பூத்த நாபி அம் தாமரைப் பூவில் வந்து
பல் பூதமும்
சேர்த்த நான்முகப் புனிதனும், முனிவர்
யாவரும், தேவரும்,
ஏத்த, நாலு வேதங்களும் தேட, நின்ற தாள்
எம்பிரான்
பார்த்தன் மா மணித் தேர் விடும் பாகன் ஆனது
எப் பான்மையே!கடவுள் வாழ்த்து
நாபி – (தன்னுடைய) கொப்பூழிலே, பூத்த – உண்டான, அம்-
அழகிய, தாமரைப்பூவில்-, வந்து – பிறந்து, பல் பூதம்உம் –
பலவகைப்பிராணிவர்க்கங்களையும், சேர்த்த-படைத்த, நால்முகம் புனிதன்உம்-
நான்கு முகங்களையுடைய பரிசுத்தருண முள்ளவனான பிரமதேவனும், முனிவர்
யாவர்உம் – இருடிகளெல்லோரும், தேவர்உம் – தேவர்களெல்லோரும், ஏத்த –
துதிக்கவும், நாலு வேதங்கள்உம் தேட – நான்குவேதங்களும் (உண்மைகாண
மாட்டாமல்) ஆராய்ந்துதேடவும், நின்ற – பொருந்தின, தாள் –
திருவடிகளையுடைய, எம் பிரான் – நமக்கெல்லாம்தலைவனான திருமால்
பார்த்தன்மா மணி தேர் விடும் பாகன் ஆனது – அருச்சுனனது சிறந்த அழகிய
தேரைச்செலுத்தும்சாரதியானது, எ பான்மைஏ – எத்தன்மையோ? (எ – று.)
பிரமன்முதலிய தேவர்களெல்லோருக்கும், முனிவர்களெல்லோருக்கும்,
வேதங்களுக்கும் பலநாளாகப் புகழ்ந்து தேடிப்பார்க்கவும் காணவெண்ணாத
கழலிணைகளையுடைய கடவுள், அந்தப் பரத்துவத்தை இருந்ததுதெரியாதபடி விட்டு
மனிதர்களிலொருவனான அருச்சுனனுக்குத் தேர்செலுத்தும் ஆளாக அமர்ந்த
சௌலப்பியம் எத்தன்மைத்து எனக் கூறி வியந்து அதில் தமக்கு உள்ள
ஈடுபாட்டை ஆசிரியர் விளக்குகிறார். வேதங்களால்இன்ன முந்தேடிக்
காணவொண்ணாமை அவ்வேதத்திலேயேகூறியுள்ளது. நாபீ, பூதம் – வடசொற்கள்,
யாவரும் – மத்திமதீபம். ஈற்று ஏகாரம் – வியப்பை விளக்கும்.
இதுமுதல் ஒன்பதுகவிகள் – பெரும்பாலும் முதற்சீரும் நான்காஞ் சீரும்
மாச்சீர்களும், மற்றையவை விளச்சீர்களு மாகிய அறுசீராசிரியவிருத்தம்
நெருநல் இப் பெருஞ் சேனையோ நிலை தளர்ந்தது;
அச் சேனையைப்
பொரு நிலத்தினில் புறமிடப் பொருதும்!’ என்று உறக் கருதியே,
வரு நிலத்து எழும் தூளியால் வான யாறு நீர் வற்றவும்,
தரு நிலத்துளோர் காணவும், தருமன் வந்தனன் சமரிலே.2.-தருமபுத்திரன் சேனையோடு போர்க்களங்குறுதல்.
இ பெரு சேனைஒ – (நமது) இந்தப் பெரியசேனையோ,
நெருகல் -நேற்று, நிலை தளர்ந்தது – வலிமைநிலை தளர்ச்சியடைந்தது; (ஆதலால்
இன்றைக்கு), பொரு நிலத்தினில்-போர்செய்யுமிடத்திலே, அ சேனையை புறம் இட
பொருதும் – எதிர்ப்பக்கத்துச் சேனையை முதுகுகொடுக்கும்படி போர்செய்து
அழிப்போம்,’ என்று உற கருதி – என்று மிகுதியாக எண்ணி,- தருமன்-யுதிட்டிரன்,-
வரு நிலத்து எழும் தூளியால் வானம் யாறு நீர் வற்றஉம்-(தன்சேனைகள்) வருகிற
பூமியினின்று மேற்கிளம்பும் புழுதிகள் போய்ப்படிதலால் ஆகாசகங்காநதி நீர்
வறளவும், தரு நிலத்துஉளோர் காணஉம்-(கற்பக) விருக்ஷங்களையுடைய
சுவர்க்கலோகத்திலுள்ள தேவர்கள் (வானத்தில்வந்துபோர்) காணவும், சமரில்
வந்தனன்-போர்செய்ய வந்தான்; (எ-று.)
கீழ் ஏழாம்போர்ச்சருக்கத்திலே அத்தினத்தில் இருதிறத்துச் சேனையும்
வெற்றி தோல்வி அடைந்தது கூறாமல் சமமாக இருந்ததுபோலக் கூறி முடித்த
ஆசிரியர், இங்குப்பாண்டவசேனை அந்நாளில் தோற்றதாகவும், கௌரவசேனை
வென்றதாகவும் கூறியதனால், இத்தன்மையை அங்கே கூட்டிக்கொள்க. இவ்வாறு
கவிகள் எங்கேனும் ஓரிடத்தில் கூறியதை ஏற்றவிடத்துப் பொருத்திக்
கொள்ளவேண்டும் மரபைப் பலகாவியங்களிலும் காணலாம். இச்செய்தியை
அங்குக்கூறாமல்விட்டது. இங்குக்கூறுவோ மென்ற கருத்தினாலே ஆதல்வேண்டும்:
இது-முப்பத்திரண்டுவகை யுத்திகளுள் ‘உரைத்தும்’ என்றதன்பாற் படும்.
ஏழாநாளில் கௌரவசேனை வென்றது. அடுத்தகவியிலுங் கூறப்படும் இனி,
இத்தனைநாளில் பாண்டவர்கள் போரில்மேம்பட்டு நின்றதுபோல்அல்லாமல்
ஏழாநாள் இருதிறத்தாரும் ஒருநிகராகஇருந்ததே துரியோதனாதியர் வென்றதாகக்
கூறியதெனின் ஏற்கும். பொருநிலம்-போர்க்களம். மூன்றாமடி-உயர்வுநவிற்சி.
வென்று போன போர் மேன்மையால் விலோதனப்
பணிக் காவலன்,
‘இன்றும் வேறும்’ என்று, அக் களத்து எண் இல்
சேனையோடு எய்தினான்-
துன்று கங்கையின் திருமகன் சூசி யூகமும், துளப மால்
வென்றி கூர் பெருஞ் சகடமாம் வெய்ய யூகமும், செய்யவே.3.-இருதிறத்தாரும் சேனையை வியூகம் வகுத்தல்.
விலோதனம்-கொடியிலே, பணி-பாம்பையுடைய, காவலன்-
துரியோதனராசன், போர் வென்று போன மேன்மையால் – (ஏழாம்நாட்) போரில்
(எதிரிகளைத் தாம்) சயித்துப்போன சிறப்பினால், இன்றுஉம் வேறும் என்று –
இன்றைத்தினமும் (நாம்) சயிப்போ மென்று கருதி, அ களத்து’ – அந்தப்
போர்க்களத்திலே, எண் இல்சேனையோடு-அளவில்லாத சேனைகளுடனே,
எய்தினான் – வந்து சேர்ந்தான்; (அங்கு), துன்று கங்கையின் திரு மகன்-
(சேனாதிபதியாகப்) பொருந்தின கங்காநதியின் சிறந்த புத்திரனான வீடுமன்,
தூசியூகம்உம்- (தம்சேனையைக்கொண்டு) தூசியென்னும் வியூகத்தையும், துளபம்
மால் – திருத்துழாயையுடைய கண்ணபிரான், வென்றி கூர் பெரு சகடம் ஆம்
வெய்ய யூகம்உம் – (தம்சேனையைக்கொண்டு) வெற்றி மிகுதற்குக்
காரணமானபெரியவண்டிவடிவமான கொடியவியூகத்தையும், செய்ய-வகுக்க -(எ-
று.)-“வலம்புரிதாரினான் வீமனைவளைத்துவந் தெதிர்திளைத்தனன்” என அடுத்த
கவியோடு குளகமாகத் தொடரும். செய்ய எய்தினான் என இப்பாட்டிலேயே
முடித்தலுமாம்.
தூசிஎன்ற சொல்லுக்கு-குதிரையென்று ஒருபொருள் உள்ளதனால்,
‘அசுவவியூகம்’ என்று ஒருவியூகம் அமைத்ததாகப் பொருள்காணலாம்:
எட்டாம்வாளில்வீடுமன் கூர்மவியூகம் வகுத்ததாகவும், திருஷ்டத்யுமநன்
ஸ்ருங்காடக [நாற்சந்தி] வியூகம் வகுத்ததாகவும் வியாசபாரதத்திலுள்ளது.
வேறும்என்று-வெல்வொமென்று வீரவாதஞ்செய்து என்றுமாம். பி-ம்:
சூசியுகமும்.
தொலைவு இல் அம் கழல் துணைவரே துணைவர் ஆக,
வெஞ் சூறைபோல்
கொலை வில் அம் கையன், பிறை முகக் கூர
வாளியன், தேரினன்,
மலை விலங்கு தோள் வீமனை வளைத்து வந்து,
எதிர் திளைத்தனன்-
தலை விலங்கலுக்கு அரசு எனத் தகும் வலம்புரித் தாரினான்.4.- துரியோதனன் வீமனோடுபொரத் தம்பிமாருடன்
வளைத்துவந்து நெருங்குதல்.
தலை விலங்கலுக்கு-(எல்லா மலைகளிலும்) சிறந்த இமயமலைக்கும்,
அரசு என தகும் – அரசனென்று சொல்லத்தக்க, வலம்புரி தாரினான் –
நஞ்சாவட்டைப்பூமாலையையுடைய துரியோதனன்,-கொலை வில் அம் கையன் –
கொல்லுதலைச்செய்யும் வில்லையேந்திய அழகிய கையையுடையவனும், பிறை
முகம் கூரவாளியன் – பிறைச்சந்திரன்போல நுனியமைந்த கூர்மையையுடைய
(அர்த்த சந்திர;)பாணங்களை யுடையவனும், தேரினன் – தேரின்மேல்
ஏறியவனுமாய்,-தொலைவு இல் அம் கழல் துணைவர்ஏ துணைவர் ஆக –
தோல்வியில்லாத அழகிய வீரக் கழலையுடைய (தன்) தம்பிமார்களே சகாயராய்வர்,
வெம் சூறை போல் – கொடிய சுழல்பெருங்காற்றுப் போல, மலை விலங்கு தோள்
வீமனை வளைத்து – மலையும் (எதிராகாமல்) விலகும்படியான [மிகவலிய]
தோள்களையுடைய வீமசேனனைச் சூழ்ந்து, எதிர்வந்து திளைத்தனன்-எதிரில்வந்து
நெருங்கினான்; (எ-று.)
இப்பாட்டில், அடிகளைப் பொருளுக்கு ஏற்றவிடத்தில எடுத்துக்கூட்டியது-
அடிமறிமாற்றுப்பொருள்கோள். இனி, இரண்டாம் அடியை வீமனுக்கு
அடைமொழியாகக் கொள்ளினும் அமையும், இமயமலைக்குத் தென்புறத்ததாகிய
பரதகண்டம் முழுவதையும் அரசாண்டவனென்ற கருத்தை, மலையரசனாகிய
இமயத்துக்குத் தலைவனென்று விளக்கினார். இனி, (தைரியத்தில்) இமயமலை
போல்பவனெனினுமாம். விலங்கலுக்கரசு மேருமலையென்பாரு முளர். விலங்கல்-
ஒருபுறத்தே விலகியிருப்பதெனக் காரணக்குறி.
தும்பிமேல் மதத்திடை விழும் தும்பிபோல் விறல்
தோன்றலும்,
தம்பிமாரும், உற்று எய்த வெஞ் சாயகங்கள்
மெய் தைக்கவே,
வெம்பி வீமனும், தன் சரம், ‘விண்தலத்தில் இவ்
வேந்தனுக்கு
எம்பிமாரில் இன்று எண்மர் போய் இடம் பிடிக்க!’
என்று ஏவினான்.5.-இதுவும் அடுத்த கவியும்-துரியோதனன்தம்பிமாரில் எண்மரை
வீமன் கொன்றமையைக் கூறும்.
தும்பி மேல் – யானையின்மேலுள்ள, மதத்திடை- மதசலத்திலே,
விழும் – (கூட்டமாக வந்து) விழுந்து மொய்க்கிற, தும்பி போல் – வாண்டுகள்
போல,விறல் தோன்றல்உம் தம்பிமார்உம் உற்று – வலிமையையுடைய
துரியோதனராசனும்[அவனது] தம்பிமார்களும் (வீமனை) நெருங்கி, எய்த –
பிரயோகித்த,வெம்சாயகங்கள் – கொடிய அம்புகள், மெய் தைக்க-(தன்)
உடம்பிற்பட,-வீமன்உம்-வீமசேனனும், வெம்பி – கோபம்கொண்டு, எம்பிமாரில்
எண்மர் இன்று விண்தலத்தில போய் இ வேந்தனுக்கு இடம் பிடிக்க என்று –
‘என்தம்பியரில்எட்டுப்பேர் இன்றைக்கு வீரசுவர்க்கத்திற்சென்று (பின்பு வரும்)
இத்துரியோதனனுக்காக அங்கு இடம் அமைத்து வைப்பார்களாக’ எனக்கூறி, தன்
சரம் ஏவினான் – தன் அம்புகளை (அவர்கள்மேல்) செலுத்தினான்; (எ-று.)
தும்பி – வண்டின் சாதிபேதம், யானைமதத்தில் மொய்க்கிற வண்டுகள் –
வீமன்மேல் ஒருங்கு நெருங்கிய துரியோதனாதியர்க்காயினும்,
அவர்களம்புகளுக்காயினும் உவமையாம். அவர்களும் அம்புகளும் அவனை
மிகுதியாகவருத்தமாட்டாமையையும் அவற்றை வீமன் சிறிதும் மதியாத
மேன்மையையும் இவ்வுவமை விளக்கும். துரியோதனனுக்குத் தம்பியர் வீமனுக்கும்
தம்பியரே யாதலால், ‘எம்பிமார்’ என்றான். எண்மர்பெயர். அடுத்த கவியிற்
கூறப்படும். தமக்குத்தலைவனான அரசன் ஓரிடத்திற்குச் செல்லுதற்கு முன்னமே
அவனைச்சேர்ந்தவர்கள் தாம் சென்று இடமமைத்தல் இயல்பு; அத்தன்மையை
இங்கே வீமன் பகைவர்க்குச் சமத்காரமாகக் கூறினான். இடமமைக்க என்னாது,
இடம்பிடிக்க என்றது – அப்பொழுது போரில் அளவில்லாமல் மேல்மேல் இறக்கிற
வீரர்களால் சுவர்க்கம் இடம்நெருங்கியிருக்கு மென்பது பற்றி யென்க. இங்ஙனம்
கூறியதனால், துரியோதனனைத் தான் விரைவில் தவறாதுகொல்லுதல்
உணர்த்தப்பட்டது.
முந்த அன்று சென்று ஆசுகன் மைந்தன்
ஆசுகம் மூழ்கவே,
சுந்தரன், விசாலக்கணன், வீர வாசி, பௌதுண்டனும்,
அந்த மா மகோதரனுடன், மாகவிந்துவும், அபயனும்,
சிந்தினார் களம்தன்னில், ஆதித்தகேதுவும், சேரவே.
அன்று – அப்பொழுது, ஆசுகன் மைந்தன் – வாயுகுமாரனான
வீமனது, ஆசுகம் – அம்புகள், முந்த சென்று – விரைவாகப் போய், மூழ்க –
(அவர்களுடம்பில்) அழுந்த,- சுந்தரன்-, விசாலக் க(ண்) ணன்-, வீரவாசி-,
பௌதுண்டனும்-, அந்த-, மா-பெரிய, மகோதரனுடன்-, மாகவிந்துவும்-, அபயனும்-
ஆதித்தகேதுவும்-, [இப்பெயர்கொண்ட துரியோதனன்தம்பிமார் எண்மரும்]. சேர-
ஒருசேர, களந்தன்னில்- போர்க்களத்திலே, சிந்தினார் – உயிர்நீத்தார்கள்; (எ-று.)
சிந்தினார் என்று சொன்னது – மங்கலவழக்கு. சுநாபன், விசாலாக்ஷன்,
பஹ்வாசீ, பண்டிதன், மகோதரன் குண்டதாரன், அபராஜிதன், ஆதித்யகேது என
இவர்கள்பெயர் வியாசபாரதத்திற் கூறப்பட்டுள்ளது. சுநாபன் சுந்தரன் என்பனவும்,
விசாலாஷன் விசாலக்கண்ணன் என்பனவும், பஹ்வாசீ வீரவாசி என்பனவும்,
அபராஜிதன் அபயன் என்பனவும் காரணப்பெயர்களாகக் கருதுமிடத்துப்
பெரும்பாலும் பொருளில் ஒற்றுமைப்படும் மகோதரன்=மகா உதர அன் –
பெருவயிறுடையான், ஆதித்ய கேது – சூரியக்கொடியுடையவன்.
பௌதுண்டனும்என்றவிடத்து ‘பண்டிதனுமே’ எனப் பாடங்கொள்ளலாம்.
குண்டதாரன், மாக விந்து என்றவை-ஒற்றுமைப்படவில்லை. மூன்றாம் அடியின்
முதலில், மந்தம் ஆம் எனப்பிரித்து – மந்த புத்தியுடைய எனப் பொருள்
கொள்ளலுமாம். ஆசுகன் – விரைந்து செல்பவன்; வாயு: ஆசுகம்-விரைந்து
செல்வது;பாணம்: வடசொற்கள். அன்று முந்தச்சென்று – அப்பொழுது (அவர்கள்
போருக்கு)முற்பட வந்து எனினுமாம்.
அற்ற கந்தரம் உயிரினோடு அந்தரம் புகத் துள்ளவும்,
இற்ற பேர் உடம்பு அவனிமேல் எடுத்த வில்லுடன் வீழவும்,
உற்ற தம்பியர் மாய்தல் கண்டு, உள் உடைந்துபோய்,
உரனுடைக்
கொற்றவன் பெருங் குருகுலக் குரிசில் நின்றுழிக் குறுகினான்.7.-தம்பிமாரெண்மர் இறந்ததுகண்ட வருத்தத்தோடு துரியோதனன்
வீடுமனைக் குறுகுதல்.
அற்ற கந்தரம் – (வீமனால்) அறுபட்ட கழுத்து (தலை),
உயிரினோடு- உயிருடனே, அந்தரம் புக – ஆகாயத்திலே பொருந்த, துள்ளஉம்-
எழும்பிக்குதிக்கவும், இற்றபேர் உடம்பு-(தலை)போன பெரிய உடம்பு, எடுத்த
வில்லுடன் -(கையிற்) பிடித்த வில்லுடனே, அவனி மேல் வீழ உம் – தரையிலே
விழுந்திடவும்,உற்ற தம்பியர் மாய்தல் – மனமொத்த (தன்) தம்பிமார் இறத்தலை,
கண்டு-, உரன்உடை கொற்றவன் – வலிமையையுடைய வீரனான துரியோதனன்,
உள்உடைந்துபோய் – மன மழிந்து, குருகுலம் பெரு குரிசில் நின்ற உழி-
குருகுலத்துப் பெரிய அரசனான வீடுமன் நின்றவிடத்தில், குறுகினான் – சேர்ந்தான்.
கந்தரம் – தலையைத் தரிப்பது; கம் – தலை: கழுத்தின் பெயர் இங்கே
தலைக்கு இலக்கணை.
தன் பிதாமகன் செய்ய தாள் தனது மௌலிமேல்
வைத்து நின்று,
‘உன் பிதாவின்மேல் அன்பினால் உலகம் உம்பியர்க்கு
உதவுவாய்;
என் பிதாவும் நீ, யாயும் நீ’ என்று இருந்தனன்;
எம்பிமார்
முன் பிதா மருத்து என்னும் அம் முதல்வனால்
முடிவு எய்தினார்.8.- இதுவும், மேற்கவியும்-ஒருதொடர்: துரியோதனன் வீடுமனிடம்
சிலகூறிப் புலம்பலைத் தெரிக்கும்.
(துரியோதனன்), தன் பிதாமகன்-தனது (பெரிய) பாட்டனான
வீடுமனது, செய்ய தாள் – சிவந்தபாதங்களை, தனது மௌலிமேல் வைத்து – தனது
தலையின்மேல் சூடி [வணங்கி], நின்று – (அருகில்) நின்று, (அவனைநோக்கி), ‘உன்
பிதாவின் மேல் அம்பினால் – உனதுதந்தையினிடத்து அன்பினாலே, உலகம் –
இராச்சியத்தை, உம்பியர்க்கு – உன் தம்பிமார்களுக்கு, உதவுவாய் – கொடுத்தவனே!
என் பிதாஉம் நீ – எனக்குத் தந்தையும் நீயே; யாய்உம் நீ – என்தாயும் நீயே,
என்று இருந்தனன் – என்றுகருதியிருந்தேன்; (இப்படியிருக்கையில்), எம்பிமார் –
என்தம்பியர், முன் பிதா மருத்து என்னும் அ முதல்வனால் – முன்னே (இவனைப்)
பெற்றதந்தை வாயு வென்று கூறப்படுகிற அந்தப்பெரியவீமனால், முடிவு எய்தினர் –
அழிவையடைந்தார்கள்; (எ – று.)-இப்பாட்டில், வைத்துநின்று’ என்பதற்கு.
அடுத்தபாட்டில் “வேந்தர் வேந்து” – எழுவாய். வைத்துநின்று “என
உரைசெய்தான்” என்க.
இரண்டாமடியில், உன்பிதாஎன்றது-சந்தனுவையும், உம்பியர் என்றது-
சித்திராங்கதனையும், விசித்திரவீரியனையுங் குறிக்கும். முதல் மனைவியான கங்கை
வீடுமனைப் பெற்றுச் சந்தனுவைவிட்டு நீங்கியபின், சந்தனு, செம்படவன் வளர்த்த
மகளாகிய பரிமள கந்தியென்பவளைக் கண்டு காமுற்று மணம்பேச, அவள்தந்தை
‘மநுநீதிமுறைப்படி மூத்தமனைவியின் குமாரன் அரசாள, என்மகளுக்குப் பிறக்கும்
பிள்ளை அரசின்றிக் கீழ்மைப்பட்டிருப்பானாதலால், நான் உனக்கு மகனைக்
கொடேன்” என்று சொல்ல அதை அறிந்த பீஷ்மன், தந்தைக்கு மணஞ்செய்வித்தற்
பொருட்டு, தான் மணஞ்செய்து கொள்வதில்லை யென்றும், இராச்சியத்தைத் தன்
தம்பிக்கே கொடுப்பதாகவும் தேவர்கள் முன்னிலையில் பயங்கரமான சபதஞ்
செய்து, அம்மகளைத் தந்தைக்கு மணஞ்செய்வித்து, பின்பு அவளுக்குப் பிறந்த
சித்தி ராங்கதன் விசித்திரவீரியன் என்பவர்க்கே முன்னைய வாக்குப்படி
அரசாட்சியைக் கொடுத்தானென வரலாறு அறிக. இவ்வாறு தம்பியரிடத்தில்
மிகுந்தஅன்புகொண்ட நீ, அவர்களில் ஒருவனுக்குப் பௌத்திரனான என்னை
உபேக்ஷிக்கலாமோ? உன் தம்பியர்உனக்குந் அருமையாயிருந்ததுபோல, என
தம்பியர் எனக்கும் அருமை யன்றோ? அவர்கள் இறக்கப் பார்த்திருப்பது
தகுதியோ? என்ற கருத்துத் தோன்ற இவ்வாறு கூறினான். வீடுமன் முனைந்து
போர்செய்திருந்தால் தன் தம்பியர் இவ்வாறு இறந்திரா ரென்ற எண்ணத்தால்,
இவ்வாறு கூறியது.
“நீ வினைத்தலைச் சேனையின் தலைவன் ஆகி
முன் நிற்கவே,
வீவு எனக்கு வேறு இல்லை” என்று எண்ணினேன்’
என வேந்தர் வேந்து,
ஓவியத்தின் மெய் உணர்வு அழிந்து, உள் அழிந்துகொண்டு,
உரை செய்தான்-
வாவி நித்திலம் என்னவே, மலர்ந்த கண்கள் நீர் மல்கவே.
நீ-, வினைத்தலை – (போர்த்) தொழிலிலே, சேனையின் தலைவன்
ஆகி – சேனைத்தலைவனய், முன் நிற்கஏ – முன்னே நிற்பதனால், வேறு வீவு
எனக்கு இல்லை என்று எண்ணினேன் – (வாழ்வுக்கு) வேறான அழிவே எனக்கு
உண்டாகா தென்று நினைத்திருந்தேன்’, என – என்று, வேந்தர் வேந்து –
ராஜராஜனான துரியோதனன், ஓவியத்தின் – சித்திரப்பாவைபோல, மெய் உணர்வு
அழிந்து – (அதிகசோகத்தால்) உடம்பின் உணர்ச்சி ஒழிந்து, உன் அழிந்துகொண்டு-
மனம் வருந்திக்கொண்டு, மலர்ந்த கண்கள் – பரந்த (தன்) கண்களினின்றும், நீர்-,
வாவி நித்திலம் என்ன – நீர்நிலைகளில்வெளித்தோன்றுகிற முத்துக்கள்போல,
மல்க- நிறைய, உரை செய்தான் – கூறினான்; (எ-று.)
என உரைசெய்தான் என இயையும், வாலி – வாபீ: வட சொல், வாவியில்
நித்திலம் – சங்கு முதலியவற்றினின்று உண்டாவன; இனி, நித்திலம் என்பதை
உவமையாகுபெயராகக் கொண்டு, முத்துப்போலத் தெளிவான குளத்துநீர்
கண்ணீர்க்கு உவமையெனினும் அமையும்.
இரங்கல் நீ சிறிதும், ஐய! எறி படை
எடுப்பது, யாரும்
உரங்கள் போய் அமரில் சாகாது, உய்ந்தனர்
ஓட அன்றே;
சரங்களால், அயிலால், வாளால், தம் பகை
செகுத்து, தாமும்
சிரங்கள் வேறு உடல்கள் வேறாக் கிடப்பதே,
செல்வம் அம்மா!10.-இதுமுதல் ஏழு கவிகள்-ஒருதொடர்: இவ்வாறு சோகித்துக்கூறிய
துரியோதனனுக்கு வீடுமன் கூறுவன.
ஐய -ஐயனே! நீ-, சிறிதுஉம் இரங்கல்-கொஞ்சமும் வருந்தாதே;
(உலகத்தில்), யார்உம் – எல்லோரும், எறிபடை எடுப்பது – (பகைவர்மேல்)
வீசத்தக்க ஆயுதங்களை யேந்துவது, அமரில் – போரில், உரங்கல் போய்
சாகாது -வலிமைகள் அழிந்து இறவாமல், உய்ந்தனர் ஓட அன்றே –
தப்பிப்பிழைத்தவர்களாய் ஓடிப்போகும் பொருட்டன்று; சரங்களால் –
அம்புகளாலும், அயிலால் – வேல்களாலும், வாளால் – வாள்களாலும், தம் பகை
செகுத்து – (தம்மால் இயன்றவளவு) தமது பகைவர்களை அழித்து, (தம்மால்
இயலாதவிடத்துப் பகைவர்களால் அழிந்து), தாம்உம் சிரங்கள் வேறு உடல்கள்
வேறு ஆ கிடப்பது எ – தாங்களும் தலைகள் வேறும் உடல்கள் வேறுமாக
விழுவதே, செல்வம் – (வீரர்க்குச்) சிறப்பாம்; (எ-று.)- அம்மா – ஈற்றசை;
இவ்வுண்மையை உணராமல் துரியோதனன் துன்பமுற்றதைப் பற்றிய வியப்பை
நன்கு விளக்கும் இடைச்சொல்லுமாம்.
போரிற் படையெடுத்துச் சென்றால், வெற்றியுந் தோல்வியும் ஒருவர் பங்கன்று;
போரிற் பகைவரை வெல்லுதல்போலவே, பகைவரால் இறத்தாலும் வீரர்க்குச்
சிறப்பேயா மென்பதாம், பௌத்திரனை ‘ஐய’ என்றது – மரபுவழுவமைதி, போய்
என்ற வினையெச்சம் – சாகாது என்பதில் சா என்ற பகுதியைக் கொள்ளும்.
கிடப்பதே, ஏ – பிரிநிலை.
இதுமுதற் பதினான்கு கவிகள் – ஒன்று நான்காஞ்சீர்கள் விளச்சீர்களும்
மற்றவை மாச்சீர்களுமாகிவந்த அறுசீராசிரியவிருத்தங்கள்
இருந் தனம் படைத்த மாக்கள் இன்பமும்
அறனும் அஞ்சார்;
விருந்து எதிர் சிறிதும் அஞ்சார், மேம்பட
வாழும் இல்லோர்;
பொருந்திய இறப்பை அஞ்சார், போத மெய்
உணர்ந்த மாந்தர்;
அருந் தவம் முனிவர் அஞ்சார்; அரசரும்
அடு போர் அஞ்சார்.
இரு தனம் படைத்த மாக்கள்-மிகுந்த செல்வத்தைப்பெற்ற
மனிதர்கள்.இன்பம்உம் அறன்உம் அஞ்சார்-(அதைச் செலவழித்துத்தாம்)
இன்பமடைதற்கும்(பிறர்க்குத்) தருமஞ்செய்தற்கும் பின் வாங்கமாட்டார்கள்;
மேம்பட வாழும்இல்லோர் – மேன்மையாக இல்லறத்தில் வாழ்பவர், விருந்து
எதிர் சிறிதுஉம்அஞ்சார்-விருந்தினரை யெதிர்கொள்ளுதற்குச் சிறிதும்
பின்னிடமாட்டார்கள்;போதம்மெய் உணர்ந்த மாந்தர்-ஞானத்தால்
தத்துவப்பொருள்களை யறிந்தமனிதர்கள், பொருந்திய இறப்பை அஞ்சார்-
(இயல்பாகப்) பொருந்தியமரணத்துக்குப் பயப்படமாட்டார்கள்; முனிவர்-இருடிகள்,
அரு தவம் அஞ்சார்-(செய்வதற்கு) அருமையான தவத்தைச் செய்வதற்கு
வருந்தமாட்டார்கள்;(அவ்வாறே), அரசர்உம் அடு போர் அஞ்சார்-
அரசர்களும்கொலைக்கிடமானபோர்த்தொழிலுக்கு அஞ்சமாட்டார்கள்; (எ-று.)
போதமெய்யுணர்தல் – நிலையாகவுள்ள பொருள்கள் நிலையில்லாத
பொருள்கள் என்பவற்றின் தன்மையை உள்ளபடியறிதல்; இதுவே தத்துவஞானம்.
-தநம், போதம் – வடசொற்கள். விருந்து-புதுமை; புதியராய்வந்தவர்க்குப்
பண்பாகுபெயர். எதிர்-எதிர்கொள்ளுதல்: முதனிலைத்தொழிற்பெயர். ஆறிலுஞ்சாவு
நூறிலுஞ்சாவு’ என்றபடி பிறந்தவுயிர் எப்பொழுதாயினும் இறத்தல் நிச்சயமாதலால்,
‘பொருந்தியஇறப்பு’ என்றது. அரசர் அடு போரஞ்சாரென்று சொல்லவேண்டிய
இடத்து, அப்ரஸ்துதமாகத் தனம்படைத்தார் இன்பமும் போகமுமஞ்சார் முதலிய
அஞ்சாமையுடையவரையெல்லாஞ் சேர்த்து ‘அஞ்சார்’ என்பதைப் பலமுறை
கூறியஇது- (சொற்பொருட்பின்வந்ததீபகவணி.)
இன்னம் ஒன்று உரைப்பக் கேண்மோ, இரு
செவிக்கு ஏறாதேனும்:
முன் அரசு ஆண்ட வேந்தர் முறைமையின்
சிதைந்தது உண்டோ?
மன் அவைதன்னில் நின்ற மாசு இலா
வடமீன் போல்வாள்-
தன் இரு கண்ணீர் இன்னம் இவைகொலோ
தருவது அம்மா!
இரு செவிக்கு ஏறாது ஏன்உம் – (உனது) இரண்டு காதுகளிலும்
(ஒப்பாக) நுழையாதாயினும், இன்னம் ஒன்று உரைப்பகேள் –
இன்னுமொருசெய்தியை (யான்) சொல்ல (நீ) கேட்பாய்; முன் அரசு ஆண்ட
வேந்தர் – (உனக்கு) முன் அரசாட்சி செய்த அரசர் (எவராயினும்), முறைமையில்
சிதைந்தது உண்டுஓ-நீதியில் தவறினது உண்டோ? [இல்லையென்றபடி]; மன்
அவைதன்னில் – இராசசபையிலே, நின்ற – (முன்புஉன்னால்துச்சாதனனைக்
கொண்டு வலியப்பிடித்து இழுத்துவரப்பட்டு) நின்ற, மாசு இலா
வடமீன் போல்வாள்தன் – குற்றமில்லாத அருந்ததியை ஒப்பவளான
திரௌபதியினது, இரு கண் நீர் – இரண்டுகண்களினின்று பெருகிய நீர்,
இன்னம்இவை கொல்ஒ தருவது – இனி இத்தீங்குகளைமாத்திரமா
விளைப்பது?-(எ-று.)அம்மா – ஈற்றசை. இரக்கப்பொருளதுமாம்.
இன்னும் பலதீங்குகளைத்தருமென்றபடி; உனக்கும் மரணத்தையுண்டாக்கு
மெனக் குறிப்பித்தவாறாம். இவைகொலோ தருவது, இன்னம் தருவது எனத்
தனித்தனிகூட்டி முடிப்பினுமாம். “ஏழை யழுத கண்ணிர் கூரியவாளொக்கும்”,
“தோற்றத்தாற்பொல்லார் துணையிலர் நல்கூர்ந்தார். மாற்றத்தாற் செற்றாரென
வலியார்- ஆட்டியக்கால், ஆற்றா தவரழுத கண்ணீ ரவையவர்க்குக். கூற்றமாய்
வீழ்ந்துவிடும்”, “அல்லாற்பட்டாற்றாதழுத கண்ணீரன்றே, செல்வத்தைத் தேய்க்கும்
படை”என்பன காண்க. மாசு இலா-கற்பு நிலைமையிற் கலங்குதலில்லாத என்க;
“கலங்கலில் கற்பினருந்ததி” என்றார் கம்பரும். அருந்ததி-வசிஷ்ட முனிவரது
மனைவி, கற்புடையார்பலரினும் இவளுக்கு மேன்மை என்னவெனின்? –
நக்ஷத்திரநிலையிலும் கணவனைப் பிரியாதிருக்கை. அதனை இங்ஙனம் அறிக:-
வடக்கில் சப்தருஷி மண்டலமென்று (இரண்டாயிரத்தெழுநூறுவருஷங்களுக்கு ஒரு
சுற்றுச்சுற்றுகிற) நக்ஷத்திரக்கூட்டமொன்று இருக்கிறது. அதில் நான்குநக்ஷத்திரங்கள்
நீண்ட சதுரமாய்ப் பெட்டிப்பண்டிபோலிருக்கின்றன; அவற்றின்முன்புறத்து அடியில்
நடுவளைந்த ஏர்க் காலைப்போல மூன்றுநட்சத்திரங்கள் இருக்கின்றன: இவற்றில்
நடு நட்சத்திரம் வசிஷ்டநட்சத்திரம், அதனடியிற்கிட்டினதாய் நுட்ப நோக்கினாற்
காணப்படத்தக்கதொரு நக்ஷத்திரம் இருக்கின்றது; அதுதான் அருந்ததி நக்ஷத்திரம்.
வடமீன் – வடக்கில் மின்னுவதெனக் காரணப்பெயர். எதிர்காலங் குறிக்கும்
இனியென்னும் இடைச்சொல் – விகாரப்பட்டு, இன்என்று ஆகி, அம் சாரியை
பெற்று, இன்னம் என நிற்கும் கேண்மோ, மோ-முன்னிலையசை
கால் வரு கவன மான் தேர்க் கன்னனும், கன்னபாக
மால் வரு கலுழி வேக மா வலான் சகுனிதானும்,
நூல் வரு பழுது இல் கேள்வி நும்பியும், நீயும், இந்த
நால்வரும் குறித்த எண்ணம் நாளையே தெரியும், ஐயா
ஐயா – ஐயனே! கால் வரு – காற்றுப்போல (வேகமாக) வருகிற,
கவனம் -நடையையுடைய, மான் – குதிரைகளைப் பூட்டிய, தேர் – தேரைச்
செலுத்தலில்வல்ல, கன்னன்உம் – கர்ணனும், கன்னம்பாகம்-
கன்னங்களினிடத்திலே, மால் வரு – மிகுதியாகவழிகிற, கலுழி-கலங்கல்நீராகிய
மதசலத்தையுடைய, வேகம் – உக்கிரத்தன்மையுள்ள, மா – யானையைச்
செலுத்துதலில், வலான் – வல்லவனாகிய, சகுனிதான்உம்-, நூல் வரு பழுது இல்
கேள்வி – நூற்களிலே பொருந்திய குற்றமில்லாத கேள்விகளையுடைய, நும்பிஉம்
நீஉம் – உன்தம்பியான துச்சாதனனும் நீயும், இந்த நால்வர்உம் – இந்த நாலுபேரும்,
குறித்த – முன்பு எண்ணின, எண்ணம் – தீயசிந்தையின் பயன், நாளைஏ தெரியும் –
நாளைக்கே தெரிந்துவிடும்; (எ-று.)-நாளையே தெரியும் – விரைவிலே உங்களுக்கு
முழுவதும் அழிவுண்டாமென்றபடி.
பெரியோர்கள் பலர் சாஸ்திரங்களிலுள்ள நீதிகளை எடுத்துச்
சொல்லக்கேட்டும் இயல்பான துர்க்குணத்தை விடாத இழிவு தோன்ற,
‘நூல்வருபழுதில் கேள்வி நும்பியும் நீயும்’ என்றார்; இனி, இகழ்ச்சியுமாம்.
முன்னிலையோடு படர்க்கையை உளப்படுத்தி முன்னிலையாக முடியாமல் ‘நால்வர்’
எனப் படர்க்கையாற் குறித்தது. இடவழுவமைதி. வழாநிலையாயின், ‘நால்விர்
எனநிற்கும். இவர்கள் குறித்த எண்ணம் – பாண்டவரைப் பலபடியாலும் கெடுத்தல்,
கால்வரு – கால்களாற் பாய்ந்துவருகிற என்றுமாம். இதைத் தேருக்கு அடைமொழி
யாக்கினால், சக்கரம்பொருந்திய என்று பொருள். ‘தேர்கண்ணன்’ என்றதில்,
கர்ணன்தேர்ப்பாகன்மகனென்ற இழிவும் தோன்றும். கன்னன்முதலியநால்வர்
துஷ்டசதுஷ்டரெனப்படுவர், நாளையே, ஏ – தேற்றம்.
விதுரனும் வெஞ் சொல் ஆற்றான், வில்லினை
ஒடித்து நின்றான்;
அதிரதன் ஆனால் அன்றி, அங்கர்கோன் அமரில் வாரான்;
முதிர் படை விசயன், வீமன், மூண்டு அமர் புரியும்காலை,
எதிர் இனி நானும் நீயும் அல்லது, இங்கு இலக்கு
வேறு ஆர்?
விதுரனும்-, வெம் சொல் ஆற்றான் – (உனது) கடுஞ்சொல்லைப்
பொறுக்கமாட்டதவனாய், வில்லினை ஒடித்து நின்றான் – வில்லை யொடித்துப்
போய்நின்றான்; அங்கர் கோன்-கர்ணன், அதிரதன் ஆனால் அன்றி – (தன்னை)
அதிரதனாக வைக்காமற்போனால், அமரில் வாரான் – போரில் வரமாட்டான்: இனி
– இனிமேல், முதிர் படை – மிகப்பயின்ற ஆயுதங்களையுடைய, விசயன் வீமன் –
அருச்சுனனும் பீமனும், மூண்டு – கோபத்தோடு வந்து, அமர் புரியும் காலை –
போர்செய்யும்பொழுது, எதிர் – (அவர்களை) எதிர்க்கவல்லவர், நான்உம் நீஉம்
அல்லது – நாம் இருவருமே யல்லாமல், இங்கு – இந்தப்பக்கத்தில், இலக்கு வேறு
ஆர் – (அவர்களுக்கு எதிர்க்கும்) குறியாய்நிற்பவர் வேறுயாவர்?
[எவருமில்லையேன்றபடி]; (எ-று.)
அருச்சுனனையும் வீமனையும் ஒருங்கே எதிர்க்கும் வல்லமை
யுடையானென்று தன்னாற் கருதப்பட்ட விதுரனும், அவ்வாறே
துரியோதனனாற் கருதப்பட்ட கர்ணனும் உதவாமற்போனதைக் கூறினான்.
நின்றான்-இங்கு வாராதுநின்றான் என்க. இனி-வராதபின்பு என்றபடி
புரிந்து அறம் வளர்க்கும் நீதிப் பொய் இலா
மெய்யன், அங்கே;
செருந்து அவிழ் துளப மாலைத் திருநெடுமாலும் அங்கே;
அருந் திறல் அமரில் பொன்றாது அங்கு
இருந்தவரை இங்கும்
இருந்தவர் காண்பது அல்லால், யார்கொலோ இறக்கலாதார்?
புரிந்து-விரும்பி, அறம்-தருமத்தை, வளர்க்கும்-விருத்திசெய்கிற,
நீதி-நியாயத்தையுடைய, பொய் இலா மெய்யன் – பொய்யில்லாத
மெய்ம்மையையுடைய, யுதிட்டிரன், அங்கே – அப்பக்கத்திலே (உள்ளான்);
செருந்துஅவிழ்-வாசனை வீசப்பெற்ற, துளபம் மாலை-திருத்துழாய்மாலையையுடைய,
திருநெடு மால்உம்- சிறந்த பெரிய கண்ணபிரானும், அங்கே – அப்பக்கத்திலே
(உள்ளான்); (ஆதலால்), அரு திறல் அமரில்-அருமையான வலிமையாற் செய்யும்
போரில், பொன்றாது – இறவாமல், அங்கு இருந்தவரை – அப்பக்கத்தில்
இருந்தவர்களை, காண்பது அல்லால் – பார்ப்பதேயல்லாமல், இங்குஉம் இருந்தவர்
– இப்பக்கத்திலுள்ளவர்களுள், இறக்கலாதார் யார்கொல்ஓ – (இன்னும்) இறக்க
மாட்டாதவர் யாவர்உளர்? (எ-று.)
அப்பக்கத்தில் தருமனது சத்தியபலமும் கண்ணனதுதெய்வபலமும்
இருத்தலால், பலர் இறத்தலில்லை; இப்பக்கத்தில்உங்கள் தீச்செய்கைப் பயனும்,
விதுரன் கர்ணன் இவர்களது உதவியின்மையும் இருத்தலால், மற்றும்பலரும்
இறத்தல் கூடுமென்றான். செருந்து-தேனும், இதழுமாம்; இச்சொல்லுக்குச்
சந்தருப்பத்திற்குஏற்ப இப்பொருள்கள் கொள்ளப்பட்டன. ‘திருந்தவிழ்’ என்ற
பாடம்பொருத்தம். இங்கும்-உம்-இசைநிறை. மாலும்-,உம் – இறந்ததுதழுவிய
எச்சத்தோடுஉயர்வுசிறப்பு. மெய்க்கு ‘பொய்யிலா’ என்ற அடைமொழி
கொடுத்தது, அதன்எப்பொழுதுந் தவறாத உறுதிப்பாட்டை உணர்த்தும்.
விடுக, நீ கவல வேண்டா; மேல் உனக்கு
உறுதி சொன்னேன்;
முடுக வாள் அமரில் சென்று முன் முனைந்தாரை இன்றே
அடுக, மற்று ஒன்றில்! ஒன்றில், ஆங்கு
அவர்தங்கள் கையால்
படுக! வா!’ என்று தேர்மேல் சென்றனன், பரிதி போல்வான்.
நீ-, கவல வேண்டா – கவலைப்படவேண்டாம்; விடுக–
(அக்கவலையை)ஒழித்துவிடுவாயாக; மேல்-இனி நடக்க வேண்டிய காரியத்துக்கு,
உனக்கு-, உறுதிசொன்னேன்-உறுதி மொழி கூறுகிறேன்: வாள் அமரில் –
ஆயுதங்களைக்கொண்டு செய்யும் போரிலே, முடுக சென்று – விரைவாகப்போய்,
முனை முனைந்தாரை. -அப்போர்க்களத்திலே போர்செய்தவர்களை இன்றே
அடுக – இப்பொழுதேகொல்வோமாக; (அல்லது), ஆங்கு – அவ்விடத்து
(அப்போரில்), அவர் தங்கள்கையால் படுக – அப்பகைவர்களது கையால்
இறப்போமாக; வா – (புறப்பட்டுப்போர் செய்ய நீ) வா, என்று – என்றுசொல்லி,
பரிதி போல்வான் – சூரியன்போல் விளங்குபவனான வீடுமன், தேர்மேல்-,
சென்றனன்-(போருக்குப்) போனான்; (எ-று.)-இப்பாட்டின் மூன்றாமடியிலுள்ள
‘ஒன்றில்’ என்றசொல் இரண்டும் – விகற்பப்பொருளன; ஒன்றில், போர்செய்து
பகைவரைக்கொல்வோம்; ஒன்றில், போரில் அவர்களால் இறப்போம் என்க.
மற்று – வினைமாற்று.
இங்ஙன் ஒன்றற்குமாறான இருதொழிலை ஒத்தவலிமையுடையவனவாக
வைத்துக்கூறுவது விகற்பாலங்கார மெனப்படும். வேண்டாம் எனவும் பிரிப்பர்.
சொன்னேன் – இயல்புபற்றி நிகழ்காலம் இறந்தகாலமான வழுவமைதி. பி-ம்:
முன்முனைந்தாரை.
காய் இருங் களிற்றின் மேலான் கடோற்கசக் காளைதான் ஓர்
ஆயிரம் வடிவாய், முந்தி, அரசர் பேர் அணியை எல்லாம்
தோய் இருட் பிழம்போடு உற்ற சோனை அம்
புயலின் தோன்றி,
மா இரு விசும்பில் தாராகணம் என, மாய்த்து வந்தான்.7.அப்போது கடோற்கசன் மாயையாற் பல வடிவுகொண்டு
பகைஞரை மாய்த்து வருதல்.
(அப்பொழுது), கடோற்கசன் காளை – கடோற்ககசனாகிய (வீம)
குமாரன், தான்-,-காய் இருங் களிற்றின் மேலான் – கோபிக்குந்தன்மையுள்ள
பெரியஒரு ஆண்யானையின்மே லேறியவனாய், தோய் இருள் பிழம்போடு உற்ற
சோனை அம் புயலின் தோன்றி – திரண்ட இருளின் தொகுதியோடு பொருந்திய
விடா மழைபொழியும் அழகியகாளமேகம்போல விளங்கி, ஓர் ஆயிரம் வடிவு ஆய்
முந்தி-(மாயையாற்) பலவடிவங்கொண்டு வந்து, மா இருவிசும்பில தாரா கணம் என
– மிகப்பெரிய ஆகாயத்திலே பொருந்திய நட்சத்திரங்களின் கூட்டம்போல்
(மிகுதியாக அடர்ந்துள்ள), அரசர் பேர் அணியை எல்லாம்-பகையரசர்களது பெரிய
சேனைகளையெல்லாம், மாய்ந்து வந்தான் – அழித்துக்கொண்டு வந்தான்; (எ-று.)
கரியயானையின்மேல் வந்த கடோற்கசனக்கு இருளினோடு பொருந்திய
காளமேகம்உவமை. மழைபொழி காளமேகம் நட்சத்திரங்களை மறைப்பது போல,
யானையோடுவந்த கடோற்கசன் பகைவர்சேனைகளை ஒழித்தன னென்க. மாயிரு –
ஒருபொருட்பன் மொழி; உரிச்சொற் புணர்ச்சி: “மாமுன் உயிர்வரின் யகரமெய்
தோன்றும்”. தாராகணம் – வடசொற்றொடர்.
ஒரு புடை இவன் போர் செய்ய, ஒரு புடை, உரக கன்னி
அருளுடை மைந்தன் எண் இல் ஆயிரம் உருவம் ஆகி,
இரு புடையினும் போர் வேந்தர் எலிகள்போல்
ஏங்கி, அம்பால்
பொரு படை உருண்டு போக, பொரு இல் வெம்
பூசல் செய்தான்.18.-ஒருபுறத்தில் இராவான் பலவடிவுகொண்டு பொருதல்.
ஒரு புடை இவன் போர் செய்ய-ஒருபக்கத்திலே இந்தக்கடோற்கசன்
(இவ்வாறு)போரைச் செய்துகொண்டிருக்க,- ஒரு புடை – மற்றொரு பக்கத்தில்,
உரக கன்னி அருள் உடைமைந்தான் – நாககன்னிகையாகிய உலூபியினது
அன்புள்ளபுத்திரனான இராவான், எண் இல் ஆயிரம் உருவம் ஆகி –
அளவில்லாத பல ஆயிரம்வடிவங்கொண்டு, போர் வேந்தர் – போர் செய்யவல்ல
அரசர்கள், எலிகள் போல் ஏங்கி-(பாம்பின் முற்பட்ட) எலிகள் போல அஞ்சி
வருந்தி, பொரு படை – போர்செய்யும் சேனைகளோடு, இருபுடையின்உம்
உருண்டு போக – இரண்டு பக்கங்களிலுஞ் சிதறிப்போகும்படி, அம்பால் –
அம்புகளால், பொருவு இல் வெம் பூசல் செய்தான் – ஒப்பில்லாத கொடிய
போரைச்செய்தான்.
நாககன்னிகைமகனான இவன், தலையின்மேற் படத்தோடு கூடிச் சிறிது
பாம்புவடிவம் உடையனாதலால், இவனுக்குமுன் ஓடுங்கின அரசர்களுக்கு
எலிகளை உவமைகூறினார்; இங்கே “ஒலித்தக்கா லென்னா முவரி யெலிப்பகை,
நாக முயிர்ப்பக்கெடும்” என்ற திருக்குறளை யுணர்க்க, பல எலிகள் கூடி
ஆரவாரித்தாலும் ஒருபாம்பினால் எளிதில் அழிதல்போல, பலர் திரண்டு
ஆரவாரித்து வந்து இவனொருவனால் அழிவடைந்தன ரென்க.
இப் பகல் முடியும் முன்னே யாரையும் முடிப்பன்!’ என்னா,
பைப் பகல் மகுட மைந்தன் பல பெரும் படையும் ஆகி,
அப் பகல் அடு போர் செய்ய, அன்று, அமர் அழிந்து மாய்ந்த
மெய்ப் பகன் இளவல் அந்த வீமன்மேல்
வெகுண்டு வந்தான்.9.-அப்போது பகாசுரன்தம்பி வீமன்மேற் பொரவருதல்.
இ பகல் முடியும் முன்ஏ – இந்தப்பகற்பொழுது முடிவதற்கு
முன்னே, யாரைஉம் முடிப்பன்-(பகைவர்கள்) எல்லோரையும் அழிப்பேன்’,
என்னா- என்றுகூறி, பை பகல் மகுடம் மைந்தன் – படத்தையும்
ஒளியையுடையகீரிடத்தையு முடைய இராவான், பல பெரு படைஉம் ஆகி –
(தான்ஒருவனே மாயையால்) பல பெரிய சேனைகளுமாக வடிவங்கொண்டு,
அ பகல் – அன்றைத்தினத்திலே, அடு போர் செய்ய – கொல்லும்போரைச்
செய்துகொண்டிருக்க,- அன்று அமர் அழிந்து மாய்ந்த மெய்பகன் இளவல்-
முன்னொருகாலத்திலே போரில்(வீமனால்) அழிந்து இறந்த வடிவத்தையுடைய
பகாசுரனது தம்பியான (அலம்புசனென்னும்) அரக்கன், அந்த வீமன்மேல்
வெகுண்டு – (தன் தமையனைக் கொன்றவனான) அவ்வீமசேனன்மேற்
கோபங்கொண்டு, வந்தான் -(பாண்டவசேனையை) எதிர்த்து வந்தான்; (எ-று.)
வேத்திரகீயநகரத்தின் புறத்தி லுள்ளதொரு வனத்தில் வசித்துக்கொண்டு,
பகாசுரனென்பவன், அவ்வூரிலுள்ள வீடுகளிலிருந்து நாள்தோறும்
ஒருவண்டியுணவையும் ஓரிளமகனையும் தனக்கு முறைப்படி திறையாகப்பெற்று
உண்டுவாழ்ந்திருந்தான்; இருக்கையில், பாண்டவர்கள் அரக்கு மாளிகையினின்று
தப்பியுய்ந்து பிராமணவேடம்பூண்டு குந்தியோடுகூட அவ்வூரில் ஓர்
அந்தணன்மனையிற் சென்று தங்கியிருக்க, ஒருநாள் அவ்வீட்டுக்குரிய முறை
நேர்ந்தது; நேரவே, தன்மகனுக்கு அழிவுண்டாவதனை நோக்கி வருந்திப் புலம்பிய
அவ்வீட்டுவேதியன்மனைவியினது சோகத்தைத் தணித்துக் குந்தி தன்மகனான
வீமனையனுப்ப, இவன் சென்று அவனுக்கென்றுகொடுத்த உணவையெல்லாந்
தானுண்டு அவனுடன்பொருது அவனையழித்து அவ்வூரவர்க்கு இடையூறில்லாதபடி
செய்தனனென்பது கதை. அந்தப் பகாசுரனது தம்பியான அலம்புசன், அதுமுதல்
வீமனிடத்துப் பகைகொண்டு, பின்பு பாரதயுத்தத்தில் வீமனைக்கொல்வதாகத்
துரியோதனனோடு சொல்லி, மற்றும் பல அரக்கர்களோடு அவன் பக்கத்தில்
துணையாய் வந்துநின்றா னென்க.
என் உடன்பிறந்தோன் தன்னை யுதிட்டிரன்
இளவல் கொன்றான்;
தன் உடல் பிளப்பேன்!’ என்று, தானை வல்
அரக்கரோடு
மன்னுடன் சொல்லி நிற்பான் வந்து, எதிர்
மலைந்த காலை,
மின்னுடை முகில்போல் சென்றான், வீமனுக்கு
இளையோன் மைந்தன்.20.-இரண்டுகவிகள்: உடன்வந்த அரக்கரைமாய்த்து அலம்புசனை
இராவான் புறங்கொடுக்கச் செய்தமையைக் கூறும்.
என் உடன் பிறந்தோன் தன்னை – எனது உடன் பிறந்தவனான
பகனை, யுதிட்டிரன் இளவல்கொன்றான்-தருமபுத்திரனது தம்பியான வீமன்
(முன்னே) கொன்றிட்டான்; தன் உடல் பிளப்பேன் – (அதற்குப்பிரதியாக)
அவ்வீமனுடம்பை (நான்) பிளந்திடுவேன்,’என்று-, மன்னுடன்-
துரியோதனராசனுடனே, சொல்லி-, நிற்பான்,-(அவனுக்குப் படைத்துணையாய்)
நிற்பவனாகிய அலம்புசன், தானை வல் அரக்கரோடு-சேனையாகத்திரண்டவலிய
பல அரக்கர்களுடனே, வந்து-,எதிர் மலைந்த காலை – எதிரிற்போர்செய்த
பொழுது, வீமனுக்கு இளையோன் மைந்தன்-வீமனது தம்பியான அருச்சுனனது
புத்திரனான இராவான், மின் உடை முகில்போல்-மின்னலையுடைய மேகம்போல,
சென்றான் – (அவனை எதிர்த்துப்) போனான்:(எ-று.)
யுதிஷ்டிரன் – போரிற் பின்வாங்காதவன், இராவானது தேக காந்தியை
நோக்கி, மின்னுடை முகில்’ என்றது.
வலம்புரித் தாம வேந்துக்காகவே மலைவான் வந்த
அலம்புசனோடும் சென்றோர் அடங்கலும்,
அரக்கர் மாயக்
குலம் பழுது அற்ற மைந்தன் கொண்ட
பல் உருவத்தோடும்
புலம்புறப் பொருதான், அந்த அரக்கனும்
புறந்தந்தானே.
வலம்புரி தாமம் வேந்துக்காகஏ – நஞ்சாவட்டைப் பூமாலையுடைய
துரியோதனனுக்கு உதவியாகவே, மலைவான் – போர்செய்வதற்கு, வந்த-,
அலம்புசனோடுஉம் – அலம்புசனுடனே, சென்றோர் – வந்தவர்களாகிய, அரக்கர்
அடங்கல்உம் – எல்லாவரக்கர்களும், மாய – அழியும்படி. குலம் பழுது அற்ற
மைந்தன் – (தந்தைதாயரது) குலங்களில் ஒருகுற்றமுமில்லாத இராவான், கொண்ட
பல் உருவத்தோடுஉம்-(தான்) கொண்ட பலவடித்துடனே, புலம்பு உற –
(அவ்வலம்புசன்) தனிமைப் படும்படி, பொருதான் – போர்செய்தான்;
(செய்யவே), அந்த அரக்கன்உம் புறம் தந்தான் – அவ்வலம்புசனும்
முதுகுகொடுத்தான்; (எ – று.)
புலம்பு என்பது-தனிமையுணர்த்தும் உரிச்சொல்) “புலம்பே தனிமை”
என்பது,தொல்காப்பியம். இனி, புலம்புற – விசனப் படஎன்றலுமொன்று, பி-ம்:
அலம்புதனோடும், அலம்பசனோடும்.
அஞ்சினன் போன பின்னர், அரவினை அடர்க்கும் மாய
வெஞ் சினக் கலுழன் ஆகி, உரும் என, மீள வந்தான்;
நஞ்சினை உமிழும் வெவ் வாய் நாகங்கள்
அனைத்தும் ஒன்றாய்
எஞ்சின போல நின்றான், நிருதருக்கு இறுதி செய்தான்.22.-இதுவும் அடுத்த கவியும்-அலம்புசன் கருடன்வடிவுகொண்டுமீளவந்து
இராவானை அழித்தமை கூறும்.
(அவ்வலம்புசன்),-அஞ்சினன் போன பின்னர் – பயந்து
புறங்கொடுத்துப்போனபின்பு, அரவினை அடர்க்கும்வெம்சினம் மாயம் கலுழன்
ஆகி – பாம்புகளைநாசஞ்செய்யும் கொடிய கோபத்தையுடைய மாயை யாலாகிய
ஒருகருடனதுவடிவமாய், மீள – பின்பு, உரும் என – இடிபோல (பயங்கரமாக),
வந்தான்-;(அப்பொழுது), நிருதருக்கு இறுதிசெய்தான் – (முன்னே) அரக்கர்களுக்கு
அழிவைச்செய்த அவ்விராவான், (அந்தக்கருடனைக் கண்டமாத்திரத்தில்),
நஞ்சினைஉமிழும் வெம் வாய் நாகங்கள் அனைத்துஉம் ஒன்று ஆய் எஞ்சின
போலநின்றான்-விஷத்தைக் கக்குகிற கொடியவாயையுடைய பாம்புகளெல்லாம்
ஒருசேரஒடுங்கினபோல (வலிமை யொடுங்கி) நின்றான்; (எ-று.)
அரக்கனும் இராவானும் மாயையினால்பலபலவடிவங்கொண்டு பலபல
வகையாகப்போர்செய்து வருகையில், இராவான் மாயையால் பலபாம்புகளின்
வடிவத்தைஅடைய, அரக்கன் மாயையால் கருடவடிவங்கொண்டு அப்பாம்புகளை
அழிக்கவே,இராவான் திகைப்படைந்துநின்றான் என முதனூலிற் கூறியதையுங்
காண்க. பாம்புகளைஅஞ்சுவிக்குந்தன்மை பற்றியும். அரக்கனுக்கு இடியுவமை
ஏற்கும். நிருதர் -நைர்ருதர், வடசொல்: நிருருதியென்னுந் திக்பாலகி மரபில்
தோன்றினவர் – கலுழன் -கருடன் என்னும் வடசொல்லின்திரிபு.
நின்றவன்தன்னை அந்த நிருதனும் வடி வாள் ஓச்சி,
கொன்றனன்; கொன்றானாக, குருகுலத்து அரசன் சேனை,
‘வென்றனன் அரக்கன்’ என்று, விரி கடல் போல ஆர்த்தது;-
அன்று அவன் அடர்த்த மாயம் ஆர்கொலோ
அடர்க்க வல்லார்?
நின்றவன்தன்னை – (அங்ஙனம் ஒடுக்கி) நின்ற இராவானை, அந்த
நிருதன்உம் – அந்த (அலம்புசனென்ற) இராக்கதனும், வடி வாள் ஓச்சி-கூறிய
வாளாயுதத்தை வீசி, கொன்றனன்-; கொன்றான் ஆக – கொல்ல, குருகுலத்து
அரசன் சேனை-துரியோதனனது சேனை, அரக்கன் வென்றனன் என்று –
இராக்கதன் சயித்திட்டான் என்றகாரணத்தால், விரி கடல் போல ஆர்த்தது –
(பிரளயகாலத்துப்) பொங்குங் கடல்போல ஆரவாரித்தது; அன்று அவன் அடர்த்த
மாயம் – அப்பொழுது அந்த இராக்கதன் போர் செய்த மாயையை, அடர்க்க
வல்லார் ஆர்கொல்ஓ-எதிர்த்துப் போர்செய்து அழிக்கவல்லவர் யாவர் உளர்?
(எ – று.)-மாயையால் மிகவும் உக்கிரமாகப் போர்செய்தனனென்றபடி. ஈற்றடி –
கவிக்கூற்று.
பூஞ் சாயகன் கைப் பொரு சாபம் பொசிந்து, கண்ணால்
தீம் சாறு பாயும் செழு நீர் வயல் செந்நெல் வேலிப்
பாஞ்சால நாடர் பலரும் பட, பாணம் விட்டார்-
தாம் சாபம் வாங்கி, மறை மைந்தனும் தந்தைதானும்.4.-அசுவத்தாமனும் துரோணனும்,
பாஞ்சாலர்பலரும் தோற்கப் பொருதல்.
பூ சாயகன் – மலர்களை அம்பாகவுடைய மன்மதனது, கை –
கையிலேயுள்ள, பொரு சாபம் – போர்செய்தற்குரிய வில்லாகிய கரும்புகள்,
கண்ணால் – கணுக்கள்தோறும், தீம் சாறு பொசிந்து பாயும் – இனிமையான
இரசம்ஊறிப்பெருகப்பெற்ற, செழு நீர் வயல் – மிகுந்த நீர்வளத்தையுடைய
கழனிகளையும், செந்நெல் வேலி – செந்நெற்பயிர்நிலங்களையுமுடைய, பாஞ்சால
நாடார் பலர்உம் – பாஞ்சாலதேசத்து அரசர்கள் பலரும், பட – தோற்கும்படி,
மறைமைந்தன்உம் தந்தைதான்உம் – வேதம்வல்ல குமாரனான அசுவத்தாமனும்
(அவனது) தந்தையாகிய துரோணாசாரியனும், தாம் சாபம் வாங்கி – தாங்கள்
வில்லை வளைத்து, பாணம் விட்டார்-அம்பு தொடுத்தார்கள்; (எ-று.)
பாஞ்சாலநாடர் – யாகசேனன், திட்டத்துய்மன் முதலியோர்; இவர்களுக்கும்
துரோணஅசுவத்தாமர்களுக்கும் ஒருவரோடொருவர் பழமையாகவே
பகைமையுள்ளது, பிரசித்தம். கணுக்களினின்று சாறுபெருகுதலைக் கண்களால்
நீர்பெருகுதலாகக் கற்பிக்கக் கருதி, ‘கண்ணால் தீஞ்சாறு பாயும்’ என்றார்போலும்,
செழு நீர்-செழிப்பான தன்மையையுடைய என்றுமாம். வேலி-ஊர்சூழ்ந்த கழனி,
மன்மதனது அம்புகள் தாமரைமலர், அசோகமலர், மாமலர், முல்லைமலர்,
நீலோற்பலமலர் என்னும் ஐந்துமாம். கரும்புகளில் தானாகவே சாறுபெருகிற
தெனச்செழிப்பு விளக்கியவாறு. கண்ணால், ‘ஆல்’ உருபு – தோறும் என்னும்
பொருளுடையது.
இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் பதினாறு பாடல்கள் – பெரும்பாலும்
மூன்றாஞ்சீரொன்று மாங்கனிச்சீரும் மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய நெடிலடி
நான்கு கொண்ட கலிநிலைத்துறைகள்.
பட்டான் துணைவன் எனக் கேட்டு, பரிவு பொங்க,
விட்டான் மணித் தேர், வளைத்தான் தனி வெய்ய சாபம்,
தொட்டான் பகழி, அபிமன்னு; தொடுத்தலோடும்,
கெட்டார், அரசன் பெருஞ் சேனையில் கேடு இல் வேந்தர்.25.-அபிமன்யு இராவானிறந்ததுகேட்டுப் பலமன்னர்கெடக்
கடும்போர் புரிதல்.
(பின்பு). அபிமன்னு-, துணைவன் பட்டான் என கேட்டு-(தன்)
உடன்பிறந்தவனான இராவான் இறந்தானென்று சொல்ல (அச்செய்தியை)க்
கேட்டறிந்து, பரிவு பொங்க – துயரம் மிக, மணி தேர் விட்டான்-அழகிய(தன்)
தேரை(ப் பகைவர் சேனையிற்) செலுத்தி, தனி வெய்ய சாபம் வளைத்தான் –
ஒப்பற்ற கொடிய (தன்)வில்லை வளைத்து, பகழி தொட்டான் -அம்புகளைத்
தொடுத்தான்; தொடுத்தலோடும் – (அங்ஙனம்) செலுத்தினவளவிலே, அரசன்
பெருசேனையில் கேடு இல் வேந்தர் – துரியோதனராசனது பெரிய சேனையிலுள்ள
குற்றமில்லாத அரசர்கள், கெட்டார் – தோற்றார்கள்; (எ-று.)
இதுவரையிலும் எந்தப்போரிலும் பங்கப்படாதவ ரென்பார், ‘கேடில் வேந்தர்’
என்றார். இராவான், அபிமன்னு என்ற இருவரும் அருச்சுனனது குமார ராதலால்,
இராவானை அபிமன்னுவின்துணைவ னென்றது.
மைந்தன் களத்தில் மடிந்தான்’ என, வாயு மைந்தன்
தந்தம் பறியுண்டு எதிர் சீறிய தந்தி என்ன,
வெந்து அங்கம் முற்றும், மனம் தீ எழ, மேல் நடந்தான்-
சிந்தம் திகழ எழுதும் திறல் சிங்கம் அன்னான்.26.-மைந்தனிறந்ததுகேட்டுச் சீறி வீமன் பொர நடத்தல்
சிந்தம் – (பகைவர்) வெல்லப்படுந்தன்மை, திகழ – விளங்க,
எழுதும்-(தன்கொடியில்) எழுதப்பட்ட, திறல் சிங்கம்- வலிமையையுடைய
சிங்கத்தை,அன்னான்-ஒத்தவனாகிய, வாயுமைந்தன் – வாயுகுமாரனான வீமன்,
மைந்தன்களத்தில் மடிந்தான் என – (தன் தம்பியாகிய) அருச்சுனனது)
புத்திரனானஇராவான் போர்களத்தில் இறந்தா னென்று அறிந்து,-தந்தம்
பறியுண்டு எதிர் சீறியதந்தி என்ன-(தன்) தந்தம் (பகைவரால்) பறிக்கப்பட்டு
அவரெதிரிலேகோபங்பொண்டு போருக்குச் சென்ற யானைபோல, அங்கம்
முற்றுஉம் வெந்து-(அவனிறந்ததனாலாகிய சோகத்தால்) உடம்புமுழுவதும்
தவித்து, மனம் தீ எழ -மனத்தில் கோபாக்கினி கொதிக்க, மேல் நடந்தான் –
(பகைவர்சேனை) மேல்(போருக்குச்) சென்றான்; (எ-று.)
வீமனுக்கு இராவானிடம் உள்ள அன்பை விளக்க, ‘தம்பி மைந்தன்’
என்னாது, ‘மைந்தன்’ என அபேதமாக் கூறியது. சிங்கக் கொடியானுக்குச்
சிங்கத்தையே உவமைகூறினார். யானைக்குத் தந்தம்போல, வீமனுக்கு இராவான்
சிறந்த அங்க மென்க. தந்த முடையது, தந்தீ; வடசொல். ஜிதமென்னும்,
வடசொல்லின் விகாரமாகிய சித மென்பது, எதுகைநோக்கி, சிந்தம் என
விரித்தல்விகாரம்பெற்றது; இனி, சிந்தம் என்பதற்கு-இடத்துக்குஏற்ப, கொடிச்
சிலையில் எனப் பொருள்கொள்ளினும் அமையும்.
சினத்தோடு நம்மேல் வருகின்றனன் செம்மல்!’ என்னா,
இனத்தோடு செல்லும் பிறை வாள் எயிற்று ஏனம் என்ன,
மனத்தோடு இயைந்த திருத்தம்பியரோடும், மன்னர்
சனத்தோடும், வந்தான்-எதிர் சீறித் தரணி வேந்தன்27.-வீமன் சினத்தோடுவருவதுகண்டு துரியோதனன் பலரோடு
அவனெதிரே சீறிவருதல்.
சினத்தோடு-கோபத்தோடு, செம்மல்-சிறந்தவீரனான வீமன்,
நம்மேல்வருகின்றனன்-நம்மேல் (எதிர்த்து) வருகின்றான்,’என்னா-என்று அறிந்து,
– தரணிவேந்தன்-நிலவுலகத்துக்கு அரசனான துரியோதனன்,-எதிர் சீறி-
எதிரிற்கோபித்து,மணத்தோடு இயைந்த திருதம்பியரோடுஉம் – (தன்) மனத்தோ
டொத்தசிறந்ததம்பிமார்களோடும், மன்னர் சனத்தோடுஉம்-(மற்றும்) அரசர்
கூட்டத்தோடும்,இனத்தோடு செல்லும் பிறை வாள் எயிறு ஏனம் என்ன-(தன்)
கூட்டத்தோடுவருகிறபிறைச்சந்திரன்போலும் ஒள்ளிய கோரப்பற்களையுடைய
பன்றிப்போல,வந்தான்- வீமனோடு போர்செய்ய) வந்தான்; (எ-று.)
கீழ்க்கவியில் வீமனது பலபராக்கிரமங்கள் விளங்க அவனுக்கு யானையையும்
சிங்கத்தையும் உவமைகூறியவர், இங்கே துரியோதனனது இழிவுதோன்ற இவனுக்குப்
பன்றியை உவமைகூறினார்.
திளைத்தார் அரசர், திகிரிக்கிரி என்ன ஓடி,
வளைத்தார், கனக வரைபோல் வரு மன்னன்தன்னை;
உளைத்தார் அனைவோர்களும், ஓர் ஒரு பாணம் ஏவித்
துளைத்தார், கிளைத்தார், விளைத்தார், அமர் தூண்டு தேரார்.28.-அரசர்பலரும் வீமனை வளைத்துக்கொண்டு
கிளைத்துப் போர்விளைத்தல்.
அரசர் அனைவோர்கள்உம்-(துரியோதனனும் அவன்தம்பிமார்களும்
முதலிய) அரசர்கள் எல்லோரும், தூண்டு தேர் செலுத்தின தேரையுடையவர்களாய்,
ஓடி – விரைந்துசென்று, திளைத்தார் – இடைவிடாது நெருங்கியவர்களாய்,-கனகம்
வரை போல் வரும் மன்னன்தன்னை-பொன்மயமான மேருமலையே (ஓங்கிச்
செந்நிறமுடையவனாய்) வருகிற வீமராசனை, திகிரி என்ன-(உலகத்தை
வளைந்துள்ள) சக்கரவாளகிரிபோல, வளைத்தார்-சூழ்ந்தவர்களாய், உளைத்தார்-
ஆராவாரஞ்செய்து, ஓர் பாணம் ஏவி-(ஒவ்வொருத்தரும்) ஒவ்வொருஅம்பைச்
செலுத்தி) துளைத்தார்-(அவ்வீமனுடம்பைத்) துளைசெய்து, கிளைத்தார் –
ஊக்கங்கொண்டு, அமர் விளைத்தார்-போர்செய்தார்கள்;(எ -று.)
அனைவோர்-ரகர வீற்று அயல் அகரம் ஓவாயிற்று.
எடுத்தான் ஒரு தன் சிலை, வீமனும்; எண் இல் பாணம்
தொடுத்தான் அவர்மேல்; இமைப்போதையில்
சூழ்ந்துளோரைக்
கெடுத்தான்; அரசற்கு இளையோர் எதிர் கிட்டி, மீண்டும்
படுத்தான், எழுவர்; இவன் வாளியின் பட்டு வீழ்ந்தார்.29.- வீமன் சூழ்ந்தோரை வலிகெடுத்துத்
துரியோதனன்தம்பிய ரெழுவரை மாய்த்தல்.
(அப்பொழுது), வீமனும்-, தன் ஒரு சிலை எடுத்தான். தனது
ஒப்பற்றவில்லையெடுத்து, அவர்மேல் எண் இல்பாணம் தொடுத்தான் –
அவ்வரசர்கள்மேல்அளவில்லாத அம்புகளைத்தொடுத்து, இமைப்போதையின் –
ஒருநொடிப்பொழுதினுள்ளே, சூழந்துஉளோரை கெடுத்தான்-(தன்னை)
வளைந்துள்ளஅவர்களையெல்லாம் நிலைகெடுத்து, அரசற்கு இளையோர் எதிர்
கிட்டி -துரியோதனன் தம்பிமார்களின் எதிரிலே சமீபித்து, மீண்டும்
எழுவர்படுத்தான்-மறுபடியும் (அவர்களில்) ஏழுபேரை அழித்தான்; (அவர்கள்)
இவன் வாளியின்பட்டு வீழ்ந்தார்-இவனது அம்புகளால் இறந்து விழுந்தார்கள்;
(எ – று.)
எழுவர்பெயர், மேற்கவியிற் கூறப்படும். கீழ் இச்சருக்கத்து ஐந்தாங்கவியை
நோக்கி, ‘மீண்டும்’ என்றார். போதை – ஐயீற்றுடைக் குற்றுகரம்.
அறம் மிக்க சொல் குண்டலபோசன், அனாதியக்கன்,
திறம் மிக்க தீர்க்கநயனன், சிலைத் திம்மவாகு,
மறம் மிக்க வேல் குண்டலன், குண்டலதாரன், மன் நூல்
துறை மிக்க கேள்விக் கனகத்துசன் ஆன தோன்றல்30.-இரண்டுகவிகள் – துரியோதனன்தம்பியர் எழுவர்தலை
வானிற் சென்றது கூறும்.
இதுவும், மேற்கவியும்-குளகம்.
(இ-ள்.) அறம் மிக்க சொல், தருமம்மிகுந்த சொற்களையுடைய,
குண்டலபோசன்-, அனாதியக்கன்-, திறம் மிக்கவலிமை மிகுந்த, தீர்க்கநயனன்-,
சிலை-வில்லில்வல்ல, திம்மவாகு-, மறம்மிக்க- பராக்கிரமம்மிகுந்த, வேல் –
வேலில்வல்ல, குண்டலன்-, குண்டலதாரன்-, மன் நூல் – நிலைபெற்ற
சாஸ்திரங்களின், துறை – வழிகளிலே, மிக்க-மிகுந்த, கேள்வி-கேள்விகளையுடைய,
கனகத்துசன் ஆன தோன்றல்-கநகத்வஜனாகிய அரசன்,-(எ-று.)
குண்டபேதன், அநாத்ருஷ்டி, தீர்க்கலோசநன், தீர்க்கபாகு, சுபாகு, வைராடன்,
கநகத்வஜன் என்று இவர்கள்பெயர் முதனூலிற் காணப்படுகிறது. தீர்ககநயநன்
என்பது – நீண்டகண்களையுடையா னென்றும், குண்டலதாரன் என்பது
குண்டலந்தரிப்பவனென்றும், கநகத்வஜன் என்பது-பொற்கொடியையுடையானென்றும்
பொருள்படும். அறம்-தீங்குமாம். பி-ம்: கருடத்துசனானதோன்றல்.
இப் பேர் எழுவர் சிரம் ஏழும் எழுந்து துள்ளி,
மைப் பேர் எழிலி அகல் வானிடை வந்த எல்லை,
‘ஒப்பு ஏது?’ என வாசவன் கேட்டலும், ‘ஓங்கல் விந்தை
கைப் பேர் எழில் பைங் கழங்கு’ என்றனர்,
கண்ட வானோர்.
இ பேர் எழுவர் – இந்தப்பேரையுடைய ஏழுபேர்களின், சிரம்
ஏழ்உம் – (வீமனால்அறுபட்ட) தலைகள் ஏழும், எழுந்து துள்ளி –
(உடம்பைவிட்டு) எழும்பிக்குதித்து, மை பேர் எழிலி அகல் வானிடை-கரியபெரிய
மேகங்களையுடைய பரந்த ஆகாயத்திலே, வந்த எல்லை – வந்தபொழுது,-
வாசவன்-இந்திரன், ஒப்பு ஏது என கேட்டலும் – (இவற்றிற்குச்) சமானம் எது
வென்று கேட்டவளவிலே,-கண்ட வானோர் – பார்த்துநின்ற தேவர்கள், ‘ஓங்கல்
விந்தை-உயர்ச்சியையுடைய வீரமகளது, கை-கையினால் (எடுத்து) ஆடப்படுகிற,
பேர்-பெரிய, எழில் -மேலெழுதலையுடைய, பைங்கழங்கு – அழகிய
அம்மனைக்காய்கள் (இவற்றிற்கு உவமை)’, என்றனர் – என்று சொன்னார்கள்;
(எ-று.)
ஓங்கல் விந்தை – மலைகளிற் சஞ்சரிக்குந் துர்க்கையுமாம். ஓங்கல்-
உயர்வென்னும் பொருளில் தொழிற்பெயரும், மலையென்னும்” பொருளில்
தொழிலாகுபெயருமாம். போர்க்களத்துக்குத் தலைவி துர்க்கை யாதலாலும்,
பராக்கிரமத்திற்குஉரியவள் வீரமகளாதலாலும், இவர்களாடிய கழங்கென்று
அத்தலைகளைக் கூறுதல் ஏற்கும், விந்தியமலையில் வீற்றிருத்தல்பற்றி,
துர்க்கைக்கு’விந்தை’ என்று பெயர்; ‘விந்த்யவாஸிநீ’ என்ற வடமொழிப்
பெயருங் காண்க.
அறம் தந்த வாழ்க்கை முடிக்கின்றனை ஆகி, நீயும்
இறந்து அந்தரத்தில் இனி ஏகுக!’ என்று சீறி,
மறம் தந்த சீயக் கொடியோன், கொடி மாசுணத்தோன்
புறந்தந்த போரில் புறம் தந்தனன், போகலுற்றான்.32.-துரியோதனன் வீமனுக்குப் புறந்தருதல்.
மறம் தந்த – பராக்கிரமம் பொருந்திய, சீயம் – சிங்கத்தின்
வடிவமெழுதிய, கொடியோன் – துவசத்தையுடைய வீமன்,-(பின்பு
துரியோதனனைநோக்கி), ‘அறம் தந்த – (பலர்க்குத்) தீங்கு செய்த வாழ்க்கை –
(உனது)உயிர்வாழ்வை, முடிக்கின்றனை ஆகி – ஒழிக்கிறவனாய், நீயும்-, இனி –
இப்பொழுது, இறந்து-, அந்தரத்தில் ஏகுக- வீரசுவர்க்கத்துச் செல்வாயாக,’ என்று –
என்று சொல்லி, சீறி-கோபிக்க-கொடி மாசுணத்தோன் – பாம்புக் கொடியையுடைய
அத்துரியோதனன், புறந்தந்த போரில் – (தான் இதுவரையில்) பாதுகாத்துவந்த
அந்தயுத்தத்திலே, புறந்தந்தனன் போகல் உற்றான் – முதுகுகொடுத்துச் செல்லத்
தொடங்கினான்: (எ-று.)
அறம் – தீமையாதலை ‘அறம்பாடுதல்’ என்னுமிடத்துங் காண்க. அறம் –
(நன்மை) அறுதல்; தொழிற்பெயர். இனி, அறம் தந்தவாழ்க்கை என்பதற்கு-
முற்பிறப்பின் நல்வினையினாலாகிய அரசவாழ்வு என்றும், இல்லறம் நடத்தும்வாழ்வு
என்றும் உரைப்பினும் அமையும்: இனி, இங்கு அறம் என்றது –
எதிர்மறையிலக்கணையால் பாவத்தைக் காட்டுமென்னலுமாம். வாழ்க்கை-
தொழிற்பெயர். சீயம் – ஸிம்ஹம்என்னும் வடமொழிச்சிதைவு. புறந்தருதல்-பாதுகாத்தலும், தோற்றலும். பி – ம்: பொரமாசுணத்தோன்
கந்தே அனைய புய வீமன் கணைகள் பட்டுத்
தம் தேர் அழிந்து படு மன்னவன் தானை என்ன,
மந்தேகர் எல்லாம் மலைவுற்று மடிந்து வீழ,
செந் தேர் அருக்கன் குடபால் திசை
சென்று சேர்ந்தான்.33-சூரியாஸ்தமன வருணணை
கந்துஏ அனைய – தூண்களையேயொத்த, புயம் –
தோள்களையுடைய, வீமன் – பீமசேனனது, கணைகள் – அம்புகள், பட்டு – (மேல்)
படுதலால், தம் தேர் அழிந்து படும் – தமது தேர் அழிந்து தோற்கிற, மன்னவன் –
துரியோதனராசனது, தானை என்ன-சேனைபோல,-மந்தேகர் எல்லாம் –
மந்தேகரென்னும் அசுரர்யாவரும், மலைவுற்று-போர்செய்து, மடிந்து வீழ – இறந்து
விழும்படி, செம் தேர் அருக்கன் – சிவந்த தேரையுடைய சூரியன், குட பால் திசை
– மேற்குத்திக்குகப்பக்கத்தை, சென்று சேர்ந்தான் – போய் அடைந்தான்
(அஸ்தமித்தான்); (எ-று.)
மந்தேகாருணமென்னுந் துவீபத்தில் வாழும் மந்தேகரென்னும் அரக்கர்கள்
உக்கிரமானதவத்தைச்செய்து பிரமனிடத்து வரம்பெற்று அதனாற் செருக்கி
எப்பொழுதும் சூரியனை வளைந்து எதிர்த்துத் தடுத்துப் போர்செய்கின்றன
ரென்றும், அந்தணர்கள் ஸ்ந்தியாகாலங்களில் மந்திரபூர்வமாகக் கையில்
எடுத்துவிடும் அர்க்கியதீர்த்தங்கள் வச்சிராயுதம்போலாகி அவர்கள்மேல் விழுந்து
அவர்களை அப்பால் தள்ளிச் சூரியனது சஞ்சாரத்துக்குத்
தடையில்லாதபடிசெய்கின்றன வென்றும் வேதங் கூறும். மூன்றாமடியால்,
பிராமணர்கள் சந்திசெய்ய என்பது தொனிக்கும். பி-ம்: மன்னவர்.
தளவு ஒத்த மூரல் தல மானை, தருமன் மைந்தன்,
வளம் மிக்க வெம் போர்க் களம் வென்று,
வதுவை செய்வான்,
உளம் உற்று அளித்த கலன் போலும், உகு கலன்கள்;
பிளவு உற்ற வேழ நுதல் நித்திலப் பெட்டி போலும்.34,- இதுமுதல் மூன்றுகவிகள்-படுகளச்சிறப்பு.
உகு கலன்கள் – (அப்போர்க்களத்திலே) சிந்திக் கிடக்கிற
(சேனையின்) ஆபரணங்கள்,-தருமன் மைந்தன்- தருமபுத்திரன், வளம்மிக்க வெம்
போர் களம் வென்று – சிறப்புமிகுந்த கொடியயுத்தகளத்திலே (பகைவரைச்) சயித்து,
தளவு ஒத்த – முல்லையரும்புகளைப்போன்ற, மூரல்-பற்களையுடைய, தலம்
மானை-பூமிதேவியை, வதுவைசெய்வான் – மணஞ்செய்து கொள்ளும்படி, உளம்
உற்று-விரும்பி,அளித்த-(அவளுக்குப் பரிசாகக்) கொடுத்த, கலன் – ஆபரணங்களை,
போலும் – ஒக்கும்; பிளவு உற்ற-பிளக்கப் பெற்ற, வேழம்நுதல் –
யானைகளின்நெற்றிகள், (முத்துக்களையுடைமையால்), நித்திலம்
பெட்டிபோலும் – (தருமன் பூமியாகிய பெண்ணை மணஞ்செய்யப் பரிசு
கொடுக்கும்)முத்துப்பெட்டியை ஒக்கும்; (எ-று.)
தலமானை வதுவைசெய்தல் என்றது, இராச்சியாபிஷேகஞ் செய்து
கொள்ளுதலை. பூமியைப் பெண் என்றதற்கு ஏற்ப, பெண்ணுக்குரிய ‘தளவொத்த
மூரல்’ என்ற அடைமொழியைக் கொடுத்தார். தன்மைத்தற்குறிப்பேற்றவணி.
‘தளவொத்த.….அளித்த’ என்பதை, நித்திலப்பெட்டிக்குங் கூட்டுக. தளவு – முல்லை;
பூவுக்கு முதலாகுபெயர்: இது – வெண்ணிறத்திலும் அழகிலும், மகளிர் பற்களுக்கு
உவமை. மான் – பெண்ணுக்கு உவமையாகு பெயர்; மான்போன்ற
பார்வையுடையவள், நித்திலப்பெட்டி-நித்திலங்களை வைத்துள்ளபெட்டி, சிறந்த
யானைகளின் தலையிலிருந்து முத்து உண்டாகுமென்பது, நூற்கொள்கை
பூட்டு அற்ற வில்லின்மிசை சோரிப் புனலின் வீரர்
வாட்டு அற்ற ஈரல் பல சுற்றி வயங்கு தோற்றம்,
வேட்டற் பொருட்டால் புவிமானுக்கு வேந்து சூட்டும்
சூட்டு அற்று; முற்றும் குடர், வாசத் தொடையல் அற்றே.
சோரி புனலின் – இரத்தப்பெருக்கிலே, (இறந்து விழுந்த), வீரர்
வீரர்களது, வாட்டு அற்ற – மெலித லில்லாத (கொழுத்துள்ள), ஈரல் பல – ஈரல்கள்
அநேகம், பூட்டு அற்ற வில்லின்மிசை – (நாணியின்) கட்டு அறுந்துவிழுந்துள்ள
வில்லின் மேலே, சுற்றி வயங்கு-சூழ்ந்துகொண்டு விளங்குகிற, தோற்றம் – காட்சி,-
வேட்டல் பொருட்டால் – கலியாணஞ்செய்துகொள்ளும் நிமித்தமாக, புவி மானுக்கு
– பூமிதேவிக்கு, வேந்து சூட்டும் – யுதிட்டிரன் சூட்டுகிற, சூட்டு – நெற்றிச்சூட்டை,
அற்று-ஒக்கும்; குடர் முற்றுஉம்- (அருகில்விழுந்துள்ள) குடல் முழுவதும், வாசம்
தொடையல் அற்று – (விவாகஞ் செய்யும்பொருட்டுப் பூமிதேவிக்கு யுதிட்டிரன்
சூட்டிய) வாசனையையுடைய மணமாலையை ஒக்கும்; (எ-று.)
இதுவும் – தன்மைத்தற்குறிப்பேற்றவணியே. நாணியற்றுச் சிறிது
வளைவுபடத் தரையில் விழுந்துகிடக்கிற வில்லின்மேல் ஈரல் சூழ்ந்து
விளங்குதல் -பூமிதேவியின் வளைவான நெற்றியில் வட்டமாகச் சூட்டிய
பூமாலைபோலுமென்றும், தரையிலே நீண்டுபரந்து விழுந்து கிடக்கிற குடல்
பூமிதேவியின்தோளிலிட்ட பூமாலைபோலுமென்றும் வருணித்தார். சூட்டப்படுவது
சூட்டு: நெற்றிமேல் வட்டமாக அயியும் மாலை, தொடுக்கப்படுவது-தொடையல்;
மார்பிலிடும்மாலை. வாட்டு – முதனிலை திரிந்த தொழிற்பெயர்.
குல மா நிருபர் உடல் சோரும் குருதி வெள்ளப்
பல மா நதி போய்த் திரை வேலையில்
பாய்ந்த தோற்றம்,
நிலமான், விளிம்பு சிவப்பு ஏறிய நீல ஆடை,
நலமாக, மன்றற்கு உடுத்தென்ன நவிலலாமே.
குலம் – (சிறந்த) குலங்களிற் பிறந்த, மா – பெரிய, நிருபர்-
அரசர்களது, உடல் – உடல்களிலிருந்து, சோரும்-பெருகுகிற, குருதி வெள்ளம் –
இரத்தப்பெருக்கு, பல மா நதி போய் – அநேகம் பெரிய நதிகளாய்ச் சென்று,
திரை வேலையில் பாய்ந்த-அலைகளையுடைய கடலிலே பாய்ந்திட்ட, தோற்றம்-
காட்சி,-நிலம் மான் – பூமிதேவி, விளிம்பு சிவப்பு ஏறிய நீலம் ஆடை –
கரைகளிற்செந்நிறம் பொருந்திய நீலநிறமுள்ள சேலையை, நலம்ஆக- அழகாக
மன்றற்கு -கலியாணத்தின்பொருட்டு, உடுத்(த)து என்ன – உடுத்துக்கொண்டது
போலுமென்று,நவிலல் ஆம்-சொல்லத்தக்கதாம்; (எ – று.)
பூமியைச்சூழ்ந்த கடலின் ஓரங்களின் இரத்தவெள்ளம் பாய்ந்துள்ளது,
பூமிதேவி சிவப்புக்கரையுள்ள நீலச்சேலையைத் தரித்தது போலு மென்று
வருணித்தார்; (தற்குறிப்பேற்றவணி) விளிம்பு – ஓரம் பி – ம்: நிருபர்குடர்.
தன் பாடி புக்கான் புறம் தந்த தரணி வேந்தன்;
மின் பாடு இலங்கும் கணை வெஞ் சிலை வீமனோடு
மன் பாடி புக்கான்; பெரும் போரிடை மாய்ந்த மன்னர்
தென் பாடி புக்கார்; குடிபுக்கது, சேர்ந்த கங்குல்.37.-இருதிறத்தவரும் பாடி புகுதலும் கங்குல்வருதலும்.
புறம் தந்த – (வீமனுக்கு) முதுகுகொடுத்த, தரணி வேந்தன் –
துரியோதனராசன், தன் பாடி புக்கான் – தனதுபடை வீட்டையடைந்தான்; மின்
பாடுஇலங்கும் – மின்னலின் தன்மையாய் விளங்குகிற, கணை – அம்புகளைத்
தொடுக்கிற, வெம் சிலை – கொடியவில்லையுடைய, வீமனோடு-வீமனுடனே, மன்-
தருமராசன், பாடி புக்கான் – (தன்) படைவீட்டை யடைந்தான்; பெரு போரிடை
மாய்ந்த மன்னர் – பெரிய அப்போரிலே இறந்த அரசர்கள். தென் பாடிபுக்கார் –
தெற்கிலுள்ள (யம) புரத்தைச் சேர்ந்தார்கள்; சேர்ந்த கங்குல் – வந்த இராத்திரி,
குடி புக்கது – நன்றாகக் குடிபுகுந்தது; (எ – று.)
வீரசுவர்க்கஞ் செல்பவரும் யமதரிசனம் பெற்றே செல்ல வேண்டுதலால்,
‘தென்பாடிபுக்கார்’ என்றார்; பாடி – ஊர். கங்குல் குடிபுக்கது – இராத்திரி
தொடங்கிற்று என்பதாம். பாடு-தன்மை.
அன்றே களத்தில் பலி ஊட்டிய ஆண்மை வீரன்
இன்றே இறந்தான்; இதற்கு உன்னி, இரங்கலீர்’ என்று,
ஒன்றே மொழியும் உரவோன் முதல் ஐவருக்கும்
குன்றே கவித்த குடைக் கோவலன் கூறினானே38-ஸ்ரீ க்ருஷ்ணன் இராவானிறந்ததற்கு வருந்தல் கூடாதெனக்
காரணங் கூறுதல்.
குன்றுஏ. குடை கவித்த – கோவர்த்தனகிரியையே குடையாக
எடுத்துப்பிடித்த, கோவலன் – பசுக்களைக் காத்தலில் வல்லவனான கண்ணபிரான்,-
ஒன்றுஏ மொழியும் உரவோன் முதல் ஐவருக்குஉம் – ஒருவகையாகவே
[சத்தியமாகவே] பேசும் வலிமையயுடைய தருமன் முதலிய பஞ்சபாண்டவர்க்கும்,-
‘அன்றுஏ – முன்னொருநாளிலேயே, களத்தில்-போர்க்களத்தில், பலி ஊட்டிய-
(தன்னைக் காளிக்குப்) பலியாக நிவேதனஞ்செய்த, ஆண்மை வீரன்-
பராக்கிரமமுடைய வீரனான இராவான், இன்றுஏ இறந்தான்-இன்றைத்தினத்தில்தான்
இறந்திட்டான்; இதற்கு-இதற்காக, உன்னி இரங்கலீர் – (நீங்கள்) சிந்தித்து வருந்த
வேண்டா’, என்று-, கூறினான் – உபசாரஞ்சொல்லியருளினான்.
கோவலன், ஐவருக்கும், இரங்கலீரென்று கூறினான் என்க. அன்றைக்கே
தன்னைக் கொய்து பலிகொடுத்தவன் இதுவரையில் உயிர்வாழ்ந்திருந்ததற்கு
மகிழவேண்டுவதேயொழிய, இன்றைக்கு இறந்ததற்கு வருந்தக்காரணமில்லை
யென்றான். இரங்கலீர் -ஏவற்பன்மை எதிர்மறை.
உன்னி, களத்தில் உயிர் வீடும் உரக மைந்தன்
சென்னிக் கதிர் மா மணி சிந்திய சோதி எல்லாம்
தன்னில் கவர்ந்தான் என, பண்டையின் தாம மேனி
மின்னி, பரிதி குணபால் திசை மேவினானே.39.-சூரியோதய வருணனை.
களத்தில் உயிர் வீடும் – போர்க்களத்திலே உயிர் விட்ட, உரகம்
மைந்தன் – நாககன்னிகைகுமாரனான இராவானது, சென்னி-தலையிலுள்ள,
கதிர் மாமணி – விளக்கத்தையுடைய சிறந்த மாணிக்கம், சிந்திய – வெளியிட்ட,
சோதிஎல்லாம்-ஒளிகளையெல்லாம், உன்னி – எண்ணி [கருத்தோடு],
தன்னில்கவர்ந்தான் என – தன்னிடத்துக் கவர்ந்துகொண்டவன்போல,
பண்டையின்மேனி தாமம் மன்னி-முன்னையிருந்ததிலும்(தன்) உடம்பு ஒளி
மிகப்பெற்று, பரிதி -சூரியன், குணபால் திசை மேவினான் – கிழக்குத்திக்
கினிடத்தை அடைந்தான்;(எ-று.)
முன் அஸ்தமித்தபொழுது இருந்த ஒளியினும் இப்பொழுது உதிக்கையில்
இயல்பாக மிகுந்துள்ள சூரியனொளியை இராவானது தலைமாணிக்கத்தினின்று
ஒளிகவர்ந்து மிகுந்ததாக உத்பிரேக்ஷித்தார், உன்னி – (ஆண்மையையே) கருதி
என்று உரைத்து, ‘உயிர் விடும்’ என்பத்தோடு கூட்டலுமாம். வீடும்-விடும் என்பதன்
நீட்டல், சிறந்தசாதிநாகத்தின் தலையில் மிகுந்த ஒளியையுடைய மாணிக்கம் உள்ள
தென்றல், மரபு.
——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply