ஸ்ரீ.வில்லிபாரதத்தில் ஸ்ரீ மத் பகவத் கீதை சாரம்

ஸ்ரீ.வியாசரும் ஸ்ரீ. வில்லி புத்தூராரும்

ஒரு லட்சம் ஸ்லோகங்கள் அடங்கிய வியாசர் அருளிய மஹாபாரதத்தைத் தமிழில் பாக்களாகத் தர எண்ணினார் வில்லி புத்தூரார்.

“குறும்பி அளவாக் காதைக் குடைந்து தோண்டி எட்டினமட்டு அறுப்பதற்கோ வில்லி இல்லை” என்று பின்னால் ஒரு புலவர் பாடும் அளவு புலமை இல்லாதவர்கள் பாடத் துணிந்தால் அவர்களின் காதைக் குடைந்து தோண்டி தண்டிக்கும் அளவு புலமை பெற்றவர் வில்லிப்புத்தூரார்.

வியாசர் பாடிய 18 பர்வங்களில் 10 பர்வங்களை மட்டுமே சுமார் 4350 பாக்களில் தன் காவியத்தில் பாடியுள்ளார். தர்மர் முடிசூட்டியதுடன் வில்லி பாரதம் முடிவடைகிறது.

700 ஸ்லோகங்கள் கொண்டது பகவத் கீதை. வில்லிபுத்தூரார் தனது பாரதத்தில் பகவத்கீதையை ஆறே ஆறு பாடல்களில் தந்துள்ளார்.

மாயை என்று ஒருத்தி தன் பால் மனம் எனும் மைந்தன் தோன்றி,
தூய நல் அறிவன் தன்னைத் தோற்றம் இன்றாக்கி வைத்தான்;
தாயொடு, தந்தை, மக்கள், தாரம், என்று இவர்பால் வைத்த
நேயமும் அவன்தனாலே நிகழ்ந்தது ஓர் நினைவு கண்டாய்.2.-இதுமுதல் ஆறுபாடல்கள்-கண்ணன் அருச்சுனனுக்குத் தத்துவங்களை
உபதேசித்தமையைக் கூறும்.

மாயை என்ற ஒருத்தி தன் பால் – மாயை யென்ற ஒருத்தி இடத்தில்,
மனம் எனும் மைந்தன் தோன்றி – மனமென்னும் புத்திரன் உண்டாகி,
தூய நல் அறிவன்தன்னை – பரிசுத்தமான நல்ல ஞானமென்கிறவனை,
தோற்றம் இன்று ஆக்கி வைத்தான் – வெளிப்படாத படி செய்திட்டான்;
தாயொடு தந்தை மக்கள் தாரம் என்ற இவர் பால் வைத்த நேயம்உம் – தாய் தந்தை பிள்ளைகள் மனைவி என்கிற இவர்களிடத்து வைத்த அன்பும்,
அவன்  தனால்ஏ நிகழ்ந்தது ஓர் நினைவு கண்டாய் – அந்த மனமென்பவனால் உண்டானதொரு எண்ண மென்றே அறிவாய்;(எ – று.)-

இவை ஆறுபாடல்களும், பகவத்கீதையின் சுருக்கமான சாராமிசம்.

மாயையாவது-உள்ளதை இல்லாததாகவும், இல்லாததை உள்ளதாகவும்,
ஒன்றை மற்றொன்றாகவுங்காட்டும் எம்பெருமானது ஒருசக்தி. மனம் அந்த மாயைக்கு
வசப்பட்டபோது, பொருள்களின் நிலையை உள்ளபடி அறியுந் தத்துவ ஞானம்
தோன்றுவதில்லை; ஆகவே, நிலையுள்ளபொருள்களை நிலையில்லாதனவென்றும்,
நிலையில்லாத பொருள்களை நிலையுள்ளனவென்றும் மாறுபட அறியும்
விபரீதஞானம் தலையெடுக்கும்; அதனாலேயே, நித்தியமான ஆத்மாவுக்கு யாதொரு
சம்பந்தமும் படாமல் அநித்தியமான தேகத்தையே பற்றிய தாய்முதலியோரிடத்துச்
சுற்றத்தவரென்ற பொய்யபிமானம் உண்டாகி நிலைநிற்கின்றது என்றதாம்.

ஒருத்திதன்பால், பால் – ஏழனுருபு. என்ற – ஈறு தொக்கது; என்றுஎனஎடுத்து
எண்ணிடைச்சொல்லுமாம். கண்டாய் என்பது — காண்பாயெனப் பொருள்படுதல்,
காலவழுவமைதி; இனி இதனை இடைச்சொல் தன்மைப்பட்டுத் தேற்றப்
பொருள்தருவ தென்றுங் கொள்ளலாம். வடமொழியில் “மாயா” என்பது
பெண்பாற்சொல்லாதலால், அதனை இங்குப் பெண்ணாகவும், மற்றை மனமும்
அறிவும் பெண்பாற்சொற்களல்ல வாதலின், அவற்றை ஆணாகவும்
உருவகப்படுத்தினார்; உருவகவணி

குயின்ற ஐம் பொறிவாய் நின்று, குறித்த ஐம் பொருளும் தானே
அயின்று, முக் குணங்களோடும், அறு வகைப் படைகளோடும்,
பயின்று, அரசாளும் அந்த மனம் எனும் பகைவன், ஆங்குத்
துயின்ற போது, ஒளித்து நின்ற தோன்றலும் தோன்றும் கண்டாய்!

குயின்ற – (உடம்பிற்) பொருந்திய, ஐம்  பொறி வாய்- (மெய்
வாய் கண்மூக்குச் செவி  யென்னும்) பஞ்ச இந்திரியங்களி னிடமாக, நின்று –
இருந்து, குறித்த- (முறையே அப்பஞ்சேந்திரியங்களுக்கு விஷயமாக) அமைக்கப்பட்ட,
ஐம் பொருள்உம் – (ஊறு சுவை ஒளி நாற்றம் ஓசை என்னும்) ஐந்துபுலன்களையும்,
தானே அயின்று – தானே அனுபவித்து, முக்குணங்களோடுஉம்–(சத்துவம் ரஜஸ்
தமஸ் என்னும்) மூவகைக்குணங்களுடனும், அறுவகை படைகளோடுஉம்- (காமம்
கோபம் லோபம் மோகம் மதம்மாற்சரியம் என்னும்) ஆறுவகைச் சேனைகளோடும்,
பயின்று – கூடிப்பழகி, அரசு ஆளும் – அரசாட்சிசெய்கிற, அந்த மனம் எனும்
பகைவன்- கீழ்க்கூறின மனமென்கிற சத்துருவானவன், துயின்றபோது – தூங்கிய
பொழுது, ஆங்கு ஒளித்து நின்ற தோன்றல்உம் – அவனால் தோற்றமிலனாய் நின்ற
(தூயநல்லறிவனென்கிற) புருஷனும், தோன்றும் – வெளிப்பட்டுவிளங்குவான்;
(எ – று.)- ‘கண்டாய்’ என்பதற்குக் கீழ்உரைத்தவாறு உரைக்க.

பஞ்சேந்திரியங்களுக்கு வசப்பட்டு அவற்றின் புலன்களிலே
முக்குணங்களோடும் மற்றும்பல தீச்சிந்தைகளோடும் மனத்தை அதுபோகிறவழிப்படி
யதேச்சையாக விட்டிடாமல் அடக்கிவைத்தால் தத்துவஞானம் உண்டா மென்பது
கருத்து. அரிஷட்வர்க்க மென்றும் உட்பகை யென்றுங் கூறப்படுகிற காமம் முதலிய
ஆறினையும் யானை தேர் குதிரை வில் வாள் வேல் என்னும் அறுவகைப்படைகளாக
உருவகப்படுத்தினார்; மனமென்னும் பகைவன்  விவேகமாகிய அரசனைப்
போர்செய்து அடக்குதற்கு இவை துணை நிற்றாலென்க. அரசாளுதல் –
கருதியபடியெல்லாஞ்செல்லுதல். அந்த மனம் – மாயையினிடத்துத் தோன்றி
அறிவைத் தோற்றமின்றாக்கிவைத்த மன மென்றவாறு. தோன்றல் –
விளங்குந்தன்மையனான புருஷன்; இதில் அல் – கருத்தாப்பொருள்விகுதி. இது –
ஆண்பாற்சிறப்புப்பெயர். முக்குணங்களை மந்திரிகளாகக்கொள்க. மனத்தின்
தூண்டுதலாலே ஐம்பொறிகள் ஐம்புலன்களின்வழியே செல்லுதலால்,
‘பொறிவாய்நின்று பொருளாயின்று’ என்றார்; “உண்டற்குரிய வல்லாப்பொருளை,
உண்டன போலக் கூறலு மரபே” என்ற வழுவமைதியால், ‘அயின்று’ எனப்பட்டது.
போது – மரூஉ. (3)

அந்த நல் அறிவன் தன்னை அறிந்தவர் அறிஞர் ஆவார்;
தந்தையால் வகுக்கப்பட்ட சராசரப் பொருள்கள் தோறும்
வந்து, அவன், தீம்பால் நெய் போல் உயிர்க்கு உயிர்
ஆகி, வாழும்
பந்தமது உணர்ந்து, நேரே பார்க்குங்கால், பகை யார்?
நண்பு ஆர்?

அந்த நல் அறிவன் தன்னை – அந்தச் சுத்தஞான மென்கிற புருஷனை
அறிந்தவர் – (உள்ளபடி) உணர்ந்தவரே, அறிஞர் ஆவார் – புத்திமான்களாவார்கள்;
தந்தையால் வகுக்கப்பட்ட – (எல்லாப் பிரபஞ்சத்துக்கும்) பரமபிதாவான கடவுளால்
அமைக்கப்பட்ட, சர அசரம் பொருள்கள்தோறுஉம் – சஞ்சரிப்பனவும்
சஞ்சரியாதனவுமாகிய எல்லாப் பொருள்களிலும், ஆன் வந்த தீம்பால் நெய்போல் –
பசுவினிடமாக வந்த இனிய பாலினிடத்து நெய்போல, உயிர்க்கு உயிர் ஆகி வாழும்
– (சகல)  சிவாத்துமாக்களினுள்ளும் அந்தராத்துமாவாய் (மறைந்து அப்பரமான்மா)
வாழ்கின்ற, பந்தம்அது – சம்பந்தத்தை, நேரே உணர்ந்து – வழுவற அறிந்து,
பார்க்கும் கால் – ஆலோசிக்குங்காலத்து, பகை யார் நண்பு ஆர் – (ஒருவனுக்குப்)
பகைவர் எவர்? நண்பர் எவர்? [எவருமில்லை யென்றபடி]; (எ – று.)

எல்லாச்சீவான்மாக்களிடத்தும் பரமான்மா ஒருதன்மையாகவே
பொருந்தியிருக்கையில் அவற்றில் சிலவற்றைப் பகையாகவும் சிலவற்றை நண்பாகவும்
கருதுவது மாயாகாரியமேயன்றி வேறன்று என்பதாம். பால் நெய் – விட்டுப் பிரியாது
உள்ளுறைதற்கு உவமம். சராசரம் – உம்மைத்தொகை தீர்க்கசந்தி: எழு
வகைப்பிறப்பினுள், தேவர் மக்கள் விலங்கு பறவை ஊர்வன நீர்வாழ்வன என்ற
ஆறும் – சரமும், ஸ்தாவரம் – அசரமுமாம், தந்தையால்- எல்லாப்பிராணிகளுக்கும்
பிதாமகனான படைத்தற் கடவுளாகிய பிரமதேவனாலென்றுமாம், பகை, நண்பு –
அவற்றையுடையார்க்குப் பண்பாகுபெயர். யார் என்றதில், வினா – எதிர்மறை
குறித்தது. ஆர்-யார் என்றதன் மரூஉ.

உம்பரும், முனிவர் தாமும், யாவரும், உணரா ஒன்றை
இம்பர், இன்று, உனக்கு நானே இசைவுற உணர்த்தா நின்றேன்;
ஐம் பெரும் பூதத்தானும் அமைந்தன உடலம், யார்க்கும்;
நம்பனும் ஒருவன்; உள்ளே ஞானியாய், நடத்துகின்றான்.

உம்பர்உம் – தேவர்களும், முனிவர்உம் – முனிவர்களும், யாவர்உம்-
மற்றும் எல்லோரும், உணரா – அறியாத, ஒன்றை-ஒரு தத்துவப்பொருளை, இம்பர்-
இவ்விடத்து, இன்று – இப்பொழுது, உனக்கு-, நானே-, இசைவு உற –
பொருந்தும்படி, உணர்த்தாநின்றேன்- அறிவிக்கிறேன்; (கேள்): யார்க்குஉம்-
எல்லாப்பிராணிகளுக்கும், உடலம்-சரீரங்கள், ஐ பெருபூதத்தான்உம் அமைத்தன-
ஐந்து பெரிய பூதங்களாலுஞ் செய்யப்பட்டன; உள்ளே- அவற்றினுள்ளே,   ஞானி
ஆய் -ஞானசொரூபியாய், நம்பன்உம் ஒருவன் – ஒப்பற்ற கடவுளொருவன்,
நடத்துகின்றான் – (இருந்து எல்லாத் தொழில்களையும் அவற்றைக்கொண்டு)
செய்விக்கிறான்; (எ – று.)

சடைப்பூதங்களினுள்ளே மனிதன் புகுந்து அவற்றைக்கொண்டு தொழில்
நடத்துதல்போல, பகவான் சேதநாசேதநங்களினுள்ளேயிருந்து தொழில்
நடத்துகின்றன னென்க. ஐம்பெரும் பூதம் – பஞ்ச மகாபூதம்; நிலம் நீர் தீ காற்று
வானம் என்பன; பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாசம்  எனப்படும். இப்பஞ்ச
பூதங்களைப் பஞ்சீகரணம் பண்ணுதலாலேயே பிரபஞ்சப்பொருள்கள்
உண்டாகின்றன; பஞ்சீகரணம் பண்ணுதலாவது – பிருதிவியில் ஒருபாதி பிருதிவியும்
மற்றைப்பாதி அப்பு தேயு வாயு ஆகாசங்களும், இவ்வாறே, மற்றைப்பாதி அதுவும்
பாதிமற்றைநான்குமாகக் கலக்கச் செய்தல். ‘யார்க்கும்’ எனச்
சிறப்புடையுயர்திணைமேல்வைத்துக் கூறினாராயினும், அஃறிணைப் பொருள்களையும்
உபலக்ஷணத்தாற் கொள்க. நம்பன் – (யாவராலும்) நம்பிச் சரணமடையப்படுபவன்
எனக் காரணப்பெயர்; நம்பு-பகுதி, அன் – விகுதி: இனி, நம் என்பது பகுதியாக
நமக்கு இன்னானென்னும் பொருள்படுவதோர் உயர்ச்சிச்சொல்லென்றுங்
கொள்ளலாம். உணர்த்தாநின்றேன், ஆநின்று – நிகழ்கால விடைநிலை. தாம்-அசை.

என்னை நீ புகலக் கேண்மோ! எங்கும் ஆய், யாவும் ஆகி,
மன்னிய பொருளும் யானே; மறைக்கு எலாம் முடிவும் யானே;
உன்னை யான் பிறிவது இல்லை; ஒரு முறை பிறந்து, மேல் நாள்-
நல் நிலா எறிக்கும் பூணாய்!-நரனும், நாரணனும் ஆனோம்.

நல் – அழகிய, நிலா- சந்திரகாந்தியோடொத்த காந்தியை. எறிக்கும் –
வீசுகின்ற, பூணாய் – ஆபரணங்களையுடைய அருச்சுனனே! என்னை-, புகல –
(இத்தன்மையனென்று யானே) சொல்ல, நீ-, கேண்மோ – கேட்பாயாக; எங்குஉம்
ஆய் – எல்லா விடங்களிலும் பொருந்தி, யாஉம் ஆகி – எல்லாப்பொருள்களுமாய்,
மன்னிய – அழியாதுநிலைபெற்ற, பொருள்உம்-பரம்பொருளும், யான்ஏ- நானே;
மறைக்கு எலாம் முடிவுஉம்-வேதங்களுக்கெல்லாம் முடிவான பொருளும், யானே-
உன்னை-, யான்-, பிறிவது இல்லை – (எப்பொழுதும்) விட்டுநீங்குவதில்லை;
மேல்நாள் – முற்காலத்தில், ஒருமுறை – ஒருதரம், பிறிந்து – நீங்கி, நரன்உம்
நாரணன்உம் ஆனோம் – நரநாராயணராய் அவதரித்தோம்; (எ – று,)

முன்னொருகாலத்தில் குருசிஷ்யகிரமத்தை உலகத்தில் அனைவர்க்கும்
விளக்கும்பொருட்டு நரனென்னும் சிஷ்யனும் நாராயணனென்னுங் குருவுமாகப்
பதரிகாச்சிரமத்தில் திருமால்தோன்றிச் சிஷ்யனுக்குக் குரு தத்துவப் பொருள்களை
உபதேசிப்பதாக வீற்றிருக்கின்றனர்; “நாராயணனாயுலகத்தறநூல், சிங்காமை
விரித்தவனெம்பெருமான்” என்பது பெரிய திருமொழி. அவர்கள் தாமே இங்கு
முறையே அருச்சுனனுங் கண்ணனுமாக அவதரித்தவர்; இங்கும் அருச்சுனனைச்
சிஷ்யனாக்கிக் கண்ணன் குருவாய் நின்று தத்துவம் விளக்கியருளுதல் காண்க;
இதுபற்றியே, அருச்சுனனுக்கு, நரனென்று ஒருபெயர். கேண்மோ, மோ –
முன்னிலையசை. நாரணன்- நாராயணன் என்பதன் விகாரம்; நார + அயந எனப்
பிரியும்; சிருஷ்டிப்பொருள்களுக் கெல்லாம் இருப்பிடமானவ னென்றும்,
பிரளயப்பெருங்கடலை இருப்பிடமாவுடையவ னென்றும், மற்றும் பலவாறும்
பொருளுரைப்பார். “செய்கின்ற கிறியெல்லாம் யானே யென்னும் செய்வானின்
றனகளும் யானே யென்னும், செய்துமுன் னிறந்தவும் யானே யென்னுஞ் செய்கைப்
பயனுண்பேனும் யானே யென்னும் செய்வார்களைச் செய்வேனும் யானே யென்னும்”
என்றும், “உற்றார்க ளெனக்கில்லை யாருமென்னும் உற்றார்க ளெனக்கிங்கெல்லாரு
மென்னும், உற்றார்களைச் செய்வேனும் யானே யென்னும் உற்றார்களை
யழிப்பேனும் யானேயென்னும்” என்றுந் திருவாய்மொழியிற் கூறியுள்ளவற்றின்
கருத்துக்களை இங்கே யுணர்க. கொல்பவனும் கொல்லப்படுபவனும்
கொலைத்தொழிலும் கொல்விப்பவனும் எல்லாம் நானே யாதலால், நீ உன்னைக்
கொல்பவனாகவும், சுற்றத்தவரைக் கொல்லப்படுபவராகவும் மாறுபாடாக நினைத்துப்
பந்து வதத்தைப் பற்றிச் சிறிதுஞ் சிந்திக்கவேண்டா என்று உபதேசித்துக்
கண்ணபிரான்  அருச்சுனனது மனத்தடுமாற்றத்தை யொழித்தருளுகிறார். ஏகாரங்கள்
பிரிநிலையோடு தேற்றம். மறைக்கெலாமுடிவு – வேதாந்த சித்தாந்தம். மறைமுடிவு
என்றது, வேதத்தின்பாகங்கள் இரண்டனுள் பகவானைப்பற்றிச் சொல்வதாய்ப்
பிரமகாண்டமெனப்படுகிற உபநிஷத்துக்களை. இரண்டாமடியிலுள்ள உம்மைகள்
இரண்டனுள், முன்னது – எதிரது தழுவியதும், பின்னது – இறந்ததுதழுவியதுமாம்.(6

பின் ஒரு பிறப்பின் யாமே இராம லக்குமப் பேர் பெற்றோம்;
இந் நெடும் பிறப்பில், நீயும் யானுமாய் ஈண்டு நின்றோம்;
நின்னிடை மயக்கும், இந்த நேயமும், ஒழிக!’ என்று,
தன் நிலை அவற்குக் காட்டி, தத்துவம் தெளிவித்தானே.

பின் ஒரு பிறப்பின் – பின்பு ஒரு அவதாரத்திலே. யாம்ஏ –
நாமிருவருமே, இராம லக்குமர் பேர் பெற்றோம் – ராமலஷ்மணரென்னும் பெயரை
யடைந்தோம்; இ நெடு பிறப்பில் – இந்தப் பெரிய அவதாரத்திலே, நீஉம் யான்உம்
ஆய் ஈண்டு நின்றோம் – அருச்சுனனாகிய நீயும் கிருஷ்ணனாகிய நானுமாய் இங்கு
நின்றோம்; (ஆதலால்), நின்னிடை – உன்னிடத்திலுள்ள, மயக்குஉம் –
திகைப்பையும்,இந்த நேயம்உம் – (உறவினரென்றும் நண்பினரென்றுங் கொண்ட)
இந்தஅபிமானத்தையும், ஓழிக – நீங்குவாயாக, என்று – என்று அருளிச்செய்து,
தன்நிலை அவற்கு காட்டி – தனது உண்மை நிலையான விசுவரூபத்தை
அவ்வருச்சுனனுக்குக் காண்பித்தலுஞ் செய்து, தத்துவம் தெளிவித்தான் –
உண்மையுணர்வை மனந்தெளியும்படி செய்தருளினான்;(எ-று,)

தான் உபதேசித்த உண்மைப் பொருளை அருச்சுனனுக்குக் கட் புலனாக்கி
அவனுடைய திகைப்பைத் தீரவொழித்தற்குக் கண்ணன் தன்னிலையை அவற்குக்
காட்டி யருளினான். ஒரு காலத்தில் தேவர்களெல்லோரும் இராவணன்முதலிய
இராக்கதர்களின் உபத்திரவம் பொறுக்க மாட்டாமல் ஸ்ரீமகாவிஷ்ணுவைச்
சரணமடைந்துவேண்ட, அவர் தசரதசக்கரவர்த்திதிருமகனாய்
ஸ்ரீராமனாக லட்சுமணபரத சத்துருக்கன ரென்னும் தம்பிமார்மூவருடனே
திருவவதரித்து அரக்கர்களனைவரையும் அழித்து நல்லோரைக் காத்தருளினார்.
இராமன் கண்ணனும், லஷ்மணன் அர்ச்சுனனு மாதலால், முதலடியில்
‘இராமலக்குமப்பேர்பெற்றோம்’ என்ற கிரமத்திற்குஏற்ப இரண்டாமடியில் ‘யானும்
நீயுமா யீண்டு நின்றோம்’ என முறைப்படிவைக்காதது – எதிர்நிரனிறைப்
பொருள்கோ
ளின்பாற்படும்; [நன்-பொது. 63]:  கீழ்க்கவியில் “நரனுநாரணணு
மானோம்” என்றதையும் இதனோடு சேர்க்க. லஷ்மணன் ஆதிசேஷனது
அவதாரமாதல் மாத்திரமேயன்றித் திருமாலினது அம்சமுமாதல்போல, அர்ச்சுனனும்
இந்திரனது அவதாரமாதல் மாத்திரமேயன்றித் திருமாலினது அமிசமுமாவ னென
அறிக. இராமலக்குமர் – வடசொற்றிரிபு. ராமனென்பதற்கு- தன்திறத்தில் யாவரும்
மனங்களித்திருக்கப்பெற்றவ னென்பது பொருள்; சகலசற் குணங்களும்
பொருந்தினவனென்பது கருத்து. லஷ்மணனென்பதற்கு – (உத்தமபுருஷ)
லக்ஷணங்கள் பலவற்றையும் உடையவனென்றும், (பகவத்கைங்கரிய)
லஷ்மியோடுகூடியவனென்றும் பொருளாம். இராமலக்குமர்+பேர்=இராமலக்குமப்
பேர்;”சில விகாரமா முயர்திணை.” மயக்கு – மயங்கு என்னும் முதனிலைதிரிந்த
தொழிற்பெயர். மயக்காவது – பொருளல்லவற்றைப் பொருளென்று உணரும்
விபரீதஞானம்.

தான் வணங்குநர், தன் கழல் வணங்குநர், தங்களைத்
தழீஇக் கொண்டு,
தேன் வணங்கு தார் மன்னவர் இருந்த பின், சென்று,
அவர் முகம் நோக்கி,
‘யான் வணங்கி, மா மாயனைத் தூதுவிட்டு, ‘எனது பார்
எனக்கு’ என்ன,
வான் வணங்கினும் வணங்கலா முடியினான், மறுத்து,
‘அமர் புரிக!’ என்றான்.–.-உபதேசத்தால் தெளிந்த அருச்சுனன் ஸ்ரீகிருஷ்ணனைப் போற்றிச்
செருச் செய்யச் செல்லுதல்.

ஆங்கு – அப்பொழுது, அவன் – அவ்வருச்சுனன், தெளிந்து –
மயக்கந்தெளிந்து, தேறி – (நல்லுணர்வு) தேர்ந்து, ‘அறம் பொருள் இன்பம் முற்றி –
தருமஅர்த்தகாமமென்னும்  மூன்றுபுருஷார்த்தங்களையும் முடிய ஒழித்து,
பாங்கினால் – (பிரபத்தியாகிய பரம) உபாயத்தால், நின்னை எய்தும் –
உன்திருவடியையடைந்து உய்தலாகிய, பயன் – நல்லபிரயோசனத்தை, எனக்கு
உரைத்தாய் – அடியேனுக்கு அருளிச்செய்தாய்,’ என்று – என்று (கண்ணனை
நோக்கி உபசாரவார்த்தை) கூறி, பூ கடி கமலம் நாறும் பொன் அடிபோற்றி –
சிறந்த பரிமளமுடைய செந்தாமரைமலர் போலத்தோன்றுகின்ற அழகிய (கண்ணனது)
திருவடிகளை வணங்கி, யான் செய் தீங்கு எலாம் பொறுத்தி என்று  –   ‘நான்
செய்த குற்றங்களையெல்லாம் பொறுத்தருள்வாயாக’ என்று (அப ராதக்ஷாமணமுங்)
கூறி, செரு செயும் ஆறு பூண்டான்-போரைச் செய்யும்படி மேற்கொண்டான்;(எ -று,)

“ஆயாவென் மைத்துனனே யாழித்தேர்ப் பாகாநான், பேயானுரைத்த
பெரும்பிழைகள் – மாயா, பொருபடைக்கை மாலே பொறுத்தருள்வாயென்று,
திருவடிக்கே வீழ்ந்தான் தெளிந்து” என்பது பாரதவெண்பா. ஆங்கு –
அவ்விடத்திலென்றுமாம்; என்றது, போர்க்களத்தில் தேர்த்தட்டை. கீதையில்
“ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ [எல்லாவுபாயங்களையும்
முற்றவிட்டு என்னையொருவனையே நீ அடைக்கலமாக அடைவாய்]” என்ற
பகவானது பிரதானமான வாக்கியத்தின் கருத்தை அனுசரித்து
‘அறம்பொருளின்பமுற்றிப் பாங்கினால் நின்னையெய்தும் பயனெனக்குரைத்தாய்’
என்பதற்குப் பொருள் கூறப்பட்டது;

“பரனைநினைந் திம்மூன்றும், விட்டதே பேரின்பவீடு” என ஒளவையார் கூறியதையும் அறிக. அறம்பொருளின்பம் –
இம்மூன்றும்திரிவர்க்க மெனப்படும்:  இவற்றுள் அறமாவது-மனு முதலிய நூல்களில்
விதித்தனசெய்தலும், விலக்கியனஒழிதலுமாம்; (இன்னவை செய்யத்தக்கவை யென்றும்
இன்னவை செய்யத்தகாதவை யென்றும் நூல்களால் வரை) அறுக்கப்பட்டமைபற்றி,
அறமென்று பெயர். பொருளாவது-தருமவழியிற்சேர்க்கப்பட்ட பொன்மணி நெல்
முதலவாகும். இன்பமாவது – ஒருகாலத்து ஒருபொருளால் ஐம்புலனும்
அனுபவிக்குஞ் சிறப்புடையதான சிற்றின்பம். அறம் – இம்மைமறுமைவீடென்னும்
மூன்றையும், பொருள் – இம்மை மறுமை யென்னும் இரண்டையும், இன்பம் –
இம்மையொன்றையும் தருவதாதல், ‘அறம்பொருளின்பம்’ என்ற முறைமைக்குக்
காரணம். பொன் – ஆபரணத்துக்குக் கருவியாகுபெயர் எனினுமாம். தீங்கெலாம்-
“பலபேசி யதிபாதக மெனக்கருதி யான்மலைவு றேனினி” என்றவை

————-

ஸ்ரீ மகாகவி பாரதியாரும்.
இரண்டே அடிகளில் தெள்ளத் தெளிவாக கீதையில் கண்ணன் போதித்ததை சுருக்கமாகக் கூறி விட்டார்:

பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான்;                                  

பலனை எண்ணாமல் உழைக்கச் சொன்னான்

மாம் அனுஸமர (என்னை நினை)

கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன! (கர்மம் புரிவதற்கே உனக்கு அதிகாரம் உள்ளது; அதில் வரும் பயனில் எண்ணம் வையாதே – ஒரு பொழுதும்!)

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading