ஸ்ரீ.வில்லிபாரதம் – மூன்றாம் பாகம் -33. ஐந்தாம் போர்ச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

கரு மா முகில் கோலம் நெஞ்சத்து இருத்தும்
கருத்து எய்துமேல்,
அரு மாதவன்தானும் அவன்; முத்தி தருகைக்கும்
அவனே குரு;
தரு மாலை மணம் நாறு தாளானை, வண்டு ஏறு
தண் அம் துழாய்
மரு மாலை புனைகின்ற திருமாலை, அல்லாது,
வல்லார்கள் யார்?கடவுள் வாழ்த்து

கரு – கருநிறமான, மா-அழகிய, முகில் – மேகம் போன்ற,
கோலம்-(திருமாலின்) திருமேனியை, நெஞ்சத்து-(தன்) மனத்திலே, இருத்தும் –
பதியவைக்கிற, கருத்து-எண்ணம், எய்தும் ஏல்-(ஒருவனுக்கு) உண்டாகுமானால்,
அரு மா தவன்தான் உம் அவன்-(பிறராற்செய்தற்கு) அரிய பெரிய தவத்தைச்
செய்தவனும் அவனே; முத்தி தருகைக்குஉம் அவன்ஏ குரு – (தன்னை
அடைந்தவர்களுக்குப்) பரமபதத்தைக் கொடுத்தற்கும் அவனே ஞானசிரியனாவன்;
(ஆதலால்),- தரு – கற்பகவிருட்சத்தின் மலர்களாலாகிய, மாலை-மாலைகளின்,
மணம்-வாசனை, நாறு-மணக்கப் பெற்ற, தாளானை-திருவடிகளையுடையவனும்,
வண்டு ஏறு-வண்டுகள் மொய்க்கின்ற, தண்-(தேனினாற்) குளிர்ந்த, அம் – அழகிய,
மரு-வாசனையையுடைய, துழாய் மாலை – திருத்துழாய்மாலையை, புனைகின்ற-
தரிக்கிற, திருமாலை அல்லாது – திருமாலென்னுந் திருநாமமுடையவனு மாகிய
ஆதிதேவனை யல்லாமல், வல்லார்கள்- சிறந்தகடவுளர், யார்-யாவர் (உளர்)?
(எ-று.)

     திருமாலினது வடிவத்தை ஒருகால் தியானிப்பவன்,
அரும்பெருந்தவஞ்செய்தவனும், தன்னையடைந்தவர்களுக்கு முத்திதர
வல்ல சிறந்த ஆசிரியனும் ஆவன்; ஆதலால், திருமாலையொழிய வேறு சிறந்த
கடவுள் இல்லை என்பது கருத்து. கருநிறத்திற்கும், காண்பவர் மனத்துயரந்
தீர்க்கவல்ல குளிர்ச்சிக்கும், கைம்மாறு கருதாது கருணைமழைசொரிதற்கும்,
எம்பெருமானுக்கு நீலமேகம் உவமை. விரதங்களால் உணவு சுருக்குதல், வெயில்
மழை பனிகளில் வருந்துதல் முதலிய சிரமம் சிறிதும் இல்லாமல் முத்தியைப்
பெறும்உபாயமாதலால், பகவானைத் தியானித்தல் அருமாதவமாயிற்று.
“ஞானமனுட்டானமிவை நன்றாகவே யுடைய, னான குருவை யடைந்தக்கால்-
மாநிலத்தீர் தேனார்கமலத் திருமாமகள் கொழுநன், றானே வைகுந்தந் தரும்”
என்றபடி நல்லாசிரியரை யடுத்து அவர்கள்முகமாகவே முத்திபெறவேண்டுதலால்,
‘முத்தி தருகைக்கு மவனே குரு’ என்றார். தரு-வடசொல். கற்பக மலர்களின்மாலை,
இந்திரன்முதலிய தேவர்களால் திருமாலினது திருவடிகளில் கொணர்ந்து
சமர்ப்பிக்கப்பட்டவை. தேவர்கள்மாலையில் வண்டுமொய்த்தல் இல்லை யாயினும்
சிறந்த அருளுடைமை தோன்ற, வண்டேறுதுழாய்’ எனப்பட்டது. துளசிமாலை-
திருமாலுக்கு உரியது. முன் இரண்டடியால், திருமாலினது அடியார்களின்
மகிமையை எடுத்து நன்குவிளக்கி, அது மூலமாகப் பின் இரண்டடிகளில்
அத்திருமாலின் ஒப்புயர்வற்ற மேன்மையை விளக்கினார். தரு-மலருக்கு
முதலாகுபெயர்.

     இதுமுதற் பன்னிரண்டு கவிகள்-பெரும்பாலும் முதல் நான்கு சீரும்
மாங்காய்ச்சீர்களும், ஈற்றுச்சீ ரொன்று மாங்கனிச்சீருமாகிய நெடிலடி நான்கு
கொண்டகலிநிலைத்துறைகள்.  

வர சங்கமும், தாரையும், சின்னமும், பொன்
மணிக் காளமும்,
முரசங்களும், துந்துபியும், எங்கும் எழ விம்ம,
முழ விம்மவே,
கரை சிந்து, திரை சிந்து, நுரை சிந்து, விரை சிந்து,
கணம் என்னவே,
அரசன் பெருஞ் சேனை வெள்ளம் புறப்பட்டது,
அணியாகவே.2.- வாச்சியப் பேரொலியோடு தருமன்சேனைவெள்ளம் புறப்படுதல்.

வர சங்கம்உம்-சிறந்த சங்குகளும், தாரைஉம்-தாரையென்னும்
ஊதுகருவியும், சின்னம்உம்-சின்னமென்னும் ஊதுகருவியும், பொன் மணி
காளம்உம்-பொன்னினாலும் இரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்ட
எக்காளமென்னும் ஊதுகருவியும், முரசங்கள்உம்-பேரிகைகளும், துந்துபிஉம்-
துந்துபியென்னும் வாத்தியமும், எங்குஉம்-எவ்விடத்தும், எழ-ஓசையெழும்படி,
விம்ம-ஒலிக்கவும், முழ-மத்தளங்கள் விம்ம-முழங்கவும்,-கரை சிந்து-கரையை
மோதுகிற, திரை – அலைகளை, சிந்து – வீசுகிற, நுரை சிந்து-நுரை சிந்தப்பெற்ற,
விரை சிந்து கணம் என்ன – விரைந்து வரும்படியான கடல்களின் கூட்டம்போல,
அரசன் பெருசேனை வெள்ளம் – தருமராசனது பெரிய சேனைகளின் கூட்டம்,
அணி ஆக புறப்பட்டது – வரிசையாகப் (போருக்குப்) புறப்பட்டது; (எ-று.)

     வெள்ளம் – ஓர்பெருந்தொகையுமாம். வரசங்கம் – திருமாலின்
பரஞ்சசன்னியமும், அருச்சுனனது தேவதத்தமும், மற்றும் பல வலம்புரிச்சங்குகளும்;
இது வடமொழித்தொடர். ‘வரிசங்கம்’ என்றபாடத்துக்கு-கோடுகளையுடைய சங்கு
என்க. காளம் – காகளம் எனவும்படும். முரசு முதலிய மூன்றும் – அடிக்கப்படும்
வாச்சியவகைகள். மூன்றாமடியிலுள்ள சிந்து என்னுஞ் சொற்களில், ஈற்றது – ஸிந்து
என்னும் வடசொல்; மற்றவை – தமிழ் வினைப்பகுதி: சொற்பின்வரு
நிலையணி.           

விருது ஆயிரம் கோடி, முரசு ஆயிரம் கோடி,
மேன்மேல் எழ,
பொரு தானையுடன் வந்து அணைந்தார்,
புறந்தந்த பூபாலரும்;
கருதா அரக்கன் கொடுந் தானை, இறைவன் கடுந்
தானை, என்று
இரு தானையும் போல, எதிருற்ற, இரு மன்னர்
இரு தானையும்.3-துரியோதனன் சேனைவந்து சேர்ந்தபின்
இருதிறச்சேனையும் பொர எதிருறுதல்.

ஆயிரம் கோடி விருது – மிகப்பலவான பிருதுகளும், ஆயிரம்
கோடிமுரசு – மிகப்பலவான பேரிகைவாத்தியங்களும், மேல் மேல் எழ –
மி்குதியாகஒலிக்க, புறம் தந்த பூபாலர்உம்-(முந்தினநாளில் தோற்று)
முதுகுகொடுத்த(துரியோதனன்சேனை) அரசர்களும், பொரு தானையுடன்
போர்செய்யுஞ்சேனைகளுடனே, வந்து அணைந்தார் – (போர்க்களத்துக்கு)
வந்துசேர்ந்தார்கள்:(இவ்வாறு வந்த) இரு மன்னர் இரு தானைஉம் – (தருமன்
துரியோதனன் என்னும்)இரண்டு அரசர்களது இரண்டு சேனைகளும்,- கருதா
அரக்கன் கொடுதானை.(பிறரைப் பொருளாக) மதியாத இராவணனது கொடிய
இராக்கதசேனையும்,இறைவன் கடு தானை- (யாவர்க்குந்) தலைவனான
இராமபிரானது பயங்கரமானவானரசேனையும், என்ற இரு தானைஉம் போல –
என்ற இரண்டு சேனைகளும்போல, எதிர் உற்ற- எதிரிலே நெருங்கின;(எ-று.)

     அசுராமிசமாய்த் தீயொழுக்கமுடைய துரியோதனாதியரது முடிவில்
தோல்வியடைவதான சேனைக்கு இராவணனது சேனையும், தேவாமிசமாய்
நல்லொழுக்கமுடைய பாண்டவரது முடிவில் வெற்றிபெறுஞ் சேனைக்கு
இராமனதுசேனையும் உவமையாம்-கீழ்த் தருமன்சேனையை முன்னும், (செ-2)
துரியோதனன் சேனையைப் பின்னும் கூறிய முறைமைக்கு மாறுபடக் கூறியது –
எதிர்நிரனிறைப்பொருள்கோள். கருதா அரக்கன் – (தனக்குவருந்தீங்கைத்
தானாகவும் பிறர்சொல்லவும்) எண்ணாத இராக்கதனுமாம். என்ற என்பதன் ஈறு
தொக்கது. விருது-அரசரது வீரம் கல்வி வெற்றி முதலியவற்றைத் துதிபாடகர்
முதலியோர் எடுத்துக்கூறிப் புகழ்வது: வெற்றிக்கு அறிகுறியான கொடியெனினுமாம்.
பூபாலர் – பூமியைக் காப்பவர்; வடசொல். 

அரக்கர்க்கு முதல் வான் அளித்தோரும் எமர்;
இன்றும் அவர்போல் உமைத்
துரக்கைக்கு நின்றேன்’ எனத் தெவ்வர் தம்மொடு
சொல்லிற்று என,
குரக்குக் கொடித் தேரின்மிசை ஏறி விசையோடு
கூத்தாடவே,
புரக்கைக்கு நின்றோனுடன், செங் கண் விசயன்
புறப்பட்டனன்.4.- விசயன் ஸ்ரீக்ருஷ்ணனுடன் தேரிற் போருக்கு வருதல்.

முதல் – பூர்வகாலத்தில், அரக்கர்க்கு வான் அளித்தோர்உம் –
(இராவணசேனையிலுள்ள) இராக்கதர்களுக்கு(ப்போரிற்கொன்று) வீரசுவர்க்கங்
கொடுத்தவர்களும், எமர் – எங்கள் இனத்தவரே [வாநர வீரர்களே] யாவர்;
இன்றுஉம் – இந்நாளிலும், அவர் போல் – அக்குரக்குவீரர்போல, உமை
துரக்கைக்கு நின்றேன் – உங்களை ஒழித்தற்கு (யான் இங்கு வந்து) நின்றேன்’,
என- என்று, தெவ்வர் தம்மோடு – பகைவர்களாகிய துரியோதனாதியர்களோடு,
சொல்லிற்று என – சொல்லியதுபோல, குரங்கு கொடி – குரங்கின்வடிவ மெழுதிய
துவசம், தேரின்மிசை ஏறி – (தனது) தேரின்மேற் பொருந்தி, விசையோடு கூத்தாட
– வேகத்தோடு நடனஞ்செய்ய, செம் கண் விசயன் – (கோபத்தாற்) சிவந்த
கண்களையுடைய அருச்சுனன், புரக்கைக்கு நின்றோனுடன் – (தன்னைப்)
பாதுகாக்கும்பொருட்டுத் துணைநின்ற கண்ணபிரானுடனே, புறப்பட்டனன் –
(போருக்கு) வந்தான்; (எ-று.)

     அருச்சுனனுக்குக் குரங்குக்கொடி, காண்டவதகநகாலத்தில் அக்கினிதேவனால்
அளிக்கப்பட்டது. பின்பு வீமசேனன் புஷ்ப யாத்திரையாக
அளகாபுரிக்குச்சென்றபொழுது, இடையில் அனுமானைக் கண்டு வணங்கி வேண்டி,
போர்க்களத்தில் அருச்சுனனது தேர்த்துவசத்தில் வந்து நின்று மகிழ்ந்து
கூத்தாடும்படி  வரம்பெற்றான். அவ்வாறு அருச்சுனனது குரங்குக்கொடியில்
அநுமான் ஆவேசித்து நின்று அக்கொடி காற்றில் வேகமாக அசையும் பொழுது
கூத்தாடுதலை, துரியோதனாதியரைவீரவாதங் கூறி வெருட்டுவதாகக் கற்பித்து
வருணித்தார்; தற்குறிப்பேற்றவணி. கீழ்பாட்டில், துரியோதனன்சேனைக்கு
இராவணசேனையை உவமைகூறியவர், இங்கு அதை யழிக்க அநுமான் வந்ததைக்
கூறினார்.குரக்குக்கொடி – வேற்றுமையில் மென்றொடர் வன்றொடராயிற்று.
புரக்கைக்கு -பூமிக்குப்பாரமாகவுள்ள துஷ்டர்களை யொழித்துச் சிஷ்டர்களைப்
பரிபாலநஞ்செய்யும் பொருட்டு என்றுங் கொள்ளலாம். பி ம்: மிசையோடி

அரன் நின்றனன் போல, அவன் நின்ற தேர் ஒத்த
அணி தேர்மிசை,
பொர நின்ற நதிமைந்தனொடு சென்று, முனை நின்று
பொர எண்ணியே.
சரம் நின்ற குனி சாப விசயன்தனைக் கொண்டு,
சங்கம் குறித்து,
உரம் நின்ற அவன் நெஞ்சுடைப் பாகன் மான் தேர்
உகைத்து ஊரவே,5.- வீடுமனோடு பொர அவனின்றவிடத்து ஸ்ரீகிருஷ்ணன்
தேர்செலுத்துதல்.

இதுவும், மேற்கவியும் – குளகம்.

     (இ – ள்) அரன் நின்றனன் போல – சிவபிரான் (போருக்கு வந்து)
நின்றாற்போல, அவன் நின்ற தேர் ஒத்த அணி தேர்மிசை பொர நின்ற –
அச்சிவபிரான் (திரிபுர சங்காரகாலத்தில்) ஏறி நின்ற (பூமியாகிய) தேரைப்போன்ற
அழகியதொருதேரின்மேலேறிப் போர்செய்யவந்துநின்ற, நதிமைந்தனொடு –
கங்காநதியின் புத்திரனான வீடுமனுடனே, சென்று முனை நின்று பொர எண்ணி –
போய் எதிரில்நின்று போர்செய்யக் கருதி,-சரம்நின்ற குனி சாபம் விசயன் தனை
கொண்டு – அம்புகள் (அழியாது) நிலை பெற்ற வளைவான (காண்டீவ)
வில்லையுடைய அருச்சுனனைக் கூடஅழைத்துக்கொண்டு, சங்கம் குறித்து – (தனது
பாஞ்சசன்னியமென்னுஞ்) சங்கை முழக்கிக்கொண்டு, உரம் நின்ற அவன்நெஞ்சு
உடை பாகன் – தைரியம் நிலைபெற்ற அவ்வருச்சுனனது மனத்திற்கு ஏற்ற
தேர்ப்பாகனான கண்ணபிரான்,-மான் தேர் உகைத்து ஊர – குதிரைகள் பூட்டிய
தேரை நடத்திக்கொண்டு செல்ல,-(எ-று.)-‘ஊர்கின்ற’ (6) என்பதனோடு இயையும்.

     அரனுவமை, அழித்தற்கு. உரம் – ஞானபலமென்பாருமுளர். பி-ம்;
உரநின்ற வன்னெஞ்சுடைப் பாகன்-

ஊர்கின்ற தேர் ஓடி, உயர் கங்கை மகன் நின்ற
ஒரு தேருடன்
சேர்கின்ற எல்லை, கலிங்கேசர் முதலான
தெம்மன்னர் போய்,
நேர்கின்ற விசயன்தனுடன் மோதி, அவன் ஏவு
நெடு வாளி பட்டு,
ஈர்கின்ற புண் வாயில் வார்கின்ற செந்நீரினிடை
மூழ்கினார்.6.-தேர்வந்தவளவில் கலிங்கேசர்முதலோர் குறுக்கிட்டு
அடிபட்டுப் புண்படுதல்

ஊர்கின்ற – (இவ்வாறு கண்ணன்) செலுத்துகிற, தேர் –
(அருச்சுனனது) இரதம், ஓடி – வேகமாகச் சென்று, உயர் கங்கை மகன் நின்ற
ஒருதேருடன் – சிறந்த கங்காபுத்திரனான வீடுமன் நின்ற ஒப்பற்ற தேருடனே,
சேர்கின்ற எல்லை(எதிர்த்து)ச் சேர்கிற சமயத்தில்,-கலிங்க ஈசர் முதல்
ஆனதெவ்மன்னர் – கலிங்கதேசத்தலைவர்கள் முதலாகிய பகையரசர்கள், போய் –
(எதிர்த்துப்) போய், நேர்கின்ற விசயன் தனுடன் மோதி – எதிர்ப்பட்ட
அருச்சுனனுடனே போர்செய்து, அவன் ஏவு நெடு வாளி பட்டு-அவ்வருச்சுனன்
பிரயோகித்த நீண்ட பாணங்கள் (தம்மேல்) தைத்து, ஈர்கின்ற – (தம்உடலைப்)
பிளக்கிற, புண் வாயில் – புண்களின் வழியே, வார்கின்ற – பெருகுகிற, செம்
நீரினிடை – இரத்தத்திலே, மூழ்கினார்-அழுந்தினார்கள்;

செல்லும் கலிங்கேசர் அலையுண்ட நிலை கண்டு,
சிவன் என்று பார்
சொல்லும் பெருஞ் செம்மல் பல்லங்கள் அவன்மேல்
தொடுத்து ஏவினான்;
கொல்லும் கொடும் பாணம்அவை ஐந்து விசயன்
கொதித்து ஏவினான்,
வில்லும், தன் வில் நாணும், விறல் அம்பும், உடன்
அற்று விடை கொள்ளவே.7.-கலிங்கேசர் அலைப்புண்டதுகண்டு வீடுமன் அருச்சுனனை எதிர்த்து
வில் முதலியன அறுபடுதல்.

செல்லும் – (அருச்சுனனை எதிர்த்துச்) சென்ற, கலிங்க ஈசர்-
கலிங்கநாட்டு அரசர்கள், அலையுண்ட – (அருச்சுனனால்) வருத்தமடைந்த,
நிலை -நிலைமையை, கண்டு – பார்த்து, சிவன் என்று பார் சொல்லும்
பெருசெம்மல் -(அழித்தல்தொழிலில்) சிவபிரான் (போல்வான்) என்று
உலகத்தவராற் சொல்லப்படுகிற சிறந்த வீரனான வீட்டுமன், அவன் மேல்
பல்லங்கள் தொடுத்து ஏவினான்- அந்த அருச்சுனன்மேல் அம்புகளை (வில்லில்)
தொடுத்து எய்தான்:(அப்பொழுது), விசயன்- அருச்சுனன், கொதித்து –
கோபங்கொண்டு, தன் வில்உம்வில் நாண்உம் விறல் அம்புஉம் உடன் அற்று
விடைகொள்ள – (அவ்வீடுமன்)தனதுவில்லும் அவ்வில்லின்நாணியும் (அவ்வில்லில்
எய்யப்படும்)வலிமையையுடைய அம்புகளும் ஒருசேர அழிந்து மீண்டு செல்லும்படி,
கொல்லும்கொடு பாணம் அவை ஐந்து-(பகைவரைக்) கொல்லவல்ல கொடிய
ஐந்துபாணங்களை, ஏவினான்-செலுத்தினான்; (எ-று.)

    விறலம்பும் என்றவிடத்து ‘அடனாணும்’ எனச் சில பிரதிகளிற்பாடங்காணப்
படுகிறது; அப்பொழுது, அடல்நாண் அற்று வலிமையும்வெட்கமுங்கெட்டு என்க.
பல்லம், பாணம், – வட சொற்கள்.

இவர் கொண்ட செற்றத்தொடு இவ்வாறு போர் செய்ய,
இகல் வீமனைப்
பவர் கொண்ட நெடு வேலைபோல் வந்து மொய்த்தார்கள்,
பல மன்னரும்;
கவர் கொண்ட முனை வாளி அவர் மார்பு தோறும்
கழன்று ஓடவே,
தவர் கொண்டு செற்றான், முன் அளகேசன் அமர் வென்ற
தனி ஆண்மையான்.8.-இதுவும் அடுத்த கவியும்-வீமனுடன் மன்னர்பலரும்
துச்சாதனன் முதலியோரும் பொழுது தோற்றோடினமை கூறும்.

இவர் – (அருச்சுனன் வீடுமன் என்ற) இவ்விருவரும், கொண்ட
செற்றத்தொடு – (தாம் தாம்) கொண்ட பராக்கிராமத்துடனே இ ஆறு போர்
செய்ய- இப்படி (ஒருபுறத்தில்) போர்செய்து கொண்டிருக்க, – (மற்றொரு புறத்தில்),
இகல்வீமனை – வலிமையையுடைய வீமசேனனை, பல மன்னர்உம் – அநேக
அரசர்களும், பவர் கொண்ட நெடு வேலை போல்-(பிரளயகாலத்தில்)
நெருங்குதலைக் கொண்ட பெரிய கடல்கள்போல, வந்து மொய்த்தார்கள் – வந்து
நெருங்கிச் சூழ்ந்தார்கள்; (அப்பொழுது), முன் அளகேசன் அமர் தனி வென்ற
ஆண்மையான் – முன்னே குபேரனது போரில் தனியே வெற்றிகொண்ட
பராக்கிரமமுடைய வீமன், தவர்கொண்டு-(தன்) வில்லை(க்கையில்) ஏந்தி,
(அம்புதொடுத்து), கவர் கொண்ட முனைவாளி – (பகைவருயிரைக்) கவர்தலைக்
கொண்ட கூர்நுனியையுடைய (அந்த) அம்புகள், அவர் மார்பு தோறுஉம் கழன்று
ஓட – அப்பகைவர்களின் மார்பு தோறும் வெளிப்பட்டு ஓடும்படி. செற்றான்-
அழித்தான்;(எ-று.)

     அளகேசன் – அளகாபட்டணத்துக்குத்தலைவன் – பாண்டவர்
வனவாசஞ்செய்கையில், அங்கு வந்து விழுந்த ஒருசிறந்த பூவைப் பார்த்து
ஆசைப்பட்டுத் திரௌபதி, அப்படிப்பட்ட பூவைக் கொண்டுவந்து தரும்படி
வேண்ட, வீமன் குபேரனது அளகாபுரியிற் சென்று அங்குள்ள சோலையிற்
பூப்பறிக்கத் தொடங்கினபொழுது, குபேரன் கட்டளையால் யஷர் முதலிய பலர்
சேனையோடு வந்து எதிர்க்க, அவர்களை யெல்லாம் இவன் ஒருவனாகவே
வென்றிட்டா னென்பது, கீழ்ப்புட்பயாத்திரைச்சருக்கத்து வரலாறு. தனி
ஆண்மையான் – அசகாயசூரன் – பவர்கொண்ட-(பவழக்)கொடியைக்கொண்ட
என்றலும் ஒன்று. பி – ம்:- மார்பு தோளும்.

துச்சாதனன், தம்பிமார், மைந்தர், மற்றும் சகுனி,
சல்லியன்,
எச் சாப முடி மன்னரும், பின்னரும், துன்னி
எதிர் சீறினார்;
அச் சாபம் ஒன்றாலும், அன்று, அவ் அவர்க்கு
அம்பு அநேகம் தொடுத்து,
உச்சாசனம் சொல்லி நின்றான், அவ் அடல்
மன்னர் உடன் ஓடவே.

பின்னர்உம்-பின்பு, துச்சாதனன் – துச்சாசனனும், தம்பிமார்-(அவனது)
தம்பியர் பலரும், மைந்தர்-(அவர்களுடைய) புத்திரர்களும், மற்றுஉம்-இன்னும்,
சகுனி-சகுனியும், சல்லியன்-சல்லியனும், சாபம் முடிஎ மன்னர்உம்-
வில்லலையேந்திய   கிரீடாதிபதிகளான அரசர்கள்பலரும், எதிர் துன்னி-
வீமனெதிரில்வந்து நெருங்கி, சீறினார்-கோபித்துப் போர்செய்தார்கள்;
(அப்பொழுதுவீமன்), அ சாபம் ஒன்றால்உம் – அந்தத் (தனது) ஒரு வில்லைக்
கொண்டே, அன்று-அப்பொழுது, அ அவர்க்கு-(வந்து எதிர்த்த) அந்தந்த
அரசர்களுக்குக்கெல்லாம், அனேகம் அம்பு தொடுத்து-(ஒவ்வொருவர்க்கும்) பல
பாணங்களைச் செலுத்தி, அ அடல் மன்னர் உடன் ஓட-வலிமையையுடைய அந்த
அரசர்கள் ஒருசேர விரைந்து ஓடிப்போம்படி, உச்சாசனம் சொல்லி நின்றான் –
(கொல்வேன்கொல்வே னென்று வீரவாதமாகக்) கொலை கூறி நின்றான்; (எ-று.)

     துஸ்ஸாஸநன்-கொடிய கட்டளையுடையான். உச்சாஸனம் – கொலை: மேலான
ஆக்கினையென்றுமாம்-கீழ்ப்பாட்டில் ‘தவர்கொண்டு’ என்றதை நோக்கி, ‘அச்சாபம்’
எனச்சுட்டினார். ‘சீறினார்’ எனக் காரியத்தைக் காரணமாக உபசரித்தார்

செருத் துப்பு உடைந்து ஓடிவரு தம்பியர்க்
கண்டு, செற்றத்துடன்
கருத்துப் புகைந்து, உள் கலங்கி, கடைக் கண்கள்
கனல் காலவே,
‘மருத்துத் தரும் காளை நின்றானை இன்று ஆவி
மலைவேன்!’ எனா,
உருத்துத் தடந் தேரின்மிசை வந்து அடுத்தான்,
உரககேதனன்.10.-தம்பிமார்ஓடிவருவதுகண்டுசீறித்துரியோதனன்வீமனைநெருங்குதல்.

செருத்து-போர்செய்து, புடைத்து-(வீமனால்) அடிபட்டு, ஓடி வரு-
(புறங்கொடுத்து) ஓடிவருகிற, தம்பியர்-(தன்) தம்பிமார்களை, கண்டு-பார்த்து,-உரக
கேதனன்-பாம்புக்கொடியனான துரியோதனன்,-செற்றத்துடன் – கோபத்துடனே,
கருத்து புகைந்து-மனங்கொதித்து, உள் கலங்கி-உள்ளே கலக்கமடைந்து, கடை
கண்கள் கனல் கால-(தன்) கண்ணின் கடைகள் கோபாக்கினியைச் சொரிய, மருந்து
தரும் காளை நின்றானை இன்று ஆவி மலைவேன் எனா –
‘வாயுபெற்றபிள்ளையாய்நின்ற வீமனை இப்பொழுதுப் (போர்செய்து) உயிரழிப்பேன்’
என்று(வீரவாதஞ்) சொல்லி, உருத்து- அதட்டிக்கொண்டு, தட தேரின்மிசை வந்து
அடுத்தான்-பெரிய தேரின்மேலே  வந்து(வீமனை) நெருங்கினான்; (எ-று.) –
தம்பியர்க்கண்டு -இரண்டாம்வேற்றுமைச்சிறப்புவிதி.

பேராத நிலை நின்று, வன்போடு சாபம் பிடித்து,
எங்கணும்
சோராத வய வாளி ஈர்-ஐந்து சேரத் தொடுத்து
ஏவினான்;
ஆர் ஆவமுடன் இட்ட கவசம் பிளந்து ஓடி,
ஆண்மைக்கு எலாம்
வீராபிடேகம் செய் வய வீமன் அகல் மார்பில்
மிக மூழ்கவே,11.-இரண்டுகவிகள்-துரியோதனன் வீமனையெதிர்த்து
வலிகெடுதலைக் கூறும்.

(வந்து அடுத்த துரியோதனன்), பேராத நிலை நின்று-சலியாத
ஒருநிலையிலே நின்று,வன்போடு சாபம் பிடித்து-வலிமையோடு வில்லைக்
கையில்ஏந்தி,-ஆண்மைக்கு எலாம் வீர அபிடேகம் செய் வய வீமன்-
பராக்கிரமத்துக்கெல்லாம் (தலைவனாகத்தன்) வீரத்தனத்தால்
பட்டாபிஷேகஞ்செய்யப் பெற்றுள்ள வலிமையையுடைய வீமசேனனது, இட்ட
கவசம்-(மேலே) தரித்த கவசத்தை, பிளந்து ஓடி-பிளந்துகொண்டு சென்று, அகல்
மார்பில்-(அவனது) பரந்த மார்பிலே, மிக மூழ்க-மிகுதியாக அழுந்தும்படி, ஏ
கண்உம் சோராத வயவெளி ஈர்ஐந்து-எவ்விடத்தும்(பகைவெல்லுதலில்)
சோர்தலில்லாத வலிமையையுடைய பத்துப் பாணங்களை, ஆராவமுடன்-
ஆராவாரத்துடனே, சேர தொடுத்து ஏவினான்- ஒருசேரப் பிரயோகித்தான்; (எ-று.)

     நிலை என்றது-போரில் வில்வளைத்து அம்பைஎய்வார்க்கு உரிய நிலை.
அது-பைசாசம், மண்டலம், ஆலீடம், பிரதியாலீடம் என நான்கு வகைப்படும்:
இவற்றுள், ஒருகாலில்நின்று ஒருகால் முடக்கல்-பைசாசநிலை: இருகாலும்
பக்கல்வளைய மண்டலித்தல்- மண்டலநிலை: வலக்கால் மண்டலித்து இடக்கால்
முந்துறல்-ஆலீட நிலை: வலக்கால் முந்துற்று இடக்கால் மண்டலித்தல்-
பிரதியாலீடநிலை: இனி, பிரதியாலீடம், ஆலீடம், சமபதம், விசாகம், மண்டலம்
எனநிலை ஐந்தென்பாரும் உளர். ஆராவம் – வடசொல்: பேரொலி: வீரவாதத்தா
லாகுவது. இனி, ஆர் ஆவமுடன் எனப்பிரித்து, நிறைந்த அம்பறாத்தூணியொடு
கவசமும் பிளந்து என இயைப்பாரு முளர்.’ ‘ஆண்மைக்கெலாம் வீராபிடேகஞ்செய்’
என்பதற்கு – பராக்கிரமசாலிகள் எல்லோர்க்குள்ளுந் தலைமைபெற்ற என்றவாறு. 

ஈமந்தொறும் சென்று நடம் ஆடு கழல் ஐயன்,
எதிராய் வரும்
காமன்தன் உடல்மேல் விழித்திட்ட நுதலில்
கனல் கண் என,
தாமம் புனைந்து ஆர மணம் நாறும் மார்பத்
தடம் தோயவே,
வீமன் தொடுத்தான், ஒர் எதிர் அம்பு பார்
மன்னன் மிடல் சாயவே.

ஈமம் தொறும் – மயானங்களிலெல்லாம், சென்று-போய், நடம் ஆடு
– கூத்தாடுகிற, கழல் – சீர்பாதங்களையுடைய, ஐயன்-தலைவனான சிவபிரான், எதிர்
ஆய் வரும் காமன்தன் உடல் மேல் விழித்திட்ட-எதிரியாய் (ப் போருக்கு) வந்த
மன்மதனது உடம்பை இலக்காகக் கொண்டு அதன்மேல் விழித்துப்பார்த்த, நுதலில்
கனல் கண் என – நெற்றியிலுள்ள நெருப்புக்கண்போல,-தாமம் புனைந்து ஆர
மணம் நாறும் மார்பம் தடம் தோய-மாலைகளைத் தரித்து மிகவாசனைவீசுகிற
மார்பினிடத்திலே பதியவும், பார் மன்னன் மிடல் சாய-பூமியை ஆளும் அரசனான
அத்துரியோதனன் (அதனால்) வலிமைகெடவும், வீமன்-வீமசேனன், ஓர் அம்பு
எதிர் தொடுத்தான்-ஒருபாணத்தை எதிரிலே செலுத்தினான்.

     சிவபிரான் வீமனுக்கும், நெற்றிக்கண் அம்புக்கும், மன்மதன்
துரியோதனனுக்கும், அழித்தலும் அழிக்கப்படுதலுமாகிய தொழில்பற்றி உவமை.
சர்வசங்காரகாலத்தில் எல்லாப்பிராணிகளும் அழியப்பெற்ற உலகமுழுவதும்
இடுகாடுஆவதனால், அவ்விடம் முழுவதிலும் அப்பொழுது சிவபிரான் உமாதேவி
கண்டுஉள்ளம் மகிழும்படி திருநடனஞ் செய்கின்றன ரென்பது, சைவசம்பிராதாயம்.
நடம்- வடசொல். ஆரம் மணம் நாறும் என எடுத்து, சந்தனக்குழம்பு கமழப்பெற்ற
எனினுமாம். ஒரேதிரம்பு – துரியோதனன் தானாகவந்து விட்ட பல அம்புகளுக்கு
மாறாகச்செலுத்தப்பட்ட ஒரு அம்பு.     

ஓர் அம்பின் உளைந்து, ஏழ் உலகு உடையான் அலமரவே,
வீரம் புனை வீமன் குனி வில்லோடு எதிர் நிற்க,
போர் அம்பர உலகு ஆள்பவர் புகழ் பூரிசவா வந்து,
ஈர்-அம்பு தொடுத்தான், ஒரு தேர்மேலினன் இவன்மேல்.13.-வீமன்மீது பூரிசிரவா வந்து பொருதல்.

ஏழ் உலகு உடையான்-ஏழுதீவுகளாகவுள்ள பூமி முழுவதையும்
தனதாகவுடைய துரியோதனன், ஓர் அம்பின் உளைந்து அலமர – (தனது) ஒரு
அம்பினால் வருந்திக்கலங்கும்படி (செய்து), வீரம் புனை வீமன் –
வீரத்தன்மையைப்பெற்றுள்ள வீமசேனன். குனி வில்லோடு எதிரி நிற்க –
வளைந்தவில்லுடனே எதிரில்நிற்க,-(அப்பொழுது),- அம்பரம் உலகு ஆள்பவர் –
ஆகாயத்திலுள்ள சுவர்க்கலோகத்தை அரசாளுகிற (இந்திரன் முதலிய)
தேவர்களால், போர் புகழ் – யுத்தத்திற் புகழப்படுகிற, பூரிசவா – பூரிசிரவசு
என்னும் அரசன், ஒரு தேர் மேலினன் வந்து – ஒருதேரின்மேல் ஏறினவனாய்
வந்து, இவன்மேல் ஈர் அம்பு தொடுத்தான் – இவ்வீமன்மேல் இரண்டு
பாணங்களைச் செலுத்தினான்;(எ-று.)

     வீரம்புனை – பராக்கிரமத்தை ஆபரணமாகக்கொண்ட என்க. பூரிஸ்ரவா:
என்னும் வடசொல், திரிந்தது: இவன் சோமதத்த னென்பவனதுமகன்; அதனால்
சௌமதத்தியென்றும் ஒரு பெயர் பெறுவன். இவன் துரியோதனன்பக்கத்து
அதிரதவீரரில் ஒருவன்-பி-ம்: அலம்வர.

     இதுமுதல் இச்சருக்கம்முடியுமளவும் பதின்மூன்று கவிகள் – பெரும்பாலும்
ஈற்றுச்சீரொன்று மாச்சீரும், மற்றைமூன்றும் மாங்கனிச்சீர்களுமாகிய அளவடி
நான்கு கொண்ட கலிவிருத்தங்கள்.  

இவன் ஆண்மையை மதியாது எதிர் எய்தான ‘
என, வெய்தின்,
பவனாகதி பெறு தேரினன், நளினாபதி இளவல்,
‘அவன் ஆர் உயிர் கவர்வேன்!’ என, அம்பு
ஒன்று தொடுத்தான்;
தவனால் மறை தெரி பூரிசவாவும், சரம் விட்டான்.14.-அதுகண்ட சாத்தகி பூரிசிரவரவோடு பொருதல்.

(அப்பொழுது), நளினாபதி இளவல் – திருமகள் கணவனான
கண்ணபிரானது தம்பியாகிய சாத்தகி, (வீமன்மேல் பூரிசிரவன் அம்பெய்தது
கண்டு),இவன் ஆண்மையை மதியாது எதிர் எய்தான் என -‘இவ்வீமனது
பராக்கிரமத்தைநன்கு மதிக்காமல் (பூரிசிவரன்) இவனெதிரில் அம்பு தொடுத்தான்’
என்று. வெய்தின்- கடுமையான கோபத்தோடு, பவனாகதி பெறுதேரினன் –
வாயுவேகத்தைப்பெற்றதேரைச் செலுத்தியவனாய் (வந்து), அவன் ஆர் உயிர்
கவர்வேன் என-‘அந்தப்பூரிசிரவனது அருமையான உயிரை (நான் இப்பொழுது)
வாங்குவேன்’ என்று(வீரவாதஞ்) சொல்லி, அம்பு ஒன்று தொடுத்தான் –
ஒருபாணத்தை (அவன்மேற்)செலுத்தினான்; தவனால் மறை தெரி பூரிசவாஉம் –
தவஞ்செய்து அதனால்(அஸ்திரத்துக்குரிய) மந்திரங்களையறிந்துள்ள பூரசிரவனும்,
சரம் விட்டான்-(சாத்தகியின்மேல்) எதிரம்பு தொடுத்தான்; (எ-று.)

     பவநாகதி – வடமொழித்தொடர், எதுகைநயம் நோக்கி நீண்டது. நளிநா –
தாமரைமலரில் வாழ்பவள்: அவள்கணவன் – நளிநாபதி; வடசொற்றெடர்.
தவன்=தவம்: இறுதிப்போலி; இனி, உயர்திணைப்பெயராகக்கொண்டு,
தவஞ்செய்துள்ள முனிவனால் மந்திரங்களை யறிந்த எனினுமாம்.  

ஏண் அற்று உயர் வரை மார்பினர் இருவோர்களும்,
ஒருவோர்
காணல் தொழில் அரிது ஆம் முறை, கடிதின்
கணை தொடவே,
நாண் அற்றன; வெஞ் சாபமும் நடு அற்றன;
எனினும்,
கோண் அற்றன புகல்வான், ஒரு குறை
அற்றது, அவர்க்கே.15.-மூன்றுகவிகள்-சாத்தகியும் பூரிசிரவாவும்
முதலில் விற்போர்புரிந்து பிறகு வாட்போர்புரிதலைக் கூறும்

ஏண் அற்று – வளைவு இல்லாமல், உயர் – நீண்டு வளர்ந்துள்ள,
வரை -மலைபோல (வலியதாய்)ப் பரந்த, மார்பினர் – 
மார்பையுடையவர்களாகிய,
இருவோர்கள்உம் – (சாத்தகி பூரிசிரவா என்னும்) இருவரும், ஒருவோர் தொழில்
காணல் அரிது ஆம் முறை – ஒருவரும் (தமது) தொழில் வகையைக்காண
முடியாததாகும்படி, கடிதின் – விரைவாக, கணை தொட – அம்புகளை யெய்ய,-
(அதனால்), நாண் அற்றன – (இருவரது) வில்நாணிகளும் அறுந்தன; வெம்
சாபம்உம் நடு அற்றன – கொடியவிற்களும் நடுவிலே துணிபட்டன;
எனின்உம்-என்றாலும்[ஆயினும்], அவர்க்கு – அவ்விரண்டு வீரர்கள்விஷயமாக,
கோண் அற்றன புகல்வான் – குற்றமில்லாத புகழ்மொழிகளைச்சொல்லுதற்கு, ஒரு
குறை அரற்றது – சிறிதுகுறையும் இல்லை; (எ-று.)

     சிறிதும்பழியில்லாத புகழ் பெறும்படி இருவரும் பின்வாங்காமல்
தம்மாலியன்றவளவுபோர்விளைத்தனரென்பதாம். வில்லையேந்துதல் வளைத்தல்
நாணேற்றல்அம்பெடுத்தல் அதனைவில்லில் தொடுத்தல் பகைவர்மேல் விடுத்தல்
முதலியதொழில்கள், செய்யுங் கைவிரைவால்எவர்க்கும்வகுத்துக்
காணவொண்ணாதபடியிருந்தன என்பது இரண்டாம் அடியின்கருத்து. ஏண்
அற்றுஉயர் மர்ர்பு என எடுத்து, குற்றமில்லாமற் சிறந்த மார்பு
எனினுமாம்.      

ஒரு கேள் தக உரை தேறினர் உளமே என, அமரில்,
பொரு கேடக நடவும் கன பொன்-தேர் மிசை இழியா,
முருகு ஏடு அவிழ் தார் மார்பினர் முனை
வாளம் இரண்டோடு,
இரு கேடகம், இரு கையினும், இருவோரும் எடுத்தார்.

முருகு-வாசனையையுடைய, ஏடு அவிழ் தார்-பூவிதழ்கள் விரிந்த
மாலையைத்தரித்த, மார்பினர் – மார்பை யுடையவர்களாகிய இருவோர்உம்-இந்த
இரண்டுபேரும்,-ஒரு கேள் தக-ஒற்றுமையான சினேகம் பொருந்த, உரை தேறினர்-
(ஒருவர்)பேச்சை(ஒருவர்) நம்புபவரான சினேகிதரது, உளம்ஏ என – மனம்போல,
செய்தொழிலில் ஒற்றுமைப்பட்டு),-அமரில் போர்க்களத்திலே, நடவும்-
செலுத்தப்படுகிற, கேடகம்பொரு-விமானத்தை யொத்த, கனம் பொன் தேர்மிசை-
பெரியபொன்னாலாகிய தேர்களின்மேலிடத்தினின்றும், இழியா-இறங்கி,-முனை
வாளம் இரண்டோடு-கூர்நுனியையுடைய இரண்டுவாளாயுதத்துடனே, இருகேடகம் –
இரண்டு கேடகங்களையும், இரு கையின்உம் எடுத்தார் – இரண்டுட கையிலும்
எடுத்துக்கொண்டார்கள்; (எ-று.)

     சமகாலத்தில் ஒருவரால் ஒருவர்  வில் அறுபட்ட இவ்விருவரும்
தேரினின்றுஇறங்குதல், வலக்கையில்வாளையும் இடக்கையிலே கேடகத்தையும்
ஏந்துதல்என்னுந் தொழில்களை மாறுபடாது ஒருங்கேசெய்ததுபற்றி
ஒருவருக்கொருவர்பகைவரான இவருக்கு, ஒருவரோடொருவர் ஒத்தமனமுள்ள
உயிர்நண்பரை உவமைகூறினார். இரண்டாமடியில், கேடகம்-வடசொல்: வானத்திற்
சஞ்சரிப்பதென்றகாரணம்பற்றி விமானத்தைக்காட்டும். இனி, கேடுஅகம்நடவும்
என்பதற்கு-கேட்டைஅவ்விடத்திற் செலுத்தும் என்றும், கேட்டைத்
தன்னிடத்தினின்று ஓட்டுகின்றஎன்றும் பொருளுரைத்தாருமுளர். கனபொன் –
நிலைமொழி வட மொழியாதலின், வலி இயல்பு, முருகு-தேனுமாம். கேடகம்-தன்
மேற் பிறர் எறியும் படைக்கலங்களைத்தடுப்பதொரு கருவி; பரிசை. ‘தக’ என்பது
தேறுதலோடு இயையும், பி-ம்:  கேடறநடவும்.   

படிவாய், உடுபதியும் தினபதியும் பொருதெனவே,
தொடி வார் கரதலம் ஒன்றிய துறு தோலிடை மறையா,
வடி வாள் முனை அசையா, விசை வரு சாரிகள் பயிலா,
இடிவாய் முகில் அதிரா, எதிர் எதிர் சீறினர், இப்பால்,

படிவாய்-பூமியிலே, உடுபதிஉம்-சந்திரனும், தினபதிஉம்-சூரியனும்,
பொருது என – (வந்து) போர்செய்தாற்போல, தொடி வார் கர்தலம் ஒன்றிய துறு
தோலிடை மறையா – தொடியென்னும் அணியை அணிந்த நீண்ட (தம்)
கைகளினிடத்திற்பொருந்திய நெருங்கிய கேடயத்தினுள்ளே மறைந்தும், வடி முனை
வாள் அசையா-கூரிய நுனியையுடைய வாள்களைச் சுழற்றியும், விசை வரு சாரிகள்
பயிலா-வேகமாக வருகிற (இடசாரி) வலசாரி யென்னும்) நடைகளை நடத்தியும், இடி
வாய் முகில் அதிரா-இடிபொருந்தின மேகம்போலச் சிங்கநாதஞ்செய்தும், எதிர்
எதிர் சீறினர்-எதிரெதிராகநின்று கோபித்துப்போர்செய்தார்கள்: (அதுநிற்க), இபால்-
இந்தப்பக்கத்தில்,- (எ-று)-“துரகம்….,கரிமா சீறின” என மேற் கவியில் முடியும்.

     “ஓடிய ஞாயி றுவாமதியோ டொத்தாற்போல், கேடகங்க ளோரிரண்டுங்
கேழ்கிளர்-ஆடமரில், தாக்கினார் சாரிகைகள் சந்தித்தா ராயுதங்கள், ஓக்கினார்
தம்மி லுடன்று” என்றார் பெருந்தேவனாரும். சந்திர சூரியருவமை-
தேககாந்தியோடுகூடிய சாத்தகி பூரிசிரவாக்களுக்குப் பொருந்தும்;
வட்டவடிவமானகேடயத்துக்குக் கொள்ளுதலும் ஒன்று. முதலடி –
இல்பொருளுவமை.
 உடுபதி -நஷத்திரங்களுக்குத் தலைவன். தினபதி-
நாளுக்குத்தலைவன். தோலமைத்துச்செய்யப்படுதலால், கேடகத்துக்கு ‘தோல்’
என்பது -கருவியாகுபெயர்

தோலாது அடலொடு சீறின, துரகத்தொடு துரகம்;
மேலாளொடு மேலாள்; வரி வில்லாளொடு வில்லாள்;
ஏலா முடி அரசோடு அரசு; இரதத்துடன் இரதம்;
காலாளொடு காலாள்; மத கரிமாவொடு கரிமா.18.-இரண்டுபக்கத்திலும் மன்னவரும் சதுரங்கசேனைகளும்
ஒன்றோடொன்று பொருதல்.

துரகத்தொடு துரகம் – குதிரைகளோடு குதிரைகளும், இரதத்துடன்
இரதம் – தேர்களோடு தேர்களும், மத கரி மாவொடு கரிமா-மதயானைகளோடு
யானைகளும், மேல் ஆளொடு மேல் ஆள்-(இவற்றின்) மேலுள்ள வீரர்வகையோடு
வீரர்வகையும், வரி வில் ஆளொடு வில் ஆள் – கட்டமைந்த வில்லின்
வீரர்வகையோடு வில்வீரர்வகையும், முடி அரசோடு அரசு – கிரீடாதிபதிகளான
அரசர்வகையோடு அரசர்வகையும், காலாளொடு காலாள் – பதாதிவகையோடு
பதாதிவகையும், ஏலா –  எதிர்த்து, தோலாது- தோல்வியடையாமல், அடலொடு
சீறின-வலிமையோடு கோபித்துப்போர்செய்தன; (எ-று)

உயர்திணைப்பெயர்களெல்லாம் சாதியுணர்த்துவனவாக வைத்து ‘சீறின’ என
அஃறிணைப்பன்மைமுற்றுக் கொடுத்து முடித்தார்.

நீடும் கட கரியின் கர நிரை அற்றன, நதியாய்
ஓடும் குருதியின் வாளைகள் என, ஓடின, ஒரு சார்;
கோடும் சிலை அம்பின் தலை அரியுண்டன குறை நின்று
ஆடும்தொறும், உடன் ஆடுவ அலகைக் குலம், ஒரு சார்.19.-இதுமுதல் மூன்றுகவிகள்-படுகளச்சிறப்பு.

(அப்போர்க்களத்தில்), ஒரு சார் – ஒரு பக்கத்தில், நிரை அற்றன-
வரிசையாக அறுந்துவிழுந்தனவான, கட கரியின் நீடும் கரம்-மதயானைகளின்
நீண்ட துதிக்கைகள், நதி அய் ஓடும் குருதியின் – ஆறுகளாக விரைந்துபெருகுகிற
இரத்தவெள்ளத்திலே, வாளைகள் என ஓடின-வாளைமீன்கள் போல ஓடின: ஒரு
சார் – மற்றொருபக்கத்தில், கோடும் சிலை அம்பின் – வளைந்த வில்லினால்
விடப்பட்ட (பகைவரது) பாணங்களால், தலை அரியுண்டன-தலை
அறுபட்டனவான,குறை – உடற்குறைகள், நின்று ஆடும் தொறுஉம் – நின்று
ஆடும்பொழுதெல்லாம்,அலகை குலம் – பேய்களின் கூட்டம், உடன் ஆடுவ-
கூடநின்று கூத்தாடுவன;(எ-று.)

     முன்னிரண்டடி – வடிவுவமை. தலையரியுண்டன குறை-கபந்த மெனப்படும்.
தலைநீங்கியஉடல் முன்தொடர்ச்சியால் சிறிதுநேரம் கைகால்களை அசைத்துத்
தொழில்செய்தலையும் பதைபதைத்துத் துடிப்பதையுமே. ‘நின்று ஆடுதல்’ என்றது:
இனி, “பேரொத்த வாயிரம்பேர் மடிந்தாற்பிறக்குங்கவந்தம், நேரொத்தவாடும்”
என்றபடி, ஒத்த ஆயிரம்வீரர் மடிந்தால் கவந்தமெழுந்து ஆடுமென்று
கூறுதலுமுண்டு. கவந்தம் ஆடும்பொழுது பேய்கள் உடன் ஆடுவது, அவற்றைத்
தாம் உண்ணலா மென்ற களிப்பினாலென்க.   

கோல் கொண்டவை, சிலை கொண்டவை, வாள்
கொண்டவை கூர் வாய்
வேல் கொண்டவை, அவைதம்முடன் விழு
கைக் குலம், ஒரு சார்;
கால் கொண்டு உகு செந்நீர் விரி களமே ககனமதா,
மால் கொண்ட கரிக் கோடு இள மதி ஆவன, ஒரு சார்.

கோல் கொண்டவை-அம்புகளை எடுத்தவையும், சிலை
கொண்டவை-வில்லைப் பிடித்தவையும், வாள் கொண்டவை-
வாளையேந்தியவையும், கூர் வாய் வேல் கொண்டவை – கூரிய நுனியையுடைய
வேலைத்தரித்தவையுமா யிருந்து, அவை தம்முடன்விழு – அவற்றுடனே அறுந்து
கீழ்விழுந்த, கைத்தலம் – கைகள், ஒரு சார் – ஒருபக்கத்தில், (கிடந்தன); ஒரு சார்
– ஒரு பக்கத்தில், கால் கொண்டு உகு செந்நீர் விரிகளம்ஏ – வாய்க்கால்களாகிப்
பெருகுகிற இரத்தம் பரந்த போர்க்களமே, ககனம் அது ஆ – (செவ்) வானமாக,
மால் கொண்ட கரி கோடு –  மதமயக்கங்கொண்ட யானைகளின் தந்தங்கள்,
இள மதி ஆவன – பிறைச் சந்திரனாக இருப்பன; (எ-று.)

முதல்வாக்கியத்துக்கு முற்று வருவிக்கப்பட்டது. இரண்டாவதுவாக்கியம் –
வடிவொப்புமைபற்றிய உருவகவணி. உபமேயத்தில் ‘செந்நீர்விரி’ என்ற
அடைமொழிக்கு ஏற்ப, ககனம் ‘செவ்வானம்’ எனப்பட்டது. பி-ம்; கைக்குலம்.

முந்நீர் தரு பவளம் கொடு முன்னம் சமைவனபோல்,
செந்நீரின் மிதந்து ஓடுவ தேர் ஆழிகள் ஒரு சார்;
நல் நீர் மழை பொழி செம் புனல் நதிவாய்
வரு நுரைபோல்,
அந் நீரிடை புகும் மூளைகள் அலை பாய்வன,
ஒரு சார்.

ஒரு சார் – ஒருபக்கத்தில், தேர் ஆழிகள்-தேர்ச் சக்கரங்கள்,
முந்நீர் தரு பவளங்கொடு முன்னம் சமைவன போல்- கடலிலுண்டாகிற
பவழத்தால் முன்னமே  செய்யப்பட்டவை போல, செந்நீரில் மிதந்து ஓடுவ –
இரத்தத்திலே மிதந்து ஓடுவன; ஒருசார்-, நல் நீர் மழை பொழி செம் புனல்
நதிவாய் வரும் நுரை போல் – நல்லநீரை மேகம்சொரிவதனாற் பெருகிய
சிவந்த புதுநீர்வெள்ளத்தையுடைய நதியிலே வருகிற நுரைகள் போல, அ
நீரிடை  புகும் மூளைகள் அலை பாய்வன – அவ்விரத்தநீரிலே விழுந்த
(வெண்மையான) மூளைகள் (எப்புறத்தும்) அலைவன;

     நல்நீர்மழை – உலகத்துக்கு நன்மைசெய்யுந் தன்மையுள்ள மேக
மென்றுமாம். தற்குறிப்பேற்றவுவமையணி.      

வை ஆர் அயில், கணை, தோமரம், வாள்,
கப்பணம், முதலாம்
கை ஆயுதம் முழுகும் துளைவழி செம்புனல் கால,
மெய் ஆயிரம் விதமாய் விழ, வெம் போரிடை
இருபத்து-
ஐஆயிரம் முடி மன்னவர் அகல் வானம் அடைந்தார்.22.- போர்க்களத்து இறந்த மன்னவரின் தொகை. 

வை ஆர் – கூர்மை மிகுந்த, அயில் – வேலும், கணை-அம்பும்,
தோமரம்-ஈட்டியும், வாள்-வாளும், கப்பணம் – யானை நெருஞ்சிமுட்படையும்,
முதல் ஆம்-முதலாகிய, கை ஆயுதம்-(பகைவர்) கையிலுள்ள ஆயுதங்கள்,
முழுகும்- (தம் உடம்பில்) அழுந்திய, துளை வழி – துவாரத்தின் வழிகள்,
செம் புனல்கால-இரத்தத்தைக் கக்கவும், மெய் ஆயிரம் விதம் ஆய் விழ –
உடம்புகள்பலவகைத்துண்டுகளாய் விழவும், வெம் போரிடை-கொடிய
அப்போரிலே, இருபதுஐ ஆயிரம் முடி மன்னவர் – இருபத்தைந்து ஆயிர
மென்னுந் தொகையுள்ளகிரீடாதிபதிகளான அரசர்கள், அகல் வானம்
அடைந்தார் – விசாலமானவீரசுவர்க்கத்தை அடைந்தார்கள் [இறந்தார்கள்
என்றபடி]; (எ-று.)-கப்பணம் -இரும்பால் பெருநெருஞ்சிமுள்ளின் வடிவமாகச்
செய்யப்படும் ஓர் ஆயுதவிசேடம், இருபத்தையாயிரம்-இருபதினாற்பெருக்கிய
ஐயாயிரம்:லஷம் என்றாலும் ஒன்று.

இவ்வாறு முனைந்து, ஆர் உயிர் இரு
சேனையும் மடிய,
மை வான் உலகு இடம் அற்றது, வய
வீரர் நெருக்கால்;
அவ் வானவர்தமது ஆலயம் வலம்
வந்த அருக்கன்
செவ் வான் உறு குடபால் வரை இடம் என்று,
அது சேர்ந்தான்23.-சூரியாஸ்தமன வருணணை

இ ஆறு – இப்படி, முனைத்து – போர்செய்து, இரு சேனைஉம் –
இருதிறத்துச் சேனைகளும், ஆர் உயிர் மடிய – அருமையான உயிர் நீங்க
[இறக்க],வய வீரர் நெருக்கால் – (உடனே வீரசுவர்க்க மடைந்த)
வலிமையையுடையஅவ்வீரர்களது நெருக்கத்தால், மை வான் உலகு இடம்
அற்றது – கரியஆகாசத்திலுள்ள சுவர்க்கலோகம் வெற்றிடம் (சிறிதும்)
இல்லையாயிற்று;(அப்பொழுது), அ வானவர் தமது ஆலயம் வலம்  வந்த
அருக்கன் – அந்தத்தேவர்களது இருப்பிடமான மேருமலையைப் பிரதஷிணமாகச்
சூழ்ந்துவந்த சூரியன்,செவ் வான் உறு குட பால் வரை இடம்என்று – செவ்வானம்
பொருந்திய (மேற்குத்திசையிலுள்ள) அஸ்தகிரியைத் தனக்கு இடமாக்கருதி, அது
சேர்ந்தான் -அம்மலையை அடைந்தான் [அஸ்தமித்தான்.]

     பூமியின் மத்தியிலுள்ள மேருமலையை வானத்திலே சுற்றி வருந்தன்மையுள்ள
சூரியன் இயல்பாக மறைந்ததை, தேவர்களுக்கு இருப்பிடமாகிய சுவர்க்கலோகமும்
மேருகிரியும் போரிலிறந்து விண்ணுலகடைந்த வீரர்களால் நெருங்கியிருப்பதைப்
பார்த்து அங்கு எங்குந் தனக்கு இடம்பெறாமல் மேற்குத்திசை மலையைத் தனியே
இடமாகக்கொண்டு சூரியன் சேர்ந்தாற்போலுமென உத்பிரேக்ஷித்தார்:
தற்குறிப்பேற்றவணி. வானத்துக்கு வடிவ மில்லையாயினும், ‘மைவான்’ என்பது –
தோற்றமாத்திரத்தைக் கொண்டு. 

எப்போதும் அரும் போரினில் இதயம் களி கூர்வார்,
கைப் போது உறு படை செம்புனல் வழியே
உயிர் காய்வார்,
ஒப்பு ஓதுதல் அரியார், இரு திற மன்னரும் ஒருவா,
அப்போது, அனிகத்தோடும், அகன் பாசறை புக்கார்24.-இருதிறத்து மன்னவரும் பாசறைபுகுதல்.

ஏ போதுஉம் – எப்போழுதும், அரும் போரினில் – அருமையான
போர்செய்தலிலே, இதயம் களி கூர்வார் – மனங்களிப்பு மிகுபவரும், போது கை
உறு – தாமரைமலர்போன்ற (தங்கள்) கைகளிற் பொருந்திய, படை –
ஆயுதங்களால், செம்புனல் வழிஏ – இரத்தம் பெருகியவழியாகவே, உயிர் –
பகைவருயிரை, காய்வார் – கொல்லுபவரும், ஒப்பு ஓதுதல் அரியார் – (எவரையும்)
உவமை சொல்லுதற்குக் கூடாதவர்களும் ஆகிய, இரு திறம் மன்னர்உம் –
இரண்டுபக்கத்து அரசர்களும், அ 
போது – அப்பொழுது, அனிகத்தோடும் –
சேனைகளுடனே, ஒருவா – (போர்க்களத்தை நீங்கி, அகல் பாசறை புக்கார் –
விசாலமான படைவீட்டை அடைந்தார்கள்; (எ – று,)

     ‘படை செம்புனல் கடலுண்டது கால்வார்’ என்ற பாடத்துக்கு –
ஆயுதங்களாற்கடல்கொள்ளும்படியான [மிக அதிகமான] இரத்தத்தைப்
பெருக்குபவர்களும் என்க.அகல்+பாசறை=அகன்பாசறை; குறில்செறியாலள”
என்னுஞ்சூத்திரத்து ‘பிற’ என்றமிகையால் அமைக்கப்படும்.  

இரவு என்று இருள் கெழு நஞ்சின் இளந்திங்கள்
எயிற்று ஓர்
அரவு உண்டு, அதுதான் மீள உமிழ்ந்தென்ன,
அருக்கன்
உரவும் குட திசை நீல் நிற உததிக்குள்
ஒளித்தோன்,
விரவும் குண திசை வேலையின்மிசை வந்து,
கிளர்ந்தான்.25-மறுநாள் சூரியோதய வருணனை.

இருள் – இருட்டாகிய, கெழு நஞ்சின் – மிகுந்த விஷத்தையும் இள
திங்கள் – கலைகுறைந்த (பிறைச்) சந்திரனாகிய, எயிறு – கோரப்பல்லையுமுடைய,
இரவு என்ற – இராத்திரியாகிய, ஓர் அரவு – ஒரு கரும்பாம்பினால், தான் உண்டு-
தான் உண்ணப்பட்டு, அது மீள உமிழ்ந்து என்ன-அப்பாம்பினால் மறுபடி
உமிழப்பட்டாற்போல, அருக்கன்-சூரியன், உரவுகுடதிசை நீல் நிறம் உததிக்குள்
ஒளித்தோன் – வலிமையுடைய மேற்குத் திக்கிலுள்ள நீலநிறத்தையுடைய கடலிலே
(முந்தினநாள் மாலைப்பொழுதில்) மறைந்தவன், விரவும் குண திசை வேலையின்
மிசை வந்து கிளர்ந்தான் – பொருந்திய கிழக்குத்திக்கிலுள்ள கடலின் மேலே
(மறுநாளுதயத்தில்) தோன்றி விளங்கினான்; (எ-று.)

     உண்ணப்பட்டாற்போல அஸ்தமித்தவன் உமிழப்பட்டாற்போல
உதித்தனனென்பதாம்: சூரியன் சிலகாலத்தில் இராகுவென்னும்
கரும்பாம்பாலுட்கொள்ளப்படுதலைக் கருதி. இங்ஙனம் கூறினார். உருவகவணியை
அங்கமாகக்கொண்டுவந்த தன்மைத்தற் குறிப்பேற்றவணி. என்றிருள் – விகாரம்.
‘உரவுக்குடதிசை’ என்பது-உரவுங்குடதிசை யென ஓசையின்பம்
நோக்கிமெலித்தல்பெற்றது. நீல் – கடைக்குறை- பி-ம்: உமிழ்ந்தோனென. 

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading