ஸ்ரீ.வில்லிபாரதம் – மூன்றாம் பாகம் -39. பதினோராம் போர்ச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

காயமும் புலனும் அந்தக்கரணமும் ஆகி, எல்லாத்
தேயமும் பரந்து நின்று, மீளவும் சித்தும் சுத்த
மாயமும் ஆகி, நீங்கி, வரு பெரு ஞானானந்தம்
ஆய எம்பெருமான், என்னை ஆண்டருள் ஆழியானே.கடவுள் வாழ்த்து

காயம்உம் – உடம்பும், புலன்உம் – (அதிலுள்ள) பஞ்ச இந்திரியங்களின்
உணர்வும், அந்தக்கரணம்உம் – (அவ்வுணர்வுக் கிடமான) மனமும், ஆகி –
(என்னும் இவற்றின்) வடிவமாய், எல்லாம் தேயம்உம் பரந்து நின்று –
எல்லாவிடங்களிலும் பரவி நிலைபெற்று, மீளஉம்-மறுபடியும், சித்துஉம் சுத்தமாய்உம்
ஆகி நீங்கி – உயிரும் பரிசுத்தமான மூலப்பிரகிருதியுமாய் (அவ்வவ்விடங்களினின்று)
பிரிந்து, வரு-(இங்ஙனம் *கற்பந்தோறும் மாறிமாறி) வருகிற, பெரு ஞான ஆனந்தம்
ஆய எம்பெருமான் – (மற்றையறிவுகளினுஞ்) சிறந்த பேரறிவும்
(மற்றையின்பங்களினுஞ்) சிறந்த சிருஷ்டிகாலந்தோறும் எல்லாத்தத்துவங்களின்
வடிவமாய் அவற்றினாலாகிய பிரபஞ்சரூபமாகக் காணப்பட்டுப் பிரளயகாலந்தோறும்
அவையாவுந் தன்னுள் ஒடுங்கச்செய்து முற்றுணர்வு வரம்பிலின்பங்களின் மயமாய்
நிற்கிற முழுமுதற்கடவுள், ஸ்ரீமந் நாராயணனே யென்பதாம். பிரபஞ்சத்தின் உத்பத்தி
ஸ்திதி விநாசங்களுக்குப் பகவானே காரண மென்பது இதில் விளங்கும்; ‘காயமும்
புலனு மந்தக்கரணமு மாகி’ என்றதனால் உற்பத்தியும், ‘எல்லாத்தேயமும் பரந்து
நின்று’ என்றதனால் ஸ்திதியும், ‘மீளவுஞ் சித்துஞ் சுத்தமாயமு மாகி நீங்கி’
என்றதனால் விநாசமூ மெனக் காண்க.

     புலன்களைக்கூறியதில் அவற்றில் தோன்றிய பஞ்சபூதங்களும்,
அவற்றின்கூறாகிய ஐந்துஞானேந்திரியங்களும், ஐந்து கருமேந்திரி யங்களும்
அடங்கும். பூதங்களைந்து-ஆகாசம் வாயு அக்கினி ஜலம் பூமி என்பன.
ஞாநேந்திரியங்களைந்து – மெய்வாய்கண் மூக்குச் செவிகள். கர்மேந்திரியங்களைந்து
– வாக்கு பாணி பாதம் பாயு உபத்தம் என்பன. ஐம்புலன்களுக்கும் மனத்துக்கும்
இடமாதலாலும், ஐம்புலன்களின் காரியமாகிய பஞ்சபூதங்களின் சேர்க்கையால்
ஆகியதாதலாலும், உடம்பு முன்கூறப்பட்டது. காயமும் புலனு மந்தக் கரணமுமாகி
என்றதனால், இவற்றிற்குக்காரணமான அகங்காரம் மகாந் புருஷன் [உயிர்] பிரகிருதி
என்பனவும் பெறப்படும். ஆகவே, இருபத்தைந்து தத்துவங்களும்
பகவானதுசொரூபம் என்றதாயிற்று. இவ்விருபத்தைந்து தத்துவங்களும் அல்லது
உலகெனப் பிறிதொன்றில்லை யென்று அறிக.

      மீளவும் என்றது, பிராகிருதப்பிரளயகாலத்தில் [பிராகிருதப் பிரளயம் –
பிரமனாயுள் முடிவில்வரும் பிரளயம்.] தத்துவங்களெல்லாம் ஒடுங்கும் நிலையை.
சிருஷ்டிகாலத்தில் எந்தப்பொருளினின்று எந்தப்பொருள் உண்டாயிற்றோ
அந்தமுறைக்கு எதிராகப் பிரளயகாலத்தில் காரியப்பொருள் தன்காரணப்பொருளில்
அடங்கிக் கொண்டு செல்லச்செல்ல இறுதியில் புருஷனும் பிரகிருதியும் பரமாத்மாவில்
லயப்படவேண்டியனவாய் நிற்கிற தன்மையை ‘மீளவுஞ் சித்துஞ்சுத்தமாயமுமாகி
நீங்கி’ என்றது. பிரகிருதியின் வ்யக்தஸ்வரூபம் அவ்யக்தஸ்வரூபம் என்ற
இரண்டுதன்மைகளுள், இங்கு சுத்தமாயை யென்று கூறியது – அவ்யக்தஸ்வரூபத்தை
; அதாவது – பொறிகளுக்குப் புலனாகாத தன்மையை : [வ்யக்தஸ்வரூபம்-
சராசரவடிவமாகப் புலப்படுந் தன்மை.] ஆனது பற்றியே, ‘சுத்தமாயம்’ எனப்பட்டது.
பிரகிருதியை ‘மாயம்’ என்றது, விசித்திரசிருஷ்டியைப் பண்ணுகையாலே. இனி, சுத்த
மாயம் என்பதற்கு வேறுபொருளுரைத்தல், விசிஷ்டாத்வைத சித்தாந்தத்துக்கு
ஒவ்வாது. சித்து – உணர்வுள்ளது.

     பெருஞானம்-முற்றுமுணர்தல், சர்வஜ்ஞதை, ஐயந்திரிபில்லாத இயற்கையறிவு.
பெருமையை ஆனந்தத்துக்குங் கூட்டுக. பேரானந்தம் – துக்க சம்பந்தமில்லாமல்
நித்தியமாயும் வரம்பில்லாததாயு முள்ள சுகம். பெரு ஞானானந்தமாய என்றது –
எல்லாவற்றையும் எப்பொழுதும் ஐயந்திரிபற அறியும் அறிவின்மிகுதியை
இயல்பிலுடையனாயும், எல்லாவின்பங்களினும்  மேம்பட்டநிரதிசயப் பேரின்பத்தை
எப்பொழுதும் உடையனாயு முள்ள வென்றபடி. இப்படிகர்மவசமான பிரபஞ்சரூபமாகத்
தோன்றுதல் நிலைத்தல் அழிதல்களை அடைந்தாலும், இவை யாவும் பகவானது
இச்சைமாத்திரத்தால் நிகழ்தலால் அப்பெருமானுக்குக் கர்மசம்பந்தம் நிகழாமைபற்றி,
ஞானானந்தங்களுக்குக் குறைவில்லை யென்பார், இவ்வாறுகூறினார்.  பி – ம்:
மீளவுஞ் சிதைத்துச்.

     இதுமுதல் பதினெட்டுக்கவிகள் – பெரும்பாலும் முதற்சீரும் நான்காஞ்சீரும்
விளச்சீர்களும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகி அறுசீராசிரிய விருத்தங்கள் :
இவற்றில் மூன்று ஆறாஞ் சீர்கள் தேமாச்சீர்களாகவே நிற்கும்.            (1)

    *கல்பம் – இங்கே, பிரமனாயுள் ; பிரமனது தினமன்று. பேரின்பமும் என்னும்
இவற்றின் சொரூபமான கடவுள்,- என்னை ஆண்டு அருள் ஆழியான்ஏ – என்னை
அடிமைகொண்டு கருணைசெய்கிற சக்கரபாணியான திருமாலே யாவன்

பகிரதி மைந்தன் சேனாபதி எனப் பத்து நாளும்
இகல் புரி இயற்கை எல்லாம் இயம்பினம்; இனிமேல், அந்தத்
துகள் அறு கேள்வி வேள்வித் துரோண ஆசிரியன் செய்த
புகல் அரும் ஐந்து நாளைப் பூசலும் புகலலுற்றாம்: .2.-கவிக்கூற்று : இன்னது கூறுவோமென்றல்.

பகிரதி மைந்தன்-கங்கையின்புத்திரனான பீஷ்மன், சேனாபதி என –
சேனைத்தலைவனாக (இருந்து), பத்து நாள்உம்- (சென்ற) பத்துத்தினங்களிலும், இகல்
புரி-போர்செய்த, இயற்கை எல்லாம் – தன்மைகளெல்லாவற்றையும், இயம்பினம் –
(கீழ் வீட்டுமபருவத்தில்) கூறிமுடித்தோம் ; இனிமேல்-, துகள் அறு – குற்றமில்லாத,
கேள்வி – நூற்கேள்விகளையும், வேள்வி – யாகங்களையுமுடைய, அந்த துரோண
ஆசிரியன் – அந்தத் துரோணாசாரியன், செய்த-, புகல் அரு – சொல்லுதற்கு
அருமையான, ஐந்து நாளை பூசல்உம் -ஐந்துநாளைப்போரையும், புகலல் உற்றாம் –
(இப்பருவத்தில்) கூறத்தொடங்கினோம் ; (எ – று.)

     பகிரதி – பாகீரதி யென்னும் வடமொழித்தத்திதாந்தநாமத்தின் குறுக்கல் ;
பகீரதனாற் கொணரப்பட்ட தென்று காரணப் பொருள். பகீரதன்-சூரியகுலத்துப்
பிரசித்தனான ஓரரசன். இவன், கபிலமுனிவனது சாபத்தாற் சாம்பலானவரும்
சகரசக்கரவர்த்தி குமாரரும் தனதுபாட்டனுக்குச் சிற்றப்பன்மாருமாகிய
அறுபதினாயிரவரை நற்கதிபெறுவித்தற்பொருட்டு அவர்களுடற்பொடியை
நனைத்தற்காகத் தேவலோகத்திலிருந்து ஆகாசகங்காநதியை முன்பு கீழுலகத்துக்குக்
கொணர்ந்தா னென வரலாறு காண்க. யாகஞ் செய்தல் செய்வித்தல் என்னும்
இருதொழிற்கும் உரியவர் அந்தணரே யாதலால், ‘வேள்வித்துரோணவாசிரியன்’
என்றார். புகல் – புகலுதல்: முதனிலைத்தொழிற்பெயர் ; இனி, புகல் அரும் –
(எளிதில்) பிரவேசிக்க வொண்ணாத எனப் பொருள்கொண்டால், புகல் – புகுஎன்னும்
பகுதியின்மேற் பிறந்த தொழிற்பெயராம். வீடுமன் தலைமைபூண்டு நடத்தின
பத்துநாட்போரினும் துரோணன் தலைமைபூண்டு நடத்தின ஐந்துநாட் போரில்
கொல்லப்பட்ட அவனுடைய பகைவர் பக்கத்தார் மிகப்பலராதலின், இதனை
‘புகலரும்’ என விசேடித்தது

சென்றனன், கங்கை மைந்தன்; தினகரன்
மைந்தன் செல்வான்
நின்றனன்; துரோணன் மைந்தன் நீடு அமர்
முனைந்து செய்யான்;
வென்றனம் இனி நாம்!’ என்று மெய்ம் முகில்
வண்ணன் சொல்ல,
குன்று அன குவவுத் தோளார் வெங் களம்
குறுகினாரே.3.-பாண்டவர் போர்க்களங் குறுகுதல்.

கங்கை மைந்தன் – வீடுமன், சென்றனன் – வலியடங்கிப்
போய்விட்டான் ; தினகரன் மைந்தன் – சூரியனுக்கு மகனான கர்ணன், செல்வான்
நின்றனன் – இறந்துசெல்பவனாய் நின்றான் ; துரோணன் மைந்தன் –
துரோணாசாரியன்மகனான அசுவத்தாமனோ, நீடு அமர் – பெரிய போரை,
முனைந்து செய்யான் – உக்கிரங்கொண்டு செய்யமாட்டான் ; (ஆதலால்), இனி-,
நாம்-, வென்றனம் – (பகைவரைச்) சயித்தேவிட்டோம்,’ என்று-, மெய் முகில்
வண்ணன் – சத்தியத்தையுடைய மேகம்போலும் (கரியதிருமேனி) நிறத்தையுடைய
கண்ணபிரான், சொல்ல-,(மகிழ்வோடு), குன்று அன குவவு தோளார் –
மலையையொத்த திரண்ட தோள்களையுடைய பாண்டவர்கள், வெம் களம்-கொடிய
போர்க்களத்தை, குறுகினார் – அடைந்தார்கள்;  (எ – று.)

     ‘தினகரன்மைந்தன் செல்வான் நின்றனன்’ என்றது-கற்ற கல்வியெல்லாம்
தக்கசமயத்தில் உதவாமல் மறந்துபோய்விடக்கடவதென்று குருவாகிய
பரசுராமனிடத்தும், போர்க்களத்தில் உடம்பு பகைவரம்பாற் சிதைந்து தேர்ச்சக்கரமும்
நிலத்திலழுந்திவிடக்கடவதென்று ஒரு முனிவனிடத்தும் கர்ணண் சாபங்கள்
பெற்றிருத்தலும், உயிர்நிலையாகிய கவசகுண்டலங்களை இந்திரனுக்குக்கொடுத்து
இழந்ததும், நாகாஸ்திரத்தை அருச்சுனன்மேல் இரண்டாம்முறை விடுவதில்லை
யென்றும் மற்றைப்பாண்டவர் நால்வரையும் கொல்வதில்லையென்றும் குந்திக்கு
வரமளித்ததும்முதலிய தக்ககாரணங்கள் பற்றியும், திருமாலின் இயல்பான
திரிகாலஞானத்தாலுமாகும். ‘தினகரன்மைந்தன்’ என்ற விவரம் :- பாண்டவர்கள்
தாயான குந்திதேவி கன்னிகையாயிருக்கும்பொழுது தனக்குத்
துருவாசமுனிவருபதேசித்த மந்திரத்தைப் பரீட்சித்தறியும் பொருட்டுச் சூரியனை
நினைத்து அம்மந்திரத்தை உச்சரிக்க, உடனே அத்தேவன் வந்து அவளுக்கு
அநுக்கிரகித்ததனால், அவளிடம் பிறந்த புத்திரன், கர்ணன்; இவனை,
பிறந்தபொழுதே குந்தி பழிக்கு அஞ்சி ஒருமிதக்கும் மரப்பெட்டியில் வைத்துப்
பூட்டிக் கங்கையாற்றில் விட்டிட, அதனைத் திருதராட்டிரனது தேர்ப்பாகனான
அதிரதனென்பவன் கண்டு எடுத்துத் திறந்து பார்த்துக் கொண்டுபோய்த் தன்
மனைவியாகிய ராதையும் தானுமாக வசுசேனனென்று பெயரிட்டு வளர்த்தான்:
இவனுக்குக் கர்ணன் என்ற பெயர் ஆகாசவாணி யிட்டது. இவன் பின்பு
துரியோதனனுக்குப் பிராணசினேகிதனாகி அவனருளால் அங்கதேசத்துக்கு
அரசனாயினான்.

     கண்ணன் துரியோதனனிடந் தூதுசென்றபொழுது விசுவரூபத்தின் பின்
அசுவத்தாமனைத் தனியேயழைத்து அவனுடன் சில பேசிக் கொண்டிருக்கையில்,
தன்கைம்மோதிரத்தைக் கீழேநழுவவிட, அதனை அசுவத்தாமன் இயல்பாக
எடுத்துக்கொடுக்கையில், கண்ணபிரான் வாங்கிக்கொள்ளாமல் ‘சூரியனைப்
பரிவேஷம் சூழ்ந்துள்ளது பார்’ என்னவே, அவன் ஆகாயத்தை நோக்கினான்;
இதனைத் தூரத்தினின்று பார்த்திருந்த துரியோதனாதியர்க்கு ‘அசுவத்தாமன்
கண்ணன்கைம் மோதிரத்தைத் தன்கையில்வாங்கிப் பூமியைத்தொட்டு ஆகாயத்தை
நோக்கிச் சூரியன்சாட்சியாக ஏதோ சபதஞ் செய்துதந்தான்’ என்று அசுவத்தாமனிடம்
அவநம்பிக்கை யுண்டாக, அதனால் அவர்கள் அவனை இரகசியமான
ஆலோசனைகளுக்கு உடன்கொள்ளாராயினர் : ஆகவே, இவனுக்கும் அவர்களிடம்
அபிமானம் குறைந்தது; ஆனதுபற்றியே, ‘துரோணனமைந்தன் நீடமர் முனைந்து
செய்யான்’ என்றான். இங்ஙனம் கண்ணன் தந்திரமாக மித்திரபேதஞ்செய்ததே, மேல்
துரோணனிறப்ப தன்பின்பு இவனைச் சேனாபதியாக்காததற்கும் முக்கியகாரணமாம்.
துரோணன் மனைவியான கிருபியின் அழகைக் கேட்டும் ஒருகால் கண்டும்
மிகக்காதல்கொண்ட சிவபிரானருளினாற் குதிரையினிடம் பிறந்தவன் அசுவத்தாமன்.

     வெல்வம் என்னாது வென்றனம் என இறந்தகாலத்தாற் கூறினது, விரைவுந்
தெளிவும் பற்றிய காலவழுவமைதி ; [நன். பொது. 33.] தெய்வாமிசமான கண்ணன்
கூறியவை யாவும் அங்ஙனமே தவறாமல்நடத்தலால், ‘மெய்ம்முகில்வண்ணன்
சொல்ல’ என்றார்.

மா தனத்து அளகை ஆளும் மன் என, வானில் பாக-
சாதனக் கடவுள் என்ன, தகும் பெருந் தரணி வேந்தன்,
சேதனப் படைஞரோடும், சேனையின் காவல் ஆன
வேத நல் குருவினோடும், வெங் களம் வந்து சேர்ந்தான்4.-துரியோதனன் படைவீரருடனும் துரோணனுடனும் போர்க்களஞ்
சேர்தல்.

 மா தனத்து – மிக்க செல்வத்தையுடைய, அளகை ஆளும் மன்
என – அளகாபுரியை ஆளுகிற அரசனான குபேரனென்றும், வானில் –
சுவர்க்கத்தில் (அரசனாய்வாழ்கிற), பாகசாதனன் கடவுள் என்ன – இந்திர தேவ
னென்றும், தகும் – (உவமை) சொல்லத்தக்க, பெரு – சிறப்புள்ள, தரணி வேந்தன் –
நிலவுலகத்து அரசனாகிய துரியோதனன், சேதனம் படைஞரோடுஉம் – (பகைவரை)
வெட்டுந்தன்மையுள்ள ஆயுதவீரர்களுடனும், சேனையின் காவல் ஆன –
சேனையைப் பாதுகாப்பவனாகிய, வேதம் நல் குருவினோடு உம் – வேதம்வல்ல
சிறந்த ஆசிரியனான துரோணனுடனும், வெம் களம் – கொடியபோர்க்களத்தில்,
வந்துசேர்ந்தான்-; (எ – று.)

     குபேரனும் தேவேந்திரனும் துரியோதனனுக்குச் செல்வச் சிறப்பில் உவமை.
குபேரன், பிரமனிடம் பெருவரம்பெற்று அதனால் நவநிதிநாயகனும் தநாதிபதியும்
திக்குப்பாலகருள் ஒருவனுமாகி, பின்பு தந்தையின் கட்டளையால் கைலாசத்திற்
சென்று அங்கு அளகையென்னுந் திவ்வியநகரியை அமைத்து அதில் புஷ்பகவிமா
நம் முதலிய பெருவிபவங்களுடன் வாழ்ந்து சிவபிரானுக்கு நண்ப னெனப்படுஞ்
சிறப்புள்ளவ னாதலால், ‘மாதனத்து அளகையாளும் மன்’ எனப்பட்டான். மன் –
பெருமை: அதனையுடைய மன்னவனுக்குப் பண்பாகுபெயர். பாகசாதனக்கடவுள் –
இந்திரனாகிய தேவ னென இருபெயரொட்டுப் பண்புத்தொகை; பாகசாஸநன் –
பாகனென்னும் அசுரனைக் கொன்றவனென்று காரணப்பொருள்; (பாகன் –
விருத்திராசுரனுடன் பிறந்தவன்.) தரணி – (பொருள்களைத்) தரிப்பது எனக்
காரணக்குறி. சேதநம் – சேதித்தல்; இனி, ‘சேதனப்படைஞர்’ என்பதற்கு-
அறிவுள்ளசேனைவீரரென்று உரைத்தல் சிறிதும் சிறவாது

மதி இலா விசும்பும், செவ்வி மணம் இலா மலரும்,
தெண்ணீர்
நதி இலா நாடும், தக்க நரம்பு இலா நாத யாழும்,
நிதி இலா வாழ்வும், மிக்க நினைவு இலா நெஞ்சும், வேத
விதி இலா மகமும் போன்ற,-வீடுமன் இலாத சேனை.5.-வீடுமனில்லாத துரியோதனசேனை பொலிவிழந்திருத்தல்.

(அப்பொழுது), வீடுமன் இலாதசேனை-பீஷ்மனில்லாத
அக்கௌரவசேனை,-மதி இலா விசும்புஉம் – சந்திரனில்லாத ஆகாயத்தையும்,
செவ்வி மணம் இலா மலர்உம் – நல்ல வாசனையில்லாத பூவையும், தெள்நீர் நதி
இலா நாடுஉம் – தெளிவானநீரையுடைய ஆறு இல்லாத தேசத்தையும், செம் பொன்
நரம்பு இலா – சிவந்தபொன்போ லருமையான நரம்பின் அமைதி இல்லாத, நாதம்
யாழ்உம் – ஒலிக்கு இடமான வீணையையும், நிதி இலா வாழ்வுஉம் –
செல்லவமில்லாத குடிவாழ்க்கையையும், தக்க நினைவு இலா நெஞ்சுஉம் – தகுந்த
நல்லெண்ண மில்லாத மனத்தையும், வேதம் விதி இலா மகம்உம் –
வேதங்களிற்கூறிய விதிமுறையொழுக்க மில்லாதயாகத்தையும், போலும்- ஒக்கும் :
(எ-று.)-பொலிவிழந்திருக்கும் என்றபடி. ‘போன்ற’ என்ற பாடத்துக்கு-போன்றது’
என்பதன் விகார மென்னலாம்.

     ‘நட்சத்திரமில்லாத வானம்போலவும், காற்றில்லாத ஆகாயம் போலவும்,
பயிரில்லாத நிலம்போலவும், திருத்தமில்லாத சொற்போலவும், பலிசக்கர
வர்த்தியில்லாதஅசுரசேனைபோலவும், கணவனில்லாத மனைவிபோலவும்,
நீரில்லாத நதிபோலவும்இருந்தது, வீடுமனில்லாத குருசேனை’ என்று
வியாசபாரதத்திற்கூறியுள்ளது.உபமானம் உபமேயம் உவமவுருபு என்ற மூன்றும்
விரிந்து நிற்கப் பொதுத்தன்மைமாத்திரம் தொக்கிருத்தலால், பொதுத்தன்மைத்
தொகையுவமையணி
யாம்.தெளிவானநீரின்வளமில்லாத நதி இருந்தும் பயனில்லை
யாதலால்,’தெண்ணீர்நதியிலாநாடு’ எனப்பட்டது. மற்றையிசைக் கருவிகளினும்
வீணையில்ஸ்வரத்துக்குரிய அக்ஷரங்களின் உச்சாரணை நன்கு அமைதலாலும்.
செவிக்கு இனியஓசையுடைமையாலும், ‘நாதயாழ்’ எனப்பட்டது. பி-ம்:-
தக்கநரம்பிலா.மிக்கநினைவிலா

பகடு, தேர், புரவி, காலாள், பல வகைப் பட்ட சேனை
சகட மா வியூகமாக வகுத்தனன், தனுநூல் வல்லான்;
திகழ் தரு கவுஞ்ச யூகமாகவே திட்டத்துய்மன்
துகள் தரு சாதுரங்கம் யாவையும் தொகுத்து நின்றான்.6.-இரண்டுபக்கத்துச் சேனாபதிகளும் தம்சேனையை அணிவகுத்தல்.

(அந்நாளில்), பகடு-யானைகளும், தேர் – தேர்களும், புரவி –
குதிரைகளும், கால் ஆள் – காலாள்களும் (என்னும் சதுரங்கங்களும்), பலவகை
பட்ட-பலபகுப்பாக அமையப்பெற்ற, சேனை – கௌரவசேனையை, தனு நூல்
வல்லான் – வில்வித்தையில் வல்லவனான துரோணாசாரியன், மா சகடம் வியூகம்
ஆக – பெரிய சகட மென்னும் வியூகமாக, வகுத்தனன் – அணிவகுத்தான்; துகள்
தரு-(வன்மையாக நடத்தலால்) புழுதியை மேலெழுப்புகிற, சாதுரங்கம் யாவைஉம்-
(பாண்டவரது) நால்வகைச்சேனைகளெல்லாவற்றையும், திட்டத்துய்மன் –
திருஷ்டத்யும்நன், திகழ்தரு – விளங்குகிற, கவுஞ்சயூகம் ஆகஏ –
கிரௌஞ்சமென்னும்  வியூகமாக, தொகுத்து நின்றான் – திரண்டு அமையச்செய்து
நின்றான்; (எ – று.)

     காலாள் – வாகனமின்றிக் கால்களால் நடக்கும் ஆண்மகன்; பதாதி.
தநுநூலாவது – வில்முதலிய ஆயுதங்களிற் பயிலும்வகைகளையும்,
பகைவெல்லுதற்குரிய மந்திரம்முதலிய பிரயோகங்களையும் அறிவிக்கிற
ஆயுதசாஸ்திரம். திகழ் + தரு = திகடரு ; இப்புணர்ச்சி
“பதினைந்தோடெண்ணிரண்டாய்” என்ற வீரசோழிய விலக்கண விதிப்படி
அமைந்தது. இனி, ‘திகழ்’ என்பது ழகரளகரப்போலியால் திகள் என நிற்க, அக்
குறில்செறியாத ளகரம் அல்வழியில் வந்த தகரம் திரிந்தபின் கெட்டதெனினும்
அமையும் ; இச்சந்தியை மரூஉமொழியில் அடக்குதல், ஒருசாரார்கொள்கை.
சாதுரங்கம் – வடமொழிப்புணர்ச்சி. யாவையும், யாவினா – எஞ்சாமை குறிக்கும் ;
உம்மை – முற்றுப்பொருளது. பி-ம்:-கரிஞ்சயூகம்

படையுடை இருவர் சேனாபதிகளும், பனி வெண் திங்கள்-
குடையுடை நிருபர் சூழ, வரூதினிக் குழாங்கள் சூழ,
நடையுடைத் தடந் தேர் உந்தி, நாகரும் பனிக்கும் வண்ணம்
தொடையுடை வாளி மாரி சோனை அம் புயலின் பெய்தார்.7.-இருசேனாபதியரும் மன்னவர் சூழநின்று இடைவிடாது அம்புபொழிதல்.

படை உடை – ஆயுதங்களையுடைய, இருவர் – (கௌரவர்
பாண்டவர் என்னும்) இருதிறத்தாரது. சேனாபதிகள்உம் – சேனைத்தலைவர்களான
துரோணனும் திட்டத்துய்மனும்,- பனி – குளிர்ச்சியான, வெள் – வெண்ணிறமுடைய,
திங்கள் – பூர்ணசந்திரன் போன்ற, குடை உடை – (கொற்றக்) குடையையுடைய,
நிருபர்- (தத்தம்பக்கத்து) அரசர்கள், சூழ – சுற்றிலும்வரவும்,- வரூதினி –
சேனைகளின், குழாங்கள் – கூட்டங்கள், சூழ – சூழ்ந்து வரவும்,- நடை உடை-
(விரைந்த) நடையையுடையை, தட – பெரிய, தேர் – (தம்தம்) தேரை, உந்தி –
செலுத்திவந்து, நாகர்உம் பனிக்கும் வண்ணம் – (பார்த்த) தேவர்களும்
அஞ்சிநடுங்கும்படி, தொடைஉடை – தொடுக்கப்படுந்தன்மையுள்ள, வாளி –
அம்புகளின். மாரி – மழையை, சோனை அம்புயலின் – விடாப்பெருமழைபொழிகிற
அழகிய மேகம்போல. பெய்தார் -(ஒருவர்மேல் ஒருவர் இடைவிடாமற்)
சொரிந்தார்கள்; (எ – று.)

இனி, ‘நாகரும்பனிக்கும்வண்ணம்’என்பதற்கு -(பாரமிகுதியால்
பாதாளலோகத்திலிருந்து பூமியைத்தாங்குகிற ஆதிசேஷன் முதலிய) நாகர்களும்
வருந்தும்படி எனினும் அமையும். தொடையுடைவாளி -ஒன்றையொன்று
தொடர்தலையுடைய அம்புகளெளினுமாம். உவமையணி. வரூதம் – ரதகுப்தி,
தேர்க்காவல்: அதனையுடையது – வரூதிநீஎன ஏதுப்பொருள், நாகரும், உம் –
உயர்வுசிறப்பு.

மருத்துவர் மைந்தர்தம்மில் இளவலும், வலிய சூது
கருத்துடன் பொருது வென்ற மாமனும், கலந்து, தம்மில்
ஒருத்தரை ஒருத்தர் வேறல் அரிது என உடன்று, வேக
சரத்தொடு சரங்கள் பாய, சராசனம் வாங்கினாரே.8.-சகதேவனும் சகுனியும் பொருதல்.

மருத்துவர் – (தேவ) வைத்தியரான அசுவிநீதேவர்களின்,
மைந்தர்தம்மில் – குமாரர்களான நகுலசகதேவர்களுள், இளவல்உம்-
இளையவனானசகதேவனும், வலிய சூது- வலிமையையுடைய சூதுபோரை,
கருத்துடன் -(வஞ்சனை) நினைப்புடனே, பொருது- செய்து, வென்ற-
(பாண்டவரைச்) சயித்த,மாமன் உம் -(துரியோதனாதியரின்) மாமனான சகுனியும்,
தம்மில் கலந்து-தமக்குள்[ஒருவரையொருவர்]நெருங்கி, ஒருத்தரை ஒருத்தர் வேறல்
அரிது என – ஒருவரைமற்றொருவர் வெல்லுதல் முடியாதாம்படி [சமமாய்],
உடன்று – உக்கிரங்கொண்டு,வேகம் சரத்தொடு சரங்கள் பாய – விரைவுள்ள
அம்புகளோடு அம்புகள் பாய்ந்துஎதிர்கோத்து நிற்கும்படி, சராசனம் வாங்கினார்-
வில்லை வளைத்துப்போர்செய்தார்கள் ; ( எ -று.)

     மருந்தின்தன்மையையறிந்து வியாதிக்கு ஏற்றபடி உபயோகித்தலால்,
மருத்துவரென்று வைத்தியர்க்குப் பெயர்; மருத்துவர் – மருந்தையுடையவர்; மருந்து-
பகுதி. பொருது என்ற வினைக்கு ஏற்ப, சூது, போரெனப்பட்டது. போர் முதலிய
செல்வங்களை எளிதிற்பெறுவித்த உறுதியைக் கருதி, ‘வலியசூது’ என்றார். இனி,
வலிமை – கொடுமையுமாம். வேறல், வெல் –  பகுதி. 

ஒரு கணை தொடுத்துப் பாகன் உயிர் கவர்ந்து,
உயர்த்த கேது
இரு கணை தொடுத்து வீழ்த்தி, இரத மாத்
தொலைய நான்கு
பொரு கணை தொடுத்து, வஞ்சன் பொரு அரு
மார்பில் ஆறு
வரு கணை தொடுத்து, வாகை மிலைந்தனன்,
வஞ்சம் இல்லான்.9.-சகதேவன் சகுனியை வெல்லுதல்.

(பின்பு), வஞ்சம் இல்லான் – வஞ்சனையில்லாதவனாகிய சகதேவன்,-
ஒரு கணை தொடுத்து- ஓரம்பைப் பிரயோகித்து, (அதனால்), பாகன் உயிர் கவர்ந்து-
(சகுனியின் தேர்ச்) சாரதியினது உயிரை (உடம்பினின்று) பறித்து [பாகனைக்
கொன்று], உயர்த்த கேது-(அவன்தேரில்) உயரக்கட்டிய துவசத்தை, இருகணை
தொடுத்து வீழ்த்தி – இரண்டுஅம்புகளைப் பிரயோகித்து (அவற்றால்)
அறுத்துத்தள்ளி, இரதம் மா தொலைய – தேரிற்பூட்டிய குதிரைகள் (நான்கும்)
அழியும்படி, நான்கு பொரு கணை தொடுத்து – போருக்குரிய நான்கு அம்புகளைப்
பிரயோகித்து, வஞ்சன் – வஞ்சனையுடையவனான அச்சகுனியின், பொரு அரு
மார்பில் – ஒப்பில்லாத மார்பிலே, வரு ஆறு கணை தொடுத்து – (ஒன்றன்பின்
ஒன்றாக) வருகிற ஆறு அம்புகளை பிரயோகித்து, வாகை மலைந்தனன் –
வெற்றிமாலை சூடினான்; ( எ -று.)

     முதலில் இருவர்க்கும் சிறிதுபொழுது சமமாகப் போர்நிகழ பின்பு போரில்
இன்னாரை இன்னாரால் வெல்லலாயிற்று என இயல்பை யெடுத்துக் கூறுதல், மரபு.
மலைதல் – சூடுதல்: “மலைதலு மிலைதலும் வேய்தலுஞ் சூடுதல்” என்பது,
பிங்கலத்தை. வஞ்சன் என்றதை, பாகன் கேது இரதம் என்றவற்றோடுங் கூட்டுக.
பாகு – யானை தேர் குதிரைகளைச் செலுத்துந் தொழில்: அதனையுடையான் –
பாகன். தொலைய என்னும் செயவெனெச்சம், காரியப்பொருளதாதலால், எதிர்காலம்.
வாகை யென்னும் மரத்தின் மலர்களாகிய மாலையைப் போர்வெற்றிக்கு அறிகுறியாக
வீரர்கள் சூடுதல், முறைமை. வஞ்சகச்சூதில் வல்லவ னாதலால், சகுனியை ‘வஞ்சன்’
என்றார்; “ஸதமாயன்” என்றார் முதனூலாரும். சகதேவன் வஞ்சமில்லானாதலை,
கீழ்ப் பழம்பொருந்து சருக்கத்திலும் கிருஷ்ணன் தூதுசருக்கத்திலும் கண்ணனுக்கும்
இவனுக்கும் நடந்த சம்பாஷணைகளாலும், (முகூர்த்தங்கேள்விச் சருக்கத்தில்)
அடுத்துக்கேட்ட துரியோதனனுக்குச் சிறிதும் வஞ்சனையின்றி நல் முகூர்த்தம்
வைத்துக்கொடுத்ததனாலும் அறிக. பி -ம் : மிலைந்தனன்.

உகு நிணச் சேற்றில் ஊன்றி ஓடுதற்கு உன்னுவான்போல்,
சகுனி அத் தேரினின்றும் இழிந்து, கைத் தண்டம் ஏந்த,
நகுலனுக்கு இளைய கோவும் நகு மணி வலயத் தோள்மேல்
மிகு திறல் தண்டுகொண்டே வென்னிடப் பொருது மீண்டான்.10.-சகதேவன் கதாயுதப்போரிலும் சகுனியை வெல்லுதல்.

உகு – (போர்க்களத்தில் இறந்த பிராணிகளின் உடம்பினின்று)
வெளிப்படுகிற, நிணம்- கொழுப்பாகிய, சேற்றில் – சேற்றிலே, ஊன்றி -(ஆதாரமாக)
ஊன்றிக்கொண்டு, ஓடுதற்கு-(தான்) ஓடிப்போவதற்கு, உன்னுவான் போல் –
எண்ணுபவன் போல, சகுனி-, அ தேரினின்றும் இழிந்து – அந்த(த் தனது)
இரதத்தினின்றும் இறங்கி, கை தண்டம் ஏந்த – கையிற் கதாயுதத்தை
எடுத்துக்கொள்ள,- (அப்பொழுது), நகுலனுக்கு இளையோன் தான்உம்- நகுலனுக்குத்
தம்பியான சகதேவனும், (தேரினின்று இறங்கி), நகு- பிரகாசிக்கிற, மணி –
இரத்தினங்கள் பதிக்கப்பெற்ற, வலயம்- வளையையணிந்த,தோள்மேல்-(தன்) கையில்,
மிகு திறல் தண்டுகொண்டுஏ – மிக்கவலிமையையுடைய கதாயுதத்தை எடுத்துக்
கொண்டே, வென் இட – (அச்சகுனி) முதுகுகொடுக்கும்படி, பொருது – போர்செய்து,
மீண்டான் – திரும்பி  (த்தேர்மீது) ஏறினான் ; (எ – று.)

தேரினின்று இறங்கிக் கையிற் கதையை யேந்திய சகுனி, சிறிதுபொழுதேனும்
எதிர்த்துநின்று அவ்வாயுதங்கொண்டு போர் செய்யமாட்டாமல் உடனே அஞ்சிப்
புறங்கொடுத்துத் தோற்று ஓடுதலால், அவனுக்கு அப் படைக்கலம்
போர்க்கருவியாகாது, வழுக்குதலுடைய சேற்றுநிலத்திற் சறுக்கிவிழாமல் ஓடுதற்கு
உதவியாகிற ஊன்றுகோல்மாத்திரமாகப் பயன்பட்டதென்றார்; இது –
தற்குறிப்பேற்றவணி. அத்தேர் – பாகனும் துவசமும் குதிரையும் இழந்த தேர்.
பி -ம்:
 இளையகோவும்.

மதாசலம், மகுட மான் தேர், வாம் பரி, வயவர், வெள்ளப்
பதாதி, எம் மருங்கும் போத, பார்த்திவர் நிழலின் போத,
பிதாமகன் இறந்தான் என்று பேதுறு நிருபன் போந்து,
சதாகதி மைந்தனோடும் தாக்கினன், தபனன் போல்வான்.11.-துரியோதனன் வீமனோடு பொருதல்.

மத அசலம்- மதத்தையுடைய மலைகள் போன்ற யானைகளும்,
மகுடம் மான் தேர் – சிகரத்தையுடைய குதிரைகள் பூட்டிய தேர்களும், வாம்பரி –
தாவிச்செல்லுங் குதிரைகளும், (என்னும் இவற்றில் ஏறிய), வயவர் – வீரர்களும்,
பதாதி வெள்ளம்- காலாள்களின் கூட்டமும், எ மருங்குஉம் போத – எல்லாப்
பக்கங்களிலும் (சூழ்ந்து) வரவும், பார்த்திவர் – அரசர்கள், நிழலின் -(தனது)
நிழல்போல, போத (நீங்காது உடன்) வரவும்,- தபனன் போல்வான் -சூரியன்போல
விளங்குபவனான, பிதாமகன் இறந்தான் என்று பேது உறு நிருபன்-
பெரியபாட்டனான வீடுமன் அழிந்தானென்று மதிமயக்கமடைந்த துரியோதனராசன்,-
போந்து-வந்து, சதாகதி மைந்தனோடுஉம்- வாயுபுத்திரனான வீமசேனனுடனே,
தாக்கினன்- எதிர்த்துப்பொருதான்; ( எ-று.)

     பார்த்திவர் – பிருதிவியை ஆளுபவர் ; தத்திதாந்தநாமம்:  ப்ருதிவீ – பூமி ;
ப்ருது என்னும் அரசனால் சீர்ப்படுத்தப்பட்டமை பற்றிய பெயர் இறந்தான் என்றது,
இங்கே இலக்கணை; வலிமை முழுதுமொடுங்கி இறந்தாற்போலானா னென்றபடி.
பேது – பேதம் என்னும் வடசொல்லின் விகாரம். ‘தபனன் போல்வான்’ என்பதனை,
வீமனுக்கு அடைமொழியாக்கினும் பொருந்தும், மேல் அவனே வெல்லுதலால்.

அரிக் கொடி அரிஏறு அன்னான், அரவ வெங்
கொடியும் அற்று,
வெருக் கொள் பேர் அரவம் அன்னான் வில்லும்
முன் அற்று வீழ,
எரிக் கணை ஏவி, சூழ்ந்த தரணிபர், எதிர்ந்த வேந்தர்,
கரிக் குலம், இவுளி, திண் தேர், மடிய, வெங்
கணைகள் தொட்டான்.12.- வீமன் துரியோதனனோடு அவனைச் சார்ந்தாரையும் வெல்லுதல்

அரி- சிங்கத்தின்வடிவமெழுதிய, கொடி – துவசத்தையுடைய, அரி
ஏறு அன்னான் – ஆண்சிங்கத்தை யொத்தவனான வீமன்,- வெரு கொள் பேர்
அரவம் அன்னான் – (காண்பவர்) அச்சங்கொள்ளுதற்குக் காரணமான பெரிய
பாம்பை யொத்த துரியோதனனது, அரவம் வெம் கொடிஉம் –
பாம்பின்வடிவமொழுதிய பயங்கரமான துவசமும், அற்ற – அறுந்து, வில்உம் –
(அவன்கை) வில்லும், அற்று – அறுபட்டு, முன் வீழ-(அவையிரண்டும்) எதிரிற்
கீழ்விழும்படி, எரி கணை – நெருப்புப்போன்ற கொடிய அம்புகளை, ஏவி-
செலுத்தி,- (அதன்பின்), சூழ்ந்த தரணிபர் – (அவனைச்) சுற்றிநின்ற அரசர்களும்,
எதிர்ந்த வேந்தர்- (தன்னை) எதிர்த்த அவ்வரசர்களின், கரி குலம் –
யானைக்கூட்டங்களும், இவுளி – குதிரைகளும், திண் தேர் – வலிய தேர்களும்,
மடிய – அழியும்படி, வெம் கணைகள் – கொடிய அம்புகளை, தொட்டான் –
பிரயோகித்தான்; ( எ -று.)

     அரி -ஹரி: (யானைமுதலிய பெரிய விலங்குகளையும்) அரிப்ப தென்று
பொருள். ‘வெருக்கொள்பேரரவமன்னான்’ எனத் தோல்வியுறுந்
துரியோதனனைக்குறித்ததாகவுமாம். தரணிபர் – பூமியையாள்பவர். ஏவித்தொட்டான்
என இயையும்; ஏவிச் சூழ்ந்த என இயைத்து உரைப்பினுமாம். பி -ம்: போரரவம்.

பல்லிய முழங்க, மன்னர் படப் பட,
பரித் தேரோடும்
வில் இயல் தானை வேந்தன் வென்னிடும்
விரைவு காணா,
சொல்லிய விற் கை வாயு சுதனுடன் உரும்ஏறு என்ன,
சல்லியன் முனைந்து, வீர சாயகம் ஏவினானே.துரியோதனன் புறங்கொடுப்பதுகண்டு சல்லியன்வந்து
வீமனையெதிர்த்தல்.

(இ -ள்.) பல் -அநேகமான, இயம் – வாத்தியங்கள், முழங்க – ஆரவாரிக்க,
(போருக்குவந்து அப்போரில்), மன்னர் பட பட – (தன்னுடன்வந்த) அரசர்கள்
மிகுதியாக அழிய, வில் இயல் தானை வேந்தன் – விற்கள் பொருந்திய
சேனையையுடைய துரியோதனன், பரி தோரோடுஉம்- குதிரைகள் பூண்ட
தேருடனே வென் இடும் -(வீமனுக்குப் ) புறங்கொடுக்கிற, விரைவு – வேகத்தை,
காணாபார்த்து, சல்லியன்-, உரும் ஏறு என்ன முனைந்து – பேரிடிபோல
உக்கிரங்கொண்டுவந்து, சொல்லிய வில் கை வாயு சுதனுடன் – கீழ்க்கூறின
வில்லையேந்திய கையையுடைய வாயுகுமாரனான வீமனை, வீரசாயகம் ஏவினான் –
வலிய அம்புகளைத் தொடுத்தான்; ( எ – று.)

     பல் இயம் – கொட்டுவனவும் ஊதுவனவும் ஆகிய தோற்கருவி துளைக்கருவி
கஞ்சக்கருவி நரப்புக்கருவி எனப்படும் அநேகவாத்தியங்களைக் காட்டும்
பொதுச்சொல்லாதலால்,’முழங்க’ எனப் பொதுவினை கொடுத்தார். சல்லியன் –
(பகைவர்க்கு) அம்பு நுனி போல் (வருத்தஞ்செய்) பவன் என்பது பற்றிய
காரணப்பெயர்;சல்யம – அம்புமுனை. இவன், மத்திரதேசத்து அரசன்; பாண்டு
மகாராசனது இரண்டாம் மனைவியாகிய மாத்திரிக்கு உடன் பிறந்தவனாதலால்,
நகுலசகதேவர்க்கு மாமனாவன். எய்பவனது பராக்கிரமத்தை அம்பின்மே லேற்றி,
‘வீரசாயகம்’ என்றது. வாயுஸு தன், சல்யன், வீரஸாயகம்- வடசொற்கள். சொல்லிய –
(சிறந்தவனென்று) சொல்லப்பட்ட எனினுமாம்.

தருமபுத்திரன் துரியோதனனை யெதிர்த்துத் தாக்கி நாகபாசத்தாற்கட்டிவைக்க,
துரோணன் வந்து கருடாஸ்திரத்தால் அந்நாகபாசத்தை விடுவித்துத் துரியோதனனை
மீட்டுக்கொண்டு சென்றதாகப் பெருந்தேவனார் கூறியுள்ளார்.

துருபதேயர், மகத நாடர், வெங் குலிங்கர், சோனகர்,
கருநடேசர், சிங்களர், கடார பூபர், கௌசலர்,
தருமராசன் மதலை சேனை முதுகிட, சரங்கள் போய்
ஒருவர் போல அனைவர்மேலும் உருவ,
எய்து உறுக்கினான்

தம்முனோடுடன்றுவந்தசல்லியகுமாரன்றன்னை
எம்முடனெதிர்ப்பையகிலிமைப்பொழுதிகல்செய்கென்னா
வெம்முனைகடந்தபொற்றேர்வெஞ்சிலைநகுலன்றோன்றி
அம்முனைகவந்தமாடவவனெடும்போர்செய்தானே.14.- சல்லியனைக் குறுக்கிட்டு நகுலன் எதிர்த்தல்.

தம் முனோடு – தனது தமையனான வீமனுடன், உடன்று வந்த –
எதிர்த்துவந்த, சல்லிய(ன்)  குமாரன்தன்னை – சல்லியனாகிய ஆண்மகனை
(நோக்கி), ‘எம்முடன் எதிர்ப்பை ஆகில்-எம்மோடு எதிர்க்கவல்லையானால், இமை
பொழுது இகல் செய்க – ஒரு மாத்திரைப்பொழுது போர்செய்வாக,’ என்னா- என்ற
சொல்லிக்கொண்டு,- வெம் முனை கடந்த – கொடிய (பல) போரை வென்ற, பொன்
தேர் – அழகிய தேரையும், வெம்சிலை – கொடிய வில்லையுமுடைய, நகுலன்-,
தோன்றி – எதிர்ப்பட்டு, அ முனை கவந்தம் ஆட – அப்போர்க்களத்தில்
தலையற்றஉடற்குறைகள் கூத்தாடும்படி, அவனொடுஉம் போர் செய்தான் –
அச்சல்லியனோடும் போரைச்செய்தான்; ( எ-று.)

     சல்லியன் வீமனை யெதிர்க்கச் செல்லுகையில், நகுலன் வீரவாதங்
கூறிக்கொண்டு இடையில் வந்து அவனையெதிர்த்துப் பொருதன னென்பதாம்.
தம்பியாகிய என்னை வென்றபின்பன்றோ தமையனான வீமனை நீ எதிர்க்கத்
தகுதியுடையாய் என்றுகருதி வந்ததுதோன்ற, ‘தம்முனோடுடன்று வந்த சல்லியனை’
என்றார். சல்லியகுமாரன் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை. பி – ம் :
அவனுடனடுபோர்செய்தான்

மோகரித்து, ஒன்று, இரண்டு, மூன்று, நால், ஐந்து,
அம்பு ஏவி,
பாகனை, சிலையை, பொன்-தேர்ப் பதாகையை,
பரியை, வீழ்த்தி,
ஆகம் உற்று உருவ எய்தான், அருச்சுனன்
இளவல்; மாறாப்
போக மத்திரத்தார் கோவும் புறந்தந்து போகலுற்றான்.15.- நகுலனுக்குச் சல்லியன் புறந்தந்துபோதல்.

அருச்சுனன் இளவல் – அருச்சுனது தம்பியான நகுலன்,- மோகரித்து
– வீராவேசங் கொண்டு, ஒன்று இரண்டு மூன்று நால் ஐந்து அம்பு ஏவி – ஒன்று
இரண்டு மூன்று நான்கு ஐந்து அம்புகளைத் (தனித்தனி) தொடுத்து, (அவற்றால்
முறையே), பாகனை – சாரதியையும், சிலையை- வில்லையும், பொன் தேர்
பதாகையை – அழகிய தேரின் கொடியையும், பரியை – (நான்கு) குதிரைகளையும்,
வீழ்த்தி – அழித்துத்தள்ளி, ஆகம் உற்று உருவ – (அச்சல்லியன்) மார்பில்
பொருந்தி ஊடுருவிச்செல்லும்படி, எய்தான் – பிரயோகித்தான்; (அதனால்), மாறா
போகம் மத்திரத்தார் கோஉம்- நீங்காத செல்வ அனுபவத்தையுடைய
மத்திரதேசத்தார்க்கு அரசனான சல்லியனும், புறம்தந்து போகல் உற்றான்-
முதுகுகொடுத்துச் செல்லத்தொடங்கினான்;  ( எ -று.)

     ஒரம்புஏவிப் பாகனையும், இரண்டு அம்புஏவிச் சிலையையும், மூன்று
அம்புஏவித் தேர்ப்பதாகையையும், நாலம்புஏவித் தேர்ப்பரியையும் வீழ்த்தி, ஐந்து
அம்பு ஆகம்உற்று உருவுமாறு எய்தானென முறைநிரனிறைப்பொருள் கோளாக
உரைத்தார். மோகரித்து- கோபத்தோடு ஆரவாரித்து என்றுமாம். ஆகம் முற்று
உருவ எனப்பிரிந்து – உடம்புமுழுவதுந் துளைக்க எனினுமாம் வில் வித்தையிலும்
பராக்கிரமத்திலும் நகுலனுக்கு உள்ள சிறப்பு விளங்க, ‘அருச்சுனனிளவல்’ என்றார்.
போகம் – மத்திரத்தார்க்காவது கோவுக்காவது அடைமொழியாக்கொள்ளின்
இன்பமனுபவித்தலும், மத்திரத்துக்கு அடைமொழியாக்கொள்ளின் பயிர்விளைவுமாம்.
போகம், மத்ரம் – வடசொற்கள்

சையம் ஓர் இரண்டு தம்மில் பொருதெனத் தடந்
தேர் உந்தி,
வெய்யவன் மகனும், வீர விராடனும், எதிர்ந்த வேலை,
வையகம், கம்பமுற்று, மாசுணம் நடுங்க, மேன்மேல்
எய்யும் வெங் கணையால், வானத்து எல்லையும்
மறைந்தது அன்றே.16.- கர்ணனும் விராடனும் பொருதல்.

ஓர் இரண்டு சையம் – ஒப்பற்ற இரண்டுமலைகள், தம்மில் பொருது
என -தமக்குள் எதிர்த்துப் போர்செய்தாற்போல, தட தேர் உந்தி – பெரிய
(தம்தம்)தேரைச் செலுத்தி, வெய்யவன் மகன்உம்- சூரியபுத்திரனான கர்ணனும், வீர
வீராடன்உம் – வீரத் தன்மையுடைய விராடராசனும், எதிர்ந்த வேலை- (தம்மில்)
எதிரிட்ட பொழுதில்,- வையகம் கம்பம் உற்று – (அவ்வதிர்ச்சியால்) பூமி
நடுக்கமடைந்து, மாசுணம் நடுங்க – (அப்பூமியைத் தாங்கும் ஆதிசேஷனாகிய)
பெரும்பாம்பும் அசைய, மேல் மேல் எய்யும் வெம் கணையால் – மேன்மேல்
இடைவிடாது தொடுக்கிற கொடிய அம்புகளால், வானத்து எல்லைஉம் மறைந்தது –
ஆகாயத்தினிடமும் மறைபட்டது; (எ-று.) – அன்றே – ஈற்றசை; தேற்றமுமாம்:
அப்பொழுதே என்றுமாம்.

     சையம்- ஸஹ்யமென்பதன்விகாரம் : குடகுமலைக்குப் பேராகிய ஸஹ்யமென்ற
சிறப்புப்பெயர் மலையென்ற பொதுப்பொருளைத் தந்ததென்க; இனி, சைல மென்னும்
வடசொல்லின் விகாரமென்றலும் ஒன்று. மலைகள் – தேருக்காயினும், வீரர்க்காயினும்
உவமம். பொருதென- பொருதாலென என எச்சத்திரிபாகவாவது, பொருததென எனத்
தொழிற்பெயர் விகாரமாகவாவது கொள்ளத்தக்கது. மேல்மேல் – அடுக்கு,
இடைவிடாமை பற்றியது.  

துருபத யாகசேன நிருபனும், தும்பை சூடி
வரு பகதத்தன் என்னும் மடங்கல் ஏறு அனைய கோவும்,
ஒரு பகல் முழுதும் தங்கள் ஊக்கமும், உரனும், தேசும்,
பொரு படை வலியும் காட்டி, போதகப் பூசல் செய்தார்.17.- துருபதனும் பகதத்தனும் வேழப்போர் புரிதல்.

துருபத யாகசேன நிருபன்உம் – துருபதனென்றும் யாகசேனனென்றும்
பெயருள்ள (பாஞ்சாலதேசத்து) அரசனும், தும்பை சூடிவரு – தும்பைப்பூமாலையைத்
தரித்தவருகிற, பகதத்தன் என்னும்- பகதத்தனென்கிற, மடங்கல் ஏறு அனைய
கோஉம் – சிறந்த ஆண் சிங்கத்தை யொத்த அரசனும் ( இவ்விருவரும்), ஒரு பகல்
முழுதுஉம் – அவ்வொருநாளைப் பகற்பொழுது முழுவதிலும், தங்கள் –
தங்களுடைய, ஊக்கம்உம்- (போரில்) உற்சாகத்தையும், உரன்உம்- (தேக)
வலிமையையும், தேசுஉம் – பராக்கிரமத்தையும், பொரு படை வலிஉம்-
போர்செய்கிற ஆயுதங்களின் பலத்தையும், காட்டி-(பலரும் அறிய) வெளியிட்டு,
போதகம் பூசல் செய்தார் – யானைப்போரைச் செய்தார்கள் ; (எ -று.)

     துருபதயாகசேனநிருபன் – திரௌபதியின் தந்தை. தும்பை யென்னுஞ்
செடியின் பெயர், அதன் பூவினாலாகிய மாலைக்கு இரு மடியாகுபெயர். இப்பூமாலை,
போர்செய்வார்க்கு உரியது. பகதத்தன்-(பிராக்ஜ்யோதிஷபுரத்து அரசனும்
வராகமூர்த்திக்குப் பூமி தேவியினிடம் பிறந்தவனும் கண்ணனாற்
கொல்லப்பட்டவனுமாகிய) நரகாசுரனது மகன். மடங்கல்-(பிடரிமயிர்) மடங்குதலுடைய
தென ஆண்சிங்கத்துக்குக் காரணக்குறி. மடங்கலென்றதே ஆண்சிங்கத்தைக்
குறித்தலால், ‘ஏறு’என்றது- சிறப்பை உணர்த்தும். உரன்- அறிவுமாம். தேசு-
தேஜஸ்.போதகப் பூசல்-யானைமேலிருந்து யானைச் சேனைகளொடு பொருந்திப்
போர்செய்தல். போதகம் – பத்துவருஷத்து யானைக்குட்டி; இங்கே
யானைமென்னுமாத்திரமாய் நின்றது. ‘உரனும்’ என்றவிடத்து ‘முரணும்’ என்றும்
பாடம்.        

துன்று வெங் கழற்கால் சோமதத்தனும், சூழ்ந்து நின்ற
வன் திறல் வேந்தர்தாமும், வாள் அமர் புறம் தந்து ஓட,
அன்று வீடுமனை வென்ற ஆண்தகை சிகண்டி என்பான்
இன்று போர் செய்த வீரம் எம்மனோர்க்கு
இயம்பல் ஆமோ?18.-சிகண்டியின் வீரம்.

துன்று- நெருங்கிய, வெம் – பயங்கரமான, கழல்- வீரக்கழலையணிந்த,
கால்- காலையுடைய, சோமதத்தனும்-, சூழ்ந்து நின்ற-(அவனுக்கு உதவியாய்ச்)
சுற்றிலும் நின்ற, வல் திறல் வேந்தர்தாம்உம் – கொடிய வலிமையுடைய அரசர்களும்,
வாள் அமர்- வாளினாற்செய்யும்போரில், புறம் தந்து ஒட- முதுகுகாட்டியோடும் படி,
அன்று வீடுமனை வென்ற ஆண் தகை சிகண்டி என்பான் – அந்நாளில் [முந்தின
பத்தாம்போர்நாளில்] பீஷ்மனைச் சயித்த ஆண்மைக்குணடுடையவனான சிகண்டி
யென்பவன், இன்று – இந்நாளில் [பதினோராம்நாளில்], போர் செய்த-, வீரம்-
பராக்கிரமம், எம்  அனோர்க்கு -எம்மைப்போன்றவர்களுக்கு, இயம்பல் ஆம்ஓ-
சொல்லுதல் கூடுமோ? [சொல்லமுடியாது என்றபடி]; (எ -று.)

சோமதத்தன் – குருவமிசத்தவனான பிரதீபனுடைய புத்திரர் மூவருள்
ஒருவனான பாகிலீகனுக்குப் புதல்வன் : கலிங்கநாட்டரசனென்பாருமுளர்.ஆண்தகை
– உயர்திணைப்பெயராதலின், அதன் முன் வலி மிகவில்லை. என்பான் –
முதல்வேற்றுமைச் சொல்லுருபு. பி -ம்: ஆண்டகைச்சிகண்டி. செய்த வண்ணம்

தேர்த் திரள், பரித் திரள், கரித் திரள், சேனையின்
கோத் திரள், புடை வர, குடை வர, கொடி வர,
பார்த்திவன் மதலையும், பார்த்தன் மா மதலையும்,
தூர்த்தனர் விசும்பையும், தொடுத்தன தொடைகளால்.19.- அபிமன்யுவும் லட்சண குமாரனும் பொருதல்.

தேர் திரள் – தேர்களின் கூட்டமும், பரி திரள்- குதிரைகளின்
கூட்டமும், கரி திரள் – யானைகளின் கூட்டமும், சேனையின் கோ திரள் –
சேனையின் சம்பந்தமான அரசர்களின் கூட்டமும், புடை வர – பக்கங்களிற்
சூழ்ந்துவரவும், குடை வர – குடைகள் (உடன்) வரவும், கொடி வர – துவசங்கள்
(உடன்)வரவும், பார்த்திவன் மதலைஉம் – துரியோதனராசனுக்குப் புத்திரனான
லக்ஷணகுமாரனும், பார்த்தன் மா மதலைஉம் – அருச்சுனனுக்குச் சிறந்த
புத்திரனானஅபிமந்யுவும், (ஒருவரோடு ஒருவர் எதிர்த்து), தொடுத்தன
தொடைகளால் – (தாம்தாம்) பிரயோகித்தனவான அம்புகளால், விசும்பைஉம்
தூர்த்தனர் – (பரந்த)ஆகாயத்தையும் நிறைத்தார்கள்; ( எ – று.)

     அபிமந்யு – அருச்சுனன் தீர்த்தயாத்திரைசென்றபோது அவனுக்குக்
கண்ணன் தங்கையான சுபத்திரையினிடம் பிறந்தவன். விசும்பையும், உம் –
உயர்வுசிறப்பு; அது – அதன்  அளவிறந்தபரப்புடைமையை விளக்கும். புடைவர,
குடைவர, கொடிவர என்றவற்றில் எண்ணும்மை தொக்கது, வினைச்செவ்வெண்.
அக்காலத்து இராசராசனாய்ப் பூமியை அரசாண்டவன் துரியோதனனே யாதலால்,
அவளை ‘பார்த்திவன்’ என்றார்.

     இதுமுதல் பதினைந்து கவிகள் – பெரும்பாலும் எல்லாச்சீர்களும்
விளச்சீர்களாகிய அளவடி நான்கு கொண்ட கலிவிருத்தங்கள்.

மொய் கணை பிற்பட முந்து தேர் உந்தவும்,
பெய் கணை கணையுடன் பின்னி முன் வீழவும்,
எய் கணை அபிமனும், இலக்கணகுமரனும்,
கை கணை தர, நெடுங் கார்முகம் வாங்கினார்.0,- நான்குகவிகள் – அவ்விருவரும் பொர, முடிவாக,
அபிமன்யு லக்ஷணகுமரனைத்தலைமயிரைப்பிடித்துத் தேரிற்கொண்டு
போனமைகூறும்.

மொய் – நெருங்கிய, கணை – அம்புகளும், பின் பட- (வேகத்தில்)
பின்னிடும்படி, முந்து தேர் – சிறந்த (தம்தம்) தேர், உந்தஉம் -(மிக்க விசையாய்ச்)
செலுத்தப்படவும், பெய் கணை – (தம்மில் ஒருவரால்) சொரியப்பட்ட அம்பு,
கணையுடன் பின்னி -(மற்றொருவரால் விடப்பட்ட) அம்பொடு சிக்கி, முன் வீழஉம்
– எதிரில் விழுந்திடவும்,- எய் கணை – தொடுக்கிற அம்புகளையுடைய
[அம்புத்தொடுக்கவல்ல என்றபடி], அபிமன்உம் – அபிமந்யுவும்,
இலக்கணகுமரன்உம்-லக்ஷணகுமாரனும், கை கணை தர – வலக்கை அம்பு
(எடுத்துக்) கொடுக்க, நெடு கார்முகம் வாங்கினார் – நீண்ட (தம்) வில்லை
வளைத்துப் போர்செய்தார்கள்; ( எ -று.)

     முதலடியில், கணை என்பதன் இறுதியில் உயர்வுசிறப்பும்மை விகாரத்தால்
தொக்கது. அபிமன், இலக்கணகுமரன் – வடசொல் திரிபுகள். அபிமந்யு என்னும்
வடமொழிப்பெயர், மிக்ககோபமுடையா னென்னும் பொருளுடையது. இப்பாட்டில்
அடிதோறும் ‘ கணை’ என வந்த சொல் ஒருபொருளையே குறித்தலால்,
சொற்பொருட்பின்வருநிலை. பி – ம்: தேருந்தியும்.  

இன் சிலை மதன வேள் என வரும் குமரன், அவ்
வன் சிலை வில்லிதான் மகிழ்வுறும் குமரனை
நன் சிலை நடு அற நாணொடும் துணியவே,
தன் சிலை கொண்டு, வெஞ் சாயகம் ஏவினான்

(அப்பொழுது), இன் – இனிமையான, சிலை-(கரும்பு) வில்லையுடைய,
மதனன் வேள் என – மன்மதன்போல, வரும் – வருகிற, குமரன் – லக்ஷணகுமாரன்,
அ- அந்த, வன் சிலை வில்லி தான் மகிழ்வுஉறும் – வலிய (மேரு) மலையை
வில்லாகவுடைய சிவபிரான் மகிழ்ச்சிமிகுதற்குக் காரணமான, குமாரனை –
அருச்சுனபுத்திரனான அபிமந்யுவை, நல் சிலை – (அவனது) சிறந்த வில்,
நாணொடுஉம்- நாணியுடனே, நடு உற துணியஏ – நடுவிலே பொருந்தத் துணி
படும்படியாகவே, தன் சிலை கொண்டு – தனதுவில்லினால், வெம் சாயகம் ஏவினான்
– கொடிய அம்புகளைச் செலுத்தி யெதிர்த்தான்; ( எ – று.)

     இன்சிலை – சுவையினிய வில்; எனவே, கரும்பாயிற்று. முருக வேளை
விலக்குதற்கு, ‘மதனவேள்’ என்றார். மதனன் – ஆண் பெண்களை மதமடையச்
செய்கிறவன்: வடசொல், லக்ஷணகுமாரனென்பது – அழகிய மைந்தனெனப்
பொருள்படுதலால், அப்பெயரை ‘மதனவேளெனவருங் குமரன்’ எனக் குறித்தார்.
அக்குமரன் என இயையும். அவ் வன்சிலைவில்லி யென இயைத்தால், அ –
உலகறிசுட்டாம். அருச்சுனன்போலவே அபிமன்யுவும் சிறந்த சிவபக்தனாய்
அப்பிரானதுதிருவள்ளத்தை உவக்கச்செய்பவ னாதலால், ‘வன்சிலை வில்லிதான்
மகிழ்வுறுங் குமரன்’ என்றார்; அத்தன்மையை இச்சருக்கத்தின் 23- ஆம் கவியிலும்,
பதின்மூன்றாம்போர்ச்சருக்கத்தின் 50- ஆம் கவியிலுங் காண்க. சிவபிரான்
மகாமேருமலையை வில்லாகக்கொண்டது, திரிபுரசங்காரகாலத்தி லென அறிக.
‘சாயகம்ஏவினான்’ என்பது- எதிர்த்தான் என ஒருசொல்மாத்திரமாகி, ‘குமாரனை
என்றசெயப்படுபொருளுக்கு முடிக்குஞ் சொல்லாம்; இனி, குமரனது சிலை யென
உருபுமயக்கமாக உரைப்பினும் அமையும் பி-ம்: நடுவற.

அற்ற வில் துணிகளால் அரியையும் பாகையும்
செற்றனன்; சென்றனன், தேரொடும் தேர் உக;
கொற்றவர் நூற்றுவர்க்கு உரிய அக் குமரனைப்
பற்றினன், உயிரொடும்-பாண்டவர் குமரனே.

(அதன்பின்), பாண்டவர் குமரன் – பாண்டவர்களுக்கு
உரியகுமரானான அபிமன், அற்ற வில் துணிகளால் – (எதிரியின் அம்பால்)
அறுபட்ட (தனது) வில்லின் துண்டுகளிரண்டாலும், அரியைஉம் பாகைஉம்
செற்றனன்- (பகைவனது தேர்க்) குதிரைகளையும் பாகனையும் அடித்துஅழித்து,
தேரொடுஉம் தேர் உக – (தனது) தேரினால் (அவனது) தேர்சிந்தும்படி,
சென்றனன்- (தாக்கிச்) சென்று, கொற்றவர் நூற்றுவர்க்கு உரிய அ குமரனை –
வெற்றியையுடைய ( துரியோதனாதியராகிய) நூறு அரசர்களுக்கும் உரிய குமாரனான
அவ்விலக்கணனை, உயிரொடுஉம் பற்றினன் – உயிரோடு பிடித்துக்கொண்டான் ;
(எ-று.)

     அரி = ஹரி: வடசொல்திரிபு : இப்பலபொருளொருசொல் – இங்கு,  குறித்தது.
பாகு – பாகனுக்குப் பண்பாகு பெயர். நூற்றுவர் -தொகைக்குறிப்பு. துரியோதனாதியர்
நூறு பேருக்கும் இலக்கணனிடத்தும், பாண்டவரைவர்க்கும் அபிமனிடத்தும்
அபேதமாகவுள்ள அன்பு தோன்ற ‘நூற்றுவர்க்குரிய அக்குமரன்’ என்றும்,
‘பாண்டவர்குமரன் ‘என்றுங் குறித்தார்.  

வீயினால் வென்ற போர் வில்லியைக் கண் நுதல்
தீயினால் வென்றவன் திகழ்தரும் சிந்தையோன்,
காயினான் வார் குழல் கைப்படுத்து, எதிர் உறப்
போயினான் அவனொடும், பொன் நெடுந் தேரின்மேல்

வீயினால் – மலரம்புகளால், வென்ற – (உலகமுழுவதையும்) சயித்த,
போர் வில்லியை – போரில்வல்ல (கரும்பு) வில்லையுடைய மன்மதனை, நுதல் கண்
தீயினால்-(தனது) நெற்றிக்கண்ணின் நெருப்பினால், வென்றவன்- சயித்திட்டவனான
பரமசிவன், திகழ்தரும் – விளங்கப்பெற்ற, சிந்தையோன் – மனத்தையுடைய அபிமன்,
காயினான் – (தன்னைக்) கோபித்து எதிர்த்தவனான இலக்கணனது, வார் குழல் –
நீண்ட தலைமயிரை, கை படுத்து – கையிற் பிடித்து, அவனொடுஉம் – அவனுடனே,
பொன் நெடு தேரின்மேல் – அழகிய பெரிய (தனது) இரதத்தில், எதிர் உற
போயினான் – (முன் வந்தவழிக்கு) எதிராக மீண்டுசெல்பவனானான்; (எ – று.)

     வீ-மலர். கடவுள் அன்பால் நினைவராது உள்ளக்கமலத்தில் அவர்
நினைந்தவடிவோடு விரைந்து சென்று வீற்றிருத்தலால், ‘வென்றவன்திகழ்தருஞ்
சிந்தையோன்’ என்றார். காயினான் என்ற தெரிநிலை வினையாயலணையும்பெயரில்,
இன் -இறந்தகால இடைநிலை. ‘எதிரற’ என்ற பாடத்துக்கு –
எதிர்ப்பவரில்லாமலென்க.   

முந்து வாள் அபிமன் அம் மூரி விற் குமரனை
உந்து தேர்மீது கொண்டு ஓடலும், ஒரு புடைச்
சிந்து பூபதி செயத்திரதன் வெஞ் சினம் உற,
வந்து, வெங் குனி சிலை வாளியின் தகையவே,24.- அப்போது அபிமனைச் சயத்திரதன் தகைதல்.

இதுவும், வருங் கவியும் – குளகம்.

     (இ-ள்.) முந்து – சிறந்த, வாள் – ஆயுதப்பயிற்சியையுடைய, அபிமன்-, மூரி
வில் -வலியவில்லையுடைய,  அ குமரனை- அவ்விலக்கணனை, உந்து தேர்மீது
கொண்டு- செலுத்தப்படுகிற (தனது) தேரின்மேற் பிடித்து வைத்துக்கொண்டு,
ஓடலும் -வேகமாகச் செல்லுமளவில்-, – ஒரு புடை – ஒரு பக்கத்திலிருந்து, சிந்து
பூபதிசெயத்திரதன் – சிந்துதேசத்தரசனான ஜயத்ரதனென்பவன், வெம் சினம் உற –
கடுங்கோபமுண்டாக, வந்து- (எதிரில்) வந்து, வெம் குனி சிலை வாளியின் – கொடிய
வளைந்தவில்லினின்று  (எய்யப்படும்) அம்புகளால்,   தகைய – தடுத்துபோர்செய்ய,-
(எ – று) -” மன்னவன் றோளுரந் தொலைந்தபின்… தேர்ம(ன்)னர்,…. அமர்
செய்தார்” என அடுத்த கவியில் தொடர்ந்து முடியும்.

     முதலில் அபிமனது வில்லைத் தன்வில்வலியால் துணித்திட்டனனாதலால்,
‘மூரிவிற்குமரன்’ எனப்பட்டான். வாள் – ஆயுதப் பொதுப்பெயராய் நின்றது.
ஜயத்ரதன் – துரியோதனாதியருடன் பிறந்தவளான துச்சளையின் கணவன்;
சிந்துதேசத்தரச னாதலால், ஸைந்தவனென்றும் இவனுக்கு ஒரு பெயர் வழங்கும்.பி-
ம்
:  வன் செயமுற.     

மடங்கலை வளைவது ஓர் சிலம்பி நூல் வலை எனத்
தொடங்கிய மன்னவன் தோள் உரம் தொலைந்த பின்,
திடம் கொள் தோள் அங்கர்கோன் முதலிய தேர் மனர்
அடங்க வந்து, அபிமனாம் ஒருவனோடு அமர் செய்தார்.25.- சயத்திரன் வலிதொலைய, பிறகு கர்ணன் முதலியபலர்
அபிமனொருவனை வளைதல்.

மடங்கலை – ஆண்சிங்கத்தை, வளைவது – சூழந்து
அகப்படுத்துவதான, ஓர் – ஒரு, சிலம்பி நூல் வலை என – சிலந்தி யென்னும்
பூச்சியின் நூலினாலாகிய வலைபோல, தொடங்கிய -(அபிமனை வளைந்துகொள்ளத்)
தொடங்கின, மன்னவன் – சயத்திரதராசன், தோள் உரம் தொலைந்த பின் –
(அவ்வபிமனாயுதங்களால் தன்)தோள்வலிமை அழிந்த பின்பு, – திடம் கொள்
வலிமையைக்கொண்ட, தோள் – தோள்களையுடைய, அங்கர் கோன் முதலிய –
அங்கதேசத்தார்க்கு அரசனான கர்ணன் முதலான, தேர் ம(ன்)னர்-
இரதாதிபதிகளான அரசர்கள், அடங்க – எல்லோரும், வந்து – (எதிர்த்து) வந்து,
அபிமன் ஆம் ஒருவனோடு – அபிமந்யுவாகிய ஒருத்தனுடனே, அமர் செய்தார் –
போர் செய்தார்கள்

     சயத்திரதனுக்கும் அபிமந்யுவுக்கும் விளைந்த மகாயுத்தத்தில் தேருஞ் சிலையும்
அழிப்புண்ட அபிமன், கதாபாணியாய்ப் பாய்ந்து புடைத்துச் சயத்திரனை முடிபிடித்து
இழுத்துத் தேரினின்று கீழ்விழத் தள்ளினா னென்று பாரதவெண்பாவிற் கூறியுள்ளது.
மடங்கலை வளைவதோர் சிலம்பி நூல்வலை – இல்பொருளு வமை; சைந்தவனது
முயற்சி  சிறிதும் பயன்படாமையின், இவ்வுவமை கூறினார். தோளுரம்
– புஜபலம். திடம்-த்ருடம் என்னும் வட சொல்லின் திரிபு. பரமசிவனது நெற்றிக்கண்
நெருப்புக்கு இரையாகி எரிபட்ட மன்மதனது அங்கம் [உடம்பு] விழுந்த இடத்துக்கு,
அக்காரணத்தால் ‘அங்கதேசம்’ என்ற பெயர்.  

வந்தவர் வந்தவர் வாள் நுதல் நிலைதொறும்
சிந்துரத் தூளியால் திலகம் இட்டனன் என,
கொந்து உறு கணை முனைக் குருதி நீர் மல்கவே,
வெந் திறல் வில்லின் வென் கண்டனன், வீரனே.26.- எதிர்த்துவந்தவர்களை அபிமன் முதுகுகொடுத்தோடச் செய்தல்.

வந்தவர் வந்தவர் – (அங்ஙனம் தன்னை) மேன்மேல் எதிர்த்துவந்த
அரசர்களது, வாள் நுதல் நிலை தொறுஉம் – பிரகாசமான நெற்றியினிடந்தோறும்,
சிந்துரம் தூளியால் திலகம் இட்டனன் என – சிந்துரச்செம்பொடியால்
திலகமிட்டவன்போல், கொந்து உறு கணை முனை – குத்துதல் பொருந்திய
அம்புகளின் நுனியால், குருதி நீர் மல்க – இரத்தப்பெருக்கு நிறைய (ச்செய்து),
வீரன்- அபிமன், (அவர்களையெல்லாம்), வெம் திறல் வில்லின் – கொடிய
வலிமையுடைய விற்போரால், வென் கண்டனன் – முதுகு கொடுக்கச்செய்தான்;
(எ -று.)

     வந்தவர் வந்தவர் – அடுக்க, மிகுதிகாட்டும். சிறந்த இலக்காதலின், நெற்றி
கூறப்பட்டது; மேல் 28- ஆங் கவியில் முகங் கூறுவதுங் காண்க. கொந்து –
முதனிலைத்தொழிற்பெயர். ‘கொத்து’ என்பதன்மெலித்தலெனக் கொண்டால்,
கொந்துறு- திரட்சிபொருந்திய என்க. பி – ம் : இட்டனரென. 

சென்ற தேர் யாவையும் தன் ஒரு தேரினால்
வென்று, மா மன்னவன் மகனையும் மீது கொண்டு,
அன்று போம் வெஞ் சிலை ஆண்மை
கண்டு, அபிமனை
வன் திறல் சல்லியன் வந்து முன் வளையவே,27.- அப்போது சல்லியன்வந்து அபிமனை முன்வளைதல்.

இதுவும்,மேற்கவியும் – குளகம்.

     (இ-ள்.) (இவ்வாறு அபிமன்), சென்ற தேர் யாவைஉம் – (எதிர்த்து) வந்த
தேர்களெல்லாவற்றையும், தன் ஒரு தேரினால் – தனது ஒரு தேரினாலே, வென்று –
சயித்து, மா மன்னவன் மகனைஉம் – பெரிய துரியோதனராசனது குமாரனான
இலக்கணனையும், மீது கொண்டு – (அத்தேரின்) மேல் வைத்துக்கொன்டு, அன்று –
அப்பொழுது, போம்-(மீண்டு) சென்ற, வெம் சிலை ஆண்மை – கொடிய வில்லின்
திறத்தை, கண்டு – பார்த்து, வல் திறல் சல்லியன் – கொடிய வலிமையையுடைய
சல்லியன், வந்து-, அபிமனை-, முன் வளைய – எதிரில் வளைந்துகொள்ள,-
( எ-று.)”விசயன்மதலை … அடைசினான்” என அடுத்த கவியோடு முடியும்.

     அபிமன் தான் அதிரத னாதலால், ஒருவனாகவே தன் தேர் குதிரை
சாரதிகளுக்கு அழிவுவராமற்காத்துப் பற்பலதேர்வீரரோடு பொருதன னென்பார்,
அதனை உபசாரவழக்காகத் தேரின்மேலேற்றி ‘சென்றதேர்யாவையுந்
தன்னொருதேரினால் வென்று’ என்றார். ஆண்மை – பராக்கிரமம்

சித்திரபானுவின் சீறி முன் செல்லும் அம்
மத்திரராசனை, ‘வருக, நீ வருக!’ என்று,
அத்திரம் நால்-இரண்டு அவன் முகத்து
அடைசினான்,
மித்திரர் செல்வமாம் விசயன் மா மதலையே.28.- அபிமன் சல்லியன்மீது அம்புசெலுத்துதல்.

சித்திரபானுவின் – (இருளையழிக்கிற) சூரியன் போல,
(விளக்கமுடையனாய்), சீறி முன் செல்லும் – கோபித்து எதிரில் வருகிற, அ மத்திர
ராசனை – அந்த மத்திரதேசத்தரசனான சல்லியனை, மித்திரர் செல்வம் ஆம்
விசயன் மா மதலை – நண்பர்க்குச் செல்வத்தையொத்த அருச்சுனனது சிறந்த
குமாரனான அபிமன், நீ வருக வருக என்று – ‘நீ வருவாயாக வருவாயாக’ என்று
(ஆதரந்தோன்ற) அழைத்து, அத்திரம் நால் இரண்ட – எட்டு அம்புகளை, அவன்
முகத்து அடைசினான் அச்சல்லியனது முகத்திற்செலுத்தினான்;  (எ -று.)

     சித்ரபாநு வென்னும் வடமொழிப்பெயர் – (ஆச்சரியகரமான) கிரணங்களை
யுடைவ னென்று பொருள்படும்: இச்சொல், அக்கினியையும் காட்டும். வருகவருக –
அடுக்கு, போரிலுள்ள உற்சாகத்தோடு விரைவையுங் காட்டும், நாலிரண்டு – சில
என்றமாத்திரம்: “நஞ்சீயர்செய்த வியாக்கியைகள் நாலிரண்டுக்கு” என்ற
விடத்துப்போல. செல்வம்போலச் சமயத்தில் சினேகிதர்களுக்குப் பலவாறு உதவுபவ
னென்பார், ‘மித்திரர் செல்வமாம்’ என்றார்; இது – விசயனுக்காயினும், அவன்
மதலைக்காயினும் அடைமொழியாம். மித்ரர் என்னும் வடசொல்லுக்கு –
அளவறிந்துகாப்பவரென்று பொருள். 

தோள் இரண்டினும் நடுத் துளை பட, பாகன்மேல்
மீளவும் கொடியது ஓர் வீர வேல் ஏவினான்;
நீள வெங் கதையுடன் நீள் வரை இழிதரும்
யாளிபோல் சல்லியன் இரதம் விட்டு இழியவே,29.- பின்னும் பாகனை அபிமன் வேலினால் மாய்க்க, சல்லியன்
கதையுடன்தேரினின்றிழிதல்.

இதுவும், மேற்கவியும் குளகம்.

     (இ -ள்.) தோள் இரண்டின்உம் – (அச்சல்லியனது) இரண்டு தோள்களிலும்,
நடு துளை பட – நடுவில் துவாரமுண்டாம்படி, ( இரண்டு அம்பு செலுத்தி), மீளஉம்
– பின்பு, பாகன்மேல் – (அச்சல்லியனது) சாரதியின்மேல், கொடியது ஓர் வீரம்
வேல்- கொடுமையையுடையதும் பராக்கிரமத்துக்கு உரியதுமான ஒரு வேலாயுதத்தை,
ஏவினான் – (அபிமன்) எறிந்தான் ; (அதனால் அப்பாகன் இறக்கவே தேர்
செலுத்துபவரில்லாமையால்), சல்லியன்-, நீளம் வெம் கதையுடன் – நீட்சியையுடைய
கொடிய கதாயுதத்துடனே, நீள் வரை இழிதரும் யாளி போல்- உயர்ந்த
மலையினின்று இறங்குகிற யாளிபோல, இரதம் விட்டு இழிய – தேரை விட்டு
இறங்க,- (எ – று.)-” அவன் வருதலும், அணிலன்மாமதலை மொத்தினான்” என
அடுத்த கவியில் முடியும்.

‘மீளவும்’ என்றதனால் ‘அம்புசெலுத்தி’ என்பது வருவிக்கப்பட்டது. இனி,
இப்பாட்டை அடுத்த கவியோடு தொடர்வ தென்னாமல், சல்லியன்
நீளவெங்கதையுடன் நீள்வரையிழிதரும் யாளி போல் இரதம்விட்டு இழியுமாறு,
(அபிமன்), தோளிரண்டிலும் நடுத் துளைபடப் பாகன்மேல் மீளவும் கொடியதோர்
வீரவேலவினான் என இயைத்துப் பொருள்கூறி முடிக்கவுமாம்.

வன்புடன் அபிமன்மேல் மற்று அவன் வருதலும்,
அன்புடன் கண்டு, பேர் அனிலன் மா மதலை போய்,
என்புடன் புயம் நெரிந்து இன மணி மகுடமும்
முன்புடன் சாயவே, தண்டினால் மொத்தினான்.30.- அதுகண்டு வீமன் சல்லியனைத் தரையிற் சாயக் கதைகொண்டு
மொத்துதல்.

(இங்ஙனம் தேரினின்று இறங்கி), அவன்- அச்சல்லியன், வன்புடன் –
கொடுமையுடன், அபிமன்மேல்-, வருதலும் – வந்தவளவிலே, பேர் அணிலன் மா
மதலை – பெருமையையுடையவாயுவின் சிறந்தகுமாரனான வீமன், கண்டு
(அவன்வருதலைப்) பார்த்து, அன்புடன்- (அபிமனிடத்து) அன்போடு, போய் –
(அச்சல்லியனை யெதிர்த்துச்) சென்று,- என்புடன் புயம் நெரிந்து – (அவனது)
எலும்போடு தோள்களும் நொருங்கி, இனம் மணி மகுடம்உம் சாய- பலவகைப்பட்ட
இரத்தினங்களைப் பதித்த (அவனது) கிரீடமும் சரியும்படி, முன்புடன் –
வலிமையோடு, தண்டினால் மொத்தினான் – (தனது சத்துருகாதினியென்னும்)
கதாயுதத்தால் அடித்தான்; (எ – று.)

     முன்பு உடன் மொத்தினான் எனப்பிரித்து, அவனை அபிமன்
அடிப்பதற்குமுன்பு விரைவில் தான் அடித்தானென்றலும் ஒன்று. மற்று- அசை ;
மற்றவன் என எடுத்து, எதிரியான அவனெனினுமாம். வாயுவுக்குப் பெருமை –
எல்லாச் சரப்பொருள்களுக்கும் பிராணரூபமாயிருத்தல்.  

தலக்கணே சல்லியன் வீழ்தலும், தந்தையோடு
அலக்கணுற்று, ‘அடியனேன் ஆண்மை என்
ஆம்?’ என,
குலக்கு அணி ஆன வில் குமரன் நின்று
அயர்தலும்,
இலக்கணகுமரனும் தனது தேர் ஏறினான்.31.-தனக்கு  இழுக்கென்று அபிமன்யு அயர்வுறுகையில்,
இலக்கணகுமாரன் தப்பியோடித் தன்தேரி லேறுதல்.

(இப்படி வீமனால் மொத்தப்பட்டு), சல்லியன்-, தலக்கண்ஏ-தரையிலே,
வீழ்தலும் – விழுந்தவளவில், குலக்கு அணி ஆன வில் குமரன் – (பாண்டவரின்)
குலத்துக்கு ஓர் அலங்காரமான வில்வித்தையில் வல்ல அபிமன், அலக்கண் உற்று –
(தன்னை எதிர்த்துவந்த சல்லியனைத்தான் வெல்லுமுன் வீமன் இடையில் வந்த
வென்றதற்கு) வருத்தமடைந்து, தந்தையோடு – (தன்பெரிய) தந்தையான
அவ்வீமனோடு, அடியனேன் ஆண்மை என் ஆம் என – ‘(நீ
இவ்வாறுசெய்தால்) எனது பராக்கிரமம் யாதுபயன்படுவதாம்?’ என்று பேசி, நின்று
அயர்தலும் – (சிறிது) சோர்ந்துநின்ற வளவில், இலக்கணகுமரனும் -, தனது தேர்
ஏறினான் – (இதுவே சமயமென்று அவன்கையினின்று தப்பியோடித்) தனது
தேர்மேல் ஏறிக்கொண்டான்; ( எ – று.)

     அபிமன் சுத்தவீர னாதலால், வீமன் இடையிற்புகுந்து தன் பகைவனை
வென்றதற்கு வருந்தினான். தனது வலிமையாற்றல்களாலும் வில்லின்திறத்தாலும்,
தான்பிறந்த குலத்துக்கு விளக்க முண்டாக்குபவனென்பார், ‘குலக்கணியான
விற்குமரன்’என்றார். குலம் கணி எனப் பிரித்து, தன்குலப்பெருமையை
மதிப்பவனென்றுபொருள் கொள்ளுதலு மொன்று. குலத்துக்கு என்பது – குலக்கு
என அத்துச்சாரியைதொக்கது: செய்யுள்விகாரம்.  

தரையில் வீழ் சல்லியன்தன்னையும் தனது பேர்
இரதமேல் ஏற்றி, அவ் இலக்கணகுமரனாம்
குரிசிலை அன்று உயக் கொண்டு போயினன்அரோ-
கிருதவன்மா எனும் கிளர் முடி நிருபனே32.- கிருதவன்மா சல்லியனைத் தன்தேரின்மே லேற்றி.
இலக்கணகுமாரனோடு அச்சல்லியனையும் உய்யக்கொண்டுபோதல்.

கிருதவன்மா எனும் – கிருதவர்மா வென்கிற, கிளர் முடி நிருபன் –
விளங்குகிற கிரீடத்தையுடைய அரசன், தரையில் வீழ் சல்லியன்தன்னைஉம் –
பூமியில் விழுந்த சல்லியனையும், தனது பேர் இரதமேல் ஏற்றி- தனது பெரிய
தேரின் மேல் ஏற்றிக் கொண்டு, அ இலக்கணகுமரன் ஆம் குரிசிலை – அந்த
லக்ஷணகுமாரனாகிய வீரனையும், அன்று – அப்பொழுது, உய கொண்டு – தப்பிப்
பிழைக்கும்படி (தன்னுடன் கூட்டிக்) கொண்டு, போயினான்- (அப்பால்) சென்றனன்:
(எ – று.) –அரோ – ஈற்றசை; செய்யுளினிறுதியில் வருவதுமாத்திர மன்றி,
அடியினிறுதியிலும், வாக்கியத்தினிறுதியிலும்வரும் இடைச்சொல்லும்
பொருள்தராதாயின் ஈற்றசையெனவே படும்.

     கிருதவன்மா- துரியோதனன் கண்ணனைப்
படைத்துணையழைக்கப்போனபொழுது, அவ்வெம்பிரானால் அவனுக்குத்
துணையாகத் தந்த யாதவசேனைக்குத் தலைவனாக அனுப்பப்பட்டவன், இவன்;
யதுகுலத்தில் இருதிகனென்பவனது குமாரன்.  

பொரும் பொரும் முனைதொறும் புண்ணியன்
சேனையில்
பெரும் பெருந் தரணிபர் பேறுடன் வேறலால்,
அடும் பெருங் கொடியின்மேல் அரவ ஏறு
எழுதினான்
திரும்பினன், பல் வகைச் சேனையும் தானுமே.33.-தருமபுத்திரன்பக்கத்து அரசர்வென்றதனால்
துரியோதனன் தன்சேனையோடு திரும்புதல்.

(இவ்வாறு அந்நாளில்), பொரும் பொரும் முனை தொறும் –
போர்செய்யுமிடந்தோறும், புண்ணியன் சேனையில் பெரு 
பெரு தரணிபர்-
நல்வினையையுடைய தருமபுத்திரனது சேனையிலுள்ள பெரியபெரிய
அரசர். பேறுடன் வேறலால் – பாக்கியத்தோடு வெல்லுதலால்,- அரு பெரு
கொடியின்மேல் அரவம் ஏறு எழுதினான் – அரிய பெரிய துவசத்தின்மேற்
பெரும்பாம்பின்வடிவ மெழுதப்பெற்றுள்ள துரியோதனன், பல்வகை சேனைஉம்
தான்உம் திரும்பினன்- பலவகைச்சேனைகளுந் தானுமாக (ப் படைவீட்டுக்கு)
மீண்டான்; (எ-று.) – பலவகைச்சேனையுந் தானும் திரும்பினன் –
திணைவிரவியெண்ணிச் சிறப்பினால் ஆண்பால்முடிபு ஏற்றது; [நன். பொது.27.]

தண்டே கொண்டு வீமன் எனும் சண்ட பவனம்
தாக்குதலால்
திண் தேர் என்னப்பட்ட எலாம் சிதைகின்றன கண்டு,
இதயம் வெரீஇ,
பண்டே உள்ள ஓர் ஆழித் தேரோடு ஒளித்துப்
பரிகள் உடன்
கொண்டே அருக்கன் அவ்வளவில் குடபால்
முந்நீர் குளித்திட்டான்.34.- சூரியாஸ்தமனவருணனை.

வீமன் எனும்-வீமசேனனென்கிற, சண்ட பவனம்- கொடுங்காற்று,
தண்டுஏ கொண்டு – (தனது) கதாயுதத்தினாலே, தாக்குதலால்- மோதியடித்ததனால்,
திண் தேர் என்னப்பட்டது எல்லாம் – வலிய தேரென்று பெயர்கூறப்பட்ட பொருள்
யாவும், சிதைகின்றது- (போர்க்களத்தில்) நொருங்கியழிகின்றதை, கண்டு -பார்த்து,-
அருக்கன்- சூரியன், இதயம் வெரீஇ – (தனது தேருக்கும்
அபாயமுண்டாகுமோவென்று) மனமஞ்சி, அ அளவில் – அச்சமயத்தில், குடபால்
முந்நீர் குளித்திட்டான் – மேற்குப்பக்கத்திலுள்ள கடலில் முழுகினான்; ( எ -று.)

     சூரியன் மண்டலத்தோடு இயல்பாக மறைந்ததற்கு, தனது தேருக்கும்
வீமன்கதை விரைவாகத்தாக்குதலால் சிதைவுண்டாகுமோ வென்று அஞ்சியோடி
யொளித்ததாகக் கவி காரணங்கற்பித்துப் கூறினமையால், ஏதுத்தற்குறிப்பேற்றவணி.
சூரியனதுதேர் சம்வத்ஸ்ரசொரூபமான ஒருசக்கரத்தையுடைய தென்றும், அதில்
காயத்ரீ, உஷ்ணிக், அநுஷ்டுப், ப்ருஹதீ, பங்க்தி, த்ரிஷ்டுப், ஜகதீ என்கிற சந்தங்க
ளேழுமே குதிரைகளாகப் பூட்டப்பட்டுள்ளன வென்றும் புராணங் கூறுதலால்,
‘ஓராழித்தேர்’ என்றும், ‘பரிகள்’ என்றுங் கூறினார். சூரியன் தேர்
மற்றையதேர்கள்போலன்றி மிகப்பழையதாகவும், ஒருசக்கரத்தையுடையதாகவும்
எளிதில் அபாயமடையத்தக்க நிலைமையிலிருந்த தென்பது தோன்ற,
‘பண்டேயுள்ளவோராழித்தேர்’ என்றது.

     முந்நீர்- மூன்றாகிய தன்மையை யுடையது: மூன்றுதன்மைகள்- பூமியைப்
படைத்தல் காத்தல் அழித்தல் என்பன; நீரினின்று நிலம் பிறந்ததென வேத
மோதுதலால் படைத்தலும், நீரின்றி உலகம் பிழையா தாதலால் காத்தலும்,
இறுதியில்நீரினால் மூடப்பட்டு உலக மழிதலால் அழித்தலும் ஆக முத்தொழில்களும்
கடலுக்கு உரியனவாயின. வீமனை வாயுவாக உருவகப்படுத்தினார்; இது- வீமனது
வலிமை மிகுதியை விளக்கும். சண்டபவநம் – வடமொழித்தொடர். என்னப்பட்டது
எல்லாம்- ஒருமைப்பன்மை மயக்கம். வெரீஇ – சொல்லிசையளபெடை. பண்டு –
ஏழாம்வேற்றுமையிடப் பொருளுணரநின்ற பழமைகுறிக்கும் இடைச்சொல்.

     இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் பன்னிரண்டுகவிகள் –
பெரும்பாலும் மூன்றாஞ்சீரும் ஆறாஞ்சீரும் காய்ச்சீர்களும், மற்றை நான்கும்
மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்.

சென்ற நிருபர் புறம் நாண, திண் தோள்
அபிமன் முதலான,
வென்றி நிருபர் குழூஉக்கொண்டு, விறல் ஆர்
சேனை வேந்தனுடன்
மன்றல் கமழும் துழாய் மவுலி மாலும், தாமும்,
பாடி மனை
ஒன்றி, இனிதின் கண் துயின்றார், உரனும் திறலும்
உடையோரே.35.- பாண்டவர் பக்கத்தார் யாவரும் படைவீட்டில் இரவு
இனிது கண் துயிலல்.

உரன்உம் – பலத்தையும், திறல்உம் – பராக்கிரமத்தையும்,
உடையோர்-உடையவர்களான, திண் தோள் அபிமன் முதல் ஆன – வலிய
தோள்களையுடையஅபிமந்யு முதலிய, வென்றி நிருபர் – வெற்றியையுடைய
அரசர்கள், சென்ற நிருபர்புறம் நாண-(எதிர்த்து) வந்த பகையரசர்கள்
புறங்கொடுத்து வெட்கமடைய,-குழூஉகொண்டு- தாம் ஒருதிரளாகக்கூடி, விறல்
ஆர் சேனை வேந்தருடன் – வெற்றிமிக்க சேனைகளோடும் மற்றையரசர்களோடும்,
மன்றல் கமழும் துழாய்  மவுலிதாம்உம் – வாசனைவீசுகிற
திருத்துழாய்மாலையைச்சூடிய திருமுடியையுடையகண்ணபிரானும் தாங்களுமாக, பாடி
மனை ஒன்றி- படைவீட்டை யடைந்து, (அங்கு),இனிதின் கண்துயின்றார் –
மகிழ்ச்சியோடு கண்மூடித் தூங்கினார்கள்; (எ – று.)

     சென்ற நிருபர் புறம் நாண – துரியோதனனுடன் சென்ற அரசர்கள்
மற்றொருபுறத்தில் நாணமடைய என்றுங் கொள்ளலாம். மௌலி என்னும் வடசொல்,
மவுலி யெனப் போலிபெற்றது.   

பால் நாள் அளவும் துயிலாமல், பாந்தள்-துவசன்தனக்கு
உயிர் நண்பு
ஆனார் பலரும், வாள் வேந்தர் அமைச்சர் பலரும்,
இளையோரும்,
சேனாபதியும் சூழ இருந்து, அபிமன் கையில்
திருமைந்தன்
தான் ஆடு அமரில் அகப்பட்ட தாழ்வுக்கு இரங்கி,
உளம் நொந்தார்.36.- துரியோதனன் பாதிராத்திரியளவும் உடன்சேர்ந்தாரோடு
இலக்கணகுமாரன் அபிமனிடம் அகப்பட்ட தாழ்வுக்கிரங்கி உளம் நோதல்

பாந்தள் துவசன் தனக்கு – பாம்புக்கொடியையுடைய
துரியோதனனுக்கு, உயிர் நண்பு ஆனார் – பிராணசினேகிதரான, வாள் வேந்தர்
பலர்உம் – ஆயுதப்பயிற்சியில்வல்ல அரசர்கள் அநேகரும், அமைச்சர் பலர்உம் –
(அவனது) மந்திரிமார் எல்லோரும், இளையோர்உம் – (அவன்) தம்பிமார்களும்,
சேனாபதிஉம் – சேனைத்தலைவனான துரோணனும், (ஆகிய எல்லோரும்), பால்
நாள் 
அளவுஉம் துயிலாமல் – பாதிராத்திரிவரையுலுந் தூக்கங்கொள்ளாமல், சூழ
இருந்து- (அவனைச்) சுற்றிலு மிருந்துகொண்டு,- அபிமன் கையில் – அபிமனது
கையிலே, திரு மைந்தன் – லக்ஷணகுமாரன், தான் -, ஆடு அமரில் – செய்த
போரில், அகப்பட்ட – அகப்பட்டுக்கொண்ட, தாழ்வுக்கு – அவமானத்துக்கு,
இரங்கி- பச்சாத்தாபப் பட்டு, உளம்நொந்தார் – மனம் வருந்தினார்கள்; (எ – று.)

     பால் – பகுதி, பாதி. நாள் – சிறப்பாய், இங்கே, இரவைக்குறித்தது. உயிர்
நண்பு- உயிர்போன்ற நண்பு; உவமைத்தொகை. திருமைந்தன் – அழகிய மைந்தன்;
இது -இலக்கணகுமாரனென்பதற்கு ஒருபரியாயநாமமாக நிற்கும். யாவரும் உளம்
நொந்தார்- உள மென்னுஞ் சினைப்பெயராகிய அஃறிணையெழுவாய் யாவரும்
என்னும்உயர்திணையெழுவாயின் பயனிலையாகிய நொந்தார் என்னும்
உயர்திணைவினையைக் கொண்டு முடிதலால் வழுவாகி,
தொடர்புண்டாயிருத்தல்பற்றிச் சார்த்திமுடித்தலால், வழுவமைதி யாயிற்று.
‘நொந்தான்’ என்ற பாடத்துக்கு, ‘பாந்தட்டுவசன்’ – எழுவாய்

தனுவேதத்தின் கேள்விக்கும், சதுர்வேதத்தின்
வேள்விக்கும்,
செனுவே! உன்னை அல்லது இனிச் செய்து முடிக்க
வல்லவர் யார்?
மனுவே அனைய உதிட்டிரனை நாளைச் சமரில்
மற்று இதற்கு ஓர்
அனுவே என்ன அகப்படுத்தின் அல்லால், செற்றம்
அறாது’ என்றான்.37.- துரியோதனன் துரோணனைநோக்கி,
‘நாளைத்தருமனை யகப்படுத்தினால்தான் செற்றந்தீரும்’ எனல்

(அப்பொழுது துரியோதனன், துரோணனை நோக்கி),
‘தனுவேதத்தின் கேள்விக்குஉம் – வில்வித்தையின் உபதேசத்துக்கும், சதுர்
வேதத்தின் வேள்விக்குஉம்- நான்குவேதங்களிற் கூறியபடி செய்யும் யாகங்களுக்கும்,
செனுவே – இடமாகவுள்ளவனே! (இப்பொழுது நான் சொல்லுந் தொழிலை), உன்னை
அல்லது இனி செய்து முடிக்க வல்லவர் யார் – உன்னை யல்லாமல் செய்து முடிக்க
வல்லமையுடையவர் வேறு யாவர் உளர்? [எவருமில்லை]; (அத்தொழில் யாதெனில்,-
), நாளை சமரில் – நாளைக்கு நிகழும் போரில், இதற்கு ஓர் அனுஏ என்ன-
இலக்கணனை அபிமன் அகப்படுத்திய) இவ்வவமானத்துக்கு ஓர் இனமாக, மனுஏ
அனைய உதிட்டிரனை மனு சக்கரவர்த்தியையொத்த தருமபுத்திரனை, அகப்படுத்தின்
அல்லால்- ( உயிரோடு) பிடித்திட்டாலல்லாமல், செற்றம் அறாது-(என்னுடைய)
இப்பகைமை தணியாது,’ என்றான்-;

     மனு – நல்லொழுக்கத்திலேயே தாம் ஒழுகுதலோடு எல்லோரையும் அங்ஙனம்
நடப்பித்து எல்லாநற்குணங்களோடுங் கூடிப் பிரசித்திபெற்றவனாதலால், தருமனுக்கு
உவமை கூறப்பட்டான். ஏ – உயர்வுசிறப்பு. சதுர்வேதம் – இருக்கு, யசுர், சாமம்,
அதர்வனம் என்பன. செனு – ஜநுஷ் என்னும் வடசொல்லின் திரிபு; முதல் அகரம்
எகரமானது, மோனைப்பொருத்ததிற்காக; ஏகாரம் மிக்கது – விளியுருபு. மற்று –
அசை ; வினைமாற்றுமாம். அநு என்பது – பின்பு என்னும் பொருள்தரும்
வடமொழியிடைச்சொல்: அநுவாதம், அநுகமநம், அநுசுருதி முதலியவற்றிற் காண்க;
இது – இங்கே, முன் நடந்ததை யொப்பப் பின் நடப்பது என்ற பொருளை
உணர்த்தி, பழிக்குப்பழி வாங்குதலென்ற கருத்தை விளக்கும். ஏ- தேற்றம். செற்றம் –
பகைமை நெடுங்காலம் நிகழ்வது: வைரம் ;  செறு- பகுதி.

பெற்றோன்தனினும் சத மடங்கு வலியோன் வீமன்
பின் நிற்க,
பொன்-தோள் விசயன் முன் நிற்க, பொரும் போர்
முனையில் போர் உதவி
அற்றோர் போல, வில் வலியால், அறத்தோன்தன்னை
அகப்படுத்தல்,
மற்று ஓர் பிறப்பில் தெரியாது, இப் பிறப்பில் முடிக்க
மாட்டேமால்!38.- இதுவும், மேற்கவியும் குளகம் – துரோணன்கூறும் உத்தரம்.

பெற்றோன்தனின்உம்- (தன்னைப்) பெற்றதந்தையான வாயுவினும்,
சதம் மடங்கு- நூறுபங்கு அதிகமான, வலியோன்- வலிமையுடையனான, வீமன்-,
பின் நிற்க – பின்னே (பாதுகாத்து) நிற்கவும், பொன் தோள் விசயன்-
அழகியதோள்களையுடைய அருச்சுனன், முன் நிற்க – முன்னே (பாதுகாத்து)
நிற்கவும், போர் பொரும் முனையில் – போர்செய்யுமிடத்தில் [யுத்தகளத்தில்],
அறத்தோன்தன்னை – தருமங்களை யுடையவனான யுதிட்டிரனை, போர் உதவி
அற்றோர் போல – போரில் உதவிசெய்பவரையுடையரல்லாதவரை (அகப்படுத்துதல்)
போல, வில் வலியால் அகப்படுத்தல்- வில்லின் வலிமையால் (உயிரோடுபற்றி)
வசப்படுத்தலை, மற்று ஓர் பிறப்பில் தெரியாது – மற்றொருசன்மத்தில் (எம்மால்
நிறைவேற்ற முடியுமோ முடியாதோ அது) தெரியாது: இ பிறப்பில்-, முடிக்க
மாட்டோம்- நிறைவேற்ற வல்லமை யில்லோம்; (எ – று.) – ஆல்- ஈற்றசை;
ஆதலாலெனினுமாம்.

      வாயுவின் வலிமை பிரசித்தம். “பிதுச்சதகுணம் புத்ர:” என்றவாறு
அவ்வாயுவினும் மிகப்பலமடங்கு வலியவன் வீமனென்க. 

செவ் வாய் வைக்கும் வலம்புரிக் கைத் திருமால்
செம்பொன் தேர் ஊர,
வெவ் வாய் வாளி வில் விசயன், மெய்ம்மைத்
தருமன் அணி நின்ற
அவ் வாய் இமைப்போது, அணுகாமல் காப்பார்
சிலர் உண்டு ஆம் ஆகில்,
இவ் வாய் நாளை அகப்படுத்தித் தரலாம்’ என்றான்
எழில் மறையோன்.

செவ் வாய் – சிவந்த திருவாய்மலரிலே, வைக்கும் – வைத்து
ஊதப்படுகிற, வலம்புரி – (பாஞ்சசந்யமென்னும்) வலம்புரிச்சங்கை யேந்திய, கை –
திருக்கையையுடைய, திருமால் – திருமகள் கொழுநனான கண்ணபிரான், செம்
பொன் தேர் – சிவந்த பொன்னினாலாகிய தேரை, ஊர( பாகனாய்நின்ற) செலுத்த,
வெவ் வாய் வாளி வில் விசயன் – கொடிய நுனியையுடைய அம்புகளையும்
வில்லையுமுடைய அருச்சுனன், மெய்ம்மை தருமன் அணி நின்ற அ வாய்-
சத்தியத்தையுடைய தருமபுத்திரன் அணிவகுப்பில் நின்ற அவ்விடத்தில், இமை
போது- ஒரு மாத்திரைபொழுதாவது, அணுகாமல்- சமீபித்துவரவொட்டாதபடி,
காப்பர்–(அவனைத்) தடுப்பவர், சிலர் -(யாராயினும்) சிலர், உண்டு ஆகில் –
உள்ளாரானால்,- இ வாய்- இவ்விடத்து [போர்க்களத்தில்], நாளை – நாளைக்கு,
அகப்படுத்தி தரல்ஆம்- (தருமபுத்திரனை நான்) பிடித்துக்கொடுத்தல் கூடும்,’
என்றான் – என்று (துரியோதனனைநோக்கிச் சபையிற்) கூறினான்: எழில்
மறையோன் – அழகிய வேதம்வல்ல துரோணன்; (எ – று.) – ‘ஆம்’ இரண்டில்,
முதலது – அசை.

     அருச்சுனனது வெற்றிக்கு முக்கியகாரணம் கண்ணன் தேர்
செலுத்துதலாதலாலும், அக்கண்ணபிரான் தான் சங்கநாதஞ் செய்து
அவ்வொலிமாத்திரத்தால் பகைவர்சேனைகள் நடுங்கியொடுங்கும்படி செய்தலாலும்,
‘செவ்வாய்  வைக்கும் வலம்புரிக்கைக் திருமால் தேரூர’ என்றான்: தருவேனென்று
திண்ணமாகக்கூறாமல் , ஒருகால் அகப்படுத்தல்தொழில் நடக்கலாமென்ற
ஐயந்தோன்ற, ‘தரலாம்’ என்றானென்னலாம். தருமன்-தருமபுத்திரனென்றதன்
நாமைகதேசம்; தருமத்தினின்று தவறாதவனென யுதிஷ்டிரனுக்குக் காரணக்குறியுமாம்:
‘தந்தையே மைந்தனாகிறான்’ என்னும் நூல் வழக்குப்பற்றி, தருமபுத்திரனை
‘தருமன்’என்றா ரென்றலும் உண்டு. காத்தல் – தடுத்தல்.  

திகத்த ராசன் முதலாகச் சஞ்சத்தகரில் சில மன்னர்,
உகத்தின் கடையில் கனல் போல்வார், ஒருவர்க்கு
ஒருவர் உரை முந்தி,
‘சகத்துக்கு ஒருவன் எனும் விசயன் தம்முற்கு உதவி
செய்யாமல்
மகத்தில் சனிபோல் வளைக்குவம் யாம்!’ என வஞ்சினமும்
பல சொன்னார்;40.- திரிகர்த்தராசன்முதலான சஞ்சத்தகவரசர்
தருமனுக்கு உதவாதபடி அருச்சுனனை வளைப்பதாக
வஞ்சினங் கூறுதல்.

(அச்சமயத்தில்), திகத்த ராசன் முதல் ஆக – திரிகர்த்ததேசத்து
அரசன் முதலாக, சஞ்சத்தகரில் – சம்சப்தகரிற் சேர்ந்த, உகத்தின் கடையில் கனல்
போல்வார் – கல்பாந்தகாலத்தில் (உலகத்தையழிக்கிற) அக்கினிபோலக்
கொடியவர்களான, சில மன்னர்- சில அரசர்கள், ஒருவர்க்கு ஒருவர் உரை முந்தி –
ஒருத்தரினு மொருத்தர் வார்த்தை முற்பட்டு, ‘சகத்துக்கு – உலகத்தில், ஒருவன்
எனும் – ஒப்பற்றவனென்று சொல்லப்படுகிற, விசயன் – அருச்சுனன், தம் முற்கு –
தமையனான தருமனுக்கு, உதவி செய்யாமல் – (போரில்) துணைசெய்யாதபடி, யாம்-
மகத்தில் சனிபோல் – மகநட்சத்திரத்துச் சனிபோல, வளைக்குவம் – (நாளைக்கு
அவ்வருச்சனனைத்தடுத்துச்) சூழ்ந்துகொள்வோம்,’ என – என்றுசொல்லி, (அதற்கு
ஏற்ப), பல வஞ்சினஉம் சொன்னார்- பலசபதங்களையுஞ் சொன்னார்கள்; ( எ -று.) –
அவற்றை மேல் மூன்றகவிகளிற் காண்க.

     த்ரிகர்த்தராஜன் – வடசொல்தொடர்; இவனுக்கு ஸூசர்மா வென்பது பெயர்.
த்ரிகர்த்த மென்பது- லாஹூர்ஜில்லாக்கருகிலிருப்பதான ஜலந்தர்(Jalandur) என்று
வழங்கும் ஊர் என்பர். (ஸம்சப்தக)ராவார் – போர்தொடங்குமுன்னமே
பலவகைச்சபதஞ்செய்து பின் அவ்வாறே நடத்திக்காட்டும் வீரர்கள்; இவர்கள்
த்ரிகர்த்த ராஜபுத்திரர்களும் அவர்களை யனுசரித்தவர்களுமாகி ஒன்பது
கோடித் தொகையினராவரென்று வியாசபாரதம் கூறும். இப் பெயர்
நன்றாகச்சபதஞ்செய்பவ ரென்று பொருள்படும். இவர்கள் இவ்வாறே பன்னிரண்டு
பதின்மூன்றாநாட்போர்களில் அருச்சுனனை அறைகூவித் தனியே
அழைத்துக்கொண்டுபோய் வெகுவாகப் பெரும்போர் செய்வர் . சில-
குறிப்புப்பெயரெச்சம். உகம் – யுகமென்னும் வடசொல்லின் விகாரம்; அது –
காலத்தின் ஒருபேரெல்லைக்குப்பெயர்: அது- இலக்கணையாய். பலயுகங்கள் கூடிய
கற்பத்தையுணர்த்தும்; கற்பம்- பிரமனது தினம். ஒவ்வொருபிரமகற்பத்தின்
பகல்முடிவிலும் தீ எழுந்து உலகங்களை எரித்தழிக்கு மென்பது, புராணக்கொள்கை;
அது பிரளயகாலாக்கினியெனப்படும். ஒருவர்க்கு – நான்காம்வேற்றுமை,
எல்லைப்பொருளில்வந்தது. ஜகத்,மகம், சநி- வடசொற்கள்.

     மகத்துச்சனி பெருந்தீங்குதருதற்கு உவமையாதலை
“மகத்திற்புக்கதோர்சனியெனக்கானாய் மைந்தனே மணியே மணவாளா,
வகத்திற்பெண்டுகள் நானென்று சொன்னா லழையேற்போ குருடா வெனத்திரியேன்,
முகத்திற்கண்ணிழந் தெங்ஙனம்வாழ்கேன் முக்கணா முறையோ மறையோ தீ,
யுகைக்குந்  தண்கடலோ தம்வந் துலவுமொற்றியூரெனுமூருறைவானே” என்ற
சுந்தரமூர்த்திநாயனார் தேவாரத்திலும், “அடையார்தமக்கு,
மகத்திற்சனியன்னசந்திரவாணன்” என்ற தஞ்சைவாணன் கோவையிலும் காண்க. மக
நட்சத்திரத்திற் பிறந்தவனுக்குச் சனிதிசையில் மரணந்தப்பாதென்று ‘நஷத்ரபலம்’
என்னுஞ்சோதிடநூலால் தெரிகிறது. அன்றியும், சனி மகத்திற்சஞ்சரிக்கும்பலன்
சிலதேசங்களுக்கும் சிலமனிதர்களுக்கும் யானைகளுக்கும் பீடை யென்று நூல்கள்
கூறும். மகம்- இருபத்தேழு நட்சத்திரங்களுள், பத்தாவது நட்சத்திரம். இது-
இலக்கணையாய், சிங்கராசியையுங் குறிக்கும்: எங்ஙன மெனின்,-
இரண்டேகால்நட்சத்திரம் ஒருராசி யென்னும் வரையறைப்படி மகமும் பூரமும்
உத்தரத்தில் முதற்பாதமும் சிங்கராசியாதல் காண்க. சிங்கம் சனிக்குப்
பகைவீடாதலால், மகத்திற் சனி வருத்துதற்கு உவமை கூறப்பட்ட தென்றலும் ஒன்று;
சிங்கம் சனிக்குப் பகைவீடாதலைச் சோதிடநூலால் அறிக. மேலும், சிங்க
லக்கினத்துக்குச் சனி பாபகிருகமுமாவன். இன்னும் மகச்சனியன் கொடுமைகளைச்
சோதிடம்வல்லார்வாய்க் கேட்டுணர்க. சனி – நவகக்கிரகங்களுள் ஏழாமவன்;
சூரியனது மகன். இனி, உத்தர நட்சத்திரத்திற் பிறந்தவன், அருச்சுனன்; அது
அவனது பற்குண னென்ற பெயராலும், “பங்குனிநிறைந்ததிங்களாதபன்பயின்ற
நாளில், வெங்குனிவரிவில்வாகைவிசயனும் பிறந்தான் வென்றிப்,
பங்குனனென்னுநாமம் பகுதியாற்படைத்திட்டானே” என்ற சம்பவச்சருக்கத்துச்
செய்யுளாலும், வடநூலாலும் தெரிகிறது. அவனை அந்நட்சத்திரத்து முதற்பாதத்தில்
[சிங்கராசியில்] பிறந்தவனெனக்கொண்டால் அவனுக்குமகத்துச்சனி ஜந்மச்சனியும்,
மற்றைய பாதங்களில் [கன்னியாராசியில்] பிறந்தவனெனக் கொண்டால்
பன்னிரண்டாமிடத்துச் சனியுமாகும்: இரண்டும் பெருந்தீங்குவிளைப்பன.
பன்னிரண்டாமிடம் ஜந்மஸ்தாநம் இரண்டாமிடம் இம்மூன்றிலும் சனிநிற்றல்,
ஏழரைநாட்சனியென்று கொடுமையிற் பிரசித்திபெற்றது. இந்தச்சனி ஸ்தாநப்ரஷ்டம்
தநஷயம் மரணம் முதலிய பெருந்தீங்குகளைச் செய்யுமென்பது, நூல்துணிபு. இங்கு,
வேறிடத்தில் தனியே அழைத்துப்போய்ச்சூழ்ந்து மிகவருத்துதற்கு ஏற்ற
உவமையாம்.          

அருளே வடிவு கொண்டனையோன் அருகு அங்கு
அமரில் அணுகாமல்,
உருள் ஏர் இரதத்து அருச்சுனனை, ஒரு நாள் முழுதும்
தகைந்திலமேல்,
மருளே கொண்டு, குடி வருந்த, மனு நூல் குன்றி,
வழக்கு அழிய,
பொருளே வெஃகும் அரசரைப்போல் புகுவேம் யாமும்
நரகு!’ என்றார்.41.- இதுமுதல் மூன்று கவிகள் – சஞ்சத்தகர்கள் கூறும் வஞ்சினங்கள்.

அமரில்- போர்க்களத்தில், அங்கு – எதிர்ப்பக்கத்திலே,
அருள்ஏ வடிவுகொண்டு அனையோன் அருகு – கருணையே ஒருபுருட
வடிவங்கொண்டாற்போன்ற தருமபுத்திரனது சமீபத்தில், அணுகாமல் –
சேரமுடியாதபடி, உருள் ஏர் இரதத்து அருச்சுனனை- சக்கரங்கள் (வலிய) அழகிய
தேரையுடைய அருச்சுனனை, ஒரு நாள் முழுதுஉம் தகைந்திலம்ஏல்-
நாளையொருதினம் முழுவதிலும் (நாங்கள் தடுத்திடோமாயின்,- குடி மருள் கொண்டு
வருந்த – (தம் நாட்டுச்) சனங்கள் (இன்னது செய்வதென்று அறியாமல்)
திகைப்பையே கொண்டு வருந்தவும், மனு நூல் வழக்கு குன்றி அழிய – மனுதர்ம
சாஸ்திரத்தின் நீதி குறைபட்டு அழியவும், பொருளே வெஃகும்- (குடிகளின்)
செல்வத்தையே(கவர) விரும்புகிற, அரசரை போல் -கொடுங்கோன்
மன்னர்களைப்போல, யாம்உம் நரகு புகுவேம் – நாங்களும்நரகத்திற்சேர்வோம்,’
என்றார்- என்று (திரிகர்த்தன் முதலியோர்) சபதங்செய்தார்கள்;(எ-று.)

     தருமச்செய்கைகளுக்கும் மறுமைநற்கதிக்குங் காரணமான கருணையை
இயல்பில் மிகுதியாகவுடையனென்பார், ‘அருளே வடிவு கொண்டனையோன்’
என்றார். பகைவரே இங்ஙனம் தருமனைச் சிறப்பித்துக் கூறின ரென்றது கொண்டு,
அவனது நற்குணவமைதியை நன்கு உணர்க.  

மறனில் சிறந்த புய வலியால் வரை போன்று அனிலன்
மைந்தன் எனப்
புறன் நிற்பானைத் தம்முனிடை போகாவண்ணம்
தகைந்திலமேல்,
அறனின் கொண்ட தன் மனையாள் அமளித் தலத்தின்
அழுது இரங்க,
பிறன் இல் தேடும் பெரும் பாவி பெறும் பேறு எமக்கும்
பேறு!’ என்றார்.

அனிலன் மைந்தன் என – வாயுவின் குமாரனென்று சொல்லப்பட்டு,
புறன் நிற்பானை- (எப்பொழுதும் தருமன்) பின்னே (பாதுகாவலாய்) நிற்பவனான
வீமனை, தம்முனிடை போகா வண்ணம் – (அங்ஙனம் துணைசெய்தற்குத்)
தமையனான யுதிட்டிரனிடத்துச் செல்லவொட்டாதபடி, மறனில் சிறந்த புயம்
வலியால்- பராக்கிரமத்தோடுகூடிச் சிறப்புற்ற (எங்கள்) தோள்களின் வலிமையால்,
வரைபோன்று- மலை ( குறுக்கிட்டு வழிதடுத்தல்) போல, தகைந்திலம் ஏல்-
தடுத்திடோமாயின்,- அறனின் கொண்ட – தருமமாக மணஞ்செய்துகொள்ளப்பட்ட,
தன் மனையாள் – தனக்குஉரிய 
மனைவி, அமளி தலத்தின்- படுக்கையிடத்திலே,
அழுது இரங்க- புலம்பி வருந்தும்படி, (அவளைவிட்டு), பிறன் இல் தேடும் –
அயலான்மனையாளைத் தேடிச்செல்கிற, பெருபாவி – பெரிய தீவினையுடையவன்,
பெறும் – (மறுமையிற்) பெறுகிற, பேறு – நரககதி, எமக்குஉம் பேறு – எங்களுக்கும்
பெறுங்கதியாகுக, ‘ என்றார் – என்றும் சபதஞ் செய்தார்கள் ; ( எ -று.)

     பலமிருந்தும் பராக்கிரமமில்லையாயின் சிறப்புறாதாதலால், ‘மறனிற்சிறந்த
புயவலி’ எனப்பட்டது. ‘மறனிற்சிறந்த புயவலியால் வரைபோன்று’ என்பதனை
‘நிற்பான்’ என்பதனோடு கூட்டி, வீமனுக்கு விசேடணமாக்குதலும் ஒன்று. கீழ் “வீமன்
பின் நிற்க” என்று துரோணன் கூறினதற்கேற்ப, ‘புறனிற்பான்’ என்றார்.
வீமனைக்குறித்துச் சபதஞ்செய்ததும், அத்துரோணன்வார்த்தையை யனுசரித்தே.

     ‘அறனிற்கொண்ட தன்மனையா ளமளித்தலத்தி னழுதிரங்கப் பிறனிற்றேடும்
பெரும்பாவி’என்றது, தன்மனையாள் வீட்டிலிருந்து வருந்தவிட்டு
அயலான்மனையாளிடத்து விரும்பிச்செல்வதன் குற்றங்களை நன்குவிளக்கும்
பொருட்டேயன்றி, தன்மனையாளழுதிரங்காவிடின் பிறன்மனையாளிடஞ்
செல்லலாமென்று கூறியதன்றெனக் கொள்க; இந்த மகாபாவி பெறும்பயனை
“வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர் பொருள் தாரமென்றிவற்றை,
நம்பினா ரிறந்தால் நமன்தமர் பற்றி யெற்றிவைத் தெரியெழுகின்ற, செம்பினா
லியன்றபாவையைப் பாவீ தழுவென மொழிவதற்கஞ்சி, நம்பனே வந்துன்
திருவடியடைந்தேன் நைமிசாரணியத்து ளெந்தாய்” என்னுந் திருமங்கையாழ்வார்
பாசுரங்கொண்டும்,” காதலாள் கரிந்துநையக் கடியவே கனிந்து நன்றி,
யேதிலான்தாரம் நம்பி யெளிதெனவிறந்தபாவத், தூதுலை யுருகவெந்த வொள்ளழற்
செப்புப் பாவை, ஆதகா தென்னப் புல்லி யலறுமால் யானை வேந்தே” என்னுஞ்
சிந்தாமணிச்செய்யுளாலும், “தங்கிருட்போதில் தலைச்சென்றயல்மனை,
யங்குமகிழ்ந்தாளவ ளிவள்காணெனச், செங்கனலேயெனவெம்பியசெம்பினிற்,
பொங்கனற்பாவைகள் புல்லப் புணர்ப்பார்” என்னுஞ் சூளாமணிச்செய்யுளாலும்
அறிக.         

கன்றால் விளவின் கனி உதிர்த்தோன் கடவும் திண்
தேரவன் ஆக,
வன் தாள் தடக் கை மாருதியே ஆக, அமரில்
மறித்திலமேல்,
என்று ஆம் நாளை, முனி போரின், எந் நன்றியினும்
செய்ந்நன்றி
கொன்றார் தமக்கு, குருகுலத்தார் கோவே! யாமும்
கூட்டு’ என்றார்.

குரு குலத்தார் கோவே – குருவமிசத்து அரசர்களுக்குத்தலைவனான
துரியோதனனே! கன்றால் -ஒரு கன்றைக்கொண்டு, விளவின்கனி –
விளாமரத்தின்பழத்தை, உதிர்த்தோன் – உதிரச்செய்தவனான கிருஷ்ணன், கடவும் –
செலுத்துகிற, திண்  தேரவன் ஆக- வலிய தேரையுடைய அருச்சுனனேயானாலும்,
வல்தாள் – கொடிய போர்முயற்சியையும், தடகை – பெரியகைகளையு முடைய,
மாருதிஏ ஆக – வீமசேனனேயானாலும், (இவர்கள்) அமரின்-
(எதிரில்வந்து)அமைந்தால், என்ற ஆம் நாளை- (இவ்விரவு கழிந்து)
சூரிய னுதிக்கும் நாளையதினத்தில், முனி போரின்- கோபித்துச் செய்யும்
யுத்தத்தில், மறித்திலம்ஏல்- (தருமனருகிற் சேராதபடி அவர்களைத்)
தடுத்திடோமாயின்,- எ நன்றியின் உம்- எல்லாத்தருமங்களுள்ளும், செய் நன்றி –
(தமக்குப் பிறர்) செய்த உபகாரத்தை, கொன்றார் தமக்கு- அழித்தபாவிகளுக்கு,
யாம்உம் கூட்டு –  நாங்களும்இனமாவோம்,’ என்றார் – என்றும் (அவர்கள்
சபதஞ்) செய்தார்கள்: (எ – று.)

     பசுவதை, சிசுவதை, பிராமணவதை முதலியபெரும்பாதகங்களைச்
செய்தார்க்காயினும் அப்பாவத்தினின்று நீங்கத்தக்க பிராயச்
சித்தங்கள் உண்டு; செய்ந்நன்றிமறந்தவனுக்கோ எவிவிதபரிகாரமுமில்லை என்பது,
நூல் துணிபு. ” எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை, செய்ந்நன்றி
கொன்றமகற்கு” என்ற திருக்குறளையும் காண்க. இனி, தாள் தடக்கை –
முழங்காலளவும் நீண்ட பெரிய கை [ஆஜானுபாகு] எனினுமாம்; இது – உத்தம
விலக்கணம். அன்றி, வலிய கால்களையும் பெரியகைகளையு முடைய என்றலு
மொன்று. ‘சூரியனுதிக்கிறநாளை’ என்றது, உலகவழக்கு; ஆனது பற்றி,’ என்று ஆம்
நாளை’ என்றார். எல் – ஒளி; அதனையுடையது என்று எனச் சூரியனுக்குக்
காரணப்பெயர். ‘மறித்திலமே யென்றானாளை’ எனப் பாடங்கொண்டு, ‘மறித்திலமே
யென்றால்’ என்று பதம் பிரித்து உரைப்பது தகுதியாம். நன்றி கொல்லுதல் –
நன்றியை மறத்தலும், கைம்மாறு செய்யாமையும், தீங்கு செய்தலும். குரு என்பவன் –
சந்திரகுலத்தில் பிரசித்திபெற்ற ஓரரசன்;  அவனால், அக்குலம் குருகுல மென்றும்,
அந்நாடு குருநாடு என்றம் குருக்ஷேத்திர மென்றும், அக்குலத்திற்பிறந்தவர்
கௌரவரென்றுங் கூறப்படுதல் காண்க.

     கன்றால் விளவின்கனியுதிர்த்த கதை: கம்சனாலேவப்பட்ட கபித்தாசுரன்,
விளாமரத்தின்வடிவமாய், கண்ணன் தன்கீழ்வரும் பொழுது மேல்விழுந்து
கொல்வதாக எண்ணி வந்துநிற்க, அதனையறிந்து, கிருஷ்ணபகவான், அவ்வாறே
தன்னைமுட்டிக் கொல்லும் பொருட்டுக் கன்றின்வடிவங்கொண்டு தான் மேய்க்குங்
கன்றுகளோடு கலந்திருந்த வத்ஸாசுரனைப் பின்னிரண்டு கால்களையும் பிடித்து
எடுத்துச் சுழற்றி விளாமரத்தின்மேலெறிய, இருவரும் இறந்து தமது
அசுரவடிவத்துடனே விழுந்திட்டனரென்பதாம். இதனால், பகைகொண்டு
பகையையழித்த கண்ணனது விசித்திர சக்தி விளங்கும்       

இவ்வாறு உரைத்த வேந்தர்தமக்கு எய்தும் சிறப்புச்
செய்து, அகற்றி,
கை வார் சாப முனிவரன்தன் கழற் கால் வணங்கி,
‘ஏகுக!’ எனச்
செவ் வாய் மலர்ந்து, மானத்தால், திறலால், வாழ்வால்,
செகத்து
ஒருவர்ஒவ்வா அரசன், தன் கோயில் அடைந்தான்,
விபுதர்க்கு ஒப்பானே.44.- வஞ்சினமுரைத்த வேந்தர்க்குச் சிறப்புச்செய்து
ஆசிரியனையும் விடுத்துத் துரியோதனன் தன்கோயி லடைதல்.

மானத்தால் – பெருமையினாலும், திறலால்- வலிமையினாலும்,
வாழ்வால் – செல்வாழ்க்கையாலும், செகத்து ஒருவர் ஒவ்வா – உலகத்தில்
ஒருத்தரும் (தனக்கு) ஒப்பாகப்பெறாத, அரசன்- ராஜராஜனும், விபுதர்க்கு ஒப்பான்-
(இன்பவாழ்க்கையில்)தேவர்களுக்கும் உவமையாகுபவனும் ஆகிய துரியோதனன், –
இ ஆறு உரைத்த – இங்ஙனம் (தனித்தனி) கூறின, வேந்தர்தமக்கு – அரசர்களுக்கு.
எய்தும் (செய்தற்குப் ) பொருந்திய, சிறப்பு செய்து – நல்ல சன்மானங்களைச்
செய்து, அகற்றி – (அவர்களை) அனுப்பிவிட்டு,- கை வார் சாபம் – கையில் நீண்ட
வில்லையுடைய, முனிவரன்தன் பிராமண சிரேஷ்டனான துரோணனது, கழல் கால் –
வீரக்கழலணிந்த திருவடிகளை, வணங்கி – நமஸ்கரித்து, ஏகுக என செவ்வாய்
மலர்ந்து – (நீ) செல்வாயாக என்று சிவந்த (தன்) வாயைத் திறந்து கூறிவிட்டு, தன்
கோயில் அடைந்தான் – தனது சிறந்தவிடத்தைச் சேர்ந்தான் ; ( எ -று.)

“இடையிருவகையோரல்லது நாடிற், படைவகைபெறா அரென்மனார் புலவர்”
என்ற தொல்காப்பியச்சூத்திரத்து, ‘நாடின் என்பதனால், ஒருசார் அந்தணரும்
படைக்கு உரிய ரென்பது கொள்க; அவர் இயமதங்கியாரும், துரோணனும், கிருபனும்
முதலாயினாரெனக் கொள்க’ என்றும், படைப்பகுதி யென்பன- வேலும் வாளும்
வில்லும் முதலாயின,  என்றுங் கூறியதனால், ‘முனிவரன்தன் கழற் கால்’ என்றது
பொருந்தும். அன்றியும், துரோணனை வீடுமன் கௌரவபாண்டவர்க்கு
வில்லாசிரியனாக்கியபொழுது, அவனுக்கு அரசர்க்குஉரிய அங்கங்களையெல்லாம்
கொடுத்ததாக ஆதிபருவத்திற்கூறியுள்ளது. செவ்வாய்மலர்ந்து – காரியம்
காரணத்தாற்கூறப்பட்டது ; உபசாரவழக்கு பி -ம்: வெவ்வேறுரைத்த வேந்தர்க்கு
வேண்டுஞ்சிறப்பு.

கங்குல், சிலை நூல் முனிவனுடன் கழற் கால் அரசன்
பணித்தமை கேட்டு,
அங்குத் தரியாது, ‘இவன் கரத்தே அருள் கூர் நெஞ்சன்
அகப்படும்’ என்று,
இங்குத் துயில்வார் யாவரையும் இரு பாளையத்தின்
இடந்தோறும்
சங்கக் குரலால் துயில் எழுப்பி, தபனன் குணபால்
தான் சேர்ந்தான்.45.- மறுநாட் சூரியோதய வருணனை.

சிலை நூல் முனிவனுடன் – வில்வித்தையில்வல்ல துரோணனுடனே,
கழல் கால் அரசன் – வீரக்கழலையணிந்த பாதத்தையுடைய துரியோதனன்,
பணித்தமை-(தருமனைப் பிடித்துத் தரும்படி) சொன்ன கடுஞ்சொல்லை, கேட்டு-,
கங்குல்-இராத்திரி. ‘இவன் கரத்து ஏ-இத்துரோணன் கையிலே, அருள்கூர் நெஞ்சன்.
கருணைமிகுந்த மனத்தையுடைய தருமன், அகப்படும் – அகப்பட்டுக் கொள்வானே,’
என்று – என்று எண்ணி இரங்கி, அங்கு தரியாது- அவ்விடத்தில் நில்லாமல்
நீங்கிச்சென்றது; (அதுசெல்ல), இங்கு- இப்பால், தபணன்-சூரியன், -இரு
பாளையத்தின் இடம் தோறும் – இருதிறத்துப் படைவீடுகளி னிடங்களிலெல்லாம்,
துயில்வார் யாவரைஉம் – தூங்குகிறவர்களெல்லோரையும், சங்கம் குரலால் துயில்
எழுப்பி – சங்கவாத்தியத்தின் தொனியால் தூக்கம்விழிக்கச்செய்து கொண்டு, தான் -,
குண பால் சேர்ந்தான் – கிழக்குத்திக்கில் அடைந்தான் [உதித்தான்]; (எ-று.)

     இயல்பாக இரவுகழிந்ததைத் துரியோதனன்வார்த்தைகேட்டு அங்கு நிற்க
மனம்பொறாமற் சென்றதாகவும், சூரிய னுதிக்கையில் சங்கநாதத்தால் யாவருந்
துயிலொழிதலைச் சூரியன் துயிலெழுப்பி வந்ததாகவும் வருணித்தவை,
தற்குறிப்பேற்றவணி. ‘அருள்கூர்நெஞ் சனகப்படுமென்ற’ என்பதை
மத்திமதீபமாகமேல்வாக்கியத்துக்குங் கூட்டலாம். முதலடியில், முனிவன்
அரசனுடன்பணித்தமையென உருபுமாற்றி, துரோணன் துரியோதனனுடன் (நாளை
அகப்படுத்திதருவதாகக்) கூறினமை என்றும் உரைக்கலாம். நெஞ்சன்அகப்படும்-
செய்யுமென்முற்று ஆண்பாலுக்கு வந்தது. சூரியோதயகாலத்தில் எங்குங்
சங்கூதுதல் இயல்பாதலை, “புள்ளுஞ்சிலம்பினகாண் புள்ளரையன் கோயில்,
வெள்ளைவிளிசங்கின் பேரரவங் கேட்டிலையோ, பிள்ளாயெழுந்திராய்” என்ற
திருப்பாவையாலும் அறிக      

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading