Archive for the ‘ஸ்ரீ ராமனின் அருள் அமுதம்’ Category

ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/6. வருணனை வழி வேண்டு படலம்–

November 3, 2020

கடல் கடக்கும் உபாயம் உரைக்குமாறு இராமன் வீடணனைக் கேட்டல்

‘தொடக்கும் என்னில் இவ் உலகு ஒரு மூன்றையும் தோளால்
அடக்கும் வண்ணமும், அழித்தலும், ஒரு பொருள் அன்றால்;
கிடக்கும் வண்ண வெங் கடலினைக் கிளர் பெருஞ் சேனை
கடக்கும் வண்ணமும் எண்ணுதி-எண்ணு நூல் கற்றாய்!’–1-

எண்ணுநூல்கற்றாய் – மதிக்கத்தக்க நல்ல நூல்களைக்
கற்றுணர்ந்தவனே! தொடக்கும் என்னில்- இந்தக் கடல் நமது
கட்டுக்கு உட்படுமானால்; இவ்வுலகு ஒரு மூன்றையும்- இந்த
மூன்று உலகங்களையும்; தோளால் அடக்கும் வண்ணமும்-
நமது தோள்களாலே அடக்கும் வண்ணமும்; அழித்தலும் ஒரு
பொருள் அன்றால் – அழிப்பதும் ஒரு பொருட்டல்ல;
கிடக்கும் வண்ண வெங்கடலினை – எதிரே பரந்து
கிடக்கின்ற நீலநிறமுள்ள இந்தக் கொடியகடலை; கிளர் பெருஞ்சேனை- கிளர்ந்து எழும் நமது
பெரிய சேனை; கடக்கும் வண்ணமும் எண்ணுதி- கடந்து
இலங்கை செல்வதற்குரிய வழியைப் பற்றி நினைப்பாயாக.

————–

கடல் கடக்க வீடணன் வழி கூறுதல்

‘கரந்து நின்ற நின் தன்மையை, அது, செலக் கருதும்;
பரந்தது, உன் திருக் குல முதல் தலைவரால்; பரிவாய்
வரம் தரும், இந்த மாக் கடல்; படை செல, வழி வேறு
இரந்து வேண்டுதி, எறி திரைப் பரவையை’ என்றான். –2-

இந்த மாக்கடல்- நமக்கெதிரே உள்ள இந்தப் பெரிய
கடல்; உன் திருக்குல முதல் தலைவரால் பரந்தது- உனது
சிறந்த குலமான சூரிய குலத்திலே தோன்றிய முதல் தலைவரான
சகரர்களால் தோண்டப்பட்டுப் பரந்திருப்பதாகும்; கரந்து
நின்ற நின்தன்மையை- தெய்வ வடிவை மறைத்து மானிட
வடிவம் கொண்டு நின்ற உனது தன்மையை; அது செலக்கருதும்
– அக்கடல் தெய்வம் முழுதும் கடைபோக அறியும்; பரிவாய்
வரும் தரும்- நமக்குப் பரிவுடனே வரம் அளிக்கும் எனவே;
படை செல வழி- நமது படை கடலைக் கடந்து செல்வதற்குரிய
வழியை; எறிதிரைப் பரவையை- பொங்கும் அலைகளை உடைய
இந்தக் கடலை; வேறு இரந்து வேண்டுதி என்றான்- தனியே
இருந்து, சரணடைந்து இரந்து வேண்டிக் கொள்வாயாக என்றான்.

—————-

இராமன் துணைவருடன் கடற்கரையை அடைதல்

‘நன்று, இலங்கையர் நாயகன் மொழி’ என நயந்தான்,
ஒன்று தன் பெருந் துணைவரும் புடை செல, உரவோன்,
சென்று வேலையைச் சேர்தலும், விசும்பிடை, சிவந்த
குன்றின் மேல் நின்று குதித்தன, பகலவன் குதிரை. -3-

நன்று இலங்கையர் நாயகன் மொழி – இலங்கையர்
வேந்தனான வீடணன் கூறிய மொழி நல்லதே; என நயந்தான்-
என்று விரும்பி உடன்பட்ட இராமபிரான்; ஒன்றுதன் பெரும்
துணைவரும்- நெருங்கியதனது சிறந்த துணைவர்களும்;
புடைசெல – இருபக்கமும் நெருங்கிவர; உரவோன் சென்று
வேலையைச் சேர்தலும்- வலிமை மிக்கவனாகிய இராமபிரான்
கடற்கரையை அடைதலும்; சிவந்த குன்றின் மேல்நின்று –
சிவந்த நிறம் வாய்ந்த உதயகிரியின் மேலிருந்து; பகலவன்
குதிரை – சூரியனுடைய தேரிலே பூட்டப்பட்ட குதிரைகள்;
விசும்பிடைக் குதித்தன – வானத்திலே குதித்துச்
செல்வனவாயின.

————–

இராமன் புல்லில் அமர்ந்து, வருண மந்திரத்தைத் தியானித்தல்

கொழுங் கதிர்ப் பகைக் கோள் இருள் நீங்கிய கொள்கை,
செழுஞ் சுடர்ப் பனிக் கலை எலாம் நிரம்பிய திங்கள்
புழுங்கு வெஞ் சினத்து அஞ்சனப் பொறி வரி அரவம்
விழுங்கி நீங்கியது ஒத்தது, வேலை சூழ் ஞாலம். 4-

வேலை சூழ் ஞாலம்- கடல் சூழ்ந்த இந்த உலகமானது;
கொழுங்கதிர்ப்பகை – செழுமைமிக்க சூரியனுடைய
கிரணங்களுக்குப் பகையாகிய; கோளிருள் நீங்கிய கொள்கை-
(இரவெல்லாம்) நிறைந்திருந்த இருள்நீங்கிய தன்மை; செழுஞ்சுடர்
பனிக் கலைஎலாம்- செழுமையான ஒளியை உடைய குளிர்ந்த
எல்லாக்கலைகளும்; நிரம்பியதிங்கள் – நிறைந்திருக்கும்
சந்திரனை; புழுங்கு வெஞ்சினத்து – மனம் புழுங்கிக்
கொடியசினத்தைஉடைய; அஞ்சனப் பொறி வரி அரவம்
– அஞ்சனம் போன்ற புள்ளிகளையும் வரிகளையும் கொண்ட
பாம்பாகியராகு; விழுங்கி நீங்கிய தொத்தது – விழுங்கி
உமிழ்ந்ததை ஒத்துக்காணப்பட்டது.

————–

‘தருண மங்கையை மீட்பது ஓர் நெறி தருக!’ என்னும்
பொருள் நயந்து, நல் நூல் நெறி அடுக்கிய புல்லில்,
கருணை அம் கடல் கிடந்தனன், கருங் கடல் நோக்கி;
வருண மந்திரம் எண்ணினன், விதி முறை வணங்கி. –5-

தருண மங்கையை மீட்பதோர்-இளமைப் பருவத்தினளான
சீதையை இராவணனுடைய சிறையிலிருந்து மீட்டுக் கொண்டு
வருதற்குரிய ஒரு; நெறி தருக என்னும் பொருள் நயந்து-
வழியைத் தருவாயாக என்னும் பொருளை விரும்பி; நல்நூல்
நெறி அடுக்கிய புல்லில்- நல்ல நூலாகிய வேதத்தின் கூறிய
நெறிப்படி அடுக்கப்பட்ட தருப்பைப் புல்லில்; கருங்கடல்
நோக்கி – கருமை நிறமான கடலைப் பார்த்தபடி;
கருணையங்கடல் கிடந்தனன் – கருணைக் கடலான
இராமபிரான் படுத்தபடி இருந்தவன்; விதிமுறை வணங்கி-
வருணனைத் தொழவேண்டியமுறைப்படி தொழுது; – வருண
மந்திரம் எண்ணினான் – வருண மந்திரத்தைத்
தியானித்தவனாக இருந்தான்.

———–

ஏழுநாள் இராமன் இருந்தும் வருணன் வாராமை

பூழி சென்று தன் திரு உருப் பொருந்தவும், பொறை தீர்
வாழி வெங் கதிர் மணி முகம் வருடவும், வளர்ந்தான்;
ஊழி சென்றன ஒப்பன, ஒரு பகல்; அவை ஓர்
ஏழு சென்றன் வந்திலன், எறி கடற்கு இறைவன். -6-

பூழி சென்று தன் திருவுருப் பொருந்தவும்- கடற்கரைப்
புழுதியெல்லாம் இராமபிரானுடைய திருமேனியில் பொருந்தவும்;
பொறை தீர் வாழி வெங்கதிர் மணிமுகம் வருடவும்-
குற்றம் நீங்கிய வெம்மை வாய்ந்த சூரியனுடைய கிரணங்கள்
அழகிய முகத்தைத் தடவவும்; வளர்ந்தான் – இராமபிரான்
தருப்பையின் மீது கண்களை மூடியவனாகப் படுத்திருந்தான்; ஒரு
பகல் ஊழி சென்றன ஒப்பன- ஒருநாள் கழிவது பல ஊழிகள்
செல்வன போன்றிருந்தது சென்றும்; அவை ஓர் ஏழு சென்றன-
அத்தகை நாட்கள் ஏழு சென்றன; எறிகடற்கு இறைவன்
வந்திலன் – அலையெறியும் கடல் அரசனான வருணன்
வந்தானல்லன்.

“ஒரு பகல் பற்பல ஊழிகளாய் விடும்’
என்ற திருவிருத்தம் நினைவு கூறத்தக்கது. இப்படிப்பட்ட ஏழு
நாள்கள் சென்றும் வருணன் வந்திலன்.

————-

இராமன் சினந்து மொழிதல்

‘ஊற்றம் மீக் கொண்ட வேலையான், “உண்டு”, “இலை”, என்னும்
மாற்றம் ஈக்கவும் பெற்றிலம், யாம்’ எனும் மனத்தால்,
ஏற்றம் மீக்கொண்ட புனலிடை எரி முளைத்தென்னச்
சீற்றம் மீக்கொண்ட சிவந்தன, தாமரைச் செங் கண். –7-

ஊற்றம் மீக் கொண்ட வேலையான் – செருக்கு
மேலோங்கப் பெற்ற இந்தக் கடல் வேந்தன்; உண்டு, இலை
என்னும் மாற்றம் ஈக்கவும் பெற்றிலம் யாம்-உண்டு, இல்லை
என்று சொல்லக் கேட்கவும் பெற்றோமில்லையாம்; எனும்
மனத்தால் – என்ற எண்ணத்தால்; ஏற்றம் மீக் கொண்ட
புனலிடை- பெருகிப் பொங்கி வரும் தண்ணீரிலே; எரி முளைத்தென்ன – நெருப்புத்
தோன்றியது போல; சீற்றம் மீக் கொண்டு- சினம் மேலோங்க;
தாமரைச் செங்கண் சிவந்தன- இராமபிரானுடைய தாமரை
மலர் போன்ற செம்மையான கண்கள் கோபத்தால் சிவந்தன.

————-

‘மாண்ட இல் இழந்து அயரும் நான், வழி, தனை வணங்கி,
வேண்ட, “இல்லை” என்று ஒளித்ததாம்’ என, மனம் வெதும்பி,
நீண்ட வில்லுடை நெடுங் கனல் உயிர்ப்பொடும் நெடு நாண்
பூண்ட வில் எனக் குனிந்தன, கொழுங் கடைப் புருவம். -8-

மாண்ட இல் இழந்து அயரும் நான்- மாண்புமிக்க
இல்லாளாகிய சீதாபிராட்டியை இழந்து வருந்தும் நான்;
வழிதனை வணங்கி வேண்ட- அந்த பிராட்டியை மீட்டு வரச்
செல்லவழியை வணங்கி வருணனை வேண்டவும்; இல்லை என்று
ஒளித்ததாம் என- வழிவிடுதற்கில்லை என்பதால் வருணன்
வராது ஒளிந்தனனோ என்று; மனம் வெதும்பி – இராமபிரான்
மனம் வெதும்பினானாக; நீண்ட வில்லுடை நெடுங்கனல்
உயிர்ப்பொடும்- நீண்ட ஒளியை உடைய நெருப்பைப் போன்ற
பெருமூச்சுடனும்; நெடு நாண் பூண்டவில் என- நீண்ட நாண்
பூட்டிய வில்லைப் போலவும்; கொழுங்கடைப் புருவம்
குனிந்தன – செழுமையான புருவங்கள் வளைந்தன.

—————

‘ஒன்றும் வேண்டலர் ஆயினும், ஒருவர்பால் ஒருவர்
சென்று வேண்டுவரேல், அவர் சிறுமையின் தீரார்;
இன்று வேண்டியது எறி கடல் நெறிதனை மறுத்தான்;
நன்று, நன்று!’ என, நகையொடும் புகை உக, நக்கான். -9-

ஒன்றும் வேண்டலர் ஆயினும்- ஒருவர், எவரிடமும்
எதையும் வேண்டாதவர் என்றாலும்; ஒருவர் பால் ஒருவர்
சென்று வேண்டுவரேல் – ஒருவரிடம் ஒருவர்சென்று ஒரு
பொருளை வேண்டுவாராயின்; அவர் சிறுமையின் தீரார்-
அவ்வாறு வேண்டியவர் சிறுமையிலிருந்து நீங்க மாட்டார்;
இன்று வேண்டியது- இன்று நான் வருணனை வேண்டியதாகிய;
நெறிதனை எறிகடல் மறுத்தான்- இலங்கைக்குச் செல்லும்
வழியைத் தர அலைபொங்கும் கடல் வேந்தன் மறுத்துவிட்டான்;
நன்று நன்று என- நல்லது நல்லது என்று; நகையொடு புகை
உக- சிரிப்போடு, கோபத்தால் புகையும் தோன்ற; நக்கான்-
இராமபிரான் கோபச்சிரிப்புச் சிரித்தான்.

——————-

‘”பாரம் நீங்கிய சிலையினன், இராவணன் பறிப்பத்
தாரம் நீங்கிய தன்மையன், ஆதலின், தகைசால்
வீரம் நீங்கிய மனிதன்” என்று இகழ்ச்சி மேல் விளைய,
ஈரம் நீங்கியது, எறி கடல் ஆம்’ என இசைத்தான். -10-

பாரம் நீங்கிய சிலையினன்- பெருமையில்லாத
வில்லையுடையவன்; இராவணன் பறிப்பத்தாரம் நீங்கிய
தன்மையன்- இராவணன் கவர்ந்து கொண்டமையால் மனைவியை
நீங்கிய தன்மையினன்; ஆதலின், தகை சால் வீரம்
நீங்கியமனிதன் – ஆதலால், தகுதி நிறைந்ததான வீரம்
நீங்கிய மானிடன்; என்று இகழ்ச்சி மேல் விளைய –
எனக்கருதி, மேலும் இகழ்ச்சி தோன்ற; எறிகடல்-
அலையெறியும் கடலுக்கு அரசனான வருணன்; ஈரம் நீங்கியதாம் என இசைத்தான் – என்னிடம் இரக்கம்
இல்லாதவனானான் என்று மீண்டும் இராமன் கூறினான்.

————-

‘புரந்து கோடலும், புகழொடு கோடலும், பொருது
துரந்து கோடலும், என்று இவை தொன்மையின் தொடர்ந்த்
இரந்து கோடலின், இயற்கையும் தருமமும் எஞ்சக்
கரந்து கோடலே நன்று; இனி நின்றது என், கழறி? -11-

புரந்து கோடலும்-(ஒருவரிடமிருந்து ஒரு பொருளைப் பெற
விரும்பினால்) அவர்களைப் பாதுகாத்து அவரிடமிருந்து
வேண்டிய பொருளைப் பெற்றுக் கொள்வதும்; புகழொடு
கோடலும்- பொருளை வைத்திருப்பவருடன் போர் செய்து,
வெற்றி பெற்று, புகழோடு அப்பொருளைப் பெற்றுக்
கொள்ளுவதும்; பொருது துரந்து கோடலும்-போரிட்டு வென்று,
பகைவனைத் துரத்திவிட்டுப் பொருளைக் கைப்பற்றிக்
கொள்வதும்; என்று இவை தொன்மையின் தொடர்ந்த- என்ற
இவையெல்லாம் தொன்மைக் காலம் முதல் தொடர்ந்து
வருவனவாம்; இரந்து கோடலின்- (இருந்தும், நான் வருணனை
வேண்டி வழிபெற விரும்பினேன்) அப்படி இரந்து பெறுவதைவிட;
இயற்கையும் தருமமும் எஞ்ச – எனது இயற்கைக்கும்,
அறத்துக்கும் குறைவு உண்டாகும்படி; கரந்து கோடலே நன்று-
நமக்கு வேண்டிய வழியைக் கவர்ந்து கொள்வதே இனி நல்லது;
இனி நின்றது என் கழறி – இனி வேறு பேசி என்ன பயன்
(வருணனைப் பலவாறு குறை கூறி என்னபயன்).

———-

‘”கானிடைப் புகுந்து, இருங் கனி காயொடு நுகர்ந்த
ஊனுடைப் பொறை உடம்பினன்” என்று கொண்டு உணர்ந்த
மீனுடைக் கடல் பெருமையும், வில்லொடு நின்ற
மானுடச் சிறு தன்மையும், காண்பரால், வானோர். -12-

கானிடைப் புகுந்து – நாட்டை விட்டுவிட்டு
காட்டுக்கிடையிலே சென்று வாழ்ந்து; இரும் கனியொடு காய்
நுகர்ந்த- பெரிதான பழங்களையும் காய்களையும் உண்டதனால்;
ஊனுடைப் பொறை உடம்பினன்- உண்டான தசையையும்
பெரிய உடலையும் உடையவன் நான்; என்று கொண்டு
உணர்ந்த- என்று கருதி, கேவலமாக என்னை உணர்ந்த;
மீனுடைக் கடற் பெருமையும் – மீன்களை உடைய கடலின்
பெருமையையும்; வில்லொடு நின்ற மானுடச் சிறுதன்மையும்-
(படைத்துணையேதுமின்றி கையில் வில்லேந்தி நின்ற மானுடத்தின்
சிறுமையையும்; வானோர் காண்பரால்- தேவர்கள் காணட்டும்.

——————-

‘ஏதம் அஞ்சி, நான் இரந்ததே, “எளிது” என இகழ்ந்த
ஓதம் அஞ்சினோடு இரண்டும் வெந்து ஒரு பொடி ஆக,
பூதம் அஞ்சும் வந்து அஞ்சலித்து உயிர்கொண்டு பொரும,
பாதம் அஞ்சலர் செஞ்செவே படர்வர், என் படைஞர். -13-

ஏதம் அஞ்சி நான் இரந்ததே- தீமைக்குப் பயந்து நான்
வருணனை இரந்து வேண்டியதனையே கொண்டு; எளிதென
இகழ்ந்த – எளியவன் என்று இகழ்ந்து வராத; ஓதம்
அஞ்சினோடு இரண்டும் – ஐந்துடன் இரண்டாகிய ஏழு
கடல்களும்; வெந்து ஒரு பொடியாக- எனது அம்பால் வெந்து
தூள்தூளாகவும்; பூதம் அஞ்சும் வந்து அஞ்சலித்து –
ஐம்பெரும் பூதங்களும் வந்து என்னை வணங்கி; உயிர்
கொண்டு பொரும- உயிர் கொண்டு வாழ வேண்டி அழுது
தேம்பவும்; பாதம் அஞ்சலர்- நடந்து செல்ல அஞ்சாதவர்களாய்;
என் படைஞர் செஞ்செவே படர்வர்- எனது வானரப் படை
வீரர்கள் செம்மையாகக் கடலிடையிலே செல்வார்கள்.

—————–

‘மறுமை கண்ட மெய்ஞ் ஞானியர் ஞாலத்து வரினும்,
வெறுமை கண்ட பின், யாவரும் யார் என விரும்பார்;
குறுமை கண்டவர் கொழுங் கனல் என்னினும் கூசார்;
சிறுமை கண்டவர் பெருமை கண்டு அல்லது தேறார்.’ -14-

மறுமை கண்ட மெய்ஞ் ஞானியர்- மறுமை இன்பமான
முத்தி இன்பத்தை அனுபவித்த உண்மையான ஞானிகள்;
ஞாலத்து வரினும் – இந்த உலகத்துக்கு வந்தார்களாயினும்
அவரிடம்; வெறுமை கண்டபின் – தாம் விரும்பும்
சிறப்பியல்பின்மை கண்டால்; யாவரும் யார் என விரும்பார்-
எவரும் அந்த ஞானிகளை யார் என்று கேட்டறிந்து
போற்றவிரும்பமாட்டார்; குறுமை கண்டவர் – ஒருவாறு உருவம்
சிறிதாயிருப்பதைப் பார்த்தவர்கள்; கொழுங்கனல் என்னினும்
கூசார்- அச்சிறிய வடிவுடையவர்கள் செழுமையான நெருப்பை ஒத்த திறம்
வாய்ந்தவர் என்றாலும் அவர்களுக்கு அஞ்சமாட்டார்; சிறுமை
கண்டவர்- உருவத்திலே சிறுமையைப் பார்த்தவர்கள்; பெருமை
கண்டு அல்லது தேறார் – பெருமை, வலிமைகளைக்
கண்டாலல்லது தெளிவு பெறமாட்டார்.

————-

இராமன் வேண்டுகோள்படி இலக்குவன் வில்லைக் கொடுத்தல்

திருதி என்பது ஒன்று அழிதர, ஊழியில் சினவும்
பருதி மண்டிலம் எனப் பொலி முகத்தினன், பல் கால்,
‘தருதி, வில்’ எனும் அளவையில், தம்பியும் வெம்பிக்
குருதி வெங் கனல் உமிழ்கின்ற கண்ணினன் கொடுத்தான். 15-

திருதி என்ப தொன்று அழிதர- மனவடக்கம் என்ற
ஒன்று குறைந்திருப்பதால்; ஊழியில் சினவும் பரிதி மண்டிலம்
என- ஊழிக் காலமுடிவில் சினந்து தோன்றும் சூரிய மண்டிலம்
என்று கூறும்படியாக; பொலிமுகத்தினன்- பொலிந்து தோன்றும்
முகத்தினனான இராமபிரான்; பலகால் தருதி வில் எனும்
அளவையின்- பலமுறை ‘வில்லைத்தா’ என்று கேட்ட அளவிலே;
தம்பியும் வெம்பி – தம்பியான இலக்குவனும் வெகுளியால்
வெம்பி; குருதி வெங்கனல் உமிழ்கின்ற கண்ணினன்-
குருதியோடு, கொடிய தீப்பொறி உமிழும் கண்களை உடையவனாய்;
கொடுத்தனன்- இராமபிரானிடம் வில்லைக் கொடுத்தான்.

—————

இராமன் கடலின்மேல் அம்பு விடுதல்

வாங்கி வெஞ் சிலை, வாளி பெய் புட்டிலும் மலைபோல்
வீங்கு, தோள்வலம் வீக்கினன்; கோதையை விரலால்
தாங்கி, நாணினைத் தாக்கினன்; தாக்கிய தமரம்,
ஓங்கு முக்கணான் தேவியைத் தீர்த்துளது ஊடல். 16-

வெஞ்சிலை வாங்கி-இலக்குவன் கொடுத்த கொடியவில்லை
கைகளில் வாங்கி; வாளி பெய்புட்டிலும் – அம்புகள்
பெய்துள்ள அம்பறாத் தூணியையும்; மலைபோல் வீங்கு
தோள்வலம் வீக்கினன்-மலை போன்ற பெரிய தோளின் வலது
பக்கம் கட்டினான்; கோதையை விரலால் தாங்கி –
விரல்களுக்கிடும் உறையையும் விரல்களில் அணிந்து;
நாணினைத் தாக்கினன் – வில்லின் நாணை இழுத்துப்
பிடித்தான்; தாக்கியதமாம்- அவ்வாறு தாக்கியதால் உண்டான
நாண் ஒலி; ஓங்குமுக்கணான் தேவியை- பெருமையில்
ஓங்கிய முக்கண் மூர்த்தியான சிவபிரானது தேவியான
உமாதேவியை; ஊடல் தீர்த்துளது- சிவபிரானுடன் கொண்ட
ஊடலைத் தீர்த்தது.

————-

மாரியின் பெருந் துளியினும் வரம்பு இல, வடித்த,
சீரிது என்றவை எவற்றினும் சீரிய, தெரிந்து,
பார் இயங்கு இரும் புனல் எலாம் முடிவினில் பருகும்
சூரியன் கதிர் அனையன சுடு சரம் துரந்தான். 17-

மாரியின் பெருந்துளியினும் வரம்பில – மழையின்
பெரியதுளிகளை விட அளவற்றவையும்; வடித்த சீரிது
என்றவை எவற்றினும் சீரிய- கூர்மையானவையும் சிறந்தவை
எனக் கூறப்படும் எல்லாவற்றையும் விடச் சிறந்தவையும் ஆகிய
அம்புகளை; தெரிந்து – தேர்ந்து எடுத்து; பார்இயங்கு
இரும்புனல் எலாம்- நிலத்தில் பரந்துள்ள நீரெல்லாவற்றையும்;
முடிவினில் பருகும் சூரியன் கதிர் அனையன- ஊழிக்
காலத்தின் இறுதியில் பருகுகின்ற சூரிய கிரணங்களைப்
போன்றவையும் ஆகிய; சுடு சரம் துரந்தான்- வெப்பம் மிக்க
அம்புகளைக் கடல் மீது எய்தான்.

————-

பெரிய மால் வரை ஏழினும் பெரு வலி பெற்ற
வரி கொள் வெஞ் சிலை வளர் பிறையாம் என வாங்கி,
திரிவ நிற்பன யாவையும் முடிவினில் தீக்கும்
எரியின் மும் மடி கொடியன சுடு சரம் எய்தான். 18-

பெரிய மால் வரை ஏழினும்- பெரிய, கரிய மலைகளான
ஏழையும் விட; பெரு வலி பெற்ற- மிகுந்த வலிமையை உடைய;
வரி கொள் வெஞ்சிலை- கட்டமைந்த கொடிய வில்லை; வளர்
பிறையாம் என வாங்கி- வளர்பிறைச் சந்திரன் எனக் கூறுமாறு
நாணால் வளைத்து; திரிவ நிற்பன யாவையும்- சரம், அசாம்
ஆகிய எல்லாவற்றையும்; முடிவினில் தீக்கும்- யுகமுடிவிலே
தீய்த்து அழிக்கின்ற; எரியின் மும்மடி கொடியன – நெருப்பை
விட மூன்று மடங்கு கொடியனவான; சுடு சரம் எய்தான்- சுடு
சரங்களை இராமபிரான் கடலின் மீது எய்தான்.

—————

கடல் அடைந்த நிலையும், அம்புகளின் செயலும்

மீனும் நாகமும் விண் தொடும் மலைகளும் விறகா
ஏனை நிற்பன யாவையும் மேல் எரி எய்த,
பேன நீர் நெடு நெய் என, பெய் கணை நெருப்பால்
கூனை அங்கியின் குண்டம் ஒத்தது, கடற் குட்டம். 19-

மீனும் நாகமும் விண் தொடும் மலைகளும் விறகா-
கடலில் உள்ள மீன்களும், நாகங்களும் விண்ணைத் தொடும்
மலைகளும் விறகாகவும்; ஏனை நிற்பன யாவையும்- மற்றும்
அங்கு நிற்கும் மரங்களும்; மேல் எரி எய்த- கடல்மீது
நெருப்புப்பற்றி எரிதலால்; பேன நீர் நெடு நெய் என-
நுரையோடு கூடிய கடல் நீர் எல்லாம் நெய்யாகவும்; பெய்கணை
நெருப்பால்- இராமன் கடல்மீது விட்ட அம்புகளாகிய
தீயினால் ; கடற்குட்டம்- அக் கடலாகியபள்ளம்; கூனை
அங்கியின் குண்டம் ஒத்தது- வளைந்த நெருப்பெரியும் யாக
குண்டத்தை ஒத்திருந்தது.

————–

பாழி வல் நெடுங் கொடுஞ் சிலை வழங்கிய பகழி,
எழு வேலையும் எரியொடு புகை மடுத்து ஏகி,
ஊழி வெங் கனல் கொழுந்துகள் உருத்து எழுந்து ஓடி,
ஆழி மால் வரைக்கு அப் புறத்து இருளையும் அவித்த. 20

பாழிவல் நெடுங் கொடுஞ்சிலை- இராமபிரானுடைய
பெரிய, வலிய நெடிய, கொடிய வில்; வழங்கிய பகழி- வழங்கிய
அம்புகள்; ஏழு வேலையும் எரியொடு புகைமடுத்து ஏகி-ஏழு
கடல்களிலும் நெருப்புடன் புகையை நிறைத்துக் கொண்டு சென்று;
ஊழிவெங்கனல் கொழுந்துகள்- ஊழிக்காலத்தில் தோன்றும்
வெம்மையான தீயினது கொழுந்துகளைப் போல;, உருத்து
எழுந்து ஓடி- சினந்து எழுந்து ஓடி; ஆழிமால் வரைக்கு
அப்புறத்து – சக்கரவாள கிரிக்கும் அப்புறத்துள்ள; இருளையும்
அவித்த- இருட்டையும் அணைத்தன (நீக்கின).

————-

மரும தாரையின் எரியுண்ட மகரங்கள் மயங்கிச்
செரும, வானிடைக் கற்பக மரங்களும் தீய,
நிருமியா விட்ட நெடுங் கணை பாய்தலின், நெருப்போடு
உருமு வீழ்ந்தெனச் சென்றன, கடல்-துளி உம்பர். 21-

மருமதாரையின் எரியுண்ட மகரங்கள்- அம்பு தைத்தலால்
உயிர் நிலையில் எரியுண்ட மகரமீன்கள்; மயங்கிச் செரும-
மயக்கமுற்று நெருங்கவும்; வானிடைக் கற்பக மரங்களும் தீய-
விண்ணுலகத்திலுள்ள கற்பக மரங்களும் தீய்ந்து போகவும்;
நிருமியாவிட்ட நெடுங்கணை பாய்தலின்- இராமபிரான்
சங்கற்பித்து விட்ட நெடிய அம்புகள் பாய்தலால்; நெருப்போடு
உருமு வீழ்ந்தென- நெருப்புடன் இடியும் சேர்ந்து விழுந்தது
போல்; கடல் துளி உம்பர் சென்றன- கடல்நீர் விண்ணுக்குச்
சென்றது.

————-

கூடும் வெம் பொறிக் கொடுங் கனல் தொடர்ந்தெனக் கொளுந்த,
ஓடும் மேகங்கள் பொரிந்து இடை உதிர்ந்தன் உம்பர்
ஆடும் மங்கையர் கருங் குழல் விளர்த்தன – அளக்கர்க்
கோடு தீந்து எழ, கொழும் புகைப் பிழம்பு மீக் கொள்ள. 22-

கூடும் வெம்பொறிக் கொழுங்கனல்- வெப்பமான
தீப்பொறிகளோடு கூடிய கொழுந்துவிட்டெரியும் நெருப்பு;
தொடர்ந்தெனக் கொளுந்த – தொடர்ந்து பற்றிக்
கொளுத்துவதாலே; ஓடும் மேகங்கள் பொரிந்து இடை
உதிர்ந்தன – வானத்திலே ஓடுகின்ற மேகங்கள் பொரிந்து போய்
இடையே உதிர்ந்தன; அளக்கர்கோடு தீந்து எழ – கடல் நீர்
கொதித்து கடலெல்லையைக் கடந்து மேலே பரந்து செல்ல;
கொழும்புகைப் பிழம்பு மீக்கொள- அதனாலே கொழுவிய
புகைத் தொகுதி மேல் சென்று சூழ; உம்பர் ஆடும் மங்கையர்-
விண்ணுலகத்திலே நாட்டியமாடும் நடன மங்கையரின்; கருங்குழல்
விளர்த்தன- கரிய கூந்தலும் வெளிறிப் போயின.

—————-

நிமிர்ந்த செஞ் சரம் நிறம்தொறும் படுதலும், நெய்த்தோர்
உமிழ்ந்து உலந்தன மகரங்கள் உலப்பு இல் உருவத்
துமிந்த துண்டமும் பல படத் துரந்தன, தொடர்ந்து
திமிங்கிலங்களும் திமிங்கிலகிலங்களும் சிதறி. 23-

நிமிர்ந்த செஞ்சரம்- வளைதலில்லாது நிமிர்ந்துள்ள
செம்மையான அம்புகள்; நிறந்தொறும் படுதலும்- மார்புகள்
தோறும் சென்று படுதலால்; நெய்த்தோர் உமிழ்ந்து உலந்தன
– இரத்தம் சிந்தி இறந்தனவான; மகரங்கள் உலப்பில-
சுறாமீன்கள் அளவில்லாதனவாம்; உருவத் துமிந்த துண்டமும்-
இராமபாணம் ஊடுருவித்துண்டித்த துண்டங்களும்;
பலபடத்துரந்தன – பலவாக எங்கும் சிதறலாயின; தொடர்ந்து
திமிங்கிலங்களும் திமிங்கில கிலங்களும் சிதறி- தொடர்ந்து
அம்புகள் பாய்வதால் திமிங்கிலங்களும், திமிங்கிலகிலங்களும்
சிதறி (எங்கும் துண்டுகள் பரந்தன).

திமிங்கிலம் – மீன்களை
விழுங்கும். ஒருவகைப் பெரியமீன். அதையும் தின்னவல்ல மிகப்
பெரியமீன் திமிங்கில கிலம்

———-

நீறு மீச்செல, நெருப்பு எழ, பொருப்பு எலாம் எரிய,
நூறும் ஆயிர கோடியும் கடுங் கணை நுழைய,
ஆறு கீழ்ப் பட, அளறு பட்டு அழுந்திய அளக்கர்
சேறு தீய்ந்து எழ, காந்தின சேடன் தன் சிரங்கள். 24-

நூறும் ஆயிர கோடியும் கடுங்கணை நுழைய – நூறும்,
ஆயிரமும் கோடியுமாக விரைந்து பாயும் அம்புகள் கடலில்
நுழைவதால்; நீறு மீச்செல நெருப்பெழ- சாம்பல் மேலே
செல்லும்படி நெருப்பு மேலோங்கி எழுதலால்; பொருப் பெலாம்
எரிய – மலைகளெல்லாம் தீப்பற்றி எரிந்தன; ஆறு கீழ்ப்பட-
அம்புகள் கீழேயும் நுழைவதால் பாதாளத்துக்கு வழி உண்டாக;
அளறுபட்டு அழுந்திய அளக்கர் – கீழே சேறுபட்டு
அழுந்தியிருந்த கடல்; சேறு தீய்ந்து எழ- சேறும் தீய்ந்து
கருகி மேலே எழுதலால்; காந்தின சேடன்தன் சிரங்கள்-
பூமியைச் சுமக்கும் ஆதிசேடனுடைய ஆயிரம் தலைகளும்
வெதும்பின.

—————–

மொய்த்த மீன் குலம் முதல் அற முருங்கின, மொழியின்
பொய்த்த சான்றவன் குலம் என, பொரு கணை எரிய்
உய்த்த கூம்பொடு நெடுங் கலம் ஓடுவ கடுப்ப,
தைத்த அம்பொடும் திரிந்தன, தாலமீன் சாலம். 25-

பொருகணை எரிய- இராமபிரானுடைய போர்த் தொழில்
வல்ல அம்புகள் கொழுந்து விட்டு எரிவதால்; மொழியின்
பொய்த்த சான்றவன் குலம் என- வழக்கில் பொய்ச் சாட்சி
கூறியவன் குலத்தோடு அழிந்து படுவது போல; மொய்த்த மீன்
குலம் முதல் அற முருங்கின- நெருங்கிய மீன் கூட்டமெல்லாம்
அடியோடு அழியலாயின; தாலமீன் சாலம்- பனைமீன்களின்
வரிசையானது; தைத்த அம்பொடு திரிந்தன- உடலில் தைத்த
அம்போடு திரிவன;உய்த்த கூம்புடை நெடுங்கலம்- கடலில் செலுத்தப்பட்ட
கூம்புகளை உடைய நெடிய மரக்கலங்கள்; ஓடுவ கடுப்ப-
ஓடுவதை ஒத்திருந்தன.

—————–

சிந்தி ஓடிய குருதி வெங் கனலொடு செறிய,
அந்தி வானகம் கடுத்தது, அவ் அளப்ப அரும் அளக்கர்;
பந்தி பந்திகளாய் நெடுங் கடுங் கணை படர,
வெந்து தீந்தன, கரிந்தன, பொரிந்தன, சில மீன். 26-

சிந்தி ஓடிய குருதி வெங்கனலொடு செறிய- அம்பு
தைத்தலால் மீன் முதலியவற்றினிடமிருந்து சிந்தி ஓடிய இரத்தம்
வெவ்விய நெருப்புடன் செறிவதால்; அந்தி வானகம் கடுத்தது-
அந்தி வானத்தை ஒத்திருந்தது; அவ்வளப்படும் அளக்கர்-
அந்த அளவிடமுடியாத கடல்; பந்தி பந்திகளாய்- வரிசை
வரிசையாக; நெடுங்கணை படர – நீண்ட அம்புகள் பரந்து
படர்ந்தமையால்; சிலமீன் வெந்து தீந்தன கரிந்தன
பொரிந்தன- மீனினமெல்லாம் வெந்து, தீய்ந்து, கரிந்து பொரிந்து
போயின.

—————

வைய நாயகன் வடிக் கணை குடித்திட, வற்றி,
ஐய நீர் உடைத்தாய், மருங்கு அருங் கனல் மண்ட,
கை கலந்து எரி கருங் கடல் கார் அகல் கடுப்ப,
வெய்ய நெய்யிடை வேவன ஒத்தன, சில மீன். 27-

வையநாயகன் வடிக்கணை குடித்திட – உலகின்
நாயகனாகிய ராமபிரான் எய்த கூர்மையான அம்புகள் கடல்
நீரைக் குடித்து விடுவதால்; வற்றி, ஐயநீர் உடைத்தாய்-
கடல் தண்ணீர் வற்றிப் போக சிறிதளவு நீரே கடலில் இருக்க;
மருங்கு அருங்கனல் மண்ட-பக்கங்களில் எல்லாம் அணைப்பதற்கரிய நெருப்புப் பற்றி
எரிய; கைகலந்து எரி கருங்கடல்- எல்லாப் பக்கங்களிலும்
நெருப்பு கலந்து எரியும் கருங்கடல்; கார் அகல் கடுப்ப-
கரிய சட்டியான வாணலியை ஒத்திருக்க; வெய்ய நெய்யிடை
வேவன ஒப்பன சிலமீன்- சிலமீன்கள் காய்ந்த நெய்யிலே
வேகின்றதை ஒத்திருந்தன.

————-

குணிப்ப அருங் கொடும் பகழிகள் குருதி வாய் மடுப்ப,
கணிப்ப அரும் புனல் கடையுறக் குடித்தலின், காந்தும்
மணிப் பருந் தடங் குப்பைகள் மறி கடல் வெந்து,
தணிப்ப அருந் தழல் சொரிந்தன போன்றன, தயங்கி. 28-

குணிப்ப அருங் கொடும் பகழிகள்- அளவிட முடியாத
கொடிய அம்புகள்; குருதிவாய் மடுப்ப- இரத்தம் தோய்ந்த
தமது வாய் வழியே சென்று சேருமாறு; கணிப்பரும் புனல்-
அளவிடமுடியாத கடல் நீரை; கடையுறக் குடித்தலில் –
கடைபோகக் குடிப்பதாலே; காந்தும் மணிப்
பருந்தடங்குப்பைகள்- கடலின் கீழே ஒளிவீசும் பெரிய,
விசாலமான மணிகளின் குவியல்கள்; மறிகடல் வெந்து-
அலைமறியும் கடல் எல்லாம் வெந்து போக; தணிப்பருந்தழல்
சொரிந்தன போன்றன தயங்கி- தணிக்க இயலாத தணல்
வெப்பம் சொரியக் கிடப்பது போல விளங்கிக் காணப்பட்டன.

————-

எங்கும் வெள்ளிடை மடுத்தலின், இழுதுடை இன மீன்
சங்கமும், கறி கிழங்கு என, இடை இடை தழுவி,
அங்கம் வெந்து பேர் அளற்றிடை அடுக்கிய கிடந்த்
பொங்கு நல் நெடும் புனல் அறப் பொரித்தன போன்ற. 29-

எங்கும் வெள்ளிடை மடுத்தலின்- அம்புகள் எங்கும்
தண்ணீர் இல்லாது வெற்றிடமாக்கி விட்டதால்; இழுதுடை
இனமீன் சங்கமும்- நிணத்தை உடைய மீன்களும் சங்குகளும்;
கறி, கிழங்கென இடைஇடை தழுவி- காய்களும், கிழங்குகளும்
இடையே கிடந்தது போல் இடையே கலந்து பொருந்தி; அங்கம்
வெந்து- தம்முடல் முழுதும் வெந்து போய்; அளற்றிடை
அடுக்கிய கிடந்த- சேற்றிலே அடுக்கடுக்காகக் கிடந்தவை;
பொங்கும் நல்நெடும் புனலற- பொங்கி எழும் நிறைந்த நீர்
முழுதும் வற்றிப் போக; பொரிந்தன போன்ற- பொரிந்து
கிடந்தன போன்றிருந்தன.

————–

அதிரும் வெங் கணை ஒன்றை ஒன்று அடர்ந்து எரி உய்ப்ப,
வெதிரின் வல் நெடுங் கான் என வெந்தன, மீனம்;
பொதுவின் மன்னுயிர்க் குலங்களும் துணிந்தன பொழிந்த
உதிரமும் கடல் திரைகளும் பொருவன, ஒரு பால். 30-

அதிரும் வெங்கணை- அதிர்ந்து வருகின்ற வெம்மைமிக்க
அம்புகள்; ஒன்றை ஒன்று அடர்ந்து எரி உய்ப்ப- ஒன்றுடன்
ஒன்று மோதுவதால் நெருப்பை உமிழ; வெதிரின் வல்
நெடுங்கான்என- வலிய, பெரிய மூங்கில்காடு தீப்பற்றி எரிவது
போல; மீனினம் வெந்தன- மீன் கூட்டமெல்லாம் தீயில்
வெந்தன; பொதுவின் மன்னுயிர்க் குலங்களும்- கடலில்
வாழுகின்ற பொதுவான உயிரினங்களின் குழுக்களும்; துணிந்தன
பொழிந்த- அம்புகளால் துணிக்கப்பட, அதனால் பொழிந்த;
உதிரமும் கடல் திரைகளும்- இரத்தமும் கடல் அலைகளும்;
ஒரு பால் பொருவன- ஒரு பக்கம் மோதுவன வாயின.

————

அண்ணல் வெங் கணை அறுத்திட, தெறித்து எழுந்து அளக்கர்ப்
பண்ணை வெம் புனல் படப் பட, நெருப்பொடும் பற்றி,
மண்ணில் வேர் உறப் பற்றிய நெடு மரம், மற்றும்,
எண்ணெய் தோய்ந்தென எரிந்தன, கிரிக் குலம் எல்லாம். 31-

அண்ணல் வெங்கணை அறுத்திட- இராமபிரான் எய்த
கொடிய அம்புகள் அறுப்பதாலே; தெறித்து எழுந்து
அளக்கர்ப் பண்ணைவெம்புனல்- மேலே தெறித்து எழுந்த
கடலாகிய நீர் நிலையின் கொதிக்கும் நீர்; மண்ணின் வேர்
உறப் பற்றிய நெடுமரம்- மண்ணிலே வேரூன்றி வளர்ந்த
நீண்ட மரங்களும்; மற்றும் கிரிக்குலம் எல்லாம்- மற்றும்
மலைக் கூட்டங்கள் எல்லாமும்; எண்ணெய் தோய்ந்தென
எரிந்தன- எண்ணெயில் தோய்ந்தன போல எரியலாயின.

————–

தெய்வ நாயகன் தெரி கணை, ‘திசை முகத்து ஒருவன்
வைவு இது ஆம்’ என, பிழைப்பு இல மனத்தினும் கடுக,
வெய்ய வல் நெருப்பு இடை இடை பொறித்து எழ, வெறி நீர்ப்
பொய்கை தாமரை பூத்தெனப் பொலிந்தது, புணரி. 32-

தெய்வ நாயகன் தெரிகணை- தெய்வங்களுக் கெல்லாம்
தலைவனான இராமபிரான் தெரிந்தெடுத்து எய்த அம்புகள்; திசை
முகத்து ஒருவன் வைவு இதாமென- பிரமதேவன் கொடுத்த
சாபம் இது என்று கூறும்படி; பிழைப்பில மனத்தினும் கடுக-
தவறுதலின்றி மனத்தைவிட வேகமாகச் செல்ல; வெய்ய
அந்நெருப்பு இடையிடை பொறித்து எழ- அதனால் வெம்மை
நிறைந்த நெருப்பு இடையிடையே தீப்பொறிகளுடன் மேலே எழ;
புணரி- அக்கடல்; வெறி நீர்ப் பொய்கை- மணம் மிக்க
நீரையுடைய பொய்கை; தாமரை பூத்தெனப் பொலிந்தது-
தாமரை மலர்களைப் பூத்தது போலப் பொலிந்தது.

—————–

செப்பின், மேலவர் சீறினும் அது சிறப்பு ஆதல்
தப்புமே? அது கண்டனம், உவரியில்; ‘தணியா
உப்பு வேலை’ என்று உலகு உறு பெரும் பழி நீங்கி,
அப்பு வேலையாய் நிறைந்தது; குறைந்ததோ, அளக்கர்? 33-

செப்பின்- சொல்லுவோமானால்; மேலவர் சீறினும்-
மேலோர்கள் வெகுண்டாலும்; அது சிறப்பாதல் தப்புமே- அது
நன்மையாவது தவறுமோ? (தவறாது); அது கண்டனம்- அதனை
இப்போது நேரிலே பார்த்தோம்; உவரியில் தணியா உப்பு
வேலை என்று- கடலில் குறையாத உப்பு நிறைந்திருத்தலால்
‘உப்புக்கடல்’ என்று; உலகு உறு பெரும் பழி நீங்கி- உலகம்
இது வரை கூறிய பெரியபழி இன்று நீங்கி; அப்பு வேலையாய்
நிறைந்தது- அம்புக் கடலாக நிறைந்திருந்தது; அளக்கர்
குறைந்ததோ- கடல் குறைவுற்றதோ; (இல்லை)

—————

தாரை உண்ட பேர் அண்டங்கள் அடங்களும் தானே
வாரி உண்டு அருள் செய்தவற்கு இது ஒரு வலியோ? –
பாரை உண்பது படர் புனல்; அப் பெரும் பரவை
நீரை உண்பது நெருப்பு எனும் அப் பொருள் நிறுத்தான்! 34-

தாரை உண்ட பேரண்டங்கள் அடங்கலும்- ஒன்றன்
மேல் ஒன்றாக ஒழுங்குபட அமைந்துள்ள பெரிய அண்டங்கள்
அனைத்தையும்; வாரி உண்டு அருள் செய்தவற்கு- ஊழிக்
காலத்திலே அவை அழியாத படி அண்டங்களை எல்லாம் வாரி
உண்டு காத்து அருள் செய்தவனாகிய எம்பெருமானுக்கு; இது
ஒரு வலியோ-கடல் நீரை வற்றச் செய்த இது ஒரு வலிமையோ;
பாரை உண்பது படர்புனல் – நிலத்தை உண்பது நிறைந்து
பரவும் நீரான கடல்; அப்பெரும் பரவை நீரை-அந்தப் பெரிய
கடலில் உள்ள தண்ணீரை; உண்பது நெருப்பு- உண்ணும்
வலிமை உடையது நெருப்பு; எனும் அப்பொருள் நிறுத்தான்-
என்று கூறும் அந்தப் பொருளை நிலை நாட்டி விட்டான்

—————–

மங்கலம் பொருந்திய தவத்து மா தவர்,
கங்குலும் பகலும் அக் கடலுள் வைகுவார்,
அங்கம் வெந்திலர், அவன் அடிகள் எண்ணலால்;
பொங்கு வெங் கனல் எனும் புனலில் போயினார். 35-

மங்கலம் பொருந்திய தவத்து மாதவர் – நன்மை
பொருந்தியதாகிய சிறந்த தவத்தைச் செய்யும் மாமுனிவர்கள்;
கங்குலும் பகலும் அக்கடலுள் வைகுவார்- இரவும், பகலும்
எப்போதும் அந்தக் கடலிலே தங்கியிருப்பவர்கள்; அங்கம்
வெந்திலர்- சுடுகணைகளாலே உடல் வேகப் பெற்றிலர்; அவன்
அடிகள் எண்ணலால்- அப்பரமனுடைய திருவடிகளையே
எப்போதும் எண்ணியிருப்பவர்களாதலால்; பொங்கு வெங்கனல்
எனும்- பொங்கி எரியும் வெம்மைமிக்க நெருப்பு என்று
கூறப்படும்; புனலில் போயினார்- நீரிலே செல்லலாயினர்.

———-

தென் திசை, குட திசை, முதல திக்கு எலாம்
துன்றிய பெரும் புகைப் படலம் சுற்றலால்,
கன்றிய நிறத்தன கதிரவன் பரி
நின்றன் சென்றில் நெறியின் நீங்கின. 36-

தென்திசை குட திசை முதல திக்கெலாம்- தெற்கு,
மேற்கு முதலான எல்லாத் திசைகளிலும்; துன்றிய
பெரும்புகைப்படலம் சுற்றலால் – நெருங்கிய நிறைந்த
புகைப்படலம் சுற்றிச் சூழ்தலால்; கதிரவன் பரி- சூரியனுடைய
தேரில் பூட்டிய குதிரைகள்; கன்றிய நிறத்தன- தமக்குரிய
பச்சை நிறம் நீங்கிக் கன்றிய நிறத்தை உடையனவாய்; நின்றன
சென்றில நெறியின் நீங்கின- வழி தவறிப் போய் மேற்
கொண்டு செல்லாதனவாய் நின்றன.

————-

‘பிறிந்தவர்க்கு உறு துயர் என்னும் பெற்றியோர்
அறிந்திருந்து, அறிந்திலர் அனையர் ஆம்’ என,
செறிந்த தம் பெடைகளைத் தேடி, தீக் கொள,
மறிந்தன, கரிந்தன – வானப் புள் எலாம். 37-

பிறிந்தவர்க்கு உறு துயர்- பிரிந்து வாழ்பவருக்கு உற்ற
துன்பம்; என்னும் பெற்றி- என்னும் தன்மையை; அறிந்திருந்து-
அத்துன்பத்தை அறிந்திருந்தாலும்; அறிந்திலர் அனையர்
ஆம்என- அறியாதவரைப் போன்றவராவர்; செறிந்த தம்
பெடைகளைத் தேடி- நிறைந்த தம் பெண் பறவைகளைத் தேடி
வந்து; தீக்கொள மறிந்தன கரிந்தன வானப்புள் எலாம்- நெருப்புப் பற்றியதால்,
ஆண்பறவைகளெல்லாம் வீழ்ந்து கருகி மாண்டன.

————

கமை அறு கருங் கடல், கனலி கைபரந்து,
அமை வனம் ஒத்த போது, அறைய வேண்டுமோ?
சுமையுறு பெரும் புகைப் படலம் சுற்றலால்,
இமையவர் இமைத்தனர்; வியர்ப்பும் எய்தினார். 38-

கமை அறு கருங்கடல் – பொறுமையற்று எப்போதும்
முழங்கிக் கொண்டிருக்கும் கரிய கடல்; கனலி கை பரந்து-
இராமபிரான் எய்த அம்புகளால் உண்டான நெருப்பு
பக்கங்களிலெல்லாம் பரவ; அமை வனம் ஒத்த போது-
தீப்பிடித் தெரிந்த மூங்கிற் காட்டை ஒத்திருந்தபோது; அறைய
வேண்டுமோ – அதைக் கூற வேண்டுமோ?; சுமை உறு
பெரும்புகைப்படலம் சுற்றலால்- சுமை பொருந்திய பெரிய
புகைப்படலம் சூழ்ந்தமையால்; இமையவர் இமைத்தனர்-
இமையா நாட்டம் கொண்ட தேவர்கள் கண்களை
இமைக்கலாயினர்; வியர்ப்பும் எய்தினர் – உடம்பில்
வியர்வையும் எய்தினார்கள்.

————-

பூச் செலாதவள் நடை போல்கிலாமையால்,
ஏச்சு எலாம் எய்திய எகினம் யாவையும்,
தீச் செலா நெறி பிறிது இன்மையால், திசை
மீச் செலர் புனலவன் புகழின் வீந்தவால். 39-

பூச்செலாதவள்- பூமேல்கூட நடக்க முடியாதவளாகிய
சீதையின்; நடை போல்கிலாமையால் – நடையை
ஒத்தில்லாமையினால்;ஏச்சு எலாம் எய்திய எகினம் யாவையும்-
பழிப்புக்கு ஆளாகிய அன்னப் பறவைகள் எல்லாம்; தீச்செலா
நெறி பிறிது இன்மையால்- தீ செல்லாத வழி வேறு எதுவும்
இல்லாமையாலே; திசை மீச் செலா – எல்லாத் திசைகளிலும்
மேலே பறந்து செல்ல; புனலவன் புகழின் வீந்தவால்-
அதனால், கடலரசனான வருணனது புகழ் எவ்வாறு அழிந்ததோ
அதுபோல அழிந்தொழியலாயின.

————-

பம்புறு நெடுங் கடல் பறவை யாவையும்,
உம்பரின் செல்லலுற்று, உருகி வீழ்ந்தன்
அம்பரம் அம்பரத்து ஏகல் ஆற்றல,
இம்பரின் உதிர்ந்தன, எரியும் மெய்யன. 40-

பம்புறு நெடுங்கடல் பறவையாவையும் – எங்கும்
பரந்துள்ள நீண்ட கடலில் வாழும் நீர்ப்பறவைகள் அனைத்தும்;
உம்பரில் செல்லலுற்று – மேலே வானத்தில் செல்லத்
தொடங்கி; உருகி வீழ்ந்தன- நெருப்பில் வெந்து உருத்
தெரியாது உருகி விழுந்தன; அம்பரம் அம்பரத்து ஏகல்
ஆற்றல – மேகங்கள் வானத்திலே செல்ல இயலாதனவாய்;
எரியும் மெய்யன- உடலெல்லாம் தீயில் வெந்து எரிய; இம்பரில்
உதிர்ந்தன- தரையில் உதிர்ந்து விழுந்தன.

————–

பட்டன படப் பட, படாத புட் குலம்,
சுட்டு வந்து எரிக் குலப் படலம் சுற்றலால்,
இட்டுழி அறிகில, இரியல் போவன,
முட்டை என்று எடுத்தன, வெளுத்த முத்து எலாம். 41-

சுட்டு வந்து எரிக்குலப் படலம் சுற்றலால்- சுட்டுக்
கொண்டே வந்த நெருப்புப் படலம் எங்கும் சூழ்ந்து
இருத்தலால்; பட்டன படப்பட-பறவைக் கூட்டம் தீயில் வெந்து
இறப்பன இறந்து கொண்டே இருக்க; படாத புட்குலம்-
இறக்காத பறவைக் கூட்டம்; இட்டுழி அறிகில- புகையும்
நெருப்பும் சூழ்ந்திருத்தலால் தமது முட்டைகளை இட்ட இடத்தை
அறியாதனவாய்; இரியல் போவன- பாதுகாப்பான வேறு
இடத்துக்குச் செல்லுபவை; வெளுத்த முத்து எலாம்- வெண்மை
நிறமான முத்துக்களை எல்லாம்; முட்டை என்று எடுத்தன-
முட்டை என நினைத்து எடுப்பனவாயின.

—————-

‘வள்ளலை, பாவிகாள், “மனிதன்” என்று கொண்டு
எள்ளலுற்று அறைந்தனம்; எண் இலாம்’ என
வெள்ளி வெண் பற்களைக் கிழித்து, விண் உறத்
துள்ளலுற்று இரிந்தன – குரங்கின் சூழ்ந்தில. 42-

பாவிகாள்- பாவிகளே! வள்ளலை மனிசன் என்று கொண்டு –
இராமபிரான் மனிதன் தானே என நினைத்து; எள்ளலுற்று
அறைந்தனம் – ஏளனமாகப் பேசினோம்; எண் இலாம்-
இராமபிரானுடைய பேராற்றலை அறியும் ஆராய்ச்சி
இல்லாதவரானோம்; என வெள்ளி வெண் பற்களைக் கிழித்து-
என்று கூறி வெள்ளி போன்ற வெண்மையான பற்களைக் காட்டி
இளித்துக் கொண்டு; குரங்கு சூழ்ந்தில- நீரில் வாழும் குரங்குகள்
அந்தக் கடலைச் சூழ்ந்து கொண்டிருக்காமல்; விண்உறத்
துள்ளலுற்று இரிந்தன- வானத்தின் மீது துள்ளி விலகிச்
செல்லலாயின.

———

தா நெடுந் தீமைகள் உடைய தன்மையார்,
மா நெடுங் கடலிடை மறைந்து வைகுவார்,
தூ நெடுங் குருதி வேல் அவுணர், துஞ்சினார்;
மீன் நெடுங் குலம் என மிதந்து, வீங்கினார். 43-

தூ நெடுங் குருதி வேல் அவுணர்- தசையோடு கூடிய,
இரத்தம் தோய்ந்த நீண்ட வேலையுடைய அவுணர்கள்; தா
நெடும் தீமைகள் உடைய தன்மையார்- துயர் தரும்
பெருந்தீமைகள் கொண்ட பண்புடையவர் என்பதால்; மா நெடுங்
கடலிடை மறைந்து வைகுவார்- பெரிய நீண்ட கடலிலே
மறைந்து வாழ்கின்றவர்கள்; துஞ்சினார்- இராமபிரானுடைய
அம்புகளின் வெம்மையால் உயிர்துறந்தார்கள்; மீ
நெடுங்கிரியென- கடலின் மீது கிடந்த மலைகளைப் போல்;
மிதந்து வீங்கினார்- மிதந்து உடல் வீங்கலாயினர்.

—————–

தசும்பு இடை விரிந்தன என்னும் தாரைய
பசும் பொனின் மானங்கள் உருகிப் பாய்ந்தன்
அசும்பு அற வறந்தன, வான ஆறு எலாம்;
விசும்பிடை விளங்கிய மீனும் வெந்தவே. 44-

பசும் பொனின் மானங்கள்- (இராமபிரான் அம்புகளால்
எங்கும் தீ எரிய) வானத்தில் செல்லும் பொன்னால் அமைந்த
விமானங்கள் எல்லாம்; உருகிப் பாய்ந்தன- தீயின் வெப்பத்தால்
உருகிப் பொழிந்தவை; தசும்பிடை விரிந்தன என்னும் தாரைய
– நீர்க்குடங்கள் உடைந்தால் நீர்தாரைதாரையாய் ஒழுகுவது
போல் இருந்தன; வான ஆறெலாம்- விண்ணுலகிலுள்ள ஆகாய
கங்கை முதலான ஆறுகள்; அசும்பறவறந்தன – ஈரம் சிறிது
மின்றி வறண்டு போயின; விசும்பிடை விளங்கிய-ஆகாயத்திலே
ஒளிர்ந்த; மீனும் வெந்தவே- விண்மீன்களும் வெந்தன.

————-

செறிவுறு செம்மைய, தீயை ஓம்புவ,
நெறியுறு செலவின, தவத்தின் நீண்டன,
உறு சினம் உறப் பல உருவு கொண்டன,
குறுமுனி எனக் கடல் குடித்த – கூர்ங் கணை. 45-

குறுமுனி எனக் கடல் குடித்த கூர்ங்கணை- குறுகிய
வடிவினரான அகத்திய முனிவரைப் போல, கடல் நீரை எல்லாம்
குடித்த (இராமபிரான் எய்த) கூரிய அம்புகள்; செறிவுறு
செம்மைய- செறிவுற்று செம்மை வாய்ந்தன; தீயை ஓம்புவ-
தீயை வளர்ப்பன; நெறியுறு செலவின- நெறியில் செல்லும்
செலவினை உடையன; தவத்தின் நீண்டன- நெடியதவத்தை
உடையன; உறுசினம் உற- மிக்க கோபம் கொண்டிருப்பதால்;
பல உருவு கொண்டன- பல வடிவங்களைக் கொண்டன.

—————

மோதல் அம் கனை கடல் முருக்கும் தீயினால்,
பூதலம் காவொடும், எரிந்த் பொன் மதில்
வேதலும், இலங்கையும், ‘மீளப் போயின
தூதன் வந்தான்’ எனத் துணுக்கம் கொண்டதால். 46-

மோதல் அம் கனைகடல்- அலைமோதுகின்ற முழங்கு
கின்ற கடலில் பற்றி; முருக்கும் தீயினால்- முழக்கத்துடன்
எரிகின்ற நெருப்பினால்; பூதலம் காவொடும் எரிந்த-
கடலைச் சூழ்ந்துள்ள நிலமெல்லாம் அங்குள்ள சோலைகளோடும்
எரிந்தது; பொன் மதில் வேதலும்- இலங்கைக்கு அரணாக
அமைந்துள்ள பொன்னாலான மதிலும் வெந்து போகவும்;
இலங்கையும்- இலங்கையில் வாழும் அரக்கர்கள் எல்லாம்;
போயின தூதன் மீளவந்தான் என – இங்கு வந்து
இலங்கைக்கு எரியூட்டிப் போன தூதன் மீண்டும் வந்தான்
என்று; துணுக்கம் கொண்டதால்- திடுக்கிட்டனர்.

——————

அருக்கனில் ஒளி விடும் ஆடகக் கிரி,
உருக்கு என உருகின, உதிரம் தோய்ந்தன,
முருக்கு எனச் சிவந்தன் முரிய வெந்தன,
கரிக் குவை நிகர்த்தன, பவளக் காடு எலாம். 47-

அருக்கனில் ஒளிவிடும் ஆடகக் கிரி – சூரியனைப்
போல ஒளிவீசும் பொன்னிற மலையான திரிகூடமலையானது;
உருக்கு என உருகின- தீயால் வெந்து, அரக்கு உருக்குப்
போல உருகலாயின; உதிரம் தோய்ந்தன- அதனுடன் இரத்தமும்
தோய்ந்தமையால்; முருக் கெனச் சிவந்தன – முருக்க மலர்
போலச் சிவந்து தோன்றின; பவளக் காடு எலாம்- கடலில்
உள்ள பவளக்காடுகளெல்லாம்; முரிய வெந்தன- அழியும்படி
வெந்து போயினவாய்; கரிக்குவை நிகர்த்தன- கரிக்குவியல்களை
ஒத்திருந்தன.

—————-

பேருடைக் கிரி எனப் பெருத்த மீன்களும்,
ஓர் இடத்து, உயிர் தரித்து, ஒதுங்ககிற்றில,
நீரிடைப் புகும்; அதின் நெருப்பு நன்று எனாப்
பாரிடைக் குதித்தன, பதைக்கும் மெய்யன. 48-

பேருடைக் கிரி எனப் பெருத்த மீன்களும்-
பெருமையுடைய ‘மலை’ என்று கூறத்தக்க பெரிய மீன்களும்;
ஓரிடத்து, உயிர் தரித்து ஒதுங்க கிற்றில- ஓரிடத்தில் இருந்து
உயிரைக் காப்பாற்றி ஒதுங்கி வாழ இயலாதவை ஆயின; நீரிடைப்புகும்- நிலம் வெப்பத்தால்
சூடாகத் தண்ணீருக்கிடையே செல்லும்; அதின் நெருப்பு
நன்றெனா- அதைவிட நெருப்பே நல்லது என்று; பாரிடைக்
குதித்தன பதைக்கும் மெய்யன- பதை பதைக்கும் உடம்பினை
உடையனவாய் நீரிலிருந்து தரைக்குக் குதித்தன.

———–

சுருள் கடல் திரைகளைத் தொலைய உண்டு, அனல்
பருகிடப் புனல் இல பகழி, பாரிடம்
மருள் கொளப் படர்வன, நாகர் வைப்பையும்
இருள் கெடச் சென்றன, இரவி போல்வன. 49-

சுருள் கடல் திரைகளைத் தொலைய உண்டு-
இராமபிரான் எய்த அம்புகள் சுருண்டு விழும் கடல் அலைகள்
அழியுமாறு அவற்றை உண்டு பின்; அனல் பருகிடப் புனல்
இலபகழி – நெருப்பு உண்பதற்கு எங்கும் தண்ணீர்
இல்லாமையால் அவ்வம்புகள்; பாரிடம் மருள் கொளப்
படர்வன- நிலம் மருளும்படி எங்கும் செல்வனவாய்ப்பின்;
இரவி போல்வன- சூரியனைப் போன்ற ஒளி உடையனவாய்;
நாகர் வைப்பையும்- நாகர்கள் வாழும் நாக உலகத்தையும்;
இருள் கெடச் சென்றன- அங்கு இருள் கெடும்படி
சென்றடைந்தன.

————–

கரும் புறக் கடல்களோடு உலகம் காய்ச்சிய
இரும்பு உறச் செல்வன, இழிவ, கீழுற
அரும் புறத்து அண்டமும் உருவி, அப் புறம்,
பெரும் புறக் கடலையும் தொடர்ந்து பின் செல்வ. 50-

கரும்புறக் கடல்களோடு – கறுத்துத் தோன்றும்
மேற்புறத்தைக் கொண்ட கடல்களோடு; உலகம் காய்ச்சிய
இரும்புறச் செல்வன- உலகமும் காய்ச்சிய இரும்பை ஒத்துச்
செல்லுவன; இழிவ கீழ்உற – கீழே பொருந்துமாறு
இறங்குவனவாய்; அரும்புறத்து அண்டமும் உருவி –
சக்கரவாளகிரிக்கு அப்பால் உள்ள செல்லுதற்கரிய புற
அண்டத்தையும் ஊடுருவிச் சென்று; அப்புறம்- அதற்கு அப்பால்
உள்ள; பெரும்புறக் கடலையும்- பெரும்புறக் கடலையும்;
தொடர்ந்து பின் செல்வ- தொடர்ந்து பின் செல்வனவாயின.

—————–

திடல் திறந்து உகு மணித் திரள்கள், சேண் நிலம்
உடல் திறந்து உதிரம் வந்து உகுவ போன்றன்
கடல் திறந்து எங்கணும் வற்ற, அக் கடல்
குடல் திறந்தன எனக் கிடந்த, கோள் அரா. 51-

திடல் திறந்து உருமணித் திரள்கள்- கடல் நடுவே உள்ள
திட்டுகள் எல்லாம் அம்புகளால் பிளக்கப்பட்டு அங்கிருந்து
சிந்தும் மணித் திரள்கள் எல்லாம்; சேண் நிலம் உடல்
திறந்து- பெரிய நிலம் உடல் பிளந்து, அதனால்; உதிரம்
வந்து உகுவ போன்றன- இரத்தம் சிந்துவன போல இருந்தன;
கடல் திறந்து எங்கணும் வற்ற- இராமபிரானுடைய அம்புகள்
கடலைப் பிளத்தலால் எங்கும் நீரில்லாது வற்றிவிட; கோள்
அரா- (அக்கடலின் அடியில் வாழ்ந்த) வலிய நீர்ப் பாம்புகள்;
அக்கடல் குடல் திறந்தன எனக் கிடந்தன- அக்கடலின்
குடல்கள் கிடந்தன போலக் காணப்பட்டன.

—————–

ஆழியின் புனல் அற, மணிகள் அட்டிய
பேழையின் பொலிந்தன, பரவை; பேர்வு அறப்
பூழையின் பொரு கணை உருவப் புக்கன,
மூழையின் பொலிந்தன, முரலும் வெள் வளை. 52-

ஆழியின் புனல் அற – கடலின் நீர் அறவே வற்றிவிட;
பரவை மணிகள் அட்டிய பேழையின் பொலிந்தன-
அக்கடல் (அடியிலே மணிகள் கிடந்ததால்) மணிகள் சேர்த்து
வைத்த பெட்டியைப் போல விளங்கியது; முரலும் வெள் வளை
பேர்வற- (அக் கடலில் உள்ள) ஒலிக்கின்ற வெண்மை நிறமான
சங்குகள் பெயர இயலாதபடி; பூழையில் பொருகணை உருவ- முகப்பிலுள்ள
துளைகளில் அம்புகள் உருவியிருப்பதால்; மூழையின்
பொலிந்தன புக்கன- அகப்பைகளைப் போல விளங்கிச்
சென்றன.

————–

நின்று நூறாயிரம் பகழி நீட்டலால்,
குன்று நூறாயிரம் கோடி ஆயின் –
சென்று தேய்வு உறுவரோ, புலவர் சீறினால்? –
ஒன்று நூறு ஆயின, உவரி முத்து எல்லாம். 53

நின்று நூறாயிரம் பகழி நீட்டலால்- (இராமபிரான்
போர்க்கோலம் கொண்டு) நின்று நூறாயிரம் அம்புகளை
எய்தலால்; குன்று நூறாயிரம் கோடி ஆயின- கடலில் உள்ள
குன்றுகள் எல்லாம் நூறாயிரம் கோடியாயின; உவரிமுத்து
எலாம்- கடலில் உள்ள முத்துக்கள் எல்லாம்; ஒன்று நூறாயின
-அம்பு பட்டு ஒன்று நூறாக ஆயின; புலவர் சீறினால்-
அறிவுமிக்க சான்றோர்கள் சீறினாலும்; சென்று தேய்வுறுவரோ-
(சீற்றத்துக்கு ஆளானவர்) சென்று தேய்வடைவார்களோ?
(மாட்டார்).

————–

சூடு பெற்று ஐயனே தொலைக்கும் மன்னுயிர்
வீடு பெற்றன் இடை மிடைந்த வேணுவின்
காடு பற்றிய பெருங் கனலின் கை பரந்து
ஓடி உற்றது நெருப்பு, உவரி நீர் எலாம். 54-

சூடு பெற்று ஐயனே தொலைக்கும்- சினத்தால் சூடு
பெற்று உயிர்களுக்குத் தலைவனான இராமபிரானே அம்பெய்து
கொல்லும்; மன்னுயிர் வீடு பெற்றன – நிலைத்துவாழும்
உயிரினங்கள் எல்லாம் அழிவில்லாத பேரின்ப வீட்டை எய்தின;
இடைமிடைந்த வேணுவின்காடு- இடையிடையே நெருங்கியுள்ள
மூங்கில்கள் நிறைந்த காட்டில்; பற்றிய பெருங்கனலின்- பற்றி
எரியும் பெருந்தீயைப் போல; கை பரந்து ஓடி- (அம்பின்
நெருப்பு) பக்கங்களிலெல்லாம் பரவிச் சென்று; உவரி நீ ரெலாம்
உற்றது- கடல் நீரை அடைந்தது.

‘அம்பின் நெருப்பு கடல் நீரை அடைந்தது. மன்னுயிர் யாவும்
வீடுபேறு எய்தின’ என்பது கருத்து. இராமபிரானால் அம்பெய்து
கொல்லப்பட்ட எல்லா உயிர்களும் ‘வீடு பெற்றன’ என்றார்.

————

கால வான் கடுங் கணை சுற்றும் கவ்வலால்,
நீல வான் துகிலினை நீக்கி, பூ நிறக்
கோல வான் களி நெடுங் கூறை சுற்றினாள்
போல, மா நிலமகள் பொலிந்து தோன்றினாள். 55-

கால வான் கடுங்கணை- எமனுக் கொப்பான விரையும்
அம்புகள்; சுற்றும் கவ்வலால்- கடல் முழுவதையும் கவ்விக்
கொண்டதால்; மா நிலமகள்- பெரிய நிலமாகிய பூமித்தாய்;
நீலவான் துகிலினை நீக்கி- தான் உடுத்திருந்த நீலவானம்
போன்ற ஆடையை நீக்கிவிட்டு; பூ நிறக் கோல வான் களி
நெடுங்கூறை- பூ வேலைப்பாடுகளோடு கூடிய செந்நிறமான
புத்தாடையை; சுற்றினாள் போல- தனது உடம்பில் சுற்றிக்
கொண்டவளைப் போல; பொலிந்து தோன்றினாள்- பொலிவுடன்
காணப்பட்டாள்.

——————

கற்றவர் கற்றவர் உணர்வு காண்கிலாக்
கொற்றவன் படைக்கலம் குடித்த வேலை விட்டு,
உற்று உயிர் படைத்து எழுந்து ஓடல் உற்றதால்,
மற்றொரு கடல் புக, வட வைத் தீ அரோ. 56-

கற்றவர் கற்றவர் உணர்வு காண்கிலாக் கொற்றவன்-
கற்றறிந்தவர்களுக்குள் கற்றவராய் விளங்கும் மேலோர்களின்
உணர்வும்கூட காண இயலாத பெருமானாகிய இராமனது;
படைக்கலம் குடித்த வேலை விட்டு- அம்புகள் நீர்
முழுவதையும் குடித்து விட்ட கடலை விட்டு விட்டு; வடவைத்
தீ- கடல் மத்தியிலே வாழும் வடவா முகாக்கினித்தீ; மற்றொரு
கடல் புக- வேறு ஒரு கடலை அடைவதற்காக; உற்று உயிர்
படைத்து எழுந்து- வலிமைபெற்று உயிர் கொண்டு எழுந்து;
ஓடல் உற்றதால்- ஓடத் தொடங்கியது.

————-

வாழியர் உலகினை வளைத்து, வான் உறச்
சூழ் இரும் பெருஞ் சுடர்ப் பிழம்பு தோன்றலால்,
ஊழியின் உலகு எலாம் உண்ண ஓங்கிய
ஆழியின் பொலிந்தது, அவ் ஆழி, அன்ன நாள். 57-

உலகினை வளைத்து – உலகத்தை எல்லாம் சுற்றி
வளைத்துக் கொண்டு; வான் உறச் சூழ் இரும் பெரும் சுடர்ப்
பிழம்பு – விண்ணை அளாவிச் சூழ்ந்த பெரிய தீயின் ஒளிப்
பிழம்பு எங்கும்; தோன்றலால்- காணப்படுதலால்; அவ்வாழி-
அந்தக் கடல்; அன்ன நாள் ஊழியின் உலகெலாம் உண்ண
ஓங்கிய- அந்த நாளிலே ஊழிக் காலத்தின் முடிவில்
உலகனைத்தையும் உண்ண உயர்ந்த; ஆழியின் பொலிந்தது-
ஊழிக் காலத்துப் பெருங் கடலைப் போல விளங்கியது.

————–

ஏனையர் என்ன வேறு உலகின் ஈண்டினார் –
ஆனவர் செய்தன அறைய வேண்டுமோ –
மேல் நிமிர்ந்து எழு கனல் வெதுப்ப, மீதுபோய்,
வானவர் மலர் அயன் உலகின் வைகினார்? 58-

மேல் நிமிர்ந்து எழுகனல் வெதுப்ப- கடலை விட்டு
மேலே நிமிர்ந்து எழுந்த நெருப்பு வெதுப்புவதால் (பயந்து);
வானவர் மீதுபோய்- விண்ணுலகில் வாழும் தேவர்கள் தாம்
வாழும் விண்ணுலகுக்கும் மேலே சென்று; மலரயன் உலகின்
வைகினார்- பிரமதேவன் வாழும் சத்தியலோகத்தில் தங்கலாயினர்
என்றால்; ஏனையர் என்ன வேறுலகில் ஈண்டினார்- தேவரினும்
ஏனையோராகிய மண்ணுலகில் வாழ்பவர்கள்; ஆனவர் செய்தன
அறைய வேண்டுமோ- என்போர் செய்த செயல்களைச் சொல்ல
வேண்டுமோ?

—————

இராமன் வருணன் மேல் சதுமுகன் படையை ஏவுதல்

‘இடுக்கு இனி எண்ணுவது இல்லை; ஈண்டு இனி
முடுக்குவென் வருணனை’ என்ன, மூண்டு எதிர்
தடுக்க அரும் வெகுளியான், சதுமுகன் படை
தொடுத்தனன்; அமரரும் துணுக்கம் எய்தினார். 59-

இடுக்கு இனி எண்ணுவ தென்னை- இதனால் இனி வரப்
போகும் துன்பங்களைப் பற்றி நினைப்பதால் என்ன பயன்?;
ஈண்டு இனி முடுக்குவென் வருணனை என்ன- வருணனை
இனி இங்கு விரைவில் வருமாறு செய்வேன் என்று; மூண்டு எதிர்
தடுக்கரும் வெகுளியான்- பெருகி எழுகின்ற எதிர்த்து எவரும்
தடுக்க இயலாத வெகுளியை உடைய இராமன்; சதுமுகன் படை
தொடுத்தனன்- பிரமதேவனது கணையான (பிரம்மாஸ்திரத்தை
வில்லில் தொடுத்து விடத் தொடங்கினான்; அமரரும் துணுக்கம்
எய்தினார்- அதைக்கண்டு தேவர்களும் திடுக்கிட்டார்கள்.

——————-

பல இடத்தும் நிகழ்ந்த மாறுபாடுகள்

மழைக் குலம் கதறின் வருணன் வாய் உலர்ந்து
அழைத்தனன்; உலகினில் அடைத்த, ஆறு எலாம்;
இழைத்தன நெடுந் திசை, யாதும் யாவரும்
பிழைப்பிலர் என்பது ஓர் பெரும் பயத்தினால். 60-

மழைக்குலம் கதறின- (இராமபிரான் சதுமுகன் கணையை
ஏவ மேகக் கூட்டங்களெல்லாம் கதறலாயின; வருணன் வாய்
உலர்ந்து அழைத்தனன்- வருணன் வாய் வறண்டு கதறினான்;
உலகமும் ஆறெலாம் அடைத்த- உலகிலுள்ள ஆறுகளெல்லாம்
தூர்ந்து போயின; யார் இனிப் பிழைப்பவர் – சதுமுகன் படைக்குத்
தப்பி இனி யார் பிழைப்பார்கள்;என்பதோர் பெரும்பயத்தினால்
– என்பதொரு பெரிய பயத்தால் இவ்வளவு நடந்தது; நெடுந்திசை
இழைத்த- நீண்ட திசைகளெல்லாம் நுணுகிப் பொடியாயின;

———–

அண்ட மூலத்துக்கு அப்பால் ஆழியும் கொதித்தது; ஏழு
தெண் திரைக் கடலின் செய்கை செப்பி என்? தேவன் சென்னிப்
பண்டை நாள் இருந்த கங்கை நங்கையும் பதைத்தாள்; பார்ப்பான்
குண்டிகை இருந்த நீரும் குளுகுளு கொதித்தது அன்றே. 61-

அண்ட மூலத்துக்கு அப்பால் ஆழியும் கொதித்தது-
அண்டத்தின் அடிப்பகுதியில் உள்ள பெரும் புறக் கடலும்
கொதித்தது (என்றால்); ஏழு தெண்திரைக் கடலின் செய்கை
செப்பிஎன்- உலகத்திலுள்ள தெளிந்த அலைகளையுடைய
ஏழுகடல்களின் செய்கையைச் சொல்ல என்ன இருக்கிறது?;
தேவன் சென்னிப் பண்டை நாள் இருந்த கங்கை
நங்கையும் பதைத்தாள்- சிவபிரானுடைய சென்னியில் வெகு
காலமாக வீற்றிருந்த கங்கையாகிய பெண்ணும் பதைபதைத்தாள்;
பார்ப்பான் குண்டிகை இருந்த நீரும்- அந்தணர் தலைவனான பிரமனது
கமண்டலத்தில் இருந்த தண்ணீரும்; குளு குளு கொதித்தது
அன்றே – குளு குளு வென ஒலித்துக் கொதிக்கலாயிற்று.

—————

‘இரக்கம் வந்து எதிர்ந்த காலத்து, உலகு எலாம் ஈன்று, மீளக்
கரக்கும் நாயகனைத் தானும் உணர்ந்திலன்; சீற்றம் கண்டும்,
வரக் கருதாது தாழ்ந்த வருணனின் மாறு கொண்டார்
அரக்கரே? அல்லர்’ என்னா, அறிஞரும் அலக்கண் உற்றார். 62-

இரக்கம் வந்து எதிர்ந்த காலத்து – (தனது
திருவுள்ளத்திலே உயிர்களிடம்) இரக்கம் தோன்றிய காலத்திலே;
உலகெலாம் ஈன்று மீளக் கரக்கும் நாயகனை- உலகங்கள்
அனைத்தையும் படைத்து மறுபடியும் மறைத்துக் கொள்ளவல்ல
உலக நாயகனை; தானும் உணர்ந்திலன்- நாம் அறிந்திருத்தல்
போலத்தானும் அறியாதவனாயினான்; சீற்றம் கண்டும்
வரக்கருதாது- இராமபிரானுடைய கோபத்தைப் பார்த்தபின்பும்
வருவதற்கு நினைக்காமல்; தாழ்த்த வருணனின்-காலம் தாழ்த்த
இந்த வருணனைவிடவும்; மாறு கொண்டார் அரக்கரே
அல்லர் என்னா- இராமபிரானிடம் பகை கொண்ட அவர்கள்
அரக்கர் அல்லர் (இந்த வருணன்தான் அரக்கன்) என்று கூறி;
அறிஞரும் அலக்கண் உற்றார்- மற்றத்தேவர்கள் எல்லோரும்
துன்பமுற்றார்கள்.

————

பூதங்கள் வருணனை வைதல்

‘உற்று ஒரு தனியே, தானே, தன்கணே, உலகம் எல்லாம்
பெற்றவன் முனியப் புக்கான்; நடு இனிப் பிழைப்பது எங்ஙன்?
குற்றம் ஒன்று இலாதோர்மேலும் கோள் வரக் குறுகும்’ என்னா,
மற்றைய பூதம் எல்லாம், வருணனை வைத மாதோ. 63-

உற்று ஒரு தனியே தானே- தான் ஒருவனே தனியாகப்
பொருந்தியிருந்து; தன்கணே உலகம் எல்லாம் பெற்றவன்-
தன்னிடமிருந்தே உலகங்கள் எல்லாவற்றையும் ஈன்றவன்;
முனியப்புக்கான் – வெகுளத் தொடங்கினான்; நடு இனிப்
பிழைப்பது எங்ஙன்? – இந்தக் கோபத்துக் கிடையே நாம்
தப்பிப் பிழைப்பது எவ்வாறு; குற்றம் ஒன்று இலாதோர்
மேலும்- குற்றம் எதுவும் செய்யாத நம்மீதும்; கோள் வரக்
குறுகும் என்னா- தீங்கு வரக் கூடும் என்று கருதி; மற்றைய
பூதம் எல்லாம் வருணனைவைத- மற்றைப் பூதங்கள் யாவும்
வருணனைத் திட்டின.

———–

வருணன் தோன்றிப் பணிவுரை பகர்தல்

6652.

எழு சுடர்ப் படலையோடும் இரும் புகை நிரம்பி
எங்கும்
வழி தெரிவு அறிவு இலாத நோக்கினன் வருணன்
என்பான்,
அழுது அழி கண்ணன், அன்பால் உருகிய நெஞ்சன்,
அஞ்சித்
தொழுது எழு கையன், நொய்தின் தோன்றினன்,
வழுத்தும் சொல்லான்.–64-

எழு சுடர்ப் படலையோடும்- தொடர்ந்து எழுகின்ற
தீச்சுடர்களின் திரள்களோடு; இரும்புகை நிரம்பி- நிறைந்த புகை
நிரம்பி; எங்கும் வழி தெரிவு அறிவிலாத- எங்கும் வரும்
வழியைத் தெரிந்து கொள்ள அறியாத; நோக்கினன் வருணன் என்பான்-
நோக்கினை உடையவனான வருணன் என்பவன்; அழுது
அழிகண்ணன்- அழுது அழுது அழகிழந்த கண்களை
உடையவனாகவும்; அன்பால் உருகிய நெஞ்சன்-
இராமபிரானிடம் கொண்ட அன்பினால் உருகிய உள்ளத்தை
உடையவனாகவும்; அஞ்சித் தொழுது ஏழு கையன்-
அஞ்சி, தொழுதபடி மேலே உயர்த்தியகைகளை
உடையவனாகவும்; வழுத்தும் சொல்லான்- இராமபிரானைப்
போற்றிப் புகழும் சொற்களை உடையவனாகவும்; நொய்தின்
தோன்றினன்- விரைந்து (இராமபிரானுக்கு எதிரிலே வந்து)
தோன்றினான்.

————

நீ எனை நினைந்த தன்மை, நெடுங் கடல் முடிவில்
நின்றேன்
ஆயினேன் அறிந்திலேன்’ என்று அண்ணலுக்கு
அயிர்ப்பு நீங்க,
காய் எரிப் படலை சூழ்ந்த கருங் கடல்
தரங்கத்தூடே,
தீயிடை நடப்பான் போல, செறி புனற்கு இறைவன்
சென்றான்.–65-

நீ எனை நினைந்த தன்மை- பெருமானே! நீ என்னை
வருமாறு நினைத்த தன்மையை; நெடுங்கடல் முடிவில் நின்றேன்
ஆயினேன் – இந்தப் பெரிய கடலில் முடிவான இடத்திலே
நின்றவனாகிய நான்; அறிந்திலேன் என்று – அறியாதவனானேன்
என்று கூறிக் கொண்டு; அண்ணலுக்கு அயிர்ப்பு நீங்க-
இராமபிரானுக்கு ஐயம் தீரும்படி; காய் எரிப்படலை சூழ்ந்த –
எரியும் தீத்திரள் எங்கும் சூழ்ந்திருந்த; கருங்கடல் தரங்கத்து
ஊடே-கரிய கடல் அலைகளுக்கு இடையிலே; தீயிடை நடப்பான்
போல- நெருப்புக்கு இடையிலே நடந்து வருபவனைப் போல்;
செறி புனற்கு இறைவன் சென்றான்-செறிந்த கடலுக்கு அரசனான
வருணன் வரலானான்.

———-

வந்தனன் என்ப மன்னோ, மறி கடற்கு இறைவன்;
வாயில்
சிந்திய மொழியன், தீந்த சென்னியன், திகைத்த
நெஞ்சன்,
வெந்து அழிந்து உருகும் மெய்யன், விழுப் புகைப்
படலம் விம்ம,
அந்தரின் அலமந்து, அஞ்சி, துயர் உழந்து,
அலக்கண் உற்றான்.–66-

மறி கடற்கு இறைவன்- அலைகள் மடிந்து விழும் கடலுக்கு
அரசனான வருணன்; வாயில் சிந்திய மொழியன்- வாயிலிருந்து
சிந்தும் சொற்களை உடையவனாயும்; தீந்த சென்னியன்-
தீயினால் தீய்ந்து போன தலையை உடையவனாயும்; திகைத்த
நெஞ்சன்- திகைப்புண்ட மனத்தை உடையவனாகவும்; வெந்து
அழிந்து உருகும் மெய்யன்- தீயால் வெந்து, உருவழிந்து,
உருகுகின்ற உடலை உடையவனாகவும்; விழுப்புகைப் படலம்
விம்ம – மிகுந்த புகைக் கூட்டம் எங்கும் நிறைந்து இருப்பதால்;
அந்தரின் அலமந்து- கண் பார்வை இல்லாதவனைப் போலத்
தடு மாறிக் கொண்டு; அஞ்சித்துயர் உழந்து- பயந்து கொண்டு
துன்பத்தால் வருந்துபவனாய்; அலக்கண் உற்றான் வந்தனன்-
வேதனைப்பட்டு வந்தான்.

———

வருணன் இராமபிரானிடம் அடைக்கலம் வேண்டுதல்

6655.

‘நவை அறும் உலகிற்கு எல்லாம் நாயக! நீயே சீறின்,
கவயம் நின் சரணம் அல்லால், பிறிது ஒன்று
கண்டது உண்டோ?
இவை உனக்கு அரியவோதான்; எனக்கு என வலி
வேறு உண்டோ?
அவயம், நின் அவயம்!’ என்னா, அடுத்து அடுத்து
அரற்றுகின்றான்:–67-

நவை அறும் உலகிற்கு எல்லாம் நாயக- குற்ற மற்ற
இவ்வுலகுக்கெல்லாம் தலைவனாக விளங்கும் பெருமானே!; நீயே
சீறின்- (கருணைமிகுந்த மனத்தை உடைய) நீயே இவ்வாறு என்
மீது சினம் கொண்டாயானால்; கவயம் நின் சரணமல்லால்-
(எனக்குப் பாதுகாப்பான) கவசம் உனது பாதங்களே அல்லாமல்;
பிறிது ஒன்று கண்டதுண்டோ – வேறு ஒன்றினை நான்
பார்த்ததுண்டோ?; இவை உனக்கு அரியவோதான்- கடலுக்குத்
தீயிட்டு, உலகை நடுங்கச் செய்யும் இச் செயல் உனக்கு
அரியதொன்றே!; எனக்கு என வலி வேறுண்டோ- உனது
வலிமையாய் வாழ்கின்ற எனக்கு எனத்தனியான வலிமை
வேறுளதோ?; அவயம் நின் அவயம் என்னா- அடைக்கலம்
உனக்கு அடைக்கலம் என்று; அடுத்து அடுத்து
அரற்றுகின்றான்- அடுத்தடுத்துக் கூறி அரற்றுவானானான்.

————

‘ஆழி நீ; அனலும் நீயே; அல்லவை எல்லாம் நீயே;
ஊழி நீ; உலகும் நீயே; அவற்று உறை உயிரும் நீயே;
வாழியாய்! அடியேன் நின்னை மறப்பெனோ?
வயங்கு செந் தீச்
சூழுற உலைந்து போனேன்; காத்தருள்-சுருதி
மூர்த்தி!–68-

சுருதி மூர்த்தி-மறைகளின் வடிவாய்த் திகழ்பவனே!; ஆழிநீ
அனலும் நீயே- இந்தக் கடலும் நீதான்; கடலை எரித்த தீயும்
நீயே; அல்லவை எல்லாம் நீயே- இவையிரண்டுமல்லாத வானும்,
மண்ணும், விசும்பும் ஆகிய அனைத்தும் நீயே; ஊழிநீ உலகும்
நீயே- உலகத்தை அழிக்கின்ற கடையூழிக் காலமும் நீயே
உன்னால் அழிக்கப்படும் உலகமும் நீயே; அவற்று உறை உயிரும்
நீயே- அவ்வுலகத்துள் வாழும் எல்லா உயிரினங்களும் நீயே;
வாழியாய் அடியேன் நின்னை மறப்பனோ- என்றும் வாழ்கின்ற
பெருமானே அடியவனாகிய நான் உன்னை மறப்பேனோ?; வயங்கு
செந்தீச் சூழுற- விளங்குகின்ற செந்நிறத் தீ என்னைச் சூழ்ந்து
கொள்ள; உலைந்து போனேன்- (அதனால் நான்) அழிந்தே
போனேன்; காத்து அருள்- அடியேனைக் காத்து அடைக்கலம்
தந்தருள்வாயாக.

சுருதி – வேதம். ‘திடவிசும் பெரி வளி நீர் நிலம் இவை
மிசை, படர் பொருள் முழுவதுமாய் அவையவை தொறும்,
உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்” என்ற திருவாய்
மொழி நினைவு கூரத்தக்கது

———–

‘காட்டுவாய் உலகம்; காட்டிக் காத்து, அவை
கடையில் செந் தீ
ஊட்டுவாய்; உண்பாய், நீயே; உனக்கும் ஒண்ணாதது
உண்டோ?
தீட்டு வான் பகழி ஒன்றால் உலகங்கள் எவையும்
தீய
வீட்டுவாய்; நினையின், நாயேற்கு இத்தனை
வேண்டுமோதான்?–69-

காட்டுவாய் உலகம்- உலகங்களை யெல்லாம் படைப்பாய்;
காட்டிக் காத்து- படைத்ததோடு அவற்றைக் காக்கவும்
செய்வாய்; அவை கடையில் செந்தீ ஊட்டுவாய்- அவைகளை
ஊழிக்காலத்து முடிவில் ஊழிக் காலப்பெருந்தீயூட்டி அழிப்பாய்;
உண்பாய் நீயே- உலகனைத்தையும் உண்டு வயிற்றிலே வைத்துக்
காப்பவனும் நீயே; உனக்கும் ஒண்ணாததுண்டோ- எல்லாம்
வல்ல உனக்குச் செய்ய இயலாத செயலும் உண்டோ?; தீட்டுவான் பகழி
ஒன்றால் – தீட்டிக் கூர்மையாக்கப்பட்ட சிறந்ததொரு
அம்பினாலேயே; உலகங்கள் எவையும் தீய வீட்டுவாய்-
எல்லா உலகங்களும் தீய்ந்து போகும்படி அழிப்பாய்; நினையின்
நாயேற்கு- நினைத்துப் பார்த்தால், நாய் போன்ற உனது
அடியவனான எனக்கு; இத்தனை வேண்டுமோதான்- இத்தனை
சினம் வேண்டுமோ?.

——–

‘சண்ட வான் கிரண வாளால் தயங்கு இருட் காடு
சாய்க்கும்
மண்டலத்து உறையும் சோதி வள்ளலே! மறையின்
வாழ்வே!
பண்டை நான்முகனே ஆதி சராசரத்து, உள்ளப்
பள்ளப்
புண்டரீகத்து வைகும் புராதனா! போற்றி, போற்றி!–70-

சண்ட வான் கிரண வாளால் – கொடிய, சிறந்த
கிரணங்களாகிய வாளால்; தயங்கு இருள் காட்டைச் சாய்க்கும்
– விளங்குகின்ற இருளாகிய காட்டை வெட்டிச் சாய்க்கின்ற;
மண்டலத்து உறையும் சோதி வள்ளலே- சூரிய மண்டலத்தின்
மத்தியிலே தங்கியிருக்கும் ஒளி வடிவான வள்ளலே; மறையின்
வாழ்வே- வேதங்களின் வாழ்வாக விளங்குபவனே; பண்டை
நான்முகனே ஆதி- பழமையான பிரமன் முதலாகிய; சராசரத்து
உள்ளப் பள்ளப் புண்டரீகத்து வைகும் – நிற்பதனவும்,
இயங்குவனவுமான உயிர்களின் உள்ளமாகிய தாமரையிலே வசிக்கும்;
புராதனா போற்றி போற்றி- பழமைமிக்கவனே போற்றி போற்றி.

——–

“கள்ளமாய் உலகம் கொள்ளும் கருணையாய்!
மறையில் கூறும்
எள்ளல் ஆகாத மூலத்து யாதுக்கும் முதலாய் உள்ள
வள்ளலே! காத்தி” என்ற மா கரி வருத்தம் தீர,
புள்ளின்மேல் வந்து தோன்றும் புராதனா! போற்றி,
போற்றி!–71-

கள்ளமாய் உலகம் கொள்ளும் கருணையாய்- ஒருவரும்
உணராதவாறு உலகத்தை எல்லாம் உதரத்தில் வைத்துக்
காத்தருளிய கருணை மிக்கவனே; மறையில் கூறும்-வேதங்களில்
விரித்துக் கூறப்படுகின்ற; எள்ளல் ஆகாத மூலத்து- எங்கும்
இகழ்ந்து பேசமுடியாத மூலப்பகுதியிலிருந்து தோன்றிய;
யாதுக்கும் முதலாயுள்ள வள்ளலே- எல்லா உயிர்களுக்கும்
முதலாக உள்ள வள்ளலே; காத்தி என்ற மாகரி வருத்தம் தீர-
என்னைக் காத்தருள்வாயாக என்று முறையிட்ட பெருமை மிக்க
யானையின் துன்பம் தீர; புள்ளின் மேல் வந்து தோன்றும்-
பறவையரசனான கருடன் மீதமர்ந்து வந்து தோன்றிய; புராதனா
போற்றி போற்றி- பழமையோனே போற்றி போற்றி!

————

‘அன்னை நீ; அத்தன் நீயே; அல்லவை எல்லாம் நீயே;
பின்னும் நீ; முன்னும் நீயே; பேறும் நீ; இழவும் நீயே;
என்னை, “நீ இகழ்ந்தது” என்றது எங்ஙனே? ஈசன்
ஆய
உன்னை நீ உணராய்! நாயேன் எங்ஙனம்
உணர்வேன், உன்னை?’–72-

அன்னை நீ அத்தன் நீயே- எனக்குத் தாயும் நீ,
தந்தையும் நீயே; அல்லவை எல்லாம் நீயே- தாயும்
தந்தையுமல்லாத மற்ற எல்லா உறவும் நீயே; பின்னும் நீ
முன்னும் நீயே- எல்லாவற்றுக்கும் அந்தமும் நீ ஆதியும் நீயே;
பேறும் நீ இழவும் நீயே- எனக்குரிய நற்பேறுகளும் நீ இழப்பும்
நீயே; என்னை- (இவ்வாறு எல்லா நிலையிலும் உன்னையே
சார்ந்திருக்கும்) என்னைநோக்கி; ‘நீ இகழ்ந்தது’ என்றது
எங்ஙனே- ‘நீ என்னை இகழ்ந்தாய்’ என்று கூறுவது எப்படிப்
பொருந்துவதாகும்; ஈசன் ஆய உன்னை நீ உணராய்-
எல்லாம்வல்ல இறைவனாகிய நீயே உன்னை உணராதவனாய்
இருக்கிறாய்; உன்னை நாயேன் எங்ஙனம் உணர்வேன்-
எனவே, அடியவனாகிய நான் உனது வல்லபத்தை எவ்வாறு
உணர்வேன்?

“அத்தனாகி அன்னையாகி ஆளும்
எம்பிரானுமாய். ஒத்தொல்லாத பல் பிறப் பொழித்து நம்மை
ஆட் கொள்வான்’ என்ற திருச்சந்த விருத்தம் (115) ஒப்பு
நோக்கத் தக்கது ‘பேறும் நீ இழவும் நீயே’ என்பது
‘நல்குரவும் செல்வும்’ நரகும் சுவர்க்கமுமாய் வெல் பகையும்
நட்பும் விடமும் அமுதமுமாய், பல்வகையும் பரந்த பெருமான்’
என்ற திருவாய் மொழி (2656)யுடன் ஒப்பிட்டு உணரத்தக்கது

——–

பாய் இருள் சீய்க்கும் தெய்வப் பருதியைப் பழிக்கும்
மாலை,
மா இருங் கரத்தால், மண்மேல் அடியுறையாக
வைத்து,
‘தீயன சிறியோர் செய்தால், பொறுப்பது பெரியோர்
செய்கை;
ஆயிர நாமத்து ஐயா! சரணம்’ என்று அடியில்
வீழ்ந்தான்.–73-

பாய் இருள் சீய்க்கும்- எங்கும் பரவிய இருளைப்
போக்குகின்ற; தெய்வப் பருதியை- தெய்வத்தன்மை வாய்ந்த
சூரியனையும்; பழிக்கும் மாலை- பழித்துக் கீழானதென்று
கூறச் செய்யும் ஒளிமிக்க மாலை ஒன்றை; மாயிரும் கரத்தால்
– தனது பெரிய கைகளால்; மண் மேல் அடியுறையாக
வைத்து- (ராமபிரானுக்கு முன்பு) தரைமீது காணிக்கையாக
வைத்து; தீயன சிறியோர் செய்தால்- சிறியவர்கள்
அறியாமையினாலே தீமை செய்வார்களானால்; பொறுப்பது
பெரியோர் செய்கை- அத்தீமையைப் பொறுத்தருள்வது
பெரியவர்களின் செய்கையாகும்; ஆயிரம் நாமத்து ஐயா-
ஆயிரம் திருநாமங்களை உடைய தலைவனே; சரணம் என்று
அடியில் வீழ்ந்தான்- அடியேன் உனக்கு அடைக்கலம் என்று
கூறியபடி வருணன் இராமபிரானது திருவடிகளில் விழுந்தான்.

“சேராதன உளரோ
பெருஞ் செல்வர்க்கு வேதம் செப்பும், பேர் ஆயிரம் திண்
பெரும்புயம் ஆயிரம் பெய்துளவத், தாரார் முடி ஆயிரம் குரு
கூர்ச் சட கோபன் சொன்ன, ஆரா அமுதக் கவி ஆயிரம் அவ்
வரியினுக்கே’ என்ற சடகோபரந்தாதி (45) ஒப்பு நோக்கத் தக்கது.

———-

இராமபிரான் சினம் தணிந்து காலம் தாழ்த்தமைக்குக் காரணம் வினவுதல்

6662.

பருப்பதம் வேவது என்னப் படர் ஒளி படராநின்ற
உருப் பெறக் காட்டி நின்று, ‘நான் உனக்கு அபயம்’
என்ன,
அருப்பு அறப் பிறந்த கோபம் ஆறினான், ஆறா
ஆற்றல்
நெருப்பு உறப் பொங்கும் வெம் பால் நீர் உற்றது
அன்ன நீரான்.–74-

பருப்பதம் வேவது என்ன- ஒரு மலையே நெருப்புப்
பற்றி எரிவது போல; படர் ஒளி படரா நின்ற உருப்பெறக்
காட்டி நின்று- பரவிய ஒளி படர்ந்து நின்று தனது வடிவத்தை
நன்றாகக் காட்டி நின்று; நான் உனக்கு அபயம் என்ன-
உனக்கு நான் அடைக்கலம் என்று வருணன் கூற; அருப்பறப்
பிறந்த கோபம் ஆறினான்- இராமபிரான் மிகுதியாக உண்டான
சினம் தணிந்தான்; ஆறா ஆற்றல் நெருப்பு உற- தணியாத
வலிமை கொண்ட நெருப்புப் பொருந்தலால்; பொங்கும்
வெம்பால்- பொங்கிய காய்ந்த பாலில்; நீர் உற்றது அன்ன
நீரான் – நீர் தெளித்தால் தணிவது போன்ற தன்மையன்
ஆயினான்.

————

ஆறினாம்; அஞ்சல்; உன்பால் அளித்தனம் அபயம்,
அன்பால்;
ஈறு இலா வணக்கம் செய்து, யாம் இரந்திட,
எய்திடாதே,
சீறுமா கண்டு வந்த திறத்தினைத் தெரிவதாகக்
கூறுதி, அறிய’ என்றான்; வருணனும், தொழுது
கூறும்:–75-

ஆறினாம் அஞ்சல் உன்பால் அளித்தனம் அபயம்-
கோபம் தணிந்தேன், அஞ்சாதே உனக்கு அடைக்கலம்
அளித்தேன்; அன்பால் ஈறிலா வணக்கம் செய்து- உன்னிடம்
அன்பு கொண்டவனாய் உனக்கு முடிவில்லாத வணக்கம் செய்து;
யாம் இரந்திட எய்திடாதே- நான் பணிவுடன் கெஞ்சிக் கேட்க
வராமல்; சீறுமா கண்டு வந்த திறத்தினை- சீற்றமிகக் கொண்டு
நின்றதைக் கண்டு அதன் பிறகு இங்கு வந்த தன்மையை;
தெரிவதாகக் கூறுதி அறியஎன்றான்- நான் தெரிந்து
கொள்ளுமாறு கூறுவாயாக என்றான் இராமபிரான்; வருணனும்
தொழுது கூறும்- அதைக் கேட்ட வருணன் இராமபிரானை
வணங்கிக் கூறுவானானான்;

———–

‘பார்த்தனில் பொறையின் மிக்க பத்தினிக்கு உற்ற
பண்பு
வார்த்தையின் அறிந்தது அல்லால், தேவர்பால்
வந்திலேன், நான்;
தீர்த்த! நின் ஆணை; ஏழாம் செறி திரைக் கடலில்
மீனின்
போர்த் தொழில் விலக்கப் போனேன்; அறிந்திலேன்
புகுந்ததுஒன்றும்.’–76-

பார்த்தனில் பொறையின் மிக்க பத்தினிக்கு-
நிலமகளைக் காட்டிலும் பொறுமைமிக்க பத்தினியான சீதா
பிராட்டி; உற்ற பண்பு வார்த்தையின் அறிந்ததல்லால்-
நேர்ந்ததனை இப்போது உனது வார்த்தையால்
அறிந்தேனேயல்லாது; தேவர் பால் வந்திலேன் நான்- நான்
தேவர்களிடம் வந்தேனல்லேன் (எனவே பிராட்டியின் நிலையை
முன்பு அறியேன்); தீர்த்த! நின் ஆணை- தூய்மை மிக்கவனே!
உன் மீது ஆணையாகக் கூறுகிறேன்; ஏழாம் செறி திரைக்
கடலில்- அலைகள் மிகுந்து செறிந்துள்ள ஏழாவது கடலிலே;
மீனின் போர்த் தொழில் விலக்கப் போனேன்- மீன்கள்
தங்களுக்குள் பகை கொண்டு செய்த போரை விலக்கச்
சென்றிருந்தேன்; அறிந்திலேன் புகுந்தது ஒன்றும்- ஆதலால்
இடையில் நிகழ்ந்த செயல் ஒன்றினையும் அறியாதவனானேன்.

———

இராமபிரான் அம்புக்கு இலக்கு யாதென வருணன் கூறுதல்

6665.

என்றலும், இரங்கி, ஐயன், ‘இத் திறம் நிற்க; இந்தப்
பொன்றல் இல் பகழிக்கு அப்பால் இலக்கம் என்?
புகறி’என்ன,
‘நன்று’ என வருணன்தானும், ‘உலகத்து நலிவு தீர,
குன்று என உயர்ந்த தோளாய்! கூறுவல்’ என்று
கூறும்:–77-

என்றலும் இரங்கி ஐயன்- என்று வருணன் கூறக்
கேட்டதும் இராமபிரான் இரக்கம் கொண்டு வருணனை நோக்கி;
இத்திறம் நிற்க- இது இவ்வாறு இருக்கட்டும் (இனி நடப்பதைப்
பார்ப்போம்); இந்தப் பொன்றல் இல்பகழிக்கு- வில்லில்
பூட்டிய இந்த அழிவில்லாத அம்புக்கு (வீணாகப் போகாமல்);
அப்பால் இலக்கம் என் புகறி என்ன- இலக்கு யாதென்று
கூறுவாயாக என்று வினவ; நன்று என வருணன் தானும்-
நல்லது என்று வருணனும் ராமனை நோக்கி; குன்றென உயர்ந்த
தோளாய்- மலை போன்ற உயர்ந்த தோள்களை உடைய
பெருமானே; உலகத்து நலிவு தீர – இவ்வுலகத்தின்
துன்பமெல்லாம் தீரும்படி; கூறுவல் என்று கூறும்- அம்புக்கு
இலக்கம் யாதெனக் கூறுவேன் என்று சொல்லலானான்.

——————

‘மன்னவ! மருகாந்தாரம் என்பது ஓர் தீவின்
வாழ்வார்,
அன்னவர் சதகோடிக்கும் மேல் உளார், அவுணர்
ஆயோர்,
தின்னவே உலகம் எல்லாம் தீந்தன; எனக்கும் தீயார்;
மின் உமிழ் கணையை வெய்யோர்மேல் செல விடுதி’
என்றான்.–78-

மன்னவ- உலகனைத்துக்கும் மன்னனாக விளங்குபவனே;
மருகாந்தாரம் என்பதோர் தீவில் வாழ்வார்- மருகாந்தாரம்
என்ற பெயர் கொண்ட கடல் நடுவே உள்ள தீவில் வாழ்பவர்கள்;
அன்னவர் சத கோடிக்கு மேல் உளர்- அத்தகையோர் நூறு
கோடிக்கு மேற்பட்ட எண்ணிக்கையினராக உள்ளனர்; அவுணர்
ஆயோர் தின்னவே உலகமெல்லாம் தீந்தன- அரக்கர்களான
அவர்கள் தின்பதால் உலகமெல்லாம் அழிந்து போயிற்று;
எனக்கும் தீயார் – அவ்வரக்கர்கள் எனக்கும் தீங்கு செய்யும்
தீயவர்கள்; மீன் உமிழ் கணையை- மின்னலைப் போல ஒளியை
உமிழும் இந்த அம்பை; வெய்யோர் மேற்செல விடுதி
என்றான்- அந்தக் கொடியவர்கள் மேல் செல்லுமாறு விடுவாயாக
என்றான்.

———

நேடி, நூல் தெரிந்துளோர்தம் உணர்விற்கும், நிமிர
நின்றான்,
‘கோடி நூறு ஆய தீய அவுணரைக் குலங்களோடும்
ஓடி நூறு’ என்று விட்டான்; ஓர் இமை ஒடுங்கா
முன்னம்,
பாடி நூறாக நூறி மீண்டது, அப் பகழித் தெய்வம்.–79-

நேடி நூல் தெரிந்துளோர் தம்- நல்ல ஞான நூல்களைத்
தேடி, ஆராய்ந்து கற்றுத் தெளிந்த அறிவுடைய ஞானிகளது;
உணர்விற்கும் நிமிர நின்றான்- ஞான உணர்வுக்கும் எட்டாது
உயர்ந்து விளங்குபவனான இராமபிரான்; கோடி நூறு ஆயதீய
அவுணரை- (தனது அம்பினை நோக்கி) நூறு கோடியினரான
கொடிய அரக்கர்களை; குலங்களோடும் ஓடி நூறு என்று
விட்டான்- அவர்களது குலங்களோடும் ஓடிச் சென்று
அழிப்பாயாக என்று கூறி எய்தான்; ஓர் இமை ஒடுங்கா
முன்னம்- ஒரு இமைப்பொழுது ஆவதற்கு முன்பே; அப்
பகழித் தெய்வம்- அந்த அம்பாகிய தெய்வம்; பாடி நூறாக
நூறி மீண்டது- அவ்வரக்கரூர் தூளாகும்படி அழித்துவிட்டு
மீண்டு வந்தது.

உணர்ந்துணர்ந்துணரிலும் இறைநிலை உணர்வரிது’ (1.3.6) என்ற
திருவாய்மொழியும் நினைவு கூரலாம்.

———

ஆய்வினை உடையர் ஆகி, அறம் பிழையாதார்க்கு
எல்லாம்
ஏய்வன நலனே அன்றி, இறுதி வந்து அடைவது
உண்டோ?
மாய் வினை இயற்றி, முற்றும் வருணன்மேல் வந்த
சீற்றம்,
தீவினை உடையார்மாட்டே தீங்கினைச் செய்தது
அன்றே.–80-

ஆய்வினை உடையராகி- ஆராய்ந்து புரியும் நல்ல
செயல்களையே உடையவராகி; அறம்பிழையாதார்க்கு எல்லாம்-
அறநெறியிலிருந்து தவறாது வாழும் நல்லவர்களுக்கு எல்லாம்;
ஏய்வன நலனே அன்றி- எவ்விதத்தும் நன்மையே எய்துமே
யல்லாது; இறுதி வந்தடைவதுண்டோ- அழிவு வந்து அடைவதுண்டோ? (இல்லை); மாய் வினை இயற்றி-
அழியும்படியான செயலைச் செய்து; வருணன் மேல் வந்த
சீற்றம் – வருணன் மீது வந்த இராமபிரானது வெகுளி
(வருணனை எதுவும் செய்யாது); தீவினை உடையார் மாட்டே-
தீய செயல்களைப் புரிந்துவந்த மருகாந்தாரத்து அரக்கர் பக்கம்
சென்று; தீங்கினைச் செய்ததன்றே- அவர்களுக்குத் தீங்கை
விளைவித்ததல்லவா?

———-

பாபமே இயற்றினாரை, பல் நெடுங் காதம் ஓடி,
தூபமே பெருகும் வண்ணம், எரி எழச் சுட்டது
அன்றே,
தீபமே அனைய ஞானத் திரு மறை முனிவர் செப்பும்
சாபமே ஒத்தது அம்பு;-தருமமே வலியது அம்மா!–81-

பாபமே இயற்றினாரை- பாவம் மிக்க செயல்களையே புரிந்து
வந்த அரக்கர்களை; பல நெடும்காதம் ஓடி- பலகாதங்களாகிய
நெடும் தூரம் விரைந்து சென்று; தூபமே பெருகும் வண்ணம்-
மருகாந்தாரத் தீவு முழுதும் புகை சூழும்படி; எரி எழச் சுட்டது-
நெருப்பு எழும்படி சுட்டு அழித்தது; தீபமே அனைய ஞான- புற
இருளை மாற்றும் விளக்குப் போன்று, அக இருளை மாற்றவல்ல
தீபமாகிய ஞானம் மிக்க; திருமுறை முனிவர் செப்பும்-
தெய்வத்தன்மை வாய்ந்த வேதங்களை அறிந்த முனிவர்கள்
கூறுகின்ற; சாபமே ஒத்தது அம்பு- சாப மொழியை ஒத்தது
இராமபாணம்; தருமமே வலியது அம்மா- தருமம் எத்தனை
வலிவுடையது.

———

இராமன் வழி வேண்ட வருணன் சேதுகட்டச் சொல்லுதல்

6670.

‘மொழி உனக்கு அபயம் என்றாய்; ஆதலான், முனிவு
தீர்ந்தேன்;
பழி எனக்கு ஆகும் என்று, பாதகர் பரவை என்னும்
குழியினைக் கருதிச் செய்த குமண்டையைக் குறித்து
நீங்க,
வழியினைத் தருதி’ என்றான், வருணனை நோக்கி,
வள்ளல்.–82-

வள்ளல் வருணனை நோக்கி – வேண்டுவார்
வேண்டியதருளும் வள்ளலாகிய இராமபிரான் வருணனைப்
பார்த்து; மொழி உனக்கு அபயம் என்றாய்- ‘உனக்கு
அடைக்கலம்’ என்று ஒரு சொல் நீ சொன்னாய்; ஆதலால்
முனிவு தீர்ந்தேன்- அதனாலே உன் மீது கொண்டிருந்த சினம்
தீர்ந்தேன்; பழி எனக்கு ஆகும் என்று- இராமன் தனது
மனைவியைக் கூடக் காப்பாற்றும் வலிமை இல்லாதவன் என்று
உலக மக்கள் கூறும் பழிக்கு நான் ஆளாகட்டும் என்று; பாதகர்
பரவை என்னும் குழியினைக் கருதி – பாதகர்களாகிய
அரக்கர்கள் இலங்கைக்கு அரணாகக் கடல் என்ற குழி
இருப்பதைக் கருதி; செய்த குமண்டையைக் குறித்து-
செய்த கூத்தினைக் குறித்து; நீங்க வழியினைத் தருதி
என்றான்- அது நீங்க, இலங்கை செல்லுதற்குரிய வழியைத்
தருவாயாக என்றான்.

———-

ஆழமும் அகலம்தானும் அளப்ப அரிது எனக்கும்,
ஐய!
ஏழ் என அடுக்கி நின்ற உலகுக்கும் எல்லை
இல்லை;
வாழியாய்! வற்றி நீங்கில், வரம்பு அறு காலம்
எல்லாம்
தாழும்; நின் சேனை உள்ளம் தளர்வுறும்-தவத்தின்
மிக்காய்!–83-

தவத்தின் மிக்காய் – மிகுந்த தவம் பொருந்திய
பெருமானே; ஆழமும் அகலம் தானும் அளப்பரிது எனக்கும்
ஐய- ஐயனே! இந்தக் கடலின் ஆழத்தையும் அகலத்தையும்
அளந்தறிவதென்பது கடல் வேந்தனான எனக்கும் அரிய
தொன்றாகும்; ஏழ் என அடுக்கி நின்ற உலகுக்கும் எல்லை
இல்லை- ‘ஏழுலகங்கள்’ என அடுக்காக உள்ள உலகுக்கும்
கடலில்லையேல் எல்லையில்லை; வாழியாய் வற்றி நீங்கில்
– வாழ்வுக்குரிய இறைவனே, இந்தக் கடலை வற்றச் செய்து,
நீர் முழுவதையும் நீங்கச் செய்ய; வரம்பறு கால மெல்லாம்
தாழும்- அளவில்லாத காலம் தாமதமாகும்; நின் சேனை
உள்ளம் தளர்வுறும்- உனது வானர சேனை, காலம்
நீட்டிப்பதால் மனம்தளர்ந்து போகநேரிடும் (என்றான்).

————

‘கல்லென வலித்து நிற்பின், கணக்கு இலா உயிர்கள்
எல்லாம்
ஒல்லையின் உலந்து வீயும்; இட்டது ஒன்று
ஒழுகாவண்ணம்
எல்லை இல் காலம் எல்லாம் ஏந்துவென், இனிதின்;
எந்தாய்!
செல்லுதி, “சேது” என்று ஒன்று இயற்றி, என்
சிரத்தின் மேலாய்.’–84-

எந்தாய்- என் தந்தையே; கல் என வலித்து நிற்பின்-
கடல் நீரைக் கல்லைப் போலக் கடினமாக்கி நின்றால்;
கணக்கிலா உயிர்கள் எல்லாம் ஒல்லையில் உலந்து வீயும்-
கடலில் வாழும் கணக்கில்லாத உயிரினங்களெல்லாம் வாழ
முடியாதபடி விரைவில் இறந்து படும்; இட்டது ஒன்று ஒழுகா
வண்ணம்- என்னிடம் இட்டது எதுவும் கீழே ஒழுகிவிடாதபடி;
எல்லையில் காலமெல்லாம் ஏந்துவன்- அளவில்லாத
காலமெல்லாம் தாங்கி ஏந்திக் கொண்டிருப்பேன் என்
சிரத்தின் மேலாய்- எனது தலையின் மீதாக; சேது என்று
ஒன்று இயற்றி- அணை என்ற ஒன்றை இயற்றி; இனிதின்
செல்லுதி- அதன் வழியாக இனிதே செல்லுவாயாக (என்றான்)

———–

இராமபிரான் சேதுகட்டப் பணித்தல்

6673.

‘நன்று, இது புரிதும் அன்றே; நளிர் கடல் பெருமை
நம்மால்
இன்று இது தீரும் என்னில், எளிவரும் பூதம்
எல்லாம்;
குன்று கொண்டு அடுக்கி, சேது குயிற்றுதிர்’ என்று
கூறிச்
சென்றனன், இருக்கை நோக்கி; வருணனும்
அருளின் சென்றான்.–85-

நன்று இது புரிதும்- நல்லது இதைச் செய்வோம் என்று
கூறிய இராமபிரான்; நம்மால் நளிர்கடல் பெருமை- கடல்மீது
அணைகட்டுவோமானால், நம்மால் இந்தக் குளிர்ந்த
கடலுக்குள்ள பெருமை; இன்று இது தீரும் என்னில்- நாம்
அணைகட்டிக் கடந்து செல்வதால் தீருமாயின்; பூதமெல்லாம்
எளிவரும்- மற்ற நான்கு பூதங்களும் நமக்கு எளிமைப்படும்;
குன்று கொண்டு அடுக்கிச் சேது குயிற்றுதிர்- குன்றுகளைக்
கொண்டு வந்து அடுக்கிக் கடலின்மீது அணைகட்டுங்கள்; என்று
கூறிச் சென்றனன் இருக்கை- என்று வானர வீரர்களுக்குப்
பணித்து விட்டுத் தனது இருப்பிடம் செல்லலானான்; வருணனும்
அருனின் சென்றான்- வருணனும் இராமபிரானது அருளுக்கு
உரியவனாகி (விடைபெற்றுச்) சென்றான்.

—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/–5. இலங்கை கேள்விப் படலம்–

November 3, 2020

இராமன் வீடணனுக்கு உறையுள் அளித்தலும், சூரியன் மறைதலும்

வந்து அடி வணங்கிய நிருதர் மன்னவற்கு
அந்தம் இலாதது ஓர் உறையுள் அவ்வழித்
தந்தனன் விடுத்த பின், இரவி, ‘தன் கதிர்
சிந்தின வெய்ய’ என்று எண்ணி, தீர்ந்தனன். 1-

வந்து அடி வணங்கிய நிருதர் மன்னவற்கு- பாடி வீட்டை
வலம் வந்தபின், வந்து இராமபிரானது திருவடிகளை வணங்கிய
அசுரர் குலவேந்தனான வீடணனுக்கு; அந்தம் இல்லாததோர்
உறையுள்- எல்லையற்ற பரப்பை உடைய ஒரு உறைவிடத்தை;
அவ்வழித் தந்தனன் விடுத்தபின் – அந்தப் பாசறையிலே
கொடுத்து அவனை அனுப்பி வைத்தபின்; இரவிதன் கதிர் சிந்தின
வெய்ய என்று எண்ணி – சூரியன் தனது கதிர்கள் வெப்பம் மிக்கன
என நினைத்து; தீர்ந்தனன் – தனது கிரணங்களைச் சுருங்கச்
செய்தான் மறைந்தான்.

————

அந்தி மாலையின் தோற்றம்

சந்தி வந்தனைத் தொழில் முடித்து, தன்னுடைப்
புந்தி நொந்து, இராமனும் உயிர்ப்ப, பூங் கணை
சிந்தி வந்து இறுத்தனன், மதனன்; தீ நிறத்து
அந்தி வந்து இறுத்தது; கறுத்தது அண்டமே. 2-

சந்தி வந்தனைத் தொழில் முடித்து – (சூரியன்
மறைந்ததும் மாலை நேரம் என்பதால் இராமபிரான்)
சந்தியாவந்தனம் செய்து முடித்து); தன் நெடும் புந்தி நொந்து
– தனது நெடிய மனம் நொந்து; இராமனும் உயிர்ப்ப –
இராமபிரானும் (சீதையைப் பிரிந்த துயரால்) பெருமூச்சு விட;
மதனன் பூங்கணை சிந்திவந்து – மன்மதனும் மலரம்புகளை
எய்து கொண்டு வந்து; இறுத்தனன் – அங்கு தங்கலாயினான்;
தீநிறத்து அந்திவந்து இறுத்தது – நெருப்புப் போன்ற நிறத்தை
உடைய அந்தி மாலை வந்தடைந்தது; அண்டம் கறுத்தது –
(அதனால்) வானம் இருண்டு கறுத்தது.

———–

மாத் தடந் திசைதொறும் வளைத்த வல் இருள்
கோத்தது, கருங் கடல் கொள்ளை கொண்டென்
நீத்த நீர்ப் பொய்கையில் நிறைந்த நாள்மலர்
பூத்தென மீன்களால் பொலிந்தது, அண்டமே. 3-

மாத்தடந்திசை தொறும் – (பகல் முழுதும் பரிதிக்குப்
பயந்து) பெரியபரந்த திசைகள் தோறும் சென்று; மறைந்த வல்
இருள் – மறைந்திருந்த வலிய இருளானது; கருங்கடல்
கொள்ளை கொண்டென- கரிய கடல் நீர் உலகத்தைக்
கொண்டது போல;கோத்தது – வந்து கவிந்து கொண்டது; நீத்த நீர்ப்
பொய்கையில்- நிறைந்த நீரையுடைய பொய்கையிலே; நிறைந்த
நாண்மலர்பூத்தென- நிறைந்த அன்றலர்ந்தமலர்கள் பூத்தது
போல; அண்டம் மீன் குலம் பொலிந்தது – வானத்திலே
விண்மீன்கள் விளங்கின.

———

சில் இயல் கோதையை நினைந்து தேம்பிய
வில்லியைத் திரு மனம் வெதுப்பும் வேட்கையால்,
எல்லியைக் காண்டலும் மலர்ந்த ஈட்டினால்,
மல்லிகைக் கானமும், வானம் ஒத்ததே. 4-

சில் இயல் கோதையை நினைந்து – சில வகைகளாக
அழகு படுத்தும் கூந்தலையுடைய சீதா பிராட்டியை நினைத்து;
தேம்பிய வில்லியை – வருந்துகின்ற வில்வீரனான இராமனை;
திருமனம் வெதுப்பும் வெம்மையால் – அவனது அழகிய
மனத்தை வெதுப்புகின்ற வெப்பத்தால்; எல்லியைக்
காண்டலும் – இரவைக் கண்டவுடனே; மலர்ந்த ஈட்டினால்-
மலர்ந்திருக்கும் தன்மையால்; மல்லிகைக் கானமும் வானமும்
ஒத்தது – மல்லிகைக் காடும் விண்மீன்கள் பொலியும்
வானத்தை ஒத்தது.

—————-

ஒன்றும் உட் கறுப்பினோடு, ஒளியின் வாள் உரீஇ,
‘தன் திருமுகத்தினால் என்னைத் தாழ்த்து அற
வென்றவள் துணைவனை இன்று வெல்குவேன்’
என்றது போல, வந்து எழுந்தது – இந்துவே. 5-

ஒன்றும் உட் கறுப்பினோடும் – பொருந்திய உள்ளத்தே
பகைமையோடும்; ஒளியின் வாள் உரீஇ – ஒளியாகிய வாளை
உருவிக் கொண்டு; தன்தனி முகத்தினால் – தனது ஒப்பற்ற
முகத்தினாலே; என்னைத் தாழ்த்து – என்னைத் தாழ்ந்து
போகச் செய்து; அறவென்றவள் – அடியோடு வெற்றி
பெற்றவளாகிய சீதாபிராட்டியின்; துணைவனை இன்று
வெல்குவேன்-துணைவனான இராமபிரானை இன்று நான் வெல்லுவேன்; என்றது
போல – என்று கூறுவதுபோல; இந்து வந்து எழுந்தது-
வானத்திலே சந்திரன் வந்து எழுந்தான்.

———-

‘கண்ணினை அப்புறம் கரந்து போகினும்,
பெண் நிறம் உண்டுஎனின், பிடிப்பல் ஈண்டு’ எனா,
உள் நிறை நெடுங் கடல் உலகம் எங்கணும்
வெண் நிற நிலவு எனும் வலையை வீசினான். 6-

கண்ணினை அப்புறம்- கண்ணுக்குப் புலனாகாதபடி
அப்புறத்தில்; கரந்துபோகினும்- மறைந்து சென்றாலும்; பெண்
நிறம் உண்டெனில்- சீதை என்னும் பெண்ணின் உடல்
இருக்குமானால்; பிடிப்பல் ஈண்டு எனா – இப்போதே
பிடிப்பேன் என்று; உள் நிறை நெடுங்கடல்- உள்ளே நிறைந்த
நீரையுடைய கடல் சூழ்ந்த; உலகம் எங்கணும்- இவ்வுலகம்
எங்கும்; வெண் நிற நிலவு எனும் – வெண்மை நிறமான
நிலவொளி என்னும்; வலையை வீசினான் – வலையைச்
சந்திரன் வீசினான்.

———–

புடைக்கை வன் திரை எடுத்து ஆர்க்கும் போர்க் கடல்,
‘உடைக் கருந் தனி நிறம் ஒளித்துக் கொண்டவன்,
அடைக்க வந்தான் எனை, அரியின் தானையால்;
கிடைக்க வந்தான்’ எனக் கிளர்ந்தது ஒத்ததே. 7-

புடைக்கை வன்திரை எடுத்து – பக்கங்களிலுள்ள
கைகளாகிய வலிய அலைகளை வீசி; ஆர்க்கும் போர்க் கடல்
– ஆரவாரம் செய்து போர்புரிய வரும் கடலானது; உடைக் கரும்
தனிநிறம் – என்னுடைய கருமையான ஒப்பற்ற நிறத்தினை;
ஒளித்துக் கொண்டவன் – தான் கவர்ந்து வைத்துக்
கொண்டவனாகிய இராமன்; அரியின் தானையால் –
வானரங்களின் படையைத் துணைகளாகக் கொண்டு; எனை அடைக்க வந்தான்- என்னைத்
தடுத்து அணைகட்ட வந்தான்; கிடைக்க வந்தான்- எனது
கைக்கு அகப்படும்படி இப்போது வந்துவிட்டான்; எனக்
கிளர்ந்தது ஒத்தது – என்று பொங்கி எழுந்தது போல் இருந்தது.

———–

மேல் உகத் தொகுதியால் முதிர்ந்த மெய் எலாம்
தோல் உகுத்தாலென, அரவத் தொல் கடல்,
வாலுகத்தால் இடைப் பரந்த வைப்பு எலாம்,
பால் உகுத்தாலென, நிலவு பாய்ந்ததால். 8-

மேல் உகத் தொகுதியால்- கடந்துபோன பல யுகங்களால்;
முதிர்ந்த மெய் எலாம் – முதுமையடைந்த தன் உடலெல்லாம்;
தோல் உகுத்தால் என – தோலை உரித்தது போல; அரவத்
தொல்கடல்- பெரிய ஒலியையுடைய பழைமை வாய்ந்த கடல்;
வாலுகத்தால் இடை பரந்த வைப் பெலாம் – மணல்
குன்றுகளால் இடையே பரந்த இடமெல்லாம்; பால் உகுத்தால்
என – பாலைச் சொரிந்தது போல்; நிலவு பாய்ந்தது- நிலவு
பாய்ந்து பரவியது.

—————

மன்றல்வாய் மல்லிகை எயிற்றின், வண்டு இனம்
கன்றிய நிறத்தது, நறவின் கண்ணது,
குன்றின்வாய் முழையின் நின்று உலாய கொட்பது,
தென்றல் என்று ஒரு புலி உயிர்த்துச் சென்றதால். 9-

மன்றல்வாய் மல்லிகை எயிற்றின் – மணம்
பொருந்திய மல்லிகை அரும்புகளாகிய பற்களையும்; வண்டினம்
கன்றிய நிறுத்தது- வண்டினமாகிய கரிய கோடுகளை உடைய உடலையும்;
நறவின் கண்ணது- தேனாகிய சிவந்த கண்களையும்; குன்றின்
வாய் முழையின் நின்று – மலையிடத்தே உள்ள குகையிலிருந்து;
உலாய கொட்பது – உலாவும் தன்மையுடையதுமாகிய; தென்றல்
என்று ஒரு புலி – தென்றல் என்னும் ஒரு புலியானது;
உயிர்த்துச் சென்றது- பெருமூச்சுவிட்டபடி வந்தது.

——————–

கரத்தொடும் பாழி மாக் கடல் கடைந்துளான்
உரத்தொடும், கரனொடும், உயர ஓங்கிய
மரத்தொடும், தொளைத்தவன் மார்பில், மன்மதன்
சரத்தொடும் பாய்ந்தது, நிலவின் தாரை வாள். 10-

கரத்தொடும்பாழிமாக்கடல் கடைந்துளான் – தனது
கைகளினாலே வன்மைமிக்க பெரிய பாற்கடலைக் கடைந்த
வாலியினது; உரத்தொடும் கரனொடும்- மார்பையும், கரனையும்;
உருவ ஓங்கிய மரத்தொடும் – உயர்ந்து வளர்ந்த வடிவத்தை
உடைய ஏழுமரங்களையும்; தொளைத்தவன்- ஊடுருவிச்
செல்லுமாறு அம்புதைய்த்த இராமபிரானுடைய; மார்பில்
– மார்பிலே (இன்று); மன்மதன் சரத்தொடும்-
மன்மதனுடைய அம்புகளோடு; நிலவின்தாரை வாள்
பாய்ந்தது- நிலவின் கதிர்களாகிய வாளும் பாய்ந்தது.

——————

இராமன் சீதையை நினைந்து வருந்துதல்

உடலினை நோக்கும்; இன் உயிரை நோக்குமால்;
இடரினை நோக்கும்; மற்று யாதும் நோக்கலன்;
கடலினை நோக்கும்; அக் கள்வன் வைகுறும்
திடரினை நோக்கும்; தன் சிலையை நோக்குமால். 11-

உடலினை நோக்கும்- (அப்போது இராமபிரான்) சீதையின்
பிரிவால் மெலிந்து போன தனது உடலைப் பார்த்தான்; இன்
உயிரை நோக்கும் – தனது இனிய உயிர் போன்றவளாகிய
சீதாபிராட்டியை மனதால் நினைத்தான்; இடரினை நோக்கும்-
அப்பிராட்டிக்கு நேர்ந்த துன்பத்தை நினைத்தான்; மற்று
யாதும் நோக்கலன் – வேறெதுவும் எண்ணாதவனாயிருந்தான்;
கடலினை நோக்கும் – தன்னெதிரே உள்ள கடலைப்
பார்ப்பான்; அக்கள்வன் வைகுறும்- சீதையைக் கவர்ந்து சென்ற
கள்வனாகிய இராவணன் தங்கியிருக்கும்; திடரினை நோக்கும் –
இலங்கையாகிய திட்டைப் பார்க்கிறான்; தன் சிலையை
நோக்கும் – தன் கையிலிருக்கும் வில்லையும் பார்த்துக்
கொள்கிறான்.

————

பணி பழுத்து அமைந்த பூண் அல்குல் பண்பினால்,
பிணி பழுத்து அமைந்தது ஓர் பித்தின் உள்ளத்தான்,
அணி பழுத்து அமைந்த முத்து அரும்பு செம்மணி
மணி பழுத்து அமைந்த வாய் மறக்க வல்லனோ? 12-

பணி ப ழுத்து அமைந்த பூண் – வேலைப்பாடு நிரம்பிப்
பொருந்திய அணிகலன்களை அணிந்துள்ள; அல்குல் பண்பினால்
– அல்குலையுடைய சீதா பிராட்டியின் சிறந்த பண்புகளை
நினைத்துப் பார்ப்பதால்; பிணி பழுத்து அமைந்ததோர்-
காமநோய் முதிர்ந்து அமைந்தமையால் உண்டானதொரு; பித்தின்
உள்ளத்தான்- பித்துப் பிடித்தது போன்ற மனத்தை உடைய
இராமபிரான்; அணி பழுத்து அமைந்த – அழகு பழுத்து அமைந்ததாகிய; முத்து அரும்பு செம்மணி – முத்துக்கள்
அரும்பிய சிவந்த மணி போன்ற; மணி பழுத்து அமைந்தவாய்
– அழகு நிறைந்து விளங்கும் சீதாபிராட்டியின் திருவாயினை;
மறக்க வல்லனோ – மறக்கும் வல்லமை உடையவனோ?
வல்லன்.

————-

வீடணனோடு மேல் விளைவு பற்றி எண்ணமாறு சுக்கிரீவன் இராமனிடம் கூறுதல்

ஆயது ஓர் – அளவையின், அருக்கன் மைந்தன், ‘நீ
தேய்வது என்? காரியம் நிரப்பும் சிந்தையை;
மேயவன் தன்னொடும் எண்ணி, மேல் இனித்
தூயது நினைக்கிலை’ என்னச் சொல்லினான். 13-

ஆயதோர் அளவையின் – (சீதையின் நினைவால் இராமன்
வருந்திய) அத்தகைய நேரத்திலே; அருக்கன் மைந்தன்-
சூரியகுமாரனான சுக்கிரீவன் (இராமபிரானை நோக்கி); நீ
தேய்வது என்- (பெருமானே) நீ இவ்வாறு வருந்தித் தேய்வது
என்ன பயனைக் கருதி; காரியம் நிரப்பும் சிந்தையை
– செய்யவேண்டிய காரியங்களை எண்ணி நிறைவேற்றத் தக்க
சிறந்த மனத்தை உடையவன் நீ (ஆதலின்); மேயவன்
தன்னொடும் எண்ணி – நம்மை நாடி வந்துள்ள இலங்கை
வேந்தனான வீடணனுடன் கலந்து சிந்தித்து; மேல் இனித்
தூயது நினைக்கிலை – இனிமேல் நடக்க வேண்டிய நமக்கு
நன்மைதரும் செயல்களை நினைக்காமலிருக்கிறாயே; என்னச்
சொல்லினான் – என்று இராமபிரானிடம் கூறலானான்.

—————

இராமன் கட்டளைப்படி, வீடணனை அழைத்துவருதல்

அவ்வழி, உணர்வு வந்து, அயர்வு நீங்கினான்,
‘செவ்வழி அறிஞனைக் கொணர்மின், சென்று’ என,
‘இவ்வழி வருதி’ என்று இயம்ப, எய்தினான் –
வௌ; வழி விலங்கி, நல் நெறியை மேவினான். 14-

அல்வழி உணர்வு வந்து- அப்பொழுது, தன்னுணர்வு
வரப்பெற்று; அயர்வு நீங்கினான் – மனத்துயர் நீங்கியவனான
இராமபிரான்; செவ்வழி அறிஞனைக் கொணர்மின் சென்றென-
நன்னெறி நின்று ஒழுகும் அறிஞனான வீடணனை அழைத்து வருக
என வானர வீரர்களுக்குக் கட்டளை இட; இவ்வழி வருதி என்று
இயம்ப – (சென்ற வானரவீரர்கள் வீடணனை அடைந்து)
இராமபிரானிடம் வருக என்று கூற; வெவ்வழிவிலங்கி
நல்நெறியை மேவினான் – தீய நெறியிலிருந்து நீங்கி,
நல்லநெறியைக் கடைப் பிடிப்பவனாகிய வீடணன்; எய்தினான்
– இராமபிரான் இருக்குமிடத்தை அடைந்தாள்.

இராமபிரான் அனுமனுக்குச் ‘சொல்லின் செல்வன்’ என்றொரு
பெயர் சூட்டிய திருவாயால் வீடணனை “செவ்வழி அறிஞன்”
என்றது குறிப்பிடத்தக்கது. இராமபிரான் கூற்றாகப் போற்றிக்
கூறியது போதாதென்று கவிக் கூற்றாகவும் ‘வெவ்வழி விலங்கி
நன்னெறியை மேவினான்” என்றது குறிப்பிடத்தக்கது.

————

இராமன் இலங்கையின் அரண் முதலியன பற்றி வீடணனை வினவுதல்

‘ஆர்கலி இலங்கையின் அரணும், அவ் வழி
வார் கெழு கனை கழல் அரக்கர் வன்மையும்,
தார் கெழு தானையின் அளவும், தன்மையும்,
நீர் கெழு தன்மையாய்! நிகழ்த்துவாய்’ என்றான். 15-

ஆர்கலி இலங்கையின் அரணும் – கடல் சூழ்ந்த
இலங்கையின் மதில் முதலிய பாதுகாப்புப் பற்றியும்; அவ்வழி
வார் கெழு கனைகழல் அரக்கர் வன்மையும்- அங்கு நீண்டு
ஒலிக்கும் வீரக் கழல் அணிந்தவர்களான இராவணன் முதலிய
அரக்கர்களின் வலிமைபற்றியும்; தார் கெழு தானையின்
அளவும் தன்மையும் – வெற்றி மாலை பொருந்திய இலங்கைப்
படையின் அளவு பற்றியும் தன்மை பற்றியும்; நீர் கெழு
தன்மையாய் – நற்குணங்கள் உடையவனே; நிகழ்த்துவாய்
என்றான் – கூறுவாயாக என, இராமபிரான் வீடணனைக்
கேட்டான்.

—————–

வீடணன் விடை பகர்தல்

எழுதலும், ‘இருத்தி’ என்று இராமன் ஏயினான்,
முழுது உணர் புலவனை; முளரிக் கண்ணினான்
பழுது அற வினவிய பொருளைப் பண்புற,
தொழுது உயர் கையினான், தெரியச் சொல்லினான்: 16-

எழுதலும்- (இராமன் கேட்டவைகளுக்கான விடை கூற
வீடணன்) எழுந்தான், அவ்வாறு எழலும்; முழுதுணர் புலவனை
– முற்றும் உணர்ந்த அறிஞனான வீடணனை;’இருத்தி’ என்று
இராமன் ஏயினான் – (உட்கார்ந்தே பேசலாம் என்ற
எண்ணத்தால்) இருப்பாயாக என்று இராமபிரான் கூறினான்;
முளரிக் கண்ணினான் – தாமரை மலர் போன்ற
கண்களைஉடைய இராமபிரான்; பழுதற வினவிய பொருளை
– குற்றம் நீங்கக் கேட்ட பொருள்களைப் பற்றியெல்லாம்;
பண்பினால் தொழுதுயர் கையினான் – பண்போடு,
தொழுதுயர்த்திய கைகளை உடையவனாக; தெரியச்
சொல்லினான்- இராமபிரான் நன்கு தெரிந்து கொள்ள
கூறுவானாயினான்.

————-

இலங்கையின் அரண்

‘நிலையுடை வட வரை குலைய நேர்ந்து, அதன்
தலை என விளங்கிய தமனியப் பெரு
மலையினை மும் முடி வாங்கி, ஓங்கு நீர்
அலை கடல் இட்டனன், அனுமன் தாதையே. 17-

அனுமன்தாதை – அனுமானுடைய தந்தையாகிய வாயுதேவன்
(காற்று); நிலையுடைவடவரை – நிலைத்ததன்மை கொண்ட
வடமேருமலையை; குலைய நேர்ந்து – நிலைகுலைந்து
சிதையும்படி செய்ய நினைத்து; அதன் தலை என விளங்கிய
– அந்தவடமலையின் முடி என்று திகழ்ந்த; தமனியப்
பெருமலையினை- பொன்மயமான பெரிய மேரு மலையை;
மும்முடிவாங்கி – மூன்று சிகரங்களைப் பறித்து வாங்கி; ஓங்கு
நீர் அலைகடல் இட்டனன்- நிறைந்த நீரையுடைய கடலிலே
இட்டான்.

————

‘ஏழு நூறு யோசனை அகலம்; இட்ட கீழ்
ஆழம் நூறு யோசனை; ஆழி மால் வரை,
வாழியாய்! உலகினை வளைந்த வண்ணமே
சூழும் மா மதில்; அது சுடர்க்கும் மேலதால். 18-

வாழியாய்- நல்வாழ்வுடையவனே!; ஏழு நூறு யோசனை
அகலம் – எழுநூறு யோசனை அகலமுடையதாகவும்; இட்ட கீழ்
ஆழம் நூறு யோசனை – கீழ் ஆழம் நூறு யோசனை
உடையதாகவும்; சூழும் மாமதில் – இலங்கை நகரைச்
சூழ்ந்திருக்கும்படி கட்டப்பட்ட பெரிய மதில்; ஆழி மால் வரை
– சக்கரவாளகிரி; உலகினை வளைத்த வண்ணமே – உலகத்தை
வளைத்திருப்பதைப் போன்றதாகும்; அது சுடர்க்கும் மேலதால்
– அம்மதில் சூரிய, சந்திரர்களுக்கும் எட்டாதபடி மேலே
உயர்ந்ததாகும்.

—————-

‘மருங்குடை வினையமும், பொறியின் மாட்சியும்,
இருங் கடி அரணமும், பிறவும், எண்ணினால்,
சுருங்கிடும்; என், பல சொல்லி? சுற்றிய
கருங் கடல் அகழது; நீரும் காண்டிரால். 19-

மருங்கு உடை வினையமும் – அந்த மதிலிடத்தே
அமைந்திருக்கும் வஞ்சக வேலைப்பாடுகளும்; பொறியின்
மாட்சியும் – இயந்திரங்களின் சிறப்பும்; இருங்கடி அரணமும்
– பெரிய காவலையுடைய மதிலும்; பிறவும் எண்ணினால்
– மற்ற ஏற்பாடுகளையும் நினைத்துப் பார்த்தால்; சுருங்கிடும் –
ஆயுட்காலம் போதாதபடி சுருங்கிவிடும்; என் பல சொல்லி
– பலவற்றையும் சொல்வதால் என்ன பயன்?; சுற்றிய
கருங்கடல் அகழது – சுற்றிலுமுள்ள கரிய பெரிய கடலே
இலங்கையின் அகழியாயுள்ளது; நீரும் காண்டிரால்- நீங்களும்
நேரில் காணலாம்.

————–

வாயில் முதலியவற்றைக் காக்கும் காவலர்

‘வட திசை வயங்கு ஒளி வாயில் வைகுவோர்,
இடை இலர், எண் – இரு கோடி என்பரால்;
கடையுக முடிவினில் காலன் என்பது என்?
விடை வரு பாகனைப் பொருவும் மேன்மையோர். 20-

வடதிசை வயங்கு ஒளி வாயில் வைகுவோர்- இலங்கை
நகரின் வடக்குத் திசையில் உள்ள ஒளி விளங்கும் வாயிலில்
தங்கிக்; காவல் காப்பவர்கள்; இடை இலர் – எதற்கும்
பின் வாங்காத வலிமை உள்ளவர்கள்; எண் இரு கோடி என்பர்
– பதினாலு கோடி பேர் என்பார்கள்; கடையுக முடிவினில்
– யுகாந்த காலமுடிவிலே; காலன் என்பது என்
– உயிர்களையெல்லாம் கொல்லுகின்ற எமனைப் போன்றவர் என்று
எப்படிச் சொல்வது?; விடை வரு பாகனை – காளை
வாகனத்திலே வரும் சிவபிரானை; பொருவும் மேன்மையோர் –
ஒத்த பெருமை மிக்கவராவார்.

————–

‘மேல் திசை வாயிலின் வைகும் வெய்யவர்க்கு
ஏற்றமும் உள, அவர்க்கு இரண்டு கோடி மேல்;
கூற்றையும் கண் – பொறி குறுகக் காண்பரேல்,
ஊற்றுறு குருதியோடு உயிரும் உண்குவார். 21-

மேல்திசை வாயிலில் வைகும்- இலங்கை மாநகரின் மேற்குத்
திசை வாயிலைக் காவல் புரிந்து தங்கியுள்ள; வெய்யவர்க்கு
ஏற்றமும் உள- கொடியவர்களுக்குச் சில தனியான மேன்மைகளும்
உண்டு; அவர்க்கு இரண்டு கோடி மேல் – வடதிசை வாயிலில்
உள்ளவர்களை விட இரண்டு கோடி அதிகம் (எனவே இவர்கள் 12
கோடி பேர்); கூற்றையும் கண்பொறி குறுகக் காண்பரேல்-
எமனையும் கூட கண்ணைச் சிறிதே குறுக்கிப் பார்ப்பாரென்றால்;
ஊற்றுறு குருதியோடு உயிரும் உண்பர்- ஊறுகின்ற
இரத்தத்துடன் உயிரையும் உண்டு விடுவார்கள்.

செங்கண் சிறுச் சிறிதே எம் மேல் விழியாவோ” என்பது
கோதையார் வாக்கு.

———-

‘தென் திசை வாயிலின் வைகும் தீயவர்
என்றவர் எண் – இரு கோடி என்பரால்;
குன்று உறழ் நெடியவர் கொடுமை கூறி என்?
வன் திறழ் யமனையும் அரசு மாற்றுவார். 22-

தென்திசை வாயிலின் வைகும் தீயவர் – தென்திசை
வாயிலைக் காவல் புரியும் தீயவர்கள்; என்றவர் எண் இரு
கோடி என்பரால்- என்று கூறப்படுபவர் பதினாறு கோடிப் பேர்
என்பார்கள்; குன்று உறழ் நெடியவர்- மலைக்கு நிகரான
நெடிய உடலினர்; கொடுமை கூறி என் – இவர்களது
கொடியசெயலை என்னவென்று கூறுவது; வன்திறல் யமனையும்
– வலிய திறத்தை உடைய எமனையும் கூட; அரசு மாற்றுவார்- ஆட்சியை மாற்றித்
தாமே ஆள வல்லவராவார்.

———–

‘கீட்டிசை வாயிலின் வைகும் கீழவர்
ஈட்டமும் எண் – இரு கோடி என்பரால்;
கோட்டு இருந் திசை நிலைக் கும்பக் குன்றையும்
தாள் துணை பிடித்து, அகன் தரையின் எற்றுவார். 23-

கீழ்த்திசை வாயிலின் வைகும் கீழவர்- கிழக்குத்
திசையிலுள்ள வாயிலில் காவல் புரிந்திருக்கும் கீழ்மக்கள்;
ஈட்டமும் எண்இரு கோடி என்பரால் – கூட்டமும்
பதினாறுகோடி; கோட்டு – வலியதந்தங்களை உடைய;
இருந்திசை நிலை – அகன்ற எட்டுத் திசைகளிலும் நிலைத்து
நிற்கும்; கும்பக் குன்றையும்- மத்தகத்தையுடைய மலைபோன்ற
திக்கு யானைகளையும்; தாள் துணை பிடித்து- அவற்றின் இரு
கால்களையும் பிடித்துத் தூக்கி; அகன் தரையின் எற்றுவார்
– தரையிலே மோதியடித்துக் கொல்லும் வல்லமை உடையவர்கள்;
அகன்தரை-அகன்ற தரையிடம்.

————–

‘விண்ணிடை விழித்தனர் நிற்கும் வெய்யவர்
எண் – இரு கோடியின் இரட்டி என்பரால்;
மண்ணிடை வானவர் வருவர் என்று, அவர்
கண் இலர், கரை இலர், கரந்து போயினார். 24-

விண்ணிடை விழித்தனர் நிற்கும் வெய்யவர்
– வானத்திலே தேவர்கள் வரக்கூடும் என்பதால் உறங்காமல்
கண் விழித்தவர்களாக நின்று காவல் புரியும் கொடியவர்; எண்
இரு கோடியின் இரட்டி என்பரால் – பதினாறு கோடியின்
இரண்டு மடங்கான முப்பத்திரண்டு கோடி என்பார்கள்;
மண்ணிடை வானவர் வருவர் என்று – மண்ணுலகத்துக்கு
தேவர்கள் வருவார் என்று கருதி; கண்ணிலர் – ஒரு சிறிதும் கண்ணோட்டம் இல்லாதவர்களாய்;
கரந்து போயினார்- தமது வடிவத்தை மறைத்துக் கொண்டு,
வேறு வடிவத்திலே உலாவுபவர்கள்; கரை இலர் –
அளவற்றவராவர்.

—————

‘பிறங்கிய நெடு மதில் பின்னும் முன்னரும்,
உறங்கலர், உண் பதம் உலவை ஆதலால்,
கறங்கு எனத் திரிபவர் கணக்கு வேண்டுமேல்,
அறைந்துளது ஐ-இரு நூறு கோடியால். 25-

பிறங்கிய நெடுமதில் – விளங்கித் தோன்றும் அந்த நீண்ட
மதிலின்; பின்னும் முன்னரும்- பின்புறத்திலும்,
முன்புறத்திலுமாக; உறங்கலர் – சிறிதும் உறங்காதவராய்;
உண்பதம் உலவை ஆதலால்- அவர்கள் உண்ணும் உணவு
காற்று ஆதலால்; கறங்கெனத் திரிபவர்- அந்தக் காற்றை நாடிக்
காற்றாடி போலத் திரிவார்கள்; கணக்கு வேண்டுமேல்
– அவர்களது எண்ணிக்கை வேண்டுமானால்; அறைந்துளது
ஐயிரு கோடி – நூறு கோடி என்று சொல்லப்பட்டுள்ளது.

———-

‘இப்படி மதில் ஒரு மூன்று; வேறு இனி
ஒப்ப அரும் பெருமையும் உரைக்க வேண்டுமோ?
மெய்ப் பெருந் திரு நகர் காக்கும் வெய்யவர்
முப்பது கோடியின் மும்மை முற்றினார். 26-

இப்படி மதில் ஒரு மூன்று – இத்தகைய கட்டுக் காவலை
உடைய மதில்கள் மூன்றாகும்; வேறு இனி ஒப்பரும்
பெருமையும்- இதை விட வேறாக அந்த மதில்களின் ஒப்பற்ற
பெருமையை; உரைக்க வேண்டுமோ – விரிவாகக் கூறவும்
வேண்டுமோ?; மெய்ப் பெரும் திருநகர் – உண்மையான பெருமைமிக்க அந்த அழகிய
இலங்கை நகரை; காக்கும் வெய்யவர் – காவல் காக்கும்
கொடியவர்கள்; முப்பது கோடியின் மும்மை முற்றினார்-
தொண்ணூறு கோடிபேர் என நிறைந்துள்ளனர்.

————

‘சிறப்பு அவன் செய்திடச் செல்வம் எய்தினார்,
அறப் பெரும் பகைஞர்கள், அளவு இல் ஆற்றலர்,
உறப் பெரும் பகை வரின் உதவும் உண்மையர்,
இறப்பு இலர், எண் – இரு நூறு கோடியே. 27-

சிறப்பு அவன் செய்திட- அந்த இராவணன் சிறப்புச்
செய்ய; செல்வம் எய்தினார்- அவனால் செல்வம்
அடைந்தவர்களும்; அறப்பெரும் பகைஞர் – அறத்துக்குப்
பெரிய பகைவர்களாய் உள்ளவர்களும்; அளவு இல் ஆற்றலர்
– அளவில்லாத வலிமை உடையவர்களும்; உறப் பெரும் பகை
வரின் – அந்த இராவணனுடன் போரிடப் பெரும்பகைவர்
வருவாராயின்; இறப்பிலர் – எப்போதும் இராவணனது
கட்டளையை மீறாதவர்களுமானவர்கள்; எண் இரு கோடியே –
பதினாறு கோடி பேராவார்.

———————-

கோயில் வாயிலின் காவலர்

‘”விடம் அல, விழி” எனும், வெகுளிக் கண்ணினர்,
“கடன் அல, இமைத்தலும்” என்னும் காவலர்,
வட வரை புரைவன கோயில் வாயிலின்
இடம் வலம் வருபவர், எண் – எண் கோடியால். 28-

விடம் அல விழி எனும்- இவை விடம் அல்ல விழிகள்தான்
என்று கூறும்படி; வெகுளிக் கண்ணினர்- கோபம் மிக்க கண்களை
உடையவர்கள்; இமைத்தலும் கடன் அல – கண்களை
இமைப்பதும் நமது கடமையல்ல; என்னும் காவலர் – என்று
கூறும்படி காவல் காப்பவர்கள்; வட வரை புரைவன – வட
வரையான மேரு மலையைப் போன்றனவாகிய; கோயில்
வாயிலின்- இராவணனுடைய அரண்மனை வாயிலில்; இடம்
வலம் வருபவர்- இடதுசாரி, வலது சாரியாகத்
திரிந்துவருகின்றவர்கள்; எண்ணெண் கோடி- அறுபத்து நான்கு
கோடிப் பேராவர்.

——–

‘அன்றியும், அவன் அகன் கோயில் ஆய் மணி
முன்றிலின் வைகுவார் முறைமை கூறிடின்,
ஒன்றிய உலகையும் எடுக்கும் ஊற்றத்தார்;
குன்றினும் வலியவர்; கோடி கோடியால். 29-

அன்றியும் அவன் அகன் கோயில் – அல்லாமலும் அந்த
இராவணனுக்குரிய விசாலமான அரண்மனையில்; ஆய்மணி
முன்றிலின் – ஆராய்ச்சி மணி கட்டப்பட்டுள்ள முற்றத்திலே;
வைகுவார் முறைமை கூறிடின் – தங்கிக் காவல் புரிபவர்களின்
தன்மையைக் கூறுவோமாயின்; ஒன்றிய உலகையும் – ஒன்றாக
உள்ள உலகத்தை எல்லாம்; எடுக்கும் ஊற்றத்தார் – தமது
கைகளால் தூக்கவல்ல ஆற்றல் உள்ளவர்களும்; குன்றினும்
வலியவர் – மலையினும் வலிமைமிக்கவர்களும் ஆகிய வீரர்கள்;
கோடி கோடியே – கோடி கோடிப் பேராவர்.

———–

படைகளின் பெருக்கம்

‘தேர் பதினாயிரம் பதுமம்; செம் முகக்
கார்வரை அவற்றினுக்கு இரட்டி; கால் வயத்து
ஊர் பரி அவற்றினுக்கு இரட்டி; ஒட்டகம்
தார் வரும் புரவியின் இரட்டி சாலுமே. 30-

தேர் பதினாயிரம் பதுமம்- இராவணனது படையிலுள்ள
தேர்கள் பதினாயிரம் பதுமமாகும்; செம்முகக் கார் வரை
அவற்றினுக் கிரட்டி – சிவந்த புள்ளிகளைக்
கொண்டமுகத்தையுடைய கரிய மலைபோன்ற யானைகளின்
எண்ணிக்கை தேர்ப் படையிலும் இரண்டு மடங்கு (இருபதாயிரம்
பதுமம்); கால் வயத்து ஊர் பரி – கால்கள் வலியனவாய் ஏறிச்
செல்லப் பயன்படும் குதிரைகள்; அவற்றினுக்கு இரட்டி –
யானைப்படையை விட இரண்டுமடங்கு (நாற்பதாயிரம் பதுமம்);
ஒட்டகம் தார்வரு புரவியின் – ஒட்டகப் படை, மாலை
யணிந்த குதிரைப் படையை விட; இரட்டி சாலுமே – இரண்டு
மடங்கு நிறைந்ததாயிருக்கும் (எண்பதாயிரம் பதுமம்);

———–

‘பேயனேன், என், பல பிதற்றி? பேர்த்து அவன்
மா இரு ஞாலத்து வைத்த மாப் படை
தேயினும், நாள் எலாம் தேய்க்க வேண்டுவது,
ஆயிர வெள்ளம் என்று அறிந்தது – ஆழியாய்! 31-

ஆழியாய் – ஆணையாகிய சக்கரத்தை உடையவனே;
பேயனேன் – பேய் போன்றவனாகிய நான்; என் பல பிதற்றி
பேர்த்து- பலவும் திரும்பத்திரும்பக் கூறுவதால் என்ன பயன்?;
அவன் மாயிரு ஞாலத்து – அந்த இராவணன் இப் பெரிய
உலகத்திலே; வைத்த மாப்படை – நிறுத்தி வைத்துள்ள
பெரியபடை; நாளெலாம் தேயினும் – உலகுள்ள நாள் வரை
அழித்தாலும்; தேய்க்க வேண்டுவது – அழித்துக் கொண்டே
இருக்க வேண்டியதாய் இருக்கும்; ஆயிர வெள்ளம் என்று
அறிந்தது- எனத் தெரிந்தது ஆயிரம் வெள்ளம் அளவினதாகும்.

———–

இராவணனது துணைவர்கள்

‘இலங்கையின் அரண் இது; படையின் எண் இது;
வலங் கையில் வாள் சிவன் கொடுக்க வாங்கிய
அலங்கல் அம் தோளவன் துணைவர், அந்தம் இல்
வலங்களும் வரங்களும், தவத்தின் வாய்த்தவர். 32-

இலங்கையின் அரண் இது- இலங்கை மதிலின் பெருமை
இது; படையின் எண் இது – படைகளின் எண்ணிக்கை இது;
வலங்கையில் வாள்- இராவணன் தனது வலது கையிலே
தாங்கியுள்ளவாள்; சிவன் கொடுக்க வாங்கிய- சிவபிரான் தரப்
பெற்றுக் கொண்ட; அலங்கல் அம் தோளவன் – வெற்றி
மாலை சூடிய அழகிய தோள்களை உடைய இராவணனது;
துணைவர் – தம்பிமார்கள்; அந்தம் இல்வலங்களும்-
அழிவில்லாத வலிமைகளும்; வரங்களும் – பலவகையான
வரங்களும்; தவத்தின் வாய்த்தவர் – தாம் செய்த தவ
பலத்தாலே வாய்க்கப் பெற்றவராவர்.

—————

‘உகம் பல் காலமும் தவம் செய்து பெரு வரம் உடையான்,
சுகம் பல் போர் அலால் வேறு இலன், பொரு படைத் தொகையான்,
நகம் பல் என்று இவை இல்லது ஓர் நரசிங்கம் அனையான்,
அகம்பன் என்று உளன்; அலை கடல் பருகவும் அமைவான். 33-

உகம் பல் காலமும் தவம் செய்து – பலயுகங்கள் தவம்
செய்து; பெருவரம் உடையான் – பெரிய வரங்களைப்
பெற்றிருப்பவனும்; சுகம் பல்போரலால் வேறிலன்- பல
போர்களைச் செய்வதை விட வேறு இன்ப மில்லாதவனும்;
பெரும்படைத் தொகையான்- பெரிய படையை உடையவனும்;
நகம் பல் என்றிவை இல்லதோர்- நகம், பல் என்பவைகளைப்
பெற்றிருக்காத ஒரு; நரசிங்கம் அனையான்- நரசிங்கத்தைப்
போன்றவனும் ஆன; அகம்பன் என்றுளன் – ‘ அகம்பன்’ என்ற
பெயர் கொண்ட ஒரு அரக்கர்தலைவன் உள்ளான்; அலை கடல்
பருகவும் அமைவான் – அலைகளை உடைய கடல்நீர்
முழுவதையும் குடிக்கவும் வல்லவன்.

அகம்பன் இராவணனுக்கு மாமன்முறைதான்.

————-

‘பொருப்பை மீதிடும் புரவியும், பூட்கையும், தேரும்,
உருப்ப விற் படை, ஒன்பது கோடியும் உடையான்,
செருப் பெய் வானிடைச் சினக் கடாய் கடாய் வந்து செறுத்த
நெருப்பை வென்றவன், நிகும்பன் என்று உளன், ஒரு நெடியோன். 34-

பொருப்பை மீதிடும் – மலைகளையும் மீதிட்டுச் செல்லும்;
புரவியும் பூட்கையும் தேரும் – குதிரைகளும், யானைகளும்,
தேர்களும்; உருப்ப விற்படை – சினம் மிக்க விற்படையினரான
காலாட்படை வீரர்களும்; ஒன்பது கோடியும் உடையான்-
ஒன்பது கோடியை உடையவனும்; வானிடை செருப்பெய்
சினக்கடாய்- வானத்திலே போர்புரிந்த சினம்மிக்க ஆட்டுக்
கடாவினை; கடாய் வந்து செறுத்த – வாகனமாகச் செலுத்தி
வந்து போரிட்ட; நெருப்பை வென்றவன் – அக்கினி தேவனை
வென்றவனும்; நிகும்பன் என்று உளன் ஒரு நெடியோன் –
சிறந்த வீரனுமான நிகும்பன் என்பவனும் உள்ளான்.

இங்குக் கூறப்படும் நிகும்பனும், அடுத்த பாடலில் வரும்
கும்பனும் கும்பகர்ணனுடைய பிள்ளைகள் என்று வான்மீகம்
கூறும்.

————-

‘தும்பி ஈட்டமும், இரதமும், புரவியும், தொடர்ந்த
அம் பொன் மாப் படை ஐ-இரு கோடி கொண்டு அமைந்தான்,
செம் பொன் நாட்டு உள சித்திரைச் சிறையிடை வைத்தான்,
கும்பன் என்று உளன்; ஊழி வெங் கதிரினும் கொடியான். 35–

தும்பி ஈட்டமும், இரதமும் புரவியும்- யானைக் கூட்டமும்,
தேர் குதிரை ஆகியவற்றுடன்; தொடர்ந்த அம்பொன் மாப்படை
– சேர்ந்த அழகிய பொன் போன்ற அரிய பெரிய படை; ஐயிரு
கோடி கொண்டமைந்தான்- பத்துக் கோடி பேரைக் கொண்டு
அமைந்தவனும்; செம்பொன் நாட்டுள சித்தரை – செம்பொன்
நாடாகிய தேவ உலகில் வாழும் சித்தர்களை; சிறையிடை
வைத்தான் – போரில் வென்று சிறையிலே வைத்தவனுமான; ஊழி
வெங்கதிரினும் கொடியான் – யுகாந்த காலத்துச் சூரியனை
விடவும் கொடியவன்; கும்பன் என்று உளன் – கும்பன்
என்பவனும் இருக்கிறான்.

—————

‘பேயை யாளியை யானையைக் கழுதையைப் பிணித்தது
ஆய தேர்ப் படை ஐ – இரு கோடி கொண்டு அமைந்தான்,
தாயை ஆயினும் சலித்திடு வஞ்சனை தவிரா
மாயையான் உளன், மகோதரன் என்று ஒரு மறவோன். 36-

பேயை யாளியை யானையை- பேய்களையும், யாளிகளையும்
யானைகளையும்; கழுதையைப் பிணித்த தாய – கழுதைகளையும்
பூட்டியதாகிய; தேர்ப்படை ஐயிரு கோடி கொண்டமைந்தான்-
தேர்ப்படைபத்துக் கோடியை யுடையவன்; தாயை ஆயினும்
சலித்திடு – பெற்ற தாய் ஆனாலும் கலக்கம் செய்யவல்ல;
வஞ்சனை தவிரா மாயையான்- வஞ்சம் நீங்காத மாயையை
உடையவன்; மகோதரன் என்று ஒரு மறவோன் உளன்
– மகோதரன் என்னும் பெயருடைய ஒரு வீரன் உள்ளான்.

—————-

‘குன்றில் வாழ்பவர் கோடி நால் – ஐந்தினுக்கு இறைவன்,
“இன்று உளார் பினை நாளை இலார்” என எயிற்றால்
தின்றுளான், நெடும் பல் முறை தேவரைச் செருவின்
வென்றுளான், உளன், வேள்வியின் பகைஞன், ஓர் வெய்யோன். 37-

குன்றில் வாழ்பவர்- மலைகளிலே வாழும் அரக்கர்கள்;
கோடி நாலைந்தினுக் கிறைவன் – இருபது கோடி பேருக்குத்
தலைவனும்; இன்றுளார் பினை நாளை இலாரென – இன்று
இருப்பவர்கள் பின்பு நாளைக்கு இருக்க மாட்டார்கள் என்னும்படி;
எயிற்றால் தின்றுளான் – பற்களால் கடித்துத் தின்று தீர்க்க
வல்லவனும்; தேவரைச் செருவின்- தேவர்களைப் போரிலே;
நெடும் பல்முறை வென்றுளான் – பலமுறையும் வென்றவனும்
ஆகிய; வேள்வியின் பகைஞன் – வேள்விப் பகைவன் என்ற
பெயர் கொண்ட; ஓர் வெய்யோன் உளன்- ஒரு கொடியவன்
இருக்கிறான்.

—————-

‘”மண் உளாரையும் வானில் உள்ளாரையும் வகுத்தால்,
உண்ணும் நாள் ஒரு நாளின்” என்று ஒளிர் படைத் தானை
எண்ணின் நால் – இரு கோடியன், எரி அஞ்ச விழிக்கும்
கண்ணினான், உளன், சூரியன் பகை என்று ஒர் கழலான். 38-

மண்ணுளாரையும் வானிலுள்ளாரையும் – மண்ணுலகத்தில்
உள்ளவர்களையும், விண்ணுலகத்தில் உள்ளவர்களையும்;
வகுத்தால் உண்ணும் நாள் ஒரு நாளின் என்று – சேர்த்து
வகைப்படுத்தி வைத்தால் அனைத்தையும் உண்ணும்நாள் ஒரு
நாள் என்று கூறத்தக்க; ஒளிர்படைத்தானை – ஒளிவீசும்
படைக்கலங்களை உடைய சேனை; எண்ணின் நாலிரு
கோடியன்- எண்ணினால் எட்டிக் கோடி உடையவனாவான்;
எரிஅஞ்ச விழிக்கும் கண்ணினான்- நெருப்பும் அஞ்சுமாறு
விழிக்கும் கண்களை உடையவன்; சூரியன் பகை என்றோர்
கழலான் உளன்- சூரியன் பகைஞன் என்ற பெயருடைய
கழலணிந்த வீரன் ஒருவன் உள்ளான்.

———————

‘தேவரும், தக்க முனிவரும், திசைமுகன் முதலா
மூவரும், பக்கம் நோக்கியே மொழிதர, முனிவான்,
தா வரும் பக்கம் எண் – இரு கோடியின் தலைவன்,
மாபெரும்பக்கன் என்று உளன், குன்றினும் வலியான். 39-

தேவரும் தக்க முனிவரும் – தேவர்களும், தகுதியுடைய
முனிவர்களும்; திசைமுகன் முதலா மூவரும் – பிரமன் முதலான
மும்மூர்த்திகளும்; பக்கம் நோக்கியே மொழிதர- (நேருக்கு
நேராக நின்று பேசுவதற்கு அஞ்சிப்) பக்கம் பார்த்தே பேசுமாறு;
முனிவான் – கோபம் உடையவனும்; தாவரும் பக்கம் எண்
இரு கோடியின் தலைவன் – மிகுந்த வலிமை கொண்ட
சேனையின் பதினாலு கோடி பேருக்குத் தலைவனும்; குன்றினும்
வலியான் – மலையை விட வலியவனுமான; மாபெரும் பக்கன்
என்றுளன்- மாபெரும் பக்கன் என்னும் பெயருடைய ஒருவன்
உள்ளான்.

————–

‘உச் சிரத்து எரி கதிர் என உருத்து எரி முகத்தன்,
நச் சிரப் படை நால் – இரு கோடிக்கு நாதன்,
முச் -சிரத்து அயில் தலைவற்கும் வெலற்கு அரு மொய்ம்பன்,
வச்சிரத்துஎயிற்றவன், உளன், கூற்றுவன் மாற்றான். 40-

உச்சிரத்து எரி கதிர் என – தலைக்கு மேலே எரிகின்ற
சூரியன் என்னும்படி; உருத்து எரி முகத்தன் – சினந்து எரியும்
முகத்தை உடையவனும்; நச்சிரப்படை நாலிரு கோடிக்கு
நாதன் – சிறந்த தலைமை வாய்ந்த எட்டுக் கோடி பேரைக்
கொண்ட படைக்குத் தலைவனும்; முச்சிரத்து அயில்
தலைவற்கும்- முக்கவட்டுச் சூலத்தைஉடைய சிவபிரானுக்கும்;
வெலற்கு அரு மொய்ம்பன்- போரில் வெல்லுதற்கரிய வலிமை
உடையவனும்; கூற்றுவன் மாற்றான் – எமனையும் எதிர்த்து
நிற்கவல்ல பகைவனுமான; வச்சிரத்தெயிற்றவன் உளன் –
வச்சிரதந்தன் என்னும் பெயர் கொண்டவன் இருக்கிறான்.

—————

‘அசஞ்சலப் படை ஐ – இரு கோடியன், அமரின்
வசம் செயாதவன், தான் அன்றிப் பிறர் இலா வலியான்,
இசைந்த வெஞ் சமத்து இயக்கரை வேரொடும், முன் நாள்
பிசைந்து மோந்தவன், பிசாசன் என்று உளன், ஒரு பித்தன். 41-

அசஞ்சலப்படை ஐயிரு கோடியன் – பகைவரைக் கண்டு
நடுங்காத தன்மையினரான பத்துக் கோடி வீரர்களைக் கொண்ட
படையை உடையவனும்; அமரின் வசம் செயாதவன்- போரில்
வெல்லப்படாதவன்; தானன்றிப் பிறர் இலாவலியன்-
தானேயல்லாது பிறர் எவருமில்லாத வலிமை உடையவனும்;
இசைந்த வெஞ்சமத்து – தான் இசைந்து செய்த கொடிய போரில்;
இயக்கரை வேரொடும் முன்நாள் பிசைந்து மோந்தவன்-
இயக்கர்களை முன் ஒரு காலத்தில் வேருடன் அழியுமாறு
கைகளால் பிசைந்து முகர்ந்து பார்த்தவனும்; ஒரு பித்தன்- போர்
புரிவதே நோக்கமான பைத்தியம் பிடித்தவனுமான; பிசாசன்
என்று உளன் – பிசாசன் என்பவன் உள்ளான்.

————–

‘சில்லி மாப் பெருந் தேரொடும், கரி, பரி, சிறந்த
வில்லின் மாப் படை ஏழ் – இரு கோடிக்கு வேந்தன்,
கல்லி மாப் படி கலக்குவான், கனல் எனக் காந்திச்
சொல்லும் மாற்றத்தன், துன்முகன் என்று அறம் துறந்தோன். 42-

சில்லிமாப் பெரும் தேரொடும் – சக்கரத்தை உடைய
பெரியதேர்ப் படையுடனே; கரி, பரி, சிறந்த வில்லின்
மாப்படை – யானை, குதிரை, சிறந்த வில் வீரர்களையுடைய
காலாட் படை என்ற; ஏழ் இரு கோடிக்கு வேந்தன் –
பதினான்கு கோடிப் பேர் கொண்ட பெரும்படைக்குத்
தலைவனும்; கல்லி மாப்படி கலக்குவான் – இந்தப் பெரிய
பூமியையேதோண்டி எடுத்துக் கலங்கச் செய்பவனும்; கனல்
எனக் காந்திச் சொல்லும் மாற்றத்தன்- தீயைப் போல்கனல்
காந்தும்படி பேசும் பேச்சை உடையவனும்; அறம் துறந்தோன் – அறச் செயல்களை நீக்கியவனுமான;
துன்முகன் என்று- துன்முகன் என்ற பெயருடைய ஒருவன்
உள்ளான்.

————

‘இலங்கை நாட்டினன், எறி கடல் தீவிடை உறையும்
அலங்கல் வேற் படை ஐ – இரு கோடிக்கும் அரசன்,
வலம் கொள் வாள் தொழில் விஞ்சையர் பெரும் புகழ் மறைத்தான்,
விலங்கு நாட்டத்தன் என்று உளன், வெயில் உக விழிப்பான். 43-

இலங்கை நாட்டன்ன – இலங்கை நாட்டைப் போன்று;
எரிகடல் தீவிடை உறையும் – அலையெறியும் கடல் நடுவே
அமைந்த தீவுகளிலே வாழ்கின்ற; அலங்கல் வேற்படை – மாலை
சூடிய வேற்படை வீரர்கள்; ஐயிரு கோடிக்கும் அரசன் – பத்துக்
கோடி பேருடைய படைக்குத் தலைவனும்; வலம் கொள்வாள்
தொழில் – வலிமை மிக்க வாட்போரில் வல்ல; விஞ்சையர்
பெரும்புகழ் மறைத்தான் – விஞ்சையரோடு போரிட்டு வென்று,
அவர்களது புகழைமறையுமாறு செய்தவனும்; வெயில் உக
விழிப்பான்- தீப்பொறி பறக்க விழிப்பவனும்; விலங்கு
நாட்டத்தன் என்று உளன் – வீரூபாக்கன் என்ற பெயர் கொண்ட
ஒருவன் உள்ளான்.

—————

‘நாமம் நாட்டிய சவம் எனின், நாள் தொறும் ஒருவர்
ஈம நாட்டிடை இடாமல், தன் எயிற்றிடை இடுவான்,
தாமம் நாட்டிய கொடிப் படைப் பதுமத்தின் தலைவன்,
தூம நாட்டத்தன் என்று உளன், தேவரைத் துரந்தான். 44-

நாமம் நாட்டிய சவம் எனின்- பிறருக்கு அச்சத்தைத் தரும்
வீரர்களின் பிணம் என்றால்; நாள் என்றும் ஒருவர் – அதனைச்
சுடலைக்குக் கொண்டு செல்ல வேண்டிய நாளாயிற்றென்று ஒருவர்;
ஈம நாட்டிடை இடாமல் – சுடுகாட்டிலே சென்று புதைக்க
விடாமல்; தன் எயிற்றிடை இடுவான் – தன் வாயிலே பெய்து
தின்பவனும்; தாமம் நாட்டிய கொடிப் படை – மாலை சூடி,
கொடிகளை உடைய சேனை; பதுமத்தின் தலைவன் – பதுமம்
என்ற அளவையுடையவற்றின் தலைவனும்; தேவரைத் துரந்தான்
– தேவர்களைப் போரில் வென்று விரட்டியவனுமாய; தூம
நாட்டத்தன் என்றுளன் – புகைக் கண்ணன் என்ற பெயருடைய
ஒருவன் உள்ளான்.

—————-

‘போரின் மத்தனும், பொரு வயமத்தனும், புலவர்
நீரின் மத்து எனும் பெருமையர்; நெடுங் கடற் படையார்;
ஆரும் அத்தனை வலி உடையார் இலை; அமரில்
பேரும், அத்தனை எத்தனை உலகமும்; பெரியோய்! 45-

பெரியோய் – பெருமைமிக்கவனே; போரின் மத்தனும்
பொருவய மத்தனும்- போர்த் தொழில்வல்ல மத்தனும், போரில்
வல்லவய மத்தனும் ஆகிய இருவரும்; புலவர் நீரின் மத்து
எனும் பெருமையர் – தேவர்கள் பாற்கடலில் இட்ட மத்தாகிய
மந்தரமலை என்று சொல்லும் பெருமை உடையவர்கள்; நெடுங்
கடற்படையார் – நீண்ட பெரிய கடல் போன்ற படையை
உடையவர்கள்; ஆரும் அத்தனை வலியுடையாரிலை –
இவர்களுக்கு ஒப்பான வலிமை உடையவர்கள் யாருமே இல்லை;
அவரால் அத்தனை எத்தனை உலகமும் பேரும் –
இவர்களால் எத்தனை உலகங்கள் உண்டோ அத்தனையும் நிலை
பெயர்ந்து கெட்டழிந்து போகும்.

————–

சேனை காவலன் பிரகத்தன்

‘இன்ன தன்மையர் எத்தனை ஆயிரர் என்கேன் –
அன்னவன் பெருந் துணைவராய், அமர்த் தொழிற்கு அமைந்தார்?
சொன்ன சொன்னவர் படைத் துணை இரட்டியின் தொகையான்,
பின்னை எண்ணுவான், பிரகத்தன் என்று ஒரு பித்தன்; 46-

அன்னவன் பெருந்துணைவராய் – அந்த இராவணனுக்குப்
பெரிதும் துணைநிற்பவராய்; அமர்த் தொழிற்கு அமைந்தார்
– போர்த் தொழிலுக்கென அமைந்தவர்கள்; இன்ன தன்மையர் –
இத்தகைய (முன்னர்க் கூறிய) ஆற்றல் மிக்கவர்; எத்தனை
ஆயிரம் என்கேன் – எத்தனையாயிரம் பேருள்ளனர் எனக்
கூறுவேன்; சொன்ன சொன்னவர் படை – முன்னே நான்
சொன்னவர்களின் விவரித்துக் கூறிய படையினும்; துணை
இரட்டியின் தொகையான் – இரண்டு மடங்கு எண்ணிக்கை
உடையவனும்; பின்னை எண்ணுவான் – (எண்ணித்துணியாது)
துணிந்த பின் எண்ணுபவனும் ஆன; பிரகத்தன் என்று ஒரு
பித்தன்- பிரகத்தன் என்ற பெயருடைய ஒருவன் போரிடுவதில்
பித்துடையவன் உள்ளான்.

————

‘சேனை காவலன்; இந்திரன் சிந்துரச் சென்னி
யானை கால் குலைந்து ஆழி ஓர் ஏழும் விட்டு அகல,
ஏனை வானவர் இருக்கை விட்டு இரியலுற்று அலைய,
சோனை மாரியின் சுடு கணை பல முறை துரந்தான். 47-

சேனை காவலன் – இந்தப் பிரகத்தன் இராவணனுடைய
சேனைக்குக் காவலன் ஆவான்; இந்திரன் சிந்துரச்
சென்னியானை – தேவேந்திரனுடைய சிந்தூரம் அப்பிய
மத்தகத்தை உடைய ஐராவதமானது; கால்குலைந்து ஆழியோர்
ஏழும் விட்டகல – கால்கள் தடுமாறி ஏழுகடல்களையும் தாண்டிப்
பயந்தோடவும்; ஏனைவானவர் – மற்றுமுள்ள தேவர்கள்
அத்தனைபேரும்; இருக்கைவிட்டு இரியலுற்று அலைய- தங்கள்
இருப்பிடங்களை விட்டு ஓடி அலைந்து திரியவும்; சோனை
மாரியின் – விடாது பெய்யும் மழையைப் போல; சுடுகணை
பலமுறை துரந்தான் – சுடுகின்ற அம்புகளைப் பலமுறையும்
செலுத்தியவனாவான்.

———–

கும்பகருணனின் வலிமை

‘தம்பி, முற்பகல் சந்திரர் நால்வரின் தயங்கும்
கும்ப மாக் கிரிக் கோடு இரு கைகளால் கழற்றி,
செம் பொன் மால் வரை மதம் பட்ட தாம் எனத் திரிந்தான்,
கும்பகன்னன் என்று உளன், பண்டு தேவரைக் குமைந்தான். 48-

தம்பி – அந்த இராவணனுடைய தம்பி; முற்பகல் சந்திரர்
நால்வரின் தயங்கும்- முதல் நாளைய பிறைச் சந்திரர்
நால்வர் சேர்ந்தது போல விளங்கும்; கும்ப மாகிரிக் கோடு
– மத்தகத்தையுடைய பெரிய மலை போன்ற யானையான
ஐராவதத்தின் தந்தங்களை; இரு கைகளால் கழற்றி – தனது
இரண்டு கைகளாலும் வாங்கி; செம்பொன் மால்வரை – செம்பொன் மலையான பெரியமேருமலை; மதம் பட்டதாமெனத்
திரிந்தான் – மதம் கொண்டு அலைந்தது எனும்படி எங்கும்
திரிந்தவன்; பண்டு தேவரைக் குமைத்தான் – முன்பு
தேவர்களையெல்லாம் அடியோடு அழித்த; கும்பகன்னன் என்று
உளன் – கும்பகன்னன் என்ற பெயருடைய வீரன் உள்ளான்.

————–

இராவணனது புதல்வர்களின் ஆற்றல்

‘கோள் இரண்டையும் கொடுஞ் சிறை வைத்த அக் குமரன்
மூளும் வெஞ் சினத்து இந்திரசித்து என மொழிவான்;
ஆளும் இந்திரற்கு அன்னவன் பிணித்ததன் பின்னை,
தாளினும் உள, தோளினும் உள, இனம் தழும்பு. 49-

கோள் இரண்டையும் – (கோள்கள் ஒன்பதிலும் முதன்மை
வாய்ந்த) சூரியன், சந்திரன் என்னும் இரண்டினையும்;
கொடுஞ் சிறைவைத்த அக்குமரன்- கொடிய சிறையிலே
வைத்த இராவணனது மகனான; மூளும் வெஞ்சினத்து –
மூண்டெழும் கொடிய வெகுளியை உடைய; ‘இந்திரசித்து’ என
மொழிவான் – இந்திரசித்து எனக் கூறப்படுபவன்; ஆளும்
இந்திரற்கு – விண்ணுலகத்தை ஆளும் தேவேந்திரனுக்கு;
அன்னவன் பிணித்ததன் பின்னை – இந்திரசித்து அவனை
வென்று கட்டிவைத்த பின்பு; இனம் தழும்பு தாளினும் உள
தோளினும் உள – இந்திரனுடைய கால்களிலும் தோள்களிலும்
இன்னும் தழும்புகள் உள்ளன.

————-

‘தன்னையும் தெறும் தருமம் என்று இறை மனம் தாழான்,
முன்னவன் தரப் பெற்றது ஓர் முழு வலிச் சிலையான்,
அன்னவன் தனக்கு இளையவன், அப் பெயர் ஒழிந்தான்
பின் ஒர் இந்திரன் இலாமையின்; பேர் அதிகாயன். 50-

தன்னையும் தெறும் தருமம் என்று – அறத்துக்கு மாறாக
நடப்பவர்களை அழிக்கும் அறக்கடவுள் தன்னையும் அழிக்கும்
என்று; இறை மனம் தாழான் – சிறிதும் மனத்திலே கருதாமல்
விரைந்து பாவச் செயல் புரிபவன்; முன்னவன் தரப் பெற்றதோர்
– முன்னவனாகிய பிரமதேவன் தரப் பெற்றதாகிய ஒரு; முழுவலிச்
சிலையான் – முழுமையான வலிமையை உடையவில்லை
உடையவன்; அன்னவன் தனக்கு இளையவன் – அந்த
இந்திரசித்துக்குத் தம்பி; பின் ஓர் இந்திரன் இலாமையின் –
இந்திரசித்து வென்ற இந்திரனைத் தவிர வேறு ஒரு இந்திரன்
இல்லாமையால். அப்பெயர் ஒழித்தான் – அந்தப் பெயரை
நீக்கினவனாய்; பேர் அதிகாயன் – அதிகாயன் என்னும் பெயர்
கொண்டவனாய் உள்ளான்.

————–

‘தேவராந்தகன், நராந்தகன், திரிசிரா, என்னும்
மூவர் ஆம், – “தகை முதல்வர் ஆம் தலைவரும் முனையின்,
போவாராம்; தகை அழிவராம்” எனத் தனிப் பொருவார்
ஆவாரம் – தகை இராவணற்கு அரும் பெறல் புதல்வர். 51-

தேவராந்தகன், நராந்தகன் திரிசிரா என்னும் மூவராம்
– தேவராந்தகன், நராந்தகன் திரிசிரா என்ற மூவருடனும்; தகை
முதல்வராம் தலைவரும் முனையின் போவராம் – தகைசிறந்த
முதல் தலைவர்களான பிரமன், திருமால், சிவன் ஆகிய மூவரும்
போரிட்டால் தோற்றுப்போவார்; தகை அழிவராம் – தமக்குரிய
பெருமையை இழந்துவிடுவர்; எனத் தனிப் பொருவா ராவராம்-
என்று உலகம் கூறுமாறு போரிட்டு வெல்லவல்ல; தகை
இராவணற்கு – தகை சிறந்த இராவணனுக்கு; அரும் பெரும்
புதல்வர் – (இந்திரசித்து, அதிகாயன் என்பவரைத்தவிர) அரிய,
பெருமைமிக்க புத்திரர்களாவர்.

———–

இராவணனது திறம் எடுத்துரைத்தல்

‘இனைய நன்மையர் வலி இஃது; இராவணன் என்னும்
அனையவன் திறம் யான் அறி அளவு எலாம் அறைவென்;
தனையன், நான்முகன் தகை மகன் சிறுவற்கு; தவத்தால்,
முனைவர் கோன் வரம், முக்கணான் வரத்தொடும் உயர்ந்தான். 52-

இனைய தன்மையர் வலி இஃது – இராவணனது துணைவர்,
தம்பி, மக்கள் ஆகிய இத்தன்மையோர் வலிமை இது; இராவணன்
என்னும் அனையவன் திறம்- இராவணன் என்ற பெயர்
உடைய அவனது திறத்தை; யானறி அளவெலாம் அறைவென்
– யான் அறிந்திருக்கும் அளவுக்கு எல்லாம் எடுத்துக் கூறுவேன்;
நான்முகன் தகைமகன் சிறுவற்குத் தனையன்- பிரம
தேவனது தகுதிமிக்க மகனான புலத்தியனுக்கு மகனான
விச்சிரவசுவின் மகனாகும்; தவத்தால் – இராவணன் செய்த
தவத்தினாலே; முனைவர் கோன் வரம் – அந்தணர்
தலைவனான பிரமன் தந்தவரம்; முக்கணான் வரத் தொடும்
உயர்ந்தான் – மூன்று கண்களை உடைய சிவபெருமான் தந்த
வரம் இவைகளால் உயர்ந்தவனானான்.

பிரமனுக்கு மகன் புலத்தியன்; அவன் மகன் விச்சிரவசு;
அவன் மகன் இராவணன். முனைவர் கோன் – அந்தணர்
தலைவன் (நான்முகன்) பிரமன் தந்தவரம் முக்கோடி வாழ்நாள்.
முக்கணான் தந்த வரம் “யாராலும் வெலப்படாய் எனக்
கொடுத்தவாள்” (சந்திரகாசம்)

—————

‘என் இல் ஐம் பெரும் பூதமும் யாவையும் உடைய
புள்ளிமான் உரி ஆடையன் உமையொடும் பொருந்தும்
வெள்ளி அம் பெருங் கிரியினை வேரொடும் வாங்கி,
அள்ளி விண் தொட எடுத்தனன், உலகு எலாம் அனுங்க. 53-

எள்இல் ஐம்பெரும் பூதமும் – எவரும் சிறிதென இகழாத
மண், நீர், கால், தீ என்ற ஐந்து பெரிய பூதங்களும்; யாவையும்
உடைய – இவற்றின் வேறுபாட்டால் உண்டான பிற எல்லாப்
பொருள்களையும் உடையவனாகிய; புள்ளிமான் உரி ஆடையன்
– புள்ளிகளை உடைய புலியின் தோலை ஆடையாக
அணிந்துள்ள சிவபிரான்; உமையொடும் பொருந்தும் –
உமாதேவியுடன் தங்கியிருக்கும்; வெள்ளி அம் பெருங்
கிரியினை – வெள்ளியங்கிரியாகிய பெரிய மலையினை;
வேரொடும் வாங்கி அள்ளி – வேரோடு பேர்த்து அள்ளி;
உலகெலாம் அனுங்க- எல்லா உலகங்களும் வருந்தும்படி;
விண் தொட எடுத்தனன்- விண்ணைத் தொடும்படி எடுத்தவன்.

—————

‘ஆன்ற எண் திசை உலகு எலாம் சுமக்கின்ற யானை
ஊன்று கோடு இற, திரள் புயத்து அழுத்திய ஒண்மை
தோன்றும் என்னவே, துணுக்கமுற்று இரிவர், அத் தொகுதி
மூன்று கோடியின்மேல் ஒரு முப்பத்து மூவர். 54-

ஆன்ற எண் திசை – விசாலமான எட்டுத் திசைகளிலும்
நின்று; உலகெலாம் சுமக்கின்ற யானை – உலகத்தை எல்லாம்
சுமக்கின்ற திக்கு யானைகளின்; ஊன்று கோடு இற – தனது
மார்பில் ஊன்றிய தந்தங்கள் முறியும்படி; திரள்புயத்து
அழுத்திய ஒண்மை – அதனைத்தன் திரண்ட தோள்களிலே
அழுந்தச் செய்த மிக்க வலிமை; தோன்றும் என்னவே –
காணப்படும் என்ற மாத்திரத்தில்; அத்தொகுதி மூன்று
கோடியின் மேல் – தொகுதியான மூன்று கோடிக்கு மேல்; ஒரு
முப்பத்து மூவர்- மூப்பத்து மூன்று பேராக இருக்கும் தேவர்கள்;
துணுக்கம் உற்று இரிவர்- நடுங்கிக் கொண்டு விலகி ஓடுவார்கள்.

—————-

‘குலங்களோடும் தம் குல மணி முடியொடும் குறைய,
அலங்கல் வாள் கொடு காலகேயரைக் கொன்ற அதன்பின்,
“இலங்கை வேந்தன்” என்று உரைத்தலும், இடி உண்ட அரவின்
கலங்குமால் இனம், தானவர் தேவியர் கருப்பம். 55-

கால கேயரை – இராவணன் கால கேயர்கள் என்னும்
தானவர்களை; குலங்களோடும் – அவர்களின் குலமக்களோடு;
தம் குலமணிமுடியொடும் குறைய – மணிகள் பதிக்கப் பெற்ற
மகுடங்களோடு, தலை குறையும்படி; அலங்கல் வாள் கொடு –
வெற்றிமாலை சூட்டியவாளைக் கொண்டு; கொன்ற அதன் பின்
– கொன்ற அதற்குப் பிறகும்; இலங்கை வேந்தன்-
இலங்காதிபன்; என்று உரைத்தலும் – என்று கூறக் கேட்ட
அளவிலே; தானவர் தேவியர் கருப்பம் – தானவர்களது
மனைவி மார்களின் கருப்பம்; இடியுண்ட அரவின்- இடியோசை
கேட்டு அஞ்சும் பரம்பைப் போல; இனம் கலங்குமால் –
இன்னும் கலங்கும்.

————-

‘குரண்டம் ஆடு நீர் அளகையின் ஒளித்து உறை குபேரன்,
திரண்ட மாடும், தன் திருவொடு நிதியமும், இழந்து,-
புரண்டு, மான் திரள் புலி கண்டது ஆம் என, போனான்-
இரண்டு மானமும், இலங்கை மா நகரமும் இழந்து. 56-

குரண்டம் ஆடு நீர் அளகையின்- கொக்குகள் விளையாடித்
திரியும் நீர் நிலைகளை உடைய அளகாபுரியில்; ஒளித்து உறை
குபேரன்- இராவணனுக்கு அஞ்சி ஒளிந்து வாழ்ந்து கொண்டிருந்த
குபேரன்; திரண்டமாடும் தன் திருவொடு நிதியமும் இழந்து-
தனக்குரிய திரண்ட செல்வத்தையும் வெற்றித் திருமகளையும்,
சங்க நிதி, பதுமநிதி என்பவைகளையும் இராவணனிடம் இழந்து
போய்; இரண்டு மானமும் இலங்கை மாநகரமும் இழந்து – தன்
மானம், விமானம் என்று இரண்டு மானமும், இலங்கை
மாநகரத்தையும் இழந்து; மான்திரள் புலிகண்டதாம் என –
புலியைக் கண்ட மான் கூட்டம் அஞ்சி ஓடுவது போல; புரண்டு
போனான்- இராவணனிடம் தோற்று புரண்டு ஓடிப் போயினான்.

————-

‘”புண்ணும் செய்தது முதுகு” என, புறங்கொடுத்து ஓடி,
“உண்ணும் செய்கை அத் தசமுகக் கூற்றம் தன் உயிர்மேல்
நண்ணும் செய்கையது” எனக் கொடு, நாள்தொறும், தன் நாள்
எண்ணும் செய்கையன், அந்தகன், தன் பதம் இழந்தான். 57-

உண்ணும் செய்கை அத் தசமுகக் கூற்றம்- உயிரை
உண்ணும் படியான செயலை உடைய பத்து முகங்களை உடைய
இராவணன் என்னும் கூற்றமானது; தன் உயிர் மேல் நண்ணும்
செய்கையதெனக் கொடு – தன்னுயிரையும் கவர வருதல்
செய்யும் என்றுஎண்ணி; புண்ணும் செய்தது முதுகு என – எனது
முதுகையும் புண் செய்து விட்டது என்று; புறம் கொடுத்து ஓடி
– புறமுதுகு காட்டி ஓடித் தப்பித்து; நாள் தொறும் தன்நாள்
எண்ணும் செய்கையன் – தனது இறுதி நாளைப் பற்றி நாள்
தோறும் நினைக்கும் செய்கையனாய்; அந்தகன் தன் பதம்
இழந்தான் – எமன் தனது தென்திசைக் காவல் பதவியையும்
இழந்தான்.

——————-

‘இருள் நன்கு ஆசு அற, எழு கதிரவன் நிற்க் என்றும்
அருணன் கண்களும் கண்டிலா இலங்கை, பண்டு அமரில்,
பருணன் தன் பெரும் பாசமும் பறிப்புண்டு, பயத்தால்
வருணன் உய்ந்தனன், மகர நீர் வெள்ளத்து மறைந்து. 58-

இருள் நன்கு ஆசற- இருள் நன்றாக விலகும்படி; எழு
கதிரவன் நிற்க – கீழ்த்திசையில் எழும் சூரியன் இருக்கட்டும்;
என்றும் அருணன் கண்களும் – சூரியனுடைய தேரில்
சாரதியாக முன்னால் அமர்ந்திருக்கும் அருணனது கண்களும்
கூட; கண்டிலா இலங்கை- பார்த்திராதது இலங்கை நகர்; பண்டு
அமரில் – முன்பு இராவணனுடன் செய்த போரிலே;
பருணன்தன் பெரும் பாசமும் பறிப்புண்டு – திறமை
உடையவன் என்றாலும் தனது படையாகிய பாசம் பறிக்கப்பட;
பயத்தால் – இராவணனைப்பற்றிய அச்சத்தினாலே; மகர நீர்
வெள்ளத்து – மகாமீன்களை உடைய கடல் நீரிலே; மறைந்து
வருணன் உய்ந்தனன் – மறைந்து வருணன் தப்பிப் பிழைத்தான்.

—————-

‘என்று, உலப்புறச் சொல்லுகேன், இராவணன் என்னும்
குன்று உலப்பினும் உலப்பு இலாத் தோளினான் கொற்றம்?
இன்று உலப்பினும், நாளையே உலப்பினும், சில நாள்
சென்று உலப்பினும், நினக்கு அன்றி, பிறர்க்கு என்றும் தீரான். 59-

இராவணன் என்னும் – இராவணன் என்ற பெயரை உடைய;
குன்று உலப்பினும் – மலை அழிந்தாலும்; உலப்பிலாத்
தோளினான் கொற்றம் – அதனுடன் மாறு கொண்டும் அழியாது
தோள்களை உடையவனது வெற்றியை; என்று உலப்புறச்
சொல்லுகேன்- என்று நான்முடிவாகச் சொல்லுவேன்; இன்று
உலப்பினும் நாளையே உலப்பினும் – இராவணன் இன்று
இறப்பான் ஆயினும், நாளையே இறப்பானாயினும்; சிலநாள்
சென்று உலப்பினும் – அல்லது இன்னும் சில நாட்கள் கழிந்த
பின் இறந்தானாயினும்; நினக்கு அன்றிப் பிறர்க்கு என்னும் தீரான்- உனக்கு அல்லாமல்
வேறு எவருக்கும் அழிந்து தீரான்.

————-

அனுமன் இலங்கையில் புரிந்த வீரச் செயல்கள்

‘ஈடு பட்டவர் எண்ணிலர், தோரணத்து, எழுவால்;
பாடு பட்டவர் படு கடல் மணலினும் பலரால்;
சூடு பட்டது, தொல் நகர்; அடு புலி துர்ந்த
ஆடு பட்டது பட்டனர், அனுமனால் அரக்கர். 60-

தோரணத்து – அசோக வனத்தின் வெளியே அமைந்த
கட்டுவாயிலில்; எழுவால் ஈடுபட்டவர் எண்ணிலர்-
அனுமானது இரும்புத் தடியால் வலிமை இழந்தவர் பல பேர்;
பாடுபட்டவர் – அடிபட்டு அழிந்து போன அரக்கர்கள்;
படுகடல் மணலினும் பலரால்- கடற்கரை மணலைவிட
எண்ணற்றவராவார்; தொல்நகர் சூடுபட்டது – பழமையான
இலங்கை மாநகரம் அனுமன் வைத்த தீயால் சூடுபட்டழிந்தது;
அனுமனால் அரக்கர் – அனுமனுடைய வலிமையால் இலங்கை
அரக்கர்கள்; அடுபுலிதுரந்த ஆடுபட்டது பட்டனர்-
கொல்லவல்ல புலி துரத்த ஆட்டுக் கூட்டம் என்ன பாடுபடுமோ
அந்தப் பாடுபட்டனர்.

—————-

‘எம் குலத்தவர், எண்பதினாயிரர், இறைவர்,
கிங்கரப் பெயர்க் கிரி அன்ன தோற்றத்தர், கிளர்ந்தார்;
வெங் கரத்தினும் காலினும் வாலினும் வீக்கி,
சங்கரற்கு அழி முப்புரத்தவர் எனச் சமைந்தார். 61-

எம் குலத்தவர் எண் பதினாயிரர்- எமது அரக்கர்
குலத்தில் பிறந்தவர்கள் எண்பதினாயிரம் பேர்களும்; இறைவர் -அவர்களுக்குத்தலைவர்களான; கிங்கரப் பெயர் கிரியன்ன
தோற்றத்தர்- கிங்கார் என்னும் பெயருடைய மலை போன்ற
தோற்றத்தவரும் ஆகி; கிளர்ந்தார்- அனுமனுடன் போரிடப்
பொங்கி எழுந்தவர்களை; வெங்கரத்தினும்- அனுமான் தனது
வலிய கைகளினாலும்; காலினும், வாலினும் – கால்களாலும்
வாலினாலும்; வீக்கி – இறுகப் பிணித்தமையால்; சங்கரற்கு
அழி – சிவ பெருமானாலே அழிந்துபோன; முப்புரத்தவர்
எனச் சமைந்தார் – திரிபுரத்து அரக்கர்களைப் போல
முடிந்தனர்.

————

‘வெம்பு மாக் கடற் சேனை கொண்டு எதிர் பொர வெகுண்டான்,
அம்பும் ஆயிரத்து ஆயிரம் இவன் புயத்து அழுத்தி,
உம்பர் வானகத்து ஒரு தனி நமனைச் சென்று உற்றான்,
சம்புமாலியும், வில்லினால் சுருக்குண்டு – தலைவ! 62-

தலைவ- தலைவனே!; சம்பு மாலியும்- சம்புமாலி என்ற
அரக்கர் தலைவனும்; வெம்பும் மாக்கடல் சேனைகொண்டு
– சினம் மிக்க பெரியகடல் போன்ற படையைக் கொண்டு; எதிர்
பொர வெகுண்டான் – அவனை எதிர்த்துப் போர் செய்யச்
சினம் கொண்டு வந்தான்; அம்பும் ஆயிரத்து ஆயிரம் –
ஆயிரம் ஆயிரம் அம்புகளை விட்டு; இவன் புயத்து அழுத்தி
– இந்த அனுமன் புயத்திலே அழுந்தச் செய்து; வில்லினால்
சுருக்குண்டு – அவன் கை வில்லினாலேயே அனுமனால்
சுருக்கிடப்பட்டு; உம்பர் வானத்து- தேவர்கள் வாழும்
விண்ணுலகுக்கு; ஒருதனி நமனைச் சென்று உற்றான்- தனி
ஒருவனாக எமனைச் சென்று அடைந்தான்.

—————

‘சேனைக் காவலர் ஓர் ஐவர் உளர், பண்டு தேவர்
வானைக் காவலும் மானமும் மாற்றிய மறவர்,
தானைக் கார்க் கருங் கடலொடும், தமரொடும், தாமும்,
யானைக் கால் பட்ட செல் என, ஒல்லையின் அவிந்தார். 63-

சேனைக்காவலர் ஓர் ஐவர் உளர் – இராவணனது
சேனையின் காவலர் ஐந்து பேர் உள்ளனர் (பஞ்சசேனாதிபதிகள்);
பண்டு தேவர் வானை – முன்பு தேவர்களின் வானுலகத்தை;
காவலும் மானமும் மாற்றிய மறவர் – பாதுகாப்பையும்,
மானத்தையும் மாற்றியவீரர்கள்; தானைக் கார்க் கரும்
கடலொடும் – படையாகிய கரிய பெரிய கடலுடனே;
தமரொடும் தாமும் – தமது உறவினருடனே தாங்களும்
(அனுமனுடன் போரிட வந்தவர்கள்); யானைக் கால்பட்ட
செல்என – யானையினது கால்களில் மிதிபட்ட கறையானைப்
போல; ஒல்லையின் அவிந்தார் – விரைந்து அழிந்து
போயினர்.

—————-

‘காய்த்த அக் கணத்து, அரக்கர்தம் உடல் உகு கறைத் தோல்,
நீத்த எக்கரின், நிறைந்துள கருங் கடல்; நெருப்பின்
வாய்த்த அக்கனை, வரி சிலை மலையொடும் வாங்கி,
தேய்த்த அக் குழம்பு உலர்ந்தில, இலங்கையின் தெருவில். 64-

காய்த்த அக்கணத்து- (அனுமனை) சினமடையச் செய்த
அந்தக் கணத்திலே; அரக்கர்தம் உடல் உகு- அந்த அரக்க
வீரர்களின் உடலில் இருந்து சிந்தும்; கறைத்தோல் –
இரத்தமும் அவர்களின் உடல் தோல்களும்; நீத்த எக்கரின்
– கடற்கரையிலுள்ள மணல் திட்டுக்களைப் போல; நிறைந்துள
கருங்கடல் – எங்கும் கரிய கடலாக நிறைந்துள்ளனவாயின்;
நெருப்பின் வாய்த்த அக்கனை – நெருப்பென வெகுண்டு
வந்த இராவணன் மகனான அட்சய குமாரனை; வரி சிலை
மலையொடும் வாங்கி- கட்டமைந்த வில்லாகிய மலையோடு
இழுத்து வாங்கி; தேய்த்த அக்குழம்பு – காலால் தேய்த்த
அக்குழம்பு; இலங்கையின் தெருவில் உலர்ந்தில –
இலங்கை வீதியிலே இன்னும் உலரவில்லை.

————

‘சொன்ன மா மதில் இலங்கையின் பரப்பினில் துகைத்துச்
சின்னம் ஆனவர் கணக்கு இலர்; யாவரே ஆதரிப்பார்?
இன்னம் ஆர் உளர், வீரர்? மற்று, இவன் சுட எரிந்த
அன்ன மா நகர் அவிந்தது, அக் குருதியால் அன்று. 65-

சொன்னமாமதில் – ஏற்கனவே கூறியபடி அமைந்த பெரிய
மதில்களால்; இலங்கையின் பரப்பினில் – இலங்கை நகரின்
பரப்பினுள்; துகைத்துச் சின்னமானவர்- அனுமன் காலால்
துகைக்கப்பட்டுச் சின்ன பின்னமான அரக்கர்; கணக்கிலர்
யாவரே தெரிப்பார் – கணக்கற்றவர் என்பதையார்
தெரிந்துரைக்கவல்லார்; இன்னம் யாருளர்வீரர் – இன்னும்
இலங்கையிலே வீரர்கள் யாருள்ளனர்?; மற்று இவன் சுட
எரிந்த – இந்த அனுமன் வைத்த தீயினால் எரிந்த; அன்ன
மாநகர் – அந்தப் பெரிய இலங்கை நகரம்; அக்குருதியால்
அவிந்தது – அனுமனால் சின்னமானவர்கள் சிந்திய
இரத்தத்தால் அணைந்து போயிற்று.

—————-

இலங்கை அனலால் அழிந்ததும், அதை அயன் மீண்டும் படைத்ததும்

‘விலங்கல் வெந்தவா வேறு இனி விளம்புவது எவனோ-
அலங்கல் மாலையும் சாந்தமும் அன்று தான் அணிந்த
கலங்களோடும், அச் சாத்திய துகிலொடும், கதிர் வாள்
இலங்கை வேந்தனும், ஏழு நாள் விசும்பிடை இருந்தான்! 66-

அலங்கல் மாலையும் சாந்தமும்- அணிந்த மாலையும்;
பூசிய சந்தனமும்; அச் சாத்தியதுகிலொடும் – அணிந்திருந்த
அந்த ஆடையோடும்; கதிர்வாள் இலங்கை வேந்தனும் –
ஒளிரும் வாளை உடைய இலங்கை வேந்தனான இராவணனும்;
ஏழுநாள் விசும்பிடை இருந்தான்- ஏழுநாட்கள் வானிலேயே
தங்கியிருந்தான் என்றால்; விலங்கல் வெந்தவா- இலங்கைக்கு
ஆதாரமாயிருந்த திரிகூடமலை அனுமன் வைத்த தீயால்
வெந்ததை; வேறுஇனி விளம்புவது எவனோ- இனித்தனியாக
விளம்பவும் கூடுமோ?.

—————

‘நொதுமல் திண் திறல் அரக்கனது இலங்கையை நுவன்றேன்;
அது மற்று அவ்வழி அரணமும் பெருமையும் அறைந்தேன்;
இது மற்று அவ்வழி எய்தியது; இராவணன் விரைவினின் ஏவ,
பதுமத்து அண்ணலே பண்டுபோல் அந் நகர் படைத்தான். 67-

நொதுமல் திண் திறல் அரக்கனது- வலிய, திண்ணிய,
ஆற்றலை உடைய அரக்கனான இராவணனது; இலங்கையை
நுவன்றேன் – இலங்கையின் வரலாறு பற்றிக் கூறினேன்;
அதுமற்றவ்வழி அரணமும் – அதுவல்லாது இலங்கையின்
மதிலைப் பற்றியும்; பெருமையும் அறைந்தேன்- இராவணனது
பெருமையும் சொன்னேன்; இது மற்றவ் வழி எய்தியது- இந்த
அனுமனது செய்தி அங்குநடந்தது (அதனையும் சொன்னேன்);
இராவணன் ஏவ – இராவணன் கட்டளை இட; பதுமத்து
அண்ணலே – தாமரை மலரில் வசிக்கும் பிரமதேவனே;
பண்டுபோல் அந்நகர் படைத்தான்- முன்பு போலத்
திகழும்படி அந்த நகரத்தைப் படைத்தான்.

————–

வீடணன் தான் போந்த காரணத்தை உரைத்தல்

‘காந்தும் வாளியின் கரன் முதல் வீரரும், கவியின்
வேந்தும், என்று இவர் விளிந்தவா கேட்டு அன்று; அவ் இலங்கை
தீந்தவா கண்டும், அரக்கரைச் செருவிடை முருக்கிப்
போந்தவா கண்டும், நான் இங்குப் புகுந்தது – புகழோய்!’ 68-

புகழோய் – புகழ்மிக்கவனே; நான் இங்குப் புகுந்தது –
நான் உன்னைச் சரண்புகுந்து இங்கு வந்தது; காந்தும் வாளியின்-
உனது எரிக்கும் அம்புகளால்; கரன்முதல் வீரரும் – கரனும்
அவனுக்குத் துணையாக வந்த வீரர்களும்; கவியின் வேந்தும்-
வானர சேனையின் அரசனான வாலியும்; என்றிவர் விளிந்தவா
கேட்டன்று – ஆகிய இவர்களெல்லாம் மடிந்ததைக் கேட்டதனால்
அல்ல; அவ்விலங்கை தீந்தவா கண்டும்- அந்த இலங்கை
உன்னருள் பெற்ற அனுமன் ஒருவனாலே அழிந்தது கண்டும்;
அரக்கரைச் செருவிடை முருக்கிப் போந்தவா கண்டும்-
இலங்கை அரக்கர்களை எல்லாம் போரிலே அனுமன் அழித்துத்
திரும்பி வந்ததை நேரில் கண்டதாலுமேயாம்.

——————–

இராமன் அனுமனைப் புகழ்ந்து உரைத்தல்

கேள் கொள் மேலையான் கிளத்திய பொருள் எலாம் கேட்டான்,
வாள் கொள் நோக்கியை, பாக்கியம் பழுத்தன்ன மயிலை,
நாள்கள் சாலவும் நீங்கலின், நலம் கெட மெலிந்த
தோள்கள் வீங்கி, தன் தூதனைப் பார்த்து, இவை சொன்னான்: 69-

கேள் கொள் மேலையான் – தன்னுடன் நட்புக்கொண்ட
வீடணன்; கிளத்திய பொருள் எலாம் கேட்டான் – கூறிய
பொருள்களை எல்லாம் கேட்ட இராமபிரான்; வாள் கொள்
நோக்கியை – வாள் போன்ற கண்களை உடையவளும்;
பாக்கியம் பழுத்தன்ன மயிலை- புண்ணியம் பழுத்துப் பயன்
தந்தது போன்ற மயிலைப் போன்றவரும் ஆகிய சீதாபிராட்டியை;
நாள்கள் சாலவும் நீங்கலின்- பல நாட்கள் பிரிந்தமையால்;
நலம் கெட மெலிந்த தோள்கள் வீங்கி – அழகு கெட
மெலிந்து போன தோள்கள் வீங்கி; தன் தூதனைப் பார்த்து
இவை சொன்னான்- தன் தூதனான அனுமானைப் பார்த்துப்
பின்வருமாறு கூறலானான்.

—————-

‘கூட்டினார் படை பாகத்தின் மேற்படக் கொன்றாய்;
ஊட்டினாய், எரி ஊர் முற்றும்; இனி, அங்கு ஒன்று உண்டோ?
கேட்ட ஆற்றினால், கிளிமொழிச் சீதையைக் கிடைத்தும்
மீட்டிலாதது, என் வில் தொழில் காட்டவோ? – வீர! 70-

வீர- வீரம் மிக்கவனே!; கூட்டினார் படை பாகத்தின்
மேற்படக் கொன்றாய் – இலங்கையில் இராவணன்
கூட்டிவைத்திருந்த படையில் பாதிக்கு மேல் நீயே கொன்று
தீர்த்தாய்; எரி ஊர் முழுதும் ஊட்டினாய் – இலங்கை நகர்
முழுவதும் தீமூட்டி அழியச் செய்தாய்; இனி, அங்கு ஒன்று
உண்டோ – இனி அங்கு நான் செய்ய வேண்டியது ஏதேனும்
ஒன்று உள்ளதோ?; கேட்ட ஆற்றினால் – வீடணன் கூறக்
கேட்ட செய்திகளால்; கிளிமொழிச் சீதையை- கிளி போன்ற
மொழிகளை உடைய சீதா தேவியை; கிடைத்தும் மீட்டிலாதது – நேரில் பார்க்கக் கிடைத்தும் கூட
நீ மீட்டு வராதது; என் வில் தொழில் காட்டவோ – நான்
எனது வில்லாற்றலைக் காட்ட வேண்டும் என்பதற்காகவோ?

————-

‘நின் செய் தோள் வலி நிரம்பிய இலங்கையை நேர்ந்தோம்;
பின் செய்தோம் சில் அவை இனிப் பீடு இன்று பெறுமோ? –
பொன் செய் தோளினாய்! – போர்ப் பெரும் படையொடும் புக்கோம்;
என் செய்தோம் என்று பெரும் புகழ் எய்துவான் இருந்தோம்? 71-

பொன் செய் தோளினாய் – பொன்னாலமைந்தது போன்ற
தோள்களை உடையவனே; நின் செய் தோள் வலி நிரம்பிய-
உனது தோள்கள் புரிந்த ஆற்றலே எங்கும் நிறைந்துள்ள;
இலங்கையை நேர்ந்தோம் – இலங்கையை நாங்கள்
அடைந்தோம்; பின் செய்தோம் சில – எங்கள் வலிமையைக்
காட்டி பின் சில போர்கள் செய்தோம்; அவை இனிப் பீடு
ஒன்று பெறுமோ – அப்படி நாங்கள் செய்யும் போர் முதலிய
வீரச் செயல்கள் ஒரு பெருமை பெறுமோ?; போர்ப் பெரும்
படையொடும் புக்கோம் – போர்த் தொழில் வல்ல
பெரும்படையுடன் நாங்கள் புகுந்துள்ளோம்; என் செய்தோம்
என்று – என்ன பெரிய செயலைச் செய்து விட்டோம் என்று;
பெரும்புகழ் எய்துவான் இருந்தோம்- பெரிய புகழ் அடைய
இருந்தோம்.

—————

‘என்னது ஆக்கிய வலியொடு அவ் இராவணன் வலியும்
உன்னது ஆக்கினை; பாக்கியம் உருக் கொண்டது ஒப்பாய்!
முன்னது ஆக்கிய மூஉலகு ஆக்கிய முதலோன்
பின்னது ஆக்கிய பதம் நினக்கு ஆக்கினென்; பெற்றாய்.’ 72-

பாக்கியம் உருக் கொண்டது ஒப்பாய் – புண்ணியமே
வடிவு கொண்டது போன்றவனே; என்னது ஆக்கியவலியொடு
– எனக்கே உரியதான வலிமையோடு; அவ்விராவணன் வலியும்
– அந்த இராவணனது வலிமையையும்; உன்னது ஆக்கினை –
உனக்கே உரியது ஆக்கிக் கொண்டாய்; முன்னது ஆக்கிய
மூவுலகு- முன்னால் படைக்கப்பட்ட மூன்றுலகங்களையும்;
ஆக்கிய முதலோன் – படைத்த பிரமதேவனுக்காக; பின்னது
ஆக்கிய பெரும் பதம்- ஏற்பட்ட பதவியாகிய பிரமபதத்தை;
நின்னது ஆக்கினென் பெற்றாய் – உனக்கு உரியதாக்கினேன்;
பெற்று உயர்வாயாக.

—————–

என்று கூறலும், எழுந்து, இரு நிலன் உற இறைஞ்சி,
ஒன்றும் பேசலன் நாணினன், வணங்கிய உரவோன்;
நின்ற வானரத் தலைவரும் அரசும், அந் நெடியோன்
வென்றி கேட்டலும், வீடு பெற்றார் என வியந்தார். 73-

என்று கூறலும் – என்று இராமபிரான் கூறியதும்; எழுந்து,
நிலன்உற இறைஞ்சி- அனுமன், எழுந்து, நிலத்தோடு படும் படி
கீழே வீழ்ந்து இராமனை வணங்கி; ஒன்றும் பேசலன்-ஒன்றுமே
பேசாதவனாக; நாணினன் வணங்கிய உரவோன் – தன்னை
இராமன் புகழ்வதற்கு நாணப்பட்டவனாய் வலிமைமிக்கவனான
அனுமன் மீண்டு வணங்குவானானான்; நின்ற வானரத்
தலைவரும் அரசும்- அங்கு நின்ற மற்றை வானரப்படைத்
தலைவர்களும் சுக்கிரீவனும்; அந் நெடியோன் வென்றி
கேட்டதும் – அந்த நெடியவனாகிய அனுமானது வெற்றியை
வீடணன் கூறக் கேட்டதும்; வீடு பெற்றார் எனவியந்தார்-
வீட்டின்பத்தைப் பெற்றவர்களைப் போல வியந்து நின்றனர்.

————

மிகைப் பாடல்கள்

திரு மறு மார்பனை இறைஞ்ச, செல்வனும்,
அருள் சுரந்து, அரக்கனை அருகு இருத்தியே,
‘அரு வரை அனைய தோள் அறிஞ! நீ புகல்
பொருள் உளது எமக்கு; அது புகலக் கேட்டியால். 14-1

மருக் கிளர் தாமரை வாச நாள்மலர்
நெருக்கிடு தடம் என இருந்த நீதியான்,
திருக் கிளர் தாமரை பணிந்த செம்மலை,
‘இருக்க, ஈண்டு எழுந்து’ என இருந்த காலையில். 14-2

‘வலம் பெறு தசமுகன் தவத்தின் மாட்சி கண்டு,
இலங்குறு மலர் அயன் எண் இல் யோசனைத்
தலம் கொடு சமைத்து, நல் நகரும் தந்து, இதற்கு
“இலங்கை” என்று ஒரு பெயர் ஈந்த மேலைநாள். 18-1

‘ஆய இந் நகரிடை, அரக்கர் ஆகிய
தீயவர் தொகையினைத் தெரிக்கின், எண் இல் நாள்
போயிடத் துணிந்து, அவை புந்தி ஓரினும்
ஓயுமோ? அறிந்தவை உரைப்பென், ஆழியாய்! 19-1

‘பேயர்கள் என்ன யான் பிதற்ற, பேர்கிலா
மா இரும் புற மதில் வகுத்த மாப் படை
ஏயின நாள் எலாம் எண்ணும் பித்தர்கள்
ஆயிர வெள்ளமே அறிந்தது, ஆழியாய்! 28-1

‘ஈங்கு இவை அன்றியும், ஏழு தீவினும்,
ஓங்கு பாதலத்தினும், உயர்ந்த வானத்தும்,
தாங்கிய சக்கர வாளச் சார்பினும்,
ஆங்கு அவன் படைதனக்கு அளவை இல்லையால். 30-1

‘ஆயவர் அளவிலர், அறத்தை நுங்கிய
தீயவர், தேவரைச் செறுத்து, தேவர் ஊர்
காய் எரி படுத்திய கடுமையார்களில்,
நாயக! அறிந்தமை நவிலக் கேட்டியால். 32-1

‘இன்னும் மைந்தர்கள் இயம்பின், மூவாயிர கோடி
என்ன உண்டு; அவர் இரதமும், கரிகளும், பரியும்,
துன்னும் ஆள் வகைத் தொகுதியும், செறிந்திட, மேல்நாள்
பன்னகாதிபன் உலகினைப் பரிபவப் படுத்தோர். 51-1

கோ…ன் குடைப்பரா கடு களிற்றை மீக்கொள்ளா
வாடலிந்திர …….ளடைவர வமரிற்
கோடி வெங்கரி கோள் அரி கண்டெனக் குலையா
ஓடினான் தரு முதலியர் பிற விழுந்துருகி. 56-1

‘பண்டு அவன் தவத்து உமை ஒரு பாகன் முன் கொடுக்கும்
திண் திறல் பெறும் வானகத் தேர் ஒன்றின் இவர்ந்தே,
அண்ட கோடிகள் எவற்றினும் புகுந்து, அரசுரிமை
கொண்டு மீளுவான் ஒரு கணத்து இலங்கையில், கொடியோன். 58-1

‘சுற்று தன் கிளைப் பரப்பொடும் தொலைவு இன்றி வாழ்தற்கு
உற்ற மூன்றரைக் கோடியின் உகம் அவன் தவத்தின்
பெற்றனன், சிவன் கொடுத்திடப் பெரு வரம்; பெரியோய்!
இற்று அவன் செயல்’ என்று கொண்டு இனையன உரைப்பான்: 58-2

‘ஈது நிற்க, மற்று எந்தை! நீ ஏவிய தூதன்
மோது வாரிதி கடந்து, ஒரு கணத்தினில் முடுகி,
ஆதி நாயகிதன்னைக் கண்டு, அணி நகர் அரணும்,
காது வெஞ் சினத்து அரக்கர் தம் வலிமையும், கடந்தான். 59-1

மழுவும் ஈட்டியும் தோட்டியும் முசலமும் மலையும்
தழுவு மாப் படை முடிவு இலாது அதனொடும் தாமும்,
எழுவர் சூட்சியின் தலைவர்கள், கிளர் ஒளி இரவிக்
குழுவின் வாய்ப்படு புழு என, வழுவுறக் குறைந்தார். 63-1

‘இலங்கை வெந்தது; வேறு இனி இயம்புவது எவனோ?
அலங்கலோடு செஞ் சாந்தமும், அன்று தான் அணிந்த
கலன்களோடும் அச் சாத்திய துகிலொடும், கதிர் வாள்
இலங்கை வேந்தனும் விசும்பிடை ஏழு நாள் இருந்தான். 65-1

—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/38-திருமுடி சூட்டு படலம்–

November 2, 2020

இராமன் தம்பியரோடு நந்தியம் பதியை அடைந்து, சடை நீக்கி, நீராடி கோலம்கொள்ளுதல்

நம்பியும் பரதனோடு நந்தியம்பதியை நண்ணி,
வம்பு இயல் சடையும் மாற்றி, மயிர் வினை முற்றி, மற்றைத்
தம்பியரோடு தானும் தண் புனல் படிந்த பின்னர்,
உம்பரும் உவகை கூர, ஒப்பனை ஒப்பச் செய்தார். 1-

நம்பியும்- இராமபிரானும்; பரதனோடு – (தவமிருந்த);
பரதனோடும், மற்றைத் தம்பியரோடு – மற்றைத்
தம்பியர்களோடும் தானும் – தானுமாக; நந்தி அம்பதியை
நண்ணி – நந்திக் கிராமமாகிய அழகிய நகரத்தை அடைந்து;
வம்பு இயல் சடையும் மாற்றி – நறுமணம் கமழ்கின்ற சடையை
நீக்கி; மயிர்வினை முற்றி – மயிர் கழிக்கும் செயலை முடித்து;
தண்புனல் படிந்த பின்னர் – குளிர்ந்த நீரில் குளித்த பிறகு;
உம்பரும் உவகை கூர – தேவர்களும் மகிழ்ச்சி கொள்ளுமாறு;
ஒப்பனை ஒப்பச் செய்தார்- அழகு நலன்களைப் பொருந்துமாறு
செய்யலாயினர்.

————–

நிருதியின் திசையில் தோன்றும் நந்தியம்பதியை நீங்கி,
குருதி கொப்பளிக்கும் வேலோன் கொடி மதில் அயோத்தி மேவ,
சுருதி ஒத்தனைய வெள்ளைத் துரகதக் குலங்கள் பூண்டு,
பருதி ஒத்து இலங்கும் பைம் பூண் பரு மணித் தேரின் ஆனான்.–2-

குருதி கொப்பளிக்கும் வேலோன்- இரத்தம் பொழியும்
வேற்படையாளனாகிய இராமன்; நிருதியின் திசையில் தோன்றும்
தென் மேற்கு திசையில் தோன்றுகின்ற; நந்தியம்பதியை
நீங்கி – நந்திக் கிராமத்தினின்றும் புறப்பட்டு; கொடி மதில்
அயோத்தி மேவ – கொடிகளால் அழகு பெற்றிருக்கும்
மதில் சூழ்ந்த அயோத்தி நகரை அடையும் பொருட்டு; சுருதி
ஒத்தனைய- வேதங்களுக்கு நிகரான;வெள்ளை துரகதக்
குலங்கள் பூண்டு – வெண்ணிறப் புரவிகள் பூட்டப் பெற்ற;
பருதி ஒத்து இலங்கும் – கதிரவனைப் போல் ஒளி வீசும்;
பைம்பூண் பருமணித் தேரின் ஆனான்- பசும்பொன்னால்
புனையப் பெற்ற பெருமணிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரின்
மீது ஏறினான்.

நிருதி – தென்மேற்குத் திசைக் காவலன்.

————–

தம்பிமாருடன் இராமன் அயோத்தி புகுதல்

ஊழியின் இறுதி காணும் வலியினது உயர் பொன் தேரின்,
ஏழ் உயர் மதமா அன்ன இலக்குவன் கவிதை ஏந்த,
பாழிய மற்றைத் தம்பி பால் நிறக் கவரி பற்ற,
பூழியை அடக்கும் கண்ணீர்ப் பரதன் கோல் கொள்ளப் போனான் -3-

ஊழியின் இறுதி காணும் – யுக முடிவின் எல்லை காணவல்ல;
வலியினது – உறுதி மிக்கதான; உயர்பொன் தேரின் – உயர்ந்த
பொன்னாலாகிய தேரில்; ஏழ் உயர் மதமா அன்ன – ஏழு முழ
உயரமுள்ள மதம் செறிந்த யானை போன்ற; இலக்குவன் –
(இளையவனாகிய) இலக்குவன்; கவிகை ஏந்த – வெண் கொற்றக்
குடையைப் பிடித்து நிற்கவும்; பாழிய மற்றைத் தம்பி – வல்லமை
மிக்க இன்னொரு தம்பி (சத்துருக்கன்); பால் நிறக் கவரி பற்ற-
வெண்ணிறமான சாமரையை ஏந்தவும்; பூழியை அடக்கும் கண்ணீர்ப்
பரதன் – இந்தப் புவியையே மறைக்கவல்ல உவகைக் கண்ணீர் சிந்தும்
பரதன்; கோல் கொள்ள – குதிரைகளை ஏவும் கோலைக் கொண்டு
செலுத்தவும்; போனான்- (இராமபிரான்) சென்றான்.

—————–

வீடணன் முதலியோர் செல்லுதல்
10293.
வீடணக் குரிசில், மற்றை வெங் கதிர்ச் சிறுவன், வெற்றிக்
கோடு அணை குன்றம் ஏறி, கொண்டல் தேர் மருங்கு செல்ல,
தோடு அணை மவுலிச் செங் கண் வாலி சேய் தூசி செல்ல,
சேடனைப் பொருவும் வீர மாருதி பின்பு சென்றான்.–4-

வீடணக் குரிசில்- வீடணனாகிய சிறப்பு மிக்கவனும்; மற்றை
– பின்னும்;வெங்கதிர்ச் சிறுவன்- வெப்பம் உமிழும் கதிரவன்
மைந்தன் சுக்கிரீவனும்; வெற்றிக்கோடு அணை- (போரில்) வெற்றி
தேடித் தரும் கொம்புகளை உடைய; குன்றம் ஏறி – மலை போன்ற
யானை மீது இவர்ந்து; கொண்டல் தேர் மருங்கு செல்ல – முகில்
வண்ணனான இராமபிரானின் தேருக்கு அருகில் செல்லவும்; தோடு
அணை மவுலி – மலர் செறிந்த மகுடம் சூடிய; செங்கண் வாலி
சேய்- சிவந்த கண்களை உடைய வாலியின் மைந்தன் அங்கதன்;
தூசி செல்ல – முன்னணியிற் செல்லவும்; சேடனைப் பொருவும்-
ஆதிசேடனுக்கு ஒப்பான வீர மாருதி – வீரம் செறிந்த அனுமன்;
பின்பு சென்றான்- பின்னர்ச் சென்றான்.

—————-

அறுபத்து ஏழ் அமைந்த கோடி யானைமேல் வரிசைக்கு ஆன்ற
திறம் உற்ற சிறப்பர் ஆகி, மானுடச் செவ்வி வீரம்
பெறுகுற்ற வனப்பர் உச்சி பிறங்கு வெண் குடையர் செச்சை
மறு உற்ற அலங்கல் மார்பர், வானரத் தலைவர் போனார்.–5-

வரிசைக்கு ஆன்ற திறம் உள்ள – தகுதிக்கேற்பக் கூறுபாடு
உற்ற; சிறப்பர் ஆகி – சிறப்பை உடையவராகி; மானுடச்
செவ்வி – மனித வடிவுடன் கூடி; வீரம் பெருகுற்ற- ஆண்மை
பொருந்திய வராகி; வனப்பர் – அழகு உடையவரும்; உச்சி
பிறங்கு வெண் குடையர்- தலை மீது வெண்கொற்றக் குடையை
உடையவரும்;செச்சை- செஞ்சாந்தக் குழம்பு பூசப் பெற்றதும்; மறு உள்ள
– தழும்பு பட்டதுமான;அலங்கல் மார்பர் – மாலை சூடிய
மார்பினை உடையவரும்; அறுபத்தேழ் அமைந்த கோடி-
அறுபத்தேழு கோடி எண்ணிக்கையினருமாகிய;வானரத் தலைவர்
யானை மேல் போனார்- வானரத் தலைவர்கள் யானை மீது
ஏறிச் சென்றனர்.

————-

எட்டு என இறுத்த பத்தின் ஏழ் பொழில் வளாக வேந்தர்
பட்டம் வைத்து அமைந்த நெற்றிப் பகட்டினர், பைம் பொன் தேரர்,
வட்ட வெண்குடையர், வீசு சாமரை மருங்கர், வானைத்
தொட்ட வெஞ் சோதி மோலிச் சென்னியர், தொழுது சூழ்ந்தார்–6-

நெற்றிப் பட்டம் வைத்து அமைந்த- நெற்றிப் பட்டம்
தைத்து அமைக்கப்பட்ட; பகட்டினர்- யானையை உடையவரும்;
பைம்பொன் தேரர் – பசும் பொன்னாலமைந்த தேரினை
உடையவரும்; வட்ட வெண்குடையர் – வட்ட வடிவமான வெண்
குடையை உடையவரும்; சாமரை வீசு மருங்கர் – இருபுறமும் கவரி
வீசப் பெற்றவரும்; வானைத் தொட் – ஆகாயத்தை அளாவும்;
வெஞ்சோதி – வெவ்விய ஒளியை உடைய; மோலிச் சென்னியர்
– மகுடம் தரித்த தலையை உடையவருமான; எட்டென இறுத்த
பத்தின்- எட்டென்று முடிகின்ற பத்து அதாவது பதினெட்டுப்
பிரிவான; ஏழ் பொழில் வளாக வேந்தர் – ஏழு பூமிகளின்
எல்லையிலுமிருந்த மன்னர்கள்; தொழுது சூழ்ந்தார்- வணங்கிச்
சூழ்ந்தனர்.

பதினெட்டு நாடுகளாவன சிங்களம், புட்பகம் சோனகம், சாவகம்,
சீனம், துளு, குடகம், கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலுங்கம்,
திராவிடம், கலிங்கம், அங்கம், சங்கம், மகதம், மராடம் முதலியனவாம்.

————-

சீதா பிராட்டியின் பயணம்
10296.
வானர மகளிர் எல்லாம் வானவர் மகளிராய் வந்து
ஊனம் இல் பிடியும் ஒண் தார்ப் புரவியும் பிறவும் ஊர்ந்து,
மீன்இனம் மதியைச் சூழ்ந்த தன்மையின் விரிந்து சுற்ற,
பூ நிற விமானம்தன்மேல் மிதிலை நாட்டு அன்னம் போனாள்.–7-

வானர மகளிர் எல்லாம்- வானரப் பெண்கள் அனைவரும்;
வானவர் மகளிராய் வந்து- தேவ கன்னிகையராய் உருமாறி;
ஊனமில் பிடியும் – குற்றமற்ற பெண்யானை மீதும்; ஒண்தார்ப்
புரவியும்- ஒள்ளிய மாலை பூண்ட குதிரையின் மீதும்; பிறவும்
ஊர்ந்து – (சிவிகை முதலிய) பிற ஊர்திகள் மீதும் ஏறிச் செலுத்தி;
மீன் இனம் – விண்மீன் கூட்டம்; மதியைச் சூழ்ந்த தன்மையின்
விரிந்து சுற்ற- நிலாவைச் சுற்றிய தன்மைபோல் சூழ்ந்துவர; பூ நிற
விமானம் தன் மேல்- பொலிவுடைய விமானத்தின் மீது;மிதிலை
நாட்டு அன்னம் போனாள்- மிதிலை நாட்டின் அன்னம் போன்ற
சீதாபிராட்டி சென்றாள்.

———————

தேவரும் முனிவரும் மலர் மழை பொழிதல்

தேவரும் முனிவர் தாமும் திசைதொறும் மலர்கள் சிந்த
ஓவல் இல் மாரி ஏய்ப்ப, எங்கணும் உதிர்ந்து வீங்கிக்
கேவல மலராய், வேறு ஓர் இடம் இன்றிக் கிடந்த ஆற்றால்,
பூ எனும் நாமம், இன்று இவ் உலகிற்குப் பொருந்திற்று அன்றே -8-

தேவரும் முனிவர் தாமும் – வானவரும் முனிவர்களும்;
திசை தொறும் மலர்கள் சிந்த- எல்லாத் திசைகளிலிருந்தும்
பூக்களைச் சொரிய; ஓவல் இல் மாரி ஏய்ப்ப – இடையறாது
மழை பொழிவதைப் போன்று; எங்கணும் உதிர்ந்து வீங்கி-
எல்லா இடத்திலும் பொழிந்து பெருகி; கேவல மலராய் –
மலர்கள் மட்டுமேயாக நிறைந்து; வேறு ஓர் இடமின்றிக்
கிடந்த ஆற்றால்- மற்றேதும் இடம் பெற முடியாமற் கிடந்த
தன்மையால்;இவ்வுலகிற்கு- இந்தப் புவிக்கு, இன்று – இந்த
நாளில்;பூ எனும் நாமம் – பூ என்கிற பெயர்; பொருந்திற்று
– பொருந்துவதாயிற்று; அன்று- அசை; ஏ- தேற்றம்; பூமிக்குப்
பூ என்னும் பெயரமைந்தமைக்குப் பிறிதொரு காரணம் கற்பித்தார்.

————

சேனைகள் முதலியவற்றின் மகிழ்ச்சி

கோடையில் வறந்த மேகக் குலம் எனப் பதினால் ஆண்டு
பாடு உறு மதம் செய்யாத பணை முகப் பரும யானை,
காடு உறை அண்ணல் எய்த, கடாம் திறந்து உகுத்த வாரி
ஓடின, உள்ளத்து உள்ள களி திறந்து உடைந்ததேபோல். –9-

கோடையில் – முதுவேனிற் காலத்தில்; வறந்த – நீர் வறண்ட;
மேகக் குலம் என – முகிற் கூட்டம் போன்று; பதினால் ஆண்டு –
(நீண்ட) பதினான்கு ஆண்டுக்காலம்; பாடு உறு மதம் செய்யாத-
வெளிப்படுத்துகின்ற மதத்தைப் பொழியாமலிருந்த; பணைமுகப் பரும
யானை – கொம்புகளை முகத்தில் பெற்ற சேணமமைந்த களிறுகள்;
காடு உறை அண்ணல் எய்த- வனவாசம் முடித்த இராமபிரான்
திரும்பி வந்தமையால்; கடாம் திறந்து உகுத்த வாரி – கன்னம்
திறந்து பொழிந்த மதநீர்; உள்ளத்து உள்ள களி திறந்து
உடைந்ததே போல் – (அவற்றின்) மனத்துக்குள் அடக்கி
வைத்திருந்த களிப்பு உடைந்து வெளிப்பட்டது போல்;ஓடின –
பெருகி ஓடலாயிற்று.

—————

துரவத் தார்ப் புரவி எல்லாம், மூங்கையர் சொல் பெற்றென்ன,
அரவப் போர் மேகம் என்ன, ஆலித்த; மரங்கள் ஆன்ற
பருவத்தால் பூத்த என்னப் பூத்தன; பகையின் சீறும்
புருவத்தார் மேனி எல்லாம் பொன் நிறப் பசலை பூத்த. -10-

துரகத் தார்ப் புரவி எல்லாம் – கிண்கிணி மாலை யணிந்த
குதிரைகள் எல்லாம்; மூங்கையர் சொல் பெற்றென்ன- ஊமையர்கள்
பேசும் திறம் பெற்றாற் போலவும்; அரவப் போர் மேகம் என்ன –
ஆரவார ஒலி முழக்கும் மேகங்கள் போலவும்; ஆலித்த -கனைத்தன;
மரங்கள் – அனைத்து மரங்களும்; ஆன்ற பருவத்தால் – பொருந்திய பருவ காலத்தில்; பூத்த என்ன-
மலர்ந்தன போன்று; பூத்தன – விரிந்தன; பகையின் சீறும்-
எதிரிகள் மீது சினந்து வளைவது போல் (வளையும்);
புருவத்தார் – புருவத்தை உடைய மகளிர்; மேனி எல்லாம் –
உடல் முழுவதும்; பொன் நிறப் பசலை பூத்த – தங்க நிறப்
பசலை படர்ந்தது.

பதினான்கு ஆண்டுகள் கனைக்காதிருந்த குதிரைகள் இராமன்
வருகையால் கனைக்கலாயின.

———

தாய் மார் முதலியோரை வணங்கி, இராமன் அரண்மனையை அடைதல்

ஆயது ஓர் அளவில், செல்வத்து அண்ணலும் அயோத்தி நண்ணி,
தாயரை வணங்கி, தங்கள் இறையொடு முனியைத் தாழ்ந்து,
நாயகக் கோயில் எய்தி, நானிலக் கிழத்தியோடும்
சேயொளிக் கமலத்தாளும் களி நடம் செய்யக் கண்டான். -11-

ஆயது ஓர் அளவில் – அந்தச் சமயத்தில்; செல்வத்து
அண்ணலும் – எல்லாத் திருவும் பொருந்திய தலைவன்
இராமபிரானும்; அயோத்தி நண்ணி- அயோத்தி நகரையடைந்து;
தாயரை வணங்கி- தன் அன்னையாரைப் பணிந்து; நாயகக்
கோயில் எய்தி – அனைத்துலக நாயகனான திருமாலின் ஆலயத்தை
அடைந்து; தங்கள் இறையொடு- தங்கள் குலதெய்வத்தோடு;
முனியைத் தாழ்ந்து- குல குருவான வசிட்டரையும் வணங்கி;
நானிலக் கிழத்தியோடும் – நில மகளோடு; சேயொளிக்
கமலத்தாளும் – சிவந்த ஒளிமிக்க தாமரைத் திருவும்;
திருநடம் செய்யக் கண்டான் – (மிக்க உவகையோடு) களி
நடம் புரிவதைக் கண்ணுற்றான்.

நாயகக் கோயில் – அரண்மனையும் ஆகலாம்.

———

நகர மாந்தரின் மகிழ்ச்சிப் பெருக்கு

‘வாங்குதும் துகில்கள்’ என்னும் மனம் இலர், கரத்தின் பல்கால்
தாங்கினர் என்ற போதும், மைந்தரும் தையலாரும்,
வீங்கிய உவகை மேனி சிறக்கவும், மேன் மேல் துள்ளி
ஓங்கவும், களிப்பால் சோர்ந்தும், உடை இலாதாரை ஒத்தார். -12-

துகில்கள் வாங்குதும் என்னும் – ஆடைகளைக் களைந்து
விட வேண்டும் என்னும்; மனம் இலர் – எண்ணமில்லாதவரான;
மைந்தரும் தையலாரும் – (அயோத்தி நகர்) ஆண்களும்
பெண்களும்; களிப்பால் – இராமனைக் கண்ட மகிழ்ச்சியால்
(தளர்கின்ற ஆடையை); கரத்தின்- தம் கரங்களால்; பல்கால்
தாங்கினர் என்ற போதும் – பன்முறையும் தாங்கி நின்றார்கள்
என்ற போதிலும்; வீங்கிய உவகை- பெருகிய மகிழ்ச்சியால்;
மேனி சிறக்கவும் – உடல் பூரித்தலால்; மேன்மேல் துள்ளி
ஓங்கவும்- மேலும் மேலும் துள்ளிப் பாய்தலாலும் சோர்ந்த
உடை இலாதாரை ஒத்தார்- நெகிழ்ந்த ஆடையற்ற திகம்பரரை
ஒத்திருந்தார்கள்.

சமணரில் திகம்பரர் ஆடை அணியாதவர் ஆவர்.

———

வேசியர் உடுத்த கூறை வேந்தர்கள் சுற்ற, வெற்றிப்
பாசிழை மகளிர் ஆடை அந்தணர் பறித்துச் சுற்ற,
வாசம், மென் கலவைச் சாந்து, என்று இனையன, மயக்கம்தன்னால்
பூசினர்க்கு இரட்டி ஆனார், பூசலார் புகுந்துளோரும். -13-

வேசியர் உடுத்த கூறை – கணிகையர் உடுத்திருந்த
சேலையினை (தடுமாற்றம் நேர்ந்தமையால்); வேதியர் சுற்ற –
வேதியர்கள் தரிக்கவும்; வெற்றிப் பாசிழை மகளிர் ஆடை-
ஊடலில் வெற்றி கொள்ளும் பசிய பொன்னணிகள் அணிந்த
பெண்களின் ஆடையினை; அந்தணர் பறித்துச் சுற்ற- அந்தணர்
வலிந்து பறித்துச் சுற்றிக் கொள்ளவும்; வாசம் – நறுமணப்
பொருள்களும்; மென் கலவைச் சாந்து – மெல்லிதாய் நறும்
பொருள்கள் கலந்து அரைத்த சாந்தும்; என்று இனையன-
என்னும் இவற்றை; பூசலார் – பூசிக் கொள்ளாது; புகுந்துளோரும்
– வந்தவர்களும்; மயக்கம் தன்னால் – மக்களின் உவகை
மயக்கத்தால்; பூசினர்க்கு இரட்டி ஆனார் – (மணப் பொருள்கள்)
பூசியவரைக் காட்டிலும் இருமடங்கு அப்பிக் கொண்டார்கள்.

—————

இறைப் பெருஞ் செல்வம் நீத்த ஏழ்-இரண்டு ஆண்டும், யாரும்
உறைப்பு இலர் ஆதலானே, வேறு இருந்து ஒழிந்த மின்னார்,
பிறைக் கொழுந்து அனைய நெற்றிப் பெய் வளை மகளிர், மெய்யை
மறைத்தனர் பூணின், மைந்தர் உயிர்க்கு ஒரு மறுக்கம் தோன்ற -14-

இறை- ஆட்சியாகிய; பெருஞ்செல்வம் நீத்த –
பெருந்திருவினை நீங்கிய; ஏழ் இரண்டு ஆண்டும் – பதினான்கு
ஆண்டுக் காலத்திலும்;யாரும் உறைப்பு இலர் ஆதலானே –
அனைவரும் மனமகிழ்ச்சியற்றிருந்தவர்களாதலால்; வேறு இருந்து
ஒழிந்த – (கணவருடன் கூடாது) தனித்திருந்து; கழித்த; பிறைக்
கொழுந்து அனைய நெற்றி – இளம் பிறை போன்ற நெற்றியினை
உடைய; மின்னார்- மின்னலைப் போன்றவரும்; பெய்வளை
மகளிர் – வளையல் அணிந்தவருமான பெண்கள்; மைந்தர்-
ஆண்மக்களுடைய; உயிர்க்கு மறுக்கம் எய்த- உயிருக்குக்
கலக்கம் ஏற்படுமாறு; மெய்யை – தம் உடலை; பூணில்
மறைத்தனர் – அணிகலன்களால் மூடிக் கொண்டனர்.

————–

விண் உறைவோர்தம் தெய்வ வெறியோடும், வேறுளோர்தம்
தண் நறு நாற்றம் தம்மில் தலைதடுமாறும் நீரால்,
மண் உறை மாதரார்க்கும் வான் உறை மடந்தைமார்க்கும்,
உள் நிறைந்து உயிர்ப்பு வீங்கும் ஊடல் உண்டாயிற்று அன்றே 15-

விண் உறைவோர் தம்- வானுலகில் வாழ்கின்றவர்களின்;
தெய்வ வெறியொடும்- தெய்வீக நறுமணத்தோடும்; வேறுளோர்
தம் – (மற்ற) மனித உலகத்தவர்களின்; தண்நறு நாற்றம்-
குளிர்ந்த நறுமணம்; தம்மில் தலைதடுமாறு நீரால் – தமக்குள்
கலந்து வீசும் தன்மையால்; மண் உறை மாதரார்க்கும் –
மண்ணுலகத்துப் பெண்களுக்கும்; வான் உறை மடந்தைமார்க்கும்
– விண்ணுலக மாதர்கட்கும்; உள் நினைந்து உயிர்ப்பு வீங்கி – உள்ளே
(வெறுப்பு) பெருகிப் பெரு மூச்சாய் வெளிப்பட்டு; ஊடல்
உண்டாயிற்று- பிணக்கு ஏற்பட்டது.

————

ஆயது ஓர் அளவில், ஐயன், பரதனை, அருளின் நோக்கி,
‘தூய வீடணற்கும், மற்றைச் சூரியன் மகற்கும்,தொல்லை
மேய வானரர்கள் ஆய வீரர்க்கும், பிறர்க்கும், நம்தம்
நாயகக் கோயில் உள்ள நலம் எலாம் தெரித்தி’என்றான்.-16-

ஆயது ஓர் அளவில்- அந்தப் பொழுதில்; ஐயன்-
இராமபிரான்; பரதனை அருளின் நோக்கி – பரதனை அன்புறப்
பார்த்து; ‘தூய வீடணற்கும் – உளந்தூய வீடணனுக்கும்; மற்றை
– மற்றும்; சூரியன் மகற்கும் – கதிரவன் மைந்தனான
சுக்கிரீவனுக்கும்; தொல்லை மேய – பழமை வாய்ந்த;
வானரர்கள் ஆய வீரர்க்கும் – வானர வீரர்களுக்கும்;
பிறர்க்கும் – மற்றையோருக்கும்; நம்தம்- நம்முடைய;
நாயகக் கோயில் உள்ள- முதன்மை வாய்ந்த அரண்மனையில்
அமைந்துள்ள; நலம் எலாம் தெரித்தி- சிறப்புக்கள்
எல்லாவற்றையும் விளக்குவாயாக; என்றான் – என்று
கூறினான்.

———-

என்றலும், இறைஞ்சி, மற்றைத் துணைவர்கள் யாவரோடும்
சென்றனன் எழுந்து, மாடம் பல ஒரீஇ, உலகில்தெய்வப்
பொன் திணிந்து அமரரோடும் பூமகள் உறையும் மேருக்
குன்று என விளங்கித் தோன்றும் நாயகக் கோயில் புக்கான்.-17-

என்றலும்- இவ்வாறு இராமன் கூறுதலும்;இறைஞ்சி – (பரதன்)
வணங்கி; மற்றைத் துணைவர்கள் யாவரோடும்- பிற
அன்பர்கள் அனைவரோடும்; எழுந்து சென்றனன்- எழுந்து
புறப்பட்டவனாகி; மாடம் பல ஒரீஇ- பல மாட கூடங்கள்
தாண்டி; உலகில்- அனைத்துலகங்களிலும்; பொன் திணிந்து-
(சிறந்த) பொன் செறிந்து; அமரரோடும் பூமகள் உறையும்-
தேவர்களோடு திருமகளும் உறைகின்ற; மேருக்குன்று என-
இமயமலை போன்று;விளங்கித் தோன்றும் – ஒளிபெற்றுத்
திகழும்; தெய்வ நாயகக் கோயில் புக்கான்-
தெய்வத்தன்மை பொருந்திய தலைமை அரண்மனைக்குச்
சென்றான்.

————-

வயிரம், மாணிக்கம், நீலம், மரகதம் முதலாய் உள்ள
செயிர் அறு மணிகள் ஈன்ற செழுஞ் சுடர்க் கற்றை சுற்ற,
உயிர் துணுக்குற்று நெஞ்சும் உள்ளமும் ஊசலாட,
மயர்வு அறு மனத்து வீரர், இமைப்பிலர், மயங்கி நின்றார்.–18-

மயர்வு அறு மனத்து வீரர் – கலக்கமற்ற மனம் படைத்த
வீடணன் முதலாம் வீரர்கள்; வயிரம் மாணிக்கம் நீலம்
மரகதம் முதலாய் உள்ள – வைரம், மாணிக்கம், நீலம்,
மரகதம் தொடக்கமாய் உள்ள; செயிர் அறுமணிகள் ஈன்ற-
குற்றமற்ற மணிக்கற்கள் தந்த; செழுஞ்சுடர்க் கற்றை சுற்ற
– வளமான ஒளிக்கிரணங்கள் தம்மைச் சூழவும்;உயிர் – தமது
உயிர்; துணுக்குற்று – திடுக்கிட; நெஞ்சும் உள்ளமும் ஊசலாட
– மனமும் உணர்வும் தடுமாற; இமைப்பிலர் – இமைக்கவும்
மறைந்தவர்களாய் மயங்கி நின்றார்- மயக்கம் கொண்டு
நின்றார்கள்.

———–

விண்டுவின் மார்பில் காந்தும் மணி என விளங்கும் மாடம்
கண்டனர்; பரதன் தன்னை வினவினர், அவர்க்கு,’காதல்
புண்டரீகத்துள் வைகும் புராதனன், கன்னல் தோளான்,
கொண்ட நல் தவம்தன்னாலே உவந்து, முன் கொடுத்தது’ என்றான்.–19-

விண்டுவின் மார்பில் – திருமாலின் மார்பினில்;
காந்தும் மணி என- ஒளி விடும் கௌத்துவ மணி போன்று;
விளங்கும் மாடம் கண்டனர்- திகழும் மாடத்தைக் கண்டவர்கள்; பரதன் தன்னை
வினவினர் – பரதனிடம் அது குறித்துக் கேட்டனர்; அவர்க்கு
– அவர்களிடம் (பரதன்); ‘புண்டரீகத்துள் வைகும் புராதனன்
– உந்தித் தாமரையில் வாழும் பழம் பெருமை மிக்க
பிரமதேவன்; கன்னல் தோளான்- கரும்பு போல் இனிமை
மிக்க தோள்களை உடைய இட்சுவாகு மன்னனுக்கு; கொண்ட நல்
தவத்தினாலே- (அவன்) மேற்கொண்ட அருந்தவத்தைப்
பாராட்டி; காதல் – அன்புடன்; உவந்து- மகிழ்ந்து; முன்
கொடுத்தது- முன்னர் பரிசாகத் தந்ததாகும்; என்றான்-
எனக் கூறினான்.

—————–

‘பங்கயத்து ஒருவன் இக்குவாகுவிற்கு அளித்த பான்மைத்து
இங்கு இது மலராள் வைகும் மாடம்’ என்று இசைத்த போதில்,
‘எங்களால் துதிக்கலாகும் இயல்பதோ’ என்று கூறி,
செங் கைகள் கூப்பி, வேறு ஓர் மண்டபம்அதனில் சேர்ந்தார்.–20-

பங்கயத்து ஒருவன்- தாமரையில் வைகும் ஒப்பற்ற
பிரமதேவன்; இக்குவாகுவிற்கு- இட்சுவாகு மன்னனுக்கு; அளித்த
பான்மைத்து- அளித்த சிறப்புக்குரிய; இங்கு இது மலராள்
வைகும் மாடம் – இங்கு அமைந்துள்ள இந்த திருமகள் தங்கும்
இனிய மாடம்;என்று இசைத்த போதில்- என்று பரதன்
இயம்பியபோது, (வீடணாதியர்);எங்களால் துதிக்கலாகும்
இயல்பதோ – எங்களால் புகழக் கூடி அளவினதோ இது?; என்று
கூறி- என்று மொழிந்து; செங்கைகள் கூப்பி – தம் சிவந்த
கரங்களால் வணங்கி;வேறு ஓர் மண்டபம் அதனில்- மற்றொரு
மண்டபத்துக்கு; சேர்ந்தார்- சென்று சேர்ந்தனர்.

————–

இருந்தனர், அனைய மாடத்து இயல்பு எலாம் எண்ணி எண்ணி,
பரிந்தனன் இரவி மைந்தன், பரதனை வணங்கி ‘தூயோய்!
கருந் தட முகிலினாற்குக் காப்பு நாண் அணியும் நல் நாள்
தெரிந்திடாது இருத்தல் என்னோ?’ என்றலும்,அண்ணல் செப்பும்:–21-

அனைய மாடத்து இயல்பு எலாம்- அந்த மாடத்தின்
தன்மையை எல்லாம்; எண்ணி எண்ணி இருந்தனர்- (வீடணாதியர்)
நினைந்து நினைந்து வியந்திருந்தனர்; இரவி மைந்தன் –
சூரியன் புதல்வனாகிய சுக்கிரீவன்; பரிந்தனன்- அன்பு
பூண்டவனாய்; பரதனை வணங்கி- பரதனைப் பணிந்து; ‘தூயோய்!
– புனிதம் மிக்கவனே; கருந்தட முகிலினாற்கு- `கரிய பெரிய
முகில் போலும் நிறம் படைத்த இராமபிரானுக்கு; காப்பு நாண்
– (மங்கல மகுடம் புனைதற்கு) காப்பு நாணினை; அணியும்
நல்நாள்- அணிந்து கொள்ளும் இனிய நாள்; தெரிந்திடாது
இருத்தல் என்னோ- இன்னமும் நாங்கள் அறியமுடியாமல்
இருப்பது ஏன்; என்றலும்- எனக் கேட்டலும்; அண்ணல்
செப்பும் – பரதன் கூறுவானாயினன்.

————-

‘ஏழ் கடல் அதனில் தோயம், இரு நதி பிறவில் தோயம்
தாழ்வு இலாது இவண் வந்து எய்தற்கு அருமைத்து ஓர் தன்மைத்து என்ன,
ஆழி ஒன்று உடையோன் மைந்தன், அனுமனைக் கடிதின் நோக்க,
சூழ் புவி அதனை எல்லாம் கடந்தனன், காலின் தோன்றல்.–22-

ஏழ்கடலதனில் தோயம்- ஏழு கடல்களிலிருந்து கொண்டு
வரும் புனித நீரும்; பிற இருநதியில் தோயம்- வேறுள்ள பெரிய
நதிகளிலிருந்து கொண்டுவரும் தீர்த்தங்களும்; தாழ்விலாது-
தாமதமின்றி;இவண் வந்து எய்தற்கு – இங்கு வந்து சேருதற்கு;
அருமைத்து ஓர் தன்மைத்து- அரிய தன்மையுடையது;என்ன –
என்று (பரதன்) கூற; ஆழி ஒன்று உடையோன் மைந்தன் –
ஒற்றைச் சக்கரத் தேரினனான சூரியன் புதல்வன் (சுக்கிரீவன்);
அனுமனைக் கடிதின் நோக்க- அனுமனை விரைந்து பார்க்கவும்;
காலின் தோன்றல்- காற்றின் மைந்தனாகிய அனுமன்; சூழ் புவி
அதனை எல்லாம் – கடல் சூழ் உலகத்தின் (தொலைவை)
எல்லாம்; கடந்தனன்- உடன் கடந்து சென்றான்.

————-

‘கோமுனியோடு மற்றைக் கணிதரைக் கொணர்க!’ என்னா
ஏவினன்; தேர் வலான் சென்று இசைத்தலும், உலகம் ஈன்ற
பூமகன் தந்த அந்தப் புனித மா தவன் வந்து எய்த,
யாவரும் எழுந்து போற்றி, இணை அடி தொழுது நின்றார்.–23-

கோமுனியோடு- தலைமை வாய்ந்த வசிட்ட முனிவரோடு; மற்றை
– பிற; கணிதரைக் கொணர்க – சோதிடரையும் அழைத்து வருக;
என்னா – என்று; ஏவினன் – (பரதன்) அமைச்சருக்குக்
கட்டளையிட்டான்; தேர் வலான் – தேர் செலுத்துவதில் வல்ல
(அமைச்சன்) சுமந்திரனும்; சென்று இசைத்தலும் – சென்று
முனிவரிடம் கூறியதும்; உலகம் ஈன்ற பூமகன் – உலகைப்
படைத்த பிரம தேவன்; தந்த அந்தப் புனித மாதவன் – பெற்ற
அப்புனித மாமுனி (வசிட்டனும்); வந்து எய்த – வந்து
சேர்தலும்; யாவரும் எழுந்து போற்றி- அனைவரும் எழுந்து
துதித்து; இணைஅடி தொழுது நின்றார்- அடியிணை வணங்கி
நின்றனர்.

————-

அரியணை பரதன் ஈய, அதன்கண் ஆண்டு இருந்த அந்தப்
பெரியவன், அவனை நோக்கி, ‘பெரு நிலக் கிழத்தியோடும்
உரிய மா மலராளோடும் உகந்தனர் ஒருவு இல் செல்வம்
கரியவன் உய்த்தற்கு ஒத்த காப்பு நாள் நாளை’என்றான்.–24-

அரியணை ஈய – சிங்காதனம் இடவும்; அதன் கண் ஆண்டு
இருந்த- அதன் மீது அங்கே அமர்ந்த; அந்தப் பெரியவன்-
அந்தப் பெருந்தகை; அவனை நோக்கி- பரதனைப் பார்த்து;
‘பெருநிலக் கிழத்தியோடும் – பூமிப் பிராட்டியோடும்; உரிய
மாமலராளோடும் – பொருந்திய திருமகளோடும்; உகந்தனர்-
உவந்திருந்து;ஒருவு இல் செல்வம்- அழியாப் பெருஞ்செல்வம்
(நுகர்ந்து); கரியவன்- கரு நிறத்து இராமன்; உய்த்தற்கு –
ஆட்சி நடத்துதற்கு; ஒத்த காப்பு நாள்- இசைந்த காப்பு
அணியும் நன்னாள்; நாளை- நாளைய தினமாகும் ; என்றான் -.

———–

இராமன் திருமுடி சூடும் நாள் குறித்து எங்கும் செய்தி அனுப்புதல்

இந்திர குருவும் அன்னார் எனையவர் என்ன நின்ற
மந்திர விதியினாரும், வசிட்டனும், வரைந்து விட்டார்-
சந்திர கவிகை ஓங்கும் தயரத ராமன் தாமச்
சுந்தர மவுலி சூடும் ஓரையும் நாளும் தூக்கி. –25-

இந்திர குருவும் அன்னார் – தேவ குரு வியாழனை
நிகர்த்தவராய்; எனையவர் என்ன நின்ற- எத்துணைப் பேர்
எனக் கருதுமாறு பலராக நின்ற; மந்திர விதியினாரும்;-
மந்திர விதிகளில் தேர்ந்தவரும்; வசிட்டனும்- மாமுனி
வசிட்டரும்; சந்திர கவிகை ஓங்கும் – நிலவென ஒளிரும்
வெண்கொற்றக் குடை உயர்த்திய; தயரதராமன் – தசரத
ராமனுக்கு; தாமம்- ஒளிமிக்கதும்; சுந்தரம்- அழகு
வாய்ந்ததுமான; மவுலி சூடும் – திருமுடி சூடுகின்ற; ஓரையும்
நாளும் தூக்கி- நல்வேளையையும் நாளையும் ஆராய்ந்து;
வரைந்து விட்டார் – எழுதி அனுப்பினார்.

———

மூவுலகத்தாரும் அயோத்தியில் வந்து குழுமுதல்

அடுக்கிய உலகம் மூன்றும், ஆதரத் தூதர் கூற,
இடுக்கு ஒரு பேரும் இன்றி, அயோத்தி வந்து இறுத்தார் என்றால்,
தொடுக்குறு கவியால் மற்றைத் துழனியை இறுதி தோன்ற
ஒடுக்குறுத்து உரைக்கும் தன்மை நான் முகத்து ஒருவற்கு உண்டோ ? -26-

அடுக்கிய உலகம் மூன்றும்- ஒன்றன் மேல் ஒன்றாகத்
திகழும் மூன்று உலகங்களிலும்; ஆதரத் தூதர்- ஆர்வம் மிக்க
தூதர்கள்;கூற – (திருமுடி சூட்டு நிகழ்ச்சியை) எடுத்துச்
சொல்ல; இடுக்கு ஒரு பேருமின்றி – சிற்றிடம் கூட
வெற்றிடமாக இல்லாமல்; அயோத்தி வந்து இறுத்தார்
என்றால் – (அத்துணைப் பேரும்); அயோத்தியில் வந்து
தங்கினார்கள் எனில், மற்றை- வேறு; துழனியை –
பேரொலியை; இறுதி தோன்ற- முடிவாக; ஒடுக்குறுத்து –
தொகுத்து; தொடுக்குறு கவியான்- புனைகின்ற கவியால்;
உரைக்கும் தன்மை – எடுத்துரைக்கும் ஆற்றல்;நான் முகத்து
ஒருவற்கு உண்டோ – பிரம தேவனுக்கும் இருக்குமோ? (இராது
என்றபடி.)

————–

அவ் வயின் முனிவனோடும் பரதனும், அரியின் சேயும்,
செவ்வியின் நிருதர்கோனும், சாம்பனும், வாலி சேயும்,
எவ்வம் இல் ஆற்றல் வீரர் யாவரும், எழுந்து சென்று,ஆங்கு
அவ்வியம் அவித்த சிந்தை அண்ணலைத் தொழுது சொன்னார்.-27-

அவ்வயின்- அப்பொழுது; முனிவனோடும்- வசிட்ட
முனிவனோடு; அரியின் சேயும்- சூரியன் புதல்வன்
சுக்கிரீவனும்; செல்வியின் நிருதர் கோனும்- செம்மை
மிக்க அரக்கர் தலைவன் வீடணனும்; சாம்பனும் –
சாம்பவந்தனும்; வாலிசேயும் – வாலியின் புதல்வன்
அங்கதனும்; எவ்வம் இல் ஆற்றல் வீரர்- குற்றமற்ற
வல்லமைமிக்க வீரர்கள்; யாவரும் – அனைவரும்; ஆங்கு-
அவ்விடத்தில்; அவ்வியம் அவித்த சிந்தை – பொறாமை
அகற்றிய உள்ளம் படைத்த; அண்ணலை – இராமபிரானை;
தொழுதுசொன்னார் – வணங்கி (முடிசூட்டு நாள் குறித்துக்)
கூறினர்.

———-

‘நாளை நீ மவுலி சூட நன்மை சால் பெருமை நல்நாள்;
காளை! நீ அதனுக்கு ஏற்ற கடன்மைமீது இயற்றுக!’என்று,
வேளையே பொடியதாக விழிக்கும் நீள் நுதலின் வெண் பூம்
பூளையே சூடுவானைப் பொருவும் மா முனிவன் போனான்.–28-

(வசிட்டன் இராமனிடம்) நீ மவுலி சூட- நீ மகுடன் சூட;
நன்மை சால் பெருமை நல்நாள் நாளை- நலம் தரும் பெருமை
சான்ற சிறந்த நாள் நாளை; காளை- (ஆதலால்) காளை
போன்றவனே; நீ அதனுக்கு ஏற்ற- நீ அப்பொறுப்புக்கு
ஏற்றவாறு; கடன்மை மீது இயற்றுக- கடமைகளின் மேல் கவனம்
செய்க; என்று- என்று கூறி; வேளையே பொடியதாக விழிக்கும்
– மன்மதனையே சாம்பலாக்கக் கண் காட்டும்; நீள் நுதலின்
– நீண்ட நெற்றியை உடைய; வெண்பூம் பாளையே-
வெண்ணிறத்துப் பூளைப் பூவையே; சூடுவானை- சூடுகின்ற சிவ
பெருமானை; பொருவும்- நிகர்த்த; மாமுனிவன்- பெருமுனி
வசிட்டன்; போனான் – சென்றான்.

————-

பிரமன் ஏவலால், மயன் முடி சூட்டு மண்டபம் அமைத்தல்

நான்முகத்து ஒருவன் ஏவ, நயன் அறி மயன் என்று ஓதும்
நூல் முகத்து ஓங்கு கேள்வி நுணங்கியோன், வணங்கு நெஞ்சன்,
கோல் முகத்து அளந்து, குற்றம் செற்று, உலகு எல்லாம் கொள்ளும்
மான் முகத்து ஒருவன், நல் நாள் மண்டபம் வயங்கக் கண்டான் –29-

நான்முகத்து ஒருவன் ஏவ – பிரமனாகிய ஒப்பற்றவன்
கட்டளையிட; நயன் அறிமயன் என்று ஓதும்- கலைநுட்பம்
வல்ல (தெய்வ தச்சன்) மயன் என்று அறியப்படும்;நூல் முகத்து
ஓங்கு கேள்வி – சிற்ப நூலில் சிறந்த கேள்வியுடனே;
நுணங்கியோன்- நுண்மாண் நுழைபுலம் மிக்கவனாகிய; மான்
முகத்து ஒருவன்- மான்முகம் பெற்ற ஒப்பற்றவன்; வணங்கும்
நெஞ்சன்- வணங்கி நிற்கும் உள்ளம் படைத்தவன்; கோல்
முகத்து அளந்து- கோல்முகம் கொண்டு அளந்து; குற்றம் செற்று
– குற்றம் களைந்து; உலகு எல்லாம் கொள்ளும்- உலகையே
தனக்குள் அடக்கும்; மண்டபம்- மண்டபத்தை; நல்நாள்-
மங்கள நாளில்; வயங்கக் கண்டான் – விளக்கமுறக் கட்டி
முடித்தான்.

—————

அனுமன் புண்ணிய தீர்த்தங்கள் கொண்டு வருதல்

‘சூழ் கடல் நான்கின் தோயம், எழு வகை ஆகச் சொன்ன
ஆழ் திரை ஆற்றின் நீரோடு அமைத்தி இன்று’ என்ன, ‘ஆம்’ என்று,
ஊழியின் இறுதி செல்லும் தாதையின் உலாவி, அன்றே
ஏழ் திசை நீரும் தந்தான், இடர் கெட மருந்து தந்தான். -30-

சூழ் – உலகைச் சூழ்ந்துள்ள;கடல் நான்கின் தோயம் –
நான்கு கடல்களின் நீரும்; எழுவகை ஆகச் சொன்ன- எழு
வகையாகக் கூறப்பட்ட; ஆழ் திரை – ஆழ்ந்த அலை கொண்ட
கடல் நீரும்; ஆற்றின் நீரோடு – ஆறுகளின் நீரோடு;
அமைத்தி- கொண்டு வந்து சேர்க்க; என்ன- என்று
(சுக்கிரீவன்) ஆணையிட; இருந்து உய்ய மருந்து தந்தான் – நெடிது வாழச் சஞ்சீவி மலை
மருந்து தந்தவனாகிய அனுமனும்; ஆம் என- அப்படியே செய்வேன்
என்று; ஊழியின் இறுதி செல்லும்- யுக முடிவில் எழுகின்ற;
தாதையின் உலாவி – சண்ட மாருதம் போல் எழுந்து சென்று;
ஒன்றா – ஒரே சமயத்தில்; ஏழ்கடல் நீரும் தந்தான் –
எழுகடல் நீரையும் கொணர்ந்து தந்தான்.

———–

எரி மணிக் குடங்கள் பல் நூற்று யானைமேல் வரிசைக்கு ஆன்ற
விரி மதிக் குடையின் நீழல், வேந்தர்கள் பலரும் ஏந்தி,
புரை மணிக் காளம் ஆர்ப்ப, பல்லியம் துவைப்ப,பொங்கும்
சரயுவின் புனலும் தந்தார், சங்குஇனம் முரல மன்னோ.–31-

வேந்தர்கள் பலரும்- பல நாட்டு மன்னர்களும்;வரிசைக்கு
ஆன்ற – தம் தகுதிக்கு ஏற்ப; விரிமதிக் குடையின் நீழல் –
விரிந்த நிலவு போன்ற வெண்கொற்றக் குடை நிழலில்; பல்
நூற்று எரிமணிக் குடங்கள்- பல நூறு சுடர் மிக்க இரத்தினக்
குடங்களை; யானை மேல் ஏந்தி – யானை மீதமர்ந்து ஏந்தி;
புரை- உள்துளை கொண்ட;மணிக்காளம் ஆர்ப்ப- அழகிய
எக்காளம் ஒலிக்க; பல்லியம் துவைப்ப- பல
இசைக்கருவிகளும் முழங்க;சங்கு இனம் முரல பொங்கும்-
சங்குகள் ஒலிக்க அலைகள் எழும்; சரயுவின் புனலும் தந்தார்
– சரயு நீதி நீரும் கொண்டு வந்தனர்.

————–

மாணிக்கப் பலகை தைத்து, வயிரத் திண் கால்கள் சேர்த்தி,
ஆணிப்பொன் சுற்றி முற்றி, அழகுறச் சமைத்த பீடம்,
ஏண் உற்ற பளிக்கு மாடத்து இட்டனர்; அதனின்மீது
பூண் உற்ற திரள் தோள் வீரன் திருவொடும் பொலிந்தான் மன்னோ.–32-

மாணிக்கப் பலகை தைத்து- மாணிக்கத்தால் செய்த பலகை
பொருத்தப் பெற்று; வயிரத்தின் கால்கள் சேர்த்தி – வைரத்தால்
வலிய கால்கள் செய்தமைத்து; ஆணிப்பொன் சுற்றிமுற்றி-
உயர்ந்த பொன்னால் சுற்றும் பூர்த்தி செய்யப் பட்டு;
அழகுறச் சமைத்த பீடம் – எழிலாக உருவாக்கிய பீடத்தை;
ஏண் உற்ற- பெருமை சான்ற; பளிக்கு மாடத்து- பளிங்கு
மாடத்தில்; இட்டனர்- அமைத்தனர்; அதனின் மீது –
அப்பீடத்தின் மேல்;பூண் உற்ற- அணிகலன் அணிந்த;
திரள் தோள் வீரன்- திரண்ட தோள்களை உடைய
வீரனாகிய இராமபிரான்; திருவொடும் பொலிந்தான் – சீதா
பிராட்டியோடும் அழகுற வீற்றிருந்தான். மன் –
அசை.

————

மங்கல கீதம் பாட, மறை ஒலி முழங்க, வல் வாய்ச்
சங்குஇனம் குமுற, பாண்டில் தண்ணுமை ஒலிப்ப,தா இல்
பொங்கு பல்லியங்கள் ஆர்ப்ப, பூ மழை பொழிய,விண்ணோர்
எங்கள் நாயகனை வெவ்வேறு எதிர்ந்து, அபிடேகம் செய்தார்.–33-

மங்கல கீதம் பாட- மங்கலப் பாடல்கள் ஒலிக்கவும்;
மறை ஒலி முழங்க- வேத முழக்கம் கேட்கவும்; வல் வாய்ச்
சங்கு இனம் குமுற- பெரிய வாயை உடைய சங்குகள்
ஒலிக்கவும்; பாண்டில் தண்ணுமை ஒலிப்ப- தாளமும் மத்தளமும்
ஓசை செய்யவும்; தா இல் பல்லியம் பொங்கி ஆர்ப்ப –
குற்றம் தீர்ந்த பல்வகை இசைக் கருவிகள் மேலெழுந்து
ஆரவாரிக்கவும்; பூ மழை பொழிய – பூ மாரி பெய்யவும்;
விண்ணோர் – வானோர்; எங்கள் நாயகனை – எங்கள்
தலைவனாகிய இராமபிரானை; வெவ்வேறு – தனித்தனியாக;
எதிர்ந்து அபிடேகம் செய்தார்- அயோத்தியில் வரவேற்று
தீர்த்தமாட்டினர்.

———
10323.
மா தவர், மறைவலாளர், மந்திரக் கிழவர், மற்றும்
மூதறிவாளர், உள்ள சான்றவர் முதல் நீராட்ட,
சோதியான் மகனும், மற்றைத் துணைவரும்,அனுமன்தானும்,
தீது இலா இலங்கை வேந்தும், பின் அபிடேகம் செய்தார்.–34-

மாதவர் – முனிவர்களும்; மறைவலாளர்- அந்தணர்களும்;
மந்திரக் கிழவர் – அமைச்சர்களும்; மற்றும் – மேலுமுள்ள;
மூதறிவாளர் – பேரறிஞர்களும்; உள்ள சான்றவர் –
அங்கிருந்த சான்றோர்களும்; முதல் நீராட்ட – முதலில்
அபிடேகம் செய்தபின்; சோதியான் மகனும் – சூரியன்
மகனாகிய சுக்கிரீவனும்; மற்றைத் துணைவரும் – பிற
நண்பர்களும்; அனுமன் தானும்- அனுமனும்; தீது இலா
இலங்கை வேந்தும் – களங்கமற்ற வீடணனும்; பின் அபிடேகம்
செய்தார்- தொடர்ந்து அபிடேகம் செய்தனர்

——–

அம் கண் வான், உலகம், தாய அடி, மலர்த் தவிசோன் ஆட்டும்
கங்கை வார் சடையின் ஏற்றான், கண்ணுதல் ஒருவன்; இந் நாள்
சிங்கஏறு அனையான் செய்ய திருமுடி ஆட்டும் நல் நீர்
எங்கண் ஏற்று அன்னோன் வாழும்?’ என்றனர்,புலவர் எல்லாம்.–35-

‘அம் கண் வான் – அழகிய வானகத்தையும்;உலகம்-
மண்ணகத்தையும்; தாய அடி- அளந்த (திருமால்) திருவடிகளை;
மலர்த் தவிசோன்- உந்தித் தாமரை வாழும் பிரமதேவன்;
ஆட்டும் கங்கை – நீராட்டிய கங்கா தீர்த்தத்தை; கண்ணுதல்
ஒருவன் – நெற்றிக் கண் கொண்ட ஒப்பற்ற சிவபெருமான்;
வார் சடையின் ஏற்றான் – விரிந்த சடையில் ஏற்றுக்
கொண்டான்; இந்நாள் – இன்று; சிங்க ஏறு ஆனையான் –
ஆண் சிங்கம் போன்ற இராமனின்; செய்ய திருமுடி- செப்பமான
திருமுடியில்; ஆட்டும் நல் நீர் – அபிடேகமான புனித நீரை;
எங்கண் ஏற்று- எவ்விடம் ஏற்று; அன்னோன் வாழும் –
அச்சிவபெருமான் வாழ்வான்; என்றனர்- என்று கூறி
வியந்தனர்; புலவர் எல்லாம் – அறிஞர்கள் ஆனோர்
எல்லாரும்.

————

மரகதச் சயிலம் செந் தாமரை மலர்க் காடு பூத்து,
திரை கெழு கங்கை வீசும் திவலையால் நனைந்து,செய்ய
இரு குழை தொடரும் வேற் கண் மயிலொடும் இருந்தது ஏய்ப்ப,
பெருகிய செவ்வி கண்டார், பிறப்பு எனும் பிணிகள் தீர்ந்தார்.–36-

மரகதச் சயிலம்- மரகத மலை;செந்தாமரை மலர்க்காடு
பூத்து- செந்தாமரை மலர்த் தொகுதி மலரப் பெற்று;
திரைகெழு கங்கை – அலைகள் செறிந்த கங்கை நதியின்;
வீசும் திவலையால் நனைந்து- வீசுகின்ற துளிகளால் ஈரமுற்று;
செய்ய- சிவந்த; இருகுழை தொடரும் – இரு செவிக்
குழைகளையும் தொட்டு மீளும்; வேற்கண்- வேல் விழி
கொண்ட; மயிலொடும் இருந்தது எய்ப்ப- ஒரு மயிலோடு
விளங்கியது போன்று; பெருகிய செல்வி கண்டார் – விரியும்
அழகினைக் கண்டவர்கள்; பிறப்பு எனும் பிணிகள் தீர்ந்தார்
– பிறப்பு என்ற நோய் தீரப் பெற்றவர்கள் ஆயினர்.

———

இராமன் நீராடுதல்

தெய்வ நீராடற்கு ஒத்த செய் வினை வசிட்டன் செய்ய,
ஐயம் இல் சிந்தையான் அச் சுமந்திரன் அமைச்சரோடும்
நொய்தினின் இயற்ற, நோன்பின் மாதவர் நுனித்துக் காட்ட,
எய்தின இயன்ற பல் வேறு, இந்திரற்கு இயன்ற என்ன, –37-

தெய்வ நீர் ஆடற்கு ஏற்ற- புனித தீர்த்தங்கள்
அபிடேகம் செய்தற்குப் பொருத்தமான; செய்வினை-
சடங்குகளை; வசிட்டன் செய்ய- வசிட்ட முனிவன் இயற்றுமாறு;
நோன்பின் மாதவர் – விரத வேதியர்கள்; நுனித்துக் காட்ட
– நுட்பங்களைச் சுட்டிக் காட்ட; ஐயமில் சிந்தையான்-
தெளிவு மிக்க சிந்தனையாளனாகிய; அச்சுமந்திரன்- அந்தச்
சுமந்திரன்; அமைச்சரோடும் – அமைச்சர் பெருமக்களோடு;
நொய்தினின் இயற்ற- விரைந்து பணி செய்ய; இந்திரற்கு
இயன்ற என்ன- இந்திரனுக்கு அமைவது போன்று; பல்வேறு
இயன்ற எய்தின- பல்வகைப் பொருள்களும் வந்து சேர்ந்தன.

—————

வசிட்டன் இராமனுக்குத் திருமுடி புனைதல்

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடை வாள் ஏந்த,
பரதன் வெண் குடை கவிக்க, இருவரும் கவரி பற்ற,
விரி கடல் உலகம் ஏத்தும் வெண்ணெய் மன் சடையன் வண்மை
மரபுளோன் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான், மௌலி –38-

அரி அணை அனுமன் தாங்க – சிங்காதனத்தை அனுமன் காத்து
நிற்கவும்; அங்கதன் உடைவாள் ஏந்த- அங்கதன் உடை வாளை
ஏந்தி நிற்கவும்; பரதன் வெண்குடை கவிக்க- வெண்
கொற்றக் குடையைப் பரதன் பிடித்து நிழற்றவும்; இருவரும்
கவரி பற்ற – இலக்குவ சத்துருக்கர் இருவரும் சாமரை
ஏந்தவும்; விரைசெறி – மணம் கமழ்கிற; குழலி ஒங்க –
கூந்தலை உடைய பிராட்டி பெருமிதமாய் விளங்கவும்;
வெண்ணெயூர்ச் சடையன்- திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப
வள்ளல்; தங்கள் மரபுளோர்- கால் வழியின் முன்னோராக
உள்ளோர்;கொடுக்க வாங்கி- கொடுக்கப் பெற்றுக்கொண்டு;
மௌலி – மகுடத்தை; வசிட்டனே புனைந்தான்- வசிட்ட முனிவனே
சூட்டினான்.

———–

வெள்ளியும் பொன்னும் ஒப்பார் விதி முறை மெய்யின் கொண்ட
ஒள்ளிய நாளின், நல்ல ஓரையின், உலகம் மூன்றும்
துள்ளின களிப்ப, மோலி சூடினான்-கடலின் வந்த
தெள்ளிய திருவும், தெய்வப் பூமியும், சேரும் தோளான். –39-

கடலின் வந்த- திருப்பாற் கடலில் தோன்றிய; தெள்ளிய
திருவும்- தெளிந்த அழகுடைய இலக்குமியும்; தெய்வப் பூமியும்
– தெய்வத் தன்மை மிக்க பூமிப் பிராட்டியும்; சேரும் –
அணைகின்ற; தோளான் – தோளை உடையவனாகிய இராமபிரான்;
கொண்ட ஒள்ளிய நாளின்- தேர்ந்தெடுத்த சிறந்த
நன்னாளில்;நல்ல ஓரையின் – சிறந்த நல் வேளையில்;
உலகம் மூன்றும் துள்ளின குனிப்ப – மூன்று உலகமும் மகிழ்ச்சி
நிரம்பியவாறு வணங்க; வெள்ளியும் பொன்னும் ஒப்பார் –
அசுர குரு சுக்கிரனும், தேவ குரு வியாழனும் போன்ற நல்லோர்;
விதி முறை- விதித்த முறைப்படியே;மௌலி- மகுடத்தை;
மெய்யின் சூடினன் – தலையில் சூடிக் கொண்டான்.

———-

மூவுலகத்தாரும் மகிழ்தல்

சித்தம் ஒத்துளன் என்று ஓதும் திரு நகர்த் தெய்வ நன்னூல்
வித்தகன் ஒருவன் சென்னி மிலைச்சியது எனினும், மேன்மை
ஒத்த மூஉலகத் தோர்க்கும் உவகையின் உறுதி உன்னின்,
தம் தம் உச்சியின் மேல் வைத்தது ஒத்தது, அத் தாம மோலி. –40-

திரு நகர்த் தெய்வ நன்னூல் – அத்திரு நகர்க் கண் உள்ள
தெய்வச் சிறப்பு வாய்ந்த நூல்களில்; வித்தகன்- வல்லவனும்;
சித்தம் ஒத்துளன் – மனத்துக்கு இசைந்தவனும்; என்று ஓதும்
ஒருவன் – என்று பேசப்படும் ஒப்பற்ற வசிட்ட மாமுனிவன்;
சென்னி மிலைச்சியது எனினும் – இராமபிரான் தலையில்
சூட்டியது என்றாலும்; அத் தாம மோலி- அவ்வொளி மிகுந்த
மகுடம்; மேன்மை ஒத்த – மேன்மை பொருந்திய; மூ
உலகத்தோர்க்கும் – மூன்று உலகிலுள்ளோருக்கும்; உவகையின்
உறுதி உன்னின் – (அப்போது ஏற்பட்ட) மகிழ்ச்சியின்
அளவை எண்ணினால்; தம்தம் உச்சியின் மேல் – தம்
சொந்தத் தலையின் மீது; வைத்தது ஒத்தது – வைத்தாற்
போல் அமைந்திருந்தது.

————–

பல் நெடுங் காலம் நோற்று, தன்னுடைப் பண்பிற்கு ஏற்ற
பின் நெடுங் கணவன் தன்னைப் பெற்று, இடைப் பிரிந்து, முற்றும்
தன் நெடும் பீழை நீங்கத் தழுவினாள், தளிர்க் கை நீட்டி,
நல் நெடும் பூமி என்னும் நங்கை, தன் கொங்கை ஆர. -41-

பல் நெடுங்காலம் நோற்று- பல்லாண்டுகள் நீண்ட காலம்
நோன்பிருந்து; தன்னுடைய பண்பிற்கு ஏற்ற – தன்னுடைய
தகுதிக்கு ஏற்றவாறு;நெடுங் கணவன் பெற்று- உயர்ந்த கணவனை
அடைந்து; இடை பிரிந்து- சிறிது காலம் அவனைப்
பிரிந்திருந்து; தன் நெடும் பீழை முற்றும் நீங்க- தன்
பெருந்துன்பம் முழுவதும் நீங்கிவிட; நன்னெடும் பூமி என்னும்
நங்கை- சிறந்த பெரிய பூமி என்னும் மாது; தளிர்க் கை
நீட்டி – தளிர்க் கரம் நீட்டி; தன் கொங்கை ஆர- தன்
மார்பு குளிர; தழுவினாள் – தழுவி இன்புற்றாள்.

——-

பரதனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டுதல்

விரத நூல் முனிவன் சொன்ன விதி நெறி வழாமை நோக்கி,
வரதனும், இளைஞற்கு ஆங்கண் மா மணி மகுடம் சூட்டி,
பரதனைத் தனது செங்கோல் நடாவுறப் பணித்து, நாளும்
கரை தெரிவு இலாத போகக் களிப்பினுள் இருந்தான் மன்னோ -42-

விரத நூல் முனிவன்- விரதம் வழுவாத வேதம் வல்ல வசிட்ட
முனிவன்;சொன்ன- சொல்லிய; விதிநெறி – விதி முறைகள்;
வழாமை நோக்கி -தவறாது காத்து;வரதனும் – அருளாளனாகிய
இராமபிரானும்; இளைஞர்க்கு- தன் தம்பிமார் மூவர்க்கும்;
மாமணி மகுடம் சூட்டி- மாணிக்கம் இழைத்த உயர்ந்த மகுடம்
அணிவித்து; பரதனை – பரத நம்பியை; தனது செங்கோல்
நடாவுறப் பணித்து – தன் செங்கோலாட்சி நடத்துமாறு
கட்டளையிட்டு; நாளும் – நாள்தோறும்; கரை தெரிவிலாத
போகக் களிப்பினுள் இருந்தான் – எல்லையற்ற இன்ப
மகிழ்ச்சியில் திளைத்திருந்தான்.

—————–

உம்பரோடு இம்பர்காறும், உலகம் ஓர் ஏழும் ஏழும்,
‘எம் பெருமான்!’ என்று ஏத்தி, இறைஞ்சி நின்று, ஏவல் செய்ய,
தம்பியரோடும், தானும், தருமமும், தரணி காத்தான்-
அம்பரத்து அனந்தர் நீங்கி, அயோத்தியில் வந்த வள்ளல். -43-

————

மிகைப் பாடல்கள்

நிருதியின் திசையில் தோன்றும் நந்தியம்பதியை நீங்கி,
குருதி கொப்பளிக்கும் வேலான் கொடி மதில் அயோத்தி மேவ,
சுருதி ஒத்தனைய வெள்ளைத் துரகதக் குலங்கள் பூண்டு,
பருதி ஒத்து இலங்கும் பைம் பூண் பரு மணித் தேரின் ஆனான் 1-1

வீடணக் குரிசில், மற்றை வெங்க் கதிர்ச் சிறுவன், வெற்றிக்
கோடு அணை குன்றம் ஏறி, கொண்டல் தேர் மருங்கு செல்ல,
தோடு அணை மவுலிச் செங்கண் வாலிசேய் தூசி செல்ல,
சேடனைப் பொருவும் வீர மாருதி பின்பு சென்றான். 2-1

அறுபத்து ஏழ் அமைந்த கோடி யானைமேல் வரிசைக்கு ஆன்ற
திறம் உற்ற சிறப்பர் ஆகி, மானுடச் செவ்வி வீரம்
பெறுகுற்ற அன்பர் உச்சி பிறங்கு வெண் குடையர் செச்சை
மறு உற்ற அலங்கல் மார்பர், வானரத் தலைவர் போனார். 2-2

எட்டு என இறுத்த பத்தின் ஏழ் பொழில் வளாக வேந்தர்
பட்டம் வைத்து அமைந்த நெற்றிப் பகட்டினர், பைம் பொன் தேரர்,
வட்ட வெண்குடையர், வீசு சாமரை மருங்கர், வானைத்
தொட்ட வெஞ் சோதி மோலிச் சென்னியர், தொழுது சூழ்ந்தார். 2-3

எழு வகை முனிவரோடும், எண் திசைத் திசைகாப்பாளர்
குழுவினர், திசைகள்தோறும் குழாம் கொண்டு களித்துக் கூடி,
தொழுவன அமரர் கைகள் சுமக்கலாம் விசும்பில் துன்னி,
வழுவல் இல் மலர்கள் சிந்தி, மானிடம் சுருங்கச் சார்ந்தார். 2-4

வானர மகளிர் எல்லாம் வானவர் மகளிராய் வந்து,
ஊனம் இல் பிடியும் ஒண் தார்ப் புரவியும் பிறவும் ஊர்ந்து,
மீன் இனம் மதியைச் சூழ்ந்த தன்மையின் விரிந்து சுற்ற,
பூ நிற விமானம் தன்மேல் மிதிலை நாட்டு அன்னம் போனாள். 2-5

ஆயது நிகழ, செங் கண் இராமனும் அயோத்தி நண்ணி,
தாயரை வணங்கி, தங்கள் இறையொடு முனியைத் தாழ்ந்து,
நாயகக் கோயில் எய்தி, நானிலக் கிழத்தியோடும்
சேயொளிக் கமலத்தாளும் திரு நடம் செய்யக் கண்டான். 3-1

உம்பரும் உலகும் உய்ய உதித்திடும் ஒருவன் தானே
செம் பதுமத்தில் வாழும் செல்வி சானகியாம் மாதும்,
தம்பியர் தாமும், மற்றும் தாபதர் சங்கத்தோடும்,
அம் புவிதன்னில் மேலாம் அயோத்தியில், அமர்ந்தான் அம்மா. 3-2

இருபத்து ஏழ் அமைந்த கோடி யானைமேல் வரிசைக்கு ஏற்ற
திரு ஒத்த சிறப்பர் ஆகி, மானிடச் செவ்வி வீரர்
உருவத் தோள் ஒளிரும் பூணர், உச்சி வெண் குடையர், பச்சை
மரு ஒத்த அலங்கல் மார்பர், வானரத் தலைவர் போனார். 6-1

ஆயது ஓர் அளவில், ஐயன், பரதனை அருளின் நோக்கி,
‘தூய வீடணற்கும், மற்றைச் சூரியன் மகற்கும், தொல்லை
மேய வானரர்கள் ஆய வீரர்க்கும், பிறர்க்கும், நம் தம்
நாயகக் கோயில் உள்ள நலம் எலாம் தெரித்தி’ என்றான். 10-1

என்றலும், இறைஞ்சி, மற்றைத் துணைவர்கள் யாவரோடும்
சென்றனன் எழுந்து, மாடம் பல ஒரீஇ, உலகில் தெய்வப்
பொன் திணிந்து அமரரோடும் பூமகள் உறையும் மேருக்
குன்று என விளங்கித் தோன்றும் நாயகக் கோயில் புக்கான். 10-2

வயிரம், மாணிக்கம், நீலம், மரகதம், முதலாய் உள்ள
செயிர் அறு மணிகள் ஈன்ற செழுஞ் சுடர்க் கற்றை சுற்ற,
உயிர் துணுக்குற்று நெஞ்சும் உள்ளமும் ஊசலாட,
மயர்வு அறு மனத்து வீரர், இமைப்பிலர், மயங்கி நின்றார். 10-3

விண்டுவின் மார்பில் காந்தும் மணி என விளங்கும் மாடம்
கண்டனர்; பரதன் தன்னை வினவினர் அவர்க்கு, ‘காதல்
புண்டரீகத்துள் வைகும் புராதன, கன்னல் தோளான்,
கொண்ட நல் தவம்தன்னாலே உவந்து, முன் கொடுத்தது’ என்றான் 10-4

‘பங்கயத்து ஒருவன் இக்குவாகுவிற்கு அளித்த பான்மை
இங்கு இது மலராள் வைகும் மாடம்’ என்று இசைத்த போதில்,
‘எங்களால் துதிக்கலாகும் இயல்பதோ’ என்று கூறி,
செங் கைகள் கூப்பி, வேறு ஓர் மண்டபம் அதனில் சேர்ந்தார். 10-5

இருந்தனர், அனைய மாடத்து இயல்பு எலாம் எண்ணி எண்ணி,
பரிந்தனன் இரவி மைந்தன், பரதனை வணங்கி, ‘தூயோய்!
கருந்தடம் கண்ணினாற்குக் காப்பு நாண் அணியும் நல் நாள்
தெரிந்திடாது இருத்தல் என்னோ?’ என்றலும், அண்ணல் செப்பும்: 10-6

‘ஏழ் கடல் அதனில் தோயம், இரு நதி பிறவில் தோயம்
தாழ்வு இலாது இவண் வந்து எய்தற்கு அருமைத்து ஓர் தன்மைத்து’ என்ன,
ஆழி ஒன்று உடையோன் மைந்தன், அனுமனைக் கடிதின் நோக்க,
சூழ் புவி அதனை எல்லாம் கடந்தனன், காலின் தோன்றல். 10-7

‘கோமுனியோடு மற்றை மறையவர்க் கொணர்க!’ என்னா
ஏவினன்; தேர் வலான் சென்று இசைத்தலும், உலகம் ஈன்ற
பூமகன் தந்த அந்தப் புனித மா தவன் வந்து எய்த,
யாவரும் எழுந்து போற்றி, இணை அடி தொழுது நின்றார். 10-8

அரியணை பரதன் ஈய, அதன்கண் ஆண்டு இருந்த அந்தப்
பெரியவன், அவனை நோக்கி, ‘பெரு நிலக் கிழத்தியோடும்
உரிய மா மலராளோடும் உவந்து, இனிது ஊழிக் காலம்
கரியவன் உய்த்தற்கு ஒத்த காப்பு நாள் நாளை’ என்றான். 10-9

கயிலையில் வாழும் ஈசன் முதலிய கடவுளோர் தம்
அயில் விழி அரிவைமாரோடு அந்தரம் புகுந்து மொய்த்தார்,
குயில் மொழிச் சீதை கொண்கன் நிலமகள் தன்னைக் கொள்ளும்
இயல்புடை வதுவை காணும் ஆதரம் இதயத்து எய்த. 12-1

வேறு இனி உரைப்பது என்னோ? வியன் தருக் குலங்கள் ஆதி
கூறிய பொருள்கள் எல்லாம் கொற்றவன் வதுவை காண,
தேரு தம் உருவு நீத்து, மானிட உருவில் சேர்ந்து, ஆங்கு
ஊறிய உவகையோடும் அயோத்தி வந்து உற்ற அன்றே. 12-2

அவ் வயின் முனிவனோடும் பரதனும், அரியின் சேயும்,
செவ்வியின் நிருதர்கோனும், சாம்பனும், வாலி சேயும்,
எவ்வம் இல் ஆற்றல் வீரர் யாவரும், எழுந்து சென்று, ஆங்கு
அவ்வியம் அவித்த சிந்தை அண்ணலைத் தொழுது சொன்னார். 12-3

‘நாளை நீ மவுலி சூட நன்மை சால் பெருமை நல்நாள்;
காளை! நீ அதனுக்கு ஏற்ற கடன்மை மீது இயற்றுக!’ என்று,
வேளையே பொடியதாக விழிக்கும்நீள் நுதலின் வெண் பூம்
பூளையே சூடுவானைப் பொருவும் மா முனிவன் போனான். 12-4

தேவர் கம்மியன் தான் செய்த செழு மணி மாட கோடி
யாவரும் புகுந்து மொய்த்தார்; எழுந்த மங்கலத்தின் ஓசை
நா வரும் பனுவல் வீணை நாரதன் முதலாய் உள்ள
மேவரு முனிவர் எல்லாம் விதிமுறை வேள்வி கொண்டார். 13-1

எரி மணிக் குடங்கள் பல் நூற்று யானைமேல் வரிசைக்கு ஆன்ற
விரி மதிக் குடையின் நீழல், வேந்தர்கள் பலரும் ஏந்தி,
புரை மணிக் காளம் ஆர்ப்ப, பல்லியம் துவைப்ப, பொங்கும்
சரயுவின் புனலும் தந்தார், சங்கு இனம் முரல மன்னோ. 14-1

மாணிக்கப் பலகை தைத்து, வயிரத் திண் கால்கள் சேர்த்தி,
ஆணிப்பொன் சுற்றி முற்றி, அழகுறச் சமைத்த பீடம்,
ஏண் உற்ற பளிக்கு மாடத்து இட்டனர்; அதனின் மீது
பூண் உற்ற திரள் தோள் வீரன் திருவொடும் பொலிந்தான் மன்னோ 14-2

அந்தணர், வணிகர், வேளாண் மரபினோர், ஆலி நாட்டுச்
சந்து அணி புயத்து வள்ளல் சடையனே அனைய சான்றோர்,
‘உய்ந்தனம் அடியம்’ என்னும் உவகையின் உவரி நாண
வந்தனர், இராமன் கோயில் மங்கலத்து உரிமை மாக்கள். 14-3

மங்கல கீதம் பாட, மறை ஒலி முழங்க, வல் வாய்ச்
சங்கு இனம் குமுற, பாண்டில் தண்ணுமை ஒலிப்ப, தா இல்
பொங்கு பல்லியங்கள் ஆர்ப்ப, பூ மழை பொழிய, விண்ணோர்,
எங்கள் நாயகனை வெவ்வேறு எதிர்ந்து, அபிடேகம் செய்தார். 14-4

மா தவர், மறைவலாளர், மந்திரக் கிழவர், மற்றும்
மூதறிவாளர், உள்ள சான்றவர் முதல் நீராட்ட,
சோதியான் மகனும், மற்றைத் துணைவரும், அனுமன் தானும்,
தீது இலா இலங்கை வேந்தும், பின் அபிடேகம் செய்தார். 14-5

‘அம் கண் வான், உலகம், தாய அடி, மலர்த் தவிசோன் ஆட்டும்
கங்கை வார் சடையின் ஏற்றான், கண்ணுதல் ஒருவன்; இந் நாள்
சிங்க ஏறு அனையான் செய்ய திருமுடி ஆட்டும் நல் நீர்
எங்கண் ஏற்று அன்னோன் வாழும்?’ என்றனர், புலவர் எல்லாம் 14-6

மரகதச் சயிலம் செந் தாமரை மலர்க் காடு பூத்து,
திரை கெழு கங்கை வீசும் திவலையால் நனைந்து, செய்ய
இரு குழை தொடரும் வேற் கண் மயிலொடும் இருந்தது ஏய்ப்ப,
பெருகிய செவ்வி கண்டார், பிறப்பு எனும் பிணிகள் தீர்ந்தார். 14-7

‘வான் உறு முகுர்த்தம் வந்தது’ என்று மா மறைகள் நான்கும்
தான் உருக் கொண்டு போற்ற, சலம் தவிர்ந்து அமரர் ஏத்தி,
தேன் உறு மலர்கள் சிந்தி, திசைமுகம் பரவ, தெய்வ
வான் உறை மகளிர் ஆட, மா தவர் மகிழ்ந்து வாழ்த்த. 15-1

இப்படித் தழுவி, மாதர் இருவரும், இரண்டு பாலும்,
செப்புறல் அரிய இன்பச் செல்வத்துள் செலுத்தும் நாளில்,
கப்புடைச் சிரத்தோன் சென்னி கடிந்த வில் இராமன், காதல்
வைப்புடை வளாகம் தன்னில், மன்னுயிர் வாழ்த்த, வந்தான். 19-1

மறையவர் வாழி! வேத மனுநெறி வாழி! நன்னூல்
முறை செயும் அரசர், திங்கள் மும் மழை, வாழி! மெய்ம்மை
இறையவன் இராமன் வாழி! இக் கதை கேட்போர் வாழி!
அறை புகழ்ச் சடையன் வாழி! அரும் புகழ் அனுமன் வாழி! 20-1

[இது முதற்கொண்டு ‘விடை கொடுத்த படலம்’ என்று சில பிரதிகளில் காண்கிறது]

பூமகட்கு அணி அது என்னப் பொலி பசும் பூரி சேர்த்தி,
மா மணித் தூணின் செய்த மண்டபம் அதனின் நாப்பண்,
கோமணிச் சிவிகைமீதே, கொண்டலும் மின்னும் போல,
தாமரைக் கிழத்தியோடும் தயரத ராமன் சார்ந்தான். 20-2

விரி கடல் நடுவண் பூத்த மின் என ஆரம் வீங்க,
எரி கதிர்க் கடவுள்தன்னை இனமணி மகுடம் ஏய்ப்ப,
கரு முகிற்கு அரசு செந்தாமரை மலர்க் காடு பூத்து, ஓர்
அரியணைப் பொலிந்தது என்ன, இருந்தனன், அயோத்தி வேந்தன் 20-3

மரகதச் சயிலமீது வாள் நிலாப் பாய்வது என்ன,
இரு குழை இடறும் வேற் கண், இளமுலை, இழை நலார்தம்
கரகமலங்கள் பூத்த கற்றை அம் கவரி தெற்ற,
உரகரும், நரரும், வானத்து உம்பரும், பரவி ஏத்த, 20-4

உலகம் ஈர்-ஏழும் தன்ன ஒளி நிலாப் பரப்ப, வானில்
திலக வாள் நுதல் வெண் திங்கள் சிந்தை நொந்து, எளிதின் தேய,
கலக வாள் நிருதர் கோனைக் கட்டழித்திட்ட கீர்த்தி
இலகி மேல் நிவந்தது என்ன, எழு தனிக்குடை நின்று ஏய. 20-5

மங்கல கீதம் பாட, மறையவர் ஆசி கூற,
சங்கு இனம் குமுற, பாண்டில் தண்ணுமை துவைப்ப, தா இல்
பொங்கு பல்லியங்கள் ஆர்ப்ப, பொரு கயல் கருங் கண், செவ் வாய்,
பங்கய முகத்தினார்கள் மயில் நடம் பயில மாதோ. 20-6

திரை கடல் கதிரும் நாணச் செழு மணி மகுட கோடி
கரை தெரிவு இலாத சோதிக் கதிர் ஒளி பரப்ப, நாளும்
வரை பொரு மாட வாயில் நெருக்குற வந்து, மன்னர்
பரசியே வணங்கும் தோறும் பதயுகம் சேப்ப மன்னோ. 20-7

மந்திரக் கிழவர் சுற்ற, மறையவர் வழுத்தி ஏத்த,
தந்திரத் தலைவர் போற்ற, தம்பியர் மருங்கு சூழ,
சிந்துரப் பவளச் செவ் வாய்த் தெரிவையர் பலாண்டு கூற,
இந்திரற்கு உவமை ஏய்ப்ப எம்பிரான் இருந்தகாலை. 20-8

கெவனொடு கெவாக்கன், தூம்பன், கேசரி, கெந்தமாதன்,
தவன் உறு சரபன், சாம்பன், சுடேணன், சம்பாதி, நீலன்,
நவை அறு பனசன், தாரன், கெசன், நளன், சமீரன், நண்பாம்
இவன் அரிலோமன், மின்போல் எயிற்றினன், இடபன் என்பான் 20-9

விரதன், வீமாக்கன், வேகதரிசியே, விந்தன், வெற்றிக்
கரமுடைச் சதுக்கன், சோதிமுகன், தெதிமுகன், கயந்தன்,
அரன், விறல் கொடிய கோபன், இடும்பனோடு, அரம்பன், ஆண்மை
தெரிவரு வசந்தன், கொற்றத் துன்முகன், தீர்க்க பாதன், 20-10

மயிந்தன், மா துமிந்தன், கும்பன் அங்கதன், அனுமன், மாறு இல்
சயம் தரு குமுதக் கண்ணன், சதவலி, குமுதன், தண் தார்
நயம் தெரி ததிமுகன், கோசமுகன், முதல நண்ணார்
வியந்து எழும் அறுபத்தி ஏழு கோடியாம் வீரரோடும். 20-11

ஏனையர் பிறரும் சுற்ற, எழுபது வெள்ளத்து உற்ற
வானரரோடும் வெய்யோன் மகன் வந்து வணங்கிச் சூழ,
தேன் இமிர் அலங்கல் பைந் தார் வீடணக் குரிசில், செய்ய
மான வாள் அரக்கரோடு வந்து, அடி வணங்கிச் சூழ்ந்தான். 20-12

வெற்றி வெஞ் சேனையோடும், வெறிப் பொறிப் புலியின் வெவ் வால்
சுற்றுறத் தொடுத்து வீக்கும் அரையினன், சுழலும் கண்ணன்,
கல் திரள் வயிரத் திண் தோள் கடுந் திறல் மடங்கல் அன்னான்,
எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை, குகன், தொழுது சூழ்ந்தான் 20-13

வள்ளலும் அவர்கள் தம்மேல் வரம்பு இன்றி வளர்ந்த காதல்
உள்ளுறப் பிணித்த செய்கை ஒளி முகக் கமலம் காட்டி,
அள்ளுறத் தழுவினான் போன்று அகம் மகிழ்ந்து, இனிதின் நோக்கி,
‘எள்ளல் இலாத மொய்ம்பீர்! ஈண்டு இனிது இருத்திர்’ என்றான் 20-14

நல் நெறி அறிவு சான்றோர், நான்மறைக் கிழவர், மற்றைச்
சொல் நெறி அறிவு நீரார், தோம் அறு புலமைச் செல்வர்,
பல் நெறிதோறும் தோன்றும் பருணிதர், பண்பின் கேளிர்,
மன்னவர்க்கு அரசன் பாங்கர், மரபினால் சுற்றமன்னோ. 20-15

தேம் படு படப்பை மூதூர்த் திருவொடும் அயோத்தி சேர்ந்த
பாம்பு-அணை அமலன் தன்னைப் பழிச்சொடும் வணக்கம் பேணி,
வாம் புனல் பரவை ஞாலத்து அரசரும் மற்றுளோரும்
ஏம்பல் உற்று இருந்தார்; நொய்தின், இரு மதி இறந்தது அன்றே 20-16

நெருக்கிய அமரர் எல்லாம் நெடுங் கடற் கிடை நின்று ஏத்த,
பொருக்கென அயோத்தி எய்தி, மற்று அவர் பொருமல் தீர,
வருக்கமோடு அரக்கர் யாரும் மடிதர, வரி வில் கொண்ட
திருக் கிளர் மார்பினான் பின் செய்தது செப்பலுற்றாம். 20-17

மறையவர் தங்கட்கு எல்லாம் மணியொடு முத்தும், பொன்னும்,
நிறைவளம் பெருகு பூவும், சுரபியும், நிறைந்து, மேல் மேல்,
‘குறை இது’ என்று இரந்தோர்க்கு எல்லாம் குறைவு அறக் கொடுத்து, பின்னர்,
அறை கழல் அரசர் தம்மை ‘வருக’ என அருள, வந்தார். 20-18

[ஒரு சில பிரதிகளில் இதுமுதல் விடை கொடுத்த படலம் தொடங்குகிறது]

ஐயனும் அவர்கள் தம்மை அகம் மகிழ்ந்து, அருளின் நோக்கி,
வையகம், சிவிகை, தொங்கல், மா மணி மகுடம், பொன் பூண்,
கொய் உளைப் புரவி, திண் தேர், குஞ்சரம், ஆடை இன்ன
மெய் உறக் கொடுத்த பின்னர், கொடுத்தனன் விடையும் மன்னோ 20-19

சம்பரன் தன்னை வென்ற தயரதன் ஈந்த காலத்து
உம்பர் தம் பெருமான் ஈந்த ஒளி மணிக் கடகத்தோடும்,
கொம்புடை மலையும், தேரும், குரகதக் குழுவும், தூசும்,-
அம்பரம் தன்னை நீத்தான்-அலரி காதலனுக்கு ஈந்தான். 20-20

அங்கதம் இலாத கொற்றத்து அண்ணலும், அகிலம் எல்லாம்
அங்கதன் என்னும் நாமம் அழகுறத் திருத்துமாபோல்,
அங்கதம் கன்னல் தோளாற்கு அயன் கொடுத்தனை ஈந்தான்;
அங்கு அதன் பெருமை மண்மேல் ஆர் அறிந்து அறையகிற்பார்? 20-21

பின்னரும், அவனுக்கு ஐயன் பெரு விலை ஆரத்தோடும்
மன்னும் நுண் தூசும், மாவும் மதமலைக் அரசும்; ஈயா
‘உன்னை நீ அன்றி, இந்த உலகினில் ஒப்பு இலாதாய்!
மன்னுக, கதிரோன் மைந்தன் தன்னொடும் மருவி’ என்றான். 20-22

மாருதி தன்னை ஐயன் மகிழ்ந்து, இனிது அருளின் நோக்கி,
‘ஆர் உதவிடுதற்கு ஒத்தார், நீ அலால்? அன்று செய்த
பேர் உதவிக்கு யான் செய் செயல் பிறிது இல்லை; பைம் பூண்
போர் உதவிய திண் தோளாய்! பொருந்துறப் புல்லுக!’ என்றான். 20-23

என்றலும், வணங்கி நாணி, வாய் புதைத்து, இலங்கு தானை
முன் தலை ஒதுக்கி நின்ற மொய்ம்பனை முழுதும் நோக்கி,
பொன் திணி வயிரப் பைம் பூண் ஆரமும், புனை மென் தூசும்,
வன் திறல் கயமும், மாவும், வழங்கினன், வயங்கு சீரான். 20-24

பூ மலர்த் தவிசை நீத்து, பொன் மதில் மீதிலை பூத்த
தேமொழித் திருவை ஐயன் திருவருள் முகத்து நோக்க,
பா மறைக் கிழத்தி ஈந்த பரு முத்த மாலை கைக் கொண்டு
ஏமுறக் கொடுத்தாள், அந்நாள், இடர் அறிந்து உதவினாற்கே. 20-25

சந்திரற்கு உவமை சான்ற, தாரகைக் குழுவை வென்ற,
இந்திரற்கு ஏய்ந்ததாகும் என்னும் முத்தாரத்தொடு
கந்து அடு களிறு, வாசி, தூசு, அணிகலன்கள், மற்றும்
உந்தினன், எண்கின் வேந்தற்கு-உலகம் முந்து உதவினானே. 20-26

நவ மணிக் காழும், முத்தும், மாலையும், நலம் கொள் தூசும்,
உவமை மற்று இலாத பொன் பூண் உலப்பு இல பிறவும், ஒண் தார்க்
கவன வெப் பரியும், வேகக் கதமலைக்கு அரசும், காதல்
பவனனுக்கு இனிய நண்பன் பயந்தெடுத்தவனுக்கு ஈந்தான். 20-27

பத வலிச் சதங்கைப் பைந் தார்ப் பாய் பரி, பணைத் திண் கோட்டு
மதவலிச் சைலம், பொன் பூண், மா மணிக்கோவை, மற்றும்
உதவலின் தகைவ அன்றி, இல்லன உள்ள எல்லாம்
சதவலிதனக்குத் தந்தான்-சதுமுகத் தவனைத் தந்தான். 20-28

‘பேச அரிது ஒருவர்க்கேயும் பெரு விலை; இதனுக்கு ஈதுக்
கோ, சரி இலது’ என்று எண்ணும் ஒளி மணிப் பூணும், தூசும்,
மூசு அரிக்கு உவமை மும்மை மும் மதக் களிறும், மாவும்,
கேசரிதனக்குத் தந்தான்-கிளர் மணி முழவுத் தோளான். 20-29

வளன் அணி கலனும் தூசும், மா மதக் களிரும், மாவும்,
நளனொடு குமுதன், தாரன், நவை அறு பனசன், மற்றோர்
உளம் மகிழ்வு எய்தும் வண்ணம் உலப்பில பிறவும் ஈந்தான்-
களன் அமர் கமல வேலிக் கோசலக் காவலோனே. 20-30

அவ் வகை அறு பத்து ஏழு கோடியாம் அரியின் வேந்தர்க்கு
எவ் வகைத் திறனும் நல்கி, இனியன பிறவும் கூறி,
பவ்வம் ஒத்து உலகில் பல்கும் எழுபது வெள்ளம் பார்மேல்
கவ்வை அற்று இனிது வாழக் கொடுத்தனன், கடைக் கண் நோக்கம் 20-31

மின்னை ஏர் மௌலிச் செங் கண் வீடணப் புலவர் கோமான்-
தன்னையே இனிது நோக்கி, ‘சராசரம் சூழ்ந்த சால்பின்
நின்னையே ஒப்பார் நின்னை அலது இலர், உளரேல்; ஐய!
பொன்னையே இரும்பு நேரும் ஆயினும் பொரு அன்று’ என்றான் 20-32

என்று உரைத்து, அமரர் ஈந்த எரி மணிக் கடகத்தொடு
வன் திறல் களிறும், தேரும், வாசியும், மணிப் பொன் பூணும்,
பொன் திணி தூசும், வாசக் கலவையும், புது மென் சாந்தும்,
நன்று உற, அவனுக்கு ஈந்தான்-நாகணைத் துயிலைத் தீர்ந்தான் 20-33

சிருங்கபேரம் அது என்று ஓதும் செழு நகர்க்கு இறையை நோக்கி,
‘மருங்கு இனி உரைப்பது என்னோ, மறு அறு துணைவற்கு?’ என்னா,
கருங் கைம் மாக் களிறும், மாவும், கனகமும், தூசும், பூணும்,
ஒருங்குற உதவி, பின்னர் உதவினன் விடையும் மன்னோ. 20-34

அனுமனை, வாவி சேயை, சாம்பனை, அருக்கன் தந்த
கனை கழல் காலினானை, கருணை அம் கடலும் நோக்கி,
‘நினைவதற்கு அரிது நும்மைப் பிரிக என்றல்; நீவிர் வைப்பும்
எனது; அது காவற்கு இன்று என் தன் ஏவலின் ஏகும்’ என்றான் 20-35

இலங்கை வேந்தற்கும் இவ்வாறு இனியன யாவும் கூறி,
அலங்கல் வேல் மதுகை அண்ணல் விடைகொடுத்தருளலோடும்,
நலம் கொள் பேர் உணர்வின் மிக்கோர், நலன் உறும் நெஞ்சர், பின்னர்க்
கலங்கலர், ‘ஏவல் செய்தல் கடன்’ எனக் கருதிச் சூழ்ந்தார். 20-36

பரதனை, இளைய கோவை, சத்துருக்கனனை, பண்பு ஆர்
விரத மா தவனை, தாயர் மூவரை, மிதிலைப் பொன்னை,
வரதனை, வலம்கொண்டு ஏத்தி, வணங்கினர் விடையும் கொண்டே,
சரத மா நெறியும் வல்லோர் தத்தம பதியைச் சார்ந்தார். 20-37

குகனைத் தன் பதியின் உய்த்து, குன்றினை வலம் செய் தேரோன்
மகனைத் தன் புரத்தில் விட்டு, வாள் எயிற்று அரக்கர் சூழ,
ககனத்தின் மிசையே ஏகி, கனை கடல் இலங்கை புக்கான்,-
அகன் உற்ற காதல் அண்ணல், அலங்கல் வீடணன், சென்று, அன்றே 20-38

ஐயனும் அவரை நீக்கி, அருள் செறி துணைவரோடும்
வையகம் முழுதும் செங்கோல் மனு நெறி முறையில் செல்ல,
செய்ய மா மகளும் மற்றச் செகதல மகளும் சற்றும்
நையுமாறு இன்றிக் காத்தான், நானிலப் பொறைகள் தீர்த்தே. 20-39

வான் வளம் சுரக்க; நீதி மனு நெறி முறையே என்றும்
தான் வளர்ந்திடுக; நல்லோர் தம் கிளை தழைத்து வாழ்க;
தேன் வழங்கு அமுத மாலைத் தெசரத ராமன் செய்கை
யான் அளந்து அறைந்த பாடல் இடைவிடாது ஒளிர்க, எங்கும். 21-1

எறி கடல் ஞாலம் தன்னுள் இன் தமிழ்ப் புலவர்க்கு எல்லாம்
முறுவலுக்கு உரியவாக முயன்றனம் இயன்ற எம் சொல்,
சிறுமையே நோக்கார், தங்கள் பெருமையே சிந்தை செய்யும்
அறிவுடை மாந்தர்க்கு எல்லாம் அடைக்கலம் ஆக வாழி. 21-2

வாழிய, சீர் இராமன்! வாழிய, சீதை கோமான்!
வாழிய, கௌசலேசை மணி வயிற்று உதித்த வள்ளல்!
வாழிய, வாலி மார்பும் மராமரம் ஏழும் சாய,
வாழிய கணை ஒன்று ஏவும் தசரதன் மதலை வாழி! 21-3

இராவணன் தன்னை வீட்டி, இராமனாய் வந்து தோன்றி,
தராதலம் முழுதும் காத்து, தம்பியும் தானும் ஆகப்
பராபரம் ஆகி நின்ற பண்பினைப் பகருவார்கள்
நராபதி ஆகி, பின்னும் நமனையும் வெல்லுவாரே. 21-4

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/37-மீட்சிப் படலம்–

November 2, 2020

இராவண வதம் முடிந்தபிறகு சீதாபிராட்டி சிறையிலிருந்து
மீண்டதையும், மூவரும் வனவாசம் முடிந்து அயோத்திக்குத்
திரும்பியதையும் கூறும் பகுதியாதலின் மீட்சிப்படலம் எனப் பெற்றது.

இராமன் இராவணற்குரிய இறுதிக் கடன்களைச் செய்து முடித்த
வீடணனுக்கு ஆறுதல் கூறுகிறான். இலக்குவனை வானர வீரர்களுடன்
சென்று வீடணனுக்கு முடி சூட்டச் செய்கிறான். வீடணனுக்கு
நீதிகளை எடுத்துரைக்கிறான். சீதைக்கு நற்செய்தி சொல்லிவர
அனுமனை அனுப்புகிறான். அனுமனால் செய்தி அறிந்த சீதை
மகிழ்கிறாள். அனுமன் அரக்கியரைத் தண்டிக்க விரும்ப
சீதை அதை மறுத்துரைக்கிறாள்.

இராமன் வீடணனைச் சீதையைச் சீரொடும் அழைத்து வா என்று
அனுப்புகிறான். இருந்தவாறே வருவேன் என்றுரைத்த பிராட்டியை
இராமன் ஆணையைக் கூறி அலங்கரித்து வரச் செய்து அழைத்து
வருகிறான். இராமனது அழகுத் திருமேனி கண்ட சீதை அனுமனைப்
பாராட்டி இராமனை வணங்கி பிரிவினால் உளதாகிய ஏக்கம்
நீங்கப் பெறுகிறாள். சீதையை இராமன் கடிந்துரைத்து தீயிடைப்
புகும்படி செய்விக்கிறான். சீதை எரியிடை விளங்கலும அக்கினி
தேவன் முறையீடும், இராமனுக்கு அக்கினிக் கடவுள் பிராட்டியின்
கற்பின் மாட்சியை அறிவித்தலும் நிகழ சீதையை இராமன் ஏற்றுக்
கொள்கிறான். பிரமன் சிவன் ஆகியோர் இராமன பரம்பொருள்
என்பதை அவனுக்கு உணர்த்துகின்றனர். தயரதன வருகிறான்.
இராமனோடு உரையாடி மகிழ்கிறான். சீதையைத் தேற்றுகிறான்.
இலக்குவனைப் பாராட்டுகிறான். இராமனால் கைகேயிபால் கொண்ட
கோபம் தணிந்து சுவர்க்கம் திரும்புகிறான். தேவர்கள் இராமனுக்கு
வரம் கொடுக்கின்றனர். அரக்கர் கோமான் வீடணன் கொணர்ந்த
புட்பக விமானத்தில் அனைவருடனும் ஏறி அயோத்திக்கு இராமன்
புறப்படுகிறான். பரத்துவாச முனிவனது உபசரிப்பை இடையில்
இராமன் ஏற்கிறான். ஆச்சிரமத்தில் தங்கிய இராமன் அனுமனைப்
பரதனிடம் அனுப்புகிறான்.

இராமன் வாராமையால் துன்புற்ற பரதன் எரிபுக எண்ணுகிறான்.
எரிபுகத் துணியும் பரதனைக் கோசலைத் தாய் தடுக்கிறாள்.
அப்போது அனுமன் தோன்றி நெருப்பைக் கையால் அணைக்கிறான்.
இராமனது அடையாள மோதிரம் காட்டி இராமன் வருகையை
அறிவிக்கிறான். பரதன் மகிழ்கிறான். பரதன் கேட்க அனுமன்
தன் வரலாற்றையும்இராமன் செய்திகளையும் முறையே தெரிவிக்கிறான். பரதன்
இராமன் இருக்கும் இடம் நோக்கி அனுமனுடன் கங்கைக் கரை
சார்கிறான்.

குகன் பரத்துவாச ஆச்சிரமம் வந்து இராமனைப் பணிந்து
அவனோடு சேர்ந்து கொள்கிறான் – அனைவரும் புட்பகத்தில்
ஏறி அயோத்தி நகர்ப்புறம் சார்கிறார்கள். இராமனைப்
பரதன் காணுகிறான். விமானம் நிலத்தை அடைகிறது. இராமன்
வருகை கண்டு தாயார் முதலிய அனைவரும் மகிழ்கின்றனர்.
வணங்கற்குரியாரை முறைப்படி மற்றவர் வணங்க அனைவரும்
விமானத்து ஏறி அயோத்திக்கு வந்து சேர்கிறார்கள் என்பது
முதலிய செய்திகள் இப்படலத்துக் கூறப்பட்டுள்ளன.

———–

இராமன் வீடணனுக்கு ஆறுதல் கூறி இலக்குவனால் முடிசூட்டச் செய்தல்
9952.
‘வருந்தல், நீதி மனு நெறி யாவையும்
பொருந்து கேள்விப் புலமையினோய்!’ எனா,
அருந் தவப் பயனால் அடைந்தாற்கு அறைந்து,
இருந் தவத்து இளையோற்கு இது இயம்பினான்:-1-

அருந் தவப் பயனால் அடைந்தாற்கு- தான் செய்த அரிய
புண்ணியத்தின் பயனால் இராமனை வந்து அடைந்தவனாகிய
வீடணனுக்கு இராமன்; நீதி மனு நெறி யாவையும் பொருந்து
கேள்விப் புலமையினோய்!- நீதி நெறிகளையும் மனு தரும்
முறைகளையும் ஆகிய யாவற்றையும் நன்கு அறிந்து பொருந்திய
கேள்வி ஞானத்தோடு கூடிய அறிவாற்றல் பொருந்திய வீடணனே!;
வருந்தல் – வருத்தமுறாதே; எனா- என்று; அறைந்து- எடுத்துக்
கூறி (அவனை ஆற்றி); இருந்தவத்து இளையோற்கு- பெரிய தவச்
செல்வத்தை உடைய இலக்குவனுக்கு; இது- (பின் வருகின்ற)
இந்தச் செய்தியை; இயம்பினான்- எடுத்துரைத்தான்.

—————-

சோதியான் மகன், வாயுவின் தோன்றல், மற்று
ஏது இல் வானர வீரரொடு ஏகி, நீ
ஆதி நாயகன் ஆக்கிய நூல் முறை
நீதியானை நெடு முடி சூட்டுவாய்.–2-

நீ- இலக்குவனே நீ; சோதியான் மகன்- சூரியன் மகனாகிய
சுக்கிரீவன்; வாயுவின் தோன்றல்- காற்றுக் கடவுளின் மகனாகிய
அனுமன்; மற்று ஏது இல் வானர வீரரொடு ஏகி- மற்றுள்ள
குற்றம் இல்லாத குரங்கு வீரர்கள் ஆகியோருடன் புறப்பட்டுச்
சென்று; நீதியானை- அற நீதியிற் சிறிதும் வழுவாத வீடணனுக்கு;
ஆதி நாயகன் ஆக்கிய நூல் முறை- முதற்கடவுளாகிய
நாராயணன் தந்த வேத விதிப்படி; நெடுமுடி சூட்டுவாய்-
சிறந்த கிரீடத்தைச் சூட்டுவாய்;

———

என்று கூறி, இளவலொடு ஆரையும்
வென்றி வீரன் விடை அருள் வேலையில்,
நின்ற தேவர் நெடுந் திரையோரொடும்
சென்று, தம் தம் செய்கை புரிந்தனர்.–3-

வென்றி வீரன் – இராமன்; என்று கூறி – இவ்வாறு சொல்லி;
இளவலொடு ஆரையும்- இலக்குவனோடு மற்றுள்ளவர்களுக்கும்;
விடை அருள் வேலையில் – விடை கொடுத்த பொழுது; நின்ற
தேவர்- (அது கேட்டு) அருகிருந்த தேவர்கள்; நெடுந்
திசையோரொடும் – எண்திசைக் காவலர்களுடனும்; தம் தம்
செய்கை புரிந்தனர்- சென்று தங்கள் தங்களால்
(பட்டாபிஷேகத்துக்கு) முடிந்த உதவிகளைச் செய்வாராயினர்.

———

சூழ் கடல் புனலும், பல தோயமும்,
நீள் முடித் தொகையும், பிற நீர்மையும்,
பாழி துற்று அரி பற்றிய பீடமும்,
தாழ்வு இல் கொற்றத்து அமரர்கள் தந்தனர். -4-

தாழ்வு இல் கொற்றத்து அமரர்கள்- குறைவு படாத
வெற்றியைப் பெற்றுள்ள தேவர்கள்; சூழ்கடல் புனலும் பல
தோயமும்- உலகைச் சுற்றியுள்ள எழு கடல் நீரும் பிற
புண்ணிய ஆற்று நீர்களும்; நீள் முடித்தொகையும் – நீண்ட
கிரீடத் தொகைகளும்; பிற நீர்மையும்- பிற அரசர்க்கேற்ற
ஆபரணங்களின் தன்மைகளும்; பாழி துற்று- வலிமை செறிந்த;
அரி பற்றிய பீடமும் – சிங்கம் தாங்கிய பீடமாகிய
சிம்மாசனமும்; தந்தனர் – கொண்டு வந்து கொடுத்தனர்.

———-

வாச நாள் மலரோன் சொல, மான்முகன்
காசும் மா நிதியும் கொடு, கங்கை சூடு
ஈசனே முதலோர் வியந்து ஏத்திட,
தேசு உலாம் மணி மண்டபம் செய்தனன்.-5-

மான்முகன் – மானின் முகம் உடையவனாகிய மயன் என்கிற
தெய்வத் தச்சன்; வாச நாள் மலரோன் சொல- வாசனையுள்ள
அன்றலர்ந்த தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமதேவன்
கட்டளையிட; காசும் மாநிதியும் கொடு- மணிகளையும் உயரிய
பொன்னையும் கொண்டு; கங்கை சூடு ஈசனே முதலோர் வியந்திட
– கங்காநதியைத் தலைமேற் சூடிக் கொண்டுள்ள சிவபெருமான்
முதலான தேவர்கள் அதிசயிக்கும் படி; தேசு உலா மணி மண்டபம்
செய்தனன் – ஒளி பரவுகிற அழகிய திருவோலக்க பட்டாபிஷேக
மண்டபத்தைச் செய்தமைத்தான்.

—————

மெய் கொள் வேத விதி முறை விண்ணுளோர்
தெய்வ நீள் புனல் ஆடல் திருத்திட,
ஐயன் ஆணையினால், இளங் கோளரி
கையினால் மகுடன் கவித்தான் அரோ–6-

விண்ணுளோர் – விண்ணுலக வாசிகளான தேவர்கள்;
மெய்கொள் வேத விதிமுறை- சத்தியத்தைத் தன்னிடத்தே
கொண்டுள்ள வேதத்திற் கூறிய சடங்கு முறைகளின்படி;
தெய்வ நீள் புனல் ஆடல் திருத்திட- தெய்வத்
தன்மையுள்ள புண்ணிய தீர்த்தங்களினால் அபிஷேகம்
செய்தலைச் செவ்வையாகச் செய்ய; ஐயன் ஆணையினால்
– இராமனது கட்டளையின் வண்ணம்; இளங்கோளரி- இளைய
சிங்கத்தை ஒத்த இலக்குவன்; கையினால்- தன் திருக்கரத்தால்;
மகுடன் கவித்தான்- கிரீடத்தை வீடணன் தலைமேற் சூடினான்.

————

கரிய குன்று கதிரினைச் சூடி ஓர்
எரி மணித் தவிசில் பொலிந்தென்னவே,
விரியும் வெற்றி இலங்கையர் வேந்தன் நீடு
அரியணைப் பொலிந்தான், தமர் ஆர்த்து எழ. –7-

விரியும் வெற்றி இலங்கையர் வேந்தன் – நிறைந்த
வெற்றியை உடைய வீடணன்; கரிய குன்று கதிரினைச் சூடி
ஓர் எரிமணித் தவிசில் பொலிந்து என்ன- கருநிறம் உள்ள
ஒரு மலை சூரியனைத் தலைமேல் அணிந்து கொண்டு ஒப்பற்ற
பிரகாசிக்கிற மணிக் கற்களால் ஆகிய பீடத்தில் விளங்கினாற்
போல என்று சொல்லும்படி; தமர் ஆர்த்து எழ- உறவினர்கள்
மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய; அரியணைப் பொலிந்தான் –
சிம்மாசனத்தில் அழகுற வீற்றிருந்தான்.

————

தேவர் பூ மழை, சித்தர் முதலினோர்
மேவு காதல் விரை மலர், வேறு இலா
மூவரோடு, முனிவர், மற்று யாவரும்
நாவில் ஆசி நறை மலர், தூவினார்.–8-

தேவர் – தேவர்கள்; பூ மழை- மலர் மழையையும்; சித்தர்
முதலினோர் – சித்தர் முதலானோர்கள்; மேவு காதல் விரை
மலர் – மிகுந்த அன்போடு கூடிய மணமிக்க மலர்களையும்;
வேறு இலா மூவரோடு முனிவர் மற்று யாவரும் – தம்முள்
ஏற்றத்தாழ்வில்லாத மும்மூர்த்திகளும் முனிவர்களும் மற்றுள்ள அனைவரும்; நாவில்
ஆசி நறை மலர் – தமது நாவால் கூறுகின்ற ஆசீர்வாதமாகிய
மணமிக்க மலர்களையும்; தூவினார் – வீடணன் மேல்
சொரிந்தார்கள்.

————

முடி புனைந்த நிருதர் முதலவன்
அடி வணங்கி இளவலை, ஆண்டை அந்
நெடிய காதலினோர்க்கு உயர் நீர்மை செய்து,
இடி கொள் சொல்லன் அனலற்கு இது இயம்பினான்:–9-

முடி புனைந்த- கிரீடத்தை அணிந்து கொண்ட
(பட்டாபிஷேகம் செய்து கொண்ட); நிருதர் முதலவன்
– அரக்கர் குலத் தலைவனாகிய வீடணன்; இளவலை அடி
வணங்கி – இலக்குவனைக் காலில் வீழ்ந்து வணங்கி;
அந்நெடிய காதலினோர்க்கு- அந்த பேரன்பையுடைய
இலக்குவனுக்கு; ஆண்டை- அவ்விடத்தே; உயர் நீர்மை
செய்து- உயர்ந்த உபசாரங்களை எல்லாம் செய்து;
இடிகொள் சொல்லன் – இடிமுழக்கம் போலக் கம்பீரமான
குரலை உடையவனாய்; அனலற்கு- தன் அமைச்சர்களில்
மூத்தவனாகிய அனலன் என்பானுக்கு; இது இயம்பினான்-
பின்வரும் வார்த்தைகளைச் சொல்லலானான்.

அனலன், அனிலன், அரன், சம்பாதி என்னும் நால்வர்
வீடணன் அமைச்சர்கள்-அனலன் அவர்களுள் மூத்தவன்.

———-

‘விலங்கல் நாண மிடைதரு தோளினாய்!
இலங்கை மா நகர் யான் வரும் எல்லை, நீ
கலங்கலா நெடுங் காவல் இயற்று’ எனா,
அலங்கல் வீரன் அடி இணை எய்தினான்.–10-

(வீடணன்) விலங்கல் நாண மிடைதரு தோளினாய்!-
மலைகளும் வெட்கமுறும்படி அவற்றினும் பெரிதாக நெருங்கி
இருக்கின்ற தோள்களை உடைய அனலனே!; நீ யான்
இலங்கை மாநகர் வரும் எல்லை- நீ! யான் (இராமனோடு
அயோத்தி சென்று) இலங்கை நகரத்துக்குத் திரும்பி வரும் வரை;
கலங்கலா நெடுங்காவல் இயற்று- உயிர்கள் யாவும் கலக்கம்
உறாதபடி நீண்ட காவலைச் செய்வாயாக; எனா- என்று சொல்லி
(அவனை அரசப் பிரதிநிதியாக ஆக்கி); அலங்கல் வீரன் –
மாலை அணிந்த வீரனாகிய இராமபிரானது; அடி இணை
எய்தினான் – திருவடி இணைகளை வந்து அடைந்தான்.

————-

வீடணற்கு இராமன் நீதி கூறல்
9962.
குரக்கு வீரன், அரசு, இளங் கோளரி,
அரக்கர் கோமகனோடு அடி தாழ்தலும்,
பொருக்கெனப் புகல் புக்கவற் புல்லி, அத்
திருக் கொள் மார்பன் இனையன செப்பினான்:–11-

அரக்கர் கோமகனோடு- அரக்கர்க்கு அரசன் ஆகிய
வீடணனோடு; குரக்கு வீரன் – வானர வீரன் என்று சிறப்பித்து
உரைக்கப்படும் அனுமன்; அரசு- வானர வேந்தனாகிய
சுக்கிரீவன்; இளங்கோளரி- வானர இளவரசாகிய சிங்கம்
போன்ற அங்கதன் (ஆகியோர்) அடி தாழ்தலும்-
(இராமபிரானது அடிகளில் வணங்குதலும்; அத்திருக்கொள்
மார்பன் புகல் புக்கவன் – அந்த இராமன் (தன்னிடத்தில்)
அடைக்கலம் புகுந்தவனாகிய வீடணனைப்; பொருக்கென-
விரைவாக; புல்லி- எடுத்துத் தழுவி;இனையன செப்பினான் –
இத்தகைய நீதிகளை எடுத்துரைத்தான்.

————-

‘உரிமை மூஉலகும் தொழ, உம்பர்தம்
பெருமை நீதி அறன் வழிப் பேர்கிலாது,
இருமை ஏய் அரசாளுதி, ஈறு இலாத்
தரும சீல!’ என்றான் – மறை தந்துளான்.–12-

மறை தந்துளான் – நான்கு வேதங்களையும் வெளியிட்டருளிய
இராமபிரான்; ஈறு இலாத் தருமசீல!- முடிவில்லாத அற ஒழுக்கத்தில் என்றும் நிலைத்து நிற்பவனே!; மூ உலகும் தொழ
– மூன்று உலகத்தில் உள்ளாரும் உன்னை மதித்து வணங்குமாறு;
உம்பர் தம் பெருமை- தேவர்களுடைய பெருமைக்கும்; நீதி-
அரச நீதிக்கும்; அறன் வழி- தரும வழிக்கும்; பேர்கிலாது
– (சிறிதும்) மாறுபடாமல்; இருமை ஏய் உரிமை அரசு-
இம்மைக்குப் புகழும் மறுமைக்குப் புண்ணியமும் தரத்தக்கதாக
உனக்கு உரிமையான இலங்கை அரசை; ஆளுதி- ஆள்வாயாக
என்றான்.

———-

பன்னும் நீதிகள் பல பல கூறி, ‘மற்று
உன்னுடைத் தமரோடு, உயர் கீர்த்தியோய்!
மன்னி வாழ்க! என்று உரைத்து, அடல் மாருதி –
தன்னை நோக்கினன், தாயர் சொல் நோக்கினான்.–13-

தாயர் சொல் நோக்கினான்- தனது சிற்றன்னையாகிய
கைகேயியின் சொல்லை மனத்தின்கண் எப்பொழுதும் நினைத்துக்
காத்தவனாகிய இராமபிரான்; பன்னும் நீதிகள் பல்பல கூறி-
திரும்பத் திரும்ப எடுத்துரைக்கப்படும் அறவுரைகள் பற்பலவற்றை
(வீடணனுக்குச்) சொல்லி; உயர்கீர்த்தியோய் – மிக்க புகழை
உடைய வீடணனே! மற்று உன்னுடைத் தமரோடு- உன்
இனத்தவர்களோடு; மன்னி வாழ்க- நிலைபெற்று வாழ்க;
என்று உரைத்து- என்று சொல்லி; அடல் மாருதி தன்னை
நோக்கினன் – வலிமை படைத்த அனுமனை (ஒன்று
சொல்லுதற்காக)ப் பார்த்தான்.

———–

இராமன் அனுமனைச் சீதையிடம் அனுப்பல்
9965.
இப் புறத்து, இன எய்துறு காலையில்,
அப் புறத்ததை உன்னி, அனுமனை
‘துப்பு உறச் செய்ய வாய் மணித் தோகைபால்
செப்புறு, இப்படிப் போய்’ எனச் செப்பினான்.–14-

இப்புறத்து- இவ்விடத்தில்; இன- இந்நிகழ்ச்சிகள்; எய்துறு
காலையில்- நடக்கும் பொழுது; அப்புறத்ததை உன்னி- மேல்
நடக்க வேண்டியவைகளை (இராமன்) மனத்தில் கருதி; அனுமனை
– அனுமனை அழைத்து; துப்பு உறச் செய்ய வாய் மணித்
தோகைபால் போய் – பவழத்தை ஒத்துச் சிவந்த வாயை உடைய
அழகிய மயில்போல்வாளாகிய சீதையிடம் சென்று; இப்படி
செப்புறு- இங்கு நடந்த செய்திகளைச் சொல்வாயாக; எனச்
செப்பினான்- என்று கூறினான்.

————

அனுமன் சீதையிடம் கூறுதல்
9966.
வணங்கி, அந்தம் இல் மாருதி, மா மலர்
அணங்கு சேர் கடி காவு சென்று அண்மினான்:
உணங்கு கொம்புக்கு உயிர் வரு நீர் என,
சுணங்கு நோய் முலையாட்கு இவை சொல்லுவான்: –15-

அந்தம் இல் மாருதி- அழிவற்ற சிரஞ்சீவியாகிய அனுமன்;
வணங்கி- (இராமனை) வணங்கி விடைபெற்றுச் சென்று; மாமலர்
அணங்கு சேர் கடிகாவு சென்று அண்மினான் – சிறந்த
தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளாகிய சீதாபிராட்டி
தங்கியுள்ள காப்பமைந்த அசோக வனத்தை நெருங்கிச் சென்று
அடைந்து; சுணங்கு நோய் முலையாட்கு- தேமல் பரவிய
நகில்களை உடைய பிராட்டிக்கு; உணங்கு கொம்புக்கு உயிர்
வரு நீர் என- காய்ந்து போன கிளைக்கு உயிர் வருதற்குக்
காரணமான நீரைப் போல; இவை- (பிராட்டிதளிர்த்தற்குக்
காரணமான) இந்தச் செய்திகளைச்; சொல்லுவான் – சொல்லத்
தொடங்கினான்.
அனுமனும் சிரஞ்சீவி
ஆதலின் ”அந்தம் இல் மாருதி” எனப்பட்டான்.

———–

‘ஏழை சோபனம்! ஏந்திழை, சோபனம்!
வாழி, சோபனம்! மங்கல சோபனம்!
ஆழி ஆன அரக்கனை ஆரியச்
சூழி யானை துகைத்தது, சோபனம்!’ –16-

ஏழை- பேதமை என்னும் அணிகலன் உடையாளே!; சோபனம்-
மிக்க மங்களம் உண்டாகட்டும்; ஏந்திழை- தரித்த அணிகலன்களை
உடையாளே!; வாழி- வாழ்வாயாக; ஆரிய சூழி யானை- மேன்மை
மிக்கவனாகிய இராமபிரான் என்கிற முகபடாம் அணிந்த யானை;
ஆழி ஆன அரக்கனை- தீமைக்கு வரம்பாகிய இராவண
ராக்கதனை; துகைத்தது- அழித் தொழித்தது; சோபனம்-
(இனி உனக்கு) மங்களம் உண்டாகட்டும் (தொடரும்

————

பாடினான் திரு நாமங்கள்: பல் முறை
கூடு சாரியின் குப்புற்றுக் கூத்து நின்று
ஆடி, அங்கை இரண்டும் அலங்குறச்
சூடி நின்றனன், குன்று அன்ன தோளினான். –17-

குன்று அன்ன தோளினான் – மலை போன்ற கோள்களை
உடையவனாகிய அனுமான்; திரு நாமங்கள் பாடினான் – இராமன்
திருப்பெயர்களைப் பாடிக் கொண்டு; பல்முறை கூடுசாரியின்
குப்புற்று- பல தடவை இடம் வலமாகச் சென்று குதித்து; கூத்து
நின்று ஆடி- ஆட்டம் ஆடுதலைச் செய்து; அங்கை இரண்டும் –
தன் அழகிய கை இரண்டையும்; அலங்கு உற சூடி நின்றனன்-
மாலை போல் தலைமேல் வளைவாகச் சூடிக் கொண்டு நின்றான்.

————

‘தலை கிடந்தன, தாரணி தாங்கிய
மலை கிடந்தனபோல்; மணித் தோள் எனும்
அலை கிடந்தன; ஆழி கிடந்தென,
நிலை கிடந்தது, உடல் நிலத்தே’ என்றான்.–18-

தாரணி தாங்கிய மலை கிடந்தன போல்- பூமியைத்
தாங்குகிற மலைகள் கீழே விழுந்து கிடந்தன போல; தலை
கிடந்தன – (இராவணனது) பத்துத் தலைகள் கீழே கிடந்தன;
மணித் தோள் எனும் – அழகிய தோள்கள் என்கின்ற; அலை
கிடந்தன – கடல் அலைகள் கிடந்தன;உடல்- இராவணனது
உடம்பு; நிலத்தே- பூமியின்கண்; ஆழி கிடந்தென- கடல்
கிடந்தது என்று சொல்லும் படி; நிலை கிடந்தது- அசையாமல்
கிடந்தது; என்றான் – என்று (அனுமன்) கூறினான்.

———-

‘அண்ணல் ஆணையின், வீடணனாம் மறக்
கண் இலாதவன் காதல் தொடர்தலால்,
பெண் அலாது, பிழைத்துளதாகும்’ என்று
எண்ணல் ஆவது ஓர் பேர் இலதால்’ என்றான். –19-

அண்ணல் ஆணையின்- தலைவனான இராமபிரானது;
ஆணையாலும்; வீடணனாம்- வீடணன் என்று கூறப்படும்;
மறக்கண் இலாதவன்- கொடுமையற்ற அறவாளனது; காதல்
– அன்பு; தொடர்தலால் – இடைவிடாது இருத்தலாலும்; பெண்
அலாது பிழைத்து உளதாகும் என்று எண்ணலாவது ஓர்
பேர் இலது- (இலங்கையில்) பெண்மக்கள் அல்லாமல் உயிர்
பிழைத்துள்ளவர் என்று நினைக்கத்தக்க ஆடவர் ஒருவர் கூட இல்லை.

———–

ராட்டியின் மகிழ்ச்சி நிலை
9971.
ஒரு கலைத் தனி ஒண் மதி நாளொடும்
வரு கலைக்குள் வளர்வது மானுறப்
பொரு கலைக் குலம் பூத்தது போன்றனள் –
பருகல் உற்ற அமுது பயந்த நாள். –20-

(அநுமன் கூறிய நற்செய்திகளைக் கேட்ட பிராட்டி) பருகல்
உற்ற அமுது பயந்த நாள் – பருகுதற்கினிய தேவர் அமுதம்
கடைந்தெடுத்த நாளில்; ஒரு கலைத் தனி ஒண் மதி- ஒற்றைக்
கலை அளவினதாகிய சந்திரன்; வருகலைக்குள் வளர்வது மானுற-
ஒவ்வொன்றாக வருகின்ற கலைகளால் தன்னுள் தானே வளர்ந்து
பதினாறு கலைகளும் நிரம்பிய முழு மதியானது போல என்னும்படி;
பொரு கலைக்குலம் பூத்தது போன்றனள்- நெருங்கிய கலைகளின்
தொகுதி நிரம்பப் பெற்று பொலிவெய்தியதைப் போன்று தழைத்தாள்.

———–

ஆம்பல் வாயும் முகமும் அலர்ந்திட,
தேம்பும் நுண் இடை நோவ, திரள் முலை
ஏம்பல் ஆசைக்கு இரட்டி வந்து எய்தினாள் –
பாம்பு கான்ற பனி மதிப் பான்மையாள். –21-

பாம்பு கான்ற பனிமதிப் பான்மையாள் – இராகுவால்
(விழுங்கிக்) கக்கப் பெற்ற குளிர்ந்த நிலவைப் போன்ற
தன்மை உடைய பிராட்டி (அநுமன் சொல்லால்); ஆம்பல் வாயும்
முகமும் அலர்ந்திட- ஆம்பல் மலரை ஒத்த சிவந்த வாயும்
முகமும் மேலும் ஒளி விளங்க; தேம்பும் நுண் இடை நோவ-
முன்பே தேய்ந்து வருந்தும் சிறிய இடையானது மேலும்
வருந்தும்படி; திரள் முலை- திரண்டுருண்ட நகில் தடங்கள்;
ஏம்பல் ஆசைக்கு- மகிழ்ச்சி மேலெழும் ஆசையால்; இரட்டி
வந்து எய்தினாள் – (முன்பிருந்ததை விட) இரண்டு மடங்கு
வளர்ந்து பொருந்தப் பெற்றாள்.

————-

புந்தி ஓங்கும் உவகைப் பொருமலோ,
உந்தி ஓங்கும் ஒளி வளைத் தோள்கொலோ,
சிந்தி ஓடு கலையுடைத் தேர்கொலோ –
முந்தி ஓங்கின யாவை – முலைகொலோ? -22-

முந்தி ஓங்கின- (பிராட்டியிடத்தில்) முற்பட்டு வளர்ந்தவை;
புந்தி ஓங்கும் உவகைப் பொருமலோ- மனத்திற்குள் உண்டாகும்
மகிழ்ச்சிப் பூரிப்போ; உந்தி ஓங்கும் ஒளி வளைத்
தோள்கொலோ- தள்ளப்பட்டு மேல் எழும்புகின்ற
ஒளிபொருந்திய வளையலை அணிந்த தோள்களா?; சிந்தி
ஒடு கலை உடைத் தேர்கொலோ- அவிழ்ந்து விலகி
விடுகின்ற ஆடையை அணிந்துள்ள தேர் போன்ற
அல்குல் தடமா?; முலைகொலோ- தனங்களா?

————–

குனித்த, கோலப் புருவங்கள்; கொம்மை வேர்
பனித்த, கொங்கை; மழலைப் பணிமொழி
நுனித்தது ஒன்று, நுவல்வது ஒன்று, ஆயினாள்;-
கனித்த இன் களி கள்ளினின் காட்டுமோ? –23-

கோலப் புருவங்கள் குறித்த- அழகிய புருவங்கள்
வளைந்துள்ளன;கொங்கை கொம்மை வேர் பனித்த – முலைகள்
திரண்டு வியர்வை அரும்பப் பெற்றன; மழலைப் பணிமொழி-
மழலையான இன்சொற்களைப் பேசுமவளாகிய பிராட்டி (இப்போது);
நுனித்தது ஒன்று நுவல்வது ஒன்று ஆயினாள்- தான் மனதில்
கருதியது ஒன்றும் சொல்லுவது ஒன்றும் ஆகப் பெற்றாள்; கனித்த
இன்களி- முற்றிய இனிய மகிழ்ச்சியானது; கள்ளினின் காட்டுமோ-
கள்ளுண்டார்க்கு நிகழும் மெய்ப்பாடுகளைத் தோற்றுவிக்குமோ.

———-

அனையள் ஆகி, அனுமனை நோக்கினாள்,
இனையது இன்னது இயம்புவது என்பது ஓர்
நினைவு இலாது நெடிது இருந்தாள் – நெடு
மனையின் மாசு துடைத்த மனத்தினாள்.–24-

நெடுமனையின் மாசு துடைத்த மனத்தினாள் – உயர்ந்த
இல்வாழ்க்கையின் குற்றத்தை அறப்போக்கிய சீரிய மனத்தை
உடைய பிராட்டி; அனையள் ஆகி- மேற்சொல்லிய மகிழ்ச்சி
விம்மிதம் உடையவளாகி; அனுமனை நோக்கினாள் – அனுமனைப்
பார்த்தாள்; இனையது இன்னது இயம்புவது என்பது ஓர் நினைவு
இலாது நெடிது இருந்தாள்- இத்தகையதான இந்த வார்த்தையைச்
சொல்ல வேண்டும் என்கின்ற நினைவு இல்லாமல் நெடுநேரம்
சும்மா இருந்தாள்.

———-

”யாது இதற்கு ஒன்று இயம்புவல்?” என்பது
மீது உயர்ந்த உவகையின் விம்மலோ?
தூது பொய்க்கும் என்றோ?’ எனச் சொல்லினான்,
நீதி வித்தகன்; நங்கை நிகழ்த்தினாள்: –25-

நீதி வித்தகன்- நீதி வழியில் தவறாது நடக்கும் திறமை
உடைய அனுமன்; (பிராட்டி ஒன்றும் கூறாது இருந்தமை நோக்கி
இதற்குக் காரணம்) இதற்கு யாது ஒன்று இயம்புவல் என்பது-
இந்த அநுமன் வார்த்தைக்கு என்ன பதில் கூறுவேன் என்று; மீது
உயர்ந்த உவகையின் விம்மலோ- மேல் எழுந்த மகிழ்ச்சிப்
பெருக்கினாலா? (அல்லது);தூது பொய்க்கும் என்றோ- (இந்த
அநுமன்) சொல்லிய செய்தி பொய்யாயிருக்கும் என்று கருதியோ?
எனச் சொல்லினான் – என்று சொன்னான்; (அது கேட்ட)
நங்கை நிகழ்த்தினாள்- சீதை பின்வருமாறு சொல்லலானாள்

————–

அனுமனுக்குச் சீதையின் பதில்
9977.
‘மேக்கு நீங்கிய வெள்ள உவகையால்,
ஏக்கமுற்று, ”ஒன்று இயம்புவது யாது?” என
நோக்கி நோக்கி, அரிது என நொந்துளேன்:
பாக்கியம் பெரும் பித்தும் பயக்குமோ? –26-

மேக்கு நீங்கிய வெள்ள உவகையால்- தனக்கு
மேற்பட்டதொன்றிலாத மகிழ்ச்சிப் பெருக்கினால்; ஏக்கம்
உற்று- (என்ன பேசுவது என்று) திகைப்படைந்து; இயம்புவது
ஒன்று யாது யாது என நோக்கி நோக்கி- சொல்லும்
வார்த்தை இதுவா இதுவா என்று சிந்தித்துச் சிந்தித்து; அரிது
என நொந்துளேன்- மறுமொழி கூறுதல் இயலாது என்று மனம்
வருந்தி யுள்ளேன்; பாக்கியம் பெரும்பித்தும் பயக்குமோ?-
(ஒருவர்க்கு வரும்) நற்பேறு பெரிய மனத்தடுமாற்றத்தையும்
தரவல்லதோ?

———–

‘முன்னை, ”நீக்குவென் மொய் சிறை” என்ற நீ,
பின்னை நீக்கி, உவகையும் பேசினை;
”என்ன பேற்றினை ஈகுவது?” என்பதை
உன்னி நோக்கி, உரை மறந்து ஓவினேன். –27-

முன்னை- (அநுமனே!) முன்பு; மொய்சிறை நீக்குவென்
என்ற நீ – நெருக்கிடும் அரக்கர் சிறையிலிருந்து உன்னை
விடுவிப்பேன் என்று (தூது வந்த போது) சொல்லிய நீ;
பின்னை நீக்கி உவகையும் பேசினை- இப்பொழுது
சிறையிலிருந்து விடுவித்து மகிழ்ச்சி மேலிட்டு மங்கல
வார்த்தையும் கூறினாய்; என்ன பேற்றினை ஈகுவது
என்பதை உன்னி நோக்கி- (உனக்கு) என்ன பாக்கியத்தைத்
தருவது என்பதை நினைத்துப் பார்த்து (எதுவும் பொருந்தி
வாராமையால்); உரை மறந்து ஒவினேன் – பேச இயலாமல்
செயலற்றேன்.

—————

உலகம் மூன்றும் உதவற்கு ஒரு தனி
விலை இலாமையும் உன்னினென்; மேல் அவை
நிலை இலாமை நினைந்தனென்; நின்னை என்
தலையினால் தொழவும் தகும் – தன்மையோய்! –28-

தன்மையோய்! – சிறந்த பண்புகளை உடையவனே!; உலகம்
மூன்றும் உதவற்கு ஒரு தனி விலை இலாமையும் – (நீ செய்த
உதவிக்குக் கைம்மாறாக) முன்று உலகங்களையும் உதவலாம்
என்றால் அவை அவ்வுதவிக்கு ஒப்பற்ற ஈடாக ஆகாமையை
அறிந்தேன்; மேல் அவை நிலை இலாமை நினைந்தனன்-
அதன் மேலும் அவ்வுலகங்கள் (நீ செய்த உதவி போல்) நிலைத்த
தன்மை உடையன அல்ல என்பதை நினைந்தனன் (வேறு செய்வது
ஒன்று இன்மையால்); நின்னை என் தலையினால் தொழவும் தகும்
– உன்னை என்னுடைய தலையால் தொழுதலே செய்யத் தகுவதாகும்.

”தொழவே தகும்” என்னும் பாடம் சிறப்புடையது

—————

‘ஆதலான், ஒன்று உதவுதல் ஆற்றலேன்:
‘யாது செய்வது?” என்று எண்ணி இருந்தனென்:
வேத நல் மணி வேகடம் செய்தன்ன
தூத! என் இனிச் செய் திறம்? சொல்’ என்றாள். –29-

வேத நல் மணி வேகடம் செய்தன்ன தூத-
துளைத்துபயோகிக்கும் நல்ல இரத்தினத்தைச் சாணையிட்டு
மெருகிட்டு துடைத்து வைத்தாற் போன்ற உத்தம குணங்களை
உடைய தூதனாகிய அனுமனே!; ஆதலான் – இக்காரணங்களால்;
ஒன்று உதவுதல் ஆற்றலேன் – பொருத்தமானதொரு பொருளை
உனக்குக் கைம்மாறாகக் கொடுக்க இயலாதவளாக ஆனேன்;
‘யாது செய்வது’ என்று எண்ணி இருந்தனென் – இனி
இவனுக்கு வேறு என்ன செய்யலாம் என்று நினைத்துச் சும்மா
இருந்தேன்; இனிச் செய்திறம் என்? சொல் – இனி நான்
செய்யும் செயல் யாது சொல்வாயாக.

————–

அனுமன் வேண்டுகோளைச் சீதை மறுத்தல்
9981.
‘எனக்கு அளிக்கும் வரம், எம்பிராட்டி! நின்
மனக் களிக்கு மற்று உன்னை அம் மானவன் –
தனக்கு அளிக்கும் பணியினும் தக்கதோ? –
புனக் களிக் குல மா மயில் போன்றுளாய்!’ –30-

எம்பிராட்டி- எம் தலைவியே!; புனக் களிக்குல மாமயில்
போன்றுளாய்- காட்டின்கண் மகிழ்ச்சி மிகுந்த உயர்ந்த
சாதியைச் சேர்ந்த மயிலைப் போன்றவளே!; எனக்கு
அளிக்கும் வரம்- நீ எனக்குக் கொடுத்தருளும் வரமானது;
நின் மனக்களிக்கு மற்று உன்னை அம்மானவன் தனக்கு
அளிக்கும் பணியினும் தக்கதோ?- உன்னுடைய
மனமகிழ்ச்சிக்கேற்ப உன்னை அப்பெருமை படைத்த
இராமபிரானிடத்தில் கொண்டு சேர்ப்பதைக் காட்டிலும்
சிறந்ததான வேறு ஒன்று இருக்கிறதா?

————-

என உரைத்தது, ‘திரிசடையாள், எம் மோய்!
மனவினில் சுடர் மா முக மாட்சியாள்
தனை ஒழித்து, இவ் அரக்கியர்தங்களை
வினையினில் சுட வேண்டுவென், யான்’ என்றான்.–31-

என உரைத்து- என்று (அனுமன்) சொல்லி (மேலும்);
எம்மோய்- எமது தாயே!; யான் மனவினில் சுடர் மாமுக
மாட்சியாள் திரிசடையாள் தனை ஒழித்து- நன்மணிக்கற்கள்
போல ஒளிவிடும் முகமலர்ந்த தோற்றமுடையாளாகிய திரிசடை
நீங்கலாக; இவ்வரக்கியர் தங்களை- (உங்களைப் பயமுறுத்தித்
துன்பம் செய்த) இந்த அரக்கியர்களை; வினையினில் சுட
வேண்டுவன் – கொடிய செயலால் சுட்டெரிக்க விரும்புகிறேன்.

—————

‘உரை அலா உரை உன்னை உரைத்து, உராய்
விரைய ஓடி, ”விழுங்குவம்” என்றுளார்
வரை செய் மேனியை வள் உகிரால் பிளந்து,
இரை செய்வேன், மறலிக்கு, இனி’ என்னுமால். –32-

உன்னை உரை அலா உரை உரைத்து- உன்னைச்
சொலத்தகாத வார்த்தைகளால் வைது; விரைய ஓடி உராய
விழுங்குவம் என்றுளர் – வேகமாக ஓடிவந்து மேல் விழுந்து
உன்னை விழுங்கிவிடுவோம் என்றுள்ளவர்களாகிய இவ்வரக்கியரது;
வரைசெய் மேனியை- மலை போன்ற உடம்பை; வள் உகிரால்
பிளந்து- வளவிய என் கை நகத்தால் பிளந்து; மறலிக்கு இரை
செய்வேன் இனி- யமனுக்கு இரையாக ஆக்குவேன் இனிமேல்;
என்னும் – என்று சொல்லுவான்.

————–

குடல் குறைத்து, குருதி குடித்து, இவர்
உடல் முருக்கியிட்டு உண்குவேன்’ என்றலும்,
அடல் அரக்கியர், ‘அன்னை! நின் பாதமே
விடலம்; மெய்ச் சரண்’ என்று விளம்பலும்.–33

இவர் – இவ் வரக்கியரது; குடல் குறைத்து- குடலை வெட்டி;
குருதி குடித்து- இரத்தத்தைக் குடித்து; உடல் முருக்கியிட்டு
உண்குவேன் – உடலைத் துண்டாக்கி உண்பேன்; என்றலும்-
என்று அனுமன் கூறிய அளவில்; அடல் அரக்கியர்- வலிமை
படைத்த அரக்கிமார்கள்; அன்னை- தாயே!; நின் பாதமே
மெய்ச்சரண் – நின்னுடைய திருவடிகளே எங்களுக்கு உண்மையான
புகலிடம்; விடலம்- விடமாட்டோம்; என்று விளம்பலும்-
என்று சொல்லுதலும்.

———–

அன்னை, ‘அஞ்சன்மின், அஞ்சன்மின்! நீர்’ எனா,
மன்னும் மாருதி மா முகம் நோக்கி, ‘வேறு
என்ன தீமை இவர் இழைத்தார், அவன்
சொன்ன சொல்லினது அல்லது? – தூய்மையோய்!–34-

அன்னை- தாயாகிய பிராட்டி; நீர் அஞ்சன்மின்
அஞ்சன்மின் எனா- (அரக்கியர்களைப் பார்த்து) நீங்கள்
பயப்படாதீர்கள் என்று சொல்லி; மன்னும் மாருதி மாமுகம்
நோக்கி- நிலைபெற்ற அனுமனது சீரிய முகத்தைப் பார்த்து;
தூய்மையோய்- பரிசுத்தமானவனே; இவர் – இவ் வரக்கியர்;
அவன் சொன்ன சொல்லினது அல்லது- அந்த இராவணன்
ஏவிய சொற்களைச் சொன்னது அல்லாமல்; என்ன தீமை
இழைத்தார் – (தாமாக) என்ன தீமையை எனக்குச
செய்தார்கள்? (என்று கேட்டாள்)

————-

‘யான் இழைத்த வினையினின் இவ் இடர் –
தான் அடுத்தது, தாயினும் அன்பினோய்!
கூனியின் கொடியார் அலரே, இவர்!
போன அப் பொருள் போற்றலை, புந்தியோய்!–35-

தாயினும் அன்பினோய்- தாயைக் காட்டிலும் என்பால்
அன்புடையவனே!; புந்தியோய்- அறிவாற்றலிற் சிறந்தவனே!;
இவ் இடர்தான் யான் இழைத்த வினையினின் தான் அடுத்தது-
இச் சிறைத்துன்பம் யான் செய்த தீவினை காரணமாக எனக்கு
வந்து சேர்ந்தது; இவர்- இவ் வரக்கியர்; கூனியின்
கொடியார் அலரே- கூனியை விடக் கொடியவர்கள அல்லர்
அல்லவா; போன அப்பொருள் போற்றலை- நடந்து முடிந்த
அந்நிகழ்ச்சிகளை மனத்திற் கொள்ளாதே (என்றான்.)
தானே திட்டமிட்டுச் செய்தவள் கூனி. அவளையே வாழ
விட்டுள்ளபோது இராவணன் சொன்னதைச் செய்த இவர்கள் மேல்
கோபிக்கலாகுமோ என்றாளாம்.

————

எனக்கு நீ அருள், இவ் வரம்; தீவினை
தனக்கு வாழ்விடம் ஆய சழக்கியர்
மனக்கு நோய் செயல்!’ என்றனள் – மா மதி
தனக்கு மா மறுத் தந்த முகத்தினாள்.–36-

மாமதி தனக்கு மாமறு தந்த முகத்தினாள் – சிறந்த
சந்திரனுக்கு பெரிய களங்கத்தைக் கொடுத்து கீழப்படுத்திய
முகம் உடையவளாகிய சீதை (அனுமனைப் பார்த்து);நீ எனக்கு
இவ்வரம் அருள்- நீ எனக்கு இந்த வரத்தைத் தருதல்
வேண்டும்; தீ வினை தனக்கு வாழ்விடம் ஆய அழக்கியர்
மனக்கு நோய் செயல் என்றனள்- கொடு வினைகளுக்குத்
தங்குமிடமாகிய கொடிய இவ்வரக்கியர்களது மனத்துக்குத்
துன்பம் செய்யாதே என்று கேட்டுக் கொண்டாள்.

———-

இராமன் வீடணனைச் சீதையை அழைத்து வருக எனல்
9988.
என்ற போதின், இறைஞ்சினன், ‘எம்பிரான்
தன் துணைப் பெருந் தேவி தயா’ எனா
நின்ற காலை, நெடியவன், ‘வீடண!
சென்று தா, நம தேவியை, சீரொடும்.–37-

என்ற போதின்- என்று பிராட்டி கூறிய அளவில் (அனுமன்);
‘எம்பிரான் தன் துணைப் பெருந்தேவி தயா’ எனா-
இராமபிரானது ஒப்பற்ற பெருந்தேவியாகிய பிராட்டியின்
ஒப்பற்ற கருணை (இருந்தவாறு என்னே) என்று சொல்லி;
இறைஞ்சினன் நின்ற காலை- வணங்கி நின்ற பொழுது;
நெடியவன்- (அங்கே) இராமபிரான்; வீடண! – வீடணனே!; நம்
தேவியை – நம்முடைய பிராட்டியை; சென்று சீரொடும்தா-
சென்று சிறப்போடும் அழைத்து வருக;

————-

என்னும் காலை, இருளும் வெயிலும் கார்
மின்னும் காலை இயற்கைய வீடணன்
‘உன்னும் காலைக் கொணர்தி’ என்று ஓத, அப்
பொன்னின் கால் தளிர் சூடினன், போந்துளான். –38-

என்னும் காலை- என்று இராமன் கட்டளையிட்ட போது;இருளும்
வெயிலும் – உடம்பால் காரிருளும், அணிகலன்களால் பகல் ஒளியும்
உடையனாய்; கார் மின்னும் காலை இயற்கைய வீடணன் – மேகம்
மின்னும் பொழுதுண்டாம் தன்மை படைத்த வீடணன்; உன்னும்
காலைக் கொணர்தி என்று ஓத- நினைக்குமாத்திரத்தே அழைத்துக்
கொண்டு வருக என்று இராமன் சொல்ல; போந்துளான் – உடனே
அசோக வனத்துக்கு வந்து சேர்ந்து; அப்பொன்னின் கால் தளிர்
துடினன்- அந்த சீதாப் பிராட்டியின் திருவடித் துளிர்களைத்
தலைமேற் சூடி வணங்கினான்.

——–

வீடணன் பிராட்டியிடம் கூறல்
9990.
‘வேண்டிற்று முடிந்தது அன்றே; வேதியர் தேவன் நின்னைக
காண்டற்கு விரும்புகின்றான்; உம்பரும் காண வந்தார்;
”பூண் தக்க கோலம் வல்லை புனைந்தனை, வருத்தம் போக்கி,
ஈண்டக் கொண்டு அணைதி” என்றான்; எழுந்தருள், இறைவி!’ என்றான்.–39-

இறைவி- தலைவியே! வேண்டிற்று முடிந்தது அன்றே- நீ
விரும்பியது நிறைவேறி விட்டது அல்லவா; வேதியர் தேவன்
நின்னைக் காண்டற்கு விரும்புகின்றான் – வேத பாரகர்களாகிய
முனிவர்களின் வழிபடுகடவுளாகிய இராமபிரான் உன்னைக்
காண்பதற்கு மிகவும் ஆசைப்படுகின்றான்; உம்பரும் காண வந்தார்
– (நீங்கள் இருவரும் ஒன்று சேரும் காட்சியைத்) தேவர்களும்
காண்பதற்குக் குழுமியுள்ளார்கள்; பூண்தக்க கோலம் வல்லை
புனைந்தனை- அணிதற்குத் தகுதியான அலங்காரங்களை
விரைவாகச் செய்வித்துக் கொண்டு; வருத்தம் போக்கி-
பிரிவினால் உளதாகிய துன்பமெலிவை அகலச் செய்து; ஈண்ட
கொண்டு அணைதி- இங்கே விரைவாக அழைத்துக் கொண்டு
வருவாயாக; என்றான்- என்று இராமபிரான் கட்டளையிட்டான்;
எழுந்தருள் – புறப்படுவாயாக; என்றான் – என்று சொன்னான். (வீடணன்)

————-

பிராட்டி வீடணனுக்கு உரைத்தல்
9991.
‘யான் இவண் இருந்த தன்மை, இமையவர் குழுவும், எங்கள்
கோனும், அம் முனிவர்தங்கள் கூட்டமும், குலத்துக்கு ஏற்ற
வான் உயர் கற்பின் மாதர் ஈட்டமும், காண்டல், மாட்சி;
மேல் நிலை கோலம் கோடல் விழுமியது அன்று – வீர!’ –40-

வீர! – வீடணனே!;யான் இவண் இருந்த தன்மை- நான் இந்த
இலங்கையில் அசோக வனச் சிறையில் இருந்த இயல்பினை; இமையவர்
குழுவும்- தேவர்கள் கூட்டமும்; எங்கள் கோனும்- எம் தலைவனாகிய
இராமனும்; அம் முனிவர் தங்கள் கூட்டமும்- அங்குள்ள
முனிவர்களுடைய குழுவும்; குலத்துக்கு ஏற்ற வான் உயர் கற்பின்
மாதர் ஈட்டமும்- தம் குலத்துக்கு ஏற்றவாறு மிக உயர்ந்த கற்பின்
மாட்சிமையுடைய பெண்கள் கூட்டமும்; காண்டல்- பார்த்தலே; மாட்சி- சிறப்புடையதாகும்; மேல் நிலை- இதன் மேலாகிய நிலைமை உடைய;
கோலம் கோடல்- அலங்கரித்துக் கொண்டு வருதல்; விழுமியது
அன்று- சிறந்தது அன்று.

——————

என்றனள், இறைவி; கேட்ட இராக்கதர்க்கு இறைவன், ‘நீலக்
குன்று அன தோளினான் தன் பணியினின் குறிப்பு இது’ என்றான்;
‘நன்று’ என நங்கை நேர்ந்தாள், நாயகக் கோலம் கொள்ள;
சென்றனர், வான நாட்டுத் திலோத்தமை முதலோர், –41-

என்றனள் இறைவி- என்று சொன்னாள் சீதை; கேட்ட
இராக்கதர்க்கு இறைவன்- அது கேட்ட அரக்க அரசனாகிய
வீடணன்; ‘நீலக் குன்று அன தோளினான்தன் பணியினின்
குறிப்பு இது’ என்றான்- நீலமலை போன்ற தோள்களை உடைய
இராமபிரானது கட்டளையின் குறிப்பு இக்கோலம் கோடல் என்று
சொன்னான்; நங்கை – அது கேட்ட பிராட்டி; நன்று என
நேர்ந்தாள் – நல்லதே என்று அதனை உடன்பட்டாள்; (உடனே);
வான நாட்டுத் திலோத்தமை முதலோர் – தேவர் உலகத்துள்ள
திலோத்தமை முதலாகிய தெய்வமகளிர்;சேர- ஒன்றாக; நாயகக்
கோலம் கொள்ள சென்றனர் – பிராட்டி அழகிய மேன்மையான
அலங்காரம் செய்து கொள்ள வேண்டி அவள்பால் சென்றனர்.சேர.

————

தேவ மாதர்கள் சீதைக்குச் செய்த அலங்காரம்
9993.
‘மேனகை, அரம்பை, மற்றை உருப்பசி, வேறும் உள்ள
வானக நாட்டு மாதர் யாரும், மஞ்சனத்துக்கு ஏற்ற
நான நெய் ஊட்டப் பட்ட நவை இல கலவை தாங்கி,
போனகம் துறந்த தையல் மருங்குற நெருங்கிப் புக்கார்.–42-

மேனகை, அரம்பை, மற்றை உருப்பசி -; வேறும் உள்ள வானக
நாட்டு மாதர் யாவரும்- என்று பலவாக உள்ள தேவலோகப் பெண்கள்
எல்லாரும்; மஞ்சனத்துக்கு ஏற்ற – பிராட்டியின் அபிடேகத்துக்குப்
பொருத்தமான; நானநெய் ஊட்டப்பட்ட நவை இல கலவை தாங்கி-
கஸ்தூரிப் புழுகு தீற்றப்பட்டுச் செய்த குற்றம் இல்லாத கலவைச்
சாந்தைக் கையில் ஏந்திக் கொண்டு; போனகம் துறந்த தையல்-
(இலங்கைச் சிறையில் இருந்த காலம் எல்லாம்); உணவைத் துறந்து
விரதம் இருந்த பிராட்டியின், மருங்கு உற நெருங்கிப் புக்கார்-
பக்கத்தில் பொருந்த நெருக்கமாக வந்து சேர்ந்தனர்.

—————

காணியைப் பெண்மைக்கு எல்லாம், கற்பினுக்கு அணியை, பொற்பின்
ஆணியை, அமிழ்தின் வந்த அமிழ்தினை, அறத்தின் தாயை,
சேண் உயர் மறையை எல்லாம் முறை செய்த செல்வன் என்ன
வேணியை, அரம்பை, மெல்ல, விரல் முறை சுகிர்ந்து விட்டாள்.–43-

அரம்பை – தேவமாதர்களுள் அரம்பை என்பவள்; பெண்மைக்கு
எல்லாம் காணியை – பெண்களின் பெண்மைக் குணங்களுக்கு
விளைநிலம் எனத்தக்க பிராட்டியை; கற்பினுக்கு அணியை-
கற்பு என்னும் நற்பண்புக்கு மேலும் அழகு செய்பவளாய சானகியை;
பொற்பின் ஆணியை – அழகிற்கு உரையாணி போன்ற திருமகளை;
அமிழ்தின் வந்த அமிழ்தினை – திருப்பாற்கடலில் அமிழ்தத்துடன்
தோன்றிய அமுதம் போன்ற செந்திருவை; அறத்தின் தாயை- அறத்தை
வளர்க்கும் அன்னையாகிய பிராட்டியை; வேணியை- கூந்தலை; மெல்ல-
மெதுவாக; சேண் உயர் மறையை எல்லாம் முறை செய்த செல்வன்
என்ன – மிக உயர்ந்த வேதங்களை எல்லாம் பிரித்து வகுத்தருளிய
திருமால்போல; விரல் முறை சுகிர்ந்து விட்டாள் – விரல்களால்
ஒழுங்காக சிக்கெடுத்து பிரித்து சீர்செய்தாள்.

————–

பாகு அடர்ந்து அமுது பில்கும் பவள வாய்த் தரளப் பத்தி
சேகு அற விளக்கி, நானம் தீட்டி, மண் சேர்ந்த காசை
வேகடம் செய்யுமாபோல், மஞ்சன விதியின், வேதத்து
ஓகை மங்கலங்கள் பாடி, ஆட்டினர், உம்பர் மாதர். –44-

உம்பர் மாதர் – தேவப் பெண்கள்; பாகு அடர்ந்து-
சர்க்கரைப் பாகினை ஒத்த இன்சுவை நெருங்கி; அமுது
பில்கும் – இன்சொற்களை வெளியிடும்;பவள வாய் – பவளம்
போன்ற சிவந்த வாயின்கண் உள்ள; தரளப்பத்தி- முத்து போன்ற
பல்வரிசைகளை; சேகு அற விளக்கி- வைரமாகப் பிடித்த மாசு
நீங்க சுத்தம் செய்து; நானம் தீட்டி- வாசனைச சாந்தைப் பூசி;
மண் சேர்ந்த காசை வேகடம் செய்யுமா போல்- மண்ணிற்
படிந்து மங்கிப் போன இரத்தினத்தை சாணையிட்டுச் சுத்தம்
செய்து ஒளிவீசச் செய்வது போல; மஞ்சன விதியின் – நீராடுதற்குரிய
விதிமுறைகளின் படி; வேதத்து ஓகை மங்கலங்கள் பாடி-
வேதநூலிற் கூறிய வண்ணம் மகிழ்ச்சிக்குரிய மங்களமான
பாடல்களைப் பாடி; ஆட்டினர் – நீராட்டினார்கள்.

————–

உரு விளை பவள வல்லி பால் நுரை உண்டதென்ன
மரு விளை கலவை ஊட்டி, குங்குமம் முலையின் ஆட்டி,
கருவிளை மலரின் காட்சிக் காசு அறு தூசு, காமன்
திரு விளை அல்குற்கு ஏற்ப மேகலை தழுவச் சேர்த்தார்.–45-

உரு விளை பவள வல்லி நுரை உண்டது என்ன-
அழகிற் சிறந்த பவளக் கொடி பால் நுரையால் மூடப்பெற்றது
போலும் என்று சொல்லும்படி; மரு விளை கலவை ஊட்டி-
(மேனி எல்லாம்) மணம் நிரம்பிய (வெள்ளிய) கலவைச் சாந்தை
மறையும்படி பூசி; குங்குமம் முலையின் ஆட்டி- குங்குமக்
குழம்பை முலை முழுக அப்பி; கருவிளை மலரின் காட்சிக்காசு
அறு தூசு- கருவிள மலர் போன்ற காணற்கினிய குற்றமற்ற
பொன்னாடையோடு; காமன் திரு விளை அல்குற்கு ஏற்ப
மேகலை- மன்மதனது செல்வம் விளங்கும் அல்குலைத் தாங்கும்
இடைக்குப் பொருத்தமாக மேகலை என்னும ஆபரணமும்; தழுவச
சேர்த்தார் – பொருந்தித் தழுவும்படி அணிவித்தார்.

———–

சந்திரன் தேவிமாரின் தகை உறு தரளப் பைம் பூண்
இந்திரன் தேவிக்கு ஏற்ப, இயைவன பூட்டி, யாணர்ச்
சிந்துரப் பவளச் செவ் வாய்த் தேம் பசும் பாகு தீற்றி,
மந்திரத்து அயினி நீரால் வலஞ்செய்து, காப்பும் இட்டார்.–46-

இந்திரன் தேவிக்கு ஏற்ப இயைவன- இந்திரனது மனைவியான
இந்திராணிக்குப் பொருத்தமாக உரிய; சந்திரன் தேவிமாரின்
தகை உறு தரளப் பைம் பூண் – சந்திரனது மனைவிமார்களாகிய
நக்ஷத்திரங்களைப் போன்ற அழகு மிக்க முத்துக்களால் ஆகிய
பசும்பொன்னணியை; பூட்டி- அணிவித்து; யாணர்ச் சிந்துரப்
பவளச் செவ்வாய் – புதிய சிந்தூரம் போலவும் பவழம் போலவும்
சிவந்த வாயில்; தேம் பசும் பாகு தீற்றி- இனிய பசிய பாக்குடன்
கூடிய தாம்பூல காரத்தை உண்பித்து; மந்திரத்து அயினி நீரால்
வலம் செய்து- மந்திரத்தோடு கூடிய ஆலத்தி நீரால் சுழற்றி;
காப்பும் இட்டார் – பின் அதனால் நெற்றிக் காப்பும் இட்டார்கள்.

————

வீடணன் சீதையை அழைத்து வருதல்
9998.
மண்டல மதியின் நாப்பண் மான் இருந்தென்ன, மானம்
கொண்டனர் ஏற்றி, வான மடந்தையர் தொடர்ந்து கூட,
உண்டை வானரரும் ஒள் வாள் அரக்கரும் புறம் சூழ்ந்து ஓட,
அண்டர் நாயகன்பால், அண்ணல் வீடணன் அருளிச் சென்றான்.–47-

அண்ணல் வீடணன் – தலைமையான வீடணன் (பிராட்டியை);
மண்டல மதியின் நாப்பண் மான் இருந்தென்ன-வட்டமான சந்திரன் நடுவே மான் இருப்பதைப் போல;
கொண்டனர் மானம் ஏற்றி- அழைத்துக் கொண்டு
வந்தவர்களாய் விமானத்தில் ஏற்றி வைத்து; வான
மடந்தையர் தொடர்ந்து கூட- தேவப் பெண்கள் பின் பற்றி
உடன் வர; உண்டை வானரரும் ஒள்வாள் அரக்கரும் புறம்
சூழ்ந்து ஓட- உருண்ட வடிவமைப்புடைய குரக்கு வீரரும்
ஒளிபடைத்த வாள் ஏந்திய அரக்கரும் புறத்தே சுற்றிக்
கொண்டு ஓடிவர; அண்டர் நாயகன் பால் – தேவதேவனாகிய
இராமபிரானிடத்து; அருளின் சென்றான்- அவன்
கட்டளையிட்டருளியபடி சென்று சேர்ந்தான்.

————–

இப் புறத்து இமையவர், முனிவர் ஏழையர்,
துப்பு உறச் சிவந்த வாய் விஞ்சைத் தோகையர்,
முப் புறத்து உலகினும் எண்ணில் முற்றினோர்,
ஒப்புறக் குவிந்தனர், ஓகை கூறுவார். –48-

இப்புறத்து- இராமன் இருக்கும் இவ்விடத்து; இமையவர்
முனிவர் ஏழையர்- தேவர்கள், முனிவர்கள் பெண்கள்; துப்பு
உற சிவந்த வாய் விஞ்சைத் தோகையர் – பவளம் போற்
சிவந்த வாயினை உடைய வித்தியாதரப் பெண்கள்; முப்புறத்து
உலகினும் எண்ணில் முற்றினோர்- மூவுலகங்களினும்
மதிக்கற்பாட்டில் உயர்ந்தவர்கள் எல்லாரும்; ஓகை கூறுவார்
– மகிழ்ச்சி வார்த்தைகளைச் சொல்பவர்களாய்; ஒப்புறக்
குவிந்தனர் – தம்முள் வேறுபாடில்லாது ஒத்த தன்மையராய்த்
திரண்டார்கள்.

——————-

10000.
அருங் குலக் கற்பினுக்கு அணியை அண்மினார்,
மருங்கு பின் முன் செல வழி இன்று என்னலாய்,
நெருங்கினர்; நெருங்குழி, நிருதர் ஓச்சலால்,
கருங் கடல் முழக்கு எனப் பிறந்த, கம்பலை–49-

அருங்குலக் கற்பினுக்கு அணியை அண்மினார் – அரிய
உயர்ந்த குலத்தில் தோன்றிக் கற்புக்கு அணிகலமாக விளங்கும்
பிராட்டியை (அனைவரும்) அணுகினார்கள்; மருங்கு பின் முன்
செல வழி இன்று என்னலாய் நெருங்கினர் – (பிராட்டி
விமானத்தின்) பக்கவாட்டிலும் பின்னும் முன்னும் செல்லுவதற்கு
வழி இல்லை என்று சொல்லும் படி நெருங்கினார்கள்; நெருங்குழி
– அவ்வாறு சூழ்ந்து நெருங்கிய பொழுது;நிருதர் ஓச்சலால்-
(வழிவிலகிச் செல்ல வேண்டி); அரக்க காவலர் (பிரம்பை) வீசி
விரட்டுதலால்; கம்பலை- கூக்குரல் ஒலி; கருங்கடல் முழக்கு
எனப் பிறந்த- கரிய கடலின் அலையொலி போலப் பேரளவினதாக
உண்டாயிற்று.

———–

அவ் வழி இராமனும் அலர்ந்த தாமரைச்
செவ்வி வாள் முகம்கொடு செயிர்த்து நோக்குறா,
‘இவ் ஒலி யாவது?’ என்று இயம்ப, இற்று எனா,
கவ்வை இல் முனிவரர் கழறினார் அரோ. –50-

அவ்வழி- அவ்விடத்து; இராமனும் அலர்ந்த தாமரைச்
செவ்வி வாள் முகம் கொடு- மலர்ந்திருக்கின்ற தாமரையின்
அழகைத் தன்னிடத்தே கொண்ட ஒளிபடைத்த தன் திருமுகம்
கொண்டு; செயிர்த்து நோக்குறா- கோபித்துப் பார்த்து;
‘இவ் ஒலி யாவது என்று இயம்ப- இந்தப் பேரொலி எதனால்
விளைந்தது என்று (அருகில் உள்ளாரைக்) கேட்க; கவ்வை இல்
முனிவரர் – துன்பமற்ற முனிவர்கள்; கழறினார் – இன்னது
என்று எடுத்துரைத்தார்கள்.

————

இராமன் வீடணனைக் கடிதல்
10002.
முனிவரர் வாசகம் கேட்புறாதமுன்,
நனி இதழ் துடித்திட நகைத்து, வீடணன் –
தனை எழ நோக்கி, ‘நீ, தகாத செய்தியோ,
புனித நூல் கற்று உணர் புந்தியோய்?’ என்றான். -51-

முனிவரர் வாசகம் கேட்புறாத முன் – முனிவர்கள் சொல்லிய
வார்த்தை காதில் விழுவதற்கு முன்பாகவே விரைந்து; இதழ் நனி
துடித்திட நகைத்து- அதரங்கள் மிகவும் துடிக்கும்படியாக
வெடிபடச் சிரித்து; வீடணன் தனை எழ நோக்கி- வீடணனை
நன்றாக அழுந்தப் பார்த்து; புனித நூல் கற்று உணர்
புந்தியோய்!- தூய்மையான மெய்யுணர் நூல்களை எல்லாம்
கற்றறிந்த ஞானவானே!; நீ தகாத செய்தியோ- நீ
தகுதிக்கேலாத செயல்களைச் செய்யலாமா?; என்றான்-.

———–

‘கடுந் திறல் அமர்க் களம் காணும் ஆசையால்,
நெடுந் திசைத் தேவரும் நின்ற யாவரும்
அடைந்தனர்; உவகையின் அடைகின்றார்களைக்
கடிந்திட யார் சொனார்? – கருது நூல் வலாய்! -52-

கருது நூல் வலாய்- உணரப்படும் சாஸ்திரங்களில் வல்ல
வீடணனே!; நெடுந்திசைத் தேவரும் நின்ற யாவரும்- நெடிய
திக்குப் பாலகர்களாய தேவர்களும் மற்றும் ஆங்காங்கே
நின்றிருந்த எல்லாரும்; கடுந்திறல் அமர்க்களம் காணும்
ஆசையால் – கொடிய வலிமையோடு போர் நடந்த இடத்தைப்
பார்க்கும் விருப்பம் காரணமாக; அடைந்தனர் – நெருங்கித்
திரண்டுள்ளனர்; உவகையின் அடைகின்றார்களைக் கடிந்திட
யார் சொனார் – மகிழ்ச்சியால் அருகே வந்து சேர்ந்தவர்களை
அடித்து விரட்டும்படி யார் உத்தரவிட்டார்கள்.

————-

‘பரசுடைக் கடவுள், நேமிப் பண்ணவன், பதுமத்து – அண்ணல்,
அரசுடைத் தெரிவைமாரை இன்றியே அமைவது உண்டோ?
கரை செயற்கு அரிய தேவர், ஏனையோர், கலந்து காண்பான்
விரசுறின், விலக்குவாரோ? வேறு உலார்க்கு என்கொல்? – வீர!–53-

வீர- வீடணனே!; பரசு உடைக் கடவுள் – பரசு என்னும் மழு
ஆயுதத்தை உடைய கடவுளாகிய சிவபெருமான்; நேமிப் பண்ணவன் – சக்கராயுதத்தை ஏந்திய பரமனாகிய திருமால்;
பதுமத்து அண்ணல்- தாமரை மலரில் வீற்றிருக்கின்ற
பிரமதேவன் ஆகிய முப்பெருங்கடவுளரும்; அரசுடைத் தெரிவை
மாரை இன்றியே அமைவது உண்டோ?- தலைமைத் தன்மையுடைய
பட்டத்தரசிகளாகிய தம் மனைவியரை இல்லாமல் வருவது
உண்டா?; கரை செயற்கு அரிய தேவர் ஏனையோர் கலந்து
காண்பான் விரசுறின்- கணக்கிட முடியாத தேவர்களும்
மற்றவர்களும் தத்தம் மனைவியருடன் கலந்து போர்க்களக்
காட்சியையும் பிராட்டியையும் காண்பதற்காக நெருங்கி
வந்தால்; விலக்குவாரோ- தள்ளி அகற்றுவார்களா?;
வேறுளார்க்கு என்கொல்- இத்தகைய மேலோர்களுக்கே
கூட்டத்தில் தள்ளப்படும் நிலை இருக்குமானால் மற்ற
சாதாரணமானவர்கள் கதி என்ன ஆகும்?

——-

‘ஆதலான், அரக்கர் கோவே! அடுப்பது அன்று உனக்கும், இன்னே
சாதுகை மாந்தர்தம்மைத் தடுப்பது’ என்று அருளி, செங் கண்
வேதநாயகன்தான் நிற்ப, வெய்து உயிர்த்து, அலக்கண் எய்தி,
கோது இலா மனனும் மெய்யும் குலைந்தனன் குணங்கள் தூயோன்.–54-

அரக்கர் கோவே! – அரக்கர்களுக்கு அரசனாகிய வீடணனே!;
ஆதலான் – ஆகையினால்; இன்னே சாதுகை மாந்தர் தம்மைத்
தடுப்பது- இவ்வாறு ஒரு தவற்றிலும் படாத சாமானிய சாது
மனிதர்களை அடித்து விரட்டுவது; உனக்கும் அடுப்பது அன்று-
உனக்கும் பொருந்துவது அன்று; என்று அருளி- என்று இவ்வாறு
சொல்லியருளி; செங்கண் வேதநாயகன்தான் நிற்ப- சிவந்த
கண்களையுடைய வேதத் தலைவனாகிய இராமன் நிற்ப; குணங்கள்
தூயோன்- குணங்களால் பரிசுத்தமானவனாகிய வீடணன் (அது
கேட்டு); அலக்கண் எய்தி- துன்பம் அடைந்து; வெய்து
உயிர்த்து- பெருமூச்சு விட்டு; கோது இலா மனனும் மெய்யும்
குலைந்தனன்- குற்றமற்ற மனமும் உடம்பும் நிலைதடுமாறப் பெற்றான்.

————–

இராமனைக் கண்ட சீதை அனுமனை நன்கு மதித்தல்

10006.
அருந்ததி அனைய நங்கை அமர்க் களம் அணுகி,

ஆடல்

பருந்தொடு கழுகும் பேயும் பசிப் பிணி தீருமாறு

விருந்திடு வில்லின் செல்வன் விழா அணி விரும்பி

நோக்கி,

கருந் தடங் கண்ணும் நெஞ்சும் களித்திட, இனைய

சொன்னாள்;

அருந்ததி அனைய நங்கை அமர்க்களம் அணுகி- அருந்ததியை
ஒத்த கற்பின் செல்வியாகிய சீதை போர்க்களத்தை நெருங்கி; ஆடல்
பருந்தொடு கழுகும் பேயும் பசிப்பிணி தீருமாறு- ஆடுகின்ற
பருந்தும் கழுகும் பேயும் பசிநோய் நீங்கும்படி; விருந்து இடு
வில்லின் செல்வன் விழா அணி விரும்பி நோக்கி – அவைகளுக்கு
உணவு புதிதாகத் தருகின்ற வில்லினால விளைக்கும் போராற்றலிற
சிறந்த இராமனது போர்க்காட்சிக கோலத்தை விரும்பிப் பார்த்து;
கருந்தடங்கண்ணும் நெஞ்சும களித்திட- கரிய அகன்ற கண்களும்
மனமும் உவகை ஏற; இனைய சொன்னாள் – பின்வரும் வார்த்தைகளைச் சொல்லலானாள்;

———

சீலமும் காட்டி, என் கணவன் சேவகக்
கோலமும் காட்டி, என் குலமும் காட்டி, இஞ்
ஞாலமும் காட்டிய கவிக்கு நாள் அறாக்
காலமும் காட்டும்கொல், என் கற்பு?’ என்றாள். –56-

சீலமும் காட்டி- என்னுடைய கற்பொழுக்கத்தையும் என்
கணவற்குக் காண்பித்து; என் கணவன் சேவகக் கோலமும் காட்டி
– என் கணவனாகிய அப்பிரானது போர்க்கோலக் காட்சியையும்
யான் பார்க்கும்படிச் செய்து; என் குலமும் காட்டி- நான்
பிறந்த குலத்தையும் புகுந்த குலத்தையும் நிலைநிறுத்தி; இஞ்
ஞாலமும் காட்டிய கவிக்கு- இவ்வுலகத்தையும் இராவணனால்
அழியாதபடி நிலைநிறுத்திய இவ்வனுமனாகிய குரங்குக்கு; என்
கற்பு- என் கற்பானது; நாள் அறாக் காலமும் காட்டுங்கொல்
– நாள் இடையற்றுப் போகாமல் என்றும் வாழ்வதாகிய
சிரஞ்சீவித் தன்மையையும் தருமோ?; என்றாள்- .

————–

‘எச்சில், என் உடல்; உயிர் ஏகிற்றே; இனி
நச்சு இலை’ என்பது ஓர் நவைஇலாள் எதிர்,
பச்சிலை வண்ணமும் பவள வாயும் ஆய்க்
கைச் சிலை ஏந்தி நின்றானைக் கண்ணுற்றாள். –57-

என் உடல் எச்சில் உயிர் ஏகிற்றே- இராவணன்
கொணர்ந்து சிறை வைத்ததால் என் உடல் தூய்மை இழந்தது;
உயிர் எப்பொழுதோ போய்விட்டது; நச்சு இனி இலை-
விருப்பம் என்பது எதுவும் இனி எனக்கு இல்லை; என்பது ஓர்
நவைஇலாள் – என்று (சிறையிருந்த போது) சொல்லிக்
கொண்டிருந்தவளாகிய ஒரு குற்றமும் அற்ற பிராட்டி; பச்சிலை
வண்ணமும் பவள வாயுமாய்க் கைச்சிலை ஏந்தி நின்றானை-
பச்சிலை போன்ற திருமேனி நிறத்தையும் பவளம் போன்ற சிவந்த
திருவாயையும் உடையனாய்க் கையில் கோதண்டம் தாங்கி நின்ற
பெருமானை; எதிர் கண்ணுற்றாள் – எதிரே பார்த்தாள்.

————

சீதை இராமனைத் தொழுதலும் இராமன் சீதையைக் காணுதலும்
10009.
மானமீது அரம்பையர் சூழ வந்துளாள்,
போன பேர் உயிரினைக் கண்ட பொய் உடல்
தான் அது கவர்வுறும் தன்மைத்து ஆம் எனல்
ஆனனம் காட்டுற, அவனி எய்தினாள். –58-

மானமீது அரம்பையர் சூழ வந்துளாள் – விமானத்தின் மேல்
தெய்வ மகளிர் சுற்றியிருப்ப வந்தவளாகிய பிராட்டி;போன பேர்
உயிரினைக் கண்ட பொய் உடல்தான் அது கவர்வுறும் தன்மைத்து
ஆம் எனல் – தன்னை விட்டுப் பிரிந்து போன பெரிய
உயிரைப் பார்த்த உயிரற்ற பொய் உடலானது அந்த உயிரைக்
கவர்கின்ற தன்மை என்பதை; ஆனனம் காட்டுற அவனி
எய்தினாள் – தன் முகமானது காட்டி நிற்க பூமியில் இறங்கினாள்.

————-

பிறப்பினும் துணைவனை, பிறவிப் பேர் இடர்
துறப்பினும் துணைவனை, தொழுது, ‘நான் இனி
மறப்பினும் நன்று; இனி மாறு வேறு வீழ்ந்து
இறப்பினும் நன்று” என ஏக்கம் நீங்கினாள். –59-

பிறப்பினும் துணைவனை- எப்பிறப்பு எடுத்தாலும்
பிறவிதோறும் துணையாக வருகின்றவனை; பிறவிப் பேர் இடர்
துறப்பினும் துணைவனை- பிறவி என்கிற பெருந்துன்பத்தை
விட்டுப் பரமபதம் எய்தினாலும் அங்கேயும் இவ்வுயிர்க்குத்
துணையாக இருக்கின்ற நாயகனை;தொழுது- வணங்கி; நான் இனி
மறப்பினும் நன்று- (என் ஆசை நிறைவேறிவிட்டது ஆதலின்)
நான் இனிமேல் அப்பெருமானை மறந்து விட்டாலும் நல்லதே; என
ஏக்கம் நீங்கினாள் – என்று சொல்லி மனத்தளர்ச்சி நீங்கப் பெற்றாள்.

————–

கற்பினுக்கு அரசினை, பெண்மைக் காப்பினை,
பொற்பினுக்கு அழகினை, புகழின் வாழ்க்கையை
தற் பிரிந்து அருள் புரி தருமம் போலியை,
அற்பின் அத் தலைவனும் அமைய நோக்கினான். –60-

அத் தலைவனும்- அந்த தலைமையான நாயகனாகிய இராமனும்;
கற்பினுக்கு அரசினை- கற்பு என்னும் குணநலத்துக்கு அரசாக
உள்ளவளை; பெண்மைக் காப்பினை- பெண்மைக் குணங்களுக்கு
வாழ்விடமாக உள்ளவளை; பொற்பினுக்கு அழகினை- அழகிற்கு
அழகாக விளங்குகின்ற பிராட்டியை; புகழின் வாழ்க்கையை-
புகழை இவ்வுலகில் வாழும்படி நிலை நிறுத்திய தேவியை; தன்
பிரிந்து அருள்புரி தருமம் போலியை- தனி நாயகனாகிய
தன்னைப் பிரிந்து உயிர்களுக்கு நல்லருள் செய்யும் தருமம் போன்ற சீதையை; அற்பின்- அன்பினால்; அமைய
நோக்கினான் – நன்றாகப் பார்த்தான்.

————–

இராமன் சீதையைக் கடிந்து உரைத்தல்
10012.
சுணங்கு உறு துணை முலை முன்றில் தூங்கிய
அணங்கு உறு நெடுங் கணீர் ஆறு வார்வுற,
வணங்கு இயல் மயிலினை, கற்பின் வாழ்வினை,
பணம் கிளர் அரவு என எழுந்து, பார்ப்புறா. –61-

சுணங்கு உறா துணை முலை முன்றில் தூங்கிய- தேமல்
பொருந்திய இரண்டாகிய முலைப் பரப்பில் சோர்ந்த; அணங்கு
உறு நெடுங்கண் நீர் ஆறு வார்வுற- வருத்தமிகுதியால் உளதான
நீண்ட கண்ணீறாறு ஒழுக; வணங்கு இயல் மயிலினை- வணங்கும்
தன்மை உடைய மயில் போல்வாளை; கற்பின் வாழ்வினை-
கற்பு நிலைபெற்று வாழக் காரணமானவளாகிய பிராட்டியை; பணம்
கிளர் அரவு என எழுந்து பார்ப்புறா- படம் எடுத்துச்
சீறுகின்ற பாம்பைப் போலச் சினந்து பார்த்து.

—————-

10013.
‘ஊண் திறம் உவந்தனை; ஒழுக்கம் பாழ்பட,
மாண்டிலை, முறை திறம்பு அரக்கன் மா நகர்
ஆண்டு உறைந்து அடங்கினை; அச்சம் தீர்ந்து, இவண்
மீண்டது என் நினைவு? ”எனை விரும்பும்”என்பதோ?–62-

ஊண் திறம் உவந்தனை- அரக்கர் ஊரில் உணவு வகைகளை
உண்ண விரும்பி நெடுநாள் இருந்தாய்; ஒழுக்கம் பாழ்பட
மாண்டிலை- ஒழுக்கம் அழிந்து போகும்படி சாகாமல் உயிருடன்
இருந்தாய்; முறை திறம்பு அரக்கன் மாநகர ஆண்டு உறைந்து
அடங்கினை- நீதிநெறியும் அறமுறையும் திறம்பிய அரக்கனது
இலங்கை நகரில் நெடுநாள் தங்கி அவனுக்கு அடங்கியிருந்தாய்;
அச்சம் தீர்ந்து இவண் மீண்டது என் நினைவு?- பயம்
இல்லாமல் இவ்விடத்துக்கு இப்பொழுது திரும்பி வந்தது எது
கருதி? ‘எனை விரும்பும்’ என்பதோ? – ‘என்னை இராமன்
விரும்புவான்’ என்பது உன் நினைவா?

———–

‘உன்னை மீட்பான்பொருட்டு, உவரி தூர்த்து, ஒளிர்
மின்னை மீட்டுறு படை அரக்கர் வேர்அற,
பின்னை மீட்டு, உறு பகை கடந்திலேன்; பிழை
என்னை மீட்பான்பொருட்டு, இலங்கை எய்தினேன். –63-

உன்னை மீட்பான் பொருட்டு- உன்னைச் சிறையிலிருந்து
மீட்பதற்காக; உவரி தூர்த்து- கடலை அணைகட்டி அடைத்து;
ஒளிர் மின்னை மீட்டுறு படை அரக்கர் வேர் அற-
பிரகாசிக்கின்ற மின்னலைத் தோற்கடிக்கும் படைகளை உடைய
அரக்கர்கள் அடியோடு அழியும்படி;பின்னை மீட்டு- பிறகும்
மேலும் போர் செய்து மீளச்செய்து;உறு பகை கடந்திலேன்-
மிக்க அரக்கர் பகையை வென்றேனில்லை (பின் எதற்காக
என்றால்); என்னை பிழை மீட்பான் பொருட்டு இலங்கை
எய்தினேன்- என்னைத் தவற்றிலிருந்து நீக்கிக்கொள்ள
இலங்கையை அடைந்தேன்.

———–

‘மருந்தினும் இனிய மன்னுயிரின் வான் தசை
அருந்தினையே; நறவு அமைய உண்டியே;
இருந்தனையே? இனி எமக்கும் ஏற்பன
விருந்து உளவோ? உரை – வெறுமை நீங்கினாய்! –64-

வெறுமை நீங்கினாய் – இல்லாமையை இல்லாதவளே!;
மருந்தினும் இனிய- தேவர் அமுதினும் இனியதாகிய; மன்
உயிரின் வான்தசை அருந்தினையே- பிராணிகளின்
புலால்களைப் புசித்தாயல்லையோ; நறவு அமைய உண்டியே-
கள்ளை நன்கு உண்டாயல்லையோ; இனி இருந்தனையே-
இவ்வளவான பிறகும் உயிரோடு இருக்கின்றாயல்லையோ;
ஏற்பன விருந்து எமக்கும் உளவோ உரை- பொருத்தமான
விருந்துணவு எனக்கும் இருக்கின்றனவா? சொல்வாயாக.

————-

‘கலத்தினின் பிறந்த மா மணியின் காந்துறு
நலத்தின் நிற் பிறந்தன நடந்த; நன்மை சால்
குலத்தினில் பிறந்திலை; கோள் இல் கீடம்போல்
நிலத்தினில் பிறந்தமை நிரப்பினாய்அரோ. –65-

கலத்தினின் பிறந்த மாமணியின் காந்துறு நலத்தின்
நிற் பிறந்தன நடந்த- ஆபரணங்களிற் பதிக்கப்படும்
இரத்தினம் போலப் பிரகாசிக்கின்ற நன்மையோடு பொருந்திய
குணம் செயல்களாய் நின்னிடம் முன்பு உள்ளனவாய அவை
இப்பொழுது போயின; நன்மை சால் குலத்தினில்
பிறந்திலை- மேன்மையுடைய உயர்குலத்தில் பிறந்தவளாய்
நடந்து கொள்ளவில்லை; கோள் இல் கீடம் போல்
நிலத்தினில் பிறந்தமை நிரப்பினாய்- குறிக்கோள் இல்லாத
புழுவைப் போல் மண்ணில் பிறந்தாய் என்பதை நிரூபித்து
விட்டாய்.

—————-

‘பெண்மையும், பெருமையும், பிறப்பும், கற்பு எனும்
திண்மையும், ஒழுக்கமும், தெளிவும், சீர்மையும்,
உண்மையும், நீ எனும் ஒருத்தி தோன்றலால்,
வண்மை இல் மன்னவன் புகழின், மாய்ந்தவால். –66-

பெண்மையும் – பெண்மைக் குணங்களும்; பெருமையும்-
பெருமையாகிய குன்றாச் சிறப்பும்; பிறப்பும் – நற்குடிப்
பிறப்பும் கற்பு எனும் திண்மையும் ஒழுக்கமும் தெளிவும்
சீர்மையும்; உண்மையும் – கற்பு என்கின்ற வலிமையும் சீரிய
ஒழுக்கமும், அறிவுத்தெளிவும், மேன்மையும், சத்தியமும் ஆகிய
எல்லாம்; நீ எனும் ஒருத்தி தோன்றலால் – சீதை என்னும்
நீ ஒருத்தி தோன்றியபடியால்; வண்மை இல் மன்னவன் புகழின்
மாய்ந்த- கொடைத் தன்மை இல்லாத அரசனது புகழ் கெடுவது
போல அடியோடு அழிந்தன.

————-

அடைப்பர், ஐம் புலன்களை; ஒழுக்கம் ஆணியாச்
சடைப் பரம் புனைந்து, ஒளிர் தகையின் மா தவம்
படைப்பர்; வந்து இடை ஒரு பழி வந்தால், அது
துடைப்பர், தம் உயிரொடும் – குலத்தின் தோகைமார். –67-

குலத்தின் தோகைமார் – நற்குலத்தில் பிறந்த பெண்கள்;
ஐம்புலன்களை அடைப்பர் – (தம் கணவரைப் பிரிந்த காலத்து)
ஐம்புலன்களையும் பொறிவழிச் செல்லாது தடுத்து நிறுத்துவர்;
ஒழுக்கம் ஆணியா – ஒழுக்கத்தைப் பாதுகாத்தலே உறுதியாகக்
கொண்டு; சடைப்பரம் புனைந்து – கூந்தலை அலங்கரியாது
சடையாகிய சுமையாகக் கொண்டு;ஒளிர் தகையின் மாதவம்
படைப்பர் – விளங்கும் அழகோடு பெருந்தவம் செய்வர்; வந்து
இடை ஒரு பழி வந்தால் – எதிர்பாராது இடையில் ஒரு பழி
வருமானால்; அது தம் உயிரொடும் துடைப்பர் – அப்பழியைப்
போக்கத் தம் உயிரையும் போக்கிக் கொள்வர்.

————

யாது யான் இயம்புவது? உணர்வை ஈடு அறச்
சேதியாநின்றது, உன் ஒழுக்கச் செய்தியால்;
சாதியால்; அன்று எனின், தக்கது ஓர் நெறி
போதியால்’ என்றனன் – புலவர் புந்தியான். –68-

புலவர் புந்தியான்- ஞானியர் மனத்தில் விளங்குபவனாகிய
இராமன் (சீதையை நோக்கி); யான் இயம்புவது யாது- நான்
சொல்வதற்கு என்ன இருக்கிறது?;உன் ஒழுக்கச் செய்தி-
உனது நடவடிக்கை; உணர்வை ஈடுஅறச் சேதியா நின்றது- என்
உணர்வுகளை அடியோடு வெட்டிவிட்டது; சாதியால் – (உன்
ஒழுக்கத்தை) உறுதி செய்து சாதிப்பாயாக; அன்று எனின்- அது
முடியாது என்றால்; தக்கது ஓர்நெறி போதியால் என்றனன்-
உனக்குத் தகுதியான வழியில் போவாயாக என்று கூறினான்.

————

முனைவரும், அமரரும், மற்றும் முற்றிய
நினைவு அரு மகளிரும், நிருதர் என்று உளார்
எனைவரும், வானரத்து எவரும், வேறு உளார்
அனைவரும், வாய் திறந்து, அரற்றினார்அரோ. –69-

(அது கேட்டு) முனைவரும்- முனிவர்களும்; அமரரும்-
தேவர்களும்; மற்றும் முற்றிய நினைவு அரு மகளிரும்- வேறு
சூழ்ந்திருந்த சிறந்த பெண்களும்; நிருதர் என்று உளார்
எனைவரும் – அரக்கர் என்றுள்ள எல்லாரும்;வானரத்து எவரும்
– குரங்கினத்தைச் சேர்ந்தவர்களும்; வேறுளார் அனைவரும்-
மற்றுள்ள எல்லாரும்; வாய்திறந்து அரற்றினார்- வாய்
திறந்து அலறி அழுதார்கள்.

——–

இராமன் கடிந்துரை கேட்ட சீதை நிலை
10021.
கண் இணை உதிரமும், புனலும் கான்று உக,
மண்ணினை நோக்கிய மலரின் வைகுவாள்,
புண்ணினைக் கோல் உறுத்தனைய பொம்மலால்
உள் நினைப்பு ஒவி நின்று, உயிர்ப்பு வீங்கினாள். –70-

மண்ணினை நோக்கிய மலரின் வைகுவாள்- பூவுலகத்தில்
அவதாரம் எடுத்து வந்த செந்தாமரை மலரில் வீற்றிருக்கும்
இலக்குமிப் பிராட்டியாகிய சீதை (அவ்வார்த்தை கேட்டு);
கண் இணை உதிரமும் புனலும் கான்று உக- கண்கள் இரத்தமும்
நீரும் கக்கிச் சிந்த; புண்ணினைக் கோல் உறுத்தனைய
பொம்மலால்- புண்ணின்கண் அம்பு செருகியதனால் ஏற்பட்டது
போன்ற துன்பம் உடையவளாய்; உள் நினைப்பு ஓவி நின்று-
மனத்தின்கண் நினைப்பு ஒழிந்து அடங்கி; உயிர்ப்பு
வீங்கினாள் – பெருமூச்சு விட்டாள்.

———-

பருந்து அடர் சுரத்திடை, பருகு நீர் நசை,
வருந்து அருந் துயரினால் மாளலுற்ற மான்,
இருந் தடம் கண்டு, அதின் எய்துறாவகைப்
பெருந் தடை உற்றெனப் பேதுற்றாள்அரோ. –71-

பருந்து அடர் சுரத்திடை- பருந்துகள் நெருங்கியுள்ள பாலை
நிலத்தில்; பருகு நீர் நசை வருந்து அருந்துயரினால் மாளலுற்ற
மான் – உண்ணுதற்குரிய நீர் வேட்கையால் வருந்துகின்ற அரிய
துன்பத்தால் இறக்கும் தறுவாயடைந்த மானானது; இருந்தடம்
கண்டு- பெரிய நீர் உள்ள தடாகத்தைக் கண்ணாற்கண்டு;
அதின் எய்துறா வகை- அந்த தடாகத்தில் இறங்கி நீர்
உண்டு தாகம் தணியாதபடி அதிற் செல்லவொண்ணாத வண்ணம்;
பெருந்தடை உற்றென- பெரிய தடை நேர்ந்து துயரப்பட்டால்
போல; பேதுற்றாள் – மயக்கம் அடைந்தாள்.

————-

உற்று நின்று, உலகினை நோக்கி, ஓடு அரி
முற்றுறு நெடுங் கண் நீர் ஆலி மொய்த்து உக,
‘இற்றது போலும், யான் இருந்து பெற்ற பேறு:
உற்றதால் இன்று அவம்!’ என்று என்று ஓதுவாள்;–72-

பிராட்டி) உலகினை உற்று நின்று நோக்கி – உலகினை நன்கு
கவனித்துப் பார்த்து; ஓடு அரி முற்றுறு நெடுங்கண் நீர் ஆலி
மொய்த்து உக- சிவந்த கரிய ரேகைகள் நிறைந்த நீண்ட
கண்களிலிருந்து வரும் நீர்த்துளி திரண்டு கீழ்விழ; யான்
இருந்து பெற்ற பேறு இற்றது போலும் – யான் உயிர்
வாழ்ந்திருந்து பெற்ற பாக்கியம் வீணாயிற்றுப் போலும்;
இன்று அவம் உற்ற- (என் பாக்கியம்) இன்று வீண் ஆன
தன்மையை அடைந்தது; என்று என்று ஓதுவாள் – என்று திரும்பத்
திரும்பக் கூறி வருந்துவாளானாள்.

———

மாருதி வந்து, எனைக் கண்டு, ”வள்ளல் நீ
சாருதி ஈண்டு” எனச் சமையச் சொல்லினான்;
யாரினும் மேன்மையான் இசைத்தது இல்லையோ,
சோரும் என் நிலை? அவன் தூதும் அல்லனோ? –73-

மாருதி வந்து எனைக் கண்டு- அனுமன் இலங்கைக்கு வந்து
என்னைப் பார்த்து; வள்ளல் நீ சாருதி ஈண்டு என அமையச்
சொல்லினான் – வள்ளலே! நீ இலங்கைக்கு வர இருக்கிறாய்
என்று பொருந்த உரைத்தான்;யாரினும் மேன்மையான் –
எல்லாரினும் மேம்பட்டவனாகிய அவ்வனுமன்; சோரும் என்
நிலை- உயிர் சோரும் சிறையிருந்த என் உண்மை நிலையை;
இசைத்தது இல்லையோ- உனக்கு எடுத்துச் சொல்ல வில்லையோ;
அவன் தூதும் அல்லனோ- அவன் உன்னால் என்னிலை அறிந்து வர
அனுப்பப் பெற்ற தூதுவனும் அல்லனோ?

———

‘எத் தவம், எந் நலம், என்ன கற்பு, நான்
இத்தனை காலமும் உழந்த ஈது எலாம்
பித்து எனல் ஆய், அவம் பிழைத்ததாம் அன்றே,
உத்தம! நீ மனத்து உணர்ந்திலாமையால்.–74-

உத்தம- ஆடவர் திலகனே!; இத்தனை காலமும் உழந்த
எத்தவம் எந்நலம் என்ன கற்பு ஈதெலாம்- இத்தனை
நாள்களாக நான் வருந்திச் சிறையிருந்து காத்த எந்தத்
தவம் எந்த நன்மை எத்தகைய கற்பு இவைகள் எல்லாம்; நீ
மனத்து உணர்ந்திலாமையால்- நீ உன் திருவுளத்து ஏற்றுக்
கொண்டு உணராதபடியால்; பித்து எனலாய் அவம் பிழைத்ததாம்
– பைத்தியச் செயல் என்னும்படி வீணாகி பழுதுபட்டுப் போயிற்று.

————-

பார்க்கு எலாம் பத்தினி; பதுமத்தானுக்கும்
பேர்க்கல் ஆம் சிந்தையள் அல்லள், பேதையேன்;
ஆர்க்கு எலாம் கண்ணவன், ”அன்று” என்றால், அது
தீர்க்கல் ஆம் தகையது தெய்வம் தேறுமோ? –75-

பார்க்கெலாம் பத்தினி- உலகத்தார்க்கெல்லாம் மிகச்
சிறந்த கற்பின் செல்வி; பதுமத்தானுக்கும் பேர்க்கலாம்
சிந்தையன் அல்லள் – படைப்புக் கடவுளான பிரமனாலும்
மாற்றக் கூடிய மனநிலை உடையவள் அல்லள் (என்று
பாராட்டப்படும் தன்மை உடைய); பேதையேன்- பேதமை
உடையளாகிய யான்; ஆர்க்கெலாம் கண்ணவன்- உலகில்
உள்ளார் அனைவர்க்கும் காட்டும் கண்ணாக விளங்குகின்ற
இராமன்; அன்று என்றால்- அப்படிப்பட்டவள் இல்லை என்று
சொல்வான் ஆனால்; அது தீர்க்கலாம் தகையது தெய்வம்
தேறுமோ- அக்கருத்தைப் போக்கும் தன்மையை வேறொரு
தெய்வம் அறியுமோ? (அறியாது என்றபடி.)

————-

‘பங்கயத்து ஒருவனும், விடையின் பாகனும்,
சங்கு கைத் தாங்கிய தருமமூர்த்தியும்,
அங்கையின் நெல்லிபோல் அனைத்தும் நோக்கினும்,
மங்கையர் மன நிலை உணர வல்லரோ?–76-

——–

‘ஆதலின், புறத்து இனி யாருக்காக என்
கோது அறு தவத்தினைக் கூறிக் காட்டுகேன்?
சாதலின் சிறந்தது ஒன்று இல்லை; தக்கதே,
வேத! நின் பணி; அது விதியும்’ என்றனள். –77-

வேத! – வேத வடிவினன் ஆகிய பெருமானே!; ஆதலின்-
உலகியல்பு இவ்வாறு இருத்தலின்; இனி புறத்து யாருக்காக என்
கோது அறு தவத்தினைக் கூறிக் காட்டுகேன்- இனிமேல்
வெளியில் வேறு யாருக்காக என் குற்றமற்ற தவத்தை நிரூபித்துக்
காட்ட வேண்டும்; சாதலின் சிறந்தது ஒன்று இல்லை- சாவதைக்
காட்டிலும் எனக்கு நற்பயன் தருவது வேறு இல்லை; நின் பணி
தக்கதே- நீ இட்ட கட்டளையும் அதுவே, எனக்குத் தகுதியானதே;
விதியும் அது- என் விதியும் அதுவே; என்றனள் – .

————

சீதை இலக்குவன் அமைத்த தீயை அணுகுதல்
10029.
இளையவன் தனை அழைத்து, ‘இடுதி, தீ’ என
வளை ஒலி முன் கையாள் வாயின் கூறினாள்;
உளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும்
களைகணைத் தொழ, அவன் கண்ணின் கூறினான். –78-

வளை ஒலி முன்கையாள் – ஒலிக்கின்ற வளையல் அணிந்த
முன்கையை உடைய சீதை;இளையவன் தனை அழைத்து தீ
இடுக என வாயின் கூறினாள் – இலக்குவனைக் கூப்பிட்டு
நெருப்பை உண்டாக்கி அமைத்துத் தருக என்று வாயாற் சொன்னாள்,
அது கேட்ட; உளைவு உறு மனத்தவன்- வருந்துகின்ற மனம்
உடையவனாகிய இலக்குவன்;உலகம் யாவுக்கும் களை கணைத்
தொழ – எல்லா உலகங்களுக்கும் துன்ப நீக்கத்திற்குப் பற்றுக்
கோடாக உள்ள தமயனாகிய இராமபிரானை (இது ஏற்கத் தக்கதோ
என்னும் குறிப்பினால்) வணங்க;அவன்- அந்த இராமன்;கண்ணின் கூறினான்- தன் கண்ணின் குறிப்பினாலேயே (செய்க
என்று) நெருப்பிடக் கூறினான்.

———–

ஏங்கிய பொருமலின் இழி கண்ணீரினன்,
வாங்கிய உயிரினன் அனைய மைந்தனும்,
ஆங்கு எரி விதி முறை அமைவித்தான்; அதன்
பாங்குற நடந்தனள், பதுமப் போதினாள். –79-

ஏங்கிய பொருமலின்- அழுகின்ற விம்மலால்; இழி
கண்ணீரினன்- இறங்குகின்ற கண்ண நீரினை உடையனாய்;
வாங்கிய உயிரினன் அனைய மைந்தனும் – போய்விட்ட உயிரை
உடையவனை ஒத்த இளைய பெருமாளும்; ஆங்கு- அவ்விடத்தே;
எரி – நெருப்பை; விதிமுறை அமைவித்தான் – முறைப்படி
உண்டாக்கித் தந்தான்; பதுமப் போதினாள்- தாமரைத் திருமகளாய
பிராட்டி; அதன் பாங்குற நடந்தனள்- அந்த நெருப்பின்
அருகாமையில் பொருந்த நடந்து சென்று நெருங்கினாள்.

—————-

தீயிடை, அருகுறச் சென்று, தேவர்க்கும்
தாய் தனிக் குறுகலும், தரிக்கிலாமையால்,
வாய் திறந்து அரற்றின – மறைகள் நான்கொடும்,
ஓய்வு இல் நல் அறமும், மற்று உயிர்கள் யாவையும். –80

தேவர்க்கும் – தேவர்க்கெல்லாம் அன்னையாகிய பிராட்டி;
தீயிடை அருகுறச் சென்று தனிக் குறுகலும் – நெருப்பின் இடையே
அருகாமையில் சென்று தனியாகச் சேர்ந்த அளவில்; தரிக்கிலாமையால்
– அக் கொடுமையைப் பார்க்கவே சகியாமையால்; மறைகள்
நான்கொடும் ஓய்வு இல் நல் அறமும் உயிர்கள் யாவையும் வாய்திறந்து அரற்றின- நால் வேதமும் ஓய்விலாத
தரும தேவதையும் எல்லா உயிர்களும் வாயைத் திறந்து கதறி அழுதன.

—————

வலம்வரும் அளவையில் மறுகி, வான் முதல்
உலகமும் உயிர்களும் ஓலமிட்டன;
அலம்வரல் உற்றன; அலறி, ‘ஐய! இச்
சலம்இது தக்கிலது’ என்னச் சாற்றின. –81-

வலம் வரும் அளவையில்- தீயைச் சுற்றி வரும் பொழுது;
வான் முதல் உலகமும் உயிர்களும் மறுதி ஓலமிட்டன- வான்,
மண், பாதலம் முதலாகிய உலகங்களும் அங்கங்குள்ள உயிர்களும்
மனம் மயங்கி கூக்குரலிட்டன; அலம் வரல் உற்றன- சுழற்சி
அடைந்தன; அலறி- கதறி; ஐய!- இராமனே!; இச்சலம் இது
தக்கின்று என்னச் சாற்றின- இத்தன்மையதான இத்தீமை
இவளுக்குத் தகுதியுடையதன்று என்று கூறின.

———-

இந்திரன் தேவியர் முதல ஏழையர்,
அந்தர வானின்நின்று அரற்றுகின்றவர்,
செந் தளிர்க் கைகளால் சேயரிப் பெருஞ்
சுந்தரக் கண்களை எற்றித் துள்ளினார். –82-

இந்திரன் தேவியர் முதல ஏழையர்- இந்திராணி முதலிய
பெண்கள்; அந்தர வானின் நின்று அரற்று கின்றவர் – ஆகாய
வெளியில் நின்று கூக்குரலிடுபவர்; சேயரிப் பெருஞ் சுந்தரக்
கண்களை- சிவந்த கோடுகள் பொருந்திய பெரிய அழகிய தமது
கண்களை; செந்தளிர்க் கைகளால் எற்றித் துள்ளினார் –
சிவந்த தளிர் போன்ற தம்கரங்களால் அடித்துக் கொண்டு துடித்தார்கள்.

———–

நடுங்கினர், நான்முகன் முதல நாயகர்;
படம் குறைந்தது, படி சுமந்த பாம்பு; வாய்
விடம் பரந்துளது என, வெதும்பிற்றால் உலகு;
இடம் திரிந்தன, சுடர்; கடல்கள் ஏங்கின.–83-

நான்முகன் முதல நாயகர் – பிரமன் முதலிய தலைமைத்
தேவர்கள்; நடுங்கினர் – அச்சமுற்றார்கள்; படி சுமந்த
பாம்பு படம் குறைந்தது – உலகைச் சுமக்கும் ஆதிசேடனாகிய
பாம்பு படம் ஒடுங்கிற்று; வாய் விடம் பரந்துளது என உலகு
வெதும்பிற்றால் – அப்பாம்பின் விடம் பரவியது என்று
சொல்லும்படி உலகம் வெதும்பியது; சுடர் இடம் திரிந்தன –
சூரிய சந்திரர்கள் உதிக்கும் இடம் மாறினர்; கடல்கள் ஏங்கின-.

———-

சீதை தீயிடைப் புகுதல்
10035.
கனத்தினால் கடந்த பூண் முலைய கைவளை,
‘மனத்தினால், வாக்கினால், மறு உற்றேன்எனின்,
சினத்தினால் சுடுதியால், தீச் செல்வா!’ என்றாள்;
புனத் துழாய்க் கணவற்கும் வணக்கம் போக்கினாள். –84-

கனத்தினால் கடந்த பூண் முலைய கைவளை- பருத்து அளவின்
மிகுந்த ஆபரணங்கள் அணிந்த தனங்களை உடைய வளைக்கையளாகிய
பிராட்டி (அக்கினியை நோக்கி); தீச் செல்வா!- அக்கினி தேவனே!;
மனத்தினால் வாக்கினால் மறு உற்றேன் எனின் சினத்தினால்
சுடுதியால் என்றாள் – நான் மனத்தாலும் சொல்லாலும் களங்கம்
உற்றவளானால் கோபத்தால் என்னைச் சுட்டெரிப்பாயாக என்று
கூறினாள்; புனத்துழாய்க் கணவற்கும் வணக்கம் போக்கினாள்
– காட்டில் தோன்றும் துளசியை அணிந்த தன் நாயகனாகிய
இராமனுக்கும் வணக்கம் செய்தாள்.

——–

நீந்த அரும் புனலிடை நிவந்த தாமரை
ஏய்ந்த தன் கோயிலே எய்துவாள் எனப்
பாய்ந்தனள்; பாய்தலும், பாலின் பஞ்சு எனத்
தீய்ந்தது அவ் எரி, அவள் கற்பின் தீயினால். –85-

நீந்த அரும் புனலிடை நிவந்த தாமரை – நீந்துதற்கரிய
வெள்ள நீரிலே உயர்ந்து மேல் தோன்றும் தாமரை மலராகிய;
ஏய்ந்த தன் கோயிலே எய்துவாள் என – பொருந்திய தன்
வாழிடத்தையே அடைவாள் போல; பாய்ந்தனள்- (நெருப்பில்)
பாய்ந்தாள்;பாய்தலும் பாலின் பஞ்சு என அவ் எரி அவள் கற்பின்
தீயினால் தீய்ந்தது- பாய்ந்தவுடன் பால் போன்ற
வெண்மையான பஞ்சு போல அந்த நெருப்பு பிராட்டியின் கற்பு
என்னும் நெருப்பால் தீய்ந்து போனது.

———

சீதை எரியிடை விளங்குதல்
10037.
அழுந்தின நங்கையை அங்கையால் சுமந்து
எழுந்தனன் – அங்கி, வெந்து எரியும் மேனியான்,
தொழும் கரத் துணையினன், சுருதி ஞானத்தின்
கொழுந்தினைப் பூசலிட்டு அரற்றும் கொள்கையான். –86-

வெந்து எரியும் மேனியான் அங்கி- கற்பு நெருப்பால்
தீய்ந்த உடம்பினனாய அக்னிதேவன்; அழுந்தின நங்கையை-
தன்னில் பாய்ந்து புகுந்த சீதையை; அங்கையால் சுமந்து-
தன் உள்ளங்கையால் தாங்கி; எழுந்தனன் – மேல் வந்தான்;
தொழும் கரத்துணையினன் – (இராமனைத்) தொழுகின்ற இணைக்
கரங்களை உடையனாய்; சுருதி ஞானத்தின் கொழுந்தினை-
வேதங்களால் உணர்த்தப்படும் மெய்ஞ்ஞானத்தின் முடிபொருளாக
விளங்கும் இராம பிரானைப் பார்த்து; பூசல் இட்டு அரற்றும்
கொள்கையான் – அடைக்கலம் வேண்டி ஒலிசெய்து கதறுகின்ற
தன்மையன் ஆயினன்.

————-

ஊடின சீற்றத்தால் உதித்த வேர்களும்
வாடிய இல்லையால்; உணர்த்துமாறு உண்டோ?
பாடிய வண்டொடும், பனித்த தேனொடும்
சூடின மலர்கள் நீர் தோய்த்த போன்றவால். -87-

ஊடின சீற்றத்தால்- தன் கணவன் தன்பால் மாறுபட்டு ஊடிய
கோபத்தால்; உதித்த வேர்களும்- தன்னிடம் உண்டாகிய
வியர்வைத் துளிகளும்; வாடிய இல்லை- உலரவில்லை;
உணர்த்துமாறு உண்டோ? – அவளது கற்பின் சிறப்பை உணர்த்த
வேறு ஒன்று உண்டோ?; சூடின மலர்கள் பாடிய வண்டொடும்
பனித்த தேனொடும் நீர் தோய்த்த போன்ற- அவள்
அணிந்திருந்த பூக்கள் தம்பால் பாடித் திரிந்த தேனீக்களோடும்
துளித்த தேனொடும் நீரில் தோய்த்து எடுத்தாற் போலக் குளிர்ந்தன.

———-

திரிந்தன உலகமும் செவ்வை நின்றன;
பரிந்தவர் உயிர் எலாம் பயம் தவிர்ந்தன;
அருந்ததி முதலிய மகளிர் ஆடுதல்
புரிந்தனர், நாணமும் பொறையும் நீங்கினார். –88-

திரிந்தன உலகமும் செவ்வை நின்றன- (முன்பு பிராட்டியின்
துன்பம் கண்டு) சுழன்றனவாகிய உலகங்களும் (இப்போது அது
நீங்கியதால்) நேரே நின்றன;பரிந்தவர் உயிர் எலாம்
பயம் தவிர்ந்தன- (என்ன நிகழுமோ என்று பயந்து)
வருந்தியவர்களது உயிர் எல்லாம் இப்போது பயம் நீங்கப்
பெற்றன; அருந்ததி முதலிய மகளிர் – அருந்ததி முதலான
கற்பின் செல்வியர்; நாணமும் பொறையும் நீங்கினார்
ஆடுதல் புரிந்தனர்- நாணமும் அடக்கமும் நீங்கப்
பெற்றவர்களாய் மகிழ்ச்சியால் ஆடுதல் செய்தனர்.

———-

தீக் கடவுள் முறையீடு; இராமன் வினா
10040.
‘கனிந்து உயர் கற்பு எனும் கடவுள் – தீயினால்,
நினைந்திலை, என் வலி நீக்கினாய்’ என,
அநிந்தனை அங்கி, ‘நீ அயர்வு இல் என்னையும்
முனிந்தனை ஆம்’ என முறையிட்டான்அரோ. –89-

அங்கி- தீக்கடவுள்; அநிந்தனை- பழிப்புக்கிடமில்லாவதனான
இராமபிரானை நோக்கி; நீ நினைந்திலை- (இவளது கற்பு கூடும்
தன்மையது என்பதனை) நீ நினையாதொழிந்தாய்; கனிந்து உயர்
கற்பு எனும் கடவுள் தீயினால் என் வலி நீக்கினாய் என- முற்ற
உயர்ந்த சீதாதேவியின் கற்பு என்னும் தெய்வ நெருப்பால் என்
வலிமையைப் போக்கிவிட்டாய் எனக் கூறி; அயர்வு இல் என்னையும்
முனிந்தனை ஆம் என முறையிட்டான் – சோர்வில்லாத என்னையும்
நீ கோபித்தாய் போலும் என்பதாக முறையிட்டான்.

————

இன்னது ஓர் காலையில், இராமன், ‘யாரை நீ?
என்னை நீ இயம்பியது, எரியுள் தோன்றி? இப்
புன்மை சால் ஒருத்தியைச் சுடாது போற்றினாய்
அன்னது ஆர் சொல்ல? ஈது அறைதியால்’ என்றான்.–90-

இராமன்-; இன்னது ஓர் காலையில் – நெருப்புத் தேவன்
முறையிட்ட போது; நீ யாரை, எரியுள் தோன்றி நீ இயம்பியது
என்னை?- நீ யார்? நெருப்பினுள்ளிருந்து வந்து நீ சொல்லியது
என்ன?; இப்புன்மை சால் ஒருத்தியைச் சுடாது போற்றினாய்,
அன்னது ஆர் சொல்ல- இப்பழிக்கிடமாகிய ஒரு பெண்ணை
எரிக்காமல் காப்பாற்றினாய், அவ்வாறு காப்பாற்றியது யார்
சொல்லியதால்; ஈது அறைதி- இதற்குப் பதில் சொல்; என்றான்-.

———–

தீக்கடவுள் மறுமொழி
10042.
‘அங்கி, யான்; என்னை இவ் அன்னை கற்பு எனும்
பொங்கு வெந் தீச் சுடப் பொறுக்கிலாமையால்,
இங்கு அணைந்தேன்; உறும் இயற்கை நோக்கியும்,
சங்கியாநிற்றியோ, எவர்க்கும் சான்றுளாய்? -91-

எவர்க்கும் சான்றுளாய்! – எல்லார்க்கும் அகத்தே நின்று
சாட்சியாக இருக்கின்ற பரம்பொருளே!; யான் அங்கி- நான்
தீக்கடவுள்; என்னை இவ் அன்னை கற்பு எனும் பொங்கு
வெந்தீ சுட பொறுக்கிலாமையால் இங்கு அணைந்தேன் –
என்னை இந்த மாதாவினது கற்பு என்று சொல்லப்படும்
மேலெழுந்த கொடு நெருப்பு சுட அதனைத் தாங்க முடியாமையால்
நெருப்பில் நின்று எழுந்து இங்கு வந்தேன்; உறும் இயற்கை
நோக்கியும்- எனக்கு உண்டாகிய தன்மையைப் பார்த்த பிறகும்;
சங்கியா நிற்றியோ ? – இவளைச் சந்தேகிக்கிறாயா?
(என்னையே சந்தேகிக்கிறாயா? எனலும் ஆம்.)

———–

வேட்பதும், மங்கையர் விலங்கினார்எனின்
கேட்பதும், பல் பொருட்கு ஐயம் கேடு அற
மீட்பதும், என்வயின் என்னும் மெய்ப்பொருள் –
வாள் – பெருந் தோளினாய்! – மறைகள் சொல்லுமால்.–92-

வாள் பெருந்தோளினாய் – ஒளி படைத்த பெரிய தோள்களை
உடைய இராமனே; மங்கையர் வேட்பதும் – பெண்களை மணம்
செய்து கொள்வதும்; விலங்கினார் எனின் கேட்பதும்-
அப்பெண்கள் இல்லற ஒழுக்கில் மாறுபட்டார் எனக் கருதின்
என் மூலமாக விசாரிப்பதும்; பல பொருட்கு ஐயம் கேடு உற
மீட்பதும் – எந்த ஒரு பொருளிடமும் ஏற்படும் சந்தேகத்தை
நீக்கித் தெளிவு பிறப்பித்துக் கொள்வதும்; என்வயின்-
அக்கினியாகிய என் மூலமாகவே; என்னும் மெய்ப் பொருள்
மறைகள் சொல்லும் – என்கின்ற உண்மையை வேதங்கள்
எடுத்துக் கூறும்.

———-

‘ஐயுறு பொருள்களை ஆசு இல் மாசு ஓரீஇக்
கையுறு நெல்லி அம் கனியின் காட்டும் என்
மெய்யுறு கட்டுரை கேட்டும், மீட்டியோ ? –
பொய் உறா மாருதி உரையும் போற்றலாய்! -93-

பொய் உறா மாருதி உரையும் போற்றலாய்-
வாய்மையில் சிறிதும் தவறாத அனுமனது வார்த்தையையும்
கருதிப் பாதுகாவாதவனே!;ஐயுறு பொருள்களை ஆசு இல்
மாசு ஓரீஇ- சந்தேகித்த பொருள்களின் இடமாக குற்றம் நீக்கி
அச்சந்தேகத்தைப் போகச் செய்து; கைஉறு நெல்லியம்
கனியின் காட்டும் என் மெய் உரை கேட்டும் மீட்டியோ-
உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெள்ளத் தெளிவாகக்
காட்டுகிற என்னுடைய சத்திய வார்த்தையைக் கேட்ட பிறகும்
திரும்பச் சேர்த்துக் கொள்ளாயோ.

————

‘தேவரும் முனிவரும், திரிவ நிற்பவும்,
மூவகை உலகமும், கண்கள் மோதி நின்று,
”ஆ!” எனல் கேட்கிலை; அறத்தை நீக்கி, வேறு
ஏவம் என்று ஒரு பொருள் யாண்டுக் கொண்டியோ? -94-

தேவரும் முனிவரும் திரிவ நிற்பவும் மூவகை உலகமும்-
தேவர்களும் முனிவர்களும் சர அசரங்களாகிய மூவகை உலகப்
பொருள்களும் உயிர்களும்; கண்கள் மோதி நின்று ‘ஆ’ எனல்
கேட்கிலை- கண்களை அடித்துக் கொண்டு நின்று ‘ஆ’ என்று
இரங்குகின்ற சொல் உன் காதில் விழவில்லையா?; அறத்தை
நீக்கி ஏவம் என்று ஒரு பொருள் யாண்டுக் கொண்டி- தரும
வடிவாகிய நீ அறத்தைப் போக்கி பாவம் என்ற ஒரு பொருளை எங்கிருந்து
பெற்றாய்?

————

‘பெய்யுமே மழை? புவி பிளப்பது அன்றியே
செய்யுமே, பொறை? அறம் நெறியில் செல்லுமே?
உய்யுமே உலகு, இவள் உணர்வு சீறினால்?
வய்யுமேல், மலர்மிசை அயனும் மாயுமே.’ –95-

இவள் உணர்வு சீறினால் – தெய்வக் கற்பினளாய இவள்
உணர்வு நிலை திரிந்து கோபம் அடைந்தால்; மழை பெய்யுமே-
மழை பொழியுமா? புவி பிளப்பது அன்றியே பொறை செய்யுமே?-
பூமி வெடிப்பது அல்லாமல் பொருளைத் தாங்குதல் செய்யுமா?;
அறம் நெறியில் செல்லுமே- அறம் நேரான வழியில்
நடக்குமா?; உலகு உய்யுமே- உலகம் பிழைக்குமா?; வய்யுமேல்
– (இவள்) சபித்தால்; மலர்மிசை அயனும் மாயும்-
மலர்மேல் வீற்றிருக்கும் நான்முகனும் இறந்து படுவான்.

————-

சீதையை இராமன் ஏற்றுக் கொள்ளல்
10047.
பாடு உறு பல் மொழி இனைய பன்னி நின்று,
ஆடுறு தேவரொடு உலகம் ஆர்த்து எழ,
சூடு உறும் மேனிய அலரி, தோகையை
மாடு உறக் கொணர்ந்தனன்; வள்ளல் கூறுவான். –96-

சூடு உறும் மேனிய அலரி- கற்பனலால் வெந்த உடம்பினை
உடைய தீக்கடவுள்; பாடு உறு பல் மொழி இனைய பன்னி நின்று
– பெருமை பொருந்திய பல இத்தகைய வார்த்தைகளைத்
திரும்பத் திரும்பச் சொல்லி; ஆடுறு தேவரொடு உலகம்
ஆர்த்து எழ- களிப்பினால் ஆடுகின்ற தேவர்களொடு உலகமும்
ஆரவாரித்து உடன் வர; தோகையை- மயில் அன்னாளாய
சீதையை; மாடு உறக் கொணர்ந்தனன்- (இராமன்) அருகில் கொண்டு
வந்தான்; வள்ளல்- (அது கண்ட) இராமபிரான்; கூறுவான்-
சொல்வானாயினன்.

———–

‘அழிப்பு இல சான்று நீ, உலகுக்கு; ஆதலால்
இழிப்பு இல சொல்லி, நீ இவளை, ”யாதும் ஓர்
பழிப்பு இலள்” என்றனை; பழியும் இன்று; இனிக்
கழிப்பிலள்’ என்றனன் – கருணை உள்ளத்தான். –97-

கருணை உள்ளத்தான் – அருள் உள்ளம் வாய்ந்தவனாகிய
இராமன்; (தீக்கடவுளை நோக்கி) நீ உலகுக்கு அழிப்பு இல
சான்று- நீ இந்த உலகத்துக்கு பிறிதொன்றால் நீக்க
முடியாத சாட்சி ஆவாய்; ஆதலால்-; நீ இவளை இழிப்பு இல
சொல்லி ”யாதும் ஓர் பழிப்பு இவள் என்றனை- நீ இவளை
இகழ்ச்சிக்கு இடம் இல்லாத உயர்ந்த வார்த்தைகளாற்
பாராட்டி யாதொரு பழிப்புக்கும் இடம் இல்லாதவள் என்று
உறுதி கூறினை; பழியும் இன்று- இவளிடத்து பழியும் இல்லை;
(எனவே) ‘இனி கழிப்பு இலள்’ என்றனன் – ‘இனி (என்னால்
இவள் நீக்கத் தக்கவள் அல்லள்’ என்று கூறினான்.

————-

பிரமன் இராமனது பரம்பொருள் தன்மை கூறல்

10049.
உணர்த்துவாய் உண்மை ஒழிவு இன்று, காலம் வந்துளதால்,
புணர்த்தும் மாயையில் பொதுவுற நின்று, அவை உணரா
இணர்த் துழாய்த் தொங்கல் இராமற்கு’ என்று இமையவர் இசைப்ப,
தணப்பு இல் தாமரைச் சதுமுகன் உரைசெயச் சமைந்தான்.–98-

இமையவர்- தேவர்கள்; (பிரமனிடம்) புணர்த்தும்
மாயையில் பொதுவுற நின்று அவை உணரா இணர்த்துழாய்த்
தொங்கல் இராமற்கு- தானே தனது நினைவால் இவர்களிடத்தே
கூட்டுகின்ற மாயையில் மற்றவைகளைப் போலவே தானும்
ஒன்றித்து நின்று தன் பரம்பொருள் தன்மையை உணரா திருக்கின்ற பூங்கொத்தாகிய துளசி மாலையை அணிந்துள்ள
இராமனுக்கு; உண்மை ஒழிவு இன்று உணர்த்துவாய்- இராமனுக்கு
அவனது உண்மை நிலையை சிறிதும் விடுபடாமல் உணர்த்து வாயாக;
காலம் வந்துளது- அதற்குரிய காலம் வந்திருக்கிறது; என்று
இசைப்ப- என்று கூற; தணப்பு இல் தாமரைச் சதுமுகன்
உரைசெயச் சமைந்தான் – பிரியாத திருமாலின் உந்தித் தாமரையில்
தோன்றிய நான்முகன் சொல்லத் தொடங்கினான்.

————–

‘மன்னர் தொல் குலத்து அவதரித்தனை; ஒரு மனிதன்
என்ன உன்னலை உன்னை, நீ; இராம! கேள், இதனை;
சொன்ன நான்மறைத் துணிவினில் துணிந்த மெய்த் துணிவு
நின் அலாது இல்லை; நின்னின் வேறு உளது இலை – நெடியோய்!-99-

நெடியோய்- (நிலம் கடந்த) நெடியவனாய திருமாலே!; இராம!
– இராமனே!; நீ இதனை கேள்- நீ நான் சொல்கிற இந்த
உரையைக் கேட்பாயாக; மன்னர் தொல் குலத்து அவதரித்தனை-
அரசர்களது பழமையான சூரிய குலத்தில் தசரத குமாரனாகத்
தோன்றினாய்; ஒரு மனிதன் என்ன உன்னை உன்னலை- ஒரு
மனிதனாக உன்னை நீ கருதற்க; சொன்ன நான் மறைத்
துணிவினில் துணிந்த மெய்த் துணிவு நின் அலாது இல்லை-
எல்லாவற்றையும் எடுத்துச் சொன்ன நான்கு வேதங்களின்
முடிந்த முடிபாகிய (வேத சிரஸ் எனப்படும்) உபநிடத முடிவில்
சொல்லப் படும் முடிபொருள் நின்னை அல்லாமல் வேறு இல்லை;
நின்னின் வேறு உளது இலை- நின்னை அல்லாமல்
நின்னிடத்திருந்து நீங்கி வேறு பொருள்கள் உளது என்னும்
இருப்பினைப் பெறுவதும் இல்லை.
நீயே பரம்பொருள்; நீயே எல்லாப் பொருளும்; உன்னையல்லாது
வேறு பொருள் எதுவும் இல்லை எனவும் கூறலாம்.

———-

‘பகுதி என்று உளது, யாதினும் பழையது, பயந்த
விகுதியால் வந்த விளைவு, மற்று அதற்குமேல் நின்ற
புகுதி, யாவர்க்கும் அரிய அப் புருடனும், நீ; இம்
மிகுதி உன் பெரு மாயையினால் வந்த வீக்கம். –100-

யாதினும் பழையது பகுதி என்று உளது – எல்லாவற்றினும்
பழைமை யானதாகிய மூலப்பிருகிருதி என்று உள்ள தத்துவமும்;
பயந்த- அம் மூலப் பிருகிருதியால் தரப்பட்ட; விகுதியால் வந்த
விளைவு- விகாரத்தால் உண்டான காரியங்களாகிய தத்துவங்களும்;
மற்று அதற்குமேல் நின்ற பகுதி யாவர்க்கும் அரிய
அப்புருடனும் – அந்தத் தத்துவங்களின் வேறாகக்
கண்டுணர்தற்கரியதாய் மேற்பட்டு நின்ற ஜீவாத்மாவும்; நீ –
நீயேயாவாய்; இம்மிகுதி- இந்த உலகத் தோற்றம் எல்லாம்; உன்
பெரு மாயையினால் வந்த வீக்கம் – உனது பெரிய சங்கற்பம்
(நினைவு) என்று சொல்லப்படுகிற மாயையால் உண்டான பரப்பாகும்.

—————–

‘முன்பு பின்பு இரு புடை எனும் குணிப்பு அரு முறைமைத்
தன் பெருந் தன்மை தான் தெரி மறைகளின் தலைகள்
”மன் பெரும் பரமார்த்தம்” என்று உரைக்கின்ற மாற்றம்,
அன்ப! நின்னை அல்லால், மற்று இங்கு யாரையும் அறையா.–101-

அன்ப! – எவ்வுயிர்களிடத்தும் அன்புள்ளவனே!; முன்பு பின்பு
இருபுடை எனும் குணிப்பு அரு முறைமைத் தன் பெருந்தன்மை
தான் தெரி மறைகளின் தலைகள்- தோற்றம், இறுதி என்கின்ற
இருபக்கத்தையும் இன்னது என்று அளவிட்டறிதற்கரிய முறைமை
யுடையதும் தன் அளப்பரும் தன்மையைத் தானே அறிய வல்லதும்
ஆகிய வேதங்களின் முடிபொருள் காட்டும் வேத சிரள் எனப்படும்
உபநிடதங்கள்; ”மன் பெரும் பரமார்த்தம் என்று உரைக்கின்ற
மாற்றம் – நிலை பெற்ற மிக மேலான பரம்பொருள் என்று
குறிப்பிடுகின்ற சொல்; நின்னை யல்லால் மற்று இங்கு யாரையும்
அறையா- (இராமனாக அவதரித்துள்ள) திருமாலாகிய நின்னை
அல்லாமல் வேறாக இங்குள்ள பிரமருத்திர இந்திராதி தேவர்களுள்
யாரையும் குறிப்பிடாது.

———

‘எனக்கும், எண் வகை ஒருவற்கும், இமையவர்க்கு இறைவன் –
தனக்கும், பல் பெரு முனிவர்க்கும், உயிருடன் தழீஇய
அனைத்தினுக்கும், நீயே பரம் என்பதை அறிந்தார்
வினைத் துவக்குடை வீட்ட அருந் தளைநின்று மீள்வார்.–102-

எனக்கும் – பிரமனாகிய எனக்கும்; எண்வகை ஒருவற்கும்-
அட்டமூர்த்தியாக உள்ள உருத்திரனுக்கும்; இமையவர்க்கு
இறைவன் தனக்கும்- இந்திரனுக்கும்; பல்பெரு முனிவர்க்கும்
– பல பெரிய முனிவர்களுக்கும்; உயிருடன் தழீஇய
அனைத்தினுக்கும்- உயிருடைய பொருள்களாய எல்லாவற்றுக்கும்;
நீயே பரம் என்பதை அறிந்தார் – நீயே மேலானவன்
(இறைவன்) என்கின்ற உண்மையை அறிந்த ஞானிகள்; வினைத்
துவக்கு உடை வீட்ட அரும் தளை நீன்று மீள்வார் –
இருவினைகளாகிய வலைக்குள் அகப்பட்டு மீள முடியாத அரிய
பிறவி என்னும் பெருந் தளையிலிருந்து மீண்டு வீடுபேறு அடைவார்.

இருநிலனாய்த் தீயாகி நீரும் ஆகி,
இயமானனாய், எறியும் காற்றும் ஆகி, அருநிலைய திங்களாய்,
ஞாயிறாகி, ஆகாசமாய் அட்டமூர்த்தியாகி” என்ற திருநாவுக்கரசர்
அருளிய நின்ற திருத்தாண்டகம்

———

‘என்னைத்தான் முதல் ஆகிய உருவங்கள் எவையும்
முன்னைத் தாய் தந்தை எனும் பெரு மாயையில் மூழ்கி,
தன்னைத் தான் அறியாமையின், சலிப்ப; அச் சலம் தீர்ந்து,
உன்னைத் தாதை என்று உணர்குவ, முத்தி வித்து, ஒழிந்த.–103-

என்னைத் தான் முதலாகிய உருவங்கள் எவையும்-
உற்பத்திக்குக் காரணமான என்னை முதலாக உடைய உயிர்
வருக்கங்கள் எல்லாம்; முன்னை தாய் தந்தை எனும் பெரு
மாயையில் மூழ்கி- பிறப்புக்கு முதலான தாய் தந்தை எனும்
சுற்றமாகிய உலக மாயையில் அழுந்தியிருக்கும் உண்மை மறந்து;
தன்னைத் தான் அறியாமையில் சலிப்ப- தம்முடைய ஆத்ம
வடிவத்தையும் அது நீயாயிருத்தலையும் தம்மால் அறிய முடியாமல்
தளர்ச்சியடைந்து துன்பம் அடைவனவாம்; அச்சலம் தீர்ந்து
ஒழிந்த உன்னைத் தாதை என்று உணர்குவ முத்திவித்து- அந்த
பொய்மை நீங்கி விலகியவாகிய சீவன்கள் உன்னையே
எல்லாவற்றுக்கும் முதலாகிய தந்தை என்று அறிவனவாம்; அவையே
வீட்டுலகத்தில் விளையும் வித்தாவனவாம்.

———–

”ஐ – அஞ்சு ஆகிய தத்துவம் தெரிந்து அறிந்து,அவற்றின்
மெய் எஞ்சாவகை மேல் நின்ற நினக்குமேல் யாதும்
பொய் எஞ்சா இலது” என்னும் ஈது அரு மறை புகலும்;
வய்யம் சான்று; இனி, சான்றுக்குச் சான்று இலை,வழக்கால்.–104-

ஐ அஞ்சு ஆகிய தத்துவம் தெரிந்து அறிந்து- பூதம் 5, புலன்
5, பொறி 5, கன் மேந்திரியம் 5, மகத், அகங்காரம்,
மனம் மூலப்பிருகிருதி, சீவன் 5 என்று கூறப்படும் ஐந்து
ஐந்துகளாகிய இருபத்தைந்து தத்துவங்களையும் நன்கு ஆராய்ந்து
அறிந்து; அவற்றின் மெய் எஞ்சாவகை மேல் நின்ற நினக்கு
மேல் யாதும் பொய் எஞ்சா இலது- அவற்றைச் சரீரமாகக்
கொண்டு சரீரியாக சிறிதும் குறைவு படாமல் நடத்தி மேலாய்
நின்ற இருபத்தாறாவது தத்துவமாக நின்ற உனக்கு மேல் எதுவும்
உண்மையாக இல்லை; என்னும் ஈது- என்கின்ற இவ்வுண்மையை;
அருமறை புகலும்- அரிய வேதம் எடுத்துக் கூறும்; வய்யம்
சான்று – இதற்கு இவ்வுலகமே (நின்னால் இயங்குதலின் நீ
இன்றி இயங்காமையின் சான்றாகும்;இனி சான்றுக்குச் சான்று
இலை- சாட்சிக்கு இன்னொரு சாட்சி வேண்டுதல் இல்லை
ஆதலின் இதை இனியும் நிரூபிக்க வேண்டியதின்று; வழக்கால்-
இது வழக்கும் ஆகும்.

————

‘அளவையால் அளந்து, ”ஆம்,” ”அன்று”, என்று அறிவுறும் அமைதி
உளவை யாவையும் உனக்கு இல்லை; உபநிடத்து உனது
களவை ஆய்ந்து உறத் தெளிந்திலது ஆயினும், கண்ணால்,
துளவை ஆய் முடியாய்! ”உளை நீ” எனத் துணியும். –105-

துளவை ஆய் முடியாய்! – திருத்துளசியை ஆராய்ந்து எடுத்துச்
சிறந்து அணிந்த திருமுடி உடைய திருமாலே!;அளவையால் அளந்து- பிரமாணங்களால் ஆராய்ந்து அளவிட்டு
‘ஆம்’ ‘அன்று’ என்று அறிவுறும் அமைதி; உளவை யாவையும்
உனக்கு இல்லை- உண்டு என்றும் இல்லை என்றும்
அறிவுறுத்தப்படும் தன்மை உடைய நிலைகள் எவையும் உன்னிடம்
பயன்படா; இல்லையாகும்; உபநிடத்து- உபநிடதங்களில்; உனது
களவை ஆய்ந்து உறத் தெளிந்திலது ஆயினும் – நீ
எல்லாவற்றினும் மறைந்து அவையேயாய் இருந்து கொண்டிருக்கும்
களவை ஆராய்ந்து உன்னை நன்கு காண இயன்றிலது ஆனாலும் அது;
கண்ணால் ‘நீ உளை’ எனத் துணியும் – தன் ஞானக்கண்ணால் நீ
அறியவாரா விடினும் இருக்கின்றாய் என்று அறுதியிட்டுக் கூறும்.

———

‘கரணம் என்று உள உன்னை வந்து அறிவு காணாமே,
அரணம் அல்லவர்க்கு இவை கடந்து அகல்வு அரிது ஆக,
மரணம் தோற்றம் என்று இவற்றிடை மயங்குப; அவர்க்கு உன்
சரணம் அல்லது ஓர் சரண் இல்லை, அன்னவை தவிர்ப்பான்.–106-

அரணம் அல்லவர்க்கு- உன்னைத் தமக்குப் பாதுகாவலாகப்
பற்றாதவர்களுக்கு; உன்னை வந்து அறிவு காணாமே- உன்னை
நெருங்கி அறிவினால் அறிந்து கொள்ளாதபடி; கரணம் என்று உள
– ஐம்பொறிகள் என்றுள்ளவைகள் பெருந்தடையாக ஆகும்;
(அதனால்) இவை கடந்து அகல்வு அரிதாக- இப் பொறிகளைக்
கடந்து மேற்சென்று அறிதல் முடியாததாக; மரணம் தோற்றம்
என்று இவற்றிடை மயங்குப- இறப்பு பிறப்பு என்ற
பாசவலைக்குட்பட்டு மீண்டும் மீண்டும் தடுமாறுவர்; அன்னவை
தவிர்ப்பான் – அப்பிறப்பு இறப்புகளாகிய துன்பங்களை நீக்குதற்கு;
அவர்க்கு- அவர்களுக்கு; உன் சரணம் அல்லது ஓர் சரண்
இல்லை- உன் திருவடியிணைகள் அல்லாமல் வேறு ஓர் புகலிடம்
இல்லை.

———–

‘தோற்றம் என்பது ஒன்று உனக்கு இல்லை; நின்கணே தோற்றும்,
ஆற்றல் சால் முதல் பகுதி; மற்று அதனுள் ஆம்,பண்பால்
காற்றை முன்னுடைப் பூதங்கள்; அவை சென்று, கடைக்கால்
வீற்று வீற்று உற்று வீவுறும்; நீ என்றும் விளியாய். –107-

தோற்றம் என்பது ஒன்று உனக்கு இல்லை- தோன்றுதல்
என்பதாகிய தன்மை உனக்கு இல்லை (அநாதி); ஆற்றல் சால்
முதற்பகுதி நின்கணே தோற்றும் – வலிமை மிக்க
மூலப்பிருகிருதி மாயை என்கிற தத்துவம் நின்னிடத்திருந்து
வெளிப்படும்; மற்று அதனுள் ஆம் பண்பால்- பின்னர் அதின்
உள்ளிருந்து ஒன்றொன்றாக வெளிப்படும் முறையால்; காற்றை
முன்னுடைப் பூதங்கள் – காற்று, ஆகாயம் முதலாகிய
ஐம்பூதங்கள் தோற்றும்; கடைக்கால்- ஊழிமுடிவில்; அவை
சென்று வீற்று வீற்று உற்று வீவுறும் – ஒன்று ஒன்றுக்குள்
ஒடுங்கி அழிந்து போகும்; நீ என்றும் விளியாய்- நீ
எப்பொழுதும் அழியமாட்டாய்.

————-

மின்னைக் காட்டுதல்போல் வந்து விளியும் இல் உலகம் –
தன்னைக் காட்டவும், தருமத்தை நாட்டவும், தனியே
என்னைக் காட்டுதி; இறுதியும் காட்டுதி; எனக்கும்
உன்னைக் காட்டலை; ஒளிக்கின்றும் இலை, மறை உரையால்.–108-

மின்னைக் காட்டுதல் போல் வந்து விளியும் இவ் உலகம்
தன்னைக் காட்டவும்- வானம் மின்னலைக் காட்டுதல் போல
தோன்றி உடனே மறையும் இந்த உலகத்தைக் காட்டவும்;
தருமத்தை நாட்டவும்- இவ்வுலகில் தருமத்தை நிலை
நிறுத்தவும்; தனியே- உன்னின் வேறாக; என்னைக் காட்டுதி
– என்னைப் படைக்கிறாய்; இறுதியும் காட்டுதி- எனக்கு
அழிவையும் உண்டாக்குகிறாய்; எனக்கும்-;உன்னைக் காட்டலை
– உலக காரணமானவனாகிய உன் உண்மை நிலையைக்
காட்டுவாயல்லை; ஒளிக்கின்றும் இலை- மறைத்திருக்கின்றாயும்
இல்லை; மறை உரை- இவை அனைத்தையும் வேதங்கள் கூறுகின்றன.

———

‘என் உருக் கொடு இவ் உலகினை ஈனுதி; இடையே
உன் உருக் கொடு புகுந்து நின்று ஓம்புதி; உமைகோன்
தன் உருக் கொடு துடைத்தி; மற்று இது தனிஅருக்கன்
முன் உரு கொடு பகல் செயும் தரத்தது – முதலோய்! –109-

முதலோய்! – எல்லாவற்றுக்கும் மூலமானவனே!; என் உருக்கொடு
இவ் உலகினை ஈனுதி- பிரமனாகிய என் வடிவம் கொண்டு இந்த
உலகத்தை உண்டாக்குகிறாய்; இடையே- நடுவில்; உன்
உருக்கொடு புகுந்து நின்று ஓம்புதி- திருமாலாகிய உன்
வடிவத்தை எடுத்துக் கொண்டு புகுந்து நின்று பாதுகாக்கிறாய்;
உமை கோன் தன் உருக்கொடு துடைத்தி- உமாதேவியின்
கணவராகிய சிவபெருமான் வடிவம் கொண்டு அழிக்கிறாய்; மற்று
இது- நீ செய்யும் இச்செயல்;தனி அருக்கன்- ஒப்பற்ற
ஒருவனாகிய சூரியன்; முன் உருக்கொடு பகல் செயும் தரத்தது-
கருதிய உருவம் கொண்டு காலையில் பகலை உண்டாக்கி, உச்சத்தில்
பகலை நடத்தி நிறுத்தி, தனது மறைவால் மாலையில் பகலை
முடித்தல் போல உள்ளதாம்.

———–

‘ஓங்காரப் பொருள் தேருவோர்தாம் உனை உணர்வோர்;
ஓங்காரப் பொருள் என்று உணர்ந்து, இரு வினை உகுப்போர்;
”ஓங்காரப் பொருள் ஆம்” ”அன்று” என்று ஊழி சென்றாலும்,
ஓங்காரப் பொருளே பொருள் என்கலா உரவோர். –110-

ஓங்காரப் பொருள் தேருவோர்தாம் உனை உணர்வோர்-
பிரணவப் பொருளை ஆராய்ந்தறிகின்றவர்களே உன் உண்மையான
சொரூபத்தை உணர்வாராவர் (அவர்கள்); ஓங்காரப் பொருள்
என்று உணர்ந்து இருவினை உகுப்போர்- உன்னைப் பிரணவப்
பொருள் என்ற தியானித்து இருவினைகளும் கழியப் பெற்று
முத்தி அடைவர்; ஓங்காரப் பொருளே பொருள் என்கலா
உரவோர்- பிரணவப் பொருளே பரம்பொருளாகும் என்ற
உண்மையை உணரமாட்டாத அறிவை உடையவர்கள்; ஓங்காரப்
பொருள் ஆம்- இறைவனாகிய நீ பிரணவப் பொருளாக உள்ளாய்
என்றும்; ‘அன்று’ என்று- இல்லை என்றும் தடுமாறி; ஊழி
சென்றாலும்- உகாந்த காலம் கடந்தாலும் (பிறவியிலிருந்து வீடு பெறார்.)

————–

‘இனையது ஆகலின், எம்மை மூன்று உலகையும் ஈன்று, இம்
மனையின் மாட்சியை வளர்த்த எம் மோயினை வாளா
முனையல்” என்று அது முடித்தனன் – முந்து நீர் முளைத்த
சினையின் பந்தமும் பகுதிகள் அனைத்தையும் செய்தோன்.–111-

முந்து நீர் முளைத்த சினையின் பந்தமும் பகுதிகள்
அனைத்தையும் செய்தோன்- நிலத்திற்கு முன்னதாகிய
நீரிலிருந்து தோன்றிய முட்டை வடிவான இவ் வண்டத்தையும்
அவற்றின் பகுதியாகிய பல்வேறு யோனி பேதங்களையும்
படைத்தருளியவனாகிய பிரமன்; இனையது ஆகலின்-
பரம்பொருளாகிய நீயே இராமனாக அவதரித்தலின்; எம்மை
மூன்று உலகையும் ஈன்று இம்மனையின் மாட்சியை
வளர்த்த எம்மோயினை வாளா முனையல்!- என்னையும்
மூவுலகங்களையும் பெற்றெடுத்து இல்லற மேன்மையை
உன்னோடிருந்து அழகுற நடத்துகிற சர்வ சக்தியாகிய எம்
தாயை வீணே வெறுக்க வேண்டா; என்று அது முடித்தனன்-
என்று கூறித் தன் உரையை நிறைவு செய்தான்.

————

சிவபெருமான் உண்மை உணர்த்தல்
10063.
என்னும் மாத்திரத்து, ஏறு அமர் கடவுளும் இசைத்தான்;
‘உன்னை நீ ஒன்றும் உணர்ந்திலை போலுமால், உரவோய்!
முன்னை ஆதி ஆம் மூர்த்தி நீ; மூவகை உலகின்
அன்னை சீதை ஆம் மாது, நின் மார்பின் வந்து அமைந்தாள்.–112-

என்னும் மாத்திரத்து- என்று பிரமன் இராமனுக்கு உண்மை
உணர்த்திய அளவில்; ஏறு அமர் கடவுளும் இசைத்தான்-
எருதின் மேல் அமர்ந்துள்ள கடவுளாய சிவனும் (பின்வருமாறு)
உண்மை உணர்த்தினான்; உரவோய்!- வலிமை உள்ள இராமனே!;
நீ உன்னை ஒன்றும் உணர்ந்திலை போலுமால்- நீ உன்னை
இன்னவாறு என்று ஒரு சிறிதும் உணர்ந்தாயில்லை போலும்; நீ
முன்னை ஆதி ஆம் மூர்த்தி- நீ எல்லார்க்கும்
முற்பட்டவனாகிய ஆதிப் பரம்பொருள்; சீதை அம்மாது நின்
மார்பின் வந்து அமைந்தாள் மூவகை உலகின் அன்னை-
சீதை என்கிற பெண் உன் திருமார்பில் வந்து
பொருந்தியிருப்பவளாகிய மூவுலகங்களுக்கும் தாயாகிய
பிராட்டியாவாள்.

————–

‘துறக்கும் தன்மையள் அல்லளால், தொல்லை எவ் உலகும்
பிறக்கும் பொன் வயிற்று அன்னை; இப் பெய்வளை பிழைக்கின்,
இறக்கும் பல் உயிர்; இராமன்! நீ இவள் திறத்து இகழ்ச்சி
மறக்கும் தன்மையது’ என்றனன் – வரதர்க்கும் வரதன்.–113-

இராமன்! – இராமனே!; தொல்லை எவ் உலகும் பிறக்கும்
பொன் வயிற்று அன்னை- பழயதாகிய எல்லா உலகங்களும்
தோன்றுதற் கிடனாகிய அழகிய உதரத்தையுடைய மகாமாதாவாகிய
இவள்; துறக்கும் தன்மையள் அல்லள்- உன்னால்
கைவிடப்படும் தன்மை உடையவளல்லள்; இப்பெய்வளை
பிழைக்கின் பல்உயிர் இறக்கும்- இப்பெண் பிழை
செய்வாளானால் எல்லா உயிர்களும் இறந்துபடும்; நீ இவள்
திறத்து இகழ்ச்சி மறக்கும் தன்மையது- நீ இவள்
விஷயத்தில் அலட்சியம் காட்டுவது மறந்து விடத் தக்கது;
என்றனன் வரதர்க்கும் வரதன்- என்று கூறினான் வரந்தரும்
கடவுளர்க்கு வரம் தரும் சிவபெருமான்.

———–

சிவன் தயரதனுக்குக் கூறல்
10065.
பின்னும் நோக்கினான், பெருந் தகைப் புதல்வனைப் பிரிந்த
இன்னலால் உயிர் துறந்து, இருந் துறக்கத்துள் இருந்த
மன்னவற் சென்று கண்டு, ‘நின் மைந்தனைத் தெருட்டி,
முன்னை வன் துயர் நீக்குதி, மொய்ம்பினோய்!’என்றான் –114-

பின்னும் நோக்கினான்- (சிவன் மேலும் செய்ய வேண்டுவதை
மனத்தால் நினைத்துப் பார்த்து; பெருந்தகைப் புதல்வனைப்
பிரிந்த இன்னலால் உயிர் துறந்து இருந் துறக்கத்துள் இருந்த
மன்னவன் சென்று கண்டு- மேம்பாடுடைய மகனாகிய இராமனைப்
பிரிந்த துன்பத்தால் உயிர் போகப் பெற்று சுவர்க்க லோகத்தில் இருந்த தசரதனைச் சென்று பார்த்து;
‘மொய்ம்பினோய்! நின்மைந்தனைத் தெருட்டி முன்னை
வன்துயர் நீக்குதி என்றான்- வலிமை படைத்தவனே! உன்
மகனாகிய இராமனைத் தெளிவித்து அவன் மனத்தில் உள்ள
வலிய துன்பத்தைப் போக்குவாயாக என்று கூறினான்.

————–

ஆதியான் பணி அருள் பெற்ற அரசருக்கு அரசன்
காதல் மைந்தனைக் காணிய உவந்தது ஓர் கருத்தால்
பூதலத்திடைப் புக்கனன்; புகுதலும், பொரு இல்
வேத வேந்தனும் அவன் மலர்த் தாள்மிசை விழுந்தான்.–115-

ஆதியான் பணி அருள் பெற்ற அரசருக்கு அரசன்-
சிவபெருமான் கட்டளையாகிய அருளைப் பெற்ற சக்கரவர்த்தியாகிய
தயரதன்; காதல் மைந்தனைக் காணிய உவந்தது ஓர் கருத்தால்
– தன் அன்பு மகனைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்ட
ஓர் எண்ணத்தால்; பூதலத்திடைப் புக்கனன் – மண்ணுலகத்தில்
நுழைந்தான்; புகுதலும் – (அவ்வாறு) பூமிக்கு வருதலும்; பொருஇல்
வேத வேந்தனும் அவன் மலர்த் தாள்மிசை விழுந்தான் –
ஒப்பற்ற வேதத் தலைவனான இராமனும் அத்தயரதனது மலர்போலும்
திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான்.;

————–

10067.
வீழ்ந்த மைந்தனை எடுத்து, தன் விலங்கல் ஆகத்தின்
ஆழ்ந்து அழுந்திடத் தழுவி, தன் கண்ணின் நீர் ஆட்டி
வாழ்ந்த சிந்தையின் மனங்களும் களிப்புற, மன்னன்
போழ்ந்த துன்பங்கள் புறப்பட, நின்று இவை புகன்றான்.–116-

மன்னன்- தயரதன்; வீழ்ந்த மைந்தனை எடுத்து-
தன்னடியில் விழுந்து வணங்கிய மகனைத் தூக்கி; தன்
விலங்கல் ஆகத்தின் ஆழ்ந்து அழுந்திடத் தழுவி-
தன்னுடைய அகன்ற மார்பின்கண் நன்றாக அழுந்தும் படி
இறுக அணைத்து; தன் கண்ணின் நீர் ஆட்டி- தன்
கண்ணிலிருந்து வருகின்ற கண்ணநீரால் அவனை
முழுக்காட்டி; போழ்ந்த துன்பங்கள் புறப்பட – இதுகாறும் அவனைப் பிரிந்ததனால் ஏற்பற்ற துன்பங்கள்
வெளியேற; நின்று இவை புகன்றான்- எதிர் நின்று பின்வரும்
சொற்களைச் சொன்னான்.

———

‘அன்று கேகயன் மகள் கொண்ட வரம் எனும் அயில் வேல்
இன்றுகாறும் என் இதயத்தினிடை நின்றது, என்னைக்
கொன்று நீங்கலது, இப்பொழுது அகன்றது, உன் குலப் பூண்
மன்றல் ஆகம் ஆம் காந்த மா மணி இன்று வாங்க. –117-

கேகயன் மகள் அன்று கொண்ட வரம் எனும் அயில்வேல்
என் இதயத்தினிடை இன்றுகாறும் நின்றது- கேகயத்தரசன்
மகளாகிய கைகேயி (அயோத்தியில் உனது பட்டாபிஷேகத்துக்கு
நாள் குறித்த) அன்று என்னிடம் பெற்றுக் கொண்ட வரம் என்ற
கூரிய வேல் என நெஞ்சகத்து இன்று வரை தங்கியிருந்தது;
என்னைக் கொன்று நீங்கலது- என்னைக் கொலை செய்து
இறக்கடித்த பிறகும் நீங்கவில்லை; இன்று உன் குலப்பூண்
மன்றல் ஆகம் ஆம் காந்த மாமணி வாங்க இப்பொழுது
அகன்றது – இன்றைக்கு (உன்னை இறுகத் தழுவிய போது) உன்
சிறந்த ஆபரணங்களை அணிந்த மணம் பொருந்திய மார்பு
ஆகிய காந்தமாமணி இழுத்த படியால் இப்பொழுது (அவ்வேல்)
அகன்று போயிற்று.

———–

மைந்தரைப் பெற்று வான் உயர் தோற்றத்து மலர்ந்தார்,
சுந்தரப் பெருந் தோளினாய்! என் துணைத் தாளின்
பைந் துகள்களும் ஒக்கிலர் ஆம் எனப் படைத்தாய்;
உய்ந்தவர்க்கு அருந் துறக்கமும் புகழும் பெற்று உயர்ந்தேன்.–118-

சுந்தரப் பெருந்தோளினாய்- அழகிய பெரிய தோள்களை
உடைய இராமனே!; மைந்தரைப் பெற்று வானுயர் தோற்றத்து
மலர்ந்தார் என் துணைத்தாளின் பைந் துகள்களும் ஒக்கிலர்
ஆம் எனப் படைத்தாய்- நல்ல மக்களைப் பெற்று மிக உயர்ந்த
பெருமையுடன் விளங்கியவர்கள் கூட எனது இரண்டுகால்களில் உள்ள
சிறு தூசுக்கும் ஒப்பாகார் என்னும்படி நீ எனக்குச் சிறந்த பெருமையை
உண்டாக்கித் தந்தாய்; உய்ந்தவர்க்கு அருந் துறக்கமும் புகழும்
பெற்று உயர்ந்தேன் – (தீவினையிலிருந்து) பிழைத்தவர்களுக்குப்
பெறுதற்கரிய மேல் உலகமும், புகழும் (மறுமைக்கும் இம்மைக்குமாகப்)
பெற்று (உன்னால் இருமையிலும்) உயர்ந்தேன்.

——–

‘பண்டு நான் தொழும் தேவரும் முனிவரும் பாராய்,
கண்டு கண்டு எனைக் கைத்தலம் குவிக்கின்றகாட்சி;
புண்டரீகத்துப் புராதனன்தன்னொடும் பொருந்தி
அண்டமூலத்து ஓர் ஆசனத்து இருத்தினை, அழக!’ –119-

அழக- அழகனே!; நான் பண்டு தொழும் தேவரும் முனிவரும்-
நான் முன்பு வணங்குகின்ற தேவர்களும் முனிவர்களும்; எனைக்
கண்டு கொண்டு கைத்தலம் குவிக்கின்ற காட்சி பாராய்-
என்னைத் திரும்பத் திரும்பப் பார்த்து கைகளைக் குவித்து
வணங்குகிற காட்சியைப் பார்ப்பாயாக; புண்டரீகத்துப் புராதனன்
தன்னொடும் பொருந்தி- தாமரைத்தவிசில் உள்ள பழயவனாகிய
பிரமனோடும் கூடிச் சமானமாக; அண்டமூலத்து ஓர் ஆசனத்து
இருத்தினை- அண்டகோளத்தின் முகப்பின்கண் ஒப்பற்ற பீடத்தில்
என்ன இருக்கச் செய்தாய்.

————–

சீதையைத் தயரதன் தேற்றல்
10071.
என்று, மைந்தனை எடுத்து எடுத்து, இறுகுறத் தழுவி,
குன்று போன்று உள தோளினான், சீதையைக் குறுக,
தன் துணைக் கழல் வணங்கலும், கருணையால் தழுவி,
நின்று, மற்று இவை நிகழ்த்தினான், நிகழ்த்த அரும் புகழோன்;–120-

குன்றுபோன்று உள தோளினான்- மலைபோன்றுள்ள தோள்களை
உடையவனாகிய தயரதன்;என்று- என்று கூறி; மைந்தனை எடுத்து
இறுகுறத் தழுவி- மகனைத் தூக்கி நன்றாகத் தழுவிப் பின்னர்;
சீதையைக் குறுக- சீதை இருந்த இடத்தை அணுக; தன் துணைக்
கழல் வணங்கலும்- தனது இரண்டு அடிகளைப் பிராட்டி வணங்குதலும்;
கருணையால் தழுவி- அன்பு கலந்த கண்ணோட்டத்தால் அவளை
அருளி; நிகழ்த்த அரும் புகழோன் – கூறுதற்கரிய நின்ற புகழை
உடைய தயரதன்; மற்று இவை நிகழ்த்தினான்- பின்வரும்
சொற்களைச் சொன்னான்.

————

”நங்கை! மற்று நின் கற்பினை உலகுக்கு நாட்ட,
அங்கி புக்கிடு” என்று உணர்த்திய அது மனத்து அடையேல்;
சங்கை உற்றவர் பெறுவதும் உண்டு; அது சரதம்;
கங்கை நாடுடைக் கணவனை முனிவுறக் கருதேல். –121-

நங்கை! – சீதையே!; நின் கற்பினை உலகுக்கு நாட்ட
அங்கிபுக்கிடு என்று உணர்த்திய அது மனத்து அடையேல்
– உனது கற்பின் சிறப்பை உலகின் கண் நிலை நிறுத்த வேண்டி
‘நெருப்பின் கண் புகும்படியாக’ இராமன் கூறிய அதனை மனத்துக்
கொள்ளாதே; சங்கை உற்றவர் பெறுவதும் உண்டு, அது சரதம்-
உலகில் சந்தேகம் உற்றவர்கள் இவ்வாறு நெருப்பின் மூலமாகவும்
பிறவற்றின் மூலமாகவும் மெய்ப்பிக்கச் செய்து அதனால் ஐயம்
நீங்குதல் கண்கூடு; உலகில் இயல்பாக நடைபெறுவதே; கங்கை
நாடு உடைக் கணவனை முனிவுறக் கருதேல் – (அவ்வாறு
சாதிக்கச் செய்ததுபற்றி) கோசல நாட்டிற்கு அரசனான உன்
கணவனை வெறுக்கக் கருதாதே.

———

”’பொன்னைத் தீயிடைப் பெய்தல் அப் பொன்னுடைத் தூய்மை –
தன்னைக் காட்டுதற்கு” என்பது மனக் கொளல் தகுதி;
உன்னைக் காட்டினன், ”கற்பினுக்கு அரசி” என்று, ”உலகில்,
பின்னைக் காட்டுவது அரியது” என்று எண்ணி, இப் பெரியோன்.–122-

”பொன்னைத் தீயிடைப் பெய்தல் அப்பொன்னுடைத் தூய்மை
தன்னைக் காட்டுதற்கு” என்பது மனக்கொளல் தகுதி-
பொன்னை நெருப்பில் போடுவது பொன்னைச் சொக்கத் தங்கம்
என உலகிற்குக் காண்பிப்பதற்காகத்தான் என்று மனத்தின்
கண் நினைத்தலே தகுதி (அதுபோல); இப்பெரியோன்-
குணங்களால் உயர்ந்த இவன்; உலகில் பின்னைக் காட்டுதற்கு
அரியது என்று எண்ணி உன்னை ‘கற்பினுக்கு அரசி’ என்று
காட்டினன் – உலகத்தில் (இச்சமயம் தவறினால்) பிறகு தெளிவித்தல்
இயலாது என்று கருதி உன்னை ‘கற்பிற் சிறந்தவள்’ என்று
(இந் நிகழ்ச்சியால்) தெளிவித்தான்.

——–

‘பெண் பிறந்தவர், அருந்ததியே முதல் பெருமைப்
பண்பு இறந்தவர்க்கு அருங் கலம் ஆகிய பாவாய்!
மண் பிறந்தகம் உனக்கு; நீ வான்நின்றும் வந்தாய்;
எண் பிறந்த நின் குணங்களுக்கு இனி இழுக்கு இலையால்’-123-

பெண் பிறந்தவர் அருந்ததியே முதல் பெருமைப் பண்பு
இறந்தவர்க்கு அருங்கலம் ஆகிய பாவாய்! – பெண்ணாய்ப்
பிறந்தவர்களாகிய அருந்ததி முதலாகிய பெருமையின் எல்லை
கடந்தவர்களுக்கும் அணிகலம் போல உள்ள பெண்ணே!உனக்கு
பிறந்தகம் மண் – உனக்குப் பிறப்பிடம் இம் மண்ணாகும்;
(ஆனால்) நீ வான் நின்றும் வந்தாய்- நீ வீட்டுலகத்தின்
நின்றும் இங்கு வந்து அவதரித்தாய்; எண் பிறந்த நின்
குணங்களுக்கு இழுக்கு இனி இலையால்- உலகால் நன்கு
மதிக்கற்பாடு உடைய நின் சிறந்த குணங்களுக்கு யாதொரு
குறையும் இனி வராது.

———

தயரதன் இலக்குவனைப் பாராட்டல்
10075.
என்னச் சொல்லி, அவ் ஏந்திழை திரு மனத்து யாதும்
உன்னச் செய்வது ஓர் முனிவு இன்மை மனம் கொளா உவந்தான்;
பின்னைச் செம்மல் அவ் இளவலை, உள் அன்பு பிணிப்ப,
தன்னைத் தான் எனத் தழுவினன், கண்கள் நீர் ததும்ப.–124-

செம்மல்- தயரதன்; என்னச்சொல்லி- என்று இவ்வாறு
உரைத்து; அவ் ஏந்திழை திருமனத்து யாதும் உன்னச் செய்வது
ஓர் முனிவு இன்மை மனம் கொளா உவந்தான்- அந்தச் சீதை
தன் நல்ல மனத்தில் சிறிதும் கருதுகின்ற வெறுப்பு இன்மை
நிகழ்ந்தபடியைத் தன் மனத்தில் அறிந்து மகிழ்ச்சி
அடைந்தான்; பின்னை- பிறகு; அவ் இளவலை- அந்த இளைய
பெருமாளாகிய இலக்குவனை; உள்அன்பு பிணிப்ப- மனத்தகத்துச்
சிறந்த அன்பு கட்டி இழுக்க; தன்னைத்தான் என கண்கள் நீர்
ததும்ப தழுவினன் – தானே தன்னைத் தழுவிக்கொள்வது போல
கண்களில் நீர் பெருகத் தழுவிக்கொண்டான்.

———-

கண்ணின் நீர்ப் பெருந் தாரை மற்று அவன் சடைக் கற்றை
மண்ணின் நீத்தம் ஒத்து இழிதர, தழீஇ நின்று, ‘மைந்த!
எண் இல் நீக்க அரும் பிறவியும் என் நெஞ்சின் இறந்த
புண்ணும் நீக்கினை, நுமையனைத் தொடர்ந்து உடன் போந்தாய்.–125-

கண்ணின் நீர்ப்பெருந்தாரை- (தயரதன்) கண்களிலிருந்து
வழிகின்ற பெரிய நீர் ஒழுக்கானது; மற்றுஅவன் சடைக்கற்றை
மண்ணின் நீத்தம் ஒத்து இழுதர- அந்த இலக்குவனது
சடாபாரமாகிய மண்ணிலே வெள்ளம்போலப் பெருக்கெடுத்து
இறங்கி வீழ; மைந்த! – இலக்குவனே!; நுமையனைத் தொடர்ந்து
உடன் போந்தாய்- உன் தமையனான இராமனைப் பின் பற்றி
அவனுடனே காடு சென்றாய்; (அதனால்) எண் இல் நீக்க
அரும்பிறவியும் என் நெஞ்சின் இறந்த புண்ணும் நீக்கினை-
கணக்கில்லாத நீக்குதற்கரிய உனது பிறவி நோயையும் என்
மனத்தில் மிக்கிருந்த புண்ணையும் போக்கிவிட்டாய்.

—————

10077.
‘புரந்தரன் பெரும் பகைஞனைப் போர் வென்ற உன்தன்
பரந்து உயர்ந்த தோள் ஆற்றலே தேவரும் பலரும்
நிரந்தரம் புகல்கின்றது; நீ இந்த உலகின்
அரந்தை வெம் பகை துடைத்து, அறம் நிறுத்தினை – ஐய!’–126-

ஐய! – இலக்குவனே!; புரந்தரன் பெரும் பகைவனைப் போர்
வென்ற உன்தன் பரந்து உயர்ந்த தோள் ஆற்றலே தேவரும்
பலரும் நிரந்தரம் புகில்கின்றது- இந்திரன் பகைவனாய
இந்திரசித்துவைப் போரின்கண் வென்ற உன்னுடைய விசாலத்து
உயர்ந்துள்ள தோள்வலிமைதான் தேவரும் பிறரும் நாடோறும்
சொல்லுவதாகும்; நீ இந்த உலகின் அரந்தை வெம்பகை துடைத்து
அறம் நிறுத்தினை- நீ இந்த உலகத்தின் துன்பமான கொடிய
அரக்கர்களாகிய பகையை அழித்து அறத்தை நிலைபெறும்படிச் செய்தாய்

——–

தயரதன் வரம் கேட்கக்கூற இராமன் வரம் கேட்டல்
10078.
‘என்று, பின்னரும், இராமனை, ‘யான் உனக்கு ஈவது
ஒன்று கூறுதி, உயர் குணத்தோய்!’ என, ‘உனை யான்
சென்று வானிடைக் கண்டு, இடர் தீர்வென் என்று இருந்தேன்;
இன்று காணப் பெற்றேன்; இனிப் பெறுவது என்?’ என்றான்.–127-

என்று- இலக்குவனை இவ்வாறு பாராட்டிவிட்டு; பின்னரும்-
பிறரும்; இராமனை- இராமனைப் பார்த்து; உயர்குணத்தோய்-
உத்தம குணங்களை உடையவனே! ‘யான் உனக்கு ஈவது ஒன்று
கூறுதி’ என- நான் உனக்குக் கொடுக்க வேண்டுவது ஒன்றைக்
கூறுக என்று கேட்ப (அதற்கு இராமன்); யான் உனை வானிடைச்
சென்று கண்டு இடர் தீர்வென் என்று இருந்தேன் இன்று
காணப் பெற்றேன் இனிப் பெறுவது என்? என்றான்
– நான் உன்னை விண்ணுலகத்திடத்தில் சென்று கண்டு துன்பம்
நீங்குவேன் என்று நினைத்திருந்தேன்; (ஆனால்) இன்று இங்கேயே
காணும் பேறு அடைந்தேன்; புதிதாக இனிப் பெறுவதற்கு என்ன
இருக்கிறது, என்று கூறினான்.

———————

10079.
‘ஆயினும், உனக்கு அமைந்தது ஒன்று உரை’ என, அழகன்,
தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும்,
தாயும் தம்பியும் ஆம் வரம் தருக!’ எனத் தாழ்ந்தான்;
வாய் திறந்து எழுந்து ஆர்த்தன, உயிர் எலாம், வழுத்தி.-128-

(தயரதன்,), ஆயினும் – ஆனாலும்; உனக்கு அமைந்தது ஒன்று
உரை என- உனக்குப் பொருந்திய தொன்றினைக் கேட்க என்று
சொல்ல; அழகன்- இராமன்; நீ தீயள் என்று துறந்த என்
தெய்வமும் மகனும் – உன்னால் தீயவள் என்று துறக்கப் பட்ட என்
தெய்வமாகிய கைகேயியும், பரதனும்; ‘தாயும் தம்பியும் ஆம்
வரம் தருக’ என தாழ்ந்தான் – எனக்குத் தாயும் தம்பியும்
ஆகும்படியான வரத்தைத் தருக எனக் கேட்டு வணங்கினான்; (அது
கேட்டு அவன் அருள் திறம் நினைந்து) உயிர் எலாம் வழுத்தி
– உயிர்கள் எல்லாம் அவனை வணங்கி; வாய்திறந்து எழுந்து
ஆர்த்தன- எழுந்து வாய்திறந்து மகிழ்ச்சிப் பேரொலி செய்தன.

—————

‘வரத கேள்!’ எனத் தயரதன் உரை செய்வான்; ‘மறு இல்
பரதன் அன்னது பெறுக! தான் முடியினைப் பறித்து, இவ்
விரத வேடம் மற்று உதவிய பாவிமேல் விளிவு
சரதம் நீங்கலதாம்’ என்றான், தழீஇய கை தளர.–129-

வரத – இராமனே!; கேள் என- கேட்பாயாக என்று; தயரதன்
உரை செய்வான்- தயரதசக்கரவர்த்தி அவனுக்குப் பதில்கூறுவான்; மறுஇல் பரதன் அன்னது பெறுக- குற்றமற்ற
பரதன் (நீ கேட்ட வண்ணம்) என் மகனாகி உனக்குத்
தம்பியாம் உரிமை பெறுக; தான் முடியினைப் பறித்து- உனக்கு
அளிக்க இருந்த முடியினைத் தானே கூடாது என்று பிடுங்கி;
இவ்விரத வேடம் மற்று உதவிய பாவிமேல்- இம் மரவுரிக்
கோலத்தை வேறாக உனக்குத் தந்த பாவியாகிய கைகேயிபால்;
விளிவு சரதம் நீங்கலதாம் என்றான் தழீஇய கை தளர-
கோபமானது உறுதியாக என்னைவிட்டு நீங்கவில்லை என்று
இராமனைத் தழுவிக் கொண்டிருந்தகைகள் தழுவுதல் விட்டுத்
தளரக் கூறினான்.

————

கைகேயியின் பால் தயரதன் கோபம் தணிந்து விண் ஏகுதல்
10081.
‘ஊன் பிழைக்கிலா உயிர் நெடிது அளிக்கும் நீள் அரசை
வான் பிழைக்கு இது முதல் எனாது, ஆள்வுற மதித்து,
யான் பிழைத்தது அல்லால், என்னை ஈன்ற எம் பிராட்டி-
தான் பிழைத்தது உண்டோ?’ என்றான், அவன் சலம் தவிர்ந்தான்.–130-

(இராமன்) ஊன் பிழைக்கிலா உயிர் நெடிது அளிக்கும் நீள்
அரசை- உடலோடு கூடிய சீவாத்மாக்களைச் சிறிதும் தவறு
வராமல் பாதுகாக்கும் பெரிய அரசுரிமையை; வான் பிழைக்கு இது
முதல் எனாது- பெருங்குற்றத்திற்கெல்லாம் இது அடிப்படையான
காரணம் ஆகும் என்று கருதாமல்; ஆள்வுற மதித்து- ஏற்று ஆளக்
கருதி; யான் பிழைத்தது அல்லால்- நான் தவறு செய்தேனே
அல்லாமல்; என்னை ஈன்ற எம்பிராட்டி- என்னைப் பெற்ற
மாதாவாகிய கைகேயி அன்னையான; தான் பிழைத்தது உண்டோ?
என்றான் – அவள் தவறு செய்தது உண்டோ என்று கேட்டான்;
அவன் சலம் தவிர்ந்தான்- தயரதன் இராமன்

————-

எவ் வரங்களும் கடந்தவன் அப் பொருள் இசைப்ப,
‘தெவ் வரம்பு அறு கானிடைச் செலுத்தினாட்கு ஈந்த
அவ் வரங்களும் இரண்டு; அவை ஆற்றினார்க்கு ஈந்த
இவ் வரங்களும் இரண்டு’ என்றார், தேவரும் இரங்கி. –131-

எவ் வரங்களும் கடந்தவன் – யாரிடமும் வரம் வேண்டுமாறு
இல்லாது, எல்லார்க்கும் வரம் ஈபவன் ஆதலின்) எல்லா வரங்களுக்கும் அப்பாற்பட்டவனாகிய இராமன்; அப்பொருள் இசைப்ப- அவ்வாறு
கூற; ‘தெவ்வரம்பு அறுகானிடைச் செலுத்தினாட்கு ஈந்த
அவ்வரங்களும் இரண்டு- வரம்பற்ற பகைவர்களை உடைய
காட்டுக்கு இராமனை அனுப்பிய கைகேயிக்கு அளித்த அந்த
வரங்களும் இரண்டு; அவை ஆற்றினாற்கு ஈந்த இவ்வரங்களும்
இரண்டு’- அவ்வரங்களின்படி நடந்து செய்து முடித்தவனாகிய
இராமனுக்குத் தந்த இந்த வரங்களும் இரண்டு; என்றார்- என்று
கூறினர்;தேவரும் இரங்கி- தேவர்களும் மனம் உருகி.

————-

வரம் இரண்டு அளித்து, அழகனை, இளவலை,மலர்மேல்
விரவு பொன்னினை, மண்ணிடை நிறுத்தி,விண்ணிடையே
உரவு மானம்மீது ஏகினன் – உம்பரும் உலகும்
பரவும் மெய்யினுக்கு உயிர் அளித்து, உறு புகழ் படைத்தோன்.–132-

உம்பரும் உலகும் பரவும் மெய்யினுக்கு உயிர் அளித்து
உறுபுகழ் படைத்தோன் – தேவர்களும் உலகமும் பரவுகின்ற
சத்தியத்துக்காகத் தன்னுயிரைத் தந்து பெரும்புகழ் படைத்த
தயரதன்; இரண்டு வரம் அளித்து- இராமனுக்கு இரண்டு வரம்
தந்து; அழகனை இளவலை, மலர்மேல் விரவு பொன்னினை
மண்ணிடை நிறுத்தி, உரவு மானம் மீது விண்ணிடையே
ஏகினன்- இராமனை, இலக்குவனை, தாமரை மேல் வீற்றிருக்கும்
திருமகளாகிய சீதையைப் பூமியின்கண் நிற்கும்படிச்செய்து, வலிய
விமானம்மேல் ஏறி மேல் உலகத்திடத்துச் சென்று சேர்ந்தான்.

———

இராமன் தேவர்களிடம் வரம்வேண்டல்
10084.
கோட்டு வார் சிலைக் குரிசிலை அமரர்தம் குழாங்கள்
மீட்டும் நோக்குறா, ”வீர! நீ வேண்டுவ வரங்கள்
கேட்டியால், என, ‘அரக்கர்கள் கிளர் பெருஞ் செருவில்
வீட்ட, மாண்டுள குரங்கு எலாம் எழுக!’ என விளம்பி.–133-

கோட்டு வார் சிலைக்குரிசிலை அமரர்தம் குழாங்கள்
மீட்டும் நோக்குறா- வளைந்த நீண்ட வில்லேந்திய
இராமனைத் தேவர்கூட்டங்கள் திரும்பவும் பார்த்து; வீர! –
வீரனே!; நீ வேண்டுவ வரங்கள் கேட்டியால்’ என- நீ
விரும்பும் வரங்களைக் கேட்பாயாக என்று கூற; (இராமன்)
‘அரக்கர்கள் கிளர் பெருஞ் செருவில் வீட்ட மாண்டுள குரங்கு
எலாம் எழுக’ என விளம்பி- அரக்கர்கள் மிக்கு எழுந்த
போரிலே கொல்ல இறந்து போன குரங்குகள் எல்லாம் மீண்டும்
உயிர் பெற்று எழுக எனக் கேட்டு;

———

பின்னும் ஓர் வரம், ‘ வானரப் பெருங் கடல் பெயர்ந்து,
மன்னு பல் வனம், மால் வரைக் குலங்கள், மற்று இன்ன
துன் இடங்கள், காய் கனி கிழங்கோடு தேன் துற்ற,
இன் உண் நீர் உளவாக! என இயம்பிடுக’ என்றான். –134-

பின்னும் ஓர் வரம்- மீண்டும் ஒரு வரம்; வானரப் பெருங்
கடல் பெயர்த்து மன்னு- வானர சேனையானது இடம் மாறிச்
சென்று நிலைக்கின்ற; பல்வனம், மால் வரைக் குலங்கள்,மற்று
இன்ன துன் இடங்கள் – பல காடுகள், பெரிய மலைக் கூட்டங்கள்,
மற்றும் இதுபோன்ற வானரம் வாழ் இடங்கள் எல்லாம்; காய், கனி,
கிழங்கோடு தேன் துற்ற இன் உண் நீர் உளவாக’- காயும்
பழமும் கிழங்குகளும் நிறைந்து, தேன்களும் நெருங்க, உண்ணுதற்கு
இனிய குடிநீரும் நிரம்பப் பெறுக; ‘என இயம்பிடுக’- என்று வரம்
தருக; என்றான்- என்று கேட்டான்.

———-

வரம் தரும் முதல், மழுவலான், முனிவரர், வானோர்
புரந்தராதி, மற்று ஏனையோர், தனித் தனி புகழ்ந்து ஆங்கு,
‘அரந்தை வெம் பிறப்பு அறுக்கும் நாயக! நினது அருளால்
குரங்கு இனம் பெறுக!’ என்றனர், உள்ளமும் குளிர்ப்பார்.–135-

வரம் தரும் முதல்- வரம் கொடுக்கும் தன்மையனாய பிரமன்;
மழுவலான் – சிவன்; முனிவரர், வானோர் – முனிவர்கள்,
தேவர்கள்; புரந்தராதி மற்று ஏனையோர் – இந்திரன் முதலாக
மற்றுள்ளவர்கள்; தனித்தனி ஆங்கு புகழ்ந்து- தனித்தனியாக
இராமனை அவ்விடத்தே பாராட்டி; அரந்தை வெம்பிறப்பு
அறுக்கும் நாயக! – துன்பம் தரும் பிறவியை வேரோடு களையும்
பெருமானே!; ‘குரங்கு இனம் – குரங்குக்கூட்டம்; நினது அருளால்
– உன்னுடைய பரமகருணையால்; பெறுக’ என்றனர் உள்ளமும்
குளிர்ப்பார்- நீ கேட்ட அனைத்தையும் பெறுவதாக என்று
மனம் குளிர்ந்து கூறினார்கள்.

———-

முந்தை நாள் முதல் கடை முறை அளவையும் முடிந்த
அந்த வானரம் அடங்கலும் எழுந்து, உடன் ஆர்த்து,
சிந்தையோடு கண் களிப்புறச் செரு எலாம் நினையா,
வந்து தாமரைக் கண்ணனை வணங்கின, மகிழ்ந்து. –136-

முந்தை நாள் முதல் கடை முறை அளவையும் முடிந்த- போர்
தொடங்கிய முதல் நாள் முதலாக இறுதி நாள் வரையும் இறந்துபோன;
அந்த வானரம் அடங்கலும் எழுந்து- அந்த குரங்குகள் எல்லாம்
உயிர் பெற்று எழுந்து; உடன் ஆர்த்து- சேர்ந்து பேரொலி செய்து;
சிந்தை யோடு கண்களிப்புற- மனமும் கண்ணும் மகிழ்ச்சி அடைய;
செருஎலாம் நினையா- நடந்த போர்களை எல்லாம் நினைத்து;
மகிழ்ந்து வந்து தாமரைக் கண்ணனை வணங்கின- உவகையோடு
வந்து இராமபிரானைக் கும்பிட்டன.

————-

கும்பகன்னனோடு இந்திரசித்து, வெங் குலப் போர்
வெம்பு வெஞ் சினத்து இராவணன், முதலிய வீரர்
அம்பின் மாண்டுள வானரம் அடங்க வந்து ஆர்ப்ப,
உம்பர் யாவரும் இராமனைப் பார்த்து, இவை உரைத்தார்:–137-

கும்பகன்னனோடு இந்திர சித்து-; வெங்குலப் போர் வெம்பு
வெஞ்சினத்து இராவணன் முதலிய வீரர் – கொடிய உயர்ந்த
போரில் சீறுகின்ற கொடுஞ்சினத்தை உடைய இராவணன் முதலிய
வீரர்களும்; அம்பின் மாண்டுள வானரம் அடங்க வந்து ஆர்ப்ப
– அம்பினால் இறந்து போன குரங்குகள் ஒன்று சேர வந்து
ஆரவாரம் செய்ய; உம்பர் யாவரும்- தேவர்கள் எல்லாம்;
இராமனைப் பார்த்து-; இவை உரைத்தார்- பின்
வருவனவற்றைச் சொன்னார்கள்.

———-

தேவர்கள் இராமனுக்கு உரைத்தல்
10089.
‘இடை உவாவினில் சுவேலம் வந்து இறுத்து, எயில் இலங்கைப்
புடை அவாவுறச் சேனையை வளைப்பு உறப் போக்கி,
படை அவாவுறும் அரக்கர்தம் குலம் முற்றும் படுத்து,
கடை உவாவினில் இராவணன் தன்னையும் கட்டு.–138-

இடை உவாவினில் சுவேலம் வந்து இறுத்து- தேய்பிறைப்
பக்கத்து அட்டமித்திதியில் இலங்கையுள்ள இடமான சுவேலமலையில்
வந்து தங்கி; எயில் இலங்கைப் புடை அவாவுறச் சேனையை
வளைப்புறப் போக்கி- மதில் சூழ்ந்த இலங்கையைச் சுற்றிப
பக்கத்தில் விரும்பி வளைத்துக் கொள்ளும்படி சேனையைச்
செலுத்தி; படைஅவாவுறும் அரக்கர்தம் குலம் முற்றும்
படுத்து- படையின் கண் எப்பொழுதும் ஆசைப்படுகின்ற
அரக்கர்கள் குலம் முழுவதையும் கொன்று; கடை உவாவினில்-
இறுதியான அமாவாசை நாளில்; இராவணன் தன்னையும் கட்டு-
இராவணனையும் அழித்து.

————

”வஞ்சர் இல்லை இவ் அண்டத்தின்” எனும்படி மடித்த
கஞ்ச நாள் மலர்க் கையினாய்! அன்னை சொல் கடவா,
அஞ்சொடு அஞ்சு நான்கு என்று எணும் ஆண்டு போய் முடிந்த;
பஞ்சமிப் பெயர் படைத்துள திதி இன்று பயந்த. –139-

வஞ்சர் இல்லை இவ் அண்டத்தின் எனும்படி மடித்த கஞ்ச
நாள் மலர்க் கையினாய்- இவ்வுலகத்தில் வஞ்சகர்களே
இல்லை என்னும்படி அழித்தொழித்த தாமரையின் அன்றலர்ந்த
மலர்போலும் கைகளை உடைய இராகவனே!; அன்னை சொல் கடவா-
கைகேயியாகிய தாய் சொன்ன சொல்லை மீறாத; அஞ்சொடு அஞ்சு
நான்கு எனும் ஆண்டு போய் முடிந்த- பதினான்கு என்கின்ற
ஆண்டுகள் சென்று கழிந்து விட்டன; இன்று பஞ்சமிப் பெயர்
படைத்துள திதி பயந்த- இன்றைய நாள் பஞ்சமி என்னும்
பெயர் பெற்றுள்ள திதியைப் பெற்றுள்ளது.

—————-

‘இன்று சென்று, நீ பரதனை எய்திலை என்னின்
பொன்றுமால் அவன் எரியிடை; அன்னது போக்க,
வென்றி வீர! நீ போதியால்’ என்பது விளம்பா,
நின்ற தேவர்கள் நீங்கினார்; இராகவன் நினைந்தான். –140-

‘வென்றிவீர! – வெற்றியை உடைய வீரனே!; நீ இன்று சென்று
பரதனை எய்திலை என்னின் அவன் எரியிடை பொன்றுமால்- நீ
இன்றே போய் அயோத்தியில் பரதனை அடையவில்லை ஆனால் அப்பரதன் நெருப்பில் வீழ்ந்து
உயிர்துறப்பான்; நீ போதியால்’ – நீ (விரைந்து அயோத்திக்குப்
போவாயாக; என்பது விளம்பா- என்பதைச் சொல்லி; நின்ற
தேவர்கள் நீங்கினார் – (வரம் கொடுத்து ஆண்டு) நின்ற
தேவர்கள் விலகிச் சென்றார்கள்; இராகவன் – ; நினைந்தான்
– புறப்பட எண்ணினான்.

———

வீடணன் புட்பக விமானம் கொணர்தல்

‘ஆண்டு பத்தொடு நாலும் இன்றோடு அறும் அயின்,
மாண்டதாம் இனி என் குலம், பரதனே மாயின்;
ஈண்டுப் போக ஓர் ஊர்தி உண்டோ ?’ என, ‘இன்றே
தூண்டு மானம் உண்டு’ என்று, அடல் வீடணன் தொழுதான். 141-

(இராமன்) ‘ஆண்டு பத்தொடு நாலும் இன்றோடு அறும் ஆயின்-
பதினான்கு ஆண்டுகளும் இன்றோடு முடிந்து போகுமானால்;பரதனே
மாயின் – பரதன் இறந்து படுவானாயின்; இனி என் குலம்
மாண்டதாம்- இனிமேல் என் சூரிய குலம் முடிந்து போயிற்று
என்றே ஆகும்; ஈண்டுப் போக ஓர் ஊர்தி உண்டோ?’ என-
விரைந்து அயோத்திக்குச் செல்ல ஓர் வாகனம் இருக்கிறதா? என்று
கேட்க; அடல் வீடணன்- வலிய வீடணன்; ‘இன்றே தூண்டு
மானம் உண்டு’ என்று தொழுதான்’- இன்றைக்கே அயோத்தி
சென்று சேரச் செலுத்துகின்ற விமானம் உள்ளது என்று சொல்லி
வணங்கினான்.

———–

வாங்கினான் இரு நிதியொடு தனதனில், வள்ளால்!
ஓங்குமால், வெள்ளம் ஏழு பஃது ஏறினும், ஒல்காது;
ஈங்கு உளார் எலாம் இவருவது; இவரின் நீ இனிது
பூங் குலா நகர் புகுதி, இஞ் ஞான்று’ எனப் புகன்றான்.–142-

(மீண்டும் வீடணன்)’ வள்ளல்! – இராமனே!; தனதனில் இரு
நிதியோடு வாங்கினான் – குபேரனிடத்திருந்து (இராவணன்)
பெருஞ்செல்வத்தோடு (இவ்விமானத்தைக்) கைப்பற்றிக்
கொண்டான்; ஓங்குமால்- (இவ்விமானம்) உயர்ந்து செல்ல
வல்லது;வெள்ளம் ஏழுபஃது ஏறினும், ஒல்காது- எழுபது வெள்ளம்
குரங்குச் சேனைகளும் ஏறினாலும் தளராது; ஈங்கு உளார் எலாம்
இவருவது- இங்கே உள்ளவர்கள் அனைவரும் ஏறிச் செல்லக்
கூடியது; இவரின்- இதில் ஏறினாய் ஆனால்; நீ இஞ்ஞான்று
பூங் குலாநகர் இனிது புகுதி’- நீ இன்றைக்கே பொலிவு
நிறைந்த அயோத்தி நகர்க்கு இனிமையாகப் போய்ச் சேர்வாய்;
எனப் புகன்றான்- என்று சொன்னான்.

————

‘இயக்கர் வேந்தனுக்கு அரு மறைக் கிழவன் அன்று ஈந்த,
துயக்கு இலாதவர் மனம் எனத் தூயது, சுரர்கள்,
வியக்க வான் செலும் புட்பக விமானம் உண்டு’ என்றே
மயக்கு இலான் சொல, ‘கொணருதி வல்லையின்’ என்றான்.–143-

மயக்கு இலான்- மனமயக்கமாகிய அஞ்ஞானம் அற்ற மகா
ஞானியாகிய வீடணன்; ‘இயக்கர் வேந்தனுக்கு – யக்ஷர்களின்
அரசனான குபேரனுக்கு; அருமறைக் கிழவன் – வேதத்தலைவனாகிய
பிரமன்; அன்று ஈந்த – முன்னாளில் கொடுத்ததும்; துயக்கு
இலாதவர் மனம் எனத் தூயது- குற்றமற்ற ஞானியர் மனம் போலத்
தூய்மையானதும்; சுரர்கள் வியக்க வான் செலும் – தேவர்களும்
அதிசயிக்கும்படி வானவீதியில் செல்வதும் ஆகிய; புட்பக விமானம்
உண்டு என்றே சொல-; (அதுகேட்ட இராமன்) ‘வல்லையின்
கொணருதி’- விரைவாகக் கொண்டு வருக; என்றான் –

————

அண்ட கோடிகள் அனந்தம் ஒத்து, ஆயிரம் அருக்கர்
விண்டது ஆம் என விசும்பிடைத் திசை எலாம் விளங்க,
கண்டை ஆயிர கோடிகள் மழை எனக் கலிப்ப,
கொண்டு அணைந்தனன் நொடியினின், அரக்கர் தம் கோமான், –144-

அனந்தம் அண்ட கோடிகள் ஒத்து- கணக்கற்ற உலக
உருண்டைகள் கோடிக்கணக்காகச் சேர்ந்தாற் போலப் பெரியதாய்;
ஆயிரம் அருக்கர் விண்டது ஆம் என விசும்பிடைத் திசை எலாம் விளங்க – ஆயிரம் சூரியர்கள் ஒருசேர வெளிப்பட்டுப்
பிரகாசித்தாற் போலத் தன் பேரொளியால் ஆகாயத்திடத்துத் திக்குகள்
எல்லாம் விளக்கமுறவும்; ஆயிரகோடி கண்டைகள் மழை எனக்
கலிப்ப- (தன்னிடம் கட்டிய) ஆயிரகோடிக் கணக்கான பெரிய மணிகள்
மழை போல ஒலிக்கவும் (புட்பக விமானத்தை) அரக்கர்தம்
கோமான் – அரக்கர்க்கு அரசனான வீடணன்; நொடியினின்
கொண்டு அணைந்தனன் – ஒரு மாத்திரைப் பொழுதில் (இராமன்
முன்) கொண்டு வந்து சேர்த்தான்.

————–

இராமன் புட்பக விமானத்தில் ஏற, தேவர்கள் மலர்மாரி பொழிந்து வாழ்த்துதல்

‘அனைய புட்பக விமானம் வந்து அவனியை அணுக,
இனிய சிந்தனை இராகவன் உவகையோடு, ‘இனி நம்
வினையம் முற்றியது’ என்று கொண்டு ஏறினன்; விண்ணோர்
புனை மலர் சொரிந்து ஆர்த்தனர், ஆசிகள் புகன்றே. -145-

அனைய புட்பக விமானம் வந்து அவனியை அணுக- அத்தகைய
புட்பக விமானமானது வந்து தரையிறங்க; இனிய சிந்தனை இராகவன்
– நற்சிந்தனைகளை உடைய இராமன்; உவகையோடு – மகிழ்ச்சியோடு;
‘இனி நம் வினையம் முற்றியது’ என்று கொண்டு ஏறினன்
– இனி (பரதனைக் காத்தலாகிய) நம் செயல் நிறைவேறியது என்று
மனத்திற் கொண்டு ஏறினான்; விண்ணோர் ஆசிகள் புகன்று
புனைமலர் சொரிந்து ஆரவாரித்தனர் – தேவர்கள் வாழ்த்துரைத்து
சூடும் மலர்களைத் தூவி மகிழ்வொலி செய்தனர்.

————–

சீதையும் இலக்குவனும் விமானத்தில் ஏறுதல்

வணங்கு நுண் இடைத் திரிசடை வணங்க, வான் கற்பிற்கு
இணங்கர் இன்மையாள் நோக்கி, ‘ஓர் இடர் இன்றி இலங்கைக்கு
அணங்குதான் என இருத்தி’ என்று, ஐயன்மாட்டு அணைந்தாள்;
மணம் கொள் வேல் இளங் கோளரி மானம் மீப் படர்ந்தான்.–146-

வான்கற்பிற்கு இணங்கர் இன்மையாள் – சிறந்த கற்பிற்குத்
தன்னோடு ஒப்பவர்கள் இல்லாது உயர்ந்தாளாகிய சீதை; வணங்கு
நுண் இடைத் திரிசடை வணங்க- வளைந்த மிகச் சிறியதாகிய
இடையை உடைய திரிசடை வந்து வணங்க; நோக்கி – அவளைப்
பார்த்து; ‘ஓர் இடர் இன்றி இலங்கைக்கு அணங்குதான் என
இருத்தி’ என்று- ஒரு சிறிதும் துன்பம் இல்லாமல் இலங்கை
நகரத்துக்கு ஒரு தெய்வப் பெண்ணாக இருப்பாயாக என்று ஆசி
கூறி; ஐயன் மாட்டு அணைந்தாள்- இராமபிரானிடம்
புட்பகவிமானத்தில் வந்து சேர்ந்தாள்; மணம் கொள் வேல்
இளம் கோளரி மானம் மீப் படர்ந்தான் – புலால் மணம்
கமழும் வேலையுடைய இளைய சிங்கமாகிய இலக்குவன்
விமானத்தின் மேல் ஏறினான்.

————

விமானத்தில் நின்ற இராமன் வீடணன் முதலிய துணைவர்க்கு விடை தரல்

அண்டம் உண்டவன் மணி அணி உதரம் ஒத்து, அனிலன்
சண்ட வேகமும் குறைதர, நினைவு எனும் தகைத்தாய்,
விண்தலம் திகழ் புட்பக விமானமாம் அதன்மேல்
கொண்ட கொண்டல், தன் துணைவரைப் பார்த்து, இவை குனித்தான்: -147-

அண்டம் உண்டவன் மணி அணி உதரம் ஒத்து- உலகம் உண்ட
திருமாலினது மணிகளால் அழகு பெற்ற வயிற்றை ஒத்து; அனிலன்
கண்ட வேகமும் குறைதர – வாயு தேவனது அளப்பரிய ஊழிக்கால
வேகமும் குறைவு என்னும்படி; நினைவு எனும் தகைத்தாய்- மனோ
வேகம் என்று சொல்லும் படியாக; விண்தலம் திகழ் விமான புட்பகம்
என்னும் அதன் மேல்- விண்ணிடத்தே விளங்குகின்ற புட்பக விமானம்
என்கின்ற அதன்மேல்;கொண்ட கொண்டல்- ஏறிய கார்நிறத்தண்ணல்;
தன் துணைவரைப் பார்த்து- தன் துணைவர்களாகிய விபீடணன்,
சுக்ரீவன் முதலியவர்களைப் பார்த்து; இவை குணித்தான்- பின்
வரும்சொற்களை ஆலோசித்துக் கூறலானான்.

————–

வீடணன் தனை அன்புற நோக்குறா, விமலன்,
‘தோடு அணைந்த தார் மவுலியாய்! சொல்வது ஒன்று உளது; உன்
மாடு அணைந்தவர்க்கு இன்பமே வழங்கி, நீள் அரசின்,
நாடு அணைந்தவர் புகழ்ந்திட, வீற்றிரு நலத்தால். –148-

விமலன் – மலமற்றவனாகிய பரம்பொருள்; வீடணன்தனை
அன்புற நோக்குறா – வீடணனை அன்பு பொருந்தப் பார்த்து; ‘தோடு
அணைந்த தார் மவுலியாய்!- இதழ்கள் நெருங்கிய மாலை அணிந்த
முடியை உடையவனே!; சொல்வது ஒன்று உளது- உனக்குச் சொல்ல
வேண்டுவது ஒன்று இருக்கிறது; நீள் அரசின் – நீண்ட இலங்கை
அரசில்; உன் மாடு அணைந்தவர்க்கு இன்பமே வழங்கி –
உன்பக்கத்தில் சேர்ந்தவர்களுக்கு இன்பத்தையே கொடுத்து; நாடு
அணைந்தவர் புகழ்ந்திட – உன் நாட்டில் உள்ளவர் அனைவரும்
புகழுமாறு; நலத்தால் வீற்றிரு- நன்மையோடு அரசு வீற்றிருப்பாயாக.

—————

‘நீதி ஆறு எனத் தெரிவுறு நிலைமை பெற்று உடையாய்!
ஆதி நான்மறைக் கிழவன் நின் குலம் என அமைந்தாய்!
ஏதிலார் தொழும் இலங்கை மா நகரினுள், இனி நீ
போதியால்’ எனப் புகன்றனன்-நான் மறை புகன்றான். –149-

நான் மறை புகன்றான் – நான்கு வேதங்களையும் சொல்லிய
இராமன். நீதி ஆறு எனத் தெரிவுறு நிலைமை பெற்று உடையாய்!
– நீதி வழி இதுவே என உன்னைக் கண்டு உலகம் விளங்கிக்கொள்ளும்
தன்மையான குணம் செயல்களை உடையவனே! ஆதி நான் மறைக்
கிழவன் நின் குலம் என அமைந்தாய்! – மூலமான பிரமதேவன்
உன்னுடைய குலம் என்று சொல்லும்படி தோன்றியவனே!; எதிலார்
தொழும் இலங்கை மாநகரினுள் – பகைவரும் அஞ்சி வணங்கும்
இலங்கை எனும் பெரிய நகரத்துள்; ‘இனி நீ போதியால்’ எனப்
புகன்றனன்- இனி நீ செல்வாயாக என்று சொன்னான்.

———-

‘சுக்கிரீவ! நின் தோளுடை வன்மையால் தசம் தொகு
அக்கிரீவனைத் தடிந்து, வெம் படையினால் அசைந்த
மிக்க வானரச் சேனையின் இளைப்பு அற மீண்டு, ஊர்
புக்கு, வாழ்க!’ எனப் புகன்றனன்-ஈறு இலாப் புகழோன். -150-

ஈறு இலாப் புகழோன்- முடிவில்லாத புகழை உடைய இராமன்;
‘சுக்கிரீவ!; நின் தோள் உடை வன்மையால் தசம் தொகு
சுக்கிரீவனைத் தடிந்து- உன்னுடைய தோள் பலத்தால் பத்து
என்று தொக்க அம் முடிகளை உடைய இராவணனைக் கொன்று;
வெம்படையினால் அசைந்த- கொடிய போர் ஆயுதங்களால்
தளர்ந்த; மிக்க வானரச் சேனையின் இளைப்பு அற மீண்டு-
அளவுகடந்த குரங்குச் சேனையின் களைப்பு நீங்கும் படி
திரும்பி; ஊர் புக்கு வாழ்க!’- கிட்கிந்தை புகுந்து வாழ்வாயாக;
எனப் புகன்றனன்- என்று கூறினான்.

—————-

வாலி சேயினை, சாம்பனை, பனசனை, வயப் போர்
நீலன் ஆதிய நெடும் படைத் தலைவரை, நெடிய
காலின் வேலையைத் தாவி மீண்டு அருளிய கருணை
போலும் வீரனை, நோக்கி, மற்று அம் மொழி புகன்றான். -151

வாலி சேயினை- அங்கதனை; சாம்பனை, பனசனை வயப் போர்
நீலன் ஆதிய நெடும் படைத்தலைவரை -; நெடிய காலின்-
நீண்ட காலால்; வேலையைத் தாவி மீண்டு அருளிய கருணை
போலும் வீரனை- கடலைத் தாண்டித் திரும்ப வந்துரைத்த தன்
கருணையைபோன்ற அனும வீரனை; நோக்கி- பார்த்து; மற்று
இம்மொழி புகன்றான்- வேறு இந்த சொற்களை உரைத்தான்.

———

ஐயன் அம் மொழி புகன்றிட, துணுக்கமோடு அவர்கள்,
மெய்யும் ஆவியும் குலைதர, விழிகள் நீர் ததும்ப,
செய்ய தாமரைத் தாள் இணை முடி உறச் சேர்த்தி,
‘உய்கிலேம், நினை நீங்கின்’ என்று இனையன உரைத்தார். -152-

ஐயன் இம்மொழி புகன்றிட – இராமன் இச்சொற்களைச்
சொல்ல; அவர்கள் துணுக்கமோடு – துணைவர்கள் நடுக்கத்தோடு;
மெய்யும் ஆவியும் குலைதர – உடம்பும் உயிரும் நிலைதடுமாற;
விழிகள் நீர் ததும்ப – கண்களில் நீர் குலுங்க; செய்ய தாமரைத்
தோள்இணை முடி உறச் சேர்த்தி – இராமனது சிவந்த
தாமரையனைய திருவடி இணைகளைத் தங்கள் முடியின்கண் பொருந்த
வணங்கி; ‘நின்னை நீங்கின் உய்கிலேம்’ என்று – உன்னைப்
பிரிந்தால் உயிர் வாழேம் என்று; இனையனை உரைத்தார்-
பின்வரும் வாசகங்களைச் சொன்னார்கள்.

———–

அயோத்தியில் ஐயன் திருமுடிசூடுதலைக் காண விரும்பி உரைத்தல்

‘பார மா மதில் அயோத்தியின் எய்தி, நின் பைம் பொன்
ஆர மா முடிக் கோலமும் செவ்வியும் அழகும்,
சோர்வு இலாது, யாம் காண்குறும் அளவையும் தொடர்ந்து
பேரவே அருள்’ என்றனர்-உள் அன்பு பிணிப்பார். –153-

உள்அன்பு பிணிப்பார் – இராமனிடத்து அகம் நிறைந்த
அன்பினால் கட்டுப்பட்டவராய் அவர்; ‘பாரமாமதில்
அயோத்தியில் எய்தி – மிகப்பெரிய மதிலாற் சுற்றப்பட்ட
அயோத்தி மாநகரை அடைந்து; நின் பைம்பொன் ஆர மாமுடிக்
கோலமும் செவ்வியும் அழகும் – (அங்கே) உன்னுடைய
பசியபொன்னாலும் முத்தாலும் ஆகிய பெரிய முடியை அணிந்து
கொள்ளும் பட்டாபிடேகக் காட்சியும் ஒளியும் அழகும்; யாம்
சோர்விலாது காண்குறும் அளவையும்- நாங்கள்
சோர்வில்லாமல் கண்டு மகிழும் வரை; தொடர்ந்து பேரவே
அருள்’ – உன்னைப் பின்பற்றி வந்து திரும்புவதற்கு அருள்
செய்க; என்றனர்- .

————-

இராமன் உடன்பட்டுக் கூற, யாவரும் மகிழ்தல்

அன்பினால் அவர் மொழிந்த வாசகங்களும், அவர்கள்
துன்பம் எய்திய நடுக்கமும், நோக்கி, ‘நீர் துளங்கல்;
முன்பு நான் நினைந்திருந்தது அப் பரிசு; நும் முயற்சி
பின்பு காணுமாறு உரைத்தது’ என்று உரைத்தனன்-பெரியோன் -154-

பெரியோன்- உயர்ந்தோனாகிய இராமன்; அவன் அன்பினால்
மொழிந்த வாசகங்களும் – துணைவர்கள் தன்மாட்டுக் கொண்ட
உள்ளன்பால் கூறிய வார்த்தைகளும்; துன்பம் எய்திய
அவர்கள் நடுக்கமும்- துன்பம் அடைந்தபடியால் அவர்களுக்கு
உண்டாகிய நடுக்கத்தையும்; நோக்கி- பார்த்து;நீர்துளங்கல்-
நீங்கள் கலங்க வேண்டா; முன்பு நான் நினைத்திருந்தது அப்பரிசு
– முன்னால் நான் மனத்தில் எண்ணியது (உங்களையும் அயோத்திக்கு
உடன் அழைத்துச் செல்வதாகிய) அதையேதான்; நும் முயற்சி பின்பு
காணுமாறு உரைத்தது – உங்கள் செயலைப் பின்னால் அறியும்படி
அவ்வாறு கூறினேன்; என்று உரைத்தான் – என்பதாகக் கூறினான்.

———

ஐயன் வாசகம் கேட்டலும், அரி குலத்து அரசும்,
மொய் கொள் சேனையும், இலங்கையர் வேந்தனும், முதலோர்,
வையம் ஆளுடை நாயகன் மலர்ச் சரண் வணங்கி,
மெய்யினோடு அருந் துறக்கம் உற்றார் என வியந்தார். 155-

ஐயன் வாசகம் கேட்டலும் – இராமன் கூறிய அவ்வார்த்தைகளைக்
கேட்டவுடன்; அரிகுலத்து அரசும் மொய்கொள் சேனையும்
இலங்கையர் வேந்தனும் முதலோர்- குரங்குச் கூட்டத்து
அரசனாகிய சுக்ரீவனும் நெருங்கிய குரங்குச் சேனையும் இலங்கை
அரசனாகிய வீடணனும் முதலானவர்கள்; வையம் ஆளுடை
நாயகன் மலர்ச்சரண் வணங்கி- உலகைத் தன் அடிமையாக
உடைய இராமபிரானது மலர்போன்ற அடிகளை வழிபட்டு;
மெய்யினோடு அருந் துறக்கம் உற்றார் என வியந்தார் –
உடம்போடு அரிய சுவர்க்கம் போனவர்களைப் போலப் பெரு
மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தனர்.

————-

யாவரும் புட்பகத்தின்மேல் ஏறுதல்

அனையது ஆகிய சேனையோடு அரசனை, அனிலன்
தனயன் ஆதியாம் படைப் பெருந் தலைவர்கள் தம்மை,
வனையும் வார் கழல் இலங்கையர் மன்னனை, ‘வந்து இங்கு
இனிதின் ஏறுமின், விமானம்’ என்று, இராகவன் இசைத்தான். 156-

இராகவன்- இராமன்; அனையது ஆகிய சேனையோடு அரசனை-
அப்படிப்பட்டதாகிய குரங்குச் சேனையோடு அரசனாகிய சுக்ரீவனை;
அனிலன் தனயன் ஆதியாம் படைப்பெருந் தலைவர்கள் தம்மை –
காற்றின் மகனாகிய அனுமன் முதலாகிய பெரிய சேனைத் தலைவர்களை;
வனையும் வார் கழல் இலங்கையர் மன்னனை- கட்டப்பட்ட நீண்ட
வாரினை உடைய வீரக் கழல் அணிந்த வீடணனை; ‘இங்கு வந்து
இனிதின் விமானம் ஏறுமின்’ என்று இசைத்தான்- இங்கே வந்து
மகிழ்வாக விமானத்தில் ஏறி அமருங்கள் என்று சொன்னான்.

————-

சொன்ன வாசகம் பிற்பட, சூரியன் மகனும்,
மன்னு வீரரும், எழுபது வெள்ள வானரரும்,
கன்னி மா மதில் இலங்கை மன்னொடு கடற்படையும்,
துன்னினார், நெடும் புட்பகமிசை ஒரு சூழல். 157-

சொன்ன வாசகம் பிற்பட- (இராமன்) சொன்ன வார்த்தை
பிற்படும்படி; (தாம் முற்பட்டு அவ்வளவு விரைவாக) சூரியன்
மகனும்- சுக்ரீவனும்; மன்னுவீரரும் எழுபது வெள்ள வானரரும்-
நிலைபெற்ற அனுமன், அங்கதன் முதலிய வீரரும் எழுபது வெள்ளம்
குரங்குச் சேனையும்; கன்னி மாமதில் இலங்கை மன்னொடு
கடற்படையும் – பிறரால் கைப்பற்றப்படாத பெருமதிலை உடைய
இலங்கை அரசனாகிய வீடணனோடு அவனது கடல் போன்ற அரக்கர்
படையும்; நெடும் புட்பகம் மிசை ஒரு சூழல் துன்னினார் –
மிகப்பெரிய புட்பகவிமானத்தின் மேல் ஒரு ஓரத்தில் நெருங்கி
அமர்ந்தார்கள்.

——————

பத்து நால் என அடுக்கிய உலகங்கள் பலவின்
மெத்து யோனிகள் ஏறினும், வெற்றிடம் மிகுமால்;
முத்தர் ஆனவர் இதன் நிலை மொழிகிவது அல்லால்,
இத் தராதலத்து இயம்புதற்கு உரியவர் யாரே! 158-

(புட்பகம்) பத்து நால் என அடுக்கிய உலகங்கள் பலவின்
மெத்து யோனிகள் ஏறினும் வெளியிடம் மிகும் – கீழ்ஏழ்;
மேல் ஏழ் என அடுக்கிக் கூறப்படும் பதினான்கு உலகங்கள்
பலவற்றினும் உயர்த்துக் கூறப்படும் உயிர் வர்க்கங்கள்
அனைத்தும் ஏறினாலும் வெற்றிடமானது மிகுதியாக இருக்கும்;
இதன் நிலை- இந்த புட்பகவிமானத்தின் தன்மையை; முத்தர்
ஆனவர் மொழிகுவது அல்லால் – வீடு பெற்ற மெய்ஞ்ஞானிகள்
தம் ஞானத்தால் கூறுவதற்கு முடியுமே அல்லாமல்; இத்தராதலத்து
– இம் மண்ணுலகில்; இயம்புதற்கு யாரே உரியவர்-
சொல்லுவதற்கு யாரால் இயலும். (இயலாது என்றபடி)

———-

புட்பக விமானத்தில் இராமன் விளங்கிய காட்சி

எழுபது வெள்ளத்தாரும், இரவி கான்முளையும், எண்ணின்
வழு இலா இலங்கை வேந்தும், வான் பெரும் படையும், சூழ
தழுவு சீர் இளைய கோவும், சனகன் மா மயிலும், போற்ற,
விழுமிய குணத்து வீரன் விளங்கினன், விமானத்து உம்பர். 159-

விழுமிய குணத்து வீரன்- சிறந்த நற்குணங்களால் பெருமை
பெற்ற இராமன்; எழுபது வெள்ளத்தோரும் இரவி கான் முளையும்
எண்ணின் வழு இலா இலங்கை வேந்தும் வான் பெரும் படையும்
சூழ – எழுபது வெள்ளம் குரங்குச் சேனையில் உள்ளாரும் சுக்ரீவனும்
கருத்தில் சிறிதும் குறையில்லாத வீடணனும் மிகப் பெரிய அவனது
அரக்கர்படையும் சுற்றியிருப்ப; தழுவு சீர் இளைய கோவும் சனகன்
மாமயிலும் போற்ற- புகழ் தழுவும் இலக்குவனும் சானகியும் துதிக்க;
விமானத்து உம்பர் விளங்கினன் – விமானத்தின் மேல் விளக்க
முற்றுத் தோன்றினான்.

————–

அண்டமே போன்றது ஐயன் புட்பகம்; அண்டத்து உம்பர்,
எண் தரும் குணங்கள் இன்றி, முதல் இடை ஈறு இன்று ஆகி,
பண்டை நான்மறைக்கும் எட்டாப் பரஞ்சுடர் பொலிவதேபோல்,
புண்டரீகக் கண் வென்றிப் புரவலன் பொலிந்தான் மன்னோ. 160-

ஐயன் புட்பகம் அண்டமே போன்றது- இராமன் ஏறியிருந்த
புட்பகவிமானம் அண்ட உருண்டையைப் போல் இருந்தது; அண்டத்து
உம்பர் – அவ் அண்டத்தின் மேலாக;எண் தரும் குணங்கள் இன்றி
முதல் இடை ஈறு இன்றி ஆகி பண்டை நான் மறைக்கும் எட்டாப்
பரஞ்சுடர் பொலிவதே போல்- நினைத்தற்குரிய குணங்கள்
இல்லாமல். பிறப்பு வளர்ப்பு அழிவு இல்லாததாய் ஆகி பழைய நால்
வேதங்களுக்கும் காணக்கிடைக்காத பரம்பொருள் விளங்கும் தன்மை
போல; புண்டரீகக் கண் வென்றிப் புரவலன் பொலிந்தான் –
தாமரை மலர் போன்ற கண்களை உடைய வெற்றி பெற்ற
காத்தற்கடவுளாகிய திருமால் விளங்கினான்.

——————-

தேனுடை அலங்கல் மௌலிச் செங் கதிர்ச் செல்வன் சேயும்,
மீனுடை அகழி வேலை இலங்கையர் வேந்தும், வெற்றித்
தானையும், பிறரும், மற்றைப் படைப் பெருந்தலைவர் தாமும்,
மானுட வடிவம் கொண்டார், வள்ளல்தன் வாய்மைதன்னால்.–161-

வள்ளல் தன் வாய்மை தன்னால்- இராமபிரானது அருள் மொழி
ஆற்றலால்; தேனுடை அலங்கல் மௌலிச்செங்கதிர்ச் செல்வன்
சேயும்- தேன் பொருந்திய மாலைசூடிய முடியணிந்த சூரியன்
மகனாய சுக்கிரீவனும்; மீனுடை அகழி வேலை இலங்கையர்
வேந்தும்- மீன் பொருந்திய கடலை அகழியாக உடைய
இலங்கைக்கு அரசனாகிய வீடணனும்; வெற்றித் தானையும்- வெற்றி பெற்ற சேனையும்; பிறரும் மற்றைப்
படைப்பெருந்தலைவர் தாமும்- மற்றவர்களும் ஏனைய
சேனைத்தலைவர்களும் (குரக்கு வடிவும் அரக்க வடிவும் நீங்கி);
மானுட வடிவம் கொண்டார்- மனித வடிவு கொண்டார்கள்.

———-

இராமன் சீதைக்கு வழியிலுள்ள காட்சிகளைக் காட்டிச் செல்லுதல்

குட திசை மறைந்து, பின்னர்க் குண திசை உதயம் செய்வான்
வட திசை அயனம் உன்னி வருவதே கடுப்ப, மானம்
தடை ஒரு சிறிது இன்று ஆகி, தாவி வான் படரும் வேலை,
படை அமை விழியாட்கு ஐயன் இனையன பகரலுற்றான்: –162-

மானம் – விமானம்; குடதிசை மறைந்து பின்னர்க் குணதிசை
உதயம் செய்வான்- மேற்கில் மறைந்து பிறகு கிழக்கில்
தோன்றுபவனாகிய சூரியன்; வடதிசை அயனம் உன்னி வருவதே
கடுப்ப- (தென்திசையிலிருந்து) வடக்கே நோக்கிச் செலல் கருதி
வருவதை ஒப்ப;ஒரு சிறிது தடை இன்று ஆகி- ஒரு சிறிய
தடை கூட இல்லாமல்; வான் தாவி படரும் வேலை- விண்ணில்
பறந்து செல்கின்ற சமையத்தில்;ஐயன்- இராமன்; படைஅமை
விழியாட்கு- வேலும் வாளும் போல கண்களையுடைய
பிராட்டிக்கு; இனையன பகரலுற்றான்- பின்வருவனவற்றைக்
கூறலானான். அயனம் – செலவு.

———–

வென்றி வீடணன் கொணர்ந்த புட்பக விமானம் தன்மேல்
ஒன்றும் நல் சீதையோடும், உம்பரும் பிறரும் காண,
வென்று உயர் சேனையோடும், இராமனும் விரைவின் எய்தி,
தென் திசை இலங்கை ஆதி, தேவிக்குத் தெரியக் காட்டும்.-163-

வென்றி வீடணன் கொணர்ந்த புட்பக விமானம் தன்மேல்-
வெற்றியுடைய வீடணன் கொண்டுவந்த புட்பகத்தின் மேல்; ஒன்றும்
நல் சீதையோடும் வென்று உயர் சேனையோடும்- தன்னோடு
ஒன்றிய நல்ல பிராட்டியோடும் வெற்றியால் உயர்ந்த சேனைகளோடும்;
இராமனும் விரைவின் எய்தி- இராமனும் வேகமாக அடைந்து;
உம்பரும் பிறரும் காண- தேவரும் மற்றவர்களும் கண்டு
கொண்டிருக்க; தேவிக்கு- சீதைக்கு; தென்திசை இலங்கை
ஆதி தெரியக் காட்டும் – தெற்கே உள்ள இலங்கை முதலாக
அனைத்தையும் நன்கு விளங்கக் காண்பிப்பானாயினன்.

————-

இலங்கையை வலஞ் செய்து ஏக’ என நினைந்திடுமுன் மானம்
வலம் கிளர் கீழை வாயில் வர, ‘பிரகத்தன், நீலன்
நலம் கிளர் கையின் மாண்டது இவண்’ என, நமன்தன் வாயில்
லந்திட, ‘ஈங்குக் கண்டாய், சுபாரிசற் கட்டது’ என்றான்–164-

‘இலங்கையை வலம் செய்து ஏக’ என நினைத்திடுமுன்-
இலங்கையை வலமாகச் சுற்றிக்கொண்டு செல்லட்டும் என்று
(இராமன்) மனத்தில் நினைக்கும் முன்னர் (நினைப்பறிந்தது
போல); மானம் வலம் கிளர் கீழை வாயில் வர – புட்பகம்
வெற்றி உயர்ந்த கிழக்கு வாசலுக்கு வர; (இராமன் சீதைக்கு)
‘நீலன் நலம் கிளர் கையின் பிரகத்தன் மாண்டது இவண்’ என
– குரங்குச் சேனைத்தலைவன் நீலனது நன்மைவிளங்கிய
கையினால் இராவண சேனைத்தலைவன் பிரகத்தன் மாண்டது
இவ்விடம் என்று சொல்ல; நமன் தன் வாயில் கலந்திட-
யமனது வாசலாகிய தெற்கு வாசலுக்கு விமானம் வர; ‘சுபாரிசன்
கட்டது ஈங்குக் கண்டாய்’ என்றான்- பெரும் பக்கனை
அழித்தது இங்கேதான் என்பதை அறிவாயாக என்றான் இராமன்.

———-

குடதிசை வாயில் ஏக, ‘குன்று அரிந்தவனை வென்ற
விட நிகர் மேகநாதன் இளவலால் வீழ்ந்தது’ என் முன்,
வட திசை வாயில் மேவ, ‘இராவணன் மவுலி பத்தும்,
உடலமும் இழந்தது இங்கு’ என்று உணர்த்தி வேறு உரைக்கலுற்றான்.–165-

குடதிசை வாயில் ஏக- விமானம் மேற்குத் திசை வாசலை
அடைய; குன்று அரிந்தவனை வென்ற விடநிகர் மேகநாதன்
இளவலால் வீழ்ந்தது’ என்முன்- மலையின் சிறகுகளை அரிந்த
இந்திரனை வென்ற கொடுவிடத்தை ஒத்த இந்திரசித்து
இலக்குவனால் இறந்தது (இங்கே) என்று சொல்வதற்கு முன்;
வடதிசை வாயில் மேவ- இலங்கையின் வடக்கு வாசலை விமானம்
அடைய; இராவணன் மவுலி பத்தும் உடலமும் இழந்தது இங்கு’
என்று உணர்த்தி- இராவணன் கிரீடத்தலை பத்தும் தன் பேருடலமும்
இழந்தது இங்கேதான் என்று சீதைக்கு அறியச் சொல்லி; வேறு
உரைக்கலுற்றான்- வேறு செய்திகள் சொல்லத் தொடங்கினான்.

————

இராமன் சீதைக்குச் சேதுவைக் காட்டல்
10117.

‘நன்னுதல்! நின்னை நீங்கி, நாள் பல கழிந்த பின்றை,
மன்னவன் இரவி மைந்தன், வான் துணையாக நட்ட
பின்னை, மாருதி வந்து, உன்னைப் பேதறுத்து, உனது பெற்றி
சொன்னபின், வானரேசர் தொகுத்தது இச் சேது கண்டாய்.–166-

நன்னுதல்! – அழகிய நெற்றியுடையாளே!; நின்னை நீங்கி –
உன்னைப் பிரிந்து; பலநாள் கழிந்த பின்றை – பலநாள் கழித்த
பிறகு; மன்னவன் இரவிமைந்தன் – வானர அரசனாய சுக்கிரீவன்;
வான் துணையாக நட்டபின்னை – சிறந்த துணைவனாக என்னோடு
நட்புச்செய்த பிறகு;மாருதி வந்து – அனுமன் தூது வந்து; உன்னைப்
பேது அறுத்து- உன்னை மயக்கத்திலிருந்தும் கலக்கத்திலிருந்தும்
நீக்கி; உனது பெற்றி சொன்னபின்- உனது இருப்பின் தன்மையை
(என்னிடம்) மீண்டு வந்து சொன்ன பிறகு; வானரேசர் தொகுத்தது
இச் சேது- வானரத் தலைவர்கள் கட்டியது இவ் அணையாகும்;
கண்டாய்- அறிவாயாக (என்றான் இராமன்).

———–

‘மற்று இதன் தூய்மை எண்ணின், மலர் அயன்தனக்கும் எட்டா;
பொன் தொடித் தெரிவை! யான் என் புகலுகேன்! கேட்டி, அன்பால்
பெற்ற தாய் தந்தையோடு தேசிகற் பிழைத்து, சூழ்ந்த
சுற்றமும் கெடுத்துளோரும் எதிர்ந்திடின் சுரர்கள் ஆவார்.–167-

பொன்தொடித் தெரிவை! – பொன்வளையல் அணிந்த சீதையே!;
மற்று இதன் தூய்மை எண்ணின்- இந்தச் சேதுவின்
பரிசுத்தமான தன்மையை நினைத்துப் பார்த்தால்; மலர் அயன்
தனக்கும் எட்டா- மலர் மேல் உள்ள நான்முகனாலும் நினைக்க
இயலாது; யான் என் புகலுகேன் – யான் என்ன வென்று
சொல்வேன்; கேட்டி – கேட்பாயாக; அன்பால் பெற்ற தாய்
தந்தையோடு தேசிகற் பிழைத்து- அன்புடன்தம்மைப் பெற்று
வளர்த்த தாய் தந்தையோடு ஆசார்யனிடத்திலும் தவறு செய்து;
சூழ்ந்த சுற்றமும் கெடுத்து ளோரும்- தன்னை ஆதரவாகப்
பற்றிச் சுற்றிய உறவினர்களையும் கெடுத்தவர்களும் கூட;
எதிர்ந்திடின்- (இச்சேதுவுக்கு) நேர்படுவார்களாயின்
(காண்பார்களாயின்); சுரர்கள் ஆவார் – (கண்ட அளவிலே
அவர்கள்) தேவர்கள் ஆவார்கள்.

———-

சேதுவைக் காட்டி, அதன் தூய்மையைப் புகழ்தல்

‘இந்திரற்கு அஞ்சி, மேல் நாள், இருங் கடல் புக்கு, நீங்கால்
சுந்தர சயிலம், தன்னைக் கண்டவர் வினைகள் தீர்க்கும்
கந்தமாதனம் என்று ஓதும் கிரி, இவண் கிடப்ப கண்டாய்;
பைந்தொடி! அடைத்த சேது பாவனம் ஆயது’ என்றான். –168-

பைந்தொடி! -பசிய வளையல் அணிந்த சானகியே!;
இந்திரற்கு அஞ்சி மேல்நாள் இருங்கடல் புக்கு நீங்காக்
கந்தர சயிலம்- இந்திரனுக்குப் பயந்து முன்னாளில் பெரிய
கடலுள் புகுந்து அதை விட்டு வெளி வராத குகைகளை உடைய மலை;
தன்னைக் கண்டவர் வினைகள் தீர்க்கும் கந்தமாதனம் என்று
ஓதும் கிரி- தன்னைப் பார்த்தவர்களது தீவினைகளைத்
தீர்க்கக்கூடிய கந்தமாதனம் என்று சொல்லப் படுகிற மலை;
இவண் கிடப்ப கண்டாய் – இங்கே இருப்பதைப் பார்ப்பாயாக;
அடைத்த சேது பாவனம் ஆயது’ என்றான்- (இந்த
மலைத்தொடர்பால்) கடலை அடைத்த அணை பரிசுத்தம் உடையதாக
ஆயிற்று என்று சொன்னான்.

———-

‘கங்கையோடு, யமுனை, கோதாவரி, நருமதை, காவேரி,
பொங்கு நீர் நதிகள் யாவும், படிந்து அலால், புன்மை போகா;
சங்கு எறி தரங்க வேலை தட்ட இச் சேது என்னும்
இங்கு இதின் எதிர்ந்தோர் புன்மை யாவையும் நீங்கும் அன்றே -169-

கங்கையோடு யமுனை கோதாவரி நருமதை காவேரி- ;
பொங்கு நீர் நதிகள் யாவும் படிந்து அலால் புன்மை போகா
– என்று கூறப்படுகிற மிகுந்த நீரினையுடைய ஆறுகள் யாவும் தம்முள்
முழுகினால் அல்லாமல் முழுகியவர்களுடைய பாவம் போகா; சங்கு
எறி தரங்க வேலை தட்ட இச் சேது என்னும் இங்கு இதின் –
சங்குகளை வீசுகின்ற அலைகளை உடைய கடலில் தடுத்துக் கட்டப்
பெற்ற இந்த அணை என்று சொல்லப்படுகிற இங்கு இதனை;
எதிர்ந்தோர் புன்மை யாவையும் நீங்கும்- பார்த்தவர்கள்
(சந்தித்தவர்கள்) பாவம் எல்லாம் நீங்கும்.

———–

‘நெற்றியின் அழலும் செங் கண் நீறு அணி கடவுள் நீடு
கற்றை அம் சடையில் மேவு கங்கையும், “சேது ஆகப்
பெற்றிலம்” என்று கொண்டே, பெருந்தவம் புரிகின்றாளால்;
மற்று இதன் தூய்மை எவ்வாறு உரைப்பது?-மலர்க்கண் வந்தாய்!’ -170-

மலர்க்கண் வந்தாய்! – தாமரை மலரின்கண் தோன்றிய
திருமகளாகிய பிராட்டியே!; நெற்றியின் அழலும் செங்கண்நீறு
அணி கடவுள்- நெற்றியின்கண் நெருப்புக் கனலும் செங்கண்ணை
உடையவனாய்த் திருநீறு பூசுகின்ற கடவுளாகிய இவனது; கற்றை
அம் சடையில் மேவு கங்கையும்- சடைத்தொகுதியில்
பொருந்தியுள்ள கங்கா நதித் தேவியும்; ‘சேது ஆகப்
பெற்றிலம்’ என்று கொண்டு பெருந்தவம் புரிகின்றாள்-
நாம் சேதுவாக ஆகப் பெறாமல் போய்விட்டோமே என்று
வருந்தி பெரிய தவத்தைச் செய்கின்றாள்; (என்றால்) மற்று
இதன் தூய்மை எவ்வாறு உரைப்பது- வேறான இந்தச் சேது
அணையின் தூய்மையை எவ்வாறு சொல்ல இயலும்?

————-

வருணன் சரணம் அடைந்த இடத்தைக் காட்டுதல்

தெவ் அடும் சிலைக் கை வீரன் சேதுவின் பெருமை யாவும்,
வெவ் விடம் பொருது நீண்டு மிளிர்தரும் கருங் கண் செவ் வாய்,
நொவ் இடை, மயில் அனாட்கு நுவன்றுழி, ‘வருணன் நோனாது
இவ் இடை வந்து கண்டாய், “சரண்” என இயம்பிற்று’ என்றான் -171

தெவ் அடும் சிலைக்கை வீரன்- பகைவர்களை அழிக்கின்ற
வில் ஏந்திய கையினை உடைய இராமன்; சேதுவின் பெருமை
யாவும்- சேது என்னும் அணையின் பெருமை எல்லாவற்றையும்;
வெவ்விடம் பொருது நீண்டு மிளிர்தரும் கருங்கண் செவ்வாய்
நொவ் இடை மயில் அனாட்கு நுவன்றுழி- கொடிய விடத்தோடு
போர்செய்து (காதுவரை) நீண்டு விளங்குகின்ற கரிய கண்ணையும்
சிவந்த வாயையும் குறுகிக் குறுகித் துன்புறுகின்ற இடையையும்
உடைய மயில் போன்ற சீதைக்குச் சொல்லி வருகிறபோது; (ஓர்
இடம் காட்டி) ‘வருணன் நோனாது வந்து சரண் என இயம்பிற்று
இவ் இடை கண்டாய்’ என்றான்- வருணனானவன் என் அம்பின்
கனலைப் பொறுக்கமாட்டாமல் ஓடி வந்து அபயம் என்று என்பால் சொல்லியது இந்த இடத்தில்தான் காண்பாயாக என்று
கூறினான்.

—————-

‘இது தமிழ் முனிவன் வைகும் இயல் தரு குன்றம்; முன் நாறு
அது வளர் மணிமால் ஓங்கல்; உப் புறத்து, உயர்ந்து தோன்றும்
அது திகழ் அனந்த வெற்பு’ என்று அருள் தர, ‘அனுமன் தோன்றிற்று
எது?’ என, அணங்கை நோக்கி, இற்று என இராமன் சொன்னான்.–172-

‘இது தமிழ் முனிவன் வைகும் இயல்தருகுன்றம்- இது
தமிழ் முனிவனாகிய அகத்தியன் தங்கியிருந்து தமிழிலக்கணத்தைத்
தந்த பொதியமலை; முன் நாறு அது வளர் மணி மால் ஓங்கல்-
முன்னால் தோன்றுகின்ற அது மணம் வீசி வளர்கின்ற திருமால்
இருஞ் சோலை மலை;உட் புறத்து உயர்ந்து தோன்றும் அது
திகழ் அனந்த வெற்பு’- இடைக்கண்ணே உயரமாகத் தோன்றுகிற
அது விளங்குகிற திருவேங்கட மலை; என்று அருள் தர-
என்றிவ்வாறு இராமபிரான் உரைத்தருள் செய்ய; (சீதை) அனுமன்
தோன்றிற்று எது? என – அனுமன் தங்களைச் சந்திக்கத்
தோன்றியது எந்த இடத்தில் என்று கேட்க; அணங்கை நோக்கி
– சீதையைப் பார்த்து; இராமன் – ; இற்று என சொன்னான்
– இந்த இடத்தில்தான் என்று (ருசியமுக பர்வதத்தைக்) காட்டிச்
சொன்னான்.

———–

அனுமனைச் சந்தித்த இடம், கிட்கிந்தை ஆகியவற்றைக் காட்டுதல்

‘வாலி என்று அளவு இல் ஆற்றல் வன்மையான், மகர நீர் சூழ்
வேலையைக் கடக்கப் பாயும் விறல் உடையவனை வீட்டி,
நூல் இயல் தரும நீதி நுனித்து அறம் குணித்த மேலோர்-
போல் இயல் தபனன் மைந்தன் உறைதரும் புரம் ஈது’ என்றான் -173-

வாலி என்று அளவு இல் ஆற்றல் வன்மையான், மகரநீர்
சூழ் வேலையைக் கடக்கப் பாயும் விறல் உடையவனை
வீட்டி- வாலி என்று கூறப்படுகிற அளவு படாத பேராற்றலோடு
கூடிய வலிமையுடையவனும் சுறாமீன்கள் சுற்றும் கடலைத்
தாண்டிச் செல்லும் வெற்றி உடையவனும் ஆகியவனை அழித்து;
நூல் இயல் தரும நீதி நுனித்து அறம் குணித்த மேலோர்
போல்- நூல்களிற் கூறியுள்ள இயல்பின்படி தரும நீதியை
நுட்பமாகக் கருதி அறத்தையே கருதும் சீர்மை உடைய
மேலோர்கள் போன்ற; இயல் தபனன் மைந்தன் உறைதரும்
புரம் ஈது என்றான்- இயல்பினை உடைய சூரியன் மகனாய
சுக்ரீவன் தங்கியுள்ள கிட்கிந்தை இது என்றான்.

————–

வானர மகளிரையும் உடன் அழைத்துச் செல்ல, சீதை விரும்பி மொழிதல்

‘கிட்கிந்தை இதுவேல், ஐய! கேட்டியால்: எனது பெண்மை
மட்கும்தான், ஆய வெள்ள மகளிர் இன்று ஆகி, வானோர்
உட்கும் போர்ச் சேனை சூழ, ஒருத்தியே அயோத்தி எய்தின்;
கள் கொந்து ஆர் குழலினாரை ஏற்றுதல் கடன்மைத்து’ என்றாள் –174-

‘ஐய! – இராமனே! கிட்கிந்தை – கிட்கிந்தா நகரம்; இதுவேல்
– இதுவாக இருக்குமானால்; கேட்டி – நான் சொல்வதைக்
கேட்பாயாக; ஆயவெள்ள மகளிர் இன்று ஆகி, வானோர்
உட்கும் போர் சேனை சூழ ஒருத்தியே அயோத்தி எய்தின்
– தோழியர் கூட்டமான பெண்கள் இல்லாமல் தேவர்களும்
அஞ்சும்படியான போர்ச்சேனை சுற்றியிருப்ப நான் ஒருத்தி மட்டும்
இவ்விமானத்தில் அயோத்தி அடைந்தால்; எனது பெண்மை
மட்கும் – என் பெண்தன்மை பொலிவு கெடும்; (ஆதலின்) கள்
கொந்து ஆர் குழலினாரை ஏற்றுதல் கடன்மைத்து’ என்றாள்
– தேன் நிரம்பிய பூங்கொத்துகள் பொருந்திய கூந்தல்
உடைய கிட்கிந்தை மகளிரை இவ்விமானத்தில் ஏற்றிக்
கோடல் செய்யத் தகும் முறைமை உடையது என்று கூறினாள்.

—————-

இராமன் ஆணைப்படி சுக்கிரீவன் அனுமனை அனுப்பி, மகளிர்களை அழைத்து வரச் செய்தல்

அம் மொழி இரவி மைந்தற்கு அண்ணல்தான் உரைப்ப, அன்னான்
மெய்ம்மை சேர அனுமன் தன்னை நோக்கி, ‘நீ விரைவின், வீர!
மைம் மலி குழலினாரை மரபினின் கொணர்தி’ என்ன,
செம்மை சேர் உள்ளத்து அண்ணல் கொணர்ந்தனன், சென்று மன்னோ –175-

அண்ணல் அம்மொழி இரவிமைந்தற்கு உரைப்ப – இராமன்
சீதையின் அச்சொல்லை சுக்கிரீவனுக்குச் சொல்ல; அன்னான்
மெய்ம்மை சேர் அனுமன்தன்னை நோக்கி- சுக்கிரீவன்
சத்தியவானாகிய அனுமனைப் பார்த்து; ‘வீர! நீ விரைவின்
மைம்மலி குழலினாரை மரபினின் கொணர்தி’ என்ன- வீர
அனுமனே! நீ விரைந்து கருமை பரவிய கூந்தலுடைய நம்
நகரப் பெண்களை அவரவர்க்குரிய முறைப்படி கொண்டு
வருக என்று கூற; செம்மை சேர் உள்ளத்து அண்ணல்
சென்று கொணர்ந்தனன் – மனக்கோட்டம் இல்லாத
பெரியோனாகிய அனுமன் உடனே சென்று அழைத்து கொண்டு
வந்தான்.

—————

வானர மகளிர் மங்கலப் பொருள்களுடன் வந்து முறைப்படி வணங்குதல்

வரிசையின் வழாமை நோக்கி, மாருதி மாதர் வெள்ளம்
கரைசெயல் அரிய வண்ணம் கொணர்ந்தனன், கணத்தின் முன்னம்;
விரைசெறி குழலினார் தம் வேந்தனை வணங்கி, பெண்மைக்கு
அரசியை ஐயனோடும் அடி இணை தொழுது, நின்றார்.–176-

மாருதி – அனுமன்; கரைசெயல் அரிய வண்ணம் மாதர்
வெள்ளம் – வரம்பிடமுடியாத தன்மை உடைய மகளிர் கூட்டத்தை;
வரிசையின் வழாஅமை நோக்கி – அவரவர்கட்குரிய தகுதியிற்
சிறிதும் பிறழாதபடி பார்த்து; கணத்தின் முன்னம் கொணர்ந்தனன்
– ஒரு கணப்பொழுதில் அழைத்துக் கொண்டு வந்தான்; விரைசெறி
குழலினார் தம் வேந்தனை வணங்கி- மணம் நிறைந்த கூந்தலை
உடைய அம்மகளிர் தம்முடைய அரசனாய சுக்கிரீவனை முதலில்
தொழுது; பெண்மைக் கரசியை ஐயனோடும் அடியிணை
தொழுது நின்றார்- பெண்மைக் குணங்களுக்குத் தலைமையானவளை
இராமனோடும் திருவடி இணைகளைக் கும்பிட்டு நின்றார்கள்.

—————-

மங்கலம் முதலா உள்ள மரபினின் கொணர்ந்த யாவும்
அங்கு அவர் வைத்து, பெண்மைக்கு அரசியைத் தொழுது சூழ,
நங்கையும் உவந்து, ‘வேறு ஓர் நவை இலை, இனி மற்று’ என்றாள்;
பொங்கிய விமானம் தானும், மனம் என, எழுந்து போன. –177-

மங்கலம் முதலவாய மரபினின் கலப்பையாவும் –
அட்டமங்கலம் முதலாகச் சொல்லப்படும் அடிப்பட
வந்த தொன்று தொடு வழக்கமாய பொருள்கள்
எல்லாவற்றையும்; அவர் அங்கு கொணர்ந்து
– அம்மகளிர் விமானத்தின்கண் கொண்டு வந்து;
பெண்மைக்கு அரசியைத் தொழுது சூழ –
சீதாபிராட்டியை வணங்கிச் சுற்றியிருப்ப; நங்கையும்
உவந்து – சீதையும் மகிழ்ச்சி அடைந்து; ‘மற்றுவேறு,
ஓர் நவை இனி இலை’ என்றாள்- வேறொரு
துன்பமும் இனி இல்லை என்று சொன்னாள்;பொங்கிய
விமானந்தானும் மனம் என எழுந்து போன-உயர்ந்த
புட்பகமும் மனத்தின் வேகம் போல புறப்பட்டுச் சென்றது.

அட்டமங்கலம் – பெரியோர்க்குச் செய்யும்
உபசாரப்பொருள்கள் எட்டாம். அவை, சாமரை, தீபம்,
பூர்ணகும்பம், இரட்டைக் கயல், கண்ணாடி, தோட்டி,
கொடி, முரசு என்பனவாகும்

————

கோதாவரி, தண்டகாரணியம், முதலியவற்றைச் சீதைக்குக் காட்டுதல்

போதா விசும்பில் திகழ் புட்பகம் போதலோடும்,
சூது ஆர் முலைத் தோகையை நோக்கி, ‘முன் தோன்று சூழல்
கோதாவரி; மற்று அதன் மாடு உயர் குன்று நின்னை,
பேதாய்! பிரிவுத் துயர் பீழை பிணித்தது’ என்றான். –178

விசும்பில் போதா திகழ் புட்பகம் போத லோடும்-
வானத்தில் எழுந்து விளங்குகிற புட்பக விமானம் சென்ற
உடனே; (இராமன்) சூது ஆர் முலைத்தோகையை நோக்கி –
சூதாடுகின்ற கருவியை ஒத்துப் பொருந்திய நகில்களை உடைய
மயில் போல்வாளைப் பார்த்து; ‘பேதாய் – இளம்பெண்ணே!;
முன்தோன்று சூழல் கோதாவரி – முன்னே தோன்றுகிற இடம்
கோதாவரியாகும்; மற்று அதன் மாடு உயர் குன்று- அதன்
அருகில் உள்ள உயர்ந்த சிறிய மலைதான்; நின்னை – உன்னை
(என்னிடமிருந்து) பிரிவுத்துயர் பீழை பிணித்தது’ – பிரித்தலால்
உண்டாகிய பிரிவு என்னும் துயர் நோயால் கட்டியது; என்றான் –

————–

‘சிரத்து வாச வண்டு அலம்பிடு தெரிவை! கேள்: இது நீள்
தரத்து உவாசவர், வேள்வியர், தண்டகம்; அதுதான்
வரத்து வாசவன் வணங்குறு சித்திரகூடம்;
பரத்துவாசவன் உறைவிடம் இது’ எனப் பகர்ந்தான்.–179-

‘சிரத்து வாச வண்டு அலம்பிடு தெரிவை! கேள் –
தலைமுடியின் கண் (நறுமணமலர்களால்) வாசனையுண்ணும்
வண்டுகள் ஒலிக்கின்ற பெண்ணே! கேட்பாயாக; இது நீள்
தரத்து உவாசவர், வேள்வியர் தண்டகம்- இது உயர்ந்த
தன்மையுடைய உபாசனை செய்கின்ற விரதிகளும் யாகம்
செய்பவர்களாகிய முனிவர்களும் (உறைகின்ற) தண்டக
ஆரண்யம்; அதுதான் வரத்து வாசவன் வணங்குறு
சித்திரகூடம் – அதோ தோன்றுகிற இடமானது
மேன்மையுடைய இந்திரனும் வணங்கத்தக்க சித்திர கூடமலை;
இது பரத்துவாசவன் உறைவிடம்’ – (அண்மையில் காணும்)
இது பரத்துவாசமுனிவன் தங்கியுள்ள தவச்சாலையாகும்; எனப்
பகர்ந்தான் – என்று சொன்னான்.

———–

மின்னை நோக்கி, அவ் வீரன் ஈது இயம்பிடும் வேலை,
தன்னை நேர் இலா முனிவரன் உணர்ந்து, தன் அகத்தின்,
‘என்னை ஆளுடை நாயகன் எய்தினன்’ என்னா,
துன்னு மா தவர் சூழ்தர, எதிர் கொள்வான், தொடர்ந்தான். –180-

மின்னை நோக்கி – சீதையைப் பார்த்து; அவ்வீரன் ஈது
இயம்பிடும் வேலை – அந்த இராமன் இதனைச் சொல்லிக்
கொண்டுள்ள போது; தன்னை நேர் இலா முனிவரன் உணர்ந்து
-தனக்கு யாரும் ஒப்பில்லாத சிறந்த தவமுனிவனாகிய பரத்துவாசன்;
உணர்ந்து; தன் அகத்தின் – தன் தவச்சாலையின் கண்; ‘என்னை
ஆளுடை நாயகன் எய்தினன்’ என்னா- என்னையும் அடிமை
கொண்டருளும் பரம் பொருளாகிய பெருமான் வந்துவிட்டான் என்று
கருதி; துன்னு மாதவர் சூழ்தர- நெருங்கிய முனிவரர்கள் சுற்றிவர;
எதிர்கொள்வான் – வரவேற்க; தொடர்ந்தான் – (இராமன்);
வரும்வழியை நோக்கி வந்தான்.

————–

பரத்துவாசன் ஆச்சிரமத்தில் இறங்குதல்

ஆதபத்திரம், குண்டிகை, ஒரு கையின் அணைத்து,
போதம் முற்றிய தண்டு ஒரு கையினில் பொலிய,
மா தவப் பயன் உருவு கொண்டு எதிர் வருமாபோல்,
நீதி வித்தகன் நடந்தமை நோக்கினன், நெடியோன். –181-

ஆதபத்திரம், குண்டிகை ஒரு கையின் அணைத்து – குடை,
கமண்டலம் இரண்டையும் ஒரு கையில் சேரப்பிடித்துக்கொண்டு;
தண்டு ஒருகையினில் பொலிய – மற்றொரு கையில் தண்டம்
விளங்க; மாதவப்பயன் உருவுகொண்டு எதிர் வருமாபோல்-
பெரிய தவத்தின் பயன் திரண்டு ஒரு வடிவு எடுத்துக்கொண்டு
எதிர் வருவதைப் போல; போதம் முற்றிய நீதி வித்தகன் –
தத்துவஞானம் நிரம்பிய நீதி நெறியில் சதுரப்பாடு உடைய
பரத்துவாசன்; நடந்தமை- தன்னை எதிர்கொள்ள நடந்து
வருகின்றமையை;நெடியோன் நோக்கினன் – இராமன் பார்த்தான்.

————–

எண் பக, தினை அளவையும் கருணையோடு இசைந்த
நட்பு அகத்து இலா அரக்கரை நருக்கி, மா மேரு
விட்பு அகத்து உறை கோள் அரி எனப் பொலி வீரன்,
புட்பகத்தினை வதிகென நினைந்தனன், புவியில். –182-

எண்பக – நெஞ்சம் பிளவுபடும்படி; தினை அளவையும் –
தினை அளவு கூட; கருணையோடு இசைந்த நட்பு அகத்து
இலா அரக்கரை நருக்கி – அருளோடு கூடிய நட்புத்தன்மை
மனத்தில் இல்லாத அரக்கர்களைக் கொன்று; மாமேரு விட்பு
அகத்து உறை கோளரி எனப் பொலி வீரன் – பெரிய
மேருமலையின் பிறப்பிடமாய பொந்தில் உள்ளே வசிக்கின்ற சிங்கம்
போல விளங்குகின்ற வீர இராகவன்; புட்பகத்தினை புவியல்
வதிக என நினைந்தனன் – புட்பக விமானத்தைப் பூமியில்
தங்குக என்று நினைத்தான்.

————

இராமன் முதலியோர் முனிவனைத் தொழ, முனிவனும் இராமனை உபசரித்தல்

உன்னும் மாத்திரத்து, உலகினை எடுத்து உம்பர் ஓங்கும்
பொன்னின் நாடு வந்து இழிந்தெனப் புட்பகம் தாழ,
என்னை ஆளுடை நாயகன், வல்லையின் எதிர் போய்,
பன்னு மா மறைத் தபோதனன் தாள்மிசைப் பணிந்தான். –183-

உன்னும் மாத்திரத்து – நினைக்கின்ற ஒரு மாத்திரைக்கால
அளவில்; உலகினை எடுத்து உம்பர் ஓங்கும் பொன்னின் நாடு
வந்து இழிந்து என புட்பகம் தாழ- உலகைச் சுமந்து
ஆகாயத்தின் மேலுயரும் தேவலோகம் கீழே இறங்கியது
என்று சொல்லும்படி புட்பகவிமானம் மண்ணில் இறங்க; என்னை
ஆளுடை நாயகன் – என்னை அடிமை கொண்டருளும் பெருமான்;
வல்லையின்- விரைவாக; எதிர்போய்- எதிர்சென்று; பன்னு
மாமறைத்தபோதனன் தாள்மிசைப் பணிந்தான்- இடையறாது
சொல்லிக்கொண்டுள்ள உயர்ந்த வேதபாரகனாகிய தவசிரேஷ்டனது
திருவடிகளின் மேல் வீழ்ந்து வணங்கினான்.

————–

அடியின் வீழ்தலும் எடுத்து, நல் ஆசியோடு அணைத்து,
முடியை மோயினன் நின்றுழி, முளரி அம் கண்ணன்
சடில நீள் துகள் ஒழிதர, தனது கண் அருவி
நெடிய காதல் அம் கலசம் அது ஆட்டினன், நெடியோன். –184-

அடியின் வீழ்தலும் – (இராமன்) தன் அடியில்வீழ்ந்து
வணங்கியவுடன்; எடுத்து – தூக்கி; நல் ஆசியோடு அணைத்து –
நல்ல வாழ்த்துரையுடன் அணைத்துக்கொண்டு;முடியை மோயினன்
நின்றுழி – இராமனது உச்சியை மோந்து நின்ற பொழுது; முளரி
அம் கண்ணன் – தாமரைக் கண்ணனான இராமனது; சடில நீள்
துகள் ஒழிதர – சடாபாரத்தில் உள்ள நீண்ட புழுதியானது
நீங்கும்படி; நெடியோன் தனது கண் அருவி – உயர்ந்தவனாகிய
பரத்துவாசன் தன்னுடைய கண்ணிலிருந்து அருவியாக வழிகின்ற நீரை; நெடிய காதல் அம்கலசம் அது-
உயர்ந்து நின்ற தன் உள்ளத்தன்பாகிய கலசத்தால் முகந்து;
ஆட்டினான் – நீராட்டித் தூய்மைசெய்தான்.

———–

கருகும் வார் குழல் சனகியோடு இளவல் கை தொழாதே,
அருகு சார்தர, அருந் தவன் ஆசிகள் வழங்கி,
உருகு காதலின் ஒழுகு கண்ணீரினன், உவகை
பருகும் ஆர் அமிழ்து ஒத்து, உளம் களித்தனன், பரிவால். -185-

கருகு வார் குழல் சனகியோடு – கருமையான நீண்ட
கூந்தலையுடைய சீதையோடு; இளவல் கைதொழுதே அருகு
சார்தர- இலக்குவன் கைகுவித்து வணங்கிப் பக்கத்தில் வர;
அருந்தவன் – பரத்துவாசன்; ஆசிகள் வழங்கி –
வாழ்த்துரைகள் கூறி; உருகு காதலன் ஒழுகு கண்ணீரினன்
– மனம் கரைந்து வரும் கண்ணீர்ப் பெருக்கோடு; உவகை
பருகும் ஆர் அமிழ்து ஒத்து பரிவால் உளம் களித்தனன்
– மகிழ்ச்சியோடு பருகுகின்ற தேவர் அமுதத்தை உண்டால் ஒத்து
அன்பினால் உளம் பூரித்தான்.

—————-

வானரேசனும், வீடணக் குரிசிலும், மற்றை
ஏனை வீரரும், தொழும்தொறும் ஆசிகள் இயம்பி,
ஞான நாதனைத் திருவொடு நன் மனை கொணர்ந்தான்,
ஆன மாதவர் குழாத்தொடும் அரு மறை புகன்றே. -186-

வானரேசனும்- சுக்ரீவனும்; வீடணக்குரிசிலும் – வீடணன்
என்கின்ற நம்பியும்; மற்றை ஏனை வீரரும்- மற்றுள்ளபிற
வீரர்களும்; தொழும்தொறும் ஆசிகள் வழங்கி-
வணங்குந்தோறும் வாழ்த்து தந்து; ஆன மாதவர் குழாத்தொடும்
அருமறை புகன்று – தன்னோடு உடன் கூடிய முனிவர்
கூட்டத்தோடும் அரிய வேதங்களைச் சொல்லிக்கொண்டே; ஞான நாதனைத் திருவொடு
நன் மனைகொணர்ந்தான்- ஞானத்திரளாய் நின்ற பெருமானைப்
புருஷாகார பூதையாகிய திருமகளோடும் தன் நல்ல மனைக்கு
அழைத்துக் கொண்டு சென்றான்.

———-

பன்ன சாலையுள் புகுந்து, நீடு அருச்சனை பலவும்
சொன்ன நீதியின் புரிந்த பின், சூரியன் மருமான்-
தன்னை நோக்கினன், பல் முறை கண்கள் நீர் ததும்ப,
பின் ஒர் வாசகம் உரைத்தனன், தபோதரின் பெரியோன்: –187-

பன்னசாலையுள் புகுந்து – தன் தவச்சாலைக்குள்
அழைத்துக்கொண்டு புகுந்து; தபோதரின் பெரியோன்-
முனிவர்களில் உயர்ந்தோன் ஆகிய பரத்துவாசன்; நீடு
அருச்சனை பலவும் – உரிய உபசார வழிபாடுகள் எல்லாம்;
சொன்ன நீதியின் புரிந்து- சாத்திரங்களிற் சொல்லப்பட்ட
முறைப்படி செய்து; பின்- பிறகு; சூரியன் மருமான் தன்னை
– சூரியனது வழியில் தோன்றிய இராமனை; பல்முறை கண்கள்
நீர்ததும்ப நோக்கினன் – பலமுறை கண்களில் நீர் ததும்பும்
படி பார்த்தவனாய்; பின் ஓர் வாசகம் உரைத்தனன்- பிறகு
ஒரு சொல் சொன்னான்.

———-

‘முனிவர் வானவர் மூவுலகத்துளோர் யாரும்
துனி உழந்திடத் துயர் தரு கொடு மனத் தொழிலோர்
நனி மடிந்திட, அலகைகள் நாடகம் நடிப்ப,
குனியும் வார் சிலைக் குரிசிலே! என், இனிக் குணிப்பாம்? –188-

முனிவர், வானவர், மூவுலகத்துளோர் யாரும் -; துனி
உழந்திடத்துயர்தரு கொடுமனத் தொழிலோர் – வருந்தும்படி
துன்பங்களைச்செய்கின்ற கொடுமையான மனமும் தொழிலும்
உடையோராய அரக்கர்; நனி மடிந்திட- மிகவும் இறந்துபோக;
அலகைகள் நாடகம் நடிப்ப- பேய்கள் களத்தில் நடனம் ஆட;
குனியும் வார்சிலைக் குரிசிலே!- வளைந்த கோதண்டத்தை
ஏந்திய நம்பியே! இனி என் குணிப்பாம்? – இனி என்ன எண்ணி
உரைக்க உள்ளது?

————

‘விராதனும், கரனும், மானும், விறல் கெழு கவந்தன் தானும்,
மராமரம் ஏழும், வாலி மார்பமும், மகர நீரும்,
இராவணன் உரமும், கும்பகருணனது ஏற்றம் தானும்,
அராவ அரும் பகழி ஒன்றால் அழித்து, உலகு அளித்தாய்-ஐய!’ -189-

ஐய! – இராமனே!; விராதனும் – கரனும் -; மானும் –
மானாகிய மாரீசனும்; விறல்கெழு – வலிமைமிக்க; கவந்தன்
தானும்- மரா மரம் ஏழும் வாலிமார்பமும் -; மகர நீரும் –
வருணன் வாராதபோது சீறியதால் கடல்நீரும்; இராவணன் உரமும்
கும்பகருணனது- ; ஏற்றம் தானும்- உயர்வும்; அராவ அரும்
பகழி ஒன்றால் – அராவிச்செய்யப்பட்ட அரிய ஓர் அம்பினாலே;
அழித்து – கொன்று செருக்கடக்கி; உலகு அளித்தாய்- உலகைக்
காப்பாற்றினாய்.

————–

சித்திர கூடம் தீர்ந்து, தென் திசைத் தீமை தீர்த்திட்டு
இத் திசை, அடைந்து, எம் இல்லின் இறுத்தமை இறுதியாக,
வித்தக! மறந்திலேன் யான்; விருந்தினையாகி, எம்மோடு
இத்திறம் இருத்தி’ என்றான், மறைகளின் இறுதி கண்டான்.–190-

மறைகளின் இறுதி கண்டான் – வேத முடிவினை
நன்குணர்ந்தவனாகிய பரத்துவாசன்; (இராமனைநோக்கி)
வித்தக! – சதுரப்பாடு உடையவனே!; சித்திரகூடம் தீர்ந்து –
சித்திரகூட மலையிலிருந்து நீங்கி; தென்திசைத் தீமை
தீர்த்திட்டு – தெற்குத்திசையில் உள்ள அரக்கர்களாய
தீமையைப் போக்கி; இத்திசை அடைந்து – வடதிசை வந்து
சேர்ந்து; எம் இல்லம் இறுத்தமை இறுதியாக – என்
தவச்சாலையில் தங்கியமை வரையிலும்; மறந்திலேன் யான்-
நான் உன்னை ஒரு கணமும் மறக்கவில்லை; விருந்தினையாகி –
விருந்து ஏற்றுக்கொண்டு; எம்மோடு – எங்களோடு; இத்திறம்
– இன்றேபோல்; இருத்தி- இருப்பாயாக; என்றான் -.

—————

‘கரதலம் அதனின் நீடு கார்முகம் வளைய வாங்கி,
சரத வானவர்கள் துன்பம் தணித்து, உலகங்கள் தாங்கும்
மரகத மேனிச் செங்கண் வள்ளலே! வழுவா நீதிப்
பரதனது இயல்பும் இன்றே பணிக்குவென்; கேட்டி’ என்றான்.–191-

கரதலம் அதனின் நீடு கார்முகம் வளைய வாங்கி –
கையின் கண் உயர்ந்த கோதண்டம் என்னும் வில்லை வளைத்து
இழுத்து; சரத வானவர்கள் துன்பம் தணித்து- உண்மை
வாழ்வுள்ள தேவர்களது துயரத்தைப் போக்கி; உலகங்கள்
தாங்கும் – உலகமனைத்தையும் பாதுகாக்கின்ற; மரகத மேனிச்
செங்கண்வள்ளலே! – மரகத மணி போன்ற மேனியையும் சிவந்த
கண்களையும் உடைய கொடையாளனே; ‘வழுவா நீதிப் பரதனது
இயல்பும் இன்றே பணிக்குவென், கேட்டி’ என்றான்- சிறிதும்
பிசகாத நீதியை உடைய பரதன் தற்போதுள்ள தன்மையையும்
இன்றைக்கே சொல்வேன் கேட்பாயாக என்று சொன்னான்.

————

‘வெயர்த்த மேனியன்; விழி பொழி மழையன்; மூ வினையைச்
செயிர்த்த சிந்தையன்; தெருமரல் உழந்து உழந்து அழிவான்;
அயிர்த்து நோக்கினும், தென் திசை அன்றி, வேறு அறியான்
பயத்த துன்பமே உருவு கொண்டென்னலாம் படியான்.–192-

(பரதன்)வெயர்த்த மேனியன் – வியர்வை அரும்பிய
உடம்புடையான்; விழி பொழி மழையன்-கண்கள் மழைநீர்
போலக் கண்ணீர் விடுகின்றதன்மையன்; மூவினையைச்
செயிர்த்த சிந்தையன் – பழைய வினைகளைக் கோபித்த
மனத்தவன்; தெருமரல் உழந்து உழந்து அழிவான் –
மனச சுழற்சியால் வருந்திவருந்திக் கெடுவான்; அயிர்த்து
நோக்கினும் தென்திசை அன்று வேறு அறியான் –
ஐயுற்றுப் பார்த்தாலும் (நீ சென்றுள்ள) தென் திசை தவிர வேறு
திசைகளைப் பார்க்க அறியான்; பயத்த துன்பமே உருவு கொண்டு என்னலாம்படியான் – அச்சத்துடன்
கூடிய துன்பமே உருவம் கொண்டாற் போன்ற வடிவம் உடையவன்.

————-

இந்தியம் களைந்து, இருங் கனி காய் நுகர்ந்து, இவுளிப்
பந்தி வந்த புல் பாயலான்; பழம்பதி புகாது,
நந்தியம்பதி இருந்தனன், பரதன் – நின் நாமம்
அந்தியும், பகல் அதனினும், மறப்பிலன் ஆகி.–193-

பரதன் -; இந்தியம் களைந்து- பொறிகளைப் புலன்வழி
செல்லாது நீக்கி; இருங்கனிகாய் நுகர்ந்து – பெரிய
பழங்களையும் காய்களையுமே உண்டு; இவுளிப் பந்தி வந்த புல்
பாயலான் – குதிரை வரிசைகள் மேய்தற்குரிய புல்லையே
படுக்கையாகக் கொண்டுள்ளான்; பழம்பதி புகாது நந்தியம்பதி-
பழமையான அயோத்தியில் செல்லாது நந்திக் கிராமத்திலேயே;
நின் நாமம் அந்தியும் பகல் அதனினும்மறப்பிலன் ஆகி-
உன்னுடைய பெயரை இரவினும் பகலினும் மறவாதவனாய்;
இருந்தனன் – இருந்தான்.

————

என்று உரைத்து, ‘அரக்கர் வேந்தன் இருபது என்று உரைக்கும் நீலக்
குன்று உரைத்தனைய தோளும், குலவரைக் குவடும் ஏய்க்கும்
என்று உரைத்தனைய மௌலித் தலை பத்தும், இறுத்த வீர!
நின்தனைப் பிரிந்தது உண்டே, யான்’ என நிகழ்த்தினானால்.-194-

என்று உரைத்து – என்றிவ்வாறு பரத்து வாசன் சொல்லி;
அரக்கர் வேந்தன் இருபது என்று உரைக்கும் நீலக் குன்று
உரைத்தனைய தோளும் குலவரைக் குவடும் ஏய்க்கும்
என்று உரைத்தனைய மௌலித் தலை பத்தும் இறுத்த வீர!-
இராவணனது நீலமலை என்று சொலத்தகுந்த இருபது
தாள்களையும் எட்டுக்குலமலைகளின் சிகரங்கள் எனக் கூறத்
தக்க மகுடம் அணிந்த பத்துத் தலைகளையும் அழித்த வீரனே!; யான்
நின்தனைப் பிரிந்தது உண்டே’? – நான் நின்னை என்றாவது
பிரிந்ததுண்டா?; என நிகழ்த்தினான்- என்று கூறினான்.

————-

இராமன் பதில் உரை
10146.
‘மின்னை ஏய் உமையினானும், விரை மலர்த் தவிசினானும்
நின்னையே புகழ்தற்கு ஒத்த நீதி மாதவத்தின் மிக்கோய்!
உன்னையே வணங்கி, உன்தன் அருள் சுமந்து உயர்ந்தேன்; மற்று இங்கு
என்னையே பொருவும் மைந்தன் யான் அலாது இல்லை’ என்றான்–195-

‘மின்னை ஏய் உமையினானும் – மின்னலை ஒத்த
உமாதேவியை உடைய சிவனும்; விரைமலர்த் தவிசினானும்
– மணமிக்க உந்தித்தாமரையில் உள்ள பிரமனும்; நின்னையே
புகழ்தற்கு ஒத்த நீதி மாதவத்தின் மிக்கோய்! – உன்னையே
சிறப்பித்துச் சொல்லுமாறு நீதியோடு கூடிய பெருந்தவத்தில்
சிறந்தவனே!; உன்னையே வணங்கி உன்தன் அருள் சுமந்து
உயர்ந்தேன் – உன்னை வழிபட்டு உனது மனக்கருணையை
நிறையப் பெற்று அதனால் உயர்ந்துள்ளேன்; (அதனால்) மற்று இங்கு
என்னையே பொருவும் மைந்தன் யான் அலாது இல்லை’
என்றான் – இவ்வுலகில் என்னை ஒத்த மகன் நான் அல்லாது வேறு
யாரும் இல்லை எனும் பேறு பெற்றேன் என்று கூறினான் (இராமன்).

————

பரத்துவாசன் வரம் தருதல்
10147.
அவ் உரை புகலக் கேட்ட அறிவனும், அருளின் நோக்கி,
‘வெவ் அரம் பொருத வேலோய்! விளம்புகேன்; கேட்டி, வேண்டிற்று
எவ் வரம் எனினும்; தந்தேன்; இயம்புதி’ எனலும், ஐயன்,
‘கவ்வை இன்று ஆகி வென்றி கவிக்குலம் பெற்று வாழ்க.–196-

அவ் உரை புகலக் கேட்ட அறிவனும் – அவ்வாறு இராமன்
கூறிய முகமனுரைகளைக் கேட்ட தத்துவ ஞானியாகிய
பரத்துவாசனும்; அருளின் நோக்கி – அருட்பார்வையால்
இராமனைப் பார்த்து; ‘வெவ் அரம் பொருத வேலோய்!
விளம்புகேன், கேட்டி வேண்டிற்று எவ்வரம் எனினும் தந்தேன்;
இயம்புதி’ எனலும் – கொடிய அரத்தால் அராவிச் செய்த
வேலை உடைய இராகவனே! சொல்வேன் கேட்பாயாக; நீ
விரும்பியது எந்த வரமானாலும் தந்துவிட்டேன், சொல்க என்று
கூறுதலும்; ஐயன்- இராமன்; ‘கவிக்குலம் கவ்வை இன்று ஆகி
வென்றி பெற்று வாழ்க- குரங்குக்கூட்டம் துன்பமின்றி சென்ற
இடங்களில் எல்லாம் வெற்றி பெற்று வாழ்க; (என்று கேட்டு)
தொடரும்.

—————

‘அரி இனம் சென்ற சென்ற அடவிகள் அனைத்தும் வானம்
சொரி தரு பருவம் போன்று, கிழங்கொடு கனி காய் துன்றி
விரிபுனல் செழுந்தேன் மிக்கு, விளங்கு!’ என இயம்புக’ என்றான்.
விரியும் மாதவனும், ‘அஃதே ஆக!’ எனப் புகன்றிட்டானால். –197-

‘அரி இனம் சென்ற சென்ற அடலிகள் அனைத்தும் வானம்
சொரிதரு பருவம் போன்று – குரங்குகள் போன காடுகள்
எங்கிலும் எப்பருவத்தும் கார்காலம் போல; கிழங்கொடு கனி
காய் துன்றி விரிபுனல் செழுந்தேன் மிக்கு விளங்கு’ என
இயம்புக” என்றான் – கிழங்கும் கனியும் காயும் நெருங்கி, மிகுந்த
நீரும், தேனும் நிரம்பி விளங்கட்டும் என்று வரம் கூறுக என்று
கேட்டான் இராமன்;விரியும் மாதவனும் – அகன்று பரந்த
பெருந்தவம் உடைய பரத்துவாசனும்; ‘அஃதே ஆக’ எனப்
புகன்றிட்டான்- அப்படியே ஆகட்டும் என்று சொல்லி முடித்தான்.
ஆல், அசை.

————–

அருந்தவன், ‘ஐய! நின்னோடு அனிக வெஞ் சேனைக்கு எல்லாம்
விருந்து இனிது அமைப்பென்’ என்னா, விளங்கும் முத்தீயின் நாப்பண்
புரிந்து ஓர் ஆகுதியை ஈந்து, புறப்படும் அளவில், போகம்
திருந்திய வானநாடு சேர வந்து இறுத்தது அன்றே.–198-

அருந்தவன் – பரத்துவாசன்; ‘ஐய! – இராம!; நின்னோடு
அனிக வெஞ் சேனைக்கு எல்லாம் விருந்து இனிது அமைப்பன்
என்னா – உன்னோடு வந்துள்ள அணிவகுப்புற்ற இக்கொடிய
சேனைகளுக்கு எல்லாம் விருந்துணவு நன்குறச் செய்து தருவேன்
என்று சொல்லி; விளங்கும் முத்தீயின் நாப்பண் புரிந்து ஓர்
ஆகுதியை ஈந்து- விளங்குகின்ற வேள்வித்தீயின் நடுவே மந்திரங்களை
விரும்பிச் சொல்லி ஓர் அவிர்ப்பாகத்தைக் கொடுத்து; புறப்படும்
அளவில்- எழுந்த அக்கணத்திலேயே; திருந்திய வான நாடு சேர
வந்து இறுத்தது- இன்பங்கள் நிறைந்த சுவர்க்கலோகம் அப்படியே
கீழ்இறங்கி அங்கே தங்கியது.

————

அரைசரே ஆதியாக, அடியவர் அந்தமாக,
கரைசெயல் அரிய போகம் துய்க்குமா கண்டு, இராமற்கு
அரைசியல் வழாமை நோக்கி, அறுசுவை அமைக்கும் வேலை
விரைசெறி கமலக்கண்ணன் அனுமனை விளித்துச் சொன்னான்:–199-

அரைசரே ஆதியாக அடியவர் அந்தமாக- அரசர் முதல்
தொண்டர் வரை; கரை செயல் அரிய போகம் துய்க்குமா கண்டு
– கணக்கிட இயலாத இன்பங்களை நுகர்வதைப் பரத்துவாசன் பார்த்து;
அரசியல் வழாஅமை நோக்கி இராமற்கு அறுசுவை அமைக்கும்
வேலை – அரசர்க்குள்ள இயல்பில் சிறிதும் வழுவாதபடி பார்த்து
இராமனுக்கு அறுசுவை உணவைப் படைத்துக்கொடுக்கும் அச்சமயத்தில்;
விரை செறி கமலக் கண்ணன் – மணமிக்க தாமரை போன்ற
கண்ணுடைய இராமபிரான்; அனுமனை விளித்துச் சொன்னான்-
அனுமனைக் கூப்பிட்டு அருகே அழைத்துப் பின்வருமாறு சொன்னான்.

—————

இராமன் அனுமனைப் பரதனிடம் அனுப்பல்

‘இன்று நாம் பதி போகலம்; மாருதி! ஈண்டச்
சென்று, தீது இன்மை செப்பி, அத் தீமையும் விலக்கி,
நின்ற காலையின் வருதும்’ என்று ஏயினன், நெடியோன்;
‘நன்று’ எனா, அவன், மோதிரம் கைக் கொடு நடந்தான். -200-

‘நெடியோன்- இராமன்; ‘மாருதி! – அனுமனே!; இன்று நாம்
பதிவருது முன்- நாம் இன்றைக்கு அயோத்திக்கு வருவதற்கு
முன்னாக; ஈண்டச் சென்று- விரைந்து போய்; தீது இன்மை
செப்பி அத்தீமையும் விலக்கி நின்ற காலையின் வருதும்’
என்று ஏயினன் – எனக்கு ஒரு தீமையும் இல்லை என்பதைப்
பரதனுக்குச் சொல்லி அவனுக்கு நேர்ந்து விடும் (தீப்புகல் ஆகிய)
தீமையையும் தடுத்து நீ அங்கே இருக்கும் நேரத்தில் வருவேன்
என்று ஏவி அனுப்பினான்; (அதுகேட்ட) அவன்- அந்த அனுமன்;
‘நன்று’ எனா – அப்படியே நல்லது என்று சொல்லி; மோதிரம்
கைக்கொடு நடந்தான் – இராமன் அளித்த அடையாளமான
கணையாழியை கையில் வாங்கிக் கொண்டு புறப்பட்டான்.

உடம்பொடு புணர்த்தலால் இராமன் கூறியதோடு கணையாழியும்
தந்தான் என்பதைப் பெற வைத்தார்.

————

தந்தை வேகமும், தனது நாயகன் தனிச் சிலையின்
முந்து சாயகக் கடுமையும், பிற்பட முடுகி,
சிந்தை பின் வரச் செல்பவன், குகற்கும் அச் சேயோன்
வந்த வாசகம், கூறி, மேல் வான் வழிப் போனான். -201-

தந்தை வேகமும்- தன் தந்தையாகிய காற்றின் வேகமும்;
தனது நாயகன் தனிச்சிலையின் முந்து சாயகக் கடுமையும்
பிற்பட முடுகி- தனது தலைவனாய இராமனுடைய ஒப்பற்ற
கோதண்டத்திலிருந்து வெளிச் செல்லும் அம்பின் வேகமும்
பின்னிடும்படி விரைந்து சென்று; சிந்தை பின் வரச் செல்பவன்
– தன்மனம் தன்னைப்பின் தொடரும்படி செல்கின்ற அனுமன்; அச்சேயோன் வந்த வாசகம் – அந்தச்
செவ்வியனாகிய இராமன் திரும்பி வந்து கொண்டிருக்கிறான்
என்கின்ற வார்த்தையை; குகற்கும் கூறி- வழியில் உள்ள
குகப்பெருமாளுக்கும் சொல்லி; மேல் வான் வழிப் போனான்-
மேலே ஆகாய வழியாகச் சென்றான்.

———–

இன்று இசைக்கு இடம் ஆய இராகவன்
தென் திசைக் கருமச் செயல் செப்பினாம்,
அன்று இசைக்கும் அரிய அயோத்தியில்
நின்று இசைத்துள தன்மை நிகழ்த்துவாம்: –202-

இன்று- இப்போது; இசைக்கு இடம் ஆய இராகவன் – புகழுக்கு
இருப்பிடமாக உள்ள இராமனது; தென்திசைக் கருமச் செயல்
செப்பினாம் – தெற்குத் திசையில் செய்த செயல்களை எல்லாம்
சொன்னோம்; அன்று- அப்போது; இசைக்கும் அரிய அயோத்தியில்
– புகழும் புகழுக்கும் அரியதாகிய அயோத்தி என்னும் மாநகரத்தில்;
நின்று இசைத்துள தன்மை நிகழ்த்துவாம்- பொருந்தி நடந்துள்ள
நிகழ்ச்சிகளை இனிமேல் சொல்லுவோம்.

————–

நந்தியம் பதியில் பரதன் இருந்த நிலை

நந்தியம்பதியின் தலை, நாள்தொறும்
சந்தி இன்றி நிரந்தரம், தம்முனார்
பந்தி அம் கழல் பாதம் அருச்சியா,
இந்தியங்களை வென்றிருந்தான் அரோ. –203-

————-

துன்பு உருக்கவும், சுற்றி உருக்க ஒணா
என்பு உருக்கும் தகைமையின் இட்டது ஆய்,
முன்பு உருக் கொண்டு ஒரு வழி முற்றுறா
அன்பு உருக் கொண்டது ஆம் எனல் ஆகுவான்; -204-

துன்பு சுற்றி உருக்கவும்- (இராமனைப் பிரிந்துள்ள) பிரிவு
என்னும் துன்பம் சூழ்ந்து உருக்குதலால்; உருக்க ஒணா என்பு
உருக்கும் தகைமையது இட்டது ஆய் – எதனாலும் உருக்கமுடியாத
எலும்பையும் உருக்கக்கூடிய தன்மை பொருந்தியதாய்; முன்பு
உருக்கொண்டு ஒருவழி முற்றுறா- முன்னொரு காலத்திலும் வடிவம்
கொண்டு ஓரிடத்தும் முழுமையாய்த் தோற்றாத; அன்பு உருக்
கொண்டது ஆம் எனல் ஆகுவான் – அன்பே ஒரு வடிவம்
கொண்டது ஆகும் என்று சொலற்குரியவனாக உள்ளான்.

———

நினைந்தவும் தரும் கற்பக நீரவாய்
நனைந்த தண்டலை நாட்டு இருந்தேயும், அக்
கனைந்த மூலமும் காயும் கனியும், அவ்
வனைந்த அல்ல அருந்தல் இல் வாழ்க்கையான்; –205-

நினைத்தலும் தடங்கண் இணை நீர் வர – இராமனை நினைத்த
அளவில் விசாலமான இருகண்களிலும் நீர்பெருக; இனத்த
தண்டலைநாட்டு இருந்தேயும் – கூட்டமான சோலைகள் சூழ்ந்த
தனது நாட்டின்கண் இருந்தும்; அக் கனத்த கந்தமும் காயும்
கனிகளும் வனத்த அல்ல – அந்த மேன்மையுடைய கிழங்கும்
காயும் பழங்களும் ஆய காட்டின்கண் கிடைக்கும் பொருள்களை
அல்லாமல் பிறவற்றை; அருந்தல் இல் வாழ்க்கையான் – நுகர்தல்
இல்லாத வாழ்க்கை உடையவன்.

———–

நோக்கின் தென் திசை அல்லது நோக்குறான்;
ஏக்குற்று, ஏக்குற்று, ‘இரவி குலத்து உளான்
வாக்கில் பொய்யான்; வரும், வரும்’ என்று, உயிர்
போக்கிப் போக்கி, உழக்கும் பொருமலான்; –206-

நோக்கின் தென் திசை அல்லது நோக்குறான் – பார்த்தால்
இராமன் சென்ற தென்திசையைத் தவிர வேறு திசைகளைப் பாரான்;
ஏக்குற்று, ஏக்குற்று – ஏங்கி ஏங்கி; ‘இரவி குலத்து உளான் வாக்கில்
பொய்யான்; வரும் வரும் ‘என்று- சூரிய குலத்தில் தோன்றியவன் சத்தியம் தவறமாட்டான், சொன்னவாறு வருவான்
என்று கருதி; உயிர் போக்கிப் போக்கி உழக்கும்
பொருமலான்- உயிரை விட்டு விட்டு வருந்தும் துக்கத்தை
உடையவன்.

———-

உண்ணும் நீர்க்கும் உயிர்க்கும் உயிரவன்,
எண்ணும் கீர்த்தி இராமன், திரு முடி
மண்ணும் நீர்க்கு வரம்பு கண்டால் அன்றி,
கண்ணின் நீர்க்கு ஓர் கரை எங்கும் காண்கிலான். -207-

உண்ணும் நீர்க்கும் உயிர்க்கும் உயிரவன் எண்ணும்
கீர்த்தி இராமன் – பருகுகின்ற நீர்க்கும் அதனால் தளிர்க்கும்
உயிர்க்கும் உயிராக உள்ளவனாய் எல்லாராலும் மதிக்கப்படும்
புகழை உடைய இராமனது; திருமுடி மண்ணும் நீர்க்கு
வரம்புகண்டால் அன்றி – திருமுடியை நீராட்டுகின்ற
பட்டாபிடேக நீர்க்கு எல்லை கண்டால் அல்லாமல்; கண்ணின்
நீர்க்கு ஓர் கரை எங்கும் காண்கிலான் – தன்
கண்ணிலிருந்து வழிகின்ற நீர்க்கு ஓர் முடிவை ஒரிடத்தும்
ஒருபொழுதும் காணாதவன்.

—————-

இராமன் வரவேண்டிய நாள் குறித்து சோதிடரை அழைத்துப் பரதன் வினவுதல்

அனையன் ஆய பரதன், அலங்கலின்
புனையும், தம்முனார் பாதுகைப் பூசனை
நினையும் காலை, நினைத்தனனாம் அரோ,
மனையின் வந்து அவன் எய்த மதித்த நாள். –208-

அனையன் ஆய பரதன் – அப்படிப்பட்டவனாகிய பரதன்;
அலங்கலின் புனையும் தம்முனார் பாதுகைப் பூசனை-
மாலையால் அலங்கரிக்கின்ற தம் தமையனாராய இராமனது
திருவடிப் பாதுகைகளின் பூசனையை; நினையும்காலை – செய்ய
எண்ணிய காலத்தில்;அவன் மனையின் வந்து எய்த மதித்த
நாள் நினைந்தனனாம்- இராமன் அயோத்தி அரண்மனைக்குத்
திரும்ப வந்து சேரக் கருதிக் கூறிய நாளைப் பற்றி நினைந்தானாம்.

———–

‘யாண்டு வந்து இங்கு இறுக்கும்?’ என்று எண்ணினான்,
‘மாண்ட சோதிட வாய்மைப் புலவரை
ஈண்டுக் கூய்த் தருக’ என்ன, வந்து எய்தினார்,
‘ஆண் தகைக்கு இன்று அவதி’ என்றார் அரோ. –209-

———–

இராமன் வாராமையால் பரதன் அவலமுற்றுப் பலவாறு சிந்தித்தல்

என்ற போதத்து, இராமன் வனத்திடைச்
சென்ற போதத்தது அவ் உரை, செல்வத்தை
வென்ற போதத்த வீரனும் வீழ்ந்தனன்,
கொன்ற போதத்த உயிர்ப்புக் குறைந்துளான். -210-

என்ற போதத்து- என்று சோதிடர்கள் சொன்ன நேரத்தில்;
செல்வத்தை வென்ற போதத்து வீரனும் வீழ்ந்தனன்- அரச
செல்வத்தை வேண்டாம் என்று உதறித்தள்ளி வென்ற ஞான
வீரனாகிய பரதனும் துடித்து விழுந்தான்; இராமன் வனத்திடைச்
சென்ற போதத்தது அவ்உரை – இராமன் காட்டுக்குச் சென்ற
போது கூறியதாகிய அந்த வார்த்தை (நினைவு வந்து); கொன்ற
போதத்து உயிர்ப்புக் குறைந்துளான்- தன்னைக் கொன்ற
சமயத்தில் மூச்சு அடங்கிப் போனான்.

——

மீட்டு எழுந்து, விரிந்த செந் தாமரைக்
காட்டை வென்று எழு கண் கலுழிப் புனல்
ஓட்ட, உள்ளம் உயிரினை ஊசல் நின்று
ஆட்டவும், அவலத்து அழிந்தான் அரோ. -211-

மீட்டு எழுந்து- உயிரினை மீட்டுத் திரும்பவும் எழுந்து;
விரிந்த செந்தாமரைக் காட்டை வென்று எழு கண் கலுழிப்
புனல் ஓட்ட- அலர்ந்த செந்தாமரைக் கூட்டத்தைத் தன்
அழகால் வென்று விளங்கும் கண்கள் கலங்கல் நீரை ஒழுகவிட;
உள்ளம் உயிரினை ஊசல் நின்று ஆட்டவும் – மனம் உயிரை
ஊசலாடச் செய்யவும்; அவலத்து அழிந்தான்- துக்கத்தில்
மூழ்கி நிலைகெட்டான்.

———–

‘எனக்கு இயம்பிய நாளும், என் இன்னலும்,
தனைப் பயந்தவள் துன்பமும், தாங்கி, அவ்
வனத்து வைகல் செய்யான்; வந்து அடுத்தது ஓர்
வினைக் கொடும் பகை உண்டு’ என விம்மினான். -212-

எனக்கு இயம்பிய நாளும்- எனக்கு வருவதாகக் குறிப்பிட்ட
நாளும்; என் இன்னலும் – என் துன்பமும்; தனைப் பயந்தவள்
துன்பமும் – தன்னைப் பெற்றெடுத்தவளாய கோசலையின்
துயரத்தையும்; தாங்கி- கிடக்கட்டும் என்று சுமந்து; வானத்து
வைகல் செய்யான்- காட்டின் கண் தங்கியிருத்தலைச் செய்ய
மாட்டான்; வந்து அடுத்தது ஓர் வினைக் கொடும்பகை உண்டு
– அவனை (அயோத்திக்கு வரமுடியாதவாறு) தடுக்க வந்து
சேர்ந்ததாகிய ஒரு தீவினையால் நேர்ந்த கொடிய பகை உண்டு
போலும்; என விம்மினான் – என்று மனத்தில்
கருதித்துயருற்றான். வாராமைக்குக் காரணம் தடையோ என்பது.

———-

‘மூவகைத் திருமூர்த்தியர் ஆயினும்,
பூவகத்தில், விசும்பில், புறத்தினில்,
ஏவர் கிற்பர் எதிர் நிற்க, என்னுடைச்
சேவகற்கு?’ என ஐயமும் தேறினான். -213-

மூவகைத் திருமூர்த்தியர் ஆயினும் – அரன், அரி, அயன்
என்னும் மூன்று மூர்த்திகள் ஆனாலும்,பூவகத்தில், விசும்பில்,
புறத்தினில் – பூமியில் விண்ணில், வேறு இடங்களில்; என்னுடைச்
சேவகற்கு- என்னுடைய தலைவனான இராமனுக்கு; எதிர் நிற்க
– எதிர்த்து நிற்பதற்கு;எவர் கிற்பர்- எவர் வல்லமை உடையவர்; என ஐயமும் தேறினான் – என்று ‘பகை உண்டு’ என்ற
சந்தேகத்திலிருந்து தெளிந்தான்.

———-

‘என்னை, “இன்னும் அரசியல் இச்சையன்
அன்னன் ஆகின், அவன் அது கொள்க” என்று
உன்னினான்கொல், உறுவது நோக்கினான்?
இன்னதே நலன்’ என்று இருந்தான் அரோ. -214-

‘என்னை ‘இன்னும் அரசியல் இச்சையன் – இன்னமும் பரதன்
அரசாளும் ஆசை உடையவனாய் உளன்; அன்னன் ஆகில் அவன்
அது கொள்க’ – அப்படியிருந்தால் அவன் அரசாட்சியைக்
கொண்டிருக்கட்டும்; என்று உன்னினான் கொல் – என்று
நினைத்திருப்பானோ; உறுவதை நோக்கினான் – இனிச்
செய்யவேண்டுவதை எண்ணிப்பார்த்தவன்; ‘இன்னதே நலன்’ என்று
இருந்தான் – நம் காட்டிலே இருப்பதே நல்லது என்று இருந்து
விட்டானாகும். அரோ – அசை.

தான் நாடாள விட்டுக்கொடுத்து வராமல் இருந்திருக்கக் கூடும் என்று
புதிய காரணத்தைக் கற்பித்துக் கொண்டான் பரதன்.

—————

உயிர் துறக்கக் கருதிய பரதன், தூதரை அனுப்பி, சத்துருக்கனை அழைத்தல்

‘அனைத்தில் அங்கு ஒன்றும் ஆயினும் ஆகுக;
வனத்து இருக்க; இவ் வையம் புகுதுக;
நினைத்து இருந்து நெடுந் துயர் மூழ்கிலேன்;
மனத்து மாசு என் உயிரொடும் வாங்குவேன். –215-

அனைத்தில் அங்கு ஒன்றும் ஆயினும் ஆகுக – அத்தனைக்
காரணங்களில் எது ஒன்று ஆனாலும் ஆகட்டும்; வனத்து இருக்க;
வையம் புகுதுக- அவன் காட்டில் இருக்கட்டும் அல்லது நாட்டுக்குள்
வரட்டும்; (அது பற்றியும் எனக்குக் கவலை யில்லை)நினைத்து இருந்து
நெடுந்துயர் மூழ்கிலேன்- பலபடியாக நினைத்து நினைத்துப்
பெருந்துன்பத்தில் மூழ்க மாட்டேன்;மனத்து மாசு என் உயிரொடும்
வாங்குவேன் – என் மனத்துன்பத்தை என் உயிரோடு நீக்கிக்
கொள்வேன்.
நான் இறந்தால் என் மனத்துன்பமும் போய்விடும் என்று கருதித்
தற்கொலைக்குத் துணிகிறான்.

————

என்னப் பன்னி, ‘இளவலை என்னுழைத்
துன்னச் சொல்லுதிர்’ என்னலும், தூதர் போய்,
‘உன்னைக் கூயினன், உம்முன்’ எனா முனம்,
முன்னர்ச் சென்றனன், மூவர்க்கும் பின் உளான். -216-

என்னப்பன்னி- என்று பலமுறை கூறி; ‘இளவலை என்னுழைத்
துன்னச் சொல்லுதிர்’ என்னலும் – தம்பியாகிய சத்துருக்கனை
என்னிடம் வரச்சொன்னதாகச் சொல்லுங்கள் என்று (தூதரிடம்)
சொல்லுதலும்; தூதர் போய் – தூதர் (சத்துருக்கனிடம்) சென்று;
‘உம்முன் உன்னைக் கூஉயினன்’ எனா முனம் – உன் அண்ணனாய
பரதன் உன்னை அழைத்தான் என்று சொல்வதற்கு முன்னாலே;
மூவர்க்கும் பின் உளான் முன்னர்ச் சென்றனன்- இராமர்க்கும் பரதலக்குவர்களுக்கும் பின பிறந்தவனாய சத்துருக்கன் பரதன் முன்னர்ச்
சென்றான்.

———

தொழுது நின்ற தம்பியிடம் பரதன் வரம் வேண்டல்

தொழுது நின்ற தன் தம்பியை, தோய் கணீர்
எழுது மார்பத்து இறுகத் தழுவினான்,
அழுது, ‘வேண்டுவது உண்டு, ஐய! அவ் வரம்,
பழுது இல் வாய்மையினாய்! தரற்பாற்று’ என்றான். –217-

தொழுது நின்ற தன் தம்பியை- வணங்கி நின்ற தன் தம்பி
சத்துருக்கனை; தோய் கணீர் எழுது மார்பத்து இறுகத்
தழுவினான் – நிறைந்த கண்ணீரால் மெழுகப் பெற்ற தன்
மார்பில் பரதன் நன்கு தழுவி; அழுது- அவலித்து; ஐய! –
அய்யனே!; வேண்டுவது உண்டு- நின்பால் நான் வேண்டிக்
கொள்வது ஒன்று உண்டு; அவ்வரம் – அந்த வரத்தை; பழுது
இல் வாய்மையினாய்! – குற்றமற்ற சத்தியம் உடையவனே!;
தரற்பாற்று- தரவேண்டும்; என்றான்-.

—————

‘”என்னது ஆகும்கொல், அவ் வரம்?” என்றியேல்,
சொன்ன நாளில் இராகவன் தோன்றிலன்;
மின்னு தீயிடை யான் இனி வீடுவென்;
மன்னன் ஆதி; என் சொல்லை மறாது’ என்றான். –218-

‘அவ்வரம் என்னது ஆகும் கொல்’ என்றியேல் – அவ்வரம்
யாதாகுமோ என்று கேட்பாயானால்; இராகவன் சொன்ன நாளில்
தோன்றிலன் – இராமன் குறித்த நாளில் வரவில்லை; யான்
மின்னு தீயிடை வீடுவென் – யான் ஒளிரும் நெருப்பின் உயிர்
துறப்பென்;என் சொல்லை மறாது மன்னன் ஆதி – என்
வார்த்தை மறுக்காமல் அயோத்திக்கு அரசனாக இருந்து
ஆள்வாயாக; என்றான் -.

———–

சத்துருக்கன் வருந்தி உரைத்தல்

கேட்ட தோன்றல், கிளர் தடக் கைகளால்
தோட்ட தன் செவி பொத்தி, துணுக்குறா,
ஊட்டு நஞ்சம் உண்டான் ஒத்து உயங்கினான்;
நாட்டமும் மனமும் நடுங்காநின்றான். –219-

கேட்ட தோன்றல் – பரதன் உரை கேட்ட சத்துருக்கன்;
கிளர் தடக்கைகளால் தோட்ட தன் செவி பொத்தி- மேல்
எழுந்த நீண்ட தன் கைகளால் துளையுடைய தன் காதுகளை
மூடிக்கொண்டு; துணுக்குறா- விதிர்ப்பு எய்தி; ஊட்டு நஞ்சம்
உண்டான் என்று உயங்கினான் – பிறர் ஊட்டிய விடத்தை
உண்டவனைப் போலச் சோர்ந்தான்; நாட்டமும் மனமும்
நடுங்கா நின்றான்- கண்ணும் மனமும் நடுங்குகின்றவனாக
ஆனான்.

————-

விழுந்து, மேக்கு உயர் விம்மலன், வெய்து உயிர்த்து,
எழுந்து, ‘நான் உனக்கு என்ன பிழைத்துளேன்?
அழுந்து துன்பத்தினாய்!’ என்று அரற்றினான்-
கொழுந்து விட்டு நிமிர்கின்ற கோபத்தான். –220-

விழுந்து – கீழே விழுந்து; மேக்கு உயர் விம்மலன் –
மேலும் மேலும் விம்மி; வெய்துயிர்த்து எழுந்து- பெரிதாக
மூச்சுவிட்டு எழுந்து; அழுந்து துன்பத்தினாய்! – துன்பத்தில்
அழுந்தியவனே! நான் உனக்கு என்ன பிழைத்துளேன் – நான்
உனக்கு என்ன தவறு செய்தேன்; என்று அரற்றினான் – என்று
புலம்பி; கொழுந்து விட்டு நிமிர்கின்ற கோபத்தான்- மேல சுவாலை
விட்டு உயர்கின்ற கோபம் உடையவன் ஆனான்.

——–

‘கான் ஆள நிலமகளைக் கைவிட்டுப் போனானைக் காத்து, பின்பு
போனானும் ஒரு தம்பி; “போனவன் தான் வரும் அவதி போயிற்று” என்னா,
ஆனாத உயிர் விட என்று அமைவானும் ஒரு தம்பி; அயலே நாணாது,
யானாம் இவ் அரசு ஆள்வென்? என்னே, இவ் அரசாட்சி! இனிதே அம்மா! –221-

கான் ஆள- காட்டில் வாழ; நில மகளைக் கைவிட்டுப்
போனானைக் காத்து, பின்பு போனானும் ஒரு தம்பி – பூதேவியை
வேண்டாம் என்று உதறிச் சென்ற இராமனைக் காப்பாற்றி அநுமன்
பின்னே போனவனும் ஒரு தம்பியாகிய இலக்குவன்; போனவன்தான்
வரும் அவதி போயிற்று என்னா – காடு போன இராமன் தான்
திரும்ப வரக் குறித்த காலம் கடந்தது என்று சொல்லி; ஆனாத உயிர்
விட என்று அமைவானும் ஒரு தம்பி – அமைந்திராத ஆற்றாமை
உடைய உயிரை விட்டுவிட என்று முயல்கின்றவனும் ஒரு தம்பியாகிய
பரதன்; அயலே நாணாது யான் ஆம் இவ் அரசு ஆள்வென் –
(இவர்களுடனேயே பிறந்து) மற்றொருவனாகிய யான் இந்த
நாணமில்லாமல் அரசை ஆளுவேனாம்; இந்த அரசாட்சி என்னே –
இந்த அரசாட்சி யாதாக உள்ளது; இனிதே – மிக இனிதே.

——–

‘”மன்னின் பின், வள நகரம் புக்கு இருந்து வாழ்ந்தானே, பரதன் என்னும்
சொல் நிற்கும்” என்று அஞ்சி, புறத்து இருந்தும், அருந் தவமே தொடங்கினாயே!
“என்னின் பின் இவன் உளனாம்” என்றே உன் அடிமை உனக்கு இருந்ததேனும்,
உன்னின் பின் இருந்ததுவும், ஒரு குடைக் கீழ் இருப்பதுவும் ஒக்கும்’ என்றான். –222-

மன்னின் பின் வளநகரம் புக்கு இருந்து வாழ்ந்தானே
பரதன் என்னும் சொல் நிற்கும் – இராமனாகிய அரசன் காடு
போன பிறகு அயோத்தி நகரம் புகுந்து அரசு வீற்றிருந்து
வாழ்ந்தான் இந்த பரதன் என்ற வார்த்தை உலகில் உண்டாகும்;
என்று அஞ்சி புறத்து இருந்தும் அருந்தவமே
தொடங்கினாயே- என்று பயந்து அயோத்திக்குப் புறத்தே
நந்தியம்பதியில் இருந்தும் அரிய தவத்தையே செய்யத்
தொடங்கினாய் அல்லவா?; என்னின் பின் இவன் உளனாம்
என்றே – நான் அக்கினிப் பிரவேசம் செய்து உயிரை விட்டபிறகு
இவன் பிழைத்திருப்பான் என்று; உன் அடிமை உனக்கு இருந்த
தேனும்- உன் அடியவனான என் விஷயத்தில் உனக்கு எண்ணம்
இருந்தாலும்; உன்னின் பின் இருந்ததுவும்- நீ இறந்த பிறகு
உனக்குப்பிறகு உடன் இறவாமல் உயிரோடு இருந்ததுவும்; ஒரு
குடைக்கீழ் இருப்பதுவும் ஒக்கும் என்றான் – நீ உள்ளபோதே
உன்னை அகற்றி ஒரு வெண் கொற்றக் குடைகீழ் நான் இருந்து
அரசாள்வதும் ஒன்றுதானே என்று கூறி வருந்தினான்.

————-

சத்துருக்கனுக்குப் பரதன் சமாதானம் கூறி, எரி அமைக்குமாறு பணித்தல்

முத்து உருக் கொண்டு அமைந்தனைய முழு வெள்ளிக் கொழு நிறத்து, முளரிச் செங்கண்,
சத்துருக்கன் அஃது உரைப்ப, ‘அவன் இங்குத் தாழ்க்கின்ற தன்மை, யான் இங்கு
ஒத்திருக்கலால் அன்றே? உலந்ததன்பின், இவ் உலகை உலைய ஒட்டான்;
அத் திருக்கும் கெடும்; உடனே புகுந்து ஆளும் அரசு; எரி போய் அமைக்க’ என்றான். –223-

முத்து உருக் கொண்டு அமைந்தனைய முழு வெள்ளிக் கொழு
நிறத்து முளரிச் செங்கண் சத்துருக்கன் அ ஃது உரைப்ப- முத்து
வடிவம் கொண்டு செய்தது போன்ற முழுமையான வெள்ளியின்
கொழுவிய வெண்மை நிற மேனியை உடைய தாமரை போலும்
கண்ணான் ஆகிய சத்துருக்கன் அந்த வார்த்தைகளைச் சொல்ல; (அது
கேட்ட பரதன்) அவன் இங்குத் தாழ்க்கின்ற தன்மை- அந்த
இராமன் நாடு வரத் தாமதிக்கின்ற காரணம்; யான் இங்கு
ஒத்திருக்கலாம் அன்றே – யான் இங்கு அரசாட்சியோடு கூடி
இருக்கின்ற தன்மையால் அல்லவா?; உலந்ததன்பின் இவ் உலகை
உலைய ஒட்டான் – நான் இறந்தபிறகு இந்த உலகத்தை வருந்தும்படி
விடமாட்டான்; அத்திருக்கும் கெடும் – அந்த மாறுபட்ட நினைவும்
அவனை விட்டுப் போகும்; உடனே புகுந்து அரசு ஆளும் – உடனே
விரைந்து அயோத்திக்குள் நுழைந்து அரசை ஆள்வான் (ஆதலின்
சத்துருக்க!); ‘போய் எரி அமைக்க’ என்றான் – நீ சென்று
நெருப்பைத் தயார் செய்வாயாக என்று சொன்னான்.

—————

செய்தி அறிந்து கோசலை விரைந்து ஓடி வருதல்

அப்பொழுதின், அவ் உரை சென்று, அயோத்தியினின் இசைத்தலுமே, அரியை ஈன்ற
ஒப்பு எழுத ஒண்ணாத கற்புடையாள், வயிறு புடைத்து, அலமந்து ஏங்கி,
‘இப்பொழுதே உலகு இறக்கும், யாக்கையினை முடித்து ஒழிந்தால், மகனே!’ என்னா,
வெப்பு எழுதினாலனைய மெலிவுடையாள் கடிது ஓடி, விலக்க வந்தாள் –224-

அப்பொழுதின் – அந்த நேரத்தில்; இவ் உரை சென்று-
பரதன் கூறிய இச்சொல் (காற்றுவாக்கில்) சென்று;
அயோத்தியினின் இசைத்தலுமே – அயோத்தி நகரத்தில்
சொல்லப்பட்டதுமே; அரியை ஈன்ற ஒப்பு எழுத ஒண்ணாத
கற்புடையாள், வெப்பு எழுதினால் அன்ன மெலிவுடையாள்-
திருமாலைப் பெற்ற உவமை சொல்ல முடியாத கற்புடையாளும்
பிரிவுத் துயரத்தினால் வெம்மை எழுதி வைத்தாற்போன்ற
தளர்ச்சியடைந்த திருமேனியுடையாளும் ஆகிய கோசலை; வயிறு
புடைத்து, அலமந்து, ஏங்கி – வயிற்றில் அடித்துக்கொண்டு,
மனம் சுழன்று, இரங்கி; மகனே! யாக்கையினை முடித்து ஒழிந்தால்
இப்பொழுதே உலகு இறக்கும் என்னா – பரதனே! நீ உன்
உடலை (எரியில் வீழ்த்து) அழித்து ஒழிந்து போனால் அக்கணமே
உலகம் முழுதும் இறந்துபடும் என்று சொல்லி; விலக்க-அவனைத்
தடுக்க; கடிது ஓடி வந்தாள்- விரைந்து ஓடி வந்தாள்.

———

மந்திரியர், தந்திரியர், வள நகரத்தவர், மறையோர், மற்றும் சுற்ற,
சுந்தரியர் எனப் பலரும் கை தலையில் பெய்து இரங்கித் தொடர்ந்து செல்ல,
இந்திரனே முதல் ஆய இமையவரும் முனிவரரும் இறைஞ்சி ஏத்த,
அந்தர மங்கையர் வணங்க, அழுது அரற்றி, பரதனை வந்து அடைந்தாள் அன்றே. -225-

(அவள்) மந்திரியர், தந்திரியர், வள நகரத்தவர், மறையோர்,
மற்றும் சுற்ற – அமைச்சர், சேனைத் தலைவர், அயோத்தி நகர
மாந்தர், அந்தணர் மற்றும்உள்ளோர் தன்னைச் சுற்றிவர; சுந்தரியர்
எனைப் பலரும் கை தலை மேல் பெய்து இரங்கித் தொடர்ந்து
செல்ல – மகளிர் முதல் அனைவரும் தலைமேல் கையால்
அடித்துக்கொண்டு மனமிரங்கி அவனைப் பின்பற்றிச் செல்ல;
இந்திரனே முதல் ஆய இமையவரும் முனிவரரும் இறைஞ்சி
ஏத்த- இந்திரன் முதலான தேவர்களும் முனிவர்களும் பரம்
பொருளை வணங்கித் தோத்திரம் செய்ய; அந்தர மங்கையர்
வணங்க- தேவப் பெண்கள் வணங்க; அழுது அரற்றி – அழுது
பலவாறு புலம்பி; பரதனை வந்து அடைந்தாள் – பரதனை வந்து
சேர்ந்தாள்.

—————

கோசலை பரதனைத் தீயில் விழாதபடி பற்றிக் கொண்டு, தடுத்துக் கூறுதல்

விரி அமைத்த நெடு வேணி புறத்து அசைந்து வீழ்ந்து ஓசிய, மேனி தள்ள,
எரி அமைத்த மயானத்தை எய்துகின்ற காதலனை இடையே வந்து,
சொரிவு அமைப்பது அரிது ஆய மழைக் கண்ணாள் தொடருதலும், துணுக்கம் எய்தா,
பரிவு அமைத்த திரு மனத்தான் அடி தொழுதான், அவள் புகுந்து, பற்றிக்கொண்டாள்.–226-

விரி அமைத்த நெடு வேணி புறத்து அசைந்து வீழ்ந்து
ஓசிய – விரிந்து பொருந்திய நீண்ட சடை முதுகின்கண் அசைந்து
விழுந்து வளைய; மேனி தள்ள- உடம்பு தடுமாற; எரி அமைத்த
மயானத்தை எய்துகின்ற காதலனை – நெருப்பு உண்டாக்கிய
இடுகாட்டை அடைகின்ற அன்பு மகனாகிய பரதனை; இடையே
வந்து- நடுவில் புகுந்து வந்து; சொரிவு அமைப்பது அரிது ஆய
மழைக் கண்ணாள் தொடருதலும் – சொரிந்து உண்டாக்குதல்
இயலாது என்று சொல்லும்படி நீர் மழை போல ஒழுகுகின்ற
கண்ணுடைய கோசலை பின்பற்றிக் கொள்ளுதலும்; பரிவு அமைந்த
திரு மனத்தான் – அன்பால் நிறைந்தமைந்த நன்மனம் உடைய
பரதன்; துணுக்கம் எய்தா – நடுக்கமுற்று; அடிதொழுதான்-
அவள் காலில் வீழ்ந்து வணங்கினான்; அவள் புகுந்து பற்றிக்
கொண்டாள் – கோசலை அவனிடையே புகுந்து அவனை இறுகப்
பிடித்துக் கொண்டாள்.

—————-

‘மன் இழைத்ததும், மைந்தன் இழைத்ததும்,
முன் இழைத்த விதியின் முயற்சியால்;
பின் இழைத்ததும், எண்ணில், அப் பெற்றியால்;
என் இழைத்தனை, என் மகனே?’ என்றாள். –227-

மன் இழைத்ததும் – தயரதன் இறந்ததும்; மைந்தன்
இழைத்ததும் – இராமன் காடு போயதும்; முன் இழைத்த
விதியின் முயற்சியால் – முன்னால் செய்தமைத்த வினையாகிய
விதியின் விளைவால் நடந்தவையாகும்; பின் இழைத்ததும்-
பின் குறித்த காலத்தில் வாராமையும்; எண்ணில்- யோசித்தால்;
அப்பெற்றியால் – அதுபோல விதியின் விளைவே; என் மகனே!
– என் மகனாகிய பரதனே (விதியாலன்றி) என் இழைத்தனை –
நீயாக என்ன செய்யத் துணிந்தாய்? என்றாள்.
தாமாக இயல்பாக நடப்பனவற்றை விதியின் விளைவு என்றும்
நாமாக வலிந்து மேற்கொண்டு செய்வனவற்றை வினை என்றும்
வேறு பிரித்துணரலாம்.

————-

‘நீ இது எண்ணினையேல், நெடு நாடு எரி
பாயும்; மன்னரும் சேனையும் பாய்வரால்;
தாயர் எம் அளவு அன்று; தனி அறம்
தீயின் வீழும்; உலகும் திரியுமால். –228-

(பரதா!) நீ இது எண்ணினையேல் நெடுநாடு எரி பாயும்
– நீ எரியில் வீழ்ந்து உயிர் துறப்பதாக நினைத்தால் இப்பெரிய
நாட்டில் உள்ளார் அனைவரும் எரி பாய்வர்; மன் அருஞ்
சேனையும் பாயும் – மன்னர்களும் அரிய சேனைகளும் பாயும்;
தாயர் எம் அளவு அன்று- தாயர்களாகிய எங்கள் அளவில்
மாத்திரம் நிற்பது அன்று; தனி அறம் தீயின் வீழும் –
ஒப்பற்ற தருமமே எரியில் வீழும்;உலகும் திரியும்- உலகம்
நிலைகெட்டுச் சுழலும்.

———-

‘தரும நீதியின் தன் பயன் ஆவது உன்
கருமமே அன்றிக் கண்டிலம், கண்களால்;
அருமை ஒன்றும் உணர்ந்திலை; ஐய! நின்
பெருமை, ஊழி திரியினும், பேருமோ? -229-

ஐய! – பரதனே!; தரும நீதியின் தன் பயன் ஆவது உன்
கருமம் அன்றிக் கண்டிலம் கண்களால் – அற நீதியின் பயன்பாடு
என்பது உன் செயலே அல்லாமல் எங்கள் கண்களால் வேறு
காணவில்லை; அருமை ஒன்றும் உணர்ந்திலை – நின்னுடைய
அருமையை ஒருசிறிதும் உணரவில்லை; நின் பெருமை ஊழி
திரியினும் பேருமோ – உனது பெருமை ஊழிக்காலம் மாறுபடினும்
மாறுபடாது.

————

‘எண் இல் கோடி இராமர்கள் என்னினும்,
அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ?
புண்ணியம் எனும் நின் உயிர் போயினால்,
மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ? –230-

எண் இல் கோடி இராமர்கள் என்னினும் அண்ணல் நின்
அருளுக்கு அருகு ஆவரோ?- கணக்கற்ற கோடியளவான இராமர்கள்
ஒன்று சேர்ந்தாலும் பெருமைக்குரியவனே உன் அருளுக்குச்
சமானமாக அருகில் வைத்துக் காணவும் ஒவ்வார்; புண்ணியம் எனும்
நின் உயிர் போயினால், மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ
– புண்ணிய வடிவாகிய நின் உயிர் போனால் நிலமும் ஆகாயமும்
ஏனைய உயிர்களும் வாழா, இறந்துபடும்.

——————

‘இன்று வந்திலனே எனின், நாளையே
ஒன்றும் வந்து, உனை; உன்னி, உரைத்த சொல்
பின்றும் என்று உணரேல்; பிழைத்தான் எனின்,
பொன்றும் தன்மை புகுந்தது போய்’ என்றாள். -231-

(இராமன்) இன்று வந்திலனே எனின்- இன்று வரவில்லை
என்றால்; நாளையே வந்து உனை ஒன்றும் – நாளைக்கே வந்து
உனைச் சேர்வான்; உன்னி உரைத்த சொல் – அவன் கருதிச்
சொன்ன வார்த்தையில்; பின்றும் என்று உணரேல்-
பின்னிட்டு வாராதிருப்பான் என்று உணராதே; பிழைத்தான்
எனின் – அப்படித் தவறுவான் ஆயின்; போய் பொன்றும்
தன்மை புகுந்தது – வந்து அவனே அழியும் அபாயத்தன்மை
நேர்ந்தது (ஆகும்); என்றாள்.

———

‘ஒருவன் மாண்டனன் என்று கொண்டு, ஊழி வாழ்
பெரு நிலத்துப் பெறல் அரும் இன் உயிர்க்
கருவும் மாண்டு அறக் காணுதியோ?-கலைத்
தருமம் நீ அலது இல் எனும் தன்மையாய்! –232-

கலைத் தருமம் நீஅலது இல் எனும் தன்மையாய்! –
சாத்திரங்களிற் சொல்லப்படும் தருமம் நீ அல்லாமல் வேறு இல்லை
என்று கூறத்தக்க குண நலம் உடையாய்!; ஒருவன் மாண்டனன்
என்று கொண்டு – ஒரு இராமன் மாண்டான் என்பதாக மனத்தில்
கருதி (உன் உயிரை மாய்த்து அதனால்); பெரு நிலத்து –
இப்பூஉலகில்; ஊழிவாழ்- நெடுங்காலம் வாழக்கூடிய; பெறல்
அரும் இன்னுயிர்க் கருவும் மாண்டு அறக் காணுதியோ –
பெறுதற்கரிய இனிய உயிரின் தோற்றமும் அடியோடு இல்லாது
போகச் செய்யப் பார்க்கிறாயா? (அது சரியன்று)

———

‘”இறக்கையும், சிலர் ஏகலும், மோகத்தால்
பிறக்கையும், கடன்” என்று, பின் பாசத்தை
மறக்கைகாண், மகனே! வலி ஆவது; என்,
துறக்கைதானும்?’ என்றாள்-மனம் தூய்மையாள். -233-

மனம் தூய்மையாள்- தூய மனம் உடைய கோசலை; மகனே! –
பரதனே!; இறக்கையும் – இறப்பதும்; சிலர் ஏகலும் – சிலர்
உலகைப் பிரிந்து செல்லுதலும்; மோகத்தால் பிறக்கையும் –
ஆசையின் காரணமாக மீண்டு பிறப்பெடுப்பதும்; கடன் – உலக
முறைமை; என்று- எனக்கருதி; பின் பாசத்தை மறக்கை வலி
ஆவது காண் – பிறகு பாசமாகிய பற்றை மறந்துவிடுதல் தான்
உள்ள வலிமை என்பதாகும் என அறிவாயாக; துறக்கை தானும் –
துறப்பது என்பதும் (அதுவே); என்றாள்.

————-

கோசலையின் உரையைப் பரதன் மறுத்து உரைத்தல்

‘”மைந்தன் என்னை மறுத்து உரைத்தான்” எனல்;
எந்தை மெய்ம்மையும், இக் குலச் செய்கையும்,
நைந்து போக, உயிர் நிலை நச்சிலேன்;
முந்து செய்த சபதம் முடிப்பெனால். –234-

(அம்மா!) மைந்தன் என்னை மறுத்து உரைத்தான் எனல்-
என் மகன் என் சொல்லை மறுத்துப் பேசிவிட்டான் என்று கருதாதே;
எந்தை மெய்ம்மையும் இக்குலச் செய்கையும் நைந்து போக –
என் தந்தையின் சத்தியமும் இக்குலத்தின் ஒழுக்கமும் தேய்ந்து அழிய;
உயிர் நிலை நச்சிலேன் – உயிர் வாழ விரும்பவில்லை; முந்து
செய்த சபதம் முடிப்பன் – சித்திரகூடத்தில் செய்த சபதத்தை
முடிப்பேன்;

———

‘யானும், மெய்யினுக்கு இன் உயிர் ஈந்து போய்,
வானுள் எய்திய மன்னவன் மைந்தனால்;
கானுள் எய்திய காகுத்தற்கே கடன்?
ஏனையோர்க்கும் இது இழுக்கு இல் வழக்கு அன்றோ? -235-

யானும் – மெய்யினுக்கு இன் உயிர் ஈந்து போய் வானுள்
எய்திய மன்னவன் மைந்தன் – நானும் வாய்மைக்குத்
தன்னுயிரைக் கொடுத்துச் சென்று விண்ணுலகடைந்த தயரதன்
மகன்தான்; (வாய்மை காப்பது என்பது) கானுள் எய்திய
காகுத்தற்கே கடன்?- காட்டிற்குச் சென்ற இராமனுக்கு மட்டுமா
முறைமை (எனக்கில்லையா); ஏனையோர்க்கும் – தயரதன்
பிள்ளைகளாய என் போன்றவர்களுக்கும்; இது – வாய்மை காப்பது;
இழுக்கு இல் வழக்கு அன்றோ? – குற்றம் இல்லாத முறைமை
அல்லவா (என் சபத வாய்மை காத்து தயரதன் மகன் என்று
குலத்தின் ஒழுக்கத்தை நிலை நிறுத்துவேன் என்றான்.)

———-

‘தாய் சொல் கேட்டலும், தந்தை சொல் கேட்டலும்,
பாசத்து அன்பினைப் பற்று அற நீக்கலும்,
ஈசற்கே கடன்; யான் அஃது இழைக்கிலேன்;
மாசு அற்றேன், இது காட்டுவென், மாண்டு’ என்றான். –236-

தாய் சொல் கேட்டலும், தந்தை சொல் கேட்டலும் பாசத்து
அன்பினைப் பற்று அற நீக்கலும்- இரத்த பாசத்தால் உறவு
முறையால் உள்ளதாகிய அன்பை அடியோடு போக்கிக் கொள்ளுதலும்
ஆகிய இவை; ஈசற்கே கடன் – இராமனுக்கே செய்யும் முறைமையாகும்;
யான் அஃது இழைக்கிலேன்- நான் அதனைச் செய்யமாட்டேன்; மாசு
அற்றேன் – குற்றம் அற்றவன் யான்; இது மாண்டு காட்டுவென் –
இதனை இறந்து அனைவர்க்கும் அறிவிப்பேன்; என்றான்.

———-

அனுமன் தோன்றுதல்

என்று தீயினை எய்தி, இரைத்து எழுந்து
ஒன்று பூசலிடும் உலகோருடன்
நின்று பூசனை செய்கின்ற நேசற்கு,
குன்று போல் நெடு மாருதி கூடினான். -237-

என்று தீயினை எய்தி – என்று சொல்லி, நெருப்பை அணுகி;
இரைத்து எழுந்து ஒன்று பூசலிடும் உலகோருடன் – கூக்குரலிட்டு
சேர்ந்து ஆரவாரம் செய்து அழுகின்ற உலக மக்களுடன்; நின்று
பூசனை செய்கின்ற நேசற்கு – சேர்ந்து நின்று விழுவதற்கு
முன்பாக அக்கினியைப் பூசிக்கின்ற அன்பனாகிய பரதனுக்கு முன்;
குன்றுபோல் நெடு மாருதி கூடினான் – மலை போன்ற
பேருருவுடைய அனுமன் வந்து சேர்ந்தான்.

———

இராமனது வருகையை உரைத்து, அனுமன் எரியை அவித்தல்

‘ஐயன் வந்தனன்; ஆரியன் வந்தனன்;
மெய்யின் மெய் அன்ன நின் உயிர் வீடினால்,
உய்யுமே, அவன்?’ என்று உரைத்து, உள் புகா,
கையினால் எரியைக் கரி ஆக்கினான். –238-

(அனுமன்) அய்யன் வந்தனன்; ஆரியன் வந்தனன் –
தலைவனான இராமன் வந்தான் மேலோன் வந்தான்; மெய்யின்
மெய் அன்ன நின் உயிர் வீடினால் அவன் உய்யுமே –
சத்தியத்திற்கு உடல் போன்றுள்ள உனது உயிர் அழிந்துபட்டால்
அந்த இராமன் உயிர் வாழ்வானா?; என்று உரைத்து உள் புகா –
என்று சொல்லி உள்ளே நுழைந்து; கய்யினால் எரியைக் கரி
ஆக்கினான்- தன் கரங்களாற் பிசைந்து நெருப்பை அணைத்துக்
கரியாக ஆகுமாறு செய்துவிட்டான்.

இராமன் வந்தான் என்பதற்கு நெருப்பைக் கையால் அணைத்து
சான்றாக (கரியாக) ஆக்கினான் என்றும் பொருள் கொள்ளுமாறு
‘கரியாக்கினான்’ என்றது ஓர் நயம்.

————-

ஆக்கி, மற்று அவன் ஆய் மலர்த் தாள்களைத்
தாக்கத் தன் தலை தாழ்ந்து வணங்கி, கை
வாக்கின் கூடப் புதைத்து, ‘ஒரு மாற்றம் நீ
தூக்கிக் கொள்ளத் தகும்’ எனச் சொல்லினான். -239-

ஆக்கி- அவ்வாறு நெருப்பை அவித்துக் கரியாக்கி; மற்று
அவன் ஆய்மலர்த் தாள்களைத் தாக்கத் தன்தலை தாழ்ந்து
வணங்கி – அப்பரதனது அழகிய மலர் போன்ற திருவடிகளை
மோதும்படி நெருக்கமாகத் தன் தலையால் தாழ்ந்து வணக்கம் செய்து; கை
வாக்கின் கூடப் புதைத்து – கையால் வாயை நன்கு மூடிக்
கொண்டு; ஒரு மாற்றம் நீ தூக்கிக் கொள்ளத் தகும்’ எனச்
சொல்லினான் – ஒரு சொல் நீ ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளத்
தகுவது என்று சொன்னான்;

———

‘இன்னம் நாழிகை எண்-ஐந்து உள, ஐய!
உன்னை முன்னம் வந்து எய்த உரைத்த நாள்;
இன்னது இல்லைஎனின், அடி நாயினேன்
முன்னம் வீழ்ந்து, இவ் எரியில் முடிவெனால். –240-

ஐய! – பரதனே!; உன்னை முன்னம் வந்து எய்த உரைத்த
நாள்- உன்னை முன்பு வந்து அடைவதாகச் சித்திர கூட மலையில்
சொல்லிய நாள்; இன்னம் எண் ஐந்து நாழிகை உளது – முடிவுற
இன்னமும் நாற்பது நாழிகை உள்ளது; இன்னது இல்லை எனின்-
அப்படி இல்லை என்று மெய்ப்பித்தால்; அடி நாயினேன் – நாயிற
கடையனான யான்; இவ் எரியில் முன்னம் வீழ்ந்து முடிவெனால் –
இந்நெருப்பில் உனக்கு முன்பாக விழுந்து இறப்பேன்.

————-

‘ஒன்றுதான் உளது; உன் அடியேன் சொலால்,
நின்று தாழ்த்தருள், நேமிச் சுடர் நெடுங்
குன்று தாழ்வளவும்; இது குன்றுமேல்,
பொன்றும், நீயும், உலகமும்-பொய் இலாய்! -241-

பொய் இலாய்! – சத்தியவானே; ஒன்றுதான் உளது – நான் கூற
வேண்டுவது ஒன்றுதான் இருக்கிறது; உன் அடியேன் சொலால் –
உன்னுடைய அடியேனாகிய என் சொல்லால்; நேமிச் சுடர் நெடுங்
குன்று தோன்றளவும் – வட்டமான ஒளி வடிவுடைய சூரியன்
உதயமலையில் தோன்றுகின்ற அளவு வரையும்; நின்று தாழ்த்தருள்-
தாமதித்து நின்றருளுவாயாக;இது குன்று மேல் -இராமன் இதற்குள்
வருவான் என்ற என் வார்த்தை பழுது படுமானால்; நீயும் உலகமும்
பொன்றும் – நீயும் ஏன் உலகமும் கூட அழிந்துபடும் (இது சத்தியம்)

தன்னைப் பரதனது அடியேன் என்று சொல்லி பரதனை அன்பாற்
பிணித்த அனுமனது சொற் சாதுரியம் காண்க. அவன் சொல்லின்
செல்வன் அன்றோ.

———-

‘எங்கள் நாயகற்கு இன் அமுது ஈகுவான்,
பங்கயத்துப் பரத்துவன் வேண்டலால்,
அங்கு வைகினன் அல்லது, தாழ்க்குமோ?
இங்கண், நல்லது ஒன்று இன்னமும் கேட்டியால்: -242-

எங்கள் நாயகற்கு – எங்கள் பெருமானாகிய இராமனுக்கு; இன்
அமுது ஈகுவான் – இனிய உணவு தருவதற்காக; பங்கயத்துப்
பரத்துவன் வேண்டலால்- தாமரை மாலை உடைய பரத்துவாச
முனிவன் வேண்டியபடியால்; அங்கு வைகினன் அல்லது தாழ்க்குமோ
– அங்கே பரத்துவாச ஆச்சிரமத்தில் தங்கினானே அல்லாமல்
தாமதிப்பானா? நல்லது ஒன்று இன்னமும் இங்கண் கேட்டி-
நல்லதாகிய இன்னும் உள்ள ஒரு செய்தியை இவ்விடத்துக் கேட்பாயாக.

————–

அனுமன் இராமனது மோதிரத்தை அடையாளம் காட்ட, அங்குள்ளார் அனைவரும் மகிழ்தல்

‘அண்டர் நாதன் அருளி அளித்துளது
உண்டு ஓர் பேர் அடையாளம்; உனக்கு அது
கொண்டு வந்தனென்; கோது அறு சிந்தையாய்!
கண்டு கொண்டருள்வாய்’ எனக் காட்டினான். –243-

கோது அறு சிந்தையாய்! – குற்றம் அற்ற மனம் உடைய
பரதனே!; அண்டர் நாதன் அருளி அளித்துளது ஓர் பேர்
அடையாளம் உண்டு, அது உனக்கு கொண்டு வந்தனென்,
கண்டு கொண்டருள்வாய் எனக் காட்டினான் – தேவதேவனாய்
இராமபிரான் அருள் செய்து அன்பினால் தந்தது ஒரு பெரிய
அடையாளம் இருக்கிறது; அதனை உனக்காகக் கொண்டு வந்தேன்.
பார்த்துப் பெற்றுக்கொண்டருள்வாயாக’ என்று சொல்லி
கணையாழியைக் காண்பித்தான்.

——————-

காட்டிய மோதிரம் கண்ணில் காண்டலும்,
மூட்டு தீ வல் விடம் உற்று முற்றுவார்க்கு
ஊட்டிய நல் மருந்து ஒத்த தாம் அரோ,
ஈட்டிய உலகுக்கும் இளைய வேந்தற்கும், –244-

காட்டிய மோதிரம் கண்ணில் காண்டலும்- அனுமன்
காண்பித்த மோதிரம் கண்ணில் கண்ட அளவில்; ஈட்டிய
உலகுக்கும் இளைய வேந்தற்கும் – அங்கு தொகுக்கப்பட்ட
உலக மக்களுக்கும் பரதனுக்கும் அது; மூட்டு தீ வவ்விடம்
உற்று முற்றுவார்க்கு ஊட்டிய நல் மருந்து ஒத்தது- எரிகின்ற
தன்மையை மேலும் அதிகப்படுத்தும் வலிய விடம் ஏறப் பெற்று
முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கு அது அடியோடு நீங்க
ஊட்டப்பெற்ற நல்ல மருந்தினை ஒத்ததாயிற்று.

——————

அழுகின்ற வாய் எலாம் ஆர்த்து எழுந்தன;
விழுகின்ற கண் எலாம் வெள்ளம் மாறின;
உழுகின்ற தலை எலாம் உயர்ந்து எழுந்தன;
தொழுகின்ற, கை எலாம், காலின் தோன்றலை. –245-

அழுகின்ற வாய் எலாம் ஆர்த்து எழுந்தன- இதுவரை அழுது
கொண்டிருந்த வாய்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து எழுந்தன;
விழுகின்ற கண் எலாம் வெள்ளம் மாறின – நீர் விழுகின்ற அழுத
கண்கள் வெள்ளநீர் மாறப் பெற்றன; உழுகின்ற தலை எலாம் உயர்ந்து
எழுந்தன- கீழே உழுவதைப் போலச் சாய்ந்த தலைகள் மேல் உயர்ந்து
நிமிர்ந்தன; கை எலாம் – கைகள் எல்லாம்; காலின் தோன்றலைத்
தொழுகின்ற – காற்றின் மகனாகிய அனுமனைத் தொழுகின்றன.

—————

மோதிரம் பெற்ற பரதனது பெரு மகிழ்ச்சி

மோதிரம் வாங்கி, தன் முகத்தின்மேல் அணைத்து,
‘ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோ?’ எனா
ஓதினர் நாண் உற, ஓங்கினான்-தொழும்
தூதனை முறை முறை தொழுது துள்ளுவான். –246-

தொழும் தூதனை முறை முறை தொழுது துள்ளுவான்-
மோதிரம் கொடுத்துத் தன்னை வணங்கிய தூதனாகிய அநுமானைப்
பன்முறை வணங்கித் துள்ளுகின்ற பரதன்; மோதிரம் வாங்கி, தன்
முகத்தின் மேல் அணைத்து – அநுமன் காட்டிய மோதிரத்தை
எடுத்துத் தன் முகத்தின் மேலாக அணைத்துக் கொண்டு; ஆதரம்
பெறுவதற்கு ஆக்கையோ? எனா ஓதினர் – இராமனைப் பிரிந்து
வருந்திய இவன் உடம்பு அவன் அன்பைப் பெறுவதற்குரிய வலிமை
உடைய உடம்புதானா இது என்று கூறியவர்கள்; நாண் உற-
வெட்கம் அடையும்படி;ஓங்கினான் – உடல் பூரிக்கப பெற்றான்.

—————

ஆதி வெந் துயர் அலால், அருந்தல் இன்மையால்,
ஊதுறப் பறப்பதாய் உலர்ந்த யாக்கை போய்,
‘ஏதிலன் ஒருவன்கொல்’ என்னல் ஆயது;
மாதிரம் வளர்ந்தன, வயிரத் தோள்களே. –247-

ஆதி வெந்துயர் அலால்- இராமனைப் பிரிந்தது முதலே கொடிய
துன்பமே; மகிழ்ச்சி இல்லாமையாலும்; அருந்தல் இன்மையால்
– நல்ல உணவுகளை உண்ணுதல் இன்மையாலும்; ஊதுறப் பறப்பதாய்
உலர்ந்த யாக்கை போய் – ஊதினால் பறப்பதாக வற்றிப் போன
உடம்பானது போய்; ஏதிலன் ஒருவன் கொல் என்னது ஆயது-
இவன் பரதனல்ல அயலான் ஒருவன் போலும் என்று ஐயுறும்படி
ஆயிற்று; வயிரத் தோள்கள் மாதிரம் வளர்ந்தன – அவனுடைய
வலிய தோள்கள் திசையளவும் வளர்ந்தன.

—————

அழும்; நகும்; அனுமனை ஆழிக் கைகளால்
தொழும்; எழும்; துள்ளும், வெங் களி துளக்கலால்;
விழும் அழிந்து; ஏங்கும்; போய் வீங்கும்; வேர்க்கும்; அக்
குழுவொடும் குனிக்கும்; தன் தடக் கை கொட்டுமால். –248-

அழும் – அழுவான்; நகும்- சிரிப்பான்; ஆழிக் கைகளால்
அனுமனை தொழும் – மோதிரம் உள்ள கையால் அனுமனைத்
தொழுவான்; எழும் – எழுவான்; வெங்களி துளக்கலால் துள்ளும்
– விரும்பும் மகிழ்ச்சி அவனை அசைப்பதால் துள்ளித் துடிப்பான்;
அழிந்து விழும் – உடனே சோர்ந்து விழுவான்; ஏங்கும்-
இரங்குவான்; போய் வீங்கும் – மேற்சென்று பூரிப்பான்;
வேர்க்கும் – வியர்ப்பான்; அக்குழுவொடும் குனிக்கும் –
மகிழும் கூட்டத்தாருடனே நடமிடுவான்; தன் தடக்கை கொட்டும்
– தனது நீண்ட கைகளைத் தட்டுவான்.

——–

‘ஆடுமின், ஆடுமின்!’ என்னும்; ‘ஐயன்பால்
ஓடுமின், ஓடுமின்!’ என்னும்; ‘ஓங்கு இசை
பாடுமின், பாடுமின்!’ என்னும்; ‘பாவிகாள்!
சூடுமின், சூடுமின், தூதன் தாள்!’ எனும். -249-

ஆடுமின், ஆடுமின்! என்னும் – ஆடுங்கள் என்பான்;
ஐயன்பால் ஓடுமின், ஓடுமின்! என்னும் – இராமனிடம்
ஓடுங்கள் என்பான்; ஓங்கு இசை பாடுமின், பாடுமின் என்னும்
– உயர்ந்த இசைப் பாடல்களைப் பாடுங்கள் என்பான்;
பாவிகாள்- பாவிகளே!; தூதன் தாள் சூடுமின், சூடுமின்!
என்னும்- தூதனாகிய அனுமன் அடியைத் தலையில் சூடுங்கள்
என்பான்.

———-

‘வஞ்சனை இயற்றிய மாயக் கைகையார்
துஞ்சுவர், இனி’ எனத் தோளைக் கொட்டுமால்;
குஞ்சித அடிகள் மண்டிலத்தில் கூட்டுற,
அஞ்சனக் குன்றின் நின்று ஆடும், பாடுமால். -250-

வஞ்சனை இயற்றிய மாயக் கைகையார்- இராமனுக்கு வஞ்சனை
செய்த தீய தன்மை கொண்ட கைகேயியானவர்; இனி துஞ்சுவர்
எனத் தோளைக் கொட்டும்- இனிமேல் இறந்து படுவர் என்று தன்
தோள்களைத் தட்டுவான்; குஞ்சித அடிகள் – வளைத்து மடித்த
கால்கள்; மண்டிலத்தில் கூட்டுற – வட்டமாகச் சேரும்படி;
அஞ்சனக் குன்றின் – மை மலைபோல; நின்று ஆடும், பாடும்
– நின்று கொண்டு ஆடுவான், பாடுவான்.

———-

வேதியர்தமைத் தொழும்; வேந்தரைத் தொழும்;
தாதியர்தமைத் தொழும்; தன்னைத் தான் தொழும்;
ஏதும் ஒன்று உணர்குறாது இருக்கும்; நிற்குமால்;-
காதல் என்றதுவும் ஓர் கள்ளின் தோன்றிற்றே! –251-

வேதியர் தமைத் தொழும் – அந்தணர்களை வணங்குவான்;
வேந்தரைத் தொழும் – அரசர்களை வணங்குவான்; தாதியர்
தமைத் தொழும் – பணி புரியும் சேடிப் பெண்களைத்
தொழுவான்; தன்னைத் தான் தொழும்- தன்னைத் தானே
வணங்கிக் கொள்வான்; ஏதும் ஒன்று உணர்குறாது இருக்கும்
நிற்கும் – எது ஒன்றையும் உணராமல் இருப்பான், நிற்பான்;
காதல் என்றதுவும் ஓர் கள்ளின் தோன்றிற்றே! – அன்பு
என்பதுவும் ஓர் கள்போலத் தோன்றியதே!

———–

பரதன் அனுமனைப் பாராட்டி, ‘நீ யார்?’ எனல்

அத் திறத்து ஆண்தகை, அனுமன் தன்னை, ‘நீ
எத் திறத்தாய்? எமக்கு இயம்பி ஈதியால்!
முத் திறத்தவருளே ஒருவன்; மூர்த்தி வேறு
ஒத்திருந்தாய் என உணர்கின்றேன்’ என்றான். –252-

அத்திறத்து ஆண்தகை- அத்தன்மைகளை உடைய ஆண்களிற்
சிறந்தவனாகிய பரதன்; அனுமன் தன்னை – அநுமனை; நீ
எத்திறத்தாய்? எமக்கு இயம்பி ஈதி – நீ எத்தன்மை உடையவன்
என்று உன்னைப் பற்றி எங்களுக்குச் சொல்லி அருளுக;
முத்திறத்தவருளே ஒருவன் ஒத்திருந்தாய் மூர்த்தி வேறு
என உணர்கின்றேன்’ என்றான் – மும்மூர்த்திகளுள் ஒருவனை
ஒத்திருக்கின்றாய்; வடிவம் மட்டும் வேறாய் உள்ளது என
ஊகித்தறிகிறேன் என்றான்.

———–

‘மறையவர் வடிவு கொண்டு, அணுக வந்தனை;
இறைவரின் ஒருத்தன் என்று எண்ணுகின்றனென்;
“துறை எனக்கு யாது எனச் சொல்லு, சொல்!” என்றான்;
அறை கழல் அனுமனும் அறியக் கூறுவான்: -253-

மறையவர் வடிவு கொண்டு அணுக வந்தனை – அந்தணர்
வேடம் கொண்டு நெருங்கி வந்திருக்கிறாய் (ஆயினும்); இறைவரின்
ஒருத்தன் என்று எண்ணுகின்றனென்- மும்மூர்த்திகளுள் ஒருவன்
நீ என்று கருதுகின்றேன்; துறை எனக்கு யாது எனச் சொல்லு
சொல் என்றான் – உன் வரலாறு யாது என்று எனக்கு விரைந்து
சொல்லுக என்றான்; அறைகழல் அனுமனும் அறியக் கூறுவான் –
ஒலிக்கும் கழலை அணிந்த அனுமனும் நன்கு விளக்கிக்
கூறுவானானான்.

———–

அனுமன் தன் வரலாற்றை உரைத்து, பெரு வடிவையும் காட்டுதல்

‘காற்றினுக்கு அரசன் பால் கவிக் குலத்தினுள்
நோற்றனள் வயிற்றின் வந்து உதித்து, நும் முனாற்கு
ஏற்றிலா அடித் தொழில் ஏவலாளனேன்;
மாற்றினென் உரு, ஒரு குரங்கு, மன்ன! யான். –254-

மன்ன! – பரதனே!; காற்றினுக்கு அரசன் பால்- வாயு
தேவனிடமாக; கலிக்குலத்தினுள் நோற்றனள் வயிற்றின் வந்து
உதித்து – குரங்குக் கூட்டத்துள் தவம் செய்தவள் வயிற்றில்
வந்து பிறந்து;நும் முனாற்கு – உம்முடைய அண்ணனுக்கு; ஏற்றிலா
அடித்தொழில் ஏவலாளனேன் – அவருடைய பெருமைக்குச்
சிறிதும் ஒவ்வாத அடிமைத்தொழில் புரியும் பணியாளன்; உரு
மாற்றினென் – வடிவை மாற்றிக்கொண்டுள்ளேன்; யான் ஒரு
குரங்கு -.

———–

‘அடித் தொழில் நாயினேன் அருப்ப யாக்கையைக்
கடித் தடந் தாமரைக் கண்ணின் நோக்கு’ எனா,
பிடித்த பொய் உருவினைப் பெயர்த்து நீக்கினான்,
முடித்தலம் வானவர் நோக்கின் முன்னுவான். –255-

அடித்தொழில் நாயினேன் அருப்ப யாக்கையைக்- அடிமைத்
தொழில் செய்யும் கீழான எனது சிறுமையான குரங்குடம்பை;
கடித்தடந் தாமரைக் கண்ணின் நோக்கு எனா – மணம் வீசும்
அகன்ற தாமரை மலர் போன்ற உன் கண்களால் பார்ப்பாயாக என்று;
பிடித்த பொய் உருவினைப் பெயர்த்து நீக்கினான் – அப்போது
எடுத்திருந்த பொய்யான மறையவர் வடிவத்தை மாற்றிப் போக்கினான்;
முடித்தலம் வானவர் நோக்கின் முன்னுவான்- முடியானது
தேவர்கள் கண்களில் படும்படி மேற்பட்டு வளர்வான் ஆனான்.

—————-

வடிவு கண்டோர் அஞ்ச, பெரு வடிவைச் சுருக்குமாறு பரதன் வேண்டுதல்

வெஞ் சிலை இருவரும், விரிஞ்சன் மைந்தனும்,
‘எஞ்சல் இல் அதிசயம் இது’ என்று எண்ணினார்;
துஞ்சிலது ஆயினும், சேனை துண்ணென
அஞ்சினது, அஞ்சனை சிறுவன் ஆக்கையால். –256-

வெஞ்சிலை இருவரும் – கொடியவில் ஏந்திய பரத
சத்துருக்கனர்களும் விரிஞ்சன் மைந்தனும் – பிரமனது மானச
புத்திரனாய வசிட்டனும்; எஞ்சல் இல் அதிசயம் இது என்று
எண்ணினார் – குறைவில்லாத ஆச்சரியப்படத்தக்க தோற்றம்
என்று கருதினார்கள்; துஞ்சிலது ஆயினும், அஞ்சனை சிறுவன்
ஆக்கையால் சேனை துண்ணென அஞ்சினது- இறக்கவில்லை
ஆனாலும் அஞ்சனாதேவியின் மகனான அனுமனது உடம்பைக்
கண்டதால் அயோத்திச் சேனை திடுக்கிட்டு பயந்தது.

————

‘ஈங்கு நின்று யாம் உனக்கு இசைத்த மாற்றம் அத்
தூங்கு இருங் குண்டலச் செவியில் சூழ்வர
ஓங்கல ஆதலின், உலப்பு இல் யாக்கையை
வாங்குதி, விரைந்து’ என, மன்னன் வேண்டினான். –257-

மன்னன்- பரதன் (அநுமனை); ஈங்கு நின்று யாம்
உனக்கு இசைத்த மாற்றம் – இங்கே இருந்து நாங்கள்
உனக்குச் சொன்ன வார்த்தை; தூங்கு இருங் குண்டலச்
செவியில் சூழ்வர ஓங்கல – தொங்குகின்ற பெரிய
குண்டலமணிந்த காதுகளில் சுற்றிப் பொருந்த ஓங்கி
வரமாட்டுகின்றில; ஆதலின், உலப்பு இல் யாக்கையை
– வற்றாத இப் பேருடம்பை; விரைந்து வாங்குதி – விரைந்து
சுருக்கி மாற்றுவாயாக; என வேண்டினான்- என்று வேண்டிக்
கொண்டான்;

————-

அனுமனுக்குப் பரதன் பரிசு கொடுத்தல்

சுருக்கிய உருவனாய்த் தொழுது முன் நின்ற
அருக்கன் மாணாக்கனை ஐயன் மேயினன்,
பொருக்கென நிதியமும், புனை பொன் பூண்களின்
வருக்கமும், வரம்பு இல நனி வழங்கினான். –258-

ஐயன் – பரதன்; சுருக்கிய உருவனாய்த் தொழுது முன் நின்ற
அருக்கன் மாணாக்கனை – சிறிதாக்கிக் கொண்ட வடிவுடைய
வனாய் வணங்கி முன்னால் நின்ற சூரியன் மாணவனாகிய
அனுமனை; அன்பினால் – அன்புடனே (நோக்கி); பொருக்கென-
விரைவாக; வனத்திடைப் புகுந்த தன்மையை – காட்டின்கண்
நடந்த நிகழ்ச்சிகளை; என் உணர்வு உருக்கி உற உரைத்தி
என்றான் – என் உணர்வு உருகும்படி சொல்வாயாக என்று
கேட்டான்;

——————-

சித்திரகூடத்தைத் தீர்ந்த பின், சிரம்
பத்து உடையவனுடன் விளைந்த பண்பும், தான்
இத் தலை அடைந்ததும், இறுதி ஆய, போர்
வித்தகத் தூதனும் விரிக்கும் சிந்தையான்.–259-

போர் வித்தகத் தூதனும் – போர்த் திறமையில் சதுரப்பாடு
உடைய அனுமனும்;சித்திர கூடத்தைத் தீர்ந்தபின்- பரதன்
சந்தித்த சித்திர கூடமலையை நீங்கிய பிறகு; பத்து சிரம்
உடையவனுடன் விளைந்த பண்பும்- பத்துத் தலைகளை உடைய
இராவணனுடன் நடந்த போர்ச் செயல்களையும்; தான் இத்தலை
அடைந்ததும் இறுதி ஆய- தான் அயோத்திக்குப் பரதனிடம்
வந்து சேர்ந்ததும் முடிவாக நடந்த செய்திகளை; விரிக்கும்
சிந்தையான் – விரித்துக் கூறும் மனம் உடையவனாக ஆனான்.

———–

குன்று உறழ் வரி சிலைக் குரிசில், எம்பிரான்
தென் திசைச் சித்திரகூடம் தீர்ந்தபின்,
வன் திறல் விராதனை மடித்து, மா தவர்
துன்றிய தண்டக வனத்துள் துன்னினான். –260-

குன்று உறழ் வரிசிலைக் குரிசில் எம்பிரான் – மலை
ஒத்த கட்டமைந்த வில்லையுடைய நம்பியாகிய இராமபிரான்;
தென்திசை சித்திரகூடம் தீர்ந்தபின் – தெற்கே உள்ள
சித்திரகூட மலையை நீங்கியபிறகு; வன்திறல் விராதனை
மடித்து – வலிமையுடைய விராதனை அழித்து; மாதவர் துன்றிய
தண்டக வனத்துள் துன்னினான்- முனிவர்கள் நெருங்கியுள்ள
தண்டகக் காட்டுக்குள் சேர்ந்து தங்கினான்.

————-

‘ஆங்கு உறை தபோதனர், ”அரக்கர்க்கு ஆற்றலேம்,
நீங்கினம் தவத் துறை, நீதியோய்!” என,
‘தீங்கு செய்பவர்களைச் செகுத்தல் திண்ணம்; நீர்
வாங்குமின் மனத் துயர், வாய்மையால்’ என்றான். –261-

ஆங்கு உறை தபோதனர் – அங்கே வசிக்கின்ற தவ
முனிவர்கள்; நீதியோய்! அரக்கர்க்கு ஆற்றலேம், தவத்துறை
நீங்கினம் என- நீதிச் செல்வனான இராமனே! அரக்கர் செய்யும்
துன்பத்தைத் தாங்க முடியாதவர்களாக உள்ளோம்; தவத்திலிருந்தும்
கூட விலகிவிட்டோம் (சரண்) என்று சொல்ல (இராமன்); நீர்
மனத்துயர் வாங்குமின், தீங்கு செய்பவர்களைச் செகுத்தல்
திண்ணம், வாய்மை என்றான் – முனிவர்களே உங்கள்
மனத்துன்பத்தை எடுத்து விடுங்கள்; தீங்கு செய்பவர்களை நான்
அழிப்பது உறுதி இது சத்தியம் என்று அவர்களுக்கு வாக்களித்தான்;

————

‘ஆறு நாள் ஆண்டு அவண் வைகி, அப் புறத்து
ஈறு இலா முனிவரர் ஏய ஆணையால்
மாறு இலாத் தமிழ் முனி வனத்தை நண்ணினான்,
ஊறு இலா முனிவரன் உவந்து முன் வர. –262-

ஆறு நால் ஆண்டு அவண் வைகி- பத்து ஆண்டுகள் அங்கு
தங்கியிருந்து; அப்புறத்து – அதன்பிறகு; ஈறு இலா முனிவரர்
ஏய ஆணையால்- அழிவில்லாத தவத்தோர் ஏவிய கட்டளைப்படி;
மாறு இலாத் தமிழ் முனி வனத்தை – தனக்கு சமானமில்லாத
தமிழ் முனியாகிய அகத்தியன் வாழும் காட்டை (அகத்தியாச்சிரமம்);
ஊறு இலா முனிவரன் உவந்து முன்வர நண்ணினான் –
துன்பமற்ற அகத்தியன் மகிழ்ந்து எதிர்கொள்ள அடைந்தான்.

————-

‘குடங்கையில் வாரிதி அனைத்தும் கொண்டவன்
தடங் கணான்தனை எதிர் தழுவி, சாபமும்,
கடுங் கணைப் புட்டிலும், கவசம்தானும், அத்
திடம் படு சுரிகையும், சேர ஈந்தனன். –263-

குடங்கையில் வாரிதி அனைத்தும் கொண்டவன் – தன்
அகங்கையில் கடலை உழுந்தளவு ஆக்கிக் கொண்ட அகத்தியன்;
தடங்கணான்தனை எதிர் தழுவி – அகன்ற கண்களை உடைய
இராமனை எதிரே தழுவிக்கொண்டு; சாபமும், கடுங்கணைப்
புட்டிலும் கவசம்தானும், அத்திடம் படு சுரிகையும் சேர
ஈந்தனன் – வில்லும், விரைந்து செல்லும் அம்புகளை உடைய
தூணியும் மார்புக் கவசமும், அத்தன்மையான வன்மை பெற்ற
வாளும் ஆகியவற்றை ஒரு சேர இராமனுக்கு அளித்தான்.

————–

‘அப் புறத்து எருவையின் அரசைக் கண்ணுறா,
துப்பு உறச் சிவந்த வாய்த் தோகைதன்னுடன்
மெய்ப் புகழ்த் தம்பியும் வீரன்தானும் போய்,
மைப் பொழில் துறு பஞ்சவடியின் வைகினார். –264-

அப்புறத்து – அதன்பிறகு; எருவையின் அரசைக் கண்ணுறா-
கழுகுகளின் அரசனாகிய சடாயுவைச் சந்தித்து; துப்பு உறச் சிவந்த
வாய்த் தோகை தன்னுடன் மெய்ப்புகழ்த் தம்பியும் வீரன்
தானும் போய் – பவழம் எனச் சிவந்த வாயினை உடைய சீதையோடு
உண்மைப் புகழ் உடைய இலக்குவனும் இராமனும் புறப்பட்டுச் சென்று;
மைப்பொழில் துறு பஞ்சவடியின் வைகினார் – கரிய சோலைகள்
நெருங்கியுள்ள ‘பஞ்சவடி’ என்ற இடத்தில் தங்கினார்கள்.

———–

பல் பகல் இறந்த பின்றை, பாதக அரக்கி தோன்றி,
மெல்லிய இடையினாளை வெகுண்டுழி, இளைய வீரன்
அல்கிய திருவைத் தேற்றி, அவளுடைச் செவியும் மூக்கும்
மல்கிய முலையும் கொய்தான்; மறித்து, அவள் கரற்குச் சொன்னாள்.–265-

பல்பகல் இறந்த பின்றை – பலநாள் கழிந்த பிறகு; பாதக
அரக்கி தோன்றி – கொடிய சூர்ப்பணகை அங்கே வந்து;
மெல்லிய இடையினாளை வெகுண்டுழி – மென்மையான
இடையுடைய சீதையைக் கோபித்து அச்சுறுத்திய போது; இளைய
வீரன் – இலக்குவன்; அல்கிய திருவைத் தேற்றி – அதனால்
மனம் சுருங்கிய (துன்புற்ற) சீதையைத் தெளிவித்து; அவளுடைச் செவியும்
மூக்கும் மல்கிய முலையும் கொய்தான் – அந்த
சூர்ப்பணகையின் காது, மூக்கு, வளர்ந்த கொங்கை
அனைத்தையும் பறித்துவிட்டான்; அவள் மறித்து கரற்குச்
சொன்னாள் – அவள் திரும்பச் சென்று கரனிடம்
முறையிட்டாள்.

————

‘கரனொடு திரிசிராவும், கடிய தூடணனும், காந்தி
எரியும் மூன்று அனலே ஒப்பார், எழுந்து, வெஞ் சேனையோடும்
விரவினர்; ஐயன் செங் கை வில்லினை நோக்கும் முன்பு, ஓர்
எரி தவழ் பஞ்சின் உக்கார்; அரக்கியும், இலங்கை புக்காள.–266-

காந்தி எரியும் மூன்று அனலே ஒப்பார் – பற்றி எரியும்
குன்று நெருப்புகளை ஒத்தவர்களாகிய; கரனொடு திரிசிராவும்,
கடில தூடணனும் – கரன், திரிசிரா, கொடிய தூடணன் ஆகிய
மூவரும்;வெஞ் சேனையோடும் எழுந்து விரவினர்- கொடிய
தங்கள் சேனைகளோடும் புறப்பட்டு இராமனோடு போரிற்
கலந்தனர்; ஐயன் செங்கை வில்லினை நோக்கும் முன்பு –
இராமன் அம்பு விடவேண்டி தன் கையில் உள்ள வில்லைப்
பார்க்கும் முன்பே; எரி தவழ் பஞ்சின் உக்கார்-
நெருப்புப் பற்றிய பஞ்சு போல இருந்த இடம் தெரியாமல்
போனார்கள்; அரக்கியும் இலங்கை புக்காள் –
சூர்ப்பணகையும் இலங்கைக்குச் சென்றாள்;

————

‘இருபது தடக் கையான்மாட்டு இசைத்தலும், எழுந்து பொங்கி,
ஒருபது திசையும் உட்க, வஞ்சக உழை ஒன்று ஏவி,
தரு பதம் சமைந்த முக்கோல் தாபத வடிவம் கொண்டு,
திருவினை நிலத்தொடு ஏந்தி, தென் திசை இலங்கை புக்கான்.–267-

(அவன் இலங்கை சென்று) இருபது தடக்கையான் மாட்டு
இசைத்தலும் – இருபது கைகளை உடைய இராவணன்பால் சொன்ன
அளவில் (அவன்); ஒரு பது திசையும் உட்க – பத்துத் திசையும்
அஞ்சும்படி; பொங்கி எழுந்து- கோபத்துடன்
புறப்பட்டு; வஞ்சக உழை ஒன்று ஏவி – பொய்மான் ஒன்றை
அனுப்பி; தரு பதம் சமைந்த முக்கோல் தாபத வடிவம்
கொண்டு- தத்துவம் தருகின்ற செவ்வி அமைந்த திரிதண்டம்
ஏந்திய முனிவர் வேடமணிந்து கொண்டு; திருவினை நிலத்தொடு
ஏந்தி – சீதையை அவள் இருந்த மண்ணொடும் சுமந்து; தென்திசை
இலங்கை புக்கான் – தெற்கேயுள்ள இலங்கை மாநகரிற் சென்று
புகுந்தான்.

——

போகின்ற காலை, ஏற்ற சடாயுவைப் பொருது வீட்டி,
வேகின்ற உள்ளத்தாளை வெஞ் சிறை அதனின் வைத்தான்;
ஏகின்ற வஞ்ச மான் மாரீசன் – கொன்று, இளவலோடு
பாகின்ற கீர்த்தி அண்ணல் தந்தையைப் பரிவின் கண்டான். –268-

போகின்ற காலை – அந்த இராவணன் இலங்கைக்குப்
போம்பொழுது; ஏற்ற சடாயுவைப் பொருது வீட்டி – தன்னை
எதிர்த்த சடாயுவைப் போர் செய்து வீழ்த்தி; வேகின்ற
உள்ளத்தாளை வெஞ்சிறை அதனின் வைத்தான் – வெந்த
உள்ளமுடைய பிராட்டியைக் கொடுஞ் சிறைக்கண் வைத்தான்
(பின் இராமன்); ஏகின்ற வஞ்ச மான் மாரீசன் கொன்று –
ஓடுகின்ற வஞ்சத் தன்மையுள்ள மானாகிய மாரீசனைக் கொன்று;
இளவலோடு – இலக்குவனோடு வந்து; பாகின்ற கீர்த்தி அண்ணல்
தந்தையைப் பரிவின் கண்டான் – பரவுகின்ற புகழ் உடைய
தலைமையோன் ஆகிய சடாயுவை அன்போடு பார்த்தான்.

————-

‘அன்னவன்தனக்கு வேண்டும் அருங் கடன் முறையின் ஆற்றி,
நன்னுதல்தன்னைத் தேடித் தென் திசை நடக்கும் ஐயன்,
மன்னிய கவந்தன்தன்னை உயிரொடு சாபம் மாற்றி,
தன்னையே மறப்பிலாத சவரி பூசனையும் கொண்டான்.–269-

அன்னவன் தனக்கு- சடாயுவுக்கு; வேண்டும் அருங்கடன்
முறையின் ஆற்றி – செய்யவேண்டிய நீர்க்கடன்களை முறைப்படி
செய்து முடித்து;நன்னுதல் தன்னைத் தேடித்- சீதையைத் தேடிக்
கொண்டு; தென்திசை நடக்கும் ஐயன்- தெற்கே நோக்கிச்
செல்லும் இராமன்; மன்னிய கவந்தன் தன்னை உயிரொடு சாபம்
மாற்றி – அங்கே நிலைபெற்ற கவந்தனை உயிரும் சாபமும்
போகும்படி செய்து (பிறகு); தன்னையே மறப்பிலாத சவரி
பூசனையும் கொண்டான் – தன்னை எப்பொழுதும் மறவாத சவரி
என்னும் தவமூதாட்டியின் வழிபாட்டினையும் ஏற்றுக் கொண்டான்.

——–

‘ஆங்கு அவள்தனது சொல்லால், அருக்கன் மா மகனை அண்மி,
பாங்குற நட்டு, ”வாலி பருவரல் கெடுப்பென்” என்னா,
ஓங்கிய மரமும் வாலி உரமும் ஊடுருவ எய்திட்டு,
ஆங்கு அவன்தனக்குச் செல்வம் அரசொடும் அருளின் ஈந்தான்.–270-

ஆங்கு அவள் தனது சொல்லால் – அங்கே சவரியின்
வார்த்தையால்; அருக்கன் மாமகனை அண்மி – சூரியன் மகனாய
சுக்கிரீவனை அணுகி; பாங்குற நட்டு – இதமாக நட்புச் செய்து;
‘வாலி பருவரல் கெடுப்பன்’ என்னா – வாலியாகிய துன்பத்தை
நீக்குவேன் என்று அவனுக்குச் சொல்லி; ஓங்கிய மரமும் வாலி
உரமும் ஊடுருவ எய்திட்டு – உயர்ந்து நின்ற மராமரங்கள்
ஏழினையும் வாலி மார்பினையும் உள்ளுருவிச் செல்லும்படி அம்பு
எய்து; ஆங்கு – அங்கே; அவன் தனக்கு – சுக்கிரீவனுக்குச்;
செல்வம் அரசொடும் அருளின் ஈந்தான் – செல்வத்தையும்
அரசையும் கருணையாலே கொடுத்தான்.

———-

‘கால மா மாரி நீங்க, கவயனோடு இடபன், காந்து
நீலன், மா மயிந்தன், சாம்பன், சதவலி, பனசன், நீடு
வாலி மா மைந்தன் என்று இவ் வானரத் தலைவரோடு
கூல வான் சேனை சூழ, அடைந்தனன், எங்கள் கோமான்.–271-

மா மாரி காலம் நீங்க – கார்காலம் கழிந்தபிறகு; கவயனோடு
இடபன் காந்து நீலன், மா மயிந்தன், சாம்பன், சதவலி, பனசன்;
நீடு வாலி மா மைந்தன்- பெருமையுற்ற வாலியின் மகனாகிய
அங்கதன்; என்று இவ் வானரத் தலைவரோடு -; கூல வான்சேனை
சூழ- வால் உடைய குரங்குச் சேனை சுற்றிவர; எங்கள் கோமான்
அடைந்தனன் – எங்கள் அரசனாய சுக்கிரீவன் (இராமனை) வந்து
சேர்ந்தான்.

————-

‘எழுபது வெள்ளத்து உற்ற குரக்கினம் எழுந்து பொங்கி,
அழுவ நீர் வேலை என்ன அடைந்துழி, அருக்கன் மைந்தன்,
தழுவிய திசைகள்தோறும் தனித்தனி இரண்டு வெள்ளம்
பொழுது இறை தடாது மீளப் போக்கினன், திருவை நாடி,–272-

எழுபது வெள்ளத்துற்ற குரக்கினம் பொங்கி எழுந்து-
எழுபது வெள்ளம் என்னும் கணக்கினை உடைய குரங்குகள் சீறிப்
புறப்பட்டு; அழுவ நீர் வேலை என்ன அடைந்துழி- பரந்த
நீரையுடைய கடல் என்னுமாறு வந்து சேர்ந்த பொழுது; அருக்கன்
மைந்தன்- சுக்கிரீவன்; திருவை நாடி – சீதையைத் தேடி வருமாறு;
தழுவிய திசைகள் தோறும் – நான்கு திசைகளிலும்; தனித்தனி
இரண்டு வெள்ளம் – இரண்டிரண்டு வெள்ளக் கணக்கான
குரங்குகளை; இறை பொழுது தடாது மீள – சிறு பொழுதும்
தாமதியாது தேடித் திரும்பும்படி; போக்கினன்- அனுப்பினான்.

————

‘தென் திசை இரண்டு வெள்ளம் சேனையும், வாலி சேயும்
வன் திறல் சாம்பனோடு வாவினர் ஏவ, நாயேன்
குன்றிடை இலங்கை புக்கு, திருவினைக் குறித்து மீண்ட
பின்றை வந்து, அளக்கர் வேலைப் பெரும் படை இறுத்தது அன்றே.–273-

தென்திசை- தெற்கே; இரண்டு வெள்ளம் சேனையும் -;
வாலி சேயும்- அங்கதனும்; வன்திறல் சாம்பனோடு – வலிய
கரடிகளின் தலைவன் சாம்பனோடு; வாவினர் ஏவ- தாவிச்
செல்லும் குரங்கினத்தார் அனுப்ப; நாயேன் – அடியேன்; குன்றிடை
இலங்கை புக்கு- திரிகூட மலைக்கிடையில் உள்ள இலங்கையில்
புகுந்து; திருவினைக் குறித்து மீண்ட பின்றை- சீதையைக்
கண்டு வந்து சொல்லியபிறகு; வேலைப் பெரும்படை- வானர
சேனைக்கடல்; அளக்கர் வந்து இறுத்தது- கடற்கரையில் வந்து
தங்கியது.

————-

அறிவினுக்கு அறிவு போல்வான் வீடணன், அலங்கல் தோளான்,
செறி புயத்து அரக்கன் தம்பி, ”திருவினை விடுதி; அன்றேல்,
இறுதி உற்றனை, நின் வாணாள்” என அவன் உரைப்ப, சீறிக்
கறுவுற, பெயர்ந்து போந்து, கருணையான் சரணம் பூண்டான்.–274-

அறிவினுக்கு அறிவு போல்வான் வீடணன் – அறிஞருள்
மிக்க வீடணன் ஆகிய; அலங்கல் தோளான்- மாலை அணிந்த
தோள்களை உடையவனும்; செறிபுயத்து அரக்கன் தம்பி – இருபது
செறிந்த புயங்களை உடைய இராவணன் தம்பியும் ஆகிய; அவன் -;
(இராவணன்பால்); திருவினை விடுதி; அன்றேல் நின்வாணாள்
இறுதி உற்றனை என்று உரைப்ப – சீதையை விட்டுவிடு
இல்லையானால் நின் ஆயுளுக்கு இறுதி நேர்ந்தவனாக ஆவாய் என்று
எடுத்துச் சொல்ல; சீறிக்கறுவுற – (அது கேட்ட இராவணன் அவனை)
கோபித்துக் கொல்ல வஞ்சம் வைக்க; பெயர்ந்து போந்து –
இலங்கையிலிருந்து புறப்புட்டு வந்து; கருணையான் சரணம்
பூண்டான் – அருளாளனாகிய உன் தமயனின் திருவடிகளைத்
தலையில் சூடி அடைக்கலம் பெற்றான்.

————

‘ஆங்கு அவற்கு அவயம் நல்கி, அரசொடு முடியும் ஈந்து,
பாங்கினால் வருணன்தன்னை அழைத்திட, பரிவு இலாமை
தாங்கினன் சிறிது போது, தாமரை நயனஞ் சேப்ப,
ஓங்கும் நீர் ஏழும் அன்னான் உடலமும் வெந்த அன்றே.–275-

ஆங்கு- அங்கே; அவற்கு- வீடணனுக்கு; அவயம் நல்கி –
அடைக்கலம் தந்து; அரசொடு முடியும் ஈந்து – இலங்கை
அரசளித்துப் பட்டாபிசேகம் செய்து; பாங்கினால் – இதமாக
(தவம் செய்து); வருணன் தன்னை அழைத்திட- வருண தேவனை
அழைக்கவும்; பரிவு இலாமை – அவன் வருவதற்கு அன்பு
காட்டாமல் இருக்க அதனை; சிறிது போது தாங்கினன் – சிறிதளவு
காலம் பொறுத்தான்; (பிறகு); தாமரை நயனம் சேப்ப – தாமரைக்
கண்கள் சிவக்க கோபிக்கவே; ஓங்கும் நீர் ஏழும்- ஏழு கடல்களும்;
அன்னான் உடலமும்- வருணனது மேனியும்; வெந்த- வெந்தன;

————-

மற்று அவன் அவயம் என்ன, மலர்ச் சரண் அடைந்த வேலை,
வெற்றி வானரர்கள் பொங்கி, வெற்பினால் வேலை தட்டல்
முற்றுற நன்கு இயற்றி, மொய் ஒளி இலங்கை புக்கு,
பற்றினர் சுற்றி ஆர்த்தார், வானவர் பயங்கள் தீர்ந்தார்.–276-

மற்று அவன் ‘அவயம்’ என்ன மலர்ச்சரண் அடைந்த
வேலை- அவ்வருணன் அவயம் என்று சொல்லித் திருவடி மலரில்
விழுந்த பொழுது; வெற்றி வானரர்கள் பொங்கி – வெற்றியுடைய
வானர வீரர்கள் மேல் எழுந்து; வெற்பினால் வேலை தட்டல்
முற்றுற நன்கு இயற்றி- மலைகளால் கடலைத் தடுத்தலை முடிவு
பெற நன்றாகச் செய்து; மொய் ஒளி இலங்கை புக்கு- ஒளி
படைத்த இலங்கை நகருக்குள் புகுந்து; பற்றினர் சுற்றி ஆர்த்தார்-
பற்றிக் கொண்டு முற்றுகை செய்து சூழ வளைத்து ஆரவாரித்தார்கள்;
வானவர் பயங்கள் தீர்ந்தார்- தேவர்கள் தம் பயங்கள் நீங்கப்
பெற்றார்கள்.

———

‘மலையினை எடுத்த தோளும், மதமலை திளைத்த மார்பும்,
தலை ஒரு பத்தும் சிந்தி, தம்பிதன் தோளும் தாளும்
கொலை தொழில் அரக்கர்ஆயோர் குலத்தொடும் தலத்து வீழ,
சிலையினை வளைவித்து, ஐயன் தேவர்கள் இடுக்கண் தீர்த்தான்.–277-

ஐயன் – இராமன் (இராவணனது); மலையினை எடுத்த தோளும்-
கயிலை மலையை எடுத்த இருபது தோளும்; மதமலை திளைத்த
மார்பும் – திக்கு யானைகள் போரிட்ட மார்பும்; தலை ஒரு பத்தும் –
பத்துத் தலைகளும்; சிந்தி – சிதறி வீழச் செய்து; தம்பிதன் தோளும்
தாளும் – அவன் தம்பியாகிய கும்பகருணனது தோளும் கால்களும்;
கொலை தொழில் அரக்கர் ஆயோர் குலத்தொடும் தலத்து வீழ –
கொல்லும் தொழில் உடைய அரக்கர்களது கூட்டத்தோடும் பூமியில்
விழும்படி; சிலையினை வளைவித்து – வில் வளைத்து அம்புகள் வீசி;
தேவர்கள் இடுக்கண் தீர்த்தான் – தேவர்களது துன்பம் போக்கினான்.

———–

‘இலக்குவன் பகழி ஒன்றால் இந்திரசித்து என்று ஓதும்
விலக்க அரு வலத்தினானும் இளைஞரும் கிளையும் வீழ்ந்தார்;
மலக்கம் உண்டு உழலும் தேவர் மலர் மழை தூவி ஆர்த்து, அன்று
உலக்குநர் குழுக்கள்தோறும் உடற் குறை ஆடல் கண்டார்.–278-

இலக்குவன் பகழி ஒன்றால்- இலக்குவனது அம்பு ஒன்றினாலே;
இந்திரசித்து என்று ஓதும் விலக்கு அரும் வலத்தினானும்
இளைஞரும் கிளையும் வீழ்ந்தார் – தடுக்கரிய வல்லமையுடைய
இந்திரசித்தும் அவன் தம்பியரும் உறவினர்களும் இறந்தொழிந்தனர்;
மலக்கம் உண்டு உழலும் தேவர் – அரக்கர்களால் கலங்கித்
திரியும் தேவர்கள்; மலர் மழை தூவி ஆர்த்து- மலரை மழை போல்
சொரிந்து பேரொலி செய்து; அன்று – அப்போர் நடந்த போது;
உலக்குநர் குழுக்கள் தோறும் – இறந்தவர் கூட்டத்தில் எல்லாம்;
உடற்குறை ஆடல் கண்டார் – கவந்தங்கள் ஆடுவதைக் கண்டார்கள்.

———-

தேவரும் முனிவர்தாமும், சித்தரும் தெரிவைமாரும்,
மூவகை உலகுளோரும், முறை முறை தொழுது மொய்ப்ப,
பூவைபோல் நிறத்தினானும், வீடணப் புலவர் கோமாற்கு
யாவையும் இயம்பி, ”மாண்டோர்க்கு இயற்றுதி கடன்கள்” என்றான்.–279-

தேவரும் முனிவர்தாமும் சித்தரும் தெரிவைமாரும் மூவகை
உலகுளோரும் முறை முறை தொழுது மொய்ப்ப- (இராமனை)
நெருங்க; பூவை போல் நிறத்தினானும்- காயாமலர் மேனியுடைய
இராமனும்; வீடணப் புலவர் கோமாற்கு- வீடணன் என்னும் அரச
அறிஞனுக்கு; யாவையும் இயம்பி – எல்லா அறிவுரைகளும் கூறி;
‘மாண்டோர்க்கு இயற்றுதி கடன்கள்’ என்றான் – இறந்தவர்
அனைவர்க்கும் நீர்க்கடன் செய்க என்று கூறினான்.

——-

நான்முகன், விடையை ஊரும் நாரி ஓர் பாகத்து அண்ணல்,
மான்முகன் முதலாய் உள்ள வானவர் தொழுது போற்ற,
ஊன்முகம் கெழுவு வேலாய்! உம்பர் நாயகியைச் சீறி,
தேன் முகம் மலரும் தாரான், அரி சொல, சீற்றம் தீர்ந்தான்.–280-

ஊன்முகம் கெழுவு வேலாய்! -பகைவரது புலால் பொருந்திய
வேலை உடைய பரதனே!; நான்முகன், விடையை ஊரும் நாரிஓர்
பாகத்து அண்ணல், மான்முகன் முதலாய் உள்ள வானவர்
தொழுது போற்ற- பிரமன், சிவன், மயன் முதலிய தேவர்கள் துதிக்க;
உம்பர் நாயகியைச் சீறி- தேவ தேவியாகிய சீதையைக் கோபித்து;
தேன் முகம் மலரும் தாரான்-தேன் நின்று பிலிற்றும் மாலையுடைய
இராமன் (பின்னர்);அரி சொல-அக்கினி தேவன் உண்மை விளக்கி உரைக்க; சீற்றம் தீர்ந்தான் –
கோபம் நீங்கப் பெற்றான்.

————–

‘மெய்யினுக்கு உயிரை ஈந்த வேந்தர்கோன் விமானத்து எய்த,
அய்யனும் இளைய கோவும் அன்னமும் அடியில் வீழ,
கய்யினால் பொருந்தப் புல்லி, கண்ணின் நீர்க் கலசம் ஆட்டி,
”செய்வரம் அருளுக” என்றான்; திருவின் நாயகனும் கொண்டான்.–281-

மெய்யினுக்கு உயிரை ஈந்த வேந்தர் கோன் – சத்தியத்தைக்
காக்க உயிரை விட்ட தயரதன்; விமானத்து எய்த –
விண்ணுலகிலிருந்து விமானத்தில் வர; அய்யனும் இளைய கோவும்
– இராமனும் இலக்குவனும்;அன்னமும் அடியில் வீழ- சீதையும்
விழுந்து வணங்க; கையினால் பொருந்தப் புல்லி- தயரதன் தன்
கைகளால் அவர்களை நன்கு தழுவி; கண்ணின் நீர்க் கலசம்
ஆட்டி – கண்களாகிய கலசத்தால் நீராட்டி; செய்வரம் அருளுக
என்றான் – நான் செய்யக்கூடிய வரம் கேட்பாயாக என்று சொன்னான்;
திருவின் நாயகனும் கொண்டான்- சீதை கேள்வனாகிய இராமனும்
அவன்பால் பின்கூறும் வரம் கொண்டான்.

———

‘ ”என்னை நன் கருணைதன்னால் ஈன்று எடுத்து, இனிது பேணும்
அன்னையும் மகனும் முன்போல் ஆக” என, அருளின் ஈந்து,
மன்னவன் போய பின்றை, வானரம் வாழ்வு கூர,
பொன் நெடு நாட்டில் உள்ளார் வரம் பல வழங்கிப் போனார்.–282-

(இராமனிடம் தயரதனிடம்) என்னை நன் கருணை தன்னால்
ஈன்று எடுத்து இனிது பேணும் அன்னையும் மகனும் முன்
போல் ஆகு என – என்னைத் தன் அருளால் பெற்றெடுத்துப்
பெரிதும் காத்த கைகேயியும் பரதனும் தாயும் தம்பியும் ஆகவேண்டும்
என்று கேட்க; அருளின் ஈந்து மன்னவன் போய பின்றை-
அருளால் தந்து தயரதன் புறப்பட்டுச் சென்றபிறகு; வானரம் வாழ்வு
கூர- குரங்குகளின் வாழ்வு சிறக்க; பொன் நெடுநாட்டில் உள்ளார்
– தேவர் உலகத்தில் உள்ள தேவர்கள்; பல வரம் வழங்கிப்
போனார்- பல வரங்களை வழங்கிச் சென்றார்கள்.

————

வெள்ளம் ஓர் ஏழு பத்தும், விலங்க அரும் வீரர் ஆகி
உள்ளவர் அறுபத்து ஏழு கோடியும், ஒற்றை ஆழி
வள்ளல்தன் மகனும், உள்ளம் மகிழ்வுற விமானம் ஈந்தான் –
எள்ளல் இல்லாத கீர்த்தி வீடணன், இலங்கை வேந்தன்.–283-

எள்ளல் இல்லாத கீர்த்தி இலங்கை வேந்தன் வீடணன் –
இகழப் படாத புகழ் உடைய இலங்கை அரசனாகிய வீடணன்;
வெள்ளம் ஓர் எழுபத்தும் – எழுபது வெள்ளம் குரக்குச்
சேனையும்; விலங்க அரும் வீரர் ஆகி உள்ளவர் அறுபத்து எழு
கோடியும் – தடுத்தற்கரிய வீரர்கள் அறுபத்தேழு கோடிப் பேரும்;
ஒற்றை ஆழி வள்ளல்தன் மகனும்- ஓராழித் தேரானாய சூரியன்
மகன் சுக்கிரீவனும்; உள்ளம் மகிழ்வுற – அயோத்திக்கு வருவது பற்றி
மனமகிழ்வு அடைய;விமானம் ஈந்தான்- புட்பக விமானத்தைத் தந்தான்.

————

‘ஆரியன் பின்னை நின்னை அன்பினால் நினைந்து, காதல்
சூரியன் மகனும், தொல்லைத் துணைவரும், இலங்கை வேந்தும்,
பேர் இயல் படையும் சூழ, பெண்ணினுக்கு அரசியோடும்
சீரிய விமானத்து ஏறி, பரத்துவன் இருக்கை சேர்ந்தான்.–284-

ஆரியன் – மேலவனான இராமன்; பின்னை- பிறகு;
நின்னை -; அன்பினால்; நினைந்து- அன்பால் நினைத்து;
காதல் சூரியனும் மகனும் – தன்பால் அன்புடைய சுக்ரீவனும்;
தொல்லைத் துணைவரும்- பழைய நண்பர்களும்; இலங்கை
வேந்தும் – வீடணனும்; பேர் இயல் படையும் சூழ-
பேரளவினதாகிய சேனைகளும் சுற்றிவர; பெண்ணினுக்கு
அரசியோடும் – சீதையோடும்; சீரிய விமானத்து ஏறி-
சிறந்த புட்பகத்தில் ஏறி; பரத்துவன் இருக்கை சேர்ந்தான்-
பரத்துவாச முனிவனது ஆச்சிரமத்தை அடைந்தான்.

———-

‘அன்பினால் என்னை, நின்பால் ஆழியும் காட்டி, ”ஆன்ற
துன்பு எலாம் துடைத்தி என்று” துரந்தனன், தோன்றல்’ என்று,
முன்பினால் இயன்ற எல்லாம் மொழிந்தனன் – முது நீர் தாவி
வன்பினால் இலங்கை முற்றும் எரிக்கு உணவாக வைத்தோன்.–285-

அன்பினால் – என்பாற் கொண்ட அன்பாலே; தோன்றல்-
இராமன்; என்னை நின்பால் ஆழியும் காட்டி – நின்னிடம்
மோதிரத்தையும் காட்டி; ‘ஆன்ற துன்பு எலாம் துடைத்தி’
என்று- இதுவரை அமைந்த துன்பத்தை எல்லாம் நீக்குக என்று
சொல்லி; துரந்தனன்- விரைய அனுப்பினான்; என்று -(இவ்வாறு)
முன்பினால் இயன்ற எல்லாம் – முன்னும் பின்னும் நடந்த
நிகழ்ச்சிகளை எல்லாம் தொகுத்து; முதுநீர் தாலி வன்பினால்
இலங்கை முற்றும் எரிக்கு உணவாக வைத்தோன்- கடலைத்
தாவி வலிமையாலே இலங்கை முழுவதையும் தீக்கடவுளுக்கு உணவாக
இட்ட அனுமன்; மொழிந்தனன் – சொல்லி முடித்தான்.

———-

பரதன் அனுமன் கை பற்றி கங்கை சேர்தல்

காலின் மா மதலை சொல்ல, பரதனும் கண்ணீர் சோர,
‘வேலி மா மதில்கள் சூழும் இலங்கையில் வேட்டம் கொண்ட
நீல மா முகில் பின் போனான் ஒருவன்; நான் நின்று நைவேன்,
போலுமால்; இவைகள் கேட்பேன்; புகழ் உடைத்து, அடிமை மன்னோ.’–286-

காலின் மாமதலை சொல்ல – காற்றின் மகனாய அனுமான்
சொல்ல; பரதனும் கண்ணீர் சோர- (அது கேட்டு) பரதனும்
கண்ணீர் சொரிய நின்று; வேலி மா மதில்கள் சூழும்
இலங்கையில் வேட்டம் கொண்ட- நீர் வேலியுடைய மதில்
சுற்றிய இலங்கையில் வேட்டையாட விரும்பிய; நீல மா
முகில்பின் ஒருவன் போனான் – நீலமேகமாய இராமன்
பின்னால் இலக்குவன் சென்றான்; நான் நின்ற நைவேன் போலும்
– நான் இங்கிருந்து வருந்துவேன் போலும்; இவைகள் கேட்பேன்
– இச்செய்திகளைக் கேட்பவனாகவே ஆனேன்; அடிமை புகழ்
உடைத்து- நான் இராமற்குச் செய்த அடிமை புகழ் உடையது
என்று வருந்திக் கூறினான்

————

என்று அவன் இரங்கி ஏங்கி, இரு கணும் அருவி சோர,
வன் திறல் அனுமன் செங் கை வலக் கையால் பற்றி, காலின்
சென்றனன் இருளினூடு, செறி புனல் கங்கை சேர்ந்தான்,
குன்றினை வலஞ் செய் தேரோன் குண கடல் தோன்றும் முன்னர்.–287-

அவன்- அப்பரதன்; என்று இரங்கி ஏங்கி- இவ்வாறு கூறி
அழுது வருந்தி; இருகணும் அருவி சோர – இரண்டு
கண்களிலிருந்தும் கண்ணீர் அருவியாய்ச் சொரியுமாறு; வன்திறல்
அனுமன் செங்கை – வலிமை மிக்க அனுமனது சீரிய கையை;
வலக்கையால் பற்றி -தனது வலது கையினால் பிடித்துக் கொண்டு;
இருளின் ஊடு காலின் சென்றனன் – இருளின் இடையே காலால்
நடந்து சென்று; குன்றினை வலம் செய்தேரோன்- மேருமலையை
வலமாகச் சுற்றி வருகின்ற தேரினை உடைய சூரியன்; குணகடல்
தோன்று முன்னர் – கீழ்க்கடலில் உதயமாவதற்கு முன்னாலே;
செறிபுனல் கங்கை சேர்ந்தான்- நீர் நிறைந்த கங்கைக்
கரையை அடைந்தான்.

————–

சூரியன் உதயம் ஆதல்
10239.
இராவணன் வேட்டம் போய் மீண்டு, எம்பிரான், அயோத்தி எய்தி,
தராதல மகளும் பூவின் தையலும் மகிழ, சூடும்
அராவு பன் மௌலிக்கு ஏய்ந்த சிகாமணி, குணபால் அண்ணல்
விராவுற எடுத்தாலென்ன, வெய்யவன் உதயம் செய்தான்.–288-

எம்பிரான்- எமது தலைவனாகிய இராமபிரான்; இராவணன்
வேட்டம் போய் மீண்டு – இராவணனை வேட்டையாடிக்
கொல்லுவதற்காக இலங்கை சென்று திரும்பி வந்து; தராதல
மகளும் பூவின் தையலும் மகிழ – பூமி என்கின்ற பெண்ணும்,
தாமரை மலரில் வீற்றிருக்கின்ற திருமகளும் மகிழ்ச்சி
அடையும்படி; சூடும்- அணிந்து கொள்கின்ற; அராவு பொன்
மௌலிக்கு ஏய்ந்த சிகாமணி – அராவிச் செய்யப் பெற்ற
பொன்னால் ஆகிய மகுடத்துக்குப் பொருந்திய உச்சி மணியை;
குணபால் அண்ணல்- கீழ்த்திசைக் காவலன் ஆகிய இந்திரன்;
விராவுற எடுத்தால் என்ன- பொருத்தமுறத் தோன்றும்படி
மேலே தூக்கிப் பிடித்தாற் போல என்னுமாறு; வெய்யவன்
உதயம் செய்தான் – சூரியன் கீழ்த்திசையில் தோன்றினான்.

————

பரதன் வினாவும் அனுமன் விடையும்
10240.
காலை வந்து இறுத்த பின்னர், கடன் முறை கமலக்கண்ணன்
கோல நீள் கழல்கள் ஏத்தி, குரக்கினத்து அரசை நோக்கி,
‘சாலவும் கலைகள் வல்லோய்! தவறு உண்டு போலும், வாய்மை;
மூலமே உணரின், உன்தன் மொழிக்கு எதிர் மொழியும் உண்டோ? –289-

(பரதன்) காலை வந்து இறுத்த பின்னர்- காலைப் பொழுது
தோன்றியபிறகு; கடன் முறை – நாட்காலத்தே தான் செய்யும்
முறைமைப்படி; கமலக்கண்ணன் கோல நீள் கழல்கள் ஏத்தி –
தாமரை மலர் போன்ற கண்களை உடைய இராமபிரானது அழகிய
நீண்ட திருவடிகளை வழிபட்டு; குரக்கினத்து அரசை நோக்கி-
அனுமனைப் பார்த்து; ‘சாலவும் கலைகள் வல்லோய் – சகல
சாஸ்திர நூல்களிலும் விற்பனன் ஆகியவனே; உன்தன் மொழிக்கு
எதிர் மொழியும் உண்டோ- உன்னுடைய வார்த்தைக்கு எதிராகச்
சொல்லத்தக்க வார்த்தையும் இருக்கிறதா (ஆயினும்); மூலமே
உணரின் – அடிமுதல் நன்றாக உணர்ந்து பார்த்தால்; வாய்மை
தவறுண்டு போலும்- உன்னுடைய சொல்லில் தவறு இருக்கிறது
போல உள்ளது.

————

‘எழுபது வெள்ளம் சேனை வானரர், இலங்கை வேந்தன்
முழு முதல் சேனை வெள்ளம், கணக்கு இல மொய்த்த என்றால்,
அழுவ நீர் வேலை சுற்றும் அரவம் இன்றாக வற்றோ?
விழுமிது, ”எம்பிரான் வந்தான்” என்று உரைத்தது, வீர!’ என்றான்.–290-

வீர! – வீரனாகிய அனுமனே!; எழுபது வெள்ளம் சேனை
வானரர் – எழுபது வெள்ளக் கணக்கான சேனைகளாகிய
வானரர்கள்; இலங்கை வேந்தன் முழுமுதல் சேனை வெள்ளம்-
இலங்கையரசனாகிய வீடணனது அளவிறந்த சேனைக் கூட்டம்;
கணக்கு இல மொய்த்த என்றால்- கணக்கில்லாதன ஒன்று
சேர்ந்து நெருங்கி விட்டன என்றால்; அழுவ நீர் வேலை சுற்றும்
அரவம் இன்றாக அற்றோ- ஆழமான நீர்ப்பரப்பான கடலின் கண்
சுற்றுகின்ற பேரொலி போன்ற பேர் ஆரவாரம் இல்லாமல்
இருக்க இயலுமா? (அவ்வொலி ஏதும் இல்லாமையால்); எம்பிரான்
வந்தான் என்று உரைத்தது விழுமிது- இராமபிரான் வந்து
விட்டான் என்று நீ கூறியது நன்றாயிருக்கிறது; என்றான்.

———–

‘ஓசனை இரண்டு உண்டு அன்றே, பரத்துவன் உறையும் சோலை;
வீசு தெண் திரையிற்று ஆய வெள்ளம் ஓர் ஏழு பத்தும்
மூசிய பழுவம் இங்ஙன் கிடப்பதோ, முரற்றல் இன்றி?
பேசியது அமையும்; நம் கோன் எங்கு உளன், பெரும!’ என்றான்.–291-

பெரும! – அனுமனே!; பரத்துவன் உறையும் சோலை-
பரத்துவாச முனிவனது ஆசிரமச் சோலை (இங்கிருந்து); இரண்டு
ஓசனை உண்டு அன்றே – இரண்டு யோசனை தூரத்தின் கண்
உள்ளது அல்லவா? (அவ்வாறாயின்); வீசு தெண் திரை யிற்று
ஆய வெள்ளம் ஓர் எழுபத்தும் – அலை வீசும் கடற்பரப்பைப்
போலக் கணக்கிடத் தக்க எழுபது வெள்ளமாகிய சேனைகளும்;
மூசிய பழுவம் – நெருங்கக் கிடக்கின்ற அச்சோலைக் காடு;
முரற்றல் இன்றி இங்ஙனம் கிடப்பதோ?- (நம் காதில்
கட்கும்படி) ஒலி செய்யாமல் அமைதியாக இவ்வாறும் இருக்க
இயலுமா?; பேசியது அமையும் – நீ இதுவரை கூறியது மிக நன்றாய்
இருந்தது (இனியும் அதை நீட்ட வேண்டா); நம் கோன் எங்கு
உளன் – நம் தலைவனாய இராமபிரான் எங்கே இருக்கின்றான்;
என்றான்.

———-

பரதன் அஃது உரைத்தலோடும், பணிந்து மாருதியும், ‘சீர் சால்
விரத மா தவத்து மிக்கோய்! விண்ணவர் தமையும் வேண்டி
வரதன் ஆண்டு அளிப்ப வந்த வரத்தினால், மலரும் தேனும்
சரதமே மாந்தி மாந்தித் துயின்றது, தானை எல்லாம்.–292-

பரதன் அஃது உரைத்தலோடும்- பரதன் அவ்வாறு சொல்லி
முடித்த அளவில்; மாருதியும் பணிந்து – அனுமனும் (பரதனை)
வணங்கி; சீர் சால் விரத மாதவத்து மிக்கோய்! – புகழ்
பொருந்திய நோன்பினால் உயர்ந்த பெருந்தவத்தில் சிறந்த பெரியோய்!;
வரதன் விண்ணவர் தமையும் வேண்டி ஆண்டு அளிப்ப வந்த
வரத்தினால் – வரந்தரவல்ல பரத்துவாசன் தேவர்களை வழிபட்டு ஓர்
ஆகுதியை வேள்விக்கண் அளிப்ப அதனாற் பெற்ற வரத்தின்
மேன்மையால்; தானை எல்லாம் – சேனைகள் எல்லாம்; மலரும்
தேனும் சரதமே மாந்தி மாந்தித் துயின்றது- மலரையும் தேனையும்
மிகுதியாகப் பெற்று நன்கு உண்டு மயங்கி அயர்ந்து துயின்று விட்டது
(அதனால் ஒலி இல்லை) தொடரும்.

————

‘வானவர் கொடுக்க வந்த வரத்தினால், மதுபம் மூசும்
தேனொடு கிழங்கும் காயும் கனிகளும் பிறவும் சீர்த்துக்
கானகம் பொலிதலாலே, கவிக் குலம் அவற்றை மாந்தி,
ஆனனம் மலர்ந்தது இல்லையாகும்; நீ துயரல், எந்தாய்!–293-

எந்தாய்! – என் தந்தைக்கு ஒப்பான பரதனே!; வானவர்
கொடுக்க வந்த வரத்தினால் – தேவர்கள் அளிக்க உண்டாகிய
வரபலத்தாலே; கானகம் – காடு; மதுபம் மூசும் தேனொடு
கிழங்கும் காயும் கனிகளும் பிறவும் சீர்த்துப் பொலிதலாலே
– வண்டுகள் மொய்க்கின்ற தேனோடு கிழங்கு, காய், பழம்,
பிற ஆகியவற்றால் வளம் பெற்று விளங்குவதால்; கவிக்குலம்
அவற்றை மாந்தி- குரங்குக் கூட்டம் அவைகளை உண்டு மயங்கி;
ஆனனம் மலர்ந்தது இல்லையாகும்- முகம் கண் விழிக்காமல்
உறங்கியவாகும்; நீ துயரல் – (இராமன் வந்தானில்லையோ
என்று கருதி) நீ வருந்தாதே. தொடரும்.

———

‘இனி ஒரு கணத்தின், எம் கோன் எழுந்தருள் தன்மை ஈண்டுப்
பனி வரும் கண்ணின் நீயே பார்த்தி’ என்று உரைத்தான்; இப்பால்,
முனிவனது இடத்து வந்த முளரி அம் கண்ணன் வண்ணக்
குனி சிலைக் குரிசில், செய்தது இற்று எனக் குணிக்கலுற்றாம்:–294-

இனி ஒரு கணத்தின்- இனிமேல் ஒரு கணப் பொழுதிற்குள்;
எம் கோன் எழுந்தருள் தன்மை – இராமபிரான் இங்கே
எழுந்தருளப் போகின்ற பாங்கினை; ஈண்டு – இவ்விடத்தே;
பனிவரும் கண்ணின் நீயே பார்த்தி என்று உரைத்தான்-
நீர் பெருகுகின்ற கண்களை உடைய நீயே பார்ப்பாய் என்று
சொல்லி முடித்தான்; இப்பால் – இன்னொரு புறமாகிய
(பரத்துவாச ஆசிரமத்தே); முனிவனது இடத்தே வந்த முளரியம்
கண்ணன் வண்ணக் குனிசிலைக் குரிசில் – பரத்துவாச
ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்த தாமரைக் கண்ணனாகிய அழகிய
வளைந்த வில்லை உடைய இராமபிரான்; செய்தது இற்று எனக்
குணிக்கல் உற்றாம்- செய்த செயல் இது என்று சொல்லத்
தொடங்கினோம்.

———–

குகன், பரத்துவாச ஆசிரமத்தில் இராமனைத் தரிசித்தல்
10246.
அருந்தவன் சுவைகள் ஆறோடு அமுது இனிது அளிப்ப, ஐயன்
கருந் தடந் கண்ணியோடும் களைகணாம் துணைவரோடும்,
விருந்து இனிது அருந்தி, நின்ற வேலையின்,வேலை போலும்
பெருந் தடந் தானையோடும், கிராதர் கோன் பெயர்ந்து வந்தான்.–295-

அருந்தவன் ஆறு சுவைகளோடு அமுது இனிது அளிப்ப
– பரத்துவாசன் அறுசு வைகளோடு கூடிய உணவினை நன்றாகக்
கொடுக்க; ஐயன் கருந்தடங் கண்ணியோடும் களைகணாம்
துணைவரோடும் விருந்து இனிது அருந்தி நின்ற வேலையின்
– இராமபிரான் சீதாபிராட்டியோடு துன்பத்திற்குத் துணையாகிய
சுக்கிரீவ விபீடண ஆதியாகிய சகோதரர்களோடும் விருந்தினை நன்கு
அருந்தியிருந்த சமயத்தில்; கிராதர் கோன் – வேடர வேந்தனாய
குகன்; வேலை போலும் பெருந்தடந் தானையோடும்
பெயர்ந்து வந்தான்- கடல் போன்ற தனது பெரிய அகன்ற
வேடச் சேனையோடும் (சிருங்கிபேரத்திருந்து) புறப்பட்டு
அங்கு வந்து சேர்ந்தான்.

——

தொழுதனன்; மனமும் கண்ணும் துளங்கினன்; சூழ ஓடி
அழுதனன்; கமலம் அன்ன அடித்தலம்அதனின் வீழ்ந்தான்;
தழுவினன் எடுத்து, மார்பில் தம்பியைத் தழுவுமாபோல்;
‘வழு இலர் வலியர்அன்றோ, மக்களும் மனையும்?’ என்றான்.–296-

(குகன் இராமனைக் கண்டு) தொழுதனன் – கும்பிட்டான்;
மனமும் கண்ணும் துளங்கினன் – மனமும் கண்களும் தடுமாறப்
பெற்றான்;சூழ ஓடி அழுதனன் – இராமனைச் சுற்றி ஓடி அழுதான்;
கமலம் அன்ன அடித்தலம் அதனின் வீழ்ந்தான் – தாமரை மலர்
போன்ற இராமனது திருவடியிணையின்கண் விழுந்தான்; மார்பில்
தம்பியைத் தழுவுமாபோல் – இராமன் மார்பின் கண்ணே
தம்பியைத் தழுவிக் கொள்வது போலத்; தழுவினன் எடுத்து-
தழுவித்தூக்கி; மக்களும் மனையும் வழுவிலர் வலியர் அன்றோ?
– உன் மக்களும், குடும்பத்தினரும் தீங்கின்றி வலியராக
உள்ளனரல்லவா?; என்றான்

——–

குகனும் இராமனும்
10248.
‘அருள் உனது உளது, நாயேற்கு; அவர் எலாம் அரிய ஆய
பொருள் அலர்; நின்னை நீங்காப் புணர்ப்பினால் தொடர்ந்து போந்து
தெருள்தரும் இளைய வீரன் செய்வன செய்கலாதேன்;
மருள் தரு மனத்தினேனுக்கு இனிது அன்றோ,வாழ்வு மன்னோ?–297-

நாயேற்கு உனது அருள் உளது- அடியேனுக்குப் (பெறற்கரிய)
உனது பெருங்கருணை உள்ளது; அவர் எலாம் அரிய ஆய பொருள்
அலர் – மக்களும் மனையும் ஆய அவர்கள் எல்லாம் அருமையான
பொருளாக மாட்டார் அது நிற்க; நின்னை நீங்காப் புணர்ப்பினால்
தொடர்ந்து போந்து- உன்னை விட்டுப் பிரியாத மனப் பிணிப்புடனே
பின்பற்றி வந்து;தெருள் தரும் இளைய வீரன் – மெய்யுணர்வு பெற்ற
இலக்குவன்; செய்வன செய்கலா தேன்- செய்த திருத்தொண்டுகளைச்
செய்ய இயலாதவனாகிய; மருள்தரும் மனத்தினேனுக்கு வாழ்வு இனிது
அன்றோ- மயக்கமுற்ற மனம் உடைய எனக்கு வாழ்வு சுவையானது
அல்லவா? (மிக நன்றாயிருந்தது)

———–

ஆயன பிறவும் பன்னி, அழுங்குவான்தன்னை, ‘ஐய!
நீ இவை உரைப்பது என்னே; பரதனின் நீ வேறு உண்டோ?
போய், இனிது இருத்தி’ என்ன, புளிஞர்கோன் இளவல் பொன் தாள்
மேயினன் வணங்கி, அன்னை விரை மலர்த் தாளின் வீழ்ந்தான்.–298-

ஆயன பிறவும் பன்னி – இவ்வாறான வார்த்தைகள்
பலவற்றையும் திரும்பப் பலமுறை சொல்லி; அழுங்குவான் தன்னை
– வருந்துகின்ற குகனைப் பார்த்து (இராமபிரான்); ஐய! நீ இவை
உரைப்பது என்னே! – குகனே! நீ இத்தகைய வார்த்தைகளைக்
கூறல் வேண்டுமா?; பரதனின் நீ வேறு உண்டோ – பரதனும்
நீயும் எனக்கு ஒன்றல்லவா; போய் இனிது இருத்தி – சென்று
நன்கு இருப்பாயாக; என்ன – என்று சொல்லி அனுப்ப; புளிஞர்
கோன் – வேடர் தலைவனாய குகன்; இளவல் பொன் தாள்
மேயினன் வணங்கி – இலக்குவனது பொலிவு பெற்ற திருவடிகளை
விருப்பத்தோடு வழிபட்டு; அன்னை விரைமலர்த்தாளின் வீழ்ந்தான்
– சீதாபிராட்டியினது மணம நாறும் மலர்போன்ற திருவடிகளில் விழுந்து
வணங்கினான்.

————-

இராமன் குகனை அனைவர்களுக்கும் அறிமுகம் செய்தல்
10250.
தொழுது நின்றவனை நோக்கி, துணைவர்கள்தமையும் நோக்கி,
முழுது உணர் கேள்வி மேலோன் மொழிகுவான்; ‘முழு நீர்க் கங்கை
தழுவு இரு கரைக்கும் நாதன்; தாயினும் உயிர்க்கு நல்லான்;
வழுவு இலா எயினர் வேந்தன்; குகன் எனும் வள்ளல் என்றான்;–299-

முழுது உணர் கேள்வி மேலோன் – முற்ற நண்குணர்ந்த
கேள்வி ஞானத்தினால் நிரம்பப் பெற்ற பெரியோனாகிய
இராமபிரான்; தொழுது நின்றவனை நோக்கி துணைவர்கள்
தமையும் நோக்கி மொழிகுவான் – வணங்கி நின்ற குகனைப்
பார்த்து; சுக்ரீவ வீடணாதி துணைவர்களையும் பார்த்துச்
சொல்கின்றான்; முழு நீர்க்கங்கை தழுவு இரு கரைக்கும்
நாதன் – (இவன்) நிரம்பிய நீரை உடைய கங்கையைத்
தழுவியுள்ள இரு கரைப் பகுதி நாடுகளுக்கும் தலைவன்;
உயிர்க்கு தாயினும் நல்லான் – உயிர்களுக்குத் தாயைக்
காட்டிலும் மிகவும் நல்லவன்; வழுவு இலா எயினர் வேந்தன்
– குற்றமற்ற வேடர் அரசன்; குகன் எனும் வள்ளல்
– குகன் என்னும் பெயருடைய பெரியோன்; என்றான்

———

சூரியன் மறைதல்
10251.
அண்ணல் அஃது உரைத்தலோடும், அரி குலத்து அரசன் ஆதி
நண்ணிய துணைவர் யாரும் இனிது உறத் தழுவி, நட்டார்;
கண்ணகல் ஞாலம் எல்லாம் கங்குலால் பொதிவான் போல,
வண்ண மால் வரைக்கும் அப் பால் மறைந்தனன், இரவி என்பான். –300-

அண்ணல் அஃது உரைத்தலோடும் – இராமபிரான் அவ்வாறு
(குகனை அறிமுகம் செய்து) கூறிய அளவில்; அரி குலத்து அரசன்
ஆதி- குரங்குக் குலத்துக்கு அரசனாகிய சுக்ரீவன் முதலாக;
நண்ணிய துணைவர் யாரும் -வீடணன் முதலிய துணைவர்கள்
எல்லாரும்; இனிதுறத் தழுவி நட்டார் – இனிமை பொருந்த
மனத்தாலும் உடலாலும் தழுவி நண்பு செய்தார்கள்; (இந்நிலையில்)
கண்ணகல் ஞாலம் எல்லாம் கங்குலால் பொதிவான் போல-
இடமகன்ற உலகம் எல்லாம் இருளால் மூடுகின்றவனைப் போல;
இரவி என்பான் – சூரியன் என்பவன்; வண்ண மால் வரைக்கும்
அப்பால் மறைந்தனன் – அழகிய பெரிய மேரு மலைக்கும்
பின்னால் மறையச் சென்றான்.

———

சூரியன் உதயமும் இராமன் புறப்படுதலும்
10252.
அலங்கல் அம் தொடையினானும், அந்தியின் கடன்கள் ஆற்றி,
பொலங் குழை மயிலினோடு துயிலுற, புணரி போலும்
இலங்கிய சேனை சூழ, இளவலும் எயினர் கோனும்,
கலங்கலர் காத்து நின்றார்; கதிரவன் உதயம் செய்தான்.–301-

அலங்கல் அம் தொடையினானும் – அசைகின்ற அழகிய
மாலையை அணிந்த இராமபிரானும்; அந்தியில் கடன்கள் ஆற்றி
– மாலைக்காலத்தே செய்யும் நீர்க்கடன்களை நிறைவேற்றி;
பொலங்குழை மயிலினோடு துயிலுற – பொன்னாலாய காதணி
அணிந்த மயில்போலும் சீதையோடு உறங்க; புணரிபோலும் இலங்கிய
சேனை சூழ – கடல் சூழப் பரந்து விளங்கும் சேனை சுற்றியிருப்ப;
இளவலும் எயினர் கோனும் கலங்கலர் காத்து நின்றார்-
இலக்குவனும் குகனும் சிறிதும் உறக்கத்தால் கலங்காத வராய்க் காவல்
செய்து இருந்தார். (இந்நிலையில்); கதிரவன் உதயம் செய்தான் –
சூரியன் தோன்றினான்.

————–

கதிரவன் உதிப்ப, காலைக் கடன் கழித்து,இளவலோடும்
அதிர் பொலன் கழலினான் அவ் அருந் தவன்தன்னை ஏத்தி,
விதி தரு விமானம் மேவி, விளங்கிழையோடும், கொற்றம்
முதிர் தரு கருணையோடும், முனி மனம் தொடரப் போனான்.–302-

கதிரவன் உதிப்ப – சூரியோதயம் ஆன அளவில்; அதிர்
பொலன் கழலினான் – ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த
திருவடியுடைய இராமன்; காலைக் கடன் கழித்து- காலைப்
பொழுதில் செய்யவேண்டிய நீர்க்கடன் வழிபாடுகளை
நிறைவேற்றி; இளவலோடும் – இலக்குவனோடும்; அவ்
அருந்தவன் தன்னை ஏத்தி – அந்த அரிய பரத்துவாச
முனிவனைத் துதித்து வணங்கி; விதிதரு விமானம் மேவி –
பிரமனால் (குபேரனுக்குக்) கொடுக்கப்பெற்ற புட்பக விமானத்தை
அடைந்து; விளங்கிழையோடும் – சீதையோடும்; கொற்றம்
முதிர் தருகருணையோடும் – வெற்றியாற் சிறந்து பெற்ற
பேரருளோடும்; முனி மனம் தொடரப் போனான் – பரத்துவாச
முனிவனது மனம் அன்பினால் தன்னைப் பின்பற்றி வரச்
சென்றான்.

———

தாவி வான் படர்ந்து மானம் தடையிலாது ஏகும் வேலை,
தீவிய கன்னி ஆகிச் செருக்கிய காமச் செவ்வி
ஓவியம் உயிர் பெற்றென்ன உம்பர்கோன் நகரும் ஒவ்வா
மா இயல் அயோத்தி சூழும் மதில் புறம் தோன்றிற்றுஅன்றே.–303-

மானம்- புட்பக விமானம்; தாவி – மேலே கிளம்பி; வான்
படர்ந்து – விண்ணில் பரந்து சென்று; தடை இலாது ஏகும் வேலை
– எதனாலும் தடைபடாமல் செல்கின்ற போது; தீவிய கன்னி ஆகிச்
– இனிய கன்னித் தன்மை உடையதாகி; செருக்கிய காமச் செவ்வி-
நிரம்பி முதிர்ந்த விரும்பத் தக்க பேரழகால்; ஓவியம் உயிர் பெற்று
என்ன – சித்திரம் உயிர் கொண்டு வந்தாற் போன்ற;உம்பர் கோன்
நகரும் ஒவ்வா- இந்திரனது அமராவதி நகரமும் ஒப்பாகாத; மா
இயல் அயோத்தி சூழும் மதில்புறம் தோன்றிற்று – திருமகள்
தங்கிய அயோத்தியைச் சுற்றியுள்ள மதிலின் புறம் தோன்றியது.

———

பொன் மதில் கிடக்கை சூழப் பொலிவுடை நகரம் தோன்ற,
நன் மதிக் கிழவர்தம்மை நோக்கிய ஞான மூர்த்தி,
‘சொல் மதித்து ஒருவராலும் சொலப்படா அயோத்தி தோன்றிற்று’
என்னலும், கரங்கள் கூப்பி எழுந்தனர், இறைஞ்சி நின்றார்.–304-

பொன் மதில் கிடக்கை சூழப் பொலிவுடை நகரம்
தோன்ற- பொன்னாற் செய்த மதிற்பரப்பாற் சுற்றப்பட்ட
அழகுடைய அயோத்தி நகரமானது தோன்ற; நன்மதிக்
கிழவர் தம்மை நோக்கிய ஞானமூர்த்தி – நல்ல
அறிவாற் சிறந்த துணைவர்களைப் பார்த்த ஞான வடிவினனாய
இராமபிரான்; சொல் மதித்து ஒருவராலும் சொலப்படா
அயோத்தி தோன்றிற்று என்னலும்- சொல்லால் கருதி
இத்தகையது என்று ஒருவராலும் சொல்ல இயலாத அயோத்தி
மாநகரம் தோன்றியது என்று சொல்லிய அளவிலே; கரங்கள்
கூப்பி எழுந்தனர் இறைஞ்சி நின்றார் – அனைவரும்
கைகளைத் தலைமேல் குவித்து எழுந்து வணங்கி நின்றார்கள்.

——–

புட்பக விமானத்தின் வருகை
10256.
அன்னது ஓர் அளவையின், விசும்பின் ஆயிரம்
துன் இருங் கதிரவர் தோன்றினார் என,
பொன் அணி புட்பகப் பொரு இல் மானமும்,
மன்னவர்க்கு அரசனும், வந்து தோன்றினார். –305-

அன்னது ஓர் அளவையின் – அந்த சமயத்தில்; விசும்பின்
துன் இருங்கதிரவர் ஆயிரம் தோன்றினார் என- ஆகாயத்தில்
நெருங்கிய பெரிய சூரியர் ஆயிரவர் தோன்றினார்கள் என்று
சொல்லும்படி; பொன் அணி புட்பகப் பொருஇல் மானமும் – பொன்னால்
அழகு பெற்ற புட்பகம் என்னும் பெயருடைய ஒப்பற்ற விமானமும்;
மன்னவர்க்கு அரசனும் – அரசர்க்கரசனாகிய சக்கரவர்த்தி
இராமபிரானும்; வந்து தோன்றினார் – வந்து அநுமன்
கண்காணத் தோன்றினர்.

———

அனுமன் பரதனுக்குக் காட்டிக் கூறுதல்
10257.
‘அண்ணலே! காண்டியால் – அலர்ந்த தாமரைக்
கண்ணனும், வானரக் கடலும், கற்புடைப்
பெண் அருங் கலமும், நின் பின்பு தோன்றிய
வண்ண வில் குமரனும், வருகின்றார்களை. –306-

அண்ணலே- பரதனே!; அலர்ந்த தாமரைக் கண்ணனும் –
அன்றலர்ந்த செந்தாமரை மலர் போலும் கண்களையுடையவனான
இராமபிரானும்; வானரக் கடலும்- வானர சேனைச் சமுத்திரமும்;
கற்புடைப் பெண் அருங்கலமும்- கற்பிற் சிறந்த பெண்டிர்க்கு
அணிகலமாய சீதாபிராட்டியும்; நின்பின்பு தோன்றிய வண்ணவில்
குமாரனும் – உனக்குப் பின்னால் பிறந்த அழகிய வில் ஏந்திய
இலக்குவனும்; வருகின்றார்களை காண்டி- என இவர்கள் வந்து
கொண்டிருப்பவர்களைப் பார்ப்பாயாக.

————

‘ஏழ் – இரண்டு ஆகிய உலகம் ஏறினும்
பாழ் புறம் கிடப்பது, படி இன்றாயது, ஓர்
சூழ் ஒளி மானத்துத் தோன்றுகின்றனன்
ஊழியான்’ என்று கொண்டு, உணர்த்தும் காலையே. –307-

ஊழியான் – யுக முடிவுக் காலத்தும் நிலை பெற்றுள்ளவனாகிய
இராமபிரான்; ஏழ் இரண்டு ஆகிய உலகம் ஏறினும்- பதினான்கு
உலகங்களிலுள்ள அத்தனையும் தன்மேல் ஏறினாலும்; புறம் பாழ் கிடப்பது – புறத்தே வெற்றிடம்
உள்ள தாயிருப்பதும்; படி இன்றாயது- தனக்குச் சமானம்
இல்லாததும் ஆகிய; ஓர் சூழ் ஒளி மானத்துத்
தோன்றுகின்றனன்- ஒப்பற்ற ஒளி சுற்றிய விமானத்தில்
காணப்படுகின்றான்; என்று கொண்டு உணர்த்தும் காலை-
என்றிவ்வாறு (அநுமன் பரதனுக்கு) தெளிவிக்கும் சமயத்தில்;
தொடரும்.

———–

பொன் ஒளிர் மேருவின் பொதும்பில் புக்கது ஓர்
மின் ஒளிர் மேகம்போல் வீரன் தோன்றலும்,
அந் நகர் ஆர்த்த பேர் ஆர்ப்பு, இராவணன்,
தென் நகர்க்கு அப் புறத்து அளவும் சென்றதால். –308-

பொன் ஒளிர் மேருவின் பொதும்பில் புக்கது ஓர் மின்
ஒளிர் மேகம் போல் வீரன் தோன்றலும் – பொன்மயமாக
விளங்குகின்ற மேருமலையின் குகைக்குள் நுழைந்த ஒரு மின்னல்
விளங்கும் கருமேகம் போல இராமபிரான் காணப்பட்ட உடனே;
அந்நகர் ஆர்த்த பேர் ஆர்ப்பு – அந்த அயோத்தி நகரம்
ஆரவாரித்த பேரோசை; இராவணன் தென் நகர்க்கு அப்புறத்து
அளவும் சென்றது – இராவணனது தெற்கே உள்ள இலங்கை
நகருக்கு அப்பாலும் சென்று ஒலித்தது.

————

பரதன் இராமனைக் காணல்
10260.
ஊனுடை யாக்கை விட்டு உண்மை வேண்டிய
வானுடைத் தந்தையார் வரவு கண்டென,
கானிடைப் போகிய கமலக்கண்ணனை,
தானுடை உயிரினை, தம்பி நோக்கினான். –309-

கானிடைப் போகிய கமலக் கண்ணனை – காட்டிற்குச் சென்ற
தாமரை மலர் போன்ற கண்களை உடைய இராமனை; தானுடை
உயிரினை – தன்னுடைய உயிராக உள்ளவனை; தம்பி – அவன்
தம்பியாகிய பரதன்; ஊனுடை யாக்கை விட்டு உண்மை வேண்டிய
வானுடைத் தந்தையார் வரவு கண்டென நோக்கினான் – ஊன்
பொதிந்த உடம்பைப் போகவிட்டு சத்தியத்தை விரும்பி
வானுலகு சென்ற தசரத சக்கரவர்த்தியாகிய தன் தந்தையார்
திரும்பி வருவது கண்டாற் போலப் பார்த்தான்.

——–

கெட்ட வான் பொருள் வந்து கிடைப்ப, முன்பு தாம்
பட்ட வான் படர் ஒழிந்தவரின் பையுள் நோய்
சுட்டவன், மானவன் – தொழுதல் உன்னியே,
விட்டனன் மாருதி கரத்தை, மேன்மையான். –310-

மேன்மையான் – சிறந்த குணங்களுக்கு இருப்பிடமானவனாகிய
பரதன்; முன்பு தாம் பட்ட வான்படர் – ஒருவர் தாம் முன்பு
அடைந்த மிகப் பெரிய துன்பம்; கெட்டவான் பொருள் வந்து
கிடைப்ப – தொலைத்து விட்ட சிறந்த பொருள் மீண்டும்
கிடைத்துவிட அதனால்; ஒழிந்தவரின் – நீங்கப் பெற்றவரைப்
போல; பையுள் நோய் சுட்டவன் – துன்ப நோயைத்
தொலைத்தவனாய்; மானவன் தொழுதல் உன்னி – இராமனை
வணங்கக் கருதி; மாருதி கரத்தை விட்டனன் – இதுவரை
பிடித்திருந்த அனுமனது கைகளை இப்போது பிடி நெகிழ விட்டான்.

பரதன் அநுமன் கையைப் பற்றி வந்ததாக வான்மீகம்
கூறவில்லை. கம்பரது கற்பனை இது. துன்பத்திற்குத் துணையாவாரைப்
பற்றி வருதல் உலகியல்பு ஆதலின்.

———

அக் கணத்து அனுமனும் அவண் நின்று ஏகி, அத்
திக்குறு மானத்தைச் செல்வன் எய்தி, அச்
சக்கரத்து அண்ணலைத் தாழ்ந்து முன் நின்றான்;
உக்கு உறு கண்ண நீர் ஒழுகும் மார்பினான். -311-

அக்கணத்து- (பரதன் கை நெகிழ்ந்த) அவ்வளவில்; அநுமனும்
அவண் நின்று ஏகி – அநுமனும் அங்கிருந்து சென்று; அத்திக்குறு
மானத்தைச் செல்வன் எய்தி- அந்த திசையளாவிப் பரந்த
புட்பக விமானத்தை முறையாக அடைந்து; உக்கு உறு கண்ண நீர்
ஒழுகும் மார்பினான் – சிந்தி விழுகின்ற கண்ணீர் ஒழுகப் பெற்ற
மார்பை உடையவனாய்; சக்கரத்து அண்ணலைத் தாழ்ந்து முன் நின்றான் – இராமபிரானை வணங்கி முன்னே
நின்றான்.

———-

‘உருப்பு அவிர் கனலிடை ஒளிக்கலுற்ற அப்
பொருப்பு அவிர் தோளனைப் பொருந்தி, நாயினேன்,
திருப் பொலி மார்ப! நின் வரவு செப்பினேன்;
இருப்பன ஆயின, உலகம் யாவையும். –312-

திருப்பொலி மார்ப! – திருமகள் தங்கிய மார்பை
உடையவனே!; நாயினேன்- அடியேன்; உருப்பு அவிர்
கனலிடை ஒளிக்கல் உற்ற அப் பொருப்பு அவிர்
தோளனைப் பொருந்தி – வெப்பம் விளங்கும்
நெருப்பின்கண் விழுந்து உயிர் துறக்கலுற்ற அந்த
மலைபோல் விளங்கும் தோள் உடைய பரதனைச்
சென்றடைந்து; நின் வரவு செப்பினேன் –
நின்னுடைய வருகையைச் சொன்னேன்; (அதனால்
அவன் நெருப்பின் கண் விழாதொழிந்தான் ஆகவே)
உலகம் யாவையும் இருப்பன ஆயின – உலகம்
எல்லாம் உயிர்பெற்று வாழ்வனவாயின.

————

‘தீவினை யாம் பல செய்ய, தீர்வு இலா
வீவினை முறை முறை விளைவ, மெய்ம்மையாய்!
நீ அவை துடைத்து நின்று, அழிக்க நேர்ந்ததால்;
ஆயினும், அன்பினாய்! யாம் செய் மா தவம்.’ -313-

மெய்ம்மையாய்! – உண்மையின் வடிவமானவனே!;
ஆயினும் அன்பினாய் – தாயைக் காட்டிலும்
பேரன்புடையவனே!; யாம் பல தீவினை செய்ய –
நாங்கள் பல தீய செயல்களைச் செய்ய; தீர்வு இலா
வீவினை முறை முறை விளைவ – அச்செயல்கள்
நீங்காமல் கெடுதிகளை முறை முறையாகத்
தோற்றுவிப்பனவாயின; நீ அவை துடைத்து நின்று
அழிக்க நேர்ந்தது- அனுமனாகிய நீ அத்தீமைகளை
அடியோடு அழித்துப் போக்கும்படி ஆகியது; யாம்
செய் மாதவம்- நாங்கள் செய்த புண்ணியப் பயனாலே
ஆகும். (தொடரும்)

———-

என்று உரைத்து, அனுமனை இறுகப் புல்லினான்;
ஒன்று உரைத்து இறுப்பது என், உனக்கும், எந்தைக்கும்,
இன் துணைத் தம்பிக்கும், யாய்க்கும்?’ என்றனன் –
குன்று இணைத்தன உயர் குவவுத் தோளினான். –314-

என்று உரைத்து- என்று இவ்வாறு கூறி; குன்று
இணைத்தன உயர் குவவுத் தோளினான் – இரண்டு
குன்றுகள் நெருங்கினாற் போன்ற உயர்ந்து திரண்ட தோளினை
உடைய இராமன்; அனுமனை இறுகப் புல்லினான் –
அனுமனை நன்கு தழுவி; உனக்கும் எந்தைக்கும்
இன்துணைத் தம்பிக்கும் யாய்க்கும் – அனுமனாகிய
உனக்கும், சத்திய வாக்கினராகிய தசரத சக்கரவர்த்திக்கும்
என்னை உடன் பிரியாத இனிய துணையாகிய
இலக்குவனுக்கும் தாயாகிய கோசலைக்கும்; ஒன்று உரைத்து
இறுப்பது என் – நன்றியாக ஒரு வார்த்தை சொல்லி முடிப்பது
எவ்வாறு இயலும்? என்றனன்;

———–

ஈடுறு வான் துணை இராமன் சேவடி
சூடிய சென்னியன், தொழுத கையினன்,
ஊடு உயிர் உண்டு என உலர்ந்த யாக்கையன்,
பாடு உறு பெரும் புகழ்ப் பரதன் தோன்றினான். –315-

பாடு உறு பெரும் புகழ்ப் பரதன் – பெருமை
பொருந்திய சிறந்த புகழை உடைய பரதன்; ஈடு உறு வான்
துணை இராமன் சேவடி- தனக்குத்தானே சமானமாய
சிறந்த துணையாக உள்ள இராமன் திருவடி நிலைகளை;
சூடிய சென்னியன் – சென்னி மேல் அணிந்து
கொண்டவனாய்; தொழுத கையினன் – கைகளால்
வணங்கிக் கொண்டு; ஊடு உயிர் உண்டு என உலர்ந்த
யாக்கையன் – உள்ளே உயிரும் இருக்கிறது என்று
கண்டார் கருதலாம்படி வற்றிப் போன உடம்புடையவனாகி;
தோன்றினான் – (இராமன முன்னாலே) வந்தான்.

————-

இராமன் பரதனைக் கண்டு மகிழ்தல்
10267.
தோன்றிய பரதனைத் தொழுது, தொல் அறச்
சான்று என நின்றவன், ‘இனைய தம்பியை,
வான் தொடர் பேர் அரசு ஆண்ட மன்னனை,
ஈன்றவள் பகைஞனை, காண்டி ஈண்டு’ எனா, –316-

தொல் அறச்சான்று என நின்றவன்- பழமையான
அறத்துக்குச் சாட்சியாக உள்ளவனாகிய அநுமான்; தோன்றிய
பரதனைத் தொழுது – அங்கே வந்த பரதனை வணங்கி
(இராமனுக்கு); இனைய தம்பியை- இத்தகைய உடன்பிறப்பை;
வான் தொடர் பேரரசு ஆண்ட மன்னனை – மிக
உயர்ந்த பாரம்பரியம் உள்ள பெரிய சூரிய குல ஆட்சி செய்த
அரசனை; ஈன்றவள் பகைஞனை – பெற்ற தாயாகிய கைகேயிக்கு
எதிரியாக இருந்தவனை; ஈண்டு காண்டி- இங்கே காண்பாயாக;
எனா- என்று; தொடரும்

———-

காட்டினன் மாருதி; கண்ணின் கண்ட அத்
தோட்டு அலர் தெரியலான் நிலைமை சொல்லுங்கால்,
ஓட்டிய மானத்துள் உயிரின் தந்தையார்
கூட்டு உருக் கண்டன்ன தன்மை கூடினான். –317-

மாருதி காட்டினன் – அநுமன் காட்டினான்; கண்ணின் கண்ட
அத் தோட்டலர் தெரியலான் நிலைமை சொல்லுங்கால் –
கண்ணாலே பரதனைப் பார்த்த அந்த இதழ் மலர்ந்த மாலை அணிந்த
இராமனது தன்மையைத் தெரியச் சொல்லுவோமானால்; ஒட்டிய
மானத்துள் – வானின்றிழிந்து வந்த விமானத்தில்; உயிரின்
தந்தையார் கூட்டு உரு – உயிர் போலச் சிறந்த தன் தந்தையாகிய
தசரத சக்கரவர்த்தியின் பொருந்திய வடிவத்தை; கண்டன்ன தன்மை
கூடினான்- இலங்கையில் இராவணவதத்தின்பின் கண்டது போன்ற
தன்மையை அடையப் பெற்றான்.

——

புட்பக விமானம் கீழ் இறங்குதல்
10269.
ஆனது ஓர் அளவையின், அமரர்கோனொடும்
வானவர் திரு நகர் வருவது ஆம் என,
மேல் நிறை வானவர் வீசும் பூவொடும்
தான் உயர் புட்பகம் நிலத்தைச் சார்ந்ததால். –318-

தான் உயர் புட்பகம் – மிக உயர்ந்த புட்பக
விமானமானது; ஆனது ஓர் அளவையின் – அப்படிப்பட்ட
நேரத்திலே; வானவர் திருநகர் அமரர் கோனொடும்
வருவது ஆம் என- தேவர் தலை நகராய அமராவதி
இந்திரனோடு கீழிறங்கி வருவதுபோல என்று சொல்லும்படி;
மேல் நிறை வானவர் வீசும் பூவொடும் – விண்ணில்
நிறைந்த விளங்கும் தேவர்கள் தூவுகின்ற மலர்களொடும்;
நிலத்தைச் சார்ந்தது – நிலத்திடத்தை வந்தடைந்தது.

————-

இராமன் வருகையால் அனைவரும் உற்ற நிலை
10270.
தாயருக்கு அன்று சார்ந்த கன்று எனும் தகையன் ஆனான்;
மாயையின் பிரிந்தோர்க்கு எல்லாம் மனோலயம் வந்தது ஒத்தான்;
ஆய் இளையார்க்குக் கண்ணுள் ஆடு இரும் பாவை ஆனான்;
நோய் உறுத்து உலந்த யாக்கைக்கு உயிர் புகுந்தாலும் ஒத்தான்.–319-

(இராமன்) தாயருக்கு – தன்னைப் பிரிந்த தாய்மார்களுக்கு;
அன்று சார்ந்த கன்று எனும் தகையன் ஆனான் –
பிரிந்து உடனே வந்தடைந்த கன்றின் தன்மையை ஒத்தவனாக
ஆனான்; மாயையின் பிரிந்தோர்க்கு எல்லாம் –
அவித்தையாகிய அஞ்ஞானம் நீங்கிய மெய்ஞ்ஞானிகளுக்கு
எல்லாம்; மனோலயம் வந்தது ஒத்தான் – மனம்
லயிக்குமிடமாகிய பரப்பிரம்மத்தோடு ஒன்றுபடும் தன்மை வந்து
சேர்ந்தாற்போல ஆனான்; ஆய் இளையார்க்குக் கண்ணுள்
ஆடு இரும்பாவை ஆனான்- தன் பிரிவால் மெலிந்து நுணுகிய பரத சத்துருக்கனராய
தம்பிமார்களுக்கு அவர்கள் கண்ணிற் கருமணியாம் பாவையாக
ஆனான். (மற்றவர்களுக்கு எல்லாம்) நோய் உறுத்து உலந்த
யாக்கைக்கு உயிர் புகுந்தாலும் ஒத்தான்- நோய் துன்புறுத்த
அதனால் வற்றிப் போன உடம்பிற்குள் மீண்டும் உயிர்வந்து
புகுந்தாற் போலும் தன்மையாக ஆனான்.

———-

எளிவரும் உயிர்கட்கு எல்லாம் ஈன்ற தாய் எதிர்ந்தது ஒத்தான்;
அளி வரும் மனத்தோர்க்கு எல்லாம் அரும் பத அமுதம் ஆனான்;
ஒளி வரப் பிறந்தது ஒத்தான், உலகினுக்கு; ஒண்கணார்க்குத்
தெளிவு அருங் களிப்பு நல்கும் தேம் பிழித் தேறல் ஒத்தான்.–320-

எளிவரும் உயிர்கட்கு எல்லாம்- எளிமை நிலையடைந்த
உயிர்களுக்கு எல்லாம்; ஈன்ற தாய் எதிர்ந்தது ஒத்தான் –
பெற்ற அன்னை வந்து கிடைத்தது போல ஆனான்;அளி வரும்
மனத்தோர்க்கு எல்லாம் அரும் பத அமுதம் ஆனான் – அன்பு
பொருந்திய மனம் உடையவர்களுக்கெல்லாம் கிடைத்தற்கரிய
தேவர் அமுதம் கிடைத்தாற் போன்றவனாக ஆனான்;உலகினுக்கு
ஒளி வரப் பிறந்தது ஒத்தான்- உலகத்திற்கு இருளை நீக்கி
ஒளி தோன்றியது போல ஆனான்; ஒண் கணார்க்குத் தெளிவு
அருங்களிப்பு நல்கும் தேம்பிழித் தேறல் ஒத்தான்- ஒள்ளிய
கண்களை உடைய மகளிர்க்குத் தெளிவற்ற மயக்கச்செருக்கு
தருகின்ற தேனினது பிழிந்த தெளிவைப் போன்றான்.

————-

ஆவி அங்கு அவன் அலால் மற்று இன்மையால், அனையன் நீங்க,
காவி அம் கழனி நாடும், நகரமும், கலந்து வாழும்
மா இயல் ஒண்கணாரும், மைந்தரும், வள்ளல் எய்த,
ஓவியம் உயிர் பெற்றென்ன ஓங்கினர், உணர்வு பெற்றார்.–321-

அவன் அலால்- அந்த இராமனையல்லாமல்; அங்கு ஆவி
மற்று இன்மையால்- அயோத்தியில் உயிர் வேறு இல்லாமையால்;
அனையன் நீங்க- அந்த இராமபிரான் அயோத்தியைப் பிரிந்து
காடு செல்ல; காவி அம் கழனி நாடும் நகரமும் கவன்று
வாழும் மா இயல் ஒண்கணாரும் மைந்தரும் – குவளை
மலர்கள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த கோசல நாடும் அயோத்தி
நகரமும் கவலையால் வாடி வாழ்கின்ற மாவடு ஒத்த கண்
உடைய மகளிரும் ஆடவரும்; வள்ளல் எய்த – இராமபிரான்
மீண்டு வர; ஓவியம் உயிர் பெற்றன்ன- சித்திரம் உயிர் பெற்று
எழுந்தாற்போல; உணர்வு பெற்றார் ஓங்கினர் – அறிவு வரப்
பெற்றவர்களாய் இழந்த நலத்தைப் பெற்று உயர்ந்தனர்.

———

சுண்ணமும், சாந்தும், நெய்யும், சுரி வளை முத்தும், பூவும்,
எண்ணெயும், கலின மா விலாழியும், எண் இல் யானை
வண்ண வார் மதமும், நீரும், மான்மதம் தழுவும் மாதர்
கண்ண ஆம் புனலும், ஓடிக் கடலையும் கடந்த அன்றே.–322-

சுண்ணமும் – வாசப் பொடியும்; சாந்தும் – சந்தனமும்;
நெய்யும்- வாச நெய்யும்; சுரிவளை முத்தும் – வளைந்த
சங்கீன்ற முத்தும்; பூவும்- எண்ணெயும் – கலின மா விலாழியும் –
சேணம் பூட்டப் பெற்ற குதிரைகளின் நுரையும்; எண் இல் யானை
வண்ண வார் மதமும் – கணக்கற்ற யானைகளின் நிறமமைந்த
ஒழுக்காகிய மதநீரும்; நீரும் – மான்மதம் தழுவும் மாதர் கண்ண
ஆம் புனலும் – கஸ்தூரி பூசிக்குளிக்கும் மகளிரது உடலில்
வழிந்தோடும் நீரும்; ஓடிக் கடலையும் கடந்த- பெருக்கெடுத்துச்
சென்று கடலையும் தாண்டிவிட்டன;

———

இராமன் வசிட்டனை வணங்கல்
10274.
அனைவரும் அனையர் ஆகி அடைந்துழி, அருளின் வேலை –
தனை இனிது அளித்த தாயர் மூவரும், தம்பிமாரும்
புனையும் நூல் முனிவன்தானும், பொன் அணி விமானத்து ஏற,
வனை கழல் குரிசில் முந்தி, மா தவன் தாளில் வீழ்ந்தான்.–323

அனைவரும் அனையர் ஆகி அடைந்துழி – எல்லோரும்
அத்தன்மை உடையவர்களாய் மகிழ்ச்சிப் பெருக்கோடு விமானம்
நெருங்கிய அளவில்; அருளின் வேலை தனை இனிது அளித்த
தாயர் மூவரும் – அருள்கடலாகிய இராமனைப் பெற்ற தாய்மார்கள்
மூவரும்; தம்பிமாரும்- பரத சத்துருக்கனன் ஆதியரும்; புனையும்
நூல் முனிவன் தானும்- முப்புரிநூல் அணிந்த முனிசிரேஷ்டனான
வசிட்டனும்; பொன் அணி விமானத்து ஏற- பொன்னால் அழகு
பெற்ற விமானத்தின்கண் ஏற வர; வனைகழல் குரிசில- கட்டிய
வீரக்கழலை உடைய இராகவன்; முந்தி- முற்பட்டுச் சென்று;
மாதவன் தாளில் வீழ்ந்தான் – வசிட்ட முனிவனது திருவடிகளில்
விழுந்து வணங்கினான்.

———

எடுத்தனன் முனிவன், மற்று அவ் இராமனை ஆசி கூறி,
அடுத்துள துன்பம் நீங்க, அணைத்து அணைத்து, அன்பு கூர்ந்து,
விடுத்துழி, இளைய வீரன் வேதியன் தாளில் வீழ,
வடித்த நூல் முனியும் முன்போல், வாழ்த்தினான், ஆசி கூறி.–324-

மற்று அவ் இராமனை முனிவன் எடுத்தனன்- அங்கே இந்த
இராமனை வசிட்ட முனிவன் தூக்கினான்; அடுத்துள துன்பம்
நீங்க ஆசி கூறி – பிரிவினால் உண்டாகிய துன்பம் நீங்கும்படி
ஆசீர்வாதம் செய்து; அணைத்து அணைத்து – தழுவி; விடுத்துழி
– விடுத்தவுடன்; இளைய வீரன் – இலக்குவன்; வேதியன் தாளில்
வீழ – வசிட்டன் திருவடியில் வீழ்ந்து வணங்க; வடித்த நூல் முனியும்
– தேர்ந்த சாஸ்திர வல்லுநனான வசிட்டனும்; முன்போல் –
இராமனுக்குச் செய்தது போலவே; ஆசி கூறி வாழ்த்தினான்.

————-

இராமன் தாயரை வணங்கல்
10276.
கைகயன் தனயை முந்தக் கால் உறப் பணிந்து, மற்றை
மொய் குழல் இருவர் தாளும் முறைமையின் வணங்கு செங் கண்
ஐயனை, அவர்கள்தாமும் அன்புறத் தழுவி, தம் தம்
செய்ய தாமரைக் கணீரால் மஞ்சனத்தொழிலும் செய்தார்.–325

முந்த – முற்பட; கைகயன் தனயை கால் உறப் பணிந்து –
கேகயப் தரசன் மகளாகிய கைகேயித் தாயின் திருவடிகளில்
நன்கு வணங்கி; மற்றை மொய்குழல் இருவர் தாளும் முறைமையின்
வணங்கு – ஏனை நெருங்கிய கூந்தலை உடைய கோசலை,
சுமித்திரை, ஆகிய இருவர் திருவடிகளையும் முறையாக வணங்குகின்ற;
செங்கண் ஐயனை – சிவந்த கண்களை உடைய இராகவனை; அவர்கள் தாமும் அன்புறத் தழுவி –
அத்தாய்மார்களும் அன்பினால் அணைத்து; தம் தம் செய்ய
தாமரைக் கண் நீரால் மஞ்சனத் தொழிலும் செய்தார் –
தம்முடைய சிவந்த தாமரை மலர் போன்ற கண்களிலிருந்து
வருகின்ற கண்ணீரினாலே நீராட்டும் தொழிலையும் செய்தார்கள்.

————

சீதையும் இலக்குவனும் வணங்கல்
10277.
அன்னமும் முன்னர்ச் சொன்ன முறைமையின் அடியில் வீழ்ந்தாள்;
தன் நிகர் இலாத வென்றித் தம்பியும் தாயர்தங்கள்
பொன் அடித் தலத்தில் வீழ, தாயரும் பொருந்தப் புல்லி,
‘மன்னவற்கு இளவல் நீயே; வாழி!’ என்று ஆசி சொன்னார்.–326-

அன்னமும் – சீதையும்; முன்னர்ச் சொன்ன முறைமையின்
அடியில் வீழ்ந்தாள் – இராமன் வணங்கியதாகச் சொல்லிய
முறைப்படியே கைகேயி, கோசலை, சுமித்திரை ஆகிய தாய்மார்கள்
திருவடியில் வணங்கினாள்; தன் நிகர் இலாத வென்றித் தம்பியும்
தாயர் தங்கள் பொன் அடித் தலத்தில் வீழ- தனக்குச் சமானம்
இல்லாத வெற்றியை உடைய தம்பியாகிய இலக்குவனும் தாய்மார்களது
பொலிவுற்ற திருவடிகளில் வீழ்ந்து வணங்க; தாயரும் பொருந்தப்
புல்லி – தாய்மார்களும் நன்கு தழுவி; மன்னவற்கு நீயே இளவல்
வாழி என்று ஆசி சொன்னார்- இராமனுக்கு நீயே தம்பியாவாய்
வாழ்க என்று மங்கலம் உரைத்தார்கள்.

———–

பரதன் இராமனை வணங்கல்.
10278.
சேவடி இரண்டும் அன்பும் அடியுறையாகச் சேர்த்தி,
பூ அடி பணிந்து வீழ்ந்த பரதனைப் பொருமி விம்மி,
நாவிடை உரைப்பது ஒன்றும் உணர்ந்திலன், நின்ற நம்பி,
ஆவியும் உடலும் ஒன்றத் தழுவினன், அழுது சோர்வான்.–327-

நின்ற நம்பி – அங்கு நின்ற ஆடவர் திலகனாய இராகவன்;
சேவடி இரண்டும் அன்பும் அடியுறையாகச் சேர்த்தி – திருவடி
நிலையாகிய பாதுகை இரண்டையும் தன் உள்ளத்து அன்பையும்
அவ்விராகவனது திருவடிக்கீழ் தங்குவதாகச் சேர்ப்பித்து; பூ அடி
பணிந்து வீழ்ந்த பரதனை – தன் மலர் போன்ற அடிகளில்
வணங்கி விழுந்த பரதனைப் பார்த்து; பொருமி விம்மி- புலம்பி
விம்மி; நாவிடை உரைப்பது ஒன்றும் உணர்ந்திலன் – தன்
நாவால் சொல்லத்தகும் வாசகம் ஒன்றும் உணராதவனாய்; அழுது
சோர்வான் – புலம்பிச் சோர்ந்து; ஆலியும் உடலும் ஒன்ற
தழுவினன் – உயிரும் உடலும் ஒன்றாகுமாறு தழுவினான்.

———

தழுவினன் நின்றகாலை, தத்தி வீழ் அருவி சாலும்
விழு மலர்க் கண்ணீர் மூரி வெள்ளத்தால், முருகின் செவ்வி
வழுவுற, பின்னி மூசு மாசுண்ட சடையின் மாலை
கழுவினன், உச்சி மோந்து, கன்று காண் கறவை அன்னான்.–328-

தழுவினன் நின்ற காலை- இப்படி இராமன் பரதனைத்
தழுவியபோது; தத்தி வீழ் அருவி காலும் விழு மலர்க்
கண்ணீர் மூரி வெள்ளத்தால் – தவழ்ந்து வருகின்ற அருவி
போன்ற சிறந்த மலர் போன்ற கண்களிலிருந்து பெருகிய வலிய
நீர்ப் பெருக்கினால்; முருகின் செவ்வி வழுவுற –
இளமையழகின் சிறப்பு குலையும்படி; பின்னி – முறுக்கி; மூசு
மாசு உண்ட சடையின் மாலை – மொய்க்கின்ற அழுக்கு தின்ற
சடைக்கற்றையை; கழுவினன் – கழுவியவனாய்; உச்சி மோந்து-
பரதனது உச்சியை முகர்ந்து; கன்று காண் கறவை அன்னான்-
தன் கன்றைக் கண்ட பசுவைப் போல ஆயினன்.

————

இலக்குவன் பரதனை வணங்கல்
10280.
அனையது ஓர் காலத்து, அம் பொன் சடை முடி அடியது ஆக,
கனை கழல் அமரர் கோமாற் கட்டவன் – படுத்த காளை,
துனை பரி, கரி, தேர், ஊர்தி என்று இவை பிறவும், தோலின்
வினை உறு செருப்புக்கு ஈந்தான் விரை மலர்த் தாளின் வீழ்ந்தான்.–329-

அனையது ஓர் காலத்து- அந்த நேரத்தில்; கனை கழல்
அமரர் கோமான் கட்டவன் படுத்த காலை- செருக்கிய
வீரக்கழல் அணிந்த இந்திரனது வென்றவனை (இந்திரசித்துவை)
அழித்தொழித்த வீரனாகிய இலக்குவன்; அம்பொன் சடைமுடி
அடியது ஆக – தனது அழகிய பொன்ம யமான சடா மகுடம்
பரதனது அடியில் விழும்படி; துனை பரி, கரி, தேர், ஊர்தி
என்று இவை பிறவும் தோலின் வினை உறு செருப்புக்கு
ஈந்தான்- விரைந்து செல்லும் குதிரை, யானை, தேர், வாகனம
என்று இவைகள் எல்லாவற்றையும் ஆளும் தன்மையைத் தோலாற
செய்த தொழில் திறம் அமைந்த இராமனது பாத அணிக்குத்
தந்தவனாகிய பரதனது; விரை மலர்த்தாளின் வீழ்ந்தான் – மணம்
வீசும் மலர் போன்ற திருவடிகளில் விழுந்து வணங்கினான்.

பாதுகையை அரசாள வைத்த தன்மையை நயமாகக் குறித்தமை
உணர்ந்து இன்புறத் தக்கது.

———–
10281.
ஊடுறு கமலக் கண்ணீர் திசைதொறும் சிவிறி ஓட,
தாள்தொடு தடக் கை ஆரத் தழுவினன் – ‘தனிமை நீங்கி,
காடு உறைந்து உலைந்த மெய்யோ, கையறு கவலை கூர
நாடு உறைந்து உலைந்த மெய்யோ, நைந்தது?’ என்று உலகம் நைய.–330-

(பரதன், அவனை) ஊடுறு கமலக் கண்ணீர் திசைதொறும்
சிவிறி ஓட- தாமரை போன்ற கண்களின் உள்ளே இருந்து
பெருகுகின்ற கண்ணீரானது நாலா பக்கங்களிலும் பரந்து சிதறி
ஓட; தனிமை நீங்கி காடு உறைந்து உலைந்த மெய்யோ? –
இராமனைப் பிரிந்த தனிமையிலிருந்து விடுபட்டு அவனுடனே
சென்று காட்டின்கண் அவனோடு தங்கி வருந்திய இலக்குவனது
உடம்போ; கையறு கவலை கூர நாடு உறைந்து உலைந்து
மெய்யோ- செயலற்ற பிரிவுத்துன்பம் மேலும் மேலும் மிகுதலால்
அயோத்தி நாட்டு நந்திக் கிராமத்தில் தங்கி உண்பதும்
உறங்குவதும் இன்றி வருந்திய பரதனது உடம்போ; நைந்தது?-
எது மிகவும் வருந்தியது;என்று உலகம் நைய – என்று உலகம்
இருவரையும் ஒருசேரப் பார்த்து வருந்தும்படி; தாள் தொடு
தடக்கை ஆரத் தழுவினன்- முழந்தாள் அளவு நீண்ட தன்
கைகளால் நன்றாகத் தழுவிக் கொண்டான்.

———

சத்துருக்கன் மூவரையும் பணிதல்
10282.
மூவர்க்கும் இளைய வள்ளல், முடிமிசை முகிழ்த்த கையன்,
தேவர்க்கும் தேவன் தாளும், செறி கழல் இளவல் தாளும்,
பூவர்க்கும் பொழிந்து வீழ்ந்தான்; எடுத்தனர் பொருந்தப் புல்லி,
வாவிக்குள் அன்னம் அன்னாள் மலர் அடித் தலத்து வீழ்ந்தான்.–331-

மூவர்க்கும் இளைய வள்ளல்- மூவர்க்கும் இளையவனாகிய
சத்துருக்கன்; முடிமிசை முகிழ்த்த கையன் – தலைமேற் கூப்பிய
கையுடையவனாய்; தேவர்க்கும் தேவன் தாளும் – இராமன்
திருவடி; செறிகழல் இளவல் தாளும் – கட்டிய கழல் உடைய
இலக்குவன் திருவடி; பூவர்க்கம் பொழிந்து வீழ்ந்தான் –
ஆகியவற்றில் மலர் மழை பொழிந்து விழுந்து வணங்கினான்;
பொருந்தப் புல்லி எடுத்தனர் – அவர்கள் அவனை நன்கு
தழுவித் தூக்கினர் (பின்னர் அவன்); வாவிக்குள் அன்னம்
அன்னாள் மலர் அடித்தலத்து வீழ்ந்தான் – பொய்கையில் வாழும்
அன்னம் போன்ற சீதையின் மலர் போன்ற திருவடிகளில் வீழ்ந்து
வணங்கினான்.

———-

துணைவர்களை அறிமுகப் படுத்தல்
10283.
பின் இணைக் குரிசில்தன்னைப் பெருங் கையால் வாங்கி, வீங்கும்
தன் இணைத் தோள்கள் ஆரத் தழுவி, அத் தம்பிமாருக்கு,
இன் உயிர்த் துணைவர்தம்மைக் காட்டினான்;இருவர் தாளும்,
மன் உயிர்க்கு உவமை கூர வந்தவர், வணக்கம் செய்தார்.–332-

பின் இணைக் குரிசில் தன்னைப் பெருங்கையால்
வாங்கி – தன் தம்பியும் பரதனோடு இணையாக
உள்ளவனும் ஆகிய சத்துருக்கனைத் தனது நீண்ட கைகளால
எடுத்து; வீங்கும் தன் இணைத் தோள்கள் ஆரத் தழுவி-
பருத்த தனது இரண்டாகிய தோள்கள் முழுகும்படி
அணைத்து; அத்தம்பிமாருக்கு – அந்த பரத
சத்துருக்கனர்களுக்கு; இன் உயிர் துணைவர் தம்மைக்
காட்டினான் – இனிய உயிர் போன்ற தனது துணைவர்களாகிய
சுக்கிரீவ, வீடணர்களைக் காட்டி அறிமுகம் செய்வித்தான்; மன்
உயிர்க்கு உவமை கூர வந்தவர் – உலக உயிர்களுக்கு
உவமைச் சிறப்பு உண்டாகும்படி வந்தவர்களாய அவர்கள்;
இருவர் தாளும்- பரத சத்துருக்கனர் தாள்களை; வணக்கம்
செய்தார்- வணங்கினார்கள்.

———–

குரக்கினத்து அரசை, சேயை, குமுதனை, சாம்பன்தன்னை
செருக் கிளர் நீலன்தன்னை, மற்றும் அத் திறத்தினோரை,
அரக்கருக்கு அரசை, வெவ்வேறு அடைவினின் முதன்மை கூறி,
மருக் கமழ் தொடையல் மாலை மார்பினன், பரதன், நின்றான்.–333-

மருக்கமழ் தொடையல் மாலை மார்பினன் பரதன்- மணம்
வீசும் கட்டமைந்த மாலை அணிந்த மார்பினை உடைய பரதன்;
குரக்கினத்து அரசை – சுக்கிரீவனை; சேயை – அங்கதனை;
குமுதனை சாம்பன் தன்னை செருக்கிளர் நீலன் தன்னை-;
மற்றும் அத்திறத்தோரை – வேறு அத்தகையவர்களை;
அரக்கருக்கு அரசை- வீடணனை; வெவ்வேறு அடைவினின்-
அவரவர்க்கு உரிய முறைப்படி; முதன்மை கூறி – உபசார
வார்த்தைகள் கூறி; நின்றான்.

———–

சுமந்திரன் வருதல்
10285.
மந்திரச் சுற்றத்துள்ளார் தம்மொடும், வயங்கு தானைத்
தந்திரத் தலைவரோடும், தமரொடும், தரணி ஆளும்
சிந்துரக் களிறு போல்வார் எவரொடும், சேனையோடும்,
சுந்தரத்தடந் தோள் வெற்றிச் சுமந்திரன் தோன்றினானால்–334-

சுந்தரத் தடந்தோள் வெற்றிச் சுமந்திரன்- அழகிய
அகன்ற தோள்களை உடைய வெற்றியுடைய சுமந்திரன் என்னும்
முதல் அமைச்சன்; மந்திரச் சுற்றத்துள்ளார் தம்மொடும்-
மந்திராலோசனைச் சபையில் இருத்தற்குரியோர்களோடும்;
வயங்கு தானைத் தந்திரத் தலைவரோடும்- விளங்கிய சேனைத்
தலைவர்களோடும்; தமரொடும் – ஏனைய சுற்றத்தினரோடும்;
தரணி ஆளும் சிந்துரக் களிறு போல்வார் எவரொடும் –
உலகை ஆளும் சிந்தூரம் அணிந்த ஆண்யானை போன்ற
மன்னர்களோடும்; சேனையோடும் தோன்றினான்.

——————-

அழுகையும், உவகைதானும் தனித்தனி அமர் செய்து ஏற,
தொழுதனன், எழுந்து விம்மி, சுமந்திரன் நிற்றலோடும்,
தழுவினன் இராமன், மற்றைத் தம்பியும் அனைய நீரான்,
‘வழு இனி உளது அன்று, இந்த மா நிலக்கிழத்திக்கு’ என்றான்.–335-

சுமந்திரன்-; அழுகையும் உவகை தானும் தனித்தனி அமர்
செய்து ஏற – அழுகையும் மகிழ்ச்சியும் தனித்தனியாக
ஒன்றோடொன்று போட்டியிட்டு மேலே மிக; எழுந்து விம்மி
தொழுதனன் நிற்றலோடும்- நின்று துடித்து வணங்கி நின்ற
அளவில்; இராமன் தழுவினன் – இராமன் தழுவினன்; மற்றைத்
தம்பியும் அனைய நீரான் – இலக்குவனும் அதுபோலவே
தழுவினன் (பின்னர் சுமந்திரன்); இந்த மாநிலக் கிழத்திக்கு-
இந்த நிலமகளுக்கு; இனி வழு உளது அன்று என்றான் –
இனித்துன்பம் இல்லை என்று மகிழ்ச்சி கூறினான்.

—————

‘ஏறுக சேனை எல்லாம் விமானமீது’ என்று, தன்போல்
மாறு இலா வீரன் கூற, வந்துள அனிக வெள்ளம்
ஊறு இரும் பரவை வானத்து எழிலியுள் ஒடுங்குமாபோல்
ஏறி, மற்று இளைய வீரன் இணை அடி தொழுதது அன்றே.–336-

தன் போல் மாறு இலா வீரன்- தனக்கு ஒப்பாக மற்று ஒன்று
இல்லாத பெருவீரனாகிய இராமபிரான்; சேனை எல்லாம் விமானம்
மீது ஏறுக என்று கூற- எல்லாச் சேனைகளும் விமானத்தின் மேல்
ஏறட்டும் என்று கட்டளையிட; வந்துள அனிக வெள்ளம் – வந்த
சேனைப் பெருக்கு; ஊறு இரும் பரவை வானத்து எழிலியுள்
ஒடுங்குமா போல்- மேலும் மேலும் ஊறுகின்ற கடல் விண்ணில்
உள்ள மேகத்துள் ஒடுங்குவதைப் போல; ஏறி – விமானத்தில் ஏறி;
இளைய வீரன் இணை அடி தொழுதது- இலக்குவனது திருவடிகளை
வணங்கியது.

————

‘உரைசெயின், உலகம் உண்டான் மணி அணி உதரம் ஒவ்வா,
கரை செயல் அரிய வேதக் குறுமுனி கையும் ஒவ்வா,
விரை செறி அலங்கல் மாலைப் புட்பக விமானம்’ என்றுஎன்று,
உரைசெய்து, வான் உளோர்கள் ஒண் மலர் தூவி ஆர்த்தார்.–337

வான் உளோர்கள் – தேவர்கள்; விரை செறி அலங்கல்
மாலைப் புட்பகவிமானம் உரைசெயின் – மணமிக்க மலர்
மாலை அணிந்த இந்த புட்பக விமானம் பற்றிச் சொல்லப்
புக்கால்; உலகம் உண்டான் மணி அணி உதரம் ஒவ்வா
– உலகம் உண்டவனாகிய திருமாலின் அழகு பொருந்திய
திருவயிறும் உவமையாகாது; கரைசெயல் அரிய வேதக்
குறுமுனி கையும் ஒவ்வா – கரை காண முடியாத
வேதங்களை உணர்ந்த அகத்திய முனிவனது (கடலை அடக்கிய)
கையும் உவமையாகாது; என்று என்று- என்று கூறி; ஒண் மலர்
தூவி ஆர்த்தார் – ஒள்ளிய மலர்களைத் தூவி ஆரவாரம்
செய்தனர்.

—————

அசனியின் குழுவும், ஆழி ஏழும் ஒத்து ஆர்த்ததென்ன,
விசையுறு முரசும், வேதத்து ஓதையும், விளி கொள் சங்கும்,
இசையுறு குரலும், ஏத்தின் அரவமும், எழுந்து பொங்கி,
திசை உறச் சென்று, வானோர் அந்தரத்து ஒலியின் தீர்ந்த.–338-

விசையுறு முரசும்- வேகமாக அடிக்கப் பெறும் முரசு ஓசையும்;
வேதத்து ஓதையும் – வேத ஓசையும்; விளிகொள் சங்கும்- சங்க
நாதமும்; இசை உறுகுரலும் – இராகம் கூடிய வாய்ப் பாட்டொலியும்;
ஏத்தின் அரவமும்- தோத்திர முழக்கொலியும்; எழுந்து பொங்கி
– மேலே புறப்பட்டுச் சென்று; திசை உறச் சென்று- நாலா பக்கமும்
அளாவி; வானோர் அந்தரத்து ஒலியின்- தேவர்கள் மகிழ்ச்சிப்
பெருக்கால் மேலே செய்யும் ஆரவாரத்தின் கண்; தீர்ந்த-
ஒலியடங்கிப் போயின;

————

கோவொடு தூசு, நல் குல மணிக் குழாம்,
மாவொடு கரித் திரள், வாவு தேர் இனம்,
தாவு நீர் உடுத்த நல் தரணி தன்னுடன்,
எவரும் சிலை வலான், யாவும் நல்கினான். —

————–

அனுமன் விமானத்திலுள்ளாரைப் பரதனுக்குச் சுட்டிக் காட்டுதல்

அன்னது ஓர் அளவையின், விசும்பின் ஆயிரம்
துன் இருங் கதிரவர் தோன்றினார் என,
பொன் அணி புட்பகப் பொரு இல் மானமும்,
மன்னவர்க்கு அரசனும், வந்து தோன்றினார். –

—————

‘அண்ணலே! காண்டியால்-அலர்ந்த தாமரைக்
கண்ணனும், வாரைக் கடலும், கற்புடைப்
பெண் அருங் கலமும், நின் பின்பு தோன்றிய
வண்ண வில் குமரனும், வருகின்றார்களை. —

————–

‘ஏழ்-இரண்டு ஆகிய உலகம் ஏறினும்
பாழ் புறம் கிடப்பது, படி இன்றாயது, ஓர்
சூழ் ஒளி மானத்துத் தோன்றுகின்றனன்
ஊழியான்’ என்று கொண்டு, உணர்த்தும் காலையே.

———-

இராமனைக் கண்டவர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தல்

பொன் ஒளிர் மேருவின் பொதும்பில் புக்கது ஓர்
மின் ஒளிர் மேகம்போல் வீரன் தோன்றலும்,
அந் நகர் ஆர்த்த பேர் ஆர்ப்பு, இராவணன்
தென் நகர்க்கு அப் புறத்து அளவும் சென்றதால்.–

———

இராமனைப் பரதன் காணுதல்

ஊனுடை யாக்கை விட்டு உண்மை வேண்டிய
வானுடைத் தந்தையார் வரவு கண்டென,
கானிடைப் போகிய கமலக்கண்ணனை,
தானுடை உயிரினை, தம்பி நோக்கினான். —

————

ஈடுறு வான் துணை இராமன் சேவடி
சூடிய சென்னியன், தொழுத கையினன்,
ஊடு உயிர் உண்டு என உலர்ந்த யாக்கையன்,
பாடு உறு பெரும் புகழ்ப் பரதன் தோன்றினான்.–

————

இராமனும் தம்பியைக் கண்டு மகிழ்தல்

தோன்றிய பரதனைத் தொழுது, தொல் அறச்
சான்று என நின்றவன், ‘இனைய தம்பியை,
வான் தொடர் பேர் அரசு ஆண்ட மன்னனை,
ஈன்றவள் பகைஞனை, காண்டி ஈண்டு’ எனா, —

———–

காட்டினன் மாருதி; கண்ணின் கண்ட அத்
தோட்டு அலர் தெரியலான் நிலைமை சொல்லுங்கால்,
ஓட்டிய மானத்துள் உயிரின் தந்தையார்
கூட்டு உருக் கண்டன்ன தன்மை கூடினான். —

—————

புட்பக விமானம் நிலத்தைச் சார்தல்

ஆனது ஓர் அளவையின், அமரர்கோனொடும்
வானவர் திரு நகர் வருவது ஆம் என,
மேல் நிறை வானவர் வீசும் பூவொடும்
தான் உயர் புட்பகம் நிலத்தைச் சார்ந்ததால். —

———–

இராமனது வருகையால் தாயர் முதலியோர் உற்ற நிலை

தாயருக்கு அன்று சார்ந்த கன்று எனும் தகையன் ஆனான்;
மாயையின் பிரிந்தோர்க்கு எல்லாம் மனோலயம் வந்தது ஒத்தான்;
ஆய் இளையார்க்குக் கண்ணுள் ஆடு இரும் பாவை ஆனான்;
நோய் உறுத்து உலர்ந்து யாக்கைக்கு உயிர் புகுந்தனையது ஒத்தான் —

————–

எளிவரும் உயிர்கட்கு எல்லாம் ஈன்ற தாய் எதிர்ந்தது ஒத்தான்;
அளி வரும் மனத்தோர்க்கு எல்லாம் அரும் பத அமுதம் ஆனான்;
ஒளி வரப் பிறந்தது ஒத்தான், உலகினுக்கு; ஒண்கணார்க்குத்
தெளிவு அருங் களிப்பு நல்கும் தேம் பிழித் தேறல் ஒத்தான். —

———–

ஆவி அங்கு அவன் அலால் மற்று இன்மையால், அனையன் நீங்க,
காவி அம் கழனி நாடும், நகரமும், கலந்து வாழும்
மா இயல் ஒண்கணாரும், மைந்தரும், வள்ளல் எய்த,
ஓவியம் உயிர் பெற்றென்ன ஓங்கினர், உணர்வு பெற்றார்.–

———-

சுண்ணமும், சாந்தும், நெய்யும், சுரி வளை முத்தும், பூவும்,
எண்ணெயும், கலின மா விலாழியும், எண் இல் யானை
வண்ண வார் மதமும், நீரும், மான்மதம் தழுவும் மாதர்
கண்ண ஆம் புனலும், ஓடிக் கடலையும் கடந்த அன்றே. —

————–

அடியில் வீழ்ந்து வணங்கிய பரதனை இராமன் அன்புறத் தழுவுதல்

சேவடி இரண்டும் அன்பும் அடியுறையாகச் சேர்த்தி,
பூ அடி பணிந்து வீழ்ந்த பரதனைப் பொருமி விம்மி,
நாவிடை உரைப்பது ஒன்றும் உணர்ந்திலன், நின்ற நம்பி,
ஆவியும் உடலும் ஒன்றத் தழுவினன், அழுது சோர்வான். —

———-

தழுவினன் நின்றகாலை, தத்தி வீழ் அருவி சாலும்
விழு மலர்க் கண்ணீர் மூரி வெள்ளத்தால், முருகின் செவ்வி
வழுவுற, பின்னி மூசி மாசுண்ட சடையின் மாலை
கழுவினன், உச்சி மோந்து, கன்று காண் கறவை அன்னான். —

————

இலக்குவன் பரதனது பாதங்களில் விழுந்து வணங்குதல்

அனையது ஓர் காலத்து, அம் பொன் சடை முடி அடியது ஆக,
கனை கழல் அமரர் கோமாற் கட்டவன்-படுத்த காளை,
துனை பரி, கரி, தேர், ஊர்தி என்று இவை பிறவும், தோலின்
வினை உறு செருப்புக்கு ஈந்தான் விரை மலர்த் தாளின் வீழ்ந்தான் —

————-

சத்துருக்கனையும் இராமன் தழுவி, பரத சத்துருக்கனர்களைத் துணைவர்களுக்கு அறிமுகப்படுத்தல்

பின் இணைக் குரிசில் தன்னைப் பெருங் கையால் வாங்கி, வீங்கும்
தன் இணைத் தோள்கள் ஆரத் தழுவி, அத் தம்பிமாருக்கு,
இன் உயிர்த் துணைவர் தம்மைக் காட்டினான்; இருவர் தாளும்,
மன் உயிர்க்கு உவமை கூர வந்தவர், வணக்கம் செய்தார். —

————

மிகைப் பாடல்கள்

‘வங்க நீள் நெடு வட திசை வானவன் விமானம்
துங்க மா கவி எழுபது வெள்ளமும் சூழ்ந்தால்
எங்குளார் எனும் இடம் உளது; அதன்மிசை ஏறி,
பொங்கு மா நகர் புகுதி, இப் பொழுதினில்’ என்றான். 1-1

‘வாங்கினான் இரு நிதியொடு தனதனில், வள்ளால்!
ஓங்குமால், வெள்ளம் ஏழு பஃது ஏறினும், ஒல்காது;
ஈங்கு உளார் எலாம் இவருவது; இவரின், நீ இனிது
பூங் குலா நகர் புகுதி, இஞ் ஞான்று’ எனப் புகன்றான். 1-2

‘மங்கலா நிதி வட திசை வானவன் மானம்;
துங்கம் ஆர் கவி எழுபது வெள்ளமும் சூழ்ந்தால்,
எங்கு உளார்?” எனும் இடம் உளது; இதன்மிசை ஏறி,
பொங்கு மா நகர் புகுதி, இப் பொழுதினில்’ என்றான். 1-3

‘வாங்கினான், அளகேசனைத் துரந்து, இந்த மானம்;
ஓங்கும் மூவுலகத்தவர் ஏறினும், உரவோய்!
ஆங்கு இடம் பினும் உடையதாம்; அதுதனில் ஏறி,
பூங் குலா நகர் புகுதி, இப் பொழுதினில்’ என்றான். 1-4

வாங்கினான் அது, மா நிதியோடு அவன் மானம்;
ஏங்கு வெள்ளம் ஓர் எழுபதும் ஏறினால், இன்னும்,
ஆங்கு உளோர் எலாம் ஏறுவது; அதனை நீ ஏறி,
பூங் குலா நகர் புகுதி, இப் பொழுதினில்’ என்றான். 1-5

என்று, தேரினை வீடணன் எய்தியது என்றான்;
‘நன்றுதான்’ என நாயகன் ஏறினன், அவரோடு
அன்றுதான் இளங் கோவொடும் அக் கவி வெள்ளம்
ஒன்றுதான் என இரு திசை இருந்தும் ஒக்கும். 1-6

ஏறினன் விமானம் தன்னில் இராமனும், இளைய கோவும்,
மாறு இலாச் சனகியோடு, வள நகர் இலங்கை வேந்தும்,
கூறிய அனுமன், சாம்பன், குமரன், வெங் கவி வந்து ஏற;
மாறிலோர் நிலத்து நின்றார், வயந்தனார் கொத்தில் உள்ளார். 1-7

[இது முதல் 1-19 வரையில் ‘இமயப் படலம்’ என்றும், ‘வசந்தன் உயிர்வரு படலம்’ என்றும், சில பிரதிகளில் உள்ளன.]

மாறதாய் வெள்ளம் சேனை மானத்தின் வராமை நோக்கி,
‘ஏறும் நீர் தேரில்’ என்ன, ‘கருணன் வந்து எதிர்த்தபோது,
சீறிய நுமரில் எம் கோன் தாக்கிட, அரக்கன் சீறி,
நீறு எழப் பிசைந்தே இட்டான் நெற்றியில்’ என்னச் சொன்னார் 1-8

என்ற வாசகம் கேட்டலும், வானரர் இறங்கி,
நின்ற போதினில் இராகவன் தேரின்நின்று இழிந்தான்;
‘பொன்றுமா வரக் காரணம் என்?’ எனப் புழுங்கா’
துன்று தார்ப் புயத்து இலக்குவ! பொறி’ எனச் சொன்னான். 1-9

‘வரிசிலை இராமன், ஓலை மறம் புரி மறலி, காண்க!
எரிகொளும் இலங்கைப் போரில், இன் உயிர் துறந்து போந்த
குரிசிலை, வயந்தன் தன்னைத் தேடியே கொணர்க; அன்றேல்,
உரிய தன் பதமும் வாழ்வும் ஒழிப்பென்’ என்று எழுதிவிட்டான். 1-10

அக் கணத்து அருகு நின்ற அனுமன் கைத் திருமுகத்தைத்
தக்கவன் நீட்ட, வாங்கி, தன் தலைமிசையில் சூடி,
‘இக்கணம் வருவென்; வாழி! இராம!’ என்று, இரு தோள் கொட்டி,
மிக்க மா மடங்கல் போல, விண்ணிடை விசைத்துப் பாய்ந்தான் 1-11

மண்டிப் புக்கனன், மறலிதன் பெரும் பதம்; நரகில்
தண்டிப்புண்டு, அறுப்புண்டு, எரிப்புண்டவர்தம்மைக்
கண்டு, மாருதி கண் புதைத்து, ‘அரி! அரி’ என்ன,
மிண்டி ஏறினர், நரகிடை வீழ்ந்தவர் எல்லாம். 1-12

துளங்கி, அந்தகன் வந்து, அடி தொழுதலும், தோலா
வளம் கொள் மாருதி, ‘வசந்தனைக் காட்டு’ என, அவனும்
உளம் கலங்கி, ‘உன் நாயகன் அடியர் இங்கு உறார்கள்;
விளங்கு கீர்த்தியாய்! தேடு விண்ணவர் புரத்து’ என்றான். 1-13

சொன்ன கூற்றுவன் தன்னைத் தன் வாலிடைத் துவக்கி,
பொன்னின் கற்பகப் பதியிடைக் கொண்டு போய்ப் புகலும்,
முன்னை வந்து கண்டு, இந்திரன், ‘முனிவு எனோ?’ என்ன,
‘மன்ன! ஏகுவென்; வயந்தனைக் காட்டுதி’ என்றான். 1-14

‘வல் அரக்கரை மடித்து, எமை எடுத்த மாருதியே!
இல்லை இங்கு; அயன் உலகிடை அறிதி’ என்று இசைப்ப,
சொல்லும் அங்கு அவன் தன்னையும் வாலிடைத் துவக்கி,
பல் உயிர்த் திறம் படைத்தவன் உலகிடைப் பாய்ந்தான். 1-15

சிந்தை தூயவன் செல, உளம் துளங்கு நான்முகனும்,
‘வந்த காரியம் எது?’ என, ‘வயந்தனைப் பார்த்துச்
சுந்தரத் தடந்தோள் வில்லி நின்றனன்; அவன் தான்
உந்தன் நீள் பதத்துளான் எனின், காட்டு’ என உணர்த்தும்: 1-16

‘என்னுடைப் பெரும் பதத்தின் மேலாகிய எந்தை-
தன்னுடைப் பெருஞ் சோதியின் கீழதாய்த் தழைத்த
மின்னும் நீடு ஒளி விண்டுவின் பதத்துளான்; விறலோய்!
அன்னவன் தனைக் கொணருதி, ஆங்கு அணைந்து’ என்றான். 1-17

என்ற நான்முகன் தன்னையும், இந்திரன் யமனோடு
ஒன்ற, வால்கொடு துவக்கினன், ஒரு குதிகொண்டான்;
மின் திகழ்ந்து ஒளி விளங்கிடும் விண்டுவின் பதத்தில்
சென்று, கண்டு கொண்டு இழிந்தனன், திசைமுகன் பதியில். 1-18

மலரின் மேல் அயன் வசந்தற்கு முன் உரு வழங்க,
குலவு வாசவன் யமனை விட்டு, இரு நிலம் குறுகி,
இலகு இல் வீரன் தன் அடி, இணை அவனொடும் வணங்கி,
சலமும் தீர்த்தனன்; படையையும் ஏற்றினன், தேர்மேல். 1-19

[வேறு சில பிரதிகளில் 1-6 பாடலுக்குப்பின் 1-20 முதல் 1-27 வரையில் உள்ள பாடல்களுடன்
வசந்தன் வரலாறு பற்றி, (1-7 முதல் 1-19) முன் வந்த பாடல்களின் சிலவற்றையும்
இடையில் கொண்டு, இவ் வரலாறு வேறு வகையில் அமைந்துள்ளது.]

ஏறினான் இராமன் தேர்மேல் எழில் மலர் மாதினோடும்;
ஏறினான் இளைய கோவும், இராக்கதர் வேந்தனோடும்;
ஏறினான் அனுமன்; சாம்பன், இடபனே, முதலோர் ஏற,
மாறினார் நிலத்து நின்றார், வசந்த கோத்திரத்திலுள்ளார். 1-20

ஏறினன், இளைய கோவும்; இரவி சேய், சாம்பன், நீலன்,
‘ஏறினன், வாலி மைந்தன்’ என்றனர்; பலரும் ஏற,
சீறிய கும்பகன்னன் சினத்திடைச் சிதைந்து பட்ட,
மாறிலா வசந்தன் சேனை நின்றது, மாறி மண்மேல். 1-21

வண்டு அலம்பு தார் அமலனும் தம்பியும், மயிலும்,
கண்டு கைதொழ வானரக் கடலும், மற்று யாரும்
எண் தவாத பொன் மானமீது இருந்திடும் இயற்கை
அண்டர் நாதனும், வானமும், அமரரும், ஆமால். 1-22

பாரில் நின்றது அங்கு ஒரு வெள்ளப் படை; அவர்தம்மை,
‘வாரும் தேரின்மேல்’ என, ‘கும்பகர்ணன் வந்து ஏன்ற
போரில் எம் படைத் தலைவனோ பொன்றினன்; அவனை
நீர் எழப் பிசைந்து, இட்டனன் நெற்றியில்’ என்றார். 1-23

ஆழி வெள்ளம் ஓர் எழுபதும், அனுமனே முதலாம்
ஏழும் மூன்றும் ஆம் பெரும் படைத் தலைவரை இராமன்
சூழ நோக்கினன்; சுக்கிரீவன் தனைப் பாரா,
‘வாழி மாப் படை அனைத்தும் வந்தன கொலோ?’ என்றான். 1-24

இரவி கான்முளை இறங்கி வந்து, இராமனை இறைஞ்சி,
‘சுருதியாய்! ஒரு பேர் அரு சொல்லுவ; தொடர்ந்து
வருவதான இச் சேனையில் வசந்தன் என்று உரைக்கும்
ஒருவன் வந்திலன்; கண்டருளுதி’ என உரைத்தான். 1-25

கசிந்த ஞானங்கள் கலங்கல் இல் கழல் கும்பகருணன்
இசைந்த போரின் வந்து எய்தலும், இவன் தனை எடுத்துத்
தசைந்த தோல், மயிர், எலும்பு, இவைதமைத் தெரியாமல்,
பிசைந்து மோந்து, உடற் பூசினன், பெரு நுதற்கு அணிந்தே. 1-26

‘இசைந்த சீராமன் ஓலை; இலங்கையில் பூசல் தன்னில்
வசந்தனைக் கண்டதில்லை; மதித்தவாறு அழகிது அம்மா!
வசந்தனைக் கொண்டுதானும் வருக! எனோ? வாராகினாகில்,
நமன் குலம் களைவென்’ என்றான் -‘நாளை வா’ என்ற வீரன். 1-27

[இதன் பின் 1-10, 11, 12, 13 என்ற பாடல்கள் உள்ளன.]

‘செல்வனே! இன்னம் கேளாய்; யான் தெரி பாசக் கையால்
அல் எனும் அரக்கர் தம்மை வம்மின்!’ என்று அழைத்து, மெள்ள
நல் இருட் பரவை மேனி நாரணன் தமரைக் கண்டால்,
‘செல்லவே போமின்’ என்று விடுக்குவென், செவியில், செப்பி. 1-32

[இதன்பின் 1-14, 15, 16,17, 18, 19 என்ற பாடல்கள் உள்ளன.]

‘மையல் இன்றியே இலங்கை மா நகர் காத்து, மாதே!
செய்யளாகிய திரு எனப் பொலிந்து, இனிது இருத்தி’
கைகளால் மிகப் புல்கியே, கண்கள் நீர் ததும்ப,
பொய் இலா மனத் திரிசடை, ‘விடை’ எனப் போனாள். 5-1

என்ற காலையில், எழுந்தவன் இயற்கையை நோக்கி,
நன்று நாயகன் அறிவொடு நினைவன நயந்தான்;
சென்று சேனையை நாடினன், திரிந்து வந்து எய்தி,
வென்றி வீரரில் வசந்தனைக் கண்டிலர், வெறுத்தார். 16-3

[சில பிரதிகளில், ‘சொன்ன வாசகம் பிற்பட’ (16) என்ற பாடலுக்குப் பின்
‘வசந்தன் உயிர் வரு படலம்’ தொடங்குகிறது. 16-3 என்னும் இந்த பாடலுக்கு முன்
இதன் முன்னர் தந்துள்ள 1-21, 1-23 என்ற இரு பாடல்களும் காணப்பெறுகின்றன.
இதன் பின் 1-24 என்ற பாடல் உள்ளது.]

என்னும் காலை (யில்), இராமனும் யமபடர் யாரும்
மன்னும் தொல் புரம் நோக்கியே, ‘மணி நகை முறுவல்
உன்னின் அன்றி, யான் தேவருக்கு உதவி செய்து’ என்னா,
பொன்னின் வார் சிலை எடுத்தனன், பொறுத்தனன், பொரவே. 16-5

எண் திசாமுகம் இரிந்து உக, யமபுரம் குலைய,
அண்ட கோளகை அடுக்கு அழிந்து உலைவுற, அழியாப்
புண்டரீகத்துப் புராதனன் முதலிய புலவோர்
தொண்டை வாய் உலர்ந்து அலமர, தொடு வில் நாண் எறிந்தான் 16-6

பாக வான் பிறையாம் என, பலர் நின்று துதிப்ப,
வாகை கொண்ட வெஞ் சிலையின் வளைவுற வாங்கி,
மேக சாலங்கள் குலைவுற, வெயிற் கதிர் மாட்சி
சோகம் எய்தி மெய் துளங்கிட, சுடு சரம் துரந்தான். 16-7

வல்லை மாதிரம் மறைந்திட, வானவர் மயங்க,
எல்லை காண்குறா யாவரும் இரியலில் ஏக,
வில்லை வாங்கிய கரம் அவை விதிர்விதிர்ப்பு எய்த,
தொல்லை நான்மறை துளங்கிட, சுடு சரம் துரந்தான். 16-8

வன் புலம் கிளர் நிருதரை வருக்கமோடு அறுக்க,
மின் புலம் கொளும் உரும் என்ன, வீக்கிய வில்லைத்
தன் பொலங் கையில் தாங்கியே தொடுத்த அச் சரங்கள்
தென் புலன் தனை நிறைத்தது; செறிந்தன, சேணில். 16-9

தருமராசனும், காலனும், யமபடர் தாமும்,
உருமு வீழ்ந்தென, சரம் வந்து வீழ்ந்ததை உணர்ந்து,
மரும தாரையில் பட்டது ஓர் வடிக் கணை வாங்கி
நிருமியா, ‘இது இராகவன் சரம்’ என நினைந்தார். 16-10

‘கெட்டது இன்று இனித் தென்புலம்; கேடு வந்து எய்தி,
பட்டனம்; இனிப் பிழைப்பு இலம்’ என்பது ஓர் பயத்தால்,
முட்ட எய்திய முயற்சியோடு யாவரும் மொய்ப்ப,
சிட்டர் தம் தனித் தேவனை வணங்கினர், சென்றார். 16-11

‘சிறந்த நின் கருணை அல்லால், செய் தவம் பிறிது இலார்மேல்
புறம் தரு முனிவு சாலப் போதுமோ? புத்தேள்! நின்னை
மறந்திருந்து உய்வது உண்டோ ? மலர்மிசை அயனைத் தந்த,
அறம் தரு சிந்தை ஐய! அபயம், நின் அபயம்’ என்றார். 16-12

‘ஐயனே! எமை ஆளுடை அண்டர் நாயகனே!
மெய்யனே!’ என, சரணில் வந்து, யாவரும் வீழ்ந்தார்;
‘பொய்யினோர் செய்த பிழை பொறுத்தருள்!’ என, போர் மூண்டு
எய்ய நேரிலாச் சிலையினை மடக்கினன், இராமன். 16-13

வந்து அடைந்து, ‘உனக்கு அபயம்’ என்று, அடியினில் வணங்கி,
“எம் தனிப் பிழை பொறுத்தி” என்று, இயம்பினிர்; இதனால்
உம்தம்மேல் சலம் தவிர்ந்தனென்; யூக நாயகன் தான்
தந்த சேனையில் வசந்தன் வந்திலன்; தருக’ என்றான். 16-14

தன் தனிச் சரண் வணங்கலும், இராகவன் சாற்றும்:
‘”என் தனிப் பிழை பொறுத்தி” என்று இயம்பினை; அதனால்
உன் தன் மேல் சலம் தவிர்ந்தனம்; யூகநாயகன் தான்
தந்த சேனையின் வசந்தன் வந்திலன்; தருக’ என்றான். 16-15

அண்ணல் ஆரியன், ‘தருதி’ என்று அருளலும், அவர் போய்,
விண் எலாம் புகுந்து ஓடியே, வசந்தனை விரைவில்
கண்ணின் நாடி, நல் உயிரினைக் காண்கிலாது இருந்தார்;
‘திண்ணன் யாக்கை எங்கே?’ என, சாம்புவன் செப்பும்: 16-16

[இதன்பின் 1-25, 1-10, 1-11 என்னும் பாடல்கள் உள்ளன.]

அன்னதே என, ‘அவன் உயிர்க்கு அமரர்தம் பதிக்கே
முன்னது ஓர் உடல் கொண்டு, இவண் தருக!’ என மொழிய,
சொன்ன வாய்மை கேட்டு, அனுமனும் துணைவரைப் பாரா,
‘பொன்னின் பாதுகம் பணிந்தனென், விடை’ எனப் போனான். 16-20

[இதன்பின் 1-12, 13, 27, 1-14, 15, 16, 17, 18, என்னும் பாடல்கள் வர
‘வசந்தன் உயிர் வரு படலம்’ முடிவு பெறுகிறது]

அன்னது ஆதலின் அமரர் அந் நகரிடை, ஆங்கண்
முன்னது ஓர் உடல் நாடியே கொணர்ந்திட, முந்தச்
சொன்ன வாயுவைத் தரிசிக்க, வசந்தனும் தோன்றி,
பொன்னின் பாதுகம் புனைந்தனன்; தருமனும் போனான். 16-29

அன்ன காலையில், புட்பக விமானம் ஆங்கு அடைய,
முன் இராகவன், சானகி, இலக்குவன் முதலா,
மன்னு வானரம் எழுபது வெள்ளமும் வரையா
உன்னி ஏறலும், உச்சியில் சொருகு பூப் போன்ற. 16-30

என்ற புட்பக விமானத்தின் ஏறினர் எவரும்;
‘நன்றுதான்’ என நாயகன் ஏறினன் திருவோடு;
அன்றுதான் இளங்கோவொடும் அக் கவி வெள்ளம்
ஒன்றுதான் என ஒரு திசை இருந்ததும் ஒக்கும். 17-1

ஆய கண்டு, அமலன் உள்ளம் மகிழ்ந்தனன்; அனுமன் தன்பால்
நேயம் மூண்டு அது தான் நிற்க, நெடியவன் சரணம் சூடி,
மேயினன், தமர்களோடு வசந்தனும்; விண்மீதாகப்
போயினது, இராமன் சொல்லின், புட்பக விமானம் அம்மா! 17-2

தேனுடை அலங்கல் மௌலிச் செங் கதிர் செல்வன் சேயும்,
மீனுடை அகழி வேலை இலங்கையர் வேந்தும், வென்றித்
தானையும், பிறரும், மற்றைப் படைப் பெருந் தலைவர்தாமும்,
மானுட வடிவம் கொண்டார்; வள்ளல் தன் வாய்மைதன்னால். 19-1

வென்றி வீடணன் கொணர்ந்த புட்பக விமானம் தன்மேல்,
ஒன்றும் நல் சீதையோடும், உம்பரும் பிறரும் காண,
வென்று உயர் சேனையொடும், இராமனும் விரைவின் எய்தி,
தென் திசை இலங்கை ஆதி, தேவிக்குத் தெரியக் காட்டும். 20-1

வென்றி சேர் கவியின் வெள்ளக் கடல் முகந்து எழுந்து, விண்மேல்
சென்றது விமானம்; செல்ல, திசையோடு தேசம் ஆதி
என்றவை அனைத்தும் தோன்ற, இராமனும் இனிது தேறி,
தென் திசை இலங்கையின் சீர் சீதைக்குத் தெரிக்கலுற்றான்: 20-2

‘மன்னு பொற் கொடிகள் ஆட, மாட மாளிகையின் ஆங்குத்
துன்னு பைம் பொழில்கள் சுற்ற, தோரணம் துவன்றி, “வானோர்
பொன்னகர் ஒக்கும்” என்று புகழ்தலின், புலவராலும்
பன்ன அரும் இலங்கை மூதூர், பவளவாய் மயிலே! பாராய். 20-3

‘வெதிர் எதிர் அஞ்சும் மென் தோள் வெண் நகைக் கனி வாய் வல்லி!
எதிர் பொர வந்த விண்ணோர்-இறைவனைச் சிறையில் வைத்த
அதிர் கழல் அரக்கர் தானை அஞ்சல் இல் ஆறு செல்ல,
கதிர் மதி விலங்கி ஏகும் கடி மதில் மூன்றும் காணாய். 20-4

‘வென்றி வேல் கருங் கண் மானே! என்னொடும் இகலி, வெய்ய
வன் திறல் அரக்கன் ஏற்ற வட திசை வாயில் நோக்காய்;
கன்றிய அரக்கன் சேனைக் காவலன் தன்னை நீலன்
கொன்று, உயிர் கூற்றுக்கு ஈந்த குண திசை வாயில் நோக்காய் 20-5

‘மறத்திறல் வாலி மைந்தன், வச்சிரத்து எயிற்றோன் தன்னைச்
செறுத்து, உயிர் செகுத்து, நின்ற தென் திசை வாயில் நோக்காய்;
அறத்தினுக்கு அலக்கண் செய்யும் அகம்பன் தன் உடலை ஆவி
வெறுத்து, எதிர் அனுமன் நின்ற மேல் திசை வாயில் நோக்காய் 20-6

‘கருங் கடல் நிகர்ப்ப ஆன அகழி ஓர் மூன்றும் காணாய்;
மருங்கு அடர் களபக் கொங்கை மதி நுதல் மிதிலை வல்லி!
இருங் கட முகத்த யானை இவுளி, தேர், காலாள், துஞ்சி,
பொரும் சுடர் நிறத்தர் வீய்ந்த போர்க்களம் தன்னைப் பாராய். 20-7

‘கொடி மதில் இலங்கை வேந்தன் கோபுரத்து உம்பர்த் தோன்ற,
அடு திறல் பரிதி மைந்தன் அவன் நிலை குலையத் தாக்கி,
சுடர் முடி பறித்த அந் நாள், அன்னவன் தொல்லை வெம் போர்ப்
படியினை நோக்கி நின்ற சுவேல மால் வரையைப் பாராய். 20-8

‘பூக் கமழ் குழலினாய்! நின் பொருட்டு யான் புகலா நின்றேன்;
மேக்கு உயர் தச்சன் மைந்தன் நளன் இவன் விலங்கலால் அன்று
ஆக்கிய இதனை, வெய்ய பாதகம் அனைத்தும், வந்து
நோக்கிய பொழுதே, நூறும் சேதுவை, நீயும் நோக்காய். 20-9

‘இலங்கையை வலஞ் செய்து ஏக’ என நினைந்திடுமுன், மானம்
வலம் கிளர் கீழை வாயில் வர, ‘பிரகத்தன், நீலன்
நலம் கிளர் கையின் மாண்டது இவண்’ என, நமன் தன் வாயில்
கலந்திட, ‘ஈங்குக் கண்டாய், சுபாரிசற் சுட்டது’ என்றான். 20-10

குட திசை வாயில் ஏக, ‘குன்று அரிந்தவனை வென்ற
விட நிகர் மேகநாதன் இளவலால் வீழ்ந்தது’ என் முன்,
வட திசை வாயில் மேவ, ‘இராவணன் மவுலி பத்தும்,
உடலமும் இழந்தது இங்கு’ என்று உணர்த்தி, வேறு உரைக்கலுற்றான்: 20-11

‘நன்னுதல்! நின்னை நீங்கி, நாள் பல கழிந்த பின்றை,
மன்னவன் இரவி மைந்தன், வான் துணையாக நட்ட
பின்னை, மாருதி வந்து, உன்னைப் பேதறுத்து, உனது பெற்றி
சொன்னபின், வானரேசர் தொகுத்தது, இச் சேது கண்டாய். 20-12

‘மற்று இதன் தூய்மை எண்ணின், மலர் அயன் தனக்கும் எட்டா;
பொன் தொடித் தெரிவை! யான் என் புகழுகேன்! கேட்டி, அன்பால்
பெற்ற தாய் தந்தையோடு தேசிகற் பிழைத்து, சூழ்ந்த
சுற்றமும் கெடுத்துளோரும் எதிர்ந்திடின் சுரர்கள் ஆவார். 20-13

ஆவினை, குரவரோடும் அருமறை முனிவர்தம்மை,
பாவையர் குழுவை, இன் சொல் பாலரை, பயந்து தம் இல்
மேவின அவரை, செற்றோர், விரி கடல் சேது வந்து
தோய்வரேல், அவர்கள் கண்டாய், சுரர் தொழும் சுரர்கள் ஆவார் 22-1

மரக்கலம் இயங்கவேண்டி, வரி சிலைக் குதையால் கீறித்
தருக்கிய இடத்து, பஞ்ச பாதகரேனும் சாரின்,
பெருக்கிய ஏழு மூன்று பிறவியும் பிணிகள் நீங்கி,
நெருக்கிய அமரர்க்கு எல்லாம் நீள் நிதி ஆவர் அன்றே. 22-2

ஆங்கு அது காட்டக் கண்ட ஆயிழை, ‘கமலம் அன்ன
பூங் கழற் புயல்போல் மேனிப் புனித! என் பொருட்டால் செய்த
ஈங்கிதற்கு ஏற்றம் நீயே இயம்பு’ என, இரதம் ஆங்கே
பாங்குற நிறுவி நின்று, இங்கு இவை இவை பகரலுற்றான்: 23-1

‘அந்தணர்தம்மைக் கொன்றோர், அருந் தவர்க்கு இடுக்கண் செய்தோர்,
செந் தழல் வேள்வி செற்றோர், தீ மனை இடுவோர், தம்பால்
வந்து இரந்தவர்க்கு ஒன்று ஈயா வைக்கும் வன் நெஞ்சர், பெற்ற
தந்தையைத் தாயைப் பேணாத் தறுகணர், பசுவைச் செற்றோர், 23-2

‘குருக்களை இகழ்வோர், கொண்ட குலமகள் ஒழியத் தங்கள்
செருக்கினால் கணிகைமாரைச் சேர்பவர், உயிர் கொல் தீம்பர்,
இருக்குடன் அமரும் தெய்வம் இகழ்பவர், ஊன்கள் தின்று
பெருக்கிய உடலர், பொய்ம்மை பிதற்றுவோர், பீடை செய்வோர் 23-3

‘வெய்யவன் உச்சி சேர மிக வழி நடந்து போவோர்,
மை அறும் முன்னோன் தன்னை வலிசெயும் தம்பிமார்கள்,
கை உள முதல்கள் தம்மைக் கரந்து தம்பிக்கு ஒன்று ஈயார்,
துய் அன சொற்கள் சொல்வோர், சோம்பரைச் சுளித்துக் கொல்வோர், 23-4

‘ஊரது முனிய வாழ்வோர், உண்ணும்போது உண்ண வந்தோர்க்கு
ஆர்வமோடு அளியாது இல்லம் அடைப்பவர், அமணே சென்று
நீரினுள் இழிவோர், பாவ நெறிகளில் முயல்வோர், சான்றோர்
தாரமது அணைவோர், மூத்தோர் தமை இகழ் அறிவிலாதோர். 23-5

‘கண்டிலாது “ஒன்று கண்டோ ம்” என்று கைக்கூலி கொள்வோர்,
மண்டலாதிபர் முன் சென்று வாழ் குடிக்கு அழிவு செய்வோர்,
மிண்டுகள் சபையில் சொல்வோர், மென்மையால் ஒருவன் சோற்றை
உண்டிருந்து, அவர்கள் தம்பால் இகழ்ச்சியை உரைக்கும் தீயோர், 23-6

‘பின்னை வா, தருவென்’ என்று பேசித் தட்டுவிக்கும் பேதை,
கன்னியைக் கலக்கும் புல்லோர், காதலால் கள்ளுண் மாந்தர்,
துன்னிய கலை வல்லோரைக் களிந்து உரைத்து இகழ்வோர், சுற்றம்
இன்னலுற்றிடத் தாம் வாழ்வோர், எளியரை இன்னல் செய்வோர் 23-7

‘ஆண்டவன் படவும் தங்கள் ஆர் உயிர் கொண்டு மீண்டோர்,
நாண் துறந்து உழல்வோர், நட்பானவரை வஞ்சிப்போர், நன்மை
வேண்டிடாது, இகழ்ந்து, தீமை செய்பவர், விருந்தை நீப்போர்,
பூண்டு மேல் வந்த பேதை அடைக்கலம் போக்கி வாழ்வோர். 23-8

‘கயிற்றிலாக் கண்டத்தாரைக் காதலித்து அணைவோர், தங்கள்
வயிற்றிடக் கருவைத் தாமே வதைப்பவர், மாற்றார்தம்மைச்
செயிர்க்குவது அன்றிச் சேர்ந்த மாந்தரின் உயிரைச் செற்றோர்,
மயிர்க் குருள் ஒழியப் பெற்றம் வெளவு வோர், வாய்மை இல்லோர், 23-9

‘கொண்டவன் தன்னைப் பேணாக் குலமகள், கோயிலுள்ளே
பெண்டிரைச் சேர்வோர், தங்கள் பிதிர்க்களை இகழும் பேதை,
உண்டலே தருமம் என்போர், உடைப்பொருள் உலோபர், ஊரைத்
தண்டமே இடுவோர், மன்று பறித்து உண்ணும் தறுகண்ணாளர், 23-10

‘தேவதானங்கள் மாற்றி, தேவர்கள் தனங்கள் வௌவும்
பாவ காரியர்கள், நெஞ்சில் பரிவிலாதவர்கள், வந்து
‘கா’ எனா, ‘அபயம்’ என்று, கழல் அடைந்தோரை விட்டோர்,
பூவைமார் தம்மைக் கொல்லும் புல்லர், பொய்ச் சான்று போவோர் 23-11

‘முறையது மயக்கி வாழ்வோர், மூங்கை அந்தகர்க்குத் தீயோர்,
மறையவர் நிலங்கள் தன்னை வன்மையால் வாங்கும் மாந்தர்,
கறை படு மகளிர் கொங்கை கலப்பவர், காட்டில் வாழும்
பறவைகள், மிருகம், பற்றிப் பஞ்சரத்து அடைக்கும் பாவர். 23-12

கார்க் கன வரை சேர் கானில் கடுங் குழி கல்லும் கட்டர்,
நீர்க் கரை அதனில் ஒட்டி நெடுங் கலை முயல் மான் கொல்வோர்,
ஊர்க் கெழு கூவல் வீழ்ந்த உயிர்ப் பசு எடாது போவோர்,
வார்க் கெழு தன் மின்னாரை வழியில் விட்டு ஏகும் மாக்கள். 23-13

வழி அடித்து உண்போர், கேட்டால் வழி சொல்லாதவர்கள், வைப்பைப்
பொழி இருள் களவு காண்போர், பொய் சொல்லிப் பண்டம் விற்போர்,
அழிவு இலா வாய்மை கொன்றோர், அடைந்தது …………………
……………………….தெரிசிக்கத் தீர்க” என்றான். 23-14

‘ஆதியர் மூவர்க்கு அந் நாள், அரு மறை அறைந்த அந்த
நீதியாம் புராணம் தன்னை இகழ்பவர், நிறையக் கேளார்,
பாதியில் விட்டு வைப்போர், படித்தவர்ப் பிரியப்படுத்தார்,
போதம் இலாதார், “மற்றச் சமயம் பொல்லாதது” என்பார். 23-15

‘என்று இவர் முதலா மற்றும் எழு நரகு அடையும் பாவம்
ஒன்றிலர், நன்றிதன்னை மறந்தவர் ஒழிய உள்ளோர்,
துன்றிய வினைகள் எல்லாம், சுடர் கண்ட இருளே போல,
தென் திசை வந்து, சேது தரிசிக்க, தீரும்’ என்றான். 23-16

ஆங்கது கேட்டு, அருந்ததியே அனையாளும், ‘அவதியுடன்
தீங்கு அணுகும் செய்ந் நன்றி மறந்திடும் தீ மனத்தோர்கள்
தாங்க அரும் பாவங்களையும் எனக்காகத் தவிர்க்க’ என,
‘நீங்கிடுக அதுவும்’ என்றான்-நிலமடந்தை பொறை தீர்த்தான். 23-17

‘பார் எழுவி வாழ்வோர்கள் பஞ்ச மா பாதகமும்,
சீர் எழுவு திரு அணையைத் தெரிசிக்கத் தீர்க’ என,
கார் எழுவு திரு மேனிக் கண்ணன் நினைப்பின் படியே,
ஈர்-எழுவர் நால்வர் என்னும் இருடிகளும் எழுதினரால். 23-18

‘பார் மேவும் மாந்தர்கள் செய் பஞ்ச மா பாதகமும்
சீர் மேவும் திரு அணையைத் தெரிசிக்கத் தீர்க’ எனா,
கார் மேவும் திரு மேனிக் காகுத்தன் கட்டுரைத்து,
வார் மேவும் முலைச் சனகி மாதோடும் வழிக்கொண்டான். 23-19

என்பன பலவும் அந்த ஏந்திழைக்கு இருந்து கூறி,
தன் பெருஞ் சேனையோடும் தம்பியும் அரக்கர் கோவும்
பொன் பொரு விமானம் தன் மேல் போகின்றபோது, மிக்க
இன்புடை இராமன் வேலைக்கு இப் புறத்து இழிந்து, என் செய்வான் 23-20

முன் பெல அரக்கன் தன்னை முனி கொலை தொடரக் கண்டு, ஆங்கு,
‘அன்பினால் அரி பால் தோன்றும் அரனை அர்ச்சித்தால் அன்றி,
துன்பமே தொடரும் பொல்லாச் சூழ் கொலை தொலையாது’ என்று ஆங்கு
இன்புறும் இராமன் வேலைக்கு இப் புறத்து இழிந்து நின்றான். 23-21

திருவணை உயர் பதம் செப்பி மீண்டபின்,
அருகு அணை திருமகட்கு, ஆங்கு மற்று உள
தரு அணை திரள் புயச் சனக வல்லிக்கு, ஆம்
கரு வரை முகில் நிற வண்ணன் காட்டுவான். 23-22

கப்பை எனும் கன்னியையும், கந்தனார் தாதையையும்,
அப்பொழுதே திருவணைக்குக் காவலராய் அங்கு இருத்தி,
செப்ப அரிய சிலையாலே திருவணையை வாய் கீறி,
ஒப்பு அரியாள் தன்னுடனே, உயர் சேனைக் கடலுடனே. 23-23

வேந்தர் வேந்தனும் வேலையின் கரையினில் வரவே,
வாய்ந்த சாய்கையும் வந்தது; வானவர் வணங்க,
ஏந்து தோள் புயத்து இராமனும், இலக்குவன் தானும்,
வாய்ந்த சீதையும், மானமும், வானர வேந்தும், 23-24

பாய்ந்த வேலையின் கரையிடைப் பரமன் அங்கு உறவே,
சாய்ந்த சாய்கையும் வந்து, அணுகாது அயல் கிடக்க,
ஏந்து திண் புயத்து இராமனும், இளையவன் தானும்,
வாய்ந்த சீதையும், சேனையும், மற்றுள பேரும், 23-25

நின்ற போதினில், நிகர் இலா அகத்தியன் முதலோர்
குன்றுபோல் புயத்து இராகவன் தனை வந்து குறுக,
“நன்று நின் வரவு” என்னவே, நாதனும் வணங்கி,
வென்றி வேந்தனும் வேதியர் தம்மொடு வியந்து, 23-26

சேதுவின் கரை சேர்ந்த அத் திறல் புனை இராமன்,
‘ஏது இத் தலம்?’ எனக் குறு முனிவனைக் கேட்ப,
‘வாத ராசனும் வாசுகிதானும் முன் மலைந்த
போது, தந்தது, இப் பொன் நகர்’ என்று அவன் புகன்றான். 23-27

புகன்றவன் தனைப் பூங் கழல் இராகவன் சாய்கை
அகன்ற காரணம் குறு முனி உரைசெய, அவனும்,
‘பகர்ந்த தேவரும், பாற்கடல் பள்ளியான், பரமன்,
புகுந்தது இவ் வழி; பூவில் வந்தவனும், மற்று யாரும், 23-28

‘இருப்பது இத் தலம்; ஆகையால், இராவணன் சாய்கை,
அருத்தி இன்றியே, அகன்றது’ என்று அருள் முனி அறைய,
பெருத்த தோளுடை அண்ணலும் பிரியம் வந்து எய்தி,
‘கருத்து மற்று இனி உரை’ என, குறுமுனி கழறும்: 23-29

‘இந்த மா நகர் தன்னிலே இறைவனை அருச்சித்து,
உன் தன் மா நகர் எய்தினால், சாய்கை போம், உரவோய்!’
‘அந்த நீதியே செய்தும்’ என்று, அனுமனை அழைத்திட்டு,
‘எம் தம் நாதனை இமைப்பினில் கொடு வருக’ என்றான். 23-30

அந்த வேலை, முனிவன் அளி தெருள்
இந்த மா நிலத்து யாவரும் இன்புற,
‘கந்த மேவிய கங்கையில் ஓர் சிலை
தந்து காண்’ என, மாருதி தாவினான். 23-31

‘போதி’ என்று, அவற் போக்கிய இராமனும், இந்த
மாது சீதையும், மைந்தனாம் இலக்குவன் தானும்,
தீது தீரவே தீர்த்தங்கள் யாவையும் ஆடி,
ஆதி நாதனும் இருந்தனன், அமரர்கள் வியப்ப, 23-32

ஆன போதினில், ஐயன் மனத்துளே
தான் நினைந்ததுதான் ஆர் அறிகுவார்?
ஞானம் ஓர் வடிவு ஆகிய நாரணன்
மோனமாகி இருந்தனன், மூவரான். 23-33

காலம் சென்றது எனக் கருதி, கையால்
கோலமான மணலினைக் கூட்டியே,
‘ஆலம் உண்ட தே இவர் ஆம்’ என
ஞாலம் உண்டவர் தம் மனம் நாட்டவே. 23-34

‘முகுத்தம் ஆனதே’ என முனி மொழிதலும், இராமன்
மிகுத்தது ஓர் இடத்து எய்தியே, வெண் மணல் கூப்பி,
அகத்தினில் புறம் பூசித்தே, அடி மலர் இறைஞ்சி,
செகுத்த தோளுடைத் தம்பியும், சீதையும், தானும். 23-35

ஒத்த பூசனை செய்யவும், அமைதியின் உள்ளச்
சுத்தி மேவிய ஞானமும் தொடர்விடாது இருந்தோன்
அத்தன் பாதகம் ஆனவை அழிதர இயற்றி,
சித்தம் வாழ்தர நின்றனன், தேவர்கள் துதிப்ப. 23-36

நின்ற போதினில், நிறங்களும் படலமும் கொண்டு,
வென்றி சேர் புய மாருதி விரைவினில் வந்து,
‘நன்று செய்தனை!’ என்னப் போய் நாதனைப் பிடுங்கி,
வென்றி வால் அற்று, மேதினி வீழ்ந்தனன், வீரன். 23-37

[இந்தப் பாடல் காணும் இடத்தில், இதற்குப் பிரதியாக, பின்வரும் ஐந்து பாடல்கள் ஒரு பிரதியில் உள்ளன]

ஆய வேலையில், கங்கையின் அருஞ் சிலை வாங்கி,
தூய வார் கழல் அனுமனும் தோன்றினான்; தோன்றா,
சீயமாய் மலி அண்ணல் முன் திருச் சிலை வைத்து,
நேயமோடு இரு தாள் பணிந்து, அங்கு அவன் நின்றான். 23-37(அ)

நின்ற காலையில், அமலன் அங்கு அனுமனை நோக்கி,
ஒன்று அலாத பல் முகமன் அங்கு உரைத்து, ‘நம் பூசை
சென்றது ஆதலின், திருச் சிலை தாழ்த்தது; இப் புளினக்
குன்றினால் சிவன் தன்னுருக் குறித்தனென், கோடி’. 23-37(ஆ)

என்னும் வாய்மை அங்கு இராகவன் இயம்பிட, இறைஞ்சி,
முன்னி மாருதி மொழிந்தனன்; ‘மூவுலகு உடையோய்!
இன்னும் யான் தரும் கங்கையின் சிலையிடைப் பிழையாது
அன்ன தானத்தின் அமைப்பென் ஓர் இமைப்பிடை’ எனவே. 23-37(இ)

ஈர்த்தனன் வாலினாலே, இராகவன் பூசை கொள்ளும்
கூந்தனை; அனந்தன் வாழும் குவலயம் அளவும் கூடி
வார்த்த பேர் உருவம் கொள்ள, வால் விசைத்து, அனுமன் அந்த
மூர்த்தி என்று உணரான், நெஞ்சம் மூச்சு அற, தளர்ந்து வீழ்ந்தான் 23-37(ஈ)

மனுபரன் அனுமன் தன்னை வரவழைத்து, ஈசன் வன்மை-
தனை உரைத்து, ‘இடை நீ தந்த நாதனை நடுவே நாட்டி,
முனம் அதை ஏத்தி, பின் இம் மூர்த்தியை ஏத்தும்’ என்ன,
அனைவரும் அமரர்தாமும் அம் முறை ஏத்தி நின்றார். 23-37(உ)

விழுந்தவன்தனை வெந் திறல் இராகவன் நோக்கி,
‘அழுந்து சிந்தையாய்! அறிவு இலாது அதனை என் செய்தாய்?
பொழிந்து மா மலர் இட்டு நீ அருச்சி’ என்று உரைப்ப,
எழுந்து போய், அவன், இறைவனை அருச்சனை செய்தான். 23-38

அவ் இடத்து, ‘அனுமன் தந்த, கங்கைமேல்
வவ்விடப்படும் வந்திடுமான் சிலை
இவ் இடத்தினில் யாவரும் ஏத்து’ எனா,
தெவ் அடக்கும் சிலையவன் செப்பினான். 23-39

‘எம்தன் நாதன் இவன்’ என்று இறைமகன்
தந்த நாமம் சராசரம் சார்ந்த போது,
இந்திரன், பிரமா, முதல் எய்தினார்;
வந்து, வானவர் யாவரும் வாழ்த்தினார். 23-40

‘இத் தலத்தினில் யாரும் அங்கு ஓர் சிலை
வைத்து மா மனத்து உள்ளே வழுத்துவார்,
நத்து உலாய கை நாரணன், நான்முகன்,
பித்தன், மூவரும் ஏத்தப் பெறுக’ எனா. 23-41

என்று, இராகவன் ஈசன் பெருமையின்
நன்றிதன்னை நவில, அடங்குமோ?
சென்று சென்று, ‘செய செய! போற்றி!’ என்று,
அன்று இராச குமாரன் அறைகுவான்: 23-42

பூசனைத் தொழில் முடிந்தபின், பூங் கழல் இராமன்
தேவத் தச்சனை அழைத்து, ‘நீள் திரைக் கடல் கிடந்த
காவல் மா மலை கொணர்ந்து, நீ கண்ணுதல் கோயில்
பூவில் வந்தவன் சொல்வழிச் சமை’ எனப் புகன்றான். 23-43

நந்தியம் பதி இறைவனை நாதனும் அழைத்தே,
‘இந்த மா மலை இரும்’ என, யாவையும் நல்கி,
‘விந்தை தங்கிய தோளினீர்! வேந்தனைப் பூசித்து,
இந்த மா நகர் இரும்’ என, இராமனும் அகன்றான். 23-44

போன காலையில், பூங் கழல் இராகவன் பின்னே
சேனை தான் வர, தேவர்கள் யாவரும் வணங்கி,
மேல் நிலத்தவர் சென்றிட, விடை கொடுத்தருளி,
தானும், சீதையும், தம்பியும், சேதுவைச் சார்ந்தார். 23-45

தேர் ஏறி, மா நாகம் சென்னிமிசைச் சென்று ஏற,
கார் ஏறு கண்ணபிரான், காவலன் கமழ் துளபத்
தார் ஏறு தடந் தோளான், தனி வயிரக் குனி சிலைக் கைப்
போர் ஏறு, பொலிவுடனே வட திசையில் போயினனால். 23-46

சேர்ந்து, சேதுவின் தென் கரை கடந்து, வந்து எய்தி,
கூர்ந்த மானவேல் இருந்தவன் வட திசை குறுகிப்
போந்து, வானரப் புதுமையும் சனகிக்குப் புகன்று,
தீர்ந்த சேதுவின் கரையையும் காட்டினன், திறலோன். 23-47

வரையலுற்றான், மலர்க் கரத்து இருந்த வன் சிலையால்,
திரையில் உற்றிட மரக்கலத் தொகுதிகள் செல்ல,
விரைவில் உற்றிடும் விமானத்தின் மீதினில் இருந்தே;
உரை செய்து உற்றனன், சனகிக்குப் பின்னும் அங்கு உரவோன்: 23-48

‘நின்னை மீட்பதே நினைந்து, சில் நெறி எலாம் நீந்தி,
என்னை ஈட்டிய திறத்தினில் திருவுடன் இருப்ப,
சொன்ன வேற் படை அரக்கரைக் குறைத்த இச் சேனை
மன்னனால் பெற்ற வலி இது; வென்றியும் அதனால். 23-49

‘தேய்ந்த மா மதி போலும் சிலைநுதல்!
வாய்ந்த வானர வாரணம், மாருதி,
ஆய்ந்த மா மணி ஆழியை அன்றுதான்
பாய்ந்த வெற்பு மயேந்திரம் பார்த்தியால். 24-1

‘மாருதி, நின்னை நாடி வருபவன், ஏறிப் பாயப்
பாரிடைக் குளித்து நின்ற பவள மால் வரையைப் பாராய்;
போரிடைப் பொலன் கொள் பொன் தார்ப் புரவிகள் போக்கு இற்று என்ன,
நீரிடைத் தரங்கம் ஓங்கும் நெறி கடல் அதனை நோக்காய்!’ 24-2

ஆரியன் அனைய கூற, அடி இணை இறைஞ்சி, ஐய
வேரி அம் கமலை செப்பும்: ‘விரிந்த கிட்கிந்தை உள்ளார்,
சீரிய அயோத்தி சேரத் திருவுளம் செய்தி’ என்ன,
கார் நிற அண்ணல், ‘மானம் காசினி குறுக’ என்றான். 26-1

என்றவன் சேயை நோக்கி, இசைந்து, கிட்கிந்தை உள்ளார்,
நன்று நம் பதியைக் காண, நாயக! அழைத்தி’ என்ன,
சென்று அவன் சாம்பன் தன்னை, ‘திசை எட்டும் திரியச் சாற்றி,
இன்று நம் சுற்றம் எல்லாம் இயல்புடன் அழைத்திடு’ என்றான். 27-1

என்றபோது, எழுந்து சாம்பன், இசைந்த கிட்கிந்தை உள்ளார்க்கு
ஒன்று ஒழியாத வண்ணம் ஓதினான்; ஓதக் கேட்டே,
ஒன்றிய கடல்கள் ஏழும் உற்று உடன் உவா உற்றென்ன,
மன்றல் அம் குழலினார்கள் துவன்றினர், மகிழ்ச்சி கூட, 27-2

சந்திர மானம் தன்மேல் தாரகை சூழ்ந்தது என்ன,
இந்திரன் மகனார் தாரத் தாரையும், ருமையும், கூடி
வந்தனர்; வந்து மொய்த்தார், வானர மடந்தைமார்கள்;
இந்திரை கொழுநன் தன்னை ஏத்தினர், இறைஞ்சி நின்றார். 29-1

நின்ற வாரிதியை முன்பு நெருப்பு எழக் கடைந்தபோது, அங்கு
ஒன்றல பலவும் ஆங்கே உற்பவித்தவற்றினுள்ளே,
தன்னுடன் பிறந்த முத்து மாலையை, தரையில் தோன்றி
மின் என நின்ற சீதைக்கு அளித்தனள், விரைவில் தாரை. 29-2

தாரையைச் சீதை புல்கி, ‘தாமரைக் கன்ணன் அம்பால்
பாரை விட்டு அகன்றான் வாலி; பார் உளோர்க்கு அவதி உண்டோ?
சீரிது மலரோன் செய்கை; தெரியுமோ? தெரியாது அன்றே?
ஆர் இது தெரியகிற்பார், காலத்தின் அளவை அம்மா?’ 29-3

என்றிட, தாரை நிற்க; எரி கதிர்க் கடகம் ஒன்று,
மின் திரிந்தனைய கொள்கை மேலைநாள் விரிஞ்சன் ஈந்தது,
அன்று அது இரவி பெற்று நாயகற்கு ஈந்தது, அன்று
சென்று அடி இணையில் இட்டே, இறைஞ்சியே, ருமையும் நின்றாள் 29-4

நின்றவள் தன்னை நங்கை அம் கையால் தழுவி நின்று,
வன் துணை மங்கைமாரும் மைந்தரும் அங்குச் சூழ,
தன் திருக் கைகளாலே தழுவினள் என்னக் கண்ணால்
ஒன்று அல பலவும் கூற, உணர்ந்து உளம் உவகை உற்றே. 29-5

‘கடி கமழ் குழலினாளே! கார்காலம் யாங்கள் வைகும்
வடிவுடைச் சிகரம் ஓங்கும் மாலியவானை நோக்காய்;
அடு திறல் பரிதி மைந்தன் நகர் அதன் அழகு பாராய்;
வடிவு உள மலை ஏழ் அன்ன மராமரம் ஏழும் நோக்காய். 30-1

‘கனி வளர் பவளச் செவ் வாய்க் கனங் குழை! நின்னைக் காணாத்
துனி வளர் துன்பம் நீங்க, தோழமை நாங்கள் கொண்ட
பனி வளர் இருளை மாற்றும் பகல்வன் சேயும் யாமும்
நனி வளர் நட்புக் கொண்ட நலம் தரு நாகம் நோக்காய். 30-2

‘மாழை ஒண் கண்ணாய்! உன்னைப் பிரிந்து யான் வருந்தும் நாளில்,
தாழ்வு இலாத் துயரம் நீங்க, தாமரை உந்தியான் கை
ஆழி அம் ஆற்றலானை, அனுமனை, அரக்கர் அஞ்சும்
பாழியான் தன்னை, கண்ட பம்பையாறு அதனைப் பாராய். 30-3

‘பொய் வித்தி, வஞ்சம் காத்து, புலை விளைத்து, அறத்தைத் தின்றோன்
கை வித்தும் சாத்தினான் அக் கடல் பெரும் படையை எல்லாம்
நைவித்த இரவு நான்கால் மருந்துக்கு நடந்து, நம்மை
உய்வித்த வீரன் தன்னைக் கண்ட இடம் உது கண்டாயே. 30-4

‘சவரியது இருக்கைதானும், கவந்தனைத் தடிந்த கானும்,
இவர் செய எழுந்த ஆற்றல் கரன் உயிர் இழந்த பாரும்,
சவையுறு சுருட்டன் மைந்தன், சரவங்கள், முதலோர் காதல்
கவை அறு முனிவர் தங்கள் இடங்களும் கருதி நோக்காய். 30-5

‘விரை கமழ் ஓதி மாதே! விராதன் வந்து எதிர்ந்து போர் செய்
நிரை தவழ் அருவி ஓங்கும் நெடு வரை அதனை நோக்காய்;
‘சரதம் நான் அரசு வேண்டேன்; தட முடி சூடுக’ என்று
பரதன் வந்து அழுது வேண்டும் பரு வரை அதனைப் பாராய். 30-6

‘வளை பயில் தளிர்க் கை மாதே! வரு புனல் பெருகக் கண்டு,
துளை பயில் வேயின் தெப்பம் இயற்றி, யான் துயரம் இன்றி
விளை தரு புனலை நோக்கி வியந்து உடன் இருப்ப, வெல் போர்
இளையவன் தனியே நீந்தும் யமுனை யாறு இதனைப் பாராய். 30-7

‘பயன் உறு தவத்தின் மிக்க பரத்துவன் இருக்கை பாராய்;
கயல் பொரு கங்கை யாறும், குகன் உறை நகரும், காணாய்;
அயன் முதல் அமரர் போற்ற அனந்தன்மேல் ஆதிமூலம்
துயில் வரும் கடலே அன்ன அயோத்தியைத் தொழுது நோக்காய்.’ 30-8

என்று உரைத்து, இளவலோடு சனகியும், இரவிசேயும்,
வென்றி வீடணனும், சேனை வெள்ளமும் விளங்கித் தோன்ற,
பொன் திகழ் புட்பகத் தேர் பூதலத்து இழிய ஏவி,
இன் துணைப் பரத்துவாசன் இட வகை இழிந்தான் அன்றே. 30-9

என்று, மன்னவன் பற்பல புதுமையும் யாவும்
மன்றல் அம் குழல் சனகிக்குக் காட்டினன், மகிழ்ந்து,
குன்று துன்றிய நெறி பயில் குட திசைச் செவ்வே
சென்று, கங்கையின் திரு நதித் தென் கரை சேர்ந்தான். 35-1

ஆர்த்து விண்ணவர் ஆடினர்; ஆடகத் தேரும்
பேர்த்த போகினில் நிலமிசை அணுகுற, பெரியோர்க்கு
ஆர்த்தம் ஆகிய அடல் கரு மலை என நடந்து,
தீர்த்தம் ஆகிய கங்கையின் தென் கரை சேர்ந்தான். 35-2

மான மானம் மீப்போனது, வட திசை வருவது
ஆன காலையில், அறிவனும் ஆயிழை அறிய,
சேனையோர் திறல் சேது வான் பெருமையும் செப்ப,
தானமாகிய தீர்த்தம் ஆம் திரு நதி சார்ந்தார். 35-3

‘பாகம் மங்கையோடு அமர்ந்தவன் பயில்வுறு கங்கை
ஆகும் ஈது’ என அறநெறி வழுவுறா அலங்கல்
மேக வண்ணனும் துணைவரும் வியந்து உடன் ஆடி,
தாகம் நீங்கினர்; அவ் இடைத் தேவரும் சார்ந்தார். 35-4

இறுத்த தேரினை இருடிகள் எவரும் வந்து எய்தி,
வெறித் துழாய் முடி வேத மெய்ப் பொருளினை வியவா,
‘புறத்ததாம் உயிர் பெற்றனம்’ என அகம் பொங்க,
திறத்து இராமன்பால் திருமுனி அவனும் வந்துற்றான். 35-5

வந்த மா முனிவோர்களை வணங்கும் முன், அவர்கள்,
‘எந்தை! நீ இன்று இங்கு இருந்து, உள வருத்தமும் நீக்கி,
செந்து, நாளை அத் திருநகர் அடைக’ எனச் செப்பி,
உந்து சித்திரகூடத்துள் யாரும் வந்துற்றார். 39-1

‘தகும் அருந் தவங்கள் ஈட்டி, தசமுகத்து அரக்கன் பெற்ற
யுகம் அரைக் கோடிகாறு ஏவல் செய்து உழலும் தேவர்
சுகம் உற, சிலை கைக் கொண்ட தொல் மறை அமல! யார்க்கும்
இக பரம் இரண்டும் காக்கும் இறைவன் நீ அன்றி உண்டோ ?’ 41-1

இந்த வாசகம் இயம்பினன், பின்னரும் இசைப்பான்,
‘எந்தை! நீ இன்று இங்கு இருந்து உள வருந்தமும் போக்கி,
சிந்தை அன்பு செய் திருநகர் நாளை நீ சேர்க!’ என்று
அந்தம் இல் பரத்துவன் சொல, அவ் இடத்து அடைந்தான். 42-1

அடைந்த மா முனித் தலைவனை அருச்சனை செய்து,
மிடைந்த சேனை அம் பெருங் கடல் சூழ் தர, மேல் நாள்,
கடைந்த பாற்கடல் கண் துயில் நீங்கி, வானவர்கள்
படிந்து போற்றிட இருந்தென, பரிவுடன் இருந்தான். 42-2

இருந்த போது, இராமன் தன்னை இருடியும் இயம்பும்: ‘எந்தாய்!
பெருந் திறல் இலங்கை தன்னை எங்ஙனம், பெரியோய்! நீயே
வருந்தினை, குரங்கு கொண்டு, மாய வல் அரக்கன் தன்னைத்
திருந்த அப் போரில் வென்று மீண்டவா செப்புக!’ என்றான். 42-3

இராகவன் அவனை நோக்கி, ‘இறந்த வாள் அரக்கர் எல்லாம்
அராவின் மாருதியும், மேன்மை வீடணன் தானும், ஆங்கே
குராவருஞ் சேனை எல்லாம் கொன்றிட, கொற்றம் கொண்டு
விராவியே மீண்டது’ என்று, மீளவும் பகரலுற்றான்: 42-4

‘தந்திரம் உற்ற சேனை தரைப்பட, மறுப்படாமல்
அந்தரம் உற்றபோது, அங்கு அரு மருந்து அனுமன் தந்தான்;
மந்திர வித்தே! எம்பி வரி சிலை வளைத்த போரில்
இந்திரசித்தும் பட்டான்; இலங்கையும் அழிந்தது அன்றே. 42-5

‘கறங்கு கால் செல்லா, வெய்ய கதிரவன் ஒளியும் காணா,
மறம் புகா, நகரம் தன்னில் வானவர் புகுதல் வம்பே;
திறம் புகாது அவிரும் நாளும் சிதைவு இலர்; தேரும் காலை,
அறம் புகா மறத்தினாலே அழிந்தது அப் பதியும், ஐயா! 42-6

‘மறக் கண், வெஞ் சினத்தின் வன்கண், வஞ்சக அரக்கர் யாரும்
இறக்க, மற்று இறந்தது எல்லாம் எம்பிதன் ஈட்டின், எந்தாய்!
பிறப்பு மேல் உளதோ? சூழ்ந்த பெருந் திசை பேரின், பேராத்
துறக்கத்தோ, யாதோ, பெற்றார்? அறிந்தருள், சுருதி நூலோய்!’ 42-7

என்ற வாசகம் இருந் தவன் கேட்டு, இகல் இராமன்
தன் துணைப் பெருந் தம்பியைத் தழுவி, ‘நீ தக்கோய்!
வென்று மீண்டிலை ஆயின, அவ் விண்ணவர் முனிவர்
பொன்றுமாறு அன்றி, ஆர் உயிர் புரப்பது ஒன்று உளதோ? 42-8

மாதவன் சொன்ன வாய்மையை மனங்கொண்டு, மறையோன்
பாதம் முந்துற வணங்கி, மா முனிவனைப் பாரா,
‘ஏதும் யான் செய்தது இல்லை; அவ் இலங்கைமேல் வெகுண்டு
வேத நாயகன் புருவத்தை நெரித்தனன்; விளிந்தார். 42-9

‘அன்றியும் பிறிது உள்ளது ஒன்று உரைசெய்வென்; அது அத்
துன்று தார் புனை மாருதி பெரும் புயத் துணையால்
வென்றி கொண்டனம், யாங்கள்; மேல் விளம்புவது எவனோ?’
என்று இயம்பினன், இருடிக்கும் இளவலும், இயைந்தே. 42-10

அனுமன் என்பவன் வாள்முகம் நோக்கினன்; அவனும்
புனித மாதவன் தனைத் தொழா, ‘புண்ணியப் பொருளாம்
தனு வலம் கொண்ட தாமரைக் கண்ணவன் தனயன்
எனும் அது என்கொலோ? யாவர்க்கும் தந்தை நீ’ என்றான். 42-11

அங்கு அவன் சொல, அனுமனும் உரைசெய்வான்: அருணப்
பங்கயந்தனில் சீதையாம் பராபரையாட்டி,
சங்கரன் அயன் தன்னையும் தரணி ஈர்-ஏழும்
தங்கு பொன் வயிற்று அன்னைதன் தன்மையை நிகழ்த்தும்: 42-12

‘இராகவன் பெருங் குலத்தையும், இப் பெருஞ் செல்வத்
தராதலம் புகழ் சனகன் தன் மரபையும், தந்து, என்
பராபரத்தினைப் பங்கயத்து அமுது எனப் பணிந்தாள்;
புராதனர்க்கு அரசே!’ என மாருதி புகன்றான். 42-13

அன்ன வாசகம் கேட்டலும், அந்தணர் கோவும்,
‘என்ன வாசகம் சீதைக்கு இன்று இயம்புவது, யாம்?’ என்று,
ஒன்றும் வாசகம் உரைத்திலன்; உள் அன்பு குளிர,
‘அன்னை வாசவன் திருவினைத் தந்தது’ என்று அறைந்தான். 42-14

பண் குலாவிய சுக்கிரீவன்தனைப் பாரா,
கண்குலா மனம் களித்தவன் கழல்மிசைப் பணிந்து,
மண்குலாம் புகழ் வீடணன், ‘நீலனே முதலாம்
எண்கின் வேந்தனும் அழித்தனர் இலங்கையை’ என்றான். 42-15

என்று அவன் இயம்பக் கேட்டு, அங்கு இருந்த மா தவனும், ‘இந்த
வென்றிஅம் தானைக்கு எல்லாம் விருந்தொடு சயனம் மேவிக்
குன்று என வருக!’ என்று கூறலும், இமையோர் நாட்டில்
அன்று இனிது அரம்பைமார்கள் அமுது எடுத்து, ஆங்கு வந்தார் 42-16

பான நெய்யுடன் நானமும் சாந்தமும் பல் பூண்
ஏனை வானவர் மகளிர்கள் ஏந்தி வந்து, இழிந்தார்;
ஆன மெய்ப்படை தம்முடைப் போகத்துள் அழுந்த,
ஆன கற்பினாளுடன் எழுந்து, இராமனும் அறைவான்: 42-17

முனிவன் வாள் முகம் நோக்கி, ‘மெய் முழுது உணர் முனியே!
அனுமன் ஆண்தகை அளித்த பேர் உதவி இன்று எம்மால்
நினையவும், உரை நிரப்பவும், அரிது; இனி, நீதிப்
புனித! உண்டி எம்முடன்’ எனப் புரவலன் புகன்றான். 42-18

என்ற வாசகம் கேட்டலும், இருந் தவத்து எவரும்,
‘நன்று, நாயகன் கருணை!’ என்று உவகையின் நவில,
துன்று தாரவன் பாதுகம் தொழுது, ‘அருந் தொல்லோய்!
ஒன்று கேள்’ என, உவகையின் மாருதி உரைக்கும்: 42-19

‘செய்த மா தவம் உடைமையின், நினக்கு அன்பு சிறந்து
பொய் இல் சாதனம் பூண்டனன்; புண்டரீகக் கண்
ஐய! நின் பெருங் கருணைதான் அடியனேற்கு அமையும்;
உய்யுமாறு இதின் வேறு உளதோ?’ என்று மொழிந்தான். 42-20

திருந்து மா தவன் செய்தது ஓர் பூசனை செய, ஆண்டு
இருந்தபோது, தன் திருவுளத்து இராகவன் நினைந்தான்;
‘பொருந்த மா முடி புனைக!’ எனப் பொருந்துறான், போத
வருந்து தம்பிக்கு, ‘வருவென் யான்’ என்பதோர் வாக்கை. 42-21

‘சித்திரகூடம் தீர்ந்து, தென் திசைத் தீமை தீர்த்திட்டு
இத் திசை அடைந்து, எம் இல்லின் இறுத்தன்மை இறுதியாக,
வித்தக! மறந்திலேன் யான்; விருந்தினையாகி, எம்மோடு
இத் திறம் இருத்தி’ என்றான், மறைகளின் இறுதி கண்டான். 42-22

‘சுரதலம் அதனின் நீடு கார்முகம் வளைய வாங்கி,
சரத வானவர்கள் துன்பம் தணித்து, உலகங்கள் தாங்கும்
மரகத மேனிச் செங் கண் வள்ளலே! வழுவா நீதிப்
பரதனது இயல்பும் இன்றே பணிக்குவென்; கேட்டி’ என்றான். 42-23

‘வெயர்த்த மேனியன்; விழி பொழி மழையன்; மூவினையைச்
செயிர்த்த சிந்தையன்; தெருமரல் உழந்து உழந்து அழிவான்;
அயிர்த்து நோக்கினும், தென் திசை அன்றி, வேறு அறியான்;
பயத்த துன்பமே உருவு கொண்டென்னலாம் படியான். 42-24

இந்தியம் களைந்து, இருங் கனி காய் நுகர்ந்து, இவுளிப்
பந்தி வந்த புல் பாயலான்; பழம் பதி புகாது,
நந்தியம்பதி இருந்தனன், பரதன் – நின் நாமம்
அந்தியும், பகல் அதனினும், மறப்பிலன் ஆகி.’ 42-25

முனிவன் இம் மொழி கூறலும், முது மறைப் பெருமான் –
தனை நினைந்து உளம் வருந்திய தம்பிமால் அயரும்
மனம் நெகிழ்ந்து, இரு கண்கள் நீர் வார, அங்கு அமலன்
நினைவின் முந்துறும் மாருதிக்கு, இனையன நிகழ்த்தும்: 42-26

என்று உரைத்து, ‘அரக்கர் வேந்தன் இருபது என்று உரைக்கும் நீலக்
குன்று உரைத்தனைய தோளும், குல வரைக் குவடும் ஏய்க்கும்
என்று உரைத்தனைய மௌலித் தலை பத்தும், இறுத்த வீர!
நின் தனைப் பிரிந்தது உண்டே, யான்’ என நிகழ்த்தினானால். 42-27

‘மின்னை ஏய் உமையினானும், விரை மலர்த் தவிசினானும்,
நின்னையே புகழ்தற்கு ஒத்த நீதி மா தவத்தின் மிக்கோய்!
உன்னையே வணங்கி, உன் தன் அருள் சுமந்து உயர்ந்தேன்; மற்று இங்கு
என்னையே பொருவும் மைந்தன் யான் அலாது இல்லை’ என்றான் 42-28

அவ் உரை புகலக் கேட்ட அறிவனும், அருளின் நோக்கி,
‘வெவ் அரம் பொருத வேலோய்! விளம்புகேன்; கேட்டி, வேண்டிற்று
எவ் வரம் எனினும்; தந்தேன்; இயம்புதி’ எனலும், ஐயன்,
‘கவ்வை இன்று ஆகி வென்றி கவிக்குலம் பெற்று வாழ்க.’ 42-29

‘”அரி இனம் சென்ற சென்ற அடவிகள் அனைத்தும் வானம்
சொரி தரு பருவம் போன்று, கிழங்கொடு கனி காய் துன்றி,
விரி புனல் செழுந் தேன் மிக்கு, விளங்குக!” என்று இயம்புக’ என்றான்;
புரியும் மா தவனும், ‘அஃதே ஆக!’ எனப் புகன்றிட்டானால். 42-30

அருந்தவன், ‘ஐய! நின்னோடு அனிக வெஞ் சேனைக்கு எல்லாம்
விருந்து இனிது அமைப்பென்’ என்னா, விளங்கும் முத் தீயின் நாப்பண்,
புரிந்து ஓர் ஆகுதியை ஈந்து, புறப்படும் அளவில், போகம்
திருந்திய வான நாடு சேர வந்து இறுத்தது அன்றே. 42-31

அன்று அவர் தம்மை நோக்கி, அந்த மாதவனும், ‘இந்த
வென்றி அம் தானைக்கு எல்லாம் விருந்தொடு சயனம் மற்றும்
குன்றினில் அருளும்’ என்று கூறலும், வான நாட்டுள்
ஒன்றிய அரம்பை மாதர் அமுது எடுத்து, ஒருங்கு வந்தார். 42-32

அரைசரே ஆதியாக, அடியவர் அந்தமாக,
கரைசெயல் அரிய போகம் துய்க்குமா கண்டு, இராமற்கு
அரைசியல் வழாமை நோக்கி, அறு சுவை அமைக்கும் வேலை,
விரை செறி கமலக் கண்ணன் அனுமனை விளித்துச் சொன்னான்: 42-33

மாருதி விடைகொண்டு ஏக, வரதனும் மறையோன் பாதம்
ஆர் அருளோடு நீட வணங்கினான்; அவனும் ஆசி
சீரிது கூறி, ‘சேறி’ என்றலும், மானம் சேர்ந்து,
போர் இயல் தானையோடும் பொருக்கென எழுந்து போனான். 44-1

‘மான் நேர் விழியாளுடனே வனம் முன்
போனான் ஒரு நாள்; வரும் நாள் இலதோ?
தேனே! அமுதே! தெளிவே! தெளிவின்
ஊனே! உயிரே! உலகு ஆளுடையாய்! 44-2

‘அம் பவளச் செவ்வாய், அணி கடகச் சேவகன்,
வம்பு அவிழும் சோலைக் கோசல நாடுடை வள்ளல்,
எம் பெருமான், என்னை, இழி குணத்து நாயேனை,
‘தம்பி’ என உரைத்த தாசரதி தோன்றானோ! 44-3

வாழி மலைத் திண் தோள் சனகன் தன் மா மயிலை,
ஏழ் உலகும் ஆளும் இறைவன் மருமகளை,
“தாழ்வு இல் பெருங் குணத்தாள்தான் உன் கொழுந்தி; நீ
தோழன்” என உரைத்த தோன்றலார் தோன்றாரோ!’ 44-4

‘துங்க வில் கரத் தோளினார் சொன்ன நாள்,
இங்கு வந்திலர்; யான் இறப்பேன்’ எனா,
மங்கைமாரும் படையும் வன் சுற்றமும்
அங்கு நீர்க் கங்கை அம்பியில் ஏற்றினான். 44-5

‘வேத நாதனும், வில்லியும், விரை மலர்த் திருவும்,
ஏது செய்யினும், என் உயிர் முடிப்பென்’ என்று எண்ணி,
ஓத நீரிடை ஓடம் அது உடைத்து, உயிர் விடுவான்,
காதலாருடன் கங்கையின் நடுவுறச் சென்றான். 44-6

‘கண்ணும் தோளும் வலம் துடிக்கும்; கரை
வண்ணப் புள்ளும் வலியும் வலத்திலே,’
எண்ணும் காலையிலே, எழில் மாருதி,
‘அண்ணல் வந்தனன்’ என்று உரையாடினான். 44-7

உள்ள வான் கிளை ஏற்றி, உயர் குகன்
வெள்ளக் கங்கையின் ஆக்கி, விரைந்து, அவண்
உள்ளும் நெற்றி உடைப்பளவில், புகும்
வள்ளலார் விடும் மாருதி தோன்றினான். 44-8

ஓங்கு வாலினை ஓட்டி, அவ் ஓடங்கள்
தீங்கு உறாவகைச் சுற்றி, திருகி, நீர்
ஆங்கு நின்று அங்கு அவை வலித்தான்; அவை
தீங்கு இலாவகை தென் கரை சேர்ந்தவால். 44-9

‘கை ஆர் வெய்ய சிலைக் கருணாகரற்குக் காதலுடைத் தோழ-
மை ஆர், சிருங்கவேபுரம் உடையாய்! மிகு கோசலை களிறு,
மை ஆர் நிறத்தான், வந்தொழிந்தான், மிதிலை வல்லி அவளுடனே;
ஐயா! வந்தான் தம்பியொடும்; அடியேம் உய்ய, வந்தானே. 44-10

‘ஆர்? உனை உரை’ என, அனுமன் கூறுவான்:
‘சீரிய வாயுவின் தோன்றல்; சீரியோய்!
குருடை இராமற்குத் தூதன்’ என்று எனது
ஏருடைத் தலையின் மேல் எழுதப்பட்டுளேன். 44-11

பரதனைத் தீயையும் விலக்கி, பாருடை
வரதனை, இராமனை, மாறிக் காண்பது
சரதமே; இனி இறை தாழ்க்க ஒணாது’ என,
கரதலத்து ஆழியும் காட்டிப் போயினான். 44-12

பரத்துவன் வருதலும், பரிந்து, இராமனும்
கரத்துணை குவித்தனன், இளைய காளையோடு,
எரித் திற முனியும் ஆசிகள் இயம்பிட,
விருப்பொடும் இடவகை இனிது மேயினான். 84-1

நின்றவன், ‘இவ் வயின் நெடியவன் தனைச்
சென்று இறைப் பொழுதினில் கொணர்வென், சென்று’ எனா,
பொன் திணி பொலங் கழல் வணங்கிப் போயினான்,
வன் திறல் மாருதி வளர்ந்த கீர்த்தியான். 102-1

ஆய காலையில், ஐயனைக் கொண்டு, தன்
தூய காவின் உறைவு இடம் துன்னினான்;
‘மேய சேனைக்கு அமைப்பென் விருந்து’ எனா,
தீயின் ஆகுதி செங் கையின் ஓக்கினான். 102-2

பான நெய்யொடு, நானமும், சாந்தமும், பலவும்,
ஆன வெள்ளிலையோடு அடைக்காய், கருப்பூரம்,
தேன் அளாவிய முக்கனி காயொடு தேன், பால்,
வான நாட்டு அர மங்கையர் மகிழ்ந்து கொண்டு இழிந்தார். 102-3

கங்கை தரு கழலாற்கும், இளவலுக்கும், காரிகைக்கும்,
துங்க முடி வீடணற்கும், சுக்கிரிவப் பெருமாற்கும்,
தங்கு பெருஞ் சேனைக்கும், தனித்தனியே, பொன் கலந்தால்
அங்கு அடைவின் மண்டலம் இட்டு, அணி விளங்க நிறைத்தனரால் 102-4

வெள்ளை நறும் போனகமும், மிகு பருப்பும், பொரிக் கறியும்,
தள்ள அரிய முக்கனியும், சருக்கரையும், நறு நெய்யும்,
எள்ள அரிய பலவிதத்துக் கறியமுதும், இமையவர்தம்
வள்ளல் முதல் அனைவோர்க்கும் வரிசை முறை படைத்தனரால் 102-5

நீர் உலவி, நீர் குடித்து, நினைந்திருந்து, ஆகுதி பண்ணி,
கார் உலவு மேனியனும், காரிகையும், இளங் கோவும்,
தேர் இரவி திருமகனும், தென் இலங்கைப் பெருமானும்,
போரின் உயர் சேனையுடன் போனகம் பற்றினர், பொலிவால். 102-6

அக் கணத்து அனுமனும் அவண் நின்று ஏகி, அத்
திக்குறு மானத்தைச் செவ்வன் எய்தி, அச்
சக்கரத்து அண்ணலைத் தாழ்ந்து முன் நின்றான்;
உக்கு உறு கண்ண நீர் ஒழுகும் மார்பினான். 102-7

‘உருப்பு அவிர் கனலிடை ஒளிக்கலுற்ற அப்
பொருப்பு அவிர் தோளனைப் பொருந்தி, நாயினேன்,
திருப்பொலி மார்ப! நின் வரவு செப்பினேன்;
இருப்பன ஆயின, உலகம் யாவையும், 102-8

‘தீவினை யாம் பல செய்ய, தீர்வு இலா
வீவினை முறை முறை விளைவ, மெய்ம்மையாய்!
நீ அவை துடைத்து நின்று, அழிக்க நேர்ந்தனை;
ஆயினும், அன்பினால் யாம் செய் மா தவம்’ 102-9

என்று உரைத்து, அனுமனை இறுகப் புல்லினான்;
ஒன்று உரைத்து இறுப்பது என், உனக்கும், எந்தைக்கும்,
இன் துணைத் தம்பிக்கும், யாய்க்கும்?’ என்றனன் –
குன்று இணைத்தன உயர் குவவுத் தோளினான். 102-10

‘இரவி காதலன், இலங்கையர் கோன், இவர் உதவி
அரசின் ஆசையது என்னலாம்; அனுமனே! என்பால்
விரவு காதலின் நீ செய்த உதவிக்கு வேறு
தருவது ஒன்று இலை, உடன் உணும் தரமது அல்லால்.’ 102-11

[இதன்பின் 42-18, 19, 20 எண்ணுள்ள பாடல்கள் உள்ளன].

‘கொற்றவன் உடன் உண்ணுமோ?-கோது இல் மாதவனே!
வெற்றி வீரனே!’ என அஞ்சி நின்றனன்; விமலன்
மற்றப் போனகம் ஒரு கை வாய் வைத்தபின், வாராப்
பற்றி, அப்பொழுது அனுமனும் பரிகலம் பறித்தான். 102-12

பரிகலத்து அமுது ஏந்தியே, பந்திகள் தோறும்
இரவி காதலற்கு, அங்கதற்கு, இலங்கையர் வேந்தற்கு,
உரிய வீரர்கட்கு அளித்து, தான் அவர்கள் ஓபாதி
வரிசையால் உண்ண, மா முனி விருந்தும் உண்டனரால். 102-13

பரிகலத்து ஒ(வ்)வோர் பிடிகொடு, பந்திகள் தோறும்
இரவி புத்திரற்கு, இலங்கையர் வேந்துக்கும் உதவி,
உரிய நல் தமர் அனைவர்க்கும் உதவி, பின், அவனும்
வரிசையின் கொண்டு, மா முனி விருந்தும் உண்டனனால். 102-13(அ)

அன்ன காலையில் போனகம் அமரர் பொற்கலத்தே
முன்னம் போல் படைத்து, திருமுன்பு வைத்தனரால்;
உன்னும் பேர் உலகு அனைத்தும் உண்டும், பசி தீரா
மன்னன் மா முனி விருந்தும் உண்டு, அகம் மகிழ்ந்தனனால். 102-14

பான நல் அமுதுடன் கருப்பூரமும், பலவும்,
ஏனை வானவர் மகளிர்கள் ஏந்தி, முன் நிற்ப,
தான மெய்ப் படைத் தம்முடைப் போகத்துள் தந்த
ஆன கற்பக நாட்டு அமிழ்து என்பதும் அயின்றான். 102-15

அண்ணல் மா முனி அருளிய போனகம் அளக்கர்-
வண்ணனே முதல் வானரக் கடல் எலாம் வாய்ப் பெய்து,
உண்ணும் வாசகம் கேட்டு, இமையோர், முனிவோரும்,
மண்ணும், நாகரும் யாவரும், அருந்துயர் மறந்தார். 102-16

மான வேந்தரும் வள்ளலும் மலர்க் கரம் விளக்கி,
ஆன வெள்ளிலையோடு அடைக்காய் அமுது அருந்தி,
ஞான மா முனி பெருமையைப் புகழ்ந்து, நாயகனும்
பானல் வேல் விழியாளொடும் படையொடும் இருந்து, 102-17

ஆர் இருள் அகலும் காலை, அமலனும், மறையோன் பாதம்,
ஆர்வமோடு எழுந்து சென்று, வணங்கலும், அவனும் ஆசி
சீரிது கூறி, ‘சேறி’ என்றலும், தேர்மேல் கொண்டு,
சீரிய தானையோடும் சிறப்பொடும் மகிழ்ந்து சென்றான். 102-18

விருந்தும் உண்டு, மா முனிவனை விடைகொண்டு, தேர்மேல்
அருந்ததிக் கற்பினாளொடும் படையொடும் அமைந்தான்;
வருந்து கோசல நாடுடன் அயோத்தியும் வாழ,
பரிந்து, இராமனும் ஏகினன், பரதனைக் காண்பான். 102-19

இராவணன் வேட்டம் போய் மீண்டு, எம்பிரான் அயோத்தி எய்தி,
தராதல மகளும் பூவில் தையலும் மகிழ, சூடும்
அராவு பொன் மௌலிக்கு ஏய்ந்த சிகாமணி, குணபால் அண்ணல்
விராவுற எடுத்தாலென்ன, வெய்யவன் உதயம் செய்தான். 102-20

இளவலை, ‘”அண்ணலுக்கு எதிர் கொண்ம்” என்று, நம்
வளை மதி அயோத்தியில் வாழும் மக்களை,
“கிளையொடும் ஏகு” எனக் கிளத்தி, எங்கணும்
அளை ஒலி முரசு இனம் அறைவிப்பாய்’ என்றான். 102-21

‘”தோரணம் நட்டு, மேல் துகில் பொதிந்து, நல்
பூரணப் பொற் குடம் பொலிய வைத்து, நீள்
வாரணம் இவுளி தேர் வரிசைதான் வழாச்
சீர் அணி அணிக!” எனச் செப்புவாய்’ என்றான். 102-22

பரத்துவன் உறைவிடத்து அளவும், பைம் பொன் நீள்
சிரத் தொகை மதில் புறத்து இறுதி சேர்தர,
வரத் தகு தரள மென் பந்தர் வைத்து, வான்
புரத்தையும் புதுக்குமா புகறி, போய்’ என்றான். 102-23

என்றலும், அவன் அடி இறைஞ்சி எய்தி, அக்
குன்று உறழ் வரி சிலைக் குவவுத் தோளினான்,
நன்று உணர் கேள்வியன், நவை இல் செய்கையன்
தன் துணைச் சுமந்திரற்கு அறியச் சாற்றினான். 102-24

அவ் உரை கேட்டலும், அறிவின் வேலையான்,
கவ்வை இல் அன்பினால் களிக்கும் சிந்தையான்,
‘வெவ் வெயில் எறி மணி வீதி எங்கணும்
எவ்வம் இன்று, அறை பறை எற்றுக!’ என்றிட, 102-25

‘வானையும் திசையும் கடந்த வான் புகழ்க்
கோனை இன்று எதிர்கொள்வான், கோல மா நகர்த்
தானையும் அரசரும் எழுகதான்’ எனா,
யானையின் வள்ளுவர் முரசம் எற்றினார். 102-26

முரசு ஒலி கேட்டலும், முழங்கு மா நகர்
அரசரும் மாந்தரும் அந்தணாளரும்,
கரை செயல் அரியது ஓர் உவகை கைதர,
திரை செறி கடல் என, எழுந்து சென்றவால். 102-27

‘அனகனை எதிர்கொள்க’ என்று அறைந்த பேரி நல்
கனகம் நல் கூர்ந்தவர் கைப்பட்டென்னவும்,
சனகனது ஊர்க்கு என முன்னம் சாற்றிய
வனை கடிப் பேரியும், ஒத்த ஆம் அரோ. 102-28

அறுபதினாயிரம் அக்குரோணி என்று
இறுதி செய் சேனையும், ஏனை வேந்தரும்
செறி நகர் மாந்தரும், தெரிவைமார்களும்,
உறுபொருள் எதிர்ந்தென, உவந்து போயினார். 102-29

அன்னையர் மூவரும், அமரர் போற்றிட,
பொன் இயல் சிவிகையின் எழுந்து போய பின்,
தம் நிகர் முனிவரும் தமரும் சூழ்தர,
மன்னவன் மாருதி மலர்க்கை பற்றுறா. 102-30

திருவடி இரண்டுமே செம் பொன் மௌவியா,
இரு புறம் சாமரை இரட்ட, ஏழ் கடல்
வெருவரும் முழக்கு என வேழம் ஆர்த்து எழ,
பொரு அரு வெண்குடை நிழற்ற, போயினான். 102-31

எல்லவன் மறைந்தனன் – என்னை ஆளுடை
வில்லியை எதிர் கொள, பரதன் மீச் செல்வான்,
அல்லி அம் கமலமே அனைய தாள்களில்
கல் அதர் சுடும் தன கதிரின் என்னவே. 102-32

அவ் வழி மாருதி அம் கை பற்றிய
செவ் வழி உள்ளத்தான், ‘திருவின் நாயகன்,
எவ் வழி உறைந்தது? அச் செயல் எலாம் விரித்து,
இவ் வழி எமக்கு நீ இயம்புவாய்’ என்றான். 102-33

என்றலும், மாருதி வணங்கி, ‘எம்பிரான்,
மன்றல் அம் தொடையினாய்! அயோத்தி மா நகர்
நின்றதும், மணவினை நிரப்பி மீண்டு கான்
சென்றதும், நாயினேன் செப்பல் வேண்டுமோ?’ 102-34

சித்திரகூடத்தைத் தீர்ந்த பின், சிரம்
பத்து உடையவனுடன் விளைந்த பண்பு எலாம்,
இத் தலை அடைந்ததும், இறுதி ஆய, போர்
வித்தகத் தூதனும் விரிக்கும் சிந்தையான். 102-35

‘குன்று உறழ் வரி சிலைக் குரிசில், எம்பிரான்
தென் திசைச் சித்திரகூடம் தீர்ந்தபின்,
வன் திறல் விராதனை மடித்து, மா தவர்
துன்றிய தண்டக வனத்துள் துன்னினான். 102-36

‘ஆங்கு உறை தபோதனர், “அரக்கர்க்கு ஆற்றலேம்,
நீங்கினம் தவத்துறை, நீதியோய்!” என,
‘நீங்கு செய்பவர்களைச் செகுத்தல் திண்ணம்; நீர்
வாங்குமின் மனத் துயர், வாய்மையால்’ என்றான். 102-37

‘ஆறு நால் ஆண்டு அவண் வைகி, அப் புறத்து
ஈறு இலா முனிவரர் ஏய ஆணையால்
மாறு இலாத் தமிழ் முனி வனத்தை நண்ணினான்,
ஊறு இலா முனிவரன் உவந்து முன் வர. 102-38

‘குடங்கையில் வாரிதி அனைத்தும் கொண்டவன்
தடங் கணான் தனை எதிர் தழுவி, சாபமும்,
கடுங் கணைப் புட்டிலும், கவசம் தானும், அத்
திடம் படு சுரிகையும், சேர ஈந்தனன். 102-39

‘அப் புறத்து எருவையின் அரசைக் கண்ணுறா,
துப்பு உறச் சிவந்த வாய்த் தோகை தன்னுடன்
மெய்ப் புகழ்த் தம்பியும் வீரன்தானும் போய்,
மைப் பொழில் உறு பஞ்சவடியின் வைகினார். 102-40

‘பல் பகல் இறந்த பின்றை, பாதக அரக்கி தோன்றி,
மெல்லிய இடையினாளை வெகுண்டுழி, இளைய வீரன்
அல்கிய திருவைத் தேற்றி, அவளுடைச் செவியும் மூக்கும்
மல்கிய முலையும் கொய்தான்; மறித்து, அவள் கரற்குச் சொன்னாள் 102-41

‘கரனொடு திரிசிராவும், கடிய தூடணனும், காந்தி
எரியும் மூன்று அனலே ஒப்பார், எழுந்து, வெஞ் சேனையோடும்
விரவினர்; ஐயன் செங் கை வில்லினை நோக்கும் முன்பு, ஓர்
எரி தவழ் பஞ்சின் உக்கார்; அரக்கியும், இலங்கை புக்காள். 102-42

‘இருபது தடக் கையான் மாட்டு இசைத்தலும், எழுந்து பொங்கி,
ஒருபது திசையும் உட்க, வஞ்சக உழை ஒன்று ஏவி,
தரு பதம் சமைந்த முக்கோல் தாபத வடிவம் கொண்டு,
திருவினை நிலத்தொடு ஏந்தி, தென் திசை இலங்கை புக்கான் 102-43

‘போகின்ற காலை, ஏற்ற சடாயுவைப் பொருது வீட்டி,
வேகின்ற உள்ளத்தாளை வெஞ் சிறை அதனில் வைத்தான்;
ஏகின்ற வஞ்ச மான் மாரீசன்-கொன்று, இளவலோடு,
பாகின்ற கீர்த்தி அண்ணல் தந்தையைப் பரிவின் கண்டான். 102-44

‘அன்னவன் தனக்கு வேண்டும் அருங் கடன் முறையின் ஆற்றி,
நன்னுதல் தன்னைத் தேடித் தென் திசை நடக்கும் ஐயன்,
மன்னிய கவந்தன் தன்னை உயிரொடு சாபம் மாற்றி,
தன்னையே மறப்பிலாத சவரி பூசனையும் கொண்டான். 102-45

‘ஆங்கு அவள் தனது சொல்லால், அருக்கன் மா மகனை அண்மி,
பாங்குற நட்டு, “வாலி பருவரல் கெடுப்பல்” என்னா,
ஓங்கிய மரமும் வாலி உரமும் ஊடுருவ எய்திட்டு,
ஆங்கு அவன் தனக்குச் செல்வம் அரசொடும் அருளின் ஈந்தான் 102-46

‘கால மா மாரி நீங்க, கயவனோடு இடபன், காந்து
நீலன், மா மயிந்தன், சாம்பன், சதவலி, பனசன், நீடு
வாலி மா மைந்தன், என்று இவ் வானரத் தலைவரோடு
கூல வான் சேனை சூழ, அடைந்தனன், எங்கள் கோமான். 102-47

‘எழுபது வெள்ளத்து உற்ற குரக்கினம் எழுந்து பொங்கி,
அழுவ நீர் வேலை என்ன அடைந்துழி, அருக்கன் மைந்தன்,
தழுவிய திசைகள் தோறும் தனித்தனி இரண்டு வெள்ளம்
பொழுது இறை தடாது மீளப் போக்கினன், திருவை நாடி. 102-48

‘தென் திசை இரண்டு வெள்ளம் சேனையும், வாலி சேயும்
வன் திறல் சாம்பனோடு வாவினர் ஏவ, நாயேன்
குன்றிடை இலங்கை புக்கு, திருவினைக் குறித்து மீண்ட
பின்றை வந்து, அளக்கர் வேலைப் பெரும் படை இறுத்தது அன்றே 102-49

‘அறிவினுக்கு அறிவு போல்வான் வீடணன், அலங்கல் தோளான்,
செறி புயந்து அரக்கன் தம்பி, “திருவினை விடுதி; அன்றேல்,
இறுதி உற்றன, நின் வாணாள்” என அவன் உரைப்ப, சீறிக்
கறுவுற, பெயர்ந்து போந்து, கருணையான் சரணம் பூண்டான். 102-50

‘ஆங்கு அவற்கு அவயம் நல்கி, அரசொடு, முடியும் ஈந்து,
பாங்கினால் வருணன் தன்னை அழைத்திட, பதைப்பு இலாது
தாங்கினன் சிறிது போது, தாமரை நயனஞ் சேப்ப,
ஓங்கும் நீர் ஏழும் அன்னான் உடலமும் வெந்த அன்றே. 102-51

‘மற்று அவன் அவயம் என்ன, மலர்ச் சரண் அடைந்த வேலை,
வெற்றி வானரர்கள் பொங்கி, வெற்பினால் வேலை தட்டல்
முற்றுற நன்கு இயற்றி, மொய் ஒளி இலங்கை புக்கு,
பற்றினர் சுற்றி ஆர்த்தார், வானவர் பயங்கள் தீர்ந்தார். 102-52

‘மலையினை எடுத்த தோளும், மதமலை திளைத்த மார்பும்,
தலை ஒரு பத்தும் சிந்தி, தம்பிதன் தோளும் தாளும்
கொலை தொழில் அரக்கர் ஆயோர் குலத்தொடும் நிலத்து வீழ,
சிலையினை வளைவித்து, ஐயன் தேவர்கள் இடுக்கண் தீர்ந்தான் 102-53

‘இலக்குவன் பகழி ஒன்றால் இந்திரசித்து என்று ஓதும்
விலக்க அரு வலத்தினானும் இளைஞரும் கிளையும் வீழ்ந்தார்;
மலக்கம் உண்டு உழலும் தேவர் மலர் மழை தூவி ஆர்த்து, அன்று
உலக்குநர் குழுக்கள் தோறும் உடற் குறை ஆடல் கண்டார். 102-54

‘தேவரும் முனிவர்தாமும், சித்தரும் தெரிவைமாரும்,
மூவகை உலகுளோரும், முறை முறை தொழுது மொய்ப்ப,
பூவைபோல் நிறத்தினானும், வீடணப் புலவர் கோமாற்கு
யாவையும் இயம்பி, “மாண்டோ ர்க்கு இயற்றுதி கடன்கள்” என்றான் 102-55

‘”ஏடுணர் அலங்கல் மார்பத்து இராவணன் முதலோர்க்கு எல்லாம்
வீடணன் கடன்கள் செய்து மீண்டனன்; அவனுக்கு இன்னே
சூடுக மௌலி” என்ன, சுந்தர இராமன் தம்பி
மாடு அணை துணைவரோடும் மகுடமே புனைந்து விட்டான். 102-56

‘நான்முகன், விடையை ஊரும் நாரி ஓர் பாகத்து அண்ணல்,
மான்முகன் முதலாய் உள்ள வானவர் தொழுது போற்ற,
ஊன்முகம் கெழுவு வேலாய்! உம்பர் நாயகியைச் சீறி,
தேன் முகம் மலரும் தாரான், அரி சொல, சீற்றம் தீர்ந்தான். 102-57

‘மெய்யினுக்கு உயிரை ஈந்த வேந்தர்கோன் விமானத்தை எய்த,
ஐயனும் இளைய கோவும் அன்னமும் அடியில் வீழ,
கையினால் பொருந்தப் புல்லி, கண்ணின் நீர்க் கலசம் ஆட்டி,
“செய்யவட்கு அருள்க” என்றான்; திருவின் நாயகனும் கொண்டான் 102-58

‘”என்னை நன் கருணைதன்னால் ஈன்று எடுத்து, இனிது பேணும்
அன்னையும் மகனும் முன்போல் ஆக” என, அருளின் ஈந்து,
மன்னவன் போய பின்றை, வானரம் வாழ்வு கூர,
பொன் நெடு நாட்டில் உள்ளார் வரம் பல வழங்கிப் போனார். 102-59

‘வெள்ளம் ஓர் ஏழு பத்தும், விலங்க அரும் வீரர் ஆகி
உள்ளவர் அறுபத்து ஏழு கோடியும், ஒற்றை ஆழி
வள்ளல் தன் மகனும், உள்ளம் மகிழ்வுற விமானம் ஈந்தான் –
எள்ளல் இல்லாத கீர்த்தி வீடணன், இலங்கை வேந்தன். 102-60

‘ஆரியன் பின்னை நின்னை அன்பினால் நினைந்து, காதல்
சூரியன் மகனும், தொல்லைத் துணைவரும், இலங்கை வேந்தும்,
பேர் இயல் படையும், சூழ, பெண்ணினுக்கு அரசியோடும்
சீரிய விமானத்து ஏறி, பரத்துவன் இருக்கை சேர்ந்தான். 102-61

‘அன்பினால் என்னை, நின்பால் ஆழியும் காட்டி, “ஆன்ற
துன்பு எலாம் துடைத்தி” என்று துரந்தனன், தோன்றல்’ என்று,
முன்பினால் இயன்ற எல்லாம் மொழிந்தனன் – முது நீர் தாவி
வன்பினால் இலங்கை முற்றும் எரிக்கு உணவாக வைத்தோன். 102-62

காலின் மா மதலை சொல்ல, பரதனும் கண்ணீர் சோர,
‘வேலி மா மதில்கள் சூழும் இலங்கையில் வேட்டம் கொண்ட
நீல மா முகில் பின் போனான் ஒருவன்; நான் நின்று நைவேன்,
போலுமால்; இவைகள் கேட்பேன்; புகழ் உடைத்து, அடிமை மன்னோ’ 102-63

என்று அவன் இரங்கி ஏங்கி, இரு கணும் அருவி சோர,
வன் திறல் அனுமன் செங் கை வலக் கையால் பற்றி, காலின்
சென்றனன் இருளினூடு, செறி புனல் கங்கை சேர்ந்தான்,
குன்றினை வலஞ்செய் தேரோன் குண கடல் தோன்றும் முன்னர் 102-64

இராவணன் வேட்டம் போய் மீண்டு, எம்பிரான், அயோத்தி எய்தி,
தராதல மகளும் பூவின் தையலும், மகிழ சூடும்
அராவு பொன் மௌலிக்கு ஏய்ந்த சிகாமணி, குணபால் அண்ணல்
விராவுற எடுத்தாலென்ன, வெய்யவன் உதயம் செய்தான். 102-65

காலை வந்து இறுத்த பின்னர், கடன் முறை கமலக் கண்ணன்
கோல நீள் கழல்கள் ஏத்தி, குரக்கினத்து அரசை நோக்கி,
‘சாலவும் கலைகள் வல்லோய்! தவறு உண்டு போலும், வாய்மை;
மூலமே உணரின், உன் தன் மொழிக்கு எதிர் மொழியும் உண்டோ ? 102-66

‘எழுபது வெள்ளம் சேனை வானரர், இலங்கை வேந்தன்
முழு முதல் சேனை வெள்ளம், கணக்கு இல மொய்த்த என்றால்,
அழுவ நீர் வேலை சற்றும் அரவம் இன்றாக வற்றோ?
விழுமிது, “எம்பிரான் வந்தான்” என்று உரைத்தது, வீர!’ என்றான் 102-67

‘ஓசனை இரண்டு உண்டு அன்றே, பரத்துவன் உறையும் சோலை;
வீசு தெண் திரையிற்று ஆய வெள்ளம் ஓர் ஏழு பத்தும்
மூசிய பழுவம் இங்ஙன் கிடப்பதோ, முரற்றல் இன்றி?
பேசியது அமையும்; நம் கோன் எங்கு உளன், பெரும!’ என்றான் 102-68

பரதன் அஃது உரைத்தலோடும், பணிந்து மாருதியும், ‘சீர் சால்
விரத மா தவத்து மிக்கோய்! விண்ணவர் தம்மை வேண்டி
வரதன் ஆண்டு அளிப்ப வந்த வரத்தினால், மலரும் தேனும்
சரதமே மாந்தி மாந்தித் துயின்றது, தானை எல்லாம். 102-69

‘வானவர் கொடுக்க வந்த வரத்தினால், மதுபம் மூசும்
தேனொடு கிழங்கும் காயும் கனிகளும் பிறவும் சீர்த்துக்
கானகம் பொலிதலாலே, கவிக் குலம் அவற்றை மாந்தி,
ஆனனம் மலர்ந்தது இல்லையாகும்; நீ துயரல், எந்தாய்! 102-70

‘இனி ஒரு கணத்தின், எம் கோன் எழுந்தருள் தன்மை ஈண்டுப்
பனி வரும் கண்ணின் நீயே பார்த்தி’ என்று உரைத்தான்; இப்பால்,
முனிதனது இடத்து வந்த முளரி அம் கண்ணன், வண்ணக்
குனி சிலைக் குரிசில், செய்தது இற்று எனக் குணிக்கலுற்றாம்: 102-71

அருந்தவன் சுவைகள் ஆறோடு அமுது இனிது அளிப்ப, ஐயன்
கருந் தடங் கண்ணியோடும் களைகணாம் துணைவரோடும்,
விருந்து இனிது அருந்தி, நின்ற வேலையின், வேலை போலும்
பெருந் தடந் தானையோடும், கிராதர் கோன் பெயர்ந்து வந்தான் 102-72

தொழுதனன்; மனமும் கண்ணும் துளங்கினன்; சூழ ஓடி
அழுதனன்; கமலம் அன்ன அடித்தலம் அதனின் வீழ்ந்தான்;
தழுவினன் எடுத்து, மார்பில் தம்பியைத் தழுவுமாபோல்;
‘வழு இலா வலியர் அன்றோ, மக்களும் மனையும்?’ என்றான். 102-73

‘அருள் உனது உளது, நாயேற்கு; அவர் எலாம் அரிய ஆய
பொருள் அலர்; நின்னை நீங்காப் புணர்ப்பினால் தொடர்ந்து போந்து
தெருள் தரும் இளைய வீரன் செய்வன செய்கலாதேன்;
மருள் தரு மனத்தினேனுக்கு இனிது அன்றோ, வாழ்வு மன்னோ?’ 102-74

ஆயன பிறவும் பன்னி, அழுங்குவான் தன்னை, ‘ஐய!
நீ இவை உரைப்பது என்னே; பரதனின் நீ வேறு உண்டோ?
போய், இனிது இருத்தி’ என்ன, புளிஞர் கோன் இளவல் பொன் தாள்
மேயினன் வணங்கி, அன்னை விரை மலர்த் தாளின் வீழ்ந்தான். 102-75

தொழுது நின்றவனை நோக்கி, துணைவர்கள் தமையும் நோக்கி,
முழ்து உணர் கேள்வி மேலோன் மொழிகுவான்; “முழு நீர்க் கங்கை
தழுவு இரு கரைக்கும் நாதன்; தாயினும் உயிர்க்கு நல்லான்;
வழுவு இலா எயினர் வேந்தன்; குகன் எனும் வள்ளல் என்பான்.’ 102-76

அண்ணல் அஃது உரைத்தலோடும், அரி குலத்து அரசன் ஆதி
நண்ணிய துணைவர் யாரும் இனிது உறத் தழுவி, நட்டார்;
கண்ணகல் ஞாலம் எல்லாம் கங்குலால் பொதிவான் போல,
வண்ண மால் வரைக்கும் அப்பால் மறைந்தனன், இரவி என்பான் 102-77

அலங்கல் அம் தொடையினானும், அந்தியின் கடன்கள் ஆற்றி,
பொலங் குழை மயிலினோடு துயிலுற, புணரி போலும்
இலங்கிய சேனை சூழ, இளவலும் எயினர் கோனும்,
கலங்கலர் காத்து நின்றார்; கதிரவன் உதயம் செய்தான். 102-78

கதிரவன் உதிப்ப, காலைக் கடன் கழித்து, இளவலோடும்
அதிர் பொலன் கழலினான் அவ் அருந் தவன் தன்னை ஏத்தி,
விதி தரு விமானம் மேவி, விளங்கிழையோடும், கொற்றம்
முதிர் தரு துணைவரோடும், முனி மனம் தொடரப் போனான். 102-79

தாவி வான் படர்ந்து மானம் தடையிலாது ஏகும் வேலை,
தீவிய கன்னி ஆகிச் செருக்கிய காமச் செவ்வி
ஓவியம் உயிர் பெற்றென்ன உம்பர்கோன் நகரும் ஒவ்வா
மா இயல் அயோத்தி சூழும் மதில் புறம் தோன்றிற்று அன்றே. 102-80

பொன் மதில் கிடக்கை சூழப் பொலிவுடை நகரம் தோன்ற,
நன் மதிக் கிழவர்தம்மை நோக்கிய ஞான மூர்த்தி,
‘சொல் மதித்து ஒருவராலும் சொலப்படா அயோத்தி தோன்றிற்று’
என்னலும், கரங்கள் கூப்பி எழுந்தனர், இறைஞ்சி நின்றார். 102-81

தோன்றலும், சுமந்திரன் தொழுத கையினன்,
ஈன்று, காத்து, அழித்து, அவை இயற்றும் அவ் உரு
மூன்றுமாய் நான்குமாய் ஐந்துமாம் முதல்
சான்றினைப் பரதற்குச் சுட்டி, சாற்றுவான். 103-1

கெட்ட வான் பொருள் வந்து கிடைப்ப, முன்பு தாம்
பட்ட வான் படர் ஒழிந்தவரின் பையுள் நோய்
சுட்டவன், மானவன்-தொழுதல் உன்னியே,
விட்டனன் மாருதி கரத்தை, மேன்மையான். 107-1

[இதன் பின் சில பிரதிகளில் 102-7, 8, 9, 10 பாடல்கள் உள்ளன]

அப்பொழுது அவ் வயின் அடந்துளோர்களைத்
‘தப்பு அறக் காண்பென்’ என்று ஐயன் தன் மனத்து
ஒப்பு அற எண்ணும் முன், உம்பர் நாடு வந்து
இப் புறத்து இழிந்தென இழிந்த, மானமும். 111-1

அவ் வயின், ‘அயோத்தி வைகும் சனமொடும், அக்குரோணி
தவ்வல் இல் ஆறு பத்து ஆயிரமோடும், தாயரோடும்,
இவ் வயின் அடைந்துளோரைக் காண்பென்’ என்று இராமன் உன்ன,
செவ்வையின் நிலத்தை வந்து சேர்ந்தது, விமானம் தானும். 110-2

எவ் வயின் உயிர்கட்கும், இராமன் ஏறிய
செவ்விய புட்பகம் நிலத்தை சேர்தலும்
அவ் அவர்க்கு அணுகிய அமரர் நாடு உய்க்கும்
எவ்வம் இல் மானம் என்று இசைக்கள் ஆயதால் 110-3

அனைவரும் அனையர் ஆகி அடைந்துழி, அருளின் வேலை-
தனை இனிது அளித்த தாயர் மூவரும், தம்பிமாரும்
புனையும் நூல் முனிவன் தானும், பொன் அணி விமானத்து ஏற,
வனை கழல் குரிசில் முந்தி, மாதவன் தாளில் வீழ்ந்தான். 115-1

எடுத்தனன் முனிவன், மற்று அவ் இராமனை ஆசி கூறி
அடுத்துள துன்பம் நீங்க, அணைத்து அணைத்து, அன்பு கூர்ந்து,
விடுத்துழி, இளைய வீரன் வேதியன் தாளில் வீழ,
வடித்த நூல் முனியும் ஏந்தி, வாழ்த்தினான், ஆசி கூறி. 115-2

கைகான் தனயை முந்தக் கால் உறப் பணிந்து, மற்றை
மொய் குழல் இருவர் தாளும் முறைமையின் வணங்கும் செங் கண்
ஐயனை, அவர்கள் தாமும் அன்புறத் தழுவி, தம் தம்
செய்ய தாமரைக் கணீரால் மஞ்சனத் தொழிலும் செய்தார். 115-3

அன்னமும் முன்னர்ச் சொன்ன முறைமையின் அடியில் வீழ்ந்தாள்;
தன் நிகர் இலாத வென்றித் தம்பியும் தாயர்தங்கள்
பொன் அடித் தலத்தில் வீழ, தாயரும் பொருந்தப் புல்லி,
‘மன்னவற்கு இளவல் நீயே; வாழி!’ என்று ஆசி சொன்னார். 115-4

நீடு வேல் ஏற்றவற்கு இளைய நின் மலன்
வாடிய மனத்தனாய் வசிட்டன் முன் வர,
சூடிய கடி மலர் தூவி ஆர்த்தனன்;
ஏடு அவிழ் தாமரை இறைஞ்சி, எய்தினான். 118-1

ஊடுறு கமலக் கண்ணீர் திசைதொறும் சிதறி ஓட,
தாள்தொடு தடக் கை ஆரத் தழுவினன் -‘தனிமை நீங்கி,
காடு உறைந்து உலைந்த மெய்யோ, கையறு கவலை கூர
நாடு மறைந்து உலைந்த மெய்யோ, நைந்தது?’ என்று உலகம் நைய 118-2

மூவர்க்கும் இளைய வள்ளல், முடிமிசை முகிழ்த்த கையன்,
தேவர்க்கும் தேவன் தாளும், செறி கழல் இளவல் தாளும்,
பூவர்க்கம் பொழிந்து வீழ்ந்தான்; எடுத்தனர் பொருந்தப் புல்லி,
வாவிக்குள் அன்னம் அன்னாள் மலர் அடித் தலத்து வீழ்ந்தான். 118-3

ஆயிடைக் குகனும் வந்து, ஆங்கு, ஆண்டவன் அடியில் வீழ,
நாயகன் உவந்து புல்லி, ‘நண்ணி, என் பின்பு வந்த
தூயனே! கிளையினோடும் சுகம் இருந்தனையோ?’ என்று
வாயிடை மொழிந்தான்,-மற்றை மறைகளும் காணா அண்ணல். 119-1

குரக்கினத்து அரசை, சேயை, குமுதனை, சாம்பன் தன்னை,
செருக்கிளர் நீலன் தன்னை, மற்றும் அத் திறத்தினோரை,
அரக்கருக்கு அரசை, வெவ்வேறு அடைவினின் முதன்மை கூறி,
மருக் கமழ் தொடையல் மாலை மார்பினன், பரதன் நின்றான். 119-2

மந்திரச் சுற்றத்துள்ளார் தம்மொடும், வயங்கு தானைத்
தந்திரத் தலைவரோடும், தமரொடும், தரணி ஆளும்
சிந்துரக் களிறு போல்வார் எவரொடும், சேனையோடும்,
சுந்தரத் தடந்தோள் வெற்றிச் சுமந்திரன் தோன்றினானால். 119-3

அழுகையும் உவகைதானும் தனித்தனி அமர் செய்து ஏற,
தொழுதனன், எழுந்து விம்மி, சுமந்திரன் நிற்றலோடும்,
தழுவினன் இராமன்; மற்றைத் தம்பியும் அனைய நீரான்,
‘வழு இனி உளது அன்று, இந்த மா நிலக் கிழத்திக்கு’ என்றான் 119-4

வேறு வேறு உள்ள சுற்றத்தவர்களும் வேந்தர் ஆதி
கூறிய குழுவினோரும் குழுமி, அங்கு இராமன் பாதம்,
ஊறிய உவகை தூண்ட, தொழுதனர்; உவந்த பின்பு
தேறிய கமலக் கண்ணன் திரு நகர்க்கு எழுதலுற்றான். 119-5

‘ஏறுக சேனை எல்லாம் விமான மீது’ என்று, தன்போல்
மாறு இலா வீரன் கூற, வந்துள அனிக வெள்ளம்
ஊறு இரும் பரவை வானத்து எழிலியுள் ஒடுங்குமாபோல்
ஏறி, மற்று இளைய வீரன் இணை அடி தொழுதது அன்றே. 119-6

‘உரைசெயின், உலகம் உண்டான் மணி அணி உதரம் ஒவ்வா,
கரை செயல் அரிய வேதக் குறுமுனி கையும் ஒவ்வா,
விரை செறி அலங்கள் மாலைப் புட்பக விமானம்’ என்று என்று,
உரை செய்து, வாள் உளோர்கள் ஒண் மலர் தூவி ஆர்த்தார். 119-7

அசனியின் குழுவும், ஆழி ஏழும் ஒத்து ஆர்த்ததென்ன,
விசையுறு முரசும், வேதத்து ஓதையும், விளி கொள் சங்கும்,
இசையுறு குரலும், ஏத்தின் அரவமும், எழுந்து பொங்கி,
திசை உறச் சென்று, வானோர் அந்தரத்து ஒலியின் தீர்ந்த. 119-8

நம்பியும் பரதனோடு நந்தியம் பதியை நண்ணி,
‘வெம்பிய எரியின் பாங்கர் விலக்குவென்’ என்று விம்மும்
கொம்பு இயல் மருங்குல் தெய்வக் கோசலை குளிர் பொன் பாதம்
தம்பியரோடும் தாழ்ந்தான், தாமரைக் கண்ணீர் தாழ. 119-9

மூன்று என நின்ற தன்மைக் குணங்களின் உயிர்கட்கு எல்லாம்
சான்று என நின்ற மானச் சிறுவனைத் தலைப்பட்டாட்குத்
தோன்றிய உவகைக்கு ஆங்கு ஓர் எல்லையும் சொல்லற்பாற்றோ?
ஈன்ற போது ஒத்தது அன்றே, எதிர்ந்த போது ஒத்த தன்மை! 119-10

இணை மலர்த் தாளின் வீழ்ந்த இலக்குவன் தன்னை ஏந்தி,
பணை முலைப் பாலும், கண்ணீர்த் தாரையும் பாய, நின்றாள்;
பிணை எனத் தகைய நோக்கின் சீதையை, பேடை அன்னத்
துணையினை, உலகில் கற்பின் பெருங் கதித் துறையை, கண்டாள் 119-11

நான்முகன் தாதைதான் தன் மகன் என்று நல்கி, விம்மி,
பால் முலை சோர நின்ற பல் பெருந் தவத்தினாளை,
கால் முதல் தொழுது, தங்கள் கட்டு இரும் பாவம் விட்டார்,
மான் முயல் உருவத்தோடும் தோன்றிய வானோர் எல்லாம். 119-12

அவ் வயின் விமானம் தாவி, அந்தரத்து, அயோத்தி நோக்கி,
செவ்வையின் படரல் உற்ற, செகதல மடந்தையோடும்;
இவ் உலகத்து உளோர்கள் இந்திரர் உலகு காண்பான்,
கவ்வையின் ஏகுகின்ற நீர்மையைக் கடுக்கும் அன்றே. 119-13

வளம் கெழு கயிலை ஈசன், மலர் அயன், மறைகள் நான்கும்,
ஒழுங்கு உறும் அமரர் ஆதி உயிர்களும் உணர்தற்கு எட்டா
விளங்கு தத்துவங்கள் மூன்றும் கடந்து, உயர் வெளிப் பாழ் மேலாய்,
விளங்குறும் நேமிப் புத்தேள் மேவும் மா அயோத்தி கண்டார். 119-14

விளங்கிய புட்பகம் நிலத்தின் மீது உற,
தொழும் தகை அமரர்கள் துள்ளி ஆர்த்திட,
களங்கணி அனைய அக் கண்ணன் மாதொடும்
விளங்கினன் நகரிடை, விளைவு கூரவே. 119-15

புகுந்தனர் நகரிடை-பொங்கும் ஓசையின்
மிகுந்துள கவிப் பெருங் கடலும், மேதகு
மகம் பயில் முனிவனும், மற்று உளோர்களும்,
அகம் தனில் அருங் களிப்பு எழுந்து துள்ளவே. 119-16

நம்பியும் வசிட்டன் கூற, நந்தியம்பதியில் சென்று,
வம்பு இயல் சடையும் மாற்றி, மயிர் வினை முற்றி, மாதோடு
இம்பரின் எவரும் ஏத்த ஈர்ம் புனல் படிந்த பின்னர்,
உம்பரும் உவகை கூர, ஒப்பனை ஒப்பம் செய்தார். 119-17

உயிர் வரும் உலவை அன்ன பரதனை இளவலோடும்
மயிர் வினை செய்வித்து, ஆங்கே மாசு அற மண்ணில் தாழும்
செயிர் அறு கடிலக் கற்றைத் திரள் அறக் களைந்து நீக்கி,
குயில் புரை மொழியர் ஆவி கொள்வது ஓர் கோலம் கொண்டார் 119-18

——————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/36–இராவணன் வதைப் படலம்–

November 2, 2020

தேவர் வாழ்த்துரைக்க இராமன் தேரேறிச் செல்லுதலும்,
இராவணன் இராமனை நோக்கி வருதலும், மகோதரன் இராமனால்
மடிதலும், தீ நிமித்தங்களைப் பொருட் படுத்தாது இராவணன்
துணிதலும், இராவணனின் போர்த் திறங்களும், வர வலிமையும்
சிறிது சிறிதாய் அழிய இராமன் கடவுள் அவதாரமோ என எண்ணி
யாரேயாயினும் போரிடுவது என முடிவு செய்தலும், அம்பு பட்டு
இராவணன் மயங்கிய காலை அவனைக் கொல்லுமாறு மாதலி
கூறியதை இராமன் ஏற்க மறுத்தலும், தேறிய இராவணன் கடும்
போர் புரியப் பிரம்மாத்திரத்தால் அவனை இராமன் மாய்த்தலும்,
அவன் முதுகுத் தழும்பு கண்டு இராமன் நாணியபோது வீடணன்
உண்மை கூறித் தெருட்டலும், பின்னர் பகை விடுத்து இறுதிக்
கடன் செய்யுமாறு வீடணனை இராமன் தூண்டுதலும், வீடணன்
துயரும், இராவணன் மனைவியர் புலம்பலும், மண்டோதரி
பிரிவாற்றாது புலம்பி மாய்தலும், இராவணனுக்கும் பிற
அரக்கர்க்கும் இறுதிக்கடன் செய்து வருந்திய வீடணனை
இராமன் தேற்றுதலும் இப்படலத்துப் பொருளாக அமைந்துள்ளன.

——–

தேவர்கள் வாழ்த்த, இராமன் தேரில் செல்லுதல்

ஆழி அம் தடந் தேர், வீரன் ஏறலும், அலங்கல் சில்லி
பூழியில் சுரித்த தன்மை நோக்கிய புலவர் போத,
ஊழி வெங் காற்றின் வெய்ய கலுழனை ஒன்றும் சொல்லார்,
வாழிய அனுமன் தோளை ஏத்தினார், மலர்கள் தூவி. 1-

ஆழி அம் தடம் தேர் – சக்கரங்கள் அமைந்த, அழகிய
பெரிய தேரின் மீது; வீரன் ஏறலும் – வீரனாகிய இராமபிரான்
ஏறியதும்; அலங்கல் சில்லி- ஒளி வீசும் தேருருளை; பூமியில் சுரித்த
தன்மை – புழுதியில் புதைந்த தன்மையை; நோக்கிய
புலவர்போத – பார்த்துக் கொண்டிருந்த தேவர்கள் வந்து;
(இராமபிரான் உடற்பாரத்தை வியந்தவர்களாய்); ஊழி வெங்
காற்றின் – யுக முடிவுக் காலத்தில் பொங்கும் வெப்பம்
நிறைந்த சூறாவளியைக் காட்டிலும்; வெய்ய கலுழனை –
கொடிய கருடாழ்வானை,; ஒன்றும் சொல்லார்- (நினைந்து)
புகழ்ச்சியாக யாதும் கூறாமல்; அநுமன் தோளை- (ஆற்றல்
மிக்க) அநுமனின் தோள்களை; மலர்கள் தூவி – பூக்கள்
சொரிந்து; வாழிய – வாழ்க வாழ்க என்று; ஏத்தினார்-
போற்றி செய்தார்கள்.

—————-

‘எழுக, தேர்; சுமக்க, எல்லோம் வலியும்; புக்கு இன்றே பொன்றி
விழுக, போர் அரக்கன்; வெல்க, வேந்தர்க்கு வேந்தன்; விம்மி
அழுக, பேர் அரக்கிமார்’ என்று ஆர்த்தனர், அமரர்; ஆழி
முழுகி மீது எழுந்தது என்னச் சென்றது, மூரித் திண் தேர். 2-

(தேவர்கள் மேலும்), அமரர் – தேவர்; தேர் எழுக-
இத்தேர் மேலெழுக; எல்லோம் வலியும் சுமக்க – நம்
யாவருடைய வலிமையையும் இத்தேர் ஏந்துவதாக; புக்கு
இன்றே போர் அரக்கன் பொன்றி விழுக – (இத்தேர்)
புகுவதால் இன்றைய தினமே போர் வெறி கொண்ட அரக்கனாகிய
இராவணன் அழிந்து வீழ்வானாக; வேந்தர்க்கு வேந்தன்
வெல்க- வேந்தருக்கெல்லாம் சக்கரவர்த்தியான இராமன் வாகை
சூடுவானாக; பேர் அரக்கிமார் விம்மி அழுக- அரக்கர்களின்
மனைவிமார்களான எண்ணற்ற அரக்கியர் (தம் கணவர் மாய)
விம்மி அழுவார்களாக’; என்று அமரர் ஆர்த்தனர் – என்று
கூறி தேவர்கள் ஆரவாரம் புரிந்தனர்; மூரித்திண்தேர்-
வலிமையும் திண்மையும் மிக்க இராமனின் தேர்; ஆழி முழுகி
மீதெழுந்தது என்ன- கடலில் முழுகி மேலெழுந்தாற் போன்று
(புழுதியினின்றும் பொங்கியெழுந்து); சென்றது – (போர்க்களம்
நோக்கிச்) சென்றது.

———–

இராமன் எதிரே தேரை செலுத்துமாறு இராவணன் சாரதிக்குக் கூறுதல்

அன்னது கண்ணின் கண்ட அரக்கனும், ‘அமரர் ஈந்தார் மன் நெடுந் தேர்’ என்று
உன்னி, வாய் மடித்து எயிறு தின்றான்; பின், ‘அது கிடக்க’
என்னா, தன்னுடைப் பெருந் திண் தேரை,
மின் நகு வரி வில் செங் கை இராமன் மேல் விடுதி’ என்றான். 3-

அன்னது- அந்தத் தேரை; கண்ணின் கண்ட அரக்கனும்
– தன் கண்களால் பார்த்த இராவணனும்; ‘மன் நெடுந் தேர்
அமரர் ஈந்தார்’ – ‘நிலை பெற்ற பெரிய தேரைத் தேவர்
கொடுத்தார்’; என்று உன்னி – எனக் கருதி; வாய் மடித்து
எயிறு தின்றான் – உதடுகளைக் கடித்துப் பற்களை மென்றான்;
பின் – அதன்பிறகு; ‘அது கிடக்க’ – ‘அது கிடக்கட்டும்’;
என்னா- என்று (அலட்சியமாய்க்) கருதியவனாய்; தன்னுடைப்
பெருந்திண் தேரை- தன்னுடைய பெரிய வலிமையான தேரினை;
மின் நகு வரிவில் செங்கை இராமன் மேல் – ஒளியைச்
சிந்தும் கட்டமைந்த வில்லைச் செவ்விய கைகளில் ஏந்திய
இராமபிரான் மீது; விடுதி’ – விடுவாயாக’; என்றான் – என்று
(தன் பாகனுக்குக்) கட்டளையிட்டான்.

————-

வானரர் போருக்கு ஆயத்தமாதல்

இரிந்த வான் கவிகள் எல்லாம், ‘இமையவர் இரதம் ஈந்தார்;
அரிந்தமன் வெல்லும் என்றற்கு ஐயுறவு இல்’ என்று, அஞ்சார்,
திரிந்தனர்; மரமும் கல்லும் சிந்தினர்; ‘திசையோடு அண்டம்
பிரிந்தனகொல்!’ என்று எண்ணப் பிறந்தது, முழக்கின் பெற்றி. 4-

இரிந்த – முன்பு சிதறியோடின; வான்கவிகள் எல்லாம் –
வானரர்கள் எல்லோரும்; ‘இமையவர் இரதம் ஈந்தார்- தேவர்கள்
(இராமனுக்குத்) தேரை நல்கினர்; அரிந்தமன் வெல்லும் –
பகைவரை அடக்கும் (ஆற்றல் மிக்க) மன்னவனாகிய
இராமபிரான் வெல்லுவான்,; என்றற்கு – என்று கருதுவதற்கு;
ஐயுறவு இல்- எவ்வித ஐயமும் இல்லை’; என்று அஞ்சார்-
என்று கூறி அச்சம் நீங்கியவர்களாய்; திரிந்தனர் –
(மீண்டும் போர்க்களம் எங்கும்) சுற்றி வந்தனர்; மரமும்
கல்லும் சிந்தினர் – மரங்களையும் கற்களையும் (அரக்கர்
மேல்) எறிந்தனர்; முழக்கின் பெற்றி – (அப்போது)
வானரர்கள் செய்த ஆரவாரத்தின் தன்மையானது;’திசையொடு
அண்டம் பிரிந்தன கொல்’ – ‘திசைகளும் அண்டங்களும்
பிளந்தன போலும்’; என்று எண்ணப் பிறந்தது – என்று
கருதும்படி எழுந்தது.

———–

வார்ப் பொலி முரசின் ஓதை, வாய்ப்புடை வயவர் ஓதை,
போர்த் தொழில் களத்து மற்றும் முற்றிய பொம்மல் ஓதை,
ஆர்த்தலின், யாரும் பார் வீழ்ந்து அடங்கினர், இருவர் ஆடல்
தேர்க் குரல் ஓதை பொங்க, செவி முற்றும் செவிடு செய்த. 5-

வார்ப்பொலி முரசின் ஓதை – வார்க்கட்டமைந்த
முரசுகளிலிருந்து எழும் ஓசையும்;வாய்ப்புடை வயவர் ஓதை-
போரியற்றும் வாய்ப்புபெற்ற வீரர்கள் எழுப்பும் ஓசையும்;
போர்த் தொழில்களத்து – போர் நிகழுகின்ற களத்தில்;
மற்றும் முற்றிய பொம்மல் ஓதை – பிற போர்ப்படைகள்
நிரம்பி நின்று எழுப்பிய மகிழ்ச்சி ஆரவார ஓசையும்;
ஆர்த்தலின் – கூடியொலித்தலால்; யாரும் – (இரு
திறத்திலுமுள்ள) அனைவரும்; பார்வீழ்ந்து அடங்கினர்-
தரையில் விழுந்து அடங்கிப் போயினர்; இருவர் –
இராமபிரான் இராவணன் என்னும் இருவருடைய; ஆடல்
தேர்க்குரல்- அசைகின்ற தேர்களின் ஒலி; ஓதை பொங்க –
முழக்கம் மேலெழுந்து; செவி முற்றும் செவிடு செய்த –
அனைவர்தம் செவிகளையும் செவிடாக்கின.

——————-

இராமன் மாதலிக்கு தன் கருத்து கூற, அவன் அதற்கு இசைதல்

மாதலி வதனம் நோக்கி, மன்னர் தம் மன்னன் மைந்தன்,
‘காதலால் கருமம் ஒன்று கேட்டியால்; களித்த சிந்தை
ஏதலன் மிகுதி எல்லாம் இயற்றிய பின்றை, என் தன்
சோதனை நோக்கிச் செய்தி; துடிப்பு இலை’ என்னச் சொன்னான் 6-

மன்னர்தம் மன்னன் மைந்தன்- (தசரதச்) சக்கரவர்த்தி
திருக் குமாரனாகிய இராமன்; மாதலி வதனம் நோக்கி – தன்
தேர்ச்சாரதியாகிய மாதலியின் முகத்தைப் பார்த்து;
‘காதலால் கருமம் ஒன்று கேட்டியால் – அன்போடு
நான் கூறும் செயல் ஒன்றினைக் கேட்பாயாக; களித்த சிந்தை
எதலன் – மிதப்பு மிக்க சிந்தனை கொண்டவனாகிய (நம்)
பகைவன்; மிகுதி எல்லாம் இயற்றிய பின்றை – தன்னுடைய
மீறிய செயல்களையெல்லாம் செய்த பிறகு; என்தன் சோதனை
நோக்கி – என் தூண்டுதலைக் கவனித்து; செய்தி – (உன்
தேரோட்டும்) தொழிலைச் செய்வாயாக; துடிப்பு இலை-
(இப்போது) விரைதல் வேண்டுவதில்லை; என்னச் சொன்னான்-
என்று கூறினான்.

————

‘வள்ளல்! நின் கருத்தும், மாவின் சிந்தையும், மாற்றலார்தம்
உள்ளமும், மிகையும், உற்ற குற்றமும், உறுதிதானும்,
கள்ளம் இல் காலப் பாடும், கருமமும், கருதேன் ஆகில்,
தெள்ளிது என் விஞ்சை!’ என்றான்; அமலனும், ‘சீரிது!’ என்றான் 7-

‘வள்ளல்! – வரையாது அருளும் இயல்புடையாய்!; நின்
கருத்தும் – உன் திருக்கருத்தையும்; மாவின் சிந்தையும்-
புரவிகளின் மனப்போக்கையும்; மாற்றலார் தம் உள்ளமும் –
பகைவரது உட்கருத்தையும்; மிகையும் – பகைவர் தம்
மிகுதியையும்; உற்ற குற்றமும் – (அதனால்) நேரும்
தீமைகளையும்; உறுதிதானும் – மேற்கொள்ளத் தக்க
உறுதியையும்; கள்ளமில் காலப்பாடும் – வஞ்சனையின்றி
(இயல்பாகச்) செயல்படும் கால நிலையையும் கருமமும் –
எடுத்துக்கொண்ட செயலின் திறத்தையும்; கருதேன் ஆகில்-
(ஆராய்ந்து) என் தொழிலைச் செய்யேனாகில்; என் விஞ்சை
– என் தேரோட்டும் கலைத்தொழில்; தெள்ளிது- மிக மிகத்
திறம்பட்டது அன்றோ?’ (ஆகாது என்றபடி!); என்றான் – என்று
கூறினான்; அமலனும் – (யாதுமோர்) குற்றமற்ற இராமபிரானும்;
செவ்விது என்றான்- (அவன் செப்பிய பாங்குணர்ந்து) ‘நன்று’
என மொழிந்தான்.

———-

வேறு இடத்துப் பொர மகோதரன் வேண்ட , இராவணன், ‘நீ இலக்குவனோடு போர் செய்’ எனல்

‘தோன்றினன் இராமன், எந்தாய்! புரந்தரன் துரகத் தேர் மேல்;
ஏன்று இருவருக்கும் வெம் போர் எய்தியது; இடையே, யான் ஓர்
சான்று என நிற்றல் குற்றம்; தருதியால் விடை ஈண்டு’
என்றான் – வான் தொடர் குன்றம் அன்ன மகோதரன் இலங்கை மன்னை. 8-

வான் தொடர் குன்றம் அன்ன – வானத்தை அளாவிய
மலை போன்ற (தோற்றத்தை உடைய); மகோதரன் –
மகோதரனாகிய வீரன்; எந்தாய்- எம் தலைவனே; புரந்தரன் –
இந்திரனுக்குரிய; துரகத் தேர்மேல் – குதிரைகள் பூட்டிய
தேரின் மீது; இராமன் தோன்றினன் – இராமன் (இதோ)
காட்சி தருகின்றான்; ஏன்று – (ஒருவரை ஒருவர்) எதிர்த்து
நிற்கும்; இருவருக்கும் – உங்கள் இருவரிடையேயும்;
வெம்போர் எய்தியது – கொடிய போர் (நடக்கும் நேரம்)
நெருங்கி விட்டது; இடையே – உங்கள் இருவருக்கும் இடையே;
யான் ஓர் சான்று என – நான் ஒரு சாட்சியாக; நிற்றல்-
(வறிதே) நிற்பது; குற்றம் – பிழையாகும்; ஈண்டு –
இப்போது; விடை தருதியால் – (வேறிடத்தில் போர் புரிய)
விடை தருவாயாக’; என்றான் – என வேண்டினான்; இலங்கை
மன்னை – (என) இலங்கை வேந்தனாகிய இராவணனிடம்.

————

‘அம்புயம் அனைய கண்ணன் தன்னை யான் அரியின் ஏறு
தும்பியைத் தொலைத்தது என்னத் தொலைக்குவென்; தொடர்ந்து நின்ற
தம்பியைத் தடுத்தியாயின், தந்தனை கொற்றம்’ என்றான்;
வெம்பு இகல் அரக்கன், ‘அஃதே செய்வென்’ என்று, அவனின் மீண்டான் 9-

(இவ் வேண்டு கோளைக் கேட்ட இராவணன்), அம்புயம்
அனைய கண்ணன் தன்னை – செந்தாமரை போன்ற கண்களை
உடைய இராமனை; அரியின் ஏறு – ஆண் சிங்கம் (ஒன்று);
தும்பியைத் தொலைத்தது என்ன – யானையை அழித்தது
என்னும் படியாக; யான் தொலைக்குவன் – நான்
அழித்தொழிப்பேன்; தொடர்ந்து நின்ற தம்பியை – இணை
பிரியாது நிற்கும் தம்பியாகிய இலக்குவனை; தடுத்தியாயின் –
(நீ) போரிட்டுத் தடுப்பாயானால்; கொற்றம் தந்தனை – (எனக்கு)
வெற்றித் தேடித் தந்தவனாவாய்; என்றான் – என்று கூறினான்;
வெம்பு இயல் அரக்கன்- (சினத்தால்) வெம்பும் தன்மையுடைய
மகோதரன்; ‘அஃதே செய்வென் என்று- ‘அவ்வாறே செய்வேன்’
என்று; அவனின் மீண்டான்- இராவணனிடத்தினின்றும் திரும்பிச்
சென்றான்.

——

இராமன் தேர் அணுக, ‘அதன் எதிரே தேரை விடு’ எனச் சாரதிக்கு மகோதரன் பணித்தல்

மீண்டவன் இளவல் நின்ற பாணியின் விலங்கா முன்னம்,
ஆண்தகை தெய்வத் திண் தேர் அணுகியது; அணுகும் காலை,
மூண்டு எழு வெகுளியோடும், மகோதரன் முனிந்து, ‘முட்டத்
தூண்டுதி தேரை’ என்றான்; சாரதி தொழுது சொல்லும்: 10-

மீண்டவன் – இராவணன் பக்கமிருந்து திரும்பி வந்த
மகோதரன்; இளவல் நின்ற பாணியின் – தம்பி இலக்குவன்
இருந்த பக்கத்திற்கு; விலங்கா முன்னம் – நீங்குவதற்கு
முன்னர்; ஆண்டகை – ஆண்மை மிக்க இராமனுடைய;
தெய்வத்திண்தேர் – தெய்வத் தன்மை மிக்க வலிமையான
தேர்; அணுகியது – நெருங்கி வந்தது; அணுகும் காலை –
அவ்வாறு நெருங்கிய போது; மகோதரன் – மகோதரன்;
மூண்டெழு வெகுளியோடும் – பொங்கி எழுகின்ற சினத்தோடு;
முனிந்து – கோபித்து; ‘முட்டத்தூண்டுதி தேரை’ – தேரை
முட்டும்படி செலுத்துவாயாக; என்றான்- என்று கட்டளையிட்டான்;
சாரதி- தேர்ப்பாகன்; தொழுது சொல்லும்- வணங்கி உரைக்கத்
தொடங்கினான்.

————

மகோதரன் இராமனுடன் பொருது, முடிதல்

‘எண் அருங் கோடி வெங் கண் இராவணரேயும், இன்று
நண்ணிய பொழுது மீண்டு நடப்பரோ, கிடப்பது அல்லால்?
அண்ணல் தன் தோற்றம் கண்டால், ஐய! நீ கமலம் அன்ன
கண்ணனை ஒழிய, அப் பால் செல்வதே கருமம்’ என்றான். 11-

ஐய – ஐயனே; அண்ணல் தன் தோற்றம் கண்டால் –
பெருமை மிக்க இராமபிரானின் உருவினைக் கண்டால்; எண்ணரும்
கோடி வெங்கண் இராவணரேயும் – (இந்த ஓர் இராவணன்
மட்டுமன்று) எண்ணுதற்கரிய கோடிக்கணக்கான கொடுங்கண்கள்
படைத்த இராவணர்களாயினும்; இன்று நண்ணிய பொழுது- இன்று
(இராமனை) நெருங்கி வந்தாலும்; கிடப்பதல்லால்- (களத்தில்)
இறந்து கிடப்பார்களே யல்லாமல்; மீண்டும் நடப்பரோ?-
(உயிருடன்) மீண்டும் செல்ல வல்லவர்களோ? (செல்லார்)
ஆதலால்; நீ- நீ; கமலம் அன்ன கண்ணனை- தாமரை போலும்
கண்களையுடைய இராமபிரானை; அப்பால் ஒழிய – (விட்டு
நீங்கி) வேறிடம்; செல்வதே- போவதே; கருமம் – (பொருத்தமான)
செயல்; என்றான்- என்று (சாரதி மகோதரனிடம்) கூறினான்.

——–

என்றலும், எயிற்றுப் பேழ் வாய் மடிந்து, ‘அடா! எடுத்து நின்னைத்
தின்றனென் எனினும் உண்டாம் பழி’ என, சீற்றம் சிந்தும் குன்று அன
தோற்றத்தான் தன் கொடி நெடுந் தேரின் நேரே சென்றது,
அவ் இராமன் திண் தேர்; விளைந்தது, திமிலத் திண் போர் 12-

என்றலும் – என்று (சாரதி) கூறுதலும்; (மகோதரன்)
எயிற்றுப் பேழ்வாய் மடித்து – (கோரைப்) பற்கள்
தோன்றும் பிளந்த தன் வாயை மடித்து; ‘அடா – ஏடா!;
நின்னை எடுத்து – என்னை மறுத்துப் பேசிய) உன்னை
வாரியெடுத்து; தின்றனன் எனினும் – உண்டேனாயினும்;
பழிஉண்டாம்’ – அதனால் எனக்குப் பழி நேர்ந்துவிடும்’
(ஆதலால் அது தவிர்ந்தேன்); என – என்றுரைக்க; சீற்றம்
சிந்தும் – சினத்தை வெளியிடும்; குன்றன தோற்றத்தான்
தன் – மலை போன்ற உருவத்தையுடைய (மகோதரனின்); கொடி
நெடுந்தேரின் நேரே – கொடிகள் கட்டிய இரதத்திற்கு நேராக;
அவ்விராமன் திண்தேர் சென்றது – அந்த இராமபிரானுடைய
வலிய தேர் சென்றது; திமிலத் திண்போர்- முழக்கத்தையுடைய
பெரும் போர்; விளைந்தது- உண்டாயிற்று.

—————–

பொன் தடந் தேரும், மாவும், பூட்கையும், புலவு உண்
வாட் கைக் கல் தடந் திண் தோள் ஆளும், நெருங்கிய
கடல்கள் எல்லாம் வற்றின, இராமன் வாளி வட அனல் பருக;
வன் தாள் ஒற்றை வன் தடந் தேரொடும் மகோதரன் ஒருவன் சென்றான். 13-

(அப்போரில் மகோதரனிடமிருந்த) பொன் தடந்தேரும்-
பொன் மயமான பெரிய தேர்களும்; மாவும் – குதிரைகளும்;
பூட்கையும் – யானைகளும்; புலவு வாட்கை – புலால் நாறும்
வாளேந்திய கரங்களையும்; கல் தடந் திண் தோள் ஆளும் –
கல்போல் வலிய அகன்று திரண்ட தோள்களையும் உடைய காலாட்
படைகளும்; நெருங்கிய – (கொண்டு) நெருக்கமுற்ற; கடல்கள்
எல்லாம்- படைக் கடல்கள் யாவும்; இராமன் வாளி வடவனல்
பருக – இராமபிரானின் அம்புகள் என்னும் வடவைக் கனல்
குடிக்க; வற்றின- வறண்டு (ஏதுமில்லாமல்) போயின (எனவே); ஒற்றை வன் தடந் தேரோடும்- (மிஞ்சிய) தன்
ஒரே பெரிய வலிய தேருடன்; வன்தாள் மகோதரன் – வலிய
(கால்களை உடைய) வனாகிய மகோதரன்; ஒருவன் சென்றான்-
தன்னந்தனியாக இராமபிரான் பக்கம் சென்றான்.

———-

அசனிஏறு இருந்த கொற்றக் கொடியின்மேல், அரவத் தேர்மேல்,
குசை உறு பாகன் தன்மேல், கொற்றவன் குவவுத் தோள்மேல்,
விசை உறு பகழி மாரி வித்தினான்; விண்ணினோடும்
திசைகளும் கிழிய ஆர்த்தான்; தீர்த்தனும், முறுவல் செய்தான். 14-

(மகோதரன்), அசனி ஏறு இருந்த கொற்றக் கொடியின்
மேல் – (இராமபிரானுக்கு இந்திரன் அளித்த தெய்வத் தேர்
மீது பறந்த) பேரிடி எழுதப் பெற்றிருந்த வெற்றிக் கொடியின்
மீதும்; அரவத் தேர் மேல் – ஒலிமிக்க அத்தேரின் மீதும்;
குசை உறு பாகன் தன் மேல்- கடிவாளம் பற்றிய தேர்ப்பாகன்
மாதலி மீதும்; கொற்றவன் குவவுத் தோள் மேல்-
வெற்றியாளனாகிய இராமபிரானின் மலைத் தோள்கள் மீதும்;
விசை உறு பகழி மாரி – வேகம் கொண்ட அம்பு மழையை;
வித்தினான் – விதை தூவுவது போல் பாய்ச்சினான்; (மேலும்)
விண்ணினோடும் திசைகளும் கிழிய – வானும் திசைகளும்
கிழிந்து போயிற்றென்னுமாறு; ஆர்த்தான் – முழக்கமிட்டான்;
தீர்த்தனும்- தூயவனாகிய இராமபிரானும்; முறுவல் செய்தான்
– புன்னகை பூத்தான்.

————-

வில் ஒன்றால், கவசம் ஒன்றால், விறலுடைக் கரம் ஓர் ஒன்றால்,
கல் ஒன்று தோளும் ஒன்றால், கழுத்து ஒன்றால், கடிதின் வாங்கி,
செல் ஒன்று கணைகள், ஐயன் சிந்தினான்; செப்பி வந்த
சொல் ஒன்றாய்ச் செய்கை ஒன்றாய்த் துணிந்தனன், அரக்கன் துஞ்சி 15-

ஐயன் – இராமபிரான்; வில் ஒன்றால் – (மகோதரனின்)
வில்லை ஒரு கணையாலும்; கவசம் ஒன்றால் – அவன் கவசத்தை
ஒரு கணையாலும்; விறலுடைக்கரம்- வலிமைமிக்க அவன் கைகளை;
ஓர் ஒன்றால் – ஒவ்வொரு கணையாலும்; கல்லொன்று தோளும்
ஒன்றால் – கற்பாறை போன்ற தோள்களை ஒரு கணையாலும்;
கழுத்து ஒன்றால் – கழுத்தினை ஒரு கணையாலும்; செல் ஒன்று
கணைகள் கடிதின் வாங்கி – விரைவு பொருந்திய அம்புகளை
வேகமாய்; சிந்தினான்- செலுத்தினான்; அரக்கன் – இராட்சதனான
மகோதரன்; செப்பி வந்த சொல் ஒன்றாய் – (இராவணனிடம்)
செப்பி வந்த மொழி ஒன்றாகவும்; செய்கை ஒன்றாய் – செயல்
மற்றொன்றாகவும் ஆகும் வண்ணம்; துஞ்சி துணிந்தனன்- இறந்து
உடல் துண்டாகி வீழ்ந்தான்.

————–

மகோதரனது முடிவு கண்டு வருந்திய இராவணன், இராமன் எதிரே தேரைச் செலுத்தச் செய்தல்

மோதரன் முடிந்த வண்ணம், மூவகை உலகத்தோடும்
மாதிரம் எவையும் வென்ற வன் தொழில் அரக்கன் கண்டான்,
சேதனை உண்ணக் கண்டான்; ‘செல விடு, செல விடு!’ என்றான்;
சூதனும் முடுகித் தூண்ட, சென்றது, துரதத் திண் தேர். 16-

மோதரன் முடிந்த வண்ணம் – மகோதரன் இறந்த நிலையை;
மூவகை உலகத்தோடு – மூன்று உலகங்களோடு; மாதிரம்
எவையும் வென்ற – திசைகள் அனைத்தையும் வெற்றி கொண்ட;
வன்தொழில் அரக்கன் – கொடுமையே தன்மையாகக் கொண்ட
இராவணன்; கண்டான் – பார்த்தான்; சேதனை உண்ண-
(இந்நிகழ்ச்சி) தன் அறிவை உண்ணவே; செலவிடு, செலவிடு
என்றான் – (தன் பாகனை நோக்கி) தேரைச் செலுத்து,
செலுத்து என்றான்; துரகத் திண்தேர் – குதிரை பூட்டிய வலிய
தேர்; சூதனும் முடுகித் தூண்ட – தேர்ப்பாகனும் விரைந்து
தூண்ட; சென்றது- வேகமாக முன்னே சென்றது.

—————–

இராவணன் சேனையை இராமன் கணத்தில் நீறாக்குதல்

‘பனிப் படா நின்றது என்னப் பரக்கின்ற சேனை பாறித்
தனிப்படான் ஆகின் இன்னம் தாழ்கிலன்’ என்னும் தன்மை
நுனிப் படா நின்ற வீரன், அவன் ஒன்று நோக்காவண்ணம்
குனிப் படாநின்ற வில்லால், ஒல்லையின் நூறிக் கொன்றான். 17-

பனிப்படா நின்றது என்ன – பனி எங்கும் பொழிந்து
நின்றாற்போல; பரக்கின்ற சேனை – விரிந்திருக்கிற
(இராவணன்) படை; பாறி – சிதறி; தனிப்படான் ஆகின்-
தான் தன்னந் தனியனாகாதவரை; இன்னம் தாழ்கிலன் –
(இவ்விராவணன்) இன்னும் கீழடங்கமாட்டான்; என்னும்
தன்மை – என்னும் நிலையை; நுனிப்படா நின்ற வீரன்-
நன்கு சிந்தித்து அறிந்த வீரனான இராமபிரான்; அவன்
ஒன்றும் நோக்கா வண்ணம்- தன் செயல் ஒன்றையும் அவன்
காணாதபடி; குனிப்படா நின்ற வில்லால்- வளைந்த வில்லால்;
ஒல்லையில் – விரைவாக; நூறிக் கொன்றான் – சின்னா
பின்னமாக்கி அழித்தான்.

————

இராவணனுக்குத் துன்னிமித்தம் தோன்றுதல்

அடல் வலி அரக்கற்கு அப் போழ்து, அண்டங்கள் அழுந்த, மண்டும்
கடல்களும் வற்ற, வெற்றிக் கால் கிளர்ந்து உடற்றும்காலை,
வடவரை முதல ஆன மலைக் குலம் சலிப்ப போன்று,
சுடர் மணி வலயம் சிந்தத் துடித்தன, இடத்த பொன் -தோள். 18-

அப்போழ்து – அவ்வேளையில்; அடல்வலி அரக்கற்கு-
மிகுந்த ஆற்றலையுடைய இராவணனுக்கு; அண்டங்கள் அழுந்த-
அண்டங்கள் அனைத்தும் தாழவும்; மண்டும் கடல்களும் வற்ற-
நிறைந்த கடல்கள் எல்லாம் வற்றவும்; வெற்றிக்கால் –
(எல்லாவற்றையும்) வென்று தீர்க்கும் (ஊழிக்) காற்று; கிளர்ந்து-
பொங்கி யெழுந்து; உடற்றும் காலை – துன்புறுத்தும் பொழுது;
வடவரை முதல ஆன – மேரு மலை முதலாக உள்ள;
மலைக்குலம் சலிப்ப மான- பெருமலை வரிசைகள் அசைவன
போன்று; சுடர்மணி வலயம் சிந்த- ஒளிவீசும் மாணிக்கங்கள்
பதித்த வாகுவலயங்கள் சிதறுமாறு; இடத்த பொன்தோள்
துடித்தன – இடதுபுறத்துப் பொன்மயமான தோள்கள் துடித்தன.

————-

உதிர மாரி சொரிந்தது, உலகு எலாம்;
அதிர வானம் இடித்தது; அரு வரை
பிதிர வீழ்ந்தது, அசனி; ஒளி பெறாக்
கதிரவன் தனை ஊரும் கலந்ததால். 19-

உலகெலாம் – உலகு முழுவதிலும்; உதிரமாரி – இரத்த
மழை; சொரிந்தது – பொழிந்தது; வானம் – முகில்கள்; அதிர
இடித்தது – உலகம் அதிரும்படி இடியொலி எழுப்பின; அருவரை
பிதிர – பெருமலைகள் சிதறும்படி; அசனி – இடி; வீழ்ந்தது –
(மலைகள் மேல்) விழுந்தது; ஒளிபெறாக் கதிரவன் தனை- ஒளி
இழந்த ஞாயிற்றை; ஊர்- ஊர்கோளும்; கலந்தது- சூழ்ந்து
கொண்டது; (ஆல் – அசை)

————-

வாவும் வாசிகள் தூங்கின; வாங்கள் இல்
ஏவும் வெஞ் சிலை நாண் இடை இற்றன;
நாவும் வாயும் உலர்ந்தன; நாள்மலர்ப்
பூவின் மாலை புலால் வெறி பூத்ததால். 20-

வாவும் வாசிகள் – (இராவணன் தேரில் கட்டிய) பாயும்
குதிரைகள்; தூங்கின – தேரில் கட்டியவாறே உறங்கின;
வெஞ்சிலை – கொடிய விற்கள்; வாங்கலில்- வளைக்கப்பட்ட
போது; ஏவும் – அம்புகளும்; நாண் இடை இற்றன –
நாண்கயிற்றில் வைக்கும்போதே முறிந்து போயின; நாவும்
வாயும் உலர்ந்தன – (இராவணன்) வாய்களும் நாக்குகளும்
காய்ந்து போயின; நாள் மலர்ப் பூவின் மாலை – புத்தம்
புதிதாக அன்று மலர்ந்த பூக்களால் கட்டப்பட்ட மாலை;
புலால் வெறி – மாமிச நாற்றத்தை; பூத்த – தோற்றுவித்தது.

————–

எழுது வீணை கொடு ஏந்து பதாகை மேல்
கழுகும் காகமும் மொய்த்தன; கண்கள் நீர்
ஒழுகுகின்றன, ஓடு இகல் ஆடல் மா;
தொழுவில் நின்றன போன்றன, சூழி மா. 21-

எழுது வீணை கொடு – வரையப் பெற்ற வீணையைச்
(சின்னமாகக்) கொண்டு,; ஏந்து பதாகை மேல் – உயர்ந்து
நிற்கும் (இராவணன்) கொடியின் மீது; கழுகும் காகமும்
மொய்த்தன – கழுகுகளும் காகங்களும் சூழ்ந்து பறந்தன;
ஓடு இகல் ஆடல் மா – பாயும் இயல்புடைய போர் வல்ல
குதிரைகளின்; கண்கள் நீர் ஒழுகுகின்றன – கண்களில்
கண்ணீர் வார்ந்து கொண்டிருந்தன; சூழி மா – முகபடாமணிந்த
யானைகள்; தொழுவில் நின்றன போன்றன – பந்திகளில்
கட்டப்பட்டாற்போல் செயலற்று நின்றன.

—————

துன்னிமித்தங்களை மதியாது, இராவணன் பொர நெருங்குதல்

இன்ன ஆகி, இமையவர்க்கு இன்பம் செய்
துன்னிமித்தங்கள் தோன்றின; தோன்றவும்,
அன்னது ஒன்றும் நினைந்திலன், ‘ஆற்றுமோ,
என்னை வெல்ல, மனித்தன்?’ என்று எண்ணுவான். 22-

இமையவர்க்கு இன்பம் செய் – தேவர்களுக்கு
மகிழ்ச்சியூட்டுகிற; துன்னிமித்தங்கள் – (இராவணனுக்கு)
கெட்ட சகுனங்களானவை; இன்னவாகி- இப்படிப்பட்டனவாகி;
தோன்றின – புலப்படலாயின; தோன்றவும் – அவ்வாறு
புலப்படவும்; அன்னது ஒன்றும் நினைந்திலன் – அவை
குறித்தும் ஏதும் சிந்திக்காதவனாய்; ‘என்னை வெல்ல
மனித்தன் ஆற்றுமோ?’ – என்னை வெல்வதற்கு (எளிய)
மனிதனால் முடியுமோ?’; என்று எண்ணுவான் – என்று
இராவணன் கருதலானான்

————

வீங்கு தேர் செலும் வேகத்து, வேலை நீர்
ஓங்கு நாளின் ஒதுங்கும் உலகுபோல்,
தாங்கல் ஆற்றகிலார், தடுமாறித் தாம்
நீங்கினார், இரு பாலும் நெருங்கினார். 23-

வேலை நீர் ஓங்கு நாளின்- கடல் நீர் பொங்கியெழும்
(ஊழிக்) காலத்தில்; ஒதுங்கும் உலகுபோய் – இரு புறமாய்
ஒதுங்கி நிற்கும் நிலம் போல; இருபாலும் நெருங்கினார் –
இருபக்கங்களிலும் நெருக்கமாகக் கூடியவர்கள்; வீங்கு தேர்
செலும் வேகத்து- (இராவணனின்) வேகம் மிக்க தேர் ஓடும்
விரைவினால்; தாங்கல் ஆற்றகிலார் – (அவ்விரைவைத்)
தாங்குதற்கு ஆற்றாதவர்களாய்; தடுமாறி – நிலை குலைந்து;
நீங்கினார்- ஒதுங்கிக் கொண்டனர்.

—————–

இராம இராவணர் தோற்றம்

கருமமும் கடைக்கண் உறு ஞானமும்,
அருமை சேரும் அவிஞ்சையும் விஞ்சையும்,
பெருமை சால் கொடும் பாவமும் பேர்கலாத்
தருமமும், எனச் சென்று, எதிர் தாக்கினார். 24-

இராவணனும் இராமபிரானும் அங்கு); கருமமும்- வினையும்;
கடைக்கண் உறு ஞானமும் – (நன்னெறியின்) கடைசியில்
எய்தும் ஞானமும் (போலவும்); அருமை சேரும் அவிஞ்சையும்-
(பொருள்களின் நிலையை) அறியாது தடுக்கும் அவிச்சையும்;
விஞ்சையும் – (அதற்கு மாறான) வித்தையும் (போலவும்);
பெருமை சால்- அளவிற் பெரிய; கொடும் பாவமும் – கொடிய
பாவமும்; பேர்கலா – (எந்நிலையிலும்) பயன்தருதலில்
தவிராத; தருமமும் என – அறமும் (போலவும்); எதிர் சென்று
தாக்கினார் – ஒருவர் மற்றொருவரை எதிர்த்துத் தாக்கினார்கள்.

———–

சிரம் ஒர் ஆயிரம் தாங்கிய சேடனும்,
உரவு கொற்றத்து உவணத்து அரசனும்,
பொர உடன்றனர் போலப் பொருந்தினர்,
இரவும் நண்பகலும் எனல் ஆயினார். 25-

சிரம் ஓர் ஆயிரம் தாங்கிய சேடனும் – தலைகள்
ஆயிரம் படைத்த ஆதி சேடனும்; உரவு கொற்றத்து –
வலிமையும் வெற்றியும் படைத்த; உவணத்து அரசனும் – கருட
வேந்தனும்; பொர உடன்றனர் – போரிட எதிர்த்து நின்றனர்;
போலப் பொருந்தினர்- என்பது போலப் பொருந்தி நின்றனர்;
இரவும் நண்பகலும் என – நள்ளிரவும் நண்பகலும் போல;
ஏற்றனர்- (அவ்விருவரும்) இசைந்து தோன்றினர்.

——–

வென்றி அம் திசை யானை வெகுண்டன
ஒன்றை ஒன்று முனிந்தன ஒத்தனர்;
அன்றியும், நரசிங்கமும் ஆடகக்
குன்றம் அன்னவனும் பொரும் கொள்கையார். 26-

வென்றி அம் திசை யானை- வெற்றி மிக்க அழகிய திக்கு
யானைகள்; வெகுண்டன – சினம் கொண்டனவாய்; ஒன்றை
ஒன்று – ஒன்றோடொன்று; முனிந்தவும்- வெறுத்து நின்றன;
ஒத்தனர் – போன்றிருந்தனர்; அன்றியும் – அதுவல்லாமலும்;
நரசிங்கமும் – நரசிங்க மூர்த்தியும்; ஆடகக் குன்றம்
அன்னவனும் – பொன்மலை போன்ற இரணியனும்; பொரும்
கொள்கையார்- ஒப்பென்று சொல்லுமாறும் விளங்கினார்கள்.

————-

துவனி வில்லின் பொருட்டு ஒரு தொல்லைநாள்,
‘எவன் அ(வ்) ஈசன்?’ என்பார் தொழ, ஏற்று, எதிர்
புவனம் மூன்றும் பொலங் கழலால் தொடும்
அவனும் அச் சிவனும் எனல் ஆயினார். 27-

தொல்லை ஒரு நாள் – பண்டொரு காலத்தில்; துவனி
வில்லின் பொருட்டு – முழக்கம் நிறைந்த (இரண்டு) விற்கள்
காரணமாக; ‘எவன் அவ் ஈசன்?’ என்பார் – எவன்
உண்மையில் தலைமை சான்ற கடவுள் என அறிய விரும்பியவரான
இமையவருக்காய்; பொர – போரிட முற்பட்டு; ஏற்று –
அவ்விற்களை எடுத்து; எதிர் – ஒருவரை யொருவர் எதிர்த்து
நின்ற; புவனம் மூன்றும் பொலங்கழலால் தொடும் – மூன்று
உலகங்களையும் தன் பொற் பாதங்களால் தொட்ட; அவனும்-
அந்தத் திருமாலும்; அச்சிவனும் – அந்தச் சிவபிரானும்;
எனல் ஆயினார் – என்னும் நிலையினராகக் (இராமனும்
இராவணனும்) காட்சி தந்தார்கள்.

———–

இராவணன் சங்கம் ஊத, திருமாலின் சங்கம் தானே முழங்குதல்

கண்ட சங்கரன் நான்முகன் கைத் தலம்
விண்டு அசங்க, தொல் அண்டம் வெடித்திட,
அண்ட சங்கத்து அமரர்தம் ஆர்ப்பு எலாம்
உண்ட சங்கம் இராவணன் ஊதினான். 28-

கண்ட – (இராம இராவணர் போர் நிகழ்ச்சிகளை
வானத்திலிருந்து) பார்த்த; சங்கரன் நான் முகன்- சிவனும்
பிரமனும்; கைத்தலம் – தங்கள் கரங்கள்; விண்டு அசங்க
– நிலைதிரிந்து நடுங்கவும்; தொல் அண்டம் வெடித்திட
– பழமையான பிரமாண்டப் பகுதி வெடித்துப் போகவும்;
அண்டம் – விண்வெளியில்; சங்கத்து அமரர் தம்
– திரண்ட தேவர்களின்; ஆர்ப்பெலாம் – பெரு
முழக்கங்களையெல்லாம்; உண்ட- (முன்பு தேவரை வெற்றி
கொண்ட காலத்தில்) உண்டு முடித்த; சங்கம்- தன்
சங்கினை; இராவணன் ஊதினான் – இராவணன் முழக்கம்
செய்தான்.

———

சொன்ன சங்கினது ஓசை துளக்குற,
‘என்ன சங்கு?’ என்று இமையவர் ஏங்கிட,
அன்ன சங்கைப் பொறாமையினால், அரி-
தன்ன வெண் சங்கு தானும் முழங்கிற்றால். 29-

அன்ன – அந்த (இராவணனின்); சங்கை – சங்கின்
(ஓசையைப்); பொறாமையினால்- (தான்) பொறுத்துக்
கொள்ளாமையினால்; சொன்ன – மேற்குறித்த; சங்கினது
ஓசை – (இராவணனது) சங்கின் ஒலி; துளக்குற-
நிலைகுலையும்படியாகவும்; இமையவர் – தேவர்கள்;’என்ன
சங்கு?’ என்று – இது யாருடைய சங்கு?’ என்று; ஏங்குற-
(ஐயுற்று) ஏக்கமுறவும்; அரிதன்ன- திருமாலினுடைய; வெண்
சங்கு தானும்- பாஞ்ச சன்னியம் என்னும் வெண்ணிற
வலம் புரிச்சங்கும்; முழங்கிற்று- (தானே) முழக்கம் செய்தது.
(ஆல் – அசை).

——–

திருமாலின் ஐம்படையும் அடிமை செய்ய வந்ததை இராமன் காணாதிருத்தல்

ஐயன் ஐம் படை தாமும் அடித் தொழில்
செய்ய வந்து அயல் நின்றன; தேவரில்
மெய்யன் அன்னவை கண்டிலன், வேதங்கள்
பொய் இல் தன்னைப் புலன் தெரியாமைபோல். 30-

ஐயன்- திருமாலின்; ஐம்படை தாமும் – சங்கு, சக்கரம்,
கதை, வாள், வில் என்ற ஐந்து படைகளும்; அடித் தொழில்
செய்ய – (தம் தலைவனுக்குத்) தொண்டு செய்யும் பொருட்டு;
அயல் நின்றன – பக்கத்தில் காத்து நின்றன; (ஆனால்),
வேதங்கள் – மறைகள்; பொய்யில் தன்னை – பொய்யற்ற
மெய்யான தன்னை; புலன் தெரியாமை போல்- (மானிட
வடிவெடுத்த அவனை) அறிந்து கொள்ளாதவாறு போல; அன்னவை- அவ்வைம்படைகளை;
தேவரில் மெய்யன்- தேவர்களுள் மெய்ப்பொருளாயுள்ள
திருமால்; கண்டிலன்- காணவில்லை.

—————

மாதலி இந்திரனது சங்கை முழக்குதல்

ஆசையும் விசும்பும் அலை ஆழியும்
தேசமும் மலையும் நெடுந் தேவரும்
கூச அண்டம் குலுங்க, குலம் கொள் தார்
வாசவன் சங்கை மாதலி வாய்வைத்தான். 31-

(அப்போது), ஆசையும்- திசைகளும்; விசும்பும் – வானமும்;
அலை ஆழியும்- அலைகள் சூழ் கடலும்; தேசமும் – பூமிப்
பரப்பும்; மலையும் – மலைகளும்; நெடுந் தேவரும்-
பெருமையால் உயர்ந்த தேவர்களும்; கூச – நடுங்கவும்; அண்டம்
குலுங்க- அண்டம் அசைந்தாடவும்; குலம் கொள்தார்- பலவகை
மலர்க்குலமும் அமைந்த மாலையை அணிந்த; வாசவன் –
இந்திரனுடைய; சங்கை- சங்கினை; மாதலி வாய் வைத்தான்-
(தேர்ப்பாகனாகிய) மாதலி தன் வாயில் வைத்து ஊதினான்.

———–

இராவணன்-இராமன் போர்

துமில வாளி அரக்கன் துரப்பன்
விமலன் மேனியின் வீழ்வதன் முன்னமே,
கமல வாள் முக நாடியர் கண் கணை
அமலன் மேனியில் தைத்த அனந்தமால். 32-

அரக்கன் துரப்பன- இராவணன் செலுத்துகின்றனவாகிய;
துமில வாளி – ஆரவாரத்தோடு வரும் அம்புகள்; விமலன்
– மாசு மறுவற்ற இராமபிரான்; மேனியின் வீழ்வதன்
முன்னமே- திருமேனியில் வந்து பாய்வதற்கு முன்பாகவே;
கமல முக- தாமரை போன்ற முகமுடைய; வான் நாடியர்-
வானத்துத் தேவ கன்னிகையர்; கண்கணை- கண்களாகிய
அம்புகள்; அமலன் மேனியில் – குற்றமற்ற இராமபிரான் மேனியில்; தைத்த – தைத்தவை;
அனந்தம் – கணக்கற்றவையாகும் (ஆல் – அசை).

———–

சென்ற தேர் ஒர் இரண்டினும் சேர்த்திய
குன்றி வெங் கண் குதிரை குதிப்பன,
ஒன்றை ஒன்று உற்று, எரி உக நோக்கின;
தின்று தீர்வன போலும் சினத்தன. 33-

சென்ற – போர்க்களத்துக்கு வந்த; தேர் ஓர் இரண்டினும்-
இராமபிரான்; இராவணன் ஆகிய இருவரின் ஒப்பற்ற தேர்களிலும்;
சேர்த்திய – கட்டப்பட்டிருந்த; குன்றி வெங்கண்- குன்றிமணி
போல் சிவந்த கண்களையுடைய;குதிரை- குதிரைகள்; குதிப்பன-
எதிரெதிர் பாய்வனவாயும்; ஒன்றை ஒன்று – ஒன்றோடொன்று;
உற்று- நெருங்கி; எரி உக நோக்கின- நெருப்புச் சிந்தும்படி
பார்ப்பனவாயும்; தின்று தீர்வன போலும்- ஒன்றை யொன்று
கடித்து விழுங்கி விடுவன போல; சினத்தன – கோபம்
கொண்டனவாயும் (காட்சி தந்தன).

————

கொடியின்மேல் உறை வீணையும், கொற்ற மா
இடியின் ஏறும், முறையின் இடித்தன-
படியும் விண்ணும் பரவையும் பண்பு அற
முடியும் என்பது ஒர் மூரி முழக்கினால். 34-

கொடியின் மேல் உறை- (இராவணன்) கொடி மீதிலிருந்த;
வீணையும் -; கொற்றம்- வெற்றியையுடைய; மா இடியின்
ஏறும்- (இராமபிரான்) கொடி மீதிருந்த இடியேறும்; படியும்
– பூமியும்; விண்ணும்- வானமும்;பரவையும்- கடலும்; பண்பு
அற – தம் இயல்பிற் குன்றி; முடியும்- அழிந்து விடும்; என்பது
ஓர் மூரி முழக்கினால்- என்று கூறத்தக்க ஆற்றல் மிக்க
ஓசையோடு; முறையின் இடித்தன – மாறி மாறி பேரொலி
எழுப்பின.

———–

இருவருடைய வில்லின் ஒலி

ஏழு வேலையும் ஆர்ப்பு எடுத்து என்னலாம்,
வீழி வெங் கண் இராவணன் வில் ஒலி;
ஆழி நாதன் சிலை ஒலி, அண்டம் விண்டு
ஊழி பேர்வுழி, மா மழை ஒத்ததால். 35-

வீழி- வீழிப்பழம் போன்ற; வெங்கண் இராவணன்- கொடிய
கண்களையுடைய இராவணன்; வில்ஒலி- வில்லின் ஓசை; ஏழு
வேலையும்- ஏழு கடல்களும்; ஆர்ப்பு எடுத்து என்னலாம்-
பேரொலி எழுப்பின என்று கூறுதற்குரியதாய் இருந்தது; ஆழி
நாதன்- சக்கராயுதம் படைத்த இராமபிரானுடைய; சிலை ஒலி-
வில்லின் ஒலியோ; அண்டம் விண்டு- விண்வெளி
பிளக்கும்படி; ஊழி பேர்வுழி – ஊழிக்காலம் வரும் போது
(உண்டாகும்); மாமழை ஒத்தது- பெரு முகில்களில் எழும்
இடியோசையை நிகர்த்திருந்தது.

———

ஆங்கு நின்ற அனுமனை ஆதியாம்
வீங்கு வெஞ் சின வீரர் விழுந்தனர்-
ஏங்கி நின்றது அலால், ஒன்று இழைத்திலர்,
வாங்கு சிந்தையர், செய்கை மறந்துளார். 36-

ஆங்கு நின்ற- (இவ்வொலிகளைச் செவியுற்று) அவ்விடத்திலே
நின்ற; அநுமனை ஆதியாம் – அநுமன் முதலாவதாக அமைந்த;
வீங்கு வெஞ்சின வீரர- பொங்கும் கொடுங்கோபமுள்ள சிறந்த
வீரர்களும்; வீழ்ந்தனர்- தரையில் விழுந்தனர்; ஏங்கி நின்றது
அலால்- என்ன செய்வோம் என்று ஏக்குற்று நின்றதன்றி; ஒன்று
இழைத்திலர் – வேறு எதுவும் செய்யலாற்றாதவராயினர்; வாங்கு
சிந்தையர் – ஓய்ந்த உள்ளத்தினராய்; செய்கை மறந்துளார்-
செயலற்றுப் போயினர்.

———–

தேவர்களின் திகைப்பும், பூமழையும்

‘ஆவது என்னை கொலாம்?’ என்று அறிகிலார்,
‘ஏவர் வெல்வர்?’ என்று எண்ணலர் ஏங்குவார்,
போவர், மீள்வர், பதைப்பர், பொருமலால்,
தேவரும் தங்கள் செய்கை மறந்தனர். 37-

தேவரும்- தேவர்களும்; ‘ஆவது என்னை கொலாம்- ‘என்ன
நிகழுமோ’; என்று அறிகிலார்- என்று அறியாதவர்களாய்; ‘ஏவர்
வெல்வர்?’- ‘எவர் தாம் போரில் வெல்வர்?’; என்று எண்ணலர்-
என்று சிந்திக்க முடியாதவர்களாய்; ஏங்குவார்- ஏக்கமுறுவார்;
போவர்- (இலக்கறியாது) செல்வர்; மீள்வர்- திரும்பி வருவர்;
பதைப்பர்- உள்ளம் அஞ்சுவர்; பொருமலால் – மனம்
விம்மி; தங்கள் செய்கை மறந்தனர் – தாம் யாதும் செய்யும்
திறனற்றுப் போயினர்.

————

சேண அந்தரம் நோக்கலும் திண் சரம்,
பூண முந்தின, சிந்தின பூ மழை,
காண வந்த கடவுளர் கை எலாம்-
ஆணவம் துணை யார் உளர் ஆவரோ? 38-

திண்சரம் – (இராமபிரானுடைய) வலிமைமிக்க அம்புகள்;
சேண அந்தரம் நோக்கலும்- தொலைவிலுள்ள வானத்தைக்
குறிபார்க்கத் தொடங்கியதும்; காண வந்த கடவுளர்
கையெலாம்- காண்பதற்கு வந்த தேவர்கள் கரங்கள்
எல்லாம்; சிந்தின பூ மழை- தூவிய மலர்மாரி; பூண
முந்தின – (வானை) அழகு செய்யும்படி முன்தோன்றின;
ஆணவம் துணை- செருக்குக்குத் துணையாக;யார் உளர்
ஆவரோ?- யார் தான் இருக்க முடியும்?

———

இருவரின் வில்லின் தகைமை

நீண்ட மின்னொடு வான் நெடு நீல வில்
பூண்டு இரண்டு எதிர் நின்றவும் போன்றன-
ஆண்ட வில்லிதன் வில்லும், அரக்கன் தன்
தீண்ட வல்லர் இலாத சிலையுமே. 39-

ஆண்ட வில்லி தன் வில்லும்- அனைத்துலகையும்
(அறநெறியில்) ஆளும் வில்லாற்றல் மிக்க இராமபிரான்
வில்லும்; தீண்ட வல்லர் இலாத – பிறரால் தொட்டெடுக்க
முடியாத; அரக்கன் தன் சிலையுமே- இராவணனின் வில்லும்;
நீல வான்- நீல வானத்தில்; நெடுவில் – நெடிய இந்திர
விற்கள்; இரண்டு- இரண்டு; நீண்ட மின்னொடு பூண்டு-
நீண்ட மின்னலாகிய (கயிறு) பூண்டு; எதிர் நின்றன போன்றன
– எதிரெதிர் நின்றாற் போல் விளங்கின.

————–

இராவனது சினத்தின் எழுச்சி

அரக்கன் அன்று எடுத்து ஆர்க்கின்ற
ஆர்ப்பும், அப் பொருப்பு மெய் வில் தெழிப்பும் உண்டு
என்பபோல், குரைக்கும் வேலையும் மேகக் குழாங்களும்
இரைத்து இடிக்கின்ற, இன்றும் ஒர் ஈறு இலா. 40-

அன்று- (இராம இராவணப்போர் நடந்த) அன்று; அரக்கன் –
இராவணன்; எடுத்து ஆர்க்கின்ற ஆர்ப்பும்- குரலெடுத்து
முழங்கிய முழக்கமும்; பொருப்பு மெய்- மலை போன்ற
வடிவுடைய; போர் வில் தெழிப்பும்- போர் வில்லினின்று
எழுப்பிய பேரொலியும்; உண்டே கொலாம்- (இன்றும்)
இருக்கின்றன போலும்! குரைக்கும் வேலையும்- ஒலிக்கின்ற
கடலும்; மேகக் குழாங்களும்- முகில் கூட்டங்களும்; இன்றும்
– இக்காலத்தும்; இரைத்து- பேரொலி செய்து;இடிக்கின்ற-
இடிமுழக்கம் செய்கின்றன;ஓர் ஈறு இல – அப்பேரொலிகட்கு
ஒரு முடிவே இல்லை.

——–

மண்ணில் செல்வன செல்லினும், மாசு அற
எண்ணின் சூல் மழை இல்ல; இராவணன்
கண்ணின் சிந்திய தீக் கடு வேகத்த
விண்ணில் செல்வன வெந்தன வீழ்வன. 41-

இனும் மாசு அற எண்ணின்- மேலும் குற்றமின்றிச்
சிந்தித்துப் பார்ப்போமாயின்; மண்ணில் செல்வன செல்-
மண்ணின் மீது வீழும் இடியேறுகள்; சூல் மழை அல்ல-
கருக்கொண்ட முகில்களில் பிறப்பன அல்ல; இராவணன் –
அரக்கனாகிய இராவணன்; கண்ணில் சிந்திய தீ- (இராமனுடன்
போரியற்றுங்கால்) கண்களில் கக்கிய நெருப்பு; கடுவேகத்த
– விரைந்த வேகத்தோடு; விண்ணில் செல்வன- வானில்
செல்லுவதே ஆகும்; மீண்டும் இன்று வீழ்வன – அந்நெருப்பே
இன்றும் வானிலிருந்து (இடியாக) வீழ்கிறது.

————-

மால் கலங்கல் இல் சிந்தையன் மாதிரம்
நால் கலங்க நகும்தொறும், நாவொடு
கால் கலங்குவர், தேவர்; கண மழைச்
சூல் கலங்கும்; இலங்கை துளங்குமால். 42-

மால் கலங்கலில் சிந்தையன்- திருமாலைக் கண்டு
கலக்கமற்ற மனம் படைத்தவனான இராவணன்; நால் மாதிரம்
கலங்க- நான்கு திசைகளும் நிலைகுலையும்படி; நகும் தொறும்
– பெருஞ்சிரிப்புச் செய்யும் போது; தேவர்- தேவர்கள்;
நாவொடு கால் கலங்குவர்- நாக்கும், பாதமும் நடுங்குவர்;
சூல்- கருக்கொண்ட; கணமழை கலங்கும்- முகில் கூட்டங்கள்
கலங்கும்; இலங்கை- இலங்கை மா நகரமும்; துளங்கும் –
நடுக்கம் கொள்ளும்.

————-

இக் கணத்தும் எறிப்ப தடித்து என,
நெக்க மேகத்து உதிக்கும் நெருப்பு என,
பக்கம் வீசும் படைச் சுடர், பல் திசை
புக்குப் போக, பொடிப்பன போக்கு இல. 43-

பக்கம்- (இராவணனது இரு) பக்கங்களிலும்; வீசும்
படைச்சுடர் – ஒளி வீசுவனவாகிய ஆயுதங்களின் ஒளி;
பல் திசை புக்குப் போக- பல்வேறு திசைகளிலும்
புகுந்து செல்பவை; பொடிப்பன- (அனைத்தையும்)
சாம்பலாக்கின; போக்கு இல- தாம் அழியாதிருந்தன;
(அவைதாம்) இக்கணத்தும்- இந்த நேரத்திலே கூட;
நெக்க மேகத்து- சிதைந்த மேகத்தினிடத்து; உதிக்கும்
– தோன்றும்; நெருப்பு என – மின்னலாகவும்; தடித்து
என – இடியாகவும்; எறிப்ப- ஒளி வீசுகின்றன.

———–

இராவணன் சின மொழி

‘கொற்ற வில் கொடு கொல்லுதல் கோள் இலாச்
சிற்றையாளனைத் தேவர்தம் தேரொடும்
பற்றி வானில் சுழற்றி, படியின்மேல்
எற்றுவேன்’ என்று உரைக்கும், இரைக்குமால். 44-

கொற்ற அம்பிற் கொடு- வெற்றி தரும் அம்பு கொண்டு;
கொல்லுதல் – கொல்லுதலாகிய; கோள் இலா- நோக்கு
இன்றி;சிற்றையாளனை- இச்சிறுவனை; தேவர் தம் தேரொடும் –
இந்திரன் தேரினோடும்; பற்றி – கையால் எடுத்து; வானில்
சுழற்றி- வானில் தூக்கிச் சுழற்றி; எற்று வேன்- நிலத்தின்
மேல் மோதுவேன்’; என்று உரைக்கும்- என்று (சினத்தால்
இராவணன்) கூறுவான்; இரைக்கும்- கூக்குரலிடுவான்.

—————

‘தடித்து வைத்தன்ன வெங் கணை தாக்கு அற,
வடித்து வைத்தன்ன மானுடன் தோள் வலி
ஒடித்து, தேரை உதிர்த்து, ஒரு வில்லொடும்
பிடித்துக் கொள்வென், சிறை’ எனப் பேசுமால். 45-

‘தடித்து – மின்னலை; வைத்தன்ன – (திரட்டி) வைத்தாற
போன்ற;வெங்கணை – கொடிய அம்பு; தாக்கு அற – தாக்கும்
வலிமை அற்றுப் போகும்படி; மானிடற்கே – இம்மனிதனுக்கு;
வலி வடித்து வைத்தது? – (ஆற்றல்) வடித்து வைக்கப்
பட்டுள்ளதோ? (இல்லை) ஒடித்து – வலிமையை அழித்து;
தேரை உதிர்த்து – தெய்வத்தேரைப் பொடியாக்கி; ஒரு
வில்லொடும் – ஒப்பற்ற அவன் வில்லோடும்; சிறைபிடித்துக்
கொள்வென் – நான் அவனைச் சிறைபிடிப்பேன்’; எனப்
பேசும் – என்று இராவணன் சினமொழி கூறுவான்.

———

இராவணன் அம்பு மாரி பொழிதலும், இராமன் தடுத்தலும்

பதைக்கின்றது ஓர் மனமும், இடை படர்கின்றது ஒர் சினமும்,
விதைக்கின்றன பொறி பொங்கின விழியும், உடை வெய்யோன்,
குதிக்கின்றன நிமிர் வெஞ் சிலை குழைய, கொடுங் கடுங் கால்
உதைக்கின்றன சுடர் வெங் கணை, உரும் ஏறு என, எய்தான் 46-

பதைக்கின்றது ஓர் மனமும் – நடுக்கமுறுகின்ற ஓர் உள்ளப்
பாங்கும்; இடை படர்கின்றது ஓர் சினமும் – இடையிலே
பொங்கிப் படர்கின்ற கோபமும்; விதைக்கின்றன – எல்லாப்
பக்கங்களிலும் தூவப்படுவதாகிய; பொறி பொங்கின விழியும் –
நெருப்புத் துளிகள் எழும் கண்களும்; உடை – பொருந்திய;
வெய்யோன்- கொடியவனாகிய இராவணன்; குதைக்கின்றன-
குதை (என்னும் வில்) உறுப்பினின்றும் வெளி வரும் அம்புகள்; நிமிர்
வெஞ்சிலை குழைய- சொரிய நிமிரும் கொடிய வில் வளைத்து;
கொடும் கடும் கால்- துன்புறுத்தும் புயல் காற்றை; உதைக்கின்றன
– உற்பத்தி செய்து விடும்; சுடர் வெங்கணை- ஒளிமிக்க தீய
அம்புகளை; உரும் ஏறு என- இடியேறுகள் போல; எய்தான் –
(சிலையினின்றும்) செலுத்தினான்.

———–

உரும் ஒப்பன, கனல் ஒப்பன, ஊற்றம் தரு கூற்றின்
மருமத்தினும் நுழைகிற்பன; மழை ஒப்பன; வானோர்
நிருமித்தன, படை பற்று அற நிமிர்வுற்றன, அமிழ்தப்
பெரு மத்தினை முறை சுற்றிய பெரும் பாம்பினும் பெரிய. 47-

(இராவணன் ஏவிய அம்புகள்), உரும் ஒப்பன- பேரிடி போன்றன;
கனல் ஒப்பன – நெருப்பை நிகர்த்தன; ஊற்றம் தரு கூற்றின் –
வலிமை மிக்க இயமனுடைய; மருமத்தினும் நுழைகிற்பன- மார்பிலும்
ஊடுருவ வல்லன; மழை ஒப்பன – மழை போலப் பெருக வல்லன;
வானோர் நிருமித்தன – தேவர்களால் உருவாக்கப் பெற்றன; படை-
எதிரிகள் ஆயுதங்கள்; பற்று அற – செறிவு அற்றுப் போக;
நிமிர்வுற்றன- மேலேற வல்லன; அமிழ்தப் பெரு மத்தினை-
அமுதம் (கடைவதற்காகத் திருப்பாற்கடலில் இட்ட) பெருமத்தாகிய
மந்தர மலையினை; முறை சுற்றிய- முறையே (கடைகயிறாகச்) சுற்றிய;
பெரும்பாம்பினும்- பெரிய பம்பாகிய வாசுகியைக் காட்டிலும்; பெரிய-
உருவத்தில் பெரியன.

————–

‘துண்டப்பட நெடு மேருவைத் தொளைத்து, உள் உறை தங்காது
அண்டத்தையும் பொதுத்து ஏகும்’ என்று இமையோர்களும், அயிர்த்தார்;
கண்டத் தெறு கணைக் காற்றினை, கருணைக் கடல், கனகச்
சண்டச் சர மழை கொண்டு, அவை இடையே அறத் தடுத்தான் 48-

(இராவணன் எய்த அம்புகள்) நெடு மேருவை- உயர்ந்த மேரு மலையை; துண்டப்பட- பிளவுபடுத்தி; தொளைத்து- ஊடுருவி;
உள் உறை தங்காது – உள்ளை உறைந்து நில்லாது;
அண்டத்தையும் – விண்வெளியையும்; பொதுத்து- துளைத்து;
ஏகும் என்று – செல்லும் என்று; இமையோர்களும் – தேவர்களும்;
அயிர்த்தார்- ஐயமுற்றார்கள்; கணைக் காற்றினை – (எழும்)
அம்புப் புயலை; கருணைக் கடல்- அருட் கடலாகிய இராமன்;
கனகச் சண்டச் சரமழை கொண்டு- பொன்மயமானதும்
கொடியதுமான (தன் அம்பு) மாரியினால்; அவை இடையே அற-
அவ்வரக்கன் அம்புகள் நடுவழியில் அழிய; தடுத்தான் –
தடுத்துவிட்டான்.

————-

உடையான் முயன்றுறு காரியம் உறு தீவினை உடற்ற,
இடையூறு உறச் சிதைந்தாங்கெனச் சரம் சிந்தின, விறலும்;
தொடை ஊறிய கணை மாரிகள் தொகை தீர்த்து, அவை துரந்தான்-
கடை ஊறு உறு கண மா மழை கால் வீழ்த்தென, கடியான். 49-

உடையான் – ஒரு தலைவன்; முயன்று உறுகாரியம் –
முயற்சியினால் செய்யும் செயலை; உறுதீவினை – அவனுக்குற்ற தீய
வினைகள்; உடற்ற- அழிக்க; இடையூறு உற- தடைகள் ஏற்பட்டு; சிதைந்தாங்கு என- (அச்செயல்) அழிந்தாற் போல;
சரம்- இராவணன் அம்புகள்;விறலும் சிந்தின- ஆற்றல் இழந்தன (ஆனால்);
கடியான் -கொடியவனான இராவணன்; தொடைஊறிய- தொடுத்தலில் சிறந்தனவும்;
தொகை தீர்ந்தன – அளவில் மிகுதியாயினவுமான; கணைமாரிகள்-
அம்பு மழையை; கடை ஊறு உறு – யுக முடிவின் பொழுது மிக்கு வருகின்ற; கணமா மழை-
அடர்ந்த கருமுகில்கள்; கால்வீழ்த்தென- கீழிறங்கின என்னுமாறு;
துரந்தான்- பொழிந்தான்.

—————

விண் போர்த்தன; திசை போர்த்தன; மலை போர்த்தன; விசை ஓர்
கண் போர்த்தன; கடல் போர்த்தன; படி போர்த்தன; கலையோர்
எண் போர்த்தன; எரி போர்த்தன; இருள் போர்த்தன; ‘என்னே,
திண் போர்த் தொழில்!’ என்று, ஆனையின் உரி போர்த்தவன் திகைத்தான். 50-

(இராவணன் எய்த அம்புகள்) விண் போர்த்தன- வானை மூடின;
திசை போர்த்தன – திசைகளை மறைத்தன; மலை போர்த்தன-
மலைகளை மூடின; இமையோர் கண் போர்த்தன – தேவர்கள்
விழிகளையும் மறைத்தன; கடல் போர்த்தன – நெடுங்கடல்களையும்
தெரியாது தடுத்தன; படி போர்த்தன- நிலத்தையும் மறைத்தன;
கலையோர் எண் போர்த்தன- கலை ஞானம் மிக்கவர் எண்ணும்
கணக்கையும் பொய்ப்பித்தன; எரி போர்த்தன – நெருப்பைப் போர்த்து
வந்தன; இருள் போர்த்தன- இருளை அணைத்து வந்தன; (இதனைக்
கண்டு), ஆனையின் உரி போர்த்தவன் – யானைத் தோலை அணிந்த
சிவபெருமான்; ‘என்னே திண் போர்த் தொழில்!’- எத்துணை பெரிய
போர்க்கலை இது’; என்று திகைத்தான்- என்று மனம் மயங்கினான்.

————-

அல்லா நெடும் பெருந் தேவரும் மறை வாணரும் அஞ்சி,
எல்லார்களும் கரம் கொண்டு இரு விழி பொத்தினர், இருந்தார்;
செல் ஆயிரம் விழுங்கால் உகும் விலங்கு ஒத்தது சேனை;
வில்லாளனும் அது கண்டு, அவை விலக்கும் தொழில் வேட்டான் 51-

(முன் குறித்த சிவபெருமான்) அல்லா- அல்லாத; நெடும்பெருந்
தேவரும்- உயர்ந்த பெரிய தெய்வங்களும்; மறைவாணரும்-
முனிவர்களும்; எல்லார்களும் – மற்றுள யாவரும்; கரம் கொண்டு-
தம் கரத்தால்; இருவிழி பொத்தினர் – இரு கண்களையும்
மூடிக்கொண்டனர்; இருந்தார்- செயலற்றிருந்தனர்; செல் ஆயிரம்
விழுங்கால் – ஓராயிரம் இடி ஒன்றாக விழுந்தால்; உகும்-
சிதறிப் போகும்; விலங்கு- மலைக்கு; சேனை ஒத்தது- (வானர)
சேனை நிகராயிற்று; அது கண்டு – இந்நிகழ்ச்சியைக்
கண்டு; வில்லாளனும் – விற்கலை வல்ல இராமனும்;அவை
– இராவணன் அம்புகளை; விலக்கும் தொழில் – தடுக்கும்
செயலை; வேட்டான்- விரும்பி மேற்கொண்டான்.

———–

செந் தீ வினை மறைவாணனுக்கு ஒருவன், சிறுவிலை நாள்,
முந்து ஈந்தது ஒர் உணவின் பயன் எனல் ஆயின, முதல்வன் வந்து
ஈந்தன வடி வெங் கணை; அனையான் வகுத்து அமைத்த
வெந் தீவினைப் பயன் ஒத்தன, அரக்கன் சொரி விசிகம். 52-

முதல்வன்- அனைத்துக்கும் முதலாகிய இராமபிரான்; வந்து
ஈந்தன- போர்க்களம் புகுந்து எய்தனவாகிய; வடிவெங்கணை-
கூரிதாய் வடித்த கொடிய அம்புகள்; செந்தீவினை- அழல்
ஓம்பும் அறவினை செய்யும்; மறைவாணனுக்கு- வேதியனுக்கு;
சிறு விலை நாள்- பஞ்ச காலத்தில்; முந்து ஈந்தது – முந்திக்
கொடுத்த; ஓர் உணவின் பயன்- உயர்ந்த அன்னதானப் பயன்;
எனல் ஆயின- என்று சொல்லுமாறு வளர்ந்தன; (ஆனால்)
அரக்கன் சொரி விசிகம் – இராவணன் எய்த அம்புகள்;
அனையான் – அன்னவன்; வகுத்து அமைத்த – தேடித்
தொகுத்துக் கொண்ட; வெந்தீ வினைப் பயன் – பாவங்களின்
பயனை; ஒத்தன- ஒப்பனவாய் அழிந்தன.

———

இராம இராவணப் பெரும் போர்

நூறாயிரம் வடி வெங் கணை நொடி ஒன்றினின் விடுவான்,
ஆறா விறல் மறவோன்; அவை தனி நாயகன் அறுப்பான்;
கூறு ஆயின, கனல் சிந்துவ, குடிக்கப் புனல் குறுகி,
சேறு ஆயின, பொடி ஆயின, திடர் ஆயின, கடலும். 53-

ஆறா விறல் மறவோன் – வற்றாத வீரத்தைப் பெற்றிருக்கும்
வீரனாகிய இராவணன்; நொடி ஒன்றினின்- ஒரு நொடிப்
பொழுதில்; நூறாயிரம் வடிவெங்கணை- நூறாயிரம் கூரிய கொடிய
அம்புகளை; விடுவான்- ஏவுவான்; அவை- அவ்வம்புகளை; தனி
நாயகன்- ஒப்பற்ற தலைவனாகிய இராமன்; அறுப்பான்- துண்டு
படுத்துவான்; கூறு ஆயின- (அவ்வாறு) துண்டு படுத்தப்பட்டவை;
கனல் சிந்துவ- நெருப்புப் பொழிவனவாய்; குறுகிப் புனல்
குடிக்க- நெருங்கி நீரை அருந்தியமையால்; கடலும்-
சமுத்திரங்களும்; சேறு ஆயின- வற்றிச் சேறாயின; பொடி
ஆயின – புழுதி ஆயின;திடர் ஆயின- மண்மேடாகிப் போயின.

———-

வில்லால் சரம் துரக்கின்றவற்கு, உடனே, மிடல் வெம் போர்
வல்லான், எழு, மழு, தோமரம், மணித் தண்டு, இருப்பு உலக்கை,
தொல் ஆர் மிடல் வளை, சக்கரம், சூலம், இவை தொடக்கத்து
எல்லாம் நெடுங் கரத்தால் எடுத்து எறிந்தான், செரு அறிந்தான் 54-

வில்லால்- தன் கை வில்லால்; சரம் துரக்கின்றவற்கு-
அம்புகள் எய்கின்ற இராமனுக்கு (எதிராக); செரு அறிந்தான்
– போர்க்கலை அறிந்தவனும்; மிடல் வெம்போர் வல்லான்-
வலிமையும் கொடுமையும் மிக்க யுத்தத்தில் வல்லவனுமாகிய
இராவணன்; உடனே – மறுகணத்திலேயே; எழு, மழு, தோமரம்,
மணித்தண்டு, இரும்பு உலக்கை- எழு முதல் உலக்கை ஈறான
ஆயுதங்களையும்; தொல் ஆர் மிடல்- பழமை மிக்க
வலிமையுள்ள; வளை, சக்கரம், சூலம் – வளை முதலாகிய
படைகளையும்; இவை தொடக்கத்து எல்லாம் – இவை தொடங்கிப் பிற படைக்
கருவிகள் அனைத்தையும்; நெடுங்கரத்தால்- நீண்ட கரங்களால்;
எடுத்து எறிந்தான்- எடுத்து வீசினான்.

———–

வேல் ஆயிரம், மழு ஆயிரம், எழு ஆயிரம், விசிகக்
கோல் ஆயிரம், பிற ஆயிரம், ஒரு கோல் படக் குறைவ-
கால் ஆயின, கனல் ஆயின, உரும் ஆயின, கதிய
சூல் ஆயின, மழை அன்னவன் தொடை பல் வகை தொடுக்க. 55-

மழை அன்னவன்- முகில் வண்ண மேனியனான இராமன்;
தொடைபல் வகை தொடுக்க- பல்வகைப்பட்ட அம்புகளைத் (தன்
வில்லில்) தொடுத்து எய்ய; (அவை), கால் ஆயின-
காற்றாய் விரைந்தன; கனல் ஆயின- நெருப்பாய் மாறின;
உரும் ஆயின- இடியாய் ஒலித்தன; கதிய- விரைவு கொண்டன;
சூல் ஆயின- புதிய அம்புகளைக் கருவீன்றன; ஒருகோல் பட-
(அவ்வம்புகளில்) ஒன்று பட்ட மாத்திரத்தில்; வேல்
ஆயிரம்- (இராவணன் வீசிய ஆயிரம் வேல்களும்; மழு ஆயிரம்
– ஆயிரம் மழுவாயுதங்களும்; எழு ஆயிரம்- ஆயிரம் எழு
என்னும் படைக்கலங்களும்; விசிகக் கோல் ஆயிரம்-
ஆயிரம் அம்புகளும்; பிற ஆயிரம்- வேறு ஆயிரக்கணக்கான
ஆயுதங்களும்; குறைவ – அழிந்து போயின.

———–

ஒத்துச் செரு விளைக்கின்றது ஒர் அளவின் தலை,-உடனே
பத்துச் சிலை எடுத்தான், கணை தொடுத்தான், பல முகில்போல்
தொத்துப் படு நெடுந் தாரைகள் சொரிந்தாலெனத் துரந்தான்-
குத்துக் கொடு நெடுங் கோல் படு களிறு ஆம் எனக் கொதித்தான் 56-

ஒத்து (இராமபிரான்) தனக்குச் சமமாக; செருவிளைக்கின்றது
ஓர் அளவின் தலை – போர் நிகழ்த்தும் ஒரு கால அளவில்;
நெடுங்குத்துக் கோல் கொடு- நெடிய அங்குசம் கொண்டு; படு களிறு ஆம் – துன்பப்படும் யானையாம்; எனக்
கொதித்தான்- என்று சொல்லும்படி மனக்கொதிப்பு உற்ற
இராவணன்;உடனே- அப்பொழுதே; பத்துச் சிலை எடுத்தான்-
பத்துக் கரங்களால் பத்து விற்களை எடுத்தவனாய்; கணை
தொடுத்தான்- அம்புகளைத் தொடுத்து; பல முகிலா- எண்ணற்ற
மேகங்கள்; தொத்துப்படு நெடுந் தாரைகள்- தொகுதி
தொகுதியாய்ப் பொழியும் நீண்ட தாரைகள்; சொரிந்தாலெனத்
துரந்தான்- சொரிவது போல் (அம்புகளை) எய்தான்.

———-

ஈசன் விடு சர மாரியும், எரி சிந்துறு தறுகண்
நீசன் விடு சர மாரியும், இடை எங்கணும் நெருங்க
தேசம் முதல் ஐம் பூதமும் செருக் கண்டனர் நெருக்க,
கூசிம் மயிர் பொடிப்பு அற்றன; அனல் ஆயின கொடிய. 57-

ஈசன் விடு சரமாரியும்- எல்லாச் செல்வங்களுக்கும்
தலைவனாகிய இராமன் எய்யும் அம்பு மழையும்; எரிசிந்துறு-
நெருப்பைச் சொரிகிற; தறுகண் – கொடுமை மிக்க; நீசன்
விடு சரமாரியும்- இழிந்த இராவணன் எய்யும் அம்பு மழையும்;
இடை எங்கணும் நெருங்க – எல்லா இடங்களிலும் நெருக்கமாய்
விழ; தேசம் முதல் ஐம் பூதமும்- நிலம் முதலாக அமைந்த
ஐந்து பூதங்களும்; செருக் கண்டனர் செருக்கி- போர் கண்டு
உற்சாகம் மேற்கொண்டு; கூசிம் மயிர்ப் பொடிப்பு அற்றன-
புல்லரிப்பு உற்ற நிலை (மெல்ல) வாங்கின; கொடிய அனல்
ஆயின – (ஏனெனில் அம்புகளின் நெருப்பால்) அவையும் கொடிய
வெப்பம் பூண்டன.

————-

மந்தரக் கிரி என, மருந்து மாருதி
தந்த அப் பொருப்பு என, புரங்கள் தாம் என,
கந்தருப்பந் நகர் விசும்பில் கண்டென
அந்தரத்து எழுந்தது, அவ் அரக்கன் தேர் அரோ. 58-

(அப்பொழுது) அவ் அரக்கன் தேர்- அந்த அரக்கனான
இராவணனின் தேரானது; மந்தரக்கிரி என – மந்தர மலை
என்னுமாறும்; மாருதி தந்த அ மருந்துப் பொருப்பு என –
அனுமன் எடுத்து வந்த அந்தச் சஞ்சீவி மலை என்னுமாறும்;
புரங்கள் தாம் என – முப்புரங்கள் தாமோ என்னுமாறும்;
கந்தருப்பந் நகர் – கந்தர்வ நகரம்; விசும்பில் கண்டென
– விண்ணில் காட்சி தருகிறது என்னுமாறும்; அந்தரத்து
எழுந்தது – வானில் மேலெழுந்தது.

———

எழுந்து உயர் தேர்மிசை இலங்கை காவலன்
பொழிந்தன சர மழை உருவிப் போதலால்,
ஒழிந்ததும் ஒழிகிலது என்ன, ஒல்லெனக்
கழிந்தது, கவிக் குலம், இராமன் காணவே. 59-

இலங்கை காவலன்- இலங்கையர் கோனான இராவணன்; உயர்
தேர்மிசை எழுந்து- உயர்ந்த தேரின் மீது வான்வழி எழுந்து;
பொழிந்தன சர மழை – கொட்டிய அம்பு மழையானது; உருவிப்
போதலால் – (உடலில்) பட்டு உருவிச் செல்லுதலால்; ஒழிந்ததும்
ஒழிகிலது என்ன- அழியாததும் அழிந்தது என்னும்படியாக;
இராமன் காணவே – இராமன் கண்டு கொண்டிருக்கும் போதே;
கவிக்குலம் – வானரக் குலம்; ஒல்லெனக் கழிந்தது – விரைவாக
இறந்தொழிந்தது.

————–

தேரை விசும்பில் எழவிடுமாறு இராமன் கூற, மாதலி அவ்வாறே செய்தல்

‘முழவு இடு தோளொடு முடியும் பல் தலை
விழ விடுவேன், இனி; விசும்பு சேமமோ?
மழ விடை அனைய நம் படைஞர் மாண்டனர்;
எழ விடு, தேரை’ என்று இராமன் கூறினான். 60-

(இதனைக் கண்ட) இராமன் – இராமபிரான் (மாதலியிடம்);
‘மழவிடை அனைய- இளங்காளைகள் போன்ற;நம்படைஞர்
மாண்டனர் – நம் படைவீரர் இறந்தனர்; முழவு இடு தோளொடு-
மத்தளம் ஒத்த (இராவணன்) தோள்களோடு; முடியும்- மகுடமும்;
பல்தலை – பலவாகிய தலைகளும்; விழ- தரையில் விழுமாறு;
இனி விடுவேன்- இனி என் அம்புகளை ஏவுவேன்; தேரை
எழவிடு- தேரினை வானில் எழுமாறு செய்;விசும்பு சேமமோ? –
(அவனுக்கு) வானம் பாதுகாப்பாகுமோ? (இல்லை); என்று
கூறினான் – என மொழிந்தான்.

————-

‘அந்து செய்குவென்’ என அறிந்த மாதலி
உந்தினன், தேர் எனும் ஊழிக் காற்றினை;
இந்து மண்டிலத்தின்மேல் இரவி மண்டிலம்
வந்தென, வந்தது, அம் மானத் தேர் அரோ. 61-

அறிந்த மாதலி – இராமபிரான் பெருமையை அறிந்துள்ள
மாதலி; ‘அந்து செய்குவென் – ‘யான் அவ்வாறே செய்வேன்’;
என- என்று; தேர் எனும் ஊழிக்காற்றினை- தேர் என்னும்
பிரளய காலக் காற்றை; உந்தினன் – (மேலே) இயக்கினான்;
அம் மானத் தேர்- அந்தப் பெரிய தேரும்; இந்து
மண்டிலத்தின் மேல்- சந்திர மண்டலத்தின் மீது; இரவி
மண்டிலம் வந்தென – சூரிய மண்டலம் வருவது போல்;
வந்தது- (இராவணன் தேர் இருக்கும் இடத்துக்கு) வந்து சேர்ந்தது.

——————

இருவரது தேரும் சாரிகை திரிதல்

இரிந்தன மழைக் குலம், இழுகித் திக்கு எலாம்;
உரிந்தன உடுக் குலம், உதிர்ந்து சிந்தின;
நெரிந்தன நெடு வரைக் குடுமி; நேர் முறை
திரிந்தன சாரிகை, தேரும் தேருமே. 62-

தேரும் தேரும்- இராம இராவணாதியர் தேர்கள் இரண்டும்;
சாரிகை நேர்முறை திரிந்தன- (வானில்) நேரான முறைகளில்
சாரி திரிந்தன; (அதனால்) மழைக்குலம்- மேகக்
கூட்டங்கள்; திக்கு எலாம் – திசைகளில் எல்லாம்; இழுகி –
தளர்ந்து; இரிந்தன- கலைந்தன; உடுக்குலம் – விண்மீன்
கூட்டங்கள்; உரிந்தன – இடம் பெயர்ந்து; உதிர்ந்து
சிந்தின – பொடிப்பொடியாய்ச் சிதைந்தன; நெடுவரைக் குடுமி
– உயர்மலைச் சிகரங்கள்; நெரிந்தன – நொறுங்கிப் போயின.

————–

வலம் வரும்; இடம் வரும்; மறுகி வானொடு
நிலம் வரும்; இடம் வலம் நிமிரும்; வேலையும்,
அலம்வரு குல வரை அனைத்தும், அண்டமும்,
சலம் வரும், குயமகன் திகிரித் தன்மைபோல். 63-

(அத்தேர்கள் இரண்டும்) வலம் வரும் – ஒன்றையொன்று
வலமாகச் சுற்றும்; இடம் வரும்- இடமாகச் சுற்றி வரும்; மறுகி-
பல முறையும் திரிந்து; வானொடு நிலம் வரும் – வானத்தையும்
நிலத்தையும் தொட்டு வரும்; இடம் வலம் நிமிரும்- (மற்றொரு
சமயம்) இடப்புறம் வலப்புறமாய் ஓங்கி வரும்; வேலையும் –
கடல்களும்; குலவரை அனைத்தும் – மலைக் குலங்களும்;
அண்டமும்- இந்த அண்டவெளியும்; குயவன திகிரி தன்மை
போல்- சுழலும் இயல்பினதாகிய குயவனது சக்கரத் தன்மை
போல; அலம் வரும் – சுழன்று நொந்து; சலம் வரும்-
நடுக்கமுறும்.

—————

‘எழும் புகழ் இராமன் தேர்; அரக்கன் தேர் இது’ என்று
உழுந்து உருள் பொழுதின் எவ் உலகும் சேர்வன,
தழும்பிய தேவரும் தெரிவு தந்திலர்,
பிழம்பு அனல் திரிவன என்னும் பெற்றியார். 64-

உழுந்து உருள் பொழுதின் – உழுந்து உருளும் அச்சிறு
பொழுதுக்குள்; எவ் உலகும் சேர்வன – (அவ்விரு தேரும்)
எல்லா உலகையும் சுற்றி வரும் தன்மையன; (ஆதலால்), இது
எழும்புகழ் இராமன் தேர்; அரக்கன் தேர்- இதுதான் புகழ்
மிக்க இராமனின் தேர்இதுதான் அரக்கனின் தேர்; என்று –
என்று; தழும்பிய தேவரும்- பழக்கமுள்ள தேவர்களும்;தெரிவு
தந்திலர்- கண்டறிந்து சொல்ல இயலாதவராயினர்; பிழம்பின
– ஒளிவடிவங்கள்; திரிவன- சுழல்கின்றன; என்னும் பெற்றியார்
– என்று கூறும் தன்மையினராகவே இருந்தனர்.

———-

உக்கிலா உடுக்களும், உருள்கள் தாக்கலின்,
நெக்கிலா மலைகளும், நெருப்புச் சிந்தலின்,
வக்கிலாத் திசைகளும், உதிரம் வாய் வழி
கக்கிலா உயிர்களும், இல்லை, காண்பன. 65-

உருள்கள் தாக்கலின் – சக்கரங்கள் தாக்குதலால்; உக்கிலா
உடுக்களும்- உதிராத விண்மீன்களும்; நெருப்புச் சிந்தலின்-
(ஒன்றோடொன்று உராய்ந்து தேர்கள்) நெருப்புச் சிதறுதலால்;
நெக்கிலாமலைகளும்- உருகாத மலைகளும்; வக்கு இலாத்
திசைகளும்- பிளந்து போகாத திசைகளும்; உதிரம் வாய்வழி-
இரத்தம் வாயின் வழியே; கக்கிலா உயிர்களும்- கக்காத
உயிரினங்களும்; காண்பன இல்லை- காணக் கூடாதன ஆயின.

——————–

தேர்களின் வேகம்

‘இந்திரன் உலகத்தார்’ என்பர்; ‘ஏன்றவர்,
சந்திரன் உலகத்தார்’ என்பர்; ‘தாமரை
அந்தணன் உலகத்தார்’ என்பர்; ‘அல்லரால்,
மந்தர மலையினார்’ என்பர்-வானவர். 66-

வானவர்- தேவர்கள் (அத் தேரிலிருந்து போரிடுவாரை);
‘இந்திரன் உலகத்தார் என்பர் – இந்திர லோகத்தில் உள்ளார்
என்பார்கள்; (மற்றொரு சமயம்), ஏன்றவர்- போரிடுவார்;
சந்திரன் உலகத்தார் என்பர் – சந்திரமண்டலத்தில் உள்ளார்
என்பார்கள்; (இன்னொரு சமயம்), ‘தாமரை அந்தணன்
உலகத்தார் என்பர் – தாமரையில் வசிக்கும் பிரமதேவன்
உலகில் உள்ளார் என்பார்கள்; அல்லரால் – இல்லையில்லை;
மந்தர மலையினார் என்பர் – மந்தர மலையில் உள்ளார்
என்பார்கள்.

—————

‘பாற்கடல் நடுவணார்’ என்பர்; ‘பல் வகை
மால் கடல் ஏழுக்கும் வரம்பினார்’ என்பர்;
‘மேல் கடலார்’ என்பர்; ‘கிழக்கு உளார்’ என்பர்;
‘ஆர்ப்பு இடை இது’ என்பர்-அறிந்த வானவர். 67-

அறியும் வானவர்- தொலைவில் நடப்பனவும் அறியவல்லரான
தேவர்கள் (இராமனும் இராவணனும் இப்போது); பாற் கடல்
நடுவணார் என்பர் – திருப்பாற்கடலின் நடுவிலுள்ளார் என்பார்கள்;
‘பல்வகை மாக்கடலினுக்கும் அவ்வரம்பினார்’ என்பர்-
மேற்குக் கடலில் இருப்பதாகக் கூறுவர்; ‘கிழக்கு உளார்’ என்பர்
– பலவகையான பெருங்கடலுக்கும் அப்பாற்பட்ட எல்லையில்
உள்ளார் என்பர்; மேல்கடலார் என்பர் – இல்லையில்லை
கீழைக்கடலில் உள்ளார் என்பர்; ‘ஆர்க்கடை உரும்’ என்பர்- தேர்ச்சக்கரத்தின் ஆரக்கால்களில் இடி
குடி இருக்கிறது என்றும் கூறுவர்.

——————

‘மீண்டனவோ?’ என்பர்; ‘விசும்பு விண்டு உகக்
கீண்டனவோ?’ என்பர்; ‘கீழவோ?’ என்பர்;
‘பூண்டன புரவியோ? புதிய காற்று!’ என்பர்;-
‘மாண்டன உலகம்’ என்று, உரைக்கும் வாயினார். 68-

‘மீண்டனவோ’ என்பர்- (அத்தேர்கள் இரண்டும்) மீண்டும்
பூமிக்கு வந்தனவோ என்பார்கள்; ‘விசும்பு விண்டு உக –
வானம் பிளந்து விழுமாறு; கீண்டனவோ என்பர்- (இவை)
கிழித்து விட்டனவோ என்பார்கள்; ‘கீழவோ’ என்பர்-
பாதாளம் புக்கனவோ என்பார்கள்; ‘பூண்டன புரவியோ-
தேரில் பூட்டியவை குதிரைகள் தானா? (அல்லது); புதிய
காற்று என்பர்- புதுமை வாய்ந்த காற்றேயாகும் என்பார்கள்;
‘உலகம் மாண்டன’ என்று- இனி உலகம் அழிந்தது என்று;
உரைக்கும் வாயினார்- (இவ்வாறெல்லாம்) பேசுகின்ற
வாயினை உடையார்களானார் தேவர்கள்.

————

ஏழுடைக் கடலினும், தீவு ஓர் ஏழினும்,
ஏழுடை மலையினும், உலகு ஓர் ஏழினும்,
சூழுடை அண்டத்தின் சுவர்கள் எல்லையா,
ஊழியில் காற்று எனத் திரிந்த, ஓவில. 69-

(அக் குதிரைகள்)ஏழுடைக் கடலினும் – ஏழு கடல்களிலும்;
தீவு ஓர் ஏழினும்- ஏழு தீவுகளிலும்; ஏழுடை மலையினும் –
ஏழு மலைகளிலும்; உலகு ஓர் ஏழினும் – ஏழு உலகங்களிலும்;
சூழுடை அண்டத்தின் சுவர்கள்- சூழ்ந்திருக்கும் அண்டத்தின்
சுவர்களை; எல்லையா- எல்லையாகக் கொண்டு; ஊழியில்
காற்றெனத் திரிந்த- பிரளய காலத்துப் புயலாய்ச்
சுற்றித் திரிந்தன; ஓவில- ஓய்வற்றவை ஆயின.

————

அரக்கன் வீசிய படைக்கலங்களை இராமன் தடுத்தல்

உடைக் கடல் ஏழினும், உலகம் ஏழினும்,
இடைப் படு தீவினும், மலை ஒர் ஏழினும்,
அடைக்கலப் பொருள் என அரக்கன் வீசிய
படைக்கலம், மழை படு துளியின் பான்மைய. 70-

உடைக்கடம் ஏழினும்- ஆடையாக பூமியைச் சுற்றிய ஏழு
கடல்கள் மீதும்; உலகம் ஏழினும்- ஏழு உலகங்கள் மீதும்;
இடைப்படு தீவினும் – அவற்றிடையே உள்ள தீவுகள் மீதும்;
மலை ஓர் ஏழினும்- ஏழு மலைகள் மீதிலும்; அடைக்கலப்
பொருள் என – பாதுகாப்புப் பொருளாக (இராவணன்)
வைத்திருந்தவை என்னும்படி; அரக்கன் வீசிய படைக்கலம்-
அரக்கனாகிய அவன் வீசிய ஆயுதங்கள்; மழைபடு துளியின்
பான்மைய – மழைத்துளிகளென (விழுந்தன).

———–

ஒறுத்து உலகு அனைத்தையும் உழலும், ஓட்டிடை
இறுத்தில; இராவணன் எறிந்த எய்தன
அறுத்ததும் தடுத்ததும் அன்றி, ஆரியன்
செறுத்து ஒரு தொழிலிடைச் செய்தது இல்லையால். 71-

இராவணன் எறிந்த எய்தன – இராவணன் வீசியனவும்
ஏவியனவுமான ஆயுதங்கள்; இறுத்தில- எங்கும் தங்காதனவாய்;
ஓட்டிடை- ஓடும் இடங்களில் எல்லாம்; உலகு அனைத்தையும்-
அனைத்து உலகங்களையும்; ஒறுத்து உழலும்- அழித்துத்
திரியும்; ஆரியன் – மேலோனாகிய இராமன்; அறுத்ததும்
தடுத்ததும் அன்றி – அவ்வாயுதங்களை முறித்ததும்
தடைசெய்ததும் அல்லாது; செறுத்து- சினமுற்று; ஒருதொழில்-
எச்செயலையும்; இடைச் செய்தது இல்லை – போர் நடுவில்
செய்யவே இல்லை (ஆல் – ஆசை).

————

தேர்கள் இலங்கையை அணுகுதல்

விலங்களும் வேலையும், மேலும் கீழரும்,
அலங்கு ஒளி திரிதரும் உலகு அனைத்தையும்,
கலங்குறத் திரிந்தது ஓர் ஊழிக் காற்றென,
இலங்கையை எய்திய, இமைப்பின் வந்த தேர். 72-

விலங்கலும்- மலைகளையும்; வேலையும்- கடல்களையும்;
மேலும் கீழரும் – மேல், கீழ் உலகங்களையும்; அலங்கு ஒளி-
சூரிய ஒளி; திரிதரும் உலகு அனைத்தையும் – பாயும் எல்லா
உலகங்களையும்; கலங்குறத் திரிந்தது- கலங்கும்படி செய்து
திரிந்த; ஓர் ஊழிக்காலக் காற்று- பிரளய காலப் புயல்;
இமைப்பின் வந்து – நொடிப்போதில் வந்து; இலங்கையை
எய்தின- இலங்கையை அடைந்தது. (அரோ – அசை)

———–

தேர்ப் பரிகளின் திறமை-காற்று குதிரைகளைக் குறித்தது-

உய்த்து உலகு அனைத்தினும் உழன்ற சாரிகை
மொய்த்தது, கடலிடை மணலின் மும்மையால்;
வித்தகர் கடவிய விசயத் தேர் பரி,
எய்த்தில வியர்த்தில, இரண்டு பாலவும். 73-

வித்தகர்- திறன் மிக்கவராகிய பாகர்கள்; கடவிய- செலுத்திய;
விசயத் தேர்ப்பரி – வெற்றி (பலகண்ட) இராம இராவணர் தேரின்
குதிரைகள்; உய்த்து- செலுத்தப்பட்டு; கடலிடை மணலின்
மும்மையால் – கடற்கரைகளிலுள்ள மணல் துகள்களின்
மும்மடங்காக உள்ள; உலகு அனைத்திலும் – எல்லா
உலகங்களிலும்; உழன்ற சாரிகை மொய்த்தது – திரிந்து
சாரிகைகள் செய்து சேர்ந்தன (எனினும்); இரண்டு பாலவும் –
இரண்டு பக்கத்துக் குதிரைகளும்; எய்த்தில –
இளைப்படையவில்லை; வியர்த்தில- வியர்வை சிந்தவுமில்லை.

———–

இராமன் தேர்க்கொடியை இராவணன் அறுத்தல்

இந்திரன் தேரின்மேல் உயர்ந்த,
ஏந்து எழில் உந்த அரும் பெரு வலி உருமின் ஏற்றினை,
சந்திரன் அனையது ஓர் சரத்தினால், தரைச்
சிந்தினன், இராவணன், எரியும் செங் கணான். 74-

எரியும் சிந்தையான்- வெந்து போன நெஞ்சினனாகிய;
இராவணன் – இராவணன்; இந்திரன் தேரின் மேல் உயர்ந்த-
(இராமன் ஏறி வந்த) இந்திரனது தேரின் மீது உயரே பறந்த;
ஏந்து எழில் – அழகு மிக்கதும்; உந்து அரும் பெருவலி –
தள்ளுதற்கரிய பேராற்றலுடையதுமான; உருமின் ஏற்றினை –
இடியேறாகிய (கொடியை); சந்திரன் அனையது ஓர் சரத்தினால்
– பிறைவடிவமுடைய ஒப்பற்ற அம்பினால்; தரைச் சிந்தினன்-
தரையில் விழும்படி செய்தான்.

——–

சாய்ந்த வல் உருமு போய், அரவத் தாழ் கடல்
பாய்ந்த வெங் கனல் என முழங்கிப் பாய்தலும்,
காய்ந்த பேர் இரும்பின் வன் கட்டி காலுறத்
தோய்ந்த நீர் ஆம் எனச் சுருங்கிற்று, ஆழியே. 75-

சாய்ந்த வல் உருமு போய் – கீழே வீழ்ந்த வன்மை வாய்ந்த
இடியேறு சென்று; அரவத் தாழ் கடல் – ஓசை பெற்றுயர்
ஆழ்கடலில்; பாய்ந்த வெங்கனல் என- விழுந்த கொடு
நெருப்பாக; முழங்கிப் பாய்தலும்- பேரொலியுடன் பாய்ந்ததும்;
காய்ந்த – பழுக்கக் காய்ந்த; பேர் இரும்பின் வன் கட்டி
– பெரிய வலிய இரும்புக் கட்டியானது; காலுற – பொருந்த;
தோய்ந்த நீர் ஆம் என- தோய்க்கப்பட்ட தண்ணீர் போல;
ஆழி சுருங்கிற்று – கடல் நீர் வற்றிப் போயிற்று.

————-

இராமனது தேர்க் குதிரைகள் மீதும், மாதலிமீதும் இராவணன் அம்பு எய்தல்

எழுத்து எனச் சிதைவு இலா இராமன் தேர்ப் பரிக்
குழுக்களைக் கூர்ங் கணைக் குப்பை ஆக்கி, நேர்
வழுத்த அரு மாதலி வயிர மார்பிடை
அழுத்தினன் கொடுஞ் சரம், ஆறொடு ஆறு அரோ. 76-

(அப்போது இராவணன்) எழுத்து எனச் சிதைவிலா-
(சான்றோர் கவி) எழுத்துப் போல் அழிவில்லாததாகிய; இராமன்
தேர்- இராமனது தேரின்; பரிக்குழுக்களை – குதிரைகளை;
கூர்ங்கணை – கூரிய கணைகளால்; குப்பை ஆக்கி – நிரம்பும்
படி செய்து; நேர் – நேராக; வழுத்த அரு மாதலி –
வணங்குதற்கு அரிய பெருமைமிக்க மாதலியின்; வயிர மார்பிடை
– வைரம் பாய்ந்த (உறுதியான) மார்பின் மீது, ஆறொடு ஆறு-
பன்னிரண்டு; கொடுஞ்சரம்- கொடிய அம்புகளை; அழுத்தினன்-
பாய்ச்சினான். அரோ- அசை.

—————

மாதலி மார்பில் அம்பு தைத்தமை கண்டு, இராமன் வருந்துதல்

நீல் நிற நிருதர்கோன் எய்த, நீதியின்
சால்புடை மாதலி மார்பில் தைத்தன
கோலினும் இலக்குவன் கோல மார்பின் வீழ்
வேலினும் வெம்மையே விளைத்த, வீரற்கு. 77-

நீல் நிற நிருதர் கோன் – கருநிறம் கொண்ட அரக்கர்
வேந்தன்; எய்த- விடுத்ததும்; இலக்குவன் கோல மார்பின்
– இலக்குவனின் அழகிய மார்பில்; வீழ் வேலினும் –
பாய்ந்ததுமான வேலைக் காட்டிலும்; நீதியின் சால்புடை-
நீதியின் நிறைவுடைய;மாதலி மார்பில் தைத்தன- மாதலியின் மார்பில்
பட்டனவாகிய; கோல் இனும் – அம்பு இன்னும்; வீரற்கு-
இராமனுக்கு; வெம்மையே விளைத்த- வருத்தத்தையே
விளைவித்தது.

———–

இராவணன் அம்புகளால் இராமன் மறைபடுதல்

மண்டில வரி சிலை வானவில்லொடும்
துண்ட வெண் பிறை எனத் தோன்ற, தூவிய
உண்டை வெங் கடுங் கணை ஒருங்கு மூடலால்,
கண்டிலர் இராமனை, இமைப்பு இல் கண்ணினார். 78-

இமைப்பு இல் கண்ணினார் – இமையா நாட்டம் பெற்ற
தேவர்கள்; மண்டில வரிசிலை- மண்டிலமாக வளைத்துக்
கட்டப்பட்ட (இராவணன்) வில்லிலிருந்து; வான வில்லொடு-
இந்திர வில்போல அமையுமாறும்; துண்ட வெண்பிறை
எனத் தோன்ற – பிளவுபட்ட பிறைக்கீற்றாகத் தோன்றுமாறும்
செய்து; தூவிய- ஏவி விடப்பட்ட;உண்டை வெங்கடுங்கணை
– தொகுதி தொகுதியான கொடிய கடிய அம்புகள்; ஒருங்கு
மூடலால்- முழுமையான (இராமனை) மறைத்தமையால்;
இராமனைக் கண்டிலர் – இராமனைக் காண இயலாதவரானார்.

————-

‘தோற்றனனே இனி’ என்னும் தோற்றத்தால்
ஆற்றல் சால் அமரரும் அச்சம் எய்தினார்;
வேற்றவர் ஆர்த்தனர்; மேலும் கீழுமாய்க்
காற்று இயக்கு அற்றது; கலங்கிற்று அண்டமே. 79-

இராமனைக் காணாத) ஆற்றல் சால் அமரரும் –
வலிமை சான்ற தேவர்களும்; ‘இனி- இப்பொழுது; தோற்றனனே’
– தோல்வியுற்று விட்டானே; என்னும் தோற்றத்தால்- என்னும்
பிரமையால்; அச்சம் எய்தினார்- பயம் கொண்டனர்;
வேற்றவர்- பகைவர்; ஆர்த்தனர்- (மகிழ்ச்சி) ஆரவாரம்
செய்தனர்; மேலும் கீழரும்- மேலுலகிலும் கீழுலகிலும்;
காற்று இயக்கு அற்றது- காற்றின் இயக்கமும் இல்லாதாயிற்று;
அண்டம் கலங்கிற்று – அண்டம் முழுமையும் துணுக்குற்றது.

————–

அங்கியும் தன் ஒளி அடங்கிற்று; ஆர்கலி
பொங்கில திமிர்த்தன; விசும்பில் போக்கு இல,
வெங் கதிர் தண் கதிர், விலங்கி மீண்டன;
மங்குவின் நெடு புயல் மழை வறந்ததால். 80-

அங்கியும்- நெருப்பும்; தன்ஒளி அடங்கிற்று – தன்
இயல்பான ஒளி குன்றிற்று; ஆர்கலி- கடலும்; பொங்கில-
பொங்கி எழவில்லை; திமிர்ந்தன – அசைவற்றுக் கிடந்தன;
விசும்பில் – வானில்; வெங்கதிர் தண்கதிர் – ஞாயிறும்
திங்களும்; போக்குஇல – இயங்கா தொழிந்தன; விலங்கி
மீண்டன- வழி விலகித் திரும்பின; மங்குலின்- மேகங்களின்;
நெடும் புனல் மழை – நெடிதாய்ப் பெய்யும் மழை நீர்;
வறந்தது- வறண்டு போயிற்று. (ஆல் – அசை)

———–

திசை நிலைக் கட கரி செருக்குச் சிந்தின;
அசைவு இல வேலைகள், ஆர்க்க அஞ்சின;
விசை கொடு விசாகத்தை நெருக்கி ஏறினன்
குசன் என, மேருவும் குலுக்கம் உற்றதே. 81-

குசன்- அங்காரகன்; விசைகொடு – வேகமாய்; விசாகத்தை
நெருக்கி ஏறினன்- விசாக நட்சத்திரத்தில் நெருக்கிப் புகுந்தான்;
(என்று), திசை நிலை கடகரி- திசைகளில் நிற்கும் மதம் பொழி
திக்கு யானைகள் (எட்டும்) செருக்குச் சிந்தின- தம் மதச்
செருக்கு அற்றுப் போயின; வேலைகள்அசைவு இல- கடல்கள்
இயக்கமற்றன; ஆர்க்க அஞ்சின- ஒலிக்கப் பயந்தன; நெடு
மேருவும் – உயர்ந்த மேரு மலையும்; குலுக்கம் உற்றது –
நடுக்கம் கொண்டது.

போர்க்கோளாகிய அங்காரகன் இட்சுவாகு வமிசத்தாரின்
பிறப்பு நட்சத்திரமான விசாகத்தை நெருங்கினன் என்பது
கெட்ட அறிகுறியாகும்.

—————-

வானரத் தலைவனும், இளைய மைந்தனும்,
ஏனை, ‘அத் தலைவனைக் காண்கிலேம்’ எனக்
கானகக் கரி எனக் கலங்கினார்; கடல் மீன்
எனக் கலங்கினார், வீரர் வேறு உளார். 82-

வானரத் தலைவனும்- குரக்கரசனான சுக்கிரீவனும்; இளைய
மைந்தனும் – தம்பி இலக்குவனும்; ஏனை- பிறரும்; ‘அத்
தலைவனைக் காண்கிலேம்’ என- அந்தத் தலைவனாம்
இராமனைக் காணப் பெற்றிலேம் என்று; கானகக் கரி என-
(தலைமையானையைக் காணாத) காட்டு யானைகள் போல;
கலங்கினார்- வருந்தினார்கள்; வீரர் வேறு உளார் – பிற
வீரர்கள் எல்லாம்; கடல் மீனெனக் கலங்கினார் –
(சேதுபந்தன காலத்து) கடல் மீன்கள் போல் நொந்தனர்.

———–

இராவணன் தேர்க் கொடியை இராமன் வீழ்த்துதல்

எய்தன சரம் எலாம் இமைப்பின் முந்துறக்
கொய்தனன் அகற்றி, வெங் கோலின் கோவையால்
நொய்து என அரக்கனை நெருங்க நொந்தன
செய்தனன், இராகவன்; அமரர் தேறினார். 83–

இராகவன்-; எய்தன சரம் எலாம் – (இராவணனால்)
எய்யப்பட்ட அம்புகளையெல்லாம்; இமைப்பின் முந்துற –
இமைப்பொழுதின் முன்; அகற்றிக் கொய்தனன் – அழித்து
ஒழித்தனன்; நொய்தென – (பின்னர்) விரைவாக; அரக்கனை
நெருங்க – இராவணனை நெருங்குமாறு சென்று; வெங்கோலின்
கோவையால்- கொடிய அம்புத் தொகுதியால்; நொந்தன
செய்தனன் – அவன் வருந்தும்படி செய்தான்; அமரர்
தேறினார்- தேவர்கள் ஆறுதல் கொண்டனர்.

————-

தூணுடை நிரை புரை கரம் அவைதொறும் அக்
கோணுடை மலை நிகர் சிலை இடை குறைய,
சேணுடை நிகர் கணை சிதறினன்-உணர்வொடு
ஊணுடை உயிர்தொறும் உறைவுறும் ஒருவன். 84-

உணர்வொடு – நல்லுணர்வோடு; ஊணுடை- தன்னை உணவாகக்
கொள்ளும்; உயிர் தொறும் உறைவுறும் ஒருவன்- உயிர்களிடம்
விரும்பி வசிக்கும் இறைவனாகிய இராமன்; தூணுடை நிரை புரை-
தூண்களின் வரிசையை ஒத்த; கரம் அவை தொறும் – பத்துக்
கைகளிலும் உள்ள; அ- அந்த; கோணுடை மலை நிகர் – வளைந்த
மலைகள் போன்ற; சிலை இடை குறைய- விற்கள் துண்டு படும்படி;
சேணுடை- தொலை தூரம் செல்வனாகிய; நிகர்
கணை – தமக்குத் தாமே நிகராகிய அம்புகளை; சிதறினன் –
தூவினான்.

‘உண்ணும் சோறு’ என்று எம்பெருமானை நம்மாழ்வார்
உரைத்தாற்போல இறைவன் ஞானிகள் அனுபவித்துண்ணும்
அன்னமாகிறான். ‘நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு
நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன்’ (தேவாரம் 1204:9)
என்ற வரிகள் ஒப்பு நோக்கற்குரியன.

———–

கயில் விரிவு அற வரு கவசமும் உருவிப்
பயில் விரி குருதிகள் பருகிட, வெயிலொடு
அயில் விரி சுடு கணை கடவினன்-அறிவின்
துயில்வுழி உணர்தரு சுடர் ஒளி ஒருவன். 85-

துயில்வுழி – யோக நித்திரையின் கண்; அறிவின் உணர்
தரு – தன் மூதுணர் இயல்பால் அனைத்தையும் உணரவல்ல;
சுடர் ஒளி ஒருவன்- பேரொளிப் பிழம்பான ஒப்பற்ற இறைவன்;
(இராமபிரான்), கயில் விரிவு அற வரு- மூட்டுவாய் விரிதலில்லாத;
கவசமும் உருவி – (இராவணன்) கவசத்தையும் ஊடுருவிக்
கொண்டு; பயில் விரி குருதிகள் பருகிட- (உடலில்) விரவியுள்ள
இரத்தத்தைப் பருகுமாறு; வெயிலொடு – ஒளியோடு; அயில் –
கூர்மையும்; விரி சுடு கணை- பரவிய வெப்பம் மிக்க அம்பினை;
கடவினன்- (இராவணன் மீது) ஏவினான்.

————-

திசை உறு துகிலது, செறி மழை சிதறும்
விசை உறு மிகிழது, விரிதரு சிரனொடு
இசை உறு கருவியின் இனிது உறு கொடியைத்
தசை உறு கணைகொடு தரை உற விடலும். 86-

திசை உறு – திக்குகளில் பொருந்திய; துகிலது –
ஆடையுடையதும்; செறி மழை சிதறும்- அடை மழை பொழிவதும்;
விசை உறு முகிழது – வேகம் மிக்க அரும்பு போன்ற உறுப்பினை
உடையதும்; விரிதரு சிரனோடு- விரிந்த தலையுடன் கூடிய; இசை
உறு கருவியின் – இசைக் கருவியான வீணையினை; இனிது உறு
கொடியை- அழகுறக் கொண்டிருப்பதுமான (இராவணன்) கொடியை; தசை உறு கணை கொடு – புலால்
பொருந்திய தன் அம்பினால்; தரை உற விடலும் – (இராமன்)
தரையில் அறுத்து வீழ்த்தியதும்.

————

படை உக, இமையவர் பருவரல் கெட, வந்து
இடை உறு திசை திசை இழுகுற, இறைவன்
அடையுறு கொடிமிசை அணுகினன்-அளவு இல்
கடை உக முடிவு எழு கடல் புரை கலுழன். 87-

கடையுக – கடையுகத்தின்; முடிவு எழு – முடிவில்
பொங்கியெழும்; அளவில் கடல்புரை கலுழன் – மிகப்பெரிய
கடல் போலும் பெருந்தோற்றமுள்ள கருடன்; படை உக –
(இராவணனுடைய) விற்படை குறைபட்டபோது; இமையவர்
பருவரல் கெட- தேவர் துயர் நீங்கும்படி; வந்து – பூமிக்கு
வந்து; இடை உறு – இடம் பொருந்திய; திசை திசை இழுகுற
– பல திசைகளிலும் (சிறகு) வீசி; இறைவன் –
இராமபிரானுடைய; அடையுறு – (தேரில்) அமைந்துள்ள;
கொடிமிசை – கொடிமீது; அணுகினன் – சார்ந்தனன்.

—————-

பண்ணவன் உயர் கொடி என ஒரு பரவைக்
கண் அகன் உலகினை வலம் வரு கலுழன்
நண்ணலும், இமையவர், ‘நமது உறு கருமம்
எண்ணலம், முனிவினின் இவறினன்’ எனவே. 88-

ஒரு பரவைக் கண்ணகன் உலகினை – ஒப்பற்ற கடல்
சூழ்ந்த இடமகன்ற உலகினை; வலம் வரு கலுழன்- வலமாகச்
சுற்றி வரும் கருடன்; பண்ணவன் உயர் கொடி என –
இராமபிரானுடைய சிறந்த கொடியாகும் என்று; நண்ணலும்-
வந்து பொருந்துதலும்; இமையவர் – தேவர்கள்; ‘நமது உறு
கருமம் எண்ணலம்’ – இனி நம் செயல்களை மட்டுமே
கருதமாட்டோம்; முனிவினன் – சினம் மிக்க கருடன்;
இவறினன் – (பெருமான் தேர் மீது) ஏறினன்; என- என்று
கூறுதலும்.

————-

இராவணன் தாமதம் என்னும் படையை விடுதலும், அப் படையின் செயல்களும்

ஆயது ஒர் அமைதியின், அறிவினின் அமைவான்
நாயகன் ஒருவனை நலிகிலது உணர்வான்,
ஏயினன், இருள் உறு தாமதம் எனும் அத்
தீவினை தரு படை-தெறு தொழில் மறவோன். 89-

ஆயது ஓர் அமைதியின் – அப்படிப்பட்ட சூழலில்;
தெறுதொழில் மறவோன் – அழிவுச் செயல் வல்ல
கொடியவனாகிய இராவணன்; அறிவினின் அறிவான்நாயகன்
ஒருவனை – உணரத்தக்கது உணரும் தலைவனான ஒப்பற்ற
இராமனை; நலிகிலது உணர்வான்- (தன் அம்புகள்) துன்பம்
செய்யாதென அறிந்தவனாகி; இருள் உறு – இருட்டை
விளைவிக்கின்ற; தாமதம் எனும் – தாமதாத்திரம் எனப்பெயர்
பெற்ற; அத்தீவினை தருபடை- கெடுதலைச் செய்யும் கணையை;
ஏயினன் – ஏவினான்.

————–

தீ முகம் உடையன சில; முகம் உதிரம்
தோய் முகம் உடையன; சுரர் முகம் உடைய;
பேய் முகம் உடையன; பிலமுகம் நுழையும்
வாய்முகம் வரி அரவு அனையன வருவ. 90-

(மேற்குறித்த தாமதாத்திரத்திலிருந்து புறப்பட்ட அம்புகளில்)
சில தீமுகம் உடையன- சில நெருப்புமிழ் முகம் படைத்திருந்தன
(சில); முகம் உதிரம் தோய் முகம் உடையன- சில அம்புகள்
குருதி தோய்ந்த முகம் கொண்டிருந்தன; சுரர் முகம் உடைய –
(சில) தேவர் முகம் படைத்திருந்தன; பேய் முகம் உடையன-
(சில) பேய்களின் முகத்தோடு இருந்தன; பில முகம் – குகைக்குள்;
நுழையும் – செல்கின்ற; வாய்முகம் – வாயும் முகமும் கொண்டன
(சில); வரி அரவு அனையன வருவ- கோடுகளுடன் கூடிய
பாம்புகளைப் போல் வந்தன.

————

ஒரு திசை முதல் கடை ஒரு திசை அளவும்,
இரு திசை எயிறு உற வருவன; பெரிய;
கருதிய கருதிய புரிவன; கனலும்
பருதியை மதியொடு பருகுவ-பகழி. 91-

(மேலும்) பகழி – இந்த அம்புகள்; ஒரு திசை முதல்- ஒரு
திக்கின் தொடக்க முதலாக; கடை ஒரு திசை அளவும்- (அதற்கு)
மறுதலையான) ஒரு திக்கின் முடிவு வரையிலும்; இருதிசை – இரு
திசைகளிலும்; எயிறு உற- பற்களைக் காட்டிக் கொண்டு; வருவன-
வருவன; பெரிய- மிகப் பெரிய அளவின; கருதிய கருதிய
புரிவன – நினைத்து நினைத்துச் செயல்பட வல்லன; கனலும்
– சுடுகின்ற; பருதியை மதியொடு- சூரியனைச் சந்திரனோடு;
பருகுவ- குடித்து விடும் தன்மையின.

—————

இருள் ஒரு திசை, ஒரு திசை வெயில் விரியும்;
சுருள் ஒரு திசை, ஒரு திசை மழை தொடரும்;
உருள் ஒரு திசை, ஒரு திசை உரும் முரலும்;
மருள் ஒரு திசை, ஒரு திசை சிலை வருடம். 92-

(தாமத அம்பினால்), ஒரு திசை இருள்- ஒரு திசையில் இருளும்;
ஒருதிசை வெயில்- அடுத்த திசையில் வெயிலும்; விரியும்- பரவும்;
ஒருதிசை சுருள் – ஒரு திசையில் சுழல்காற்றும்;ஒரு திசை மழை-
மற்றொரு திசையில் மழையும்; தொடரும்- தொடரும்; ஒரு திசை
உருள்- ஒரு திசையில் சக்கரமும்; ஒரு திசை உரும் முரலும்-
இன்னொரு திசையில் இடியும் ஒலிக்கும்; ஒரு திசை மருள்- ஒரு
திசையில் மயக்கமும்; ஒரு திசை சிலை வருடம்- வேறொரு
திசையில் கல்மாரியும் உண்டாகும்.

————–

இராமன் சிவனது படையை விட்டு, தாமதப் படையைத் தொலைத்தல்

இனையன நிகழ்வுற, எழு வகை உலகும்
கனை இருள் கதுவிட, அமரர்கள் கதற,
வினை உறு தொழிலிடை விரவலும், விமலன்
நினைவுறு தகையினன் நெறியுறு முறையின், 93-

இனையன நிகழ்வுற- இவ்வாறு நிகழ்ந்து கொண்டிருக்கும்
வேளையில்; கனை இருள் – செறிந்த இருட்டானது; எழுவகை
உலகும் – ஏழு உலகங்களையும்; கதுவிட- கவ்விக்கொள்ள;
உயிர் இடை கதற- அனைத்துயிர்களும் இதனிடையே வாய்விட்டலற;
வினை உறு தொழிலிடை- தீவினை நெருங்கிச் செயல்படுதலென;
விரவலும்- (துன்பம்) எங்கும் பரவுதலுற்ற போது;விமலன்- மாசறு
பண்புடைய இராமன்; நெறியுறு முறையின் – முறைப்படியான வழியில்;
நினைவுறு நகையினன்- சிந்திக்க லுற்றவனாகி;

—————

கண்ணுதல் ஒருவனது அடு படை கருதிப்
பண்ணவன் விடுதலும், அது நனி பருக;
எண்ணுறு கனவினொடு உணர்வு என, இமையில்,
துண்ணெனும் நிலையினின் எறி படை தொலைய 94-

கண்ணுதல் ஒருவனது- நெற்றிக் கண்ணனாகிய ஒப்பற்ற
சிவபிரானது; அடுபடை- வெல்லும் அம்பினை; கருதி-
எண்ணியெடுத்து; பண்ணவன் விடுதலும்- இராமபிரான் ஏவுதலும்;
அது- அவ்வம்பு; நனி பருக- தாமத அம்பினைப் பருகியதினால்;
இமையில்- இமைப்பொழுதில்; கனவினோடு- கனவுப் பொழுதில்;
எண்ணுறும் உணர்வு என- சிந்தனையாகிய உணர்வு (இல்லாமற்
போவது) போல; துண்ணெனும் நிலையினில் – அச்சம் கொள்ளும்
நிலையில்; எறிபடை- (இராவணனால்) ஏவப்பட்ட தாமதாத்திரம்;
தொலைய- அழிந்து போக.

——————

இராவணன் இராமன் மேல், ஆசுரப் படையை விடுதல்

விருந்த தன் படை மெய் கண்ட பொய் என வீய்ந்த;
எரிந்த கண்ணினன், எயிற்றிடை மடித்த வாயினன், தன்
தெரிந்த வெங் கணை, கங்க வெஞ் சிறை அன்ன, திறத்தான்,
அரிந்தமன் திரு மேனிமேல் அழுத்தி, நின்று ஆர்த்தான். 95-

விரிந்த- பரந்து சென்று; தன்படை- தன் தாமதாத்திரம்;
மெய்கண்ட பொய் என- உண்மையைக் கண்ட பொய்யினைப்
போல; வீய- அழிந்து போக; எரிந்த கண்ணினன்- நெருப்பை
உமிழ்கின்ற கண்களை உடையவனும்; எயிற்றிடை மடித்த
வாயினன் – பற்களிடையே மடித்த வாயை உடையவனுமான
இராவணன்; கங்க வெம் சிறை அன்ன- பருந்தின் கொடுஞ்
சிறகு போன்று; திறத்த- வன்மை மிக்கனவாய்; தெரிந்த
வெங்கணை- தேர்ந்தெடுத்த கொடிய அம்புகளை; அரிந்தமன்
– பகைவரை அடக்கும் இராமபிரான்; திருமேனி மேல் அழுத்தி
– திருவுடல் மீது பாய்ச்சி; நின்று ஆர்த்தான் – நின்று ஆரவாரம்
செய்தான்.

—————

ஆர்த்து, வெஞ் சினத்து ஆசுரப் படைக்கலம், அமரர்
வார்த்தை உண்டது, இன் உயிர்களால் மறலிதன் வயிற்றைத்
தூர்த்தது, இந்திரன் துணுக்குறு தொழிலது, தொடுத்து,
தீர்த்தன்மேல் வரத் துரந்தனன், உலகு எலாம் தெரிய. 96-

(இராவணன்) ஆர்த்து- ஆரவாரம் செய்து; அமரர் வார்த்தை
உண்டது- வானவர் புகழுரை பெற்றதும்; இன்உயிர்களால்-
இனிய உயிர்களால்; மறலி தன் வயிற்றைத் தூர்த்தது – எமன்
வயிற்றை நிறைத்ததும்; இந்திரன் துணுக்குறு தொழிலது- தேவர்
தலைவனைத் திடுக்கிட வைத்ததுமான; வெஞ்சினத்து ஆசுரப்
படைக்கலம்- கொடுந்தன்மையுடைய ஆசுரம் என்னும் அம்பினை
உலகு எலாம் தெரிய- அனைவரும் காண; தீர்த்தன் மேல்
வரத் துரந்தனன் – புனிதன் மீது பாயும்படி ஏவினன்.

————–

ஆசுரப் பெரும் படைக்கலம், அமரரை அமரின்
ஏசுவிப்பது, எவ் உலகமும் எவரையும் வென்று
வீசு வெற்பு இறத் துரந்த வெங் கணையது, –
விசையின் பூசுரர்க்கு ஒரு கடவுள் மேல் சென்றது போலாம். 97-

இவ்வுலகை – இந்த உலகினை;ஓர் நொடி வரை- ஒரு நொடிப்
பொழுதில்; நுங்குகின்றது- விழுங்குகின்றது; என்ன – என்று
கூறும்படி; எங்கும் நின்று நின்று – எல்லா இடங்களிலும்
குவியலாய் நின்று; அலமரும் அமரர் – மனம் கலங்கிய அமரர்கள்;
கண்டுஇரைப்ப – இவ்வம்பினைக் கண்டு அஞ்சிக் குரலெழுப்பும்
போது; மங்குல் வல் உருமேற்றின் மேல் – மேகங்களில் உள்ள
ஆற்றல் மிக்க இடியேற்றின் மீது; எரி மடுத்தென்ன – நெருப்புப்
பற்றிக் கொண்டாற்போல; அங்கி தன் நெடும்படை எடுத்து –
அக்கினியாஸ்திரத்தை எடுத்து; இராகவன் அறுத்தான் –
இராமபிரான் (ஆசுரத்தை) அழித்தான்.

————–

ஆசுரப் படையை அக்கினிப் படையால் இராமன் அறுத்தல்

‘நுங்குகின்றது, இவ் உலகை ஓர் நொடி வரை’ என்ன,
எங்கும் நின்று நின்று அலமரும் அமரர் கண்டு இரைப்ப,
மங்குல் வல் உருமேற்றின்மேல் எரி மடுத்தென்ன
அங்கி தன் நெடும் படை தொடுத்து, இராகவன் அறுத்தான். 98-

கூற்றுக் கோடினும்- எமன் தவற விட்டாலும்; கோடல –
தாம் குறி தப்பாதவையும்; கடல் எலாம் குடிப்ப- கடல் நீர்
முழுவதும் குடிக்க வல்லவையும்; மேருவை- மகா மேரு
மலையை; நீற்றுக் குப்பையின் நூறுவ- பொடிப்பொடியாக்கி
அழிக்க வல்லவையும்; நெடிய காற்று- பெரும் புயல் காற்றும்;
பின் செலச் செல்வன – தம்பின் வரும்படி முன்
செல்பவையும்; உலகு எலாம் கடப்ப – உலகனைத்தும்
கடக்க முற்படுபவையுமான; நூற்றுக்கோடி அம்பு- பல
கோடி அம்புகளை; நொடியில் – நொடிப்போதில்; இராவணன்
எய்தனன் – இராவணன் ஏவினான்.

——————-

தொடர்ந்து இராவணன் பல படை துரக்க, இராமன் அவற்றைப் பிறைமுக அம்புகளால் பிளத்தல்

கூற்றுக் கோடினும் கோடல, கடல் எலாம் குடிப்ப,
நீற்றுக் குப்பையின் மேருவை நூறுவ, நெடிய
காற்றுப் பின் செலச் செல்வன, உலகு எலாம் கடப்ப,
நூற்றுக் கோடி அம்பு எய்தனன், இராவணன், நொடியில். 99-

முனைவர்- வீரர்களில்; சிலர் – சிலர்; என்ன கைக்கடுப்போ
– இது என்ன கை வேகம்; என்பர்- என வியப்பர்; சிலர் – வேறு
சிலர்; ‘இவையும் அன்ன மாயமே- இவ்வம்புகளும் அந்த
மாயமே; அம்பல- அம்புகள் அல்ல; என்பர்- என்பார்கள்; சிலர்
– மற்றும் சிலர்; அவ்வம்புக்கு- இவ்வம்புகளுக்கு; இன்னம்
உண்டுகொல் இடம் – இன்னும் வேண்டிய இடமுண்டோ?’;
என்பர் – என அதிசயிப்பர்; சிலர்- இன்னும் சிலர்; ‘முன்னம்-
முன் எப்போதும்; இத்தனை இகல் போர் – இந்த அளவு
மாறுபாடுற்ற போரை; முயன்றிலனாம்- முயன்று இயற்றியதில்லை;
என்பர்- என எண்ணுவார்கள்.

————-

‘என்ன கைக் கடுப்போ!’ என்பர் சிலர்; சிலர், ‘இவையும்
அன்ன மாயமோ; அம்பு அல’ என்பர்; ‘அவ் அம்புக்கு
இன்னம் உண்டுகொல் இடம்!’ என்பர் சிலர்; சிலர், ‘இகல் போர்
முன்னம் இத்தனை முயன்றிலனாம்’ என்பர்-முனிவர். 100–

முனைவர்- வீரர்களில்; சிலர் – சிலர்; என்ன கைக்கடுப்போ
– இது என்ன கை வேகம்; என்பர்- என வியப்பர்; சிலர் – வேறு
சிலர்; ‘இவையும் அன்ன மாயமே- இவ்வம்புகளும் அந்த
மாயமே; அம்பல- அம்புகள் அல்ல; என்பர்- என்பார்கள்; சிலர்
– மற்றும் சிலர்; அவ்வம்புக்கு- இவ்வம்புகளுக்கு; இன்னம்
உண்டுகொல் இடம் – இன்னும் வேண்டிய இடமுண்டோ?’;
என்பர் – என அதிசயிப்பர்; சிலர்- இன்னும் சிலர்; ‘முன்னம்-
முன் எப்போதும்; இத்தனை இகல் போர் – இந்த அளவு
மாறுபாடுற்ற போரை; முயன்றிலனாம்- முயன்று இயற்றியதில்லை;
என்பர்- என எண்ணுவார்கள்.

———–

மறைமுதல் தனி நாயகன், வானினை மறைத்த
சிறையுடைக் கொடுஞ் சரம் எலாம் இமைப்பு ஒன்றில் திரிய,
பொறை சிகைப் பெருந் தலைநின்றும் புங்கத்தின் அளவும்
பிறை முகக் கடு வெஞ் சரம் அவை கொண்டு பிளந்தான். 101-

மறை முதல் தனி நாயகன் – வேத முதல்வனாகிய
சிறப்புடையோன்; வானினை மறைத்த- ஆகாய வீதியை மூடிய;
சிறை உடைக் கொடுஞ்சரம்- இறகுடன் கூடிய தீய அம்புகள்;
எலாம் – அனைத்தையும்; இமைப்பொன்றில் –
நொடிப்பொழுதில்; திரிய- உலுக்குலையுமாறு; பிறைமுகக் கடு
வெம்சரம் – பிறைச் சந்திரன் போன்ற உருவினவாகிய கொடிய
வெவ்விய அம்புகளால்; பொறை சிகை – பாரமான
உச்சியையுடைய; பெருந்தலைநின்றும் – பெரிய தலை முதலாக;
புங்கத்தின் அளவும்- நுனிவரை; பிளந்தான்- பிளவுபடும்படி
செய்தான்.

—————

இராவணன் விட்ட மயன் படையைக் கந்தருவக் கணையால் இராமன் போக்குதல்

அயன் படைத்த பேர் அண்டத்தின் அருந் தவம் ஆற்றி,
பயன் படைத்தவர் யாரினும் படைத்தவன், ‘பல் போர்
வியன் படைக்கலம் தொடுப்பென் நான், இனி’ என விரைந்தான்;
மயன் படைக்கலம் துரந்தனன், தயரதன் மகன்மேல். 102-

அயன் படைத்த – பிரமனால் படைக்கப்பட்ட; பேர்
அண்டத்தின்- பேருலகங்கள் அனைத்திலும்; அருந்தவம்
ஆற்றி – கடுந்தவம் புரிந்து; பயன் படைத்தவர் யாரினும் –
நன்மையுற்றவர் எவரையும் விட; படைத்தான் – சிறப்புப்
பெற்றவனாகிய இராவணன்; ‘நான் இனி – இனி நான்;
பல்போர் வியன் படைக்கலம்- பல்வகைப் போர்
விந்தைகளும் செய்யும் புதிய அம்பினை; தொடுப்பென்’-
தொடுக்கப் போகிறேன்; என- என எண்ணியவனாய்; தயரதன்
மகன் மேல் – தசரத புத்திரனாகிய இராமன் மேல்; மயன்
படைக்கலம் துரந்தனன் – மயன் அம்பை ஏவினான்.

—————-

‘விட்டனன் விடு படைக்கலம் வேரொடும் உலகைச்
சுட்டனன்’ எனத் துணுக்கமுற்று, அமரரும் சுருண்டார்;
‘கெட்டனம்’ என வானரத் தலைவரும் கிழிந்தார்;
சிட்டர் தம் தனித் தேவனும், அதன் நிலை தெரிந்தான். 103-

விட்டனன்- (இராவணன் மயன்படை) ஏவி விட்டான்;
விடுபடைக்கலம் – அவன் ஏவிய அம்பு காரணமாக; வேரொடும்
உலகைச் சுட்டனன் – உலகத்தை வேரொடும் சுட்டழித்தான்; என
– என்று; அமரரும்- தேவரும்; துணுக்கமுற்று- அச்சம்கொண்டு;
சுருண்டார் – உள்ளொடுங்கினார்; வானரத் தலைவரும் –
குரங்குப்படைத்தலைவர்களும்; ‘கெட்டனம்’- இனி அழிந்தோம்;
எனக் கிழிந்தார்- எனச் சிதறிக் கலைந்தனர்; சிட்டர் தம்-
நல்லோர்தம்; தனித்தேவனும் – ஒப்பற்ற தலைவனாகிய இராமனும்;
அதன் நிலை தெரிந்தான் – அவ் அம்பின் தன்மையை உணர்ந்து
கொண்டான்.

——————-

‘பாந்தள் பல் தலைப் பரப்பு அகன் புவியிடைப் பயிலும்
மாந்தர்க்கு இல்லையால் வாழ்வு’ என வருகின்ற அதனைக்
காந்தர்ப்பம் எனும் கடுங் கொடுங் கணையினால் கடந்தான்-
ஏந்தல் பல் மணி எறுழ் வலித் திரள் புயத்து இராமன். 104-

‘பாந்தள் பல்தலைப் பரப்பு- ஆதிசேடனுடைய எண்ணற்ற
தலைகளின் மேல் பரந்துள்ள; அகன் புவியிடைப் பயிலும்-
விரிந்த பூமியின்மீது வாழும்; மாந்தர்க்கு வாழ்வு இல்லை-
மனிதர்களுக்கு உயிர் வாழ்வு இல்லை; என – என்னுமாறு;
வருகின்ற அதனை – வரும் அவ்வம்பினை; ஏந்தல் –
உயர்ந்தனவும்; பல்மணி – பல்வகை மணிகள் பூண்டனவும்;
ஏறுழ்வலி- மிக்க வலிமையுடையனவும் ஆகிய; திரள் – திரண்ட;
புயத்து – தோள்களை உடைய; இராமன் – இராமபிரான்;
காந்தர்ப்பம் எனும்- கந்தர்வம் எனும் பெயருடைய; கடுங்
கொடுங் கணையினால்- வலிய கொடிய அம்பினால்; கடந்தான்
– வெற்றி கொண்டான். (ஆல் – அசை)

————–

இராவணன் தண்டாயுதம் எறிய, அம்பினால் இராமன் அதைப் பொடியாக்கல்

‘பண்டு நான்முகன் படைத்தது, கனகன் இப் பாரைத்
தொண்டு கொண்டது, மது எனும் அவுணன் முன் தொட்டது,
உண்டு இங்கு என் வயின்; அது துரந்து உயிர் உண்பென்’ என்னா,
தண்டு கொண்டு எறிந்தான், ஐந்தொடு ஐந்துடைத் தலையான். 105-

‘பண்டு நான்முகன் படைத்தது’ – முன்னம் பிரமனால்
படைக்கப்பட்டதும்,; கனகன் – இரணியன்; இப்பாரைத்
தொண்டு கொண்டது – இவ்வுலகை அடிமைப்படுத்தக்
காரணமானதும்; மது எனும் அவுணன்- மது எனும் அசுரன்;
முன் தொட்டது- முன்பு ஏந்தியிருந்ததும் ஆன (ஒரு தண்டு);
இங்கு என் வயின் உண்டு- இங்கு என்னிடம் இருக்கிறது;
அது துரந்து உயிர் உண்பென்- அதனை ஏவிப் (பகைவனின்)
உயிரை உண்பேன்’; என்னா – என்று கருதி; ஐந்தொடு
ஐந்துடைத் தலையான் – பத்துத் தலைகளுடைய இராவணன்;
தண்டு கொண்டு எறிந்தான்- கதாயுதத்தால் தாக்கினான்.

————-

தாருகன் பண்டு தேவரைத் தகர்த்தது, தனி மா
மேகு மந்தரம் புரைவது, வெயில் அன்ன ஒளியது,
ஓர் உகம் தனின் உலகம் நின்று உருட்டினும் உருளாச்
சீர் உகந்தது, நெரித்தது, தானவர் சிரத்தை. 106-

தாருகன் பண்டு – தாருகாசுரன் முன்னொரு காலத்தில்;
தேவரைத் தகர்த்தது – தேவரை ஒழிக்க உதவியாய் இருந்ததும்;
தனிமா- ஒப்பற்ற பெரிய; மேருமந்தரம் புரைவது – மேரு
மலையையும் மந்திர கிரியையும் நிகர்ப்பதும்; வெயிலன்ன
ஒளியது – சூரிய வெளிச்சம் போல் ஒளியுடையதும்; ஓர்
உகம்தனில்- ஒரு யுகக் காலமளவும்; உலகம் நின்றுருட்டினும்
– உலகம் முழுவதும் சேர்ந்து உருட்டினாலும்; உருளாத- உருட்ட
முடியாத; சீர் உகந்தது – சிறப்புக்கு உரியதும்; தானவர்
சிரங்கள் நெரித்தது – அசுரர் தலைகளை நசுக்கியதும்;

—————-

பசும் புனல் பெரும் பரவை பண்டு உண்டது, பனிப்புற்று
அசும்பு பாய்கின்றது, அருக்கனின் ஒளிர்கின்றது, அண்டம்
தசும்புபோல் உடைந்து ஒழியும் என்று அனைவரும் தளர,
விசும்பு பாழ்பட, வந்தது மந்தரம் வெருவ. 107-

பசும்புனல் – பச்சை நிற நீரால் நிரம்பிய; பெரும் பரவை
– பெரிய கடலை; பண்டு உண்டது – முன் காலத்தில்
பருகியதும்; பனிப்புற்று – குளிர்ச்சி பொருந்தி; அசும்பு
பாய்கின்றது – நீர் கசிவதும்; அருக்கனின் ஒளிர்கின்றது-
சூரியனைக் காட்டிலும் ஒளி வீசுவதுமான அத்தண்டாயுதம்;
அண்டம் – இவ்வண்டம்; தசும்புபோல் – குடல் போல்;
உடைந்து ஒழியும் – உடைந்து தகரும்; என்று அனைவரும்
தளர- என எல்லாரும் மனம் தளரவும்; விசும்பு பாழ்பட-
வானம் பாழடையவும்; மந்தரம் வெருவவும் – மந்தர மலை
அஞ்சுமாறும்; வந்தது- வரலாயிற்று.

————–

கண்டு, ‘தாமரைக் கடவுள் மாப் படை’ எனக் கழறா,
அண்டர் நாயகன் ஆயிரத்து அளவினும் அடங்கா,
புண்டரீகத்தின் மொட்டு அன்ன புகர் முகக் கணையால்
உண்டை நூறுடை நூறுபட்டுளது என உதிர்த்தான். 108-

கண்டு- இக்காட்சியைக் கண்டு; தாமரைக் கண்ணன்
– செந்தாமரைக் கண்ணனான இராமன்; அக் கடவுள்
மாக்கதையை- அத் தெய்வத்தன்மை வாய்ந்த பெருந்தண்டத்தை;
ஆயிரம் கண்ணினும்- ஆயிரம் கண்களால்; அண்டர் நாயகன்
– தேவர் தலைவனாகிய இந்திரனுக்கும்; அடங்காத – பார்க்க
முடியாத; நூறு உண்டை உடை – நூறு உண்டைகளை
உடையதும்; புண்டரீகத்தின் புகர்முகம் – தாமரையின் ஒளி
பொருந்திய முகமுள்ளதுமான அம்பினை; விட்டான்- செலுத்தி;
நூறு பட்டுளது- நூறு கூறாயிற்று எனும்படி; உதிர்த்தான் – சிதற
வைத்தான்.

———

இராவணன் மாயையின் படையை விடல்

‘தேய நின்றவன், சிலை வலம் காட்டினான்; தீராப்
பேயை என் பல துரப்பது? இங்கு இவன் பிழையாமல்
ஆய தன் பெரும் படையொடும் அடு களத்து அவிய
மாயையின் படை தொடுப்பென்’ என்று, இராவணன் மதித்தான். 109-

தேய நின்றவன்- அழியப் போகின்றவனாகிய; சிலைவலம்
காட்டினான்- நம் பகைவன் வில்லாண்மை காட்டுகின்றான்;
தீராப் பேயை- தீர்க்க முடியாத பேய்களைப் போன்ற (பயனற்ற);
பல – அம்புகளை; துரப்பது என்?- விடுவதனால் பயனில்லை;
இங்கு இவன் பிழையாமல் – இங்கு இப்பகைவன் (இராமன்)
தப்ப முடியாதபடி); ஆய தன் பெரும் படையொடும்-
தனக்கமைந்த படைக்கலங்களோடு; அடுகளத்து அவிய-
போர்க்களத்தில் பட்டழிய; மாயையின் படை தொடுப்பென்-
மாயாத்திரத்தைத் தொடுத்து விடுவேன்’; என்று இராவணன்
மதித்தான்- என்று இராவணன் சிந்தித்தான்.

————–

பூசனைத் தொழில் புரிந்து, தான் முறைமையின் போற்றும்
ஈசனைத் தொழுது, இருடியும் சந்தமும் எண்ணி,
ஆசை பத்தினும் அந்தரப் பரப்பினும் அடங்கா
வீசி மேற் செல, வில் விசைத் தொடை கொண்டு விட்டான். 110-

பூசனைத் தொழில் புரிந்து- மாயாத்திரத்தைப் பூசிக்கும்
தொழிலைச் செய்து; தான் முறைமையிற் போற்றும்- தான்
ஒழுங்காக வணங்கும்; ஈசனை- சிவபிரானை; தொழுது- வழிபாடு
செய்து; இருடியும் சந்தமும் எண்ணி – ரிஷியையும்
சந்தஸ்ஸையும் நினைந்து; ஆசை பத்தினும் – பத்துத்
திசைகளிலும்; அந்தரப் பரப்பினும் – வான வெளியிலும்;
அடங்கா- அடங்காது; செல- எங்கும் செல்லுமாறு; வில் இடை
தொடை – வில்லில் (மாயாத்திரமாகிய) அம்பினை; கொடு
விட்டான்- வைத்து வீசி விட்டான்.

—————

மாயம் பொத்திய வயப் படை விடுதலும், வரம்பு இல்
காயம் எத்தனை உள, நெடுங் காயங்கள் கதுல,
ஆயம் உற்று எழுந்தார் என ஆர்த்தனர்-அமரில்
தூய கொற்றவர் சுடு சரத்தால் முன்பு துணிந்தார். 111-

மாயம் பொத்திய- மாயை நிறைந்துள்ள; வயப்படை விடுதலும்
– வெற்றிப்படையை இராவணன் ஏவுதலும்; அமரில்- முன்பு நடந்த
போரில்; தூய கொற்றவர் – உயர் பண்பினரான இராம இலக்குவர்;
சுடுசரத்தான்- சுடுகின்ற அம்பினால்; முன்பு- முன்னர்; துணிந்தார்
– துண்டாகி விழுந்த அரக்கர்களின்; வரம்பில் காயம் எத்தனை உள
– எண்ணில்லாத காயம்பட்டு வீழ்ந்த உடல்கள் எத்தனையுண்டோ
அவை அனைத்தும்; நெடுங்காயங்கள் கதுவ- உயர்ந்த ஆகாயம்
வரை தழுவி; ஆயம் உற்று எழுந்தார் என- உயிர் பெற்று
எழுந்தாற்போல (மாயம் காட்டி); ஆர்த்தனர்- ஆரவாரம் செய்தனர்.

————

இந்திரற்கு ஒரு பகைஞனும், அவற்கு இளையோரும்,
தந்திரப் பெருந் தலைவரும், தலைத் தலையோரும்,
மந்திரச் சுற்றத்தவர்களும், வரம்பு இலர் பிறரும்,
அந்தரத்தினை மறைத்தனர், மழை உக ஆர்ப்பார். 112-

இந்திரற்கு ஒரு பகைஞனும்- இந்திரசித்தும்; அவற்கு
இளையோரும்- அவனுக்குத் தம்பியரான அதிகாயன்
முதலியவர்களும்; பெரும் தந்திரத் தலைவரும்- பெரி
சேனைத்தலைவர்களும்; தலைத்தலையோரும் – மேலும் பல
தலைமையுடையோரும்; மந்திரச் சுற்றத்தவர்களும்-
(மகோதரன்) முதலிய அமைச்சர்களும்; வரம்பு இலர் பிறரும்
– எண்ணற்ற பிறரும்; அந்தரத்தினை மறைத்தனர்- ஆகாயம்
முழுமையும் மறைத்துக் கொண்டவர்களாய்; மழை உக
ஆர்ப்பார் – மழை சிதறும்படி ஆரவாரம் புரியலானார்.

————

குடப் பெருஞ் செவிக் குன்றமும், மற்றுள குழுவும்,
ப்டைத்த மூல மாத் தானையும், முதலிய பட்ட,
விடைத்து எழுந்தன-யானை, தேர், பரி, முதல் வெவ்வேறு
அடைத்த ஊர்திகள் அனைத்தும் வந்து, அல் வழி அடைய. 113-

குடப் பெருஞ் செவிக் குன்றமும்- குடம் போன்ற பெரிய
செவிகளை உடைய மலை போன்ற கும்பகருணனும்; மற்றுள
குழுவும் – மற்றுள்ள வீரர்களும்; படைத்த மூலமாத்
தானையும் – இராவணன் முன்பு பெற்றிருந்த மூலபலப்படையும்;
முதலிய பட்ட – முதலிய மன்னர் இறந்து போன; யானை
தேர் பரி முதல் – யானை தேர் குதிரை முதலாக; வெவ்வேறு
அடைத்த ஊர்திகள்- வேறு வேறாக நிரம்பிய வாகனங்களும்;
அனைத்தும் வந்து – எல்லாம் ஒருங்கு வந்து; அவ்வழி
அடைத்த – அங்கு திரண்டு வந்தன.

——————–

ஆயிரம் பெரு வெள்ளம் என்று அறிஞரே அறைந்த
காய் சினப் பெருங் கடற்படை களப் பட்ட எல்லாம்,
ஈசனின் பெற்ற வரத்தினால் எய்திய என்ன,
தேசம், முற்றவும் செறிந்தன, திசைகளும் திசைக்க. 114-

திசைகளும் திகைப்ப – நாற்றிசையிலும் உள்ளார் கண்டு
திகைக்கும் படி;ஆயிரம் பெரு வெள்ளம் என்று – ஓராயிரம்
வெள்ளம் என்று; அறிஞரே அறைந்த – அறிஞரால்
கூறப்பட்டனவும்; களப்பட்ட- களத்தில் முன்பு இறந்தனவுமான;
காய்சினப் பெருங் கடற் படை எல்லாம்- கடுஞ்சினம் மிக்க
விரிந்த கடல் போன்ற படைகள் அனைத்தும்; ஈசனில் பெற்ற
வரத்தினால்- சிவபிரானிடம் பெற்ற வரம் காரணமாக; எய்திய
என்ன- உயிர் பெற்று வந்தன என்னும் படி; தேசமுற்றவும்
செறிந்தன – எல்லா இடத்திலும் நிறைந்தன.

————–

சென்ற எங்கணும், தேவரும் முனிவரும் சிந்த-
‘வென்றதும் எங்களைப்போலும்; யாம் விளிவதும் உளதோ?
இன்று காட்டுதும்; எய்துமின், எய்துமின்’ என்னா,
கொன்ற கொற்றவர்தம் பெயர் குறித்து அறைகூவி. 115-

வென்றது எங்களைப் போலும்- ‘எங்களைத் தானோ
வெற்றி கொண்டது! யாம் விளிவதும் உளதே – யாம்
இறப்பதும் உண்டோ? இன்று காட்டுதும் – என்
வலிமையை இன்று காட்டுவோம்; எய்துமின் எய்துமின்-
வாருங்கள் வாருங்கள்’; என்னா- என்று; கொன்ற
கொற்றவர் தம் பெயர்- தம்மைக் கொன்ற வீரர்களின்
பெயரை;குறித்து அறை கூவி – குறிப்பாகச் சொல்லி
அறை கூவல் விட்டு; தேவரும் முனிவரும் சிந்த –
தேவர்களும் முனிவர்களும் சிதறியோட; எங்கணும்
சென்ற – (அப்படைகள்) எங்கும் செல்லலாயின.

————–

மாயப் படையால் பூதங்களும் பேய்களும் தோன்றுதல்

பார் இடந்து கொண்டு எழுந்தன பாம்பு எனும் படிய,
பாரிடம் துனைந்து எழுந்தன மலை அன்ன படிய,
‘பேர் இடம் கதுவ அரிது, இனி விசும்பு’ என, பிறந்த,
பேர் இடங்கரின் கொடுங் குழை அணிந்தன பேய்கள். 116-

(மாயத்தினால்) பார் இடந்து கொண்டு- நிலத்தைத்
துளைத்துக் கொண்டு; பாம்பு எழுந்தன எனும் படிய-
ஆதிசேடன் முதலிய பாம்புகள் எழுந்து வந்தன
எனும்படியாகவும்; பாரிடம்- நிலத்தினுக்கு; மேலே
துனைந்தெழுந்தன- விரைந்து மேலெழுந்து கிளம்பின;
மலையன்ன படிய – பெரிய மலைகளென்று
கூறும்படியாகவும்; இனி பேரிடம் கதுவரிது- இனி
இப்பெரிய உலகில் உறைதலாற்றாது; விசும்பென –
விண்ணகமே பொருத்தமான இடமென; பேரிடங்கரின் –
தண்ணீரில் பெயர்ந்து திரியும் முதலைகள் போன்ற;
கொடுங்குழை – வளைந்த குண்டலங்களை; பிறந்த
பேய்கள் – (மாயத்தில்) பிறந்த பேய்கள்; அணிந்தன-
அணிந்து காட்சி தந்தன.

————–

மாயத்தினால் தோன்றியவர் பல வகைப் படைகளை ஏந்தி நிற்றல்

தாமசத்தினில் பிறந்தவர், அறம் தெறும் தகையர்,
தாம் அசத்தினில் செல்கிலாச் சதுமுகத்தவற்கும்
தாமசத்தினைத் தொடர்ந்தவர், பரிந்தன தாழ்ந்தார்-
தாம சத்திரம் சித்திரம் பொருந்திய, தயங்க. 117-

தாமசத்தினில் பிறந்தவர் – மாயாத்திரத்தால்
பிறந்தவரும்; அறந்தெறும் தகையர் – தருமத்தை
அழிக்க வல்ல ஆற்றல் உள்ளவருமான மாயப்படைகள்;
தாம்- தாம்; அசத்தினில் – போலி நெறியில்;
செல்கிலா- செல்லாதவராய்; சதுமுகத்தவற்கு –
நான் முகனுக்கு; உத்தாமம் – சிறந்த; த்திரம் –
யாகத்தை;செய்பவர்- புரிபவரான முனிவர்; பரிந்தனர் தளர- மனம் நொந்து
தளர; தாமம் – ஒளி சிறந்த; சத்திரம் – படைக்கலம்; தயங்க –
மின்னிட; சித்திரம் பொருந்தினர் – விசித்திரமாக விளங்கினர்.

————–

தாம் அவிந்து மீது எழுந்தவர்க்கு இரட்டியின் தகையர்,
தாம இந்துவின் பிளவு எனத் தயங்கு வாள் எயிற்றர்,
தாம் அவிஞ்சையர், கடல் பெருந் தகையினர், தரளத்
தாம விஞ்சையர் துவன்றினர், திசைதொறும் தருக்கி. 118-

தாம் அவிந்து- தாம் முன்னர் இறந்து; மீது எழுந்தவர்க்கு
இரட்டியின் தகையர்- மீண்டும் எழுந்தவர்களாகி இரண்டாம்
முறை வந்த தன்மையுடையவரும்; தாம இந்துவின் – ஒளி மிக்க
திங்களின்; பிளவென- பிறையென; தயங்குவாள் எயிற்றர் –
மின்னும் ஒளிமிக்க பற்களை உடையவரும்; தாம் அவிஞ்சையர்
– தாம் மாயத்தன்மை மிக்கவரும்; கடல் பெரும் தகையினர் –
பெருங்கடல் போல் பரந்தவராய்; தரளத் தாம விஞ்சையர்-
முத்துமாலை அணிந்த விந்தை மிக்கோராய்; திசைதொறும்-
எல்லாப் பக்கங்களிலும்; தருக்கித் துவன்றினர்- நெருங்கினர்.

———–

தாம் மடங்கலும், முடங்கு உளை யாளியும் தகுவார்,
தாம் அடங்கலும் நெடுந் திசை உலகொடும் தகைவார்,
தா மடங்கலும் கடலும் ஒத்து ஆர்தரும் தகையார்,
தாம் மடங்கலும் கொடுஞ் சுடர்ப் படைகளும் தரித்தார். 119-

தாம் மடங்கலும் – தாவும் இயல்பினவான சிங்கத்தையும்;
முடங்கு உளை யாளியும்- வளைந்த பிடரிமயிரை உடைய
யாளியையும்; தகுவார் – நிகர்த்தவர்களும்;தாம் அடங்கலும்
– தாம் அனைவரும்; நெடுந்திசை – நெடிய திசைகளை;
உலகொடும் தகைவார் – உலகினோடும் (போரில்) தடுக்க
வல்லவர்களும்; தா மடங்கலும் கடலும் ஒத்து ஆர்
தரும் தகையார்- தாவுகின்ற ஊழித்தீயும் கடலும் போல
ஆரவாரிக்கும் தன்மையர்; தாம்- ஒளிமிக்க; மடங்கலும் –
இடியேறுகளையும்; கொடுஞ்சுடர்ப் படைகளும்- கொடியதும் ஒளிமிக்கதுமான படைக்கலன்களையும்;
தரித்தார் – தாங்கி நின்றனர்.

————-

மாயப் படையின் விளைவு கண்டு, இராமன் மாதலியை வினவுதல்

இனயை தன்மையை நோக்கிய இந்திரை கொழுநன்,
‘வினையம் மற்று இது மாயமோ? விதியது விளைவோ?
வனையும் வன் கழல் அரக்கர்தம் வரத்தினோ? மற்றோ?
நினைதியாமெனின், பகர்’ என, மாதலி நிகழ்த்தும்: 120-

இனைய தன்மையை நோக்கிய- இப்படிப்பட்ட நிலையைக்
கண்ட; இந்திரை கொழுநன் – திருமகள் நாயகனாகிய
(இராமபிரான்); ‘இது வினயம் மாயமோ? – இந்தச் செயல் மாயம்
தானோ?; விதியது விளைவோ? – (இல்லையெனில்) விதியில்
நேர்ந்ததுதானோ?; வனையும் – அணிந்த; வன்கழல் அரக்கர்-
பெரிய கழலினை உடைய அரக்கர்களின்; வரத்தினோ?- வர
வலம் தானோ; மற்றோ?- வேறு காரணங்களால் நேர்ந்ததோ?;
நினைதியாம் எனில்- எண்ணி அறிந்திருந்தால்; பகர் –
கூறுவாயாக; என- என்று கேட்க; மாதலி நிகழ்த்தும் – மாதலி
உரைக்கலானான்.

————–

இராமன் ஞானக் கணையால் அதனை ஒழித்தல்

‘இருப்புக் கம்மியற்கு இழை நுழை ஊசி என்று இயற்றி,
விருப்பின், “கோடியால் விலைக்கு” எனும் பதடியின், விட்டான்-
கருப்புக் கார் மழை வண்ண!-அக் கடுந் திசைக் களிற்றின்
மருப்புக் கல்லிய தோளவன் மீள அரு மாயம். 121-

கருப்பு- கடும் பஞ்ச காலத்தில் (பெய்தற்கு முற்பட்ட);
கார் மழை வண்ண- கரிய முகில் நிற முடையாய்!; இருப்புக்
கம்மியற்கு- இரும்பினால் பணிசெய்கின்ற கொல்லனுக்கு;
இழை நுழை- நூலிழை நுழைகின்ற; ஊசி ஒன்று இயற்றி- ஓர் ஊசி
செய்து; விருப்பின்- ஆசையோடு; விலைக்குக் கோடியால்-
விலைக்குப் பெற்றுக்கொள்; எனும் – என்றுரைக்கும்;
பதடியின் – அறிவிலான் போன்று; அக்கடுந் திசைக்
களிற்றின் – அந்தக் கடுமைவாய்ந்த திசையானையின்; மருப்பு
– கொம்பினால்; கல்லிய – துளைக்கப்பட்ட; தோளவன்-
தோள்களையுடைய இராவணன்; மீள அரும் மாயம் –
தப்புதற்கு அரிதான மாயாஸ்திரத்தை; விட்டான்- எய்தான்?

————

‘வீக்கு வாய் அயில் வெள் எயிற்று அரவின் வெவ் விடத்தை
மாய்க்குமா நெடு மந்திரம் தந்தது ஓர் வலியின்,-
நோய்க்கும், நோய் தரு வினைக்கும், நின் பெரும் பெயர் நொடியின்,
நீக்குவாய்!-உனை நினைக்குவார் பிறப்பு என, நீங்கும். 122-

நோய்க்கும்- பிறவியாகிய நோயினுக்கும்; நோய்தரு
வினைக்கும் – அப்பிணியினை விளைவிக்கும் வினைகளுக்கும்
(எதிராக); நின் பெரும் பெயர்- உன் பெருமை மிக்க
திருநாமம்;நொடியின்- மொழிந்தால்; நீக்குவாய்! – (அவற்றை)
நீக்கி அருள்பவனே!; வீக்கு- அழிக்கும் தன்மையுடையதாய்;
வாயிலில்- வாயில் வைத்திருக்கின்ற; வெள் எயிற்று
அரவின் – வெண் பற்கள் கொண்ட பாம்பின்;
வெவ்விடத்தை – கொடிய நஞ்சினை; மாய்க்கும் –
அழிக்கின்றவாறு; நெடுமந்திரம் தந்தது ஓர் வலியின்-
உயர்ந்த மந்திரம் அளிக்கும் ஒப்பற்ற ஆற்றலைப் போன்று
(உன் அம்பின் வலிமையால் இம்மாயாஸ்திரம்); நினை
நினைக்குவார்- உன்னைத் தியானிப்பவர்; பிறப்பு என
நீங்கும்- பிறவி நீங்குவது போன்று தொலையும் (என்று
மாதலி கூறினான்)

இராமநாமத்தின் பெருமை கூறப்பட்டது.

———–

‘வரத்தின் ஆயினும், மாயையின் ஆயினும், வலியோர்
உரத்தின் ஆயினும், உண்மையின் ஆயினும், ஓடத்
துரத்தியால்’ என, ஞான மாக் கடுங் கணை துரந்தான்-
சிரத்தின் நான்மறை இறைஞ்சவும் தேடவும் சேயோன். 123-

நான்மறை- நான்கு வேதங்களும்; சிரத்தின் – தன் சிரசுக்கு
நிகரான உபநிடதங்களால்;இறைஞ்சவும் தொடரவும் – வணங்கவும்
தேடவும் (இயலாதவாறு); சேயோன் – அப்பாற்பட்டு நிற்பவனாகிய
இராமன்; வரத்தின் ஆயினும் – வர பலத்தினாலாவது; மாயையின்
ஆயினும்- மாயையினாலாவது; வலியோர் உரத்தின் ஆயினும் –
வல்லமை மிக்க ஆற்றலினாலாவது; உண்மையின் ஆயினும்
– சத்தியத்தினாலாவது (எந்த வகையிலாவது இருந்தாலும்); ஓடத்
துரத்தியால்-மாயாஸ்திரம் ஓடும்படித் துரத்துவாய்; என- என்று;
ஞானமாக் கடுங்கணை – ஞானமாகிய பெருமையும் கடுமையும்
நிறைந்த அம்பினை; துரந்தான் – எய்தான்.

—————-

துறத்தல் ஆற்று உறு ஞான மாக் கடுங் கணை தொடர,
அறத்து அலாது செல்லாது, நல் அறிவு வந்து அணுக,
பிறத்தல் ஆற்றுறும் பேதைமை பிணிப்புறத் தம்மை
மறத்தலால் தந்த மாயையின் மாய்ந்தது, அம் மாயை. 124-

துறத்தல் ஆற்று – (இராமபிரான்) ஏவியவழியில்; உறு –
உற்ற; மாக்கடும்- பெருமை மிக்கதும் கடுமை கொண்டதுமான;
ஞானக்கணை- ஞானாத்திரம்; தொடர- பின்தொடர; அறத்து
அலாது செல்லாத- அறத்துக்கு மாறான வழியில் செல்லும்
இயல்பு நீங்கி; நல்லறிவு வந்து அணுக- நல்லுணர்வு நெருங்கிச்
சேர்தலால்; பிறத்தல் ஆற்றுறும்- பிறப்பின் (காரணமாக)
வழிப்படும்; பேதைமை பிணிப்புற- அறியாமையின் கட்டுற்று;
தம்மை மறத்தலால்- தம் நிலை மறந்ததனால்; தந்த- ஏற்பட்ட;
மாயையின்- மாயை அழிவது போன்று; மாயம் மாய்ந்தது- அம்
மாயாத்திரம் தொலைந்தது.

————-

இராவணன் சூலம் வீசுதல்

நீலம் கொண்டு ஆர் கண்டனும், நேமிப் படையோனும்,
மூலம் கொண்டார், கண்டகர் ஆவி முடிவிப்பான்,
காலம் கொண்டார்; கண்டன முன்னே கழிவிப்பான்,
சூலம் கொண்டான், அண்டரை எல்லாம் தொழில் கொண்டான். 125-

நீலம் கொண்டு ஆர் – நீல நிறம் வந்து பொருந்திய;
கண்டனும்- கழுத்தை உடைய சிவபெருமானும்; நேமிப்
படையோனும்- சக்கரப் படை படைத்த திருமாலும்;மூலம்
கொண்டார்- (திருமாலின் நாபிக் கமலத்தை) மூலமாகக்
கொண்ட பிரமனும்; கண்டகர்- கொடிய அரக்கரின்; ஆவி
முடிவிப்பான்- உயிரை அழிப்பதற்கு; காலம் கொண்டார் –
உரிய காலத்தை அமைத்துக் கொண்டார்; அண்டரை எல்லாம்
– தேவாதி தேவர்களை எல்லாம்; தொழில் கொண்டான்-
ஏவல் கொண்டவனாகிய இராவணன்; முன்னே கண்டன
கழிவிப்பான்- கண்ணுக்கு முன்னே காண்பனவெல்லாம்
அழித்தல் கருதியவனாய்; சூலம் கொண்டான்- ஒரு
சூலாயுதத்தை ஏந்தினான்.

————–

கண்டா குலம் முற்று ஆயிரம் ஆர்க்கின்றது, கண்ணில்
கண்டு ஆகுலம் உற்று உம்பர் அயிர்க்கின்றது, ‘வீரர்-
கண் தா, குலம், முற்றும்’ சுடும் என்று அக் கழல் வெய்யோன்,
கண் தாகுதல் முன், செல்ல விசைத்துள்ளது கண்டான். 126-

ஆயிரம் கண்ட ஆகுலம்- ஆயிரம் கண்டம் (என்ற
ஒலிக்கருவி) என்னும் தொகுதி; முற்று ஆர்க்கின்றது-
முழுவதும் ஆரவாரிப்பதும்; கண்ணில் கண்டு-
கண்ணுற்று; ஆகுலம் உற்று- துன்பமடைந்து; உம்பர்-
தேவர்கள்; அயிர்க்கின்றது- ஐயுறுவதற்குக் காரணமானதும்;
வீரர் கண் – எதிர்த்து நிற்கும் வீரர் மாட்டுள்ள; தா-
வலிமையையும்; குலம்- குலத்தையும்; முற்றும் சுடும்-
முற்றிலுமாகச் சுட்டெரிக்கும்; என்று – எனக் கருதி; அக்
கழல் வெய்யோன் – அழகிய வீரக்கழலணிந்த கொடிய
இராவணன்;கண் தாகுதல் முன் – (பிறர்) கண் காணுமுன்;
செல்ல- செல்லுமாறு; விசைத்துள்ளது- வேகமாய்
விட்டதான (சூலாயுதத்தை);கண்டான்- இராமபிரான் கண்டான்.

—————-

எரியாநிற்கும் பல் தலை மூன்றும் எரி சிந்தி,
திரியாநிற்கும் தேவர்கள் ஓட, திரள் ஓட,
இரியாநிற்கும் எவ் உலகும் தன் ஒளியே ஆய்,
விரியா நிற்கும்; நிற்கிலது, ஆர்க்கும் விழி செல்லா, 127-

எரியா நிற்கும் பல்தலை- எரியும் அத்திரிசூலமானது; எரி
மூன்றும் அஞ்ச- மூன்று நெருப்பும் அஞ்சுமாறு; திரியா நிற்க
– சுழன்று திரிய; தேவர்கள் ஓட- (அதுகண்டு) தேவர்கள்
ஓட்டம் பிடிக்கவும்; திரள் ஓட- (வானரர் முதலிய) கூட்டம்
சிதறி ஓடவும்;இரியா நிற்கும் எவ்வுலகும்- நிலை
குலைகின்ற அனைத்து உலகங்களிலும்; தன் ஒளியே விரியா
நிற்கும்- தன் ஒளிப்பிழம்பே பரப்பிச் செல்லும்;
ஆர்க்கும்- எவருக்கும்; விழி செல்லா நிற்கிலது-
(அதன்மீது) பார்வை செல்லாமல் நில்லாது.

மூன்று நெருப்பு – ஆகவனீயம், காருகபத்தியம், தென்திசைத்
தீ என்பன.

————–

சூலத்தை வெல்ல தேவர்கள் இராமனை வேண்டுதல்

‘செல்வாய்’ என்னச் செல்ல விடுத்தான்; ‘இது தீர்த்தற்கு
ஒல்வாய் நீயே; வேறு ஒருவர்க்கும் உடையாதால்;
வல் வாய் வெங் கண் சூலம் எனும் காலனை, வள்ளால்!
வெல்வாய், வெல்வாய்!’ என்றனர், வானோர், மெலிகின்றார். 128-

‘செல்வாய்’ என்ன- ‘சென்று வா’ என்று; செல்ல
விடுத்தான்- (இராவணன்) சூலத்தைச் செல்லுமாறு ஏவினான்;
வானோர் – தேவர்கள்; மெலிகின்றார் – (உடலும் மனமும்)
வாட்டமுற்றவராய்; ‘வள்ளால் இது தீர்த்தற்கு நீயே
ஒல்வாய்- வள்ளலே! இதனை அழித்தற்கு உன்னால்தான்
முடியும்;வேறு ஒருவர்க்கும் உடையாது- பிறர் எவராலும்
(இதனை) அழிக்கவொண்ணாது; வல்வாய் வெங்கண் சூலம் –
வலிய வாயுடன் கொடிதாய் வரும் சூலம்; எனும் காலனை-
எனப் (பெயர் தரித்த) கூற்றுவனை; வெல்வாய் வெல்வாய் –
வெற்றி கொள்க, வெற்றி கொள்க’; என்றனர்- என்று
வேண்டினர்.

————-

சூலத்தின்மேல் எறிந்த படைகள் பயனிலவாக, இராமன் செய்வதறியான் போல் இருத்தல்

துனையும் வேகத்தால் உரும் ஏறும் துண்ணென்ன
வனையும் காலின் செல்வன,-தன்னை மறவாதே
நினையும் ஞானக் கண் உடையார்மேல் நினையாதார்
வினையம் போலச் சிந்தின-வீரன் சரம் வெய்ய. 129-

துனையும் வேகத்தால்- விரையும் வேகத்தால்; உரும் ஏறும்
துண்ணென்ன- இடியேறும் திடுக்கிடுமாறு; வனையும் காலின்
செல்வன- சூழும் காற்றெனச் செல்லுகின்ற; வீரன் வெய்ய
சரம்- இராமபிரான் ஏவிய கொடிய அம்புகள்; தன்னை மறவாதே
நினையும் – தன்னை என்றும் மறக்காது சிந்திக்கும்;
ஞானக்கண் உடையார் மேல் – ஞானக்கண் படைத்த பேரன்பாளர்
மீது; நினையாதார் வினையம்- இறைவனை நினையாத கீழ்
மக்கள் செய்யும் தீமைகள்; போலச் சிந்தின- பயன் தராது
அழிவது போன்று சிதறி விழுந்தன.

——————

எய்யும், எய்யும் தேவருடைத் திண் படை எல்லாம்;
பொய்யும் துய்யும் ஒத்து, அவை சிந்தும்; புவி தந்தான்
வையும் சாபம் ஒப்பு என வெப்பின் வலி கண்டான்,
ஐயன் நின்றான், செய் வகை ஒன்றும் அறிகில்லான். 130-

புவி தந்தான் – பூமி காக்கும் இராமபிரான்; தேவர் உடைத்
திண்படை எல்லாம்- வானோரின் வலிமை மிக்க படைக் கருவி-
களெல்லாம்; எய்யும் எய்யும் – இடைவிடாது தொடுத்தான்; அவை
– அவ்வாயுதங்கள்; பொய்யும் துய்யும் ஒத்து- பொய்ம்மையும்
(மெல்லிய) பஞ்சினையும் போன்று; சிந்தும் – (சூலத்தை வெல்லாது)
சிதறின; அய்யன்- இராமபிரான்; வய்யும் சாபம் ஒப்பு என-
வைகின்ற சாபம் போன்று; வெப்பின்- வெம்மை சான்ற சூலத்தின்;
வலி கண்டான்- வலிமையை உணர்ந்தான்; செய்வகை ஒன்றும்
அறிகில்லான் நின்றான்- யாதும் செய்தற்கறியாதவன் போன்று
(செயலற்று) நின்றான்.

—————

இராமனை நெருங்கிய சூலம் அவனது உங்காரத்தால் பொடியாதல்

‘மறந்தான் செய்கை; மற்று எதிர் செய்யும் வகை எல்லாம்
துறந்தான்’ என்னா, உம்பர் துணுக்கம் தொடர்வுற்றார்;
அறம்தான் அஞ்சிக் கால் குலைய, தான் அறியாதே,
பிறந்தான் நின்றான்; வந்தது சூலம், பிறர் அஞ்ச. 131-

செய்கை மறந்தான் – (இராமபிரான்) செயலாற்றும் முறையை
மறந்து போனான் மற்று எதிர் செய்யும் வகை எல்லாம்-
மேலும் எதிரிகளை எதிர்த்துச் செய்ய வேண்டுவன அனைத்தையும்;
துறந்தான்- நீத்து விட்டான்; என்னா- என்று கருதி; உம்பர்-
தேவர்கள்; துணுக்கம் தொடர்வுற்றார்- அச்சம் தொடர நின்றனர்;
அறம் தான் அஞ்சிக் கால் குலைய- அறம் நடுநடுங்கி நிலை
குலைந்து போக; பிறந்தான்- மனிதனாகப் பிறந்த இராமபிரான்;
தான் அறியாதே நின்றான் – தன் தெய்வீகத்தை உணராது
நின்றான்;பிறர் அஞ்ச – (அது சமயம்) கண்டவர் அஞ்சுமாறு;
சூலம் வந்தது- சூலப்படை நெருங்கி வந்தது.

————-

சங்காரத்து ஆர் கண்டை ஒலிப்ப, தழல் சிந்த,
பொங்கு ஆரத்தான் மார்பு எதிர் ஓடிப் புகலோடும்,
வெங் காரத்தான் முற்றும் முனிந்தான்; வெகுளிப் பேர்
உங்காரத்தால் உக்கது, பல் நூறு உதிர் ஆகி. 132-

(அச்சூலம்) சங்காரத்தான்- அழிவைச் செய்வதற்காக; கண்டை
ஒலிப்ப- மணிகள் ஒலிக்க; தழல் சிந்த- நெருப்புச் சிதற; பொங்கு
ஆரத்தான் மார்பு எதிர்- நிரம்பிய முத்து மாலைகளை அணிந்த
இராமனது மார்பின் எதிராக; ஓடிப் புகலோடும்- விரைந்து வந்த
அளவில் (இராமன்); வெங்காரத்தான் – கொடிய வெறுப்போடு;
முற்றும் முனிந்தான் – மிகவும் கோபித்தான்; வகுளிப் பேர்
உங்காரத்தால் – பெரிய சினத்தால் உண்டாகிய உங்கார
சப்தத்தாலேயே; பல்நூறு உதிர் ஆகி உக்கது – (அச்சூலம்)
பல நூறு பொடிகளாகிச் சிந்தியது.

————

வானோரின் பெரு மகிழ்ச்சி

ஆர்ப்பார் ஆனார்; அச்சமும் அற்றார்; அலர் மாரி
தூர்ப்பார் ஆனார்; துள்ளல் புரிந்தார்; தொழுகின்றார்,
‘தீர்ப்பாய் நீயே தீ என வேறாய் வரு தீமை
பேர்ப்பாய் போலாம்!’ என்றனர்-வானோர், உயிர் பெற்றார். 133-

வானோர்- தேவர்கள்; உயிர் பெற்றார்- இழந்த உயிரை
மீண்டும் பெற்றவர்களாகி; ஆர்ப்பார் ஆனார் – ஆரவாரித்தார்கள்;
அச்சமும் அற்றார்- பயம் நீங்கினார்கள்; அலர் மாரி தூர்ப்பார்
ஆனார்- மலர் மழையை எங்கும் சொரிந்து தூர்த்தார்கள்; துள்ளல்
புரிந்தார்- துள்ளுதலையும் செய்தார்கள்;”தீர்ப்பாய் நீயே தீ என
வேறாய் வரு தீமை பேர்ப்பாய்” என்றனர் தொழுகின்றார் –
இந்தச் சூலத்தைத் தீர்ப்பவனாகிய நீயே எனக்கு நெருப்பென
வேறாக வருகின்ற தீமைகளையும் நீக்குவாய் ஆவாய் என்று
கூறியவர்களாய் வணங்குகின்றார்கள்.

———-

இராமனை வேத முதல்வனோ என இராவணன் கருதுதல்

‘வென்றான்’ என்றே, உள்ளம் வெயர்த்தான், ‘விடு சூலம்
பொன்றான் என்னின் போகலது’ என்னும் பொருள் கொண்டான்;
ஒன்று ஆம் உங்காரத்திடை உக்கு, ஓடுதல் காணா நின்றான்,
அந் நாள் வீடணனார் சொல் நினைவுற்றான். 134-

விடுசூலம்- நாம் விட்ட சூலம்; பொன்றான் என்னின் போகலது
என்னும் பொருள் கொண்டான் – (இராமன்) இறந்தால் அல்லாமல்
அவனை விட்டுப் போகாது என்னும் கொள்கையைக் கொண்டவனாகிய
இராவணன்; ஒன்று ஆம் உங்காரத்திடை- (இராமனது) தனித்தன்மை
வாய்ந்த உங்கார சப்தத்தால்; உக்கு ஓடுதல் காணா நின்றான் –
பொடிப் பொடியாகிப் போதலைக் கண்ணால் கண்டு நின்றவனாகி;
வென்றான் என்றே உள்ளம் வியந்தான் – இவன் நம்மை வெற்றி
கொண்டான் என்று மனத்தில் அவனை நன்கு மதித்து; அந்நாள்
வீடணனார் சொல் நினைவுற்றான்- (அனுமன் தூது வந்த பொழுதும்,
மந்திர அவையிலும்) தன் தம்பியாகிய வீடணனது அறிவுரைகளை
மனத்தில் நினைத்தான்.

————-

‘சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்; திருமாலாம் அவனோ? அல்லன்;
மெய் வரம் எல்லாம் அடுகின்றான்; தவனோ என்னின்,
செய்து முடிக்கும் தரன் அல்லன்; இவனோதான்
அவ் வேத முதல் காரணன்?’ என்றான். 135-

என் மெய் வரம் எல்லாம் அடுகின்றான் – என்னுடைய
உண்மையான மிகச்சிறந்த வரபலங்களை எல்லாம் அழிக்கின்றான்;
சிவனோ? – இவ்இராமன் சிவபெருமானாய் இருப்பானோ?
அல்லன் – அப்படி இரான்; திருமாலாம் அவனோ? –
திருமாலாகிய அவனாக இருப்பானோ?; அல்லன் – அப்படியும்
இரான்; தவனோ என்னின் – தவம் செய்து ஆற்றல் பெற்றவனாய்
இருப்பானோ என்றால்; செய்து முடிக்கும் தரன் அல்லன்-
இத்தகைய பேராற்றலைத் தவத்தால் செய்து முடிக்கு தகுதியுடையவன்
ஒருவனும் இல்லை; (ஆதலின்) அவ் வேத முதல் காரணன்
இவனோதான் – அந்தத் தொன்மையான வேதங்களுக்கெல்லாம் மூல
காரணமான ஆதிப் பரம் பொருள் இவன் தானோ?; என்றான்-
என்று கூறி வியந்து பிரமித்து நின்றான்.

————–

இராவணன் நிருதியின் படையை விடுதல்

‘யாரேனும் தான் ஆகுக! யான் என் தனி ஆண்மை பேரேன்;
இன்றே வென்றி முடிப்பென்; பெயர்கில்லேன்; நேரே
செல்வென் கொல்’ என் அரக்கன் நிமிர்வு எய்தி,
‘வேரே நிற்கும்; மீள்கிலென்’ என்னா, விடலுற்றான். 136-

யாரேனும் தான் ஆகுக- எதிர் நிற்பவன் (மேல் நாம்
நினைத்தவருள்) எவனாக இருப்பினும் இருந்து விட்டுப்
போகட்டும்; யான் என் தனி ஆண்மை பேரேன் – நான்
எனக்கேயுரிய தனியாற்றலிலிருந்தும் பெயர மாட்டேன்;
நின்றே வென்றி முடிப்பென் – (எதிர்) நின்றே என்
வெற்றியை முடிப்பேன்; புகழ் பெற்றேன்- மூவுலகிலும் நான்
வீரத்தால் புகழ் பெற்றவன்; நேரே செல்லும்- (ஒரு வீரன்)
நேருக்கு நேர் செல்வான்; ‘கொல்லும் – கொல்வான்;எனில்
தான் – என்றால்தான்; நிமிர் வென்றி வேரே நிற்கும்-
மடங்காத வெற்றியின் (புகழ்) வேர் நிலைத்து நிற்கும்;
மீள்கிலென்- (எது நேரினும்) திரும்பேன்; என்னா விடல்
உற்றான்- என்று கூறியவாறு (இராவணன்) அம்புகளை
விடுவதற்கு ஒருப் பட்டான்.

முன் பாடலில் சிறிதே தலையெடுத்த சத்துவகுணம், இராவணனின்
ராசதக் குணத்தால் மீண்டும் அடங்கி ஒடுங்கிப் போனமையை
இப்பாடல் அறிவிக்கின்றது.

————–

நிருதித் திக்கில் நின்றவன் வென்றிப் படை நெஞ்சில்
கருதி, தன்பால் வந்தது அவன் கைக்கொடு, காலன்
விருதைச் சிந்தும் வில்லின் வலித்து, செலவிட்டான்-
குருதிச் செங் கண் தீ உக, ஞாலம் குலைவு எய்த. 137-

நிருதித் திக்கில் நின்றவன்- நிருதியின் திசையில்
நிற்கும் திக்குப் பாலகனுடைய; வென்றிப் படை நெஞ்சில்
கருதி- வெற்றி தரும் படைக்கலத்தை நெஞ்சத்தில்
தியானிக்க; தன்பால் வந்தது- அப்படை (உடனே)
அவனிடம் வந்தது; அவன் கைக்கொடு- அந்த இராவணன்
அதனைக் கையால் ஏற்று; காலன் விருதைச் சிந்தும்-
யமனுடைய வீர விருதுகளையெல்லாம் அழித்தொழிக்க
வல்ல; வில்லில் வலித்து- (தன்) வில்லில் ஏற்றி; குருதிச்
செங்கண் தீ உக- உதிரம் போல் சிவந்த (தன்) கண்கள்
தீயுமிழுமாறும்; ஞாலம் குலைவு எய்த- உலகம் நிலை
குலையவும்; செலவிட்டான்- அந்த (நிருதிக்கணையை)
விடுத்தான்.நிருதித் திசை – தென்மேற்குத் திசை.

————-

வையம் துஞ்சும் வன் பிடர் நாகம் மனம் அஞ்ச,
பெய்யும் கோடிப் பல் தலையோடும் அளவு இல்லா,
மெய்யும் வாயும் பெற்றன, மேருக் கிரி சால
நொய்து என்று ஓதும் தன்மைய ஆக நுழைகிற்ப, 138-

வய்யம் துஞ்சும்- (இந்த) உலகம் தங்குதற்கிடமான; வன்
பிடர் நாகம்- வலிய பிடரியையுடைய ஆதிசேடன்;மனம் அஞ்ச
– மனம் பயம் கொள்ளுமாறு; கோடிப் பல் தலையோடும்
– வரிசையாக அமைந்த தலைகளோடும்; பய்யும்- படங்களும்;
அளவு இல்லா மெய்யும்- எண்ணிக்கை கடந்த உடல்களும்;
வாயும் பெற்றன- வாய்களும் பெற்றனவும்; மேரு கிரி சால
நொய்து- மேரு மலை இவற்றோடு ஒப்பிட மிகவும் கனமற்றது;
என்று ஓதும் தன்மைய- என்று கூறத்தக்கனவாய்; நுழைகின்ற
– நுழைகின்றனவும்;

————-

வாய் வாய்தோறும் மா கடல் போலும் விட வாரி
போய் வாழ்கின்ற, பொங்கு அனல் கண்ணின் பொழிகின்ற
மீவாய் எங்கும் வெள்ளிடை இன்றி மிடைகின்ற,
பேய் வாய் என்ன வெள் எயிறு எங்கும் பிறழ்கின்ற. 139-

வாய் வாய் தோறும்- ஒவ்வொரு வாயிலிருந்தும்;
மாகடல் போலும்- பெருங்கடல் நீர் போலும்; விடநீர்
போய் வார்கின்ற – நச்சுநீர் மிகுதியாக ஒழுகப்
பெற்றனவும்; பொங்கு அனல் கண்ணில் பொழிகின்ற
– மிக நெருப்பைக் கண்களில் கொட்டுகின்றனவும்; மீவாய்
எங்கும்- மேலிடம் எங்கும்; வெள் இடை இன்றி –
வெற்றிடம் இல்லாமல்; மிடைகின்ற- நெருங்குகின்றனவும்;
பேய் வாய் அன்ன- பேய்களின் வாய்களைப் போல;
வெள் எயிறு – வெண்மையான பற்கள்; பிறழ்கின்ற-
விளங்குகின்றனவும்.

————-

‘கடித்தே தீரும்; கண் அகன் ஞாலம் கடலோடும்
குடித்தே தீரும்’ என்று உயிர் எல்லாம் குலைகின்ற,
‘முடித்தான் அன்றோ, வெங் கண் அரக்கன்? முழு முற்றும்
பொடித்தான் ஆகும், இப்பொழுது’ என்னப் புகைகின்ற. 140-

கடித்தே தீரும்- (இந்த நிருதிக்கணை) (இராமனைத்)
தீண்டிக் கடித்தே தீரும்; கண் அகல் ஞாலம் கடலோடும்
குடித்தே தீரும்- (கடித்துவிட்டு) இடமகன்ற இந்த உலகத்தைக்
கடலோடும் சேர்த்துக் குடித்தே தீரும்; என்று உலகெல்லாம்
குலைகின்ற- எனக் கூறி உலகோர் நிலைகுலைவதற்கு ஏதுவாய்;
வெங்கண் அரக்கன்- அருளற்ற இந்த இராவணன்; முழுமுற்றும்
முடித்தான் – உலகம் அடங்கலும் அழித்துக் கட்டிவிடுவான்;
இப்பொழுது பொடித்தான் ஆகும் – இப்பொழுதே பொடி செய்து
விடுவான்; என்னப் புகைகின்ற- என்னுமாறு புகை கக்கி வந்தன
(அந்த நிருதிக்கணையுமிழ்ந்த நாகங்கள்)

————–

நிருதிப் படையைப் போக்க, இராமன் கருடப் படையை விடுதல்

அவ்வாறு உற்ற ஆடு அரவன் தன் அகல் வாயால்
கவ்வா நின்ற மால் வரை முற்றும் அவை கண்டான்,
‘எல் வாய்தோறும் எய்தின’ என்னா, எதிர் எய்தான்,
‘தவ்வா உண்மைக் காருடம் என்னும் படைதன்னால். 141-

அவ்வாறு உற்ற ஆடு அரவம்- அங்ஙனம் படமெடுத்தாடும்
இயல்பான நாகங்கள்; தன் அகல்வாயில்- தம் அகன்ற
வாயினால்; மால் வரை முற்றும்- பெரிய மலைகள் முழுவதையும்;
கவ்வா நின்ற அவை கண்டான்- கவ்வத்தக்கனவாய் அவை
வருவதை (இராமன்) கண்டான்; எவ்வாய் தோறும் எய்தின-
இந்த நாகங்கள் எல்லா இடங்களிலும் வந்து அடைந்தன; என்னா
– என்றெண்ணி; தவ்வா- தவறாத; மெய்ம்மைக் காருடம்
என்னும் படை தன்னால்- உண்மையுடைய கருடாத்திரம் என்னும்
படைக்கலத்தால்; எதிர் எய்தான்- (அந்நாகக் கணைகளை
அழிக்க) எதிர்க்கணையாக விட்டான்.

———————

எவண் எத்தன்மைத்து ஏகின நாகத்து இனம் என்ன,
பவணத்து அன்ன வெஞ் சிறை வேகத் தொழில் பம்ப,
சுவணக் கோலத் துண்டம் நகம் தொல் சிறை வெல் போர்
உவணப் புள்ளே ஆயின, வானோர் உலகு எல்லாம். 142-

நாகத்து இனம் – (இராவணன் நிருதிக்கணையால் விடுத்த)
நாகக் கூட்டங்கள்; எவண் எத்தன்மைத்து ஏகின என்ன-
எங்கே எவ்வாறு ஏகி மறைந்தன என்று வியக்குமாறு; பவணத்து
அன்ன வெஞ்சிறை- காற்றைப் போன்ற கொடிய சிறகுகளில்;
வேகத் தொழில் பம்ப- விசையுடன் கூடிய பறக்கும் செயல்
நிறைதலால்; சுவணக்கோலம்- பொன்மயமான நிறத்தையும்;
துண்டம், நகம், தொல் சிறை- மூக்கையும், நகத்தையும்,
முதிர்ந்த சிறகையும் கொண்ட; போர்வெல் உவணப் புள்ளே-
போரில் வெற்றியையே பெறும் கருடப் பறவையின் மயமாகவே;
வானோர் உலகு எல்லாம் ஆயின- தேவர் உலகு முழுவதும்
மாறின.

பவணம் – காற்று. பவனம் என்ற வடசொல் எதுகை நோக்கிப்
பவணம் என வந்தது.

———–

அளக்க அரும் புள் இனம் அடைய ஆர் அழல்
துளக்க அரும் வாய்தொறும் எரியத் தொட்டன,
‘இளக்க அரும் இலங்கை தீ இடுதும், ஈண்டு’ என
விளக்கு இனம் எடுத்தன போன்ற, விண் எலாம். 143-

அளக்க அரும் புள்ளினம் அடைய- எண்ண முடியாத
கருடப் பறவைத் தொகுதி எல்லாம்; துளக்க அரும் வாய்
தொறும்- அசைத்தற்கு இயலாத வாய்கள் தோறும்; ஆர்
அழல் எரியைத் தொட்டன- பெருந் தீயையுமிழ்ந்தன;
அவை இளக்க அரும் இலங்கை தீ இடுதும் – நெகிழாத
இலங்கையை நெகிழ்விக்க நெருப்பையிடுவோம்; ஈண்டு என-
விரைவில் என்று; விண் எலாம்- விண்ணுலகத் தேவர்
எல்லோரும்; விளக்கு இனம் எடுத்தன போன்ற-
விளக்குகளின் தொகுதியை எடுத்தாற் போன்றிருந்தன.

—————

குயின்றன சுடர் மணி, கனலின் குப்பையின்
பயின்றன, சுடர் தரப் பதும நாளங்கள் வயின் தொறும்
கவர்ந்தென, துண்ட வாள்களால் அயின்றன,
புள் இனம் உகிரின் அள்ளின. 144-

குயின்ற(ன்)ன- நாகங்களின் தலையில் பதித்து வைத்தாற்
போன்ற; சுடர்மணி கனலின் குப்பையின் பயின்றன-
ஒளியுள்ள மாணிக்கங்கள் தீயின் தொகுதியைப் போன்றனவாய்;
சுடர் தர – ஒளிவீச; புள் இனம் – அந்தக் கருடப்
பறவைகள்; பதும நாளங்கள்- தாமரைத் தண்டுகளை; வயின்
தொறும்- இடந்தோறும்; கவர்ந்தென- கவர்ந்து சென்றாற்
போல; உகிரின் அள்ளின- அப்பாம்புகளைக் கால்
நகங்களால் அள்ளி; துண்ட வாள்களால் – மூக்குகளாகிய
வாள்களைக் கொண்டு; அயின்றன- கொத்தித் தின்றன.

————

ஆயிடை அரக்கனும், அழன்ற நெஞ்சினன்,
தீயிடைப் பொடிந்து எழும் உயிர்ப்பன், சீற்றத்தன்,
மா இரு ஞாலமும் விசும்பும் வைப்பு அறத்
தூயினன், சுடு சரம் உருமின் தோற்றத்த. 145-

ஆயிடை- அப்போது; அரக்கனும் அழன்ற நெஞ்சினன் –
இராவணனும் கொதிக்கும் நெஞ்சினன் ஆகி; தீயிடைப் பொடிந்து
எழும் உயிர்ப்பன்- நெருப்புப் பொடியாகச் சிந்துகின்ற பெரு
மூச்சுடையவனாய்; சீற்றத்தன்- வெகுளி மிக்கவனாய்; மா இரு
ஞாலமும் விசும்பும்- மிக விரிந்த இந்த உலகமும் ஆகாயமும்;
வைப்பு அற- இடமில்லையென்னும்படி; உருமின் தோற்றத்த-
இடியைப் போன்று காட்சி தரும்; சுடுசரம் தூயினன் – சுடுகின்ற
அம்புகளை வாரி வீசினான்.

—————

அங்கு அ(வ்) வெங் கடுங் கணை அயிலின் வாய்தொறும்,
வெங் கணை படப் பட, விசையின் வீழ்ந்தன;
புங்கமே தலை எனப் புக்க போலுமால்;
துங்க வாள் அரக்கனது உரத்தில் தோற்றல! 146-

அங்கு அவ் வெம்கடும் கணை- அப்போது இராவணன்
விட்ட கொடிய வேகங்கொண்ட அம்புகள்; அயிலின் வாய்
தொறும்- (தம்முடைய) கூரிய வாய்கள் தோறும்;வெம்கணை
படப்பட – (இராமனுடைய) கொடிய அம்புகள் படப்பட;
விசையின் வீழ்ந்தன – வேகமாகச் சில வீழ்ந்தன; துங்கவாள்
அரக்கனது உரத்தில் – (வீரத்தில்) உயர்ந்தவனான இராவணனது
மார்பில்; புங்கமே தலையெனப் புக்க- அம்பின் முனையே
தலையாகப் புகுந்து கொண்டன; தோற்றல- (அதனால் அவை)
கண்களுக்குப் புலப்படவில்லை.

————-

இராவணன் விஞ்சைகள் தளர்தலும், இராமன் வீரமும் வலியும் மிகுதலும்

ஒக்க நின்று எதிர் அமர் உடற்றும் காலையில்,
முக்கணான் தட வரை எடுத்த மொய்ம்பற்கு
நெக்கன, விஞ்சைகள், நிலையின் தீர்ந்தன;
மிக்கன, இராமற்கு வலியும் வீரமும். 147-

ஒக்க நின்று – சரிசமமாக நின்று; எதிர் – எதிர்த்து;
அமர் உடற்றும் காலையில்- போர்புரியும் போது;
முக்கணான் தடவரை எடுத்த மொய்ம்பற்கு-
சிவபெருமானது பெரிய கயிலை மலையைத் தூக்கிய
தோள்களையுடைய வலிமை வாய்ந்த இராவணனுக்கு;
விஞ்சைகள்- அவன் கற்று வைத்திருந்த மாய
வித்தைகள்; நெக்கன- (நினைவுக்கு வரும் தன்மைகள்)
நெகிழ்ந்தனவாயின;நிலையில் தீர்ந்தன- (ஆதலால்)
அவற்றின் தெய்வத்தன்மைகள் அகன்று போயின; இராமற்கு வலியும் வீரமும் மிக்கன- இராம
பிரானுக்கோ வல்லமையும் வீரத் தன்மையும் மிகத் தொடங்கின.

——————

பிறை முக அம்பினால் இராமன் இராவணன் தலையை அறுக்க, அது கடலில் போய் விழுதல்

வேதியர் வேதத்து மெய்யன, வெய்யவற்கு
ஆதியன் அணுகிய அற்றம் நோக்கினான்,
சாதியின் நிமிர்ந்தது ஓர் தலையைத் தள்ளினான்,
பாதியின் மதி முகப் பகழி ஒன்றினால். 148-

வேதியர் வேதத்து மெய்யன்- வேதம் வல்லோர்
ஓதுகின்ற வேதத்தின் உண்மைப் பொருளாயிருக்கும் இராமபிரான்;
வெய்யவர்க்கு ஆதியன்- கொடியவர்கட்கெல்லாம்
முதல்வனாயிருக்கும் இராவணனுக்கு; அணுகிய அற்றம்
நோக்கினான்- (இராவணன் தலையைக் கொய்ய இதுவே) ஏற்ற
சமயம் என்று உணர்ந்து; சாதியின் நிமிர்ந்த ஓர் தலையை-
அவன் தலைக் கூட்டத்தில் சிறந்த ஒரு தலையை; பாதியின்
மதி முகப்பகழி ஒன்றினால்- அர்த்தசந்திரக்கணை ஒன்றால்;
தள்ளினான் – (அறுத்து நிலத்தில்) வீழ்த்தினான்.

————

மேருவின் கொடுமுடி, வீசு கால் எறி
போரிடை, ஒடிந்து போய், புணரி புக்கென
ஆரியன் சரம் பட அரக்கன் வன் தலை
நீரிடை விழுந்தது, நெருப்பொடு அன்று போய். 149-

வீசு கால் எறி போரிடை- வீசுகின்ற தன்மையனான காற்றுக்
கடவுளோடு நிகழ்ந்த (ஆதிசேடனின்) போரில்; மேருவின்
கொடுமுடி- மேரு மலையின் சிகரம்; ஒடிந்து போய் – முறிந்து
போய்; புணரி புக்கென- கடலில் புகுந்தது போல்; ஆரியன்
சரம் பட- இராமபிரானுடைய அம்பு தாக்கியதன் விளைவாக;
அரக்கன் வன் தலை- இராவணனது வலிய தலை; அன்று-
அந்நாளில்; நெருப்பொடு போய் நீரிடை வீழ்ந்தது- தீயோடு
சென்று கடல் நீரில் போய் விழுந்தது.

————–

குதித்தனர் பாரிடை, குன்று கூறுற
மிதித்தனர்; வடகமும் தூசும் வீசினார்
துதித்தனர்; பாடினர்; ஆடித் துள்ளினார்;
மதித்தனர், இராமனை-வானுளோர் எலாம். 150-

வான் உளோர் எலாம் – விண்ணுலக வாசிகளான தேவர்கள்
யாவரும்; பாரிடை குதித்தனர் – மண்மீது குதித்தார்கள்; குன்று
கூறுஉற மிதித்தனர் – திரிகூட மலை மூட்டு நெகிழும்படி
துகைத்தார்கள்; வடகமும் தூசும் வீசினர் – (மகிழ்வின்
மிகுதியால்) மேலாடைகளையும் இடையாடைகளையும் வீசியெறிந்தனர்;
இராமனைத் துதித்தனர் பாடினர் ஆடித்துள்ளினர் –
இராமபிரானை துதித்து, பாடி, ஆடித்துள்ளி மகிழ்ந்தனர்; மதித்தனர்
– (இராமபிரானின்) பேராற்றலை உயர்த்திப் போற்றினர்.

——————-

இராவணனது அற்ற தலை மீண்டும் முளைத்து, இராமனை ஆரவாரத்துடன் வைது அதட்டுதல்

இறந்தது ஓர் உயிருடன் தருமத்து ஈட்டினால்
பிறந்துளதாம் எனப் பெயர்த்தும், அத் தலை
மறந்திலது எழுந்தது, மடித்த வாயது;-
சிறந்தது தவம் அலால், செயல் உண்டாகுமோ! 151-

இறந்தது ஓர் உயிர்- இறந்துபோன ஓர் உயிர்; கருமத்து
ஈட்டினால்- (ஈட்டிய) கருமங்களின் தொகுதியால்; உடன் –
உடனே; பிறந்து உளதாம் என- (மீண்டும்) பிறந்திருப்பது
போல; பெயர்த்தும் – திரும்பவும்; மறந்திலது- (முன்
இருந்த நிலைமையை) மறவாமல்; மடித்த வாயது- (சினத்தால்)
மடித்த வாயோடு கூடியதாய்; அத்தலை எழுந்தது- அந்த
இராவணன் தலை மீண்டும் முளைத்தது;சிறந்தது தவம் அலால்
– (உலகில்) சிறந்ததான தவம் இல்லையானால்; செயல்
உண்டாகுமோ- (இவ்வாறான) அரிய செயல்கள் நிகழக் கூடுமோ?
(கூடாது).

—————-

கொய்தது, ‘கொய்திலது’ என்னும் கொள்கையின்
எய்த வந்து, அக் கணத்து எழுந்தது ஓர் சிரம்,
செய்த வெஞ் சினத்துடன் சிறக்கும் செல்வனை
வைதது, தெழித்தது, மழையின் ஆர்ப்பினால். 152-

கொய்தது- கொய்யப் பெற்றதாகி; கொய்திலது-
கொய்யப் படவில்லை; என்னும் கொள்கையின்-
என்னும் எண்ணம் உண்டாகுமாறு; எய்த அக்கணத்து
– எய்த அந்தக் கணத்திலேயே; வந்து எழுந்தது ஓர்
சிரம்- (உடனே) வந்து ஒரு தலை முளைத்தது; செய்த
வெஞ்சினத்துடன்- வெளிப்படும்படியான கொடுங்
கோபக் குறியுடன்; சிறக்கும் செல்வனை-
பெருமைக்குரிய இராமபிரானை; மழையின் ஆர்ப்பது-
மழை போன்ற ஆரவாரத்துடன்; வைதது தெழித்தது-
வைது திட்டியது.

—————

கடலீல் வீழ்ந்த இராவணன் தலையும் ஆரவாரித்தல்

இடந்தது கிரிக் குவடு என்ன எங்கணும்
படர்ந்தது, குரை கடல் பருகும் பண்பது,
விடம் தரு விழியது, முடுகி, வேலையில்
கிடந்ததும், ஆர்த்தது, மழையின் கேழது. 153-

விடம் தரு விழியது- நஞ்சைக் கக்குகின்ற
கண்களையுடையதாகி; முடுகி- விரைந்து; வேலையில்
கிடந்ததும் – கடலிற் கிடந்ததான தலையும்; கிரிகுவடு
கிடந்தது என்ன- மலைச்சிகரம் குத்தி எடுக்கப்பட்டது
என்னுமாறு; எங்கணும் படர்ந்தது- எங்கும் சென்றதாகி;
மழையின் கேழது- மேகத்தின் நிறத்தைக் கொண்டு;
குரை கடல் – ஒலிக்கின்ற கடலின் நீரை; பருகும்
பண்பது – பருகுகின்ற தன்மையதாய்; ஆர்த்தது –
ஆரவாரித்தது.

மேகம் கடல்நீரை உண்ணும் தன்மையது எனும் புராண
மரபு பற்றி, இராவணன் தலைமை மேகமாக்கி, கடல் நீரினை
அது உண்டு ஆர்ப்பரித்தது என்றார்.

———-

இராவணனது கையை இராமன் அறுக்க, அதுவும் முன்போல் முளைத்தல்

‘விழுத்தினன் சிரம்’ எனும் வெகுளி மீக்கொள,
வழுத்தின, உயிர்களின் முதலின் வைத்த ஓர்
எழுத்தினன், தோள்களின் ஏழொடு ஏழு கோல்
அழுத்தினன்-அசனி ஏறு அயிர்க்கும் ஆர்ப்பினான். 154-

அசனு ஏறு அயிர்க்கும் ஆர்ப்பினான்- பேரிடியும்
அஞ்சக் கூடியவாறு ஆர்ப்பரிக்கின்ற இராவணன்; சிரம்
விழுத்தினன் எனும் வெகுளி மீக்கொள- தன் தலையை
(இராமன்) வீழ்த்திவிட்டான்
என்கின்ற வெகுளி மேல் ஓங்கி; வழுத்தினன்- (யாவரும்)
போற்றுமாறு; உயிர்களின் முதலில்- உயிர் எழுத்துக்களின்
முதலிலே; வைத்த ஓர் எழுத்தினன் தோள்களில்-
வைக்கப் பட்டுள்ள ஒப்பற்ற எழுத்தாகிய அகர வடிவினனான
இராமபிரானுடைய தோள்களில்; ஏழொடு ஏழு கோல்
அழுத்தினான் – பதினான்கு சரங்களைப் பதித்தான்.

”எழுத்துகளில் நான் அகரமாக இருக்கிறேன்” என்பது
”அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே
உலகு” என்று வள்ளுவனார் வாக்கும் நோக்குக. (குறள்: 1)
”அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி, நாத
மாத்திரையாகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத்
தலைமை, செயற்கையுணர்வானன்றி, இயற்கையுணர்வான்
முற்றும் உணர்தலானும் கொள்க என்ற இக்குறளுக்குப்
பரிமேலழகர் உரைத்த நயவுரையும் இங்கு நினைத்தற் குரியது.
இராமன் அகார வாச்சியனான மூல முதற் பொருளே என
மீண்டும் நினைப்பித்தவாறு.

—————

‘தலை அறின், தருவது ஓர் தவமும் உண்டு’ என,
நிலை உறு நேமியான் அறிந்து, நீசனைக்
கலை உறு திங்களின் வடிவு காட்டிய
சிலை உறு கையையும் நிலத்தில் சேர்த்தினான். 155-

தலை அறின் தருவது ஓர் தவமும் உண்டு என –
(இராவணனுடைய) தலையை அரிந்தால் (அது மீண்டும்)
பெறுவதாகிய ஒரு வரத்தை இவன் பெற்றிருக்கிறான் என்று;
நிலையுறு நேமியான் அறிந்து- நிலை பேறுடைய சக்கரப்
படையையுடைய இராமபிரான் அறிந்து; நீசனை –
இழிந்தவனாகிய இராவணனை; கலையுறு திங்களின் வடிவு
காட்டிய – (பாதிக்) கலைகள் அமைந்த சந்திரனின் (அரை
வட்ட) வடிவைக் காட்டுகின்ற; சிலை உறு கையையும்-
வில் ஏந்திய கையினையும்; தலத்தில் சேர்த்தினான்-
(துண்டித்து) நிலத்தில் வீழச் செய்தான்.

—————–

கொற்ற வெஞ் சரம் பட, குறைந்து போன கை
பற்றிய கிடந்தது சிலையைப் பாங்குற
மற்று ஓர் கை பிடித்தது போல வவ்வியது;
அற்ற கை, பிறந்த கை, யார் அது ஓர்குவார்? 156-

கொற்ற வெம் சரம் பட- (இராமபிரானுடைய) வெற்றி
மிகுந்த கொடிய அம்பு பட்டதனால்;குறைந்து போன கை-
வெட்டப்பட்டு விட்ட கை; பற்றிய கிடந்தது சிலையை-
பற்றிக் கிடந்த வில்லை; பாங்குற மற்று ஓர் கை பிடித்தது
போல- (கீழே விழுமுன்) மற்றொரு கை அழகாகப் பற்றிக்
கொண்டது போல; வவ்வியது- (புதிதாக முளைத்த உடனே)
பிடித்துக் கொண்டது; அற்ற கை பிறந்த கை- அறுக்கப்பட்ட
கை மீண்டும் முளைத்து விட்டதை; யார் அது ஓர்குவார்?-
(முளைத்த விரைவினால்) யாரும் அறிய இயலவில்லை?

————-

அற்ற தன் கையை எடுத்து இராவணன் மாதலிமேல் வீசித் தாக்குதல்

பொன் கயிற்று ஊர்தியான் வலியைப் போக்குவான்
முன்கையில் துறு மயிர் முள்ளின் துள்ளுற,
மின் கையில் கொண்டென வில்லை விட்டிலா
வன் கையைத் தன் கையின் வலியின் வாங்கினான். 157-

ஊர்தியான் – (இராமபிரானுடைய தேர்ச்சாரதியான)
மாதலியின்; பொன் கை இற்று வலியைப் போக்குவான்
– அழகிய கையை ஒடித்து அவன் வலிமையைப் போக்கக்
கருதிய இராவணன்; முன் கையில் துறும் மயிர் – முன்னங்
கையிலே அடர்ந்துள்ள மயிர்; முள்ளில் துள்ளுற-
முள்ளைப் போல் கூச்செறிய; மின்கையில் கொண்டென-
மின்னலைக் கையிற் கொண்டாற் போன்ற; வில்லை விட்டிலா
– வில்லை விடாத; வன் கையை- (இராமனால் முன்பு)
வெட்டப்பட்ட வலிய கையினை; தன் கையின் – (இராவணன்)
தனது கையால்; வலியின் வாங்கினான்- வலிமையுடன் எடுத்து
வீசினான்.

மாதலி – இந்திரன் ஆணையால் தேரோடு வந்து
இராமபிரானுக்குத் தேர் ஓட்டும் சாரதி.

——————

விளங்கு ஒளி வயிர வாள் அரக்கன் வீசிய
தளம் கிளர் தடக் கை தன் மார்பில் தாக்கலும்,
உளம் கிளர் பெரு வலி உலைவு இல் மாதலி
துளங்கினன், வாய் வழி உதிரம் தூவுவான். 158-

விளங்கு ஒளி வயிர வாள் அரக்கன் – ஒளி விளங்குகின்ற
வயிர வாளையுடைய இராவணன்; வீசிய தளம் கிளர் தடக்கை-
வீசியெறிந்த பருத்துக் கிளர்ந்த பெரிய கரம்; தன்
மார்பில் தாக்கலும் – தனது மார்பில் தாக்கியவுடனே; உளம்
கிளர் பெருவலி- மனத்தில் எழுகின்ற பெரு வலிமை வாய்ந்த;
உலைவில் மாதலி- தளர்வில்லாத மாதலி; வாய் வழி உதிரம்
தூவினான் துளங்கினான்- தன் வாயின் வழியாகக்
குருதியினைச் சிந்தியவனாய் நிலை குலைந்தான்.

———–

மாதலிமேல் இராவணன் தோமரம் வீச, இராமன் அதனைத் துகளாக்குதல்

மா மரத்து ஆர் கையால் வருந்துவானை ஓர்
தோமரத்தால் உயிர் தொலைப்பத் தூண்டினன்-
தாம் அரத்தால் பொராத் தகை கொள் வாட் படை,
காமரத்தால், சிவன் கரத்து வாங்கினான். 159-

அரத்தால் பொராத் தகை கொள் வாள்படை-
அரத்தினால் அராவப் படாத (இயல்பாகக்) கூர்மை
கொண்ட வாட்படையை; காமரத்தால் சிவன் கரத்து
வாங்கினான்- சீகாமரப்பண் பாடி, சிவபெருமானது
கரங்களிலிருந்து பெற்றவனாகிய இராவணன்; மாமரத்து
ஆர் கையால் வருந்துவானை- பெரிய மரம் போன்ற
தன் கையின் தாக்குதலால் வருந்துகின்ற மாதலியை; ஓர்
தோமரத்தால்- ஒரு தோமரம் என்ற ஆயுதத்தால்;உயிர்
தொலைப்பத் தூண்டினான்- உயிரை நீக்குமாறு
செலுத்தினான்.

——————

‘மாண்டது இன்றொடு மாதலி வாழ்வு’ என,
மூண்ட வெந் தழல் சிந்த முடுக்கலும்,
ஆண்ட வில்லி ஓர் ஐம் முக வெங் கணை
தூண்டினான்; துகளானது, தோமரம். 160-

மாதலி வாழ்வு இன்றோடு மாண்டது- மாதலியின் வாழ்க்கை
இன்றோடு முடிந்தது; என- என்னும்படி; மூண்ட வெந்தழல் சிந்த
முடுக்கலும்- மூட்டிய கொடுந்தழலைச் சிந்திக்கொண்டு (தோமரப் படையை) விரைந்து இராவணன் விடுத்தபோது; ஆண்ட வில்லி-
யாவரையும் ஆட்கொள்பவனும் கோதண்டம் எனும் பெயருடைய
வில்லையுடையவனுமாகிய இராமபிரான்; ஓர் ஐம்முக வெங்கணை
தூண்டினான்- ஒப்பற்ற ஐந்து முகங்களையுடைய கொடிய
அம்பினைச் செலுத்தினான்; துகள் ஆனது தோமரம் – பொடிப்
பொடியாய்ப்போனது அந்தத் தோமரப்படை.

———–

இராவணனது தலைகளை இராமன் தொடர்ந்து அறுக்க, அவை பல இடங்களிலும் சிதறி விழுதல்

ஓய்வு அகன்றது, ஒரு தலை நூறு உற,
போய் அகன்று புரள, பொரு கணை
ஆயிரம் தொடுத்தான்-அறிவின் தனி
நாயகன் கைக் கடுமை நடத்தியே. 161-

அறிவின் தனி நாயகன்- ஞானத்தின் ஒப்பற்ற தலைவன்
ஆகிய இராமபிரான்; கை கடுமை நடத்தி – (தனது) கையில்
வேகத்தைச் செலுத்தி; ஓய்வு அகன்று- ஒழிவில்லாமல்;
ஒருதலை நூறு உற- ஒரு தலை நூறு தலைகளாக முளைக்கவும்;
அகன்று போய்- (அவையனைத்தும்) வெகு தொலையிற்போய்;
புரளப் பொருகணை ஆயிரம் தொடுத்தான்- புரளுமாறு போர்
அம்புகள் ஆயிரம் விடுத்தான்.

————–

நீர்த் தரங்கங்கள்தோறும், நிலம்தொறும்,
சீர்த்த மால் வரைதோறும், திசைதொறும்,
பார்த்த பார்த்த இடம்தொறும், பல் தலை
ஆர்த்து வீழ்ந்த-அசனிகள் வீழ்ந்தென. 162-

பல்தலை- (துண்டுபட்ட) இராவணனின் பல தலைகளும்; நீர்த்
தரங்கங்கள் தொறும்- கடலின் அலைகளிலும்; நிலம் தொறும்- பல்வகை நிலங்கள் தோறும்; சீர்த்த மால்வரை
தொறும்- சிறப்பான பெரிய மலைகள் தோறும்; திசை
தொறும் – திசைகள் தொறும்; பார்த்த பார்த்த இடம்
தொறும் – கண்ணிற் பட்ட இடங்கள் தோறும்; அசனிகள்
வீழ்ந்தென- இடிகள் வீழ்ந்தாற் போன்று; ஆர்த்து வீழ்ந்த
– ஆர்ப்பரிப்போடு வீழ்ந்தன.

———–

தகர்ந்து மால் வரை சாய்வுறத் தாக்கின;
மிகுந்த வான்மிசை மீனம் மலைந்தன;
புகுந்த மா மகரக் குலம் போக்கு அற
முகந்த வாயின், புணரியை முற்றுற. 163-

தகர்ந்து – (இவ்வாறு இராம பாணத்தால் துண்டுபட்ட
இராவணனின் தலைகள்) பிளவுண்டு; மால் வரை சாய்வுறத்
தாக்கின- பெரிய மலைகள் சாயுமாறு (அவற்றின் மேல்)
மோதின; மிகுந்த வான்மிசை- விரிந்த ஆகாயத்தில் உள்ள;
மீனம் மலைந்தன- நட்சத்திரங்களைத் தாக்கின; புகுந்த-
(கடலிலும்) புகுந்து; மா மகரக்குலம் போக்குஅற- பெரிய
சுறாமீன் கூட்டங்கள் போகுமிடம் இன்றி; புணரியை முற்றுற
வாயின் முகந்த- கடல் நீர் முழுவதையும் வாயில் அடக்கின.

—————

வீழ்ந்த இராவணனது தலைகளின் கண்களைப் பேய்கள் தோண்டுதல்

பொழுது சொல்லினும் புண்ணியம் போன பின்,
பழுது சொல்லும் அன்றே, மற்றைப் பண்பு எலாம்?-
தொழுது சூழ்வன முன், இன்று தோன்றியே,
கழுது சூன்ற, இராவணன் கண் எலாம். 164-

பொழுது நீட்டிய புண்ணியம் போனபின் – பலகாலமாய்
நீளத் துய்த்துவந்த புண்ணியப் பயன் தீர்ந்து போன பின்னால்;
மற்றைப் பண்பு எல்லாம்- (புகழ் முதலிய) பிற பண்புகள்
யாவும்; பழுது செல்லும் அன்றே?- பழுது பட்டுப் போகும்
அல்லவா? தொழுது சூழ்வன- (முன்பெல்லாம்) வணங்கி வலம்
வரக்கூடிய; கழுது- பேய்கள்; முன் நின்று தோன்ற- நேராக
நின்று, வெளிப்படையாக; இராவணன் கண் எலாம் சூன்ற-
இராவணனுடைய (அறு பட்ட தலைகளில் உள்ள) கண்களையெல்லாம்
(அஞ்சாமல்) தோண்டித் தின்றன.

——————–

இராவணன் வாள் முதலியன வீச, இராமன் அவனை வெல்லும் வகை குறித்துச் சிந்தித்தல்

வாளும், வேலும், உலக்கையும், வச்சிரக்
கோளும், தண்டும், மழு எனும் கூற்றமும்,
தோளின் பத்திகள்தோறும் சுமந்தன,
மீளி மொய்ம்பன் உரும் என வீசினான். 165-

மீளி மொய்ம்பன்- மிகுவலி படைத்தவனான இராவணன்;
தோளின் பத்திகள் தோறும்- (அவன்) தோள்களின்
வரிசைகள் தோறும்; சுமந்தன- தாங்கி நின்ற; வாளும்
வேலும் உலக்கையும்- வாள், வேல், உலக்கை;
வச்சிரக்கோளும்- வச்சிராயுதம்;தண்டும் – கதாயுதமும்;
மழு எனும் கூற்றமும் – யமனைப் போன்று வருத்தும்
மழுவாயுதமும் ஆகிய படைகளை; உரும் என வீசினான் –
இடிகளைப் போல எறிந்தான்.
மொய்ம்பு – வலிமை, தோளுமாம்.

———-

அனைய சிந்திட, ஆண் தகை வீரனும்
‘வினையம் என் இனி? யாதுகொல் வெல்லுமா?
நினைவென்’ என்ன, ‘நிசாசரன் மேனியைப்
புனைவென், வாளியினால்’ எனப் பொங்கினான். 166-

அனைய சிந்திட- அத்தகைய போர்ப் படைகளை (இராவணன்)
வீசவும்; ஆண்தகை வீரனும்- ஆண்மைப் பண்புகட்கு
உறைவிடமான இராமபிரானும்;இனி வினையம் என்?- இனிப்புரிய
வேண்டிய நுட்பமான செயல் எது?; வெல்லுமா யாது- இராவணனை
வெல்லும் வழி யாது; நினைவென்- ஆராய்வேன்; என்ன- என்று;
நிசாசரன் மேனியை- அரக்கனின் உடலை; வாளியினால்
புனைவென்- கணைகளால் அலங்கரிப்பேன்; என்று பொங்கினான்
– என்று வெகுண்டெழுந்தான்.

———–

இராவணனது மேனியை முற்றும் அம்பினால் இராமன் மூடுதல்

மஞ்சு அரங்கிய மார்பினும், தோளினும்,
நஞ்சு அரங்கிய கண்ணினும், நாவினும்,
வஞ்சன் மேனியை, வார் கணை அட்டிய
பஞ்சரம் எனல் ஆம் படி பண்ணினான். 167-

மஞ்சு அரங்கிய மார்பினும் தோளினும்- (நிறத்தால்)
மேகத்தைத் தோல்வியுறச் செய்த மார்பிலும் தோளிலும்;
நஞ்சு அரங்கிய கண்ணினும் நாவினும்- நஞ்சினைத்
தோல்வியுறச் செய்த கண்களிலும் நாவிலும்; வஞ்சன் மேனியை- (வேறு பிற
உறுப்புக்களிலுமாக) வஞ்சகனான இராவணன் உடம்பினை;
வார்கணை அட்டிய- (அம்புகளை விடுத்து) நீண்ட
அம்புகள் வைத்திருப்பதற்கேற்ற; பஞ்சரம் எனலாம்
வகை பண்ணினான்- கூடு (தூணி) என்று கூறலாம்படி
செய்தான்.

பஞ்சரம் – கூடு. இங்கு அம்பறாத் தூணி. இராமனின் அம்புகள்
ஆயிரக்கணக்காகப் புறப்பட்டமையால், அவன் முதுகிலிருந்த
சிறிய அம்பறாத்தூணி போதாமையால் அவ்வம்புகளை வைக்க
இராவணனின் உடம்பை, பெரிய அம்பறாத் தூணியாக்கினான்
எனும் நயந்தோன்றக் கூறினார்.

———–

வாய் நிறைந்தன, கண்கள் மறைந்தன,
மீ நிறங்களின் எங்கும் மிடைந்தன,
தோய்வுறும் கணை, செம்புனல் தோய்ந்தில,
போய் நிறைந்தன, அண்டப் புறம் எலாம். 168-

வாய் நிறைந்தன- (இராவணன்) வாய்கள் தோறும் இராமனின்
அம்புகள் நிறைந்தன; கண்கள் மறைந்தன – கண்கள் யாவும்
அம்புகளால் மறைந்தன; மீ நிறங்களின் எங்கும் மிடைந்தன-
மார்புக்கு மேற்பட்ட இடங்கள் யாவும் அம்புகளால்
நிறைந்தன; தோய்வுறும் கணை செம்புனல் தோய்ந்தில-
உடலிற் பதிந்த வாளிகள் குருதி படு முன்னே வெளியேறிப்
போய் விட்டன; அண்டப்புறம் எலாம் போய் நிறைந்தன-
அண்டவெளியெல்லாம் (இராமனின்) அம்புகளால் நிறைந்து
கிடந்தன.

————–

மயிரின் கால்தொறும் வார் கணை மாரி புக்கு,
உயிரும் தீர உருவின் ஓடலும்,
செயிரும் சீற்றமும் நிற்க, திறல் திரிந்து,
அயர்வு தோன்ற, துளங்கி அழுங்கினான். 169-

மயிரின் கால் தொறும்- மயிர்க்கால்கள் தோறும்;
வார்கணை மாரி புக்கு- நீண்ட சரமாரி நுழைந்து;
உயிரும் தீர- உயிர்த்தல் செய்யவும் இயலாதபடி;
உருவின ஓடலும்- ஊடுருவிப் போவதனால்; செயிரும்
சீற்றமும் நிற்க- வன்மமும், வெகுளியும் (மனத்துள்)
நின்றாலும்; திறல்திரிந்து அயர்வு தோன்ற- (உடம்பின்)
ஆற்றல் கெட்டு சோர்வுண்டாகி; துளங்கி அழுங்கினான்
– நிலை குலைந்து வருந்தினான் (இராவணன்).

————

தேரில் இராவணன் உணர்வு இழந்து கிடக்க, சாரதி தேரை விலக்கி நிறுத்தலும், இராமன் அம்பு எய்தலைத் தவிர்த்தலும்

வாரி நீர் நின்று எதிர் மகரம் படர்
சோரி சோர, உணர்வு துளங்கினான்;
தேரின் மேல் இருந்தான்-பண்டு தேவர் தம்
ஊரின் மேலும் பவனி உலாவினான். 170-

பண்டு தேவர் தம் ஊரின் மேலும் – முன்பு தேவர்களின்
ஊரின் மேல் எல்லாம்; பவனி உலாவுவான்- பவனி போய்
உலா வந்தவனான இராவணன்; வாரி நீர் நின்று – கடல்
நீரிலிருந்து;எதிர்- எதிர்த்து மோதி; மகரம் பட – மகர
மீன்கள் இறந்து போகுமாறு; சோரி சோர- (தன் உடலிலிருந்து)
குருதி வடிய; உணர்வு துளங்கினான்- அறிவு கலங்கினவனாய்;
தேரின் மேல் இருந்தான்- தேரின் மீது கிடந்தான்.

————–

ஆர்த்துக்கொண்டு எழுந்து உம்பர்கள் ஆடினார்;
வேர்த்துத் தீவினை வெம்பி விழுந்தது;
‘போர்த்துப் பொய்த்தனன்’ என்று, பொலம் கொள் தேர்
பேர்த்துச் சாரதி போயினன், பின்றுவான். 171-

உம்பர்கள் ஆர்த்துக் கொண்டு எழுந்து ஆடினர்
– (இராவணன் தேரின் மேல் உணர்வற்றுக் கிடப்பது கண்டு
எழுந்த மகிழ்ச்சியினால்); தேவர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டு
(உவகை) மேலெழுந்து கூத்தாடினர்; தீவினை வெம்பி
வேர்த்து விழுந்தது- தீவினையானது (மனம்) புழுங்கி
(அச்சத்தால்) வேர்த்து விழுந்தது; சாரதி- (இராவணனுடைய)
தேர்ச்சாரதி; போர் துப்பு ஓய்ந்தனன் – போர் புரியும்
ஆற்றலில் தளர்ந்தான்; என்று – எனக் கருதி; பின்றுவான் –
(அங்கு நிற்கப்) பின்வாங்கி; பொலம் கொள் தேர் –
பொன்மயமான (இராவணன்) தேரை; பேர்த்துப் போயினன்-
(அங்கிருந்து) திருப்பிக்கொண்டு போய் நிறுத்தினான்.

—————-

கை துறந்த படையினன், கண் அகல்
மெய் துறந்த உணர்வினன், வீழ்தலும்,
எய் திறம் தவிர்ந்தான்-இமையோர்களை
உய் திறம் துணிந்தான், அறம் உன்னுவான். 172-

இமையோர்களை உய்திறம் துணிந்தான்- தேவர்களைக்
காக்கத் துணிவு கொண்டவனாய் அவதரித்த இராமபிரான்; கை
துறந்த படையினன் – கையிலிருந்து நழுவிய படைக்கலத்தை
யுடையவனாய்; கண் அகல் மெய் துறந்த உணர்வினன்-
இடம் விரிந்த உடம்பில் உணர்ச்சியற்றவனாய் உள்ள இராவணன்;
வீழ்தலும்- (தேரின் மேல் மயங்கி) வீழ்ந்தவுடன்; அறம்
உன்னுவான்- போர் அறத்தை நினைவு கொண்டவனான
இராமபிரான்; எய்திறம் தவிர்ந்தான்- அம்பு விடுக்கும்
செயலை நிறுத்தி விட்டான்.

————–

இப்பொழுதே இவனைக் கொல்வாய் என்ற மாதலிக்கு, இராமன், ‘அது நீதி அன்று’ என மறுத்தல்

‘தேறினால், பின்னை யாதும் செயற்கு அரிது;
ஊறுதான் உற்றபோதே உயிர்தனை
நூறுவாய்’ என, மாதலி நூக்கினான்;
ஏறு சேவகனும், இது இயம்பினான். 173-

மாதலி- மாதலியாகிய இராமனின் சாரதி (அப்போது);
தேறினால் பின்னை யாதும் செயற்கு அரிது-
இராவணன் (மூர்ச்சை) தெளிந்தால், பிறகு அவனை ஒன்றும்
செய்தல் கூடாது; ஊறு தான் உற்ற போதே- (ஆதலால்)
அவன் இடையூறு அடைந்துள்ள போதே; உயிர்தனை
நூறுவாய்- அவன் உயிரை அழித்திடுவாயாக; என
நூக்கினான்- என்று (இராமனை) தூண்டினான்; ஏறு
சேவகனும் இது இயம்பினான்- சிங்க ஏறு போன்ற
இராமபிரானும் பின்வருமாறு கூறினான்.

—————-

படை துறந்து, மயங்கிய பண்பினான்
இடை பெறும் துயர் பார்த்து, இகல் நீதியின்
நடை துறந்து, உயிர் கோடலும் நன்மையோ?
கடை துறந்தது போர், என் கருத்து’ என்றான். 174-

படை துறந்து மயங்கிய பண்பினான் இடை- போர்க்
கருவிகளைக் கைவிட்டு, நினைவிழந்து கிடக்கின்ற தன்மை
உள்ளவனிடத்தில்; பெறும்துயர் பார்த்து- அழிக்கக்கூடிய
துன்பம் உண்டாயிருப்பதைப் பார்த்து; இகல் நீதியின்
நடைதுறந்து- போர் நீதியின் ஒழுக்கத்திலிருந்து விலகி;
உயிர் கோடலும் நன்மையோ?- உயிரைக் கொள்வதும்
அறம் ஆகுமோ? என் கருத்து- என்னுடைய கருத்தின்படி;
கடை துறந்தது போர் – கடைப்பட்ட பண்புகளிலிருந்து
விலகுவதுதான் (தூய) போர் நெறியாகும்; என்றான்-…

————–

உணர்வு பெற்ற இராவணன், தேரைத் திரும்பி நிறுத்தியதற்காகச் சாரதியைச் சினத்தல்

கூவிரம் செறி பொன் கொடித் தேரொடும்
போவர் அஞ்சினர், அன்னது ஓர் போழ்தினின்,
ஏவர் அஞ்சலையாதவர்? எண்ணுடைத்
தேவர் அஞ்ச, இராவணன் தேறினான். 175-

கூவிரம் செறி பொற் கொடித் தேரொடும்- கொடிஞ்சியெனும்
கைப்பிடியோடு கூடிய பொன்னாலான கொடியுடன் கூடிய தேர்களோடு;
போவர் அஞ்சினர்- போகின்ற அச்சம் கொண்ட அரக்கருள்;
அன்னதோர் போழ்தினின்- அப்போது; ஏவர் அஞ்சலியாதவர்?
– (இராமபிரானுடைய அற நெஞ்சத்தை எண்ணி) யார்தாம் கை கூப்பி
வணங்காதவர்?; எண்ணுடை- மதிப்புக்குரிய; தேவர் அஞ்ச-
வானவர்கள் அஞ்சுமாறு (அப்போது); இராவணன் தேறினான்-
இராவணன் (மயக்க நிலையிலிருந்து) தெளிவுபெற்றான்.

————–

உறக்கம் நீங்கி உணர்ச்சியுற்றான் என,
மறக் கண் வஞ்சன், இராமனை வான் திசைச்
சிறக்கும் தேரொடும் கண்டிலன்; சீற்றத் தீப்
பிறக்க நோக்கினன், பின்னுற நோக்கினான். 176-

மறக்கண் வஞ்சன் – கொடுமை மிகும் கண்களையுடைய
வஞ்சக இராவணன்; உறக்கம் நீங்கி- மயக்கம் நீங்கி;
உணர்ச்சியுற்றான் என- மூர்ச்சை தெளிந்த அளவிலே;
வான்திசை- சிறந்த திக்குகளில்; சிறக்கும் தேரொடும்
இராமனைக் கண்டிலன்- புகழுடைய தேரோடு நிற்கும்
இராமனை கண்டான் இல்லை; பின் உற நோக்கினான்-
தன் தேர்ப் பாகனைப் பின்புறமாகப் பார்த்த அவன்; சீற்றத்
தீப்பிறக்க நோக்கினான் – சினத்தீ கொப்புளிக்க
(அவனைப்) பார்த்தான்.

—————-

‘தேர் திரித்தனை, தேவரும் காணவே;
வீர விற்கை இராமற்கு வெண் நகை
பேர உய்த்தனையே; பிழைத்தாய்’ எனா,
சாரதிப் பெயரோனைச் சலிப்புறா. 177-

தேவரும் காண- தேவர்கள் யாவரும் காணுமாறு; தேர்
திரித்தனை- தேரைத் திருப்பி ஓட்டி வந்துவிட்டாய்; வீர
விற்கை இராமற்கு- (அதனால்) வீரம் செறிந்த கோதண்டம்
ஆகிய வில்லினை ஏந்திய இராமனுக்கு; வெள் நகை பேர
உய்த்தனை- வெள்ளிய (ஏளனப்) புன்னகை எழுமாறு
செய்து விட்டாய்; எனா- என்று; சாரதிப் பெயரானைச்
சலிப்புறா- சாரதியாகப் பெயர் தாங்கியவனை
வெறுத்தவனாய்;

————-

‘தஞ்சம் நான் உனைத் தேற்ற, தரிக்கிலா
வஞ்ச! நீ பெருஞ் செல்வத்து வைகினை;
“அஞ்சினேன்” எனச் செய்தனை; ஆதலால்,
உஞ்சு போதிகொலாம்!’ என்று உருத்து எழா. 178-

தரிக்கிலாவஞ்ச!- பொறுத்துக் கொள்ள இயலாத வஞ்சம்
கொண்டவனே! தஞ்சம் நான் உனைத் தேற்ற – (என்னைக்)
காப்பவன் நீ என்று நான் உன்னைத் தெளிந்திருக்க; நீ
பெரும் செல்வத்து வைகினை- (அதனால் நான் தரும்
செல்வங்கொண்டு) நீ பெரிய வளவாழ்வு வாழ்கின்றாய்;
அஞ்சினேன் எனச் செய்தனை – இவ்வளவிற்கும்
கைம்மாறாக எதிரிக்குப் பயந்தேன் என்று (மாற்றார்) (என்னைக்)
கருதுமாறு செய்துவிட்டாய்; ஆதலால் – ஆகையால்;உஞ்சு
போதி கொல்- உய்ந்து போவாயோ நீ;என்று உருத்து எழா
– என்று கூறி (இராவணன்) வெகுண்டு எழுந்து

—————-

சாரதி தேரைத் திருப்பி நிறுத்திய காரணத்தைத் தெரிவித்தல்

வாள் கடைக்கணித்து ஓச்சலும், வந்து, அவன்
தாள் கடைக்கு அணியாத் தலை தாழ்வுறா,
‘மூள் கடைக் கடுந் தீயின் முனிவு ஒழி,
கோள் கடைக் கணித்து’ என்று அவன் கூறுவான்: 179-

வாள் கடைக் கணித்து- (இராவணன் தன்) வாளைக்
கடைக் கண்ணால் நோக்கி; ஓச்சலும்- (சாரதி மீது செலுத்த)
ஓங்கலும்; அவன் வந்து- சாரதி (நெருங்கி) வந்து; தாள்
கடைக்கு அணியா- (இராவணனின்) பாதங்களாகிய கடை
உறுப்பிற்கு அண்மையாக; தலை தாழ்வுறா- தன்
தலையினைத் தாழ்த்தி வணங்கி; கடைக்கணித்துக் கோள்
– என்னுடைய சொற்களைக் கடைக்கணித்து (ஏற்றுக்)
கொள்வாயாக; மூள் கடைத்தீயின் முனிவு ஒழி – யுகாந்த
காலத்து எழும் ஊழித்தீ போன்ற உன் சினத்தீயை அவிப்பாயாக;
என்று அவன் கூறுவான் – என்று வேண்டியவனாய் (மேலும்)
கூறுகின்றான்.

—————-

‘ஆண்தொழில் துணிவு ஓய்ந்தனை; ஆண்டு இறை
ஈண்ட நின்றிடின், ஐயனே! நின் உயிர்
மாண்டது அக் கணம் என்று, இடர் மாற்றுவான்,
மீண்டது, இத் தொழில்; எம் வினை மெய்ம்மையால். 180-

ஐயனே!- தலைவனே! ஆண் தொழில் துணிவு ஓய்ந்தனை
– வீரச் செறிவு புரியும் துணிவு உன்னிடம் தளர்ந்தது; ஆண்டு
இறை ஈண்ட நின்றிடின் – அந்த இடத்தில் அருகிருந்திருந்தால்;
நின்னுயிர் அக்கணம் மாண்டது என்று- உன்னுயிர் அந்தக்
கணம் மடிந்தொழிந்து விடும் என்று கருதி; இடர் மாற்றுவான்
– (உனக்கு வரவிருந்த) துன்பத்தை மாற்றவேண்டி; மீண்டது இத்
தொழில்- தேரை மீட்டுக்கொண்டு வரும் இச்செயலை நான்
செய்தது; எம்வினை மெய்ம்மை- எம் செயல் (என்றும்)
உண்மையாவதேயாகும்.

——————–

‘ஓய்வும் ஊற்றமும் நோக்கி, உயிர் பொறைச்
சாய்வு நீக்குதல் சாரதி தன்மைத்தால்,
மாய்வு நிச்சயம் வந்துழி; வாளினால்
காய்வு தக்கது அன்றால்; கடை காண்டியால்.’ 181-

மாய்வு நிச்சயம் வந்துழி- மடிவது உறுதி என்று சாரதி
முடிவுக்கு வரும்போது; ஓய்வும் ஊற்றமும் நோக்கி- தேர்
மீது இருக்கும் தலைவனின் தளர்ச்சியும் வலிமையும் அறிந்து;
உயிர்ப் பொறைச் சாய்வு நீக்குதல் – உடலின் தளர்ச்சியை
நீக்கும் செயல்களைச் செய்தல்; சாரதி தன்மைத்து – தேர்
ஓட்டியின் கடமைப் பண்பேயாகும்; வாளின் மேல் காய்வு
தக்கது அன்று – வாள் கொண்டு தண்டிக்க நினைத்தல்
தக்க செயல் ஆகாது; கடைகாண்டி- இறுதியில் நான் செய்த
செயலின் உண்மை நோக்கத்தை உணர்வாயாக.

————

இராவணன் சாரதிமேல் இரக்கம் கொண்டு, தேரை மீட்கச் செய்து இராமன் எதிருறல்

என்று இறைஞ்சலும், எண்ணி இரங்கினான்,
‘வென்றி அம் தடந் தேரினை மீட்க!’ என,
சென்று எதிர்ந்தது, தேரும்; அத் தேர்மிசை
நின்ற வஞ்சன் இராமனை நேர்வுறா. 182-

என்று இறைஞ்சலும்- (தேரோட்டி) இவ்வாறு கூறி
இராவணனை வணங்கிய போது; எண்ணி இரங்கினான்
– (அவன் செய்தது சரியென்று) கருதி (தான் அவன் மேல்
வெகுண்டதற்கு வருந்தி அவன் மேல்) இரக்கம்
கொண்டவனாய்; வென்றி அம் தேரினை மீட்க-
வெற்றித் தேரினை மீண்டும் செலுத்துவாயாக; என-
என்று இராவணன் கூறியவுடன்; தேரும் சென்று
எதிர்ந்தது – அவன் தேரும் சென்று இராமனுக்கு எதிர்
நின்றது; அத்தேர் நின்ற வஞ்சன்- அத்தேர்மீது நின்ற
வஞ்சகனாகிய இராவணன்; இராமனை நேர்வுறா-
இராமபிரானை நோக்கி எதிர்ப்பட்டு;

குளகம். தூற்றினான் என்று அடுத்த பாடலில் வினை
முடிவு கொள்ளும்.

————–

கூற்றின் வெங் கணை கோடியின் கோடிகள்
தூற்றினான், வலி மும் மடி தோற்றினான்;
வேற்று ஓர் வாள் அரக்கன் என, வெம்மையால்
ஆற்றினான் செரு; கண்டவர் அஞ்சினார். 183-

கூற்றின் வெங்கணை- (கொல்லும் தொழிலில்) யமனைக்
காட்டிலும் கொடிய கணைகள்; கோடியின் கோடிகள்- கோடி
கோடியானவற்றை; தூற்றினான்- இராகவன் மீது செலுத்தினான்
வேறு ஓர் வாள் அரக்கன் என்று- (இவன் முந்தைய
இராவணன் அல்லன்) வேறொரு புதிய வாள் அரக்கன்
என்னுமாறு;வெம்மையால் செரு ஆற்றினான்- கொடும் போர் புரிந்தான்;
கண்டவர் அஞ்சினார – (அப்போரைப்) பார்த்தவர்கள்
(எல்லோரும்) அச்சம் கொண்டனர்.

———-

இராமன் இராவணனின் வில்லைத் துண்டித்தல்

‘”எல் உண்டாகின் நெருப்பு உண்டு” எனும் இது ஒர்
சொல் உண்டாயதுபோல், இவன் தோளிடை
வில் உண்டாகின் வெலற்கு அரிது ஆம்’ எனா,
செல் உண்டால் அன்னது ஓர் கணை சிந்தினான். 184-

எல் உண்டாகின் நெருப்பு உண்டு- ஒளியுண்டானால் தீயுண்டு;
எனும் இது ஓர் சொல் உண்டாயது போல்- என்கின்ற ஒவ்வொரு
சொல்தொடர் உண்டாகியிருப்பது போல; இவன் – இந்த
இராவணனுடைய; தோளிடை வில் உண்டாகின் – தோள்களிடையே
வில் கிடக்கும் வரை; வெலற்கு அரிது ஆம் எனா- வெல்ல
முடியாதாகும் என்று கருதி; செல் உண்டால் அன்னது ஓர்கணை
சிந்தினான்- இடியை விழுங்கியது போன்ற தோர் ஒப்பற்ற கணையைச்
செலுத்தினான் (இராமன்)

————

நாரணன் படை நாயகன் உய்ப்புறா, பார்
அணங்கினைத் தாங்குறும் பல் வகை
வாரணங்களை வென்றவன் வார் சிலை ஆர்
அணங்கை இரு துணி ஆக்கினான். 185-

நாரணன் படை- நாராயணன் அத்திரத்தை; நாயகன்- இராமபிரான்;
உய்ப்புறா- செலுத்தி; பார் அணங்கினைத் தாங்கும்- பூமகளைத்
தாங்கி நிற்கும்; பல்வகை வாரணங்களை – எட்டுத் திக்கு
யானைகளையும்; வென்றவன் வார்சிலை- வென்றவனான இராவணனின்
நீண்ட வில்லை; ஆர் அணங்கை – மிக்க அச்சம் தருவதான
அவ்வில்லை; இரு துணி ஆக்கினான் – இருதுண்டாகச் செய்தான்.

————-

அயன் படைத்த வில், ஆயிரம் பேரினான்
வியன் படைக்கலத்தால் அற்று வீழ்தலும்,
உயர்ந்து உயர்ந்து குதித்தனர் உம்பரும்,
‘பயன் படைத்தனம், பல் கவத்தால்’ என்றார். 186-

அயன் படைத்த வில்- பிரமதேவனால் உருவாக்கப் பெற்ற
வில்; ஆயிரம் பேரினான் வியன் படைக்கலத்தால்- ஆயிரம்
திருநாமங்களையுடையவனான நாராயணனின் அத்திரத்தால்; அற்று
வீழ்தலும் – அறுக்கப்பட்டு வீழ்ந்தவுடன்; உம்பர் உயர்ந்து
உயர்ந்து குதித்தனர்- தேவர்கள் (மகிழ்வின் மிகுதியால்)
எம்பி எம்பிக் குதித்தார்கள்; பல் தவத்தால் பயன் படைத்தனம்
என்றார் – (நாம் இதுவரை செய்த) பற்பல தவங்கட்கான பயனை
இன்றடைந்தோம் என்று கூறி மகிழ்ந்தார்கள்.

————-

மாறி மாறி, வரிசிலை வாங்கினான்
நூறு நூறினொடு ஐ-இருநூறு அவை
வேறு வேறு திசை உற, வெங் கணை
நூறி நூறி, இராமன் நுறுக்கினான். 187-

மாறி மாறி – (இராவணன்) ஒன்றன்பின் ஒன்றாக; வரிசிலை
வாங்கினான் – கட்டமைந்த விற்களை வாங்கிக்
கொண்டேயிருந்தான்; இராமன் – இராமபிரான்; நூறு நூறினோடு
ஐஇரு நூறு அவை – கோடி விற்களை;வேறு வேறு திசை
உற – வேறு வேறு திசைகளிற் போய் விழுமாறு; வெம்கணை
நூறி நூறி – கொடிய அம்புகளால் துகள் துகளாக்கி;
நுறுக்கினான்- பொடி செய்தான்.

நூறு நூறு – பத்தாயிரம். பத்து ஆயிரத்துடன் இருநூறான
ஆயிரத்தைப் பெருக்கினால் கோடியாவது உணர்க, அளவிறந்த
எண் தொகையினைக் கோடியெனக் கூறிவிடுதல் கவி மரபு

———-

இருப்புலக்கை, வேல், தண்டு, கோல், ஈட்டி, வாள்,
நெருப்பு உலக்க வரும் நெடுங் கப்பணம்,
திருப் புலக்க உய்த்தான்-திசை யானையின்
மருப்பு உலக்க வழங்கிய மார்பினான். 188-

திசையானையின் மருப்பு உலக்க வழங்கிய மார்பினான் –
எட்டுத் திக்கு யானைகளின் தந்தங்களும் ஒடியுமாறு, தன்
மார்பினைக் காட்டிய இராவணன்; திரு புலக்க- (இராமன்
மார்பில் அகலாது வாழும்) திருமகளும் புலந்து சிறிது அப்பால்
(மார்பை) விட்டு ஒதுங்குமாறு; இரும்பு உலக்கை, வேல், தண்டு,
கோல், ஈட்டி, வாள்- இரும்பால் ஆன உலக்கை, வேல் கதை,
குத்துக்கோல், ஈட்டி, வாள்; நெருப்பு உலக்க வரும் கப்பணம்
– தீயைச் சிந்தி வரும் கப்பணம் ஆகிய படைக்கருவிகளையும்;
உய்த்தான்- (இராமன் மேல்) செலுத்தினான்.

————–

அவை அனைத்தும் அறுத்து, அகன் வேலையில்
குவை அனைத்தும் எனக் குவித்தான், குறித்து,
‘இவை அனைத்தும் இவனை வெல்லா’ எனா,
நவை அனைத்தும் துறந்தவன் நாடினான். 189-

அவை அனைத்தும்- (இராவணன் எடுத்த) ஆயுதங்கள்
அனைத்தையும்; அறுத்து- (தன் அம்புகளால்) துண்டித்து;
அனைத்தும்- (அவ்வாறு துண்டித்த) அனைத்தையும்; அகல்
வேலையில் – அகன்ற கடலில்; குவை எனக் குவித்தான்-
குவியலாகக் குவித்தான்; நவை அனைத்தும் துறந்தவன்-
குற்றங்கள் அனைத்தையும் நீக்கியவனான இராமபிரான்;
இவையனைத்தும் இவனை வெல்லா எனா- இப்படைக்
கருவிகள் எல்லாம் இவனை வெல்ல இயலாதவையென்று;
குறித்து நாடினான்- வேறு செய்யும் குறிப்பில் ஆராய
முற்பட்டான்.

நவையனைத்தும் துறந்தவன் – இராமன். ”சகல கல்யாண
குணங்களுக்கும் உறைவிடமானவன்.” ”குற்றங்களுக்கு எதிர்த்
தட்டானவன்” என்பார் திருவாய் ஈடு மகாப்பிரவேசம்
நம்பிள்ளை

———–

‘கண்ணினுள் மணியூடு கழிந்தன, எண்ணின்
நுண் மணலின் பல வெங் கணை;
புண்ணினுள் நுழைந்து ஓடிய, புந்தியோர்
எண்ணின் நுண்ணிய; என் செயற்பாற்று’ எனா, 190-

எண்ணின்- ஆராய்ந்தால்; நுண்மணலின் பல- நுண்ணிய
மணலினும் பலவாகி; புந்தியோர் எண்ணின் நுண்ணிய
வெங்கணை – அறிஞர்களின் (நுண்ணிய) கருத்துக்களிலும்
நுண்ணியவான பல கொடுங்கணைகள்; கண்ணின் உள் மணியூடு
கழிந்தன- கண்ணின் உள் உள்ள கரு மணியின் உள்ளே ஊடுருவிச்
சென்றன; புண்ணின் உள் நுழைந்து ஓடிய- (முன்பே பட்டிருந்த)
புண்களையே (இலக்காக) நுழைந்து ஓடின;என் செயற்பாற்று –
(இவையெல்லாம் இராவணனை ஒன்றும் செய்யவில்லையாதலின்)
இனி என்ன செய்ய வேண்டும்; எனா- என்று ஆய்ந்து.

—————-

‘நாரணன் திரு உந்தியில் நான்முகன் பார
வெம் படை வாங்கி, இப் பாதகன் மாரின்
எய்வென்’ என்று எண்ணி, வலித்தனன்,
ஆரியன், அவன் ஆவி அகற்றுவான். 191-

ஆரியன் – இராமபிரான்; அவன் ஆவி அகற்றுவான்
– இராவணனுடைய உயிரைப் போக்கக் கருதி; நாரணன் –
நாராயணனுடைய; திருஉந்தியில் நான்முகன்- நாபிக்
கமலத்தே தோன்றிய நான்முகமுடைய பிரம்மாவின்; பார
வெம்படை வாங்கி – பெருமை மிக்க கொடிய அம்பை
எடுத்து; இப்பாதகன் மாரின் எய்வென்- இந்தப்
பாவியினுடைய மார்பில் பாய்ச்சுவேன்; என்று எண்ணி
வலித்தான் – என்று கருதி, அக்கருத்திலே உறுதி கொண்டான்.

—————-

முந்தி வந்து உலகு ஈன்ற முதற் பெயர்
அந்தணன் படை வாங்கி அருச்சியா,
சுந்தரன் சிலை நாணில் தொடுப்புறா,
மந்தரம் புரை தோள் உற வாங்கினான். 192-

முந்தி வந்து உலகு ஈன்ற முதற்பெயர் அந்தணன்-
உயிர் வருக்கத்தின் முதல்வனாகத் தோற்றம் எடுத்து,
உலகினைப் படைத்த முதல்வன் எனப் புகழ் பெற்ற
அந்தணாளன் ஆகிய பிரமதேவனுடைய; படை வாங்கி –
அத்திரத்தை எடுத்து; அருச்சியா- (அதனை) அருச்சித்து;
சிலை நாணில் தொடுப்பு உறா- வில்லின் நாணில் தொடுத்து;
சுந்தரன்- பேரழகனான பெருமான் இராமன்; மந்தரம் புரை
தோள் உற வாங்கினான்- மேரு மலை போன்ற (தன்) தோளில்
பொருந்துமாறு இழுத்தான்.

—————–

புரம் சுடப் பண்டு அமைந்தது, பொன் பணை
மரம் துளைத்தது, வாலியை மாய்த்துளது,
அரம் சுடச் சுடர் நெஞ்சன் அரக்கர் கோன்
உரம் சுட, சுடரோன் மகன் உந்தினான். 193-

புரம் சுடப் பண்டு அமைந்தது – சிவபெருமான் முப்புரத்தை
எரிக்க அமைக்கப் பெற்றதும்; பொன் பணைமரம் துளைத்தது-
அழகிய கிளைகள் கொண்ட மராமரத்தைத் துளைக்க இராமபிரான்
பயன்படுத்தியதும்; வாலியை மாய்த்துளது- இராமபிரான்
வாலியை மடிக்க எடுத்ததும் ஆகிய அந்தப் பிரம்மாத்திரத்தை;
அரம் சுட- அரமானது தாக்க; சுடர் நெஞ்சின் அரக்கர்கோன்
– மேலும் சுடர் விடும் தீச்சுடர் போன்று (துன்பம் தாக்கவும் துவளாத)
நெஞ்சினையுடைய அரக்கர்களின் தலைவனான இராவணனது;உரம்
சுட- மார்பினைத் தாக்கும் வண்ணம்; சுடரோன் மகன் உந்தினான்
– சூரிய குலத்து மகனான இராமபிரான் செலுத்தினான்.

————–

அயன்படை இராவணனது மார்பில் பாய, அவன் உயிர் இழத்தல்

காலும் வெங் கனலும் கடை காண்கிலா,
மாலும் கொண்ட வடிக் கணை, மா முகம்
நாலும் கொண்டு நடந்தது, நான்முகன்
மூல மந்திரம் தன்னொடு மூட்டலால். 194-

மாலும்- திருமாலின் அவதாரமான இராமபிரானின்;
கொண்ட வடிக்கணை- கையிலிருந்து விடப்பட்ட அந்தப்
பிரம்மாத்திரம்; காலும் வெங்கனலும் கடை காண்கிலா-
காற்றும் கொடிய தீயும் காண முடியாத (விரைவும் கொடுமையும்
கொண்டு); தன்னொடு நான்முகன் மாமுகம் நாலும் கொண்டு
– (நான்முகன்போல்) நான்கு திசைக்கும் உரிய நாலு முகங்களையும்
மேற்கொண்டு; மூல மந்திரம் மூட்டலால் நடந்தது – பிரம்ம
தேவனுக்குரிய மூல மந்திரத்தின் ஆற்றலால் இராவணனை
நோக்கிச் சென்றது.

———————–

ஆழி மால் வரைக்கு அப்புறத்து அப்புறம்,
பாழி மாக் கடலும் வெளிப் பாய்ந்ததால்-
ஊழி ஞாயிறு மின்மினி ஒப்புற,
வாழி வெஞ் சுடர் பேர் இருள் வாரவே. 195-

வெம்சுடர்- அந்தப் பிரம்மாத்திரத்தின் கொடிய ஒளி; பேர்
இருள் வார – பேரிருளை அகற்றி; ஊழி ஞாயிறும் – ஊழிக்
காலத்து சூரியனும்; மின்மினி ஒப்புற – மின்மினி என்னுமாறு;
மால் ஆழி வரை – பெரிய சக்கரவாள கிரிக்கு; அப்புறத்து-
அப்புறத்தே உள்ள; அப்புறம் பாழிமாக் கடலும் – நீர் நிறைந்த
வலிய பெருங் கடலுக்கும்; வெளிப்பாய்ந்தது – வெளியே பாய்ந்தது.

—————–

அக் கணத்தின் அயன் படை ஆண்தகை
சக்கரப் படையோடும் தழீஇச் சென்று,
புக்கது, அக் கொடியோன் உரம்; பூமியும்,
திக்கு அனைத்தும், விசும்பும்; திரிந்தவே. 196-

அக்கணத்தின்- அந்தக் கணத்தில்; அயன் படை – அந்தப்
பிரம்மாத்திரம்;ஆண்தகை சக்கரப் படையோடும் – ஆண்களிற்
சிறந்த குணங் கொண்டவனான இராமபிரானின் ஆழிப்படையுடனே;
தழீஇச் சென்று – தழுவிப் போய்; அக்கொடியோன் – அந்தக் கொடியவன் இராவணனுடைய; உரம் புக்கது – மார்பில் நுழைந்தது;
பூமியும் திக்கு அனைத்தும் – (அப்போது) பூமியும் திக்குகள்
அனைத்தும்; விசும்பும் திரிந்த – விண்ணுலகும் நிலை கலங்கின.

———

முக்கோடி வாழ்நாளும், முயன்றுடைய பெருந்தவமும், முதல்வன் முன்நாள்,
‘எக் கோடியாராலும் வெலப்படாய்’ எனக் கொடுத்த வரமும், ஏனைத்
திக்கோடும் உலகு அனைத்தும் செருக் கடந்த புய வலியும், தின்று, மார்பில்
புக்கு ஓடி உயிர் பருகி, புறம் போயிற்று, இராகவன் தன் புனித வாளி 197-

இராகவன் தன் புனித வாளி- இராமபிரான் செலுத்திய தூய்மை
நிறைந்த பிரம்மாத்திரம்; முக்கோடி வாணாளும்-(இராவணனுடைய) மூன்று கோடி ஆயுளையும்; முயன்றுடைய
பெருந்தவமும் – முயன்று பெற்றிருந்த பெருந்தவப் பயனையும்;
முதல்வன்- தேவர்களில் ஒருவனான நான்முகன்; முன் நாள் –
முன் காலத்தில்; எக்கோடி யாராலும்- (முப்பத்து முக்கோடி
தேவர்களில்) எந்த வரிசையைச் சேர்ந்தோர் ஆனாலும் அவர்களால்;
வெலப்படாய்- நீ வெல்லப்பட மாட்டாய்; எனக் கொடுத்த வரமும்
– என்று தந்த வரத்தையும்; ஏனைத் திக்கோடும் உலகு
அனைத்தும் – மற்றும் திசைகளையும், உலகங்கள் எவற்றையும்;
செருக்கடந்த புயவலியும் – போரால் வென்ற தோள் ஆற்றலையும்;
தின்று- உண்டு விட்டு; மார்பில் புக்கு- (இராவணனுடைய) மார்பில்
நுழைந்து; ஓடி- உடல் எங்கும் சுழன்று; உயிர் பருகி – உயிரைப்
பருகிவிட்டு; புறம் போயிற்று- வெளியே சென்றது.

இராவணன் பல்லாண்டுகள் கடுந்தவம் இயற்றி, ஒவ்வொரு தலையாக
அறுத்து ஒன்பது தலைகளை ஆகுதியில் இட்டுப் பெற்ற தவப்பயன்கள்
அவையாதலின் ”முயன்றுடைய பெருந்தவம்” என்றார்.
சிவபிரானிடம் மூன்றரைக் கோடி ஆயுள் பெற்றான் இராவணன்
என்றறிந்த திருமால் முனிவன் வடிவெடுத்து, மூன்றரைக் கோடியாகாது அரைகுறையென்பார்கள். முன்பு பெற்ற மூன்றரைக் கோடி ஒழிய,
அரைக்கோடி கேள் என்றான். அப்படியே நான்முகன் பெற்ற
மூன்றரைக்கோடி ஆயுள் ஒழிய இப்போது அரைக்கோடி கொடு என
இராவணன் கேட்க அப்படியே ஆகுக என்றான் சிவபிரான். ”முன்னம்
மூன்றரைக் கோடியு மொழிய நீ முதல்வ, இன்னம் ஓரரைக் கோடி நாள்
ஈந்தருள் என்ன மன்னும் மாசுணப் பாயலான் மாயம் ஈது என்னா,
உன்னும் மாமலை மகளுடன் உமாபதி நகைத்தே அன்னவாறு அரைக்-
கோடியே யளித்தனம்” என்பது உத்தரகாண்டம். (வரையெடுத்த 79-82)
இராவணன் பெற்ற ஆயுளில் அரைக்கோடியே வாழ்ந்தான். மூன்று
கோடியாயுளும் ஒழிந்தது. மீண்டும் பெற்ற வரத்தால் ஆதலின்
”முக்கோடி வாழ்நாளும்” என்றார்

———–

இராவணனைக் கொன்ற அம்பு தூ நீராடி மீண்டு, இராமனது தூணியில் புகுதல்

ஆர்க்கின்ற வானவரும், அந்தணரும், முனிவர்களும், ஆசி கூறித்
தூர்க்கின்ற மலர் மாரி தொடரப் போய், பாற்கடலில் தூய் நீர் ஆடி,
தேர்க் குன்ற இராவணன் தன் செழுங் குருதிப் பெரும் பரவைத் திரைமேல் சென்று,
கார்க்குன்றம் அனையான் தன் கடுங் கணைப் புட்டிலின் நடுவண் கரந்தது அம்மா. 198-

ஆர்க்கின்ற வானவரும், அந்தணரும், முனிவர்களும்
– இராவண வதத்தால் எழுந்த உவகை மிகுதியால் ஆரவாரம்
செய்கின்ற தேவர்களும் அந்தணாளர்களும் முனிவர்களும்;
ஆசி கூறி- ஆசிகள் கூறி; தூர்க்கின்ற மலர் மாரி
தொடரப் போய் – கொட்டுகின்ற பூ மழை (தன்னைப்) பின்
தொடர்ந்து வரச் சென்று; பாற்கடலில் தூநீர் ஆடி-
திருப்பாற்கடலில் புனித நீர் ஆடி; தேர்க்குன்ற இராவணன்
தன்- (திரும்பி) குன்றனையை தேருடைய இராவணனின்;
செழுங்குருதிப் பெரும் பரவைத் திரைமேல் சென்று –
செழித்த இரத்தம் என்னும் பெருங்கடலின் அலை மேலே சென்று;
கார்க்குன்றம் அனையான்தன் கடுங்கணை- கரிய மலை
போன்ற இராமபிரானின் கடிய சரம்; புட்டிலின் நடுவண்-
அம்பறாத் தூணியினிடையே; கரந்தது- (இராகவனின் அந்தப்
புனிதக்கணை) ஒளிந்தது.

————

தேரிலிருந்து இராவணன் தலைகீழாக நிலத்தில் விழுந்து, முகம் பொலிவுற்றுக் கிடத்தல்

கார் நின்ற மழைநின்றும் உரும் உதிர்வ என, திணி தோட் காட்டின் நின்றும்,
தார் நின்ற மலைநின்றும், பணிக் குலமும் மணிக் குலமும் தகர்ந்து சிந்த,
போர் நின்ற விழிநின்றும் பொறிநின்று புகையோடும் குருதி பொங்க,
தேர் நின்று நெடு நிலத்துச் சிரமுகம் கீழ்ப் பட விழுந்தான், சிகரம் போல்வான். 199-

சிகரம் போல்வான்- (அரக்கர் இனம் என்னும் மலைக்குச்)
சிகரம் போன்றிருந்த இராவணன்;கார் நின்ற மழை நின்றும்
உரும் உதிர்வ என- கருமை நிறைந்த மழை மேகத்திலிருந்து
இடிகள் உதிர்ந்து வீழ்வதே போல்; திணி தோட்காட்டின்
நின்றும்- திண்ணிய இருபது தோள்களிலிருந்தும்; தார்
நின்ற மலை நின்றும்- மாலையணிந்த மலை போன்ற மார்பிலிருந்தும்;
பணிக்குலமும் மணிக்குலமும் தகர்ந்து சிந்த-
ஆபரணத் தொகுதிகளும் மாணிக்கத் தொகுதிகளும்
உடைந்து சிதறவும்; போர் நின்ற விழி நின்றும்- போர்க்
குணத்தோடு நின்ற விழிகளிலிருந்து; பொறிநின்று- தீப்பொறி
தோன்றி; புகையோடும் குருதி பொங்க- புகையுடனே உதிரம்
பொங்கவும்; தேர் நின்று- தேரிலிருந்து; நெடு நிலத்து-
அகன்ற பூமியின் மேல்; சிரம் முகம் கீழ்பட விழுந்தான்-
தலையுடன் கூடிய முகம் கீழ்ப்பட (குப்புற) விழுந்தான்.

————

வெம் மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்க, மனம் அடங்க, வினையம் வீய,
தெவ் மடங்க, பொரு தடக் கைச் செயல் அடங்க, மயல் அடங்க, ஆற்றல் தேய,
தம் அடங்கு முனிவரையும் தலை அடங்கா, நிலை அடங்கச் சாய்த்த நாளின்
மும் மடங்கு பொலிந்தன, அம் முறை துறந்தான் உயிர் துறந்த முகங்கள் அம்மா. 200-

வெம்மடங்கல் வெகுண்டனைய- கொடிய சிங்கம் ஒன்று
சினந்தாற் போன்று; சினம் அடங்க- வெகுளியடங்கவும்;
மனம் அடங்க- (அடங்காத) மனம் அடங்கவும்; வினையம்
வீய – (மனத்தே நிறைந்த) சூழ்ச்சிகள் அழியவும்; தெவ் மடங்க
– பகைமை அழியவும்; பொரு தடக்கைச் செயல் ஒடுங்க-
போரிட்டுக் கொண்டேயிருந்த இருபது கரங்களும்
போர்ச்செயல் ஒழியவும்; மயல் அடங்க- (சானகி மீது
கொண்ட) மையல் மடியவும்; ஆற்றல் தேய- வலிமை தேயவும்;
உயிர் துறந்த அம் முறை துறந்தான்- உயிர் நீங்கிய அந்த
அறமுறை நீங்கிய இராவணனின் பத்து முகங்களும்; தம் அடங்கு
முனிவரையும் – தம்மைத்தாமே அடக்கிய முனிவரை யெல்லாம்;
தலை அடங்கா நிலை அடங்க- தலை தாழவும் நிலை தளரவும்;
சாய்த்த- முறியடித்த;நாளின்- நாளைவிட; மும் மடங்கு
பொலிந்தன- மூன்று மடங்கு பொலிவுற்றுத் திகழ்ந்தன.

—————

இராமன் இராவணனைப் பார்த்தல்

‘பூதலத்தது ஆக்குவாயாக, இனிப்பொலந் தேரை’ என்ற போதில்,
மாதலிப் பேரவன் கடவ, மண் தலத்தின் அப் பொழுதே வருதலோடும்,
மீது அலைத்த பெருந் தாரை விசும்பு அளப்பக் கிடந்தான் தன் மேனி முற்றும்
காதலித்த உரு ஆகி, அறம் வளர்க்கும் கண்ணாளன் தெரியக் கண்டான். 201-

பொலந்தேரை இனிப் பூதலத்தது ஆக்குவாயாக- பொன்
மயமான தேரை இனி மண் மீது இறக்குவாயாக; என்ற போதின்
– என்று (இராமபிரான் மாதலிக்கு) ஆணையிட்ட போதில்; மாதலிப்
பேரவன்- மாதலி என்னும் பேருடைய அத்தேர்ச் சாரதி; கடவ
– செலுத்த; மண் தலத்தின் அப்பொழுதே வருதலோடும்-
மண்ணின் மீது (அத்தேர் படிந்து) அக்கணத்திலேயே வருகின்ற
போது; காதலித்த உருவாகி- (கண்டார்) விரும்பும் எல்லா
இலக்கணங்களும் பொருந்தப் பெற்ற உருவம் உடையவனாகி;
அறம் வளர்க்கும் கண்ணாளன்- தருமத்தை (உலகில்)
வளர்க்கப் பிறந்த கருணை யாளனாகிய இராமபிரான்; மீது
அலைத்த பெருந்தாரை- மேலே அலையெறிந்து கொண்டுள்ள
பெரிய உதிரப் பெருக்கு; விசும்பு அளப்பக் கிடந்தான் தன்
மேனி முற்றும்- விண்ணளவும் தெறிக்கக் கிடந்தவனாகிய
இராவணனது உடம்பு முழுதும்; தெரியக் கண்டான்- விளங்க
நன்றாகப் பார்த்தான்.

இராமன் பெயரே ரமிக்கச் செய்பவன் எனும் பொருளது ஆதலின்
”காதலித்த உரு” என்றார்.

——-

‘தேரினை நீ கொடு விசும்பில் செல்க’ என்ன மாதலியைச் செலுத்தி, பின்னர்,
பாரிடம்மீதினின் அணுகி, தம்பியொடும் படைத்தலைவர் பலரும் சுற்ற,
போரிடை மீண்டு ஒருவருக்கும் புறங்கொடாப் போர்விரன் பொருது வீழ்ந்த
சீரினையே மனம் உவப்ப, உரு முற்றும் திருவாளன் தெரியக் கண்டான் 202-

நீ தேரினை கொண்டு விசும்பில் செல்க- நீ தேரைக்
கொண்டு வானுலகிற்குச் செல்வாயாக; என்ன- என்று;
மாதலியைச் செலுத்தி- மாதலிக்கு விடை தந்து; பின்பு
பாரிடம் மீதினின் அணு கி- பிறகு மண்ணின் மேல் வந்து;
திருவாளன்- திருமகள் நாதனாகிய இராமபிரான்;
தம்பியொடும் படைத்தலைவர் பலரும் சுற்ற- தம்பியாகிய
இலக்குவனும் படைத் தலைவர்கள் பலரும் தன்னைச் சுற்றி வர;
போரிடை மீண்டு- (இதுவரை) போர்க்களத்திலிருந்து
பின்வாங்கி; ஒருவர்க்கும் புறங்கொடா- யார்க்கும் புறமுதுகு
காட்டியறியாத; போர் வீரன் – போரிற் சிறந்த வீரனாகிய
இராவணன்; பொருது வீழ்ந்த சீரினையே- போரிட்டு வீழ்ந்து
கிடக்கும் சிறப்பினை; மனம் உவப்ப – தன் மனம் உவகையுற;
உரு முற்றும் தெரியக் கண்டான்- அவனுடைய உடல்
முழுவதனையும் நன்றாகப் பார்த்தான்.

—————

புலைமேலும் செலற்கு ஒத்துப் பொது நின்ற செல்வத்தின் பன்மைத் தன்மை
நிலை மேலும் இனி உண்டோ ? நீர்மேலைக் கோலம் எனும் நீர்மைத்து அன்றே
தலைமேலும் தோள்மேலும் தடமுதுகின் படர்புறத்தும் தாவி ஏறி,
மலைமேல் நின்று ஆடுவபோல் ஆடினவால் வானரங்கள், வரம்பு இலாத 203-

வரம்பிலாத வானரங்கள் – அளவற்ற குரங்குகள்; மலை
மேல் நின்று ஆடுவபோல்- மலை ஒன்றின் மேல் நின்று
(மகிழ்ச்சிக்) கூத்து ஆடுவதுபோல; தலை மேலும் தோள்
மேலும் தட முதுகின் படர் புறத்தும்- இராவணேசுவரனுடைய
தலைகள் மேலும் தோள்கள் மேலும், அகன்ற முதுகின்
விசாலப் பரப்பின் மீதும்; தாவி ஏறி – தாவிக் குதித்து ஏறி;
ஆடின – நடனம் ஆடின; புலை மேலும் செலற்கு ஒத்து-
இழிந்த புலைத்தன்மை யுடையாரிடத்தும் (கூசாது) செல்வதற்கு
ஒருப்படும்; பொது நின்ற செல்வத்தின்- (உயர்ந்தோர்
தாழ்ந்தோர் என்றில்லாது எல்லோரிடத்தும்) பொதுவாகச் செல்லும்
தன்மையுடைய செல்வத்தினுடைய; புன்மைத் தன்மை- இழிந்த
தன்மையை விளக்க; நிலை மேலும் இனி உண்டோ?- இராவணன்
வீழ்ச்சிக்குப் பிறகும் வேறு உவமை தேடும் நிலை இனி உலகில்
உண்டாகுமோ? நீர் மேலைக் கோலம் எனும் நீர்மைத்து
அன்றே – (இழிந்தோர் செல்வ வாழ்வு) நீர் மேற் குமிழியின்
(நிலையிலாக்) கோலம் என்னும் இயல்பினது அன்றோ?

————-

தோடு உழுத நறுந் தொடையல் தொகை உழுத கிளை வண்டின் சுழியத் தொங்கல்
பாடு உழுத படர் வெரிநின் பணி உழுத அணி நிகர்ப்ப, பணைக் கை யானைக்
கோடு உழுத நெடுந் தழும்பின் குவை தழுவி, எழு மேகக் குழுவின் கோவைக்
காடு உழுத கொழும் பிறையின் கறை கழன்று கிடந்தனபோல் கிடக்கக் கண்டான்: 204-

தோடுழுத நறுந்தொடையல்- இதழ்களால் ஆன மணமாலைகளின்;
தொகை உழுத கிளை வண்டின்- தொகுதிகளை உழுது கொண்டிருக்கின்ற வண்டுகளையுடைய; சுழியத் தொங்கல் – தலை
மாலைகளோடு கூடிய மாலைகளின்; பாடு உழுத படர் வெரிநின் –
பக்கங்களில் படர்ந்து கிடக்கிற (இராவணன்) முதுகில்; பணி உழுத
அணி நிகர்ப்ப- அழகிய வேலைப்பாடு நிறைந்த அணிகலத்தைப்
போன்று; பணைக்கை யானைக்கோடு உழுத நெடுந் தழும்பின்
குவை- பருத்த கையையுடைய திசை யானைகளின் கொம்புகள்
உழுததனால் தோன்றிய நீண்ட தழும்புகளின் கூட்டத்தை; தழுவி-
பொருந்தி; எழு மேகக் குழுவின் கோவைக் காடுஉழுத- எழுகின்ற மேகக் கூட்டத்தின் வரிசையாகிய
காட்டில் உலாவுகின்ற;கொழும் பிறையில் – செழித்த
பிறை நிலாவின்; கறை கழன்று- களங்கம் நீங்கி;
கிடந்தன போல் கிடக்கக் கண்டான் – கிடந்தன
போலக் கிடக்கக் கண்டான் (இராமபிரான்)

————–

இராவணனின் புறப்புண் கண்ட இராமன் முறுவலித்தல்

தளிர் இயல் பொருட்டின் வந்த சீற்றமும், தருக்கினோன் தன்
கிளர் இயல் உருவினோடும் கிழிப்புறக் கிளர்ந்து தோன்றும்
வளர் இயல் வடுவின் செம்மைத்து அன்மையும், மருவ நின்ற
முளரி அம் கண்ணன், மூரல் முறுவலன், மொழிவதானான்: 205-

முளரி அம் கண்ணன்- இராவணன் உடலருகே சென்று
நின்று தாமரை போன்ற அழகிய கண்களையுடைய இராமபிரான்;
தளிர் இயல் பொருட்டின் வந்த சீற்றமும்- தளிர் போன்ற
மென்மைத் தன்மை வாய்ந்த சீதையின் காரணத்தால்
(இராவணன் மேல் எழுந்த) சினமும்; தருக்கினோன் தன்-
செருக்கு மிக்க இராவணனுடைய; கிளர் இயல் உருவினோடும்
– கிளர்ச்சி தரும் அவன் வடிவத்தில்; கிழிப்புறக் கிளர்ந்து
தோன்றும் – முதுகுப் பக்கம் கிழிபட்டுத் தெளிவாகத்
தோன்றும்; வளர் இயல் வடுவின் – நீண்ட தழும்பின்;
செம்மைத் தன்மையும்- சிவந்த தன்மையும்; மருவ நின்ற-
கூடிக் கலக்க (எழுந்த); மூரல் முறுவலன்- (இகழ்ச்சியால்
எழுந்த) புன்சிரிப்புக் கொண்டவனாய்; மொழிவதானான்-
கூறத் தொடங்கினான்.

—————

‘வென்றியான் உலகம் மூன்றும் மெய்ம்மையால் மேவினாலும்,
பொன்றினான் என்று தோளைப் பொது அற நோக்கும் பொற்புக்
குன்றி ஆசுற்றது அன்றே-இவன் எதிர் குறித்த போரில்
பின்றியான் முதுகில் பட்ட பிழம்பு உள தழும்பின் அம்மா. 206-

உலகம் மூன்றும் மெய்ம்மையால் – மூன்று உலகங்களையும்
உண்மையாக; வென்றியான் மேவினாலும் – வெற்றி
கொண்டவனாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும்; பொன்றினான்-
(இன்று என் பாணத்தால்) அழிந்தான்; என்று- என்ற காரணம்
பற்றி; தோளைப் பொதுவற நோக்கும் பொற்பும்- (என்னுடைய)
தோள்களை (வெற்றிச் சிறப்பால்) சிறந்த பெருமிதத்தோடு
நோக்கிக் கொள்ள வல்ல பொலிவும்; இவன்- இந்த
இராவணன்; எதிர் குறித்த போரில் – எதிர் நின்று (இடும்)
போரில்; பின்றியான்- பின்னடைந்தவனாய்; முதுகிற் பட்ட
– முதுகுப் பக்கத்தில் பதிந்துள்ள; பிழம்பு உள தழும்பின் –
(சிவந்த) பிழம்பாக உள்ள தழும்புகளால்; குன்றி ஆசுற்றது-
குறைந்து போய், குற்றமும் அடைந்தது.

—————

‘”கார்த்தவீரியன் என்பானால் கட்டுண்டான்” என்னக் கற்கும்
வார்த்தை உண்டு; அதனைக் கேட்டு, நாணுறு மனத்தினேற்குப்
போர்த்தலை புறகிட்டு ஏற்ற புண்ணுடைத் தழும்பும் போலாம்
நேர்த்ததும் காணலுற்ற; ஈசனார் இருக்கை நிற்க! 207-

ஈசனார் இருக்கை நிற்க- சிவபிரான் மலையை எடுத்து
(இராவணன் பரிபவப்பட்டது ஒருபக்கம்) நிற்பினும்;
கார்த்தவீரியன் என்பானால் கட்டுண்டான் – கார்த்த
வீரியன் என்னும் மானுட மன்னனால் இவன் பிணிக்கப்பட்டான்;
என்னக் கற்கும் வார்த்தை உண்டு – என்று கூறப்படும் வார்த்தை உலகில்
(இவனைப் பற்றி) உண்டு; அதனைக் கேட்டு நாணுறும்
மனத்தினேற்கு- (அந்த அவமானச்) சொல்லைக் கேட்டே
வெட்கமுற்ற உள்ளமுடைய எனக்கு; போர்த்தலை –
போரிலே; புறகிட்டு ஏற்ற புண்ணுடைத் தழும்பும்-
புறமுதுகிட்டு அதனால் வந்த புண்களால் ஏற்பட்ட
தழும்புகளும்; நேர்த்ததும் காணல் உற்ற- நேரிடையாகக்
காணல் உற்றன.

”நான் வீரர்களுள் இராமனாக இருக்கிறேன்” என்றான்
கீதையில் கண்ணன்.

—————-

‘மாண்டு ஒழிந்து உலகில் நிற்கும் வயங்கு இசை முயங்க மாட்டாது,
ஊண் தொழில் உகந்து, தெவ்வர் முறுவல் என் புகழை உண்ண,
பூண் தொழில் உடைய மார்பா! போர்ப் புறங்கொடுத்தோர்ப் போன்ற
ஆண் தொழிலோரின் பெற்ற வெற்றியும் அழகிற்று’ என்றான். 208-

பூண் தொழில் உடைய மார்பா!- அணிகளைத் தரிக்கும்
மார்பினையுடைய வீடணனே; ஊண் தொழில் உகந்து-
உண்ணும் செயலையே விரும்பி; தெவ்வர் முறுவல்
என்புகழை உண்ண- பகைவர்கள் (இகழ்ச்சிப்) புன்னகை என்
புகழைத் தின்று தீர்க்க; போர்ப்புறம் கொடுத்தோர்ப்
போன்ற- போரில் புற முதுகிட்டவர்களைப் போன்ற; ஆண்
தொழிலோரின் – ஆண்மைச் செயலையுடைய இவ்விராவணனால்;
பெற்ற வெற்றியும்- அடைந்த வெற்றியும்; அவத்தம்-
வீணானதே; மாண்டு ஒழிந்து- இராவணன் இறந்து ஒழிந்ததனால்;
உலகில் நிற்கும் வயங்கும் இசை- (எனக்கு) உலகில்
அழியாமல் நிற்கவல்ல விளங்குகின்ற புகழும்; முயங்க மாட்டாது-
(இனி) என்பால் அடைய மாட்டாது.

—————-

இராவணனது முதுகில் வடு உற்ற உண்மையை வீடணன் விளக்கி, அவனது உயர்வைப் புலப்படுத்துதல்

அவ் உரைக்கு இறுதி நோக்கி, வீடணன், அருவிக் கண்ணன்,
வெவ் உயிர்ப்போடு நீண்ட விம்மலன், வெதும்பும் நெஞ்சன்,
‘செவ்வியின் தொடர்ந்த அல்ல செப்பலை, செல்வ!’ என்னா,
எவ் உயிர்ப் பொறையும் நீங்க இரங்கி நின்று, இனைய சொன்னான்: 209-

அவ்வுரை உரைப்பக் கேட்ட வீடணன்- (இராமபிரானின்)
அந்த உரைகளைக் கேட்ட வீடணன்; அருவிக் கண்ணன்-
அருவி நீர் போன்ற கண்ணீரையுடையவனாய்; வெவ்வுயிர்ப்
போடு நீண்ட விம்மலன்- பெருமூச்சோடும் கூடிய விம்மலையும்
உடையவனாய்; வெதும்பும் நெஞ்சன்- வெதும்புகின்ற
நெஞ்சோடும் கூடியவனாய்; செல்வ- செல்வனாகிய
இராமபிரானே; செவ்வியில் தொடர்ந்த அல்ல- செம்மையில்
கூடாத வார்த்தைகளை; செப்பலை- செப்ப வேண்டா; என்னா-
என்று கூறி; எவ்வுயிர்ப் பொறையும் நீங்க- எந்த உயிரும்
தரிக்க இயலாவாறு; இரங்கி நின்று இனைய சொன்னான் –
இரக்கத்தோடு தோன்ற நின்று இத்தகைய மொழிகளை மொழியலானான்.

—————–

‘ஆயிரம் தோளினானும், வாலியும், அரிதின், ஐய!
மேயின வென்றி விண்ணோர் சாபத்தின் விளைந்த; மெய்ம்மை;
தாயினும் தொழத் தக்காள்மேல் தங்கிய காதல்-தன்மை
நோயும் நின் முனியும் அல்லால், வெல்வரோ நுவலற்பாலார்? 210-

ஐய – ஐயனே! ஆயிரம் தோளினானும்- ஆயிரம்
தோள்களையுடைய கார்த்தவீரியனும்; வாலியும்- வாலியாகிய
வானர அரசனும்; அரிதின் மேயின வென்றி- அரிதில்
பெற்ற வெற்றிகள்; விண்ணோர் சாபத்தின் விளைந்த-
(இராவணனுக்கு) தேவர்கள் இட்ட சாபங்களால் விளைந்தவை;
மெய்ம்மை- இஃது உண்மை; தாயினும் தொழத்தக்காள்
மேல் – (இப்போது) உலகம் தாயினும் போற்றற்குரியவளாய்
வணங்கத்தக்க சீதையின் மேல்; தங்கிய காதல் தன்மை நோயும்- கொண்ட ஆசையும்; நின் முனிவும்
அல்லால்- உன் சீற்றமும் அல்லால்; நுவலற் பாலார் –
வீரர் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவார் யாரேனும்;
வெல்வரோ- (இவனை) வெல்ல வல்லார் ஆவாரோ?

————–

‘நாடு உளதனையும் ஓடி நண்ணலார்க் காண்கிலாமல்,
பீடு உள குன்றம் போலும் பெருந் திசை எல்லை யானைக்
கோடு உளதனையும் புக்குக் கொடும் புறத்து எழுந்த புண் கோள்
பாடு உளது அன்றி, தெவ்வர் படைக்கலம் பட்டு என் செய்யும்? 211-

நாடு உளதனையும் ஓடி- உலகமுள்ள எல்லை வரையிலும்
விரைந்து; நண்ணலார்க் காண்கிலாமல்- (எல்லோரையும்
வென்று முடித்து விட்டபடியால்) பகைவரைக் காண இயலாமையால்;
பீடு உள குன்றம் போலும்- (இவைகளையாகிலும் வெல்வேன்
என்று) பெருமிதம் வாய்ந்த குன்றுகள் போன்றிருந்த;பெருந்திசை
எல்லை யானைக் கோடு- எட்டுப் பெரிய திக்குகளில் காவலாக
உள்ள யானைகளின் கொம்புகளை; உளதனையும் புக்கு-
அவற்றின் நீளம் உள்ளளவும் மார்பில் அழுத்தி; கொடும்புறத்து
அழுந்து புண்ணின் – கொடிய முதுகின் வெளிப்புறம்
அழுந்தியதனால் ஆகிய புண்களின்;பாடு உளது அன்றி –
தழும்புகள் உள்ளனவேயல்லாமல்; தெவ்வர் படைக்கலம் பட்டு-
பகைவர் ஆயுதங்கள் இவன் உடம்பில் பட்டு; என்ன செய்யும்?-
என்ன செய்யவல்லவையாம்?

—————

‘அப் பணை அனைத்தும் மார்புக்கு அணி எனக் கிடந்த; வீரக்
கைப் பணை முழங்க, மேல்நாள், அமரிடைக் கிடைத்த காலன்
துப்பு அணை வயிர வாளி விசையினும், காலின் தோன்றல்
வெப்பு அணை குத்தினாலும், வெரிநிடைப் போய அன்றே. 212-

அப்பணை அனைத்தும் – அந்தத் தந்தங்கள் அனைத்தும்;
மார்புக்கு அணி எனக் கிடந்த- (இராவணனுடைய) மார்புக்கு
ஆபரணம் ஆக அமைந்து கிடந்தன; அவை மேனாள்- முன்
நாளில்; வீரக் கைப்பணை முழங்க- வீரசங்கம் கையில் ஒலிக்க;
அமர் இடை நிலைத்த காலன் – போரில் எதிர்த்து வந்த
யமனுடைய; துப்பு இணை வயிர வாளி விசையினும்- வலிமை
வாய்ந்த திண்ணிய அம்புகளின் வேகத்தாலும்; காலின்
தோன்றல்- வாயு புத்திரனின் மகனான அனுமானின்; வெப்பணை
குத்தினாலும்- கொடுமை மிக்க குத்தினாலும்; வெரிந் இடைப்
போய- முதுகில் ஊடுருவிச் சென்றன.

—————-

‘அவ் வடு அன்றி, இந்த அண்டத்தும் புறத்தும் ஆன்ற
தெவ் அடு படைகள் அஞ்சாது இவன் வயின் செல்லின், தேவ!
வெவ் விடம் ஈசன் தன்னை விழுங்கினும், பறவை வேந்தை
அவ் விட நாகம் எல்லாம் அணுகினும், அணுகல் ஆற்றா. 213-

தேவ!- பெருமானே; அவ்வடு அன்றி- அந்தத் தந்தத்
தழும்புகளேயன்றி; இவன் வயின் செல்லின் – இவனிடத்துச்
செல்வதென்றால்; வெவ்விடம் ஈசன் தன்னை விழுங்கினும்
– ஈசன் உண்ட விடம் அவனையே விழுங்குவதானாலும்; பறவை
வேந்தை அவ்விட நாகம் எல்லாம் அணுகினும் –
பறவைகட்கு அரசனான கருடனை விட நாகங்கள் எல்லாம்
(கொல்ல) நெருங்கினாலும்; இந்த அண்டத்தும் புறத்தும்
ஆன்ற- இந்த உலகிலும் புற உலகிலும் (உள்ள) உயர்ந்த; தெவ்
அடு படைகள் அஞ்சாது- பகையழிக்கும் படைக்கருவிகள்
யாவும் அஞ்சாமல்; இவன் வயின் அணுகல் ஆற்றா- இவனிடம்
துன்புறுத்த அணுக வல்லமையுள்ளவை ஆகா.

——————–

‘வென்றியாய்! பிறிதும் உண்டோ வேலை சூழ் ஞாலம், ஆண்டு, ஓர்
பன்றியாய் எயிற்றுக் கொண்ட பரம்பரன் முதல பல்லோர், “என்று யாம் இடுக்கண் தீர்வது?”
என்கின்றார்; “இவன் இன்று உன்னால் பொன்றினான்”
என்றபோதும், புலப்படார், “பொய்கொல்?” என்பர்.’ 214-

வென்றியாய்!- வெற்றி வீரனே; வேலை சூழ் ஞாலம் –
கடல் சூழ் உலகை; ஆண்டு ஓர் பன்றியாய்- அக்காலத்தில்
ஒரு வராக வடிவாகி; எயிற்றுக் கொண்ட பரம்பரன் –
கொம்பில் ஏந்தி வந்த திருமால்; முதல் பல்லோர் – முதலான
பலரும்; யாம் இடுக்கண் தீர்வது என்று என்கின்றார் – நாம்
(இராவணனுடைய) துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவது என்று
என்று ஏங்கியிருக்கின்றனர்; உன்னால் இன்று இவன்
பொன்றினான் என்றபோதும் – உன்னால் இந்த இராவணன்
இன்று அழிந்தான் என்று சொன்னாலும்; பொய் கொல்-
இச்செய்தி பொய்யோ; என்பர் – என்று ஐயங் கொள்வார்;
புலப்படார் – (இறந்தான் என நம்பி) வெளித் தோன்ற மாட்டார்கள்.

——————-

இராவணனுக்கு இறுதிக்கடன் செய்ய இராமன் வீடணனைப் பணித்தல்

‘அன்னதோ?’ என்னா, ஈசன் ஐயமும் நாணும் நீங்கி,
தன்ன தோள் இணையை நோக்கி, ‘வீடணா! தக்கது அன்றால்;
என்னதோ, இறந்துளான் மேல் வயிர்த்தல்? நீ இவனுக்கு, ஈண்டச்
சொன்னது ஓர் விதியினாலே கடன் செயத் துணிதி’ என்றான். 215-

அன்னதோ என்னா- அப்படியோ என்று சொல்லி;
ஈசன்- இராமபிரான்; ஐயமும் நாணும் நீங்கி-
சந்தேகமும் வெட்கமும் நீங்கப் பெற்றவனாய்; தன்ன
தோள் இணையை நோக்கி- தன் இரு தோள்களையும்
(பெருமிதத்தால்) நோக்கி (பிறகு வீடணனை நோக்கி); வீடணா
– வீடணனே; இறந்துளான் மேல் வயிர்த்தல்- மாண்டு
போனவன் மேல் வைராக்கியம் கொண்டு (வாளா இருத்தல்);
தக்கது அன்று- தகுதியன்று; நீ இவனுக்கு- நீ இந்த
இராவணனுக்கு;ஈண்டு- இங்கு; சொன்னதோர் விதியினாலே
– கூறப்பட்டுள்ள விதிமுறைப்படி; கடன் செயத் துணிதி-
இறுதிக் கடன்களைச் செய்வாயாக; என்றான்- என்று கூறினான்.

————–

அவ் வகை அருளி, வள்ளல் அனைத்து உலகங்களோடும்
எவ் வகை உள்ள தேவர் யாவரும் இரைத்துப் பொங்கிக்
கவ்வையின் தீர்ந்தார் வந்து வீழ்கின்றார் தம்மைக் காண
செவ்வையின் அவர் முன் சென்றான்; வீடணன் இதனைச் செய்தான்.–215-

வள்ளல்- இராமபிரான்; அவ்வகை அருளி- அவ்வாறு
(வீடணனிடம்) கூறியருள் செய்து;இரைத்துப் பொங்கி-
ஆர்ப்பரித்து (மனம்) பூரித்து; கவ்வையில் தீர்ந்தார்-
துன்பங்களிலிருந்து விடுபட்டவர்களாய்; வந்து வீழ்கின்றார்
– வந்து தொழ வருகின்ற; அனைத்து உலகங்களோடும்-
எல்லா உலகத்தில் உள்ளவர்களோடும்; உள்ள தேவர்
யாவரும் – இருக்கின்ற பல்வகைத் தேவர்களையும்; காண-
காண்பதற்காக; செவ்வையின் – நேராக; அவர் முன்
சென்றான்- அத்தேவர்கள் பால் சென்றான்; வீடணன்
இதனைச் செய்தான் – (அப்போது) வீடணன் பின்வருமாறு
செய்தான்.

————–

வீடணன் இராவணன் மேனிமேல் வீழ்ந்து அரற்றுதல்
9919.
‘போழ்ந்தென அரக்கன் செய்த புன் தொழில் பொறையிற்று ஆமால்;
வாழ்ந்த நீ இவனுக்கு ஏற்ற வழிக் கடன் வகுத்தி’ என்ன,
தாழ்ந்தது ஓர் கருணைதன்னால், தலைமகன் அருள, தள்ளி,
வீழ்ந்தனன் அவன்மேல், வீழ்ந்த மலையின்மேல் மலை வீழ்ந்தென்ன.–216-

போழ்ந்தென- (நெஞ்சினை வாளால்) பிளந்தாற்போன்ற;
அரக்கன் செய்த புன்தொழில்- இராவணன் புரிந்த அற்பச்
செயல்; பொறையிற்று ஆம்- பொறுக்கத்தக்கதேயாம்;
வாழ்ந்த நீ- (இறந்துபட்ட) இவனுக்குச் செய்யத்தக்க
இறுதிக் கிரியைகளை; வரன் முறை வகுத்தி- மரபுப்படி
செய்வாயாக; என்ன- என்று; தாழ்ந்தது ஓர் கருணை தன்னால்- இரக்கமுற்றால் செல்லும் (இராமபிரானின்
இயல்பான) கருணையினால்; தலை மகன் அருள – இராமபிரான்
அருளிச் செய்ய; வீழ்ந்த மலையின் மேல் மலை வீழ்ந்தென்ன-
விழுந்து கிடந்த மலையின் மேல் (நின்ற) மலையொன்று விழுந்தது
போல; தள்ளி- (துயரம்) தள்ளியதனால்; அவன்மேல் வீழ்ந்தனன்-
இராவணன் (உடல்) மேல் வீழ்ந்தான் (வீடணன்).

இங்கு
வீடணா! இறுதிக் கடனை நீ செய்கிறாயா? இல்லை, நான்
செய்யட்டுமா? என்று பெருமான் கேட்டான் என்று நம்பிள்ளை ஈடு
கூறுவது நினைவுக்கு வருகிறது. நீ என் தம்பி. இவன் உன் அண்ணன்;
ஆகவே, இவன் எனக்கும் உறவினன் ஆவான்.என்று இராவணனுக்கு
இராமபிரான் இறுதிக் கடன் செய்ய எழுந்தபோது, உடனே வீடணன்
நீர்க்கடன் செய்ய எழுந்தான் என்று நம்பிள்ளை ஈட்டுரை கூறுவது
ஒப்பு நோக்கற்பாலது.

——————–

ஏவரும் உலகத்து எல்லா உயிர்களும் எரியின் நெஞ்சின்
தேவரும் முனிவர்தாமும் சிந்தையின் இரக்கம் சேர,
தா அரும் பொறையினான்தன் அறிவினால் தகைக்க நின்ற
ஆவலும் துயரும் தீர, அரற்றினான் பகு வாய் ஆர.-217-

ஏவரும் உலகத்து எல்லா உயிர்களும் – இடையறாது (பெருகி
வரும்) உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும்; இரங்கி ஏங்க –
இரக்கமுற்று ஏங்கவும்; தேவரும் முனிவர் தாமும் சிந்தையின்
இரக்கம் சேர – தேவரும் முனிவர் (கூடத்) தத்தமது நெஞ்சில்
இரக்கம் கொள்ளவும்; ஆ அரும் பொறையினான் தன்
அறிவினைத் தகைக்க நின்ற – தனது பற்றற்ற உணர்வினைத்
தடுக்குமாறு நின்ற; ஆவலும் துயரும் தீர – ஆசையும் துன்பமும்
தீருமாறு; பகுவாய் ஆர அரற்றினான் – பிளந்த வாயாரப் புலம்பத்
தொடங்கினான்.

—————-

வீடணன் புலம்பல்
9921.
உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு; சனகி எனும் பெரு நஞ்சு உன்னைக்
கண்ணாலே நோக்கவே, போக்கியதே உயிர்; நீயும் களப் பட்டாயே!
எண்ணாதேன் எண்ணிய சொல் இன்று இனித் தான் எண்ணுதியோ? – எண் இல் ஆற்றல்
அண்ணாவோ! அண்ணாவோ! அசுரர்கள்தம் பிரளயமே! அமரர் கூற்றே! –218-

எண் இல் ஆற்றல் அண்ணாவோ! அண்ணாவோ! –
அளவற்ற ஆற்றல்களின் உறைவிடமாயிருந்த என்
அண்ணனே! என் அண்ணனே! அசுரர்கள் தம் பிரளயமே
– அசுரர்கட்கு எல்லாம் ஊழிக்காலமாய் உருவெடுத்தவனே!;
அமரர் கூற்றே!- தேவர்கட்கு எல்லாம் எமனாய்
இருந்தவனே!; ஒரு நஞ்சும் – எந்த விடமும்; உண்ணாதே
உயிர் உண்ணாது- உண்ணாமல் ஓர் உயிரை உண்ணாது;
சனகி எனும் பெரு நஞ்சு- (இதற்கு மாறாக) சானகி
என்னும் கொடிய விடம்; கண்ணாலே நோக்கவே- (நீ)
கண்ணாலே கண்ட மாத்திரத்தில்; உன்னை உயிர்
போக்கியதே – உன் உயிரைப் போக்கியதே; நீயும்
களப்பட்டாயே- (ஒப்புயர்வற்ற பெருவீரனாகிய) நீயும்
(சாமானியன் போன்று) படுகளப் பட்டு வீழ்ந்து கிடந்தனையே;
எண்ணாதேன் எண்ணிய சொல் – எண்ணத் தெரியாதவன்
என்று (உன்னால் கருதப்பட்ட) நான் எண்ணி உரைத்த
சொற்களை;இன்று இனித்தான் எண்ணுதியோ?- இந்த
இறுதிக் காலத்தில் இப்போது தான் எண்ணுகின்றாயா?

——————

9922.
”ஓர் ஆசை ஒருவன்மேல் உயிர் ஆசைக் குலமகள்மேல் உடைய காதல்
தீர்; ஆசை பழி” என்றேன்; எனை முனிந்த முனிவு ஆறித் தேறினாயோ?
போர் ஆசைப்பட்டு எழுந்தகுலம் முற்றும் பொன்றவும்தான் பொங்கி நின்ற
பேர் ஆசை பெயர்ந்ததோ? – பெயர்ந்து ஆசைக் கரி இரியப் புருவம் பேர்த்தாய்! –219-

ஆசைக்கரி பெயர்ந்து இரியப் புருவம் பேர்த்தாய்
– திசை யானைகள் நிலை பெயருமாறு புருவம் பெயர்க்கும்
திறல் வாய்ந்தவனே; ஓராதே – உணராமல்; ஒருவன் தன்
உயிர் ஆசைக் குலமகள் மேல்- வேறு ஒருவன் தன்
உயிர் போன்று நேசித்து வந்த ஒரு குல மகளின் மேல்;
உற்ற காதல்- கொண்ட ஆசை; தீராத வசை என்றேன்
– (என்றும்) தீராப் பழியைத் தரும் என்று கூறினேன்; எனை
முனிந்த முனிவு ஆறித் தேறினாயோ?- (அப்போது) நீ
என் மேற் கொண்ட கோபம் (தவறு என்று) (இப்போதாவது)
தணிந்து தெளிவடைந்தாயா?; போர் ஆசைப்பட்டு எழுந்த
– போரிலே ஆசை கொண்டு எழுந்த; குலம் முற்றும்
பொன்றவும்- குலம் முழுவதும் அழிந்து படவும்; பொங்கி
நின்ற பேர் ஆசை பெயர்ந்ததோ?- மேன்மேல் உயர்ந்து
வந்த உன் பேராசை (இப்போதாவது) ஒழிந்ததா?

———-

9923.
”அன்றுஎரியில் விழு வேதவதி இவள்காண்;உலகுக்கு ஓர் அன்னை” என்று,
குன்று அனைய நெடுந் தோளாய்! கூறினேன்; அது மனத்துள் கொள்ளாதே போய்,
உன்தனது குலம் அடங்க, உருத்து அமரில் படக் கண்டும், உறவு ஆகாதே,
பொன்றினையே! இராகவன்தன் புய வலியை இன்று அறிந்து, போயினாயோ!”–220

அன்று- ஒரு காலத்தில்; எரியில் விழு வேதவதி- தீயில்
(உன்னைச் சபித்து) விழுந்த வேதவதி என்பவள்; உலகுக்கு
ஓர் அன்னை – உலகத்துக்கெல்லாம் ஒப்பற்ற தாயாகி
(சீதையென்னும்); இவள் காண்- இவளாகி வந்துள்ளாள்; என்று
– என்று; குன்று அனைய நெடுந்தோளாய்- மலை போன்ற
திண்மையுடைய பெருந்தோளனே!; கூறினேன்- நான் சொன்னேன்;
அது மனத்துள் கொள்ளாதே போய் – அவ்வுரையை மனத்துட்
கொள்ளாமல் போய்; உன் தனது குலம் அடங்க- உன்னுடைய
குலம் முழுவதும் அழிய; அமரில் உருத்து- போரில் சினந்து;
படக் கண்டும் – இறந்து மடிதலைக் கண்டும்; உறவு ஆகாதே – (நீ இராமபிரானை)
உறவாகக் கொள்ளாமல்; பொன்றினையே- இறுதி
வரையில் அவனைப் பகையாகக் கொண்டு அழிந்து
ஒழிந்தாயே; இராகவனார் புய வலியை- இராமபிரானுடைய
தோள்வலியை (நான் சொல்லும்போது அறியாமல்); இன்று
அறிந்து போயினாயோ- (சாகும்போது) அறிந்துகொண்டு
போயிருக்கிறாயோ!

———–

‘மன்றல் மா மலரானும், வடி மழு வாள் படையானும், வரங்கள் ஈந்த
ஒன்று அலாதன உடைய முடியோடும் பொடி ஆகி உதிர்ந்து போன;
அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும் அவன் நாட்டை அணுகாநின்ற
இன்றுதான் உணர்ந்தனையே, இராமன்தன் யாவருக்கும் இறைவன் ஆதல்? –221-

மன்றல் மா மலரோனும்- மணமுள்ள தாமரை மேல்
வாழ்பவனாகிய பிரமதேவனும்; வடி மழுவாள் படையானும்
– கூரிய மழுவாளைப் படையாகக் கொண்ட சிவபிரானும்; ஈந்த
– கொடுத்தருளிய; வரங்கள் – வரங்கள்; ஒன்று அலாதன
உடைய – பத்தாகவுள்ள; முடியோடு- உன் தலைகளோடு
சேர்ந்து; பொடியாகி உதிர்ந்து போன- பொடிப் பொடியாக
உதிர்ந்து போயின; அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும்
– (நீ சீதையை எடுத்து வந்து) அன்று இராமனின் ஆற்றலை
உணராது போனாலும்; அவன் நாட்டை அணுகா நின்ற
இன்றுதான்- அந்த பரமபதத்தை அடையா நின்ற இன்றைக்கு
ஆகிலும்; இராமன் தான் யாவர்க்கும் இறைவன் ஆதல் –
இராமனே அனைவர்க்கும் இறைவன் ஆவான் என்பதனை;
உணர்ந்தனையே- உணர்ந்தாயோ?

————

வீர நாடு உற்றாயோ? விரிஞ்சனாம்

யாவருக்கும் மேலாம் முன்பன் பேரன் நாடு உற்றாயோ?
பிறை சூடும் பிஞ்ஞகன்தன் புரம் பெற்றாயோ? ஆர், அணா!
உன் உயிரை, அஞ்சாதே, கொண்டு அகன்றார்? அது எலாம் நிற்க,
மாரனார் வலி ஆட்டம் தவிர்ந்தாரோ? குளிர்ந்தானோ, மதியம் என்பான்? –222-

வீரநாடு உற்றாயோ?- வீரர்கள் அடையும் துறக்க நாட்டை
அடைந்தாயோ?; விரிஞ்சன் ஆம் யாவருக்கும் மேலாம்
முன்பன் பேரன் நாடு உற்றாயோ?- விரிஞ்சன் எனும்
பெயரினனாய் (உயிர்களில்) எவர்க்கும் மேன்மையும் முதன்மையும்
உடையவனான நான்முகன் ஆகிய உன் பாட்டனின் நாட்டினை
அடைந்தாயோ?; பிறைசூடும் பிஞ்ஞகன் தன் புரம் பெற்றாயோ
– பிறை நிலவைச் சிரத்தில் சூடும் சிவபெருமானின் கயிலாய
புரத்தையடைந்தாயோ?; அணா- அண்ணா!; உன் உயிரை
அஞ்சாதே கொண்டு அகன்றார் ஆர்?- உனது உயிரை
அஞ்சாமற் கொண்டு சென்றவர் தான் யார்?; அது எலாம் நிற்க-
அது எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்; மாரனார் தனியாட்டம்
தவிர்ந்தாரோ?- மன்மதனார் (உன்பால் ஆடிய) வலிய
ஆட்டத்தை (இப்போதாவது) நிறுத்திக்கொண்டாரோ; மதியம்
என்பான் குளிர்ந்தானோ?- (காம தாபத்தால் உன்னை
எரித்துக் கொண்டிருந்த) சந்திரன் (இப்போதாவது)
குளிர்ச்சி தருபவன் ஆனானோ?

————

கொல்லாத மைத்துனனைக் கொன்றாய்” என்று அது குறித்துக் கொடுமை சூழ்ந்து,
பல்லாலே இதழ் அதுக்கும் கொடும் பாவி நெடும் பாரப் பழி தீர்ந்தாளே!
நல்லாரும் தீயாரும் நரகத்தார் துறக்கத்தார், நம்பி! நம்மோடு
எல்லாரும் பகைஞரே; யார் முகத்தே விழிக்கின்றாய்? எளியை ஆனாய்! -223-

கொல்லாத மைத்துனனை – கொல்லத் தகாத மைத்துனனை;
கொன்றாய் என்று- நீ கொன்று விட்டாய் என்று; அது
குறித்துக் கொடுமை சூழ்ந்து- அக்கொடுமையை மனத்துட்
கொண்டு புரியச் சூழ்ச்சி செய்து; பல்லாலே இதழ் அதுக்கும்
கொடும்பாவி – (சமயம் பார்த்த வண்ணம்) பற்களால்
இதழைக் கடித்துக் கொண்டிருந்த கொடிய பாவியான
சூர்ப்பணகை; நெடும் பாரப் பழி தீர்ந்தாளே!-
(தன் நெஞ்சை யழுத்திக் கொண்டிருந்த) பெரும்
பாரமாம் பழியை (இப்போது) தீர்த்துக் கொண்டாளோ?;
நம்பி- நம்பியே; நல்லாரும் தீயாரும்-
நல்லோர்களும் தீயோர்களும்; நரகத்தார்
துறக்கத்தார் – நரகத்திலா (அன்றி) சொர்க்கத்திலா
இருப்பார்கள்; நம்மோடு எல்லோரும் பகைஞரே!-
நம்மோடு அனைவரும் பகைமை பாராட்டுபவர்களே!;
எளியை ஆனாய் – (உயர்நிலையிலிருந்து) (காமத்தால்)
எளியவனாய் வீழ்ந்தவனே!; யார் முகத்தில்
விழிக்கின்றாய்?- (இப்போது) யார் முகத்தில் விழித்துக்
கொண்டிருக்கிறாய்?

———-

‘போர்மகளை, கலைமகளை, புகழ்மகளை,தழுவிய கை பொறாமை கூர,
சீர்மகளை, திருமகளை, தேவர்க்கும் தெரிவு அரிய தெய்வக் கற்பின்
பேர்மகளை, தழுவுவான் உயிர் கொடுத்து பழி கொண்ட பித்தா! பின்னைப்
பார்மகளைத் தழுவினையோ, திசை யானைப் பணை இறுத்த பணைத்த மார்பால்?’ –224-

போர்மகளை- வெற்றித் திருமகளையும்; கலை மகளை
– கலைகட்குரிய நாமகளையும்; புகழ் மகளை- கீர்த்திக்குரிய
மகளையும்; தழுவிய கை- அணைத்த உன் கரமானது;
பொறாமை கூர – பொறாமை மிகுமாறு; சீர்மகளைத்
திருமகளை – சிறப்பு வாய்ந்த மகளான திருமகளை;
தேவர்க்கும் தெரிவு அரிய – தேவர்களும் அறிய முடியாத;
தெய்வக் கற்பின் பேர்மகளை- தெய்வத்தன்மை வாய்ந்த
கற்பினால் பெயர் பெற்றவளான சீதா தேவியை; தழுவுவான்- தழுவும் ஆசையினால்;உயிர் கொடுத்து
– உயிரைக் கொடுத்து; பழி கொண்ட- பழியை வாங்கிய;
பித்தா- பித்தனே!; திசையானை பணை இறுத்த- திக்கு
யானைகளின் கொம்புகளை ஒடித்த; பணைத்த மார்பால்- பெரிய
மார்பினால்; பின்னை- பிறகு;பார்மகளைத் தழுவினையே-
மண் மகளை அணைத்துக் கிடக்கின்றாயே!

————

வீடணன் தேறுதல்
9928.
என்று ஏங்கி, அரற்றுவான்தனை எடுத்து,சாம்பவனாம் எண்கின் வேந்தன்,
‘குன்று ஓங்கு நெடுந் தோளாய்! விதி நிலையை மதியாத கொள்கைத்து ஆகிச்
சென்று ஓங்கும் உணர்வினையோ? தேறாது வருந்துதியோ?’ என்ன, தேறி
நின்றான், அப்புறத்து; அரக்கன் நிலை கேட்டாள் மயன் பயந்த நெடுங் கண் பாவை. -225-

என்று ஏங்கி- என்று இரங்கி; அரற்றுவான் தனை
– கதறுகின்ற வீடணனை; எடுத்து- (கைகளால்) எடுத்து;
சாம்பவனாம் எண்கின் வேந்தன்- சாம்பவன் என்கின்ற
கரடிகளின் அரசன்; குன்று ஓங்கு நெடுந்தோளாய்!- மலை
போல் உயர்ந்த பெருந் தோளனே!; விதி நிலையை மதியாத
கொள்கைத்து ஆகி- விதியின் நிலைமையைக் கருதாத
கொள்கையைதாய்; சென்று ஓங்கும் – சென்று உயர்கின்ற;
உணர்வினையோ?- உணர்வினையுடையவனாய் ஆயினையோ?;
தேறாதே அழுந்துதியோ?-தெளியாமல் (துன்பத்தில்) ஆழ்கின்றாயோ?; என்ன- என்று
கூற; தேறி- தெளிவுற்றவனாய்; அப்புறத்து நின்றான்-
அப்புறமாக நின்றான்; (வீடணன்) மயன் பயந்த நெடுங்கண்
பாவை- மயனின் மகளாகிய பெரிய கண்களையுடைய மண்டோதரி;
அரக்கன் நிலை கேட்டாள் – இராவணன் (பட்ட) நிலையைக்
கேள்வியுற்றாள்.

———–

மண்டோதரியும் அரக்கியரும் இராவணன் கிடக்கும் இடம் அடைதல்

9929.
அனந்தம் நூறாயிரம் அரக்கர் மங்கைமார்,
புனைந்த பூங் குழல் விரித்து அரற்றும் பூசலார்,
இனம் தொடர்ந்து உடன் வர, எய்தினாள் என்ப –
நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள். -226-

அனந்தம் நூறாயிரம் அரக்கர் மங்கைமார்- பல
இலட்சக் கணக்கினரான இராட்சதப் பெண்கள்; புனைந்த
பூங்குழல் விரித்து- மலர் சூடிய கூந்தல்களை விரித்து;
அரற்றும் பூசலார்- கதறுகின்ற அழுகையினராய்; இனம்
தொடர்ந்து- கும்பலாகத் தொடர்ந்து; உடன் வர- கூட
வர; நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள் –
நினைவும் மறப்பும் அற்ற நெஞ்சினளாகிய மண்டோதரி;
எய்தினாள் – அடைந்தாள்.

———-

இரக்கமும் தருமமும் துணைக்கொண்டு, இன் உயிர்
புரக்கும் நன் குலத்து வந்து ஒருவன் பூண்டது ஓர்
பரக்கழி ஆம் எனப் பரந்து, நீண்டதால் –
அரக்கியர் வாய் திறந்து அரற்றும் ஓதையே. –227-

இரக்கமும் தருமமும் துணைக்கொண்டு – தயையும் தருமமும்
துணையாகக் கொண்டு; இன்னுயிர் புரக்கும் நன் குலத்து ஒருவன்
– இனிய உயிர்களைப் பாதுகாக்கப் பிறந்த நல்ல குலத்துப் பிறந்த
ஒருவனை;பூண்டதோர் பரக்கழி யான் என- (அவ்வாறு
செய்யாமல்) மேற்கொண்டதொரு மிகு பழி பரந்து விரிவது
போல; அரக்கியர் வாய் திறந்து அரற்றும் ஓதை-
அரக்கிமார்கள் வாயைத் திறந்து கதறுகின்ற ஓசையானது;
பரந்து நீண்டது- பரவி விரிந்தது.

————–

நூபுரம் புலம்பிட, சிலம்பு நொந்து அழ,
கோபுரம்தொறும் புறம் குறுகினார் சிலர்;
‘ஆ! புரந்தரன் பகை அற்றது ஆம்’ எனா,
மா புரம் தவிர, விண் வழிச் சென்றார் சிலர்.–228-

நூபுரம் புலம்பிட- நூபுரம் வருந்தவும்; சிலம்பு நொந்து
அழ – சிலம்பு புலம்பிடவும்; கோபுரம் தொறும் புறம் சிலர்
குறுகினர்- (நகரவாயில்) கோபுரந்தோறும் சிலர் வெளியே
வந்தனர்; ஆபுரந்தரன் பகை அற்றது ஆம் எனா – ஓ!
இந்திரன் பகை இன்றோடு ஒழிந்தது என்று கூறி; மாபுரம்
தவிர விண் வழிச் சென்றார் சிலர்- இலங்கையிலிருந்து
(இராவணனின் தேவர் குல மகளிர்) சிலர் வானுலகுக்குச்
சென்றனர்.

————

அழைப்பு ஒலி முழக்கு எழ, அழகு மின்னிட,
குழைப் பொலி நல் அணிக் குலங்கள் வில்லிட,
உழைப் பொலி உண் கண் நீர்த் தாரை மீது உக,
மழைப் பெருங் குலம் என, வான் வந்தார் சிலர். –229-

அழைப்பு ஒலி முழக்கு எழ- அழைக்கின்ற ஒலி (இடி)
முழக்கைப் போல் எழவும்; அழகு மின்னிட- அழகு மின்னல்
போன்று மின்னிடவும்; குழை பொலி நல் அணிக்குலங்கள்
வில்லிட- காதணி முதலிய அழகிய நல்ல அணிவகைகள்
(வான) வில்போன்று ஒளிரவும்; உழைபொலி- மான்போல்
திகழும்; உண்கண் – மைதீட்டப் பெற்ற கண்களிலிருந்து;
நீர்த்தாரை மீது உக- கண்ணீர்த் தாரைகள் (மண்) மேலே
விழவும்; மழைப் பெரும் குலம் என- மேகக் கூட்டங்கள் போல்; சிலர் வான்
வந்தார்- சில மகளிர் வான்வழியாக வந்தனர்.

————

தலைமிசைத் தாங்கிய கரத்தர், தாரை நீர்
முலைமிசைத் தூங்கிய முகத்தர், மொய்த்து வந்து
அலைமிசைக் கடலின் வீழ் அன்னம்போல், அவன்
மலைமிசைத் தோள்கள்மேல் வீழ்ந்து, மாழ்கினார். -230-

தலைமிசைத் தாங்கிய கரத்தர்- தலை மேல் சுமந்த
கைகளையுடையவரும்; தாரை நீர்- கண்ணீர்த் தாரைகள்;
முலை மிசைத் தூங்கிய முகத்தர்- முலைமுகட்டில்
வீழுமாறு தொங்கிய முகங்களையுடையவரும்; மொய்த்துவந்து
-நெருங்கி வந்து; கடலின் அலைமிசை- கடல் அலைகளின்
மேல்; வீழ் அன்னம் போல்- (வந்து) வீழ்கின்ற அன்னக்
கூட்டங்களைப் போல; அவன் – அந்த இராவணனின்;
மலைமிசைத் தோள்கள் மேல் – மலையினும் விஞ்சிய
(வன்மைத்) தோள்களின்மேல்;வீழ்ந்து மாழ்கினார்-
நிலைகலங்கிச் சோர்ந்து விழுந்தனர்.

———–

தழுவினர் தழுவினர் தலையும் தாள்களும்,
எழு உயர் புயங்களும் மார்பும், எங்கணும்
குழுவினர், முறை முறை கூறு கூறு கொண்டு
அழுதனர் அயர்த்தனர், அரக்கிமார்களே. -231-

அரக்கிமார்கள்- இராக்கதப் பெண்டிர்; குழுவினர் –
கூட்டம் கூட்டமாய்; தலையும் தாள்களும்- தலைகளும்
கால்களும்; எழு உயர் புயங்களும்- கணையமரம் ஒத்த
தோள்களும்; மார்பும்- மார்புகளும்; (ஆகிய இராவணன்
அங்கங்களின்) எங்கணும்- எல்லாவிடங்களிலும்; முறை
முறை கூறு கொண்டனர்- முறை முறையாய் பகுத்துக்
கொண்டவராகி; தழுவினர் தழுவினர் – பன்முறை தழுவி;
அழுதனர் அயர்த்தனர் – அழுது மயங்கினர்.

————-

வருத்தம் ஏது எனின், அது புலவி; வைகலும்
பொருத்தமே வாழ்வு எனப் பொழுது போக்குவார்,
ஒருத்தர்மேல் ஒருத்தர் வீழ்ந்து, உயிரின் புல்லினார்-
திருத்தமே அனையவன் சிகரத் தோள்கள்மேல். -232-

வருத்தம் ஏது எனின்- (இந்த மகளிர்க்கு இது வரையில்)
துன்பம் யாது என்றால்; அது புலவி – அது இராவணனிடம்
நேர்ந்த புலவியேயாகும்; வைகலும் பொருத்தமே வாழ்வு
என – நாடோறும் (அவன் மார்பில்) பொருந்தி வாழ்வதே
வாழ்வாகும் என்று கருதி; பொழுது போக்கினார்- காலங்கழித்து
வந்த அந்த அரக்கியர்; திருத்தமே அனையவன் – (இறைவன்
படைப்பில் பலமுறை) திருத்திச் செம்மைப்பட்ட வடிவினைப்
பெற்றவன் எனக் கூறத்தக்க வடிவினையுடைய இராவணனின்;
சிகரத் தோள்கள் – தோள்களின் மேல்; ஒருத்தர் மேல்
ஒருத்தர் வீழ்ந்து- ஒருவர் மேல் ஒருவர் விழுந்து; உயிரின்
புல்லினர்- (அவன்) உயிரைத் தழுவுவதுபோல் தழுவினர்.

———–

இயக்கியர், அரக்கியர், உரகர் ஏழையர்,
மயக்கம் இல் சித்தியர், விஞ்சை மங்கையர் –
முயக்கு இயல் முறை கெட முயங்கினார்கள் – தம்
துயக்கு இலா அன்பு மூண்டு, எவரும் சோரவே. –233-

இயக்கியர் அரக்கியர்- யட்ச மாதரும், இராக்கத
மங்கையரும்; உரகர் ஏழையர்- நாகலோகப் பெண்களும்;
மயக்கமில் சித்தியர்- மயக்கமற்ற சித்தசாதிப் பெண்டிரும்;
விஞ்சை மங்கையர்- வித்தியாதர மகளிரும்; (ஆகிய)
எவரும்- யாவரும்; தம் துயக்கிலா அன்பு மூண்டு-
தம்முடைய தளராத அன்பின் முனைப்பால்; எவரும் சோர
– அனைவரும் அறிவு சோர்ந்து;முயக்கியல் முறை கெட- தழுவும் முறையெல்லாம் தவிர்த்து;
முயங்கினார்கள் – (இராவணன் உடலைத்) தழுவினார்கள்.

———

‘அறம் தொலைவுற மனத்து அடைத்த சீதையை
மறந்திலையோ, இனும்? எமக்கு உன் வாய்மலர்
திறந்திலை; விழித்திலை; அருளும் செய்கிலை;
இறந்தனையோ?’ என இரங்கி, ஏங்கினார். –234-

அறம் தொலைவுற- (தகாத காதலால்) தருமம் அழியுமாறு;
மனத்து அடைத்த சீதையை- உன் உள்ளத்துக்குள்ளே சிறை
வைத்திருந்த சீதையை; இனும் மறந்திலையோ?- இறந்த
பின்பும் மறந்தாய் இல்லையோ?; எமக்கு உன் வாய் மலர்
திறந்திலை- (அதனால்) எம் போன்றோர்க்கு உனது வாய்
மலரை நல்கினாய் இல்லை; விழித்திலை- (எம்மை) கண்
எடுத்தும் நோக்கினாய் இல்லை; அருளும் செய்கிலை- (வேறு
வகையாலும்) அருள் புரிந்தாய் இல்லை; இறந்தனையோ- (நீ)
இறந்து போனாயோ; என இரங்கி ஏங்கினார் – என்று இரங்கி
ஏங்கி அழுதனர்.

————-

மண்டோதரி இராவணன் மார்பில் விழுந்து புலம்புதல்
9938.
தரங்க நீர் வேலையில் தடித்து வீழந்தென,
உரம் கிளர் மதுகையான் உருவின் உற்றனள்,
மரங்களும் மலைகளும் உருக, வாய் திறந்து,
இரங்கினள் – மயன் மகள், – இனைய பன்னினாள்: –235-

மயன் மகள்- மயனின் மகளும் (இராவணனின் பட்டத்தரசியும்
ஆகிய) மண்டோதரி; உரம் கிளர் மதுகையான் – மனத் திண்மை
வாய்ந்த வலியவனான இராவணனுடைய; உருவின்- உடலின் மேல்;
தரங்க நீர் வேலையில்- அலையெறியும் நீரினையுடைய கடலின்
மேல்; தடித்து வீழ்ந்தென- மின்னல் வீழ்ந்தது போல்;
உற்றனள்- வீழ்ந்தவளாய்; மரங்களும் மலைகளும் உருக-
(உருகும் இயல்பில்லாத) மரங்களும் மலைகளும் உருகுமாறு; வாய்
திறந்து- வாய்விட்டு; இரங்கினாள் – அழுதவளாய்; இனைய
பன்னினாள் – இத்தகைய மொழிகளைக் கூறினாள்.

————-

அன்னேயோ! அன்னேயோ! ஆ, கொடியேற்கு அடுத்தவாறு! அரக்கர் வேந்தன்
பின்னேயோ, இறப்பது? முன் பிடித்திருந்த கருத்து அதுவும் பிடித்திலேனோ?
முன்னேயோ விழுந்ததுவும், முடித் தலையோ? படித் தலைய முகங்கள்தானோ?
என்னேயோ, என்னேயோ, இராவணனார் முடிந்த பரிசு! இதுவோ பாவம்! –236-

அன்னேயோ! அன்னேயோ! – அம்ம!’ அம்மம்ம!;
கொடியேற்கு அடுத்தவாறு – கொடியவளான எனக்கு
வந்துள்ள நிலைமையை என்னென்பது; அரக்கர் வேந்தன்
பின்னேயோ இறப்பது- இராக்கதர் தலைவனாகிய
இராவணன் இறந்த பின்னேயோ நான் இறப்பது? முன்
பிடித்திருந்த கருத்து- முன்பு தொடங்கி நான் கடைப்பிடித்து
வந்த கொள்கைகளில்; அதுவும் பிடித்திலேனோ? –
அதையும் கைவிட்டு விட்டேனோ?; முன்னேயோ
விழுந்ததுவும் முடித்தலையோ?- (அந்தத் தவற்றால்) எனக்கு
முன்னாலே (என் கணவரின்) மகுடத் தலைகள் விழுந்தனவோ?
படித்தலைய முகங்கள் தானோ?- மண் மேல் கிடப்பவை என்
(உயிர் அனையானின்) தலைகள் தானோ? என்னேயோ?
என்னேயோ? – என்னென்பேன் என்னென்பேன்?; இராவணனார்
முடிந்த பரிசு இதுவோ பாவம்- (உலகைக் கலக்கிய)
இராவணனார் வாழ்வு இத்தகையதாகவா முடியவேண்டும்! பாவம்!
பாவம்!

——–

வெள் எருக்கஞ் சடை முடியான் வெற்பு எடுத்த திரு மேனி, மேலும் கீழும்
எள் இருக்கும் இடன் இன்றி, உயிர் இருக்கும் இடன் நாடி, இழைத்தவாறோ?
‘கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச் சிறையில் கரந்த காதல்
உள் இருக்கும்” எனக் கருதி, உடல் புகுந்து,தடவியதோ ஒருவன் வாளி?–237-

ஒருவன் வாளி – ஒப்பற்ற இராமபிரானின் அம்பு; வெள்
எருக்கம் சடைமுடியான்- வெள்ளை எருக்கம் பூவை (முடியில்)
சூடும் சிவபெருமானுடைய; வெற்பு எடுத்த திருமேனி – கயிலை
மலையைத் தூக்கிய இராவணனுடைய அழகிய உடலின்; மேலும்
கீழும் – உடம்பின் மேல்பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும்; எள்
இருக்கும் இடம் இன்றி – எள் இருக்கும் இடம் கூட இல்லாமல்;
உயிர் இருக்கும் இடம் நாடி- உயிர் இருக்கும் இடம்
முழுவதையும் தேடி; இழைத்த ஆறோ?- ஆராய்ந்த வண்ணமோ?
கள் இருக்கும் மலர்க்கூந்தல் சானகியை- தேன் குடிகொள்ளும்
மலர்களைச் சூடிய கூந்தலையுடைய சீதாதேவியை; மனச் சிறையில்
கரந்த காதல் – மனம் எனும் சிறையில் ஒளித்து வைத்திருந்த
காதலானது;உள் இருக்கும் எனக் கருதி – உள்ளே (இன்னும்
எங்காவது) பதுங்கியிருக்கும் என்று எண்ணி; உடல் புகுந்து
தடவியதோ? – உடல் முழுதும் நுழைந்து (நுழைந்து) தடவிப்
பார்த்ததோ?

———–

‘ஆரம் போர் திரு மார்பை அகல் முழைகள் எனத் திறந்து, இவ் உலகுக்கு அப்பால்
தூரம் போயின, ஒருவன் சிலை துரந்த சரங்களே; போரில் தோற்று
வீரம் போய், உரம் குறைந்து, வரம் குறைந்து,வீழ்ந்தானே! வேறே! கெட்டேன்!
ஓர்அம்போ, உயிர் பருகிற்று, இராவணனை? மானுடவன் ஊற்றம் ஈதோ!–238-

ஒருவன் சிலை துரந்த சரங்கள் – ஒப்பற்றவனான இராம
பிரானுடைய வில் செலுத்திய அம்புகள்; ஆரம் போர்
திருமார்பை – முத்து மாலைகள் அணிந்த அழகிய மார்பினை;
அகல் முழைகள் என – விரிந்த குகைகள் போல; திறந்து-
பிளந்து;இவ் உலகுக்கு அப்பால்- இந்த உலகைக் கடந்து
அப்பால்; தூரம் போயின – வெகு தொலைவுக்குச் சென்று விட்டன; போரில் தோற்று- போரில்
தோற்று; வீரம் போய் – வீரம் இழந்தும்; உரம் குறைந்தும்
– வலிமையிழந்தும்; வரம் குறைந்தும்- பெற்ற வரமெல்லாம்
இழந்தும்; வீழ்ந்தனையே- (போர்க்களத்தில்) வீழ்ந்து
கிடக்கின்றாயே; இராவணனை ஓர் அம்போ உயிர்
பருகிற்று?- இராவணனாகிய உன்னை (இராமன்) விட்ட ஓர்
அம்பா உயிரையுண்டது? (நம்ப முடியவில்லை); மானுடவன்
ஊற்றம் ஈதோ.- மனிதன் ஒருவனின் வலிமை இத்தகையதோ?

—————

‘காந்தையருக்கு அணி அனைய சானகியார் பேர் அழகும், அவர்தம் கற்பும்
ஏந்து புயத்து இராவணனார் காதலும், அச் சூர்ப்பணகை இழந்த மூக்கும்,
வேந்தர் பிரான், தயரதனார், பணியதனால் வெங் கானில் விரதம் பூண்டு
போந்ததுவும், கடைமுறையே புரந்தரனார் பெருந் தவமாய்ப் போயிற்று, அம்மா!–239-

காந்தையருக்கு அணி அனைய – மகளிர்க்கெல்லாம்
அணி போன்ற; சானகியார் பேர் அழகும்- சீதா தேவியின்
பெருமைக்குரிய அழகும்; அவர்தம் கற்பும் – அவர்
(பூண்டிருந்தகற்பும்); ஏந்து புயத்து இராவணனார் காதலும்
– ஓங்கிய புயங்களையுடைய இராவணனார் (சீதைமேல் கொண்ட
தகாத) காதலும்; அச்சூர்ப்பணகை இழந்த மூக்கும் – அந்தச்
சூர்ப்பணகை (இதனால்) இழந்து போன மூக்கும்; வேந்தர்
பிரான் தயரதனார் பணியதனால்- மன்னர்க்கு மன்னனான
தயரதன் ஏவலினால் வெங்கானில் விரதம் பூண்டு போந்ததுவும்
– கொடிய கானகத்தே விரத வேடம் பூண்டு (இராமன்) வந்ததுவும்;
கடைமுறையே- கடைசியில்; புரந்தனார் பெருந்தவமாய்ப்
போயிற்று- இந்திரனார் செய்த பெருந்தவத்தின் பலனாக
முடிந்துவிட்டன.

————-

‘தேவர்க்கும், திசைக் கரிக்கும், சிவனார்க்கும் அயனார்க்கும், செங் கண் மாற்கும்,
ஏவர்க்கும், வலியானுக்கு என்று உண்டாம் இறுதி?” என ஏமாப்புற்றேன்;
ஆவற்கண் நீ உழந்த அருந் தவத்தின் பெருங் கடற்கும், வரம் என்று ஆன்ற
காவற்கும், வலியான் ஓர் மானுடவன் உளன் என்னக் கருதினேனோ?–240-

தேவர்க்கும் – வானவர்க்கும்; திசைக்கரிக்கும் – திசை
யானைகட்கும்; சிவனார்க்கும் அயனார்க்கும்,
செங்கண்மாற்கும் – மும்மூர்த்திகட்கும்,; ஏவர்க்கும்-
மற்றும் உள்ள யாவரைக் காட்டிலும்; வலியானுக்கு –
வலியவனான உனக்கு; என்று இறுதி உண்டாம்? – என்றைக்கு
முடிவு வரப்போகிறது?;என்று ஏமாப்பு உற்றேன் – பெருமிதம்
உற்றிருந்தேன்; நீ ஆவல்கண் – நீ ஆர்வத்தோடு; உழன்ற-
வருந்திச் செய்த; அரும் தவத்தின் பெரும் கடற்கும்- அரிய
பெரிய கடல் போன்ற தவத்திற்கும்; வரம் என்று ஆன்ற
காவற்கும் – வரம் என்று சொல்லப்பெற்ற காவலாகிய
பேற்றுக்கும்; ஓர் வலியான் ஓர் மானுடவன் – (அழிவை
விளைக்கவல்ல ஒப்பற்ற வலிமையையுடைய மானிடன்; உளன்
என்னக் கருதினேனோ?- இருக்கின்றான் என நான்
நினைக்கவில்லையே!

—————

‘அரை கடை இட்டு அமைவுற்ற முக்கோடி ஆயுவும் முன் அறிஞர்க்கேயும்
உரை கடையிட்டு அளப்ப அரிய பேர் ஆற்றல்,தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை;
திரை கடையிட்டு அளப்ப அரிய வரம் என்னும் பாற்கடலைச் சீதை என்னும்
பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ,தவப் பயனின் பெருமை பார்ப்பேன்?–241-

அரை கடையிட்டு – அரையைக் கடைசியாகக் கொண்டு;
அமைவுற்ற முக்கோடி ஆயுவும் – மூன்று கோடி ஆயுளுக்கும்;
பேர் அறிஞர்க்கேயும்- பெருமை பெற்ற அறிஞர்களாலும்;உரை
கடையிட்டு அளப்பு அரிய – வாய் வார்த்கைகளால் முடிவு காட்டி
அளக்க முடியாத; பேர் ஆற்றல் தோள் ஆற்றற்கு- பெருவலிமை
கொண்ட (உன்) தோள் ஆற்றலுக்கு;உலப்பு இல்லை – அழிவு
இல்லை (என்று நினைத்து); தவப் பயனின் பெருமை பார்ப்பேன்
– தவங்களின் பயனாய் வந்த வரங்களின் பெருக்கத்தை எண்ணிப்
பெருமை கொண்டிருந்தவளாகிய நான்; திரை கடையிட்டு அளப்பு
அரிய – அலைகளின் முடிவு காட்டி அளக்க முடியாத; வரம்
என்னும் பாற்கடலை – (உன்) வரங்கள் ஆகிய பாற்கடலை; சீதை
என்னும் பிரை – சீதா தேவியாகிய பிரையானது; கடையிட்டு-
இறுதியில் இடப்பட்டு; அழிப்பதனை – அழிக்கப்போவதனை;
அறிந்தேனோ- அறிந்தேன் இல்லையே!

————-

ஆர் அனார், உலகு இயற்கை அறிதக்கார்? அவை ஏழும் ஏழும் அஞ்சும்
வீரனார் உடல் துறந்து, விண் புக்கார்;கண் புக்க வேழ வில்லால்,
நார நாள் மலர்க் கணையால், நாள் எல்லாம் தோள் எல்லாம், நைய எய்யும்
மாரனார் தனி இலக்கை மனித்தனார் அழித்தனரே, வரத்தினாலே!–242-

உலகு இயற்கை அறிதக்கார் அன்னார் யார்- உலகின்
இயல்பினை (முழுதும்) அறியத் தகுதியுடையவர் யார் ? (யாரும்
இல்லை); அவை- அந்த உலகம்; ஏழும் ஏழும்- பதினான்கும்;
அஞ்சும் வீரனார் – அஞ்சத்தக்க இராவணனாரும்; உடல் துறந்து
விண் புக்கார்- உடலைப் போட்டு விண்உலகம் போய்விட்டார்;
கண் புக்க வேழவில்லால்- கணுக்கள் பொருந்திய கரும்பு
வில்லால்;நாரம் நாள் மலர்க்கணை – (வண்டொழுக்கை) நாணாகக்
கொண்ட அன்றலர்ந்த மலர்களின் கணையால்; நாள் எல்லாம் தோள்
எல்லாம் – நாள் முழுவதும் தோள்கள் எல்லாம்; நைய – வருந்துமாறு;
எய்யும் – எய்கின்ற; மாரனார் தனியிலக்கை- மன்மதனின் தனிப்பட்ட
குறியை (இராவணனை);மனித்தனார் – மனிதராகிய இராமபிரான்;
வரத்தினால் அழித்தனரே – அவர் வரத்தின் மேன்மையினால்
அழித்து விட்டாரே!

—————-

மண்டோதரி உயிர் பிரிதல்
9946.
என்று அழைத்தனள், ஏங்கி எழுந்து, அவன்
பொன் தழைத்த பொரு அரு மார்பினைத்
தன் தழைக் கைகளால் தழுவி, தனி
நின்று அழைத்து உயிர்த்தாள், உயிர் நீங்கினாள்.–243-

என்று அழைத்தனள் – என்று கூவி அழுதவளாய்; ஏங்கி –
ஏக்கமுற்று; எழுந்து- எழுந்து; அவன் – அந்த இராவணனின்;
பொன் தழைத்த- பொன் அணிகள் தழைத்துக் கிடக்கிற;
பொரு அருமார்பினை- ஒப்புரைக்க இயலாத (வீர) மார்பினை;
தன் தழைக்கைகளால் தழுவி – தன் தளிர் போன்ற (மெல்லிய)
கரங்களால் தழுவி; தனி நின்று- தனித்து நின்று; அழைத்து
உயிர்த்தான் – அழைத்தவாறு பெருமூச்சு விட்டவளாய்; உயிர்
நீங்கினாள்- உயிர் நீத்தாள்.

மாசு மறுவற்ற மண்டோதரியின் தூய கற்புப்
பெருக்கினை எண்ணி வியந்த நம் முன்னோர்கள், மண்டோதரியை தூய
பஞ்ச கன்னிகைகளில் ஒருத்தியாய்ச் சேர்த்துள்ளனர் என்பதை இங்கு
நினைக.

————

வான மங்கையர், விஞ்சையர், மற்றும் அத்
தான மங்கையரும், தவப் பாலவர்,
ஆன மங்கையரும், அருங் கற்புடை
மான மங்கையர் தாமும், வழுத்தினார்.-244-

வான மங்கையர்- வானாட்டு மகளிரும்; விஞ்சையர் –
வித்தியாதரப் பெண்டிரும்; மற்றும் அத்தான மங்கையரும்-
மற்றும் அத்தானவ மங்கையரும்; தவப் பாலவர் ஆன-
தவத்தின் பக்கத்திலே சென்ற; மங்கையரும்-
முனிபத்தினியரும்;அருங் கற்புடை மான மங்கையர்தாமும்-
அரிய கற்புடைய மானுட மகளிரும்; வழுத்தினார் –
(கற்பரசியாகிய) (மண்டோதரியை) பாராட்டித் துதித்தனர்.

———

பின்னர், வீடணன் பேர் எழில் தம்முனை,
வன்னி கூவி, வரன்முறையால், மறை
சொன்ன ஈம விதி முறையால் தொகுத்து,
இன்னல் நெஞ்சினொடு இந்தனத்து எற்றினான்.–245-

பின்னர்- (இதற்குப்) பின்பு; வீடணன் – வீடணன்; வரன்
முறையால் – மரபு வழிப்படி;வன்னி கூவி- அக்கினியை
ஆவாகனம் செய்து; மறை சொன்ன- வேதம் விதித்துள்ள; ஈம
விதிமுறையால் – ஈமக்கடன் விதிகளின் படி; தொகுத்து-
(சடங்குப் பொருள்களாகக்) கூட்டி; இன்னல் நெஞ்சினொடு-
துயரம் மிக்க உள்ளத்தோடு; பேர் எழில் தம்முனை –
பேரழகினனாகிய தம் முன் பிறந்த அண்ணனாகிய இராவணனை; இந்தனத்து ஏற்றினான் – ஈம
விறகின்மேல் ஏற்றி வைத்தான்.

————–

கடன்கள் செய்து முடித்து, கணவனோடு
உடைந்து போன மயன் மகளோடு உடன்
அடங்க வெங் கனலுக்கு அவி ஆக்கினான் –
குடம் கொள் நீரினும் கண் சோர் குமிழியான். -246-

குடம் கொள் நீரினும்- குடம் கொண்ட நீரை விட மிகுதியாக;
கண் சோர் குமிழியான் – குமிழியிட்டுக் கண்ணீரைக் கொட்டும்
வீடணன்; கடன்கள் செய்து முடித்து- இறுதிக் கடன்களையெல்லாம்
செய்து முடித்தபின்; கணவனோடு உடைந்து போன – கணவனுடனே
(தன்) நெஞ்சம் உடைந்து மாண்டு போன; மயன் மகளோடு உடன் –
மயனின் மகளாகிய மண்டோதரியுடன்; அடங்க- (அந்த இராவணன்
உடல்) அடங்குமாறு; வெங்கனலுக்கு – கொடுந்தீக்கு;
அவியாக்கினான் – உணவாக்கினான்.

————–

மற்றையோர்க்கும் வரன்முறையால் வகுத்து,
உற்ற தீக் கொடுத்து, உண்குறு நீர் உகுத்து,
‘எற்றையோர்க்கும் இவன் அலது இல்’ எனா,
வெற்றி வீரன் குரை கழல் மேவினான். –247-

மற்றையோர்க்கும்- போரில உயிர் நீத்த மற்றைய
வீரர்கட்கும்; வரன் முறையால் வகுத்து- (நூல்கள்) கூறிவரும்
முறைப்படி வகைசெய்து; உற்ற தீக் கொடுத்து- உரிய தீக்
கொடுத்து; உண்குறு நீர் உகுத்து- உண்ணுமாறு நீர்க்
கடன்களையும் புரிந்து; எற்றையோர்க்கும் இவன் அலது இல்
எனா- எவர்க்கும் இவன் அல்லால் (வேறு துணை) இல்லை என்று
கூறத்தக்க; வெற்றி வீரன்- வெற்றியே தாங்கும் வீரனான்
இராமபிரானுடைய; குரைகழல்- ஒலிக்கும் கழல் அணிந்த
திருவடிகளை;மேவினான்- அடைந்தான் (வீடணன்).
உண்ணும் நீர் உகுத்தல் – வாசோதகம் திலோதகம் கொடுத்தல்
என்பர்.

———-

வந்து தாழ்ந்த துணைவனை, வள்ளலும்
‘சிந்தை வெந் துயர் தீருதி, தெள்ளியோய்!
முந்தை எய்தும் முறைமை இது ஆம்’ எனா,
அந்தம் இல் இடர்ப் பாரம் அகற்றினான். –248-

வந்து தாழ்ந்த துணைவனை – (தன்முன்) வந்து அடியிற்
பணிந்த தம்பியாகிய வீடணனை; வள்ளலும்- வள்ளலாகிய
இராமபிரானும்; தெள்ளியோய்- உலகந் தெளிவுற்ற மேலோனே!;
சிந்தை வெம் துயர் தீருதி- (உன்) மனத்தே நிறையும்
கொடுந்துயரை நீக்குவாயாக; அது முந்தை எய்தும் முறைமை
ஆம்- (இறந்தோரால் எய்தும் துயர் துடைத்து ஆறுதல்
கொள்வதே) முந்தையோர் கொண்ட முறைமையாகும்; எனா –
என்று; அந்தம் இல் இடர்ப் பாரம் அகற்றினான் – (வீடணன்
கொண்ட) முடிவற்ற துன்பச்சுமையை (இராமபிரான் தன்
இன்னுரைகளால்) நீக்கியருளினான்.

————–

மிகைப் பாடல்கள்

புரந்தரன் பகைவன் ஆவி போக்கிய புனிதன், வென்றி
சுரந்தருள் அனுமன், நீலன், அங்கதன், சுக்கிரீவன்,
உரம் தரு வீரர் ஆதிக் கவிப் படைத் தலைவருள்ளார்,
பரந்திடும் அரக்கன் சேனை படுத்தனர், திரியலுற்றார். 5-1

வரம் படைத்து உயர்ந்த வன் போர் வயப் படைத் தலைவரோடு
நிரம்பிய வெள்ளச் சேனை நிரு தரும், களிறும், தேரும்,
மரம் படர் கானில் தீப்போல், வள்ளல் தன் பகழி மாரி
பொரும்படி உடல்கள் சிந்தி, பொன்றினர் எவரும் அம்மா. 17-1

பொங்கிய குருதி வெள்ளம் பொலிந்து எழு கடலில் போக,
தங்கிய பிணத்தின் குப்பை தடுத்தது; சமரபூமி எங்கணும்
கவந்தம் ஆட, எய்தி அங்கு அரக்கிமார்கள், தங்கள்
தம் கணவர்ப் பற்றி, தம் உடல் தாங்கள் நீத்தார். 17-2

எழும் படை வெள்ளம் எல்லாம், இரண்டு ஒரு கடிகை தன்னில், ஆங்கு
களம் பட, கமலக்கண்ணன் கடுங் கனல் பகழி மாரி வளம் படச் சிலையில் கோலி,
பொழிந்து, அவை மடித்தான்; கண்டு, உளம் கனல் கொளுந்த,
தேரின் உருத்து, எதிர், அரக்கன் வந்தான் 17-3

மூஉலகு அடங்கலும் மூடும் அண்டமேல் தாவினன்
தேரொடும், அரக்கன்; தாவியே, கூவினன்;
அங்கு அறைகூவ, கொண்டலும் மேவினன்,
அரக்கனை விடாது பற்றியே. 71-1

அண்டம் ஓராயிர கோடி எங்கணும் மண்டினர், செருத் தொழில்
மலைதல் விட்டிலர்; அண்டர்கள் கலங்கினர்;
‘அரக்கராயுளோர் உண்டு, இனிக் கரு’ என
ஓதற்கு இல்லையால். 71-2

உமையவள் ஒரு புடை உடையவன் உதவியது,
அமைவுறும் மயல் வினை அளவு இல புரிவது,
சுமை பெறும் உலகு ஒரு நொடிவரை தொடருவது,
இமையவர் அடல் வலி பருகியது, எளிமையின். 89-1

மயன் படைக்கலம் அழிந்தது கண்டு, இகல் மறவோன்,
‘சயம் படைத்தது நன்று; இவன் செருக்கினைத் தடுக்க,
பயன் படைத்துள தண்ட மாப் படைகள் உண்டு; அதனால்,
நயம் படைப்பென்’ என்று, ஒரு கதை நாதன்மேல் எறிந்தான். 104-1

அன்ன மாக் கதை விசையொடு வருதலும், அமலன்
பொன்னின் ஆக்கிய சிலையிடை ஒரு கணை பொறுத்தான்;
முன்னது ஆக்கிய கரங்களும் முதிர் பொதிர் எறிய, சின்னமாக்கினன்;
அது கண்டு, அங்கு அரக்கனும் சினந்தான். 106-1

ஆயது ஆக்கிய செய்கை கண்டு, அரக்கனும் சினந்தே,
தீயின் மாப் படை செலுத்த, அப் படையினின் செறுத்தான்;
தூய நீக்கம் இல் வாயுவின் படை தொட, அரக்கன்
ஏய அப் படை ஏவி, அங்கு அமலனும் இறுத்தான். 108-1

இரவிதன் படை ஏவினன், அரக்கன்; மற்று அமலன் சுருதி,
அன்ன திண் படைகொடு காத்தனன்; மதியின் விரவு வெம் படை
வெய்யவன் விடுத்தலும், வீரன், உரவு திங்களின்
படைகொண்டு, அங்கு அதனையும் ஒறுத்தான் 108-2

வாருதிக்கு இறை படை கொண்டு அங்கு அரக்கனும் மறைந்தான்;
நேர் உதிக்க அப் படை கொண்டு நிமலனும் நீக்க, தார்
உதித்திடு தடம் புயத்து அரக்கனும் தருக்கி, ‘பேருவிப்பென்,
மற்று இவன் உயிர்’ எனும் உளம் பிடித்தான். 108-3

முக்கணான் படை முதலிய தேவர்தம் படைகள் ஒக்க வாரி, அங்கு
அரக்கனும், ஊழ் முறை துரப்ப, புக்கி, அண்ணலை
வலங்கொண்டு போனதும், பொடிபட்டு உக்கி,
ஓடினதும் அன்றி, ஒன்று செய்துளதோ? 108-4

இத் திறம்பட மாயையின் படை வகுத்து, எழுந்து, அங்கு
எத் திறங்களும் இடி உரும் எறிந்திட வெருவி,
சித்திரம் பெற அடங்கிய கவிப் பெருஞ் சேனை
மொய்த்து மூடியது, அண்டங்கள் முழுவதும் மாய. 119-1

‘அண்ட கோடிகள் முழுவதும் அடுக்கு அழிந்து உலையக்
கொண்ட காலம் ஈதோ!’ எனக் குலைகுலைந்து, அமரர்
துண்ட வான் பிறை சூடியைத் தொழ, அவன் துயரம்
கண்டு, ‘இராகவன் கடிந்திடும்; கலங்கலீர்’ என்றான். 119-2

மாயையின் படை தொலைந்திட, வகுப்பொடும் எழுந்த
தீய வெவ் வினைச் செய்கைகள் யாவையும் சிதைந்தே போயது;
எங்கணும் இருள் அற ஒளித்தது; அப் பொழுதில் காயும்
வெஞ் சினத்து அரக்கனும் கண்டு, உளம் கறுத்தான். 124-1

நெற்றி விழியான்-அயன், நிறைந்த மறையாளர்,
மற்றை அமரர், புவியில் வானவர்கள், ‘ஈர்-ஐந்து
உற்ற தலை தானவன் விடும் கொடிய சூலம்
இற்று ஒழிய ஆன்று அழியுமோ?’ என-இசைத்தான். 131-1

‘வேதம் ஒரு நாலும், உள வேள்விகளும், வெவ்வேறு
ஓத முதலாய் உதவு பூதம் அவை ஐந்தும், நீதியொடு
கால்குலைய, நீசன் விடு சூலம் ஈது அழியும்’ என்று
இதயம் எண்ணினன், இராமன். 131-2

எவ் வகை உரகமும் இரியல் போயின, நொவ்வியல் உற்றன;
நொடிப்பது என் இனி? அவ் வயின் அரன் அணி
அடல் அராவுமே கவ்வையின் உழந்தன,
சிறையின் காற்றினே. 144-1

பிறைத் தலைப் பகழியால் பின்னும் ஓர் தலை
அறுத்தனன்; முளைத்தது, அங்கு அதுவும் ஆர்த்து; உடன்
மறுத்து இரு தலைதனை மாற்ற, வள்ளலும்
குறைத்திலன் எனும்படி முளைத்த, குன்றுபோல். 151-1

ஆயிரப் பதின் மடங்கு அரக்கன் மாத் தலை
தீமுகப் பகழியால் சினந்து, இராகவன்
ஓய்வு அறத் துணிக்கவும், உடன் முளைத்ததால்,
தீயவன் தவப் பெருஞ் செயலின் வன்மையால். 151-2

அண்ணலும் இடைவிடாது அறுத்து வீழ்த்தலால்,
மண்ணொடு வானகம், மருவும் எண் திசை,
எண்ணுறும் இடம் எலாம் இராவணன் தலை
நண்ணியது; அமரரும் நடுக்கம் எய்தினார். 152-1

இத் திறத்து இராமன் அங்கு ஏவும் வாளியின்
தத்துறும் தலை முளைத்து எய்தும் தன்மையால்,
அத் திறத்து அரக்கனும் அமர் ஒழிந்திலன்-
முத் திறத்து உலகமும் முருக்கும் வெம்மையான், 153-1

தொடுத்த ஆழியின் தோமரம் தூள்பட,
விடுத்த வீரன் அவ் வெய்யவன் மாத் தலை
அடுத்து மீளவும் நின்று அறுத்தான்; உயிர்
முடித்திலன் விளையாடலை முன்னியே. 160-1

ஆனபோது, அங்கு அரக்கன் அத் தேரொடும்
வான மீது எழ, மாதலி தூண்டிட, ஞான
நாயகன் தேரும் எழுந்துறப் போனது;
அண்டப்புறத்து அமர் கோலினார். 164-1

அஞ்சல் இன்றி, அமர்க் களத்து, ஆரியன்
வெஞ் சினத்தொடு வேல் அரக்கன் பொர,
எஞ்ச ஏழு திவசம் இராப் பகல்
விஞ்சு போர் செயும் வேலையில் வீரனும், 183-1

ஆய கண்டு, அங்கு அமலன் விடும் சரம்
சாயகங்களை நூறி, தலைத்தொகை
போய் அகன்றிடச் செய்தலும், போக்கிலாத்
தீயவன் சினந்து, இம் மொழி செப்புவான்: 183-2

‘துறக்கும் என்பதை எண்ணி, சிரத் தொகை
அறுக்குமுன் முளைத்து உய்குவது அன்றியே,
மறுக்கும் என்று மனக் கொளல், மா நிலத்து
இறக்கும் மானுடர் போன்று, என் உயிரும், நீ.’ 183-3

ஈது அரக்கன் புகல, இராமனும்,
‘தீது இருக்குறும் சிந்தையின் நீ தெளிந்து,
ஓது உரைக்கு எதிருற்று, என் பகழி
இப் போது உரைக்கும்’ எனக் கொடு பொங்கினான். 183-4

மாறுபடத் தேவர்களை ஏவல்கொளும் வாள் அரக்கன் மடிய, அன்னான்
ஏறி வரு பொன் தடந் தேர் பாகனும் பொன்றிட, பண்டு அங்கு இமையா முக் கண்
ஈறு இல் பரன் புகன்றபடி சுரந்து இமைப்பின் ஏகியதால்-இடையே கூடித்
தேறுதல் செய்து உழல் போதில், தீவினை மாய்த்திடப் போம் நல் வினையேபோல. 200-1

———————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/35-இராமன் தேர் ஏறு படலம்–

November 2, 2020

சிவபெருமான் ஏவ, இந்திரன் தேர் அனுப்பினான்; அவனுடைய
தேரோட்டியாகிய மாதலி தேர் கொண்டு வந்தான். தேரின்
சிறப்பைக் கவிக்கூற்றால் உணர்கிறோம். அரக்கர் மாயையால்
வந்த தேரோ என முதலில் இராமன் ஐயப்பட்டான். பின்னர்
உண்மை தெரிந்து, தேவர் அனுப்பிய தேரில் ஏறினான் பெருமான்.
இவை இப்படலம் கூறும் செய்திகள்.

——-

இராமன் போர்க்கோலம் பூண்டு எழுதல்

தொழும் கையொடு, வாய் குழறி, மெய்ம் முறை துளங்கி,
விழுந்து கவி சேனை இடு பூசல் மிக, விண்ணோர்
அழுந்து பணிமீது அமளி, ‘அஞ்சல்’ என, அந் நாள்,
எழுந்தபடியே கடிது எழுந்தனன், இராமன். 1-

முறை – முறையே; தொழும் கையொடு – (இராவணன்
வருவதைக் கண்டு அஞ்சிய வானரர்கள் இராமனை நோக்கி)
வணங்கிய கைகளோடு; வாய் குழறி – அச்சத்தால் பேச்சுக் குழறி;
மெய் துளங்கி – உடம்பு நடுங்க; கவிசேனை – வானர சேனை;
விழுந்து இடு பூசல் மிக – நிலத்திலே தடுமாறி விழுந்து
எழுப்புகின்ற பேரொலி பெருகிட; இராமன்- அந்த ஆரவாரத்தைக்
கேட்ட இராமன்; விண்ணோர் அழுந்து படு பால் அமளி
அந்நாள் – (முன்பொரு காலத்திலே) தேவர்கள் துன்பத்தில்
அழுந்திய போது எழுப்பிய ஆரவாரத்தைக் கேட்ட திருப்பாற்கடலில்
இருந்த அந்தக் காலத்தில்; ‘அஞ்சல்’ என எழுந்தபடியே-
(தேவர்களைப் பார்த்து) ‘அஞ்சாதீர்கள்’ என அபயம் கூறி
எழுந்தருளியது போலவே; கடிது- விரைவாக; எழுந்தனன்- (வானர
சேனை அச்சம் தவிருமாறு) இராமபிரான் எழுந்தான்.

——————-

கடக் களிறு எனத் தகைய கண்ணன், ஒரு காலன்
விடக் கயிறு எனப் பிறழும் வாள் வலன் விசித்தான்,
‘மடக்கொடி துயர்க்கும், நெடு வானின் உறைவோர்தம்
இடர்க் கடலினுக்கும், முடிவு இன்று’ என இசைத்தான். 2-

கடக்களிறு எனத் தகைய கண்ணன் – மதம் கொண்ட
ஆண்யானை எனத் தக்க கண்ணன் (இராமன்); ஒரு காலன்-
ஒப்பற்ற இயமனுடைய; விடக் கயிறு எனப் பிறழும் வாள்-
நஞ்சு போன்ற பாசக் கயிறு போல விளங்குகின்ற உடைவாளை;
வலன் விசித்தான் – வலப் புறத்திலே கட்டிக் கொண்டான்;
‘மடக் கொடிதுயர்க்கும்- (உடைவாளைக் கட்டிக் கொண்ட
இராமபிரான்) இளங்கொடி போன்றவளாகிய சீதையின்
துயரத்திற்கும்; நெடுவானின் உறைவோர் தம் – நீண்ட
வானுலகில் வாழ்கின்ற தேவர்களுடைய; இடர்க்கலினுக்கும்-
துன்பமாகிய கடலுக்கும்; ‘இன்று முடிவு’ என இசைத்தான்-
‘இன்றோடு முடிவு வந்தது’ என்று கூறினான்.

————-

தன் அக வசத்து உலகு தங்க, ஒரு தன்னின்
பின்னக அசத்த பொருள் இல்லை; பெரியோனை
மன்ன கவ சத்து உற வரிந்தது என என்கோ?
இன்ன கவசத்தையும் ஒர் ஈசன் எனலாமால். 3-

தன் அக வசத்து – தன்னுள்ளே; உலகு தங்க –
உலகங்களெல்லாம் தங்கியிருக்க; ஒரு தன்னின் – ஒப்பற்ற
தன்னினும்; பின்னக அசத்த பொருள் இல்லை- வேறுபட்டதும்
சக்தியற்றதுமான வேறு எப்பொருளும் இல்லை; என – என்பது
போல; பெரியோனை – இராமபிரானை; மன்ன, க(வ்)வ –
நிலைபெற்றுக் கவ்வுமாறு; சத்து உற வரிந்தது என என்கோ?-
உண்மை பொருந்த கட்டப்பட்டது என்று சொல்வதா?; இன்ன கவசத்தையும் – பிணித்து இராமன் மேனியைப் பற்றிய
கவசத்தையும்; ஓர் ஈசன் எனலாம்- ஒரு பரம்பொருளே
எனலாம்.

———-

புட்டிலொடு கோதைகள், புழுங்கி எரி கூற்றின்
அட்டில் எனலாய மலர் அங்கையின் அடக்கிக்
கட்டி, உலகின் பொருள் எனக் கரை இல் வாளி
வட்டில், புறம் வைத்து, அயல் வயங்குற வரிந்தான். 4-

கூற்றின்- இயமதருமனின்; புழுங்கி எரி அட்டில் எனலாய-
நன்றாக எரிகின்ற அடுப்பு என்று சொல்லத்தக்க; அங்கையின்
– அழகிய கரங்களிலே; புட்டிலொடு கோதைகள் – விரல்
உறைகளையும் கை உறைகளையும்; அடக்கிக் கட்டி- முற்றிலும்
(கை) மறையும்படி கட்டிக் கொண்டு; உலகின் பொருள் என-
உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களும் அடங்குமாறு போல;
கரை இல் வாளி – அளவற்ற அம்புகளைக் கொண்டுள்ள; வட்டில்
– அம்பறாத் தூணியை; புறம் அயல் வைத்து- முதுகுப் பக்கத்திலே;
வயங்குற வரிந்தான்- விளங்கும்படி வைத்துக் கட்டினான்;

—————–

இராமனுக்குத் தேர் அனுப்புமாறு, சிவபெருமான் தேவருக்கு கட்டளையிடல்

‘மூண்ட செரு இன்று அளவில் முற்றும்; இனி, வெற்றி
ஆண் தகையது; உண்மை; இனி அச்சம் அகல்வுற்றீர்,
பூண்ட மணி ஆழி வய மா நிமிர் பொலந் தேர்
ஈண்ட விடுவீர், அமரில்’ என்று, அரன் இசைத்தான். 5-

அமரர்- தேவர்களே!; மூண்ட செரு- மூண்டுள்ள இந்தப்
போர்; இன்றளவில் முற்றும்- இன்றோடு முடிந்துவிடும்; இனி
வெற்றி ஆண்தகையது- இனிமேல் வெற்றி ஆண்மையாளனான
இராமனுக்கே உரியது; உண்மை- இதுவே உண்மை; இனி
அச்சம் அகல்வுற்றீர்- இனிமேல் அச்சம் உங்களை விட்டு
நீங்கப் பெற்றீர்கள்; மணி பூண்ட- மணிகள் கட்டியதும்; வய
மா- வலிமை கொண்ட குதிரைகள் பூட்டப்பட்டதும்; ஆழி-
சக்கரங்கள் உடையதுமான; நிமிர்- உயர்ந்த; பொலந்தேர்
– பொன்தேரினை; ஈண்ட விடுவீர்- (இராமபிரானுக்கு)
விரைவில் அனுப்புவீர்களாக; என்று அரன் இசைத்தான்-
என்று சிவபெருமான் கூறினான்.

————–

இந்திரன் கூற மாதலி தேரைக் கொணர்தல்

தேவர் அது கேட்டு, ‘இது செயற்கு உரியது’ என்றார்;
ஏவல் புரி இந்திரனும், ‘அற்று’ என இசைத்தான்;
‘மூஉலகும் முந்தும் ஒர் கணத்தின்மிசை முற்றிக்
கோவில் புரிகேன்; பொரு இல் தேர் கொணர்தி’ என்றான். 6-

தேவர் அது கேட்டு- தேவர்கள் சிவபிரான் சொன்னதைக்
கேட்டு; ‘இது செயற்கு உரியது’ என்றார்- ‘இச் செயல்
செய்வதற்கு உரியது என்று (இந்திரனிடம்) சொன்னார்கள்;
ஏவல் புரி இந்திரனும்- சிவபிரான் ஏவியதைச் செய்யும்
இந்திரனும்; அத்தொழில் இசைந்தான்- அந்தச் செயலைச்
செய்ய ஏற்றுக்கொண்டான்; மூ உலகும் முந்தும்- மூன்று
உலகங்களிலும் ஏற்பட்டுச் சிறப்பதாயும்; ஓர் கணத்தில்
முற்றி- ஒரு கணத்தில் (அந்த மூவுலகங்களையும்) முழுவதாகச்
சுற்றிவருவதாயும்; கோவில் புரிவேன்- சிறப்புள்ள தேரை
இராமனுக்கு ஏற்ற கோவிலாகச் செய்வேன்; பொரு இல் தேர்
கொணர்தி – ஒப்பற்ற தேரினைக் கொண்டு வருக; என்றான்-
என (மாதவியாகிய தன் சாரதியிடம்) கூறினான்.

———

மாதலி கொணர்ந்த தேரின் சிறப்பு

மாதலி கொணர்ந்தனன், மகோததி வளாவும்
பூதலம் எழுந்து படர் தன்மைய பொலந் தேர்;
சீத மதி மண்டலமும் ஏனை உளவும் திண்
பாதம் என நின்றது, படர்ந்தது விசும்பில். 7-

மகோததி வளாவும் – பெருங்கடல் சூழ்ந்துள்ள; பூதலம்
எழுந்து படல் தன்மைய- பூவுலகமே எழுந்து இயங்குவது போன்ற
தன்மை கொண்ட; பொலம் தேர் – பொன்மயமான தேரை; மாதலி
கொணர்ந்தனன் – மாதலி கொண்டு வந்தான்; சீத மதி
மண்டலமும் – குளிர்ச்சி கொண்ட சந்திர மண்டலமும்; ஏனை
உளவும் – மற்றும் (மேல் மண்டலத்தில்) உள்ளனவும்; திண்
பாதம் என – தன்னுடைய வலிமையான பாதம் என்று சொல்லும்
படியாக; நின்றது – (தேவர்கள் அனுப்பிய தேர் நின்றது;
விசும்பில் படர்ந்தது – (தன் உயரத்தால் ஆகாயத்தின் மேல்
பரவியது.

—————–

குலக் கிரிகள் ஏழின் வலி கொண்டு உயர் கொடிஞ்சும்,
அலைக்கும் உயர் பாரின் வலி ஆழியினின் அச்சும்,
கலக்கு அற வகுத்தது; கதத்து அரவம் எட்டின்
வலக் கயிறு கட்டியது; முட்டியது வானை. 8-

குலக்கிரிகள் ஏழின் வலி கொண்டு – ஏழு குல மலைகளின்
வலிமையைத் தன்னிடம் கொண்டதாய்; உயர் கொடிஞ்சும் –
உயர்ந்த கொடிஞ்சு என்னும் உறுப்பையும்; அலைக்கும் உயர்
பாரின் வலி – (அலைகளால் இடையறாமல்) அலைக்கப்படுகின்ற
நிலவுலகத்தின் வலிமை (கொண்டதுபோன்ற); ஆழியினின்
அச்சும் – சக்கரத்தில் பொருந்திய அச்சினையும்; கலக்கு
அற வகுத்தது – இடைவெளி இல்லாமல் நெருக்கமாகக் கோக்கப்
பட்டது அந்த தேர்; கதத்து அரவம் எட்டின் – சினம் கொண்ட
எட்டுப் பெருநாகங்களையும்; வலக் கயிறு கட்டியது – வலிமை
கொண்ட கயிறாகக் கொண்டு கட்டப்பட்டது, அந்த தேர்;
வானை முட்டியது – (அத்தேர்) வானத்தையே முட்டிக்கொண்டு
நின்றது.

————–

ஆண்டினொடு நாள், இருது, திங்கள், இவை என்று
மீண்டனவும் மேலனவும் விட்டு, விரி தட்டில்
பூண்டு உளது; தாரகை மணிப் பொரு இல் கோவை
நீண்ட புனை தாரினது; நின்றுளது குன்றின். 9-

மீண்டனவும் மேலனவும் – கடந்தவையும்
வரப்போவனவுமாகிய; ஆண்டினொடு – ஆண்டையும்; நாள்,
இருது, திங்கள் இவை என்னா – கிழமை, பருவம், மாதம்
என்ற இவற்றின் காலப் பகுதிகளையும்; விரி தட்டில் பூண்டுளது
– விரிந்த தேர்த்தட்டிலே குறிக்கப்பட்டுள்ளது; தாரகை மணி –
நட்சத்திர மணிகள் கொண்டு கோத்த; பொரு இல் கோவை-
ஒப்பற்ற மாலைகளையும்; புனை தாரினது – அழகு செய்யப்பட்ட
மாலைகளையும் உடையது; குன்றின் நின்றுளது – மலைபோலப்
பெருமிதமாகப் போர்க்களத்திலே வந்து நின்றது.

————

மாதிரம் அனைத்தையும் மணிச் சுவர்கள் ஆகக் கோது அற
வகுத்தது; மழைக் குழுவை எல்லாம் மீது உறு
பதாகை என வீசியது; மெய்ம்மைப் பூதம்
அவை ஐந்தின் வலியின் பொலிவது அம்மா! 10-

மாதிரம் அனைத்தையும் – எல்லாத் திசைகளையும்; மணிச்
சுவர்களாக- அழகிய சுவர்களாகக்கொண்டு;கோது அற வகுத்தது
– (அந்தத் தேர்) குற்றமற உருவாக்கப்பட்டது; மழைக் குழுவை
எல்லாம் – மேகக் கூட்டம் அனைத்தையும்; மீது உறு பதாகை
என – (தேர்) மேல் கட்டப்பட்ட பெரிய கொடிகளாகக் கொண்டு;
வீசியது- ஆடச் செய்தது; மெய்ம்மைப் பூதம் அவை
ஐந்தின் – அழியா நிலை கொண்ட ஐந்து பூதங்களினுடைய;
வலியின் பொலிவது – வலிமையோடு அழகாக அமைவது.

———–

மரத்தொடு தொடுத்த துகில் யாவும் உள வாரித்
தரத்தொடு தொடுத்த கொடி தங்கியது; சங்கக்
கரத்தொடு தொடுத்த கடல் மீது நிமிர் காலத்து,
உரத்தொடு கடுத்த கதழ் ஓதை அதன் ஓதை. 11-

மரத்தொடு மருந்து – மரங்கள் மற்றும் பூண்டுகள் என;
உலகில் உள யாவும் வாரி – உலகில் உள்ள எல்லாப்
பொருள்களையும் வாரி எடுத்து; தரத்தொடு தொடுத்த –
உயர்தரம் கொண்டு தொடுக்கப்பட்ட; கொடி தாங்கியது-
கொடியைத் தாங்கியிருப்பது; சங்கக்கரத்தொடு தொடுத்த
கடல்- கூட்டமாயுள்ள அலைகளோடு பொருந்திய கடலானது;
மீது நிமிர் காலத்து – மேலே பொங்கி வருகின்ற (ஊழிக்)
காலத்து; உரத்தொடு கடுத்த கதழ் ஓசை – வலிமையொடு
விரைவுகொண்டு உக்கிரமாக எழுப்பும் ஓசையே; அதன் ஓதை-
அந்தத் தேரின் ஓசையாகும்.

————–

பண்டு அரிதன் உந்தி அயன் வந்த பழ முந்தைப்
புண்டரிக மொட்டு அனைய மொட்டினது; பூதம்
உண்டன வயிற்றிடை ஒடுக்கி உமிழ்கிற்போன்,
அண்டச மணிச் சயனம் ஒப்பது, அகலத்தின். 12-

பண்டு- முன்னம் ஆதியிலே;அரிதன் உந்தி அயன் வந்த-
திருமாலின் உந்தியில் நான்முகன் தோன்றுதற்கு இடமாகிய;
பழ முந்தைப் புண்டரிக மொட்டு அனைய – பழமையான
தாமரை மொட்டைப் போன்ற; மொட்டினது – மொட்டு என்னும்
உறுப்பினை உடையது (அந்தத் தேர்); பூதம் உண்டவை
வயிற்றிடை ஒடுக்கி- பூத விகாரங்களாகிய உயிரிகளையெல்லாம்
தன் வயிற்றுள் ஒடுக்கி; உமிழ்கிற்போன்- (மீண்டும் படைப்புக்
காலத்தில்) உமிழ வல்லவனாகிய திருமாலின்; அண்டச மணிச்
சயனம் ஒப்பது அகலத்தில் – ஆதி சேடனாகிய அழகிய
படுக்கையை அகலத்தில் ஒத்திருப்பது.

————–

வேதம் ஒரு நாலும், நிறை வேள்விகளும், வெவ் வேறு
ஓதம் அவை ஏழும், மலை ஏழும், உலகு ஏழும்,
பூதம் அவை ஐந்தும், எரி மூன்றும், நனி பொய் தீர்
மா தவமும், ஆவுதியும், ஐம் புலனும், மற்றும்.–13

(அந்தத் தேரானது) வேதம் ஒரு நாலும்- நான்கு வேதங்களும்;
நிறை வேள்விகளும் – நிறைவுடைய வேள்விகளும்; வெவ்வேறு
ஓதம் அவை ஏழும் – தனித்தனியாக உள்ள கடல்கள் ஏழும்;
மலை ஏழும் – ஏழு (குல) மலைகளும்; உலகு ஏழும் – ஏழு
உலகங்களும்; பூதம் அவை ஐந்தும் – ஐந்து பூதங்களும்; எரி
மூன்றும்- மூவகை அக்கினிகளும்; நனி பொய் தீர் மா தவமும்
– மிகவும் பொய்ம்மையினின்று நீங்கிய பெருந்தவமும்; ஆவுதியும் –
(தேவர்க்கு வழங்கப்படும்) ஆகுதிகளும்; மற்றும்- மேலும்…

————

அருங் கரணம் ஐந்து, சுடர் ஐந்து, திசை நாலும்,
ஒருங்கு அரணம் மூன்றும், உழல் வாயு ஒரு பத்தும்,
பெரும் பகலும், நீள் இரவும், என்று இவை பிணிக்கும்
பொரும் பரிகள் ஆக நனி பூண்டது, பொலந் தேர். 14-

பொலந்தேர் – பொன்மயமான அந்தத் தேர்; அருங்
கரணம் ஐந்து – இந்திரியங்கள் ஐந்து; சுடர் ஐந்து – ஐந்து
நெருப்புகள்; திசை நாலும் – மேலவற்றோடு நான்கு திசைகள்;
ஒருங்கு அரணம் மூன்றும்- ஒருங்கே இணைந்து செயல்பட்ட
மூன்று மதில்கள்; உழல் வாயு ஒரு பத்தும் – திரிகின்ற பத்து
வகைக் காற்றும்; பெரும்பகலும் – பெரிய பகற்காலம்; என்று
இவை – எனக் குறிக்கப்பட்ட இவை; பொரும் பரிகள் ஆகி-
போர்க்குணம் உடைய குதிரைகளாகி; நனி பூண்டது- நன்கு
பூணப்பட்டது.

வேதம் நான்கு, பூதம் ஐந்து, கரணம் ஐந்து, புலன் ஐந்து,
திசை நாலு இவை தெளிவு எஞ்சியவற்றின் விரிவு வருமாறு;
வேள்விகள் ஐந்து: கடவுள் வேள்வி, பிரம வேள்வி, பூத
வேள்வி, மானிட வேள்வி, தென்புலத்தார் வேள்வி. கடல்
ஏழு: உவர்நீர்க் கடல், நெய்க்கடல், கருப்பஞ்
சாற்றுக்கடல், தேன் கடல், மலை ஏழு: கயிலை, இமயம்,
மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலம் இவற்றோடு
கந்த மாதனத்தைச் சேர்த்து மலை எட்டு எனவும் உண்டு. உலகு
ஏழு: பூலோகம், தவலோகம், சத்தியலோகம், மகாலோகம், சன
லோகம், தவ லோகம், சத்திய லோகம். எரி மூன்று (வேள்வித்தீ):
காருகபத்தியம், ஆகவனீயம், தட்சிணாக்கினி சுடர் (நெருப்பு)
ஐந்து நான்கு திசையில் நான்குடன் மேலே உள்ள கதிரவனைச் சேர்த்து
பஞ்சாக்கினிகள் என்பர்; இராகம், கோபம், காமம்,
சடம், தீபனம் ஆகியவை பஞ்சாக்கினிகள் எனலும் ஒன்று.
அரணம் மூன்று: பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால்
ஆகிய திரிபுர மதில்கள். தச வாயுக்கள்: பிராணன், அபானன்,
சமானன், உதானன், வியானன், நாகன், கூர்மன், கிரிகரன்,
தேவதத்தன், தனஞ்சயன் என்பன.

————

மாதலி இராமனிடம் தேர் கொணர்ந்து அதன் சிறப்பைச் செப்புதல்

வந்ததனை வானவர் வணங்கி, ‘வலியோய்! நீ
எந்தை தர வந்தனை; எமக்கு உதவுகிற்பாய்;
தந்தருள்வை வென்றி’ என நின்று, தகை மென் பூச்
சிந்தினர்கள்; மாதலி கடாவி, நன் சென்றான். 15-

வந்ததனை- அவ்வாறு வந்த தேரை; வானவர் வணங்கி-
தேவர்கள் வணங்கி; (மாதலியை நோக்கி) ‘வலியோய்!-
வல்லமை உடையவனே!; நீ எந்தை தர வந்தனை- நீ எம்
தலைவனாகிய இந்திரன் அனுப்பியதால் வந்திருக்கிறாய்;
எமக்கு உதவுகிற்பாய் – எங்களுக்கு உதவும் ஆற்றல்
உடையவன் நீ; வென்றி தந்தருள்வை- வெற்றி தந்தருள்வாயாக’;
என நின்று – என்று சொல்லி நின்று; தண்மென் பூச்
சிந்தினர்கள்- குளிர்ந்த மெல்லிய மலர்களைச் சொரிந்தனர்;
மாதலி….; கடாவி – தேரைச் செலுத்திக் கொண்டு; நனி
சென்றான்- விரைந்து சென்றான்.

————–

‘வினைப் பகை விசைக் கொடு விசும்பு உருவி, மான
மனத்தின் விசை பெற்றுளது வந்தது’ என, வானொடு
அனைத்து உலகமும் தொழ, அடைந்தது, அமலன்பால்;
நினைப்பும் இடை பிற்பட, நிமிர்ந்தது நெடுந் தேர். 16-

நெடுந்தேர் – அந்தப் பெரிய தேர்; வினைப்பகை விசைக்
கொடு – ஆன்மாவின் பகையாகிய வினையின் வேகத்தைக்
கொண்டு; விசும்பு உருவி- ஆகாயத்தை ஊடுருவிக்கொண்டு; மான
மனத்தின் விசை பெற்றுளது- பெருமைக்குரிய மன வேகத்தைப்
பெற்றதாய்; வந்தது – வந்து சேர்ந்தது; என – என்று
பெருமைப்படுத்தி; வானோடு அனைத்து உலகமும் தொழ- வானுலகத்தோடு எல்லா உலகங்களும் வணங்கும்படியாக;
அமலன்பால் அடைந்தது – குற்றமற்றவனாகிய இராமனிடம்
வந்துசேர்ந்தது; நினைப்பும் இடை பிற்பட- எண்ணம்கூடப்
பின்னடையும்படியாக; நெடுந்தேர் – அந்தப் பெரிய தேர்;
நிமிர்ந்தது- உயரமாக வந்து நின்றனது.

———

தேரினை வியந்த இராமன், தேர் கொணர்ந்தது குறித்து மாதலியை வினாவுதல்

‘அலரி தனி ஆழி புனை தேர் இது எனில், அன்றால்;
உலகின் முடிவில் பெரிய ஊழ் ஒளி இது அன்றால்;
நிலைகொள் நெடு மேரு கிரி அன்று; நெடிதுஅம்மா;
தலைவர் ஒரு மூவர் தனி மானம் இதுதானோ? 17-

அலரி- சூரியனுடைய; தனி ஆழி புனை தேர் இது எனில்,
அன்று – ஒற்றைச் சக்கரம் பூண்ட தேர்தான் இது எனின் அப்படி
இல்லை; உலகின் முடிவில் – உலகங்களின் அழிவுக் காலத்தில்
எழுகின்ற; பெரிய ஊழ் ஒளி இது அன்று – பெரிய ஊழிக்
காலத்தில் தோன்றும் தீயின் ஒளிகொண்டது இது அன்று;
நிலைகொள் நெடு மேரு கிரி அன்று- நிலைபேறுடைய பெரிய
மேரு மலையும் அன்று; நெடிது – மிகவும் உயரமானது இது;
(அம்மா என்ற சொல் வியப்புக் குறிப்பானது); தலைவர் ஒரு
மூவர் – தலைவர்களாகிய ஒப்பற்ற மும்மூர்த்திகளின்; தனிமானம்
இதுதானோ- சிறந்த விமானம் இதுதானோ?

———–

‘என்னை இது நம்மை இடை எய்தல்?’ என எண்ணா,
மன்னவர்தம் மன்னன் மகன், மாதலியை, ‘வந்தாய்,
பொன்னின் ஒளிர் தேர் இது கொடு, ஆர் புகல?’
என்றான்; அன்னவனும் அன்னதனை ஆக உரை செய்தான்: 18-

‘என்னை இது நம்மை இடை எய்தல்’- இந்தத் தேர்
நம்மிடம் எய்தியது ஏன் எப்படி?’; என எண்ணா – என்று
எண்ணி; மன்னவர்தம் மன்னன் மகன் – மன்னர் மன்னனாகிய
இராமன்; மாதலியை – மாதலியை நோக்கி; பொன்னின் ஒளிர்
தேர் இது கொடு – பொன்போல் ஒளிவீசுகின்ற இந்தத்
தேரைக் கொணர்ந்தது; யார் புகல- எவர் கட்டளைப்படி?’;
என்றான் – என்று வினவினான்; அன்னவனும் – அந்த மாதலியும்;
அன்னதனை ஆக உரை செய்தான் – இராமனை கேட்ட
செய்தியைப் பொருந்துமாறு சொன்னான்.

————

மாதலியின் மறுமொழி

‘முப் புரம் எரித்தவனும், நான்முகனும், முன்நாள்,
அப் பகல் இயற்றி உளது; ஆயிரம் அருக்கர்க்கு
ஒப்பு உடையது; ஊழி திரி நாளும் உலைவு இல்லா
இப் பொரு இல் தேர் வருவது இந்திரனது;-எந்தாய்! 19-

‘எந்தாய் – என் தந்தையே!; முப்புரம் எரித்தவனும் –
திரிபுரம் எரித்த சிவபெருமானும்; நான்முகனும் – பிரமனும்;
முன் நாள் அப் பகல் – முதல் நாளாகிய படைப்புக்
காலத்தில்; இயற்றி உளது – செய்தது (இத்தேர்); ஆயிரம்
அருக்கர்க்கு ஒப்பு உடையது – தன் ஒளிச் சிறப்பால் ஆயிரம்
சூரியர்களுக்கு நிகரானது; ஊழி திரிகாறும் உலைவு இல்லா –
ஊழிக்காலம் மாறும்போதும் அழிவிலாததாகி; இத்தேர் வருவது
– வந்துள்ள இந்தத் தேர்; இந்திரனது- இந்திரனுக்கு உரியது.

———-

‘அண்டம் இது போல்வன அளப்பு இல அடுக்கிக்
கொண்டு பெயரும்; குறுகும்; நீளும்; அவை கோளுற்று
உண்டவன் வயிற்றினையும் ஒக்கும், உவமிக்கின்;
புண்டரிக! நின் சரம் எனக் கடிது போமால். 20-

புண்டரிக – (கண், கரம், கால் போன்ற உறுப்புகளால்)
தாமரையானே!; இதுபோல்வன அண்டம் அளப்பு இல – இந்த
அண்டம் போல அளவற்ற அண்டங்களை; அடுக்கிக் கொண்டு
பெயரும் – தன்னிலே அடுக்கிக்கொண்டு இயங்கவல்லது; குறுகும்,
நீளும்- தேவைப்படும்போது அளவிலே குறுகும் அல்லது நீளும்;
உவமிக்கின் அவை கோளுற்று உண்டவன் வயிற்றினையும்
ஒக்கும்- உவமை சொல்ல வேண்டுமாயின் அந்த அண்டங்களை
அனைத்தையும் பற்றி உண்டவனாகிய திருமாலின் வயிற்றையும்
ஒக்கும்; நின் சரம் எனக் கடிது போம் – உன்னுடைய அம்பு
போல் வேகமாகப் போகும்.

————

‘கண்ணும் மனமும் கடிய காலும் இவை கண்டால்,
உண்ணும் விசையால்; உணர்வு பின் படர ஓடும்;
விண்ணும் நிலனும் என விசேடம் இலது; அஃதே,
எண்ணும் நெடு நீரினும், நெருப்பிடையும்-எந்தாய்! 21-

‘எந்தாய்…; கண்ணும் மனமும் கடிய காலும் இவை
கண்டால் – கண், மனம், விரைவாக இயங்குகின்ற காற்று ஆகிய
இவற்றைக் கண்டால்; விசையால் – அவற்றினும் விரைவாக;
உண்ணும் – (இந்தத் தேர்) உண்டுவிடும் (அதாவது அவற்றை
வேகத்தால் தோற்கடிக்கும்); உணர்வு பின் படர ஓடும்- அறிவுகூட
தன் பின்வருமாறு இது முன்னேறி ஓடும்; விண்ணும் நிலனும் என
விசேடம் இலது – (இயங்குவதற்கு) ஆகாயம் நிலம் என வேறுபாடு
இல்லாதது; எண்ணும் நெடு நீரினும் நெருப்பிடையும் அஃதே –
எண்ணப்படுகின்ற பெரிய நீரிலும் நெருப்பிடையிலும் அதுவே
(அதாவது, இத்தேரின் இயக்கத்துக்கு நீர் நெருப்பு என்ற வேறுபாடு
இல்லை).

—————-

‘நீரும் உளவே, அவை ஒர் ஏழு? நிமிர்கிற்கும்
பாரும் உளவே, அதின் இரட்டி? அவை பண்பின்
பேரும் ஒரு காலை, ஒரு காலும் இடை பேராத்
தேரும் உளதே, இது அலால்?-உலகு செய்தோய்! 22-

உலகு செய்தோய் – உலகங்களைப் படைத்தவனே!; நீரும்
உளவே அவை ஓர் ஏழு – ஏழு கடல்களும் உள்ளன அன்றோ?;
நிமிர்கிற்கும் பாரும் உளவே அதின் இரட்டி- கடல்மேல்
நிமிர்கின்ற உலகங்களும் ஏழு கடல்கள் போல இரண்டு
மடங்காக பதினான்கு உள்ளன அன்றோ?; அவை – அந்தக்
கடல்களும் உலகங்களும்; பண்பின் பேரும் ஒரு காலை – தம்
இயல்பிலிருந்து ஒரு காலத்திலே மாறுபடும்; இது அலால் –
இந்தத் தேரைத் தவிர; ஒரு காலும் இடை பேராத் தேரும்
உளதே- ஒரு காலத்திலும் தன் இயல்பிலிருந்து நிலை பெயராத
தேரும் இருக்கிறதோ?’ (இல்லை).

———-

‘தேவரும், முனித் தலைவரும், சிவனும், மேல்நாள்,
மூஉலகு அளித்த அவனும், முதல்வ! முன் நின்று
ஏவினர்; சுரர்க்கு இறைவன் ஈந்துள இது’ என்றான்,
மாவின் மனம் ஒப்ப உணர் மாதலி, வலித்தான். 23-

முதல்வ! – தலைவனே!; தேவரும் முனித்தலைவரும்
சிவனும்மேல்நாள் மூ உலகு அளித்த அவனும் –
தேவர்கள், முனிவர்களின் தலைவர்கள், சிவபிரான், பண்டொரு
காலத்தில் மூன்று உலகங்களையும் படைத்த நான்முகன்
ஆகியோர்; முன் நின்று ஏவினர்- முன் வந்து ஏவினார்கள்;
(அவர்களின் கட்டளையை ஏற்றுச்) சுரர்க்கு இறைவன்-
தேவர்களின் அரசனான இந்திரன்; ஈந்துள (து) இது –
கொடுத்ததாகும் இந்தத்தேர்’; என்றான் – என்று
சொல்லியவனாய்; மாவின் மனம் ஒப்ப உணர் மாதலி –
குதிரையின் மனப்போக்கினைப் பொருத்தமாக உணர்ந்து
(தேர் செலுத்த வல்ல) மாதலி; வலித்தான் – சொலக்கருதி
உறுதிபடச் சென்னான்.

————–

இராமன் அரக்கர் மாயையோ என ஐயமுற, மாதலி தேரில் பூட்டிய குதிரைகள் உண்மை என்பதை விளக்குதல்

ஐயன் இது கேட்டு, ‘இகல் அரக்கர் அகல்
மாயச் செய்கைகொல்?’ எனச் சிறிது சிந்தையில் நினைந்தான்;
மெய் அவன் உரைத்தது என வேண்டி, இடை பூண்ட
மொய் உளை வயப் பரி மொழிந்த, முது வேதம். 24-

ஐயன் – இராமபிரான்; இது கேட்டு – மாதலி உரைத்த
இதனைக் கேட்டு; ‘இகல் அரக்கர் அகல் மாயச் செய்கை
கொல்’ என- ஒருகால் இது பகைவராகிய அரக்கர்களின் பெரிய
மாயையால் விளைந்த செயலோ என்று; சிந்தையில் சிறிது
நினைந்தான் – மனத்திலே ஓரளவு எண்ணினான்; ‘அவன்
உரைத்தது மெய்’ என வேண்டி – அந்த மாதலி உரைத்தது
உண்மையே எனப் புலப்பட வேண்டி இடை பூண்ட- தேரிலே
கட்டப்பட்ட; மொய் உளை வயப் பரி- செறிந்த பிடரி மயிர்
கொண்ட வலிய குதிரைகள்; முது வேதம் மொழிந்த –
பழமையான வேதங்களை ஓதின.

————-

இராமன் ஐயம் நீங்கி, சாரதியின் பெயரைக் கூறு என, மாதலி தன் பெயரை வெளியிடுதல்

‘இல்லை இனி, ஐயம்’ என எண்ணிய இராமன்,
நல்லவனை, ‘நீ உனது நாமம் நவில்க!’ என்ன,
‘வல் இதனை ஊர்வது ஒரு மாதலி எனப் பேர்
சொல்லுவர்’ எனத் தொழுது, நெஞ்சினொடு சொன்னான். 25-

‘இனி ஐயம் இல்லை- இனிமேல் ஐயம் ஏதும் இல்லை; என
எண்ணிய இராமன் – என்று தெளிவுற்று எண்ணிய இராமன்;
நல்லவனை – நற்பண்புடைய மாதலியை நோக்கி; ‘நீ உனது
நாமம் நவில்க’ என்ன – நீ உனது பெயரைச் சொல்லுக என்று
கூற; வல் இதனை ஊர்வது ஒரு மாதலி எனப் பேர்
சொல்லுவர் என- வலிய இத் தேரினை ஏறிச் செலுத்துவதற்குரிய
மாதலி என்று என் பெயரைச் சொல்லுவார்கள் என்று; தொழுது
– வணங்கி; நெஞ்சினொடு சொன்னான்- மனமாரக் கூறினான்.

————–

மாருதியையும் இளவலையும் நோக்கி, ‘உம் கருத்து யாது?’ என, அவர்களும், ‘இதில் ஐயம் இல்லை’ என்றல்

மாருதியை நோக்கி, இள வாள் அரியை நோக்கி, ‘நீர்
கருதுகின்றதை நிகழ்த்தும்’ என, நின்றான்;
ஆரியனை வணங்கி, அவர், ‘ஐயம் இலை, ஐயா!
தேர் இது புரந்தரனது’ என்றனர், தெளிந்தார். 26-

மாருதியை நோக்கி – அனுமனைப் பார்த்து; இள வாள்
அரியை நோக்கி – பின்னர் இளைய ஒளி வீசும் சிங்கம் போன்ற
இலக்குவனைப் பார்த்து; ‘நீர் கருதுகின்றதை நிகழ்த்தும் என
– ‘நீங்கள் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று கேட்டு;
நின்றான் ஆரியன் – தலைவனாகிய இராமன் (தேரில்
ஏறிவிடாமல்); தாமதித்து நின்றான்; தெளிந்தார் – ஐயம்
தெளிந்தவராகிய அவர்கள்; ‘ஐயா, ஐயம் இலை – தலைவனே!;
ஐயமே இல்லை;இது புரந்தரனது தேர்- இது தேவேந்திரனுடைய
தேர்தான்; என்றனர்…

————–

மாதலி கொணர்ந்த தேரில் இராமன் ஏறுதல்

விழுந்து புரள் தீவினை நிலத்தொடு வெதும்ப,
தொழும் தகைய நல்வினை களிப்பினொடு துள்ள,
அழுந்து துயரத்து அமரர் அந்தணர் கை முந்துற்று
எழுந்து தலை ஏற, இனிது ஏறினன் – இராமன். 27-

நிலத்து விழுந்து புரள் தீவினை- தரையிலே விழுந்து புரளத்
தொடங்கிவிட்ட தீவினை; வெதும்ப- வாடவும்; தொழுந்தகைய
நல்வினை களிப்பினொடு துள்ள – வணங்கத் தக்க நல்வினை
மகிழ்ச்சியால் துள்ளவும்; துயரத்து அழுந்து அமரர் அந்தணர்
– துயரத்தில் அழுந்திக்கிடந்த தேவர்கள் அந்தணர்
ஆகியோரின்; கை முந்துற்று எழுந்து தலை ஏற – கைகள்
முந்திக்கொண்டு அவர்கள் தலைமேல் ஏறவும்; இராமன் இனிது
ஏறினன் – இராமபிரான் இந்திரன் அனுப்பிய தேரின்மீது இனிதே
ஏறினான்.

————–

மிகைப் பாடல்கள்

இத் தகையன் ஆகி, ‘இகல் செய்து, இவனை இன்னே
கொத்து முடி கொய்வென்’ என, நின்று எதிர் குறிப்ப,
தம்தம் முறுவல் செயல் தவிர்ந்தது என, வானில்,
சித்தர்கள், முனித் தலைவர், சிந்தை மகிழ்வுற்றார். 4-1

—————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/34–இராவணன் தேர் ஏறு படலம்–

November 2, 2020

எஞ்சிய சேனையைத் திரட்டுமாறு மகோதரனுக்கு இராவணன் கூறுதல்

பூதரம் அனைய மேனி, புகை நிறப் புருவச் செந் தீ,
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி,
‘”ஏது உளது இறந்திலாதது இலங்கையுள் இருந்த சேனை
யாதையும் எழுக!” என்று, ஆனை மணி முரசு எற்றுக!’ என்றான் 1

பூதரம் அனைய மேனி – மலை போன்ற உடலையும்;
புகைநிறப் புருவச் செந்தீ – புகைபோல் கரிய புருவங்களையுடைய
செந்தீ போன்ற; மோதரன் என்னும் நாமத்து ஒருவனை- மகோதரன்
எனும் பெயருள்ள ஒருவனை; முறையின் நோக்கி- முறைக்கு ஏற்பப்
பார்த்து; இறந்திலாதது ஏதுஉளது- சாவாத சேனை எது உள்ளது?; இலங்கையுள் இருந்த சேனை –
இலங்கைக்குள் இருந்த படை; யாதையும் எழுக என்று –
எல்லாவற்றையும் எழுக என; ஆனை மணி முரசு எற்றுக
என்றான்- அழகிய முரசத்தை யானைமீது ஏற்றி அடிப்பிடிக்க
என்றான்.

—————

சேனைகள் திரளுதலும், இராவணன் பூசனை செய்து, தானம் முதலிய நல்குதலும்

எற்றின முரசினோடும் ஏழ்-இரு நூறு கோடி
கொற்ற வாள் நிருதர் சேனை குழீஇயது; கொடித் திண் தேரும்,
சுற்றுறு துளைக் கைம் மாவும், துரகமும், பிறவும் தொக்க,
வற்றிய வேலை என்ன, இலங்கை ஊர் வறளிற்று ஆக. 2-

ஏற்றின முரசினோடும் – முழக்கிய முரசத்துடன்; ஏழ்இரு
நூறுகோடி – பதினான்கு நூறுகோடி;கொற்றவாள் நிருதர் சேனை-
வெற்றி பொருந்திய அரக்கர் படை; குழீஇயது- திரண்டது; வற்றிய
வேலை என்ன- நீர்வறண்டு போன கடல் போல; இலங்கையூர்
வறளிற்றாக – இலங்கை நகர் வறுமையுடையதாக ஆயிற்று;
கொடித்திண் தேரும் – கொடிகள் கட்டிய தேரும்; சுற்றுறு
துளைக்கைம்மாவும் – சுற்றிச் சுழலும் துளைக் கையையுடைய
யானையும்; துரகமும் பிறவும் தொக்க – குதிரையும் பிற படை
யாவையும் சேர்ந்த;

———–

ஈசனை, இமையா முக் கண் இறைவனை, இருமைக்கு ஏற்ற
பூசனை முறையின் செய்து, திரு மறை புகன்ற தானம்
வீசினன் இயற்றி, மற்றும் வேட்டன வேட்டோ ர்க்கு எல்லாம்
ஆசு அற நல்கி, ஒல்காப் போர்த் தொழிற்கு அமைவது ஆனான் 3-

ஈசனை – எல்லாச் செல்வங்களும் உடையவனும்; இமையா
முக்கண் ஒருவனை – இமைக்காத மூன்று கண்களை உடையவனும்
ஆன சிவபெருமானை; இருமைக்கு ஏற்ற – இம்மை மறுமைக்குகந்த;
பூசனை முறையின் செய்து – பூசைகளை முறைப்படி செய்து; திருமறை புகன்ற தானம்- சிறந்த வேதங்கள்
கூறும் தானங்களை; வீசினன் இயற்றி- வீசிக் கொடுத்து; மற்றும்
– மேலும்; வேட்டன வேட்டோக்கு எல்லாம்- விரும்பியவற்றை விரும்பியவர்க்கெல்லாம்; ஆசு அற நல்கி – குற்றமின்றிக் கொடுத்து;
ஒல்காப் போர்த்தொழிற்கு- தளராத போர்வினைக்கு அமைவது
ஆனான்- பொருந்தியவன் ஆனான்.

———

இராவணன் போர்க்கோலம் பூணுதல்

அருவி அஞ்சனக் குன்றிடை ஆயிரம் அருக்கர்
உருவினோடும் வந்து உதித்தனர் ஆம் என ஒளிர,
கருவி நான்முகன் வேள்வியில் படைத்ததும், கட்டிச்
செருவில் இந்திரன் தந்த பொன் கவசமும், சேர்த்தான். 4-

அருவி அஞ்சனக் குன்றிடை – நீரருவி கொண்ட கரிய
மலையிலே; ஆயிரம் அருக்கர் உருவினோடும்- ஆயிரம் சூரியர்
வேற்று உருவத்தோடு; வந்து உதித்தனர் ஆம் என ஒளிர- வந்து
தோன்றினர் ஆம் என்று ஒளி வீச; கருவிநான் முகன் வேள்வியில்
– (உலகங்களைப் படைக்கக்) கருவியான பிரமன் வேள்வியிலே;
படைத்ததும் – தோற்றுவித்ததும்; சுட்டிச் செருவில் – போரில்
சுட்டிய; இந்திரன் தந்த- தேவேந்திரன் அளித்த; பொன்கவசமும்
சேர்த்தான்- பொற்கவசமும் அணிந்தான்.

————–

வாள் வலம் பட, மந்தரம் சூழ்ந்த மாகணத்தின்
தாள் வலந்து ஒளிர் தமனியக் கச்சொடும் சார்த்தி;
கோள் வலந்தன குவிந்தன ஆம் எனும் கொள்கை
மீள்வு இல் கிம்புரி மணிக் கடி சூத்திரம் வீக்கி; 5-

வாள் வலம்பட- உடைவாளை வலமாகப் பொருந்தச் சேர்த்தி;
மந்தரம் சூழ்ந்த மாசுணத்தின் – மந்தரமலையைச் சூழ்ந்த
(வாசுகி எனும்) பாம்பு போல; தாள் வலந்து ஒளிர் –
முயற்சியால் சுற்றப்பட்டு ஒளி வீசும்; தமனியக் கச்சொடும்
சார்த்தி – பொன்னாலான கச்சிலே சேர்த்தி; வலந்தன
கோள் குவிந்தன – வலம் வரும் கிரகங்கள் குவிந்தன; ஆம்
எனும் கொள்கை- ஆகுமென்ற கொள்கை; மீள்வு இல் – மீளுதல்
இல்லாத; கிம்புரி – கிம்புரி போன்ற வட்டவடிவமைந்த; மணிக் கடி சூத்திரம்
வீக்கி – இரத்தினத்தாலமைந்த கடி சூத்திரத்தைக் கட்டி.

—————-

மறை விரித்தன்ன ஆடுறு மான மாக் கலுழன்
சிறை விரித்தன்ன கொய்சகம் மருங்கு உறச் சேர்த்தி;
முறை விரித்தன்ன முறுக்கிய கோசிக மருங்கில்
பிறை விரித்தன்ன வெள் எயிற்று அரவமும் பிணித்து; 6-

மறை விரித்துள்ள- வேதங்களை விரித்தாற்போல; மாடுறு
மானமாக் கலுழன் – அருகிலிருந்த பெருமை மிகுந்த பெரிய
கருடன்; சிறை விரித்தன்ன கொய்சகம்- சிறகை விரித்தாற்
போன்ற கோசிகத்தின்; மருங்குறச் சேர்த்தி – இடத்திலே
சேர்த்து; முறுக்கிய கோசிக மருங்கில் – முறுக்கமைந்த
வெண்பட்டாடையை இடையிலே; முறை விரித்தன்ன- முறையாக
விரித்தாற் போல; பிறை விரித்தன்ன – பிறையை வெளியிட்டாற்
போல; வெள்எயிற்று அரவமும் பிணித்து – வெண்மையான
பற்களையுடைய பாம்பைக் கட்டி.

————

மழைக் குலத்தொடு வான் உரும் ஏறு எலாம் வாரி
இழை தொடுத்தன அனைய வாள் உடை மணி ஆர்த்து;
முழைக் கிடந்த வல் அரி இனம் முழங்குவ போல்வ
தழைக்கும் மின் ஒளிப் பொன் மலர்ச் சதங்கையும் சாத்தி; 7-

மழைக் குலத்தொடு- மேகக் கூட்டத்தின் உறையும்; வான்உரும்
ஏறு எல்லாம் வாரி – மேலான இடிகள் எல்லாவற்றையும் வாரி;
இழைத் தொடுத்தன அனைய- செவ்விய முறையில் தொகுத்தமைத்தது
போன்ற; வாள் உடை மணி ஆர்த்து – வாளையும் உடையையும்,
மணியையும் கட்டி; முழைக்கிடந்த வல் அரிஇனம் – குகையில்
உறங்கும் வலிய சிங்கக் கூட்டம்; முழங்குவ போல்வ – முழங்குவதைப்
போன்றன; தழைக்கும் மின்ஒளிப் பொன்மலர்ச் சதங்கையும் சாத்தி
– மிகுகின்ற மின்னல் போன்ற ஒளியுடைய பொன்மலர் போன்ற
சதங்கைகளையும் அணிந்து.

—————

உரும் இடித்த போது அரவு உறு மறுக்கம், வான் உலகின்
இரு நிலத்திடை, எவ் உலகத்திடை,
யாரும் புரிதரப் படும் பொலங் கழல் இலங்குறப் பூட்டி;
சரியுடைச் சுடர் சாய் வலம் சார்வுறச் சாத்தி; 8-

உரும் இடித்த போது – இடி இடித்த போழுது; அரவுஉறு
மயக்கம்- பாம்பு அடைந்த கலக்கம்; வான்உலகின் இருநிலத்தடை
– விண் உலகிலும் பெரிய பூமியிலும்; எவ்வுலகத்திடை – எந்த
உலகத்திலும்; யாரும் புரிதரப்படும் – யாவரும் அடையுமாறு
ஒலிக்கும்; பொலங்கழல் இலங்குறப் பூட்டி – பொற்கழல்களை
விளங்கும் வகையில் அணிந்து; சரியுடைச் சுடர் சாய்நலம் –
சரிந்த உடையில் சுடர் வீழ்வதால் உண்டாகும் அழகு; சார்வுறச்
சாத்தி – மேலும் விளங்க அணிந்து.

—————

நால்-அஞ்சு ஆகிய கரங்களில் நனந் தலை அனந்தன்
ஆலம் சார் மிடற்று அருங் கறை கிடந்தென,
இலங்கும் கோலம் சார் நெடுங் கோதையும் புட்டிலும் கட்டி;
தாலம் சார்ந்த மாசுணம் எனக் கங்கணம் தழுவ; 9-

நால் அஞ்சு ஆகிய கரங்களில் – இருபது கைகளில்;
நனந்தலை அனந்தன் – பெரிய தலையையுடைய அனந்தனின்;
ஆலம்சார் மிடற்று அருங்கறை கிடந்தென – நஞ்சு தங்கிய
கழுத்தில் அரிய கறை கிடந்தது போல; இலங்கும் – விளங்குகின்ற;
கோலம்சார் நெடுங்கோதையும் – அழகுமிக்க நீண்ட
தோற்கட்டும்; புட்டிலும் கட்டி – விரற்புட்டிலும் கட்டி;
தாலம் சார்ந்த மாசுணம் என – நீண்ட நாவுடைய பாம்பு போல;
கங்கணம் தழுவ- கங்கணத்தை அணிந்து;

————–

கடல் கடைந்த மால் வரையினைச் சுற்றிய கயிற்றின்
அடல் கடந்த தோள் அலங்கு போர் வலயங்கள் இலங்க;
உடல் கடைந்த நாள் ஒளியவன் உதிர்ந்த பொன் கதிரின்
சுடர் தயங்குற, குண்டலம் செவியிடைத் தூக்கி; 10-

——–

உதயக் குன்றத்தோடு அத்தத்தின் உலாவுறு கதிரின்
துதையும் குங்குமத் தோளொடு தோளிடைத் தொடர;
புதை இருள் பகைக் குண்டலம் அனையவை பொலிய;
சிதைவு இல் திங்களும் மீனும்போல், முத்துஇனம் திகழ; 11-

———

வேலைவாய் வந்து, வெய்யவர் அனைவரும் விடியும்
காலை உற்றனர் ஆம் எனக் கதிர்க் குலம் காலும்
மாலை பத்தின்மேல், மதியம் முன் நாளிடைப்
பலவாய் ஏல முற்றிய அனைய முத்தக் குடை இமைப்ப; 12-

முத்தக் குடை இமைப்ப – முத்துக்கள்
தொங்கும் வெண்கொற்றக் குடை விளங்கவும்.

———–

பகுத்த பல் வளக் குன்றினில் முழை அன்ன பகு வாய்
வகுத்த வான் கடைக் கடை தொறும் வளை எயிற்று ஈட்டம்,
மிகுத்த நீல வான் மேகம் சூழ் விசும்பிடை, தசும்பூடு
உகுத்த செக்கரின் பிறைக் குலம் முளைத்தன ஒக்க; 13-

பகுத்த பல்வளக் குன்றினில் – வகை செய்யப்பட்ட
பலவளங்களுடைய குன்றில்; முழை அன்ன பகுவாய் – குகை
போன்ற பிளந்தவாயிலே; வகுத்த வான்கடைக் கடைதொறும்-
வகுக்கப் பெற்ற பெரிய கடைவாய் தோறும் கடை வாய்தோறும்
வளைஎயிற்று ஈட்டம்- வளைந்த பற்களின் கூட்டம்; மிகுத்த
நீலவான் மேகம் சூழ்- மிகுதியாகவுள்ள நீல நிறமுள்ள பெரிய
மேகங்கள் சூழ்ந்த; விசும்பிடை- வானத்தில்; தசும்பூடு உகுத்த
– பாலிகைக் கலன்களில் தூவிய; செக்கரின் பிறைக்குலம்-
சிவந்த வானில் பிறைக் கூட்டம்; முளைத்தன ஒக்க –
முளைத்தவற்றை ஏத்திருக்க.

————–

ஒத்த தன்மையின் ஒளிர்வன, தரளத்தின் ஒக்கத்
தத்துகின்றன, வீர பட்டத் தொகை தயங்க;
முத்த ஓடைய முரண் திசை முழு மத யானை
பத்து நெற்றியும் சுற்றிய பேர் எழில் படைக்க; 14-

ஒத்த தன்மையின் ஒளிர்வன – இயைந்த தன்மையோடு
ஒளிவீசுவன; தரளத்தின் ஓதம் தத்துகின்றன – முத்துக்களின்
ஒளி அலை வீசுகின்றன; வீரபட்டத் தொகை தயங்க –
வீரபட்டத் தொகை விளங்குவதால்; ஒத்த ஒடைய முரண் திசை
முழுமத யானை – சிறப்பால் ஒத்த முகபடாம்களை முரண்பட்ட
எட்டுத் திக்குகளிலும் உள்ள நிரம்பிய மதம் பொழியும்
யானைகளின்; பத்து நெற்றியும் – பத்து நுதல்களும்; சுற்றிய
பேர்எழில் படைக்க – சூழ்ந்த பெருமைமிக்க அழகை
உண்டாக்கவும்.

———

புலவி மங்கையர் பூஞ் சிலம்பு அரற்று அடி போக்கி,
தலைமை கண்ணினர்த் தாழ்கிலா மணி முடித்
தலங்கள் உலகம் ஒன்றினை விளக்குறும் கதிரினை ஓட்டி,
அலகு இல் எவ் உலகத்தினும் வயங்கு இருள் அகற்ற; 15-

புலவிமங்கையர்- புலக்கும் பெண்டிர்; பூஞ்சிலம்பு அரற்று
அடி நோக்கி- அழகிய சிலம்புகள் ஒலிக்கும் அடியை நீக்கி;
தலைமை கண்ணினர் – தலைமையைக் கருதுகின்றவர்களை;
தாழ்கிலா மணிமுடித்தலங்கள்- வணங்காத இரத்தினம் பதித்த
திருமுடி சூட்டிய இடங்கள்; உலகம் ஒன்றினை விளக்குறும்-
உலகம் ஒன்றை விளங்கச் செய்யும்; கதிரினை ஓட்டி –
சூரியனைத் தனக்கீடாகாதென ஓடச் செய்து; அலகு இல் எவ்
உலகத்தினும்- அளவற்ற எந்த உலகத்திலும்; வயங்கு இருள்
அகற்ற- விளங்கும் இருளை நீக்கவும்.

————–

நாகம் நானிலம் நான்முகன் நாடு என நயந்த
பாகம் மூன்றையும் வென்று கொண்டு, அமரர் முன் பணித்த
வாகை மாலையும் மருங்கு உற, வரி வண்டொடு அளவி;
தோகை அன்னவர் விழி தொடர் தும்பையும் சூட்டி; 16-

நாகம் – சுவர்க்க லோகமும்; நானிலம் – மண்ணுலகமும்;
நான்முகன் நாடு என நயந்த – பிரமலோகம் என விரும்பிய;
பாகம் மூன்றையும்- மூன்று பகுதிகளையும்; வென்று கொண்டு-
வெற்றி பெற்றுக் கைக்கொண்டு; அமரர் முன்பு அணிந்த –
தேவர் முன்னர் புனைந்திருந்த; வாகைமாலையும் – வெற்றி
மாலையும்; மருங்குற- அம்மாலையின் பக்கத்தே; வரிவண்டொடு
அளவி- கோடுகளை உடைய வண்டுகளொடு சேர்த்து; தோகை
அன்னவர் விழிதொடர் – மயில் போன்ற இள மகளிர் கண்கள்
பின்தொடரப் பெற்ற; தும்பையும் சூட்டி – தும்பை மலர்
மாலையும் அணிந்து.

————

அகழும் வேலையை, காலத்தை, அளக்கர் நுண் மணலை,
நிகழும் மீன்களை, விஞ்சையை, நினைப்பது என்? நின்ற
இகழ்வு இல் பூதங்கள் இறப்பினும், இறுதிசெல்லாத் தன்
புகழ் என, சரம் தொலைவு இலாத் தூணி பின் பூட்டி; 17-

அகழும் வேலையை- கடலை; காலத்தை – காலப் பொழுதை;
அளக்கர் நுண்மணலை – கடலின் நுண்ணிய மணலை; நிகழும்
மீன்களை – கடலில் வாழும் மீன்களை; விஞ்சையை – கல்வியை
ஒப்பாக; நினைப்பது என்- நினைப்பது எதற்காக; நின்ற இகழ்வு
இல் பூதங்கள் இறப்பினும் – நிலைத்து நின்ற இகழ்ச்சி இல்லாத
பூதங்கள் ஒழிந்தாலும்; இறுதி செல்லாத புகழ் என – அழிவற்ற
புகழைப் போல; சரம் தொலைவு இலாத் தூணியின்பூட்டி –
அம்புகள் என்றும் அமைந்த அம்பு அறாத் துணியைத் தன் முதுகுப்
புறத்தே கட்டி.

————-

‘வருக, தேர்!’ என, வந்தது-வையமும் வானும் உரக தேயமும்
ஒருங்கு உடன் ஏறினும், உச்சிச் சொருகு பூ அன்ன
சுமையது; துரகம் இன்று எனினும், நிருதர்
கோமகன் நினைந்துழிச் செல்வது, ஓர் இமைப்பில். 18-

வையமும் வானும் உரகதேயமும் – மண்ணுளோரும்
விண்ணுளோரும் நாகலோகத்தோரும்; ஒருங்கு உடன் இவரினும்
– ஒருசேர ஏறினாலும்; உச்சிச் சொருகுபூ அன்னசுமையது –
உச்சிப் பூப்போன்ற எளிய சுமையை உடையது; துரகம் இன்று
எனினும் – குதிரைகள் இல்லாவிடிலும்; நிருதர் கோமகன்
நினைத்துழி ஓர் இமைப்பில்- இராவணன் நினைத்த போது இமை
நொடிக்கும் நேரத்தில்; செல்வது – செல்லும் ஆற்றலுடைய தேர்;
‘வருக தேர்’ என வந்தது – வருக தேர் என்று சொல்லியவுடன்
வந்தது.

————-

ஆயிரம் பரி அமுதொடு வந்தவும், அருக்கன் பாய்
வயப் பசுங் குதிரையின் வழியவும், படர் நீர் வாய்
மடுக்கும் மா வடவையின் வயிற்றின், வன் காற்றின்
நாயகற்கு, வந்து உதித்தவும், பூண்டது நலத்தின். 19-

அமுதொடு வந்தவும்- பாற்கடலில் அமுதத்தோடு பிறந்தனவும்;
அருக்கன் பாய்வயப் பசுங் குதிரையின் வழியவும் – சூரியன்
குதிரைகளின் மரபில் தோன்றியவும்; படர்நீர் வாய் மடுக்கும்
மாவடவையின் வயிற்றின் – பரவிய நீர் எங்கும் பரவியுள்ள
வடவாமுகாக்னி வயிற்றிலே; வன்காற்றின் நாயகற்கு
வந்துதித்தவும் – கொடிய காற்றுக் கடவுளாம் வாயு தேவனுக்குத்
தோன்றியனவுமாகிய; ஆயிரம்பரி நலத்தின் பூண்டது –
ஆயிரம் குதிரைகள் அழகாக கட்டப்பட்டது.

————–

பாரில் செல்வது, விசும்பிடைச் செல்வது; பரந்த
நீரில் செல்வது; நெருப்பிடைச் செல்வது; நிமிர்ந்த
போரில் செல்வது; பொன் நெடு முகட்டிடை விரிஞ்சன்
ஊரில் செல்வது; எவ் உலகினும் செல்வது, ஓர் இமைப்பின். 20-

பாரில் செல்வது – நிலத்தில் செல்வது போலவே;
விசும்பிடைப் படர்வது- வானிலே செல்வது; பரந்த நீரில்
செல்வது – பரப்பமைந்த நீரிலே செல்வது; நெருப்பினும்
செல்வது- தீயிலும் செல்வது; நிமிர்ந்து போரில் செல்வது
– தன்னிகரின்றி போரிலே செல்வது; பொன்முகட்டிடை –
பொன்னால் அமைந்த வானில்; விரிஞ்சன் ஊரில் செல்வது-
பிரமன் ஊரிலும் செல்வது; ஓர் இமைப்பின் எவ்வுலகத்தும்
செல்வது- ஓரிமை நொடிக்குள் எந்த உலகத்திலும் செல்வது.

—————

எண் திசைப் பெருங் களிற்றிடை மணி என இசைக்கும்
கண்டை ஆயிர கோடியின் தொகையது; கதிரோன்
மண்டிலங்களை மேருவில் குவித்தென வயங்கும்
அண்டம் விற்கும் நன் காசுஇனம் குயிற்றியது, அடங்க. 21-

எண்திசைப் பெருங்களிற்றிடை – எட்டுத் திசையிலுள்ள
பெரிய யானைகளின் கழுத்தில் கட்டிய; மணியென இசைக்கும்-
மணிகள் போல ஒலிக்கின்ற; கண்டை ஆயிர கோடியின்
தொகையது – கண்டை எனும் வாச்சியம் ஆயிரம் கோடித்
தொகையை உடையது; கதிரோன் மண்டிலங்களை – சூரிய
மண்டிலங்களை; மேருவில் குவித்தென – மேருமலையில்
குவித்தாற் போன்று; வயங்கும் அண்டம் – விளங்கும்
அண்டத்தை; விற்கும் நன்காக இனம்- விலையாகக்` கொளும்
உயர்ந்த இரத்தினங்களின் கூட்டம்; அடங்க, குயிற்றியது-
முழுவதும் இழைக்கப் பெற்றது.

————-

முனைவர் வானவர் முதலினர், அண்டத்து முதல்வர்
எனைவர் ஈந்தவும், இகலினில் இட்டவும், இயம்பா
வினையின் வெய்யன படைக்கலம், வேலை என்று இசைக்கும்
சுனையின் நுண் மணல் தொகையன சுமந்தது, தொக்க. 22-

முனைவர் வானவர் முதலினர் – முனிவரும், தேவரும்
முதலானவரும்; அண்டத்து முதல்வர் – உலகில் முதன்மை நிலை
பெற்றவரும்; எனைவர் ஈந்தவர் – எப்படிப் பட்டவரும்
கொடுத்திட்டனவும்; இகலினில் இட்டவும் – போரில்
தோற்றுக் கொடுத்திட்டனவும்; இயம்பா வினையின் – சொல்ல
முடியாத கொடிய போர்ச்செயலின்; வெய்யன படைக்கலம் –
கொடியனவாம் படைக்கருவிகள்; வேலை என்று இசைக்கும் –
வேலை எனக் கூறப்பெறும்; சுனையின் நுண்மணல் தொகையன-
நீர்ச் சுனையிலுள்ள மணலின் தொகையை உடையவாகி; தொக்க
சுமந்தது – திரண்டவற்றைச் சுமந்தது.

————

கண்ணன் நேமியும், கண்ணுதல் கணிச்சியும், கமலத்து
அண்ணல் குண்டிகைக் கலசமும், அழியினும், அழியாத்
திண்மை சான்றது; தேவரும் உணர்வு அருஞ் செய்கை
உண்மை ஆம் எனப் பெரியது, வென்றியின் உறையுள். 23-

கண்ணன் நேமியும் – (அத்தேர்) திருமாலின் சக்கரமும்;
கண்ணுதல் கணிச்சியும் – சிவபெருமானின் மழுப்படையும்;
கமலத்து அண்ணல்- தாமரையில் வாழும் பிரமனின்; குண்டிகைக்
கலசமும் – குண்டிகையாம் பாத்திரமும்; அழியினும் அழியாத்
திண்மை சான்றது – அழிந்தாலும் தான் அழியாத வலிமை
நிறைந்தது;தேவரும்- வானவரும்; உணர்வரும் செய்கை உண்மை
எனப் பெரியது – அறிய முடியாத தன்மை உடைய உண்மையைப்
போலப் பெரியது; வென்றியின் உறையுள்- வெற்றிக்கு உறைவிடம்.

————-

அனைய தேரினை அருச்சனை வரன்முறை ஆற்றி,
இனையர் என்பது ஓர் கணக்கு இலா மறையவர் எவர்க்கும்
வினையின் நல் நிதி முதலிய அளப்ப அரும் வெறுக்கை
நினையின் நீண்டது ஓர் பெருங் கொடை அருங் கடன் நேர்ந்தான் 24-

அனைய தேரினை – அப்படிப்பட்ட தேரை; அருச்சனை
வரன் முறை ஆற்றி – போற்றித் துதிப்பதை முறையாகச் செய்து;
இனையர் என்பது ஓர் கணக்கு இலா – இவ்வளவு பேர் என்ற
ஒரு கணக்கு இல்லாத; மறையவர் எவர்க்கும் – வேதியவர்
எவர்க்கும்; வினையின் நல் நிதி முதலிய அளப்பரும்- அளிக்க
வேண்டியவாறு நல்ல பொருள் முதலியவற்றை அளப்பதற்கு முடியாத;
வெறுக்கை – செல்வங்களை; நினையின் – நினைக்க முடியாதவாறு;
நீண்டதுஓர் பெருங்கொடை – மிக்க ஒப்பற்ற பெரிய
செல்வத்தை அளிப்பதாக; அருங்கடன் நேர்ந்தான் – அரிய
கடமையைச் செய்து நிறைவேற்றினான்.

————–

ஏறினான் தொழுது; இந்திரன் முதலிய இமையோர்
தேறினார்களும் தியங்கினார், மயங்கினார், திகைத்தார்;
வேறு தாம் செயும் வினை இலை, மெய்யின் ஐம் புலனும்
ஆறினார்களும் அஞ்சினார், உலகு எலாம் அனுங்க. 25-

தொழுது ஏறினான்- (அந்தத் தேரை இராவணன்) வணங்கி
ஏறினான்; இந்திரன் முதலிய இமையோர் தேறினார்களும்
தியங்கினார் – இந்திரன் முதலான தேவர்களும் அறிவு
சோர்ந்து; மயங்கினார் திகைத்தார் – மயங்கினராய்
திகைப்படைந்தனர்; வேறு நாம் செயும் வினை இலை –
வேறாகச் செய்கின்ற செயல் இல்லாமையால்; மெய்யின்
ஐம்புலனும் – உடலிலுள்ள ஐந்து புலன்களும்; ஆறினார்களும்
– அடங்கப் பெற்ற முனிவர்களும்; உலகு எலாம் அனுங்க
அஞ்சினர் – உலகங்கள் எல்லாம் வருந்த பயப்பட்டனர்.

————–

இராவணனின் சபதம்

‘மன்றல் அம் குழல் சனகி தன் மலர்க் கையான் வயிறு
கொன்று, அலந்தலைக் கொடு, நெடுந் துயரிடைக் குளித்தல்;
அன்று இது என்றிடின், மயன் மகள் அத் தொழில் உறுதல்;
இன்று, இரண்டின் ஒன்று ஆக்குவென், தலைப்படின்’ என்றான் 26-

மன்றல் அம்குழல் சனகி – நறுமணம் மிக்க அழகிய
கூந்தலையுடைய சீதை; தன் மலர்க்கையால் வயிறு கொன்று –
தனது மலர் போன்ற கைகளால் வயிற்றை அலைத்து; அலந்தலைக்
கொண்டு – அலைச்சலைக் கொண்டு;நெடுந்துயரிடைக் குளித்தல்
– ஆழ்ந்த துன்பத்தில் மூழ்குதல்; அன்று இது என்றிடின் –
அல்லது இது நடக்காது என்று கூறினால்;மயன்மகள் அத்தொழில்
உறுதல் – மண்டோதரி அச்செயல்களை அடைதல் ஆம்;
தலைப்படின் – நான் போர் செய்யப் புகுந்தால்; இன்று
இரண்டின் ஒன்று – இன்றைக்கு இந்த இரண்டு செயல்களில்
ஒன்றை; ஆக்குவென் என்றான் – நடைபெறச் செய்வேன் என
இராவணன் கூறினான்.

————–

இராவணன் தோள் புடைத்து ஆர்த்து, வில் நாணைத் தெறித்தல்

பல களம் தலை மௌலியோடு இலங்கலின், பல் தோள்
அலகு அளந்து அறியா நெடும் படைகளோடு அலங்க,
விலகு அளம் தரு கடல் தரை விசும்பொடு வியப்ப,
உலகு அளந்தவன் வளர்ந்தனன் ஆம் என உயர்ந்தான். 27-

பலகளம் தலை மௌலியோடு இலங்கலின்- பலகழுத்துக்களின்
மீது தலைகள் அரசு முடிகளோடு விளங்கலின்; பல்தோள் அலகு
அளந்து அறியா- பல தோள்கள் அளவால் அளந்தறிய முடியாமல்;
நெடும் படைகளோடு அலங்க – நெடிய படைக்கலன்களோடு
ஒளிர்ந்து நிற்க; விலகு அளம் தருகடல் – விலகியுள்ள
உப்பளத்தை அளிக்கும் கடலால் சூழப்பட்ட; தரை விசும்பொடு
வியப்ப- உலகத்தோர் வானோர் ஆச்சரியப்பட; உலகு அளந்தவன் வளர்ந்தவன் ஆம் –
மூன்றுலகைத் தன் அடிகளால் அளந்த திருமால் வளர்ந்தது போல; என
உயர்ந்தான் – என்று கூறும்படி வளர்ந்தான்.

————-

விசும்பு விண்டு இரு கூறுற, கல் குலம் வெடிப்ப,
பசும் புண் விண்டெனப் புவி பட, பகலவன் பசும் பொன்
தசும்பின் நின்று இடை திரிந்திட, மதி தகை அமிழ்தின்
அசும்பு சிந்தி நொந்து உலைவுற, தோள் புடைத்து ஆர்த்தான். 28-

விசும்புவிண்டு இருகூறுற – வானம் பிளந்து இருபங்காக;
கல்குலம் வெடிப்ப- மலைகள் வெடித்திட; பசும்புண் விண்டென
– பசிய புண்கள் மேலும் பிளந்தது போல; பகலவன் பசும்பொன்
தசும்பு நின்று இடைந்து இரிந்திட – கதிரவன், பசிய பொற்குடம்
போல இருந்து தன் இடத்திலிருந்து திரிந்திட; மதி தகை அமிழ்தின்
அசும்பு – சந்திரனின் பண்பாகிய அமுதத் துளிகளை; சிந்திநொந்து
உலைவுற – சிந்தி வருந்தித் துன்பமடைய; தோள்புடைத்து
ஆர்த்தான் – தோளைத் தட்டி இராவணன் ஆரவாரம் செய்தான்.

————-

‘நணித்து வெஞ் சமம்’ என்பது ஓர் உவகையின் நலத்தால்,
திணித் தடங் கிரி வெடித்து உக, சிலையை நாண் தெறித்தான்;
மணிக் கொடுங் குழை வானவர், தானவர், மகளிர்
துணுக்கம் எய்தினர், மங்கல நாண்களைத் தொட்டார். 29-

வெஞ்சமம் நணித்து- கொடிய போர் அண்மை நிலையில் வந்து
விட்டது; என்பது ஓர் உவகையின் நலத்தால் – எனும் ஒப்பற்ற
மகிழ்ச்சியின் நன்மையால்; திணித்தடங்கிரி வெடித்து உக – வலிய
பெரிய மலை வெடித்துப் பொடியாகி விழ; சிலையை நாண்
தெறித்தான் – வில்நாணைத் தெறித்தான்; மணிக் கொடுங்குழை
வானவர் – அழகிய வளைந்த குழைகளை அணிந்த தேவர்கள்;
தானவர் – தானவ குலத்தினரது; மகளிர் – பெண்டிர்; துணுக்கம்
எய்தினர் – அச்சமுற்றனர்; மங்கல நாண்களைத் தொட்டார்-
(அதனால்) எங்கே தங்கள் தாலி மங்கலக் கயிறு அறுபட்டுப்
போகுமோ எனத் தொட்டுப் பார்த்துக் கொண்டனர்.

—————-

போர்க்களத்தில் இராவணன் தோன்றுதல்

சுரிக்கும் மண்டலம் தூங்கு நீர்ச் சுரிப்பு உற, வீங்க,
இரைக்கும் பல் உயிர் யாவையும் நடுக்கமுற்று இரிய,
‘பரித்திலன் புவி, படர் சுடர் மணித் தலை பலவும்
விரித்து எழுந்தனன், அனந்தன்மீது’ என்பது ஓர் மெய்யான். 30-

சுரிக்கும் மண்டலம் – வானில் சுழலும் சூரிய, சந்திர
மண்டலம்; தூங்கு நீர்ச் சுரிப்பு உற வீங்க – மிகுந்த
நீருள்ள கடலிலே சுழற்சி உண்டாகிப் பொங்கவும்; இரைக்கும்
பல்லுயிர் யாவையும் – ஆரவாரிக்கும் எல்லா உயிர்களும்;
நடுக்கமுற்று இரிய – நடுங்கி நிலை கெடவும்; அனந்தன் –
ஆயிரந் தலைகள் கொண்ட அனந்தன் எனும் பாம்பு; புரி
பரித்திலன் – உலகைத் தாங்க முடியவில்லை; படர் சுடர்
மணித்தலை பலவும் – விரிகின்ற ஒளியுடைய மணிகள் பூண்ட
பல தலைகளும்; மீது விரித்து எழுந்தனன் – மேலே படம்
விரித்து எழுந்தனன்; என்பது ஓர் மெய்யான் – என்று
தோன்றும் வகையில் ஒப்பற்ற உடலை உடையவன் ஆனான்
(இராவணன்).

————–

தோன்றினான் வந்து-சுரர்களோடு அசுரரே தொடங்கி
மூன்று நாட்டினும் உள்ளவர் யாவரும் முடிய,
‘ஊன்றினான் செரு’ என்று உயிர் உமிழ்தர, உதிரம்
கான்று, நாட்டங்கள் வட அனற்கு இரு மடி கனல. 31-

சுரர்களோடு அசுரரே தொடங்கி- தேவர்களுடனே அசுரர்
தொடங்கி; மூன்று நாட்டினும் உள்ளவர் யாவரும் முடிய –
மூவுலகிலும் உள்ளவர் யாவரும் அழிய; செரு ஊன்றினான்-
போரில் மனம் வைத்தான்; என்று உயிர் உமிழ்தர உதிரம்
கான்று – என உயிர்கள் அழியவும் இரத்தம் கக்கவும்;
நாட்டங்கள்- கண்கள்; வடஅனற்கு இருமடி கனல- வடவைத்
தீக்கு இருமடங்கு கொடுமையாய்த் தீ வீச.

———–

உலகில் தோன்றிய நிலைகுலைவைச் சுக்கிரீவன் முதலியோர் கண்டு, துணுக்கமுற்று எழுதல்

உலகில் தோன்றிய மறுக்கமும், இமைப்பிலர் உலைவும்,
மலையும் வானமும் வையமும் நடுக்குறும் மலைவும்,
அலை கொள் வேலைகள் அஞ்சின சலிக்கின்ற அயர்வும்,
தலைவனே முதல் தண்டல் இலோர் எலாம் கண்டார். 32-

உலகில் தோன்றிய மறுக்கமும் – இவ்வுலகில் தோன்றிய
கலக்கமும்; இமைப்பிலர் உலைவும்- தேவர்களின் வருத்தமும்;
மலையும் வானமும் வையமும்- மலைகளும் விண்ணும் பூமியும்;
மறுகுறு மறுக்கும் – சுழலும் சுழற்சியும்; அலைகொள்
வேலைகள் அஞ்சின- அலைகள் மிகுந்த கடல்கள் பயந்தனவாய்;
சலிக்கின்ற அயர்வும் – சலிப்புறுகின்ற தளர்ச்சியும்; தலைவனே
முதல் தண்டல் இலோர் எலாம் கண்டார்- சுக்கிரீவன் முதலிய
தடுக்கப்படாத வலிமையை உடையவர் எல்லோரும் பார்த்தனர்.

————-

‘பீறிற்றாம் அண்டம்!’ என்பது ஓர் ஆகுலம் பிறக்க,
வேறிட்டு ஓர் பெருங் கம்பலை பம்பி மேல் வீங்க,
‘மாறிப் பல் பொருள் வகுக்குறும் காலத்து மறுக்கம்
ஏறிற்று; உற்றுளது என்னைகொலோ?’ என எழுந்தார். 33-

அண்டம் பீறிற்றாம் – இவ்வுலகம் கிழிந்தது; என்பது ஓர்
ஆகுலம் பிறக்க – என்று எண்ணுமாறு ஒரு தடுமாற்றம் எழ;
வேறிட்டு ஓர் பெருங்கம்பலை – வேறுபட்ட ஒரு பேரொலி;
பம்பி மேல் வீங்க – நெருங்கி மேலும் மிக; மாறிப் பல்பொருள்
வகுக்குறும் காலத்து- அழிந்திடப் பல பொருள்களைப் படைக்கப்
பெறும் பொழுதில்; மறுக்கம் ஏறிற்று – கலக்கம் மிகுதியாயிற்று;
என்னை கோலோ- என்ன காரணமோ; என எழுந்தார் – என்று
இராமன் படையில் எழலானார்.

———–

இராவணன் வருகையை அவர்கள் உணர்தல்

கடல்கள் யாவையும், கல் மலைக் குலங்களும், காரும்,
திடல் கொள் மேருவும், விசும்பிடைச் செல்வன சிவண,
அடல் கொள் சேனையும், அரக்கனும், தேரும், வந்து ஆர்க்கும்
கடல் கொள் பேர் ஒலிக் கம்பலை என்பதும் கண்டார். 34-

கடல்கள் யாவையும் – கடல்கள் எல்லாம்; கல்மலைக்
குலங்களும் – கல்வடிவான மலைக் கூட்டங்களும்; காரும் –
மேகமும்; திடல்கொள் மேருவும் – வலிமை மிகுந்த
மேருமலையும்; விசும்பிடைச் செல்வன சிவண – வானத்தில்
செல்வனவற்றை ஒத்திருக்க; அடல் கொள் சேனையும்- வலிமை
கொண்ட அரக்கர் படையும்; அரக்கனும் – இராவணனும்; தேரும்
வந்து ஆர்க்கும் – தேரும் வந்து ஒலிக்கும்; கடல்கொள்
பேர் ஒலிக்கம்பலை என்பதும் கண்டார் – கடல் போல
ஒலிக்கின்ற பேரொலி அது என்பதையும் அறிந்தார்.

————–

இராவணனது வருகையை வீடணன் இராமனுக்குக் கூறுதல்

‘எழுந்து வந்தனன் இராவணன்; இராக்கதத் தானைக்
கொழுந்து முந்தியது உற்றது; கொற்றவ! குலுங்குற்று
அழுந்துகின்றது, நம் பலம்; அமரரும் அஞ்சி,
விழுந்து சிந்தினர்’ என்றனன், வீடணன், விரைவான். 35-

கொற்றவ !- வெற்றிகொண்ட இராமனே!; இராவணன் எழுந்து
வந்தனன் – இராவணன் (தன் படையுடன்) புறப்பட்டு வந்தான்;
வீடணன் விரைவான் – விரைந்து வந்த வீடணன்; இராக்கதர்
தானைக் கொழுந்து முந்தி வந்து உற்றது – அரக்கர் படையின்
முன்னணிப்படை முன்னர் வந்தடைந்தது; நம்பலம் குலுங்குற்று
அழுந்துகின்றது – நம்படை நடுங்கி மூழ்குகின்றது; அமரரும்
அஞ்சி விழுந்து சிந்தினர் – தேவர்களும் பயப்பட்டுக் கீழே
விழுந்து சிதறிப் போனார்கள்; என்றனன் – எனக் கூறினான்

———–

மிகைப் பாடல்கள்

ஏழ்-இரு நூறு கோடி எனும் படைத் தலைவரோடும்
ஆழியின் வளைந்த சேனை ஐ-இருநூறு வெள்ளம்
ஊழியின் எழுந்த ஓதத்து ஒலித்தலும், அரக்கர் வேந்தன்,
‘வாள் அமர் முடிப்பென் இன்றே’ என மணித் தவிசு நீத்தான். 2-1

உரை செயற்கு அருந் தவத்தினுக்கு உவந்து, உமை
கேள்வன் அருள உற்றது, அங்கு அவன் மழுக் குலிசமோடு
ஆழி முரிய, மற்றவை முனை மடித்து, ஒன்றினும் முடியா
விரவு வச்சிரக் கவசத்தை மேற்படப் புனைந்தான். 4-1

அண்ட கோடிகள் எவற்றினும் தன் அரசு உரிமை
கண்டு போய் வரும் காட்சியின், கண்ணுதற் பரமன்,
பண்டு அவன் செய்யும் தவத்தினின் பரிந்து, இனிது அளிக்கக்
கொண்ட வானகத் தேரது; குதிரையைக் குறிக்கின், 18-1

ஐம் முகம் பயின்று இரட்டி, அங்கு அடல் புயன் நால்-
ஐந் தும், ஐந் நான்கு எனும் கரத்தொடும், உமையவள் ஒழிய
இம்மை இவ் உரு இயைந்து, எழில் கயிலையோடு ஈசன்
வெம்மை ஆடு அமர்க்கு எழுந்தென, தேர்மிசை விரைந்தான். 27-1

———————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/33–இராவணன் களம் காண் படலம்–

November 2, 2020

போர் விரர்க்கு விருந்து அளிக்க இராவணன் முற்படல்

பொருந்து பொன் பெருங் கோயிலுள், போர்த் தொழில்
வருந்தினர்க்கு, தம் அன்பினின் வந்தவர்க்கு,
அருந்துதற்கு அமைவு ஆயின ஆக்குவான்,
விருந்து அமைக்க மிகுகின்ற வேட்கையான். 1-

பொருந்து பொன் பெருங்கோயிலுள் – இராவணன் தான்
வாழ்கின்ற பொன்னால் கட்டப்பெற்ற பெரிய அரண்மனையில்
போர்த்தொழில் வருந்தினர்க்கு- போர் வினையில் தன்
பொருட்டுப் போர் புரிந்து வருந்தியவர்க்கும்; தம் அன்பின்
வந்தவர்க்கு – அவ்வீரர் தம் மேல் வைத்த அன்பினால்
வந்தவர்க்கும்; அருந்துதற்கு அமைவு ஆயின- உண்பதற்குப்
பொருந்தியவற்றை; ஆக்குவான் விருந்து அமைக்க
– அமைத்திட்டு விருந்து செய்ய; மிகுகின்ற வேட்கையான –
மிகுந்த விருப்பம் உடையவனாய்.

————–

வான நாட்டை ‘வருக!’ என, வல் விரைந்து,
ஏனை நாட்டவரோடும் வந்து எய்தினார்;
‘ஆன நாட்டு அந்த போகம் அமைத்திர்; மற்று
ஊனம் நாட்டின், இழத்திர் உயிர்’ என்றான். 2-

வானநாட்டை- விண்ணவரை;வருக என- வாருங்கள் என்று
ஆணையிட்டவுடன்; வல்விரைந்து ஏனை நாட்டவரோடும் –
மிக விரைந்த மற்றையதானவர் நாட்டோடும்; வந்து எய்தினார்-
வந்து சேர்ந்தனர்; ‘மான நாட்டு அந்த போகம் அமைத்திர்
– உயர்ந்த விண்ணவர் நாட்டு அரிய உணவைப் படைப்பீராக;
மற்று ஊனம் நாட்டின் – மாறாகக் குறைகள் செய்தால்; உயிர்
இழத்திர் என்றான் – உம் உயிரை இழப்பீர் என்றான்.

————

போகப் பொருள்களுடன் தேவ மகளிர் வருதல்

நறவும் ஊனும், நவை அற நல்லன
பிறவும், ஆடையும், சாந்தமும், பெய்ம் மலர்த்
திறமும், நானப் புனலொடு சேக்கையும்,
புறமும் உள்ளும் நிறையப் புகுந்தவால். 3-

நவை அற நல்லன நறவும் ஊனும் – குற்றமில்லாமல்
நல்லனவாகிய கள்ளும் ஊனும்; பிறவும் ஆடையும் சாந்தமும்-
பிற உணவுப் பொருள்களும் ஆடைகளும் பூசும் சந்தனமும்;
பெய்ம்மலர்த் திறமும் – அணிதற்குரிய மலர்வகையும்; நானப்
புனலொடு – கத்தூரி போன்ற மணப்பொருள் கலந்த
குளித்தற்குரிய நறு மண நீரொடு; சேக்கையும் – படுத்தற்குரிய
படுக்கைகளும் ஆகியவைகள்; புறமும் உள்ளும் –
அரண்மனைக்கு உள்ளேயும் வெளியேயும்; நிறையப் புகுந்தன
– நிறைய வந்து சேர்ந்தன.

—————

நானம் நெய் நன்கு உரைத்து, நறும்
புனல் ஆன கோது அற ஆட்டி, அமுதொடும்
பானம் ஊட்டி, சயனம் பரப்புவான்,
வான நாடியர் யாவரும் வந்தனர். 4-

நானம் நெய் நன்கு உரைத்து- புழுகு நெய்யை நன்கு தேய்த்து;
நறும்புனல் ஆன கோது அற ஆட்டி – நறுமண நீரால் அழுக்குப்
போக நீராட்டி; அமுதொடும் பானம் ஊட்டி – அமுதாகிய
சோறொடு பருகும் நீரையும் அளித்து; சயனம் பரப்புவான்-
படுக்கைகளைப் பரப்புவதற்காக; வானநாடியர் யாவரும் வந்தனர்
– வானுலகப் பெண்கள் அனைவரும் வந்து சேர்ந்தனர்.

————

அரக்க வீரர் போகம் நுகர்தல்

பாடுவார்கள்; பயில் நடம் பாவகத்து
ஆடுவார்கள்; அமளியில் இன்புறக்
கூடுவார்கள்; முதலும் குறைவு அறத்
தேடினார் என, பண்ணையின் சேர்ந்ததால். 5-

பாடுவார்கள் – இன்னிசை பாடுவார்களும்; பயில் நடம்
பாவகத்து ஆடுவார்கள் – பயின்ற நாட்டியத்தை பாவனையோடு
ஆடுவார்களும்; அமளியில் இன்புறக் கூடுவார்கள் –
படுக்கையில் இன்பம் பொருந்த அணைவார்கள்; முதலும் குறைவு
அற – முதற்பொருள் முதல் எவையும் குறைவின்றி; தேடினான்
என – தேடிக் கொண்டவன் போன்று; பண்ணையின்
சேர்ந்தது – மகளிர் கூட்டத்தால் சேர்ந்தது ஆம்.

————-

அரைசர் ஆதி, அடியவர் அந்தமா,
வரை செய் மேனி இராக்கதர் வந்துளார்,
விரைவின் இந்திர போகம் விளைவுற,
கரை இலாத பெரு வளம் கண்ணினார். 6-

அரைசர் ஆதி – அரசர் முதல்; அடியவர் அந்தமா –
அடியவர்கள் ஈறாக; வரைசெய் மேனி இராக்கதர் வந்துளார்-
மலை போன்ற வலிய உடம்புள்ள அரக்கர் வீரர் வந்துள்ளனர்;
விரைவின் இந்திரபோகம் விழைதர – விரைவாக இந்திர
போகத்தை விரும்பிட; கரையிலாத பெருவளம் கண்ணினார் –
அளவில்லாத இன்பப் பெருவளத்தைத் துய்த்தனர்.

————–

இராவணனிடம் தூதுவர் வந்து, மூலபலப் படை அழிந்தமையைத் தெரிவித்தல்

இன்ன தன்மை அமைந்த இராக்கதர்
மன்னன் மாடு வந்து எய்தி வணங்கினார்,
அன்ன சேனை களம் பட்ட ஆறு எலாம்
துன்னு தூதர் செவியிடைச் சொல்லுவார்: 7-

இன்ன தன்மை அமைந்த இராக்கதர் மன்னன் மாடுவந்து-
இத்தகைய போகத்தைத் துய்க்கும் இராக்கதர்களின் அரசனாம்
இராவணனிடத்து வந்து; எய்தி வணங்கினார்- அடைந்து
தொழுதனர்; அன்ன சேனை – அத்தன்மையான மூலப்படை முழுதும்;
களப்பட்ட ஆறு எலாம் – போர்க்களத்தில் இறந்துபட்டதெல்லாம்;
துன்னு தூதர் – இராவணனை அடைந்த தூதுவர்; செவியிடைச்
சொல்லுவார்- செவியில் மறை பொருளாகக் கூறுவார்.

————-

நடுங்குகின்ற உடலினர், நா உலர்ந்து
ஒடுங்குகின்ற உயிர்ப்பினர், உள் அழிந்து
இடுங்குகின்ற விழியினர், ஏங்கினார்,
பிடுங்குகின்ற உணர்வினர், பேசுவார்: 8-

நடுங்குகின்ற உடலினர்- நடுங்கும் உடல் உடையவராய்;
நாஉலர்ந்து – நாக்கு வறந்து; ஒடுங்குகின்ற உயிர்ப்பினர்-
சோர்கின்ற மூச்சுடையவராய்; உள் அழிந்து- உள்ளம்
அழிந்து; இடுங்குகின்ற விழியினர்- சுருங்கிய கண்ணினராய்;
ஏங்கினார்- ஏங்கி நின்றவராய்; பிடுங்குகின்ற மொழியினர்
பேசுவார்- சொல் தடுமாறு சொற்களை வலிதிற் பிடுங்குபவர்
போல் கூறினர்.

—————

‘இன்று யார் விருந்து இங்கு உண்பார்?- இகல் முகத்து இமையோர் தந்த
வென்றியாய்!-ஏவச் சென்ற ஆயிர வெள்ளச் சேனை
நின்றுளார் புறத்தது ஆக, இராமன் கை நிமிர்ந்த சாபம்
ஒன்றினால், நான்கு மூன்று கடிகையின் உலந்தது’ என்றார். 9-

இகல்முகத்து இமையோர் தந்த வென்றியாய்- போரில்
விண்ணவர் அளித்த வெற்றி பெற்ற அரசே!; ஏவச் சென்ற ஆயிர
வெள்ளச் சேனை- நீ ஆணையிடப் போர் புரியச் சென்ற ஆயிர
வெள்ளம் ஆகிய படை; புறத்தது ஆக நின்றுளார் – போர்க்களத்தில்
ஓர்புறமாக நிற்க; இராமன் கைநிமிர்ந்த சாபம் ஒன்றினால்-
இராமன் திருக்கரத்திலே விளங்கும் வில் ஒன்றினால்; இரண்டு மூன்று
கடிகையின் உலர்ந்தது – ஆறு நாழிகைப் பொழுதில் சேனை முழுதும்
அழிந்தது; இன்று யார் விருந்து இங்கு உண்பார் என்றார்-
இப்போது யாரிங்கு விருந்துண்பார்கள் என்று கேட்டனர்.

————-

‘வலிக் கடன் வான் உளோரைக் கொண்டு, நீ வகுத்த போகம்,
“கலிக் கடன் அளிப்பென்” என்று நிருதர்க்குக் கருதினாயேல்,
பலிக் கடன் அளிக்கற்பாலை அல்லது, உன் குலத்தின் பாலோர்
ஒலிக் கடல் உலகத்து இல்லை; ஊர் உளார் உளரே உள்ளார் 10-

வலிக்கடன் வான் உளோரைக் கொண்டு – கட்டளையாக
கடமையை செய்யும் விண்ணுளோரைக் கொண்டு; நீ வகுத்த
போகம்- நீ உண்டாக்கிய போகத்தை; கலிக்கடன் அனிப்பல்
என்று- மகிழ்ச்சியின் முறைமையால் அளிப்பேன் என;
நிருதர்க்குக் கருதினாயேல் – அரக்கர்க்கு அளிக்க எண்ணினால்;
பலிக்கடன் அளிக்கற்பாலை அல்லது – இறந்தவர்க்குச்
செய்யும் பலிக்கடனளிக்கத் தக்காய் என்பதல்லது; உன்
குலத்தின் பாலோர் – உன் குலத்தினைச் சேர்ந்தவர்கள்;
ஒலிக்கடல் உலகத்து இல்லை – ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த
உலகத்தில் யாரும் இல்லை; ஊர் உளார் உளரே உள்ளார் –
ஊரில் உள்ளவர்கள்தாம் உயிருள்ளவராக இருக்கின்றனர்
(எனத் தூதுவர் கூறினர்.)

——————

இராவணன் திகைத்து தூதரின் பேச்சை ஐயுற்றுக் கூறுதல்

ஈட்ட அரும் உவகை ஈட்டி இருந்தவன், இசைத்த மாற்றம்
கேட்டலும், வெகுளியோடு துணுக்கமும் இழவும் கிட்டி,
ஊட்டு அரக்கு அனைய செங் கண் நெருப்பு உக, உயிர்ப்பு வீங்க,
தீட்டிய படிவம் என்னத் தோன்றினன், திகைத்த நெஞ்சன். 11-

ஈட்ட அரும் உவகை ஈட்டி இருந்தவன்- (இலக்குவனை
மாய்த்தோம் எனப் பிறரால் பெறற்கரும் மகிழ்ச்சியைப்
பெற்று இருந்த இராவணன்; இசைத்த மாற்றம் கேட்டலும் –
(தூதுவர்) கூறிய சொல்லைக் கேட்டதும்; வெகுளியோடு
துணுக்கமும் இழவும் கிட்டி – கோபத்துடன் நடுக்கமும் இழப்பும்
சேர; ஊட்டு அரக்கு அனைய செங்கண்- செல்வரக்குப் போன்ற
தன் சிவந்த கண்கள்; நெருப்பு உக – (கோபத்தால்)
தீப்பொறி சிந்த; உயிர்ப்பு வீங்க – பெருமூச்சு உண்டாக;
திகைத்த நெஞ்சன் – திகைப்படைந்த மனம் கொண்டவனாய்;
தீட்டியபடிவம் என்னத் தோன்றினன் – எழுதிய சித்திரப்
பாவை போல் அசையாமல் இருந்தான்.

————–

‘என்னினும் வலியர் ஆன இராக்கதர் யாண்டும் வீயார்;
உன்னினும், உலப்பு இலாதார்; உவரியின் மணலின் மேலார்;
“பின் ஒரு பெயரும் இன்றி மாண்டனர்” என்று சொன்ன
இந் நிலை இதுவோ? பொய்ம்மை விளம்பினீர் போலும்’ என்றான் 12-

என்னினும் வலியர் ஆன இராக்கதர் – என்னைவிட
வலிமை கொண்டவரான மூலப்படை வீரர்; யாண்டும் வீயார்-
எப்போதும் எங்கும் அழியாதவர்கள்; உன்னினும் உவப்பு
இலாதார் – நினைப்பினால் கொல்வதானாலும் கொல்ல
முடியாதவர்கள்; உவரியின் மணலின் நீள்வார் – கடல்
மணலைக் காட்டிலும் எண்ணிக்கை மிக்கவர்; பின் ஒரு
பெயரும் இன்றி மாண்டனர்- பின்பு காண ஒருவருமின்றி
இறந்தனர்; என்று பேசும் இந்நிலை இதுவோ – என நீர்
கூறும் இந்நிலை இதுவோ; பொய்ம்மை விளிம்பினிர்
போலும் என்றான் – பொய் சொன்னீர் என்று கூறினான்
இராவணன்; ”உண்மை பேசியதாக உங்கள் நினைப்போ” என்றான்
இராவணன்.

—————

மாலியவான், ‘தூதுவர் பொய் உரையார்; நீ பெரியோர் செய்கையை மேற்கொள்’ எனல்

கேட்டு அயல் இருந்த மாலி, ‘ஈது ஒரு கிழமைத்து ஆமோ?
ஓட்டு உறு தூதர் பொய்யே உரைப்பரோ? உலகம் யாவும்
வீட்டுவது இமைப்பின் அன்றே, வீங்கு எரி? விரித்த எல்லாம்
மாட்டுவன் ஒருவன் அன்றே, இறுதியில் மனத்தால்?’ என்றான். 13-

கேட்டு அயல் இருந்தமாலி- (தூதுவரை ஐயுற்று இராவணன்
கூறியதைக்) கேட்டுப் பக்கத்திலிருந்த மாலியவான்; ஈது ஒரு
கிழமைத்து ஆமோ- (இராவணனை நோக்கி) இவ்வாறு கேட்பது
ஒரு முறைமையுடையது ஆகுமோ?; ஓட்டு உறு தூதர் பொய்யே
உரைப்பரோ- நாம் விடுத்த தூதர் பொய் சொல்லுவார்களோ; உலகம்
யாவும் – எல்லா உலகங்களும்; வீங்குஎரி வீட்டுவது இமைப்பின்
அன்றே- ஊழித்தீ இமைப் பொழுதில் அழிந்து விடும் அல்லவா;
விரித்த எல்லாம் – விரிந்து கிடக்கும் உலகங்கள் எல்லாம்;
இறுதியில் மனத்தால் – ஊழியின் முடிவில் மனத்தால் நினைத்தவுடன்;
ஒருவன் மாட்டுவன் அன்றே- உருத்திரன் அழிப்பான் அல்லவா.

——-

‘”அளப்ப அரும் உலகம் யாவும் அளித்துக் காத்து அழிக்கின்றான் தன்
உளப் பெருந் தகைமை தன்னால் ஒருவன்” என்று உண்மை வேதம்
கிளப்பது கேட்டும் அன்றே? “அரவின்மேல் கிடந்து, மேல் நாள்,
முளைத்த பேர் இராமன்” என்ற வீடணன் மொழி பொய்த்து ஆமோ? 14-

அளப்ப அரும் உலகம் யாவும்- அளந்து கூற முடியாத எல்லா
உலகமும்; அமைத்துக் காத்து அழிக்கின்றான் – படைத்து அளித்து
அழிப்பதும்; தன்உளப் பெருந்தகைமை தன்னால் ஒருவன் – தன்
உள்ளத்தின் பெருமையால் தான் ஒருவனே செய்வன; என்று
உண்மை வேதம்- என உண்மை கூறும் வேதம்; கிளப்பது கேட்டும்
அன்றே – சொல்வதைக் கேட்டுள்ளோம் அல்லவா; அரவின் மேல்
கிடந்து – ஆதிசேடன் மேல் படுத்து; மேல் நாள் முளைத்த போர்
இராமன்- பின்பு அயோத்தியில் பிறந்த போராற்றல் மிக்க இராமன்;
என்று வீடணன் மொழி – என்று கூறிய வீடணன் சொற்கள்;
பொய்த்து ஆமோ- பொய்ம்மை உடையது ஆகுமோ (ஆகாது.)

————-

‘ஒன்று இடின் அதனை உண்ணும் உலகத்தின் உயிர்க்கு ஒன்றாத
நின்றன எல்லாம் பெய்தால், உடன் நுங்கு நெருப்பும் காண்டும்,
குன்றொடு மரனும், புல்லும், பல் உயிர்க் குழுவும், கொல்லும்
வன் திறல் காற்றும் காண்டும்; வலிக்கு ஒரு வரம்பும் உண்டோ ? 15-

ஒன்று இடின் அதனை உண்ணும் – ஏற்ற ஓருணவை இட்டால்
அதனை உண்கின்ற; உலகத்தின் உயிர்க்கு ஒன்றாத – உலக
உயிர்களுக்குப் பொருந்தாத; நின்றன எல்லாம் பெய்தால் –
எல்லாவற்றையும் இட்டால்; உடன் நுங்கு நெருப்பும் காண்டும்
– ஒருங்கே உண்ணும் தீயைக் காண்கின்றோம்; குன்றொடு
மரனும் புல்லும் – மலையொடு மரமும் புல்லும் முதலிய;
பல்லுயிர் கொல்லும் – பல உயிர்களைக் கொல்லும் ஆற்றல்
உள்ள; வன்திறல் காற்றும் காண்டும் – வலிமை கொண்ட
காற்றையும் காண்கின்றோம்; வலிக்கு ஒரு வரம்பும் உண்டோ
– (ஆதலால்) வலிமைக்கு ஒரு கட்டுப்பாடு உண்டா? (இல்லை).

————

‘பட்டதும் உண்டே உன்னை, இந்திரச் செல்வம்; பற்று
விட்டது மெய்ம்மை; ஐய! மீட்டு ஒரு வினையம் இல்லை;
கெட்டது, உன் பொருட்டினாலே, நின்னுடைக் கேளிர் எல்லாம்;
சிட்டது செய்தி’ என்றான்; அதற்கு அவன் சீற்றம் செய்தான். 16-

ஐய- ஐயனே!; பட்டதும் உண்டே- மூலப்படை அழிந்தது
உண்மையே; உன்னை இந்திரச் செல்வம் பற்று விட்டதும்
மெய்ம்மை- உன்னை விட்டு இந்திரச் செல்வமானது பற்று
விட்டு விட்டதும் உண்மையே; மீட்டு ஒரு வினையும் இல்லை –
இனிச் செய்வதற்குரிய வேறு ஒரு செயலும் இல்லை; நின்னுடைக்
கேளிர் எல்லாம்- உன்னுடைய உறவினர் யாவரும்; கெட்டது
உன் பொருட்டினாலே – இறந்தது உன் காரணமாகவே; சிட்டது
செய்தி – எனவே சிறந்ததைச் செய்வாயாக; என்றான்- என்று
மாலிய வான் கூறினான்; அதற்கு அவன் சீற்றம் செய்தான்-
அதைக் கேட்டு இராவணன் கோபம் கொண்டான்.

—————-

மாலியவான் உரையால் சீற்றமுற்ற இராவணன், ‘வெற்றி எனதே’ எனல்

‘இலக்குவன் தன்னை வேலால் எறிந்து, உயிர் கூற்றுக்கு ஈந்தேன்;
அலக்கணில் தலைவர் எல்லாம் அழுந்தினர்; அதனைக் கண்டால்,
உலக்குமால் இராமன்; பின்னர் உயிர்ப் பொறை உகவான்; உற்ற
மலக்கம் உண்டாகின் ஆக; வாகை என் வயத்தது’ என்றான். 17-

இலக்குவன் தன்னை வேலால் எறிந்து- இலக்குவனை
வேல் கொண்டு எறிந்து; உயிர் கூற்றுக்கு ஈந்தேன்- அவனுயிரை
யமனுக்குக் கொடுத்தேன்; அலக்கணில் தலைவர் எல்லாம்
அழுந்தினர் – வானரத் தலைவர் யாவரும் அவனிறந்த
துன்பத்தில் அழுந்தி விட்டனர்; அதனைக் கண்டால்-
இலக்குவன் இறந்த நிலையைப் பார்த்தால்; இராமன் உலக்கும்
– இராமன் வற்றுவான்; பின்னர் உயிர்ப் பொறை உகவான் –
பின்பு உயிருடன் இருப்பதை விரும்ப மாட்டாது இறப்பான்;
உற்றமலக்கம் உண்டாகின் ஆக – எனக்கு நேர்ந்த துன்பம்
உண்மையாயின் ஆகுக; வாகை என் வயத்தது என்றான்- வெற்றி
என் பக்கமே என்று இராவணன் கூறினான்.

—————–

மாருதி கொணர்ந்த மருந்தால் இலக்குவன் உயிர் பெற்றான் எனத் தூதர் உரைத்தல்

ஆண்டு அது கண்டு நின்ற தூதுவர், ஐய! மெய்யே
மீண்டது, அவ் அளவின் ஆவி, மாருதி மருந்து மெய்யில்
தீண்டவும்; தாழ்த்தது இல்லை; யாரும் அச்
செங்கணானைப் பூண்டனர் தழுவிப் புக்கார்; காணுதி போதி’ என்றார். 18-

ஆண்டு அது கண்டு நின்ற தூதுவர்- அங்கு அதைப் பார்த்த
நின்ற தூதுவர்; ஐயா அந்த இளவல் ஆவி – ஐயனே! இராமனின்
தம்பியாம் இலக்குவனின் உயிர்; மாருதி மருந்து மெய்யில்
தீண்டவும் – அனுமன் கொணர்ந்த மருந்து உடம்பில் பட்டவுடன்;
தாழ்ந்தது இல்லை மீண்டது- சிறிதும் தாழ்க்காமல் மீண்டது;
அச்செங்கணானை யாரும் பூண்டனர் தழுவிப் புக்கார்- சிவந்த
கண்ணுடைய இலக்குவனை எல்லோரும் சூழ்ந்து தழுவிக் கொண்டு
சென்றனர்; காணுதி போதி என்றார்- சென்று பார்ப்பாயாக என்று
கூறினர்

—————

இராவணன் கோபுரத்தின் மீது ஏறி, களத்தைக் காணுதல்

தேறிலன் ஆதலானே, மறுகுறு சிந்தை தேற,
ஏறினன், கனகத்து ஆரைக் கோபுரத்து உம்பர் எய்தி,
ஊறின சேனை வெள்ளம் உலந்த பேர் உண்மை எல்லாம்,
காறின உள்ளம் நோவ, கண்களால் தெரியக் கண்டான். 19-

தேறிலன்- தூதர் சொன்னதை உண்மையென இராவணன்
தெளிவு பெறவில்லை; ஆதலானே மறுகுறு சிந்தை தேற-
ஆதலால் கலக்கமுற்ற எண்ணம் தெளிய; கனகத்து ஆரைக்
கோபுரத்து உம்பர் ஏறினன்- பொன்னால் செய்யப் பெற்ற உயர்
கோபுரத்தின் மீது ஏறினான்; எய்தி ஊறின சேனை வெள்ளம்
உலந்த பேர் உண்மை எல்லாம்- அடைந்து பெருகிய சேனை
வெள்ளம் அழிந்த பெரிய உண்மை முழுதும்; காறின உள்ளம்
நோவ – செருக்குற்ற தன் மனம் வருந்த; கண்களால் தெரியக்
கண்டான்- கண்களால் தெளிவாகப் பார்த்தான்.

————–

கொய் தலைப் பூசல் பட்டோ ர் குலத்தியர் குவளை தோற்று
நெய்தலை வென்ற வாள்-கண் குமுதத்தின் நீர்மை காட்ட,
கை தலை வைத்த பூசல் கடலொடு நிமிரும்காலை,
செய்தலை உற்ற ஓசைச் செயலதும் செவியின் கேட்டான். 20-

கொய்தலைப் பூசல் பட்டோர் குலத்தியர் – பகைவரால்
கொய்யப்பட்ட (தம் கணவரின் தலையைக் கண்டு துன்புறும்
அரக்க மகளிர்; குவளை தோற்று நெய்தலை வென்ற வாள்கண்-
கரிய குவளை மலரையும் கரு நெய்தல் மலரையும் வென்ற வாள்
போன்ற கண்கள்; குமுதத்தின் நீர்மை காட்ட – அழுது
சிவந்ததால் செங்குமுத மலரின் தன்மையைக் காட்ட; கய் தலை
உற்ற பூசல்- தம் கையால் தம் தலையில் அடித்துக் கொண்டிருக்கும்
அழுகை ஒலி; கடலொடு நிமிருங்காலை செய்தலை உற்ற ஓசைச்
செயலதும்- கடல்கள் எல்லாம் பொங்கிய காலத்து எழும் ஓசை
செய்யும் தன்மையை; செவியின் கேட்டான்- இராவணன் தன்
காதாற் கேட்டான்.

———–

எண்ணும் நீர் கடந்த யானைப் பெரும் பிணம் ஏந்தி, யாணர்
மண்ணின் நீர் அளவும் கல்லி, நெடு மலை பறித்து, மண்டும்
புண்ணின் நீர் ஆறும், பல் பேய்ப் புதுப் புனல் ஆடும் பொம்மல்,
கண்ணின் நீர் ஆறும், மாறாக் கருங் கடல் மடுப்பக் கண்டான் 21-

எண்ணும் நீர் கடந்த யானைப் பெரும் பிணம் ஏந்தி –
எண்ணும் தன்மையைக் கடந்த யானையின் பெரும் பிணங்களை
ஏந்திக் கொண்டு; யாணர் மண்ணின் நீர் அளவும் கல்லி –
புதிய ஊற்று நீர் உள்ள அளவும் தோண்டி; நெடுமலை பறித்து-
நீண்ட மலைகளைப் புரட்டி; மண்டும் புண்ணின் நீர் அறும் –
விரைந்து ஓடும் இரத்த ஆறும்; பல்பேய்ப் புதுப்புனல் ஆடும்
பொம்மல்- பலபேய்கள் புதிய நீர் எனக்குளிக்கும் பொலிவுடைய;
கண்ணின் நீர் ஆறும் – கண்ணில் வடியும் ஆறும்; மாறாக்
கருங்கடல் மடுப்பக் கண்டான்- தம் தன்மை மாறாது கரிய
கடலில் புகுந்து கலப்பதை இராவணன் பார்த்தான்.

———–

குமிழி நீரோடும், சோரிக் கனலொடும், கொழிக்கும் கண்ணான்,
தமிழ் நெறி வழக்கம் அன்ன தனிச் சிலை வழங்கச் சாய்ந்தார்
அமிழ் பெருங் குருதி வெள்ளம் ஆற்று வாய்முகத்தின் தேக்கி,
உமிழ்வதே ஒக்கும் வேலை ஓதம் வந்து உடற்றக் கண்டான். 22-

குமிழி நீரோடும் – குமிழி இட்டுப் பெருகும் கண்ணீரோடும்;
சோரிக்கனலொடும் – சின நெருப்புக் கக்கும் இரத்தத்தோடும்;
கொழிக்கும் கண்ணான்- பெருகும் கண்களையுடைய இராவணன்;
தமிழ்நெறி வழக்கம் அன்ன- தமிழ்க்குரிய அகப்பொருள் கூறும்
பெருகிய வழக்கம் போன்று; தனிச்சிலை வழக்கில் சாய்ந்தார்-
ஒப்பற்ற வில் விடுத்த அம்பினால் இறந்தவர்களின்; அமிழ்
பெருங்குருதி வெள்ளம் ஆற்றுவாய்- அமிழும் மிகுந்த இரத்த
வெள்ளத்தை கடலில் ஆறு கலக்கும் சங்கமுமாகிய வாயினால்;
முகத்தின் தேக்கி – முகத்திலே தேக்கி வைத்து; உமிழ்வதை
ஒக்கும் – துப்புவதைப் போன்றிருக்கும்; வேலை ஓதம் வந்து
உடற்றக் கண்டான்- (இரத்தம் கலந்த) கடலின் அலைகள் வந்து
போர்க்களத்தில் மோதிடப் பார்த்தான்.

———–

விண்களில் சென்ற வன் தோள் கணவரை, அலகை வெய்ய
புண்களில் கைகள் நீட்டி, புது நிணம் கவர்வ நோக்கி,
மண்களில் தொடர்ந்து, வானில் பிடித்து, வள் உகிரின் மானக்
கண்களைச் சூன்று நீக்கும் அரக்கியர் குழாமும் கண்டான். 23-

விண்களில் சென்ற – (போரில் இராமன் விடுத்த அம்பால்
இறந்து) வானுலகில் புகுந்த; வன்தோள் கணவரை- வலிய
தோளுடைய கணவர் உடலிலுள்ள; அலகை வெய்ய புண்களில்
கைகள் நீட்டி- பேய்கள் இறந்தவர் உடலில் விரும்பத் தக்க
புண்களில் தம் கைகளை நீட்டி; புதுநிணம் கவர்வ நோக்கி –
புதிய கொழுப்பைக் கவர்வதைக் கண்டு; மண்களில் தொடர்ந்து
– அப்பேய்களைத் தரையில் துரத்திச் சென்று; வானில் பிடித்து –
(பேய்கள் பறக்க) வானத்தில் தொடர்ந்து சென்று பிடித்து; வள்
உகிரின் – பெரிய நகங்களால்; மானக் கண்களை – பெரிய
கண்களை; சூன்று நீக்கும் – தோண்டி எடுத்து நீக்குகின்ற;
அரக்கியர் குழாமும் கண்டான் – அரக்கியர் கூட்டத்தையும்
பார்த்தான் இராவணன்.

—————

இராவணன் சோகமும் கோபமும் கொண்டு கோபுரத்திலிருந்து இறங்கி, அரசிருக்கை மண்டபத்தை அடைதல்

விண் பிளந்து ஒல்க ஆர்த்த வானரர் வீக்கம் கண்டான்;
மண் பிளந்து அழுந்த ஆடும் கவந்தத்தின் வருக்கம் கண்டான்;
கண் பிளந்து அகல நோக்கும் வானவர் களிப்பும் கண்டான்;
புண் பிளந்தனைய நெஞ்சன் கோபுரத்து இழிந்து போந்தான். 24-

விண்பிளந்து ஒல்க ஆர்க்கும்- வானுலகம் பிளந்து
அசையுமாறு ஆரவாரிக்கும்; வானரர் வீக்கம் கண்டான்-
வானர வீரர்களின் பெருக்கத்தைப் பார்த்தான்; மண்பிளந்து
அழுந்த – மண்உலகம் பிளவுற்று அழுந்துமாறு; ஆடும்
கவந்தத்தின் வருக்கம் கண்டான்- ஆடுகின்ற தலையற்ற
உடல்களின் கூட்டத்தைப் பார்த்தான்; கண் பிளந்து அகல
நோக்கும்- கண்களை அகலமாகத் திறந்து போர்க்களத்தைப்
பார்க்கும்; வானவர் களிப்பும் கண்டான்- தேவர்களின்
மகிழ்ச்சியையும் பார்த்தான்; புண் பிளந்தனைய நெஞ்சன் – உடலிலுள்ள புண் பிளந்தது போன்ற துன்பமிக்க
உள்ளமுடைய இராவணன்; கோபுரத்து இழிந்து போனான்-
கோபுரத்திலிருந்து இறங்கி வந்தான்.

————

நகை பிறக்கின்ற வாயன், நாக்கொடு கடை வாய் நக்கப்
புகை பிறக்கின்ற மூக்கன், பொறி பிறக்கின்ற கண்ணன்,
மிகை பிறக்கின்ற நெஞ்சன், வெஞ் சினத் தீமேல் வீங்கி,
சிகை பிறக்கின்ற சொல்லன், அரசியல் இருக்கை சேர்ந்தான் 25-

நகை பிறக்கின்ற வாயன் – கோபச் சிறப்புத் தோன்றும்
வாயுடையவனாய்; நாக்கொடு கடைவாய் நக்க- நாக்குடன்
கடைவாய் கோபச் சிரிப்பு கொள்ளுவதால்; புகை பிறக்கின்ற
கண்ணன் – தீப்பொறி பறக்கின்ற கண்ணுடையவனாய்;
மிகைபிறக்கின்ற நெஞ்சன்- செருக்குத் தோன்றும் நெஞ்சு
உடையவனாய்; வெஞ்சினத்தீ மேல் வீங்கி- தீயானது கொடிய
கோபத்தில் மிகுதியாக ஓங்கி; சிகைபிறக்கின்ற சொல்லன்
– கோபத்தெழுந்து தோன்றுகின்ற சொற்களை உடையவனாய்;
அரசியல் இருக்கை சேர்ந்தான்- ஆட்சி நடத்தும்
அரண்மனையை அடைந்தான்.

————

மிகைப் பாடல்கள்

அலக்கண் எய்தி அமரர் அழிந்திட,
உலக்க வானர வீரரை ஓட்டி, அவ்
இலக்குவன் தனை வீட்டி, இராவணன்
துலக்கம் எய்தினன், தோம் இல் களிப்பினே. (இந்த பாடல் படலத்தின் முதற் செய்யுளாக உள்ளது)

முற்று இயல் சிலை வலாளன் மொய் கணை துமிப்ப, ஆவி
பெற்று, இயல் பெற்றி பெற்றாலென்ன, வாள் அரக்கர் யாக்கை,
சிற்றியல் குறுங் கால் ஓரிக் குரல் கொளை இசையா, பல் பேய்
கற்று இயல் பாணி கொட்ட, களி நடம் பயிலக் கண்டான். 21-1

——————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/32-வானரர் களம் காண் படலம்–

November 2, 2020

சுக்கிரீவனை மூலப் படையின் அழிவு காண இராமன் ஏவல்

ஆய பின், கவியின் வேந்தும், அளப்ப அருந் தானையோடும்,
மேயினன், இராமன் பாதம் விதி முறை வணங்கி; வீந்த
தீயவர் பெருமை நோக்கி, நடுக்கமும் திகைப்பும் உற்றார்,
ஓய்வுறு மனத்தார் ஒன்றும் உணர்ந்திலர், நாணம் உற்றார். 1

ஆய பின்- அதன் பிறகு; கவியின் வேந்தும் அளப்ப
அருந்தானையோடும் மேயினன் – சுக்கிரீவனும் அளக்க
முடியாத தன் வானரப் படையோடு வந்து சேர்ந்தால்; இராமன்
பாதம் விதிமுறை வணங்கி- இராமனின் திருவடியைத் துதித்து;
வீந்த தீயவர் பெருமை நோக்கி- இறந்துபட்ட அரக்கரின்
பெருக்கைக் கண்டு; நடுக்கமும் திகைப்பும் உற்றார்-
நடுக்கமும் திகைப்பும் கொண்டார்; ஓய்வுறு மனத்தார்
ஒன்றும் உணர்ந்திலர்- ஓய்ந்த உள்ளத்தினராய் எதுவும்
உணரவில்லை; நாணம் உற்றார் – வெட்கப்பட்டார்.

——-

‘மூண்டு எழு சேனை வெள்ளம் உலகு ஒரு மூன்றின் மேலும்
நீண்டு உள அதனை, ஐய! எங்ஙனம் நிமிர்ந்தது?’ என்னத் தூண்
திரண்டனைய திண் தோள் சூரியன் புதல்வன் சொல்ல,
‘காண்டி நீ, அரக்கர் வேந்தன் தன்னொடும் களத்தை’ என்றான் 2-

ஐய !- இராமனே; மூண்டு எழு சேனை வெள்ளம் – போரில்
பகைமிகுந்து எழும் சேனைப் பெருக்கம்; உலகு ஒரு மூன்றின்
மேலும் நீண்டுஉள – மூன்றுலகங்களை விட நீண்டுள்ளன; அதனை
எங்ஙனம் நிமிர்ந்தது? என்ன – அப்படிப்பட்டதை எவ்வாறு
வென்றது என்று; தூண்திரண்டனைய திரள் தோள் சூரியன்
சிறுவன் சொல்ல – தூண் பருத்துள்ளது போல் திண்ணிய
தோளையுடைய சூரியன்மகனாம் சுக்கிரீவன் கேட்க; ‘நீ
அரக்கர் வேந்தன் தன்னொடும் களத்தைக் காண்டி’ என்றான்
– ‘நீ வீடணனொடு சென்று போர்க்களத்தை நேரில் பார்’ என்று
இராமன் சொன்னான்.

————-

தொழுதனர் தலைவர் எல்லாம்; தோன்றிய காதல் தூண்ட,
‘எழுக’ என விரைவின் சென்றார், இராவணற்கு இளவலோடும்;
கழுகொடு பருந்தும், பாறும், பேய்களும், கணங்கள் மற்றும்,
குழுவிய களத்தைக் கண்ணின் நோக்கினர், துணுக்கம் கொண்டார் 3-

தலைவர் எல்லாம் தொழுதனர் – வானரத் தலைவர்கள்
எல்லாம் (இராமனைத்) தொழுதனர்; தோன்றிய காதல் தூண்ட –
உண்டான ஆசை தூண்டுவதால்; இராவணற்கு இளவலோடும் –
இராவணன் தம்பியாம் வீடணனோடும்; ‘எழுக’ என விரைவின்
சென்றார்- ‘எழுக’ என்று கூறி விரைவாகச் சென்றனர்; கழுகொடு,
பருந்தும் பாறும் பேய்களும் கணங்கள் மற்றும் குழுவிய
களத்தை – கழுகும், பருந்தும், பாறும் பேய்களும் மற்றுமுள்ள
காகம் முதலிய கூட்டமும் கூடியுள்ள போர்க்களத்தை; கண்ணின்
நோக்கினர் – கண்ணில் கண்டனர்; துணுக்கம் கொண்டார் –
மனநடுக்கம் கொண்டனர்.

————–

களம் கண்ட வானரர்கள் அடைந்த நிலை

ஏங்கினார்; நடுக்கமுற்றார்; இரைத்து இரைத்து, உள்ளம் ஏற,
வீங்கினார்; வெருவலுற்றார்; விம்மினார்; உள்ளம் வெம்ப,
ஓங்கினார்; மெள்ள மெள்ள உயிர் நிலைத்து, உவகை ஊன்ற,
ஆங்கு அவர் உற்ற தன்மை யார் அறிந்து அறையகிற்பார்? 4-

ஏங்கினார் – அழுதார்கள்; நடுக்கமுற்றார் – நடுக்கம்
அடைந்தார்கள்; இரைத்து இரைத்து உள்ளம் ஏற வீங்கினார்-
பெருமூச்சு வாங்கி மனம் துன்புற உடம்பு வீங்கினார்கள்;
வெருவலுற்றார் – அஞ்சினார்கள்; உள்ளம் வெம்ப
விம்மினார் – மனம் வெதும்பத் தேம்பினார்கள்; மெள்ள
மெள்ள உயிர் நிலைத்து – மெதுவாக உயிர்ப்பு நிலைபெற்று;
உவளக ஊற – மகிழ்ச்சி பொங்க; ஓங்கினார் – உணர்வு
மிகுந்தார்கள்; ஆங்கு அவர் உற்ற தன்மை – அப்போது
அவர்கள் அடைந்த மெய்ப்பாட்டுத் தன்மையை; அறிந்து
அறைய கிற்பார் யார் – தெரிந்து சொல்ல வல்லவர்கள் யார்?
(ஒருவருமில்லை);

————

வானரர் வேண்ட, போர்க்களக் காட்சியை வீடணன் கூறுதல்

ஆயிரம் பருவம் கண்டும், காட்சிக்கு ஓர் அளவிற்று அன்றால்;
மேயின துறைகள்தோறும் விம்மினார் நிற்பது அல்லால்,
பாய் திரைப் பரவை ஏழும் காண்குறும் பதகர் என்ன,- ‘நீ இருந்து
உரைத்தி’ என்றார்; வீடணன் நெறியின் சொல்வான்: 5-

பாய் திரைப்பரவை ஏழும்- அலைகள் பாய்ந்து வரும்
கடல்கள் ஏழையும்; காண்குறும் பதகர் என்ன- காண விரும்பும்
பாவிகளைப் போல; மேயின துறைகள் தோறும்- விரும்பிய
துறைகள் தோறும்; விம்மினார் – மகிழ்ந்து; நிற்பது
அல்லால் – நிற்பதன்றி; ஆயிரம் பருவம் கண்டால்
காட்சிக்கு ஓர் கரையிற்று அன்றால் – ஆயிரம் ஆண்டுகள்
ஆனாலும் சாட்சிக்கு ஒரு கரை காணல் இயலாது; நீ இருந்தி
உரைத்தி என்றார் – அமைதியாக இருந்து நீ சொல்க
என்றனர்; வீடணன் நெறியின் சொல்வான் – வீடணன்
முறையாகக் கூறுவான்.

————-

‘காகப் பந்தர்ச் செங் களம் எங்கும், செறி கால
ஓகத்து அம்பின் பொன்றின வேனும், உடல் ஒன்றி,
மேகச் சங்கம் தொக்கன, வீழும் வெளி இன்றி,
நாகக் குன்றின் நின்றன காண்மின் – நமரங்காள்! 6-

நமரங்காள்- நம்மவர்களே!; ஓகத்து அம்பின்
பொன்றினவேனும்- (இராமனின்) அம்புக் கூட்டத்தால்
இறந்தன ஆயினும்; உடல் ஒன்றி – உடல்கள் ஒன்றுடன்
ஒன்று ஒட்டி; செறி கால – இரத்தச் சேற்றில் சிக்கிய
கால்களுடன்; மேகச் சங்கம் தொக்கன – மேகக் கூட்டம்
கூடியது போல்; வீழும் வெளி இன்றி – தரையில் வீழ
இடமின்றி; காகப் பந்தர் செங்களம் எங்கும்-
காகங்களிட்ட பந்தரை உடைய சிவந்த போர்க்களம் எங்கும்;
நாகக் குன்றின் நின்றன காண்மின்- யானை மலைகள்
நின்றுள்ள நிலையைப் பாரீர்.

———-

‘வென்றிச் செங் கண் வெம்மை அரக்கர் விசை ஊர்வ,
ஒன்றிற்கு ஒன்று உற்று அம்பு தலைப்பட்டு உயிர் நுங்க,
பொன்றி, சிங்கம் நாக அடுக்கல் பொலிகின்ற
குன்றில் துஞ்சும் தன்மை நிகர்க்கும் குறி காணீர். 7-

வென்றிச் செங்கண் வெம்மை அரக்கர்- வெற்றி
கொண்டு முன்னர் விளங்கிய சிவந்த கண்ணும் கொடுமையுமுடைய
அரக்கர்; விசை ஊர்வ- (இராமனின் அம்புகள்) வேகமாக
வந்துதைக்க; அம்பு ஒன்றிற்கு ஒன்று உற்று தலைப்பட்டு –
அம்புகள் ஒன்றின் மேல் ஒன்று முற்பட வந்து பாய்ந்து; உயிர்
நுங்க- தம் உயிரைப் பருகியதால்; பொன்றி – இறந்து; சிங்கம்
நாக அடுக்கல் பொலிகின்ற குன்றில் துஞ்சும் தன்மை –
சிங்கங்கள் யானைகளாம் குன்றின் மேல் உறங்கும் தன்மையை;
நிகர்க்கும் குறி காணீர் – ஒத்து நிற்கும் குறிப்பைப் பாரீர்.

—————–

‘அளியின் பொங்கும் அங்கணன் ஏவும் அயில் வாளிக்
களியில் பட்டார் வாள் முகம், மின்னும் கரை இல்லாப்
புளினத் திட்டின் கண் அகன் வாரிக் கடல் பூத்த
நளினக் காடே ஒப்பன காண்மின் – நமரங்காள்! 8-

அளியின் பொங்கும் அங்கணன்- அருள் ததும்பும் அழகிய
கண்களையுடைய இராமன்; ஏவும் அயில்வாளிக் களியின்
பட்டார் – ஏவிய கூரிய அம்புகளால் (இறக்க வாய்ப்புப்
பெற்ற) களிப்போடு மடிந்த அரக்கரின்; மின்னும்
கரையில்லா வாள்முகம் – மின்னுகின்ற அளவில்லா ஒளி
படைத்த முகங்கள்; புளினத் திட்டின் கண் அகன் வாரிக்
கடல் பூத்த – மணல் திட்டுக்களின் அகன்ற நீர் மிகுந்த
கடலில் மலர்ந்த; நளினக்காடே ஒப்பன- தாமரைக் காடே
போல் வன; நமரங்காள்! காண்மின்- நம்மவர்களே! பாருங்கள்.

————–

‘ஒழுகிப் பாயும் மும் மத வேழம் உயிரோடும்
எழுகிற்கில்லாச் செம்புனல் வெள்ளத்திடை இற்ற;
பழகிற்கில்லாப் பல் திரை தூங்கும் படர் வேலை
முழுகித் தோன்றும் மீன் அரசு ஒக்கும் முறை நோக்கீர்! 9-

ஒழுகிப் பாயும் மும்மதவேழம் – தரையில் ஒழுகிப் பாயும்
கன்னம், கபோலம், பீசம் என்னும் உறுப்புகளில் மதநீர்
கொண்ட யானைகள்; உயிரோடும் எழுகிற்கில்லா –
உயிரோடிருந்தும் எழமுடியாத; செம்புனல் வெள்ளத்திடை இற்ற
– இரத்த வெள்ளத்தில் தனித்தனி ஆயின; பழகிற்கில்லா-
பழகுதல் இல்லாத; பல்திரை தூங்கும்- பல அலைகள் மடங்கி;
படர்வேலை – பரவுகின்ற கடலில்; முழுகித் தோன்றும்-
மூழ்கி வெளிப்படும்; மீன் அரசு ஒக்கும் – மீன் அரசு
போலிருக்கும்; முறை நோக்கீர் – முறையைப் பாருங்கள்.

—————

‘பூ வாய் வாளிச் செல் எறி காலைப் பரி பொன்ற, கோ ஆர்
விண்வாய் வெண் கொடி திண் பாயொடு கூட,
மா வாய் திண் தேர் மண்டுதலால், நீர் மறி வேலை
நாவாய் மானச் செல்வன காண்மின் – நமரங்காள்! 10-

நமரங்காள் ! – நம்மவர்களே!; பூவாய் வாளிச் செல்
எறிகாலை – கூரிய முனையை உடைய அம்புகளாம் இடிகள்
வீழ்ந்து எறிந்த காலத்து; பரிபொன்ற- குதிரைகள் இறக்க; கோ
ஆர் விண்வாய் – சிறப்புமிக்க வானத்திடையே; வெண்கொடி
திண்பாயொடு கூட – வெள்ளைக் கொடி திண்ணிய பாயொடு
பொருந்த; மாவாய் திண்தேர் மண்டுதலால் – குதிரைகள்
பூட்டிய வலிய தேர்கள் இரத்த வெள்ளத்தில் நிற்பதால்;
நீர்மறி வேலை நாவாய்மானச் செல்வன – நீர் நிறைந்த
கடலிலே மரக்கலங்கள் போலச் செல்வனவற்றை; காண்மின் –
பாருங்கள்.

——————

‘கடக் கார் என்னப் பொங்கு கவந்தத்தொடு கைகள்
தொடக்கா நிற்கும் பேய், இலயத்தின் தொழில் பண்ணி,
மடக்கோ இல்லா வார் படிமக் கூத்து அமைவிப்பான்,
நடக் கால் காட்டும் கண்ணுளர் ஒக்கும் – நமரங்காள்! 11-

நமரங்காள் ! – நம்மவர்களே!; கடக் கார் என்ன – உடல்
மேகங்களொடு ஒத்திருக்க; பொங்கு கவந்தத் தொடுகைகள் –
எழுச்சியுற்ற கவந்தத்திற்கு ஏற்பக் கைகளை; தொடக்கா
நிற்கும் பேய் – சேர்க்கா நிற்கின்ற பேய்கள்; இலயத்தின்
தொழில் பண்ணி – தாளஒற்றுக்கு ஏற்ப செயலைச் செய்து;
மடக்கோ இல்லா வார் படிமக் கூத்து – சோம்பலில்லாத
நீண்ட அபிநயக் கூத்தை; அமைவிப்பான் – பொருந்தச்
செய்யுமாறு; நடக்கால் காட்டும்- நடனக் காலைக் காட்டுகின்ற;
கண்ணுளர் ஒக்கும் – பரத ஆசிரியனைப் போலும்.

————–

‘மழுவின் கூர் வாய் வன் பல் இடுக்கின் வய வீரர்
குழுவின் கொண்டார் நாடி துடிக்கப் பொறி கூடித்
தழுவிக் கொள்ள, கள்ள மனப் பேய் அவை தம்மை
நழுவித் தள்ளிப் போவன காண்மின் – நமரங்காள்! 12-

நமரங்காள்- நம்மவர்களே!; மழுவின் கூர்வாய் வன்பல்
இடுக்கின்- மழுவினுடைய கூரிய வாய் போன்ற வலிய பல்லின்
இடுக்கிலே நடனமிடும் பேயின் கால்கள்; வயவீரர் குழுவின்
கொண்டு – வெற்றிவீரர் கூட்டமாகக் கொண்ட; அந்நாடி
தொடக்கப் பொறி கூட்டி – அந்த நரம்புகள் தொடக்குதலை
உடைய யந்திரம் போல; தழுவிக் கொள்ள – கட்டிக் கொள்ள;
கள்ளமனப் பேய்- வஞ்சக உள்ளமுடைய பேய்கள்; அவை
தம்மை நழுவிச் செல்லும் இயல்பின – அவற்றைத் தள்ளி
நழுவிப் போகின்ற தன்மையுடையதை; காண்மின் – பாருங்கள்.

——————

‘பொன்னின் ஓடை மின் பிறழ் நெற்றிப் புகர் வேழம்,
பின்னும் முன்னும் மாறின வீழ்வின் பிணையுற்ற,
தன்னின் நேரா மெய் இரு பாலும் தலை பெற்ற
என்னும் தன்மைக்கு ஏய்வன பல் வேறு இவை காணீர். 13-

பொன்னின் ஓடை- பொன்னாலாகிய நெற்றிப் பட்டத்தால்;
மின்பிறழ் நெற்றிப்புகர் வேழம்- ஒளிவிளங்கும் நெற்றியில்
செம்புள்ளிகள் கொண்ட யானைகள்; பின்னும் முன்னும் மாறின
வீழ்வின் பிணையுற்ற – அம்புகளால் வீழும் போது பின்புறமும்
முன்புறமுமாக மாறினவாகச் சேர்ந்துள்ளவை; தன்னின் நேரா –
தன்னில்தான் ஒப்பாக; மெய் இருபாலும் தலைபெற்ற – உடம்பின்
இருபக்கமும் தலையைப் பெற்ற புதியவிலங்கு; என்னும் தன்மைக்கு
ஏய்வன – என்று கூறும் பண்பிற்குப் பொருந்துவன; பல்வேறு
இவை காணீர் – பலவேறான இவற்றைப் பாரீர்.

———-

‘நாமத் திண் போர் முற்றிய கோப நகை நாறும்,
பாமத் தொல் நீர் அன்ன நிறத்தோர் பகு வாய்கள்,
தூமத்தோடும் வெங் கனல் இன்னும் சுடர்கின்ற
ஓமக் குண்டம் ஒப்பன பல் வேறு இவை காணீர். 14-

நாமத்திண்போர் முற்றிய – அச்சமூட்டும் வலிய போரில்
முதிர்ந்த; கோப நகை நாறும் – சினக் கடும் சிரிப்பில்
தோன்றியவும்; பாமத் தொல் நீர் அன்ன – பரவுகின்ற
பழமையான நீரையுடைய கடல்போல்; நிறத்தோர் பகுவாய்கள்-
நிறத்தையுடையவுமான ஒப்பில்லாத பிளவுபட்ட வாய்கள்;
தூமத்தொடு வெங்கனல் இன்னும் சுடர்கின்ற – புகையுடன்
கொடிய நெருப்பு இன்னும் எரிகின்ற; ஓமக்குண்டம் ஒப்பன –
ஓமகுண்டங்களைப் போன்றன; பல்வேறு இவை காணீர்-
பலவேறுபட்ட இவற்றைப் பாருங்கள்.

—————

‘மின்னும் ஓடை ஆடல் வயப் போர் மிடல் வேழக்
கன்னம் மூலத்து அற்றன வெண் சாமரை காணீர்;
மன்னும் மா நீர்த் தாமரை மானும் வதனத்த;
அன்னம் பூவில் துஞ்சுவ ஒக்கின்றவை பாரீர். 15-

மின்னும் ஓடை ஆடல்- மின்னுகின்ற நெற்றிப்பட்டத்தையும்
ஆடலையும் உடைய; வயப்போர் மிடல் வேழக்கன்னம்
மூலத்துற்றன – வெற்றி பொருந்திய போரிலே வலிமை மிக்க
யானைகளின் காதின் அடிப்பக்கத்திலே அமைந்துள்ள; வெண்சாமரை
காணீர் – வெண்சாமரைகளைப் பாரீர்; மன்னும் மாநீர்த்
தாமரைமானும் – நிலைபெற்ற மிகுந்த நீரில் உள்ள தாமரை மலரை
ஒத்த; வதனத்த – (வீரரின்) முகத்தின்மீது படிந்த அவைகள்;
அன்னம் மெல்லத் துஞ்சுவ ஒக்கின்றவை காணீர் –
அன்னப்பறவைகள் அம்மலர்களில் மெல்லத் தூங்குகின்றவை
ஒக்கும். அவற்றைப் பாரீர்.

—————-

‘ஒளிம் முற்றாது உற்று உயர் வேழத்து ஒளிர் வெண் கோடு,
ஆளின் முற்றாச் செம் புனல் வெள்ளத்தவை காணீர்;
கோளின் முற்றாச் செக்கரின் மேகக் குழுவின்கண்
நாளின் முற்றா வெண் பிறை போலும்-நமரங்காள்! 16-

நமரங்காள்- நம்மவர்களே!; ஆளின் முற்றாச் செம்புனல்
வெள்ளத்து – வீரர்களால் நிரம்பப் பெறாத இரத்த
வெள்ளத்தில்; ஓளிம் முற்றாது உற்று உயர் வேழத்து –
ஒழுங்காக முற்றுகை செய்யாது போர்க்களத்தை அடைந்த
உயர்ந்த யானைகளின்; ஒளிர் வெண் கோடு காணீர்-
ஒளிவீசுகின்ற வெண்மையான கொம்புகளைக் காணுங்கள்!;
கோளின் முற்றாச் செக்கருள் – ஒளியில் நிரம்பாச்
செக்கர் வானத்துள் கிடக்கும்; மேகக்குழுவின் கண்- மேகக்
கூட்டங்களினிடத்தே; நாளின் முற்றாவெண்பிறை போலும்-
நாளால் நிரம்பாத வெள்ளிய பிறைமதி போல விளங்கும்;

————-

‘கொடியும் வில்லும், கோலொடு வேலும், குவி தேரும்,
துடியின் பாதக் குன்றின்மிசைத் தோல் விசியின் கட்டு
ஒடியும் வெய்யோர் கண் எரி செல்ல, உடன் வெந்த
தடி உண்டு ஆடிக் கூளி தடிக்கின்றன காணீர். 17-

ஒடியும் வெய்யோர் கண் எரிசெல்ல- இறக்கும் வீரர்களின்
கண்களில் தோன்றும் கோபத் தீ செல்ல; கொடியும் வில்லும்
கோலொடு வேலும் குவி தேரும் – கொடிகளையும் விற்களையும்
அம்புகளோடு வேல்களையும் குவிந்த தேர்களையும்; துடியின்
பாதக் குன்றின்மிசை- உடுக்கைபோன்ற அடிகளையுடைய
மலைபோன்ற யானைகளின் மேல்; விசியின் கட்டு – வாரினால்
விரிந்து கட்டிய அம்பாரிகளையும் சுட்டிக்காட்ட; உடன்வெந்த
தடியுண்டு – அவற்றுடன் வெந்த தசையைத் தின்று; ஆடிக்கூளி
தடிக்கின்றன – ஆடிக் கொண்டு பேய்கள் பருக்கின்றன;
காணீர்- பாருங்கள்.

————–

‘சகரம் முந்நீர்ச் செம்புனல் வெள்ளம் தடுமாறா,
மகரம் தம்மின் வந்தன காணா, மனம் உட்கி,
“சிகரம் அன்ன! யானைகொல்?” என்னச் சில நாணி,
நகரம் நோக்கிச் செல்வன காண்மின் – நமரங்காள்! 18-

நமரங்காள் – நம்மவர்களே!; சகரம் முந்நீர்ச் செம்புனல்
வெள்ளம் தடுமாறா – சகரரால் தோண்டப் பெற்ற கடல்நீர்,
போர்க்கள இரத்த வெள்ளம் தம்முன் கலந்து விட்டமையால்;
மகரம் தம்மின் வந்தன காணா- மகரமீன்கள் தம்மோடு வந்து
நிற்பவற்றைக் கண்டு யானைகள்; மனம் உட்கி – உள்ளம்
அஞ்சி; சிகரம் அன்ன யானைகொல் என்ன – மலைபோன்ற
யானைகள் என்றெண்ணி; சிலநாணி – சில மகரமீன்கள்
நாணத்தோடு, நகரம் நோக்கிச் செல்வன காண்மீன்- தம்
வாழுமிடமான கடலை நோக்கிப் போவனவற்றைப் பாருங்கள்.

—————–

‘விண்ணில் பட்டார் வெற்பு உறழ் காயம் பல, மேன் மேல்,
மண்ணில் செல்வார் மேனியின் வீழ, மடிவுற்றார்,
எண்ணின் தீரா அன்னவை தீரும் மிடல் இல்லாக்
கண்ணில் தீயார், விம்மி உளைக்கும் படி காணீர். 19-

விண்ணில் பட்டார்- வானத்தில் (செல்லும் போது
இராமனின் அம்புபட்டு) இறந்தவர்களின்; வெற்புஉறழ் காயம்
பல – மலைபோன்ற உடம்புகள் பல; மண்ணில் செல்வார்
மேனியின் மேன்மேல் வீழ- மண்ணுலகில் நடப்போர்
உடம்பின் மேல் மேலும் வீழ்தலால்; மடிவுற்றார் –
மடியப்பட்டவர்கள்; எண்ணில் தீரா அன்னவை தீரும் –
அளவிடமுடியாத அப்பிணங்களை நீக்கும்; மிடல் இல்லார்
கண்ணில் தோன்றார்- வலிமை இல்லாராய் நம் கண்களுக்கு
வெளிப்படாதவராய்; விம்மி உளைக்கும்படி காணீர்- தேம்பி
வருந்தும் நிலையைப் பாருங்கள்.

—————

‘அச்சின் திண் தேர், ஆனையின், மாமேல், அகல் வானில்
மொய்ச்சுச் சென்றார் மொய் குருதித் தாரைகள் முட்ட,
உச்சிச் சென்றான் ஆயினும், வெய்யோன், உதயத்தின்
குச்சிச் சென்றான் ஒத்துளன் ஆகும் குறி காணீர். 20-

அச்சின் திண்தேர் ஆனையின், மாமேல் – அச்சடைய
வலிய தேரின் மேலும் யானைகள் மேலும் குதிரைகள் மேலும்;
காலாளின் மொய்ச்சுச் சென்றார்- காலாட் படையோடு நெருங்கிப்
போர்க்குச் சென்ற அரக்கர்களின்; மொய் குருதித் தாரைகள்
முட்ட – (உடம்பிலிருந்து) வெளிவந்த இரத்த வெள்ளங்கள்
பாய்ந்ததால்; வெய்யோன் உச்சிச் சென்றான் ஆயினும்- கதிரவன்
வானின் நடு உச்சியை அடைந்தான் ஆனாலும்; உதயத்தின்
முச்சிச் சென்றான் – உதயமலையில் தோன்றும் செங்கதிரவன்;
ஒத்துளன் ஆகும் குறி காணீர்- ஒத்திருக்கும் நிலையைப் பாருங்கள்.

————

‘கால் தோய் மேனிக் கண்டகர் கண்டப்படு காலை, “ஆறோ!” என்ன,
விண் படர் செஞ் சோரியது ஆகி, வேறாய் நின்ற
வெண் மதி செங் கேழ் நிறம் விம்மி, மாறு ஓர்
வெய்யோன் மண்டிலம் ஒக்கின்றது காணீர். 21-

கால்தோய் மேனிக் கண்டகர் – கருநிற உடல் கொண்ட
அரக்கர்; கண்ட படுகாலை- துண்டு படும் போது; ஆறோ என்ன-
இது ஆறோ எனக் கண்டோர் கருத; விண்படர் செஞ்சோரியது
ஆகி – வானில் பாயும் சிவந்த இரத்தமாகி; வேறாய் நின்ற
வெண்மதி – வேறாக நின்ற வெண்ணிறச் சந்திரன்; செங்கேழ்
நிறம் விம்மி – செந்நிறம் மிகுந்து; மாறுஓர் வெய்யோன்
மண்டிலம் – மாறுபட்ட ஒரு கதிரவனின் மண்டிலம்; ஒக்கின்றது
காணீர் – போன்றுள்ளதைப் பாரீர்.

—————

‘வான் நனைய, மண் நனைய, வளர்ந்து எழுந்த பெருங் குருதி மகர வேலை-
தான் நனைய, உற்று எழுமாறு, அவை தெளித்த புது மழையின் துள்ளி தாங்கி,
மீன் அனைய நறும் போதும், விரை அரும்பும், சிறை வண்டும், நிறம் வேறு எய்தி,
கானகமும் கடி பொழிலும் முறி ஈன்ற போன்று ஒளிர்வ காண்மின்! காண்மின்! 22-

வான் நனைய – வானம் நனையவும்; மண் நனைய வளர்ந்து
எழுந்த – மண்நனையவும் மிக எழுந்த; கொழுங் குருதி மகர
வேலை தான் நனைவுற்று – செழுமையான இரத்தத்தில் மகர
மீன்களுடைய கடலும் நனைய; எழும் பறவைச் சிறை தெளித்து –
வானில் எழும் பறவைகளின் சிறகுகளில் தெளித்த; புது மழையின்
துள்ளி தாங்கி – புதிய மழைத் துளிகளைத் தாங்கியிருப்பதால்;
மீன் அனைய நறும் போதும் – விண்மீன் போன்ற வெள்ளிய
நறுமலர்களும்; விரை அரும்பும் சிறைவண்டும்- மணமிக்க அரும்பும்
கருஞ்சிறகு வண்டுகளும்; வேறு நிறம் எய்தி – வேற்று நிறம் பெற்று;
கானகமும் கடிபொழிலும் முறிஈன்ற போன்று- காடும் மணமிக்க
சோலையும் செந்தளிர்களைத் தளிர்த்தது போன்று; ஒளிர்வ
காண்மின் காண்மின் – விளங்குவதைப் பாருங்கள்! பாருங்கள்!

—————–

‘வரை பொருத மத யானைத் துணை மருப்பும், கிளர் முத்தும், மணியும், வாரி,
திரை பொருது புறம் குவிப்பத் திறம் கொள் பணை மரம் உருட்டி, சிறைப் புள் ஆர்ப்ப,
நுரைக் கொடியும் வெண் குடையும் சாமரையும் எனச் சுமந்து, பிணத்தின் நோன்மைக்
கரை பொருது கடல் மடுக்கும் கடுங் குருதிப் பேர் ஆறு காண்மின்! காண்மின்! 23-

வரைபொருத மதயானைத் துணைமருப்பும்- மலையொடு
போரிட்ட மதமிக்க யானையின் இரட்டைக் கொம்புகளையும்; கிளர்
முத்தும் மணியும் வாரி – (அவற்றில் தோன்றிய ஒளிமிக்க
முத்துக்களையும், மணிகளையும் வாரிக்கொண்டு; திரை பொருது
புறம் குவிப்ப- அலைகள் மோதி இருபுறமும் குவிக்க; திறம்
கொன் பணைமரம் உருட்டி – வலிமை மிக்க பருத்த மரங்களை
உருட்டி; சிறைப்புள் ஆர்ப்ப – சிறகோடு கூடிய பறவைகள்
ஆரவாரிக்க; கொடியும் வெண்குடையும் – கொடியும்
வெண்குடையும்; சாமரையும் நுரை எனச் சுமந்து – சாமரையும்
ஆகியவற்றை நுரை எனும் படி சுமந்து கொண்டு; பிணத்தின்
நோன்மைக் கரை பொருது- பிணங்களாலாகிய வலிய கரைகளை
மோதி; கடல் மடுக்கும் கருங் குருதிப் பேர்ஆறு – கடலில்
கலக்கும் வேகமுள்ள இரத்தப் பேராற்றை; காண்மின் காண்மின்
– பாருங்கள்! பாருங்கள்!

—————

‘கைக் குன்றப் பெருங் கரைய, நிருதர் புயக் கல் செறிந்த, கதலிக் கானம்
மொய்க்கின்ற பரித் திரைய, முரண் கரிக் கைக் கோள் மாவ, முளரிக் கானின்
நெய்க்கின்ற வாள் முகத்த, விழும் குடரின் பாசடைய, நிணமேல் சேற்ற,
உய்க்கின்ற உதிர நிறக் களம் குளங்கள், உலப்பு இறந்த, உவையும் காண்மின்! 24-

கய்க்குன்றப் பெருங்கரைய- தும்பிக்கைகளை உடைய மலை
போன்ற யானைப் பிணங்களால் ஆகிய கரையையுடையனவும்; நிருதர்
புயக் கல் செறிந்த – அரக்கரின் தோள்களால் ஆகிய படிக்கற்கள்
நெருங்கியுள்ளனவும்; கதலிக் கானம் மொய்க்கின்ற பரித் திரைய
– கொடித்திரளாகிய காடுகள் உடைய குதிரைகளாகிய அலைகளை
உடையனவும்; முரண்கரிக்கைக் கோள் மாவ- பகையுடன் மாறுபட்ட
யானையின் தும்பிக்கை ஆகிய முதலைகளை உடையனவும்;
முளரிக்கானின் நெய்க்கின்ற வாள் முகத்த – தாமரைக் காடுபோல
ஒளியில் பொலிவு பெற்ற முகங்களை உடையனவும்; விழும் குடரின்
பாசடைய- வீழ்கின்ற குடல்களாய பாசிகளையுடையனவும்; நிணமேல்
சேற்ற – கொழுப்பாகிய சேற்றை உடையனவும்; உய்க்கின்ற உதிர
நிறக் களம் குளங்கள் – (அரக்கர் உடம்பிலிருந்து) சொரிகின்ற
இரத்தமாம் நீரையுடைய அகன்ற குளங்கள்; உலப்பு இறந்த –
எண்ணிக்கையைக் கடந்து நிற்பன; உவையும் காண்மின் –
இவற்றையும் பாருங்கள்;

———-

‘நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின், உதிர நீர் நிறைந்த காப்பின்,
கடும் பகடு படி கிடந்த கரும் பரம்பின், இன மள்ளர் பரந்த கையில்,
படுங் கமல மலர் நாறும் முடி பரந்த பெருங் கிடக்கைப் பரந்த பண்ணை,
தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே எனப் பொலியும் தகையும் காண்மின்! 25-

நெடும் படை வாள் நாஞ்சில் உழுநிணச் சேற்றின் –
நீண்டவாளாம் கலப்பையாக உழுத கொழுப்பாகிய சேறுள்ளதாலும்;
உதிரநீர் நிறைந்த காப்பின் – இரத்தமாம் நீர்நிறைந்த
தேக்கமுள்ளதாலும்; கடும்பகடு படி கிடந்த கரும்பரப்பின்-
(விரைந்து செல்லும் எருமைகளோடு தரையில் கிடந்த பரம்பு
அடிக்கும் பலகை கொண்டுள்ளது போல) விரைந்து செல்லும்
யானைப்பகடு படிந்த கரிய பெரும்பரப்பையுள்ளதாலும்;
இனமள்ளர் பரந்த கையில் – (இரைமாத்த உழவர் பரவியுள்ள
மக்கள் போல்) இனமொத்த வீரர் பரவிய பக்கங்கள்
உள்ளதாலும்; படுங்கமல மலந் நாறும் முடிபரந்த
பெருங்கிடக்கைப் பரந்த -(களையுள்ள தாமரை மலரோடு நாற்று
முடிகள் கிடந்த பெரிய களங்கள் போல) தலைமாலையாகத்
தாமரை சூடியதால் மணம் வீசும் முடிமகுடங்கள் கிடக்கும் பெரிய
கிடக்கைகள் உள்ளமையாலும்; பண்ணை – (வயல்) வீரரின்
பரந்த கூட்டம் உள்ள;தடம்பணையின் நறும்பழனம் தழுவியதே
– எனப் பொலிவும் தகையும் காணீர். பெரிய மருதநிலம்
பரப்பினை உடைய (போர்க்களம்) நறுமணம் வீசும் வயல்;
எனப் பொலியும் தகையும் காண்மின் – எனத்தோன்றும்
தன்மையையும் பாருங்கள்.

—————–

‘வெளிறு ஈர்ந்த வரை புரையும் மிடல் அரக்கர் உடல் விழவும், வீரன் வில்லின்
ஒளிறு ஈர்த்த முழு நெடு நாண் உரும்ஏறு பல படவும், உலகம் கீண்டு
நளில் தீர்த்த நாகபுரம் புக்கு, இழிந்த பகழி வழி நதியின் ஓடி,
களிறு ஈர்த்துப் புக மண்டும் கடுங் குருதித் தடஞ் சுழிகள் காண்மின்! காண்மின்! 26-

வெளில் தீர்த்த வரைபுரையும்- வெற்றிடமில்லாத மலையை
ஒத்த; மிடல் அரக்கர் உடல் விழவும் – வலிமை மிக்க அரக்கரின்
உடல்கள் கீழே விழவும்; வீரன் வில்லின் ஒளிறு ஈர்த்த – இராமன்
வில்லின் ஒளிவீசும் காதளவு இழுக்கப்பெற்ற; முழுநெடு நாண் உரும்
ஏறு பலபடவும்- முழுமையும் நீட்சியுமுடைய நாண் ஒலி இடிகள் பல வலியற்று வீழவும்; உலகம் கீண்டு நளில் தீர்த்த
நாகபுரம் புக்கு – உலகைக் கிழித்துச் செறிவில்லாத தூய
நாகருலகில் புகுந்து; இழிந்த பகழிவழி நதியின் ஓடி-
இறங்கிய அம்பு சென்ற வழியில் ஆறுபோல் ஓடி; களிறு
ஈர்த்துப் புகமண்டும்- யானைகளை இழுத்துக் கொண்டு நாக
உலகிற்கு புக நெருங்கும்; சுடுங் குருதித் தடஞ்சுழிகள்-
வேகத்துடன் வரும் இரத்தத்தின் பெரிய சுழிகளை; காண்மின்
காண்மின்- பாருங்கள் பாருங்கள்.

————

‘கைத்தலமும், காத்திரமும், கருங் கழுத்தும், நெடும் புயமும், உரமும், கண்டித்து
எய்த்தில போய், திசைகள்தொறும் இரு நிலத்தைக் கிழித்து இழிந்தது என்னின் அல்லால்,
மைத்த களிற்று இன மாவின், வாள் நிருதர் பெருங் கடலின், மற்று இவ் வாளி
தைத்து உளதாய் நின்றது என ஒன்றேயும் காண்பு அரிய தகையும் காண்மின்! 27-

கய்த்தலமும் – யானையின் தும்பிக்கையும்; காத்திரமும்-
முன்னங் கால்களையும்; கருங்கழுத்தும் – பெரிய வலிய
கழுத்தும்; நெடும் புயமும்- நீண்ட தோள்களையும்; உரமும்
கண்டித்து – மார்பையும் துண்டித்து; எய்த்தில போய்-
சளைக்காமல் சென்று; திசைகள் தொறும் – திக்குகள்
தோறும்; இருநிலத்தைக் கிழித்து – பெரிய நிலத்தைக்
கிழித்துக் கொண்டு; இழிந்தது என்னின் அல்லால் –
பாதலத்தில் இறங்கின என்று சொல்வது தவிர; மத்த கரிவய
மாவின் வாள் நிருதர்- மதமிக்க யானை வெற்றி தரும்
குதிரை, படைவீரர்கள் ஆகிய; பெருங்கடலின்- பெரிய
கடலின் மீது; இவ்வாளி தய்த்து உளவாய் நின்றது என-
இராமனின் இவ் அம்பு தைத்துக் கிடப்பதாயிற்று என்று;
ஒன்றேயும் காண்பு அரிய தகையும்- சிறிதும் காணற்கரிய
தன்மையும்; காண்மின்- பாருங்கள்.

—————

‘குமுதம் நாறும் மதத்தன, கூற்றன,
சமுதரோடு மடிந்தன, சார்தரும் திமிர மா
அன்ன செய்கைய, இத் திறம் அமிர்தின்
வந்தன, ஐ-இரு கோடியால். 28-

குமுதம் நானும் மதத்தன – குமுத மலர்களின் மணம்
வீசுகின்ற மத நீரை உடையனவும்; கூற்றன – எமன் போலக்
கொடுமையுடையனவும்; சமுதரோடு மடிந்தன – பாகரோடு
மடிந்து கிடப்பனவும்; சார் தரும் திமிரமா அன்ன செய்கைய
– முன் சார்கின்ற கரும்பன்றி போலும் செய்கை கொண்டனவும்
ஆகிய யானைகள்; இத்திறம் அமிர்தின் வந்தன – முன்னர்
பாற்கடலில் அமுதத்தோடு பிறந்தன;ஐயிரு கோடி – பத்துக்கோடி
எனும் அளவுடையன.

——-

‘ஏறு நான்முகன் வேள்வி எழுந்தன,
ஊறும் மாரியும், ஓங்கு அலை ஓதமும்,
மாறும் ஆயினும், மா மதமாய் வரும்
ஆறு மாறில, ஆறு-இரு கோடியால். 29-

ஊறும் மாரியும்- பெய்யும் மழையும்; ஓங்கு அலை ஓதமும்-
உயர்ந்த அலைவீசும் கடலும்; மாறும் ஆயினும் – நீர் வற்றி
வறண்டு போனாலும்; மாமதமாய் வரும் – கரிய மத நீராய்
ஒழுகின்ற; ஆறு மாறில – ஆறுகள் மாற்றமுறாதனவான யானைகள்;
ஆறு இரு கோடி- பன்னிரண்டு கோடி; ஏறுநான்முகன் வேள்வி
எழுந்தன- பெருமையில் உயர்ந்த பிரமனின் யாகத்தின் தோன்றினவாம்.

———–

‘உயிர் வறந்தும், உதிரம் வறந்து தம்
மயர் வறந்தும், மதம் மறவாதன,
புயலவன் திசைப் போர் மத ஆனையின்
இயல் பரம்பரை ஏழ்-இரு கோடியால். 30-

உயிர் வறந்தும்- உயிர் நீங்கியும்; உதிரம் வறந்தும் –
இரத்தம் வற்றியும்; தம்மயர் வறந்தும் – தம்முடைய
மதமயக்கம் நீங்கினும்; மதம் மறவாதன – மதம் மட்டும்
நீங்காதன யானைகள்; புயல்வன்- மேகங்களின் தலைவனாம்
இந்திரன்; திசைப் போர் மதயானையின் – கிழக்குத்
திக்கில் போர்த்திறமிக்க ஐராவத யானையின்; இயல் பரம்பரை
– இயல்புள்ள மரபில் தோன்றியவை; ஏழ் இருகோடி-
பதினான்கு கோடி அளவுடையன.

———-

‘கொடாது நிற்றலின், கொற்ற நெடுந் திசை
எடாது நிற்பன, நாட்டம் இமைப்பு இல,
வடாது திக்கின் மதவரையின் வழிக்
கடாம் முகத்த, முளரிக் கணக்கவால். 31

வடாது திக்கின் – வடதிசைக்குரிய; மதவரையின் வழி –
மதம் பொழியும் குன்றம் போன்ற சாருவ பௌமம் என்ற யானை
மரபில் தோன்றி; கடாம் முகத்த – மதநீர் பொழியும் முகமுள்ள
இந்த யானைகள்; கொடாது நிற்றலின் – (பிரமன் இப்பூமியைத்
தாங்குக என) அருளாது இருத்தலால்; கொற்ற நெடுந்திசை –
வெற்றியுடைய நீண்ட திக்கினை; எடாது நிற்பன – தாங்காமல்
நிற்பன;நாட்டம் இமைப்பு இல- தேவர்போல் கண் இமையாதன;
முளரிக் கணக்க- பதுமம் எனும் பெருந்தொகையன

———

‘வானவர்க்கு இறைவன் திறை தந்தன
ஆன வர்க்கம் ஒர் ஆயிர கோடியும்,
தானவர்க்கு இறைவன் திறை தந்தன
ஏனை வர்க்கம் கணக்கு இல, இவ் எலாம். 32-

வானவர்க்கு இறைவன் திறைதந்தன – இந்திரனால்
(இராவணனுக்கு) கப்பப்பொருள்களாகத் தந்தன; ஆன வர்க்கம்
ஓர் ஆயிரகோடி – ஆகிய கூட்டம் ஓர் ஆயிரகோடியாகும்;
தானவர்க்கு இறைவன் – தானவர்க்குத் தலைவன்; திறை
தந்தன – கப்பமாக அளித்தவை; ஏனை வர்க்கம் – மற்றோர்
இனமாம்; இவ்எலாம் கணக்கு இல- இவற்றிற்குக் கணக்கு
இல்லை.

————-

‘பாற்கடல் பண்டு அமிழ்தம் பயந்த நாள், ஆர்த்து
எழுந்தன, ஆயிரம் ஆயிரம் மால் கணப் பரி
இங்கு இவை; மாறு இவை; மேற்கின்
வேலை வருணனை வென்றவால். 33-

இங்கு இவை- இங்கே காணப்படும் இக்குதிரைகள்; பண்டு
பாற்கடல் அமிழ்தம் பயந்த நாள்- முன்னர்ப் பாற்கடல்
அமுதத்தை அளித்த நாள்; ஆர்த்து எழுந்தன – ஆரவாரம்
செய்து எழுந்தன; ஆயிரம் ஆயிரம் – ஆயிரம் ஆயிரம்
கணக்குடையன; மால்கணம் பரி – பெருமைமிக்க போர்க்களக்
குதிரைகள்; மாறு இவை – இவற்றிற்கு மாறாகத் தோன்றும்
இவை; மேற்கின் வேலை வருணனை வென்றன –
மேற்கேயுள்ள கடலில் தெய்வமாக உள்ள வருணனைவென்றவை.

————

‘இரு நிதிக் கிழவன் இழந்து ஏகின அரிய
அப் பரி ஆயிரம் ஆயிரம்; விரி சினத்து
இகல் விஞ்சையர் வேந்தனைப்
பொருது பற்றிய, தாமரை போலுமால்.’ 34-

அரிய அப்பரி – எய்துதற்கு அரிய அந்தக் குதிரைகள்;
இருநிதிக் கிழவன் இழந்து ஏகின- குபேரன் (இராவணனுடன்
செய்த போரில்) தோற்று விட்டு ஓடினவாம்; ஆயிரம் ஆயிரம்
– ஆயிரம் ஆயிரம் என்னும் அளவின; விரிசினத்து இகல்-
விரிந்த கோபமுள்ள பகை பூண்ட; விஞ்சையர் வேந்தனை –
வித்தியாதரர் அரசனை; பொருது பற்றிய தாமரை போலும்-
போரில் வென்று கைப்பற்றிய எண்ணிக்கை தாமரை எனும்
பேரளவின ஆம்.

———

என்று, ‘காணினும், காட்டினும், ஈது இறைக்
குன்று காணினும் கோள் இலது; ஆதலால்,
நின்று காணுதும்; நேமியினானுழைச்
சென்று காண்டும்’ என்று ஏகினர், செவ்வியோர். 35-

என்று காணினும் காட்டினும்- இக்களக் காட்சியை என்றும்
நாங்கள் கண்டு கொண்டேயிருந்தாலும் நீ காட்டிக் கொண்டே
யிருந்தாலும்; ஈது இறைக்குன்று நாணினும் கோளிலது- இது
இமயமலை போன்ற பெருமலையைக் காணமுடியும் கொள்கை
யுடையதன்று; ஆதலால்- எனவே; நின்று காணுதும்- சிறிது
கழித்துக் காண்போம்; நேமியினான் உழைச்சென்று காண்டும்
– இராமனிடத்துச் சென்று பார்க்கலாம்; என்று செவ்வியோர்
ஏகினர்- என்று கூறிச் சிறந்தவராம் வானரத் தலைவர்கள்
சென்றனர்.

————–

ஆரியன் தொழுது, ஆங்கு அவன் பாங்கரும்,
போர் இயற்கை நினைந்து எழு பொம்மலார்,
பேர் உயிர்ப்பொடு இருந்தனர்; பின்பு உறும்
காரியத்தின் நிலைமை கழறுவாம். 36-

ஆரியன் தொழுது- உயர்ந்தோனாம் இராமனை வணங்கி;
ஆங்கு அவன் பாங்கு- அங்கு அவன் பக்கத்தில்; அரும்போர்
இயற்கை நினைந்து – அரிய போரின் இயல்பை எண்ணி; எழு
பொம்மலார்- எழுகின்ற பெருமகிழ்ச்சியுடையோராய்; பேர்
உயிர்ப்பொடு இருந்தனர்- பெருமூச்சு விட்டிருந்தனர்; பின்பு
உறும்- இனிப் பின்பு நிகழும்; காரியத்தின் நிலைமை கழறுவாம்
– செயல்களின் நிலைமையைக் கூறுவோம்.

——————-

மிகைப் பாடல்கள்

என்று உரைத்து, ‘உயர் வான் பிறப்பு எய்திய
வென்றி வெஞ் சின வேழங்கள் தம்மொடும்
துன்று வாசித் தொகைகளும் கேண்ம்’ எனா,
நின்ற வீடணன் தானும் நிகழ்த்துவான். 25-1

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/31–வேல் ஏற்ற படலம்–

November 2, 2020

வானரத் தலைவர்களைத் தொடர்ந்து, குரக்குச் சேனை களத்திற்கு மீண்டு வருதல்

‘பெரும் படைத் தலைவர் யாரும் பெயர்ந்திலர்; பெயர்ந்துபோய், நாம்
விரும்பினம் வாழ்க்கை என்றால், யார் இடை விலக்கற்பாலார்;
வரும் பழி துடைத்தும்; வானின் வைகுதும், யாமும்’ என்னா,
இருங் கடல் பெயர்ந்தது என்ன, தானையும் மீண்டது, இப்பால். 1-

பெரும்படைத் தலைவர் யாரும் – பெருமையுடைய படையின்
தலைவர்கள் எல்லாரும்; பெயர்ந்திலர் – நீங்கினர்
அல்லர்; பெயர்ந்து போய் – படை வீரர் போர்க்களத்தை
விட்டு நீங்கி; நாம் விரும்பினம் வாழ்க்கை என்றால்-
நாம் மட்டும் உயிர் வாழ விரும்பினாம் என்றால்; இடை
விலக்கற்பாலார் யார் – இடையில் நின்று நம்மைத்
தடுப்பதற்குரியவர் யார்?; வரும் பழி துடைத்தும்-
(அதனால்) வருகின்ற பழியைத் துடைப்போம்; யாமும் வானில்
வைகுதும் என்னா- நாங்களும் துறக்கவுலகில் வாழ்வோம் என்று
உறுதி கொண்டு; இருங்கடல் பெயர்ந்தது என்ன- பெரிய கடல்
நிலை பெயர்ந்து வந்தது போன்று; இப்பால் தானையும் மீண்டது
– இப்பக்கம் வானரப்படையும் மீண்டு வந்தது.

————-

சேனைகள் புடை சூழ, இராவணன் போர்க்களம் செல்லுதல்

சில்லி ஆயிரம், சில் உளைப் பரியொடும் சேர்ந்த,
எல்லவன் கதிர் மண்டிலம் மாறு கொண்டு இமைக்கும்,
செல்லும் தேர்மிசைச் சென்றனன் – தேவரைத் தொலைத்த
வில்லும், வெங் கணைப் புட்டிலும், கொற்றமும், விளங்க. 2-

சில்லி ஆயிரம்- ஆயிரம் சக்கரங்களோடும்; சில் உளைப்
பரியொடும் சேர்ந்த- சிலவாகிய பிடரி மயிருடைய ஆயிரம்
குதிரைகளோடும் சேர்ந்ததும்; எல்லவன் கதிர் மண்டலம்-
கதிரவன் செங்கதிர் மண்டலத்தோடு; மாறுகொண்டு இமைக்கும்
– ஒப்புமை பூண்டு ஒளி வீசுவதும்; செல்லும் தேர்மிசை –
விரைந்து போகும் செலவினையும் உடைய தேர் மீது ஏறி;
தேவரைத் தொலைத்த- வானவர்களையும் அழித்த; வில்லும்
வெங்கணைப் புட்டிலும்- கொடிய வில்லும் அம்பு நிறைந்த
அம்பறாத்தூணியும்; கொற்றமும் விளங்கச் சென்றனன்-
வீரமும் விளங்க (இராவணன் போர்க்களத்திற்குச்) சென்றான்.

————-

நூறு கோடி தேர், நொறில் பரி நூற்று இரு கோடி,
ஆறு போல் மத மா கரி ஐ-இரு கோடி,
ஏறு கோள் உறு பதாதியும் இவற்று இரட்டி,
சீறு கோள் அரிஏறு அனானுடன் அன்று சென்ற. 3-

அன்று சீறுகொள் அரிஏறு அனானுடன் – அப்போது சீறுகின்ற
வலிய ஆண் சிங்கம் போன்ற இராவணனுடன்; நூறு கோடி தேர்-
நூறு கோடி தேர்களும்; இருநூற்றுக் கோடி நொறில் பரி- இருநூறு
கோடி விரைந்து செல்லும் குதிரைகளும்; ஐயிரு கோடி- பத்துக்கோடி;
ஆறுபோல் மதமாகரி- ஆற்றுநீர் போல் ஒழுகும் மத நீரையுடைய
பெரிய யானைகளும்; இவற்று இரட்டி ஏறுகோள் உறு பதாதியும்-
இருபத்தாறு கோடி சிங்க ஏற்றைப் போன்ற காலாட்படையும்; சென்றன
– உடன் போயின.

———————–

‘மூன்று வைப்பினும், அப் புறத்து உலகினும், முனையின்
ஏன்று கோளுறும் வீரர்கள் வம்மின்!’ என்று இசைக்கும்
ஆன்ற பேரியும், அதிர் குரல் சங்கமும், அசனி
ஈன்ற காளமும், ஏழொடு ஏழ் உலகினும் இசைப்ப. 4-

மூன்று வைப்பினும்- விண்ணுலகு, மண்ணுலகு, பாதலம் எனும்
மூன்றுலகத்திலும்; அப்புறத்து உலகினும் – அவற்றிற்கு
அப்பாற்பட்ட உலகத்திலும் உள்ளவர்களாய்; முனையின் ஏன்று
கோளுறும் வீரர்கள் – போர்முனையில் எதிர்த்துப் போர்
புரியும் அரக்கவீரர்கள் யாவரும்; வம்மின் என்று இசைக்கும்
– வாருங்கள் என அழைப்பது போன்று ஒலிக்கும்; ஆன்ற
பேரியும்- பெரிய முரசுகளும்; அதிர் குரல் சங்கமும்- கேட்டாரை அதிரச் செய்யும்
குரலை உடைய சங்குகளும்; அசனி ஈன்ற காளமும்- இடி ஒலி
உண்டாக்கும் எக்காளமும் ஆகிய இசைக்கருவிகளின் ஒலி;
ஏழொடு ஏழ் உலகினும் இசைப்ப- பதினான்கு உலகங்களிலும்
சென்று ஒலிப்பன ஆயின.

————-

இராவணனையும் அரக்கர் தானையையும் கண்ட வானரர் ஆரவாரித்தல்

அனைய ஆகிய அரக்கர்க்கும் அரக்கனை, அவுணர்
வினைய வானவர் வெவ் வினைப் பயத்தினை, வீரர்
நினையும் நெஞ்சினைச் சுடுவது ஓர் நெருப்பினை, நிமிர்ந்து
கனையும் எண்ணையும் கடப்பது ஓர் கடலினை, கண்டார். 5-

அனைய ஆகிய அரக்கர்க்கும்- அத்தன்மை கொண்டு வரும்
அரக்கர்களுக்கும்; அரக்கனை- அரக்கனாக இருப்பவனை; அவுணர்
வினைய- அவுணர்களின் தீவினையுடைய; வானவர் வெவ்வினைப்
பயத்தினை- தேவர்களின் கொடிய தீவினைப் பயனாகத் துன்பம்
செய்கின்றவனை; வீரர் நினையும் நெஞ்சையும்- தன்னை நினைக்கும்
போர் வீரர்களின் உள்ளத்தையும்; சுடுவது ஓர் நெருப்பினை- சுடுகின்ற
ஒப்பற்ற தீப்போன்றவனை; நிமிர்ந்து கனையும் எண்ணையும்-
எல்லையைக் கடந்து நிற்கும் அளவினையும்; கடப்பது ஓர் கடலினைக்
கண்டார்- கடந்து நிற்கின்ற ஒப்பற்ற கடல் போன்ற நிறமும் ஆற்றலும்
உடைய இராவணனைக் கண்டனர்.

—————-

கண்டு, கைகளோடு அணி வகுத்து, உரும் உறழ் கற்கள்
கொண்டு, கூற்றமும் நடுக்குறத் தோள் புடை கொட்டி,
அண்ட கோடிகள் அடுக்கு அழிந்து உலைவுற, ஆர்த்தார்-
‘மண்டு போரிடை மடிவதே நலம்’ என மதித்தார். 6-

கண்டு – இராவணனைப் பார்த்து; மண்டு போரிடை –
நெருங்கிச் செய்யும் போரிலே; மடிவதே நலம் என மதித்தார்
– சாவதே நல்லது என மதித்தவராய்; கைகளோடு அணி வகுத்து-
போர்க்களத்தில் பக்கங்களோடு முன்பின் வரிசையாக நின்று;
உரும் உறழ் கற்கள் கொண்டு – இடிபோல் பகைவர்க்குத்
துன்பம் செய்யும் கற்களைக் கொண்டு; கூற்றமும் நடுக்குற-
எமனும் நடுங்குமாறு; தோள்புடை கொட்டி- தோள்களைத்
தட்டிக் கொண்டு; அண்ட கோடிகள் – பல உலகின் பல்வேறு
மூலை முடுக்குகளும்; அடுக்கு அழிந்து- அடுக்குமுறை குலைந்து;
உலைவுற- வருந்துமாறு; ஆர்த்தார்- ஆரவாரம் செய்தார்.

———–

அரக்கன் சேனையும் குரக்குச் சேனையும் கைகலத்தல்

அரக்கன் சேனையும், ஆர் உயிர் வழங்குவான் அமைந்த
குரக்கு வேலையும், ஒன்றொடு ஒன்று, எதிர் எதிர் கோத்து,
நெருக்கி நேர்ந்தன; நெருப்பு, இடை பொடித்தன;
நெருப்பின் உருக்கு செம்பு என, அம்பரத்து, ஓடினது உதிரம். 7-

அரக்கன் சேனையும்- இராவணன் படையும்; ஆருயிர்
வழங்குவான் அமைந்த – தம் அரிய உயிரைப் போரில்
அழிக்குமாறு நின்ற; குரக்கு வேலையும் – குரங்கின் கடல்
போன்ற படையும்; ஒன்றோடு ஒன்று எதிர் எதிர் கோத்து-
ஒன்றுடன் ஒன்று எதிர் எதிராகக் கைகலந்து; நெருக்கி
நேர்ந்தன- நெருக்கியவாறு போர் புரிந்தன; நெருப்பு இடை
பொடித்தன- தாக்குவதால் இரு படைக்கும் இடையில் நெருப்புத்
தோன்றின; நெருப்பின் உருக்கு செம்பு என- தீயிலே
காய்ச்சி உருக்கிய செம்பு போல; உதிரம் அம்பரத்து ஓடினது
– இரத்தம் கடலை நோக்கி ஓடியது.

————–

அற்ற வன் தலை அறு குறை எழுந்து எழுந்து, அண்டத்து
ஒற்ற, வானகம் உதய மண்டிலம் என ஒளிர,
சுற்றும் மேகத்தைத் தொத்திய குருதி நீர் துளிப்ப,
முற்றும் வையகம் போர்க் களம் ஆம் என முயன்ற. 8-

அற்ற வன்தலை- அறுபட்ட வலிய தலை; அறுகுறை எழுந்து
எழுந்து – தலை அற்ற உடல் குறையிலிருந்து எழுந்தெழுந்து;
அண்டத்து ஒற்ற – மேலே போய் ஒற்றுதலால்; வானகம் உதய
மண்டிலம் என ஒளிர- விண்ணில் எழுகின்ற கதிரவன் போல ஒளி
வீச; சுற்றும் மேகத்தைத் தொத்திய- வானத்தில் மிதந்து
வரும் மேகத்தில் பதிந்துள்ள; குருதிநீர் துளிப்ப-
இரத்தநீர் மழையாகத் துளிர்க்க; வையகம் முற்றும்
போர்க்களம் ஆம் என முயன்ற- உலகம் முழுவதும்
போர்க்களம் போன்று தோன்றுமாறு காட்சி அளித்தன.

—————-

தூவி அம் பெடை அரி இனம் மறிதர, சூழி
தூவி, அம்பு எடை சோர்ந்தன, சொரி உடல் சுரிப்ப,
மே வியம் படை படப்படர் குருதியின் வீழ்ந்த,
மேவி அம் படைக் கடலிடை, குடரொடு மிதந்த. 9-

அம்படைக் கடலிடை மேவி- (யானைகள்) சேனைக் கடலிடைச்
சேர்ந்து (இலக்குவன் அம்பு தொடுக்க எடுத்தலால்); தூவி
அம்பெடை அரியினம் மறிதர- சிறகுகளை உடைய அழகிய பெண்
வண்டோடு கூடிய அழகிய ஆண் வண்டுக் கூட்டம் மீண்டு போகுமாறு;
சூழி தூவி – முகபடாத்தை வீசி எறிந்து; சோர்ந்தன-
சோர்வடைந்தனவாய்; வியம்மே படைபடப் படர் குருதியின்
சொரியுடல் சுரிப்ப வீழ்ந்த – வியத்தற்குரிய அம்புப் படை
மேலே படப்பட பரந்து செல்லும் இரத்தத்தில் சுழன்று அமிழ்ந்து உடல்
வீழ; அம்பு எடை குடரொடு மிதந்த- அம்பின் மிகுதியால் பொருந்தி
வெளிப்பட்ட குடரொடு மிதப்பவாயின.

——————

கண் திறந்தனர் கணவர்தம் முகத்த அவர் முறுவல்
கண்டு இறந்தனர் மடந்தையர், உயிரொடும் கலந்தார்-
பண்டு இறந்தன பழம் புணர்வு அகம் புக, பன்னி,
பண் திறந்தன புலம்பு ஒலி, சிலம்பு ஒலி பனிப்ப. 10-

பண்டு இறந்தன பழம் புணர்வு அகம்புக- முன்பு தம்
கணவருடன் கழித்த பழைய புணர்ச்சி நிகழ்ச்சிகளை நினைத்து; பன்னி
பண் திறந்தன புலம்பு ஒலி சிலம்பு ஒலி பனிப்ப- பலவாறு
வாய்விட்டுப் பாடினாற் போன்று புலம்புகின்ற ஒலியும் சிலம்பின் ஒலியும்
கலந்து நடுங்கியவாறு ஒலிக்க; கணவர் கண் திறந்தன தம்
முகத்து- கணவர் தம் கண்கள் விழித்துள்ளனவாகிய
முகங்களில்; அவர் முறுவல் கண்டு இறந்த அன
மடந்தையர்- அவர்களுடைய சிரிப்பைப் பார்த்து
மகிழ்ந்து தம் உடலை விட்டுப் பிரிந்தவர் போன்ற
கற்புடை மகளிர்; உயிரொடும் கலந்தார்- தம் இறந்த
கணவருடைய உயிரொடு ஒன்றாய்க் கலந்தனர்

—————–

ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் யாவும்
ஊழி பேர்வதே ஒப்பது ஓர் உலைவுற, உடற்றும்
நூழில் வெஞ் சமம் நோக்கி, அவ் இராவணன் நுவன்றான் –
‘தாழ் இல் என் படை தருக்கு அறும்’ என்பது ஓர் தன்மை. 11-

ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் யாவும்
– கீழ் ஏழு உலகம் மேல் ஏழு உலகம் எனச் சொல்லும் உலகங்கள்
பதினான்கும்; ஊழி பேர்வது ஒப்பது- ஊழிக்கால முடிவில்
நிலை பெயர்வது போன்ற; ஓர் உலைவுற உடற்றும்- ஒரு அழிவு
உண்டாகப் போரிடுகின்ற; நூழில் வெஞ்சமம் நோக்கி-
பகைவரைக் கொல்லும் கொடிய போர்க்களத்தைப் பார்த்து;
அவ்இராவணன்- அந்த இராவணன்; தாழி இல் என்படை தருக்கு
அறும் என்பது ஓர் தன்மை நுவன்றான் – தாழ்வு இல்லாத என்
சேனை இனிச் செருக்கு அழியும் என்ற ஒரு தன்மையைக் கூறினான்.

———–

அனுமனும் இலக்குவனும் அரக்கர் படையைச் சிதைத்தல்

மரமும் கல்லுமே, வில்லொடு வாள், மழு, சூலம்,
அரமும், கல்லும், வேல், முதலிய அயில் படை அடக்கி,
சிரமும் கல் எனச் சிந்தலின், சிதைந்தது, அச் சேனை;
உரமும் கல்வியும் உடையவன் செரு நின்றது ஒரு பால். 12-

உரமும் கல்வியும் உடையவன் செரு நின்றது ஒருபால்-
வலிமையும் கல்வியறிவும் உள்ள அனுமான் போர் செய்யும் ஒரு
பக்கத்தில்; மரமும் கல்லுமே வில்லொடு வாள் மழு சூலம்
அரமும் கல்லும் வேல் முதலிய அயில் படை அடக்கி-
வானரர்கள் வீசும் மரங்களும் கற்களுமே கொண்டு வில்லும்
வாளும் மழுவும் சூலமும் அரத்தையும் அழிக்கத்தக்க உறுதி
மிக்க வேல் முதலிய கூரிய படைகளையும் அடக்கிவிட்டு; சிரமும் கல் எனச்
சிந்தலின்- அரக்கர்களின் தலைகளையும் கற்கள் போல
உருளுமாறு சிந்துவதால்; என் சேனை சிதைந்தது – என்படை
அழிந்தது.

—————–

அழலும் கண் களிற்று அணியொடும், துணி படும்; ஆவி
சுழலும் பல் பரித் தேரொடு புரவியும், சுற்ற,
கழலும் சோரி நீர் ஆற்றொடும் கடலிடைக் கலக்கும்-
குழலும் நூலும்போல் அனுமனும் தானும் அக் குமரன். 13-

குழலும் நூலும் போல் – நெய்கின்ற குழலும் அதைத்
தொடர்ந்து செல்லும் நூலும் போல; அனுமனும் தானும் அக்குமரன்
– ஒருவர் பின் ஒருவராகத் தொடர்ந்து அநுமனும் இலக்குமணனும்
போர் செய்தனர்; அழலும் கண் களிறு- சினம் மிக்க
கண்ணுடைய யானைகள்; அணியொடும் துணிபடும் – அணிந்த
அணிகலன்களோடு துண்டுபடும்; பல்படைத் தொகுதியும் ஆவி
சுழலும்- பலவகைப் படை வீரரின் கூட்டமும் உயிர் சுழன்று
நிற்கும்; சுடர்த்தேர் அன்னதே – ஒளிமிக்க தேர்களும்
சுழலும்; கழலும் சோரிநீர் ஆற்றொடும் கடலிடைக் கலக்கும்
– இறந்து பட்ட உடம்பிலிருந்து இரத்தம் ஆற்று நீரோடு கலந்து
கடலிடையே சேரும்.

—————–

‘வில்லும் கூற்றுவற்கு உண்டு’ என, திரிகின்ற வீரன்
கொல்லும் கூற்று எனக் குறைக்கும், இந் நிறை பெருங் குழுவை;
ஒல்லும் கோள் அரி, உரும், அன்ன குரங்கினது உகிரும்
பல்லும் கூர்க்கின்ற; கூர்க்கில அரக்கர்தம் படைகள். 14-

வில்லும் கூற்றுவற்கு உண்டு என திரிகின்ற வீரன்-
இயமனுக்குத் தண்டேயன்றி வில்லும் படையாக உண்டு எனக்
கூறும்படி போர்க்களத்தில் திரிகின்ற இலக்குவன்;
கொல்லும் கூற்று எனக் குறைக்கும் – கொல்லுவதைத்
தொழிலாக கொண்ட யமன் போல் அரக்கர் எண்ணிக்கையைக்
கொன்று குறைக் கின்றான்; இந்நிறை பெருங்குழுவை- இந்நிலையில் வானரர்
பெருங் கூட்டத்தை; ஒல்லும் கோள் அரி- வெல்லுதற்குரிய
வலிமையுடைய சிங்கமும்; உரும் அன்ன- இடியும் போன்ற;
குரங்கினது உகிரும் பல்லும் கூர்க்கின்ற – அனுமனாம்
குரங்கின் நகமும் பல்லும் அரக்கர் படையை அழிக்கக்
கூர்மையுடையன; அரக்கர் தம் படைகள் கூர்க்கில-
அரக்கரின் படைகள் வானரங்களை அழிக்கக் கூர்மை
பெறவில்லை.

—————

இராவணன் கொதித்து, அம்பு தொடுக்க குரக்குச் சேனை நிலைகெடுதல்

‘கண்டு நின்று, இறைப் பொழுது, இனிக் காலத்தைக் கழிப்பின்,
உண்டு கைவிடும் கூற்றுவன், நிருதர் பேர் உயிரை;
மண்டு வெஞ் செரு நான் ஒரு கணத்திடை மடித்தே
கொண்டு மீள்குவென், கொற்றம்’ என்று இராவணன் கொதித்தான். 15-

இறைப்பொழுது- சிறிது போழ்து இங்ஙனம்; கண்டு நின்று
இனிக் காலத்தைக் கழிப்பின்- இலக்குவன் அனுமன் புரியும்
போரைக் கண்டு காலத்தைக் கழிப்பேன் ஆனால்; நிருதர்
பேர் உயிரை உண்டு கை விடும் கூற்றுவன் – அரக்கரின்
பெருமை மிக்க உயிர்களை உண்டு போர்க்களத்தை விட்டுக்
கூற்றுவன் போய் விடுவான்; மண்டு வெஞ்செரு- வீரர்கள்
நெருங்கிப் புரியும் போரில்; நான் ஒரு களத்திடை மடித்தே
கொற்றம் கொண்டு மீள்குவென் – நான் ஒரு நொடிப்பொழுதில்
குரங்குகளைக் கொன்று வெற்றி பெற்று மீள்வேன்; என்று
இராவணன் கொதித்தான்- எனச் சொல்லி இராவணன்
வெதும்பினான்.

—————–

ஊதை போல்வன, உரும் உறழ் திறலன, உருவிப்
பூதலங்களைப் பிளப்பன, அண்டத்தைப் பொதுப்ப,
மாதிரங்களை அளப்பன, மாற்ற அருங் கூற்றின்
தூது போல்வன, சுடு கணை முறை முறை துரந்தான். 16-

ஊதை போல்வன- காற்றைப் போல் வேகமாகச் செல்வனவும்;
உரும் உறழ் திறலன – இடிபோல் அழிக்கும் வலிமை
பெற்றனவும்; உருவிப் பூதலங்களைப் பிளப்பன- உலகின்
ஊடுருவிப் பிளப்பனவும்; அண்டத்தைப் பொதுப்ப- வானத்தைத்
துளைப்பன வும்; மாதிரங்களை அளப்பன- திசைகளை அளப்பனவும்;
மாற்றருங் கூற்றின் தூது போல்வன- மாற்றுதற்கு முடியாத
யமனின் தூதுவர்களைப் போல்வனவும்; சுடுகணை முறை முறை
துரந்தான் – தீய்க்கின்ற அம்புகளை முறை முறையாகப் பகைவர்
மீது (இராவணன்) செலுத்தினான்.

————

ஆளி போன்று உளன் எதிர்ந்த போது, அமர்க் களத்து அடைந்த
ஞாளி போன்று உள என்பது என்? நள் இருள் அடைந்த
காளி போன்றனன் இராவணன்; வெள்ளிடைக் கரந்த
பூளை போன்றது, அப் பொரு சினத்து அரிகள்தம் புணரி. 17-

எதிர்ந்த போது ஆளி போன்று உளன்- (இராவணன்)
எதிரிட்டபோது சிங்கம் போல் விளங்கினான்; அமர்க்களத்து-
போர்க்களத்தில்; அடைந்த ஞாளி போன்று – (வானரப்படை)
அடைந்தபோது நாயைப்போல இருந்தது என்பதால் பயன் என்ன?;
இராவணன் நள்ளிருள் அடைந்த காளி போன்றனன் –
இராவணன் செறிந்த இருட்டிலே வந்த காளி தெய்வத்தைப்
போன்றான்; அப்பொரு சினத்து அரிகள் தம் புணரி – அந்தப்
போரிடும் கோபம் உடைய வானரர் படைக்கடல்; வெள்ளிடைக்
கரந்த பூனை போன்றது- வெற்றிடத்தில் பொருந்திய பூனைப்
பூக்கள் போன்றது.

——————

இலக்குவன் – இராவணன் பொருதல்

இரியல் போகின்ற சேனையை இலக்குவன் விலக்கி,
‘அரிகள்! அஞ்சன்மின், அஞ்சன்மின்’ என்று அருள் வழங்கி,
திரியும் மாருதி தோள் எனும் தேர்மிசைச் சென்றான்;
எரியும் வெஞ் சினத்து இராவணன் எதிர் புகுந்து ஏற்றான். 18-

இரியல் போகின்ற சேனையை இலக்குவன் விலக்கி – தோற்று
ஓடுகின்ற வானர சேனையை இலக்குவன் தடுத்து; ‘அரிகள்!
அஞ்சன்மின், அஞ்சன்மின்’ என்று அருள் வழங்கி – ‘வானரர்களே!
பயப்படாதீர்கள், பயப்படாதீர்கள்’ என்று அருள் மொழி
கூறி; திரியும் மாருதி தோள் எனும் தேர்மிசைச் சென்றான்
– திரிகின்ற அனுமானின் தோள் என்னும் தேர் மேல் ஏறிச்
சென்றான்; எரியும் வெஞ்சினத்து இராவணன் எதிர் புகுந்து
ஏற்றான்- எரிகின்ற கொடிய கோபத்தை உடைய இராவணன்
எதிரே சென்று எதிர்த்தான்.

————–

ஏற்றுக் கோடலும், இராவணன் எரி முகப் பகழி
நூற்றுக் கோடியின்மேல் செலச் சிலைகொடு நூக்க,
காற்றுக்கு ஓடிய பஞ்சு எனத் திசைதொறும் கரக்க,
வேற்றுக் கோல்கொடு விலக்கினன், இலக்குவன் விசையால். 19-

ஏற்றுக் கோடலும்- (அவ்வாறு இலக்குவன் எதிர் நின்று)
எதிர்த்த அளவில்; இராவணன் எரிமுகப் பகழி- இராவணன்
நெருப்பை முனையிலே கொண்ட அம்புகளை; நூற்றுக் கோடியின்
மேல் – நூறு கோடிக்கு மேலாக; செலச் சிலை கொடு நூக்க-
செல்லுமாறு வில்லால் எய்ய; காற்றுக்கு ஓடிய பஞ்சு என-
காற்றுக்கு எதிர் நிற்கமுடியாமல் ஓடிப் பறந்த பஞ்சுபோல்;
திசைதொறும் கரக்க- திசைகள் தோறும் சென்று மறையுமாறு;
இலக்குவன் வேற்றுக்கோல் கொடு விசையால் விலக்கினன்-
இலக்குவன் அவற்றிற்கு எதிரான அம்புகள் கொண்டு விசையால்
எதிர் விலக்கினான்.

—————

விலக்கினான் தடந் தோளினும் மார்பினும், விசிகம்
உலக்க உய்த்தனன், இராவணன்; ஐந்தொடு ஐந்து உருவக்
கலக்கம் உற்றிலன் இளவலும், உள்ளத்தில் கனன்றான்,
அலக்கண் எய்துவித்தான், அடல் அரக்கனை, அம்பால். 20-

விலக்கினான் தடந்தோளினும் மார்பினும் – அவ்வாறு
விலக்கியவனாம் இலக்குவனின் பெரிய தோளிலும் மார்பிலும்;
இராவணன் ஐந்தொடு ஐந்து விசிகம் உலக்க உய்த்தனன்-
இராவணன் பத்து அம்புகளை இலக்குவனின் வலிமை குறையுமாறு
விடுத்தான்; உருவக் கலக்கம் உற்றிலன் இளவலும்-உடம்பின் அவ்வம்புகள் ஊடுருவக் கலக்கம் கொள்ளாத
இலக்குவனும்; உள்ளத்தில் கனன்றான் – மனத்தில் கோபம்
கொண்டு; அடல் அரக்கனை – வலிமை மிக்க இராவணனை;
அம்பால் அலக்கண் எய்துவித்தான் – தன் அம்புகளால்
துன்பமுறச் செய்தான்.

—————

காக்கல் ஆகலாக் கடுப்பினில் தொடுப்பன கணைகள்
நூக்கினான்; கணை நுறுக்கினான், அரக்கனும், ‘நூழில்
ஆக்கும் வெஞ் சமத்து அரிது இவன்தனை வெல்வது; அம்மா!
நீக்கி, என் இனிச் செய்வது?’ என்று இராவணன் நினைந்தான். 21-

காக்கல் ஆகலாக் கடுப்பினில் கணைகள் தொடுப்பன –
தடுத்தற்கு முடியாத விரைவொடு அம்புகளை (இலக்குவன்);
நூக்கினான் -செலுத்தினான்; கணை நுறுக்கினான் அரக்கனும்-
செலுத்திய அம்புகளை நுறுங்கச் செய்த இராவணனும்; நூழில்
ஆக்கும் வெஞ்சமத்து – கொன்று குவிக்கும் கொடிய போரில்;
இவன்தனை வெல்வது அரிது – இவனை வெற்றி காண்பது
முடியாது; அம்பால் நீக்கி – அம்பினால் போரிடுவதை விலக்கி;
இனி என் செய்வது – இனிமேல் என்ன செய்வது; என்று
இராவணன் நினைந்தான் – என இராவணன் ஆழமாகச்
சிந்தித்தான்.

——————

இராவணன் மோகப் படையை விட, வீடணன் கூற இலக்குவன் ஆழிப்படையை விடல்

‘கடவுள் மாப் படை தொடுக்கின், மற்று அவை முற்றும்
கடக்க விடவும் ஆற்றவும் வல்லனேல், யாரையும் வெல்லும்;
தடவும் ஆற்றலைக் கூற்றையும்; தமையனைப் போலச்
சுடவும் ஆற்றும் எவ் உலகையும்; எவனுக்கும் தோலான். 22-

கடவுள் மாப்படை தொடுக்கின் – பெரிய தெய்வ அம்புகளைத்
தொடுத்தால்; மற்று அவை முற்றும் கடக்கவிடவும் ஆற்றவும்
வல்லனேல்- அவ்வம்புகள் எல்லாவற்றையும் வெல்லவும்
தாங்கவும் வலிமை யுடையவன் ஆனால்; யாரையும் வெல்லும்-
எல்லாரையும் வெல்லுவான்; கூற்றையும் ஆற்றலைத் தடவும்-
கூற்றுவனையும், வலிமையை ஆராய்ந்து பார்க்கும்; தமையனைப்
போல- இராமனைப் போல்; எவ்வுலகையும் சுடவும் ஆற்றும்-
எல்லா உலகங்களையும் சுட்டெரிக்கவும் முடியும்; எவனுக்கும்
தோலான் – யார்க்கும் தோற்கமாட்டான்.

—————

‘மோக மாப் படை ஒன்று உளது; அயன் முதல் வகுத்தது;
ஆகம் அற்றது; கொற்றமும் சிவன் தனை அழிப்பது;
ஏகம் முற்றிய விஞ்சையை இவன்வயின் ஏவி,
காகம் உற்று உழல் களத்தினில் கிடத்துவென் கடிதின்’- 23-

மோகம் ஒன்று உண்டு – மோகம் என்பது ஒன்று உள்ளது;
முன்னாள் முதலவன் வகுத்தது – தொடக்க காலத்தில் முதற்
கடவுள் இயற்றியது; ஆகம் அற்றது- கண்ணால் காணும் வடிவம்
இல்லாதது; கொற்றமும் சிவன்தனை அழிப்பது – வெற்றியையும்
சிவனின் ஆற்றலையும் அழிக்கும் ஆற்றலுடையது; ஏகம் முற்றிய
விஞ்சையை – தனித்தன்மை பொருந்திய இந்த விஞ்சையை;
இவன் வயின் ஏவி – இலக்குவன் மீது செலுத்தி; காகம் உற்று
உழல் களத்தினில் – பிணந்தின்ன வரும் காகங்கள் திரியும்
போர்க்களத்தில்; கடிதின் கிடத்துவென் – விரைந்து கிடக்கச்
செய்வேன்.

————–

என்பது உன்னி, அவ் விஞ்சையை மனத்திடை எண்ணி,
முன்பன்மேல் வரத் துரந்தனன்; அது கண்டு முடுகி,
அன்பின் வீடணன், ‘ஆழியான் படையினின் அறுத்தி’
என்பது ஓதினன்; இலக்குவன் அது தொடுத்து எய்தான். 24-

என்பது உன்னி – என்பது எண்ணி; அவ்விஞ்சையை
மனத்திடை எண்ணி – அந்த மோகன விஞ்சையை மனத்தில்
நினைத்து; முன்பன் மேல் வரத்துரந்தனன் – வலியவனாம்
இலக்குவன் மேல் செல்ல விடுத்தான்; அன்பின் வீடணன் –
அன்புடைய வீடணன்; அது கண்டு முடுகி, ஆழியான் படையினின்
அறுத்தி – அதனைக் கண்டு விரைந்து சக்கரப் படையுடைய
நாராயணனது கணையால் இதனை அறுப்பாயாக; என்பது ஓதினன்
– என்பதைக் கூறினான்; இலக்குவன் அது தொடுத்து எய்தான்
– இலக்குவன் அந்த நாராயணன் அம்பைப் பூட்டி விடுத்தான்.

————-

வீடணன் உபாயத்தால் படை வலி அழிய, இராவணன் அவன் மேல் வேல் எறிதல்

வீடணன் சொல, விண்டுவின் படைக்கலம் விட்டான்,
மூடு வெஞ் சின மோகத்தை நீக்கலும், முனிந்தான்,
‘மாடு நின்றவன் உபாயங்கள் மதித்திட, வந்த
கேடு நம்தமக்கு’ என்பது மனம்கொண்டு கிளர்ந்தான். 25-

வீடணன் சொல- வீடணன் சொல்ல; விண்டுவின் படைக்கலம்
விட்டான் – அவன் சொல்லியபடி நாராயணனது அம்பை
விட்டான்; மூடு வெஞ்சின மோகத்தை நீக்கலும்- தன்னை மூடி
மயக்கவந்த கொடிய சினத்தையுடைய மோகத்தை இலக்குவன்
விலக்கலும்; முனிந்தான் – இராவணன் வெகுண்டான்; மாடு
நின்றவன் உபாயங்கள் மதித்திட – பக்கத்திலிருந்த வீடணன்
உபாயங்களைச் சொல்லிட அதை இலக்குவன் மதித்து ஏற்றிட; கேடு
நம் தமக்கு வந்த – நமக்குக் கேடு வந்தன;என்பது மனங்கொண்டு
கிளர்ந்தான்- என்பதை உளத்தில் எண்ணிக் கிளர்ச்சியுற்றான்.

———

மயன் கொடுத்தது, மகளொடு; வயங்கு
அனல் வேள்வி, அயன் படைத்துளது; ஆழியும் குலிசமும்
அனையது; உயர்ந்த கொற்றமும் ஊழியும் கடந்துளது; உருமின்,
சயம்தனைப் பொரும் தம்பியை, உயிர் கொளச் சமைந்தான். 26-

மகளொடு மயன் கொடுத்தது – (முன்னர், திருமணத்தின் போது
இராவணனுக்கு) மண்டோதரியாம் மகளொடு மயன் அளித்தது;
வயங்கு அனல் வேள்வி அயன் படைத்துளது – பிரமனால் யாகத்
தீயில் படைக்கப்பட்ட படையாம்; ஆழியும் குலிசமும் அனையது
– திருமாலின் சக்கரப்படையும் இந்திரனின் வச்சிரப்படையும் போன்றது;
உயர்ந்த கொற்றமும் ஊழியும் கடந்துளது – உயர்ந்த வெற்றி அளிப்பதிலும் ஊழிக்
காலத்தையும் கடந்துளதாகிய; உருமின் – இடி போன்ற
வேற்படையாலே; சயம் தனைப் பொரும் தம்பியை –
வெற்றியையே உவமை கூறத்தக்க வீடணனது; உயிர்கொளச்
சமைந்தான் – உயிரைக் கொள்வதற்குத் துணிந்தான்.

—————–

விட்ட போதினின் ஒருவனை வீட்டியே மீளும்,
பட்ட போது அவன் நான்முகன் ஆயினும் படுக்கும்,
வட்ட வேல் அது வலம்கொடு வாங்கினன், வணங்கி,
எட்ட நிற்கலாத் தம்பிமேல் வல் விசைத்து எறிந்தான். 27-

விட்ட போதினின் ஒருவனை வீட்டியே மீளும்- வேலை எறிந்த
போது அந்த ஒரு பகைவனை வீழ்த்தி விட்டே திரும்பும்;
பட்டபோது அவன் நான்முகன் ஆயினும் படுக்கும்- மேலே பட்ட
போது தன்னைப் படைத்த பிரமனே ஆனாலும் கொல்லும்
தன்மையது; வட்டவேல் அது வலங்கொடு வாங்கினான் வாங்கி –
திருத்தமான வேலை வலந்திரிந்து எடுத்து வணங்கி; எட்ட
நிற்கலாத் தம்பிமேல் – தொலைவில் நிற்காத அருகில்
உள்ள தம்பி வீடணன் மேல்; வல் விசைத்து எறிந்தான்- மிகுந்த
வேகத்துடன் எறிந்தான்.

——————–

‘ஈது என் உயிர் அழிக்கும்’ என்று வீடணன் உரைக்க, இலக்குவன் ‘இதைப் போக்குவேன்; அஞ்சல் நீ’ எனல்

எறிந்த காலையில், வீடணன் அதன் நிலை எல்லாம்
அறிந்த சிந்தையன், ‘ஐய! ஈது என் உயிர் அழிக்கும்;
பிறிந்து செய்யல் ஆம் பொருள் இலை’ என்றலும், பெரியோன்,
‘அறிந்து போக்குவல்; அஞ்சல், நீ!’ என்று இடை அணைந்தான். 28-

எறிந்த காலையில் – இராவணன் வேலினை எறிந்த போது;
அதன் நிலை எல்லாம் அறிந்த சிந்தையன் வீடணன் –
அவ்வேலின் திறம் முழுதும் அறிந்த அறிவுடையோனாகிய
வீடணன்; ஐய! ஈது என் உயிர் அழிக்கும்- ஐயனே! இவ்வேல்
என் உயிரை வாங்கும்; பிறிந்து செய்யல் ஆம் பொருள் இலை
என்றலும் – தடுத்துச் செய்தற்குரிய உபாயம் வேறு இல்லை என்று கூறியதும்;
பெரியோன் அறிந்து போக்குவல் – இதைப் போக்கும் திறம்
அறிந்து போக்குகின்றேன்; நீ அஞ்சல் – நீ பயப்படாதே;
என்று இடை அணைந்தான் – எனக் கூறி வீடணன் நின்ற
இடத்தில் வந்து நின்றான்.

————-

வேலைத் தானே மார்பில் ஏற்க, இலக்குவன் எதிர்தல்

எய்த வாளியும், ஏயின படைக்கலம் யாவும்,
செய்த மா தவத்து ஒருவனைச் சிறு தொழில் தீயோன்
வைத வைவினில் ஒழிந்தன; ‘வீடணன் மாண்டான்;
உய்தல் இல்லை’ என்று, உம்பரும் பெரு மனம் உலைந்தார். 29-

எய்த வாவியும் – இலக்குவன் எய்த அம்புகளும்; ஏவின
படைக்கலம் யாவும் – ஏவிய படைக்கருவிகள் எல்லாம்; செய்த
மாதவத்து ஒருவனை – சிறந்த தவத்தால் பெரியோனை; சிறு
தொழில் தீயோன் வைத வைவினில் ஒழிந்தன- கீழான ஏவல்
புரியும் தீயோன் சபித்த சாபம் பலிக்காது போயின போலப்
பயனின்றிப் போயின; வீடணன் மாண்டான் – வீடணன்
செத்தான்; உய்தல் இல்லை என்று – பிழைப்பது இனி இல்லை
என்று; உம்பரும் பெருமனம் உலைந்தோர் – தேவர்களும்
தம்முடைய பெருமை மிக்க மனம் அழிந்தனர்.

————–

‘தோற்பென் என்னினும், புகழ் நிற்கும்; தருமமும் தொடரும்;
ஆர்ப்பர் நல்லவர்; அடைக்கலம் புகுந்தவன் அழியப் பார்ப்பது என்?
நெடும் பழி வந்து தொடர்வ தன் முன்னம்,- எற்பென், என்
தனி மார்பின்’ என்று, இலக்குவன் எதிர்ந்தான். 30-

தோற்பென் என்னினும் – (வீடணனைக் காக்க வேலை ஏற்று)
என் உயிரை இழந்தேன் என்றாலும்; புகழ் நிற்கும் – (அடைக்கலம்
காத்த) புகழ் நிலைத்து நிற்கும்; தருமமும் தொடரும் – அறமும்
என்னைத் தொடர்ந்து வரும்; நல்லவர் ஆர்ப்பர்- நல்ல மனிதர்கள்
மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்வர்; அடைக்கலம் புகுந்தவன்
அழியப் பார்ப்பது என் – அடைக்கலமாக அடைந்த வீடணன்
இறக்கப் பார்த்துக் கொண்டிருப்பது எதற்கு? நெடும் பழி
வந்து தொடர்வதன் முன்னம் – (அடைக்கலப் பொருளைக்
காவாமல் விட்டான் என்று) நெடுங்காலம் நிற்கும் பழி வந்து
தொடர்வதற்கு முன்னரே; என் தனி மார்பின் ஏற்பென்- எனது
ஒப்பற்ற மார்பில் அவ்வேலை ஏற்பேன்; என்று இலக்குவன்
எதிர்ந்தான் – என்று இலக்குவன் எதிர் நின்றான்;

————–

வேலை ஏற்க பலரும் முந்த, இலக்குவன் அவ் வேலைத் தன் மார்பில் ஏற்றல்

இலக்குவற்கு முன் வீடணன் புகும்; இருவரையும்
விலக்கி, அங்கதன் மேற்செலும்; அவனையும் விலக்கி
கலக்கும் வானரக் காவலன்; அனுமன் முன் கடுகும்;
அலக்கண் அன்னதை இன்னது என்று உரை செயல் ஆமோ? 31-

இலக்குவற்கு முன் வீடணன் புகும் – இலக்குவனுக்கு
முன்னர் வீடணன் செல்வான்; இருவரையும் விலக்கி அங்கதன்
மேற்செலும் – அவ்விருவரையும் விலக்கி விட்டு வாலி மகன்
அங்கதன் முன் புகுவான்; அவனையும் விலக்கி வானரக்
காவலன் கலக்கும்- அங்கதனை விலக்கிவிட்டு வானரர் அரசாம்
சுக்கிரீவன் முந்துவான்; அனுமன் முன் கடுகும் – அனுமன்
விரைந்து செல்வான்; அலக்கண் அன்னதை – அப்படிப்பட்ட
துன்பத்தை; இன்னது என்று உரை செயல் ஆமோ- இத்தகையது
என்று கூற முடியுமா?

———–

முன் நின்றார் எலாம் பின் உற, காலினும் முடுகி,
‘நின்மின்; யான் இது விலக்குவென்’ என்று உரை நேரா,
மின்னும் வேலினை, விண்ணவர் கண் புடைத்து இரங்க,
பொன்னின் மார்பிடை ஏற்றனன், முதுகிடைப் போக, 32-

முன் நின்றார் எலாம் பின் உற- முன்னே சென்றவர்கள்
எல்லாம் பின்னே நிற்க; காலினும் முடுகி – காற்றினும்
விரைந்து சென்று; நின்மின் யான் இது விலக்குவென் –
எல்லாரும் நில்லுங்கள் நான் இதை விலக்குவேன்; என்று உரை நேரா
மின்னும் வேலினை – என்று சொல்லிக்கொண்டே ஒளி வீசும்
வேலை; விண்ணவர் கண் புடைத்து இரங்க- தேவர்கள் கண்மேல்
மோதிக் கொண்டு வருந்த; பொன்னி்ன் மார்பிடை –
பொன்னிறமுள்ள மார்பில் பட்டு; முதுகிடைப்போக ஏற்றனன் –
முதுகுக்குள்ளே ஊடுருவிப் போக (அவ்வேலை) ஏற்றான் இலக்குவன்.

——————-

வீடணன் தண்டு கொண்டு இராவணனது தேர்க் குதிரையையும் சாரதியையும் அழித்தல்

‘எங்கு நீங்குதி நீ?’ என வீடணன் எழுந்தான்,
சிங்கஏறு அன்ன சீற்றத்தான், இராவணன் தேரில்
பொங்கு பாய் பரி சாரதியோடும் படப் புடைத்தான்,
சங்க வானவர் தலை எடுத்திட, நெடுந் தண்டால். 33-

எங்கு நீங்குதி நீ என `வீடணன் எழுந்தான்-
(போர்க்களத்தை விட்டுப் புறப்படும் இராவணனைப் பார்த்து)
வீடணன், ‘நீ எங்கே செல்கிறாய் என்று எழுந்து; சிங்கஏறு
அன்ன சீற்றத்தான் – ஆண் சிங்கம் போன்ற கோபம்
உடையவனாய்; இராவணன் தேரில்- இராவணனுடைய தேரிலே;
பொங்குபாய் பரி சாரதியொடும் பட – கிளர்ந்து பாயும்
குதிரையொடு தேரோட்டியும் இறந்திட; சங்க வானவர் தலை
எடுத்திட நெடுந்தண்டால் புடைத்தான் – திரளாயுள்ள
தேவர்கள் மீண்டும் கிளர்ச்சி பெற்றுயரத் தன் நீண்ட
தண்டாயுதத்தால் அடித்தான்.

——————-

இராவணன் வீடணன்மேலும், அனுமன்மேலும் கணை தொடுக்க, அவனை வீடணன் வெகுண்டு, பின் தொடர்தல்

சேய் விசும்பினில் நிமிர்ந்து நின்று, இராவணன் சீறி,
பாய் கடுங் கணை பத்து அவன் உடல் புகப் பாய்ச்சி,
ஆயிரம் சரம் அனுமன் தன் உடலினில் அழுத்தி,
போயினன், ‘செரு முடிந்தது’ என்று, இலங்கை ஊர் புகுவான். 34-

சேய் விசும்பினில் நிமிர்ந்து நின்று இராவணன் சீறி –
தூரத்தே உள்ள வானில் உயரச் சென்று இராவணன் சீற்றம்
கொண்டு; அவன் உடல் புகப் பாய் கடுங்கணை பத்து பாய்ச்சி
– அவ்வீடணன் உடம்பிலே பாய்கின்ற கொடிய அம்புகள் பத்தை
அழுத்திவிட்டு; ஆயிரம் சரம் அனுமன் தன் உடலினில் அழுத்த
– ஆயிரம் அம்புகளை அனுமனின் உடம்பில் பாய்ச்சிவிட்டு; செரு
முடிந்தது என்று- போர் முற்றுப் பெற்றது என்று; இலங்கை ஊர் புகுவான்
போயினன் – இலங்கை நகரில் புக, (இராவணன்) சென்றான்.

———–

‘தேடிச் சேர்ந்த என் பொருட்டினால், உலகுடைச் செல்வன்
வாடிப் போயினன்; நீ இனி வஞ்சனை மதியால்
ஓடிப் போகுவது எங்கு? அடா! உன்னொடும் உடனே
வீடிப் போவென்’ என்று அரக்கன்மேல் வீடணன் வெகுண்டான். 35-

தேடிச் சேர்ந்த என் பொருட்டினால் – அடைக்கலமாகப்
புகுந்த என்னைக் காப்பதற்காக; உலகுடைச் செல்வன் வாடிப்
போயினன் – உலகம் எல்லாம் தன்னதாக உடைய இலக்குவன்
வாடிப் போனான்; இனி வஞ்சனை மதியால் ஓடிப் போகுவது
எங்கு? – இனிமேல் உன்னுடைய வஞ்சனை புத்தியால் நீ ஓடிப்
போவது எங்கு? அடா! உன்னொடும் உடனே வீடிப் போவென்
என்று- அடா உன்னோடு இப்போதே போர் செய்து உன்னைக் கொன்று
நானும் இறப்பேன் என்று; அரக்கன் மேல் வீடணன் வெகுண்டான்
– இராவணன் மீது வீடணன் கோபித்தான்.

————-

வீடணனைக் கொல்லாது இராவணன் இலங்கைக்கு மீள்தல்

‘வென்றி என் வயம் ஆனது; வீடணப் பசுவைக்
கொன்று, இனிப் பயன் இல்லை’ என்று இராவணன் கொண்டான்;
நின்றிலன், ஒன்றும் நோக்கிலன், முனிவு எலாம் நீத்தான்;
பொன் திணிந்தன மதிலுடை இலங்கை ஊர் புக்கான். 36-

வென்றி என் வயம் ஆனது – வெற்றி என் வசம் ஆயிற்று;
வீடணப் பசுவைக் கொன்று இனிப் பயன் இல்லை என்று- பசுப்
போன்ற வீடணனைக் கொன்று இனிமேல் அடையும் நன்மை ஒன்றும்
இல்லை என்று; இராவணன் கொண்டான் – இராவணன் மனத்தில்
நினைத்தான்; நின்றிலன் – நிற்கவும் இல்லை; ஒன்றும்
நோக்கலன் – போர்க்களத்து எதையும் பார்க்கவில்லை;
முனிவு எலாம் நீத்தான்- கோபம் எல்லாம் விட்டவனாய்; பொன்
திணிந்தன மதிலுடை இலங்கை ஊர் புக்கான் – அழகிய மதிலை
உடைய இலங்கை நகர்க்குள் சென்றான்.

—————–

வீடணன் துயரம் மிக்கவனாய், இலக்குவன் பாதத்தில் வீழ்ந்து, இறக்க முயல, சாம்பன் தடுத்தல்

அரக்கன் ஏகினன்; வீடணன் வாய் திறந்து அரற்றி,
இரக்கம் தான் என இலக்குவன் இணை அடித் தலத்தில்,
கரக்கல் ஆகலாக் காதலின் வீழ்ந்தனன் கலுழ்ந்தான்;
குரக்கு வெள்ளமும் தலைவரும் துயரிடைக் குளித்தார். 37-

அரக்கன் ஏகினன் – இராவணன் இலங்கைக்குள் சென்றான்;
வீடணன் வாய் திறந்து அரற்றி – வீடணன் வாய் திறந்து
புலம்பி; இரக்கம் தான் என இலக்குவன் இணை அடித்தலத்தில்
– இரக்கப் பண்பே உருவான இலக்குவனின் இரண்டு காலடியில்;
கரக்கல் ஆகலாக் காதலின் – அடக்க முடியாத அன்பினால்;
கலுழ்ந்தான் வீழ்ந்தனன் – கண்ணீர் சிந்தி விழுந்தான்;
குரக்கு வெள்ளமும் தலைவரும் துயரிடைக் குளித்தார்-
குரங்குச் சேனையும் அதன் தலைவர்களும் துன்பத்தில் ஆழ்ந்தார்கள்.

————

‘பொன் அரும்பு உறு தார்ப் புயப் பொருப்பினான் பொன்ற,
என் இருந்து நான்? இறப்பென, இக் கணத்து; எனை ஆளும்
மன் இருந்து இனி வாழ்கிலன்’ என்றவன் மறுக, ‘நில், நில்’
என்றனன், சாம்பவன் உரை ஒன்று நிகழ்த்தும்: 38-

பொன் அரும்பு உறுதார்ப் புயப் பொருப்பினான் பொன்ற –
அழகு மிக்க அரும்பால் கட்டிய மாலையணிந்த தோள்களாம்
மலையை உடைய இலக்குவன் இறக்க; நான் இருந்து என்? – நான்
உயிரோடு இருந்து என்ன பயன்? இக்கணத்து இறப்பென்- இந்த
நொடியே இறப்பேன்; எனை ஆளும் மன் இருந்து இனி வாழ்கிலன்
என்றனன் மறுக – என்னை அடைக்கலமாய்க் கொண்ட இராமன்
இனி உயிரோடு வாழான் என்று மனங்கலங்கி நிற்க;
சாம்பவான் ‘நில் நில்’ என்றனன்- சாம்பவான் அவனைத்
தடுத்து ‘நில் நில்’ என்று கூறி,; உரை ஒன்று நிகழ்த்தும்-
சொல் ஒன்று சொல்வான்.

—————

‘அனுமன் நிற்க, நாம் ஆர் உயிர்க்கு இரங்குவது அறிவோ?
நினையும் அத்துணை மாத்திரத்து, உலகு எலாம் நிமிர்வான்,
வினையின் நல் மருந்து அளிக்கின்றான்; உயிர்க்கின்றான், வீரன்;
தினையும் அல்லல் உற்று அழுங்கன் மின்’ என்று இடர் தீர்த்தான். 39-

அனுமன் நிற்க நாம் ஆர் உயிர்க்கு இரங்குவது அறிவோ-
அனுமன் நம் பக்கம் இருக்கும் போது நாம் அரிய உயிர்
நீங்கியதற்கு வருந்துதல் அறிவுடைமை ஆகுமோ; நினையும்
அத்துணை மாத்திரத்து உலகு எலாம் நிமிர்வான் – அனுமன்
எண்ணிய அளவில் உலகெலாம் நிமிர்கின்ற பேருருவுடையவனாய்;
வினையின் நல் மருந்து அளிக்கின்றான் – நம் புண்ணிய
வினையால் நல்ல மருந்தைக்கொண்டு அளிக்கின்றான்; வீரன்
உயிர்க்கின்றான் – அளித்தவுடன் இலக்குவன் உயிர்
பெற்றெழுகின்றான்; தினையும் அல்லல் உற்று அழுங்கன்மின்
என்று இடர் தீர்த்தான் – மிகச்சிறிய அளவும் துன்பமுற்று
வருந்தாதீர்கள் என்று சாம்பவான் கூறி வீடணன் முதலியோர்
துன்பம் தீர்த்தான்.

—————

சாம்பன் உரைப்படி அனுமன் மருந்து கொண்டு வந்து, இலக்குவனை உயிர்ப்பித்தல்

மருத்தின் காதலன் மார்பிடை அம்பு எலாம் வாங்கி,
‘இருத்தியோ, கடிது ஏகலை? இளவலை இங்ஙன்
வருத்தம் காணுமோ மன்னவன்?’ என்னலும், அன்னான்
கருத்தை உன்னி, அம் மாருதி உலகு எலாம் கடந்தான். 40-

மருத்தின் காதலன் – வாயுமகனாகிய அனுமனின்; மார்பிடை
அம்பு எலாம் வாங்கி – மார்பில் தைத்த அம்பு எலாம்
வாங்கிவிட்டு; இருத்தியோ கடிது ஏகலை- நீ மருந்து கொண்டு
வராமல் இருப்பாயோ விரைந்து செல்ல மாட்டாயா; மன்னவன் இளவலை
இங்ஙனன் வருத்தம் காணுமோ – இராமன் தன் தம்பியாம்
இலக்குவனை இவ்வருத்த நிலையில் காண்பானா? என்னலும் –
என்று சாம்பவன் கூற; அன்னான் கருத்தை உன்னி –
அத்தகையோன் எண்ணத்தை நினைத்துப் பார்த்து; அம்மாருதி
உலகு எலாம் கடந்தான்- அவ்வனுமான் உலகங்களை எல்லாம்
கடந்து சென்றான்.

————-

உய்த்து ஒரு திசைமேல் ஓடி, உலகு எலாம் கடக்கப் பாய்ந்து,
மெய்த் தகு மருந்துதன்னை, வெற்பொடும் கொணர்ந்த வீரன்,
பொய்த்தல் இல் குறி கெடாமே பொது அற நோக்கி, பொன்போல்
வைத்தது வாங்கிக் கொண்டு வருதலில், வருத்தம் உண்டோ ? 41-

உய்த்து ஒரு திசை மேல் ஓடி- (தன் கருத்தை மருந்தின்
மீது) செலுத்தி வட திசையில் ஓடி; உலகு எலாம் கடக்கப்
பாய்ந்து – உலகங்கள் எல்லாம் கடந்திடுமாறு பாய்ந்து
சென்று; மெய்த்தகு மருந்து தன்னை – மெய்ம்மையுடன்
பொருந்திய மருந்தை; வெற்பொடும் கொணர்ந்த வீரன்-
மருத்து மலையுடன் முன்னர் கொண்டு வந்த வீரனாம் அனுமான்;
பொய்த்தல் இல்குறி கெடாமே பொது அறநோக்கி –
பொய்யில்லாத அடையாளங்களை நன்கு பார்த்து; பொன் போல்
வைத்தது வாங்கிக் கொண்டு வருதலில் வருத்தம்
உண்டோ?- பாதுகாப்பாக வைத்த பெருஞ்செல்வம் போல்
போற்றி வைத்ததை மீண்டும் கொண்டு வருவதில் துன்பம்
உண்டோ? (இல்லை)

————

தந்தனன், மருந்து தன்னை; தாக்குதல் முன்னே யோகம்
வந்தது, மாண்டார்க்கு எல்லாம்; உயிர் தரும் வலத்தது என்றால்,
நொந்தவர் நோவு தீர்க்கச் சிறிது அன்றோ? நொடிதல் முன்னே,
இந்திரன் உலகம் ஆர்க்க, எழுந்தனன் இளைய வீரன். 42-

தந்தனன் மருந்து தன்னை – அனுமன் தந்த நல்ல மருந்தை;
தாக்குதல் முன்னே யோகம் வந்தது- மருந்தின் வாசனை
வருமுன்னே நல்வினை கூடிற்று; மாண்டார்க்கு எல்லாம் உயிர்
தரும் வலத்தது என்றால்- செத்தவர் எல்லார்க்கும் உயிர்
அளிக்கும் வலிமையுடையது என்றால்; நொந்தவர் நோவு
தீர்க்கச் சிறிது அன்றோ – வேலால் துன்புற்றவரின்
துன்பம் தீர்ப்பது சிறிய சொல் அல்லவா? இந்திரன் உலகம்
ஆர்க்க – தேவர் உலகம் ஆரவாரம் செய்ய; நொடிதல் முன்னே
இளைய வீரன் எழுந்தனன்- நொடிப் பொழுதில் இலக்குவன்
உயிர் பெற்று எழுந்தான்.

———-

இலக்குவன் அனுமனைத் தழுவி, வீடணனின் நலத்தை உசாவல்

எழுந்து நின்று, அனுமன் தன்னை இரு கையால்
தழுவி, ‘எந்தாய்! விழுந்திலன் அன்றோ, மற்று அவ் வீடணன்!’ என்று, விம்மித்
தொழும் துணையவனை நோக்கி, துணுக்கமும் துயரும் நீக்கி,
‘கொழுந்தியும் மீண்டாள்; பட்டான் அரக்கன்’ என்று உவகை கொண்டான் 43-

எழுந்து நின்று- இலக்குவன் எழுந்து நின்று; அனுமன் தன்னை
இரு கையால் தழுவி – அனுமனைத் தன் இரு கைகளாலும்
தழுவிக்கொண்டு; எந்தாய் விழுந்திலன் அன்றோ மற்று
அவ்வீடணன் என்ன – எம் தந்தை போன்றவனே! அந்த வீடணன்
இறந்து பட வில்லை அல்லவா என்று கேட்க; விம்மித் தொழும்
துணையவனை நோக்கி – (அது கேட்டுத்) தேம்பித் தன்னை
வணங்கும் துணைவனைப் பார்த்து; துணுக்கமும் துயரும் நீக்கி-
மன நடுக்கமும் துன்பமும் தீர்ந்து; அரக்கன் பட்டான் –
இராவணன் இனி மாண்டான்; கொழுந்தியும் மீண்டாள் –
சீதையும் சிறை மீண்டாள்; என்று உவகை கொண்டான் – என
மகிழ்ச்சி கொண்டான்.

————-

வானரத் தலைவர்கள் இராமனிடம் சேர்ந்து வணங்க, இராமன், ‘விளைந்தது என்ன?’ என வினாவுதல்

‘”தருமம்” என்று அறிஞர் சொல்லும் தனிப் பொருள் தன்னை இன்னே
கருமம் என்று அனுமன் ஆக்கிக் காட்டிய தன்மை கண்டால்,
அருமை என் இராமற்கு? அம்மா! அறம் வெல்லும், பாவம் தோற்கும்,
இருமையும் நோக்கின்’ என்னா, இராமன்பால் எழுந்து சென்றார். 44-

தருமம் என்று அறிஞர் சொல்லும் தனிப்பொருள் தன்னை-
அறம் என அறிஞர் கூறும் ஒப்பற்ற பொருளை; இன்னே கருமம்
என்று – இப்போதே செய்யத் தக்கது என்று; அனுமன் காட்டிய
தன்மை – அனுமன் நிரூபித்துக் காட்டிய தன்மை; கண்டால்
இராமற்கு அருமை என்- நோக்கினால் இராமனுக்கு செய்தற்கு
அரிய பொருள் எது? (ஒன்றுமில்லை); இருமையும் நோக்கின்-
இம்மை மறுமையை ஆராயின்; அறம் வெல்லும் பாவம் தோற்கும்
– அறம் வெல்லும் மறம் தோற்கும்; என்னா இராமன் பால்
எழுந்து சென்றார்- என்று கூறி இராமனிடத்து எழுந்து போனார்.

————–

ஒன்று அல பல என்று ஓங்கும் உயர் பிணத்து உம்பர்
ஒன்று குன்றுகள் பலவும், சோரிக் குரை கடல் அனைத்தும், தாவிச்
சென்று அடைந்து, இராமன் செம் பொன் திருவடி வணக்கம் செய்தார்,
வென்றியின் தலைவர்; கண்ட இராமன், ‘என் விளைந்தது?’ என்றான். 45-

ஒன்று அல பல என்று – ஒன்று அல்லாதன பல என்று கூறுமாறு;
உயர்பிணத்து குன்றுகள் பலவும் – உயர்ந்த பிணக் குன்றுகள்
பலவற்றையும்; சோரிக் குரைகடல் அனைத்தும் – ஒலிக்கும்
இரத்தக் கடல் அனைத்தும்; உம்பரோடும் தாவிச் சென்று,
அடைந்து – தேவர்களோடும் கடந்து சென்று சேர்ந்து; இராமன்
தன்னை திருவடி வணக்கம் செய்தார் – இராமனின் திருவடிகளை
வணங்கினார்கள்; வென்றியின் தலைவர்- வெற்றி கண்ட
தலைவர்கள்; கண்ட இராமன் – அவ்வாறு வணங்கக் கண்ட
இராமன்; விளைந்தது என் என்றான் – நடந்தது என்ன என்று கேட்டான்.

——-

இராமன் அனுமனைத் தழுவி ஆசி கூறுதல்

உற்றது முழுதும் நோக்கி, ஒழிவு அற, உணர்வு உள் ஊற,
சொற்றனன் சாம்பன், வீரன் அனுமனைத் தொடரப் புல்லி,
‘பெற்றனன் உன்னை; என்னை பெறாதன? பெரியோய்! என்றும்
அற்று இடையூறு செல்லா ஆயுளை ஆக!’ என்றான். 46-

சாம்பன் உற்றது முழுதும் நோக்கி- (அது கேட்ட) சாம்பன்
நிகழ்ந்ததை முழுவதும் சிந்தித்து; ஒழிவு அற உணர்வுள் ஊறச்
சொற்றனன் – ஒன்று விடாமல் இராமனின் உணர்வில் பதியும்
வண்ணம் கூறினான்; வீரன் அனுமனைத் தொடரப்புல்லி –
வீரனாம் அனுமானை இராமன் நெருங்கத் தழுவி; பெரியோய்!
உன்னைப் பெற்றனன்- பெரியோனை! உன்னைப் பெற்று
விட்டேன்; என்னை பெறாதன் – இனிப் பெறாத பேறு என்ன
உளது? என்றும் அற்று இடையூறு செல்லா ஆயுளை ஆக
என்றான்- எக்காலத்தும் இடையறவு பட்டு முடியாத நீண்ட ஆயுளை
உடையவன் ஆகுக என வாழ்த்தினான்.

————-

இலக்குவனை இராமன் பாராட்டி உரைத்தல்

புயல் பொழி அருவிக் கண்ணன், பொருமலன் பொங்குகின்றான்,
உயிர் புறத்து ஒழிய நின்ற உடல் அன்ன உருவத் தம்பி,
துயர் தமக்கு உதவி, மீளாத் துறக்கம் போய், வந்த தொல்லைத்
தயரதற் கண்டால் ஒத்த தம்முனைத் தொழுது சார்ந்தான். 47-

புயல் பொழி அருவிக் கண்ணன்- மேகம் போல் பொழியும்
கண்ணீர் அருவியை உடைய கண்களுடையவனும்; பொருமலன்
பொங்குகின்றான்- அழுது விம்முபவனும் மகிழ்ச்சி பொங்கும்
மனமுடையவனும்; உயிர் புறத்து ஒழிய நின்ற உடல் அன்ன
உருவத்தம்பி – உயிர் பிரிந்து வெளியே நிற்க அதைப்
பிரிந்த உடம்பு போல வாடிய உருவமுடையவனும் ஆகிய தம்பி
இலக்குவன்; துயர் தமக்கு உதவி – தமக்குப் பிரிவாற்றாத்
துன்பம் கொடுத்து விட்டு; மீளாத் துறக்கம் பெற்று உயர்ந்த
தொல்லைத் தயரதற் கண்டால் ஒத்த – இறந்து மீண்டும் வராத
துறக்க உலகைப் பெற்றுயர்வுற்ற பழைய தயரதனை வரக்கண்டு
மகிழ்ந்தது போன்று; தம்முனைத் தொழுது சார்ந்தான்- தன்
அண்ணன் இராமனை வணங்கி வந்தடைந்தான்.

———–

இளவலைத் தழுவி, ‘ஐய! இரவிதன் குலத்துக்கு ஏற்ற
அளவினம்; அடைந்தோர்க்கு ஆகி, மன் உயிர் கொடுத்த வண்மைத்
துளவு இயல் தொங்கலாய்! நீ அன்னது துணிந்தாய் என்றால்,
அளவு இயல் அன்று; செய்தற்கு அடுப்பதே ஆகும் அன்றே? 48-

இளவலை நோக்கி – தன்னைத் தொழுது வந்த தம்பியைப்
பார்த்து; ஐய! துளவு இயல் தொங்கலாய்!- ஐயனே!
துளவத்தால் கட்டிய மாலை அணிந்தவனே; இரவி தன் குலத்துக்கு
ஏற்ற அளவினம் – சூரிய குல இயல்புக்குத் தக்கபடி;
அடைந்தோர்க்கு ஆகி – தம்மை அடைக்கலமாக வந்தவர்க்கு
உதவுவோர் ஆகி; மன் உயிர் கொடுத்த வன்மை- நிலை பெற்ற
உயிர் கொடுக்கும் வலிய செயல்; அன்னது துணிந்தாய்
என்றால்- நீ அச்செயல் செய்யத் துணிந்தாய் என்றால்;
அளவியல் அன்று- அது நின் தகுதிக்கு மிகுதியான அளவினை
உடையதன்று; அடுப்பதே ஆகும் அன்றே – செய்தற்கு ஏற்ற
செயலே ஆகும் அல்லவா?

———-

புறவு ஒன்றின் பொருட்டா யாக்கை புண் உற அரிந்த புத்தேள்
அறவனும், ஐய! நின்னை நிகர்க்கிலன்; அப்பால் நின்ற
பிற வினை உரைப்பது என்னே? பேர் அருளாளர் என்பார்
கறவையும் கன்றும் ஒப்பார், தமர்க்கு இடர் காண்கில்’ என்றான். 49-

ஐய! புறவு ஒன்றின் பொருட்டு – ஐயனே! தன்னிடம்
அடைக்கலம் புகுந்த புறாவிற்காக; இன்யாக்கை புண் உற
அரிந்த புத்தேள் அறவனும் – தன் இனிய உடம்பை புண்
உண்டாகத் தசை அரிந்தளித்த தெய்வத்தன்மையுள்ள அறவானாம்
சிபியும்; நின்னை நிகர்க்கிலன் – உனக்கு ஒப்பாக
மாட்டான்; அப்பால் நின்ற பிறவினை உரைப்பது என்னே –
அதற்குப் பிறகு ஒழிந்த பிற செயல்களைக் கூறுவது என்ன பயன்?
பேர் அருளாளர் என்பார்- பெரிய அருளாளர் எனப்படுவோர்;
தமர்க்கு இடர் காணில் – தம்மைச் சார்ந்தவர்க்குத்
துன்பம் வரக் கண்டால்; கறவையும் கன்றும் ஒப்பார்
என்றான் – பசுவையும் கன்றையும் போல் விரைந்து சென்று
காப்பர் என்று கூறினான்.

—————-

இராமன் இளைப்பாறுதல்

சாலிகை முதல ஆன போர்ப் பரம் தாங்கிற்று எல்லாம்
நீல் நிற ஞாயிறு அன்ன நெடியவன் முறையின் நீக்கி,
கோல் சொரி தனுவும் கொற்ற அனுமன் கைக் கொடுத்து, கொண்டல்
மேல் நிறை குன்றம் ஒன்றில் மெய்ம் மெலிவு ஆற்றலுற்றான். 50-

சாலிகை முதல ஆன போர்ப்பரம் தாங்கிற்று எல்லாம்-
கவசம் முதலிய போர்க்கெனத் தாங்கிய பாரத்தை எல்லாம்;
நீல் நிற ஞாயிறு அன்ன நெடியவன் முறையின் நீக்கி – நீல
நிறமுள்ள சூரியனைப் போல இராமன், இலக்குவன்
உடம்பிலிருந்து முறையாக நீக்கி; கோல் சொரி தனுவும் –
அம்புகளை எய்யும் வில்லையும்; கொற்ற அனுமன் கை
கொடுத்து- வெற்றிக்குரிய அனுமனின் கையில் கொடுத்துவிட்டு;
கொண்டல் மேல் நிறை குன்றம் ஒன்றில் – மேகங்கள்
நிறைந்த குன்றம் ஒன்றின்மேல்; மெய்ம்மெலிவு ஆற்றலுற்றான்
– இலக்குவன் உடல் மெலிவை ஆற்றச் செய்தான்.

———–

மிகைப் பாடல்கள்

அரக்கர் சேனை ஓராயிர வெள்ளத்தை, ‘அமரில்
துரக்க, மானுடர் தம்மை’ என்று, ஒருபுடை துரந்து,
வெருக் கொள் வானரச் சேனைமேல் தான் செல்வான் விரும்பி,
இருக்கும் தேரொடும் இராவணன் கதுமென எழுந்தான். 2-1

———————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-