ஸ்ரீ.வில்லிபாரதம் – மூன்றாம் பாகம் -32. நான்காம் போர்ச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

தேடிய அகலிகை சாபம் தீர்த்த தாள்,
நீடிய உலகு எலாம் அளந்து நீண்ட தாள்,
ஓடிய சகடு இற உதைத்து, பாம்பின்மேல்
ஆடியும் சிவந்த தாள்,-என்னை ஆண்ட தாள்.கடவுள் வாழ்த்து

என்னை ஆண்டதாள் – என்னை அடிமையாக
ஆட்கொண்டருளிய (திருமாலினது) திருவடிகள்,-தேடிய – (எங்கு உள்ளாளென்று)
தேடத்தக்க [இன்னாளென்று அறியவெண்ணாதபடி வேற்றுருவடைந்த], அகலிகை –
அகலிகையயினது, சாபம் – சாபத்தை, தீர்த்த – (ஸ்ரீராமாவதாரகாலத்தில்)
நீக்கியருளிய, தாள் – திருவடிகளும், நீடிய உலகு எலாம் – நீண்ட
உலகங்களெல்லாவற்றையும், அளந்து – (திரிவிக்கிரமாவதார காலத்தில்)
அளவாநின்றுகொண்டு, நீண்ட – நீண்டுசென்ற, தாள் – திருவடிகளும், ஒடிய –
(தன்னைக்கொல்லும்பொருட்டு) விரைந்துவந்த, சகடு – சகடாசுரன், இற –
அழியும்படி, உதைத்து – (கிருஷ்ணாவதாரகாலத்திலே) உதைத்து, பாம்பின் மேல்
ஆடிஉம் – (காளியனென்னும்) நாகத்தின்மேல் கூத்தாடியும், சிவந்த –
செந்நிறமடைந்த, தாள் – திருவடிகளுமாம்.

     தமக்குஉரிய கடவுளினது சீர்பாதங்களின் பற்பல மகிமையை எடுத்துக்
கூறியவாறு. ‘தேடியவ்வகலிகை’ என்ற பாடத்துக்கு – அவ்வகலிகையுள்ள
விடத்தில்தாமாகச்சென்று என்ற பொருள் கூறுக. சகடு – ஸகடம் என்னும்
வடமொழித் திரிபு:பண்டியென்று பொருள். ஆடியும், உம் – இறந்ததுதழுவியது.
‘உதைத்தும்’ எனப்பாடங்கொள்ளின், இரண்டும்- எண்ணும்மை.

     அகலிகை – அஹல்யா என்னும் வடமொழித் திரிபு: இச் சொல்லுக்கு
அழகில்லாமையில்லாதவ ளென்று பொருள்: மிக்க அழகுடையவ ளென்று கருத்து;
ஹலம் என்றார் விரூபம்: ஹல்யம் – அழகின்மை. இவள்-கௌதம முனிவரது
மனைவி: சநகமகாராசாவுக்குப் புரோகிதராகிய சதாநந்தமுனிவரது தாய். பிரமதேவர்
பூர்வத்தில் ரூபத்திலுங் குரலிலும் பேதமில்லாமல் ஒருபடிப்படவே பிரஜைகளைப்
படைத்துவந்தார்; பின்பு, ஒருவர்க்கொருவர் வேற்றுமையின்றி யிருப்பது நலமன்
றெனக் கருதி, முன்படைத்த பிரஜைகளுக்கு அந்தந்த அங்கங்களிலுள்ள
சிறப்பையெல்லா மெடுத்து, அதைக்கொண்டு அழகுமிகுந்த பெண்ணொருத்தியைச்
சிருஷ்டித்து, அவளுக்கு அஹல்யையென்று பெயரிட்டார்;  அப்பொழுது இந்திரன்
இம்மேலான பெண்ணுக்குக் தக்ககொழுநன் மேலான தானேயன்றி வேறில்லை
யென்று செருக்குற்றிருந்தான்; படைத்தற்கடவுள் அவளை அவனுக்குக் கொடாமல்
கௌதமமுனிவரிடம் கொடுத்து ‘இவளைப் பாதுகாத்துவாரும்’ எனக்
கட்டளையிட்டார்; அவ்வாறே அவர் வெகுகாலம் பாதுகாத்துப் பின்பு
பிதாமகக்கடவுளிடங் கொணர்ந்து விட்டார்; கௌதமரது மனஞ் சபலப்படாம
லிருந்ததையும், அவரது தவநிட்டையையுங் கண்டு, நான்முகக்கடவுள் உவந்து
அம்முனிவருக்கே அவளை மனைவியாக்கினார்; இந்திரனோ பொறாமை கொண்டு
வேற்றுருவத்தால் அவளைக் கற்பழிக்கக் கருதினான்: இவ்வாறு
பலநாளாய்ப்பெருங்காதல்கொண்டிருந்த தேவேந்திரன் ஒருநாள் நடுராத்திரியில்
கௌதமராச்சிரமத்துக்கு அருகேவந்து பொழுதுவிடியுங்காலத்துக் கோழிகூவுவது
போலக் கூவ, அது கேட்ட முனிவர் சந்தியாகாலஞ் சமீபித்துவிட்ட தெனக்கருதி
யெழுந்து காலைக்கடன் கழிக்கும்பொருட்டு நீர்நிலைநோக்கிப் புறப்பட்டுச்செல்ல,
அப்பொழுது இதுவேசமயமென்று இந்திரன் அம்முனிவருருக்கொண்டு
ஆச்சிரமத்துட்சென்று இவளோடு கலக்கையில், இவளும் ‘தன்கணவரல்லன்,
இந்திரன்’ என்று உணர்ந்தும் விலக்காமல் உடன்பட்டிருக்க, அதனை
ஞானக்கண்ணாலறிந்து உடனே மீண்டுவந்த அம்முனிவர் இவளைக்
கருங்கல்வடிவமாம் படியும் இந்திரனை உடம்புமுழுவதிலும்
ஆயிரம்பெண்குறியையடையும்படியுஞ் சபித்து, உடனே அவர்கள்
அஞ்சிநடுங்கிப்பலவாறு வேண்டிக்கொண்டதற்கு இரங்கி, முறையே, ‘ஸ்ரீராமனது
திருவடிப்பொடிபடுங்காலத்து இக்கல்வடிவம் நீங்கிச் சுயவுருவம் பெறுக’ என்றும்,
‘அப்பெண்குறிகள்பிறர்க்குக் கண்களாகப் புலப்படும்’ என்றும் அவர்களுக்கு
அநுக்கிரகிக்க, அவ்வாறேகல்லுருவமாய்க் கிடந்த அகலியை, ஸ்ரீராமலக்ஷ்மணர்
விசுவாமித்திரரோடுமிதிலைக்குச் செல்லும்போது ஸ்ரீராமனது திருவடித்துகள்
பட்டமாத்திரத்தில்சாபம்நீங்கி இயற்கையுருவமடைந்தா ளென்பது, முதலடியின்
கதை.
 ‘கோதமன்றன்பன்னிக்கு முன்னையுருக் கொடுத்ததிவன், போதுநின்ற
தெனப்பொலிந்த பொலன்கழற்காற்பொடிகண்டாய்’ என்றது கம்பராமாயனம்.
கௌதமர் இந்திரனைஆண்குறியிழக்கும்படியும், அகலிகையை அரூபியாகி
உணவில்லாமற் பலநாள்சாம்பலிலே கிடக்கும்படியுஞ் சபித்திட்டன ரென்றும்,
இந்திரனைப் பகைவன்கையிலேஅகப்பட்டுப் பேரவமானமடையும்படி
சபித்ததாகவும், இன்னும் சிறிது வேறுபடுத்தியும்இவ்வரலாறு நூல்களிற் கூறப்படும்.

     மூன்றாமடியிற் குறித்த சரித்திரம்:- நந்தகோபகிருகத்தில் ஒரு
வண்டியின்கீழ்புறத்தில் தொட்டிலிற் பள்ளிக்கொண்டிருந்த ஸ்ரீகிருஷ்ணன், ஒரு
காலால்அச்சகடத்தில் கம்ஸனால் ஏவப்பட்ட அசுரனொருவன் வந்து ஆவேசித்துத்
தன்மேலே விழுந்து தன்னைக் கொல்லமுயன்றதை அறிந்து, பாலுக்கு
அழுகிறபாவனையிலே தன் சிறிய திருவடிகளை மேலேதூக்கியருள அவ்வடிகளால்
உதை பட்டமாத்திரத்தில் அச்சகடு திருப்பப்பட்டுக் கீழேவிழுந்து அசுரனுள் பட
அழிந்த தென்பது.

     இதுமுதல் நான்குகவிகள் – பெரும்பாலும் மூன்றாஞ் சீரொன்று மாச்சீரும்,
மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள். 

நற் பகலிடை வரு நளின நாயகன்
பொற்பு அகலுற ஒளி புரியும் நேமியான்
பிற் பகல் அணியையும், பிறங்கு சேனையால்,
முற் பகல் வியூகமே ஆக மூட்டினான்.2.-பாண்டவசேனை அர்த்தசந்திரவியூகமாகவே வகுக்கப்படுதல்.

நல் பகலிடை வரும் – நல்ல மத்தியானகாலத்திலே
காணப்படுகிற,நளினம் நாயகன் பொற்பு – தாமரைக்குக் கொழு
நனானசூரியனது விளக்கமும், அகலுற – நீங்கும்படி, ஒளி புரியும்-(தான் மிகுந்த)
பிரகாசத்தைச்செய்கிற, நேமியான்-(சுதர்சந மென்னுஞ்) சக்கரா யுதத்தையுடைய
கண்ணபிரான்,-பின் பகல் அணியைஉம் – அடுத்தநாளின் [நான்காநாளின்]
படைவகுப்பையும். பிறங்கு சேனையால் – (வெற்றியால்) விளங்குகிற
(பாண்டவர்களின்) சேனைகளைக்கொண்டு, முன் பகல் வியூகம்ஏ ஆக  –
(இதற்கு)முந்தினநாளின் [மூன்றாநாளில் அமைத்த] வியூகமாகவே
[அர்த்தசந்திரவியூகமாகவே], மூட்டினான் – வகுத்திட்டான்;

     “ஸூதர்ஸநம் பாஸ்கரகோடி துல்யம்” என்றபடி எம்பெருமானது திருவாழி
கோடிசூரியப்பிரகாச முடையதாய் விளங்குதலால்,’ நளினநாயகன் பொற்பு அகலுற
வொளிபுரியுநேமி’ என்றார். நளிந நாயகன்-வடசொற்றொடர்.  

கார் முகில் வண்ணனைக் கண்டு, காணலார்-
தாமும் அவ் வியூகமே சமைத்து முந்தினார்;
ஏமமோடு எதிர் முனைந்து இருவர் சேனையும்,
போர் முரசு எழ எழ, பொங்கி ஆர்த்தவே.3.-துரியோதனன் பக்கத்தவரும் காருடவியூகமாகவேவகுக்கப்பட,
இரு சேனையும் போர்ப்பறை முழங்க ஆர்த்தல்.

கார் முகில் வண்ணனை கண்டு – கரிய மேகம்போன்ற
திருநிறத்தையுடைய கண்ணபிரானைப் பார்த்து [கண்ணன் முந்தினநாள்
வியூகமாகவே அன்றும் அமைத்ததை நோக்கி யென்ற படி], காணலார் –
பகைவர்கள், தாம்உம்-தாங்களும், அ வியூகம்ஏ சமைத்து முந்தினார் – அந்த
[மூன்றா நாளில் வகுத்தகாருட] வியூகமாகவே அணிவகுத்து(ப் போருக்கு)
முற்பட்டார்கள்; (அப்பொழுது), இருவர் சேனைஉம்- இருதிறத்தாரது
சேனைகளும்,ஏமமோடு-களிப்புடனே, எதிர் முனைந்து – எதிரெதிராக வந்து
கலந்து, போர் முரசுஎழ எழ-போருக்குரிய பறைகள் மிகுதியாக முழங்க,
பொங்கி ஆர்த்த-ஊக்கங்கொண்டு ஆரவாரித்தன;  (எ – று.)

     போர்ப்பறையோசையைக் கேட்குந்தோறும் வீரர்க்குப்போரில் உற்சாகம்
மிகுதியாக உண்டாதல் இயற்கை யாதலால், ‘போர்முரசெழவெழப் பொங்கியார்த்த’
என்றார். இச்செய்யுளில் ஒன்று நான்காம் அடிகளில் ரகர வொற்றிடைவந்த
ஆசெதுகை காண்க.

ஏழ்-இரு புவனமும் ஏந்து மேருவைச்
சூழ்வன கிரிக் குழாம் சுற்றுமாறுபோல்,
பாழி அம் புய கிரிப் பவனன் மைந்தனை
வேழ வெம் படையுடை வேந்தர் சூழவே.4.-வீமனை வேழப்படை வளைதல்.

ஏழ் இரு புவனம்உம் ஏந்து மேருவை-பதினாலு உலகங் களையுந்
தாங்கவல்ல மகாமேருகிரியை, சூழ்வன கிரி குழாம் சுற்றும் ஆறு போல்-
சுற்றிலுமுள்ள மலைகளின் கூட்டம் சூழ்ந்துநிற்கும் விதம் போல,-பாழி அம் புய
கிரிபவனன் மைந்தனை-வலிமையையுடைய அழகிய மலைபோலுந்
தோள்களையுடைய வாயுகுமாரனான வீமனை, வெம் வேழம் படை உடை
வேந்தர் சூழ – கொடிய யானைச்சேனையையுடைய பகையரசர்கள் (வந்து)
வளைந்துகொள்ள, – (எ-று.)-இதில் ‘சூழ’ என்ற வினையெச்சத்துக்கு, மேற்
பதினொரு பாடல்களிலுள்ள ‘தோலாயின’ முதலிய முற்றுக்க ளெல்லாம்
முடிக்குஞ்சொல்லாம்.

     உவமையணி. மலை, மேலே எவ்வளவு உயர்ந்து காணப்படுகிறதோ,
அவ்வளவு கீழிலும் பொருந்திப் பூமியைத் தாங்குதலால், ‘பூதரம்’
எனப்படுகிறதன்மைபற்றி, ‘ஏழிருபுவனமுமேந்து மேரு’ என்றார். ‘ஏழிரும்புவனம்’
என்ற பாடத்திற்கு – ஏழுதீவுகளாகவுள்ள பெரிய பூமியென்று பொருளாம்.

ஆலாலம் எனக் கதுவா, அதிரா,
மேல் ஆள் விழ, வீமன் வெறுங் கைகளால்,
ஏலா உடல் என்பு உக, மோத, வெறுந்
தோல் ஆயின-சிற்சில தோல்இனமே.5.-அவ்யானைச்சேனையை, வீமன் தனது ஆற்றலாற் பலவாறு
சிதறடித்தமையை, பதினொருபாடல்கள் வருணிக்கும்.

(அப்பொழுது), வீமன்-, ஆலாலம் என – ஹாலாஹல
விஷம்போல,கதுவா-பெருஞ்சினம்பற்றி, அதிரா – ஆரவாரஞ்செய்து, மேல் ஆள்
விழ -(அவ்யானைகளின்) மேலிருந்த வீரர் கீழ்விழும்படி, வெறு கைகளால் ஏலா –
(ஆயுதமெதுவு மேந்தாத தனது) வறுங்கைகளால் (யானைகளை) எடுத்து, உடல்
என்பு உகமோத-(அவற்றின்) உடம்பி லுள்ள எலும்புகளெல்லாம் உதிரும் படி
தாக்கியதனால், சில்சில தோல் இனம்-சிலசில யானைக்கூட்டங்கள், வெறு தோல்
ஆயின – வெறுந் தோல்மாத்திரம் மிகுந்தவையாயின; (எ – று.)

     யானைக்கு இயற்கையாகவுள்ள தோல்என்னும் பெயர்க்கு இங்கே கவி
சாதுரியமாக ஒரு காரணங் கற்பித்துக் கூறியதனால், இது – ‘நிருக்தி‘ என்னும்
பிரிநிலைநவிற்சியணியின் பாற்படும். இயற்கைப்பெயர்களுக்குக் காரணங்கற்பித்தல்,
இவ்வணியின் இலக்கணம். இவ்வணியை அடுத்த பலகவிகளிலுங்காண்க. இதில்
தோல் என்ற சொல் அடுத்து வெவ்வேறு பொருளில் வந்தது-
மடக்கென்னுஞ்சொல்லணி.  “யானையும் வனப்பு மதளுந் தோல்வியுந்,
தோலென்றுரைப்பார் தோற்பலகையு மாகும்” என்னும் பலங்கொண்டவ னாதலால்,
யானைகளை இங்ஙனம் எளிதில் அழிக்கலாயிற்று. ஆலாலம் – வடமொழித்திரிபு;
இது, தவறாது அழித்தற்கு உவமை.

     இதுமுதல் பதினெட்டுக்கவிகள் – பெரும்பாலும் எல்லாச்சீர்களும்
மாச்சீர்களாகிய அளவடி நான்கு கொண்ட கலிவிருத்தங்கள்; இவற்றை, முதற்சீர்
மாச்சீரும், இரண்டாஞ்சீர் கனிச்சீரும், மூன்றாஞ்சீர் காய்ச்சீருமாகிய சிந்தடி
நான்குகொண்டுவந்த வஞ்சிவிருத்தங்களாக அலகிடினுமாம்.    

மேல் வாய் தம கையொடு மேல் எழவும்,
தோல் வாய் அவை கீழ் விழவும், துணியா,
மால் வாரணம் வாய்கள் கழன்றன, முன்
நால்வாய் எனும் நாமம் நலம் பெறவே.

மேல் வாய் தம கையொடு மேல் எழஉம் – மேல்வாய் தமது
துதிக்கையோடு மேற்கிளம்பவும், தோல் வாய் கீழ் விழஉம்-தோல் மயமான
கீழ்வாய்கீழே தாழவும், அவை துணியா- அவ்விரண்டு வாய்களுந் தனித்தனி
அறுபட்டு,மால் வாரணம்-பெரிய மதயானைகள், முன் நால்வாய் எனும் நாமம்
நலம் பெறஏ-(தொங்குகின்ற வாயையுடைமையால் தமக்கு) முன்னமேயுள்ள
நால்வாயென்னும்பெயர் (இப்பொழுது எண்ணினாலும்) சிறப்புறும்படி, வாய்கள்
கழன்றன-வாய்கள் கிழியப்பெற்றன;  (எ-று.)

     தொங்குகிற வாயை யுடைமையால் வினைத்தொகைப்புறத்துப் பிறந்த
அன்மொழித்தொகையாக முன்பு நால்வாயென்று பெயரிடப்பட்டுள்ள யானைகள்,
அப்பொழுது, மேல்வாய் கீழ்வாய் என்னுமிரண்டும் வீமன்செய்த போரில் தனித்தனி
துணிபட்டு நான்கு வாயையுடையனவாய், பண்புத்தொகைப்புறத்துப்பிறந்த
அன்மொழித்தொகையாகவும் நால்வா யென்னலாம்படியாயின என்க.

மதி வெண்குடை மாருதி வன்புடனே
குதிகொண்டு ஒரு கைகொடு குத்துதலால்,
அதிர் சிந்துர வல் உரம் அத்தனையும்
எதிர் சிந்துரம் ஆகி, இளைத்தனவே.

மதி வெண் குடை மாருதி-பூர்ணசந்திரன்போன்ற
வெண்கொற்றக்குடையையுடைய வாயுகுமாரனான வீமன், வன்புடனே –
வலிமையோடு, குதி கொண்டு – பாய்ந்து, ஒரு கைகொடு குத்துதலால்-(தனது)
ஒருகையினால் [முட்டியால்] குத்தினதனால், அதிர் சிந்துரம் –
முழங்குந்தன்மையனவான யானைகள், வல் உரம் அத்தனைஉம் எதிர் சிந்துரம்
ஆகி – வலிய (தமது) உடம்பு முழுவதும் எதிரிலே பொடிபட்டு, இளைத்தன-
மெலிந்தன;(எ – று.)

     யானையைக் குறிக்கும்பொழுது, ஸிந்துரமென்னும் வடசொல்லுக்கு –
சிந்துதேசத்தில் சஞ்சரிப்ப தென்று பொருள். உரம் – மார்பு; உரஸ் என்னும்
வடமொழித்திரிபு: இது இலக்கணையாய், இங்கே உடம்பை யுணர்த்திற்று.
நான்காமடியில், ஸிந்தூரம் – செந் துகள்.   

உடலில் தசை யாவும் உடைந்து, நெடுங்
குடல் அற்று விழும்படி குத்துதலான்,
மிடல் பற்றிய வீமன் வெறுங் கைகளால்
அடல் அத்திகள் அத்திகள் ஆயினவே.

உடலில் தசை யாஉம் உடைந்து – உடம்பிலுள்ள சதைகளெல்லாம்
சரிந்து, நெடு குடல் அற்று விழும்படி – நீண்ட குடலும் அறுந்து கீழ்விழும்படி,
மிடல் பற்றிய வீமன் – வலிமை பொருந்தின வீமசேனன், வெறு கைகளால்
குத்துதலால் – ஆயுதமில்லாத (தனது) கைகளால் குத்தியதனால், அடல் அத்திகள்
அத்திகள் ஆயின –  வலிமையையுடைய யானைகள் எலும்புமாத்திர மாயின; (எ-று.)

உயிர்வாழ்ந்தபொழுதுள்ள அத்தியென்னும் பெயர் உயிர் நீங்கினபின்பு
வேறுவகையாலும் இருந்த தென்பது, கவியினது சதுரப்பாடு. அத்தி என்பது –
இவ்விருபொருளு முடையதாதலை “யானையு மொருமரப் பெயருமென்பு,
மார்கலிப்பெயரு மத்தியென்றாகும்” என்ற பிங்கலந்தையினாலுமறிக.
அத்தியென்பது -யானையைக் குறிக்கும்பொழுது, ஹஸ்தீயென்னும் வடமொழித்
திரிபென்றும்;எலும்பைக் குறிக்கும்பொழுது, அஸ்தியென்னும் வடமொழித் திரி
பென்றுங் காண்க.ஹஸ்தம் – கை, இங்கே துதிக்கை;  அதனையுடையது –
ஹஸ்தீ.தசை – ஊன்.

கந்தாவகன் மொய்ம்பு உறு காளை, புயக்
கந்தால், அமர் செய்து கலக்குதலின்,
தந்தாவள சேனை தரிப்பு அறவே
தம் தாவளம் உற்றன, சாயுறவே.

மொய்ம்பு உறு – வலிமைமிகுந்த, காந்தாவகன் காளை –
வாயுவினதுகுமாரனான வீமன், புயம் கந்தால் – (தனது) தோள்களாகிய
தூண்களால், அமர்செய்து கலக்குதலின் – போர் செய்து கலங்கச்செய்ததனால்,
தந்தாவளம் சேனை -யானைச் சேனைகள், தரிப்பு அற – (பின்வாங்காது)
எதிர்நிற்றல் இல்லையாம்படி, சாய்உற – அழிவுண்டாக, (அஞ்சி), தம் தாவளம்
உற்றன – தமது இருப்பிடத்தைஅடைந்தன; (எ-று.)

     இச்செய்யுளில் முன்னிரண்டடிகளிலும் பின்னிரண்டடிகளிலும் முதலில்
எழுத்துக்கள் தனித்தனி ஒத்துநின்று பொருள் வேறுபட்டு வந்தது – யமக
மென்னுஞ்சொல்லணி. கந்தவஹ னென்னும் வடசொல்லுக்கு-வாசனையை வகிப்ப
னென்றும்,தந்தாவளம் என்னும் வடசொல்லுக்கு – தந்தங்களை யுடைய தென்றும்
பொருள். கந்து- ஸ்கந்தமென்னும் வடமொழித்திரிபு. சாயுற – மீளஎன்றுமாம்.
தாவளம் – இடமாதலை”சரண மாவாசம் பக்கந்தாவள நியமந் தாமம்” என்னும்
நிகண்டினாலு மறிக. சாய்-முதனிலைத் தொழிற்பெயர்.   

வெவ் வாயுவின் மைந்தன் வெகுண்டு, ஒரு தோல்
மொய் வாகுவில் வைத்து, எதிர் மோதுதலால்,
கை, வாலதி, மெய், தலை, கால்கள், கரந்து,
அவ் வாரணம் வாரணம் ஆகியதே.

வெம் வாயுவின் மைந்தன் – கொடிய வாயுவினது குமாரனான
வீமன், வெகுண்டு – கோபித்து, ஒரு தோல் – ஒரு யானையை, மொய் வாகுவில்
வைத்து – வலிய கையில் எடுத்துக் கொண்டு, எதிர் மோதுதலால் – எதிரே
தாக்கியதனால், கை வாலதி மெய் தலை கால்கள் கரந்து – கையும் வாலும் உடம்பும்
தலையும் கால்களும் மறைந்து, அ வாரணம் – அந்தயானை, வாரணம் ஆகியது –
கோழிபோலச் சுருண்டது; (எ-று.)

வாரணமாகியது என்பதற்கு – சங்குபோலாயிற்று என்று உரைப்பாருமுளர்.
“யானையுங் கோழியுஞ் சங்கும் வாரணம்” என்ற திவாகரத்தை இங்கு அறிக.
வாரணம் – கடலென்றுகொண்டு, எல்லா வுறுப்புக்களும் தெரிதலின்றிக்
கருநிறமொன்றே தெரிதலால், இவ்வாறு கூறியதென உரைவகுத்தாரு முளர்: அது
சிறவாதென்பது மேற்பாடலை நோக்கின் விளங்கும். வாகு – இங்கே கை;
“தோளுற்றொர்தெய்வந் துணையாய்” என்ற சிந்தாமணியில், ‘தோள்’
என்பதுபோல.

கம்பித்தன கார் உடல், பேர் உயிரும்
கும்பித்தன,-வாயு குமாரன் இவன்
அம் பொற் கர பங்கயம் அள்ளுதலின்,-
தும்பிக் குலம் ஆயின, தும்பிகளே.

 கார் உடல் கம்பித்தன – கரிய உடல் நடுங்கின வாகும்படியும்,
பேர்உயிர்உம் கும்பித்தன – பெரிய உயிரும் உள்ள டங்கினவாம்படியும், வாயு
குமாரன்இவன்-வாயுவின்மகனான இவ்வீமன், அம் பொன்கரம் பங்கயம்
அள்ளுதலின் -அழகிய பொன்னிறமான தன் கைகளாகிய தாமரைமலர்களில்
எடுத்ததனால்,தும்பிகள் – யானைகள், தும்பி குலம் ஆயின-வண்டின்
கூட்டமாயின; (எ – று.)

     “தும்பியே களிறு வண்டாம்” என்ற நிகண்டையுங் காண்க, கம்பித்தன.
கும்பித்தன – வடசொல்லடியாப்பிறந்த பலவின்பால் முற்றேச்சங்கள்; கம்பம்-
நடுக்கம்:கும்பித்தல்-ஒடுங்குதல், கரிய பெரிய யானைகள், கரியசிறிய
வண்டுகள்போலஉடல்சுருங்கின என்க, யானையை வண்டென்பதற்கு ஏற்ப,
வீமன்கையைத்தாமரைமல ரென்றார்: உருவகவணி, பி-ம்: தம்பித்தனகாருடல்,

மின் நாக மணிப் புயன் வெங் கதையால்
முன்னாக மலைந்து முருக்குதலால்,
எந் நாகமும் நாகம் எனும்படியே
மன் ஆகவம் எங்கும் மடிந்தனவே.

பொன் நாகம் மணி புயன் – பொன்மலையாகிய மகா
மேருபோன்றஅழகிய தோள்களையுடைய வீமன், வெம் கதையால் – கொடிய
(தனது)கதாயுதத்தால், முன் ஆக மலைந்து – எதிராகப் போர்செய்து,
முருக்குதலால் -அழித்ததனால், எ நாகம்உம் – எல்லா யானைகளும், நாகம்
எனும் படிஏ -மலைகளென்று உவமைசொல்லும்படி, மன் ஆகவம் எங்கும் –
பெரிய போர்க்களம்முழுவதிலும், மடிந்தன – இறந்துவிழுந்துகிடந்தன;  (எ-று.)

     “நாகம் விண் குரங்கு புன்னை நல்தூசு மலைபாம்பி யானை” என்பது
நிகண்டு. பொன் ஆகம் எனப் பிரித்தால், அழகிய அல்லது ஜயலக்ஷ்மிதங்குகிற
மார்பென்னலாம். நாகம் – யானையைக் குறிக்கும்பொழுது, மலையில்
வாழ்வதென்றும் [நகம்-மலை]; மலையைக் குறிக்கும்பொழுது, சலியாததென்றும்
காரணங் காண்க.  பி-ம்: மின்னாக மணிப்புயன். 

கோடும் கரமும் பறிய, குதிகொண்டு
ஓடும் குருதிப் புனலூடு, உடலம்
மூடும்படி யாவரும் மூழ்குதலால்,
ஆடும் கயம் ஆயின, அக் கயமே.

கோடுஉம் கரம்உம் பறிய – தந்தங்களுந் துதிக்கையும்
பிளந்தொழிய, குதிகொண்டு ஓடும் – (அப்பொழுது அந்தக் கொம்புங் கோடும்
பறியுண்ட இடத்தினின்று) பாய்ந்தோடுகின்ற, குருதி புனலூடு – இரத்த
வெள்ளத்தில்,உடலம் மூடும் படி யாவர்உம் மூழ்குதலால் – (தம்தம்) உடம்பு
மறையும்படி பலரும்மூழ்கவிருந்ததனால், அ கயம்- அவ்யானைகள், ஆடும்
கயம் ஆயின-நீராடுதற்குரியகுளங்களாயின;   (எ – று.)

     தந்தங்களுந் துதிக்கையும் பறியப் பாயும் இரத்தப்பெருக்குக்கு, கரைகளும்
மதகும் உடையப் பாயும் புதுநீர்வெள்ளம் உவமையாம், “குளமுமாழமு நீருங்
குறையுங், களிறும் பெருமையு மென்மையுங் கயமெனல்” என்பது பிங்கலந்தை,
கயம்- யானையைக் குறிக்கும்பொழுது, கஜமென்னும் வடமொழித் திரிபாம்,
புனலூடு. ஊடு- ஏழனுருபு, உடலம். அம்-சாரியை,   

வீசும் தம கைம் முதல் மெய்ம் முழுதும்
கூசும்படி சிற்சில் குழம்புகளாய்,
மூசும் களபக் குலம், மொய்ம்பன் உடல்
பூசும் களபக் களி போன்றனவே.

மூசும் சில் சில் களபம் குலம்-நெருங்கிவருகிற சிலசில
யானைகளின்கூட்டம்,-கூசும்படி – (பார்ப்பவர்) அஞ்சும் படி, வீசும் தம கை
முதல் மெய்முழுதுஉம் குழம்புகள் ஆய் – முன்னேவீசுகிற தம்முடைய துதிக்கை
முதலாகஉடம்புமுழுவதுங் குழைசேறாகி, மொய்ம்பன் உடல் பூசும் களபம் களி
போன்றன -வலிமையையுடைய வீமசேனனது உடம்பில் பூசுதற்கு எதிர்வைத்த
கலவைச்சந்தனக்குழம்பை யொத்தன;

     “கலவையும் யானைக் கன்றுங் களபம்” என்றார் பிங்கலத்தையிலும். களபம்-
யானையைக்குறிக்கும்பொழுது, வடசொல்; பத்துப் பிராயத்து யானைக்கன்றுக்குப்
போதகமென்றும்,-முப்பதுபிராயத்து யானைக் கன்றுக்குக் களபமென்றும்
பெயர்கூறுதல், வடமொழிமரபு. கலவை- குங்குமப்பூ முதலிய
பலவகைவாசனைப்பண்டங்கள் கலக்கப்பெற்ற செந்நிறச்சாந்து. கலவை,
வெற்றிமகளை மணந்திடுதற் கென்க.      

கிரியே என வந்து எதிர் கிட்டின, புன்
பொரியே என, வானிடை புக்கன; போர்
அரிஏறு அனையான் வலிமைக்கு அவர்தம்
கரியே கரி அல்லது, கண்டவர் யார்?

கிரிஏ என வந்து எதிர் கிட்டின – மலைகளேயென்று உவமை
கூறும்படி எதிரில் வந்து நெருங்கின யானைகளெல்லாம், புல் பொரிஏ என
வானிடைபுக்கன – அற்பமானநெற்பொரிகளே யென்று உவமை கூறும்படி
(அப்பொழுதுவீமனால் எளிதில் எறியப்பட்டு) ஆகாயத்திற் பறந்தன;  போர்
அரி ஏறுஅனையான் வலிமைக்கு – போரில் ஆண்சிங்கத்தை யொத்தவனான
வீமனதுபலத்துக்கு, அவர்தம்  கரிஏ கரி அல்லது – அவர்களது [பகைவர்களது]
யானைகளே சாட்சியில்லாமல், கண்டவர் யார் – (வேறே உள்ளபடி) கண்டவர்
எவர்? [எவருமில்லை யென்றபடி]; (எ – று.)

     எவருங் கண்கொண்டு காணவொண்ணாதபடி உக்கிரமாக வீமன்
யானைகளைத் தனதுபேராற்றலால் அழித்திட்டன னென்பதாம். “கரி
யென்பதிருந்தைசான்று கறையடி சேகு நாற்பேர்” என்பது நிகண்டு.
பலபலவகையாக வீமனால்அழிக்கப்பட்ட யானைகளைக்கொண்டே
அவனதுவல்லமையை நன்கு அறியலாம்என்பது, பின்னிரண்டடியின் கருத்து,
பற்பல யானைக்கூட்டத்தை ஒருங்கேஅலட்சியமாக அழித்தல்பற்றி, இங்கே
வீமசேனனுக்குச் சிங்கவேற்றைஉவமைகூறினார்.     

இவ்வாறு வெகுண்டு, இவன் எற்றுதலும்,
கை வாரண வேலை கலக்கம் உற,
தெவ் ஆகிய மன்னவர் தேர்களொடும்
வெவ் வாசிகள்தம்மொடும் வென்னிடவே,16.-வீமன் இங்ஙன் கடுமையாகப் பொருவதனால்
எதிர்மன்னர் தம்வாகனங்களோடு வென்னிடுதல்.

இதுவும், மேற்கவியும் குளகம்,

     (இ-ள்.) இ ஆறு – இப்படி, வெகுண்டு – கோபங்கொண்டு, இவன்-இவ்வீமன்,
எற்றுதலும்-தாக்கினவளவிலே, கை வாரணம் வேலை- துதிக்கையையுடைய
யானைச்சேனையாகிய கடல், கலக்கம் உற-மிகக்கலங்க,-தெவ் ஆகிய மன்னவர் –
பகைவராகிய அரசர்கள், தேர்களொடுஉம்-இரதங்களோடும், வெம் வாசிகள்
தம்மொடுஉம்- உக்கிரமான குதிரைகளோடும், வென் இட – புறங்கொடுத்தோட,(எ-
று.) -‘உடைக்கின்றமை கண்டு உரகத்துவசன்… அவன்மேற்போனான்’ என அடுத்த
கவியிலே முடியும்.

     வாரணமென்பது-யானை கோழி சங்குதடை முதலியபலபொருள் குறிக்கும்
ஒருபெயர்த்திரிசொ லாதலால், அது இங்கே இன்ன பொருளதென
வெளிப்படையாக்குதற்கு, ‘கைவாரணம்’ என்றார்.

உடைகின்றமை கண்டு, உரகத் துவசன்,
குடையும், கொடியும், குளிர் மா முரசும்,
படையும், சில தம்பியரும், பலரும்,
புடைகொண்டு வர, போனான் அவன்மேல்.17.-அதுகண்டு துரியோதனன் வீமன்மீது சேறல்.

உடைகின்றமை-(இங்ஙனம் தன்சேனை) அழிகின்றதை, கண்டு-
பார்த்து, உரகம் துவசன்-பாம்புக்கொடியனான துரியோதனன், குடைஉம் கொடிஉம்
குளிர் மா முரசுஉம் படைஉம் சில தம்பியர்உம் பலர்உம் புடைகொண்டு வர-
வெண்கொற்றக்குடையும் துவசமும் அச்சத்தைத்தருகிற பெரியபேரிகைகளும்
சேனைகளும் சில தம்பிமார்களும் வேறுபலரும் பக்கத்திற்சூழ்ந்துவர, அவன்
மேல்போனான்-அவ்வீமன்மீது (போருக்குச்) சென்றான்; (எ-று.)-இனி, குளிர்
மா முரசு-ஒலிக்கிற சிறந்தபேரிகை யெனவுமாம்.

வீமற்கு எதிர் நின்று, அவன் வில் அறவும்,
சேமக் கவசம் சிதைவுற்றிடவும்,
நாமக் கணை ஏவினன்-நாயகனாம்
மா முத்த மதிக் குடை மன்னவனே.18.-துரியோதனன் வீமனுடைய வில்லும் கவசமும் அழியக்
கணை தொடுத்தல்.

நாயகன் ஆம்-(குருநாட்டுக்குத்) தலைவனாகிய, மா முத்தம் மதி
குடை மன்னவன் – சிறந்த [பெரிய] முத்துக்களினாலாகிய பூர்ணசந்திரன்போன்ற
வெண்கொற்றக்குடையையுடைய துரியோதனராசன், வீமற்கு எதிர் நின்று-(போய்)
வீமசேனனுக்கு எதிரிலே நின்று, அவன் வில் அறஉம்-அவனது வில் துணிபடவும்,
சேமம் கவசம் சிதைவுற்றிடஉம் -(உடம்புக்குப்) பாதுகாப்பாகவுள்ள (அவனது)
கவசம்அழிவடையவும், நாமம் கணை ஏவினன்-அச்சத்தைத்தருகிற அம்புகளைச்
செலுத்தினான்;   (எ – று.)

     சேமம்-க்ஷேமம் என்னும் வடமொழித்திரிபு. நாம் – அச்சப்
பொருளுணர்த்துவதோர் உரிச்சொல்: அம்-சாரியை.   

ஆறு அம்பினில் அற்று அரவத் துவசம்,
நூறு அம்பு அகல் மார்பில் நுழைந்தன; பின்,
வேறு அம்பு தொடுத்திலன், வீமன்; அவன்
மாறு அம்பு தொடுத்தனன், மற்று இவன்மேல்.19.-வீமன் துரியோதனன்மீது கடுமையாகக் கணைதொடுத்தல்.

(அப்பொழுது வீமன்விட்ட), ஆறு அம்பினில்-ஆறு பாணங்களால்,
அரவம் துவசம்-(துரியோதனனது) பாம்புக்கொடி, அற்று – அறுபட, நூறு அம்பு-
(அவ்வீமனது) நூறுபாணம், அகல் மார்பில் நுழைந்தன-(துரியோதனனது) பரந்த
மார்பிலே புதைந்து ஊடுருவின;  பின்-அதன்பின், வீமன்-, வேறு அம்பு
தொடுத்திலன்-வேறுபாணன் தொடுத்தானில்லை; அவன் – அத்துரியோதனன்,
மற்று-பின்பு, இவன்மேல்-இவ்வீமன்மேல், மாறு அம்பு தொடுத்தனன்-
எதிரம்புகளைப்பிரயோகித்தான்; (எ – று.)

     அரவத்துவசன் மார்பில் நூறம்பு நுழைந்த அப்பொழுதில் வீமன்
வேறம்புதொடுக்காமை, தழிஞ்சியென்னும் புறப்பொருள் திணையின் பாற்படும்;
அது-சாய்ந்தார்மேற் படராமை.      

சிங்கக் கொடி அற்று, அணி தேர் சிதைவுற்று,
அங்கத்தில் நுழைந்தன அம்புகளும்;
துங்கக் கடகத் திரள் தோள் புடையா,
வெங் கண் கனல் வீமன் வெகுண்டனனே.20.-துரியோதனன் கடுங்கணைவிடவே வீமன் வெகுளுதல்.

(துரியோதனன் விட்ட அம்புகளால்), சிங்கம் கொடி அற்று-
சிங்கத்தின்வடிவமெழுதிய (வீமனது) துவசம் துணிபட, அணி தேர் சிதைவுற்று-
அழகிய தேரும் அழிவடைய, அங்கத்தின்உம் அம்புகள் நுழைந்தன –
வீமனுடம்பிலும் துரியோதனனம்புகள் தைத்துச்சென்றன; (அப்பொழுது), வெம்
கண்கனல் வீமன்- உக்கிரமானகண்களிற் கோபாக்கினியுடைய வீமசேனன்,
துங்கம் கடகம்திரள் தோள் புடையா- உயர்வானவையும் கடக மென்னும்
ஒருவகையணியையணிந்தவையும் திரண்டுள்ளவையுமான தனது தோள்களைக்
(கைகளால்) கொட்டி,வெகுண்டனன் – சினங்காட்டினான்;  (எ-று.)–அற்று,
உற்று- எச்சத்திரிபுகள்.இரண்டாம் அடியில் உம்மை மாறுக. தோள்புடைத்தல்-
கோபாவேசம்.

நொந்தான் இவன்!’ என்று, நுதிக் கதிர் வேல்
அம் தார் முடி மன்னர் அநேகருடன்
வந்தார், பலர் தம்பியர், மைத்துனரும்,
கொந்து ஆர் தொடை வீர குமாரருமே.1.-வீமன்நொந்தானென்று தம்பிமார்முதலியோர் துணையாகவருதல்.

அப்பொழுது),  இவன் நொந்தான் என்று – இவ்வீமன்
(துரியோதனனம்புகளால்) வருத்தமுற்றா னென்று கருதி, நுதி கதிர் வேல் அம் தார்
முடி மன்னர் அநேகருடன் – கூர் நுனியையும் ஒளியையுமுடைய வேலாயுதத்தையும்
அழகிய மாலையையும் கிரீடத்தையு முடைய பல அரசர்களுடனே, பல தம்பியர்
மைத்துனர்உம்-தம்பிமாரும் மைத்துனன்மாருமாகிய அநேகம்பேரும், கொந்து ஆர்
தொடை வீர குமாரர்உம் – பூங்கொத்துப் பொருந்தின மாலையையுடைய
வீரர்களானஇராசகுமாரர்களும், வந்தார் – (வீமனுக்கு உதவியாக) வந்தார்கள்;
(எ-று.)

     நுதி – வடசொல். மைத்துனர் – இங்கே, மனைவியின் உடன் பிறந்தவர்;
என்றது, திரௌபதிக்கு உடன்பிறந்தமுறையாகுபவரை. கொந்து -எதுகை நோக்கிய
மெலித்தல். கொந்து ஆர் தொடை- திரட்சி பொருந்தின மாலை யென்றும்
உரைக்கலாம்.  

மலரும் குடை மன்னவர் வந்தமை கண்டு,
அலரும் கொடி வாள் அரவோன் அருகே,
பலரும் கரி தேர் பரி ஆளுடனே
சிலரும் புவிபாலர் திரண்டனரே.22.-துரியோதனன்பக்கத்தும் பலமன்னர் துணையாகத்திரளுதல்.

(இவ்வாறு வீமனுக்குத் துணையாக), மலரும்  குடை மன்னவர்
வந்தமை – பரந்துவிளங்கும் வெண்கொற்றக் குடையையுடைய பல அரசர்கள்
வந்ததை, கண்டு-, பலர்உம் கரி தேர் பரி ஆளுடனே – யானைவீரரும்
தேர்வீரரும்குதிரைவீரரும் காலாள் வீரரும் ஆகிய (நால்வகை) வீரர்
அநேகரோடும், புவிபாலர்சிலர் உம் – சில அரசர்களும், அலரும் கொடி வாள்
அரவோன் அருகுஏதிரண்டனர் – விரிந்துவிளங்கும் துவசத்திலே கொடியபாம்பின்
வடிவத்தையுடையதுரியோதனனது அருகிலே (உதவியாக வந்து) கூடினார்கள்;
(எ – று.)

     வாள் அரவு-வாள்போலஉக்கிரமான அர வென்க; இனி, ஒளியையுடைய
பாம்பெனினுமாம். மூன்றாமடியை, கரிதேர்பரி ஆள் பலருடனேயும் என
மொழிமாற்றுக. புவிபாலர் – பூமியைக் காப்பவர்.    

எதிர்ந்தார், மன்னர் இரு திறத்தும், ஒருவர்க்கு ஒருவர்;
இடை இடை நின்று
அதிர்ந்தார், சிறு நாண்; பேர் ஒலியால் உடையா
அல்ல, அகிலாண்டம்;
முதிர்ந்தார் போரில் தொடு கணையால், முரண் தோள்
துணிந்தும், முடி துணிந்தும்;
உதிர்ந்தார், தம்தம் உடல் நிலத்தில்; உயர்ந்தார்,
ஆவி உயர் வானில்.23.-இருபடையிலும் மன்னர் கடுமையாகப்பொருது ஆவியிழத்தல்.

இரு திறத்துஉம் – இரண்டுபக்கத்திலும், மன்னர் – பல அரசர்கள்,
ஒருவர்க்கு ஒருவர் எதிர்ந்தார் – ஒருவரோடு ஒருவர் எதிரிட்டார்கள்;  இடை
இடைநின்று – (அவ்யுத்தகளத்தின்) இடந்தோறும் பொருந்திநின்று, சிறு நாண்
அதிர்ந்தார்- சிறியவில் நாணியை(க் கைவிரலால் தெறித்து) ஒலிசெய்தார்கள்;
பேர் ஒலியால் -அந்தப் பெரிய ஓசையினால், அகில அண்டம் உடையா அல்ல
– எல்லாவண்டங்களும் (மிகஅதிர்ந்து) உடைபடாதனவல்ல[யாவும் உடைபட்டன்];
(இன்னும்அவர்), தொடுகணையால் போரில் முதிர்ந்தார் – பிரயோகிக்கின்ற
அம்புகளால்போர்செய்தலில் மிக்கார்கள்; (பின்புபகைவர்படைக்கலங்களால்),
முரண் தோள்துணிந்துஉம்-வலிமையையுடையதோள்கள் அறுபட்டும், முடி
துணிந்துஉம்-தலையறுபட்டும், தம் தம் உடல் நிலத்தில் உதிர்ந்தார் – தம்தமது
உடம்பு தரையிலேசிதறப்பெற்றார்கள்; ஆவி உயர் வானில் உயர்ந்தார் – (தத்தம்)
உயிர் சிறந்தவீரசுவர்க்கத்தில் ஏறப்பெற்றார்கள் [இறந்தார்கள்]; (எ – று.)

     மன்னர் உடல் உதிர்ந்தார், ஆவி உயர்ந்தார் – திணைவழுவமைதி:
‘பேரொலியாலுடையாவல்லவகிலாண்டம்’ என்ற வாக்கியம், வில்நாணொலியைச்
சிறப்பித்துக்கூறவந்த இடைப்பிறவரல்.

     இதுமுதற் பத்துக் கவிகள் – கீழ்ச்சருக்கத்தின் முதற்கவி போன்ற
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள். 

தாமத் தெரியல் வலம்புரியோன் தடந் தாமரைக்
கைத் தனுத் தறிய,
சேமக் கவனப் பவன கதிப் பரிமா நான்கும்
சிரம் துணிய,
மா மொட்டு ஒடிந்து கொடிஞ்சியுடன் மான் தேர்
சிதைய, மார்பு உருவ,
நாமக் கணைகள் பல பட வில் உகைத்தான்,
நின்று நகைத்தானே.24.-வீமன் துரியோதனனுடையவில்முதலியனதுணியஎய்து நகைத்தல்.

(அப்பொழுது), தாமம் – ஒளியையுடைய, வலம்புரி தெரியலோன்-
நஞ்சாவட்டைப் பூமாலையையுடைய துரியோதனனது, தட தாமரை கை – பெரிய
தாமரைமலர்போன்ற கையிலுள்ள, தனு – வில், தறிய – முறிபடவும்,-சேமம்-
நன்மையுள்ள, கவனம் பவனம் கதி – நடையிலே வாயுவினது சஞ்சாரத்தை யொத்த
[விரைந்த], பரிமா நான்குஉம்- (துரியோதனனதுதேர்க்) குதிரைகள் நாலும், சிரம்
துணிய – தலை அறுபடவும்,-மா மொட்டு ஒடிந்து கொடுஞ்சியுடன் மான் தேர்
சிதைய – பெரிய மொட்டு என்னுந் தேருறுப்பு ஒடிபட்டுப் கொடுஞ்சியென்னும்
உறுப்போடு குதிரைகள்பூட்டிய (துரியோதனனது) தேர் அழியவும், மார்பு உருவ –
(அவன்) மார்பு துளைபடவும், நாமம் கணைகள்-அச்சத்தை விளைக்கும்படியான
அம்புகளை, பலபட – பலவாக, வில் உகைத்தான் – (தனது) வில்லினின்று
செலுத்தி,(வீமன்), நின்று நகைத்தான் – எதிர்நின்று (அவனது தோல்வியை
நோக்கிச்)சிரித்தான்; (எ – று,)

     இங்கே, நகைப்பு-பகைவனை இகழ்தல் காரணமாகப் பிறந்தது. இப்பாட்டுக்கு
‘வீமன்’ தோன்றா எழுவாயென்பதை, அடுத்தகவியில் “அவனைப் பெற்றெடுத்தோன்”
என்பதனா லறிக. வலம்புரித் தெரியலோன் என்பது-கைத்தனு, பரி, தேர், மார்பு
என்றநான்கோடும் இயையும். மொட்டு – தேரில்வீரன் ஏறியிருக்கும் ஆசன
மென்றும்,தேரின்கூம்பு என்றும் கூறுவர். கொடிஞ்சி – தாமரை முகைவடிவாகச்
செய்ததேருறுப்பு என்றனர் நச்சினார்க்கினியர். மா என்னும் விலங்கின்
பொதுப்பெயர்,னகரமெய்ச்சாரியை பெற்று இங்கே சிறப்பாய்க் குதிரையை
உணர்த்திற்று.    

முன் நாள் அமரில் கடோற்கசன்தான் முனை வெஞ்
சரத்தால் மூழ்குவித்தான்;
பின் நாள், மீளப் பிறைக்கணையால் பிளந்தான், அவனைப்
பெற்று எடுத்தோன்’
என்னா, இரங்கா, மெய்ந் நடுங்கா, எடுத்தார் அணைத்தார்,
சகுனியும், அப்
பொன் ஆர் தடந் தேர்ச் சல்லியனும், முதலா
உள்ள பூபாலர்.25.-சகுனிமுதலியோர் துரியோதனனை எடுத்தணைத்தல்.

(அப்பொழுது), சகுனியும்-, பொன் ஆர் தட தேர் சல்லியன்
உம்-பொன்னினா லமைந்த [அழகுநிறைந்த] பெரிய தேரையுடைய சல்லியனும்,
முதல் ஆஉள்ள – முதலாகவுள்ள, அ பூபாலர்-அந்த [துணை வந்த] அரசர்கள்,
-‘முன் நாள்அமரில்-முந்தின [மூன்றாவது] நாட் போரில், கடோற்கசன்-, முனை
வெம் சரத்தால்- கூர் நுனியையுடைய கொடிய அம்புகளால், மூழ்குவித்தான்-(நமது
துரியோதனனை)முழுகச் செய்தான்; பின் நாள் – அடுத்த இந்நாளில், அவனை
பெற்று எடுத்தோன்; -அக்கடோத்கசனைப் பெற்ற தந்தையான வீமன், பிறை
கணையால் மீள பிளந்தான்-அர்த்தசந்திரபாணங்களால் மறுபடியும்
(இத்துரியோதனனைப்) பிளந்திட்டான்,’என்னா – என்று சொல்லி, இரங்கா – மன
மிரங்கி, மெய்நடுங்கா – (இவனுக்கு என்னாகுமோ என்று எழுந்த அச்சத்தால் தம்)
உடம்பு நடுங்கி, எடுத்தார் அணைத்தார் – (அத் துரியோதனனை) எடுத்து
அணைத்துக்கொண்டார்கள்;  (எ – று.)

     கடோற்கசன் துரியோதனனை முனைவெஞ்சரத்தால் மூழ்குவித்ததைக்
கீழ்ச்சருக்கத்தில் “துவசம்பிளந்து” என்ற ஏழாங்கவியிற் காண்க. சரத்தால்
மூழ்குவித்தல்-மேலே அம்புமழைபொழிந்து நிறைத்து அவனுருத்தெரியாது மறைத்தல்.
இங்கே ‘ பிறைக்கணை’ என்றதனால், கீழ்க்கவியில் ‘நாமக்கணை’ என்றது-பிறைமுக
வம்புகளை யென்க. அச்சல்லியனென இயைத்தால், அகரச்சுட்டு-வஞ்சனைவழியால்
துரியோதனனுக்குத் துணைவனான தன்மையைக் குறிக்கும். சல்லியன்
தேர்செலுத்துதலில்வல்லவ னாதலால், தேர்ச் சல்லிய னெனப்பட்டான்

தம்முன் தளர்ந்த நிலை கண்டு, தரியார் ஆகி,
தம்பியர்கள்,
‘எம் முன் பொருதற்கு இசைவார்கள் இசைவீர்!’
என்று என்று, இகல் கூறி,
தெவ் முன், செவிகள் செவிடுபடச் சிறு நாண்
எறிந்து, தேர் கடவி,
முன் முன் கடிதின் கணை பொழிந்தார், முகுந்தன்
தடுத்த முகில் போல்வார்.26.-துரியோதனனன் தளர்ந்ததுகண்டு அவன்தம்பிமார் போரில்மூளுதல்.

தம் முன் – தங்கள் தமையனாகிய துரியோதனன், தளர்ந்த-
தளர்ச்சியடைந்த, நிலை-நிலைமையை, கண்டு – பார்த்து, தம்பியர்கள்-(அவனது)
தம்பிமார்கள் பலர், தரியார் ஆகி – மனம் பொறாதவர்களாய், எம்முன்
பொருதற்குஇசைவார்கள் இசைவீர் என்று என்று இகல் கூறி – ‘எங்களெதிரிற்
போர்செய்வதற்குப் பொருந்துபவர்கள் பொருந்துவீர்களாக’ என்று பலமுறை
(தங்கள்)வல்லமையை யெடுத்துச்சொல்லி, தெவ் முன் – பகைவர்களெதிரில்,
செவிகள் செவிடுபட சிறு நாண் எறிந்து – (கேட்பவரின்) காதுகள் (ஒலிமிகுதியால்)
செவிடாகும்படிசிறிய வில்நாணியைத் (தம் கைவிரலால்) தெறித்து (ப்பேரொலியை
உண்டாக்கி), தேர்கடவி-(தம்தம்) தேரைச் செலுத்திக் கொண்டு, முன் முன் –
(ஒருவர்) முன்(ஒருவராக) முந்திவந்து, கடிதின் – விரைவாக, முகுந்தன் தடுத்த
முகில் போல்வார் -கண்ணபிரானால் (கோவர்த்தனமலையைக்கொண்டு)
தடுக்கப்பட்ட மேகம்போல்பவர்களாய், கணை பொழிந்தார்-அம்புமழையைச்
சொரிந்தார்கள்;    (எ-று.)

     இரண்டாம்அடி-வீரவாதம். முன்முன்வருதல், போரில் அவர்களுக்கு உள்ள
ஊக்கத்தை விளக்கும். முகுந்தன் தடுத்த முகில் போல்வார் என்ற உவமை,
அவர்கள்வீமனை ஒன்றுஞ்செய்யமாட்டாமல் அவனால் எளிதில் வெல்லப்
படுதலைக் குறிக்கும்.தம்முன் – தமக்குமுன்பு பிறந்தவன்: முன்-காலவாகுபெயர்.
தெவ்+முன்=தெம்முன்.இசைவார்கள் இசைவீர்-முன்னிலையிற் படர்க்கைவந்த
இடவழுவமைதி.இச்செய்யுளில் இனவெதுகை காண்க.

வில்மேல் விசையின் கடும் பாணம் மேன்மேல் நிறுத்தி,
வேந்தரைப்பார்த்து,
‘என் மேல் நினைவு?’ என்று, அவர் அவர் பேர் இரதம்
துணித்து, சிலை துணித்து,
தன்மேல் வந்த தம்பியரில் தரியாது உடன்ற ஐவர்க்கு
மன்மேல் எய்த வாளி எனத் தொடுத்தான், ஐந்து
வய வாளி.27.-இதுவும்அடுத்த கவியும்-வீமன் வந்தவரை யெதிர்த்துவென்று
ஐந்துதம்பிமாரைச் சுவர்க்கம் அனுப்பினமை கூறும்.

(அப்பொழுது வீமன்), வில்மேல் – (தனது) வில்லிலே,
விசையின் -வேகத்தோடு, கடு பாணம்-கொடிய அம்புகளை, மேல் மேல் நிறுத்தி –
மேலேமேலேவைத்துத் தொடுத்து, வேந்தரை பார்த்து – (எதிர்த்து வந்த அந்த)
அரசர்களைநோக்கி, மேல் நினைவு  என் என்று – இனிமேல் (உங்கள்)
ஆலோசனை என்ன வென்று (இகழ்ச்சிதோன்றச்) சொல்லி, அவர் அவர் –
அந்தந்தஅரசர்களது, பேர் இரதம்- பெரியதேர்களை, துணித்து-அழித்து, சிலை-
விற்களை,துணித்து-அறுத்து, தன்மேல் வந்த தம்பியரில் தரியாது உடன்ற
ஐவர்க்குஉம் -தன்மேல் (போருக்கு) வந்த (துரியோதனன்) தம்பிமார்களுள்
பொறுக்கக்கூடாதபடி[மிகுதியாகப்] போர் செய்த ஐந்துபேருக்கும், மன் மேல்
எய்த வாளி என (கீழ்த்)துரியோதனன்மேல் (தான்) தொடுத்த அம்புகள்போல,
ஐந்து வயவாளி-வெற்றியைத்தருதற்குரிய ஐந்தபாணங்களை, தொடுத்தான்-
செலுத்தினான்; (எ-று.)    

     முன்இரண்டடி – வீமனதுதொழில்; துணித்துத்தொடுத்தான் என்க:
துரியோதனன் தம்பிமாரது தொழிலாயின், துணித்துத் தன்மேல்வந்த என்க. என்
மேல்நினைவு என்றது, இனி அழிவுநிச்சயம் என்பதைக் காட்டும். ஐவர்பெயர் –
அடுத்த கவியிற் கூறப்படும். மன்மேல்எய்தவாளி – கீழ் 24-ஆம் பாட்டிற்
காண்க.     

சேனாவிந்து, சுதக்கணன், பொன்-தேர்ப்
பிங்கலசன், சலாசந்தன்,
ஆனா வீமவாகு, எனும் அடல் வாள்
நிருபர் ஐவரையும்,
வான் நாடு ஆளும்படி விடுத்தான்-வன்பால்
தம்மை ஐவரையும்
‘கான் ஆள்க!’ என்ற காவலனைப் போல்வான்,
வீரக் கழல் வீமன்.

வன்பால் – கொடுமையால், தம்மை ஐவரைஉம் –
(பாண்டவர்களாகிய) தங்களைந்து பேரையும், கான் ஆள்க என்ற –
‘காட்டையாளுவீர்களாக’ என்று சொல்லியனுப்பின, காவலனை –
துரியோதனராசனை, போல்வான்-ஒப்பவனாகிய, வீரம் கழல்வீமன் –
வீரக்கழலையுடைய வீமன்,-சேனாவிந்து-,சுதக்கணன்-,பொன்தேர்-
பொன்னாலாகியதேரையுடைய, பிங்கலசன்-,சலாசந்தன்-,ஆனா-(போரில்) நீங்காத,
வீமவாகு-,எனும்-என்று பேர்சொல்லப்படுகிற, அடல் வாள் நிருபர் ஐவரைஉம் –
வலிமையையுடையவாளாயுதத்தையுடைய அரசர்கள் ஐந்து பேரையும்,  வான்
நாடு ஆளும்படிவிடுத்தான் – வீரசுவர்க்கத்தை ஆளும்படி அனுப்பினான்;
(எ-று.)

     துரியோதனனும் வீமனும் சமபலமுடையவராதலாலும் துரியோதனன்
பஞ்சபாண்டவரை இந்நாட்டைவிட்டு வனமடையச் சொல்லி அனுப்பியது போல,
வீமன் இப்பொழுது துரியோதனன் தம்பிமாரைவரை இவ்வுலகத்தைவிட்டு
விண்ணுலகமடையும்படி அனுப்புதலாலும், வீமனுக்குத் துரியோதனனை
உவமைகூறினார். வானாடாளும்படிவிடுத்தல்-கொல்லுதல்: பிறிதினவிற்சி.
பீமபாஹூ- வடசொல்; பகைவர்க்குப் பயங்கரமான தோள்களையுடையா னென்று
பொருள். ஆளுதல் – இங்கே, சேர்தல். வன்பால் – பலாத்காரமாக என்றபடி.
ஸேநாபதி, ஸூஷேணன், ஸூலோசநன் ஜலஸந்தன், பீமபாஹூ என வடநூலிற்
பெயர் காணப்படுகிறது.

ஒருபால் வீமன், சிலை விசயன் ஒருபால்,
ஒருபால் அபிமன்னு,
ஒருபால் நகுலன், சாதேவன் ஒருபால்,
ஒருபால் உரகேசன்,
ஒருபால் அரக்கன், பாஞ்சாலன் ஒருபால்,
அடல் உத்தமபானு
ஒருபால், உடன்று பொரப் பொரவே, உடைந்தது,
அரசன் பெருஞ் சேனை,29.-தருமபுத்திரன்பக்கத்து வீமன் முதலியோர்
ஆங்காங்குப் போர்புரியவே துரியோதனன்சேனை யுடைதல்.

ஒரு பால் – ஒருபக்கத்தில், வீமன்-வீமசேனனும், ஒரு பால்-,
சிலைவிசயன் – வில்லில்வல்ல அருச்சுனனும், ஒரு பால்-, அபிமன்னு –
அபிமன்யுவும்,ஒரு பால்-, நகுலன்-நகுலனும், ஒரு பால்-, சாதேவன் – சகதேவனும்,
ஒரு பால்-உரக ஈசன் – நாகர்களுக்குத் தலைவனான இராவானும், ஒரு பால்-,
அரக்கன் -கடோற்கசனும், ஒரு பால்-, பாஞ்சாலன் – பாஞ்சாலதேசத்து அரசனான
துருபதனும்,ஒரு பால்-, அடல் உத்தமபானு – வலிமையையுடைய உத்தமௌஜஸூம்,
உடன்றுபொர பொர – கோபங்கொண்டு மிகுதியாகப்போர்செய்ய, (அதனால்)
அரசன் பெருசேனை – துரியோதனராசனது பெரியசேனை, உடைந்தது – தோற்றுப்
பின்னிடைந்தது; (எ-று.)

     இராவான் போர்செய்யுந்தன்மை கீழ்க் களப்பலியூட்டுசருக்கத்தின் சு, எ –
பாட்டுகளிற் கூறப்பட்டது. அரக்கன் – பொதுப்பெயர் சிறப்புப்பொருளை
யுணர்த்திற்று. உத்தமௌஜஸ் – பாஞ்சாலரிற் சேர்ந்தவன்.   

விண் நாடருக்கா வெஞ் சமத்தில் அசுராதிபரை
வென் கண்டோன்,
மண் ஆள் அரசர் மகுட சிகாமணியே போல்வான்,
மா மரபால்
பண் ஆர் பஞ்ச கதி மான் தேர்ப் பகலோன்
அன்ன பகதத்தன்,
எண்ணார் துரக்க வரும் படையை, ‘அஞ்சல்!’ என்று
என்று, எதிர் சென்றான்.30.-அப்போது பகதத்தனென்பான் உடைந்தோடுஞ்சேனைக்கு
அபயமளித்துப் பாண்டவர்சேனையோடெதிர்த்தல்.

வெம் சமத்தில் – கொடிய (தேவாசுர) யுத்தத்தில், விண் நாடருக்கு
ஆ – தேவர்களுக்கு உதவியாக (ச்சென்று), அசுர அதிபரை வென்எண்டோன் –
அசுரத்தலைவர்களை முதுகுகாட்டியோடச் செய்தவனும், மா மரபால் – சிறந்த
வமிசமுறைமையால், மண் ஆள் அரசர் மகுட சிகாமணிஏ போல்வான் – பூமியை
ஆளுகிற அரசர்களது கிரீடத்திலுள்ள பிரதான ரத்தினத்தையொப்பவனுமாகிய,
பண் ஆர் – அலங்காரமமைந்த, பஞ்ச கதி – ஜவகை நடைகளையுடைய, மான் –
குதிரைபூண்ட, தேர் – இரதத்தையுடைய, பகலோன் அன்ன – சூரியனை யொத்த,
பகதத்தன்-, எண்ணார்துரக்க வரும் படையை – (அப்பொழுது) பகைவர்கள்
துரத்துதலால் (தோற்றோடி) வருகிற கௌரவ  சேனையை,அஞ்சல் என்று என்று –
அஞ்சவேண்டா என்று பலமுறைசொல்லிக்கொண்டு, எதிர்சென்றான் –
பகைவர்களெதிரிற் (போருக்குச்) சென்றான்; (எ –  று.)

ஒருகாலத்திலே தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில்
தோல்வியடைந்த தேவேந்திரன், திருமாலின் பௌத்திரனும் நரகாசுரனது மகனும்
அவன்காலத்திற்குப்பின் கண்ணனால் இளமையில் பரிபாலனஞ் செய்யப்பட்டவனும்
ஆகிய பகதத்தனைத் துணையழைக்க, இவன் அவ்விந்திரன் வேண்டுகோளின்படி
சென்று அசுரரையொழித்து இந்திரனுக்கு அரசாட்சியை நிலைநிறுத்தினானென்பது,
வரலாறு; மேல் பன்னிரண்டாம்போர்ச்சருக்கத்திலும் “முருகனென வெற்றி நேமி
முகிலென முரணவுணருக்கு வாழ்வு கெடவுயர், சுரபதி தனக்கு வாழ்வு வரும்வகை
சுரருலகளித்த தோழ னிவனரோ” என்று கூறுவர். அரசர் மகுடசிகாமணியே
போல்வான் – அரசர்கள் தலைமையாகவைத்துக்  கொண்டாடத்தக்கவ னென்றபடி.
பஞ்சகதி – மல்லகதி மயூரகதி வானரகதி வியாக்கிரகதி  இடபகதி என்பன:  இனி,
நச்சினார்க்கினியர் “விக்கிதம் வற்கிதம் வெல்லு முபகண்டம்,
மத்திமஞ்சாரியோடைந்து” எனக் குதிரைகட்கு ஐவகைநடை கூறியுள்ளார்.
புறப்பொருள் வெண்பாமாலையுரையாசிரியர் ‘விக்கிதம் வற்கிதம் உபகண்டம் ஜவம்
மாஜவம் என்னும் இப்பஞ்சதாரை’  என்பர். மற்றும், ஆஸ்கந்திதம், தோரிதகம்,
ரேசிதம், வல்கிதம், புலுதம் எனவும்படும்: அவற்றுள், நிச்சலமாக அதிவேகமும்
அதிமந்தமுமாகாமற் சமமானகதி, ஆஸ்கந்திதம்; அதைக்காட்டிலும் அதிகமாய்ச்
சதுரமானகதி, தோரிதகம்: தாளகதியுடன் வட்ட மிட்ட நடை, ரேசிதம்;
வேகத்தினாலே முன்னங்காலைத்தூக்கிவரும் நடை, வல்கிதம்; அவ்வளவு
வேகமாகவும் சமமாகவும் போகுகை, புலுதம், எண்ணார் என்றது, கீழ்க்கவியிற்
கூறியவீமன்முதலியோரை.

அலை கால் வெள்ளக் கருங் கடல்போல் அதிரா
நின்ற ஆகவத்தில்,
மலை கால் பெற்று வருவதுபோல், வரு திண் பனைக்
கை மா மிசையான்
சிலை கால் வளைத்து, தீ வாய் வெஞ் சரம் கொண்டு,
அடையார் சிரம் கொண்டான்,
கொலை கால் செங் கண் கரிய நிறக் கூற்றம்தனக்கும்
கூற்று அன்னான்.31.-பகதத்தன் செய்த கடும்போர்.

கொலை கால் – (தனக்கு உரிய) கொல்லுதல் தொழிலை
வெளியிடுகிற, செம் கண் – (கோபத்தாற்) சிவந்த கண்களையும், கரிய நிறம்-
கருநிறத்தையுமுடைய, கூற்றம் தனக்குஉம்-யமனுக்கும், கூற்று அன்னான் – ஒரு
யமனை யொத்தவனாகிய அந்தப்பகதத்தன்,-அலை கால் – அலைகளைவீசுகிற,
வெள்ளம் – நீர்வெள்ளத்தையுடைய, கரு கடல் போல்-கரியசமுத்திரம்போல,
அதிராநின்ற – ஆரவாரிக்கிற, அகவத்தில் – போர்க்களத்திலே, மலை கால் பெற்று
வருவது போல் வரு – ஒருமலை (நான்கு) கால்களையுடையதாய் வருவதுபோல
வருகிற, திண்- வலிய, பனை கை மா மிசையான் – பனைமரம்போன்ற
துதிக்கையையுடைய யானையின் மேலேறியவனாய்,- சிலை கால் வளைத்து-
வில்லின்கோடிகளை வளைத்து, தீ வாய் வெம் சரம்கொண்டு-நெருப்பையுமிழ்கிற
நுனியையுடைய  கொடிய(தன்) அம்புகளால், அடையார்சிரம் கொண்டான் – (பல)
பகைவர்களின் தலைகளைஅறுத்திட்டான். (எ-று)

இவன் ஏறிவரும் பட்டத்துயானைக்குச் சுப்பிரதீகமென்று பெயர்; “இதற்கு
நாம்முரைசெயின் நிலையுடைய சுப்ரதீகம்” என்பர், மேல்பன்னிரண்டாம்
போர்ச்சருக்கத்தில். மலை கால் பெற்று வருவது – இல்பொருளுவமை.
சிலைகால்வளைத்தல் – வில்லின் தண்டத்தை வளையச்செய்தல். அடையார்-
(தன்னைச்) சேராதவர். யமனுக்குத் தான் அஞ்சாமல் யமனைத் தான்
அஞ்சுவிப்பவனென்பது, நான்காம் அடியின் கருத்து.

தார் ஆர் ஓடைத் திலக நுதல் சயிலம்
பதினாயிரம் சூழ
வாராநின்ற மத கயத்தின் வன் போர் வலியும்,
மன வலியும்,
சேரார் வணங்கும் பகதத்தன் திண் தோள்
வலியும், சிலை வலியும்,
பாராநின்ற கடோற்கசன் தன் படையின் தளர்வும்
பார்த்தானே.32.-பகதத்தனால் தம்சேனைக்குநேர்ந்த தளர்வைக் கடோற்கசன்
பார்த்தல்,

 தார் ஆர் – கிண்கிணிமாலைகள் நிறைந்த, ஓடை திலகம் நுதல்-
பட்டத்தையும் சிந்தூரத்திலகத்தையும் அணிந்த நெற்றியையுடைய, சயிலம்
பதினாயிரம் – மலைபோன்ற பதினாயிரம் யானைகள், சூழ – (தன்னைச்) சூழ்ந்து
வர,வாராநின்ற-(இடையிலே) வருகிற, மதம் கயத்தின் – (சுப்பிரதீக மென்னும்
அந்த)மதயானையினது, வல் போர் வலிஉம் – வலிய போர் வல்லமையையும்,
மனம்வலிஉம் – மனத்திலுள்ள போர்க்களிப்பையும், சேரார் வணங்கும் பகதத்தன்
-பகைவர்கள் வணங்கத்தக்க பகதத்தனது, திண் தோள் வலிஉம் – உறுதியான
தோள்களின் வலிமையையும், சிலை வலி உம்-வில்லின் வலிமையையும்,
பாராநின்ற-பார்த்துநின்ற, கடோற்கசன்-,தன் படையின் தளர்வுஉம்-
(அவனாலுண்டான)தன்பக்கத்துச்சேனையின் தளர்ச்சியையும், பார்த்தான்-;
(எ – று.)

     இனி, தார்-அலங்காரத்துக்காக அணியும் பூமாலையுமாம். ஓடை –
நெற்றிப்பட்டம்; இது – பொன்னினால் அமைவது: ஆடையாலமையும் முகபடாம்
சூழி யெனப்படும்: இவ் வேறுபாட்டை “விழுச்சூழிய விளங்கோடைய” என்னும்
மதுரைக்காஞ்சியின் உரைநோக்கி அறிக. சயிலம்=சைலம்: உவமையாகுபெயர்.
மனவலி-பகதத்தனது மனோபலமுமாம்.   

ஆய போதில், ஆயிர நூறு மத மாவும்,
மேய தீய காலனை ஒக்கும் மேலாளும்,
சாயகம்மும், சாபமும், யாவும், தானே ஆம்
மாய வேடம் கொண்டு, அவனோடு மலைவுற்றான்.33.-கடோற்கசன் மாயவேடங்கொண்டு
பகதத்தனோடு போர்தொடங்குதல்.

(பார்த்த கடோற்கசன்,)-ஆய போதில் – அப்படியான
அச்சமயத்தில்.- ஆயிரம் நூறு மதம் மாஉம்  – லஷம்மதயானைகளும், மேய –
(அத்தொகையாகப்) பொருந்திய, தீய – கொடிய, காலனை ஒக்கும் –
யமனையொத்த, மேல் ஆள்உம் – (அந்தயானைகளின்) மேலுள்ள வீரர்களும்,
சாபம்உம் – (அவர்களது) விற்களும், சாயகம்உம் – (அவ்விற்களால் எய்யப்படும்)
அம்புகளும், (ஆகிய), யாஉம் – எல்லாம், தான்ஏ ஆம் – தானே யாகிய, மாயம்
வேடம் – மாயாவடிவத்தை, கொண்டு – எடுத்துக் கொண்டு, அவனோடு
மலைவுற்றான் – அந்தப்பகதத்தனோடு  போர் செய்யத் தொடங்கினான்; (எ -று.)

     அரக்கனாதலால், மாயாரூபங்கொண்டான், சாயகம்மும் – விரித்தல்,
தானேயாஎன்று எடுத்து – தானேயாக என்றுமாம்.                   (172)

     இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் பத்துக்கவிகள் – பெரும்பாலும்
மூன்றாஞ்சீர்விளச்சீரும், ஐந்தாவது மாங்காய்ச் சீரும், மற்றைமூன்றும் மாச்சீர்களு
மாகிய நெடிலடிநான்குகொண்ட கலிநிலைத்துறைகள்.

சங்கம் ஊத, தார் முரசு ஆர்ப்ப, முழவு ஆர்ப்ப,
பொங்கும் பூழி ஆழி வறக்கும்படி போத,
சிங்கம் குன்றில் செல்வது போல, சிலையோடும்,
எங்கும் தானும் வேழமும் ஆகி, எதிர் சென்றான்.34 – கடோற்கசன் மாயையால் எங்கும் தானும் வேழமுமேயாகிப்
பகதத்தன்மீது போதல். 

சங்கம் – சங்குகள், ஊத – ஊதப்பட்டு முழங்கவும், தார் –
சேனைக்குஉரிய, முரசு – பேரிகைகள், ஆர்ப்ப – ஆரவாரிக்கவும், முழவு –
(மற்றைப்)பறைகள், ஆர்ப்ப – ஒலிக்கவும், பொங்கும் பூழி – மேற்கிளம்புந்
தூளிகள்,ஆழி வறக்கும்படி போத –  கடல்களும் நீர்வற்றும்படி பரவவும்,
(கடோற்கசன்),சிங்கம் குன்றில் செல்வது போல,- ஒருசிங்கம் ஒருமலையின்மேல்
ஏறிப்போவதுபோல, சிலையோடுஉம் – (தன்கை) வில்லுடனே, எங்குஉம் தான்உம்
வேழம்உம் ஆகி – (மாயையால்) எவ்விடத்திலும் தானும் (தன்) யானையுமாய், எதிர்
சென்றான் – பகதத்தனெதிரிற் போனான்; (எ-று.)

     சிங்கம் – பராக்கிரமசாலியான கடோற்கசனுக்கும், மலை – வலியபெரிய யானைக்கும் உவமை.மிகுதியாகக் கிளம்பின புழுதிகள் படிந்து கடல்நீரை வறட்டு
மென, யானைச்சேனையால் மேலெழுப்பட்ட தூளிகளின் மிகுதியைக் கூறியவாறு.
தார்முரசு – மாலையையணிந்தமுரச மென்று உரைப்பாரு முளர். தானும் வேழமுமாகி
எதிர்சென்றான் – உயர்திணையும் அஃறிணையும் விரவிச் சிறப்பினால்
உயர்திணைஒருமை முடிபேற்ற திணைவழுவமை தி. பி-ம்:-
சங்கமெழத் தாரைகள் முரசார்ப்ப முழவிம்ம.    

மைபோல் ஆர்த்து, மும் முறை தான மழை சிந்தி,
கை போய் முட்டி, கையொடு தம்தம் கால் வீசி,
மெய்போல் வெம் போர் செய்தன, வீரன்
விறல் வேழம்;
பொய்போல் நின்ற, வரு பகதத்தன் போர் வேழம்.35.-கடோற்கசனுடைய வேழப்படைத்தொழிலும்
பகதத்தனுடைய வேழப்படைத்தொழிலும்.

வீரன் – வீரத்தன்மையுள்ள கடோற்கசனது, விறல் – (மாயை)
வலிமையினாலாகிய, வேழம்-யானைகள்,-மைபோல் ஆர்த்து – மேகங்கள்போல
முழங்கியும், மு முறை தானம் மழை சிந்தி-மூன்றிடங்களின்றும் மதநீர்மழையைச்
சொரிந்தும், கை போய் கையொடு முட்டி – முன் சென்று (தம்) துதிக்கையால்
(பகையானைகளின்) துதிக்கையோடு மோதியும். தம் தம் கால் வீசி – தம் தமது
கால்களை வீசியும், மெய் போல் வெம் போர் செய்தன – உண்மையான
யானைகள்போலக் கொடியபோரைச் செய்தன; வரு – (எதிர்த்து) வந்த,பகதத்தன் –
பகதத்தனது, போர் வேழம் – போருக்குரிய உண்மையான யானைகள், பொய்
போல் நின்ற – (கீழக்கூறிய முழக்கம் முதலியன ஒழிந்து) பொய் யானைகள்போ
லாயின;(எ-று.)

     தொழிலால் பொய் மெய்யும், தொழிலொழிதலால் மெய் பொய்யும் ஆயின
வென வியப்புத்தோன்றக் கூறினார். தாநம் – வடசொல்.

நின்றார்; நின்றபடி கடிதாக நெடிது ஓடிச்
சென்றார்; கண்ட சிந்துரம் யாவும் தீ அம்பின்
கொன்றார்; மற்று அக் கொற்றவர் யாரும்
கொலையுண்டார்;
வென்றார் அன்றோ, வீமன் மகன் சேனையில் வீரர்?36.- கடோற்கசனுடைய மாயாவீரர்வெல்லுதல். 

வீமன்  , மகன் சேனையில் – கடோற்கசனது யானைச்
சேனையிலுள்ள, வீரர் – (மாயையினாலாகிய) வீரர்கள், நின்றார்-எதிர்த்து
நின்றார்கள்;நின்ற படி – (அவ்வாறு) நின்ற முறைமையாகவே, கடிது
ஆக-வேகமாக, நெடிதுஓடி சென்றார் – மிகுதியாக ஓடி (நெருங்கி)ப்
போனவர்களாய், கண்ட சிந்துரம்யாஉம் – (எதிரிற்)காணப்பட்ட(பகதத்தனது)
யானைகளை யெல்லாம், தீ அம்பின்கொன்றார் – கொடிய (மாயையாலாகிய)
அம்பினால் கொன்றுவிட்டார்கள்; மற்று -பின்பு, அ கொற்றவர் யார்உம்-
அவ்யானைகளின்மேலுள்ள (பகதத்தனைச்சார்ந்த)வீரர்களெல்லொரும்,
கொலையுண்டார் – (இவர்களாற்) கொல்லப்பட்டார்கள்; வென்றார் –
(இவ்வாறு கடோற்கசனது பொய்ச்சேனையார் பகதத்தனது மெய்ச்சேனையாரைச்)
சயித்துவிட்டார்கள்; (எ-று.) – அன்றோ – தேற்றம்; இதில் – வியப்புந்தோன்றும்.

ஆனது ஆனது ஆகவம் எங்கும் ஆனைப் போர்;
போன போன மைந்தர் பிழைப்பீர், போம்!’ என்று என்று,
ஊனம் எய்தாது, அவ் இறை போனான், உயிரோடும்;
போன கண்ட காய் கதிரோனும் புறமிட்டான்.  37.-சூரியாஸ்தமன வருணனை.

ஆகவம் எங்கும் – போர்க்களம் முழுவதிலும், ஆனை போர் –
யானைச்சண்டை, ஆனது ஆனது – மிகுதியாகஉண்டாயிற்று; போன போன
மைந்தர் – ஓடிப்போன வீரர்களெல்லோரும், பிழைப்பீர் – உயிர்வாழ்வீர்கள்;
(ஆதலால்), போம் – (தப்பி) ஓடிப்போங்கள்,’ என்று என்று-என்று
பலமுறைச்சொல்லி, அ இறை – அந்த (ப் பகதத்த)ராசன், ஊனம் எய்தாது –
அழிவையடையாமல், உயிரோடுஉம் போனான் – உயிரோடும் (புறங்கொடுத்துச்)
சென்றான்; போன கண்ட – (அப்படிச்) சென்றதைப் பார்த்த, காய் கதிரோன்உம் –
சுடுகிற கிரணங்களையுடைய சூரியனும், புறம்இட்டான் – (தானும் கடோற்கசனது
யானைச்சேனைக்கு அஞ்சிப்) புறங்கொடுப்பவன்போல மறைந்துசென்றான்; (எ-று.)

     தற்குறிப்பேற்றவணி  மைந்தர் பிழைப்பீர். இடவழுவமைதி. போன=
போனது:விகாரம்.    

பூந் தண் மாலைப் பஞ்சவர் ஆனைப் போர் வென்று,
சேர்ந்த சேர்ந்த மன்னவரோடும், திறலோடும்,
தாம் தம் பாடி வீடு புகுந்தார்; தரை ஆளும்
வேந்தனோடும் பாசறை புக்கான், வீடும்மன்.38.-அப்போது இருதிறத்தாரும் பாசறை சேர்தல். 

பூ – பூக்களாலமைந்த, தண் – (தேனினாற்) குளிர்ந்த, மாலை –
வெற்றிமாலையை யணிந்த,  பஞ்சவர் – பஞ்ச பாண்டவர்கள், ஆனை போர்
வென்று – அந்த  யானைப்போரில் சயித்து, சேர்ந்த சேர்ந்த மன்னவரோடுஉம் –
(தங்களோடு மிகுதியாக வந்து சேர்ந்த அரசர்களுடனும், திறலோடுஉம் –
வெற்றியுடனும், தாம் தம் பாடிவீடு புகுந்தார்-தாங்கள் தங்களது படைவீட்டை
யடைந்தார்கள்; வீடும்மன்-வீடுமன், தரை ஆளும் வேந்தனோடுஉம் – பூமியை
ஆளுகிற துரியோதனராசனுடனே, பாசறை புக்கான்-(தன்)படைவீட்டை யடைந்தான்;
(எ-று.)

     ஈற்று அடியால், துரியோதனாதியர் சேனையிலுள்ள மற்றையரசர்கள்
பலரும்பாண்டவர்சேனைக்குத் தோற்றுச் சிதறினரென்பது தொனிக்கும். வீடும்மன் –
விரித்தல்.   

‘பூண் பாய் மார்பின் புத்திரர்#தம்மைப் பொலிவோடும்
காண்பாள் ஐவர்க் கண்டிலள், பெற்ற காந்தாரி;
‘சேண்பால் எய்தச் சென்றனரோ?’ என்று, இரு கண் நீர்
தூண்பால் ஆகிச் சோர்தர, உள்ளம் சோர்வுற்றாள்.39- காந்தாரி தம்புதல்வர் ஐவர் இறந்ததற்குக் கலங்கிக்
கண்ணீர்வடித்துச் சோர்வுறல்.

பெற்ற-(துரியோதனாதியர் நூற்றுவரைப்) பெற்ற (தாயான), காந்தாரி-,
பூண் பாய் மார்பின் புத்திரர்தம்மை – ஆபரணங்கள் பரவிய மார்பையுடைய (தன்)
பிள்ளைகளையெல்லாம், பொலிவோடுஉம்-மகிழ்ச்சியுடனே, காண்பாள் –
(தினந்தோறும்) காண்பவள், ஐவர் கண்டிலள்-(அன்றையதினம் அவர்களுள்)
ஐந்துபேரைக் காணாதவளாய்,-சேண் பால் எய்த சென்றனர்ஒ என்று-
‘வீரசுவர்க்கத்தினிடத்தை அடையப் போயினார்களோ?’ என்றுசொல்லி, இரு கண்
நீர் தூண் பால் ஆகி சோர்தர – (தன்) இரண்டு கண்களினின்றும் நீர் தூணின்
தன்மையை யொத்து [பெருந்தாரையாக]ப் பெருக, உள்ளம் சோர்வு உற்றாள்-
மனத்தளர்ச்சியை யடைந்தாள்; (எ-று.)

     காந்தாரி-திருதராட்டிரனது மனைவி: சகுனியின் உடன்பிறந்தவள்.
தூண்பாலாகி-(தான்) தூண்போலசைவற்று எனினுமாம். சென்றனரோ, ஓகாரம்-
இரக்கம். சேண்-ஆகாயம்; சுவர்க்கத்துக்கு இடவாகுபெயர்.    

கொன்னே குந்தி மைந்தர் இருக்கக் கொலையுண்டீர்;
முன்னே முன்னும் முன்னம் முடிந்தது’ என முன்னா,
மின்னே என்ன மெய் குலையா, மண்மிசை வீழ்ந்தாள்;
‘என்னே! என்னே!’ என்று இனையா நின்று, என் செய்தாள்!40.-காந்தாரி வருந்தியது

குந்தி மைந்தர்-பாண்டவர்கள் ஐவரும், கொன்னே இருக்க-
அழிவடையமாலேயிருக்க, கொலை உண்டீர்-(நீங்கள்மாத்திரம்) கொலைப்பட்டீர்கள்;
முன்னே முன்னும் முன்னம் – முன்னே (அவர்கள்) எண்ணின எண்ணம், இன்று
முடிந்தது-இன்றைக்குப் பலித்தது’, என்னா-என்று சொல்லி, மெய் குலையா-உடம்பு
நடுங்கி, – மின்னே என்ன-மின்னல் விழுவதுபோல, மண்மிசை வீழ்ந்தாள்-
தரையிலே விழுந்து, என்னே என்னே என்று-இது என்னதுக்கம்! என்னதுக்கம்!!
என்று, இனையா நின்று-மனம் வருந்திநின்று,  என்செய்தாள்-என்னபாடுபட்டாள்!
(எ-று.) – மிகுந்த விசன மடைந்தாள் என்றபடி.

     திருதராஷ்டிரனது ‘மனைவியாகிய தனக்குப் பாண்டுவின் மனைவியாகிய
குந்தியினிடம் உள்ள பங்காளிக்காய்ச்சலால், ‘குந்திமைந்தர்’ என்றாள்; (ஆதியிலும்
குந்திக்கு முதலில் பிள்ளை பிறந்தது கேட்டு இவள் மிகப்பொறாமையுற்றுத் தன்
கருக்கொண்ட வயிற்றைக் கல்லாற் குத்திக்கொண்டது காண்க.) முன்னே முன்னும்
முன்னம்-என்மக்களைக் கொல்லவேண்டுமென்ற எண்ணம் – என்னே என்னே-
சோகக்குறிப்பு. மாத்திரியினிடம் பிறந்த நகுல சகதேவரையும் சேர்த்து
‘குந்திமைந்தர்’ என்று இங்கே அபேதமாகக் கூறியது, அந்த மாத்திரிக்குப்
புதல்வரைப் பெறும் மந்திர முபதேசித்தவள் குந்தி யாதலாலும், பாண்டுவோடு
மாத்திரி சககமநஞ்செய்து இறந்துவிட அவ்விருவரையும் குந்தியே
அன்போடுவளர்த்தன ளாதலாலும் என்க. பி-ம்:- முடிந்ததெனமுன்னா.
முடிந்ததின்னென்னா.     

வீறு ஆர் கற்பின் மின் அனையாளை விறல் மைந்தர்
ஏறா மன்றில் ஏற்றவும், ‘ஆம், அன்று’ என்னாதாள்,
ஊறா அன்பின் கண்ணறை மன்னன் ஒரு தேவி,
ஆறா வெள்ளத் துன்புற அன்றே அடியிட்டாள்.41- கவிக்கூற்று: காந்தாரி அன்றுதான் வருத்தமின்னதென்று
அறியத் தொடங்கினாளெனல்.

வீறு ஆர்-பெருமைமிக்க, கற்பின்-பதிவிரதா தருமத்தையுடைய,
மின்அனையாளை-மின்னற்கொடியையொத்த திரௌபதியை, விறல் மைந்தர் –
வலிமையையுடைய (தன்) பிள்ளைகளான துரியோதனனும் துச்சாதனனும், ஏறா
மன்றில் ஏற்றஉம்-(பெண்கள்) செல்லத்தகாத இராசசபையிலே (பலாத்காரமாகச்)
செலுத்தவும், ஆம் அன்று என்னாதாள்-(இது) தக்கதன் றென்று சொல்லாதவளாகிய,
ஊறா அன்பின் – சிறிதும் உண்டாகாத அன்பையுடைய, கண்ணறை மன்னன்
ஒருதேவி-பிறவிக்குருடனான திருதராட்டிரனது ஒப்பற்ற மனைவியான காந்தாரி,
ஆறா – தணியாத, துன்பு-(புத்திர)சோகமாகிய, வெள்ளம்-வெள்ளத்திலே, உற-
சேர்வதற்கு, அன்றே அடி இட்டாள் – அன்றைத்தினமே கால்வைத்தாள்
[தொடங்கினாள்]; (எ-று.)

     துரியோதனாதியர் நூற்றுவருள் சிலர் முந்தி இறந்த தினம்
அத்தினமேயாதலால், ‘அன்றே யடியிட்டாள்’ என்றார். தகுதியன்றென்று
சொல்லாதவளென்றதனால், தகுதியென்று உடன்பட்டவளென்பது பெறப்படும்.
அத்தீவினையின்பயனே புத்திரசோகத்தை யனுபவிக்கச்செய்த தென்றவாறு.
கண்ணறைமன்னனொருதேவி-கண்ணில்லாதவனுக்கு ஏற்றதேவி. ஏற்றவும், உம்-
இழிவுசிறப்பு.         

ஆளாய் மாய்ந்த வேந்தர் இடம்தோறு அழும் ஓசை
கேளா, ‘எப்போது ஏகுவம்?’ என்று, அக் கிளர் கங்குல்
மீளா, ஓடிற்று; அத் திசை வானோன் மிளிர் சென்னிச்
சூளாமணிபோல் வந்தது காலைச் சுடர் அம்மா!42.-சூரியோதய வருணனை.

ஆள் ஆய் மாய்ந்த – வீரர்களாயிருந்து இறந்த, வேந்தர்-
அரசர்கள்பொருட்டாக, இடம் தோறு அழும்-பல இடங்களிலும் அழுகிற, ஒசை-
ஓசையை, கேளா-(நாம்) கேட்காமல், எ போது ஏகுவம் என்று – எப்பொழுது
நீங்குவோ மென்று கருதி, அ கிளர் கங்குல் – அந்த (இருள்) நிறைந்த இரவானது,
மீளா ஓடிற்று-மீண்டு ஓடிவிட்டது; (அப்பொழுது), காலை சுடர் – உதய காலத்துக்கு
உரிய ஒளியாகிய சூரியன்,-அ திசை வானோன் – அந்தத் திக்கில் [கீழ் திசையில்]
உள்ளவனான தேவேந்திரனது, மிளிர் – விளங்குகிற, சென்னி சூளாமணி போல்-
முடிவில் அணிந்தகிரீடம் போல, வந்தது-உதித்துவிளங்கிற்று; (எ-று.)-அம்மா-
ஈற்றசை.

புலம்பல் கேட்பவர்க்கு அவ்விடத்தைவிட்டு நீங்கக் கருத்துண்டாதல்,
இயல்பு.இயற்கையாக இரவுகழிந்ததற்கு இப்படிப் பட்டதொரு காரணத்தைக்
கற்பித்துக்கூறியது – ஏதுத்தற்குறிப்பேற்றவணி. ‘காலைச்சுடர் வந்தது’ என்பதை
நோக்கி,’அத்திசை’ என்றது-கிழக்கைக் குறிக்கும்; செய்யுளாதலின்  சுட்டு
முன்வந்தது.’அத்திசை வானோன்’ என்றது, கிழக்குத்திக்குப் பாலகனாகிய
இந்திரனை.சூளாமணி-சூடாமணி என்னும் வடசொல்லின் போலி; தலையில்
அணியும் இரத்தினமென்று பொருள்: சூடா-தலை. சூரியனைக் காலைச்சுடரென்றும்,
சந்திரனைமாலைச்சுடரென்றுங் கூறுதல் ஒரு மரபு. பி-ம்:- வானோர்.

  ——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading