உரலும் வேதமும் தொடர, நந்தகோனுடன் அசோதை
கண்டு உருக, வாழ்வு கூர்
தரணிமீது செங் கையும் மா முழந் தாளும் வைத்து
வைத்து, ஆடும் மாயனார்,
விரவி நின்ற மா மருதினூடு தாம் மெத்தெனத்
தவழ்ந்தருளி, மீளவும்
புரியும் நீள் கடைக்கண்ணும் வண்ணமும் போற்றுவார்கள்
மெய் புளகம் ஏறுமே.கடவுள் வாழ்த்து
உரல்உம் வேதம்உம் தொடர – (தன்னைக் கட்டி வைத்த) உரலும்
(தன்னையே புகழ்கிற) வேதங்களும் உடன்வரவும், நந்தகோனுடன் அசோதை
கண்டு உருக – (தன்னை வளர்த்த தந்தை தாயாராகிய) நந்தகோபனும் யசோதையும்
பார்த்து மனமுருகவும் வாழ்வு கூர் தரணி மீது செம்கைஉம் மா முழந்தாள்உம்
வைத்து வைத்து – வாழ்க்கைமிகுந்த பூமியின் மேல் சிவந்த (தன்) கைகளையும்
அழகிய முழங்கால்களையும் மாறிமாறி எடுத்து வைத்து, ஆடும் மாயனார்-
திருவிளையாட்டுச்செய்கிற கண்ண பிரான் விரவி நின்ற மா மருதினூடு –
[ஒன்றோடொன்று] கூடி நின்ற பெரிய மருதமரங்களின் நடுவிலே, தாம் மெத்தென
தவழ்ந்து – தாம் மெதுவாகத்தவழ்ந்து சென்று, அருளி – (அந்த மருதமரங்களுக்கு)
நற்கதிகொடுத்து, மீளஉம் புரியும் – திரும்பிப் பார்த்தருளுகின்ற, நீள்
கடைக்கண்உம் – நீண்ட கடைக்கண்களையும் வண்ணஉம் – அழகையும்,
போற்றுவார்கள் – துதிப்பவர்களது, மெய் – உடம்பு, புளகம் ஏறும்-மயிர்ச்சிலிர்ப்பு
மிகப்பெறும்;
இங்கே, உடம்பில் ரோமாஞ்சமுண்டாதல் – அன்புமிகுதியாலாகும்
மெய்ப்பாடாம், வேதமுந் தொடர – “தொடர்ந்த நான்மறை பின்செல” என்றது
காண்க. கண்ணனைப்பெற்ற தந்தை தாயரான வசுதேவனும் தேவகியும், கண்ணனது
குழந்தைதிருவிளையாடல்களைக் காணப்பெறாமல், வளர்த்த தந்தைதாயரான
நந்தகோபனும் யசோதையுமே அவற்றைக் கண்டு களிக்கப்பெற்ற அருமை தோன்ற,
‘நந்தகோனுடன் அசோதை கண்டு உருக’ என்றார். பூமிதேவியின் பாரத்தை
நிவிருத்தி செய்யும்பொருட்டுக் கண்ணன் தன்னிடம்வந்துதிருவவதரிக்கப்
பெற்றதனாலும், அப்பெருமானது திருக்கைகளும் திருவடிகளும்தன்மீது
பரிசிக்கப்பெற்ற பாக்கியவிசேஷத்தை யுடைமையாலும், பூமியை ‘வாழ்வுகூர்
தரணி’ என்றார். குழந்தை தவழும்பொழுது பின்னே திரும்பித் திரும்பிப்
பார்த்துக்கொண்டு செல்லும் இயல்புபற்றி, ‘தவழ்ந்தருளி மீளவும் புரியும் நீள்
கடைக்கண்’ என்றது. கடைக்கண் – கடாஷம், பகவான் தன்னுடைய
பரத்துவத்தைவிட்டுச் சௌலப்பியத்தைக் கைக்கொண்டு உரலுடன் கட்டுப்பட்டு
எளிமையாக இருந்த இவ்வரலாறு, “பத்துடையடியவர்க் கெளியவன்
பிறர்ககளுக்கரிய, வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும்பெறலடிகள்,
மத்துறுகடைவெண்ணெய் களவினி லுரவிடையாப்புண்டு, எத்திறம் உரலினோ
டிணைந்திருந் தேங்கிய எளிவே” என்று கூறி நம்மாழ்வார் ஈடுபட்டு
ஆறுமாதகாலம் ‘மோகித்துக்கிடக்கும்படியான மகிமை யுடையதனால்,
இவ்வரலாற்றைப் போற்றுபவர்களது மெய்புளகமேறும் என்றார். அருளி மீளவும்
புரியும்-(அம் மரங்களுக்கு)முன்னையநிலையை மறுபடி கொடுத்தருளின எனப்
பொருள் கொள்ளலுமாம். நந்தகோன்-நந்தன்கோன் எனப் பிரியும்: இரு
பெயரொட்டுப் பண்புத்தொகை. ஈற்றேகாரம்-தேற்றம்-புளகம் – வடசொல்.
மெத்தென – மந்தக்குறிப்பு,
கண்ணன் குழந்தையாயிருக்குங்காலத்தில் துன்பப்படுத்துகின்ற பல
திருவிளையாடல்களைச் செய்யக்கண்டு கோபித்த நந்த கோபரின் மனைவியான
யசோதை, ஒருநாள் கிருஷ்ணனைத் திருவயிற்றிற் கயிற்றினாற் கட்டி ஓருரலிலே
பிணித்துவிட, கண்ணன் அவ்வுரலை யிழுத்துக்கொண்டு தவழ்ந்து அங்கிருந்த
இரட்டை மருதமரத்தின் நடுவிலே எழுந்தருளியபொழுது அவ்வுரல் குறுக்காய்
நின்று இழுக்கப்பட்டபடியினாலே அம்மரங்களிரண்டும் முறிந்து விழுந்தவளவில்,
முன் நாரதர்சாபத்தால் அம்மரங்களாய்க்கிடந்த நளகூபரன். மணிக்கிரீவ
னென்னும் குபேரபுத்திரர் இருவரும் சாபந்தீர்ந்து சென்றனரென்பது கதை.
இந்தக் குபேரபுத்திரர்கள் முன்பு ஒரு காலத்தில்பலதெய்வமகளிருடனே
ஆடையில்லாமல் ஜலக்கீரிடை செய்துகொண்டிருக்கையில்,நாரதமகாமுனிவர்
அங்கு எழுந்தருள, மங்கையரனைவரும் நாணங்கொண்டுஆடையெடுத்து உடுத்து
நீங்க, இந்த மைந்தர்மாத்திரம் மதுபாந மயக்கத்தால் நிர்வாணமாகவே யிருக்க,
நாரதர்கண்டு கோபங்பொண்டு ‘மரங்கள் போலிருக்கிறநீங்கள் மரங்களாவீர்’என்று
சபித்து, உடனே அவர்கள் வேண்டிக்கொண்டதற்குஇரங்கி, ‘நெடுங்காலஞ் சென்ற
பின்பு திருமால் உங்களை யடையுஞ் சமயத்தில்இவ்வடிவமொழிந்து முன்னைய
வடிவம் பெற்று மீள்வீர்’ என்று சாபவிடை கூறிப்போயினரென அறிக.
இச்சருக்கத்திலுள்ள பத்துப்பாடல்களும் – பெரும்பாலும் ஒன்று மூன்று
ஐந்துஏழாஞ் சீர்கள் மாச்சீர்களும், மற்றைநான்கும் விளச்சீர்களுமாகிய
கழிநெடிலடிநான்குகொண்ட எண்சீராசிரியவிருத்தங்கள்.
இருவர் சேனையும், சேனை மன்னரும், இகலியே,
பல திசைகள் எங்கணும்,
முரசம் ஆதி வெம் பணை முழங்கவே, முன்னை
வெங் களம் பின்னும் எய்தினார்-
மரகதாசலம் போலும் மேனி மா மாயன் நச்சு
மாசுண வியூகமும்,
தரணி காவலன்தன் பிதாமகன் சகட வியூகமும்
தான் வகுக்கவே.
இருவர் சேனைஉம்-இருதிறத்தாரது சேனைகளும், சேனை
மன்னர்உம்-அந்தச்சேனைகளிலுள்ள அரசர்களும், இகலி – பகைமைகொண்டு, பல
திசைகள் எங்கண்உம் முரசம் ஆதி வெம்பனை முழங்க-எல்லாத்திக்குக்களினிடம்
முழுவதிலும் பேரிகை முதலிய பயங்கரமான போர்ப்பறை கோஷிக்க, முன்னை
வெம் களம் பின்உம் எய்தினார்-முந்தின நாள்களில் அடைந்த கொடிய போர்க்
களத்தை அந்தநாளிலும் அடைந்தார்கள்: (அங்கு ஒரு பக்கத்தில்) மரகத அசலம்
போலும் மேனி மா மாயன் – மரகதரத்தினமயமானதொரு மலையை யொத்த
திருமேனியையுடைய மிக்க மாயையுள்ள கண்ணபிரான், நஞ்சு மாசுணம்
வியூகம்உம் – விஷத்தையுடைய சர்ப்பத்தின் வடிவமான வியூகத்தையும்,
(மற்றொருபக்கத்தில்), தரணி காவலன் தன் பிதாமகன் – பூமியையாளும்
அரசனானதுரியோதனனது பாட்டனான வீடுமன், சகடம் வியூகம்உம் – வண்டி
வடிவமானவியூகத்தையும், வகுக்க – அமைக்க,-(எ-று,) – ‘பாண்டியன் அஞ்சி
யோடினான்’என்று அடுத்த கவியோடு குளகமாக இயையும், வகுக்கவே, களம்
எய்தினார் எனஇக்கவியிலேயே இயைத்தலு மொன்று தான் – அசை.
ஏழாம்நாட்போரில் பாண்டவசேனை வச்சிரவியூகமாகவும், கௌரவசேனை
மண்டலவியூகமாகவும் வகுக்கப்பட்டதாக முதனூலில் உள்ளது. பி – ம்:
பணைகொழிக்கவே.
மன்றல் நிம்ப நாள் மாலை மௌலியான், மாறன்,
மீனவன், வழுதி, பஞ்சவன்,
அன்று பஞ்சவர்க்காகவே உடன்று, அந்தணற்கு
உடைந்து, அஞ்சி ஓடினான்;
துன்று மாய மால் யானை கொண்டு போர் யானை
மன்னரைத் தொல் அமர்க்கணே
வென்று, கண்டு அவர் புறம், அவர்க்கு இடான், மீள
வந்தனன், வீமன் மைந்தனே.3.-பாண்டியன் துரோணனுக்குத் தோற்றுப்போக, கடோற்கசன் வருதல்.
மன்றல் – வாசனையையுடைய, நிம்பம் – வேப்பம் பூவினாலாகிய,
நாள்மாலை – புதியமாலையை, மௌலியான் – முடியிற் சூடியவனும், மீனவன் –
மீனக்கொடி யுடையவனும், மாறன் வழுதி பஞ்சவன் – மாறன்முதலிய
பெயர்களையுடையவனுமான பாண்டியராசன், அன்று – அப்பொழுது,
பஞ்சவர்க்காகஏ உடன்று – பாண்டவர்களுக்காகவே போர்செய்து, அந்தணற்கு
உடைந்து – துரோணாசாரியனுக்குத் தோற்று, அஞ்சி ஓடினான்-; துன்று –
நெருங்கிய, மாயம் மால் யானை – மாயையினாலாகிய மதயானைகளை, கொண்டு –
அமைத்துக்கொண்டு, போர் யானை மன்னரை – போர் செய்யவல்ல (உண்மை)
யானைகளின்மேலேறிய (பகதத்தன் முதலிய) அரசர்களை, தொல் அமர்க்கண் –
பழைய (நான்காநாட்) போரிலே, வென்று – சயித்து, அவர் புறம் கண்டு –
அவர்களை முதுகுகண்டு (முதுகுகாட்டியோடச் செய்து) அவர்க்கு (புறம்) இடான் –
அவர்களுக்கு (எப்பொழுதும் தான்) புறங்கொடாதவனாகிய, வீமன் மைந்தன்-
கடோற்கசன், (இன்றைப்போரில்), மீள-மறுபடி, வந்தனன்-வந்தான்; (எ – று,)
நிம்பம் – வடசொல்; இது-அடையாளப்பூ, சேரசோழபாண்டியர்க்கு, பனை
ஆத்திவேம்பின் பூமாலைகளும் வில் புலி மீன் கொடிகளும் முறையே உரியன,
மாறன் -{எவரையும்} மாறுபட்டு அழிக்கவல்லவன். புறம் – மத்திமதீபம். பி – ம்:
மாலைவேலினான்.
முகில் நிறம் கொள் மா மேனி மாயனார் முன்
பிறக்கவே பின் பிறந்தவன்
புகு நிலந்தனில், சற்றும் நின்றிலன், பொரு சுதாயு;
தன் போர் பொறாமையின்,
சகுனியும், பெருஞ் சேனை முன் வரத் தக்க
சல்லியன்தானும், ஓடவே,
மிகு நிறம் கொள் பைந் தாம வாகை போர் வென்று
சூடினான், வீமசேனனே.4.-சாத்தகிக்குச் சுதாயு தோற்க, வீமன் சகுனிசல்லியரை வெல்லுதல்.
முகில் நிறம் கொள் – மேகம்போன்ற (கரிய) திருநிறத்தைக்
கொண்ட,மா மேனி – அழகிய திருமேனியையுடைய, மாயனார் – கண்ணபிரான்,
முன் பிறக்க- முன்னே (யதுகுலத்து வசுதேவனிடம்) திருவவதாரஞ் செய்ய, பின்
பிறந்தவன் -பின்பு (அக்குலத்துச் சத்யகனிடத்திலே) தோன்றின [கண்ணன்
தம்பியான]சாத்தியகி, புகும் – (போருக்குச்) சென்ற, நிலந்தனில் – இடத்திலே
பொரு (சுதாயு -(வந்து) போர்செய்து சுருதாயு என்பவன், சற்றுஉம் நின்றிலன்-
சிறிதும் முன்நிற்கமாட்டாதவனாயினான்; தன் போர் பொறாமையின் – தனது
யுத்தத்தைச்சகிக்கமாட்டாமையால், சகுனியும்-, பெரு சேனை முன்வர தக்க-பெரிய
சேனை(தன்) முன்னே வரப் பொருந்திய, சல்லியனும்-, ஓட-(தோற்று) ஓட,
வீமசேனன்-,போர் வென்று – அப்போரில் வெற்றிகொண்டு, மிகுநிறம் கொள் பை
வாகை தாமம் சூடினான் – (அவ்வெற்றிக்கு அறிகுறியாக) மிகுந்த ஒளியைக்கொண்ட
குளிர்ச்சியான வாகைப்பூமாலையைத் தரித்தான்; (எ-று.)
தன் என்றது, வீமனை. ‘தண்போர் பொறாமையின்’ என்றதை
மத்திமதீபமாகக் கொண்டு, சாத்தகியினது போரைப் பொறாமையால் என்று
உரைத்து, சுதாயு நின்றலின் என முன் வாக்கியத்தோடும் கூட்டலாம்.
பெருஞ்சேனை முன் வரத்தக்க – பெரிய சேனைக்குத் தலைவனாய் முன்னே
வரத்தக்க (சௌரிய தைரியங்களையுடைய) எனினுமாம்; பெரிய சேனைக்கு
முன்னே எதிர்த்துவரத்தக்க என்றுங் கொள்ளலாம். சுதாயு – வடசொல் திரிபு;
இவன் – வருணபகவானுக்குப் பந்நவாதையினிடம் பிறந்தவன். கையில்
ஆயுதமில்லாதவன்மேல் தன்ஆயுதம் எறியப்பட்டால் தான்இறக்கும்படியும்,
வேறோருவிதத்திலும் இறாவாதபடியும் வரம் பெற்றவன்.
உயர்ந்த மேருவோடு ஒத்து இலங்கு தேர் உலகு அளந்த
தாள் வலவன் ஊரவே,
செயந்தன் மா பெருந் துணைவன், வன் பெருஞ்
சேனைதன்னொடும் சென்று பற்றினான்;
வியந்த தேரின்மேல் முப்புரங்களும் வென்ற மீளிபோல்
நின்ற வீடுமன்
இயைந்து, போரினுக்கு எதிர, வில் வலோர் இருவர்
விற்களும் எதிர் வளைந்தவே.5.-நான்குகவிகள்-அருச்சுனனுடையவும் வீடுமனுடையவும்
கடும்போரைக் கூறும்.
உயர்ந்த மேருவோடு ஒத்து இலங்குதேர் – (எல்லா மலைகளினும்)
உயர்ந்த மகாமேருமலையோடு ஒத்து(ப் பொன்மயமாய்ப் பெரியதாக) விளங்குகிற
தேரை, உலகு அளந்த தாள்வலவன் ஊர – உலகங்களை அளவிட்ட
திருவடிகளையுடைய (கண்ணனாகிய) சாரதி செலுத்த, செயந்தன் மா பெரு
துணைவன்-(இந்திரகுமாரனான) ஜயந்தனது சிறந்த பெருமையுள்ள தம்பியான
அருச்சுனன், வல் பெரு சேனை தன்னொடுஉம் சென்று – வலிய பெரிய
சேனைகளுடனே போய், பற்றினான் – (வீடுமனைத்) தொடர்ந்தான்; வியந்த
தேரின்மேல் – (காண்பவர்) அதிசயித்தற்குக் காரணமான (சிறந்த பெரிய)
தேரின்மேலே, மு புரங்கள்உம் வென்ற மீளிபோல் நின்ற – திரிபுரங்களையுஞ்
சயித்த பராக்கிம சாலியான சிவபிரான்போல நின்ற, வீடுமன் – அவ்வீடுமனும்,
போரினுக்கு இயைந்து – (அவ்வருச்சுனனோடு) போர்செய்தற்கு உடன்பட்டு, எதிர –
எதிர்நிற்க,(உடனே), வில்வலோர் இருவர்விற்கள்உம் – விற்போரில் வல்லவரான
இவ்விரண்டுபேரின் விற்களும், எதிர் வளைந்த – (ஒன்றுக்கொன்று) எதிரிலே
வளைந்தான்; (எ-று.)
உயர்தல்-ஓங்குதலும், சிறத்தலும். ‘உலகளந்ததாள்வலவன் தேரூர’ என்ற
தொடரில் எம்பெருமானது அளவிறந்த ஆற்றலும் அடியவர்க்கெளிமையும்
விளங்கும். செயந்தன் – இந்திரனுக்கு இந்திராணியிடம் பிறந்த புத்திரன்:
இந்திரனுக்குக் குந்தியினிடம் பிறந்த அருச்சுனன் காலத்தாற் பிந்தியவனாதலால்,
செயந்தனுக்கு அருச்சுனன் தம்பியாவன்.பி-ம்: எதிரில் வல்லரோ
ஒருவர் எய்த அம்பு ஒருவர்மேல் உறாது, ஓர்ஒர்
அம்பினுக்கு ஓர்ஒர் அம்பு தொட்டு,
இருவரும் புகுந்து எய்த வல்லபம் இன்னது ஆகும்
என்று உன்னல் ஆகுமோ-
வரி வில் வெங் கட கரியின் வந்த தாரகனும் மா
மயில் குகனும் அன்றியே,
மருவு வெங் குரல் கொண்டல் வாகனும் வலனும்,
ராம ராவணரும் என்னவே?
வரி – கட்டமைந்த, வில் – வில்லுடனே, வெம் கடகரியின் வந்த –
வெவ்விய மதயானைமுகமாக வந்த, தாரகன்உம் – தாரகாசுரனும், மா மயில்
குகன்உம் – சிறந்த மயில்வாகனத்தையுடைய சுப்பிரமணியனும்,-அன்றி –
அல்லாமல், மருவு வெம் குரல் கொண்டல் வாகன்உம் – பொருந்திய பயங்கரமான
இடி முழக்கத்தையுடைய மேகத்தை வாகனமாகக்கொண்ட தேவேந்திரனும்,
வலன்உம் – பலாசுரனும்,-(அன்றியும்), ராமராவணர்உம் – ஸ்ரீராமபிரானும்
இராவணனும்,-என்ன – என்னும் இவர்கள்போல,-இருவர்உம்- (அருச்சுனன்
வீடுமன் என்ற) இரண்டு பேரும், புகுந்து – (போர்க்களம்) அடைந்து, ஒருவர்
எய்தஅம்பு ஒருவர்மேல் உறாது -ஒருத்தர் தொடுத்த பாணம் மற்றொருத்தர் மேற்
படாதபடி, ஓர் ஓர் அம்பினுக்கும் ஓர் ஓர் அம்பு தொட்டு எய்த-ஒவ்வொரு
அம்புக்கும் ஒவ்வொரு எதிரம்பை (வில்லில்) தொடுத்துப் பிரயோகித்த, வல்லபம் –
போர்த்திறமை, இன்னது ஆகும் என்று – இப்படிப்பட்டதாகு மென்று, உன்னல்
ஆகும்ஓ-(மனத்தில்) நினைத்தலுங் கூடுமோ? (எ-று.)-எண்ணுதற்கும்
முடியாதெனவே, சொல்லுதற்குஞ் செய்தற்கும் முடியாமை பெறப்படும்.
ராவணண் – கூவினவன்; கைலாசகிரியின் கீழ்க்கையகப்பட்டுக்
கொண்டபொழுது பேராரவாரமிட்டதுபற்றி, இவனுக்கு இப்பெயர்
சிவபிரானால் அளிக்கப்பட்டது. இனி, ராவணன் – கூச்சலிடச் செய்தவ னென்றுங்
கொள்ளலாம்; தான் செய்யும் பல துன்பங்களால் உலகத்தாரை அலறிக் கதறிக்
கூவச்செய்தான் இவன், இனி, விஸ்ரவஸின்மகன் என்னும் பொருளில் ஆதேசம்
வந்து ராவணன் என்று ஆயிற்று என்றும் இப்பெயர்க்குக் காரணங் கூறுவர்.
இப்பாட்டின் பின் இரண்டடிகளில் எதிர்நிரனிறைப்பொருள்கோள் உள்ளது.
அருச்சுனனுக்கு-முருகக்கடவுளும், இந்திரனும், இராமனும்; வீடுமனுக்கு-தாரகனும்,
வலனும், ராவணனும் உவமையாவர். என்ன எய்தஎன்க.
சுப்பிரமணியக் கடவுளால் வேல்கொண்டு பிளக்கப்பட்ட சூரபதுமனது
உடம்பின் கூறுஇரண்டும் மயில்வடிவமும் கோழி வடிவமும் பெற்று
அக்கடவுளருளால் அப்பிரானுக்கு வாகனமுங் கொடியுமாய் அமைந்த சிறப்பைக்
கருதி, ‘மாமயில்’ என்றார். குஹன் என்னும் வடசொல்லுக்கு – அஞ்ஞான
இருளைப் போக்குபவனென்று பொருள்; கு – இருள்; இது இப்பொருளதாதலை
‘குரு’ என்ற சொல்லிலுங் காண்க. இனி, இச்சொல்லுக்கு- (பகைவர் படையினின்றும்
தன்படையைக்) காத்துக்கொள்கின்றவனென்றுமாம்.
தாரகன் – அசுரேசன்மகளாகிய மாயையென்னும் பெயர் பெற்ற
சுரசையென்பவள் காசியபமகாமுனிவரைக் கூடிப்பெற்ற புத்திரர்மூவரில்,
சூரபதுமனுக்கும் சிங்கமுகனுக்கும் இளையவன்; யானைமுகத்தோடு பிறந்தவன்.
சூரபத்மன் தாரகன் சிங்கமுகன் என்ற இம்மூவரும் பரமசிவனைக்குறித்து யாகமுந்
தவமுஞ் செய்து அவரருளால் அளவிறந்த வரங்களைப்பெற்றுச் செருக்குற்றுத்
தமது குருவாகிய சுக்கிரபகவானது தீய உபதேசத்தால் மற்றும் பல ஆயிரம்
அசுரர்களோடு சென்று இந்திரன் முதலிய தேவர்களனைவரோடும் போர்செய்து
வென்று பற்பல வகையாக உலகத்தை வருத்தினவளவில், அத்துன்பம்
பொறுக்கலாற்றாததேவர்கள் திருக்கைலாயமடைந்து பரமசிவனைத் தொழுது துதி
செய்து ‘தேவரீரைப்போல ஒரு புத்திரனை யுண்டாக்கி அக்குமாரனால்
அசுரர்களையழித்து எங்கள் துன்பத்தைப் போக்கிக் காத்தருளல்வேண்டும்’
என்று பிரார்த்திக்க,சிவபெருமான் அவ்வேண்டுகோளுக்கு இரங்கிக்
குமாரக்கடவுளை யுண்டாக்கிஅனுப்பியருள, அவர் வீரவாகுதேவர் முதலான
சிவபுத்திரர்களோடும் மற்றும் பலலஷம் வீரர்களுடனும் போய் யுத்தஞ்செய்து
அவ்வசுரர்க ளனைவரையும்அழித்துத் தேவர்களைக் காத்தருளின ரென்பது
கதை. தாரகாசுரனோடுமுருகக்கடவுளுக்குப் போர், அவ்வசுரனுக்கு இருப்பிடமான
கிரௌஞ்சகிரியினிடத்திலே நடந்தது.
சிவபெருமானைக் குறித்து அரிய தவஞ்செய்து போரில் யாவரையும் வெல்லும்
ஆற்றலையும், தான் இறப்பின் தன்னுடைய உடம்பிலுள்ள தாதுக்கள் நவரத்தின
மாதல்வேண்டு மென்பதையும் வரமாகப் பெற்ற பலாசுரனென்பவன், இந்திரனைப்
போருக்கு அழைக்க இருவர்க்கும் பெரும்போர் நிகழ்ந்தது; அப்போரில்
முன்நிற்கமாட்டாது தோற்ற இந்திரன், பின்பு அவனை வஞ்சனையால்
வெல்லக்கருதிச்சென்று புகழ்ந்து. குறையிரந்து வேண்டி யாகபசுவாக வரித்து
உடன்பட்டுவந்த அவனை யூபஸ்தம்பத்திற்கட்டிக் கொன்றான் என்பது கதை.
கரி அணிக்குள் எக் கரிகள் புண் படா! கடவு தேரில்
எத் தேர் கலக்குறா!
பரி நிரைக்குள் எப் பரி துணிப்புறா! பாகர்தம்மில்
எப் பாகர் வீழ்கலார்!
நரனும் வெற்றி கூர் வசுவும் உற்ற போர் நவிலுகிற்கினும்,
நா நடுங்குமால்;
இரு தளத்தினும், இருவர் அம்பினும், ஏவுணாத பேர்
எந்த மன்னரே!
(அப்பொழுது), கரி அணிக்குள் – யானைவரிசைகளிலே, ஏ கரிகள்
புண் படா – எந்த யானைகள்தாம் காயப்படாதவை? கடவு தேரில்-செலுத்தப்படுகிற
தேர்வரிசைகளிலே, எ தேர் கலக்கு உறா – எந்தத் தேர்கள்தாம் கலக்க
மடையாதவை? பரி நிரைக்குள் – குதிரைப்பந்திகளிலே, எ பரி துணிப்பு உறா-
எந்தக் குதிரைகள் தாம் வெட்டுப்படாதன? பாகர் தம்மில் – (இவற்றைச்)
செலுத்துபவர்களில், எ பாகர் வீழ்கலார் – எந்தப் பாகர் தாம் – இறந்து விழாதவர்?
இரு தளத்தின்உம் – இரண்டு சேனைகளிலும், இருவர்அம்பின்உம் – இந்த
இரண்டுபேரது பாணங்களாலும், ஏவுணாத பேர்- எய்யப்படாதவர், எந்த மன்னர்-
எந்த அரசர்தாம் (உளர்)? (எவருமில்லை யென்றபடி); (இவ்வாறு), நரன்உம் –
நரனது அவதாரமான அருச்சுனனும், வெற்றி கூர்வசுஉம் – சிறப்பு மிகுந்த
வசுவினது தோற்றமான வீடுமனும், உற்ற – பொருந்தின, போர் – யுத்தத்தை,
நவிலுகிற்கின்-சொல்லத் தொடங்கினால், நாஉம் நடுங்கும் – (பேசுங்கருவியான)
நாக்கும் அஞ்சும்; (எ-று.)
இதில் நால்வகைச்சேனையிலும் எல்லாம் அடிபட்டதன்மை கூறப்பட்டது.
அப்போர்,சொல்லுதற்கு அரிது என்பதாம். கீழ்ப்பாட்டில், ‘உன்னலாகுமோ’
எனஎண்ணமுடியா தென்றவர், இப்பாட்டில் ‘நவிலுகிற்கினும் நாநடுங்கும்’ எனச்
சொல்லலாகாமையை வெளியிட்டார். ஏவுணாத, உண்-செயப்பாட்டுவினைப்
பொருளுணர்த்தும் இடைநிலை. ஆல் – ஈற்றசை
வேறு போர் இனிப் பொருதல் வேண்டுமோ? விசயன்
வீடுமன் என்னும் வீரர்தம்
சீறு போரிடை, திசை அடங்கலும் சிவந்த கோல மெய்க்
கவந்தம் ஆடுமால்;
கூறு போர் பொரக் கருதி, வெங் களம் கொண்டு, தங்களில்
கொல்லலுற்ற நாள்
ஆறு போரினும் பட்ட பேரினும் அறு மடங்கு பேர்
அன்று பட்டதே.
விசயன்வீடுமன் என்னும் வீரர்தம்-அருச்சுனன் பீஷ்மன் என்கிற
இரண்டு வீரர்களது, சீறு போரிடை-கோபித்துச் செய்த யுத்தத்திலே, திசை
அடங்கல்உம்-எல்லாத்திக்குக்களிலும், சிவந்த கோலம் மெய் கவந்தம்
ஆடும்-(இரத்தத்தாற்) சிவந்த நிறத்தையுடைய வடிவமுள்ள கவந்தங்கள் (எழுந்து)
கூத்தாடும்; (இருதிறத்தாரும்), கூறு போர் பொர கருதி – (சிறப்பித்துச்)
சொல்லப்படுகிற போரைச் செய்யஎண்ணி, வெம் களம் கொண்டு-கொடிய
போர்க்களத்தை யடைந்து, தங்களில்கொல்லல் உற்ற – தம்மில் (ஒருவரையொருவர்)
கொல்லத்தொடங்கிய, ஆறு நாள் போரின்உம்-(கீழ் நடந்த) ஆறுநாளை
யுத்தத்திலும், பட்ட பேரின்உம் – இறந்த சேனைத்தொகையினும், அறு மடங்கு
பேர்-ஆறளவுகொண்ட சேனைத்தொகை, அன்று பட்டது – அந்தஏழா
நாட்போரில்இறந்தது; (என்றால்), இனி வேறு போர் பொருதல் வேண்டும்ஒ –
இனிமேல் மற்றும்போர்செய்தல் வேண்டுமோ? (எ-று.)-அவ்வளவோடு
அன்றையதினத்துப்போர்முடிந்தது என்க
பார வாளினும் கூர வேலினும் பகழி வாயினும்
பட்ட பட்ட போர்-
வீரர் வானின்மேல் வழி நடத்தலான், மெய் தளர்ந்து,
வேதனை மிகுத்த பின்,
‘சேர நீரும் நும் பாடி எய்துவீர்; செருவில் நொந்தது,
இச் சேனை’ என்று, போய்,
ஆரவாரம் நீடு ஆழி எய்தினான், ஆழி ஒன்றுடைத்
தேர் அருக்கனே.–சூரியன் மேல் கடலில் மறைந்து,
உதய கிரியில் தோன்றுதல்.-சூரியாஸ்தமனவருணனை.
பார வாளின்உம்-பெரிய வாள்களாலும், கூரவேலின்உம் –
கூர்மையையுடைய வேல்களாலும், பகழி வாயின்உம்- அம்புநுனிகளாலும், பட்ட
பட்ட – மிகுதியாக இறந்த, போர் வீரர்-யுத்தவீரர்கள், வானின்மேல் –
ஆகாயத்திலே [வீரசுவர்க்கத்தை நோக்கி] வழி நடத்தலான்-(தன்
மண்டலத்தைப்பிளந்துகொண்டு அதன்) வழியே செல்லுதலால், ஆழி ஒன்று உடை
தேர் அருக்கன் – ஒற்றைச்சக்கரத்தையுடைய தேரையுடைய சூரியன், மெய்
தளர்ந்து-(தன்) வடிவந்தளர்ச்சிபெற்று, வேதனை மிகுத்த பின் –
துன்பத்தைமிகுதியாகப்பெற்றபின்பு, (இருதிறத்தாரையும்நோக்கி), ‘சேர – ஒருசேர,
நீர்உம் – நீங்களும், நும் பாடி எய்துவீர் – உங்கள் படைவீட்டை அடையுங்கள்: இ
சேனை-,செருவில் நொந்தது-போரில் வருந்திற்று,’ என்று-என்று (சொல்லியவன்,
போல), போய்-, ஆராவாரம் நீடு ஆழி எய்தினான் – பேரொலி மிகுந்த (மேல்)
கடலைச் சேர்ந்தான் [அஸ்தமித்தான்]; (எ – று.)
தன்மைத்தற்குறிப்பேற்றவணி. கீழ் முதற்போர்ச்சருக்கத்தில்” உம்பர்,
வானிலடைந்த வயவருக்கு வழியாயசுடர்மண்டலம்” என்றது காண்க. நீரும், உம்மை
– ‘நானும் என்னிடத்தை அடைவேன்’ என்பதை உணர்த்தலால்,
எதிரதுதழுவியஎச்சம் பி – ம்: பேர்வீர வானின்மேல்.
வெங் களம்தனில் பகல் மலைந்த போர் மெய் விடாய்
கெட, கைவிடாது போய்,
திங்களின் குலத்து இருவர்தம் பெருஞ் சேனை மன்னரும்
பாடி எய்தினார்;
இங்கு அளந்தவாறு, அப் புறத்து வான் எல்லை தான்
அளந்து, இந்த மன்னவர்-
தங்கள் வெஞ் சமம் காண, மா மணிச் சயிலம் எய்தினான்,
தபனன் மீளவே.10.-மறுநாள்சூரியோதயவருணனை.
திங்களின் குலத்து – சந்திரகுலத்திலே (பிறந்த), இருவர்தம் –
இருதிறத்தாரது, பெரும் சேனை – பெரிய சேனையில் (உள்ள), மன்னர்உம் –
அரசர்களும்,-வெம் களந்தனில் பகல் மலைந்த போர் மெய் விடாய் கெட –
கொடிய போர்க்களத்திலே பகல்முழுவதும் (தாம்) செய்த போரிலாகிய
உடலில்தோன்றிய களைப்புத் தணிய, கைவிடாது போய்-தொடர்ச்சியாகச்சென்று,
பாடி எய்தினார் – (தங்கள்) படைவீட்டையடைந்தார்கள்; தபனன்-சூரியன், இங்கு
அளந்த ஆறு – (பூமிமத்தியிலுள்ள மகாமேருமலையின் தென்திசையாகிய)
இப்பக்கத்தை(ப் பகலில் தான் செல்லுதலால்) அளந்ததுபோலவே, அ புறத்து வான்
எல்லை தான் அளந்து – (அம்மலையின்) வடபுறத்திலுள்ள ஆகாயஎல்லையை
(இராத்திரியில்) தான் அளவிட்டு, மீள- பின்பு, இந்த மன்னவர் தங்கள் வெம்
சமம்காண – இவ்வரசர்களது கொடிய போரைப் பார்ப்பதற்கு, மா மணி சயிலம்
எய்தினான் – சிறந்த இரத்தினங்களையுடைய உதயகிரியை அடைந்தான்
[உதித்தான்;] (எ-று.)
பயன்தற்குறிப்பேற்றவணி, நிலத்தில்நடக்கும்போரை அச்சமும்
வருத்தமுமின்றிக் காண்பதற்கு உயர்ந்த இடத்திலிருத்தல் இனிதாகுதலால்,
‘சமங்காணச் சயிலமெய்தினான்’ என்றார்; இங்கே “குன்றேறி
யானைப்போர்கண்டற்றால்” எனத் திருக்குறளிற் கூறியதைக் காண்க. உதயகிரியில்
சிந்தூர அருவிவீழ்ந்த சிந்தூராகரத்திற் சிறந்தமாணிக்கம் பிறத்தலால், அம்மலை
‘மாமணிச்சயிலம்’ எனப்பட்டது. சூரியன் ஒவ்வொருநாளும் மேருமலையைச்
சுற்றிவருகிறா னென்றும், அவன் அம்மலையின் தென்புறத்தில் விளங்குங்காலம்
நமக்குப் பகலும், வடபுறத்திலிருக்குங் காலம் நமக்குஇரவு மாகிறதென்றும்,
இவ்வாறே பகலிரவுகள் வடபுறத்திலுள்ளார்க்கு மாறுபடக்ககாணு மென்றும் நூற்
கொள்கை; அதுபற்றி ‘இங்களந்தவாறப்புறத்துவானெல்லை தானளந்து’
என்றார்.
——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply