ஸ்ரீ.வில்லிபாரதம் – மூன்றாம் பாகம் -34. ஆறாம் போர்ச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

கோயில் ஆளுடைய பைங் கொண்டலார்
கண் துயில்
பாயலாய் வாழ, நீ பாக்கியம் செய்தது என்-
‘தீ அலாது உவமை வேறு இல்’ என, தீய நின்
வாய் எலாம் நஞ்சு கால் வாள் எயிற்று உரகமே!கடவுள் வாழ்த்து

தீ அலாது உவமை வேறு இல் என-அக்கனியல்லது வேறு
உபமானம் இல்லை யென்று சொல்லும்படி, தீய நின்வாய் எலாம் நஞ்சு கால் –
கொடிய உனது வாய்களெல்லாவற்றினின்றும் விஷத்தைக் கக்குகிற, வாள் எயிறு –
வாள்போலக் கொடிய பற்களையுடைய, உரகமே-பாம்பே [ஆதிசேஷனே!], நீ-
,கோயில் ஆள் உடைய – திருவரங்கமென்னுந் திருப்பதியை ஆளுதலையுடைய
பைங் கொண்டலார் – பசுநிறமான நீர்கொண்ட மேகம்போன்ற திருமால், கண்
துயில் – அறிதுயில்செய்தருளப் பெற்ற, பாயல் ஆய் வாழ – படுக்கையாய்
வாழ்வதற்கு, செய்தது பாக்கியம் என் – செய்துள்ள நல்வினைப்பயன் யாதோ?
(எ-று.)

     மிகக்கொடிய பாம்புகளுக்கெல்லாம் அரசனும் நெருப்புப் போலத் தவறாது
கொல்லவல்ல விஷத்தை எல்லாவாயினின்றும் உமிழ்பவனும் பயங்கரமான
விஷபற்களை யுடையவனு மான நீ எம்பெருமானுக்குத் திருப்பள்ளி
மெத்தையாவதற்குச் செய்த பாக்கியத்தை எளியவனான எனக்குக் கூறினால்,
கொடுந்தன்மையையுடைய யானும் அந்நல்வினையைச் செய்து அப்பிரான்
அகத்தில்வந்து தங்கப்பெற்று உய்ந்திடுவேனென்பது குறிப்பு. அளவிறந்த
நல்வினையைச்செய்திருந்தாலொழிய எம்பெருமான் இடைவிடாது தன்னிடத்தில்
வந்துதங்கும்படியான பெரும்பேற்றைப் பெறுதல்கூடாதென்பதாம், திருமாலின்
திருப்பதிகள் நூற்றெட்டனுள் முதலதான திருவரங்கத்துக்கு,வைஷ்ணசம்
பிரதாயத்தில் ‘கோயில்’ என்று ஒரு பெயர். பசுமை கருமைநீலநிறங்களை
(ச்சிறிதுவேறுபாட்டைக் கருதாமல்) அபேதமாகக்கூறுங் கவிகளது
மரபுபற்றி, நீலமேகத்தை ‘பைங்கொண்டல்’ என்றார். பாயல், அல் – சாரியை,
பாக்யம் – வடசொல். கோயில் – கோவில் என்பதன் இலக்கணப்போலி:
கோ+இல்:சிறந்த இடம்.

     இதுமுதல் பதினெட்டுக் கவிகள் – பெரும்பாலும் எல்லாச்சீர்களும்
விளச்சீர்களாகிய அளவடி நான்கு கொண்ட கலிவிருத்தங்கள்.  

பயிலும் வெம் பாசறை, பாண்டவர் ஐவரும்
துயில் உணர்ந்து, அணி பசுந் துளப மால் அடி பணிந்து,
அயிலும் நஞ்சு அனைய போர் அடு களம் குறுகினார்,
சயில வெங் கட கரித் தானையும் தாமுமே. .பாண்டவர், சேனையோடு போர்க்களங்குறுதல்.

பாண்டவர் ஐவரும்-, பயிலும் வெம் பாசறை – (தாம்) பழகிய
விருப்பத்திற் கிடனான படைவீட்டிலே, துயில் உணர்ந்து – தூக்க மொழிந்து
எழுந்திருந்து, அணி பசு துளபம் மால் அடி பணிந்து – அழகிய பசுநிறமான
திருத்துழாய்மாலையையுடைய கண்ணபிரானது திருவடிகளை வணங்கி,
(அவனனுமதிப்படி அவனுடனே), சயிலம் வெம் கட கரி தானைஉம் தாம்உம்-
மலைபோன்ற கொடிய மதயானைகளின் சேனைகளும் தாமுமாக, அயிலும் நஞ்சு
அனைய அடு போர் களம் குறுகினார்-உண்கிற விஷத்தை யொத்த [மிகக்கொடிய]
(பகைவரைக்) கொல்லும் போர்க்களத்தை அடைந்தார்கள்; (எ-று.)-கரி – மற்றை
மூன்றுவகை அங்கங்களுக்கும்உபலக்ஷணம்.

பகுத்த பல் அணிகளின் பான்மை அக்குரோணியாய்
மிகுத்த வெஞ் சேனையாம் வெள்ள நீர் வேலையைத்
தொகுத்து, வண்டு இமிர் தொடைத் துருபதன் திருமகன்,
வகுத்தனன், புறம் இடா மகர மா வியூகமே.3.-த்ருஷ்டத்யும்நன் தன்சேனையை மகரவியூகமாக வகுத்தல். 

வண்டு இமிர் தொடை-வண்டுகள் ஓலிக்கப்பெற்ற பூமாலையைத்
தரித்த, துருபதன் திரு மகன் – துருபதராசனது  சிறந்த குமாரனான
திட்டத்துய்மன்,-பகுத்த – பிரிக்கப்பட்ட, பல் அணிகளின் பான்மை-பலவகை
அணிகளின் தன்மையையுடைய, அக்குரோணியால்-அகௌஹிணியென்னுந்
தொகையால், மிகுத்த-மிகுதியாகவுள்ள, வெம் சேனை ஆம்-
பயங்கரமான(தன்பக்கத்துச் சேனையாகிய, வெள்ளம் நீர் வேலையை-
நீர்வெள்ளத்தையுடைய கடலை, தொகுத்து – ஒருங்குசேர்த்து, – புறம் இடா-
(பகைவர்க்குப்) புறங்கொடுக்காத, மாமகர வியூகம்-பெரிய மகர வியூகமாக,
வகுத்தனன்-அணிவகுத்தான்; (எ-று.)

     பல் அணி – சதுரங்கசேனைகளின் வரிசைகள். மகரவியூகம் – சுறாமீன்
வடிவமாகச் செய்யும் படைவகுப்பு. மகரத்தின் தலையிடத்தில் அருச்சுனனும்,
கண்களில் நகுல சகதேவரும், வாயில் பீமசேனனும், கண்டத்தில் அபிமந்யு
கடோற்கசன் சாத்யகி தருமபுத்திரன் முதலியோரும். புறத்தில் விராடனும்
திட்டத்துய்மனும், இடப்பக்கத்தில் கேகயநாட்டரசர் ஐவரும், வலப்பக்கத்தில்
திருஷ்டகேதுவும் சேகிதாநனும். கால்களில் குந்திபோசனும் சதாநீகனும்,
வாலில்சிகண்டியும் இராவானும் நின்றனரென்று வியாசபாரதங் கூறும்

போகமும் தருமமே ஆன மெய்ப் புனிதனும்,
நாக வெங் கொடியுடை நாயகக் குரிசிலும்,
வேக வெம் படையுடை வேந்தரும், சேனையும்,
ஆகவம் குறுகினார், ஆரவம் பெருகவே.4.-வீடுமன் தம்பக்கத்தவரோடு போர்க்களங்குறுகுதல்

தருமம்ஏ போகம்உம் ஆன-அறத்தையே இன்பமுமாகக் கொண்ட,
மெய் புனிதன்உம்-சத்தியந்தவறாத பரிசுத்த குணமுடைய வீடுமனும், நாகம் வெம்
கொடி உடை-பாம்பை யெழுதிய கொடிய துவசத்தையுடைய, நாயகன் குரிசில்உம்
(யாவர்க்குந்) தலைமையரசனான துரியோதனனும், வேகம் வெம் படை உடை –
(போரில்) விரைவையும் வெவ்விய ஆயுதங்களையு முடைய, வேந்தர்உம்-
அரசர்களோடும், சேனைஉம்-சேனைகளோடும், ஆரவம்பெருக-முழக்கம் மிக,
ஆகவம் குறுகினார்-, போர்க்களத்தை அடைந்தார்கள்; (எ – று,)

     வீடுமன் அறத்தையே இன்பமுமாகப் பாவித்ததை, தந்தைக்கு மணஞ்
செய்விக்கும் பொருட்டுத் தான் மணஞ்செய்வதை விட்டு இவ்வுலகவின்பத்தைத்
துறந்ததனால் அறிக. அதன் பொருட்டு முன்னே இவன் தேவர்முன்னிலையில்
செய்த சபதம் தவறாமல் உறுதிநிலையாயுள்ள தன்மையை நோக்கி,
‘மெய்ப்புனிதன்’என்றார்.         

பொரும் சமம் கருதி, ஆள், புரவி, தேர், போதகம்,
தெரிஞ்சு கொண்டு ஈர்-இரு திசையினும் செல்லவே,
பெருஞ் சனம்தன்னை, அப் பீடுடை வீடுமன்,
கரிஞ்சம் என்று உள்ள பேர் வியூகமும் கட்டினான்.5.-வீடுமன் தன்சேனையைக் கிரௌஞ்சவியூகமாக வகுத்தல்.

ஆள்-காலாட்களும், புரவி – குதிரைகளும், தேர்-தேர்களும்,
போதகம்-யானைகளும், பொரும் சமம் கருதி – பொர வேண்டும் போரை
நினைந்து, தெரிஞ்சு கொண்டு-(தன் குறிப்பை) அறிந்துகொண்டு, ஈர் இரு
திசையின்உம் செல்ல – நான்குதிக்குக்களிலும் பரவும்படி, பெரும் சனம்
தன்னை-பெரிய அச்சேனைவீரர்களை, அ பீடு உடை வீடுமன்-
பெருமையையுடையஅந்தப்பீஷ்மன், கரிஞ்சம் என்று பேர் உள்ள வியூகம்உம்
கட்டினான் -கரிஞ்சமென்று பெயருடைய வியூகமாக அணிவகுத்தான்; (எ-று.)

     கரிஞ்சம்-க்ரௌஞ்சம் என்னும் வடமொழித் திரிபு போலும்.
அன்றில்,கிரௌஞ்சம் என்பன-ஒருபொருட்சொற்கள்; ஆதலால்,
கிரௌஞ்சவியூகமாக வகுத்தன னென்க. கிரௌஞ்சவியூகம்-அன்றிற்பறவையின்
வடிவமாகச் செய்யப்படும் படைவகுப்பு. அப்பறவையின் வாயிடத்தில்
துரோணனும்,கண்களில் அசுவத்தாமனும் கிருபனும், தலையில்: பல
அரசர்களோடுகிருதவர்மாவும், கழுத்தில் பல அரசர்களோடு துரியோதனனும்,
மார்பில் பலஅரசர்களோடும் பெருஞ்சேனையோடும் பகதத்தனும், இடச்சிறகில்
தன்சேனையோடு சுசர்மாவும், வலச்சிறகில் யவனர் முதலிய பல அரசர்களும்,
புறத்தில்சுருதாயுவும் சதாயுவும் சௌமதத்தியும் நின்றறர் என்று முதனூல் கூறும்.
அன்றில் -எப்பொழுதும் ஆணும் பெண்ணும் கூடியே நிற்பதும், கணப்பொழுது
ஒன்றையொன்று விட்டுப்பிரிந்தாலும் அத்துயரத்தைப் பொறாமல் ஒன்றையொன்று
இரண்டுமூன்றுதரம் கத்திக்கூவி அதன்பின்பும் தன்துணையைக் கூடாவிட்டால்
உடனே இறந்துபடுவதுமான ஒருவகைப்பறவை, கருதி, தெரிஞ்சுகொண்டு என்ற
வினைகளுக்கு ஏற்ப, ‘தேர்’ என்றது-அதனை நடத்துபவரையே குறிக்கும் பி-ம்:
தெரிந்து.          

இந்திரன் முதலிய இமையவர் தங்களால்
அந்தரம் இடன் அற, அரவு உளைந்து அலமர,
வந்து வந்து, இரு பெரும் படைஞரும் மாறுபட்டு,
உந்தினார்; முந்தினார்; ஒட்டினார்; முட்டினார்.6.-இருபடைவீரர்களும் நெருங்கிப்பொருதல்.

இந்திரன் முதலிய இமையவர்தங்களால் – (போர்காணவந்த)
இந்திரன்முதலான தேவர்களால், அந்தரம் இடன் அற – ஆகாயவெளி
வெற்றிடமில்லையாகவும், அரவு உளைந்து அலமர – (தமது அதிபாரத்தைப்
பொறுக்கமாட்டாமல்) ஆதிசேஷன் வருந்திக் கலங்கவும், இரு பெருபடைஞர்உம் –
இரு திறத்துப் பெருஞ்சேனைவீரரும், வந்து வந்து – நெருங்கிவந்து,மாறுபட்டு –
(ஒருவரோடொருவர்) எதிர்த்து, உந்தினார் – (ஆயுதங்களைச்)செலுத்தி,
முந்தினால் – முற்பட்டு, ஒட்டினார் – வீர வாதஞ்செய்து, முட்டினார்
– தாக்கிப்போர்செய்தார்கள்; (எ-று.) – இமையவர் – இமையாதவர்
இமையில்விசேஷமுடையவர்; இமயமலையில் வாழ்பவர்

பரவி நால் வித வயப் படைஞரும் சூழ, ‘வாள்
இரவி நான், வெம் பகை இருளினுக்கு’ என்று, தன்
புரவி நான்மறை எனப் பூண்ட தேர் தூண்டினான்,
விரவினான் வீமன்மேல், விற் கை ஆசிரியனே.7.-துரோணாசார்யன் வீமன்மேல் போருக்கு நெருங்குதல்.

நால் விதம் வய படைஞர்உம் – நான்குவகைப்பட்ட
வலிமையையுடைய சேனைவீரர்களும், பரவி சூழ – பரந்து (தன்னைச்) சூழ்ந்து
வர,-வில் கை ஆசிரியன் – வில்லைத் தரித்த கையையுடைய ஆசாரியனான
துரோணன், வெம் பகை இருளினுக்கு நான் வாள் இரவி என்று – ‘கொடிய
பகைவர்களாகிய இருளை யொழிப்பதற்கு நான் ஒளியையுடைய சூரியன்’ என்று
கூறி, நால் மறை என புரவி பூண்ட தன் தேர் தூண்டினான்-(திரிபுரசங்கார
காலத்தில் சிவபிரானுக்குக் குதிரைகளாக விருந்த) நான்குவேதங்கள்போல(ச்
சிறந்த)குதிரைகளைப் பூட்டியுள்ள (தனது) தேரைச் செலுத்தினவனாய்,
வீமன்மேல்விரவினான்-வீமசேனன்மேல் (போருக்கு) நெருங்கினான்; (எ-று.)

     துரோணனது தேர்க்குதிரைகளுக்குச் சிவனது வேதக்குதிரைகளை உவமை
கூறியதனால், துரோணன் அழித்தல்தொழிலில் சிவன்போல்வானென்பது
தொனிக்கும். நான்குவேதம்வல்ல துரோணனது குதிரைகளுக்கு நான்குவேதங்களை
உவமைகூறியது ஏற்கும். இருளினுக்கு – நான்காம் வேற்றுமை, பகைப்பொருளது.
விற்கையாசிரியன் என்றதை – இரண்டாம்போர்ச்சருக்கத்து ஒன்பதாம்பாட்டிலுங்
காண்க.       

சிலை வரம் பெறு திறல் தேசிகன் சீறவும்,
நிலைபெறும் புகழினான் நெஞ்சின் அஞ்சலி செயா,
மலையினும் பெரிய தேர் வலவனும், புரவியும்,
தலை அறும்படி சரம் தனு வளைத்து, உதையினான்.8.-வீமன் துரோணனுடைய தேர்க்குதிரைகளையும் பாகனையும்
அழித்தல்.

 தேசிகன் சீறஉம்-வில்லாசிரியன துரோணன் (இவ்வாறு) கோபித்து(த்
தன்மேல்) போருக்கு வரவும், நிலை பெறும் புகழினான-  (அழியாது) நிலைபெற்ற
கீர்த்தியையுடைய வீமன், வரம் சிலை பெறுதலின் – (தான் அவனிடம்) சிறந்த
வில்விதத்தையைப் பெற்றவ னாதலால், நெஞ்சின் அஞ்சலி செயா-மனத்தில்
(அவனுக்கு) நமஸ்காரத்தைச் செய்து, தனு வளைத்து – வில்லைவளைத்து,
மலையின்உம் பெரிய தேர் வலவன்உம் புரவிஉம் தலை அறும்படி –
மலையைக்காட்டிலும் பெரியதாகவுள்ள (அவனது) தேரைச் செலுத்தும் பாகனும்
தேர்க்குதிரைகளும் தலைதுணியும்படி, சரம் உதையினான் – அம்புகளைச்
செலுத்தினான்; (எ-று.)

     வெளிபடையாகக் கைக்கூப்பிவணங்குவது போரில் தோல்விக்கு அறிகுறியாக
முடியு மாதலால், மனத்தில் அஞ்சலிசெய்தான். தலைதெரியாது எதிர்த்துச்செய்யும்
போரிலும் வீமன் குரு பக்தியை விடாத சிறப்புப்பற்றி, ‘சீறவும்’ என்றதை அடுத்து
‘நிலைபெறும்புகழினான்’ என்றார். தேஸிகன் – குரு; வடசொல். அஞ்சலி –
கைகூப்பித்தொழுதல்; வடசொல். நெஞ்சின் – மனப்பூர்வமாக எனினுமாம். பி-ம்:
பெறுதிறற்றேசிகன்.   

சூழி வெங் கச, ரத, துரகத, நிருபரை
வீழ வெங் கணைகளால், மெய் துளைத்த அளவிலே,
தாழ நின்றிலன், எழில் சல்லியன்; ‘தன்னொடே
தோழ! இன்று அமர் செய்க!’ என்று, ஒரு திசைத்
தோன்றினான்.9.-பின்னும் பல அரசர்களை வீமன் அழிக்க,
அப்போது தன்னுடன பொருமாறு சல்லியன் அங்குத் தோன்றுதல்,

(இவ்வாறு வீமன் துரோணனது தேர்ப்பாகனையுங்குதிரைகளையும்
அழித்துத் தேரைப் பயனற்றதாக்கி), சூழி வெம்கசம் – முகபடாத்தையுடைய
கொடியயானைகளும், ரதம்- தேர்களும், துரகதம்-குதிரைகளும், (என்னும்)
இவற்றின்மேலுள்ள), நிருபரை – அரசர்களை, வீழ-(இறந்துகீழ்) விழும்படி, வெம்
கணைகளால் – கொடிய (தனது) அம்புகளால், மெய் துளைத்த அளவிலே –
உடம்பைத் துளைசெய்தமாத்திரத்திலே, – எழில் சல்லியன் – அழகையுடைய
சல்லியன், தாழ நின்றிலன்-தாமதமாக நிற்காதவனாய், (வீமனைநோக்கி), ‘தோழ –
தோழனே!’ (இன்று) தன்னொடே அமர்செய்க – இப்பொழுது என்னுடனே
போர்செய்வாயாக,’ என்று-என்று சொல்லிக்கொண்டு, ஒரு திசை தோன்றினான் –
ஒருபக்கத்திலே வந்தான்; (எ-று.)

     தனது மருமக்களான நகுல சகதேவர்களுக்கு இரண்டாந்தமையனான
வீமனைச் சல்லியன் ‘தோழ’ என விளித்தது, போரில் தன்னோடொத்த பல
பராக்கிரம முடையவனாதலால் என்க. அன்றியும், சல்லியன் பகைவர் பக்கத்திற்
சேர்ந்தும், முந்தின அன்பை மறவாமல், ‘தோழ’ என அழைத்தன னென்க. இனி,
பின் இரண்டடிகட்கு-தாழ நின்றிலன் – (துரோணன் தேரின்றிக்) கீழே
நிற்கமாட்டாதவனாய், எழில் சல்லியன் தன்னொடே தோழ இன்று அமர்செய்க
என்று – அழகுள்ள சல்லியனுடனே ‘தோழ!’ இப்பொழுது (நீ எனக்காக வீமனை
யெதிர்த்துப்) போர்செய்வாய்’ என்று சொல்லி, ஒரு திசை தோன்றினான் –
(அவ்விடம்விட்டு) மற்றோரிடத்துக்குப் போயினான் என்பாரு மூளர்.
துளைத்தளவில்-தொகுத்தல்,

வல்லை, வெஞ் சமர் செய வல்லை! நீ வருக!’ என,
வில்லையும் துணி செய்து, வெல்ல வந்தவனையும்
தொல்லை வெங் கரி எனத் தேரொடும் தோள் மடுத்து,
எல்லை அம் புவியின்மேல் எற்றினான், வீமனே.10.-சல்லியன்வில்லை வீமன் துண்டித்து அவனைத்
தேரொடுந்தூக்கி யெறிதல்.

(அப்பொழுது), வீமன்-, (சல்லியனை நோக்கி),   ‘நீ வெம் சமர்
செயவல்லை-நீ கொடிய போரைச் செய்ய வல்லவன்; (ஆதலால்), வல்லை
வருக -விரைவில் வருவாயாக,’ என – என்று சொல்லி (எதிர்கொண்டு அழைத்து),
வில்லைஉம் துணிசெய்து – (சல்லியனது) வில்லையுந்துண்டாக்கி, வெல்ல
வந்தவனைஉம் – (தன்னைச்) சயிக்க வந்த அச்சல்லியனையும், தொல்லை வெம்
கரி என – முன்னொருநாள் கொடிய யானைகளை எடுத்து எறிந்தாற்போல,
தேரொடுஉம் தோள் மடுத்து-தேரொடு தோளிலேஎடுத்து, அம் புவியின்
எல்லைமேல் எற்றினான்-அழகிய பூமியிலே மோதினான்; (எ-று.)

     தொல்லை என்றது, நான்காம்போர் காளை, அந்நாட்போரில் வீமன்
யானைகளைக் கைகளால் எடுத்து எறிந்ததைக் கீழ் நான்காம் போர்ச்சருக்கத்தில்
ஐந்து பத்துப்பதினோராங் கவிகளிற் காண்க. முதலடியிலுள்ள வல்லை யென்னுஞ்
சொல் இரண்டினுள், முந்தினது – வன்மையென்னும் பண்படியாப் பிறந்த
முன்னிலையொருமைக் குறிப்பு முற்று; பிந்தினது – விரைவுப்பொருளுணர்த்தும்
வல்என்னும் இடைச்சொல் ஐகாரச்சாரியை பெற்றது

சல்லியன்தன் பெருஞ் சலிவு கண்டு, ‘அங்கையின்
நெல்லி அம் கனி இனி நேரலார் உயிர்’ என,
பல்லியங்களும் எழ, பாந்தள் அம் பொற் கொடி
அல்லி அம் தெரியலான் அங்கு வந்து, அணுகினான்.சல்லியனது சலிப்புக்கண்டு வீமன் வீரவாதங்கூற,
துரியோதனன் அங்குவருதல்.

(இவ்வாறு தான் எற்றியதனால் நேர்ந்த), சல்லியன் தன் பெரு
சலிவுகண்டு – சல்லியனது மிகுந்த தளர்ச்சியைப் பார்த்து, வீமன் இனி நேரலார்
உயிர்அம் கையின் நெல்லி அம்கனி என – ‘இப்பொழுது பகைவர்களது உயிர்
உள்ளங்கைநெல்லிக்கனிபோல (என்கைவசத்தது)’ என்று வீரவாதங்கூற,- பாந்தள்
அம் பொன் கொடி அல்லி அம் தெரியலான்-பாம்பையெழுதிய அழகிய
பொற்காம்பையுடைய துவசத்தையும் அக விதழ்களால் தொடுத்த அழகிய
மாலையையுமுடைய துரியோதனன், பல் இயங்கள்உம் எழ – பலவகை
வாத்தியங்களும் ஒலிக்க, அங்கு வந்து அணுகினான் – அவ்விடத்தில் [வீமனெதிரில்]
வந்து நெருங்கினான்; (எ-று.)

     உள்ளங்கைநெல்லிக்கனி, கவிகளால் தெளிவுக்கு உவமை கூறப்படும்.
இரண்டாமடிக்கு – ‘இனிமேல் (நாம் வீமனை எதிர்க்காமலிருந்தால் அவனுக்குப்)
பகைவர்களான நம்முடைய சேனையாரது உயிரெல்லாம் அவன்கைவசத்ததாம்’
என்றுகருதி எனவும் உரைக்கலாம், அன்றி, துரியோதனன் கூறிய வீரவாதமென
உரையிடினுமாம்.      

வெம் புய வீமன்மேல் வில் வளைத்து, ஆயிரம்
அம்புகள் மாரிபோல் ஆர்த்து எழ வீசினார்-
தும்பை அம் தார் முடிச் சூழ் படை மன்னரும்,
தம்பியர் யாவரும், மாமனும், தானுமே.12.-துரியோதனன் தம்பிமார்முதலினோரொடுஞ்சேர்ந்து
அம்புமாரிபொழிதல்.

தான்உம் – (அவ்வாறு வந்த) துரியோதனன் தானும், தம்பியர்
யாவர்உம் – (அவனது) தம்பிமார்க ளெல்லோரும், மாமன்உம் -(அவர்கள்)
மாமனான சகுனியும், தும்பை அம்தார் முடி – தும்பைப்பூவினாலாகிய
அழகியமாலையைச்சூடிய மயிர் முடியையுடைய, சூழ் படை மன்னர்உம் –
சூழ்ந்துள்ள சேனையரசர்களும், வெம் புயம் வீமன் மேல் – கொடிய
தோள்களையுடைய வீமசேனன்மேல், (எதிர்த்து), வில் வளைத்து – (தம் தம்)
வில்லை வணக்கி, ஆயிரம் அம்புகள் – மிகப்பலபாணங்களை, மாரி போல்-
மழைபோல, ஆர்த்துஎழ- ஆரவாரித்துச் செல்லும்படி, வீசினார் எய்தார்கள்;
(எ-று.)-‘தும்பையந்தார்முடி’ என்பதை, தம்பியர் முதலியோர்க்குங் கூட்டலாம்

தோன்று அரித் துவசனும், சோகம் இல் பாகன் ஊர்
வான் தடந் தேரொடும், ‘வருக!’ எனச் சென்று, எதிர்
ஊன்றினான்-மைந்தரும், இளைஞரும், உயிரையே
போன்ற மைத்துனரும், வாள் நிருபரும், புடைவர13.-மைந்தர் முதலியோர் புடைவர வீமன் துரியோதனாதியரை
யெதிர்த்தல்.

தோன்று அரி துவசன்உம்-விளங்குகிற சிங்கத்தையெழுதிய
கொடியையுடைய வீமசேனனும்,-மைந்தர்உம் -(தன்) பிள்ளைகளாகிய கடோற்கசன்
முதலியோரும், இளைஞர்உம்-தம்பியரான அருச்சுனன் முதலியோரும், உயிரைஏ
போன்ற – உயிரையொத்து மிக அன்புள்ள, மைத்துனர்உம் – மைத்துனன்மாரான
திட்டத்துய்மன் முதலியோரும், வாள் நிருபர்உம்-ஆயுதமேந்திய (மற்றும் பல)
அரசர்களும், புடை வர-பக்கத்திலே வர,-சோகம் இல் பாகன் ஊர் வான் தட
தேரொடுஉம் – (போரில்) சோர்தலில்லாத சாரதி செலுத்திய சிறந்த பெரிய
தேருடனே, சென்று – போய், வருக என எதிர் ஊன்றினான் – (துரியோதனன்
முதலியோரை) வருவீர்களாக’ என்றுசொல்லி எதிர்த்து நிலைநின்றான்.

அரித்துவசன், மைந்தர்முதலியோர் புடைவரத் தேரொடுஞ் சென்று
ஊன்றினானென்க. ஸோகம் – வடசொல். ‘உயிரையே போன்ற’ என்ற
அடைமொழியை ‘மைந்தர்’ முதலியோர்க்குக் கூட்டுதலு மொன்று.

நின்று இரு சேனையும் நேர்பட, வேலினும்,
வன் திறல் வில்லினும், வாளினும், மலைவுற,
குன்றம் நேர் தோளினார் இருவரும் கொக்கரித்து,
ஒன்றினார், வில் வளைத்து ஒருவருக்கு ஒருவரே.14.-இருபுறத்து வீரரும் பொருமாறு நெருங்குதல்.

இரு சேனைஉம்-இருதிறத்துச் சேனைகளும், நேர் படநின்று-
(ஒன்றுக்கொன்று) எதிராக நின்று, வேலின்உம் – வேல்களாலும், வல்திறல்
வில்லின்உம் -கொடிய வலிமையையுடைய விற்களாலும் வாளின்உம்-
வாள்களாலும்,மலைவு உற-போரைச் செய்ய,-குன்று அன தோளினார்
இருவர்உம்-மலையையொத்த தோள்களையுடையவரான (வீமன் துரியோதனன்
என்ற) இரண்டுபேரும்,வில் வளைத்து- (தம் தம்) வில்லை வளைத்து,
கொக்கரித்து – கர்ச்சித்துக்கொண்டு,ஒருவருக்கு ஒருவர் ஒன்றினார் –
ஒருத்தருக்கொருத்தர் நெருங்கினார்;

அவனும், அம்பு இவன் உரத்து அழகு
உற எழுதினான்;
இவனும், அம்பு அவன் மணித் தோளின்மேல்
எழுதினான்;
புவனம் எங்கணும் மிகப் பொறி எழப்
போர் செய்தார்,
பவனனும் கனலியும் நிகர் எனும் பரிசினார்.15.-வீமதுரியோதனரின் கைகலந்த போர்.

அவன்உம் – துரியோதனனும், இவன் உரத்து – வீமன்மார்பிலே,
அம்பு – பாணங்களால், அழகு உற எழுதினான் – அழகாகப் பதிவுசெய்தான்;
இவன்உம் – வீமனும், அவன் மணி தோளின்மேல் – துரியோதனனது அழகிய
தோள்களின்மேல், அம்பு – அம்புகளால் எழுதினான் – பதிவுசெய்தான்;
(இவ்வாறு),பவனன்உம் கனலிஉம் நிகர் எனும் பரிசினார்-காற்றும் நெருப்பும்
(தமக்கு) உவமையென்றுசொல்லப்படுந்தன்மையையுடைய அவ்விருவரும்,-புவனம்
எ கணும் மிகபொறி எழ போர் செய்தார் – பூமிமுழுவதிலும் மிகுதியாக(க்
கோபாக்கினியின்)பொறிகள் சிந்தும்படி யுத்தம்பண்ணினார்கள்; (எ-று.)

     அம்பெய்தற்கு மார்புதோள் சிறந்த இலக்காதல் தோன்ற, ‘அழகுறஎழுதினான்’ என்றார்.அவன்-வந்தவன். இவன்- எதிரூன்றி நின்றவன். 

வரத்தின் முன் பெறு கதை வன்மையும் வின்மையும்
சிரத்தின் நின்று எண்ண ஓர் பேர் பெறும் சேவகன்,
சரத்தினும் கடுகு தேர்ச் சர்ப்பகேதனனை, அன்று,
உரத்தின் வெங் கணைகள் பட்டு உருவ,
வில் உதையினான்.16.-வீமன் துரியோதனனை அம்பெய்து வருத்துதல்.

வரத்தின் – வரத்தினாலே, முன் பெறு – முன்னே பெற்ற, கதை –
கதாயுதத்தினது, வன்மைஉம் – வலிமையிலும், வின்மைஉம் – வில்லின்திறத்திலும்,
சிரத்தின் நின்று எண்ண – (தன்னைத்) தலைமையாகவைத்து (யாவரும்)
மதிக்கும்படி, ஓர் பேர் பெறும் – ஒப்பற்ற புகழைப் பெற்ற, சேகவன் – வீரனான
வீமன்,-அன்று – அப்பொழுது, சரத்தின்உம் கடுகு தேர் சர்ப்பகேதனனை –
(வில்லினின்று விடப்பட்ட) அம்பைக்காட்டிலும் விரைவாகவருகிற தேரையுடைய
பாம்புக்கொடியனான துரியோதனனை, உரத்தின் வெம் கணைகள் பட்டு உருவ –
மார்பிலே கொடிய அம்புகள் பட்டு ஊடுருவும்படி, வில் உதையினான் –
வில்லினின்று (அம்புகளைச்) செலுத்தினான்; (எ-று.)

     காண்டவதகநகாலத்தில் அக்காட்டுத்தீயினின்று அருச்சுனனால் உயிர்
பிழைப்பிக்கப்பட்ட மயனென்னும் அசுரசிற்பி, பின்பு அவ்வுதவிக்குக்
கைம்மாறாக,பாண்டவர்களுக்கு இராசசூயயாகத்துக்குரிய ஒரு சிறந்த
இரத்தினமண்டபத்தை அமைத்துக் கொடுத்தது மன்றி, வீமசேனனுக்கு ஒரு
கதாயுதத்தையும்,அருச்சுனனுக்கு ஒரு சங்கத்தையும் கொடுத்தா னென்றவரலாறு
கொண்டு, இங்கே’வரத்தின்முன்பெறு கதை’ எனப்பட்டது.

தான் விடும் கணைகளின் தம்பியர் தம்மையும்
தேன் விடும் தெரியலான் எய்து புண்செய்து, பின்,
ஊன் விடும்படி துளைத்து, உருவு பல் பகழியால்,
வான் விடும் பேரையும் வானில் உய்த்தனன்அரோ.17.-வீமன், துரியோதனன் தம்பியரைப் புண்படுத்திப்
பலரையும் உயிர் வதைத்தல்.

இவ்வாறு துரியோதனனை வருத்தியபின்பு),- தேன் விடும்
தெரியலான் – தேனைச்சொரிகிற பூமாலையையுடைய வீமன்,- தான் விடும்
கணைகளின் – தான் செலுத்தும் அம்புகளால், தம்பியர் தம்மைஉம் எய்து புண்
செய்து – (துரியோதனன்) தம்பிமார்களையுந் துளைத்துப் புண்படுத்தி,-பின் –
பின்பு,ஊன் விடும்படி துளைத்து உருவு பல் பகழியால் – (பகைவருயிர்)
உடம்பைநீங்கும்படி (அவ்வுடம்பைத்) துளைசெய்து ஊடுருவுந்தன்மையுள்ள பல
பாணங்களால், வான் விடும் பேரைஉம் வானில் உய்த்தனன்-(அப்பொழுது)
வீரசுவர்க்கத்துக்குச் செலுத்தத் தக்கவர்களையும் அவ்விடத்துக்குச் செலுத்தினான்
[கொன்றான்]: (எ-று.)-அரோ – ஈற்றசை. சிற்சிலரை காயப்படுத்திச் சிற்சிலரைக்
கொன்றானென்பதாம், ஊன் விடும்படி என்பதற்கு – சதை வெளிப்படும்படி என்று
உரைப்பாருமுளர்

வா வரும் கவன மாக் கடுகு தேர் வலவர் போய்,
ஏ வரும் சிலைகள் போய், இரு புய வலிமை போய்,
யாவரும் பண்டு தாம் இடு புறம் இட்டனர்;
தேவரும் கண்டு உவந்து, அலர் மழை சிந்தினார்.8.- துரியோதனன் பக்கத்தார் வீமனுக்குப் புறங்கொடுக்க,
வானோர் பூமாரி பொழிதல்.

அப்பொழுது வீமன் முன்னிலையில்). யாவர்உம் – (எதிர்த்த
துரியோதனன் சேனையார்) எல்லோரும், வா வரும் கவனம் மா-தாவிவருகிற
வேகத்தையுடைய குதிரைகளும், கடுகுதேர் – வேகமாகச்செல்லுகிற இரதங்களும்,
வலவர் – சாரதிகளும், போய் – ஒழியப்பெற்று, ஏ வரும் சிலைகள் போய் –
அம்புகள் (தொடுத்தற்குப்) பொருந்திய விற்க ளொழியப்பெற்று, இரு புயம்
வலிமைபோய் – இரண்டு தோள்களின்பலமும் ஒழியப்பெற்று, பண்டு தாம் இடு
புறம்இட்டனர்-பழமையாகத் தாம் கொடுக்கிற புறத்தை இப்பொழுதும்
கொடுத்தார்கள்[முதுகுகாட்டி யோடினார்கள்]; கண்டு – (அதனைப்) பார்த்து,
உவந்து – (வீமனதுவல்லமைக்கு)  மகிழ்ந்து, தேவர்உம் – (வானத்தில் நின்ற)
தேவர்களும், அலர்மழை சிந்தினார்-(வீமன்மேற் பூமாரி பொழிந்தார்கள்; (எ-று.)

     துரியோதனாதியர்க்குப் புறங்கொடுத்தல் இன்றைக்குமாத்திரமே புதியதன்று,
முன்னமே அமைந்துள்ளது என்பதுதோன்ற ‘பண்டு தாம் இடுபுற மிட்டனர்’
என்றார். இங்ஙன் புறங்கொடுத்தலை, கீழ் நடந்த போர்களிலும் சிற்சிலவிடத்துக்
கூறிப்போந்தார். வாவரும் – வாவிவரும் என்பதன் விகாரம்.

ஏய வரி சிலை வீமனொடு பொரு போரில்
எனைவரும் வென்னிட,
மேய விழி இலையாய பதி தரு வீரர் பலரும்,
விகன்னனும்,
ஆய முதிர் சினம் மூள, விரைவுடன் மீள வர,
அபிமன்னுவும்
தூய வரி சிலை வாளிகொடு தன தேர்கொடு
அவர் எதிர் துன்னினான்.19.-விகன்னன் முதலியோர் பொருமாறுவர, அபிமன்யு
விகன்னனெதிரிற்சென்று சேர்தல்

ஏய – (அம்புகளை) ஏவிய, வரி சிலை – கட்டமைந்த
வில்லையுடைய, வீமனொடு – வீமசேனனுடனே, பொரு – தாக்கிச் செய்த,
போரில்-யுத்தத்தில், அனைவர்உம் வென் இட – (இவ்வாறு துரியோதனன்
முதலியோர்)எல்லோரும் புறங்கொடுக்க,- (பின்பு-),  மேய விழி இலை ஆய
பதிதரு -பொருந்தின கண்களில்லையான் திருதராட்டிரமகாராசன் பெற்ற
(புத்திரரான), வீரர்பலர்உம் விகன்னன்உம் – பராக்கிரமமுடைய பல அரசர்களும்.
விகர்ணனென்பவனும், ஆய முதிர் சினம் மூள – பழமையான முதிர்ந்த கோபம்
அதிகப்பட, விரைவுடன் மீளவர – வேகத்தோடு மறுபடி(போருக்கு) வர,
அபிமன்னுஉம் – அபிமநயுவும், தூய வரி சிலை வாளி கொடு – குற்றமில்லாத
கட்டமைந்த வில்லையும் (பல) அம்புகளையும் உடன் கொண்டு, தன தேர் கொடு –
தன்னுடைய தேர்மே லேறிக்கொண்டு, அவன் எதிர் துன்னினான்-
அவ்விகர்ணனெதிரிலே சென்றுசேர்ந்தான்

மான அபிமனும், ஞான விகனனை, வாளி
பல பல ஏவ, மேல்
ஆன இரதமும், மாவும், வலவனும் ஆழிகளும்,
உடன் அற்ற பின்,
தான் அ(வ்) இரதம் உறாமல், விசையொடு தத்தி,
அருகு உறு சித்திர-
சேனன் எனும் இளையோனது அணி பெறு
தேரின்மிசை கடிது ஏறினான்.20.- அபிமன்யு விகன்னனுடைய தேர்முதலியவற்றை அழிக்கை. 

மானம் அபிமன்உம்-பெருமையையுடைய அபிமந்யுவும், ஞானம்
விகனனை – நல்லறிவுடைய விகர்ணனை, பல பல வாளி ஏவ-மிகப்பலவான
அம்புகளையேவி எதிர்க்க, (அதனால் அவனது), மேல் ஆன
இரதம்உம்-சிறந்ததேரும், மாஉம்-தேர்க்குதிரைகளும், வலவன்உம் – தேர்ப்பாகனும்,
ஆழிகள்உம் – தேர்ச்சக்கரங்களும், உடன் அற்ற பின்-ஒரு சேர அழிந்தபின்பு,-
தான் – அவ்விகர்ணன், அ இரதம் உறாமல் – (அழிந்த) அத்தேரிற் பொருந்தாமல்,
விசையொடு தத்தி-வேகத்தோடு பாய்ந்து, அருகு உறு சித்திரசேனன் எனும்
இளையோனது அணி பெறு தேரின்மிசை-பக்கத்துப்பொருந்திய சித்திரசேனனென்னும்
இளவீரனது அழகுபெற்ற தேரின்மேல், கடிது ஏறினான்-விரைவாக ஏறினான்;
(எ-று.)

     மூன்றாம் அடியில், அவிரதம்-அவ்விரதம் தம் என்பதன் தொகுத்தல்; இனி,
அவிரதம் என்றுபிரித்து-அந்த [தோல்விக்குஉரிய] ஓய்வை, உறாமல்-அடையாமல்
என்றும், அப்படிப்பட்ட பழிப்பைப் பெறாமல்என்றும் பொருள் கொள்ளலுமாம்;
விரதம் – ஒழிவு: விரஸம் – நிந்தை: வடசொற்கள் சித்ரஸேநன் – பலவகைச்
சேனையையுடையா னென்று காரணப்பொருள்; வடமொழிப்பெயர் – சித்திர
சேனனென்பவன் துரியோதனனுடைய தம்பியரில் ஒருவனென்பர் ஒருசாரார்.
மேல்ஆன – தான் மேலேறிய என்றுமாம். இளையோன் – (போரில்)
இளைப்படையாதவனுமாம். 

மற்றை இளைஞரும், மைத்துனனும், மத மத்த
கய பகதத்தனும்,
செற்ற விகனனும், முற்றும் இவனொடு செற்றி
அமர் பொருகிற்றினார்;
வெற்றி அபிமனும் விற் கையுடன் அவர் விட்ட
கணைகள் விலக்கி, மார்பு
எற்று கணை அனைவர்க்கும் அவர் அவர்
எய்த்து விழ விழ, மொத்தினான்.1.-பிறகு துரியோதனன்தம்பிமார் சயத்திரதன் பகதத்தன்
இவர்கள்பொர, இவர்களை அபிமன்யு அம்பினால் மொத்துதல்.

மற்றை இளைஞர்உம்-(விகர்ண னொழிந்த) மற்றைத் துரியோதனன்
தம்பிமார் பலரும், மைத்துனன்உம் – இவர்களுடன் பிறந்தவளது கணவனான
சயத்திரதனும், மதம் மத்தம் கயம் பகதத்தன்உம் – மதத்தினாற் களித்துள்ள
யானைச்சேனையையுடைய பகதத்தனும், செற்றம் விகனன்உம்-கோபத்தையுடைய
விகர்ணனும், முற்றுஉம் – (ஆகிய) எல்லோரும், இவனோடு – இவ்வபிமனுடனே,
செற்றி அமர் பொருகிற்றினார்-நெருங்கிய போரைச் செய்தார்கள்; (அப்பொழுது),
வெற்றி அபிமன்உம் – சயத்தையுடைய அபிமந்யுவும், வில்கையுடன்-
வில்லைப்பிடித்த கையுடனே, அவர் விட்ட கணைகள் விலக்கி-அவர்கள்
(தன்மேல்)எய்த அம்புகளைத் (தான் எய்யும் அம்புகளால்) தடுத்து, (உடனே),
மார்பு எற்றுகணை-(பகைவர்) மார்பைத் தாக்கும் படியான அம்புகளை,
அனைவர்க்குஉம் -அவர்களெல்லோர்க்கும், அவர் அவர் எய்த்து விழ விழ –
அவரவர்கள் களைத்துமிகுதியாக விழும்படி, மொத்தினான்-செலுத்தினான்; (எ-று.)

     மதமத்தகஜபகதத்தன்-வடசொற்றொடர், கீழ்த்தனது தேர்க் குதிரை
சாரதிகளைஅழித்தது பற்றி, விகர்ணன் அபிமந்யுவினிடம் கோபங்கொண்டதனால்,
‘செற்ற விகனன்’ என்றார். செற்ற எனப் பெயரெச்சமாகக்கொண்டு, (அபிமனாற்)
பங்கப்பட்ட எனினுமாம். பொருகிற்றினார் என்ற இறந்தகாலமுற்றில், கில்-
ஆற்றலுணர்த்தும் இடைநிலை து – சாரியை

நெடிய வரி சிலை நிமிர, முறை முறை நெடிய
விசையுடன் விசியும் நாண்,
இடியும் முகில் என, அகில வெளி முகடு இடிய,
அதிர் பெரு நகையுடன்,
கொடிய விகனனை மடிய, அவன் உடல் கொடிய
குடர் உகு குருதி நீர்
வடிய, இரு புயம் ஒடிய, உதையினன், வடிய
கணை ஒரு நொடியிலே.22.-அப்போதும் விகன்னனை வருந்துமாறுஅபிமன்யு
அம்பினாற் பொருதல்.

(மற்றும் அபிமந்யு), நெடிய வரிசிலை – நீண்ட கட்டமைந்த
(தன்)வில், முறை முறை – அடிக்கடி, நிமிர – நிமிர்ந்துநிற்கவும்,- நெடிய
விசையுடன் -மிகுந்த வேகத்தோடு, விசியும் – இழுக்கப்பட்ட, நாண் – வில்நாணி,
இடியும் முகில்என-இடிக்கிற மேகம்போலொலிக்கவும்,-அகிலம் வெளி முகடு –
அண்டகோளத்தின் மேல்முகடு, இடிய – அதிரவும்,-அதிர் பெரு நகையுடன்-
ஆரவாரிக்கிற பெருஞ்சிரிப்புடனே,-கொடிய விகனனை – (பகைவர்க்குப்)
பயங்கரனான விகர்ணனை (எதிர்த்து),- அவன் உடல் மடிய – அவனுடம்பு
வருந்தவும்,-கொடிய குடர் உகுகுருதி நீர் வடிய – வலிமையையுடைய –
அவன்குடலினின்று பெருகுகிற இரத்தநீர் வழியவும், – இரு புயம் ஓடிய –
(அவனது) இரண்டு தோள்களும் காயப்படவும்,-வடிய கணை – கூர்மையுடைய
அம்புகளை, ஒரு நொடியில்-ஒருமாத்திரைப்பொழுதிலே, உதையினன் –
செலுத்தினான்; (எ-று.)

     வடிய என்னுஞ் சொல்இரண்டனுள், முன்னது-வடிஎன்னும்
வினைப்பகுதியடியாப்பிறந்த செயவென்னும் வினையெச்சம்: பின்னது – வடி
என்னும் பெயரடியாப் பிறந்த குறிப்புப்பெயரெச்சம். சிலை முறைமுறை நிமிர்தல் –
அம்பை யிழுத்துவிடும் பொழுதுதோறும் வில்லின் வளைவு சிறிது மாறல். கொடிய
குடர்-கொடிபோல்சுற்றியுள்ள குடருமாம். குடர் – போலி. பி-ம்: விசையுடன்
வீசினான்.      

மன்னர் மணி முடி மன்னு கனை கழல் மன்னன்
இளவல் விகன்னனை
முன்னர் உறு கணை பின்னர் விழ விழ, முன்னர்
அமர் பொர முன்னினான்,
பொன் அசலம் நிகர் அன்ன புய அபிமன்னு
ஒருவனும்; இன்னும் நாம்
என்ன அமர் பொர இன்னர் அணுகுவது?’ என்ன
வெருவினர், துன்னலார்.3.- அபிமன்யுவின் வீரத்தைக் கண்டு பகைஞர் அஞ்சுதல்.

‘பொன் அசலம் நிகர் அன்ன – பொன்மலையான மேருவையொத்த,
புயம் – தோள்களையுடைய, அபிமன்னு ஒருவன்உம் – அபிமன்யு ஒருத்தனும்,-
மன்னர் மணி முடி மன்னு – (வந்து வணங்குங்காலத்தில்) அரசர்களது
இரத்தினகிரீடங்கள் பொருந்தப்பெற்ற, கனை கழல் – ஒலிக்கின்ற வீரக்கழலையுடைய
(பாதத்தையுடைய), மன்னன் – துரியோதனராசனது, இளவல் – தம்பியான,
விகன்னனை – விகர்ணனை,-முன்னர் உறு கணை – முன்னே [மார்பில்] பொருந்திய
அம்புகள், பின்னர் விழ விழ – (ஊடுருவிக்கொண்டு) பின்னே மிகுதியாக விழும்படி,
முன்னர் அமர் பொர முன்னினான்-எதிரில்நின்று போர்செய்யத் தொடங்கி
விட்டான்; இன்னும்-பின்பும், நாம்-, என்ன அமர் பொர-என்னபோரைச் செய்வதற்கு,
இன்னர் அணுகுவது – இப்பொழுது (அபிமந்யுவை) நெருங்குவது?’ என்ன – என்று
கருதி, துன்னலார் – பகைவர்கள், வெருவினர் – அஞ்சினார்கள்;(எ – று)

‘அபுமந்யு வேறுதுணையில்லாமல் தானொருவனாகவே இராசராசனான
துரியோதனனது தம்பியான விகர்ணனை மார்பு துளைக்கும்படி பல அம்புகளை
எய்தா னென்றால், நாம் அவ்வபிமனோடு எதிர்த்து என்ன போர்
செய்யமாட்டுவோம்?’ என்று எதிரிகள் பலர் அஞ்சினரென்பதாம். நிகர் அன்ன
என்ற இடத்து – திருக்கோவையாரில், “கோளரிக்குந் நிகரன்னார்” என்பதற்கு –
கோள்வல்ல அரிமாவிற்கு மறுதலைபோல்வார்’ என்றும், ‘கோளரிக்கு ஒப்பாகிய
அத்தன்மையர் எனினும் அமையும்’ என்றும் பேராசிரியர் கூறியது அறியத்தக்கது.
ஒருவனும், உம் – இழிவு சிறப்பு: அவனது துணையின்மையையும்,
இளம்பிராயத்தையும் காட்டும். இன்னர் – இத்தன்மையரெனினுமாம். இப்பாட்டு –
மெல்லோசையால் மிக்கது. முன்னும் பின்னு முள்ள இவ்வகை விருத்தங்களில்
ஒவ்வொருபாட்டும் ஒவ்வொரு ஓசைவிகற்பம் பொருந்தப் பாடப்பட்டுள்ளவாறு
காண்க.

அன்றை அமரினில் ஒன்றுபட அவர், அங்கம்
அயர்வுறு பங்கம் ஏது
என்று மொழிவது? தம் தம் மனை உற எந்த
நிருபரும் முந்தினார்;
வென்று பொரு முனை நின்ற அபிமனை விஞ்சும்
உவகை கொள் நெஞ்சுடன்
சென்று தழுவினர், இந்து வர எழு சிந்து என
மகிழ் தந்தைமார்.24.- அபிமன் போர்வெல்ல, தந்தைமார் எதிர்கொண்டு மகிழ்ந்து
அவனைத் தழுவுதல்.

அன்றை அமரினில் – அன்றையதினத்துப்போரில், ஒன்று பட –
ஒருசேர, அவர் அங்கம் – (விகர்ணன் முதலிய) பகையரசர்களது உடம்பு,
அயர்வுஉறு-தளர்ச்சியடைந்த, பங்கம் – தோல்வியை, ஏது என்று மொழிவது –
(யாம்) என்னவென்று எடுத்துச்சொல்வது? எந்த நிருபர்உம் – (துரியோதனன்
பக்கத்தில்) எல்லா அரசர்களும், தம் தம் மனை உற – தங்கள் தங்கள் வீட்டை
அடைவதற்கு, முந்தினார் – (ஒருவரினும் ஒருவர்) முற்பட்டார்: (அப்பொழுது),
இந்துவரவு எழு சிந்து என – சந்திரன் உதிக்கப்பொங்குகிற கடல்போல, மகிழ
தந்தைமார் – மகிழ்ச்சி கொண்ட (அபிமனது) தந்தையரான பாண்டவர், வென்று
பொருமுனை நின்ற அபிமனை – வெற்றி கொண்டு போர்க்களத்திலேநின்ற
அபிமந்யுவை, விஞ்சும் உவகை கொள்நெஞ்சுடன் – மிகு களிப்புக் கொண்ட
மனத்துடன், சென்று தழுவினர்-; (எ-று.)

    சந்திரனது வரவைக் கண்டமாத்திரத்தில் கடல் பொங்குவதற்குக் காரணம்,
தன்னிடத்திலிருந்து உண்டானதுபற்றித் தனக்குப் பிள்ளைமுறையாகிய
அச்சந்திரனைக் காணுதலாலாகுங் களிப்பு என்று கூறுவது கவிமரபு: அதுபற்றி
அபிமனதுவெற்றியைக் கண்டுகளிக்கிற அவன் தாதையர்க்கு, சந்திரனது வரவைக்
கண்டு பொங்குங் கடல் உவமை.   

கோடு முதலொடு வாளிகளின் இற வீழ்வ
பல கட குஞ்சரம்
காடு படு துளவோன் முன் வர விடு கஞ்சன்
மழ களிறு ஒக்குமால்;
ஓடு குருதியினூடு வடிவு ஒரு பாதி புதைதரும்
ஓடை மா
நீடு முதலையின் வாயின் வலி படு நீலகிரியை
நிகர்க்குமால்.5.-இதுமுதல் மூன்றுகவிகள் – படுகளச்சிறப்பு.

(அப்போர்க்களத்திலே),-கோடு – தந்தங்கள், முதலொடு –
அடியோடு,வாளிகளின் இற – (எதிரிகளின்) பாணங்களால் அழிய, வீழ்வ-
விழுந்துகிடப்பனவான, பல கடம் குஞ்சரம் – அநேகமதயானைகள்,-காடு படு
துளவோன் முன்-காட்டிற் பொருந்திய திருத்துழாயைத் தரித்த கண்ணபிரானுக்கு
முன்னே, வர – சொல்லும், கஞ்சன் – கம்சன், விடு – ஏவிய, மழ களிறு –
இளமையான (குவலயாபீடமென்னும்) யானையை, ஓக்கும் – ஒத்திருக்கும்; ஓடு
குருதியின் ஊடு – ஓடுகிற இரத்தவெள்ளத்தினிடையே, வடிவு ஒரு பாதி புதைதரும்
– உடம்பில் ஒருபாதி அழுந்திய, ஓடைமா – நெற்றிப்பட்டத்தையுடைய யானைகள்,-
நீடு முதலையின் வாயின் – நீண்ட முதலையினது வாயினால், வலி படு –
வலிமையொழிந்த, நீலகிரியை – நீலநிறமுள்ள மலைபோன்ற (கஜேந்திரனென்னும்)
யானையை, நிகர்க்கும்-; (எ-று.)

     முன் இரண்டடியிற் கூறிய உவமை-யானைகள் தந்தம் வேரோடு ஒழிய
இறந்து விழுந்து கிடந்ததற்கும், பின் இரண்டடியிற் கூறிய உவமை – பாதியுடம்பு
வெளித்தெரியாது மறைய ஒடுக்கியதற்கு மென்க. துளசி – முல்லை நிலத்திற்கு
உரியதாதலால், ‘காடுபடுதுளவு’ எனப்பட்டது; இனி, ‘காடுபடுதுளவோன்’ என்பதற்கு
– முல்லைநிலத்துக்குத் தெய்வமாகப் பொருந்திய கண்ணபிரானென்றும்
கொள்ளலாம். நீலகிரி – கருநிறமுடைய யானைக்கு, உவமையாகுபெயர், வீழ்வ –
பெயர். ஆல் இரண்டும்- அசை.

     வில்விழாவென்கிற வியாஜம்வைத்துக் கம்சனால் வரவழைக்கப்பட்ட ஸ்ரீ
கிருஷ்ணபலராமர்கள், கம்ஸனரண்மனையை நோக்கிச் செல்லுகையில், அவனது
அரண்மனைவாயில் வழியில் தம்மைக் கொல்லும்படி அவனால் ஏவி நிறுத்தப்பட்ட
குவலயாபீடமென்னும் மதயானை கோபித்துவர, அவ்யாதவ வீரர்
அதனையெதிர்த்து அதன் தந்தங்களிரண்டையும் சேற்றிலிருந்து கொடியை
யெடுப்பதுபோல எளிதிற்பறித்து அவற்றையே ஆயுதமாகக்கொண்டு அடித்து
உயிர்தொலைத்து உள்ளேபோயினரென்பது, இரண்டாம் அடியின் கதை.

மாலும் மத கட சாலும், நுதலும், மருப்பும், ஒரு
கையும், வதனமும்,
தோலும், ஒழிய உள் ஆன தசை பல பேய்கள்
நுகர்தரு தும்பிமா,
நாலு மறைகளும் ஓலம் என, அகல் வானம் என,
முழு ஞானமே
போலும் என, ஒளிர் மேனி உடையவர் போர்வை
உரி அதள் போலுமே.

மாலும்-மயங்குதற்குக் காரணமான, மதசாலம்-
மதப்பெருக்கைக்கொண்ட, கடம்-கன்னங்களையுடைய, நுதல்உம்-நெற்றியும்,
மருப்புஉம் – தந்தங்களும், ஒரு கைஉம் – ஒன்றாகிய துதிக்கையும், வதனம்உம்-
முகமும், தோல்உம்-(உடம்பின்) தோலும், ஒழிய-நீங்க, உள் ஆன தசை-உள்ளே
பொருந்திய சதைகளை, பல பேய்கள் நுகர்தரு- அநேகம் பேய்கள்
உண்ணப்பெற்ற, தும்பிமா – யானைகள்,-நாலு மறைகள்உம்-நான்கு வேதங்களும்,
ஓலம் என – அபயமிட்டழைக்கவும், அகல்வானம் என-பரந்த ஆகாயம் மென்று
சொல்லவும், முழு ஞானம்ஏ போலும் என-பூர்ணமான அறிவையே ஒக்கு மென்று
சொல்லவும், ஓளிர்-விளங்குகிற,  மேனி உடையவர்- திருமேனியையுடைய
சிவபிரானுக்கு, போர்வை – போர்வையாக உள்ள, உரி அதள்-
உரிக்கப்பட்ட(யானைத்) தோலை, போலும்-ஓக்கும்.

     உடம்பிலுள்ள உறுப்புக்கள் ஒழியத் தோலுரிபட்ட யானைகள்,
சிவபிரானால்முன்பு தோலுரிக்கப்பட்ட யானையை யொக்கு மென்க. தமது
துன்பத்தையழிக்கும்பொருட்டு யாவராலும் அபாயங்கூறி அடையப்படுங் கடவுள்
இவரேயென்றும், ஆகாசமூர்த்தி யென்றும், பூர்ணஞானசொரூபி யென்றும்
வேதங்களாற்புகழப்பட்டுத் தேசோமயமாய் விளங்குபவர் சிவபிரானென்பது,
பின்னிரண்டடிகளில்விளங்கும். சாலம்-ஜாலம் என்னும் வடசொல்லின் விகாரம்:
இனிஜலமென்பதன்விகாரமெனக் கொண்டு, நீர் என்றுமாம். அன்றி. ‘மதகடசாலும்
‘என்றுபாடங்கொண்டு, மதநீரைக் கொண்ட கன்னமாகிய சாலும் என்று
பொருளுரைப்பாருமுளர்: சால்-நீர்ப்பாத்திரம். போர்வை-போர்க்கப்படுவது.
யானைத்தோலுரித்த கதை:-அருந்தவமியற்றிப் பெருவரம்பெற்ற
கஜாசுரனென்பவன்தேவர் முனிவர் முதலியோரை இடைவிடாது வருத்தித் துரத்த,
அஞ்சியோடினஅவர்களது பிரார்த்தனையால் பரமசிவன் தம்மை யெதிர்த்துப்
போர்செய்யவந்தஅவ்வசுரனைக் காலாலுதைத்துத் தள்ளிக் கொன்று தோலை
உரித்துப்போர்த்தருளின தென்றாயினும், தாருகவனமுனிவரேவிய யானையினுட்
சென்றுஉருத்திரமூர்த்தி உடலைப்பிளந்து அதனுரிவையைப் போர்த்துக்கொண்ட
தென்றாயினுங்கொள்க.

சேனை இப முகம் அற்று விழுவன சென்று
திசை வழி கவ்வி, விண்
போன வயவர்கள் படைகொடு எதிர் எதிர்
பூசல் புரி இரு பூதமும்,
சோனை மழை முகில் வாகன் முதல சுரேசர்
தொழுது துதிக்கவே,
யானை முக அசுரேசனுடன் அமர் ஆடு
முதல்வனை ஒக்குமே.

சேனை – அச்சேனையிலே, அற்று விழுவன-அறுந்து
விழுந்தனவாகிய, இபம் முகம்-யானைகளின் முகங்களைக், திசை வழி சென்று
கவ்வி-(அவை விழுந்துள்ள) திக்குகளின் இடங்களிலே ஓடிப்போய் (வாயினாற்)
கௌவி யெடுத்துக்கொண்டு, விண்போன வயவர்கள் படைகொடு-(இறந்து)
வீரசுவர்க்கஞ்சென்ற வீரர்களது ஆயுதங்களை (த்தம் கைகளில்) ஏந்திக்கொண்டு,
எதிர் எதிர் பூசல் புரி-எதிரெதிராக நின்று ஒன்றோடொன்று) போர்செய்கிற, இரு
பூதம்உம் – இரண்டு சேனைகளும், சோனை மழை முகில் வாகன் முதல –
விடாப்பெருமழை பொழியும், சோனை மேகத்தை வாகனமாகவுடைய இந்திரன்
முதலிய, தலை சிறந்த தேவர்கள், தொழுது துதிக்க. (தன்னை வந்து) வணங்கித்
தோத்திரஞ்செய்ததனால், யானை முகம் அசுரேசனுடன் அமராடு –
யானைமுகத்தையுடைய அசுரராசனோடுபோரைச்செய்த, தலைவனை –
தலைவனானவிநாயகக்கடவுளை, ஒக்கும்-; (எ-று.)

     மாகதனென்னும் வீமனுக்கு விபுதையென்னும் அசுர கன்னிகையினிடத்தில்
பிறந்தகஜமுகாசுரனென்பவன் அநேகவரங்களைப் பெற்று தன்னுடன் பிறந்த பல
அசுரர்களுடனே உலகத்துக்கு பலவகைத் தீங்குகளை இழைத்து வருகையில்,
வேண்டுகோளால் அவனைக் கொல்லும்பொருட்டுச் சிவ குமாரராய்
யானைமுகக்கடவுளாக அவதரித்த விநாயகர் இந்திரன் முதலிய தேவர்களின்
பிரார்த்தனையாற்சென்று எதிர்த்துப் போர்செய்து அவ்வசுரனை அழித்திட்டனர்
என்பது கதை. அவ்வசுரன் இரணியன்போலத் தேவர்களாலும் அசுரர்களாலும்
மனிதர்களாலும் மிருகங்களாலும் மற்றும் பல பிராணிகளாலும் (தனித்தனி)
இறவாதபடி வரம்பெற்றிருந்தன னாதலால், அவனைச் சிவபிரான் யானைமுகமும்,
தெய்வப் பிறப்பும், பூதவடிவமும் கொண்ட ஒருபுத்திரனை யுண்டாக்கி அவனால்
அழித்தருளின்ரென்க. அவன் படைக்கலங்களாலும் அழியாதபடி
வரம்பெற்றனனாதலால், அவன்மேல் விநாயகர் தமது தந்த மொன்றை யொடித்து
வீசி அதனால் கொன்றன ரென்று நூல்கள் கூறும். யானைமுகத்தை
வாயிற்கௌவியவையும், அங்குள்ள பிணங்களைத் தின்பதில் தமக்குஉண்டான
மாறுபாட்டினாலும் விளையாட்டினாலும் தம்மில்ஒன்றோடொன்று
போர்செய்கிறவையுயான பூதங்களுக்கு, ஒருவரோடொருவர்போர்செய்த
பயங்கரரூமான கஜமுகாசுரனும் கைகால்வயிறுகளில்பூதவடிவங்கொண்ட
யானைமுகக்கடவுளும் உவமை யெனக் காண்க. முதல் – குறிப்புபெயரெச்சம்,
வயவர் வலிமையுடையவர், எல்லாச் சுபகாரியங்களிலும் முதலில் பூசிக்கப்படுகிற
தலைமைபற்றி, விக்கிநேசுவரரை   ‘முதல்வன்’என்றார். பி-ம்: தசைவழி.

இமையம் அணுகினன், விசயன் மதலையை, ‘இன்றை
அமர் இனி உங்களுக்கு
அமையும்’ என, முதல்; அனிகம் அடையவும்,
அணியும் அவனிபர் நால்வரும்,
தமையனொடு தம பதியின் அணுகினர், தங்க;
விரைவொடு கங்குல் போய்,
சிமையம் அணுகினன், மீள, நனி இருள் சிதைய,
உதய திவாகரன்.8.-சூரியாஸ்தமனமும், மறுநாள் சூரியோதயமும்.

(சூரியன்),-விசயன் மதலையை-அருச்சுனனது புத்திரனான
அபிமன்னுவை (நோக்கி),’இன்றை அமர் இனி உங்களுக்கு அமையும்’ என-
இன்றைய தினத்துப்போர் இப்பொழுது உங்களுக்கு அமையும்’ என- இன்றைய
தினத்துப்போர் இப்பொழுது உங்களுக்குப் போதுமென்று (கூறியவன் போல),
முதல்-முதலிலே, இமையம் அணுகினன்-(அஸ்தமந) கிரியை அடைந்தான்
(அஸ்தமித்தான்); (உடனே), அனிகம் அடையஉம் – சேனைகளெல்லாவற்றோடும்,
அணியும் அவனிபர் நால்வர்உம் – அழகு பொருந்திய (வீமன் முதலிய) நான்கு
அரசர்களும், தமையனொடு, (தங்கள்) தமையனான தருமபுத்திரனுடனே, தம
பதியின் அணுகினர் தங்க – தமதுபடைவீட்டிற் சேர்ந்து தங்க,-கங்குல் விரைவொடு
போய்-இராத்திரி துரிதமாகக் கழிய, மீள – பின்பு, நனி இருள் சிதைய-மிகுந்த
இருள் அழியும்படி, உதயம் திவாகரன் – உதயகாலத்துச் சூரியன், சிமையம்
அணுகினன் –  உதயகிரியைஅடைந்தான் [உதித்தான்]; (எ-று.)

சூரியன் இயல்பாக அஸ்தமித்ததை அன்றைய தினம் சிறப்பாகப் போர்
செய்தஅபிமனைநோக்கி ‘இவ்வளவோடு  இன்றைப் போர் போதும்’ எனக்கூறிச்
சென்றதாக உத்பிரேக்ஷித்தார். முதல் இமையமணுகினன் திவாகரன், கங்குல்போய்
இருள்சிதைய மீளச் சிமையம் அணுகினன் என ஒருவாக்கியமாகவே
முடித்தலுமொன்று. இமயம், சிமயம் என்பன – எதுகைநோக்கி
இடைப்போலிபெற்றன இமயம் – இங்கே, மலையென்னுமாத்திரமாய், சிறப்புப்பெயர்
பொதுப்பொருளை யுணர்த்திற்று; பின் வருவதை நோக்கி அஸ்தகிரியாயிற்று.
தமையன் – தம் ஐயன் எனப்பிரிந்து தம் தந்தைபோல்வானென்று பொருள்படும்; ‘
தமையன் தந்தை போல் மதிக்கத்தக்கவன்’ என்பது – நூல்வழக்கு, திவாகரன் –
பகலைச்செய்பவன்; வடமொழிப்பெயர்; ‘பகலவன்’ என்பது – இதற்கேற்ற
தமிழ்மொழி. உதயச்சிமயமென மொழிமாற்றியுரைப்பினும் அமையும். சிமயம் –
மலையுச்சி; இங்கே, மலைக்குச் சினையாகுபெயர்.

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading