (தந்தையின்) கையிலே ஒப்பித்துவிட்டு,அவள்உம் – அந்தக் கங்கையாளும்,
தோன்றலோடு – ஆண்களிற்சிறந்தோனாகியசந்தனுமகாராசாவினிடத்தில், இவை
இவை – இவ்விவ்வார்த்தைகளை, சொன்னாள்-:(எ-று.)- இவை யிவைஎன்று
சுட்டியவற்றை, மேலிரண்டுகவிகளிற் காண்க. காவலனைஎன்றவிடத்துக் காதலனை
என்றும் பாடம்.

     82-ஆம் பாடலில், ‘கரிந்தபாதவம்போல்’ என்று கூறியதை யொட்டி,
‘வாடிய தருவில் மழைபொழிவதுபோல்’ என்றார்: உவமையணி. புத்திரனைச்
சேர்ப்பிக்கவேண்டுதலாகிய தான் நாடிய கருமம் மன்னவனைத் தேடிக்கொண்டு
போகவேண்டிய பணியில்லாமல் அம்மன்னவனே தன்னருகுவந்ததனால்,
நாடியகருமம்வாய்த்தது என்று உவகையோடு மகவைக் கைக்கொடுத்தனள்
கங்கையாள் என்க.இனி, ‘கங்கையாளை இம்மையிற் காண்குமோ?’ என்று நாடிய
மன்னவனுக்குஅன்னாள் போந்து மகனைக் காட்டித்தந்ததனால், மன்னவன் தான்
நாடியகருமம்வாய்த்ததென்று உவகை கொண்டு நலம்பெற்றிருந்தானென்று
கூறினும் ஆம். தரு -தற்சம வடசொல். 

வேந்த! கேள்: இவன் உன் மதலையே; தேவ விரதன் என்று
இவன் பெயர்; பல்லோர்
ஆய்ந்த நூல் வெள்ளம் கடந்தனன் கரை கண்டு, அருந்ததிபதி
திருவருளால்; பூந் துழாய்
மாலைப் போர் மழுப் படையோன் பொன்னடி பொலிவுற வணங்கி,
ஏந்து நீள் சிலையும், பல கணை மறையும், ஏனைய படைகளும்,
பயின்றான்.

வேந்த – அரசனே! கேள் – கேட்பாயாக: இவன்-, உன் மதலை
ஏ -உன்புத்திரனே: தேவவிரதன்என்று – தேவவிரதனென்பது, இவன்பெயர்-:
அருந்ததிபதிதிருஅருளால் – அருந்ததிக்குக் கணவரான வசிஷ்டமுனிவருடைய
திருவருளினால்,பல்லோர் ஆய்ந்த – பல பெரியோர்களும் ஆராய்ந்துள்ள, நூல்
வெள்ளம் -நூல்களாகிய வெள்ளத்தின், கரைகண்டு – அக்கரையைக்கண்டு,
கடந்தனன் -கடந்துள்ளான் [சாஸ்திரங்களை யெல்லாம் முற்றக்
கற்றுள்ளானென்றபடி]: (அன்றியும்), பூந் துழாய் மாலை – பூவையுடைய
திருத்துழாய் மாலையைப் பூண்டவனும், போர்மழு படையோன் – போரில்வல்ல
மழுப்படையைத் தாங்கியவனுமான பரசுராமனுடைய,பொன் அடி – அழகிய
திருவடிகளை, பொலிவு உற – விளக்க முண்டாம்படி, வணங்கி- பணிந்து, ஏந்து
நீள் சிலைஉம் – கையிலேந்திய நீண்டவில்வித்தையையும், பலகணை மறைஉம் –
பலவகைப்பட்ட அஸ்திரங்களின் மந்திரங்களையும், ஏனையபடைகள்உம் –
மற்றுமுள்ள ஆயுதங்களையும், பயின்றான் – கற்றுள்ளான்;

     தேவவ்ரதனென்ற பேர் இவனுக்குக் கங்கையாளிட்டது. பரசுராமன்
திருமாலின்ஏழாமவதாரமாதலால், அன்னான் ‘பூந்துழாய் மாலைப்
போர்மழுப்படையோன்’ எனப்பட்டான். பெரு வீரனாகச் சிறப்படையும்
வீடுமன்வீழ்ந்து வணங்குவதால்பரசுராமனுடைய   பொன்னடி
பொலிவுறுவதாயிற்று.    

மகப் பெறுமவரில் ஒருவரும் பெறாத மகிழ்ச்சியும், வாழ்வும்,
மெய் வலியும்,
மிகப் பெறும் தவம் நீ புரிந்தனை; நின்னை வேறு இனி வெல்ல
வல்லவர் ஆர்?
உகப்புற இவனோடு அவனி ஆளுக!’ என்று, ஓர் அடிக்கு ஓர்
அடி புரிந்து,
தகப் பெறு மயிலும், தலைவன்மேல் உள்ளம் தகைவுற, தடம்
புனல் புகுந்தாள்.

மக பெறுமவரில் – பிள்ளையைப் பெற்றாரில், ஒருவர் உம்
பெறாத -எவரும் (இதுவரையிற்) பெற்றிராத, மகிழ்ச்சிஉம் – சந்தோஷமும்,
வாழ்வுஉம் -உயிர்வாழ்ச்சியும், மெய்வலிஉம் – உடல் வலிமையும், மிக பெறும் –
மிகுதியாக அடைகின்ற,  தவம் – தவத்தை, நீ புரிந்தனை – நீ செய்துள்ளாய்;
இனி-, நின்னைவெல்ல வல்லவர்-, வேறு ஆர் – வேறுயாவர்? உகப்பு உற –
மனத்தி லுற்சாகம் மிக, இவனோடு – இவனுடனே, அவனி ஆளுக – (நீ) பூமியை
யாட்சிபுரிவாய், என்று – என்று சொல்லி,- தக பெறு மயில்உம் –
நற்குணம்பெறுதலுள்ள மயில்போன்றசாயலுடைய கங்கையாளும், ஓர் அடிக்கு
ஓர் அடி புரிந்து – (பிரிவாற்றாமையால்) ஓரடி மீது ஓரடியை வைத்தல்செய்து
[மெல்ல மெல்ல அடிவைத்து நடந்து], தலைவன்மேல் உள்ளம் தகைவுஉற –
தலைவனான மன்னவன்மீது (தன் மனம்) தடைப்பட்டுநிற்க, தட புனல் புகுந்தாள்-
பெரிய கங்கைநீர் வெள்ளத்திலே புகுந்துமறைந்தாள்; (எ-று.) – மயில் –
உவமையாகுபெயர்.

மனைவியைக் கண்டு மீளவும் பிரிந்த வருத்தம், மெய்த்
திருத்தகு கேள்வித்
தனையனைக் கண்ட மகிழ்ச்சியால், அருக்கன்-தன் எதிர்
இருள் எனத் தணப்ப,
நினைவினில் சிறந்த தேர்மிசை, புதனும் நிறை கலை
மதியுமே நிகர்ப்ப,
புனை மணிக் கழலான் அவனொடும் தனது புரம் எதிர்
கைதொழ, புகுந்தான்.–சந்தனு மைந்தனோடு நகரடைதல்

மனைவியை-, கண்டு-, மீளஉம் – மறுபடியும், பிரிந்த –
பிரிந்ததனால்தோன்றிய, வருத்தம் – துன்பம், மெய் திரு தகு கேள்வி –
உண்மையான சிறப்புக்கொண்டு விளங்குகின்ற நூற் கேள்வியையுடைய,
தனையனை- புத்திரனை,கண்ட – காணப்பெற்றதனாலுண்டான, மகிழ்ச்சியால்-,
அருக்கன் தன் எதிர் இருள்என – சூரியனுக்கு எதிரே இருட்டுப்போல, தணப்ப
– (இருந்த அடையாளமும்தெரியாது) நீங்க, நினைவினில் சிறந்த தேர்மிசை –
மனத்தினைக்காட்டிலுஞ் சிறந்த[மனோவேகத்தினும் விரைவாகச்செல்லவல்ல]
தேரின்மேல், புதன்உம் -புதனென்பவனையும், நிறை கலை மதிஉம் ஏ – நிறைந்த
[பதினாறான] கிரணங்களையுடைய சந்திரனையுமே, நிகர்ப்ப – ஒப்பாகும்படி,
மணி புனை கழலான் -மணிகளழுத்திய வீரக்கழலையணிந்த மன்னவன்,
அவனொடுஉம் -அந்தப்புத்திரனுடனே, தனது புரம் – தன்னுடைய பட்டணத்தில்
[அஸ்தினாபுரியில்] உள்ளவர், எதிர் கைதொழ – எதிர்ந்து கைகூப்பி வணங்க,
புகுந்தான் -பிரவேசித்தான்; (எ-று.)

     தண்ணளிநிரம்பியிருத்தலால் மன்னவனுக்கு மதியையும் பல கலைகளையும்
முற்றவுணர்ந்த புலவனாயிருத்தலால் மைந்தனுக்குப் புதனையும் உவமை கூறினார்.
மனைவியைப்பிரிந்த துயரம் மகனை யடைந்த மகிழ்ச்சியின்முன்னே
தலையெடுக்காமற்போனதை, அருக்கன்றன்னெதிரிருளெனத்தணப்ப என்று
தொழிலுவமைகொண்டுவிளக்கினார்.   

தானும் அம் மகனும் தரியலர் வணங்கத் தங்கு நல் நாளில்
அங்கு ஒரு நாள்,
தேன் உறும் தொடையல் இளவரசனைத் தன் திகழ்
அரியாசனத்து இருத்தி,
கான் உறு விலங்கின் உயிர் கவர் நசையால், காற்று எனக்
கூற்று என நடந்து,
பானுவின் மகளாம் காளிந்தி நதியின் பாரம் எய்தினன்,
விறல் படையோன்.-சந்தனு ஒரு நாள் வேட்டைக்குச் செல்லல்

தான் உம் – சந்தனுவும், அ மகன் உம் – (தேவவிரத னென்ற)
அந்த(க் கங்கையின்) புத்திரனும், தரியலர் வணங்க – பகைவர்கள் (அஞ்சி)
வணங்குமாறு,அங்கு – அந்நகரிலே, (பெருமதிப்போடு), தங்கும் – தங்கியிருக்கப்
பெற்ற, நல் நாளில்- சிறந்த நாள்களுள், ஒருநாள்-, தேன் உறுந் தொடையல்
இள அரசனை – தேன்பொருந்திய மாலையையணிந்த இளவரசனாகிய
தேவவிரதனை, தன் திகழ் அரிஆசனத்து இருத்தி – தன்னுடைய விளங்குகின்ற
சிங்காசனத்திருக்கச்செய்து,- கான்உறு விலங்கின் உயிர் கவர் நசையால் –
காட்டில் தங்குகின்ற மிருகங்களின் உயிரைக்கவரவேணுமென்ற விருப்பினால்,
விறல் படையோன் – வலிமையுள்ள(வேட்டைக்குரிய) பரிவாரங்களோடு
கூடியவனாகி,-காற்று என கூற்று என நடந்து-(இவன்) காற்றும் யமனும்
(போல்வான்) என்று சொல்லுமாறு (விரைவாகவும் கொடுமைதோன்றவும் )
நடந்துபோய்,- பானுவின் மகள் ஆம் காளிந்தி நதியின் -சூரியபுத்திரியான
யமுனாநதியின், பாரம் – கரையில், எய்தினன் – (அடைந்து அங்குஅமைந்த
பாசறையிற்) சேர்ந்தான்; (எ-று.) – தங்குநாடன்னில், இளவரசென என்றும்
பாடம்.

     சந்தனு காளிந்திக்கரையில் அமைத்த பாசறையிற்சேர்ந்திருந்தமை,
மேற்கவியிற்பெறப்படும். கானுறுவிலங்கினுயிர் கவர் நசை – வேட்டை விருப்பம்.
காளிந்திநதிக்குஉரிய பெண்தெய்வம், சூரியனுடைய புத்திரியாவள்

பாசறை முழுதும் ஒரு பெருங் கடவுள் பரிமளம் ஒல்லெனப் பரப்ப,
யோசனை அளவும் கரை இரு மருங்கும் உயிர்க்கும் மெல் உயிர்ப்பு எதிர் ஓடி,
தாசர்தம் குலத்துக்கு அதிபதி அளித்த தையலை, தரணிபர்க்கு எல்லாம்
ஈசனும், உருகிக் கண்டு, உளம் களியா, ‘இலங்கிழை! யார்கொல் நீ?’ என்றான்.-சந்தனு சத்தியவதியைக் கண்டு காதல் கொள்ளல்

(அங்ஙன் கானகஞ்சேர்ந்து பாசறையில் தங்கியிருக்கையில்), பாசறை
முழுதுஉம் – (தங்கியிருந்த) படைவீடுமுழுவதும், ஒரு பெருங் கடவுள் பரிமளம் –
ஒப்பற்ற மிக்கதெய்வத்தன்மையுள்ள நறுமணத்தை, ஒல்லென பரப்பி –
விரைவாகப்பரப்பிக்கொண்டு, யோசனை அளவுஉம் – யோசனைதூரமும், கரை
இருமருங்குஉம் -(அந்த யமுனாநதியின்) கரையினிருபக்கங்களிலும், உயிர்க்கும் –
வீசுகின்ற, மெல்உயிர்ப்பு – மெல்லியகாற்றுக்கு, எதிர் ஓடி – எதிர்முகமாக
விரைந்துசென்று,-தரணிபர்க்கு எல்லாம் ஈசன்உம் – அரசர்க்கு அதிபதியான அந்தச்சந்தனுமன்னவனும், தாசர் தம்குலத்துக்கு அதிபதி அளித்த
தையலை- வலைஞர்குலத்துக்கு அதிபதியான வலைஞன் தந்த அந்தப்பெண்ணை,
கண்டு-பார்த்து, உளம் உருகி களியா – மனம் நைந்துமகிழ்ந்து, (அவளை
நோக்கி), ‘இலங்குஇழை – விளங்குகின்ற ஆபரணங்களையணிந்துள்ள மாதராய்!
நீ-, யார்கொல் -யாவள்?’ என்றான் – என்று வினாவினான்; (எ-று.)

     தாசர்குலபதியின் மகளின்மேனி யோசனைதூரங் கமழுந் தன்மைய
தாதலால்,அவள்மேனியின் நறுமணம் கந்தவகனான காற்றின்மூலம்
யோசனைதூரம்செலுத்தப்பெற, அந்த நறுமணக் காற்றுக்கு எதிராக ஓடி
மன்னவன்அந்தயோசனகந்தியைக் கண்டன னென்க. தாசர் என்ற வடசொல்,
தாசர்  என்றுதிரிந்தது. தாசர் தங்குலம் – வலைஞர்குலம்: இவன்பெயர்
‘உச்சைச்ச்ரவஸ் ‘ என்று பாலபாரதத்தும் வியாசபாரதத்தும் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாசனால் வளர்க்கப்பட்டகன்னிகை முதலில்மச்சகந்தியா யிருந்து பிறகு
பாராசரபகவானருளால் யோசனைதூரம்நறுமணம் வீசும் உடம்பைப்
பெற்றாளாதலால், யோஐநகந்தி என்று பெயர்பெறுவாளானாள்: இவள்
காளியென்றும், ஸத்யவதீயென்றும், வாஸவீயென்றும்வழங்கப்பட்டுள்ளாள்.
ஒல்லெனப் பரப்ப என்றும் பாடம். 

நிருபனது உரை கேட்டு, அஞ்சினள், ஒதுங்கி நின்று, கை நினைவு
உறக் குவியா,
‘இரு துறை நெறியில் வருநரை நாவாய் ஏற்றுவல், எந்தை ஏவலின்’
என்று,
உரைசெயும் அளவில், வேட்கையால் உள்ளம் உருகி, மெய்ம்
மெலிந்து, ஒளி கருகி,
அரிவையை அளித்தோன் பக்கம் -அது அடைந்தான்; அவனும்
வந்து, அடிமலர் பணிந்தான்.

 நிருபனது – சந்தனுவரசனுடைய, உரை – வார்த்தையை, கேட்டு -,
அஞ்சினள் – அச்சங்கொண்டவளாய், ஒதுங்கி நின்று-, நினைவுஉற –
(பெரியோரைக்கண்டால் வணங்கவேண்டு மென்ற) எண்ணந்தோன்ற, கைகுவியா-
கைகூப்பிவணங்கி,- ‘இரு துறை நெறியில் வருநரை – பெரிய நீர்த்துறைநெறியைக்
கடக்குங் கருதத்தோடு இங்கு வருபவரை, எந்தை ஏவலின் – என் தந்தையாரின்
கட்டளையினால், நாவாய் ஏற்றுவல் – மரக்கலத்திலேற்றுவேன்,’ என்று-, உரை
செயும்அளவில் – சொல்லும்போது,- (மன்னவன்), வேட்கையால் –
காமவிச்சையால், உள்ளம்உருகி-, மெய் மெலிந்து – உடல் தளர்ந்து, ஒளி
கருகி -, அரிவையை அளித்தோன்-யோசன கந்தி யென்ற
அந்தமடந்தையைப்பெற்ற வலைஞனுடைய, பக்கம் அது -இருக்குமிடத்தை,
அடைந்தான்-: அவன்உம் – அந்தவலைஞனும், வந்து-, அடிமலர்
பணிந்தான்- (மன்னவனுடைய) திருவடித் தாமரையை வணங்கினான்; (எ-று.)

     வேட்கையாலென்பது உள்ளமுருகுதற்கேயன்றி, மெய்ம்மெலிதலுக்கும்
ஒளிகருகுதற்கும் ஏது ஆகும். பக்கமது, அது – பகுதிப் பொருள்விகுதி

பாகனை அரசன் குறிப்பினால் ஏவ, பாகனும் பரதவர் பதியை
ஓகையோடு இருத்தி, ‘நின்னுழை வதுவை உலகுடை நாயகன் நயந்தான்;
தோகை செய் தவமோ, நின் பெருந் தவமோ, தொல் குலத்தவர்
புரி தவமோ,
ஆகும் இவ் வாழ்வு!’ என்று உரைத்தனன். அவனும் ஆகுமாறு
அவனுடன் உரைப்பான்;

அரசன் – சந்தனு, பாகனை – (தன்னுடைய) தேர்ப்பாகனை,
குறிப்பினால் ஏவ – சாடைகாட்டி (மணம்பேசுமாறு) தூண்ட, பாகனும்-, பரதவர்
பதியை- வலைஞர் தலைவனை, ஓகையோடு – மிக்க மகிழ்ச்சியோடு, இருத்தி –
இருக்கச்செய்து,- ‘உலகு உடைநாயகன் – உலகுக்குத் தலைவனாகிய சந்தனுராசன்,
நின்னுழை – உன்னிடத்து, வதுவைநயந்தான் – மணத்தை விரும்பினான்
[உன்மகளைமணந்துகொள்ளுமாறு எம்முடைய சந்தனு மன்னவன்
விரும்பியுள்ளான்]: இ வாழ்வு – இங்கனம் (அரசன் வதுவைவிரும்பிய) இந்த
வாழ்ச்சி, தோகை செய்தவம் ஓ – (உன்னுடைய மகளான) மயில்போலுஞ்
சாயலையுடையாள் செய்துள்ளதவப்பயனாலோ, நின் பெருந்தவம் ஓ – நீ
செய்துள்ள மிக்கதவத்தினாலோ, தொல்குலத்தவர் புரி தவம் ஓ – பழமையான
பரதகுலத்தவர்செய்த தவத்தினாலோ, ஆகும் -உண்டானதாகும், ‘ என்று-,
உரைத்தனன் – சொன்னான்: அவன்உம் – அந்தப்பரதவர்பதியும், ஆகும் ஆறு –
(அந்த அரசன்நினைவு) முற்றுதற்குரியவகையை, அவனுடன்- அந்தப்பாகனோடு,
உரைப்பான் – சொல்பவனானான்;

     பரதவர்பதிகூறுவதை மேற்செய்யுளிற் காண்க. மன்னவன் பரதவர்பதியிடத்து
மகளை நேரேகேட்கநாணிப் பாகன் மூலமாகக் கேட்டானென்க

பூருவின் மரபில் பிறந்த கோமகன் என் புன் குல மகள்
குயம் பொருந்தல்,
மேருவும் அணுவும் நிறுக்குமாறு ஒக்கும்! மேல் இனி இவை
புகன்று என்கொல்?
பார் உவகையினால் ஆளுதற்கு இருந்தான் பகீரதி மகன்;
இவள் பயந்த
சீருடை மகன் மற்று என் செய்வான்? இசைமின், செய்கைதான்
திருவுளம் குறித்தே’–பரதர் தலைவன் மறுமொழி்

பூருவின் மரபில் – பூருவின்வமிசத்திலே, பிறந்த – தோன்றிய,
கோமகன் – இராசகுமாரன், என் புன்குலம் மகள் குயம் பொருந்தல் –
என்னுடையதாழ்மையான குலத்திற்பிறந்தபெண்ணின் தனங்களைத் தழுவுதல்
[என் பெண்ணைமணந்துகொள்ளுதல்], மேருஉம் அணுஉம் நிறுக்கும்
ஆறுஒக்கும் – மேருவை ஒருதட்டிலும் அணுவை மற்றொருதட்டிலும் வைத்து
நிறுக்கின்ற தன்மைக்குச்சமானமாகும்: மேல் இனி இவை புகன்று என் கொல் –
இப்போது இவற்றைப்பற்றிப்பேசி என்னபயன்? பகீரதி மகன் – கங்காதேவியின்
புத்திரனான தேவவிரதன், பார் -(சந்தனு
வின்) அரசை, உவகையினால் –
மனமகிழ்ச்சியோடு, ஆளுதற்கு – ஆட்சி புரிதற்கு,இருந்தான் – சித்தனாக
இருக்கிறான்; மற்று – பிறகு, இவள் பயந்த சீர் உடை மகன் -இந்த என்பெண்
பெறப் போகின்ற சிறப்புள்ள புதல்வன், என்செய்வான் -என்னசெய்யக்கூடியவன்?
செய்கை – (அவன் செய்யவேண்டிய) செயலை, திரு உளம்குறித்து – உம்முடைய
மனத்தினால் ஆலோசித்து, இசை மின் – சொல்லுங்கள்; ‘ (எ-று.)-“என்ன” என்று
அடுத்த கவியோடு தொடரும்.

     “பகீரதிமைந்த னாளுதற்கிருந்தான்; இவள் பயந்த சீருடை மகன்
மற்றென்செய்வா னிசைமின் செய்கை திருவுளங்குறித்தே” என்று வலைஞர்பதி
கூறியபேச்சில், ‘இவள்வயிற்றிற்பிறக்கும் மகனுக்கே அரசுதருவதாக உடன்பட்டால்
இவளைவதுவைசெய்து கொடுக்க இசைவேன்’ என்ற குறிப்புத் தோன்றுதல்
காண்க. பயந்த – இயல்பினால் எதிர்காலம் இறந்தகாலமாயிற்று. 

என்ன முன் இறைஞ்சி, இவன் மொழி கொடுஞ் சொல் இறையவன்
கேட்டலும், இரண்டு
கன்னமும் அழற்கோல் வைத்தது ஒத்து, இதயம் கருகி, வேறு
ஒன்றையும் கழறான்,
‘முன்னம் உன்மதத்தால் முனி இடு சாபம் முடிந்தது!’ என்று
ஆகுலம்முற்றி, அன்னமும்
குயிலும் பயிலும் நீள் படப்பை அத்தினாபுரியை மீண்டு
அடைந்தான்.-சந்தனு வருத்தத்தோடு மீளல்

என்ன – என்று, முன் – (தன்) முன்னிலையிலே, இறைஞ்சி –
வணங்கி, இவன் மொழி கொடுஞ் சொல் – இந்தப்பரதவர்பதி சொல்லிய
கொடுஞ்சொல்லை, இறையவன் – சந்தனுமன்னவன், கேட்டலும் –
கேட்டவுடனே,-இரண்டு கன்னம் உம் – (தன்னுடைய) இரண்டுகாதிலும்,
அழல்கோல் -கொள்ளிக்கட்டை, வைத்தது – வைக்கப்பட்டதை, ஒத்து-, இதயம்
கருகி – நெஞ்சுவெந்து, வேறு ஒன்றை உம் கழறான் – வேறொரு வார்த்தையுஞ்
சொல்லாதவனாய்,-முன்னம் – முன்பு, உன்மதத்தால் – கோபமயக்கத்தினால்,
முனி – வசிட்டமுனிவன்,இடு – இட்ட, சாபம் – சாபமே, முடிந்தது –
பயனைவிளைக்க வந்திட்டதுபோலும்,என்று-, ஆகுலம் முற்றி – வருத்தம்மிகுந்து,
அன்னம்உம் குயில்உம் பயிலும்நீள்படப்பை அத்தினாபுரியை – அன்னப்
பறவையும் குயிற்பறவையும் பழகப் பெற்றநீண்டசோலையையுடைய
அத்தினாபுரியென்ற (தன்) நகரை, மீண்டு – (அங்குநின்று)திரும்பி,
அடைந்தான் – சேர்ந்தான்;

     வசிட்டமுனிவன்இட்ட சாபத்தின்பயனே இந்தவலைஞர் பதியை இவ்வாறு
சொல்விப்பதுபோலும் என்று கருதி, ஆகுலமுற்றான் சந்தனுவென்க. 

கங்கையாளிடத்தில் ஆதரம் மெலிந்த காலையில், களிந்தவெற்பு
அளித்த
மங்கையாம் என்ன நின்ற பூங்கொடிமேல் வைத்த பேர்
ஆதரம் மலிய,
பங்கயானனம்தான் முறை முறை குறையும் பால்மதி என
அழகு அழிந்த
சங்கையால், மைந்தன் வினவலும், நிகழ்ந்த தன்மையைச் சாரதி
புகன்றான்.-தேவ விரதன் நிகழ்ந்தமை அறிதல்

கங்கையாளிடத்தில்-, ஆதரம் – விருப்பம், மெலிந்த – குறைவுபட்ட,
காலையில் – சமயத்திலே, களிந்தவெற்பு அளித்த மங்கை ஆம் என்ன நின்ற பூங்
கொடிமேல் – களிந்தமலைபெற்ற யமுனாநதியின் பெண்தெய்வமாவாள்போலும்
என்றுகருதுமாறு (யமுனைக்கரையிலிருந்த) பூங்கொடிபோன்ற
யோசனகந்தியினிடத்து,வைத்த-, பேர் ஆதரம் – மிக்கவிருப்பம், மலிய – மிக,-
பங்கய ஆனனம் -தாமரைமலர்போன்ற (அரசன்) முகம், முறை முறை குறையும்
பால் மதி என அழகுஅழிந்த – நாடோறும் முறையே கலை தேயப்பெற்ற
வெண்மை நிறமுள்ளசந்திரன்போல அழகுகெட்டதனாலான, சங்கையால் –
சங்கையினால், மைந்தன் -குமாரனான தேவவிரதன், வினவலும் – ( ‘இங்ஙனம்
என் தந்தை முகம் அழகுகெடக்காரணம் யாது?’ என்று) வினவவே, சாரதி-,
நிகழ்ந்த தன்மையை-, புகன்றான் -கூறினான்; (எ -று.)

     யமுனைக்கரையில் கருநிறமுடையவளாயிருந்த யோசனகந்தி யமுனையின்
பெண்தெய்வமேபோல்வ ளென்று தற்குறிப்பேற்றவணி படக் கூறினார். காலையில்
வேலையிற் பிறந்த என்ற பிரதிபேதம். 

கேட்ட அக் கணத்தில், கடற் புறத்து அரசைக் கேண்மையோடு
அடைந்து, இளவரசும்,
‘பாட்டன் நீ எனக்கு; பெற்ற தாய்தானும் பகீரதி அல்லள்;
நின் மகளே;
நாட்டம் இன்று உனக்கு யாது? அது நிலை; இந்த ஞாலமும்
எம்பியர் ஞாலம்;
நீட்டம் அற்று இன்றே திருமணம் நேர்வாய், நீதி கூர்
நிருபனுக்கு’ என்றான்.-விரதம் கூறி வீடுமன் எனும் பெயர் பெறுதல்

கேட்ட-, அ கணத்தில் – அந்த க்ஷணத்தில் தானே, இள
அரசுஉம் -இளவரசனான வீடுமனும்,- கடல்புறத்துஅரசை – கடலைச்சார்ந்த
நெய்தல்நிலத்துக்குஉரியவனான வலைஞாபதியை. அடைந்து – சேர்ந்து,
கேண்மையோடு -உறவுமுறைபாராட்டுதலுடனே, ‘நீ எனக்கு பாட்டன்-: (எனக்கு),
பெற்ற தாய்தான் உம்-, பகீரதி அல்லள் – கங்காதேவியல்லள்: நின் மகள் ஏ –
உன்னுடைய புதல்வியே:இன்று – இப்போது, உனக்கு -, நாட்டம் யாது –
விருப்பம் எதன்மீதோ, அது-, நிலை- நிச்சயமாகப்பெறக்கூடிய பொருளேயாகும்:
இந்த ஞாலம்உம் – இந்தப்பூமியும், எம்பியர் ஞாலம் – என்னுடைய தம்பிமார்
ஆட்சிபுரிதற்கு உரிய பூமியேயாகும்: நீட்டம்அற்று – தாமதித்தலில்லாமல், இன்று
ஏ – இப்போதே, நீதி கூர் நிருபனுக்கு -நீதிமுறைமிக்க அரசனாகிய
என்தந்தைக்கு, திருமணம் நேர்வாய்- (உன்மகளை) மணஞ்செய்துகொடுத்தற்கு
இசைவாய்,’ என்றான்-; (எ-று.)

     கேண்மையோடு என்றான் என இயையும். பாட்டனீயெனக்கு முதலியவற்றில்,
கேண்மைதோன்றுதல் காண்க.    

விரதம் முற்றியவாறு அனைவரும் கேண்மின்: மெய் உயிர் வீடும்
அன்று அளவும்,
சரதம் முற்றிய மெய்த் தாதுவும் மூலத் தழலுடன் மீது எழும்
தகைத்தே;
‘இரதம் முற்றிய சொல் மகப் பெறாதவருக்கு இல்லை’ என்று
இயம்பும் நல் கதியும்
சுரதம் முற்றிய என் தந்தைதன் பொருட்டால் பெறுவல்’ என்று,
இன்னதும் சொன்னான்.

இங்ஙன் தேவவிரதன் கூறியதைக்கேட்ட வலைஞர்பதி வியப்புக் கொண்டு
மீண்டும் கங்கையாள் மகனைநோக்கி ‘செம்மலே!  நீ உன் தந்தையினிடத்து
உறுதியானஅன்பினால்இராச்சியத்தைவிட்டிட்
டாய்: இந்த இராச்சியத்தை உன்புத்திரன்
பெறற்குரியனாவனே; அப்போதும் என்கருத்துப் பழுதுபடுமே!’ என்று
கருதக்கூடுமெனக் கொண்டு, வீடுமன் பின்வருமாறுகூறலுற்றான்:-

‘(யான்), விரதம் – நோன்பை, முற்றியஆறு – (இப்போது)
தீர்மானித்துக்கொண்டவகையை, அனைவர்உம் கேண்மின் – யாவரும் கேளுங்கள்:
மெய் உயிர் வீடும் அன்று அளவுஉம் – உடலை விட்டு உயிர்போகும்வரையில்,
சரதம்- திண்ணமாக, மெய் முற்றிய – (என்) உடம்பில் மிகுந்துள்ள, தாதுஉம் –
சுக்கிலமும்,மூலம் தழலுடன் – மூலாக்கினியுடனே, மீதுஎழும் தகைத்து –
மேற்புறமாகநோக்கியிருக்கும் தன்மையையுடையது: இரதம் முற்றிய – இனிமை
மிகுந்த, சொல் -குதலைச்சொற்களையுடைய, மக- குழந்தைகளை, பெறாதவருக்கு-,
இல்லை என்று-,இயம்பு – சொல்லப்படுகின்ற, நல்கதிஉம், சுரதம் முற்றிய என்
தந்தைதன்பொருட்டால் -புணர்ச்சியின்பம் முதிரப்பெற்ற என் தந்தையின்
நிமித்தமாக [என்தந்தையை மணக்குமாறு செய்ததன் பயனாக], பெறுவல் –
(யான்) அடைவேன்,’ என்று-, இன்னதுஉம் – இந்தச்சொல்லையும், சொன்னான்-;
(எ -று.)

     குய்யத்துக்கும் குதத்துக்கும் மத்தியில் நான்கிதழ்த்தாமரை போலிருக்கிற
சக்கரம்,மூலம் எனப்படும். தாது கீழ்நோக்காது மேலெழுந்தன்மையுடைய
பெரியோர், ஊர்த்வரேதஸ்கர் எனப்படுவர். மூலாக்கினி மேலெழந்தன்மையும்
தவசியர்க்கேயுரியதென்ப. இரதம்= ரஸம். மகப்பெறாதார் நற்கதியடையாரென்றும்,
புத்தென்றநரகத்திற் சேர்வரென்றும் நூல்கள் கூறும். தந்தைக்குமணஞ்
செய்வித்ததன் பயனாகத்தனக்க  மகப்பெற்றோர்பெறும்  நற்கதியும்
உண்டாகுமென்றா  னென்க.

இவன் மொழி நயந்து கேட்டுழி, அவையின் இருந்த தொல்
மனிதரே அன்றி,
தவ முனிவரரும், தேவரும், ககனம் தங்கும் மா மங்கையர் பலரும்,
உவகையோடு இவனுக்கு ஏற்ற பேர் உரைசெய்து, ஒளி கெழு
பூமழை பொழிந்தார்-
அவனியில் நிருபர் வெருவரும் திறலான் அரிய சொல் பொருள்
நிலை அறிந்தே.- அவையிலிருந்தோர் முதலியோர் தேவவிரதனுக்கு
வீடுமனென்றபெயரைச் சூட்டலும் பூமழைபொழிதலும்.

இவன் – இந்தத்தேவவிரதன், மொழி – (கூறிய) சபதவார்த்தையை,
நயந்து கேட்டஉழி – விரும்பிச்செவியேற்றபோது, அவையின் இருந்த –
சபையிலேயிருந்த, தொல் மனிதர்ஏ அன்றி – பழமையான மனிதரே யல்லாமல்,
தவம்முனிவரர்உம் – தவத்தையுடைய சிறந்த இருடியரும், தேவர்உம் – தேவர்களும்,
ககனம் தங்கும் மா மங்கையர்பலர்உம் – வானுலகத்தில் வாழ்கின்ற சிறந்த தேவ
மங்கையர் பலரும்,- அவனியில் -பூமியிலே, நிருபர் – அரசர், வெருவரும் –
அஞ்சுகின்ற, திறலான் – மனவலிமைபற்றிவந்த, அரிய சொல் – அருமையான
அந்தவீடுமனென்ற சொல்லின், பொருள்நிலை -அர்த்தத்தின் நிலைமையை,
அறிந்து – தெரிந்து, – உவகையோடு – மகிழ்ச்சியுடனே,இவனுக்கு ஏற்ற –
இவனுக்குத் தக்க, பேர் – நாமதேயமாக, (வீடுமன் என்பதை),உரைசெய்து –
சொல்லி, ஒளிகெழு – ஒளிபெறுதற்குக் காரணமான, பூமழை மலர்மாரியையும்,
பொழிந்தார்-;

     நிருபர்வெருவருந்திறல் – தேகவலியேயன்றி மனவலியையும் காட்டும்.
வீடுமனென்ற சொல் இவனுக்குவந்தது மனத்திறலினாலாகுமென்பார்
‘திறலானரியசொல்’ என்றார்; இங்கே, ஆன் – மூன்றுனுருபு. திறலான் –
திறலையுடையவனென,ஆண்பால்விகுதி யென்பாருமுளர். உரைசெய்த பேர்,
‘பீஷ்மன்’ என்பது: இது -பயங்கரமானவனென்று பொருள்படும்: பயங்கரமான
விரதத்தை மேற் கொண்டமனவலிமைபற்றியது, இந்த வீடுமனென்ற பெயரென்க.
இந்தவீடுமன் விரதங்கொண்டதுதாசபூபதியின் முன்னிலையிலேயாகவும்,
அதனைக் கேள்வியுற்ற சபையோர்முதலியோர் வீடுமனென்ற பெயரை இவனுக்குத்
தந்து மலர்மாரியும் பொழிந்தனரென்பதாம்.

மெய்ம் மகிழ் கடவுள் பூமழையுடனே வீடுமன் எனும்
பெயர் எய்தி,
கைம் மகிழ் வரி வில் தாசபூபதியும், கன்னிகை காளியும்,
தானும்,
மொய்ம் மணம் கமழும் மன்றல் வேனிலின்வாய், முனிவரும்
கிளைஞரும் சூழ,
செய்ம் மகிழ் பழனக் குருநிலம் உடையான் திருமனை விரைவுடன்
சேர்ந்தான்.வீடுமனென்றபேரைப்பெற்ற தேவவிரதன் தாசபூபதியை
மகளுடனேயழைத்துக் கொண்டு, அரண்மனையை யடைதல்.

மெய் மகிழ் – உண்மையான மகிழ்ச்சியைக்கொண்ட, கடவுள்-
தேவர்களின், பூமழையுடனே -, வீடுமன் எனும் பெயர் – வீடுமனென்ற
பெயரையும்,எய்தி – அடைந்து, (தேவவிரதன்),- மகிழ் வரிவில் கை தாசபூபதிஉம்
கன்னிகைகாளிஉம் தான்உம் – மகிழ்ச்சி யடைந்தவனான கட்டமைந்த வில்லைக்
கையிலேந்தியவலைஞர் தலைவனும் (அவனுடைய) கன்னிகையான காளியும்
தானுமாக,- மொய்மணம் கமழும்மன்றல் வேனிலின்வாய் – நெருங்கியமணம்
வீசப்பெற்றமணஞ்செய்தற்குஉரிய வசந்தகாலத்தில், முனிவர்உம்
கிளைஞர்உம் சூழ -முனிவர்களும் சுற்றத்தார்களும் சூழ்ந்துவர, செய் மகிழ்
பழனம் குருநிலம் உடையான்திரு மனை – வயலைக்கண்டு மகிழ்வதற்குக்
காரணமான நிலவள நீர்வளமுள்ளகுருநிலத்தையுடையவனான சந்தனு
மன்னவனுடைய அழகிய இல்லத்தை, விரைவுடன்சேர்ந்தான்-; (எ -று.)

     பூபதியும்காளியும் தானும் …. சேர்ந்தான் – சிறப்பினால்
உயர்திணையாண்பாலான்முடிந்த பால்வழுவமைதி. விவாகத்துக்கு வசந்தருதுவே
சிறப்பாகக் கூறப்பட்டுள்ளதனால், அதனை ‘மன்றல்வே
னில்’ என்றார். வலைஞர்
பெண்ணாய் வளர்ந்த ஸத்யவதிக்குக் காளி என்ற பெயர்நிறம்பற்றிவந்தது போலும்.
மூன்றாமடியில் மெய்ம் மகிழ்கமழும் என்றும் பாடம்.

பரிமள வடிவப் பாவையை அரசன் -பாலள் என்று ஒருபுடை நிறுத்தி,
இரு பதம் தொழுது நின்ற மா மகனை இதயமோடு இறுகுறத் தழுவி,
தரு மணம் கமழும் சென்னிமேல் வதனம் தாழ்ந்து, மோந்து, உருகி,
‘முன் தந்தைக்கு
உரிய பேர் இளமை கொடுத்த கோமகனும் உனக்கு எதிர் அல்லன்’
என்று உரைத்தான்ந்தனு மகனைப் பாராட்டி வரம் அளித்தல்

 பரிமளம் வடிவம் பாவையை – பரிமளமே ஒருவடிவு படைத்து
வந்திருப்பதுபோன்ற அந்தக்காளியை, அரசன் பாலள் என்று ஒருபுடை நிறுத்தி –
அரசனுக்கு உரியவளென்று ஒருபுறத்திலே நிறுத்தி, இரு பதம் தொழுதுநின்ற மா
மகனை – இரண்டு பாதங்களையும் தொழுதுகொண்டுநின்ற (தன்) சிறந்த
புதல்வனை,(சந்தனுமன்னவன்), இதயமோடு இறுகுற தழுவி – மார்போடு
அழுந்தக்கட்டிக்கொண்டு,தரு மணம் கமழும் சென்னி மேல் – கற்பகமலரின்
நறுமணம் வீசுகின்ற(அந்தப்புதல்வனுடைய) சிரசின்மீது, வதனம் தாழ்ந்து
மோந்து – (தன்) முகத்தைத்தாழ்ந்து (உச்சி) மோந்து, உருகி- (அன்பினால்)
மனங் கசிந்து, ‘முன் தந்தைக்கு உரியபேர் இளமை கொடுத்த கோமகன்உம் –
முன்பு (தன்) தந்தைக்கு (த் தனக்கு) உரியமிக்க இளமையைக் கொடுத்த பூரு
என்ற ராஜகுமாரனும், உனக்கு எதிர் அல்லன்-, ‘என்று-, உரைத்தான் –
சொன்னான்; (எ-று.)

      ‘தரு’ என்ற மரப்பொதுப்பெயர் – சிறப்பாய்க் கற்பகத்தைக் காட்டி,
முதலாகுபெயரால், அதன்மலரைக் காட்டிற்று. கீழ் வானவர்பூமழை
பொழிந்தாரென்றதற்கு ஏற்ப, இங்கே ‘தருமணங்கமழுஞ் சென்னி’ என்றார்.
நான்காமடியில், உரியதன்னிளமை என்றும், அல்லவென்றுவந்தான் என்றும்
பாடம்.   

‘தந்தையர்க்கு உதவும் உதவியின் எனக்குச் சத மடங்கு
உதவினை; உனக்கு
மைந்தருக்கு உதவும் உதவியின் சிறிதும் மா தவம்
செய்திலேன் உதவ;
சிந்தையில் துறக்கம் வேண்டும் என்று எண்ணிச் செல்லும்
அன்று அல்லது, உன் உயிர்மேல்
முந்துறக் காலன் வரப்பெறான்’ என்றே முடிவு இலா ஒரு
வரம் மொழிந்தான்.–சந்தனு வீடுமனிடத்துக் கூறும் முகமன்.

எனக்கு-,தந்தையர்க்கு உதவும் உதவியின் – (பெற்ற மகன்)
தன்னுடைய தந்தையார்திறத்தி லுதவுகின்ற உதவியைக்காட்டிலும், சதம் மடங்கு –
நூறுமடங்கு (மிக), உதவினை – உதவிபுரிந்தாய்: உனக்கு-, மைந்தருக்கு உதவும்
உதவியின்- (தந்தை தன்) புதல்வருக்கு உதவுகின்ற உதவியைப்போல, உதவ –
உதவும்படி,சிறிதும்உம் – கொஞ்சமும், மா தவம் செய்திலேன் – சிறந்த
தவத்தைச்செய்தேனில்லை: சிந்தையில் – (உன்) மனத்தில், ‘துறக்கம் வேண்டும் –
சுவர்க்கத்துக்குப்போகவேண்டும்,’ என்று-, 
எண்ணி-, செல்லும்- (நீயே) போகின்ற,
அன்று அல்லது – அன்றைக்கு அல்லாமல், உன் உயிர்மேல்-, காலன் – யமன்,
முந்துற – (நீ சுவர்க்கத்துக்குச் செல்லவேணுமென்றுகருதுவதற்கு) முன்பாக,
வரப்பெறான்-, ‘என்று-, முடிவுஇலா – (விருப்பமின்றி) இறத்தலில்லாமையாகிய, ஒரு
வரம் – ஒப்பற்றவரத்தையும், மொழிந்தான்- (சந்தனு வீடுமன்பொருட்டு) வாய்விட்டுச்
சொன்னான்: (எ-று.)

   இங்ஙனம் வேண்டும்போது இறத்தல் ‘ஸ்வச்சந்தமரணம்’ எனப்படும்

அம் புவி அரசன் மாமனும், அரசன் அடி பணிந்து,
அவயவத்து அழகால்
உம்பரும் வியக்கும் கிளியை முன் நிறுத்தி, ஒடுங்கினன்,
வாய் புதைத்து, உரைத்தான்:
‘எம் பெருமான்! நீ கேட்டருள்: உனக்கே இசைந்த மெய்த்
தவம் புரி இவளை,
வம்பு அவிழ் மலர் மாது என்பதே அன்றி, வலைஞர்
மா மகள் எனக் கருதேல்.-பரதவர் தலைவன் மகளின் வரலாறு கூறல்

இதுமுதல் நான்குகவிகள் – வலைஞர் தலைவன் யோசன கந்தியை
முன்நிறுத்திப் பணிவுடன் அவள்வரலாற்றினைத் தெரிவித்தலைக்கூறும்-ஐந்துகவிகள் – ஒருதொடர்

     (இ-ள்.) அம் புவி அரசன் மாமன்உம் – அழகியபூமிக்குத்தலைவனான
சந்தனுவுக்கு மாமனாராகியவலைஞர் தலைவனும், அரசன் அடிபணிந்து –
மன்னவனுடைய பாதங்களில் வணங்கி,- அவயவத்து அழகால் –
உடம்பினழகினால்,உம்பர்உம் – தேவர்களும், வியக்கும் – அதிசயிக்கின்ற,
கிளியை – கிளிபோன்றபெண்ணை, முன் – (அவ்வரசனுக்கு) முன்னே, நிறுத்தி –
நிற்கவைத்து,- ஒடுங்கினன் -ஒடுக்கத்தைக் காட்டியவண்ணம், வாய்புதைத்து –
வாயை(க் கையினால்) மூடிக்கொண்டு, உரைத்தான் – (பின்வருமாறு)
சொல்பவனானான்: எம்பெருமான் – எமதுபெருமானே! நீ கேட்டருள் – நீ
கேட்டருள்வாய்: உனக்கு  ஏ இசைந்தமெய் தவம் புரிஇவளை – உனக்கே
(மனைவியாகப்) பொருந்திய உண்மைத்தவம்புரிந்துள்ளஇந்தப்பெண்ணை, வம்பு
அவிழ் மலர் மாது என்பது ஏ அன்றி – நறுமணம்வீசுகின்றமலரில் தங்கும்
திருமகள் போல்வா ளென்பதல்லாமல், வலைஞர் மா மகள் என -வலைஞர்
குலத்துத் தோன்றிய சிறந்த பெண்ணென்று, கருதேல் – எண்ணாதே: (எ-று.)
– இச்செய்யுளில ‘எம்பெருமான்’ (103) என்பது தொடங்கி “காவலர்
குலத்திடைக்கலந்தாள்” (106) என்பது வரையில், வலைஞர் தலைவனுரைத்த
உரையாகும்.

     அவயவம் அங்கம் என்பன பரியாய மாதலாலும், உடம்பை அங்கமென்று
வழங்கியிருத்தலாலும், இங்கு உடம்பை அவயவமென்றார். 

‘வாசவன் அளித்த விமானமீது ஒருவன், வசு எனும்
சேதி மா மரபோன்,
கேசரன் எனப் போம் விசும்பிடை, மனையாள் கிரிகையை
நினைந்து, உடல் கெழுமி,
நேசமொடு இதயம் உருகும் அக் கணத்தில், நினைவு அற
விழுந்த வீரியம், மெய்த்
தேசவன் அளித்த நதியிடைத் தரளத் திரள் எனச் சிந்தியது,
ஒருபால்.

வாசவன் அளித்த விமானமீது – இந்திரன் தந்த
விமானத்தின்மேல், சேதிமா மரபோன் வசு எனும்ஒருவன் – சேதி வமிசத்தில்
தோன்றியவனான வசுவென்றஒருவன், கேசரன் என – ஆகாசத்திற் சஞ்சரிக்கின்ற
தேவசாதியான்போல, போம் -செல்லுகின்ற, விசும்பிடை – ஆகாயத்தினிடத்தே,
மனையாள் கிரிகையை நினைந்து -மனையாளாகிய கிரிகையென்பாளை எண்ணி,
உடல் கெழுமி – உடம்பிற்காமவிகாரங்கொண்டு, நேசமொடு – அன்புடனே,
இதயம் உருகும்அ கணத்தில் – நெஞ்சம் உருகுகின்ற அந்த க்ஷனத்திலே,
நினைவு-, அற -இன்றிக்கேயிருக்க, [தன்னடைவே], விழுந்த-, வீரியம் –
சுக்கிலமானது, மேய் தேசவன்- தேஜோமயமான மேனியைப் படைத்த சூரியன்,
அளித்த – தந்த, நதியிடை -யமுனாநதியிலே, ஒரு பால் – ஒருபுறத்திலே, திரள்
தரளம் என – திரண்டவடிவுள்ளமுத்துப் போல, சிந்தியது-; (எ-று.)

     சேதிபனான வசுவென்பவன் நோன்பால் வானத்திற்செல்ல வல்ல
விமானத்தைத்தேவேந்திரனருளாற் பெற்றான்: அன்னான் வானத்திற்
சஞ்சரிக்கையில் ஒருகால்தன்மனைவியை நினைந்து காமவிகாரங்கொண்டதனாற்
சுக்கிலம்தோன்ற, அதனைஒருமரத்தின் இலையிலேந்தி ஒரு சியேனமென்னும்
பறவையை யழைத்துக் கொடுத்துக்கிரிகையினிடத்துச் சேர்ப்பிக்குமாறு
சொன்னான்: சொல்லவும், வேறொருசியேனப்பறவை அதனை இரையென்று
கருதிப்பொர, அந்தச்சுக்கிலம் யமுனைநதியின்புனலில் முத்தின் திரள் போல
விழுந்திட்டதென விளக்கங் காண்க.மற்றொருமனையாள் கிரீடையையென்றும்
பாடம்.    

ஒரு முனி முனிவால், அரமகள் ஒருத்தி, மீனமாய்
உற்பவித்து உழல்வாள்,
இரை என அதனை விழுங்கும்முன் கருக் கொண்டு, ஈன்
முதிர் காலையில், அதனைப்
பரதவர் வலையின் அகப்படுத்து, அரிய, பாலகன் ஒருவனும்
இவளும்,
இருவரும் இந்த மீன் வயிற்று இருந்தார், யமுனையும் யமனும்
நேர் எனவே.

ஒருமுனிமுனிவால் – ஒருமுனிவனுடைய வெகுளியினால், அரமகள்
ஒருத்தி – ஒருதேவமாது, மீனம் ஆய் உற்பவித்து உழல்வாள் – மீனாகித்தோன்றி
யலைபவளாய்,- அதனை – (யமுனையின் ஒருபாற் சிந்திய) அந்த (வசுவின்)
வீரியத்தை, இரை என – (தனக்கு உரிய) உணவென்று, விழுங்குமுன் –
உட்கொள்வதற்குமுன்னமே [உட்கொண்டவுடனே யென்றபடி], கரு கொண்டு –
கருப்பமடைந்து, ஈன்முதிர் காலையில் – (அந்தக்கருப்பம்) ஈனுமாறு முதிர்ச்சி
யடைந்ததருணத்தில்,- அதனை – கருக்கொண்ட அந்த மீனை, பரதவர் –
வலைஞர், வலையின்அகப்படுத்து – வலையில் அகப்படுமாறு செய்து, அரிய –
அரிந்துபார்க்க, – பாலகன்ஒருவன்உம் – ஒரு குமாரனும், இவள் உம் –
இந்தக்குமாரியும், இருவர் உம் -(ஆகிய) இருவர்களும், யமுனை உம் யமன் உம்
நேர் என-, இந்த மீன் வயிற்றுஇருந்தார்-:

     சூரியபுத்திரியாகிய யமுனைநதியின் மீன்வயிற்றிலே தோன்றிய குமார
குமாரிகட்கு, சூரியனுக்குப் புதல்வனும் புதல்வியுமான யமனையும் யமுனையையும்
உவமைகூறினார். ப்ருஹ்மசாபத்தினால் அத்திரிகையென்ற தேவமாது
மீனமாயினாளென்று கூறப்படும்: ஆகவே, ஒருமுனி யென்றது – பிரமதேவனைக்
காட்டும்.  

‘மானவர் பதியாம் வசுவினுக்கு இவரை மகிழ்வு உறக் காட்டலும்,
மகனை,
‘மீனவன்’ எனப் பேர் கொடுத்தனன், கொண்டு, மெல்லியல்
இவளை மீண்டு அளித்தான்;
யானும் இன்று அளவும் என் மகள் என்னும் இயற்கையால்
இனிமையின் வளர்த்தேன்;
கான மென் குயில்போல் வந்து, மீளவும், தன் காவலர்
குலத்திடைக் கலந்தாள்.’

மானவர் பதி ஆம் – மானுடர்க்குத் தலைவனாகிய, வசுவினுக்கு-,
இவரை – இந்த மக்களை, மகிழ்வு உற – மகிழ்ச்சிபொருந்த, காட்டலும் – (நான்)
காட்டியபோது,-(அந்தவசுமன்னவன்), மகனை-, மீனவன் எனபேர்கொடுத்தனன்
கொண்டு – மீனவனென்று பேரிட்டு(த் தன்னுடன்) வைத்துக்கொண்டு, மெல்லியல்
இவளை – இந்தப்பெண்ணை, மீண்டு-, அளித்தான் கொடுத்திட்டான்: யான் உம்-,
இன்று அளவுஉம் – இன்றுவரையிலும், என் மகள் என்னும் இயற்கையால் –
என்மகளென்று சொல்லக்கூடிய தன்மையினால், இனிமையின் வளர்த்தேன் –
இனிதாகவளர்த்து வந்தேன்: (இவள்), கானம் மெல் குயில்போல் –
இன்னிசையையுடைய  மெல்லிய குயில் போல், வந்து – வளர்ந்துவந்து, மீளஉம் -,
தன்காவலர் குலத்திடை – தனக்குரிய அரசர்குலத்திலேயே, கலந்தாள் –
சேர்ந்திட்டாள்; (எ-று.)

என்று கூறி விடுத்தனன்; ஏந்தலும்,
அன்று அவைக்கண் அவன் மொழி கேட்டு, உவந்து,
‘இன்று நல் தினம்’ என்று, இளந் தோகையை
மன்றல் எய்தினன், மா நிலம் வாழ்த்தவே.-சந்தனு சத்தியவதியை மணந்து வாழ்தல்

என்று கூறி விடுத்தனன் – என்றுசொல்லி (அந்தப் பெண்ணை)க்
கொடுத்தான்: ஏந்தல்உம் – சந்தனு மன்னவனும்,- அன்று-, அவைக்கண் –
சபையிலே(கூறிய), அவன் மொழி – அவ்வலைஞர்பதியின் வார்த்தையை,கேட்டு,-,
உவந்து -மனம்மகிழ்ந்து,- இன்று நல் தினம் என்று-, ‘இந்நாள் மணஞ்செய்து
கொள்ளுதற்குஏற்ற நன்னாளாகும்’ என்றுசொல்லி, இளந்தோகையை – இளமயில்
போலுஞ்சாயலையுடைய அந்தப்பெண்ணை, மாநிலம் வாழ்த்த –
பெரியநிலவுலகத்தார்வாழ்த்துக்கூற, மன்றல் எய்தினன் – விவாகஞ்
செய்துகொண்டான்; (எ-று.)

     தான் விரும்பிவளைச் சிறப்புற்ற வசுவின் பெண்ணென்று அறிந்தமையால்,
சந்தனு உவந்தானென்க. 
இது முதல் இருபத்துநான்கு கவிகள் – பெரும்பாலும்முதற்சீர்
மாச்சீரும், மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள்.

காளி வந்து, கலந்தனள்; கங்கை வேய்த்
தோளியும் புயம் தோய்ந்தனள் முன்னமே;-
வாளி வெம் பரி மா நெடுந் தேருடை
மீளிதானும் விடையவன் ஆதலால்.

வாளி வெம் பரி மா நெடுந்தேர் உடை மீளி தான்உம் –
நேரேசெல்லும் கதி வாய்ந்த வெவ்விய குதிரை பூண்ட நெடிய தேரையுடைய
வீரனாகிய சந்தனுவும்,- விடையவன் ஆதலால்-, காளி வந்து கலந்தனள்-; கங்கை
வேய் தோளிஉம் – கங்கையென்ற மூங்கில்போலுந் தோளையுடையாளும்,
முன்னமே,புயம்தோய்ந்தனள் – (அந்தமன்னவனை) மணந்தாள்; (எ -று.)

     விடையவன் – விடையைவாகனமாகவுடையவ னென்றும், விடை
போல்பவனென்றும்சிலேடைவகையால் இருபொருள்படும். விருஷப வாகனனாகிய
சிவபிரானைக் காளி மணத்தலும், கங்காதேவி கூடியிருத்தலும் இயல்பேயென்ற
கருத்துஇதில்விளங்குதல் காண்க. “ஸ்வீக் ருத்யகாளீம் கிரிஜாமிவேச:” என்றது,
பாலபாரதம்.காளியென்பது, யோஜநகந்திக்கு வழங்கும் பெயர்; இச்சொல்
பார்வதியினமிசமானபத்திரகாளியையும் காட்டும். விடையவன் என்பது,
இடபக்குறியையுடைய வருணனதுஅமிசமானவன் என்று சந்தனுவைக்
காட்டுமென்றாரு முளர்.               

கங்கையின் கரைக் கண்ணுறு காரிகை
கொங்கை இன்பம் குலைந்தபின், மற்று அவள்
எங்கை என்ன யமுனையின்பால் வரும்
மங்கை இன்பம் மகிழ்ந்தனன், மன்னனே.-சந்தனு காளியின் இன்பத்தில் மகிழ்தல்.

கங்கையின் கரை – கங்கையின்கரையிலே, கண்ணுறு-
காணப்பெற்ற,காரிகை – கங்கையின் பெண்தெய்வத்தின், கொங்கை இன்பம்-
தனங்களைத்தழுவுவதனாலான இன்பம், குலைந்தபின் – அழிவுற்ற பின்பு,-
மற்றவள் எங்கை என்ன- அந்தக்கங்காதேவியின் தங்கையென்னுமாறு,
யமுனையின்பால் வரும் மங்கை -யமுனாநதியின் கரையிலே வந்த பெண்ணின்,
இன்பம் – இன்பத்தை, மன்னன் -சந்தனுராசன், மகிழ்ந்தனன்-; (எ-று.)

வீடுமன் கழல் வேந்தர் வணங்கிட,
நாடும் நல் நெறி நாளும் நடத்திட,
நீடு மன்னனும் நேரிழைமேல், மலர்த்
தோடு மன்னு சுரும்பு என வீழவே,

இரண்டுகவிகள் – குளகம்: வீடுமன் அரசமுறையை நடாத்த,
மன்னவன் அந்தக்காளியினிடத்துப் புதல்வரைப் பெறுதலைக் கூறும்.

 வீடுமன்-,-கழல்வேந்தர் வணங்கிட – வீரக்கழலை யணிந்த
மன்னவர்வணங்காநிற்க, நாடும் நல் நெறி – ஆராய்ந்து செய்தற்கு உரிய நல்ல
செங்கோல்முறையை, நாள்உம் நடத்திட – நாடோறும் நடத்தாநிற்க,- நீடு
மன்னன்உம் -பெருமைமிக்க சந்தனுவரசனும், நேரிழைமேல் – அழகிய
ஆபரணங்களையணிந்தபெண்ணினிடத்து, மலர் தோடு மன்னு சுரும்புஎன வீழ –
மலரிதழில் மொய்க்கின்றவண்டுபோல விரும்பி வீழாநிற்க,- (எ-று.)
-“செங்கண்ணி- மைந்தரிருவரையீன்றனள்” எனத் தொடரும்.

     மன்னனுக்கு வண்டும், காளிக்கு மலரிதழும், போகத்துக்குத் தேனும்
உவமையாம். இளவரசனாகிய வீடுமனிடத்து அரசப் பொறுப்பைச் சந்தனுமன்னன்
ஒப்பித்துப் பெண்ணின்பத்தை விரும்பிநின்றா னென்க.    

அன்ன நாளில், அருக்கனும் திங்களும்
என்ன, மைந்தர் இருவரை ஈன்றனள்,
மன்னன் ஆவி வடிவு கொண்டன்ன மெய்க்
கன்னபூரம் கலந்த செங் கண்ணியே.–சத்தியவதி மைந்தர் இருவரைப் பெறுதல்

மன்னன் ஆவி வடிவு கொண்டு அன்ன மெய் கன்னபூரம் கலந்த
செங் கண்ணி – சந்தனுமன்னவனுடைய உயிரே ஒரு வடிவுபடைத்தாற்போன்ற
உடலையுடையவளாய்க் காதணிவரையில் நீண்ட செவ்வரிபரந்த கண்களையுடையளானகாளியானவள், அன்ன நாளில் – அந்தக்காலத்திலே,
அருக்கன்உம் திங்கள்உம் என்ன- சூரியனும் சந்திரனும் என்னும்படி, மைந்தர்
இருவரை ஈன்றனள் – இரண்டுபுத்திரரைப் பெற்றாள்;(எ-று.)

     தேஜோவான்களென்பதை விளக்கச் சூரியசந்திரரை உவமை கூறியது.
கன்னபூரம் = கர்ணபூரம்: காதைநிரப்பவதென்ற காரணம் பற்றிக் காதணியைக்
காட்டும்வடசொல்.    

சித்திராங்கதன், செப்பு நலனுடை
மெய்த்த சீர்த்தி விசித்திரவீரியன்,
இத் திறத்தர் இருவரும், தம்முனால்
ஒத்த கல்வியர் ஆயினர், உண்மையே.-பிறந்தபுத்திரரை வீடுமன் உரியகாலத்திற் கல்வி பயிற்றுவித்தல்.

சித்திராங்கதன் – சித்திராங்கதனும், செப்பு நலன் உடை மெய்த்த
சீர்த்தி – (யாவராலும்) பாராட்டிச்சொல்லுதற்கு உரிய அழகமைந்து உண்மையான
மிகுபுகழைப் பெற்ற, விசித்திரவீரியன் – விசித்திரவீரியனும், இ திறத்தர்
இருவர்உம் -இப்படிபட்டவரான இரண்டுமைந்தரும், தம்முனால் – தமது
அண்ணனான வீடுமனால்,ஒத்த கல்வியர் ஆயினர் – ஒத்தகல்விமான்களாயினர்:
உண்மை ஏ-;

     இச்செய்யுள், சிலபிரதிகளில் “சித்திராங்கதன் சித்திரவீரனென், றித்தராதிபன்
மைந்தரிருவரும், தத்தமன்பொடுதம்முன் பதந்தழீஇ, யொத்த
கல்வியராயினருண்மையால்” என்று காணப்படுகின்றதென்ப. சித்திராங்கதன்
இறந்துபட,விசித்திரவீரியனே இராசங்கத்துக்கு உரியவனானதால், அவனுக்கு
‘மெய்த்தசீர்த்தி’ என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.   

மதி நெடுங் குல மன்னனை நண்பினால்,
விதி, அனந்தரம், விண்ணுலகு ஏற்றினான்;
நதியின் மைந்தனும், ‘நம் புவிக்கு எம்பியே
அதிபன்’ என்று, அரியாசனத்து ஏற்றினான்.-சந்தனுவுக்குப் பின் சித்திராங்கதன் அரசனாதல்-சந்தனு விண்ணுலகடைய, வீடுமன் சித்திராங்க
தனைச் சிங்காசனத்தேற்றுதல்.

அனந்தரம் – பின்பு, மதி நெடுங் குலம் மன்னன்- சந்திரனுடைய
பெருமைபெற்ற குலத்துத் தோன்றிய அரசனை, விதி – ஊழ்வினைக்குரியகடவுள்,
நரையினால் – கிழத்தனத்தினால், விண் உலகு ஏற்றினான் – வானுலகமேறச்
செய்தான்:நதியின் மைந்தன்உம் – கங்காநதிக்குப்புதல்வனாகிய வீடுமனும், ‘நம்
புவிக்கு -நம்முடைய பூமிக்கு, எம்பிஏ – என்தம்பியே, அதிபன் –
தலைவனாவன், ‘என்று -என்றுசொல்லி, அரி ஆசனத்து ஏற்றினான் –
சிங்காதனத்திலேறச் செய்தான்; (எ -று.)

     வயசுமுதிர்ந்ததனால் சந்தனுமன்னன் வானுலகடைய, சித்திராங்கதனை
வீடுமன்அரசனாக்கினனென்பதாம். நரைகாரணமாகவிதி சந்தனுவை வானுலகேற்ற,
வீடுமனும்தம்பியை அரியாசனத்தேற்றினான் என்று சமத்காரமாகக்கூறினார். இங்கு
‘மன்னனைநண்பினால்’ என்றபாடம், பொருள் சிறவாமை காண்க;
‘மன்னனரையினால்’ என்பதைப்படிக்கத் தெரியாமையால் நேர்ந்த
தவறாயிருக்கலாம்; “ததோவிதிர்விஸ்ரஸயோபகூடம் – நரேந்த்ரம்
ஆரோஹயதிஸ்ம நாகம் – பீஷ்மோபிசஸ்த்ராஸ்த்ரவிதம் குமாரம் – சித்ராங்க
தம் பௌரவரராஜ்யபீடம்” என்றபாலபாரதமும் காண்க: இந்த ச்லோகத்தில்;
விஸ்ரஸயா – நரையினாலென்றுபொருளாம்

எங்கள் நாமம் இவன் கவர்ந்தான்’ என,
கங்குல் வந்து ஒரு கந்தருவாதிபன்,
தொங்கல் மா முடி சூடிய வேந்தனை
அம் கையால் மலைந்து, ஆர் உயிர் கொள்ளவே,-சித்திராங்கதன் கந்தருவனால் கொலையுண்டு இறத்தல்-சித்திராங்கதன் அப்பெயர்கொண்ட கந்தருவனால் இறத்தல்.–இரண்டுகவிகள் – குளகம்.

  (இ-ள்.) ‘எங்கள் நாமம் – எம்முடையபேராகிய சித்திராங்கத னென்பதை,
இவன்கவர்ந்தான் – இவன் திருடிக்கொண்டான்,’ என – என்று வெகுண்டு, ஒரு
கந்தருவஅதிபன் – (சித்திராங்கதனென்று பேர்பூண்ட) ஒரு கந்தருவராசன்,
கங்குல் வந்து -இராப்போதில் வந்து, தொங்கல் மா முடி சூடிய வேந்தனை –
அரசாங்கத்துக்குரியமாலையுடனே கிரீடமும் தரித்துள்ள
அந்தச்சித்திராங்கதமன்னனை, அம் கையால்மலைந்து – (தன்னுடைய)
அழகியகையினாற் பொருது, ஆர் உயிர் கொள்ள -அருமையான
உயிரைக்கவர்ந்துகொண்டிட, (எ-று.)- “முடிசூட்டினான்” (115) என்றுஇயையும்.

   வீடுமனிடத்து அச்சத்தினால் பகலில் வராமல் இரவில்வந்து கவர்ந்து சித்திராங்க
தமன்னனைக் கொன்றிட்டனன், அப்பெயர்   பூண்ட கந்தருவனென்க.
பேரைக்கொண்டிருத்தலை, நாமம் கவர்ந்தனென்றது. அஸந்நிதௌ  ஸிந்துபுவ:
ஸ்வநாம்நா கந்தர்வவர்யேண ரணே நிஜக்நே [கங்காபுத்திரரான வீடுமருடைய
அஸந்நிதானத்தில் போரிலே தன்பேரைக்கொண்ட கந்தருவனால் சித்திராங்கதன்
கொல்லப்பட்டான்] என்று பாலபாரதத்திலுள்ளது. வியாசபாரதத்தில் “சித்திராங்கதன்
தன் வீரத்தினால்பூலோகத்து அரசர்களைவென்று அவர்களை ஒருபொருட்டாக
நினையாமல் தேவர்களையும் எதிர்த்தானாக, பலவானான சித்திராங்கதனென்ற
கந்தருவன் ‘நீ என்பேர் கொண்டிருப்பதை மாற்றி வேறொரு பெயராவது கொள்க:
இல்லாவிடின் என்னோடாவது பொருக’ என்ன, இந்த மன்னவன்
அந்தக்கந்தருவனோடு பொருதற்கு இசைய, இருவர்க்கும் மூன்று வருஷங்கள்
ஹிரண்யவதீயென்ற நதியின்கரையில் போர் நடக்க, முடிவில் மிக்கமாயையில்வல்ல
சித்திராங்கத கந்தருவன் இவனைக் கொன்றிட்டான்” என்று உள்ளது.

எம் முன் அன்றி இறந்தனன்’ என்று, தாய்
விம்மு நெஞ்சின் மிகு துனி மாறவே,
தெம் முன் வல்ல விசித்திரவீரனைத்
தம்முன் மீளத் தனி முடி சூட்டினான்.-தாயின் மனவருத்தம் நீங்க, விசித்திரவீரியனுக்கு
வீடுமன் முடிசூட்டுதல்.

எம்முன் அன்றி – எம்முடைய கண்ணெதிரிலேயல்லாமல்,
இறந்தனன் -(சித்திராங்கதன்) இறந்திட்டான்,’ என்று-, விம்மு – துயரப்படுகின்ற,
தாய் – தாயின், நெஞ்சின் – மனத்திலுள்ள, மிகுதுனி – மிக்க வருத்தம், மாற –
நீங்குமாறு,- தெம் முன்வல்ல -(தம்) பகைவர் முன்னிலையில்
வல்லமைகாட்டற்குரியனான, விசித்திர வீரனை -விசித்திரவீரியனென்பானை,
தம்முன் – அண்ணனாகிய வீடுமன், மீள – மறுபடியும், தனி முடி சூட்டினான் –
ஒப்பற்ற முடியைத் தரிப்பித்தான்; (எ-று.)

     சித்திராங்கதன் தம்பியாகிய விசித்திரவீரியனுக்கே வீடுமன் இராச்சிய
பட்டாபிஷேகஞ்செய்தா னென்க. மூன்றாமடி, 112 – ஆம் பாடலின்
பாடபேதத்திற்குஏற்ப “தெம்முன்வென்ற நற்சித்திர வீரனை” என்று சில
பிரதிகளிற் காணப்படுகின்றது.    

சிற்பொருள் பரமான பொருட்கு எதிர்
உற்பவிக்கும் உபாயம்-அது என்னவே,
வில் படைத் திறல் வீடுமன் வாய்மையால்,
பொற்பு உற, புவி பூபதி ஆளும் நாள்,-விசித்திரவீரியன் அரசுபுரிதல்.

சித் பொருள் – சித்தாயிருக்கின்ற ஆன்மா, பரம் ஆன பொருட்கு-
பரம்பொருளுக்கு, எதிர் – எதிரிலே, உற்பவிக்கும் – தோன்றுகின்ற, உபாயம்
அது என்ன – தன்மைபோல,- வில் படை திறல் – வில்லென்றஆயுதத்தின்
வலிமையையுடைய, வீடுமன் – வீடுமனுடைய, வாய்மையால் -மொழியினால், பூபதி –
விசித்திரிவீரியராசன், பொற்புஉற – அழகுபொருந்த, புவிஆளும் நாள் – அரசாட்சி
புரியுங்காலத்தில்,- (எ -று.)- “ஆள்விட” என்று தொடரும்.

     “அநேநஜீவேந ஆத்மநாநுப்ரவிச்யநாமரூபேவ்யாகரவாணி [இந்த
ஜீவன்மூலமாகநான் எதிலும் உட்புகுந்து நாமரூபங்களை யுண்டாக்கக் கடவேன்]”
என்றுபரம்பொருள் சங்கற்பித்துக் கொள்ள அதனால் இந்தச் சராசரம்
தொழிற்படுதல்போலவே, வீடுமன் மொழிப்படியே விசித்திரவீரியன் புவியை
அரசாட்சிபுரிந்தானென்பதாம். சிற்பொருட்பரமான பொருட்கு என்ற பாடத்தில்,
ஞானப்பொருளாகிய பரம்பொருளுக்கு என்று உரைத்து, உற்பவிக்கும் என்பதற்கு
எழுவாய் வருவிக்க.    

காசி மன்னவன், ‘கன்னியர் மூவரும்
தேசின் மிக்கவர்ச் சேர்வர்’ என்று ஆள் விட,
மாசு இல் தொல் குல மன்னவர் ஈண்டினார்,
மூசி வண்டுஇனம் மொய்ப்பது போலவே.-காசி மன்னன் மகளிர் சுயம்வரம்  

காசிமன்னவன்-, ‘கன்னியர் மூவர்உம் – (தன்) புத்திரியரான
மூன்றுகன்னிகைகளும், தேசில் மிக்கவர்ச்சேர்வர் – வலிமையினால்
மேம்பட்டவரைக் (க்கணவராக) அடைவர்,’ என்று-, ஆள் விட – தூதுவரை
(எங்கும்) அனுப்ப,- வண்டுஇனம் மூசி மொய்ப்பதுபோல- வண்டுகளின் கூட்டம்
நெருங்கி மொய்த்துக்கொள்ளுவது போல, (அக்கன்னிகையரின் மணமாலையை
வேண்டி), மாசுஇல் தொல்குலம் மன்னவர் – குற்றமற்ற பழமையான குலத்துத்
தோன்றிய அரசர்கள், ஈண்டினார்- (அந்தக் காசிநகரில்) நெருங்கினார்கள்;

வரித்த மன்னர் மறம் கெட, வன்பினால்
திரித்தும் எம்பியைச் சேர்த்துவல், யான்’ எனா,
தரித்த வில்லொடும், தன் இளவேந்தொடும்,
விரித்த வெண்குடை வீடுமன் ஏகினான்.-அந்தக்கன்னியரைத் தன்தம்பிக்கு மணம்புரிவிக்கு
மாறு வீடுமன் ஆண்டுச் செல்லுதல்.

வரித்த – (மங்கையரால்) விரும்பப்பட்ட, மன்னர் –
அரசரின்,மறம் – வலிமை, கெட – அழியுமாறு, வன்பினால் – (என்)
வலிமையினால், திரித்துஉம்- (அவர்களை) ஓடச்செய்தாவது, எம்பியை –
என்தம்பியை, சேர்த்துவல் -(அக்கன்னியரைச்) சேருமாறு செய்வேன், ‘ எனா –
என்று கருதி,- விரித்த வெண்குடை வீடுமன் – மலர்த்திய வெண்கொற்றக்
குடையையுடைய வீடுமன்,- தரித்தவில்லொடுஉம் – தாங்கிய வில்லுடனும், தன்
இளவேந்தொடுஉம் – தன் (தம்பியாகிய)இளைஞனான அரசனொடும், ஏகினான் –
சென்றான்;

     திரித்தும், உம்மை – உயர்வுசிறப்பு. தம்பியோடுசென்றதாகப்
பாலபாரதத்திலாவது,வியாசபாரதத்திலாவது இல்லை. தம்பியோடு சென்றதாகக்
கூறுவதில், யாதொரு நயமும்காணப்படவில்லை. இனி, தன்னிளவேந்தொடும் –
தன்னிளவேந்தினிடத்தில், ‘வரித்தமன்னர் மறங்கெட வன்பினால் திரித்தும்
எம்பியைச் சேர்த்துவல்யான் ‘ என்று சொல்லி,தரித்தவில்லொடும் வீடுமனேகினான்
என்று இங்குப் பொருள் கூறிவிடலாம்:ஆயினும், 120-ஆஞ் செய்யுளில்
“வெஞ்சராசனவீரனும் தம்பியும், மஞ்சமேறிமணித்தவிசேறினார்” என்றும், 124-
ஆஞ்செய்யுளில் “யானையென்னவிளவலொடேகினான்” என்றும், 126-இல்
‘மைந்தர்தங்கள் வளநகர் மன்னினார்’ என்றும் வருவதனால், அங்ஙன்
கூறமுடியவில்லை: இனி, அந்தச்செய்யுள்களில், “வெஞ்சராசன வீரனுமேகியே,
மஞ்சமேறிமணித்தவிசேறினான்,” “யானையென்னவிரைவினொடேகினான்”,
“மைத்தன்றன்ன வளநகரெய்தினான்” என்றாற்போன்றுபாடமிருப்பின் நலம்

அரவ மா நதி அன்னையும், தன் மகன்
வரவு அறிந்து, வழி இளைப்பு ஆற்றினாள்,-
பரவி வந்து, பனி மலர்த் தென்றலை
விரவு நுண் துளி மீது எறி ஊதையால்.-இடைவழியில் வீடுமன் இளைப்பாறுதல்.

அரவம் மா நதி அன்னைஉம் – பேரொலிபடைத்த சிறந்த
நதியாகிய(கங்காநதியென்ற) தாயும்,- தன் மகன் வரவு அறிந்து – தன்
புதல்வனாகியவீடுமன்வருவதை யறிந்து, பரவிவந்து-, பனி மலர் தென்றலை
விரவு – குளிர்ந்தமலர்மணத்தோடுவருகின்ற தென்றலோடு கலந்துள்ள, நுண்
துளி – நுண்ணியநீர்த்திவலையை, மீது எறி – மேலே வீசுகின்ற, ஊதையால் –
காற்றினால், வழிஇளைப்பு- (அவ்வீடுமனது) வழிகடந்துவந்ததனாலான களப்பை,
ஆற்றினாள் -போக்கினாள்; (எ-று.)

     நறுமலர்மணங்கூடிய நீர்த்திவலைகள் கலக்கப்பெற்றுப் பரவி வந்து
மீதெறிகின்றதென்றற்காற்றின்மூலமாய்க் கங்கையாள் வீடுமனுடைய
வழியிளைப்பை மாற்றினளென்க.தென்றலாய் என்றும் பாடம். 

கஞ்ச வாவி கலை மதி கண்டென,
நெஞ்சு அழிந்து நிருபர் குழாம் தொழ,
வெஞ் சராசன வீரனும் தம்பியும்,
மஞ்சம் ஏறி, மணித் தவிசு ஏறினார்.-நிருபர்குழாம் நெஞ்சழிந்துதொழ,வீடுமன்
தம்பியோடு மஞ்சத்தின்மீது மணித்தவிசு ஏறுதல்.

கஞ்சம் வாவி – தாமரைத்தடாகம், கலை மதி -பதினாறு
கலைகளையும்படைத்த சந்திரனை, கண்டுஎன – கண்டாற்போல
[மதியைக்கண்டதடாகத்திலுள்ள கமலமலர்கள் போல], நிருபர்குழாம் – மன்னவரின்
கூட்டம், நெஞ்சு அழிந்து – மனம்முரிந்து, தொழ- 
வணங்காநிற்க,- வெம் சராசனம்
வீரன்உம் தம்பிஉம் – கொடியவிற் படையில் வல்லவீரனாகிய வீடுமனும் (அவனது)
தம்பியாகிய விசித்திரவீரியனும், மஞ்சம் ஏறி -(அரசர்கள் தங்குமாறு
அமைக்கப்பட்டுள்ள) கட்டிலின்மீதுஏறி, மணி தவிசு ஏறினார் –
(அம்மஞ்சத்திலிட்டிருந்த) அழகிய ஆசனத்தின்மேலே யேறினார்கள்;
(எ-று.)- ‘மதிகண்டென ‘ என்ற உவமைக்கேற்ப ‘வெஞ்சராசனவீரனுமேகியே’
என்றாற்போன்றபாடமே சிறத்தல் காண்க.     

குருத்தலம்தனில் கூறிய வஞ்சினம்,
ஒருத்தர் அன்று, அறிவார் உலகோர் பலர்;
விருத்தன் வந்தனன்; மேல் இனி ஏது இவன்
கருத்து?’ எனா, மனம் காளையர் கன்றினார்..-அது கண்டு, அரச குமாரர்கள் மன வாட்டமுறுதல்-வீடுமன் மஞ்சத்தவிசிலிருப்பது கண்டு, அரசக் காளையர் மனங் கன்றுதல்.

குருத்தலந்தனில் – குருக்ஷேத்திரத்திலே, கூறிய – (வீடுமன்)
சொன்ன,வஞ்சினம் – (தான் மணப்பதில்லையென்ற) சபதமொழியை, அறிவார் –
அறிபவர்,ஒருத்தர் அன்று – ஒருவர் அல்லர்: உலகோர் பலர் – உலகத்தவர்
பலரும்(அறிபவரே): (அப்படியிருக்கவும்), விருத்தன் – கிழவனாகிய வீடுமன்,
வந்தனன் -(மணமாலைபெற வேண்டிஇவ்விடம்) வந்துள்ளான்: இனிமேல் இவன்
கருத்துஏது -இனிமேலே இவன்எண்ணம் என்னவோ!, எனா – என்று, காளையர்
-காளைப்பருவமுள்ள (வராய்ச் சுயம்வர மணமாலைபெறும் பொருட்டு வந்த)
அரசகுமாரர்கள், மனம் கன்றினார் – மனம் வாட்டமுற்றார்கள்;

     மணப்பதில்லையென்று முன்னமே வஞ்சினங்கூறிக் கிழவனுமாய்விட்ட
இவன் இப்போது கன்னியர் மணமாலைசூட்டும் இவ்விடத்தில் வந்ததன்
நோக்கமென்னையோ? ‘ என்று அவன் வந்த காரணந்தெரியாமையால்
மனம்வாடினர்அரசகுமார ரென்பதாம். இதனாலும், தம்பியுடன் வீடுமன் சென்றில
னென்பது குறிப்பிக்கப்படுதல் காண்க. யமுனைக்கரையில் வசித்த தாசபூபதியின்
மனந் தெளியஅங்கு அவையத்தோர் கேட்குமாறு மணஞ்செய்வதில்லை யென்று
சபதஞ்செய்ததாகவந்துள்ளதனாலும், இங்கு ‘குருத்தலந்தனிற் கூறியவஞ்சினம்’
என்றுவருதலாலும்அவன் சபதஞ்செய்த அந்த இடமும் குருக்ஷேத்திரத்திற்
சேர்ந்ததென்றுகொள்ளவேணும். முதனூலில் “வீடுமன் மணமாலைபெறுமிடத்து
வந்திருந்ததுகண்டசபையிலுள்ள அரசகுமாரர் ‘கங்கா நதியின் புத்திரனான
இந்தக்கிழவன்பிரதிஜ்ஞைதவற இங்கு ஏன் வந்தான்?’ என்று சொல்பவர்களாய்க்
கைகொட்டிச்சிரித்தார்கள்” என்று உள்ளது

இருந்த மன்னர், ‘இவர் இவர்’ என்று, உளம்
பொருந்த, மற்று அவர் பொற்புடைத் தேசு எலாம்
திருந்த நின்று, செவிலியர் கூறவே,
முருந்த வாள் நகை மூவரும் தோன்றினார்.-மாலையுடன் நெருங்கிய கன்னியர் வீடுமனது நிலை கண்டு ஐயுறுதல்-கன்னியர்மூவரும் வர, செவிலியர் சுயம்வரமண்டபத்து வந்திருந்த மன்னவரைக் காட்டி இன்னாரின்னாரென்று அறிவித்தல்.

செவிலியர் – செவிலித்தாய்மார், நின்று- (எதிரே) நின்று,-
இருந்தமன்னர் – (சுயம்வரத்தின்பொருட்டு அந்தமண்டபத்து) வந்திருந்த
அரசர்களை, ‘இவர்இவர் – இவ்வரசர் இத்தன்மையர்,’ என்று-, உளம் பொருந்த-
மனத்திற்படுமாறு, அவர் பொற்பு உடை தேசு எலாம் – அம்மன்னவரின்
அழகுபொருந்தியபராக்கிரமங்களையெல்லாம், திருந்த கூற – செவ்வனே
கூறும்படி, முருந்தம் வாள்நகைமூவர்உம் – மயிலிறகினடிபோன்றஒளிபொருந்திய
பற்களையுடைய அந்தக்காசிமன்னவன்கன்னியர்மூவரும், தோன்றினார் –
(அம்மண்டபத்து) வந்தார்கள்; (எ-று.)

     மணமாலைசூட்டவருங் கன்னிமார்க்கு அரசருடையசரித்திரங்
களையுணர்ந்தமகளிர் இவர் இன்னரென்றுகூறுதல், மரபு. முருந்தம், அம் –
சாரியை.முருந்து அ எனவும் பிரிக்கலாம். மற்று – அசை.

கையில் மாலை இவற்கு’ எனக் கன்னியர்
வெய்ய நெஞ்சொடு மின் என வந்தவர்,
வைய மன்னன் வய நிலை நோக்கியே,
ஐயம் உற்றனர், அன்புறு காதலார்.–மாலைசூட்டவந்தகன்னியர் வீடுமன்நிலையைக்கண்டு ஐயுறுதல்.

கையில் மாலை – கையிலுள்ளமாலையானது, இவற்கு-  இந்த
மன்னவனுக்கு (ச் சூட்டுவது), என – என்று, வெய்ய – விரும்பிய, நெஞ்சொடு –
மனத்துடனே, மின் என வந்தவர் கன்னியர் – மின்னல் போல ஒல்கியொசியுந்
தன்மையுடன் வந்த அந்தக் கன்னியர், அன்பு உறுகாதலார் – அன்புற்ற
காதலையுடையராக (இருந்தும்), வையம் மன்னன் வயநிலை நோக்கி –
உலகத்துக்குஅரசனாகிய வீடுமனது வயசின் நிலைமையைநோக்கி, ஐயம்
உற்றனர் -(கிழவனாயிருக்கிற இவனுக்கு மாலைசூட்டுவது எப்படி? என்று)
சங்கைகொண்டுபின்வாங்கினார்கள்; (எ-று.)

     செவிலியர் மன்னரைப்பற்றிக் கூறியதுகேட்ட கன்னிமார், வீடுமனுக்கு
மாலைசூட்டுவது என்று விரும்பிவந்தவராய், அவன் கிழவனாயிருப்பது கண்டு
பின்வாங்கின ரென்றவாறு. “ஆத்மாநம் ஆலோக்யஜராஸமேதம் – அந்யத்ர
யாந்தீ;” என்று பாலபாரதத்து வருவதுங் காண்க: வியாசபாரதத்தும் இவ்வாறே
வருகின்றது.வயஸ் நிலை என்ற இரண்டுசொற்கள் சேர்ந்து வயநிலையென்று
திரிந்துவந்ததென்க.இனி இதனைத் தென்மொழித் தொடராகக்
கொண்டுவீரநிலையென்றுபொருளுரைத்து, தாம் எவனோ ஒரு ராஜகுமாரனுக்கு
மாலைசூட்டலாமென்றுஉத்தேசித்து விருப்புள்ள நெஞ்சோடுவந்த அக்கன்னிமார்,
இடையிலேவீரநிலையோடுநிற்கும் வீடுமனைக்கண்டு ‘நாம் பிறனுக்கு
மாலைசூட்டினால் இவன்என்ன செய்வானோ? என்று ஐயமுற்றா ரென்று இச்
செய்யுளுக்கு வலிந்து பொருள்கூறுவர், பலர்.

ஏனை வேந்தர் எதிர், இவரைப் பெருந்
தானை சூழ் மணிச் சந்தனத்து ஏற்றியே,
சோனை மா மதம் சோரும் கட தட
யானை என்ன இளவலொடு ஏகினான்.-வீடுமன் மகளிரைக் கவர்ந்துகொண்டு செல்லுதல்-அப்போது மன்னவர்பார்த்துநிற்க, அந்தக்கன்னி
யரைத் தேர்மீது ஏற்றித் தம்பியோடு வீடுமன் தன்நகர் நோக்கிச் செல்லுதல்.

(காசிராசன்கன்னியர் மனத்துச் சங்கைகொண்டு மாலை சூட்டப்
பின்வாங்குகையில்), ஏனை வேந்தர் எதிர் – மற்றை யரசரெதிரில்தானே,
இவரை -இந்தக்கன்னிமார்மூவரையும், பெருந்தானை சூழ் – பெருஞ் சேனையாற்
சூழப்பெற்ற,மணி சந்தனத்து ஏற்றி – அழகிய தேரின்மீது ஏற்றிக்கொண்டு,-
சோனை மா மதம்சோரும்-  விடாப்பெருமழைபோல மிக்கமதம் பெருகப்பெற்ற,
கடதடம் – மதம்பெருகும் கபோலத்தையுடைய, யானை என்ன – யானை போல,
(வெகுவிரைவாக), இளவலொடு – தம்பியுடனே, ஏகினான்-;

முறையினால் அன்றி, மொய்ம்பின் கவர்வது எக்
குறையினால்?’ என, கோக்குலம் கூடி வந்து,
இறைவனோடு எதிர் ஏற்ற வில் வீரரை,
பிறைமுகக் கணையால் பிளந்து, ஓட்டினான்.-எதிர்ந்த மன்னரை ஓட்டி, வீடுமன் தன் நகரை அடைதல

முறையினால்அன்றி, – முறைமையினாலல்லாமல், மொய்ம்பின் –
வலிமையினால், கவர்வது – பறித்துக்கொண்டுசெல்வது, எ குறைவினால் –
(நம்மிடத்துள்ள) எந்தக்குறைவினால்?’ என – என்று சொல்லிக்கொண்டு,
கோகுலம் -அரசரின்திரள், கூடிவந்து – ஒன்று சேர்ந்துவந்து, இறைவனோடு –
வீடுமனோடு, எதிர்எற்ற – எதிராகப் பொராநிற்க,- (அப்போதுவீடுமன்),- அ
வீரரை- (தன்னை யெதிர்த்த)வீரரான அம் மன்னவர்களை, பிறைமுகம்
கணையால் – அர்த்தசந்திரபாணங்களால்,பிளந்து – காயப்படுத்தி, ஓட்டினான்-
ஓடச்செய்தான்; (எ -று.)

     நாம் வலிமையாற் குறைவற்றவராக இருக்கையில் நம்முன் இக்கன்னியரைக்
கவர்ந்துசெல்வது தக்கதன்று என்ற கருத்தினால் ‘மொய்ம்பிற்கவர்வ
தெக்குறையினால்’ என்றனர். ‘ஏற்றவவ்வீரரை, ஏற்றவில்வீரரை’ என்றும் பாடம்

முந்துறப் பெறும் மூவரொடு, ஆடு அமர்
விந்தைதன்னையும் வேந்தர் கொடுத்தலால்,
சந்தனுப் பெயர்த் தார் முடி மன்னவன்
மைந்தர் தங்கள் வள நகர் மன்னினார்.-வீடுமன் வெற்றிபெற்றுக் கன்னிமாரைக் உடன் கொண்டு தன் நகர் சார்தல்.

முந்துற பெறும் – முன்னமே பெற்ற, மூவரொடு –
(அந்தக்கன்னிமார்).மூவருடனே, ஆடு அமர் விந்தைதன்னைஉம் – (பகையைக்)
கொல்லுதலையுடையபோர்க்குஉரியவீரலட்சுமியையும், வேந்தர் – (எதிர்த்த)
மன்னவர், கொடுத்தலால்-, -சந்தனு பெயர் தார் முடி மன்னவன் மைந்தர் –
சந்தனு வென்ற பெயரொடுமாலையையும் கிரீடத்தையும் அணிந்தவனான
மன்னவனுடைய புதல்வராகிய வீடுமனும் விசித்திரவீரியனும், தங்கள் வளம் நகர்
மன்னினார் – தங்களுடைய வளப்பமுள்ள நகரத்தைச் சேர்ந்தார்கள்; (எ-று.)

     விந்தியமலையில் வசிப்பவளாதலால் வீரலட்சுமிக்கு ‘விந்த்யவாஸிநீ’ என்று
பெயர்: அச்சொல், விந்தையெனவரும்.   

சமரின் முந்திய சாலுவன்மேல் மனம்
அமர நின்றது அறிந்துழி, அம்பையை,
‘எமர்களுக்கு இஃது இயற்கை அன்று’ என்னவே,
அமர் அழிந்த அவனுழைப் போக்கினான்.-போரிற் சற்று முந்திய சாலுவனிடத்து மனஞ்சென்ற தறிந்து, அம்பையை வீடுமன் அவனிடத்துப் போக்குதல்.

சமரில் – (எதிர்த்துப்பொருதபோது) அந்தப்போரில், முந்திய –
(சற்று)முற்பட்டவனான, சாலுவன்மேல்-, (அம்பை யென்பவள்,) மனம் – (தன்)
நெஞ்சம்,அமர நின்றது – பொருந்த நின்றதை, அறிந்த உழி – (வீடுமன்)
அறிந்தபோது,-அம்பையை- (அந்த) அம்பையை (நோக்கி, ‘எமர்களுக்கு –
எம்மைச்சேர்ந்தோர்க்கு,இஃது -(பிறர்மீது மனஞ்செல்லுங்கன்னிகையைக்
கொள்ளுகின்ற) இது, இயற்கை அன்று- தகுதியன்று,’ என்ன – என்றுசொல்லி,
அமர் அழிந்த அவனுழை போக்கினான் -போரில் தோற்ற அந்தச்சாலுவனிடமே
(அவளை) அனுப்பினான்; (எ-று.)

     சாலுவன் – சாலுவதேசத்து ராசன்: இவன்பெயர் பிரமதத்தனென்பது: இவன்
வீடுமனுடன் எதிர்ப்போரில் வலிமையிற்சற்று முந்தினா னென்க. 

அம்பிகைக்கும் அம்பாலிகைக்கும் பதி
எம்பியே, எழிலால்!’ என்று, இசைவுற,
தம்பிதன்னைத் தனஞ்சயன்தன் எதிர்
வம்பினால் மிகு மா மணம் சேர்த்தினான்.-அம்பிகை அம்பாலிகைகளைத் தன் தம்பிக்கு வீடுமன்
மணம்புரிவித்தல்.

‘எழிலால்- அழகினாலேற்ற, எம்பி ஏ – என்
தம்பிவிசித்திரவீரியனே, அம்பிகைக்குஉம்-, அம்பாலிகைக்குஉம்-, பதி –
கணவனாவான்,’ என்று-என்றுசொல்லி, இசைவுஉற – (அவர்கள்)
மனஞ்சம்மதிக்க,தம்பிதன்னை-, தனஞ்சயன்தன் எதிர் – அக்கினிக்கு எதிரே,
வம்பினால் மிகு – நறுமணத்தினால்மிக்க, மா மணம்- சிறந்த கலியாணத்தை,
சேர்த்தினான் – நடப்பித்தான்; (எ-று.)

சென்ற அம்பையைத் தீ மதிச் சாலுவன்,
‘வென்று, தெவ்வர் கவர்ந்த நின் மெய் தொடேன்’
என்று இகப்ப, இவனுழை மீளவும்,
மன்றல் வேண்டினள், மன்றல் அம் கோதையாள்.-சாலுவன், பகைஞன் கவர்ந்த உன்னைக் கொள்ளே னென்றிட,
அம்பை மீண்டு வீடுமனைச் சார்தல்.

சென்ற அம்பையை – (தன்னிடம்) வந்துசேர்ந்த அம்பை
யென்பாளை,தீ மதி சாலுவன் – கெடுமதியையுடைய சாலுவனென்பவன், ‘வென்று
தெவ்வர் கவர்ந்தநின் – ஜயித்துப் பகைவர் கவர்ந்துபோன நினது, மெய் –
உடலை, தொடேன் -தீண்டேன்,’ என்று-, இகப்ப – (அங்கீகரியாது) புறக்கணிக்க,-
இவனுழை – இந்தவீடுமனிடத்தே, மீளஉம் – மறுபடியும், மன்றல்
அம்கோதையாள் – நறுமணமுள்ளஅழகிய மாலையையணிந்த அந்த அம்பை,
மன்றல் வேண்டினள் -மணஞ்செய்துகொள்ள இரந்தாள்; (எ-று.)- கற்பால்
வந்தவளைக் கடிதலால் ‘தீமதிச்சாலுவன்’ என்றது.

கங்கை மைந்தன், கடிமணம், காதல் கூர்
மங்கைதன்னை மறுத்தபின், மங்கையும்
செங் கண் நீர் எழ, சிந்தை செந் தீ எழ,
சங்கையோடு தன் தாதையை நண்ணினாள்.-வீடுமன் மணம்மறுக்க, அம்பை சங்கையோடு தன் தந்தையைச் சார்தல்.

காதல்கூர்- (விவாகஞ்செய்துகொள்ள வேணுமென்று) விருப்பம்
மிகுந்த,மங்கைதன்னை – (அம்பையென்ற) பெண்ணைநோக்கி, கங்கைமைந்தன் –
கங்கையின்புத்திரனான வீடுமன், கடி மணம்மறுத்த பின் – கடியென்று
ஒருபேர்கொண்ட மணத்தை (உடன்படாது) மறுத்திட்டபின்பு,- மங்கைஉம் – அந்த
அம்பையும்,- செங் கண் நீர் எழ – (வெகுளியாற்) சிவந்த (தன்) கண்களினின்று
கண்ணீர்பெருகவும், சிந்தை செந் தீ எழ – (தன்) மனத்திலே வெகுளித்தீச்
சொலிக்கவும், சங்கையோடு – (என்னசொல்லுவானோ) என்ற சங்கையுடனே, தன்
தாதையை – தன் தகப்பனை, நண்ணினாள் – சேர்ந்தாள்;

      ‘அம்பை வீடுமனால் நிராகரிக்கப்பட்டபின்பு தவத்தில் மன மூன்றியவளாய்க்
காட்டிற்குச்சென்றாள்’ என்ற இவ்வளவே பால பாரதத்திலுள்ளது: அன்னாள்
சிகண்டியான சரித்திரம் அங்குஇல்லை.

தாதை தாளினில் விழுந்து, சந்தனுவின் மைந்தன் இன்னல்
உரை தந்ததும்,
கோதையால் உறவு கொண்டு கைதரல் குறித்த
கோமகன் மறுத்ததும்,
பேதை கூற, மனம் நொந்து, இரங்கியவன், மிக்க
நண்பினொடு பின்னையும்,
தூதை ஏவி, மணம் உற்று இரந்தனன், விசும்பு உலாவு
நதி சுதனையே.-அம்பை நிகழ்ந்தவற்றைத் தந்தையிடஞ் சொல்ல, அன்னான்
மணந்துகொள்ளுமாறு வீடுமனிடத்துத் தூதரை யேவுதல்.

(நண்ணிய அம்பை), – தாதை தாளினில் விழுந்து – (தன்)
தந்தையின்பாதங்களிலே விழுந்து, சந்தனுவின் மைந்தன்- சந்தனுவின் குமாரனான
வீடுமன்,இன்னல் உரை – துன்பந்தரும் வார்த்தைகளை, தந்ததுஉம் –
சொன்னதையும்,கோதையால் – மணமாலைமூலமாக, உறவுகொண்டு கைதரல் –
சம்பந்தஞ்செய்துகொண்டு பாணிக்கிரகணஞ்செய்தலை, குறித்த – எண்ணிய,
கோமகன்-சாலுவ மகாராசன், மறுத்ததுஉம் – மணஞ்செய்துகொள்ள
உடன்படாததையும், பேதை கூற (தன்) பெண் சொல்ல,-(அது கேட்டு), மனம்
நொந்து-,இரங்கியவன் – இரக்கங்கொண்டவனான அப்பெண்ணின் தந்தை,
மிக்கநண்பினொடு -மிக்கசினேகத்தோடு, பின்னைஉம் – பின்னும், தூதை ஏவி –
தூதுவரை அனுப்பி,(அத்தூதன்மூலமாக), விசும்பு உலாவு நதி சுதனை –
ஆகாயத்திலுலாவுகின்ற நதியாகியகங்கையாளின் மகனாகிய வீடுமனை, உற்று-
அடைந்து, மணம் இரந்தனன் – (தன்மகளை)  மணஞ்செய்து கொள்ளுமாறு
வேண்டினான்; (எ -று.)

     கோதையால் – மணமாலைமூலமாக என்றபடி: கோதைபா லென்று
பாடமாயின்,தன்னைப் படர்க்கையாகக் கூறியதாகக் கொள்க. பின்னையும் என்ற
உம்மை, முன்புஅம்பை சென்றமையையும் தழுவும்.

     இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் பதினேழுகவிகள் – பெரும்பாலும்
ஒன்றுமூன்று ஐந்தாஞ்சீர்கள் மாச்சீர்களும் ஈற்றுச்சீரொன்று விளச்சீரும்,
மற்றைமூன்றும்காய்ச்சீருமாகிவந்த எழுசீராசிரியவிருத்தங்கள்

போன தூதுவர் வணங்கி, இம் மொழி புகன்ற போது,
மொழி பொய்யுறா, மீனகேதனனை
வென்று, தன் கொடிய விரதமே புரியும் வீடுமன்,
மான வேல் நிருபன் மகள் குறித்த திரு மன்றல்
வன்பொடு மறுத்தலால்,
ஆன ஆதரவொடு ஆகுலம் பெருக அம்பை
தந்தைதனது அருளினால்,-தூதுவர் புகலவும் வீடுமன் மணம்மறுத்தல்.-இதுமுதல் நான்குகவிகள் – ஒருதொடர்.

போன தூதுவர் – (அங்குநின்று) சென்ற தூதுர்கள், (வீடுமனை
யடைந்து), வணங்கி-, இ மொழி புகன்ற போது – இந்த வார்த்தையைச்
சொன்னபோது,- மொழி பொய் உறா – (தான்) சொன்ன சொல் தவறாமல்,
மீனகேதனனை வென்று தன் கொடிய விரதம்ஏ புரியும் – மன்மதனைச்
செயித்துத்தன்னுடைய கொடிய விரதத்தையே நடத்துகின்ற, வீடுமன்-, – மானம்
வேல் நிருபன்மகள் குறித்த திரு மன்றல் – பெருமைபெற்ற வேற்படையைக்
கொண்டகாசிராசன்மகள் எண்ணிய சிறந்த விவாகத்தை, வன்பொடு மறுத்தலான்-
கடுமையாகமறுத்திட்டதனால், – அம்பை தந்தை – அந்த அம்பையின் தகப்பனான
காசிராசன்,-ஆன ஆதரவொடு – (தன்மகள் திருமணத்தைப்பற்றிக்) கொண்ட
விருப்புடனே,ஆகுலம் பெருக – துன்பம் மிக,- தனது அருளினால்,– (எ -று.)-
என்று (கூறினான்),என்று – மேல் 134 – ஆங் கவியோடு இயையும்.
மீனகேதனனைவென்று -காமவிகாரமில்லாமல் என்றபடி. மீனகேதனன் –
மீன்வடிவத்தைக் கொடியிலுடையவன்.

வரிசையால் உயர் அநேக மண்டல மகீபர் சொன்ன
சொல் மறுக்கினும்,
பரசுராமன் அருள் மொழி மறான்; அவனது இரு
பதத்திடை பணிந்து நீ
உரைசெய்தால், அவன் உரைத்த சொல்லின்வழி ஒழுகி
வந்து, நினை உவகையால்
விரை செய் மாலை புனையாது வீடுமன் மறுத்து,
மீளவும் விளம்புமேல்,-தந்தையின் உரைப்படி அம்பை, உதவி
வேண்டிப் பரசுராமனைச் சார்தல்

 வரிசையால் – சிறப்பினால், உயர் – மேம்பட்ட, அநேகம் மண்டலம்
மகீபர் – பல மண்டலிகரான அரசர்கள், சொன்ன-, சொல் – சொல்லை,
மறுக்கின்உம்- மறுத்தாலும், பரசுராமன்-, அருள்- கூறுகின்ற, மொழி-பேச்சை,
மறான்- (வீடுமன்)மறுக்கமாட்டான்: (ஆகையால்), -நீ-, அவனது இருபதத்திடை
பணிந்து – அந்தப்பரசுராமனுடைய உபயபாதங்களிலே நமஸ்கரித்து,
உரைசெய்தால் (உன் குறையைச்)சொன்னால், அவன் உரைத்த சொல்லின் வழி –
அந்தப் பரசுராமன் கூறியபேச்சின்வழியே, ஒழுகிவந்து – நடந்துவந்து, நினை –
உன்னை, உவகையால் -மகிழ்ச்சியோடு, விரை செய் மாலை புனையாது –
நறுமணங்கமழ்கின்ற மணமாலைசூட்டாது, வீடுமன்-, மீளஉம் – மீண்டும், மறுத்து
விளம்பும் ஏல் – மறுத்துக்கூறுவானானால்,- (எ-று.)- விளம்புமேல் என்பது,
அடுத்த செய்யுளில் “பெருந்தவம்புரிதி” என்பதனோடு இயையும்.

     குரு ஆதலால் பரசுராமன் மொழியை வீடுமன் மறுக்க மாட்டா னென்று
காசிராசன் கருதினான். 

பின்னை எண்ணிய பெருந் தவம் புரிதி’ என்று
கூறிய பிதாவையும்,
அன்னைதன்னையும், வணங்கி, நீடு சது-ரந்தயானமிசை
அம்புயப்
பொன்னை வென்று ஒளி கொள் சாயலாள், இரு புறத்து
மாதர் பலர் பொலிவுடன்
தன்னை வந்து புடைசூழ, ஏகி, யம-தங்கி மைந்தன்
நகர் சாரவே,

பின்னை- பிறகு, எண்ணிய – (நீ) நினைத்துள்ள, பெருந்தவம் –
மிக்கதவத்தை, புரிதி – செய்வாய், என்று-, (கூறினான்); கூறிய – (அங்ஙனம்)
சொன்ன,பிதாவைஉம் – தகப்பனையும், அன்னை தன்னைஉம் – தாயையும்,
வணங்கி-, நீடு -நீண்டுள்ள, சதுரந்தயானம் மிசை – பல்லக்கின்மீது, அம்புயம்
பொன்னை வென்று ஒளிகொள் சாயலாள்- தாமரைமலரில் வாழ்பவளான
இலக்குமியைச் சயித்துஒளியைக்கொண்ட மெல்லியலான அம்பை, மாதர்பலர் –
பலமங்கைமார், தன்னை-,வந்து- அடைந்து, இருபுறத்துஉம்-, பொலிவுடன்-
அழகாக, புடைசூழ – சூழ்ந்திருக்க,ஏகி – (அங்கு நின்றும்) போய், யம தங்கி
மைந்தன் – சமதக்கினிமுனிவனுடையகுமாரனாகிய பரசுராமன், நகர் –
இருக்குமிடத்தை, சார – போய்ச்சேர,- (எ-று.) ‘புகல”(135) என இயையும்.

     132- ஆம் கவியில்வந்த “தந்தை” என்பதற்கு முடிக்குஞ் சொல் வேண்டி,
‘என்று’ என்பதன்பின் ‘கூறினான்’ என்று வருவிக்கப்பட்டது. இங்ஙன்
முடிக்காவிடின்இச்செய்யுளில்  ‘பிதாவை’ என வருவதனால் அந்தச்செய்யுளில்
நின்ற ‘தந்தை’ என்பதுபயனின்றா யொழியும். யமதங்கி = ஜமதக்நி

காசிராசன் மகள் என்று வந்தனள் ஒர் கன்னி’ என்று
கடை காவலோர்,
வாச நாறு துளவோனுடன் புகல, ‘வருக!’ என்றபின்,
மடந்தை போய்,
ஆசினால் உரைவகுத்து, முன்செயல் அனைத்தும், அண்ணல்
அடி தொழுது, பின்
பேசினாள்; அவனும், ‘யாம் முடிக்குவம் இது’ என்று
மெய்ம்மையொடு பேசினான்.-அம்பை பரசுராமனை யடைந்து தன்குறையைத் தெரிவிக்க,
அவனும் அவள்குறையை முடிப்பதாக உறுதிகூறல்.

கடை காவலோர் – வாயிற்காவலர், வாசம் நூறு துளவோனுடன் –
நறுமணம் வீசுகின்ற திருத்துழாய்மாலையை யணிந்த பரசுராமனிடத்து, காசிராசன்
மகள்என்று ஓர் கன்னி வந்தனள் என்று புகல – காசிராசன் பெண்ணென்று
ஒருகன்னிகைவந்துள்ளாளென்றுசொல்ல,- (அந்தப்பரசுராமன்), வருக என்று பின்-
‘வருவாயாக’ என்று  சொன்ன பின்பு, மடந்தை – இந்தப் பெண், போய்-
(பரசுராமனிருக்குமிடஞ்)சென்று, முன் ஆசினால் உரை வகுத்து – முதலில்
வாழ்த்தினால் பேசி [வாழ்த்தி], பின்- பிறகு, அண்ணல் அடிதொழுது –
பெருமையிற் சிறந்தோனாகியஅந்தப்பரசுராமனுடைய பாதங்களில் வணங்கி,
செயல் அனைத்துஉம் பேசினாள் -(முன்னே) நிகழ்ந்த செய்திகளையெல்லாஞ்
சொன்னாள்; அவன்உம் -அந்தப்பரசுராமனும், இது – இந்தஉன்கருத்தை, யாம்-,
முடிக்குவம் -நிறைவோற்றுவோம், என்று-, மெய்ம்மையொடு – உறுதியாக,
பேசினான்-சொன்னான்;

     முன்நிகழ்ந்தது – மணமாலையைச் சாலுவனுக்குச் சூட்டக் கருதியது
முதலியன. ஆசினால் – விரைவோடுஎன்பாருமுளர்.

வரதன், வீர மழுவால் அநேக குல மன்னர் வேரற
மலைந்த கோன்,
இரதமீது அவளுடன் கணப் பொழுதின் ஏறி, ஐ-இரு
தினத்தினில்,
விரதம் ஆபரணம் என அணிந்த திறல் வீடுமன் பதியின்
மேவலும், சரதமாக எதிர்கொண்டு,
அவன் சிரம் இவன் பதத்தினிடை சாத்தினான்.-பரசுராமன் அவளது குறை முடிக்க உடன்பட்டு,
அவளுடன் வீடுமனிடம் வந்து, அவளை மணம்புரியுமாறு உரைத்தல்

வரதன் – (வேண்டுவார்க்கு வேண்டிய) வரத்தைக் கொடுப்பவனும்,
வீரம்மழுவால் அநேக குலம் மன்னர் வேர் அறமலைந்த கோன் –
வீரத்தோடுகூடியமழுப்படையால் பலகுலத்தில் தோன்றிய அரசரும்
வமிசநாசமாகுமாறு பொருததலைவனுமாகிய அந்தப்பரசுராமன், கணம் பொழுதின்
– ஒருகணப்போதிற்குள்ளே,இரதம்மீது – (தன்) தேரின்மீது, அவளுடன் – அந்த
அம்பையுடனே, ஏறி-,- ஐ இருதினத்தினில் – பத்துத்தினங்களில், விரதம்
ஆபரணம் என அணிந்த திறல் வீடுமன் -விரதத்தையே ஆபரணமாகப் பூண்ட
வலிமையுள்ள வீடுமனுடைய, பதியின் -பட்டணத்திலே [அஸ்திநாபுரியிலே],
மேவலும் – சேர்ந்தவுடனே,- சரதம் ஆக -(மனத்தில்) அன்புதோன்ற,
எதிர் கொண்டு-, அவன் – அவ்வீடுமன், சிரம் – (தன்)சிரசை, இவன்
பதத்தினிடை – இந்தப் பரசுராமன் பாதத்திலே, சாத்தினான் -சேர்த்தினான்;
(எ-று.)

     சரதம் – உண்மையென்பாருமுளர்;  மூன்னையபொருளில், ஸரஸ மென்ற
வடசொல்லின் விகாரம்.    

தனக்கு வின்மை நிலையிட்ட கோவை ஒரு தமனியத்
தவிசில் வைத்து, ‘நீ
எனக்கு நன்மை தர வந்த நல் தவம் இருந்தவா!’
என, இருந்தபின்,
‘கனக்கும் வெண் தரள வட முலைப் பெரிய கரிய
கண்ணி இவள், காதலால்
உனக்கு மன்றல் பெற உரியள் ஆகுக!’ என உவகையோடு
அவன் உரைக்கவே,-வீடுமன் பரசுராமனை யுபசரித்தபின், பரசுராமன்
அம்பையை மணந்துகொள்ளுமாறு வீடுமனிடம் கூறுதல்.-நான்குகவிகள் – ஒருதொடர்.

தனக்கு-, வின்மை – வில்லின்நிலைமையை, நிலையிட்ட –
நிலையாகவுணர்த்திய, கோவை – உபாத்தியாயனான பரசுராமனை, ஒரு தமனியம்
தவிசில் வைத்து – ஒரு பொற்பீடத்திலிருக்கச்சொல்லி, ‘நீ-, எனக்கு-, நன்மை
தர -மிக்க மேன்மையைத் தருமாறு, வந்த – (இங்கு) எழுந்தருளிய, நல் தவம் –
(என்னுடைய) சிறந்த தவம், இருந்த ஆ இருந்தவகை (என்னே!)’, என – என்று
(வீடுமன்) முகமன்கூற, இருந்தபின் – (பரசுராமன் அந்தத்தமனியத் தவிசில் தங்கி)
இருந்தபின்பு,- ‘வெள் தரளம் வடம்  கனக்கும் முலை பெரிய கரிய கண்ணி
இவள் -வெண்ணிறமுள்ள முத்துவட மணிந்த பருத்த தனங்களையும்
பெரியனவும்கரியனவுமான கண்களையுமுடைய இந்த அம்பை யென்பவள்,
காதலால் -ஆசையோடு, உனக்கு-, மன்றல்பெற – மணந்துகொள்ளுதற்கு, உரியள்
ஆகுக-, என- என்று, உவகையோடு – மனமகிழ்ச்சியோடு, அவன் – அந்தப்
பரசுராமன், உரைக்க- சொல்ல,-(எ-று.)- ஆகுகென – தொகுத்தல்.
பெரியகரியகண் – ஈரடை

இன் சொலால் அவனி கொண்ட எந்தை, முதல், இன்ப
மன்றல் இனிது எய்த, நான்
வன் சொலால், ‘இரத மணம் உறேன்’ என மனத்தினால்
விரதம் மன்னினேன்;
‘நின் சொல் யாவரும் மறார்’ எனக் கருதி, நீ உரைப்பினும்,
நிகழ்ந்த இப்
புன் சொலானது, இனி மா தவத்தின் மிகு புனித! என்
செவி பொறுக்குமோ?இதுவும் அடுத்தகவியும் – வீடுமன் தன்விரதத்தைத்
தெரிவித்துப் பரசுராமனிடம் அம்பையை மணந்துகொள்ள மறுத்ததைத்தெரிவிக்கும்.

இன்சொலால் – இனிய சொல்லினால், அவனி – உலகத்தாரை,
கொண்ட- (தன்) வசமாக்கிக்கொண்ட, எந்தை – என் தந்தை, முதல் – முன்பு,
இன்பம் மன்றல்- இன்பத்தை யனுபவிதற்குஉரிய விவாகத்தை, இனிது எய்த-
இனிதுபெறுமாறு, வன் சொல்-சபத வார்த்தைகளால், ‘நான்-, இரதம் மணம் –
இன்பமனுபவித்தற்குரியவிவாகத்தை, உறேன் – பெறாமலிருப்பேன்,’ என –
என்று, மனத்தினால் -மனப்பூர்வமாக, விரதம் – ஒருவிரதத்தை, மன்னினேன் –
பொருந்தினேன்: நின்சொல்யாவர்உம் மறார் என கருதி நீ உரைப்பின்உம் –
உன்னுடைய சொல்லை எவரும்மறுத்துச் சொல்லாரென்று கருதி நீ
(என்னைமணந்துகொள்ளுமாறு) கூறினாயானாலும்,மாதவத்தின் மிகு புனித –
பெருந்தவத்தினால் மிக்க பரிசுத்த மூர்த்தியே! நிகழ்ந்த இபுன்சொல் ஆனது –
(உன்னிடத்தினின்று) வந்த இந்த அற்பமான சொல்லாகியதை,இனி – இப்போது,-
என் செவி பொறுக்கும் ஓ – என்செவி யேற்று நிற்குமோ? (எ -று.)

     குருவின்மொழி தள்ளத்தகாத தென்றலும், விரதம்பூண்ட எனக்கு இது
புன்மொழியாகுதலால், இதனைக் கேளேனென்றான். இரதம் = ரதம்: புணர்ச்சி

‘களம் புகுந்தவரை மீள ஏகுதல் கொடாத கார்முக
வினோத! கேள்:
உளம் புகுந்து இனிது இருக்கும் நல் கடவுள் உன்னை
அன்றி இலை, உண்மையே;
வளம் புனைந்த அநுராக போகம் மிகு மாதர் மங்கையர்
பொருட்டினால்,
விளம்பும் இந்த மொழி ஒழிக! என்தன் உயிர் வேண்டும்
என்னினும் வழங்குவேன்.’

களம் புகுந்தவரை மீள ஏகுதல் கொடாத கார்முகம் வினோத –
போர்க்களத்தில் புகுந்தாரை மீண்டுபோகுமாறு இடங்கொடுக்காத
[எதிர்த்தாரைக்கொன்றேதீர்க்கின்ற] விற்றொழில் வினோதனே! கேள்-: உளம்
புகுந்துஇனிது இருக்கும் நல் கடவுள்- (என்)  மனத்திற்புகுந்து வாழுஞ் சிறந்த
கடவுள்,உன்னை அன்றி இலை- உண்மை ஏ – (இது) சத்தியமேயாம்: வளம்
புனைந்தஅநுராகம் போகம் மிகு மாதர் மங்கையர்பொருட்டினால் –
வளப்பம்பொருந்திய [மிக்க]ஆசையினால் நிகழும் இன்பநுகர்ச்சிக்கு உரிய சிறந்த
அழகிய மகளிரின்பொருட்டாக,விளம்பும் – சொல்லுகின்ற, இந்தமொழி –
இந்தப்பேச்சை, ஒழிக – தவிர்க: என்றன்உயிர் வேண்டும் என்னின்உம் –
என்னுடைய உயிரே வேண்டுமென்றா யெனினும்,வழங்குவேன் – தந்திடுவேன்;
(எ -று.)

     குருபேச்சுத் தட்டக்கூடாது: எனினும், விரதமும் தவிரக்கூடாது: ஆதலால்,
விரதபங்கஞ் செய்யாமல் நான் இருக்க நீ எது கேட்டாலுந் தருவேனென்றனன்
வீடுமனென்க. களம்… வினோத – நீ போர்புரிவாயானாலும் நான் அஞ்சி
என்கொள்கையைவிடே னென்ற குறிப்பினது. மாதர்-அழகு. 

மறுத்து இவன் புகல, வீரியன் புயம் ஒர் ஆயிரம்
துணிசெய் மழுவினான்,
வெறுத்து, அனந்தரம், எழுந்திருந்து, கரை அழியும் வேலை
நிகர் வெகுளியன்,
கறுத்த நெஞ்சினன், வெளுத்த மேனியன், உறச் சிவந்த
இரு கண்ணினன்,
பொறுத்த வில்லினன், விரைந்து, தேர்மிசை புகுந்தனன், பெரிது
போர் செய்வான்.-வெகுளி பொங்கப் பரசுராமன் போருக்கு
எழவே, வீடுமனும் எதிர் பொருது அவனை வெல்லுதல்

இவன் – இந்தவீடுமன், மறுத்து புகல – (குருவின் வாசகத்தை)
மறுத்துச்சொல்ல, வீரியன் புயம் ஒர் ஆயிரம் துணி செய் மழுவினான் –
கார்த்தவீரியனுடைய ஓராயிரம் புஜத்தைத் துண்டித்த மழுப்படையை யுடையனான
பரசுராமன், அனந்தரம் – பிறகு, வெறுத்து- (வீடுமனிடத்தில்) வெறுப்புக்கொண்டு,
எழுந்திருந்து-, கரை அழியும் வேலை நிகர் வெகுளியன் – கரைமீறிச் செல்லுங்
கடலையொத்த சினத்தையுடையவனாகி,- கறுத்த நெஞ்சினன் – கோபங்கொண்ட
நெஞ்சையுடையவனும், வெளுத்த மேனியன்- (அதனால்) வெண்மையடைந்த
உடலையுடையவனும், உற சிவந்த இரு கண்ணினன்- மிகச் சிவந்த இரண்டு
கண்களையுடையவனும், பொறுத்த வில்லினன் – (கையிற்) கொண்ட
வில்லையுடையவனுமாகி,- பெரிது போர் செய்வான்- பெரும்போர் செய்யும்
எண்ணங்கொண்டு, விரைந்து-, தேர்மிசை புகுந்தனன் – தேரின் மீது ஏறினான்;
(எ-று.)

     சுரையழியும் வேலைநிகர் வெகுளியன் – அளவிடமுடியாத கோபத்தை
யடைந்தவன். வெகுளிச்சுவை இச்செய்யுளிற் காணத்தக்கது. வீரியன் – கார்த்தவீரிய
னென்பதன் நாமைகதேசம். மூன்றாமடியில் முரண்தொடை காண்க. கார்த்தவீரியன்
தன்பிதாவைக் கொன்றதனால் அவனைப் பரசுராமன் கொன்றானென்பது, சரிதம்.

வெருவுடன் தொழுது, கங்கை மைந்தன் அடி வீழவும்,
சினம் மிகுத்தலால்,
‘உருவுடன் தனி இருக்கும் நீள் விரதம் வழுவி, நான்
நரகம் உறுவதின்,
குருவுடன் பொருது மடிதல் நன்று’ என நினைந்து, தாலம்
உயர் கொடியினன்,
செரு உடன்றிடுதல் உன்னி, ஏறினன், அமைந்து நின்றது
ஒரு தேரின்மேல்.-விரதந்தவறுவதைவிடக் குருவுடன்பொருது
மாண்டாலும் நன்று’ என்று வீடுமனும் பொருமாறு தேரிலேறுதல்.

கங்கைமைந்தன் – கங்காதேவியின்குமாரனான வீடுமன்,
வெருவுடன் -அச்சத்துடனே, தொழுது – வணங்கி, அடிவீழஉம் – (தன்)
பாதத்தில் வீழ்ந்துவேண்டவும்,- (பரசுராமன்), சினம் – (தன்) வெகுளியை,
மிகுத்தலால் – மிகுதியாகக்கொண்டிருந்ததனால்,- ‘உருவுடன் – (பிறருக்கு)
அச்சந்தோன்றும் நிலையுடனே, தனிஇருக்கும் – ஒப்பற்றுள்ள, நீள் – சிறந்த,
விரதம் – நோன்பை, நான்-, வழுவி- தவறி,நரகம் உறுவதின் – நரகத்தை
யடைவதைக் காட்டிலும், குருவுடன் பொருது மடிதல்நன்று – (என்)
ஆசிரியனோடு போர்செய்து இறந்திடுதல் சிறந்ததாகும், ‘ என – என்று,
தாலம் உயர் கொடியினன் – பனைமரத்தை யெடுத்து (த் தூக்கி)க்கட்டிய
கொடியையுடையவனாகிய அந்த வீடுமன், நினைந்து-, செரு உடன்றிடுதல்
உன்னி -போரினால் மாறுபடுதலைக் கருத்துட்கொண்டு, அமைந்து நின்றது ஒரு
தேரின்மேல் -சித்தமாகஇருந்ததொரு தேரின்மேலே, ஏறினன்-; (எ-று.)-
“உருவுட்காகும்” என்பது,தொல்காப்பியம்.

அவ் இராமனும், மறுத்த மன்னவனும், ஐ-இரண்டு
தினம், இகலுடன்,
வெவ் இராவும் ஒழியாது, வெஞ் சமர் விளைத்த
காலை, அடல் வீடுமன்
கை விராய சிலையோடு மெய் வலி கவர்ந்து, முன்
தளர்வு கண்ட போர்
அவ் இராமன் நிகர் என்னுமாறு, இவனை அஞ்சி நின்று,
எதிர் அடர்க்கவே,–இதுவும் அடுத்த கவியும் – ஒருதொடர்: பரசுராமனை
வீடுமன் வென்றிட, அவ்விருவருந் தம்மிருப்பிடஞ்சேர்
தலையும், அம்பை தவவனமடைந்தமையையும் கூறும்.

அ இராமன்உம் – (அம்பையை மணந்துகொள்ளுமாறு கூறிய)
அந்தப்பரசுராமனும், மறுத்த மன்னவன்உம் – (அச்சொல்லை) மறுத்துக்கூறிய
க்ஷத்திரியனான வீடுமனும், ஐ இரண்டு தினம் – பத்துநாள், இகலுடன் –
மாறுபாட்டினுடனே, வெவ் இரா உம் ஒழியாது – கொடிய இரவிலுங்கூட
நீங்காமல்[இரவும் பகலுமாக], வெம்சமர் – கொடியபோரை, விளைத்தகாலை-,-
அடல் வீடுமன் -வலிமை பொருந்திய வீடுமன், முன் – முன்பு, கை விராய
சிலையோடு – கையிற்பொருந்திய வில்லின்மூலமாக, மெய் வலி கவர்ந்து –
(அந்தப் பரசுராமனுடைய)உடல்வலிமையைப் பறித்துக் கொண்டு, தளர்வுகண்ட –
தளர்ச்சியையுண்டாக்கிய, போர்- போரில்வல்ல, அ இராமன் நிகர் –
அந்தத்தசரதராமன் நிகராவான், என்னும் ஆறு- என்று (கண்டவர்) சொல்லுமாறு,
(அப்பரசுராமன் வலிமையைக் கவர்ந்திடப்பிறகுஅவ்விராமன்),- இவனை- இந்த
வீடுமனை, எதிர் அடர்க்க அஞ்சிநின்று – எதிர்த்துப்பொருதற்கு அச்சமடைந்து
நின்று,-(எ-று.) “ஓடி… ஊர்புகுந்தனன்” (143) என்று தொடரும்.

     தசரதராமன் சிவதனுசையொடித்துச் சீதையை மணந்து கொண்டு
அயோத்திக்குவரும் நெறியிலே பரசுராமன் எதிர்ப்பட்டு அவ்விராமபிரானை
வலுவிற்போருக்குஅழைக்க, அவன் அந்தப் பரசுராமனை வில்லின்மூலமாக
வலிமையைக்கவர்ந்துதளர்வுறச் செய்தமை இராமாயணத்திற் பிரசித்தம்

ஓடி, மீள, மழு மேவு பாணி தனது ஊர் புகுந்தனன்;
உவந்து, பல்
கோடி பேர் அரசர் துதி எடுக்க, நதி-குமரனும் தன்
நகர் குறுகினான்.
நாடி, மாலையிட வந்த காசி பதி நல்கும் ஒல்கும்
இடை நவ்வியும்,
வாடி வாடி, ‘இனி அமையும்’ என்று, தவ வனம்
அடைந்தனள், மடங்கியே.

ஓடி- (புறங்கொடுத்து) விரைந்துசென்று, மீள – மீண்டும்,
மழுமேவு பாணி – பரசுபொருந்தியகையையுடைய பரசுராமன், தனது ஊர்
புகுந்தனன்-:நதிகுமரன்உம்- கங்காநதியின் குமாரனிகிய வீடுமனும்,- பல் கோடி
பேர் அரசர்-,உவந்து – மன மகிழ்ந்து, துதி எடுக்க – தோத்திரஞ் செய்ய, தன்
நகர் குறுகினான் -தன்இருப்பிடஞ்சேர்ந்தான்: நாடி – விரும்பி, மாலைஇட –
மணமாலையைச் சூட்டுமாறு,வந்த-, காசிபதி நல்கும் ஒல்கும் இடை நவ்வி உம் –
காசியரசன்பெற்றதளர்ந்துமெலியும் இடையையுடைய மான் போன்றவளான
அம்பையென்பவளும், வாடிவாடி – மிகவும் மனந் தளர்ந்து, இனி அமையும் –
இனி (த் தவஞ்செய்தலே எனக்கு)அடுக்கும், என்று-, மடங்கி- (மணஞ்செய்து
கொள்ளும் முயற்சியினின்று) மீண்டு, தவவனம் அடைந்தனள் – தபோவனத்தைச்
சேர்ந்தாள்; (எ-று.)

     அமையும் – மணஞ்செய்துகொள்ள முயல்வது போலும் எனினுமாம்.
வாடிவாடி- மிகுதிப்பொருளது, மழுமேவுபாணி -அன்மொழித்தொகை.  

வெம் பை ஆடு அரவம் மாய வென்றிடு விகங்கராசன்
என, வீடுமன்
தும்பை ஆடு அமரில் மாய வெல்ல வல சூரன்
ஆகுவன் யான்’ எனா,
வம்பை மோது முலை, வம்பை வீசு குழல், வம்பை மன்னும்
எழில், வரி கொள் கூர்
அம்பை மானும் விழி, அம்பை என்பவளும் அரிய
மா தவம் இயற்றினாள்.-இந்தவீடுமனை வெல்லுஞ் சூரனாவேனென்று உறுதி கொண்டு
அந்த அம்பை பெருந்தவமியற்றுதல்.

வெம் பை ஆடு அரவம் – கொடியபடத்தையெடுத்து ஆடுகின்ற
சர்ப்பம், மாய – ஒடுங்கும்படி, வென்றிடு – சயிக்கின்ற, விகங்கராசன் என –
பட்சிகட்குஅரசனான கருடன்ஒப்புஆகுமாறு, தும்பை ஆடு அமரின் வீடுமன்
மாய -தும்பைமாலைசூடிக்கொண்டு செய்யப்படுகின்ற போரிலே வீடுமன்
உயிரிறக்கும்படி,வெல்ல வல – வெல்லும் வல்லமைபெற்ற, சூரன் ஆகுவன்
யான் – சூரனாவேன்யான், எனா என்றுசொல்லி,- வம்பை மோதுமுலை – கச்சை
மோதுகின்றதனங்களையும், வம்பை வீசு குழல் – வாசனை வீசுகின்ற
கூந்தலையும், வம்பைமன்னும் எழில் – புதுமைபொருந்திய அழகையும், வரிகொள்
கூர் அம்பை மானும் விழி – செவ்வரிபரந்த கூரிய அம்பையொத்த
கண்களையுமுடையவளான, அம்பை என்பவளும்-, அரிய மாதவம் – அருமையான
பெருந்தவத்தை, இயற்றினாள் – செய்தாள்; (எ-று.)

     விஹங்கராஜன் – வடசொற்றொடர். வம்புஎன்பது வெவ்வேறு பொருளில்
வந்தது- சொற்பின்வருநிலை. அரவம்வீடுமனுக்கும், விகங்கராசன் அம்பைக்கும்
உவமை.தும்பை – பொரச்செல்வோர் தரிக்கும் மாலை

தாள் இரண்டினில் ஒர் தாள் மடக்கி, ஒரு தாளில் வைத்து,
அமை சமைத்த பொன்
தோள் இரண்டினையும் மீது எடுத்து, நனி தொழுது, இயக்கி
துணை அடியிலே
வாள் இரண்டு அனைய விழி மலர்த்தி, நிறை வாவி நீரினிடை,
வான் உளோர்
நாள் இரண்டு-அதனொடு ஐ-இரண்டும் ஒரு நாள்
எனும்படி நடக்கவே,-அம்பையின் பெருந்தவம்.இரண்டுகவிகள் – ஒருதொடர்

     (இ – ள்.) தாள் இரண்டினில் – இரண்டுபாதங்களுள், ஒர் தாள் மடக்கி –
ஒருதாளைமடக்கி, ஒரு தாளில் வைத்து – மற்றொருதாளின் மேல்
வைத்துக்கொண்டு,அமை சமைத்த பொன் தோள் இரண்டினைஉம் –
மூங்கிலையொத்த அழகியதோள்கள்இரண்டையும், மீது எடுத்து –
மேலேதூக்கியவண்ணம். நனிதொழுது- நன்குகுவித்து,இயக்கி துணை அடியிலே –
தருமதேவதைபோன்ற தன் இரண்டு பாதங்களிலே, வாள்இரண்டு அனைய விழி
மலர்த்தி – இரண்டு வாட்படை போன்ற (தன்) இரண்டுகண்களையும் மலரவைத்து,
நிறை வாவிநீரின் இடை – நிறைந்துள்ள வாவியின் நீரிலே,வான் உளோர்
இரண்டு நாள் அதனொடு ஐ இரண்டுஉம் – தேவர்களின்பன்னிரண்டுநாள்கள்
[பன்னிரண்டுவருஷங்கள்], ஒருநாள் எனும்படி நடக்க -ஒருநாள்போலக் கழிய,-
(எ-று.)- “அருந்தவ முயன்றபின்” (146) என்றுதொடரும்

அம்பை தவஞ்செய்து அத்தவத்தின்பயனால் வீடுமனைக் கொல்லுமாறு
அந்தவடிவத்தை நீங்கிச் சிகண்டி யென்ற பேர் பெற்றுத் தேவசேனாபதியான
அறுமுகக்கடவுளுக்கு ஒப்பான பராக்கிரமச் செயலுடனே துருபதனிடத்துத்
தோன்றினளென்க. யாகசேனன் – துருபதன். முயல் – முயல்வடிவாகத்
தோன்றுங் களங்கத்துக்கு,ஆகுபெயர். முயலிலாமதி, புயலிலாத மினல் –
இல்பொருளுவமை.வீடுமன்பரசுராமனோடுபோர்புரிந்ததுமுதலியஇந்தச் சரித்திரம்
பாலபாரதத்து இல்லை:வியாசபாரதத்திலும் உத்தியோக பருவத்திலுள்ளது.
மயலிலாடனது என்றும்பாடம்.

முயல் இலா மதி முகத்தினாள், ஒருவர் முயல் அருந் தவம்                                    முயன்ற பின்,
புயல் இலாத மினல் ஒத்த மெய்யில் ஒளி புரி
இயக்கிதனது அருளினால்,
மயில் அனாள் தனது வடிவு அகற்றி, இகல் யாகசேனனது
வயினிடைச்
செயலில் ஆறுமுகன் நிகர் எனத்தகு சிகண்டி
ஆயினள் சிறக்கவே!அம்பை சிகண்டியாதல்.

ஒருவர் முயல் அருந் தவம் – ஒருத்தர் முயன்று செய்வதற்கு
அருமையான பெருந்தவத்தை, முயன்றபின் – முயற்சியோடு செய்தபின்பு, – முயல்
இலா மதிமுகத்தினாள் – முயற்கறை யில்லாத சந்திரன் போன்ற முகத்தையுடைய,
மயில் அனாள் – மயில் 
போன்ற சாயலையுடைய அம்பை,- புயல் இலாத மினல்
ஒத்த மெய்யில் – மேகத்திலிராத [தனிப்பட்டுள்ள] மின்னலையொத்த உடம்பில்,
ஒளி புரி – ஒளிமிக்க,இயக்கி தனது – தருமதேவதையின், அருளினான் –
கருணையினால், தனது வடிவுஅகற்றி – தன்னுடைய அந்தவடிவத்தை யொழித்து,
இகல் யாகசேனனது வயினிடை -வலிமையையுடைய யாகசேனனுடைய இடத்திலே,
செயலில்- (தன்னுடைய)வீரச்செய்கையினால், ஆறுமுகன் நிகர் என தகு – அறு
முகக்கடவுள் ஒப்பாவனென்றுசொல்லத்தகுமாறு, சிறக்க – சிறப்புற்றிருக்க, சிகண்டி
ஆயினள் – சிகண்டியானாள்; (எ-று.)

     அம்பை தவஞ்செய்து அத்தவத்தின்பயனால் வீடுமனைக் கொல்லுமாறு
அந்தவடிவத்தை நீங்கிச் சிகண்டி யென்ற பேர் பெற்றுத் தேவசேனாபதியான
அறுமுகக்கடவுளுக்கு ஒப்பான பராக்கிரமச் செயலுடனே துருபதனிடத்துத்
தோன்றினளென்க. யாகசேனன் – துருபதன். முயல் – முயல்வடிவாகத்
தோன்றுங் களங்கத்துக்கு,ஆகுபெயர். முயலிலாமதி, புயலிலாத மினல் –
இல்பொருளுவமை.வீடுமன்பரசுராமனோடுபோர்புரிந்ததுமுதலியஇந்தச் சரித்திரம்
பாலபாரதத்து இல்லை:வியாசபாரதத்திலும் உத்தியோக பருவத்திலுள்ளது.
மயலிலாடனது என்றும்பாடம். 

மணி முடிக்கு உரிய நிருபனும், கடி கொள் மாதர்தங்களை
மகிழ்ச்சியால்
அணி பெறத் தழுவி, இன்ப வேலையின் அழுந்தி, நாள்
பல கழிந்தபின்,
பிணிகளுக்கு அரசு எனும் பெரும் பிணி பிணித்து, ‘வாழ்வு
இனி நணித்து’ என,
பணி முடிப் புவி இரங்க, வைகி, ஒரு பற்று இலாத
நெறி பற்றினான்.–விசித்திரவீரியன் இன்பமனுபவித்து,
க்ஷயரோகத்தால் விண்ணுலகடைந்தமை.

மணி முடிக்கு உரிய நிருபன்உம் – அழகிய கிரீடத்துக்கு
உரியவனானவிசித்திரவீரியனும், கடிகொள் – விவாகத்திற் கொண்ட, மாதர்
தங்களை – (அம்பிகைஅம்பாலிகை என்ற) மகளிரை, மகிழ்ச்சியால் –
மனமகிழ்ச்சியோடு, அணி பெற தழுவி- அழகுபொருந்த ஆலிங்கனஞ்
செய்துகொண்டு, இன்பம் வேலையின அழுந்தி -இன்ப சமுத்திரத்திலே முழுகி,
பலநாள் கழிந்த பின் – பலநாள் நீங்கினபின்,பிணிகளுக்கு அரசு எனும் –
நோய்களுக்கு அரசனென்று சொல்லத்தக்க, பெரும் பிணி- கொடிய
வியாதியினால், பிணித்து – கொள்ளப்பெற்று, இனி வாழ்வு நணித்துஎன –
இனி மேலுலகவாழ்க்கை சமீபித்திட்டது என்று கருதி, பணி முடி புவிஇரங்க –
ஆதிசேஷனது சிரசிலே யுள்ள பூமியிலுள்ளார் இரக்கங்கொள்ள, வைகி –
தங்கியிருந்து, ஒரு பற்று இலாத நெறி – பற்றைவிட்டு அடையப்படும் இடமான
வானுலகத்தை, பற்றினான் – அடைந்திட்டான்; ( எ-று.)

     ராஜயக்ஷ்மா என்ற க்ஷயரோகம் மிகுபோகத்தால் விசித்திர வீரியனுக்குத்
தோன்ற, அதனாலே யிறந்து வானுலகடைந்தனன் அந்த அரச னென்க

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வில்லிபாரதம் –பதிப்புரை-சிறப்புப் பாயிரம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

September 10, 2023
ஸ்ரீ வில்லிபாரதத்தின் முதனூலைப்பற்றிய ஆராய்ச்சி:-‘ வில்லிபுத்தூரார்
பாடிய இந்தப்பாரதம், வியாசபாரதத்தை முதனூலாக் கொண்டதென்று
நூலாசிரியரே கூறியிருந்த போதிலும், வடமொழியில் அகஸ்தியப்பட்ட
ரென்பவரியற்றியுள்ள பாலபாரத மென்னும் காவியத்தின் பொருளமைதியோடு
பலவிடத்தும் ஒத்திருக்கின்றது: ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து இந்நூலுக்கும்
அந்நூலுக்கும் இடையிடையே பலவேறுபாடுகளும் உள்ளனவாயினும் சிற்சில
விடங்களில் இந்நூல் அந்நூலின் மொழிபெயர்ப்பென்றே சொல்லலாம்படி
யுள்ளது’

நூலாசிரியர் வரலாறு

தமிழில் மகாபாரதமென்னும் பெருங்காப்பியம்பாடிய மகாகவி,
வில்லிபுத்தூரா ரென்பவர்; இவர் பிராமணசாதியிற் பிறந்தவர். இவருடைய மதம்
திருமண்காப்புத்தரிக்கும் வைஷ்ணவ மென்பது, இப்பாரதத்தின் முதலிலும்
இந்நூற்சருக்கங்களின் தொடக்கம் பலவற்றிலும் இவர் ஸ்ரீமகாவிஷ்ணுவின்
விஷயமாகவே பலவாறு கடவுள்வாழ்த்துக் கூறியுள்ளதனாலும், “எங்கள்மாதவன்”
என்று நூலைத் தொடங்கியிருப்பதனாலும் வில்லிபுத்தூராழ்வாரெனத்
திருநாமமுடைமையாலும், இவர் ஒன்பதாம் போர்ச்சருக்கத்துக் காப்புச்செய்யுளில்
“ஓராறுபேதசமயங்களுக்கு முருவாகிநின்ற வொருவ, னீராறு நாம முரைசெய்து
மண்கொடிடுவார்கள் காணுமிமையோர்” எனத்துவாதசோர்த்துவ புண்டரத்தைச்
சிறப்பித்துக்கூறியதனாலும், பதினைந்தாம் போர்ச்சருக்கத்துக்காப்பில்
“கொத்தவிழ்த்த சோலைமன்னு குருகையாதி நெஞ்சிலே, வைத்த முத்திநாதன்”
என நம்மாழ்வாரையும், பத்தாம் போர்ச்சருக்கத்துக் காப்பில் ‘கலிய னெங்கள்
மங்கையாதி கண்டுகொண்ட நாமமே” எனத் திருமங்கையாழ்வாரையும்
கூறியுள்ளதனாலும் தெளிவாகத் தெரியலாம்.

நடுநாடென்று சொல்லப்படுகிற திருமுனைப்பாடிநாட்டில் சனியூரிலே
பிராமணசாதியிலே வைஷ்ணவமதத்தில் வீரராகவாசாரிய ரென்பவருக்குத்
திருக்குமாரராய்த் திருவவதரித்து * வில்லிபுத்தூராழ்வாரென்று இயற்பெயர்
பூண்ட இவர் பாரதம்பாடிய காரணம்:- இவர் இளமையிலே நல்லாசிரியரை
யடுத்துக்கல்வி கற்று, இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழிலும் மிகவல்லவராய்
வடமொழியிலும் மிக்கதேர்ச்சிபெற்று ஆசு மதுரம் சித்திரம் விஸ்தாரம் என்னும்
நால்வகைக் கவிகளையும் மிக எளிதில் அமிழ்தினும் இனியனவாகப்
பாடவல்லவராய், சேரசோழபாண்டியரென்னும் தமிழ் நாட்டு மூவேந்தர்களாலும்
மிக்க சிறப்புடன் விரும்பியழைக்கப்பட்டு ஆங்காங்குச் சென்று தமது
கல்வித்திறத்தைப் பலவகையாலுங் காட்டி அவர்களைக் களிப்பித்து, அவர்கள்
அன்போடு அபிமானித்து மிகுதியாகவழங்கிய சிறந்த பலபெரும்பரிசுகளைப்
பெற்று, பற்பலகவிகள் பாடித் திருமாலை இரவும் பகலும் எப்பொழுதுந்
துதித்துக்கொண்டு, தமிழ்நாடு முழுவதிலும் தமது கல்விப் பெரும்புகழைப்
பரவச்செய்துவந்தார்.

அங்ஙனம் வருகையில், முற்கூறிய திருமுனைப்பாடிநாட்டிலே வக்கபாகை
யென்னும் இராசதானியில் வீற்றிருந்து செங்கோல் செலுத்திய கொங்கர்குலத்துத்
தோன்றிய வரபதியாட்கொண்டா னென்கிற அரசன், இவ்வில்லிபுத்தூராரது
கல்வி கேள்வித்

திறமைகளைக் கேள்வியுற்று இவரை வரவழைத்து அநேக சன்மானங்கள்செய்து
தனது ஆஸ்தாநபண்டிதராக அமைத்துவைத்து, ஒருநாள் இவரை நோக்கி
‘வடமொழியில் ஸ்ரீவேதவியாசமகாமுனிவரால் விரித்துரைக்கப்பட்ட
மகாபாரதசரித்திரத்தைச் செந்தமிழில் விருத்தப் பாடல்களினாற் சுருக்கமுற
ஒருபெருங்காப்பியமாகப் பாடித் தந்தருளல் வேண்டும்’ என்று பிரார்த்திக்க,
க்ருஷ்ணனுடைய சரித்திரம் ஆங்காங்கு வருவதுபற்றி அவ்வேண்டுகோளுக்கு
இசைந்து சொற்சுவை பொருட்சுவைகள் மிக்குவிளங்கும்படி நல்ல நடையிலே
இவ்வில்லிபுத்தூரார் நாலாயிரத்து முந்நூற்றுச் சொச்சம்பாடல்களாற் பாடினார்.

இவர், தம்காலத்திற் கல்விச்செருக்கு அடைந்திருந்த புலவர்கள் பலரையும்
தமது வித்தியாசாமர்த்தியத்தால் வென்று, அவ்வெற்றிக்கு அடையாளமாக,
தோற்றுப்போன புலவர்களின்  காதுகளைத் தமதுகையிலே எப்பொழுதும்
ஆயுதமாகவைத்துக்கொண்டுள்ள துறட்டுக்கோலால் மாட்டியிழுத்து
அறுத்துவந்தன ரென்பது, “குட்டுதற்கோ பிள்ளைப்பாண்டிய னீங்கில்லை
குறும்பியளவாக்காதைக் குடைந்து தோண்டி, யெட்டினமட் டறுப்பதற்கோ
வில்லியில்லை யிரண்டொன்றா முடிந்து தலையிறங்கப்போட்டு, வெட்டுதற்கோகவி
யொட்டக்கூத்த னில்லை விளையாட்டாக் கவிதைதனை விரைந்துபாடித்,
தெட்டுதற்கோ அறிவில்லாத் துரைக ளுண்டு தேசமெங்கும் புலவரெனத்
திரியலாமே” என வழங்குந்தனிப்பாடலினால் அறியப்படும். இவர் காலத்து
அரசர்கள் இவரிடத்தில் மிகவும் அன்புவைத்திருந்ததனால், இவர் இங்ஙனஞ்
செய்ய இடங்கொடுத்து வந்தார்கள்.

இவருடைய காலம்:- பாயிரத்தில் “நான்காஞ்சங்கமென முச்சங்கத்
தண்டமிழ்நூல் கலங்காமல் தலைகண்டானே” என்று வரபதியாட்கொண்டா
னென்னும் அரசனைக் கூறியிருத்தலாலும், அவ்வரசனை இரட்டையர்களும்
பாடியிருத்தலாலும், அவ்விரட்டையராற் பாடப்பட்ட இராசநாராயணசம்புவராய
னென்பான் கி. பி. 1331 – 1383 வரை ஆட்சிபுரிந்தானென்று
சாசனவாராய்ச்சியாளர் கூறுவதாலும், இவர்காலம் பதினான்காம் நூற்றாண்டின்
இடைப்பகுதியாகுமென்றும், அருணகிரியார் காலமும் இதுவே யென்றுங் கூறுவர்.

இவ்வில்லிபுத்தூரார் சிவத்துவேஷம் பாராட்டுகிற வீரவைஷ்ணவரல்லர்;
அது – முதலில் விநாயகஸ்தோத்திரஞ் செய்திருத்தலாலும், அருச்சுனன்
தீர்த்தயாத்திரைச் சருக்கத்திலும், அருச்சுனன் தவநிலைச்சருக்கத்திலும்
பதின்மூன்றாம்போர்ச்சருக்கத்திலும் சைவசம்பிரதாயத்துக்கு வழுவுறாதபடி
சிவபிரானைச் சிறப்பித்தும் இதரதேவர்களைத் தாழ்த்தியுங் கூறியதனாலும்
நன்கு புலனாகிறது. வைஷ்ணவராகிய இவர் சிவபிரானைத் சிறப்பிக்கு மிடத்துத்
தமது பரதேவதையாகிய திருமாலையும் தாழ்த்திக் கூறுவது – தமது காலத்திருந்த
அரசரை மகிழ்விக்கவேண்டித் தம்கொள்கையாகவன்றிப் பிறன்கோட்கூறலாகக்
கூறியதாகு மென்க. அன்றியும், வியாசர் புராணங்களில் ஒவ்வொரு தேவரை

ஒவ்வோரிடத்திற் சந்தர்ப்பத்துக்கேற்பச் சிறப்பித்துக் கூறியிருத்தல்போலவே,
இவரும் தமது நூலில் சூரியன் அக்கினி யமன் முதலிய மற்றைத்தேவர்களையும்
சமயம்வந்தவிடத்துப் பக்ஷபாதமில்லாமற் சிறப்பித்துக் கூறியிருக்கின்றார்.
தம்மையாதரித்த வக்கபாகைவரபதியாட்கொண்டானை ஆங்காங்கு உபமான
முகத்தாற் சிறப்பித்துக்கூறியுள்ளார். அங்ஙன் கூறுவதை இந்த ஆதி பருவத்தில்
காண்டவதகனசருக்கத்தில் 69 – ஆம் பாடலிலுங் காணலாம்.

கடைச்சங்கப்புலவர்களுள் ஒருவராகிய பெருந்தேவனாரென்பவர்
பாரதம்பாடியுள்ளார். அந்நூலுள் பழைய உரைகளிற் கிடைக்கின்ற
சிலபாடல்களன்றி, மற்றையவை காணப்படவில்லை. பிறகு ஒன்பதாம்நூற்றாண்டில்
மூன்றாம் நந்திவர்மன்காலத்திருந்தவராய்ப் பெருந்தேவனாரென்று
பெயர்வழங்கப்பெற்ற ஒருவர் மகாபாரதத்தைத் தமிழில் வசனமும் பாடலுமாக
விரவிவருகிற ‘சம்பு’ என்கிற நடையிலே பாடியிருக்கின்றனர்; பெரும்பாலும்
வெண்பாக்களால் அமைந்ததுபற்றி, அந்நூலுக்குப்பாரதவெண்பாவென்று பெயர்.
அதிற் சில பகுதிகளே இப்போது கிடைக்கின்றன. 13- ஆம் நூற்றாண்டின்
தொடக்கத்தில் அரும்பாக்கத்து அருணிலை விசாகன் பாரதத்தை
இனியசெந்தமிழ்ப் படுத்தினான் என்று திருவாலங்காட்டுச்சாசனம் கூறும்;
இந்நூல் வழக்குவீழ்ந்தது போலும்.

இப்பாரதத்துக்கும் இதன்முதனூலாகிய வியாசபாரதத்துக்கும் இடையிடையே
கதையமைதிகள் சிற்சில வேறுபடுவது “முன்னோர் நூலின் முடி பொருங்கொத்துப்,
பின்னோன் வேண்டும் விகற்பங்கூறி, அழியாமரபினது வழிநூலாகும்” என்ற
வழிநூலிலக்கண விதிப்படி இவ்வாசிரியராற் பிறநூல் மேற்கோள்கொண்டு
அமைக்கப்பட்டதாதல்வேண்டுமென அறிக.

வில்லிபுத்தூரார் தமது பாரதத்திற் பாடியது, முதற்பத்துப் பருவமே;
மற்றை யெட்டுப்பருவங்கள் அவராற் பாடப்படவில்லை. அதற்குக் காரணம்:-
நூல் முழுவதையும் பாடினால், பாண்டவர்கள் கிருஷ்ணபகவான் என்கிற
மகாபுருஷர்களது மரணசரித்திரத்தைத் தம்வாயாற் சொல்லவேண்டுமே யென்று
கருதி, “கனை கடற்பா ரளித்து அவரு மந்நகரி லறநெறியே கருதிவாழ்ந்தார்”
என மங்களகரமாகச் சரித்திரத்தைப் பாடிமுடித்தனரெனக்கொள்வது
தகுதியுடையது. பாண்டவசரித்திரங் கூறுகிற பாரதசம்பு முதலிய சில
நூல்களிலும் பின்னிட்ட கதை காணப்படவில்லை. (கம்பர் இராமயணத்தில்
உத்தரகாண்டம்பாடாமல் விட்டதற்கும் இப்படிப்பட்ட காரணமே முக்கியமாகும்.)
இனி, இந்நூலின் பின்னைய ‘பருவங்களும் இவராற் பாடப்பட்டுப் பிற்காலத்திற்
கிடைத்தற்கு அரியவையாயின என்று கொள்வாரு முளர். “ கலியுகவியாதன்
சொல்லக் கணபதி யெழுதுபாடல், பொலிவுறு  தமிழிலாறாயிரமென விருத்தம்
போற்றிச், சலிவற வில்லிபுத்தூரிறைவனாஞ்சார்வபௌம,
னொலிகெழுமறையோர்கோமா னுயர்ந்தவரு

வப்பச்சொன்னான்” என ஒருசெய்யுள் வில்லிபுத்தூரார்பாரதத்து ஏட்டுப்பிரதி
சிலவற்றில் வரந்தருவார் பாடிய சிறப்புப்பாயிரத்தினிறுதியிற் காணப்படுகின்றது:
இது, பழைய  பாடலாக இருக்குமாயின், இதிற்கூறிய ஆறாயிரம் பாடல்களில்
பத்துப்பருவங்களாகவுள்ள நாலாயிரத்துமுந்நூற்றுச்சில்லறைபோக, மற்றவை
இவர் பாடிய எட்டுப்பருவங்களெனக் கொள்ளலாம்.

வில்லிபுத்தூரார் பாடியபாரதத்திலே சுருக்கமாகக் கதையைக் தொகுத்துக்
கூறும் முந்நூறு நானூறு பாடல்கள் தவிர மற்றை நாலாயிரஞ் செய்யுட்களை
யெடுத்துக்கொண்டு, பிற்காலத்தில் நல்லாப்பிள்ளை யென்பவர், புதிதாகத் தாம்
பதினோராயிரம் பாடல் பாடி இடையிடையிற் கோத்தும், இறுதியிற் சேர்த்தும்
பாரதம் பதினெட்டுப்பருவங்களையும் பூர்த்திசெய்தார்; அது ‘நல்லாப் பிள்ளை
பாரதம்’ என வழங்கும்: அந்நூலாசிரியர், இற்றைக்கு நூற்று நாற்பத்தைந்து
வருடங்கட்குமுன் இருந்தவர். இது தவிர, இற்றைக்கு, 190 வருடங்களின்முன்
இருந்த அஷ்டாவதானம் – அரங்கநாதகவிராயர் பாடியபாரதத்தின்
பிற்பகுதியும்ஒன்று உளது; அது, ஏறக்குறைய 2500 செய்யுட்களையுடையது.
இனி, மாவிந்தம் என்னும் பெயரால் தமிழில் பாரதக் கதையைச்சொல்லும் ஒரு
நூலுண்டு என்றும் கூறுப: மற்றும், பழையகாஞ்சிப்புராண ஆசிரியர் ஒரு
பாரதத்தை இயற்றியுள்ளாரென்று அப்புராணச் சிறப்புப்பாயிரம் தெரிவிக்கின்ற
தென்றும் அந்நூல் இப்போது கிடைக்கவில்லையென்றும் கூறுப.

இவர்மகாபாரதமொன்றுதவிர வேறுநூலெதுவும் பாடியிருப்பதாகத்
தெரியவில்லை.

இவர் தமது நூலிற் பெரும்பாலும் வடமொழிகளைத் தனி மொழியாகவும்
தொடர்மொழியாகவும் இன்னமொழியின் சம்பந்தமானதென்று எளிதில்
தெரியவொண்ணாதபடி திரித்தும் மொழிபெயர்த்தும் உபயோகித்திருக்கின்றனர்.
தமிழில் எந்தநூலாசிரியரும் வடமொழிகளை இவரளவு எடுத்துக்
கொள்ளவில்லை. வடசொற்களைத் தமிழ்க்காப்பியத்தில் நுழைக்கிற வழக்கம்
இவர் காலந்தொடங்கித்தான் அதிகமாயிருத்தல்வேண்டும். இவர் பாடல்களில்
– உவமை, உருவகம், எடுத்துக்காட்டுவமை, தற்குறிப்பேற்றம், வேற்றுப்
பொருள்வைப்பு, பிறதுமொழிதல், உயர்வுநவிற்சி முதலிய பொருளணிகள்
அமைந்திருப்பது மாத்திரமேயன்றி, மடக்கு [யமகம்], பிராசம் முதலிய
சொல்லணிகளும் ஆங்காங்கு அமைந்திருத்தலையும், இவரது செய்யுள்நடை
பலவிடத்தும் முடுகுடையதாதலையும் பலவகைச்சந்தங்கள் சந்தப்போலிகள்
வண்ணங்கள் பொருந்தியிருத்தலையும், யுத்தவருணனை எல்லா நூல்களினும்
இந்நூலிற் சிறந்திருத்தலையும் காணலாம்.

————-

ஸ்ரீ வியாசரும் வில்லியும்

ஒரு லட்சம் ஸ்லோகங்கள் அடங்கிய வியாசர் அருளிய மஹாபாரதத்தைத் தமிழில் பாக்களாகத் தர எண்ணினார் வில்லிப்புத்தூரார்.

“குறும்பி அளவாக் காதைக் குடைந்து தோண்டி எட்டினமட்டு அறுப்பதற்கோ வில்லி இல்லை” என்று பின்னால் ஒரு புலவர் பாடும் அளவு புலமை இல்லாதவர்கள் பாடத் துணிந்தால் அவர்களின் காதைக் குடைந்து தோண்டி தண்டிக்கும் அளவு புலமை பெற்றவர் வில்லிப்புத்தூரார்.

வியாசர் பாடிய 18 பர்வங்களில் 10 பர்வங்களை மட்டுமே சுமார் 4350 பாக்களில் தன் காவியத்தில் பாடியுள்ளார். தர்மர் முடிசூட்டியதுடன் வில்லி பாரதம் முடிவடைகிறது.

700 ஸ்லோகங்கள் கொண்டது பகவத் கீதை. வில்லிபுத்தூரார் தனது பாரதத்தில் பகவத்கீதையை ஆறே ஆறு பாடல்களில் தந்துள்ளார்.

பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

மாயை என்று ஒருத்தி தன்பால் மனம் எனும் மைந்தன் தோன்றி,          

தூய நல் அறிவன் தன்னைத் தோற்றம் இன்றாக்கி வைத்தான்           

தாயொடு தந்தைமக்கள் தாரம்என்று இவர் பால் வைத்த                        

நேயமும் அவன் தனாலே நிகழ்ந்தது ஓர் நினைவு கண்டாய்!

மாயை என்னும் ஒருத்தியிடம் மனம் என்னும் மகன் தோன்றினான். பரிசுத்தமான ஞானம் என்பவனை வெளிப்படாமல் ஆகி வைத்தான். தாய், தந்தை, மக்கள், மனைவி ஆகியோர்  மீதான பாசமும் அந்த மனம் என்பவனின் எண்ணத்தாலே  தான் நிகழ்ந்தது!

குயின்ற ஐம் பொறிவாய் நின்றுகுறித்த ஐம்பொருளும் தானே                

அயின்றுமுக்குணங்களோடும்அறுவகைப் படைகளோடும்,           

பயின்றுஅரசாளும் அந்த மனம் எனும் பகைவன் ஆங்குத்             

துயின்ற போதுஒளித்து நின்ற தோன்றலும் தோன்றும் கண்டாய்!

உடம்பில் பொருந்தியுள்ள மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து இந்திரியங்களும் ஊறு சுவை. ஒளி. வாசனை, ஓசை என்னும் ஐந்து புலன்களையும் தானே அனுபவித்து, சத்வம், ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்களோடும் காமம், க்ரோதம், லோபம், மோகம், மதம், மாற்சர்யம் என்னும் ஆறு வகை சேனைகளோடு பழகி அரசாட்சி செய்யும் மனம் என்னும் பகைவன் தூங்கிய போது,  (அவனால்) தோற்றமில்லாதவனாய் செய்யப்பட்ட அந்த நல்லறிவன் வெளிப்படுவான்.

அந்த நல் அறிவன் தன்னை அறிந்தவர் அறிஞர் ஆவார்,                     

தந்தையால் வகுக்கப்பட்ட சராசரப் பொருள்கள் தோறும்                         

வந்துஅவன்தீம்பால் நெய்போல் உயிர்க்கு உயிர் ஆகிவாழும்               

பந்தமது உணர்ந்துநேரே பார்க்குங்கால்பகை யார்நண்பு ஆர்?

அந்த நல் அறிவன் தன்னை அறிந்தவர்களே அறிஞர் ஆவார். அந்தப் (பரம்பொருள் என்னும்) தந்தையால் வகுக்கப்பட்ட சஞ்சரிப்பதும் சஞ்சாரியாதனவும் ஆகிய எல்லாப் பொருள்களிலும் பசுவின் பாலில் உள்ளே உறைந்திருக்கும் நெய் போல, உயிர்க்கு உயிர் ஆகி, ஜீவாத்மாக்களின் உள்ளே பரமாத்மாவாக உறைந்து வாழும், (இந்த) சம்பந்தத்தை உணர்ந்து நேரே பார்க்கும் போது பகைவன் யார்? நண்பன் யார்? எவருமில்லை!

உம்பரும்முனிவர் தாமும்யாவரும்உணரா ஒன்றை                 

இம்பர்இன்றுஉனக்கு நானே இசைவுற உணர்த்தா நின்றேன்,                           

ஐம் பெரும் பூதத்தானும் அமைந்தன உடலம்யார்க்கும்;                        

நம்பனும் ஒருவன்உள்ளே ஞானியாய் நடத்துகின்றான்!

தேவர்களும், முனிவர்களும், மற்றும் எல்லோரும் உணராத ஒன்றை, இந்த இடத்தில், இப்போது, உனக்கு நான் பொருந்தும் படி உணர்த்துகின்றேன். எல்லாப் பிராணிகளுக்கும் ஐம்பெரும் பூதங்களால் அமைந்தது உடல். அவற்றினுள்ளே ஞானியாய் இருந்து (ஒப்பற்ற கடவுளாய்) ஒருவன் தானே அனைத்துத் தொழில்களையும் செய்து நடத்துகின்றான்.

என்னை நீ புகலக் கேண்மோஎங்கும் ஆய்யாவும் ஆகி                     

மன்னிய பொருளும் யானேமறைக்கு எலாம் முடிவும் யானே;               

உன்னை யான் பிறிவது இல்லைஒரு முறை பிறந்து மேல் நாள் –                     

நல் நிலா எறிக்கும் பூணாய்! – நரனும் நாரணனும் ஆனோம்

 ‘நல்ல சந்திரகாந்தியை ஒத்த ஒளியை வீசும் ஆபரணங்களை அணிந்துள்ள அர்ஜுனா! என்னை யார் என (உனக்கு உணர்த்துமாறு) நான் சொல்வதைக் கேள்! எல்லாப் பொருள்களிலும் பொருந்தி எல்லாப் பொருள்களுமாய் அழியாது நிலை பெற்ற பரம்பொருளும் நானே! வேதங்களுக்கு எல்லாம் முடிவான பொருளும் நானே! உன்னை என்றும் நான் பிறிந்தவன் அல்ல; முன்னொரு சமயம் நரனும் நாராயணனுமாக நீயும் நானும் அவதரித்தோம்!

பின் ஒரு பிறப்பின் யாமே இராம லக்குமப் பேர் பெற்றோம்;             

இந் நெடும் பிறப்பில்நீயும் யானுமாய் ஈண்டு நின்றோம்;

நின்னிடைமயங்கும் இந்த நேயமும் ஒழிக!” என்று,                                     

 தன் நிலை அவற்குக் காட்டிதத்துவம் தெளிவித்தானே.

பின்பு ஒரு அவதாரத்தில் நாமே இராமன், இலக்குவனாக அவதரித்தோம். இந்த நீண்ட அவதாரத்தில் நீ அர்ஜுனனாகவும் நான் கண்ணனாகவும் இங்கு இருக்கிறோம். உன்னிடமுள்ள திகைப்பையும் உறவினர், நண்பர் என்ற இந்த அபிமானத்தையும் நீக்குக’ என்று தன் உண்மையான விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டித் தத்துவத்தை அவம் மனம் தெளிவுறும்படி அருளினான்.

ஆஹா! என்ன அருமையான பாடல்கள்! எத்தனை எளிமையாக கீதை ஆறே பாடல்களில் எளிய தமிழில் பொருளாழத்துடனும் சொல் சிக்கனத்துடனும் சூத்திரப் பாங்குடனும் விளக்கப்பட்டுள்ளது.

இதைப் படிப்போர்கள் முழு வில்லி பாரதத்தையும் படிக்க உத்வேகம் பெறுவார்கள் என்பதில் ஐயமுண்டோ!

இந்த விளக்கத்தைப் படித்த பின்னர் மகாகவி பாரதியாரிடம் வருவோம்.

அவசர யுகம் அல்லவா! இரண்டே அடிகளில் அவன் தெள்ளத் தெளிவாக கீதையில் கண்ணன் போதித்ததை இப்படிச் சுருக்கமாகக் கூறி விட்டான்:

பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான்;                                  

பலனை எண்ணாமல் உழைக்கச் சொன்னான்

மாம் அனுஸமர (என்னை நினை)

கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன! (கர்மம் புரிவதற்கே உனக்கு அதிகாரம் உள்ளது; அதில் வரும் பயனில் எண்ணம் வையாதே – ஒரு பொழுதும்!)

———-

ஆதிபருவம்

சபா பருவம்
ஆரணிய பருவம்
விராட பருவம்
உத்தியோக பருவம்
வீட்டும பருவம்
துரோண பருவம்
கன்ன பருவம்
சல்லிய பருவம் – செளப்திக பருவம்
  • மிகைப் பாடல்கள்
  • ————

பதிப்புரை

பாரத நாடெங்கும் மிகப் பழைய காலந்தொட்டுப் பரவி நிலைபெற்று வந்துள்ள கதைகள் பாரதமும் இராமாயணமும் ஆம். இந்த இரு பெரு நூல்களும் ‘இதிகாசம்’ என்று சிறப்பித்துக் கூறப்படுவன. வடமொழியில் தோன்றிய இந்தப் பெருநூல்களைப் பாரத நாட்டு மொழிகள் பலவற்றில், கவிதை வடிவிலும் பிறவாறாகவும், மொழிபெயர்த்தும், சுருக்கியும், அங்கங்கே வழங்கிய புதிய கதைகளை உடன் பிணைத்தும், நாட்டு நடப்பு, சூழ்நிலை முதலியவற்றிற்கு ஏற்பச் சிற்சில மாறுதல்கள் செய்தும், புலவர் பெருமக்கள் பற்பல காலங்களில் ஆக்கிவந்துள்ளார்கள். இந் நூல்களில் அடங்கிய பல நிகழ்ச்சிகளையும் கிளைக்கதைப் பகுதிகள் சிலவற்றையும் தனித்தனி நூலாகவும் சிலர் செய்துவந்துள்ளனர்.

இவ்விரண்டிலும் பாரதக்கதைகள் நம் நாட்டில் மிகுதியாகப் போற்றப் பெற்று வந்துள்ளன. இராம சரிதத்தால் இராமாயணம் ஏற்றம் பெற்றது போலவே, கண்ணன் சரிதத்தோடு ஒன்றிப் பாரதம் ஏற்றம் பெற்றுள்ளது. ‘மகாபாரதத்தால் தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது‘ என்று பெரியார்கள் கூறியுள்ளனர். ஆழ்வார்கள் முதலியோரும் கண்ணன் தூது நடந்த நிகழ்ச்சியில் பெரிதும் ஈடுபட்டுள்ளனர். பகவத் கீதையின் தோற்றத்திற்கு நிலைக்களமாய் அமைந்தது பாரதப் போர் என்பர். ‘மாயன் அன்று ஐவர் தெய்வத் தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப் பாரினில் சொன்ன இராமாநுசன்‘ என்பது இராமாநுச நூற்றந்தாதி (68). பாரதத்தை நான்கு வேதங்களோடு ஒக்க வைத்து ஐந்தாம் வேதம் என்று மக்கள் போற்றிவந்துள்ளார்கள். ‘பாரத: பஞ்சமோ வேத:’ என்பது ஒரு பழமொழி.

நீடு ஆழி உலகத்து மறை நாலொடு ஐந்து என்று நிலைநிற்கவே
வாடாத தவ வாய்மை முனிராசன் மாபாரதம் சொன்ன நாள்-என வில்லி பாரதத்தின் சிறப்புப் பாயிரப் பாடல் புகழ்தலும் கவனிக்கத்தக்கது. இப் பெரிய இதிகாசத்தின் பெருமை கருதி இதனை ‘மகாபாரதம்’ என்றும், ‘மாபாரதம்’ என்றும் சிறப்பித்துக் கூறிவருகின்றனர்.

பாரதக் கதைகள் பொதுமக்களைப் பெரிதும் பிணித்து வந்துள்ளன. ஏதேனும் விரிவான கதையையோ வேறு நிகழ்ச்சியையோ மக்கள் குறிப்பிடும்பொழுது ‘இது என்ன! பாரதமாயிருக்கிறதே! என்பது உலக வழக்கு. சிவப்பிரகாசரும் தம் சகோதரரது திருமணக்காலத்தில் வாழ்த்திய வாழ்த்து ஒன்றில், ‘சிவன் ஒருவர் தூது என்ன; அத் தூது சென்ற கதை செப்பில் ஒரு பாரதம் என’ என்று பாரதம் என்பதைச் சிலேடைப் பொருள்பட அமைத்துள்ளமையும் நோக்கத் தகும். பட்டி தொட்டிகளில் வாழும் எழுத்தறிவில்லாத மாந்தரும் இக்கதையின் பல பகுதிகளை அறிவர்; இதில் வரும் முக்கியமான சில கதாபாத்திரங்களின் செயல்களையும் அறிவர். இப் பாத்திரங்களோடு தம் காலத்தவரை ஒப்பிட்டுப் பேசுதலும் உண்டு. ‘கொடைக்குக் கர்ணன்’ என்பதும், நெறி தவறா நேர்மையாளனைத் ‘தருமன்’ என்று புகழ்தலும், வலிமையிற் சிறந்த புகழுடையாரை ‘வீமவிசயர் போல’ என்று ஒப்பிடுதலும் எங்கும் உண்டு. கலகம் மூட்டித் திரியும் ஒருவனைச் ‘சகுனி மாமன்’ என்று சொல்வது பெரு வழக்கு. தருமன், விசயன், சகாதேவன், பாஞ்சாலி, திரௌபதி, முதலிய பெயர்களை மக்களுக்கு இட்டு வழங்குகின்றனர்.

இவ்வாறு மக்களிடையே இக் கதை பெரிதும் பரவவே, வியாசர் வழங்கிய பாரதமும் எங்கும் பயிலப்பெறுவதாயிற்று. இதனைப் பிரசங்கம் புரிதலையே தொழிலாக உடைய பெருமக்களும் அங்கங்கே பெருகினர். அதனால் இவவிதிகாசமும் நாளடைவில் வளர்ச்சி பெறுவதாயிற்று. இந்தப் பேரிதிகாசத்தில் இடைச் செருகல்கள் மிகப் பலவாக ஏற்பட்டுள்ளன என ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். அவ்வக்காலங்களில் அங்கங்கே வழங்கிய பல கதைகளும் நிகழ்ச்சிகளும் வியாசர் வாக்குடன் பின்வந்தவர்களால் பாடிச் சேர்க்கப்பெற்றன. மதவாதிகளாலும் தத்துவ நூற் புலவர்களாலும் பல செய்திகள் இதனுள் புகுத்தப்பெற்றிருத்தல் இயல்பே. சிற்சில பிரதேசங்களில் மட்டும் வழங்கிய சில கதைகளும் அந்தந்தப் பிரதேச பண்டிதர்களால் பிணைக்கப்பெற்றிருக்கலாம். இதன் பகுதிகளைக் கோவில்களில் ஓதிப் பொருள் சொல்லிவந்தவர்களாலும் இதனைப் பிரசங்கித்து வந்தவர்களாலும் காலப்போக்கில் பல மாறுதல்கள் இந் நூலில் ஏற்பட்டன. இதனால் வியாச பாரதத்தில் இடைச்செருகல்கள் பல ஏற்பட்டுள்ளதோடு, நூலும் மிகமிக விரிவடைவதாயிற்று. பிரதேசத்துக்குப் பிரதேசம் நூற்பகுதிகள் வேறுபட்டுக் காண்பதோடு, பாடல்கள் பற்பல மாறுபாடுகளையும் பெற்றுள்ளன. இவ்வகை மாறுபாடுகள் எல்லாம் இந் நூல் மக்களிடையே பெரிதும் வழங்கிவந்தமையையே புலப்படுத்துகின்றன.

நம் நாட்டில் மட்டுமின்றி, சுமாத்திரா, ஜாவா, முதலிய தூரக் கிழக்குத் தேசங்களிலும் பாரதக்கதைகள் பரவியுள்ளன. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் சம்பா என்னும் இடத்தில் வியாச பகவானுக்குக் கோவில் கட்டியிருந்தமை சாசனங்களால் தெரியவருகிறது. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காம்போஜ நாட்டிலே பாரதம், இராமாயணம், புராணங்கள் முதலிய நூல்களைக் கோவில்களில் படிப்பதற்கு அந்த நாட்டு அரசன் ஏற்பாடு செய்திருந்தமையும் சாசனங்களால் வெளியாகிறது. எனவே, இந்திய நாட்டில் பிறந்த இக் கதை மக்களின் வாணிகம், குடியேற்றம் ஆகியவற்றால் கீழை நாடுகளில் மிக முற்பட்ட காலத்திலேயே பரவியுள்ளமை புலனாம். இப்பொழுது, இப் பெருங் கதை உலகில் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பெற்றுப் போற்றும் பெருமை எய்தியுள்ளது.

—–

பாரதம் பாடிய பெருந்தேவனார் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு, என்னும் ஐந்து தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்துப் பாடல் பாடியுள்ளார். இவர் பாரதத்தை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக இயற்றினர் என்று தெரிகிறது. தொல்காப்பியப் பொருளதிகார உரையில் நச்சினார்க்கினியராலும், யாப்பருங்கல விருத்தியுரைகாரர் முதலியோராலும், ‘இது பெருந்தேவனார் பாட்டு’, ‘இது பாரதப் பாட்டு‘ என எடுத்தாளப்பெறுகின்ற பாடல்கள் இந் நூலைச் சார்ந்தனவாதல் கூடும். இந் நூல் முற்றும் நமக்குக் கிடைக்கப் பெறாமையினாலே இதன் கதைப் போக்கு , நடை, முதலிய பிற இயல்புகளை நாம் தெரிந்து கொள்ளக் கூடவில்லை.

பழந் தமிழ் நூலாகிய புறநானூற்றிலும் பாரதப் போரில் தமிழரசர்கள் உதவி செய்தது பற்றி ஒருகுறிப்பு உள்ளது. பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்பான் பாரதப் போரில் சோறு வழங்கினான் என்று முரஞ்சியூர் முடிநாகராயர் என்பவர் பாடியுள்ளார்.

அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலம் தலைக் கொண்ட பொலம் பூந் தும்பை
ஈர்-ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழியப்
பெருஞ் சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்! (213-16)-என்பது இப் புலவரின் வாக்கு. சங்க நூல்களில் இவர் பாடியதாகக் காண்பது இந்தப் பாடல் ஒன்றே.

புறம் 366-ஆம் பாடல் தருமபுத்திரனைக் கோதமனார் பாடியது. அப்பாடலில் கோதமனார் தருமபுத்திரனை, ‘அறவோன் மகனே! மறவோர் செம்மால்!’ என்று விளிக்கின்றார். ‘அறவோன் மகன்’ என்பதனால் ஐவருள் ஒருவனாகிய தருமபுத்திரனைக் குறித்ததாகுமோ என்னும் ஐயுறவு எழுதல் இயல்பே. டாக்டர் உ.வே. சாமிநாதையர், ‘இவன் ஓர் அரசன்’ என்றே பாடப்பட்டோர் வரலாற்றில் குறித்துள்ளார். எனவே, தரும புத்திரனது பெயர் பூண்ட ஒரு தமிழ் மன்னன் என்றே இவனைக் கொள்ளலாம். இதனால் பாரத வீரர்களின் பெயரை மக்கள் தங்கள் பெயராக மேற்கொள்ளுதல் மிகப் பழங்காலந்தொட்டே வரும் மரபு என்பது போதரும். பெரும்பாணாற்றுப்படையில்,

ஈர்-ஐம்பதின்மரும் பொருது களத்து அவிய,
பேர் அமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந் தேர்
ஆராச் செருவின் ஐவர் போல       (415-417)-இளந்திரையன் பகை வென்றான் என்பது குறிக்கப்பட்டுள்ளது.

விசயன் காண்டவ வனம் எரித்த செய்தியும், வீமன் வகுத்த மடைநூல் (பாக சாஸ்திரம்) நெறிப்படி பற்பல உணவு ஆக்கியமையும்,

கா எரியூட்டிய கவர் கணைத் தூணி
பூ விரி கச்சைப் புகழோன் தன்முன்,
பனிவரை மார்பன், பயந்த நுண் பொருட்
பனுவலின் வழாஅப் பல் வேறு அடிசில்  (238-241)-என வரும் சிறுபாணாற்றுப்படை அடிகளால் புலனாகின்றன.

கலித்தொகையில்உவமை வாயிலாகப் பாரதக் கதை நிகழ்ச்சிகள் பல காட்டப் பெற்றுள்ளன. அரக்கு இல்லில் ஐவரைக் குடிபுகச் செய்து துரியோதனன் அதற்குத் தீயிட்டது(25:1-4), அந்தப் பேராபத்திலிருந்து வீமன் தன் கிளைஞரைக்காப்பாற்றியது (25:5-8), துச்சாதனன் திரௌபதியின் கூந்தலைப் பற்றியது (101:18-20), அவனது நெஞ்சத்தை வீமன் பிளந்தது (101:18-20), துரியோதனன் துடையை வீமன் முறித்தது (52:2-3), பாரதப் பொருகளம்(104:57-59), முதலியவற்றைப் பற்றிய குறிப்புக்களைக் காணலாம். சிலப்பதிகாரத்தில், ‘இலங்கையில் எழுந்த சமரமும், கடல்வணன் தேர் ஊர் செருவும், பாடி’ (26:238-239) என இராமாயண பாரதப் போர்கள் இரண்டும் சுட்டப்பெற்றுள்ளன. அன்றியும், பாரதப் போர் பதினெட்டு நாள் நடந்தமை குறித்தும் (27:7-10), அப் போரில் சேரன் பெருஞ் சோறு அளித்தமை குறித்தும் (29:24), கண்ணன் பாண்டவர்க்குத் தூது நடந்தமை குறித்தும் (17:34,37) குறிப்புகள் வந்துள்ளன. விராடனது நகரில் விசயன் பேடியாக வாழ்ந்தமை பற்றி மணிமேகலையில் குறிப்பு உள்ளது (3:146-147).

  தேவார, திவ்யப் பிரபந்தங்களிலும் பாரதக் கதை நிகழ்ச்சிகளைக் காணலாம். அருச்சுனன் பன்றியின்பொருட்டுச் சிவபெருமானுடன் போர் புரிந்ததும், அப் பெருமான் அவனுக்குப் பாசுபதம் அளித்ததும் ஆகிய நிகழ்ச்சிகள் தேவாரத் திருப் பாட்டுக்களில் உள்ளன (1,20,6;1,48,6;4,7,10;,6,34,3;7,66,4;7,98,9) திவ்யப்பிரபந்தப் பாசுரங்களிலே கண்ணனோடு இயைபுடைய பாரத சரித நிகழ்ச்சிகள் யாவுமே அங்கங்கே குறிக்கப்படுதல் காணலாம். ஐவர்க்காகக் கண்ணன் புரிந்த செயல்கள் எல்லாம் ஆழ்வார்களால் குறிக்கப்பெற்றுள்ளன. முக்கியமாகப் பெரியாழ்வார், திருமங்கை மன்னன் பாசுரங்களிலே பாரதக் கதைகள் மிகுதியும் இடம் பெற்றுள்ளன.

பிற்காலச் சோழர் காலத்துத் தோன்றிய கலிங்கத்துப்பரணி,

தங்கள் பாரதம் முடிப்பளவும் நின்று தருமன்-
தன் கடற்படைதனக்கு உதவி செய்த அவனும் (194)-என்றும்,
தேவாசுர ராமாயண மாபாரதம் உளவென்று
ஓவா உரை ஓயும்படி உளது, அப் பொரு களமே (472)-என்றும், சோழரின் முன்னோன் ஒருவன் தருமன் பக்கம் நின்று உதவிய வகையையும், பாரதப் போரையும் பற்றிக் கூறுதல் கவனிக்கத்தக்கது.
அரக்கரைப் பொருத முரட்போர் வில்லும்,
பாரதம் பொருத பேர் இசைச் சிலையும்,
தாருகற் கடிந்த வீரத்து அயிலும்
பாடிய புலவன் பதி அம்பர்ச் சேந்தன்–என வரும் திவாகரத்தின் பத்தாவது ஒலிபற்றிய பெயர்த் தொகுதி இறுதிக் கட்டுரையால் திவாகர நிகண்டின் ஆசிரியர் பாரதம் பொருத விசயனது வெற்றி வில்லைப் பாடினார் என்பது தெரிகிறது. இவர் பாரதக் கதை முற்றும் பாடினரா’ அல்லது அதன் பகுதிகளுள் ஏதேனும் ஒன்றைப் பாடினரா’ என்பது துணியக்கூடவில்லை. சேந்தனாரின் புலமைக்கு எடுத்துக்காட்டாகக் கூறுவதனால் எல்லோரும் மதித்துப் போற்றிய ஓர் இலக்கியமாகவே இவருடைய நூல் இருந்திருக்கவேண்டும் என்று ஊகிக்கலாம். இங்ஙனமாக, சங்கநூல் தொடங்கிப் பாரதக் கதைப்பகுதிகள் தமிழ் நூல்களில் புலவர் பெருமக்களால் விதந்தோதப் பெற்றுள்ளமை மக்களிடையே இக்கதையின் பெரு வழக்கினையே புலப்படுத்தும்.

     நூலாசிரியர்களைத் தவிர, பழைய உரையாசிரியர்களும் இந்த மாக் கதை பற்றிக் கூறியதோடு பழைய பாரதப் பாடல்கள் சிலவற்றையும் மேற்கோள் காட்டியுள்ளார்கள். நச்சினார்க்கினியர் தமது உரையில், ‘இராமாயணமும், பாரதமும் போல்வன இலக்கியம்’ என்று (புறத். 20) குறிப்பிடுகின்றார். யாப்பருங்கல விருத்தியுரைகாரர் ‘தொன்மை’ என்னும் வனப்பிற்கு ‘பாரதமும் இராமாயணம் முதலாயினவும் கொள்க’ (95) என்று உதாரணம் காட்டுகின்றார். நச்சினார்க்கினியர் உரையில் காட்டும் பாரதப் பாட்டுக்கள் பழைய பாரதத்தைச் சார்ந்தனவாக இருத்தல் கூடும். வீரசோழிய உரையிலும் பாரதப் பாடல்கள் மேற்கோளாகக் காட்டப் பெற்றிருக்கின்றன. இக்கதை நிகழ்ச்சி பற்றிய தனிப்பாடல்கள் சிலவும் உள்ளன.

————–

    தமிழ்ச் சாசனங்களிலும் மகாபாரதம் பற்றிய செய்திகள் வந்துள்ளன.

மாபாரதம் பொருது மன்னவர்க்குத் தூது சென்று
தேவாசுர மதுகை தரித்துத் தேனாரு மறையும் கொண்டருளி(T.A.S. ii,19–என்று வீரபாண்டியன் மெய்க்கீர்த்தியிலும்,
மாரதர் மலை களத்து அவியப் பாரதத்தில் பகடு ஓட்டியும்
விசயனை வசுசாபம் நீக்கியும் வேந்தழியச் சுரம் போக்கியும்–(சின்னமனூர்ச் சாசனம், செந்தமிழ், தொ. 23)

என்று இராசசிங்க பாண்டியன் மெய்க்கீர்த்தியிலும் (சின்னமனூர்ச் சாசனப் பகுதி) வந்துள்ள பகுதிகள் முன்னோன் செயலைப் பின்னோனாகிய பாண்டியனுக்கும் ஏற்றி மொழிந்த சிறப்புக்களாகும். தவிர, இராச சிங்க பாண்டியன் மெய்க்கீர்த்தியில், மாபாரதம் தமிழ்ப்படுத்து மதுராபுரிச் சங்கம் வைத்து என்று கூறப்பட்டுள்ளது.

இவன் மதுரையில் நிறுவிய சங்கத்தைக் குறித்தும், தமிழில் இவன் ஆக்குவித்த மகாபாரதம் பற்றியும் ஒன்றும் தெரியவில்லை. ஒருகால் இவைகளும் இவனுடைய முன்னோரைப்பற்றிய செய்திகளாதலும் கூடும். எவ்வாறாயினும், பாண்டியன் ஒருவன் மகாபாரதத்தைத் தமிழ்ப்படுத்தச் செய்தான் என்பது உண்மை நிகழ்ச்சியாகலாம். மேலும், அருணிலை விசாகன் என்போன் பாரதத்தை இனிய செந்தமிழ்ப் படுத்திய செய்தி திருவாலங்காட்டுச் சாசனத்தால் தெரிய வருகிறது (சாஸனத் தமிழ்க்கவி சரிதம், பக். 90).

————-

தெள்ளாற்றுப் போர் வென்ற மூன்றாம் நந்திவர்மப் பல்லவன் காலத்தில், பெருந்தேவனார் என்பவரால் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக ஒரு பாரதம் தோன்றியுள்ளது. இதில் பெரும்பாலும் வெண்பாக்களும் ஒரு சில ஆசிரியப் பாக்களும் இரண்டொரு விருத்தங்களும் உள்ளன. இதனைப் ‘பெருந் தேவனார் பாரதம்’ என்றும், ‘பாரத வெண்பா’ என்றும் வழங்கி வருகின்றனர். இவரது நூலில் இப்பொழுது உத்தியோக பருவம் முதல் துரோண பருவத்தில் பதின்மூன்றாம் நாட் போர் முடிய, 830 பாடல்களே கிடைத்துள்ளன. எஞ்சிய பகுதிகள் இறந்துபட்டமையால், இவரது பாரத நூலில் தொடக்கம் முடிவு முதலிய கதைப் போக்குப் புலனாக இடமில்லை. ‘மாவிந்தம்’ என்னும் பெயருடைய நூல் ஒன்று தஞ்சைச் சரஸ்வதி மகால் வெளியீடாக வந்துள்ளது. இது பெருந் தேவனார் பாரத வெண்பாவின் பிற்பகுதி என்று தெரியவருகிறது. பாரத வெண்பாச் செய்யுட்களை உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ளார்கள். புறத்திரட்டு என்னும் செய்யுள்-தொகைநூல் செய்தவர் வெண்பாவால் ஆன பாரதப் பாடல்களை (33) நூலுள் தொகுத்துள்ளார். இவை பெருந்தேவனார் பாரத வெண்பாவைச் சார்ந்தனவாகலாம்.

வில்லிபுத்தூரர் காலத்திற்குச் சுமார் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட இந்தப் பாரத வெண்பாவைச் குறித்து, அவர் தமது நூலுள் யாதும் குறிப்பிடவில்லை.

மண்ணில் ஆரணம் நிகர் என வியாதனார் வகுத்த
எண் இலா நெடுங் காதையை யான் அறிந்து இயம்பல் (குருகுலச். 4)–என்றும்,
முன் சொலாகிய சொல் எலாம் முழுது உணர் முனிவன்-
தன் சொலாகிய மாப் பெருங்காப்பியம்தன்னைத
தென்சொலால் உரைசெய்தலின் (குருகுலச். 5)–என்றும், அவர் வியாசர் தந்த பெருங் காப்பியத்தைத் தமிழில் பாடுவதாகவே கூறுகின்றார்.
ஆயினும், பாரத வெண்பாவையும் அவர் பயன்படுத்தியிருக்கிறார் என்பது இரு நூல்களையும் ஒப்பு நோக்குவார்க்குப் புலனாகும். பாரத வெண்பாவிலுள்ள சிற்சில செய்யுட்களின் போக்கையும், அதன்கண் வரும் உரைநடைப் பகுதிகளில் சிலவற்றையும் வில்லி மேற்கொண்டிருக்கிறார். (பெருந். 140: வில்லி. கிருட். 47; பெருந் 234; வில்லி, கிருட் 232; பெருந். 614; வில்லி. ஒன்பதாம் போர்ச். 5; பெருந். 372; வி்ல்லி. சஞ்சய 16; பெருந் 34; வில்லி. உலூகன். 4) தவிரவும், பாரது நிகழ்ச்சி பற்றி வழங்கிய பல தனிப் பாடல்களும் வில்லியின் நூலுக்கு உதவியிலுக்கலாம்.

————–

வடமொழியில் உள்ள மற்றொரு நூலும் வில்லிக்கு வழிகாட்டியிருக்கின்றது. அதுவே, அகஸ்திய பட்டர் பாடிய ‘பால பாரதம்’. இப் பாலபாரதம் இருபது சருக்கங்களில் பாரதக் கதையைச் சுருக்கமாகத் தருகிறது. எளிய இனிய வடமொழி நடையை இது மேற்கொண்டுள்ளது. இந்நூலைச் சுலோகத்துக்குச் சுலோகம், சொல்லுக்குச் சொல், அப்படியே வில்லி தழுவியுள்ளார் என்றும், பாலபாரதத்தின் மொழிபெயர்ப்பாய் அமைந்ததே வில்லிபாரதம் என்றும் சிலர் கூறிவருகின்றனர். இது முற்றிலும் உண்மை அன்று. பாலபாரதத்தின் முதல் ஆறு சருக்கங்களுக்கும் வில்லிபாரதத்துக்கும் பெரிதும் ஒற்றுமை காணப்படுகிறது. ஆனால், போகப் போக இரண்டும் இடையிடையே வேறுபட்டுச் சென்று, இறுதியில் முற்றும் வேறுபட்டு விடுகின்றன. எனவே, விரிந்த பாரதக் கதையைச் சுருக்கமாகத் தமிழில் அமைப்பதற்குப் பாலபாரதத்தின் சுருக்கமுறை வில்லிக்குப் பயன்பட்டிருக்கலாம். ‘வில்லி புத்தூராரின் பாரதம் முழுவதும் பாலபாரதத்தின் மொழிபெயர்ப்பாக அமைந்தது என்று சொல்ல இயலாது’ என்று கூறி, இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளையும் தமது வில்லிபாரத உரைப் பதிப்பின் முகவுரையில் வை. மு. கோபால கிருஷ்ணமாசாரியர் விளக்கியுள்ளார்.

இங்கனமாக, வில்லிபுத்தூரர் பாரதம் பாடுவதற்கு முன் வடமொழியிலும் தமிழிலும் முதல் நூலை ஒட்டிச் சிற்சில நூல்கள் தோன்றி, நாட்டில் வழங்கிவந்துள்ளமையைப் பார்த்தோம். தம் காலத்து மிகுதியாகக் காப்பியங்களில் வழங்கிய விருத்த யாப்பில், பல்வேறு சந்தங்களையும் மேற்கொண்டு, சிறந்த முறையில் பாரதத்தை வில்லி அளிக்கவே, பாரத வெண்பா போன்ற முந்திய தமிழ் நூல்கள் மக்களால் பெரிதும் விரும்பிக் கற்கப் பெறவில்லை. வில்லிபுத்தூரர் காலம் முதல் வில்லி பாரதமே தமிழுலகில் தலைசிறந்து விளங்குவதாயிற்று. வில்லிபுத்தூரர் பாடல்களை அங்கங்கே பயன்படுத்திக் கொண்டு பாரதக் கதையை விரிவாகப் பாடிய நல்லாப் பிள்ளை பாரதமும், வில்லியின் நூலைத் தொடர்ந்து பாரதத்தை முற்றுவித்த அட்டாவதானம் அரங்கநாத கவிராயர் பாரதமும் வில்லிபாரதத்தைப்போல அத்துணையாகப் புலவர் பெருமக்களால் வரவேற்கப்பெறவில்லை. இங்கனமே, வேறு சிலர் பிற்காலத்துப் பாடிய பாரத நூல்கள் சில பெயரளவினால்கூட அறியப்படாது மறைந்து விட்டனவும் உண்டு. உதாரணமாகப் பழைய காஞ்சிப் புராண ஆசிரியர் இயற்றிய பாரதம், ‘மாவிந்தம்’ முதலியவற்றைக் கூறலாம். இவ்வாறு வில்லிபுத்தூரருக்கு முன்னும் பின்னும் தோன்றிய பாரத நூல்களெல்லாம் வழக்கொழியுமாறு கவிதைப் பெருமையினால் சிறந்து, இன்றும் புலவர் பெருமக்களால் போற்றப்பெற்று வருவது வில்லிபுத்தூரரின் பாரதம் ஒன்றே.

————–

வில்லிபுத்தூரரின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாக எடுத்தியம்புவது அவர்தம் புதல்வர் வரந்தருவார் பாடிய சிறப்புப் பாயிரம். இப்பாயிரத்துள் காணும் செய்திகளுக்கும் புலவர் புராணத்தில் வில்லிபுத்தூரர் சருக்கத்தில் காணும் வரலாற்றிற்கும் சிற்சில மாறுபாடுகள் உள்ளன. வில்லியின் வரலாற்றோடு இயைபுடைய செய்திகளைத் தெரிவிக்கும் சில தனிப்பாடல்களும் உள்ளன.

    இவரது பெயரைச் சிறப்புப் பாயிரம் ‘வில்லிபுத்தூரன்’ என்றும், அரங்கநாத கவிராயர் ‘வில்லிபுத்தூராழ்வார்’ என்றும் குறித்தல் காணலாம். இவர் திருமால் பக்தர் என்பது கொண்டு வில்லிபுத்தூராழ்வார் என்று இக்காலத்தும் சிலர் வழங்குகின்றனர். தமிழ்விடு தூதும் தனிப்பாடலும் இவரை வில்லி என்றே குறிக்கின்றன.

    இவர் திருமுனைப்பாடி நாட்டில் சனியூரில் தோன்றியவர். இந் நாட்டை நடு நாடு, சேதிநாடு, மாகதக் கொங்கு, என்றும் வழங்குவது உண்டு. பெண்ணையாற்றினால் வளம் சிறத்தலின், இது பெண்ணை நாடு என்னவும் பெறும். அறநெறிச் சாரம் பாடிய திருமுனைப்பாடியார் இந்த நாட்டைச் சார்ந்தவரே. சனியூர் என்ற ஊர் எது என்பது இப்பொழுது விளங்கவில்லை. இவ்வூரில் அந்தணர் குலத்தில், வந்த வைணவராகிய வீரராகவர் என்பவரே இவர்தம் தந்தையார். வட்டமாமணி என்னும் குடியில் இவர் பிறந்தவர் என்பர். ‘வட்டமாமணியினன்’ என்னும் வரந்தருவார் பாயிரக் குறிப்பு இதனைப் புலப்படுத்தும். வில்லி திருமால் பத்தியில் சிறந்தவரே.

    மன்னுமாதவன் சரிதமும் இடைஇடை வழங்கும்
    என்னும் ஆசையால் யானும் ஈது இயம்புதற்கு இசைந்தேன்.–என்னும் இவரது அவையடக்கச் செய்யுள் (குருகுலச். 6) இவரது பத்தியின் பெருமையை விளக்குதல் காணலாம்.

திருமால் பத்தியில் விஞ்சிய இவர் அருச்சுனன் தீர்த்த யாத்திரைச் சருக்கம், அருச்சுனன் தவநிலைச் சருக்கம், முதலிய பல இடங்களில் சிவ பெருமானைக் குலதெய்வமாகக் கொண்டுள்ளவர் போன்று துதிக்கின்றார். மும்மூர்த்திகளில் முதல்வன் சிவனே என்றும் ஒரு சில இடங்களில் குறிப்பிட்டுள்ளார். அன்றியும், சூரியன், வாயு, முதலிய தெய்வங்களையும் புகழ்கின்றார். இங்கனமாக வரும் பல குறிப்புகளினால் சைவ வைணவ சமரச ஞானியாய் இவரைப் பாரதத்தில் காண்கிறோம். எனவே, இவரை மதக் காழ்ப்பு இல்லா வைணவர் என்று கொள்ளுதல் பொருந்தும்.

இவரது பெருங் காவியத்திலிருந்து இவரது வடமொழி தென்மொழிப் புலமைத் திறம் நன்கு விளங்கும். தமிழிலுள்ள முந்து நூல்கள் பலவற்றையும் இவர் நன்கு கற்றவர். பல நூல்களிலுமிருந்து இவர் எடுத்தாளும் கருத்து, சொல், தொடர் முதலியவற்றால் இது விளங்கும். விருத்தப்பாவில் கதையின் சுதிக்கு ஏற்பப் பல்வேறு வகையான சந்தங்களை இவர் மேற்கொண்டிருப்பது இவருக்கே உரிய ஒரு தனிச் சிறப்பாகும்.

    ஐந்து பாவுடை நால்வகைக் கவிக்கு அதிபதியாய்
    வந்து, வட்டமாமணியினன் மணி முடி புனைந்து–என்று சிறப்புப்பாயிரம் (15) இவரது கவிதையின் ஆற்றலைப் புலப்படுத்தியுள்ளது.

காளம் முதலிய வெற்றி விருதுகளை இவர் படைத்தவர் என்பது, ‘தீர காகளம் பெறுதலின் யாரினும் சிறந்தோன்’ என்னும் பாயிரப் பகுதியால் (17) தெரியவரும். மேலும், இவர் தமிழ் நாட்டு மூவேந்தர்களிடமும் பரிசுகள் பல பெற்றுத் திகழ்ந்தார் என்றும் பாயிரத்தால் அறிகிறோம்.

இவ்வாறு தமிழகம் எங்கும் புகழ் பரவ இவர் வாழ்ந்துவரும் காலத்தில், இவர் வாழ்ந்த நாட்டின் அதிபதியாம் குறுநில மன்னன் ஆட்கொண்டான் இவரை வரவேற்று ஆதரித்தான். இவனது தலைநகர் வக்கபாகை. எனவே, இவன் வக்கபாகை வரபதியாட்கொண்டான் என்றும் குறிப்பிடப்படுகின்றான்.

சாணர்க்கு முன்னிற்கும் ஆட்கொண்ட நாயன் தமிழ்க் கொங்கர் கோன்
பாணுற்ற வரி வண்டு சேர் வக்கை நகர் ஆதி பக்கத்திலே
ஊணுக்கு வாராதிருப்பாய், விருப்பாகி உயர் வானிலே;
வீணுக்கு நின் ஆகம் மெலிகின்றது இவ்வாறு, வெண் திங்களே!–(தமிழ் நாவலர் சரிதை, 107)–என இரட்டையர் இவனது கொடைத் திறத்தைப் புகழ்ந்து பாடியுள்ளனர்.

இந்த வக்கபாகை வரபதி ஆட்கொண்டான் வேண்டுகோளினாலேயே பாரதப் பெருங் கதை வில்லி வாக்கினின்று பிறந்தது. ‘

பிறந்த திசைக்கு இசை நிற்பப் பாரதமாம்
    பெருங்கதையைப் பெரியோர்தங்கள்
சிறந்த செவிக்கு அமுதம் எனத் தமிழ்மொழியின்
    விருத்தத்தால் செய்க!’–என ஆட்கொண்டான் வேண்டியதாகப் பாயிரம் (22) அறிவிக்கின்றது. வில்லியின் பாரதத்தால் ஆட்கொண்டான் இசையும் இறவாது நிலைபெறுவதாயிற்று.
துன்னு மறைப் பொருள் எல்லாம் பொதிந்து, சுவை முதிர்ந்து,
பன்னு புகழ் பெறு ஐந்தாம் வேதம் என்னும் அப் பாரதத்தைத்
தென்னன் மொழியிற் சொலச் செய்து கன்னடற் செற்ற தமிழ்
மன்னன் வலியன் ஆட்கொண்டான் முனோர் கொங்கு மண்டலமே-என வரும் கொங்கு மண்டலச் சதகச் செய்யுளும் (32) ஆட்கொண்டான் பாரதம் செய்வித்தமையை அறிவிக்கின்றது.

வில்லியோ தமது நூலுள் ஆசைபற்றிப் பாரதப் பெருங்கதையைப் பாட முற்பட்டதாகக் கூறுகின்றார்.

   மன்னும் மாதவன் சரிதமும் இடை இடை வழங்கும்
   என்னும் ஆசையால் யானும் ஈது இயம்புதற்கு இசைந்தேன் (குருகுலச். 6)–என்பது அவர் வாக்கு.

எனினும், நூலுள் நான்கு இடங்களில் தம் நன்றியைப் புலப்படுத்தும் வகையில் வரபதியாட்கொண்டானைச் சிறப்பித்துள்ளமையினால் (காண்டவ, 50, நிரைமாட்சி 103, பதினாறாம் போர் 90, பதினேழாம் போர் 33), இம்மன்னன் வோண்டுகோளும் ஆதரவும் பாரதம் பாடுவதற்குத் துணைக்காரணங்களாய் அமைந்தன என்பது தெளிவாம்.

வில்லிபுத்தூரர் புலமையில்லாத போலிப்புலவர்களோடு வாதிட்டு வென்று, அவர்கள் காதுகளைத் துறட்டினால் அறுத்து வந்தார் என்றும் ஒரு கர்னபரம்பரைக்கதை உண்டு. இதனைத் தமிழ்விடு தூதும், ஒரு தனிப்பாடலும் குறித்துள்ளன. தெய்வ பக்தியில் விஞ்சிய இப் புலவர் இம்மாதிரியான செயல்களில் ஈடுபட்டார் என்றல் பொருத்தமாகத் தோன்றவில்லை. ஒட்டக்கூத்தர் முதலிய வேறு புலவர் சிலரைப் பற்றியும் இத்தகைய கதைகள் உண்டு. இக் கதையைக் குறிப்பிடும்,

மேலோரில்,
பாத் தனதாக்கொண்ட பிள்ளைப் பாண்டியன், வில்லி, ஒட்டக்-
கூத்தன், இவர் கல்லாது கோட்டிகொளும் சீத்தையரைக்
குட்டி, செவி அறுத்து, கூட்டித் தலைகள் எல்லாம்
வெட்டி, களைபறிக்க, . . . . . . . . (65-67)

என வரும் தமிழ் விடு தூதுப் பகுதிக்குக் குறிப்புரை வகுத்த டாக்டர் உ.வே. சாமி நாதையர், ‘இவற்றிற் கூறப்பட்ட செய்திகள், “குடடு்தற்கோ” என வரும் தனிப்பாடலை ஒட்டி எழுந்தன போலும்; பெரியோர் பலர்க்கு இக் கதைகள் உடன்பாடு அல்ல’ என்று எழுதியிருத்தலும் நோக்கத்தகும்.

————–

இனி, வில்லி வாழ்ந்த காலத்தை நோக்குவோம்; இவர் தழுவிய நூல்களுள் ஒன்றாகிய பாலபாரதம் இயற்றிய அகஸ்திய பட்டர் தெலுங்கு தேசத்தில் அரசாண்ட காகதீயப் பிரதாப ருத்திரனுடைய காலத்தில் (கி.பி. 1232-1323) இருந்தவர் என்று ஆராய்ச்சியாளர் துணிகின்றனர். எனவே, வில்லி இக்காலத்திற்குப் பிற்பட்டவர் என்பது போதரும்.

‘நான்காம் சங்கம் என முச்சங்கத் தண்டமிழ் நூல் தலைகண்டான்’ என்று வரந்தருவாரால் பாயிரத்துள் (18) சிறப்பிக்கப் பெறும் ஆட்கொண்டானை இரட்டைப் புலவரும் பாடியுள்ளனர். எனவே, ஆட்கொண்டான் வில்லிபுத்தூரரைத் தவிர வேறு பல புலவர்களின் மதிப்புக்கும் உரியவனாய் விளங்கியிருக்கின்றான். இரட்டையர்களால் பாடப்பெற்ற மற்றொருவன் இராசநாராயண சம்புவராயன் என்பவனாவன். இவன் கி.பி. 1331 முதல் 1383 வரை ஆட்சி புரிந்தான் என்று சாசன ஆராய்ச்சியாளர் கூறுவர். எனவே, வரபதியாட்கொண்டானும் வில்லியும் இக்காலப் பகுதியைச் சார்ந்தவர் என்றும், வில்லி 14-ஆம் நூற்றாண்டுப் புலவராவர் என்றும் கொள்ளலாம்.

———–

வியாச பாரதம் பதினெட்டுப் பருவங்களைக் கொண்டு மிக விரிந்த நூலாய் உள்ளது. அதில் பாரதக் கதையோடு எத்தனையோ கிளைக் கதைகளும் வேறு பல இடைப்பிறவரல்களும் உள்ளன. அதனை முற்றக் கற்றுப் பாரதக் கதையைப் புரிந்து கொள்ளுதல் ஓரளவு கற்றோருக்கே அத்துணை எளிய செயலன்று. ஆகவே, பாரதக் கதையை யாவரும் எளிதில் உணருமாறு சுருக்கமாகச் செந்தமிழில் சந்த விருத்தத்தில் அமைக்க முற்பட்டுள்ளவர் வில்லியே. பாரதப் போர் முடிவது வரையிலுள்ள கதைப் பகுதி மட்டுமே இவர் கூறியுள்ளார்.

இருக்கு ஆதி மறை மொழிந்தோன் இயம்பிய இப்
    பெருங் கதையைப் பலரும் கேட்ப,
சுருக்காகப் புராண முறை சொல்லுக என்றலின்,
    இவன் சொல்லலுற்றான்

என்ற பாயிரச் செய்யுட் பகுதி (23) ஆட்கொண்டான் பாரதத்தைச் சுருக்கிப் புராண முறையில் அருளுமாறு வேண்டிக்கொண்டதாகவே கூறுகிறது. அதற்கு இசையவே வில்லியும் தமது நூலை யாத்தனர் என்பது தோன்றுகிறது. பாரதத்தைச் சுருக்கித் தந்தமை குறித்துப் புலவர்புராணத்தில் (வில்லிபுத்தூரர் சருக்கம்),

    காவியப் புலமை வாய்ந்தோர் கணக்கு இல் பற்பலர் ஆனாலும்,
    தா இல் சீர் வில்லிபுத்தூர்த் தமிழ்ப் புலவரை ஒவ்வாரே!       (16)–என்றும்,
இருந்ததற்கு ஒருபாட்டு, அப்பால் எழுந்ததற்கு ஒரு பாட்டு, ஓதிப்
பெருந் தொகைப் படுத்துவாரைப் பேதையர் வியந்து கொள்வார்;
மருந்து உறழ்கவி ஒன்றால் பல் வான் பொருள் தெளிவாச் சொல்லும்
திருந்து இயல் பாரதச் சீர் தெரிபவர் சிலர்தாம் அன்றே’       (17)-என்றும் முருகதாச சுவாமிகள் வில்லியைப் புகழ்ந்துள்ளார்.

இவர் குறித்தவண்னமே ஒரு பாடலில் சில வரலாறுகளை அழகாக அமைத்துள்ளார் வில்லி; பல பொருள்களைத் தெளிவுற ஒரு பாடலில் அடக்கிப் பாடும் திறம் இவருக்கு இயல்பாய் அமைந்துள்ளது. இவர் சில செய்திகளை முன்னர்க் கூறவேண்டுமிடத்துக் கூறாது, மேல் நிகழும் நிகழ்ச்சியோடு பிணைத்துப் பின்னர்க் காட்டியும், முன் ஓர் இடத்துக் குறிப்பாகச் சுட்டியதைப் பின்பு மற்றோரிடத்தில் விளக்கியும் கதையை விடாது கொண்டு செல்கின்றார். விளக்கமாக வருவிக்கவேண்டிய இடங்களை இவர் விட்டுவிடவும் இல்லை. அவசியமாக கதைப் பகுதிகளை எல்லாம் விடாது தொடர்புபடுத்தி, சுமார் 4,000 பாடல்களிலே மாபாரதக் கதையை வில்லி தந்தது மிகவும் போற்றுதற்குரியது.

வில்லியும் வியாசரைப் போலவே பதினெட்டுப் பருவங்களையும் பாடினர் என்றும் பிற்பகுதி காலவெள்ளத்தில் மறைந்துபட்டது என்றும் சிலர் கருதுகின்றனர். இவர்கள் இதற்கு ஆதாரமாகக் காட்டும் பாடல் வருமாறு;

கலியுக வியாதன் சொல்லக் கணபதி எழுது பாடல்
பொலிவுறு தமிழின் ஆறாயிரம் என விருத்தம் போற்றிச்
சலிவு அறு வில்லிபுத்தூர் இறைவனாம் சார்வ பூமன்
ஒலி கெழு மறையோர் கோமான் உயர்ந்தவர் உவப்பச் சொன்னான்.

இத் தனிப்பாடல் பாரதம் முழுவதையும் ஆறாயிரம் பாடல்களில் வில்லி செய்தனர் என்று குறிக்கின்றது.

அப்படிச் சிறிதுநாள் அங்கு அவன் வசத்தினரா வைகி,
முப்பழச் சாறும், பாகும், முதிரவே அட்ட பாலும்,
ஒப்பவே வண்ணப் பாட்டும் உடனுடன் கலந்து பாடி,
எய்ப்பு அறு கவிகள் ஆறாயிரம் என முடித்திட்டாரே.–என்று ஆறாயிரம் பாடல் பாடியதாகப் புலவர் புராணமுடையாரும் கூறுகின்றார்.

இவர் மேலே காட்டிய தனிப்பாடலை ஆதாரமாகக் கொண்டு மொழிந்தார் என்றே தோன்றுகிறது. பரிசோதித்த பாரத ஏடுகள் பலவற்றில் இத்தனிப்பாடல் காணப் பெறவில்லை. ஒருசில ஏடுகளிலேதான் இப்பாட்டும் வரந்தருவார் பாயிரத்துடன் கலந்து வந்துள்ளது. அச்சுப்பிரதிகளில் மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பைத் தவிர வேறு பதிப்புக்களில் இப்பாடல் தரப்பெறவில்லை. எனவே, இதனை உறுதியான ஆதாரமாகக் கொள்ளுதற்கு இல்லை.

    மேலும், வில்லி பாரதத்தின் இறுதிப் பாடலில் வரும் ‘கனைகடற் பார் அளித்து, அவரும் அந் நகரில் அறநெறியே கருதி வாழ்ந்தார்’ எனவரும் ஈற்றடிக்கு, ‘கனை கடற்பார் அளித்து, அவரும் அந் நகரில் வாழ்ந்த செயல் கழறுவோமே’ என்றொரு பாடபேதம் உளதாகக் காட்டுகின்றனர். இதனால் பிற்பகுதியையும் வில்லி பாடி இருக்கவேண்டும் என்று எண்ணுவர். பாடபேதத்தைக் கொண்டு மட்டும் துணிதல் இயலாது. இப்பொழுதும் நூலின் பின் இணைப்பாக, இரண்டொரு ஏடுகளில், ‘மாதர்கள் களம் புகுந்து வான் அடைந்த சருக்கம்’, ‘முடி புனைச் சருக்கம்’, ‘முடி சூட்டுச் சருக்கம், ‘மௌவி சூட்டுச் சருக்கம்’ என்ற பெயர்களில் வேறு வேறு பாடல்கள் காணப்பெறுகின்றன. இவற்றை வில்லி வாக்கு என்றல் சிறிதும் ஒவ்வாது. இவ்வாறு கதையை வளர்த்து, கம்பன் திருமுடி சூட்டுப் படலம் அமைத்ததுபோல பாடமே ஈற்றடியில் காணும் பாடபேதம் என்பது மனம்கொள்ளத்தகும். ‘பாரத சம்பு’ முதலிய நூல்களிலும் போருக்குப் பிந்திய கதைப் பகுதி காணப்படவில்லை. இவ்வாறு பலவற்றையும் சிந்திக்கும் காலத்து, போர்ப் பகுதியோடு வில்லி தம் பெரு நூலை முற்றுவித்தார் என்று கொள்வதே உண்மை நிகழ்ச்சியாகும்.

வில்லி பாரதத்திற்குப் பல பதிப்புகள் வந்துள்ளன. இவற்றுள் முற்பட்டனவாக்க் கருதப்படுவன ஆகிய ஆறுமுகநாவலர் பதிப்பும் கோமளபுரம் இராசகோபாலப் பிள்ளை பதிப்பும் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளி வந்தன. ஏட்டுப் பிரதிகள் ஒன்றிலும் காணப்பொறாத பல செய்யுட்கள் இவர்கள் பதிப்பில் உள்ளன. எனவே, இவை பிரதிகளின்படி நன்கு பரிசோதித்து வெளியிடப் பெற்றனவாக எண்ணக்கூடவில்லை. அடுத்து, மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பைக் (1907) கூறலாம். பதினான்கு பிரதிகளைக் கொண்டு சேற்றூர் ரா.சுப்பிரமணியக் கவிராயரால் பரிசோதிக்கப்பெற்றது இப் பதிப்பு. முக்கியமான பாடவேறுபாடுகளும் சில பிரதிகளில் காணப்பெறாத செய்யுட்கள் முதலியன பற்றிய குறிப்புக்களும் அங்கங்கே அடிக்குறிப்பில் தரப்பட்டுள்ளன. நூல் முழுமைக்கும் அரும்பதவுரை சிறந்த முறையில் உள்ளது. தவிரவும் விஷய சூசிகை, அபிதான அகராதி, தொகை அகராதி என்னும் தலைப்புக்களில் தரப்பெற்றுள்ள பொருள்களும் நூலை ஆராய்வார்க்கு அவசியமான குறிப்புக்களாகும். இங்ஙனம் பல சிறப்புக்களையும் பெற்று விளங்கும் இப் பதிப்பு மூலப்பதிப்புக்களுள் முதன்மையாக வைத்து எண்ணத் தகுவது.

இனி, தனிப்பட எடுத்துக் கூறத் தக்கது வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியரின் உரைப் பதிப்பு. வில்லி பாரதத்தின் பெரும்பான்மைப் பகுதிகள் வை.மு. சடகோப ராமாநுஜாசாரியராலும், சே. கிருஷ்ணமாசாரியராலும் உரைவகுக்கப் பெற்றுப் பகுதி பகுதியாக முன்னரே வெளிவந்துள்ளன. இவர்கள் உரை எழுதாத ஆதி பருவம், ஆரணிய பருவம், விராட பருவம் என்னும் பகுதிகளுக்கு வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியர் உரை எழுதி முற்றுவித்து, முற்குறித்த இருவர் உரைகளையும் நன்கு பரிசோதித்து, பாரதம் முழுவதற்கும் உரை நூல் அச்சிட்டுள்ளார். பதவுரை, கருத்துரை, விளக்கவுரை முதலிய பலவும் கொண்டு விரிந்த உரைநூலாய் இது அமைந்துள்ளது. பாடல்களில் பயின்றுவரும் கதைகளை அங்கங்கே விளக்கி எழுதியதோடு வியாசபாரதம், பால பாரதம் முதலியவற்றோடுள்ள ஒற்றுமை வேற்றுமைப் பகுதிகளை ஆங்காங்கே விளக்கியுள்ளார். பாட வேறுபாடுகளை அந்தந்தப் பாடல்களின் கீழ்ச் சுட்டியதோடு பிரதிகளில் காணும் பிற வேறுபாடுகள் பற்றியும் சிற்சில இடங்களில் குறிப்புத் தந்துள்ளார். அரும்பத அகராதி, அபிதான சூசிகை அகராதி, ஆகியவற்றைப் பாடல் எண் குறிப்புடன் ஒவ்வொரு தொகுதியிலும் தந்திருப்பது இப் பதிப்பிற்குரிய ஒரு தனிச் சிறப்பு.

இங்கனமாக வெளிவந்துள்ள பதிப்புக்களில் மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பும், வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியரின் பதிப்புமே இந்தப்பதிப்பின் பரிசோதனைக்குப் பெரிதும் பயன்பட்டன. சென்னை அடையாற்றிலுள்ள மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை அரசாங்கச் சுவடி நிலையம், தஞ்சைச் சரசுவதிமகால், மதுரைத் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரத்திலுள்ள அரசாங்க நூல் நிலையம் ஆகியவற்றில் இப்பொழுது கிடைக்கும் சுவடிகள் ஒப்பு நோக்கப்பெற்றன. இதனால், நூல் அமைப்பிலும், சருக்கங்களின் வரிசைமுறையிலும் பாடல்களின் அடைவிலும் சிற்சில மாறுபாடுகள் காணப்பெற்றன. பாட ரூப பேதங்களின் விரிவு கருதி அவை இப் பதிப்பில் தரப்பெறவில்லை.

———-

நூற் பெயர் சில ஏடுகளில் குறிக்கப்பெறவில்லை. பெரும்பாலான ஏடுகளில் பாரதம், மகாபாரதம்என்னும் பெயர்களைத் தொடக்க முடிவுகளில் குறித்துள்ளனர். முற்பதிப்பாசிரியர்கள், ‘வில்லிபுத்தூராழ்வார் இயற்றியருளிய மகாபாரதம், வில்லிபுத்தூராழ்வார் அருளிச்செய்த மகாபாரதம், வில்லிபுத்தூரர் இயற்றிய மகாபாரதம், பாரதம்-வில்லிபுத்தூராழ்வார் இயற்றியது’ என்று இவ்வாறு நூல் முகப்பில் தந்துள்ளனர். மகாபாரதம் என்ற பெயர் முதல் நூலால் பெற்ற பெயர். ஆனால் இந் நூலை ‘வில்லி பாரதம்’ என்று குறித்தலே பெருவழக்காய்ப் புலவர்களிடையே பயின்று வருகிறது. தமிழிலுள்ள பிற பாரத நூல்களையும் பெருந் தேவனார் பாரதம், நல்லாப்பிள்ளை பாரதம் என்று இவ்வாறு ஆசிரியர் பெயருடன் இணைத்தே வழங்குகின்றனர். ஆகவே, ‘கம்ப ராமாயணம்’ என்பது போல ‘வில்லி பாரதம்’ என்பதே இப் பதிப்பில் நூற் பெயராகப் கொள்ளப்பட்டது.

    நூலாசிரியர் மகனார் வரந்தருவார் பாடிய ‘சிறப்புப் பாயிரம்’ எல்லாப் பிரதிகளிலும் நூல் தொடங்குவதற்கு முன்னாகவே உள்ளது. இப் பாயிரம் ஆசிரியரைப் பற்றியும் அவர் நூல் பாடிய காரணம் முதலியன பற்றியும் விளக்கிக் கூறும் ஒரு செய்யுள் முன்னுரையாய் உள்ளமையின், ஏடுகளில் காண்கின்றபடியே நூல்-முகப்பில் மேற்கொள்ளப்பெற்றது.

————-

அச்சுப்புத்தகங்களில் பருவப் பெயர் சுட்டியிருப்பதுபோல ஏட்டுப்பிரதிகளில் பருவப்பெயர்குறிக்கப்பெறவில்லை. இது முதல் நூலை ஒட்டிப் பதிப்பாசிரியர்கள் அமைத்துக் கொண்ட புத்தமைப்பே. பதினெட்டாம் போர்ச் சருக்கத்தின் பிற் பகுதிப் பாடல்களைப் பத்தாவது சௌப்திக பருவம் எனக் கொண்டிருத்தலும், இதில் செய்யுள் எண்ணிக்கை பதினெட்டாம் போர்ச் சருக்கத்தின் தொடர்ச்சியாய் 205 முதல் தொடர்ந்து செல்லுதலும் நோக்கின், மேற்கூறியதன் உண்மை புலனாம். எனவே, இப்பதிப்பில் பருவப் பெயர்கள் கொடுக்கப்படவில்லை.

சருக்க அமைப்பு, பாடல் தொகை, முதலியவற்றில் நூல் முதலலும், ஆரணிய பருவக் கதைப் குதியிலும     இந்த முதற் செய்யுள் அயன், அரி, அரன் மூவர்க்கும் பொதுவாய் அமைந்துள்ளது. பின் வரும் சருக்கங்களிலுள்ள வாழ்த்துப் பாடல்களோ திருமாலை பற்றியே கூறுகின்றன. பின் வரும் சருக்கங்களில் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இல்லாமலும் ஒருசில ஏடுகள் உள்ளன. இராசகோபாலப் பிள்ளை பதிப்பிலேதான் எல்லாச் சருக்கங்களுக்கும் கடவுள் வாழ்த்து உள்ளது. பிற்பதிப்புகளில் இடையிடையேில சருக்கங்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடல் இல்லை. இங்கனம் விடுபட்ட இடங்களில் இராசகோபாலப் பிள்ளை கொடுத்துள்ள பாடலுக்குப் பிரதியாக ஒரு சில ஏடுகளில் வேறு பாடல்கள் காணப்படுகின்றன. இன்னும் சில ஏடுகள் ஒரு சருக்கத்திற்கு உரியதாகத் தந்துள்ள பாடலை வேறு சருக்கத்தின் வாழ்த்தாகவும் கொண்டுள்ளன. இவ்வகை மாறுபாடுகளினால், ‘கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் யாவும் ஆசிரியர் பாடியவைதாமா” என்னும் ஐயம் எழுகின்றது.

இனி, சருக்கங்களின் பெயர், அமைப்பு முதலியவற்றில் காணும் மாறுபாடுகளைக் கவனிப்போம். ஆரணிய பருவக் கதைப் பகுதியில் ‘முண்டகச் சருக்கம்’ என்பது ‘புட்பயாத்திரைச் சருக்கம்’ என்று அச்சுப் பிரதிகளில் உள்ளது. தாமரைப் பூவைக் கொணரவே வீமன் செல்வதாக இந்தச் சருக்கத்தின் கதை உள்ளது. இதை விளக்கும் வகையில் முண்டகச் சருக்கம் என்ற பெயர் பெரும்பான்மைப் பிரதிகளில் உள்ளமை கருதி, அப் பெயரே மேற்கொள்ளப்பெற்றது. இப் பருவத்தில் தரப் பெற்றுள்ள ‘மணிமான் வதைச் சருக்கம்’ பெரும்பான்மையான பிரதிகளில் இல்லை. முண்டகச் சருக்கத்தில் வரும் கதையே சில மாறுதல்களுடன் விரிவாக இதில் தரப் பெறுகிறது. ஆகவே, கூறியது கூறலாக வரும் இச்சருக்கம் நூலின் பகுதியாகக் கொடுக்கப்பெறவில்லை. இச் சருக்கத்தில் இறுதிப் பாடலாகப் பதிப்புகளில் காணும் ‘அப்பொழுது வானுலகம்’ என்னும் பாடல் மணிமான் வதை இன்றியுள்ள பிரதிகளில், சடாசுரன் வதைச் சருக்கத்தின் ஈற்றயல் பாடலாகப் உள்ளது. அது போன்றே இப் பதிப்பிலும் காணப்பெறும். ஆரணிய பருவத்தின் இறுதிச் சருக்கமாக அச்சுப் பிரதிகளில் காணப்பெறும் நச்சுப்பொய்கைச் சருக்கம் பல ஏடுகளில் சடாசுரன் வதைச் சருக்கத்தை அடுத்து உள்ளது. அவ்வாறே இப்பதிப்பிலும் மேற்கொள்ளப் பட்டுள்ளது. படை எழுச்சிச் சருக்கத்தின் பின், முகூர்த்தம் கேள்விச் சருக்கம், களப்பலியூட்டு சருக்கம், அணிவகுப்புச் சருக்கம் என்னும் மூன்று சருக்கங்கள் அச்சுப் பிரதிகளில் காணப்பெறுகின்றன. இவற்றுள் முகூர்த்தம் கேள்விச் சருக்கம் முதலிய மூன்றும் இன்றி, யாவற்றையும் படையெழுச்சிச் சருக்கமாகவே பல பிரதிகள் மேற்கொண்டுள்ளன. முகூர்த்தம் கேள்வி, களப்பலி, அணிவகுப்பு என்னும் மூன்றும் படையெழுச்சியின் அங்கங்களே. ஆதலின், இப் பதிப்பிலும் படையெழுச்சிச் சருக்கம் ஒன்றே கொள்ளப் பெற்றது.

—————-

நூல் இறுதியில் ஒரு சில ஏடுகளில் ‘மாதர்கள் களம் புகுந்து வான் அடைந்த சருக்கம்’ என்றும், முடி சூட்டுச் சருக்கம்’ என்றும், ‘மௌலி சூட்டுச் சருக்கம்’ என்றும் வெவ்வேறு வகையில் பல பாடல்கள் உள்ளன. இவை அச்சுப்பிரதிகளில் இடம் பெறாதவை. இவற்றுள் மௌலி சூட்டுச் சருக்கம் என்பது சென்னை அரசாங்கச் சுவடி நிலையத்தின் தனி வெளியீடு ஒன்றில் (1949) வெளியிடப்பெற்றிருக்கிறது. இதற்கும் முடி புனை சருக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை. பெயர் ஒற்றுமை தவிர, பாடல்கள் எல்லாம் வேறு பட்டவை. இந்தச் சருக்கங்களும், மணிமான் வதைச் சருக்கப் பாடல்களும், பல பிரதிகளில் காணப்பெறாமலும் சந்தர்ப்பத்திற்கு ஒவ்வாமலும் அமைந்துள்ள பாடல்களும், ‘மிகைப் பாடல்கள்’ என்னும் தலைப்பின் கீழ் நூல் இறுதியில் அமைக்கப்பெற்றுள்ளன.

————-

முந்திய பதிப்புக்களில் அரங்கசாமி நாயக்கர் பதிப்பில் மட்டும் நூல் முழுவதும் பாடல்கள் சீர் பிரித்துப் பதிப்பிக்கப்டிருக்கின்றன. வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியர் பதிப்பில் ஒருசில பருவங்கள் சீர் பிரித்து அச்சிடப் பெற்றிருக்கின்றன. ஏனைய பதிப்புக்களில் அடிவரையறைப்படி பாடல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளனவே அன்றி, அடிகளினூடே இடைவெளி சிறிதும் விடப் பெறவில்லை. இம் முறைகளினால் பாரதப் பாடல்களைப் பொருளுணர்ச்சியோடு வாசிப்பது கற்றார்கே பெரிதும் இடர்ப்பாடு தருவது ஒன்றாம். இந்தப் பதிப்பில் பாடல்கள் சந்தி பிரித்து, ஏற்ற நிறுத்தற்குறியீடுகளுடன் தரப்பெற்றுள்ளன. கதைப்போக்கை விளக்கும் வகையில் தக்க தலைப்புகளும் இடையிடையே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றால் பாடல்களின் பொருள் முதலியவற்றை எளிதில் உணர்ந்துகொள்ளலாகும். நூல் முகப்பில் காணும் உள்ளுரைப் பகுதியில் தலைப்புகள் எல்லாம் ஒருசேரத் தரப்பெற்றுள்ளன. இவற்றைத் தொடர்ந்து வாசித்தால் வில்லியின் கதைப் போக்கு நன்கு தெளிவாம்.

——————-

திருவாளர்கள் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, வி.மு. சுப்பிரமணியம், மு.சண்முகம் ஆகிய மூவரும் பிரதிகளுடன் ஒப்பு நோக்கி ஆராய்ந்து வில்லி பாரதத்தை அழகுறப் பதிப்பித்துள்ளார்கள். திருவாளர்கள் பெ.நா. அப்புஸ்வாமி, பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை, பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், பன்மொழிப் புலவர் வே. வேங்கடராஜுலு ரெட்டியார், கி.வா. ஜகந்நாதன், அ.ச. ஞானசம்பந்தன், சா. கணேசன், ஆகியோர் இப் பதிப்பு சம்பந்தமாகப் பற்பல ஆலோசனைகள் கூறியதோடு வேறு பல உதவிகளும் புரிந்தனர். இங்ஙனமாக, செவ்விய முறையில் இப்பதிப்பு வெளிவர உதவி புரிந்த அன்பர்கள் யாவர்க்கும் எங்கள் உளம் கனிந்த நன்றி உரியதாகுக.

சிறப்புப் பாயிரம்

 

பொருப்பிலே பிறந்து, தென்னன் புகழிலே கிடந்து, சங்கத்து
இருப்பிலே இருந்து, வைகை ஏட்டிலே தவழ்ந்து பேதை-
நெருப்பிலே நின்று, கற்றோர் நினைவிலே நடந்து, ஓர் ஏன
மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள்.-1-

பேதை பாவைமருங்கிலே வளருகின்றாளென்க. ஓரேன மருப்பிலே
பயின்றபாவையென்றது – பூமிதேவியை. வராகாவதாரஞ் செய்த திருமால்
தன்கோட்டிலே பூமியை யேந்தியமை, புராணப் பிரசித்தம். பேதையென்பது –
தமிழணங்காகிய குழந்தையை. பேதை – குழந்தைப்பருவம்: அப்பருவத்துக்கு
வயதுஎல்லை – ஐந்து வயதுமுதல் ஏழுவயசுவரையிலும். தமிழைப் பேதையென்றதற்குஏற்ப, பிறவி முதலியனகூறினார். பொருப்பு – அகத்தியரின்
வாழிடமான பொதியமலை.பாண்டியரே தமிழ்வளர்த்தோ ராதலால், அவர்புகழிலே
தமிழ்ப்பேதை கிடப்பாளென்க.மதுரையில் சங்கத்தாரால் தமிழ்மொழி
வளர்க்கப்பட்டு வளர்ந்ததனால்’சங்கத்திருப்பிலேயிருந்து’ என்றது.
திருஞானசம்பந்தர் சமணருடன் வாது நிகழ்த்திப்புனல் வாதத்தில் அச்சமணரை
வெல்லுமாறு “வாழ்கவந்தணர்” என்ற பாசுரத்தைஓலையிலெழுதி நட்டாற்றில்
விட்டபோது அவ்வேடு கரையெதிரேறி வந்தது என்றசரித்திரத்தையுட்கொண்டு,’
வைகையேட்டிலே தவழ்ந்த’ என்றது. அங்ஙனமேநள்ளாற்றுப்பதிகம் எழுதிய
ஏட்டை நெருப்பிலேயிட, அப்பதிகம் வேவாதுகிடந்ததென்ற வரலாறுபற்றி,
‘நெருப்பிலே நின்று’ என்றது. கற்றோர் அத்தமிழ்மொழியைப்பயின்று வருதலால்
‘கற்றோர்நினைவிலேநடந்து’ என்றது.

அகத்தியன் பயந்த செஞ்சொல் ஆரணங்கு, அம்புசாதன்
முகத்தினில் வாழும் அந்த மொய்குழல், அருளினாலே,
பகைத்து எதிர் பொருத தெய்வப் பாரத கதை, இம் முந்நீர்ச்
செகத்தினில், விருத்த யாப்பால் செய்க!’ என, செய்தது அன்றே.-2-

அம்புசாதம் – தாமரை: அதில்தோன்றியவன் – அம்புசாதன்.
அம்புயாதன் என்று பாடம் ஓதுவாருமுளர். முகம் – ஈண்டு, முகத்திலுள்ள நா:
“கலைமகள்வாழ்க்கைமுகத்ததெனினு, மலரவன்” என்றதும் காண்க. மொய்குழல்
என்றது சரசுவதியை.பெரும்பான்மைபற்றி, விருத்தயாப்பு என்றது. பாரதகதை
செய்கெனச் செய்ததுஎன்பதை, மேலே விளக்குவர்.

தேடினார் யாவரேகொல், எழு வகையானும் சீர்த்தி’
நீடினார் அவரே! எனபர், நீள் நிலத்து உயர்ந்த மாந்தர்;
‘பாடினார் யாவர்’ யாவர் பாடுவித்தார் கொல்” என்று
நாடினார் தெளியும்வண்ணம், நவை அற, நவிலலுற்றேன்.-3-

தடாகபிரதிஷ்டை, தநநிக்ஷேபம், அக்கிரகாரபிரதிஷ்டை, தேவாலய
பிரதிஷ்டை,நந்தவன பிரதிஷ்டை, பிரபந்தநிர்மாணம், ஸத்திரபிரதிஷ்டை என்ற
இவ்வேழுவகையால் கீர்த்தியைத் தேடுவர்: இவை ‘ஸப்தஸந்தாநம்’ எனப்படும்.
இவ்வேழுவகையிற் பிரபந்தநிர்மாணத்தாலாகிய புகழ், பாடுவார்க்கு உரியதாகும்:
அப்புகழைப் பெற்றவர் இன்னா ரென்று கூறத்தொடங்கியவர் அதனைச்
செய்வித்தாராகிய பாடுவித்தாரையும் உடன்கூறலுறுகிறாரென்க. நவையற –
குற்றமில்லாமல்: செவ்வனே. நவிலல் – சொல்லுதல்.

நாள் நிரைத்து, அநேக தாரகாகணம் ஆம்
நவ மணியுடன் நவ விதம் கொள்
கோள் நிரைத்து, ஈர்-ஏழ் புவனமும் வலம் செய்
கொற்ற நேமியின் வரு கொண்டல்,
வாள் நிரைத்து இரவி விதிர்ப்பபோல் மின்னி,
வான் முகடு உற நெடும் பளிக்குத்
தூண் நிரைப்பனபோல், நந்தி மால் வரையின்
சூழலில் தாரை கொண்டதுவே.–4

நூலாசிரியர் தோன்றிய திருமுனைப்பாடிநாட்டினைப் பற்றிக்கூறலுற்று
ஆங்குப்பாயும் பெண்ணையாறு நந்திமலையில் தோன்றுவதைக் கூறுகின்றார்:
நாள் -அசுவினி முதலிய இருபத்தேழு நட்சத்திரங்களை. நிரைத்து – ஒழுங்காக
உண்டாக்கி:(அவற்றோடு), தாரகாகணம் ஆம் நவ மணியுடன் – நட்சத்திரக்
கூட்டங்களாகிய புதியஇரத்தினங்களோடு. நவமணியென முறை நவின்ற என்று
பிரதிபேதம். நவவிதங்கொள்கோள் – ஒன்பதுவகையான கிரகங்கள்: அவை –
சூரியன் முதலியன. இவற்றால்எல்லாப்பொருட்கும் ஆதிகாரணன் திருமாலே
யென்று தெரிவித்தவாறு. வலஞ் செய் -பிரதட்சிணஞ் செய்கின்ற: ஈரேழ்
புவனத்தவரும் உய்யுமாறு திருமாலைவலஞ்செய்கின்றனரென்க. நேமி –
சக்கரப்படை: அதையுடைய திருமாலுக்கு,ஆகுபெயர். திருமால்போல் வருகின்ற
கொண்டலென்க: கொண்டல் – நீரைக் கொண்டமேகம். நேமியின் வரு –
மேருமலையினின்று வருகின்ற என்றாரு முளர்,இரவிபோன்ற பேரொளி படைத்த
வாளை நிரைத்து விதிர்ப்பபோல் மின்னி யென்க.மழைத்தாரை – பளிக்குத்தூணை
யொக்கும். நந்திமால்வரை – குடகுமலை: இதுபெண்ணையாறு தோன்றும்
மலையாகும்.

வம்பு அறா மலரும், செம் பொனும், மணியும்,
மருங்கு எலாம் நெருங்கும் அக் குன்றின்.
உம்பர், ஆர்ப்பு எழ, பார் அளவும் நின்று ஒங்கி,
உள்ளுறத் துள்ளி, வீழ் அருவி-
அம்புராசியை மால் மந்தரம் சுழற்றி,
அமுது எழக் கடைந்த நாள், அதற்குத்
தம்பமாம் மதியை அதனுடன் பெயர்த்துச்
சார்த்தி வைத்தென்னலாம் தகைத்தே.–5

வம்பு – வாசனை. உம்பர்- மேலிடம். ஆர்ப்பு – ஆரவாரம். உம்பரூடெழ
என்றும்பாடம். உள்ளுற- (கண்டோர்) மதிக்க. அம்புராசி – இங்கே, பாற்கடல். மலையைச்சார்ந்த அருவி, மந்தர மலையைச்சார்ந்த
அடைதூணானமதியையொக்குமென்க: தற்குறிப்பேற்றம். வைத்து – வைத்ததால்:
எச்சத்திரிபு.

வெண்ணெயே கமழும் பவளமாய் விமலன
மெய் எனக் கருகி, மெல்லியலார்
கண்ணையே அனைய நெடுங் கடல் முகந்து,
ககனமும் திசைகளும் விழுங்கி,
பண்ணை சூழ்ந்து இலகும் திருமுனைப்பாடிப்
பழைய நாடு அனைத்தையும், ஒருதன்
பெண்ணையே கொண்டு போகம் உய்த்திடுமால்,
புயல் எனும் பெயருடையப் பெரியோன்.–6-

முகில்பெய்தலால் நந்திமலையில் அருவிபெருகிப் பின்னர்ப்
பெண்ணைமாநதியாய்அம்முனைப்பாடி நாட்டிற்பாய்வது கூறப்படுகின்றது.
மாற்புயலெனும் -கரியபுயலென்கிற. விமலன் – திருமால். ககனம் – ஆகாயம்,
திக்குத்திசைதெரியாமல்மேகம் கவிந்துகொள்வதை ‘ககனமுந்திசைகளும்விழுங்கி’
என்றார். பண்ணை – வயல்.திருமுனைப்பாடிநாடு என்றது – நடுநாடு.
பெண்ணையேகொண்டு -பெண்ணையாற்றைக்கொண்டு மகளைக்கொண்டு என்றும்,
போகம் – விளைவு இன்பம்என்றும் இருபொருள்தரும்.

தொடுத்த நாள்மலர், வேய்ந்து, அகில் அளைந்து, உந்திச்
சுழிவயின் இலங்க, மெய்த்தனங்கள்
எடுத்து மேல் வீசி, மணி மருங்கு அலைய,
இனம் கொள் வண்டொடு சிலம்பு இரங்க,
அடுத்த நீள் சுரத மகளிரின் தடங் கண்
நிறம் சிவப்புற, கரை அழிந்து,
படுத்த பேர் அணைப் போர் புரிந்ததால்- அந்தப்
பண்ணை அம் கானல் சூழ் பெண்ணை.-7-

இது அப்பெண்ணை அணைக்கட்டையுமுடையதாதல் கூறும். பண்ணை
அம் கானல்- வயல்களோடு அழகிய சோலைகளையுடைய பெண்ணையென்க.
பெண்ணைநதியைச்சுரதமகளிர்க்கு ஒப்பாகக்கூறுகின்றார்: சிலேடையுவமை:
மகளிர்க்குச்சேரும்போது,-அகில் – அகிற்புகை. உந்திச்சுழி – கொப்பூழாகிய சுழி.
வயின் – வயிறு. தனங்கள் -கொங்கைகள். மருங்கு – இடை. மருங்கு அலைய
மணி [ஆபரணங்களை]மேலெடுத்துவீசி. வண்டு – கைவளை. தடங்கண் – பெரிய
கண். கரையழிந்து -வரம்புகடந்து, அணை போர் – அணையிற் செய்யும்போர்:
கல்விப்போர்பெண்ணைநதிக்கு ஆகும் போது, அகில் – அகிற்கட்டைகள்.
உந்திச்சுழி வயின்இலங்க – உந்திபோன்ற சுழி இடங்கடோறும் இலங்க. மெய்த்
தனம் -உண்மையாகியபொன். மணி – நவமணி. மருங்கு – பக்கம். சிலம்பு
இரங்க – மலைஎதிரொலிசெய்ய. தடங்கள் – வாவிகள். கரை யழிந்து – கரை
கடந்து. படுத்த -கட்டப்பட்ட. பேர் அணை – பெரிய அணைக்கட்டு.

அவ்வை பாடலுக்கு நறு நெய் பால் பெருகி,
அருந் தமிழ் அறிவினால் சிறந்து,
பௌவ நீர் ஆடைத் தரணிமான் மார்பில்
பயிலும் உத்தரியமும் போன்று,
மொய் வரால், கெண்டை, வாளை, சேல், மலங்கு,
முதலிய சனம் எதிர்கொள்ள,
தெய்வ மா நதி நீர் பரக்கும் நாடு அந்தத்
திருமுனைப்பாடி நல் நாடு.–8-

திருமுனைப்பாடிநாடு பெண்ணை நீர்பாயப்பெறுவதென்பது.
உத்தரியம்போல்வதுபெண்ணைநதியென்க. ஒளவை பாடலுக்குப் பெண்ணைநதி நெய்பால் பெருகிய சரிதை, அருச்சுனன் றீர்த்தயாத்திரைச்
சருக்கத்து  16-ஆம் பாடலினுரையிற் கூறப்படும். ஒளவைபாடலுக்குப்
பெருகியதனால்,அருந்தமிழறிவினாற் சிறந்து என்றது. முதலிய  சனம் –
முதலியவற்றின்திரள்;முதலியவற்றைச் சனங்கள் என்று கூறுதலும் ஒன்று.

பா அருந் தமிழால் பேர் பெறு பனுவல்
பாவலர், பாதி நாள் இரவில்,
மூவரும் நெருக்கி, மொழிவிளக்கு ஏற்றி,
முகுதனைத் தொழுத நல் நாடு;
தேவரும் மறையும் இன்னமும் காணாச்
செஞ் சடைக்கடவுளைப் பாடி,
யாவரும் மதித்தோர் மூவரில், இருவர்
பிறந்த நாடு, இந்த நல் நாடு.-9-

இது அந்தத் திருமுனைப்பாடி நாட்டிற்குள்ள வேறுவகைச் சிறப்பைக்
கூறுவது. பாவலரென்றது – பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் என்ற
மூவரை: இவர்கள் முதலாழ்வார்களென்றுங் கூறப்படுவர். இவர்கள் சரித்திரமும்
தீர்த்தயாத்திரைச்சருக்கத்து 16-ஆஞ் செய்யுளிலுள்ளது.
நான்காமடியிற்குறிக்கப்பட்ட மூவர்-தேவாரம்பாடிய திருஞானசம்பந்தர்,
திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திகள்.திருநாவுக்கரசரும் சுந்தரமூர்த்திகளும்
இந்தநாட்டில் முறையே திருவதிகைதிருவெண்ணெய் நல்லூர் என்ற ஊரில்
தோன்றியவராவர். காணாச்செஞ்சுடர்க்கடவுளை என்றும் பாடம்.

அந்தத் திருநாட்டு, அந்த நதி அமுதம் பெருகி, இரு கரையும்
சந்தத்துடன் கார் அகில் கமழ, தடங் கா அகம் சூழ் தடம் நிறைப்ப,
கந்தக் குவளை மேய் பகட்டின் காலால் நெரிந்து, கதிர் முத்தம்
சிந்தச் சிந்த, கொழு முனைக்கு முன் ஏர் உழுவ, செய்ச் சங்கம்.–10-

யாற்றுநீர்பாய்வதனாலானநீர்வளவருணனை. அமுதம் – நீர். சந்தம் –
சந்தனம். தடங்காவகம் சூழ் தடம் – பெரியசோலையினுள்ளிடத்திற்
சூழ்ந்திருக்கும்தடாகம். பகடு – எருமைக்கடா. செய்ச்சங்கம் – கழனியிலுள்ள
சங்குப்பூச்சிகள்.முத்தஞ்சிந்த ஏருழுவது போல உழுவனஎன்க.
முன்னேயுழவுசெயுஞ்சங்கம் என்றும்பாடம்.

கொழு நீர் மது உண் கடைசியர் தம் குழை தோய் விழியின் எழு நிழலைக்
கழுநீர் மலர் என்று, ஒரு பகலும் காலால் மயக்கிக் களை துவைப்பார்,
முழு நீரூடு தமது நிழல் முழுதும் கண்டு, தொழுது, இறைஞ்சி,
செழு நீர் அரமங்கையர் என்று திகைப்பார், நகைப்பார், செறுவெல்லாம்,–11-

இதுவும் அது : ஒருபகலும் – களைபறிக்கும் ஒவ்வொரு பகலிலும்.
களைதுவைப்பார் – களைபறிப்பவராகியமகளிர். மயக்கித் திகைப்பாராய்
நகைப்பாரென்க.செறு – வயல்.

கரும்பும் கமுகும் தலைதெரியாக் கழனிச் செநநெற் களையாகி,
அரும்பும் குவளை நறு மலர்த் தேன் ஆறாய், எங்கும் சேறாக,
விரும்பும் சுருதி இசை கேட்டு, வேலைக் கழிக் கானல்அம் கைதை,
சுரும்பும் தும்பிகளும் அருந்த, மாறாது என்றும் சோறு இடுமால்.–12-

நீர்வளத்தாலான நிலவளம்: தலைதெரியா – வேற்றுமை தெரியாத.
கானல் – கடற்கரை.கைதை – தாழை: இதனிடத்து ஒரு பிரபுவின்தன்மை
தொனிக்கும். சுருதியிசை -சுருதியோடுகூடிய இசை. சோறு – உணவு என்ற
பொருளும்தோன்றும்: தாழையினுட்பகுதி சோறு எனப்படும்; மகரந்த மென்றாரு
முளர்.

கம்பலைக் கழனிச் சேனைக் காவலர் கரங்கள் நீக்கி,
பைம் புலத்து உழுநர் தங்கள் பல வகை விளைவும் ஈட்டி,
ஐம்புலத்தவர்க்கும் ஈந்து, ஆங்கு அறத்தினை வளர்த்தலாலே,
செம் புலக்கிழத்திக்கு ஆவி அன்னது, அச் செல்வ நாடே.–13-

நாட்டுச்சிறப்பு: சேனைக்காவலர்கரங்கள் – சேனையையுடைய
மன்னவர்க்கு உரியவரிப்பொருள்கள். ஐம்புலத்தவர் – தென்புலத்தார், தெய்வம்,
விருந்து, ஒக்கல்,தான் என்பவர். புலக்கிழத்தி – நிலமகள்.

எண்ணும் மா கடல் ஏழும் அன்று இரு கடலாக,
பெண்ணை மா நதி நெய் பால் பெருகும் அப் பழனப்
பண்ணை நீள் வளம் பல்கு சீர்ப் பழைய நல் நாட்டில்,
வண்ணம் நான்கினும் உய்ந்துளோன் ஒரு முனி வந்தான்.–14-

அந்நாட்டில் வில்லிபுத்தூரார் தோன்றியமை: வண்ணம் நான்கு –
பிராமணர்க்ஷத்திரியர் வைசியர் சூத்திரர் என்பன. கடலேழு உவரி –
கருப்பஞ்சாறு தேன்நெய் தயிர் பால் நன்னீர் இவற்றின் மயமானவை.

ஐந்து பாவுடை நால் வகைக் கவிக்கு அதிபதியாய்,
வந்து, வட்டமாமணியினன் மணி முடி புனைந்து,
பைந் துழாய் முடிப் பரமனைப் பல கவித் துறையும்
சிந்தையான் மொழிந்து, அன்பர்தம் திருவுளம் பெற்றோன்;–15-

மூன்று கவிகள் வில்லிபுத்தூராரின் சிறப்பு: ஐந்துபா – வெண்பா
ஆசிரியப்பாகலிப்பா வஞ்சிப்பா மருட்பா என்பன. நால் வகைக்கவி ஆசு
மதுரம் சித்திரம்வித்தாரம் என்பன.  கவிக்கதிபதியாதற்கேற்ற
முடிபுனைந்துள்ளானென்க.அன்பர்தந் திருவுளம் பெற்றோன் என்றது,
திருமாலடியார்களால் இவன் சிறந்தஅடியவனென்று மதிக்கப்பெற்றவ னென்றபடி.

தென்னர், சேரலர், செம்பியர், எனப் பெயர் சிறந்த
மன்னர் மூவரும் வழங்கிய வரிசையால் உயர்ந்தோன்;
முன்னர் எண்ணிய முத் தமிழ்ப் பாவலர் எவரும்
பின்னர் வந்து ஒரு வடிவு கொண்டனர் எனப் பிறந்தோன்;–16-

தென்னர் – பாண்டியர், கேரளரென்றும் பாடம்.செம்பியர் – சோழர்.
வரிசை -சிறப்பு. முன்னர் – முற்காலத்து.

தாரகாயண வண்டு அலை தண்டலைச் சனியூர்
வீரராகவன் அருள் பெறு வில்லிபுத்தூரன்,
ஊர் அரா முடி மண்மிசை உயர் புகழ் நிறுத்தி,
தீர காகளம் பெறுதலின், யாரினும் சிறந்தோன்.–17-

தார காயன வண்டு – தாரமென்ற இசையைப் பாடவல்ல வண்டு.
காயணவண்டுஎன்று படிப்பாருமுண்டு. தாரகாகண வண்டு என்றும் பாடம். அலை
– சஞ்சரிக்கின்ற,தண்டலை – சோலை. தீரகாகளம் – மனத்திண்மையைக் காட்டும்
வெற்றிச்சின்னம்.தகப்பனார் பெயர் வீரராகவனென்பது இதிற் பெறப்படும்.

எங்கும் இவன் இசை பரப்பி வரும் நாளில்,
யாம் உரைத்த இந்த நாட்டில்,
கொங்கர் குல வரபதியாட்கொண்டான் என்று்,
ஒரு வண்மைக் குரிசில் தோன்றி,
வெங் கலியின் மூழ்காமல், கருநடப் பேர்
வெள்ளத்து விழாமல், நான்காம்
சங்கம் என முச் சங்கத் தண் தமிழ் நூல்
கலங்காம்ல, தலைக்கண்டானே.–18-

நான்குகவிகள் வில்லிபுத்தூராரைக் கொண்டு பாரதம் பாடுவித்த
வரபதியாட்கொண்டான் சிறப்புக் கூறும்: நடுநாடு, மாகதக்கொங்கு எனப்படும்:
அதனையாண்டவர் கொங்கர்: அக் கொங்கர்குலத்துத் தோன்றியவன்
வரபதியாட்கொண்டானென்ற அரசன.. கலி – வறுமை. அடுத்துள்ள
கருநாடநாட்டினுள்வழங்கும் கன்னடபாஷையில் மனம்பதியாமல்
செந்தமிழ்ப்பாஷையிலேயே அன்னான்மனம் பதிந்ததனால், ‘கருநடப்பேர்
வெள்ளத்து விழாமல்’ என்றது.முதலிடைகடைச்சங்கமென்று மதுரையில் வழங்கிய
சங்கங்களில் அரங்கேறியதமிழ்நூல்களை நிலைகலங்காமற் பாதுகாத்துத்
தன்னாட்டில் நான்காஞ்சங்கமென்னுமாறுபுலவர் கூட்டத்தைத் திரட்டியிருந்தனன்
அந்தமன்னவ னென்க.

மற்று அவன், இப் புவி ஆளும் வளவனுக்கு
முடி கவித்து, வழுதித் தெவ்வைச்
செற்று, அவனுக்கு அவனி எல்லாம் செங்கோன்மை

நிலையிட்டு, செல்வம் எல்லாம்
கற்றவருக்கு இரு கையுடைக் கற்பகம்போல்

இனிது அளித்து, கமல மாதும்
கொற்றவையும் மனம் களிப்ப, தன் நாமம்

மேருவினும் கோட்டினானே.–19-

வழுதித்தெவ்- பாண்டியனாகிய பகைவன். கொற்றவை – வீரலட்சுமி.
கோட்டினான்-எழுதினான். இச்செய்யுளின் குறிப்பினால், சோழவரசர்க்குக்
கீழ்ப்படிந்துஅவனதுபகைவரையோட்டிய சிற்றரசன் இந்த வரபதியாட்கொண்டா
னென்பதுபெறப்படும். பகைவென்றதனால் கொற்றவையும், புலவர்க்கு வழங்குமாறு
அப்பகைவரிடத்தினின்றுபெரும் பொருளை யீட்டியதனாற் கமலமாதும்களிப்ப
ரென்க.

தென் நாட்டில், வட நாட்டில், குட நாட்டில்,
குண நாட்டில், தெவ்வர் ஒட,
கல் நாட்டி, அமர் பொருது, கங்கை நீர்
ஊட்டுவித்து, கண்டன் வேங்கை
எந் நாட்டும் எழுதி, அவன் திரு மரபோர்
பெற்ற புகழ் யாவர் பெற்றார்’
அந் நாட்டுக் கொற்றம் எல்லாம் அக் குரிசில்
புகழொடு அவதரித்தது அன்றோ.–20-

அமர்பொருது பிறகு அப்போரில் பெருவீரங்காட்டியிறந்தோர்க்கு
அவர்வடிவந்தீட்டிய கல்லைப் பிரதிஷ்டைசெய்து அதற்குக் கங்கைநீரைக்
கொண்டுஅபிஷேகஞ்செய்வித்துஎன்க. நாட்டி = நிறுத்தி. கண்டன் –
சோழனுடைய, வேங்கை -புலிக்கொடி.

ஆற்றிய மெய்ச் செல்வத்தால் அளகையை வென்று
இருங் கவினால் அமரர் ஊரை
மாற்றிய பொன் தட மதில் சூழ் வக்கபாகையின்,
அறத்தின் வடிவம் போலத்
தோன்றிய அக் கொங்கர்பிரான், சூழ் தமிழான்
ஆட்கொண்டான், சுற்றத்தோடு்
போற்றிய இப் புவி முழுதும் தன் திருப்பேர்
மொழி கொண்டே புரந்தான் அம்மா.–21-

அமரரூரைமாற்றிய – தேவரூரை மேம்பாடு இல்லாமற் செய்வித்த.
மாற்றியவக்கபாகை, பொற்றடமதில்சூழ் வக்கபாகை என்க. ஆற்றிய மெய்ச்
செல்வம்என்றதனால் தருமவழியாற் சம்பாதித்த செல்வமென்றதாயிற்று.
வக்கபாகை -வரபதியாட்கொண்டானது நகரம்.

பிறந்து, உய்யக் கொண்டவன், இப் பேர் உலகம்
பெரு வாழ்வு கூரும் நாளில்,
நிறைந்த புகழ்ச் சனி நகர் வாழ் வில்லிபுத்தூரனை
நோக்கி, ‘நீயும் நானும்
பிறந்த திசைக்கு இசை நிற்ப, பாரதமாம்
பெருங் கதையை, பெரியோர்தங்கள்
சிறந்த செவிக்கு அமுதம் எனத் தமிழ் மொழியின்
விருத்தத்தால் செய்க!’ என்றான்.–22-

வரபதியாட்கொண்டான் வில்லிபுத்தூராரைப் பாரதத்தை
விருத்தப்பாவாற்பாடுமாறுகேட்டுக்கொண்டது. பிறந்து உய்யக்கொண்டவன் –
தான் பிறந்ததனால்உலகத்தாரைஉய்யுமாறு செய்தவனாகிய ஆட்கொண்டான்.

இருக்கு ஆதி மறை மொழிந்தோன் இயம்பிய இப்
பெருங் கதையை யாரும் கேட்ப,
சுருக்காகப் புராண முறை சொல்லுக!’ என்றலின்,
அவனும் சொல்லலுற்றான்;
பெருக்காளர் முதலாய பெருங் குலத்தோர்
இக் கதையின் பெற்றி கேட்டார்;
செருக்காக அவன் மைந்தன் வரந்தருவான்
இப் பதிகம் செப்பினானே.–23–

இருக்காதி மறைமொழிந்தோன் – வியாசன். சுருக்காக – சங்கிரகமாக.
புராணமுறை – பழமையான முறைமை. என்றலின்- என்று சொன்னதனால்.
அவனும் -அந்த வில்லிபுத்தூரனும். பெருக்காளர் – செல்வப்பெருக்கமுள்ளவர்:
இச்சொல் -அறிவுச் செல்வப் பெருக்கமுடையாரையும் பொருட் செல்வப்பெருக்க
முடையாரையுங்காட்டும்.செருக்கு ஆக – கல்விச்செருக்குத் தோன்ற.

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்