பொய்யாத தவ முனி பின் போயருளி,
தாடகைதன்
மெய் ஆவம் நிகர் என்ன வெஞ் சரத்தால்
அழுத்திய பின்,
மை ஆழி முகில் வண்ணன் வாங்கியன,
பூங் கமலக்
கையாலும் ஒரு சாபம்; காலாலும்
ஒரு சாபம்.கடவுள் வாழ்த்து
மை ஆழி முகில் வண்ணன் – மையும்கடலும் மேகமும்போன்ற
கருநிறத்தையுடைய இராமபிரான், பொய்யாத – பொய்யாகாத, தவம் –
தவவொழுக்கத்தையுடைய, முனி பின் -விசுவாமித்திரமுனிவனது பின்னே, போய் –
சென்ற, அருளி – கருணை கொண்டு, தாடகைதன் மெய் – தாடகையின் உடம்பு,
ஆவம் நிகர் என்ன – அம்பறாத்தூணிக்கு ஒப்பென்னும்படி, வெம் சரத்தால் –
கொடிய அம்புகளால், அழுத்திய பின் – பதித்தபின்பு,- (அப்பிரானது), பூ கமலம்
கையால்- அழகிய தாமரைமலர்போன்ற திருக்கையினால், ஒரு சாபம்உம் – ஒரு
சபிப்பும், வாங்கியன – வாங்கப்பட்டன [முறையே, வளைக்கவும் நீக்கவும் பட்டன];
(எ -று.)
‘மெய்ஆவம் நிகரென்ன’ என்றதற்கு – அம்புகள் மிகுதியாக உடம்பினுள்
பொருந்த என்று கருத்து. வாங்குதல் என்பது – சிலேடையால், வளைதலும்
நீங்கலுமாகிய இருபொருளை உணர்த்தின. சாபம் – வடசொல்திரிபு: இது
இவ்விருபொருளு முடையதாதலை “சாபமே சபித்தல் வில்லாம்” என்னும்
நிகண்டினாலு மறிக. சாபம் என்ற ஒருசொல்தானே ஓரடியில் வெவ்வேறு பொருளில்
வந்தது, மடக்கு என்னுஞ் சொல்லணி.
வசிஷ்டமகாமுனிவனது தவவலிமையை ஒருகால் கண்டு அவ்வாற்றலே
மெய்ம்மையானதென்றும் மற்றைய ஆற்றல்களெல்லாம் பொய்ம்மையானதென்றுந்
துணிந்து அரசாட்சியைவிட்டுநாற்றிசையுஞ் சென்று பற்பல இடையூறுகளைக்கடந்து
நெடுங்காலந்தவம் புரிந்து முடிவில் தாம்முன்புகருதிய பிரமவிருடிப் பட்டத்தைப்
பெற்ற பெருஞ்சிறப்புடைய னாதலால், கௌசிகன் ‘பெய்யாத தவமுனி எனப்பட்டான்.
பயிர்செழித்தற்பொருட்டுக் களைபறித்தல் போலச் சிஷ்டபரிபாலநத்திற்காகத்
துஷ்டநிக்கிரகஞ்செய்தல் கருணையின் காரியமே யாதலால், ‘அருளி’ எனப்பட்டது.
தாடகை- மலைகளில் சஞ்சரிப்பவள்; இவள் – சுகேது என்னும் யக்ஷனது
மகள்; சுந்தனென்பவனது மனைவி ; ஆயிரம்யானை வலிமைகொண்டவள். கணவன்
அகஸ்தியமகா முனியின் கோபத்தீக்கு இலக்காய்ச் சாம்பரானதை யறிந்த இவள்,
தன்புத்திரர்களாகிய சுபாகுமாரீசர்களுடனே அம்முனிவனை எதிர்த்துச் சென்ற
பொழுது, அவரிட்டசாபத்தால் தன் மக்களோடு இராக்கத்தன்மையடைந்தனள்.
பின்புமுனிவர்களது யாகாதிகளைக்கெடுக்கிற இவர்களை அழித்துத்
தன்வேள்வியைக்காக்கும்பொருட்டுவிசுவாமித்திர முனிவன்
தசரதசக்ரவர்த்தியினியிடம்அனுமதிபெற்று இளம்பிராயமுடைய இராமலக்குமணரை
யழைத்துக்கொண்டுபோனபொழுது, அம்முனிவனாச்சிரமத்துக்குச் செல்லும்
வழியிடையிலேவந்து எதிர்த்த தாடகையை ஸ்ரீராமன் முனிவன் கட்டளைப்படி
பெண்ணென்றுபாராமற் பொருது கொன்றருளினான்.
கையா லொருசாபம் வாங்கியது:- ஜனகமகாராசன் பரமசிவனாற்
கொடுக்கப்பட்டதொரு பெரிய வலிய வில்லையெடுத்து வளைத்தவற்கே தன்மகள்
சீதையைக் கலியாணஞ் செய்துகொடுப்ப தென்று கந்யாசுல்கம் வைத்திருக்க,
வேள்விமுடித்த விசுவாமித்திரனுடன் மிதிலைக்குச் சென்ற ஸ்ரீராமன் அவ்வில்லை
வளைத்துச் சானகியை மணஞ்செய்துகொண்டனனென்பதாம்.
காலாலும் ஒருசாபம் வாங்கியது:- அகலிகை விருத்தாந்தம்; நான்காம்
போர்ச்சருக்கம் முதற்பாடலுரையிற்காண்க.
இதுமுதற் பதினைந்து கவிகள்- பெரும்பாலும் நாற்சீர்களும் காய்ச்சீர்களாகிய
அளவடி நான்கு கொண்ட கலிவிருத்தங்கள்.
அல், தராபதி கருதி, ஆசானோடு
உரைத்த எலாம்
ஒற்றரால் அக் கணத்தே உணர்ந்த முரசக்
கொடியோன்,
மற்று அரா-அணை துறந்த மாயனுக்கும்,
விசயனுக்கும்,
சொற்று, அராபதம் நெருங்கத் தொடைத்
தும்பை புனைந்தானே.2.- ஒற்றரால் துரியோதனன் பாசறையில் நிகழ்ந்தவையறிந்து
யுதிட்டிரன் உக்கிரமாகப் பொரக் கருதுதல்.
அல் – (முந்தினநாளின்) இராத்திரியில், தரா பதி – பூமிக்கு
அரசனான துரியோதனன், கருதி – ஆலோசித்து, ஆசானோடு –
துரோணாசாரியனுடனே, உரைத்த எலாம்- சொன்ன வார்த்தைகளையெல்லாம்,
ஒற்றரால் – (தனது) வேவுகாரர்களால், அ கணத்துஏ – அந்த க்ஷணத்திலேயே,
உணர்ந்த- அறிந்த, முரசம் கொடியோன் – பேரிகையின்வடிவத்தை யெழுதிய
துவசத்தையுடைய தருமபுத்திரன், மற்று – பின்பு, அரா அணை துறந்த
மாயனுக்குஉம்- ஆதிசேஷனாகிய சயநத்தை விட்டுவந்த திருமாலாகிய
கண்ணபிரானுக்கும், விசயனுக்குஉம்- அருச்சுனனுக்கும்,சொற்று-
(அச்செய்தியைச்) சொல்லி,- அராபதம் நெருங்க- வண்டுகள் நெருங்கிமொய்க்க,
தும்பை தொடை புனைந்தான்- (போருக்குரிய) தும்பைப்பூமாலையைச் சூடினான்;
(எ – று.) – உக்கிகரமாகப் போர் செய்ய நிச்சயித்தான் என்பதாம்.
ஆங்காங்கு நடப்பவற்றை ஒற்றியறிந்துவருவதால், ஒற்றர் என்று பெயர்;
ஒற்றுதல்-அடுத்து நின்று உண்மையைக் கிரகித்தல். இவர் – தூதரினும்
வேறுபட்டவர்;வடமொழியில், ‘சாரர்’ எனப்படுவர். அராபதம்- அறுபதம் என்பதன்
விகாரம்போலும்.”பனிக்கடலுள் பள்ளிகோளைப் பழகவிட் டோடிவந்து, என் மனக்
கடலுள்வாழவல்ல மாயமணாளநம்பீ” என்றார்போல, ‘அராவணைதுறந்த மாயன்’
என்றார் ; இது – உபசாரம், ‘படஞ்செய் நாகணைப் பள்ளி நீங்கினான் ” என்றார்
கம்பரும். ‘அராத்துறந்த’ என்னாது ‘அராவணைதுறந்த’ என்றதனால்,
அவ்வாதிசேஷன்இங்குப்பலராமனாய் அவதரித்துள்ள தன்மை தொனிக்கும்.
ஆசான் -ஆசார்யன்என்னும் வடசொல்லின் விகாரம்.
கருங் களவின் கனி வண்ணன், கனை கழற்
கால் வேந்தரொடும்
பெருங் களம் சென்று எய்திய பின், பேணார்கள்
வெருக் கொள்ள,
இருங் களிறு, தேர், பரி, ஆள், இரு மருங்கும்
புடை சூழ,
வருங் களி கொள் வரூதினியை மண்டலமா
வகுத்தானே.3.- பாண்டவசேனை மண்டலவியூகமாக வகுக்கப்படுதல்.
கரு களவின் கனி வண்ணன் – கரிய களாப்பழம் போன்ற
திருமேனிநிறத்தையுடைய கண்ணன், – கனை கழல் கால் வேந்தரொடுஉம் –
ஒலிக்கின்ற வீரக்கழலை யணிந்த பாதத்தையுடைய அரசர்களுடனே, பெருகளம்
சென்று எய்திய பின் – பெரிய போர்க்களத்தைப் போய் அடைந்த பின்பு, இரு –
பெரிய, களிறு – யானைகளும், தேர்- தேர்களும். பரி – குதிரைகளும், ஆள் –
காலாள்களும்,(ஆகிய சதுரங்கமும்), இரு மருங்குஉம் – இரண்டு பக்கங்களிலும்,
புடைசூழ- திரண்டு சூழ்ந்துநிற்க, வரும் -வருகிற, களிகொள் – (போரில்)
உற்சாகத்தைக்கொண்ட, வரூதினியை – (பாண்டவ) சேனையை, பேணார்கள் வெரு
கொள்ள – பகைவர்கள் (கண்டு) அச்சங்கொள்ளும்படி, மண்டலம் ஆ
வகுத்தான் -மண்டலமென்னும் வியூகமாக அணிவகுத்தான்; (எ -று.)
மண்டலம் – வியூகத்தின் வகை நான்கனுள் ஒன்றென்பர். நாற்புறத்தும்
வட்டமாகச் சேனையை நிறுத்துவது மண்டல மென்றும், அது ஸர்வதோபத்ரம்
துர்ஜயம் என இரண்டுவகைப்படு மென்றும் காமந்தக மென்னும் வட நூல் கூறும்,
களா- ஓர்செடி. புடை சூழ என்பதில், ‘புடை’ என்னும்பகுதியே புடைத்து என
வினை யெச்சப்பொருள்பட்டது.
பின் நிறுத்தி மாருதியை, பேர் அணியில்
பல வகையாம்
மன் நிறுத்தி, இரு பாலும் மருத்துவர்
மைந்தரை நிறுத்தி,
மின் நிறுத்து நெடு வாளி விசயனையும்,
குமரனையும்,
முன் நிறுத்தி, நடு நின்றான் முரசம் நிறுத்திய
கொடியோன்.4.- அந்த வியூகத்தின் முன்புறம் முதலியவற்றில்
அருச்சுனன் முதலோர் நிறுத்தப்பட்டமை.
முரசம்- பேரிகையின் வடிவத்தை, நிறுத்திய – எழுதிப்பதித்த,
கொடியோன் – துவசத்தையுடைய தருமன்,- மாருதியை – வீமனை, பின் நிறுத்தி –
(தனது) பின்புறத்திலே நிற்கச் செய்து, போர் அணியில் – பெரிய அணிவகுப்பிலே,
(ஆங்காங்கு), பல வகை ஆம் மன் நிறுத்தி – பலவகைப்பட்ட அரசர்களை நிற்கச்
செய்து, இரு பால்உம் – இரண்டு பக்கங்களிலும், மருத்துவர் மைந்தரை நிறுத்தி –
அசுவிநீதேவர்களின் குமாரர்களான நகுலசகதேவர்களை நிற்கச்செய்து, மின்
நிறுத்தும் – ஒளியை (த்தன்னிடம்) நிலைநிறுத்திய [நீங்காமற்கொண்ட], நெடு
வாளி -நீண்ட அம்புகளையுடைய, விசயனைஉம் குமரனைஉம் -அருச்சுனனையும்
(அவன்)மகனான அபிமனையும், முன் நிறுத்தி-, நடு நின்றான் – (தான்) நடுவில்
நின்றான்
இப்பால், மற்று இவர் நிற்ப, இரவு உரைத்த
மொழிப்படியே
தப்பாமல் திகத்த குலத் தலைவனும்,
சஞ்சத்தகரும்,
துப்பு ஆர் வெஞ் சிலைத் தடக் கைத் துரோணன்
முதல் அனைவோரும்,
அப்பால் வந்து, அணி மகர வியூகம் வகுத்து
அணிந்தாரே.5.- துரியோதனன்பக்கத்துச்சேனை கருடவியூகமாக வகுக்கப்படுதல்
இ பால் – இவ்விடத்து, இவர் – இவர்கள், நிற்ப – (இவ்வாறு) நிற்க,
அ பால் – எதிர்ப்பக்கத்தில், இரவு உரைத்த மொழி படிஏ – இராத்திரி சொன்ன
வார்த்தையின்படியே, தப்பாமல் – தவறாமல், திகத்தகுலம் தலைவன்உம்-
திரிகர்த்ததேசத்து அரசர்கூட்டத்துக்குத் தலைவனான சுசர்மாவும், சஞ்சத்ததகர்உம்
– ஸம்சப்தகர்களும், கதுப்புஆர் – வலிமைநிறைந்த, வெம்சிலை – கொடிய வில்லை
யேந்திய, தட கை – பெரியகைகளையுடைய, துரோணன் முதல் அனைவோர்உம் –
துரோணன் முதலிய எல்லாவீரர்களும், வந்து-, அணி கருட வியூகம் வகுத்து
அணிந்தார் – சேனையை அழகிய கருடவியூகமாக அணிவகுத்துநின்றார்கள்;
(எ -று.)
கருட வியூகம் – கருடன்வடிவமாகச் செய்யும் படைவகுப்பு ; இதுவும்
கீழ்ச்சருக்கத்தில் கூறிய சகடவியூகமும், போகமென்னும் வியூகத்தின் பேதங்களிற்
சேர்ந்தன. முதனூலிலும் கருடவியூகம் வகுத்தாகவே யுள்ளது. மற்று- அசை;
வினைமாற்றுமாம். பி-ம்; மகரவியூகம்.
கார் அணிபோல், பொருப்பு அணிபோல், காற்று
அணிபோல்; களிற்று அணியும்,
தேர் அணியும், பரி அணியும்; திரிகத்த குலபதியும்,
நாரணகோபாலர் எனும் நராதிபரும், வாள் விசயன்
காரணமா அறைகூவி, கடுங் கொடுங் கார்முகம்
வளைத்தார்.6.- திரிகர்த்தபதி முதலியோர் அருச்சுனனை யறைகூவிப்பொருதல்.
கார் அணி போல் – மேகங்களின் வரிசை போன்ற, களிறு அணிஉம்
– யானைகளின் வரிசையும், பொருப்பு அணிபோல் – மலைகளின் வரிசைபோன்ற,
தேர் அணிஉம்- தேர்களின் வரிசையும், காற்று அணிபோல் – காற்றின்
வரிசைபோன்ற, பரி அணிஉம்- குதிரைகளின்வரிசையும், திரிகத்த குல பதிஉம் –
திரிகர்த்தர் கூட்டத்து அரசனும், நாரண கோபாலர் எனும் –
நாராயணகோபாலரென்கிற, நர அதிபர்உம் – அரசர்களும், வாள் விசயன் காரணம்
ஆ – ஆயுதப் பயிற்சியில்வல்ல அருச்சுனன் விஷயமாக, அறைகூவி -போர்செய்ய
அழைத்துக்கொண்டு, கடு கொடு கார்முகம் வளைத்தார் – மிகக் கொடுமையான (தம்)
வில்லை வளைத்து வந்தார்கள் ; ( எ -று.)
விசயன்காரணமா அறைகூவி- அருச்சுனனைத் தம்முடன் போருக்கு வலிய
அழைத்து என்றபடி. ‘ காரணிபோற்பொருப்பணி போற் காற்றணிபோல்’ என்ற
உபமானங்கள், முறையே ‘ களிற்றணியுந் தேரணியும் பரியணியும்’ என்ற
உபமேயங்களோடு இயைதலால், முறைநிரனிறைப்பொருள்கோள். அணிகளும்,
பதியும், அதிபரும் வளைத்தார் – திணைவிரவி யெண்ணிச் சிறப்பினால் உயர்திணை
முடிபுஏற்றது; [நன். பொது. 27.] நாராயண கோபாலர் – கண்ணனுக்குப்
பதினாறாயிரம் கோபஸ்திரீகளிடம் பிறந்தவர்கள். கீழ்த் துரியோதனன் கண்ணனைப்
படைத்துணையழைக்கப் போனபோது அவனால் துரியோதனுக்குத் துணையாகக்
கொடுக்கப்பட்டனர் இவரென அறிக. நாராயணன் – திருமால், கோபாலர்-
இடைச்சாதியார்; இவ்விருவர்சம்பந்தமு முள்ளதனால், நாராயணகோபாலரென்று
இவர்க்குப் பெயர். நாராணன் – நாராயணன் : சிருஷ்டிப் பொருள்களுக்கெல்லாம்
இருப்பிடமானவ னென்றும், பிரளயப் பெருங்கடலை
இருப்பிடமாகவுடையவனென்றும் பொருள்படும். கோபாலர் – பசுக்களைக்
காப்பவர்.
ஆர்த்து வரும் அவர் நிலை கண்டு, ‘அரசனை
நீர் இமைப்பொழுது
காத்திடுமின்’ என நின்ற காவலரோடு உரைசெய்து,
கோத் தருமன் பணித்ததன்பின், கோதண்டம்
உற வாங்கி,
பார்த்தனும், அன்று அவர் எதிர் போய், பல வாளி
மழை பொழிந்தான்.7.- தருமனைக் காக்க ஏற்பாடுசெய்து விடைபெற்றுக்கொண்டு
சென்று அருச்சுனன் அறைகூவினார்மேல் அம்புமழை பொழிதல்.
ஆர்த்து வரும் – (இப்படி போருக்கு அழைத்து) ஆரவாரித்துவருகிற,
அவர் – அவர்களது, நிலை – உறுதிநிலையை, கண்டு – பார்த்து, பார்த்தன்உம் –
அருச்சுனனும், அரசனை நீர் இமைபொழுது காத்திடுமின் என – ‘ யுதிட்டிரராசனை
நீங்கள் ஒருமாத்திரைப்போது பாதுகாத்திருங்கள்’ என்று, நின்ற காவலரோடு
உரைசெய்து – (அங்கு) நின்ற (தன்பக்கத்து) அரசர்களுடனே சொல்லி,- கோ
தருமன் பணித்ததன்பின் – அத்தருமராசன் கட்டனையிட்டபின், கோதண்டம் உற
வாங்கி – (காண்டீவமென்னும் தன்) வில்லை நன்றாகவளைத்து, அன்று –
அப்பொழுது, அவர் எதிர்போய் – அவர்களெதிரிற்சென்று, பல வாளி மழை –
அநேக அம்புமழையை, பொழிந்தான்-; (எ-று.)
வீமன் விராடன் துருபதன் பாண்டியன் நகுலசகதேவர் திட்டத்துய்மன்
திட்டகேது முதலியசோமகர் சிருஞ்சயர் கடோற்கசன் என்னும் இவர்களின் வசத்தில்
தருமபுத்திரனை ஒப்பித்து அருச்சுனன் சென்றானென்று பெருந்தேவனார்
பாரதத்தால் தெரிகிறது. துருபதராசபுத்திரனும் அதிரதனுமாகிய ஸத்தியஜித்து
என்பவனைத் தருமனைக் காக்குமாறு அருச்சுனன் சொல்லிச் சென்றதாக
வியாசபாரதம் கூறும். கோதண்டமென்னும் இராமன் வில்லின் பெயர், சிறப்பினால்
அருச்சுனன்வில்லைக் குறித்தது; இனி, இச்சிறப்புப்பெயர், பொதுப்பெயராக,
வில்லென்றமாத்திரமாகவும் வழங்கிய தென்னலாம்.
தூளியே அண்டம் உறத் தூர்த்து முதல்,
அகல் விசும்பை
வாளியே தூர்க்கும்வகை மலை வாங்கு
சிலை வாங்கி,
ஆளிஏறு அனையானும் அவனிபரும்,
கவந்தமுடன்
கூளியே நடம் ஆட, கொடுஞ் சமரம்
விளைக்குங்கால்,8.- அருச்சுனன் சஞ்சத்தகரோடு கடும்போர் செய்தல்.
இதுவும் மேற்கவியும் – குளகம்.
(இ -ள்.)ஆளிஏறு அனையான்உம் – ஆண்சிங்கத்தை யொத்த அருச்சுனனும்,
அவனிபர்உம் -(திரிகர்த்தன் முதலிய) அரசர்களும், – முதல் – முதலில், தூளிஏ –
(தமது வாகனங்களால் மேலெழுப்பப் பட்ட) புழுதியே, அண்டம் உற –
உலகவுருண்டை முழுவதும் செல்லும்படி, தூர்த்து – நிறைத்து, (அதன் பின்பு), அகல்
விசும்பை – பரந்த ஆகாயத்தை, வாளிஏ – (தமது) அம்புகளே, தூர்க்கும் வகை –
நிறைக்கும்படி, மலை வாங்கு சிலை வாங்கி – மலையொத்த (தம்தம்) வில்லை
வளைத்து, கவந்தமுடன் கூளிஏ நடம் ஆட – தலையற்ற உடற்குறைகளும்
பேய்களுமே கூத்தாடும் படி, கொடு சமரம் விளைக்கும் கால் – (ஒருவரோடொருவர்)
கொடிய போரைச் செய்யும்பொழுது,- (எ-று.) -” சிலையின் குருவந்தான்” என
அடுத்த கவியோடு முடியும்.
மலை யென்பதற்கு – (யாவருங்கண்டு) மலையத்தக்கதென்று காரணமுரைப்பர்;
மலைதல் – அஞ்சுதல். இங்கே, மலையென்றது, பரமசிவனுக்கு வில்லான
மகாமேருவை, பேய்கள் – அங்கு பிணந்தின்ன வந்தவை. கூளி- பெருங்கழுகுமாம்.
இவை கூத்தாடுதற்குக் காரணம், அங்கே தமக்கு மிகுதியாக இரை கிடைத்தலால்.
அதிசயோக்தியலங்காரம்.
தடித் தலை வேல் சயத்திரதன், சவுபலன்,
குண்டலன், முதலா
முடித் தலை வாள் அடல் நிருபர்
முப்பதினாயிரர் சூழ,
இடித் தலை மா முரசு இயம்ப, இப துரகப்
படை சூழ,
கொடித் தலை மான் தடந் தேரான் குனி
சிலையின் குரு வந்தான்.9.- துரோணன் சயத்திரதன்முதலானார்பலர்சூழத் தேர்மேல் வருதல்.
கொடிது அலை வேல் – கொடியதாய்ச் சுழல்கிற
வேலாயுதத்தையுடைய, சயத்திரதன் – சயத்திரதனும், சவுபலன் – சகுனியும்,
குண்டலன் – குண்டலனும், முதல் ஆ- முதலாக, முடிதலை – கிரீடமணிந்த
தலையையும், வாள் – ஆயுதங்களையும், அடல்- வலிமையையுமுடைய, நிருபர்
முப்பத்தினாயிரர் – முப்பதினாயிரம் அரசர்கள், சூழ – சூழ்ந்து வரவும், இடி
தலை -இடிபோன்ற முழக்கத்தைத் தம்மிடத்திலுடைய, மா முரசு – பெரிய
பேரிகைகள்,இயம்ப
ஒலிக்கவும், இப துரகம் படை சூழ – யானை குதிரைகளின் சேனைகள்
சுற்றிலும் வரவும், குனி சிலையின் குரு – வளைந்த வில்லின் ஆசாரியனான
துரோணன், கொடி தலை மான் தட தேரான் – துவசத்தை மேலுடையதும்
குதிரைகள் பூட்டியதுமான பெரிய தேரிலேறியவனாய், வந்தான் – (தருமனை
எதிர்க்க) வந்தான் ; (எ – று.)
கொடிது+அலை =கொடித்தலை; சிறுபான்மை உயிர்த்தொடர்க்
குற்றியலுகரத்தில் தகரவொற்று இரட்டிற்று : எருத்துமாடு என்றார்போல. இனி
கொடிதலை வேல் என எடுத்து, காக்கைகள் வட்டமிடும் நுனியையுடைய வே
லென்றலும் ஒன்று; “பாற்றினஞ் சுழலும் வைவேல்” என்றார்போல: காக்கைகள்,
அவ்வேலி லொட்டிய தசையையும் அவ்வேலாற் கொல்லப்படும் பிராணிகளையும்
தின்ன விரும்பி வந்தவை. இனி, கொடியினிடத்து வேலின் வடிவத்தையுடைய
எனவும் பொருள்படும். இனி, ‘தடித்தலைவேல்’ என்று பாடங்கொண்டு, தடி தலை
வேல் எனப் பிரித்து – தசை பொருந்திய நுனியையுடைய வேலென்றாவது, தடித்து
அலைவேல் எனப் பிரித்து – மின்னல் போல் அசைந்து விளங்குகிற வேலென்றாவது
பொருள் கொள்ளுதல் பொருந்தும். தடி- வில் என்பாரு முளர். ஸௌபலன் –
வடசொல் : சுபலனது மகனென்று பொருள்: தத்திதாந்தநாமம். ஸூபலன் – நல்ல
வலிமையுடையான்; இவன் – காந்தாரதேசத்து அரசன்: திருதராட்டிரன்
மனைவிக்கும், சகுனிக்குந் தந்தை. பி – ம்;இடித்தலைமாமுகிலனையவிபதுரகம்
புடைசூழ.
வந்த குரு, குருகுல மா மன்னுடன் போர்
புரிவதன்முன்,
பந்தம் உறப் பாஞ்சாலர் பல் பதினாயிரர் சூழ,
முந்த வயப் பணை முழங்க, முழங்கு ஒலி
நீர் கொதிப்பதுபோல்,
அந்த முனிக்கு எதிர் நடந்தான், ஐவர்
சேனாபதியே.10. அப்போது திருஷ்டத்யும்நன் துரோணனுக்கு எதிரிற்செல்லுதல்.
வந்த குரு – (அவ்வாறுவந்த) துரோணண், குருகுலம் மா மன்னுடன்
– குருகுலத்துச் சிறந்த அரசனான தருமனுடன், போர் புரிவதன் முன் –
போர்செய்வதன்முன்னே, ஐவர் சேனாபதி – பாண்டவர்சேனைத் தலைவனான
திட்டத்துய்மன்,- பந்தம் உற – நெருக்கம் மிக, பாஞ்சாலர் பல்பதினாயிரர் –
அநேகம்பதினாயிரக்கணக்காவுள்ள பாஞ்சாலதேசத்துவீரர்கள், சூழ – சூழ்ந்து
வரவும்,- முழங்குஒலி நீர் கொதிப்பது போல் – ஆரவாரிக்கிற ஓசையையுடைய
நீரையுடைய கடல்பொங்குவதுபோல (ச் சினம்பொங்க),- வயம் பணை- வெற்றிக்கு
அறிகுறியானவாத்தியங்கள், முந்த- முன்னே, முழங்க- மிக ஒலிக்கவும், அந்த
முனிக்கு எதிர்நடந்தான் – அந்தத் துரோணனெதிரிற்சென்றான்; ( எ -று.)
குருக்குருகுலமெனச் சந்தவின்ப நோக்கியிரட்டித்தது. பி-ம்: ஒலிப்பதுபோல்.
இருவர் பெருஞ் சேனையும் உற்று, எதிர் எதிர்
ஆயுதம் எடுத்து, அங்கு
ஒருவர் ஒருவரை வேறற்கு ஒண்ணாத அமர்
உடற்ற,
செருவில் அரிஏறு அனையான் திட்டத்துய்மனும்
வெகுண்டு,
பொரு சிலை வெங் கணை பொழிந்தான்; போர்
வேந்தர் பலர் மடிந்தார்.11.- திருஷ்டத்யும்நன் பலரை அம்பெய்து மாய்த்தல்
இருவர் பெரு சேனைஉம் – (இந்த) இருதிறத்தாரது பெரிய
சேனைகளும், எதிர் எதிர் உற்று – ஒன்றற்கொன்று எதிராகப் பொருந்தி, ஆயுதம்
ஏந்தி – ஆயுதங்களை யெடுத்துக்கொண்டு, ஒருவர் ஒருவரை வேறற்கு ஒண்ணாத
அமர் – ஒருதிறத்தார் மற்றொருதிறத்தாரைச் சயித்தற்கு முடியாத போரை, உடற்ற,
-உக்கிரமாகச்செய்ய, (அப்பொழுது), செருவில் அரி ஏறு அனையான் – போரில்
ஆண்சிங்கத்தை யொத்தவனான, திட்டத்துய்மனும்-, வெகுண்டு – கோபித்து,
பொருசிலை – போருக்குரிய வில்லினின்று, வெம் கணை – கொடிய அம்புகளை,
பொழிந்தான் – சொரிந்தான்; (அதனால்), போர் வேந்தர் பலர் மடிந்தார் –
போர்செய்கிற பகையரசர் அநேகர் இறந்தார்கள்; (எ-று.) – பி-ம்
ஆயுதமெடுத்தங்கு.
துன்முகனைப் புறங்கண்டு, துன்மருடன்
முனை சாய்த்து,
கல் முகம் ஆம் காந்தாரர், கலிங்கர்,
கவுசலர், நிடதர்,
புன் முகராய் இளைத்து ஓட, பொருது
அழித்தான்; பொருது அழிந்த
மன் முக வெம் பெருஞ் சேனை மறையவன்பால்
அடைந்தனவே.2.- திருஷ்டத்யும்நனாலழிந்த சேனை துரோணனை யடைதல்.
(திட்டத்துய்மன்), – துன்முகனை – துர்முகனென்னும் அரசனை,
புறம்கண்டு – முதுகுகொடுக்கச்செய்தும்,- துன்மருடன் – துர்மர்ஷணனென்பவனது,
முனை – போரை, சாய்த்து – ஒழித்தும்,- கல் முகம் ஆம் – கல்லின்தன்மையுடைய,
காந்தாரர் – காந்தாரதேசத்துவீரரும், கலிங்கர் – கலிங்கதேசத்துவீரரும், கவுசலர் –
கோசலதேசத்துவீரரும், நிடதர் – நிஷததேசத்துவீரரும், புல் முகர் ஆய் – வாடிய
முகமுடைவர்களாய், இளைத்து ஓட – மெலிந்து தோற்று ஓடும்படியும், பொருது –
போர்செய்து, அழித்தான் – சிதைத்தான்: பொருது அழிந்த -(அங்ஙனம்)
போர்செய்து சிதைந்த, மன் முகம் வெம் பெரு சேனை -மிகுதியைத்
தன்னிடத்திலுடைய கொடிய பெரிய சேனைகள், மறையவன்பால்அடைந்தன –
துரோணாசாரியனிடம் சேர்ந்தன; (எ-று.)
துர்முகன் என்பதற்கு – கொடிய முகமுடையவனென்றும், துர்மர்ஷணன்
என்பதற்கு – (பகைவராற்) பொறுக்கவொண்ணாதவனென்றும் பொருள்.
இவ்விருவரும் துரியோதனன் தம்பியர். துன்மருடன் – மகாரதவீரரில் ஒருவன். கீழ்
அணிவகுப்புச்சருக்கத்தில் இவனை மகாரதனாகவும், மற்றைத் துரியோதனன்
தம்பிமார்களை அர்த்தரதராகவும் பிரித்து வகுத்துக் கூறியுள்ளமை காண்க. கல் –
வலிமைக்கு உவமை. கல்முகமாங் காந்தாரர் – கல் நெஞ்சரான காந்தாரருமாம்;
என்றது, அந்நாட்டரசனான சகுனி கொடுமனத்தவ னாதலால். ‘கோஸலம் என்ற
வடசொல்- க உஸல எனப் பிரிக்கப்பட்டு, படைத்தற்கடவுளான பிரமனும்
உல்லாஸப் படத்தக்க தென்னும் பொருளைத் தரும். இப்பெயரால் அந்நாட்டின்
சிறப்பு விளங்கும். நிடதம் – நிஷதம் என்னும் வடசொல்லின் திரிபு; இதற்கு –
(பலருந்) தங்குமிட மென்று வடநூலார் பொருளுரைப்பர் – புல்முகராய் – புல்லைக்
கவ்விய வாயையுடையவராய் என்றுங் கொள்ளலாம்; புற்கௌவுதல் – தோல்விக்கு
அறிகுறி
மறை வாய் வெஞ் சிலை முனிவன் வரூதினி தன்
நிலை அழிந்து
குறைவாய் வந்தமை கண்டு, கோதண்டம்
எதிர் வாங்கி,
துறை வாய் வெங் கனல் போலும் துருபதன்
கைச் சிலை துணிய,
பிறை வாய் வெங் கணை தொடுத்து, பிறைமுடியோன்
எனச் சென்றான்13.- மூன்றுகவிகள்- துருபதன் முதலியோரை வென்று துரோணன்
மாற்றார்பலரை மடிவித்தலைக் கூறும்.
மறை வாய் – வேதங்களையோதிய வாயையும், வெம் சிலை- கொடிய
வில்லையுமுடைய, முனிவன் – துரோணன், வரூதினி – (தனது) சேனை, தன் நிலை
அழிந்து – தனக்குஉரிய உறுதிநிலை கெட்டு, குறைவு ஆ வந்தமை – குறைவாக
வந்ததனை, கண்டு – பார்த்து, கோதண்டம் எதிர் வாங்கி – வில்லை எதிரிலே
வளைத்து, துறை வாய் வெம் கனல் போலும் – வேள்வித்துறைவாய்ந்த வெவ்விய
அக்கினி போன்ற [மிகக்கொடிய], துருபதன் – துருபதராசகுமாரனான
திட்டத்துய்மனது, கை சிலை – கையிலுள்ள வில், துணிய- துண்டாகும்படி, பிறை
வாய் வெம் கணை தொடுத்து – பிறைச்சந்திரன்போன்ற [வளைவான]
நுனியையுடைய கொடிய அம்பைத் தொடுத்துக்கொண்டு, பிறை முடியோன் என –
இளஞ்சந்திரனையணிந்த சடைமுடியையுடைய சிவபிரான்போல, சென்றான் –
(உக்கிரமாக எதிர்த்துச்) சென்றான் ; (எ-று.)
குறைவா வருதல் – சென்றபொழுதினுந் தொகை குறைவாக மீளுதலும்,
அவமானமுண்டாகப் பின்னிடுதலும். துறை – வேதவிதியொழுக்கம். கனலுவமையும்,
சிவனுவமையும், எதிர்க்கும் பொருளைத் தவறாது அழித்தற்கு என்க.
துருபதபுத்திரனை ‘துருபுதன்’ என்றார், தருமபுத்திரனை ‘தருமன்’ என்றாற்போல.
சத்தியகேதுவின் சாபம் சரம் ஒன்றால்
இரண்டு ஆக்கி,
சித்திர வெஞ் சிலை ஆண்மைச் சிகண்டியையும்
சிலை அறுத்திட்டு,
உத்தமபானுவை முதலா உள்ள கொடுந்
திறல் வேந்தர்
தம் தம் உயிருடன் போகத் தானை
எலாம் மடிவித்தான்.
சென்ற துரோணன்),- சத்தியகேதுவின் – சத்தியகேதுவென்னும்
பாஞ்சாலராசனது, சாபம் – வில்லை, சரம் ஒன்றால் – ஓரம்பினால், இரண்டு
ஆக்கி -துணித்து, சித்திரம்- அழகிய, வெம் கொடிய, சிலை- வில்லின் திறத்தில்,
ஆண்மை -பராக்கிரமத்தையுடைய, சிகண்டியையும்-, சிலை அறுத்திட்டு –
வில்லையறுத்து,உத்தமோசா முதல் ஆ உள்ள – உத்தமோசா என்னும் அரசன்
முதலாகவுள்ள,கொடு திறல் வேந்தர் – கொடிய வலிமையையுடைய அரசர்கள், தம்
தம் உயிருடன்போக – தங்கள் தங்களது உயிரோடு புறங்கொடுத்துப் போகும்படி,
தானை எலாம் -(பாண்டவ) சேனையை யெல்லாம், மடிவித்தான் –
அழியச்செய்தான்; ( எ -று.)
சத்தியகேது – உண்மைக்குக் கொடிகட்டியுள்ளவ னெனப் பொருள்படும் :
இவனைக் காசிராஜ வமிசத்தவனான விபுவின் தந்தை யென்று கூறுகின்றனர். ஒன்றை
இரண்டாக்குதல் வல்லார்செயலாதலால் அங்ஙனம் செய்தானென ஒருசமத்காரந்
தோன்ற ‘ இரண்டாக்கி’ என்றார். அளவிறந்த அழிவற்ற செல்வவொளிகளுக்குச்
சிகண்டமென்றுபெயர்; அதனையுடையவன், சிகண்டீ; இது, திருமாலின்
ஆயிரநாமங்களுள் ஒன்று; அதுவே இவனுக்குப் பெயராக
இடப்பட்டதுபோலும். பி-ம்: சிகண்டியையுந் தேரழித்திட்டு. உத்தமபானுவை
தாண்டிய வெம் பரி நகுல சாதேவர் வென்னிட்டார்;
பாண்டியனும் முதுகிட்டான்; பாஞ்சாலர் புறமிட்டார்;
ஈண்டிய வெங் களத்து அவிந்தார் எத்தனை
ஆயிரம் வேந்தர்!-
தூண்டிய வெம் பரி நெடுந் தேர்த் துரோணன்
கைத் தொடையாலே.
அப்பொழுது), தூண்டிய – செலுத்திய, வெம் பரி – வேகமான
குதிரைகளைப்பூட்டிய, நெடு தேர் – பெரிய தேரையுடைய துரோணன் –
துரோணனது, கை – கையினால் (விடப்பட்ட), தொடையால்- அம்புகளால், தாண்டிய
வெம் பரி நகுல சாதேவர் – தாவிச்செல்லுகிற வேகமுள்ள குதிரைத்தொழிலில்
வல்ல நகுலனும் சகதேவனும், வென் இட்டார் – முதுகுகொடுத்தார்கள்; பாண்டியன்
உம் – பாண்டியநாட்டரசனும், முதுகு இட்டான் – முதுகுகொடுத்தான் ;
பாஞ்சாலர் -பாஞ்சாலராசர்கள், புறம் இட்டார் – முதுகு கொடுத்தார்கள்;
(இவைஇன்றி), ஈண்டிய- நெருங்கிய, வெம்- கொடிய, களத்து – போர்க்களத்தில்,
அவிந்தார் – இறந்தவர்,எத்தனை ஆயிரம் வேந்தர் – மிகப்பலவாயிரம்
அரசர்களாவர்; (எ -று.)
நகுலன் குதிரைத்தொழிலில்வல்லவ னாதலால், ‘தாண்டியவெம் பரி நகுலன்’
எனப்பட்டான். தோற்றுப்பின்னிடைதலென்ற ஒரு பொருளை, வென்னிட்டார்,
முதுகிட்டான், புறமிட்டார் என வெவ்வேறு சொற்களாற் குறித்தது –
பொருட்பின்வருநிலையணி. இங்கே பாண்டியனென்றது, அருச்சுனன்மனைவியான
சித்திராங்கதையின் தந்தையாகிய சித்ரவாகனனை.
வடுத் தரு வெஞ் சிலீமுகமும் வணக்கு கொடுஞ்
சராசனமும்,
எடுத்து மனம் கதாவு சினம் எழுப்ப எழுந்து, ஒர்
ஓர் நொடியின்
நடுத் தகைவு இன்றி வானவரும் நடுக்குறுகின்ற
போர் முனையில்,
அடுத்தனர், வன் தபோதனனும் அடல் தருமன்
குமாரனுமே.16.-துரோணனும் தருமனும் நெருங்குதல்.
(பின்பு), வானவர்உம் – தேவர்களும், நடுக்கு உறுகின்ற –
(கண்டுஅஞ்சி) நடுக்கமடையும்படியான, போர் முனையில் – போர்க்களத்தில்,
வல்தபோனன்உம் – வலிமையையுடைய துரோணாசாரியனும், அடல் தருமன்
குமாரன்உம் – வலிமையையுடைய தருமபுத்திரனும், மனம் – (தம்தம்) மனத்தில்,
கதாவு – மிகுதியாகப் பொருந்திய, சினம் – கோபம், எழுப்ப – (தம்மைத்) தூண்ட,
வடு தரு – விரணத்தழும்பை யுண்டாக்குகிற, வெம் – கொடிய, சிலீமுகம்உம் –
அம்புகளையும், வணக்கு- வளைத்தற்குரிய, கொடு – கொடிய, சராசனம்உம்-
வில்லையும், எடுத்து -எடுத்துக்கொண்டு, எழுந்து – புறப்பட்டு, நடுதகைவு இன்றி –
இடையிலே தடையில்லாமல், ஒர் ஓர் நொடியில்- ஒவ்வொரு மாத்திரைப்
பொழுதிலே, அடுத்தனர்- (ஒருவரையொருவர்) நெருங்கினார்கள்; ( எ -று.)
ஆறிப்போவதான புண்ணை யுண்டாக்குவதென்பதனினும், ஆறாதுகிடக்கும்
வடுவை யுண்டாக்கு மென்பது சிறப்பாதலால், ‘வடுத்தரு சிலீமுகம்’ என்றார்.
‘கதுவுசினம்’ என்றும், ‘எழுப்ப வெழுந்தோர் நொடியில்’ என்றும்,
‘நடுத்தகைவின்வானவரு நடுக் குறுவெம்போர் முனையில்’ என்றும் வழங்குகிற
பாடம், சந்தவமைதிக்கு வழுவாம், இனி, அடுத்த பாடல்முதல்தான் விருத்தம்
வேறுபடுகின்றதென்று கொள்வார்க்கு, இந்தப்பாடங்கள் ஏற்கும். பி – ம்:
எழுப்பவெழுந்த தோர் நொடியில்.
இதுமுதல் பத்துக் கவிகள் – பெரும்பாலும் முதற்சீரும் நான்காஞ்சீரும்
கருவிளச்சீர்களும், இரண்டாஞ்சீரும் ஐந்தாஞ்சீரும் தேமாச்சீர்களும், மூன்றாஞ்சீரும்
ஆறாஞ்சீரும் கூவிளங்காய்சீர்களுமாக வந்த அறுசீராசிரியச்சந்தவிருத்தங்கள்.
‘தனத்தன தந்த தான தன தனத்தன தந்த தானதன’ என்பது, இவற்றிற்குச்
சந்தக்குழிப்பாம்.
அதிர்த்தன, சங்க சாலம் முதல் அனைத்து விதம்
கொள் காகளமும்;
உதிர்த்தன, அண்டகோளம் உற ஒலித்து உடுவின்
குழாம் முழுதும்;
விதிர்த்தன, செங் கை வாளொடு அயில்; விழித்தன,
கண்கள் தீஉமிழ;
எதிர்த்தன, தங்கள் சேனைகளும், எதிர்ப் படு மைந்தர்
போர் செயவே.17.- இருதிறத்துச்சேனைகளும் தம்மில் பொருதல்.
(அப்போர்க்களத்தில்), சங்க சாலம் முதல் – சங்குகளின்
கூட்டம்முதலாக, அனைத்து விதம் கொள் – மிகப்பலவகைகளைக் கொண்ட,
காகளம்உம் – வாத்தியங்கள்யாவும், அதிர்த்தன-முழங்கினவாய், அண்டகோளம்
உற – உலகவுருண்டைமுழுவதிலும், ஒலித்து – சப்தித்து, உடுவின்குழாம் முழுதுஉம்
– நக்ஷத்திரக் கூட்டம் முழுவதையும், உதிர்த்தன – (அதிர்ச்சியால்) உதிரச்செய்தன;
செம் கை -(வீரர்களது) சிவந்த கைகள், வாளொடு அயில்- வாளையும் வேலையும்,
விதிர்த்தன – வேகமான அசைத்தன; கண்கள் – (அவ்வீரர்கள்) கண்கள், தீ உமிழ –
நெருப்பைச் சொரியும்படி, விழித்தன – (கோபத்தோடு) திறந்து உற்றுநோக்கின;
(இவ்வாறு), எதிர் படு மைந்தர்- (ஒருவருக்கொருவர்) எதிர்ப்பட்ட வீரர்கள், போர்
பொர – போர்செய்ய, தங்கள் சேனைகள் உம் – அவர்களது (யானைமுதலிய)
சேனைகளும், எதிர்த்தன – (ஒன்றோடொன்று) எதிரிட்டுப்பொருதன; ( எ -று.)
காகளம் – எக்காள மென்றும்வழங்கும் ; ஊதப்படுவ தொரு வாத்திய
விசேஷம்: இச்சிறப்புப்பெயர், இங்கே , வாத்தியங்களுக்குப் பொதுப்பெயராய்
நின்றது. பி -ம்: போர்செயவே
மதித்து மதங்கள் ஏழினும் மெய் வனப்பு உறு
கொண்டல் மானுவன;
கதித்து நெடுங் கை வீசி, உடு கணத்தை
முகந்து வாருவன;
மிதித்து, உரகன் பணா முடிகள் விதிர்த்து,
வெகுண்டு, உலாவுவன;-
கொதித்து, இரு கண்களாலும் எரி கொளுத்தின
கும்ப வாரணமே.18.- இதுமுதல் நான்குகவிகளால், சதுரங்கசேனைகளை
முறையே வருணிக்கின்றார்; அவற்றுள், இது -யானைவருணனை
கும்பம் வாரணம் – (அப்போர்களத்திலுள்ள) மஸ்தகத்தையுடைய
யானைகள், மதங்கள் ஏழின்உம் – எழுவகைமதங்களாலும், மதித்து – கொழுத்து,
மெய் – (கறுத்த) உடம்பினால், வனப்பு உறு கொண்டல் மானுவன – அழகு மிக்க
காளமேகத்தை யொத்திருப்பன; கதித்து – கோபித்து, நெடு தை வீசி – நீண்ட
துதிக்கையை மேல்வீசி, உடு கணத்தை – நக்ஷத்திரக்கூட்டத்தை, முகந்த வாருவன –
மிகுதியாகமொண்டு எடுப்பன; உரகன் – (கீழிருந்து பூமியைத் தாங்குகிற)
ஆதிசேஷனது, பணா மணிகள் – படங்களிலுள்ள மாணிக்கங்களை, மிதித்து –
(கால்வலிமைமிகுதியால்) துவைத்து, வெகுண்டு- கோபங்கொண்டு, விழித்து –
(அப்கோபந்தோன்றக்) கண்விழித்து, உலாவுவன – சஞ்சரிப்பன; கொதித்து –
மனம்வெதும்பி, இரு கண்களாலும்-, எரி கொளுத்தின – தீயைச் சொரிந்தன;
மதங்களேழ் – இரண்டுகண்கள், இரண்டுகன்னங்கள், இரண்டு
துதிக்கைத்துளைகள், ஆண்குறி என்பவற்றினின்று பாய்கின்றவை.
துதிக்கைநீண்டிருந்தால் உத்தம கஜலக்ஷண மாதலால், ‘நெடுங்கை’ என்றார்.
உடுகணம், பணாமணி, கும்பவாரணம் – வடமொழித் தொடர்கள். கோபமிகுதியால்
கண் மிகச்சிவந்து கொடுமையாகத் தோன்றுதலை ‘கொதித் திருகண்களாலு
மெரிகொளுத்தின’ என்றது. கும்பம் -குடம்; அதுபோன்ற வடிவமுடைய
மஸ்தகத்துக்கு உவமவாகுபெயர். ‘மிதித் துரகன்பணாமணிகள் விழுத்தி’ என்ற
பாடம்சிறந்தது; அதற்கு – தாம் மிதித்தால் ஆதிசேஷன்படத்து மாணிக்கங்களைக்
கீழ்விழச்செய்த என்ற பொருள். முதலடி உவமையணியும், மற்றையவை –
உயர்வுநவிற்சியணியுமாம் பி-ம் : பணா முடிவுகள் விதிர்த்து.
வரைக் குலம் என்று கூறிடின், அவ் வரைக்கு
வயங்கும் நேமி இல;
நிரைக்கும் நெடும் பதாகை இல; நிறத்த
கொடிஞ்சி ஆதி இல;
உரைப் பட உந்து பாகர் இல; உகைத்த
துரங்க ராசி இல;
இரைத்து விரைந்து உலாவல் இல’ என, செரு
மண்டு தேர் பலவே!19.- தேர்வருணனை.
வரை குலம் என்று- மலைகளின்கூட்டமென்று, கூறிடின் – (உவமை)
சொல்லலாமென்றால், அ வரைக்கு – அம்மலைகளுக்கு, வயங்கும் நேமி இல –
விளங்குகிற சக்கரங்கள் இல்லை; நிரைக்கும் – வரிசையாகநாட்டப்பட்ட, நெடு
பதாகை – நீண்ட துவசங்கள், இல -இல்லை; நிறத்த-நல்லநிறமுள்ள
வையாய்விளங்குகிற, கொடிஞ்சிஆதி – கொடிஞ்சிமுதலிய உறுப்புகள்,
இல – இல்லை; உரை பட – புகழுண்டாக, உந்து-செலுத்துகிற, பாகர் – சாரதிகள்,
இலர்- இல்லை; உகைத்த-செலுத்தப்படுகிற, துரங்க ராசி-குதிரைகளின் கூட்டங்கள்,
இல-இல்லை; இரைத்து-ஆரவாரித்துக்கொண்டு, விரைந்து உலாவல்-
வேகமாகச்செல்லுந்தொழில்கள், இல-இல்லை, என-என்று சொல்லும்படி, செரு
மண்டு – அப்போரிற் பொருந்திய, தேர் -தேர்கள், பல -அநேகங்களாம்; ( எ-று.)
வலிமை பருமை உயர்ச்சிகளில் ஒப்பனவாயினும், சக்கரம் முதலியன
இல்லாமையால் மலைகளுந் தேர்கலுக்கு ஒப்பாகா என்பதாம். இப்பாட்டில்
உபமானமாகிய மலையினும் உபமேயமாகிய தேருக்கு நேமி முதலியன
உண்மையாகிய விசேடங் கூறியதனால், வேற்றுமையணி. கொடிஞ்சி – கொடிஞ்சு
என்றும் வழங்கும். உரை பட- (குதிரைகளை அதட்டுஞ்) சொல் உண்டாக
என்றுமாம். பி -ம் : பாகரில.
உகத்தின் முடிந்த நாள் அலையோடு ஒலித்து எழு
சங்க வேலை என,
மிகப் புகை கொண்டு வானுலகும் வெடித்திட மண்டு
தேயு என,
நகச் சிகரங்கள் சாய எதிர் நடப்பன சண்ட வாயு என,
இகல் செய்து, செம் பராகம்மிசை எழுப்பின-துங்க
வாசிகளே.20.- குதிரை வருணனை.
உகத்தின் முடிந்த நாள் – கல்பத்தின் முடிவுகாலத்தில், அலையோடு
ஒலித்து எழு – அலைகளோடு ஆரவாரித்துப் பொங்குகிற, சங்கம் வேலை என –
சங்குகளையுடைய கடல்போலவும்,- (அக்காலத்தில்), மிக புகை கொண்டு –
புகையைமிகுதியாகக்கொண்டு, வான்உலகுஉம் வெடித்திட – மேலுள்ள
தேவலோகமும்வெடிக்கும் படி, மண்டு – மூண்டுஎரிகிற, தேயு என – காலாக்கினி
போலவும்,(அக்காலத்தில்),- நகம் சிகரங்கள் சாய – மலைகளின் உச்சிகள்
சரியும்படி, எதிர்நடப்பன – எதிர்த்துச்செல்வனவான, சண்டம் வாயு என –
கொடியகாற்றுக்கள்போலவும்,- துங்கம் வாசிகள் – உயர்ந்த குதிரைகள் இகல்
செய்து -போரைச்செய்து, செம் பராகம் – சிவந்த புழுதிகளை, மிசை எழுப்பின –
மேலே(கால்களால்) கிளப்பின;
ஆரவாரத்துக்கும் அணிபடவருதற்கும் கடலும், அஞ்சத்தக்க கொடுமைக்குத்
தீயும், வேகத்துக்கு வாயுவும் என ஏற்றபடி ஒப்புமை கண்டுகொள்க. உவமையணி.
கல்பாந்தகாலத்தில் உலகையழிக்கக் கடல்பொங்கியெழுதலும், பொருந்தீப்
பற்றியெரிதலும், பெருங்காற்று விசையோடுஅடித்தலும், இயல்பு, சப்தமருத்துக்களென
வாயு எழுவகைப்படுதலால், ‘நடப்பன’ என அதனைப் பன்மையால் விசேடித்தார்.
விளைத்தனர், தொந்தமாக அமர்; மிகைத்தனர்,
தம்தம் வீரமுடன்;
உளைத்தனர், சிங்க சாபம் என; உறுக்கினர்,
சென்று மேல் முடுகி;
வளைத்தனர், கொண்ட வார் சிலைகள்; வடித்த
சரங்களால் உழுது,
திளைத்தனர், வென்றி கூரும்வகை;-செருக்களம்
எங்கும் ஆடவரே.21.- காலாள் வருணனை.
செரு களம் எங்குஉம் -அப்போர்களத்தில் எவ்விடத்தும், ஆடவர்-
காலாள்வீரர்கள்,- தொந்தம் ஆக – இவ்விரண்டுபேராக, அமர் விளைத்தனர் –
(ஒருவரோடொருவர்) போரைச் செய்தார்கள் ; தம் தம் வீரமுடன் – தங்கள்
தங்கள்பராக்கிரமத்தோடு, மிகைத்தனர் – செருக்கினார்கள்; சிங்க சாபம் என –
சிங்கக்குட்டிகள்போல, உளைத்தனர்- கர்ச்சித்தார்கள்; சென்று மேல் முடுகி –
எதிர்சென்று மேல்நெருங்கி உறுக்கினர்- அதட்டினார்கள்; கொண்டவார் சிலைகள் –
(தாம்) ஏந்திய நீண்ட விற்களை, வளைத்தனர் – வளைத்தார்கள்; வடித்த
சரங்களால்-வடிக்கப்பட்ட அம்புகளால், வென்றி கூரும் வகை – வெற்றிமிகும்படி,
உழுது -(பகைவருடம்பைக்) கிளறி, திளைத்தனர் – மகிழந்தார்கள்;
தொந்தம், சிங்கசாபம் – த்வந்த்வம், ஸிம்ஹஸாபம் என்னும் வடசொற்களின்
திரிபுகள். சாபம் [சாபம்] என்று குட்டிக்குப் பெயர்; இதனை, மேல்
பதினெட்டாம்போர்ச்சருக்கத்தில் “காண்டரிய கேசரிவெஞ்சாப மன்னார்”
என்னுமிடத்துங் காண்க. சாபம் என்பது – இளமைப்பெயராவதொரு வடசொல்
என்று அறியாதார், சாபச்சிங்கமென மொழிமாற்றி, வில்லையுடைய சிங்கம்போல
வென்று நலிந்துபொருள்கொண்டு இடர்ப்படுவர். உழுதலென்ற வினைக்கு ஏற்ப,
சரத்தைக் கலப்பையாகவும், பகைவருடலைக் கழனியாகவும், போரைப் பயிராகவும்,
வெற்றியை விளைவாகவும் கொள்க. திளைத்தல் – இடைவிடாது பயிலுதலுமாம்.
பி-ம்: திளைத்தனர் வென்றி கூருவகை.
மிகைத்தனர்; தும்பை மாலை முடி மிலைச்சினர்;
‘இன்று சாலும்!’ என
நகைத்தனர்; தங்கள் தேரும் எதிர் நடத்தினர்;
சண்ட வேகமொடு
பகைத்தனர்; அங்கம் யாவும் மிசை படப் பட,
நஞ்சு கால் பகழி
உகைத்தனர்;-அன்றை ஆடு அமரில், உதிட்டிரனும்
துரோணனுமே.22.- யுதிட்டிரனுக்கும் துரோணனுக்கும் கைகலந்த போர்.
அன்றை ஆடு அமரில்- அன்றைத்தினத்தில் நடந்த போரில்,
உதிட்டிரனும் துரோணனும்-, மிகைத்தனர்-செருக்கினார்கள்; தும்பைமாலை-
(போருக்குஉரிய) தும்பைப்பூமாலையை, முடி மிலைச்சினர் – (தமது) சிரசில்
சூடினார்கள்; இன்று சாலும் என -இன்றைக்கு (இப்போர்) தகுமென்று,
நகைத்தனர் -சிரித்தார்கள்: தங்கள் தேர்உம்- தம் தம் தேரையும், எதிர்
நடத்தினர் -(ஒருவருக்கொருவர்) எதிரிற்செலுத்தினார்கள்; சண்ட வேகமொடு –
கொடியஉக்கிரத்துடனே, பகைத்தனர் – பகைமை பாராட்டினார்கள்; அங்கம்
யாஉம்-உடம்பினுறுப்புக்கள் எல்லாவற்றிலும், மிசை பட பட – மேலே மிகுதியாய்
ஊன்றும்படி, நஞ்சு கால் பகழி – விஷத்தைச் சொரிகிற அம்புகளை, உகைத்தனர் –
செலுத்தினார்கள்; (எ -று.)
சண்டைவேகமொடு தேரை எதிர் நடத்தினர் என இயைப்பினும் அமையும்.
படப்பட- அடுக்கு, மிகுதி. பகையை யழித்தற்காக அம்பு நுனியில் விஷந்தடவுதலும்
உண்டு; தவறாமற்கொல்லுங் கொடுமையால் விஷத்தன்மையை வெளியிடும் அம்பு
என்றலும் இயையும். இன்று சாலும் என – இன்றைக்கே (போர்) முடியுமென்று
எனினுமாம். பி -ம்:மிலைச்சினரிந்த்ரசால்மென.
சினத்து முனைந்த போரில் வரு சிலைக் குருவின்
பதாகை அற,
மனத்தினும் முந்து மா துணிய, வயத்துடன் உந்து
பாகன் விழ,
அனைத்து உருளும் சதாவியிட, அடுக்கு உற
நின்ற தேர் அழிய,
இனத் தொடை ஐந்து பூபதியும் இமைப்பொழுதின்கண்
ஏவினனே.23.- தருமன் குருவின்பதாகை முதலியவற்றை ஒழியுமாறு செய்தல்.
சினத்து – கோபத்தோடு, முனைந்த – முயன்று செய்த, போரில் –
யுத்தத்தில், வரு -(எதிர்த்து) வந்த, சிலை குருவின் – வில்லாசிரியனான
துரோணனது,பதாகை-(வேதக்) கொடி, அற – அறுபடவும், மனத்தின்உம் முந்து –
மனோவேகத்தினும் முற்படச்செல்லுகிற, மா – குதிரைகள், துணிய – துண்டாகவும்,
வயத்துடன் – வலிமையோடு, உந்து -தேர்செலுத்துகின்ற, பாகன் – சாரதி, விழ –
இறந்து கீழே விழவும், அனைத்து உருள்உம் – தேர்ச்சக்கரங்களெல்லாம் சதாவியிட
– சிதைந்து விழவும், அடுக்க உற நின்ற – (அனேக அங்கங்கள்
ஒன்றன்மேலொன்றாக) அடுக்கியிருக்கின்ற, தேர்-, அழிய – அழியவும், இனம்
தொடை ஐந்து – ஒருசாதியான ஐந்து அம்புகளை, பூபதிஉம் – பூமிக்குத்தலைவனான
யுதிட்டிரனும், இமை பொழுதின் கண் – ஒருமாத்திரைப்பொழுதிலே, ஏவினன் –
(அக்கொடி முதலிய ஐந்தன்மேலும் தனித்தனி) செலுத்தினான்; (எ -று.)
ஒருபொருளை நினைத்த மாத்திரத்தில் மனம் அப்பொருள் எவ்வளவு
தூரத்திலிருப்பினும் அவ்விடத்தே செல்லுதலால், மனம், வேகத்துக்குச் சிறந்த
உவமையாகக் கூறப்படும், ‘விழ’ என்றது- மங்கலவழக்கு.
தனித்து மலைந்த போரில் எழு தலத்து அரசன்
கை வாளிகளில்
அனத்தம் விளைந்து, நாணொடு வில் அறத்
துணியுண்டது; ‘ஆகவமுன்,
முனிக்குலம் என்றும், ஆதி மறை முதல் குரு
என்றும், மேன்மை உற
இனிக் கணை ஒன்றும் ஏவுகிலம்; இளைப்பு அற,
அஞ்சல், ஏகு’ எனவே,24.- இதுவும் அடுத்த கவியும் குளகம்: படையிழந்த துரோணனைத்
தருமன் ஏகுமாறுசொல்ல அவன் ஏகுதல்.
தனித்து மலைந்த போரில்- (வேறு எவருந் துணையில்லாமல்
தருமனும் துரோணனும் தொந்தயுத்தமாகத்) தனித்துச் செய்த போரிலே, எழு
தலத்துஅரசன் – ஏழுதீவுகளாகவுள்ள பூமி முழுவதுக்கும் இராசனான தருமனது,
கைவாளிகளில் – கையினா லெய்யப்பட்ட அம்புகளால், அனத்தம் விளைந்து –
(துரோணனுக்குத்) தீங்கு உண்டாகி, நாணொடு வில் அற துணியுண்டது-
நாணோடுகூடிய வில் இரண்டாம்படி துணிக்கப்பட்டது; (அப்பொழுது), ஆகவம்
முன் – போர்க்களத்திலே, (தருமன் துரோணனை நோக்கி), ‘முனிகுலம் என்றும் –
(நீ பிறந்தசாதி) பிராமணசாதி யாதலாலும், ஆதி மறை முதல் குரு என்றும் –
பழமையான வேதம் வல்ல சிறந்த ஆசிரியனாதலாலும், மேன்மை உற – (உன்பக்கல்
எமக்குக்) கௌரவபுத்தியிருத்தலால், இனி கணை ஒன்றுஉம் ஏவுகிலம்-
இனிமேல் அம்பொன்றையும் (உன்மீது யாம் ) செலுத்தோம்: அஞ்சல் – பயப்படாதே;
இளைப்பு அற – சோர்வு நீங்க, ஏகு – செல்வாய்,’ என – என்றுசொல்ல,-(எ – று.)-
‘முனி போயினன் என அடுத்த கவியில் முடியும்
இங்ஙனம் ஏகென விடுத்தது – தழிஞ்சி என்னும் புறப்பொருள்
துறையின்பாற்படும்; அது-சாய்ந்தவர்மேல் செல்லாமல் தழுவுது. இப்படித் தருமன்
பெருமைதோன்றக் கூறினதால், அப்பொழுது துரோணனுயிர் தருமன்
வசத்ததாயிருந்தது என்பது போதரும். ஏழு தீவுகள் – சம்பூ, பிலட்சம், குசம்,
கிரௌஞ்சம், சாகம், சால்மலி, புஷ்கரம் என்பன. அனத்தம்=அநர்த்தம்.
துணியுண்டது, உண்- செயப்பாட்டுவினைப் பொருளுணர்த்தும் விகுதி. ஆஹவம் –
வட சொல் முன் – ஏழுனுருபு. பி – ம்: ஆகவமும். இளைப்புற.
அறத்தின் மகன்தன் ஆண்மையினை அழித்து, உயிர்
எஞ்சிடாவகை தன்
மறத்தொடு கொண்டுபோவல் எனமதித்து, எதிர் வந்த
சாப முனி,
திறத்தின் இவன் கை ஏவு கணை செயித்தது கண்டு,
நாணி, மெலிவு
உறத் தளர் சிந்தையோடு, தனதுஉடற் சுமை கொண்டு
போயினனே.
அறத்தின் மகன்தன் – தருமபுத்திரனது, ஆண்மையினை –
பராக்கிரமத்தை, அழித்து – அழியச்செய்து, உயிர் எஞ்சிடா வகை -(அவனது) உயிர்
ஒழியாதபடி [உயிருடன் என்றபடி], தன் மறத்தொடு- தனது வலிமையால்,
கொண்டுபோவல் என – (அவனைப்) பிடித்துக்கொண்டுபோவேனென்று, மதித்து –
எண்ணி, எதிர் வந்த – (அவனெதிரிற் போருக்கு) வந்த, சாபம் முனி – வில்லில்
வல்லதுரோணன், திறத்தின் – போர்த்திறமையை யுடைய, இவன்- இத்தருமனது,
கை -கையினால், ஏவு – எய்யப்பட்ட, கணை – அம்புகள் , செயித்தது – (தன்னை)
வென்றதை, கண்டு-, நாணி- வெட்கப்பட்டு, மெலிவுஉற- வாட்டமுண்டாக, தளர்
சிந்தையோடு- சோர்ந்த மனத்துடனே, தனது உடல் சுமை கொண்டு – தனது
உடம்பாகிய பாரத்தைச் சுமந்துகொண்டு, போயினன் – (மீண்டு) சென்றான்;
(எ -று.)
போரில் தன்மாணாக்கனாற் பரிபவப்பட்ட துரோணாசாரியன் உயிர் நீங்காது
உடம்போடிருத்தலை ஒரபாரமாகக்கருதின னென்பதும், அவனுக்கு அப்பொழுது
உடம்பும் ஒருபாரமாகும்படி சோர்வு உளதாயிற்று என்பதும் தோன்ற,
‘உடற்சுமைகொண்டு’ என்றார். மறத்தொடு, ஓடு- கருவிப்பொருளது. பி-ம்: ஏவு பல
அதருமன் மைந்தனுடன் மலைந்து சமரில் அஞ்சி ஓடியும்,
கருமம் நன்று பட நினைந்த கலசயோனி, பின்னையும்,-
முரண் மிகுந்து உடற்றவேகொல், முந்த ஓடவே கொலாம்-
விரைவுடன் சினம் கடாவ வேறு ஒர் தேரில் ஏறினான்!26.-தோற்றோடிய துரோணன் வேறொருதேரி லேறுதல்.
(இவ்வாறு), தருமன் மைந்தனுடன் – தருமபுத்திரனுடனே,
மலைந்து- போர்செய்து, சமரில் – அப்போரில், அஞ்சி – பயந்து, ஓடிஉம்-
(தோற்றுமுதுகுகொடுத்து) ஓடியும்,- கருமம்- (தான் வெல்லவேண்டுந்) தொழிலை,
நன்று பட – நன்றாக, நினைந்த- ஆலோசித்த, கலச யோனி- பாத்திரத்தை (த்
தனக்கு)ப் பிறப்பிடமாகவுடைய துரோணன், பின்னைஉம் – மறுபடியும், முரண்
மிகுந்து உடற்றஏ கொல் – வலிமை மிக்குப் போர்செய்தற்காகவேயா? முந்த ஓடஏ
கொல் ஆம் – விரைவாக ஒடிப்போவதற்காகவேயோ? விரைவுடன் – துரிதத்தோடு,
சினம் கடாவ – கோபந் தூண்ட, வேறு ஓர் தேரில் ஏறினான் – மற்றொருதேரின்
மீதுஏறினான்;
துரோணன் முன்புதோற்றதற்கு நாணி மற்றொருதரத்திலாயினும்
வெல்லும்பொருட்டு வேறொருதேரின்மே லேறியதை, இதுவும் முன்போலத்
தோல்வியாகவே முடிதலால், கவி சமத்காரமாக ‘முரண்மிகுந்துடற்றவேகொல்
முந்தஓடவேகொல்’ என்று கூறினார். அவன் இவ்விரண்டாந் தரத்திலும்
புறங்கொடுத்தலை, மேல் 43-ஆங் கவியிற் காண்க. ‘கருமநன்று பட நினைந்த’
என்பதற்கு- செய்தொழில்களை நன்றாக ஆராய்ந்தறிந்த என்று இயற்கை
குறிப்பதாக் கொள்ளினுமாம். கலசயோநி- வடசொற்றொடர்;
வேற்றுமைத்தொகையன்மொழி; இப்பெயர்- பெரும்பாலும் அகத்தியனுக்கும்,
சிறுபான்மை வசிட்டனுக்கும் வழங்கும். பி – ம் : நினைந்து-கதாவ.
இதுமுதல் பத்தொன்பது கவிகள் – பெரும்பாலும் ஈற்றுச் சீரொன்று
விளச்சீரும்மற்றையாறும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட
எழுசீராசிரியவிருத்தங்கள்.
தங்கள் மன்னன் அம் முனைத் தனித்து வென்ற வின்மையும்,
துங்க வென்றி இன்றியே துரோணனார் அழிந்ததும்,
அங்கு உளம் கனன்று மீள அணிகொள் தேரின் ஆனதும்,
சிங்கம் என்ன அருகு நின்ற சிறுவர் கண்டு சீறியே27.- இதுமுதல் நான்குகவிகள் – குளகம்: பாண்டவர்பக்கத்து வீரர்
கனன்றுவளைய, துரியோதனன்பக்கத்துச் சேனைவீரர்களும் திரள முனைந்த
போர் நிகழ்ந்தது கூறும்.
தங்கள் மன்னன்- தங்கள் அரசனான யுதிட்டிரன், அ முனை –
அப்போரிலே, தனித்து வென்ற – தனியாய்நின்று சயித்த, வின்மைஉம்- வில்
வன்மையையும், துங்கம் வென்றி இன்றிஏ – சிறந்த வெற்றியில்லாமலே,
துரோணனார்அழிந்ததுஉம் – துரோணாசாரியர் தோற்றதையும், மீள – பின்பு,
உளம் கனன்று -(அந்தத் துரோணர்) மனங்கொதித்து, அங்கு – அவ்விடத்தில்,
அணி கொள் தேரின்ஆனதுஉம் – அலங்காரங்கொண்ட மற்றொருதேரில்
ஏறியதையும், சிங்கம் என்னஅருகு நின்ற சிறுவர் – சிங்கங்கள் போலத்
தருமனருகில் நின்ற இளவீரர்கள், கண்டு-, சீறி- (துரோணர்மீது) கோபித்து,-
(எ – று.)-“முனியை வளைய” எனஅடுத்தகவியோடு தொடரும்.
முந்தி முந்தி மச்ச ராசனோடு சேனை முதல்வனும்,
குந்திபோசன் ஆதியான குல மகீபர் யாவரும்,
வந்து சூழ, வேழமீது வய மடங்கல் செல்வபோல்,
அந்த வேத முனியை ஓடி அக் கணத்தில் வளையவே.
மச்ச ராசனோடு – மத்ஸ்யதேசத்தரசனான விராடனுடன், சேனை
முதல்வன்உம் – சேனைத்தலைவனான திட்டத்துய்மனும், குந்திபோசன் ஆதி ஆன
– குந்திபோஜதேசத்தரசன் முதலான, குலம் மகீபர் யாவர்உம் – உயர்குலத்தில்
தோன்றிய அரசர்களெல்லோரும் , முந்தி முந்தி- ஒருவருக்கொருவர் முற்பட்டு,
சூழ வந்து- சுற்றிலும் வந்து, வேழம்மீது- ஒரு யானையின்மேல், வய மடங்கல்-
வலிமையையுடைய பலசிங்கங்கள், செல்வ போல்- (எதிர்த்துச்) செல்வனபோல,
ஓடி- விரைந்து, அந்த வேதம் முனியை – வேதம் வல்ல அத்துரோணனை, அ
கணத்தில்- அந்தக்ஷணத்தில், வளைய – வளைந்துகொள்ள,- ( எ -று.)-
“செருச்செய்தார்” என மேல் முப்பதாங்கவியில் முடியும்.
மச்சம்- வடசொற்சிதைவு; நீர்வளமிகுதியால் எங்கும் மீன்கள்
மலிந்திருத்தல்பற்றி, மத்ஸ்யதேசமெனப் பெயர்போலும். குந்தி போசன் – பாண்டவர்
தாயாகிய குந்தியின் உடன்பிறந்த முறையாகுபவன்; இவன்பெயர் ‘புரஜித்’ என்பதை
முதனூலால் அறிக.
கன்னன் ஆதி, சகுனி ஆதி, கலிங்கதேசன் ஆதியா,
மன்னன் ஆதியாக அங்கு மறையவன் பெரும் படை;
தென்னன் ஆதி, நகுலன் ஆதி, திட்டத்துய்மனோடு அபி-
மன்னன் ஆதியாக இங்கு உதிட்டிரன் வரூதினி;
கன்னன் ஆதி – கர்ணன் முதலாகவும், சகுனி ஆதி- சகுனி
முதலாகவும், கலிங்கதேசன் ஆதி ஆ – கலிங்கநாட்டரசனான சோமதத்தன்
முதலாகவும், மன்னன் ஆதி ஆக-(யாவருக்கும்) அரசனான துரியோதனன்
முதலாகவும் அங்கு- அப்பக்கத்தில், மறையவன் பெரு படை- வேதியனான
துரோணனது பெரியசேனையிலும், – தென்னன் ஆதி- பாண்டியன் முதலாகவும்,
நகுலன் ஆதி- நகுலன் முதலாகவும், திட்டத்துய்மனோடு அபிமன்னன் ஆதி
ஆக -திட்டத்துய்மனும் அபிமந்யுவும் முதலாகவும், இங்கு – இப்பக்கத்தில்,
உதிட்டிரன்வரூதினி- தருமனது சேனையிலும்,-(எ-று.)-” மன்னர்தாமும் மன்னர்
தாமும் செருச்செய்தார்” எனவருங்கவியோடுமுடியும். ‘திட்டதுய்மனாதிமால்,
பின்னனாதியாகவிங் குதிட்டிரன்பெரும்படை’ என்ற பாடத்தில், மால்பின்னன் –
சாத்தகி யென்க.
நின்ற சேனை மன்னர்தாமும், நின்ற அந் நிலத்திடைச்
சென்ற சேனை மன்னர்தாமும், எங்கணும் செருச் செய்தார்’
என்று கூறி எதிர் உரைத்தல் யாவருக்கும் முடிவுறாது;-
ஒன்று நூறு சின்னமா உடைந்தது, ஓர் ஒர் உடலமே!
நின்ற- (அப்பக்கத்தில்) நின்ற, சேனை மன்னர்தாம் உம் –
சேனைகளோடுகூடிய அரசர்களில் இன்னாரின்னாரும், நின்ற அ நிலத்திடை –
அங்ஙனம் நிற்கப்பெற்ற அக்குருக்ஷேத்திரத்தினிடத்து, சென்ற – போய்ச்சேர்ந்த,
சேனை மன்னர்தாம் உம் – சேனைகளோடுகூடிய (இப்பக்கத்து) அரசர்களில்
இன்னாரின்னாரும், எங்கண்உம்- எல்லாவிடத்தும், செரு செய்தார்- போர்
செய்தார்கள், என்று கூறி – என்று பகுப்பிட்டு, எதிர் உரைத்தல் –
நேராகச்சொல்லுதல், யாவர்க்குஉம் – எவருக்கும், முடிவு உறாது – முடியாது;
(அப்போரில்), ஓர் ஒர் உடலம் – (போர்வீரர் பலரது ) ஒவ்வொரு உடம்பும்,
ஒன்று நூறு சின்னம் ஆ – ஒவ்வொன்று நூறுதுண்டுகளாக, உடைந்தது –
சிதைந்தது; (எ-று.)
கீழ்க்கவியிற்கூறிய முறைமைக்கு ஏற்ப, இக்கவியில், ‘நின்ற சேனை மன்னர்’
எனத் துரியோதனன் பக்கத்தாரையும், ‘சென்ற சேனைமன்னர்’ எனத்
தருமன்பக்கத்தாரையும், முறையே குறித்தது – முறைநிரனிறைப்பொருள்கோள்.
குருக்ஷேத்திரம் அப்பொழுது துரியோதனனாளுகைக்கு உட்பட்டிருந்ததனால்,
அதில்’நின்றமன்னர்’ அவரும், ‘சென்றமன்னர்’ இவருமாவர். பி-ம்:
என்றுகூறியிகலுரைக்கில்.
வேல் விதத்தும், வாள் விதத்தும், வில் விதத்து விடு நெடுங்
கோல் விதத்தும், முடி துணிந்த கொற்ற மன்னர் சற்று அலார்-
நூல் விதத்து மிக்க கேள்வி நோன் சிலைக் கைம் முனி படை,
கால் விதத்து, ரத துரங்க கய விதத்து, வயவரே.31.- துரியோதனன்பக்கத்து நால்வகை வீரரிலும் பலர் இறந்தமை.
நூல் விதத்து – சாஸ்திரங்களின் வகைகளிலே, மிக்க – மிகுந்த,
கேள்வி – பொருட்கேள்விகளையுடைய, நோன் சிலை கை முனி – வலிய
வில்லையேந்திய கையையுடைய துரோணனது, படை- சேனையிலுள்ள, கால்விதத்து
– காலாள்வகைகளையும், ரதம் துரங்கம் கயம் விதத்து- தேர் குதிரை யானை
இவற்றின் வகைகளையும் (ஆகச் சதுரங்கங்களையும்) உடைய, வயவர்- வீரர்களுள்
(பகைவர்களது), வேல் விதத்துஉம் – வேல்களின் வகைகளாலும் வாள்விதத்துஉம்-
வாள்களின் வகைகளாலும், வில் விதத்து விடு – விற்களின் வகைகளால் எய்யப்பட்ட,
நெடு கோல் விதத்துஉம்- நீண்ட அம்புகளின் வகைகளாலும், முடி துணிந்த –
தலையறுபட்ட, கொற்றம் மன்னர் -(முன்பு) வெற்றியையுடைய அரசர்கள், சற்று
அலார்- கொஞ்சமல்லர் [மிகப்பலர் என்றபடி]; ( எ-று.)
வேல்விதம்- குத்துவேல், எறிவேல், கைவேல் முதலியன வாள்விதம் –
பெருவாளும், உடைவாளும் முதலியன. கோல்விதம் – நெட்டம்பு, மொட்டம்பு,
பிறைமுகவம்பு முதலியன: அஸ்திரங்களும் இதில் அடங்கும். அஞ்சிப் பின்னிடாது
பொருது அழிந்தமையின்,’கொற்றமன்னர்’ எனப்பட்டார். உயர்திணைப்
பொருளாதலின்,காலாள்களை முன்னர்க் கூறினார்; ‘துறக்கம் புகு
வேட்கையுடைமையின் காலாளைமுற்கூறி’ என்பர், நச்சினார்க்கினியர்.
காலாள்வகைகள்- வில்வீரர், வாள்வீரர்,வேல்வீரர். கொல்வது கோல் எனக்
காரணக்குறி.
குத்துவார், படைக்கலங்கள் கொண்டு; மல் குறிப்பினால்
மொத்துவார்; இரண்டு தேரும் முட்ட விட்டு, மொய்ம்பினால்,
ஒத்துவார்; களிற்றினின்றும் ஒரு களிற்றின் முதுகு உறத்
தத்துவார்; துரங்கமங்கள் தாரையாக ஏறுவார்.32.- இரண்டுகவிகள்- தருமன்பக்கத்துச் சேனாவீரரின் செயல் கூறும்.
(தருமன்பக்கத்து வீரர்கள்), படைக்கலங்கள் கொண்டு –
ஆயுதங்களினால், குத்துவார் – (எதிரிகளைக்) குத்துவார்கள்; மல் குறிப்பினால் –
(ஆயுதங்களையொழித்து) மற்போர்செய்யுங்கருத்தால், மொத்துவார் –
(வெறுங்கைகளால்) அடிப்பார்கள்; தேர் இரண்டுஉம் முட்ட விட்டு – பகைவர் தேர்
தம்தேர் என்ற இரண்டும் (ஒன்றையொன்று) தாக்கும்படி செலுத்தி, மொய்ம்பினால்
ஒத்துவார் – ( பின்பு) வலிமையோடு விலகுவார்கள்; களிற்றினின்றுஉம்- (ஒரு)
யானையினின்றும், ஒரு களிற்றின் முதுகு உற- மற்றொரு யானையின் முதுகிலே
பொருந்த, தத்துவார் – பாய்வார்கள்; துரங்கமங்கள் – பலகுதிரைகளை, தாரை
ஆகஏறுவார் – ஒழுங்காக ஏறிச்செலுத்துவார்கள் ; (எ – று.)
தாரையாக – வரிசையாக எனினும், பலவகைக்கதிகள்பொருந்த எனினும்
அமையும். ஒத்துதல் – பொருந்தலுமாம். தாரை – வட சொற்றிரிபு.
கொற்ற வாளின் முடி இழந்த குறை உடம்பு வாளுடன்
கற்ற சாரி ஓடும் அக் கணக்கு அறிந்து புகழுவார்;
அற்ற கால்கள் அற்ற கைகள் ஆயுதங்களாகவே
எற்றுவார், படைக்கலன் இழந்து நின்ற வீரரே.
(தருமன்சேனையார்),- கொற்றம் வாளின் – வெற்றியையுடைய(தங்கள்)
வாள்களால், முடி இழந்த – தலையையிழந்த, குறை உடம்பு- (எதிரிகளின்)
உடற்குறைகள், வாளுடன்- (கையிற் பிடித்த) வாளாயுதத்துடனே, கற்ற சாரி –
(முன்புதாம்) பயின்றுள்ள (வலசாரி இடசாரி முதலிய) நடைவிகற்பங்களில், ஓடும்-
(தலைபோனபின்பும் சிறிதுபொழுது) விரைந்து செல்லுகிற, அ கணக்கு -அந்த
நிலைமையை, அறிந்த – கண்டுஉணர்ந்து, புகழுவார் – கொண்டாடுவார்கள்;
படைக்கலன் இழந்து நின்ற – ஆயுதங்களை ( எதிரிகளாற்) தோற்றுநின்ற, வீரர்-
(மற்றும்பல) வீரர்கள், அற்ற கால்கள் அற்ற கைகள் ஆயுதங்கள் ஆக ஏ-
(போர்களத்தில்) அறுந்து விழுந்துகிடக்கிற (ஆடவரது) கால்களையும்
அப்படிப்பட்டகைகளையுமே படைக்கலமாக எடுத்துக்கொண்டு, ஏற்றுவார்-
(அவற்றால்பகைவரைத்) தாக்குவார்கள் ;(எ -று.)
அற்றகால்களும் அற்றகைகளுந் தம்முடையனவே யென்றலும் தகுதி ;
“இருதுடையற்றிருக்கு மறவர்க ளெதிர்பொரு கைக்களிற்றின்வலிகெட,
ஒருதுடையைச்சுழற்றி யெறிவர்களொருதுடை யிட்டுவைப்பரெறியவே” என்ற
கலிங்கத்துப்பரணியைக் காண்க. முடியிழந்தகுறையுடம்பு – கபந்தம்.
சொன்னவாறு குறியும் உள்ள துரகதம் துணிந்தன;
கன்ன ஆறு சொரி மதக் களிற்றினங்கள் வீழ்ந்தன;
பின்ன ஆறு பட்டன பிறங்கு தேர்; பதாதிகள்
இன்னவாறு பட்டன எனக் குறித்து இயம்ப ஒணா!34.- நால்வகைச்சேனையும் பட்டமை.
(அப்பொழுது துரோணன்சேனையில்), சொன்ன ஆறு குறிஉம் உள்ள
– (அசுவநூல்களிற்) கூறியுள்ளபடி எல்லா நல்லிலக்கணங்களையுமுடைய, துரகதம் –
குதிரைகள், துணிந்தன – அறுபட்டன; கன்னம்- கபோலங்களினின்று, ஆறு சொரி –
ஆறாகப் பெருகுகிற, மதம் – மதநீரையுடைய, களிறு இனங்கள் – யானைக்
கூட்டங்கள், வீழ்ந்தன – இறந்துகீழ் விழுந்தன; பிறங்கு தேர்- விளங்குகிறதேர்கள்,
பின்னம் ஆறு பட்டன – பிளவுத்தன்மையை அடைந்தன; பதாதிகள் –
காலாட்கூட்டங்கள், இன்ன ஆறு பட்டன என குறித்து இயம்பு ஓணா-‘இவ்விதமாக
அழிந்தன’ என்ற குறிப்பிட்டுச் சொல்லமுடியாதவையாயின; ( எ -று.)
குறி -அடையாளம். ‘சொன்னஆறு குறியுமுள்ள’ என்பதற்கு (குதிரை
நூல்களில் நல்லிலக்கணமாகக்) கூறின (பிறப்பிடம், நிறம், சுழி, குரல், உறுப்பமைதி,
நடை என்னும்) ஆறுதன்மைகளையுமுடைய என்றும் உரைக்கலாம். ‘பதாதிகள்’
என்பது – இங்கே, அஃறிணைப்பன்மைபாற் பட்டதனால், ‘பட்டன’,’இயம்பொணா’
என்னும் அஃறிணைப்பன்மைமுற்றைக் கொண்டது. சிலபிரதியில், இந்தப்பாடல்
அடுத்தபாடலின்பின் உள்ளது.
உங்கள் சேனை கெட்டது’ என்று உதிட்டிரன் தளத்து உளார்
திங்கள் அன்ன கும்ப யோனி சேனைதன்னை இகழுவார்;
‘எங்கள் சேனை கெட்டது உங்கள் இறைவன்
வின்மையால்!’ என,
தங்கள் சேனை அந்தணன் தளர்ந்ததற்கு இரங்குவார்.35.-யுதிட்டிரன் பக்கத்தவரின் செருக்குமொழியும், துரியோதனன்
பக்கத்தவரின் இரக்கமொழியும்.
உதிட்டிரன் தளத்து உளார் – தருமன்பக்கத்தின்
சேனையிலுள்ளவர்கள், திங்கள் அன்ன கும்பயோனி சேனை தன்னை-
பூர்ணசந்திரனையொத்த துரோணனது சேனையை, உங்கள் சேனை கெட்டது என்று
– ‘உங்கள்சேனை தோற்றது’ என்று, இகழுவார்- நிந்திப்பார்கள்; (அதற்கு அவர்கள்),
உங்கள் இறைவன் வின்மையால் எங்கள் சேனை கெட்டது என – ‘உங்களரசனான
தருமனது வில்லின்திறத்தால் எங்கள் சேனை அழிந்தது’ என்று ஒப்புக்கொண்டு,
தங்கள் சேனை அந்தணன் தளர்ந்ததற்கு இரங்குவார் – தங்கள்
சேனைத்தலைவனான துரோணன் தளர்ச்சியடைந்ததற்கு மனம் வருந்துவார்கள்;
(எ-று)
அப்பொழுது அவர்கள் தோல்வி அவர்களே ஒத்துக்கொள்ளும் படியிருந்த
தென்பது, பின்னிரண்டடிக்குக் கருத்து. திங்களுவமை- கலைநிரம்புதற்கு. பி – ம்:
திறத்துளார்.
இரு தளத்தும் நின்ற மன்னர் இருவராக இகலியே,
ஒரு தளத்து மன்னர் என்ன ஒத்து நின்று, உடற்றினார்;
பொரு தளத்தின் இங்ஙன் நின்று போர் புரிந்த பொழுதிலே,
வரு தளத்தொடு உதவினான், மருத்து வீமன் மைந்தனே.36.- இருதிறத்துசேனையும் ஒத்துப்பொருகையில் கடோத்கசன்
பாண்டவசேனைக்குத் துணையாதல்.
(பின்னும்), இரு தளத்துஉம் -இரண்டுசேனைகளிலும், நின்ற –
(இறந்தவர்போக மிச்சமாய்) நின்ற, மன்னர் – அரசர்கள், இருவர் ஆக –
இவ்விரண்டுபேராக, இகலி – (தம்மில்) மாறுபட்டு, ஒரு தளத்து மன்னர் என்ன
ஒத்துநின்று – ஒருசேனையரசர்போல நெருங்கிநின்று, உடற்றினார்-
போர்செய்தார்கள்; இங்ஙன் – இவ்வாறு, பொரு தளத்தில் – போர்க்களத்திலே,
நின்று – நெருங்கிநின்று,போர் புரிந்த பொழுதில் – யுத்தஞ்செய்தசமயத்தில்,
மருத்து வீமன் மைந்தன் -வாயுகுமாரனான வீமசேனனது புத்திரனான கடோத்கசன்,
வரு தளத்தொடு -கூடவருகிற சேனையுடனே, உதவினான் – (பாண்டவசேனைக்குத்)
துணையானான்;
நிருத கன்னி மகனும், நேமி நீல வண்ணன் மருகனும்,
கருதி நெஞ்சு அழன்று வந்த காவல் மன்னர் யாவரும்,
சுருதி அன்ன தூ மொழித் துரோணன்மேல் நடக்கவே,
பரிதி கண்ட பனி என, பகைத் தளம் பறந்ததே.37.- கடோற்கசன் அபிமன் மற்றும் காவன்மன்னர் துரோணன்மேல்
நடக்க, பகைச்சேனை பறத்தல்.
நிருதகன்னி மகன்உம்- இராக்கதகன்னிகையான இடிம்பியின்
புத்திரனான கடோற்கசனும், நேமி நீல வண்ணன் மருகன்உம்-
சக்கராயுதத்தையுடைய நீலநிறமுள்ள கண்ணபிரானது மருமகனான அபிமந்யுவும்,
(மற்றும்), நெஞ்சு கருகி – மனங்கோபித்து, அழன்று வந்த – சீறிக்கொண்டுவந்த,
காவல் மன்னர்யாவர்உம்- (இராச்சியத்தைக்) காக்குந்தன்மையுள்ள
அரசர்களெல்லோரும், சுருதி அன்ன தூ மொழி- வேதவாக்கியத்தை யொத்த
சுத்தமானசொற்களையுடைய, துரோணண்மேல்-, நடக்க- எதிர்த்துசெல்ல, பகை
தளம்- பகைவரான துரியோதினாதியரது சேனை, பரிதி கண்ட பனி என –
சூரியமண்டலத்தைக்கண்ட பனி போல, பறந்தது – (இருந்தவிடந்தெரியாதபடி
உடனே) விரைந்து ஒடிற்று; ( எ -று.)
மருகன் -மருமகன் : இங்கே, உடன்பிறந்தவள்மகன்: கண்ணனது தங்கை
சுபத்திரைமகன். உண்மையானவும், வீண்படாதனவும், யாவராலும்
சிறந்தபிரமாணமென்று அங்கீகரிக்கப்படுவனவும், இலக்கணமமைந்தனவும், பொருள்
நிரம்பினவு மான நிறைமொழி யென்பார், ‘சுருதி யன்ன தூமொழி’ என்றார்
பறந்து போய் நெடும் பணிப் பதாகையானொடு எய்தினார்-
பிறந்து போய் வளர்ந்த பின் பிறப்பு உணர்ந்த பெருமனும்,
துறந்து போய விதுரன் முன் துணித்த வில் எனத் துணிந்து
இறந்துபோன மன்னர் அன்றி, நின்ற மன்னர் எவருமே38.- புறங்கொடுத்தமன்னர்யாவரும் துரியோதனனைச் சார்தல்.
துறந்து- (பாண்டவர் துரியோதனாதியர் என்னும் இருதிறத்தார்க்கும்
உதவிசெய்தலை) விட்டு, போய – (தீர்த்தயாத்திரை) சென்ற, விதுரன்-, முன்
துணித்த- முன்னே ( துரியோதனசபையில்) ஒடித்தெறிந்த, வில் என – வில்போல,
துணிந்து- (உடம்பு) இரண்டுதுண்டுபட்டு, இறந்துபோன-, மன்னர் அன்றி
அரசர்களல்லாமல், நின்ற – (இறவாமல் மிச்சமாய்) நின்ற, மன்னர் எவர்உம்-
(துரியோதனசேனை) அரசர்களெல்லோரும்,- பிறந்து- (ஒருத்திமகனாய் ஓரிடத்துப்)
பிறந்து, போய்- (உடனே அவ்விடத்தைவிட்டு) நீங்கி, வளந்த பின் – (பின்பு
ஒருத்திமகனாய் ஓரிடத்தில்) வளர்ந்த பிறகு, பிறப்பு உணர்ந்த- (தன்) பிறப்பு
வரலாற்றை யறிந்துகொண்ட, பெருமன்உம் – சிறந்த அரசனான கர்ணனும்,- பறந்து
போய்- வேகமாகச்சென்று, நெடு பணி பதாகையானொடு – நீண்டபாம்மை
யெழுதிய கொடியையுடைய துரியோதனனுடன், எய்தினார்- சேர்ந்தார்கள்; (எ-று.)
நெடுமை – பணிக்கும், பதாகைக்கும் அடைமொழியாம், பிறப்பு உணர்ந்தது,
பாண்டவர்க்காகத் தூதுவந்தபொழுது கண்ணன் இரகசியமாகச்சொன்னதனாலும் ,
அதன்பின் அவன்கட்டளைப்படி குந்திவந்த கூறியதனாலும் என்க. பெருமன்-
பெருமானென்பதன் விகாரமுமாம். கண்ணன் பாண்டவர்க்குத் தூதாய்வந்தமைபற்றி
அவனையும், அவனுக்குத் தன்வீட்டில் இடங்கொடுத்து விருந்து செய்து
உபசரித்தமைபற்றி விதுரனையும், துரியோதனன் பலவாறு இராசசபையில் தூஷிக்க,
விதுரன் கடுங்கோபங்கொண்டு ‘பாதகனாகிய உன்பொருட்டுப் போர்செய்யேன்:
இத்தனைநாளாய் உன் சோற்றயுண்டமைபற்றி உனக்கு எதிராகப் பாண்டவரோடு
சேர்ந்தும் பொரேன்’ என்றுசொல்லித் தனது வில்லை இரண்டு துண்டாக
முறித்துப்போகட்டுவிட்டுத் தீர்த்தயாத்திரைக்குப் பல ராமனுடன்
சென்றிட்டானென்பது, கீழ்உத்தியோகபருவத்துவந்த வரலாறு. விதுரன் –
வில்முதலியபடைத்தொழில்களில் மற்றை யாவரினும் மிகவல்லவன்; இவனை,
யமதருமராசனதுஅமிசமென்றும், பரமபாகவதர்களில் ஒருவ னென்றும் நூல்கள்
கூறும்.
வதிட்டனும் துதிக்கும் வாய்மை வரி சிலைக்
கைம் முனிவனோடு
உதிட்டிரன் புரிந்த போர் உரைக்கவே உணர்ந்துளான்,
‘பதிட்டிதம் பிறந்தது, இன்று, பாண்டவர்க்கு ஞாலம்!’ என்று,
அதிட்டம் ஒன்றும் உணர்கலானும், அனில வேகம் ஆயினான்.39.-இரண்டுகவிகள்- புறங்கொடுத்துவந்ததுணர்ந்த துரியோதனன்,
சேனைகளை நெருங்கச்செல்ல ஏவித் தானும் பொரச்செல்லுதல் கூறும்.
(துரியோதனனைச்சேர்ந்தஅரசர்கள்யாவரும்), வதிட்டன்உம்
துதிக்கும்- வசிஷ்டமகாமுனிவனுந் தோத்திரஞ் செய்யும் படியான, வாய்மை-
சத்தியவார்த்தையையும், வரி சிலை கை – கட்டமைந்தவில்லையேந்திய
கையையுமுடைய, முனிவனோடு- துரோணனுடனே, உதிட்டிரன் புரிந்த –
தருமபுத்திரன்செய்த, போர்- யுத்தத்தின்தன்மையை [துரோணனைத் தருமன்
வென்றதை], உரைக்கவே- சொல்லவே, உணர்ந்துளான்- (அதனை) அறிந்தவனாய்,
அதிட்டம் ஒன்றுஒம் உணர்கலான்உம் – வினைப்பயனைச் சிறிதும்
ஆலோசித்தறியாதவனான துரியோதனனும், ‘இன்று-இப்பொழுது, பாண்டவர்க்கு –
பாண்டு புத்திரர்க்கு, ஞாலம் – பூலோகம், பதிட்டிதம் பிறந்தது –
நிலைநின்றதாய்விட்டது,’ என்று- என்றுஎண்ணி, அனிலம் வேகம் ஆயினான் –
வாயுவேகமுடையவனாய் வந்தான்;
நல்வினைதீவினைகளின் தன்மையும் அவற்றின்பயனையும் சிறிதாயினும்
அறிந்திருப்பின் பாண்டவர்க்கு அரசுகொடாமை முதலிய அநீதிகளைப்
புரியானென்பார்,’ அதிட்டமொன்று முணர்கலான்’ என்றார். வதிட்டன்-வஸிஷ்டன்
என்னும் வடசொல்லின் திரிபு; இதற்கு-(பஞ்சஇந்திரியங்களை) நன்றாக
வசப்படுத்தினவன் என்று காரணப்பொருள்: ஞானத்திற் குடிகொண்டவ னென்றுங்
கூறுவர். இவன்- பிரமனது புத்திரன்: வைதிக லௌகிக ஒழுங்கங்களில்
மிகச்சிறந்தவன். சூரியகுலத்தரசர்க்குப் புரோகிதனும் பிரதானமந்திரியுமான
இவன்போலவே, துரோணனும்கௌரவர்க்குக் குருவும் சிறந்தமந்திரியும் ஆனதால்,’
வதிட்டனுந்துதிக்கும்வாய்மை வரிசிலைக்கைம்முனிவன்’ என்றார். உம் –
உயர்வுசிறப்பு. பதிட்டிதம்- ப்ரதிஷ்டிதம் என்னும் வடசொல் சிதைந்தது; இதற்கு-
நிலைநிறுத்தப்பட்டது என்று பொருள். தெளிவுபற்றி, ‘பதிட்டிதம் பிறந்தது’ என
இறந்தகாலத்தாற் கூறப்பட்டது; காலவழுவமைதி. அதிட்டம் – அத்ருஷ்டம்:
இதற்கு-கண்ணாற் காணப்படாத தென்று அவயவப்பொருள்.
விட்ட விட்ட ரத துரங்க வேழ வாகனத்தொடும்,
தொட்ட தொட்ட சிலையொடும், துணிந்து, வெங் களத்திடைப்
பட்ட பட்ட நிருபர்தங்கள் பாடு காண எண்ணியோ,
‘முட்ட முட்ட ஏகுக’ என்று, தன் படைக்கு முந்தினான்!
விட்ட விட்ட – மேன்மேற்செலுத்தின, ரதம் – தேர்களும் துரங்கம்-
குதிரைகளும், வேழம் – யானைகளுமாகிய, வாகனத்தொடுஉம்- வாகனங்களுடனும்,
தொட்டதொட்ட- மிகுதியாக(க்கையில்) ஏந்திய, சிலையொடுஉம் – வில்லுடனும்,
துணிந்து- துண்டு பட்டு, வெம் களத்திடை – கொடிய போர்க்களத்தில், பட்ட பட்ட
– மிகுதியாக இறந்த, நிருபர்தங்கள்- (தன்பக்கத்து) அரசர்களது, பாடு- நிலைமையை,
காண – பார்க்க, எண்ணிஓ – நினைத்தோ, (துரியோதனன்), முட்ட முட்ட ஏகுக
என்று – மிகநெருங்கச் செல்லுங்களென்று (தன்சேனையரசரை நோக்கிச்)
சொல்லிக்கொண்டு, தன் படைக்கு முந்தினான் – தனது சேனைக்கு முற்பட்டு
வந்தான்;
துரியோதனன் வந்ததது, மேல் போரிற் பகைவரை வெல்லுதலாக
முடியாமையால், அதனை, போர்க்களத்தில் அழிந்த அரசர்கள் பட்டபாட்டைப்
பார்க்கக்கருதியோ வந்தானென்று சமத்காரமாக உத்பிரேட்சித்தார்.
முந்த வந்த மன்னனும், முரண் கொள் வாகை அரசரும்,
வந்த வந்த சேனையும், வகுத்து அணிந்து முனையவே,
அந்த அந்த முனைகள்தோறும் அந்த அந்த வீரர் மெய்
சிந்த வந்து உடற்றினன், சிலைத் தடக் கை அபிமனே.41.-இரண்டுகவிகள்-அபிமன் தானொருவனாக எண்ணில்லாத
சேனைகளையழித்தல் கூறும்.
முந்த வந்த- (இங்ஙனம்) முற்பட வந்த, மன்னன் உம்-
துரியோதனனும், முரண் கொள்- வலிமையைக்கொண்ட, வாகை- வெற்றிக்கு உரிய,
அரசர்உம்- (அவன்பக்கத்து) அரசர்களும், வந்த வந்த- (அவர்களுடன்)
மிகுதியாய்வந்த, சேனைஉம்-, வகுத்து அணிந்து – ஒழுங்காக
அணிவகுக்கப்பட்டுநின்று, முனையஏ- போர்செய்யவே,- அந்த அந்த வீரர் மெய்
சிந்த – அவ்வவ்வீரரது உடம்பு அழிந்து கீழ்ச்சிந்தும்படி, சிலை தட கை அபிமன்-
வில்லைப்பிடித்த பெரியகையையுடைய அபிமந்யு, வந்து உடற்றினன்- எதிர்த்துவந்து
போர்செய்தான்;
சிந்தி வாளி மழைகள், ஓடு சிலை வளைத்து, முடுகு தேர்
உந்தி, வாரி மேகம் என்ன, அமர் செய்தானும் ஒருவனே;
அந்தி வானம் ஒத்தது, உற்ற குருதிநீரில் அக் களம்;
தந்தி வாசி தேர்களோடு உடைந்தது, எண் இல் தானையே.
முடுகு தேர்- விரைந்துசெல்லுந்தன்மையதான தேரை, உந்தி –
(எங்கும்) செலுத்தி, ஓடு சிலை – விரைவாகத் தொழில்செய்கிற வில்லை, வளைத்து –
வணக்கி, வாளி மழைகள் – அம்புமழைகளை, சிந்தி – சொரிந்துகொண்டு, வாரி
மேகம் என்ன – நீர்கொண்ட மேகம்போல, அமர்செய்தான்உம் – (எதிரில்) போர்
செய்தவனும், ஒருவன்ஏ- (அபிமன்) ஒருத்தனே; (அவனால்), எண் இல் தானை –
அளவிறந்த (பகைவர்) சேனை, தந்திவாசி தேர்களோடு- யானைகள் குதிரைகள்
தேர்கள் என்பவற்றோடு, உடைந்தது- அழிந்தது; அ குருதி நீர் கொள் – அப்படி
(அழிந்தபிராணிகள்) இரத்தப்பெருக்கைக்கொண்ட, அடு களம் – போர்க்களம்,
அந்திவானம் ஒத்தது- மாலைப்பொழுதிற் காணப்படுஞ் செவ்வானத்தை யொத்தது;
(எ -று.)
அபிமனுக்கு நீர்கொண்டமேகம் நிறத்துக்கும், விசையோடு வருதற்கும்,
வில்ஏந்துதற்கும், அம்புமழைசொரிதற்கும் உவமை. செவ்வானம்- நிறத்திற்கு
உவமை.மழைகளோடு – மழைகளையெனினுமாம். பி-ம்: உற்றகுருதி நீரிலக்களம்
ஏறு தேர் அழிந்து, சாபம் இற்று, முற்றும் இன்றியே,
வேறு தேரும் இன்றி நின்று, வில் எடுத்த வேதியன்
கூறு தேர் உதிட்டிரன் குனித்த விற்கு உடைந்து, பல்
நூறு தேர்தனைப் புரக்க, நொய்தினில் கழற்றினான்.43.-துரோணன் தருமனுக்குத் தோற்று, பலவீரர்காக்க முனையினின்று
விலகுதல்.
நின்று – (தருமநெறியில்) நின்று, வில்எடுத்த – வில்லையேந்திப்
போர்செய்த, வேதியன் – துரோணாசாரியன், (அவன்எய்த அம்புகளால்), ஏறு தேர்
அழிந்து (தான்) ஏறிய தேர் சிதைந்து, சாபம் இற்று- கைவில்லுந்துணிந்து, முற்றுஉம்
இன்றி- (மற்றையாயுதங்கள்) அனைத்தும் இல்லாமலே, கூறு தேர் உதிட்டிரன்
குனித்த விற்கு உடைந்து- சிறப்பித்துச் சொல்லப்படுகிற தேர்வீரனான தருமன்
வளைத்த வில்லுக்குத் தோற்று, வேறு தேர்உம் இன்றி – (மீண்டும்ஏறிப்போர்
செய்தற்கு) வேறொருதேரும் இல்லாமல், பல் நூறு தேர்தனை புரக்க –
பலநூறுதேர்வீரர்கள் (தன்னைப்) பாதுகாக்க, நொய்தினில் – விரைவில்,
கழற்றினான்- (தன்னை) அச்சேனையினின்று) நீக்கிக்கொண்டான்; ( எ -று.)
போரினின்று விலகுதற்றொழிலைக் செய்வதற்கே வருத்தப்பட வேண்டியதாயிற்
றென்ற பொருள் தோன்ற, ‘கழற்றினான்’ எனப் பிறவினையாற் கூறினார்; இனி
தன்வினைப்பொருளைப் பிறவினைச் சொல்லாற் குறித்தாருமாம். இனி இதனை,
கழறினான் என்றதன் விரித்த லெனக்கொண்டு, அநேகநூறுதேர்வீரர் தன்னைப்
பாதுகாக்கும்படி தந்திரமாகச்சொன்னான் என்று உரைப்பாரு முளர். விற்குஉடைந்து,
நான்கனுருபு – பகைப்பொருளின்பாற்படும். பி – ம் : தேருமேறிநின்று.
முனியும், ஏனை யானை தேரில் முடுகி வந்த நிருபரும்,
குனி சிலைக் கை அபிமன் வெங் கணைக்கு
வென் கொடுக்கவே,
‘இனி நமக்கு நல்ல காலம்!’ என்று சீறி எய்தினான்,
தனிதம் மிக்க சலதம் அன்ன சதமகன் சகாயனே.44.-அதுகண்ட பகதத்தன் தருமன் சேனையை எதிர்க்கவருதல்.
முனியும்- கோபங்கொண்ட, யானை தேரின் முடுகி வந்த-
யானைகளின்மேலும் தேர்களில்மேலும் விரைவாகவந்த, ஏனை நிருபர்உம் –
(துரியோதனன் முதலிய) மற்றையரசர்களெல்லோரும், குனி சிலை கை –
வளைந்தவில்லைப்பிடித்த கையையுடைய, அபிமன்- அபிமந்யுவினது, வெம்
கணைக்கு – கொடிய அம்புகளுக்கு, வென் கொடுக்கஏ – முதுகுகொடுக்கவே,-
(அச்சமயத்தில்), தனிதம் மிக்க – இடிமிகுந்த, சலதம் – மேகத்தை, அனன –
ஒத்த,சதமகன் சகாயன்- இந்திரனது துணைவனான பகதத்தன், இனி நமக்கு நல்ல
காலம்என்று – (போர்வலிமைகாட்டற்கு) இப்பொழுது நமக்கு நலல சமயமென்று,
சீறிஎய்தினான் – கோபங்கொண்டு எதிர்த்து வந்தான்; (எ-று.)
சிறந்தபோர் எப்பொழுதுநேருமோ என்று சமயத்தை எதிர்பார்த்திருக்குஞ்
சுத்தவீர னாதலால், ‘இனி நமக்கு நல்ல காலம்’ என்றான். இவன் வருகிற
ஆரவாரத்துக்கு ‘தனிதமிக்கசலதம்’ என உவமைகூறினார், முனியும்-
எதிர்காலப்பெயரெச்சம்; இதற்கு – துரோணனும் என்று பொருள் கூறுதல்,
இவ்விடத்துக்குப்பொருந்தாது. பகதத்தனைச் சதமகன் சகாயனென்ற விவரம்,
நான்காம் போர்ச்சருக்கத்துக் கூறப்பட்டது.
அதி தவள மத்த வாரணமும், முதல் அமுத மதனத்தில்
ஆழிமிசை வரும்
மத களிறு சுத்தமாக; இவனும் அம் மகபதி; எடுத்த
கார்முகமும் அவன்
எதிர்தர எடுத்த சாபம்; இவனுடன் இகல்செய நினைக்க
யாவர் உளா’?’ என,
விதம் உற வகுத்த யானை அணியுடன் விருது பகதத்த
ராசன் உதவவே,-45.- மூன்றுகவிகள் – பகதத்தன்வருஞ் சிறப்புக் கூறும்.
இதுமுதல் ஏழுகவிகள்- குளகம்;அவற்றில், முதல் மூன்றரைச் செய்யுள்
ஒருதொடரும், மற்றவை ஒருதொடருமாம்.
(இ-ள்.) ‘அதி தவளம்- மிக வெண்ணிறமான, மத்த வாரணம்உம்-
மதம்பிடித்த(இவனது) யானையும், முதல் – பூர்வ காலத்தில், அமுத மதனத்தில் –
தேவாமிருதத்துக்காகக் கடைகையில், ஆழிமிசை- திருப்பாற்கடலின்மேல், சுத்தம்
ஆகவரும் – வெண்ணிறமாகத் தோன்றிய, மதம் களிறு- (ஐராவதமென்னும்
இந்திரனது) மதயானையேபோலும்; இவன்உம்-, அ மகபதி – அந்த இந்திரனே
போல்வான் ; எடுத்த கார்முகம்உம்- (இவன்கையில்) ஏந்திய வில்லும், அவன்-
அவ்விந்திரன், எதிர்தர- (பகைவர்) எதிர்க்கையில், எடுத்த – (கையில்) எடுத்த
சாபம்-வில்லேபோலும்; இவனுடன் இகல்செய நினைக்க – இவனொடு (எதிர்த்துப்)
போர்செய்தற்கு நினைக்கவும், யாவர்உளர் – எந்தவீரர் தகுதியுள்ளார்?’ என –
என்று, விருது உதவ – (துதிபாடகர்) பிருதாவளிகளைக்கூற, – விதம் உற வகுத்த –
பலவகையாகப் பகுக்கப்பட்ட, யானை அணியுடன்- யானைச்சேனையுடனே,-
பகதத்தராசன்-,- (எ-று.)-“களத்திலானபொழுதிலே” என 47 – ஆங் கவியோடு
தொடரும்.
இவன் ஏறிவரும் பட்டத்துயானைக்கு ‘சுப்பிரதீகம்’ என்று பெயர்; இது
தேவயானையென்றும், இந்திரனால் இவனுக்கு அளிக்கப்பட்ட தென்றுங் கூறப்படும்;
இது நூறாயிரம்யானை பலமுடைய தென்று பெருந்தேவனார் பாரதத்து
உரைநடையால் தெரிகிறது. இவனதுவில்லைப் பெருந்தேவனார்
“கடவுட்சிலை” என்றதையும் இங்கே யறிக. மத்தவாரணம், அம்ருதமதநம், சுத்தம்-
வடசொற்கள். விருது- பிரதாபத்தை வெளியிடும் வாக்கியங்கள்; வெற்றி யென்று
கூறினாருமுளர். அம்மகபதியென்பது, சந்தவின்பத்துக்காகத் தொக்கது. பி-ம்: –
உயர்மகபதி.
இதுமுதற் பத்துக்கவிகள்- பெரும்பாலும் ஒன்று ஐந்தாஞ்சீர்கள்
கருவிளங்காய்ச்சீர்களும், இரண்டுமூன்று ஆறுஏழாஞ்சீர்கள் தேமாச்சீர்களும்,
நான்குஎட்டாஞ்சீர்கள் கருவிளச்சீர்களும் ஆகிய கழிநெடிலடி நான்குகொண்ட
எண்சீராசிரியச்சந்த விருத்தங்கள். ‘தனதனன தத்த தான தனதன தனதனன
தத்ததான தனதன’ எனச் சந்தக்குழிப்புக் காண்க.
இருபது பதிற்று நூறு களிறு உள; இவனினும் மிகுத்த
வீரர் கடவுவர்;
ஒருபது பதிற்று நூறு மழ களிறு உவமை என மிக்க
வாகு வலியினன்;
முருகன் என, வெற்றி நேமி முகில் என, முரண்
அவுணருக்கு வாழ்வு கெட, உயர்
சுரபதிதனக்கு வாழ்வு வரும் வகை சுரர் உலகு அளித்த
தோழன் இவன்அரோ.
இருபது பதிற்று நூறு களிறு – இருபதினாயிரம் யானைகள், உள-
(இவனுக்கு) உள்ளன; (அவற்றை), இவனின்உம் மிகுத்த வீரர் – இவனைக்காட்டிலுஞ்
செருக்கிய வீரர்கள், கடவுவர்- செலுத்துவார்கள்; இவன்-, ஒருபது பதிற்றுநூறுமழ
களிறு உவமைஎன- பதினாயிரம் இளையஆண்யானைகள் ஒப்பு என்று சொல்லும்
படி, மிக்க- மிகுந்த, வாகு வலியினன் – தோள்வலிமையையுடையான்;
முருகன் என- (தேவசேனாபதியான) சுப்பிரமணியமூர்த்திபோலவும், வெற்றி நேமி
முகில் என – சயத்தைத்தருகிற சக்கராயுதத்தையுடைய மேகம்போன்ற
திருமால்போலவும், முரண் அவுணருக்கு வாழ்வு கெட- வலிமையையுடைய
அசுரர்களுக்கு வாழ்க்கையொழிய, உயர் சுரபதிதனக்கு – சிறந்த தேவேந்திரனுக்கு,
வாழ்வு வரும் வகை – நல்வாழ்க்கையுண்டாகும்படி, சுரர் உலகு அளித்த – தேவ
லோகத்தை (மீட்டு)க்கொடுத்த, தோழன் – சினோகிதன்; (எ – று.) அரோ- ஈற்றசை.
கீழ்ச்செய்யுளில் ‘பகதத்தராசன்’ எனப் பெயரைப் குறித்த ஆசிரியர், இப்பாட்டால்,
அவனது சிறப்புக்களைத் தெரிவித்தார்; ஆதலின், இது – குளகத்தில்
இடைப்பிறவரலாக நின்றது. பி – ம் :- கடவுவ.
‘பதினாயிரம்யானைப் பலமுடையான் நூறாயிரம்யானையின் பல முடையதோர்
சுப்பிரதீபமென்னும் மதஹஸ்தியை மேற்கொண்டு’ என்றார், பெருந்தேவனாரும்.
முருகு- தெய்வத்தன்மை, இளமை, வலிமை; அவற்றையுடையவன்- முருகன்:
சூரபதுமன் முதலிய அசுரர்களைச் சங்கரித்தற்காகவே அவதரித்தவ னாதலால்
முருகனையும். பற்பலசமயங்களில் பகைவரை யொழித்து அமரரைக் காத்ததனால்
திருமாலையும், பகதத்தனுக்கு அசுரசங்காரத்திலும் தேவபரிபாலனத்திலும்
உவமைகூறினார். முகில்- உவமையாகுபெயர். ‘சுரபதிதனக்கு’ என்பதை
‘வாழ்வுவரும்வகை’ என்றதோடும், ‘சுரருலகளித்த’ என்றதோடும், ‘தோழன்’
என்றதோடும் கூட்டுக. பாற்கடலைக் கடைந்தகாலத்து அதினின்று உண்டானதொரு
சுரையை [வாருணியென்னும் ஒருவகை மதுவை] ப் பானஞ்செய்தது பற்றித்
தேவர்க்குச் சுரர் என்றும், அதனைப்பானஞ்செய்யாதது பற்றி மற்றொரு
திறத்தார்க்குஅசுரர் என்றும் பெயர்
எழில் அணி தடக் கை மேரு கிரி நிகர் இப சிரம்
அதைக்க மோதி, உரும் என
மொழி உற அதிர்த்து, நீடு புய கிரி முறை முறை
தடிக்க, வேகமொடு புகை
பொழி சினம் மனத்தின் மூள, அவிர் ஒளி புனை
நுதல் வெயர்க்க, வாயு கதி என,
விழிவழி நெருப்பு வீழ, விரைவுடன் விறல் மிகு
களத்தில் ஆன பொழுதிலே,
எழில் அணி- அழகுபெற்ற, தட கை – பெரியதுதிக்கையையுடைய,
மேரு கிரி நிகர் இபம் – மகாமேருமலையையொத்த (தான் ஏறிய) யானையினது,
சிரம்- தலையை, அதைக்க- அழுந்தும் படி, மோதி – (கையால்) அடித்து,- உரும்
என – இடியோசை போல, மொழி உற – சொற்கள் வெளிப்படும்படி, அதிர்த்து –
ஆரவாரித்து,- நீடு புய கிரி- உயர்ந்த மலைகள்போன்ற தோள்கள், முறை முறை
தடிக்க – மேல்மேல் பூரிக்க, – புகை பொழி சினம்- புகையைச்சொரிகிற கோபத்தீ,
வேகமொடு- உக்கிரமாக, மனத்தில் மூள – நெஞ்சிற்பற்றியெழ,- (அதனால்), அவிர்
ஒளி புனை நுதல்- விளங்குகிற ஒளியைக்கொண்ட நெற்றி, வெயர்க்க-
வேர்வையடையவும்-, விழிவழி- கண்களின்வழியாய், நெருப்பு வீழ – தீச்சிந்தவும், –
வாயு கதி என – காற்றின் ஓட்டம்போல், விரைவுடன் – வேகத்தோடு, விறல் மிகு
களத்தில் – வெற்றிமிக்க போர்க்களத்திலே, ஆன பொழுதில் – (அந்தப்பகதத்தன்)
வந்த சமயத்தில்,- ( எ-று.)-” திருகின,*** முடுகினர்” என மேற்கவியில் முடியும்.
‘எழிலாவது – வளர்ந்தமைந்தபருவத்தும் இதுவளர்ந்துமாறிய தன்றி இன்னும்
வளருமென்பது போன்று காட்டுதல்’ என்றார், நச்சினார்க்கினியர். மொழி –
யானையை அதட்டுதற்குக் கூறுஞ் சொற்களும், வீரவாதமும். புயகிரி –
முன்பின்னாகத் தொக்க உவமைத்தொகை. மிக்ககோபாவேசத்தால் தோள்கள்
புடைபருத்தலும், உடம்புவேர்த்தலும், கண்கொடிதாதலும் இயல்பு.
பொருது புறகிட்ட சேனை, இவன் வரு பொலிவொடு
புறக்கிடாது திருகின;
அரவினை உயர்த்த கோவும், இளைஞரும், அவனிபரும்,
ஒத்து மீள முடுகினர்;
முரசு எழுது பொன் பதாகை நிருபனும், முதல் அமர்
செகுத்த வாகை அபிமனும்,
இரு கை மலர் கொட்டி ஆடி எதிர்கொள, இரு படையும்
உற்ற பூசல் விளையவே,48.-அப்போது புறங்கொடுத்த துரியோதனன் பக்கத்தார் பொரமீள,
தருமனும் அபிமனும் எதிர்கொள இருதிறத்தார்க்கும் போர்நிகழ்தல்.
பொருது புறகு இட்ட சேனை – (கீழ்ப்) போர்செய்து பின்னிட்ட
(துரியோதனன்) சேனைகள், இவன் வரு பொலிவொடு- இப்பகதத்தன் (துணை)
வருகிற உற்சாகத்தால், புறக்கிடாது திருகின- பிற்படாமல் (போருக்குத்) திரும்பின;
அரவினை உயர்த்தகோஉம் – பாம்புக்கொடியை உயர நாட்டிய துரியோதனனும்,
இளைஞர்உம்- அவன்தம்பிமார்பலரும், அவனிபர்உம்- (மற்றை) அரசர்களும்,
ஒத்து-கூடி, மிள முடுகினர் – மறுபடி வேகமாகவந்தார்கள்; (அங்ஙனம்
வந்தவர்களை), முரசு எழுத பொன் பதாகை நிருபன் உம்-
முரசத்தின்வடிவத்தையெழுதினஅழகிய கொடியையுடைய தருமனும், முதல் அமர்
செகுத்த வாகை அபிமன்உம்-முந்தின போரில்(பகையை) அழித்த வெற்றியையுடைய
அபிமந்யுவும், இரு கை மலர்கொட்டி ஆடி – (உற்சாகத்தோடு) தாமரைமலர்போன்ற
(தம்தம்) கைகளிரண்டையும்தட்டிக் கூத்தாடிக்கொண்டு, எதிர்கொள- எதிர்கொள்ள,-
இருபடைஉம்-இருதிறத்துச்சேனைகளிலும், உற்ற பூசல் விளைய – மிக்கபோர்
உண்டாக,- (எ – று.)”வாயு குமாரன் குத்தி” என வருங்கவியோடு தொடரும்.
பிறகு என்பதுபோல, புறகு என்பதும்- பின் என்னும்பொருள் தருவதோர்
இடைச்சொல்லாம். புறகு + இடாது – புறக்கிடாது; உயிர்த்தொடரில் சிறுபான்மை
ககரவொற்று இரட்டிற்று. பொற்பதாகை- பொற்காம்பு அமைந்த துவசமுமாம்;
பொன்-அதனாலாகிய தண்டத்துக்குக் கருவியாகுபெயர். ‘முதல் அமர்’ என்றது-
பதினொன்றாநாட்போரையும், இப்பன்னிரண்டாநாட்போரில் இதற்கு
முந்திநடத்ததையும்.
‘நிசிசரன் எடுத்த ஆதி கயிலையும் நிகர் அல இதற்கு’
எனா, முன் வரு கரி
விசையுடன் நடத்தி, ‘வீமன் எவண்? அவன் விறல் முடி
துணித்து மீள்வன் இனி!’ என,
வசை பல பிதற்றி, வேகமுடன் வரும் வலிய பகதத்தன்
வாகு கிரிகளை
ஒசிதர வளைத்து, மார்பு சுழிதர ஒரு கைகொடு குத்தி,
வாயு குமரனே,49.- மூன்றுகவிகள்- பகதத்தனுக்கும் வீமனுக்கும் நிகழ்ந்த
கைகலந்த போரைக் குறிக்கும்
நிசிசரன்- இராக்கதனான இராவனன், எடுத்த – (கைகளால்)
தூக்கின,ஆதி கயிலைஉம் – பழமையான கைலாசகிரியும், இதற்கு நிகர் அல –
இவ்யானைக்கு ஒப்பன்று’, எனா – என்று சொல்லப்பட்டு, முன்வரு – சிறப்பாக
வருகிற, கரி- (தனது வெள்ளை) யானையை, விசையுடன்நடத்தி-
வேகமாகச்செலுத்திக் கொண்டு, ‘வீமன் எவண் – வீமன் எவ்விடத்தில் (உள்ளான்)?
அவன் விறல் முடி துணித்து – அவனது வலிமையையுடைய தலையைத் துண்டித்து,
இனி மீள்வன்- பின்பு திரும்புவேன்,’ என – என்று, வசைபலபிதற்றி –
பலநிந்தைமொழிகளைச் சொல்லிக்கொண்டு, வேகமுடன்வரும் – விரைவாகவருகிற,
வலிய பகதத்தன் – வலிமையையுடைய பகதத்தனது, வாகு கிரிகளை – மலைகள்
போன்ற கைகளை, ஓசிதர – ஒடியும்படி, வாயுகுமாரன் – வீமன், வளைத்து-
(தன்கைகளாற் பிடித்து) மடக்கிவிட்டு, மார்பு சுழிதர – (அவன்) மார்பு குழிபடும் படி,
ஒரு கைகொடு குத்தி-(தனது) ஒருகையாற்குத்தி,- (எ -று.) -“கதைகொடு அடித்து”
என அடுத்த கவியில் தொடரும்.
இவன் கூறிய வீரவாதம் மேல் பயன்பெறாது முடிதல்பற்றி, ‘பிதற்றி’ என்றார்.
வாகுகிரிகளை வளைத்தல்- தோள்களைத்தழுவுதலுமாம். வெள்ளிமலையாதலால்,
கைலையை வெள்ளையானைக்கு எடுத்துக்கூறினார். இராவணன்
கைலையெடுத்தது:-இராவணன்திக்கு விசயஞ் செய்கையில் குபேரனோடு எதிர்த்துப்
பொருது அவனை வென்று அவனது புஷ்பகவிமானத்தைப்பறித்து அதன்மேலேறிக்
கொண்டு கைலாசமலைக்கு மேலாக ஆகாசமார்க்கத்திலே விரைந்து
மீண்டுவருகையில், அம்மலையின் மகிமையால் விமானந்தடைப்பட்டு நிற்க,
அதற்குக்காரணம் இன்னதென்று அறியாது திகைக்கையில், நந்தி எதிரில்வந்து
‘சிவபிரானுக்குத் தங்குமிடமான திருக்கைலாயத்தின் பெருமை இது’ என்று
சொல்லவும் கேளாமல் தசமுகன் தனது பிரயாணத்துக்குத் தடையாகிய இம்மலையை
இப்பொழுதே வேரொடுபறித்து எடுத்து அப்பால் எறிந்துவிட்டுத் தடையின்றி
மேற்செல்வேனென்று கூறி விமானத்தினின்றும் இறங்கித் தனது இருபதுகைகளையும்
அம்மலையின்கீழ்க்கொடுத்து அதனைப்பெயர்த்து அசைத்தனனென்பது கதை.
ஒசிதர- துவளஎன்பாருமுளர். பி -ம்: குழிதர, சுளிதர.
கதைகொடு, பனைக் கை வீசி எதிர்வரு கட கரியின்
நெற்றி ஓடை அணியொடு
புதைபட அடித்து, மீள, விசையொடு புரவி இரதத்தின்மீது
குதி கொள;
இதய மலர் செற்றம் மூள இவன், அவன் எதிர் சிலை
வளைத்து, வாளி நிரைபட
உதைய, உதைபட்ட வாளி தனது கை உயர் கதை
புடைத்து வீழ முனையவே,
பனை கை வீசி- பனைமரம்போன்ற துதிக்கையை வீசிக்கொண்டு,
எதிர்வரு – எதிர்த்துவருகிற, கட கரியின் – (பகதத்தனது) மதயானையினது, நெற்றி -,
ஓடை அணியொடு – முகப்படாத்தோடும் ( பட்டமாகிய) ஆபரணத்தோடும். புதைபட
– உட்குழியும்படி (வீமசேனன்), கதைகொடு- (தனது) கதாயுதத்தால்.
அடித்து-, மீள – பின்பு, விசையொடு -வேகத்துடனே, புரவி இரதத்தின்மீது –
குதிரைகள்பூண்ட தேரின்மேல், குதி கொள- பாய்ந்து ஏறிக்கொள்ள,- (அதனால்),
இவன்-பகதத்தன், இதயம் மலர் செற்றம் மூள – இதயகமலத்தில் கோபம் மிக,
அவன் எதிர் – அவ்வீமனெதிரில், சிலை வளைத்து – வில்லை வளைத்து, வாளி –
அம்புகளை, நிரைபட – கூட்டமாக, உதைய – செலுத்த,- உதைப்பட வாளி –
(அங்ஙனம்) செலுத்தப்பட்டுவந்த அம்புகள், தனமு கை உயர்கதை புடைத்து வீழ-
தன்னுடைய [வீமனுடைய] கையிலுள்ள சிறந்தகதாயுதத்தில் தாக்கிவிழ, முனிய –
(அதனால் வீமன்) கோபங்கொள்ள, (எ -று.)-” வாளிநெடுமழை *** விலகின” என
அடுத்த கவியோடு குளகமாய் முடியும்.
பனைமரம்- துதிக்கைக்கு, திரண்டு உருண்டு நீண்ட வடிவத்தால் உவமம்.
ஓடையணி-பன்மையீறுபெறாத அஃறிணையும்மைத்தொகை. இதயம், தாமரை
மலர்வடிவமானதொரு மாம்ஸாகாரமாகவுள்ளதனால், ‘ இதயமலர்’ எனப்பட்டது.
பி – ம்:பணைக்கை, முனைய.
ஒருவரை ஒருத்தர் வேறல் அரிது அரிது, ஒருபடி செருச்
செய்தாலும் இனி!’ என,
இருவரும் எடுத்த சாபம் ஒலிபட, எதிர் எதிர் தொடுத்த
வாளி நெடு மழை
ஒருவர் உடலத்தின் மூழ்கி முனை உற உருவு தொழில்
அற்று, நூலின் முறைமையின்
இருவரும் விலக்க, ஓடி விலகின, எதிர் எதிர் கடித்து,
வானம் மறையவே.
ஒருபடி- ஒரேவிதமாக, செரு செய்தால்உம் – போர் செய்தாலும்,
இனி- இனிமேல், (இவர்கள்), ஒருவரை ஒருத்தர் வேறல் அரிது அரிது என –
ஒருத்தரையொருத்தர் வெல்லுதலில்லை யென்னும்படி, இருவர்உம் – அந்த
இரண்டுபேரும்,எடுத்தசாபம் – பிடித்த விற்களினின்று, ஒலிபட – ஓசையுண்டாக,
எதிர் எதிர்தொடுத்த- எதிரிலேஎதிரிலேசெலுத்தின, வாளி நெடு மழை- பெரிய
அம்புமழைகள்,-ஒருவர் உடலத்தில் மூழ்கி முனைஉறஉருவு தொழில்- அற்று –
ஒருவருடம்பில்தைத்துக்கூர்நுனி பொருந்த(அவவுடம்பை) ஊடுருவிச்செல்லுஞ்
செயலில்லாமல், நூலின் முறைமையின் இருவர்உம் விலக்க- ஆயுதசாஸ்திரத்தின்
முறைமைப்படி அவ்விரண்டுபேரும் விலக்குதலால், எதிர் எதிர் கடித்து –
(இடைவழியிலே ஒன்றையொன்று) எதிரிலே எதிரிலே பற்றிக்கொண்டு, வானம்
மறைய – ஆகாயத்தினிடம் மறையும்படி, ஓடி விலகின – விரைந்துமீண்டன;
(எ -று.)
பகதத்தன் வீமன் என்ற இரண்டுபேரும் ஒருவரெய்த அம்பு மற்றொருவர்
மேற்படாதபடி ஊக்கத்தோடு எதிரம்புகோத்துப் பொருதல் பற்றி, இருவ ரம்புகளும்
இடையிலே ஒன்றையொன்று கௌவிக்கொண்டு கீழ்விழுந்திடுதலால், அப்போர்
வெற்றிதோல்விகளாகிய பயனைப் பெறாதாயிற்றென்க. பி-ம்: அரிதென.
மகரிகை மருப்பு நாலும் உள எனில், வலிய குண திக்கில்
வாரணமும் இனி
நிகர் அல இதற்கு; நாமம் உரைசெயின், நிலை உடைய
சுப்ரதீகம்; இதன் வலி
பகரில், இபம் எட்டும் நாணும்; எதிர் எறி படைகள்
உலவுற்ற போரில், எரி வரு
புகர் முக கரக் கபோல மத கரி பொரு தொழில்
உரைக்கலாகும் அளவதோ?52.- இரண்டுகவிகள்- பகதத்தன் ஏறிவந்த யானையின் சிறப்பு.
மகரிகை- பூணையணிந்த, மருப்பு நால்உம்- நான்கு தந்தங்களும்,
இதற்கு -இவ்யானைக்கு, உள எனில்- உள்ளனவானால், வலிய குணதிக்கில்
வாரணம்உம் -வலிமையையுடைய கீழ்திசை யானையான ஐராவதமும், எதிர் நிகர்
அல – (இதற்கு)ஏற்றஒப்பாகாது; நாமம் உரை செயின் – (இதற்குப்) பெயர்
இன்னதென்றுசொன்னால், நிலை உடைய சுப்ரதீகம் – உறுதி நிலைமையையுடைய
சுப்பிரதீகம்(என்பதாம்); இதன் வலி பகரில் – இதன் வலிமையைக் கூறலுற்றால்,
இபம் எட்டுஉம்நாணும்- அஷ்டதிக்கஜங்களும் (தமக்கு இப்படிப்பட்ட
வலிமையில்லையே யென்று)வெட்கப்படும்; எதிர் எறி – எதிரிலே வீசுதற்குரிய,
படைகள் – ஆயுதங்களை,உணர்வு உற்ற – (யாவரும்) அறிந்துபிரயோகிக்கிற,
போரில் – யுத்தகளத்தில், எரிவரு – தீ எழுகிற, புகர்முகம் –
செம்புள்ளிகளையுடைய முகத்தையும், கரம் -துதிக்கையையும், கபோலம் மதம்-
கன்னங்களினின்று பெருகுகிறமதசலத்தையுமுடைய, கரி – (இப்பகதத்தன்) யானை,
பொரு – போர்செய்கிற,தொழில்-, உரைக்கல் ஆகும் அளவதுஓ- (எவராலேனுஞ்)
சொல்லுதற்குத்தக்கஅளவுள்ளதோ? (எ -று.)
மகரிகை – யானைக்கொம்பிற்பூண்; சுறாமீனின்திறந்தவாயின்
வடிவமாகச்செய்யப்படுவது: மகரமென்பதனடியாப்பிறந்த காரணப்பெயர்; மகரம் –
சுறாமீன். இனி, துதிக்கைமேல் எழுதப்படும் மகரிகாபத்திரமுமாம்; அது –
சுறாமீன்வடிவமாக எழுதப்படுஞ் சித்திரரேகை; “மகரிகை தரித்த மதமா” என்றார்,
முதற்போர்ச்சருக்கத்தும். நான்குதந்தங்களையுடைய அந்த ஐராவதத்தினும்
இரண்டுதந்தமுடைய இந்தச்சுப்பிரதீகத்துக்குக் குறைவு இரண்டு தந்தம் மாத்திரமே:
வலிமைஅழகு உத்தமவிலக்கணம் அறிவு வெண்மை பாரந்தாங்குதல் உயர்ந்த
வேந்தனையேந்தல் முதலிய சிறப்புக்களில் ஐராவதத்தினும் சுப்பிரதீகம்
மேம்பட்டதுஎன்பது- முதல்வாக்கியத்துக்குக் கருத்து. உபமானத்தோடு
உபமேயத்துக்கு உள்ளவித்தியாசத்தை விளக்கியதனால், வேற்றுமையணி.
‘இதற்கு’ என்பதை மத்திமதீபமாகஇரண்டு வாக்கியத்துக்குங் கூட்டுக. ஸுப்ரதீகம்
என்ற வடசொல் – ஸு -நல்ல,ப்ரதீகம்- அவயவங்களையுடையது எனப்
பொருள்படும். எரிவருபுகர். -அனற்பொறியை யொத்த செம்புள்ளிகளுமாம்;
யானைமுகத்தில் செம்புள்ளிகளிருத்தல், உத்தமவிலக்கணம்: “தீயுமிழ் சிறுகணுஞ்
செம்புகரு முடைத்தாய்” என்றது காண்க. முன்னே கரம் என வந்ததனால்,
பின்னே ‘கரி’ என்றது- துதிக்கையுடையதென்னுங் காரணப் பொருள் குறியாது,
யானை யென்னுமாத்திரமாய் நின்றது. கபோல மதகரி – வடசொல்தொடர். பி-ம்:-
வாரணமுமினி. நாமுமுரை செயின். படைகளுலவுற்ற.
கரிகளை எடுத்து வானின் இடை இடை கர நுதி கொடு
எற்றும்; நீடு பிறை நிகர்
இரு பணை மருப்பினாலும், அவர் அவர் எதிர் எதிர்
உடைக்கும், நேமி இரதமும்;
உரனுடைய சித்ர வால்கொடு ஒருபடி ஒலியொடு
புடைக்கும், வாசி விழ விழ;
அரவு அபயம் இட்டு வீழ நடை பயில் அடிகொடு
துகைக்கும், வீரர் அணியையே.
(அவ்யானை),- கரம் நுதி கொடு – (தன்) துதிக்கையின் நுனியினால்,
கரிகளை எடுத்து – யானைகளை (உயர) எடுத்து, வானின் இடைஇடை –
ஆகாயத்தினிடந்தோறும், எற்றும் – வீசியெறியும்; நீடு- நீண்ட, பிறை நிகர் –
இளஞ்சந்திரனை யொத்த, இரு பணை மருப்பினால்உம்- பருத்த
தந்தங்களிரண்டினாலும், அவர் அவர் எதிர் எதிர் – அவ்வவ்வீரர்களது எதிரிலே
எதிரிலே, நேமி இரதம் உம்- சக்கரங்களையுடைய தேர்களையும், உடைக்கும்-;
உரன்உடைய – வலிமையையுடைய, சித்ரம் வால்கொடு – அழகிய வாலினால்,
வாசி விழவிழ – குதிரைகள் மிகுதியாக விழும்படி, ஒலியொடு-ஓசையுடன், ஒரு
படி புடைக்கும்- ஒருவிதமாய் அடிக்கும்; அரவு- (பூமியைத்தாங்குகிற) ஆதிசேஷன்,
அபயம் இட்டுவீழ- ( பார மிகுதியை ஆற்றாமல்) அபயம் வேண்டிக் கீழ்விழும்படி,
நடைபயில்-நடத்தலைச் செய்கிற, அடி கொடு – கால்களால், வீரர் அணிஉம்-
காலாள்வீரர்களதுகூட்டத்தையும், துகைக்கும்- மிதித்துத் துவைக்கும்; (எ -று.)
இப்பாட்டின் நான்கு வாக்கியங்களால், அந்தப்பகதத்தன்யானை பாண்டவரது
நால்வகைச்சேனையையும் தன் உறுப்புகளால் அழித்தலை விளக்கினார். கரநுதி,
சித்ரம்-வடமொழிகள். வால்- வால மென்னும் வடசொல்லின் விகாரம்.
யானைத்தந்தத்துக்குப் பிறையுவமை- வளைவு வெண்மை ஒளிகளாலென்க. ‘
அவரவர் எதிர் எதிர்’ என்பதை முந்தினபிந்தின வாக்கியங்களுக்குங் கூட்டுக;
அவ்வவ்வீரர் பார்த்தும் பரிகாரமொன்றுஞ் செய்யமாட்டாமல் நிற்க என்க.
அபயமிடுதல் – பயப்படாதேயென்று வாக்குத்தத்தஞ் செய்யவேண்டுமென்று
பிரார்த்தித்தல், அடைக்கலங்கொள்ளல். ‘உரனுடைய
சித்திரவாலதிகொடொருபடிபுடைக்கும் வாசிவிழ விழ’ என்ற பாடம்,
சந்தத்துக்குப்பொருந்தாது. பி -ம்: அணியையே.
அமர் செய் பகதத்தனாலும், அவன் விடும் அருவிமத
வெற்பினாலும், அணி கெழு
தம படை இளைத்ததாக, விரகொடு தருமன் உணர்வுற்று,
வேறு ஒர் திசையினில்
இமிர் முரசம் எற்று பூசல் புரிதரும் இளையவன் நடத்து
தேரின் வலவனை,
நிமலனை, அனைத்தும் ஆன ஒருவனை, நினையினன்,
மனத்தினோடு பரவியே.54.- பகதத்தனாலும் அவன்யானையினாலும் தம்சேனை இளைத்ததுகண்டு
தருமன் ஸ்ரீகிருஷ்ணனை நினைத்தல்.
இப்படி), அமர்செய்- போர்செய்கிற, பகதத்தனாலும்-, அவன்
விடும்- அவன் ஏவின, அருவி மதம் வெற்பினால்உம்- மதநீரருவியையுடைய
மலைபோன்ற யானையினாலும், அணி கெழு தம படை – அழகுமிக்க தம்முடைய
சேனை, இளைத்தது ஆக – சோர் வடைய,- (அப்பொழுது), தருமன்-, விரகொடு
உணர்வு உற்று- நல்லுபாயமேற்பட ஆலோசித்து,- வேறு ஒர் திசையினில்-
வேறொருதிக்கிலே, இமிழ்முரசு அரற்று பூசல் புரிதரும் – ஒலியையுடைய
பேரிகைகள் ஆரவாரிக்கிற பெரும்போரைச் ( சஞ்சத்தகரோடு) செய்கிற,
இளையவன் – (தன்) தம்பியான அருச்சுனன், நடத்து -ஏறிச்செல்கிற, தேரின்-
இரதத்தின், வலவனை- சாரதியும், நிமலனை-குற்மற்றவனும், அனைத்துஉம்
ஆனஒருவனை – எல்லாச் சராசரங்களின் வடிவமான ஒருத்தனுமாகிய
கண்ணபிரானை, மனத்தினோடு பரவி- கருத்தினோடு துதித்து, நினையினன் –
நினைத்தான் [தியானித்தான்]; ( எ-று.)
நிமலன்- தான் கருமசம்பந்தமில்லாதவனாதல் மாத்திரமே யன்றி, தனக்குச்
சரீரமாகவுள்ள சராசரங்களின் வினைகளுந் தொடரப்பெறாதவன் “ஸர்வம்
விஷ்ணுமயம் ஜகத்” என்றபடி சகல சேதநாசேதநங்களின் உள்ளும் புறம்பும்
எம்பெருமான் வாசியறக் கலந்துநிற்றலின்,’ அனைத்துமான ஒருவன்’ என்றார்.
‘அனைத்து’ என்பது- சொல்லால் ஒருமையாயினும், பொருளால் பன்மைகுறிக்கும்.
‘தேரின் வலவனை, நிமலனை, அனைத்துமான வொருவனை’ என்றவற்றால்,
எம்பெருமானது சௌலப்பியமும், பரத்துவமும், ஜகச்சரீரகத்வமும் விளங்கும்,
‘இமிர்முரசமெற்றுபூசல்’ என்ற பாடம், சந்தத்துக்குப் பொருந்தாது;
‘இமிர்சமுரமெற்று’என்றிருப்பின் பொருந்தும். விறலொடுணர்வுற்று என்ற
பாடத்துக்கு- உறுதியாகஆலோசித்து என்க.
நினைவுற்ற பொழுது, எழுது முரசு உற்ற கொடி நிருபன்
நியமித்தபடி தரியலார்
முனை மட்க அமர் பொருது, செயம் முற்றி, உவகை பெறு
முகில் ஒத்த வடிவின் நெடுமால்,
புனை விற் கை அடு பகழி திசை சுற்றும் மறைய நனி
பொழி கொற்ற விசயனுடனே
வினை முற்றி, ‘உயர் தருமனுடன் இற்றை அரிய அமர்
விளைவுற்றது’ என உரைசெய்தான்:55.- சஞ்சத்தகரைவென்ற அருச்சுனனோடு தருமன்செய்தியை
ஸ்ரீக்ருஷ்ணன்கூறுதல்.
நினைவு உற்ற பொழுது – (அங்ஙனம் தருமபுத்திரன்)
தியானித்தவளவிலே,- எழுது முரசு உற்ற- எழுதப்பட்ட பேரிகைவடிவம்
பொருந்தின,கொடி – துவசத்தையுடைய, நிருபன் – தருமபுத்திரன், நியமித்தபடி-
கட்டளையிட்டபடி, தரியலார் முனை மட்க – பகைவர்கள் போரில் அழியும்படி,
அமர் பொருது – போர் செய்து, செயம் முற்றி – வெற்றி மிக்கு, உவகை பெறு-
மகிழ்ச்சி பெற்ற, முகில் ஒத்த வடிவின் நெடு மால் – மேகத்தை யொத்த
திருமேனியையுடைய பெருமைக்குணமுள்ள கண்ணபிரான்,- கை- (தன் ) கையில்,
புனை – தரித்த, வில்- வில்லினின்று, அடு பகழி – கொல்லும் அம்புகளை, திசை
சுற்றுஉம் மறைய- திக்குக்கள் முழுதும் மறையும்படி, நனிபொழி – மிகுதியாகச்
சொரிகிற, கொற்றம் விசயனுடனே – வெற்றியையுடைய அருச்சுனனோடு,-‘ இற்றை –
இப்பொழுது, வினை முற்றி உயர் தருமனுடன் – போர்தொழிலில் மிகப்பயின்று
[தேறிச்] சிறந்த யுதிட்டிரனோடு, (பகைவர்க்கு) அரிய அமர் உற்றது- பொறுத்தற்கரிய
போர் நேர்ந்தது,’ என – என்று, உரை செய்தான்- சொல்லியருளினான்; ( எ -று.)
கீழ் ஏழாம்பாட்டில் ” கோத்தருமன் பணித்ததற்பின்” என்றதற்கு ஏற்ப,
‘நிருபன் நியமித்தபடி’ என்றார், அருச்சுனனுக்க நியமித்தது, அவன் சாரதியான
கண்ணனுக்கும் அமையும், ‘நியமித்தபடி பொருது’ என்றதனால், கண்ணனது
அடியார்க்கெளிமை பெறப்படும். அர்ச்சுனனது வடிவத்தில் ஆவேசித்துத் தொழில்
செய்பவன் திருமாலே யாதலால், ‘அமர்பொருது செயமுற்றி’ எனப் போரும்
வெற்றியும் கண்ணன்மேலும் ஏற்றிக் கூறப்பட்டன. பி-ம்: பகழிமழை,
இதுமுதல் பன்னிரண்டு கவிகள்- பெரும்பாலும் ஒன்ற மூன்று ஐந்தாஞ்
சீர்கள்புளிமாங்காய்ச்சீர்களும், இரண்டு நான்காஞ் சீர்கள் கருவிளங்காய்ச்சீர்களும்,
ஆறுஏழாஞ் சீர்கள் புளிமாச்சீர்களுமாகிய எழுசீராசிரியச் சந்தவிருத்தங்கள்.
இவற்றிற்கு’தனதத்த தனதனன தனதத்த தனதனன தனதத்த தனன தனனா’
என்பதுசந்தக்குழிப்பு
ஒரு பத்தொடு உறழ் ஒருபது உறழ் பத்தொடு உறழ் ஒருபது
உடை எட்டு நிருபர் உயிர் நீ
தெரிவித்த பகழிகொடு மடிவித்து, வலிமையொடு சிலை
வெற்றி உற அமர் செய்தாய்;
முரண் அற்றது இவண்; இனி உன் உயிர் ஒத்த தமையனொடு
முனை புக்கு விரைவின் அணுகா,
வரை ஒத்த களிறு உடைய பகதத்தன் உயிர் கவர வருகிற்றி
நொடியில்’ எனவே,56.- பகதத்தனைக்கொல்லவருகஎன்று ஸ்ரீக்ருஷ்ணன்
அருச்சுனனிடங் கூறுதல்.
இதுவும், மேற்கவியும் – குளகம்.
(இ -ள்.) (கண்ணன் அருச்சுனனை நோக்கி), ‘ஒருபத்தொடு உறழ் ஒருபது
உறழ் பத்தொடு உறழ் ஒருபது உடை எட்டு விருதர்- எண்பதினாயிரம் வீரர்களது,
உயிர்- உயிரை, நீ-, தெரிவித்த பகழி கொடு- (பெரியோரால்) அறிவிக்கப்பட்ட
அம்புகளால், மடிவித்து – (இப்பொழுது) அழித்து, வலிமையொடு பலத்துடனே,
சிலை- வில்வித்தையில், வெற்றிஉற- சயமுண்டாம்படி, அமர் செய்தாய்-
போரைச்செய்தாய்; (ஆதலால்), இவண் – இவ்விடத்தில், முரன் அற்றது- (உனக்குப்)
பகை ஒழிந்தது; இனி – இனிமேல், (நீ), விரைவின் – துரிதமாக, முனை புக்கு –
போர்க்களத்தினுட் பிரவேசித்து, உன் உயிர் ஒத்த தமையனொடு அணுகா – உனது
உயிரைப் போன்ற தமையனான தருமனுடனே சேர்ந்து, வரை ஒத்த களிறு உடைய
பகதத்தன் உயிர் கவர – மலையைப்போன்ற யானையையுடைய பகதத்தனது உயிரை
(அவனுடம்பினின்றும்) பறிக்கும் பொருட்டு, நொடியில் – இந்நொடிப்பொழுதிலே,
வருகிற்றி – ( உடன்) வருவாய்,’ என – என்று சொல்லி,- (எ -று.)-‘ அணுகினான்’
என அடுத்தகவியில் முடியும். அன்று சஞ்சத்தகரில் மடிவித்தவர் எண்பதினாயிர
வீரரென்க.
உறழ்தல் – எண்கூட்டிப்பெருக்கல். பத்தோடு பெருக்கிய பத்து- நூறு,
அதனோடு பெருக்கிய பத்து – ஆயிரம், அதனோடு பெருக்கிய பத்து –
பதினாயிரம்:அதனையுடைய எட்டு – எண்பதினாயிரம். தெரிவித்த பகழி-
(கிருபனும்துரோணனும் பரமசிவனும் கண்ணபிரானும்) கற்றக்கொடுத்த
அஸ்திரசஸ்திரங்கள்.எக்காலத்தும் ஒருபடிப்பட நித்தியமாய் அழிவில்லாததான
உயிருக்குமடிதல்-உடம்பினின்று நீங்குதல். விருது- வலிமை, வீரம், வெற்றி;
அவற்றையுடையவர்-விருதர். பி -ம் : நிருபர்.
அரி ஒத்த பரி கடவி, மனம் ஒத்த இரதமிசை அமரர்க்கு
முதல்வன் மகனோடு,
எரி பற்றி வரும் அனிலம் என வெற்றி வரி வளையும் இதழ்
வைத்து, அவ் ஒரு நொடியிலே
கிரி முற்றும் அரிவது ஒரு கிளர் வச்ரம் என, உதய கிரி
உற்ற பரிதி எனவே,
கரி சுற்றும் வர விகட கரடக் கைம் மலையில் வரு கணை
விக்ரமனை அணுகினான்.57.- ஸ்ரீ க்ருஷ்ணன் அருச்சுனனோடு பகதத்தனை யணுகுதல்.
அரி ஒத்த (வேகத்தில்) வாயுவைப்போன்ற, பரி – குதிரைகளை,
கடவி-செலுத்திக்கொண்டு, மனம் ஒத்த இரதமிசை மனத்தையொத்த தேரின் மீது,
அமரர்க்கு முதல்வன் மகனோடு- தேவர்களுக்குத் தலைவனான இந்திரனுக்குப்
புத்திரனாகிய அருச்சுனனுடன், எரி பற்றி வரும் அனிலம் என – நெருப்போடு
தொடர்ந்து வருங் காற்றுப்போல, வெற்றி வரி வளைஉம் இதழ் வைத்து- சயத்துக்கு
(அடையாளமாக)க் கோடுகளையுடைய தன் சங்கத்தையும் வாயில்வைத்து
ஊதிக்கொண்டு, அ ஒரு நொடியிலே – அந்த ஒரு மாத்திரைப் பொழுதிலே,
(கண்ணன்),- கிரி முற்றுஉம் அரிவது ஒரு கிளர் வச்ரன் என –
மலைகளெல்லாவற்றையும் இறகறுப்பதொரு விளங்குகிற வச்சிராயுதத்தையுடைய
இந்திரன் போலவும், உதயகிரி உற்ற பரிதிஎன – உதய பருவதத்தின் மேற்
பொருந்தின சூரியன் போலவும்,- கரி சுற்றும் வர – யானைகள் (தன்னைச்)
சுற்றிலும்வர, விகடம் கரடம் கை மலையில் வரு – களிமயக்கத்தையும்
மதசலத்தையும்துதிக்கையையுமுடைய மலைபோன்ற யானையின் மீது வருகிற,
கணை விக்ரமனை -அம்புதொழிலிற் பராக்கிரமத்தையுடைய பகதத்தனை,
அணுகினான்- சமீபித்தான்; (எ- று.)
அரி – ஹரி; வடசொல்: (அகப்பட்டபொருள்களை) அடித்துக் கொண்டு
வருவது என்று பொருள். ஏறியவீரரது உள்ளக்கருத்தை யொத்துச் செல்லுவ
தென்பார், ‘மனமொத்த இரதம்’ என்றார்; மனோவேகம்போலச் செல்லுந் தேர்
என்றலும் ஒன்று. ( திருமால் வீற்றிருக்கும் இடமாதல்பற்றி) இதய கமலத்தை யொத்த
தேரென்றலும் அமையும். நெருப்பு- பகையழிக்கும் அருச்சுனனுக்கும், காற்று-
அவனைத் தூண்டித் தொழில் செய்விக்குங் கண்ணனுக்கும் வினையுவமை.
வடமொழி மகாபாரதத்திலும் இவ்வுவமை விவரித்துக் கூறப்பட்டுள்ளமை காண்க.
அவ்வொருநொடியிலே – தருமன் நினைத்தவுடன் மிகவிரைவிலே என்றபடி.
முன்றாமடி – யானை மீது வரும் பகதத்தனுக்கு உவமை. இந்திரன்,
ஐராவதயானையின்மேல் ஏறிவருதல்பற்றி, உவமை கூறப்பட்டான். இந்திரன்
செல்வ வாழ்க்கைபற்றியும், பரிதிதேககாந்தியும் பகையிருளொழிக்குந்தன்மையும்
பற்றியும் உவமையாவர். வச்ரன்என்னும் பெயரால் இந்திரனைக் குறித்தலை,
மேல் 65- ஆங் கவியிலுங் காண்க.பி-ம்: வச்ரமென, வச்ரியென, சக்ரனென,
கணைவித்தகனை.
அனிலத்தின் மதலையொடு வயிரத்து மலையும் முனை அமர்
விட்டு, முகிழ் நகை செயா,
‘இனி இற்றை அமரில், அரிது, எளிது ஒட்டி எதிர் பொருதல்’
என, மத்த கரியின் மிசையான்,
மனம் முற்றும் அழல் கதுவ, மொழி முற்றும் இடி நிகர, வலி
பட்ட சிலையை வளையா,
மினல் ஒத்த கணை பலவும் வசை அற்ற புகழுடைய
விசயற்குமிசை உதவினான்.58.- இதுவும் அடுத்த கவியும்- பகதத்தன் பொருது அருச்சுனனைத்
தளர்வுறச் செய்தமை கூறம்.
அப்பொழுது), மத்தகரியின் மிசையான்- மதம் பிடித்த
யானையின்மேலுள்ளவனான பகதத்தன், – அனிலத்தின் மதலையெடு – வாயுவின்
புத்திரனான வீமனுடனே, வயிரத்து மலையும் – பகைமையோடு போர்செய்கிற,
முனை அமர் – கொடியபோரை, விட்டு- ஒழித்து,- முகில் நகை செயா- அரும்புகிற
புன்சிரிப்பைச் செய்து,-‘ இனி-, இற்றை அமரில்- இன்றைப் போரில் எளிது ஒட்டி
எதிர் பொருதல்- சுலபமாகச் சபதஞ்செய்து (அவ்வாறே) எதிர்த்துப் போர்
செய்தல்,அரிது – அருமையானது, ‘ என – என்று எண்ணி,- மனம் முற்றுஉம் –
மனம்முழுவதிலும், அழல் கதுவ- கோபத்தீப்பற்றவும், மொழி முற்றுஉம்-
(வீரவாதமான) சொற்களெல்லாம், இடி நிகர- இடிமுழக்கத்தை ஒத்திருக்கவும், வலி
பட்ட சிலையை வளையா – உறுதி மிக்க வில்லை வளைத்த, மினல் ஒத்த கணை
பலஉம் – மின்னலைப்போன்ற[விளங்குகின்ற] அம்புகளநேகங்களை, வசை அற்ற
புகழ் உடைய விசயற்குமிசை- பழிப்பில்லாத கீர்த்தியையுடைய அருச்சுனன் மேலே,
உதவினான் – பிரயோகித்தான்;
‘தேவர்களை இருதிணையாகவுங் கூறலாம்’ ஆதலால், இங்கே ‘அனிலம்’ என
அஃறிணையாகக் கூறப்பட்டது. வைரம் என்னும் வடசொல், போலிபெற்றது. முனை
அமர்- சிறந்த போருமாம்; முந்தின போ ரெனினுமாம். மின்னல்- தொழிலாகுபெயர்.
விசயற்கு மிசை – உருபுமயக்கமாக, அருச்சுனனது மேலே யென்க. பி-ம்: வயிரித்து.
அவன் விட்ட சுடுகணைகள் கொடி மற்கடமும் நடுவண்
அற வெட்டி, அதி தவள மா
கவனத்தின் முடுகி அடு பரி கொத்தி, உடலில் இடு
கவசத்தை மறைய நுழையூ,
சிவனுக்கும் மலரில் உறை பிரமற்கும் உணர்வு அரிய
திகிரிக் கை வலவனையுமே
சவனத்தில் மிகு துயரம் உறுவிக்க, அவசம் மிகு தளர்வு
உற்ற தனு விசயனே,
இதுமுதல் மூன்று கவிகள் – குளகம்
(இ -ள்.) அவன் விட்ட – அப்பகதத்தன் பிரயோகித்த, சுடு கணைகள்-
பகையழிக்கவல்ல அம்புகள்,- (அருச்சுனனது), மற்கடம் கொடிஉம்- குரங்கின்
வடிவமெழுதின துவசத்தையும், நடுவண் அற- நடுவிலே அறும்படி, வெட்டி –
துணித்து, – அதி தவளம்- மிக வெண்மையானவையும், மா கவனத்தின் முடுகி
அடு- மிக்க நடையில் விசைகொண்டு பொருந்துபவையுமான, பரி- குதிரைகளை,
கொத்தி- பேதித்து,- உடலில் இடு கவசத்தை- உடம்பில் தரித்த கவசத்தை,
மறைய- (முழுவதும்) மறையும்படி, நுழையூ- நுழைந்து, சிவனுக்குஉம்-,
மலரில் உறை- தாமரை மலரில் வாழ்கிற, பிரமற்கு உம்- பிரமனுக்கும், உணர்வு
அரிய – அறிதற்கு முடியாத, திகிரிகை வலவனைஉம்- சக்கரத்தையேந்துங்
கையையுடைய (பார்த்த) சாரதியான கண்ணனையும், இ சவனத்தில்- இப்போரில்,
மிகு துயரம் உறுவிக்க- மிக்க துன்பமடையச்செய்ய,- அவசம் மிகு தளர்வு உற்ற-
தன்வசந் தப்புந்தன்மை மிகும்படியான தளர்ச்சியை யடைந்த, தனு விசயன்-
விற்போரில்வல்ல அருச்சுனன்,- (எ-று.)-, ‘தனதுசிலைகுனிவித்து’ என அடுத்த
கவியோடு தொடரும்.
மூன்றாம் அடியால், “பத்துடையடியவர்க்கெளியவன் பிறர்களுக்கரிய
வித்தகன்” என்ற இரண்டுதன்மைகளும் நன்குவிளக்கப்பட்டன. வலவனையும், உம்-
உயர்வுசிறப்போடு இறந்ததுதழுவிய எச்சம். சவனம் என்பதை ஸவநம் என்ற
வடசொல்லின்திரிபு என்க; வேள்வியென்று பொருளாம்: பொருதல் ‘களவேள்வி’
எனப்படுதல் காண்க. ‘ஜவநம்’ என்ற வடசொற்றிரிபு என்றால், வேகத்தால்மிக்க
தென்று காரணப்பொருள்படும். மர்க்கடம், அதிதவளம், கவசம், அவசம் –
வடசொற்கள். தநு – உடம்பையுடைய எனினுமாம். பி – ம்:- தவளவெங்.
சிவமுற்ற.வலவனையுமே.
உரம் மிக்க தனது சிலை குனிவித்து, மதியின் வகிர்
உவமிக்கும் அடு பகழியால்,
வரம் மிக்க தவள நிற மத வெற்பை எதிர் கடவி வரு
வெற்றி அவனிபதி நீள்
கரம் உற்ற சிலை, கவசம், அற வெட்டி, விடு கணைகள்
கணை விட்டு விலக, அவன் மா
சரம் விட்டு, ஒர் அயில் விசயன் இரதத்தின் வலவன்மிசை
தமரத்தினுடன் எறியவே,60.- மூன்றுகவிகள்-அருச்சுனன் தன் பராக்கிரமத்தைக் காட்டியமைகூறும்.
உரம் மிக்க – வலிமை மிகுந்த, தனது சிலை – தன் வில்லை,
குனிவித்து – வளைத்து, மதியின் வகிர் உவமிக்கும்- சந்திரனது பிளப்போடு
ஒப்புமைகூறப்படுகிற, அடு பகழியால் – அழிக்க வல்ல அர்த்தசந்திரபாணங்களால்-,
வரம் மிக்க- மேன்மை.மிகுந்த, தவளம் நிறம்- வெண்ணிறத்தையுடைய, மதம்
வெற்பை- மதத்தையுடைய மலைபோன்ற யானையை, எதிர் கடவி வரு- எதிரிற்
செலுத்தி வருகிற, வெற்றி அவனிபதி – சயத்தையுடைய அரசனான பகதத்தனது, நீள்
கரம் உற்ற – நீண்ட கையிற் பொருந்தின, சிலை- வில்லும், கவசம்- உடற்கவசமும்,
அற- துணிபடும்படி, வெட்டி- பிளந்து, விடு கணைகள்- (அவன் தன்மேல்) விடும்
ஆயுதங்களை, கணை விட்டு- எதிரம்பு கோத்து, விலக- (அருச்சுனன்) விலக்க,-
அவன்உன்- அப்பகதத்தனும், சரம் விட்டு- அம்பையொழித்து, ஓர் அயில்உம்- ஒரு
வேலாயுதத்தை, விசயன் இரதத்தின் வலவன்மிசை- அருச்சுனனது தேர்ப்பாகனான
கண்ணபிரான்மேல், தமரத்தினுடன்- ஆரவாரத்தோடு, எறிய- வீச,-(எ -று.)-“அயிலதனை*** தறிவித்து” என வருங் கவியோடு தொடரும்.
உவமித்தல் – ஒத்தல் அவநீபதி- வடமொழித்தொடர்; பூமிக்குத் தலைவன்.
விலக=விலக்க. சந்தவின்பம் நோக்கிவந்தது, பி-ம்: அவனிபதிதன். அவன்மா.
கஎறிகுற்ற அயில் அசுரர் உயிர் செற்ற அயில் அதனை
எதிர் முட்ட விடு பகழியால்
தறிவித்து, மகபதிதன் மகன், முக்கண் இறைவனொடு சரி
ஒத்து முறுவல் புரியா,
வெறி மத்த கரட முகபட சித்ர புகர் கொள் முக விகடக்
கைம்மலை அணி எலாம்
முறியத் தன் வரி வில் உமிழ் முனை பட்ட பகழி மழை
முகில் வர்க்கம் என முடுகினான்.
மகபதிதன் மகன் -இந்திரனுக்குக் குமாரனான அருச்சுனன்,-
எறிகுற்றஅயில்- (பகதத்தன் கண்ணன்மேல்) எறிந்த ஆயுதமும், அசுரர் உயிர்
செற்ற அயில்-(முன்பு) அசுரர்களது உயிரை அழித்த வேலும் ஆகிய, அதனை- ,
எதிர் முட்டவிடு பகழியால்- எதிரிலே தாக்கும்படி பிரயோகித்த அம்புகளால்,
தறிவித்து -துண்டுபடச்செய்து,- முக்கண் இறைவனோடு சரி ஒத்து- மூன்று
திருக்கண்களையுடைய தலைவனான சிவபிரானுடன் மிகவும் ஒத்து, முறுவல்
புரியா -கோபநகை செய்து, வெறி- கோபாவேசத்தையும், மத்த கரடம்-
மதநீர்கொண்டகபோலங்களையும், முகபடம் ஒத்த புகர்கொள் முகம்-
முகபடாத்தைபோன்றசெம்புள்ளிகளைக் கொண்ட முகத்தையும், விகடம் –
மதமயக்கத்தையும், கை-துதிக்கையையுமுடைய, மலை- மலைபோன்ற (பகதத்தன்)
யானைகளின், அணிஎலாம்- வரிசைகள் யாவும், முறிய – அழியும்படி, தன் வரி
வில் உமிழ்- தனது கட்டமைந்தவில்லினால் வெளிவிடப்பட்ட, முனைபட்ட பகழி
மழை- கூர்மை மிக்கஅம்புமழையை, முகில் வற்கம் என- மேகக்கூட்டம்போல,
முடுகினான்- விரைவிற்செலுத்தினான்; (எ- று.)
சிவபிரான் சிரித்துப் புரந் துடைத்ததனால்,’ இறைவனோடு சரி யொத்து
முறுவல் புரியா’ என்றார். சரியொத்து- முழுவதும் ஒத்து எனக் கருத்துக்
கொள்ளலாம். முகபடம் – யானைக்கு அலங்காரமாக முகத்தின்மேல் இடும்
போர்வை.முகத்தின் மேல் உத்தம விலக்கணமாகிய செம்புள்ளிகள் நிறைந்திருத்தல்,
செந்நிறப்பட்டாடைபோர்த்தது போன்ற உள்ளதனால், ‘முகபடமொத்த புகர் கொள்
முகம்’ எனப்பட்டது. அசுரர் – தேவர்க்கு எதிரானவர்; இச்சொல் பகைவருயிரைக்
கவர்பவ ரென்றுங்காரணப் பொருள்படும்: அஸு – உயிர். முனைபட்ட – பகழி –
போரில் மிகப்பயின்ற அம்பு எனினுமாம். எறி குற்றம் அயில் என்று பிரித்து –
நீங்கிய குற்றத்தையுடைய [குற்றம் நீங்கிய] வேல் என்றும் பொருள் கூறலாம்.
பி -ம்: பகழியிற். முகபட சித்ரபுகர்கொள்.
அணி கெட்டு, மத கரிகள் கரம் அற்று விழ, முதிய சிரம்
அற்று விழ, அருகு தாழ்
மணி அற்று விழ, நெடிய குடல் அற்று விழ, முழை கொள்
வயிறு அற்று விழ, உடல் எலாம்
துணிபட்டு விழ, விசிறு செவி அற்று விழ, வலிய தொடை
அற்று விழ, மகரிகைப்
பணி பெற்ற பணைகளொடு பதம் அற்று விழ, உழுது
படுவித்த பல பகழியே.
மத கரிகள் – மதயானைகள், அணி கெட்டு- ஒழுங்கு கெட்டு, கரம்
அற்று விழ- துதிக்கையறுந்துவிழவும், முதிய சிரம் அற்று விழ- பழமையான[முற்றின
வலிய] தலை யறுந்துவிழவும், அருகு தாழ் மணி அற்று விழ –
பக்கங்களில்தொங்குகிற மணிகள் அறுந்துவிழவும், நெடிய குடர் அற்று விழ –
மலைக் குகையை யொத்த [உள்விசாலமான] வயிறு அறுந்துவிழவும், உடல் எலாம்
துணி பட்டு விழ – உடம்புமுழுவதும் துண்டாகி விழவும், விசிறு செவி அற்று விழ-
(எப்பொழுதும்) வேகமாக வீசுகிற காதுகள் அறந்த விழவும், வலிய தொடை அற்று
விழ – வலிமையுடைய தொடை யென்னும் உறுப்புக்கள் அறுந்து விழவும், மகரிகை
பணிபெற்ற பணைகளொடு- பூணாகிய ஆபரணத்தைத் தரித்த தந்தங்களுடன், பதம்
– கால்களும், அற்ற- அறுபட்டு, விழவும், பல பகழி – (அருச்சுனனது) அநேக
அம்புகள், உழுது- நன்றாகப்பாய்ந்து, படுவித்த – அழித்தன; (எ -று.) பி -ம்:
உடல்களும்.
பெயர் பெற்ற கரி வயவர் பிணம் மிக்க அமரினிடை
பிறகிட்டு முறியும் அளவே,
சய சக்ரதரனை இவன் வழிபட்ட பொழுது தரு தழல்
உக்ரம் உடையது ஒரு வேல்
வயம் உற்ற சிலை விசயன் உடலத்தின் எறிவது தன்
வடிவத்தில் உற உதவினான்,
அயர்வு உற்ற உணர்வின் நலம் என-முத்தி முதல்வன்
என அருகு உற்ற ரத வலவனே.63. அப்போது பகதத்தன் திருமால் தந்திருந்த வேலை எறிய,
ஸ்ரீக்ருஷ்ணன் அதனை மார்பிலேற்றல்.
(இங்ஙனம் எய்யப்பட்ட அருச்சுனனம்புகளால்), பெயர் பெற்ற கரி
வயவர் – பிரசித்திபெற்ற யானை வீரர்கள், பிணம் மிக்க அமரினிடை-
பிணங்கள்மிகுந்த அப்போர்க்களத்திலே, பிறகு இட்டு முறியம் அளவே –
பின்னிட்டுஅழியும் அத்தருணத்தில்,- இவன்- பகதத்தன், சய சக்ரதரனை-
வெற்றியையுடைய சக்ராயுதத்தை யேந்திய திருமாலை, வழிபட்ட பொழுது –
(தான் முன்பு)பூசித்தகாலத்தில், தரு – (அப்பெருமானால் தனக்குக்)
கொடுக்கப்பட்ட, தழல் உக்ரம்உடையது ஒரு வேல்- நெருப்புப்போலுங்
கொடுமையுடையதொரு வேலாயுதத்தை,வயம் உற்ற சிலை விசயன் உடலத்தில்
எறிவது- வெற்றிபொருந்தின வில்லையுடையஅருச்சுனனது உடம்பின்மேல்
வீசியெறிய அவ்வேல், தன் வடிவத்திற் உற-(அவ்வருச்சுனனனுடம்பிற்படாமல்)
தன் உடம்பிற்படும்படி[தன்மார்பிற்பொருந்துமாறுஏற்று],- முத்தி முதல்வன் என
அருகு உற்ற – மோக்ஷத்துக்குத்தலைவனென்றுசொல்ல (அவ்வருச்சுனனது)
சமீபத்திற் பொருந்திய, ரதம் வலவன்- தேர்ப்பாகனானஸ்ரீ கிருஷ்ணபகவான்,
அயர்வு உற்ற உணர்வின் நலம் என – மனக்கவற்சியிலுதவிய
அறிவின் நற்பய னென்று சொல்லும்படி, உதவினான்- துணைசெய்தருளினான்;
(எ-று.)
பகதத்தன் தனக்கு முன்பு திருமால் கொடுத்திருந்ததொரு வேற்படையை
அப்பொழுது அருச்சுனனைக் கொல்லும்படி அவன் மார்பின்மேலெறிய, அதனைத்
திருமாலின் அவதாரமாகிய கண்ண பிரான் தன்மார்பில் ஏற்றுக்கொண்டன
னென்பதாம். அயர்வு – மனக்கவற்சி யென்றபொருளதா தலை, “உலகுடன் பெறினுங்
கொள்ளலரயர்விலர்” என்ற புறநானூற்றிலுங் காண்க. சக்ரதரன், உக்ரம் –
வடசொற்கள் திரியாது நின்றன: திரித்துப் பாடமோதினால், சந்தவின்பம் கெடும்.
பி-ம்: அளவில்
பருமித்த களிறு விடு பகதத்தன் எறியும் முது பகை செற்று
வரு கொடிய வேல்
மருமத்தினிடை முழுகு பொழுதத்தில், அது புதிய மணி
வர்க்கம் மிகு தொடையலாய்
நிருமித்தபடி தனது புய வெற்பின்மிசை ஒளிர, நிகர் அற்ற
கருணை வடிவைக்
கருமத்தின் முதலை இமையவர் சித்தமொடு தொழுது கரை
அற்ற புகழ் உரைசெய்தார்.64.- பகதத்தன்வேல் ஸ்ரீகிருஷ்ணன்மார்பில் மாலையாய்விளங்கத்
தேவர்கள்புகழ்தல்.
பருமித்த- பருமையுடைய, களிறு – யானையை, விடு –
செலுத்துகிற,பகதத்தன் -, எறியும்- வீசிய, முது பகை செற்று வருகொடிய வேல் –
பழமையானபகைவர்களை அழித்துவருகிற கொடுமையுடைய அந்தவேலாயுதம்,
மருமத்தினிடை முழுகுபொழுதத்தில்- (கண்ணபிரானது) மார்பினிடத்திலே
அழுந்தியபொழுதில், அது-, நிருமித்தபடி- (அப்பெருமான்) நியமித்தபடி, புதிய
மணிவற்கம் மிகு தொடையல் ஆய் – புதுமையான இரத்தினங்கள் மிக்கதொரு
ஆரவடிவமாய், தனது புயம் வெற்பின் மிசைஒளிர – அவ்வெம்பெருமானது
மலைகள் போன்ற தோள்களின்மேல் விளங்க, (அவ்வற்புதத்தைக் கண்டு),
இமையவர்- தேவர்கள், நிகர் அற்ற கருணை வடிவை – ஒப்பில்லாத திருவருளின்
மூர்த்தியானவனும், கருமத்தின் முதலை- (அவரவர்செய்த) வினைக்களுக்கெல்லாம்
காரணமானவனும் ஆகிய கண்ணனை, சித்தமொடு – மனக்கருத்துடனே, தொழுது-
வணங்கி. கரை அற்ற புகழ் – அளவில்லாத (அவனது) கீர்த்திகளை,
உரைசெய்தார் -எடுத்துக்கூறித் துதித்தார்கள்;
திருமால் தந்த வேலாதலால், அது அப்பெருமானது திருவவதாரமான
கண்ணபிரானை ஒன்றும் ஊறு செய்யமாட்டாது அவனது சங்கல்பத்தின்படி ஓர்
ரத்தினஹாரவடிவமாக அவன்மார்பில் விளங்கிற்றுஎன்க. இங்ஙனம் அன்பனான
அருச்சுனன்பக்கல்வரம்பு கடந்து கருணைசெய்ததுபற்றி, ‘கருணை வடிவு’ என்றார்.
பருமித்த – கல்லணையையுடைய எனினுமாம். இதுவரையிலும் எப்போரிலும்
அவ்வேல் எறியப்பட்டாரைக் கொல்லாது தவறியதில்லையென்ற தன்மையை,
இப்பாட்டில் ‘முதுபகைசெற்றுவரு கொடியவேல்’ என்றதனாலும், கீழ்ப்பாட்டில் ‘
தழலுக்ரமுடையதொருவேல் என்றதனாலும் விளக்கினார். திருமால் சகல
சேதநாசேதநங்களின் உள்ளும்புறம்பும் இருந்துகொண்டு அவற்றைக்கொண்டு
தொழில்செய்தலால், ‘கருமத்தின்முதல்’ என்றார்: இனி, ஊழ்வினைக்கும் முதற்
காரணமானவனென்றும்; கேள்வி தவம் முதலிய சற்கருமங்களுக்கெல்லாம்
தலைவனென்றும்; கருமத்திற்கேற்ற பயனையளிப்பவனென்றும் கூறலாம்.
இது நிற்க, யமனை நிகர் பகதத்தன் உயிர் கவர, இது
பக்வம்’ என, விசயனோடு
உதரத்தின் முழுது உலகு குடி வைத்த புயல் உரைசெய்து,
உறுதிக்கண் விடு பகழிதான்
இதயத்தினுடன் அருள, உயர் வச்ரன் மதலை தொழுது,
இரு பொற் கைம் மலர்கொடு கொளா,
அதிரத் தன் எதிர் களிறு பொர விட்ட நொடியில், அவன்
அகலத்தின் உருவ விடவே,65.- இதுமுதல் மூன்றுகவிகள்- குளகம்: இதுதான் பகதத்தனுயிரைக்கவர்தற்குச்
சமயமென்று ஸ்ரீகிருஷ்ணன் படைகொடுக்க, விசயன் அது கொண்டு
பகதத்தனைக் களிற்றுச்சேனையொடு வீழ்த்தியமை கூறும்.
இது நிற்க-; உத்ரத்தில் முழுது உலகு குட வைத்த புயல் – (தனது)
திருவயிற்றிலே உலகமுழுவதையுந் தங்கவைத்த மேகம்போன்ற கண்ணபிரான்,
விசயனோடு – அருச்சுனனுடன், யமனை நிகர் பகதத்தன் உயிர் கவர இது பக்வம்
என உரைசெய்து – யமனை யொத்த பகதத்தனது உயிரை வாங்குதற்கு இது தக்க
பொழுது என்றுசொல்லி, உறுதிக்கண் விடு பகழிதான் – தவறாதவிதத்திலே
பிரயோகிக்கபடுவதான அம்பை, இதயத்தினுடன் அருள- திருவுள்ளத்தோடு
(அவனுக்குக்) கொடுத்தருள,- உயர் வச்ரன் மதலை – சிறந்த இந்திரனது
புத்திரனானஅருச்சுனன், தொழுது- (கண்ணனை) வணங்கி, இரு பொன் கை
மலர் கொடு-அழகிய தாமரைமலர் போன்ற (தனது) இரண்டு கைகளாலும்,
கொளா-(அந்தஅம்பைப்) பெற்றுக் கொண்டு,- அதிர தன் எதிர் களிறு பொர
விட்டநொடியில் – அதிர்ச்சியுண்டாம்படி தன்எதிரிலே யானையைப்
போர்செய்தற்குச்செலுத்தின சமயத்தில், அவன் அகலத்தின் உருவ விட-
அப்பகதத்தனது மார்பில்ஊடுருவிச் செல்லும் படி (அதனைக்) பிரயோகிக்க,-
(எ -று.)-“பகதத்தனும் பட்டுஅவனூர்ந்த பகடும்பட்டு” என் மேல் 67-ஆங்
கவியோடு இயையும்.
இங்கே கண்ணன் கொடுத்தது, தனது நாராயணாஸ்திரம்; “விரிகடல்
வண்ணன்றன் வெவ்வாளி யேவப், புரிகடல்சூழ் பூதலத்துப்பொங்கிக்- கரியுண்,
மலைதுமிக்கு மால்யானை மன்னு பகதத்தன், தலைதுமியப் போயிற்றே தான்”
என்றபாரதவெண்பாவை அறிக. யமன் என்ற வடசொல்- (பிராணிகளை)
அடக்குபவனென்று பொருள்படும். யமனுவமை, தவறாமற் கொல்லுதற்கு.
“ஒருகையாற் கொள்ளார் கொடாஅர் குரவர்க்கு” என்ப வாதலால், இருகைகொடு
கொண்டான்; இங்ஙனகொள்ளுதல், உபசாரம். ‘இருபொற்கைம்மலர்கொடு’
என்பதை,மத்திமதீபமாக தொழுது என்பதனோடுங் கூட்டலாம். இதயம் – மனதில்
தோன்’றும்அன்புக்கு ஆகுபெயர். பொற்கை- பொன்னாபரணமணிந்த கையுமாம்.
பி – ம் :பகழியொன்று
பரி தத்த வரும் இரதமிசை தத்த, எதிர் முடுகு பகதத்தன்
உடல் முழுதும் நீடு
எரி தத்தி உகுவது என உகுவித்த குருதி நதி இடை
தத்த, வலி கெழுவு தோள்-
கிரி தத்த, மகுடமொடு தலை தத்த, ஒரு ரசத கிரி தத்தி
விழுவது எனவே
கரி தத்த, மறி அலகை கடை தத்தி உவகையொடு களம்
முற்றும் நடம் நவிலவே,
பரி – குதிரைகள், தத்த – தாவிச்செல்ல, வரும் – வருகிற,
இரதம்மிசை – (அருச்சனனது) தேரின்மேல், தத்த – பாயும்படி, எதிர் முடுகு –
எதிரிலே (யானையோடு) விரைந்துவருகிற, பகதத்தன்- பகதத்தனது, உடல்
முழுவதும்எம்- உடம்புமுழுவதிலும், நீடு எரி தத்தி உகுவது என – மிக்க
நெருப்புப்பற்றிச் சிந்துவதுபோல, உகுவித்த – சொரிவித்த, குருதி நதி –
இரத்தவாறு,இடைதத்த – அவ்விடத்திலே பெருகவும், வலி கெழுவு தோள்
கிரி – பலம் மிக்கமலைகள் போன்ற தோள்கள், தத்த – ஒடியவும், மகுடமொடு
தலை தத்த -கீரீடத்தோடு தலை சிதறவும், ஒரு ரசத கிரி தத்தி விழுவது என –
வெள்ளிமலையொன்று முறிந்துவிழுவதுபோல, கரிதத்த – (வெள்ளை) யானை
இறந்துவிழுவும், மறிஅலகை- (எதிர்ப்பட்டாரை) அகப்படுத்துந்தன்மையுள்ள
பேய்கள், கடை தத்தி-அவ்விடத்தில் நெருங்கி, உவகையொடு – மகிழ்ச்சியுடனே,
களம் முற்றுஉம்-போர்க்களம் முழுவதிலும், நடம் நவில – கூத்தாடவும், –
(எ – று.)-” பகதத்தனும்பட்டு அவனூர்ந்த பகடும் பட்டு” என அடுத்த
கவியோடு தொடரும்.
‘தத்த’ என ஒருசொல்லே பலவிடத்தும் வந்தது, சொற்பின் வருநிலையணி.
‘வினைப்பகுதிகள் வேண்டியபொருளை விளைக்கும்’ என வடநூலார் கூறிய
நியாயத்தால், இக்கவியில் ‘தத்த’ என்னுஞ்சொல்லுக்கு – சந்தர்ப்பத்திற்குஏற்பப் பல
பொருள் உரைக்கப்பட்டது. ரஜதம், நடம் – வடசொற்கள். பி -ம்: கெழுபுயக்
பகதத்தனும் பட்டு, அவன் ஊர்ந்த பகடும் பட்டு,
புடை சூழச்
சிகரக் கிரிபோல் அணி நின்ற சேனைக் களிறும்
பட்டமை கண்டு,
இகலின் பொழி கார் வெஞ் சிலைக் கை இமையோர்-
தலைவன் குமரனையும்,
புகழ்தற்கு அரிய பாகனையும், புகழார் இல்லைப் பூபாலர்
(அருச்சுனன்னெய்த கண்ணனம்பினால்), பகதத்தனும்–, பட்டு –
இறந்து, அவன் ஊர்ந்த பகடுஉம் – அவன் ஏறிச்செலுத்திய சுப்பிரதீக யானையும்,
பட்டு – இறந்து, புடை சூழ – (அவனது) பக்கங்களிற் சுற்றிலும், சிகரம் கிரி
போல் -உச்சியையுடைய மலைகள்போல, அணி நின்ற – ஒழுங்கு படநின்ற,
சேனைகளிறுஉம் – சேனையாகவுள்ள யானைகளும், பட்டமை – இறந்ததை,
கண்டு -பார்த்து, – பூபாலர் – அரசர்கள்,- இகலின் பொழி – வலிமையோடு
மழைபொழிகிற,கார் – காளமேகம்போன்ற, வெம் சிலை கை இமையோர் தலைவன்
குமரனைஉம் -கொடிய வில்லை ஏந்திய கையையுடைய தேவராசகுமாரனான
அருச்சுனனையும்,புகழ்தற்கு அரிய பாகனை உம் – துதிக்க முடியாத [அளவிறந்த
மகிமையுடைய]பார்த்தசாரதியான கண்ணனையும், புகழார் இல்லை – கொண்டாடிப்
பேசாதாரில்லை;(எ – று.)
இருதிறத்து அரசர்களிலும் எவரும் புகழாதவரில்லை: எல்லோரும்
புகழ்ந்தனரென்பதாம். உபமேயமாகிய யானையின் மேல்தவிசைக் கருதி,
உபமானமாகிய மலையை ‘ சிகரக்கிரி’ என விசேடித்துக் கூறினார். கார் –
இருவர்க்கும் உவமை; சிலைக்கு ஒப்பெனினுமாம். மனமொழிமெய்களுக்கு
எட்டாதமாயவனாதலால், ‘ புகழ்தற்கரிய பாகன்’ என்றார் இதனால்,
பகவானதுவாசாமகோசரத்வம் வெளியாம். பி -ம்: புகழாதில்லை.
இதுமுதற் பதினாறுகவிகள்- கீழ்ச்சருக்கத்தின் முப்பத்துநான்காங்கவி
போன்றஅறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தங்கள்.
விருதும், சங்கும், பல்லியமும், மேன்மேல் அதிர,
‘வில் போரில்
பொருது இன்று இவனைக் கொன்று அன்றிப் போகோம்’
என்னப் புடை சூழ்ந்தார்-
மருதும் சகடும் விழ உதைத்த வலவன் கடவ, வாயு எனக்
கருதும் புரவித் தேர் ஊரும் கழற் காவலன்மேல் காந்தாரர்.68.- அப்போது காந்தாரர் கொல்வதாக அருச்சுனனைப்
புடைசூழ்தல்
(அதன்பின்பு), காந்தாரார் – காந்தாரதேசத்து அரசர்கள், விருதுஉம்-
பிருதாவளிகளும், சங்குஉம்-, பல் இயம்உம் -அநேக வாத்தியங்களும், மேல்மேல்
அதிர – மிக அதிகமாகமுழங்க, ‘வில் போரில் – வில்லினாற் செய்யும் யுத்தத்தில்,
இன்று – இன்றைக்கு, பொருது- போர்செய்து, இவனை – இவ்வருச்சுனனை,
கொன்றுஅன்றி- கொன்றாலல்லாமல், போகோம்- விட்டுப்போகமாட்டோம்’,
என்ன – என்று(வீரவாதஞ்) சொல்லிக்கொண்டு,- மருதுஉம் சகடுஉம் விழ
உதைத்த -மருதமரங்களும் வண்டியுங் கீழ்விழும்படி (திருவடியால்) உதைத்திட்ட,
வலவன் -பாகனான கண்ணன், கடவ – செலுத்த,- வாயு என கருதும் –
(விசையால்)காற்றென்று எண்ணத்தக்க, புரவி- குதிரைகளைப் பூட்டிய, தேர் –
தேரின்மேல்,ஊரும் – ஏறிவருகிற, கழல் காவலன்மேல்- வீரக்கழலையுடைய
அருச்சனராசன்மேல், புடைசூழ்ந்தார்- நாற்புறத்துஞ் சூழ்ந்துகொண்டார்கள்;
(எ -று.)- விருது – வெற்றியைக்குறிக்கும் சின்னம் முதலிய ஊதுகருவிகளுமாம்.
பி -ம்:விறற்போரில்.
காந்தும் தறுகண் காந்தாரர் கடு வெங் கனல்போல் கண்
சிவந்து, அங்கு
ஏந்தும் சிலையால் சர மழை பெய்து, எழிலிக் கணம்போல்
எதிர் ஊன்றி,
சாந்தும் புழுகும் கமழ் வாகுச் சகுனி தனயர் தலைப்போரில்
சேர்ந்து அன்று இறந்தார், விடசெயனும் செயனும் எனும்
போர்ச் செய வீரர்.69.- அருச்சுனனம்பால் சகுனிதனயரிருவர் இறத்தல்.
காந்தும்- கோபித்துவந்த, தறுகண்-அஞ்சாமையையுடைய, காந்தாரர்-
காந்தாரதேசத்து அரசருள், சாந்துஉம் புழுகுஉம் கமழ் வாகு சகுனி தனயர்-
சந்தனமும் கஸ்தூரிப்புழுகும் வாசனைவீசுகிற தோள்களையுடைய சகுனியின்
புத்திரர்களான, விடசெயன்உம் செயன்எம் எனும் – வ்ருஷஜயன் ஜயன் என்னும்
பெயருடைய, போர் செய வீரர் – போரில் வெற்றியையுடைய வீரர்கள், அன்று –
அப்போது, கடு வெம் கனல்போல் – மிகக்கொடிய நெருப்புப்போல, கண் சிவந்து-
(கோபத்தாற்) கண்கள் சிவக்கப் பெற்ற, தலை போரில் – போர்க்களத்தின்
முன்னிடத்தில், சேர்ந்து – சென்றுசேர்ந்து, அங்கு – அவ்வடத்தில், எழிலி
கணம்போல்- மேகக்கூட்டம்போல, ஏந்தும் சிலையால் கணை மழை பெய்து-
(கையில்) எடுத்த வில்லினால் அம்புமழையைச்சொரிந்து, எதிர்
ஊன்றி-( அருச்சுனன்) எதிரில் நிலைத்துநின்று, இறந்தார்- (அவன் எய்த
அம்புகளால்) அழிந்தார்கள்; ( எ -று.)
‘கணமழை’ என்ற உருவகம், ‘எழிலிக்கணம்போல்’ என்ற உவமைக்கு
அங்கமாகவந்தது, சகுனிக்கு இப்பெயர்களுடன் புத்திரர் இருவர் இருந்ததாக
வியாசபாரதத்தால் தெரியவில்லை பி-ம்: கனல்போலவியக்கணப் போதில்.
சரமழை.எதிரூன்ற. விடசேனன். எனும்பேர்.
சஞ்சத்தகர் விண் குடியேறத் தானே அடர்த்தான்;
பகதத்தன்
விஞ்சைக் கடவுள் சிகரம் நிகர் வேழத்துடனே
விழப் பொருதான்;
வஞ்சச் சகுனி மைந்தரையும் மலைந்தான்; விசயன்
வடிக் கணையால்
எஞ்சப் பொருத நரபாலர்க்கு இலக்கு ஏது, அன்று
அங்கு எண்ணுதற்கே!70.-கவிக்கூற்று: அருச்சுனன் வீரர் பலரையுங் கொன்றதைக்
குறித்த பாராட்டு.
அன்று – அன்றைத்தினத்தில்,- விசயன்- அருச்சுனன், தான்ஏ –
தானொருவனாகவே [பிறர்துணையில்லாமலே], சஞ்சத்தகர் விண்குடி ஏற – (அநேக)
ஸம்சப்தகர்கள் வீரசுவர்க்கத்தில் சென்று தங்கும்படி, வடிகணையால் – கூர்மையான
அம்புகளால், அடர்ந்தான் – அழித்தான்;( அன்றியும்), பகதத்தன்-, விஞ்சை கடவுள்
சிகரம் நிகர் – வித்தியாதரராசனான குபேரனது மலையாகிய கைலாசத்தை யொத்த,
வேழத்துடனே – வெள்ளை யானையுடனே, விழ- இறந்துவிழும்படி, பொருதான் –
போர்செய்தான்; (மற்றும்), வஞ்சம் சகுனி மைந்தரைஉம்’- வஞ்சனையையுடைய
சகுனியின் குமாரர்களையும், மலைந்தான்- அழித்திட்டான்; (ஆதலால்), எஞ்ச
பொருத நரபாலர்க்கு – பகையழியும்படி போர்செய்தே (தருமன் முதலிய)
அரசர்களுக்கு, அங்கு- எதிர்ப்பக்கத்தில், எண்ணுதற்கு- (ஒருபொருளாக)
மதிக்கப்படுதற்கு, இலக்கு- ஏற்றகுறி, ஏது-யாது உள்ளது? (எ – று.)
அருச்சுனொருவனே இத்தனைபெயரை அன்றைக்கு அழித்திட்டனனென்றால்,
மற்றைத் தருமன் முதலியோர்க்கெல்லாம் எதிர்த்து அழித்திடுதற்கு ஏற்ற
இலக்காவார்எவருமில்லை யென்பதாம். சுவர்க்கம் மேலிடத்திலுள்ளதாதல்பற்றி,
‘குடியேற’எனப்பட்டது. சீவகசிந்தாமணியில் ” விஞ்சைக்கிறைவன்” என்ற விடத்து,
‘விஞ்சை-குணப்பண்பு பண்புடைப்பொருள்மேல் நின்ற ஆகுபெயர்’ என
உரைத்தார்நச்சினார்க்கினியர். வித்யாதரர் – பதினெட்டுத் தேவகணங்களுள்
ஒருசாதியார்;இவர்களுக்கும் யக்ஷர்கந்தருவர் முதலிய மற்றஞ்சிலைவகையார்க்கும்
குபேரன்அரசனாதலை, கீழ்ப்புட்பயாத்திரைச் சருக்கம், மணிமான்வதைச் சருக்கம்
இவற்றிற் கூறியவற்றாலும் அறிக. அவனுக்கு இடமான அளகாபுரி கைலாசமலையின்
ஒருசாருள்ள தென்று புராணம் கூறும். சிகரம் என்ற மலையுச்சியின் பெயர்- இங்கே,
மலைக்குச் சினையாகு பெயர். இனி, விஞ்சைக்கடவுள் சிகரம் என்பதற்கு-
வித்யாதரர்களுக்கு இருப்பிடமான வெள்ளிமலை யென்றுங்கொள்ளலாம். ஈற்றடிக்கு-
போர்செய்தது அழிந்த அரசர்மிகப்பலரென்று கருத்துக் கொள்வாருமுளர்.
இங்கு இப்படி போர் உடன்று எழுந்த சகுனி இவன்
கை எரிகணையால்
பங்கப்பட்ட அரசு ஒழிய, படாத அரசர் பலரோடும்,
சிங்கத் தனி ஏறு எனச் செம் பொன் தேர்மேல்
நின்ற தருமனுடன்
புங்கப் படையால் அமர் புரியப் புகுந்தான், மதுகைப்
புலி போல்வான்.–71.- இதுஇங்ஙன் நிற்க, மற்றொருபால் சகுனி தருமனுடனே
போர்புரியப்புகுதல்.
இங்கு – இவ்விடத்தில் [அருச்சுனனெதிரில்], (நடந்த செய்தி), இ
படி -இவ்விதமாம்! (மற்றொருபக்கத்தில்), போர் உடன்று எழுந்த- போர்
செய்தற்குக்கோபித்துப் புறப்பட்ட, மதுகை புலி போல்வான் – (பராக்கிரமத்தில்)
வலிமையுடையபுலியை யொப்பவனான, சகுனி-, இவன் கை எரிகணையால்
பங்கப்பட்ட அரசுஒழிய படாத அரசர் பலரோடுஉம் – இவ்வருச்சுனனது
கையாலெய்யப்பட்டஅழிக்கவல்ல அம்புகளால் அழிவடைந்த அரசர்கள் தவிர
அழிவடையாத பலஅரசர்களுடனே (கூடி), தனி சிங்கம் ஏறு என செம்பொன்
தேர்மேல் நின்றதருமனுடன் – ஒப்பற்ற ஆண்சிங்கம்போலச் சிவந்த
பொன்மயமான தேரின்மீதுநின்ற யுதிட்டிரனுடனே, புங்கம் படையால் அமர்
புரிய – அம்புகளாகியஆயுதங்களால் போர்செய்தற்கு, புகுந்தான் – சென்றான்;
(எ-று.)
தருமனுக்கும் சகுனிக்கும் வலிமை முதலியவற்றில்உள்ள ஏற்றத்தாழ்வு
தோன்ற,சிங்கத்தையும் புலியையும் உவமை கூறினார். பலரோடும்புகுந்தான் என்க.
தனி நின்றஎன்றும் இயைக்கலாம். புங்கப்படை – அம்புகளின் தொகுதியுமாம்;
தொகுதியாகியஆயுதங்களுமாம்.
சோரத்துடன் நீ பொருது அடர்த்த சூது அன்று; இவை
மெய் துளைத்து உருவும்
வீரப் பகழி; உனை இவற்றால் வெல்வேன்!’ எனப்
போர் வில் வாங்கி,
ஈரக் கருணை முகத்து அண்ணல் எய்தான்; அவற்றுக்கு
எட்டாமல்
பேரப் பேரத் தேர் கடவி, பின்னிட்டவர்க்கு முன் இட்டான்.72.- தருமபுத்திரனை கணை தூவ, சகுனி இலக்காகாமற் பின்னிடுதல்.
(அதுகண்டு), ஈரம் கருணை முகத்து அண்ணல் – குளர்ச்சியான
அருள் (வெளித்தோன்றும்) முகத்தையுடைய அரசனான யுதிஷ்டிரன்,
(சகுனியைப்பார்த்து),’ நீ சோரத்துடன் பொருது அடர்த்த சூது அன்று – நீ
வஞ்சனையோடு போர்செய்து வென்ற சூது போ ரன்று (இது)! இவை-, மெய்
துளைத்து உருவும் வீரம் பகழி- உடம்பைத் துளைசெய்து ஊடுருவுகிற
வலிமையையுடைய அம்புகள் [சூதாட்டம் ஆடும் பாசிகைகள் அல்ல]! உனை –
(முன்பு என்னைச் சூதுகருவியால் வென்ற) உன்னை, இவற்றால் வெல்வேன் –
(இப்பொழுது) இம்மோது கருவிகளால் சயித்திடுவேன்,’ என – என்று
(வீரவாதங்), கூறி, போர்வில் வாங்கி – போருக்குரிய வில்லைவளைத்து, எய்தான்-
(பல அம்புகளைப்) பிரயோகித்தான்; ( உடனே சகுனி), அவற்றுக்கு எட்டாமல் –
அவ்வம்புகளுக்கு இலக்காகாதபடி, பேர பேர தேர் தடவி – பிற்படப் பிற்படத்
(தன்)தேரை விசையோடு செலுத்திக் கொண்டு, பின் இட்டவர்க்கு முன் இட்டான்
– புறங்கொடுத்தவர்களுள் முந்திச்சென்றவனானான்; (எ – று.)
‘இது சூது போரன்று, மோதுபோர்: என் கையிலிருப்பவை பாசிகையல்ல,
பகழிகள்’ என்றது – விலக்கணி ; இதனை வடநூலார் ப்ரதிஷேதாலங்காரம்
என்பர்;பிரசித்தமானதாகியும் அபிப்பிராயத்தோடு கூடியு மிருக்கின்ற விலக்கைச்
சொல்லுதல்,இதன் இலக்கணம். இதில், அம்பிற் சூதின்தன்மையில்லாமை
பிரசித்தமாக விருக்கவும்,’ அன்று’ என்னும் விலக்கு, நீ சூதாட்டத்தன்றி அம்பிற்
சமர்த்தனல்லை யென்றும்இகழ்ச்சியை உட்கொண்டிருக்கின்றது. ‘அவற்றிற்கு
எட்டாமல்’ என்றும்,’பின்னிட்டவர்க்கு முன்னிட்டான்’ என்றுங் கூறினது-
சமத்காரம். தருமனம்புகளுக்குஎட்டாமலிருக்கவும், முன்னிடவும்- இவையல்லது
வேறு உபாயமில்லையென்றவாறு.
உடனே வந்து பொரு நிருபர் ஒருவர்க்கு ஒருவர்
உதிட்டிரன் கை
விடம் நேர் கணையால் ஏவுண்டு விளிந்தார்; ஒழிந்தார்,
‘வெஞ் சமத்தில்
கடன் ஏது எமக்கு!’ என்று ஊர் புகுந்தார்; காலைச்
செந்தாமரை மலர்ந்த
தடம் நேர் என்ன நிறம் பெற்றது, அப்போது
அந்தச் சம பூமி.73.- சகுனியுடனேவந்து தருமனுடன்பொருத அரசருள்
அழிந்தவர்போக மற்றையோர் ஊர்புகுதல்.
உடனே- அச்சகுனியுடனே, வந்து-, பொரு- போர்செய்த நிருபர் –
அரசருள், ஒருவர்க்கு ஒருவர்- ஒருவரினும் ஒருவர், உதிட்டிரன் கை விடம் நேர்
கணையால் – தருமன் கையிலுள்ள விஷத்தையொத்த அம்புகளால், ஏவுண்டு –
(மிகுதியாக) எய்யப்பட்டு, விளிந்தார் ஒழிந்தார் – இறந்தவர்கள் போக
மிச்சமானவர்கள். வெம் சமத்தில்- கொடியபோரில், தமக்கு கடன் ஏ என்று-
(புறங்கொடுத்தல்) தமக்கு முறைமையே யென்று கருதி, ஊர் புகுந்தார் -(தம்)
ஊரையடைந்தார்கள்; அ போது – அப்பொழுது, அந்த சம பூமி – அந்த
யுத்தகளம்,காலை செம் தாமரை மலர்ந்த தடம் நேர் என்ன – உதய காலத்திற்
செந்தாமரைமலர் மலரப்பெற்ற தடாகம் ஒப்பென்னும்படி, நிறம் பெற்றது –
விளக்கமடைந்தது; (எ – று.)
பலமுறை தோற்று ஓடிப் பழகிவிட்டதனால், நிருபர்புதுமை கருதி நாணாமல்
தமக்குக் கடனேயென்று ஊர்புகுந்தன ரென்க. செந்தாமரைமலர்ந்த தடம்,
இரத்தத்தால் செந்நிறம் பெறுதற்கு உவமையாதலுமாம். இறந்த அரசர்களது
இரத்தத்தோடு கீழ் விழுந்த முகங்களைச் செந்ததாமரைமலர்க ளென்னலாம்.
ஸமபூமி- (போர்செய்தற்கு ஏற்ப) மேடுபள்ளமில்லாமல் எங்குஞ் சமமாகவுள்ள
குருக்ஷேத்திரமென்றலுமாம். பி -ம்: எய்வுண்டு.
ஆசாரியனும், திருமகனும், அடல் வேல் அங்கர்
பெருமானும்,
தூசு ஆர் உரகக் கொடி நெடுந் தேர்த் துரியோதனனும்,
தம்பியரும்,
வீசாநின்ற மாருதம்போல் மேல் வந்து அடுத்த வீமனுடன்
கூசாது எதிர்ந்து, வெம் பகழி கோத்தார், விசும்பைத் தூர்த்தாரே.74.- மற்றொருபக்கத்தில் துரோணன்முதலியோர் வீமனுடன் எதிரிடுதல்
(மற்றொருபக்கத்தில்), ஆசாரியன்உம்- துரோணனும், திருமகன்உம்-
(அவனது) சிறந்தகுமாரனான அசுவத்தாமனும், அடல்வேல் அங்கர் பெருமான்உம்-
வலிமையையுடைய வேலாயுதத்தையுடைய அங்கதேசத்தார்க்குத் தலைவனான
கர்ணனும், தூசுஆர் – சீலையிற்பொருந்தின, உரகம் – பாம்பின் வடிவத்தையுடைய,
நெடுந்தேர்- பெரிய தேரையுடைய, துரியோதனனும்-, தம்பியர்உம் – (அவன்)
தம்பிமார் பலரும்,- விசாநின்ற மாருதம் போல் மேல் வந்த அடுத்த வீமனுடன்-
வீசுகிற பெருங்காற்றுப்போலத் தம்மேல் வந்து நெருங்கிய வீமசேனனுடனே,
கூசாதுஎதிர்ந்து – கூச்சமில்லாமல் எதிரிட்டு, வெம் பகழி கோத்தார் – கொடிய
அம்புகளைத் தொடுத்து, விசும்பை தூர்த்தார்- (அவற்றால்) ஆகாயத்தை
நிறைத்தார்கள்; ( எ – று.)
இவர்களுக்கு வீமனை யெதிர்க்கவல்ல ஆற்றல் இன்மைதோன்ற ‘கூசாது
எதிர்ந்து’ என்றார்: ‘விசும்பைத் தூர்த்தார்’ என்றதனால், அவர் எய்த அம்புகள்
வீமனை ஒன்றுஞ் செய்யமாட்டாமை தொனிக்கும்; அத்தன்மையை அடுத்த கவியில்
விளங்கக் காண்க. சிவபிரானது அருளாற் பிறந்த புத்திரனாதலால், அசுவத்தாமன்
‘திருமகன்’ எனப்பட்டான். இங்கே வேலைக்கூறி, மற்றையபடைகளையெல்லாம்
உபலக்ஷணத்தாற் பெறவைத்தார்; இனி, பகையைத் தவறாது அழிக்கவல்லதொரு
வேற்படையைக் கர்ணன் இந்திரனிடம் பெற்றுள்ளதனால், ‘அடல்வே
லங்கர்பெருமான்’ என்றாரெனினுமாம்.
கெடுமோ கருடன் உரகர்க்கு? கிரி வெஞ்
சரபம்தனை அரிகள்
அடுமோ? சக்ரபாணியுடன் அமர் உந்துவரோ
அசுரேசர்?
நெடு மேருவின் முக் குவடு ஒடித்தான் நேயப்
புதல்வன் பேர் உடலில்
படுமோ, தொடுத்த பகழி? பருப்பதம் சேர்
மழைபோல் பாறினவே!75.- பகைவரெய்த அம்புகள் வீமன்மேற்படாமல் சிதறினமை.
உரகர்க்கு – சர்ப்பராசர்க்கு, கெருடன்-, கெடும்ஓ- அழிவனோ?
கிரிவெம் சரபந்தனை – மலையிலுள்ள கொடிய சரபத்தை, அரிகன்- சிங்கங்கள்,
அடும்ஓ – கொல்லமாட்டுமோ? அசுர ஈசர் – அசுரத்தலைவர்கள் , சக்ரபாணியுடன்
– சக்கராயுதத்தையேந்திய திருக்கையையுடைய திருமாலுடனே, அமர் உந்துவர்ஓ-
போரை முடிக்க வல்லரோ? (அவைபோல),- நெடு- உயர்ந்த, மேருவின் –
மேருமலையின் , மு குவடு- மூன்று சிகரங்களை, ஒடித்தான்- ஒடித்தவனான
வாயுவின், நேயம் புதல்வன் – அன்புள்ள புத்திரனான வீமனது, பேர் உடலில்-
பெரிய உடம்பில், தொடுத்த பகழி – (பகைவர்) ஏவிய அம்புகள், படும்ஓ –
தைக்கமாட்டுமோ? (மாட்டாமல்), பருப்பதம் சேர் மழை போல்- கல்மலைமேல்
விழுந்த மழைத்துளிகள்போல, பாறின- (உள்ளிறங்குதலின்றி) வெளிச்சிதறின;
(எ- று.)
வீமனைப் பகைவர் வெல்லமாட்டாமைக்குத் திருஷ்டாந்தங் காட்டியதனால்,
எடுத்துக்காட்டுவமையணி. சரபம் – எட்டுக்கால்களையுடையதும்,
சிங்கத்தைக்கொல்லவல்லது மான தொரு மிருகவிசேடம்: இதனைப்
பறவையென்பாரும் உளர். வீமனது மிக்கவலிமையை விளக்கும்பொருட்டு, அவனை
‘நெடுமேருவின் முக்குவடொடித்தான் நேயப்புதல்வன்’ என்றது; கருத்துடையடை
கொளியணி: நான்காமவடி – உவமையணி. ஓகாரங்கள் – எதிர்மறை.
பொல்லா அவுணர் வைகிய முப்புரம் நீறு எழ,
அன்று அரன் வளைத்த
வில்லாம் என்ன வலிய விறல் வில் ஒன்று எடுத்து,
விறல் வீமன்,
எல்லா மன்னவரும் ஊர்ந்த எல்லா இரதங்களும்
இமைப்பின்
வல்லான் எறிந்த பம்பரம்போல் சுழலும்படி, கால்
வளைத்தானே.76.- நான்குகவிகள் – எதிர்த்தவர்கள் அஞ்சுமாறும் புகழுமாறும்
வீமன் தன்வலிமைகாட்டியதைக் கூறும்.
(அப்பொழுது), வீறல் வீமன் – வலிமையுடைய வீமசேனன்,
பொல்லாஅவுணர் வைகிய – தீக்குணமுடைய அசுரர்கள் தங்கிய, மு புரம் –
மூன்றுபட்டணங்கள், நீறு எழ – சாம்பலாம் படி, அன்று – அக்காலத்தில், அரன்
வளைத்த – சிவபிரான் வளைத்த, வில் ஆம் என்ன – (மேருமலையாகிற) வில்லாகும்
(இது) என்னும் படி, வலிய – வலிமையையுடைய, விறல் – வெற்றியைத்தருகிற, வில்
ஒன்று -ஒரு வில்லை, எடுத்து-, -எல்லா மன்னவர்உம்ஊர்ந்த- எல்லாவரசர்களும்
ஏறிவந்த, எல்லா இரதங்கள்உம்- தேர்களெல்லாம், இமைப்பின் -கண்ணிமைப்
பொழுதிலே, வல்லான் எறிந்த பம்பரம் போல் சுழலும்படி – வல்லவன்
சுழற்றியெறிந்த பம்பரம் போலச் சுற்றும்படி, கால் வளைத்தான் – (இரண்டு)
கோடியையும் வணக்கினான்; ( எ -று.)
உவமையணி.பொல்லா – பொல்லாமை என்ற எதிர்மறைப்பண்பின் அடி;
இதற்கு உடன்பாடு – பொற்பு, அல்லது பொலிவு; (பொன் என்னுஞ் சொல்
தொல்காப்பியவிதியால் ஈறுதிரிந்துநின்ற ‘பொல்’ என்பது- இவற்றில் பகுதியோ
மெனஉய்த்துணர்க.) கால்- வில்லின் தண்டம்.
ஒன்று முதலாப் பல பகழி ஓர் ஓர் தொடையில்
தொடுத்து ஏவி,
அன்று முதன்மை உற மலைந்த அரசர்
உடலம்தொறும் மூட்டி,
‘இன்று முதல் ஆயோதனத்தில் ஏறோம்’
என்னும் படியாகக்
கொன்று, முதல், பின் வரும் உரகக் கொடியோன்
மனமும் கொதிப்பித்தான்..
(வீமன்),- முதல்- முதலில் ஒன்று முதல் ஆ பல பகழி – ஒன்று
முதலாக அநேகம்அம்புகளை, ஓர் ஓர் தொடையில் தொடுத்து ஏவி – ஒவ்வொரு
தொடுக்குந்தரத்திலே பிரயோகித்துச் செலுத்தி, (அவற்றை), இன்று முதல்
ஆயோதனத்தில் ஏறோம் என்னும்படி ஆக – இன்றைத்தினம் முதல் [இனி]
போரில்எதிர்த்திடோம்’ என்று கருதும்படி, அன்ற முதன்மை உற மலைந்த
அரசர் உடலம்தொறுஉம் மூட்டி -அப்பொழுது சிறப்பு பொருந்தப் போர்செய்த
அரசர்களதுஉடம்பெல்லாம் உட்புகுவித்து, கொன்று- (அவர்களை) அழித்து, –
பின்-பின்பு. வரும்உரகக்கொடியோன் மனம்உம் கொதிப்பித்தான் – வருகிற
துரியோதனனது மனத்தையும் (தன்பெருமிதத்தால்) கொதிக்கச்செய்தான்; (எ -று.)-
முதன்மை- முதலாந்தன்மை;முன்னிடுதல். ஊட்டி என்றும் பிரிக்கலாம்.
ஆயோதம் – வடசொல். பி -ம்:முதன்மையுடன்.
கொதித்தான் அரசன்’ என வரி வில் குனித்தார், இளைஞர்;
குனித்தது கண்டு,
அதிர்த்தான், வீமன் தன் கணையால் அறுத்தான், வில்லும்
அணி நாணும்;
‘விதித்தான் வரினும் வீமனுடன் விற் போர் புரிதல்
அரிது!’ என்று
மதித்தார், தம்முன் நினைத்த எல்லாம் முடிக்கும் சமர
வரி வில்லார்.
அரசன் கொதித்தான் – என துரியோதனன் மிகக் கோபித்தா
னென்று அறிந்து, இளைஞர்- (அவன்) தம்பிமார், வரிவில் குனித்தார்-
(வீமனெதிரில்)கட்டமைந்த வில்லவளைத், தார்கள்; குனித்தது கண்டு- (அவர்)
வளைத்ததைப்பார்த்து, வீமன் அதிர்த்தான்- ஆரவாரித்து, தன் கணையால்- தனது
அம்புகளால்,வில்உம் அணி நாண்உம்- (அவர்கள்) வில்லையும்(அதிற்) பொருந்திய
நாணியையும்,அறுத்தான்-; (அறுக்கவே), தன் முன் நினைத்தது எல்லாம் முடிக்கும்
சமரம் வரிவில்லார் – தங்கள் தமையனான வல்ல போருக்குரிய கட்டமைந்த
வில்லையுடையஅத்தம்பிமார், ‘விதி தான் வரின்உம் -(உலகத்தைப்) படைத்தவனான
பிரமதேவன்தானே வந்தாலும், வீமனுடன் வில்போர் புரிதல் அரிது – (அவனுக்கும்)
வீமனோடுவில்யுத்தஞ்செய்தல் முடியாது’ என்ற மதித்தார் – என்று எண்ணினார்கள்;
(எ – று.)-விதித்தான் – இன்னபடி நடக்க வேண்டுமென்று நியமித்த முதற்
கடவுளுமாம்.
நின்றார் நின்றபடி, கொடித் தேர் நிருபன்தனையும்,
இளைஞரையும்,
வன் தாள் வரி வில் குருவினையும், மைந்தன்தனையும்,
கன்னனையும்,
பொன் தாழ் மார்பின் பல் படைக் கைப் பூபாலரையும்,
கொல்லாமல்
கொன்றான்-வாயுகுமரன் தன் கோலாகல வெங் கொடுங்
கணையால்.
வாயு குமரன்- வீமன், தன் – தனது, கோலாகலம்-
ஆரவாரத்தையுடைய, வெம் கொடு கணையால்- மிகக்கொடிய அம்புகளால்,
கொடிதேர் நிருபன் தனைஉம்- கொடி கட்டிய தேரிலுள்ள துரியோதனராசனையும்,
இளைஞரைஉம்-(அவனது) தம்பிமாரையும், வல் தாள் வரி வில் குருவினைஉம் –
வலிய முயற்சியையும் கட்டமைந்த வில்லையு முடைய துரோணாசாரியனையும்,
மைந்தன்தனைஉம் – (அவன்) மகனான அசுவத்தாமனையும், கன்னனையும்-, பொன்
தாழ் மார்பின் – பொன்னாரந் தொங்குகிற மார்பையும், பல படை கை- அனேக
ஆயுதங்களை யேந்திய கைகளையுமுடைய, பூபாலரைஉம்- (மற்றை) அரசர்களையும்,
நின்றார் நின்ற படி – அவரவர் (திகைத்து) நின்றவாறே நிற்க, கொல்லாமல்
கொன்றான்-; (எ – று.)
வல் தாள் – வலிய கழுந்துமாம். கோலாஹலம் – வடசொல் கொல்லாமல்
கொன்றான்- பிராணாபாயமில்லாமல் மரணவேதனைப் படுத்தினன்:
தன்னையொன்றும் வருத்தாதிருக்கத் தான் வருத்தினான் என்றலும் ஒன்று:
“செய்யாமற்செய்தவுதவி” என்றாற் போல. ‘நின்றார்நின்றபடி’ என்பதை, (மதித்த
தம்பிமார்) நின்ற வாறே திகைத்துநின்றா ரெனக் கீழ்க்கவியோடு தொடர்ச்சி
யாக்குவாரும் உளர்.
இளைத்தது அடையப் பெருஞ் சேனை; இனி நாம்
ஒன்றுக்கு ஈடு ஆகோம்;
வளைத்த சிலையோடு இவன் நிற்க, மாயன்தன்னோடு
அவன் நிற்க,
துளைத்த கணையால் துரோணன் வலி தொலைத்தோன்
நிற்க, மலைந்து இவரைத்
திளைத்தல் அரிது!’ என்று, அக் களத்தில் பொன்றா
அரசர் சென்றாரே.80.-எதிர்த்தவர் புறங்கொடுத் தோடுதல்.
(பின்பு), அ களத்தில்- அப்போர்க்களத்தில், பொன்றா அரசர் –
இறவாது சேடித்த அரசர்கள், ‘பெரு சேனை அடைய- பெரிய சேனை முழுவதும்,
இளைத்தது- சோர்வடைந்து விட்டது; இனி – இனிமேல், நாம்-, ஒன்றுக்கு ஈடு
ஆகோம் – ஒரு தொழிற்செய்தற்கும் வலியுடையமல்லோம்; வளைத்த சிலையோடு-
வணக்கிய வில்லுடனே, இவன்- வீமன், நிற்க-, மாயன் தன்னோடு-
கண்ணபிரானோடு, அவன் – அருச்சுனன், நிற்க,- துளைத்த கணையால்
துரோணன்வலி தொலைத்தோன் – துளைசெய்த அம்புகளால், துரோணனது
வலிமையை (முன்)ஒழியச்செய்து தருமன், நிற்க- இவரை மலைத்து திளைத்தல்-
இவர்களை எதிர்த்துநெருங்குதல், அரிது – (எவர்க்கும்) முடியாது,’ என்று –
என்றுஎண்ணி, சென்றார்-(புறங்கொடுத்துப் பாசறைக்குப் ) போயினார்; (எ-று.)
ஒன்றுக்கு ஈடாகோம்- சிறிதும் போர்செய்யவல்லோமல்லோம் என்றபடி;
ஓரம்புக்கேனும் எதிராகோம் எனினும் அமையும். ‘வளைத்தசிலையோடு’ என்றதற்கு
இனமாக ‘மாயன்தன்னோடு என்றதனால், ஆயுதம் வீரனுக்கு உதவுதல்போலக்
கண்ணன் அருச்சுனனுக்கு உதவுந் தன்மை குறிப்பிக்கப்பட்டது. பி-ம்
அக்கணத்தில்.
பெரும் பேர் அறத்தின் திருமகவைப் பிடிப்பான்
எண்ணி, முடிப்பான்போல்
பொரும் போர் அரசருடன் வந்த பொன்-தேர்
முனியும் புறம் போனான்;
‘பரும் பேர் உரகக் கொடி வேந்தன் பட்டான்
மிகவும் பரிபவம்!’ என்று
அரும் போர் அரசர் களித்து ஆட, அவரும்
தம் பாசறை அடைந்தார்.81.- பாண்டவர் மகிழ்ச்சியோடு பாசறைசேர்தல்.
பெரு – பெருமைக்குணமுடைய, பேர் அறத்தின் திரு மகவை-
சிறந்த தருமராசனது அழகிய குமாரனான யுதிட்டிரனை, பிடிப்பான் எண்ணி-
(உயிரோடு) பிடித்துக்கொள்ளக் கருதி, முடிப்பான் போல் – (அவ்வாறு)
நிறைவேற்றவல்லான்போல், போர் பொரும் அரசருடன் வந்த- போர்செய்யவல்ல
(பல) அரசர்களோடு கூடிவந்த, பொன் தேர் முனிஉம் – அழகிய தேரையுடைய
துரோணனும், புறம் போனான் – புறங்கொடுத்து (ப் பாசறைக்கு)ச் சென்றான்;
பருபேர் உரகம் கொடி வேந்தன் – பருத்த பெரிய பாம்புக்கொடியையுடைய
துரியோதனன், மிகஉம் பரிபவம் பட்டான்- மிகவும் அவமானமடைந்தான், என்ற –
என்றகாரணத்தால், அருபோர் அரசர் – (செய்தற்கு) அரிய போரில்வல்ல
(தன்பக்கத்து) அரசர்கள், களித்து ஆட – மிகமகிழ்ந்து கூத்தாட, அவர்உம்-
அப்பாண்டவர்களும், தம் பாசறை அடைந்தார் – தமது படை வீட்டைச்
சேர்ந்தார்கள்; (எ- று.)
மக -பண்பாகுபெயர். ‘முடிப்பான் போல்‘ என்றது, முடிக்க மாட்டாமை
விளக்கிற்று. பி -ம்: பேரரசர்.
காரின் குளிர்ந்து குழைந்த செழுங் கானம் பூத்தது
எனக் கவினிப்
பாரில் பிறந்து சிறந்த இந்தப் பல் மா நிறத்த
பரி அனைத்தும்
போரில் புகுந்து மடிந்ததற்குப் புறந்தந்து அஞ்சிப்
போவான்போல்,
தேரில் துரகம் கொண்டு ஓடி, குடபால் அடைந்தான்,
தினகரனும்.82.- சூரியாஸ்தமனவருணனை.
காரின் – மேகத்தால் [மழைவளத்தால்], குளிர்ந்து – குளிர்ச்சிபெற்று,
குழைந்த- தளிர்த்த, செழு கானம்- செழுமையான காடு, பூத்ததுஎன – பூப்பூத்தது
போல, கவினி – அழகுபெற்று, பாரில் பிறந்து – பூமியில் தோன்றி, சிறந்தவிதம் –
சிறப்புப்பெற்ற வகையிற்சேர்ந்த, பல் மா நிறத்த – பல சிறந்த நிறங்களையுடைய,
பரிஅனைத்தும் – குதிரைகளெல்லாம், போரில் புகுந்து மடிதற்கு-யுத்தத்தில் புகுந்து
இறந்ததற்கு [இறந்தது கண்டு என்றபடி], அஞ்சி – பயந்து, புறந்தந்து –
முதுகுகொடுத்து, தேரில் துரகம் கொண்டு – (தனது) தேரிற்பூண்ட குதிரைகளை
(அழியாதபடி) உடன் கொண்டு, ஓடி போவான் போல்-, தினகரன்உம்- சூரியனும்,
குடபால் அடைந்தான்- மேற்குப் பக்கத்தைச் சேர்ந்தான்; ( எ -று.)
சூரியன் அஸ்தமித்ததற்கு, போரில் மிகப் பலவாகிய குதிரைகளெல்லாம்
அழிதலைப் பார்த்துத் தன் குதிரைகளுக்கும் அழிவுண்டாகுமோ வென்று அஞ்சி
முன்நில்லாமல் அக்குதிரைகளுடன் விலகிச் சென்றதாகக் காரணங் கற்பித்தார்;
ஏதுத்தற்குறிப்பேற்றவணி; ஒவ்வொன்று ஒவ்வொரு நிறமும் ஒவ்வொன்றே
பலநிறமும் உடையவனவா யிருத்தலும், வநாயு பாரசீகம் காம்போசம் பாஹ்லிகம்
முதலிய தேசங்களில் பிறத்தலும், குதிரைகளுக்கு உத்தமவிலக்கணமாதலால்,
‘கானம்பூத்ததெனக்கவினிப் பாரிற் பிறந்து சிறந்த பன் மாநிறத்தபரி’ என்றார்;
“உருத்திகல் செய் புலி புளியங் கழுதை செந்நாயொண்பூசை நரியினுடன் கரியகாகம்,
தரித்தவழல் புகை நிறமும் புனையவாகித் தருக்கி மருத்தெனுங் கவனத்தன்மை
யெய்தி விரித்தகதிர் வெண்டரளத் திங்கள் நீல மென் கமலத்தாது செழுங் கனகம்
காயா, அரத்தமலர்நல்ல பசுங்கிள்ளைபோல அமைந்தவொளி தயங்கிய
வங்கத்தவாகி” என்றதனாலும் குதிரைகளின் நிறங்கள் விளங்கும். கவினி –
இறந்தகால வினையெச்சம். கவின் என்றது- அவயங்களின் அமைதி, நற்சுழிகளின்
பொருத்தம் முதலியவற்றை. பி – ம்: கவினிற் சிறந்தவிந்த.
அறம் தந்த மைந்தற்கும், வீமற்கும், விசயற்கும்,
அபிமற்குமே,
புறந்தந்த வய வீரர் எல்லாரும் அரசன் புறஞ்
சார்பு இருந்து,
இறந்து அந்த யூகத்து வாராத மன்னர்க்கு
இரங்கா, அழா,
மறம் தந்த வேழத்துடன் பட்ட பகதத்தன்
வலி கூறினார்.83.- புறந்தந்த துரியோதனன் பக்கத்தார் துரியோதனனைச்சார்ந்து
இறந்தவர்க்கு இரங்கி, பகதத்தன் வலிமையைக் கூறுபவராதல்.
அறம் தந்த மைந்தற்குஉம்- தருமராசன் பெற்ற புத்திரனான
யுதிட்டிரனுக்கும், வீமற்குஉம்-, விசயற்குஉம்- அருச்சுனனுக்கும், அபிமற்குஉம்ஏ –
அபிமனுக்கும், (ஆக இந்நாலுபேருக்குமே), புறம் தந்த- முதுகு கொடுத்த, வய
வீரர்எல்லார்உம் – வலிமையையுடைய (துரியோதனன் பக்கத்து) வீரர் யதாவரும்,
(சூரியன் அஸ்தமித்தபின்),- அரசன் புறம் சார்பு இருந்து – துரியோதனனது
பின்பக்கத்திலே யிருந்துகொண்டு, இறந்து அந்த யூகத்து வாராத மன்னர்க்கு –
(அன்றைத்தினம்) மரித்து அந்தக் கூட்டத்தில் வந்திடாத அரசர்களுக்காக, இரங்கா
அழா – மனமிரங்கிப் புலம்பி, மறம் தந்த வேழத்துடன் பட்ட பகதத்தன் வலி
கூறினார் – கொடுமை விளைக்கிற யானையோடு இறந்த பகதத்தனது பலத்தைப்
பாராட்டி எடுத்துக் கூறினார்கள்; (எ – று.)
முன் இருக்க முகமில்லாமையால், புறஞ்சார் பிருந்தாரென்க: இனி, புறஞ்சார்பு
– சுற்றிடமுமாம். ‘ அந்த யூகம்’ என்றது – அப்பொழுது தாம் கூடிய கூட்டத்தை;
இனி, யூகத்து இறந்தது என இயைப்பின், படைவகுப்பில் மரித்து என்க. இரங்குதல்-
விசனப்படுதல். வழா மறம் என எடுத்து, தவறாத வலிமை யெனினுமாம். அறம்-
அறக்கடவுள்; அஃறிணையாற் கூறியது.
இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் பதினொரு கவிகள் – பெரும்பாலும்
ஐந்தாஞ்சீரொன்று மாங்கனிச்சீரும் மற்றை நான்கும் மாங்காய்ச்சீர்களுமாகிய
நெடிலடிநான்குகொண்ட கலிநிலைத்துறைகள்.
மன்னர்க்கு மன்னன்தன் முன் வைகும் முனிதன்னை
மதியாமல்,
‘நீ நென்னல் கலங்காமல் உரைசெய்த உரை இன்று
நிலையானதே!’-
கன்னப் பெயர்க் காளை,-‘மறை அந்தணர்க்கு என்ன
கட்டாண்மை உண்டு?’
என்னச் சிரித்தான், வணங்காதவர்க்கு என்றும் இடிஏறு
அனான்.84.- சொன்னசொல்லை நிறைவேற்றாமைக்காகக்
கர்ணன் துரோணனைப் பரிகசித்தல்.
(அச்சமயத்தில்), மன்னர்க்கு மனனன்தன் முன் வைகும் –
ராஜராஜனான துரியோதனனுக்கு எதிரில் வீற்றிரந்த, முனி தன்னை- துரோணனை
(ப்பார்த்து), (அவனை ஒரு பொருளாக மதியாமல்),- வணங்காதவர்க்கு என்றுஉம்
இடி ஏறு அனான்- (தன்னை) வணங்காதவர்களுக்கு [பகைவர்களுக்கு]
எப்பொழுதும் பேரிடிபோல் அழிவுசெய்பவனான, கன்னன் பெயர் காளை –
கர்ணனென்னும் பெயருள்ள வீரன், ‘நீ-, மதியாமல் – ஆலோசனையில்லாமல்,
நென்னல்- நேற்று, கலங்காமல்- கலக்கமில்லாமல்[உறுதியாக], உரை செய்த –
(தருமனைப் பிடித்துக்கொடுப்பேனென்று) கூறின, உரை – சபதவார்த்தை, இன்று –
இன்றைக்கு, நிலை ஆனது ஏ – உன்மையாய் நடந்தேறிற்றே! மறை அந்தணர்க்கு –
வேதமோதுவதே தொழிலாகவுள்ள பிராமணர்க்கு, என்ன கட்டு ஆண்மை உண்டு –
என்ன உறுதியான வீரமுள்ளது. என்ன – என்று (நிந்தையாகக்) கூறி, சிரித்தான்-
(பரிகாசமாக) நகைத்தான்; (எ-று.)
கர்ணன் எப்பொழுதும் தன்னைத் தான் மேலாகநினைக்கும் பெருஞ்
செருக்குடையவ னாதலால், இங்ஙனஞ் செய்தான். மதியாமல் என்ன என்று
இயைத்துஉரைத்தலும் ஒன்று. நிலையானது என்றது, பிறகுறிப்பு வகையால்,
நிலைப்படாதுபோனதைக் குறிக்கும்; ஏ – இகழ்ச்சி. ‘வணங்காதவர்க்கு என்றும்
இடியேறனான்’ என்பதை, அடுத்தபாட்டில் வரும் ‘குரு’ என்பதற்கு
அடைமொழியாக்கி, குளகமாக்கொள்ளினும் அமையும்.
தெருமந்த சிந்தைச் சிலைக் கைக் குரு, கண்
சிவப்பு ஏறவே,
உருமும் திகைக்கக் கொதித்து, அங்கர்பதியோடு
உறக் கூறுவான்:
‘கருமம் தவா வில் விறல் கன்னனே அல்ல;
கழல் மன்னரில்
தருமன்தன் முன் நிற்க வல்லார்கள் யார், இத்
தளம்தன்னிலே?85.- இதுமுதல் ஏழு கவிகள் – துரோணன் கூறும்
எதிர்மொழியைத் தெரிவிக்கும்.
இதுவும். அடுத்த கவியும் – ஒருதொடர்.
(இ -ள்.) (அதுகேட்டு), தெருமந்த- கலங்கின, சிந்தை- மனத்தையுடைய,
சிலைகை குரு- விற்பிடிக்குங் கையையுடைய துரோணன், கண் சிவப்பு ஏற –
கண்கள்செந்நிறம் மிகவும், உரும்உம் திகைக்க – இடியும் அஞ்சித் திடுக்கிடவும்,
அங்கர்பதியோடு- அங்கநாட்டார்க்கு அரசனான கர்ணனுடன், கொதித்து –
கோபித்து, உற கூறுவான்- பொருந்த உத்தரஞ் சொல்லுவான்:- கருமம் தவா –
செய்யுந்தொழில் தவறாத, வில் திறல் – வில்வன்மையையுடைய, கன்னன்ஏ அல்ல-
கன்னன்மாத்திரமே யல்லன்: இ தளந்தன்னில் – இந்தப்பக்கத்துச் சேனையிலுள்ள,
கழல் மன்னரில் – வீரக்கழலையுடைய அரசர்களில், தருமன்தன் முன் நிற்க
வல்லார்கள் யார் – யுதிட்டிரனது முன்னிலையில் (எதிர்த்து) நிற்கவாயினும்
வல்லமையுடையார் எவர்?(எ – று.)
‘கருமந்தவாவிற்றிறல்’ என்ற அடைமொழிகளைக் கர்ணனுக்குத் துரோணன்
கொடுத்தது, அவன் அங்ஙனம் தன்னைத் தானே கருதி நன்குமதித்துச்
செருக்கிநிற்கிறானென்பதை வெளியிடுதற்கு; இகழ்ச்சியுமாம். உருமும், உம் –
உயர்வுசிறப்பு. கன்னனே, ஏ- பிரிநிலையோடு உயர்வுசிறப்பு. பி-ம்: வன்றிறல்
இன்று அல்ல நாளைக்கும் ஆம்; நின் அவைக்கண்
இருந்தோர்களில்
சென்று அல்லல் உற மோதி அறன் மைந்தனைத் தங்கள்
சிலை ஆண்மையால்
வென்று அல்லது அணுகாத வீரர்க்கு விடை நல்கு,
விறல் மன்ன! நீ;
நன்று அல்ல, வீரத்தில் ஓரம் சொலுவது!’ என்று
நனி சீறினான்.
இன்று அல்ல- இன்றைக்கே அன்று; நாளைக்கு உம் ஆம் –
நாளைக்காயினும் (தருமனைப்பிடிக்க முயலல்) ஆம்; விறல் மன்ன-
வெற்றியையுடைய அரசனே! நின் அவைக்கண் இருந்தோர்களில்- உனது
சபையிலுள்ளவர்களுள், சென்று- (எதிர்த்துப்) போய், அறன் மைந்தனை – தரும
புத்திரனை, அல்லல் உற மோதி- துன்பமுண்டாம்படி தாக்கி, தங்கள் சிலை
ஆண்மையால் – தங்கள் வில்லின் திறத்தால், வென்று அல்லது அணுகாத-
சயித்தல்லது திரும்பிவராத, வீரர்க்கு-, நீ-, விடை நல்கு அனுமதி கொடுப்பாய்;
வீரத்தில் – பராக்கிரமவிஷயத்தில், ஓரம் சொலுவது – (ஒருவரை ஒருவர்)
பக்ஷபாதமாக (நிந்தித்துப்) பேசுவது, நன்று அல்ல- நல்லதன்று, என்று-
என்றுசொல்லி, நனி சீறினான்.- மிகக்கோபித்தான்; (எ -று.)
மன்ன- துரியோதனனை நோக்கிய விளி. இன்றல்ல நாளைக்குமாம்-
நேற்றுச்சொன்னபடி இன்றைக்கு நான் தருமனைப்பிடிக்க முடியாமற்
போய்விட்டாலும்,கர்ணன்போன்றவர் எவரேனும் இன்ற சபதஞ்செய்து அங்ஙனமே
நாளைக்குநிறைவேற்றப்பார்க்கலாமென்றவாறு. நாளைக்கு மா எனப்பிரித்து,
நாளைக்குஎன்பதை ‘சென்று’ என்பதனோடும், ‘மா’என்பதை ‘அவை’
என்பதோடும்இயைத்தலுமாம். சிலைக்கைக்குரு (85) சீறினான் (86) என இயையும்.
‘அல்ல’ -ஒன்றன்பாலுக்கு வந்தது. பி-ம்: அறன்மன்னனை.
வில் ஆண்மை யாவர்க்கும் இன்று’ என்று
எனைப் போல மிகு வஞ்சினம்
சொல்லாமல், அறன் மைந்தனைப் போர் மலைந்து
உங்கள் தோள் ஆண்மையால்
வல்லார் இனிக் கொண்டு வம்மின்கள்; வந்தால்,
இம் மண் ஒன்றுமோ,
அல்லாத உலகிற்கும், இரு-நாலு திக்கிற்கும்,
அவர் வீரரே.
இதுமுதல் ஐந்து கவிகள் – ஒருதொடர்.
(இ-ள்.) ‘யாவர்க்குஉம்- (என்னையொழிய வேறு) எவருக்கும், வில்
ஆண்மைஇன்று – வில்லின் திறமை இல்லை,’ என்று-, எனை போல – யான்
சபதஞ்செய்ததைப்போல மிகு வஞ்சினம் சொல்லாமல் – மிக்க சபதவார்த்தைகளைக்
கூறாமலே,- வல்லார்- வல்லவர்கள் உங்கள் தோள் ஆண்மையால் – உங்களது
புசபராக்கிரமத்தால், போர் மலைந்து – போர்செய்து, அறன் மைந்தனை-
தருமபுத்திரனை, இனி-, கொண்டு வம்மின்கள் – பிடித்துக்கொண்டு வாருங்கள்;
வந்தால் (அவ்வாறு) வந்தால்,- அவர்- அப்படிக் கொண்டு வருபவரே,- இ மண்
ஒன்றும்ஓ – இந்தப்பூலோகமொன்றுக்கு மாத்திரமோ, அல்லாத உலகிற்குஉம்-
மற்றையுலகங்களுக்கும், இரு நாலு திக்கிற்குஉம்- எட்டுத்திக்குக்களுக்கும், வீரர்-
(சிறந்த) வீரராவர்; (எ-று.)
நான் நேற்றுச்சபதஞ்செய்து இன்று தவறிப்போனே னென்று இகழ வேண்டா;
உங்களில் வல்லவர் எவரேனும் முந்திச் சபதஞ் செய்யாவிடினும், நாளைமுதல்
என்றைக்காவது தருமனைப் பிடித்து வருக; வந்தால், அவனின் மிக்கவீரன்
எவ்வுலகத்தினு மில்லை யென்பதாம். தான் தருமனை நாளையகப் படுத்துத் தரலா
மென்று முந்தினநாட்சொல்லியதை, ‘வில்லாண்மை வேறு யாவர்க்கும் இல்லை
யென்று எண்ணிச் சபதஞ்செய்ததாகக் கண்ணன் கருதினானென்று உட்கொண்டு’
வில்லாண்மையாவர்க்குமின்றென்று எனைப்போல மிகுவஞ்சினஞ் சொல்லாமல்
என்றுநீட்டூரமாகத் துரோணன் கூறுகிறான்; இனி, ‘என்னைப்போலயாவர்க்கும்
வில்லாண்மையின்று’ என்று பெருஞ்சபதம்பேசாமல் என இயைத்துக் கூறினுமாம்,
வல்லார் – வல்லவர்களே! என அண்மைவிளியுமாம், பி-ம்: என்றனைப்போல.
அவன் வீரனே.
‘எம் போல வரி வில் எடுத்து எய்ய யார் வல்லர்?’
எனும் வீரரும்,
வெம் போரில் வந்தால் ஒர் அணுவுக்கும் நில்லாது
விளிகிற்பரால்;
வம்பு ஓதி என் பேறு? வல் ஆண்மை புனை அந்த
வில்லாளி கூர்
அம்போடு இராமன் கை அடல் அம்பும் உவமிக்கில்
அதி பாவமே.
எம்போல எம்மைப்போல, வரி வில் எடுத்து – கட்டமைந்தவில்லை
யேந்தி, எய்ய- (அம்பு) செலுத்த, யார் வல்லர்- யாவர் வல்லமையுடையார்?
[எவருமில்லை யென்றபடி],’ எனும்- என்று (பெருமிதம்) பேசுகிற, வீரர்உம்-, வெம்
போரில் வந்தால்- கொடிய யுத்தத்தில் வந்தால், ஓர் அணுவுக்கும்உம் நில்லாது –
ஒர்அணுப்போலவாயினும் முன்நிற்கமாட்டாமல், விளிகிற்பர்- அழிந்திடுவர், ஆல்-
ஆதலால், வம்பு ஒதி என் பேறு – வீண்வார்த்தை பேசி யாதுபயன்? வல் ஆண்மை
புனை – வலிய பராக்கிரமத்தை ஆபரணமாகக் கொண்ட, அந்த வில் ஆளி –
வில்வீரனான அத்தருமனது, கூர் அம்போடு கூர்மையையுடைய அம்புகளுடனே,
இராமன் கை அடல் அம்புஉம் -ஸ்ரீராமபிரான்கையிலுள்ள வலிய அம்புகளையும்,
உவமிக்கில் – ஒப்புமை கூறினால், அதி பாவம் – மிக்க தீவினையாம்; (எ-று.)
போரில் வெற்றிதோல்விகள் ஒருதலையல்ல என்பது, முன்னிரண்டடியின்
கருத்து.சிறிதும் மெய்யாகாது முழுப்பொய்யாகு மென்பார், அதனை வற்புறுத்துதற்கு
‘அதிபாவம்’ என உறுதி மொழியாற் கூறினார். இராமனென அடைமொழி கொடாமற்
கூறினார், இராமர் மூவருள்ளுஞ் சிறப்புடைய தசரதராமனையே குறிக்கும். தைடன்
என்னும் வடமொழிப்பெயர்க்கு – தன்திறத்தில் யாவரும் மனங்களித்திருக்கப்பெற்றவ
னென்பது பொருள்; சகல சற்குணங்களும் பொருந்தினவனென்பது கருத்து. ஆல்-
விகாரம். அம்பும், உம்- உயர்வுசிறப்பு. இராமனம்பின் மகிமை, அதிப்பிரசித்தம்;
அதனினுஞ் சிறந்தது தருமனம்பு எனப் புகழ்ந்து கூறியவாறு.
கொத்து ஒத்த, தொடை ஒத்த, அளவு ஒத்த, சிறகு
ஒத்த, குதை ஒத்த, வந்து,
ஒத்து ஒத்து முனையோடு முனை தத்தி விழுமாறு
உடன்று ஏவினான்;
தத்து ஒத்த புரவித் தடந் தேர் மன் என்னோடு
சாதித்ததும்,
வித்து ஒத்தது, என் வாளி; அவன் விட்ட வடி வாளி
விளைவு ஒத்ததே.
கொத்து ஒத்த – திரட்சியில் ஒத்தவையும், தொடை ஒத்த –
தொடுக்கும்வகையில் ஒத்தவையும், அளவு ஒத்த – அளவிலொத்தவையும், சிறகு
ஒத்த – இறகில் ஒத்தவையும், குதை ஒத்த – அடியில் ஒத்தவையும் ஆகிய
அம்புகளை, ஒன்று ஒத்து ஒத்து முனையோடு முனை தத்திவிழும் ஆறு- (யான்
எய்த அம்புகள்) ஒவ்வொன்றோடும் பொருந்திப் பொருந்தி நுனியோடு நுனிபட்டு
(அவை) விழும்படி, உடன்று ஏவினான்- கோபித்து (த் தருமன்) செலுத்தினான்:
தத்து- தாவிச்செல்லுகிற, ஒத்த புரவி – (ஒன்றோடொன்று) ஒத்த ‘ குதிரைகளைப்
பூட்டிய, தட தேர்- பெரிய தேரையுடைய, மன் – அத் தருமராசன், என்னோடு
சாதித்ததுஉம் – மற்றும் என்னோடு போர்செய்ததை ( க் கூறினால்), என் வாளி-
யான் எய்தஅம்பு, வித்து ஒத்தது- விதையைப்போன்றது; அவன் விட்ட-, வடி
வாளி – கூரிய அம்பு, விளைவு ஒத்தது- விளைச்சலைப் போன்றது; (எ – று.)
யான் ஒரம்பு எய்தால் அதற்கு எதிராக அவன் பல அம்புகளை
எய்திட்டனனென்பதாம். ஒருவிதை பலவிதைகளுண்டாம்படி விளைதலின்,
வித்தையும்விளைவையும் உவமைகூறினார். தொடை என்பதற்கு – அம்பென்று
பொருள்கூறினால், ஒத்த அளவு என எடுத்து- சாஸ்திரவிதியோடு
ஒத்துள்ள[மாறுபடாத]அள வென்க. ஒத்த புரவி- நூல்முறைமைக்குத் தக்க குதிரை
யெனினுமாம்.சாதித்தல்- தொடங்கியதைச் சோர்வின்றி நிறைவேற்றலுமாம்.
ஒத்தல் – உவமித்தலும்,பொருந்தலும். பி – ம்: குதையொத்தவந்து.
‘வன்மைக்கு வய வீமன், வின்மைக்கு முகில் ஊர்தி
மகன், அன்றி வேறு
இன்மைக்கு மா விந்தை கிரி கன்னி கரி’ என்பர்
எம் மன்னரும்;
வின்மைக்கும் வன்மைக்கும் இளையோரை அனையாரை
மிக எண்ணலாம்;
தன்மைக்கு நிலையான தருமற்கு நிகர் யார், தனித்து
எண்ணவே?
‘வன்மைக்கு – வலிமையில், வய வீமன் – வெற்றியையுடைய
வீமசேனனும், வின்மைக்கு – வில்லின்திறத்தில், முகில் ஊர்தி மகன்- மேகங்களை
வாகனமாகவுடைய இந்திரனுக்குக் குமாரனான அருச்சுனனும், அன்றி – அல்லாமல்,
வேறு இன்மைக்கு- வேறு (எவரும் சிறந்தவர்) இல்லாமைக்கு, கிரி கன்னி-
இமயமலையின்மகளான பார்வதியினமிசமான, மா விந்தை- சிறந்த துர்க்கை, கரி –
சாக்ஷி,’ என்பர் எ மன்னர் உம்- என்று எல்லா அரசரும் கூறுவர்; வின்மைக்குஉம்-
வில்லின் திறத்திலும், வன்மைக்கு உம்- வலிமையிலும், இளையோரை அனையாரை –
தம்பிமார்களான வீமஅருச்சுனர்களைத் தனித்தனியொக்கும் வீரரை, மிக எண்ணல்
ஆம்- (உலகத்தில்) மிகுதியாகக் (குறித்துக்) கணக்கிடலாம்; தன்மைக்கு – (வின்மை
வன்மை என்ற அவ்விரண்டு) தன்மைகளிலும், நிலை ஆன – உறுதிபெற்ற, தருமற்கு
– யுதிட்டிரனுக்கு, தனித்து எண்ண- தனியேகுறித்துக் கணக்கிட, நிகர் யார் –
ஒப்பாகுபவர் யார்? [எவருமில்லை என்றபடி]; (எ – று)- இது, துரோணன் தான்
சொந்த அபிப்பிராயத்தை வெளியிட்டது.
வீம அருச்சுனர்க்கு ஒப்புமை கிடைத்தல் கூடும்; தருமனுக்குக் கிடைக்காது
என்க. முகில்ஊர்தி – அன்மொழித்தொகை; மேகங்களை இந்திரனுக்கு வாகன
மென்றல், மரபு. போருக்குஉரியதேவதை துர்க்கை யாதலால், அவள்
சாட்சியெனப்பட்டாள். விந்தியமலையில் வீற்றிருத்தல் பற்றி, துர்க்கைக்கு ‘விந்தை’
என்ற பெயர்; விந்த்ய வாஸிநீ’ என்பர் வடமொழியாரும்: உமாதேவி
தக்ஷகன்னிகையாயிருந்த உடம்பைத் துறந்து, தன்னை மகளாகப்பெரும் பொருட்டுப்
பலநாளாகத் தவம்புரிந்துவந்த பர்வதராசனுக்குப் பெண்ணாகத் தோன்றிப்
பார்வதியென்று பெயர்பெற்றாள், தன்மைக்கு நிலை ஆன –
குணத்திற்குஇடமான எனினுமாம். பி -ம்: வடவிந்தகிரி கன்னி.
அதிர்வார்கள் அதிர்மின்கள்; அதிரப் பொரும் போரில்
அறன் மைந்தனோடு
எதிர்வார்கள் உண்டாகில், இக் கங்குல் சென்றால் இனிக்
காணலாம்; முதிர்
வாய்மையால் என்ன பயன்?’ என்று வெஞ் சாப
முனி ஏகினான்;
கதிர் வார் முடிக் கோவும் அரசர்க்கு விடைதந்து
கண் துஞ்சினான்.
அதிர்வார்கள் அதிர்மின்கள்- வீணாரவாரஞ்செய்பவர்கள்
செய்யுங்கள்;அதிர பொரும் போரில்- நடுக்கமுண்டாம்படி செய்யும் யுத்தத்தில்,
அறன்மைந்தனோடு எதிர்வார்கள் – தரும புத்திரனோடு எதிர்க்கவல்லவர்கள்,
உண்டுஆகில் – உள்ளாரானால் இ கங்குல் சென்றால்- இவ்விராத்திரி கழிந்தால்,
இனி -பின்பு [நாளைமுதல்], காணல் ஆம்- (அவர்திறத்தைப்) பார்க்கலாம்: முதிர்
வாய்மையால்- வரம்புகடந்த வாய்ப்பேச்சுமாத்திரத்தால், என்ன பயன்-? என்று –
என்றுசொல்லிவிட்டு, வெம் சாபம் முனி- கொடிய வில்லில்வல்ல துரோணன்,
ஏகினான் – (தன்இடத்துக்குச்) சென்றான்; கதிர் வார் முடி கோஉம்- ஒளியையுடைய
நீண்ட கிரீடத்தையுடைய துரியோதனனும், அரசர்க்கு – (கர்ணன் முதலிய)
அரசர்களுக்கெல்லாம், விடை தந்து – (செல்ல) அனுமதிகொடுத்து, கண்துஞ்சினான் –
தூங்கினான்; (எ – று.)
முன்னிரண்டடிகளோடு துரோணன் மறுமொழி முற்றுகின்றது.
பின்னிரண்டடிகள் – அவ்வாறுகூறிய துரோணன் ஏக, யாவர்க்கும் விடை
கொடுத்துத்துரியோதனன் துயின்றமையைத் தெரிவிக்கும். அதிர்வார்கள்
அதிர்மின்கள் -வழுவமைதி. கதிர் – சூரியன்போன்ற என்றுமாம். பி- ம்:
யாவர்க்கும் விடைதந்து.
மகதத்தரில் சூர சஞ்சத்தகரில் உள்ள மகிபாலரும்,
பகதத்தனும், துள்ளி எதிர் வந்த காந்தார பதி மைந்தரும்,
தகதத்த என வெங் களத்தூடு விழ வென்ற தனுவேதியும்,
சுக தத்தம் உற ஓட வென்றோர்களும், கண்துயின்றார்களே.92.- பாண்டவர்கள் கண்துயிலுதல்.
மகதத்தரில் – மகததேசத்துவீரரிலும், சூர சஞ்சத்தகரில்-வீரர்களான
சஞ்சப்தகரிலும், உள்ள – சேர்ந்த, மகிபாலர்உம்- அரசர்களும், பகதத்தனும்-,
துள்ளிஎதிர் வந்த காந்தாரபதி மைந்தர்உம்- மகிழ்ச்சியோடு கூத்தாடிக்கொண்டு
எதிர்த்துவந்த காந்தாரதேசத்து அரசனான சகுனியின் பிள்ளைகள் இரண்டு
பேரும், தகதத்தஎன வெம் களத்தூடு விழ – தகதத்தவென்னும் ஓசையுண்டாகக்
கொடியபோர்க்களத்தில் இறந்து கீழ்விழவும்,- வென்ற தனுவேதிஉம்-
பகைவெல்லுந்தன்மையுள்ள வில்வித்தை வல்ல துரோணனும், சுக தத்தம் உற ஓட –
இன்பத்தையிழத்தலுண்டாகப் புறங்கொடுத்தோடவும்,- வென்றோர்கள்உம்- சயித்த
பாண்டவர்களும், கண் துயின்றார்கள் – நித்திரைசெய்தார்கள்;
மகிபாலரும் பகதத்தனும்…மைந்தரும் களத்தூடுவிழவும், தனுவேதியும் ஒடவும்
வென்றோர்களும் என்க. தகதத்த – ஒலிக்குறிப்பு. பொருளை யிழந்தாரை ‘ தத்தஞ்
செய்துவிட்டார்’ என்னும் வழக்குப்பற்றி, ‘சுகதத்தம் உற’ என்பதற்கு – இவ்வாறு
பொருள்கொள்ளப்பட்டது: இனி, இன்பத்தை அளித்தருளுதலுண்டாக எனினும்
அமையும்; எதிரி இரங்கி உயிரோடுவிட்டு அபயப் பிரதானஞ் செய்தருளும்படி
என்று கருத்து; பகைவர்க்கு வெற்றியின்பத்தைக் கொடுத்தல் பொருந்த
என்றலுமொன்று. தனுவேதியும் என்பதற்கு- வில்லாயுதத்தையுடைய விசயனும்
என்றும், ‘சுகதத்தமுறவோடி’ என்று பாடங்கொண்டு, தத்தம் – தம்தமக்கு,
சுகம்உற-சுகமுண்டாக, ஓடி என்றும் கூறினாரு முளர்.
நிலையான வய வீரரும் தேவராய் நின்ற நிலை கண்டு, வெண்
கலையால் நிரம்பும் செழுந் திங்கள் ஏக, கடைக் கங்குல்வாய்
அலை ஆழி முழு நீல உறைநின்றும் மாணிக்க மணி ஆடிபோல்
உலையாத ஒளி கொண்ட கதிர் ஆயிரத்தோனும் உதயஞ்செய்தான்.93.- சந்திராஸ்தமனமும், மறுநாட் சூரியோதயமும்.
நிலைஆன வய வீரர்உம்- (போரிற்பின்னிடாமல்) நிலைபெற்ற
வலிமையையுடைய வீரர்கள் பலரும், தேவர் ஆய்நின்ற- இறந்து தேவர்களாகி
நின்ற, நிலை- நிலைமையை, கண்டு – பார்த்து, வெள் கலையால் நிரம்பும் செழு
திங்கள்- வெண்ணிறமான அமிருத கிரணங்களால் நிறைந்துள்ள செழிப்பான
சந்திரன், ஏக – அப்பாற் செல்ல [அஸ்தமிக்க],- கடை கங்குல் வாய் –
அவ்விரவின்முடிவில், உலையாத ஒளி கொண்ட கதிர் ஆயிரத்தோன்உம் –
அழியாதபிரகாசத்தைக் கொண்ட ஆயிரங்கிரணங்களையுடைய சூரியனும், அலை
ஆழி முழுநீலம் உறைநின்று- அலைகளையுடைய கருங்கடலாகிய பெரிய
நீலநிறமுள்ளஉறையினின்று, மாணிக்கம் மணி ஆழி போல்- மாணிக்க
ரத்தினமயமானசக்கரம்போல, உதயம் செய்தான்- உதித்தலைச்செய்தான்
[உதித்தான்]; ( எ -று.)
சந்திரன் தேவர்களுக்குத் தன்கலைகளாகிய அமிருதத்தை உணவாகக்
கொடுக்குந்தன்மைய னாதலால், போரிலிறந்து தேவசரீரம் பெற்று
வீரசுவர்க்கம்புக்கவர்க்கு விருந்திடும்பொருட்டுச் சென்றானென்று சந்திராஸ்தமநத்தை
வருணித்தார்; பயன்தற்குறிப்பேற்றவணி. ஆழி- மோதிரமென்பாருமுளர். உறை –
இங்கே, ஆபரணம் வைக்கும்கூடு. மாணிக்கம்- வடசொல்லின் திரிபு;
செந்நிறமுள்ள இரத்தினம். (கருமாணிக்கம் என நூல்களில் வருவது,
இல்பொருளுவமை.) பின் இரண்டடி – உவமையணி. கதிர் ஆயிரத்தோன் –
ஸஹஸ்ரகிரணன். ‘உறையின்று’ என்ற பாடத்துக்கு- உறையில்லாமல் என்க. பி -ம்:
அணியாழிபோல் , மணியாடி போல்.
——————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்