ஸ்ரீ.வில்லிபாரதம் – மூன்றாம் பாகம் -31. மூன்றாம் போர்ச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

தம்தம் உறியில், அவர் வைத்த தயிர் பால்
வெண்ணெய் எட்டாமல்,
குந்தி, உரலின்மிசை ஏறி, இளங் கோவியர்முன்
கூத்தாடி,
நந்தன் மனையில் அசோதை இரு நயனம்
களிக்க விளையாடும்
மைந்தன் இரு தாள் ஒரு நாளும் மறவாதாரே
பிறவாதார்.கடவுள் வாழ்த்து

தம் தம் உறியில்-தங்கள் தங்கள் உறிகளின்மேல், அவர் வைத்த-
அந்தந்த ஆயர்மகளிர் வைத்திட்ட, தயிர் பால் வெண்ணெய்-தயிரும் பாலும்
வெண்ணெயும், எட்டாமல் – (குழந்தைப்பருவமுள்ள தனக்கு) எட்டாமையால்,
உரலின்மிசை குந்தி ஏறி-உரலின்மேலிருந்து ஏறி, இள கோவியர் முன் கூத்து
ஆடி-இளமைப்பருவமுடைய கோப ஸ்திரீகளின் எதிரில் (பலவகை) நடனஞ்செய்து,
நந்தன்மனையில்-நந்தகோபரதுவீட்டிலே, அசோதை இரு நயனம் களிக்க –
யசோதைப்பிராட்டியின் இரண்டு கண்களும் (கண்டு) களிக்கும்படி, விளையாடும்-
விளையாடின, மைந்தன்- இளம்பிராய முடையனான கண்ணனது, இரு தாள்-
உபயதிருவடிகளை, ஒரு நாள்உம் மறவாதார்ஏ-ஒருபொழுதும் மறவாதவர்களே,
பிறவாதார்-பிறப்பில்லாதவராவர்; (எ – று.)

ஒருநாளும் மறவாதார்-இடைவிடாதுதியானிப்பவரென்றபடி. “பிறவிப்
பெருங்கடனீந்துவர் நீந்தா, ரிறைவ னடிசேரா தார்” என்றபடி எம்பெருமானை
இடைவிடாதுதியானிப்பவர்க்குப் பிறவியறுதலும் அங்ஙனம் தியானியாதவர்க்குப்
பிறவியறாமையுமாகிய இரண்டும் நியமமாதலால், ‘மறவாதாரே பிறவாதார்’ எனக்
கூறினார்.பிறவாதா ரென்றதனால், பிறப்பற்றுக் கருமசரீரமொழிந்து திவ்வியசரீரம்
பெற்றுமீளாதமுத்தியுலகஞ் சேர்ந்து நிரதிசயவின்ப மடைந்து அங்கு என்றும்
ஒருபடிப்படவாழ்வரென்பதாம். ‘செய்யுட் கேற்புழி” என்றதனால், அவர் என்னுஞ்
சுட்டுப்பெயர்கோவியரென்னும் இயற்பெயரின்முன் வந்தது. வெண்ணெய்=
வெள்நெய் -உருக்காதநெய். பசுக்களைக் காப்பவனென்ற காரணத்தால்,
இடையனுக்கு -வடமொழியில் ‘கோபன்’ என்று பெயர்; அதன்பெண்பாலான கோபீ
யென்பதுவிகாரப்பட்டு, கோவியென்று ஆகி, பின்பு பலர்பால்விகுதியேற்றுக்
கோவிய ரென்றுநின்றது. நந்தன் என்ற வடசொல்லுக்கு – ஆனந்த
முடையவனென்றும், யஸோதாஎன்ற வடசொல்லுக்கு – (தனது
நற்குணநற்செய்கைகளால் தான் பிறந்த குலத்துக்கும்புகுந்தகுலத்துக்கும்)  புகழைத்
தருபவ ளென்றும் பொருள். மைந்தன் – அழகனும்,மிடுக்கனுமாம்.’அசோதையிரு
நயனங்களிக்க விளையாடும் மைந்தன்’ என்ற விடத்து,’முழுதும் வெண்ணெய்
அளைந்து தொட்டுண்ணும்’ என்ற பெருமாள்திருமொழிப்பாடலும் ‘ஏரார்ந்தகண்ணி
யசோதை’ என்ற திருப்பாவைத் தொடர்க்குவியாக்யாநமும் நினைக்கத்தக்கது.
ஒருநாளும் என்ற உம்மை – இழிவுசிறப்பு. ஏகாரம்- பிரிநிலை.

     வடமதுரைக்குச் சமீபத்திலுள்ள கோகுலபிருந்தாவனமெனப்படுகிற
திருவாய்ப்பாடியிலுள்ள இடையர்களுக்கெல்லாந் தலைவர் நந்தகோபரும், அவரது
மனைவி யசோதையு மாவர்; இவர்கள், கண்ணனை வளர்த்த தந்தைதாயர்.
வசுதேவரும் தேவகியும் கம்சனால் சிறையிலிருத்தப்பட்டுத் தளை பூண்டிருக்கையில்
திருமால் தேவகியினிடம் எட்டாவது கருப்பத்திற் கண்ணனாய் அவதரிக்க,
அக்குழந்தையைக் கம்சன் வழக்கப்படி கொன்றுவிடக் கூடுமென்கிற அச்சத்தால்
தாய்தந்தையர் அத்தெய்வக்குழவியின் அனுமதிபெற்று அந்தச்சிசுவை அதுபிறந்த
நடுராத்திரியிலேயே நந்தகோபரது திருமாளிகையிலே இரகசியமாகக்கொண்டு
சேர்த்துவிட்டு அங்கு அப்பொழுது யசோதைக்கு மாயையின் அம்சமாய்ப்
பிறந்திருந்ததொருபெண்குழந்தையை யெடுத்துக்கொண்டுவந்து விட, அதுமுதல்
கம்சனைக்கொல்லுகிறவரையில் இளம்பருவத்திலெல்லாம் கண்ணபிரான்
அவ்வாய்ப்பாடியிலேயே பலவகைத் திருவிளையாடல்கள் புரிந்து வளர்ந்தருளின்
ரென்பது வரலாறு.

     இது முதற் பதின்மூன்று கவிகள் – மூன்று ஆறாஞ் சீர்கள் காய்ச்சீர்களும்,
மற்றைநான்கும் மாச்சீர்களு மாகிய அறுசீராசிரிய விருத்தங்கள். 

ஏலா அமரில் மூன்றாம் நாள், இரண்டு படையும்
திரண்டு ஏற,
கால் ஆர் திண் தேர் வீடுமனும் வகுத்தான், கடுங்
காருட யூகம்;
மேலாம் வென்றிப் பாண்டவர் தம் வெஞ் சேனையைக்
கொண்டு, எஞ்சாமல்
தோலா அர்த்த சந்த்ரப் பேர் வியூகம் வகுத்தான்,
துளவோனே2.-இருதிறத்தவரும் படைகளை வியூகமாக வகுத்தல்.

அமரின் மூன்றாம் நாள் – யுத்தத்தின் மூன்றாவது தினத்தில்
இரண்டு படைஉம் – இருதிறத்துச்சேனைகளும், திரண்டு – (தம்மிற்) கூடி, ஏலா –
எதிர்க்க, ஏற – (போர்க்களத்தே விரைந்தே) செல்ல,- கால் ஆர் திண் தேர்
வீடுமன்உம் – சக்கரங்களமைந்த வலிய தேரையுடைய பீ்ஷ்மனும், கடு காருடயூகம்
வகுத்தான் – பயங்கரமான கருடவியூகமாக(த் தன் சேனையை) அணிவகுத்தான்;
துளவோன் – திருத்துழாய்மாலையை யுடைய கண்ணன்,- மேல் ஆம் வென்றி
பாண்டவர்தம் வெம் சேனையை கொண்டு – மேன்மையான வெற்றியையுடைய
பாண்டவர்களது உக்கிரமான சேனையைக்கொண்டு, எஞ்சாமல் – (வீடுமனுக்குக்)
குறையாமல், தோலா அர்த்த சந்த்ரம் பேர் வியூகம் வகுத்தான் –
தோல்வியடையாதஅர்த்தசந்திரமென்னும் பெயருடைய வியூகத்தை
அமைத்தருளினான்; (எ-று.)

     கருடவடிவத்தின் வாயிடத்தில் வீடுமனும், கண்களில்துரோணனும்
கிருதவர்மாவும், சிரசில் அசுவத்தாமனுங் கிருபனும், கழுத்தில் பூரிசிரவன் சலன்
சல்லியன் பகதத்தன் ஜயத்திரதன் என்பவரும், புறத்தில் தம்பிமாருடன்
துரியோதனனும், வாலில் விந்த அநுவிந்தரும், வலச்சிறகில் மாகதருங்கலிங்கரும்,
இடச்சிறகில் பிருகத்பலனும் காரூசரும் மற்றும் பலவீரர் சூழ இருந்தன ரென்றும்;
அர்த்தசந்திரவடிவத்தினது தென்கோட்டில் பீமசேனனும், வடகோட்டில்
அருச்சுனனோடிகூடிய கண்ணனும், மத்தியத்தில் விராடன் துருபதன் திருஷ்டகேது
திருஷ்டத்யும்நன் சிகண்டி சாத்தியகி உபபாண்டவர் அபிமந்யு கடோத்கசன்
என்னும்இவரோடு யுதிட்டிரனும் மற்றும்பலவீரர் சூழ இருந்தனரென்றும்
வியாசபாரதத்திற்கூறியுள்ளது. கருடனது வடிவம்போலப் படைவகுக்கப்படுவது
காருடவியூகமும்,பாதிச் சந்திரனது வடிவம் போலப்படைவகுக்கப்படுவது
அர்த்தசந்திரவியூகமுமாம்.கருட சம்பந்தமானது – காருடம்; தத்திதாந்தம். யூகம் –
வடசொற்றிரிபு.திருவள்ளுவர் “கால்வல் நெடுந்தேர்” என்றாற்போல,
‘காலார்திண்டேர்’ என்றார்;இனி, இத்தொடருக்கு – (வேகத்திற்) காற்றையொத்த
வலியதேரென்றும் உரைக்கலாம்.படைவகுப்பது சேனாபதியின் தொழிலாக
இருக்கவும் ஸ்ரீகிருஷ்ணனை அர்த்தசந்திரவியூகம்வகுத்தானென்றது, அவனது
திருவுள்ளத்தையறிந்தே சேனாபதிவியூகம்வகுத்தமையைக் குறிப்பிக்கும்.

போரே தொடங்கி இரு படையும் புகுந்த பொழுதில்,
உகம் தொலைத்த
காரே தொடங்கி, கார்கோள் வெங் கடுங் கால் கலிகொண்டு,
ஆர்ப்பனபோல்,
வாரே தொடங்கும் பணைக் குலமும், மணிக் காகளமும்,
உடன் முழங்க,
பாரே தொடங்கி, எவ் உலகும் அடைவே செவிடு
பட்டனவே.3.-இருதிறத்துச்சேனைகளும் பொரத்தொடங்குகையில்,
பலபோர்ப்பறைகளும் முழங்குதல்.

இரு படைஉம் – இருத்திறத்துச்சேனையும், போர் தொடங்கி –
யுத்தத்தைச்செய்யத்தொடங்கி, புகுந்த பொழுதில்-(போர்க்களத்தில்)
அடைந்தபொழுது,-உகம்தொலைத்த – கல் பாந்தகாலத்தில் (உலகத்தை)
அழிக்கலுற்ற, கார் தொடங்கி -மேகம்முதலாக, கார்கோள் – கடல்களும், வெம்
கடுகால்-கொடிய சண்டமாருதமும்,கலி கொண்டு ஆர்ப்பன போல்- முழக்கத்தைக்
கொண்டு ஆரவாரிப்பனபோல, வார்தொடங்கும் பணை குலம்உம்-
தோற்கயிற்றாற்கட்டப்பட்ட பறைகளின் கூட்டமும்,மணி காகளம் உம் – அழகிய
எக்காளமென்னும் வாத்யவிசேஷமும், உடன் முழங்க- ஒருங்குஒலிக்க, (அதனால்),
பார் தொடங்கி எ உலகு உம்-பூமிமுதலாகஎல்லாவுலகங்களிலுமுள்ள பிராணிகளும்,
அடைவுஏ செவிடு பட்டன- முறையேசெவிடாய்விட்டன; (எ – று.)- ஏகாரங்கள்
ஆறும் – அசைநிலை.

     உகந்தொலைத்த காரே தொடங்கிக் கார்கோள்வெங்கடுங்கால்
கலிகொண்டார்ப்பனபோல் என்பதற்கு – சர்வசங்காரகாலத்தில் அனைத்தையும்
அழித்தற்பொருட்டு இடைவிடாப்பெருமழை பொழியும் மேகம் முதலாக
ஒருங்குபொங்கியெழும் கடல் இடையாக மிகக்கொடிதாகவீசும் பெருங்காற்று
இறுதியாக உள்ள மூன்றுபொருள்களும் முழங்கிப் பேராரவாரத்தை விளைப்பன
போலவென்று கருத்து. அளவிறந்த ஓசையைக் கேட்டால் காது செவிடாம்:
அன்றியும், உலகத்தில் எங்கும் ஒருவர்பேசும்பேச்சு மற்றவர்க்கு இப்போரவாரத்தால்
கேட்கவில்லையென்ற கருத்துங் கொள்ளலாம். பல பிராணிகள் அழியுங் கால
மாதலின், கல்பாந்த காலத்தை உவமைகூறினது ஏற்கும். கடலினின்று மேகத்தால்
(நீர்)கொள்ளப்படுவதால், கடலுக்குக் கார்கோள் என்று பெயர்; ‘கார்முகக்கப்
படுதலின்,கடல் கார்கோள் என்று பெயர்பெற்றது; ஆகுபெயர்’ என்பர்
நச்சினார்க்கினியர்.தொடக்குதல் – கட்டுதல்: இது – மூன்றாமடியில் எதுகை
நயம்நோக்கித் தொடங்கும்என மெலிந்தது. காகளம் – சிறுசின்னம்; இது –
இடைக்குறைவிகாரமாய்க்காளமெனவும் வழங்கும். உகம் – யுகமென்னும் வட
மொழித் திரிபு; இது -இலக்கணையாய், யுகமுடிவையுணர்த்தி, இங்கே,
கால்பாந்தகாலத்துக்கு வந்தது. 

சொல் ஆர் கேள்விக் கங்கை மகன், துரோணன்,
முதலாம் அதிரதரும்,
எல் ஆர் இரத, கய, துரங்கம், ஏல் ஆளுடனே,
காலாளும்,
வில்லால் முன்நாள் தமைத் துரந்த வீரன்தனையும்
சிறுவனையும்,
மல்லால் வஞ்ச மல் அடர்த்த மாயன்தனையும்,
வளைத்தாரே.4.-வீடுமன் துரோணன்முதலியோர்,
ஸ்ரீக்ருஷ்ணனுடனே அருச்சுன வபிமன்யுஇவர்களை வளைத்தல்.

சொல் ஆர் – சொற்கள்நிறைந்த, கேள்வி – கேள்விகளையுடைய,
கங்கை மகன் – வீடுமனும், துரோணன் துரோணனும், முதல் ஆம் – முதலாகிய,
அதிரதர்உம் – அதிரதர்களும், எல் ஆர் -ஒளி நிறைந்த. இரத கய துரங்கம் –
தேர்யானை குதிரைகளில், ஏல் – பொருந்தின,ஆளுடனே – வீரர்களொடு,
காலாள்உம் – பதாதிவீரர்களும்,- வில்லால் முன் நாள்தமைதுரந்த வீரன்தனைஉம் –
வில்திறமையால் முந்தினநாளில் [இரண்டாநாட்போரில்]தம்மைத் துரத்திய வீரனான
அருச்சுனனையும்,  சிறுவனைஉம் – அருச்சுனன்மகனான அபிமன்னுவையும்,
(அருச்சுனனுக்குப் பாகனாகவுள்ள), மல்லால் வஞ்சம்மல் அடர்த்த
மாயன்தனைஉம் – இளம்பருவத்திலே மற்போரால்வஞ்சனையையுடைய மல்லர்களை
அழித்த ஆச்சரியகசக்தியையுடையகண்ணபிரானையும், வளைத்தார் –
சூழ்ந்துகொண்டார்கள்; (எ – று.)

துரோணகும்பத்தில் [பதக்களவுகொண்ட பாத்திரத்தினின்று] பிறந்தமைபற்றி,
துரோணன் என்று பெயர்; துரோணம்-பதக்கு: இனி, துரோணமென்று வில்லுக்குப்
பெயருண்மையால், வில்வன்மைபற்றிவந்த பெய ரென்னவுமாம். கஜம் – கயமென
மொழியிடையில் ஜகரம் யகரமாயிற்று. ஏலாள் – வினைத்தொகை; ஏலுதல் –
பொருந்துதல். மேலாள் எனப் பதம்பிரித்து உரைத்தல் மோனைத்தொடைக்குச்
சிறவாதாம். மல்-மல்லர்க்குத் தொழிலாகுபெயர். கம்ஸசபையிற் கிருஷ்ணபலராமர்
செல்லுகையில், அவனால் வஞ்சனையாக ஏவப்பட்ட சாணூரன் முஷ்டிகன் முதலிய
பெருமல்லர்கள் சிலர் வந்துஎதிர்த்து உக்கிரமாகப் பெரும்போர்செய்ய,
அவர்களையெல்லாம் இவ்யாதவவீரர் இருவரும் மற்போரினாலேயே கொன்று
வென்றிட்டன ரென்பது கதை.   பி – ம்:  வீரன்றனையுஞ் சிறுபதத்தே

சூரர்க்கு எல்லாம் முதல் எண்ணும் துரியோதனனும்
தம்பியரும்,
ஆரக் கவிகைக் காந்தாரன் முதலா உள்ள
அவனிபரும்,
சேரத் திரண்டு, கரிகள் ஒரு சிங்கம் வளைத்தது
என, சிங்க
வீரத் துவசன் நின்றுழிப் போய், வளைத்தார்,
சமரம் விளைத்தாரே.5.-துரியோதனன்முதலியோர் வீமனை வளைத்தல்.

சூரர்க்கு எல்லாம் முதல் எண்ணும் துரியோதனன் உம் -எல்லா
வீரர்களுக்கும் முதலிலெண்ணப்படுகிற துரியோதனனும், தம்பியர் உம்- (அவனது)
தம்பிமார்களும், ஆரம் கவிகை-முத்துக்களாலாகிய குடையையுடைய, காந்தாரன்
முதல் ஆ உள்ள அவனிபர்உம் – காந்தாரதேசத்தரசனான சகுனி முதலாகவுள்ள
அரசர்களும், சேர திரண்டு – ஒருசேரக்கூடி, கரிகள் ஒரு சிங்கம் வளைத்தது
என -பலயானைகள் ஒரு சிங்கத்தைச் சூழ்ந்ததுபோல, சிங்கம் வீரம் துவசன்
நின்ற உழிபோய் வளைத்தார் – சிங்கத்தின் வடிவத்தையெழுதின வீரத்தன்மைக்கு
அறிகுறியானகொடியையுடைய வீமசேனன் நின்றவிடத்திற் சென்று அவனைச்
சூழ்ந்துகொண்டு,சமரம் விளைத்தார் – போரைச் செய்தார்கள்; (எ – று.)

     வீமனது எளிதில் வெல்லு மாற்றலுக்கும், அவன்முன் பகைவரது
வீரமின்மைக்கும்  ஏற்ற உவமை கூறினார். சூரர்க்கெல்லாம் முதலெண்ணும்-
சூரர்களெல்லாருள்ளுஞ்சிறந்த வென்றபடி. தம்பியர் – துச்சாதனன் முதலியோர்.
ஆரம் – ஹாரம்:  பி-ம்:-காந்தாரர்.     

வரத்தால், மறையால், தாம் பெற்ற வரி சாபங்கள்
பிடித்த தனிக்
கரத்தால், மறைந்தது, அவரவர்தம் கடைக்கண்;
படைக்கண் விரைந்து விடும்
சரத்தால் மறைந்தது, அகல் வானம்; தரணிதலம்
அச் சரம் துணித்த
சிரத்தால் மறைந்தது; உகு குருதிச் சேற்றால் மறைந்த,
திசை நான்கும்.6.-இருதிறத்துப்பெருவீரருஞ் செய்த கடும்போர் வருணனை.

வரத்தால் – (தேவர்கள் முதலியோர் தந்தருளிய) வரத்தினாலும்,
மறையால் – மந்திரத்தாலும், தாம் பெற்ற – தாங்கள் பெற்றுக்கொண்டுள்ள, வரி
சாபங்கள் – கட்டமைந்த விற்களை, பிடித்த – உறுதியாக ஏந்தியுள்ள, தனி
கரத்தால்- ஒப்பற்ற கையினால், அவர் அவர்தம் கடைக்கண் – அந்தந்தப்
போர்வீரரதுகண்ணின்கடை, மறைந்தது-;  படைக்கண் – (வில்லாகிய அந்த)
ஆயுதத்தில்,விரைந்துவிடும் – துரிதமாகப் பிரயோகிக்கிற, சரத்தால் –
அம்புகளினால், அகல்வானம் – பரந்த ஆகாயம், மறைந்தது-;அ சரம் – அந்த
அம்புகள், துணித்த -அறுத்துத்தள்ளிய, சிரத்தால் – (பகைவர்கள்) தலைகளால்,
தரணி தலம் -பூமியினிடம், மறைந்தது-; உகு – (அத்தலைகளினின்று) பெருகிய,
குருதி சேற்றால் -இரத்தக்குழம்பினால், திசை நான்கு உம் – நாற்றிசைகளும்,
மறைந்த – மறைந்தன;(எ – று.)

     அப்பொழுது போரில் வீரர்பலர் தாம் வரமாக அஸ்திரப்பிரயோகத்துக்கு
உரியமந்திரத்தோடு பெற்றுள்ள விற்களைத் தந்தங்கையில் ஏந்தித்தம்தம்
கண்ணுக்குநேராகமுன்னேபிடித்து அவற்றில் அளவிறந்த அம்புகளைத்தொடுத்து
அவற்றால் எதிரிகள்தலைகளைவீழ்த்தி எங்கும் இரத்தமயமாக்கின ரென்பதாம்.
மறையால் என்பதற்கு -தக்கமந்திரத்தை ஜபித்த பலத்தால் என்றும்,
மந்திரோபதேசத்தோடு என்றுங் கருத்துக்கொள்ளலாம். ஒவ்வொருவர்க்கும்
அநேகஞ் சிறந்த விற்கள் உண்மை தோன்ற,’சாபங்கள்’ எனப் பன்மையாற்
கூறினார். கடைக்கண் – கண்கடை:முன்பின்னாகத்தொக்க ஆறாம்வேற்றுமைத்
தொகை: இலக்கணப்போலி.படையென்னும்பொதுப் பெயர் – இங்கே சிறப்பாய்
வில்லையுணர்த்தி, சுட்டுப்பெயர்மாத்திரமாய் நின்றது. மறைந்த-முற்று. பி-ம்:-
திரைநான்கும்.        

துவசம் பிளந்து, தேர் ஊரும் துரகம் பிளந்து,
சுடர் மணிப் பொன்
கவசம் பிளந்து, மார்பகமும் பிளந்து, ஊடு
உருவ, கடோற்கசன்தான்
நவ சந்திர மா முனை வாளி தொடுத்தான்;
தொடுத்த நாழிகையில்,
அவசம் பிறந்து, தம்பியர்முன் விழுந்தான்
ஒருவர்க்கு அழியாதோன்.7.-கடோற்கசனம்புகளால் துரியோதனன் பிரஜ்ஞையற்று விழுதல்.

(அப்படிப்பட்ட கடும்போரில் துரியோதனனது), துவசம் –
கொடியை,பிளந்து-, தேர் ஊரும் துரகம் – இரதத்தைச் செலுத்துங் குதிரைகளை,
பிளந்து-, சுடர்மணி பொன் கவசம் – விளங்குகிற இரத்தினங்களைப் பதித்ததும்
பொன்னாலாகியதுமான கவசத்தை, பிளந்து -, மார்பு அகம்உம் –
மார்பினிடத்தையும்,பிளந்து-, ஊடு உருவ – உள்ளே நுழைந்துசெல்லும்படி,
கடோற்கசன்-, நவ சந்திரன்மா முனை வாளி – புதுமையான (பாதிச்) சந்திரன்
வடிவமான பெரிய [சிறந்த]கூர்நுனியையுடைய அம்புகளை, தொடுத்தான்-;
தொடுத்த நாழிகையின் -பிரயோகித்த மாத்திரத்தில், ஒருவர்க்கு அழியாதோன் –
எவர்க்குந்தோலாதவனானதுரியோதனன், அவசம் பிறந்து – (தன்வசந்தப்பிப்)
பரவசமாய் [மூர்ச்சித்து என்றபடி],தம்பியர் முன் – தம்பிமார்களெதிரில்,
விழுந்தான்-; (எ – று.)

     தம்பிமார் பலர் அருகிலிருந்தும் அவன் இப்படி பங்கப்படலாயிற்றென்ற
இழிவுதோன்ற, ‘தம்பியர்முன் விழுந்தான்’ என்றார். சந்திரவாளி- அர்த்த
சந்திரபாணம்;பிறைமுகவம்பு எனவும்படும். நவ – ஒன்பது, வாளி எனினும்
அமையும். நாழிகையென்னுஞ் சிறப்புப்பெயர், இங்கே பொதுவாய்க்
காலமாத்திரத்தை யுணர்த்திற்று.ந+வசம்=அவசம். அவசம் பிறந்து –
தன்வசமில்லாமை யுண்டாய்; மெய்ம்மறந்து:வசம்-சுவாதீனம். கடோற்கசன்
என்னும் வடமொழிக்கு – குடம்போலும் பெரியமயிர்முடியுடையவ னென்று
காரணப்பொரு ளுரைப்பர்; கட உத்கசம் அன்எனப்பிரியும்:  கடம் – குடம்,
உத் – அதிகம், கசம் – மயிர்முடி.  

நாகம் துவசம் என உயர்த்தோன் நடுங்காமுன்னம்,
நண்ணலரை
மாகம்தனில் சென்று அமர் கடந்து, வரும் மைந்து
உடையோன் திருமைந்தன்,
வேகம் பட நின்று, ஒரு சமர வேலால், மீண்டும்
அவ் வேந்தன்
பாகன்தனது மருமத்தில் பாய்ந்தான், அவனும்
மாய்ந்தானே.8.-அப்போது அபிமன்யு துரியோதனனுடைய பாகனை மாய்த்தல்.

நாகம் துவசம் என உயர்த்தோன் – பாம்பைக் கொடியாக
உயரத்தில் தூக்கியுள்ள துரியோதனன், நடுங்கா முன்னம் – (இவ்வாறு
கடோற்கசனம்பினால்) சோர்தற்கு முன்னே, நண்ணலரை மாகந்தனில் சென்று
அமர்கடந்து வரு மைந்து உடையோன் திரு மைந்தன் – (தேவர்களுக்குப்)
பகைவர்களான நிவாதகவச காலகேயர்களைப் பெரிய ஆகாய மார்க்கத்திற்
போய்ப்போரில்வென்றுவந்த வலிமையையுடைய அருச்சுனனது சிறந்த குமாரனான
அபிமந்யு. வேகம் பட நின்று – விரைவாக (எதிரில் வந்து) நின்று, ஒரு சமரம்
வேலால் – போருக்குரிய ஒரு வேலாயுதத்தால், மீண்டும்-, அ வேந்தன் பாகன்
தனது மருமத்தில் பாய்ந்தான்- அத்துரியோதனராசனுடைய தேர்ப்பாகனது மார்பில்
எறிந்தான்; (எறியவே), அவன்உம் மாய்ந்தான் – அந்தச்சாரதியும் இறந்தான்; (எ-று.)

     துரியோதனனைத் தேற்றுதற்குப் பாகனது துணையும் இல்லை யானதை இதில்
தெரிவித்தார். நண்ணலரை மாகந்தனிற் சென்று அமர்கடந்து வரு மைந்துடையோன்
திருமைந்தன் என்பதற்கு – (இந்திரனாலேவப்பட்டுப்) பகைவர்களாய் வந்து
துரியோதனாதியர்களைக் கட்டித் தூக்கிக்கொண்டு போன சித்திரசேனன்
முதலியவர்களைப் பெரிய வானத்திற் பாய்ந்து போரில் வென்று வந்த
வலிமையையுடையனான வீமசேனனது  சிறந்தகுமாரனாகிய கடோத்கச னென்று
உரைப்பினும் அமையும். மீண்டும்-துரியோதனனைக் கடோற்கசன்
வீழ்த்தினதல்லாமல்என்றபடி. நண்ணலர் – பொருந்தவர்: பகைவர். மாகம்=மஹா
கம்:
 வடசொல்.வேகம்படப் பாய்ந்தான் என இயைப்பினுமாம்.

விழுந்தான், வேலால் தேர்ப் பாகன்; வெஞ்
சாயகத்தால், விறல் வேந்தர்
தொழும் தாள் அரசன்தானும் உயிர் சோர்ந்தான்’
என்னும் தொனி கேட்டு,
செழுந் தார் வாகை விசயனையும் திருமாலையும்
விட்டு, ஒரு முனையாய்
எழுந்தான்-மந்தாகினி மைந்தன், இளைததோர் தமக்கு
ஓர் எயில் போல்வான்.9.-துரியோதனன் சோர்ந்துவீழ்ந்தமைகேட்டு
வீடுமன் அருச்சுனனைவிட்டு அங்கு எழுதல்.

தேர் பாகன் – (துரியோதனனது) சாரதி, வேலால் – (பகைவன்
எறிந்த)வேலாயுதத்தால் விழுந்தான் – இறந்துவிழுந்திட்டான்;  விறல் வேந்தர்
தொழும் தாள்அரசன் தான்உம் – வலிமையையுடைய அரசர்கள் பலர் வணங்கும்
பாதத்தையுடையதுரியோதனராசனும், வெம் சாயகத்தால் – கொடியபகைவனம்பால்,
உயிர்சோர்ந்தான்-மூர்ச்சித்தான்,’ என்னும்-என்று (சேனைவீரர்) கூவுகிற, தொனி-சத்தத்தை,கேட்டு-, இளைத்தோர்தமக்கு ஓர் எயில் போல்வான் – (போரில்)
இளைத்தவர்க்குஒருமதில்போலப் பாதுகாவலாகவுள்ளவனாகிய, மந்தாகினி
மைந்தன்-கங்காபுத்திரனான வீடுமன், செழு தார் வாகை விசயனைஉம்
திருமாலைஉம் விட்டு -(தன்னா லெதிர்க்கப்பட்டுநின்ற) அழகிய
வாகைப்பூமாலையைச்சூடியஅருச்சுனனையும் கண்ணனையும் விட்டுநீங்கி, ஒரு
முனை ஆய் எழுந்தான் -ஒரேவேகமாய்ப்புறப்பட்டு (த் துரியோதனனிடம்)
வந்தான்; (எ – று.)

     செழுந்தார்வாகை யென்றது, முந்தினநாளில் வீடுமனாதியோரைவென்ற சயத்தை
விளக்குதற்கு. இளைத்தோர்தமக்கோ ரெயில்போல்வான்-இது இங்கே ஸாபிப்பிராய
விசேஷணம்: கருத்துடையடைமொழி. ஸாயகம், த்வநி – வடசொற்கள். திருமால் –
திருமகளிடத்து மால்கொண்டவனென்க; மால்- ஆசைப்பெருக்கம்:
சிறந்தமாயவனுமாம். மந்தாகிநீ – ஆகாச கங்கைக்குப் பெயர்.

வண்டு ஆர் அலங்கல் வலம்புரியோன் மார்பம்
துளைத்த வாளி வழி
கண்டான்; எடுத்து, தாழ்ந்த திருக் கையால் அணைத்து,
கால் தேரில்
கொண்டான்; ஆவி தரு மருந்து கொடுத்தான்; அவனும்
கொடுத்த மருந்து
உண்டான்; உண்ட கணத்தினில் மீண்டு உணர்ந்தான்,
உலகு ஏழ் உடையானே.10.-வீடுமன் துரியோதனன் மூர்ச்சையைத் தெளிவித்தல்.

(வந்த வீடுமன்)-, வண்டு ஆர் அலங்கல் வலம்புரியோன் மார்பம்
துளைத்த வாளி வழி கண்டான் – வண்டுகள் ஒலிக்கப்பெற்ற
நஞ்சாவட்டைப்பூமாலையையுடைய துரியோதனனது மார்பை ஊடுருவின
அம்புசென்ற வழியைப் பார்த்தான்; தாழ்ந்த திரு கையால் எடுத்து அணைத்து –
நீண்டுதொங்குகிற அழகிய (தன்)கைகளால் (அத்துரியோதனனை) எடுத்துத் தழுவி,
கால் தேரில்கொண்டான்-சக்கரவலிமையையுடைய (தனது) தேரின்மீது
வைத்துக்கொண்டு, ஆவி தரும் மருந்து கொடுத்தான்-உயிரைத் தரவல்ல திவ்விய
ஒளடதத்தை (அவனுக்குக்) கொடுத்தான்; உலகு ஏழ் உடையான் அவன்உம் – ஏழு
தீவுகளாகிய பூமிமுழுவதையும் (தனதாக) வுடையனான அத்துரியோதனனும்,
கொடுத்த மருந்து உண்டான்-(வீடுமன்) தந்த மருந்தையுட்கொண்டான்; உண்ட
கணத்தினில்-உட்கொண்ட அந்த க்ஷணத்தில் தானே, மீண்டு உணர்ந்தான்-
மறுபடிஉணர்ச்சிபெற்றான்; (எ – று.)- மூர்ச்சை தெளிந்து முன்போலாயின
னென்றபடி.

மன்னன்தனை அச் சந்தனுவின் மைந்தன் பெரும்
பேர் அணி நிறுவி,
‘பொன் அம் குன்றே, இவன் சிலையும்; இவனே
காணும் புராரி’ என
மின்னும் கழற் கால் வீமனுடன் வெம் போர்
விளைத்து, விடலையர் ஆய்
முன் நின்றவரும் பின்னிட, தன் முனை வாளியினால்
வினை செய்தான்.1.-வீடுமன் துரியோதனனை அணியில்நிறுவியபின்
வீமன் முதலியோர் பின்னிடக் கடும்போர்புரிதல்.

(இவ்வாறு தேற்றி), மன்னன்தனை – துரியோதனராசனை, அ
சந்தனுவின் மைந்தன் – சந்தனுகுமாரனான அவ்வீடுமன, பெரு பேர் அணி
நிறுவி-மிகப்பெரிய படைவகுப்பிலே நிறுத்தி, (பின்பு), ‘இவன் சிலைஉம் பொன்
அம்குன்றுஏ இவன் புர அரிஏ காணும்’ என-‘இவனது வில்லும் பொன்மயமான
அழகியமகாமேருமலையே: இவனும் திரிபுரத்தையழித்திட்ட பரமசிவனே:
பாருங்கள்’ என்று(தன்வில்லையுந் தன்னையும்பற்றி அனைவருங்) கூறும்படி,
மின்னும் கழல் கால்வீமனுடன் – விளங்குகின்ற வீரக்கழலையணிந்த
பாதத்தையுடைய வீமசேனனும்,வெம் போர் விளைத்து விடலையர் ஆய்
முன்நின்றவர்உம் – (துரியோதனனோடு)கொடியபோரைச் செய்து இளவீரர்களாய்
முன்னேநின்ற கடோற்கசனும்அபிமந்யுவம், பின் இட – புறங்கொடுக்கும்படி, தன்
முனைவாளியினால் வினைசெய்தான்-தனது கூரிய அம்புகளால் போர்த்
தொழிலைப் புரிந்தான்;  (எ – று.)

     நிறுவி, நிறுவு-பகுதி. பெரும்பேர்-சிறப்புணர்த்தும் அடுக்கு; இனி, மிக்க
புகழையுடைய வென்றும் உரைக்கலாம். காணும் என்பதை முன்னிலையசையென்றும்,
தேற்றமென்றும் கொள்ளினுமாம்.

மருமங்களினும், புயங்களினும், வதனங்களினும்,
கண்களினும்,
செருமும்படி வெங் கணை மாரி சிந்திச் சிந்தி,
சிரம் துணித்து,
தருமன் சேனைப் பரவை எலாம் தானே ஆகி,
தலைநாளில்
பொரு மந்தர மால் வரை போல, திரிந்தான், வெம்
போர் புரிந்தானே.12.-வீடுமன் தருமன்சேனையிற் பலரையும் கொன்றுகொண்டு திரிதல்.

(வீடுமன்), மருமங்களின்உம்-(எதிரிகளுடைய) மார்புகளிலும்,
புயங்களின்உம் – தோள்களிலும், வதனங்களின்உம்-முகங்களிலும், கண்களின்உம்-
கண்களிலும், செருமும்படி – தைத்து நெருங்கும்படி, வெம் கணை மாரி சிந்தி
சிந்தி-கொடிய அம்புமழையை மிகுதியாகப்பெய்து, சிரம் துணித்து-(அவர்கள்)
தலைகளையறுத்து, தருமன் சேனை பரவை எலாம்- யுதிட்டிரனது சேனாசமுத்திரம்
முழுவதிலும், தான்ஏ ஆகி- தானொருவனேயாய், தலைநாளில் பொரு மந்தரம்
மால்வரை போல திரிந்தான்-முன்னொருகாலத்தில் (திருப்பாற்கடலில்) பொருந்திய
[கடைந்த] பெரிய மந்தரகிரிபோலச் சுழன்று, வெம் போர் புரிந்தான்-கொடிய
போரைச்செய்தான்; (எ-று.)- முதலடியிற்கூறிய நான்கிடமும், அம்பெய்தற்குச்
சிறந்தஇலக்குக்களாம். செருமம், செருமு-பகுதி. மர்மம், வதநம், மந்தரம் –
வடசொற்கள்.

மலை ஒத்து அதிரும் கட களிறும், வய மா
அணியும், மான் தேரும்,
தொலையத் தொலைய, யாவரையும் சுடு வெங்
கணையால் துரந்து துரந்து,
அலையத் தரங்கம் எறி கடல்வாய் வடவானலம்போல்
அவன் நின்ற
நிலையைக் கண்டும், காணான்போல் நின்றான், விசயன்,
நிகர் இல்லான்.13.-வீடுமன் மும்முரமாகக் கொன்றுகொண்டிருக்கவும்,
அருச்சுனன் கண்டுங் காணான்போலிருத்தல்

மலை ஒத்து அதிரும் கடகளிறுஉம் – மலைபோல நின்று
கர்ச்சிக்கும் மதயானைகளும், வய மா அணிஉம் – வலிய குதிரைவரிசைகளும்,
மான்தேர்உம் – குதிரைகளைப் பூட்டிய தேர்களும், தொலைய தொலைய –
மிகுதியாகஅழியும்படி, யாவரைஉம் – (பகைவர்கள்) எல்லோரையும், சுடு
வெம்கணையால்துரந்து துரந்து – அழிக்கவல்ல கொடிய அம்புகளால்
துரத்தித்துரத்தி, அலையதரங்கம் எறி கடல்வாய் வடவானலம் போல் –
அலையும்படி அலைகளைவீசுகிறகடலில் படபாமுகாக்நிபோல, அவன் நின்ற –
அவ்வீடுமன் (பாண்டவசேனைமத்தியில்) நின்ற, நிலையை – தன்மையை,
கண்டுஉம் – பார்த்தும், நிகர் இல்லான்விசயன் – ஒப்பற்றவனான அருச்சுனன்,
காணான் போல் நின்றான் – பாராதவன்போல(ப் போர் செய்யாது திகைத்து)
நின்றான், (எ – று.)

     படபாநலம் – வடசொற்றொடர்; கடலினிடையே பெண்குதிரையொன்றின்
முகத்தி லுள்ளதும், மழை முதலியவற்றால் வருகிற நீரினால் கடல் பொங்காதபடி
அந்நீரை உறிஞ்சுவதும், யுகாந்தகாலத்தில் அங்குநின்று எழுந்து உலகங்களை
யொழிப்பதுமாகிய தீ: படபா – பெண்குதிரை; அநலம் – நெருப்பு. நிகரில்லான்
காணான்போல் நிற்பதே! என்றபடி இனி, நிகரில்லான் – இகழ்ச்சிக்குறிப்பினதுமாம்

கான் எரி துற்றென வீடுமன் இப்படி காதி
மலைந்திடவும்,
மானம் நினைத்திலை, சாபம் எடுத்திலை, வாளி
தொடுத்திலை, நீ!
ஏன் இது, உனக்கு?’ என மாயன் உரைத்து,
அவன் ஏறு இரதத்து இழியா’
‘ஆனது எனக்கு இனி ஆக!’ எனத் தனி
ஆழி எடுத்தனனே.14.-வீடுமன் கடும்போர்புரிகையில் பொராதிருந்த அருச்சுனனை
ஸ்ரீ கிருஷ்ணன் சினந்து, சக்கரமெடுத்தல்.

(அப்பொழுது), ‘கான் எரி துற்று என – காட்டில் தீப்பற்றி
யெரித்தாற்போல, வீடுமன் இ படி காதிமலைத்திடஉம்-பீஷ்மன் இவ்வாறு
தாக்கிப்போர் செய்யவும், நீ-, மானம் நினைத்திலை-மானத்தை(ப் பாதுகாக்க)
எண்ணினாயில்லை; சாபம் எடுத்திலை – வில்லை(க்கையில்) ஏந்தினாயில்லை;
வாளிதொடுத்திலை – அம்பை யெய்தாயுமில்லை; உனக்கு ஏன் இது – உனக்கு
ஏன்இந்தக்குணம்?’ என – என்று, மாயன் – கண்ணபிரான், உரைத்து –
(அருச்சுனனைநோக்கிச்) சொல்லி, அவன் ஏறு இரதத்து இழியா- அவ்வருச்சுனன்
ஏறியுள்ள தேரினின்று (தான்) இறங்கி, இனி எனக்கு ஆனது ஆக என-
‘இப்பொழுது எனக்கு ஆனது ஆகட்டும்’ என்று கூறி, தனி ஆழி எடுத்தனன் –
ஒப்பற்ற (தனக்குரிய சுதரிசனமென்னுஞ்) சக்கராயுதத்தை ஏந்தியருளினான்.

     இங்ஙனம் செய்தது, எதிர்ப்பவர் இல்லாமல் வீடுமன் மிகுதியாகப் பொருத
போரை நோக்கி வரம்புகடந்தெழுந்த ஆவேசத்தாலென்க. ‘போரிற்படையெடேன்’
என்று முன் துரியோதனனுக்குக் கூறியிருந்த சபதம் தவறுதலால், கண்ணன் ‘தனக்கு
எந்தப்பழி வந்தாலும் வருக’ என்று ‘ஆன தெனக்கினியாக’ என்றான். கீழ்
வாசுதேவனைப்படைத்துணையழைத்த சருக்கத்தில் “போரிற்படையெடா தொழிமின்”
என்று வேண்டிய துரியோதனனுக்கு ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி “நடையுடைப் புரவித்
திண்டேர் நானிவற் கூர்வ தன்றி, மிடைபடையேவிநும்மோ டமர்செயேன்வேந்த”
என்று வாக்குத்தத்தஞ்செய்ததை இங்ஙனந்தவறலாமோ வெனின்;- போரில்
ஆயுதமெடுப்பதில்லையென்று கண்ணன் கூறியதைக் கேள்விப்பட்டு வீடுமன்
கண்ணனைத் தான் போரில் ஆயுதமெடுப்பிப்பதாகத் துரியோதனனுக்குமுன்
பிரதிஜ்ஞைசெய்திருந்தனனாதலால், எம்பெருமான் ‘தனதுசபதந் தவறினும் தவறுக;
தனது அன்பனாகிய வீடுமனது சபதம் பொய்க்கலாகாது’ என்று தன் திருவுள்ளத்தி
லெழுந்த திருவருளால் இப்படிச்செய்தான். பரமாத்மாவாகிய கண்ணன்
விரதந்தவறினால் அகர்மவசியனும் நிரங்குசஸ்வதந்திரனுமான அவனுக்கு
வருவதொருகுற்றமில்லை; ஆத்மகோடிகளில் ஒருவனான வீடுமன்
விரதந்தவறினாலோ அத்தீவினையால் மறுமையில் தண்டனைக்கு உள்ளாவன்:
ஆதலால், தனது சிறந்தபக்தலும் பரமபாகவதர்களில் ஒருவனாக எண்ணப்
படுபவனும்ஆகிய வீடுமனை ஊழ்வினையொழித்துப் பரமபதத்துச் சேர்ப்பிக்க
வேண்டு மென்றபெருங்கருணையே இங்ஙனம் வரம்புகடந்ததற்கு ஏற்ற
காரணமாம். இதனால், தனதுவாய்மையைத் தவறியாயினும், அடியார்களுக்கு
வருகிற ஆபத்தைப் போக்கித்காத்தருளுகிற பகவானது பேரருளுடைமை
விளங்குகின்றது. பி-ம்:- மலைத்திடவே.

     இதுமுதற் பத்துக்கவிகள் – ஈற்றுச்சீரொன்று கூவிளங் காய்ச்சீரும்,
மற்றையைந்துங் கூவிளச்சீர்களுமாகிய அறுசீராசிரியச் சந்தவிருத்தங்கள்

கான் எரி துற்றென வீடுமன் இப்படி காதி
மலைந்திடவும்,
மானம் நினைத்திலை, சாபம் எடுத்திலை, வாளி
தொடுத்திலை, நீ!
ஏன் இது, உனக்கு?’ என மாயன் உரைத்து,
அவன் ஏறு இரதத்து இழியா’
‘ஆனது எனக்கு இனி ஆக!’ எனத் தனி
ஆழி எடுத்தனனே.14.-வீடுமன் கடும்போர்புரிகையில் பொராதிருந்த அருச்சுனனை
ஸ்ரீ கிருஷ்ணன் சினந்து, சக்கரமெடுத்தல்.

(அப்பொழுது), ‘கான் எரி துற்று என – காட்டில் தீப்பற்றி
யெரித்தாற்போல, வீடுமன் இ படி காதிமலைத்திடஉம்-பீஷ்மன் இவ்வாறு
தாக்கிப்போர் செய்யவும், நீ-, மானம் நினைத்திலை-மானத்தை(ப் பாதுகாக்க)
எண்ணினாயில்லை; சாபம் எடுத்திலை – வில்லை(க்கையில்) ஏந்தினாயில்லை;
வாளிதொடுத்திலை – அம்பை யெய்தாயுமில்லை; உனக்கு ஏன் இது – உனக்கு
ஏன்இந்தக்குணம்?’ என – என்று, மாயன் – கண்ணபிரான், உரைத்து –
(அருச்சுனனைநோக்கிச்) சொல்லி, அவன் ஏறு இரதத்து இழியா- அவ்வருச்சுனன்
ஏறியுள்ள தேரினின்று (தான்) இறங்கி, இனி எனக்கு ஆனது ஆக என-
‘இப்பொழுது எனக்கு ஆனது ஆகட்டும்’ என்று கூறி, தனி ஆழி எடுத்தனன் –
ஒப்பற்ற (தனக்குரிய சுதரிசனமென்னுஞ்) சக்கராயுதத்தை ஏந்தியருளினான்.

     இங்ஙனம் செய்தது, எதிர்ப்பவர் இல்லாமல் வீடுமன் மிகுதியாகப் பொருத
போரை நோக்கி வரம்புகடந்தெழுந்த ஆவேசத்தாலென்க. ‘போரிற்படையெடேன்’
என்று முன் துரியோதனனுக்குக் கூறியிருந்த சபதம் தவறுதலால், கண்ணன் ‘தனக்கு
எந்தப்பழி வந்தாலும் வருக’ என்று ‘ஆன தெனக்கினியாக’ என்றான். கீழ்
வாசுதேவனைப்படைத்துணையழைத்த சருக்கத்தில் “போரிற்படையெடா தொழிமின்”
என்று வேண்டிய துரியோதனனுக்கு ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி “நடையுடைப் புரவித்
திண்டேர் நானிவற் கூர்வ தன்றி, மிடைபடையேவிநும்மோ டமர்செயேன்வேந்த”
என்று வாக்குத்தத்தஞ்செய்ததை இங்ஙனந்தவறலாமோ வெனின்;- போரில்
ஆயுதமெடுப்பதில்லையென்று கண்ணன் கூறியதைக் கேள்விப்பட்டு வீடுமன்
கண்ணனைத் தான் போரில் ஆயுதமெடுப்பிப்பதாகத் துரியோதனனுக்குமுன்
பிரதிஜ்ஞைசெய்திருந்தனனாதலால், எம்பெருமான் ‘தனதுசபதந் தவறினும் தவறுக;
தனது அன்பனாகிய வீடுமனது சபதம் பொய்க்கலாகாது’ என்று தன் திருவுள்ளத்தி
லெழுந்த திருவருளால் இப்படிச்செய்தான். பரமாத்மாவாகிய கண்ணன்
விரதந்தவறினால் அகர்மவசியனும் நிரங்குசஸ்வதந்திரனுமான அவனுக்கு
வருவதொருகுற்றமில்லை; ஆத்மகோடிகளில் ஒருவனான வீடுமன்
விரதந்தவறினாலோ அத்தீவினையால் மறுமையில் தண்டனைக்கு உள்ளாவன்:
ஆதலால், தனது சிறந்தபக்தலும் பரமபாகவதர்களில் ஒருவனாக எண்ணப்
படுபவனும்ஆகிய வீடுமனை ஊழ்வினையொழித்துப் பரமபதத்துச் சேர்ப்பிக்க
வேண்டு மென்றபெருங்கருணையே இங்ஙனம் வரம்புகடந்ததற்கு ஏற்ற
காரணமாம். இதனால், தனதுவாய்மையைத் தவறியாயினும், அடியார்களுக்கு
வருகிற ஆபத்தைப் போக்கித்காத்தருளுகிற பகவானது பேரருளுடைமை
விளங்குகின்றது. பி-ம்:- மலைத்திடவே.

     இதுமுதற் பத்துக்கவிகள் – ஈற்றுச்சீரொன்று கூவிளங் காய்ச்சீரும்,
மற்றையைந்துங் கூவிளச்சீர்களுமாகிய அறுசீராசிரியச் சந்தவிருத்தங்கள்

ஆழி எடுத்தனன், வீடுமனைப் பொருது ஆவி
அழித்திடுவான்,
ஊழிமுகக் கனல்போல் எழும் அப் பொழுது,
ஓடி அருச்சுனனும்,
தாழிதனக்கு முன் வீடு கொடுத்தருள் தாள்
இணையைப் பிடியா,
‘வாழி! உனக்கு இவனோ எதிர்? வித்தக! மாய!’
எனத் தொழுதான்.15.-அப்போது அருச்சுனன் தொடர்ந்துசென்று போர்புரியாதபடி
ஸ்ரீக்ருஷ்ணன்தாளிணை பற்றுதல்.

(இங்ஙனம் கண்ணபிரான்), ஆழி எடுத்தனன் – சக்கரத்தை
யேந்திக்கொண்டு, பொருது – போர்செய்து, வீடுமனை ஆவி அழித்திடுவான் –
பீஷ்மனைக்கொல்லும்பொருட்டு, ஊழி முகம் கனல் போல்-பிரளயகாலத்துத்
தீப்போல, எழும் அப்பொழுது-புறப்பட்டுச்சென்ற அந்தச்சமயத்தில், அருச்சுனனும்-
,ஓடி – (அவ்வெம்பெருமானைத் தொடர்ந்து) விரைந்துசென்று, தாழி தனக்கு முன்
வீடு கொடுத்தருள் தாள் இணையை பிடியா – தயிர்த்தாழிக்கு முன்னே
முத்தியைக்கொடுத்தருளின (அவனது) உபயபாதத்தை(த் தன்கைகளாற்)
பிடித்துக்கொண்டு, ‘வித்தக – ஞானசொரூபியானவனே! மாய –
ஆச்சரியசக்தியுடையவனே! வாழி-வாழ்வாயாக; உனக்கு இவன்ஓ எதிர் –
(வரம்பிலாற்றலையுடைய) உனக்கு இவ்வீடுமனோ எதிராவன்?’ என-என்று கூறி,
தொழுதான்-நமஸ்கரித்தான்; (எ – று.)

     ‘அருச்சுனனால் வீடுமனை வெல்லமுடியாமற் போகவே, கண்ணன் தன்
சபதந்தவறியாயினும் சக்கரமெடுத்துப் போர்புரியலாயிற்று’ என்று தனக்கு
உண்டாகும்பெரும்பழிக்கு அஞ்சி அருச்சுனன் கண்ணனைப் போர்புரியாதபடி
திருவடிபிடித்துவேண்டுபவனானான். வரையறைகடந்த கண்ணனது
பெருங்கருணைக்குக்கண்ணெச்சில்பட்டு ஏதேனுந் தீங்குவிளையுமோ வென்று தன்
மனத்தில் திடுக்கென்றுஉண்டான சங்கையால், அந்தத் திருஷ்டி தோஷம்
உண்டாகமலிருக்கவேண்டுமென்றுவாழியென வாழ்த்தினான்; இங்ஙனம்பகவானை
வாழ்த்துதல், பொங்கும்பரிவையுடைய பெரிய பக்தர்களது மரபு. அதிக
விருப்பத்தால்அவசியமில்லாதவிடத்திலும் பயசங்கையுண்டாதல், இயல்பு. இவனோ
என்ற ஓகாரம்-இழிவுசிறப்போடு எதிரல்ல னென எதிர்மறையையுங் குறிக்கும்.

     ‘தாழிதனக்குமுன்வீடுகொடுத்தருள் தாளிணை’ என்பதிலடங்கியசரிதை:-
ஒருநாள் கண்ணன் யசோதை பால்கொடாததற்காக வெகுண்டு தயிர்த்தாழிகளை
யுடைத்து உருட்டிவிட்டு, அதுகண்டு தன்னை யடிக்கக்கோலெடுத்து வந்த
அவளுக்கு அகப்படாதபடி ததிபாண்டனென்பவனது மனையிலே மறைய, அவன்
கண்ணனது திருவடித்தாமரைகளைப் பிடித்துக்கொண்டு ‘எனக்கு முத்தியளிக்க
வேண்டும்’ என்ன, கண்ணன் ‘தாய் என்னை அடிக்க வருகிறாள்: என் காலை விடு’
என்று சொல்ல, அவன் ‘நீ எனக்கும் எனக்கு வேண்டிய இருபத்தெட்டுமனையி
லுள்ளோருக்கும் எனது தயிர்த்தாழிக்கும் பரமபதம் கொடாயானால், யான்
உன்காலைவிடாமல் உன்னையசோதைகையிற் காட்டிக்கொடுப்பேன்’ என்று கூற,
ஸ்ரீகிருஷ்ணன் உடனேஅவன் வேண்டுகோளின்படியே முத்தியருளிச் சென்றன
னென்பது. “பந்தித்தடம்புடைசூழரங்கா ததி பாண்டனுன்னைச், சந்தித்தநாண்முத்தி
பெற்றதென்னேதயிர்த்தாழியுமே” என்றார் ஐயங்காரும்.  

வாசவன் முன் பெறு காளை தொழத் தொழ,
மாறுபடச் சினவும்
கேசவன் இப்படி மேல் வருகிற்பது கேவலம்
உற்று உணரா,
‘நாசம் நமக்கு உறு காலம் நணித்து!’ என
நாடி, நடுக்கமுடன்,
தேசு அணி பொன்-தட மேரு எனத் திரி
தேரினை விட்டு இழியா,16.-ஸ்ரீக்ருஷ்ணன்ஆயுதமெடுத்தது கண்டு நடுங்கி வீடுமன்
தன்தேரினின்றுஇறங்குதல்.

இது முதல் நான்கு கவிகள் – குளகம்.

     (இ – ள்.) முன் வாசவன் பெறு காளை – முன்னே இந்திரன் பெற்ற
புத்திரனான அருச்சுனன், தொழ தொழ – மிகுதியாக வணங்கவும், (தணியாமல்),
மாறுபட சினவும் – பகைமைதோன்றக் கோபங்கொள்ளுகிற, கேசவன் –
கண்ணபிரான், இ படி மேல் வருகிற்பது – இவ்வாறு தன்மீது (எதிர்த்துப் போருக்கு)
வருவதை, கேவலம் உற்று உணரா – நன்றாக உற்றுப்பார்த்து அறிந்து,-(வீடுமன்),-
நமக்கு நாசம் உறு காலம் நணித்து என நாடி – ‘நமக்கு அழிவு நேருங் காலம்
கிட்டியது ‘ என்று ஆலோசித்து, நடுக்கமுடன் – அச்சத்துடனே, தேசு அணி பொன்
தட மேரு என திரி தேரினைவிட்டு இழியா – ஒளிபொருந்தின பொன்மயமான
பெரிய மேருமலைபோலத் திரிகின்ற தனது இரதத்தை விட்டு இறங்கி, – (எ – று.) –
‘இழியா’ என்றது, “எனப் பல நாடியுரைத்தனன்” (19) என்பதனோடு முடியும்.

     உள்ளமும் உடம்பும் நடுங்குதல், அச்சமென்னுஞ் சுவைக்குரிய மெய்ப்பாடாம்.
வாஸவன் என்னும் வடசொல்லுக்கு-அஷ்ட வசுக்கள் தலைவனென்றும், எல்லா
ஐசுவரியமு முடையவ னென்றும் பொருள்; வசு – தேவர்களில் ஓர் இனம்: அல்லது,
செல்வம். கேசவன் – பிரமனையும் உருத்திரனையும் தன் அங்கத்திற் கொண்டவ
னென்று பொருள்படும்: க – பிரமன், ஈச-சிவன்; “பிறைதங்கு சடையானை வலத்தே
வைத்துப் பிரமனைத் தன்னுந்தியிலே தோற்றுவித்து” என்றார்
திருமங்கையாழ்வாரும்;இனி, இதற்கு – அழகிய மயிர்முடியையுடையவனென்றும்,
கேசி யென்னும்அசுரனைக் கொன்றவனென்றும் பொருள்கள் உண்டு. கேவலம் –
தனிமையாகஎன்றும், தனது சிறந்த ஞானத்தாலென்றும் பொருள் கொள்ளலாம்.
நமக்கு -தனித்தன்மைப் பன்மை.  

ஆரண கற்பித! மாதவ! அச்சுத! ஆழியிடைத் துயிலும்
காரண! சிற்குண ரூப! மலர்க் கொடி காதல் மனத்து உறையும்
நாரண! அற்புத! வானவருக்கு ஒரு நாயக! நிற் பணியும்
வாரணம் முத்தி விசாலதலத்திடை வாழ்வுற வைத்தவனே!17.-மூன்றுகவிகள்-வீடுமன் கண்ணனைப் பலவாறு துதித்தைக் கூறும்.

ஆரணம் கற்பித – வேதங்களிற்கூறிய நியமத்தை யுடையவனே!
மாதவ – மாதவனென்னும் பெயரையுடையவனே! அச்சுத – அச்சுதனென்னும்
பெயரையுடையவனே! ஆழியிடைதுயிலும் – கடலிலே அறிதுயிலமர்ந்தருளும்,
காரண – பிரபஞ்ச காரணணே!  சித் குண ரூப – ஞானத்தையே குணமாகவும்
வடிவமாகவும் உடையவனே! மலர் கொடி காதல் மனத்து உறையும் –
செந்தாமரைமலரில் வாழும் பூங்கொடிபோல் மெல்லிய வடிவமுடைய திருமகளது
அன்புள்ள மனத்தில் (எப்பொழுதும்) வசித்தருளும், நாரண – நாரயணனென்னும்
பெயரையுடையவனே! அற்புத – ஆச்சரியசக்தியுடையவனே! வானவருக்கு ஒரு
நாயக – தேவர்கட்கு ஒப்பில்லாத தனிநாயகனே! நின் பணியும் வாரணம் –
உன்னைவணங்குவதொரு யானையை, முத்தி விசால தலத்திடை – மோஷமாகிய
பெரியஉலகத்தினிடத்தே, வாழ்வு உற – பேரின்பவாழ்க்கையையடையும்படி,
வைத்தவனே -சேர்ப்பித்தருளியவனே!(எ-று.)

     ஆரண கற்பித என்பதற்கு – வேதமந்திரங்களால் (ஓரிடத்து) ஆவாகனஞ்
செய்யப்படுபவ னென்றும் பொருள்கொள்ளலாம். மாதவன் – திருமகள்கணவன்.
அச்சுதன் – தன்னைச்சரணமடைந்தவர்களை நழுவவிடாதவன் அல்லது
அழிவில்லாதவன். திருப்பாற்கடலிலும் மற்றைக்கடல்களிலும் பிரளயசமுத்திரத்திலும்
எம்பெருமான் பள்ளிகொண்டு யோகநித்திரை செய்தருளுகின்றன னென நூல்கள்
கூறும். கொடி – உவமையாகுபெயர். சித்குணரூப, அத்புத, நாயக, வாரணம்,
முக்திவிஸாலதலம்- வட சொற்கள். ஒருநாயகன் – ஆதிநாயகன். நிற்பணியும் –
“நின்னீறியல்பாம்” என்ற விதிக்கு மாறாக னகரந் திரிந்தது; இரண்டாம்
வேற்றுமைச்சிறப்புவிதியால். முக்தி – (இவ்வுலகப்பற்றுக்களை) விட்டு
அடையுமிடமெனக்காரணப்பெயர்; ‘வீடு’ என்னுந் தமிழ்ப் பெயரும் இதன்பொருள்
கொண்டதே.

     ‘வாரணம் முத்திதலத்து வாழ்வுறவைத்தவன்’ என்பதிலடங்கியகதை:-
இந்திரத்யும்நனென்னும் அரசன் மிக்க விஷ்ணுபக்தியுடையவனாய் விஷ்ணு
பூஜைசெய்கையில், ஒரு நாள் – அகஸ்தியமகாமுனிவர் அவனிடம் எழுந்தருள,
அப்பொழுது அவன் கருத்து முழுவதையும் திருமாலைப்பூசிப்பதிற்
செலுத்தியிருந்ததனால் அம்முனிவர்வருகையை யறியாமல் அவருக்கு
உபசாரமொன்றுஞ் செய்யாதிருக்க, அவர் தம்மை அலட்சியஞ்செய்தா னென்று
கருதிக் கோபித்து ‘நீ யானைபோலச் செருக்குற்றிருந்ததனால், யானையாகக் கடவை’
என்று சபிக்க, அங்ஙனமே அவன் ஒரு காட்டில் யானையாகத்தோன்றினனாயினும்,
முன்செய்த விஷ்ணுபக்தியின் மகிமையால் அப்பொழுதும் விடாமல் நாள்தோறும்
ஆயிரந்தாமரை மலர்களைக்கொண்டு திருமாலை அருச்சித்துப் பூசித்துவருகையில்,
ஒருநாள் பெரியதொரு தாமரைத்தடாகத்தில் அருச்சனைக்காகப்
பூப்பறித்தற்குப் போயிறங்கினபொழுது, அங்கே (முன்நீர்நிலையில் நின்று
தவஞ்செய்துகொண்டிருந்த தேவலரென்னும் முனிவரது காலைப் பற்றியிழுத்து
அதனாற் கோபங்கொண்ட அவரது சாபத்தால்) பெரிய முதலையாய்க் கிடந்த
ஹூஹூவென்னுங்கந்தருவன் அவ்யானையின்காலைக் கௌவிக்கொள்ள, அதனை
விடுவித்துக் கொள்ளமுடியாமல் கஜேந்திரன் ‘ஆதிமுலமே!’ என்று கூவியழைக்க,
உடனே திருமால் ஸ்ரீகருடவாகனாரூடராய் அங்கு எழுந்தருளித் தமது சக்கரத்தைப்
பிரயோகித்து முதலையைத் துணித்து யானையை அதன்வாயினின்றும் விடுவித்து
இறுதியில் அதற்கு முத்தியை அருள்செய்தனரென்பது. 

ஆவி அழித்தனை, தூணில் உதித்து, அடல்
ஆடகனைத் தலை நாள்;
மாவலியை, சிறு மாண் உருவத்துடன், வார் சிறை
வைத்தனையால்;
ஏவில் அரக்கனை வீழ அடர்த்தனை; யான் ஒர்
இலக்கு எனவோ,
நீ வலியின் சினம் மூளும் மனத்தொடு நேமி
எடுத்ததுவே

தலை நாள் – முன்னொருகாலத்தில், தூணில் உதித்து – ஒரு
கம்பத்திலே தோன்றி, அடல் ஆடகனை-வலிமையையுடைய இரணியனை, ஆவி
அழித்தனை – உயிர்நீக்கினாய்; சிறு மாண் உருவத்துடன் – சிறிய பிராமசாரி
ரூபத்தோடு (சென்று), மாவலியை – மகாபலிசக்கரவர்த்தியை, வார்சிறை
வைத்தனை -நீண்டசிறையிலே வைத்திட்டாய்; அரக்கனை – இராக்கதராசனான
இராவணனை,வீழ-இறந்துவிழும்படி, ஏவில்-அம்பினால், அடர்த்தனை-அழித்தாய்;
நீ -(இப்படிப்பட்ட பேராற்றலையுடைய) நீ, வலியின்-வலிமையொடும், சினம் மூளும்
மனத்தொடு – கோபம் பற்றின மனத்துடனும், நேமி எடுத்தது – (போர்செய்தற்குச்)
சக்கராயுதத்தைக் கையில் ஏந்தினது, யான் ஓர் இலக்கு எனஓ – நான் (உனக்கு
ஏற்ற) ஒரு லக்ஷ்யமென்று கருதியோ? (எ – று.)- ஆல், ஏ – ஈற்றசைகள்.

     இந்திரன்முதலிய தேவர்களுட்பட மூவுலகத்தாரையும் வென்று அடக்கியாண்ட
இரணியன் மகாபலி இராவணன் என்னும் இவரை முன்பு ஒவ்வொரு அவதாரத்தில்
தந்திரமாக எளிதில் வென்றுஒழித்த உனது திவ்விய சக்திக்குச் சாதாரண மனிதரில்
ஒருவனான யான் சிறிதும் எதிர்த்துப் பொருதற்குஏற்ற இலக்கல்ல னென
எம்பெருமானது பெருமையும் தனதுசிறுமையுந் தோன்ற இங்ஙனங்கூறித் துதித்தான்
வீடுமனென்க. ஆடகன் – ஹாடகனென்னும் வடமொழித் திரிபு;
பொன்னிறமானவனென்று இதற்குப் பொருள்: ஹாடகம் – நால்வகைப் பொன்களுள்
ஒன்று; (மற்றவை – கிளிச்சிறை, சாதரூபம், சாம்பூநதம் எனப்படும்.) இரணியன்
இரணியகசிபு என்ற பெயர்களுக்கும் பொருள் இதுவேயாதலால், இரணியனை
‘ஆடகன்’ என்றார்; இரணியம் – பொன். தலைநாள் என்பதை மற்றையவற்றிற்குங்
கூட்டுக. மாவலி, உரு, இலக்கு – வடசொற்சிதைவுகள். மாணியென்பது இங்கு
விகாரப் பட்டு ‘மாண்’ என நின்றது. இனி, மாணுருவம் என்பதற்கு –
பண்புத்தொகையாக, மாட்சிமைப்பட்ட ரூபமென்று உரைப்பாருமுளர். சிறை –
காவலிடம்: பாதாளத்தில் பலிசக்கரவர்த்தியுள்ள விடத்துக்கு விஷ்ணு காவலாக
எப்பொழுதும் வாயிலி லிருக்கிறாரென வுணர்க. அதனையே ‘மூன்றடி தருகிறோ
மென்றாய், கொடுத்தவிரண்டடியொழியமற்றை யோரடி நிலத்தையுந்தாராய்’ என்று
திருமால் பலியைக் கடன்காரர்க்குரிய சிறையிலே யிட்டதாகக் குறித்தார்:
“ஒருகுறளாயிருநிலம் மூவடிமண் வேண்டியுலகனைத்து மீரடியா லொடுக்கி
யொன்றுந்,தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன்” என்னும்
ஆழ்வாரருளிச்செயலை இங்கே யறிக. ஏவில், இல் – ஐந்தனுருபு ஏது. இனி, ஏ
வில் எனப்பிரித்து,அம்பையும் வில்லையு முடைய என்றும் பொருள் கொள்ளலாம்.

     முதலடியிற்குறித்தகதை:- தேவர் மனிதர் விலங்கு முதலிய பிராணிகளாலும்,
ஐம்பெரும் பூதங்களாலும் தனக்கு மரணமில்லாதபடி அளவற்ற வரங்களைப்பெற்றுத்
தேவர்முதலியவர்க்குங் கொடுமை யியற்றித் தன்னையே கடவுளாக வணங்கச் செய்து
வந்தவனும், இரணியாக்கனது உடன்பிறந்தவனு மான இரணியன் தன்புத்திரனான
பிரகலாதாழ்வான் தன்பெயர் சொல்லிக் கல்விகற்காமல் நாராயணநாமஞ் சொல்லி
வரவே அவனைக் கொல்லுதற்கு என்ன உபாயஞ் செய்தும் அவன் பகவானருளால்
இறந்திலனாக, இரணியன் மகனைநோக்கி ‘நீ சொல்லும் நாராயணனென்பான்
எங்குஉளன்? காட்டாய்’ என்ன, அப்பிள்ளை “சாணிணு முளனோர் தண்மை
யணுவினைச் சதகூறிட்ட, கோணினு முளன் மாமேருக் குன்றினுமுள னிந் நின்ற,
தூணினுமுள னீசொன்ன சொல்லினு முளன் இத்தன்மை, காணுதி விரைவின்” என்று
சொல்ல, உடனே இரணியன் நன்றென்று சினந்து தூணைப் புடைக்க, அதில்நின்றும்
பகவான் மனிதரூபமுஞ் சிங்கவடிவமுங் கலந்த நரசிங்கமூர்த்தியாய்த் தோன்றித்
திருக்கைந்நகங்களால் அவன்மார்பைப் பிளந்து அழித்திட்டாரென்பது.

வான் நரகில் புகுதாமல் எனக்கு உயர் வான்
உலகைத் தருவான்,
நீ நினைவு உற்றது போன பிறப்பில் என் நீடு
தவப் பயனே;
யானும் இனிப் பிறவாமல் அளித்தருள்; ஈச!’
எனப் பரவா,
ஞான மனத்தொடு, நா குழற, பல நாடி,
உரைத்தனனே.

வான் நரகில் புகுதாமல் – (மறுமையில் நான்) பெருநரகத்திற்
செல்லாதபடி, உயர் வான் உலகை எனக்கு தருவான் – சிறந்த முத்தியுலகத்தை
எனக்குக் கொடுத்தருள, நீ நினைவு உற்றது – நீ எண்ணியது, போனபிறப்பில்
என்நீடு தவம் பயன்ஏ – முற்பிறப்புக்களில் யான் செய்திருந்த மிகுந்த தவத்தின்
பலமேயாம்; (ஆதலால்), ஈச – கடவுளே! யான்உம் இனிபிறவாமல் அளித்தருள் –
(எளியவனான) நானும் இனிப் பிறப்பெடுக்காதபடி (அப்பரமபதத்தைத்) தந்தருள்
வாய்,என – என்றுசொல்லி, பரவா-துதித்து, ஞானம் மனத்தொடு –
தத்துவஞானம்பொருந்திய சுத்தசித்தத்துடனே, நா குழற – (தேகம் பக்
திமிகுதியால்பரவசப் பட்டமைபற்றி) நாக்குத் தடுமாற, பல நாடி உரைத்தனன் –
(மற்றும்) பல துதிமொழிகளையும் ஆராய்ந்து கூறினான், (வீடுமன்.)

எம்பிரானது திருவுள்ளத்துக்கு எதிரானவர் நரகமடைவரென்பதும்,
எப்படிப்பட்டவராயினும் எம்பிரானாற் கொல்லப்பட்டுவராயின் அவர்செய்த
கருமத்துக்கெல்லாம் அக்கொலைமாத்திரமே தண்டனையாய்முடிய அவர்கள்
கருமமொழிந்து உடனே முத்திபெறுவ ரென்பதும் ஆகிய நூற்கொள்கைகளைக்
கருத்தினுட்கொண்டும், தன்மீது சினந்து எம்பிரான் கையிற் சக்கரமேந்திப்
போர்செய்யவந்ததனால் தனக்கு இனி வெகுவிரைவில் அவ்வெம்பிரானால்
மரணம்நேர்தல் திண்ண மெனக் கருதியும், இங்ஙனம் வீடுமன் கூறியது. இங்ஙனம்
அவனால் அழித்தருளப் பட்டு முத்திபெறுதற்கேற்றதவத்தைத் தான் இப்பிறப்பில்
செய்ததில்லை யென்று எண்ணி, ‘போனபிறப்பிலென்னீடு தவப்பயனே’ என்கிறான்.
ஏ- தேற்றம். நீடுதவம் – நெடுங்காலஞ்செய்த தவமென்க. இருவினையும் அற்று
முத்திபெற்றவர்க்கு மீளவும் பிறப்பெடுத்தல் இல்லை யாதலால்,
‘இனிப்பிறவாமலளித்தருள்’ எனப்பட்டது. யானும் என்ற உம்மை –
தனதுதாழ்வைவிளக்குதலால் இழிவுசிறப்பாவதோடு, கீழ்க்கவியில் வந்த
இரணியனாதியோரை நோக்குதலால் இறந்ததுதழுவிய எச்சமுமாம். பி – ம் –
மாநரகில், யானரகில், நாகுழறிப் பலநாமம்.

ஆரியன் அப்பொழுது ஆறினன் நிற்கவும்,
ஆடல் அருச்சுனனும்,
தாரை வடிக் கணை ஆயிரம் உய்ப்பது ஒர்
சாபம் வளைத்து, அதிரா,
‘யார் எதிர் நிற்பினும், யாவர் தடுப்பினும், யான்
இனி இப் பகலே
சேர முருக்குவன்; ஏறுக!’ எனத் தன தேர்மிசை
புக்கனனே.20.அருச்சுனன்வேண்டுகோளினால் ஸ்ரீக்ருஷ்ணன் தேரின்மீது ஏறுதல்.

அ பொழுது – அவ்வாறு வீடுமன் துதித்த பொழுது, ஆரியன் –
யாவரிலுஞ்சிறந்த கண்ணபிரான், ஆறினன் நிற்கஉம் – (கொண்ட கோபந்) தணிந்து
நின்றவளவிலே, ஆடல் அருச்சுனன்உம் – வெற்றியையுடைய அருச்சுனனும், தாரை
வடிகணை ஆயிரம் உய்ப்பது ஒர் சாபம் வளைத்து அதிரா- ஓழுங்காகவுள்ள கூரிய
மிகப்பல அம்புகளை ஒருங்குசொரிவதான ஒப்பற்ற (தனது காண்டீவமென்னும்)
வில்லை வளைத்து ஆரவாரஞ்செய்து, ‘இனி – இனிமேல், யார் எதிர் நிற்பின்உம் –
(எனது) எதிரிலே யார் வந்து நின்றாலும், யாவர் தடுப்பின்உம் – (என்னை) எவர்
தடுக்க முயன்றாலும், (சிறிதும் பின்வாங்காமல்), யான்-, இ பகல்ஏ – இந்த
மத்தியானகாலத்திலேயே, சேர முருக்குவன் – (அவரெல்லோரையும்) ஒருசேர
அழிப்பேன்; ஏறுக – (நீ எனது தேரில் முன்போல) ஏறியருள்வாயாக’, என –
என்று(கண்ணனைப்) பிரார்த்தித்து, தன தேர்மிசை புக்கனன் – தனது
இரதத்தின்மேல்ஏறினான்; (எ -று.)

     யாரெதிர்நிற்பினும் யாவர் தடுப்பினும் என்றதனால், எத்துணை வலியராயினும்
எவ்வகை உறவினராயினும் யான் இப்பொழுது எதிரிகளை அழியாது
விடேனென்றவாறு. அருச்சுனன்=அர்ஜ்ஜு நன்; வடசொற்றிரிபு :
இதற்கு-வெண்ணிறமுடையவனென்பது பொருள்: இது -முதலில் இந்நிறமுடைய
கார்த்தவீரியமகாராசனுக்குப்பெயர் பெயராயிருந்து, பின்பு, அவனைப்போன்ற
சௌரிய தைரியங்களையுடைய பார்த்தனுக்கு இட்டுவழங்கப்பட்டது; இது-
உவமவாகுபெயரின்பாற்படும். பார்த்தன் கருநிறமுடையவனாததலால். அவனுக்கு
அருச்சுனனென்பது நிறம்பற்றிவந்த பெயரென்றல் பொருந்தாது. இனி, “குருச்சுடர்
மணிசெய் பச்சைக் கொழுந்துடற் பொலிவு நோக்கி, அருச்சுன னென்ப
ரீதென்னரும்பெயர் வந்த பான்மை” என்னும் நல்லாப்பிள்ளைபாரதச்
செய்யுளைக்கொண்டு,அருச்சுனனென்பது – பசுமைநிறம் பற்றிவந்த பெய ரென்றலு
மொன்று. அன்றியும்,பார்த்தன் (பார்வதிபோல) முதலில் [பிறந்தபொழுது]
வெண்ணிறமுடையவனாயிருந்துஉடனே கருமைநிறமடைந்தானென்று
கூறுவதுமுண்டு. தாரை-கூர் நுனியுமாம்.தாரையுய்ப்பது-மழைபொழிவது
போலமிகுதியாக எய்வதுஎனவும் கொள்ளலாம்.அதிரா – நாணேற்றி
அந்நாணியைக்கைவிரலால் தெறித்து டங்காரத்தொனியையுண்டாக்கிச்
சிங்கநாதமுஞ் செய்து என்க.  

நீறு படுத்தினன் மா மகுடத் திரள்; நீள் நில
வைப்பு அடையச்
சேறு படுத்தினன், மூளைகளின் தசை; சேர்
குருதிப் புனலால்
ஆறு படுத்தினன்; ஓர் ஒருவர்க்கு எதிர் ஆயிரம்
வைக் கணையால்
ஈறு படுத்தினன்; வீடுமன் விட்டவர் யாவர்
பிழைத்தவரே?-1.-இதுவும் அடுத்த கவியும்.அருச்சுனன் செய்த
கடும்போரைத் தெரிவிக்கும்.

(உடனே அருச்சுனன்),-மா மகுடம் திரள் – (பகையரசர்களது)
பெரிய கிரீடங்களின் தொகுதியை, நீறு படுத்தினன்-பொடியாக்கினான்;
மூளைகளின் -(அவ்வீரர்களது) மூளைகளால், நீள் நிலம் வைப்பு அடைய சேறு
படுத்தினன் -பெரிய பூலோகத்தின் இடம்முழுவதுஞ் சேறாக்கினான்; திசை சேர்
குருதி புனலால் -எல்லாத்திக்குக்களிலும் பாய்கிற இரத்தவெள்ளத்தால், ஆறு
படுத்தினான் –  பலஆறுகளை யுண்டாக்கினான்; ஓர்ஒருவர்க்கு எதிர் ஆயிரம்
வை கணையால-(தன்னையெதிர்த்த) ஒவ்வொரு வீரருக்கும் எதிராக(த் தான்எய்த)
ஆயிரம் ஆயிரம்கூரிய அம்புகளால் ஈறுபடுத்தினன் – (அவர்களுக்கு) அழிவை
யுண்டாக்கினான்;(அப்பொழுது), வீடுமன் விட்டவர் யாவர் பிழைத்தவர் –
வீடுமனொழிந்த வீரர் எவர்பிழைத்தார்? (எ – று.)-எவரும் பிழைக்கவில்லை;
மிகப்பலர் இறந்தனர் என்பதாம்.

     இனி, வீடுமன் விட்டவர் யாவர் பிழைத்தவர் என்பதற்கு – அருச்சுனனோடு
போர்செய்யும்படி வீடுமனால் ஏவியனுப்பப்பட்டு எதிர்த்த வீரர்களில் யார்
பிழைத்தார்? எவருமில்லை என்றுஉரைப்பாரு முளர். பி-ம்:- திரை சேர்குருதி,
தசைசேர்குருதி. விட்டமர்.

வாயு வடிக் கணை, வாசவன் வைக் கணை, வாருண
மெய்க் கணை, செந்
தீயின் வடிக் கணை, தேவர் சுடர்க் கணை, சேர
விடுத்தமையால்,
ஆயம் முனைப் படு தேர் அணி பட்டன; ஆள்
அணி பட்டன; வெங்
காய் கரி பட்டன; பாய் பரி பட்டன; காவலர் பட்டனரே.

வாயு வடி கணை – வாயுவைத்தெய்வமாகவுடைய கூரிய
அம்பையும் [வாயவ்யாஸ்திரத்தையும்], வாசவன் வைகணை – இந்திரனைத்
தெய்வமாகவுடைய கூரிய அம்பையும் [ஐந்திராஸ்திரத்தையும்], வாருணம் மெய்
கணை-வருணனைத்தெய்வமாகவுடைய உண்மையான [தவறுதலில்லாத] அம்பையும்
[வாருணாஸ்திரத்தையும்], செம் தீயின் வடி கணை – சிவந்த அக்கினியைத்
தெய்வமாகவுடைய கூரியஅம்பையும் [ஆக்நேயாஸ்திரத்தையும்], தேவர் சுடர்
கணை- (மற்றும் பல) தேவர்களுக்குஉரிய ஒளியையுடைய அஸ்திரங்களையும்,
சேர -ஒருசேர, விடுத்தமையால் – (அருச்சுனன்) பிரயோகித்ததனால்.-ஆயம் –
கூட்டமான,முனைபடு – போர்க்களத்தில்  எதிர்ப்பட்ட, தேர் அணி –
தேர்வரிசைகள், பட்டன-அழிந்தன: ஆள் அணி –  காலாள்வரிசைகள்,
பட்டன-; வெம் காய் கரி – கொடியசீறுகிற யானைகள், பட்டன; பாய் பரி –
பாய்ந்துசெல்லுந்தன்மையனவானகுதிரைகள், பட்டன-;  காவலர் –
(இந்நால்வகைச்சேனைக்கும்)அரசராகவுள்ளவர்களும், பட்டனர் –
அழிந்தார்கள்;(எ- று.)

     வாருணம் – தத்திதாந்தநாமம். ஆய எனப் பிரித்தால், ஆகிய
எனப்பொருள்படும். பி-ம்:- ஆயுமுனைப்படு.  

நாடி ஒளித்தனர், சூழ் புனல் மத்திர நாடன் முதல் பலரும்;
கூடி ஒளித்தனர், மா ரதரில் திறல் கூரும் வயப் படையோர்;
ஓடி ஒளித்தனர் ஆடு அமரில் துரியோதனனுக்கு இளையோர்;
வாடி ஒளித்தனர், மாகதர், ஒட்டியர், மாளவர், குச்சரரே.23.-அருச்சுனன் கடுமையாகப்பொரவே பகையரசர்
அஞ்சியொளித்தமை.

(இன்னும் அப்பொழுது), ஆடு அமரில் – (அருச்சுனன்) செய்த
போரில், புனல் சூழ் மத்திரநாடன் முதல் பலர்உம்-நீர்சூழ்ந்த மத்திரதேசத்தரசனான
சல்லியன் முதலிய பல சமரதவீரர்களும், நாடி ஒளித்தனர் – (எதிர்த்தற்கு அஞ்சி)
இடந்தேடி யொளித்துக்கொண்டார்கள்;  மா ரதரில் திறல் கூரும் வய படையோர் –
மகாரதவீரர்களில் வலிமைமிகுந்த வெற்றியைத்தரும் ஆயுத்ததையுடைய
சோமதத்தன்முதலியோர், கூடி ஒளித்தனர் – ஒருங்குகூடி மறைந்தார்கள்;
துரியோதனனுக்கு இளையோர் – (அர்த்தரதவீரரான) துரியோதனனது தம்பிமார்,
ஓடிஒளித்தனர்-; மாகதர் – மகததேசத்தாரும், ஒட்டியர்- ஓட்ரசேதத்தாரும்,
மாளவர்-மாளவதேசத்தாரும், குச்சரர் – கூர்ச்சரதேசத்தாரும் ஆகிய அரசவீரர்கள்,
வாடிஒளித்தனர் – வாட்டமுற்று ஒளித்தார்கள்;  (எ – று.)

    துரியோதனனுக்கு – நான்காமுருபு, முறைப்பொருளது. ஒட்டியர், குச்சரர் –
வடசொற்சிதைவுகள்.

பார்த்தன் அம்பினால் மேவலார் படைப் பரவை
சாயவே, விரவு கோவியர்
தூர்த்தன் அன்புடன் கண்டு, உவந்து, தன் தொக்க 
«
சனையின் பக்கம் எய்தினான்,
சேர்த்த வெம் பனைக் கொடி மகீபனும், வில் வினோதனும்,
செல்வ மைந்தனும்,
காத்து நின்று, தம் காவலன்தனைக் கொண்டு பாசறை
கடிதின் எய்தினார்.
4.-அருச்சுனன் கடும்போர்செய்தல்கண்டு ஸ்ரீக்ருஷ்ணன் உவந்திருக்க,
வீடுமன்முதலியோர் துரியோதனனைக் காத்தவண்ணம் பாசறைசேர்தல்.

இவ்வாறு), பார்த்தன் அம்பினால் – அருச்சுனனது பாணங்களால்,
மேவலார் படை பரவை – பகைவர்களது சேனாசமுத்திரம், சாயஏ – அழிந்திடவே,-
விரவு கோவியர் தூர்த்தன்-(தன்னோடு) கலந்த கோபஸ்திரீகள் பலரிடத்திலும்
அன்புள்ளவனான கண்ணபிரான், கண்டு –     (அதனை) நோக்கி, அன்புடன்
உவந்து – அன்போடு மகிழ்ந்து, தொக்க தன் சேனையின் பக்கம் எய்தினான்-
(கூட்டமாகத்) திரண்டுள்ள தன் சேனையின் பக்கத்தை யடைந்தான்; சேர்த்த வெம்
பனை கொடி மகீபன்உம்-கட்டிய கொடிய பனைமரத்தின் வடிவமெழுதிய
கொடியையுடைய அரசனான வீடுமனும், வில்வினோதன்உம்-வில்வித்தையையே
பொழுதுபோக்கும் விளையாட்டாகவுடைய துரோணாசாரியனும், செல்வம்
மைந்தன்உம்-(அவனது) செல்வப்பிள்ளையான அசுவத்தாமனும், தம் காவலன்
தனைகாத்து நின்று – தங்கள் அரசனான துரியோதனனை (அருச்சுனனம்பால்
அழிவடையாதபடி சூழ்ந்து) நின்று பாதுகாத்துக் கொண்டு, கொண்டு பாசறை
கடிதின்எய்தினார்- (அவனை) அழைத்துக்கொண்டு (தமது) படைவீட்டுக்கு
விரைவிற் சென்றுசேர்ந்தார்கள்; (எ – று.)

     ‘பார்த்தனம்பினால் மேவலார் படைப்பரவைசாயவே’ என்றது- கண்ணன்
தொழிலும் வீடுமன்முதலியோர்தொழிலுமாகிய இரண்டுக்குங் காரணம். பார்த்தன்
என்னும் வடமொழிப்பெயர்க்கு-பிருதையினது மகனென்று காரணப்பொருள்;
தத்திதாந்தநாமம். பிருதை யென்பது-குந்தியின் இயற்பெயர்: பார்த்தனென்பது,
இங்குஅருச்சுனனுக்கு சிறப்பாக வழங்கிற்று; தாய்க்கு இளைய மகனிடத்தில் அன்பு
மிகுதியென்ற பொது நியாயம், இதற்குக் காரணமாகலாம். தூர்த்தன்-வடசொல்;
இதற்கு-வஞ்சகனான காமுக னென்று பொருள்: கண்ணன் ஆயர்மங்கையர்பலரிடத்து
இங்ஙனம் ஒருங்கு காதலுடையனாதலை “கருமலர்க் கூந்த லொருத்திதன்னைக்
கடைக்கணித் தாங்கே யொருத்தி தன்பான், மருவி மனம் வைத்து மற்றொருத்திக்
குரைத்து ஒருபேதைக்குப் பொய் குறித்துப், புரிகுழன் மங்கை யொருத்தி தன்னைப்
புணர்தியவளுக்கும் மெய்யனல்லை, மருதிறுத்தா யுன் வளர்த்தி யூடே
வளர்கின்றாதாலுன்றன் மாயை தானே” என்ற பெருமாள் திருமொழிப்பாசுரத்தாலு
மறிக. பக்கம் -பக்ஷம்: வடசொல். ‘ வில்வினோ தனும்’ என்றவிடத்து
‘திறல்துரோணனும்’ என்றும்பாடம்.

     இதுமுதல் இச்சருக்கமுடியுமளவும் ஏழுகவிகள் – பெரும்பாலும் முதல் மூன்று
ஐந்து ஏழாஞ்சீர்கள் மாச்சீர்களும், இரண்டு நான்கு ஆறு எட்டாஞ்சீர்கள்
கூவிளச்சீர்களுமாகிய எண்சீராசிரிய விருத்தங்கள்      

வெஞ் சரத்தினால் விசயன் வென்ற போர் மிகு
களத்தின்வாய் விசையொடு அற்றன
குஞ்சரத்தின் வீழ் கைகள் நாகமே; குருதி வட்டமும்
பரிதி வட்டமே;
பஞ்சரத்தொடும் திரியும் யானையின் பக்கம் எங்கணும்
பட்டு மூழ்கிய
செஞ் சரத்தின்மேல் சிறகர், பண்டு வச்சிரம் அரிந்திடும்
சிறகர் மானுமே.25,-இது முதல் மூன்று கவிகள் – படுகளச்சிறப்பு.

வெம் சரத்தினால் – கொடிய அம்புகளைக்கொண்டு, விசயன் –
அருச்சுனன், வென்ற – சயித்தற்கிடமான, போர் மிகுகளத்தின்வாய் –
போர்த்தொழில்மிகுந்த யுத்தகளத்திலே, விசையொடு அற்றன – விரைவில்
அறுபட்டனவான, குஞ்சரத்தின்வீழ்கைகள்- யானைகளின் கீழ்விழுந்த துதிக்கைகள்,
நாகம்ஏ – பெரும் பாம்புகளின்வடிவமேபோலும்; குருதிவட்டம்உம் –
வட்டவடிவமாகத் தேங்கிய இரத்தப்பெருக்கும், பரிதி வட்டம்ஏ –
சூரியமண்டலமேபோலும்; பஞ்சரத்தொடுஉம் திரியும் – அம்பாரிகளோடு திரிகிற,
ஆனையின் – யானைகளின், பக்கம் எங்கண்உம்- (உடலின்) இருபுறத்தி லெங்கும்,
பட்டு முழ்கிய – தைத்து அழுந்திய, செம்சரத்தின் மேல் – சிவந்த
அம்புகளிம்மீதுள்ள, சிறகர் – இறகுகள், பண்டு வச்சிரம் அரிந்திடும் சிறகர்
மானும் -முன்னொருகாலத்தில் (தேவேந்திரனது) வச்சிராயுதத்தால் அறுபட்ட
(மலைகளின்)சிறகுகளையே போலும்; (எ-று.)

     யானையின் கரியபெரியவடிவத்துக்கு மலையும், அதன்மேல் தைத்துள்ள
அம்பினிறகுகளுக்கு அவற்றின் இறகும் உவமை. அழகுக்காகவும்விரைந்து
செல்லும்பொருட்டாகவும் அம்புகளுக்கு இறகுகட்டுதல், இயல்பு.
தற்குறிப்பேற்றவணி. மானும் என்னும் வினைமுற்றை, மற்றை யிரண்டு
வாக்கியங்களிலுங் கூட்டுக. ‘கைகள் நாகமே குருதிவட்டமும் பரிதிவட்டமே’ என்று
சேர்த்தியால், இரத்தமண்டலமாகிய சூரியமண்டலத்தைப்பிடித்தற்கு அருகில் வந்த
இராகு வென்னுங் கரும்பாம்பென்று அருகில் வீழ்ந்துள்ள யானைத்துதிக்கையைக்
குறித்ததாகக் கொள்க. குஞ்சரம் – காட்டுப்புதர்களிற் சஞ்சரிப்பது; மத்தகத்துக்குக்
கீழுள்ள குழிகளை யுடைய தென்றுமாம். குஞ்சம் – புதரும், கும்பஸ்
தலங்களுக்குக்கீழுள்ள குழிகளும். பஞ்சரம் – வடசொல்: கூடென்றுபொருள்; இது
இங்கே இலக்கணையாய் அம்பாரிக்குக் கொள்ளப்பட்டது. யானைமீது
அம்பாரிகட்டுதல், இயல்பு: இனி, பஞ்சரம் – கழுகு என்று பொருள்கொண்டு,
யானையாற் கொல்லப்படும் பிராணிகளை யுண்ண யானையுடன் கழுகுந்
திரியுமென்பர், ஒருசாரார். சிறகர் – குற்றியலுகரம், ‘அர்’ பெற்றது.

கொற்ற மன்னர் சென்னியின் அணிந்த பொற் கோளம்
யாவையும் தாளமாகவே,
அற்றை வெஞ் சமத்து அடல் அருச்சுனன் ஆண்மை
பாடி நின்று, அலகை ஆடுமால்;
முற்ற வெம் பிணக் குவையும், வேழமும், முடுகு வாசியும்,
தேரும், மொய்ம்பு உறத்
துற்ற குன்று என, ஒன்றுபட்டு எழச் சொரியும் மூளை
ஆறு அருவி ஒக்குமே.

கொற்றம் மன்னர் – வலிமையையுடைய (இறந்த அரசர்கள்),
சென்னியின் அணிந்த – தலையில் அணிந்திருந்த, பொன் கோளம் யாவைஉம் –
பொன்மகுடங்களையெல்லாம், தாளம் ஆக ஏ – தாளமாகக் (கையில்
ஏந்திக்கொண்டு), அலகை-பேய்கள், அற்றை வெம் சமத்து அடல் அருச்சுனன்
ஆண்மை பாடிநின்று-அன்றையதினத்துக் கொடியயுத்தத்திற் காட்டிய அருச்சுனனது
பராக்கிரமத்தைப் பாடிக்கொண்டுநின்று, ஆடும் – கூத்தாடும்; வெம் பிணம்
குவைஉம் – கொடிய பிணங்களின் கூட்டமும், வேழம்உம்-(இறந்த) யானைகளும்,
முடுகு வாசிஉம்-(முன்பு) விரைவையுடைய (இறந்த) குதிரைகளும், தேர்உம் –
(அழிந்த) தேர்களும், முற்ற-(போர்க்களம்) முழுவதிலும், மொய்ம்பு உற துற்ற குன்று
என – வலிமை மிக நெருங்கிய மலைகள்போல, ஒன்றுபட்டுஎழ – ஒன்றுசேர்ந்து
உயர்ந்து தோன்ற, சொரியும் மூளை – (அவற்றினின்று) பெருகுகிற நிணம், ஆறு
அருவி ஒக்கும் – (அம்மலையினின்று) ஆறுகளாகப்பெருகும் நீரருவிபோலும்.

     கோளம் – வட்டவடிவமாகத் தலையிலணிவதோர் ஆபரணம். கோலம் என்று
ஓதி – தலைக்கோலமென்பாரு முளர். பேய்கள் பாடியாடுதற்குக் காரணம், தமக்கு
நிரம்பப் பிணங்களாகிற இரை கிடைத்த களிப்பு. இங்ஙனம் கிடைத்தற்குக் காரணம்
போரில் எதிரிகள்சேனையை அழித்த அருச்சுனனது ஆற்றலே யாதலால், அதனைப்
புகழ்ந்து பாடுவனவாயின. முதலிரண்டடியில் தும்பைத் திணையில் பேய்க்குரவை
என்ற துறையின் கருத்தமையக்கூறினார். பின்னிரண்டடியில் தற்குறிப்பேற்றவணி
காண்க. மூன்றாமடியிற் பிணமென்றது, மனிதரது உயிர்நீத்தவுடலை. யாறு என்றும்
பிரிக்கலாம்.        

பமர மும் மதக் கரி, விலாவின் வேல் பட்ட வாய்
நிணம் பறிய நிற்பன,
குமரன் வேலின்வாய் அனலம் ஊர்தரும் கோடுடைத்
தடங் குன்றம் ஒக்குமால்;
அமரர்கோன் மகன் செங் கை அம்பினால் அற்ற
வீரர்தம் தலைகள் கவ்வி, அச்
சமர பூமி சேர் ஞாளி, மானுடத் தலை விலங்கின்
இன் தன்மை சாலுமே.

பமரம் – வண்டுகள்மொய்க்கப்பெற்ற, மும் மதம் – மூன்று
வகைமதத்தையுடைய, கரி – யானைகள், விலாவின் வேல் பட்டவாய் நிணம் பறிய
நிற்பன – (தத்தம்) விலாப்புறத்தில் (எதிரியின்) வேல் பாய்ந்த இடத்திலே
கொழுப்புவெளிப்பட அழிந்துநிற்பவை,-குமரன் வேலின் வாய்-முருகக் கடவுளால்
எறியப்பட்ட வேலாயுதந்தைத்தவிடத்திலே, அனலம் ஊர்தரும் –
நெருப்புப்பற்றப்பெற்ற, கோடு உடை தட குன்றம் ஒக்கும் – சிகரத்தையுடைய
பெரியகிரௌஞ்சகிரியைப் போலும்; அமரர்கோன் மகன் செம் கை அம்பினால்
அற்றவீரர்தம் தலைகள் கௌவி – தேவேந்திரகுமாரனான அருச்சுனனது:
சிவந்தகைகளால்விடப்பட்ட அம்புகளால் அறுபட்ட வீரர்களது தலைகளைக்
கௌவிக்கொண்டு, அ சமரபூமி சேர் – அந்தப்போர்க்களத்திற் பொருந்திய,
ஞாளி – நாய்கள், மானுடர் தலை விலங்கின் இன்தன்மை சாலும் – மனிதத்
தலையோடு கூடிய மிருகங்களின் இனிய தன்மையைப்பொருந்தும்.

‘ஆண்டலைப்புள்’ போல மானுடத்தலைவிலங்கும் உண்டென்க;
புருஷமிருகமென ஒருவகை வழங்குகிறது. பமரம் – ப்ரமரமென்னும்
வடமொழித்திரிபு. விலா – வயிற்றுப்புறம். மலை – யானைக்கும்,
மலையைத்துளைத்தவேல் – யானையின்மீது தைத்த வேலுக்கும், அனல் –
இரத்தத்தோடுகூடிய நிணத்துக்கும் உவமை. விலங்கு – ‘திர்யக்’ என்னும்
வடசொல்லின் மொழிபெயர்ப்பு;  குறுக்காக நிற்பதென்று பொருள். ஆல், ஏ –
ஈற்றசைகள்.

     குமரக் வேலின்வாயனலமூர்தருங் கோடுடைக்குன்றமென்
பதிலடங்கியகதை:- 
சிவபிரானது இளையகுமாரனாய்த் தேவர்வேண்டுகோளால்
அசுரர்களையொழித்தற்குத்  தேவசேனாபதியாம்பொருட்டு அவதரித்த
முருகக்கடவுள், சூரபதுமனைப் பொருது அழித்தற்குச் செல்லுங் வழியிடையே
கிரௌஞ்சனென்னும் அசுரன் பெரியமலை வடிவங்கொண்டு அக்கடவுளை
நலிவதாகஎதிர்வந்துநிற்க, அதன் மேல் அப்பெருமான் தனது
தெய்வத்தன்மையுள்ளவேற்படையை யேவி அதனைப்பிளந்து அழித்திட்டன
னென்பது, கதை: பரசுராமனும் சுப்பிரமனியனும் பரமசிவனிடம் வில்முதலிய
ஆயுதப்பயிற்சியைச் செய்துமுடித்தபின்பு இவர்களுள் உயர்வுதாழ்வு அறியும்
பொருட்டுச்சிவபிரான் உமாதேவியின் முன்னிலையிலே இவர்களுக்குக்
கிரௌஞ்சமலையைச்சுட்டிக்காட்டி இதனைத் துளைத்திடு மென்று நியமிக்க,
பரசுராமன் அம்பெய்துஅதனைத் துளையிட்டுக் காட்ட, முருகக்கடவுள்
வேலாயுதத்தை அனற்பொறிகிளம்பவீசியெறிந்து அம்மலையைப் பிளந்திட்டன
னென்றும் கதை கூறப்படும். 

அன்று வெஞ் சரத்தொடு தறிந்த வாள் அரசர் சோரி
மெய்ப் பட்டதுஆதலின்,
சென்று செங் கதிர்ச் செல்வன் வாருணத் திசை அடைந்து,
வெண் திரையில் மூழ்கினான்;
நின்று அருச்சுனன் பொர மறந்ததும், நெடிய செங் கண்
மால் நேமி தொட்டதும்,
பின்றை வில் எடுத்து அவன் மலைந்ததும், பேசினான்,
மகீபதி பிதாமகன்.28.-சூரியாஸ்தமனவருணனை.

அன்று – அத்தினத்திலே, வெம் சரத்தொடு-(அருச்சுனனது)
கொடியஅம்புகளால், தறிந்த – அறுபட்ட, வாள் அரசர் – ஆயுதங்களையுடைய
அரசர்களது, சோரி – இரத்தம், மெய் பட்டது ஆதலின் – (தனது) உடம்பில் வந்து
தெறித்ததாதலால், (அவ்விரத்தக்கறையைக்கழுவியொழிக்கும் பொருட்டு), செம் கதிர்
செல்வன் – சிவந்த கிரணங்களைச் செல்வமாகவுடைய சூரியன், சென்று – போய்,
வாருணம் திசை அடைந்து – வருணனது சம்பந்தமான மேற்குத்திக்கை யடைந்து,
வெள் திரையில் மூழ்கினான் – வெண்மையான அலைகளையுடைய (அங்குள்ள)
கடலிலே நீராடினான் [மறைந்தான் என்றபடி]: (பின்பு), மகீபதி பிதாமகன் –
துரியோதனராசனது பெரியபாட்டனான வீடுமன், அருச்சுனன் நின்று பொர
மறந்ததுஉம்- அருச்சுனன் (போர்க் களத்தில் திகைத்து) நின்று
போர்செய்யமறந்ததையும், நெடிய செம் கண் மால் நேமிதொட்டதுஉம் – நீண்ட
சிவந்தகண்களையுடைய திருமால் (அதனை  நோக்கித் தான்போர்செய்தற்குச்)
சக்கரமேந்தினதையும், பின்றை வில் எடுத்து  அவன்மலைந்ததுஉம் – அதன்பின்பு
வில்லையெடுத்து அவ்வருச்சுனன் போர்செய்ததையும்,பேசினான் – (பாராட்டித்
தன்படைவீரரோடு) கூறினான்.

     மெய்என்றது, மண்டலத்தை, அந்திமாலைப்பொழுதில் சூரிய மண்டலத்தில்
மிகுதியாக இயல்பில்தோன்றுஞ் செந்நிறத்தைச் செந்நீர் தெளித்ததனாலாகிய
தெனக்குறித்தனர்; முன்னிரண்டடியில் ஏதுத்தற்குறிப் பேற்றவணி,
தொடர்புயர்வுநவிற்சியணியை
 அங்கமாகக் கொண்டு வந்தது. சரத்தொடு
என்பதில்,’ஓடு’ உருபு – கருவிப் பொருளது. ஆள் அரசர் எனப் பிரித்து,
ஆளுதற்றொழிலையுடைய மன்ன ரென உரைத்தல் மோனைத்தொடைக்கு
மிகப்பொருந்தும், வருணன் மேற்குத்திக்குப்பாலக னாதலால், மேற்றிசை
‘வாருணத்திசை’ எனப்பட்டது, பிதாமகன் – வீடுமன், மகீபதி –
துரியோதனராசனோடு,  பேசினான் என்று அநுவயித்துப் பொருள்கூறுதலு
மொன்று.பி-ம்: அமர்மலைந்ததும்.  

தருமன் மா பெருஞ் சேனைதன்னுளார் தங்கள்
ஆதரத்தொடு தனஞ்சயன்
பொரு வில் ஆண்மையும், வீமன் மா மகன் பொருத
வீரமும் புகழ்ந்து பாடினார்;
அரவ கேதனன் சேனைதன்னுளார் அழிந்த மன்னருக்கு
அழுது அரற்றினார்;
இருவர் சேனையும் கண்படாமல், அன்று, இரவு பட்டது
என் என்று இயம்புவாம்!29.-இருசேனையும் அற்றையிரவுபோக்கினவகை.

தருமன் மா பெரு சேனை தன்னுளார் – தருமபுத்திரனது சிறந்த
பெரிய சேனையிலுள்ள வீரர்கள், தங்கள் ஆதரத்தொடு – தமக்குரிய அன்புடனே,
தனஞ்சயன் பொரு வில் ஆண்மைஉம் – அருச்சுனன் போர் செய்த வில்லின்
திறத்தையும், வீமன் மா மகன் பொருத வீரம்உம்-வீமனது சிறந்தகுமாரனான
கடோற்கசன் போர்செய்த வீரத்தன்மையையும், புகழ்ந்து, பாடினார் – புகழ்ந்து
துதித்தார்கள்; அரவகேதனன் சேனை தன்னுள்ளார்- பாம்புக்கொடியனான
துரியோதனனது சேனையிலுள்ளவர்கள், அழிந்த மன்னருக்கு அமுது அரற்றினார்-
(தம்பக்கத்தில் இறந்த அரசர்க்காகப்புலம்பிக் கதறினார்கள்; (இவ்வாறு), இழுங்கா
சேனைஉம் – இருதிறத்தாரது சேனைகளும், கண் படாமல் – தூங்காமல், அன்று
இரவு – அன்றையிராத்திரி முழுவதும் பட்டம் அடைந்தநிலைமையை, என் என்று
இயம்புவாம் – (யாம்) என்ன வென்றுசொல்வோம்? (எ – று.)-சொல்வது அரிது
என்றபடி.

     ஆதரத்தொடு புகழ்ந்துபாடினார் என இயையும். தநஞ்சயன் என்னும்
வடமொழிப்பெயர்க்கு – செல்வத்தைச் சயித்தவனென்று பொருள்;  தருமபுத்திரன்
ராஜசூயபாகஞ் செய்யவேண்டியபொழுது, அவன் கட்டளையால் அருச்சுனன்
வடதிசையிற் சென்று பல அரசர்களை வென்று அவர்கள் செல்வத்தைத் திறை
யாகக் கொணர்ந்ததனால், இவனுக்கு இப்பெயர் வந்தது; இனி, இதற்கு-
வெற்றியையே செல்வமாகக் கொள்பவ னென்றும் பொருள் கொள்ளலாம். பட்டது –
முறையே அடைந்த இன்பமும் துன்பமும் பி-ம்: தருமன்மாமகன்சேனை

நென்னல் அம் கையில் கொண்டது என்னையே, நேமியாக,
அந் நீல மேனியான்;
இன்னமும் பொரத் தேடும், ஆகவத்து இன்றும்’ என்றுகொண்டு,
எண்ணியே கொலோ?
தன் நெடுந் தனிச் சயிலமும் பொலந் தமனியத் தடஞ்
சயிலம் ஆகவே,
மின் நெடுஞ் செழுங் கதிர் பரப்பினான்-வெய்ய ஏழ் பரித்
தேர் விபாகரன்.30.-மறுநாள் சூரியோதய வருணனை.

அ நீலம் மேனியான் – நீலநிறமுள்ள திருமேனியையுடைய
அக்கண்ணபிரான், நென்னல் – நேற்று, நேமி ஆக – சக்கரமாக, அம் கையில்
கொண்டது – அழகிய (தனது) திருக்கையில் எடுத்துப் பிடித்தது, என்னையே-;
(ஆதலால்), இன்னமும்-, இன்றுஉம் – இன்றைக்கும், ஆகவத்து – போர்க்களத்தில்,
பொர – போர்செய்யும்பொருட்டு, தேடும் – (என்னைத்) தேடுவான்,’ என்று
கொண்டுஎண்ணிஏ கொல்ஓ – என்று நினைத்துத்தானோ, வெய்ய ஏழ் பரி தேர்
விபாகரன் -வெவ்வியஏழு குதிரை பூண்ட தேரையுடைய சூரியன், தன் நெடு தனி
சயிலம் உம்பொலம் தபனியம் தட சயிலம் ஆக – தனது உணர்ந்தஒப்பற்ற
உதயகிரியும் அழகியபொன்மயமான பெரிய மகாமேருகிரியாகும்படி
[செந்நிறமடையுமாறு], மின் நெடுசெழு கதிர் பரப்பினான். விளங்குகிற நீண்ட
மிக (தனது) சிவந்தகிரணங்களைப்பரவச் செய்தான் [உதித்தான் என்றபடி];
(எ-று.)

     ஏதுத்தற்குறிப்பேற்றவணி. சூரியன் திருமாலினது சக்கராயுதத்தின்
அமிசமாதலால், இங்ஙனங் கூறினது. என்றுஎண்ணிக்கொண்டு கொலோ
எனமொழிமாற்றி யுரைப்பினும் அமையும். சைலம், தபநீயம், விபாகரன் –
வடசொற்கள், சைலம்-சிலாமயமானது: சிலை – கல். தபநீயம்-(நெருப்பில்)
தபிக்கப்பட்டு விளங்குவது; தபித்தல் – எரித்தல். விபாகரன் என்பது –
விசேஷமாகஒளியைச் செய்பவ னென்றும், விசேஷகாந்திக்கு இருப்பிடமானவ
னென்றும்பொருள்படும்; முறையே வி பா கரன் என்றும், வி பா ஆகரனென்றும்
பிரியும்: வி -விசேஷம், பா – பிரகாசம்.     

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading