Archive for the ‘ஸ்ரீ மஹாபாரதம்’ Category

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ  பீஷ்ம பர்வம்-ஸ்ரீ பீஷ்மவத பர்வம்-

October 13, 2025

பீஷ்மருக்குத் தலையணை அமைத்த அர்ஜுனன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 122-பீஷ்மரிடம் தான் அவரது அடிமை என்று சொன்ன அர்ஜுனன்; அர்ஜுனனிடம் தலையணை கேட்ட பீஷ்மரும், அதை அமைத்துக் கொடுத்த அர்ஜுனனும்; அர்ஜுனனைப் பாராட்டிய பீஷ்மர்; மருத்துவர்களைத் திருப்பிய அனுப்பிய துரியோதனன்; கிருஷ்ணன், யுதிஷ்டிரன் பேச்சு…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தன் பெரிய வில்லில் நாணேற்றி, பாட்டனை {பீஷ்மரை} மரியாதையுடன் வணங்கிய அர்ஜுனன், கண்ணீரால் நிறைந்த கண்களுடன் இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! குருக்களில் முதன்மையானவரே, ஆயுதங்களைத் தரிப்போர் அனைவரிலும் முதலானவரே, ஓ! வெல்லப்படமுடியாதவரே {பீஷ்மரே}, நான் உமது அடிமை, எனக்குக் கட்டளையிடுவீராக. ஓ! பாட்டா {பீஷ்மரே}, நான் என்ன செய்ய வேண்டும்?” {என்றான் அர்ஜுனன்}.

அதற்குச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்} அவனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! ஐயா {அர்ஜுனா}, என் தலை தொங்குகிறது. ஓ! குருக்களில் முதன்மையானவனே, ஓ! பல்குனா {அர்ஜுனா}, எனக்குத் தலையணை தருவாயாக. உண்மையில், ஓ! வீரா {அர்ஜுனா}, எனக்குப் படுக்கையாகத் தகுந்ததைத் தாமதமில்லாமல் எனக்குத் தருவாயாக. ஓ! பார்த்தா {அர்ஜுனா}, விற்கள் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையான நீயே அதற்குத் தகுந்தவன். க்ஷத்திரியர்களின் கடமைகளை அறிந்தவன் நீயே, மேலும், புத்திக்கூர்மையையும், நற்குணத்தையும் கொண்டவன் நீயே” என்றார் {பீஷ்மர்}.

பிறகு, “அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன பல்குனன் {அர்ஜுனன்} பீஷ்மர் சொன்னதைச் செய்ய விரும்பினான். காண்டீவத்தையும், நேரான கணைகள் சிலவற்றையும் எடுத்து, மந்திரங்களால் அவற்றைத் தூண்டி, பாரதக் குலத்தின் வலிமைமிக்கத் தேர்வீரரான அந்த ஒப்பற்றவரிடம் அனுமதி பெற்ற அர்ஜுனன், பிறகு, பெரும் சக்தியுடன் கூடிய மூன்று கூரிய கணைகளைக் கொண்டு பீஷ்மரின் தலையைத் தாங்கினான் {தூக்கி நிறுத்தினான்}.

பிறகு, பாரதர்களின் தலைவரும், அறத்தின் உண்மைகளை அறிந்தவரும், அற ஆன்மா கொண்டவருமான பீஷ்மர், தமது எண்ணத்தை அறிந்து, அந்தச் சாதனையை அடைந்த அர்ஜுனனைக் கண்டு மிகவும் மனம் நிறைந்தார். இப்படி அவருக்கு {பீஷ்மருக்கு} அந்தத் தலையணை கொடுக்கப்பட்டதும், அவர் {பீஷ்மர்} தனஞ்சயனை {அர்ஜுனனைப்} புகழ்ந்தார்.

அங்கிருந்த பாரதர்கள் அனைவரின் மீதும் தன் கண்களைச் செலுத்திய அவர் {பீஷ்மர்}, போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், தன் நண்பர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனுமான குந்தியின் மகன் அர்ஜுனனிடம், “ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, எனக்குப் படுக்கையாகக் கூடிய ஒரு தலையணையை நீ எனக்குக் கொடுத்துவிட்டாய். நீ வேறுவகையில் செயல்பட்டிருந்தாயானால், கோபத்தால் நான் உன்னைச் சபித்திருப்பேன். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, தன் கடமைகளை நோற்ற க்ஷத்திரியன் ஒருவன், கணைகளாலான தன் படுக்கையில், போர்க்களத்தில் இப்படியே உறங்க வேண்டும்”, என்றார்.

பீபத்சுவிடம் {அர்ஜுனனிடம்} இப்படிப் பேசிய அவர் {பீஷ்மர்}, பிறகு அப்போது அங்கிருந்த மன்னர்கள் மற்றும் இளவரசர்களிடம், “பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} எனக்குக் கொடுத்திருக்கும் தலையணையைக் காண்பீராக. சூரியன் வடகோட்டிற்கு {உத்தர அயனத்திற்குத்} திரும்பும் வரை நான் இந்தப் படுக்கையிலேயே உறங்குவேன் {கிடப்பேன்}. அப்போது என்னிடம் வரும் மன்னர்கள் என்னைக் காண்பார்கள் (உயிரை விடும் என்னைக் காண்பார்கள்). சூரியன் ,பெரும் வேகம் கொண்டதும், ஏழு குதிரைகள் பூட்டப்பட்டதுமான தன் தேரில் வைஸ்ரவணன் {குபேரன்} இருக்கும் திசையை நோக்கிச் செல்லும்போது, அன்புக்குரிய நண்பனை விட்டுப் பிரியும் அன்பு நண்பனைப் போல நான் என் உயிரை விடுவேன். மன்னர்களே {நான் இருக்கும் இந்த} என் இடத்தைச் சுற்றி அகழ் ஒன்று தோண்டப்பட வேண்டும். இப்படி நூறு கணைகளால் துளைக்கப்பட்ட நான் சூரியனுக்கு என் துதிகளைச் செலுத்தப் போகிறேன். உங்களைப் பொறுத்தவரை, மன்னர்களே, பகையைக் கைவிட்டு, போரிடுவதை நிறுத்துவீராக” என்றார் {பீஷ்மர்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு, கணைகளைப் பிடுங்குவதில் திறம்பெற்றவர்களும், (தங்கள் தொழிலுக்குத்) தேவையான அனைத்து உபகரணங்களுடன் கூடியவர்களும், (தங்கள் அறிவியலில்) நன்கு பயிற்சி கொண்டவர்களுமான அறுவைசிகிச்சை நிபுணர்கள் சிலர் அவரிடம் {பீஷ்மரிடம்} அங்கே வந்தனர்.

அவர்களைக் கண்ட கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, உமது மகனிடம் {துரியோதனனிடம்}, “இந்த மருத்துவர்களுக்கு உரிய மரியாதைகளை வழங்கி, செல்வங்களைப் பரிசளித்து அனுப்புவாயாக. இந்நிலையை அடைந்தும் எனக்கு மருத்துவர்களால் என்ன தேவை இருக்கிறது? க்ஷத்திய செயல்பாடுகளில் மிகவும் மெச்சத்தகுந்த மிக உயர்ந்த நிலையை நான் வென்றிருக்கிறேன் {அடைந்திருக்கிறேன்}. மன்னர்களே, கணைகளின் படுக்கையில் கிடக்கும் நான் மருத்துவர்களின் சிகிச்சையை ஏற்பது எனக்குத் தகாது. மனிதர்களின் ஆட்சியாளர்களே, என் உடலில் உள்ள இந்தக் கணைகளுடனே நான் எரிக்கப்பட வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.

அவரது {பீஷ்மரின்} வார்த்தைகளைக் கேட்ட உமது மகன் துரியோதனன், மருத்துவர்களுக்குத் தகுந்த மரியாதைகளைச் செலுத்தி அவர்களை அனுப்பி வைத்தான். பல்வேறு ஆட்சிப்பகுதிகளின் மன்னர்களான அவர்கள், அளவிலா சக்தி கொண்ட பீஷ்மர், அறத்தில் நிலையான உறுதியை வெளிப்படுத்தியதைக் கண்டு ஆச்சரியத்தில் நிறைந்தனர். இப்படி உமது தந்தைக்குத் தலையணை கொடுத்தவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும் அந்த மனிதர்களின் ஆட்சியாளர்களுமான பாண்டவர்களும், கௌரவர்களும், அந்தச் சிறந்த படுக்கையில் கிடந்த உயர் ஆன்ம பீஷ்மரை மீண்டும் ஒன்றுசேர்ந்து அணுகினர். உயர் ஆன்மா கொண்ட அவரை {பீஷ்மரை} மரியாதையுடன் வணங்கி, அவரை மும்முறை வலம் வந்து, அவரது பாதுகாப்புக்காகச் சுற்றிலும் காவலர்களை நிறுத்தி அவ்வீரர்கள் {பாண்டவர்களும், கௌரவர்களும்}, மேனியெங்கும் குருதியால் நனைந்து, தங்கள் இதயங்கள் துயரத்தில் மூழ்கி, தாங்கள் கண்டவற்றை நினைத்துக் கொண்டே, மாலை வேளையில் ஓய்வுக்காகத் பாசறைகளுக்குச் சென்றனர்.

பிறகு, வலிமைமிக்க மாதவன் {கிருஷ்ணன்}, பீஷ்மரின் வீழ்ச்சியால் இன்பத்தில் நிறைந்து, ஒன்றாகச் சேர்ந்து மகிழ்ச்சியாக அமர்ந்திருந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டவர்களைச் சரியான நேரத்தில் அணுகி, தர்மனின் மகனான யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! குருகுலத்தவரே {யுதிஷ்டிரரே}, நற்பேறாலேயே வெற்றி உமதானது. நற்பேறாலேயே மனிதர்களால் கொல்லப்பட இயலாதவரும், கலங்கடிக்கப்பட இயலாத வலிமைமிக்கத் தேர்வீரருமான பீஷ்மர் வீழ்த்தப்பட்டார். அல்லது, ஒருவேளை, விதிவசத்தால், அனைத்து ஆயுதங்களிலும் கரைகண்டவரான அந்தப் போர்வீரர் {பீஷ்மரை}, உமது கண்களால் மட்டுமே கொல்ல முடிந்தவரான உம்மை எதிரியாக அடைந்து, கோபம் நிறைந்த உமது பார்வையால் எரிக்கப்பட்டார்” {என்றான் கிருஷ்ணன்}.

கிருஷ்ணனால் இப்படிச் சொல்லப்பட்டதும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அந்த ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்}, “உன் அருளாலேயே வெற்றி {கிடைக்கும்}, உன் கோபத்தாலேயே தோல்வியும் {கிடைக்கும்}! உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டோரின் அச்சங்களை விலக்குபவன் நீயே! எங்கள் புகலிடம் நீயே! ஓ! கேசவா {கிருஷ்ணா} யாரை போரில் எப்போதும் நீ காக்கிறாயோ, யாருடைய நன்மைக்காக எப்போதும் நீ ஈடுபடுகிறாயோ, அவர்கள் வெற்றியை அடைவது அச்சரியமில்லை. எங்கள் புகலிடமாக உன்னை அடைந்த நான் எதையுமே ஆச்சரியமானதாகக் கருதவில்லை” என்றான் {யுதிஷ்டிரன்}. இப்படி அவனால் {யுதிஷ்டிரனால்} சொல்லப்பட்டதும், ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} புன்னகைத்தவாறே, “ஓ! மன்னர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, உம்மிடம் இருந்து மட்டுமே இவ்வார்த்தைகள் வர முடியும்” என்று பதிலுரைத்தான்” {என்றான் சஞ்சயன்}. 

துரியோதனனை வேண்டிய பீஷ்மர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 123-பதினோராம் நாள் காலையில் பீஷ்மரைச் சந்தித்த கௌரவர்களும், பாண்டவர்களும்; மன்னர்களிடம் தண்ணீர் கேட்ட பீஷ்மர்; அருஞ்செயலால் தண்ணீர் கொணர்ந்த அர்ஜுனன்; அர்ஜுனனைப் புகழ்ந்த பீஷ்மர்; அர்ஜுனனின் மகிமை; துரியோதனனை அறிவுறுத்திய பீஷ்மர்; பீஷ்மரின் அறிவுரைகளை ஏற்காத துரியோதனன்..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த இரவு கடந்ததும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னர்கள் அனைவரும், பாண்டவர்களும், தார்தராஷ்டிரர்களும் பாட்டனிடம் {பீஷ்மரிடம்} சென்றனர். அந்த க்ஷத்திரியர்கள், தங்கள் வகையைச் சார்ந்த காளையும், குருக்களில் முதன்மையனவரும், வீரப்படுக்கையில் கிடந்த அந்த வீரரை {பீஷ்மரை} வணங்கி, அவர் முன்னிலையில் நின்றனர்.

அந்த இடத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான கன்னியர், அந்தச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்} மீது சந்தனப் பொடிகளையும், பொரிகளையும், மலர்மாலைகளையும் பொழிந்தனர். பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள், சாதாரணப் பார்வையாளர்கள் ஆகியோர் அனைவரும், சூரியனைக் காண விரும்பும் உலக உயிரினங்களைப் போல, சந்தனுவின் மகனை {பீஷ்மரைக் காண} அணுகினர். நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான எக்காளங்கள், நர்த்தகர்கள், கைவினைஞர்கள் ஆகியோரும் முதிர்ந்த குரு பாட்டனிடம் {பீஷ்மரிடம்} வந்தனர்.

குருக்களும், பாண்டவர்களும் போரை நிறுத்தி, தங்கள் கவசங்களை அகற்றி, தங்கள் ஆயுதங்களை ஒருபுறம் கிடத்திவிட்டு, எதிரிகளைத் தண்டிப்பவரும் வெல்லப்பட முடியாதவருமான தேவவிரதரிடம் {பீஷ்மரிடம்} ஒன்று சேர்ந்து வந்தனர். பழங்காலத்தைப் போலவே ஒன்றாகக் கூடி வந்த அவர்கள், தங்கள் தங்கள் வயதுக்கேற்றபடி ஒருவரோடொருவர் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டனர்.

நூற்றுக்கணக்கான பாரத மன்னர்களால் நிறைந்த அந்தச் சபையானது, பீஷ்மரால் அலங்கரிக்கப்பட்டு, சொர்க்கத்தில் உள்ள தேவர்களின் சபையைப் போலச் சுடர்விட்டபடி அழகாகத் தெரிந்தது. கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} மதிக்கும் மன்னர்களால் ஆன அந்தச் சபை, தங்கள் தலைவனான பாட்டனை (பிரம்மனை) வழிபடும் தேவர்களின் சபையைப் போல அழகாகத் தெரிந்தது.

எனினும் பீஷ்மர், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, (தன் மேனியில் தைத்திருந்த) கணைகளால் எரிந்து கொண்டிருந்தாலும் மனோ பலத்தால் தன் வேதனைகளை அடக்கிக் கொண்டு, பாம்பொன்றைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தார். அந்தக் கணைகளால் எரிச்சலடைந்த தன் உடலுடன், ஆயுதக் காயங்களின் விளைவால், கிட்டத்தட்ட தன் உணர்வுகளை இழந்த நிலையில் இருந்த பீஷ்மர், அந்த மன்னர்களின் மேல் தன் கண்களைச் செலுத்தி, {அவர்களிடம்} தண்ணீர் கேட்டார்.

அப்போது அந்த க்ஷத்திரியர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிறந்த உணவுப் பொருட்களையும், குளிர்ந்த நீர் கொண்ட குடங்கள் பலவற்றையும் அங்கே கொண்டு வந்தனர். தனக்காகக் கொண்டுவரப்பட்ட அந்த நீரைக் கண்ட சந்தனுவின் மகன், “மனித மகிழ்ச்சிக்குகந்த {பயன்பாட்டுக்குரிய} எந்தப் பொருளையும் என்னால் இப்போது பயன்படுத்த இயலாது. மங்கிய மாந்தர் இனத்தில் இருந்து நான் நீக்கப்பட்டுவிட்டேன். நான் கணைகளின் படுக்கையில் கிடக்கிறேன். சந்திரனும், சூரியனும் திரும்புவதை எதிர்பார்த்தே நான் இங்குத் தங்கியிருக்கிறேன்” என்றார். இவ்வார்த்தைகளைப் பேசிய பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அம்மன்னர்களை நிந்தித்த அவர் {பீஷ்மர்}, “நான் அர்ஜுனனைக் காண விரும்புகிறேன்” என்றார். பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அர்ஜுனன், அங்கே வந்து, இருகரங்களையும் கூப்பிப் பாட்டனை {பீஷ்மரை} மரியாதையுடன் வணங்கியபடி, “நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.

நீதிமிக்க ஆன்மா கொண்ட பீஷ்மர், தன் முன்னிலையில் இப்படி நின்று, மரியாதை நிரம்பிய வணக்கங்களைத் தனக்குச் செலுத்திய பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கண்டு, மகிழ்ச்சியுடன் அந்தத் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்}, “உனது கணைகளால் முழுவதும் மறைக்கப்பட்டுள்ள என் உடல் பெரிதும் எரிகிறது! என் உடலின் முக்கிய அங்கங்கள் யாவும் வேதனையை அனுபவிக்கின்றன. என் வாய் உலர்ந்திருக்கிறது. ஓ! அர்ஜுனா, வேதனையால் பீடிக்கப்பட்டிருக்கும் உடலைக் கொண்ட எனக்குத் தண்ணீரைத் தருவாயாக. நீ ஒரு பெரும் வில்லாளியாவாய். முறையாக எனக்குத் தண்ணீரைத் தர நீயே இயன்றவனாவாய்” என்றார் {பீஷ்மர்}.

“அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன வீர அர்ஜுனன், தன் தேரில் ஏறி, தன் காண்டீவத்தைப் பலமாகத் தட்டி, அதை வளைக்கத் தொடங்கினான். அவனது {அர்ஜுனனது} வில்லின் நாணொலியையும், இடிமுழக்கத்திற்கு ஒப்பான அவனது உள்ளங்கைத் தட்டல்களையும் கேட்ட மன்னர்கள் அனைவரும் அச்சத்தால் தூண்டப்பட்டனர். பிறகு, அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்}, தன் தேரில் ஏறி, படுத்துக் கிடந்தவரும், ஆயுதபாணிகள் அனைவரிலும் முதன்மையானவருமான பாரதர்களின் தலைவரை {பீஷ்மரை} வலம் வந்தான். மந்திரங்களால் தூண்டப்பட்ட, பர்ஜன்ய ஆயுதத்தின் அடையாளத்தைக் கொண்ட சுடர்மிக்கக் கணையொன்றைக் குறிபார்த்தப் பாண்டுவின் மகன் பார்த்தன் {அர்ஜுனன்}, {அவ்வாயுதத்தைக் கொண்டு}, முழுப் படையும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பீஷ்மர் கிடந்த இடத்திற்கும் சிறிது தெற்கில் [1] பூமியைத் துளைத்தான். பிறகு அங்கே, தூய்மையானதும், மங்கலகரமானதும், குளுமையானதும், அமுதத்துக்கு ஒப்பானதும், தேவ மணமும், சுவையும் கொண்டதுமான நீரூற்று ஒன்று எழுந்தது. பார்த்தன் {அர்ஜுனன்}, அந்தக் குளிர்ந்த நீரூற்றைக் கொண்டு, தேவர்களைப் போன்ற செயல்களும், ஆற்றலும் கொண்டவரும், குருக்களில் காளையுமான அந்தப் பீஷ்மரை மனம் நிறையச் செய்தான்.

சக்ரனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பான செயல்பாடுகளைக் கொண்ட பார்த்தனின் அந்த அருஞ்செயலால், பூமியின் மன்னர்கள் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்தனர். ஆச்சரியத்தால் நிறைந்தவர்களான அங்கே இருந்த மன்னர்கள் அனைவரும் தங்கள் ஆடைகளை (காற்றில்) அசைத்தனர். சங்குகளின் முழக்கமும், பேரிகைகளின் ஒலியும் களமெங்கும் உரக்கக் கேட்கப்பட்டன.

தன் தாகம் தணிந்த சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த மன்னர்கள் அனைவரின் முன்னிலையிலும் ஜிஷ்ணுவை {அர்ஜுனனை} உயர்வான இவ்வார்த்தைகளால் புகழ்ந்தார், அவர் {பீஷமர்} “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே ஓ! குருகுலத்து மகனே {அர்ஜுனா}, உன்னிடம் {காணப்படும்} இஃது ஆச்சரியமானதல்ல, ஓ! அளவிலா காந்தி கொண்டவனே {அர்ஜுனா}, நீ ஒரு புராதன முனிவன் என்று நாரதரே சொல்லியிருக்கிறார்! உண்மையில், வாசுதேவனை {கிருஷ்ணனை} உனது கூட்டாளியாகக் கொண்ட நீ, தேவர்கள் அனைவருடனும் கூடிய தேவர்களின் தலைவனே {இந்திரனே} அடையத் துணியாத வலிமையான அருஞ்செயல்கள் பலவற்றை அடைவாய். இது போன்ற விஷயங்களில் {தேவ ரகசியங்களில்} அறிவு கொண்டோர், க்ஷத்திரிய குலம் முழுவதையும் அழிப்பவன் நீ என்று அறிவர். உலகத்தில் உள்ள வில்லாளிகளில் நீ ஒருவனே வில்லாளியாவாய். மனிதர்களில் முதன்மையானவன் நீயே.

இவ்வுலகில், உயிரினங்களில் அனைத்திலும் முதன்மையான மனிதர்கள், சிறகு படைத்த உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையான கருடன், நீர் கொள்ளிடங்கள் அனைத்திலும் முதன்மையான கடல், நான்கு கால் உயிரினங்களில் முதன்மையான பசு, ஒளிப் பொருட்கள் அனைத்திலும் முதன்மையான சூரியன், மலைகள் அனைத்திலும் முதன்மையான இமயம்; சாதிகள் அனைத்திலும் முதன்மையான பிராமணன் ஆகியவற்றைப் போல வில்லாளிகள் அனைவரிலும் நீயே முதன்மையானவன் ஆவாய். என்னாலும், விதுரன், துரோணர், ராமர் {பரசுராமர்} [2], ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} ஆகியோராலும் சஞ்சயனாலும் கூட மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட வார்த்தைகளைத் திருதராஷ்டிரன் மகன் (துரியோதனன்) கேட்கவில்லை. ஒரு முட்டாளைப் போல அறிவற்ற துரியோதனன் அந்த வார்த்தைகளின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. அனைத்து வழிமுறைகளையும் மீறிய அவன் {துரியோதனன்} பீமனின் வல்லமையால் வீழ்த்தப்பட்டு எப்போதும் கிடக்க வேண்டியிருக்கும் என்பது உறுதி” என்றார் {பீஷ்மர்}.

அவரது இவ்வார்த்தைகளைக் கேட்ட குரு மன்னன் துரியோதனன், இதயத்தால் மகிழ்ச்சியற்றவனானான். அவனை {துரியோதனனைக்} கண்ட சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, “ஓ! மன்னா {துரியோதனா}, கேட்பாயாக. உன் கோபத்தைக் கைவிடுவாயாக! ஓ! துரியோதனா, அமுத மணம் கொண்ட குளுமையான அந்த நீரூற்றைப் புத்திசாலிப் பார்த்தன் {அர்ஜுனன்} எவ்வாறு உண்டாக்கினான் என்பதை நீ கண்டாய். இத்தகு அருஞ்செயலைச் செய்யக்கூடிய வேறு எவனும் இவ்வுலகில் இல்லை. அக்னி, வருணன், சோமன், வாயு, விஷ்ணு ஆகியோருக்கு உடையவையும், இந்திரன், பசுபதி, பரமேஷ்டி {பிரம்மன்}, பிரஜாபதி, தாத்ரி {தாதா}, தாஷ்ட்ரி {தவஷ்டா}, சாவித்ரி {ஸவிதா}, விவஸ்வான் ஆகியோருக்கு உடையவையுமான இவ்வாயுதங்கள் அனைத்தையும் மனிதர்களின் இவ்வுலகில் தனஞ்சயன் {அர்ஜுனன்} மட்டுமே அறிவான் [3]தேவகியின் மகனான கிருஷ்ணனும் அவற்றை அறிவான். ஆனால் அவற்றை அறிந்தவன் என வேறு எவனும் இல்லை. ஓ! ஐயா {துரியோதனா}, இந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, போரில் தேவர்களும் அசுரர்களும் இணைந்து வந்தாலும் வீழ்த்தப்பட முடியாதவனாவான். இந்த உயர் ஆன்மாவின் {அர்ஜுனனின்} சாதனைகள் மனித சக்திக்கு அப்பாற்பட்டவையாகும்.

உண்மையான வீரனும், போரின் ஆபரணமும், போரில் சாதித்தவனுமான அந்தப் போர்வீரனை {அர்ஜுனனைக்} கொண்டு, ஓ! மன்னா {துரியோதனா} விரைவில் அமைதி ஏற்படுத்தப்படட்டும். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணன் கோபத்துக்கு ஆட்படாமல் இருக்கும்போதே, ஓ! குருக்களின் தலைவா {துரியோதனா} வீரர்களான பார்த்தர்களுடன் {பாண்டர்வளுடன்}, ஓ! ஐயா {துரியோதனா} அமைதி ஏற்படுத்தப்படுவதே தகும். ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, எஞ்சியிருக்கும் இந்த உனது தம்பிகள் கொல்லப்படாமல் இருக்கும்போதே,  அமைதி {சமாதானம்} ஏற்படட்டும். கோபத்தால் எரியும் கண்களுடன் கூடிய யுதிஷ்டிரன், போரில் உனது துருப்புகளை எரிக்காதிருக்கும்போதே அமைதி ஏற்படட்டும். பாண்டுவின் மகன்களான நகுலன், சகாதேவன், பீமசேனன் ஆகியோர் உன் படையை நிர்மூலமாக்காமல் இருக்கும்போதே, ஓ ஏகாதிபதி {துரியோதனா} வீரப் பாண்டவர்களுக்கும், உனக்கும் இடையில் நட்புறவுகள் மீட்கப்பட வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.

ஓ! ஐயா, இந்தப் போர் என் மரணத்தோடு முடியட்டும்! பாண்டவர்களுடன் அமைதி {சமாதானம்} கொள்வாயாக. ஓ! பாவமற்றவனே {துரியோதனா}, என்னால் உனக்குச் சொல்லப்படும் இவ்வார்த்தைகள் உனக்கு ஏற்புடையனவாகட்டும். உனக்கும், (குரு) குலத்திற்கும் இதுவே நன்மையைத் தரும் என நான் கருதுகிறேன். உன் கோபத்தைக் கைவிட்டு, பார்த்தர்களுடன் அமைதியை ஏற்படுத்துவாயாக. ஏற்கனவே பல்குனன் {அர்ஜுனன்} செய்திருப்பதே போதுமானது. பீஷ்மனின் மரணத்தோடு நட்புறவுகள் மீட்கப்படட்டும்! எஞ்சிய இவர்கள் (இந்த வீரர்கள்) வாழட்டும்!

ஓ! மன்னா {துரியோதனா}, மனம் இரங்குவாயாக! பாண்டவர்களுக்கு நாட்டில் பாதியைக் கொடுப்பாயாக. நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனை இந்திரப்பிரஸ்தத்திற்குப் போகட்டும். ஓ! குருக்களின் தலைவா {துரியோதனா}, உறவினர்களுக்குள் பிளவினை ஏற்படுத்தும் அற்பத்தனத்திற்கான நிந்தனையைப் பெற்று, பூமியின் மன்னர்களிடம் பழிச்சொல்லை அடையாதே. என் மரணத்தோடு அனைவருக்கும் அமைதி உண்டாகட்டும்! பூமியின் ஆட்சியாளர்களான இவர்கள் ஒருவரோடொருவர் மகிழ்ச்சியாகக் கலக்கட்டும்! மகன் தந்தையை அடையட்டும், சகோதரியின் மகன் தாய்மாமனை அடையட்டும்! இந்நேரத்திற்குத் தகுந்த என்னுடைய சரியான வார்த்தைகளை மூடத்தனத்தாலோ, புத்தி குறைவாலோ நீ கேளாமற்போனால் பிறகு நீ பெரிதும் வருந்த வேண்டியிருக்கும். நான் சொல்வது உண்மையேயாகும். எனவே, இப்போதே {போரில் இருந்து} விலகுவாயாக” என்றார் {பீஷ்மர்}.

கடலுக்குச் செல்வபளின் (கங்கையின்) மகன் {பீஷ்மர்}, மன்னர்களுக்கு மத்தியில் இருந்த துரியோதனனிடம் பாசத்தால் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அமைதியானார். கணைக்காயங்களால் தன் முக்கிய உறுப்புகள் எரிந்து கொண்டிருந்தாலும், தன் வேதனைகளை அடக்கிக் கொண்ட அவர் {பீஷ்மர்}, தன்னை யோகத்தில் ஆழ்த்தினார்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அறம், பொருள் ஆகிய இரண்டும் நிறைந்த இந்த நன்மையான அமைதிநிறைந்த வார்த்தைகளை உமது மகன் {துரியோதனன்} கேட்டாலும், சாகும் மனிதன் மருந்தை மறுப்பதைப் போல அவற்றை ஏற்றானில்லை” {என்றான் சஞ்சயன்}. 

கர்ணனை அனுமதித்த பீஷ்மர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 124-பீஷ்மரிடம் சென்ற கர்ணன்; கர்ணனிடம் அன்பொழுகப் பேசிய பீஷ்மர்; கர்ணனைப் பாண்டவர்களுடன் சேருமாறு அறிவுறுத்திய பீஷ்மர்; பீஷ்மரின் அறிவுரையை மறுத்துப் போரில் களம் காண பீஷ்மரிடம் அனுமதி கோரிய கர்ணன்; கர்ணனுக்கு அனுமதியளித்த பீஷ்மர்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சந்தனுவின் மகனான பீஷ்மர் அமைதியடைந்த பிறகு, ஓ! ஏகாதிபதி, அங்கே இருந்த பூமியின் ஆட்சியாளர்கள் அனைவரும் தங்களுக்கு உரிய இடங்களுக்கு {தங்கள் தங்கள் பாசறைகளுக்குத்} திரும்பினர். பீஷ்மரின் படுகொலையைக் கேள்விப்பட்ட [1] மனிதர்களில் காளையான ராதையின் மகன் (கர்ணன்), ஓரளவு அச்சத்தால் தூண்டப்பட்டு அங்கே வந்தான். அவன் {கர்ணன்}, நாணல் படுக்கையில் {கிடப்பதைப் போல} கிடக்கும் [2] அந்தச் சிறப்புவாய்ந்த வீரரை {பீஷ்மரைக்} கண்டான். பிறகு, பெரும்புகழ் கொண்ட அந்த விருஷன் (கர்ணன்), கண்களை மூடிக் கிடந்த அந்த வீரரை {பீஷ்மரை} அணுகி, கண்ணீரால் தடைபட்ட குரலுடன் அவரது பாதத்தில் விழுந்தான். அவன் {கர்ணன் பீஷ்மரிடம்}, “ஓ! குருக்களின் தலைவரே {பீஷ்மரே}, உமது கண்களுக்கு முன்பாக இருந்த போதெல்லாம், உம்மால் எங்கும் வெறுப்புடனே பார்க்கப்பட்ட நான் ராதையின் மகன் {கர்ணன்} {வந்திருக்கிறேன்}” என்றான் [3].

இவ்வார்த்தைகளைக் கேட்டவரும், குருக்களின் முதிர்ந்த தலைவருமான கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, திரையால் [4] மூடப்பட்ட தன் கண்களின் இமைகளை மெல்ல உயர்த்தி, காவலர்களை விலகச் செய்து, அந்த இடத்தில் யாரும் இல்லாததைக் கண்டு {உறுதி செய்து கொண்டு}, மகனை அணைக்கும் தந்தையைப் போல ஒரு கரத்தால் கர்ணனை அணைத்துக் கொண்டு, பெரும்பாசத்துடன் இவ்வார்த்தைகளைச் சொன்னார். {பீஷ்மர் கர்ணனிடம்} “வா, என்னுடன் ஒப்பிட்டுக் கொண்டு எப்போதும் சவால் விடும் எதிராளியான நீ வருவாயாக. நீ என்னிடம் வந்திராவிடில் அஃது உனக்கு நன்றாயிராது என்பதில் ஐயமில்லை. நீ குந்தியின் மகனே, ராதையினுடையவனல்ல {ராதையின் மகன் அல்ல}. அதிரதனும் உன் தந்தையல்ல. ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, உன்னைக் குறித்த இவை அனைத்தையும் நான் நாரதரிடமும், கிருஷ்ண துவைபாயனரிடமும் {வியாசரிடமும்} கேட்டிருக்கிறேன். இவையனைத்தும் உண்மை என்பதில் ஐயமில்லை.

ஓ! மகனே {கர்ணா} நான் உன்னிடம் வெறுப்பெதையும் கொண்டிருக்கவில்லை என்பதை நான் உண்மையாகவே சொல்கிறேன். உன் சக்தியைக் குறைப்பதற்காகவே நான் அத்தகு கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தினேன். ஓ! அற்புத நோன்புகளைக் கொண்டவனே {கர்ணா}, காரணமே இல்லாமல் நீ பாண்டவர்களைத் தவறாகப் பேசுகிறாய். பாவத்தாலேயே நீ இவ்வுலகில் வந்தாய். இதன் காரணமாக உனது இதயம் அப்படி இருக்கிறது. செருக்காலும், இழிந்தோரின் தோழமையாலும் உன் இதயம் தகுதிவாய்ந்த மனிதர்களையும் {புண்ணியவான்களையும்} வெறுக்கிறது. இதன் காரணமாகவே நான் குரு முகாமில் உன்னைக் குறித்து அத்தகு கடும் வார்த்தைகளைப் பேசினேன்.

பூமியில் எதிரியால் தாங்கிக் கொள்ளக் கடினமான உன் போராற்றலைக் குறித்து நான் அறிவேன். பிராமணர்கள் மீது நீ கொண்ட மரியாதையையும், உனது வீரத்தையும், கொடையளிப்பதில் நீ கொண்ட பெரும் பற்றையும் நான் அறிவேன். ஓ! தேவனைப் போன்றவனே {கர்ணா}, மனிதர்களில் உன்னைப் போல வேறு எவனும் இல்லை. குடும்பத்துக்குள் உண்டாகும் பிளவுக்கு அஞ்சியே நான் உன்னைக் குறித்துக் கடும் வார்த்தைகளை எப்போதும் பேசினேன்.

வில்லாளித்தன்மை, ஆயுதத்தைக் குறிபார்த்தல், கர நளினம் {லாகவம்}, ஆயுத பலம் ஆகியவற்றில் நீ பல்குனனுக்கோ {அர்ஜுனனுக்கோ}, உயர் ஆன்ம கிருஷ்ணனுக்கோ இணையானவனாவாய்! ஓ! கர்ணா, காசி நகரத்திற்குத் தனியாக உன் வில்லுடன் சென்று, குரு மன்னனுக்கு {துரியோதனனுக்கு} மணமகளை {பானுமதியை} அடைவதற்காகப் போரில் மன்னர்களைத் தாக்கினாய். வலிமைமிக்கவனும், வெல்லப்பட இயலாதவனும், போரில் தன் ஆற்றல் குறித்து எப்போதும் தற்பெருமை பேசுபவனுமான மன்னன் ஜராசந்தனும் போரில் உனக்கு இணையாக முடியவில்லை. நீ பிராமணர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவன்; நீ எப்போதும் நல்ல போரைச் செய்பவன். சக்தியிலும், பலத்திலும் நீ தேவர்களின் பிள்ளைக்கு இணையானவன், மேலும், நிச்சயமாக மனிதர்களுக்கு மேன்மையானவன்.

உனக்கு எதிராக நான் கொண்டிருந்த கோபம் தணிந்துவிட்டது. முயற்சியால் விதியைத் தவிர்க்க முடியாது. ஓ! எதிரிகளைக் கொல்பவனே {கர்ணா}, வீரர்களான பாண்டுவின் மகன்கள் உனக்கு இரத்த {உடன்பிறந்த} சகோதரர்களாவர். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {கர்ணா}, நீ எனக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பினால் அவர்களுடன் {பாண்டவர்களுடன்} சேர்வாயாக. ஓ! சூரியனின் மகனே {கர்ணா}, இந்தப் பகையுணர்ச்சிகள் என்னோடு முடியட்டும். பூமியின் மன்னர்கள் அனைவரும் இன்று ஆபத்திலிருந்து விடுபடட்டும்” என்றார் {பீஷ்மர்}.

கர்ணன் {பீஷ்மரிடம்}, “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {பீஷ்மரே}, இதை நான் அறிவேன். இவை யாவிலும் (நீர் சொல்வதைப் போலவே) ஐயமில்லை. நீர் என்னிடம் சொல்வதைப் போலவே, ஓ! பீஷ்மரே, நான் குந்தியின் மகனே, சூதர் ஒருவரின் மகனல்ல. எனினும், நான் குந்தியால் கைவிடப்பட்டு, சூதர் ஒருவரால் வளர்க்கப்பட்டு வந்தேன். (இவ்வளவு நெடுங்காலத்திற்கு) துரியோதனனின் செல்வத்தை அனுபவித்த நான், அஃதை இப்போது பொய்யாக்கத் துணியேன்.

பாண்டவர்களுக்காக உறுதியாகத் தீர்மானம் செய்திருக்கும் வசுதேவரின் மகனை {கிருஷ்ணனைப்} போல, ஓ! பிராமணர்களுக்கு அபரிமித கொடையளிப்பவரே {பீஷ்மரே}, துரியோதனனுக்காக, என் உடைமைகள், என் உடல், என் பிள்ளைகள், மனைவி ஆகியோரையும் கைவிட நான் தயாராகவுள்ளேன். ஓ! குரு குலத்தவரே {பீஷ்மரே}, நோயால் மரணம் க்ஷத்திரியருக்குரியதில்லை. துரியோதனனைச் சார்ந்தே நான் எப்போதும் பாண்டவர்களை அவமதித்து வந்தேன். இக்காரியங்கள் அதன் வழியில் செல்ல விதிக்கப்பட்டிருக்கிறது. அது தவிர்க்க முடியாததாகும்.

முயற்சியால் விதியை வெல்லத் துணிந்தவர்கள் {இதுவரை} யார் இருந்துள்ளனர்? ஓ! பாட்டா {பீஷ்மரே}, பூமியின் அழிவைக் குறிக்கும் பல்வேறு சகுனங்கள் உம்மால் காணப்பட்டு, சபையிலும் அறிவிக்கப்பட்டது. அந்தப் பாண்டுவின் மகனும் {அர்ஜுனனும்}, வாசுதேவனும் {கிருஷ்ணனும்} பிற மனிதர்களால் வெல்லப்பட முடியாதவர்கள் என்பதை நான் நன்கறிவேன். அவர்களோடே நாம் போரிடத் துணிகிறோம். போரில் நான் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} வீழ்த்துவேன். இதுவே என் உறுதியான தீர்மானமாகும்.

(பாண்டவர்களுக்கு எதிரான) இந்தக் கடும் பகையைக் கைவிட இயன்றவனாக நான் இல்லை. மகிழ்ச்சியான இதயத்துடனும், என் வகையின் கடமைகளை என் கண் முன் கொண்டும், நான் தனஞ்சயனை {அர்ஜுனனை} எதிர்ப்பேன். ஓ! வீரரே {பீஷ்மரே}, போரில் உறுதியான தீர்மானத்தைக் கொண்டிருக்கும் எனக்கு உமது அனுமதியைக் கொடுப்பீராக. நான் போரிடுவேன். இதுவே என் விருப்பமாகும். எப்போதாவது நான், கோபத்தாலோ, சிந்தனையற்ற தன்மையினாலோ உமக்கு எதிராகக் கடுஞ்சொற்களைப் பேசியிருந்தாலும், எந்தச் செயலையாவது உமக்கெதிராகச் செய்திருந்தாலும் என்னை நீர் மன்னிப்பதே உமக்குத் தகும்” என்றான் {கர்ணன்}.

பீஷ்மர் {கர்ணனிடம்}, “உண்மையிலேயே, இந்தக் கடும் பகையை உன்னால் கைவிட இயலவில்லையெனில், ஓ! கர்ணா நான் உனக்கு அனுமதியளிக்கிறேன். சொர்க்கத்தில் விருப்பத்துடன் போரிடுவாயாக. கோபமில்லாமலும், பழியுணர்ச்சியின்றியும், உனது சக்திக்கும், துணிவுக்கும் தகுந்த வகையில், அற நடத்தை நோற்று மன்னனுக்கு {துரியோதனனுக்குப்} பணிசெய்வாயாக. ஓ! கர்ணா, என் அனுமதியைப் பெற்றுக் கொள்வாயாக. நீ எதை வேண்டினாயோ அதை அடைவாயாக. நீ தனஞ்சயன் {அர்ஜுனன்} மூலமாக, க்ஷத்திரியனின் கடமைகளை நிறைவேற்ற வல்ல உலகங்கள் அனைத்தையும் {இதன் பிறகு} அடைவாயாக.

நேர்மையான போரைத் தவிர, வேறெதிலும் க்ஷத்திரியன் ஒருவனுக்குப் பெருமகிழ்ச்சி இல்லை என்பதால், செருக்கிலிருந்து விடுபட்டு, உன் பலம் மற்றும் சக்தியை நம்பி போரில் ஈடுபடுவாயாக. அமைதியை ஏற்படுத்த நான் நீண்ட காலம் பெருமுயற்சிகளைச் செய்தேன். ஆனால், ஓ! கர்ணா, நான் அந்தப் பணியில் வெல்லவில்லை. இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்” என்றார் {பீஷ்மர்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} இதைச் சொன்னதும், பீஷ்மரை வணங்கிய அந்த ராதையின் மகன் {கர்ணன்}, அவரிடம் மன்னிப்பைப் பெற்று, தன் தேரில் ஏறி, உமது மகனை (அவனது {துரியோதனனின்} பாசறையை} நோக்கிச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}” {என்றார் வைசம்பாயனர்}.

பீஷ்ம வத உபபர்வம் முற்றிற்று

பீஷ்ம பர்வம் முற்றிற்று

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ  பீஷ்ம பர்வம்-ஸ்ரீ பீஷ்மவத பர்வம்-பத்தாம் நாள் போர்-

October 13, 2025

கிருஷ்ணனிடம் ஆலோசித்த யுதிஷ்டிரன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 108அ-போரை நிறுத்திய கௌரவர்களும் பாண்டவர்களும்; பீஷ்மரைப் புகழ்ந்த துரியோதனன் மகன்கள்; பாண்டவர்கள் ஒன்று கூடி செய்த ஆலோசனை; கிருஷ்ணனிடம் புலம்பிய யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனின் கவலைக்கு ஆறுதல் சொன்ன கிருஷ்ணன்; தானே போரிட்டு பீஷ்மரை அழிக்க உத்தரவிடுமாறு யுதிஷ்டிரனைக் கேட்ட கிருஷ்ணன்; கிருஷ்ணன் தான் முன்னர்க் கூறியிருந்தபடியே நீடிக்க வேண்டும் என்ற யுதிஷ்டிரன்; தனக்கும் பீஷ்மருக்கும் முன்பு ஏற்பட்டிருந்த ஓர் ஒப்பந்தத்தைக் குறித்துச் சொல்லும் யுதிஷ்டிரன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அவர்கள் {அந்தக் கௌரவ மற்றும் பாண்டவ வீரர்கள்} போர் புரிந்து கொண்டிருக்கையில், சூரிய மறைவின் உதவியால் சந்திப் பொழுது அங்கே தோன்றியது, {எனவே}, அதற்கு மேலும் போரைக் காண முடியவில்லை. பிறகு, மன்னன் யுதிஷ்டிரன், சந்திப்பொழுது வந்ததையும், பீஷ்மரால் கொல்லப்பட்ட தன் துருப்பினர், தங்கள் ஆயுதங்களை வீசி எறிந்து விட்டு, அச்சத்தால் பீடிக்கப்பட்டுக் களத்தில் இருந்து புறங்காட்டி தப்பி ஓட முயல்வதையும் கண்டு, வலிமைமிக்கத் தேர்வீரரான பீஷ்மர், கோபத்தால் தூண்டப்பட்டு, போரில் அனைவரையும் பீடிப்பதையும் கண்டு, சோமகர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் வீழ்த்தப்பட்டு, அவர்கள் அனைவரும் உற்சாகமிழந்திருப்பதையும் கவனித்து, சிறிது சிந்தித்த பிறகு, அந்தத் துருப்புகளைத் திரும்பும்படி ஆணையிட்டான்.

பிறகு மன்னன் யுதிஷ்டிரன் தன் படைகளைத் திரும்பப் பெற்றான். அதேபோல, உமது படைகளைத் திரும்பப் பெறுதலும் அதே நேரத்தில் நடந்தது. பிறகு, போரில் சிதைக்கப்பட்டவர்களான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், ஓ! குருக்களில் தலைவரே {திருதராஷ்டிரரே}, தங்கள் படைகளைத் திரும்ப அழைத்துக் கொண்டு தங்கள் பாசறைகளுக்குள் நுழைந்தனர். பீஷ்மரின் கணைகளால் பீடிக்கப்பட்ட பாண்டவர்கள், போரில் அந்த வீரரின் {பீஷ்மரின்} சாதனைகளை நினைவுகூர்ந்தபடி மன அமைதியை  இழந்தனர். பீஷ்மரும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, போரில் பாண்டவர்களையும், சிருஞ்சயர்களை வீழ்த்தியபிறகு, உமது மகன்களால் வழிபடப்பட்டு, அவர்களால் புகழவும் பட்டார். மகிழ்ச்சி மிக்கக் குருக்களோடு {கௌரவர்களோடு} அவர் {பீஷ்மர்} தன் பாசறைக்குள் நுழைந்தார்.

பிறகு உயிரினங்கள் அனைத்தின் உணர்வுகளையும் இழக்கச் செய்யும் இரவும் வந்தது. அப்போது அந்த இரவின் கடும்பொழுதில், பாண்டவர்கள், விருஷ்ணிகள், வெல்லப்படமுடியாதவர்களான சிருஞ்சயர்கள் ஆகியோர் ஒரு கலந்தாய்வுக்காக {ஆலோசனைக்காக} அமர்ந்தனர். சபையில் தீர்மானங்களை எட்டுவதில் திறம்பெற்றவர்களான அந்த வலிமைமிக்க நபர்கள் அனைவரும், தங்கள் சூழ்நிலையின் பார்வையில் எது உடனடி நன்மையை அளிக்கும் என நிதானமாகக் கலந்தாய்ந்தனர்.

பிறகு மன்னன் யுதிஷ்டிரன், நெடுநேரம் சிந்தித்தபிறகு, தன் கண்களை வாசுதேவன் {கிருஷ்ணன்} மேல் செலுத்தி இந்த வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! கிருஷ்ணா, கடும் ஆற்றலைக் கொண்ட உயர் ஆன்ம பீஷ்மரைப் பார். கோரைப்புல் காடு ஒன்றை நசுக்கும் யானையைப் போல என் துருப்புகளை அவர் {பீஷ்மர்} நசுக்குகிறார். அந்த உயர் ஆன்ம வீரரைக் காண்பதற்கும் நாம் துணியவில்லை. மூண்டெழும் காட்டுத்தீயைப் போல அவர் {பீஷ்மர்} எனது துருப்புகளை நக்குகிறார் {துடைத்தழிக்கிறார்}. கூரிய ஆயுதங்களைக் கொண்ட வீரப் பீஷ்மர், போரில் கோபத்தால் தூண்டப்பட்டு, கையில் வில் பிடித்துக் கணைகளை ஏவும்போது, கடும் நச்சுக் கொண்ட வலிமைமிக்க நாகன் தக்ஷகனைப் போலக் கடுமையாகிறார்.

உண்மையில், கோபக்கார யமனோ, வஜ்ரத்தைத் தரித்திருக்கும் தேவர்களின் தலைவனோ {இந்திரனோ}, கையில் சுருக்குக் கயிற்றை {பாசத்தைக்} கொண்ட வருணனோ, கதாயுதம் தரித்த யக்ஷர்களின் தலைவனோ {குபேரனோ} கூட வீழ்த்தப்பட இயன்றவர்களே. ஆனால் கோபம் தூண்டப்பட்ட பீஷ்மர், போரில் வெல்லப்பட இயலாதவராவார். வழக்கு இதுவாயிருக்கையில், ஓ! கிருஷ்ணா, என் புரிதலில் உள்ள பலவீனத்தினால், நான் போரில் பீஷ்மரை (எதிரியாக) அடைந்து துன்பக்கடலில் மூழ்கிவிட்டேன்.

ஓ! வெல்லப்பட முடியாதவனே {கிருஷ்ணா}, நான் காட்டுக்குள் ஓயப் போகிறேன் {காட்டிற்கே செல்கிறேன்}. ஓ! கிருஷ்ணா, போரை நான் இனியும் விரும்பவில்லை. பீஷ்மர் எப்போதும் நம்மைக் கொல்கிறார். சுடர்விடும் நெருப்புக்குள் விரையும் பூச்சியொன்று மரணத்தைச் சந்திப்பதைப் போல, நானும் பீஷ்மரை நோக்கி விரைந்தேன். ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, என் அரசாட்சிக்காக {நாட்டுக்காக} ஆற்றலை முன்வைத்த நான், ஐயோ, அழிவையே அடைந்தேன்.

துணிவுமிக்க என் தம்பிகள் அனைவரும் கணைகளால் பெரிதும் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். தங்கள் அண்ணனான என் மீது அவர்கள் கொண்ட பாசத்தின் விளைவால், அவர்கள் அரசாட்சியை இழந்து காட்டுக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, என்னாலேயே கிருஷ்ணை {திரௌபதி} இத்தகுத் துயரத்தில் மூழ்கியிருக்கிறாள். உயிரானது உயர்ந்த மதிப்பைக் கொண்டது என நான் கருதுகிறேன். உண்மையில், அந்த உயிரும் காக்கப்படுவது கடினம் என இப்போது தெரிகிறது. (என்னால் அந்த உயிரைக் காக்க முடிந்தால்), எஞ்சிய பின்னதை {வாழ்நாளை} சிறந்த அறப்பயிற்சியில் கழிக்கப் போகிறேன் {தர்மத்தை அனுஷ்டிக்கப் போகிறேன்}.

ஓ! கேசவா {கிருஷ்ணா}, என் தம்பிகளுடன் கூடிய நான், உனது உதவிக்குத் {தயவுக்குத்} தகுந்தவனானால், ஓ! கிருஷ்ணா, என் {க்ஷத்திரிய} வகைக்கான கடமைகளை மீறாமல் என் நன்மைக்கானது எது என்பதை எனக்குச் சொல்வாயாக” {என்றான் யுதிஷ்டிரன்}.

(நிலைமையை விளக்கும்) அவனது {யுதிஷ்டிரனது} வார்த்தைகளை விரிவாகக் கேட்ட கிருஷ்ணன், கருணையினால், யுதிஷ்டிரனுக்கு ஆறுதல் மறுமொழியாக இந்த வார்த்தைகளைச் சொன்னார், “ஓ! தர்மனின் மகனே, ஓ! உண்மையில் உறுதியாக இருப்பவரே {யுதிஷ்டிரரே}, எதிரிகளைக் கொல்பவர்களான இந்த வெல்லப்பட முடியாத வீரர்களை உமது தம்பியாகக் கொண்ட நீர் துயரடையாதீர். அர்ஜுனன், பீமசேனர் ஆகியோர் அக்னி மற்றும் வாயுவின் சக்தியைக் கொண்டவர்களாவர். மாத்ரியின் மகன்கள் {நகுலன், சகாதேவன்} இருவரும் தேவர்களின் தலைவனைப் {இந்திரனைப்} போன்ற வீரத்தைக் கொண்டவர்களாவர்.

நமக்குள் நிலவும் நல்ல புரிதலின் மூலம் நீர் என்னையும் இந்தப் பணியில் நிறுவுவீராக. ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, நானும் பீஷ்மருடன் போரிடுவேன். ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரரே}, உம்மால் வழிநடத்தப்பட்டால் பெரும்போரில் என்னால் செய்ய முடியாதது அங்கே என்ன இருக்கிறது? மனிதர்களில் காளையான அந்தப் பீஷ்மரைக் கொல்லப் பல்குனன் {அர்ஜுனன்} விரும்பாவிட்டால், அவரைச் சவாலுக்கழைக்கும் நான், தார்தராஷ்டிரர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே போரில் அவரைக் {பீஷ்மரைக்} கொல்வேன். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, வீரப் பீஷ்மரின் படுகொலையால் வெற்றி உறுதி என நீர் கண்டால், நானே தனித்தேரில் சென்று, அந்தக் குருக்களின் முதிர்ந்த பாட்டனைக் {பீஷ்மரைக்} கொல்வேன்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, போரில் மகேந்திரனுக்கு இணையான என் ஆற்றலைக் காண்பீராக. எப்போதும் வலிமைமிக்க ஆயுதங்களையே ஏவும் அந்த வீரரை {பீஷ்மரை}, அவரது தேரில் இருந்து நான் வீழ்த்துவேன். பாண்டுவின் மகன்களுக்கு எவன் எதிரியோ, அவன் என் எதிரியுமாவான் என்பதில் ஐயமில்லை. யாரெல்லாம் உம்முடையவர்களோ {உமது எதிரிகளோ} அவர்கள் எனதுமாவார்கள் {என்னுடைய எதிரிகளுமாவர்}, அதே போல யாரெல்லாம் என்னுடையவர்களோ {எனது எதிரிகளோ} அவர்கள் உம்முடையவர்களுமாவர்கள் {உமது எதிரிகளுமாவார்கள்} [1]. உமது தம்பி (அர்ஜுனன்}, என் நண்பனும், உறவினனும், சீடனுமாவான். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நான் அர்ஜுனனுக்காக என் சதைகளையே கூட அறுத்துக் கொடுப்பேன். மனிதர்களில் புலியான இவனும் {அர்ஜுனனும்}, எனக்காகத் தன் உயிரையே விடுவான். ஓ! ஐயா {யுதிஷ்டிரரே}, ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொள்வோம் என்பதே நமது புரிந்துணர்வாகும் {ஒப்பந்தம்}. எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, எவ்வழியில் {எவ்வகையில்} நான் போரிட வேண்டும் என்று எனக்கு ஆணையிடுவீராக.

முன்னர், உபப்லாவ்யத்தில், பலரின் முன்னிலையில் பார்த்தன் {அர்ஜுனன்}, “கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} நான் கொல்வேன்” என்று சூளுரைத்தான் {உறுதியேற்றான்}. புத்திசாலி பார்த்தனின் {அர்ஜுனனின்} இவ்வார்த்தைகளை (நடைமுறையில்) பின்பற்ற வேண்டும். உண்மையில், பார்த்தன் {அர்ஜுனன்} என்னை வேண்டினால், அந்தச் சூளை {உறுதியை} நான் நிறைவேற்றுவேன் என்பதில் ஐயமில்லை. அல்லது, இது போரில் பல்குனனின் {அர்ஜுனனின்} பணியாகவே இருக்கட்டும். இஃது அவனுக்குப் {அர்ஜுனனுக்கு} பாரமானதில்லை. பகை நகரங்களை அடக்குபவரான பீஷ்மரை அவன் கொல்வான். வேகமாகச் செயல்படும் தேவர்களையும், அவர்களோடு தைத்தியர்களையும், தானவர்களையும் போரில் அர்ஜுனனால் கொல்ல முடியும்.

எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, பீஷ்மரைக் குறித்து என்ன சொல்லப்பட வேண்டும்? பெரும் சக்தி கொண்டவரான சந்தனுவின் மகன் பீஷ்மர், நீதிநெறிபிறழ்ந்து, புத்திக் கூர்மை சிதைந்து, சிற்றறிவு படைத்தவராக, தான் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாதிருக்கிறார் என்பதில் ஐயமில்லை” {என்றான் கிருஷ்ணன்}.

கிருஷ்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன், “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! மதுகுலத்தோனே {கிருஷ்ணா}, நீ சொல்வது போலவே இஃது இருக்கிறது. இவை அனைத்தும் சேர்ந்தாலும் உன் சக்தியை இவற்றால் தாங்க இயலாது. ஓ! மனிதர்களில் புலியே {கிருஷ்ணா}, நான் எதை விரும்பினாலும், என் தரப்பில் நான் உன்னைக் கொண்டிருக்கிறேன் என்பதில் எப்போதும் உறுதியாக இருக்கிறேன். ஓ! வெற்றியாளர்களில் முதன்மையானவனே {கிருஷ்ணா}, என் பாதுகாவலனாக உன்னைக் கொண்ட நான், ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களையே கூட வெற்றி கொள்வேன்.

எனவே, பீஷ்மர் வலிமைமிக்கத் தேர்வீரராக இருந்தாலும், {அவரைக் குறித்து} நான் என்ன சொல்ல முடியும்? ஆனால், ஓ! கிருஷ்ணா, என் மகிமைக்காக {சுய புகழுக்காக}, நான் உன் வார்த்தைகளைப் பொய்யாக்கத் துணிய மாட்டேன். எனவே, ஓ! மாதவா {கிருஷ்ணா}, உன்னால் முன்பே உறுதிகூறப்பட்டபடி, எனக்காகப் போரிடாமலே எனக்கு உதவியைத் தருவாயாக.

இந்தப் போரில், பீஷ்மருடன் நான் ஓர் ஒப்பந்தத்தைச் செய்துள்ளேன். அவர் {பீஷ்மர்}, “துரியோதனனுக்காக நான் போரிட வேண்டியிருப்பதால், நான் உனக்கு ஆலோசனை வழங்குவேனேயன்றி, உனக்காக ஒருபோதும் போரிட மாட்டேன். இஃதை உண்மையென்றே அறிவாயாக” என்று சொன்னார். எனவே, ஓ! தலைவா {கிருஷ்ணா}, எனக்கு நல்ல ஆலோசனையை வழங்குவதால், ஓ! மாதவா {கிருஷ்ணா}, பீஷ்மரால் எனக்கு அரசாட்சியைக் {நாட்டைக்} கொடுக்க முடியும். ஆதலால், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, உன்னுடன் சேர்ந்த நாமனைவரும், மீண்டும் தேவவிரதரிடம் {பீஷ்மரிடம்} அவரது மரணத்திற்கான வழி குறித்துக் கேட்பதற்காகச் செல்வோமாக.

பிறகு, ஓ! மனிதர்களில் சிறந்தவனே {கிருஷ்ணா}, நாமனைவரும் தாமதமில்லாமல் பீஷ்மரிடம் ஒன்றாகச் சென்று, அந்தக் குரு குலத்தோனின் {பீஷ்மரின்} அறிவுரையை விரைவாகக் கேட்போம். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அவர் நல்ல ஆலோசனையை நமக்கு உண்மையில் தருவார்; மேலும், ஓ! கிருஷ்ணா, அவர் சொல்வதை நான் போரில் செய்வேன். தவ நோன்புகளைக் கொண்ட அவர் {பீஷ்மர்} நமக்கு ஆலோசனையையும், வெற்றியையும் தருவார்.

நாங்கள் குழந்தைகளாகவும், அநாதைகளாகவும் இருந்தோம். அவராலேயே {பீஷ்மராலேயே} நாங்கள் வளர்க்கப்பட்டோம். ஓ! மாதவா {கிருஷ்ணா}, எங்கள் முதிர்ந்த பாட்டனான; எங்கள் தந்தைக்குத் தந்தையான அவரை {பீஷ்மரை} நான் கொல்ல விரும்புகிறேன். ஓ! க்ஷத்திரியத் தொழிலை நிந்திக்க வேண்டும்” என்றான் {யுதிஷ்டிரன்}.

யுதிஷ்டிரனுக்குப் பீஷ்மர் சொன்ன உபாயம்! – பீஷ்ம பர்வம் பகுதி – 108ஆ-கிருஷ்ணனுடன் சேர்ந்து பீஷ்மரைச் சந்தித்த பாண்டவர்கள்; வெற்றி அடையவும், பீஷ்மரைக் கொல்லவும் பீஷ்மரிடமே வழி கேட்ட யுதிஷ்டிரன்; தன்னை வீழ்த்த பீஷ்மர் சொன்ன வழிமுறை…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வார்த்தைகளைக் கேட்ட விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்}, யுதிஷ்டிரனிடம், “ஓ! பெரும் ஞானங்கொண்டவரே {யுதிஷ்டிரரே}, உமது வார்த்தைகள் என் சுவைக்கேற்ற வகையில் {நான் விரும்பும் வண்ணம்} இருக்கின்றன. தேவவிரதர் என்றும் அழைக்கப்படும் பீஷ்மர் ஆயுதங்களில் திறம்பெற்றவராவார். அவர் தன் பார்வையிலேயே எதிரியை எரித்துவிடக் கூடியவராவார்.

கடலுக்குச் செல்பவளின் (கங்கையின்) மகனிடமே {பீஷ்மரிடமே}, அவரது மரணத்திற்கான வழிகளைக் கேட்கச் செல்லலாம். குறிப்பாக உம்மால் கேட்கப்பட்டால், அவர் {பீஷ்மர்} நிச்சயம் உண்மையைச் சொல்வார். எனவே, குரு பாட்டனை {பீஷ்மரைக்} கேட்க நாம் செல்வோம். சந்தனுவின் மதிப்புக்குரிய மகனிடம் {பீஷ்மரிடம்} சென்று, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவரது ஆலோசனைகளைப் பெறும் நாம், அவர் {பீஷ்மர்} நமக்கு அளிக்கும் அறிவுரையின்படியே எதிரியுடன் போரிடுவோம்” என்றான் {கிருஷ்ணன்}.

ஓ! பாண்டுவின் அண்ணனே {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் வீரமகன்களும், வீர வாசுதவேனும் {கிருஷ்ணனும்} இப்படித் தீர்மானித்துக் கொண்டு, அனைவருமாகச் சேர்ந்து, தங்கள் கவசங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றைத் துறந்து, பீஷ்மரின் இருப்பிடத்திற்குச் சென்று, அவரது பாசறைக்குள் நுழைந்து, அனைவரும் தங்கள் சிரங்களைத் தாழ்த்தி அவரை {பீஷ்மரை} வணங்கினார்கள். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பாரதர்களின் குலக்காளையை {பீஷ்மரை} வழிபட்ட பாண்டுவின் மகன்கள், தங்கள் சிரங்களால் அவரை {பீஷ்மரை} வணங்கி, அவரது பாதுகாப்பை நாடினார்கள்.

பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட குரு பாட்டன் பீஷ்மர் அவர்களிடம், “ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, உனக்கு நல்வரவு. ஓ! தனஞ்சயா {அர்ஜுனா} உனக்கு நல்வரவு. ஓ! நீதிமானான மன்னன் யுதிஷ்டிரா உனக்கும், ஓ! பீமா உனக்கும் நல்வரவு. அசுவினிகளே {நகுல, சகாதேவர்களே} உங்களுக்கும் நல்வரவு. உங்கள் மகிழ்ச்சியைப் பெருக்க இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? அடைவதற்கு மிகக் கடினமானதாக அஃது இருப்பினும், என் முழு ஆன்மாவுடன் அதை நான் செய்வேன்” என்றார் {பீஷ்மர்}.

மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் கூடிய மன்னன் யுதிஷ்டிரன், இத்தகு பாசத்துடன் அவர்களிடம் இப்படி மீண்டும் மீண்டும் பேசிய கங்கையின் மைந்தரிடம் {பீஷ்மரிடம்} அன்பாக இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! அனைத்தையும் அறிந்தவரே, நாங்கள் எவ்வாறு வெற்றியை அடைவோம்? நாங்கள் எவ்வாறு அரசுரிமையை அடைவோம்? இந்த உயிரினங்களின் அழிவை எவ்வாறு நிறுத்த முடியும்? ஓ! தலைவா {பீஷ்மரே}, இவை அனைத்தையும் எனக்குச் சொல்லும். உமது மரணத்திற்கான வழியையும் எங்களுக்குச் சொல்லும்.

ஓ! வீரரே {பீஷ்மரே}, போரில் உம்மை நாங்கள் எவ்வாறு தாங்கிக் கொள்ள இயலும்? ஓ! குருக்களின் பாட்டா {பீஷ்மரே}, உமது எதிரிகள் உம்மைத் தேர்ந்தெடுக்க {குறிவைக்க}, நுண்ணியத் துளையையும் கொடுக்கவில்லை [1]. நீர் போரில் எப்போதும் வட்டமாக வளைக்கப்பட்ட வில்லுடனே காணப்படுகிறீர். நீர் எப்போது உமது கணைகளை எடுக்கிறீர், எப்போது அவற்றைக் குறிபார்க்கிறீர், (அவற்றை ஏவ) எப்போது வில்லை வளைக்கிறீர் என்பதை ஒருவராலும் குறிக்க முடியவில்லை.

ஓ! பகைவீரர்களைக் கொல்பவரே {பீஷ்மரே}, தேர்களையும், குதிரைகளையும், மனிதர்களையும், யானைகளையும் (நீர் எப்போதும் அடிப்பது போலவே) தொடர்ந்து அடித்துக் கொண்டு, இரண்டாவது சூரியனைப் போலவே உம்மை உமது தேரில் காண்கிறோம். போரில் கணைமாரியைப் பொழிந்து பெரும் அழிவை ஏற்படுத்தும் உம்மை வீழ்த்தத்தக்க மனிதன் அங்கே {போர்க்களத்தில்} எவன் இருக்கிறான்? ஓ! பாட்டா {பீஷ்மரே}, அரசாட்சி எங்களுடையதாக்குவது எவையோ, இறுதியாக இத்தகு அழிவை எனது படைக்கு நேராமல் தடுப்பது எவையோ, போரில் உம்மை வீழ்த்தக்கூடியவை எவையோ அந்த வழிகளை எனக்குச் சொல்லும்” {என்றான் யுதிஷ்டிரன்}.

ஓ! பாண்டுவின் அண்ணனே {திருதராஷ்டிரரே}, இந்த வார்த்தைகள் கேட்ட சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, அந்தப் பாண்டு மகனிடம், “ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நான் உயிரோடு இருக்கும் வரை, ஓ! பெரும் ஞானம் கொண்டவனே {யுதிஷ்டிரா}, போரில் வெற்றி உங்களுடையதாக முடியாது. இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். எனினும், பாண்டு மகன்களே, போராட்டத்தில் நான் வீழ்த்தப்பட்ட பிறகு, போரில் நீங்கள் வெற்றி அடையலாம்.

எனவே, போரில் வெற்றியை நீங்கள் விரும்பினால் தாமதமில்லாமல் என்னை அடிப்பீராக. பிருதையின் {குந்தியின்} மகன்களே, நீங்கள் விரும்பியவாறு என்னை அடிக்க நான் உங்களுக்கு அனுமதி அளிக்கிறேன். நற்பேற்றுச் சூழல் {அதிர்ஷ்டவசம்} என்று நான் எதைக் கருதுகிறேனோ, அதில் {அந்தச் சூழலில்} இப்படி {வெல்லப்பட முடியாதவன் என்று} என்னை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் [2]நான் கொல்லப்பட்டதும், எஞ்சியவர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள். எனவே, நான் சொன்னதைப் போலச் செய்வீராக” என்றார் {பீஷ்மர்}.

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “கதாயுதம் தரித்த அந்தகனைப் போலக் கோபத்தால் தூண்டப்பட்டுப் போரிடும் உம்மைப் போரில் வீழ்த்தச் செய்பவை எவையோ, அந்த வழிகளை எங்களுக்குச் சொல்லும். வஜ்ரதாரியோ {இந்திரனோ}, வருணனோ, யமனோ வீழ்த்தப்படலாம். எனினும், இந்திரனைத் தலைமையில் கொண்டு, ஒன்று சேர்ந்த தேவாசுரர்களாலேயே போரில் நீர் வீழ்த்தப்பட இயலாதவராவீர்” என்றான் {யுதிஷ்டிரன்}.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாண்டுவின் மகனே, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {யுதிஷ்டிரா}, நீ சொல்வது உண்மையே. கையில் ஆயுதங்களுடனும், என் பெரிய வில்லுடனும் போரில் நான் கவனமாகப் போரிட்டால் இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவாசுரர்களாலும் நான் வீழ்த்தப்பட முடியாதவனாவேன். எனினும், நான் என் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டால், இந்தத் தேர்வீரர்களாலும் என்னைக் கொல்ல முடியும்.

தன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டவர், கீழே விழுந்தவர், கவசம் நழுவியவர், கொடிமரம் விழுந்தவர், தப்பி ஓடுபவர், அச்சமுற்றவர், “நான் உம்மவன்” என்று சொல்பவர், பெண்ணாக இருப்பவர், பெண் பெயரைத் தாங்கியவர், இனிமேலும் தன்னைத் தானே கவனித்துக் {பாதுகாத்துக்} கொள்ளும் திறன் இல்லாதவர், ஒரே மகனைக் கொண்டவர், அருவருப்பான ஒருவர் ஆகிய இவர்களைப் போன்றோருடன் நான் போரிட விரும்புவதில்லை [3].

ஓ! மன்னா, முன்பே நான் கொண்ட தீர்மானத்தையும் கேட்பாயாக. மங்கலமற்ற சகுனத்தைக் கண்டால், நான் போரிடவே மாட்டேன். உன் படையில் இருப்பவனும், சிகண்டி என்ற பெயரில் அறியப்பட்டவனும், போரில் கோபம் நிறைந்தவனும், துணிச்சல் மிக்கவனும், எப்போதும் வெல்பவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்தத் துருபதன் மகன் {சிகண்டி}, முன்பு பெண்ணாக இருந்தவன் ஆவான், ஆனால் அதன்பின் ஆண்மையை அடைந்தான் [4]. இவை யாவும் எப்படி நடந்தன என்ற உண்மையை நீங்கள் அறிவீர்கள்.

போரில் துணிவுள்ளவனான அர்ஜுனன், கவசம் தரித்துக் கொண்டு, சிகண்டியைத் தனக்கு முன்னே நிறுத்திக் கொண்டு, தன் கூரிய கணைகளால் என்னைத் தாக்கட்டும். மங்கலமற்ற அந்தச் சகுனம், அதிலும் குறிப்பாக முன்னர்ப் பெண்ணாக இருந்தவனின் வடிவத்தில் {அந்தச் சகுனம்} அங்கிருக்கும்போது, கையில் வில்லையும், கணையையும் கொண்டிருந்தாலும், நான் அவனைத் தாக்க ஒரு போதும் முயல மாட்டேன். ஓ! பாரதர்களின் குலக்காளையே {யுதிஷ்டிரா}, அந்த வாய்ப்பை அடையும், பாண்டுவின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் கணைகளால் அனைத்துப் புறங்களிலும் என்னை விரைவாகத் துளைக்கட்டும்.

உயர்ந்த அருளைக் கொண்ட கிருஷ்ணன் மற்றும் பாண்டுவின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகியோரைத் தவிர, போரில் என்னைக் கொல்ல இயன்ற ஒருவனை மூவுலகிலும் நான் காணவில்லை. எனவே, பீபத்சு {அர்ஜுனன்}, ஆயுதங்கள் தரித்துக் கொண்டு, போரில் கவனமாகப் போராடிபடி, தன் முன்னிலையில் (சிகண்டி அல்லது) வேறு எதையும் நிறுத்திக் கொண்டு, கையில் உள்ள தன் சிறந்த வில்லால் (என் தேரில் இருந்து) என்னைக் கீழே வீசி எறியட்டும். பிறகு, வெற்றி உறுதியாகும். ஓ! பெரும் மன்னா, ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவனே {யுதிஷ்டிரா}, நான் உன்னிடம் சொல்லும் இதைச் செய்வாயாக. பிறகு, போரில் கூடியிருக்கும் தார்தராஷ்டிரர்கள் அனைவரையும் உன்னால் கொல்ல இயலும்” என்றார் {பீஷ்மர்}. 

பீஷ்மரை நினைத்து வருந்திய அர்ஜுனன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 108இ-பீஷ்மரிடம் இருந்து தங்கள் பாசறைக்கு வந்த பாண்டவர்கள்; பீஷ்மரை நினைத்து வேதனையடைந்த அர்ஜுனன்; கிருஷ்ணனிடம் தன் குழந்தைப் பருவத்தைச் சொன்ன அர்ஜுனன்; பீஷ்மரைக் கொல்ல மாட்டேன் என்று சொன்ன அர்ஜுனன்; விதியை மாற்ற முடியாது என்று சொன்ன கிருஷ்ணன்; சிகண்டி கொல்வான் என்று சொல்லி படுக்கைக்குச் சென்ற அர்ஜுனன்..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இவை அனைத்தையும் உறுதி செய்து கொண்ட பார்த்தர்கள் {பாண்டவர்கள்}, குரு பாட்டனான உயர் ஆன்ம பீஷ்மரை வணங்கிவிட்டுத் தங்கள் பாசறைகளுக்குத் திரும்பினர்.

அடுத்த உலகத்திற்குச் செல்லத் தயாராகிவிட்ட கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} இதைச் சொன்ன பிறகு, வேதனையில் எரிந்து, அவமானம் முகத்தில் பரவிய {அவமானம் நிறைந்த முகத்துடன்} அர்ஜுனன், இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! மாதவா {கிருஷ்ணா}, எங்கள் குலத்தின் முதிர்ந்த உறுப்பினரும் {குருக்களில் முதிர்ந்தவரும்}, ஞானமும் புத்திசாலித்தனமும் கொண்டவரும், வயதில் எனக்கு {மிக} மூத்தவருமான பாட்டனோடு {பீஷ்மரோடு} போரில் நான் எவ்வாறு மோதுவேன்?

குழந்தைப் பருவ நாட்களில் நான் விளையாடிக் கொண்டிருக்கையில், ஓ! வாசுதேவா {கிருஷ்ணா}, அழுக்கான உடலுடன் இவரது மடியில் ஏறி, உயர் ஆன்மா கொண்ட இந்த ஒப்பற்றவரின் {பீஷ்மரின்} உடலை நான் புழுதியால் பூசுவேன் {அழுக்காக்குவேன்}. ஓ! கதனின் அண்ணனே {கிருஷ்ணா}, அவர் {பீஷ்மர்}, என் தந்தை பாண்டுவின் தந்தையாவார். நான் குழைந்தையாயிருக்கையில், ஒரு முறை இந்த உயர் ஆன்மாவின் {பீஷ்மரின்} மடியில் ஏறி, தந்தை என்று நான் அழைத்தபோது, “ஓ! பாரதா {அர்ஜுனா}, நான் உன் தந்தையல்ல, ஆனால் உன் தந்தைக்கே தந்தையாவேன் {உன் பாட்டனாவேன்}” என்றார். இதுவே என் குழந்தைப் பருவத்தில் அவர் எனக்கு (மறுமொழியாகச்) சொன்னது.

ஓ! இப்படிச் சொன்னவர் எப்படி என்னால் கொல்லப்படலாம்? ஓ! என் படை அழியட்டும். வெற்றியோ, மரணமோ, எதை நான் அடைந்தாலும், அந்த உயர் ஆன்மாவிடம் {பீஷ்மரிடம்} நான் ஒரு போதும் போரிட மாட்டேன். (இதையே நான் நினைக்கிறேன்}. ஓ! கிருஷ்ணா, நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான் {அர்ஜுனன்} [1].

வாசுதேவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “முன்னர்ப் பீஷ்மரைக் கொல்வதாகச் சூளுரைத்த பிறகு, ஓ! ஜிஷ்ணு {அர்ஜுனா}, க்ஷத்திரியக் கடமைகளுக்கு ஏற்புடைய வகையில் அவரை {பீஷ்மரை} நீ எப்படிக் கொல்லாமல் இருக்க முடியும்? ஓ! பார்த்தா {அர்ஜுனா}, போரில் வெல்லப்பட முடியாமல் இருக்கும் அந்த க்ஷத்திரியரை {பீஷ்மரை}, அவரது தேரில் இருந்து கீழே வீசி எறிவாயாக. கங்கையின் மைந்தரைப் {பீஷ்மரைக்} கொல்லமால் ஒருபோதும் வெற்றி உனதாகாது.

இப்படியே அவர் {பீஷ்மர்} யமனின் வசிப்பிடத்தை அடைவார். இது தேவர்களால் முன்பே தீர்மானிக்கப்பட்டதாகும். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, முன்பே விதிக்கப்பட்டது நடக்க வேண்டும். இது வேறாக முடியாது. ஓ! வெல்லப்பட முடியாதவனே {அர்ஜுனா}, வாயைத் திறந்திருக்கும் காலனைப் போன்ற வெல்லப்பட முடியாத பீஷ்மரிடம் உன்னைத் தவிர யாராலும், ஏன் வஜ்ரபாணியால் {இந்திரனால்} கூடப் போரிட முடியாது. கவலையேதுமற்று பீஷ்மரைக் கொல்வாயாக.

பெரும்புத்திசாலியான பிருஹஸ்பதி, பழங்காலத்தில் சக்ரனிடம் {இந்திரனிடம்} சொன்னவையான இந்த எனது வார்த்தைகளைக் கேட்பாயாக. “அனைத்துத் தகுதியும் கொண்ட, மதிக்கத்தகுந்த முதிய மனிதனேயானாலும், அவன் எதிரியாக வந்தாலோ, உண்மையில் வேறு எவனும் தன்னை அழிக்க அணுகினாலோ, அவனை ஒருவன் கொல்ல வேண்டும்” {என்பதே அவ்வார்த்தைகள்}.

ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, போரிடுவது, குடிகளைக் காப்பது, வேள்விகளை நடத்துவது ஆகிய அனைத்தையும் தீமையில்லாமல் செய்வதே க்ஷத்திரியர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட நித்திய கடமையாகும்” என்றான் {கிருஷ்ணன்}.

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! கிருஷ்ணா, சிகண்டி நிச்சயமாகப் பீஷ்மரின் மரணத்துக்குக் காரணமாவான், ஏனெனில், பாஞ்சால இளவரசனான அவனைக் {சிகண்டியைக்} கண்ட உடனேயே, பீஷ்மர் தாக்குவதை நிறுத்துகிறார். எனவே, அவருக்கு, {பீஷ்மருக்கு} எதிரில் நமக்கு முன்னிலையில் சிகண்டியை நிறுத்தும் வழிமுறையால் நாம் கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} வீழ்த்துவோம்.

பெரிய வில்லாளிகளான பிறரை நான் எனது கணைகளால் தடுப்பேன். சிகண்டியைப் பொறுத்தவரை, அவன், போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையான அந்தப் பீஷ்மருடன் தனியாகப் போரிடுவான்.

சிகண்டி முன்பு பெண்ணாகப் பிறந்து, அதன்பிறகு ஆணாக மாறியவனாதலால், அவனை {சிகண்டியை} அவர் தாக்க மாட்டார் என்று நான் அந்தக் குருக்களின் தலைவரிடம் இருந்தே {பீஷ்மரிடமிருந்தே} கேட்டிருக்கிறேன்” என்றான் {அர்ஜுனன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பீஷ்மரின் அனுமதியுடன் இதைத் தீர்மானித்த பாண்டவர்கள், மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன், மாதவனுடன் {கிருஷ்ணனுடன்} சென்றனர். பிறகு அந்த மனிதர்களில் காளையர், தங்கள் தங்கள் படுக்கைக்குச் சென்றனர்” {என்றான் சஞ்சயன்}. 

பீஷ்மரைச் சவாலுக்கழைத்த சிகண்டி! – பீஷ்ம பர்வம் பகுதி – 109-பாண்டவ கௌரவப் படைகளில் அவரவர் நின்ற வரிசைகள்; சிகண்டியை முன்னிறுத்திச் சென்ற பாண்டவப் படை; பீமனால் கொல்லப்பட்ட கௌரவப் படையினர்; தப்பி ஓடிய கௌரவப் படை; இவற்றைப் பொறுத்துக் கொள்ளாத பீஷ்மர்; பாண்டவர்களின் முக்கியத் தேர்வீரர்களைத் தடுத்த பீஷ்மர்; பாண்டவப் படைக்கு அச்சமூட்டிய பீஷ்மர்; பீஷ்மரின் சாதனைகளைக் கண்டு ஆச்சரியமடைந்த கௌரவர்கள்; பீஷ்மரின் மார்பைத் துளைத்த சிகண்டி; சிகண்டியைத் தாக்காத பீஷ்மர்; பீஷ்மரிடம் கோபத்துடன் பேசிய சிகண்டி; பீஷ்மருடன் போரிடச் சிகண்டியைத் தூண்டிய அர்ஜுனன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “சிகண்டி போரில் கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} எவ்வாறு எதிர்த்துச் சென்றான்? பீஷ்மரும் பாண்டவர்களை எவ்வாறு எதிர்த்து சென்றார்? ஓ! சஞ்சயா இவையனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு அந்தப் பாண்டவர்கள் அனைவரும், சூரிய உதயக் காலத்தின் போது, சிகண்டியைத் தங்கள் முன்னிலையில் நிறுத்தி, பேரிகைகள், மத்தளங்கள், ஆனகங்கள் ஆகியவற்றை அடித்துக் கொண்டும், சுற்றிலும் பால்வெண்மை கொண்ட சங்குகளை ஊதிக் கொண்டும் போருக்குச் சென்றனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பகைவர்கள் அனைவருக்கும் அழிவை உண்டாக்கும் ஒரு வியூகத்தை [1] அமைத்துக் கொண்டு அவர்கள் அணிவகுத்துச் சென்றனர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சிகண்டி துருப்புகள் அனைத்திற்கும் முன்னணியில் நின்றான். பீமசேனனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} அவனது {சிகண்டியின்} தேர்ச்சக்கரங்களின் பாதுகாவலர்களானார்கள்.

அவனுக்கு {சிகண்டிக்குப்} பின்னால் திரௌபதியின் மகன்களும், வீர அபிமன்யுவும் இருந்தனர். வலிமைமிக்கத் தேர்வீரர்களான சாத்யகியும், சேகிதானனும் {சிகண்டியின்} இறுதிப் பாதுகாவலர்கள் ஆனார்கள் [2]. அவர்களுக்குப் பின் பாஞ்சாலர்களால் பாதுகாக்கப்பட்ட திருஷ்டத்யும்னன் இருந்தான். திருஷ்டத்யும்னனுக்குப் பின்னால் அடுத்து, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அரசத் தலைவனான யுதிஷ்டிரன், இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} துணையுடன், காற்றைச் சிங்க முழக்கங்களால் நிறைத்த படி அணிவகுத்தான். அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} அடுத்து தன் துருப்புகளால் சூழப்பட்ட விராடன் இருந்தான். அவனுக்கு {விராடனுக்கு} அடுத்து, ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, துருபதன் இருந்தான். கைகேயச் {கேகயச்} சகோதரர்கள் ஐவர், வீர திருஷ்டகேது ஆகியோர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பாண்டவப்படையின் பின்புறத்தைப் பாதுகாத்தார்கள் [3]. தங்கள் பெரிய படையை இப்படிப்பட்ட வியூகத்தில் [4] அணிவகுத்த பாண்டவர்கள், தங்கள் உயிர்களையே விடத் துணிந்து உமது படையை எதிர்த்து விரைந்தனர்.

அதே போலக் கௌரவர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் படை முழுமைக்கும் தலைமையில் வலிமைமிக்கத் தேர்வீரரான அந்தப் பீஷ்மரை நிறுத்திப் பாண்டவர்களை எதிர்த்துச் சென்றனர். அந்த வெல்லப்படமுடியாத வீரர் {பீஷ்மர்} உமது வலிமைமிக்க மகன்களால் பாதுகாக்கப்பட்டார். அடுத்து, அவர்களுக்குப் பின்னால் பெரும் வில்லாளியான துரோணரும், அவரது வலிமைமிக்க மகனும் (அஸ்வத்தாமனும்) இருந்தார்கள். அடுத்து, அதற்குப் பின்னால் தன் யானைப்படையால் சூழப்பட்ட பகதத்தன் இருந்தான். பகதத்தனுக்குப் பின்னால் கிருபரும், கிருதவர்மனும் இருந்தனர். அவர்களுக்குப் பின்னால் காம்போஜர்களின் வலிமைமிக்க ஆட்சியாளன் சுதக்ஷிணனும், மகதர்களின் மன்னன் ஜயத்சேனனும், சுபலனின் மகனும் {சகுனியும்}, பிருஹத்பலனும் இருந்தனர். அதேபோல, பெரும் வில்லாளிகளான பிற மன்னர்கள் அனைவரும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது படையின் பின்புறத்தைப் பாதுகாத்தனர்.

ஒவ்வொரு நாள் வந்தபோதும், சந்தனுவின் மகனான பீஷ்மர், சில நேரங்களில் அசுரர்களின் முறைமையின்படியும், சிலநேரங்களில் பிசாசர்கள் மற்றும் சில நேரங்களில் ராட்சசர்கள் {முறைமையின்} படியும் போரில் வியூகங்களை அணிவகுத்தார். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளும் உமது துருப்பினர் மற்றும் அவர்களுடையவர்கள் {அவர்களது துருப்பினர்} ஆகிய இருதரப்புகளுக்கும் இடையில் யமனின் ஆட்சிப்பகுதியில் வசிப்போர் எண்ணிக்கையைப் பெருக்கும்படியான போர் தொடங்கியது. பார்த்தர்கள் {பாண்டவப் படையினர்}, அர்ஜுனனைத் தங்கள் தலைமையில் கொண்டு, சிகண்டியை முன்னணியில் நிறுத்தி, பல்வேறு விதங்களிலான கணைகளை இறைத்தபடி அந்தப் போரில் பீஷ்மரை எதிர்த்துச் சென்றனர். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமனின் [5] கணைகளால் பீடிக்கப்பட்ட உமது வீரர்கள் (பலர்), பீறிட்ட குருதியில் குளித்து, அடுத்த உலகத்திற்குச் சென்றனர்.

நகுலன், சகாதேவன், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகியோர் உமது படையை அணுகி, பெரும் வீரத்தால் அதை {உமது படையைப்} பீடிக்கத் தொடங்கினர். போரில் இப்படிக் கொல்லப்பட்ட உமது வீரர்கள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களின் அந்தப் பெரும்படையைத் தடுக்க முடியாதவர்களாக இருந்தனர். பிறகு, பெரும் தேர்வீரர்களால் பயங்கரமாகப் பீடிக்கப்பட்டு, இப்படி அவர்களால் எங்கும் கொல்லப்பட்டுவந்த உமது படையினர், அனைத்துப் புறங்களிலும் தப்பி ஓடினர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களின் கூரிய கணைகளால் கொல்லப்பட்ட அவர்கள், {தங்களுக்குப்} பாதுகாவலன் ஒருவனையும் கண்டடையவில்லை” {என்றான் சஞ்சயன்}.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “சினத்தால் தூண்டப்பட்ட வீர பீஷ்மர், பார்த்தர்களால் எனது படை பீடிக்கப்படுவதைக் கண்டு என்ன செய்தார் என்பதை எனக்குச் சொல்வாயாக. ஓ! பாவமற்றவனே {சஞ்சயா}, எதிரிகளைத் தண்டிப்பவரான அந்த வீரர் {பீஷ்மர்}, போரில் எப்படிப் பாண்டவர்களை எதிர்த்து விரைந்து, சோமகர்களை {எப்படிக்} கொன்றார் என்பதையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களால் உமது மகனின் {துரியோதனனின்} படை பீடிக்கப்பட்ட போது, உமது தந்தை {பீஷ்மர்} என்ன செய்தார் என்பதை நான் உமக்குச் சொல்கிறேன். ஓ! பாண்டுவின் அண்ணனே {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் வீரப் புதல்வர்கள், மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் (தாங்கள் சந்தித்த அனைவரையும்) கொன்றபடி உமது மகனின் {துரியோதனனின்} படையினருடன் மோதினர்.

ஓ! மனிதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றுக்கு நேர்ந்த அந்தப் பேரழிவையும், உமது படையின் எதிரியால் போரில் ஏற்படுத்தப்பட்ட அந்த அழிவைப் பீஷ்மரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வெல்லப்பட முடியாத அந்தப் பெரும் வில்லாளி {பீஷ்மர்}, தம் உயிரையே விடத் துணிந்து, பாண்டவர்கள், பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் மீது நாராசங்களையும் {நீண்ட கணைகளையும்}, வத்சதந்தங்களையும் {கன்றுக்குட்டியின் பல் போன்ற கணைகளையும்}, அஞ்சலிகங்களையும் {பிறை வடிவக் கணைகளையும்} பொழிந்தார்.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபத்துடன் கூடிய அவர் {பீஷ்மர்}, தாக்குதலுக்குரிய, தற்காப்புக்குரிய பிற ஆயுதங்களை சக்தியுடன் பொழிந்து, போரில் கடுமையாகப் போராடிக்கொண்டிருந்த பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்களில் முதன்மையான ஐவரைத் தன் ஆயுதங்களாலும் கணைகளாலும் தடுத்தார். கோபத்தால் தூண்டப்பட்ட அவர் {பீஷ்மர்}, அந்தப் போரில் எண்ணற்ற யானைகளையும், குதிரைகளையும் கொன்றார். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மனிதர்களில் காளையான அவர் {பீஷ்மர்}, தேர்வீரர்கள் பலரை அவர்களது தேரில் இருந்தும், குதிரைவீரர்களை அவர்களது குதிரைகளில் இருந்தும், காலாட்படை வீரர் கூட்டத்தையும், யானைவீரர்களை அவர்கள் செலுத்திய விலங்குகளின் முதுகில் இருந்தும் கீழே தள்ளி, எதிரிக்கு அச்சமூட்டினார்.

பாண்டவ வீரர்கள் அனைவரும், ஒன்று கூடியிருக்கும் அசுரர்கள் வஜ்ரதாரியை {இந்திரனை} எதிர்த்து விரைவதைப் போல, போரில் தனியாகப் போராடிக் கொண்டிருக்கும் வலிமைமிக்கத் தேர்வீரரான பீஷ்மரை நோக்கிப் பெரும் சுறுசுறுப்புடன் விரைந்தார்கள். அவர் {பீஷ்மர்}, இந்திரனின் இடிக்கு ஒத்த தீண்டலைக் கொண்ட கூர்தீட்டப்பட்ட தன் கணைகளை அனைத்துப் புறங்களிலும் ஏவியபடி பயங்கரத் தோற்றம் கொண்டவராக எதிரிக்குத் தெரிந்தார். அந்தப் போரில் போரிட்டுக் கொண்டிருந்தபோது சக்ரனின் {இந்திரனின்} வில்லை ஒத்த அவரது பெரிய வில் எப்போதும் வட்டமாகவே வளைக்கப்பட்டே தெரிந்தது. போரில் அந்தச் சாதனைகளைக் கண்ட உமது மகன்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் ஆச்சரியத்தால் நிறைந்து பாட்டனை {பீஷ்மரை} வழிபட்டார்கள்.

பார்த்தர்கள் {பாண்டவர்கள்}, போரில் போராடிக் கொண்டிருக்கும் உமது வீரத்தந்தையின் {பீஷ்மரின்} மேல், தேவர்கள் (அசுரன்) விப்ரசித்தியைப் (பழங்காலத்தில்) கண்டதைப் போல மகிழ்ச்சியற்ற இதயங்களுடன், தங்கள் கண்களைச் செலுத்தினர். அவர்களால், அகலவிரித்த வாயைக் கொண்ட அந்தகனை ஒத்த அந்த வீரரை {பீஷ்மரைத்} தடுக்க முடியவில்லை. அந்தப் பத்தாம் {10} நாள் போரில், பீஷ்மர், , காட்டை எரிக்கும் காட்டுத்தீயைப் போல, சிகண்டியின் படைப்பிரிவைத் தன் கூரிய கணைகளால் எரித்தார்.

கடும்நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்பையோ, காலனால் தூண்டப்பட்ட அந்தகனையோ ஒத்த சிகண்டி, மூன்று {3} கணைகளால் அவரது {பீஷ்மரின்} நடு மார்பைத் துளைத்தார். இப்படி ஆழத்துளைக்கப்பட்ட பீஷ்மர் (தன்னைத் துளைத்துக் கொண்டிருப்பது) சிகண்டி என்பதைக் கண்டார். கோபத்தால் தூண்டப்பட்டாலும், (சிகண்டியோடு போரிட) விரும்பாத பீஷ்மர் சிரித்துக் கொண்டே, “நீ என்னைத் தாக்கினாலும், தாக்காவிட்டாலும், நான் உன்னுடன் ஒருபோதும் போரிட மாட்டேன். படைப்பாளனால் {பிரம்மனால்} முதலில் செய்யப்பட்டது போலவே இன்னும் இருக்கும் அந்தச் சிகண்டியே நீ [6]” என்றார் {பீஷ்மர்}.

[6] பாலினம் மாற்றப்பட்டாலும் நீ இன்னும் பெண்ணே என்று சிகண்டியிடம் பீஷ்மர் சொல்வதாகக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அவரது {பீஷ்மரின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட சிகண்டி, கோபத்தால் உணர்வுகளை இழந்து, தன் கடைவாயை நாவால் நனைத்தபடி {நக்கியபடி}, அந்தப் போரில் பீஷ்மரிடம், “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {பீஷ்மரே}, க்ஷத்திரிய இனத்தை அழிப்பவர் நீர் என்பதை நான் அறிவேன் [7]. ஜமதக்னியின் மகனுடனான {பரசுராமருடனான} உமது போரையும் நான் கேட்டிருக்கிறேன். மனிதசக்திக்கு மீறிய உமது ஆற்றலைக் குறித்தும் நான் அதிகம் கேட்டிருக்கிறேன். உமது ஆற்றலை அறிந்தும், நான் இன்று உம்மோடு போரிடுவேன்.

[7] வேறொரு பதிப்பில் க்ஷத்திரியர்களுக்குப் பயத்தை உண்டாக்குபவர் நீர் என்பதை நான் அறிவேன் என்று சிகண்டி சொல்வதாக இருக்கிறது.

பாண்டவர்களுக்கும், எனக்கும் ஏற்புடையதைச் செய்ய, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, ஓ! மனிதர்களில் சிறந்தவரே {பீஷ்மரே}, போரில் இன்று நான் உம்மோடு போரிடுவேன். நிச்சயமாக நான் உம்மைக் கொல்வேன். உமது முன்னிலையில் இதை நான் உண்மையின் {சத்தியத்தின்} மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். நீர் என்னைத் தாக்கினாலும், தாக்கவில்லையென்றாலும், நீர் என்னிடம் இருந்து உயிரோடு தப்ப முடியாது. ஓ! எப்போதும் வெல்வபரே, ஓ! பீஷ்மரே, இவ்வுலகை இறுதிமுறையாகக் காண்பீராக” என்றான் {சிகண்டி}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படிச் சொன்ன அந்தச் சிகண்டி தன் சொற்கணைகளால் ஏற்கனவே துளைத்தது போக, அந்தப் போரில் ஐந்து {5} நேரான கணைகளால் பீஷ்மரைத் துளைத்தான்.

வலிமைமிக்கத் தேர்வீரனான அர்ஜுனன், சிகண்டியின் வார்த்தைகளைக் கேட்டு, அவனே {சிகண்டியே} பீஷ்மரை அழிப்பவன் எனக் கருதி, “என் கணைகளால் எதிரியை முறியடித்தபடி உன் பின்னால் இருந்து போரிடுவேன். சினம் தூண்டப்பட்ட நீ பயங்கர ஆற்றல் படைத்த பீஷ்மரை எதிர்த்து விரைவாயாக. வலிமைமிக்கப் பீஷ்மரால் போரில் உன்னைப் பீடிக்க இயலாது. எனவே, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {சிகண்டி}, பீஷ்மருடன் மூர்க்கமாகப் போரிடுவாயாக. ஓ! ஐயா {சிகண்டி}, பீஷ்மரைக் கொல்லாமல் நீ இன்று திரும்புவாயானால், என்னுடன் சேர்த்து நீ இவ்வுலகில் ஒரு கேலிப்பொருளாவாய். ஓ! வீரா {சிகண்டியே}, இந்தப் பெரும்போரில் நாம் கேலிக்கு ஆளாகாதவாறு போரிட முயற்சி செய்வாயாக. பீஷ்மரைக் கொல்வாயாக. ஓ! பெரும்பலம் கொண்டவனே {சிகண்டியே}, (குரு படையின்) தேர்வீரர்கள் அனைவரையும் தடுத்து நான் இந்தப் போரில் உன்னைக் காப்பேன். நீ பாட்டனை {பீஷ்மரைக்} கொல்வாயாக.

துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர், சுயோதனன் {துரியோதனன்}, சித்திரசேனன், விகர்ணன், சிந்துக்களின் ஆட்சியாளன் ஜெயத்ரதன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், காம்போஜர்களின் ஆட்சியாளனான சுதக்ஷிணன், துணிச்சல்மிக்கப் பகதத்தன், மகதர்களின் வலிமைமிக்க மன்னன்{ஜெயத்சேனன்}, சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, ராட்சசர்களில் துணிச்சல்மிக்கவனான ரிஷ்யசிருங்கனின் மகன் {அலம்புசன்}, திரிகர்த்த ஆட்சியாளன் {சுசர்மன்} மற்றும் (கௌரவப்படையின்) பெரும் தேர்வீரர்கள் பிறர் ஆகியோரை, பொங்கும் கடலைத் தடுக்கும் கரையைப் போலத் தனியாக நான் தடுப்பேன். உண்மையில், ஒன்றுகூடி நம்மோடு போர்புரியக்கூடிய குருபடையின் வலிமைமிக்க வீரர்கள் அனைவரையும் நான் தடுத்து நிறுத்துவேன். நீ பாட்டனைக் {பீஷ்மரைக்} கொல்வாயாக” என்று சொல்லி அவனை {சிகண்டியைத்} தூண்டினான் {அர்ஜுனன்}” {என்றான் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்}. 

அர்ஜுனனுக்கு அஞ்சிய துரியோதனன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 110-பீஷ்மர் புரிந்த கடுமையான போர்; பீஷ்மர் இருந்த இடத்திற்கு விரைந்து வந்த அர்ஜுனன்; அர்ஜுனனைக் கண்டு சிதறி ஓடிய கௌரவப் படை; பீஷ்மரிடம் பேசிய துரியோதனன்; துரியோதனனுக்குப் பதில் சொன்ன பீஷ்மர்; போரில் பீஷ்மரைத் தடுத்த பாண்டவப் படையினர்; பீஷ்மரால் கொல்லப்பட்ட படையினரின் எண்ணிக்கை…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “பாஞ்சால இளவரசனான சிகண்டி, கோபத்தால் தூண்டப்பட்டு, நீதிமிக்க ஆன்மாவும், கட்டுப்பாடான நோன்புகளையும் கொண்ட கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} போரில் எவ்வாறு எதிர்த்துச் சென்றான்? பெரும் செயல்வேகம் தேவைப்பட்ட அந்தச் சந்தர்ப்பத்தில், வெற்றியை விரும்பி ஆயுதங்களை உயர்த்தியவர்களும், பாண்டவப்படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களில், செயல்வேகத்துடன் முயற்சி செய்து, சிகண்டியைப் பாதுகாத்தவர்கள் யாவர்? பெரும் சக்தியைக் கொண்ட சந்தனுவின் மகன் பீஷ்மரும், அந்தப் பத்தாம் {10} நாள் போரில் பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களுடன் எவ்வாறு போரிட்டார்? போரில் பீஷ்மருடன் சிகண்டி மோதும் கருத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. (உண்மையில், சிகண்டி பீஷ்மரைத் தாக்கிய போது), பீஷ்மரின் தேரோ, அவரது வில்லோ முறிக்கப்பட்டதா?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்தப் போரில் போராடிக் கொண்டிருந்தபோது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் வில்லுக்கோ, தேருக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அப்போது அவர் {பீஷ்மர்} நேரான கணைகளால் எதிரையைக் கொன்று கொண்டிருந்தார். உமது படையின் பல்லாயிரக்கணக்கான வலிமைமிக்கத் தேர்வீரர்களும், யானைகளும், நன்கு சேணம் பூட்டப்பட்ட குதிரைகளும் பாட்டனைப் {பீஷ்மரைத்} தங்கள் முன்னிலையில் கொண்டு போரிடச் சென்றன.

ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, எப்போதும் வெல்பவரான பீஷ்மர், தன் நோன்புக்கு ஏற்புடையவகையில், பார்த்தர்களின் துருப்புகளைக் கொல்வதில் இடையறாமல் ஈடுபட்டார். (அவர்களோடு {பாண்டவப் படைவீரர்களோடு}) போரிடுபவரும், தன் கணைகளால் தனது எதிரிகளைக் கொல்பவருமான அந்தப் பெரும் வில்லாளியைப் {பீஷ்மரைப்} பாஞ்சாலர்களாலும், பாண்டவர்களாலும், தாங்கிக் கொள்ள இயலவில்லை. பத்தாம் நாள் வந்த போது, பீஷ்மர், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தன் கணைகளால் அந்த எதிரிப் படையைப் பிரித்துச் சிதறடித்தார்.

ஓ! பாண்டுவின் அண்ணனே {திருதராஷ்டிரரே}, வேல் தரித்த யமனுக்கு ஒப்பான அந்தப் பெரும் வில்லாளி பீஷ்மரைப் போரில் வீழ்த்த பாண்டுவின் மகன்களால் முடியவில்லை. பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெல்லப்பட முடியாதவனும், இடது கையாலும் வில்வளைக்க இயன்றவனுமான பீபத்சு, அல்லது தனஞ்சயன் {அர்ஜுனன்}, தேர்வீரர்கள் அனைவரையும் அச்சுறுத்தியபடி அந்த இடத்திற்கு வந்தான். சிங்கத்தைப் போல உரக்க முழங்கி, வில்லின் நாணைத் தொடர்ச்சியாகப் பின்னிழுத்து, கணைகளின் மாரியைப் பொழிந்தபடி, காலனைப் போலவே அந்தப் போர்க்களத்தில் திரிந்தான். அவனது முழக்கங்களால் அச்சமடைந்த உமது வீரர்கள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சிங்கத்தின் ஒலியைக் கேட்ட சிறு விலங்குகளைப் போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அச்சத்தால் தப்பி ஓடினர்.

இப்படி அந்தப் படையைப் பீடித்து, வெற்றிமகுடம் சூட்டிய பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கண்ட துரியோதனன், தானும் அச்சத்தின் ஆதிக்கத்துக்குள்ளாகி பீஷ்மரிடம், “ஓ! ஐயா {பீஷ்மரே}, (தன் தேரில் பூட்டப்பட்ட) வெண் குதிரைகளையும், தன் தேரோட்டியாகக் கிருஷ்ணனையும் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, காட்டை எரிக்கும் தீயைப் போல என் துருப்புகள் அனைத்தையும் எரிக்கிறான். ஓ! வீரர்களில் முதன்மையானவரே, ஓ! கங்கையின் மைந்தரே {பீஷ்மரே}, போரில் பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} கொல்லப்படுவதையும், {என்} துருப்புகள் அனைத்தும் ஓடுவதையும் பாரும்.

உண்மையில், ஓ! எதிரிகளை எரிப்பவரே {பீஷ்மரே}, காட்டில் மந்தையாளன் {இடையன்} தன் கால்நடைகளை நையப்புடைப்பதைப் போலவே, {அர்ஜுனனால்} என் படையும் நையப்புடைக்கப்படுகிறது. வெல்லப்பட முடியாதவனான பீமனும், தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால் பிளக்கப்பட்டு, அனைத்துப் புறங்களிலும் சிதறி ஓடும் எனது படையை முறியடிக்கிறான். சாத்யகி, சேகிதானன், மாத்ரியின் இரட்டை மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, வீர அபிமன்யு ஆகியோரும் எனது துருப்புகளை முறியடிக்கின்றனர். துணிச்சல் மிக்கத் திருஷ்டத்யும்னன், ராட்சசன் கடோத்கசன் ஆகியோரும், இந்தக் கடும் போரில் என் படையை மூர்க்கமாக உடைத்துத் துரத்துகின்றனர்.

அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களால் கொல்லப்படும் இந்தத் துருப்புகளில், ஓ! மனிதர்களில் புலியே {பீஷ்மரே}, நிலைத்து நிற்பதிலும், களத்தில் போராடுவதிலும் தேவர்களுக்கு இணையான ஆற்றல் படைத்த உம்மைத் தவிர வேறு புகலிடத்தை நான் காணவில்லை. எனவே, தாமதமில்லாமல் அந்தப் பெரும் தேர்வீரர்களை அடைந்து, பீடிக்கப்படும் இந்தத் துருப்புகளுக்குப் புகலிடமாவீராக” என்றான் {துரியோதனன்}.

அவனால் {துரியோதனனால்} இப்படிச் சொல்லப்பட்ட உமது தந்தையும், சந்தனுவின் மகனுமான தேவவிரதர் {பீஷ்மர்}, ஒருக்கணம் சிந்தித்து, தான் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொண்டு, உமது மகனுக்கு ஆறுதல் அளிக்கும் இந்த வார்த்தைகளைச் சொன்னார், “ஓ! துரியோதனா, நான் சொல்வதை அமைதியாகக் கேட்பாயாக. ஓ! மன்னா, ஓ! பெரும்பலம் கொண்டவனே {துரியோதனா}, “உயர் ஆன்மா கொண்ட பத்தாயிரம் {10000} க்ஷத்திரியர்களை ஒவ்வொரு நாளும் கொன்றுவிட்டே போரில் இருந்து திரும்புவேன்” என்று முன்பு நான் உன்னிடம் உறுதியேற்றேன். ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, அந்நோன்பை நான் நிறைவேற்றி இருக்கிறேன். ஓ! பெரும்பலம் கொண்டவனே, இன்று நான் இன்னும் பெரிய சாதனை ஒன்றை அடைவேன்.

ஒன்று இன்று நான் கொல்லப்பட்டு உறங்குவேன், அல்லது பாண்டவர்களைக் கொல்வேன். {இந்த இரண்டில் ஒன்று இன்று ஏற்படுவது உறுதி}. ஓ! மனிதர்களில் புலியே {துரியோதனா}, உன் படையின் தலைமையில் இருந்து எனது உயிரை விடுவதன் மூலம், நீ எனக்கு அளித்த உணவின் நிமித்தமாக நான் உனக்குப் பட்ட கடனிலிருந்து இன்று விடுபடுவேன் [1]” என்றார் {பீஷ்மர்}.

அந்த வெல்லப்பட முடியாத வீரர் {பீஷ்மர்}, இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, க்ஷத்திரியர்களுக்கு மத்தியில் தன் கணைகளை இறைத்துக் கொண்டு, பாண்டவப் படையைத் தாக்கினார். பிறகு பாண்டவர்கள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கடும் நஞ்சுமிக்கப் பாம்பொன்றைப் போலக் கோபத்தால் தூண்டப்பட்டவரும், தன் படைகளுக்கு மத்தியில் இருந்தவருமான கங்கையின் மைந்தரைத் {பீஷ்மரைத்} தடுக்கத் தொடங்கினர். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பத்தாம் நாள் போரில் பீஷ்மர், ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, தன் வலிமையை வெளிப்படுத்தி, நூறாயிரக் கணக்கில் கொன்றார்.

சூரியன் தன் கதிர்களால் (பூமியின்) ஈரப்பதத்தை உறிஞ்சுவதைப் போல, பாஞ்சாலர்களில் முதன்மையான அரசத் தேர்வீரர்களின் சக்திகளை அவர் {பீஷ்மர்} வற்ற செய்தார். மனிதர்களில் சிறந்தவரான அந்தப் பீஷ்மர், பெரும் செயல்வேகத்துடன் பத்தாயிரம் {10000} யானைகளையும், பத்தாயிரம் {10000} குதிரைகளையும், அவற்றைச் செலுத்திய வீரர்களையும், இருநூறாயிரம் {2,00,000-இரண்டு லட்சம்} காலாட்படை வீரர்களையும் கொன்ற பிறகு, புகைச்சுருள் ஏதுமற்ற நெருப்பைப் போல அந்தப் போரில் பிரகாசமாக ஒளிர்ந்தார் [2]. எனினும் பாண்டவர்கள், போரில் அந்தப் பெரும் வில்லாளியால் {பீஷ்மரால்} பீடிக்கப்பட்டாலும், வலிமைமிக்கச் சிருஞ்சயத் தேர்வீரர்கள் துணையுடன் அவரைப் {பீஷ்மரைக்} கொல்வதற்காக மேலும் விரைந்தார்கள்.

தன்னைச் சுற்றிலும் எண்ணற்றோருடன் மேலும் மேலும் போரிட்டுக் கொண்டிருந்த சந்தனுவின் மகன் பீஷ்மர், மேகத்திரள்களால் அனைத்துப் புறங்களிலும் மறைக்கப்பட்ட மேருவின் குன்றைப் போலக் காணப்பட்டார். எனினும், உமது மகன்கள் (பீஷ்மரைப் பாதுகாப்பதற்காக) பெரும்படையுடன் அவரைப் {பீஷ்மரைச்} சூழ்ந்து நின்றனர். பிறகு (குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில்) ஒரு பயங்கப் போர் தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.

அர்ஜுனன் துச்சாசனன் மோதல்! – பீஷ்ம பர்வம் பகுதி – 111-சிகண்டியை அறிவுறுத்திய அர்ஜுனன்; ஒருவரையொருவர் எதிர்த்துப் போரிட்ட வீரர்களின் பட்டியல்; அர்ஜுனனைத் தடுத்த துச்சாசனன்; துச்சாசனனின் வில்லையும் தேரையும் முறித்த அர்ஜுனன்; அர்ஜுனனைத் தவிர்த்துப் பீஷ்மரிடம் ஓடிய துச்சாசனன்; மயக்கம் தெளிந்த துச்சாசனன் மீண்டும் அர்ஜுனனுடன் போரிட்டது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் பீஷ்மரின் ஆற்றலைக் கண்ட அர்ஜுனன், சிகண்டியிடம், “பாட்டனை {பீஷ்மரை} நோக்கிச் செல்வாயாக. இன்று நீ பீஷ்மரிடம் சிறு அச்சத்தையும் கொள்ளக்கூடாது. என் கூரிய கணைகளின் மூலம் நானே அவரது சிறந்த தேரில் இருந்து அவரைப் {பீஷ்மரைக்} கீழே வீழ்த்துவேன்” என்றான் {அர்ஜுனன்}.

பார்த்தனால் {அர்ஜுனனால்} இப்படிச் சொல்லப்பட்ட சிகண்டி, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்த வார்த்தைகளைக் கேட்டு கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} நோக்கி விரைந்தான்.

அதே போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனும், வலிமைமிக்கத் தேர்வீரனான அபிமன்யுவும் பார்த்தனின் {அர்ஜுனனின்} வார்த்தைகளைக் கேட்டு பீஷ்மரை நோக்கி மகிழ்ச்சியுடன் விரைந்தனர்.

முதிர்ந்தவர்களான விராடன், துருபதன் ஆகியோரும் கவசம் பூண்ட குந்திபோஜனும், உமது மகன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே பீஷ்மரை நோக்கி விரைந்தனர்.

நகுலன், சகாதேவன், வீரமன்னன் யுதிஷ்டிரன் ஆகியோரும், வீரர்களில் எஞ்சியோர் அனைவரும், ஓ! ஏகாதிபதி, பீஷ்மரை நோக்கியே விரைந்தார்கள்.

ஒன்றாகச் சேர்ந்து செல்லும் (பாண்டவப் படையின்) அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களை எதிர்த்த உமது வீரர்களைப் பொறுத்தவரை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்கள் தங்கள் சக்திக்குத் தக்கபடி எதிர்த்தார்கள். உம்மிடம் (அவர்களைக் குறித்துச்) சொல்லும் என்னை {என் வார்த்தைகளைக்} கேட்பீராக.

அந்தப் போரில், சித்திரசேனன் [1], இளம்புலியொன்று காளையைத் தாக்குவதைப் போல, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரிடம் சென்று கொண்டிருந்த சேகிதானனை எதிர்த்து விரைந்தான்.

கிருதவர்மன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் செயல்வேகத்துடனும், ஆவேசத்துடனும் முயன்று பீஷ்மரை அடைந்திருந்த திருஷ்டத்யும்னனைத் தடுத்தான்.

சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்டுப் பீஷ்மரைக் கொல்ல விரும்பிய பீமசேனனைப் பெரும் செயல்வேகத்துடன் தடுத்தான்.

அதேபோலப் பீஷ்மரின் உயிரைக் (காக்க) விரும்பிய விகர்ணனும், சுற்றிலும் எண்ணற்ற கணைகளை இறைத்த துணிச்சல் மிக்க நகுலனைத் தடுத்தான்.

சினத்தால் தூண்டப்பட்ட சரத்வானின் மகனான கிருபரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் தேரை நோக்கி முன்னேறிய சகாதேவனைத் தடுத்தார்.

வலிமைமிக்கத் துர்முகன் [2], பீஷ்மரைக் கொல்ல விரும்பியவனும், கொடுஞ்செயல் புரிபவனுமான பீமசேனனின் வலிமைமிக்க மகனை {கடோத்கசனை} நோக்கி விரைந்தான்.உமது மகன் துரியோதனன், போரில் முன்னேறிய சாத்யகியைத் தடுத்தான் [3].காம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணன், ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் தேரை நோக்கி முன்னேறிய அபிமன்யுவைத் தடுத்தான்.

சினத்தால் தூண்டப்பட்ட அஸ்வத்தாமன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முதிர்ந்தவர்களும், ஒன்றிணைந்திருப்பவர்களும், எதிரிகளைத் தண்டிப்பவர்களுமான விராடன் மற்றும் துருபதன் ஆகிய இருவரையும் தடுத்தான்.

போரில் ஆவேசத்துடன் முயன்று வந்த பரத்வாஜரின் மகன் {துரோணர்}, பீஷ்மரின் மரணத்தை விரும்பியவனும், பாண்டவர்களில் மூத்தவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனை எதிர்த்தார்.

வலிமைமிக்க வில்லாளியான துச்சாசனன், அந்தப் போரில் (தன் பிரகாசமான ஆயுதங்களால்) பத்து திக்குகளுக்கும் ஒளியூட்டுபவனும், பீஷ்மரை அடைய விரும்பியவனும், சிகண்டியைத் தன் முன்னிலையில் கொண்டவனும், பெரும் வேகத்துடன் விரைந்து வந்தவனுமான அர்ஜுனனைத் தடுத்தான்.

அந்தப் பெரும்போரில் உமது படையின் பிற வீரர்கள், பீஷ்மருக்கு எதிராகச் செல்லும் பாண்டவர்களின் {பாண்டவப் படையின்} வலிமைமிக்கத் தேர்வீரர்களைத் தடுத்தார்கள்.

சினத்தால் தூண்டப்பட்ட வலிமைமிக்கத்தேர்வீரனான திருஷ்டத்யும்னன், பீஷ்மரை மட்டுமே எதிர்த்து விரைந்து, {தன்} துருப்புகளிடம் மீண்டும் மீண்டும் உரத்த குரலில், “அதோ, குரு குலத்தை மகிழ்விப்பவரான அர்ஜுனர், போரில் பீஷ்ரை எதிர்த்துச் செல்கிறார். கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} எதிர்த்து விரைவீராக. அஞ்சாதீர். பீஷ்ரால் போரில் உங்களைத் தாக்க இயலாது [4]. போரில் அர்ஜுனரிடம் போராட வாசவனும் {இந்திரனும்} துணியமாட்டான். எனவே, போரில் துணிச்சலைக் கொண்டிருந்தாலும், முதிர்ந்து, பலமற்றவராக இருக்கும் பீஷ்மரைக் குறித்த என்ன சொல்ல வேண்டும்?” என்றான்.தங்கள் படைத்தலைவனின் {திருஷ்டத்யும்னனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட பாண்டவப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், மகிழ்ச்சியால் நிறைந்து கங்கை மைந்தரின் {பீஷ்மரின்} தேரை நோக்கி விரைந்தனர். எனினும், உமது படையில் மனிதர்களில் முதன்மையான பலர், உயிரூட்டும் சக்தியின் மூர்க்கமான திரள் போலப் பீஷ்மரை எதிர்த்து விரையும் அவ்வீரர்களை மகிழ்ச்சியாக ஏற்றுத் தடுத்தனர் [5].வலிமைமிக்கத் தேர்வீரனான துச்சாசனன், அச்சங்கள் அனைத்தையும் கைவிட்டு, பீஷ்மரின் உயிரைப் பாதுகாக்க விரும்பி, தனஞ்சயனை {அர்ஜுனனை} எதிர்த்து விரைந்தான். அதே போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வீரப்பாண்டவர்களும், பீஷ்மரின் தேரின் அருகில் நின்ற அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான உமது மகன்களை எதிர்த்துப் போரிட விரைந்தனர். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துச்சாசனனின் தேர் வரை சென்ற பார்த்தனால் {அர்ஜுனனால்} மேலும் முன்னேற முடியாத மிக அற்புதமான ஒரு நிகழ்வைக் கண்டோம். பொங்கும் கடலைத் தடுக்கும் கரையைப் போலவே உமது மகன் (துச்சாசனன்}, கோபம் நிறைந்த பாண்டுவின் மகனைத் {அர்ஜுனனைத்} தடுத்தான்.

இருவரும் தேர்வீரர்களில் முதன்மையானவர்களாக இருந்தனர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இருவரும் வெல்லப்பட முடியாதவர்களாகவும் இருந்தனர். அழகிலும், காந்தியிலும் ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} அவ்விருவரும் சூரியனையோ, சந்திரனையோ ஒத்திருந்தனர். கோபம் தூண்டப்பட்டிருந்த அவ்விருவரும், ஒருவரை ஒருவர் கொல்ல விரும்பினர். பழங்காலத்தின் மயனும் சக்ரனும் {இந்திரனும்} போல, அந்தப் பயங்கரப் போரில் அவ்விருவரும் மோதிக் கொண்டனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் துச்சாசனன், மூன்று {3} கணைகளால் பாண்டுவின் மகனையும் {அர்ஜுனனையும்}, இருபதால் {20 கணைகளால்} வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} துளைத்தான். விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்} இப்படிப் பீடிக்கப்பட்டதைக் கண்டு சினத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனன், நூறு நாராசங்களால் துச்சாசனனைத் துளைத்தான். இவை {அந்தக் கணைகள்}, பின்னவனின் {துச்சாசனனின்} கவசங்களின் ஊடாக ஊடுருவி அந்தப் போரில் அவனது குருதியைக் குடித்தன.

பிறகு துச்சாசனன், கோபத்தால் தூண்டப்பட்டு, ஐந்து கணைகளால் பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தான். மீண்டும், ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, மூன்று கூரிய கணைகளால் அர்ஜுனனின் நெற்றியைத் துளைத்தான். நெற்றியில் தைத்த கணைகளோடு கூடிய அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் நெடும் கொடுமுடிகளோடு கூடிய மேரு மலையைப் போல அழகாகத் தெரிந்தான். பெரும் வில்லாளியான அந்தப் பார்த்தன், வில் தரித்த உமது மகனால் {துச்சாசனனால்} இப்படி ஆழத் துளைக்கப்பட்டு, அந்தப் போரில் மலர்ந்திருக்கும் கின்சுகம் {பலாச மரம்} ஒன்றைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.

பிறகு, அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, சினத்தால் தூண்டப்பட்ட ராகு, வளர்பிறையின் பதினைந்தாவது {15} நாளில் முழுமையாக இருக்கும் சந்திரனைப் பீடிப்பதைப் போலச் சினத்தால் தூண்டப்பட்டுத் துச்சாசனனைப் பீடித்தான். அந்த வலிமைமிக்க வீரனால் {அர்ஜுனனால்} இப்படிப் பீடிக்கப்பட்ட உமது மகன் {துச்சாசனன்}, அந்தப் போரில், கங்கப் பறவையின் தன்மைகளைக் கொண்ட {கழுகின் இறகுகளாலான} சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான பல கணைகளால் பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தான். பிறகு பார்த்தன் {அர்ஜுனன்}, மூன்று கணைகளால் துச்சாசனனின் வில்லை அறுத்து, அவனது தேரையும் ஒடித்து, காலனின் கணைகளை ஒத்த கடுங்கணைகள் பலவற்றை அவன் {துச்சாசனன்} மீது ஏவினான் [6]. எனினும், உமது மகன், வீரியத்துடன் முயன்று பார்த்தனின் {அர்ஜுனனின்} அந்தக் கணைகள் தன்னை அடையும் முன்பே அவற்றை வெட்டினான். இவை அனைத்தும் மிக அற்புதமாகத் தெரிந்தன.பிறகு, உமது மகன் மிகக் கூர்மையான கணைகள் பலவற்றால் பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தான். அப்போது சினத்தால் தூண்டப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்} கல்லில் கூராக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான எண்ணற்ற கணைகளைத் தன் வில்லின் நாணில் பெருத்தி, அவற்றைக் குறி பார்த்து, தன் எதிரியின் மீது அவை அனைத்தையும் ஏவினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தடாகத்தைப் பிளந்து செல்லும் அன்னப்பறைவைகளைப் போல, அவை அந்த உயர் ஆன்ம வீரனின் {துச்சாசனனின்} உடலை ஊடுருவிச் சென்றன. இப்படி உயர் ஆன்ம பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} பீடிக்கப்பட்ட உமது மகன் {துச்சாசனன்} பார்த்தனை {அர்ஜுனனைத்} தவிர்த்துவிட்டு, பீஷ்மரின் தேரை நோக்கி விரைந்தான்.

உண்மையில், அடியற்ற ஆழமான நீரில் இப்படி மூழ்கிக் கொண்டிருந்தவனுக்குத் {துச்சாசனனுக்குப்} பீஷ்மர் ஒரு தீவானார். வீரமும் ஆற்றலும் கொண்ட உமது மகன் {துச்சாசனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பிறகு உணர்வு மீண்டு, (அசுரன்) விருத்திரனைத் தடுத்த புரந்தரனைப் {இந்திரனைப்} போல, பார்த்தனை {அர்ஜுனனை} மீண்டும் தடுக்கத் தொடங்கினான். பெரும் வடிவம் கொண்ட உமது மகன் {துச்சாசனன்}, அர்ஜுனனைத் துளைக்கத் தொடங்கினான், ஆனால் பின்னவனோ {அர்ஜுனனோ} (இவை அனைத்தாலும்) எள்ளளவும் வலியை உணரவில்லை” {என்றான் சஞ்சயன்}.

பகைவீரர்களின் தனிப்பட்ட மோதல்கள்! – பீஷ்ம பர்வம் பகுதி – 112-அலம்புசன் சாத்யகி, சாத்யகி பகதத்தன் ஆகியோருக்கு இடையிலான மோதல்; துரியோதனனின் உத்தரவின் பேரில் சாத்யகியைச் சூழ்ந்த கொண்ட கௌரவர்கள்; சுதக்ஷிணன் அபிமன்யு மோதல்; சிகண்டி பீஷமர் மோதல்; விராடன் மற்றும் துருபதனை எதிர்த்த அஸ்வத்தாமன்; கிருபர் சகாதேவன், விகர்ணன் நகுலன், துர்முகன் கடோத்கசன், கிருதவர்மன் திருஷ்டத்யும்னன், பீமசேனன் பூரிஸ்ரவஸ், துரோணர் யுதிஷ்டிரன், சித்திரசேனன் சேகிதானன் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட போர்களின் வர்ணனை

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வலிமைமிக்க வில்லாளியான ரிஷ்யசிருங்கன் மகன் (அலம்புசன்), அந்தப் போரில் கவசமணிந்து பீஷ்மரை நோக்கி முன்னேறிய சாத்யகியைத் தடுத்தான். எனினும், கோபத்தால் தூண்டப்பட்ட அந்த மது குலத்தோன் {சாத்யகி}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சிரித்துக் கொண்டே ஒன்பது கணைகளால் ராட்சசனைத் {அலம்புசனைத்} துளைத்தான். கோபத்தால் தூண்டப்பட்ட ராட்சசனும் {அலம்புசனும்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிநி வம்சக் காளையான அந்த மதுகுலத்தோனை {சாத்யகியை} ஒன்பது கணைகளால் பீடித்தான்.

பகைவீரர்களைக் கொல்பவனான மதுகுலத்து சிநியின் பேரன் {சாத்யகி}, கோபத்தால் தூண்டப்பட்டு, அந்த ராட்சசன் {அலம்புசன்} மீது அபரிமிதமான கணைகளைப் பொழிந்தான். பிறகு, அந்த வலிமைமிக்க ராட்சசன் {அலம்புசன்}, கலங்கடிக்கப்பட முடியா ஆற்றல் கொண்ட சாத்யகியைப் பல கூரிய கணைகளால் துளைத்து, பேரொலியை எழுப்பினான். பெரும் சக்தி கொண்ட அந்த மதுகுலத்தோன் {சாத்யகி}, அந்தப் போரில் ராட்சசனால் ஆழத் துளைக்கப்பட்டாலும், உறுதியாகத் தன் ஆற்றலை நம்பி (தன் காயங்களைக் கண்டு) நகைத்து பெரும் முழக்கங்களைச் செய்தான்.

பிறகு பகதத்தன் சினத்தால் தூண்டப்பட்டு, அங்குசத்தால் பெரும் யானை ஒன்றை பாகன் துளைப்பதைப் போல, பல கூரிய கணைகளால் அந்தப் போரில் மதுகுலத்தோனை {சாத்யகியைப்} பீடித்தான். பிறகு, தேர்வீரர்களில் முதன்மையான அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, போரில் ராட்சசனை {அலம்புசனைக்} கைவிட்டு, பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்} மீது நேரான பல கணைகளை ஏவினான். பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்}, தன் கர நளினத்தை வெளிக்காட்டியபடி பெரும் கூர்மை கொண்ட பல்லம் {அகன்ற தலை கொண்ட கணை} ஒன்றால் சாத்யகியின் பெரிய வில்லை அறுத்தான்.

பிறகு, சினத்தால் தூண்டப்பட்ட அந்தப் பகைவீரர்களைக் கொல்பவன் {சாத்யகி}, பெரும் வேகம் கொண்ட மற்றொரு வில்லை எடுத்து, கூரிய கணைகள் பலவற்றால் அந்தப் போரில் பகதத்தனைத் துளைத்தான். வலிமைமிக்க வில்லாளியான அந்தப் பகதத்தன் ஆழத்துளைக்கப்பட்டு, தன் கடைவாயை நாவால் நனைக்கத் {நக்கத்} தொடங்கினான். பிறகு அவன் {பகதத்தன்}, அந்தப் போரில் தன் எதிரியின் {சாத்யகியின்} மேல், முழுதும் இரும்பாலானதும் தங்கத்தாலும், வைடூரியக் கற்களாலும் அலங்கரிக்கப்பட்டதும், யமனின் தண்டத்தைப் போன்று கடுமையானதுமான ஓர் உறுதிமிக்க ஈட்டியை ஏவினான்.

பகதத்தனுடைய கரத்தின் பலத்தால் ஏவப்பட்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன்னை நோக்கி வேகமாக வரும் அந்த ஈட்டியைத் தன் கணைகளின் மூலம் இரண்டாக அறுத்தான் சாத்யகி. அதன் பேரில், காந்தியை இழந்த பெரும் எரி கோளைப் போல அந்த ஈட்டி திடீரெனக் கீழே விழுந்தது. ஈட்டி கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி, பெரும் எண்ணிக்கையிலான தேர்களுடன் அந்த மது குலத்தோனை {சாத்யகியைச்} சூழ்ந்து கொண்டான்.

விருஷ்ணிகளில் வலிமைமிக்கத் தேர்வீரனான அவன் {சாத்யகி} இப்படிச் சூழப்பட்டதைக் கண்ட துரியோதனன், கோபத்துடன் தன் தம்பிகள் அனைவரிடமும், “கௌரவர்களே, உங்களிடமிருந்தோ, இந்தப் பெரும் தேர்ப்படைப்பிரிவிடம் இருந்தோ சாத்யகி உயிருடன் தப்பாதபடியான நடவடிக்கைகளை எடுப்பீராக. இவன் {சாத்யகி} கொல்லப்பட்டால், பாண்டவர்களின் பரந்த படையும் கொல்லப்பட்டதாகவே கருதப்படும்” என்றான். துரியோதனனின் வார்த்தைகளை ஏற்று “அப்படியே ஆகட்டும்” என்று பதிலுரைத்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், பீஷ்மரின் பார்வையிலேயே சிநியின் பேரனோடு போரிட்டனர்.

வலிமைமிக்கக் காம்போஜர்களின் ஆட்சியாளன் {சுதக்ஷிணன்}, அந்தப் போரில் பீஷ்மரை எதிர்த்து முன்னேறிய அபிமன்யுவைத் தடுத்தான். அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, ஓ! ஏகாதிபதி, பல நேரான கணைகளால் அம்மன்னனை {சுதக்ஷிணனைத்} துளைத்து, அறுபத்துநான்கு கணைகளால் மீண்டும் அந்த ஏகாதிபதியைத் துளைத்தான். எனினும், பீஷ்மரின் உயிரை {காக்க} விரும்பி சுதக்ஷிணன், அந்தப் போரில் ஐந்து கணைகளால் அபிமன்யுவையும், ஒன்பதால் {9 கணைகளால்} அவனது தேரோட்டியையும் துளைத்தான். அவ்விரு வீரர்களும் சந்தித்துக் கொண்டதன் விளைவால் அங்கே உண்டான அந்தப் போர் மிகக் கடுமையானதாக இருந்தது.

பிறகு, எதிரிகளைக் கலங்கடிப்பவனான சிகண்டி, கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} நோக்கி விரைந்தான்.

வலிமைமிக்கத் தேர்வீரர்களும் முதிர்ந்தவர்களுமான விராடன், துருபதன் ஆகிய இருவரும் சினத்தால் தூண்டப்பட்டு, கௌரவப் படையைத் தடுத்துக் கொண்டே பீஷ்மருடன் போரிட விரைந்தனர். தேர்வீரர்களில் சிறந்தவனான அஸ்வத்தாமன், சினத்தால் தூண்டப்பட்டு, அவ்விரு வீரர்களுடன் மோதினான். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவனுக்கும், அவர்களுக்கும் இடையில் போர் தொடங்கியது.

ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, பிறகு விராடன், வலிமைமிக்க வில்லாளியும், போர்க்கள ரத்தினமுமான துரோண மகனை {அஸ்வத்தாமனை}, பின்னவன் {அஸ்வத்தாமன்} தங்களை எதிர்த்து முன்னேறியபோது பல்லங்களால் தாக்கினான். மூன்று கணைகளால் துருபதனும் அவனைத் துளைத்தான். பிறகு ஆசானின் நிலமான {வாரிசான} அஸ்வத்தாமன், பீஷ்மரை நோக்கிச் செல்லும் துணிச்சல்மிக்க விராடன் மற்றும் துருபதன் ஆகியோரை இப்படியே தாக்கி, கணைகள் பலவற்றால் அவ்விருவரையும் துளைத்தான். துரோணரின் மகனால் ஏவப்பட்ட கடுங்கணைகள் அனைத்தையும் தடுத்த அந்த முதிர்ந்த வீரர்கள் இருவரின் {துருபதன், விராடனின்} அற்புதமான செய்கையை நாங்கள் கண்டோம்.

காட்டில் மதங்கொண்ட எதிராளியை {யானையை} எதிர்த்து விரையும் மற்றொரு யானையைப் போல, சரத்வானின் மகனான கிருபர், பீஷ்மரை நோக்கி முன்னேறிய சகாதேவனை எதிர்த்துச் சென்றார். போரில் துணிச்சல்மிக்கக் கிருபர், வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த மாத்ரியின் மகனைத் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட எழுபது கணைகளால் விரைவாகத் தாக்கினார். எனினும், அந்த மாத்ரியின் மகன் {சகாதேவன்}, தன் கணைகளின் மூலம் கிருபரின் வில்லை இரண்டாகத் துண்டித்தான்.

கிருபரின் வில்லை அறுத்த சகாதேவன், ஒன்பது கணைகளால் அவரையும் {கிருபரையும்} துளைத்தான். அந்தப் போரில், சினத்தால் தூண்டப்பட்ட கிருபர், பெரும் வலிமையைத் தாங்கவல்ல மற்றொரு வில்லை எடுத்து, பீஷ்மரின் உயிரை {காக்க} விரும்பி, பத்து கணைகளால் மாத்ரியின் மகனை {சகாதேவனை} மகிழ்ச்சியாகத் தாக்கினார். அதே போலப் பதிலுக்குப் பாண்டுவின் மகனும் {சகாதேவனும்}, பீஷ்மரின் மரணத்தை விரும்பி, சினத்தால் தூண்டப்பட்டு, கோபம் நிறைந்த கிருபருடைய மார்பை (பல கணைகளால்) தாக்கினான். பிறகு அங்கே பயங்கரமான மற்றும் கடுமையான ஒரு போர் நிகழ்ந்தது.

எதிரிகளை எரிப்பவனான விகர்ணன், பாட்டன் பீஷ்மரைக் காக்க விரும்பி, அந்தப் போரில் சினத்தால் தூண்டப்பட்டு, அறுபது {60} கணைகளால் நகுலனைத் துளைத்தான். நகுலனும், உமது புத்திசாலி மகனால் ஆழத் துளைக்கப்பட்டு, பதிலுக்கு எழுபத்தேழு {70} கணைகளால் விகர்ணனைத் துளைத்தான். மனிதர்களில் புலிகளும், எதிரிகளைத் தண்டிப்பவர்களுமான அவ்வீரர்கள் இருவரும், பீஷ்மரின் நிமித்தமாக, மாட்டுக் கொட்டிலில் உள்ள காளைகள் இரண்டைப் போல ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

பெரும் ஆற்றலைக் கொண்ட உமது மகன் துர்முகன், போரிட முன்னேறுபவனும், தான் வந்த வழியெங்கும் உமது படையினரைக் கொன்றவனுமான கடோத்கசனை எதிர்த்துப் பீஷ்மரின் நிமித்தமாகச் சென்றான். எனினும், எதிரிகளைத் தண்டிப்பவனான ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, சினத்தால் தூண்டப்பட்டு, நேரான கணையொன்றால் துர்முகனை மார்பில் தாக்கினான். பிறகு வீரத் துர்முகனும், மகிழ்ச்சியாகக் கூச்சலிட்டபடி, கூர்முனை கொண்ட அறுபது {60} கணைகளால் அந்தப் போர்க்களத்தில் பீமசேனனின் மகனைத் {கடோத்கசனைத்} துளைத்தான்.

வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, பீஷ்மரைக் கொல்ல விரும்பிப் போரில் முன்னேறியவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான திருஷ்டத்யும்னனைத் தடுத்தான். எனினும், பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, முழுதும் இரும்பாலான ஐந்து {5} கணைகளால் கிருதவர்மனைத் துளைத்து, மீண்டும் ஐம்பது {50} கணைகளால் அவனது {கிருதவர்மனின்} நடுமார்பில் விரைவாகத் தாக்கினான். அதே போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிருஷதன் மகன் {துருபதன் மகன் திருஷ்டத்யும்னன்}, கங்கப் பறவையின் இறகுகளாலானச் சிறகுகளைக் கொண்ட, கூரிய, சுடர்மிக்க ஒன்பது கணைகளால் கிருதவர்மனைத் தாக்கினான். பெரும் வீரத்துடன் மோதிக் கொண்ட அவ்விருவருக்கும் இடையில் பீஷ்மரின் நிமித்தமாக நேர்ந்த அந்தப் போர் விருத்திரனுக்கும் வாசவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்த போரைப் போலக் கடுமையாக இருந்தது.

வலிமைமிக்கப் பீஷ்மரை நோக்கி முன்னேறிய பீமசேனனை எதிர்த்த பூரிஸ்ரவஸ், “நில், நில்” என்று சொன்னபடி பெரும் வேகத்துடன் சென்றான். அந்தச் சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, அந்தப் போரில் தங்கச் சிறகுகள் கொண்டதும், மிகக் கூர்மையானதுமான கணையொன்றால் பீமனை, அவனது நடுமார்பில் தாக்கினான். மார்பில் தாங்கிய அந்தக் கணையுடன் வீர பீமசேனன், ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் ஸ்கந்தனின் வேலால் தாக்கப்பட்ட கிரௌஞ்ச மலையைப் போல அழகாகத் தெரிந்தான்.

போரில் சீறிய மனிதர்களில் காளையரான அவ்விருவரும், தங்கள் கொல்லன்களால் பளபளப்பாக்கப்பட்டுப் பிரகாசமாக இருந்தவையும், சூரியனின் ஒளியைக் கொண்டவையுமான கணைகளால் ஒருவரையொருவர் தாக்கினர். பீஷ்மரின் மரணத்திற்காக ஏங்கிய பீமன், சோமதத்தனின் வலிமைமிக்க மகனுடன் போரிட்டான், மேலும் பின்னவன் {பூரிஸ்ரவஸ்}, பீஷ்மரின் வெற்றியை விரும்பி முன்னவனோடு {பீமனோடு} போரிட்டான். அவ்விருவரும் மற்றவரின் சாதனைகளுக்கு எதிர்செயலை கவனமாகச் செய்தனர்.

பரத்வாஜரின் மகன் {துரோணர்}, பெரும் படையின் துணையுடன் பீஷ்மரை நோக்க வந்த குந்தியின் மகனான யுதிஷ்டிரனைத் தடுத்தார். ஓ! மன்னா, ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, மேகங்களின் முழக்கத்தை ஒத்த துரோணரின் தேர் சடசடப்பொலியைக் கேட்ட பிரபத்திரகர்கள் நடுங்கத் தொடங்கினர். பயங்கர முயற்சி செய்த பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} அந்தப் பெரும்படை, போரில் துரோணரால் தடுக்கப்பட்டு ஓர் அடிகூட முன்னேற முடியவில்லை.

உமது மகன் சித்திரசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரை அடையப் பயங்கரமாக முயன்றவனும், கோபம்நிறைந்த முகத்தோற்றம் கொண்டவனுமான சேகிதானனைத் தடுத்தான். பெரும் ஆற்றலும், பெரும் கரவேகம் கொண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {சித்திரசேனன்}, பீஷ்மரின் நிமித்தமாக, தன் சக்தி முழுவதையும் பயன்படுத்தி சேகிதானனுடன் போரிட்டான். சேகிதனானும், தன் சக்தி முழுவதையும் பயன்படுத்திச் சித்திரசேனனுடன் போரிட்டான். அவ்வீரர்களின் சந்திப்பின் விளைவாக நடந்த போர் மிகக் கடுமையானதாக இருந்தது.

அர்ஜுனனைப் பொறுத்தவரை, அனைத்து வழிகளிலும் அவன் தடுக்கப்பட்டாலும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மேலும் உமது மகனை {துச்சாசனனைப்} புறமுதுகிட நிர்பந்தித்து, உமது துருப்புகளை நசுக்கினான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, எனினும், தன் சக்தி முழுமையையும் பயன்படுத்திய துச்சாசனன், பீஷ்மரைக் காப்பதற்காகப் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} தடுக்கத் தொடங்கினான். இத்தகு படுகொலைக்கு ஆளான உமது மகனின் படை, (பாண்டவப் படையின்) தேர்வீரர்களில் முதன்மையான பலரால் அங்கேயும் இங்கேயும் கலங்கடிக்கப்பட்டது” {என்றான் சஞ்சயன்}.

“அர்ஜுனன் பாதை தவிர்ப்பாயாக” என்ற துரோணர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 113-துரோணர் கண்ட சகுனங்கள்; அர்ஜுனனின் பாதையில் குறுக்கிட வேண்டாம் என்றும், எனினும் பீஷ்மரைக் காக்க வேண்டும் என்றும் அஸ்வத்தாமனிடம் அறிவுறுத்திய துரோணர்; அர்ஜுனனின் பெருமையைச் சொன்ன துரோணர் அஸ்வத்தாமனைப் போரிடத் தூண்டியது..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மதங்கொண்ட யானையின் ஆற்றலைக் கொண்டவரும், பெரும் வில்லாளியும், பெரும் வலிமை கொண்டவர்களுள் முதன்மையானவருமான வீரத் துரோணர், மதங்கொண்ட யானையையே தடுக்கவல்ல தனது பெரிய வில்லை எடுத்து, (தன் கைகளால்) அதை அசைத்தபடி {வில்லில் நாணிழுத்தபடி} பாண்டவப் படையணியினருக்கு மத்தியில் ஊடுருவி அவர்களைப் பீடித்துக் கொண்டிருந்தார்.

அனைத்து சகுனங்களையும் அறிந்தவரான வீரமிக்க அந்தப் போர்வீரர் {துரோணர்}, அனைத்துப் புறங்களிலும் சகுனங்களைக் கண்டு, பகையணிகளை எரித்துக் கொண்டிருந்த தன் மகனிடம் {அஸ்வத்தாமனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னார், “ஓ! மகனே {அஸ்வத்தாமா}, போரில் பீஷ்மரைக் கொல்ல விரும்பும் வலிமைமிக்கப் பார்த்தன் {அர்ஜுனன்}, போரில் தன் முழு வலிமையாலும் முயலப் போகும் அந்த நாள் இதுவே {இந்நாளே}.

என் கணைகள் (அம்பறாத்தூணியில் இருந்து, தாமாகவே) வெளியே வருகின்றன. என் வில் கொட்டாவி விடுவதாகத் தெரிகிறது [1]. எனது ஆயுதம் என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய விரும்பவில்லை [2], மேலும் என் இதயமும் உற்சாகமற்றிருக்கிறது. விலங்குகளும், பறவைகளும் அச்சம் நிறைந்து இடைவிடாமல் கதறுகின்றன. பாரதத் துருப்புகளின் பாதங்களுக்குக் கீழே கழுகுகள் மறைவதாகத் தெரிகிறது [3]. சூரியனும் தன் நிறத்தை இழந்தவனாகத் தெரிகிறான். திசைகள் அனைத்தும் எரிந்து கொண்டிருக்கின்றன. பூமி அலறுவதாகவும், அஞ்சுவதாகவும் தெரிந்து எங்கும் நடுங்குகிறது. கங்கங்கள் {ஒரு வகைக் கழுகு}, கழுகுகள், நாரைகள் ஆகியன அடிக்கடி அலறுகின்றன. மங்கலமற்ற கடும் ஊளைகளை இடும் நரிகள் பெரும் ஆபத்தை முன்னறிவிக்கின்றன. சூரிய வட்டிலின் மத்தியில் இருந்து பெரும் எரி கோள்கள் விழுவதாகத் தெரிகிறது. பரிகம் என்றழைக்கப்படும் நட்சத்திரக்கூட்டம் சூரியனைச் சுற்றி உடலற்ற வடிவில் தோன்றுகிறது. சந்திர சூரிய வட்டில்கள், க்ஷத்திரியர்களின் உடல்கள் சிதைவடையப் போவதை முன்னறிவிக்கும் வகையில் பயங்கரத்தை அடைந்திருக்கின்றன [4]. குரு மன்னனின் கோவில்களில் உள்ள அவனது சிலைகள் [5] நடுங்கவும், சிரிக்கவும், நடனமாடவும், அழவும் செய்கின்றன. சிறப்பு வாய்ந்த சந்திரன் தன் கொம்புகள் கீழ் நோக்கியவாறு எழுகிறான் [6]. குரு படையைச் சேர்ந்த மன்னர்கள் அனைவரின் உடல்களில் கவசங்கள் இருந்தாலும், அவை ஒளியிழந்து மங்கியிருப்பதாகத் தெரிகிறது,

பாஞ்சஜன்யத்தின் உரத்த சங்கொலியும், காண்டீவத்தின் நாணொலியும் இரு படைகளின் புறங்கள் அனைத்திலும் கேட்கப்படுகின்றன.

அர்ஜுனன் தன் பெரும் ஆயுதங்களைச் சார்ந்து, பிற வீரர்களைத் தவிர்த்துப் பாட்டனை {பீஷ்மரை} நோக்கியே முன்னேறுவான் என்பதில் ஐயமில்லை. ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அஸ்வத்தாமா}, பீஷ்மருக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நடக்க இருக்கும் மோதலை நினைத்து, என் உடலின் நுண்துளைகள் சுருங்குகின்றன, என் இதயமும் சோர்வடைகிறது. பார்த்தன் {அர்ஜுனன்}, தன் முன்னே பாவ ஆன்மாவும், வஞ்சகம் அறிந்தவனுமான பாஞ்சால இளவரசனைக் {சிகண்டியைக்} கொண்டு பீஷ்மருடன் போரிடச் செல்கிறான்.

சிகண்டியைத் தான் கொல்லப் போவதில்லை என்று பீஷ்மர் முன்பே சொல்லியிருக்கிறார். ஏதோ சந்தர்ப்பவசத்தின் தொடர்ச்சியாக அவன் {சிகண்டி} ஆணாக ஆனாலும், படைப்பாளனால் முன்பு அவன் பெண்ணாகப் படைக்கப்பட்டவனாவான். அந்த வலிமைமிக்க யக்ஞசேனன் {துருபதன்} மகனேகூட {சிகண்டியேகூட} (தன்னளவிலேயே) மங்கலமற்ற சகுனமே {அவன் அமங்கலஸ்வரூபியாவான்}. கடலுக்குச் செல்பவளின் மகன் {கங்கையின் மகன் பீஷ்மர்}, தன்னளவில் மங்கலமற்ற அவனைத் {சிகண்டியைத்} தாக்க மாட்டார்.

கோபத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனன், முதிர்ந்தவரான குரு பாட்டனின் {பீஷ்மரின்} மீது பாயப் போகிறான் என்பதை நினைத்தே என் இதயம் அதீத சோர்வை அடைகிறது. யுதிஷ்டிரனின் கோபம், போரில் பீஷ்மர் அர்ஜுனனுக்கிடையிலான மோதல், இது போன்ற (ஆயுதங்களை ஏவும்) என்னுடைய முயற்சி – ஆகிய இவை (மூன்றும்), உயிரினங்களுக்குப் பெரும் தீங்கை விளைவிப்பன {அமங்கலகரமானவை} என்பது நிச்சயம்.

பெரும் சக்தியைக் கொண்ட அர்ஜுனன், பலமிக்கவனாகவும், துணிச்சலைக் கொண்டவனாகவும், ஆயுதங்களை நன்கு அறிந்தவனாகவும், பெரும் செயல்வேகத்துடன் கூடிய வீரத்தைக் கொண்டவனாகவும் இருக்கிறான். வெகுதூரத்தில் இருந்தே தன் கணைகளால் இலக்கைத் தாக்க வல்லவனும், பலமாக அவற்றை ஏவவல்லவனுமான அவன் {அர்ஜுனன்}, அதையும் தவிர, சகுனங்களை நன்கு அறிந்தவனாகவும் இருக்கிறான். பெரும் வலிமையும், புத்திக்கூர்மையும், களைப்பில்லா தன்மையும் கொண்ட அந்த வீரர்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்}, வாசவனை {இந்திரனைத்} தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களாலும் வெல்லப்பட முடியாதவனாவான். பயங்கர ஆயுதங்களைக் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, போரில் எப்போதும் வெற்றிகரமானவன் ஆவான்.

ஓ! கடும் நோன்புகளைக் கொண்டவனே {அஸ்வத்தாமா}, அவனது {அர்ஜுனனின்} பாதையைத் தவிர்த்துவிட்டு [7], (பீஷ்மரின் வெற்றிக்காகப்) போருக்குச் செல்வாயாக. இன்று இந்தப் பயங்கரப் போரில் பெரும் படுகொலைகளை நீ காண்பாய். துணிவுமிக்க வீரர்களின் தங்கதால் அலங்கரிக்கப்பட்ட, விலையுயர்ந்த, அழகிய கவசங்கள் நேரான கணைகளால் துளைக்கப்படும். கொடிமரங்களின் நுனிகள், தோமரங்கள், விற்கள், கூர்முனை கொண்ட பளபளப்பான வேல்கள், தங்கத்தால் பிரகாசிக்கும் ஈட்டிகள், யானைகளின் முதுகில் உள்ள கொடிமரங்கள் ஆகியன அனைத்தும் கோபம் கொண்ட கிரீடியால் {அர்ஜுனனால்} வெட்டப்படும்.

ஓ! மகனே {அஸ்வத்தாமா}, சார்ந்து வாழ்பவர்கள் {வேலைக்காரர்கள்}, தங்கள் உயிர்களைக் கவனித்துக் {காப்பாற்றிக்} கொள்ள வேண்டிய நேரம் இதுவல்ல. சொர்க்கத்தை முன்னிட்டுக் கொண்டு, புகழுக்காகவும், வெற்றிக்காகவும் போரிடச் செல்வாயாக. அங்கே, குரங்குக் கொடியோன் (அர்ஜுனன்), தேர்கள், யானைகள், குதிரைகள் எனும் நீர்ச்சுழல்களைக் கொண்டும், கடப்பதற்குக் கடினமானதுமான போரெனும் பயங்கர ஆற்றைத் தன் தேரில் கடக்கிறான்.

தனஞ்சயன் {அர்ஜுனன்}, வலிமைமிக்கப் பீமசேனன், பாண்டுவின் மூலமான மாத்ரியின் இரட்டை மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோரைத் தங்கள் தம்பிகளாகவும், விருஷ்ணி குலத்தின் வாசுதேவனைத் {கிருஷ்ணனைத்} தன் பாதுகாவலனாகவும் கொண்ட யுதிஷ்டிரனிடம் மட்டுமே அந்தணர்களுக்கு மரியாதை, தற்புலனடக்கம் {தன்னடக்கம்}, ஈகை, தவம், உன்னத நடத்தை ஆகியன காணப்படுகின்றன. தவத்தின் தழல்களால் தூய்மையான உடலைக் கொண்ட யுதிஷ்டிரனுடைய துன்பத்தில் பிறந்த {யுதிஷ்டிரனின்} கோபம், தீய ஆன்மா கொண்டவனான திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} மேல் திருப்பட்டு, இந்தப் பாரதப் படையை எரித்து வருகிறது.

அதோ, வாசுதேவனை {கிருஷ்ணனைத்} தன் பாதுகாவலனாகக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, (தான் வரும்போதே) இந்தத் தார்தராஷ்டிரப் படையைத் தடுத்துக் கொண்டே அங்கே வருகிறான். முகடுகளைப் போன்ற அலைகளைக் கொண்ட பரந்த கடலைக் கலங்கடிக்கும் பெரிய திமிங்கலம் ஒன்றைப் போல இந்தப் படையைக் கிரீடி {அர்ஜுனன்} கலக்குவதைப் பார். படைக்கு முன்பாகக் குசுகுசுப்பும், துன்பம் மற்றும் சோர்வின் கூச்சல்களும் கேட்கப்படுகின்றன.

போ, பாஞ்சால மன்னனின் வாரிசுடன் {திருஷ்டத்யும்னனுடன்} [8] மோதுவாயாக. என்னைப் பொறுத்தவரை, நான் யுதிஷ்டிரனை எதிர்த்துச் செல்வேன். மன்னன் யுதிஷ்டிரனுடைய பலமிக்க வியூகத்தின் இதயப்பகுதியை அடைவது கடினமாகும். அதிரதர்களால் அனைத்துப் புறங்களிலும் காக்கப்படும் அது {அந்த வியூகம்}, கடலின் உட்பகுதியைப் போன்று அடைவதற்குக் கடினமானதாகும். சாத்யகி, அபிமன்யு, திருஷ்டத்யும்னன், விருகோதரன், இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோரே {ஆகிய அந்த அதிரதர்களே}, மனிதர்களின் ஆட்சியாளனான மன்னன் யுதிஷ்டிரனைக் காக்கிறார்கள்.

இந்திரனின் தம்பியைப் போன்று கருமையானவனும், சால மரத்தைப் போன்று உயரமாக எழுந்தவனுமான அபிமன்யு, இரண்டாவது பல்குனனை {அர்ஜுனனைப்} போல (பாண்டவப்) படையின் தலைமையில் நின்று முன்னேறிச் செல்வதைப் பார். உன் வலிமைமிக்க ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, உன் பெரிய வில்லைக் கையில் கொண்டு, பிருஷதனின் அரச மகனையும் (சிகண்டியையும்) {திருஷ்டத்யும்னனையும்}[9], விருகோதரனையும் {பீமனையும்} எதிர்த்துச் செல்வாயாக. தன் அன்புக்குரிய மகன் பல வருடங்கள் வாழ வேண்டும் என்று விரும்பாதவன் எவன் இருக்கிறான். எனினும், க்ஷத்திரியக் கடமைகளை என் முன் கொண்டே, நான் உன்னை (இந்தப் பணியில்) ஈடுபடுத்துகிறேன் [10].அதே போல, பீஷ்மரும், இந்தப் போரில், அதோ வலிமைமிக்கப் பாண்டவப் படையை எரித்துக் கொண்டிருக்கிறார். ஓ! மகனே {அஸ்வத்தாமா}, போரில் அவர் {பீஷ்மர்}, யமனுக்கோ, வருணனுக்கோ இணையானவர் ஆவார்” என்றார் {துரோணர்}” {என்றான் சஞ்சயன்}. 

பீமசேனனின் ஆற்றல்! – பீஷ்ம பர்வம் பகுதி – 114-பீமசேனனுடன் போரிட்ட பத்து கௌரவ வீரர்கள்; கிருபரின் வில்லை அறுத்த பீமன்; ஜெயத்ரதனின் குதிரைகளையும், தேரோட்டியையும் கொன்று, அவனுடைய வில்லையும் அறுத்த பீமன்; பீமனின் தேரோட்டியான விசோகனைத் துளைத்த சல்லியன்; கிருதவர்மனனின் வில்லை அறுத்த பீமன்; பல வீரர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்த பீமனைக் கண்ட அர்ஜுனன் அந்த இடத்திற்கு வந்தது; வெற்றியில் நம்பிக்கை இழந்த கௌரவர்கள்; பீமனையும் அர்ஜுனனையும் கொல்ல சுசர்மனை ஏவிய துரியோதனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உயரான்ம துரோணரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பகதத்தன், கிருபர், சல்லியன், கிருதவர்மன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், சிந்துக்களின் ஆட்சியாளன் ஜெயத்ரதன், சித்திரசேனன், விகர்ணன், துர்மர்ஷணன் ஆகிய உமது படையின் பத்து வீரர்களும், இன்னும் பிறரும், பீஷ்மருக்கான போரில் உயர்ந்த புகழை வெல்ல விரும்பி, பல நாடுகளைச் சேர்ந்த பெரும் படைகளுடன் பீமசேனனுடன் போரிட்டனர்.

சல்லியன் ஒன்பது {10} கணைகளால் பீமனைத் தாக்கினான், கிருதவர்மன் மூன்றாலும் {3}, கிருபர் ஒன்பதாலும் {9} அவனைத் தாக்கினர். சித்திரசேனன், விகர்ணன் மற்றும் பகதத்தன் ஆகியோர் ஒவ்வொருவரும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பத்து {10×3} கணைகளால் அவனைத் தாக்கினர். சிந்துக்களின் ஆட்சியாளன் (ஜெயத்ரதன்}, மூன்றால் {3 கணைகளால்} அவனைத் தாக்கினான், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோர் ஒவ்வொருவரும் ஐந்து {5×2} கணைகளாலும் அவனைத் தாக்கினர். துரியோதனன் இருபது {20} கூரிய கணைகளால் அந்தப் பாண்டுவின் மகனை {பீமனைத்} தாக்கினான்.

பீமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உலக மனிதர்களில் முதன்மையானவர்களும், தார்தராஷ்டிரப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அந்த மன்னர்கள் ஒவ்வொருவரையும், ஒருவர் பின் ஒருவராகப் பதிலுக்குத் தாக்கினான். பகை வீரர்களைக் கொல்பவனான அந்தத் துணிச்சல்மிக்கப் பாண்டவன் {பீமன்}, சல்லியனை ஏழு {7} கணைகளாலும், கிருதவர்மனை எட்டாலும் {8 கணைகளாலும்} துளைத்தான். மேலும் அவன் {பீமன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கிருபரின் கணை பொருத்தப்பட்ட வில்லை நடுவில் இரண்டாகப் பிளந்தான். அவன் {பீமன்}, இப்படி அவரது {கிருபரின்} வில்லை வெட்டிய பிறகு, மீண்டும் ஏழு {7} கணைகளால் கிருபரைத் துளைத்தான். விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோர் ஒவ்வொருவரையும் மூன்று {3} கணைகளால் அவன் {பீமன்} தாக்கினான். துர்மர்ஷணனை இருபது {20} கணைகளாலும், சித்திரசேனனை ஐந்தாலும் {5}, விகர்ணனைப் பத்தாலும் {10}, ஜெயத்ரதனை ஐந்தாலும் {5} அவன் {பீமன்} துளைத்தான். மேலும் மூன்று {3} கணைகளால் சிந்துக்களின் ஆட்சியாளனைத் {ஜெயத்ரதனைத்} தாக்கிய அவன் {பீமன்}, மகிழ்ச்சியால் நிறைந்து உரக்கக் கூச்சலிட்டான்.

பிறகு, தேர்வீரர்களில் முதன்மையானவரான கௌதமர் {கிருபர்}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, பத்து {10} கூரிய கணைகளால் கோபத்துடன் பீமனைத் துளைத்தார். அங்குசத்தால் துளைக்கப்பட்ட பெரும் யானையைப் போல அந்தப் பத்து கணைகளால் துளைக்கப்பட்ட அந்த வீர பீமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் நிறைந்து அந்தப் போரில் பல கணைகளால் கௌதமரைத் {கிருபரைத்} தாக்கினான்.

யுக முடிவில் தோன்றும் யமனின் காந்தியைக் கொண்ட பீமசேனன், மூன்று {3} கணைகளால் சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனின்} குதிரைகளையும், அவனது தேரோட்டியையும் காலனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான். அதன் பேரில், அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் (அதாவது, ஜெயத்ரதன்), குதிரைகள் கொல்லப்பட்ட தனது தேரில் இருந்து விரைவாகக் கீழே குதித்து, கூர்முனை கணைகள் பலவற்றை அந்தப் போரில் பீமசேனன் மேல் ஏவினான். பிறகு, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, இரண்டு பல்லங்களைக் கொண்டு, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, சிந்துக்களின் உயர் ஆன்ம மன்னனின் {ஜெயத்ரதனின்} வில்லை நடுவில் வெட்டினான். தன் வில் அறுபட்டு, தேரிழந்து, தன் குதிரைகளும், தேரோட்டியும் கொல்லப்பட்ட ஜெயத்ரதன், பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சித்திரசேனனின் தேரில் விரைவாக ஏறிக் கொண்டான்.

உண்மையில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள் அனைவரையும் துளைத்து, {அவர்களை} முன்னேற விடாமல் தடுத்து, படைகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சிந்துக்கள் ஆட்சியாளனின் {ஜெயத்ரதனின்} தேரை இழக்கச் செய்த அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, அந்தப் போரில் மிக அற்புதமான சாதனையை அடைந்தான்.

பீமசேனன் வெளிப்படுத்திய ஆற்றலைப் பொறுக்க முடியாத சல்லியன், அவனிடம் {பீமனிடம்}, “நில், நில்” என்று சொல்லி, கொல்லர்களின் கைகளால் நன்கு பளபளப்பாக்கப்பட்ட கூரிய கணைகள் பலவற்றைக் குறிபார்த்து, அவற்றைக் கொண்டு அந்தப் போரில் பீமனைத் துளைத்தான். கிருபர், கிருதவர்மன், வீர பகதத்தன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், சித்திரசேனன், துர்மர்ஷணன், விகர்ணன், சிந்துக்களின் வீர ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} ஆகியோர் அனைவரும் அந்தப் போரில் சல்லியனுக்காகப் பீமனை விரைவாகத் துளைத்தனர்.

பீமன் பதிலுக்கு அவர்கள் ஒவ்வொருவரையும் ஐந்து {5} கணைகளால் துளைத்தான். அவன் {பீமன்}, சல்லியனை எழுபது {70} கணைகளாலும், பிறகு மறுபடியும் பத்தாலும் {10} துளைத்தான். சல்லியன் அவனை {பீமனை} ஒன்பது {9} கணைகளாலும், பிறகு மறுபடியும் ஐந்தாலும் {5 கணைகளாலும்} துளைத்தான். மேலும் அவன் {சல்லியன்}, பல்லம் ஒன்றினால், பீமசேனனின் தேரோட்டியுடைய உயிர் நிலைகளில் ஆழமாகத் துளைத்தான். தன் தேரோட்டியான விசோகன் ஆழமாகத் துளைக்கப்பட்டதைக் கண்ட வீரப் பீமசேனன், மத்ரர்கள் ஆட்சியாளனின் {சல்லியனின்} மார்பிலும் கரங்களிலும் மூன்று {3} கணைகளை ஏவினான்.

பெரும் வில்லாளிகளான பிறரைப் பொறுத்தவரை, அவர்கள் ஒவ்வொருவரையும் மூன்று நேரான கணைகளால் அந்தப் போரில் துளைத்த அவன் {பீமன்}, பிறகு சிங்கம் போல உரக்க முழங்கினான். பிறகு, உறுதியுடன் முயன்ற அந்தப் பெரும் வில்லாளிகள் ஒவ்வொருவரும், போரில் திறம் பெற்ற அந்தப் பாண்டு மகனின் {பீமனின்} உயிர் நிலைகளில் மூன்று {மும்மூன்று} கணைகளால் துளைத்தனர். வலிமைமிக்க வில்லாளியான அந்தப் பீமசேனன், ஆழத் துளைக்கப்பட்டாலும், மேகங்கள் பொழியும் மழைத்தாரைகளில் நனைந்த மலையைப் போல (உறுதியாக நின்றானேயன்றி) நடுங்கவில்லை.

பிறகு, பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரனாகக் கொண்டாடப்படும் அந்த வீரன் {பீமன்}, கோபத்தால் நிறைந்து, மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} மூன்று கணைகளால் துளைத்தான். பிறகு அவன் {பீமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் நூறு {100} கணைகளால் பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளனைத் {பகதத்தனைத்} துளைத்தான். பெரும் புகழ்பெற்ற அவன் {பீமன்}, பல கணைகளால் கிருபரைத் துளைத்து, பிறகு தன் பெரும் கர வேகத்தை வெளிப்படுத்தி, கூர்முனை கொண்ட க்ஷுரப்ரத்தால், உயர் ஆன்ம கிருதவர்மனின் கணை பொருத்தப்பட்ட வில்லை அறுத்தான். பிறகு, எதிரிகளை எரிப்பவனான அந்தக் கிருதவர்மன், மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, நாராசம் ஒன்றினால் விருகோதரனின் {பீமனின்} புருவங்களுக்கு இடையில் தாக்கினான்.

எனினும், பீமன், அந்தப் போரில் முழுக்க இரும்பாலான ஒன்பது {9} கணைகளால் சல்லியனையும், பகதத்தனை மூன்றாலும் {3}, கிருதவர்மனை எட்டாலும் {8} துளைத்து, கௌதமரைத் {கிருபரைத்} தலைமையாகக் கொண்ட பிறர் ஒவ்வொருவரையும் இரண்டு {2×2 இரண்டு இரண்டு} கணைகளால் துளைத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வீரர்களும், கூர்முனை கணைகளால் பதிலுக்கு அவனைத் {பீமனைத்} துளைத்தனர். அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களின் அனைத்து வகையிலான ஆயுதங்களால் பீடிக்கப்பட்டாலும், அவை அனைத்தையும் துரும்பாகக் கருதிய அவன் {பீமன்}, களத்தில் கவலையேதும் இல்லாமல் திரிந்து கொண்டிருந்தான். தேர்வீரர்களின் முதன்மையான அவர்களோ (மறுபுறம்), பெரும் பொறுமையுடன், பீமன் மீது நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கூர்முனை கணைகளை ஏவினர்.

பிறகு, வலிமைமிக்க வீர பகதத்தன், அந்தப் போரில், கடும் வேகம் கொண்டதும், தங்கப்பிடி கொண்டதுமான ஈட்டி {சக்தி} ஒன்றை அவன் {பீமன்} மீது வீசினான். வலிய கரங்களைக் கொண்ட சிந்துமன்னன் {ஜெயத்ரதன்} அவன் {பீமன்} மீது ஒரு வேலையும், ஒரு கோடரியையும் எறிந்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவன் {பீமன்} மீது சதக்னி ஒன்றைக் கிருபரும், கணை ஒன்றைச் சல்லியனும் ஏவினர். பெரும் வில்லாளிகளான பிறர் ஒவ்வொருவரும், அவன் {பீமன்} மீது, பெரும் சக்தியுள்ள ஐந்து {ஐந்து ஐந்து} கணைகளை ஏவினர்.

அந்த வாயு தேவனின் மகன் {பீமன்}, கூரிய க்ஷுரப்ரம் ஒன்றால் {ஜெயத்ரதனின்} அந்த வேலை இரண்டாக அறுத்தான். பிறகு அவன் {பீமன்}, ஏதோ எள்ளுச்செடியின் தண்டை வெட்டுவது போல மூன்று கணைகளால் அந்தக் கோடரியையும் வெட்டினான். கங்கப் பறவையின் இறகுகளால் அமைந்த சிறகைக் கொண்ட ஐந்து {5} கணைகளால், {கிருபரின்} அந்தச் சதக்னியை துண்டுகளாக வெட்டினான். பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {பீமன்}, மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} ஏவிய கணையை வெட்டி, அந்தப் போரில் பகதத்தனால் ஏவப்பட்ட ஈட்டியையும் {சக்தியையும்} பலமாக வெட்டினான். பிற கணைகளைப் பொறுத்தவரை, போரில் தன் சாதனைகளால் பெருமை கொண்டவனான பீமசேனன், நேரான தன் கணைகளால் அவை ஒவ்வொன்றையும் மூன்று {மூன்று மூன்று} துண்டுகளாக வெட்டினான். மேலும் அவன் {பீமன்}, அந்தப் பெரும் வில்லாளிகள் ஒவ்வொருவரையும் மூன்று {மூன்று மூன்று} கணைகளால் தாக்கினான்.

அந்தப் பயங்கரப் போர் நடந்து கொண்டிருந்த போது, தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் கணைகளால் (பலரை எதிர்த்துப்) போரிட்டு, எதிரியைத் தாக்கிக் கொண்டிருந்த வலிமைமிக்கத் தேர்வீரனான பீமனைக் கண்டு அவ்விடத்திற்குத் தன் தேரில் வந்தான். பிறகு, உமது படையின் அந்த மனிதர்களில் காளையர், பாண்டுவின் இரண்டு உயர் ஆன்ம மகன்களையும் ஒன்றாகக் கண்டு, வெற்றிக்கான நம்பிக்கைகள் அனைத்தையும் இழந்தனர்.

பிறகு பீஷ்மரைக் கொல்ல விரும்பித் தன் முன்னே சிகண்டியை நிறுத்தி வந்த அந்த அர்ஜுனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பெரும் வீரர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்த பீமனை அணுகி, உமது படையின் கடும் போராளிகளான அந்தப் பத்து {10} பேர் மீதும் பாய்ந்தான். பிறகு அந்தப் பீபத்சு {அர்ஜுனன்}, பீமனுக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமனுடன் போரிட்டுக் கொண்டிருந்த அந்த வீரர்கள் அனைவரையும் துளைத்தான்.

பிறகு, மன்னன் துரியோதனன், அர்ஜுனன் மற்றும் பீமசேனன் ஆகிய இருவரின் அழிவுக்காகச் சுசர்மனிடம், “ஓ! சுசர்மா, பெரும் படையொன்றால் ஆதரிக்கப்பட்டு விரைந்து செல்வாயாக. தனஞ்சயன் {அர்ஜுனன்} மற்றும் விருகோதரன் ஆகிய பாண்டுவின் மகன்கள் இருவரையும் கொல்வாயாக” என்று சொல்லித் தூண்டினான். பிரஸ்தாலம் என்றழைக்கப்படும் நாட்டை ஆள்பவனான அந்தத் திரிகர்த்த மன்னன் {சுசர்மன்}, அவனது {துரியோதனனின்} வார்த்தைகளைக் கேட்டு, பீமன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இரண்டு வில்லாளிகளுடன் போரிட விரைந்து, பல்லாயிரம் தேர்களால் அவர்கள் இருவரையும் {பீமன், அர்ஜுனனை} சூழ்ந்து கொண்டான். பிறகு அர்ஜுனனுக்கும், எதிரிக்கும் இடையில் கடும் போரொன்று தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.

பீமார்ஜுனர்களின் ஆற்றல்! – பீஷ்ம பர்வம் பகுதி – 115-கௌரவப் படையைப் பீடித்த அர்ஜுனன்; அர்ஜுனனையும் பீமனையும் தங்கள் கணைகளால் துளைத்த கௌரவர்கள்; பீமார்ஜுனர்களை எதிர்த்த துரோணரும், ஜெயத்சேனனும்; ஜெயத்சேனனின் தேரோட்டியை வீழ்த்திய பீமன்; பீமனுக்கும் துரோணருக்கும் ஏற்பட்ட மோதல்; சுசர்மனின் துருப்புகளை அழித்த அர்ஜுனன்; போர் பீஷ்மரை மையமாகக் கொண்டு இயங்கியது

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அர்ஜுனன், போரில் கடுமையாகப் போராடிக் கொண்டிருந்த வலிமைமிக்கத் தேர்வீரனான சல்லியனைத் தன் நேரான கணைகளால் மறைத்தான். அவன் {அர்ஜுனன்}, சுசர்மன் மற்றும் கிருபர் ஆகியோர் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் துளைத்தான்.-அந்தப் போரில், அதிரதனான அர்ஜுனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்}, சிந்துக்களின் மன்னன் ஜெயத்ரதன், சித்திரசேனன், விகர்ணன், கிருதவர்மன், துர்மர்ஷணன், அவந்தியின் இளவரசர்களான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் இருவர் {விந்தன் மற்றும் அனுவிந்தன்} ஆகியோர் ஒவ்வொருவரையும் கங்க மற்றும் மயில் இறகுகளால் அமைந்த சிறகைக் கொண்ட மூன்று {மூன்று மூன்று} கணைகளால் தாக்கி உமது படையைப் பீடித்தான்.

சித்திரசேனனின் தேரில் இருந்த ஜெயத்ரதன், (பதிலுக்குப்) பார்த்தனைத் {அர்ஜுனனைத்} துளைத்து, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பிறகு, நேரத்தை இழக்காமல், பீமனையும் தன் கணைகளால் துளைத்தான். சல்லியன், தேர்வீரர்களில் முதன்மையான கிருபர் ஆகிய இருவரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உயிர்நிலைகளையே ஊடுருவவல்ல பல்வேறு வகையான கணைகளால் ஜிஷ்ணுவை {அர்ஜுனனைத்} துளைத்தனர். சித்திரசேனனின் தலைமையிலான உமது மகன்கள் ஒவ்வொருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் அர்ஜுனனையும், பீமசேனனையும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஐந்து கூரிய கணைகளால் விரைவாகத் துளைத்தனர்.

எனினும், தேர்வீரர்களில் முதன்மையானவர்களும் பாரதக் குலக் காளைகளுமான அந்தக் குந்தியின் மகன்கள் இருவரும் {பீமனும், அர்ஜுனனும்}, அந்தப் போரில் திரிகர்த்தர்களின் வலிமைமிக்கப் படையைப் பீடிக்கத் தொடங்கினர். ஒன்பது {9} கணைகளால் பார்த்தனைப் {அர்ஜுனனைப்} பதிலுக்குத் துளைத்த சுசர்மன், (பாண்டவர்களின்) அந்தப் பெரும்படையை அச்சுறுத்தும் வகையில் பெரும் கூச்சலிட்டான். வீரமிக்கத் தேர்வீரர்கள் பிறர், தங்கச் சிறகுகளைகளையும், கூர் முனைகளையும் கொண்ட நேராகச் செல்லும் கணைகள் பலவற்றால் பீமசேனனையும், தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} துளைத்தனர்.

எனினும், பாரதக் குலக்காளைகளும், பெரும் தேர்வீரர்களுமான அந்தக் குந்தியின் மகன்கள் இருவரும் {பீமனும், அர்ஜுனனும்}, இந்தத் தேர்வீரர்களுக்கு மத்தியில் மிக அழகாகத் தெரிந்தனர். பசு மந்தைகளுக்கு மத்தியில் உள்ள மூர்க்கமான சிங்கங்கள் இரண்டைப் போல, அவர்களுக்கு {எதிர்த்த கௌரவ வீரர்களுக்கு} மத்தியில் அவர்கள் {பீமனும், அர்ஜுனனும்}, விளையாடுவதைப் போலத் தெரிந்தது. அந்தப் போரில் துணிச்சல் மிக்க வீரர்கள் பலரின் விற்கள் மற்றும் கணைகளைப் பல்வேறு வழிகளில் வெட்டிய அந்த வீரர்கள் இருவரும் {பீமனும், அர்ஜுனனும்}, போராளிகளின் தலைகளை நூறு நூறாக வீழ்த்தினார்கள்.

எண்ணற்ற தேர்கள் நொறுக்கப்பட்டன, நூற்றுக்கணக்கான குதிரைகளும், பல யானைகளும் அவற்றைச் செலுத்துபவர்களுடன் சேர்த்துக் கொல்லப்பட்டு, அந்தப் பயங்கரப் போர்க்களத்தில் கீழே கிடந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் எண்ணிக்கையிலான தேர்வீரர்கள், குதிரைவீரர்கள், யானைப்பாகன்கள் ஆகியோர் உயிரிழந்து துடித்துக்கொண்டே நகர்வது களமெங்கும் காணப்பட்டது. கூட்டமாகக் கொல்லப்பட்ட யானைகள் மற்றும் காலாட்படையினர், உயிரிழந்த குதிரைகள், பல்வேறு வழிகளில் நொறுக்கப்பட்ட தேர்கள் ஆகியவற்றால் பூமி மறைக்கப்பட்டிருந்தது.

அனைத்து வீரர்களையும் தடுத்து, பெரும் படுகொலையை நிகழ்த்திய வலிமைமிக்க வீரனான அந்தப் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} நாங்கள் அங்கே கண்ட ஆற்றல் மிக அற்புதமானதாக இருந்தது. {இருப்பினும்}, கிருபர், கிருதவர்மன், சிந்துக்களின் ஆட்சியாளன் ஜெயத்ரதன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோர் போரைக் கைவிடவில்லை. பிறகு, பெரும் வில்லாளியான பீமனும், வலிமைமிக்கத் தேர்வீரனான அர்ஜுனனும், கௌரவர்களின் அந்தக் கடும் படையை அந்தப் போரில் முறியடிக்கத் தொடங்கினர்.

(அந்த {கௌரவப்} படையின்) மன்னர்கள் விரைவாகத் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} தேர் மீது மயிலிறகுகளால் அலங்கரிக்கப்பட்ட லட்சக்கணக்கான எண்ணற்ற கணைகளை ஏவினர். எனினும், பார்த்தன் {அர்ஜுனன்}, தன் கணை மழையால் அந்தக் கணைகளைத் தடுத்து, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களை யமலோகம் அனுப்பத் தொடங்கினான்.

பிறகு, அந்தப் போரில் விளையாடிக் கொண்டிருப்பவனைப் போல இருந்த பெரும் தேர்வீரனான சல்லியன், கோபத்தால் தூண்டப்பட்டு, நேரான சில பல்லங்களால் அர்ஜுனனின் மார்பைத் தாக்கினான். பிறகு பார்த்தன் {அர்ஜுனன்}, ஐந்து {5} கணைகளின் மூலம் சல்லியனின் வில்லையும், தோலுறையையும் அறுத்து, கூர் முனை கொண்ட கணைகள் பலவற்றால் பின்னவனின் {சல்லியனின்} உயிர்நிலைகளை ஆழமாகத் துளைத்தான்.

பெரும் வலிமையைத் தாங்கவல்ல மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, பிறகு, மூன்று கணைகளால் ஜிஷ்ணுவையும் {அர்ஜுனனையும்}, ஐந்தால் {5} வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} மூர்க்கமாகத் தாக்கினான். மேலும் ஒன்பது கணைகளால் பீமசேனனின் கரங்களையும் மார்பையும் தாக்கினான்.

பிறகு, துரியோதனனின் உத்தரவுக்கிணங்க, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணர், வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த மகதர்களின் ஆட்சியாளன் {ஜெயத்சேனன்} ஆகிய இருவரும், குரு மன்னனின் வலிமைமிக்கப் படையைப் படுகொலை செய்து கொண்டிருந்த இரு வலிமைமிக்கத் தேர்வீரர்களான பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் பீமசேனன் ஆகியோர் இருக்கும் இடத்தை அடைந்தனர்.

பிறகு, (மகதர்களின் மன்னன்) ஜெயத்சேனன், ஓ! பாரதக்குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, போரில் பயங்கர ஆயுதங்களைத் தரித்திருக்கும் அந்தப் பீமனை எட்டு கூரிய கணைகளால் துளைத்தான். எனினும், பீமன் (பதிலுக்கு) பத்து கணைகளாலும், பிறகு மீண்டும் ஐந்தாலும் அவனைத் {ஜெயத்சேனனைத்} துளைத்தான். பிறகு அவன் {பீமன்}, பல்லம் ஒன்றினால் ஜெயத்சேனனின் தேரோட்டியை அவனது தேர்த்தட்டில் இருந்து விழச்செய்தான். கட்டுப்பாட்டை இழந்த (அவனது {ஜெயத்சேனனது} தேரின்) குதிரைகள் திசைகள் அனைத்திலும் மூர்க்கமாக ஓடி, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மகதர்களின் ஆட்சியாளனை {ஜெயத்சேனனை} (போரை விட்டு வெளியே) கொண்டு சென்றன.

அதே வேளையில், ஒரு திறப்பை {வாய்ப்பைக்} கண்ட துரோணர், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தவளையின் வாய் வடிவத் தலைகளைக் கொண்ட எட்டு {8} கணைகளால் பீமசேனனைத் துளைத்தார். எனினும், போரில் எப்போதும் மகிழ்பவனான பீமன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தந்தையைப் போல மதிக்கத்தக்க ஆசானை {துரோணரை} ஐந்து பல்லங்களாலும், பிறகு மேலும் அறுபது {60} கணைகளாலும் துளைத்தான்.

அர்ஜுனன், (முழுவதும்) இரும்பாலான எண்ணற்ற கணைகளால் சுசர்மனைத் துளைத்து, வலிமைமிக்க மேகத் திரள்களை அழிக்கும் சூறாவளியைப் போல அவனது {சுசர்மனின்} துருப்புகளை அழித்தான்.

பிறகு, பீஷ்மர், {கௌரவ} மன்னன் (அதாவது துரியோதனன்), கோசலர்களின் ஆட்சியாளன் பிருஹத்பலன் ஆகியோர் சினத்தால் தூண்டப்பட்டு, பீமசேனன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகியோரிடம் முன்னேறிச் சென்றனர். இதன் காரணமாக, பாண்டவப் படையின் வீரமிக்கப் போர்வீரர்களும், பிருஷதன் {துருபதன்} மகன் திருஷ்டத்யும்னனும், வாயை அகலத்திறந்து காலனைப் போல முன்னேறி வரும் பீஷ்மரை எதிர்த்து விரைந்தான்.

சிகண்டியும், பாரதர்களின் பாட்டனைப் {பீஷ்மரைக்} கண்டு, மகிழ்ச்சியால் நிறைந்து, வலிமைமிக்க அந்தத் தேர்வீரர் {பீஷ்மர்} மீது கொண்ட அச்சத்தைக் கைவிட்டு, அவரை {பீஷ்மரை} நோக்கி விரைந்தான். பிறகு, யுதிஷ்டிரனைத் தங்கள் தலைமையில் கொண்ட பார்த்தர்கள் அனைவரும், சிகண்டியைத் தங்கள் முன்னணியில் கொண்டும், சிருஞ்சயர்களுடன் {பாஞ்சாலர்களுடன்} சேர்ந்தும், போரில் பீஷ்மருடன் போரிட்டனர். அதே போல உமது படையின் வீரர்கள் அனைவரும், ஒழுங்கான நோன்புகளைக் கொண்ட பீஷ்மரைத் தங்கள் முன்னணியில் கொண்டு, போரில் சிகண்டியின் தலைமையிலான பார்த்தர்கள்  {பாண்டவர்கள்} அனைவருடன் போரிட்டனர்.

பிறகு, பீஷ்மரின் வெற்றிக்காக கௌரவர்களுக்கும், அல்லது பீஷ்மரை வெல்வதற்காகக்  பாண்டுவின் மகன்களுக்கும் {பாண்டவர்களுக்கு} இடையில் தொடங்கிய அந்தப் போர் மிகப் பயங்கரமானதாக இருந்தது. உண்மையில், வெற்றிக்காக, அல்லது தோல்விக்காக விளையாடப்பட்ட அந்தப் போர் விளையாட்டில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது படையின் வெற்றிக்கு யாரை நம்பியிருந்தனரோ, அந்தப் பீஷ்மர் பந்தயப் பொருளானார்.

பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருப்புகள் அனைத்துக்கும் ஆணையிட்ட திருஷ்டத்யும்னன், “கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} எதிர்த்து விரைவீராக. தேர்வீரர்களில் சிறந்தவர்களே, அஞ்சாதீர்” என்றான். தங்கள் படைத்தலைவனின் அவ்வார்த்தைகளைக் கேட்ட பாண்டவர்களின் படை, அந்தப் பயங்கரப் போரில் தங்கள் உயிரையும் விடத் தயாராகப் பீஷ்மரை எதிர்த்து விரைந்து முன்னேறினர்.

தேர்வீரர்களில் முதன்மையான அந்தப் பீஷ்மர், கொந்தளிக்கும் கடலை ஏற்கும் நிலத்தை {கரையைப்} போலத் தன்னை நோக்கி விரைந்து வரும் அந்தப் பெரும்படையை ஏற்றார் {வரவேற்றார்}” {என்றான் சஞ்சயன்}.

யுதிஷ்டிரனை அறிவுறுத்திய பீஷ்மர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 116-திருதராஷ்டிரன் கேள்வியும், சஞ்சயன் பதிலளிக்கத் தொடங்கியதும்; வாழ்வை வெறுத்த பீஷ்மர், தன்னைக் கொல்ல அறிவுறுத்தி, யுதிஷ்டிரனைத் தூண்டிய பீஷ்மர்; படைவீரர்களைத் தூண்டிய யுதிஷ்டிரன்; பாண்டவப் படையின் முயற்சி; ஒருவரை ஒருவர் எதிர்த்த மன்னர்களையும் தேர்வீரர்களையும் பற்றிய குறிப்பு; போரில் எழுந்த ஆரவாரமும், பேரொலியும்; இரு தரப்பிலும் ஏற்பட்ட இழப்புகள்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, வலிமையும் சக்தியும் கொண்ட சந்தனுவின் மகன் பீஷ்மர், பத்தாம் {10} நாள் போரில் பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களுடன் எவ்வாறு போரிட்டார்? குருக்களும் போரில் பாண்டவர்களை எவ்வாறு தடுத்தனர்? போரையே ஆபரணமாகக் கொண்ட பீஷ்மர், அந்தப் பெரும்போரில் போரிட்டதை எனக்கு விவரமாகச் சொல்வயாக” என்று கேட்டான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கௌரவர்கள் எவ்வாறு பாண்டவர்களுடன் போரிட்டனர் என்றும், அந்தப் போர் எவ்வாறு நடந்தது என்றும் இப்போது நான் உமக்கு விவரிப்பேன்.

நாளுக்கு நாள், கோபத்தில் தூண்டப்பட்ட உமது படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர், கிரீடம் தரித்தவனின் (அர்ஜுனனின்) பெரும் ஆயுதங்களால் அடுத்த உலகத்திற்கு அனுப்பப்பட்டனர். எப்போதும் வெல்லும் குரு வீரரான பீஷ்மரும், தன் நோன்புக்கு ஏற்புடைய வகையில், பார்த்தப் படைக்கு {பாண்டவபடைக்கு} மத்தியில் பெரும் அழிவையே எப்போதும் ஏற்படுத்தினார்.

ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, குருக்களுக்குத் தலைமையில் நின்று போரிடும் பீஷ்மரையும், பாஞ்சாலர்களுக்குத் தலைமையில் நின்று போரிடும் அர்ஜுனனையும் கண்ட எங்களால், வெற்றி எத்தரப்பில் தன்னை அறிவித்துக் கொள்ளும் என்று உண்மையிலேயே சொல்ல முடியவில்லை.

பத்தாம் {10} நாள் போரில், பீஷ்மரும் அர்ஜுனனும் ஒருவரோடொருவர் மோதியபோது, பயங்கரப் பேரழிவு அங்கே நிகழ்ந்தது. அந்நாளில், ஓ! எதிரிகளை எரிப்பவரே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்க உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவரான சந்தனுவின் மகன் பீஷ்மர், ஆயிரமாயிரம் வீரர்களைத் தொடர்ச்சியாகக் கொன்றார். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பெயர்கள் மற்றும் குடும்பங்கள் {கோத்திரங்களும்} அறியப்படாதவர்களும், போரில் பின்வாங்காதவர்களும், பெரும் துணிவுமிக்கவர்களுமான பலர் அந்நாளில் பீஷ்மரால் கொல்லப்பட்டனர்.

பத்து நாட்கள் பாண்டவப் படையை எரித்தவரான அற ஆன்மா கொண்ட {தர்மாத்மா} பீஷ்மர், தன் உயிரைக் காத்துக் கொள்ளும் விருப்பம் அனைத்தையும் கைவிட்டார். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, தன் துருப்புகளுக்குத் தலைமையில் இருந்து கொண்டு, தாம் கொல்லப்படுவதை விரும்பி, “பெரும் எண்ணிக்கையிலான வீரர்களில் முதன்மையானோரை இனியும் நான் கொல்லேன்” என்று நினைத்தார்.

அவர் {பீஷ்மர்}, தன் அருகில் இருந்த யுதிஷ்டிரனைக் கண்டு, அவனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, ஓ! பெரும் விவேகியே {பேரறிவாளனே}, ஓ! கல்வியின் அனைத்து கிளைகளையும் அறிந்தவனே, ஓ! ஐயா {யுதிஷ்டிரா}, நீதிமிக்கதும், சொர்க்கத்திற்கு வழிகாட்டுவதுமான நான் சொல்லும் வார்த்தைகளைக் கேட்பாயாக. ஓ! பாரதா, ஓ! ஐயா {யுதிஷ்டிரா}, இந்த என் உடலை இனிமேலும் பாதுகாக்க நான் விரும்பவில்லை. பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களைப் போரில் கொன்றே நெடுங்காலத்தை நான் கடந்திருக்கிறேன். எனக்கு ஏற்புடையதைச் செய்ய நீ விரும்புவாயெனில், பாஞ்சாலர்களுடனும், சிருஞ்சயர்களுடனும் கூடிய பார்த்தனை {அர்ஜுனனை} உனக்கு முன்னில்லையில் நிறுத்தி, என்னைக் கொல்ல முயல்வாயாக” என்றார் {பீஷ்மர்}.

மெய்ப்பார்வை கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், இஃதையே அவரது நோக்கம் என உறுதி செய்து கொண்டு, (தன் உதவிக்கு) சிருஞ்சயர்களைக் கொண்டு போரிடச் சென்றான். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனும், பாண்டுவின் மகனான யுதிஷ்டிரனும், பீஷ்மரின் அந்த வார்த்தைகளைக் கேட்டு, தங்கள் வியூகத்தை {வியூகத்தில் இருந்த படைவீரர்களைத்} தூண்டினார்கள்.

யுதிஷ்டிரன், “முன்னேறுவீராக! போரிடுவீராக! போரில் பீஷ்மரை வீழ்த்துவீராக! எதிரிகளை வெல்பவனும், கலங்கடிக்க முடியாத நோக்கம் கொண்டவனுமான ஜிஷ்ணுவால் {அர்ஜுனனால்} நீவிர் அனைவரும் பாதுகாக்கப்படுவீர். பெரும் வில்லாளியும், (நமது படைகளின்) தலைவனுமான இந்தப் பிருஷதன் மகனும் {துருபதன் மகன் திருஷ்டத்யும்னனும்}, பீமனும் உங்களை நிச்சயமாகப் பாதுகாப்பார்கள். சிருஞ்சயர்களே, போரில் இன்று பீஷ்மரிடம் எந்த அச்சமும் கொள்ளாதீர். சிகண்டியை முன்னிறுத்தி பீஷ்மரை இன்று நாம் வீழ்த்துவோம் என்பதில் ஐயமில்லை” என்றான் {யுதிஷ்டிரன்}.

பத்தாம் {10} நாள் போரில் இத்தகு விரதம் பூண்ட பாண்டவர்கள், (வெல்வது அல்லது) சொர்க்கத்திற்குச் செல்வது எனத் தீர்மானித்து, சினத்தால் குருடாகி, சிகண்டியையும், பாண்டுவின் மகனான தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} தங்கள் முன்னிலையில் கொண்டு முன்னேறினர். மேலும், பீஷ்மரை வீழ்த்த மிகக் கடுமையான முயற்சிகளை அவர்கள் செய்தனர்.

பிறகு, பெரும் வலிமையைக் கொண்ட பல்வேறு மன்னர்கள், உமது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்டு, துரோணர், அவரது மகன் {அஸ்வத்தாமன்} மற்றும் ஒரு பெரும்படையின் துணையோடும், தன் தம்பிகள் அனைவருக்கும் தலைமையில் இருந்த வலிமைமிக்கத் துச்சாசனனோடும், அந்தப் போரின் மத்தியில் இருந்த பீஷ்மரை நோக்கி {அவரைக் காப்பதற்காக} முன்னேறினர். பிறகு, உமது படையின் துணிச்சல்மிக்க வீரர்களான அவர்கள், உயர்ந்த நோன்புகளைக் கொண்ட பீஷ்மரைத் தங்கள் முன்னணியில் கொண்டு, சிகண்டியின் தலைமையிலான பார்த்தர்களோடு {பாண்டவர்களோடுப்} போரிட்டனர்.

சேதிகள் மற்றும் பாஞ்சாலர்கள் ஆகியோரால் ஆதரிக்கப்பட்ட குரங்குக் கொடியோன் அர்ஜுனன், சிகண்டியை முன்னிறுத்திக் கொண்டு சந்தனுவின் மகனான பீஷ்மரை நோக்கிச் சென்றான்.

சிநியின் பேரன் {சாத்யகி} துரோணரின் மகனோடு {அஸ்வத்தாமனோடு} போரிட்டான், திருஷ்டகேது பூருவின் வழித்தோன்றலுடனும் {பௌரவனுடனும்}, {சோமக [பாஞ்சால] இளவரசன்} யுதாமன்யு [1] தொண்டர்களுக்குத் தலைமையில் இருந்த உமது மகன் துரியோதனனுடனும் போரிட்டனர். விராடன், தன் படைகளுக்குத் தலைமையில் நின்று, ஜெயத்ரதனோடும், அவனை ஆதரித்த அவனது துருப்புகளோடும் போரிட்டான். வர்த்தக்ஷத்தரினின் வாரிசோ [2], ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, சிறந்த வில் மற்றும் கணைகளோடு கூடிய உமது மகன் சித்திரசேனனுடன் மோதினான்

யுதிஷ்டிரன், வலிமைமிக்க வில்லாளியும், தன் துருப்புகளுக்குத் தலைமையில் நின்றவனுமான சல்லியனை எதிர்த்து விரைந்தான். பீமசேனன், நன்கு பாதுகாத்துக் கொண்டு, (கௌரவப் படையின்) யானைப்படைப் பிரிவை எதிர்த்துச் சென்றான். தன் தம்பிகள் துணையுடன் கூடிய பாஞ்சால இளவரசனான திருஷ்டத்யும்னன், சீற்றத்தால் தூண்டப்பட்டு, ஆயுதங்கள் தாங்கியோர் அனைவரிலும் முதன்மையானவரும், வெல்லப்பட முடியாதவரும், தடுக்கப்பட முடியாதவருமான துரோணரை எதிர்த்து விரைந்தான்.

சிங்கக் கொடியினை தன் கொடிமரத்தில் கொண்டவனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான {கோசலர்களின்} இளவரசன் பிருஹத்பலன், கர்ணீகர {கோங்கு மரம்} மலர்க்கொடியைத் தாங்கிய கொடிமரத்துடன் கூடிய சுபத்ரையின் மகனை {அபிமன்யுவை} எதிர்த்து விரைந்தான் [3]. மன்னர்கள் பலரின் துணையோடு கூடிய உமது மகன்கள், சிகண்டி மற்றும் பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரையும் கொல்ல விரும்பி அவர்களை எதிர்த்து விரைந்தனர்.

பயங்கர ஆற்றலைக் கொண்ட இரு படைகளின் போராளிகளும் ஒருவரை நோக்கி ஒருவர் விரைந்த போது (அவர்களது நடையால்) பூமி நடுங்கியது. போரில் சந்தனுவின் மகனை {பீஷ்மரைக்} கொண்ட உமது படையும், எதிரியின் படையும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஒருவரோடு ஒருவர் கலந்தனர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சினத்தில் எரிந்து, ஒருவரை ஒருவர் எதிர்த்து விரையும் அந்தப் போராளிகளால் எழுந்த மிகப் பெரிய ஆரவாரம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} அனைத்துப் பக்கங்களிலும் கேட்கப்பட்டது. சங்கொலிகளாலும், படைவீரர்களின் சிங்க முழக்கங்களாலும் எழுந்த பேரிரைச்சல் பயங்கரமாக இருந்தது. சூரியனுக்கோ, சந்திரனுக்கோ இணையான காந்தியைக் கொண்ட வீரமன்னர்கள் அனைவரின் தோள்வளைகளும், கிரீடங்களும் மங்கிப் போயிற்று.

இரு படைகளைச் சேர்ந்தவர்களின் விற்களின் நாணொலிகளும், கணைகளின் “விஸ்” ஒலிகளும், சங்கொலிகளும், பேரிகைகளின் ஒலிகளும், தேர்களின் சடசடப்பொலியும் மேகங்களின் கடும் முழக்கங்களுக்கு இணையாக இருந்தன. இரு படைகளைச் சேர்ந்தவர்களின் பராசங்கள், ஈட்டிகள், ரிஷ்டிகள் மற்றும் கணைகளின் மழையால் போர்க்களத்திற்கு மேலே இருந்த ஆகாயம் இருளடைந்தது {ஒளியற்றதாகியது}. அந்தப் பயங்கரப் போரில் தேர்வீரர்களும், குதிரை வீரர்களும், குதிரைவீரர்களை வீழ்த்தினார்கள். யானைகள், யானைகளைக் கொன்றன, காலாட்படை வீரர்கள், காலாட்படை வீரர்களைக் கொன்றனர்.

பீஷ்மரின் நிமித்தமாகக் குருக்களுக்கும் {கௌரவர்களுக்கும்}, பாண்டவர்களுக்கும் இடையில் நடைபெற்ற அப்போர், ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, ஒரு சதைத்துண்டுக்காக மோதும் இரு பருந்துகளைப் போல மிகக் கடுமையானதாக இருந்தது. ஒருவரை ஒருவர் கொல்ல விரும்பி, ஒருவரை ஒருவர் வீழ்த்த விரும்பி போரில் ஈடுபட்ட போராளிகளுக்குள் நடைபெற்ற அந்த மோதல் மிகப் பயங்கரமானதாக இருந்தது” {என்றான் சஞ்சயன்}

பயங்கரப் போரும், பேரழிவும்! – பீஷ்ம பர்வம் பகுதி – 117-திருதராஷ்டிரன் கேள்வியும், சஞ்சயன் பதிலளிக்கத் தொடங்கியதும்; வாழ்வை வெறுத்த பீஷ்மர், தன்னைக் கொல்ல அறிவுறுத்தி, யுதிஷ்டிரனைத் தூண்டிய பீஷ்மர்; படைவீரர்களைத் தூண்டிய யுதிஷ்டிரன்; பாண்டவப் படையின் முயற்சி; ஒருவரை ஒருவர் எதிர்த்த மன்னர்களையும் தேர்வீரர்களையும் பற்றிய குறிப்பு; போரில் எழுந்த ஆரவாரமும், பேரொலியும்; இரு தரப்பிலும் ஏற்பட்ட இழப்புகள்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பீஷ்மரின் நிமித்தமாகத் தன் ஆற்றலை வெளிப்படுத்திய அபிமன்யு, பெரும்படையால் ஆதரிக்கப்பட்ட உமது மகனுடன் {துரியோதனனுடன்} போரிட்டான். பிறகு, கோபத்தால் தூண்டப்பட்ட துரியோதனன், ஒன்பது {9} நேரான கணைகளால் அபிமன்யுவின் மார்பிலும், பிறகு மூன்று {3} கணைகளாலும் தாக்கினான்.

பிறகு அந்தப் போரில் கோபத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, மரணக்கோலுக்கு {காலதண்டத்திற்கு} ஒப்பான ஒரு பயங்கர ஈட்டியை துரியோதனனின் தேர் மீது ஏவினான். எனினும் வலிமைமிக்கத் தேர்வீரனான உமது மகன் {துரியோதனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் வேகத்துடன் தன்னை நோக்கி வரும் பயங்கர சக்தி கொண்ட அந்த ஈட்டியைப் பெரும் கூர்மையுள்ள பல்லம் ஒன்றினால் இரண்டாக வெட்டினான். தன் ஈட்டி பூமியில் விழுந்ததைக் கண்ட அர்ஜுனனின் கோபக்கார மகன் {அபிமன்யு}, மூன்று கணைகளால் துரியோதனனின் கைகளையும், மார்பையும் துளைத்தான். ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, பாரதக் குலத்தின் அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {அபிமன்யு}, பத்து கடுங்கணைகளால் மீண்டும் ஒருமுறை, குரு மன்னனின் {துரியோதனின்} நடு மார்பைத் துளைத்தான்.

சுபத்திரையின் மகன் {அபிமன்யு} மற்றும் அந்தக் குரு குலக் காளை {துரியோதனன்} ஆகிய இரு வீரர்களுக்கு இடையில் நடந்ததும், முன்னவன் {அபிமன்யு} பீஷ்மரின் மரணத்திற்காகவும், பின்னவன் {துரியோதனன்} அர்ஜுனனின் தோல்விக்காகவும் போரிட்டதுமான அந்தப் போர், காண்பதற்குக் கடுமையானதாகவும், சுவாரஸ்யமானதாகவும், புலன்களுக்கு நிறைவைத்தருவதாகவும், மன்னர்கள் அனைவராலும் மெச்சப்படுவதாகவும் இருந்தது.

அந்தணர்களில் காளையும், எதிரிகளைத் தண்டிப்பவனும், அந்தப் போரில் கோபத்தால் தூண்டப்பட்டவனுமான துரோண மகன் {அஸ்வத்தாமன்}, ஒரு கடுங்கணையால் {நாராசத்தால்} சாத்யகியின் மார்பைப் பலமாகத் தாக்கினான். அளவிலா ஆன்மா கொண்டவனும், சிநியின் பேரனுமான அந்த வீரன் {சாத்யகி}, கங்கப் பறவையின் இறகுகளால் அமைந்த சிறகுகளைக் கொண்ட ஒன்பது {9} கணைகளால் ஆசான் மகனின் {அஸ்வத்தாமனின்} முக்கிய அங்கங்கள் அனைத்தையும் தாக்கினான். பிறகு, அந்தப் போரில் அஸ்வத்தாமன், ஒன்பது {9} கணைகளால் சாத்யகியை (பதிலுக்குத்) தாக்கி, மீண்டும் விரைவாக முப்பதால் {30} அவனது கரங்களையும் மார்பையும் தாக்கினான். அப்போது, பெரும் புகழைக் கொண்டவனும், சாத்வத குலத்தோனுமான அந்தப் பெரும் வில்லாளி {சாத்யகி}, துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} ஆழத் துளைக்கப்பட்டு, (பதிலுக்கு) பின்னவனை {அஸ்வத்தாமனைக்} கணைகளால் துளைத்தான்.

வலிமைமிக்கத் தேர்வீரனான பௌரவன், அந்தப் போரில் {சேதி மன்னன்} திருஷ்டகேதுவைத் தன் கணைகளால் மறைத்து, அந்தப் பெரும் வில்லாளியைக் {திருஷ்டகேதுவைக்} கடுமையாகச் சிதைத்தான். பெரும் பலம் கொண்ட வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டகேது, முன்னவனை {பௌரவனை} முப்பது கணைகளால் விரைவாகத் துளைத்தான் பிறகு, வலிமைமிக்கத் தேர்வீரனான பௌரவன் திருஷ்டகேதுவின் வில்லை அறுத்து, உரக்கக் கூச்சலிட்டபடி, கூர் தீட்டப்பட்ட கணைகளால் அவனைத் {திருஷ்டகேதுவைத்} துளைத்தான். மற்றொரு வில்லை எடுத்த திருஷ்டகேது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் கூர்மையுள்ள எழுபத்துமூன்று {73} கணைகளால் அந்தப் பௌரவனைத் துளைத்தான்.

பெரும் வில்லாளிகளும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும், பெரும் தோற்றம் கொண்டவர்களுமான அவ்விருவரும், கணைமாரியால் ஒருவரையொருவர் துளைத்துக் கொண்டனர். ஒருவரின் வில்லை மற்றவர் வெட்டுவதிலும், ஒருவரின் குதிரைகளை மற்றவர் கொல்வதிலும் அவர்கள் ஒவ்வொருவரும் வென்றனர். மேலும் அவர்கள் இருவரும் இப்படித் தங்கள் தேர்களையும் இழந்து, வாள்களால் போரிட்டு ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர். காளைத் தோலாலானவையும், நூறு நிலவுகளாலும், நூறு நட்சத்திரங்களாலும் அலங்கரிக்கப்பட்டவையான அழகிய கேடயங்களை அவ்விருவரும் எடுத்துக் கொண்டனர். மேலும் அவர்கள் ஒவ்வொருவரும் பெரும் பிரகாசம் கொண்ட பளபளக்கும் வாள் ஒன்றையும் எடுத்துக் கொண்டனர்.

இப்படித் தங்களை {ஆயுதங்களால்} தரித்துக் கொண்ட அவர்கள், ஆழ்ந்த கானகத்தில், பருவகாலமடைந்த ஒரு பெண் சிங்கத்தின் துணையை நாடும் இரண்டு சிங்கங்களைப் போல ஒருவரை நோக்கி மற்றவர் விரைந்தனர். அழகான வளையங்களில் {களத்தில் வட்டமாகச்} சுழன்ற அவர்கள், முன்னேறியும், பின்வாங்கியும் தங்கள் பிற நகர்வுகளை வெளிக்காட்டியபடியும் ஒருவரையொருவர் தாக்க முயன்றனர். பிறகு கோபத்தால் தூண்டப்பட்ட பௌரவன், திருஷ்டகேதுவிடம், “நில், நில்” என்று சொல்லி, தன் பெரிய வாளால் அவனது நெற்றி எலும்பில் தாக்கினான்.

சேதிகளின் மன்னனும் {திருஷ்டகேதுவும்} அந்தப் போரில், கூர்முனை கொண்ட தன் பெரும் வாளால், மனிதர்களில் காளையான அந்தப் பௌரவனை அவனது தோள்ப்பூட்டில் தாக்கினான். இப்படி அந்தப் பயங்கரப் போரில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட அந்த எதிரிகளை ஒடுக்குபவர்களான அவர்கள் இருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தில் கீழே விழுந்தனர். உமது மகன் ஜெயத்சேனன், தன் தேரில் பௌரவனைத் தூக்கிக் கொண்டு, அவ்வாகனத்தின் மூலமே அவனைப் {பௌரவனைப்} போர்க்களத்தில் இருந்து விலக்கினான். திருஷ்டகேதுவைப் பொறுத்தவரை, வீரமிக்கவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனும், மாத்ரியின் மகனுமான வீர சகாதேவன் களத்தில் இருந்து அவனைத் {திருஷ்டகேதுவைத்} தூக்கிச் சென்றான்.

சித்திரசேனன், முழுவதும் இரும்பாலான பல கணைகளால் சுசர்மனைத் [1] துளைத்து, மேலும் அறுபது {60} கணைகளாலும், பிறகு மேலும் ஒன்பதாலும் {9 கணைகளாலும்} அவனை {சுசர்மனைத்} துளைத்தான். எனினும், போரில் கோபத்தால் தூண்டப்பட்ட சுசர்மன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} நூற்றுக்கணக்கான கணைகளால் உமது மகனை {சித்திரசேனனைத்} துளைத்தான். சித்திரசேனனும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்டு, தன் எதிரியை நேரான முப்பது கணைகளால் துளைத்தான். எனினும், சுசர்மனும் பதிலுக்குச் சித்திரசேனனைத் துளைத்தான்.

பீஷ்மரின் அழிவுக்கான அந்தப் போரில், புகழையும் மதிப்பையும் மேம்படுத்துபவனான சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தன், (தன் தந்தையான) பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்கு} உதவும் வகையில் தன் ஆற்றலை வெளிப்படுத்தி, இளவரசன் பிருஹத்பலனோடு போரிட்டு, பிறகு பீஷ்மரின் எதிரே சென்றான். கோசலர்களின் ஆட்சியாளன் {பிருஹத்பலன்}, இரும்பாலான ஐந்து கணைகளால் அர்ஜுனன் மகனை {அபிமன்யுவைத்} துளைத்து, மேலும் இருபது {20} நேரான கணைகளால் மீண்டும் அவனைத் துளைத்தான். பிறகு சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, முழுவதும் இரும்பாலான எட்டு கணைகளால் கோசலர்களின் ஆட்சியாளனைத் {பிருஹத்பலனைத்} துளைத்தான். எனினும், அவன் {அபிமன்யு}, கோசலர்களின் ஆட்சியாளனை நடுங்கச் செய்வதில் வெல்லவில்லை, எனவே, அவன் {அபிமன்யு} மீண்டும் கணைகள் பலவற்றால் அவனைத் {பிருஹத்பலனைத்} துளைத்தான். மேலும் அந்தப் பல்குனன் மகன் {அபிமன்யு}, பிருஹத்பலனின் வில்லை அறுத்து, கங்கப் பறவையின் இறகுகளாலான சிறகுகளைக் கொண்ட முப்பது கணைகளைக் கொண்டு அவனை {பிருஹத்பலனை} மீண்டும் தாக்கினான். பிறகு, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட இளவரசன் பிருஹத்பலன், கோபத்துடன் அந்தப் போரில் பல்குனன் மகனை {அபிமன்யு} பல கணைகளால் துளைத்தான். ஓ! எதிரிகளை எரிப்பவரே {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்டவர்களும், போரின் வகைகள் அனைத்தையும் அறிந்தவர்களுமான அவர்கள் இருவருக்குள்ளும் பீஷ்மரின் நிமித்தமாக நடைபெற்ற அப்போரானது, பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்ற போரின் போது, பலிக்கும் வாசவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்த மோதலைப் போலவே இருந்தது.

யானை படைப்பிரிவுக்கு எதிராகப் போரிட்ட பீமசேனன், பெரிய மலைகளைத் தன் வஜ்ரத்தால் பிளந்த சக்ரனைப் {இந்திரனைப்} போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தான். உண்மையில், மலைகளைப் போலப் பெரிதானவையாக இருந்த யானைகள், அந்தப் போரில் பீமசேனனால் கொல்லப்பட்டு, தங்கள் பிளிறல்களால் பூமியையே நிறைத்த படி பெரும் எண்ணிக்கையில் கீழே களத்தில் விழுந்தன. மலை போன்ற அளவுகளைக் கொண்டவையும், கனமான பெரும் உலோகக் குவியல் போன்றவையும், மத்தகம் பிளக்கப்பட்டுப் பூமியில் கிடந்தவையுமான அந்த யானைகள் பூமியின் பரப்பில் சிதறிக் கிடக்கும் மலைகளைப் போலத் தெரிந்தன.

ஒரு பெரும் படையால் பாதுகாக்கப்பட்ட வலிமைமிக்க வில்லாளியான யுதிஷ்டிரன், அந்தப் பயங்கரப் போரில் மத்ரர்களின் ஆட்சியாளனுடன் {சல்லியனுடன்} மோதியபடி அவனைப் பீடித்தான். பீஷ்மரின் நிமித்தமாகப் பதிலுக்குத் தன் ஆற்றலை வெளிப்படுத்திய மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, வலிமைமிக்கத் தேர்வீரனான தர்மனின் மகனை {யுதிஷ்டிரனை} அந்தப் போரில் பீடித்தான்.

சிந்துக்களின் மன்னன் {ஜெயத்ரதன்}, கூர்முனை கொண்ட ஒன்பது நேரான கணைகளால் விராடனைத் துளைத்து, மேலும் முப்பதால் {30 கணைகளால்} அவனை மீண்டும் தாக்கினான். எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரு பெரும் படைப்பிரிவின் தலைவனான விராடன், கூர் முனை கொண்ட முப்பது {30} கணைகளால் ஜெயத்ரதனின் நடுமார்பைத் தாக்கினான். அழகிய விற்களையும், அழகிய வாள்களையும் தரித்துக் கொண்டு, அழகிய கவசங்கள், ஆயுதங்கள், கொடிமரங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு, அழகிய வடிங்களைக் கொண்டவர்களான மத்ஸ்யர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} ஆகிய இருவரும் அந்தப் போரில் பிரகாசமாகத் தெரிந்தனர்.

துரோணர், பாஞ்சாலர்களின் இளவரசனான திருஷ்டத்யும்னனுடன் பயங்கர போரில் மோதி, தன் நேரான கணைகளால் கடுமையாகப் போரிட்டார். பிறகு துரோணர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிருஷதன் {துருபதன்} மகனுடைய {திருஷ்டத்யும்னனின்} பெரிய வில்லை அறுத்து, ஐம்பது {50} கணைகளால் அவனை ஆழமாகத் துளைத்தார். பிறகு பகைவீரர்களைக் கொல்பவனான அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, தன்னுடன் மோதிய துரோணரின் மேல் பல கணைகளை ஏவினான். எனினும், வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணர், அந்தக் கணைகள் அனைத்தையும் தன் கணைகளால் தாக்கி அவற்றை வெட்டினார். பிறகு துரோணர், கடும் கணைகள் ஐந்தை {5} துருபதன் மகனின் {திருஷ்டத்யும்னன்} மேல் ஏவினார்.

பிறகு பகைவீரர்களைக் கொல்பவனான அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, சினத்தால் தூண்டப்பட்டு, மரணக் கோலுக்கு {யம தண்டத்துக்கு} ஒப்பான ஒரு கதாயுதத்தை அந்தப் போரில் துரோணரின் மேல் ஏவினான். எனினும், துரோணர், தன்னை நோக்கி மூர்க்கமாக வந்து கொண்டிருந்ததும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்தக் கதாயுதத்தை ஐம்பது {50} கணைகளால் தடுத்தார். அதன் பேரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகளால் துண்டுகளாக வெட்டப்பட்ட அந்தக் கதாயுதம், கீழே பூமியில் விழுந்தது. பிறகு, எதிரிகளை எரிப்பவனான பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, தன் கதாயுதம் கலங்கடிக்கப்பட்டதைக் கண்டு, முழுவதும் இரும்பாலான சிறந்த ஈட்டி ஒன்றைத் துரோணரின் மேல் ஏவினான். எனினும் துரோணர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் ஒன்பது கணைகளால் அந்த ஈட்டியை வெட்டி, பெரும் வில்லாளியான பிருஷதன் மகனைப் {திருஷ்டத்யும்னனைப்} பீடித்தார். இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் நிமித்தமாகத் துரோணருக்கும், பிருஷதன் மகனுக்கு {திருஷ்டத்யும்னனுக்கும்} இடையில் அந்தக் கடுமையான மற்றும் பயங்கரமான போர் நடைபெற்றது.

அர்ஜுனன், கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} அடைந்து, கூர்முனை கொண்ட கணைகள் பலவற்றால் அவரைப் பீடித்து, காட்டில் மற்றொரு யானையை நோக்கிச் செல்லும் மதங்கொண்ட ஒரு யானையைப் போல அவரை நோக்கி விரைந்தான். எனினும், பெரும் ஆற்றலைக் கொண்ட மன்னன் பகதத்தன், அந்தப் போரில் கணைமாரியால் அர்ஜுனனின் வழியைத் தடுத்து, அவனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தான். பிறகு அர்ஜுனன், அந்தப் பயங்கரப் போரில், இரும்பாலானவையும், வெள்ளியைப் போலப் பிரகாசமாக இருந்தவையும், கூர்முனை கொண்டவையுமான பளபளக்கும் கணைகள் பலவற்றால் தன்னை நோக்கி யானையில் வந்து கொண்டிருந்த பகதத்தனைத் துளைத்தான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அதே வேளையில் குந்தியின் மகன் {அர்ஜுனன்- சிகண்டியிடம்},  “செல், பீஷ்மரை நோக்கிச் சென்று அவரைக் கொல்வாயாக” என்று சிகண்டியைத் தூண்டினான். பிறகு, ஓ! பாண்டுவின் அண்ணனே {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கைவிட்ட பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருபதனின் தேரை எதிர்த்துச் சென்றான்.

பிறகு அர்ஜுனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சிகண்டியை முன்னணியில் கொண்டு பீஷ்மரை நோக்கி விரைவாகச் சென்றான். பிறகு, உமது படையின் துணிவுமிக்கப் போராளிகள் அனைவரும், உரக்கக் கூச்சலிட்டபடியே பெரும் வீரியத்துடன் அர்ஜுனனை எதிர்த்து விரைந்ததால், அங்கே கடும் போர் ஒன்று நடைபெற்றது. இவை அனைத்தும் மிக அற்புதமாகக் காணப்பட்டது. கோடை காலத்தில் ஆகாயத்தின் மேகத் திரளைகளை விலக்கும் காற்றைப் போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகனின் பல்வேறு படைப்பிரிவுகளை அர்ஜுனன் விலகச் செய்தான். எனினும் சிகண்டி, கவலையேதும் இல்லாமல், பாரதர்களின் பாட்டனிடம் {பீஷ்மரிடம்} வந்து, கணைகள் பலவற்றால் அவரைத் துளைத்தான்.

பீஷ்மரைப் பொறுத்தவரை, அப்போது அவரது தேரே அவரது நெருப்பறையானது {அக்னிகிருகமானது}. அந்நெருப்பின் தழலாக அவரது வில்லே ஆனது. வாள்களும், ஈட்டிகளும், கதாயுதங்களும் அந்நெருப்பின் எரிபொருளாகின {விறகாகின}. அந்தப் போரில் க்ஷத்திரியர்களை எரிக்க அவர் ஏவிய கணைமாரியே அந்நெருப்பின் சுடர்ப்பொறிகளாகின {தீப்பொறிகளாகின}. தொடர்ந்து ஊட்டப்படும் எரிபொருளால் பற்றி எரியும் நெருப்பானது காற்றின் உதவியோடு, உலர்ந்த புற்குவியலுக்கு மத்தியில் பரவுவதைப் போல, பீஷ்மரும் தெய்வீக ஆயுதங்களை இறைத்தபடி தழல்களுடன் சுடர்விட்டெரிந்தார்.

மேலும் அந்தக் குருவீரர் {பீஷ்மர்}, அந்தப் போரில் பார்த்தனை {அர்ஜுனனைப்} பின்தொடர்ந்து வந்த சோமகர்களைக் கொன்றார். உண்மையில், அந்த வலிமைமிக்கத் தேர்வீரர் {பீஷ்மர்}, தங்கச் சிறகுகள் கொண்டவையும், கூர் தீட்டப்பட்டவையும், நேரானவையுமான தன் கணைகளின் மூலம், அர்ஜுனனின் பிற படைகளையும் தடுத்தார். அந்தப் பயங்கரப் போரில், அடிவானின் முக்கிய மற்றும் துணைப் புள்ளிகள் {திக்குகளும், துணைத்திக்குகளும்} அனைத்தையும் தன் சிங்க முழக்கங்களால் நிறைத்த பீஷ்மர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல தேர்வீரர்களையும் (அவர்களது தேரில் இருந்து} வீழ்த்தினார், மேலும், பல குதிரைகளையும், அவற்றைச் செலுத்துபவர்களையும் வீழ்த்தினார். இலைகளாலான தங்கள் தலைகள் வெட்டப்பட்ட பனைமரக்காடுகளைப் போல அந்தத் தேர்களில் பெரும்படை தெரியும்படி செய்தார்.

ஆயுதம் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையான அவர் {பீஷ்மர்}, அந்தப் போரில், தேர்களையும், குதிரைகளையும், யானைகளையும், அவற்றைச் செலுத்துபவர்களை இழக்கச் செய்தார். இடி முழக்கத்திற்கு ஒப்பான அவரது வில்லின் நாணொலி, உள்ளங்கைகளின் தட்டல்கள் ஆகிய இரண்டையும் கேட்டு, களமெங்கும் இருந்த துருப்புகள் நடுங்கின. ஓ! மனிதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, உமது தந்தையின் {பீஷ்மரின்} கணைகள் பாயும்போது அவற்றில் எவையும் பயனற்றதாக ஆகவில்லை. உண்மையில், பீஷ்மரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அவை எதிரியின் உடலை தொட்டு மட்டும் விழவில்லை (ஆனால், அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவை அவர்களை ஊடுருவிச் சென்றன).

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வேகமான குதிரைகள் பூட்டப்பட்ட தேர் கூட்டங்கள் தங்கள் தேரோட்டிகளை இழந்து, காற்றின் வேகத்தில் அனைத்துப் பக்கங்களிலும் இழுத்துச் செல்லப்படுவதை நாங்கள் கண்டோம். சேதிகள், காசிகள் மற்றும் கரூசர்களைச் சேர்ந்தவர்களும், உன்னதப் பிறப்பைக் கொண்டவர்களும், தங்கள் உயிரையே விடத் தயாராக இருந்தவர்களும், பின்வாங்காதவர்களும், துணிச்சல்மிக்கவர்களும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரங்களைக் கொண்டவர்களுமான பெரும் தேர்வீரர்கள் பதினாலாயிரம் {14000} பேர், வாயை அகல விரித்திருக்கும் காலனைப் போல இருந்த வீரர் பீஷ்மரை அணுகித் தங்கள் குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளோடு அடுத்த உலகத்திற்கு அனுப்பப்பட்டனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் பீஷ்மரை அணுகிய சோமகர்களில் பெரும் தேர்வீரன் ஒருவன் கூட அம்மோதலில் இருந்து உயிருடன் திரும்பவில்லை. பீஷ்மரின் ஆற்றலைக் கண்ட மக்கள், (அவரை அணுகி) அந்த வீரர்கள் அனைவரும், ஏற்கனவே இறந்தோர் மன்னனின் {யமனின்} வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டதாகவே கருதினர். உண்மையில், (தன் தேரில்) வெண் குதிரைகள் பூட்டப்பட்டவனும், கிருஷ்ணனைத் தன் தேரோட்டியாகக் கொண்டவனுமான அர்ஜுனனையும், அளவிலா சக்தி கொண்ட பாஞ்சால இளவரசன் சிகண்டியையும் தவிர அந்தப் போரில் பீஷ்மரை அணுக எந்தத் தேர்வீரனும் துணியவில்லை” {என்றான் சஞ்சயன்}.

துச்சாசனனை முறியடித்த அர்ஜுனன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 118-பீஷ்மரைத் துளைத்த சிகண்டி; சிகண்டியைத் தூண்டிய அர்ஜுனன்; சிகண்டியை அலட்சியம் செய்த பீஷ்மர்; துச்சாசனன் வெளிப்படுத்திய ஆற்றல்; துச்சாசனனை வீழ்த்திய அர்ஜுனன்;  படைவீரர்களுடன் பேசிய துரியோதனன்; துச்சாசனனின் குதிரைகளையும், தேரோட்டியையும் வீழ்த்திய அர்ஜுனன்; அர்ஜுனனிடம் வீழ்ந்த  கிருபர், சல்லியன், துச்சாசனன், விகர்ணன், விவிம்சதி ஆகியோர் களத்தில் இருந்து தப்பி ஓடியது; அர்ஜுனனின் ஆற்றல்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, போரில் பீஷ்மரை அணுகிய சிகண்டி, பத்து பல்லங்களால் அவரது {பீஷ்மரின்} நடுமார்பைத் தாக்கினான். எனினும், அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, கோபத்துடன் பாஞ்சால இளவரசனான சிகண்டியைப் பார்வையால் எரித்துவிடுவதைப் போலப் பார்க்க மட்டுமே செய்தார். அவனது பெண்தன்மையை நினைவுகூர்ந்த பீஷ்மர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவனைத் தாக்காதிருந்தார். எனினும், சிகண்டி அதைப் புரிந்து கொள்ளவில்லை.

பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அர்ஜுனன் சிகண்டியிடம், “வேகமாக விரைந்து பாட்டனைக் {பீஷ்மரைக்} கொல்வாயாக. ஓ! வீரா {சிகண்டியே}, உனக்குச் சொல்ல என்ன தேவையிருக்கிறது? வலிமைமிக்கத் தேர்வீரரான பீஷ்மரைக் கொல்வாயாக. ஓ! மனிதர்களில் புலியே {சிகண்டியே}, போரில் பீஷ்மருடன் போரிடத் தகுந்த வேறெந்த வீரனையும் நான் யுதிஷ்டிரரின் படையில் காணவில்லை. இதை நான் உண்மையாகவே சொல்கிறேன்” என்றான்.

இப்படிப் பார்த்தனால் சொல்லப்பட்ட சிகண்டி, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பல்வேறு விதங்களிலான ஆயுதங்களால் பாட்டனை {பீஷ்மரை} விரைவாக மறைத்தான். அந்தக் கணைகளை அலட்சியம் செய்த உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, தன் கணைகளைக் கொண்டு அந்தப் போரில் கோபக்கார அர்ஜுனனை மட்டுமே தடுத்தார்.

ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர் {பீஷ்மர்}, கூர்முனை கொண்ட தன் கணைகளால் பாண்டவர்களின் மொத்த படையையும் அடுத்து உலகத்திற்கு அனுப்பத் தொடங்கினார். அதே போலப் பாண்டவர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் பெரிய படையால் ஆதரிக்கப்பட்டு, பகலை உண்டாக்குபவனை {சூரியனை} மறைக்கும் மேகங்களைப் போலப் பீஷ்மரை மூழ்கடிக்கத் தொடங்கினர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்டிருந்த அந்தப் பாரத வீரர் {பீஷ்மர்}, (எண்ணற்ற மரங்களை) எரிக்கும் காட்டுத்தீயைப் போலத் துணிவுமிக்க வீரர்கள் பலரை எரித்தார்.

அந்தப் போரில் பாட்டனை {பீஷ்மரைப்} பாதுகாத்துக் கொண்டும், பார்த்தனோடு {அர்ஜுனனோடு} போரிட்டுக் கொண்டும் என நாங்கள் அங்கே கண்ட உமது மகனின் (துச்சாசனனின்) ஆற்றல் அற்புதமானதாக இருந்தது. சிறப்பான வில்லாளியான உமது மகன் துச்சாசனனின் அந்தச் சாதனையால், மக்கள் அனைவரும் மனம் நிறைந்தனர். பாண்டவர்கள் அனைவருடனும், அவர்களுக்கு மத்தியில் இருந்த அர்ஜுனனுடனும் அவன் {துச்சாசனன்} தனியாகப் போரிட்டான்; பாண்டவர்களால் அவனைத் தடுக்க இயலாத வீரியத்துடன் அவன் {துச்சாசனன்} போரிட்டான். அந்தப் போரில் துச்சாசனனால் தேர்வீரர்கள் பலர் தங்கள் தேர்களை இழந்தனர். குதிரையின் முதுகில் இருந்த வலிமைமிக்க வில்லாளிகள் பலரும், வலிமைமிக்க வீரர்கள் பலரும், யானைகளும், துச்சாசனனின் கூர்மையான கணைகளால் துளைக்கப்பட்டுக் கீழே பூமியில் விழுந்தன. அவனது {துச்சாசனனின்} கணைகளால் பீடிக்கப்பட்ட பல யானைகள் அனைத்துத் திசைகளிலும் ஓடிக் கொண்டிருந்தன. எரிபொருள் {விறகு} ஊட்டப்பட்ட நெருப்பின் பிரகாசமான தழல்கள் சுடர்விட்டு எரிவதைப் போலப் பாண்டவப் படையை எரித்து உமது மகன் {துச்சாசனன்} சுடர்விட்டெரிந்தான்.

வெண் குதிரைகளைக் கொண்டவனும், கிருஷ்ணனைத் தன் தேரோட்டியாகக் கொண்டவனுமான இந்திரனின் மகனை {அர்ஜுனனைத்} தவிர, பாண்டவப் படையைச் சேர்ந்த எந்த வீரனும் பெரிய வடிவம் கொண்ட அந்த வீரனை {துச்சாசனனை} வீழ்த்தவோ, எதிர்க்கவோ துணியவில்லை. பிறகு விஜயன் என்றும் அழைக்கப்படும் அர்ஜுனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் துச்சாசனனை வீழ்த்தி, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பீஷ்மரை எதிர்த்து விரைந்தான். உமது மகன் {துச்சாசனன்} வீழ்த்தப்பட்டாலும், பீஷ்மரின் வலிமையை ஆதரமாகக் கொண்டு, தன் தரப்புக்கு அடிக்கடி ஆறுதலளித்து, பாண்டவர்களுடன் மிகக் கடுமையாகப் போரிட்டான்.

அந்தப் போரில் தன் எதிரிகளுடன் போரிட்ட அர்ஜுனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மிகப் பிரகாசமாகத் தெரிந்தான். பிறகு அந்தப் போரில் சிகண்டி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இடியின் தீண்டலைக் கொண்டதும், பாம்பின் நஞ்சைப் போல மரணத்தைத் தரவல்லதுமான கணைகள் பலவற்றால் பாட்டனைத் {பீஷ்மரைத்} துளைத்தான். எனினும் அந்தக் கணைகள் உமது தந்தைக்குச் சிறு வலியையே கொடுத்தன, ஏனெனில் அவற்றை அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} சிரித்துக் கொண்டே ஏற்றார். உண்மையில், வெப்பத்தால் பீடிக்கப்பட்ட ஒருவன் மழைத்தாரைகளை ஏற்பதைப் போலவே கங்கையின் மைந்தரும் {பீஷ்மரும்}, சிகண்டியின் கணைகளை ஏற்றார்.

மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அங்கிருந்த க்ஷத்திரியர்கள், அந்தப் போரில் உயர் ஆன்ம பாண்டவர்களின் துருப்புகளைத் தொடர்ச்சியாக எரிக்கும் கடும் முகம் கொண்டவராகவே பீஷ்மரைக் கண்டனர். பிறகு உமது வீரர்களிடம் பேசிய உமது மகன் {துரியோதனன்}, அவர்களிடம், “அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பல்குனனை {அர்ஜுனனை} எதிர்த்து விரைவீராக. படைத்தலைவர் ஒருவரின் கடமைகளை அறிந்தவரான பீஷ்மர் உங்களைக் காப்பார்” என்றான். இப்படிச் சொல்லப்பட்ட கௌரவத் துருப்புகள், அச்சமனைத்தையும் விட்டுப் பாண்டவர்களுடன் போரிட்டனர். (பிறகு துரியோதனன், மீண்டும் அவர்களிடம்), “தங்கப் பனைமர வடிவத்தைத் தாங்கிய தனது உயர்ந்த கொடிமரத்துடன் கூடிய பீஷ்மர், தார்தராஷ்டிர வீரர்கள் அனைவரின் மதிப்பையும், கவசங்களையும் பாதுகாத்தபடி நிலை கொண்டிருக்கிறார். தேவர்களே கூட மிகக் கடுமையாக முயன்றாலும், சிறப்புமிக்கவரும், வலிமைமிக்கவருமான பீஷ்மரை வீழ்த்தமுடியாது. எனவே, இறப்பவர்களான {மனிதர்களான} பார்த்தர்களைக் குறித்து என்ன சொல்ல வேண்டும்? எனவே, வீரர்களே பல்குனனை {அர்ஜுனனை} எதிரியாக அடைந்து களத்தில் இருந்து ஓடாதீர்கள். பூமியின் தலைவர்களான உங்களுடன் நானும் சேர்ந்து, இன்று மிகக் கடுமையாக முயற்சியுடன் பாண்டவர்களுடன் போரிடுவேன்” என்றான் {துரியோதனன்}.

வில்லைக் கையில் கொண்ட உமது மகனின் {துரியோதனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டவர்களும், விதேஹர்கள், கலிங்கர்கள், தாசேரகர்களின் பல்வேறு இனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களுமான வலிமைமிக்கப் போராளிகளில் பலர், சினத்தால் தூண்டப்பட்டுப் பல்குனன் {அர்ஜுனன்} மீது பாய்ந்தனர். அதேபோல, நிஷாதர்கள், சௌவீரர்கள், பாஹ்லீகர்கள், தாரதர்கள், மேற்கத்தியர்கள், வடக்கத்தியர்கள், மாலவர்கள், அபிகதர்கள், சூரசேனர்கள், சிபிகள், வசாதிகள், சால்வர்கள், சாகர்கள், திரிகர்த்தர்கள், அம்பஷ்டர்கள், கேகயர்கள் ஆகியோரைச் சேர்ந்த போராளிகள் பலரும், நெருப்பில் விழும் விட்டில் பூச்சிகளைப் போலப் பார்த்தனின் {அர்ஜுனனின்} மேல் பாய்ந்தனர்.

பீபத்சு என்றும் அழைக்கப்படும் தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தெய்வீக ஆயுதங்கள் பலவற்றை மனதில் நினைத்து, அவற்றைக் கொண்டு படைப்பிரிவுகளின் தலைமையில் நின்ற அந்தப் பெரும் தேர்வீரர்களைக் குறிபார்த்து, விட்டில் பூச்சிகளை எரிக்கும் நெருப்பைப் போல, பெரும் சக்தி கொண்ட அந்த ஆயுதங்களின் மூலமாக அவர்கள் அனைவரையும் விரைவாக எரித்தான். உறுதிமிக்க அந்த வில்லாளி (தன் தெய்வீக ஆயுதங்களின் மூலமாக) காண்டீவத்தால் ஆயிரமாயிரம் கணைகளை உண்டாக்கிய போது,  ஆகாயத்தில் மிகப் பிரகாசமாகத் தெரிந்தது.

பிறகு, அந்தக் கணைகளால் பீடிக்கப்பட்டவர்களும், உயர்ந்த தங்கள் கொடிமரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டவர்களுமான அந்த க்ஷத்திரியர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஒன்றாகச் சேர்ந்து, அந்தக் குரங்குக் கொடியோனை (பார்த்தனை {அர்ஜுனனை}) அணுகவும் முடியவில்லை. கிரீடியின் {அர்ஜுனனின்} கணைகளால் தாக்கப்பட்ட தேர்வீரர்கள் தங்கள் கொடிமரங்களுடனும், குதிரைவீரர்கள் தங்கள் குதிரைகளுடனும், யானை வீரர்கள் தங்கள் யானைகளுடனும் கீழே விழுந்தனர். அர்ஜுனனின் கரங்களால் ஏவப்பட்ட கணைகளின் விளைவாக முறியடிக்கப்பட்டுப் பின்வாங்கிச் செல்லும் அம்மன்னர்களின் துருப்புகளால் விரைவில் பூமியானது அனைத்துப் பக்கங்களிலும் மறைக்கப்பட்டது.

பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கௌரவப் படையை முறியடித்த பார்த்தன் {அர்ஜுனன்}, துச்சாசனன் மேல் பல கணைகளை ஏவினான். இரும்புத் தலைகளைக் கொண்ட அக்கணைகள் அனைத்தும், உமது மகன் துச்சாசனனைத் துளைத்து ஊடுருவி, எறும்புப் புற்றுக்குள் ஊடுருவி செல்லும் பாம்புகளைப் போலப் பூமிக்குள் நுழைந்தன. பிறகு அர்ஜுனன், துச்சாசனனின் குதிரைகளைக் கொன்று, பிறகு அவனது {துச்சாசனனின்} தேரோட்டியையும் வீழ்த்தினான். தலைவன் அர்ஜுனன், இருபது {20} கணைகளால் விவிம்சதியைத் தேரிழக்கச் செய்து, மேலும் ஐந்து {5} நேரான கணைகளால் அவனை {விவிம்சதியைத்} தாக்கினான். வெண்குதிரைகளைக் கொண்ட அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, முழுவதும் இரும்பாலான பல கணைகளால் கிருபர், விகர்ணன், சல்லியன் ஆகியோரைத் துளைத்து, அவர்கள் அனைவரையும் தேரிழக்கச் செய்தான். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, இப்படித் தங்கள் தேர்களை இழந்து, போரில் சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} வீழ்த்தப்பட்ட கிருபர், சல்லியன், துச்சாசனன், விகர்ணன், விவிம்சதி ஆகியோர் அனைவரும் தப்பி ஓடினார்கள் {போரைவிட்டு ஓடினார்கள்}.

வலிமைமிக்கத் தேர்வீரர்களை முற்பகலில் வீழ்த்திய பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, புகையற்ற நெருப்பைப் போல அந்தப் போரில் சுடர்விட்டெரிந்தான். சூரியன் ஒளிக்கதிர்களைப் பொழிவதைப் போலச் சுற்றிலும் தன் கணைகளை இறைத்த பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பிற மன்னர்கள் பலரையும் வீழ்த்தினான். தன் கணைகளின் மூலம் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களைக் களத்தைவிட்டுப் புறமுதுகிடச் செய்த அர்ஜுனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, குருக்கள் மற்றும் பாண்டவர்களின் படைகளுக்கிடையில் நடைபெற்ற அந்தப் போரில் குருதிப் புனலைக் கொண்ட பெரிய ஆறை அங்கே ஓடச் செய்தான் [1].

தேர்வீரர்களால் பெரும் எண்ணிக்கையிலான யானைகளும், குதிரைகளும், தேர்வீரர்களும் கொல்லப்பட்டன. யானைகளால் கொல்லப்பட்ட தேர்வீரர்கள் பலராக இருந்தனர், மேலும், காலாட்படை வீரர்களால் கொல்லப்பட்ட குதிரைகளும் பலவாக இருந்தன. யானைவீரர்கள், குதிரைவீரர்கள், தேர்வீரர்கள் ஆகியோரின் உடலும், அவர்களது தலைகளும் நடுவில் பிளக்கப்பட்டு, போர்க்களத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விழுந்தன. காது குண்டலங்கள், தோள்வளைகள் ஆகியவற்றை அணிந்தவர்களும், கீழே விழுந்தவர்களும், வீழ்த்தப்படுகிறவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான (கொல்லப்பட்டுக் கிடந்த) இளவரசர்களால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களமானது விரவி கிடந்தது. தேர்ச்சக்கரங்களால் அறுக்கப்பட்டோ, யானைகளால் மிதிக்கப்பட்டோ தேர்வீரர்கள் பலரின் உடல்கள் விரவிக் கிடந்தன.

காலாட்படை வீரர்களும், குதிரைகளுடன் கூடிய குதிரைவீரர்கள் தப்பி ஓடினார்கள். அனைத்துப் பக்கங்களிலும் பல யானைகளும் தேர்வீரர்களும் விழுந்தனர். சக்கரங்கள், நுகத்தடிகள், கொடிமரங்கள் முறிக்கப்பட்ட பல தேர்களும் களமெங்கும் சிதறிக் கிடந்தன. யானைகள், குதிரைகள், தேர்வீரர்கள் ஆகியோரின் குருதியால் நனைக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் இருந்த போர்க்களம் கூதிர் கால வானின் சிவந்த மேகம் போல அழகாகத் தெரிந்தது. நாய்கள், காகங்கள், கழுகுகள், ஓநாய்கள், நரிகள் மற்றும் பிற பயங்கர விலங்குகளும், பறவைகளும், தங்கள் முன் கிடக்கும் உணவைக் கண்டு உரக்க ஊளையிட்டன. காற்றானது அனைத்துத் திசைகளில் இருந்து பல்வேறு விதங்களில் வீசியது. உரக்க முழக்கமிடும் ராட்சசர்களும், தீய ஆவிகளும் அங்கே காணப்பட்டனர்.

தங்கத்தால் இழைக்கப்பட்ட சங்கிலிகளும், விலையுயர்ந்த கொடிகளும் காற்றால் அசைக்கப்படுவது தெரிந்தது. ஆயிரக்கணக்கான குடைகளும், கொடிமரங்களோடு இணைக்கப்பட்ட பெரும் தேர்களும் களத்தில் சிதறிக் கிடந்தது காணப்பட்டது [2].பிறகு, பீஷ்மர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தெய்வீக ஆயுதமொன்றைத் தூண்டியெழுப்பி, வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே குந்தியின் மகனிடம் {அர்ஜுனனிடம்} விரைந்தார். கவசம் பூண்ட சிகண்டி, அர்ஜுனனை நோக்கி விரையும் பீஷ்மரிடம் விரைந்தான். அதன் பேரில், (பிரகாசத்திலும், சக்தியிலும்) நெருப்புக்கு ஒப்பான அந்த ஆயுதத்தைப் பீஷ்மர் திரும்பப்பெற்றார். அதேவேளையில், வெண்குதிரைகளைக் கொண்ட குந்தியின் மகன் {அர்ஜுனன்}, பாட்டனை {பீஷ்மரைக்} குழப்பியபடி உமது துருப்புகளைக் கொன்றான் [3].

பீஷ்மர் ஏற்படுத்திய அழிவு! – பீஷ்ம பர்வம் பகுதி – 119-பாண்டவப் படையை நடுங்கச் செய்த கௌரவ வீரர்களும், பீஷ்மரும்; கௌரவப் படையினருக்கு அர்ஜுனன் ஏற்படுத்திய பேரழிவு;  பாண்டவப் படையைத் தூண்டிய திருஷ்டத்யும்னன்; பத்தாம் நாள் போரில் பீஷ்மர் உண்டாக்கிய பேரழிவு; சதாநீகனைக் கொன்ற பீஷ்மர்; பீஷ்மருக்கு எதிராக அர்ஜுனனைத் தூண்டிய கிருஷ்ணன்; பீஷ்மரை மட்டுமே எதிர்த்து விரைந்த பாண்டவ வீரர்கள்; பீஷ்மரை மீண்டும் மீண்டும் துளைத்த அர்ஜுனன்

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “எண்ணிக்கையில் வலுவான இரண்டு படைகளின் போராளிகளும், போர்வியூகத்தில் இப்படி நின்றிருந்த போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பின்வாங்காதவர்களான அந்த வீரர்கள் அனைவரும் பிரம்மலோகத்தில் தங்கள் இதயங்களை நிலைநிறுத்தினர் [1]. தொடர்ந்து நடந்த பொதுவான மோதலில், ஒரு வகுப்பைச் சேர்ந்த போராளிகள், அதே வகுப்பைச் சேர்ந்தோருடன் போரிடவில்லை. தேர்வீரர்கள் தேர்வீரர்களோடும், காலாட்படை வீரர்கள், காலாட்படை வீரர்களோடும், குதிரைவீரர்கள் குதிரைவீரர்களோடும், யானை வீரர்கள் யானைவீரர்களோடும் போரிடவில்லை. மறுபுறம், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போராளிகள், பைத்தியக்காரர்களைப் போல ஒருவரோடொருவர் போரிட்டனர். அந்த இருபடைகளையும் அடைந்த பேரிடர் பெரியதாகவும் பயங்கரமானதாகவும் இருந்தது. அந்தக் கடும் படுகொலையில் யானைகளும், மனிதர்களும் களத்தில் தங்களைப் பரப்பிக் கொண்ட போது, அவர்கள் கண்மூடித்தனமாகப் போரிட்டதால், அவர்களுக்குள் இருந்த வேறுபாடுகள் அனைத்தும் இல்லாமல் போனது.

சல்லியன், கிருபர், சித்திரசேனன், துச்சாசனன், விகர்ணன் ஆகிய வீரர்கள் பிரகாசமான தங்கள் தேர்களில் ஏறி, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாண்டவப் படையை நடுங்கச் செய்தனர். அந்த உயர் ஆன்ம போர்வீரர்களால் போரில் கொல்லப்பட்ட அந்தப் பாண்டவப் படை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காற்றால் புரட்டப்படும் நீரில் உள்ள படகைப் போலப் பல்வேறு வழிகளில் சுழலத் தொடங்கியது. குளிர்காலத்தின் குளுமை விரைவாகப் பசுக்களை வெட்டுவதை {சதைகளைப் பிளப்பதைப்} போலவே, பீஷ்மரும் பாண்டுவின் மகன்களை விரைவாக வெட்டினார்.

மேலும், உமது படையைப் பொறுத்தவரை, புதிதாக எழுந்த மேகங்களைப் போலத் தெரிந்த பல யானைகள், சிறப்புமிக்கப் பார்த்தனால் {அர்ஜுனனால்} வீழ்த்தப்பட்டன. போர்வீரர்களில் முதன்மையானோர் பலரும் அந்த வீரனால் {அர்ஜுனனால்} நசுக்கப்படுவது தெரிந்தது. ஆயிரக்கணக்கான கணைகளாலும், நாராசங்களாலும் தாக்கப்பட்டுப் பெரும் யானைகள் பல வலியால் பயங்கரமாகப் பிளிறிபடி கீழே விழுந்தன. சிதறிக் கிடந்தவையும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தவையுமான உயிரிழந்த உயர் ஆன்ம வீரர்களின் உடல்களுடனும், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட தலைகளுடனும் அந்தப் போர்க்களம் அழகாகத் தெரிந்தது.

பெரும் வீரர்களின் அழிவுக்கான அந்தப் போரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரும், பாண்டுவின் மகனானத் தனஞ்சயனும் {அர்ஜுனனும்} தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தியபோது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கள் துருப்புகள் அனைத்தின் தலைமையில் நின்று கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்த பாட்டனை {பீஷ்மரைக்} கண்ட உமது மகன்கள் அவரை அணுகினர். போரில் தங்கள் உயிர்களை விட விரும்பி, சொர்க்கத்தையே தங்கள் இலக்காகக் கொண்ட அவர்கள், பெரும் படுகொலைகள் நிறைந்த அந்தப் போரில் பாண்டவர்களை அணுகினர். துணிவுமிக்கப் பாண்டவர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முன்னர் உம்மாலும், உமது மகனாலும் {துரியோதனனாலும்} தங்கள் மீது சுமத்தப்பட்ட பல்வேறு விதங்களிலான தீங்குகள் பலவற்றை மனதில் தாங்கி, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அச்சங்கள் அனைத்தையும் விலக்கி, உயர்ந்த சொர்க்கங்களை வெல்லும் ஆவலில் உமது மகனோடும், உமது படையின் வீரர்கள் பிறருடனும் மகிழ்ச்சியாகப் போரிட்டனர்.

பிறகு பாண்டவப் படையின் படைத்தலைவனான வலிமைமிக்கத் தேர்வீரன் திருஷ்டத்யும்னன், தன் படைவீரர்களிடம், “சிருஞ்சயர்களுடன் கூடிய சோமகர்களே, கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} நோக்கி விரைவீராக” என்றான். தங்கள் படைத்தலைவனின் வார்த்தைகளைக் கேட்ட சோமகர்களும், சிருஞ்சயர்களும், கணைகளின் மழையால் பீடிக்கப்பட்டாலும், கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} நோக்கி விரைந்தனர். இப்படித் தாக்கப்பட்ட உமது தந்தை பீஷ்மர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்டுச் சிருஞ்சயர்களோடு போரிடத் தொடங்கினார்.

பழங்காலத்தில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, புத்திசாலியான ராமர் {பரசுராமர்}, பகையணிகளுக்கு அழிவைத் தரும் ஆயுதங்களின் கல்வியைப் பெரும் சாதனைகளைக் கொண்ட பீஷ்மருக்கு அளித்தார். அந்தக் கல்வியைக் கொண்டு, எதிரியின் துருப்புகளுக்கு மத்தியில் பெரும் அழிவை ஏற்படுத்திய, பகைவீரர்களைக் கொல்பவரான முதிர்ந்த குரு பாட்டன் பீஷ்மர் நாளுக்கு நாள் பத்தாயிரம் ரத வீரர்களை {தேர்வீரர்களைக்} கொன்றார்.

எனினும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்தப் {போரின்} பத்தாம் {10} நாளில்,  பீஷ்மர், தனியாளாகவே பத்தாயிரம் யானைகளைக் கொன்றார். பிறகு, மத்ஸ்யர்களுக்கும், பாஞ்சாலர்களுக்கும் மத்தியில் இருந்த பெரும் தேர்வீரர்கள் {மகாரதர்கள்} எழுவரையும் கொன்றார். இவை அனைத்திற்கும் மேலாக, அந்தப் பயங்கர போரில், ஐயாயிரம் {5000} காலாட்படை வீரர்களும், தந்தங்களைக் கொண்ட ஓராயிரம் {1000} யானைகளும், பத்தாயிரம் {10000} குதிரைகளும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கல்வியால் அடையப்பட்ட திறமையின் மூலம் உமது தந்தையால் {பீஷ்மரால்} கொல்லப்பட்டன [2].

மன்னர்கள் அனைவரின் படையணிகளை மெலிதாக்கிய {குறைத்த} அவர் {பீஷ்மர்}, விராடனின் அன்புக்குரிய தம்பி சதாநீகனைக் கொன்றார். அந்த வீரப் பீஷ்மர், போரில் சதாநீகனைக் கொன்று, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் பல்லங்களால் முழுமையாக ஓராயிரம் க்ஷத்திரியர்களைக் கொன்றார். இவற்றைத் தவிர, தனஞ்சயனை {அர்ஜுனனைப்} பின்தொடர்ந்து வந்த பாண்டவப் படையின் க்ஷத்திரியர்கள் அனைவரும் பீஷ்மரை அடைந்ததுமே {அவர்கள்} யமோலோகம் செல்ல வேண்டியிருந்தது. போரில் கௌரவப் படையின் தலைமையில் நின்ற பீஷ்மர், கணைகளின் மழைகளால் பாண்டவப் படையின் அனைத்துப் பக்கங்களையும் மறைத்தார். பத்தாம் நாளில் கையில் வில்லுடன், இரு படைகளுக்கும் மத்தியில் நின்று கொண்டு மகத்தான சாதனைகளை அடைந்து, கோடை வானின் வெப்பமான நடுநாள் {மத்திய வேளை} சூரியனைப் போல இருந்ததால், அவரை {பீஷ்மரை}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னர்கள் எவராலும் காணவும் முடியவில்லை. போரில் தைத்திய படையை எரிக்கும் சக்ரனை {இந்திரனைப்} போலவே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீஷ்மரும் பாண்டவப் படையை எரித்தார்.

தன் ஆற்றலை இப்படி வெளிப்படுத்தும் அவரை {பீஷ்மரைக்} கண்ட மதுசூதனனான தேவகியின் மகன் {கிருஷ்ணன்}, மகிழ்ச்சியுடன் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்}, “{அதோ} இரு படைகளுக்கும் மத்தியில் சந்தனுவின் மகனான பீஷ்மர் நிற்கிறார். உனது வலிமையை வெளிப்படுத்தி அவரை {பீஷ்மரைக்} கொன்றால், நீ வெற்றியை அடையலாம். அங்கே, அந்த இடத்தில், நமது படைகளை அவர் பிளக்கும்போது, உன் பலத்தை வெளிப்படுத்தி அவரைத் தடுப்பாயாக. ஓ! தலைவா {அர்ஜுனா}, உன்னையன்றி வேறு எவனும் பீஷ்மரின் கணைகளைத் தாங்கத் துணிய மாட்டான்” என்றான் {கிருஷ்ணன்}.

இப்படித் தூண்டப்பட்ட குரங்குக் கொடியோன் அர்ஜுனன், அந்தக் கணத்திலேயே தன் கணைகளின் மூலம் பீஷ்மரின் தேர், குதிரைகள், கொடிமரம் ஆகியவற்றோடு அவரையும் {பீஷ்மரையும்} மறையச் செய்தான். எனினும், குருக்களில் முதன்மையானவரான அந்தக் காளை {பீஷ்மர்}, தன் கணை மழையின் மூலம், பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} ஏவிய கணைகளின் மழையைத் துளைத்தார் {தடுத்தார்}. பிறகு, பாஞ்சாலர்களின் மன்னன் {துருபதன்}, {சேதி மன்னனான} வீர திருஷ்டகேது, பாண்டுவின் மகனான பீமசேனன், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், இரட்டையர்கள் (நகுலன் மற்றும் சகாதேவன்), சேகிதானன், கைகேயச் சகோதரர்கள் ஐவர், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சாத்யகி, சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, கடோத்கசன், திரௌபதியின் (ஐந்து) மகன்கள், சிகண்டி, வீரக் குந்திபோஜன், {பாண்டவத் தரப்பைச் சேர்ந்த} சுசர்மன், விராடன் ஆகியோரும், பாண்டவப் படையின் பலமிக்கப் போர்வீரர்கள் பலரும் பீஷ்மரின் கணைகளால் பீடிக்கப்பட்டு, துன்பக்கடலில் மூழ்குவதாகத் தெரிந்தது, எனினும், பல்குனன் {அர்ஜுனன்}, அவர்கள் அனைவரையும் காப்பாற்றினான்.

பிறகு, சிகண்டி, வலிமைமிக்க ஆயுதம் ஒன்றை எடுத்துக் கொண்டு, கிரீடியால் {அர்ஜுனனால்} பாதுகாக்கப்பட்டு, பீஷ்மரை மட்டுமே நோக்கி மூர்க்கமாக விரைந்தான். வெல்லப்பட முடியாதவனான பீபத்சு {அர்ஜுனன்}, எதன் பிறகு எதைச் செய்ய வேண்டும் என்பதை அறிந்து, பீஷ்மரைப் பின்தொடர்ந்தோர் அனைவரையும் கொன்று அதன் பிறகு அவரை {பீஷ்மரை} நோக்கி விரைந்தான். சாத்யகி, சேகிதானன், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், விராடன், துருபதன், பாண்டுவின் மூலமான மாத்ரியின் இரட்டை மகன்கள் ஆகிய அனைவரும் உறுதிமிக்க அந்த வில்லாளியால் (அர்ஜுனனால்) பாதுகாக்கப்பட்டு, அந்தப் போரில் பீஷ்மரை மட்டுமே எதிர்த்து விரைந்தனர்.

அபிமன்யு, திரௌபதியின் மகன்கள் ஐவர் ஆகியோரும் வலிமைமிக்க ஆயுதங்களை உயர்த்திக் கொண்டு போரில் பீஷ்மருக்கு எதிராக விரைந்தனர். போரில் பின்வாங்காதவர்களான அந்த வலிமைமிக்க வில்லாளிகளான அனைவரும், நன்கு குறிபார்க்கப்பட்ட கணைகளால் பீஷ்மரின் உடலில் பல்வேறு பகுதிகளில் துளைத்தனர். பாண்டவப் படையைச் சேர்ந்த அந்த இளவரசர்களில் முதன்மையானோரால் ஏவப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான அந்தக் கணைகள் அனைத்தையும் அலட்சியம் செய்தவரும், கலக்கமில்லா ஆன்மா கொண்டவருமான பீஷ்மர், பாண்டவப் படையணிக்குள் ஊடுருவினார்.

ஏதோ எந்நேரமும் விளையாடுபவரைப் போல இருந்த பாட்டன் {பீஷ்மர்}, அந்தக் கணைகள் அனைத்தையும் கலங்கடித்தார். பாஞ்சால இளவரசனான சிகண்டியை அடிக்கடி பார்த்துச் சிரித்து, அவனது பெண்தன்மையை நினைவுகூர்ந்த அவர் {பீஷ்மர்}, அவனை {சிகண்டியை} நோக்கி ஒரு கணையைக் கூடக் குறிப் பார்க்காமல் இருந்தார். மறுபுறம் அவர் {பீஷ்மர்}, துருபதனின் படைப்பிரிவைச் சேர்ந்த பெரும் தேர்வீரர்கள் எழுவரைக் கொன்றார்.

பிறகு, அந்தத் தனி வீரரை {பீஷ்மரை} எதிர்த்து விரைந்த மத்ஸ்யர்கள், பாஞ்சாலர்கள், சேதிகள் ஆகியோருக்கு மத்தியில் குழப்பமான துயரக் குரல்கள் எழுந்தன. அவர்கள் {பாண்டவப் படையினர்}, பெரும் எண்ணிக்கையிலான காலாட்படைவீரர்கள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றுடனும், கணைகளின் மழைகளுடனும், ஓ! எதிரிகளை எரிப்பவரே {திருதராஷ்டிரரே}, பகலை உண்டாக்குபவனை மறைக்கும் மேகங்களைப் போலத் தனி வீரரும், எதிரிகளை எரிப்பவரும், பாகீரதியின் {கங்கையின்} மகனுமான பீஷ்மரைப் மறைத்தனர்.

பிறகு, பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்ற போருக்கு ஒப்பான, அவருக்கும் {பீஷ்மருக்கும்}, அவர்களுக்கும் {பாண்டவப் படையினருக்கும்} இடையிலான அந்தப் போரில், கிரீடம் தரித்தவன் (அர்ஜுனன்), தன் முன்னிலையில் சிகண்டியை நிறுத்திக் கொண்டு, பீஷ்மரை (மீண்டும் மீண்டும்) துளைத்தான்” {என்றான் சஞ்சயன்}.

தன் மரணத்தை விரும்பிய பீஷ்மர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 120அ-பீஷ்மரை ஒன்றுகூடித் தாக்கிய பாண்டவர்கள்; போர்க்களத்தில் அந்திகால நெருப்பாய்த் திரிந்த பீஷ்மர்; பீஷ்மரின் விற்களை மீண்டும் மீண்டும் வெட்டிய அர்ஜுனன்; தன் மரணத்தை விரும்பிய பீஷ்மர்; அம்முடிவை அங்கீகரித்த முனிவர்களும், வசுக்களும்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இப்படியே பாண்டவர்கள் அனைவரும், சிகண்டியைத் தங்கள் முன் கொண்டு அந்தப் போரில் அனைத்துப் பக்கங்களிலும் பீஷ்மரைச் சூழ்ந்து கொண்டு மீண்டும் மீண்டும் அவரைத் துளைத்தனர். ஒன்றுசேர்ந்த சிருஞ்சயர்கள் அனைவரும், பயங்கரமான சதக்னிகளாலும், பரிகங்களாலும், போர்க்கோடரிகளாலும், முத்கரங்களாலும், குறுகிய தடிமனான உலக்கைகளாலும், பராசங்களாலும், க்ஷேபணீயங்களாலும் {ஏவுகணை போன்ற பிற ஆயுதங்களாலும்}, தங்கச் சிறகுகளைக் கொண்ட கணைகளாலும், ஈட்டிகளாலும், தோமரங்களாலும், கம்பனங்களாலும், நாராசங்களாலும், வத்ஸதந்தங்களாலும், புசுண்டிகளாலும் {எறிகணைகளாலும்} அவரை {பீஷ்மரைத்} தாக்கினர். இப்படிப் பலவற்றால் பீடிக்கப்பட்ட அவரது {பீஷ்மரது}  கவசம் எங்கும் துளைக்கப்பட்டிருந்தது. ஆனால், முக்கியப் பகுதிகள் அனைத்திலும் துளைக்கப்பட்டிருந்தாலும் பீஷ்மர் வலியை உணரவில்லை.

மறுபுறம், யுகத்தின் முடிவில் (அனைத்தையும் அழிக்கும்படி) எழும் நெருப்பின் தோற்றத்தில் அவர் {பீஷ்மர்} தன் எதிரிகளுக்குக் காட்சியளித்தார். அவரது வில்லும் கணைகளும் (நெருப்பாலானவை போல) {அந்நெருப்பின்} சுடர்விடும் தழல்களைக் கொண்டிருந்தன. அவரது {பீஷ்மரது} ஆயுதங்களின் வீச்சு அதனுடன் {அந்நெருப்புத் தழலுடன்} (நட்புடன்) கூடிய தென்றலாக இருந்தன {The flight of his weapons constituted its (friendly) breeze}. அவரது {பீஷ்மரது} தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி வெப்பமாகவும், வலிமைமிக்க ஆயுதங்கள் அதன் {அந்நெருப்பின்} காந்தியாகவும் இருந்தன. அவரது அழகிய வில் அதன் {அந்நெருப்பின்} கடும் நாக்காக இருந்தது, வீரமிக்கப் போர்வீரர்களின் உடல்கள் அதன் அபரிமிதமான எரிபொருளாகின. அந்த மன்னர்களின் தேர்க்கூட்டங்களுக்கு மத்தியில் திரிபவராகவோ, அல்லது சில நேரங்களில் (அதன் நெருக்கத்தில் இருந்து) வெளியே வருபராகவும், அல்லது மீண்டும் அவர்களின் மத்தியில் திரிபவராகவும் பீஷ்மர் காணப்பட்டார்.

பாஞ்சாலர்களின் மன்னனையும் {துருபதனையும்}, திருஷ்டகேதுவையும் அலட்சியப்படுத்திய அவர் {பீஷ்மர்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாண்டவப் படைக்கு மத்தியில் ஊடுருவினார். பிறகு அவர் {பீஷ்மர்} சாத்யகி, பீமன், பாண்டுவின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, துருபதன், விராடன், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன் ஆகிய ஆறு பாண்டவ வீரர்களை, அனைத்து வகைக் கவசங்களையும் ஊடுருவவல்லவையும், பெரும் மூர்க்கத்துடன் செல்பவையும், “விஸ்” என்ற பயங்கர ஒலியுடன் செல்பவையும், பெரும் கூர் கொண்டவையுமான அற்புதக் கணைகள் பலவற்றால் துளைத்தார். எனினும், அந்தக் கூரிய கணைகளைத் தடுத்து, பெரும் சக்தியுடன் பீஷ்மரைப் பீடித்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள் ஒவ்வொருவரும் பத்து {பத்து பத்து} கணைகளால் அவரை {பீஷ்மரைத்} துளைத்தனர்.

பெரும் தேர்வீரனான சிகண்டியால் ஏவப்பட்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், தங்கச்சிறகுகள் கொண்டவையுமான வலிமைமிக்க அந்தக் கணைகள் பீஷ்மரின் உடலுக்குள் விரைவாக ஊடுருவின. பிறகு, கோபத்தால் தூண்டப்பட்ட கிரீடம் தரித்தவன் (அர்ஜுனன்), சிகண்டியைத் தன் முன்னிலையில் கொண்டு பீஷ்மரை நோக்கி விரைந்து, பின்னவரின் {பீஷ்மரின்} வில்லை அறுத்தான்.

அதன் பேரில் வலிமைமிக்கத் தேர்வீரர்களான துரோணர், கிருதவர்மன், சிந்துக்களின் ஆட்சியாளன் ஜெயத்ரதன், பூரிஸ்ரவஸ், சலன், சல்லியன், பகதத்தன் ஆகியோரால் அர்ஜுனனின் அந்தச் செயலை {பீஷ்மரின் வில்லை வெட்டிய செயலைப்} பொறுக்கமுடியவில்லை. சினத்தால் தூண்டப்பட்ட அவர்கள் அவனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தனர். உண்மையில், அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், தெய்வீக ஆயுதங்களை இருப்புக்குத் தூண்டி அழைத்து, பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீது பெருங்கோபத்துடன் பாய்ந்து, தங்கள் கணைகளால் அவனை மறைத்தனர். பல்குனனின் {அர்ஜுனனின்} தேரை நோக்கி அவர்கள் விரைந்த போது, அவர்களால் உண்டான ஒலியானது, யுகத்தின் முடிவில் சினத்துடன் பொங்கும் கடலுக்கு ஒப்பானதாக இருந்தது.

பல்குனனின் {அர்ஜுனனின்} தேரை நோக்கி, “கொல்”, “(நம் படைகளைக்) கொண்டு வா”, “எடு”, “துளை”, “வெட்டு” என்ற இது போன்ற சீற்றமிகுந்த கூச்சல்களே கேட்டன. அந்தச் சீற்றமிக்கக் கூச்சல்களைக் கேட்டப் பாண்டவப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனைப் பாதுகாப்பதற்காக முன்னோக்கி விரைந்தனர்.

சாத்யகி, பீமசேனன், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், விராடன் மற்றும் துருபதன் ஆகிய இருவரும், ராட்சசன் கடோத்கசன், கோபக்கார அபிமன்யு ஆகியோரே அவர்கள். சினத்தால் தூண்டப்பட்ட அந்த எழுவரும் அற்புத விற்களைத் தரித்துக் கொண்டு பெரும் வேகத்துடன் விரைந்தனர். இவர்களுக்கும், கடுமையான கௌரவ வீரர்களுக்கும் இடையில் நடைபெற்ற அந்தப் போரானது, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, தானவர்களுடன் நடந்த தேவர்களின் போருக்கு ஒப்பாக மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

தேர்வீரர்களில் முதன்மையான சிகண்டி, கிரீடம் தரித்தவனால் (அர்ஜுனனால்} போரில் பாதுகாக்கப்பட்டு அம்மோதலில் பீஷ்மரைத் துளைத்து, பிறகு, பத்து கணைகளால் பின்னவரின் {பீஷ்மரின்} வில்லையும் அறுத்தான். மேலும் அவன் {சிகண்டி}, பிற கணைகளால் பீஷ்மரின் தேரோட்டியைத் தாக்கி, ஒரு கணையால் பின்னவரின் {பீஷ்மரின்} கொடிமரத்தை வெட்டினான்.

பிறகு அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} மேலும் கடுமையான மற்றொரு வில்லை எடுத்தார். அதையும் மூன்று கணைகளால் பல்குனன் {அர்ஜுனன்} வெட்டினான். உண்மையில், இடது கையாலும் வில்லை வளைக்கவல்லவனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான அர்ஜுனன், சினத்தால் தூண்டப்பட்டு, பீஷ்மர் எடுத்த அனைத்து விற்களையும் ஒன்றன்பின் ஒன்றாக வெட்டினான்.

பிறகு, இப்படி விற்கள் வெட்டப்பட்ட பீஷ்மர், சினத்தால் தூண்டப்பட்டு, தன் கடைவாயை நாவால் நனைத்தபடி, மலையையே பிளக்கவல்ல ஓர் ஈட்டியை எடுத்தார். சினத்தால் அவர் {பீஷ்மர்}, அதைப் பல்குனனின் தேர் மீது வீசினார். சொர்க்கத்தின் வஜ்ரத்தைப் போன்று அது தன்னை நோக்கி வருவதைக் கண்ட அந்தப் பாண்டவர்களை மகிழ்விப்பவன் {அர்ஜுனன்}, ஐந்து கூரிய பல்லங்களை (தன் வில்லின் நாணில்) பொருத்தினான். கோபக்கார அர்ஜுனன் அவ்வைந்து பல்லங்களைக் கொண்டு, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் கைகளால் ஏவப்பட்ட அந்த ஈட்டியை ஐந்து துண்டுகளாக வெட்டினான். கோபம் நிறைந்த அர்ஜுனனால் இப்படி வெட்டப்பட்ட அந்த ஈட்டி மேகத்திரள்களில் இருந்து பிரிந்த மின்னலின் கீற்றுகளைப் போல விழுந்தது. தன் ஈட்டி வெட்டப்பட்டதைக் கண்ட பீஷ்மர் சினத்தால் நிறைந்தார்.

அவர் {பீஷ்மர்}, “வலிமைமிக்க விஷ்ணு [1] {கிருஷ்ணன்} பாண்டவர்களின் பாதுகாவலனாக இல்லையெனில், ஒரே வில்லைக் கொண்டே அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரையும் என்னால் கொல்ல முடியும். எனினும், பாண்டவர்களின் கொல்லப்படாத் தன்மை [2] மற்றும் சிகண்டியின் பெண்தன்மை ஆகிய இரண்டு காரணங்களுக்காக நான் அவர்களுடன் {பாண்டவர்களுடன்} போரிட மாட்டேன். முன்பு, என் தந்தை {சந்தனு} காளியை {சத்தியவதியை} மணந்த போது, (என்னிடம்) மனம் நிறைந்த அவர் {சந்தனு}, போரில் நான் கொல்லப்படாதவனாக இருப்பேன் என்றும், என் மரணமானது எனது சொந்த விருப்பத்தைச் சார்ந்தது என்றும்” இரண்டு வரங்களைக் கொடுத்தார். எனினும், இதுவே தகுந்த நேரமாதலால், நான் இப்போது என் மரணத்தை விரும்ப வேண்டும்” என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டார் {பீஷ்மர்}.

வானத்தில் நின்றிருந்த முனிவர்களும், வசுக்களும், அளவிலாத சக்தி கொண்ட பீஷ்மரின்  தீர்மானம் இதுவே என்பதை உறுதி செய்து கொண்டு, “ஓ! மகனே {பீஷ்மா}, நீ எதைத் தீர்மானித்திருக்கிறாயோ, அதை நாங்களும் அங்கீகரிக்கிறோம். ஓ! மன்னா {பீஷ்மா}, உன் தீர்மானத்தின்படியே செயல்படுவாயாக. போரில் இருந்து உன் இதயத்தை விலக்குவாயாக” என்றனர். இந்த வார்த்தைகளின் முடிவில், நறுமணமிக்கதும், மங்கலகரமானதும், நீர்த்துளிகள் நிறைந்ததுமான தென்றல் இயல்பான திசையிலேயே வீசத் தொடங்கியது. தேவ துந்துபிகளும் பேரொலியோடு முழங்கத் தொடங்கின. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் மீது பூமாரியும் பொழிந்தது.

எனினும், முனிவர்களும், வசுக்களும் கூறிய வார்த்தைகள், பீஷ்மரைத் தவிர வேறு யாராலும் கேட்கப்படவில்லை. {வியாச} முனிவர் எனக்குக் கொடுத்த சக்தியால் {சஞ்சயனாகிய} நானும் அவற்றைக் கேட்டேன். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அனைத்து உலகங்களுக்கும் பிடித்தமானவரான அந்தப் பீஷ்மர் தேரில் இருந்து விழப்போகிறார் என்ற நினைப்பாலேயே தேவர்களின் இதயங்களில் நிறைந்த துயரம் பெரிதாக இருந்தது” {என்றான் சஞ்சயன்}.

வீழ்ந்தார் பீஷ்மர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 120ஆ-பீஷ்மரை ஒன்றுகூடித் தாக்கிய பாண்டவர்கள்; போர்க்களத்தில் அந்திகால நெருப்பாய்த் திரிந்த பீஷ்மர்; பீஷ்மரின் விற்களை மீண்டும் மீண்டும் வெட்டிய அர்ஜுனன்; தன் மரணத்தை விரும்பிய பீஷ்மர்; அம்முடிவை அங்கீகரித்த முனிவர்களும், வசுக்களும்…

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “தேவர்களின் இவ்வார்த்தைகளைக் கேட்ட, பெரும் ஆன்மிகத் தகுதி கொண்ட சந்துனுவின் மகன் பீஷ்மர், அனைத்துக் கவசங்களையும் ஊடுருவவல்ல கூரிய கணைகளால் தானே துளைக்கப்பட்டிருந்தாலும், பீபத்சுவை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தார். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்ட சிகண்டி ஒன்பது கூரிய கணைகளால் அந்தப் பாரதர்களின் பாட்டனின் {பீஷ்மரின்} மார்பைத் தாக்கினான்.

எனினும், குரு பாட்டனான பீஷ்மர், போரில் அவனால் {சிகண்டியால்} இப்படித் தாக்கப்பட்டாலும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பூகம்பத்திலும் அசையாமல் நீடிக்கும் ஒரு மலையைப் போலவே அவர் {பீஷ்மர்} நடுங்காதிருந்தார். பிறகு, தன் வில்லான காண்டீவத்தை வளைத்த பீபத்சு {அர்ஜுனன்}, சிரித்துக் கொண்டே, இருபத்தைந்து {25} கணைகளால் கங்கையின் மைந்தரை {பீஷ்மரைத்} துளைத்தான். கோபத்தால் தூண்டப்பட்டவனும், பெரும் வேகம் கொண்டவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, நூற்றுக்கணக்கான கணைகளால் மீண்டும் அவரது முக்கிய அங்கங்களைத் தாக்கினான்.

பிறராலும் ஆயிரக்கணக்கான கணைகளால் துளைக்கப்பட்டவரான வலிமைமிக்கத் தேர்வீரர் பீஷ்மர், அந்தப் பிறரை பெரும் வேகத்துடன் பதிலுக்குத் துளைத்தார். அந்த வீரர்கள் ஏவிய கணைகளைப் பொறுத்தவரை, போராற்றலைக் கொண்ட பீஷ்மர், அந்தப் போரில் கலங்கடிக்கபட முடியாத அவை அனைத்தையும்  தன் நேரான கணைகளால் தடுத்தார். எனினும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், {சாணை} கல்லில் கூர்தீட்டப்பட்டவையும், சிகண்டியால் ஏவப்பட்டவையுமான அந்தக் கணைகள் பீஷ்மருக்குச் சிறு வலியையேனும் ஏற்படுத்தவில்லை.

பிறகு, சினத்தால் தூண்டப்பட்ட அந்தக் கிரீடம் தரித்தவன் (அர்ஜுனன்), சிகண்டியைத் தன் முன் கொண்டு, பீஷ்மரை அருகில் அணுகி அவரது வில்லை மீண்டும் அறுத்தான். மேலும் பத்து {10} கணைகளால் பீஷ்மரைத் துளைத்த அவன் {அர்ஜுனன்}, பின்னவரின் {பீஷ்மரின்} கொடிமரத்தையும் ஒன்றால் {ஒரு கணையால்} அறுத்தான். மேலும் அர்ஜுனன், பத்து கணைகளால் பீஷ்மரின் தேரைத் தாக்கி அவரையும் {பீஷ்மரையும்} நடுங்கச் செய்தான்.

பிறகு அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} வலுவான மற்றொரு வில்லை எடுத்தார். எனினும், அந்த வில் எடுக்கப்படும்போதே, அதை அர்ஜுனன் மூன்று பல்லங்களால் உண்மையில் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மூன்று துண்டுகளாக வெட்டினான். இப்படியே அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பீஷ்மரின் விற்கள் அனைத்தையும் வெட்டினான்.

அதன்பிறகு சந்தனுவின் மகனான பீஷ்மர், அர்ஜுனனுடன் மேலும் போரிட விரும்பவில்லை [1]. எனினும், பின்னவன் {அர்ஜுனன்} அவரை {பீஷ்மரை} இருபத்தைந்து {25} கணைகளால் {க்ஷுத்ரகம் எனும் கணைகளால்} துளைத்தான்.இப்படிப் பெரிதும் துளைக்கப்பட்ட அந்தப் பெரும் வில்லாளி {பீஷ்மர்}, {தன் அருகில் இருந்த} துச்சாசனனிடம், “பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரனும், போரில் கோபத்தால் தூண்டப்பட்டவனுமான பார்த்தன் {அர்ஜுனன்}, பல்லாயிரம் கணைகளால் என்னை மட்டுமே துளைப்பதைப் பார். இவன் {அர்ஜுனன்}, போரில் வஜ்ரபாணியாலும் {இந்திரனாலும்} வெல்லப்படமுடியாதவனாவான். என்னைப் பொறுத்தவரையும் கூட, ஓ! வீரா {துச்சாசனா}, தேவர்கள், தானவர்கள், ராட்சசர்கள் ஆகியோர் இணைந்து வந்தாலும் {அவர்களால்} வீழ்த்தப்பட முடியாதவனாகவே இருக்கிறேன். {இப்படி இருக்கையில்} மனிதர்களுக்கு மத்தியில் உள்ள வலிமைமிக்கத் தேர்வீரர்களைக் குறித்து நான் என்ன சொல்வேன்?” என்றார் [2]. பீஷ்மர் துச்சாசனனிடம் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது, பல்குனன் {அர்ஜுனன்}, அந்தப் போரில் சிகண்டியை முன் கொண்டு, கூரிய கணைகளால் பீஷ்மரைத் துளைத்தான்.பிறகு பீஷ்மர், காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} கூர்முனை கணைகளால் ஆழமாகவும் அதீதமாகவும் துளைக்கப்பட்டு, மீண்டும் துச்சாசனனிடம் புன்னகையுடன், “நேரானவையும், நன்றாகத் தீட்டப்பட்டவையும், ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து தொடுக்கப்படுகின்றவையும், வானத்தின் இடியின் {வஜ்ரத்தின்} தீண்டலுக்கு ஒப்பானவையுமான இந்தக் கணைகள் அர்ஜுனனாலேயே ஏவப்படுகின்றன. இவை சிகண்டியுடையவை அல்ல.

என் முக்கிய அங்கங்களை வெட்டி, கடுமையான என் கவசத்தையே துளைத்து, முசலங்களின் {உலக்கைகளின்} சக்தியுடன் என்னைத் தாக்கும் இக்கணைகள் சிகண்டியுடைவையல்ல.

(தண்டனையளிக்கும்) பிராமணக் கோல் {பிரம்மதண்டம்} [3] போலக் கடுந்தீண்டல் கொண்டவையும், வஜ்ரத்தைப் போன்ற தாங்கமுடியாத மூர்க்கத்தைக் கொண்டவையுமான இந்தக் கணைகள் என் முக்கியப் பகுதிகளைப் பீடிக்கின்றன. இவை சிகண்டியுடையவையல்ல.கதாயுதம், பரிகாயுதங்கள் போலத் தாக்குபவையும், காலனால் (அந்தக் கடும் மன்னனாலேயே) ஏவப்பட்ட தூதர்கள் {யமதூதர்கள்} போல வருபவையுமான இந்தக் கணைகள் என் உயிர் சக்திகளை அழிக்கின்றன. இவை சிகண்டியுடையவையல்ல.

தங்கள் நாவுகளை வெளியே விடும் நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்புகளைப் போல இவை என் உயிர்நிலைகளை ஊடுருவுகின்றன. குளிர்காலத்தின் குளுமை பசுக்களின் முக்கிய அங்கங்களை வெட்டுவதைப் {பிளப்பதைப்} போல இவை என் முக்கிய அங்கங்களை வெட்டுகின்றன [4]இவை சிகண்டியுடையவையல்ல-வீர காண்டீவதாரியான குரங்குக்கொடி ஜிஷ்ணுவை {அர்ஜுனனைத்} தவிர, மற்ற மன்னர்கள் அனைவரில் எவரும் எனக்கு வலியை உண்டாக்க இயன்றவர்களில்லை” என்றார் {பீஷ்மர்}.

இவ்வார்த்தைகளைச் சொன்ன சந்தனுவின் வீர மகன் பீஷ்மர், பாண்டவர்களை எரிக்கும் நோக்கில், பார்த்தன் {அர்ஜுனன்} மீது ஈட்டி ஒன்றை எறிந்தார். எனினும், பார்த்தன் {அர்ஜுனன்}, உமது படையின் குருவீரர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருந்த போதே, மூன்று கணைகளால் அதை மூன்று துண்டுகளாக வெட்டி கீழே விழச் செய்தான்.

பிறகு, கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, மரணத்தையோ, வெற்றியையோ அடைய விரும்பி ஒரு வாளையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கேடயத்தையும் எடுத்தார். எனினும், அவர் {பீஷ்மர்} தனது தேரை விட்டுக் கீழே இறங்குவதற்கு முன்பே அர்ஜுனன் தன் கணைகளின் மூலம் அந்தக் கேடயத்தை நூறு துண்டுகளாக வெட்டினான். அவனின் {அர்ஜுனனின்} அந்தச் சாதனை மிக அற்புதமானதாகத் தெரிந்தது.

பிறகு மன்னன் யுதிஷ்டிரன் தன் துருப்புகளைத் தூண்டி, “கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} நோக்கி விரைவீராக. கிஞ்சிற்றும் அஞ்சாதீர்” என்றான். பிறகு அவர்கள் அனைவரும் {பாண்டவப் படையினர் அனைவரும்}, தோமரங்கள், வேல்கள், கணைகள், கோடரிகள் {பட்டசங்கள்}, சிறந்த வாள்கள், பெருங்கூர்மையுள்ள நாராசங்கள், வத்ஸதந்தங்கள், பல்லங்கள் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு அந்தத் தனி வீரரை {பீஷ்மரை} நோக்கி அனைத்துப் பக்கங்களில் இருந்தும் விரைந்தனர். அப்போது அந்தப் பாண்டவப் படைக்கு மத்தியில் உரத்த கூச்சல்கள் எழுந்தன. பிறகு உமது மகன்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் வெற்றியை விரும்பி அவரைச் சூழ்ந்து கொண்டு சிங்க முழக்கம் செய்தனர்.

அந்தப் பத்தாம் {10} நாளில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரும், அர்ஜுனனும் சந்தித்துக் கொண்டபோது, உமது துருப்புகளுக்கும், எதிரியின் துருப்புகளுக்கும் இடையில் அங்கே நடைபெற்ற போர் கடுமையானதாக இருந்தது. கங்கை கடலைச் சந்திக்கும் இடத்தில் உண்டாகும் நீர்ச்சுழலைப் போல, இரு தரப்பு படைகளின் துருப்புகளும் சந்தித்து ஒருவரை ஒருவர் தாக்கி வீழ்த்திய அந்த இடத்தில் ஒரு குறுகிய காலத்திற்குச் [5] சுழல் உண்டானது {வீரர்கள் சுழன்றனர்}. இரத்தத்தால் நனைந்த பூமியானவள் கொடும் வடிவத்தை அடைந்தாள். அவளது பரப்பில் உள்ள சமமான மற்றும் சமமற்ற இடங்களை அதற்கு மேலும் வேறுபடுத்திப் பார்க்கமுடியவில்லை.பீஷ்மரின் முக்கிய அங்கங்கள் அனைத்தும் துளைக்கப்பட்டிருந்தாலும், அந்தப் பத்தாம் {10} நாளில், பத்தாயிரம் {10000} வீரர்களைக் கொன்ற அவர் போரில் (அமைதியாக) நின்று கொண்டிருந்தார். பிறகு, பெரும் வில்லாளியான பார்த்தன் {அர்ஜுனன்}, தன் துருப்புகளுக்குத் தலைமையில் நின்று கொண்டே குரு படையின் நடுப்பகுதியைப் பிளந்தான். தன் தேரில் வெண்குதிரைகளைக் கொண்டிருந்த குந்தியின் மகன் தனஞ்சனிடம் {அர்ஜுனனிடம்} அச்சம் கொண்ட நாங்கள், அவனது பளபளப்பான ஆயுதங்களால் பீடிக்கப்பட்டுப் போரில் இருந்து தப்பி ஓடினோம்.

சௌவீரர்கள், கிதவர்கள், கிழக்கத்தியர்கள், மேற்கத்தியர்கள், வடக்கத்தியர்கள், மாலவர்கள், அபீஷாஹர்கள், சூரசேனர்கள், சிபிக்கள், வஸாதிகள், சால்வர்கள், சயர்கள், திரிகர்த்தர்கள், அம்பஷ்டர்கள், கைகேயர்கள் [6] ஆகியோரும், இன்னும் பல சிறந்த வீரர்களும், கணைகளால் பீடிக்கப்பட்டும், தங்கள் காயங்களால் வலியை உணர்ந்தும், கிரீடம் தரித்தவனோடு (அர்ஜுனனோடு) அந்தப் போரில் போரிட்டுக் கொண்டிருந்த பீஷ்மரைக் கைவிட்டனர் {கைவிட்டு ஓடினர்}. பிறகு, பெரும் வீரர்கள் பலர், அந்தத் தனி வீரரை {பீஷ்மரை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டு, (அவரைப் பாதுகாத்துக் கொண்டிருந்த) குருக்களை வீழ்த்தி, கணைமாரியால் அவரை {பீஷ்மரைத்} துளைத்தனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, “கீழே வீசு”, “பிடி”, “போரிடு”, “துண்டுகளாக வெட்டு” என்ற கடுமுழக்கங்களே பீஷ்மரின் தேரின் அருகில் கேட்கப்பட்டன.ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போரில் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் (எதிரிகளைக்) கொன்ற அந்தப் பீஷ்மரின் உடலில் கணைகளால் துளைக்கப்படாத இடைவெளி என்று இரண்டு விரல்களின் அகலம் அளவுக்குக் கூட இடம் இல்லை. இப்படியே உமது தந்தை {பீஷ்மர்}, அந்தப் போரில் பல்குனனின் {அர்ஜுனனின்} கூர்முனைக் கணைகளால் சிதைக்கப்பட்டிருந்தார். பிறகு, சூரியன் மறைவதற்குச் சற்று நேரத்திற்கு முன் உமது மகன்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர் {பீஷ்மர்}, கிழக்குப்பக்கமாகத் தலையைக் கொண்டு {கிழக்கு முகமாக} தன் தேரில் இருந்து கீழே விழுந்தார்.

பீஷ்மர் விழுந்த போது, தேவர்களும், பூமியின் மன்னர்களும் “ஓ!” என்றும், “ஐயோ!” என்று அலறியது ஆகாயத்தில் கேட்கப்பட்டது. உயர் ஆன்மப் பாட்டன் {பீஷ்மர்} (தன் தேரில் இருந்து) விழுந்ததைக் கண்ட எங்கள் அனைவரின் இதயங்களும் அவரோடு சேர்ந்து விழுந்தன. வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான அந்த வலிய கரங்களைக் கொண்ட வீரர் {பீஷ்மர்}, வேரோடு சாய்ந்த இந்திரனின் கொடிமரம் {இந்திரத்வஜம்} போல, பூமியையே நடுங்கச் செய்தபடி கீழே விழுந்தார். எங்கும் கணைகளால் துளைக்கப்பட்டிருந்த அவரது {பீஷ்மரது} உடல் தரையைத் தொடவில்லை.

அக்கணத்திலேயே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கணைப்படுக்கையில் {சரதல்பத்தில்} கிடந்த அந்தப் பெரும் வில்லாளியை தெய்வீக இயல்பு வந்தடைந்தது {பீஷ்மர் தெய்வீகத்தன்மையை அடைந்தார்}. மேகங்கள் அவர் மீது (குளிர்ந்த நீரைப்) பொழிந்தன, மேலும் பூமியும் நடுங்கினாள்” {என்றான் சஞ்சயன்}.

“நான் உயிரோடிருக்கிறேன்” என்ற பீஷ்மர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 120இ-உத்தர அயனத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பீஷ்மரிடம், அன்னப்பறவைகளை அனுப்பிய கங்கை; அன்னங்களிடம் தன் உறுதியைச் சொன்ன பீஷ்மர்; துக்கத்தில் ஆழ்ந்த கௌரவர்கள்; பாண்டவப் படையினரின் மகிழ்ச்சி; யோகத்தில் ஆழ்ந்த பீஷ்மர்.

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “அவர் {பீஷ்மர்} விழுந்து கொண்டிருந்தபோது, சூரியன் தென் கோட்டில் {தக்ஷிணாயனத்தில்} இருப்பதைக் கவனித்தார். எனவே, அவ்வீரர் {பீஷ்மர்}, (மரணத்திற்கான) காலத்தை (காலம் மங்கலமற்றதாக இருப்பதை) நினைத்து, தன் புலன் உணர்வுகளைப் போக அனுமதிக்கவில்லை {நினைவு தப்பாமல் இருந்தார்} [1]. “ஏன், ஆயுதப் போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையான கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, {சூரியனின்} தெற்குச் சரிவின் போது, ஓ! ஏன் தன் உயிரை விட வேண்டும்?” என்ற தேவக் குரல்களை வானமெங்கும் அவர் {பீஷ்மர்} கேட்டார். இவ்வார்த்தைகளைக் கேட்ட கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, “நான் உயிரோடிருக்கிறேன்” என்று பதிலளித்தார். குரு பாட்டனான பீஷ்மர் பூமியில் விழுந்தாலும், {சூரியனின்} வடக்குச் சரிவை {உத்தர அயனத்தை} எதிர்பார்த்து தன் உயிரை விடவில்லை [2].ஹிமவத்தின் {ஹிமவானின் – இமயத்தின்} மகளான கங்கை, இதையே அவரது {பீஷ்மரின்} தீர்மானமாகக் கொண்டு, அவரிடத்தில் {பீஷ்மரிடத்தில்} அன்னத்தின் வடிவத்தில் இருந்த பெருமுனிவர்களை அனுப்பினாள். மானஸத் {மானசரோவர்} தடாகவாசிகளும், அன்னத்தைப் போன்ற வடிவம் கொண்டவர்களுமான அந்த முனிவர்கள் விரைவாக எழுந்து, குரு பாட்டனான பீஷ்மரைக் காண்பதற்காக, அந்த மனிதர்களில் முதன்மையானவர் {பீஷ்மர்} கணைகளின் படுக்கையில் கிடந்த அந்த இடத்திற்கு ஒன்றாக வந்தனர்.

அன்னங்களைப் போன்ற வடிவங்களில் இருந்த அந்த முனிவர்கள், பீஷ்மரிடம் வந்து, கணைகளின் படுக்கையில் கிடந்த அந்தக் குரு குலக் கொழுந்தை {பீஷ்மரைக்} கண்டனர். பாரதர்களின் தலைவரான உயர் ஆன்ம கங்கையின் மைந்தரை {பீஷ்மரைக்} கண்டு, அவரை வலம் வந்து, சூரியன் தென்கோட்டில் இருந்ததால், அவர்கள் தங்களுக்குள், “உயர் ஆன்ம மனிதனான பீஷ்மர் {சூரியனின்} தென் சரிவின்போது ஏன் (இவ்வுலகத்தை விட்டு) செல்ல வேண்டும்?” என்ற வார்த்தைகளைச் சொன்னார்கள். இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த அன்னங்கள் தென் திசையை நோக்கிச் சென்றன.

அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பெரும் புத்திக் கூர்மை கொண்ட பீஷ்மர், அவற்றைக் கண்டு ஒருக்கணம் சிந்தித்தார். பிறகு அந்தச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்} அவர்களிடம், “சூரியன் தென்கோட்டில் உள்ள வரை நான் (இவ்வுலகத்தைவிட்டு) செல்ல மாட்டேன். இதுவே என் தீர்மானமாகும். சூரியன் வடகோட்டை அடையும்போதே, நான் என் புராதன வசிப்பிடத்திற்குச் செல்வேன். அன்னங்களே, இதை நான் உங்களுக்கு உண்மையாகவே சொல்கிறேன். {சூரியனின்} வடக்குச் சரிவை எதிர்பார்த்து நான் என் உயிரைப் பிடித்துக் கொள்ளப் போகிறேன். உயிரை விடுவதில் முழுக் கட்டுப்பாடும் என்னிடம் உள்ளதால், வடக்குச் சரிவின் போதான மரணத்தை எதிர்பார்த்து நான் அதை {உயிரைப்} பிடித்துக் கொள்வேன்.

என் மரணம் என் விருப்பதைப் பொறுத்தே அமையும் என்று என் ஒப்பற்ற தந்தையால் {சந்தனுவால்} எனக்குக் கொடுக்கப்பட்ட வரமானது, ஓ! உண்மையாகட்டும். என் உயிரை விடுவதில் நான் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதால் என் உயிரைப் பிடித்துக் கொள்வேன்” என்றார். அன்னங்களிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன அவர் {பீஷ்மர்}, கணைகளின் படுக்கையிலேயே தொடர்ந்து கிடந்தார்.

குரு குலச் சிகரமான பெரும் சக்தி படைத்த பீஷ்மர் விழுந்தபோது, பாண்டவர்களும், சிருஞ்சயர்களும் சிங்க முழக்கம் செய்தனர். குருக்கள் அனைவரும் முழுமையாகத் தங்கள் புலனுணர்வுகளை இழந்தனர். கிருபர் மற்றும் துரியோதனனின் தலைமையிலான குருக்கள் பெருமூச்சுவிட்ட படியே அழுதனர். துக்கத்தால் அவர்கள் நீண்ட நேரத்திற்கு உணர்விழந்தபடியே இருந்தனர். அவர்கள், ஓ! ஏகாதிபதி, போரில் தங்கள் இதயங்களைச் செலுத்தாமல் முற்றிலும் அசையாதிருந்தனர். பாண்டவர்களை எதிர்த்துச் செல்லாத அவர்கள், ஏதோ தொடை பிடிப்பு ஏற்பட்டவர்களைப் போல அசைவற்றிருந்தனர்.

கொல்லப்பட இயலாதவரான (என்று கருதப்பட்ட) வலிமைமிக்க சக்தி கொண்ட சந்தனுவின் மகன் பீஷ்மர் கொல்லப்பட்டபோது, குரு மன்னனின் {துரியோதனனின்} அழிவு அருகிலேயே இருக்கிறது என்று நாங்கள் அனைவரும் நினைத்தோம். சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} வீழ்த்தப்பட்டும், எங்கள் முதன்மையான வீரர்கள் கொல்லப்பட்டும், கூரிய கணைகளால் சிதைக்கப்பட்டும் இருந்த எங்களுக்கு {மேற்கொண்டு} என்ன செய்வது என்பது தெரியவில்லை. பரிகாயுதங்களைப் போன்று தெரியும் பெரிய கரங்களைக் கொண்ட வீரப் பாண்டவர்கள் அனைவரும், வெற்றியை அடைந்தும், அடுத்த உலகத்தின் உயர்ந்த அருள்நிலையை வென்றும் தங்கள் பெரும் சங்குகளை முழங்கினர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சோமகர்கள் மற்றும் பாஞ்சாலர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். ஆயிரக்கணக்கான பேரிகைகள் முழங்கிய போது, வலிமைமிக்கப் பீமசேனன் தன் கக்கங்களை {தோள்களைத்} தட்டிக் கொண்டு உரத்த கூச்சலிட்டான். மிகவும் சக்திவாய்ந்தவரான கங்கையின் மகன் {பீஷ்மர்} கொல்லப்பட்ட போது, வீரமான இரு படைகளின் போர்வீரர்களும், தங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, சிந்தனையில் மூழ்கத் தொடங்கினர்.

சிலர் உரக்க அலறினர், சில தப்பி ஓடினர், சிலர் தங்கள் உணர்வுகளை இழந்தனர் {மயக்கமடைந்தனர்}. சிலர் க்ஷத்திரிய வகையினரின் நடைமுறைகளை நிந்தித்தனர், சிலர் பீஷ்மரைப் போற்றினர். முனிவர்களும், பித்ருக்கள் அனைவரும் உயர் நோன்புகளைக் கொண்ட பீஷ்மரைப் போற்றினர். பாரதர்களின் {இறந்து போன} மூதாதையர்களும் பீஷ்மரைப் புகழ்ந்தனர். அதே வேளையில், புத்திக்கூர்மையுள்ளவரும், சந்தனுவின் மகனுமான வீர பீஷ்மர், பெரும் உபநிஷத்துகளில் சொல்லப்பட்டுள்ள யோகத்தை அடைந்து, மனத்துதிகளில் ஈடுபட்டுத் தன் நேரத்தை எதிர்பார்த்து அமைதியில் நீடித்தார்” {என்றான் சஞ்சயன்}.

திடீரென விழுந்த துரோணர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 121-திருதராஷ்டிரன் அடைந்த வேதனை; கௌரவர்களின் துயரமும், பீமசேனனின் மகிழ்ச்சியும்; பீஷ்மர் கொல்லப்பட்டதைத் துரோணரிடம் தெரிவித்த துச்சாசனன்; அதிர்ச்சியில் மயங்கி விழுந்த துரோணர்; பீஷ்மரிடம் சென்ற பாண்டவர்களும், கௌரவர்களும்; அர்ஜுனனிடம் தலையணை கேட்ட பீஷ்மர்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம் சொன்னார்}, “ஐயோ, ஓ! சஞ்சயா, தன் மரியாதைக்குரிய தந்தைக்காக {சந்தனுவிற்காகப்} பிரம்மச்சாரியானவரும், தேவர்களைப் போன்றவருமான பீஷ்மரை இழந்த போது (என்) வீரர்களின் நிலை எவ்வாறு இருந்தது? பீஷ்மர், துருபதன் மகனை {சிகண்டியை} இழிவாகக் கருதி அவனைத் தாக்காதிருந்தபோதே பாண்டவர்களால் குருக்களும் மற்றவர் அனைவரும் கொல்லப்பட்டதாகவே நான் கருதினேன். இழிந்த நிலையில் இருக்கும் நான், இன்று என் தந்தை {பீஷ்மர்} கொல்லப்பட்டதையும் கேட்டேன்.

இதைவிடக் கனமான துன்பம் வேறென்ன இருக்க முடியும்? ஓ! சஞ்சயா, பீஷ்மரின் மரணத்தைக் கேட்டும் நூறு துண்டுகளாக உடையாமல் இருக்கும் என் இதயம் நிச்சயம் உருக்காலானதே. ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவனே {சஞ்சயா}, குரு குலச் சிங்கமான வெற்றியை விரும்பும் பீஷ்மர் போரில் கொல்லப்பட்ட போது, என்ன செய்தார் என்பதை எனக்குச் சொல்வாயாக. தேவவிரதர் {பீஷ்மர்} போரில் கொல்லப்பட்டார் என்பதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஐயோ, பழங்காலத்தில் ஜமதக்னி மகனின் {பரசுராமரின்} தெய்வீக ஆயுதங்களாலும் கொல்லப்படாத அவர் {பீஷ்மர்}, ஐயோ துருபதன் மகனான பாஞ்சால இளவரசன் சிகண்டியால் இப்போது கொல்லப்பட்டாரே” என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மாலையில் கொல்லப்பட்ட குரு பாட்டன் பீஷ்மர் {தன் மறைவால்} தார்தராஷ்டிரர்களைக் கவலை கொள்ளச் செய்து, பாஞ்சாலர்களை மகிழ்வித்தார். அவர் {பீஷ்மர்} பூமியில் விழுந்தாலும், அவரது உடலானது பூமியைத் தொடாதவகையில், கணைகளின் படுக்கையில் கிடந்தார். உண்மையில், பீஷ்மர் தன் தேரில் இருந்து வீசப்பட்டுப் பூமியின் பரப்பில் விழுந்த போது, அனைத்து உயிரினங்களும், “ஓ!” என்றும், “ஐயோ!” என்றும் கதறின.

குருக்களின் எல்லை மரமானவரும் {வேலியானவரும்}, எப்போதும் வெல்பவருமான பீஷ்மர் விழுந்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இரு படை க்ஷத்திரியர்களின் இதயங்களில் அச்சம் நுழைந்தது. கொடிமரம் வீழ்த்தப்பட்டு, கவசம் பிளக்கப்பட்ட சந்தனுவின் மகன் பீஷ்மரைக் கண்டு, குருக்களும், பாண்டவர்களும் மகிழ்ச்சியற்ற மனநிலைக்கு உந்தப்பட்டார்கள். ஆகாயம் இருளால் மூடப்பட்டது, சூரியனும் {ஒளியிழந்து} மங்கினான். சந்தனுவின் மகன் {பீஷ்மர்} கொல்லப்பட்டபோது, பூமி உரக்க அலறுவதாகத் தெரிந்தது.

“வேதங்களை அறிந்தோரில் முதன்மையானவர் இவர்! {பீஷ்மர்!} வேதங்களை அறிந்தோரில் சிறந்தவர் இவர் {பீஷ்மர்}” என்றே (கணைகளின் படுக்கையில்) கிடந்த அந்த மனிதர்களில் காளையை {பீஷ்மரைக்} குறித்து உயிரினங்கள் பேசின. [1]“முன்பு, தன் தந்தை {சந்தனு} காமத்தால் பீடிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொண்ட இந்த மனிதர்களில் காளை {பீஷ்மர்}, தன் உயிர் வித்தை மேலெழுப்பத் தீர்மானித்தவராவார்” என்றே கணைகளின் படுக்கையில் கிடந்த பாரதர்களில் முதன்மையானவரைக் குறித்துச் சித்தர்கள் மற்றும் சாரணர்களோடு கூடிய முனிவர்கள் பேசினர்.

பாரதர்களின் பாட்டனான சந்தனுவின் மகன் பீஷ்மர் கொல்லப்பட்ட போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, என்ன செய்வது என்பதை உமது மகன்கள் அறியவில்லை. அவர்களது முகங்கள் துன்பக்குறிகளை அணிந்து கொண்டன. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவர்களது முகத்தோற்றங்கள் காந்தியை இழந்தன, அவர்கள் அனைவரும் அவமானத்தில் தங்கள் தலைகளைத் தொங்கப்போட்டபடியே நின்றனர். மறுபுறம், வெற்றியடைந்த பாண்டவர்கள் தங்கள் படையணிகளின் தலைமையில் நின்றனர். பிறகு அவர்கள் அனைவரும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தங்கள் பெரிய சங்குகளை முழங்கினர்.

ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, தங்கள் மகிழ்ச்சியின் விளைவால் ஆயிரக்கணக்கான பேரிகைகள் முழக்கப்பட்ட போது, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் பலம் படைத்தவனும், குந்தியின் மகனுமான பீமசேனன் பெரும் பலமிக்கப் பகை வீரர்கள் பலரைக் கொன்று, பெரும் மகிழ்ச்சியோடு விளையாடிக் கொண்டிருப்பதை நாங்கள் கண்டோம்.

குருக்கள் அனைவரையும் பெரும் மயக்கம் ஆட்கொண்டது. கர்ணனும் [1], துரியோதனனும், அடிக்கடி பெருமூச்சுவிட்டார்கள். குரு பாட்டனான பீஷ்மர் இப்படி விழுந்தபோது சுற்றிலும் துன்பக்குரல்கள் கேட்கப்பட்டன, (குரு படையின் மத்தியில்) பெரும் குழப்பம் நிலவியது.

பீஷ்மர் விழுந்ததைக் கண்ட உமது மகன் துச்சாசனன், துரோணரின் தலைமையிலான படைப்பிரிவுக்குள் பெரும் வேகத்தோடு நுழைந்தான். தன் துருப்புகளின் தலைமையில் கவசம் பூண்டவனாக நின்ற அந்த வீரன் {துச்சாசனன்}, (பீஷ்மரின் பாதுகாப்பிற்காகத்) தன் அண்ணனால் நிறுத்தப்பட்டிருந்தான். அந்த மனிதர்களில் புலி {துச்சாசனன்}, தன் தலைமையிலான துருப்புகளைத் துன்பத்தில் ஆழ்த்தியபடி இப்போது அங்கே {துரோணரிடம்} வந்தான். இளவரசன் துச்சாசனன் தங்களை நோக்கி வருவதைக் கண்ட கௌரவர்கள், அவன் {துச்சாசனன்} சொல்வதைக் கேட்க விரும்பி அவனைச் சூழ்ந்து கொண்டனர்.

குரு குலத்தின் துச்சாசனன் பீஷ்மர் கொல்லப்பட்டதைத் துரோணருக்குத் தெரிவித்தான். அந்தத் தீய செய்திகளைக் கேட்ட துரோணர், தன் தேரில் இருந்து திடீரென விழுந்தார். பிறகு, தன் சுயநினைவை விரைவாக அடைந்த பரத்வாஜரின் வீர மகன் {துரோணர்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தொடர்ந்து போரிடும் குரு படையைத் தடுத்தார். போரில் இருந்து குருக்கள் விலகுவதைக் கண்ட பாண்டவர்களும், வேகமான குதிரைகளில் செல்லும் தூதர்களைக் கொண்டு, போரிடுவதை நிறுத்தினர். இரு படைகளின் மன்னர்கள் அனைவரும் தங்கள் கவசங்களை அகற்றி பீஷ்மர் இருந்த இடத்திற்குச் சென்றனர். போரில் இருந்த விலகிய ஆயிரக்கணக்கான {பிற} வீரர்களும், அனைத்து உயிர்களின் தலைவனை {பிரம்மனை} நோக்கிச் செல்லும் தேவர்களைப் போல உயர் ஆன்ம பீஷ்மரை நோக்கிச் சென்றனர்.

ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, (அப்போது அம்புப் படுக்கையில் கிடந்த) பீஷ்மரை அணுகிய பாண்டவர்களும், குருக்களும், அவருக்குத் தங்கள் வணக்கங்களைத் தெரிவித்தனர். நீதிமிக்க ஆன்மா கொண்டவரான சந்தனுவின் மகன் பீஷ்மர், இப்படித் தன்னை வணங்கித் தன் முன் நின்ற பாண்டவர்களிடமும், குருக்களிடமும் பேசினார்.

அவர் {பீஷ்மர்}, “உயர்ந்த அருளைப் பெற்றவர்களே {பெரும்பாக்கியசாலிகளே}, உங்களுக்கு நல்வரவு! வலிமைமிக்கத் தேர்வீரர்களே, உங்களுக்கு நல்வரவு! தேவர்களுக்கு ஒப்பான உங்களைக் கண்டதால் நான் மனநிறைவடைகிறேன்” என்றார். தலையைத் தொங்கப்போட்டபடியே அவர்களிடம் பேசிய அவர் {பீஷ்மர்} மீண்டும் அவர்களிடம், “என் தலை அதிகமாகத் தொங்குகிறது. ஒரு தலையணையை எனக்குக் கொடுப்பீராக” என்றார். பிறகு, (அங்கே நின்று கொண்டிருந்த) மன்னர்கள், மிக மென்மையானவையும், மிக மெல்லிய துணிகளாலான பல அற்புத தலையணைகளைக் கொண்டு வந்தனர். எனினும், பாட்டன் {பீஷ்மர்} அவற்றை விரும்பவில்லை.

பிறகு அந்த மனிதர்களில் புலி {பீஷ்மர்}, சிரித்துக் கொண்டே அந்த மன்னர்களிடம், “மன்னர்களே, இவை வீரனின் படுக்கைக்காகாது” என்றார். பிறகு, அவர்களைக் {அந்த மன்னர்களைக்} கண்ட அந்த மனிதர்களில் முதன்மையானவர் {பீஷ்மர்}, உலகங்கள் அனைத்திலும் உள்ள தேர்வீரர்களில் வலிமையானவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், பாண்டுவின் மகனுமான தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! தனஞ்சயா, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! ஐயா {அர்ஜுனா}, என் தலை தொங்குகிறது. {அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் எனக்குத்} தகுந்தது என்று நீ கருதும் தலையணையை எனக்குக் கொடுப்பாயாக” என்றார் {பீஷ்மர்}” {என்றான் சஞ்சயன்}.

பத்தாம் நாள் போர் முற்றும்

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ  பீஷ்ம பர்வம்-ஸ்ரீ பீஷ்மவத பர்வம்-ஒன்பதாம் நாள் போர்-

October 13, 2025

”பீஷ்மர் விலகட்டும்” என்ற கர்ணன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 098-தோல்விக்கு வருந்திய துரியோதனன், பீஷ்மர் ஆயுதத்தைத் தவிர்த்துவிட்டுப் போரில் இருந்து விலகிக் கொண்டால் பாண்டவர்களைத் தானே வெல்வதாகக் கூறிய கர்ணன்; கர்ணனைப் போரிட அனுமதிக்கும்படி பீஷ்மரிடம் வேண்டிய துரியோதனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மன்னன் துரியோதனன், சுபலனின் மகன் சகுனி, உமது மகன் துச்சாசனன், வெல்லப்படமுடியாத சூதனின் மகன் (கர்ணன்) ஆகியோர் ஒன்றுகூடி பின்வருமாறு ஆலோசித்தனர். “போரில் தங்களைப் பின்தொடர்வோருடன் கூடிய பாண்டுவின் மகன்களை வெற்றிக் கொள்வது எப்படி?” என்ற இஃதே அவர்களது ஆலோசனையின் பொருளாக இருந்தது.

பிறகு, சூதனின் மகனிடமும் {கர்ணனிடமும்}, வலிமைமிக்கச் சகுனியிடமும் பேசிய மன்னன் துரியோதனன், அந்தத் தனது ஆலோசகர்கள் அனைவரிடமும், “துரோணர், பீஷ்மர், கிருபர், சல்லியன், சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்} ஆகியோர் பார்த்தர்களை {பாண்டவர்களைத்} தடுக்கவில்லை. இத்தகைய (அவர்களது) நடத்தையின் காரணம் என்ன என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. இவர்கள் யாராலும் கொல்லப்படாத பாண்டவர்கள் எனது படைகளை அழிக்கிறார்கள். எனவே, ஓ! கர்ணா, நான் வலிமை குன்றி வருகிறேன், மேலும், எனது ஆயுதங்களும் குறைந்து வருகின்றன [1]. தேவர்களாலும் வெல்லப்பட முடியாதவர்களான வீரப்பாண்டவர்களால் நான் வஞ்சிக்கப்படுகிறேன். போரில் அவர்களைத் தாக்கி எப்படி வெல்லப் போகிறேன் என்ற ஐயம் உண்மையில் என் மனத்தை நிறைக்கிறது” என்றான் {துரியோதனன்}.

இப்படிச் சொன்ன அந்த மன்னனுக்கு {துரியோதனனுக்கு} பதிலளிக்கும் வகையில், ஓ! பெரும் ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, “ஓ! பாரதர்களின் தலைவா {துரியோதனா}, வருந்தாதே. உனக்கு ஏற்புடையது எதுவோ, அதை நானே செய்வேன். சந்தனுவின் மகனான பீஷ்மர் இந்தப் பெரும்போரில் இருந்து விரைவில் விலகட்டும். தன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, போரில் இருந்து அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} விலகியதும், அந்தப் பீஷ்மர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சோமகர்கள் அனைவருடன் கூடிய பார்த்தனை [2] {அர்ஜுனனை} நான் கொல்வேன். ஓ! மன்னா {துரியோதனா}, உண்மையாகவே இந்த உறுதியை நான் ஏற்கிறேன். உண்மையில், ஒவ்வொரு நாளும் பாண்டவர்களுக்குக் கருணை காட்டுகிறார் பீஷ்மர். இதைத்தவிரவும், அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களை வெற்றிக் கொள்ள இயலாதவராகவும் அவர் {பீஷ்மர்} இருக்கிறார். போரில் பீஷ்மர் தன் ஆற்றலைக் காட்டி பெருமை கொள்பவராவார். மேலும் அவர் {பீஷ்மர்} போரை மிகவும் விரும்புபவருமாவார். ({பாண்டவர்களைக் கொன்றுவிட்டால்} பிறகு போரே முடிந்து விடுமாகையால்) ஒன்றுகூடியிருக்கும் பாண்டவர்களை அவர் ஏன் வெல்லப் போகிறார்? [3] எனவே, தாமதிக்காமல் பீஷ்மரின் பாசறைக்குச் சென்று, மரியாதைக்குரிய அந்த முதிர்ந்த திருவாளரை {பீஷ்மரை} ஆயுதங்களைக் கீழே வைக்கச் செய்வாயாக. அவர் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்ட பிறகு, ஓ! பாரதா {துரியோதனா}, நண்பர்கள் மற்றும் சொந்தங்களுடன் கூடிய பாண்டவர்கள் என் ஒருவனாலேயே ஏற்கனவே கொல்லப்பட்டதாக நினைப்பாயாக” என்றான் {கர்ணன்}.

இப்படிக் கர்ணனால் சொல்லப்பட்ட உமது மகன் துரியோதனன், தன் தம்பி துச்சாசனனிடம், “ஓ! துச்சாசனா, என் அணிவரிசையில் நடப்போர் அனைவரையும் தாமதமில்லாமல் {நன்கு} உடுத்திக் கொள்ளச் செய்வாயாக” என்றான். இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கர்ணனிடம் பேசிய மன்னன் {துரியோதனன்}, “மனிதர்களில் முதன்மையான பீஷ்மரை இஃதை ஏற்கச்செய்துவிட்டு, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கர்ணா}, தாமதமில்லாமல் நான் உன்னிடம் வருவேன். போரில் இருந்து அந்தப் பீஷ்மர் விலகிய பிறகு, போரில் நீ (எதிரியைத்) தாக்குவாயாக” என்றான்.

பிறகு உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தேவர்களுடன் (கூடிய) நூறு வேள்விகளைச்செய்தவன் {இந்திரனைப்} போலத் தன் தம்பிகளுடன் தாமதமில்லாமல் புறப்பட்டான். அப்போது, அவனது தம்பியான துச்சாசனன், புலியின் ஆற்றலைக் கொண்ட அந்த மன்னர்களில் புலியை {துரியோதனனை} குதிரையில் ஏறச் செய்தான். உமது மகன் {துரியோதனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கங்கணங்களோடும், தலையில் கிரீடத்தோடும், தன் கைகளில் பிற ஆபரணங்களோடும் தெருக்களில் சென்ற போது பிரகாசமாக ஒளிர்ந்தான்.

பந்தி {மஞ்சிஷ்டா} மலரின் [4] நிறம் கொண்ட நறுமணமிக்கச் சந்தனக்குழம்பைப் பூசி புடம்போட்ட தங்கம் போலப் பிரகாசமாக, தூய ஆடைகள் உடுத்திக் கொண்டு, சிங்கம் போன்ற விளையாட்டு {வீர} நடையுடன் கூடிய அந்தத் துரியோதனன், ஆகாயத்தில் பிரகாசமான ஒளியுடன் கூடிய சூரியனைப் போல அழகாகத் தெரிந்தான். அந்த மனிதர்களில் புலி {துரியோதனன்}, பீஷ்மரின் பாசறையை நோக்கிச் சென்ற போது, உலகத்தில் கொண்டாடப்படும் வலிமைமிக்க வில்லாளிகள் பலர் அவனைப் பின்தொடர்ந்து சென்றனர். வாசவனுக்குப் {இந்திரனுக்குப்} பின்னால் நடக்கும் தேவர்களைப் போல, அவனது தம்பிகள் அவனுக்குப் பின் அணிவகுத்து நடந்தனர்.

மனிதர்களில் முதன்மையான சிலர் குதிரைகளின் மீதும், சிலர் யானைகளின் மீதும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சிலர் தேர்களின் மீதும் ஏறிக் கொண்டு அனைத்துப் புறங்களிலும் அவனை {துரியோதனனைச்} சூழ்ந்து கொண்டனர். அவனது {துரியோதனனின்} நலன் விரும்பியோரில் பலர், அரசனான அவனது பாதுகாப்புக்காக ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, சொர்க்கத்தில் சக்ரனை {இந்திரனைச்} சூழ்ந்திருக்கும் தேவர்களைப் போலப் பெரும் எண்ணிக்கையில் அங்குத் தோன்றினர். கௌரவர்கள் அனைவராலும் புகழப்படும் வலிமைமிக்க அந்தக் குருக்கள் {கௌரவர்கள்} தலைவன் {துரியோதனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புகழ்பெற்ற கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} இருக்கும் இடத்தை {பாசறையை}நோக்கி இப்படியே சென்றான்.

தன் உடன்பிறந்த தம்பிகளால் எப்போதும் பின்தொடரப்பட்டும், சூழப்பட்டும் இருந்த அவன் {துரியோதனன்}, எதிரிகள் அனைவரையும் தடுக்கவல்லதும், யானையின் துதிக்கையைப் போன்றதும், பெரியதுமானத் தன் வலக்கரத்தை அடிக்கடி உயர்த்தியபடியே சென்றான். அந்தத் தனது கரத்தால், அனைத்துப் புறங்களில் இருந்தும் தன்னை நோக்கிக் கூப்பிய கரங்களை உயர்த்தியபடி வழியில் நின்றோரின் மரியாதைகளை {அவர்களால் தனக்கு அளிக்கப்படும் மரியாதைகளை} ஏற்றுக் கொண்டான்.

அப்படி அவன் {துரியோதனன்} சென்ற போது, பல்வேறு நாட்டு குடிமக்களின் இனிய குரல்களைக் கேட்டான். பெரும்புகழைக் கொண்ட அவன் {துரியோதனன்}, பாணர்களாலும், மாகதர்களாலும் {புகழ்பாடிகளாலும்} துதிக்கப்பட்டான். பதிலுக்கு அந்தப் பெரும் மன்னன் {துரியோதனன்} அவர்கள் அனைவருக்கும் தன் மரியாதைகளைச் செலுத்தினான் {அவர்கள் அனைவரையும் கௌரவித்தான்}. நறுமணத் தைலங்கள் ஊற்றப்பட்டுத் தங்கத்தாலான ஒளிவிளக்குகளுடன் உயர் ஆன்ம மனிதர்கள் {கிங்கரர்கள்} பலர் அவனைச் {துரியோதனனைச்} சூழ்ந்து நின்றனர். அந்தத் தங்க விளக்குகளால் சூழப்பட்ட மன்னன் {துரியோதனன்}, சுடர்மிக்கக் கோள்களுடன் கூடிய சந்திரனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகையைக் கொண்டோர் (பணியாட்கள்), கைகளில் பிரம்புகளுடனும், ஜரிஹாரங்களுடனும் {Jhariharas [5]} மென்மையாகச் சுற்றிலும் இருந்த கூட்டத்தை வழிவிடச் செய்தார்கள்.

பீஷ்மரின் சிறப்பான வசிப்பிடத்தை அடைந்த மன்னன் {துரியோதனன்} தன் குதிரையில் இருந்து இறங்கினான். அந்த மனிதர்களின் ஆட்சியாளன் {துரியோதனன்}, பீஷ்மரின் முன்னிலையை அடைந்து, பீஷ்மரை வணங்கிய பின், தங்கத்தாலானதும், அழகானதும், விலையுயர்ந்த போர்வை விரிக்கப்பட்டதுமான ஒரு சிறந்த இருக்கையில் அமர்ந்தான். கூப்பிய கரங்களுடன், கண்ணீரில் குளித்த கண்களுடன், துயரத்தில் அடைபட்ட குரலுடன் கூடிய அவன் {துரியோதனன்}, பீஷ்மரிடம், “ஓ! எதிரிகளைக் கொல்பவரே {பீஷ்மரே}, நாங்கள் இந்தப் போரில் உமது பாதுகாப்புடன் இந்திரனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களையும் அசுரர்களையும் கூட வெல்லத் துணிவோம். அப்படி இருக்கும் போது, சொந்தங்கள், நண்பர்களோடு கூடிய பாண்டவர்களைப் பற்றி, அவர்கள் வீரர்களாகவே இருந்தாலும், சொல்ல என்ன இருக்கிறது? எனவே, ஓ! கங்கையின் மைந்தரே, ஓ! தலைவா {பீஷ்மரே}, எனக்குக் கருணை காட்டுவதே உமக்குத் தகும்.

பாண்டுவின் துணிச்சல்மிக்க மகன்களைத் தானவர்களைக் கொல்லும் மகேந்திரனைப் {இந்திரனைப்} போலக் கொல்வீராக. “ஓ! மன்னா {துரியோதனா}, சோமகர்கள் மற்றும் பாஞ்சாலர்கள் அனைவரையும், கேகயர்களுடன் கூடிய காருஷர்களையும் நான் கொல்வேன்”  இவையே, ஓ! பாரதரே {பீஷ்மரே}, நீர் என்னிடம் சொன்ன வார்த்தைகளாகும். இந்த வார்த்தைகள் உண்மையாகட்டும். ஒன்று கூடியிருக்கும் பார்த்தர்களையும், வலிமைமிக்க வில்லாளிகளான அந்தச் சோமகர்களையும் கொல்வீராக. ஓ பாரதரே {பீஷ்மரே}, உமது வார்த்தைகளை உண்மையாக்குவீராக.(பாண்டவர்கள் மீது கொண்ட) கருணையாலோ, ஓ! மன்னா {பீஷ்மரே}, கெடுபேறு கொண்ட {அதிர்ஷ்டமற்ற} என் மீது நீர் கொண்ட வெறுப்பினாலோ பாண்டவர்களை நீர் {கொல்லாமல்} விடுகிறீரெனில், போரின் ரத்தினமான கர்ணனைப் போரிட அனுமதிப்பீராக. அவன் {கர்ணன்}, பார்த்தர்களையும், அவர்களோடு கூடிய அவர்களது நண்பர்கள் மற்றும் சொந்தங்களையும் போரில் வெல்வான்” என்று சொன்னான் {துரியோதனன்}.

மன்னனான உமது மகன் துரியோதனன் இதைச் சொன்ன பிறகு, பயங்கர ஆற்றலைக் கொண்ட பீஷ்மரிடம் மேலும் வேறெதையும் சொல்லாமல் தன் உதடுகளை {வாயை} மூடிக் கொண்டான்” {என்றான் சஞ்சயன்}.

பீஷ்மரின் வேதனை! – பீஷ்ம பர்வம் பகுதி – 099-அர்ஜுனனின் திறமையையும், பாண்டவர்கள் வெல்லப்பட முடியாதவர்கள் என்பதையும் துரியோதனனுக்கு எடுத்துச் சொன்ன பீஷ்மர்; சிகண்டியைத் தவிரப் பாஞ்சாலர்களைத் தான் கொல்வதாக உறுதியேற்ற பீஷ்மர்; பீஷ்மரின் உறுதியை துச்சாசனனுக்குத் தெரிவித்த துரியோதனன்; பீஷ்மரைப் பாதுகாப்பதே முதன்மையான கடமை என்று துச்சாசனனுக்கு ஆணையிட்ட துரியோதனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உயர் ஆன்ம பீஷ்மர், உமது மகனின் {துரியோதனனின்} கத்தி போன்ற சொற்களால் ஆழத் துளைக்கப்பட்டுப் பெரும் துயரில் நிறைந்தார். ஆனால் மறுமொழியாக ஏற்பில்லாத {இனிமையற்ற} வார்த்தை ஒன்றையும் அவர் சொல்லவில்லை. உண்மையில், அந்தச் சொற்கத்திகளால் சிதைக்கப்பட்டு, துயராலும், சினத்தாலும் நிறைந்த அவர் {பீஷ்மர்}, ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டு, நீண்ட நேரம் (அமைதியாகச்) சிந்தித்தார்.

உலகை அறிந்தவர்களில் முதன்மையானவரான அவர் {பீஷ்மர்}, பிறகு கோபத்தால், தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள் ஆகியோருடன் கூடிய உலகத்தையே எரித்துவிடுபவரைப் போலத் தன் விழிகளை உயர்த்தி, உமது மகனிடம் இந்த அமைதியான வார்த்தைகளைச் சொன்னார், “ஓ! துரியோதனா, உன் சொற்கத்திகளால் என்னை ஏன் இப்படித் துளைக்கிறாய்? உனக்கு எது நன்மையோ அதைச் செய்ய முழு வல்லமையுடன் முயற்சி செய்கிறேன், எப்போதும் {உனக்கு நன்மையே} செய்கிறேன். உண்மையில், உனக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பியே, போரில் என் உயிரையும் விடத் தயாராக இருக்கிறேன்.

உண்மையிலேயே பாண்டவர்கள் வெல்லப்படமுடியாதவர்களாவர். பாண்டுவின் அந்தத் துணிச்சல்மிக்க மகன் {அர்ஜுனன்}, போரில் சக்ரனையே {இந்திரனையே} வெற்றிக் கொண்டு காண்டவ வனத்தில் அக்னியை நிறைவு {திருப்தி} கொள்ளச் செய்தானே, அதுவே {அவன் வெல்லப்பட முடியாதவன் என்பதை உணர்த்தப்} போதுமான அறிகுறியாகும். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, பாண்டுவின் அதே மகன் {அர்ஜுனன்}, கந்தர்வர்களால் சிறைபிடிக்கப்பட்டுத் தூக்கிச் செல்லப்பட்ட உன்னை மீட்டானே, அதுவே போதுமான அறிகுறியாகும்.

அந்தச் சந்தர்ப்பத்தில், ஓ! தலைவா {துரியோதனா}, துணிச்சல்மிக்க உன் உடன் பிறந்த தம்பிகள் அனைவரும், சூத சாதியைச் சேர்ந்த அந்த ராதையின் மகனும் {கர்ணனும்} தப்பி ஓடினார்கள். (அர்ஜுனனால் நீ மீட்கப்பட்ட) அதுவும் {அந்த நிகழ்வும்} போதுமான அறிகுறியே.

அவன் {அர்ஜுனன்}, விராடனின் நகரத்தில் ஒன்றுகூடியிருந்த நம் அனைவரின் மீதும் தனியாளாகவே பாய்ந்தான். அது போதுமான அறிகுறியே.

அவன் {அர்ஜுனன்}, சினத்தால் தூண்டப்பட்டிருந்த துரோணரையும், என்னையும் போரில் வென்று, எங்கள் ஆடைகளை எடுத்துச் சென்றான். அது போதுமான அறிகுறியே.

பசுக்களைக் கவர்ந்த அந்த முந்தைய நிகழ்விலேயே அவன் {அர்ஜுனன்}, வலிமைமிக்க வில்லாளிகளான துரோணரின் மகனையும் {அஸ்வத்தாமனையும்}, சரத்வானின் மகனையும் {கிருபரையும்} தோல்வியடையச் செய்தான். அது போதுமான அறிகுறியே.

தன் ஆண்மையைக் குறித்துப் பெரிதாகத் தற்பெருமை பேசும் கர்ணனையும் தோல்வியடைச் செய்த அவன் {அர்ஜுனன்}, பின்னவனின் {கர்ணனின்} ஆடைகளை உத்தரனுக்குக் கொடுத்தான். அது போதுமான அறிகுறியே.

அந்தப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, வாசவனாலேயே {இந்திரனாலேயே} வீழ்த்தப்பட இயலாத நிவாதகவசர்களைப் போரில் வீழ்த்தினான். அது போதுமான அறிகுறியே.

சங்கு, சக்கரம், கதாயுதம் தரித்து அண்டத்தைக் காப்பவனையே {கிருஷ்ணனை} தன் பாதுகாவலனாகக் கொண்ட அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை}, போரில் பலத்தால் வெல்ல இயன்றவன் உண்மையில் எவன் இருக்கிறான்? எல்லையில்லா சக்தி படைத்தவனும், அண்டத்தையே அழிப்பவனும் அந்த வாசுதேவனே {கிருஷ்ணனே}. அனைவருக்கும் உயர்ந்த தலைவனும், தேவர்களுக்குத் தேவனும், பரமாத்மாவும், அழிவில்லாதவனும் அவனே {கிருஷ்ணனே}. நாரதராலும், இதர பெரும் முனிவர்களாலும், ஓ! மன்னா {துரியோதனா}, பலவாறாக விவரிக்கப்படுபவன் அவனே {கிருஷ்ணனே}.

எனினும், ஓ! சுயோதனா {துரியோதனா}, உன் மூடத்தனத்தின் விளைவால், சொல்லத்தக்கது எது, {சொல்லத்} தகாதது எது என்பதை நீ அறியவில்லை. மரணத்தின் விளிம்பில் நிற்கும் மனிதன் மரங்கள் அனைத்தையும் தங்கத்தாலானவையாகக் காண்கிறான். அப்படியே, ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, நீயும் அனைத்தையும் தலைகீழாகப் {விபரீதமாகப்} பார்க்கிறாய். பாண்டவர்களுடனும், சிருஞ்சயர்களுடனும் கடும்பகையை {நீயாகவே} தூண்டிக் கொண்ட நீ, யுத்தத்தில் இப்போது அவர்களுடன் (நீயே) போரிடுவாயாக. நீ ஆண்மையுடன் செயல்பட்டு {அதை} நாங்கள் காணும்படி செய்வாயாக.

என்னைப் பொறுத்தவரை, ஓ! மனிதர்களில் புலியே {துரியோதனா}, சிகண்டியை மட்டும் தவிர்த்து, ஒன்றாகக் கூடியிருக்கும் சோமகர்கள் மற்றும் பாஞ்சாலர்கள் அனைவரையும் நான் கொல்வேன். {ஒன்று} போரில் அவர்களால் கொல்லப்பட்டு நான் யமலோகம் செல்வேன், அல்லது போரில் அவர்களைக் கொன்று, நான் உனக்கு மகிழ்ச்சியைத் தருவேன்.

துருபதனின் மாளிகையில் முதலில் சிகண்டி பெண்ணாகவே {சிகண்டினியாகவே} பிறந்தான். வரம் அருளப்பட்டதன் விளைவாலேயே அவள் {சிகண்டினி} ஆணானாள். அனைத்துக்கும் பிறகும் கூட அவள் {இன்னும்} சிகண்டினிதானே. ஓ! பாரதா {துரியோதனா}, நான் என் உயிரையே இழப்பதாக இருந்தாலும், அவனைக் {சிகண்டியைக்} கொல்ல மாட்டேன். படைப்பாளன் {பிரம்மன்} முதலில் {முற்காலத்தில்} படைத்தவாறே அவள் {இன்னும்} அதே சிகண்டினிதான்.

ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, மகிழ்வான உறக்கத்தில் இவ்விரவைக் கடத்துவாயாக. உலகம் நீடித்திருக்கும் வரை மனிதர்களால் {வீரர்களால்} பேசப்படப்போகும் ஒரு கடும்போரை நாளை நான் போரிடப் போகிறேன் {செய்யப் போகிறேன்}” {என்றார் பீஷ்மர்}.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீஷ்மரால் இப்படிச் சொல்லப்பட்டவனான உமது மகன் {துரியோதனன்} அங்கிருந்து வந்துவிட்டான். {தன் குரு போன்ற} திருவாளரிடம் {பீஷ்மரிடம்} தலைவணங்கிய பிறகு அவன் {துரியோதனன்}, தனது பாசறைக்குத் திரும்பி வந்தான். திரும்பி வந்த மன்னன் {துரியோதனன்}, தனது பணியாட்களை அனுப்பிவிட்டான். பிறகு, அந்த எதிரிகளை அழிப்பவன் விரைவாகத் தனது வசிப்பிடத்திற்குள் நுழைந்தான். (பாசறைக்குள்) நுழைந்ததும், அந்த ஏகாதிபதி {துரியோதனன்}, அந்த இரவை (உறக்கத்தில்) கழித்தான்.

அந்த இரவு விடிந்ததும், எழுந்த மன்னன் {துரியோதனன்}, அரசவீரர்கள் அனைவரிடமும் “படைகளை அணிவகுக்கச் செய்வீராக. சினத்தால் தூண்டப்பட்ட பீஷ்மர் இன்று சோமகர்கள் அனைவரையும் கொல்லப் போகிறார்” என்றான். இரவில் துரியோதனனின் வெகுவான புலம்பல்களைக் கேட்டிருந்த பீஷ்மர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவற்றைத் தனக்கான கட்டளைகளாகவே கருதினார். பெரும் துயரில் நிறைந்து, தன் அடிமைத்தனத்தை இகழ்ந்த அந்தச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, போரில் அர்ஜுனனுடனான ஒரு மோதலை நினைத்து {கருதி} வெகு நேரம் சிந்தித்தார் [1].

கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} அப்படி நினைப்பதைக் குறிப்புகளால் புரிந்து கொண்ட துரியோதனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துச்சாசனனிடம், “ஓ! துச்சாசனா, பீஷ்மரைப் பாதுகாக்க விரைவாகத் தேர்கள் நியமிக்கப்படட்டும். (நமது படையின்) இருபத்திரண்டு {22} பிரிவுகள் முழுமையும் தூண்டப்படட்டும். பாண்டவர்களை அவர்களுடைய துருப்புகளுடன் படுகொலை செய்து அரசாட்சியைக் {நாமே} கைப்பற்றவேண்டுமென்று தொடர்ந்து பல ஆண்டுகளாக நாம் எதை சிந்தித்து கொண்டிருக்கிறோமோ அதற்கான நேரம் இப்போது வந்துள்ளது. இக்காரியத்தில், பீஷ்மரைப் பாதுகாப்பதே நமது முதன்மையான கடமை என நான் நினைக்கிறேன். நம்மால் பாதுகாக்கப்படும் அவர் {பீஷ்மர்} போரில் நம்மையும் பாதுகாத்து, பார்த்தர்களையும் {பாண்டவர்களையும்} கொல்வார்.

தூய ஆன்மாவுடன் அவர் {பீஷ்மர்} என்னிடம், “சிகண்டியை நான் கொல்லேன். அவன் முன்பு பெண்ணாயிருந்தவன், எனவே, ஓ! மன்னா {துரியோதனா}, போரில் அவன் என்னால் தவிர்க்கப்பட வேண்டியவன். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, என் தந்தைக்கு நன்மை செய்ய விரும்பிய நான், முன்பு விரிந்து வளர்ந்த அரசாட்சியைத் துறந்தேன் என்பதை உலகம் அறியும்.

எனவே, ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, பெண்ணையோ, முன்பு பெண்ணாக இருந்த எவரையுமோ போரில் நான் கொல்லேன். இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்.

ஓ! மன்னா {துரியோதனா}, இந்தச் சிகண்டி முதலில் பெண்ணாகப் பிறந்தவன். நீ அந்தக் கதையைக் கேட்டிருக்கிறாய். போர் தொடங்குவதற்கு முன்னர் நான் சொன்னது போலவே அவள் சிகண்டினியாகப் பிறந்திருந்தாள். மகளாகப் பிறந்த அவள் ஆணாக ஆனாள் [2]உண்மையில், அவள் என்னுடன் போரிடுவாள், ஆனால் நான் என் கணைகளை அவள் மீது ஏவ மாட்டேன். பாண்டவர்களின் வெற்றியை விரும்பும் பிற க்ஷத்திரியர்களைப் பொறுத்தவரை, ஓ! ஐயா {துரியோதனா}, அவர்கள் போர்க்களத்தில் நான் அடையத்தக்க இடத்திற்கு வந்தால், நான் அவர்களைக் கொல்வேன்” என்றார் {பீஷ்மர்}. இவையே, சாத்திரங்களை அறிந்தவரும், பாரதர்களின் குலத்தலைவனுமான அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} என்னிடம் சொன்ன வார்த்தைகளாகும்.

எனவே, அந்தக் கங்கையின் மைந்தரைக் {பீஷ்மரைக்} காப்பதே நமது முதன்மையான கடமை என்று முழு ஆன்மாவோடு {மனத்தோடு} நான் நினைக்கிறேன். பெரும் காட்டில் பாதுகாப்பில்லாத சிங்கத்தை ஓர் ஓநாய்கூடக் கொன்றுவிடலாம். ஓநாயால் கொல்லப்படும் சிங்கத்தைப் போல, சிகண்டியால் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} கொல்லப்படாதிருக்கட்டும். நமது தாய்மாமன் சகுனி, சல்லியன், கிருபர், துரோணர், விவிம்சதி ஆகியோர் கங்கையின் மைந்தரைக் {பீஷ்மரைக்} கவனமாகப் பாதுகாக்கட்டும். அவர் பாதுகாக்கப்பட்டால், (நமது) வெற்றி உறுதியே” என்றான் {துரியோதனன் துச்சாசனனிடம்}.

துரியோதனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அனைவரும், தேர்களின் பெரும் படைப்பிரிவு ஒன்றின் துணையுடன் கங்கையின் மைந்தரை {பீஷ்மரைச்} சூழ்ந்து கொண்டனர். உமது மகன்களும் பீஷ்மரைச் சுற்றித் தங்கள் நிலைகளை அமைத்துக் கொண்டு போரிடச் சென்றனர். பூமியையும் ஆகாயத்தையும் நடுங்கச் செய்தபடியும், பாண்டவர்களின் {பாண்டவப் படையினரின்} இதயங்களில் அச்சத்தை உண்டாக்கியபடியும் அவர்கள் அனைவரும் சென்றார்கள். அந்தத் தேர்களாலும், யானைகளாலும் ஆதரிக்கப்பட்ட (அந்தக் கௌரவப் படையின்) வலிமைமிக்கத் தேர்வீரர்கள், போரில் கவசம் தரித்துப் பீஷ்மரைச் சூழ்ந்து நின்றார்கள். தேவர்கள் தங்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில் வஜ்ரபாணியைப் {இந்திரனைப்} பாதுகாத்து நின்றது போலவே அந்த வலிமைமிக்கத் தேர்வீரரைப் {பீஷ்மரைப்} பாதுகாக்க அவர்கள் அனைவரும் தங்கள் நிலைகளை எடுத்தார்கள்.

பிறகு மீண்டுமொருமுறை தன் தம்பியிடம் {துச்சாசனனிடம்} பேசிய துரியோதனன், “யுதாமன்யு அர்ஜுனனுடைய தேரின் இடது சக்கரத்தைப் பாதுகாக்கிறான், உத்தமௌஜஸ் அவனது வலது சக்கரத்தைப் பாதுகாக்கிறான். மேலும் (இப்படிப் பாதுகாக்கப்படும்) அர்ஜுனன் சிகண்டியைப் பாதுகாக்கிறான். ஓ! துச்சாசனா, பார்த்தனால் {அர்ஜுனனால்} பாதுகாக்கப்படும் சிகண்டியால், நம் பாதுகாப்பையும் மீறி பீஷ்மரைக் கொல்ல இயலாதபடி தக்க நடவடிக்கைகளை எடுப்பாயாக” என்றான். தன் அண்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட உமது மகன் துச்சாசனன், பீஷ்மரை முன்னிலையில் நிறுத்தி துருப்புகளுடன் போரில் முன்னேறினான்.

(இப்படிப் பெரும் எண்ணிக்கையிலான தேர்களால் சூழப்பட்ட) பீஷ்மரைக் கண்ட தேர்வீரர்களில் முதன்மையான அந்த அர்ஜுனன், திருஷ்டத்யும்னனிடம், “ஓ! இளவரசே {திருஷ்டத்யும்னா}, இன்று பீஷ்மரின் முன்பாக மனிதர்களில் புலியான சிகண்டியை நிறுத்துவாயாக, ஓ! பாஞ்சால இளவரசே {திருஷ்டத்யும்னா}, நானே அவனுக்குப் {சிகண்டிக்குப்} பாதுகாவலனாக இருப்பேன்” என்றான் {அர்ஜுனன்}” {என்றான் சஞ்சயன்}. 

சர்வதோபத்திர மண்டல வியூகங்கள்! – பீஷ்ம பர்வம் பகுதி – 100-பீஷ்மர் அமைத்துக் கொண்ட சர்வதோபத்திர வியூகம்; பாண்டவர்கள் அமைத்துக் கொண்ட வியூகம்; பாண்டவர்களும் கௌரவர்களும் தங்கள் தங்கள் வியூகங்களில் நின்ற நிலைகள்; போர் தொடங்கும் முன்பு காணப்பட்ட அபசகுனங்கள்….

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, சந்தனுவின் மகனான பீஷ்மர் துருப்புகளுடன் கிளம்பினார். அவர் {பீஷ்மர்} தனது துருப்புகளைச் சர்வதோபத்திரம் என்று அழைக்கப்படும் வலிமைமிக்க வியூகத்தில் அமைத்தார் [1]கிருபர், கிருதவர்மன், வலிமைமிக்கத் தேர்வீரனான சைப்யன், சகுனி, சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, காம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணன் ஆகியோர் அனைவரும் பீஷ்மருடனும், உமது மகன்களுடனும் சேர்ந்து மொத்தப் படையின் முன்னணியில் தங்கள் நிலைகளை அமைத்துக் கொண்டு அந்த (கௌரவ) வியூகத்தின் முகப்பில் நின்றார்கள்.

கவசங்கள் தரித்திருந்த துரோணர், பூரிஸ்ரவஸ், சல்லியன், பகதத்தன் ஆகியோர், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்த வியூகத்தின் வலது பக்கத்தில் தங்கள் நிலைகளை அமைத்தனர். அஸ்வத்தாமன், சோமதத்தன், பெரும் தேர்வீரர்களான அவந்தியின் இளவரசர்கள் இருவர் {விந்தன், அனுவிந்தன்} ஆகியோர் ஒரு பெரும் படையுடன் இடது பக்கத்தைப் பாதுகாத்தனர். துரியோதனன், ஓ, ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அனைத்துப் புறங்களிலும் திரிகர்த்தர்களால் சூழப்பட்டுப் பாண்டவர்களுடன் மோதுவதற்காக வியூகத்தின் மத்தியில் தன் நிலையை அமைத்துக் கொண்டான். தேர்வீரர்களில் முதன்மையான அலம்புசன், வலிமைமிக்கத் தேர்வீரனான சுருதாயுஷ் [2] ஆகியோர் கவசங்களைத் தரித்துக் கொண்டு, வியூகத்தின் பின்புறத்திலும், எனவே மொத்தப்படையின் பின்புறத்திலும் தங்கள் நிலையை அமைத்துக் கொண்டனர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது வீரர்கள் அந்தச் சந்தர்ப்பத்தில் இப்படித் தங்கள் வியூகத்தை அமைத்துக்கொண்டும், கவசம் தரித்துக் கொண்டும் எரியும் நெருப்பைப் போலத் தெரிந்தனர்.

கவசம் தரித்தவர்களான மன்னன் யுதிஷ்டிரன், பாண்டுவின் மகனான பீமசேனன், மாத்ரியின் இரட்டை மகன்களான நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் {தங்கள்} வியூகத்தின் முன்னிலையில் தங்கள் நிலைகளை அமைத்துக் கொண்டனர், எனவே அவர்கள் அனைவரும் தங்கள் துருப்புகளின் முகப்பிலேயே இருந்தனர் [3]. பகையணியினரை அழிப்பவர்களான திருஷ்டத்யும்னன், விராடன், வலிமைமிக்க வில்லாளியான சாத்யகி ஆகியோர் ஒரு பெரும்படையின் துணையோடு நின்றனர். சிகண்டி, விஜயன் (அர்ஜுனன்), ராட்சசன் கடோத்கசன், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சேகிதானன், வீர குந்திபோஜன் ஆகியோர், ஒரு பெரும்படையால் சூழப்பட்டுப் போருக்காக நின்றனர். பெரும் வில்லாளியான அபிமன்யு, வலிமைமிக்கத் துருபதன், (ஐந்து) கைகேய {கேகயச்} சகோதரர்கள் ஆகியோர் கவசம் தரித்துக் கொண்டு போருக்காக நின்றனர்.இப்படியே போரில் பெரும் துணிவுமிக்கவர்களான அந்தப் பாண்டவர்களும் கவசமணிந்து கொண்டு வலிமைமிக்கதும், வெல்லப்பட முடியாததுமான வியூகத்தை [4] வகுத்துக் கொண்டு போருக்காக நின்றனர்.பிறகு, ஓ! ஏகாதிபதி, உமது வியூகத்தின் மன்னர்கள் தங்கள் படைகளோடு கூடி சிறப்பாக முயற்சி செய்து, தங்களுக்கு முன்னிலையில் பீஷ்மரை நிறுத்திக் கொண்டு, போரில் பார்த்தர்களை {பாண்டவர்களை} எதிர்த்து விரைந்தனர். அதே போலவே பீமசேனனால் தலைமை தாங்கப்பட்ட பாண்டவர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் வெற்றியை விரும்பி, பீஷ்மருடன் போரிடுவதற்காகச் சென்றனர்.

சிங்க முழக்கங்கள், குழம்பிய கூக்குரல்கள் ஆகியவற்றுடன் தங்கள் சங்குகள், கிரகசங்கள், மாட்டுக் கொம்புகள் ஆகியவற்றை ஊதிக்கொண்டு, பேரிகைகள், பணவங்கள் ஆகியவற்றை ஆயிரக்கணக்கில் அடித்துக் கொண்டு பாண்டவர்கள் {பாண்டவப் படையினர்} சென்றனர். பயங்கரக் கூச்சல்களை எழுப்பியபடியே அந்தப் பாண்டவர்கள் போருக்குச் சென்றார்கள். எங்கள் பேரிகைகள், பணவங்கள், சங்குகள், துந்துபிகள் ஆகியவற்றின் ஆரவாரத்துடனும், உரத்த சிங்க முழக்கங்களுடனும், இன்னும் பிற விதங்களிலான கூச்சல்களாலும் நாங்களும் எதிரியின் கூச்சல்களுக்கு மறுமொழி கொடுத்தபடியே சினத்தால் தூண்டப்பட்டு அவர்களை எதிர்த்து பெரும் மூர்க்கத்துடன் விரைந்தோம்.

இந்த ஒலிகள் அனைத்தும் ஒன்றோடொன்று கலந்து ஒரு பயங்கர இரைச்சலை உண்டாக்கியது. பிறகு, இரு படைகளின் வீரர்களை ஒருவரையொருவர் நோக்கி விரைந்து தாக்கத் தொடங்கினர். அந்த மோதலால் உண்டான ஆரவாரத்தின் விளைவாகப் பூமியே நடுங்குவதாகத் தெரிந்தது. பறவைகளும் கடுமையாக இரைந்தபடியே காற்றில் {ஆகாயத்தில்} பறந்தன. எழும்போது ஒளிமிக்கவனாக இருந்த சூரியன் {ஒளி} மங்கினான். பெரும் பயங்கரங்களைக் குறிப்பது போலக் காற்றுக் கடுமையாக வீசியது. மோசமான படுகொலைகளை முன்னறிவிக்கும் வண்ணம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அச்சந்தரும் நரிகள் பயங்கரமாக ஊளையிட்டபடியே உலவின.

திசைகள் எரிவது போலத் தெரிந்தன, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீலவானத்தில் இருந்து புழுதி {மண்} மாரி பொழிந்தது. இரத்தத்தோடு கூடிய எலும்புத்துண்டுகளும் அங்கே மழையாகப்பொழிந்தது. அழுது கொண்டிருந்த விலங்குகள் அனைத்தின் கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது. கவலையால் நிறைந்த அவை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிறுநீரையும், தங்கள் குடல்களில் இருந்த உள்ளடக்கங்களையும் {மலத்தையும்} வெளியேற்றத் தொடங்கின. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மனித ஊனுண்ணிகள், ராட்சசர்கள் ஆகியோரின் உரத்தக் கூச்சல்கள் போரின் பேரொலியையே செவிக்குப் புலப்படாதவையாக ஆக்கின. நரிகள், வல்லூறுகள், காக்கைகள் நாய்கள் ஆகியன, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பல்வேறு விதங்களிலான ஒலிகளை எழுப்பியபடி, களத்தில் பாயவும், கீழ்நோக்கி வரவும் ஆரம்பித்தன. சூரிய வட்டிலை {சூரியனைத்} தாக்கிய சுடர்மிகும் எரிகோள்கள் {தூமகேது} பெரும் பயங்கரங்களை முன்னறிவித்தபடி பூமியில் வேகமாக விழுந்தன.

பாண்டவர்களுக்கும் , தார்தராஷ்டிரர்களுக்கும் உரிய இரு பெரும் படைகளும், அந்தப் பயங்கர மோதலில் புயலால் நடுங்கும் காடுகளைப் போலச் சங்குகள் மற்றும் பேரிகைகள் உருவாக்கிய பெரும் ஆரவாரத்தின் விளைவாக நடுங்கின. மன்னர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றால் நிறைந்தவையும், தீய {அசுபமான} காலத்தில் ஒருவரோடொருவர் மோதிக்கொண்டவையுமான இரு படைகளும் உண்டாக்கிய ஒலி, புயலால் கலங்கடிக்கப்படும் பெருங்கடல்களின் ஒலிகளை ஒத்திருந்தது” {என்றான் சஞ்சயன்}.

அபிமன்யுவின் ஆற்றல்! – பீஷ்ம பர்வம் பகுதி – 101-அபிமன்யு வெளிப்படுத்திய ஆற்றல்; அபிமன்யுவை எதிர்க்க அலம்புசனை ஏவிய துரியோதனன்; அலம்புசனுக்கும் திரௌபதி மகன்களுக்கும் இடையில் நடந்த மோதல்; அலம்புசனை மயங்கச் செய்த திரௌபதியின் மகன்கள்; திரௌபதியின் மகன்கள் தங்கள் தேர்களை இழந்தது; அவர்களது நிலையைக் கண்ட அபிமன்யு அலம்புசனோடு மோதியது..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பெரும் சக்தி படைத்த உன்னத அபிமன்யு, பழுப்பு நிறத்திலான தன் குதிரைகளால் சுமக்கப்பட்டு, மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலத் தன் கணைமாரியைப் பொழிந்தபடி துரியோதனனின் வலிமைமிக்கப் படையை நோக்கி விரைந்தான். ஓ! குருகுலத்தின் மகனே {திருதராஷ்டிரரே}, எதிரிகளைக் கொல்பவனான சுபத்திரையின் மகன் {அபிமன்யு} கோபத்தால் தூண்டப்பட்டு, ஆயுத செல்வத்தை எடுத்துக் கொண்டு அளவற்ற கடலாகிய (கௌரவப்) படையில் மூழ்கினான். அந்தப் போரில் {அபிமன்யுவைத்} தடுக்க உமது வீரர்களால் இயலவில்லை.

அந்தப் போரில் அவனால் {அபிமன்யுவால்} ஏவப்பட்டவையான உயிரைக்குடிக்கும் கணைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இறந்த ஆவிகளின் மன்னனுடைய {யமனுடைய} உலகங்களுக்கு வீர க்ஷத்திரியர்கள் பலரை அனுப்பி வைத்தன. உண்மையில், கோபத்தால் தூண்டப்பட்ட சுபத்திரையின் மகன் {அபிமன்யு} அந்தப் போரில் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்றோ, காலனின் தண்டத்தைப் {யமதண்டத்தைப்} போன்றோ இருந்த சுடர்மிகும் கடுங்கணைகளை ஏவினான்.

அந்தப் பல்குனன் மகன் {அர்ஜுனன் மகன் அபிமன்யு}, தேர்களோடு கூடிய தேர்வீரர்களையும், குதிரையோட்டிகளோடு கூடிய குதிரைகளையும், தாங்கள் நடத்திய பெரும் விலங்குகளோடு {யானைகளோடு} கூடிய யானைவீரர்களையும் துண்டுகளாக வேகமாகப் பிளந்தான். பூமியின் ஆட்சியாளர்கள் {அரசர்கள்} மகிழ்ச்சியில் நிறைந்து, அந்த வல்லமைமிக்கச் சாதனைகளை மெச்சி அதை அடைந்தவனையும் {அபிமன்யுவையும்} புகழ்ந்தார்கள்.

அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பஞ்சுப் பொதியை வானத்தில் அனைத்துப் பக்கங்களிலும் வீசியடிக்கும் பெருங்காற்றைப் போல (கௌரவப்படையின்) அந்தப் பிரிவுகளை வீசினான். அவனால் {அபிமன்யுவால்} முறியடிக்கப்பட்ட துருப்புகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சேற்றில் மூழ்கிய யானைகளைப் போல, ஒரு பாதுகாவலனை அடையத் தவறின. துருப்புகள் அனைத்தையும் முறியடித்த பிறகு, ஓ! மனிதர்களில் சிறந்தவரே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புகைச்சுருளேதும் அற்ற சுடர்மிகும் நெருப்பைப் போல அபிமன்யு நின்று கொண்டிருந்தான். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விதியால் உந்தப்பட்ட பூச்சிகளால் சுடர்மிகும் நெருப்பைத் தாங்கிக் கொள்ள முடியாததைப் போல அந்த எதிரிகளைக் கொல்பவனை {அபிமன்யுவை} உமது வீரர்களால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. {அப்படியே விதியால் உந்தப்பட்ட கௌரவப் படையினர் அபிமன்யுவைத் தாக்கி உயிரிழந்தனர்}

பாண்டவர்களின் எதிரிகள் அனைவரையும் தாக்கிய பிறகு, வலிமைமிக்கத் தேர்வீரனும், பெரும் வில்லாளியுமான அவன் {அபிமன்யு}, வஜ்ரத்தை ஏந்திய வாசவனைப் {இந்திரனைப்} போலவே அந்தக் கணத்தில் தெரிந்தான். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பின்புறத்தடி கொண்ட அவனின் {அபிமன்யுவின்} வில்லானது, ஒவ்வொரு புறமும் நகர்ந்த போது மேகங்களுக்கு மத்தியில் தென்படும் மின்னலின் கீற்றைப் போலத் தெரிந்தது. அந்தப் போரில் அவனது வில்லின் நாணில் இருந்த வந்த நல்ல பதத்திலான {நன்கு கடினமாக்கப்பட்ட} கூரிய கணைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காட்டில் மலர்ந்திருக்கும் மரங்களில் இருந்து வரும் வண்டுக் கூட்டங்களைப் போல வந்தன. அந்த உயர் ஆன்ம சுபத்திரையின் மகன் {அபிமன்யு} தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அங்கங்களுடைய தன் தேரில் களத்தில் திரிந்த போது, (அவனைத் தாக்குவதற்கு) ஒரு சந்தர்ப்பத்தையும் மக்களால் {பகை வீரர்களால்} காண இயலவில்லை.

கிருபர், துரோணர், வலிமைமிக்கத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} ஆகியோரையும் குழப்பியபடியே பெரும் சுறுசுறுப்புடனும், திறமையுடனும் அந்தப் பெரும் வில்லாளி {அபிமன்யு} போர்க்களத்தில் நகர்ந்து கொண்டிருந்தான். அப்படி உமது துருப்புகளை அவன் {அபிமன்யு} எரித்த போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இடைவிடாமல் அவனது வில் வட்டமாக வளைக்கப்படுவதையும், அது சூரியனைச் சுற்றி சில நேரங்களில் காணப்படும் வட்டமான ஒளிவளையத்துக்கு ஒப்பாக இருப்பதையும் நான் கண்டேன். துணிச்சல் மிக்க க்ஷத்திரியர்கள், இப்படித் திறமையுடன் எதிரியை எரிக்கும் அவனை {அபிமன்யுவைக்} கண்டு, அந்தச் சாதனைகளின் விளைவாக, இந்த உலகம் இரண்டு பல்குனர்களைக் {அர்ஜுனர்களைக்} கொண்டிருப்பதாகவே நினைத்தனர்.

உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவனால் {அபிமன்யுவால்} பீடிக்கப்பட்ட பாரதர்களின் அந்தப் பெரும் படை, மது குடித்த பெண்ணைப் போல அங்கேயே இங்கேயும் சுற்றியது. அந்தப் பெரும்படையை முறியடித்து, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரை நடுங்கச் செய்த அவன் {அபிமன்யு}, மயனை வீழ்த்திய பிறகு (தேவர்களை மகிழ்வித்த வாசவனைப் {இந்திரனைப்} போல) தன் நண்பர்களை மகிழ்வித்தான். அந்தப் போரில் அவனால் {அபிமன்யுவால்} முறியடிக்கப்பட்ட போது, உமது துருப்புகள் மேகங்களின் முழக்கத்தை ஒத்த துன்பப்பேரொலிகளை வெளியிட்டன.

ஓ! பாரதா {திருதராஷ்டிரரே}, காற்றால் கலங்கடிக்கப்படும் அலைகள் நிறைந்த கடலின் முழக்கத்தை ஒத்ததாக இருந்த உமது துருப்புகளின் பரிதாபகரமான ஒப்பாரியைக் கேட்ட துரியோதனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ரிஷ்யசிருங்கன் மகனிடம் {அலம்புசனிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அலம்புசா}, இரண்டாவது பல்குனனை {அர்ஜுனனைப்} போல இருக்கும் இந்த அபிமன்யு அவன் ஒருவனாகவே, தேவர்களின் படையை முறியடிக்கும் விருத்திரனைப் போல, சினத்தால் (எனது) படையை முறியடிக்கிறான். அனைத்து அறிவியலிலும் நன்கு திறன் பெற்ற உன்னைத் தவிர, ஓ! ராட்சசர்களில் சிறந்தவனே {அலம்புசா}, அவனுக்கு {அபிமன்யுவுக்குத்} தீர்வைத் தரும் வேறு எந்த மருந்தையும் போரில் நான் காணவில்லை. எனவே, விரைந்து சென்று, சுபத்திரையின் அந்த வீர மகனை {அபிமன்யுவைப்} போரில் கொல்வாயாக. எங்களைப் பொறுத்தவரை, பீஷ்மர் மற்றும் துரோணரின் தலைமையில் செல்லும் நாங்கள் பார்த்தனை {அர்ஜுனனைக்} கொல்வோம்” என்று சொன்னான் {துரியோதனன்}.

இப்படிச் சொல்லப்பட்டதும், உமது மகனின் {துரியோதனனின்} கட்டளையின் பேரில், வலிமைமிக்க அந்த வீர ராட்சசன் {அலம்புசன்}, மழைக்காலத்தின் மேகங்களைப் போல உரத்த முழக்கங்களையிட்டபடியே போரிட விரைந்து சென்றான். அந்தப் பேரொலியின் விளைவால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காற்றால் கலங்கடிக்கப்படும் பெருங்கடலைப் போலப் பாண்டவர்களின் அந்தப் பெரும்படை முழுமையாக நடுங்கியது. அந்த முழக்கங்களால் பீதியடைந்த போராளிகள் பலர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் இன்னுயிரை விட்டுப் பூமியில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தார்கள். மகிழ்ச்சியால் நிறைந்த அந்த ராட்சசன் {அலம்புசன்}, தன் வில்லை எடுத்து, நாணில் கணையைப் பொருத்தி, தன் தேர்த்தட்டில் நடனமாடிக்கொண்டிருப்பவனாகத் தோன்றியபடியே அபிமன்யுவை எதிர்த்துச் சென்றான். பிறகு அந்தக் கோபக்கார ராட்சசன் {அலம்புசன்}, அந்தப் போரில் அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} தான் அடையும் தொலைவில் கொண்டு வந்து, அவன் {அபிமன்யுவின்} அருகில் இருந்தவர்களையும் சேர்த்து அவனது படைப்பிரிவுகளை முறியடிக்கத் தொடங்கினான்.

உண்மையில், அந்த ராட்சசன் {அலம்புசன்}, தேவர்களின் படையை எதிர்த்து விரைந்த பலனைப் {பலன் என்ற அசுரனைப்} போல, அந்த வலிமைமிக்கப் பாண்டவப் படையைப் போரில் எதிர்த்து விரைந்து கொல்லவும் தொடங்கினான். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பயங்கர முகத்தோற்றம் கொண்ட ராட்சசனால் போரில் தாக்கப்பட்ட துருப்புகளின் மத்தியில் நடந்த அந்தப் படுகொலை மிகப் பெரியதாக இருந்தது. தன் ஆற்றலை வெளிப்படுத்திய அந்த ராட்சசன் {அலம்புசன்}, ஆயிரக்கணக்கான கணைகளால் பாண்டவர்களின் அந்தப் பெரிய படையை முறியடிக்கத் தொடங்கினான். இப்படி அந்தப் பயங்கர முகம் படைத்த ராட்சசனால் {அலம்புசனால்} படுகொலை செய்யப்பட்டுப் பெரும் அச்சத்தை அடைந்த அந்தப் பாண்டவப் படை தப்பி ஓடியது.

தாமரைத் தண்டுகளைக் கலக்கும் யானையைப் போல அந்தப் படையைக் கலங்கடித்த வலிமைமிக்க ராட்சசன் {அலம்புசன்}, பிறகு, திரௌபதியின் மகன்களை எதிர்த்துப் போரிட விரைந்தான். போரில் சாதித்தவர்களும், பெரும் வில்லாளிகளுமான அந்தத் திரௌபதியின் மகன்கள், சூரியனை எதிர்த்து விரையும் ஐந்து கோள்களைப் போல அந்த ராட்சசனை {அலம்புசனை} நோக்கி விரைந்தனர். பயங்கர நிகழ்வான உலக அழிவின்போது ஐந்து கோள்களால் பீடிக்கப்படும் சந்திரனைப் போல அந்த ராட்சசர்களில் சிறந்தவன் {அலம்புசன்}, பெரும் சக்தி கொண்ட அந்தச் சகோதரர்களால் {திரௌபதியின் மகன்களால்} பீடிக்கப்பட்டான்.

பிறகு வலிமைமிக்கப் பிரதிவிந்தியன் போர்க்கோடரிகளைப் போலக் கூர்மையானவையும், கவசங்கள் அனைத்தையும் ஊடுருவ வல்ல முனைகளைக் கொண்டவையும், தீட்டப்பட்டவையுமான கணைகளால் அந்த ராட்சசனை {அலம்புசனைத்} துளைத்தான். அதன்பேரில் தன் கவசம் துளைக்கப்பட்ட அந்த ராட்சசர்களில் முதன்மையானவன் {அலம்புசன்}, சூரியக் கதிர்களால் ஊடுருவப்பட்ட மேகங்களின் திரளைப் போலத் தெரிந்தான். தங்கச் சிறகுகளைக் கொண்ட இந்தக் கணைகளால் துளைக்கப்பட்ட ரிஷ்யசிருங்கன் மகன் {அலம்புசன்}, ஓ! மன்னா, சுடர்மிகும் முகடுகளைக் கொண்ட ஒரு மலையைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.

பிறகு, அந்த ஐந்து சகோதரர்களும், அந்த ராட்சசர்களில் முதன்மையானவனை {அலம்புசனைத்} தங்கச் சிறகுகளைக் கொண்டவையும் தீட்டப்பட்டவையுமான கணைகள் பலவற்றைக் கொண்டு அந்தப் போரில் துளைத்தனர். கோபக்காரப் பாம்புகளை ஒத்த அந்தப் பயங்கரக் கணைகளால் துளைக்கப்பட்ட அலம்புசன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாம்புகளின் மன்னனைப் போலவே சினத்தால் எரிந்தான். சிலக்கணங்களிலேயே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பெரும் தேர்வீரர்களால் ஆழத் துளைக்கப்பட்ட அந்த ராட்சசன் {அலம்புசன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பெரிதும் பீடிக்கப்பட்டு நீண்ட நேரத்திற்கு [1] உணர்விழந்தவனாக {மயக்கத்தில்} நீடித்தான்.பிறகு தன் சுயநினைவு திரும்பி, கோபத்தால் தன் அளவை விட இரு மடங்கு பெருகிய அவன் {அலம்புசன்}, அவர்களது {திரௌபதி மகன்களின்} கணைகள், கொடிமரங்கள் மற்றும் விற்களை வெட்டினான். அப்போது சிரிப்பவன் போல இருந்த அவன் {அலம்புசன்}, அவர்கள் ஒவ்வொருவரையும் ஐந்து {5} கணைகளால் தாக்கினான். பிறகு, வலிமைமிக்க ராட்சசனும், பெரும் தேர்வீரனுமான அந்த அலம்புசன், கோபத்தால் தூண்டப்பட்டு, தன் தேர்த்தட்டில் நடனமாடுபவனைப் போல இருந்து கொண்டு, தன் சிறப்பு வாய்ந்த எதிரிகளான அந்த ஐவரின் குதிரைகளையும், பிறகு தேரோட்டிகளையும் விரைவாகக் கொன்றான். சினத்தால் எரிந்த அவன் {அலம்புசன்}, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, பல்வேறு வண்ணங்களிலான கூரிய கணைகளால் அவர்களை {திரௌபதியின் மகன்களை} மீண்டும் துளைத்தான். இரவு உலாவியான அந்த ராட்சசன் அலம்புசன், அந்தப் பெரும் வில்லாளிகளைத் தங்கள் தேர்களை இழக்கச் செய்த பிறகு, அவர்களை {திரௌபதியின் மகன்களை} யமலோகம் அனுப்பும் விருப்பத்துடன் அவர்களை நோக்கி மூர்க்கமாக விரைந்தான்.

தீய ஆன்மா கொண்ட அந்த ராட்சசனால் {அலம்புசனால்} அந்தப் போரில் (இப்படிப்) பீடிக்கப்பட்ட அவர்களைக் கண்ட அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, அவனிடம் {அலம்புலசனிடம்} விரைந்தான். பிறகு, அவனுக்கும் {அபிமன்யுவுக்கும்} அந்த மனித ஊனுண்ணிக்கும் {அலம்புசனுக்கும்} இடையில் நடைபெற்ற போரானது, விருத்திரனுக்கும் வாசவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்ததைப் {நடந்த போரைப்} போல இருந்தது. உமது படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களும், பாண்டவர்களினுடையவர்களும் {பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்களும்} அந்த மோதலைக் காணும் பார்வையாளர்களானார்கள்.

கடும்போரில் ஒருவரோடொருவர் மோதி, கோபத்தில் சுடர்விட்டு, பெரும் வலிமையுடன், இருந்த அவர்கள் {இருவரும்} சினத்தில் கண்கள் சிவந்து அந்தப் போரில் மற்றவனை யுக நெருப்பை ஒத்தவனாகவே கண்டனர். அவர்களுக்கிடையிலான அந்த மோதல், பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில் சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்}, சம்பரனுக்கும் இடையில் நடந்ததைப் {நடந்த மோதலைப்} போலக் கடுமையாகவும், பயங்கரமாகவும் ஆனது.” {என்றான் சஞ்சயன்}.

அலம்புசனைப் புறமுதுகிடச் செய்த அபிமன்யு! சாத்யகியின் வீரம்!! – பீஷ்ம பர்வம் பகுதி – 102-அபிமன்யுவுக்கும் அலம்புசனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; மாயாசக்தியைப் பயன்படுத்திய அலம்புசன்; அலம்புசனைப் புறமுதுகிடச் செய்த அபிமன்யு; கௌரவ வீரர்கள் அனைவரும் அபிமன்யுவைச் சூழ்ந்து கொண்டது; அபிமன்யுவை எதிர்த்த பீஷ்மர்; அபிமன்யுவைக் காக்க அர்ஜுனன் விரைந்தது; அர்ஜுனனைத் தாக்கிய கிருபர்; கிருபரைத் தாக்கிய சாத்யகி; சாத்யகியின் வீரம்; சாத்யகி கிருபரைக் கொல்லாமல் தடுத்த அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமன் சாத்யகி மோதல்; மயங்கி அமர்ந்த அஸ்வத்தாமன்; தன் மகனை மீட்க விரைந்த துரோணர்; சாத்யகி துரோணர் மோதல்; துரோணர் அர்ஜுனன் மோதல்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, வலிமைமிக்க நம் தேர்வீரர்கள் பலரைப் போரில் தாக்கிய அர்ஜுனனின் வீர மகனை {அபிமன்யுவை} அலம்புசன் எவ்வாறு எதிர்த்தான்? மேலும், பகைவீரர்களைக் கொல்பவனான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, ரிஷ்யசிருங்கன் மகனுடன் {அலம்புசனுடன்} எவ்வாறு போர்புரிந்தான்? அந்தப் போரில் நடந்ததை உள்ளபடியே இவை அனைத்தையும் விவரமாக எனக்குச் சொல்வாயாக. தேர்வீரர்களில் முதன்மையான பீமன், ராட்சசன் கடோத்கசன், நகுலன், சகாதேவன், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி, தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகியோரும் போரில் என் துருப்புகளை என்ன செய்தார்கள்? ஓ! சஞ்சயா, (விவரிப்பதில்) நீ திறம்படைத்தவனாக இருப்பதால், இவை அனைத்தையும் எனக்கு உண்மையாகச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்த ராட்சசர்களில் முதன்மையானவனுக்கும் {அலம்புசனுக்கும்}, சுபத்திரையின் மகனுக்கும் {அபிமன்யுவுக்கும்} இடையில் நடைபெற்ற அந்தப் பயங்கரப் போரைக் குறித்துத் தற்போது விவரிக்கிறேன். போரில் அந்த அர்ஜுனன் வெளிப்படுத்திய ஆற்றலையும், பாண்டுவின் மகனான பீமசேனன், நகுலன், சகாதேவன், பீஷ்மர் மற்றும் துரோணரின் தலைமையிலான உமது படையின் வீரர்கள், என்று அனைவரும் அச்சமற்று செய்த பல்வேறு அற்புத சாதனைகளையும் உமக்கு நான் விவரிப்பேன்.

பேரொலிகளை எழுப்பிய அலம்புசன், அபிமன்யுவை நோக்கி மீண்டும் மீண்டும் முழங்கி, “நில், நில்” என்று சொன்னபடி, போரில் அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை {அபிமன்யுவை} எதிர்த்து மூர்க்கமாக விரைந்தான். அதே போல அபிமன்யுவும், சிங்கம் போல மீண்டும் மீண்டும் முழங்கியபடி ரிஷ்யசிருங்கன் மகனும், முன்னவனின் {அபிமன்யுவின்} தந்தையால் {அர்ஜுனனால்} மன்னிக்கமுடியாத எதிரியுமான அந்த வலிமைமிக்க வில்லாளியை {அலம்புசனை} நோக்கி பெரும் சக்தியுடன் விரைந்தான்.

பிறகு தேர்வீரர்களில் முதன்மையானவர்களான அந்த மனிதன் {அபிமன்யு}, ராட்சன் {அலம்புசன்} ஆகிய இருவரும் தங்கள் தேர்களில் இருந்தபடியே தேவனும் தானவனும் போலத் தங்களுக்குள் மோதிக்கொண்டனர். அந்த ராட்சசர்களில் சிறந்தவன் {அலம்புசன்} மாயாசக்திகளைக் கொண்டிருந்தான், அதே வேளையில் பல்குனன் மகனோ {அபிமன்யுவோ} தெய்வீக ஆயுதங்களை அறிந்தவனாக இருந்தான். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் ரிஷ்யசிருங்கன் மகனை {அலம்புசனை} மூன்று கூரிய கணைகளாலும், பிறகு மீண்டும் ஐந்தாலும் துளைத்தான். கோபத்தால் தூண்டப்பட்ட அலம்புசனும், அங்குசங்கள் {தோத்ரங்கள்} கொண்டு யானையைத் துளைக்கும் பாகனைப் போல அபிமன்யுவின் மார்பை ஒன்பது {9} கணைகளால் வேகமாகத் துளைத்தான்.

அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பெரும் சுறுசுறுப்புக் கொண்ட அந்த இரவு உலாவி {அலம்புசன்}, அம்மோதலில் அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} ஆயிரம் {1000} கணைகளால் பீடித்தான். பிறகு, சினத்தால் தூண்டப்பட்ட அபிமன்யு, மிகக் கூர்மையான ஒன்பது {9} நேரான கணைகளால் அந்த ராட்சசர்களின் இளவரசனின் {அலம்புசனின்} அகன்ற மார்பைத் துளைத்தான். அவனது உடலைத் துளைத்துச் சென்ற அவை, அவனது உயிர்நிலைகளுக்கு உள்ளேயே ஊடுருவின. அவற்றால் தன் அங்கங்கள் சிதைக்கப்பட்ட அந்த ராட்சசர்களில் சிறந்தவன் {அலம்புசன்}, மலர்ந்த கின்சுகங்கள் {பலாச மரங்கள்} அடர்ந்திருக்கும் ஒரு மலையைப் போல அழகாகத் தெரிந்தான். தங்கச் சிறகுகள் கொண்ட அந்தக் கணைகளைத் தன் உடலில் தாங்கியபடி இருந்த வலிமைமிக்க அந்த ராட்சசர்களின் இளவரசன் {அலம்புசன்}, தீப்பிடித்த ஒரு மலையைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.

பிறகு, பழியுணர்வு கொண்ட அந்த ரிஷ்யசிருங்கன் மகன் {அலம்புசன்}, கோபத்தால் தூண்டப்பட்டு, சிறகுகள் படைத்த கணைகளின் மேகங்களால், மகேந்திரனுக்கு {இந்திரனுக்கு} இணையான அபிமன்யுவை மறைத்தான். அவனால் {அலம்புசனால்} ஏவப்பட்ட, யமதண்டங்களுக்கு ஒப்பான அந்தக் கூரிய கணைகள், அபிமன்யுவைத் துளைத்துச் சென்று பூமிக்குள் நுழைந்தன. அதே போல அர்ஜுனன் மகனால் {அபிமன்யுவால்} ஏவப்பட்ட, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கணைகளும், அலம்புசனைத் துளைத்துச் சென்று பூமிக்குள் நுழைந்தன. பிறகு சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, பழங்காலத்தில் மயனைத் [1]  துரத்தியடித்த சக்ரனைப் {இந்திரனைப்} போல, அந்தப் போரில் தன் நேரான கணைகளால், அந்த ராட்சனை {அலம்புசனை} போர்க்களத்தில் புறமுதுகிட நிர்பந்தித்தான் {புறமுதுகிடச் செய்தான்}.

இப்படி விரட்டப்பட்டவனும், தன் எதிராளியால் {அபிமன்யுவால்} மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டவனும், பகைவர்களை எரிப்பவனுமான அந்த ராட்சசன் {அலம்புசன்}, காரிருளை உண்டாக்கி தன் பெரும் மாயாசக்திகளை வெளிப்படுத்தினான். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அங்கிருந்த போராளிகள் அனைவரும் அந்த இருளால் மறைக்கப்பட்டனர். அபிமன்யுவையும் காண முடியவில்லை, அந்தப் போரில் எதிரிகளிடம் இருந்து நண்பர்களை வேறுபடுத்திப் பார்க்கவும் முடியவில்லை [2]. எனினும், அந்தப் பயங்கரக் காரிருளைக் கண்ட அபிமன்யு, ஓ! குரு குலத்தின் மகனே {திருதராஷ்டிரரே}, சுடர்மிகும் சூரியாயுதத்தைத் {பாஸ்கராஸ்திரத்தைத்} தோன்றச் செய்தான் {விடுத்தான்}. அதன் பேரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அண்டத்தை மீண்டும் காணும்படி ஆனது {உலகம் அனைத்தும் பிரகாசமாயிற்று}. இப்படியே அவன் {அபிமன்யு}, அந்தத் தீய ராட்சசனின் மாயையைச் செயலறச் {சமன்} செய்தான்.

பிறகு பெரும் சக்தி கொண்ட அந்த மனிதர்களின் இளவரசன் {அபிமன்யு}, கோபத்தால் தூண்டப்பட்டு, பெரும் ஆற்றலோடு நேரான கணைகள் பலவற்றால் அந்த ராட்சர்களில் முதன்மையானவனை  {அலம்புசனை} அந்தப் போரில் மறைத்தான். பல்வேறு வகைகளிலான இன்னும் பிற மாயையைகள் அந்த ராட்சசனால் {அலம்புசனால்} ஏவப்பட்டன. எனினும், ஆயுதங்கள் அனைத்தையும் அறிந்தவனான பல்குனன் மகன் {அபிமன்யு} அவை அனைத்தையும் செயலறச் {சமன்} செய்தான்.

தன் மாயை அனைத்தும் அழிக்கப்பட்டு, கணைகளால் தாக்கப்பட்ட அந்த ராட்சசன் {அலம்புசன்}, பிறகு, அங்கேயே தன் தேரைக் கைவிட்டு விட்டு பெரும் அச்சத்துடன் தப்பி ஓடினான். நேர்மையற்ற போருக்கு அடிமையான {நேர்மையற்ற போர் செய்தே பழக்கப்பட்ட} அந்த ராட்சசன் இப்படி வீழ்த்தப்பட்டதும், அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, மதநீரால் குருடான காட்டு யானைகளின் இளவரசன் ஒன்று தாமரைகள் அடர்ந்த தடாகத்தைக் கலக்குவது போல உமது துருப்புகளைக் கலங்கடிக்கத் தொடங்கினான்.

அப்போது, சந்தனுவின் மகனான பீஷ்மர், முறியடிக்கப்பட்ட தன் துருப்புகளைக் கண்டு, அந்தச் சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} அடர்த்தியான கணை மழையால் மறைத்தார். பிறகு, தார்தராஷ்டிப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரும், அந்தத் தனிவீரனைச் {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்டு, தங்கள் கணைகளால் பலமாகத் தாக்கத் தொடங்கினர். ஆற்றலில் தன் தந்தையை ஒத்தவனும், வீரத்திலும் வலிமையிலும் வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} இணையானவனும், ஆயுதம் தரித்திருப்போர் அனைவரில் முதன்மையானவனுமான அந்த வீரன் {அபிமன்யு}, தன் தந்தைக்கும் {அர்ஜுனனுக்கும்}, {தன்} தாய்மாமனுக்கும் {கிருஷ்ணனுக்கும்} தகுந்த பல்வேறு சாதனைகளை அந்தப் போரில் அடைந்தான்.

பிறகு, கோபத்தால் தூண்டப்பட்ட வீரத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் மகனை {அபிமன்யுவை} மீட்க விரும்பி, {தான்} வந்த வழியெங்கும் உமது துருப்பினரைக் கொன்றபடி பின்னவன் {அபிமன்யு} இருந்த இடத்தை அடைந்தான். அதே போல உமது தந்தை தேவவிரதரும் {பீஷ்மரும்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூரியனை அணுகும் ராகுவைப் போல அந்தப் போரில் பார்த்தனை {அர்ஜுனனை} அணுகினார் [3]. பிறகு தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றின் துணையோடு கூடிய உமது மகன்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} அந்தப் போரில் பீஷ்மரைச் சூழ்ந்து கொண்டு அனைத்துப் புறங்களில் இருந்தும் அவரைப் பாதுகாத்தனர். அது போலவே கவசந்தரித்த பாண்டவர்களும், ஓ! மன்னா, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கடும்போரில் ஈடுபட்டிருந்த தனஞ்சயனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது சரத்வானின் மகன் (கிருபர்), பீஷ்மருக்கு முன்பு நின்று கொண்டிருந்த அர்ஜுனனை இருப்பத்தைந்து {25} கணைகளால் துளைத்தார். அதன்பேரில் புலியொன்று யானையைத் தாக்குவதைப் போல, கிருபரை அணுகிய சாத்யகி, பாண்டவர்களுக்கு ஏற்புடையதைச் செய்யும் விருப்பத்தால் தீட்டப்பட்ட கணைகள் பலவற்றால் அவரைத் {கிருபரைத்} துளைத்தான். கோபத்தால் தூண்டப்பட்ட கௌதமரும் பதிலுக்கு, கங்கப் பறவையின் {கழுகின்} இறகுகளாலான சிறகுகளைக் கொண்ட ஒன்பது கணைகளால் அந்த மது குலத்தோனின் {சாத்யகியின்} மார்பிலேயே விரைவாகத் துளைத்தார். கோபத்தால் தூண்டப்பட்ட அந்தச் சிநியின் பேரனும் {சாத்யகியும்},தன் வில்லைப் பலமாக வளைத்து, அவரது {கிருபரின்} உயிரையே எடுக்க வல்ல கணையொன்றை அவர் மீது வேகமாக ஏவினான்.

எனினும், நெருப்பு போன்ற துரோண மகன் {அஸ்வத்தாமன்}, கோபத்தால் தூண்டப்பட்டு, கிருபரை நோக்கி மூர்க்கமாக வந்து கொண்டிருந்ததும், பிரகாசத்தில் இந்திரனின் வஜ்ரத்துக்கு இணையானதுமான அந்தக் கணையை இரண்டாகத் துண்டித்தான். அதன் பேரில், தேர்வீரர்களில் முதன்மையானவனான அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, கிருபரை விட்டுவிட்டு, சந்திரனை எதிர்த்து ஆகாயத்தில் விரையும் ராகுவைப் போலப் போரில் துரோண மகனை {அஸ்வத்தாமனை} நோக்கி விரைந்தான்.

எனினும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தத் துரோண மகன் {அஸ்வத்தாமன்}, சாத்யகியின் வில்லை இரண்டாக வெட்டினான். அவனது {சாத்யகியின்} வில் அப்படி வெட்டப்பட்டதும், முன்னவன் {அஸ்வத்தாமன்} தன் கணைகளால் பின்னவனை {சாத்யகியைத்} தாக்கத் தொடங்கினான். பெரும் கடுமையைத் தாங்க வல்லதும், எதிரியைக் கொல்லவல்லதுமான மற்றொரு வில்லை எடுத்த சாத்யகி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆறு {6} கணைகளால் அந்தத் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} மார்பிலும், கரங்களிலும் தாக்கினான். இப்படித் துளைக்கப்பட்டுப் பெரும் வலியை உணர்ந்த அவன் {அஸ்வத்தாமன்}, ஒருக்கணம் தன் உணர்வுகளை இழந்து, தன் கொடிக்கம்பத்தைப் பிடித்தபடியே, தன் தேர்த்தட்டில் கீழே அமர்ந்தான்.

பிறகு தன் சுயநினைவு மீண்ட அந்தத் துரோணரின் வீர மகன் {அஸ்வத்தாமன்}, சினத்தால் தூண்டப்பட்டு, அந்தப் போரில் நாராசம் ஒன்றால் {நீண்ட கணை ஒன்றால்} அந்த விருஷ்ணி குலத்தோனை {சாத்யகியைப்} பீடித்தான். சிநியின் பேரனை {சாத்யகியை} துளைத்துச் சென்ற அந்த நாராசம், வசந்த காலத்தில் தன் துளைக்குள் நுழையும் விறுவிறுப்பான இளம்பாம்பு ஒன்றைப் போலப் பூமிக்குள் நுழைந்தது. அந்தப் போரில் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, வேறு ஒரு பல்லத்தால் {அகன்ற தலை கொண்ட கணையால்} சாத்யகியின் அருமையான கொடிமரத்தை வெட்டினான். அந்தச் சாதனையை அடைந்த அவன் {அஸ்வத்தாமன்} சிங்க முழக்கம் செய்தான். மீண்டுமொருமுறை அவன் {அஸ்வத்தாமன்}, ஓ! பாரதரே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் எதிராளியை {சாத்யகியை} கோடை காலத்தைக் கடந்தபின் {மழைக்காலத்தில்} சூரியனை மறைக்கும் மேகங்களைப் போல, கடுங்கணைகளின் மழையால் மறைத்தான்.

சாத்யகியும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தக் கணை மழையைக் கலங்கடித்து, பல்வேறு கணைமழைகளால் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} விரைவில் மறைத்தான். பகைவீரர்களைக் கொல்பவனான அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, மேகங்களில் இருந்து விடுபட்டச் சூரியனைப் போல அந்தக் கணை மழையில் இருந்து விடுபட்டு, (தன் சக்தியால்) துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} எரிக்க {தகிக்க} ஆரம்பித்தான். சினம் பெருக்கெடுத்த அந்த வலிமைமிக்கச் சாத்யகி, மீண்டும் ஒருமுறை தன் எதிரியை {அஸ்வத்தாமனை} ஆயிரம் கணைகளால் மறைத்து பெருங்கூச்சலிட்டான்.

ராகுவால் பீடிக்கப்பட்ட சந்திரனைப் போலத் தன் மகனைக் கண்ட பரத்வாஜரின் வீர மகன் {துரோணர்}, சிநியின் பேரனை {சாத்யகியை} நோக்கி விரைந்தார். அந்த விருஷ்ணி வீரனால் {சாத்யகியால்} பீடிக்கப்பட்ட தன் மகனை மீட்க விரும்பிய துரோணர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவனை {சாத்யகியை} மிகக் கூர்மையான கணை ஒன்றால் துளைத்தார். அப்போது சாத்யகி, வலிமைமிக்கத் தேர்வீரனான அஸ்வத்தாமனை விட்டுவிட்டு, அந்தப் போரில் மிகக் கூர்மையான இருபது {20} கணைகளால் துரோணரைத் துளைத்தான்.

அதன்பிறகு விரைவில், எதிரிகளை எரிப்பவனும், வலிமைமிக்கத் தேர்வீரனும், அளவிலா ஆன்மா கொண்டவனுமான அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, கோபத்தால் தூண்டப்பட்டு, அந்தப் போரில் துரோணரை எதிர்த்து விரைந்தான். பிறகு துரோணரும், பார்த்தனும் {அர்ஜுனனும்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் இருக்கும் புதன் மற்றும் சுக்கிரக் கோள்களைப் [4] போலக் கடுமையாகப் போரிட்டு தங்களுக்குள் மோதிக் கொண்டனர்

ருத்திரனாகத் தெரிந்த பீமசேனன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 103-துரோணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த போர்; துரோணரின் பாதுகாப்புக்காகச் சுசர்மனை ஏவிய துரியோதனன்; அர்ஜுனனுக்கும் திரிகர்த்த மன்னன் சுசர்மனுக்கு இடையில் நடந்த போர்; வாயவ்ய ஆயுதமும், சைல ஆயுதமும்; சுசர்மனைப் புறமுதுகிடச் செய்த அர்ஜுனன்; பீமனை நோக்கி யானைப் படையுடன் சென்ற பகதத்தன்; யானைகளின் தந்தங்களை உடைத்து அந்தத் தந்தங்களாலேயே அவற்றின் மத்தகங்களைப் பிளந்த பீமன்; தங்கள் படையையே நசுக்கிச் சென்ற கௌரவப் படையின் யானைகள்; கௌரவப் படை புறமுதுகிட்டோடியது…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “மனிதர்களில் காளையரான, பெரும் வில்லாளி துரோணரும், பாண்டுவின் மகன் தனஞ்சயனும் {அர்ஜுனனும்} போரில் தங்களுக்குள் எவ்வாறு மோதிக்கொண்டனர்? அறிவாளியான பரத்வாஜரின் மகனுக்கு {துரோணருக்கு}, அந்தப் பாண்டுவின் மகன் எப்போதும் அன்புக்குரியவனாவான். அதே போலப் பிருதையின் {குந்தியின்} மகனுக்கு {அர்ஜுனனுக்கு} ஆசானும் {துரோணரும்} எப்போதும் அன்புக்குரியவராவார். அந்தப் போர் வீரர்கள் இருவரும் போரில் மகிழ்ச்சியடைபவர்கள் ஆவர். மேலும் அவர்கள் இருவருமே சிங்கங்களைப் போலக் கடுமையானவர்களுமாவர். எனவே, கவனமாகப் போரிடுபவர்களான பரத்வாஜர் மகன் {துரோணர்}, தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரும் தங்களுக்குள் எவ்வாறு போரிட்டனர்?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துரோணர் பார்த்தனை {அர்ஜுனனைத்} தன் அன்புக்குரியவனாகப் போரில் ஒருபோதும் உணரவில்லை. க்ஷத்திரியக் கடமைகளை நோக்கில் கொண்ட பார்த்தனும் {அர்ஜுனனும்}, தன் ஆசானை {துரோணரை} அப்படி {அன்புக்குரியவராக} உணரவில்லை.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, க்ஷத்திரியர்கள் போரில் ஒருவரையொருவர் ஒருபோதும் தவிர்ப்பதில்லை. ஒருவரையொருவர் பொருட்படுத்தாத அவர்கள் {க்ஷத்திரியர்கள்}, தந்தைமாருடனும், சகோதரர்களுடனும் போரிட்டனர்.

அந்தப் போரில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பார்த்தன் {அர்ஜுனன்} மூன்று {3} கணைகளால் துரோணரைத் துளைத்தான். எனினும், துரோணர், போரில் பார்த்தனின் {அர்ஜுனனின்} வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகளை மதிக்கவில்லை. உண்மையில் அந்தப் போரில் பார்த்தன் {அர்ஜுனன்} மீண்டும் ஆசானை {துரோணரைக்} கணை மழையால் மறைத்தான். அதன் பேரில் பின்னவர் {துரோணர்} ஆழ்ந்த கானகத்தின் நெருப்பைப் போலக் கோபத்தால் சுடர்விட்டெரிந்தார். பிறகு, ஓ! மன்னா, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துரோணர், நேரான கணைகள் பலவற்றால் அந்த மோதலில் அர்ஜுனனை விரைவாக மறைத்தார்.

அப்போது மன்னன் துரியோதனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போரில் துரோணரின் வலப்பக்கத்தை ஏற்கும்படி {பாதுகாக்கும்படி} சுசர்மனை அனுப்பினான். பிறகு அந்தத் திரிகர்த்தர்களின் ஆட்சியாளன் {சுசர்மன்}, சினத்தால் தூண்டப்பட்டு, தன் வில்லைப் பலமாக வளைத்து, இரும்புத் தலைகள் கொண்ட ஏராளமான கணைகளால் பார்த்தனை {அர்ஜுனனைப்} போரில் மறைத்தான். அவ்விருவீரர்களாலும் ஏவப்பட்ட அந்தக் கணைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கூதிர் காலத்தின் நாரைகளைப் [1] போல ஆகாயத்தில் அழகாகத் தெரிந்தன. குந்தியின் மகனை {அர்ஜுனனை} அடைந்த அந்த அம்புகள், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, சுவைநிறைந்த கனிகளால் கனத்து வளைந்திருந்த ஒரு மரத்திற்குள் பறவைகள் மறைவதைப் போல அவனது உடலில் நுழைந்தன.

அப்போது, தேர்வீரர்களில் முதன்மையான அர்ஜுனன், அந்தப் போரில் உரத்த முழக்கமிட்டபடி, திரிகர்த்தர்களின் ஆட்சியாளனையும் {சுசர்மனையும்}, அவனது மகனையும் தன் கணைகளால் துளைத்தான். யுக முடிவின் காலனைப் போன்ற பார்த்தனால் {அர்ஜுனனால்} துளைக்கப்பட்ட அவர்கள் {சுசர்மனும் அவனது மகனும்}, தங்கள் உயிரை விடத் தீர்மானித்துக் கொண்டு, பார்த்தனை {அர்ஜுனனைத்} தவிர்க்க விரும்பாதிருந்தார்கள். பிறகு அவர்கள் அர்ஜுனனுடைய தேரின் மீது {கணை} மழையைப் பொழிந்தனர். எனினும், அர்ஜுனன், மேகங்களின் மழைத்தாரையை ஏற்கும் மலையொன்றைப் போல அந்தக் கணைமாரியைத் தன் கணைமாரியால் ஏற்றான்.

நாங்கள் அப்போது கண்ட பீபத்சுவின் {அர்ஜுனனின்} கர லாகவம் மிக அற்புதமானதாக இருந்தது. போர்வீரர்கள் பலரால் ஏவப்பட்டுத் தாங்க முடியாததாக இருந்த அந்தக் கணைகளின் மழையை, மேகங்களை நோக்கி விரைந்து, அந்த மேகக்கூட்டங்களைச் சிதறடிக்கும் காற்றைப் போலத் தனி ஒருவனாகவே அவன் {அர்ஜுனன்} கலங்கடித்தான். பார்த்தனின் {அர்ஜுனனின்} அந்தச் சாதனையினால் (அந்தப் போரைக் காண அங்கே கூடியிருந்த) தேவர்களும், தானவர்களும் பெரிதும் நிறைந்தனர் {திருப்தியடைந்தனர்}.

பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் திரிகர்த்தர்களுடன் ஈடுபட்டு {போரிட்டுக்} கொண்டிருந்த அர்ஜுனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களின் படைப்பிரிவை எதிர்த்து வாயவ்ய ஆயுதத்தை {வாயவ்யாஸ்திரத்தை} ஏவினான். அப்போது, ஆகாயத்தைக் கலங்கச் செய்த காற்றானது, மரங்கள் பலவற்றை வீழ்த்தியும், (பகை) துருப்புகளை அடித்துக் கீழே வீழ்த்தவும் செய்தது. அப்போது, கடுமையான அந்த வாயவ்ய ஆயுதத்தைக் கண்ட துரோணர், சைலம் {சைலாஸ்திரம்} என்று அழைக்கப்பட்ட ஒரு பயங்கர ஆயுதத்தை ஏவினார். போரில் துரோணரால் அந்தக் கணை ஏவப்பட்டதும், ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, காற்று தணிந்து, பத்துத் திக்குகளும் அமைதியடைந்தன.

எனினும், வீரனான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, திரிகர்த்தப் படைப்பிரிவைச் சேர்ந்த அந்தத் தேர்வீரர்களின் ஆற்றலையும், நம்பிக்கையையும் இழக்கச் செய்து, போர்க்களத்தில் அவர்களை {சுசர்மனையும் அவனது மகனையும்} புறமுதுக்கிடச் செய்தான். பிறகு, துரியோதனன், தேர்வீரர்களில் முதன்மையான கிருபர், அஸ்வத்தாமன், சல்லியன், காம்போஜர்களின் ஆட்சியாளனான சுதக்ஷிணன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், பாஹ்லீகர்களின் துணையோடு கூடிய பாஹ்லீகன் ஆகியோர், பெரும் எண்ணிக்கையிலான தேர்களுடன் அனைத்துப் பக்கங்களிலும் பார்த்தனைச் {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர்.

அதே போல, பகதத்தனும், வலிமைமிக்கச் சுருதாயுஷும் யானைப்படைப் பிரிவு ஒன்றோடு அனைத்துப் பக்கங்களிலும் பீமனைச் சூழ்ந்து கொண்டனர்.

பூரிஸ்ரவஸ், சலன், சுபலனின் மகன் சகுனி ஆகியோர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பளபளக்கும் கூர்மையான கணைகளால் மாத்ரியின் இரட்டைமகன்களைத் {நகுலன் மற்றும் சகாதேவனைத்} தடுக்கத் தொடங்கினர்.

எனினும், பீஷ்மர், அந்தப் போரில் திருதராஷ்டிரர் மகனுடைய {துரியோதனனுடைய} துருப்புகளின் துணையைக் கொண்டு, யுதிஷ்டிரனை அணுகி, அனைத்துப் பக்கங்களிலும் அவனை {யுதிஷ்டிரனைச்} சூழ்ந்து கொண்டார்.

பெரும் துணிச்சலைக் கொண்டவனும், பிருதையின் {குந்தியின்} மகனுமான அந்த விருகோதரன் {பீமன்}, தன்னை நோக்கி வரும் அந்த யானைப்படைப் பிரிவைக் கண்டு, காட்டுச் சிங்கம் ஒன்றைப் போலத் தன் கடைவாயை நனைக்க {நக்கத்} தொடங்கினான். பிறகு, தேர்வீரர்களில் முதன்மையான அந்தப் பீமன், அந்தப் பெரும்போரில், தன் கையில் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, தன் தேரில் இருந்து விரைவாகக் குதித்து உமது வீரர்களின் இதயங்களை அச்சத்தால் பீடிக்கச் செய்தான். அந்த யானை வீரர்கள், கையில் கதாயுதத்துடன் வரும் பீமசேனனைக் கண்டு, அந்தப் போரில் அனைத்துப் பக்கங்களிலும் அவனைக் கவனமாகச் சூழ்ந்து கொண்டனர். அந்த யானைகளின் மத்தியில் இருந்த பாண்டுவின் மகன் {பீமன்}, வலிமைமிக்க மேகத்திரள்களுக்கு மத்தியில் உள்ள சூரியனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.

அப்போது, பாண்டு மகன்களில் காளையான அவன் {பீமன்}, ஆகாயத்தை மறைத்திருக்கும் மேகங்களின் பெரும் திரளை விலகச் செய்யும் காற்றைப் போல அந்த யானைப் படைப் பிரிவை தன் கதாயுதத்தால் எரிக்கத் தொடங்கினான். வலிமைமிக்கவனான அந்தப் பீமசேனனால் கொல்லப்பட்ட அந்த யானைகள், மேகத்திரள்களின் முழக்கங்களைப் போலத் துன்ப ஒலியால் உரக்க அலறின. அந்தப் பெரும் விலங்குகளின் {யானைகளின்} தந்தங்களால் (தன் மேனியில்} பல்வேறு கீறல்களைக் கொண்ட அந்தப் பிருதையின் மகன் {பீமன்}, மலர்ந்திருக்கும் கின்சுகத்தை {அசோக மரத்தைப்} போல, அந்தப் போர்க்களத்தில் அழகாகத் தெரிந்தான்.

சில யானைகளின் தந்தங்களைப் பிடித்த அவன் {பீமன்}, அவற்றை அந்த ஆயுதங்களை {தந்தங்களை} இழக்கச் செய்தான். பிறவற்றின் {பிற யானைகளின்} தந்தங்களை முறுக்கி வெளியே எடுத்த அவன் {பீமன்}, தண்டத்தைக் கையில் கொண்ட காலனைப் போல, அந்தத் தந்தத்தைக் கொண்டே அந்தப் போரில் அவற்றின் மத்தகங்களில் தாக்கினான். அப்படிச் சிந்திய குருதியில் குளித்த தன் கதாயுதத்தை ஏந்திக் கொண்டு, கொழுப்பும் ஊனீரும் தன் மேல் சிதறிக் கிடக்க, இரத்தத்தால் பூசப்பட்டிருந்த அவன் {பீமன்}, ருத்திரனைப் போலவே தெரிந்தான். இப்படி அவனால் கொல்லப்பட்டவை போக எஞ்சி இருந்த சில பெரிய யானைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நட்புப் படைப்பிரிவுகளையே {தங்கள் துருப்புகளையே} கூட நசுக்கிக் கொண்டே திசைகள் அனைத்திலும் தப்பி ஓடின. அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடும் அந்தப் பெரிய யானைகளின் விளைவால், ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, துரியோதனனின் துருப்புகள் போர்க்களத்திலிருந்து மீண்டும் புறமுதுகிட்டோடின” {என்றான் சஞ்சயன்}. 

“அகந்தையின்றிப் போரிடுவீர்” என்ற துரியோதனன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 104-பீஷ்மருக்கும் சோமகர்களுக்கு இடையில் நடைபெற்ற போர்; துருபதனின் வில்லைத் துண்டித்த பீஷ்மர்; பாஞ்சாலர்களைப் பீஷ்மரிடம் இருந்து காக்க விரைந்த பாண்டவப் படையினர்; அங்கே நடந்த பயங்கரப் போர் குறித்த வர்ணனை; போர்க்களத்தில் பயங்கரமாக ஓடிய குருதிப் புனல்; பாண்டவர்களைப் புகழ்ந்தும், கௌரவர்களை இகழ்ந்தும் பேசிய வீரர்கள்; கௌரவர்களைத் துரிதப்படுத்திய துரியோதனன்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பெரும் படுகொலைகளால் நிறைந்த கடும்போர் ஒன்று, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மருக்கும், சோமகர்களுக்கும் இடையில் நடுப்பகல் வேளையில் நடந்தது. தேர்வீரர்களில் முதன்மையான அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கூர்மையான கணைகளால் பாண்டவர்களின் படையணியை எரிக்கத் தொடங்கினார். காளைக்கூட்டங்கள், (தங்கள் நடையால்) நெல் கட்டுகளின் குவியலை அரைப்பதைப் போல உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்} அந்தத் துருப்புகளைக் கலங்கடித்தார்.

திருஷ்டத்யும்னன், சிகண்டி, விராடன் மற்றும் துருபதன் ஆகியோர், அந்தப் போரில் பீஷ்மரின் மீது பாய்ந்து, அந்த வலிமைமிக்கத் தேர்வீரரைத் தங்கள் எண்ணற்ற கணைகளால் தாக்கினர். பிறகு திருஷ்டத்யும்னன், விராடன் ஆகியோர் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் துளைத்த பீஷ்மர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துருபதன் மீது நாராசம் {நீண்ட கணை} ஒன்றை ஏவினார். பகைவர்களை அழிப்பவரான அந்தப் பீஷ்மரால் போரில் இப்படித் துளைக்கப்பட்ட அந்தப் பெரும் வில்லாளிகள், (மனிதர்களின் கால்களால்) மிதிபட்ட பாம்புகளைப் போலக் கோபத்தை அடைந்தனர்.

சிகண்டி, பாரதர்களின் பாட்டனான பீஷ்மரைக் (கணைகள் பலவற்றால்) துளைத்தான். எனினும், மங்காப் புகழ் கொண்ட அந்தப் பீஷ்மர், எதிரியைப் {சிகண்டியைப்} பெண்ணாகக் கருதி அவனைத் தாக்கவில்லை. அப்போது, திருஷ்டத்யும்னன், அந்தப் போரில் நெருப்பைப் போலக் கோபத்தில் சுடர்விட்டெரிந்து, பாட்டனை {பீஷ்மரை} மூன்று கணைகளால் கரங்களிலும், மார்பிலும் தாக்கினான். துருபதன் இருபத்தைந்து {25} கணைகளாலும், விராடன் பத்து {10} கணைகளாலும், சிகண்டி இருப்பத்தைந்து {25} கணைகளாலும் பீஷ்மரைத் துளைத்தார்கள். ஆழமாகத் துளைக்கப்பட்டு, குருதியால் மறைக்கப்பட்ட அந்தப் பீஷ்மர், பல வண்ண மலர்களால் நிறைந்திருந்த சிவந்த அசோகத்தை {அசோக மரத்தைப்} போலத் தெரிந்தார்.

அப்போது, அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, அவர்கள் {பாண்டவப் படைவீரர்கள்} ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் பதிலுக்குத் துளைத்தார். பிறகு, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பல்லம் {அகன்ற தலை கொண்ட கணை} ஒன்றினால் துருபதனின் வில்லையும் துண்டித்தார். வேறு வில்லைக் கையில் எடுத்த பின்னவன் {துருபதன்}, ஐந்து கணைகளால் பீஷ்மரைத் துளைத்தான். மேலும் அவன் {துருபதன்}, அந்தப் போர்க்களத்தில், கூர்மையான மூன்று கணைகளால் பீஷ்மரின் தேரோட்டியையும் துளைத்தான்.

பிறகு, யுதிஷ்டிரனின் தலைமையிலான திரௌபதியின் மகன்கள் ஐவர், கேகய சகோதரர்கள் ஐவர், சாத்வத குலத்தின் சாத்யகி ஆகியோர் அனைவரும், திருஷ்டத்யும்னன் தலைமையிலான பாஞ்சாலர்களைக் காப்பாற்ற விரும்பி, கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} நோக்கி விரைந்தனர். அதே போல, உமது படையின் வீரர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரைப் பாதுகாக்க முனைந்து, பாண்டவப் படையை எதிர்த்துத் தங்கள் துருப்புகளின் முன்னணியில் விரைந்தனர். உமது படை மற்றும் அவர்களது படையின் மனிதர்கள் மற்றும் குதிரைகளுக்கிடையில் அங்கே கடுமையாக நடந்த அந்தப் பொது மோதல் யமனின் ஆட்சிப்பகுதிகளைப் பெருகச் செய்யும்படி இருந்தது.

தேர்வீரர்களின் மீது பாய்ந்த தேர்வீரர்கள் ஒருவரையொருவர் யமலோகத்திற்கு அனுப்பினர். அதுபோலவே, மனிதர்கள், யானை வீரர்கள், குதிரைவீரர்கள் ஆகியோர் (தங்கள் வர்க்கத்தைச் சேர்ந்த) பிறர் மீது பாய்ந்து நேரான கணைகளால் அவர்களை அடுத்த உலகத்திற்கு அனுப்பினார்கள். பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பல்வேறு விதங்களிலான கடுங்கணைகள் மூலம் தேர்வீரர்களையும், தேரோட்டிகளையும் இழந்த தேர்கள் அங்கேயும் இங்கேயும் எனப் போர்க்களமெங்கும் {குதிரைகளால்} இழுத்துச் செல்லப்பட்டன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களையும், குதிரைகளையும் நசுக்கிய அந்தத் தேர்கள் (வேகத்தில்) காற்று போன்றவையாகவும், ஆகாயத்தில் தோன்றும் (காட்சியாகத் தோன்றும்) நீராவி மாளிகைகளுக்கு {கந்தர்வ நகரங்களுக்கு} [1] ஒப்பானவையாகவும் தெரிந்தன.

கவசமணிந்தவர்களாக, காந்தியுள்ளவர்களாக, காதுகுண்டலம் மற்றும் தலைப்பாகைகளை உடையவர்களாக, தங்கத்தாலான தோள்வளைகள் மற்றும் மாலைகளைப் பூண்டவர்களாக, தேவர்களின் பிள்ளைகளுக்கு ஒப்பானவர்களாக, போரில் இந்திரனின் ஆற்றலுக்கு இணையானவர்களாக, செல்வத்தில் விஸ்வரவணனையும் {குபேரனையும்}, புத்திக்கூர்மையில் பிருஹஸ்பதியையும் விஞ்சியவர்களாக, பரந்த மாநிலங்களை ஆள்பவர்களாக, பெரும் வீரர்களாக இருந்த தேர்வீரர்களில் பலர், தங்கள் தேர்களை இழந்து அங்கேயும் இங்கேயும் சாதாரண மனிதனைப் போல ஓடுவது தெரிந்தது.

திறன்மிக்கப் பாகன்களை இழந்த பெரும் யானைகளும், ஓ! மனிதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே} {தங்கள்} நட்புப் படையணிகளையே நசுக்கியபடி ஓடி, உரத்த பிளிறல்களுடன் கீழே விழுந்தன. புதிதாக எழுந்த மேகங்களைப் போலத் தெரிந்த மிகப் பெரிய யானைகள், தங்கள் கவசங்களை இழந்து, மேகங்களைப் போலவே முழங்கிக் கொண்டு திசைகள் அனைத்திலும் ஓடுவது தெரிந்தது. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அவற்றின் {யானைகளின் மீதிருந்த} சாமரங்கள், பலவண்ணங்களிலான கொடிமரங்கள், தங்கப் பிடி கொண்ட குடைகள், (தங்கள் பாகர்களின்) பளபளக்கும் வேல்கள் ஆகியவை சிதறிக் கிடந்தன. தங்கள் யானைகளை இழந்த, உமது மற்றும் அவர்களது தரப்பைச் சேர்ந்த பாகன்களும், அந்தப் பயங்கர அழுத்தத்தில் ஓடியது தெரிந்தது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குதிரைகள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, காற்றின் வேகத்தில் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஓடுவது தெரிந்தது. தங்கள் குதிரைகளை இழந்த குதிரை வீரர்கள் வாள்களை ஏந்திய படி {தப்பி} ஓடவோ, (அவர்களைத் தாக்கும் பிறரால்) விரட்டப்பட்டோ ஓடுவதோ தெரிந்தது. அந்தப் பயங்கரப் போரில் தப்பி ஓடும் யானையைச் சந்திக்கும் மற்றொரு யானை காலாட்படையினரையும், குதிரைகளையும் விரைவாக நசுக்கிச் சென்றது. அதே போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த மிகப்பெரிய உயிரினங்கள் {யானைகள்} அந்தப் போரில் பல தேர்களை நசுக்கின. தேர்களும், (தங்கள் வழியில்) விழுந்து கிடக்கும் குதிரைகளை நசுக்கின. அப்படியே குதிரைகளும், அந்தப் போரின் அழுத்தத்தில், காலாட்படை வீரர்கள் பலரை (தங்கள் குளம்புகளால்) நசுக்கின.

இப்படியே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவை ஒன்றையொன்று பல்வேறு வழிகளில் நசுக்கின. கடுமை நிறைந்த அந்தப் பயங்கரப் போரில் குருதிப் புனலோடு கூடிய ரத்த ஆறு பாய்ந்தது. விற்களின் குவியல்கள் அதன் நேரான பாதைக்குத் தடங்கல் செய்தது, (கொல்லப்பட்ட வீரர்களின்) தலைமயிர்கள் அதன் பாசிகளாகின. (உடைந்த) தேர்கள் அதன் மடுக்களாகின, கணைகள் அதன் நீர்ச்சுழிகளாகவும் அமைந்தன. குதிரைகள் அதன் மீன்களாக அமைந்தன. (உடலில் இருந்து வெட்டப்பட்ட) தலைகள் அதன் கற்பாறைகளாக அமைந்தன. அதில் {களத்தில்} இருந்த யானைகள் அதன் முதலைகளாக அமைந்தன. கவசங்களும், தலைப்பாகைகளும் அதன் நுரைகளாகின. (வீரர்களின் கைகளில் இருந்த) விற்கள் அதன் ஊற்றின் வேகமாகவும், வாள்கள் அதன் ஆமைகளாகவும் அமைந்தன. அங்கே நிறைந்திருந்த கொடிகளும், கொடிமரங்களும் அதன் கரைகளில் உள்ள மரங்களாக அமைந்தன. மனிதர்கள் அந்த ஆறு தொடர்ந்து உண்ணும் {அரிக்கும்} அதன் கரைகளாக அமைந்தனர். அதில் இருந்த மனிதஊனுண்ணிகள் அதன் அன்னங்களாக அமைந்தன. அந்த ஓடை {ஆறு} (தன் நீரூற்றால் கடலைப் பெருகச் செய்வதை விட்டு) யமனின் ஆட்சிப்பகுதியை பெருக்கியது.

வலிமைமிக்கத் தேர்வீரர்களான துணிவுமிக்க க்ஷத்திரியர்கள், அச்சமனைத்தையும் உதறிவிட்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தெப்பங்கள் மற்றும் படகுகளாகச் செயல்பட்ட தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றின் துணையோடு அந்த ஆற்றைக் கடக்க முயன்றனர். மரணமன்னனின் {யமனின்} உலகத்திற்கு இறந்தவர்களின் ஆவிகளை இட்டுச் செல்லும் வைதரணீ நதியைப் போல, குருதிப் புனலோடு கூடிய அந்த ஆறு போரில் அஞ்சித் தங்கள் உணர்வுகளை இழந்து மயக்கமடைந்தவர்களைச் சுமந்து சென்றது.

போர்க்களத்தில் அந்தப் பயங்கர அழிவைக் கண்ட க்ஷத்திரியர்கள் அனைவரும், “ஐயோ, துரியோதனனின் தவறால் மன்னர்கள் அழிவடைகிறார்களே. ஓ!, பாவம் நிறைந்த ஆன்மா கொண்ட திருதராஷ்டிரன் பேராசையினால் மயங்கி, எண்ணற்ற நற்குணங்களைக் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன்களிடத்தில் ஏன் பொறாமைக்கு இடமளித்தான்?” என்று உரக்கக் கூறினர்.

பாண்டவர்களைப் புகழ்ந்தும், உமது மகன்களை நிந்தித்தும், ஒருவருக்கொருவர் பேசிக்கொண்ட இந்த வகையிலான பல்வேறு அலறல்கள் அங்கே கேட்டன. அனைவருக்கும் எதிராகக் குற்றம் புரிபவனான உமது மகன் துரியோதனன், போராளிகள் அனைவராலும் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளைக் கேட்டு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீஷ்மர், துரோணர், கிருபர் மற்றும் சல்லியனிடம், “அகந்தை கொள்ளாமல் போரிடுவீராக. ஏன் எப்போதும் தாமதிக்கிறீர்கள்?” என்று கேட்டான் {துரியோதனன்}.

பகடையாட்டத்தால் விளைந்ததும், பயங்கரப் படுகொலையால் குறிக்கப்பட்டதுமான அந்தக் கடும்போர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் மீண்டும் தொடங்கியது. ஓ! விசித்திரவீரியன் மகனே {திருதராஷ்டிரரே}, சிறப்பு வாய்ந்த மனிதர்கள் பலரால் அதற்கு {பகடைக்கு} எதிராக எச்சரிக்கப்பட்டும் {உமது நண்பர்களின் ஆலோசனைகளை} மறுத்ததன் பயங்கரக் கனியையே {பலனையே} இப்போது நீர் காண்கிறீர்.

அந்தப் போரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகன்களோ, அவர்களது துருப்புகளோ, அவர்களைப் பின்தொடர்பவர்களோ, கௌரவர்களோ தங்கள் உயிர்களைக் குறித்துக் கிஞ்சிற்றும் கருதிப் பார்க்கவில்லை. விதியாலோ, உமது தீய கொள்கையின் காரணமாகவோ, ஓ! மனிதர்களில் புலியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உறவினர்களின் இந்தப் பயங்கரமான அழிவு நடக்கிறது” {என்றான் சஞ்சயன்}. 

சாத்யகி பீஷ்மர் மோதல்! – பீஷ்ம பர்வம் பகுதி – 105-அர்ஜுனனுக்கும் திரிகர்த்த மன்னன் சுசர்மனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; தப்பி ஓடிய படைவீரர்கள்; திரிகர்த்தப்படையை முறியடித்த அர்ஜுனன்; அர்ஜுனனைத் தாக்கிய துரியோதனன்; அபிமன்யுவுக்கும் சித்திரசேனனுக்கும் இடையில் நடந்த போர்; துரோணர்-துருபதன், பீமன்-பாஹ்லீகர்; சாத்யகி-கிருதவர்மன் ஆகியோருக்கிடையில் நடந்த போர்கள்; சாத்யகிக்கும்-பீஷ்மருக்கும் நடந்த கடுமையான போர்; சாத்யகியைப் பீஷ்மரிடம் இருந்து காக்க விரைந்த பாண்டவர்கள்

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, அர்ஜுனன்,  தீட்டப்பட்ட தன் கணைகளின் மூலம் சுசர்மனைப் பின்தொடர்ந்து வந்த க்ஷத்திரியர்களை மரணமன்னனின் {யமனின்} வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான். எனினும் அந்தப் போரில், சுசர்மனும் தன் கணைகளால் பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தான். மேலும், அவன் {சுசர்மன்}, எழுபதால் {70 கணைகளால்} வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, ஒன்பது {9} கணைகளால் மீண்டும் அர்ஜுனனையும் துளைத்தான். வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த இந்திரன் மகன் {அர்ஜுனன்}, அந்தக் கணைகளைத் தன் கணை மழையால் தடுத்து, சுசர்மனின் துருப்பினரை யமலோகத்திற்கு அனுப்பினான்.

அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் {சுசர்மனின் வீரர்கள்}, யுகமுடிவிலான காலனைப் போன்ற பார்த்தனால் {அர்ஜுனனால்} அந்தப் போரில் கொல்லப்பட்டபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீதியடைந்த அவர்கள் அனைவரும் போர்க்களத்தை விட்டுத் தப்பி ஓடினார்கள். சிலர் தங்கள் குதிரைகளையும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சிலர் தங்கள் தேர்களைக் கைவிட்டும், பிறர் தங்கள் யானைகளைக் கைவிட்டும் திக்குகள் அனைத்திலும் தப்பி ஓடினார்கள். இன்னும் பிறர், தங்கள் குதிரைகள், யானைகள், தேர்கள் ஆகியவற்றுடன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} பெரும் வேகத்துடன் தப்பி ஓடினார்கள். அந்தப் பயங்கரப் போரில் தங்கள் ஆயுதங்களைப் புறந்தள்ளிய காலாட்படை வீரகள், ஒருவரையொருவர் கருதிப் பாராமல் அங்கேயும் இங்கேயும் தப்பி ஓடினர். திரிகர்த்தர்களின் ஆட்சியாளனான சுசர்மனாலும், மன்னர்களில் முதன்மையானோரான இன்னும் பிறராலும் தடுக்கப்பட்டாலும் அவர்கள் போரில் நிலைபெறவில்லை.

அந்தப் படை முறியடிக்கப்பட்டதைக் கண்ட உமது மகன் துரியோதனன், படைகள் அனைத்திற்கும் முன்னின்று, திரிகர்த்தர்கள் ஆட்சியாளனின் உயிருக்காக ({சுசர்மனைக்} காப்பதற்காகத்) தன் வீரியம் முழுமையும் பயன்படுத்திப் பீஷ்மரின் தலைமையில் அந்தப் போரில் தனஞ்சயனை {அர்ஜுனனைத்} தாக்கினான். தன் தம்பிகள் அனைவரின் துணையோடு பல்வேறு விதமான கணைகளை இறைத்துக் கொண்டு போரில் அவன் {துரியோதனன்} நின்றான். மீதி மனிதர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்.

அதேபோலப் பாண்டவர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கவசம்பூண்டு கொண்டு, பல்குனனின் {அர்ஜுனனின்} நிமித்தமாகத் தங்கள் வீரியம் முழுமையையும் பயன்படுத்தி, பீஷ்மர் இருந்த இடத்திற்குச் சென்றனர். அவர்கள் {பாண்டவப் படையினர்}, போரில் அந்தக் காண்டீவந்தாங்கியின் {அர்ஜுனனின்} பயங்கர ஆற்றலை அறிந்திருந்தாலும், உரத்த கூக்குரல்களுடனும் பெரும் துணிச்சலுடனும் பீஷ்மர் இருந்த இடத்திற்குச் சென்று அனைத்துப் புறங்களிலும் அவரை {பீஷ்மரைச்} சூழ்ந்து கொண்டனர். பிறகு அந்தப் பனைமரக்கொடி வீரர் {பீஷ்மர்}, அந்தப் போரில் தன் நேரான கணைகளால் பாண்டவப் படையை மறைத்தார்.

சூரியன் நடுக்கோட்டை {உச்சி வானை} அடைந்ததும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கௌரவர்கள் {கௌரவப் படையினர்} குழம்பிய திரளாக இருந்த பாண்டவர்களுடன் {பாண்டவப் படையினருடன்} போரிட்டனர். வீர சாத்யகி, ஐந்து {5} கணைகளால் கிருதவர்மனைத் துளைத்ததும், ஆயிரக்கணக்கான தன் கணைகளை இறைத்தபடி போரில் நிலைத்தான். மன்னன் துருபதனும், தீட்டப்பட்ட கணைகள் பலவற்றால் துரோணரைத் துளைத்து, மீண்டும் எழுபது {70} கணைகளால் அவரையும் {துரோணரையும்}, ஒன்பதால் {9 கணைகளால்} அவரது தேரோட்டியையும் துளைத்தான். பீமசேனனும், தன் பெரும்பாட்டனான பாஹ்லீகரைத் துளைத்து, காட்டுப் புலியைப் போல உரக்க முழங்கினான்.

அர்ஜுனன் மகன் (அபிமன்யு), கணைகள் பலவற்றால் சித்திரசேனனால் [1] துளைக்கப்பட்டு, மூன்று கணைகளால் சித்திரசேனனின் மார்பில் ஆழமாகத் துளைத்தான். ஒருவரோடொருவர் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்த மனிதர்களில் முதன்மையானோர் இருவரும் {அபிமன்யுவும், சித்திரசேனனும்}, ஆகாயத்தில் உள்ள வெள்ளி மற்றும் சனி கோள்களைப் போலக் களத்தில் பிரகாசமாகத் தெரிந்தனர். பிறகு எதிரிகளைக் கொல்பவனான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, ஒன்பது கணைகளால் தன் எதிராளியின் குதிரைகளையும், தேரோட்டியையும் கொன்று உரத்த முழக்கமிட்டான். அதன் பேரில், அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் (அதாவது சித்திரசேனன்), ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குதிரைகள் கொல்லப்பட்ட அந்தத் தேரில் இருந்து கீழே வேகமாகக் குதித்து, தாமதம் செய்யாமல் துர்முகனின் [2] தேரில் ஏறிக் கொண்டான்.வீரத் துரோணர், பின்னவனின் {துருபதனின்} தேரோட்டியையும் துளைத்தார். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் துருப்புகளின் முகப்பில் இருந்த துருபதன் இப்படிப் பீடிக்கப்பட்டு, பழங்காலத்தில் இருந்து (தனக்கும் துரோணருக்கும் இடையில்) நீடிக்கும் பகையை நினைவுகூர்ந்து, வேகமான தன் குதிரைகளின் உதவியால் பின்வாங்கினான். பீமசேனன், மன்னன் பாஹ்லீகரை, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஒரு கணத்திற்குள் தனது குதிரைகள், தேர் மற்றும் தேரோட்டி ஆகியவற்றை இழக்கச் செய்தான். மனிதர்களில் சிறந்த அந்தப் பாஹ்லீகர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் ஆபத்தான சூழ்நிலையில் விழுந்து, தன் இதயத்தில் அச்சத்துடன் அந்த வாகனத்தில் இருந்து கீழே குதித்து, அந்தப் போரில் லக்ஷ்மணனின் [3] தேரில் விரைவாக ஏறினார்.

சாத்யகி, அந்தப் பயங்கரப் போரில் கிருதவர்மனைத் தடுத்து, பாட்டன் {பீஷ்மர்} மீது பாய்ந்து, பல்வேறு வகையான கணைகளை அவர் மீது பொழிந்தான். அவன் {சாத்யகி}, தன் பெரிய வில்லை அசைத்தபடி, இறகுகளால் சிறகமைந்த அறுபது தீட்டப்பட்ட கணைகளால் பாட்டனை {பீஷ்மரை} துளைத்து, தன் தேரில் நடனமாடுபவனைப் போலக் காணப்பட்டான். பிறகு பாட்டன் {பீஷ்மர்}, பாம்புகளின் மகளைப் போல அழகானதும், பெரும் வேகம் கொண்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், இரும்பினால் செய்யப்பட்டதுமான வலிமைமிக்க ஓர் ஈட்டியை அவன் {சாத்யகியின்} மீது ஏவினார். விருஷ்ணி குலத்தின் அந்த ஒப்பற்ற வீரன் {சாத்யகி}, காலனுக்கு ஒப்பான தடுக்க முடியாத அந்த ஈட்டியைக் கண்டு, தன் அசைவுகளின் நளினத்தால் {லாகவத்தால்} அதைக் கலங்கடித்தான்.

அதன் பேரில், அந்த விருஷ்ணி குலத்தோனை {சாத்யகியை} அடைய முடியாத அந்தக் கடும் ஈட்டி, சுடர் மிகுந்து பிரகாசிக்கும் ஒரு பெரிய எரி கோளைப் போலக் கீழே பூமியில் விழுந்தது. பிறகு, அந்த விருஷ்ணி குலத்தோன் {சாத்யகி}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கத்தைப் போல ஒளிரும் தன் ஈட்டியைத் தன் உறுதியான கைகளில் ஏந்தி பாட்டனின் {பீஷ்மரின்} தேரின் மேல் வீசினான். அந்தப் பயங்கரப் போரில் சாத்யகியின் பலமான கரங்களால் வீசப்பட்ட அந்த ஈட்டி (விதி முடிந்த) மனிதனை நோக்கி வேகமாக விரையும் மரண இரவைப் போல மூர்க்கமாகச் சென்றது. எனினும் பீஷ்மர், அது தன்னை நோக்கி பெரும் சக்தியுடன் வந்த போதே, கூர் முனை கொண்ட க்ஷுரப்ரங்கள் {குதிரை லாடம் போன்ற தலை கொண்ட கணைகள்} இரண்டால் அதை இரண்டாகத் துண்டித்தார்; அதன்பேரில் அது கீழே பூமியில் விழுந்தது. எதிரிகளைக் கலங்கடிப்பவரான அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, அந்த ஈட்டியைத் துண்டித்து, கோபத்தால் தூண்டப்பட்டு, சிரித்துக் கொண்டே ஒன்பது கணைகளால் சாத்யகியின் மார்பைத் தாக்கினார்.

பிறகு அந்தப் பாண்ட வீரர்கள், ஓ! பாண்டுவின் தமையரே {திருதராஷ்டிரரே}, அந்த மதுகுலத்தோனை {சாத்யகியை} மீட்கும் பொருட்டு, தங்கள் தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றோடு, அந்தப் போரில் பீஷ்மரைச் சூழ்ந்து கொண்டனர். பிறகு, வெற்றியை விரும்பியவர்களான பாண்டவர்கள் மற்றும் குருக்கள் ஆகிய இருவருக்கும் இடையில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்த கூடிய வகையில் கடும் போரொன்று மீண்டும் தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}. 

யுதிஷ்டிரனிடம் விரைந்த பீமன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 106-பீஷ்மரைப் பாதுகாக்கத் துச்சாசனனை ஏவிய துரியோதனன்; நகுலன், சகாதேவன், யுதிஷ்டிரன் ஆகியோரைச் சூழ்ந்து கொண்ட சகுனி; துரியோதனன் அனுப்பிய குதிரைகள்; குதிரைப்படையை முறியடித்த பாண்டவர்கள்; யுதிஷ்டிரனுக்கு எதிராகச் சல்லியனை ஏவிய துரியோதனன்; யுதிஷ்டிரன், நகுலன், சகாதேவன் ஆகியோருக்கும், சல்லியனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; யுதிஷ்டிரனைக் காக்க விரைந்து வந்த பீமன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோடை காலத்தின் முடிவில் ஆகாயத்தில் மேகங்களால் சூழப்பட்ட சூரியனைப் போல, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போரில் பாண்டவர்களால் அனைத்துப் புறங்களிலும் சூழப்பட்ட பீஷ்மர், கோபத்தால் தூண்டப்பட்டிருப்பதைக் கண்ட துரியோதனன் துச்சாசனனிடம், “பெரும் வில்லாளியும், எதிரிகளைக் கொல்பவருமான இந்த வீரப் பீஷ்மர், ஓ! பாரதக் குலத்தின் காளையே {துச்சாசனா}, துணிச்சல்மிக்கப் பாண்டவர்களால் அனைத்துப் புறங்களிலும் சூழப்பட்டிருக்கிறார். ஓ! வீரா {துச்சாசனா}, அந்த ஒப்பற்றவரைப் பாதுகாப்பதே உன் கடமை. நமது பாட்டனான பீஷ்மர், போரில் நம்மால் பாதுகாக்கப்பட்டால் பாண்டவர்களுடன் சேர்த்துப் பாஞ்சாலர்கள் அனைவரையும் கொல்வார். எனவே, பீஷ்மரைப் பாதுகாப்பதே நமது உயர்ந்த கடமை என நான் நினைக்கிறேன். ஏனெனில், நோன்புகளுடன் கூடியவரும், பெரும் வில்லாளியுமான இந்தப் பீஷ்மர் பதிலுக்கு நம்மையும் பாதுகாப்பார். எனவே, போரில் மிகக்கடினமான சாதனைகளை எப்போதும் அடையும் பாட்டனை {பீஷ்மரை} நம் துருப்புகள் அனைத்தாலும் சூழ்ந்து கொண்டு அவரைப் பாதுகாப்பாயாக” என்றான் {துரியோதனன்}.

இப்படித் துரியோதனனால் சொல்லப்பட்ட துச்சாசனன், ஒரு பெரும்படையால் அனைத்துப் புறங்களிலும் பீஷ்மரைச் சூழ்ந்து கொண்டு {போரில்} தன் நிலையை எடுத்துக் கொண்டான். கையில் பளபளக்கும் ஈட்டிகள், வாள்கள் மற்றும் வேல்களைக் கொண்டிருந்தவர்களும், செருக்குடையவர்களும், நன்கு உடுத்தியிருந்தவர்களும், கொடிகளைத் தாங்கும் பலமான உடல் கொண்டவர்களும், நன்கு பயிற்சிபெற்ற, போரில் திறம்பெற்ற சிறந்த காலாட்படை வீரர்களுடன் கலந்து நின்றவர்களுமான நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான குதிரைவீரர்களுடன் கூடிய சுபலனின் மகன் சகுனி, மனிதர்களில் சிறந்தோரான நகுலன், சகாதேவன், பாண்டுவின் மகன் யுதிஷ்டிரன் ஆகியோரை அனைத்துப் புறங்களிலும் சூழ்ந்து கொண்டு, அவர்களைத் தடுக்கத் தொடங்கினான்.

பிறகு மன்னன் துரியோதனன், பாண்டவர்களைத் தடுப்பதற்காகத் துணிச்சல்மிக்க (வேறு) குதிரைவீரர்கள் பத்தாயிரம் {10000} பேரை அனுப்பினான். பெரும் மூர்க்கத்துடன் எதிரியை நோக்கிப் பல கருடர்களைப் போல இவை {துரியோதனன் அனுப்பிய குதிரைகள்} விரைந்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குதிரைக்குளம்புகளால் தாக்கப்பட்ட பூமி நடுங்கி பேரொலியை எழுப்பியது. தீப்பிடித்த மலையில் உள்ள ஒரு பெரும் மூங்கில்காட்டின் ஒலியை ஒத்ததாக அவற்றின் குளம்புகளின் உரத்த சடசடப்பொலிகள் கேட்கப்பட்டன. களத்தில் இவை மோதிய போது, மேகம் போல அங்கே எழுந்த புழுதி, ஆகாயத்தை அடைந்து அந்தச் சூரியனையே மறைத்தது. ஒரு பெரிய தடாகத்தின் மார்பில் {பரப்பில்} அன்னப்பறவை கூட்டங்கள் திடீரென வேகமாக இறங்கி, அது கலக்கப்படுவது போல, மூர்க்கமான அந்தக் குதிரைகளின் விளைவால் அந்தப் பாண்டவப் படை கலக்கப்பட்டது. அவற்றின் கனைப்பொலிகளின் விளைவாக அங்கே வேறு எதையும் கேட்க முடியவில்லை.

பிறகு மன்னன் யுதிஷ்டிரனும், மாத்ரியின் மூலமான பாண்டுவின் மகன்கள் இருவரும் {நகுலனும், சகாதேவனும்}, மழைக்காலத்தில் நீர் பெருகி, அலை நிரம்பியபடி ஆர்ப்பரிக்கும் கடலின் சக்தியைத் தாங்கிக் கொள்ளும் நிலத்தை {கரையைப்} போலப் போரில் அந்தக் குதிரைவீரர்களின் தாக்குதலை விரைவாகத் தடுத்தனர். பிறகு அந்த (மூன்று) தேர்வீரர்களும், ஓ! ஏகாதிபதி, தங்கள் நேரான கணைகளால் அந்தக் குதிரைவீரர்களின் தலைகளைத் துண்டித்தனர். உறுதிமிக்க அந்த வில்லாளிகளால் கொல்லப்பட்ட அவர்கள் {குதிரைவீரர்கள்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் யானைகளால் கொல்லப்படும் வலிமைமிக்க யானைகள் மலைக்குகைகளில் விழுவதைப் போலக் கீழே விழுந்தனர்.

உண்மையில், (பாண்டவப் படையின்) அந்த வீரர்கள் களம் முழுவதும் உலாவி கூர்மையான பராசங்கள் {முள்பதித்த கணைகள்} மற்றும் நேரான கணைகள் ஆகியவற்றால் அந்தக் குதிரைப்படை வீரர்களின் தலையை அறுத்தார்கள். வாள்களால் தாக்கப்பட்ட அந்தக் குதிரைவீரர்கள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நெடும் மரங்கள் தங்கள் கனிகளை உதிர்ப்பதைப் போலத் தங்கள் தலைகளை உதிர்த்து துன்புற்றனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஓட்டுநர்களோடு கூடிய குதிரைகள் களமங்கும் உயிரற்று விழுந்ததோ, விழுவதோ காணப்பட்டது. (இப்படிக்) கொல்லப்பட்ட போது, பீதியால் பீடிக்கப்பட்ட குதிரைகள், சிங்கத்தைக் கண்டு தங்கள் உயிரைக் காக்க விரும்பும் சிறு விலங்குகளைப் போலத் தப்பி ஓடின. அந்தப் போரில் தங்கள் எதிரிகளை வீழ்த்திய பாண்டவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் சங்குகளை ஊதி, தங்கள் பேரிகைகளையும் முழக்கினர்.

பிறகு, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, துரியோதனன், தன் துருப்புகள் வீழ்த்தப்பட்டதைக் கண்டு துயரில் நிறைந்து, மத்ரர்களின் ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்}, “ஓ! தலைவா {சல்லியரே}, அங்கே பாண்டுவின் மூத்த மகன் {யுதிஷ்டிரன்}, இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவனின்} துணையுடன், ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே {சல்லியரே}, உமது பார்வைக்கு முன்பாகவே போரில் நமது துருப்புகளை முறியடிக்கிறான். ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே {சல்லியரே}, கடலைத் தடுக்கும் நிலத்தை {கரையைப்} போல அவனை {யுதிஷ்டிரனைத்} தடுப்பீராக. வல்லமை உள்ளவர் என்றும், உமது ஆற்றல் தடுக்கப்பட முடியாதது என்றும் பெரிய அளவில் நீர் நன்கு அறியப்பட்டிருக்கிறீர்” என்றான் {துரியோதனன்}.

உமது மகனின் {துரியோதனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த வீரச் சல்லியன், யுதிஷ்டிரன் இருந்த இடத்திற்குத் தன் பெரும் தேர்ப்படையுடன் சென்றான். அதன்பேரில், அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, வலிமைமிக்க அலையைப் போன்ற சக்தியுடன் தன்னை நோக்கி மூர்க்கமாக விரையும் சல்லியனின் அந்தப் பெரும்படையைப் போரில் தடுக்க ஆரம்பித்தான். வலிமைமிக்கத் தேர்வீரனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், அந்தப் போரில் பத்து {10} கணைகளால் மத்ர ஆட்சியாளனை {சல்லியனை} விரைவாகத் துளைத்தான். நகுலனும், சகாதேவனும் அவனை நேரான ஏழு {7} கணைகளால் தாக்கினர்.

பிறகு, அந்த மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, அவர்கள் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் தாக்கினான். மீண்டும் அவன் {சல்லியன்}, கூர்முனை கொண்ட அறுபது {60} கணைகளால் யுதிஷ்டிரனைத் துளைத்தான். கோபத்தால் தூண்டப்பட்ட அவன் {சல்லியன்}, மாத்ரியின் மகன்கள் ஒவ்வொருவரையும் இரு {2} கணைகளால் தாக்கினான். அப்போது, எதிரிகளை வீழ்த்துபவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமன், மன்னன் {யுதிஷ்டிரன்} அந்தப் போரில், காலனின் கோரப்பற்களுக்கு இடையில் இருப்பதைப் போல, சல்லியனின் தேர் அடையத்தக்க தூரத்தில் {அருகிலேயே} இருப்பதைக் கண்டு, யுதிஷ்டிரனின் பக்கம் விரைவாகச் சென்றான் [1].பிறகு, சூரியன் உச்சிவானைக் கடந்து மூழ்கிக் கொண்டிருந்த போது, கடுமையானதும், பயங்கரமானதுமான ஒரு போர் அங்கே (களத்தின் அந்தப் பகுதியில்) தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}. 

பீஷ்மரைக் கொல்ல விரைந்த கிருஷ்ணன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 107-பீஷ்மருக்கும் பாண்டவர்களுக்கு இடையில் ஏற்பட்ட போர்; பீஷ்மருடன் சேர்ந்து கொண்ட துரோணர்; பாண்டவப் படைக்குப் பீஷ்மர் ஏற்படுத்திய அழிவு; சிதறி ஓடிய பாண்டவப் படை; அர்ஜுனனைத் தூண்டிய கிருஷ்ணன்; பீஷ்மர் இருந்த இடத்திற்கு விரைந்த அர்ஜுனன்; அர்ஜுனனின் மென்மையைக் கண்டு கோபமுற்ற கிருஷ்ணன், பீஷ்மரைக் கொல்ல இரண்டாவது முறையாகத் தேரைவிட்டு இறங்கி அவரை நோக்கி மூர்க்கமாகச் சென்றது; பீஷ்மர் கிருஷ்ணனை வணங்கியது; அர்ஜுனன் கெஞ்சியது; மீண்டும் தன் தேரில் ஏறிய கிருஷ்ணன்; பீஷ்மர் பாண்டவப் படையை முறியடித்தது; ஒன்பதாம் நாள் போர் முடிவை எட்டியது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு உமது தந்தை {பீஷ்மர்}, கோபத்தால் தூண்டப்பட்டு, பெரும் கூர்மை கொண்ட சிறப்பான கணைகளால் பார்த்தர்களையும் {பாண்டவர்களையும்}, அவர்களது துருப்புகளையும் சுற்றிலும் தாக்கத் தொடங்கினார்.

அவர் {பீஷ்மர்}, பனிரெண்டு {12} கணைகளால் பீமனையும், ஒன்பதால் {9 கணைகளால்} சாத்யகியையும் துளைத்தார். மூன்று {3} கணைகளால் நகுலனைத் துளைத்த அவர், ஏழால் {7 கணைகளால்} சகாதேவனைத் துளைத்தார். அவர் {பீஷ்மர்}, பனிரெண்டு {12} கணைகளால் யுதிஷ்டிரனைக் கரங்களிலும், மார்பிலும் துளைத்தார். மேலும், அந்த வலிமைமிக்க வீரர் {பீஷ்மர்}, திருஷ்டத்யும்னனையும் துளைத்து உரக்க முழக்கமிட்டார்.

பனிரெண்டு கணைகளால் நகுலனும், மூன்றால் {மூன்று கணைகளால்} சாத்யகியும் அவரைப் {பீஷ்மரைப்} (பதிலுக்குத்) துளைத்தனர். எழுபது கணைகளால் திருஷ்டத்யும்னனும், ஏழால் {ஏழு கணைகளால்} பீமசேனனும் அவரைத் துளைத்தனர். யுதிஷ்டிரனும் பதிலுக்குப் பனிரெண்டு கணைகளால் பாட்டனை {பீஷ்மரைத்} துளைத்தான்.

(மறுபுறம்) துரோணர், சாத்யகியைத் துளைத்து, அடுத்ததாகப் பீமசேனனைத் துளைத்தார். அவர் {துரோணர்} அவர்கள் ஒவ்வொருவரையும் யம தண்டத்திற்கு ஒப்பான ஐந்து கூரிய கணைகளால் துளைத்தார். எனினும் அவர்கள் இருவரில் ஒவ்வொருவரும் {சாத்யகியும், பீமனும்}, பதிலுக்கு மூன்று நேரான கணைகளால், அந்தணர்களில் காளையான துரோணரைத் துளைத்தனர் [1].

சௌவீரர்கள், கிதவர்கள், கிழக்கத்தியர்கள் {கீழ்நாட்டு வீரர்கள்}, மேற்கத்தியர்கள் {மேனாட்டு வீரர்கள்}, வடக்கத்தியர்கள் {வடநாட்டு வீரர்கள்}, மாளவர்கள், அபீஷாஹர்கள், சூரசேனர்கள், சிபிக்கள், வசாதிகள் ஆகியோர் கூர்மையான கணைகளைக் கொண்டு பீஷ்மரால் இடையறாமல் கொல்லப்பட்டாலும், போரில் அவரை {பீஷ்மரைத்} தவிர்க்கவில்லை {விட்டு விலகவில்லை}. அதே போல, பல்வேறு ஆயுதங்களைத் தரித்துப் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த மன்னர்கள் பாண்டவர்களை (போரில் அவர்களைத் தவிர்க்க முயலாமல்) அணுகினார்கள்.

மேலும் பாண்டவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்துப் புறங்களிலும் பாட்டனைச் {பீஷ்மரைச்} சூழ்ந்து கொண்டனர். அந்தத் தேர்களின் பெரும் கூட்டத்தால் வெல்லப்படாத பீஷ்மர், அனைத்துப் புறங்களிலும் சூழப்பட்டிருந்தாலும், காட்டின் மத்தியில் பிடித்த நெருப்பைப் போலச் சுடர்விட்டபடி தன் எதிரிகளை எரித்தார்.

பீஷ்மரின் தேரே அவரது நெருப்புக் கூடமாகவும்; அவரது வில் (அந்த நெருப்பின்) தழல்களாகவும்; வாள்கள், ஈட்டிகள், கதாயுதங்கள் {அந்நெருப்பின்} எரிபொருளாகவும் {விறகாகவும்}; அவரது கணைகள் (அந்நெருப்பின்) பொறிகளாகவும்; அவரே {பீஷ்மரே} க்ஷத்திரியர்களில் முதன்மையானோரை எரிக்கும் அந்த நெருப்பாகவும் இருந்தார். உண்மையில் அவர் {பீஷ்மர்}, பெரும் சக்தியும், கழுகின் இறகுகளையும், தங்கச் சிறகுகளையும் கொண்ட கணைகளாலும், கர்ணிகளாலும் {முள் பதித்த கணைகளாலும் barbed arrows}, நாளீகங்களாலும், நாராசங்களாலும் {நீண்ட கணைகளாலும்} பகைக்கூட்டத்தை மறைத்தார். அவர் {பீஷ்மர்}, தன் கூரிய கணைகளால் யானைகளையும், தேர்வீரர்களையும் வீழ்த்தினார். மேலும் அவர் {பீஷ்மர்} அந்தப் பெரிய தேர்ப்படையை, இலைகளாலான தலைகள் மழிக்கப்பட்ட பனங்காடு ஒன்றை {மொட்டைப்பனை மரங்கள் நிறைந்த காட்டை} ஒத்திருக்கச் செய்தார்.

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவருமான அவர் {பீஷ்மர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்கள், யானைகள் மற்றும் குதிரைகள் ஆகியவை தங்கள் ஓட்டுனர்களை இழக்கும்படி செய்தார். இடி முழக்கம் போன்ற பேரொலியுடன் இருந்த அவரது வில்லின் நாணொலியையும், அவரது உள்ளங்கை {தட்டல்} ஒலிகளையும் கேட்டு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துருப்புகள் அனைத்தும் நடுங்கின.

உமது தந்தையின் {பீஷ்மரின்} கணைகளே, ஓ! பாரதக் குலத்தின் காளையே, எதிரியிடம் பேசின. உண்மையில், பீஷ்மரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகள் கவசங்களை மட்டும் தாக்கவில்லை (ஆனால் அவற்றைத் துளைத்துச் சென்றன) [2]. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துணிச்சல் மிக்கத் தங்கள் ஓட்டுனர்களை இழந்த பல தேர்கள் அவற்றில் பூட்டப்பட்ட வேகமான குதிரைகளால் களமெங்கும் இழுத்துச்செல்லப்படுவதை நாங்கள் கண்டோம்.

சேதிகள் {சைத்யர்கள்}, காசிகள், கரூசர்கள் ஆகியோரைச் சேர்ந்தவர்களும், பெரும் புகழையும், உன்னதப் பிறப்பையும் கொண்டவர்களும், போரில் தங்கள் உயிரை இழக்கத் துணிந்தவர்களும், களத்தில் இருந்து பின்வாங்காதவர்களும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட சிறந்த கொடிமரங்களை உடையவர்களுமான பதினாலாயிரம் {14000} தேர்வீரர்கள், வாயை அகல விரித்திருக்கும் அந்தகனை ஒத்த பீஷ்மரைப் போரில் சந்தித்து, அவர்கள் அனைவரும் தங்கள் தேர்களோடும், குதிரைகளோடும், யானைகளோடும் அடுத்த உலகத்திற்குச் சென்றனர். மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அச்சுகள் மற்றும் அடிமரங்கள் நொறுங்கிய சிலவும், சக்கரங்கள் நொறுங்கிய சிலவும் என நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் தேர்களை நாங்கள் கண்டோம்.

வரூதங்களோடு {மரக்கூடுகளோடு} [3] உடைத்துத் தள்ளப்பட்ட தேர்கள், கீழே வீழ்த்தப்பட்டு நெடுஞ்சாண் கிடையாகக் கிடக்கும் தேர்வீரர்கள், கணைகள், உடைக்கப்பட்ட அழகிய கவசங்கள், கோடரிகள் {பட்டசங்கள்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கதாயுதங்கள், பிண்டிபாலங்கள் {குறுங்கணைகள்}, கூர்மையுள்ள கணைகள், தேர்களின் அடிமரங்கள், அம்பறாத்தூணிகள், உடைக்கப்பட்ட சக்கரங்கள், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, எண்ணிலடங்கா விற்கள், வாள்கள், காது குண்டலங்கள் அணிந்த தலைகள், தோலாலான கையுறைகள், விரலுறைகள், கீழே வீழ்த்தப்பட்ட கொடிமரங்கள், பலவாறாக அறுக்கப்பட்ட விற்கள் ஆகியவற்றால் பூமி விரவி கிடந்தது.

பாகன்களை இழந்த யானைகளும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கொல்லப்பட்ட (பாண்டவப் படையின்) குதிரைவீரர்களும் கீழே இறந்து கிடந்தனர். அந்த வீரப் பாண்டவர்கள் {பாண்டவ வீரர்கள்} முயற்சித்தாலும், பீஷ்மரின் கணைகளால் பீடிக்கப்பட்டு, போர்க்களத்தைவிட்டு ஓடும் தேர்வீரர்களைத் தடுக்க அவர்கள் சக்தியற்றவர்களாக இருந்தனர். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்திரனுக்கு இணையான சக்தியைக் கொண்ட பீஷ்மரால் அந்த வலிமைமிக்கப் படை கொல்லப்பட்ட போது, இருவராக எவரும் ஓடாதவாறு முற்றாகச் சிதறி ஓடியது.

வீழ்த்தப்பட்ட தேர்கள், யானைகள், குதிரைகள், அதிகமாகக் கீழே கிடந்த கொடிமரங்கள் ஆகியவற்றைக் கொண்ட பாண்டு மகன்களின் அந்தப் படை, உணர்வுகளை இழந்து துன்பப் பேரொலிகளை எழுப்பின. அந்நேரத்தில் விதியால் உந்தப்பட்டுத் தந்தை மகனைக் கொன்றான், மகனும் தந்தையைக் கொன்றான், நண்பன் தன் அன்புக்குரிய நண்பனை அடித்தான். பாண்டவப் படையின் போராளிகள் பலர், தங்கள் கவசங்களை எறிந்துவிட்டு, கலைந்த கேசங்களுடன் திக்குகள் அனைத்திலும் தப்பி ஓடுவது காணப்பட்டது. உண்மையில், அந்தப் பாண்டவத் துருப்புகள், ஏர்க்கால்களின் கட்டுப்பாட்டில் நீடிக்காமல் அச்சத்தால் காட்டுத்தனமாக {கட்டுப்பாடு இல்லாமல்} ஓடும் காளைகளைப் போலத் தெரிந்தன. உண்மையில் நாங்கள் கேட்ட துன்பக் குரல் பேரொலியாக இருந்தது.

பிறகு, அந்த யாதவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பவன் {கிருஷ்ணன்}, பாண்டவப்படை சிதறி ஓடுவதைக் கண்டு, (தான் வழிநடத்திய) சிறந்த தேரின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு, பிருதையின் மகனான பீபத்சுவிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நீ எதிர்பார்த்த நேரம் இதோ வந்து விட்டது. இப்போதே தாக்குவாயாக, ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, அல்லது நீ உனது உணர்வுகளை இழந்துவிடுவாய். முன்னர், ஓ! வீரா {அர்ஜுனா}, விராடரின் நகரத்தில் நடந்த மன்னர்களின் கூட்டத்தில், ஓ! பார்த்தா {அர்ஜுனா}, சஞ்சயனின் முன்னிலையில் இவ்வார்த்தைகளை நீ சொன்னாய்: “யுத்தத்தில் என்னோடு போரிடப் போகும் பீஷ்மர், துரோணர் ஆகியோரையும், திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} வீர்கள் அனைவரையும், அவர்களைப் பின்தொடர்பவர்கள் அனைவரையும் சேர்த்து நான் கொல்வேன்” {என்று சொன்னாய்}. ஓ! குந்தியின் மகனே, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {அர்ஜுனா}, அந்த உனது வார்த்தைகளை உண்மையாக்குவாயாக. க்ஷத்திரியன் ஒருவனின் கடமையை நினைவு கூர்ந்து எந்தக் கவலையும் இல்லாமல் போரிடுவாயாக” என்றான் {கிருஷ்ணன்}.

வாசுதேவனால் {கிருஷ்ணனால்} இப்படிச் சொல்லப்பட்ட அர்ஜுனன் தன் தலையைக் கீழே தொங்கப் போட்டு, அவனைச் சாய்வாகப் பார்த்தான். பிறகு, விருப்பமில்லாமல் பதிலுரைத்த அந்தப் பீபத்சு {அர்ஜுனன்}, “கொல்லத்தகாதவர்களைக் கொன்று நரகத்தையே இறுதியாகக் கொண்ட அரசாட்சியை அடைவது, அல்லது நாடுகடத்தப்பட்டவன் காட்டில் படும் துன்பங்களை அடைவது (இவை மட்டுமே மாற்று {இவை இரண்டில் ஒன்றையே தேர்ந்தெடுக்க முடியும்}). இவற்றில் நான் எதை அடைய வேண்டும்? குதிரைகளைத் தூண்டுவாயாக, ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, உன் கட்டளையை நான் செய்வேன் {நிறைவேற்றுவேன்}. வெல்லப்பட முடியாத வீரரான குரு பாட்டன் பீஷ்மரை நான் வீழ்த்துவேன்” என்றான் {அர்ஜுனன்}.

இப்படிக் கேட்டுக்கொள்ளப்பட்ட மாதவன் {கிருஷ்ணன்}, சூரியன் போலப் பார்க்கப்பட முடியாதவராகப் பிரகாசித்துக் கொண்டிருந்த பீஷ்மர் இருந்த இடத்திற்கு அந்த வெள்ளிநிறக் குதிரைகளைத் தூண்டினான். பிறகு, பின்வாங்கிச் சென்ற யுதிஷ்டிரனின் அந்தப் பெரும்படை, பீஷ்மருடன் மோதச் செல்லும் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பார்த்தனை {அர்ஜுனனைக்} கண்டு, மீண்டும் போரிட வந்தது. அப்போது, குருக்களில் முதன்மையான பீஷ்மர் ஒரு சிங்கத்தைப் போல மீண்டும் மீண்டும் முழங்கினார். பிறகு அவர் {பீஷ்மர்},  கணைமாரியால் தனஞ்சயனின் தேரை விரைவாக மறைத்தார். ஒரு கணத்திற்குள் அவனுடைய {அர்ஜுனனுடைய} தேர், குதிரைகள், தேரோட்டி {கிருஷ்ணன்} ஆகியோர் அந்தக் கணை மாரியின் விளைவால் முழுமையாகப் பார்க்கப்பட முடியாதனவாக ஆகினர் {மறைக்கப்பட்டனர்}.

எனினும் அச்சமற்ற வாசுதேவன் {கிருஷ்ணன்}, பொறுமையைத் திரட்டிக் கொண்டு பீஷ்மரின் கணைகளால் சிதைக்கப்பட்ட குதிரைகளைப் பெரும் சுறுசுறுப்புடன் தூண்டினான். அப்போது பார்த்தன் {அர்ஜுனன்}, மேகங்களின் முழக்கத்தைப் போன்ற நாணொலி கொண்ட தன் தெய்வீக வில்லை {காண்டீவத்தை} எடுத்து, தன் கணைகளால் பீஷ்மரின் வில்லை (துண்டுகளாக) வெட்டி, அவரது கைகளில் இருந்து அதை {வில்லை} விழச் செய்தான்.

பிறகு, இப்படி வில் வெட்டப்பட்ட உமது தந்தையான அந்தக் குரு வீரர் {பீஷ்மர்}, கண் இமைப்பதற்குள் மற்றொரு பெரிய வில்லில் நாணேற்றினார். எனினும், கோபத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனன், அவரது {பீஷ்மரின்} அந்த வில்லையும் துண்டித்தான்.

சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, அர்ஜுனன் வெளிப்படுத்திய கரநளினத்தை {கர லாகவத்தை} மெச்சி, “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, நன்று செய்தாய், நன்று, ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, நன்று” என்றார். இப்படி அவனிடம் சொன்ன பீஷ்மர், அந்தப் போரில் மற்றொரு அழகிய வில்லை எடுத்து, பார்த்தனின் {அர்ஜுனனின்} தேரின் மேல் பல கணைகளை ஏவினார். வாசுதேவன் {கிருஷ்ணன்}, (பீஷ்மரின்) அந்தக் கணைகள் அனைத்தையும் கலங்கடிக்கும் வகையில் சுழன்று நகர்ந்து, குதிரைகளைக் கையாள்வதில் {தன்} பெரும் திறமையை வெளிப்படுத்தினான். பீஷ்மரின் கணைகளால் சிதைக்கப்பட்ட அந்த மனிதர்களில் புலிகளான இருவரும், கொம்புகளில் சிராய்ப்புகளைக் கொண்ட கோபக்காரக் காளைகள் இரண்டைப் போல அழகாகத் தெரிந்தனர்.

பகைவீரர்களைக் கொல்பவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான அந்த மதுகுலத்து வாசுதேவன் {கிருஷ்ணன்}, மென்மையாகப் போரிடும் பார்த்தனையும் {அர்ஜுனனையும்}, போரில் இடையறாமல் தன் கணைமாரியைப் பொழியும் பீஷ்மரையும், இரண்டு படைகளுக்கும் நடுவில் இருந்து கொண்டு, சூரியனைப் போல அனைத்தையும் பின்னவர் {பீஷ்மர்} எரிப்பதையும், யுதிஷ்டிரனின் போராளிகளுள் முதன்மையானவர்களை அடித்து வீழ்த்துவதையும், உண்மையில், யுக முடிவில் என்ன நடக்குமோ, அதை யுதிஷ்டிரனின் படையில் {பீஷ்மர்} சாதிப்பதையும் கண்டு, அதை {கிருஷ்ணனால்} மேலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

அப்போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்த யோக சக்திகளின் பெருந்தலைவன் {கிருஷ்ணன்}, வெள்ளியைப் போலத் தெரிந்த பார்த்தனின் {அர்ஜுனனின்} குதிரைகளை விட்டுவிட்டு, கோபத்தால் நிறைந்து, அந்தப் பெரும் தேரில் இருந்து கீழே குதித்தான். அடிக்கடி சிங்கம் போல முழங்குபவனும், அளவிலா காந்தி கொண்டவனும், அண்டத்தின் தலைவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்த வலிமைமிக்கக் கிருஷ்ணன், சினத்தால் தாமிரம் போலச் சிவந்த கண்களுடன், தன் வெறுங்கைகளையே தன் ஆயுதமாகக் கொண்டு, தன் நடையால் அண்டத்தையே பிளந்துவிடுபவனைப் போல, பீஷ்மரைக் கொல்ல விரும்பி, கையில் சாட்டையுடன் அவரை {பீஷ்மரை} நோக்கி விரைந்தான்.

மாதவன் {கிருஷ்ணன்} பீஷ்மரின் அருகே இருப்பதையும், அந்தச் சீற்றமிகு போரில் அவர் {பீஷ்மர்} மீது {கிருஷ்ணன்} பாய இருப்பதையும் கண்டு போராளிகள் அனைவரின் இதயங்களும் {மனங்களும்} மயக்கத்தில் இருப்பதாகத் தெரிந்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வாசுதேவன் மீது கொண்ட அச்சத்தால் விளைந்த, “பீஷ்மர் கொல்லப்பட்டார், பீஷ்மர் கொல்லப்பட்டார்” என்ற இந்த உரத்த கூக்குரல்களே, அங்கே கேட்கப்பட்டன. மஞ்சள் ஆடை {பீதாம்பரம்} உடுத்தியவனும், இந்திரநீலக்கல்லைப் போலக் கறுத்த உடலைக் கொண்டவனுமான ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, பீஷ்மரைத் தொடர்ந்த போது {எதிர்த்த போது}, மின்னலின் சக்தியூட்டப்பட்ட மேகங்களின் திரளைப் போல அழகாகத் தெரிந்தான். அந்த மது குலத்தின் காளை {கிருஷ்ணன்}, சிங்கம் ஒன்று யானையை நோக்கிச் செல்வதைப் போலவோ, மாட்டுமந்தையின் தலைவன் {காளை} ஒன்று, தன் வகையான மற்றொன்றை {காளையை} நோக்கிச் செல்வதைப் போலவோ, முழக்கப்பேரொலியுடன் பீஷ்மரை நோக்கி மூர்க்கமாக விரைந்தான்.

பீஷ்மர், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அவன் {புண்டரீகாக்ஷன், கிருஷ்ணன்} (இப்படித்) தன்னை நோக்கி வருவதைக் கண்டு, அச்சமற்ற வகையில் தன் பெரிய வில்லை வளைக்கத் தொடங்கினார். அச்சமற்ற இதயத்துடன் கூடிய அவர் {பீஷ்மர்}, கோவிந்தனிடம் {கிருஷ்ணனிடம்}, “வா, ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே {புண்டரீகாக்ஷா}, வா. ஓ! தேவர்களின் தேவா, நான் உன்னை வணங்குகிறேன். ஓ! சாத்வதர்களில் சிறந்தவனே {கிருஷ்ணா}, இந்தப் போரில் இன்று என்னைக் கீழே வீசி எறிவாயாக. ஓ! தேவா {கிருஷ்ணா}, போரில் உன்னால் கொல்லப்படுவது, ஓ! பாவமற்றவனே, ஓ! கிருஷ்ணா, உலகில் அனைத்துவகையிலும் எனக்குப் பெரும் நன்மையைச் செய்யும். ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, மூவுலகங்களில் உள்ள அனைவரிலும், போரில் இன்று எனக்குச் செய்யப்படும் மதிப்பு {கௌரவம்} பெரியதாகும். ஓ! பாவமற்றவனே {கிருஷ்ணா}, நீ விரும்பியவாறு என்னைத் தாக்கலாம், ஏனெனில் நான் உன் அடிமையாவேன்” என்றார் {பீஷ்மர்}.

அதேவேளையில், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, பின்னாலிருந்து கேசவனை {கிருஷ்ணனை} விரைவாகத் தொடர்ந்து வந்து, தன் இரு கைகளாலும் அவனைச் {கிருஷ்ணனை} சுற்றிவளைத்துப் பிடித்தான். ஆண்மக்களில் சிறந்தவனும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனுமான கிருஷ்ணன், பார்த்தனால் {அர்ஜுனனால்} {இப்படிப்} பிடிக்கப்பட்டிருந்தாலும், பின்னவனையும் {அர்ஜுனனையும்} சேர்த்து இழத்துக் கொண்டு பெரும் வேகத்துடன் முன்னேறிக் கொண்டிருந்தான். எனினும், பகைவீரர்களைக் கொல்பவனான வலிமைமிக்கப் பார்த்தன் {அர்ஜுனன்}, ரிஷிகேசனின் {கிருஷ்ணனின்} கால்களைப் பலமாகப் பற்றிக் கொண்டு, பத்தாவது எட்டில் {பத்தாவது அடியில்} பெரும் சிரமத்துடன் அவனைத் {கிருஷ்ணனை} நிறுத்தினான்.

பிறகு, கேசவனின் {கிருஷ்ணனின்} அன்பு நண்பனான அர்ஜுனன், கவலையில் நிறைந்து அவனிடம் {கிருஷ்ணனிடம்} பாசத்துடன், “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, நிற்பாயாக, ஓ! கேசவா {கிருஷ்ணா}, “நான் போரிடேன்” என்று முன்பு நீ சொன்ன வார்த்தைகளைப் பொய்யாக்குவது உனக்குத் தகாது. ஓ! மாதவா {கிருஷ்ணா}, நீ ஒரு பொய்யன் என்று மக்கள் சொல்வார்கள். இந்தச் சுமைகள் {பொறுப்புகள்} அனைத்தும் என் மீதே இருக்கின்றன. பாட்டனை {பீஷ்மரை} நான் கொல்வேன். ஓ! கேசவா {கிருஷ்ணா}, என் பகைவர்களின் அழிவை அடைவதற்கான அனைத்தையும் நான் செய்வேன் என, ஓ! பகைவர்களைக் கொல்பவனே {கிருஷ்ணா}, என் ஆயுதங்கள் மீதும், உண்மை {சத்தியம்} மீதும், என் நற்செயல்களின் மீதும் நான் உறுதி கூறுகிறேன் {ஆணையேற்கிறேன்}. வெல்லப்பட முடியாதவரான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர் {பீஷ்மர்}, யுக முடிவில் (அண்ட அழிவு ஏற்படும்போது) உள்ள பிறை சந்திரனைப் போல, மிக எளிமையாகக் கீழே வீசி எறிப்படுவதை இந்நாளே பார்ப்பாயாக” என்று சொன்னான் {அர்ஜுனன்}. எனினும், மாதவன் {கிருஷ்ணன்}, உயர் ஆன்ம பல்குனனின் {அர்ஜுனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டாலும், ஒரு வார்த்தையும் பேசாமல், ஆனால் கோபத்துடன் மீண்டும் தேரின் மேல் ஏறினான் [4].

பிறகு, சந்தனுவின் மகனான பீஷ்மர், தங்கள் தேரில் நின்றுகொண்டிருந்த அந்த மனிதர்களில் புலிகளான இருவர் மீதும், மலைச்சாரலில் மழையைப் பொழியும் மேகங்களைப் போலத் தன் கணைமாரிகளை மீண்டும் பொழிந்தார். உமது தந்தையான தேவவிரதர் {பீஷ்மர்}, கோடை காலத்தில் அனைத்துப் பொருட்களின் சக்திகளையும் தன் கதிர்களால் உறிஞ்சும் சூரியனைப் போல (பகை) வீரர்களின் உயிர்களை எடுத்தார். பாண்டவர்கள், போரில் குருக்களின் படையணிகளை உடைத்ததைப் போலவே, உமது தந்தையும் {பீஷ்மரும்} போரில் பாண்டவப் படையணிகளை உடைத்தார்.

மேலும் முறியடிக்கப்பட்டவர்களான அந்தப் படைவீரர்கள், ஆதரவற்றவர்களாகக் கொடூரமாகப் பீஷ்மரால் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொல்லப்படும்போது, தன்னொளியில் சுடர்மிகும் நடுப்பகல் சூரியனைப் போல இருந்த அவரை {பீஷ்மரை} அந்தப் போரில் பார்க்கும் சக்தி கூட அற்றவர்களாக இருந்தனர். உண்மையில், அச்சத்தால் பீடிக்கப்பட்ட பாண்டவர்கள் {பாண்டவப் படைவீரர்கள்}, அந்தப் போரில் மனித சக்திக்கு மேம்பட்ட சாதனைகளை அப்போது அடைந்து வந்த பீஷ்மரை மருட்சியுடன் கண்டனர். இப்படித் தப்பியோடும் பாண்டவத் துருப்பினர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பலமான ஒரு நபரால் கீழே மிதித்துத் தள்ளப்பட்டு, எறும்புக் கூட்டத்தில் மூழ்கிய ஒரு பசுமந்தையைப் போல ஒரு பாதுகாவலனை அடையத் தவறினர் [5].

உண்மையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அபரிமிதமான கணைகளைக் கொண்டவரும், (பாண்டவப் படையின்) மன்னர்களை எரித்துக் கொண்டிருந்தவரும், அந்தக் கணைகளின் விளைவாக நெருப்புக் கதிர்களை உதிர்க்கும் சுடர்மிக்கச் சூரியனைப் போலத் தெரிந்தவரும், அசைக்கப்பட முடியாதவருமான அந்த வலிமைமிக்க வீரரைப் பாண்டவர்களால் {பாண்டவப் படையினரால்} பார்க்க இயலவில்லை. அவர் {பீஷ்மர்} இப்படிப் பாண்டவப் படையைக் கலங்கடித்துக் கொண்டிருந்த போது, பகலை உண்டாக்குபவனான ஆயிரங்கதிரோன் {சூரியன்} {தான்} மறையும் மலைகளுக்குச் சென்றான், களைத்துப் போயிருந்த துருப்புகளும் (களத்திலிருந்து) பின்வாங்குவதில் தங்கள் இதயங்களை நிலைக்கச் செய்தனர்” {என்றான் சஞ்சயன்}.

ஒன்பதாம் நாள் போர் முற்றும்

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ  பீஷ்ம பர்வம்-ஸ்ரீ பீஷ்மவத பர்வம்-எட்டாம் நாள் போர்-

October 13, 2025

ஊர்மி சிருங்காடக வியூகங்கள்! – பீஷ்ம பர்வம் பகுதி – 088-எட்டாம் நாள் போர் தொடங்கியது; கௌரவர்கள் அமைத்துக் கொண்ட வியூகம்; கௌரவவீரர்கள் வியூகத்துக்குள் நின்ற நிலைகள்; பாண்டவர்கள் அமைத்த எதிர்வியூகம்; பாண்டவர்களை எதிர்த்து விரைந்த பீஷ்மர்; தொடர்ந்து நடந்த பயங்கரப் போர்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த இரவை நல்ல உறக்கத்தில் கழித்த மனிதர்களின் ஆட்சியாளர்களான கௌரவர்களும், பாண்டவர்களும் மீண்டும் போரிடச் சென்றனர். இரு படைகளின் துருப்புகளும், களத்திற்குச் செல்ல முற்பட்ட போது கேட்கப்பட்ட பெரும் ஆரவாரமானது கடலின் பேரிரைச்சலுக்கு ஒப்பானதாக இருந்தது.

பிறகு, மன்னன் துரியோதனன், சித்திரசேனன், விவிம்சதி, தேர்வீரர்களின் முதன்மையான பீஷ்மர், பெரும் ஆற்றலைக் கொண்ட பரத்வாஜரின் மகன் {துரோணர்} ஆகிய கவசம் பூண்ட வலிமைமிக்கத் தேர்வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒன்று சேர்ந்து பாண்டவர்களுக்கு எதிரான கௌரவ வியூகத்தைப் பெருங்கவனத்துடன் அமைத்தனர். குதிரைகளையும், யானைகளையும் அலைகளாகவும், நீராகவும் கொண்ட கடுமையானக் கடலைப் போன்ற அந்த வலிமைமிக்க {ஊர்மி} வியூகத்தை [1] அமைத்த பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மாளவர்கள், தென்னாட்டில் குடியிருப்பவர்கள், அவந்திகள் ஆகியோர் துணையுடன், முழுப் படையின் முன்னணியில் சந்தனுவின் மகனான உமது தந்தை பீஷ்மர் சென்றார்.

அவருக்கு {பீஷ்மருக்கு} அடுத்துப் புளிந்தர்கள், பாரடர்கள் [2]க்ஷூத்திரகமாலவர்கள் ஆகியோருடன் பரத்வாஜரின் வீர மகன் {துரோணர்}, இருந்தார். துரோணருக்கு அடுத்ததாக, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரிடும் உறுதியான தீர்மானத்துடன் மகதர்கள், கலிங்கர்கள் மற்றும் பிசாசர்களோடு [3] வீர பகதத்தன் இருந்தான். பகதத்தனுக்குப் பின்னே மேகலர்கள், திரிபுரர்கள், சிசிலர்கள் {குருவிந்தர்கள்} ஆகியோருடன் கோசலர்களின் மன்னனான பிருஹத்பலன் இருந்தான். பிருஹத்பலனுக்கு அடுத்ததாகப் பெரும் எண்ணிக்கையிலான காம்போஜர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான யவனர்களுடன் [4], துணிவுமிக்கப் பிரஸ்தல ஆட்சியாளனான மன்னன் திரிகர்த்தன் இருந்தான்.

திரிகர்த்தர்களின் ஆட்சியாளனுக்கு அடுத்து, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்க வீரனான துரோண மகன் {அஸ்வத்தாமன்} சிங்கமுழக்கமிட்டபடி பூமியை எதிரொலிக்கச் செய்தான். துரோணரின் மகனுக்கு {அஸ்வத்தாமனுக்கு} அடுத்ததாகத் தன்னுடன் தம்பிகளால் சூழப்பட்டபடிருந்த மொத்தப் படையுடன் மன்னன் துரியோதனன் சென்றான். துரியோதனனுக்குப் பின்பு சரத்வானின் மகனான கிருபர் சென்றார். இப்படியே கடலை ஒத்த அந்த வலிமைமிக்கப் படை (போரிடச்} சென்றது. ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, கொடிமரங்கள், வெண்குடைகள், அழகிய தோள்வளைகள், விலையுயர்ந்த விற்கள் ஆகியன ஆங்கே தங்கள் ஒளியைப் பொழிந்தன.

உமது படைகளின் அந்த வலிமைமிக்க வியூகத்தைக் கண்டப் பெரும் தேர்வீரனான யுதிஷ்டிரன், (தன் படையின்) தலைவனான பிருஷதன் மகனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} வேகமாக, “ஓ! பெரும் வில்லாளியே {திருஷ்டத்யும்னா}, கடல் போன்று ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் அந்த {கூர்ம} வியூகத்தைப் பார். ஓ! பிருஷதனின் மகனே {திருஷ்டத்யும்னா}, தாமதமில்லாமல் நீயும் எதிர்வியூகத்தை அமைப்பாயாக” என்றான்.

(இப்படிச் சொல்லப்பட்டதும்), ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, பிருஷதனின் அந்த வீர மகன் {திருஷ்டத்யும்னன்}, பகைவியூகங்கள் அனைத்தையும் அழிப்பதும், சிருங்காடகம் [5] என்று அழைக்கப்படுவதுமான அந்தப் பயங்கர வியூகத்தை அமைத்தான். பல்லாயிரம் தேர்கள், குதிரைகள் மற்றும் காலாட்படைகளுடன் கூடியவர்களான பீமசேனனும், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகியும் அதன் {அந்த சிருங்காட வியூகத்தின்} கொம்புகளில் {சிகரங்களில்} இருந்தனர். அவர்களுக்கு அடுத்ததாக, மனிதர்களில் முதன்மையானவனும், வெண்குதிரைகளையும், தன் தேரோட்டியோகக் கிருஷ்ணனையும் கொண்ட அர்ஜுனன் நின்றான். மன்னன் யுதிஷ்டிரனும், மாத்ரியின் மூலமான பாண்டுவின் இரட்டை மகன்களும் {நகுலனும், சகாதேவனும்} {வியூகத்தின்} நடுவில் நின்றனர். வியூகங்களின் அறிவியலை அறிந்த மற்ற அரசவில்லாளிகள் தங்கள் துருப்புகளுடன் அந்த வியூகத்தை நிறைத்தனர். பின்புறத்தில் அபிமன்யு, வலிமிக்கத் தேர்வீரனான விராடன், திரௌபதியின் மகன்கள், ராட்சசன் கடோத்கசன் ஆகியோர் இருந்தனர்.

இப்படியே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தங்கள் வியூகத்தை அமைத்துக் கொண்ட வீரப் பாண்டவர்கள், வெற்றியை விரும்பி போருக்கான ஏக்கத்துடன் களத்தில் காத்திருந்தனர். சங்கொலிகளுடனும், சிங்க முழக்கங்களுடனும், (போராளிகளின்) முழக்கங்கள் மற்றும் தோள்தட்டும் ஒலிகள் ஆகியவற்றுடன் கலந்த பேரிகைகளின் உரத்த ஒலி, திசைகள் அனைத்தையும் பயங்கரமாக நிறைத்தது. போருக்காக ஒருவரையொருவர் அணுகும் அந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} கண்களைச் சிமிட்டாமல் ஒருவரை ஒருவர் பார்த்தனர். பிறகு அந்த வீரர்கள், ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, முதலில் ஒருவரையொருவர் பெயர் சொல்லி சவாலுக்கழைத்த பிறகு, தங்களுக்குள் மோதிக் கொண்டனர் [6]. பிறகு, உமது துருப்புகளும், எதிரியின் துருப்புகளும் ஒன்றையொன்று தாக்கிக் கொண்டன. அவற்றுக்கிடையில் கடுமையானதும் பயங்கரமானதுமான ஒரு போர் தொடங்கியது-

அந்தப் போரில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, திறந்த வாயுடன் கூடிய பயங்கரப் பாம்புகளைப் போல, கூர்மையான நாராசங்கள் மழையாக விழுந்தன. மூர்க்கமான வேகத்துடன் கூடியவையும், எண்ணெயில் தோய்க்கப்பட்டவையுமான பளபளக்கும் ஈட்டிகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மேகங்களில் ஒளிரும் மின்னலின் கீற்றுகளைப் போலப் பிரகாசித்தன. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, பளபளக்கும் பட்டைகள் இணைக்கப்பட்டு, களமெங்கும் விழுந்து கிடந்த கதாயுதங்கள், மலைகளின் முகடுகளைப் போலத் தெரிந்தன. தெளிந்த (நீல) வானின் நிறம் கொண்ட கத்திகளும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட காளைத்தோல் கேடயங்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, களமெங்கும் விழுந்தபோது, அவை அழகாகத் தெரிந்தன.

அந்த இரு படைகளும் ஒன்றோடொன்று போரில் ஈடுபட்ட போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளும் தேவர்களும், அசுரர்கூட்டங்களும் ஒளிர்ந்தது போல ஒளிர்வதாகத் தெரிந்தது. எல்லாவகையிலும் ஒருவரையொருவர் எதிர்த்துப் போரிட அவர்கள் விரைந்தனர். அரசத் தேர்வீரர்களில் முதன்மையானவர்கள், அந்தப் பயங்கரப் போரில் {எதிரிப்படையின்} தேர்வீரர்களை எதிர்த்து மூர்க்கமாக மோதித் தங்கள் எதிரிகளின் தேர் நுகத்தடி தங்கள் தேர்களில் சிக்கியபடியே போரிட்டனர். மேலும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, போரிடும் யானைகளின் தந்தங்களுடைய உராய்வின் விளைவால், களமெங்கும் புகையுடன் கூடிய நெருப்புப் பொறிகள் உண்டாகின., யானைகளின் முதுகிலிருந்த போராளிகள், வேல்களால் தாக்கப்பட்டுக் கீழே விழுவது, மலைகளின் சிகரங்களில் இருந்து (தளர்ந்து) விழும் பாறைகளைப் [7] போலத் தெரிந்தது. துணிவுமிக்கக் காலாட்படை வீரர்கள், வெறும் கைகளைக் கொண்டோ, வேல்களைக் கொண்டோ போரிட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டது மிக அழகாகத் தெரிந்தது.

கௌரவ மற்றும் பாண்டவப் படைகளின் வீரர்கள், அம்மோதலில் ஒருவரையொருவர் அணுகி, பல்வேறுவிதமான கணைகளால் ஒருவரையொருவர் யமனுலகு அனுப்பி வைத்தனர். பிறகு, சந்தனுவின் மகனான பீஷ்மர், தன் தேரின் சடசடப்பொலியை (சுற்றிலும்) நிரப்பி, தனது வில்லின் நாணொலியால் எதிரிகளின் புலனுணர்வை இழக்கச் செய்தபடி, போரில் பாண்டவர்களை எதிர்த்து விரைந்தார். திருஷ்டத்யும்னனின் தலைமையிலான பாண்டவத் தேர்வீரர்களும், போரிட உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டு, கடுமுழக்கங்களிட்டபடி அவரை {பீஷ்மரை} நோக்கி விரைந்தனர். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவர்களது {பாண்டவர்களது} மற்றும் உமது காலாட்படைவீரர்கள், தேர்வீரர்கள், யானைகள் ஆகியவற்றுக்குள் போர் தொடங்கியது. அதில் போராளிகள் அனைவரும் கலந்து போனார்கள் {சிக்கிக் கொண்டார்கள்}” {என்றான் சஞ்சயன்}. 

கௌரவர்கள் எண்மரைக் கொன்ற பீமன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 089-பீஷ்மரை எதிர்த்த பாண்டவத் துருப்புகள்; பாஞ்சாலர்களை வீழ்த்திய பீஷ்மர்; பாண்டவர்களில் பீமன் மட்டுமே பீஷ்மரை எதிர்த்தது; தன் தம்பிகள் சூழப் பீஷ்மரைப் பாதுகாத்த துரியோதனன்; துரியோதனன் தம்பிகள் எண்மரைக் கொன்ற பீமன்; திருதராஷ்டிரனின் மற்ற மகன்கள் அஞ்சி ஓடியது; தன் தம்பிகளின் மறைவால் துயருற்ற துரியோதனன் பீஷ்மரிடம் புலம்பியது; துரியோதனனுக்குப் பழையதை நினைவூட்டி உறுதி அளித்த பீஷ்மர்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போரில் கோபத்தால் தூண்டப்பட்டவரும், சுட்டெரிக்கும் வெம்மை கொண்ட சூரியனைப் போல அனைத்துப் புறங்களையும் எரிப்பவருமான பீஷ்மரைப் பார்ப்பதற்கும் சக்தியற்றவர்களாகப் பாண்டவர்கள் இருந்தார்கள். கூர்மையான கணைகளால் அனைத்தையும் கலங்கடித்துக் கொண்டிருந்த கங்கையின் மைந்தரை {பீஷ்மரைத்} தாக்க, தர்மனுடைய மகனின் {யுதிஷ்டிரனின்} கட்டளைக்கிணங்க (பாண்டவத்) துருப்புகள் அனைத்தும் விரைந்தன. எனினும் {அப்படியிருந்தாலும்}, போரில் மகிழ்ந்த பீஷ்மர், சிருசஞ்சயர்கள் மற்றும் பாஞ்சாலர்களில் வலிமைமிக்க வில்லாளிகளை வீழ்த்தினார். பீஷ்மரால் இப்படிக் கொல்லப்பட்டாலும், மரணபயத்தைக் கைவிட்ட பாஞ்சாலர்கள், சோமகர்களுடன் கூடி அவரை {பீஷ்மரை} நோக்கி மூர்க்கமாக விரைந்தனர்.

எனினும், சந்தனுவின் மகனான வீர பீஷ்மர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போரில் அவர்களுடைய {பாஞ்சாலத்} தேர்வீரர்களின் தலைகளையும் கரங்களையும் துண்டித்தார். உமது தந்தையான தேவவிரதர் {பீஷ்மர்}, அவர்களது {பாஞ்சாலர்களின்} தேர்வீரர்கள், தங்கள் தேர்களை இழக்கச் செய்தார். குதிரைகளில் இருந்த அவர்களது குதிரைப்படை வீரர்களின் தலைகள் விரைவாக விழுந்தன. மலைகளைப் போன்ற பெரும் யானைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் பாகன்களை இழந்து, பீஷ்மரின் ஆயுதங்களால் முடக்கப்பட்டு, சுற்றி அனைத்துப் பக்கங்களிலும் விழுந்து கிடப்பதை நாங்கள் கண்டோம்.

பாண்டவர்களில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (பீஷ்மரைத் தடுப்பதற்கு) தேர்வீரர்களில் முதன்மையான, வலிமைமிக்கப் பீமசேனனைத் தவிர வேறு ஒரு மனிதனும் இல்லை. உண்மையில், பீமன் மட்டுமே பீஷ்மரை அணுகி, அவருடன் போரில் மோதினான் {போரிட்டான்}. பீமனுக்கும், பீஷ்மருக்கும் இடையிலான அம்மோதலில், (கௌரவத்) துருப்புகள் அனைத்தின் மத்தியிலும், கடும் ஆரவாரம் பயங்கரமாக எழுந்தது. மகிழ்ச்சியால் நிறைந்த பாண்டவர்கள் சிங்க முழக்கமிட்டார்கள். அழிவை ஏற்படுத்திய அந்தப் படுகொலையின் போது, தன் உடன் பிறந்த தம்பிகள் சூழ இருந்த மன்னன் துரியோதனன், அந்தப் போரில் பீஷ்மரைப் பாதுகாத்து வந்தான். 

அப்போது, தேர்வீரர்களில் முதன்மையான அந்தப் பீமன், பீஷ்மரின் தேரோட்டியைக் கொன்றான். அதன் பேரில், கட்டுப்பாட்டினை இழந்த {பீஷ்மரின்} அந்தக் குதிரைகள், தேருடன் களத்தைவிட்டு ஓடின. பிறகு எதிரிகளைக் கொல்லும் அந்தப் பீமன், ஒரு கூரிய க்ஷுரப்ரத்தால் {குதிரை லாடம் போன்ற தலை கொண்ட ஒரு கணையால்} சுநாபனின் [1] தலையைக் கொய்தான். (இப்படிக்) கொல்லப்பட்ட பின்னவன் {சுநாபன்} கீழே பூமியில் விழுந்தான்.

வலிமைமிக்கத் தேர்வீரனும், பெரும் வில்லாளியுமான அந்த உமது மகன் {சுநாபன்} கொல்லப்பட்ட போது, அவனது வீரச் சகோதரர்கள் எழுவரால், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, (அச்செயலை அமைதியாகத்) தாங்கிக் கொள்ள முடியவில்லை. போரிட விருப்பமுள்ளவர்களும், பலவண்ணங்களிலான அழகிய கவசங்களையும், ஆயுதங்களையும் தரித்தவர்களும், எதிரிகளைக் கலங்கடிப்பவர்களுமான ஆதித்யகேது, பஹ்வாசி, குண்டதாரன், மஹோதரன், அபராஜிதன், பண்டிதகன், வெல்லப்படமுடியாத விசாலாக்ஷன் ஆகியோர் பாண்டுவின் மகனை {பீமனை} எதிர்த்து விரைந்தனர்.

விருத்திரனைக் கொன்றவன் {இந்திரன்}, (பெரும் அசுரனான) நமுசியைத் தாக்கியதைப் போல, அந்தப் போரில், வஜ்ரத்திற்கு இணையான சக்தி கொண்டவையும், சிறகு படைத்தவையுமான ஒன்பது {9} கணைகளால் மஹோதரன், பீமசேனனைத் துளைத்தான். ஆதித்யகேது எழுபது  {70}கணைகளாலும், விஷ்ணு {பஹ்வாசி} ஐந்தாலும் {5 கணைகளாலும்} பீமனைத் தாக்கினர். மேலும் குண்டதாரன் தொண்ணூறு {90} கணைகளாலும், விசாலாக்ஷன் ஏழாலும் {7 கணைகளாலும்} அவனை {பீமனைத்} தாக்கினர். எதிரிகளை வெல்பவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அபராஜிதன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும்பலம்படைத்த அந்தப் பீமசேனனைப் பல கணைகளால் பீடித்தான். பண்டிதகனும், அப்போரில் மூன்று {3} கணைகளால் அவனைத் {பீமனைத்} துளைத்தான். எனினும், போரில் தனது எதிரிகளின் இந்தத் தாக்குதலைப் பீமனால் (பொறுமையாகத்) தாங்கிக் கொள்ள இயலவில்லை.

தன் இடக்கையால் வில்லை வலுவாகப் {அழுத்திப்} பிடித்த அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவன் {பீமன்}, நல்ல {அழகிய} மூக்குடன் கூடிய உமது மகன் அபராஜிதனின் தலையை அப்போரில் நேரான கணை ஒன்றால் அறுத்தான். இப்படிப் பீமனால் வீழ்த்தப்பட்ட அவனது தலை தரையில் விழுந்தது.

பிறகு, உமது துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருந்த போதே, வலிமைமிக்கத் தேர்வீரனான குண்டதாரனை மற்றொரு பல்லத்தால் {அகன்ற தலை கொண்ட கணையால்} காலனின் உலகத்திற்குப் பீமன் அனுப்பிவைத்தான்.

பிறகு அளவிடமுடியாத ஆன்மா கொண்ட அந்த வீரன் {பீமன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அப்போரில் மீண்டும் ஒரு கணையைக் குறிபார்த்து, பண்டிதகன் மீது ஏவினான். காலனால் தூண்டப்பட்ட ஒரு பாம்பு, (தன் காலம் வந்த {முடிந்த} ஒரு) மனிதனைக் கொன்று விரைவாகப் பூமிக்குள் நுழைவதைப் போலவே பண்டிதகனைக் கொன்ற அந்தக் கணையும் பூமிக்குள் நுழைந்தது.

சோர்விலா ஆன்மா {மனம்} கொண்ட அந்த வீரன் {பீமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனது முன்னாள் துயரங்களை நினைவுகூர்த்து, விசாலாக்ஷனின் தலையை மூன்று {3} கணைகளால் வெட்டிவீழ்த்தினான்.

பிறகு அந்தப் போரில், வலிமைமிக்க வில்லாளியான மஹோதரனை ஒரு நாராசத்தால் {நீண்ட கணையால்} நடுமார்பில் பீமன் தாக்கினான். (அதனால்) கொல்லப்பட்ட பின்னவன் {மஹோதரன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பூமியில் விழுந்தான்.

பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் ஆதித்யகேதுவின் குடையை ஓர் அம்பினால் அறுத்த அவன் {பீமன்}, மற்றொரு மிகக்கூரிய பல்லத்தினால் அவனது {ஆதித்யகேதுவின்} தலையையும் அறுத்தான்.

பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்ட பீமன் வேறொரு நாராசத்தால் {நீண்ட கணையால்}, பஹ்வாசினை {பஹ்வாசியை} யமலோகத்தை நோக்கி அனுப்பிவைத்தான் [2].

பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மற்ற உமது மகன்கள், சபையில் (கௌரவர்களுக்கு மத்தியில்) பீமன் சொன்ன வார்த்தைகள் [3] உண்மையே எனக் கருதி ஓடிப்போனார்கள். தனது தம்பிகள் குறித்த துக்கத்தால் பீடிக்கப்பட்ட மன்னன் துரியோதனன், தன் துருப்புகள் அனைத்திடமும், “பீமன் அங்கே இருக்கிறான். அவன் கொல்லப்பட வேண்டும்” என்றான். இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் சகோதரர்கள் கொல்லப்பட்டதைக் கண்டவர்களும், வலிமைமிக்க வில்லாளிகளுமான உமது மகன்கள், பெரும் அறிஞரான விதுரரால் சொல்லப்பட்டவையும், நன்மை மற்றும் அமைதி தருபவையுமான அந்த வார்த்தைகளை நினைவுகூர்ந்தனர்.

உண்மைநிறைந்த விதுரரின் வார்த்தைகள் இப்போதுதான் உண்மையில் உணரப்படுகின்றன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பேராசை மற்றும் மூடத்தனத்தின் தாக்கத்தாலும், உமது மகன்கள் மீது கொண்ட பாசத்தாலும் நன்மை நிறைந்த அந்த வார்த்தைகளை அப்போது உம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த வலிய கரம் கொண்ட வீரன் {பீமன்}, கௌரவர்களைக் கொல்லும் முறையைப் பார்த்தால், உமது மகன்களின் அழிவுக்காகவே அந்த வலிமைமிக்கப் பாண்டு மகன் {பீமன்} தனது பிறப்பை எடுத்திருக்கிறான் என்பது நிச்சயமாகத் தெரிகிறது.

ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அதே வேளையில் மன்னன் துரியோதனன், பெரும் துயரத்தில் மூழ்கிப் பீஷ்மரிடம் சென்று, துக்கம் மேலிட ” என் வீரத் தம்பிகள் போரில் பீமசேனனால் கொல்லப்பட்டனர். என்னதான் நமது துருப்புகள் அனைத்தும் துணிச்சலுடன் போரிட்டாலும், தோல்வியையே அடைகின்றன. ஏதோ அக்கறையேயில்லாத பார்வையாளனைப் போல நடந்து கொண்டு, (நீர் செயல்படுவது போலவே) எங்களை நீர் புறக்கணிப்பதாகவே தெரிகிறது. ஐயோ, என்ன வழியை நான் மேற்கொண்டேன் {அடைந்திருக்கிறேன்}. கொடுமையான என் விதியைப் பாரும்” எனச் சொல்லி அங்கே புலம்பத் தொடங்கினான் {துரியோதனன்}.”

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “துரியோதனனின் இந்தக் கொடிய வார்த்தைகளைக் கேட்ட உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, கண்ணீரால் நிறைந்த கண்களுடன் இஃதை அவனிடம் சொன்னார். “நானும், துரோணரும், விதுரனும், புகழ்பெற்ற காந்தாரியும் முன்பே இஃதை உனக்குச் சொன்னோம். ஓ! மகனே {துரியோதனா}, அப்போது அதை நீ புரிந்து கொள்ளவில்லை. ஓ! எதிரிகளைக் கலங்கடிப்பவனே {துரியோதனா}, நானோ, துரோணரோ எப்போதும் இந்தப் போரில் இருந்து உயிருடன் தப்ப மாட்டோம் என்ற {எங்கள்} தீர்மானத்தையும் முன்பே நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன் [4]. போரில் பீமன் யார் மீதெல்லாம் தனது கண்களைச் {பார்வையைச்} செலுத்துவானோ, {அவர்களையெல்லாம்} அவன் நிச்சயம் கொல்வான் என்று நான் உண்மையாகவே சொல்கிறேன். எனவே, ஓ! மன்னா {துரியோதனா}, உன் பொறுமையனைத்தையும் வரவழைத்துக் கொண்டு, போரை உறுதியாகத் தீர்மானித்து, சொர்க்கத்தை உனது குறிக்கோளாகக் கொண்டு, பிருதையின் மகன்களுடன் {பாண்டவர்களுடன்} போரிடுவாயாக. பாண்டவர்களைப் பொறுத்தவரை, வாசவனைக் (தங்கள் தலைமையில்) கொண்ட தேவர்களாலேயேகூட அவர்கள் {பாண்டவர்கள்} வெல்லப்பட இயலாதவர்களாக இருக்கிறார்கள். எனவே, ஓ! பாரதா {துரியோதனா}, உனது இதயத்தைப் போரில் உறுதியாக நிலைக்கச் செய்து போரிடுவாயாக” என்றார் {பீஷ்மர்}” {என்றான் சஞ்சயன்}.

பீஷ்மரை மட்டுமே எதிர்த்த பலர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 090-திருதராஷ்டிரன் வேதனை; விதுரனின் வார்த்தைகளை நினைவு கூர்ந்த திருதராஷ்டிரன்; திருதராஷ்டிரனைக் கண்டித்த சஞ்சயன்; பாண்டவ வீரர்களில் பலர் பீஷ்மரையே குறியாகக் கொண்டு முன்னேறியது; மூன்று பிரிவுகளான பாண்டவப் படையில் ஒரு பிரிவு பீஷ்மரையும், மற்றொரு பிரிவு துரியோதனன் தலைமையிலான மன்னர்களையும், மேலும் ஒரு பிரிவு பிற மன்னர்களையும் எதிர்த்துச் சென்றது; பாஞ்சாலர்களை அழித்த துரோணர்; கௌரவத் துருப்புகளையும், யானைப் பிரிவுகளையும் அழித்த பீமன்; குதிரைப் படை மீது பாய்ந்த இரட்டையர்கள்; அர்ஜுனனால் கௌரவர்களுக்கு நேர்ந்த அழிவு…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, எண்ணிக்கையில் மிகுந்த என் மகன்கள், தனி ஒருவனால் {பீமனால்} கொல்லப்பட்டதைக் கண்ட பீஷ்மர், துரோணர், கிருபர் ஆகியோர் அந்தப் போரில் [1] என்ன செய்தார்கள்? ஓ! சஞ்சயா, நாளுக்கு நாள் என் மகன்கள் கொல்லப்பட்டே வருகிறார்கள். அனைத்துவிதங்களிலும் என் மகன்கள் அனைவரும் தோல்வி அடைகிறார்களேயன்றி வெற்றி பெறவில்லை என்பதால், ஓ! சூதா {சஞ்சயா}, தீய விதியாலே அவர்கள் முழுமையாகப் பீடிக்கப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

{போரில்} பின்வாங்காத வீரர்களான துரோணர், பீஷ்மர் மற்றும் உயர் ஆன்மக் கிருபர், சோமதத்தனின் வீரமகன் {பூரிஸ்ரவஸ்}, பகதத்தன், அஸ்வத்தாமன் மற்றும் {இன்னும்} பிற துணிச்சல்மிக்க வீரர்களுக்கு [2] மத்தியில் இருக்கும் போதே, ஓ! மகனே {சஞ்சயா}, போரில் என் மகன்கள் கொல்லப்படுகிறார்கள் என்றால், விதியைத் தவிர வேறு எதைச் சொல்ல முடியும்? என்னாலும், பீஷ்மராலும், விதுரனாலும் முன்பே எச்சரிக்கப்பட்டாலும், பொல்லாத துரியோதனன் அந்த (எங்கள்) வார்த்தைகளைப் புரிந்து கொள்ளவில்லை.

எப்போதும் துரியோதனனுக்கு நன்மை செய்யும் நோக்கில், காந்தாரி (அவன் செயல்களைத் தடுத்தாலும்) இருந்தாலும், தீய புரிதல் கொண்ட அவன் {துரியோதனன்}, தன் மூடத்தனத்தில் இருந்து முன்பே விழிப்படையவில்லை [3]. அதுவே (அந்த நடத்தையே) இப்போது கனி {இந்தப் பலனைத்} தருகிறது. சினத்தால் தூண்டப்பட்ட பீமசேனன், அறிவில்லாத என் மகன்களைப் போரில் நாள்தோறும் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைக்கிறான்” என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது நன்மைக்கானதும், நீர் புரிந்து கொள்ளாததுமான விதுரரின் அந்த மிகச்சிறந்த வார்த்தைகள் இப்போது உணரப்படுகின்றன. “பகடையில் {சூதாட்டத்தில்} இருந்து உமது மகன்களைத் தடுப்பீராக” என்று விதுரர் சொன்னார். காலம் வந்த {முடிந்த} மனிதன், சரியான மருந்தை மறுப்பதைப் போல, (உமது நன்மைக்காக) உமக்கு ஆலோசனை கூறிய நலன்விரும்பிகளான {உமது} நண்பர்களின் வார்த்தைகளை நீர் கேட்கவில்லை. நெறிசார்ந்தோரால் சொல்லப்பட்ட அந்த வார்த்தைகள் இப்போது உமக்கு முன்பாக உணரப்படுகின்றன. விதுரர், துரோணர், பீஷ்மர் மற்றும் நலம்விரும்பிகளான பிறராலும் சொல்லப்பட்ட ஏற்புடைய வார்த்தைகளை மறுத்ததாலேயே, உண்மையில், இப்போது கௌரவர்கள் அழிக்கப்படுகிறார்கள். அந்த அறிவுரைகளை நீர் கேட்க மறுத்ததன் விளைவுகளே இவை [4].எனினும், நடந்தது போன்றே சரியாக நான் உரைக்கப் போவதை இப்போது கேளும் [5]. நடுப்பகல் வேளையில் அந்தப் போர் மிக மோசமானதாக, பெரிய படுகொலைகள் நிறைந்ததாக மாறியது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நான் விவரிக்கப் போவதைக் கேட்பீராக.

பிறகு, சினத்தால் தூண்டப்பட்ட (பாண்டவப் படையின்) துருப்புகள் அனைத்தும், தர்மனின் மகனுடைய {யுதிஷ்டிரனுடைய} கட்டளைக்கிணங்க, பீஷ்மரைக் கொல்ல விரும்பி அவரை எதிர்த்து விரைந்தன. தங்கள் தங்கள் படையின் துணையோடு சென்ற திருஷ்டத்யும்னன், சிகண்டி, வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகியோர் பீஷ்மரை மட்டுமே எதிர்த்துச் சென்றனர்.

வலிமைமிக்கத் தேர்வீரர்களான விராடனும், துருபதனும், சோமகர்கள் அனைவருடன் கூடி அப்போரில் பீஷ்மரை மட்டுமே எதிர்த்து விரைந்தனர்.

கவசம் அணிந்திருந்த கைகேயர்கள் {கேகயர்கள்}, திருஷ்டகேது, குந்திபோஜன் ஆகியோரும் தங்கள் படைகளின் துணையோடு பீஷ்மரை மட்டுமே எதிர்த்து விரைந்தனர்.

அர்ஜுனன், திரௌபதியின் மகன்கள், பெரும் ஆற்றலைக் கொண்ட சேகிதானன் ஆகியோர் துரியோதனனின் கட்டளைக்கு உட்பட்ட மன்னர்கள் அனைவரையும் எதிர்த்துச் சென்றனர்.

வீர அபிமன்யு, வலிமைமிக்கத் தேர்வீரனான ஹிடிம்பையின் {இடும்பியின்} மகன் {கடோத்கசன்}, கோபத்தால் தூண்டப்பட்ட பீமசேனன் ஆகியோர் (பிற) கௌரவர்களை எதிர்த்து விரைந்தனர்.

(இப்படியே) பாண்டவர்கள் {பாண்டவ வீரர்கள்} மூன்று பிரிவுகளாகப் பிரிந்திருந்து, கௌரவர்களைப் {கௌரவ வீரர்களைப்} படுகொலை செய்யத் தொடங்கினர் [6]. அதுபோலவே, கௌரவர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் எதிரிகளைக் கொல்லத் தொடங்கினர். தேர்வீரர்களில் முதன்மையானவரான துரோணர், கோபத்தால் தூண்டப்பட்டு, சோமகர்கள் மற்றும் சிருஞ்சயர்களை யமலோகம் அனுப்ப விரும்பி, அவர்களை எதிர்த்து விரைந்தார். கையில் வில் பிடித்த பரத்வாஜரின் மகனால் {துரோணரால்} கொல்லப்பட்ட போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துணிச்சல்மிக்கச் சிருஞ்சயர்கள் மத்தியில் உரத்த கதறல்கள் எழுந்தன. துரோணரால் தாக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான க்ஷத்திரியர்கள் அனைவரும், நோய் வேதனையில் வலிப்பு வந்தவரைப் போல நடுங்குவது தெரிந்தது. பசியால் பீடிக்கப்பட்டோரைப் போல முனகல்களும், அலறல்களும், தேம்பல்களும் களம் முழுவதும் தொடர்ந்து கேட்கப்பட்டன.

அதைப் போலவே, இரண்டாம் யமனைப் போல இருந்த வலிமைமிக்கப் பீமசேனன், கோபத்தால் தூண்டப்பட்டு, கௌரவத் துருப்புகளுக்கு மத்தியில் பயங்கரப் படுகொலையை நிகழ்த்தினான். அந்தப் பயங்கரப் போரில், வீரர்கள் ஒருவரையொருவர் கொன்றதன் விளைவாகக் குருதியையே அலையாகவும், வெள்ளமாகவும் கொண்ட ஒரு பயங்கர ஆறு {அங்கே} பாயத் தொடங்கியது [7]. குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையிலான அந்தப் போர் கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும் ஆகி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யமனின் அரசாங்கத்தைப் பெருகச் செய்தது.

பிறகு அந்தப் போரில் கோபத்தால் தூண்டப்பட்ட பீமன், (கௌரவர்களின்) யானைப் பிரிவின் மேல் மூர்க்கத்தனமாகப் பாய்ந்து, {அவற்றில்} பலவற்றைக் காலனின் உலகங்களுக்கு அனுப்பத் தொடங்கினான். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமனின் கணைகளால் தாக்கப்பட்ட அந்தப் பெரிய விலங்குகளில் சில கீழே விழுந்தன, சில செயலிழந்தன, சில (வலியால்) அலறின, மேலும் சிலவோ திக்குகள் அனைத்திலும் ஓடின. துதிக்கை வெட்டப்பட்டு, அங்கங்கள் சிதைக்கப்பட்ட பெரும் யானைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நாரைகளை {அன்றில் பறவைகளைப்} போலக் கதறிக் கொண்டு பூமியில் விழத் தொடங்கின.

நகுலனும், சகாதேவனும் (கௌரவக்) குதிரைப்படையின் மீது பாய்ந்தனர். தலையில் தங்க மாலை அணிந்தவையும், கழுத்துகளிலும், மார்பிலும் தங்க ஆபரணங்களால் அலங்கரிப்பட்டவையுமான பல குதிரைகள் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொல்லப்படுவதாகத் தெரிந்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பூமி, வீழ்ந்த குதிரைகளால் பரவி கிடந்தது. சில {குதிரைகள்} நாக்கிழந்திருந்தன; சில மூச்சுவிடச் சிரமப்பட்டன; சில தீனமான முனகலை வெளியிட்டன; மேலும் சில உயிரற்றுக் கிடந்தன. ஓ! மனிதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, பல்வேறு வகைகளிலான இத்தகு குதிரைகளுடன் கூடிய பூமியானது மிக அழகானதாகத் தெரிந்தது.

அதே வேளையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனால் அந்தப் போரில் கொல்லப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான மன்னர்களால் அவள் {பூமாதேவி} கடுமையான பிரகாசத்துடனும் தெரிந்தாள். உடைந்து போன தேர்கள், அறுபட்ட கொடிகள், கிழிந்த சாமரங்கள் மற்றும் விசிறிகள், துண்டுகளாக நொறுங்கிய வலிமைமிக்க ஆயுதங்கள், தங்க மாலைகள் மற்றும் ஆரங்கள், காது குண்டலங்களுடன் கூடிய தலைகள், (தலையில் இருந்து) தளர்ந்து விழுந்த தலைப்பாகைகள், கொடிமரங்கள், தேர்களின் அழகிய அடிமரங்கள், கட்டுக்கயிறுகள், கடிவாளங்கள் ஆகியவற்றால் பரவிக்கிடந்த அந்தப் பூமியானவள், வசந்த காலத்தில் மலர்களால் இறைக்கப்பட்டதைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தாள்.

இப்படியே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்டவர்களான சந்தனுவின் மகன் பீஷ்மர், தேர்வீரர்களில் முதன்மையான துரோணர், அஸ்வத்தாமன், கிருபர், கிருதவர்மன் ஆகியோரால் பாண்டவப் படை அழிவைச் சந்தித்தது.

அதைப் போலவே உமது படையும், சினத்தால் தூண்டப்பட்ட அடுத்த {எதிர்} தரப்பான பாண்டவ வீரர்களால் அதே போன்ற அழிவைச் சந்தித்தது” {என்றான் சஞ்சயன்}.

அரவான் – பிறப்பும்! இறப்பும்!! – பீஷ்ம பர்வம் பகுதி – 091-குதிரைகளுடன் விரைந்து வந்த அரவான்; அரவான் பிறப்பின் மர்மம்; விதவையான உலூபியை மனைவியாக ஏற்ற அர்ஜுனன்; அரவான் பிறப்பு; இந்திரலோகத்தில் இருந்த அர்ஜுனனுடன் அரவானின் சந்திப்பு; தக்க சமயத்தில் உதவும்படி கேட்ட அர்ஜுனனும், உறுதியளித்த அரவானும்; கௌரவப் படைக்கு அரவான் ஏற்படுத்திய அழிவு; அரவானை எதிர்த்த சகுனியின் தம்பிகள்; தன்னை எதிர்த்து வந்த சகுனியின் தம்பிகள் அறுவரில் ஒருவனைத் தவிர மற்ற ஐவரைக் கொன்ற அரவான்; அரவானை எதிர்த்து அலம்புசனை ஏவிய துரியோதனன்; அலம்புசனும், அரவானும் வெளிப்படுத்திய மாயைகள்; அரவானைக் கொன்ற அலம்புசன்; துரோணரின் ஆற்றல்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பெரும் வீரர்களின் படுகொலைகள் நிறைந்ததான அந்தக் கடும்போர் நடந்து கொண்டிருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுபலனின் புகழ்வாய்ந்த {செல்வப்பெருக்குள்ள} மகன் சகுனி, பாண்டவர்களை எதிர்த்து விரைந்தான்.

பகை வீரர்களைக் கொல்பவனான சாத்வத குலத்தின் ஹிருதிகன் மகனும் {கிருதவர்மனும்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாண்டவப் படையணியினரை எதிர்த்துப் போரிட விரைந்தான்.

நதிகளின் நாட்டில் பிறந்தவையும், காம்போஜ இனத்தில் சிறந்தவையும், ஆரட்டா, மஹீ, சிந்து மற்றும் வனாயுவை {நாடுகளைச்} சேர்ந்தவையும், வெண்ணிறம் கொண்டவையும், இறுதியாக மலை நாடுகளைச் சேர்ந்தவையும் எனப் பெரும் எண்ணிக்கையிலான குதிரைகளைக் கொண்டிருந்தவர்களும், புன்னகைத்துக் கொண்டிருந்தவர்களுமான (உமது தரப்பின்) பல வீரர்கள், (பாண்டவப் படையைச்) சூழ்ந்து கொண்டனர் [1]. அவ்வாறே, காற்றைப் போன்ற பெரும் வேகத்தைக் கொண்டவையும், தித்திரி இனத்தைச் சேர்ந்தவையுமான குதிரைகளால் (இன்னும் பிறர் அந்தப் {பாண்டவப்} படையைச்  சூழ்ந்து கொண்டனர்}.

மேலும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கவசத்துடன் கூடியவையும், தங்கள் வகையில் முதன்மையானவையும், காற்றின் வேகத்தைக் கொண்டவையுமான பல குதிரைகளைக் கொண்டிருந்தவனும், எதிரிகளைக் கொல்பவனுமான வலிமைமிக்க அர்ஜுனன் மகன் (அஃதாவது இராவான் {அரவான்}), அந்தப் (கௌரவப்) படையை அணுகினான் [2]. அழகானவனும், இராவான் {அரவான்} என்ற பெயரைக் கொண்டவனுமான அந்த அர்ஜுனனின் வீர மகன் {அரவான்}, புத்திசாலியான பார்த்தனால் {அர்ஜுனனால்}, நாகர்களின் மன்னனுடைய மகளிடம் {உலூபியிடம்} பெறப்பட்டவனாவான். கருடனால் அவளது கணவன் கொல்லப்பட்டதும், ஆதரவற்றவளாகவும், மகிழ்ச்சியற்ற ஆன்மா கொண்டவளாகவும் அவள் {உலூபி} ஆனாள். குழந்தையற்ற அவளை {உலூபியை}, உயர் ஆன்ம {நாக மன்னன்} ஐராவதன் அவனுக்கு (அர்ஜுனனுக்கு) அளித்தான். ஆசையின் {காமத்தின்} ஆதிக்கத்தில் தன்னிடம் வந்த அவளைப் பார்த்தன் {அர்ஜுனன்} தன் மனைவியாக ஏற்றுக் கொண்டான். இப்படியே அந்த அர்ஜுனன் மகன் {இராவான்}, வேறொருவன் மனைவியிடத்தில் பெறப்பட்டான் [3].

பார்த்தன் {அர்ஜுனன்} மீது வெறுப்பைக் கொண்ட தனது பொல்லாத சிற்றப்பனால் {அஸ்வசேனனால்} கைவிடப்பட்ட அவன் {அரவான்}, தனது தாயால் {உலூபியால்} பாதுகாக்கப்பட்டு நாகலோகத்தில் வளர்ந்தான். அழகனாகவும், பெரும் பலம் கொண்டவனாகவும், பல்வேறு திறமைகள் கொண்டவனாகவும், கலங்கடிக்கப்பட இயலாதவனாகவும் அவன் {அரவான்} இருந்தான்.

அர்ஜுனன் இந்திரலோகத்திற்குச் சென்றிருக்கிறான் எனக் கேள்விப்பட்ட அவன் {அரவான்}, விரைவாக அங்கே சென்றான். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், கலங்கடிக்கப்பட இயலாத ஆற்றலைக் கொண்டவனுமான இராவான் {அரவான்}, தன் தந்தையை {அர்ஜுனனை} அணுகி, முறையாக அவனை வணங்கி, கூப்பிய கரங்களுடன் அவனின் {அர்ஜுனனின்} முன்னிலையில் நின்றான். “நான் இராவான் {அரவான்}. நீர் அருளப்பட்டிருப்பீராக, ஓ! தலைவரே {அர்ஜுனரே}, நான் உமது மகனாவேன்” என்று உயர் ஆன்ம அர்ஜுனனிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டான். தன் தாயை {உலூபியை} அர்ஜுனன் சந்தித்தது தொடர்பான நிகழ்வுகள் அனைத்தையும் பின்னவனுக்கு {அர்ஜுனனுக்கு} அவன் {அரவான்} நினைவூட்டினான்.

அதன் பேரில், அந்த நிகழ்வுகள் அனைத்தையும், அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அவை நடந்தவாறே நினைவுகூர்ந்தான். தன்னைப் போன்றே திறமைசாலியாக இருந்த தனது மகனை அணைத்துக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, அந்த இந்திரலோகத்தில் மகிழ்ச்சியால் நிறைந்தான். பிறகு, தேவலோகத்தில் இருந்த அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட இராவான் {அரவான்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனால் தன் சொந்த காரியத்திற்காக “போர் நடக்கும்போது, நீ உதவ வேண்டும்” என்று (இந்த வார்த்தைகளில்) மகிழ்ச்சியுடன் கட்டளையிடப்பட்டான். “சரி {அப்படியே ஆகட்டும்}” என்று சொன்ன அவன் {அரவான்} அங்கிருந்து சென்றான் [4].

பெரும் வேகமும், அழகிய நிறமும் கொண்ட பெரும் எண்ணிக்கையிலான குதிரைகளுடன் கூடிய அவன் {அரவான்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இப்போது இந்தப் போர் நேரத்தில் வந்திருக்கிறான். தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், பல்வேறு நிறங்களிலானவையும், பெரும் வேகம் கொண்டவையுமான அந்தக் குதிரைகள், பெருங்கடலில் உள்ள அன்னங்களை {அன்னப்பறவைகளைப்} போலத் திடீரெனக் களத்தில் ஓடின {துள்ளிக் குதித்தன}. உமது குதிரைகளின் மேல் பெரும் வேகத்துடன் பாய்ந்த அவை {அக்குதிரைகள்}, மார்போடு மார்பாகவும், மூக்கோடு மூக்காகவும் மோதின. (உமது குதிரைகளை எதிர்த்து) மோதிய மூர்க்கத்தனத்தால் பீடிக்கப்பட்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திடீரென அவை பூமியில் விழுந்தன.

அந்தக் குதிரைகளும், உமது குதிரைகளும் மோதிக் கொண்டதன் விளைவாக, கருடனின் திடீர்த்தாக்குதலின்போது கேட்கப்படும் பெரும் ஒலிகள் அப்போது கேட்கப்பட்டன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் குதிரைகளைச் செலுத்தியவர்கள் இப்படி அந்தப் போரில் ஒருவரையொருவர் எதிர்த்து மோதி, ஒருவரையொருவர் கடுமையாகக் கொல்லத் தொடங்கினர். கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும் இருந்த அந்தப் பொது மோதலில், (போரின் அழுத்தத்தில் இருந்து தப்பித்த) இருதரப்பு குதிரைகளும், களமெங்கும் முரட்டுத்தனமாக ஓடிக்கொண்டிருந்தன. ஒருவர் கணைகளால் மற்றவர் எனப் பலவீனமடைந்த துணிச்சல்மிக்க {குதிரை} வீரர்கள், தங்களுக்குக் கீழ் உள்ள குதிரைகள் கொல்லப்பட்டும், முயற்சியால் களைத்துப் போயும், ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு மாண்டு போனார்கள்.

பிறகு அந்தக் குதிரைப் படைப்பிரிவுகள் குறைந்து, எஞ்சியவை மட்டுமே உயிர் பிழைத்த போது, பெரும் அறிவைக் கொண்ட சுபலன் மகனுடைய {சகுனியின்} தம்பிகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (கௌரவப்படையின் வியூகத்தில் இருந்து) வெளிப்பட்டு, வேகம் மற்றும் வலுவான மோதலில் புயலுக்கு ஒப்பானவையும், நன்கு பயிற்சி கொடுக்கப்பட்டவையும், முதிர்ந்ததாகவோ, மிக இளமையாகவோ இல்லாதவையுமான அற்புதமான குதிரைகளில் ஏறிக் களத்தின் முன்னணிக்கு வந்தனர் [5]. பெரும் பலம் படைத்தவர்களும், சகுனியாலும், பெரும் வீரமிக்கத் தங்கள் படையாலும் உதவப்பட்டவர்களும், கவசமணிந்தவர்களும், போரில் நிபுணர்களும், கடுமையான முகத்தோற்றம் கொண்டவர்களும், மிகப்பெரும் வலிமை கொண்டவர்களுமான கயன் {கஜன்}, கவக்ஷன் {கவரக்ஷன்}, விருஷபன் {விருஷகன்}, சர்மவான், ஆர்ஜபன் {ஆர்ஜயன்}, சுகன் என்ற அந்த ஆறு சகோதரர்களும், அந்த வலிமைமிக்க (கௌரவ) வியூகத்தை உடைத்துக் கொண்டு வெளிப்பட்டனர்.

(பாண்டவர்களின்) வெல்லப்பட முடியாத குதிரைப்படையைப் பிளந்தவர்களும், முறியடிக்கப்படக் கடினமானவர்களும், பெரும் படையின் துணை கொண்டவர்களுமான அந்தக் காந்தார வீரர்கள் {சகுனியின் தம்பிகள்}, சொர்க்கத்தை விரும்பி, வெற்றிக்காக ஏங்கி, மகிழ்ச்சியில் நிறைந்தபடியே அதற்குள் {பாண்டவர்களின் குதிரைப்படைக்குள்} ஊடுருவினர்.

மகிழ்ச்சி நிறைந்தவர்களாக இருக்கும் அவர்களைக் கண்ட வீர இராவான் {அரவான்}, பல்வேறு விதமான ஆபரணங்கள் மற்றும் ஆயுதங்களைத் தரித்திருந்த தனது வீரர்களிடம், “எதன் விளைவாக இந்தத் திருதராஷ்டிர வீரர்களின் ஆயுதங்கள் மற்றும் விலங்குகள் அழியுமோ, அந்த மேலான திட்டத்தை மேற்கொள்வீராக.” என்றான். “சரி {அப்படியே ஆகட்டும்}” என்று சொன்ன இராவானின் {அரவானின்} அந்த வீரர்கள் அனைவரும், வலிமைமிக்கவர்களும், வெல்லப்பட முடியாதவர்களுமான தார்தராஷ்டிரப் படைவீரர்களைக் கொல்லத் தொடங்கினர்.

இராவானின் {அரவானின்} படைப்பிரிவால் தங்கள் வீரர்கள் தூக்கி வீசப்படுவதைக் {கொல்லப்படுவதைக்} கண்ட அந்தச் சுபலனின் மகன்கள் அனைவரும், அதைப் பொறுக்க இயலாமல், இராவனை நோக்கி விரைந்து அனைத்துப் புறங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். இராவானைப் பின்தொடர்பவர்களை வேல்களால் தாக்க {தங்களைப் பின்தொடர்பவர்களுக்குக்} கட்டளையிட்ட அந்த வீரர்கள் {சகுனியின் தம்பிகள்}, பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியபடி களத்தில் திரிந்தார்கள்.

அந்த உயர் ஆன்ம வீரர்களின் வேல்களால் துளைக்கப்பட்ட இராவான் {அரவான்}, வேணுகத்தால் தாக்கப்பட்ட யானையைப் போலத் (தன் காயங்களில் இருந்து) ஒழுகும் இரத்தத்தால் நனைந்தான். மார்பு, முதுகு, விலாப்பகுதிகள் ஆகியவற்றில் ஆழமான காயத்தை அடைந்து, தனியாளாகப் பலரோடு மோதினாலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவன் {அரவான்}, தனது (இயல்பான) உறுதியில் இருந்து நழுவவில்லை.

உண்மையில், சினத்தால் தூண்டப்பட்ட இராவான் {அரவான்}, அந்தப் போரில் கூர்மையான கணைகளால் அந்த எதிரிகளைத் துளைத்து, அவர்கள் அனைவரையும் உணர்விழக்கச் செய்தான். மேலும் அந்த எதிரிகளைக் கொல்பவன் {அரவான்}, தன் உடலில் இருந்த வேல்களைப் பிடுங்கி, அவற்றைக் கொண்டே போரில் சுபலன் மகன்களைத் தாக்கினான். பிறகு, பளபளக்கும் தன் வாளை உறையில் இருந்து உருவி கொண்டு, ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்டு, சுபலன் மகன்களை அம்மோதலில் கொல்ல விரும்பியவனாகக் காலாளாகவே விரைந்தான்.

எனினும், தங்கள் உணர்வுகள் மீண்ட சுபலனின் மகன்கள் கோபத்தால் தூண்டப்பட்டு மீண்டும் இராவானை {அரவானை} நோக்கி விரைந்தனர் {எதிர்த்தனர்}. இருப்பினும், தன் பலத்தில் செருக்குடையவனான இராவான் {அரவான்}, தன் கரவேகத்தை வெளிப்படுத்தியபடி, தன் வாளுடன் அவர்கள் அனைவரையும் நோக்கிச் சென்றான். அவனைப் {அரவானைப்} போலவே பெரும் சுறுசுறுப்புடன் அந்தச் சுபலனின் மகன்கள், வேகமான தங்கள் குதிரைகளில் சென்றாலும், (காலாளாக நின்ற) அந்தவீரனைத் {அரவானைத்} தாக்கும் வாய்ப்பை அவர்கள் காணவில்லை. அப்போது காலாளாக நின்ற அவனை {அரவானைக்} கண்ட அவனது எதிரிகள், நெருக்கமாக அவனைச் சூழ்ந்து கொண்டு, அவனைச் சிறைபிடிக்க விரும்பினர்.

எதிரிகளை நொறுக்குபவனான அவன் {அரவான்} பிறகு, தன் அருகிலே நெருங்கிய அவர்களைக் கண்டு, தன் வாளால் அவர்களது வலது மற்றும் இடது கரங்களை வெட்டி, அவர்களது மற்ற அங்கங்களையும் சிதைத்தான். அப்போது, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அவர்களது கரங்களும், அவர்களது ஆயுதங்களும், கீழே பூமியில் விழுந்தன. மேலும் அங்கங்கள் சிதைந்த அவர்களும் உயிரிழந்து கீழே களத்தில் விழுந்தனர். தன் மேனியில் பல காயங்களுடன் கூடிய விருஷபன் {விருஷகன்} மட்டுமே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வீரர்களை அழித்த அந்தப் பயங்கரப் போரில் இருந்து (உயிருடன்) தப்பித்தான்.

போர்க்களத்தில் கிடந்த அவர்களைச் {சகுனியின் தம்பிகளைக்} கண்ட உமது மகன் துரியோதனன், கோபத்தால் தூண்டப்பட்டு, பயங்கர முகத்தோற்றம் கொண்ட ராட்சசனும், மாயை அறிந்த பெரும் வில்லாளியும், எதிரிகளைத் தண்டிப்பவனும், பகன் கொல்லப்பட்டதன் விளைவால் பீமசேனனிடம் பகையுணர்வு கொண்டவனுமான ரிஷ்யசிருங்கனின் மகனிடம் [6] {ஆர்ஸ்யசிருங்கியிடம்} (அலம்புசனிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! வீரா {அலம்புசா}, வலிமைமிக்கவனும், மாயை அறிந்தவனுமான பல்குனன் மகன் {அர்ஜுனன் மகனான அரவான்}, எப்படி எனது படைகளை அழித்து, எனக்குக் கடும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறான் என்பதைப் பார். நீயும், ஓ! ஐயா {அலம்புசா}, விரும்பிய எந்த இடத்திற்கும் செல்ல இயன்றவனாகவும், மாயசக்திகள் கொண்ட ஆயுதங்கள் அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கிறாய். பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} நீ பகைமையை விரும்புபவனாகவும் இருக்கிறாய். எனவே, இவனை {அரவானை} நீ போரில் கொல்வாயாக” என்றான் {துரியோதனன்}. “சரி {அப்படியே ஆகட்டும்}” என்று சொன்ன அந்தப் பயங்கர முகம் கொண்ட ராட்சசன் {அலம்புசன்}, வலிமைமிக்கவனும், இளமையானவனுமான அர்ஜுனன் மகன் {அரவான்} இருந்த இடத்திற்குச் சிங்க முழக்கத்துடன் சென்றான்.

மேலும் அவன் {அலம்புசன்}, போரில் நிபுணர்களும், பளபளக்கும் வேல்களைக் கொண்டு போரிடுபவர்களும், {விலங்குகள் அல்லது வாகனங்களில்} நல்லேற்றம் கொண்டவர்களும், தாக்குவதில் திறன்மிக்கவர்களுமானத் தன் படைப்பிரிவின் வீரர்களால் ஆதரிக்கப்பட்டிருந்தான். வலிமைமிக்க இராவத்தைப் {அரவானைப்} போரில் கொல்ல விரும்பிய அவன் {அலம்புசன்}, (கௌரவர்களிடம்) எஞ்சியிருந்த அந்தச் சிறந்த குதிரைப்படைப் பிரிவுடன் சென்றான். சினத்தால் தூண்டப்பட்டு, அந்த ராட்சசனைக் கொல்ல விரும்பி விரைந்து சென்றவனும், எதிரிகளைக் கொல்பவனுமான அந்த வீர இராவத் {அரவான்}, அவனை {அலம்புசனை} எதிர்க்கத் தொடங்கினான்.

எதிர்த்து வரும் அவனை {அரவானைக்} கண்ட அந்த வலிமைமிக்க ராட்சசன் {அலம்புசன்}, தன் மாய சக்திகளை வெளிக்காட்டும்படி, விரைவாகத் தன்னை அமைத்துக் கொண்டான் {மாயையை வெளிப்படுத்த தொடங்கினான்}. பிறகு அந்த ராட்சசன் {அலம்புசன்}, ஈட்டிகள் மற்றும் கோடரிகளைத் தரித்தவர்களான பயங்கர ராட்சசர்களால் செலுத்தப்பட்ட மாயக் குதிரைகள் பலவற்றை உண்டாக்கினான். எனினும், சினத்துடன் எதிர்த்தவர்களும், நன்றாகத் தாக்கும் திறமை கொண்டவர்களுமான அந்த இரண்டாயிரம் {2000} பேரும் (இராவானின் {அரவானின்} படைகளுடன் மோதலுக்காகப் பாய்ந்த போது) விரைவாக யமலோகம் அனுப்பப்பட்டனர் [7]. இருவரின் படைகளும் அழிந்ததும், போரில் வெல்லப்பட இயலாதவர்களான அவ்விருவரும், விருத்திரனையும், வாசவனையும் {இந்திரனையும்} போலத் தங்களுக்குள் மோதிக் கொண்டனர்.

போரில் வெல்லக் கடினமான அந்த ராட்சசன் {அலம்புசன்}, தன்னை நோக்கி வருவதைக் கண்ட வலிமைமிக்க இராவத் {அரவான்}, சினத்தால் தூண்டப்பட்டு, அவனது தாக்குதலைத் தடுக்கத் தொடங்கினான். அந்த ராட்சசன் {அலம்புசன்} தன்னருகே வந்ததும், தன் வாளால் வேகமாக அவனது வில்லை அறுத்த இராவத் {அரவான்}, அவனது கணைகள் ஒவ்வொன்றையும் ஐந்து துண்டுகளாக வெட்டினான். தன் வில் வெட்டப்பட்டதைக் கண்ட அந்த ராட்சசன் {அலம்புசன்}, கோபத்தில் இருந்த இராவத்தை {அரவானைத்} தன் மாயையால் குழப்பியபடி விரைவாக ஆகாயத்தில் எழுந்தான்.

உடலின் முக்கிய அங்கங்களைப் பற்றிய அறிவுடையவனும், விரும்பிய எவ்வுருவத்தையும் ஏற்க வல்லவனும், அணுகப்பட முடியாதவனுமான இராவத்தும் {அரவானும்}, அந்த ராட்சசனை {அலம்புசனைத்} தன் மாயையால் குழப்பி வானத்தில் எழுந்து, பின்னவனின் {அலம்புசனின்} அங்கங்களை வெட்டத் தொடங்கினான். இப்படியே அந்த ராட்சசனின் அங்கங்கள் பல துண்டுகளாக வெட்டப்பட்டன [8].

எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது அந்த ராட்சசன் {அலம்புசன்} இளமையான தோற்றத்துடன் மீண்டும் பிறந்தான். அவர்களுக்கு மாயை இயல்பானதாக இருந்தது. மேலும் அவர்களது வயதும், உருவமும் அவ்விருவரின் விருப்பத்தைப் பொறுத்தே இருந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துண்டுகளாக வெட்டப்பட்ட அந்த ராட்சசனின் {அலம்புசனின்} அங்கங்கள் அழகாகக் காட்சி அளித்தன. சினத்தால் தூண்டப்பட்ட இராவத் {அரவான்}, தன் கூரிய கோடரியால் வலிமைமிக்க அந்த ராட்சசனை {அலம்புசனை} மீண்டும் மீண்டும் வெட்டினான்.

வலிமைமிக்க இராவத்தால் {அரவானால்} இப்படி ஒரு மரத்தைப் போன்று துண்டுகளாக வெட்டப்பட்ட அந்தத் துணிச்சல்மிக்க ராட்சசன் {அலம்புசன்} கடுமையாக முழங்கினான். அவனது அந்த முழக்கங்கள் {மற்றவர்களை} செவிடாக்குபவையாக இருந்தன. கோடரியால் சிதைக்கப்பட்ட அந்த ராட்சசன் {அலம்புசன்}, இரத்தத்தை வெள்ளமாகச் சிந்தினான். பிறகு, ரிஷ்யசிருங்கனின் அந்த வலிமைமிக்க மகன் (அலம்புசன்), சக்தியால் தன் எதிரி சுடர்விடுவதைக் கண்டு, தணியாத கோபம் கொண்டு அம்மோதலில் தன் ஆற்றலைப் பயன்படுத்தினான்.

கடுமையான மிகப் பெரிய வடிவை ஏற்ற அவன் {அலம்புசன்}, அர்ஜுனனின் வீர மகனான புகழ்பெற்ற இராவத்தைப் {அரவானைப்} பிடிக்கக் கடுமையாக முயன்றான். அங்கிருந்த போராளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, போரின் முன்னணியில் அந்தப் பொல்லாத ராட்சசனால் உண்டாக்கப்பட்ட மாயையைக் கண்டவனும் மாயையை அறிந்தவனுமான இராவத் {அரவான்}, கோபத்தால் தூண்டப்பட்டு, அந்த மாயையைத் தணிக்கும் வகையில் தானும் மாயையைக் கைக்கொண்டான் {பதிலுக்கு மாயையின் மூலம் போர் புரிந்தான்}.

போரில் இருந்து எப்போதும் பின்வாங்காதவனான அந்த வீரன் {அரவான்} கோபத்தால் தூண்டப்பட்ட போது, அவனது தாய்வழியைச் சேர்ந்தவனான நாகன் {?} ஒருவன் அவனிடம் {அரவானிடம்} வந்தான். அந்தப் போரில் அனைத்துப் புறங்களிலும் நாகர்களால் சூழப்பட்ட அந்த நாகன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனந்தனைப் போன்ற வலிமைமிக்கப் பெரும் வடிவை ஏற்றான் [9]. பிறகு, பல்வேறு வகைகளிலான நாகர்களால் அவன் அந்த ராட்சசனை மறைத்தான். அந்த நாகர்களால் மறைக்கப்பட்ட போது, ராட்சசர்களில் காளையான அவன் {அலம்புசன்}, ஒருக்கணம் சிந்தித்து, கருட வடிவை ஏற்று, அந்தப் பாம்புகளை விழுங்கினான்.

தன் தாயின் வழி வந்த அந்த நாகன் மாயையின் மூலம் விழுங்கப்பட்ட போது, இராவான் {அரவான்} குழப்பமடைந்தான் {திகைத்து நின்றான்}. {அரவான்} அந்நிலையில் இருந்த போதே, அந்த ராட்சசன் {அலம்புசன்} தன் வாளால் அவனைக் {அரவானைக்} கொன்றான். காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டதும், கிரீடத்துடன் கூடியதும், தாமரையையோ, சந்திரனையோ போன்று அழகானதுமான இராவத்தின் {அரவானின்} தலையை அலம்புசன் பூமியில் வீழ்த்தினான்.

அர்ஜுனனின் அந்த வீர மகன் {அரவான்}, அந்த ராட்சசனால் {அலம்புசனால்} இப்படிக் கொல்லப்பட்டபோது, மன்னர்கள் அனைவருடன் கூடிய அந்தத் தார்தராஷ்டிரப் படை துயரில் இருந்து விடுபட்டது. இவ்வளவு கடுமையாக இருந்த அந்தப் பெரும்போரில், இரு படைப்பிரிவுகளுக்குள்ளும் நேர்ந்த படுகொலைகள் மிக மோசமானவையாக இருந்தன. ஒன்றோடொன்று சிக்கிக் கொண்ட குதிரைகள், யானைகள், காலாட்படை வீரர்கள் ஆகியோர் யானைகளால் கொல்லப்பட்டனர். காலாட்படை வீரர்களால் பல குதிரைகளும், யானைகளும் கொல்லப்பட்டன. அந்தப் பொதுவான மோதலில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படை மற்றும் அவர்களது படை ஆகிய இரண்டையும் சேர்ந்த காலாட்படை வீரர்களும், தேர்ப் படைகளும், பெரும் எண்ணிக்கையிலான குதிரைகளும் தேர்வீரர்களால் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையில், தன் மடியில் பிறந்த மகன் {அரவான்} கொல்லப்பட்டதை அறியாத அர்ஜுனன், பீஷ்மரைப் பாதுகாத்த பல மன்னர்களை அப்போரில் கொன்றான். மேலும் உமது படையின் வீரர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிருஞ்சயர்களும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு (போரெனும் நெருப்பில்) தங்கள் உயிர்களையே ஆகுதியாக ஊற்றினர். கலைந்த கேசத்துடன் கூடிய தேர்வீரர்கள் பலர், தங்கள் கைப்பிடியில் இருந்து வாள்களும், விற்களும் விழுந்த நிலையில் வெறுங்கைகளாலேயே ஒருவரோடொருவர் மோதினர்.

உயிரையே ஊடுருவவல்ல கணைகளைக் கொண்ட வலிமைமிக்கப் பீஷ்மரும், வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரைக் கொன்று, பாண்டவப் படையை (அப்போது) நடுங்கச் செய்தார். யுதிஷ்டிரனின் படையைச் சேர்ந்த போராளிகள் பலரும், யானைகள், குதிரைவீரர்கள், தேர்வீரர்கள், குதிரைகள் பலவும் அவரால் {பீஷ்மரால்} கொல்லப்பட்டன. அந்தப் போரில் பீஷ்மரின் ஆற்றலைக் கண்ட போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அது {அவ்வாற்றல்} சக்ரனுக்கு {இந்திரனுக்கு} இணையானதாக எங்களுக்குத் தோன்றியது.

பீமேசனனின் ஆற்றலும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} பார்ஷதனின் {திருஷ்டத்யும்னனின்} ஆற்றலும் (பீஷ்மரின் ஆற்றலுக்குச்) சற்றும் குறைந்ததாக இல்லை. அதே போல, சாத்வத குலத்தின் பெரும் வில்லாளியின் {சாத்யகியின்} ஆற்றலும் அதற்கு நிகரான கடுமையைக் கொண்டிருந்தது. இருப்பினும், துரோணரின் ஆற்றலைக் கண்ட பாண்டவர்கள் அச்சத்தால் பீடிக்கப்பட்டனர். உண்மையில் அவர்கள் {பாண்டவப் படையினர்}, “துரோணரால் நம் துருப்புகள் அனைத்தையும் தனியாகவே கொல்ல முடியும். அப்படி இருக்கையில், உலகத்தில் தங்கள் துணிச்சலுக்காகப் புகழ்பெற்ற போர் வீரர்களின் பெரும்படையால் சூழப்பட்டிருக்கும் அவரைக் குறித்து என்ன சொல்ல முடியும்?” என்றே நினைத்தனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரால் பீடிக்கப்பட்ட பார்த்தனும் {அர்ஜுனனும்} இதையே சொன்னான் [10].

அந்தக் கடும்போர் நடந்து கொண்டிருந்த போது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, எந்தப் படையின் துணிச்சல் மிக்கப் போராளிகளும், எதிர்தரப்பினரை மன்னிக்கவில்லை {பொறுத்துக் கொள்ளவில்லை}. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது படை மற்றும் பாண்டவப்படை ஆகிய இரண்டையும் சேர்ந்த வலிமைமிக்க வில்லாளிகள், கோபத்தால் தூண்டப்பட்டு, ஏதோ தாங்கள் ராட்சசர்களாலும், பேய்களாலும் {அசுரர்களாலும்} பீடிக்கப்பட்டவர்களைப் போல ஒருவரோடொருவர் சீற்றத்துடன் போரிட்டனர். உண்மையில், பேய்களின் {அசுரர்களின்} போராகக் கருதப்படுவதும், உயிர்களுக்குப் பெரும் அழிவை ஏற்படுத்துவதுமான அந்தப் போரில் தன் உயிரை வைத்துக் கொள்ள நினைப்பவன் ஒருவனையும் நாங்கள் [11] காணவில்லை” என்று கூறினான்.

துரியோதனனை நிந்தித்த கடோத்கசன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 092-அரவான் கொல்லப்பட்டதைக் கண்டு கோபத்துடன் கர்ஜித்த கடோத்கசன்; கடோத்கசனைக் கண்டு அஞ்சி நடுங்கிய கௌரவத் துருப்புகள்; கடோத்கசனை எதிர்த்த துரியோதனன்; துரியோதனனை நிந்தித்த கடோத்கசன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, இராவத் {அரவான்} கொல்லப்பட்டதை அவர்கள் {பாண்டவர்கள்} கேட்டபோது, போரில் வலிமைமிக்கப் பார்த்தன் {அர்ஜுனன்} [1] செய்தவை அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போரில் இராவத் {அரவான்} கொல்லப்பட்டதைக் கண்டவனும், பீமசேனனின் மகனுமான ராட்சசன் கடோத்கசன் பேரொலியுடன் முழக்கங்களிட்டான். அம்முழக்கங்களின் ஒலிவன்மையின் விளைவால் கடலைத் தன் ஆடைகளாகக் கொண்ட பூமியானவள், தன் மலைகள் மற்றும் காடுகளுடன் வன்மையாக நடுங்கத் தொடங்கினாள். ஆகாயமும், திக்குகள் மற்றும் துணை திக்குகளைக் கொண்ட கோணங்கள் இரண்டும் என அனைத்தும் நடுங்கத் தொடங்கின. பேரொலிமிக்க அவனது முழக்கங்களைக் கேட்டு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது துருப்பினரின் [2] தொடைகளும், பிற அங்கங்களும் நடுங்கத் தொடங்கின, மேலும், அவர்களது மேனியில் வியர்வையும் தோன்றியது.

மேலும், உமது போராளிகள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இதயத்தில் மகிழ்ச்சியற்றவர்களாக ஆனார்கள். சிங்கத்தைக் கண்டு அஞ்சிய யானை ஒன்றைப் போல, களமெங்கிலும் இருந்த வீரர்கள் அசையாமல் நின்றனர். இடியின் இரைச்சலை ஒத்த பேரொலிமிக்க முழக்கங்களையிட்ட அந்த ராட்சசன் {கடோத்கசன்}, பயங்கர வடிவொன்றை ஏற்று, சுடர்மிகும் சூலமொன்றைத் தன் கையில் ஏந்திக் கொண்டு, பல்வேறு வகையான ஆயுதங்கள் தரித்தவர்களும், கடும் வடிவங்களைக் கொண்டவர்களுமான ராட்சசக் காளைகள் பலரால் சூழப்பட்டபடி, யுக முடிவின் போதான அந்தகனைப் போலச் சினம் தூண்டப்பட்ட நிலையில் முன்னேறினான்.

பயங்கர முகத் தோற்றம் கொண்டவனும், கோபத்தில் முன்னேறுபவனுமான அவனையும் {கடோத்கசனையும்}, கிட்டத்தட்ட தன் துருப்புகள் அனைத்தும் அந்த ராட்சன் மீது கொண்ட அச்சத்தால் ஓடுவதையும் கண்ட மன்னன் துரியோதனன், தனது வில்லை எடுத்துக் கொண்டு, நாணில் கணையைப் பொருத்தி, சிங்கத்தைப் போல மீண்டும் மீண்டும் முழங்கியபடி, அந்தக் கடோத்கசனை எதிர்த்து விரைந்தான். அவனுக்கு {துரியோதனனுக்குப்} பின்னால், மலைகளைப் போன்று பெரியவையும், மதநீர் ஒழுகிக் கொண்டிருந்தவையுமான பத்தாயிரம் யானைகளுடன் வங்கர்களின் ஆட்சியாளனும் {பகதத்தனும்} [3] சென்றான்.

அந்த யானைப் படையால் சூழப்பட்டு (இப்படி) முன்னேறும் உமது மகனை {துரியோதனனைக்} கண்ட அந்த இரவு உலாவி {கடோத்கசன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் பெரிதாகக் கொழுந்துவிட்டெரிந்தான். பிறகு, வல்லமைமிக்க அந்த ராட்சசனுக்கும் {கடோத்கசனுக்கும்}, துரியோதனனின் துருப்புகளுக்கும் இடையில், உச்சபட்சத் தீவிரத்துடன் கூடியதும், மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதுமான ஒரு போர் தொடங்கியது. (அடிவானில்) எழுந்த மேகத்தைப் போல இருந்த அந்த யானைப் படையைக் கண்டு சினத்தால் எரிந்த அந்த ராட்சசர்கள், மின்னலுடன் கூடிய மேகங்களைப் போலக் கையில் ஆயுதங்களுடன், பல்வேறு விதங்களிலான முழக்கங்களிட்டபடி, அதை {அந்த யானைப்படையை} நோக்கி விரைந்தனர். கணைகள், ஈட்டிகள், வாள்கள் {ரிஷ்டிகள்}, நாராசங்கள் {நீண்ட கணைகள்} ஆகியவற்றாலும், மேலும், சூலங்கள், உலக்கைகள், போர்க்கோடரிகள், பிண்டிபாலங்கள் {குறுங்கணைகள்} ஆகியவற்றாலும் அவர்கள் {ராட்சசர்கள்}, அந்த யானைப் படையைத் தாக்கத் தொடங்கினர். கொடுமுடிகளாலும் {மலை முகடுகளாலும்}, பெரும் மரங்களாலும் அவர்கள் {அந்த ராட்சசர்கள்} பெரும் யானைகளைக் கொன்றார்கள்.

ராட்சசர்கள் அந்த யானைகளைக் கொன்ற போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவற்றில் சில மத்தகம் நொறுங்கியும், சில குருதியில் குளித்தும், சில தங்கள் அங்கங்கள் உடைக்கப்பட்டும், வெட்டப்பட்டும் கிடப்பதை நாங்கள் கண்டோம். இறுதியாக அந்த யானைப்படை உடைக்கப்பட்டு, குறைக்கப்பட்ட போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தின் வசப்பட்ட துரியோதனன், தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாது, அந்த ராட்சசர்களை எதிர்த்து விரைந்தான். பிறகு அந்த வலிமைமிக்க வீரன் {துரியோதனன்}, அந்த ராட்சசர்கள் மீது கூரிய கணைகளின் மேகங்களை {கணைக்களின் கூட்டத்தை} ஏவினான். மேலும் அந்தப் பெரும் வில்லாளி {துரியோதனன்} அவர்களின் {ராட்சச} வீரர்களில் முதன்மையானோர் பலரையும் கொன்றான்.

சினத்தால் கொழுந்துவிட்டெரிந்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான உமது மகன் துரியோதனன், ஓ! பாரதர்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, நான்கு கணைகளைக் கொண்டு ராட்சசர்களில் முக்கியமானவர்களான வேகவான், மஹாருத்ரன் {மகாரௌத்ரன்}, வித்யுஜ்ஜிஹ்வன், பிரமாதி ஆகிய நால்வரைக் கொன்றான். பிறகு, அந்த அளவிடமுடியாத ஆன்மா {மனத்துணிவு} கொண்டன் {துரியோதனன்}, ஓ! பாரதர்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, அந்த ராட்சசன் {கடோத்கசன்} மீது, தடுப்பதற்குக் கடினமான கணைமாரியைப் பொழிந்தான்.

ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது மகனின் {துரியோதனனின்} அந்த அருஞ்செயலைக் கண்டவனும், பீமசேனனின் வலிமைமிக்க மகனுமான அவன் {கடோத்கசன்} கோபத்தால் சுடர்விட்டெரிந்தான். மின்னலைப் போன்ற பிரகாசத்துடன் கூடிய தனது பெரிய வில்லை வளைத்த அவன் {கடோத்கசன்}, கோபம்நிறைந்த துரியோதனனிடம் மூர்க்கமாக விரைந்தான். காலத்தினால் ஏவப்பட்ட அந்தகனைப் போல (இப்படித்) தன்னிடம் விரையும் அவனைக் {கடோத்கசனைக்} கண்ட உமது மகன் துரியோதனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிஞ்சிற்றும் நடுங்கவில்லை.

பிறகு, கோபத்தால் சிவந்த கண்களுடன், ஆத்திரத்தால் தூண்டப்பட்ட கடோத்கசன், உமது மகனிடம் {துரியோதனனிடம்}, “கொடியவனான உன்னால் நெடுநாளைக்கு நாட்டை விட்டுத் துரத்தப்பட்டவர்களான எனது தந்தைமாரிடமும், தாயிடமும் பட்டக் கடனிலிருந்து நான் இன்று விடுபடப் போகிறேன். ஓ! மன்னா {துரியோதனா}, பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, உன்னால் பகடையாட்டத்தில் வீழ்த்தப்பட்டனர். நோயுற்றிருந்ததால் ஒரே ஆடை உடுத்தியிருந்த துருபதன் மகளான கிருஷ்ணையும் {திரௌபதியும்} சபைக்குக் கொண்டு வரப்பட்டாள். ஓ! மிகப் பொல்லாதவனே {துரியோதனா}, அவளுக்கு உன்னால் பல்வேறு வழிகளிலும் பெரும் தொல்லைகள் கொடுக்கப்பட்டன.

மரங்களடர்ந்த தனது ஓய்வில்லத்தில் {ஆசிரமத்தில்} அவள் {திரௌபதி} வசித்து வந்த போது, உன் நலன் விரும்பியும், சிந்துக்களின் ஆட்சியாளனுமான அந்தத் தீயவன் {ஜெயத்ரதன்}, என் தந்தைமாரை பொருட்படுத்தாது, மேலும் அவளைத் துன்புறுத்தினான். நீ களத்தைவிட்டு வெளியேறாமல் இருந்தாயானால், ஓ! உன் குலத்தில் இழிந்தவனே {துரியோதனா}, இவற்றிற்காகவும், இன்னும் பிற தவறுகளுக்காகவும் நான் இன்று {உன்னைப்} பழி தீர்ப்பேன்” என்றான் {கடோத்கசன்}.

இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த ஹிடிம்பை மகன் {கடோத்கசன்}, தன் பெரிய வில்லை வளைத்து, தன் (அடி) உதட்டைத் தனது பற்களால் கடித்து, கடைவாயை நாவால் நனைத்து {நக்கி}, மழைக்காலத்தில், மழையின் நீர்த்தாரைகளை மலைச்சாரலில் பொழியும் மேகங்களின் திரளைப் போல, அதிகளவிலான {கணை} மழையால் துரியோதனனை மறைத்தான்” {என்றான் சஞ்சயன்}.

கடோத்கசனிடம் சிக்கிய துரியோதனன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 093-கடோத்கசனின் கணைமாரியைத் தாங்கிக் கொண்ட துரியோதனன்; கடோத்கசனைத் தாக்கிய துரியோதனன்; துரியோதனனைக் கொல்ல விரும்பி ஈட்டியை ஓங்கிய கடோத்கசன்; இடையில் புகுந்த பகதத்தன்; பகதத்தன் யானையைக் கொன்ற கடோத்கசன்; வஜ்ராயுதம் போன்ற கணையை ஏவிய துரியோதனன்; கணைக்குத் தப்பிய கடோத்கசன்; கடோத்கசனின் முழக்கங்களைக் கேட்ட பீஷ்மர், துரோணரை எச்சரித்தது; துரியோதனனைக் காக்க கௌரவப்படையின் முன்னணி வீரர்கள் சென்றது; அவர்கள் அனைவரையும் கலங்கடித்தக் கடோத்கசன்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “{கடோத்கசனின்} அந்தக் கணைமாரி, தானவர்களே கூடத் தாங்கிக் கொள்ள {முடியாத அளவுக்குக்} கடினமானதாக இருந்தாலும், (வானத்திலிருந்து) பொழியும் மழையைத் தாங்கிக் கொள்ளும் ஒரு பெரும் யானையைப் போல, அந்தப் போரில் மன்னன் துரியோதனன் (அமைதியாக {பொறுமையாக}) அதைத் தாங்கிக் கொண்டான். பிறகு கோபத்தால் நிறைந்து, பாம்பைப் போலப் பெருமூச்சு விட்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மிக ஆபத்தான நிலையில் நிறுத்தப்பட்டான்.

பிறகு அவன் {துரியோதனன்}, கூர்முனை கொண்ட இருபத்தைந்து {25} நாராசங்களை ஏவினான். அவை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கந்தமாதனச் சாரலின் கடும் நஞ்சு கொண்ட சீற்றமிகு பாம்புகளைப் போல, அந்த ராட்சசர்களில் காளை {கடோத்கசன்} மீது பெரும் சக்தியுடன் பாய்ந்தன. அந்நாராசங்களால் துளைக்கப்பட்டதால், அந்த ராட்சசனின் {கடோத்கசனின்} உடலில் குருதி ஒழுகியது, அப்போது அவன் {கடோத்கசன்} மதநீர் ஒழுகும் ஒரு யானையைப் போலத் தெரிந்தான். அதன் பேரில் அந்த மனித ஊனுண்ணி {கடோத்கசன்}, (குரு) மன்னனின் {துரியோதனனின்} அழிவில் தன் இதயத்தை {மனத்தை} நிலைநிறுத்தினான்.

பிறகு அவன் {கடோத்கசன்}, மலையையே கூடத் துளைக்க வல்ல ஒரு பெரும் ஈட்டியை எடுத்துக் கொண்டான். பிரகாசமான பெரும் எரிகோளைப் {தூமகேதுவைப்} போல, ஒளியுடன் சுடர்விட்ட அது {ஈட்டி} மின்னலைப் போலவே ஒளியுடன் எரிந்தது. மேலும் அந்த வலிய கரங்களைக் கொண்ட கடோத்கசன், உமது மகனைக் {துரியோதனனைக்} கொல்ல விரும்பி அந்த ஈட்டியை உயர்த்தினான்.

உயர்த்தப்பட்ட அந்த ஈட்டியைக் கண்ட வங்கர்களின் ஆட்சியாளன், மலை போன்ற ஒரு பெரும் யானையின் மீதேறி அந்த ராட்சசனை {கடோத்கசனை} நோக்கிச் சென்றான். போர்க்களத்தில், பெரும் வேகம் கொண்ட வலிமைமிக்க யானையுடன் சென்ற பகதத்தன் [1], துரியோதனன் தேரின் முன்னிலையில் தன்னை நிறுத்திக் கொண்டான். அந்த யானையைக் கொண்டு உமது மகனை {துரியோதனனை} அவன் முழுமையாக மறைத்து விட்டான். வங்கர்களின் புத்திசாலி மன்னனால் {பகதத்தனால்} இப்படி (துரியோதனன் தேருக்குச் செல்லும்) வழி மறைக்கப்பட்டதைக் கண்ட கடோத்கசனின் கண்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தில் சிவந்தன. ஏற்கனவே உயர்த்திப் பிடிக்கப்பட்டிருந்த அந்தப் பெரும் ஈட்டியை அவன் {கடோத்கசன்} அந்த யானையின் மீது ஏவினான்.

கடோத்கசன் கரங்களில் இருந்து ஏவப்பட்ட அந்த ஈட்டியால் தாக்குண்ட அந்த யானை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குருதியில் நனைந்து, பெரும் வேதனையுடன் கீழே விழுந்து இறந்தது. எனினும், வலிமைமிக்க அந்த வங்கர்களின் மன்னன் {பகதத்தன்}, அந்த யானையில் இருந்து விரைவாகக் குதித்துக் கீழே தரையில் இறங்கினான். அந்த யானைகளின் இளவரசன் கொல்லப்பட்டதையும், உடைந்து பின்வாங்கும் தன் துருப்புகளையும் கண்ட துரியோதனன் அப்போது கவலையில் நிறைந்தான். தான் வீழ்த்தப்பட்டிருந்தாலும், க்ஷத்திரியர்களின் கடமையைக் [2] கருதியும், தன் தனிப்பட்ட செருக்காலும் அந்த மன்னன் {துரியோதனன்} மலையென உறுதியாக நின்றான்.

கோபத்தால் நிறைந்து, ஊழித்தீயின் {யுக நெருப்பின்} சக்தியை ஒத்த ஒரு கூரிய கணையைக் கொண்டு குறிபார்த்த அவன் {துரியோதனன்}, கடுமையான அந்த இரவு உலாவியின் {கடோத்கசன்} மேல் அஃதை ஏவினான். இந்திரனின் வஜ்ராயுதத்தைப் போலச் சுடர்விட்டபடி தன்னை நோக்கி வரும் அந்தக் கணையைக் கண்ட உயர் ஆன்ம கடோத்கசன், தன் அசைவுகளின் வேகத்தால் {லாகவத்தால்} அதைக் கலங்கடித்தான் {அதில் இருந்து தப்பித்தான்}.

கோபத்தினால் கண்கள் சிவந்த அவன் {கடோத்கசன்}, யுகத்தின் முடிவில் தோன்றும் மேகங்களைப் போல மீண்டும் ஒரு முறை கடுமையாக முழக்கமிட்டு உமது துருப்புகள் அனைத்தையும் அச்சுறுத்தினான். அந்தப் பயங்கரமான ராட்சசனின் {கடோத்கசனின்} கடும் முழக்கங்களைக் கேட்ட சந்தனுவின் மகனான பீஷ்மர், ஆசானை {துரோணரை} அணுகி இவ்வார்த்தைகளைச் சொன்னார், “ராட்சசர்களால் உண்டாக்கப்படுவனவும், நாம் கேட்பனவுமான இந்தக் கடும் முழக்கங்கள், ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்} மன்னன் துரியோதனனுடன் போரிடுவதைக் குறிக்கிறது என்பதில் ஐயமில்லை. அந்த ராட்சசன் {கடோத்கசன்}, போரில் எந்த உயிரினத்தாலும் வெல்லப்பட முடியாதவனாவான் [3]. எனவே, நீங்கள் அருளப்பட்டிருப்பீராக {உங்களுக்கு மங்களமுண்டாகட்டும்}, அங்கே சென்று மன்னனை {துரியோதனனைக்} காப்பீராக. அருளப்பட்டவனான துரியோதனன், அந்த உயர் ஆன்ம ராட்சசனால் {கடோத்கசனால்} தாக்கப்படுகிறான். எனவே, எதிரிகளைத் தண்டிப்பவர்களே, இதுவே நமது உயரிய கடமையாகும் [4]” {என்றார் பீஷ்மர்}.

பாட்டனின் {பீஷ்மரின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், நேரத்தை இழக்காமல், {தங்களால்} இயன்ற அளவுக்குப் பெரும் வேகத்தோடு, குருக்களின் மன்னன் {துரியோதனன்} இருந்த இடத்திற்குச் சென்றனர். துரியோதனன், சோமதத்தன், பாஹ்லீகன், ஜெயத்ரதன், கிருபர், பூரிஸ்ரவஸ், சல்லியன், {கோசல மன்னன்} பிருஹத்பலனோடு கூடிய அவந்தியின் இளவரசர்கள் இருவர் {விந்தன் மற்றும் அனுவிந்தன்}, அஸ்வத்தாமர், விகர்ணன், சித்திரசேனன் மற்றும் விவம்சதி ஆகியோரை அவர்கள் சந்தித்தனர். இன்னும் பிற தேர்வீரர்கள் பல்லாயிரம் பேரும், அவர்களைப் பின்தொடர்வோர் அனைவரும் சேர்ந்து, கடுமையாகத் தாக்கப்பட்டிருந்த உமது மகன் துரியோதனைக் காக்க விரும்பி சென்றனர் [5].

அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களால் பாதுகாக்கப்பட்டு, பகை எண்ணங்களுடன் தன்னை நோக்கி வரும் அந்த வெல்லப்பட இயலாத படைப்பிரிவைக் கண்டவனும், ராட்சசர்களில் சிறந்தவனுமான அந்த வலிய கரங்களைக் கொண்ட கடோத்கசன், தண்டாயுதங்கள், உலக்கைகள் மற்றும் பல்வேறு வகைகளிலான பிற ஆயுதங்களைத் தரித்திருந்த தனது சொந்தங்களால் சூழப்பட்டபடி, கையில் பெரும் வில்லுடன், மைநாக மலையைப் போல உறுதியாக நின்றான். பிறகு, அந்த ராட்சசர்கள் ஒருபுறத்திலும், துரியோதனனின் படைப்பிரிவுகளில் முதன்மையான அந்தப் பிரிவு மறுபுறத்திலும் இருந்த அவர்களுக்கிடையில் மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தும் வகையிலான ஒரு கடும்போர் தொடங்கியது.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் நாணொலி எழுப்பும் விற்களின் பேரொலி, மூங்கில்கள் எரியும்போது உண்டாகும் ஒலியைப் போல அனைத்துப் புறங்களிலும் கேட்கப்பட்டது. போராளிகளின் கவசங்களில் பாயும் ஆயுதங்களால் உண்டாக்கப்பட்ட ஆரவாரவொலி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மலைகள் பிளக்கும் ஒலியை ஒத்திருந்தது. வீரர்களின் கரங்களில் இருந்து ஏவப்பட்ட வேல்கள் {தோமரங்கள்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தின் ஊடாகச் செல்லும் போது, சீறிப்பாயும் பாம்புகளைப் போலத் தெரிந்தன.

பிறகு, பெரும் கோபத்தால் தூண்டப்பட்டு, தன் பெரும் வில்லை வளைத்த அந்த வலிய கரங்களைக் கொண்ட ராட்சச இளவரசன் {கடோத்கசன்}, உரக்க முழங்கியபடி, ஆசானின் {துரோணரின்} வில்லை ஓர் அர்த்தச்சந்திரக் கணையால் சினத்துடன் துண்டித்தான்.

பிறகு, மற்றொரு பல்லத்தினால் {அகன்ற தலை கொண்ட கணையால்} சோமதத்தனின் கொடிமரத்தையும் வீழ்த்திய அவன் {கடோத்கசன்}, உரத்தக் கூச்சலுடன் முழங்கினான்.

மேலும், மூன்று {3} கணைகளால் பாஹ்லீகனின் நடுமார்பில் துளைத்தான்.

பிறகு, கிருபரை ஒரு கணையாலும், சித்திரசேனனை மூன்றாலும் {3 கணைகளாலும்} துளைத்தான்.

மேலும் மற்றொரு கணையால், வலுவான கரத்துடன், தன் வில்லை முழுமையாக வளைத்து, சரியாக ஏவி விகர்ணனின் தோள்ப்பூட்டைத் தாக்கினான். அதன் பேரில் பின்னவன் {விகர்ணன்}, தான் சிந்திய இரத்தத்தினால் மறைக்கப்பட்டு, கீழே தன் தேர்த்தட்டில் அமர்ந்தான்.

அளக்க முடியாத ஆன்மா கொண்ட அந்த ராட்சசன் {கடோத்கசன்}, சினத்தால் தூண்டப்பட்டு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பூரிஸ்ரவசின் மேல் பதினைந்து {15} கணைகளை ஏவினான். பின்னவனின் {பூரிஸ்ரவசின்} கவசத்தை ஊடுருவிய அவை பூமியில் நுழைந்தன.

அதன் பிறகு அவன் {கடோத்கசன்}, விவிம்சதி மற்றும் அஸ்வத்தாமனின் தேரைத் தாக்கினான். குதிரைகளின் கடிவாளங்களை விட்டுவிட்ட அவர்கள் {விவிம்சதியும், அஸ்வத்தாமனும்}, கீழே தங்கள் தேர்களின் முன்னிலையில் விழுந்தனர் [6].

மற்றுமொரு அர்த்தச்சந்திரக் கணையால் அவன் {கடோத்கசன்}, பன்றி வடிவம் பொறிக்கப்பட்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான ஜெயத்ரதனின் கொடிமரத்தை வீழ்த்தினான். மேலும், இரண்டாவது ஒரு கணையால் அவன் {கடோத்கசன்} பின்னவனின் {ஜெயத்ரதனின்} வில்லையும் அறுத்தான்.

பிறகு, கோபத்தால் சிவந்த கண்களைக் கொண்ட அவன் {கடோத்கசன்}, நான்கு கணைகளைக் கொண்டு, அவந்தியின் உயர் ஆன்ம மன்னனுடைய நான்கு குதிரைகளைக் கொன்றான்.

மேலும் அவன் {கடோத்கசன்}, முழுமையாக வளைக்கப்பட்ட தன்வில்லில் இருந்து ஏவப்பட்டதும், நன்கு கடினமாக்கப்பட்டதும், கூரியதுமான மற்றொரு கணையால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, {கோசல} மன்னன் பிருஹத்பலனைத் துளைத்தான். ஆழமாகத் துளைக்கப்பட்டுப் பெரும் வலியை உணர்ந்த பின்னவன் {பிருஹத்பலன்}, கீழே தன் தேர்த்தட்டில் அமர்ந்தான்.

பெருங்கோபத்தால் நிறைந்து, தன் தேரில் அமர்ந்திருந்த அந்த ராட்சசர்களின் இளவரசன் {கடோத்கசன்}, பிறகு, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்றவையும், கூர்முனை கொண்டவையுமான பிரகாசமான கணைகள் பலவற்றை ஏவினான். அவை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் சாதித்தவனான சல்லியனைத் துளைப்பதில் வென்றன” {என்றான் சஞ்சயன்}.

புறமுதுகிட்ட கௌரவர்கள்! – பீஷ்ம பர்வம் பகுதி – 094-கௌரவர்களைப் புறமுதுகிட்டோட செய்த கடோத்கசன்; பலரால் சூழப்பட்ட கடோத்கசனின் முழக்கங்கள்; கடோத்கசனின் உதவிக்குச் செல்லும்படி பீமனை ஏவிய யுதிஷ்டிரன்; கடோத்கசனின் உதவிக்குப் பாண்டவ வீரர்கள் பலர் விரைவது; மீண்டும் புறமுதுகிட்டோடிய கௌரவப் படை…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போர்க்களத்திலிருந்து (உமது படையின்) வீரர்கள் அனைவரையும் புறங்காட்டி ஓடச் செய்த ராட்சசன் கடோத்கசன், ஓ! பாரதர்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, பிறகு, துரியோதனனைக் கொல்ல விரும்பி அவனை நோக்கி விரைந்தான். மன்னனை {துரியோதனனை} நோக்கி பெரும் மூர்க்கத்துடன் விரையும் அவனைக் {கடோத்கசனைக்} கண்டவர்களும், போரில் அவனை வீழ்த்த இயலாதவர்களுமான உமது படையின் வீரர்கள் பலர், {பதிலுக்கு} அவனைக் {கடோத்கசனைக்} கொல்ல விரும்பி, அவனை நோக்கி விரைந்தார்கள். வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள், முழுமையாக ஆறு முழ நீளம் கொண்ட தங்கள் விற்களைகளை வளைத்துக் கொண்டும், சிங்கங்களின் கூட்டத்தைப் போலப் பேரொலியுடன் ஆரவாரம் செய்து கொண்டும் ஒன்று சேர்ந்து, அந்தத் தனி வீரனை {கடோத்கசனை} எதிர்த்து விரைந்தனர்.

பிறகு, கூதிர் காலத்தில், மழைநீர்த்தாரைகளால் மலைச்சாரலை மறைக்கும் மேகங்களைப் போல, அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்ட அவர்கள் தங்கள் கணைமாரியால் அவனை {கடோத்கசனை} மறைத்தார்கள். அக்கணைகளால் ஆழமாகத் துளைக்கப்பட்டுப் பெரும் வலியை உணர்ந்திருந்த அவன் {கடோத்கசன்}, அங்குசத்தால் துளைக்கப்பட்ட யானையைப் போல காணப்பட்டான்.

அப்போது அவன் {கடோத்கசன்}, கருடனைப் போல விரைவாக ஆகாயத்தில் எழுந்தான். ({அப்படி அவன்} அங்கே இருந்த போது), கூதிர்கால மேங்களைப் போலப் பேரொலிமிக்க முழக்கங்கள் பலவற்றைச் செய்த அவன் {கடோத்கசன்}, அந்தக் கடுங்குரலால், ஆகாயத்தையும், முக்கியத் திசைப்புள்ளிகள் மற்றும் துணைத் திசைப்புள்ளிகள் அனைத்தையும் எதிலொலிக்கச் செய்தான்.

ராட்சசனின் {கடோத்கசனின்} அம்முழக்கங்களைக் கேட்ட பிறகு பீமனிடம் பேசிய மன்னன் யுதிஷ்டிரன், ஓ! பாரதர்களில் தலைவரே {திருதராஷ்டிரரே}, அந்த எதிரிகளைத் தண்டிப்பவனிடம் {பீமனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ராட்சசனின் {கடோத்கசனின்} கடுமையான முழக்கத்தால் நாம் கேட்கும் இவ்வொலி, தார்தராஷ்டிரப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களுடன் அவன் போரிடுவதையே ஐயத்திற்கிடமின்றி குறிக்கிறது. ராட்சசர்களில் காளையான அவனால் {கடோத்கசனால்} தாங்க இயன்ற சுமையைவிட இந்தச் சுமை {அவனுக்குக்} கனமானது என்பதையும் நான் காண்கிறேன்.

சினத்தால் தூண்டப்பட்ட பாட்டனும் {பீஷ்மரும்} பாஞ்சாலர்களைக் கொல்லத் தயாராக இருக்கிறார். அவர்களைக் {பாஞ்சாலர்களைக்} காக்கவே பல்குனன் {அர்ஜுனன்} எதிரியுடன் {பீஷ்மருடன்} போரிடுகிறான்.

ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {பீமா}, உடனடிக் கவனத்தைக் கோரும் இந்தப் பணிகள் இரண்டையும் இப்போது கேட்டு, பெரும் ஆபத்தான நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும் ஹிடிம்பையின் மகனுக்கு {கடோத்கசனுக்கு} உற்றவுதவி செய்யச் செல்வாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}.

தன் அண்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட விருகோதரன் {பீமன்}, தன் சிங்க முழக்கங்களால் மன்னர்கள் அனைவரையும் அச்சுறுத்தியபடி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முழு நிலவின் {பௌர்ணமியின்} தொடக்கக் காலத்தில் உள்ள கடலைப் போலப் பெரும் மூர்க்கத்துடனும், பெரும் வேகத்துடனும் சென்றான். சத்தியதிருதி, போரில் வெல்லக் கடினமான சௌசித்தி, சிரேணிமான், வசுதானன், காசி ஆட்சியாளனின் வலிமைமிக்க மகனான அபிபூ ஆகியோரும், அபிமன்யு தலைமையிலான பல தேர்வீரர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களான அந்தத் திரௌபதியின் மகன்கள், வீரனான க்ஷத்ரதேவன், க்ஷத்ரதர்மன், தன் தனிப்பட்ட படைகளுக்குத் தலைமையில் நின்றவனும், தாழ்ந்த நாடுகளின் ஆட்சியாளனுமான நீலன் [1] ஆகியோரும் அவனைப் {பீமனைப்} பின்தொடர்ந்தார்கள். தேர்களின் ஒரு பெரும்படைப்பிரிவுடன் (அவனுக்கு உதவி செய்வதற்காக) ஹிடிம்பையின் மகனை {கடோத்கசனை} இவர்கள் சூழ்ந்து கொண்டார்கள்.

ராட்சசர்களின் இளவரசனான அந்தக் கடோத்கசனை மீட்பதற்காக, எப்போதும் சீற்றத்துடன் இருப்பவையும், தாக்குவதில் சாதிப்பவையுமான ஆறாயிரம் {6000} யானைகளுடன் அவர்கள் சென்றார்கள். பேரொலிமிக்கத் தங்கள் சிங்க முழக்கங்களாலும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலிகளாலும், குதிரைகளின் குளம்பொலிகளாலும் பூமியையே அவர்கள் நடுங்கச் செய்தார்கள்.

முன்னேறி வரும் அந்த வீரர்களின் ஆரவாரத்தைக் கேட்ட உமது துருப்பினரின் முகங்கள், பீமசேனன் மீது கொண்ட அச்சத்தில் விளைந்த கவலையில் {நிறம்} மங்கிப் போயிற்று. பிறகு, கடோத்கசனை விட்டு விட்டு அவர்கள் அனைவரும் தப்பி ஓடினார்கள்.

புறமுதுகிடாதவர்களான அந்த உயர் ஆன்ம வீரர்கள், உமது வீரர்கள் ஆகிய இரு தரப்பிற்கும் இடையில் களத்தின் அந்தப் பகுதியில் ஒரு பயங்கரப் போர் தொடங்கியது. பல்வேறு விதங்களிலான ஆயுதங்களை ஏவிய அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், ஒருவரை ஒருவர் துரத்தி அடித்தனர். துணிவற்றோரின் இதயங்களில் திகிலை உண்டாக்கிய அந்தக் கடும்போரில் பல்வேறு வகையான {படைகளைச் சேர்ந்த} போராளிகள் ஒருவரோடு ஒருவர் சிக்கிக் கொண்டனர் {கலந்து போரிட்டனர்} [2].

குதிரைகள் யானைகளோடும், காலாட்படை வீரர்கள் தேர்வீரர்களோடும் போரிட்டனர். அந்தப் போரில் ஒருவரையொருவர் சவாலுக்கழைத்தபடியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்கள் போரிட்டனர். தேர்கள், குதிரைகள், யானைகள், காலாட்படை வீரர்கள் ஆகியோரின் அந்த மோதலின் விளைவாக, தேர்ச்சக்கரங்களாலும், (அந்தப் போராளிகள் மற்றும் விலங்குகளின்) நடையாலும்) எழுப்பப்பட்ட அடர்த்தியான புழுதி தோன்றியது. சிவந்த புகையின் நிறைத்திலான அடர்த்தியான அந்தப் புழுதி அந்தப் போர்க்களத்தையே மறைத்தது. போராளிகளால் தங்களைச் சேர்ந்தவர்களையும், எதிரிகளையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தியதும், (யாராலும் யாருக்கும்) கருணை காட்டப்படாததுமான அந்தப் பயங்கர மோதலில், தந்தை மகனை அடையாளங்காணவில்லை, மகனும் தந்தையை அடையாளங்காணவில்லை.

இரைந்து செல்லும் ஆயுதங்கள் மற்றும் போராளிகளின் கூச்சல் ஆகியவற்றால் உண்டான இரைச்சல், ஓ! பாரதக் குலத்தின் தலைவரே {திருதராஷ்டிரரே}, (நரகலோகங்களில் உள்ள) இறந்தவர்களின் ஆவிகளால் உண்டாக்கப்படும் இரைச்சலைப் போல இருந்தது.

யானைகள், குதிரைகள், மனிதர்கள் ஆகியோரின் குருதியையே வெள்ளமாகக் கொண்ட ஓர் ஆறு அங்கே பாயத் தொடங்கியது. (போராளிகளின்) மயிறே அதன் {அந்த ஆற்றின்} களைகள் மற்றும் பாசிகளாக அமைந்தன. மேலும், அந்தப் போரில் மனிதர்களில் உடல்களில் இருந்து விழுந்த தலைகள், கற்களின் மழை பொழிவதைப் போலப் பேரொலியை உண்டாக்கின. யானைகளின் சிதைந்த உடல்களோடும், குதிரைகளின் வெட்டப்பட்ட அங்கங்களோடும் மனிதர்களின் தலையற்ற உடல்கள் அந்த பூமியில் பரவி கிடந்தன.

வலிமைமிக்கத் தேர்வீரர்கள் ஒருவரையொருவர் அடித்து வீழ்த்துவதற்காக ஒருவரை ஒருவர் துரத்தி, பல்வேறு விதங்களிலான ஆயுதங்களை ஏவினார்கள். தங்கள் ஓட்டுநர்களால் {குதிரையோட்டிகளால்} தூண்டப்பட்ட குதிரைகள், {மற்ற} குதிரைகள் மேல் பாய்ந்து, ஒன்றோடொன்று மோதி உயிரற்று கீழே விழுந்தன. கோபத்தில் கண்கள் சிவந்த மனிதர்கள், {வேறு} மனிதர்களை எதிர்த்து விரைந்து, தங்கள் மார்புகளால் ஒருவரையொருவர் தாக்கி, ஒருவரையொருவர் அடித்து வீழ்த்தினர். பகை யானைகளை எதிர்த்துத் தங்கள் வழிகாட்டிகளால் {பாகன்களால்} தூண்டப்பட்ட யானைகள், தங்கள் தந்தங்களின் முனைகளைக் கொண்டு அந்தப் போரில் தங்கள் எதிராளிகளை {எதிரிகளின் யானைகளைக்} கொன்றன.

தங்கள் காயங்களின் விளைவால் குருதியில் போர்த்தப்பட்டவையும், (தங்கள் முதுகுகளில்) கொடிமரங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான யானைகள் {வேறு} யானைகளுடன் சிக்கி மின்னலால் சக்தியூட்டப்பட்ட மேகங்களின் திரள்களைப் போலத் தெரிந்தன. அவற்றில் தந்தங்களின் முனைகளைக் கொண்டு (பிறரால்) ஏற்றம் கண்ட {தங்கள் முதுகில் வீரர்களைக் கொண்ட} சிலவும், வேல்களை {தோமரங்களைக்} கொண்டு தங்கள் மத்தகங்கள் பிளக்கப்பட்ட சிலவும், முழங்கும் மேகங்களின் திரள்களைப் போலப் பேரொலியுடன் பிளிறிக் கொண்டே அங்கேயும் இங்கேயும் ஓடின. அவற்றில் தங்கள் துதிக்கைகள் வெட்டப்பட்ட [3] சிலவும், அங்கங்கள் சிதைக்கப்பட்ட பிறவும், தங்கள் சிறகுகள் வெட்டப்பட்ட மலைகளைப் போல அந்தப் பயங்கரப் போரில் கீழே விழுந்தன [4].

பெரும் யானைகள் பிற, எதிராளிகளால் {எதிரிப்படையின் யானைகளால்} பிளக்கப்பட்ட தங்கள் விலாக்களில் இருந்து அதிக அளவில் இரத்தத்தைச் சிந்தி, (மழைக்குப் பிறகு) தங்கள் பக்கங்களில் (நீர்மமாக்கப்பட்ட, நீரில் கறைந்த) செம்மண் ஒழுகிக் கொண்டிருக்கும் மலைகளைப் போலத் தெரிந்தன. நாராசங்களால் கொல்லப்பட்டோ, வேல்களால் {தோமரங்களால்} துளைக்கப்பட்டோ தங்கள் பாகன்களை இழந்த பிற {யானைகள்}, தங்கள் முகடுகளை இழந்த மலைகளைப் போலத் தெரிந்தன. அவற்றில் சில, கோபத்தால் பீடிக்கப்பட்டும், (குமட்டிலும், கன்னப் பொட்டுகளிலும் ஒழுகிக் கொண்டிருக்கும்) மதத்தின் விளைவால் (சீற்றத்துடன்) குருடாகியும் {பார்வை மறைக்கப்பட்டு} [5], அங்குசத்திற்குக் கட்டுப்படாமல் அந்தப் போரில் நூற்றுக்கணக்கான தேர்களையும், குதிரைகளையும், காலாட்படை வீரர்களையும் நசுக்கின.

அதேபோல, தோமரங்களாலும், வேல்களாலும் குதிரைவீரர்களால் தாக்கப்பட்ட குதிரைகளும், தங்களைத் தாக்குவோரை எதிர்த்துத் திசைகள் அதிரும்படி விரைந்தன. நற்குலத்தில் பிறந்த தேர்வீரர்கள், தங்கள் உயிர்களை விடத் துணிந்து, எதிர்த்து மோதும் தேர்வீரர்களுடன் தங்கள் முழுப் பலத்தை நம்பி அச்சமற்றவகையில் போரிட்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புகழையோ, சொர்க்கத்தையோ வேண்டிய போராளிகள், சுயம்வரத்தின்போது செயல்படுவதைப் போல, அந்தப் பயங்கர மோதலில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

எனினும், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்திய அந்தப் பயங்கரப் போரின் போது, பொதுவாகத் தார்தராஷ்டிரத் துருப்புகள் புறமுதுகிட்டோடும்படியே செய்யப்பட்டன” {என்றான் சஞ்சயன்}.

துரோணரை மயக்கமடையச் செய்த பீமன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 095-பீமனை நோக்கி விரைந்த துரியோதனன்; பீமனின் வில்லை அறுத்த துரியோதனன்; பீமனுக்கு உதவியாகப் பாண்டவப் படையினர் விரைவது; துரியோதனனைக் காக்கும்படி கௌரவவீரர்களை ஏவிய துரோணர்; துரோணரின் விலாவைத் துளைத்த பீமன் துரோணரை மயக்கமடையச் செய்தது; துரியோதனனும், அஸ்வத்தாமனும் பீமனை எதிர்ப்பது; நீலனுக்கும் அஸ்வத்தாமனுக்கு இடையில் நடந்த போர்; அஸ்வத்தாமனால் துளைக்கப்பட்ட நீலன்; அஸ்வத்தாமனை எதிர்த்த கடோத்கசன்; கடோத்கசன் வெளிப்படுத்திய மாயை; கௌரவர்கள் தோற்றோடியது; எட்டாம் நாள் போரை பாண்டவர்கள் வென்றது..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தன் துருப்புகள் கொல்லப்பட்டதைக் கண்டு கோபத்தால் தூண்டப்பட்ட மன்னன் துரியோதனன், எதிரிகளைத் தண்டிப்பவனான பீமசேனனை நோக்கி விரைந்தான். இந்திரனுடைய வஜ்ராயுதத்துக்கு நிகரான பிரகாசமுடைய மிகப் பெரும் வில்லை எடுத்துக் கொண்ட அவன் {துரியோதனன்}, அடர்த்தியான கணைமழையால் அந்தப் பாண்டுவின் மகனை {பீமனை} மறைத்தான்.

சினத்தால் நிறைந்த அவன் {துரியோதனன்}, இறகுகளோடு கூடிய சிறகுகள் படைத்த அர்த்தச்சந்திரக் கணை ஒன்றால் குறிபார்த்து {அஃதை ஏவி} பீமசேனனின் வில்லை அறுத்தான். மேலும் அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {துரியோதனன்}, {நல்ல} சந்தர்ப்பத்தில், மலைகளையே பிளக்கவல்லதும், கூர்த்தீட்டப்பட்டதுமான கணை ஒன்றால் தன் எதிராளியை {பீமனை} விரைந்து குறிபார்த்தான். வலிய கரங்களைக் கொண்ட (வீரனான) அவன் {துரியோதனன்}, அதைக் {அந்தக் கணையைக்} கொண்டு, பீமசேனனை மார்பில் தாக்கினான்.

அக்கணையால் ஆழத் துளைக்கப்பட்டு, பெரும் வலியை உணர்ந்தவனும், பெரும் சக்தி படைத்தவனுமான அந்தப் பீமசேனன், தன் கடைவாயை நாவால் நனைத்த படி {நக்கியபடி}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் கொடிக்கம்பத்தைப் பற்றிக் {அழுந்த பிடித்துக்} கொண்டான். உற்சாகமற்ற அந்த நிலையில் இருந்த பீமசேனனைக் கண்ட கடோத்கசன், அனைத்தையும் எரிக்கும் பெருநெருப்பைப் {காட்டுத்தீயைப்} போலக் கோபத்தால் சுடர்விட்டெரிந்தான். பிறகு, அபிமன்யுவின் தலைமையிலான பாண்டவப் படையைச் சேர்ந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர், (தங்கள் நெஞ்சுக்குள்) உண்டான கோபத்தால் உரக்கக் கூச்சலிட்டபடி அந்த மன்னனை {துரியோதனனை} நோக்கி விரைந்தனர்.

கோபத்தால் நிறைந்து (போரிடுவதற்காகப்) பெரும் சீற்றத்தோடு (இப்படி) முன்னேறி வந்த அவர்களைக் கண்ட பரத்வாஜரின் மகன் {துரோணர்}, (உமது தரப்பின்) வலிமைமிக்கத் தேர்வீரர்களிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார், “அருளப்பட்டிருப்பீராக, விரைந்து சென்று மன்னனைக் {துரியோதனனைக்} காப்பீராக. துன்பக் கடலில் மூழ்கும் அவன் {துரியோதனன்}, பெரும் ஆபத்தான நிலையில் நிறுத்தப்பட்டிருக்கிறான் {ஆபத்தான நிலையில் இருக்கிறான்}. பெரும் வில்லாளிகளும், பாண்டவப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான இவர்கள், பீமசேனனைத் தங்கள் தலைமையாகக் கொண்டு, வெற்றியை வெல்லும் {அடையும்} தீர்மானத்துடன் பல்வேறு வகைகளிலான ஆயுதங்களை ஏவிக்கொண்டும், வீசிக்கொண்டும், பயங்கரக் கூச்சலிட்டுக் கொண்டும், (உங்கள் தரப்பிலுள்ள) மன்னர்களை அச்சுறுத்தியபடி துரியோதனனை நோக்கி விரைந்து வருகிறார்கள்” {என்றார் துரோணர்}.

ஆசானின் {துரோணரின்} இவ்வார்த்தைகளைக் கேட்டதும், சோமதத்தன் தலைமையிலான உமது தரப்பு வீரர்களுமான பலர், பாண்டவப் படையணியை நோக்கி விரைந்தனர். கிருபர், பூரிஸ்ரவஸ், சல்லியன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, விவிம்சதி, சித்திரசேனன், விகர்ணன், சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, பிருஹத்பலன், அவந்தியின் இளவரசர்களான அந்த வலிமைமிக்க வில்லாளிகள் இருவர் {விந்தன் மற்றும் அனுவிந்தன்} ஆகியோர் குரு மன்னனைச் {துரியோதனனைச்} சூழ்ந்து கொண்டனர். ஒருவரையொருவர் கொல்ல விரும்பிய அந்தப் பாண்டவர்களும், தார்தராஷ்டிரர்களும், இருபது அடிகள் மட்டுமே முன்னேறி [1] தாக்கத் தொடங்கினர்.

(தார்தராஷ்டிர வீரர்களிடம்) அவ்வார்த்தைகளைச் சொன்னவரும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவருமான பரத்வாஜர் மகன் {துரோணர்}, தன் பெரும் வில்லை வளைத்தபடி, இருபத்தாறு {26} கணைகளால் பீமனைத் துளைத்தார். மழைக்காலத்தில் மலைச்சாரலில் மழைத்தாரைகளைப் பொழியும் முகில்களின் திரளைப் போல, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர் {துரோணர்} கணைமழையால் பீமசேனனை மீண்டும் ஒருமுறை விரைவாக மறைத்தார். எனினும், பெரும் பலங்கொண்டவனும், வலிமைமிக்க வில்லாளியுமான பீமசேனனோ, பதிலுக்குப் பத்து {10} கணைகளால் அவரது {துரோணரின்} இடது புறத்தில் {இடது விலாவில்} விரைவாகத் துளைத்தான். அந்தக் கணைகளால் ஆழத் துளைக்கப்பட்டு, வலியை உணர்ந்த ஆசான் {துரோணர்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தன் வயதின் நிமித்தமாக நலிவுற்று {பலவீனமடைந்து}, நினைவையும் இழந்து, கீழே திடீரெனத் தன் தேர்த்தட்டில் அமர்ந்தார்.

இப்படி வலியை உணர்ந்த அவரை {துரோணரைக்} கண்ட மன்னன் துரியோதனன், அஸ்வத்தாமன் ஆகிய இருவரும் கோபத்தால் தூண்டப்பட்டுப் பீமசேனனை நோக்கி விரைந்தனர். யுகத்தின் முடிவில் தன்னை வெளிப்படுத்தும் யமனைப் போன்றவர்களான அவ்விரு வீரர்களைக் கண்டதும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான பீமசேனன், கதாயுதம் ஒன்றை விரைவாக எடுத்துக் கொண்டு, நேரத்தை இழக்காமல் தன் தேரில் இருந்து கீழே குதித்து, யமதண்டத்தைப் போன்ற கனமான கதாயுதத்தை உயர்த்திப் பிடித்தபடி, மலையொன்றைப் போல அந்தப் போரில் அசையாதவனாக நின்றான். (அவ்விவரிப்பின் படியே) முகடுகளுடன் கூடிய கைலாசத்தைப் போலத் தெரிந்தவனும், (இப்படி) உயர்த்தப்பட்ட கதாயுதத்துடன் கூடியவனுமான அவனை {பீமனைக்} கண்டவர்களான குரு மன்னன் {துரியோதனன்} மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகிய இருவரும் அவனை நோக்கி விரைந்தனர்.

அப்போது, பெரும் வேகத்துடன் தன்னை நோக்கி இப்படி விரையும் மனிதர்களில் முதன்மையான அவ்விருவரையும் நோக்கி வலிமைமிக்கப் பீமசேனன் மூர்க்கமாக தானே விரைந்தான். முகத்தில் பயங்கர உணர்வுகளுடனும், சீற்றத்துடனும் இப்படி விரையும் அவனை {பீமனைக்} கண்ட கௌரவப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களில் பலர், அவனை {பீமனை} நோக்கி வேகமாக முன்னேறினர். பரத்வாஜர் மகனால் {அஸ்வத்தாமனால்} [2] தலைமை தாங்கப்பட்ட தேர்வீரர்களான அவர்கள் அனைவரும் இப்படியே ஒன்றுசேர்ந்து, பீமசேனனைக் கொல்லும் விருப்பத்தால் உந்தப்பட்டு, பல்வேறு விதங்களிலான ஆயுதங்களை அவனது {பீமனின்} மார்பில் ஏவி, அனைத்துப் புறங்களில் இருந்தும் பீமனைப் பீடித்தனர்.

இப்படி பீடிக்கப்பட்டுப் பெரும் ஆபத்தான நிலையில் நின்றிருந்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரனைக் {பீமனைக்} கண்டவர்களும், அபிமன்யுவின் தலைமையில் இருந்தவர்களுமான பாண்டவப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரும், அவனை {பீமனைக்} காக்க விரும்பி தங்கள் இன்னுயிரையே இழக்கத் துணிந்து அந்த இடத்திற்கு விரைந்தனர். நீலமேகங்களின் திரளைப் போலத் தெரிந்தவனும், பீமனின் அன்பு நண்பனும், தாழ்ந்த நாட்டின் [3] வீர ஆட்சியாளனுமான நீலன், கோபத்தால் நிறைந்து துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} நோக்கி விரைந்தான். பெரும் வில்லாளியான நீலன், துரோணர் மகனுடனான {அஸ்வத்தாமனுடனான} ஒரு மோதலை எப்போதும் விரும்பினான் [4].

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் தேவர்களுக்குப் பயங்கரமாக இருந்தவனும், கோபத்துடன் மூன்று உலகங்களையும் தன் சக்தியால் அச்சுறுத்தியவனும், வெல்லப்பட முடியாதவனுமான தானவன் விப்ரசித்தியைத் துளைத்த சக்ரனைப் {இந்திரனைப்} போலத் தன் பெரிய வில்லை வளைத்த அவன் {நீலன்}, சிறகு படைத்த கணைகள் பலவற்றால் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைத்} துளைத்தான். நீலனால் அப்படி நன்கு ஏவப்பட்டவையும், இறகுகளுடன் கூடிய சிறகு படைத்தவையுமான கணைகளால் துளைக்கப்பட்டு, குருதியில் மறைந்து, பெரும் வலியை உணர்ந்த அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} கோபத்தால் நிறைந்தான்.

புத்திசாலி மனிதர்களில் முதன்மையானவனான அவன் {அஸ்வத்தாமன்}, இந்திரனின் வஜ்ராயுதத்தைப் போல உரத்த நாணொலி கொண்ட தன் பெரிய வில்லை வளைத்து நீலனின் அழிவில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான். பிறகு புத்திசாலி மனிதர்களில் முதன்மையானவனான அவன் {அஸ்வத்தாமன்}, கொல்லன் கைகளால் கூராக்கப்பட்ட சில பிரகாசமான பல்லங்களைக் குறிபார்த்து தன் எதிராளியின் {நீலனின்} நான்கு குதிரைகளைக் கொன்று, அவனது கொடிமரத்தையும் வீழ்த்தினான் [5]. மேலும் அவன் {அஸ்வத்தாமன்}, ஏழாவது கணையால் நீலனின் மார்பைத் துளைத்தான். ஆழத்துளைக்கப்பட்டு, பெரும் வலியை உணர்ந்த அவன் {நீலன்}, கீழே தன் தேர்த்தட்டில் அமர்ந்தான்.

நீல மேகங்களின் திரளைப் போலத் தெரிந்த மன்னன் நீலன் மயக்கத்தில் இருப்பதைக் கண்ட கடோத்கசன், கோபத்தால் நிறைந்து, தன் சொந்தங்கள் புடைசூழ போரின் ஆபரணமான துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} நோக்கி மூர்க்கமாக விரைந்தான். அதே போலவே, போரில் எளிதில் வீழ்த்தப்பட முடியாத பிற ராட்சசர்கள் பலரும் அஸ்வத்தாமனை நோக்கி விரைந்தனர். பயங்கர முகத்தோற்றம் கொண்ட அந்த ராட்சசன் {கடோத்கசன்} தன்னை நோக்கி வருவதைக் கண்ட பரத்வாஜரின் வீரமகனும் {அஸ்வத்தாமனும்} அவனை {கடோத்கசனை} நோக்கி மூர்க்கமாகவே விரைந்தான்.

கோபத்தால் நிறைந்த அவன் {அஸ்வத்தாமன்}, கடோத்கசனுக்கு முன்பாக இருந்தவர்களும், கோபம் நிறைந்தவர்களும், அச்சந்தரும் முகத்தோற்றம் கொண்டவர்களுமான ராட்சசர்கள் பலரைக் கொன்றான். பெரிய வடிவம் கொண்டவனும், பீமனின் மகனுமான கடோத்கசன், துரோண மகனின் {அஸ்வத்தாமனின்} வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளின் மூலம் அம்மோதலில் முறியடிக்கப்பட்ட அவர்களைக் {ராட்சசர்களைக்} கண்டு கோபத்தால் நிறைந்தான். பிறகு அவன் {கடோத்கசன்}, கடுமையானதும், அச்சத்தைத் தருவதுமான மாயையை வெளிப்படுத்தினான். அதன் மூலம், இயல்புக்குமீறிய மாயாசக்திகள் கொண்ட அந்த ராட்சசர்களின் இளவரசன் {கடோத்கசன்}, அந்தப் போரில் துரோணரின் மகனைக் {அஸ்வத்தாமனைக்} குழப்பினான் {மயங்கச் செய்தான்}.

பிறகு, அந்த மாயையின் விளைவால் உமது துருப்புகள் அனைத்தும் போர்க்களத்தில் புறமுதுகிட்டோடின. வெட்டப்பட்டவர்களாக, பூமியின் பரப்பில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடப்பவர்களாக, அதிர்வுடன் நடுங்குபவர்களாக, முற்றிலும் ஆதரவற்றவர்களாக, குருதியில் நனைந்தவர்களாகவே ஒருவரையொருவர் அவர்கள் {கௌரவர்கள்} கண்டனர். துரோணர், துரியோதனன், சல்லியன், அஸ்வத்தாமன், கௌரவர்களில் முதன்மையானவர்களாகக் கருதப்பட்ட பெரும் வில்லாளிகளான பிறர் ஆகியோரும் தப்பி ஓடுவதாகத் தெரிந்தது. தேர்வீரர்கள் அனைவரும் நொறுக்கப்பட்டதாகவும், மன்னர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாகவும் தெரிந்தது [6]. குதிரைகளும், குதிரையோட்டிகளும் ஆயிரக்கணக்கில் வெட்டி வீழ்த்தப்பட்டதாகத் தெரிந்தது. இவை யாவற்றையும் கண்ட உமது துருப்புகள் தங்கள் பாசறைகளை நோக்கித் தப்பி ஓடினர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, என்னதான் நானும், தேவவிரதரும் {பீஷ்மரும்} எங்கள் குரலின் உச்சத்தில் “போரிடுவீர்! ஓடாதீர்!! இவை யாவும் போரில் கடோத்கசனால் உண்டாக்கப்பட்ட ராட்சச மாயையாகும்” என்று இரைந்து கூச்சலிட்டாலும், தங்கள் புலன்கள் குழப்பப்பட்ட அவர்கள் நிற்கவே இல்லை. நாங்கள் இருவரும் இப்படிச் சொன்னாலும், பீதியால் பீடிக்கப்பட்டிருந்த அவர்கள் எங்கள் வார்த்தைகளுக்கு எந்த மதிப்பையும் அளிக்கவில்லை. அவர்கள் தப்பி ஓடுவதைக் கண்ட பாண்டவர்கள், வெற்றி தங்களுடையது என்று கருதினார்கள். (தங்களுடன் உள்ள) கடோத்கசனுடன் அவர்கள் சிங்க முழக்கங்களையிட்டார்கள் {சிங்கம் போல முழங்கினார்கள்} [7].

சங்கொலிகள், துந்துபி ஒலிகள் ஆகியவற்றோடு கலந்த தங்கள் கூச்சலுடன் சுற்றிலும் அந்தச் சூழ்நிலையையே {தங்கள் பேரொலியால்} அவர்கள் நிறைத்தார்கள். இப்படியே சூரியன் மறையும் நேரத்தின் நெருக்கத்தில் அந்தப் பொல்லாத கடோத்கசனால் முறியடிக்கப்பட்ட உமது படை முழுவதும் திசைகள் அனைத்திலும் தப்பி ஓடியது” {என்றான் சஞ்சயன்}.

பகதத்தன் செய்த போர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 096-கடோத்கசனிடம் அடைந்த தோல்வியை நினைத்துப் பீஷ்மரிடம் வருந்தும் துரியோதனன்; துரியோதனனுக்கு ஆறுதல் கூறிய பீஷ்மர், கடோத்கசனை நோக்கி பகதத்தனை ஏவிய பீஷ்மர்; பீமன் மற்றும் கடோத்கசனுடன் பகதத்தன் செய்த போர்; அரவான் மரணம் குறித்துக் கிருஷ்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் தெரிவித்த பீமன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்தப் பெரும்போருக்குப் பிறகு, கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} அணுகிய மன்னன் துரியோதனன், பணிவுடன் அவரை வணங்கி, கடோத்கசன் பெற்ற வெற்றி, தன் தோல்வி ஆகிய அனைத்தையும் அவருக்கு விவரிக்கத் தொடங்கினான்.

வெல்லப்பட முடியாத அந்த வீரன் {துரியோதனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டபடி, குருக்களின் பாட்டனான பீஷ்மரிடம் இவ்வார்த்தைகளைக் கூறினான், “ஓ! தலைவா {பீஷ்மரே}, எதிரிக்கு வாசுதேவன் {கிருஷ்ணன்} (துணையாக இருப்பது) போல, உம்மைத் துணையாகக் கொண்டே பாண்டவர்களுடனான ஒரு கடும்போர் என்னால் தொடங்கப்பட்டது [1]. கொண்டாடப்படும் துருப்புகளான எனது இந்தப் பதினோரு {11} அக்ஷெஹிணிகளும், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {பீஷ்மரே}, உமது கட்டளைக்குக் கீழ்ப்படிந்தே என்னுடன் இருக்கின்றன. ஓ! பாரதர்களில் புலியே {பீஷ்மரே}, நிலைமை இப்படியிருந்தாலும், பீமசேனனின் தலைமையில், கடோத்கசனை சார்ந்திருந்த பாண்டவ வீரர்களால் போரில் நான் தோற்கடிக்கப்பட்டேன். இது காய்ந்த மரத்தை நெருப்பு எரிப்பது போல என் அங்கங்களை எரிக்கிறது. ஓ! அருளப்பட்டவரே, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {பீஷ்மரே}, எனவே, ஓ! பாட்டா, வெல்லப்பட முடியாதவரான உமது துணையுடன், ராட்சசர்களில் இழிந்தவனான கடோத்கசனை நானே கொல்ல விரும்புகிறேன். அந்த எனது விருப்பத்தை நிறைவேறச் செய்வதே உமக்குத் தகும்” என்றான் {துரியோதனன்}.

மன்னனின் {துரியோதனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டவரும், பாரதர்களில் முதன்மையானவரும், சந்தனுவின் மகனுமான பீஷ்மர் துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார், “ஓ! மன்னா, ஓ! குரு குலத்தோனே, ஓ! எதிரிகளைத் தண்டிப்போனே {துரியோதனா}, எப்போதும் நீ நடந்து கொள்ள வேண்டிய வழி குறித்து, உனக்கு நான் சொல்லப்போகும் வார்த்தைகளைக் கேட்பாயாக. ஓ! எதிரிகளை அடக்குபவனே {துரியோதனா}, அனைத்துச் சூழ்நிலைகளிலும் ஒருவன் போரில் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். ஓ! பாவமற்றவனே {துரியோதனா}, நீ எப்போதும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுடனோ, அர்ஜுனனுடனோ, இரட்டையர்களுடனோ {நகுல சகாதேவனுடனோ}, பீமசேனனுடனோ தான் போரிட வேண்டும். ஒரு மன்னனின் கடமையைக் கொண்டிருக்கும் மன்னன் ஒருவன், மற்றொரு மன்னனையே தாக்குவான்.

நான், துரோணர், கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சாத்வத குலத்தின் கிருதவர்மன், சல்லியன், சோமதத்தனின் மகன் {பூரிஸ்ரவஸ்}, வலிமைமிக்கத் தேர்வீரனான விகர்ணன், துச்சாசனன் தலைமையிலான உனது வீரத் தம்பிகள் ஆகியோர் அனைவரும் உன் நிமித்தமாக வலிமைமிக்க அந்த ராட்சசர்களை எதிர்த்துப் போரிடுவோம். அல்லது, ராட்சசர்களில் கடுமையான இளவரசனைக் {கடோத்கசனைக்} குறித்த உன் துயரம் பெரிதானதாக இருக்குமேயானால், போரில் புரந்தரனுக்கு {இந்திரனுக்கு} இணையானவனான இந்த மன்னன் பகதத்தன் அந்தப் பொல்லாத வீரனைப் {கடோத்கசனைப்} போரில் எதிர்த்துச் செல்லட்டும்” {என்றார் பீஷ்மர்}.

மன்னனிடம் {துரியோதனனிடம்} இதைச் சொல்லிவிட்டு, பேச்சில் வல்லவரான பாட்டன் {பீஷ்மர்}, (குரு) மன்னனின் {துரியோதனனின்} முன்னிலையில் பகதத்தனிடம் பேசினார், “ஓ! பெரும் ஏகாதிபதியே {பகதத்தா}, ஹிடிம்பையின் மகனான அந்த வெல்லப்பட முடியாத வீரனை {கடோத்கசனை} எதிர்த்து விரைவாகச் செல்வாயாக. பழங்காலத்தில் தாரகனை {தாரகாசுரனை} எதிர்த்த இந்திரனைப் போல, வில்லாளிகள் அனைவரும் பார்க்கும்போதே, தீச்செயல்கள் புரியும் அந்த ராட்சசனைக் {கடோத்கசனைக்} கவனத்துடன் இந்தப் போரில் நீ எதிர்ப்பாயாக. உன் ஆயுதங்கள் தெய்வீகமானவை. எதிரிகளைத் தண்டிப்பவனே {பகதத்தா}, உன் ஆற்றலும் பெரியதே. பழங்காலத்தில் பல அசுரர்களுடன் [2] மோதல்கள் பலவற்றில் நீ ஈடுப்பட்டிருக்கிறாய், ஓ! மன்னர்களில் புலியே {பகதத்தா}, பெரும்போரில் நீயே அந்த ராட்சசனுக்கு {கடோத்கசனுக்கு} இணையானவனாவாய். உன் துருப்புகளால் பலமாக ஆதரிக்கப்பட்டபடி சென்று, ஓ! மன்னா {பகதத்தா}, அந்த ராட்சசர்களில் காளையைக் {கடோத்கசனைக்} கொல்வாயாக” {என்றார் பீஷ்மர்}.

(கௌரவப்படையின்} படைத்தலைவரான பீஷ்மரின் இந்த வார்த்தைகள் கேட்ட பகதத்தன், எதிரிகளின் படையணிகளை நோக்கி சிங்க முழக்கத்துடன் சென்றான். முழங்கும் முகில்களின் மொத்துகையைப் {திரளைப்} போலத் தங்களை நோக்கி முன்னேறி வரும் அவனை {பகதத்தனைக்} கண்டப் பாண்டவப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களில் பலர், கோபத்தால் எரிந்து அவனை {பகதத்தனை} எதிர்த்துச் சென்றனர். பீமசேனன், அபிமன்யு, ராட்சசன் கடோத்கசன், திரௌபதியின் மகன்கள், சத்யதிருதி, க்ஷத்ரதேவன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சேதிகளின் ஆட்சியாளனான வசுதானன், தசார்ணர்களின் மன்னன் {சுதர்மன் [3]}ஆகியோரே அவர்கள்.

அப்போது, சுப்ரதீகம் என்று அழைக்கப்பட்ட தன் யானையின் மீது இருந்த பகதத்தன் அவர்களை எதிர்த்து விரைந்தான். பிறகு பாண்டவர்களுக்கும், பகதத்தனுக்கும் இடையில் கடுமையானதும், பயங்கரமானதும், யமலோகத்திலிருப்போரின் எண்ணிக்கையைப் பெருக்கியதுமான ஒரு போர் தொடங்கியது.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பயங்கர சக்தியும், பெரும் மூர்க்கமும் கொண்ட கணைகள் தேர்வீரர்களால் ஏவப்பட்டு, யானைகள் மீதும், தேர்களின் மீதும் பாய்ந்தன. நெற்றிப்பொட்டுகள் பிளந்தவையும் {மதங்கொண்டவையும்}, தங்கள் பாகன்களால் (போரிடப்) பயிற்றுவிக்கப்பட்டவையுமான பெரும் யானைகள், அச்சமற்ற வகையில் ஒன்றையொன்று அணுகி ஒன்றின் மேல் ஒன்றாகப் பாய்ந்தன. தங்கள் உடல்களில் வழியும் மத நீரின் விளைவால் (சீற்றத்துடன்) குருடாகி, சினத்தால் தூண்டப்பட்டு, பருத்த தடிகளைப் போன்ற தங்கள் தந்தங்களால் ஒன்றையொன்று தாக்கிக் கொண்டு, அவ்வாயுதங்களின் {தந்தங்களின்} முனைகளால் ஒன்றையொன்று துளைத்தன.

சிறந்த வால்களைக் கொண்ட குதிரைகள், வேல்கள் தரித்த வீரர்களால் செலுத்தப்பட்டு, அந்த ஓட்டுநர்களின் தூண்டுதலால், அச்சமற்றும், பெரும் மூர்க்கத்துடனும் ஒன்றின் மேல் ஒன்றாகப் பாய்ந்தன. காலாட்படை வீரர்கள் ஈட்டிகளும், வேல்களும் தரித்த {எதிரி} காலாட்படையினரால் தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் பூமியில் விழுந்தனர்.

தேர்களில் இருந்த தேர்வீரர்கள், கர்ணிகள், நாளீகங்கள் {துப்பாக்கி போன்ற ஆயுதங்கள்} [4], தோமரங்கள் ஆகியவற்றின் மூலம் வீரமிக்கத் தங்கள் எதிரிகளைக் கொன்று சிங்க முழக்கமிட்டனர். பெரும் வில்லாளியான அந்தப் பகதத்தன், மயிர்ச்சிலிர்ப்பை உண்டாக்கும் அந்தப் போரின் போது, மழைக்குப் பிறகு தன்சாரலில் பாய்ந்து வரும் (பல) சிற்றோடைகளோடு கூடிய மலையொன்றைப் போல, கன்னப்பொட்டுகள் பிளந்து, ஏழு ஊற்றுகளாக மதநீர் ஒழுகும் தன் யானையைச் செலுத்திக் கொண்டு பீமசேனனை நோக்கி விரைந்தான். ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, ஐராவதத்தின் மேலிருக்கும் சிறப்புவாய்ந்த புரந்தரனையே {இந்திரனையே} போல, அவன் {பகதத்தன்}, (தான் இருந்த) சுப்ரதீகத்தின் {சுப்ரதீகம் எனும் யானையின்} தலையில் இருந்து கொண்டு ஆயிரக்கணக்கான கணைகளைத் திசைகள் அனைத்திலும் பொழிந்தபடியே வந்தான்.

கோடை கழிந்ததும் மழைத்தாரைகளால் மலைச்சாரலைத் தாக்கும் மேகங்களைப் போல, மன்னன் பகதத்தன் தன் கணைமழையால் பீமசேனனைப் பீடித்தான். எனினும், சினத்தால் தூண்டப்பட்ட அந்த வலிமைமிக்க வில்லாளியான பீமசேனன், பகதத்தனின் பக்கங்களையும் {இரு பக்கங்களையும்}, பின்புறத்தையும் பாதுகாப்போரில், நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான போராளிகளைத் [5] தன் கணை மழையால் கொன்றான். அவர்கள் கொல்லப்படுவதைக் கண்ட வீர பகதத்தன் சினத்தால் நிறைந்து, தனது யானைகளின் இளவரசனை {சுப்ரதீகத்தைப்} பீமசேனனின் தேரை நோக்கிச் தூண்டினான். இப்படி அவனால் {பகதத்தனால்} தூண்டப்பட்ட அந்த யானை வில்லின் நாணில் இருந்து உந்தப்பட்ட ஒரு கணையைப் போல, எதிரிகளைத் தண்டிப்பவனான பீமசேனனை நோக்கி மூர்க்கமாக விரைந்தது.

அந்த யானை {பகதத்தனின் யானை} முன்னேறுவதைக் கண்ட பீமசேனனை தலைமையாகக் கொண்ட பாண்டவப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், தாங்களே அதை நோக்கி விரைந்தார்கள். கேகய இளவரசர்கள் (ஐவர்) [6], அபிமன்யு, திரௌபதியின் மகன்கள் (ஐவர்), தசார்ணர்களின் ஆட்சியாளன் {சுதர்மன்}, க்ஷத்ரதேவன் [7], ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சேதிகளின் ஆட்சியாளன் {திருஷ்டகேது} மற்றும் சித்ரகேது [8] ஆகியோரே அவர்கள்

வலிமைமிக்க வீரர்களான இவர்கள் அனைவரும், கோபத்தால் எரிந்து, சிறப்புமிக்கத் தங்கள் தெய்வீக ஆயுதங்களை வெளிப்படுத்தியபடியே வந்தார்கள். மேலும் கோபத்தில் இருந்த இவர்கள் அனைவரும் (தங்கள் எதிரி செலுத்திவந்த) அந்தத் தனி யானையைச் {சுப்ரதீகத்தைச்} சூழ்ந்து கொண்டனர். பல கணைகளால் துளைக்கப்பட்டுத் தன் காயங்களில் வழிந்த ஊனீரால் போர்த்தப்பட்டிருந்த அந்தப் பெரும் யானை {சுப்ரதீகம்}, (மழைக்குப் பிறகு நீர்மமாக்கப்பட்ட) செம்மண்ணோடு கூடிய மலைகளின் இளவரசனைப் போலப் பிரகாசத்துடன் காணப்பட்டது.

பிறகு தசார்ணர்களின் ஆட்சியாளன் {சுதர்மன்} மலையைப் போன்ற ஒரு யானையில் பகதத்தனின் யானையை நோக்கி விரைந்தான். எனினும் யானைகளின் இளவரசனான சுப்ரதீகம், சீறும் கடலைத் தாங்கிக் கொள்ளும் நிலத்தைப் {நிலத்தின் கரையைப்} போலத் தன்னை எதிர்த்து வரும் தனக்கு இணையான யானையைத் (அதன் வேகத்தைத்) தாங்கிக் கொண்டது. உயர் ஆன்ம தசார்ண மன்னனின் {சுதர்மனின்} அந்த யானை இப்படித் தடுக்கப்பட்டதைக் கண்ட பாண்டவத் துருப்புகளே கூட, “நன்று, நன்று!” என்று மெச்சிக் கூச்சலிட்டனர். பிறகு, மன்னர்களில் சிறந்தவனான அந்தப் பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்}, சினத்தால் தூண்டப்பட்டு, அந்த {சுதர்மனின்} யானையின் மேல் பதினான்கு {14} வேல்களை ஏவினான். எறும்புப்புற்றில் நுழையும் பாம்புகளைப் போல, அவை {வேல்கள்}, அந்த விலங்கின் உடலில் தரித்திருந்த தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட சிறந்த கவசத்தின் ஊடாக விரைந்து ஊடுருவி அதற்குள் {அந்த யானைக்குள்} நுழைந்தன.

ஆழத் துளைக்கப்பட்டு, வலியை உணர்ந்த அந்த யானை, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, அதன் சீற்றம் தணிக்கப்பட்டு, பெரும் சக்தியுடன் விரைவாகப் புறமுதுகிட்டது. வேகத்துடன் மரங்களை முறிக்கும் பெருங்காற்றைப் {புயலைப்} போல, பாண்டவப் படையணியினரை நசுக்கிக் கொண்டும், அச்சத்தால் பிளிறிக் கொண்டும், அந்த {சுதர்மனின்} யானை பெரும் வேகத்துடன் தப்பி ஓடியது. அந்த யானை (இப்படி) வெல்லப்பட்ட பிறகு, பாண்டவப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், சிங்கங்களைப் போல உரக்கக்கூச்சலிட்டபடி போரிட அணுகினர்.

பீமனைத் தங்கள் தலைமையில் கொண்ட அவர்கள் பல்வேறு விதங்களிலான கணைகளையும், பல்வேறு விதங்களிலான ஆயுதங்களையும் இறைத்துக்கொண்டு பகதத்தனை நோக்கி விரைந்தனர். சினமும், பழியுணர்ச்சியும் பெருகியபடி முன்னேறி வரும் அந்த வீரர்களின் கடும் கூச்சல்களைக் கேட்ட பெரும் வில்லாளியான அந்தப் பகதத்தன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்து, முற்றிலும் அச்சமற்ற வகையில் தன் யானையைத் தூண்டினான். அங்குசத்தாலும், கால்பெருவிரலாலும் இப்படித் தூண்டப்பட்ட அந்த யானைகளின் இளவரசன் {சுப்ரதீகம்}, விரைவில் (யுகத்தின் முடிவில் தோன்றுவதும். அனைத்தையும் அழிப்பதுமான) சம்வர்த்த நெருப்பின் {ஊழித் தீயின்} வடிவத்தை ஏற்றது.

அது {சுப்ரதீகம்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில், தேர்கள், தனக்கு இணையான (பகை) யானைகள், குதிரையோட்டிகளுடன் கூடிய குதிரைகள் ஆகியவற்றை நசுக்கியபடி அங்கேயும் இங்கேயும் திரும்பத் தொடங்கியது. சினத்தால் நிறைந்த அது {சுப்ரதீகம்}, நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான காலாட்படையினரையும் நசுக்கியது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த யானையால் தாக்கப்பட்டு, கலங்கடிக்கப்பட்ட அந்தப் பாண்டவர்களின் பெரும் படை, நெருப்பில் {அதன் வெம்மையில்} காட்டப்பட்ட தோல் துண்டு ஒன்றைப் போல அளவில் சுருங்கியது {எண்ணிக்கையில் குறைந்தது}.

புத்திசாலியான அந்தப் பகதத்தனால் உடைக்கப்பட்ட பாண்டவ வியூகத்தைக் கண்ட கடுமுகம் கொண்ட கடோத்கசன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுடர்விடும் முகம் மற்றும் நெருப்பு போன்ற கண்களுடன் சினத்தால் நிறைந்து அவனை {பகதத்தனை} நோக்கி விரைந்தான். பயங்கர வடிவை ஏற்றுக் கோபத்தால் எரிந்த அவன் {கடோத்கசன்}, மலைகளையே பிளக்கவல்ல பிரகாசமான ஒரு சூலத்தை எடுத்தான். பெரும் பலத்தைக் கொண்ட அவன் {கடோத்கசன்}, அந்த யானையை {சுப்ரதீகத்தைக்} கொல்ல விரும்பி, அனைத்துப் பக்கங்களிலும் நெருப்புத் தழல்களை வெளியிட்டு சுடர்விட்ட  அந்தச் சூலத்தை வலுவுடன் வீசினான்.

தன்னை நோக்கிப் பெரும் மூர்க்கத்துடன் வரும் அதை {அந்தச் சூலத்தைக்} கண்ட பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்}, அழகானதும், ஆனால் கடுமையானதுமான அர்த்தச்சந்திரக் கணையொன்றை அதன் {அந்த சூலத்தின்} மேல் ஏவினான். பெரும் சக்தி படைத்த அவன் {பகதத்தன்}, அந்தச் சூலத்தைத் தன் கணையால் {அர்த்தச்சந்திரக் கணையால்} துண்டாக்கினான். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தச் சூலம், இந்திரனால் ஏவப்பட்டு ஆகாயத்தினூடாக மின்னிக் கொண்டே வரும் வஜ்ரத்தைப் போல, இப்படி இரண்டாகப் பிளந்து கீழே தரையில் விழுந்தது.

(தன் எதிரியின்) அந்தச் சூலம் இரண்டாகப் பிளந்து தரையில் விழுந்ததைக் கண்ட பகதத்தன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கக் கைப்பிடி கொண்டதும், நெருப்பின் தழல் போன்ற பிரகாசத்துடன் கூடியதுமான ஒரு பெரிய ஈட்டியை எடுத்துக் கொண்டு, “நில், நில்” என்று சொன்னபடி அந்த ராட்சசன் {கடோத்கசன்} மீது வீசினான். இடியைப் போல வானத்தினூடாகத் தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் அதை {ஈட்டியைக்} கண்ட அந்த ராட்சசன் {கடோத்கசன்}, உயரக் குதித்து அதைப் {அந்த ஈட்டியைப்} பிடித்து உரக்கக் கூச்சலிட்டான். விரைவாக அதை {ஈட்டியை} தன் முழங்காலில் வைத்த அவன் {கடோத்சகசன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மன்னர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதை {ஈட்டியை} உடைத்தான். இவையனைத்தும் மிக அற்புதமானவையாகத் தெரிந்தன. வானத்திலிருந்த தேவர்கள், கந்தர்வர்கள், முனிவர்கள் ஆகியோர் வலிமைமிக்க அந்த ராட்சசன் {கடோத்கசன்} செய்த அந்த அருஞ்செயலைக் கண்டு அதிசயித்தனர். பீமசேனனின் தலைமையிலான பாண்டவ வீரர்களும், “நன்று, நன்று” என்ற கூச்சல்களால் பூமியை நிறைத்தனர் .

எனினும், பெரும் வில்லாளியான வீர பகதத்தனால், மகிழ்ச்சியடைந்த பாண்டவர்களின் அந்த உரத்த கூச்சல்களைத் (பொறுமையாகத்) தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்திரனின் வஜ்ரத்தைப் போன்ற பிரகாசத்துடன் கூடிய தன் பெரும் வில்லை வளைத்த அவன் {பகதத்தன்}, பாண்டவப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களைக் கண்டு, பெரும் சக்தியுடன் முழங்கிய அதே வேளையில், நெருப்பைப் போன்ற பிரகாசம் கொண்டவையும், பெரும் கூர்மை கொண்டவையுமான கணைகள் பலவற்றைஅவர்கள் மீது ஏவினான்.

பீமனை ஒரு கணையாலும், அந்த ராட்சசனை {கடோத்கசனை} ஒன்பதாலும் {9} துளைத்தான்.

அபிமன்யுவை மூன்றாலும் {3}, கேகயச் சகோதரர்களை ஐந்தாலும் {5} துளைத்தான்.

முழுமையாக வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து ஏவப்பட்ட நேரான மற்றொரு கணையால், அந்தப் போரில் க்ஷத்ரதேவனின் வலக்கரத்தைத் துளைத்தான். அதன் காரணமாக நாணில் கணை பொருத்தப்பட்ட பின்னவனின் {க்ஷத்ரதேவனின்} வில் அவன் கையில் இருந்து கீழே விழுந்தது.

பிறகு அவன் {பகதத்தன்}, ஐந்து {5} கணைகளால் திரௌபதியின் மகன்களைத் தாக்கினான்.

மேலும் கோபத்தால் அவன் {பகதத்தன்} பீமசேனனின் குதிரைகளைக் கொன்றான். பிறகு அவன் {பகதத்தன்}, சிங்க வடிவம் பொறிக்கப்பட்டிருந்த பீமசேனனின் கொடிமரத்தை, இறகுகளால் சிறகமைந்த மூன்று கணைகளால் வெட்டி வீழ்த்தினான். மேலும் அவன் {பகதத்தன்}, வேறு மூன்று கணைகளால் பீமசேனனின் தேரோட்டியையும் {தேரோட்டி விசோகனையும்} துளைத்தான். ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் பகதத்தனால் ஆழத்துளைக்கப்பட்டுப் பெரும் வலியை உணர்ந்த விசோகன், கீழே அந்தத் தேர்த்தட்டிலே அமர்ந்தான்.

பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இப்படித் தன் தேரை இழந்த அந்தத் தேர்வீரர்களில் முதன்மையான பீமன், தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, தன் பெரிய வாகனத்தில் இருந்து விரைவாகக் கீழே குதித்தான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சிகரத்துடன் கூடிய மலையைப் போல, உயர்த்தப்பட்ட கதாயுதத்துடன் கூடிய அவனை {பீமனைக்} கண்ட உமது துருப்பினர் அனைவரும் பெரும் அச்சத்தால் நிறைந்தனர்.

சரியாக இதே நேரத்தில், கிருஷ்ணனைத் தன் தேரோட்டியாகக் கொண்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தான் வந்த வழியெங்கும் எதிரிகளைக் கொன்றபடி, வலிமைமிக்கத் தேர்வீரர்களும், தந்தையும் மகனுமான பீமனும், கடோத்கசனும், பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளனுடன் {பகதத்தனுடன்} போரிட்டுக் கொண்டிருந்த இடத்தில் தோன்றினான். ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே} அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான தன் சகோதரர்கள் போரிட்டுக் கொண்டிருப்பதைக் கண்ட அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் கணைகளை அளவில்லாமல் இறைத்தபடி போரிடத் தொடங்கினான்.

பிறகு, அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான மன்னன் துரியோதனன், தேர்களாலும், யானைகளாலும் நிறைந்திருந்த தன் துருப்புகளின் ஒரு பிரிவை விரைவாகத் தூண்டினான். மூர்க்கத்துடன் இப்படி விரைந்து வரும் கௌரவர்களின் அந்தப் படைப்பிரிவை நோக்கி, வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனனும் பெரும் மூர்க்கத்துடன் விரைந்தான். தன் யானையில் இருந்த பகதத்தனும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாண்டவப் படையணியினரை நசுக்கியபடி யுதிஷ்டிரனை நோக்கி விரைந்தான். பிறகு பகதத்தனுக்கும், ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, ஆயுதங்களை உயர்த்திய பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள், கேகயர்கள் ஆகியோருக்கும் இடையில் ஒரு கடும்போர் தொடங்கியது.

அப்போது பீமசேனன், அந்தப் போரில் கேசவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவருக்கும் இராவத் {அரவான்} கொல்லப்பட்டதை உள்ளபடியே விவரமாகக் சொன்னான்” {என்றான் சஞ்சயன்}.

எட்டாம்நாள் போரின் முடிவு! – பீஷ்ம பர்வம் பகுதி – 097-இராவத்தின் கொலை குறித்துத் தெரிவிக்கப்பட்ட அர்ஜுனன்; கிருஷ்ணனிடம் அர்ஜுனன் வேதனையில் க்ஷத்திரியத் தொழிலை நிந்தித்துப் பேசியது; பீமனை எதிர்த்த துரியோதனன் தம்பிகள்; துரியோதனன் தம்பிகள் ஒன்பது பேரைக் கொன்ற பீமன்; அர்ஜுனனை எதிர்த்த பெரும் வீரர்கள்; அபிமன்யுவின் சாதனை; போர்க்களத்தின் வர்ணனை…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தன் மகன் இராவத் {அரவான்} கொல்லப்பட்டதைக் கேட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} பெரும் துயரால் நிறைந்து ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சுவிட்டான்.

போரின் மத்தியில் வாசவனிடம் {கிருஷ்ணனிடம்} அவன் {அர்ஜுனன்} இவ்வார்த்தைகளைச் சொன்னான், “உயர் ஆன்மா கொண்ட பெரும் அறிவாளி விதுரர், கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நேரும் இந்தப் பயங்கர அழிவைத் (தன் மனக்கண்ணால்) முன்பே கண்டிருக்கிறார் என்பதில் ஐயமில்லை. மன்னன் திருதராஷ்டிரரை அவர் {விதுரர்} இதற்காகவே தடுத்தார். இந்தப் போரில், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, இதர பல வீரர்கள் கௌரவர்களால் கொல்லப்பட்டிருக்கின்றனர், அதேபோலக் கௌரவர்களில் பலர் நம்மால் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

ஓ! மனிதர்களில் சிறந்தவனே {கிருஷ்ணா}, செல்வத்தின் பொருட்டே இழிந்த செயல்கள் செய்யப்படுகின்றன. எதன் பொருட்டுச் சொந்தங்களின் படுகொலை இப்படி நிகழ்த்தப்படுகிறதோ, அந்தச் செல்வத்தை நிந்திக்க வேண்டும். செல்வம் இல்லாத ஒருவனுக்கு, சொந்தங்களின் படுகொலையின் மூலம் கிடைக்கும் செல்வத்தை விட மரணம் கூட மேலானதே. ஓ! கிருஷ்ணா, கூடியிருக்கும் சொந்தங்களைக் கொல்வதன் மூலம் நாம் என்ன ஈட்டப் போகிறோம்? ஐயோ, துரியோதனன் மற்றும் சுபலனின் மகன் சகுனியின் தவறாலும், கர்ணனின் தீய ஆலோசனைகளாலும், க்ஷத்திரிய குலம் அழிவை அடைகிறது.

ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, பாதி நாட்டை மட்டுமோ, இல்லை அதற்குப் பதிலாக ஐந்து கிராமங்களை மட்டுமோ கூடச் சுயோதனனிடம் {துரியோதனனிடம்} இரந்து கேட்டு மன்னன் {யுதிஷ்டிரர்} விவேகமாக நடந்து கொண்டார் என நான் இப்போது புரிந்து கொள்கிறேன். ஐயோ, தீய ஆன்மா கொண்ட அந்த இழிந்தவனால் {துரியோதனனால்} அதுகூடக் கொடுக்கப்படவில்லையே {அந்தப் பொல்லாதவன் அதைக் கூடக் கொடுக்கவில்லையே}. துணிச்சலான க்ஷத்திரியர்கள் பலர் போர்க்களத்தில் (இறந்து) கிடப்பதைக் காணும் நான், க்ஷத்திரியத் தொழில் நிந்திக்கத்தக்கது என்று சொல்லி என்னை நானே நிந்தித்துக் கொள்கிறேன்.

போரில் சக்தியற்றவனாக [1] க்ஷத்திரியர்கள் என்னைக் கருதுவார்கள் என்பதால் மட்டுமே நான் போரிடுகிறேன். இல்லையெனில், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா} சொந்தங்களுடனான இந்தப் போர் எனக்கு அருவருப்பானதாகவே {வெறுக்கத்தக்கதாகவே} இருக்கிறது. தார்தராஷ்டிரப் படையை நோக்கி குதிரைகளை வேகமாகத் தூண்டுவாயாக. கடப்பதற்கு அரிதான இந்தப் போர்க் கடலின் அடுத்தக் கரையை என் இரு கைகளால் நான் அடைவேன். ஓ! மாதவா {கிருஷ்ணா}, இழப்பதற்கு நேரமேதும் இல்லை [2]” {என்றான் அர்ஜுனன்}.

பகைவீரர்களைக் கொல்பவனான கேசவன் {கிருஷ்ணன்}, பார்த்தனால் {அர்ஜுனனால்} இப்படிச் சொல்லப்பட்டுக் காற்றின் வேகத்தையுடைய அந்த வெண்ணிறக் குதிரைகளைத் தூண்டினான். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, புயலால் கலங்கடிக்கப்படும் அலைகள் நிறைந்த பெருங்கடலின் ஒலியைப் போல [3] உமது துருப்புகளுக்குள் பேரொலி {பேரிரைச்சல்} கேட்டது.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிற்பகலில், பீஷ்மருக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட போரானது முகில்களின் முழக்கத்தை ஒத்த ஒலியால் குறிக்கப்பட்டது. பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வாசவனை {இந்திரனைச்} சூழ்ந்திருக்கும் வசுக்களைப் போலத் துரோணரைச் சூழ்ந்திருந்த உமது மகன்கள், பீமேசனனை எதிர்த்துப் போரிட விரைந்தனர்.

அப்போது, சந்தனுவின் மகனான பீஷ்மர், தேர்வீரர்களில் முதன்மையான கிருபர், பகதத்தன், {திரிகர்த்த மன்னன்} சுசர்மன் ஆகியோர் அனைவரும் தனஞ்சயனை {அர்ஜுனனை} நோக்கிச் சென்றனர்.

ஹிருதிகனின் மகன் (கிருதவர்மன்) மற்றும் பாஹ்லீகன் ஆகியோர் சாத்யகியை நோக்கி விரைந்தனர்.

மன்னன் அம்பஷ்டன் {அம்பஷ்டகன்} [4]அபிமன்யுவின் முன்னால் தன்னை நிறுத்திக் கொண்டான்.

மேலும் பெரும் தேர்வீரர்கள் பிறர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் தேர்வீரர்களான {வேறு} பிறருடன் மோதினர். பிறகு காணப் பயங்கரமான ஒரு கடும்போர் தொடங்கியது.

உமது மகன்களைக் கண்ட பீமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (ஆகுதியான) தெளிந்த நெய்யுடன் கூடிய நெருப்பைப் போல அந்தப் போரில் கோபத்தால் சுடர்விட்டு எரிந்தான். எனினும் உமது மகன்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மழைக்காலத்தில் மலைச்சாரலை நனைக்கும் மேகங்களைப் போலத் தங்கள் கணைகளால் அந்தக் குந்தியின் மகனை {பீமனை} மறைத்தார்கள். புலி போலச் செயல்படும் அந்த வீரன் {பீமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (இப்படி) உமது மகன்களால் பல்வேறு வழிகளில் மறைக்கப்பட்டபோது தன் கடைவாயை நாவால் நனைத்தான் {நக்கினான்}.

பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கூர்மையான க்ஷுரப்ரம் {குதிரை லாடம் போன்ற தலை கொண்ட கணை} ஒன்றால் வியுதோரோஷ்கனை [5] வீழ்த்தினான். அதன்பேரில் அந்த உமது மகன் {வியுதோரோஷ்கன்} உயிரை இழந்தான்.

செம்பதமாக்கப்பட்டதும் {நன்கு கடுமையாக்கப்பட்டதும்}, கூர்மையானதுமான வேறு ஒரு பல்லத்தினால் அவன் {பீமன்}, சிங்கம் சிறு விலங்கொன்றை வீழ்த்துவதைப் போலக் குண்டிலினை வீழ்த்தினான்.

பிறகு, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது (மற்ற) மகன்களைக் (தன் கணைகள் செல்லும் தூரத்திற்குள்) கொண்டு வந்து, கூர்மையானதும், செம்பதமாக்கப்பட்டதுமான பல கணைகளை [6] எடுத்துக் கொண்டு, அவற்றைக் கவனமாகக் குறிபார்த்து அவர்கள் மீது ஏவினான்.  அந்த வலிமையான வில்லாளியான பீமசேனனால் ஏவப்பட்ட அந்தக் கணைகள், வலிமைமிக்கத் தேர்வீரர்களான உமது மகன்களை அவர்களது வாகனங்களில் இருந்து விழச்செய்தன. {அவர்கள்} (இப்படிக் கொல்லப்பட்ட உமது மகன்கள்) அநாதிருஷ்டி, குண்டபேதின், விராஜன், தீர்கலோசனன் {தீப்தலோசனன்}, தீர்க்கபாகு, சுபாகு, கன்யாகத்யஜன் {மகரத்வஜன்} ஆகியோராவர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, வசந்தகாலத்தில் மலர்ந்திருக்கும் பலவண்ணங்களிலான மாமரங்கள் விழுந்தால் எப்படி இருக்குமோ, அப்படி அந்த வீரர்கள் (தங்கள் தேர்களில் இருந்து) விழுந்த போது பிரகாசமாகத்தெரிந்தனர். பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரே}, உமது பிற மகன்கள், வலிமைமிக்க அந்தப் பீமசேனனைக் காலனாகவே கருதி அங்கிருந்து தப்பி ஓடினார்கள் [7].

அப்போது துரோணர், உமது மகன்களை இப்படி எரித்துக் {அழித்துக்} கொண்டிருந்த அந்த வீரனை {பீமனை}, மலைச்சாரலில் மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போல அனைத்துப் புறங்களில் இருந்தும் கணைகளால் மறைத்தார். அந்தப் போரில் துரோணரால் தடுக்கப்பட்டாலும், உமது மகன்களைக் கொன்ற அந்தக் குந்தியின் மகனுடைய {பீமனின்} ஆற்றல் மிக அற்புதமாக இருந்ததை நாங்கள் கண்டோம். உண்மையில், மேலிருந்து விழும் மழைப்பொழிவைத் தாங்கிக் கொள்ளும் காளையைப் போலத் துரோணரால் ஏவபட்ட கணைகளின் மழையை அந்தப் பீமன் மகிழ்ச்சியாகத் தாங்கிக் கொண்டான். துரோணரால் தடுக்கப்பட்ட போதும், அந்தப் போரில் உமது மகன்களை அங்கே கொன்று, விருகோதரனால் {பீமனால்} அடையப்பட்ட அந்தச் சாதனை அற்புதமானதாக இருந்தது.

உண்மையில் அந்த அர்ஜுனனின் அண்ணன் {பீமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மான்கூட்டத்தில் ஒரு வலிமைமிக்கப் புலியைப் போல வீரர்களான உமது மகன்களுடன் விளையாடினான். மான்கூட்டத்துக்கு மத்தியில் ஓநாய் ஒன்று இருந்து, அந்த விலங்குகளை {மான்களை} விரட்டி அச்சுறுத்துவது போலவே, விருகோதரனும் அந்தப் போரில் உமது மகன்களை விரட்டி அச்சுறுத்தினான்.

அதேவேளை, கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, பகதத்தன் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரரான கௌதமர் {கிருபர்} ஆகியோர் பாண்டுவின் மூர்க்கமான மகன் அர்ஜுனனைத் தடுக்கத் தொடங்கினார்கள். அந்தப் போரில் தன் எதிரிகளின் ஆயுதங்களைத் தன் ஆயுதங்களால் கலங்கடித்த அந்த அதிரதன் {அர்ஜுனன்}, உமது படையில் முக்கியமான பல வீரர்களை யமனுலகு அனுப்பிவைத்தான்.

தன் கணைகளால் அபிமன்யுவும், புகழ்பெற்றவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான மன்னன் அம்பஷ்டனின் தேரை இழக்கச் செய்தான். தன் தேரை இழந்த அந்த மன்னன் {அம்பஷ்டன்}, சுபத்திரையின் புகழ்பெற்ற மகனால் கொல்லப்படுவதற்கு முன்னர், விரைந்து அவமானத்தால் தன் தேரில் இருந்து கீழே குதித்து, அந்தப் போரில் உயர் ஆன்ம அபிமன்யுவின் மேல் தன் வாளை எறிந்தான். பிறகு, அந்த வலிமைமிக்க ஏகாதிபதி {அம்பஷ்டன்}, ஹிருதிகன் மகனின் {கிருதவர்மனின்} தேரில் ஏறினான். போரில் நகர்வுகள் அனைத்தையும் அறிந்தவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தன்னை நோக்கி வரும் அந்த வாளைக் கண்டு லாகவத்தால் {தன் நகர்வுகளின் வேகத்தால்} அதைக் கலங்கடித்தான். அந்தப் போரில் சுபத்திரையின் மகனால் {அபிமன்யுவால்}, அந்த வாள் இப்படிக் கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட அந்தத் துருப்புகளுக்கு மத்தியில், “நன்று”, “நன்று” என்ற பெருங்கூச்சல்கள் கேட்டன.

திருஷ்டத்யும்னனின் தலைமையிலான பிற வீரர்கள் உமது துருப்பினருடன் போரிட்டன. அதே வேளையில் உமது துருப்பினர் அனைவரும் அந்தப் பாண்டவர்களுடன் {பாண்டவத் துருப்புகளுடன்} போரிட்டனர். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உம்மவருக்கும், அவர்களுடையவர்களுக்கும் இடையில் நடைபெற்ற அந்தக் கடுமையான மோதலில் போராளிகள் பெரும் சக்தியுடன் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு கடினமான சாதனைகளை அடைந்தார்கள். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் முடிகளைப் பற்றிய அந்தத் துணிச்சல் மிக்கப் போராளிகள், தங்கள் நகங்கள், பற்கள், கைமுட்டிகள், கால்முட்டிகள், உள்ளங்கைகள், வாள்கள், நல்ல விகிதங்களில் அமைந்த தங்கள் கரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்திப் போரிட்டனர் [8].

{போரில்} ஒருவர் தாமதத்தை மற்றவர் பயன்படுத்திக் கொண்டு {இப்படியே} அவர்கள் ஒருவரையொருவர் யமலோகத்திற்கு அனுப்பினார்கள். தந்தை மகனைக் கொன்றான், அதே போல மகன் தந்தையைக் கொன்றான். உண்மையில் அந்தப் போராளிகள் ஒவ்வொருவரும் தங்கள் ஒவ்வொரு அங்கங்களையும் பயன்படுத்திப் போரிட்டனர்.

போரில் கொல்லப்பட்ட வீரர்களின் பிடியில் இருந்து நழுவியவையான தங்கப் பிடிகளையுடைய அழகிய விற்களும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, விலையுயர்ந்த ஆபரணங்களும், தங்கம் அல்லது வெள்ளிச் சிறகுகளைக் கொண்ட, எண்ணெயிலிட்டுத் தீட்டப்பட்டிருந்த கூரிய கணைகள்  (அப்படிக் {வீரர்களின் பிடியில் இருந்து நழுவி} களத்தில் சிதறிக் கிடந்த போது) பிரகாசமாகத் தெரிந்தன. அதிலும் குறிப்பாக, பின்னவை {கணைகள்} சட்டை உரித்த பாம்புகளைப் போல இருந்தன. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுத் தந்தப் பிடிகளைக் கொண்டிருந்த வாட்களும், தங்கத்துடன் பல வண்ணங்களில் இருந்த வில்லாளிகளின் கேடயங்களும் அவர்களது {வீரர்களின்} பிடியில் இருந்து நழுவி களத்தில் கிடந்தன.

தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையான பராசங்கள், கோடரிகள், வாள்கள், எறிவேல்கள், அழகிய கவசங்கள், கனமான குறுகிய தடிகள், பரிகங்கள், போர்க்கோடரிகள், பிண்டிபாலங்கள், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பல்வேறு வடிவங்களிலான யானை அம்பாரிகள், சாமரங்கள், விசிறிகள் ஆகியனவும் களத்தில் சிதறிக் கிடந்தன. தங்கள் கைகளிலோ, தங்களின் அருகிலோ பல்வேறு விதங்களிலான ஆயுதங்களுடன் களத்தில் கிடந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் உயிர்மூச்சுப் போயிருந்தாலும் உயிருடன் இருப்பது போலவே தோன்றினர். கதாயுதங்களால் நொறுக்கப்பட்ட அங்கங்களுடனும், தண்டங்களாலோ, யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றாலோ நொறுக்கப்பட்ட தலைகளுடனும் மனிதர்கள் அந்தக் களத்தில் கிடந்தனர்.

கொல்லப்பட்ட குதிரைகள், மனிதர்கள், யானைகள் ஆகியவற்றின் உடல்கள் சிதறிக் கிடந்த பூமியின் பல பகுதிகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மலைகள் சிதறிக் கிடப்பது போல அழகாகத் தெரிந்தன. விழுந்து கிடந்த ஈட்டிகள் {சக்திகள்}, வாள்கள் {ரிஷ்டிகள்}, கணைகள் {அம்புகள்}, வேல்கள் {தோமரங்கள்}, பட்டாக்கத்திகள், கோடரிகள், பராசங்கள், கன்னக்கோல்கள் {அவஸ்கந்தகங்கள்}, போர்க்கோடரிகள், பரிகங்கள், பிண்டிபாலங்கள், சதக்னிகள் [9] ஆகியவற்றாலும், ஆயுதங்களால் சிதைக்கப்பட்ட உடல்களாலும் அந்தப் போர்க்களம் மறைக்கப்பட்டிருந்தது.

ஓ! எதிரிகளைக் கொல்பவரே {திருதராஷ்டிரரே}, போர்வீரர்களில் உயிரையிழந்த சிலர், மரண அமைதியிலும், {உயிரிழக்காத} பிறர் தீனமான முனகல்களுடனும் என இரத்தத்தில் போர்த்தப்பட்டு, களத்தில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்தனர். அந்த உடல்களால் விரவிக் கிடந்த அந்தப் பூமி வண்ணமயமான காட்சி ஒன்றை அளித்தது. சந்தனக்குழம்பு பூசப்பட்டு, தோலுறைகளும், தோள்வளைகளும் தரித்திருந்த பலம்நிறைந்த வீரர்களின் கரங்களாலும், யானைகளின் துதிக்கைகளைப் போன்ற {அவர்களின்} கூம்பும் தொடைகளாலும், ரத்தினங்கள் இணைக்கப்பட்ட தலைப்பாகைகளுடன் கூடியவையும், பெரிய கண் படைத்த போராளிகளின் காது குண்டலங்களுடன் கூடியவையுமான வீழ்த்தப்பட்ட {அவர்களின்} தலைகளாலும் விரவிக் கிடந்த பூமி அழகிய காட்சியைக் கொண்டது. குருதியும், சாயம்பூசப்பட்ட கவசங்களும், பல வகையான ஆபரணங்களும் பரவிக்கிடந்த அந்தப் போர்க்களம், நெருப்பின் மென் தழல்கள் (சிதறிக்) கிடந்ததைப் போல மிக அழகாகத் தெரிந்தது.

தங்கள் நிலைகளில் இருந்து விழுந்த பல்வேறு விதமான ஆபரணங்களாலும், விழுந்து கிடக்கும் விற்களாலும், சுற்றிலும் சிதறிக் கிடக்கும் தங்கச் சிறகுகளைக் கொண்ட கணைகளாலும், மணிவரிசைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த உடைந்த பல தேர்களாலும், ரத்தத்தால் போர்த்தப்பட்டும், நாக்குகள் வெளித்தள்ளப்பட்டும் கொல்லப்பட்டுச் சிதறிக் கிடந்த பல குதிரைகளாலும், தேர்களின் அடிமரங்கள், கொடிமரங்கள், அம்பறாத்தூணிகள், கொடிகள், பெரும்வீரர்களுக்குச் சொந்தமானவையான பெரிய பால்வெள்ளை சங்குகள் ஆகியவற்றாலும், நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்த துதிக்கைகளற்ற யானைகளாலும் இந்தப் பூமியானவள், பல்வேறு விதமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அழகிய காரிகை ஒருத்தியைப் போலத் தெரிந்தாள்.

அங்கே, வேல்களால் {தோமரங்களால்} துளைக்கப்பட்டு, பெரும் வேதனையில் தங்கள் துதிக்கைகளால் மெல்லிய முனகல்களை அடிக்கடி வெளியிட்ட பெரும் யானைகளோடு கூடிய அந்தப் போர்க்களம், நகரும் மலைகளைக் கொண்டதைப் போல அழகாகத் தெரிந்தது. பல்வேறு நிறங்களிலான விரிப்புகள் மற்றும் யானைகளின் அம்பாரிகளாலும், வைடூரியம்-ரத்தினங்கள் இழைக்கப்பட்ட பிடிகளுடன் கூடிய விழுந்து கிடந்த மாவெட்டிகளாலும், பெரும் யானைகளை அலங்கரித்து விழுந்து கிடந்த மணிகளாலும், பலவண்ணங்களில் இருந்த சுத்தமான துணிகளாலும், ரங்கு மான் தோல்களாலும், யானைகளின் அழகிய கழுத்து ஆரங்களாலும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கச்சைகளாலும், பல்வேறு வகைகளிலான உடைந்த பொறிகளாலும், தங்கத்தாலான பராசங்களாலும், புழுதியால் பழுப்பானவையும், சித்திர வேலைப்பாடுகளுடன் கூடியவையுமான குதிரைகளின் கவசங்களாலும், தோள்வளை பூண்ட குதிரைப்படை வீரர்களின் வெட்டப்பட்ட கரங்களாலும், பளபளக்கும் கூரிய வேல்களாலும், பிரகாசமான வாள்களாலும், (தலைகளில் இருந்து) விழுந்த பலவண்ணங்களிலான தலைப்பாகைகளாலும், பரவி கிடந்த தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அழகிய அர்த்தச்சந்திரக் கணைகளாலும், கிழிபட்டு, நசுங்கிய ரங்குமான் தோல்களாலான குதிரைகளின் சேனங்களாலும், விழுந்து கிடந்தவையான விலையுயர்ந்த ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட மன்னர்களின் அழகிய தலைப்பாகைகள், குடைகள், சாமரங்கள், விசிறிகள் ஆகியவற்றாலும், அழகிய காதுகுண்டலங்களைக் கொண்டவையும், நன்கு வெட்டப்பட்ட தாடிகளை {மீசைகளைக்} கொண்டவையும், தாமரையையோ சந்திரனையோ போன்று பிரகாசமானவையும், பிற தங்க ஆபரணங்களால் ஒளிர்பவையுமான கீழே விழுந்து கிடந்த போர்வீரர்களின் முகங்களாலும் இந்தப் பூமி கோள்கள் மற்றும் நட்சத்திரங்களால் நிறைந்த ஆகாயம் போலத் தெரிந்தது.

இப்படியே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உம்முடையவரும், அவர்களுடையவருமான அந்த இரு படையினரும் போரில் ஒருவரோடொருவர் மோதி, ஒருவரை ஒருவர் நசுக்கினர். அந்தப் போராளிகள் களைப்படைந்து, முறியடிக்கப்பட்டு, நசுக்கப்பட்ட பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கருமையான இரவு வந்ததால் மேற்கொண்டு அந்தப் போரைப் பார்க்க முடியவில்லை.

அந்தக் காரிருள் கொண்ட இரவு வந்தபோது குருக்களும், பாண்டவர்களும் தங்கள் படைகளை விலக்கிக் கொண்டனர். அப்படித் துருப்புகளை விலக்கிக் கொண்ட குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இருவரும், தங்கள் தங்கள் பாசறைகளுக்குச் சென்று இரவில் ஓய்வெடுத்தனர்” {என்றான் சஞ்சயன்}.

எட்டாம் நாள் போர் முற்றும்

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ  பீஷ்ம பர்வம்-ஸ்ரீ பீஷ்மவத பர்வம்-ஏழாம் நாள் போர்-

October 13, 2025

துரியோதனனை உற்சாகப்படுத்திய பீஷ்மர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 081-: ஏழாம் நாள் போர்த் தொடக்கம்; துரியோதனனுக்கும் பீஷ்மருக்கும் இடையில் நடந்த கருத்துப் பரிமாற்றம்; பீஷ்மரின் பேச்சைக் கேட்டு மகிழ்ந்த துரியோதனன்; போருக்குப் புறப்பட்ட படை குறித்த சஞ்சயன் வர்ணனை..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஒருவர் மேல் ஒருவர் பகையுணர்வுகளை வளர்த்து வந்தவர்களும், இரத்தம் தோய்ந்த மேனியுடையவர்களுமான அந்த வீரர்கள் {ஆறாம் நாள் போர் முடிவில்} ஓய்ந்திருக்கத் தங்கள் பாசறைக்குச் சென்றனர். விதிகளுக்கு ஏற்புடைய வகையில் சிறிது நேரம் {அன்றிரவு} இளைப்பாறி (அந்த நாளைய சாதனைகளுக்காக) ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொண்ட அவர்கள், மீண்டும் போர்புரியக் கருதி கவசம் தரித்தவர்களாகக் காணப்பட்டார்கள்.

பிறகு, துயரில் மூழ்கியவனான உமது மகன் {துரியோதனன்}, (தன் காயங்களில்) இருந்து சொட்டிய குருதியால் நனைந்தபடி, பாட்டனிடம் {பீஷ்மரிடம் துரியோதனன்} [1], “நமது துருப்புகள் மூர்க்கமானவையாகவும், பயங்கரமானவையாகவும், எண்ணிலடங்கா கொடிமரங்களைச் சுமப்பவையாகவும் இருக்கின்றன. மேலும், அவை முறையாக அணிவகுக்கப்பட்டும் இருக்கின்றன. எனினும், துணிவுமிக்கவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான பாண்டவர்கள் (நமது அணிவகுப்பிற்குள்) ஊடுருவி (நமது துருப்புகளைப்} பீடித்து, படுகொலை செய்து, காயப்படாமல் தப்பிக்கிறார்கள். நம் அனைவரையும் குழப்பும் அவர்கள் போரில் பெரும் புகழை வென்றுள்ளனர்.

இடியைப் போன்ற வலிமையுடன் இருந்த நமது மகர [2] அணிவகுப்புக்குள் ஊடுருவிய பீமன், காலனின் கணை {யமதண்டங்களைப்} போன்ற பயங்கரக் கணைகளால் என்னைப் பீடித்தான். கோபத்தால் தூண்டப்பட்ட அவனை {பீமனைக்} கண்ட நான், ஓ! மன்னா {பீஷ்மரே}, எனது புலன் உணர்வுகளை இழந்தேன் {அச்சத்தால் மயக்கமடைந்தேன்}. இப்போதும் எனது மன அமைதியை என்னால் மீட்க முடியவில்லை. உமது அருளால், ஓ! உண்மையில் {சத்தியத்தில்} உறுதியுள்ளவரே {சத்தியசந்தரே, பீஷ்மரே}, பாண்டு மகன்களைக் கொன்று வெற்றியை அடைய நான் விரும்புகிறேன் [3]” என்றான் {துரியோதனன்}.

அவனால் {துரியோதனனால்} இப்படிச் சொல்லப்பட்டவரும், ஆயுதம் தரித்தவர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், பெரும் மனோ சக்தி கொண்டவருமான கங்கையின் உயர் ஆன்ம மகன் {பீஷ்மர்}, துரியோதனன் கொண்ட துயரைப் புரிந்து கொண்டு, உற்சாகமற்றிருந்தாலும் சிரித்தவாறே அவனிடம் {பீஷ்மர் துரியோதனனிடம்}, “விடா முயற்சியுடனும், எனது முழு ஆன்மாவுடனும் (அவர்களது) படைக்குள் ஊடுருவி, ஓ! இளவரசே {துரியோதனா}, உனக்கு வெற்றியையும் மகிழ்ச்சியையும் தர நான் விரும்புகிறேன். உனக்காக நான் ஒரு போதும் பாசாங்கு செய்வதில்லை. பாண்டவர்களின் கூட்டாளிகளாக உள்ளவர்கள் மூர்க்கமானவர்களாகவும், எண்ணிலடங்காதவர்களாகவும் இருக்கின்றனர். பெரும் புகழ்பெற்று வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள் மிகத் துணிவுள்ளவர்களாகவும், ஆயுதங்களில் சாதித்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

களைப்படைய இயலாத அவர்கள் {பாண்டவர்கள்} தங்கள் கோபத்தையே கக்குகிறார்கள். ஆற்றலில் வளர்ந்து, உன் மீது பகையை வளர்த்திருக்கும் அவர்கள் {பாண்டவர்கள்}, எளிதில் வெல்லப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள். எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, என் முழு ஆன்மாவுடனும், என் உயிரை விட்டும் நான் அந்த வீரர்களுடன் போராடுவேன். ஓ! பெரும் மகிமை கொண்டவனே {துரியோதனா}, இன்று உனக்காகவே, இந்தப் போரில் என் உயிர் துச்சமாக வெளிப்படும். {உனக்காக என்னுடைய உயிரானது இப்போது காப்பாற்றத்தக்கதன்று}. இங்கிருக்கும் உன் எதிரிகளை விடு, உன் பொருட்டுத் தேவர்களுடனும், தைத்தியர்களுடனும் கூடிய உலகங்கள் அனைத்தையும் கூட நான் எரித்துவிடுவேன். ஓ! மன்னா {துரியோதனா}, அந்தப் பாண்டவர்களுடன் போரிட்டு, உனக்கு ஏற்புடைய அனைத்தையும் நான் செய்வேன்” என்று மறுமொழி கூறினார் {பீஷ்மர்}.

இவ்வார்த்தைகளைக் கேட்ட துரியோதனன், பெரும் நம்பிக்கையும் ஊக்கமும் பெற்றதால், அவனது இதயம் மகிழ்ச்சியால் நிரம்பியது. (தனது படையின்) துருப்புகள் அனைத்தையும், மன்னர்கள் அனைவரையும் முன்னேறும்படி மகிழ்ச்சியாக அவன் {துரியோதனன்} உத்தரவிட்டான். அந்த உத்தரவின் பேரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்கள், குதிரைகள், காலாட்படை வீரர்கள் மற்றும் யானைகளைக் கொண்ட அவனது {துரியோதனனது} படை முன்னேறத் தொடங்கியது. பல்வேறு விதமான ஆயுதங்களைத் தரித்திருந்த அந்தப் பெரும்படை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} அதிக மகிழ்ச்சியுடன் இருந்தது.

யானைகள், குதிரைகள் மற்றும் காலாட்படை வீரர்கள் அடங்கிய அந்த உமது படை, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களத்தில் மிகவும் அழகாகத் தெரிந்தது. பல்வேறு விதமான ஆயுதங்கள் தரித்த அரசப் போராளிகள் பலர் உமது துருப்புகளுக்கு மத்தியில் தெரிந்தனர். தேர்கள், காலாட்படைவீரர்கள், யானைகள், பெரு உடல்களைக் கொண்ட குதிரைகள் ஆகியவை களத்தில் நகர்ந்ததனால் எழுப்பப்பட்ட புழுதியானது காலைச் சூரியன் போலச் சிவந்து, சூரியக் கதிர்களை மறைத்த படி மிக அழகாகத் தெரிந்தது.

காற்றில் அசைந்து, வானத்தில் நகர்ந்து கொண்டிருந்தவையும், தேர்கள் மற்றும் யானைகளில் இருந்தவையுமான வண்ணக் கொடிகள் பல, மேகங்களுக்கு மத்தியில் உள்ள மின்னலின் கீற்றுகளைப் போல அழகாகத் தெரிந்தன. கிருதயுகத்தில் தேவர்களாலும், பெரும் அசுரர்களாலும் கடையப்பட்ட கடலின் முழக்கத்தைப் போல, மன்னர்களால் வளைக்கப்பட்ட விற்களின் நாணொலிகளின் முழக்கம் கடுமையானவையாகவும், பேரொலியாகவும் இருந்தன. பல்வேறு நிறங்கள், வடிவங்ககள் ஆகியவற்றை (உடைய போராளிகளைக்) கொண்டவையும், செருக்குடன் காணப்பட்டவையும், பகை வீரர்களைக் கொல்ல இயன்றவையுமான உமது மகன்களின் அந்தப் படை, யுக முடிவின் போது ஏற்படும் மேகங்களின் திரள்களைப் போல மூர்க்கமாக இரைந்தன” {என்றான் சஞ்சயன்}.

மண்டல வஜ்ர வியூகங்கள்! – பீஷ்ம பர்வம் பகுதி – 082-துரியோதனனுக்கு உறுதியளித்த பீஷ்மர்; துரியோதனனின் காயங்களுக்கு மூலிகை கொடுத்த பீஷ்மர்; பீஷ்மர் அமைத்த மண்டல வியூகம்; மண்டல வியூகத்தின் அமைப்பு; யுதிஷ்டிரன் அமைத்த வஜ்ர வியூகம்; ஏழாம் நாள் போரில் நேருக்கு நேர் மோதிய வீரர்களின் பெயர்கள்; அர்ஜுனன் ஏவிய ஐந்திர ஆயுதம்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, சிந்தனையில் ஆழ்ந்திருந்த உமது மகனிடம் மீண்டும் பேசிய கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, அவனிடம் {துரியோதனனிடம்}, “நான், துரோணர், சல்லியன், சத்வத குலத்தின் கிருதவர்மன், அஸ்வத்தாமன், விகர்ணன், பகதத்தன், சுபலனின் மகன் {சகுனி}, அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், பாஹ்லீகர்களின் பாஹ்லீகன், திரிகர்த்தர்களின் வலிமைமிக்க மன்னன் {சுசர்மன்}, மகதர்களின் ஒப்பற்ற ஆட்சியாளன் {ஜெயத்சேனன்}, கோசலர்களின் மன்னன் பிருஹத்பலன், சித்திரசேனன், விவிம்சதி, நெடிய கொடிமரங்களால் அருளப்பட்ட தேர்வீரர்கள் பல்லாயிரக்கணக்கானோர், சிறந்த குதிரைவீரர்கள் அமர்ந்திருந்த பெரும் எண்ணிக்கையிலான நாட்டுக் குதிரைகள், அடங்கா மதம் கொண்டவையும், மதப்பெருக்குக் கொண்ட கன்னங்களையும், வாய்களையும் கொண்டவையுமான சிறந்த யானைகள், பல்வேறு இடங்களில் பிறந்து, பல்வேறு ஆயுதங்களைத் தரித்திருக்கும் துணிவுமிக்கக் காலாட்படை வீரர்கள் பலர் ஆகியோர் அனைவரும் உனக்காகப் போரிடத் தயாராக இருக்கிறார்கள். உனக்காகத் தங்கள் உயிரையே விடச் சித்தமாக இருக்கும் இவர்களாலும், இன்னும் பலராலும் தேவர்களையே கூடப் போரில் வீழ்த்திவிட முடியும் என நான் நினைக்கிறேன்.

எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, உனக்கு நன்மையானது எது என்பதையே நான் உனக்கு எப்போதும் சொல்ல வேண்டும். வாசவனுடன் {இந்திரனுடன்} சேர்ந்த தேவர்களாலேயே கூடப் பாண்டவர்களை வீழ்த்த முடியாது. வாசுதேவனைக் {கிருஷ்ணனைக்} கூட்டாளியாகக் கொண்ட அவர்கள் {பாண்டவர்கள்}, ஆற்றலில் மகேந்திரனுக்கு இணையானவர்களாக இருக்கிறார்கள். எனினும், என்னைப் பொறுத்தவரை, நான் எப்போதும் நீ சொல்வதைச் செய்வேன். ஒன்று நான் போரில் பாண்டவர்களை வீழ்த்துவேன், அல்லது அவர்கள் என்னை வீழ்த்துவார்கள்” என்றார் {பீஷ்மர்}.

இவ்வார்த்தைகளைச் சொன்ன பாட்டன் {பீஷ்மர்}, அவனது {துரியோதனனின்} காயங்களுக்காகப் பெரும் திறங்கொண்ட அற்புத மூலிகையொன்றை அவனிடம் கொடுத்தார் [1]. அதைக் கொண்டு உமது மகன் {துரியோதனன்} தனது காயங்களை ஆற்றிக் கொண்டான்.அதிகாலையில் வானம் தெளிவாக இருந்த போது, அணிவகுப்பு வகைகள் அனைத்தையும் நன்கு அறிந்தவர்களில் முதன்மையானவரும், வீரமிக்கவருமான பீஷ்மர், அடர்த்தியான ஆயுதங்களால் நெருங்கியதும், மண்டலம் என்று அழைக்கப்படுவதுமான வியூகத்தில் [2] தனது துருப்புகளை அணிவகுத்தார்

வீரர்களில் முதன்மையானோர், யானைகள் மற்றும் காலாட்படை வீரர்களால் அது {அந்த மண்டல வியூகம்} நிறைந்திருந்தது. மேலும் அது, பல்லாயிரக்கணக்கான தேர்கள், வாள்கள் மற்றும் வேல்கள் தரித்த குதிரை வீரர்களின் பெரும்படை ஆகியவற்றால் அனைத்துப் புறங்களிலும் சூழப்பட்டிருந்தது, ஒவ்வொரு யானைக்கு அருகிலும் ஏழு தேர்கள் அமர்த்தப்பட்டன, மேலும் ஒவ்வொரு தேருக்கு அருகிலும் ஏழு குதிரைவீரர்கள் அமர்த்தப்பட்டனர். ஒவ்வொரு குதிரைவீரனுக்குப் பின்பு ஏழு வில்லாளிகள் அமர்த்தப்பட்டனர். ஒவ்வொரு வில்லாளிக்குப் பின்பும் கேடயங்களுடன் கூடிய ஏழு போராளிகள் அமர்த்தப்பட்டனர். இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரர்களால் அணிவகுக்கப்பட்டும், பீஷ்மரால் பாதுகாக்கப்பட்டும் இருந்த உமது படை கடும்போருக்காகக் காத்திருந்தது.

பத்தாயிரம் குதிரைகளும், அதே அளவு {பத்தாயிரம்} யானைகளும், பத்தாயிரம் தேர்களும், சித்திரசேனனுடன் சேர்ந்த கவசம் தரித்த உமது மகன்களும் பாட்டனால் {பீஷ்மரால்} பாதுகாக்கப்பட்டார்கள். மேலும், அந்தத் துணிவுமிக்க வீரர்களாலும், கவசம் தரித்த பெரும்பலமுடைய அந்த இளவரசர்களாலும் (பதிலுக்குப்) பீஷ்மர் பாதுகாக்கப்பட்டார். அருள் அனைத்தும் கொண்டவனும், கவசம் தரித்தவனும், களத்தில் தன் தேரில் அமர்ந்திருந்தவனுமான துரியோதனன், சொர்க்கத்தில் உள்ள சக்ரனைப் {இந்திரனைப்} போல ஒளிர்ந்தான்.

அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தேர்களின் சடசடப்பொலி மற்றும் இசைக்கருவிகளின் ஆரவாரம் ஆகியவற்றைக் கேட்கவிடாமல் செவிடாக்கும் பேரொலியாக உமது மகன்களின் முழக்கங்கள் இருந்தன. எதிரிகளைக் கொல்பவர்களான தார்தராஷ்டிரர்களின் மண்டலம் என்று அழைக்கப்பட்ட வலிமைமிக்க, ஊடுருவப்பட முடியாத வியூகம் பீஷ்மரால் அணிவகுக்கப்பட்டு, மேற்கு முகமாக {மேற்கு நோக்கி} செல்லத் தொடங்கியது. எதிரிகளால் வீழ்த்தப்பட முடியாத அஃது, அனைத்து இடங்களிலும் அழகாகத் தெரிந்தது. மண்டலம் என்று அழைக்கப்பட்ட மிகக் கடுமையான அந்த வியூகத்தைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன், வஜ்ரம் என்று அழைக்கப்பட்ட வியூகத்தில் தனது துருப்புகளை அணிவகுத்தான் [2].

படைப்பிரிவுகள் இப்படி அணிவகுக்கப்பட்டதும், முறையான இடங்களில் நின்று கொண்டிருந்த தேர்வீர்கள், குதிரைவீரர்கள் ஆகியோர் சிங்க முழக்கமிட்டனர். தங்களுக்குரிய படைகளின் துணையோடு, துணிவுமிக்கவர்களும், தாக்குவதை நன்கறிந்தவர்களும், போரை எதிர்பார்த்திருந்தவர்களுமான இருபடையின் வீரர்களும், தங்கள் ஒவ்வொருவரின் வியூகத்தையும் பிளக்க விரும்பி முன்னேறிச் சென்றனர்.

பரத்வாஜரின் மகன் {துரோணர்} மத்ஸ்ய மன்னனை {விராடனை} எதிர்த்தும்,

அவரது மகன் (அஸ்வத்தாமன்) சிகண்டியை எதிர்த்தும் சென்றனர்.

மன்னன் துரியோதனன், பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} எதிர்த்துத் தானே சென்றான்.
நகுலனும், சகாதேவனும் மத்ரர்களின் மன்னனை {சல்லியனை} எதிர்த்துச் சென்றனர்.

அவந்தியின் விந்தனும், அனுவிந்தனும், இராவத்தை {இராவானை [அ] அரவானை எதிர்த்துச் சென்றனர்.

பல மன்னர்கள் கூடி தனஞ்சயனுடன் {அர்ஜுனனுடன்} போரிட்டனர்.

விடா முயற்சி கொண்ட பீமசேனன், போரில் ஹிருதிகன் மகனை {கிருதவர்மனை} எதிர்த்தான்.

பெரும் ஆற்றலைக் கொண்ட அர்ஜுனனின் மகன் (அபிமன்யு), ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சித்திரசேனன், விகர்ணன் மற்றும் துர்மர்ஷணன் ஆகிய உமது மகன்களுடன் போரிட்டான்.

ஹிடிம்பையின் மகனான அந்த ராட்சசர்களின் இளவரசன் {கடோத்கசன்}, மதங்கொண்ட யானையை எதிர்த்து விரையும் மற்றொரு மதங்கொண்ட யானையைப் போல, பிராக்ஜோதிஷதர்களின் ஆட்சியாளனை {பகதத்தனை} எதிர்த்து விரைந்தான்.

சினத்தால் தூண்டப்பட்ட ராட்சசன் அலம்புசன், தன் தொண்டர்களுக்கு மத்தியில் இருந்த ஒப்பற்ற சாத்யகியை எதிர்த்துப் போரிட்டான்.

பெரிதும் முயற்சி செய்பவனான பூரிஸ்ரவஸ், {சேதி நாட்டு மன்னன்} திருஷ்டகேதுவை எதிர்த்துப் போரிட்டான்.

தர்மனின் மகனான யுதிஷ்டிரன், {அம்பஷ்டர்களின்} மன்னன் சுருதாயுஷை எதிர்த்து முன்னேறினான்.

{விருஷ்ணி குலத்தின்} சேகிதானன் அந்தப் போரில் கிருபரை எதிர்த்துப் போரிட்டான். பலத்துடன் முயற்சித்த (குரு வீரர்களில்) பிறர், வலிமைமிக்கத் தேர்வீரனான பீமனை [2] எதிர்த்து முன்னேறினர். மேலும் ஆயிரக்கணக்கான (பிற) மன்னர்கள், ஈட்டிகள் {சக்திகள்}, வேல்கள் {தோமரங்கள்}, கணைகள் {நாராசங்கள்}, கதாயுதங்கள், பரிகங்கள் {முள் பதிக்கப்பட்ட தண்டங்கள்} ஆகியவற்றைக் கையில் கொண்டு தனஞ்சயனைச் {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர்.

அப்போது, பெருங்கோபத்தால் தூண்டப்பட்டவனான அர்ஜுனன், விருஷ்ணி குலத்தோனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! மாதவா {கிருஷ்ணா}, அனைத்து வகை வியூகங்களையும் அறிந்தவரும், உயர் ஆன்மா கொண்டவருமான கங்கையின் மைந்தரால் {பீஷ்மரால்} போருக்காக அணிவகுக்கப்பட்டிருக்கும் தார்தராஷ்டிரத் துருப்புகளைப் பார். ஓ! மாதவா {கிருஷ்ணா}, (என்னுடன்) போர் புரிய விரும்புபவர்களும், துணிவுமிக்கவர்களுமான எண்ணிலா வீரர்களைப் பார். ஓ! கேசவா {கிருஷ்ணா}, தன் சகோதரர்களுடன் கூடிய திரிகர்த்தர்களின் ஆட்சியாளனைப் பார். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, போர்க்களத்தில் (என்னுடனான) போரை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இவர்கள் அனைவரையும், ஓ! யதுக்களில் முதன்மையானவனே {கிருஷ்ணா}, இன்றே, உன் கண்களுக்கு எதிரிலேயே நான் கொல்லப்போகிறேன்” என்றான் {அர்ஜுனன்}.

இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, தனது வில்லின் நாணைத் தேய்த்து, எண்ணற்ற அந்த மன்னர்களின் மேல் தனது கணைகளை மழையாகப் பொழிந்தான். அந்தப் பெரும் வில்லாளிகளும், மழைக்காலத்தில் நீரால் தடாகத்தை நிரப்பும் மேகங்களைப் போல, அடர்த்தியான கணைமாரியை அவன் {அர்ஜுனன்} மீது பொழிந்தார்கள். அந்த இரு கிருஷ்ணர்களையும் {இரு கருப்பர்களான – அர்ஜுனனையும், கிருஷ்ணனையும்} அந்நிலையில் கண்ட தேவர்கள், தெய்வீக முனிவர்கள், கந்தர்வர்கள், உரகர்கள் பெரும் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனன் ஐந்திர ஆயுதத்தை அழைத்தெழுப்பினான். பிறகு, அந்தப் போரில் தன் எதிரிகளால் ஏவப்படும் ஆயுத மழையைத் தன் கணைகளின் கூட்டத்தால் தடுத்த விஜயனின் {அர்ஜுனனின்} அற்புதப் பேராற்றலை நாங்கள் கண்டோம். ஆங்கே இருந்த ஆயிரக்கணக்கான மன்னர்கள், குதிரைகள், யானைகளுக்கு மத்தியில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காயம்படாதவர்கள் என எவரும் இல்லை. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, இரண்டு கணைகளாலும், மூன்று கணைகளாலும் அந்தப் பிருதையின் மகன் {அர்ஜுனன்} பிறரையும் தாக்கினான்.

இப்படிப் பார்த்தனால் {அர்ஜுனனால்} தாக்கப்பட்ட அவர்கள் சந்தனுவின் மகனான பீஷ்மரின் பாதுகாப்பை நாடினார்கள். அப்போது, அடியற்ற ஆழத்தில் {கடலில்} மூழ்கும் மனிதர்களைப் போன்ற அவ்வீரர்களின் {படகு போன்ற} மீட்பரானார் பீஷ்மர். இப்படிச் சிதறி ஓடும் அந்தப் போர்வீரர்கள், உமது துருப்புகளில் கலந்ததன் விளைவாக உடைந்த உமது படையணிகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புயலால் கொந்தளிக்கும் பெருங்கடலைப் போலக் கொந்தளித்தன” {என்றான் சஞ்சயன்}.

துரோணரால் கொல்லப்பட்ட சங்கன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 083-திரிகர்த்த மன்னன் சுசர்மனிடம் பேசிய துரியோதனன்; அர்ஜுனனைக் கண்டு நடுங்கிய திருதராஷ்டிரப் படை; சுசர்மனின் திரிகர்த்தப் படையினரால் பாதுகாக்கப்பட்ட பீஷ்மர்; துரோணருக்கும் விராடனுக்கும் இடையில் நடந்த மோதல்; விராடனின் மகன் சங்கனைக் கொன்ற துரோணர்; அச்சத்தால் ஓடிய விராடன்; சிகண்டிக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடந்த மோதல்; தேரை இழந்த சிகண்டி சாத்யகியின் தேரில் ஏறியது; சாத்யகிக்கும் ராட்சசன் அலம்புசனுக்கும் இடையில் நடந்த போர்; சாத்யகிக்கு அஞ்சி ஓடிய அலம்புசன்; திருஷ்டத்யும்னனுக்கும், துரியோதனனுக்கும் இடையில் நடந்த போர்; தேரை இழந்த துரியோதனன் சகுனியின் தேரில் ஏறியது; கிருதவர்மனுக்கும், பீமனுக்கும் இடையில் நடந்த போர்; தேரை இழந்த கிருதவர்மன் சகுனியின் தம்பியான விருஷகனின் தேரில் ஏறியது; கௌரவப்படையை அழிக்கத் தொடங்கிய பீமன்..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இப்படிப் போர் நடந்து, {திரிகர்த்த மன்னன்} சுசர்மன் போரிடுவதை நிறுத்திய போது, (குரு படையின்) துணிவுமிக்க வீரர்கள் {மன்னர்கள்} அனைவரும், உயர் ஆன்மப் பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} போரில் முறியடிக்கப்பட்டனர். உண்மையில், கடலைப் போன்றே இருந்த உமது படை விரைவாகக் கலங்கியது. விஜயனின் {அர்ஜுனனின்} தேரை எதிர்த்து கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} விரைவாக முன்னேறினார்.

போரில் பார்த்தனின் {அர்ஜுனனின்} ஆற்றலைக் கண்ட மன்னன் துரியோதனன், {அர்ஜுனனிடம் தோற்ற} அந்த மன்னர்களிடம் விரைந்து சென்று, அவர்களிடமும், அவர்களின் முன்பு நின்ற வலிமைமிக்கவனும், துணிவுமிக்கவனுமான {திரிகர்த்த மன்னன்} சுசர்மனிடமும் பேசி, அவர்கள் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் இந்த வார்த்தைகளைச் சொன்னான். “குருக்களில் முதன்மையானவரும், சந்தனுவின் மகனுமான இந்தப் பீஷ்மர், தனது உயிரையே துச்சமாக மதித்து, தன் முழு ஆன்மாவுடன் தனஞ்சயனை {அர்ஜுனனை} எதிர்த்துப் போரிட விரும்புகிறார். உங்கள் துருப்புகளின் துணையுடன், ஒன்றுகூடி முயற்சி செய்பவர்களே, எதிரிப்படையை எதிர்த்துச் செல்லும் பாரதக் குலத்தின் பாட்டனை {பீஷ்மரை} நீங்கள் அனைவரும் காப்பீராக” என்றான் {துரியோதனன்}.

“சரி” என்று சொன்ன அந்த மன்னர்களின் படைப்பிரிவினர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாட்டனைப் {பீஷ்மரைப்} பின்தொடர்ந்து சென்றனர். பிறகு, (இப்படிப் போரிட விரையும்) சந்தனுவின் மகனான வலிமைமிக்கப் பீஷ்மர், வெண்குதிரைகள் பூட்டப்பட்டதும், கடுமையான குரங்கைத் {அனுமனைத்} தாங்கியிருக்கும் கொடிமரத்தைக் கொண்டதும், மேகங்களைப் போன்ற ஆழ்ந்த சடசடப்பொலி கொண்டதும், பெரும் பிரகாசத்தைக் கொண்டதுமான பெரிய தேரில், தன்னை நோக்கி வந்த பாரதக் குலத்தின் அர்ஜுனனிடம் விரைவாக வந்தார். இப்படிப் போரிட வந்து கொண்டிருந்தவனும், கிரீடம் தரித்தவனுமான தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கண்ட உமது படை முழுவதும், அச்சத்தால் வியப்பின் பேரொலிகளை வெளியிட்டன.

நடுப்பகலின் {மதிய காலச்} சூரியனைப் போன்ற காந்தியுடனும், கையில் கடிவாளங்களுடனும் இருந்த கிருஷ்ணனைக் கண்ட உமது துருப்புகளால், அவனை {கிருஷ்ணனை} கண்ணெடுத்தும் பார்க்க முடியவில்லை. அதே போலவே, வெண்குதிரைகளுடனும், வெள்ளை வில்லுடனும், ஆகாயத்தில் எழுந்த சுக்கிரக் {வெள்ளிக்} கோளைப் போல இருந்த சந்தனுமகன் பீஷ்மரை நோக்கும் சக்தியற்றவர்களாகவே பாண்டவர்களும் இருந்தனர். தனது தம்பிகள், மகன்கள் மற்றும் பிற வலிமைமிக்கத் தேர்வீரர்களுடன் இருந்த தங்கள் மன்னனின் {சுசர்மனின்} தலைமையில் திரிகர்த்தர்களின் உயர் ஆன்மப் போர்வீரர்களால் {பாதுகாக்கப்படும்படி} பின்னவர் {பீஷ்மர்} அனைத்துப் புறங்களிலும் சூழப்பட்டிருந்தார்.

அதேவேளையில், பரத்வாஜரின் மகன் {துரோணர்}, சிறகு படைத்த தனது கணைகளால், போரில் மத்ஸ்யர்களின் மன்னனை {விராடனைத்} துளைத்தார். அம்மோதலில் அவர் {துரோணர்}, ஒரு கணையால் பின்னவனின் {விராடனின்} கொடிமரத்தை அறுத்து, மற்றொரு கணையால் அவனது வில்லையும் அறுத்தார். பிறகு, ஒரு பெரும் படையின் தலைவனான விராடன், இப்படி வெட்டப்பட்ட அந்த வில்லை விட்டு, பெரும் பலத்தைத் தாங்கும் திறன் கொண்டதும், வலுவானதுமான மற்றொரு வில்லை விரைவாக எடுத்தான். மேலும் அவன் {விராடன்}, கொடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்ற சுடர்மிகும் கணைகள் பலவற்றையும் எடுத்தான். (அவற்றைக் கொண்டு) மூன்றால் துரோணரையும், நான்கால் அவரது (நான்கு) குதிரைகளையும் துளைத்தான். பிறகு மற்றொரு கணையை எடுத்த அவன் துரோணரின் கொடிமரத்தையும், ஐந்தால் அவரது தேரோட்டியையும் துளைத்தான். மேலும் ஒரு கணையால் அவன் {விராடன்} துரோணரின் வில்லைத் துளைத்தான். (இவை அனைத்தினாலும்) அந்த அந்தணர்களில் காளை {துரோணர்} மிகவும் கோபமடைந்தார்.

பிறகு துரோணர், நேரான எட்டு கணைகளால் விராடனின் குதிரைகளைக் கொன்று, ஓ! பாரதர்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, ஒரு கணையால் அவனது {விராடனின்} தேரோட்டியையும் கொன்றார். தன் தேரோட்டி கொல்லப்பட்ட விராடன், குதிரைகளும் கொல்லப்பட்ட தனது தேரில் இருந்து கீழே குதித்தான். அதன் பிறகு, தேர்வீரர்களில் முதன்மையான அவன் {விராடன்}, (தனது மகன்) சங்கனின் தேரில் விரைவாக ஏறினான். ஒரே தேரில் நின்ற தந்தையும் {விராடனும்}, மகனும் {சங்கனும்}, பரத்வாஜர் மகனின் {துரோணரின்} அடர்த்தியான கணைமாரியை பெரும் வலிமையுடன் தடுக்கத் தொடங்கினர்.

அப்போது அம்மோதலில் கோபத்தால் தூண்டப்பட்ட பரத்வாஜரின் வலிமைமிக்க மகன் {துரோணர்}, கடும்நஞ்சுமிக்கப் பாம்பை ஒத்த கணையொன்றை சங்கன் மீது விரைந்து ஏவினார். சங்கனின் மார்பைத் துளைத்த அந்தக் கணை, அவனது குருதியைக் குடித்து, இரத்தத்தில் நனைந்து ஈரத்துடன் பூமியில் விழுந்தது. பரத்வாஜர் மகனின் {துரோணரின்} கணையால் தாக்கப்பட்ட சங்கன், தன் தந்தையின் {விராடனின்} முன்னிலையிலேயே, தனது வில் மற்றும் கணைகளில் இருந்த தன் பிடி தளர, தனது தேரில் இருந்து வேகமாக விழுந்தான். தன் மகன் {சங்கன்} கொல்லப்பட்டதைக் கண்ட விராடன், திறந்த வாய்க் கொண்ட அந்தகனைப் போல இருந்த துரோணரைப் போரில் தவிர்த்து, அச்சத்தால் ஓடினான். பிறகு ஒரு கணத்தையும் இழக்காத பரத்வாஜர் மகன் {துரோணர்}, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான போராளிகளுடன் போரிட்டு வலிமைமிக்க அந்தப் பாண்டவர்களின் கூட்டத்தைத் {படையைத்} தடுத்தார் [1].

சிகண்டியோ, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} அடைந்து, வேகமாகச் செல்லும் மூன்று கணைகளால் அவனது புருவங்களுக்கு மத்தியில் பின்னவனைத் {அஸ்வத்தாமனைத்} தாக்கினான். அந்தக் கணைகளால் துளைக்கப்பட்ட மனிதர்களில் புலியான அஸ்வத்தாமன், மூன்று நெடிய தங்க முகடுகளைக் கொண்ட மேரு மலையைப் போல அழகாகத் தெரிந்தான். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் கோபத்தால் தூண்டப்பட்ட அஸ்வத்தாமன், கண்ணிமைக்க ஆகும் பாதி நேரத்தில், சிகண்டியின் தேரோட்டி, கொடிமரம், குதிரைகள், ஆயுதங்கள் ஆகியவற்றைப் பெரும் எண்ணிக்கையிலான தன் கணைகளால் மறைத்து, அவற்றை வீழ்த்தினான்.

எதிரிகளை எரிப்பவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான அந்தச் சிகண்டி, குதிரைகள் கொல்லப்பட்டத் தனது தேரில் இருந்து கீழே குதித்து, பளபளப்பான, கூரிய வாளையும், கேடயத்தையும் எடுத்துக் கொண்டு, சினத்தால் தூண்டப்பட்டு,  ஒரு பருந்தைப் போன்றப் பெரும் சுறுசுறுப்புடன் களத்தில் நகர்ந்தான். கையில் வாளுடனும், பெரும் சுறுசுறுப்புடன் அவன் {சிகண்டி} களத்தில் சென்றபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},  (அவனைத் தாக்கும்) சந்தர்ப்பம் எதையும் காணத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} தவறினான். இவை அனைத்தையும் காண அற்புதமாக இருந்தது. பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பெரும் கோபக்காரனான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} பல்லாயிரம் கணைகளை ஏவினான். ஆனால், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையான அந்தச் சிகண்டியோ, தன்னை நோக்கி வந்தக் கடும் கணைமாரியைத் தன் கூரிய வாளால் வெட்டினான்.

பிறகு, அந்தத் துரோண மகன் {அஸ்வத்தாமன்}, அழகானதும், ஒளிமிக்கதும், நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்துமான {சிகண்டியின்} கேடயத்தையும், சிகண்டியின் வாளையும் துண்டுகளாக வெட்டினான். மேலும் அவன் {அஸ்வத்தாமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிறகுபடைத்தவையும், பெரும் எண்ணிக்கையிலானவையுமான கணைகளால், பின்னவனின் {சிகண்டியின்} மேனியைத் துளைத்தான். பிறகு, சுடர்மிகும் பாம்புகளைப் போன்றவையான அஸ்வத்தாமனின் கணைகளால் வெட்டப்பட்டதும், (தன் கையில் இருந்ததுமான) உடைந்த வாளைச் சுழற்றிய சிகண்டி, அஃதை {வாளை} அவன் {அஸ்வத்தாமன்} மீது வேகமாக வீசினான். எனினும் அந்தப் போரில் தன் கர வேகத்தைக் காட்டிய துரோண மகன் {அஸ்வத்தாமன்}, தன்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்ததும், யுகத்தின் முடிவில் எழும் சுடர்மிகும் நெருப்பைப் போன்றதுமான (அந்த உடைந்த வாளை) அதை வெட்டினான். மேலும் அவன் {அஸ்வத்தாமன்}, இரும்பாலான எண்ணிலாக் கணைகளால் சிகண்டியைத் துளைத்தான். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கூரிய கணைகளால் மிகவும் துன்பப்பட்ட சிகண்டி, அந்த மது குலத்தின் உயர் ஆன்மக் கொழுந்தின் {சாத்யகியின்} தேரில் விரைந்து ஏறினான்.

பிறகு, கோபத்தால் தூண்டப்பட்ட சாத்யகி, அந்தப் போரில் தன் பயங்கரக் கணைகளால் கொடிய ராட்சசன் அலம்புசனை அனைத்துப் புறங்களிலும் துளைத்தான். அப்போது, அந்த ராட்சசர்களின் இளவரசன் {அலம்புசன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அர்த்தச்சந்திரக் {பிறைவடிவக்} கணையொன்றால் அம்மோதலில், சாத்யகியின் வில்லை அறுத்து, பல கணைகளால் சாத்யகியையும் துளைத்தான். தன் ராட்சச சக்திகளால் ஒரு மாயையை உண்டாக்கிய அவன் {அலம்புசன்}, சாத்யகியைக் கணைமாரியால் மறைத்தான். ஆனால், அந்தக் கூரிய கணைகளால் எவ்வளவுதான் தாக்குண்டாலும், அவன் {சாத்யகி} அச்சத்திற்கு ஆளாகாததை நாங்கள் கண்டோம். அந்தச் சினி பேரனின் {சாத்யகியின்} ஆற்றல் அற்புதமாக இருந்தது.

மறுபுறம், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த விருஷ்ணி குலத்தின் மகன் {சாத்யகி}, (மந்திரங்களுடன் கூடிய) ஐந்திர ஆயுதத்தை ஏவினான். மதுகுலத்தின் ஒப்பற்ற அந்த வீரன் {சாத்யகி}, விஜயனிடம் {அர்ஜுனனிடம்} இருந்து அவ்வாயுதத்தைப் பெற்றிருந்தான் [2]. அந்த அசுர மாயையைச் சாம்பலாக்கிய அவ்வாயுதம் {ஐந்திரம்}, மழைக்காலத்தில் மழைநீரால் மலைச்சாரலை மறைக்கும் மேகங்களின் திரளைப் போல, அலம்புசனைச் சுற்றிலும் பயங்கரக் கணைகளால் மறைத்தது. இதன் பேரில், அந்த மதுகுலத்து வீரனால் {சாத்யகியால்} இப்படிப் பீடிக்கப்பட்ட ராட்சசன் {அலம்புசன்}, போரில் சாத்யகியைத் தவிர்த்துவிட்டு, அச்சத்தால் ஓடிவிட்டான்.

அப்போது அந்தச் சினியின் பேரன் {சாத்யகி}, மகவத்தாலேயே {இந்திரனாலேயே} வீழ்த்தப்பட முடியாத அந்த ராட்சசர்களின் இளவரசனை {அலம்புசனை} வீழ்த்திவிட்டு, உமது துருப்புகள் பார்த்துக் கொண்டிருக்கும்போது உரத்த முழக்கத்தை வெளியிட்டான். கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் கொண்ட சாத்யகி, பிறகு, எண்ணிலடங்கா கணைகளைக் கொண்டு உமது துருப்புகளைக் கொல்ல ஆரம்பித்தான். அதன் பேரில் பின்னவர்கள் {உமது துருப்பினர்} அச்சத்தால் ஓடிவிட்டனர்.

அதே வேளையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துருபதனின் வலிமைமிக்க மகனான திருஷ்டத்யும்னன், உமது அரச மகனைப் {துரியோதனனை} போரில் எண்ணிலடங்கா நேரான கணைகளைக் கொண்டு மறைத்தான். எனினும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தன் கணைகளால் திருஷ்டத்யும்னன் அவனை {துரியோதனனை} இப்படி மூடிக் கொண்டிருந்தாலும், உமது அரச மகன் {துரியோதனன்} கலக்கமடையவோ, அச்சங்கொள்ளவோ இல்லை. மறுபுறம் அவன் {துரியோதனன்}, போரில் திருஷ்டத்யும்னனை (முதலில்) அறுபது {60} கணைகளாலும், (பிறகு) முப்பது {30} கணைகளாலும் விரைவாகத் துளைத்தான். இவை அனைத்தும் மிக அற்புதமாகத் தெரிந்தன.

அப்போது அந்தப் பாண்டவப் படைத்தலைவன் {திருஷ்டத்யும்னன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்டு, அவனது {துரியோதனனது} வில்லை அறுத்தான். மேலும் அம்மோதலில், அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {திருஷ்டத்யும்னன்}, உமது மகனின் {துரியோதனனின்} நான்கு குதிரைகளைக் கொன்று, கூர்முனை கொண்ட ஏழு கணைகளால் அவனையும் {துரியோதனனையும்} துளைத்தான். அதன் பேரில் (உமது மகன்), பெரும் பலமும், வலிமையான கரங்களும் கொண்ட அந்த வீரன் {துரியோதனன்}, குதிரைகள் கொல்லப்பட்ட தன் தேரில் இருந்து கீழே குதித்து, பட்டாக்கத்தியை உயர்த்தியபடி பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} நோக்கி கால் ஆளாகவே ஓடினான் [3].

மன்னனிடம் {துரியோதனனிடம்} அர்ப்பணிப்புள்ளவனும், வலிமைமிக்கவனுமான சகுனி, விரைவாக அந்த இடத்திற்கு வந்து, அனைவரும் பார்க்கும்போதே, உமது அரச மகனைத் {துரியோதனனைத்} தனது தேரில் ஏறச் செய்தான். எதிரிகளைக் கொல்பவனான அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, மன்னனை {துரியோதனனை} வீழ்த்திய பிறகு, அசுரர்களைக் கொல்லும் வஜ்ரபாணியைப் {இந்திரனைப்} போல உமது துருப்புகளைக் கொல்லத் தொடங்கினான்.

மேலும், அந்தப் போரில் கிருதவர்மன், வலிமைமிக்கத் தேர்வீரனான பீமனைத் தன் கணைகளால் மறைத்தான். உண்மையில், சூரியனை மறைக்கும் வலிமைமிக்க மேகங்களின் திரளைப் போல, பின்னவனை {பீமனை} முழுமையாக மறைத்தான். பிறகு, எதிரிகளைத் தண்டிப்பவனான பீமசேனன், கோபத்தால் தூண்டப்பட்டுச் சிரித்துக் கொண்டே, கிருதவர்மன் மீது சில கணைகளை எய்தான். அதனால் தாக்குண்ட சத்வத குலத்தின் அந்த அதிரதன் {கிருதவர்மன்}, அனைவரையும் வலிமையில் விஞ்சும் வகையில் நடுங்காதிருந்தான். ஆனால் (அதற்குப் பதிலாக), ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல கூரிய கணைகளால் பீமனைத் துளைத்தான்.

வலிமைமிக்கப் பீமசேனன் அப்போது, கிருதவர்மனின் நான்கு குதிரைகளைக் கொன்று, பின்னவனின் {கிருதவர்மனின்} தேரோட்டியையும், அதன் பிறகு அவனது அழகிய கொடிமரத்தையும் வீழ்த்தினான். மேலும், அந்தப் பகைவீரர்களைக் கொல்பவன் (பீமன்), பல்வறு வகைகளிலான பல கணைகளால் கிருதவர்மனையும் துளைத்தான். மேனியெங்கும் துளைக்கப்பட்ட கிருதவர்மனின் ஒவ்வொரு அங்கமும் மிகக் கடுமையாகச் சிதைக்கப்பட்டதைப் போலத் தோன்றியது [4].

பிறகு கிருதவர்மன், உமது மகன் {துரியோதனன்} மற்றும் சல்லியன் ஆகிய இருவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, குதிரைகள் கொல்லப்பட்ட அந்தத் தேரில் இருந்து விரைந்து சென்று விருஷகனின் [5] தேரில் ஏறிக் கொண்டான். பிறகு, சினத்தால் தூண்டப்பட்ட பீமசேனன், உமது துருப்புகளைப் பீடிக்கத் தொடங்கினான். தண்டத்தைக் கையில் கொண்ட யமனைப் போலக் கோபத்தின் பாதையில் சென்று, அவர்கள் {உமது துருப்பினர்} அனைவரையும் அவன் {பீமன்} கொல்லத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.

அரவான் வீரமும்! கடோத்கசன் ஓட்டமும்!! சல்லியன் மயக்கமும்!!! – பீஷ்ம பர்வம் பகுதி – 084-திருதராஷ்டிரன் கவலை; திருதராஷ்டிரனைக் கண்டித்த சஞ்சயன்; அரவானுக்கும், அவந்தியின் விந்தானுவிந்தர்களுக்கும் இடையில் நடைபெற்ற போர்; தேரோட்டியை இழந்த விந்தானுவிந்தர்களின் தேர் களத்தைவிட்டு ஓடியது; கடோத்கசனுக்கும், பகதத்தனுக்கும் இடையில் நடந்த மோதல்; அஞ்சி ஓடிய கடோத்கசன்; சல்லியனுக்கும், நகுலசகாதேவர்களுக்கும் இடையில் நடைபெற்ற போர்; சகாதேவனின் கணையால் தாக்கப்பட்ட சல்லியன் மயக்கமடைந்தது; சல்லியனை அவனது தேரோட்டி களத்தைவிட்டே கொண்டு சென்றது…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, பாண்டவர்கள் மற்றும் எனது வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற பல தனிப்போர்களைக் குறித்து, நீ சொல்லி நான் கேட்டவை அற்புதம் நிறைந்தவையாக இருக்கின்றன. எனினும், ஓ! சஞ்சயா, (இத்தகு நேரங்களில்) என்தரப்பைச் சேர்ந்தவர்களில் எவரும் மகிழ்ச்சியுடன் இருந்ததாக நீ சொல்லவில்லை. பாண்டு மகன்கள் மகிழ்ச்சி நிறைந்தவர்களாகவும், முறியடிக்கப்படாமல் இருப்பவர்களாகவும், ஓ! சூதா {சஞ்சயா}, என்னவர்கள் மகிழ்ச்சியற்று, சக்தியற்று, போரில் தொடர்ச்சியாக வீழ்த்தப்படுவதாகவுமே எப்போதும் நீ சொல்கிறாய். இவை அனைத்தும் விதியே என்பதில் ஐயமில்லை” என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, உம்முடையவர்கள் வல்லமையுடன் தங்கள் பெரும் வீரத்தை வெளியிட்டு, தங்கள் சக்திக்கேற்றபடியும், ஊக்கத்திற்குத் தகுந்தபடியுமே முயற்சி செய்கிறார்கள். தெய்வீக ஓடையான கங்கையின் இனிய நீர், கடலின் தன்மைகளுடன் தொடர்பு கொண்டு, உப்பாவது போல, உமது படையில் உள்ள ஒப்பற்ற வீரர்களின் வீரமும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் பாண்டுவின் வீர மகன்களை அடைந்ததும் வீணாகிறது. தங்கள் சக்திக்குத்தக்க வகையில் முயன்று, மிகக்கடுஞ்சாதனைகளை அடையும் உமது துருப்புகளிடம், ஓ! குருக்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, நீர் குறை காணக்கூடாது.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, யமனின் உலகத்தைப் (அதில் உள்ளவர்கள் எண்ணிக்கையைப்) பெருக்குவதும், அச்சந்தருவதுமான இந்தப் பயங்கரமான உலக அழிவு உமது சீர்கேட்டாலும், உமது மகன்களின் தவறான நடத்தையாலுமே உண்டானது. உமது தவறால் உண்டானவைக்காக, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் வருந்துவது உமக்குத் தகாது. இவ்வுலகில் மன்னர்கள் தங்கள் உயிரை எப்போதுமே காத்துக் கொள்வதில்லை. பூமியின் இந்த ஆட்சியாளர்கள், அறவோரின் உலகங்களை {சொர்க்கத்தைப்} போரால் வெல்ல விரும்பி, (பகை) அணியினருக்குள் ஊடுருவி, சொர்க்கத்தையே தங்கள் இலக்காகக் கொண்டு தினமும் போரிடுகின்றனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (பழங்காலத்தில்) தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையிலான போரில் நடந்தது போலவே, அந்நாளின் முற்பகலில் நடந்த படுகொலைகள் பெரிதாக இருந்தன. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சிதறாத கவனத்துடன் அதைக் கேட்பீராக.

வலிமைமிக்கவர்களும், போரில் கடுமையான அற்புதப் போர்வீரர்களும், பெரும் வில்லாளிகளுமான அவந்தியின் இளவரசர்கள் {விந்தன், அனுவிந்தன்} இருவரும், இராவத்தைக் {இராவானைக் [அ] அரவானைக்}[1] கண்டு, அவனை எதிர்த்துச் சென்றனர். அவர்களுக்கிடையில் நடைபெற்ற கடும்போர், மயிர்க்கூச்சம் ஏற்படுத்தும் வகையில் இருந்தது. அப்போது, சினத்தால் தூண்டப்பட்ட இராவத் {அரவான்}, தெய்வீக வடிவங்களைக் கொண்ட அந்தச் சகோதரர்கள் இருவரையும், நேரான மற்றும் கூரிய கணைகள் பலவற்றால் துளைத்தான். எனினும், போர்வகைகள் அனைத்தையும் அறிந்த அந்த இருவரும், அந்தப் போரில் பதிலுக்கு அவனை {அரவானை} துளைத்தனர். எதிரியைக் கொல்லச் சிறப்பாகப் போராடி, ஒவ்வொருவரின் அருஞ்செயலையும் எதிர்க்க விரும்பித் தங்களுக்குள் போரிட்ட அவர்களுக்குள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை.

பிறகு இராவத் {அரவான்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நான்கு கணைகளால், அனுவிந்தனின் நான்கு குதிரைகளை யமலோகம் அனுப்பிவைத்தான். மேலும் கூரிய இரண்டு பல்லங்களால் அவன் {அரவான்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அனுவிந்தனின் வில்லையும், கொடிமரத்தையும் அறுத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்த அருஞ்செயல் அற்புதம் மிகுந்ததாக இருந்தது. பிறகு அனுவிந்தன், தன் தேரை விட்டு விட்டு விந்தனின் தேரில் ஏறிக் கொண்டான். பெரும் வலிமையைத் தாங்கவல்லதும், பலமானதும், சிறப்பானதுமான ஒரு வில்லை எடுத்த அனுவிந்தன் மற்றும் அவனது அண்ணனான விந்தன் ஆகிய அவந்தியின் தேர்வீர்களில் முதன்மையான அவர்கள், ஒரே தேரில் நின்று கொண்டு, உயரான்ம இராவத்தின் {அரவானின்} மேல் பல கணைகளை விரைவாக ஏவினார்கள். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், வேகமாகச் செல்லக்கூடியவையுமான அவர்கள் ஏவிய கணைகள், காற்றில் சென்ற போது ஆகாயத்தையே மறைத்தன [2].

அப்போது சினம் தூண்டப்பட்ட அரவான், வலிமைமிக்கத் தேர்வீரர்களான, அந்த (அவந்தியைச் சேர்ந்த) சகோதரர்கள் இருவர் மீதும் தன் கணைமாரியைப் பொழிந்து, அவர்களின் தேரோட்டியை வீழ்த்தினான்.  அந்தத் தேரோட்டி உயிரிழந்து பூமியில் விழுந்த போது, கட்டுப்பாட்டை இழந்த குதிரைகள் தேருடன் {அங்கிருந்து} ஓடின. அந்த வீரர்கள் இருவரையும் வீழ்த்தியவனும், நாக மன்னனின் மகளுடைய {உலூபியின்} மகனுமான அவன் {அரவான்}, தனது ஆற்றலை வெளிப்படுத்தியபடி, பெருஞ்சுறுசுறுப்புடன் உமது படையணியினரை எரிக்கத் தொடங்கினான். போரில் இப்படிக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த அந்த வலிமைமிக்கத் தார்தராஷ்டிரப் படை, நஞ்சைக் குடித்த மனிதனைப் போலப் பல திசைகளிலும் ஓடத் தொடங்கியது.

அப்போது, ஹிடிம்பையின் வலிமைமிக்க மகனான ராட்சச இளவரசன் {கடோத்கசன்}, கொடிமரத்துடன் கூடியதும், சூரியப்பிரகாசம் கொண்டதுமானத் தனது தேரில் பகதத்தனை எதிர்த்து விரைந்தான். அந்தப் பிராக்ஜோதிஷ ஆட்சியாளன் {பகதத்தன்}, யானைகளின் இளவரசனான தன் யானையின் மீது அமர்ந்தபடி, பழங்காலத்தில் தாரகனை {தாராகாசுரனை} அழித்த போரில் வஜ்ரபாணி {இந்திரன்} பிரகாசித்தது போலப் பிரகாசித்தான். தேவர்கள், கந்தர்வர்கள், முனிவர்கள் ஆகியோர் அனைவரும் அங்கே வந்தனர். எனினும், ஹிடிம்பையின் மகனுக்கும் {கடோத்கசனுக்கும்} பகதத்தனுக்கும் இடையில் அவர்களால் எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை.

கோபத்தால் தூண்டப்பட்ட தேவர்கள் தலைவன் {இந்திரன்}, தானவர்களை அச்சங்கொள்ளச் செய்ததைப் போலவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பகதத்தனும், பாண்டவ வீரர்களை அச்சுறுத்தினான். அனைத்துப் புறங்களிலும் அவனால் அச்சுறுத்தப்பட்ட பாண்டவப்படையின் வீரர்கள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்கள் படையணியினருள் தங்களைக் காப்பவர் எவரையும் காணத் தவறினர்.

எனினும் அங்கே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தன் தேரில் இருந்த பீமனின் மகனைக் {கடோத்கசனைக்} கண்டோம். வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பிறர் மகிழ்ச்சியற்ற இதயங்களுடன் சிதறி ஓடினர். அந்தப் போரில், பாண்டவர்களின் துருப்புகள் மீண்டும் திரும்பி வந்த போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகளுக்கு மத்தியில் அச்சந்தரும் பேரொலி எழுந்தது. அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பயங்கரப் போரில், மேருவின் {மேரு மலையின்} சாரலில் மழையைப் பொழியும் மேகங்களைப் போலப் பகதத்தனைத் தன் கணைகளால் கடோத்கசன் மறைத்தான். ராட்சசனின் {கடோத்கசனின்} வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகள் அனைத்தையும் கலங்கடித்த அந்த மன்னன் {பகதத்தன்}, பீமசேனன் மகனின் {கடோத்கசனின்} முக்கிய அங்கங்கள் அனைத்தையும் விரைவாகத் தாக்கினான்.

எண்ணிலடங்கா நேரான கணைகளால் தாக்கப்பட்டாலும், அந்த ராட்சச இளவரசன் {கடோத்கசன்}, (கணைகளால்) துளைக்கப்பட்ட மலையைப் போல (அசையாமல்) நடுங்காதிருந்தான். பிறகு, அம்மோதலில், கோபத்தால் தூண்டப்பட்டவனான பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்}, பதினான்கு தோமரங்களை ஏவினான். எனினும், அவை அனைத்தும் அந்த ராட்சசனால் {கடோத்கசனால்} வெட்டப்பட்டன. தன் கூரிய கணைகளால் அந்தத் தோமரங்களை அறுத்தவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த ராட்சசன் {கடோத்கசன்}, எழுபது {70} கணைகளால் பகதத்தனைத் துளைத்தான். அவை ஒவ்வொன்றும் வஜ்ரத்தின் சக்திக்கு ஒப்பானவையாக இருந்தன.

அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்}, சிரித்தபடியே அந்த ராட்சசனின் {கடோத்கசனின்} நான்கு குதிரைகளையும் யமலோகம் அனுப்பி வைத்தான். எனினும், பெரும் வீரம் கொண்ட அந்த ராட்சசர்களின் இளவரசன் {கடோத்கசன்}, குதிரைகள் கொல்லப்பட்ட அந்தத் தேரிலேயே இருந்து கொண்டு, பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளனுடைய {பகதத்தனின்} யானையின் மேல் பெரும் சக்தியுடன் ஓர் ஈட்டியை எறிந்தான். மன்னன் பகதத்தன், தன்னை நோக்கி விரைவாக வந்து கொண்டிருந்ததும், தங்கப்பிடியுடன் கூடியதுமான அந்த வேகமான ஈட்டியை மூன்று துண்டுகளாக வெட்டினான். அதன்பேரில் அது {அந்த ஈட்டி} தரையில் விழுந்தது. தன் ஈட்டி வெட்டப்பட்டதைக் கண்ட ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, பழங்காலத்தில் இந்திரனுடன் நடந்த போரில் தைத்தியர்களில் முதன்மையான நமூசி பயந்தோடியதைப் போல {அங்கிருந்து} ஓடினான். யமனாலோ, வருணனாலோ கூடப் போரில் வீழ்த்தப்பட முடியாதவனும், புகழ்பெற்ற ஆற்றலைக் கொண்டவனும், பெரும் வீரத்தைக் கொண்டவனுமான அந்த வீரனை {கடோத்கசனை} வீழ்த்திய பகதத்தன், தன் யானையுடன் சேர்ந்து (தடாகத்தில்) தன் நடையால் தாமரைத்தண்டுகளை நசுக்கும் காட்டு யானையைப் போலப் பாண்டவத் துருப்புகளை நசுக்கத் தொடங்கினான்.

அப்போது, மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, தன் தங்கையின் {மாத்ரியின்} மகன்களான இரட்டையருடன் {நகுலன் மற்றும் சகாதேவனுடன்} போரில் ஈடுபட்டு, அந்தப் பாண்டு மகன்களைக் கணைகளின் மேகங்களால் மூழ்கடித்தான். தன் தாய்மாமனை {சல்லியனைக்} கண்ட சகாதேவன், (அவனுடன் {சல்லியனுடன்}) போரில் ஈடுபட்டு, நாளை உண்டாக்கபவனை {சூரியனை} மூடும் மேகங்களைப் போலத் தன் கணைகளால் அவனை {சல்லியனை} மறைத்தான். அந்தக் கணை மேகங்களால் மறைக்கப்பட்ட மத்ர ஆட்சியாளன் {சல்லியன்} மகிழ்ச்சியான உணர்வை வெளிப்படுத்தினான். இரட்டையர்களும் தங்கள் தாயின் {மாத்ரியின்} நிமித்தமாகப் பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தனர் [3]. பிறகு, வலிமைமிக்கத் தேர்வீரனான சல்லியன், அந்தப் போரில் திறமையுடன் போரிட்டு, சிறப்பான நான்கு கணைகளை ஏவி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நகுலனின் நான்கு குதிரைகளை யமனுலகிற்கு அனுப்பி வைத்தான்.

வலிமைமிக்கத் தேர்வீரனான நகுலனும், குதிரைகள் கொல்லப்பட்ட அந்தத் தேரில் இருந்து விரைவாகக் கீழே குதித்து, புகழ்பெற்ற தன் தம்பியின் {சகாதேவனின்} தேரில் ஏறிக் கொண்டான். போரில் கடுமையானவர்களும், சினத்தால் தூண்டப்பட்டவர்களும், ஒரே தேரில் இருந்தவர்களுமான அந்த வீரர்கள் இருவரும், பெரும் பலத்துடன் தங்கள் விற்களை வளைத்து, (தங்கள் கணைகளால்) மத்ரர்களின் ஆட்சியாளனுடைய {சல்லியனுடைய} தேரை மறைக்கத் தொடங்கினர். ஆனாலும், தன் தங்கை மகன்களின் நேரான எண்ணற்ற கணைகளால் இப்படி மூடப்பட்ட அந்த மனிதர்களில் புலி {சல்லியன்}, (அசையாது நிற்கும்) ஒரு மலையைப் போலவே கிஞ்சிற்றும் நடுங்காதிருந்து, சிரித்துக் கொண்டே (பதிலுக்குத்) தன் கணைமாரிகளால் அவர்களைத் தாக்கினான்.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அப்போது, கோபம் தூண்டப்பட்டவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான சகாதேவன், (சக்திமிக்க) ஒரு கணையை எடுத்து, மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} நோக்கி விரைந்து வந்து, அவன் மீது அஃதை {கணையை} ஏவினான். கருடனின் வேகத்தைக் கொண்ட அந்தக் கணை, மத்ரர்களின் ஆட்சியாளனைத் {சல்லியனைத்} துளைத்து, {அவனது உடலை} ஊடுருவி பூமியில் விழுந்தது. அதன்பேரில் ஆழமாகத் துளைக்கப்பட்டு, பெரும் வலியை உணர்ந்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {சல்லியன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் தேர்த்தட்டில் அமர்ந்து மயக்கமடைந்தான். இரட்டையர்களால் (இப்படிப்) பாதிக்கப்பட்டு, உணர்விழந்து தேரில் கிடக்கும் அவனைக் {சல்லியனைக்} கண்ட அவனது தேரோட்டி, களத்தைவிட்டே தன் வாகனத்தில் அவனை {சல்லியனை} அகற்றிச் சென்றான்.

(போரில் இருந்து) பின்வாங்கும் மத்ரர்கள் ஆட்சியாளனின் {சல்லியனின்} தேரைக் கண்டத் தார்தராஷ்டிரர்கள் அனைவரும் மகிழ்ச்சியற்றுப் போய், அவன் {சல்லியன்} அவ்வளவுதான் என நினைத்தார்கள். அப்போது, தங்கள் தாய்மாமனைப் போரில் வீழ்த்தியவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அந்த மாத்ரியின் மகன்கள் இருவரும், தங்கள் சங்குகளை எடுத்து மகிழ்ச்சியாக ஊதி, சிங்க முழக்கமிட்டார்கள். பிறகு அவர்கள் {நகுல, சகாதேவர்கள்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தைத்திய படையை நோக்கி விரையும் தேவர்களான இந்திரனையும், உபேந்திரனையும் போல, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது படைகளை நோக்கி மகிழ்ச்சியாக விரைந்தனர்” {என்றான் சஞ்சயன்}.

துரியோதனன் தம்பிகளைக் கொல்லாத அபிமன்யு! – பீஷ்ம பர்வம் பகுதி – 085-யுதிஷ்டிரனுக்கும் சுருதாயுஷுக்கும் இடையில் நடைபெற்ற போர்; யுதிஷ்டிரனின் கோபத்தைக் கண்டு உலகமே நடுங்கியது; புறமுதுகிட்ட சுருதாயுஷ்; சேகிதானனுக்கும், கிருபருக்கும் இடையில் நடைபெற்ற போர்; இருவரும் மயங்கி விழுந்தது; திருஷ்டகேதுவுக்கும் பூரிஸ்ரவசுக்கும் இடையில் நடைபெற்ற போர்; தேர் இழந்த திருஷ்டகேது சதானீகனின் தேரில் ஏறியது; துரியோதனன் தம்பிகள் மூவருக்கும், அபிமன்யுவுக்கும் இடையில் நடைபெற்ற போர்; தேர்களை இழந்த துரியோதனன் தம்பிகளைக் கொல்லாமல் விட்ட அபிமன்யு; சுசர்மனிடம் பேசிய அர்ஜுனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சூரியன் நடுக்கோட்டை {நடுப்பகலை) அடைந்ததும், சுருதாயுஷைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன், தனது குதிரைகளைத் துரிதப்படுத்தினான். எதிரிகளைத் தண்டிக்கும் சுருதாயுஷை நோக்கி விரைந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, கூர்முனை கொண்ட ஒன்பது கணைகளால் அவனை {சுருதாயுஷை} தாக்கினான். பெரும் வில்லாளியான மன்னன் சுருதாயுஷ், அப்போரில் யுதிஷ்டிரனால் ஏவப்பட்ட கணைகளைத் தடுத்து, ஏழு கணைகளால் அந்தப் பாண்டு மைந்தனைத் {யுதிஷ்டிரனைத்} தாக்கினான். அப்போரில் அவனது {யுதிஷ்டிரனின்} கவசத்தை ஊடுருவிய அவை {ஏழு கணைகள்}, மிக முக்கியச் சக்திகளை உறிஞ்சிக் குடிப்பதைப் போல [1]., உயர் ஆன்மா கொண்ட அவனது {மகாத்மாவான யுதிஷ்டிரனின்} குருதியைக் குடித்தன.

அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, மன்னன் சுருதாயுஷால் ஆழமாகத் துளைக்கப்பட்டிருந்தாலும், (பதிலுக்கு) வராஹகர்ணத்தால் {பன்றியின் காது போன்ற ஒரு கணையால்} அந்த உயர் ஆன்ம மன்னின் {சுருதாயுஷின்} இதயத்தைத் துளைத்தான். தேர்வீரர்களில் முதன்மையான அந்தப் பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்}, மேலும் ஒரு பல்லத்தால், உயர் ஆன்ம சுருதாயுஷின் கொடிமரத்தை, அவனது தேரில் இருந்து விரைவாகப் பூமியில் வீழ்த்தினான். தன் கொடிமரம் வீழ்த்தப்பட்டதைக் கண்ட மன்னன் சுருதாயுஷ், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனை} ஏழு கூரிய கணைகளால் துளைத்தான்.

அப்போது, தர்மனின் மகனான யுதிஷ்டிரன், உயிரினங்களை எரிப்பதற்காக யுகத்தின் முடிவில் சுடர்விட்டெரியும் நெருப்பைப் போலக் கோபத்தில் சுடர்விட்டெரிந்தான். கோபத்தால் தூண்டப்பட்ட பாண்டு மகனைக் {யுதிஷ்டிரனைக்} கண்ட தேவர்கள், கந்தர்வர்கள், ராட்சசர்கள் ஆகியோர் நடுங்கினர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்த அண்டமும் கலங்கத் தொடங்கியது. “கோபத்தால் தூண்டப்பட்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, இன்றே மூவுலகங்களையும் எரிக்கப்போகிறான்” என்பதே உயிர்கள் அனைத்தின் மனதிலும் எழுந்த சிந்தனையாக இருந்தது. உண்மையில், பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} கோபத்தால் இப்படித் தூண்டப்பட்ட போது, உலக அமைதிக்காக முனிவர்களும், தேவர்களும் வேண்டிக்கொண்டனர்.

கோபத்தால் நிறைந்து, கடைவாயை அடிக்கடி நாவால் நனைத்த {நக்கிய} யுதிஷ்டிரன், யுகத்தின் முடிவில் எழும் சூரியனைப் போலப் பயங்கரமாகத் தோன்றினான். அப்போது, ஓ! மன்னா, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது வீரர்கள் அனைவரும் தங்கள் வாழ்வைக் குறித்த நம்பிக்கையை இழந்தனர். எனினும், பொறுமையால் கோபத்தைத் தணித்த புகழ் பெற்ற அந்தப் பெரும் வில்லாளி {யுதிஷ்டிரன்}, சுருதாயுஷின் வில்லை அதன் கைப்பிடியில் வெட்டினான். பிறகு அப்போரில், அனைத்துத் துருப்புகளும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, வில்லறுபட்ட சுருதாயுஷை, நாராசம் {நெடுங்கணை} ஒன்றினால் நடுமார்பில் துளைத்தான்.

பிறகு, அந்த வலிமைமிக்க யுதிஷ்டிரன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனது கணைகளால் சுருதாயுஷின் குதிரைகளை விரைவாகக் கொன்று, மேலும் ஒருக்கணமும் தாமதிக்காமல் அவனது தேரோட்டியையும் கொன்றான். மன்னனின் {யுதிஷ்டிரனின்} ஆற்றலைக் கண்ட சுருதாயுஷ், குதிரைகள் கொல்லப்பட்ட அந்தத் தேரை விட்டு விட்டு, போரில் இருந்து விரைவாக ஓடினான் [2]. தர்மனின் மகனால் {யுதிஷ்டிரனால்} அந்தப் பெரும் வில்லாளி {சுருதாயுஷ்}, வீழ்த்தப்பட்ட பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனின் துருப்புகள் அனைத்தும் தங்கள் முகங்களைத் திருப்பிக் கொண்டன {புறமுதுகிட்டு ஓடின}. இந்தச் சாதனையை அடைந்த தர்மனின் மகன் யுதிஷ்டிரன், வாயை அகல விரித்திருக்கும் காலனைப் போல உமது துருப்புகளைக் கொல்லத் தொடங்கினான்.

பிறகு, விருஷ்ணி குலத்தின் சேகிதானன், துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தேர்வீரர்களின் முதன்மையான கௌதமரைத் {கிருபரைத்} தன் கணைகளால் மறைத்தான். அந்தப் போரில், அந்தக் கணைகளையெல்லாம் கலங்கடித்த சரத்வானின் மகனான கிருபர், பதிலுக்குப் பெரும்கவனத்துடன் தன் கணைகளால் சேகிதானனைத் துளைத்தார். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மேலும் ஒரு பல்லத்தைக் கொண்டு சேகிதானனின் வில்லை அறுத்த அந்தப் பெருங்கரவேகம் கொண்டவர் {கிருபர்}, மற்றுமொரு பல்லத்தினால் முன்னவனின் {சேகிதானனின்} தேரோட்டியையும் வீழ்த்தினார். பிறகு அந்தக் கிருபர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சேகிதானனின் குதிரைகளையும், பின்னவனின் {சேகிதானனின்} சிறகுகளைப் {பக்கங்களைப்} பாதுகாத்த இரண்டு வீரர்களையும் கொன்றார்.

பிறகு அந்தச் சத்வத குலத்தின் சேகிதானன், தனது தேரில் இருந்து விரைவாகக் குதித்து ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டான். கதாயுதம் தாங்குவோர் எவரிலும் முதன்மையான சேகிதானன், வீரர்களைக் கொல்லும் அந்தக் கதாயுதத்தால், கௌதமரின் {கிருபரின்} குதிரைகளைக் கொன்று, பிறகு அவரது தேரோட்டியையும் கொன்றான். அப்போது, அந்தக் கௌதமர் {கிருபர்}, தரையில் நின்றபடியே சேகிதானன் மேல் பதினாறு {16} கணைகளை ஏவினார். சத்வத குலத்தின் அந்த வீரனை {சேகிதானனைத்} துளைத்துச் சென்ற அந்தக் கணைகள், பூமியில் நுழைந்தன.

அதன்பேரில் சினம் தூண்டப்பட்ட சேகிதானன், விருத்திரனைக் கொல்ல விரும்பிய புரந்தரனை {இந்திரனைப்} போல, மீண்டும் ஒரு முறை தன் கதாயுதத்தை வீசினான். கௌதமர் {கிருபர்}, தன்னை நோக்கி வரும் அந்தத் கதாயுதத்தைக் கடினமான பலம் கொண்ட பல்லாயிரக்கணக்கான கணைகளால் தடுத்தார். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உறையில் இருந்து தன் வாளை உருவிய சேகிதானன், கௌதமரை {கிருபரை} நோக்கி விரைந்தோடினான்.

அதன் பேரில், கௌதமரும் {கிருபரும்}, தன் வில்லைத் தூக்கியெறிந்துவிட்டு, பளபளக்கும் ஒரு வாளை எடுத்துக் கொண்டு, சேகிதானனை நோக்கி பெரும் வேகத்துடன் விரைந்தார். அற்புதமான வாள்களுடன் இருந்தவர்களும், பெரும் பலம் கொண்டவர்களுமான அந்த இருவரும், கூர்முனை கொண்ட தங்கள் ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். மனிதர்களில் காளையரான அவர்கள் தங்கள் கத்திகளால் ஒருவரை ஒருவர் சக்தியுடன் தாக்கிக் கொண்டதால், உயிரினங்களின் பூதமான (உயிரினங்கள் பொதுப் பூதமான) பூமியில் விழுந்தனர்.

தாங்கள் கொண்ட முயற்சியினால் களைப்படைந்த அந்த இருவரும் மூர்ச்சையடைந்து அங்கங்கள் அசைவற்றுக் கிடைந்தனர். அப்போது, நட்பால் உந்தப்பட்ட காரகார்ஷன் {பீமன்} [3] அந்த இடத்திற்கு வேகமாக விரைந்தான். வெல்லப்பட முடியாத அந்த வீரன் {பீமன்}, அந்த அவல நிலையில் கிடந்த சேகிதானனைக் கண்டு, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவனை {சேகிதானனைத்} தன் தேரில் ஏற்றினான். அதே போல, உமது மைத்துனனான துணிச்சல்மிகு சகுனியும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தேர்வீரர்களில் முதன்மையான அந்தக் கௌதமரை {கிருபரை} தன் தேரில் விரைவாக ஏறச் செய்தான்.

கோபத்தால் தூண்டப்பட்ட {சேதி மன்னன்} திருஷ்டகேது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தொண்ணூறு {90} கணைகளால் சோமதத்தன் மகனை {பூரிஸ்ரவசை} விரைவாக மார்பில் துளைத்தான். தன் மார்பில் கொண்ட அந்தக் கணைகளோடு இருந்த அந்தச் சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, தன் கதிர்களுடன் கூடிய நடுப்பகல் சூரியனைப் போலப் பெரிதும் பிரகாசித்தான்.

எனினும் அந்தப் போரில் பூரிஸ்ரவஸ், தன் சிறந்த கணைகளால் திருஷ்டகேதுவின் தேரோட்டியையும், குதிரைகளையும் கொன்று, அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை {திருஷ்டகேதுவை}, அவனது தேரை இழக்கச் செய்தான். குதிரைகளும், தேரோட்டியும் கொல்லப்பட்டுத் தன் தேரை இழந்து நிற்கும் திருஷ்டகேதுவைக் கண்ட பூரிஸ்ரவஸ், அந்த மோதலில் அடர்த்தியான கணை மழையால் அவனை {திருஷ்டகேதுவை} மறைத்தான். பிறகு, தன் தேரைக் கைவிட்ட அந்த உயர் ஆன்ம திருஷ்டகேது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, {நகுலனின் மகனான} சதானீகனின் தேரில் ஏறிக் கொண்டான்.

தங்கக்கவசம் பூண்டிருந்த தேர்வீரர்களான சித்திரசேனன், விகர்ணன், துர்மர்ஷணன் ஆகியோர் அனைவரும், சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} நோக்கி விரைந்தனர். பிறகு, காற்று {வாயு}, பித்தம், சளி {வாதம், பித்தம், கபம் [சிலேத்துமம்]} ஆகியவற்றோடு {எனும் மூன்றோடு} உடல் கொள்ளும் போரைப் போல [4], ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அபிமன்யுவுக்கும், அந்த {மூன்று} வீரர்களுக்கும் இடையில் ஒரு கடுமையான போர் நடந்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எனினும் அந்த மனிதர்களில் புலி (அபிமன்யு),  உமது மகன்களைத் தங்கள் தேர்களை இழக்கச் செய்து, பீமனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து அவர்களைக் கொல்லாமல் விட்டான் [5].

பிறகு, மோதல் தொடர்ந்து கொண்டிருந்த போது, தேவர்களாலும் வீழ்த்தப்பட முடியாதவரான பீஷ்மர்,  உமது மகன்களை மீட்பதற்காகவலிமைமிக்கத் தேர்வீரனாயினும் சிறுவனும், தனியனுமான அபிமன்யுவை நோக்கி முன்னேறுவதைக் கண்டவனும், வெண்ணிறக் குதிரைகளைக் கொண்டவனுமான அந்தக்  குந்தியின் மகன் (அர்ஜுனன்), வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, தேர்வீரர்கள் அதிகமாக இருக்கும் அந்த இடத்திற்குக் குதிரைகளைச் செலுத்துவாயாக. அவர்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்களாக, துணிச்சல்மிக்கவர்களாக, ஆயுதங்களை அறிந்தவர்களாக, போரில் வெல்லப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள். ஓ! மாதவா {கிருஷ்ணா}, எதிரி நமது துருப்புகளைக் கொல்ல இயலாதவண்ணம் குதிரைகளை வழிநடத்துவாயாக” என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னான் {அர்ஜுனன்}.

அளவிலா சக்தி கொண்ட குந்தியின் மகனால் {அர்ஜுனனால்} இப்படித் தூண்டப்பட்ட விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்}, வெண் குதிரைகள் பூட்டப்பட்ட அந்தத் தேரைப் போரில் செலுத்தினான். சினத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனன், இப்படி உமது படையை நோக்கி முன்னேறிய போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகளுக்கு மத்தியில் ஆரவாரமிக்கப் பேரொலி எழுந்தது.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரைப் பாதுகாத்தபடி நின்ற அந்த மன்னர்களிடம் வந்த குந்தியின் மகன் {அர்ஜுனன்},  (முதலில்) {திரிகர்த்த மன்னன்} சுசர்மனிடம், “போரில் முதன்மையானவன் என்றும், ஆரம்பத்தில் {பழங்காலத்தில்} இருந்தே (எங்களுடைய) கொடிய எதிரியாக இருப்பவன் என்று உன்னை நான் அறிவேன். அந்த (உனது) தீய நடத்தையின் பயங்கரக் கனியை இன்று நீ பார். நான், இன்று உன்னை உனது முன்னோர்களின் ஆவிகளைச் சந்திக்கச் செய்வேன்” என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னான் {அர்ஜுனன்}.

எனினும், தேர்ப்படைகளின் தலைவனான சுசர்மன், எதிரிகளைக் கொல்பவனான அந்தப் பீபத்சு {அர்ஜுனன்} சொன்ன இந்தக் கடும் வார்த்தைகளைக் கேட்டும், (பதிலுக்கு) நல்லதாகவோ, அல்லதாகவோ ஒன்றும் சொல்லவில்லை. (ஆனால்) வீர அர்ஜுனனை அணுகி, தன்னைப் பின்தொடர்ந்த பெரும் எண்ணிக்கையிலான மன்னர்களுடன் அந்தப் போரில் அவனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டு, ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, உமது மகன்களின் துணையுடன், பகலை உண்டாக்குபவனை {சூரியனை} மூடும் மேகங்களைப் போல, முன்புறம், பின்புறம், பக்கங்கள் {விலாப்புறம்} என அனைத்துப் புறங்களிலும் கணைகளால் அவனை {அர்ஜுனனை} மூடினான். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே},  உமது படைக்கும், பாண்டவர்களின் படைக்கும் இடையில் நீரைப் போல குருதி ஓடும் ஒரு பயங்கரப் போர் நடைபெற்றது” {என்றான் சஞ்சயன்}.

பீமனிடம் தப்பிய சித்திரசேனன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 086-அபிமன்யுவுக்குத் துணையாக வந்த அர்ஜுனன்; பீஷ்மரைக் கொன்று சபதத்தை நிறைவேற்றும்படி சிகண்டியிடம் சொன்ன யுதிஷ்டிரன்; சிகண்டியின் ஆற்றல்; ஜெயத்ரதனுக்கும் பீமனுக்கும் இடையில் நடந்த போர்; பீமனின் கதாயுதத்துக்குத் தப்பி ஓடிய சித்திரசேனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “{சுசர்மன் மற்றும் அவனுக்குத் துணையாக நின்ற பிற மன்னர்களின்} அந்தக் கணைகளால் தாக்கப்பட்ட வலிமைமிக்கத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, மிதிபட்ட பாம்பைப் போல நீண்ட பெருமூச்சுகளை விட்டபடி, தன் தொடர்ச்சியான கணைகளின் பெரும் சக்தியால் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களின் விற்களை வெட்டினான். அந்தப் போரில் பலம் நிறைந்த ஏகாதிபதிகளின் விற்களை ஒருக்கணத்தில் வெட்டிப் போட்ட உயர் ஆன்ம அர்ஜுனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களை அழிக்க விரும்பி, ஒரே நேரத்தில் தன் கணைகளால் அவர்கள் அனைவரையும் துளைத்தான்.

இப்படி இந்திரனின் மகனால் {அர்ஜுனனால்} தாக்கப்பட்ட அவர்களில் சிலர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இரத்தத்தில் மூழ்கி களத்தில் விழுந்தனர். சிலர் தங்கள் அங்கங்கள் சிதைக்கப்பட்டனர், மேலும் சிலர் தலை அறுபட்டனர். இன்னும் சிலர் கவசங்கள் பிளந்து, உடல்கள் சிதைந்து மாண்டனர். பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் பீடிக்கப்பட்ட அவர்களில் பலர், பூமியில் விழுந்து ஒன்றாக அழிந்தனர்.

போரில் கொல்லப்பட்ட அந்த இளவரசர்களைக் கண்ட திரிகர்த்தர்களின் ஆட்சியாளன் {சுசர்மன்}, {அந்த இடத்தை நோக்கித்} தன் தேரில் முன்னேறி வந்தான். கொல்லப்பட்ட போராளிகளின் பின் பக்கத்தைப் பாதுகாத்த தேர்வீரர்களில் முப்பத்திரண்டு {32} பேரும் பார்த்தன் {அர்ஜுனன்} மீது பாய்ந்தனர். பார்த்தனை {அர்ஜுனனைச்} சூழ்ந்த அவர்கள் அனைவரும், உரத்த நாணொலி கொண்ட தங்கள் விற்களை வளைத்து, மலைச்சாரலில் நீரை பெருமளவில் பொழியும் மேகங்களைப் போல, அடர்த்தியான கணை மழையை அவன் {அர்ஜுனன்} மீது பொழிந்தனர்.

அந்தப் போரில், கணைமாரியால் பீடிக்கப்பட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, கோபத்தால் தூண்டப்பட்டு, எண்ணெயில் தோய்த்த {தோய்த்துக் கூராக்கப்பட்ட} அறுபது {60} கணைகளால் பின்புறத்தைப் பாதுகாத்தவர்களான அவர்கள் அனைவரையும் {யமனுலகு} அனுப்பி வைத்தான். அந்த அறுபது தேர்வீரர்களையும் வீழ்த்திய ஒப்பற்ற தனஞ்சயன் {அர்ஜுனன்}, மகிழ்ச்சியால் இதயம் நிறைந்தான் {மனக்களிப்படைந்தான்}. அம்மன்னர்களின் படைகளையும் கொன்ற ஜிஷ்ணு {அர்ஜுனன்}, {அடுத்து} பீஷ்மரைக் கொல்ல விரைந்தான்.

வலிமைமிக்கத் தேர்வீரர்களான தன் நண்பர்கள் கொல்லப்பட்டதைக் கண்ட திரிகர்த்தர்களின் ஆட்சியாளன் {சுசர்மன்}, தனக்கு முன்னணியில் பல (பிற) மன்னர்களையும் கொண்டு பார்த்தனை {அர்ஜுனனைக்} கொல்வதற்காக அவனிடம் விரைந்து வந்தான். ஆயுதங்களை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையான தனஞ்சயனை {அர்ஜுனனை} நோக்கி முன்னேறும் அந்தப் போராளிகளைக் கண்ட, சிகண்டியின் தலைமையிலான பாண்டவ வீரர்கள், அர்ஜுனனின் தேரைப் பாதுகாக்க விரும்பி, கூர் தீட்டப்பட்ட ஆயுதங்களைக் கைகளில் கொண்டு முன்னேறினர்.

திரிகர்த்தர்களின் ஆட்சியாளனுடன் {சுசர்மனுடன்} தன்னை நோக்கி முன்னேறிவரும் அந்தத் துணிச்சல்மிக்கவர்களைக் கண்ட பார்த்தனும் {அர்ஜுனனும்}, காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளின் மூலம் அந்தப் போரில் அவர்களைச் சிதைத்தான். பிறகு, பீஷ்மரை அணுக விரும்பிய அந்தப் புகழ் பெற்ற வில்லாளி {அர்ஜுனன்}, துரியோதனனையும், சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} தலைமையிலான பிற மன்னர்களையும் கண்டான். பெரும் சக்தியுடன் போரிட்டு, பீஷ்மரைப் பாதுகாக்க விரும்பிய அவ்வீரர்களை ஒரு கணத்தில் தடுத்தவனும், பெரும் வீரம் கொண்டவனும், அளவிலா ஆற்றல், மிகுந்த பலம், பெரும் மனவுறுதி ஆகியவற்றைக் கொண்டவனுமான வீர அர்ஜுனன், துரியோதனன், ஜெயத்ரதன் மற்றும் பிறரை தவிர்த்துவிட்டு, கையில் வில் மற்றும் அம்புடன் அந்தப் போரில் கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} நோக்கி இறுதியில் முன்னேறினான்.

கடும் ஆற்றல், அளவிலா புகழ் ஆகியவற்றைக் கொண்ட உயர் ஆன்ம யுதிஷ்டிரனும், கோபத்தால் தூண்டப்பட்டு, தனது பங்காக ஒதுக்கப்பட்ட மத்ரர்களின் ஆட்சியாளனைப் {சல்லியனைப்} [1] போரில் தவிர்த்துவிட்டு, பீமன் மற்றும் மாத்ரி மகன்களின் {நகுலன் மற்றும் சகாதேவனின்} துணையுடன், சந்தனுவின் மகனான பீஷ்மரை நோக்கிப் போரிடுவதற்காக விரைவாகச் சென்றான். ஒன்றாகக் கூடியிருந்த பாண்டு மகன்கள் அனைவராலும் போரில் தாக்கப்பட்டாலும், போர்க்கலையின் அனைத்து வழிமுறைகளையும் அறிந்தவரும், கங்கை மற்றும் சந்தனுவின் உயர் ஆன்ம மகனுமான அவர் {பீஷ்மர்}, சற்றேனும் நடுங்கவில்லை.

கடும்பலமும், பெரும் சக்தியும், இலக்கில் உறுதியும் கொண்ட மன்னன் ஜெயத்ரதன், போரில் முன்னேறி, தன் சிறந்த வில்லைக் கொண்டு, வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள் அனைவரின் விற்களையும் [2] பலத்துடன் வெட்டி வீழ்த்தினான். கோபம் தூண்டப்பட்டவனும், ஒப்பற்றவனுமான துரியோதனன், தன் நிலை குறித்த கோபத்தில், நெருப்பின் சுடர்களுக்கு ஒப்பான கணைகளால் யுதிஷ்டிரன், பீமசேனன், இரட்டையர்கள் {நகுல சகாதேவர்கள்}, பார்த்தன் {அர்ஜுனன்} ஆகியோரைத் தாக்கினான். மேலும், கிருபர், சலன், சித்திரசேனன் ஆகியோரின் கணைகளாலும் துளைக்கப்பட்ட பாண்டவர்கள், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, (பழங்காலத்தில்) ஒன்று சேர்ந்திருந்த தைத்தியர்களின் கணைகளால் துளைக்கப்பட்ட தேவர்களைப் போலக் கோபத்தால் எரிந்து கொண்டிருந்தனர்.

சந்தனு மகனால் {பீஷ்மரால்} ஆயுதம் வெட்டப்பட்டு ஓடிக்கொண்டிருந்த சிகண்டியைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன் கோபத்தால் நிறைந்தான் [3]. அப்போரில் சிகண்டியிடம் கோபத்துடன் பேசிய அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்}, “உன் தந்தையின் முன்னிலையில் என்னிடம், “உயர்ந்த நோன்புகளைக் கொண்ட பீஷ்மரைப் பிரகாசமிக்கச் சூரியனின் நிறத்தைக் கொண்ட என் கணைகளால் நான் கொல்வேன். உண்மையாகவே நான் இதைச் சொல்கிறேன்” என்று அப்போது நீ சொன்னாய். அஃதே உனது உறுதிமொழியாகும். தேவவிரதரை {பீஷ்மரை} நீ போரில் கொல்லாத வரை, உனது உறுதிமொழியை நிறைவேற்றாதவனாகவே நீ இருப்பாய். ஓ! வீரா {சிகண்டியே}, நிறைவேறா உறுதிமொழியைக் கொண்டவனாக இராதே.

உனது அறம், குலம், புகழ் ஆகியவற்றைக் கவனத்தில் கொள்வாயாக. பயங்கர மூர்க்கம் கொண்ட பீஷ்மர், கடும் சக்தி கொண்ட தனது எண்ணற்ற கணைகளால் எனது படைகளை எரித்து, காலனைப் போல ஒரு கணத்தில் அனைத்தையும் அழிப்பதைப் பார். உனது வில்லறுபட்டு, போரைத் தவிர்த்துவிட்டு, சந்தனுவின் அரசமகனால் {பீஷ்மரால்} வீழ்த்தப்பட்டு, உனது சொந்தங்களையும் சகோதரர்களையும் கைவிட்டுவிட்டு நீ எங்கே செல்லப் போகிறாய்? இஃது உனக்குத் தகாது. அளவற்ற ஆற்றலைக் கொண்ட பீஷ்மரையும், முறியடிக்கப்பட்டு ஓடும் நமது படையையும் கண்டு, ஓ துருபதன் மகனே {சிகண்டியே}, நீ அச்சப்படுகிறாய் என்பது உறுதியே. அதனாலேயே உன் முகத்தின் நிறம் மங்கியிருக்கிறது. ஓ! வீரா {சிகண்டியே}, இந்தப் பயங்கரப் போரில் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஈடுபட்டிருக்கிறான்என்பது உனக்குத் தெரியவில்லையே.  ஓ! வீரா {சிகண்டியே}, உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நீ, பீஷ்மரைக் கண்டு இன்று ஏன் அஞ்சுகிறாய்? [4]” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.

பலமான காரணத்துடன் கூடியதாக {நியாயமானதாக} இருந்தாலும் கடுமையுடன் இருந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட உயர் ஆன்ம சிகண்டி, அவற்றை நல்ல ஆலோசனையாகக் கருதி, பீஷ்மரைக் கொல்வதில் தன்னை விரைவாக நிலைநிறுத்திக் கொண்டான். பீஷ்மர் மீது பாய்வதற்காக அப்போரில் பெரும் மூர்க்கத்துடன் சிகண்டி முன்னேறிக் கொண்டிருந்தபோது, கலங்கடிப்பதற்குக் கடினமான பயங்கர ஆயுதங்களால் சல்லியன் அவனைத் தடுக்கத் தொடங்கினான். எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்திரனுக்கு நிகரான ஆற்றலைக் கொண்ட அந்தத் துருபதன் மகன் {சிகண்டி}, அண்ட அழிவு நேரத்தின்போது சுடர்விட்டெரியும் நெருப்பைப் போன்று பிரகாசத்துடன் (இப்படிக்) காட்சியளித்த அந்த ஆயுதங்களைக் (ஆக்னேயாஸ்திரங்களைக்} கண்டு கிஞ்சிற்றும் குழம்பவில்லை,.

தனது கணைகளால் அந்த அயுதங்களைத் தடுத்த வலிமைமிக்க வில்லாளியான சிகண்டி, அசையாமல் அங்கேயே நின்றான். பிறகு, (சல்லியனின் அந்த நெருப்பு போன்ற ஆயுதங்களை [அந்த ஆக்னேயாஸ்திரங்களைக்]) கலங்கடிப்பதற்காக, மற்றொரு ஆயுதமான கடுமையான வருண ஆயுதத்தை {வருணாஸ்திரத்தை} அவன் {சிகண்டி} எடுத்தான். பின்னர், ஆகாயத்தில் நின்றிருந்த தேவர்களும், பூமியில் இருந்த மன்னர்களும் என அனைவரும், சல்லியனின் ஆயுதங்களைக் கலங்கடிக்கும் சிகண்டியின் வருண ஆயுதத்தைக் கண்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அதே வேளையில், உயர் ஆன்மா கொண்ட வீர பீஷ்மர்,  பாண்டுவின் மகனும், ஆஜமீட குலத்தவனுமான மன்னன் யுதிஷ்டிரனின் பலவண்ணங்களிலான கொடிமரத்தையும், வில்லையும் அந்தப் போரில் வெட்டி வீழ்த்தினார்.

அதன் பேரில், அச்சத்தில் மூழ்கியிருக்கும் யுதிஷ்டிரனைக் கண்டு, தனது வில்லையும் கணைகளையும் போட்டுவிட்டு, ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்ட பீமசேனன், அந்தப் போரில் கால்நடையாகவே ஜெயத்ரதனை நோக்கி விரைந்தான். பிறகு, ஜெயத்ரதன், யமதண்டம் போன்றவையும், கூர் முனை கொண்டவையுமான ஐநூறு {500} பயங்கரக் கணைகளைக் கொண்டு, தன்னை நோக்கிக் கையில் கதாயுதத்துடன் இப்படி மூர்க்கமாக விரைந்து வரும் பீமசேனனை அனைத்துப் புறங்களிலும் இருந்தும் துளைத்தான். அந்தக் கணைகளை அலட்சியம் செய்தவனும், மூர்க்கமானவனுமான விருகோதரன் {பீமன்}, சினத்தால் நிறைந்த இதயத்துடன், ஆரட்டாவில் [5] பிறந்தவையான சிந்துக்கள் மன்னனின் {ஜெயத்ரதனின்} குதிரைகள் அனைத்தையும் அப்போரில் கொன்றான்.

அதன்பிறகு, பீமசேனன் நடந்து வருவதைக் கண்டவனும், நிகரற்ற ஆற்றலைக் கொண்டவனும், தேவர்கள் தலைவனை {இந்திரனைப்} போன்றவனுமான உமது மகன் (சித்திரசேனன்), அவனுக்கு {பீமனுக்கு} மரணத்தைக் கொடுப்பதற்காக உயர்த்திய ஆயுதங்களுடன் அவனை {பீமனை} நோக்கித் தன் தேரில் விரைந்தான். பீமனும், கையில் கதாயுதத்துடன் முழங்கிக் கொண்டே, உரக்கக் கத்திய படி அவனை {சித்திரசேனனை} நோக்கி மூர்க்கமாக விரைந்தான். யமதண்டத்தைப் போன்றிருந்த அந்த உயர்த்திப் பிடிக்கப்பட்ட கதாயுதத்தைக் கண்ட கௌரவர்கள் அனைவரும், (தங்களுக்கு மத்தியில்) அது பாய்வதைத் தவிர்க்க விரும்பி, துணிச்சல் மிக்க உமது மகனை {சித்திரசேனனைக்} கைவிட்டுவிட்டு ஓடினார்கள் [6].

புலனுணர்வைக் குழப்புவதும், கடுமையானதும், அச்சத்தைத் தருவதுமான (மனிதர்களின்) அந்த நொறுங்கலில் {போரில்}, தன்னை நோக்கி வரும் கதாயுதத்தைச் கண்டாலும், சித்திரசேனன் தனது புலனுணர்வுகளை இழக்கவில்லை. பளபளக்கும் ஒரு வாளையும், ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்ட அவன் {சித்திரசேனன்} தனது தேரைக் கைவிட்டுவிட்டு, மலைமுகட்டின் மேல் இருந்து குதிக்கும் சிங்கத்தைப் போல (தன் வாகனத்தில் இருந்து) கீழே தரையில் குதித்துக் காலாட்படை வீரனானான்.

அதே வேளையில் அந்த அழகிய தேரின் மேல் விழுந்த அந்தக் கதாயுதம், குதிரைகள் மற்றும் தேரோட்டியுடன் கூடிய அந்த வாகனத்தையே {தேரையே} அந்தப் போரில் அழித்து, ஆகாயத்தில் இருந்து பூமியில் தளர்ந்து விழும் சுடர்மிக்க ஓர் எரிநட்சத்திரத்தைப் போலப் பூமியில் விழுந்தது {கதாயுதம்}. அற்புதம் நிறைந்த அந்த உயர்ந்த சாதனையை {சித்திரசேனன் தப்பியதைக்} கண்ட உமது துருப்புகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியால் நிறைந்தன. அவை {அந்தத் துருப்புகள்} அனைத்தும் ஒன்றாகக் கூடி அந்தப் போர்க்களத்தில் பெருமுழக்கம் செய்தன. மேலும் வீரர்கள் அனைவரும் (தாங்கள் என்ன கண்டார்களோ, அதற்காக) உமது மகனை {சித்திரசேனனை}  பாராட்டினார்கள்” {என்றான் சஞ்சயன்}.

சிகண்டியை மீண்டும் தவிர்த்த பீஷ்மர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 087-பீமனால் தேரிழந்த சித்திரசேனனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்ட விகர்ணன்; பீஷ்மருக்கும் யுதிஷ்டிரனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; குதிரைகள் கொல்லப்பட்ட யுதிஷ்டிரன், நகுலனின் தேரில் ஏறிக் கொண்டது; நகுலசகாதேவர்களைத் தன் கணைகளால் மறைத்த பீஷ்மர்; வில்லால் விளையாடிய பீஷ்மர்; சிகண்டியைத் தவிர்த்த பீஷ்மர்; திருஷ்டத்யும்னனின் குதிரைகளைக் கொன்ற விந்தனும் அனுவிந்தனும்; சாத்யகியின் தேரில் ஏறிக் கொண்ட திருஷ்டத்யும்னன்; ஏழாம் நாள் போரின் முடிவிலான களநிலவரம்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இப்படி {பீமனால்} தன் தேரை இழந்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான உமது மகன் சித்திரசேனனைக் கண்ட உமது {மற்றொரு} மகன் விகர்ணன், அவனை {சித்திரசேனனைத்} தன் தேரில் ஏறச் செய்தான். கடுமையாகவும், கொடூரமாகவும் நடைபெற்ற அந்தப் பொதுவான போரில், சந்தனுவின் மகனான பீஷ்மர், யுதிஷ்டிரனை நோக்கி மூர்க்கமாக விரைந்தார்.

அப்போது, தங்கள் தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றோடு கூடிய சிருஞ்சயர்கள் நடுங்கத் தொடங்கினார்கள். யுதிஷ்டிரன் ஏற்கனவே காலனின் வாய்க்குள் அகப்பட்டுவிட்டதாகவே அவர்கள் {சிருஞ்சயர்கள்} கருதினார்கள். எனினும், இரட்டையர்களுடன் {நகுல சகாதேவர்களுடன்} சென்ற குரு குலத்தின் தலைவனான யுதிஷ்டிரன், வலிமைமிக்க வில்லாளியும், மனிதர்களில் புலியுமான பீஷ்மரை நோக்கி முன்னேறினான். அப்போது, ஆயிரக்கணக்கான கணைகளை ஏவிய அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, சூரியனை மறைக்கும் மேகங்களைப் போலப் பீஷ்மரை மறைத்தான்.

யுதிஷ்டிரனால் நன்கு அடிக்கப்பட்ட அந்த எண்ணிலா கணைகளை, நூறு நூறாகவும், ஆயிரங்களாகவும் தனித் தனித் தொகுப்புகளாக அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} ஏற்றுக் கொண்டார் [1]. (பதிலுக்கு) பீஷ்மரால் ஏவப்பட்ட கணைகள், காற்றில் பறக்கும் பூச்சிகளின் கூட்டத்தைப் போல எண்ணற்றவையாக இருந்தன. கண்ணிமைக்க ஆகும் பாதி நேரத்தில், சந்தனுவின் மகனான பீஷ்மர், தொகுப்புகளாக அடிக்கப்பட்ட எண்ணிலாக் கணைகளால் குந்தியின் மகனை {யுதிஷ்டிரனை} அந்தப் போரில் மறைத்தார்.

அப்போது, கோபத்தால் தூண்டப்பட்ட மன்னன் யுதிஷ்டிரன், அந்த உயர் ஆன்மக் கௌரவர் {பீஷ்மர்} மீது நஞ்சுமிக்கப் பாம்பைப் போன்ற ஒரு நாராசத்தை {நீண்ட கணையை} வேகமாக ஏவினான். எனினும், வலிமைமிக்கத் தேர்வீரரான அந்தப் பீஷ்மர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அம்மோதலில் யுதிஷ்டிரனின் வில்லில் இருந்து அடிக்கப்பட்ட அந்த நாராசம், தன்னை அடைவதற்கு முன்பே, ஒரு க்ஷூரப்ரத்தால் {குதிரை லாடம் போன்ற தலை கொண்ட கணையால்} அதனைத் துண்டாக்கினார். காலனுக்கு ஒப்பான அந்த நாராசத்தைத் துண்டித்த பீஷ்மர், குருக்களின் வழிவந்த அந்த இளவரசனுடையவையும் {யுதிஷ்டிரனுடையவையும்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான அந்தக் குதிரைகளைக் கொன்றார்.

பிறகு, குதிரைகள் கொல்லப்பட்ட தனது தேரைக் கைவிட்ட பாண்டுவின் மகன் யுதிஷ்டிரன், உயர் ஆன்ம நகுலனின் தேரில் விரைவாக ஏறிக் கொண்டான். அப்போது, பகை நகரங்களை அடக்குபவரான பீஷ்மர் கோபத்தால் தூண்டப்பட்டு, அப்போரில் இரட்டையரிடம் {நகுலன் மற்றும் சகாதேவனிடம்} வந்து, அவர்களைக் கணைகளால் மறைத்தார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் கணைகளால் இப்படிப் பீடிக்கப்பட்ட அந்த (சகோதரர்கள்) இருவரையும் கண்ட யுதிஷ்டிரன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் அழிவை (நிர்ணயிக்க) விரும்பி ஊக்கத்துடன் சிந்திக்கத் தொடங்கினான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு, அந்த யுதிஷ்டிரன்,  “ஒன்றாகக் கூடி சந்தனுவின் மகனான பீஷ்மரைக் கொல்வீராக” என்று சொல்லி தன் நண்பர்களையும், (தன் தரப்பிலுள்ள) ஆட்சியாளர்களையும் தூண்டினான். பிருதை மகனின் {குந்தியின் மகனின் யுதிஷ்டிரனின்} இவ்வார்தைகளைக் கேட்ட அந்த ஆட்சியாளர்கள் அனைவரும், பெரும் எண்ணிக்கையிலான தேர்களுடன் பாட்டனைச் {பீஷ்மரைச்} சூழ்ந்து கொண்டனர். அப்போது, அனைத்துப் புறங்களிலும் சூழப்பட்ட உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரை வீழ்த்தித் தன் வில்லால் விளையாடத் தொடங்கினார்.

களத்தில் இப்படிக்கட்டுப்படுத்தப்பட முடியாமல் திரிந்து கொண்டிருந்த அந்தக் குரு குலத்தவரை {பீஷ்மரை}, காட்டில் மான் கூட்டத்திற்கு மத்தியில் திரியும் இளஞ்சிங்கத்தைப் போலப் பாண்டவர்கள் கண்டார்கள். அந்தப் போரில் பேரொலியுடன் முழங்கித் துணிவுமிக்க வீரர்களின் இதயங்களைத் தன் கணைகளால் அச்சங்கொள்ளச் செய்யும் அவரை {பீஷ்மரைக்} கண்ட க்ஷத்திரியர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிங்கத்தைக் கண்ட சிறு விலங்குகளைப் போல அச்சத்தால் பீடிக்கப்பட்டனர். உண்மையில், போரில் அந்தப் பாரதக் குலச் சிங்கத்தின் {பீஷ்மரின்} அசைவுகளைக் காற்றின் உதவியால் வைக்கோலை எரிக்கும் காட்டு நெருப்புக்கு ஒப்பானதாகவே அந்த க்ஷத்திரியர்கள் கண்டார்கள்.

கனிந்த (பனம்) பழங்களைத் தாங்கும் மரங்களிலிருந்து (கல்லைக் கொண்டு) அவற்றை {கனிகளை} வீழ்த்தும் திறமைமிக்க ஒரு மனிதனைப் போல, அந்தப் போரில் தேர்வீரர்களின் தலைகளைப் பீஷ்மர் வீழ்த்தினார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பூமியின் பரப்பில் விழுந்த வீரர்களின் தலைகள், கல் மழையை ஒத்த பேரொலியை எழுப்பின. கடுமையானதும், பயங்கரமானதுமான அப்போர் நடந்து கொண்டிருந்த போது, துருப்புகள் அனைத்தின் மத்தியிலும் ஒரு பெரிய குழப்பம் தோன்றியது. அந்தக் குழப்பத்தின் விளைவால் (இரு படையின்) வியூகங்களும் {அணிவகுப்புகளும்} உடைந்தன. ஒருவரையொருவர் தனிப்பட்ட முறையில் {போருக்கு} அழைத்த க்ஷத்திரியர்கள், போரிடுவதற்காக ஒருவரையொருவர் அணுகினர்.

அப்போது, பாரதர்களின் பாட்டனைக் {பீஷ்மரைக்} கண்ட சிகண்டி, “நில்லும், நில்லும்” என்று சொன்னபடி அவரை நோக்கி மூர்க்கமாக விரைந்தான். எனினும், சிகண்டியின் பெண்தன்மையை நினைவுகூர்ந்த பீஷ்மர், அதன் காரணமாக அவனை {சிகண்டியை} அலட்சியம் செய்து சிருஞ்சயர்களை நோக்கி முன்னேறினார் [2]. அதன்பேரில், அந்தப் பெரும்போரில் பீஷ்மரைக் கண்ட சிருஞ்சயர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர். அவர்கள் {சிருஞ்சயர்கள்} தங்கள் சங்கொலிகளுடன் கலந்து, பல்வேறு விதமான உரத்த முழக்கங்களையும் செய்தனர். அதன் பிறகு தொடங்கிய கடுமையான போரில் தேர்களும் யானைகளும் ஒன்றோடொன்று கலந்தன. ஓ தலைவா {திருதராஷ்டிரரே}, நாளின் அந்த மணித்துளியின் போது, சூரியன் (நெடுங்கோட்டுக்கு {தீர்க்கரேகைக்கு}) அடுத்தப் பக்கத்தில் {மேற்கில்} இருந்தான்.

பிறகு பாஞ்சாலர்களின் இளவரசனான திருஷ்டத்யும்னனும், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகியும், கணைகள் மற்றும் வேல்களின் மழையால் (பாரதர்களின் அந்தப்) படையைப் பெரிதும் பீடித்தனர். அவ்விருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எண்ணிலடங்காக் கணைகளால் அந்தப் போரில் உமது வீரர்களைத் தாக்கத் தொடங்கினர். எனினும், அந்தப் போரில் மேன்மையான தீர்மானத்தை அடைத்திருந்த உமது போராளிகள், ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, (இப்படிப்) போரில் கொல்லப்பட்டாலும், போரிடுவதிலிருந்து பின்வாங்கவில்லை. உண்மையில், உமது துருப்புகள் தங்கள் துணிச்சலின் அளவுக்குத்தக்க தாக்கத் தொடங்கினார்கள்.

எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிருஷதனின் ஒப்பற்ற மகனால் {திருஷ்டத்யும்னனால்} உமது உயர் ஆன்மப் போராளிகள் கொல்லப்பட்ட போது, அவர்களுக்கு மத்தியில் பேரொலியுடன் கூடிய துன்பக் கதறல்கள் கேட்கப்பட்டன. பேரொலியுடன் கூடிய அந்தக் கதறல்களைக் கேட்டு, உமது படையின் வலிமைமிக்க இரு தேர்வீரர்களான அவந்தியின் விந்தனும், அனுவிந்தனும், பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} எதிர்த்து வேகமாகச் சென்றனர். அவனது {திருஷ்டத்யும்னனின்} குதிரைகளை வேகமாகக் கொன்ற அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் இருவரும் சேர்ந்து, அந்தப் பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனைக்} கணைமாரியால் மறைத்தனர். அதன்பேரில், வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, தன் தேரைவிட்டு விரைவாகக் கீழே குதித்துக் காலந்தாழ்த்தாமல் உயர் ஆன்ம சாத்யகின் தேரில் ஏறிக் கொண்டான்.

பிறகு, கோபத்தால் தூண்டப்பட்ட மன்னன் யுதிஷ்டிரன், பெரும்படை ஒன்றின் துணையுடன், அவந்தியின் இரு இளவரசர்களான அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்களை {விந்தானுவிந்தர்களை} எதிர்த்துச் சென்றான். அதே போல, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அனைத்து விதங்களிலும் தயாராக இருந்த உமது மகனும் {துரியோதனனும்}, போரில் விந்தன் மற்றும் அனுவிந்தனைச் (அவர்களை ஆதரிப்பதற்காக) சூழ்ந்து நின்றான்.

அந்தப் போரில் சினம் தூண்டப்பட்ட அர்ஜுனனும், அசுரர்களை எதிர்த்த வஜ்ரபாணியை {இந்திரனைப்} போல க்ஷத்திரியக் குலத்தின் காளைகள் பலரை எதிர்த்துப் போரிட்டான். உமது மகனுக்கு {துரியோதனனுக்கு} ஏற்புடையதை எப்போதும் செய்யும் துரோணரும், அந்தப் போரில் கோபத்தில் எரிந்து, பஞ்சுக்குவியலை எரிக்கும் நெருப்பைப் போலப் பாஞ்சாலர்களை எரிக்கத் தொடங்கினார். துரியோதனனைத் தங்கள் தலைவனாகக் கொண்ட உமது பிற மகன்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் பீஷ்மரைச் சூழ்ந்து கொண்டு, பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட்டனர்.

பிறகு, சூரியன் சிவப்பு நிறமடைந்த போது [3], ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகளிடம் பேசிய மன்னன் துரியோதனன், “நேரத்தை இழக்காதீர் {விரைவாகச் செயல்படுவீர்}” என்று சொன்னான். இப்படிப் போரிட்ட அவர்கள், அடைதற்கரிய சாதனைகளை அடைந்த பின், சூரியன் மேற்கு மலையில் ஓயச் சென்றதன் விளைவால் மறைந்த போது, அந்த அந்திப் பொழுதின் தொடக்கத்தில், குருதியையே வெள்ளமாகவும், அலைகளாகவும் கொண்டதும், எண்ணிலடங்கா குள்ளநரிகளால் மொய்க்கப்பட்டதுமான பயங்கர ஆறு ஒன்று விரைவாக அங்கே பெருக்கெடுத்தது. மேலும், தீமையை முன்னறிவிக்கும் வகையில், ஆவிகளும், பயங்கரமாக ஊளையிடும் குள்ளநரிகளும் நிறைந்து அந்தப் போர்க்களமே பயங்கரமாக மாறியது. ராட்சசர்களும், பிசாசங்களும் மற்றும் மனித ஊனுண்ணிகள் பிறவும், நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் சுற்றிலும் காணப்பட்டன.

சுசர்மன் தலைமையிலான மன்னர்கள் அனைவரையும், அவர்களைப் பின்தொடர்பவர்களையும் {படைவீரர்களையும்} அவர்களது படைப்பிரிவின் மத்தியில் வெற்றிக் கொண்ட அர்ஜுனன், தன் பாசறையை நோக்கிச் சென்றான். இரவு தொடங்கிய போது, தன் தம்பிகளோடு கூடிய குரு குலத்தின் தலைவன் யுதிஷ்டிரனும், தன் துருப்புகள் பின் தொடர, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் பாசறையை நோக்கிச் சென்றான். துரியோதனன் தலைமையிலான மன்னர்களை வெற்றிக் கொண்ட பீமசேனனும், தனது பாசறையை நோக்கிச் சென்றான்.

அந்தப் பெரும்போரில் (தனது துருப்புகளுடன்) சந்தனுவின் மகனான பீஷ்மரைச் சூழ்ந்து கொண்ட மன்னன் துரியோதனனும், தன் பாசறையை நோக்கிச் சென்றான். மொத்த (தார்தராஷ்டிரப்) படையையும் சூழ்ந்து கொண்ட துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர், சல்லியன், சத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோரும், தங்கள் பாசறைகளை நோக்கிச் சென்றனர். அதே போல, தங்கள் படையைச் சூழ்ந்து கொண்ட சாத்யகியும், பிருஷதனின் மகனும் {திருஷ்டத்யும்னனும்} தங்கள் பாசறைகளுக்குச் சென்றனர்.

இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரிகளைத் தண்டிப்பவர்களான உமது துருப்பினரும், பாண்டவர்களும், இருளடைந்ததும் போரிடுவதை நிறுத்தினர். தங்கள் பாசறைகளுக்குச் ஓயச் சென்ற பாண்டவர்களும், கௌரவர்களும், அவற்றில் {பாசறைகளில்} நுழைந்ததும், ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டனர். துணிவுமிக்கத் தங்கள் வீரர்களின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைச் செய்து, விதிகளுக்கு ஏற்ப காவல்சாவடிகளை அமைத்து, (தங்கள் உடல்களில் இருந்து) கணைகளைப் பிடுங்கி, பல்வேறு விதங்களிலான நீரில் நீராடினர் {குளித்தனர்}.

பிறகு, அவர்களுக்காகச் சினமாற்றும் {அமைதிப்படுத்தும்} சடங்குகளை அந்தணர்கள் செய்தனர்; பாணர்கள் அவர்களது புகழைப் பாடினர். பிறகு அந்தப் புகழ்பெற்ற மனிதர்கள், கருவிகள் மற்றும் குரல் இசை ஆகிய இரண்டின் துணையோடும் சிறிது நேரம் களிப்பில் ஈடுபட்டனர் {உல்லாசமாகப் பொழுதைக் கழித்தனர்}. சிறிது நேரத்திற்கு {ஒரு முகூர்த்த நேரத்திற்கு} அந்த முழுக் காட்சியும் சொர்க்கத்தைப் போன்றே இருந்தது. அந்த மனிதர்களில் காளையர் சிறிது நேரம் போரைக் குறித்துப் பேசாதிருந்தனர். களைத்த மனிதர்களாலும், யானைகளாலும், குதிரைகளாலும் நிறைந்திருந்த அந்தப் படைகள் இரண்டும் அங்கே உறங்கிய போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, காண்பதற்கு அவை அழகாகின [4]” {என்றான் சஞ்சயன்}.

ஏழாம் நாள் போர் முற்றும் 

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ  பீஷ்ம பர்வம்-ஸ்ரீ பீஷ்மவத பர்வம்-ஆறாம் நாள் போர்-

October 13, 2025

மகரக்கிரௌஞ்ச வியூகத்துடன் ஆறாம் நாள் போர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 075-டைகள் இரண்டிலும் எழுந்த பேராரவாரம்; பாண்டவர்கள் மகர வியூகம் அமைத்தது; கௌரவர்கள் கிரௌஞ்ச வியூகம் அமைத்தது; இருதரப்பிலும் ஒவ்வொரும் ஏற்ற நிலைகள்; ஆறாம் நாள் போர் தொடங்கியது; துரோணரின் தேரோட்டியைக் கொன்ற பீமசேனன்; பீஷ்மராலும், துரோணராலும் பாண்டவர்களுக்கு ஏற்பட்ட அழிவு; பீமனாலும், அர்ஜுனனாலும் கௌரவர்களுக்கு ஏற்பட்ட அழிவு…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சிறிது ஓய்வுக்குப் பிறகு அந்த இரவு கடந்ததும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குருக்கள், பாண்டவர்கள் ஆகிய இரு தரப்பும் மீண்டும் போருக்குப் புறப்பட்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் யானைகளையும், குதிரைகளையும் மோதலுக்குத் தயார்ப்படுத்தும்போதும், காலாட்படை வீரர்கள் தங்கள் கவசங்களைத் தரிக்கும்போதும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போருக்குத் தயாரான வலிமைமிக்கத் தேர்வீரர்களுக்கு மத்தியில் பேராரவாரம் எழுந்தது. களத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சங்குகள் மற்றும் துந்துபிகளின் முழக்கங்கள் {அங்கிருந்தவர்களைச்} செவிடாக்குவதாக இருந்தன.

அப்போது, மன்னன் யுதிஷ்டிரன், திருஷ்டத்யும்னனிடம், “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {திருஷ்டத்யும்னா}, எதிரியைச் சுடுவதும், மகரம் என்று அழைக்கப்படுவதுமான வியூகத்தில் துருப்புகளை அணிவகுப்பாயாக” என்றான். பிருதையின் மகனால் {குந்தியின் மகன் யுதிஷ்டிரனால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், தேர்ப்போராளிகளில் முதன்மையானவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்தத் திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (மகர வியூகத்தில் அணிவகுக்கும்படி) தேர்வீரர்களுக்கு உத்தரவு பிறப்பித்தான்.

துருபதனும், பாண்டுவின் மகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்} அந்த அணிவகுப்பின் தலையில் அமைந்தார்கள். சகாதேவனும், வலிமைமிக்கத் தேர்வீரனான நகுலனும் அதன் கண்களாக அமைந்தார்கள். வலிமைமிக்கவனான பீமசேனன் அதன் வாயாக {முகமாக} அமைந்தான். சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, திரௌபதியின் மகன்கள், ராட்சசன் கடோத்கசன், சாத்யகி, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோர் அதன் கழுத்தில் நின்றனர். பெரும்படைப்பிரிவின் தலைவனான மன்னன் விராடன், திருஷ்டத்யும்னனாலும், ஒரு பெரும் படையினாலும் ஆதரிக்கப்பட்டு அதன் {அந்த அணிவகுப்பின்} பின்புறமாக அமைந்தான்.

கேகயச் சகோதரர்கள் ஐவரும் அதன் இடது விலாவானார்கள். மனிதர்களில் புலியான திருஷ்டகேது, பெரும் ஆற்றலைக் கொண்ட சேகிதானன் ஆகியோர் வலது விலாவில் அந்த அணிவகுப்பைப் பாதுகாக்க நின்றார்கள். அதன் இரண்டு பாதங்களில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனும், அருளப்பட்டவனுமான குந்திபோஜனும், சதானீகனும் ஒரு பெரும்படையால் ஆதரிக்கப்பட்டு நின்றார்கள். சோமகர்களால் சூழப்பட்ட பெரும் வில்லாளியான வலிமைமிக்கச் சிகண்டியும், இராவத்தும் {இராவானும் [அ] அரவானும்} அந்த மகர வியூகத்தின் வால் பகுதியில் நின்றார்கள்.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்கள் பெரும் அணிவகுப்பை அமைத்துக் கொண்ட பாண்டவர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கவசம் தரித்தப்படி அதிகாலையிலேயே மீண்டும் போருக்காக நின்றார்கள். யானைகள், குதிரைகள், தேர்கள் மற்றும் காலாட்படையுடனும், உயர்த்திப் பிடிக்கப்பட்ட கொடிக் கம்பங்கள், குடைகள் ஆகியவற்றுடனும், கூர் தீட்டப்படு பிரகாசமாக இருந்த ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு கௌரவர்களை எதிர்த்து விரைவாகச் சென்றனர்.

பிறகு உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, இப்படி அணிவகுப்பட்ட (பாண்டவப்) படையைக் கண்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரு பெரும் நாரையின் வடிவத்திலான {கிரௌஞ்ச வியூகத்தை} [1] எதிரணியாக வகுத்தார். அதன் அலகாகப் பரத்வாஜரின் மகன் (துரோணர்) இருந்தார். அஸ்வத்தாமன், கிருபர் ஆகியோர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அதன் கண்களாயிருந்தனர். வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான கிருதரவர்மன், அங்கே நின்ற காம்போஜர்களின் ஆட்சியாளனோடும் {சுதக்ஷிணனோடும்}, பாஹ்லீகர்களோடும் அதன் தலையாக அமைந்தான். அதன் கழுத்தாக, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சூரசேனன் மற்றும் உமது மகன் துரியோதனன் ஆகியோர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல மன்னர்களால் சூழப்பட்டபடி நின்றார்கள்.மத்ரர்கள், சௌவீரர்கள், கேகயர்கள் ஆகியோரோடு ஒன்றிணைந்த பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்}, ஒரு பெரும்படையால் சூழப்பட்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அதன் மார்பில் நின்றான். கவசம் தரித்துக் கொண்டு, தன் தனிப்பட்ட துருப்புகளின் துணையோடு இருந்த பிரஸ்தலையின் மன்னன் சுசர்மன் இடது சிறகில் நின்றான். துஷாரர்கள், யவனர்கள், சகர்கள் ஆகியோர் சூளிகர்களுடன் {சூசுபர்களுடன்} சேர்ந்து, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த அணிவகுப்பின் வலது சிறகில் நின்றார்கள். சுருதாயுஷ், சதாயுஷ் {சதாயிஷ்}, சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்} ஆகியோர், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே} அந்த அணிவகுப்பின் பின்பகுதியில் ஒருவரை ஒருவர் பாதுகாத்தபடி நின்றனர் [2].பிறகு அந்தப் பாண்டவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போருக்காகக் கௌரவர்களை எதிர்த்து விரைந்தார்கள். ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, போர் தொடங்கிய போது சூரியன் எழுந்திருந்தான் {உதயமாகியிருந்தது}. யானைகள், யானைகளை எதிர்த்து விரைந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},  குதிரைவீரர்கள், குதிரைவீரர்களை எதிர்த்தும், தேர்வீரர்கள், தேர்வீரர்களையும், யானைகளையும் அச்சந்தரும் அந்தப் போரில் எதிர்த்தனர். தேர்வீரர்கள் யானைப் பாகன்களை எதிர்த்தும், யானைப் பாகன்கள் குதிரைவீரர்களை எதிர்த்தும் விரைந்தனர். தேர்வீரர்கள், காலாட்படை வீரர்களோடும், காலாட்படை குதிரைப்படையோடும் மோதின. கோபத்தால் தூண்டப்பட்ட வீரர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் எதிர்த்துப் போரிட விரைந்தனர்.

பீமசேனன், அர்ஜுனன், இரட்டையர்கள் {சகாதேவன் மற்றும் நகுலன்} ஆகியோரால் பாதுகாகப்பட்ட அந்தப் பாண்டவப்படை, விண்மீன்களால் {நட்சத்திரங்களால்} அலங்கரிக்கப்பட்ட இரவைப் போல அழகானதாக இருந்தது. பீஷ்மர், கிருபர், துரோணர், சல்லியன், துரியோதனன் மற்றும் பிறருடன் கூடிய உமது படையும் {கௌரவப்படை}, கோள்களால் {கிரகங்களால்} நிறம்பெற்ற ஆகாயவிரிவைப் போல ஒளிர்ந்தது.

பெரும் ஆற்றலைக் கொண்டவனான குந்தியின் மகன் பீமசேனன், துரோணரைக் கண்டு, பெரும் வேகம் கொண்ட குதிரைகளால் சுமக்கப்பட்ட பரத்வாஜரின் மகனுடைய {துரோணரின்} படைப்பிரிவை எதிர்த்து விரைந்தான். அந்த மோதலில் கோபம் தூண்டப்பட்டவரும், பெரும் ஆற்றலைக் கொண்டவருமான துரோணர், பீமனின் முக்கிய உறுப்புகளைக் குறி வைத்து, முழுக்க முழுக்க இரும்பாலான ஒன்பது {9} கணைகளால் அவனைத் {பீமனைத்} துளைத்தார். அந்தப் போரில் பரத்வாஜரின் மகனால் {துரோணரால்} ஆழமாகத் துளைக்கப்பட்ட பீமன், துரோணரின் தேரோட்டியை யமலோகத்திற்கு அனுப்பிவைத்தான். அதன்பேரில் பெரும் ஆற்றலைக் கொண்ட அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, தானே குதிரைகளைக் கட்டுப்படுத்தியபடி, பஞ்சுக் குவியலை எரிக்கும் நெருப்பைப் போல அந்தப் பாண்டவப்படையை எரிக்க ஆரம்பித்தார்.

இப்படித் துரோணராலும், பீஷ்மராலும் கொல்லப்பட்டவர்களான சிருஞ்சயர்கள், கேகயர்களுடன் சேர்ந்து சிதறி ஓடினார்கள். அதேபோல, பீமனாலும், அர்ஜுனனாலும் சிதைக்கப்பட்ட உமது துருப்புகளும், செருக்குடன் நிற்கும் அழகிய பெண் போல, உணர்விழந்து நின்றார்கள். வீரர்களுக்கு அழிவை உண்டாக்கும் அந்த மோதலில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது படை மற்றும் அவர்களது படை ஆகிய இரண்டுக்கும் ஏற்பட்ட வேதனை பெரிதாக இருந்தது. தங்கள் உயிரைத் துச்சமாக மதித்து, ஓ!பாரதரே {திருதராஷ்டிரரே}, ஒருவரோடொருவர் போரிடும் துருப்புகளின் அற்புதக் காட்சியை நாங்கள் கண்டோம். அம்மோதலில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களும், கௌரவர்களும், ஒருவரின் ஆயுதங்களுக்கு மற்றவர் பதிலடி கொடுத்தபடி ஒருவரோடொருவர் போரிட்டனர்” {என்றான் சஞ்சயன்}.

படை திறன் சொன்ன திருதராஷ்டிரன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 076-தன் படையின் திறனை சஞ்சயனுக்கு எடுத்துரைக்கும் திருதராஷ்டிரன்; இப்படிப்பட்ட வலுவான படையும் பாண்டவர்களால் கொல்லப்படுவது விதிவசத்தாலேயே என்று புலம்புவது…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “பல மகத்துவங்களைக் கொண்டதும், பல்வேறு சக்திகளைக் கொண்டதுமான நமது படையின் திறன் பெரிதாகும். அறிவியல் {சாத்திர} விதிகளின் படி அணிவகுக்கப்படுவதால் அது தடுக்கப்பட முடியாததாகும். நம்மிடம் எப்போதும் பற்றுதலையும், அர்ப்பணிப்பையும் அது {நமது படை} கொண்டிருக்கிறது. ஒழுக்கக்கேடுகள் மற்றும் குடிவெறி ஆகிய களங்கங்களில் இருந்து விடுபட்ட அஃது {கௌரவப்படை} ஒழுக்கமானதாக இருக்கிறது.

அதன் ஆற்றல் ஏற்கனவே சோதிக்கப்பட்டுள்ளது. படைவீரர்கள், மிக முதிர்ந்தவர்களாகவோ, மிக இளமையானவர்களாகவோ இல்லை. அவர்கள் மெலிந்தோ, பருத்தோ இல்லை. சுறுசுறுப்பான பழக்கவழக்கம், நன்கு வளர்க்கப்பட்ட, பலமான உடற்கட்டுகளைக் கொண்ட அவர்கள் நோயில்லாதவர்களாவர். கவசம் தரித்த அவர்கள், நல்ல தயாரிப்புடன் ஆயுதங்களோடு இருக்கிறார்கள். அனைத்து வகை ஆயுதங்களையும் பயின்றவர்கள் அவர்கள். வாள்கள், வெறுங்கைகள், கதாயுதங்கள் ஆகியவற்றைக் கொண்டு போரிடுவதில் அவர்கள் திறன்வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். வேல்கள் {lances}, ரிஷ்டிகள் {பட்டாக்கத்திகள் Sabres}, தோமரங்கள் {darts}, இரும்புமயமான பரிகங்கள் {iron clubs}, பிண்டிபாலங்கள் {குறுங்கணைகள் Short arrows}, ஈட்டிகள் {Javelins}, உலக்கைகள் {mallets} ஆகியவற்றை அவர்கள் நன்கு பயின்றவர்களாவர்,

{கம்பனங்கள், விற்கள், கணபங்கள், க்ஷேபணீயங்கள் உள்ளிட்ட} அனைத்து வகை ஆயுதப் பயிற்சிகளிலும் அவர்கள் அர்ப்பணிப்புள்ளவர்கள். யானைகளின் முதுகில் ஏறுதல் மற்றும் இறங்குதல், முன்னேறுதல், திரும்புதல், சிறப்பாக அடித்தல், அணிவகுத்தல், பின்வாங்குதல் ஆகியவற்றில் அவர்கள் திறமைமிக்கவர்களாவர். யானைகள், குதிரைகள் மற்றும் தேர்களை நிர்வகிப்பதில் அவர்கள் பல முறை சோதிக்கப்பட்டவர்கள். முறையாகச் சோதிக்கப்பட்ட அவர்கள், குலவழிக்காக, உறவு நிலைக்காக, பற்றுறுதிக்காக அல்லாமல், பிறப்பு மற்றும் குருதியின் அடிப்படையில் அல்லாமல் ஊதியங்களால் உற்சாகப்படுத்தப்படுகின்றனர் [1].

அவர்கள் அனைவரும் மரியாதைக்கு உரியவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களது உறவினர்கள் நம்மால் நன்றாக நடத்தப்பட்டு, மனநிறைவு செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு நாங்கள் பல நன்மைகளைப் புரிகின்றோம். இது தவிர, அவர்கள் புகழ்பெற்ற மனிதர்களாகவும், பெரும் மன ஆற்றல் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். மேலும், ஓ! மகனே {சஞ்சயா}, பெரும் சுறுசுறுப்பு கொண்டவர்களும், சாதனைகளால் புகழ்வாய்ந்தவர்களும், லோகபாலர்களைப் போன்றவர்களும், உலகம் முழுவதும் அறியப்பட்டவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான பலரால் அவர்கள் பாதுகாக்கப்படுகின்றனர். உலகம் முழுவதும் மதிக்கப்படுபவர்களும், தங்கள் விருப்பத்தால் தங்கள் படையுடன் நம் தரப்பை அடைந்தவர்களுமான எண்ணிலா க்ஷத்திரியர்களும், அவர்களது தொண்டர்களும் அவர்களைப் {நமது படையினரைப்} பாதுகாக்கின்றனர்.

உண்மையில், அனைத்துத் திசைகளில் இருந்தும் ஓடிவரும் எண்ணற்ற நதிகளின் நீரால் நிறையும் பரந்த கடலைப் போன்றதே நமது படையாகும். சிறகில்லாவிட்டாலும், காற்றில் பறக்கும் பறவைகளைப் போன்ற யானைகள் மற்றும் தேர்கள் அதில் நிறைந்திருக்கின்றன. பெரும் எண்ணிக்கையிலான போராளிகள் அந்தக் கடலின் நீராக இருக்கின்றர். குதிரைகள், பிற விலங்குகள் ஆகியன அதன் பயங்கர அலைகளாக இருக்கின்றன. (அந்தக் கடலில் குவிந்துள்ள) எண்ணிலா வாள்கள், கதாயுதங்கள், ஈட்டிகள், கணைகள், வேல்கள் ஆகியவை துடுப்புகளாக இருக்கின்றன. கொடிமரங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றால் நிறைந்து, தங்கம் மற்றும் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட துணிகளால் அலங்கரிக்கப்பட்டு விரைந்து வரும் குதிரைகளும், யானைகளும், அதை {கடலை} மூர்க்கமாகக் கலங்கடிக்கும் காற்றாக இருக்கின்றன.

துரோணர், பீஷ்மர், கிருதவர்மன், கிருபர், துச்சாசனன் ஆகியோராலும், ஜெயத்ரதன் தலைமையிலான பிறராலும் அந்தப் படை பாதுகாக்கப்படுகிறது. பகதத்தன், விகர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சுபலனின் மகன் {சகுனி}, பாஹ்லீகன், மற்றும் உலகத்தின் உயர்ஆன்ம வலிமைமிக்க வீரர்கள் பலராலும் அது பாதுகாக்கப்படுகிறது.

அப்படிப்பட்ட நமது படை, ஓ! சஞ்சயா, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விதியின் காரணமாகவே போரில் இப்படிக் கொல்லப்படுகிறது. மனிதர்களோ, பழங்காலத்தின் உயர் ஆன்ம முனிவர்களோகூட (போருக்கான) இத்தகு தயாரிப்புகளை இதற்கு முன் பூமியில் கண்டிருக்க மாட்டார்கள். செல்வத்தால் (நம்மிடம்) பற்றுதல் கொண்டவையும், அறிவியலின் {சாத்திரங்களின்} படி திரட்டப்பட்டவையுமான இப்படிப்பட்ட பெரும்படையே போரில் கொல்லப்படுகிறது என்றால், ஐயோ, இது விதியின் விளைவு என்பதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்? ஓ! சஞ்சயா, இவை யாவும் இயற்கைக்கு மாறானதாகவே தெரிகிறது [2].உண்மையில் நன்மையானது, ஏற்கத்தக்கது ஆகிய இரண்டையும் அடிக்கடி விதுரன் சொன்னான். ஆனால், என் தீய மகன் துரியோதனனோ, அஃதை ஏற்கவில்லை. உயர் ஆன்மா கொண்டவனும், நல்லறிவு கொண்டவனுமான அவன் {விதுரன்}, இப்போது நடப்பவற்றை முன்னரே அறிந்தே எங்களுக்கு ஆலோசனை வழங்கினான் என நான் நம்புகிறேன். அல்லது, ஓ! சஞ்சயா, இவை யாவும், அதன் முழுமையுடன், படைப்பவனால் முன்பே ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவனால் {படைத்தவனால்} விதிக்கப்பட்டவை விதிக்கப்பட்டபடியே நடந்தே தீரும், வேறுவிதமாகாது” {என்றான் திருதராஷ்டிரன்}. 

பீமன் மீது திருஷ்டத்யும்னன் கொண்ட பாசம்! – பீஷ்ம பர்வம் பகுதி – 077அ-திருதராஷ்டிரனை இடித்துரைத்த சஞ்சயன்; போர் வர்ணனைகளை மீண்டும் சொல்ல ஆரம்பித்த சஞ்சயன்; கௌரவர்களின் வியூகத்தைப் பிளந்த பீமன், தன்னந்தனியாகத் துரியோதனன் தம்பிகளை எதிர்த்து வியூகத்திற்குள் புகுந்தது; அவ்வழி வந்த திருஷ்டத்யும்னன் பீமனின் தேர் வெறுமையாக இருப்பதைக் காண்பது; நடந்ததைத் தேரோட்டி விசோகன் திருஷ்டத்யும்னனுக்குச் சொல்வது; வருத்தமடைந்த திருஷ்டத்யும்னன்; பீமன் சென்ற பாதையிலேயே சென்று பீமனை அடைந்த திருஷ்டத்யும்னன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது தவறுகளின் விளைவாலேயே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உம்மை இந்தப் பேரிடர் அண்டியிருக்கிறது. ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, (பாண்டவர்கள் மீதான) அநீதி வழியான நடத்தையில் நீர் கண்ட தவறுகளைத் துரியோதனன் காணவில்லை.

உமது தவறாலேயே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பகடையாட்டம் நடைபெற்றது. மேலும், உமது தவறாலேயே பாண்டவர்களுடனான இந்தப் போரும் நடக்கிறது. பாவம் செய்தது நீர், எனவே, உமது அந்தப் பாவத்தின் கனியை அறுவடை செய்கிறீர். தன்னால் இழைக்கப்பட்ட செயல்களின் கனியை ஒருவன் தானே அறுவடை செய்வான். எனவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இங்கும் {இம்மையிலும்}, இதற்குப் பிறகும் {மறுமையிலும்} உமது செயல்களின் கனிகளை நீர் அறுவடை செய்வீர். எனவே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இந்தப் பேரிடரை அடைந்த நீர், உறுதியாக இருந்து, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, போர் குறித்து நான் உரைப்பதைக் கேட்பீராக.

வீரன் பீமசேனன் தனது கூரிய கணைகளால் வலிமைமிக்க உமது வியூகத்தைப் {அணிவகுப்பைப்} பிளந்து கொண்டு, துரியோதனனின் தம்பிகள் அனைவரையும் அணுகினான். துச்சாசனன், துர்விஷஹன், துஸ்ஸஹன், துர்மதன், ஜயன், ஜெயத்சேனன், விகர்ணன், சித்திரசேனன், சுதர்சனன், சாருசித்திரன், சுவர்மா, துஷ்கர்ணன், கர்ணன் [1] மற்றும் தன் அருகில் இருந்த தார்தராஷ்டிரப் படையின் இன்னும் பல வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரைக் கண்டவனான வலிமைமிக்கப் பீமசேனன், அந்தப் போரில் சினத்தால் தூண்டப்பட்டு,  பீஷ்மரால் பாதுகாக்கப்பட்ட (உமது) வலிமைமிக்க வியூகத்திற்குள் ஊடுருவினான் {புகுந்தான்}. அவனை {பீமனைத்} தங்கள் மத்தியில் கண்ட அந்த வீரர்கள் அனைவரும், “மன்னர்களே, இவனது உயிரை எடுப்போமாக!” என்றனர். அதன் பேரில், அந்தப் பிருதையின் மகன் {பீமன்}, (தன் உயிரை எடுக்க) உறுதியாகத் தீர்மானித்திருந்த தன் சகோதரர்களால் {தன் பெரியப்பன் மகன்களால்} சூழப்பட்டான்.

அண்ட அழிவின் போது, தீய இயல்பு கொண்ட வலிமைமிக்கக் கோள்களால் சூழப்பட்டவனும் கடும் பிரகாசம் கொண்டவனுமான சூரியனைப் போல, அப்போது அந்தப் பீமன் இருந்தான். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில், பழங்காலத்தில் நடந்த கடும்போரில், தானவர்களால் சூழப்பட்ட இந்திரனைப் போலவே, (கௌரவ) வியூகத்தின் மத்தியில் இருந்தாலும் கூட அந்தப் பாண்டு மகனின் {பீமனின்} இதயத்தில் அச்சம் நுழையவில்லை.

ஆயுதங்கள் அனைத்தையும் தரித்தவர்களும், போருக்கு முழுமையாகத் தயாராக இருந்தவர்களுமான ஆயிரக்கணக்கான தேர்வீரர்கள், தனியனான அவனைப் {பீமனைப்} பீடித்தார்கள். அதன்பேரில் திருதராஷ்டிரன் மகன்களை அலட்சியம் செய்த அந்த வீர பீமன், யானைகள் மற்றும் குதிரைகளின் முதுகிலோ, தேரிலோ இருந்து போரிட்ட (கௌரவப் படையின்) வீரர்களில் முதன்மையான பலரை அந்தப் போரில் கொன்றான். தனது அழிவுக்காக முயன்று கொண்டிருந்த தனது சகோதரர்களின் {திருதராஷ்டிரன் மகன்களின்} நோக்கங்களை உறுதியாக அறிந்து கொண்ட அந்த வலிமைமிக்கப் பீமன், அவர்கள் அனைவரையும் கொல்வதில் தனது இதயத்தை நிலைநிறுத்தினான். தனது தேரை விட்டுவிட்டு, தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, கடல் போன்ற அந்தத் தார்தராஷ்டிரத் துருப்புகளைத் தாக்கத் தொடங்கினான்.

இப்படித் தார்தராஷ்டிரப் படைக்குள் பீமசேனன் நுழைந்த பிறகு, (தான் போரிட்டுக் கொண்டிருந்த) துரோணரைக் கைவிட்ட பிருஷதனின் மகன் திருஷ்டத்யுமனன், விரைவாகச் சுபலனின் மகன் {சகுனி} இருந்த இடத்திற்கு வந்தான். உமது படையின் எண்ணற்ற வீரர்களைக் கலங்கடித்த அந்த மனிதர்களில் காளை {திருஷ்டத்யும்னன்}, பீமசேனனன் இல்லாத வெறும் தேர் இருந்த இடத்திற்கு வந்தான்.

அந்தப் போரில் பீமசேனனின் தேரோட்டியான விசோகனைக் கண்ட திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மிகவும் துயருற்று கிட்டத்தட்ட உணர்வுகளை {நினைவு} இழந்தான். கண்ணீரால் தடைபட்ட குரலுடன், துயரத்தால் பெருமூச்சுவிட்டபடியே விசோகனிடம், “என் உயிரைப் போன்றே அன்புக்குரிய பீமர் எங்கே?” என்று கேட்டான். கூப்பிய கரங்களுடன் திருஷ்டத்யும்னனுக்கு மறுமொழி கூறிய விசோகன், “பெரும் பலத்தையுடைய வலிமைமிக்கப் பாண்டு மகன் {பீமன்}, இங்கேயே தனக்காகக் காத்திருக்கும்படி எனக்கு உத்தரவிட்டு, கடல் போன்ற இந்தத் தார்தராஷ்டிரப் படைக்குள் தனியாக ஊடுருவினார். அந்த மனிதர்களில் புலி {பீமன்}, மிக உற்சாகமாக என்னிடம், “ஓ! தேரோட்டியே {சூதா; விசோகா}, என்னை அழிக்கும் நோக்கம் கொண்டவர்களை நான் கொல்லும் அந்தக் குறுகிய காலம் வரை குதிரைகளை நிறுத்தி எனக்காகக் காத்திருப்பாயாக” என்றார். கையில் கதாயுதத்துடன் விரைந்த அந்த வலிமைமிக்கப் பீமரைக் கண்டு, (அவரை ஆதரித்த) நமது துருப்புகள் அனைத்தும் மகிழ்ச்சியால் நிறைந்தன. பிறகு, கடுமையானதும், பயங்கரமானதுமான இந்தப் போரில், ஓ! இளவரசே {திருஷ்டத்யும்னரே}, உமது நண்பர் {பீமர்}. (எதிரியின்) வலிமைமிக்க வியூகத்தைப் பிளந்து கொண்டு அதற்குள் ஊடுருவினார் {புகுந்தார்}” என்றான் {விசோகன்}.

விசோகனின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், பெரும் பலம்படைத்தவனும், பிருஷதனின் மகனுமான திருஷ்டத்யும்னன்,  அந்தத் தேரோட்டியிடம் {விசோகனிடம்} அந்தப் போர்க்களத்தில் இவ்வார்த்தைகளை சொன்னான். “பாண்டவர்களிடம் நான் கொண்ட பற்றை மறந்து, பீமரை இந்தப் போரில் நான் கைவிட்டேன் எனில், இன்று இந்த உயிர்தான் எனக்கு எதற்கு? பீமரில்லாமல் இன்று நான் திரும்புவேன் எனில், என்னைக் குறித்து க்ஷத்திரியர்கள் என்ன சொல்வார்கள்? நான் களத்தில் இருக்கும்போதே, பகைவரின் வியூகத்தில் ஒரு திறப்பை ஏற்படுத்தித் தனியாகப் பீமர் ஊடுருவினார் என்று அறியும்போது என்னைக் குறித்து அவர்கள் {க்ஷத்திரியர்கள்} என்ன சொல்வார்கள்? போரில் தன் தோழர்களைக் கைவிட்டு, காயமில்லாமல் வீடு திரும்புவனை, இந்திரனின் தலைமையிலான தேவர்கள் தீமையோடே அணுகுவார்கள் {அப்படித் திரும்புபவனுக்கு நல்லதைச் செய்யாமல் தீமையையே தேவர்கள் செய்வார்கள்}. வலிமைமிக்கப் பீமர், எனது நண்பரும், உறவினரும் ஆவார். அவர் என்னிடம் அர்ப்பணிப்பு கொண்டவர், எதிரிகளைக் கொல்லும் அவருக்கு நானும் அர்ப்பணிப்புடையவனே. எனவே, பீமர் எங்கே சென்றிருக்கிறாரோ, அங்கே நானும் செல்வேன். தானவர்களைக் கொல்லும் வாசவனை {இந்திரனைப்} போல, எதிரிகளைக் கொல்லும் என்னைப் பார்ப்பாயாக” {என்றான் திருஷ்டத்யும்னன்}.

இதைச் சொன்ன வீர திருஷ்டத்யும்னன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமன் தன் கதையால் நசுக்கிய யானைகளால் குறிக்கப்பட்டதும், அவனால் {பீமனால்} திறக்கப்பட்டதுமான பாதையின் வழியாக எதிரியின் மத்தியில் நுழைந்தான். அப்போது, மரங்களின் வரிசைகளை அழிக்கும் புயலைப் போலப் பகையணிகளை எரித்து, க்ஷத்திரிய வீரர்களை வீழ்த்திக் கொண்டிருக்கும் பீமசேனனைப் பார்வையில் {தன் கண்களில்} கண்டான். அவனால் {பீமனால்} இப்படிக் கொல்லப்படும் போது, தேர்வீரர்கள், குதிரைவீரர்கள், காலாட்படையினர், யானை வீரர்கள் ஆகியோர் துயரத்தால் உரக்கக் கதறினார்கள். போர்க்கலையின் தன்மைகள் அனைத்தையும் அறிந்த வெற்றியாளன் பீமனால் கொல்லப்படும்போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகளில் இருந்து “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கதறல்கள் எழுந்தன. பிறகு, ஆயுதங்களை அறிந்தவர்களான கௌரவ வீரர்கள் அனைவரும் விருகோதரனை {பீமனை} அனைத்துப் புறங்களில் சூழ்ந்து கொண்டு, அச்சமற்ற வகையில் அவன் {பீமன்} மீது ஒரே நேரத்தில் கணை மாரிகளைப் பொழிந்தார்கள்.

அப்போது, அந்த வலிமைமிக்கப் பிருஷத மகன் {திருஷ்டத்யும்னன்}, எதிரிகளுடைய கடும் படையணிகளின் நெருக்கமான அணிவகுப்பால் அனைத்துப் புறங்களிலும் இருந்து இப்படித் தாக்கப்படவனும், ஆயுதம் தாங்குபவர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், கணைகளால் சிதைக்கப்பட்டவனும், களத்தில் நடந்து சென்றவனும், தன் கோபத்தின் நஞ்சைக் கக்கிக் கொண்டிருந்தவனும், கையில் கதாயுதம் கொண்டவனும், அண்ட அழிவில் வரும் காலன் போலத் தெரிந்தவனும், கொண்டாடப்படுபவனுமான அந்தப் பாண்டுவின் மகனை {பீமனைக்} கண்டு, விரைந்து அவனை அணுகி, தன் இருப்பால் அவனுக்கு ஆறுதலளித்தான். பிறகு தன் தேரில் அவனை {பீமனை} ஏற்றிக் கொண்டு, அவனது {பீமனது} அங்கங்கள் அனைத்தில் இருந்தும் கணைகளைப் பிடுங்கி, அவனை ஆரத் தழுவிக் கொண்ட உயர் ஆன்ம பிருஷத மகன் {திருஷ்டத்யும்னன்}, எதிரிகளுக்கு மத்தியிலேயே பீமசேனனுக்கு ஆறுதலை அளித்தான்.

பிரமோகனப் பிரக்ஞாயுதங்கள்! – பீஷ்ம பர்வம் பகுதி – 077ஆ-திருஷ்டத்யும்னனைக் கொல்லத் தன் தம்பிகளைத் தூண்டிய துரியோதனன்; திருஷ்டத்யும்னன் பயன்படுத்திய பிரமோகனாயுதம்; துருபதனை விரட்டிய துரோணர்; பிரக்ஞாயுதத்தைப் பயன்படுத்திக் கௌரவரின் மயக்கத்தைத் தெளிவித்த துரோணர்; பீமன் மற்றும் திருஷ்டத்யும்னன் நிலை குறித்து அஞ்சிய யுதிஷ்டிரன்; சூசீமுக வியூகம்; திருஷ்டத்யும்னன் விற்களை ஒடித்த துரோணர்; திருஷ்டத்யும்னன் குதிரைகளையும் தேரோட்டியையும் கொன்ற துரோணர்…

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொன்னான்} அப்போது அந்தப் பயங்கரப் போரில் தன் தம்பிகளிடம் வந்த உமது மகன் {துரியோதனன்}, அவர்களிடம், “தீய ஆன்மா கொண்ட இந்தத் துருபதன் மகன் {திருஷ்டத்யும்னன்} இப்போது பீமசேனனுடன் சேர்ந்திருக்கிறான். நாம் அனைவரும் சேர்ந்து அவனைக் கொல்வதற்கு அணுகுவோம். (போருக்காக) எதிரி நமது படையணிகளை அணுகாதிருக்கட்டும்”, என்றான். இவ்வார்த்தைகளைக் கேட்ட தார்தராஷ்டிரர்கள், தங்கள் அண்ணனின் {துரியோதனனின்} உத்தரவால் உந்தப்பட்டு, (எதிரியைச்) சந்திக்க இயலாமல், அண்ட அழிவுகாலத்தின் கடுமையான எரிக்கோள்களைப் போல, திருஷ்டத்யும்னனைக் கொல்வதற்காக வேகமாக விரைந்தனர்.

தங்கள் அழகிய விற்களை எடுத்த அந்த வீரர்கள், தங்கள் வில்லின் நாணொலியாலும், தங்கள் தேர்களின் சடசடப்பொலியாலும், இந்தப் பூமியை நடுங்கச் செய்தபடி, மலையின் சாரலில் மழையைப் பொழியும் மேகங்களைப் போல, துருபதன் மகன் {திருஷ்டத்யும்னன்} மீது கணைகளைப் பொழிந்தார்கள்.

மறுபுறம், வலிமைமிக்கத் தேர்வீரனான துருபதனின் இளமையான மகன் {திருஷ்டத்யும்னன்}, போரில் தன் முன் நின்ற உமது வீரமகன்களைக் கண்டான். போரில் தன்னைக் கொல்வதற்காக இயன்ற வரை முயன்று வரும் அவர்களைப் பிரமோகனம் {மோகனாஸ்திரம்} என்று அழைக்கப்படும் கடும் ஆயுதத்தால் கொல்ல விரும்பிய அவன் {திருஷ்டத்யும்னன்}, தானவர்களுடன் மோதும் இந்திரனைப் போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்கள் மீது அஃதை {மோகனாஸ்திரத்தை} ஏவினான்.

பிரமோகன ஆயுதத்தால் புத்தியும், பலமும் பீடிக்கப்பட்ட அந்தத் துணிவுமிக்க வீரர்கள் தங்கள் உணர்வுகளை இழந்தனர். தங்கள் {அழிவு} காலம் வந்ததைப் போல உணர்வுகளை இழந்து மயக்கத்தில் ஆழ்ந்த உமது மகன்களைக் கண்ட கௌரவர்கள் அனைவரும் தங்கள் குதிரைகளோடும், யானைகளோடும், தேர்களோடும் அனைத்துப் புறங்களிலும் ஓடினார்கள் [1].

அதேவேளையில், ஆயுதங்கள் தரித்த அனைவரிலும் முதன்மையான துரோணர், துருபதனை அணுகி, மூன்று கடுங்கணைகளால் அவனைத் துளைத்தார். துரோணரால் ஆழமாகத் துளைக்கப்பட்ட அந்த ஏகாதிபதி துருபதன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (பரத்வாஜர் மகனுடன் {துரோணருடன்}) ஏற்பட்ட தனது பழம்பகையை நினைவுகூர்ந்து, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தை விட்டு விலகினான். அதன்பேரில், துருபதனை இப்படி வீழ்த்தியவரும், பெரும் ஆற்றலைக் கொண்டவருமான துரோணர் தனது சங்கை முழக்கினார். அவரது {துரோணரின்} சங்கொலியைக் கேட்ட சோமகர்கள் அனைவரும் அச்சத்தால் பீடிக்கப்பட்டனர். பிறகு, பெரும் சக்தி கொண்டவரும், ஆயுதங்கள் தரித்தோர் அனைவரிலும் முதன்மையானவருமான துரோணர், பிரமோகன ஆயுதத்தால் போரில் உணர்விழந்திருக்கும் உமது மகன்களைக் குறித்துக் கேள்விப்பட்டார்.

பிறகு, அந்த இளவரசர்களை மீட்க விரும்பிய பரத்வாஜர் மகன் {துரோணர்}, களத்தின் அந்தப் பகுதியை விட்டகன்று உமது மகன்கள் இருந்த இடத்திற்குச் சென்றார். வலிமைமிக்க வில்லாளியும், பெரும் ஆற்றலைக் கொண்டவருமான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, அந்தப் பெரும்போரில் திரிந்து கொண்டிருக்கும் திருஷ்டத்யும்னனையும், பீமனையும் கண்டார். மேலும், தங்கள் உணர்வை இழந்திருக்கும் உமது மகன்களையும் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர் {துரோணர்} கண்டார். பிறகு துரோணர் பிரக்ஞம் என்ற அழைக்கப்பட்ட ஆயுதத்தை எடுத்து, (திருதஷ்டத்யும்னனால் ஏவப்பட்ட) பிரமோகன ஆயுதத்தைச் சமன் செய்தார் {பிரமோகனாயுதத்தின் உக்கிரத்தைத் தணித்தார்}. தங்கள் உணர்வுகளை மீண்டும் அடைந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான உமது மகன்கள் மீண்டும் பீமனோடும், பிருஷதன் மகனோடும் {திருஷ்டத்யும்னனோடும்} போரிடத் தொடங்கினர்.

பிறகு யுதிஷ்டிரன், தனது தனிப்பட்ட துருப்புகளிடம், “கவசம் தரித்தவர்களும், துணிச்சல்மிக்கவர்களுமான பனிரெண்டு {12} தேர்வீரர்கள், சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} தலைமையாகக் கொண்டு, தங்களால் வலிமை முழுவதையும் பயன்படுத்தி, பீமன் மற்றும் திருஷ்டத்யும்னன் ஆகியோர் சென்ற வழியில் பின்தொடர்ந்து செல்லட்டும். (அவ்விரண்டு வீரர்களைக் குறித்து அறியப்படட்டும். என் இதயம் கலக்கமுறுகிறது” என்றான் {யுதிஷ்டிரன்}.

மன்னனால் {யுதிஷ்டிரனால்} இப்படி உத்தரவிடப்பட்டவர்களும், போரில் பெரும் ஆற்றலைக் கொண்டவர்களுமான அவ்வீரர்கள், தங்கள் ஆண்மையில் செருக்குடன், “சரி” என்று சொல்லி, நடுவானைச் சூரியன் அடைந்ததும் அங்கு சென்றார்கள். எதிரிகளைத் தண்டிப்பவர்களான கைகேயர்கள் {கேகயர்கள்}, திரௌபதியின் மகன்கள், பெரும் ஆற்றல்படைத்த திருஷ்டகேது ஆகியோர், சூசிமுகம் [2] என்று அழைக்கப்பட்ட வியூகத்தில் தங்களைத் தாங்களே அணிவகுத்துக் கொண்டு, அந்தப் போரில் தார்தராஷ்டிரர்களின் தேர்பிரிவுக்குள் ஊடுருவினர்.

பீமசேனன் மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்டும், திருஷ்டத்யும்னனால் உணர்வுகள் இழுந்தும் இருந்த உமது துருப்புகளால், அபிமன்யு தலைமையில் (விரைந்து) வந்த வலிமைமிக்க வில்லாளிகளைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தெருக்களில் உள்ள மங்கையரைப் போல அவர்கள் ஆதரவற்ற நிலையில் இருந்தனர். தங்க வேலைப்பாடுகள் கொண்ட, பல்வேறு நிறத்திலான கொடிமரங்களைக் கொண்ட வலிமைமிக்க வில்லாளிகள், திருஷ்டத்யும்னனையும், விருகோதரனையும் {பீமனையும்} மீட்பதற்காகப் (கௌரவப் படையணிகளைப்) பிளந்து கொண்டு பெரும் வேகத்துடன் சென்றனர்.

அபிமன்யுவின் தலைமையிலான அந்த வலிமைமிக்க வில்லாளிகளைக் கண்ட பின்னவர்கள் {திருஷ்டத்யும்னனும், பீமனும்}, மகிழ்ச்சியால் நிறைந்து, உமது படையணிகளை அடிப்பதைத் தொடர்ந்தனர். அதேவேளையில், பாஞ்சாலத்தின் வீர இளவரசனான பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, தன்னை நோக்கிப் பெரும் வேகத்துடன் வரும் தனது ஆசானைக் {துரோணரைக்} கண்டதும், உமது மகன்களைக் கொல்ல அதற்கு மேலும் விரும்பவில்லை. பிறகு, கைகேயர்களின் {கேகயர்களின்} மன்னன் தேரில் விருகோதரனை {பீமனை} ஏறச் செய்த அவன் {திருஷ்டத்யும்னன்}, கணைகள் மற்றும் ஆயுதங்கள் அனைத்தையும் அறிந்த துரோணரை எதிர்த்து பெருங்கோபத்துடன் விரைந்தான்.

எதிரிகளைக் கொல்பவரான பரத்வாஜரின் வீர மகன் {துரோணர்}, கோபத்தால் தூண்டப்பட்டு, ஒரு பல்லத்தினால் {அகன்ற தலை கொண்ட கணையால்} தன்னை நோக்கி மூர்க்கமாக விரைந்து வரும் பிருஷதன் மகனுடைய {திருஷ்டத்யும்னனுடைய} வில்லைத் துண்டித்தார். தன் தலைவனிடம் {துரியோதனனிடம்} தான் உண்ட சோற்றை நினைவுகூர்ந்தும் {செஞ்சோற்றுக் கடனுக்காகவும்}, துரியோதனனுக்கு நல்லது செய்ய விரும்பியும், பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} மீது அவர் நூற்றுக்கணக்கான கணைகளை ஏவினார்.

அப்போது, பகைவீரர்களைக் கொல்பவனான பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, மற்றொரு கணையை எடுத்து, தங்கச் சிறகுகள் கொண்டவையும், கல்லில் கூர்த்தீட்டப்பட்டவையுமான எழுபது {70} கணைகளால் துரோணரைத் துளைத்தான். எதிரிகளைக் கலங்கடிப்பவரான துரோணர் மீண்டும் ஒருமுறை அவனது வில்லைத் துண்டித்து, நான்கு அற்புதக் கணைகளால், அவனது {திருஷ்டத்யும்னனின்} நான்கு குதிரைகளை யமலோகத்திற்கு அனுப்பி, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, ஒரு பல்லத்தினால் அவனது தேரோட்டியையும் கொன்றார்.

வலிய கரங்களைக் கொண்ட வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன், குதிரைகள் கொல்லப்பட்ட அந்தத் தேரில் இருந்து விரைந்து இறங்கி, அபிமன்யுவின் பெருந்தேரில் ஏறினான். பிறகு, தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றைக் கொண்ட பாண்டவப் படையைப் பீமசேனன் மற்றும் பிருஷதனின் புத்திசாலி மகன் {திருஷ்டத்யும்னன்} ஆகியோர் பார்வைக்கெதிரிலேயே நடுங்கச் செய்தார்.

அளவிலா சக்தி கொண்ட துரோணரால், இப்படிப் பிளக்கப்பட்ட அந்தப் படையைக் கண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவராலும் அஃது ஓடுவதைத் {அந்தப் படை ஓடுவதைத்} தடுக்க முடியவில்லை. துரோணரின் கூரிய கணைகளால் இப்படிக் கொல்லப்பட்ட அந்தப் படை {பாண்டவப் படை}, கலங்கிய கடலைப் போல அங்கே சுழலத் தொடங்கியது. அந்தப் (பாண்டவப்) படையை அப்படிப்பட்ட நிலையில் கண்ட உமது துருப்பினர் மகிழ்ச்சியால் நிறைந்தனர். கோபத்தால் தூண்டப்பட்டு, எதிரியின் படையணிகளை இப்படி எரித்துக் கொண்டிருந்த ஆசானை {துரோணரைக்} கண்ட உமது வீரர்கள் அனைவரும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உரக்க முழக்கமிட்டபடி, துரோணரைப் புகழ்ந்தனர்” {என்றான் சஞ்சயன்}.

துரியோதனாதிகளுடன் மோதிய பீமன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 078-பீமனும் துரியோதனனும் மோதிக்கொண்டது; பீமனால் தாக்கப்பட்ட துரியோதனனைக் கண்ட அவனது தம்பிகள் பீமனை எதிர்க்க விரைந்தது; அவர்கள் அனைவரையும் தாக்கிய பீமன்; அபிமன்யு தலைமையில் பனிரெண்டு வீரர்களை அனுப்பிய யுதிஷ்டிரன்; இதைக் கண்ட துரியோதனன் தம்பிகள் பீமனைக் கைவிட்டு அவர்களுடன் மோதியது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு தன் புலனுணர்வுகள் மீண்ட மன்னன் துரியோதனன், மீண்டும் தன் கணை மழைகளால் பீமனைத் தடுக்கத் தொடங்கினான். வலிமைமிக்கத் தேர்வீரர்களான உமது மகன்கள் ஒன்று சேர்ந்து மீண்டும் பீமசேனனிடன் வீரத்துடன் போரிடத் தொடங்கினார்கள். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமசேனனும், தன் தேரை அடைந்து, அஃதில் ஏறி, உமது மகன்கள் இருந்த இடத்திற்குச் சென்றான். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், வலிமையானதும், கடினமானதும், எதிரிகளின் உயிரை எடுக்கவல்லதுமான ஒரு வில்லை எடுத்த அவன் {பீமன்}, அம்மோதலில் உமது மகன்களைத் தனது கணைகளால் துளைத்தான்.

மன்னன் துரியோதனன் மிகக்கூரிய நாராசம் {நெடிய கணை} ஒன்றினால் வலிமைமிக்கப் பீமசேனனின் முக்கிய உறுப்புகளைத் தாக்கினான். இப்படி உமது மகனால் {துரியோதனனால்} ஆழமாகத் துளைக்கப்பட்ட அந்த வலிமைமிக்க வில்லாளி {பீமன்}, கோபத்தினால் கண்கள் சிவந்து, துரியோதனனின் இரு கரங்களையும், மார்பையும் மூன்று கணைகளால் தாக்கினான். ஆனால் இப்படித் தாக்கப்பட்டாலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நடுங்காத அவன் {துரியோதனன்} மலைகளின் இளவரசனைப் போல நின்றான்.

கோபத்தால் தூண்டப்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டிருந்த அந்த இரு வீரர்களையும் கண்டவர்களும், வீரர்களுமான துரியோதனனின் தம்பிகள் அனைவரும், தங்கள் உயிரைவிடத் துணிந்து, பயங்கரச் செயல் புரியும் விருகோதரனைத் {பீமனைத்} தாக்க முன்பே திட்டமிட்டிருந்தபடி, உறுதியான தீர்மானத்துடன் அவனைத் தாக்கச் சென்றனர்.

அப்படி அவர்கள் அந்தப் போரில் அவன் {பீமன்} மீது பாய்ந்த போது, பெரும்பலம்படைத்த பீமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனக்கு இணையான எதிரியைத் தாக்க விரையும் யானையைப் போல அவர்களை நோக்கி விரைந்தான். சினத்தால் தூண்டப்பட்டவனும், பெரும் சக்தியைக் கொண்டவனும், கொண்டாடப்படும் வீரனுமான அவன் {பீமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நாராசம் {நெடிய கணை} ஒன்றினால் உமது மகன் சித்திரசேனனைத் பீடித்தான். அந்தப் போரில் உமது {மற்ற} மகன்களைப் பொறுத்தவரை, பரதனின் வழித்தோன்றலான அவன் {பீமன்}, தங்கச்சிறகுகள் கொண்டவையும், பெரும் வேகம் கொண்டவையுமான பல்வேறு வகையான கணைகளால் அவர்கள் அனைவரையும் தாக்கினான்.

தன் படைப்பிரிவுகள் அனைத்தையும் முறையாகச் செலுத்திய நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அபிமன்யுவையும், பிறரையும் சேர்த்து வலிமைமிக்கப் பனிரெண்டு {12} தேர்வீரர்களைப் பீமசேனனைப் பின் தொடந்து செல்லும்படி அனுப்பினான். அவர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்க வில்லாளிகளான உமது மகன்களை எதிர்த்துச் சென்றனர். சூரியனைப் போன்றோ, நெருப்பைப் போன்றோ தங்கள் தேர்களில் பிரகாசித்தவர்களும், சுடர்மிகும் ஒளியுடன் திகழ்ந்தவர்களும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு அந்தப் பயங்கரப்போரில் மிகப் பிரகாசமாகத் தெரிந்தவர்களுமான அந்த வலிமைமிக்க வில்லாளிகளைக் கண்ட வல்லமை மிக்க உமது மகன்கள் (தாங்கள் போரிட்டுக் கொண்டிருந்த) பீமனைக் கைவிட்டனர். எனினும், தன்னைக் கைவிட்டு உயிரோடு போகும் {தப்பிச் செல்லும்} அவர்களைக் கண்ட குந்தியின் மகனால் {பீமனால்} [1] அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை [2]” {என்றான் சஞ்சயன்}.

பிற்பகலில் நடந்த பயங்கரப் போர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 079- துரியோதனன் தம்பிகளுடன் போரிட்ட பீமனும், அபிமன்யுவும்; விகர்ணனின் குதிரைகளைக் கொன்ற அபிமன்யு; சித்திரசேனனையும், விகர்ணனையும் தாக்கிய அபிமன்யு; துரியோதனனுடன் மோதிய திரௌபதியின் மகன்கள்; பீஷ்மரால் பீடிக்கப்பட்ட பாண்டவப் படை; போர் வர்ணனை…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது மகன்களைத் தொடர்ந்து சென்ற பீமசேனனுடன் சேர்ந்த அபிமன்யு, அவர்கள் {உமது மகன்கள்} அனைவரையும் பீடித்தான். துரியோதனனுடன் சேர்த்து, உமது படையைச் சார்ந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களும், பிறரும், (கௌரவத்) துருப்புகளுக்கு மத்தியில் இருந்த பிருஷதன் மகனுடன் {திருஷ்டத்யும்னனுடன்} அபிமன்யுவும், பீமசேனனும் சேர்ந்ததைக் கண்டு, தங்கள் விற்களை எடுத்து, அந்த வீரர்கள் இருந்த இடத்திற்கு வேகமான தங்கள் குதிரைகளில் சென்றனர். அந்தப் பிற்பகலில் [1], ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படை மற்றும் எதிரியின் படையைச் சார்ந்த வலிமைமிக்கப் போராளிகளுக்கிடையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பயங்கரம் நிறைந்த ஒரு மோதல் நடைபெற்றது.( இஃது அபராண்ணகாலம் என்று குறிக்கப்படுகிறது. 18 நாழிகைக்கு மேல் 24 நாழிகைக்குள்ளான 6 நாழிகைக் காலமே அபராண்ணகாலமாகும். 1 நாழிகை என்பது 24 நிமிடங்கள் என்றால், 18 நாழிகை என்பது 7 மணிநேரம் 12 நிமிடங்களாகும். 24 நாழிகை என்பது 9 மணிநேரம் 36 நிமிடங்கள் ஆகும். 60 நாழிகையைக் கொண்டது ஒரு நாள். காலை 6 மணியில் இருந்து நாள் தொடங்குவதாக இருந்தால் 18வது நாழிகை என்பது மதியம் 1 மணி 12 நிமிடத்தையும், 24 நாழிகை என்பது மாலை 3 மணி 36 நிமிடத்தையும் குறிக்கும். இதற்கு இடைப்பட்ட காலத்திலேயே மேற்கண்ட போர் நடைபெற்றது என நாம் புரிந்து கொள்ள வேண்டும்.)

அந்தக் கடும்போரில் விகர்ணனின் குதிரைகளைக் கொன்ற அபிமன்யு, அவனை {விகர்ணனை} இருபத்தைந்து {25} குறுங்கணைகளால் துளைத்தான். குதிரைகள் கொல்லப்பட்ட அந்தத் தேரைக் கைவிட்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான விகர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சித்திரசேனனின் ஒளிமிக்கத் தேரில் ஏறினான். இப்படி ஒரே தேரில் இருந்த அந்தக் குருகுலத்தின் சகோதரர்கள் {சித்திரசேனனும், விகர்ணனும்} இருவரையும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு} கணை மழையால் மறைத்தான். அப்போது துர்ஜெயனும் {சித்திரசேனனும்} [2], விகர்ணனும் அபிமன்யுவை முழுக்க இரும்பாலான ஐந்து கணைகளால் துளைத்தனர். எனினும் மேரு மலையைப் போல உறுதியாக நின்ற அபிமன்யு கிஞ்சிற்றும் நடுங்கவில்லை. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் துச்சாசனன் கேகயச் சகோதரர்கள் ஐவருடன் போரிட்டான். ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, இவை அனைத்தும் மிக அற்புதமாகத் தெரிந்தது.சினம் தூண்டப்பட்ட திரௌபதியின் மகன்கள் அந்தப் போரில் துரியோதனனைத் தடுத்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மூன்று கணைகளால் உமது மகனைத் துளைத்தார்கள். போரில் ஒப்பற்றவனான உமது மகனும் {துரியோதனனும்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, திரௌபதியின் மகன்களைக் கூரிய கணைகளால் துளைத்தான். (பதிலுக்கு) அவர்களால் துளைக்கப்பட்டு, குருதியில் குளித்த அவன் {துரியோதனன்}, (தன் சாரலில் வழுக்கிச் செல்லும்) பாண்டரங் {சிவப்பு சுண்ணாம்பு} கலந்த நீர் அருவியுடன் கூடிய ஒரு மலையைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.

வலிமைமிக்கப் பீஷ்மர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் மந்தையை நையப்புடைக்கும் மந்தையாளனை {இடையனைப்} போல, அந்தப் போரில் பாண்டவப் படையைப் பீடித்தார். அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, படையின் வலப்புறத்தில் [3] எதிரிகளைக் கொன்று கொண்டிருந்த பார்த்தனுடைய {அர்ஜுனனுடைய} காண்டீவத்தின் நாணொலி கேட்டது. களத்தின் அந்தப் பகுதியில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு துருப்புகளிலும் ஆயிரக்கணக்கில் தலையில்லா முண்டங்கள் எழுந்தன.

குருதியே நீராக, (போராளிகளால் ஏவப்பட்ட) கணைகளே எதிர்ச்சுழிகளாக அந்தப் போர்க்களமே ஒரு கடலைப் போல இருந்தது. அந்தக் கடலில் யானைகள் தீவுகளாகவும், குதிரைகள் அலைகளாகவும் இருந்தன. துணிச்சல் மிக்க வீரர்கள் அதை {அந்தக் கடலைக்} கடக்கத் தேர்களே படகுகளாக இருந்தன. கரங்கள் வெட்டப்பட்டு, கவசம் இழந்து, அருவருக்கத்தக்க வகையில் சிதைக்கப்பட்டிருந்த துணிச்சல்மிக்கப் போராளிகள் பலர், நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் அங்கே கிடப்பது தெரிந்தது. இரத்தத்தில் குளித்திருந்த உயிரிழந்த மதங்கொண்ட யானைகளின் உடல்களுடன் கூடிய அந்தப் போர்க்களத்தைக் காண, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மலைகள் சிதறிக் கிடப்பதைப் போலத் தோன்றியது. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களத்தில் உமது படையிலும், பாண்டவர்களின் படையிலும் போரிட விரும்பாத ஒரு மனிதனும் இல்லாத அந்த அற்புதக் காட்சியை அந்தப் போரில் நாங்கள் கண்டோம்.

இப்படியே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} உமது படை மற்றும் பாண்டவர்களின் படை ஆகிய இரண்டையும் சார்ந்த அந்தத் துணிச்சல் மிக்க வீரர்கள் புகழ் வேண்டியும், வெற்றியை விரும்பியும் போரிட்டனர்” {என்றான் சஞ்சயன்}.

துஷ்கர்ணனைக் கொன்ற சதானீகன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 080-துரியோதனனை எச்சரித்த பீமன்; பீமனால் கொடிமரம் வீழ்த்தப்பட்டு மயக்கமடையச் செய்யப்பட்ட துரியோதனன்; துரியோதனனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்ட கிருபர்; பீமனைத் தேர்களால் சூழ்ந்த ஜெயத்ரதன்; விகர்ணனின் மார்பைத் துளைத்த அபிமன்யு; துர்முகனின் கவசத்தை ஈட்டியால் பிளந்து தாக்கிய சுருதகர்மன்; தேரிழந்த சுருதகர்மனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்ட சுதசோமன்; ஜெயத்சேனனின் மார்பைத் துளைத்த சதானீகன்; சதானீகனின் வில்லை அறுத்த துஷ்கர்ணன்; துஷ்கர்ணனைக் கொன்ற சதானீகன்; பாஞ்சாலர்களை அழித்த பீஷ்மர் அன்றைய நாள் போரை நிறுத்திக் கொண்டது; திருஷ்டத்யும்னனையும், பீமனையும் கண்ட யுதிஷ்டிரன் மகிழ்ந்து, ஓய்வெடுக்கத் தனது கொட்டகைக்குச் சென்றது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சூரியன் சிவப்பு நிறம் ஏற்றதும், போர்விருப்பம் கொண்ட மன்னன் துரியோதனன், பீமனைக் கொல்ல விரும்பி அவனை நோக்கி விரைந்தான். (இப்படி) ஆழ்ந்த பகையைக் கொண்ட அந்தத் துணிவுமிக்க வீரன் {துரியோதனன்} தன்னை நோக்கி வருவதைக் கண்ட பீமசேனன் , கோபத்தால் தூண்டப்பட்டு, “பல வருடங்களாக நான் விரும்பிக் கொண்டிருந்த அந்த நேரம் இப்போது வந்துவிட்டது. போரைவிட்டு நீ விலகாதிருந்தால் இன்றே நான் உன்னைக் கொல்வேன். உன்னைக் கொன்று குந்தி மற்றும் திரௌபதியின் துயரத்தையும், வனவாசத்தின் போது ஏற்பட்ட எங்கள் துன்பங்களையும் இன்று நான் போக்கிக் கொள்வேன்.

செருக்கு நிறைந்த நீ, பாண்டு மகன்களை முன்னர் அவமதித்திருக்கிறாய். ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, அந்தப் பாவம் நிறைந்த நடத்தையின் கொடிய கனியைப் பார். கர்ணன் மற்றும் சுபலன் மகனின் {சகுனியின்} ஆலோசனைகளைப் பின்பற்றி, பாண்டவர்களைச் சிறுமை படுத்திய நீ, உன் விருப்பப்படியே முன்னர் நடந்து கொண்டாய். (அமைதியை) இரந்து கேட்ட கிருஷ்ணனையும் நீ அவமதித்தாய். மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடனும், உனது செய்திகளுடனும் உலூகனை (எங்களிடம்) அனுப்பி வைத்தாய். இவை அனைத்திற்காகவும், உனது சொந்தங்களுடன் கூடிய உன்னை இன்று கொன்று, முந்தைய நாட்களில் நீ செய்த அந்தக் குற்றங்கள் அனைத்திற்காகவும் பழிதீர்த்துக் கொள்வேன்” என்றான் {பீமன்}.

இவ்வார்த்தைகளைச் சொன்ன பீமன் தனது வில்லை வளைத்து, மீண்டும் மீண்டும் இழுத்து, மின்னலைப் போன்ற பிரகாசத்துடன் கூடிய எண்ணற்ற பயங்கரமான கணைகளை எடுத்து, சினத்தால் நிறைந்து, முப்பத்தாறு {36} கணைகளைத் துரியோதனன் மீது விரைவாக ஏவினான். சுடர்மிகும் நெருப்பின் தழல்களைப் போன்ற அக்கணைகள் இடி போன்ற சக்தியுடன் நேராகச் சென்றன.

அதன் பிறகு, இரு கணைகளைக் கொண்டு துரியோதனனையும், இன்னும் இரு கணைகளைக் கொண்டு அவனது {துரியோதனனின்} தேரோட்டியையும் துளைத்தான். மேலும் நான்கு கணைகளைக் கொண்டு துரியோதனனின் (நான்கு) குதிரைகளை எமனுலகு அனுப்பி வைத்தான். அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவன் {பீமன்}, பெரும் சக்தியுடைய இரு கணைகளைக் கொண்டு, மன்னனின் {துரியோதனனின்} அற்புதத் தேரில் இருந்த குடையை அந்தப் போரில் வெட்டி வீழ்த்தினான். மேலும் மூன்று கணைகளைக் கொண்டு அவனது அழகிய சுடர்மிகும் கொடிமரத்தை வெட்டி வீழ்த்தினான். அதை வெட்டி வீழ்த்திய அவன் {பீமன்}, உமது மகனின் {துரியோதனனின்} பார்வைக்கு முன்பாகவே பேரொலியுடன் முழங்கினான் {உரக்க கர்ஜித்தான்}.

பல்வேறு ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த பின்னவனின் {துரியோதனனின்} அழகிய கொடிமரம், மேகங்களில் இருந்து விழும் மின்னலின் கீற்றைப் போல, அவனது தேரில் இருந்து திடீரெனப் பூமியில் விழுந்தது. ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதும், சூரியனைப் போலப் பிரகாசிப்பதும், யானைப் பொறியைத் தாங்கியதுமான குருமன்னனின் {துரியோதனனின்} அந்த அழகிய கொடிமரம் (பீமசேனனால்) வெட்டப்பட்டு வீழ்வதை மன்னர்கள் அனைவரும் கண்டார்கள் [1]. வலிமைமிக்கத் தேர்வீரனான பீமன், புன்னகைத்துக் கொண்டே, அங்குசத்தால் வலிமைமிக்க யானையைத் துளைக்கும் வழிகாட்டியைப் {பாகனைப்} போல, அந்தப் போரில் பத்து {10} கணைகளால் துரியோதனனைத் துளைத்தான்.

அப்போது, தேர்வீரர்களில் முதன்மையான சிந்துக்களின் வலிமைமிக்க மன்னன் {ஜெயத்ரதன்}, துணிவுமிக்க வீரர்கள் பலரால் ஆதரிக்கப்பட்டு, துரியோதனன் பக்கத்தில் தன்னை நிறுத்திக் கொண்டான். பெரும் தேர்வீரரான கிருபர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அளவிலா சக்தி கொண்டவனும், குரு குலத்தின் மகனும், பழிவாங்கும் குணம் கொண்டவனுமான துரியோதனனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்டார். பீமசேனனால் ஆழமாகத் துளைக்கப்பட்ட மன்னன் துரியோதனன், பெரும் வலியை உணர்ந்து, {மயக்கமடைந்து} அந்தத் தேரின் தட்டில் அமர்ந்தான் [2].

அப்போது, பீமனைக் கொல்ல விரும்பிய ஜெயத்ரதன், பல்லாயிரக் கணக்கான தேர்களுடன் அனைத்துப் புறங்களிலும் அவனை {பீமனைச்} சூழ்ந்து கொண்டான். பிறகு, திருஷ்டகேது, பெரும் சக்தி கொண்ட அபிமன்யு, கேகயர்கள், திரௌபதியின் மகன்கள் ஆகியோர் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களுடன் போரிட்டனர்.

உயர் ஆன்மா கொண்ட அபிமன்யு, தன் அற்புத வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், இடியைப் போன்றோ, காலனைப் போன்றோ தாக்குபவையும் நேரானவையுமான ஐந்து கணைகளால் ஒவ்வொருவரையும் துளைத்து, அவர்கள் அனைவரையும் தாக்கினான். இதன் பேரில் (பொறுமையாக) அதைத் தாங்கிக் கொள்ள முடியாத அவர்கள் அனைவரும், தேர்வீரர்களில் முதன்மையான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு} மீது, மேரு மலைகளின் சாரலில் மழையைப் பொழியும் நீர் நிறைந்த மேகங்களைப் போல, இலக்குத் தவறாமல் கூரிய கணைமாரியை அடித்தார்கள்.

ஆனால், அவர்களால் போரில் இப்படிப் பீடிக்கப்பட்டாலும், ஆயுதங்களை நன்கறிந்த ஒப்பற்ற வீரனான அபிமன்யு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேவாசுரப் போரில் வலிமைமிக்க அசுரர்களை நடுங்கச் செய்த வஜ்ரபாணியைப் {இந்திரனைப்} போல, உமது மகன்கள் அனைவரையும் நடுங்கச் செய்தான். பிறகு, தேர்வீரர்களில் முதன்மையான அவன் {அபிமன்யு}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} கடும்நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்ற கடுமையான பதினான்கு {14} பல்லங்களை {அகன்ற தலை கொண்ட கணைகளை} விகர்ணன் மீது ஏவினான்.

பெரும் ஆற்றல் கொண்ட அவன் {அபிமன்யு}, போரில் நடனமாடுபவனைப் போலச் சென்று, அக்கணைகளால் {14 பல்லங்களால்} விகர்ணனின் கொடிமரத்தை அவனது தேரில் இருந்து விழச் செய்தான். மேலும் அவனது தேரோட்டியையும், குதிரைகளையும் கொன்றான். பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, நன்கு கடினமாக்கப்பட்டவையும், நேராகச் செல்லக்கூடியவையும், கவசங்கள் அத்தனையையும் ஊடுருவக்கூடியவையுமான பிற கணைகள் பலவற்றை விகர்ணன் மீது மீண்டும் ஏவினான். கங்கப் பறவையின் இறகுகளால் அலங்கரிக்கப்பட்ட அந்தக்கணைகள், விகர்ணனை அடைந்து, அவனது உடலின் ஊடாகக் கடந்து சென்று, {இஸ் என} இரையும் பாம்புகளைப் போலப் பூமிக்குள் நுழைந்தன. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட சிறகுகளும் முனைகளும் கொண்ட அந்தக் கணைகள், விகர்ணனின் குருதியில் குளித்து, பூமியில் இரத்தத்தைக் கக்குவதைப் போலத் தோன்றின.

இப்படி விகர்ணன் துளைக்கப்பட்டதைக் கண்ட அவனது இரத்தச் சகோதரர்கள், சுபத்திரையின் மகனின் {அபமன்யுவின்} தலைமையிலான தேர்வீரர்களுக்கு எதிராக விரைந்தார்கள். தங்கள் (தனிப்பட்ட) தேர்களில் இருந்த அந்த ஒப்பற்ற வீரர்கள், பல சூரியன்களைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்த (பாண்டவப் படையின்) போராளிகளிடம் வந்து ஒருவரையொருவர் துளைக்கத் தொடங்கினர்.

ஏழு {7} கணைகளால் ஸ்ருதகர்மாவைத் துளைத்த துர்முகன் [3], ஒரு கணையால் அவனது {ஸ்ருதகர்மாவின்} கொடிமரத்தை வெட்டிவீழ்த்தி, ஏழு கணைகளால் அவனது {ஸ்ருதகர்மாவின்} தேரோட்டியைத் துளைத்தான். மேலும் நெருங்கிய அவன் {துர்முகன்}, தங்கக் கவசம் பூண்டவையும், காற்று போன்ற வேகத்தைக் கொண்டவையுமான அவனது {ஸ்ருதகர்மாவின்} குதிரைகளை ஆறு கணைகளால் கொன்று, பிறகு அவனது {ஸ்ருதகர்மாவின்} தேரோட்டியையும் கொன்றான். எனினும், குதிரைகள் கொல்லப்பட்ட தனது தேரிலேயே நின்ற ஸ்ருதகர்மன், பெரும் கோபம் கொண்டு, சுடர்மிகும் கடும் எரி கோள் ஒன்றைப் {தூமகேதுவைப்} போன்ற ஓர் ஈட்டியை {சக்தி ஆயுதத்தை} வீசினான். பிரகாசத்துடன் சுடர்விட்ட அந்த ஈட்டி புகழ்பெற்ற துர்முகனின் கடினமான கவசத்தின் ஊடாகக் கடந்து, பூமியைத் துளைத்தது.(ஸ்ருதகர்மன் – சகாதேவனின் மகன், துர்முகன் – துரியோதனனின் தம்பி)

அதே வேளையில், தேரை இழந்த சுருதகர்மனைக் கண்ட சுதசோமன் [4] துருப்புகள் அனைத்தின் பார்வைக்கெதிரிலேயே அவனை {ஸ்ருதகர்மனைத்} தன் தேரில் ஏற்றிக் கொண்டான். வீரனான சுருதகீர்த்தி உமது மகனான ஜெயத்சேனனைக் கொல்ல விரும்பி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் புகழ்மிக்கப் போர்வீரனைப் போரில் எதிர்த்து விரைந்தான். அப்போது, உமது மகன் ஜெயத்சேனன், புன்னகைத்தவாறே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனது கரங்களை நீட்டி வளைத்தபடி, கூரிய க்ஷுரப்ரத்தம் {குதிரை லாடம் போன்ற தலை கொண்ட கணை} ஒன்றினால் உயர் ஆன்ம சுருதகீர்த்தியின் வில்லை வெட்டி வீழ்த்தினான்.(பீமனின் மகன் சுதசோமன், அர்ஜுனனின் மகன் சுருதகீர்த்தி)தன் இரத்தச் சகோதரனின் வில் வெட்டப்பட்டதைக் கண்டவனும், பெரும் வீரம் கொண்டவனுமான சதானீகன் [5], சிங்கம் போல அடிக்கடி முழக்கமிட்டபடி அந்த இடத்திற்கு வந்தான். அந்தப் போரில் பெரும் சக்தியுடன் தனது வில்லை இழுத்த சதானீகன், பத்து {10} கணைகளால் ஜெயத்சேனனைத் துளைத்துவிட்டு, மதங்கொண்ட யானையைப் போல முழங்கினான். கவசம் அனைத்தையும் துளைக்கவல்லதும், கூரிய முனை கொண்டதுமான மற்றொரு கணையை எடுத்த அவன் {சதானீகன்}, ஜெயத்சேனனின் மார்பை ஆழமாகத் துளைத்தான்.(நகுலனின் மகன் சதானீகன்)

சரியாக அதே நேரத்தில், தன் சகோதரன் (ஜெயத்சேனன்) அருகில் இருந்த துஷ்கர்ணன், கோபத்தால் தூண்டப்பட்டு, சதானீகனின் வில்லையும் கணையையும் அறுத்தான். அப்போது பெரும் சக்தியைத் தாங்க வல்ல மற்றொரு அற்புத வில்லை எடுத்த வலிமைமிக்கச் சதானீகன், பல கூரிய கணைகளைக் குறிபார்த்தான். தன் சகோதரன் (ஜெயத்சேனன்) அருகில் இருந்த துஷ்கர்ணனிடம், “நில்லும்”, “நில்லும்” என்று சொன்ன அவன் {சதானீகன்}, பல பாம்புகளைப் போன்ற சுடர்மிகும் கூரிய கணைகளை அவன் {துஷ்கர்ணன்} மீது ஏவினான். ஒரு கணையால் துஷ்கர்ணனின் வில்லை விரைந்து வெட்டிய அவன் {சதானீகன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, இரு கணைகளால் அவனது தேரோட்டியைக் கொன்று, ஏழு கணைகளால் துஷ்கர்ணனையும் துளைத்தான்.

களங்கமற்ற அந்தப் போர்வீரன் {சதானீகன்}, மனோ வேகம் கொண்டவையும், பல்வேறு நிறங்களில் இருந்தவையுமான துஷ்கர்ணனின் குதிரைகள் அனைத்தையும் பனிரெண்டு {12} கூரிய கணைகளால் கொன்றான்.பெரும் கோபத்தால் தூண்டப்பட்ட சதானீகன், நன்கு குறிபார்க்கப்பட்டதும், விரைந்து செல்லவல்லதுமான மற்றொரு பல்லத்தினால் {அகன்ற தலை கொண்ட கணையால்} துஷ்கர்ணனின் மார்பை ஆழமாகத் துளைத்தான். அதன் பேரில், இடியால் தாக்கப்பட்ட மரம் போலப் பின்னவன் {துஷ்கர்ணன்} பூமியில் விழுந்தான்.

துஷ்கர்ணன் கொல்லப்பட்டதைக் கண்ட வலிமைமிக்கப் போர்வீரர்கள் ஐவரும் {கௌரவர்கள்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சதானீகனைக் கொல்ல விரும்பி, அனைத்துப் புறங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். மேலும் அவர்கள் புகழ்மிக்கச் சதானீகனைக் கணைமழையால் தாக்கினர். பிறகு கோபத்தால் தூண்டப்பட்ட கேகயச் சகோதரர்கள் ஐவர் (சதானீகனை மீட்க) அணுகினர். பின்னவர்கள் {கேகயச் சகோதரர்கள்} தங்களை நோக்கி வருவதைக் கண்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான உமது மகன்கள், வலிமைமிக்க யானைகளை எதிர்த்து விரையும் யானைகளைப் போல அவர்களை எதிர்த்து விரைந்தனர். (உமது மகன்களில்) துர்முகன், துர்ஜயன், இளைஞனான துர்மர்ஷணன், சத்துருஞ்சயன், சத்துருஸஹன் ஆகிய {ஐந்து} புகழ்பெற்ற வீரர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்டுக் கேகயச் சகோதரர்களை (கேகயச் சகோதரர்கள் ஐவரை) எதிர்த்துச் சென்றனர்.

(அரண் அமைக்கப்பட்ட) நகரங்களைப் போன்றவையும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரைகள் பூட்டப்பட்டவையும், பல்வேறு வண்ணங்களிலான அழகிய கொடிமரங்களால் அருளப்பட்டவையுமான தங்கள் தேர்களில் அற்புத விற்களைத் தாங்கியபடியும், அழகிய கவசங்களைத் தரித்தபடியும், அற்புத கொடிமரங்களைக் கொண்டபடியும் இருந்த அந்த வீரர்கள், ஒரு காட்டில் இருந்து மற்றொரு காட்டுக்குள் நுழையும் சிங்கங்களைப் போலப் பகைவரின் படைக்குள் நுழைந்தனர். தேர்களும், யானைகளும் ஒன்றோடொன்று கலந்து போனதும், அவர்களுக்கும் எதிரிக்கும் இடையில் நடந்ததும், கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போரில் அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

சூரியன் மறையும் அந்தக் குறுகிய காலத்திற்குள் ஒருவர் மீது ஒருவர் பகைமை பாராட்டி யமலோகத்தைப் பெருக்கும் {அங்கு செல்பவர்கள் எண்ணிக்கையைப் பெருக்கும்} அந்தப் பயங்கரப் போர் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தேர்வீரர்களும் குதிரைவீரர்களும் களமெங்கும் சிதறிக் கிடந்தனர்.

கோபத்தால் தூண்டப்பட்ட சந்தனுவின் மகன் பீஷ்மர், தன் நேரான கணைகளால் உயர் ஆன்மப் பாண்டவர்களின் துருப்புகளைக் கொல்லத் தொடங்கினார். அவரது கணைகள் பாஞ்சாலப் போராளிகளை யமனுலகு அனுப்பி வைத்தன. பாண்டவர்களின் படையணிகளை இப்படி உடைத்த அந்தப் பாட்டன் {பீஷ்மர்}, {அந்த நாளின்} இறுதியில் தன் துருப்புகளைப் பின்வாங்கச் செய்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஓய்வெடுக்கத் தனது பாசறைக்குச் சென்றார். திருஷ்டத்யும்னனையும், விருகோதரனையும் கண்ட மன்னன் யுதிஷ்டிரனும், அவர்களது தலைகளை முகர்ந்து பார்த்து, மகிழ்ச்சியால் நிறைந்து, தனது கொட்டகைக்கு ஓய்வெடுக்கச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}.

ஆறாம் நாள் போர் முற்றும்

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ  பீஷ்ம பர்வம்-ஸ்ரீ பீஷ்மவத பர்வம்-(விஸ்வோபாக்யானம் )-ஐந்தாம் நாள் போர்-

October 13, 2025

திருதராஷ்டிரனின் கேள்வி! – பீஷ்ம பர்வம் பகுதி – 065அ-தொடர்ந்து பாண்டவர்கள் வெல்வதற்கும், தன் மகன்கள் தோற்பதற்கும் உண்மையான காரணம் என்ன என்று திருதராஷ்டிரன் சஞ்சயனைக் கேட்பது; காரணங்களைச் சொல்லும் சஞ்சயன்; அதே கேள்வியைப் பீஷ்மரிடம் கேட்கும் துரியோதனன்; பீஷ்மரின் அறிவுரை….

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “தேவர்களும் அடைய முடியாதவையான பாண்டு மகன்களின் இந்த அருஞ்செயல்களைக் கேட்டு, ஓ! சஞ்சயா, எனது இதயம் அச்சத்தாலும், வியப்பாலும் நிறைகிறது. அனைத்து வகையிலும் என் மகன்கள் பட்ட அவமானத்தைக் கேட்டு, அவற்றைத் தொடர்ந்து வரப்போகும் விளைவைக் குறித்த கவலை எனக்கு அதிகமாகிறது. விதுரன் உதிர்த்த வார்த்தைகள் என் இதயத்தை எரிக்கிறது என்பதில் ஐயமில்லை. ஓ! சஞ்சயா, நடந்தது அனைத்தும் விதியால் நடந்ததாகவே தெரிகிறது.

பாண்டவப் படையின் போராளிகள், பீஷ்மரைத் தலைமையாகக் கொண்டவர்களும், சிறப்பானவர்களும், அனைத்து ஆயுதங்களையும் அறிந்தவர்களுமான வீரர்களுடன் {கௌரவப் படையுடன்} மோதி அவர்ளைத் தாக்குகின்றார்களே. ஓ! மகனே {சஞ்சயா}, உயர் ஆன்மா கொண்டவர்களான பாண்டுவின் வலிமைமிக்க மகன்களால் என்ன ஆன்ம நோன்புகள் நோற்கப்பட்டன? என்ன வரத்தை அவர்கள் அடைந்தார்கள்? அல்லது, எந்த அறிவியலை அறிந்ததன் விளைவாக அவர்கள் ஆகாயத்தில் இருக்கும் நட்சத்திரங்களைப் போல் அழிவடையால் இருக்கின்றனர்? பாண்டவர்களால் எனது படை தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மிகக் கடுமையான தெய்வீகத் தண்டனை என் மீது மட்டுமே விழுகிறதே.

பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} கொல்லப்படாதவர்களாகவும், எனது மகன்கள் {கௌரவர்கள்} கொல்லத்தக்கவர்களாகவும் இருப்பது ஏன் என்பது குறித்த உண்மைகள் அனைத்தையும் எனக்கு முழுமையாகச் சொல்வாயாக. இந்தத் துயரின் (துயரக்கடலின்) மறுகரையை நான் காணவில்லை. ஆழமான பரந்த கடலைத் தன் இரு கரங்களை மட்டுமே கொண்டு கடக்க விரும்பும் மனிதனைப் போல நான் இருக்கிறேன்.

என் மகன்களைப் பேரிடர் ஒன்று பீடித்திருக்கிறது என்று நிச்சயமாக நான் நினைக்கிறேன். என் மகன்கள் அனைவரையும் பீமன் கொல்வான் என்பதில் ஐயமில்லை. போரில் என் மகன்களைக் காக்கக்கூடிய ஒரு வீரனை என்னால் காண இயலவில்லை. ஓ! சஞ்சயா, இந்தப் போரில் என் மகன்கள் இறக்கப்போவது உறுதி. எனவே, ஓ! சூதா {சஞ்சயா}, உன்னைக் கேட்கும் எனக்கு, அனைத்தின் உண்மைக் காரணங்களையும் சொல்வதே உனக்குத் தகும்.

தனது துருப்புகள் புறம்காட்டி ஓடுவதைக் கண்டு துரியோதனன் என்ன செய்தான்? முதிர்ந்த பீஷ்மர், துரோணர், கிருபர், சுபலனின் மகன் {சகுனி}, ஜெயத்ரதன், வலிமைமிக்க வில்லாளியான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, பெரும் பலம் கொண்ட விகர்ணன் ஆகியோர் என்ன செய்தனர்? ஓ! பெரும் அறிவைக் கொண்டவனே {சஞ்சயா}, போரில் எனது மகன்கள் புறமுதுக்கிட்ட போது, அந்த உயர் ஆன்ம வீரர்கள் என்ன தீர்மானித்தனர்?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கவனமாகக் கேளும். கேட்ட பிறகு, அவற்றை உமது இதயத்தில் நிலைநிறுத்திக் கொள்ளும். (இஃது) எந்த மந்திரத்தின் விளைவும் இல்லை. எவ்வகை மாயையின் விளைவும் இல்லை. பாண்டுவின் மகன்கள் புதிதாக எந்தப் பயங்கரத்தையும் {அச்சத்தையும்} ஏற்படுத்தவில்லை. அவர்கள் வலிமையுடன் இருக்கிறார்கள்; இந்தப் போரில் அவர்கள் நியாயமான வழிகளிலேயே போரிடுகின்றனர்.

உயர்ந்த புகழை விரும்பும் அந்தப் பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, தங்கள் வாழ்வைத் தாங்கிக் கொள்வதையும் {உயிர்வாழ்வதற்குத் தேவையான செயல்களையும்} சேர்த்து, அனைத்துச் செயல்களையும் அறநெறிகளுக்கு ஏற்ற வழியிலேயே செய்கின்றனர். அனைத்து வகையான செழிப்பையும், பெரும் பலத்தையும் கொண்டிருக்கும் அவர்கள், நேர்மையில் தங்கள் கண்களை வைத்துக் கொண்டே, போரில் இருந்து விலகாமல் இருக்கிறார்கள்.

எங்கே நேர்மை இருக்கிறதோ, அங்கேதான் வெற்றி இருக்கிறது. இதனாலேயே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பிருதையின் மகன்கள் {பாண்டவர்கள்} போரில் கொல்லப்பட முடியாதவர்களாகவும், எப்போதும் வெற்றிகரமாகவும் இருக்கிறார்கள்.

தீய ஆன்மா கொண்ட உமது மகன்களோ, பாவங்களுக்கு அடிமையாக {தீய எண்ணங்களுடன்} இருக்கிறார்கள். கொடுமையான, இழிந்த செயல்களையே அவர்கள் செய்கிறார்கள். இதனாலேயே அவர்கள் போரில் பலவீனப்படுகிறார்கள். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெறுக்கத்தக்க மனிதர்களைப் போல, உமது மகன்கள் பல கொடுமைகளையும், வஞ்சகச் செயல்களையும் பாண்டுவின் மகன்களுக்கு {பாண்டவர்களுக்குச்} செய்தார்கள்.

எனினும், ஓ! பாண்டுவின் அண்ணனே {திருதராஷ்டிரரே}, உமது மகன்களின் குற்றங்கள் அனைத்தையும் அலட்சியம் செய்த பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, அச்செயல்களை எப்போதும் {உலகத்தின் கண்ணிலிருந்து} மறைத்தே வந்தனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களோ எண்ணற்ற நேரங்களில் பாண்டவர்களை அவமதித்தனர்.

அந்தப் பாவ வழியின் தொடர்ச்சியாக, இப்போது, நஞ்சைப் போன்ற கொடூரக் கனியை [1] {பலனை} அவர்கள் {கௌரவர்கள்} அறுவடை செய்யட்டும். உமது நலன்விரும்பிகள் ஆலோசனை கூறியும், விழிப்படையாத நீரும், உமது மகன்கள் மற்றும் சொந்தங்களுடன் கூடி அந்தக் கனியை புசிக்க வேண்டும்.(மூலத்தில் இங்கே குறிப்பிடப்படுவது “சுரைக்காய் இனத்தைச் சேர்ந்த ‘Kimpaca’ கிம்பகம் என்ற கனி ஆகும்”)

விதுரர், பீஷ்மர், உயர் ஆன்ம துரோணர் ஆகியோராலும், என்னாலும் தொடர்ந்து தடுக்கப்பட்டும், நீர் புரிந்து கொள்ளவில்லை. பரிந்துரைக்கப்படும் மருந்தை மறுக்கும் நோயாளியைப் போல, ஏற்றுக் கொள்ளத்தக்கதும், உமது நன்மைக்கானதுமான எங்கள் வார்த்தைகளை நீர் மறுத்தீர். உமது மகன்களின் கருத்துக்களை ஏற்ற நீர், பாண்டவர்கள் ஏற்கனவே வீழ்த்தப்பட்டுவிட்டதாகவே கருதினீர்.

ஓ! பாரதர்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, நீர் கேட்டபடியே, பாண்டவர்களின் வெற்றிக்கான உண்மையான காரணத்தை மேலும் கேளும். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, நான் கேள்விப்பட்டதை உமக்குச் சொல்கிறேன். இதே கேள்வியைத்தான் பாட்டனிடம் {பீஷ்மரிடம்} துரியோதனனும் கேட்டான். வலிமைமிக்கத் தேர்வீரர்களான தனது தம்பிகள் போரில் வீழ்த்தப்பட்டதால், ஓ! கௌரவரே {திருதராஷ்டிரரே}, துயரில் இதயம் மயங்கிய உமது மகன் துரியோதனன், பெரும் அறிவுபடைத்த பாட்டனிடம் {பீஷ்மரிடம்}, இரவில் பணிவுடன் சென்று, அவரிடம் இதே கேள்வியைக் கேட்டான். ஓ! ஏகாதிபதியே {திருதராஷ்டிரரே}, அவை அனைத்தையும் என்னிடம் கேட்பீராக.

துரியோதனன் {பீஷ்மரிடம்}, “துரோணர், {பீஷ்மராகிய} நீர், சல்லியன், கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஹிருதிகனின் மகனான கிருதவர்மன், காம்போஜர்களின் ஆட்சியாளனான சுதக்ஷிணன், பூரிஸ்ரவஸ், விகர்ணன், பெரும் ஆற்றல் படைத்த பகதத்தன் ஆகியோர் அனைவரும் வலிமைமிக்கத் தேர்வீரர்களாகக் {மகாரதர்களாகக்} கருதப்படுகிறீர்கள். மேலும் இவர்கள் அனைவரும் உயர்ந்த பிறப்பைக் கொண்டவர்களும், போரில் தங்கள் உயிர்களை விடத் தயாராக இருப்பவர்களுமாவர். (ஒன்று சேர்ந்திருக்கும்) மூன்று உலகங்களுக்கும் இணையானவர்கள் இவர்கள் என்பது எனது கருத்து. பாண்டவப் படையின் (ஒன்றிணைந்த) வீரர்கள் அனைவராலும் உங்கள் ஆற்றலைத் தாங்க முடியாது. என் மனத்தில் ஒரு சந்தேகம் உதிக்கிறது. கேட்கும் எனக்கு அதை விளக்குவீராக. யாரால் இந்தப் பாண்டவர்கள் நம்மைத் தொடர்ந்து வீழ்த்துகிறார்கள்?” என்று கேட்டான் {துரியோதனன்}.

பீஷ்மர் {துரியோதனனிடம்}, “ஓ! மன்னா, ஓ! குரு குலத்தோனே {துரியோதனா}, நான் சொல்லும் வார்த்தைகள் அனைத்தையும் கேட்பாயாக. இந்த விளைவுதான் அடிக்கடி என்னால் உனக்குச் சொல்லப்பட்டது. ஆனால், நான் சொன்னதை நீ கேட்கவில்லை. ஓ! பாரதர்களில் சிறந்தவனே {துரியோதனா}, பாண்டவர்களிடம் சமாதானம் ஏற்படட்டும். ஓ! தலைவா {துரியோதனா}, உனக்கும், இந்த உலகத்துக்கும் இது நன்மையைப் பயக்கும் என்று நான் கருதுகிறேன். உனது நலன்விரும்பிகள் அனைவரையும் மனம் நிறையச் செய்யும்படியும், உனது சொந்தங்களுக்கு மகிழ்வூட்டும்படியும், ஓ! மன்னா {துரியோதனா}, உன் சகோதரர்களுடன் சேர்ந்து இந்தப் பூமியை அனுபவித்து மகிழ்ச்சியாக இருப்பாயாக. இதுகுறித்து என் தொண்டை வற்ற இதற்கு முன் நான் கதறினாலும், ஓ! ஐயா {துரியோதனா}, நீ எனக்குச் செவிமடுக்கவில்லை. பாண்டுவின் மகன்களை நீ எப்போதும் அவமதித்தே வந்திருக்கிறாய். அவற்றின் விளைவுகள் தான் இப்போது உன்னை அடைகின்றன.

ஓ! மன்னா {துரியோதனா}, சாதனைகளால் களைப்படையாதவர்களாகவும், கொல்லப்பட முடியாதவர்களாகவும் ஏன் பாண்டவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கான காரணத்தை, ஓ! தலைவா {துரியோதனா}, நான் சொல்லும்போதே கேட்பயாக. சாரங்கபாணியால் {கிருஷ்ணனால்} காக்கப்படும் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} அனைவரையும் வீழ்த்த வல்லவர்களோ, வீழ்த்துபவர்களோ இவ்வுலகில் யாரும் இல்லை, {இதற்கு முன்} இருந்ததுமில்லை, {இனிமேல்} இருக்கவும் முடியாது. ஓ! அறநெறிகளை அறிந்தவனே {துரியோதனா}, ஆன்மாவைக் கட்டுக்குள் கொண்ட முனிவர்களால் சொல்லப்பட்ட பழமையான வரலாற்றை உள்ளபடியே கேட்பாயாக” {என்றார் பீஷ்மர்}.

பிரம்மன் சொன்ன நாராயணத் துதி! – பீஷ்ம பர்வம் பகுதி – 065ஆ-பழங்காலத்தில் கந்தமாதன மலைகளில் நடந்த கதையொன்றை பீஷ்மர் துரியோதனனுக்குச் சொல்வது; தேவர்களும், முனிவர்களும், பிரம்மனும் கந்தமாதனத்தில் கூடியிருக்கையில் அவர்களுக்கு நாராயணன் காட்சியளித்தது; பிரம்மன் சொன்ன நாராயணத் துதி; பூமியில் பிறப்பெடுக்குமாறு பிரம்மன் நாராயணனை வேண்டுவது…

{பீஷ்மர் துரியோதனிடம் தொடர்ந்தார்}, “பழங்காலத்தில், கந்தமாதன மலைகளில், தேவர்களும், முனிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, பெரும்பாட்டனுக்காக {பிரம்மனுக்காக} மரியாதையுடன் காத்திருந்தனர் {பணிவிடை செய்தனர்}. அவர்களுக்கு மத்தியில் சுகமாக வீற்றிருந்த அனைத்துயிர்களின் தலைவன் {பிரம்மன்}, சுடர்மிகும் பிரகாசத்துடன் ஆகாயத்தில் நின்றிருந்த ஓர் அற்புதமான தேரை {விமானத்தைக்} கண்டான். தியானத்தால் (அது குறித்த அனைத்தையும்) உறுதி செய்து கொண்ட பிரம்மன், ஒடுங்கிய இதயத்துடனும், கூப்பிய கரங்களுடனும், மகிழ்ச்சிகரமான ஆன்மாவுடனும், அந்த உயர்ந்த தெய்வத்திற்குத் {நாராயணனுக்குத்} தனது வணக்கங்களைச் செய்தான். (இப்படி அந்த வடிவத்தை) ஆகாயத்தில் கண்ட முனிவர்கள் மற்றும் தேவர்கள் ஆகிய அனைவரும், அந்த அற்புதங்களின் அற்புதம் மீது நிலைத்த கண்களுடனும், கூப்பிய கரங்களுடன் எழுந்து நின்றனர்.

பிரம்மத்தை அறிந்த அனைவரிலும் முதன்மையானவனும், அண்டத்தின் படைப்பாளனும், உயர்ந்த அறத்தை அறிந்தவனுமான பிரம்மன், அவனை {நாராயணனை} முறையாக வழிபட்டு, {பின்வரும்} இந்த உயர்வான வார்த்தைகளைச் சொன்னான். அவன் {பிரம்மன்}, “ஏற்றிருக்கும் அண்ட வடிவத்தினால் மகிமையானவன் {விஸ்வாவசு} நீயே, அண்டத்தின் தலைவன் {விஸ்வேதேவன்} நீயே. ஓ! முழு அண்டத்தையும் காப்பவனே {விஷ்வக்சேனா}, ஓ! அண்டத்தையே உனது செயலாகக் கொண்டவனே {சமஸ்தகர்மஸ்வரூபியே}, ஓ! ஆன்மாவைக் கட்டுக்குள் கொண்டவனே {ஜிதேந்திரனே}, அண்டத்தின் தலைமை உரிமையாளன் {விஸ்வேஸ்வரன்} நீயே. வாசுதேவன் நீயே. எனவே, உயர்ந்த தெய்வீகத்திற்கும், யோகத்திற்கும் ஆன்மாவான {தேவனும், யோகஸ்வரூபியுமான} உன்னை நான் சரணடைந்தேன்.

அண்டத்தின் தலைமை தெய்வமான உனக்கு வெற்றி {ஜெயம்}. உலகங்களின் நன்மையில் எப்போதும் ஈடுபடும் உனக்கு வெற்றி. யோகத்தின் தலைவனான {யோகீஸ்வரனான} உனக்கு வெற்றி. அனைத்து சக்திகளும் வாய்ந்தவனான உனக்கு வெற்றி. யோகத்திற்கும் முன்பும் பின்பும் ஆனவனான {யோகஸ்வரூபனான} உனக்கு வெற்றி. நாபியில் கமலம் உதித்தவனே {பத்மநாபா}, அகன்ற கண்களை உடையவனே, அண்டத்தின் தலைவர்களுக்கெல்லாம் தலைவனான {பரமேஸ்வரனான} உனக்கு வெற்றி.

ஓ! கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகியவற்றின் தலைவா, மென்பண்பின் வடிவமான {embodiment of gentleness} உனக்கு வெற்றி. சூரியர்களின் சூரியனே, ஓ! சொல்லப்படாத பண்புகளின் கொள்ளிடமே, அனைத்திற்கும் புகலிடமாக இருப்பவனான உனக்கு வெற்றி. நாராயணன் நீயே, புரிந்து கொள்ளப்பட முடியாதவன் நீயே, சாரங்கம் என்றழைக்கப்படும் வில்லைத் தரிப்பவனான உனக்கு வெற்றி. ஓ! அண்டத்தை உருவமாகக் கொண்டவனே, ஓ! எப்போதும் நலத்துடன் இருப்பவனே {பிறவிப்பிணியற்றவனே}, அனைத்துப் பண்புகளையும் கொண்டவனான உனக்கு வெற்றி. ஓ! அண்டத்தின் தலைவா {விஸ்வேஸ்வரா}, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, உலகங்களின் நன்மைக்காக எப்போதும் தயாராக இருப்பவனான உனக்கு வெற்றி. ஓ! பெரும்பாம்பே {ஆதிசேஷஸ்வரூபனே}, ஓ! பெரும் பன்றியே {வராகனே}, ஓ! காரணமுதல்வனே, ஓ! பழுப்புச் சடை கொண்டவனே {ஹரிகேசனே}, எல்லாம் வல்லவனான {விபுவான} உனக்கு வெற்றி.

ஓ! மஞ்சளாடை கொண்டவனே {பீதாம்பரதாரியே}, ஓ! திசைகள் மற்றும் துணை திசைகளின் தலைவா, ஓ! அண்டத்தையே வசிப்பிடமாகக் கொண்டவனே, ஓ! சிதைவற்றவனே, ஓ! தோற்றம் கொண்டவனே, ஓ! தோற்றம் இல்லாதவனே, ஓ! அளவிலா இடம் {அமிதமானஸ்தானங்களைக்} கொண்டவனே, ஓ! புலன்கள் அனைத்தையும் கட்டுக்குள் கொண்டவனே, ஓ! எப்போதும் நன்மையையே அடைபவனே, ஓ! அளவிடப்பட முடியாதவனே, தன்னியல்பைத் தானொருவனே அறிந்தவனே, ஆழமானவனான உனக்கு வெற்றி. ஓ! விருப்பங்கள் அனைத்தையும் தருபவனே, ஓ! முடிவற்றவனே, ஓ! பிரம்மமாக அறியப்படுபவனே, ஓ! நித்தியமானவனே, ஓ! உயிரினங்கள் அனைத்தையும் படைத்தவனே, ஓ! எப்போதும் வெற்றியாளனாய் இருப்பவனே, ஓ! அறிவை வெளிப்படுத்தும் செயல்களையே எப்போதும் செய்பவனே {பேரறிவாளனே}, ஓ! அறநெறி அறிந்தவனே, ஓ! வெற்றியைத் தருபவனே, ஓ! புதிரே உருவமானவனே, ஓ! யோகமனைத்தின் ஆன்மாவாக இருப்பவனே {சர்வயோகேஸ்வரூபனே}, ஓ! இருப்பில் எழுந்த அனைத்தின் காரணமானவனே {வியக்தம அவதாரமே}, ஓ! உயிரினங்கள் அனைத்தின் தன்னறிவானவனே, ஓ! உலகங்களின் தலைவா, உயிரினங்கள் அனைத்தையும் படைத்தவனான உனக்கு வெற்றி.

ஓ! தன்னையே தோற்றமாகக் கொண்டவனே, ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே {மகாபாக்யனே}, ஓ! அனைத்தையும் அழிப்பவனே, ஓ! மன எண்ணங்கள் அனைத்தையும் ஊக்குவிப்பவனே, பிரம்மத்தை அறிந்தவர் அனைவரிலும் அன்பானவனான உனக்கு வெற்றி. ஓ! படைப்பிலும், அழிப்பிலும் ஓய்வில்லாதவனே, ஓ! விருப்பங்களை அனைத்தையும் கட்டுப்படுத்துபவனே, ஓ! உச்சமான தலைவா {பரமேஸ்வரா}, ஓ! அமுதத்தின் காரணனே {மோட்சகாரணனே}, ஓ! அனைத்தும் கொண்டவனே {முக்தாத்மஸ்வரூபனே}, ஓ! யுகத் தொடக்கத்தில் முதலில் தோன்றுபவனே, ஓ! வெற்றியைக் கொடுப்பவனே, ஓ! அனைத்து உயிர்களின் தலைவனுடைய {பிரம்மனின்} தெய்வீகத் தலைவனே, ஓ! நாபியில் கமலம் உதித்திருப்பவனே {பத்மநாபரே}, ஓ! பெரும் பலம்வாய்ந்தவனே, ஓ! தன்னிலே எழுந்தவனே {சத்ஸ்வரூபனே}, ஓ! பழங்கால நிலையைக் கொண்ட பெரும்பூதங்களாக {பஞ்ச பூதங்களாக} இருப்பவனே, ஓ! (அறச்} சடங்குகள் அனைத்தின் ஆன்மாவே, அனைத்தையும் கொடுப்பவனான உனக்கு வெற்றி.

பூமாதேவி உன் இரண்டு பாதங்களைப் பிரதிபலிக்கிறாள், திசைகள் மற்றும் துணை திசைகள் உனது கரங்களையும், ஆகாயம் உனது தலையையும் பிரதிபலிக்கின்றன. உன் வடிவமாக நான் இருக்கிறேன். தேவர்கள் உனது உறுப்புகள் {உடல்}, சூரியனும், சந்திரனும் உன்னிரு கண்கள். ஆன்மத் தவங்களும், அறத்தில் பிறந்த உண்மையும், (அறச்) சடங்குகளும் உனது பலம். நெருப்பே {அக்னியே} உனது சக்தி, காற்றே உனது மூச்சு, உன் வேர்வையில் இருந்து உதித்ததே நீர். அசுவினி இரட்டையர்கள் உனது காதுகள், சரஸ்வதி தேவி உனது நாக்கு. வேதங்களே உனது அறிவு, இந்த அண்டமே உன்னில்தான் நிலைநிற்கிறது.

ஓ! யோகம் மற்றும் யோகியரின் தலைவா, உனது எல்லை, அளவு, சக்தி, ஆற்றல், பலம், தோற்றம் ஆகியவற்றை நாம் அறியோம். ஓ! தெய்வமே, ஓ! விஷ்ணுவே, உன்னிடம் அர்ப்பணிப்பில் நிறைந்து, உன்னையே நம்பி நோன்புகள் மற்றும் தவங்களால் {நியமங்களால்} எப்போதும் உன்னையே உயர்ந்த தலைவனாகவும், தேவர்களின் தேவனாகவும் வணங்குகிறோம்.

முனிவர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பன்னகர்கள், பிசாசங்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், ஊர்வன ஆகிய இவை அனைத்தும் என்னால் படைக்கப்பட்டது உனது கருணையே. ஓ! நாபியில் கமலம் உதித்தவனே {பத்மநாபா}, ஓ! அகன்ற பெரிய கண்களை உடையவனே, ஓ! கிருஷ்ணா, ஓ! துன்பங்கள் அனைத்தையும் விலக்குபவனே, உயிரினங்கள் அனைத்தின் புகலிடம் நீயே, அவற்றின் வழிகாட்டியும் நீயே, அண்டத்தைத் தன் வாயாகக் கொண்டவன் நீயே, ஓ! தேவர்களின் தலைவா {தேவேசனே}, தேவர்கள் எப்போதும் மகிழ்வுடன் இருப்பது உனது கருணையே. பயங்கரங்களில் இருந்து பூமி எப்போதும் விடுபட்டிருப்பது உனது கருணையே.

எனவே, ஓ! பெரிய கண்களைக் கொண்டவனே, யது குலத்தில் நீ பிறப்பாயாக. அறத்தை நிலைநாட்டவும், திதியின் மகன்களைக் {தைத்தியர்களைக்} கொல்லவும், அண்டத்தைத் தாங்கிப் பிடிக்கவும், ஓ! தலைவா, நான் சொன்னதைச் செய்வாயாக. ஓ! வாசுதேவா, உனது இந்த உயர்ந்த புதிர்கள் {பரமரகசியங்கள்}, ஓ! தலைவா, உனது அருளாலேயே என்னால் பாடப்பட்டன. உன்னில் இருந்து நீயே சங்கர்ஷணனைப் {பலராமனைப்} படைத்த பிறகு, ஓ! கிருஷ்ணா, உனக்கு நீயே பிரத்யும்னனாகப் பிறந்தாய். பிரத்யும்னனிலிருந்து நித்தியமான விஷ்ணுவாக அறியப்படும் அநிருத்தனைப் படைத்தாய். அந்த அநிருத்தனே அண்டத்தைத் தாங்குபவனான பிரம்மனாக என்னைப் படைத்தான். வாசுதேவனின் சாரத்தால் படைக்கப்பட்டவன் நான், எனவே, நீயே என்னைப் படைத்தவனாவாய். உன்னையே பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, ஓ! தலைவா, மனிதர்களுக்கு மத்தியில் பிறப்பாயாக.

உலகங்கள் அனைத்தின் மகிழ்ச்சிக்காக அசுரர்களைக் கொன்று, அறத்தை நிறுவி, புகழை வென்று, மீண்டும் நீ யோகத்தை அடைவாயாக. உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டவர்களும், பூமியில் உள்ள மறுபிறப்பாள முனிவர்களும், தேவர்களும், உனக்குச் சொந்தமான பெயர்களால் அற்புதனான உன்னைப் பாடுகிறார்கள். ஓ! அற்புதக் கரங்களைக் கொண்டவனே, அனைத்து வகை உயிரினங்களும், வரங்களை அளிப்பவனான உன்னையே புகலிடமாகக் கொண்டு, உன்னிலேயே வசிக்கின்றன. உலகங்களின் பாலமானவனாகவும், முதல், இடை, கடை ஆகியவை அற்றவனாகவும், அளவிலா யோகம்படைத்தவனாகவும்  மறுபிறப்பாளர்கள் உன்னைப் பாடுகின்றனர்” என்றான் {பிரம்மன்}” {என்றார் பீஷ்மர்}.

“கிருஷ்ணன் மனிதனா?” பீஷ்மர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 066-பிரம்மனின் கோரிக்கையை ஏற்ற விஷ்ணு; வந்தது யார் என்று பிரம்மனிடம் தேவர்கள் கேள்வி; கிருஷ்ணனின் பெருமைகளைச் சொல்லும் பிரம்மன்; கிருஷ்ணனின் பெருமைகளைத் துரியோதனனுக்குச் சொல்லும் பீஷ்மர்…

பீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், “அப்போது, உலகங்களின் தலைவனான அந்த ஒப்பற்ற தேவன் {நாராயணன்} மென்மையான மற்றும் ஆழமான குரலில், “யோகத்தின் மூலம், ஓ! ஐயா {பிரம்மனே}, உன்னால் விரும்பப்படும் அனைத்தும் என்னால் அறியப்பட்டது. நீ விரும்பியது போலவே நடக்கும்” என்று சொல்லி அங்கேயே மறைந்து போனான்.

பிறகு, பெரும் வியப்பால் நிறைந்த தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் அனைவரும் பிரம்மனிடம் ஆவலுடன், “ஓ! தலைவா {பிரம்மரே}, ஒப்பற்றவரான உம்மால் பணிவுடன் வணங்கப்பட்டவனும், இத்தகு உயர்ந்த வார்த்தைகளால் புகழப்பட்டவனுமான அவன் யார்? நாங்கள் அதைக் கேட்க விரும்புகிறோம்” என்றனர். இப்படிச் சொல்லப்பட்ட பெரும்பாட்டன் {பிரம்மன்} தேவர்கள், மறுபிறப்பாள முனிவர்கள், கந்தர்வர்கள் ஆகிய அனைவரிடமும் இனிமையான வார்த்தைகளால் மறுமொழியாக, “தத் என்று அழைக்கப்படுபவன் எவனோ, உயர்ந்தவன் எவனோ, இப்போதும், எப்போதும் இருப்பவன் எவனோ, பரமாத்மா எவனோ, உயிரினங்களின் ஆன்மா எவனோ, பெருந்தலைவன் எவனோ, தேவர்களில் காளைகளே, எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவனான அவனிடமே நான் பேசிக் கொண்டிருந்தேன். அண்டத்தின் நன்மைக்காக, மனித குலத்தின் மத்தியில், வசுதேவன் குடும்பத்தில் பிறப்பெடுக்கும்படி, அந்த அண்டத்தின் தலைவன் {நாராயணன்} என்னால் வேண்டப்பட்டான்.

நான் அவனிடம் {பிரம்மனாகிய நான் நாராயணனிடம்}, “அசுரர்களின் படுகொலைக்காக மனிதர்களின் உலகில் உன் பிறப்பை எடுப்பாயாக” என்றேன். போரில் கொல்லப்பட்டவர்களும், கொடுமையான வடிவமும், பெரும் பலமும் கொண்டவர்களுமான அந்தத் தைத்தியர்களும், ராட்சசர்களும் மனிதர்களுக்கு மத்தியில் பிறந்திருக்கிறார்கள். உண்மையில், ஒப்பற்றவனும், வலிமைமிக்கவனுமான தலைவன் {நாராயணன்}, மனிதக் கருவறையில் பிறந்து, நரனின் துணையுடன் பூமியில் வாழ்வான். தேவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடிப் போரிட்டாலும் கூட, புராதனமானவர்களும், முனிவர்களில் சிறந்தவர்களுமான அந்த நரனையும், நாராயணனையும் வீழ்த்த இயலாது.

அளவிலா பிரகாசம் கொண்ட முனிவர்களான அந்த நரனும், நாராயணனும் மனிதர்களின் உலகில் ஒன்றாகப் பிறப்பெடுக்கும்போது மூடர்கள் அவர்களை அறியமாட்டார்கள். எவனுடைய ஆன்மாவில் இருந்து, முழு அண்டத்தின் தலைவனும், பிரம்மனுமான நான் உதித்தேனோ, உலகங்கள் அனைத்தின் தலைமை தெய்வமான அந்த வாசுதேவன், உங்கள் துதிகளுக்குத் தகுந்தவனாவான். தேவர்களில் சிறந்தவர்களே, பெரும் சக்தி கொண்டவனும், சங்கு, சக்கரம், கதாயுதம் ஆகியவற்றைத் தரித்தவனுமான அவன், வெறும் மனிதன் என்று எப்போதும் அலட்சியப்படுத்தப்படக் கூடாது.

தலைமையான புதிர் {பரமரகசியம்} அவனே, தலைமையான புகலிடம் அவனே, தலைமையான பிரம்மம் அவனே, தலைமையான மகிமை அவனே. சிதைவில்லாதவன், தோற்றமில்லாதவன், நித்தியமானவனும் அவனே. யாராலும் புரிந்துகொள்ளப்பட முடியாத அவனே, புருஷன் என்றும் பாடப்படுகிறான். தலைமையான சக்தி என்றும், தலைமையான மகிழ்நிலை என்றும் தேவ தச்சன் {விஸ்வகர்மா} அவனைப் பாடியிருக்கிறான்.

எனவே, இந்திரனைத் தங்கள் தலைமையாகக் கொண்ட தேவர்களோ, அசுரர்கள் அனைவருமோ, அளவிலா ஆற்றல் படைத்த தலைவன் வாசுதேவனை, அவன் ஒரு மனிதன்தானே என ஒருபோதும் அலட்சியம் செய்யக்கூடாது. வெறும் மனிதன்தானே ரிஷிகேசன் என்று பேசி அலட்சியம் செய்யும் மூட அறிவு கொண்டவன் இழிந்தவன் என்று அழைக்கப்படுவான்.

அந்தத் தெய்வீகமானவனை, படைக்கப்பட்டவையான அசைவன மற்றும் அசையாதனவற்றின் ஆன்மாவானவனை, (தன் மார்பில்) மங்கலகரமான சக்கரத்தைத் {ஸ்ரீவத்சம் என்ற மறுவைத்} தாங்கியிருப்பவனை, திகைப்பூட்டும் பிரகாசம் கொண்டவனை, தன் நாபியில் (பழங்காலத்} தாமரை உதித்தவனைக் குறித்து அறியாத ஒருவன் மக்களால் இருளில் மூழ்கியவன் {தமோ குணம் கொண்டவன்} என்று சொல்லப்படுகிறான். கிரீடத்தையும், கௌஸ்துப ரத்தினத்தையும் தரித்தவனும், தன் நண்பர்களின் அச்சங்களை விலக்குபவனும், உயர் ஆன்மா கொண்டவனுமான அவனை அவமதிப்பவன் அடர்த்தியான இருளில் {கோரமான அந்தகாரத்தில்} மூழ்குகிறான். தேவர்களில் சிறந்தவர்களே, இந்த உண்மைகள் அனைத்தையும் முறையாக அறிந்த அனைவராலும், உலகங்களின் தலைவனான அந்த வாசுதேவன் துதிக்கப்பட வேண்டும்” என்றான் {பிரம்மன்}.

பீஷ்மர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், “பழங்காலத்தில், தேவர்களிடமும், முனிவர்களிடமும் இவ்வார்த்தைகளைச் சொன்ன ஒப்பற்ற பெரும்பாட்டன் {பிரம்மன்}, அவர்கள் அனைவருக்கும் விடைகொடுத்தனுப்பித் தன் வசிப்பிடம் திரும்பினார். பிரம்மனால் சொல்லப்பட்ட அந்த வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள், கந்தர்வர்கள், முனிவர்கள், அப்சரசுகள் ஆகியோர் மகிழ்ச்சியால் நிறைந்து சொர்க்கத்திற்குத் திரும்பினார்கள்.

ஓ! ஐயா {துரியோதனா}, பண்பட்ட ஆன்மா கொண்ட, முனிவர்களின் சபையில் பழமையானவனான வாசுதேவனைக் குறித்த இவை என்னால் கேட்கப்பட்டன. மேலும், ஓ! சாத்திரங்களை நன்கறிந்தவனே {துரியோதனா}, ஜமதக்னியின் மகனான ராமன் {பரசுராமர்}, பெரும் அறிவு கொண்ட மார்க்கண்டேயர், வியாசர் மற்றும் நாரதர் ஆகியோரிடம் இருந்தும் நான் இதைக் கேட்டிருக்கிறேன்.

இவை யாவற்றையும் அறிந்தும், ஒப்பற்ற வாசுதேவனே நித்தியமான தலைவன் என்றும், உலகங்கள் அனைத்தின் தலைமையான தெய்வம் என்றும், பெரும் உரிமையாளன் என்றும், எவனில் இருந்து பிரம்மன் உதித்தானோ அவனே என்றும், அண்டத்தின் தகப்பன் என்றும் கேட்டும், மனிதர்களால் வாசுதேவன் ஏன் துதிக்கப்படவும், வழிபடப்படவும் கூடாது? ஓ! ஐயா {துரியோதனா}, “வில்தரித்த வாசுதேவனிடமும் {கிருஷ்ணனிடமும்}, பாண்டவர்களிடமும் ஒருபோதும் போருக்குச் செல்லாதே” என்று பண்பட்ட ஆன்மாக்களை உடைய முனிவர்களால் முன்பே தடுக்கப்பட்டும், மடமையினால் அஃது உன்னால் புரிந்து கொள்ளப்படவில்லை.

எனவே, நான் உன்னைக் கொடிய ராட்சசன் என்றே கருதுகிறேன். இதுதவிரவும், இருளில் {தமோ குணத்தில்} நீ மூழ்கியிருக்கிறாய். இதனால் தான் நீ கோவிந்தனையும் {கிருஷ்ணனையும்}, பாண்டுவின் மகனான தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} வெறுக்கிறாய். மனிதர்களின் மத்தியில் வேறு யார்தான் தெய்வீகமான நரனையும், நாராயணனையும் வெறுப்பார்கள்? இதனால் தான், ஓ! மன்னா {துரியோதனா}, அவன் {கிருஷ்ணன்} நித்தியமானவன் என்றும், மங்காதவன் என்றும், அண்டம் முழுவதும் படர்ந்தூடுருவி இருப்பவன் என்றும், மாற்றமில்லாதவன் என்றும், ஆட்சியாளன் என்றும், அனைத்தையும் படைத்துத் தாங்குபவன் {காப்பவன்} என்றும், உண்மையான இருப்பு என்றும் நான் உனக்குச் சொல்கிறேன்.

மூன்று உலகங்களையும் தாங்குபவன் அவனே, அசையும் மற்றும் அசையாத உயிரினங்களின் தலைமைத் தேவன் அவனே, பெரும் உரிமையாளன் அவனே, போராளி அவனே, வெற்றி அவனே, வெல்பவனும் அவனே, மேலும் இயற்கை அனைத்தின் தலைவனும் அவனே. ஓ! மன்னா {துரியோதனா}, நற்குணம் {சத்வ குணம்} நிறைந்தவனும், மேலும், இருள் {தமோ} மற்றும் பேராசையின் {ராஜச} குணங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டவனும் அவனே.

கிருஷ்ணன் எங்கிருக்கிறானோ அங்கே அறம் {தர்மம்} இருக்கும்; அறம் எங்கிருக்குமோ அங்கே வெற்றியிருக்கும். அவனது {கிருஷ்ணனுடைய} யோக மகிமையாலும், அவனது ஆன்ம யோகத்தாலுமே, ஓ! மன்னா {துரியோதனா}, பாண்டுவின் மகன்கள் ஆதரிக்கப்படுகின்றனர். எனவே, வெற்றி என்பது, நிச்சயம் அவர்களுடையதே. நீதியுடன் கூடிய அறிவையும், போரில் பலத்தையும் பாண்டவர்களுக்கு எப்போதும் அளிப்பவன் அவனே {கிருஷ்ணனே}; மேலும், ஆபத்துகளில் இருந்து எப்போதும் அவர்களைப் பாதுகாப்பவனும் அவனே {கிருஷ்ணனே}.

அனைத்துயிர்களில் ஊடுருவியிருப்பவனும், அருளுடன் எப்போதும் இருப்பவனுமான அவனே நித்திய தேவனாவான். நீ எவனைக் குறித்துக் கேட்டாயோ, அவன், வாசுதேவன் {கிருஷ்ணன்} என்ற பெயரால் அறியப்படுகிறான். தங்களுக்கெனத் தனித்துவமான பண்புகளைக் கொண்ட பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும், சூத்திரர்களும், தங்கள் தனிப்பட்ட கடமைகளை ஆற்றி, ஒடுங்கிய இதயங்களுடனும் பணிவுடனும் அவனையே சேவித்து வழிபடுகிறார்கள். துவாபர யுக முடிவின் நெருக்கத்திலும், கலி யுகத் தொடக்கத்திலும் அர்ப்பணிப்புள்ள பக்தர்களால் சங்கர்ஷணனுடன் {பலராமனுடன்} சேர்த்துப் பாடப்படுபவன் அவனே. யுகத்துக்குப் பின் யுகத்தையும், தேவர்கள் மற்றும் மனிதர்களின் உலகங்களையும், கடலால் சூழப்பட்ட நகரங்கள் மற்றும் மனிதர்கள் வசிக்கும் பகுதிகள் அனைத்தையும் படைத்தவன் வாசுதேவனே {கிருஷ்ணனே}” {என்றார் பீஷ்மர்}.

“கிருஷ்ணனே பரம்பொருள்!” பீஷ்மர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 067-துரியோதனனுக்குக் கிருஷ்ணனின் மகிமைகளை எடுத்துச் சொல்லும் பீஷ்மர்…

துரியோதனன் {பீஷ்மரிடம்}, “அனைத்து உலகங்களிலும் வாசுதேவனே {கிருஷ்ணனே} பரம்பொருள் {மஹாபூதஸ்வரூபி} எனச் சொல்லப்படுகிறான். ஓ! பாட்டா {பீஷ்மரே}, அவனது {கிருஷ்ணனது} தோற்றத்தையும் {ஆகமத்தையும்}, மகிமையையும் {பிரதிஷ்டையையும்} நான் அறிய விரும்புகிறேன்” என்றான்.

பீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், “வாசுதேவனே {கிருஷ்ணனே} பரம்பொருள். தேவர்கள் அனைவரின் தேவன் அவன். ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட {புண்டரீகாக்ஷனான} அவனுக்கும் மேன்மையானவன் எவனும் காணப்படவில்லை. கோவிந்தனை {கிருஷ்ணனை}, அற்புதம் நிறைந்தவன் என்றும், மிக உயர்ந்தவன் என்றும் அனைத்துமானவன் என்றும், ஆத்மத்திரள் என்றும், உயர்ந்த ஆன்மா என்றும், பரம புருஷன் என்றும் மார்க்கண்டேயர் சொல்கிறார்.

நீர், காற்று மற்றும் நெருப்பு ஆகிய மூன்றையும் படைத்தவன் அவனே. உலகங்கள் அனைத்தின் தலைவனான அந்தத் தெய்வீக உரிமையாளனே இந்தப் பூமியைப் படைத்தான். ஒப்பற்ற ஆன்மா கொண்ட அந்தப் பரம்பொருள் தன்னை நீரில் கிடத்தி {சயனம்} கொண்டான். அனைத்து வகைச் சக்திகளாலான அந்தப் பரம்பொருள் {சர்வதேவஸ்வரூபி}, அங்கே யோகத்துயில் கொண்டான்.

தன் வாயிலிருந்து நெருப்பையும், சுவாசத்தில் இருந்து காற்றையும் உண்டாக்கினான். மங்கா மகிமை கொண்ட அவன் தன் வாயிலிருந்து பேச்சையும், வேதங்களையும் உண்டாக்கினான். இப்படியே முதலில் அவன் உலகங்களையும், தேவர்களையும், பல்வேறு வகையான முனிவர்களையும் படைத்தான். பிறகு அவன் அனைத்து உயிர்களின் சிதைவையும், மரணத்தையும், பிறப்பையும், வளர்ச்சியையும் படைத்தான்.

அறமும் அவனே, அற ஆன்மாவும் அவனே. வரங்களையும், (நமது) விருப்பங்கள் அனைத்தையும் அளிப்பவன் அவனே. செயல்படுபவனும், செயலும் அவனே. தெய்வீக உரிமையாளன் அவனே. முன்பே கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றைப் படைத்தவன் அவனே; அண்டத்தைப் படைத்தவன் அவனே. ஒப்பற்ற ஆன்மா கொண்டவன் அவனே; மங்கா மகிமை கொண்ட உரிமையாளன் அவனே.

அனைத்து உயிர்களுக்கும் முன்பு பிறந்த சங்கர்ஷணனைப் படைத்தவன் அவனே. மலைகளுடன் கூடிய உலகத்தையும் உயிரினங்கள் அனைத்தையும் தாங்குபவனும், அனந்தன் என்று அறியப்படுபவனுமான தெய்வீக சேஷனைப் படைத்தவன் அவனே. பரமசக்தி படைத்த அவனையே மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} தங்கள் யோகத் தியானத்தின் மூலம் அறிகிறார்கள். அவனது செவிகளின் சுரப்பில் {அழுக்காக இருக்க வேண்டும்} இருந்து {கர்ணமலத்திலிருந்து} உதித்தவனும், கடுமையானவனும் கொடுஞ்செயல்கள் புரிபவனும், மது என்ற பெயரால் அறியப்பட்டவனுமான பெரும் அசுரன், பிரம்மனை அழிக்க முயன்ற போது அந்தப் பரம்பொருளால் கொல்லப்பட்டான். ஓ! ஐயா {துரியோதனா}, அந்த மது படுகொலை செய்யப்பட்டதன் விளைவாகத் தேவர்கள், தானவர்கள், மனிதர்கள், முனிவர்கள் ஆகியோர், ஜனார்த்தனனை மதுசூதனன் {மதுவைக் கொன்றவன்} என்று அழைக்கிறார்கள்-பெரும் பன்றி {வராகம்} அவனே. பெரும் சிங்கம் {நரசிம்மம்} அவனே. மூன்று அடி தலைவன் {குள்ளன் –வாமனன்} அவனே. அனைத்து உயிர்களின் தாயும் தந்தையும் அவனே-தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அவனுக்கு மேலானவன் எவனும் இருந்ததில்லை, இனியும் இருக்க மாட்டான்.

ஓ! மன்னா {துரியோதனா}, தன் வாயிலிருந்து பிராமணர்களைப் படைத்தவன் அவனே; தன் இரு கைகளில் இருந்து க்ஷத்திரியர்களையும், தன் தொடைகளிலிருந்து,  வைசியர்களையும் படைத்தவன் அவனே. தன் கால்களில் இருந்து சூத்திரர்களைப் படைத்தவனும் அவனே.

கடமையுணர்வுடன் அவனுக்காகக் காத்திருந்து, நோன்புகள் நோற்று முழு நிலவிலும் {பௌர்ணமியிலும்}, புது நிலவிலும் {அமாவாசையிலும்} தியானிக்கும் ஒருவன், பிரம்மம் மற்றும் யோகத்தின் சாரமானவனும், வடிவம் கொண்ட உயிரினங்கள் அனைத்துக்கும் புகலிடமாக இருப்பவனுமான அந்தத் தெய்வீகக் கேசவனை நிச்சயமாக அடைவான் [1]. கேசவன், உயர்ந்த சக்தி வாய்ந்தவனும், உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டனும் ஆவான். ஓ! மன்னா {துரியோதனா}, முனிவர்கள் அவனை ரிஷிகேசன் (புலன்களின் தலைவன்) என்று அழைக்கிறார்கள். அவனை ஆசானாகவும், தந்தையாகவும், உரிமையாளனாகவும் அனைவரும் அறிய வேண்டும்(தவத்தில் நிலைபெற்றவனும், ஒளியுள்ளவனும், அனைத்துயிர்களுக்கும் ஆதாரமானவனும், அமாவாசையில் பிரம்மரூபியாகவும், பௌர்ணமியில் யோகரூபியாகவும் இருக்கும் கேசவனை வழிபடுபவன் அதிக நன்மையை அடைவான்.)எவனிடம் கிருஷ்ணன் மனநிறைவு கொள்கிறானோ, அவனால் அழியாத (அருள்) உலகங்கள் வெல்லப்படுகிறது. அச்சந்தரும் இடத்தில் கேசவனின் பாதுகாப்பை நாடுபவனும், இந்த விளக்கத்தைப் படிப்பவனும் மகிழ்ச்சியை அடைந்து அனைத்து செழிப்புகளையும் அடைவான். கிருஷ்ணனை அடைந்த மனிதர்கள் எவரும் வஞ்சிக்கப்பட்டதில்லை. பெரும் பயங்கரங்களில் மூழ்கிவிட்டவர்களை எப்போதும் காப்பவன் ஜனார்த்தனனே {கிருஷ்ணனே} ஆவான்.

ஓ! பாரதா {துரியோதனா}, உள்ளபடி இதைப் புரிந்து கொண்ட யுதிஷ்டிரன், தன் முழு ஆன்மாவுடன், பூமியின் தலைவனும், யோகத்தின் தலைவனும், உயர்வான அருள் நிறைந்தவனுமான கேவசனின் {கிருஷ்ணனின்} பாதுகாப்பை நாடியிருக்கிறான்” {என்றார் பீஷ்மர்}.

“கிருஷ்ணனிடம் அன்பு கொள்!” பீஷ்மர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 068-முனிவர்கள் செய்த கிருஷ்ணத்துதி; கிருஷ்ணனின் அன்புக்குரியவர்களான பாண்டவர்களுடன் சமாதானத்துடன் இருக்கும்படி துரியோதனனிடம் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், “ஓ! மன்னா {துரியோதனா}, பிரம்மனாலேயே உச்சரிக்கப்பட்ட இந்தப் பாடலை என்னிடம் கேட்பாயாக. பழங்காலத்தில், இந்தப் பாடல், மறுபிறப்பாள முனிவர்களாலும், தேவர்களாலும் பூமியில் (மனிதர்களுக்குச்) சொல்லப்பட்டதாகும். {அது பின்வருமாறு}…

“தேவர்களின் தேவன் {இந்திரன்}, சாத்யர்கள் மற்றும் தேவர்கள் ஆகியோரின் தலைவன் என்றும், உரிமையாளன் {ஈஸ்வரன்} என்றும், உலகங்களைப் படைத்தவனின் இயல்பை அறிந்தவரான நாரதர் உன்னை விளக்குகிறார். கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் {முன்பும், இப்போதும், எப்போதும் இருப்பவன்} என்றும், வேள்விகளின் வேள்வி என்றும், தவங்களின் தவம் என்றும் மார்க்கண்டேயர் உன்னைச் சொல்கிறார். தேவர்களின் தேவன் என்றும், உனது வடிவமே விஷ்ணுவின் புராதன {ஆதி [அ] பழங்கால} வடிவம் என்றும் ஒப்பற்ற பிருகு சொல்கிறார். சக்ரனையும் {இந்திரனையும்}, தேவர்களுக்குத் தேவனையும், அனைத்து உயிர்களையும் நிலைநிறுத்துபவன் வசுக்களின் வாசுதேவனே என்று துவைபாயனர் {வியாசர்} சொல்கிறார்.

பழங்காலத்தில் உயிரினங்களைப் படைக்கும் நிகழ்வின் போது, படைப்பின் தந்தை தக்ஷன் என்று முனிவர்கள் உன்னைச் சொன்னார்கள். அனைத்து உயிரினங்களையும் படைப்பவன் நீயே என்று அங்கிரஸ் சொல்கிறார். வடிவமில்லா அனைத்தும் உன் உடல் என்றும், வடிவம் படைத்தவை உன் மனம் என்றும், உனது சுவாசத்தின் விளைவே தேவர்கள் அனைவரும் என்றும் தேவலர் சொல்கிறார். ஆகாயம் உனது தலைகளால் படர்ந்திருக்கிறது, உனது கரங்களோ பூமியைத் தாங்குகின்றன. உனது வயிற்றிலே மூன்று உலகங்களும் இருக்கின்றன. தவத்தால் மேன்மையுற்ற மனிதர்கள் உன்னை இப்படியே அறிகிறார்கள்.

ஆன்மாவைத் தரிசித்து மனம் நிறைந்த முனிவர்களுடன் சத்-ன் சத்-ஆக [1] இருப்பவன் நீயே. ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, தயாள மனம் கொண்டவர்களும், போரில் புறமுதுகிடாதவர்களும், உயர்வின் எல்லையாக அறநெறியைக் கொண்டவர்களுமான அரச முனிகளின் ஒரே புகலிடமாக இருப்பவன் நீயே.” {பிரம்மனின் துதி இங்கு முடிகிறது}.

சனத்குமாரராலும், யோகத்துடன் கூடிய பிற தவசிகளாலும் அந்த ஒப்பற்ற பரம்பொருளான ஹரி {கிருஷ்ணன்}, இப்படியே துதிக்கப்பட்டு வழிபடப்படுகிறான். ஓ! ஐயா {துரியோதனா}, கேசவனைக் {கிருஷ்ணனைக்} குறித்த உண்மை அனைத்தும், சுருக்கமாகவும், விபரமாகவும் உனக்கு இப்போது சொல்லப்பட்டது. உனது இதயத்தில் கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} அன்பு கொள்வாயாக” {என்றார் பீஷ்மர்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இந்தப் புனிதக் கதையைக் கேட்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கேசவனையும், வலிமைமிக்கத் தேர்வீரர்களான இந்தப் பாண்டுவின் மகன்களையும் {பாண்டவர்களையும்} உயர்வாகக் கருத ஆரம்பித்தான்.

பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மீண்டும் உமது மகனிடம் {துரியோதனனிடம்} பேசிய சந்தனுவின் மகன் பீஷ்மர் {துரியோதனனிடம்}, “ஓ! மன்னா {துரியோதனா}, நீ கேட்டவையும், உயர் ஆன்ம கேசவன் {கிருஷ்ணன்} மற்றும் நரனின் மகிமை ஆகியவற்றையும் உள்ளபடியே நீ இப்போது கேட்டாய். நரன் மற்றும் நாராயணன் ஆகிய இருவரும்,  மனிதர்கள் மத்தியில் தங்கள் பிறப்பை எடுத்ததின் நோக்கத்தையும் நீ கேட்டாய். அந்தப் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} ஏன் வெல்லப்பட முடியாதவர்களாகவும், போரில் வீழ்த்தப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கும், ஓ! மன்னா {துரியோதனா}, அந்த வீரர்கள் ஏன் போரில் கொல்லப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதற்குமான காரணமும் உனக்குச் சொல்லப்பட்டது.

ஒப்பற்ற பாண்டுவின் மகன்களிடம் {பாண்டவர்களிடம்}, கிருஷ்ணன் பெரும் அன்பைக் கொண்டிருக்கிறான். இதற்காகவே நான், ஓ! மன்னர்களின் மன்னா {துரியோதனா}, “பாண்டவர்களிடம் சமாதானமேற்படட்டும்” என்று சொல்கிறேன். உன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு, (உன்னைச் சுற்றியுள்ள) வலிமைமிக்க உனது சகோதரர்களுடன் பூமியை நீ அனுபவிப்பாயாக. தெய்வீகமான நரனையும், நாராயணனையும் அவமதித்தால், நிச்சயம் நீ அழிவையே அடைவாய்” என்றார் {பீஷ்மர்}.

இவ்வார்த்தைகளைச் சொன்ன உமது தந்தை {பீஷ்மர்} அமைதியடைந்தார். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னனுக்கு {துரியோதனனுக்கு} விடைகொடுத்து அனுப்பிய அவர் {பீஷ்மர்}, தனது பாசறைக்குத் திரும்பினார். ஒப்பற்ற பாட்டனை {பீஷ்மரை} வழிபட்ட மன்னனும் {துரியோதனனும்} தனது பாசறைக்குத் திரும்பினான். பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்த இரவை உறக்கத்தில் கழிக்கத் தன்னைத் தனது வெண்படுக்கையில் கிடத்திக் கொண்டான்” {என்றான் சஞ்சயன்}.

ஐந்தாம் நாள் போர்த் தொடக்கம்! – பீஷ்ம பர்வம் பகுதி – 069-போரின் ஐந்தாம் நாள் தொடக்கத்தில் கௌரவர்கள் மகர வியூகத்தையும், பாண்டவர்கள் ஸ்யேன வியூகத்தையும் அமைத்துக் கொண்டு போரைத் துவக்கியது; சிகண்டியைத் தவிர்த்த பீஷ்மர்; துரோணரைத் தவிர்த்த சிகண்டி; பீஷ்மரைக் காக்க சென்ற துரியோதனன்; அவரைத் தாக்க சென்ற பாண்டவர்கள்….

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த இரவு கடந்து, சூரியன் உதித்ததும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவ்விரு படைகளும் போருக்காக ஒன்றையொன்று அணுகின. ஒன்றையொன்று பார்த்த அந்தப் படைகள், கோபம் தூண்டப்பட்ட மற்றொன்றை நோக்கி அதை வீழ்த்தும் விருப்பத்துடன் ஒன்றுசேர்ந்து சென்றன. உமது தீய கொள்கையின் விளைவாக, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கவசம் பூண்ட பாண்டவர்களும், தார்தராஷ்டிரர்களும் ஒருவரை ஒருவர் தாக்க அணிவகுத்தனர்.

பீஷ்மரால் அனைத்துப் புறங்களிலும் பாதுகாகப்பட்ட படை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மகர வடிவத்தில் [1] இருந்தது. அதே போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களும், (தங்கள் துருப்புகளைக் கொண்டு) தாங்கள் அமைத்த அணிவகுப்பைப் {வியூகத்தைப்} பாதுகாத்தனர். பிறகு, தேர்வீர்களில் முதன்மையான உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் தேர்ப்படையால் ஆதரிக்கப்பட்டு முன்னணியில் முன்னேறிச் சென்றார். அவர்கள் {கௌரவர்கள்} போருக்குத் தயாராக இருப்பதைக் கண்டவர்களான ஒப்பற்ற பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, அணிவகுப்புகளின் இளவரசனும், ஒப்பற்றதுமான ஸ்யேனம் [2] என்று அழைக்கப்படும் அணிவகுப்பில் {வியூகத்தில்} தங்கள் துருப்புகளை அணிவகுத்தனர்.

அதன் அலகில் பெரும் பலம் கொண்ட பீமசேனன் ஒளிர்ந்து கொண்டிருந்தான். அதன் கண்கள் இரண்டிலும் சிகண்டியும், பிருஷத குல திருஷ்டத்யும்னனும் இருந்தார்கள். அதன் தலையில் கலங்கடிக்கப்பட முடியா ஆற்றல் கொண்ட வீரன் சாத்யகி இருந்தான். மேலும், அதன் கழுத்தில் காண்டீவத்தை அசைத்தபடியே அர்ஜுனன் இருந்தான்.

அதன் இடது சிறகில் உயர் ஆன்மா கொண்டவனும், அருளப்பட்டவனுமான துருபதன் தனது மகனுடன், அனைத்து வகைப் படைகளையும் கொண்ட ஓர் அக்ஷௌஹிணியால் ஆதரிக்கப்பட்டு இருந்தான். ஓர் அக்ஷௌஹிணியைக் கொண்ட கேகயர்களின் மன்னன் (அந்த அணிவகுப்பின்) வலது சிறகில் அமைந்தான். அதன் {அந்த அணிவகுப்பின்} பின்புறம் திரௌபதியின் மகன்களும், பெரும் ஆற்றலைக் கொண்ட சுபத்திரையின் மகனும் {அபிமன்யுவும்} இருந்தனர். அதன் வால் பகுதியில் இரட்டை சகோதரர்களால் {நகுல சகாதேவர்களால்} ஆதரிக்கப்பட்டவனும், அற்புத ஆற்றலைக் கொண்டவனுமான வீர மன்னன் யுதிஷ்டிரன் இருந்தான்.

அதைத் தொடர்ந்து நடந்த போரில், (கௌரவர்களின்) அந்த மகர வியூகத்தை அதன் வாய் வழியாக ஊடுருவிச் சென்ற பீமன், பீஷ்மரை அடைந்து அவரைத் தன் கணைகளால் மறைத்தான். அப்போது, பெரும் ஆற்றலைக் கொண்ட பீஷ்மர், போருக்கு அணிவகுத்திருந்த பாண்டவர்களின் வீரர்களைத் தன் வலிமைமிக்க ஆயுதங்களால் அந்தப் பெரும்போரில் குழப்பினார்.

இப்படி (பாண்டவப் படையின்) அந்தப் போராளிகள் குழப்பப்பட்ட போது, விரைந்து வந்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, போர்க்களத்தின் முன்னணியில் இருந்த பீஷ்மரை ஓராயிரம் {1000} கணைகளால் துளைத்தான். அம்மோதலில் பீஷ்மரால் ஏவப்பட்ட ஆயுதங்களுக்குப் பதிலடி கொடுத்த அர்ஜுனன், உற்சாகமிக்கத் தன் தனிப்பட்ட படைப்பிரிவால் ஆதரிக்கப்பட்ட மோதலுக்குத் தயாராக இருந்தான்.

அப்போது, பெருந்தேர் வீரனும், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவனுமான மன்னன் துரியோதனன், பயங்கரமாகக் கொல்லப்படும் தன் துருப்புகளைக் கண்டு, (முந்தைய நாளில்) தன் தம்பிகள் படுகொலை செய்யப்பட்டதையும் நினைவு கூர்ந்து, பரத்வாஜரின் மகனை {துரோணரை} நோக்கி விரைந்து வந்து, அவரிடம், “ஓ! ஆசானே, ஓ! பாவமற்றவரே, எப்போதும் எனது நலத்தை விரும்புபவர் நீரே. உம்மையும், பாட்டனான பீஷ்மரையும் நம்பி போரில் தேவர்களையே வெற்றி கொள்வதில் ஐயமில்லை எனும் போது, சக்தியும் ஆற்றலும் அற்ற பாண்டுவின் மகன்களை வெல்வதில் என்ன இருக்கிறது?

அருளப்பட்டிருப்பீராக, பாண்டவர்கள் கொல்லப்படும் வகையில் செயல்படுவீராக. உமது மகனால் {துரியோதனனால்} இப்படிச் சொல்லப்பட்ட துரோணர், சாத்யகியின் பார்வைக்கெதிரிலேயே பாண்டவ அணிவகுப்புக்குள் ஊடுருவினார். அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பரத்வாஜர் மகனை {துரோணரைச்} சாத்யகி தடுத்தான். (அதன் பேரில்), காணப் பயங்கராமன கடுமையான நிகழ்வுகளுடன் கூடிய போர் உண்டானது. இவ்வளவு நேரமும் சிரித்துக் கொண்டிருந்த வரும், பெரும் ஆற்றல் படைத்தவருமான பரத்வாஜரின் மகன் {துரோணர்}, கோபத்தால் தூண்டப்பட்டு, பத்து {10} கணைகளால் சிநியின் பேரனுடைய {சாத்யகியின்} தோள்ப்பூட்டைத் துளைத்தார்.

கோபத்தால் தூண்டப்பட்ட பீமசேனனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையான துரோணரிடம் இருந்து சாத்யகியைக் காக்க விரும்பி (பல கணைகளால்) பரத்வாஜரின் மகனைத் {துரோணரைத்} துளைத்தான்.

துரோணர், பீஷ்மர், சல்லியன் ஆகியோரும் கோபத்தால் தூண்டப்பட்டு, அந்தப் போரில் பீமசேனனைத் தங்கள் கணைகளால் மறைத்தனர். இதனால் சினம்மூண்ட அபிமன்யுவும், திரௌபதியின் மகன்களும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உயர்த்தப்பட்ட ஆயுதங்களைக் கொண்ட அவ்வீரர்கள் அனைவரையும் தங்கள் கூர்முனைக் கணைகாளல் துளைத்தனர்.

பிறகு, அந்தக் கடும்போரில் பெரும் வில்லாளியான சிகண்டி, பாண்டவர்களுக்கு (இப்படி) நேர்ந்ததை நினைத்துக் கோபத்தால் தூண்டப்பட்டு, பீஷ்மர், துரோணர் ஆகிய அந்த வலிமைமிக்க வீரர்கள் இருவரையும் எதிர்த்து விரைந்தான். மேகங்களின் முழக்கங்களை ஒத்த நாணொலி கொண்ட தனது வில்லை உறுதியாகப் பிடித்திருந்த அந்த வீரன் {சிகண்டி}, சூரியனையே மறைக்கும்படி தன் கணைகளால் விரைவாகத் தனது எதிராளிகளை மறைத்தான். எனினும் சிகண்டிக்கு முன் வந்த பாரதர்களின் பாட்டன் {பீஷ்மர்}, அவனது {சிகண்டியின்}, பெண்பால் தன்மையை நினைவு கூர்ந்து அவனைத் {சிகண்டியைத்} தவிர்த்தார்.

பிறகு உனது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்ட துரோணர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த அழுத்தத்தில் இருந்து பீஷ்மரைக் காக்க விரும்பி போருக்கு விரைந்தார். எனினும், ஆயுதம் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையான அந்தத் துரோணரை அணுகிய சிகண்டி, யுக முடிவில் தோன்றும் நெருப்பைப் போலச் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் அவ்வீரரின் {துரோணரின்} மீது கொண்ட அச்சத்தால் அவரைத் தவிர்த்தான்.

பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும்படையுடன் கூடிய உமது மகன் {துரியோதனன்}, பெரும்புகழை வெல்ல விரும்பி பீஷ்மரைக் காக்கச் சென்றான். வெற்றியில் தங்கள் இதயங்களை உறுதியாக நிலைக்கச் செய்திருந்த பாண்டவர்களும் அங்கே சென்றனர். பிறகு, வெற்றியையும், புகழையும் விரும்பிய அந்த இரு படைகளின் போராளிகளுக்கும் இடையில் அங்கே நடைபெற்ற போர், (பழங்காலத்தில்) தேவர்களுக்கும், தானவர்களுக்கு இடையில் நடந்த போரைப் போன்றே, கடுமையானதாகவும், உயர்ந்த அற்புதங்கள் நிறைந்ததாகவும் இருந்தது” {என்றான் சஞ்சயன்}.

கடும்போர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 070-கடுமையாகப் போரிட்ட பீஷ்மர்; அங்கங்களாலும், தலைகளாலும், விலங்குகளாலும், ஆயுதங்களாலும் நிரம்பியிருந்த போர்க்களத்தின் வர்ணனை; போர்க்களத்தில் ஓடிய குருதிப் புனல்….

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, சந்தனுவின் மகனான பீஷ்மர், பீமசேனன் மீது கொண்ட அச்சத்தால், உமது மகன்களைக் காக்கும் பொருட்டுக் கடுமையாகப் போரிட்டார். கௌரவ மற்றும் பாண்டவப் படைகளின் மன்னர்களுக்கிடையில் நடைபெற்ற அந்தப் போர், தீவிர அச்சத்தை உண்டாக்குவதாகவும், பெரிய வீரர்களை அழிப்பதாகவும் இருந்தது.

இவ்வளவு கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும், பிரம்மாண்டமானதாகவும் இருந்த அந்தப் போரில் எழுந்த பேரொலி வானத்தையே தொட்டது. பெரும் யானைகளின் பிளிறல்கள், குதிரைகளின் கனைப்பொலிகள், சங்கொலிகள், பேரிகை ஒலிகள் ஆகியவற்றின் விளைவால் எழுந்த ஆரவாரம் {காதுகளைச்} செவிடாக்குவதாக இருந்தது. வெற்றிக்காகப் போரிட்டவர்களும், பெரும் ஆற்றலைக் கொண்டவர்களுமான வலிமைமிக்கப் போராளிகள், மாட்டுக் கொட்டகையில் {ஒன்றையொன்று நோக்கி} முழங்கும் காளைகளைப் போல ஒருவரை ஒருவர் நோக்கி முழங்கினர்.

அந்தப் போரில், கூர்முனைக் கணைகளால் வெட்டப்பட்டு தொடர்ச்சியாக விழுந்து கொண்டே இருந்த தலைகள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, வானத்தில் இருந்து கல்மழை விழும் தோற்றத்தை ஏற்படுத்தின. உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, காது குண்டலங்கள், தலைப்பாகைகள், ஒளிரும் தங்க ஆபரணங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்த எண்ணற்ற தலைகள் போர்க்களத்தில் கிடந்தன. பல்லங்களால் துண்டாக்கப்பட்ட அங்கங்களாலும், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட தலைகளாலும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கரங்களாலும் பூமி மறைக்கப்பட்டிருந்தது.

கவசம் பூண்ட உடல்களும், ஆபரணங்கள் தரித்த கரங்களும், சிவந்த கடைக்கண்களுடன் நிலவைப் போன்றிருந்த அழகிய முகங்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் அனைத்து அங்கங்களும், ஒரு கணத்தில், களம் முழுவதும் பரவிக் கிடந்தன. (போர்வீரர்களால் எழுப்பப்பட்ட) புழுதி, அடத்தியான மேகம் போலவும், அழிவுக்கான பிரகாசமான கருவிகள், மின்னலின் கீற்றுகள் போலவும் தெரிந்தன. ஆயுதங்களால் உண்டான ஒலி, இடியின் முழக்கத்தைப் பிரதிபலித்தது.

குருக்களுக்கும் {கௌரவர்களுக்கும்}, பாண்டவர்களுக்கும் இடையில் நடந்ததும், கடுமையானதும், அச்சத்தைத் தருவதுமான அந்த ஆயுதங்களின் பாதை {போர்}, அங்கே இரத்த ஆறையே ஓட வைத்தது. பயங்கரமானதும்,, கடுமையானதும், மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதும், அச்சந்தருவதுமான அந்தப் போரில், வீழ்த்தப்பட இயலாத க்ஷத்திரிய வீரர்கள் தங்கள் கணை மாரியைப் பொழிந்தனர்.

உமது படையின் யானைகளும், எதிரிகளின் யானைகளும், அந்தக் கணை மழையால் பீடிக்கப்பட்டு, உரக்க அலறி மூர்க்கத்துடன் இங்கேயும் அங்கேயும் ஓடின. கோபமுள்ளவர்கள், துணிவுள்ளவர்கள், அளவற்ற ஆற்றல் படைத்தவர்களான வீரர்களுடைய விற்களின் நாணொலிகள், விரலுறைகளின் மீது நாண்கயிறுகள் தட்டும் ஒலி ஆகியவற்றில் ஒன்றையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. இரத்தத் தடாகம் போல் காட்சியளித்த களம் முழுவதிலும், தலையில்லா உடல்கள் {முண்டங்கள்} எழுந்து நிற்கவே, மன்னர்கள், தங்கள் எதிரிகளைக் கொல்லும் முனைப்புடன் போருக்கு விரைந்து ஓடினர்.

அளவிலா சக்தி கொண்டவர்களும், கனத்த தடிகளைப் போன்ற கரங்களைக் கொண்டவர்களுமான துணிச்சல்மிக்க வீரர்கள், தங்கள் கணைகளாலும், ஈட்டிகளாலும், கதாயுதங்களாலும், வளைந்த வாள்களாலும் ஒருவரை ஒருவர் கொன்றனர். அங்குசம் மூலம் தங்களை வழிநடத்தும் பாகன்களை இழந்து, கணைகளால் துளைக்கப்பட்ட யானைகளளும், குதிரையோட்டிகள் இல்லாத குதிரைகளும் எல்லாப்புறங்களிலும் மூர்க்கமாக ஓடிக்கொண்டிருந்தன. ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, உமது படையைச் சேர்ந்த பல வீரர்களும், எதிரிப் படையைச் சேர்ந்த பல வீரர்களும் கணைகளால் ஆழமாகத் துளைக்கப்பட்டு எம்பிக் குதித்துக் கீழே விழுந்தனர்.

பீமனுக்கும், பீஷ்மருக்கும் இடையில் நடைபெற்ற அம்மோதலில், கரங்கள் மற்றும் தலைகளின் குவியல்களும், விற்கள், கதாயுதங்கள், பரிகங்கள், கைகள், தொடைகள், கால்கள், ஆபரணங்கள், கங்கணங்கள் ஆகியவற்றின் குவியல்களும் களமெங்கும் பரவிக் கிடந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புறமுதுகிடாதவையும், பெரும் உடல்படைத்தவையுமான யானைகளின் உடல்களும், குதிரைகளின் உடல்களும், தேர்களும் களம் முழுவதும் அங்கேயும், இங்கேயும் எனப் பரவிக் கிடந்தன.

விதியால் ஏவப்பட்ட க்ஷத்திரிய வீரர்கள், கதாயுதங்கள், வாள்கள், வேல்களும் மற்றும் நேரான கணைகள் ஆகியவற்றால் ஒருவரையொருவர் கொன்றனர். பெரும் வீரம் படைத்தவர்களும், போரில் சாதனை படைத்தவர்களுமான பிறர், இரும்பாலான பரிகங்களைப் {முள் பதித்த தண்டாயுதங்களைப்} போன்ற வெறுங்கரங்களால் ஒருவருடன் மற்றவர் மோதினர். உமது படையின் மற்ற பிற துணிச்சல்மிக்க வீரர்கள், பாண்டவப் படையின் போராளிகளுடன் ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மடக்கப்பட்ட கைமுட்டிகளாலும் {முஷ்டிகளாலும்}, கால்முட்டிகளாலும், அறைந்து கொண்டும், குத்திக் கொண்டும் போரில் ஈடுபட்டனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விழுந்த மற்றும் வீழ்ந்து கொண்டிருந்தவர்கள், வேதனையில் தரையில் புரண்டு கொண்டிருந்தவர்கள் ஆகிய வீரர்களுடன் கூடிய போர்க்களம் முழுவதையும் காணப் பயங்கரமாக இருந்தது. தேர்களை இழந்த தேர்வீரர்கள், அற்புத வாள்களைப் பிடித்துக் கொண்டு, படுகொலையை விரும்பி, ஒருவரை நோக்கி ஒருவர் விரைந்தனர்.

கலிங்கர்களின் பெரும்படைப்பிரிவால் சூழப்பட்ட மன்னன் துரியோதனன், பீஷ்மரைத் தலைமையில் நிறுத்திக் கொண்டு, பாண்டவர்களை நோக்கி விரைந்தான். அதே போல, விருகோதரனை {பீமனை} ஆதரித்தவர்களும், விலங்குக் கூட்டங்களைச் சொந்தமாகக் கொண்டவர்களுமான பாண்டவப் போராளிகளும், கோபத்தால் தூண்டப்பட்டு, பீஷ்மரை எதிர்த்து விரைந்தனர்.

பீஷ்மரை நோக்கி விரைந்த அர்ஜுனன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 071-பீஷ்மரை எதிர்த்த அர்ஜுனன்; அர்ஜுனனைக் கண்ட கௌரவப்படை அஞ்சியது; சகுனியைச் சூழ்ந்த நின்ற கலிங்கனும், ஜெயத்ரதனும்; ஒருவரோடு ஒருவர் மோதிய வீரர்களின் பெயர்கள்; கள நிலவர வர்ணிப்பு; போர்க்களத்தில் குதிரைகள் மற்றும் யானைகளுக்கு நேர்ந்த கதி…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பீஷ்மருடன் போரில் ஈடுபடும் தனது சகோதரர்களையும், மற்றும் பிற மன்னர்களையும் கண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் ஆயுதங்களை உயர்த்தியபடி கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} எதிர்த்து விரைந்தான். பாஞ்சஜன்யத்தின் {சங்கின்} முழக்கத்தையும், காண்டீவ வில்லின் நாணொலியையும் கேட்டும், பிருதையின் {குந்தியின்} மகனுடைய {அர்ஜுனனுடைய} கொடிமரத்தைக் கண்டும் எங்கள் இதயங்களில் பெரும் அச்சம் புகுந்தது.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நாங்கள் கண்ட காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} கொடிமரம், சிங்க வால் பொறியைத் தாங்கி வானத்தில் சுடர்விடும் மலையைப் போலத் தெரிந்தது. அழகும், தெய்வீகக் கைவண்ணமும், பல்வேறு நிறங்களும் கொண்ட அது {கொடி}, மரங்களால் தடை செய்யப்படாதவாறு உதித்தெழுந்த எரிக்கோளைப் போலத் தெரிந்தது. அந்தப் போரில், கைப்பிடியின் பின்புறம் பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்டதும், ஆகாயத்தின் மேகத்திரள்களுக்கு மத்தியில் மின்னலின் கீற்றைப் போல அழகாகத் தெரிந்ததுமான காண்டீவத்தைப் போர்வீரர்கள் கண்டனர்.

உமது படையின் போராளிகளைக் கொல்லும்போது, அர்ஜுனன் செய்த முழக்கங்கள் இந்திரனின் முழக்கங்களுக்கு நிகரானவையாக இருந்தன. அவனது {அர்ஜுனனின்} உள்ளங்கைகளின் தட்டல்களும் அச்சத்தை ஊட்டும் வகையில் பேரொலியாக இருந்தன. பொங்கியெழும் புயலால் உதவப்பட்ட மின்னல் பொதிந்த மேகத்திரளின் முழக்கத்தைப் போலத் தனது கணை மழையைத் இடைவிடாது பொழிந்த அர்ஜுனன், திசைக்காட்டியின் பத்து புள்ளிகளையும் {பத்து திசைகளையும்} மறைத்தான்.

பயங்கர ஆயுதங்களைக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} பிறகு, கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} நோக்கி வேகமாக விரைந்தான். அவனது ஆயுதங்களின் விளைவால் நான்கு புலன்களையும் இழந்த எங்களால் கிழக்கையும், மேற்கையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, விலங்குகள் சோர்வடைந்து, குதிரைகள் கொல்லப்பட்டு, இதயங்களும் சோர்வடைந்த உமது போர்வீரர்கள் முழுமையாகக் குழம்பிப் போய் [1], ஒருவரோடு ஒருவர் நெருங்கி, உமது மகன்கள் அனைவருடன் பீஷ்மரின் பாதுகாப்பை நாடினர். அந்தப் போரில் சந்தனுவின் மகனான பீஷ்மரே அவர்களைப் பாதுகாப்பவரானார்.

அச்சத்தால் பீடிக்கப்பட்ட தேர்வீரர்கள் தங்கள் தேர்களில் இருந்து கீழே குதித்தும், குதிரைப்படை வீரர்கள் தங்கள் குதிரைகளின் முதுகில் இருந்து கீழே குதித்தும், காலாட்படை வீரர்கள் தாங்கள் நின்ற இடத்திலேயும் என அனைவரும் பூமியில் விழ ஆரம்பித்தனர். இடியின் முழக்கத்தை ஒத்திருந்த காண்டீவத்தின் நாணொலியைக் கேட்ட உமது வீரர்கள் அனைவரும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அச்சத்தால் பீடிக்கப்பட்டுப் உருகிப் போவது {பதுங்குவது} போலத் தெரிந்தது.

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காம்போஜ இனத்தின் வேகமான பெரும் குதிரைகளைக் கொண்டவனும், பெரும் கோபமானப் படையுடன் கூடிய பல்லாயிரக்கணக்கான கோபர்களால் சூழப்பட்டவனும், மத்ரர்கள், சௌவீரர்கள், காந்தாரர்கள், திரிகர்த்தர்கள், முக்கியத்துவம் வாய்ந்த கலிங்கர்கள் அனைவராலும் ஆதரிக்கப்பட்டவனுமான கலிங்கர்களின் மன்னனும் {சுருதாயுதனும்} [2], மன்னர்கள் அனைவருடன் கூடியவனும், துச்சாசனனைத் தலைமையாகக் கொண்ட பல்வேறு இனங்களின் பெரிய படையாலும், முக்கியமான குதிரைவீரர்கள் பதினாலாயிரம் {14000} பேரால் ஆதரிக்கப்பட்டவனுமான மன்னன் ஜெயத்ரதனும், உமது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்டு, (சகுனியை ஆதரிப்பதற்காக) அந்தச் சுபலனின் மகனை {சகுனியைச்} சூழ்ந்து கொண்டனர்.(இம்மன்னன் சுருதாயுதன் )பிறகு, அந்தப் போரில், தனித்தனி தேர்களிலும், விலங்குகளிலும் போரிட்டவர்களான பாண்டவர்கள் [3] அனைவரும் ஒன்று சேர்ந்து, உமது துருப்புகளைப் படுகொலை செய்யத் தொடங்கினர். தேர்வீரர்கள், குதிரைவீரர்கள், காலாட்படை வீரர்கள் ஆகியோரால் மேகத் திரள் போல எழுப்பப்பட்ட புழுதி, அந்தப் போர்க்களத்தை மிகப் பயங்கரமானதாக்கியது.-யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றுடன் கூடியதும், வேல்கள், நாராசங்கள், பல்லங்கள் ஆகியவற்றைத் தரித்தவர்களைக் கொண்டதுமான ஒரு பெரும்படையுடன் கூடிய பீஷ்மர், கிரீடம் தரித்தவனுடன் (கிரீடியான அர்ஜுனனுடன்} போரிட்டார் [4].(ஓ! பாரதரே, ஒன்று சேர்ந்திருப்பவர்களான உமது தரப்பினர் அனைவரும் தனித்தனியாகப் பகுக்கப்பட்டிருக்கின்ற தேர்களோடும், வாகனங்களோடும் அர்ஜுனனை அடித்தார்கள்.)

அவந்தியின் மன்னன், காசியின் ஆட்சியாளனுடனும், சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} பீமசேனனுடனும் போரிட்டனர்.

தன் மகன்கள் மற்றும் ஆலோசகர்கள் {அமைச்சர்களுடன்} கூடிய மன்னன் யுதிஷ்டிரன், மத்ரத்தின் புகழ்மிக்கத் தலைவன் சல்லியனுடன் போரிட்டான்.

விகர்ணன் சகாதேவனுடனும், சித்திரசேனன் சிகண்டியுடனும் போரிட்டனர்.

மத்ஸ்யர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனுடனும் சகுனியுடனும் போரிட்டனர்; துருபதன், சேகிதானன் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகியோர் தன் மகன் {அஸ்வத்தாமன்} துணையுடன் இருந்த உயர் ஆன்மத் துரோணருடன் போரிட்டனர்.

கிருபர், கிருதவர்மன் ஆகிய இருவரும் திருஷ்டத்யும்னனை எதிர்த்து விரைந்தார்கள்.

போர்க்களம் முழுவதும் இப்படியே, குதிரைகள், யானைகள், தேர்கள் ஆகியவற்றின் படைகள் விரைந்து ஒன்றோடொன்று போரிட்டுக் கொண்டன.

வானத்தில் மேகங்கள் ஏதும் இல்லையெனினும், மின்னலின் கீற்றுகள் தெரிந்தன. திசைக்காட்டியின் அனைத்துப் புள்ளிகளும் {திசைகள் அனைத்தும்} புழுதியால் மூடப்பட்டன. மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இடியொலியுடன் கூடி விழும் கடுமையான விண்கற்களும் காணப்பட்டன. கடுங்காற்று வீசியது, மேலிருந்து புழுதி மழை பொழிந்தது. துருப்புகளால் எழுப்பப்பட்ட புழுதியால் மூடப்பட்ட சூரியன் ஆகாயத்திலிருந்து மறைந்தான். புழுதியால் மறைக்கப்பட்டவர்களும், ஆயுதங்களுடன் போரிட்டவர்களுமான போர்வீரர்கள் அனைவரும் தங்கள் புலன்களை இழந்தனர் {மதிமயக்கம் அடைந்தனர்}.

கவசங்கள் அனைத்தையும் ஊடுருவிச் செல்பவையும், வீரர்களின் கரங்களில் இருந்து வீசப்பட்டவையுமான ஆயுதங்கள் உண்டாக்கிய ஒலி அங்கே மிகப்பெரிய ஆரவாரத்தை ஏற்படுத்தியது. மேலும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நட்சத்திரங்களைப் போன்ற பிரகாசமிக்கவையும், சிறந்த கரங்களில் இருந்து வீசப்பட்டவையுமான ஆயுதங்கள், வானத்திற்கு ஒளியூட்டின. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தங்கத்தால் புடைக்கப்பட்ட காளைத்தோல்களிலானவையும், பல்வேறு நிறங்களிலானவையுமான கேடயங்கள், களமெங்கும் சிதறிக் கிடந்தன. சூரியப் பிரகாசம் கொண்ட வாள்கள், பட்டாக்கத்திகள் ஆகியவற்றால் வெண்டுண்ட தலைகளும், அங்கங்களும் எல்லாப்புறங்களிலும் விழுந்து கிடந்தன.

சக்கரங்கள், அச்சுக்கட்டைகள், நீடங்கள் [5] ஆகியவை ஒடிக்கப்பட்டும், நெடிய கொடிமரங்கள் வீழ்த்தப்பட்டும், குதிரைகள் கொல்லப்பட்டும், பெரிய தேர்வீரர்கள் தரையில் வீழ்ந்தனர். பல தேர்வீரர்கள் கொல்லப்பட்டவுடன், ஆயுதங்களால் சிதைக்கப்பட்ட அவர்களது குதிரைகள், (தாங்கள் பூட்டப்பட்ட) தேர்களை இழுத்துக் கொண்டே ஓடி தரையில் விழுந்தன. களத்தின் பல இடங்களில், கணைகளால் பீடிக்கப்பட்ட அற்புதக் குதிரைகள், தங்கள் அங்கங்கள் சிதைக்கப்பட்டு, வார்களுடன் சேர்த்துத் தங்கள் நுகத்தடிகளைத் தங்களுக்குப் பின்னே இழுத்தோடின. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேரோட்டிகள் மற்றும் குதிரைகளுடன் கூடிய பல தேர்வீரர்கள், பெரும் பலம் பொருந்திய தனி யானைகளால் நசுக்கப்பட்டிருப்பதும் அங்கே காணப்பட்டது. அந்தப் போரில், பெரும் படைகளுக்கு மத்தியில் இருந்த பல யானைகள், தங்களை ஒத்த யானைகளின் மதநீரின் மணத்தை நுகர்ந்தபடி, மீண்டும் மீண்டும் காற்றை விட்டுவிட்டு நுகரத் தொடங்கின.(நீடம் என்பது, தேர்வீரன் ஒருவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தேரில் ஏற்படுத்தப்பட்ட இடமாகும்.)

பல்லங்களால் {அகன்ற தலை கொண்ட கணைகளால்} உயிர் பறிக்கப்பட்டு, தங்கள் முதுகில் மரக்கூடுகள் மற்றும் பாகன்களோடு கீழே விழுந்து கொல்லப்பட்ட யானைகள் களம் முழுவதும் பரவிக் கிடந்தன. பெரும் படைகளுக்கு மத்தியில் இருந்த பல யானைகள், பாகன்களால் ஏவப்பட்டவையும், முதுகில் கொடிமரங்கள், போர்வீரர்கள் ஆகிவற்றைக் கொண்டவையுமான தங்களை ஒத்த பெரும் யானைகளால் நசுக்கப்பட்டுக் களத்தில் கீழே விழுந்தன. பெரும் யானைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (ஐராவதம் என்றழைக்கப்படும்) யானைகளின் இளவரசனின் துதிக்கைகளை ஒத்த தங்கள் துதிக்கைகளால், பல தேர்களின் ஏர்க்கால்களைப் முறிப்பது அங்கே காணப்பட்டது.

அம்மோதலில், ஜாலர்களான பல தேர்வீரர்கள், யானைகளால் தங்கள் தேர்கள் சிதறடிக்கப்பட்டு, தங்கள் தலை மயிரில் பிடித்து இழுக்கப்பட்டு, மரத்தின் கிளைகள் போல முறித்து வடிவமற்ற திரள்களாக {பொடிகளாக} நசுக்கப்பட்டார்கள். இன்னும் பிற பெரும் யானைகளோ, பிற தேர்களோடு பிணைக்கப்பட்ட தேர்களை இழுத்துப் போட்டு, உரக்கப் பிளிறிக் கொண்டே அனைத்துப் புறங்களிலும் ஓடின. அப்படி அந்தத் தேர்களை இழுத்துச் சென்ற யானைகள், தடாகங்களில் வளரும் தாமரைத் தண்டுகளை இழுக்கும் தங்கள் வகையைச் சேர்ந்த பிற யானைகளைப் போலவே தெரிந்தன.

இப்படியே குதிரைப் படை வீரர்களும், காலாட்படை வீரர்களும், பெரும் தேர்வீரர்களும், கொடிமரங்களும் அந்தப் போர்க்களமெங்கும் பரவிக் கிடந்தன” {என்றான் சஞ்சயன்}.

சாத்யகியை விரட்டிய பீஷ்மர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 072-போரில் ஈடுபட்ட கௌரவர்கள் மற்றும் பாண்டவத்தரப்புகளுக்கு இடையில் யார் எவருடன் மோதியது என்ற வர்ணனை; வீரர்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய கடுமையான போர்; பீமனின் வில்லை இரண்டாக வெட்டிய பீஷ்ம்ர்; இடையில் குறுக்கிட்ட சாத்யகி; சாத்யகியைப் பின்வாங்கச் செய்த பீஷ்மர்; துரோணருடன் போரிட்டுக் கொண்டிருந்த திருஷ்டத்யும்னனின் படை பீஷ்மரை எதிர்த்து விரைந்தது..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மத்ஸ்யர்களின் மன்னனான விராடனுடன் கூடிய சிகண்டி, ஒப்பற்றவரும், வலிமைமிக்க வில்லாளியுமான பீஷ்மரை விரைந்து அணுகினான்.

தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, துரோணர், கிருபர் மற்றும் விகர்ணன் ஆகியோருடனும், வலிமைமிக்க வில்லாளிகளும், பெரும் பலம்வாய்ந்தவர்களும், போரில் துணிச்சல்மிக்கவர்களுமான பிற மன்னர்கள் பலருடனும், நண்பர்கள், சொந்தங்கள் மற்றும் மேற்கு, தெற்கு திசைகளைச் சேர்ந்த பல மன்னர்களால் ஆதரிக்கப்பட்டவனும், வலிமைமிக்க வில்லாளியுமான சிந்துக்களின் ஆட்சியாளனுடனும் {ஜெயத்ரதனுடனும்} மோதினான்.

வலிமைமிக்க வில்லாளியும், பழிவாங்கும் வெறி கொண்டவனுமான உமது மகன் துரியோதனனையும், மேலும் துஸ்ஸகனையும் எதிர்த்து பீமசேனன் முன்னேறினான்.

பெரும் வில்லாளிகளும், ஒப்பற்ற வீரர்களும், தந்தையும் மகனுமாகிய சகுனி மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரனான உலூகன் ஆகியோரை எதிர்த்து சகாதேவன் முன்னேறினான்.

உமது மகனால் {துரியோதனனால்} வஞ்சமாக நடத்தப்பட்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான யுதிஷ்டிரன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} அந்தப் போரில் (கௌரவர்களின்) யானைப் படைப்பிரிவை எதிர்த்து முன்னேறினான்.

எதிரியைக் கண்ணீர் சிந்தவைக்க இயன்றவனும், பாண்டு மற்றும் மாத்ரியின் மகனுமான வீர நகுலன், திரிகர்த்தர்களின் அற்புதத் தேர்வீரர்களுடன் போரில் ஈடுபட்டான்.

ஒப்பற்ற வீரர்களான சாத்யகி, சேகிதானன் மற்றும் சுபத்திரையின் வலிமைமிக்க மகன் {அபிமன்யு} ஆகியோர் சல்லியனையும், கேகயர்களையும் எதிர்த்து முன்னேறினார்கள்.

போரில் வெல்லப்பட முடியாதவர்களான திருஷ்டகேது மற்றும் ராட்சசன் கடோத்கசன் ஆகியோர் உமது மகன்களின் தேர்ப் படைப்பிரிவுகளை எதிர்த்து முன்னேறினார்கள்.

அளவிலா ஆன்மா கொண்ட (பாண்டவப் படையின்) படைத்தலைவனும், வலிமைமிக்க வில்லாளியுமான திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கடும் சாதனைகளை அடைந்தவரான துரோணருடன் போரில் ஈடுபட்டான்.

இப்படியே உமது படை மற்றும் பாண்டவப் படை ஆகியவற்றின் வலிமைமிக்க வில்லாளிகளான அந்த வீரர்கள் போரில் ஈடுபட்டு, ஒருவரை ஒருவர் தாக்கத் தொடங்கினர்.

சூரியன் நடுக்கோட்டை {உச்சிவானத்தை – Meridian-ஐ} அடைந்து, அவனது {சூரியனின்} கதிர்களால் வானம் ஒளியூட்டப்பட்ட போது, கௌரவர்களும், பாண்டவர்களும் ஒருவரை ஒருவர் கொல்லத் தொடங்கினர். அப்போது, மிதக்கும் கொடிகளை உச்சியில் கொண்ட கொடிமரங்கள் உடையவையும், தங்கத்தால் பல வண்ணமாக்கப்பட்டவையும், புலித்தோல்களால் மூடப்பட்டவையுமான தேர்கள் அந்தப் போர்க்களத்தில் நகர்ந்தது அழகாகத் தெரிந்தது. ஒருவரை ஒருவர் வீழ்த்த விரும்பி போரில் ஈடுபட்ட வீரர்களின் முழக்கங்கள், சிங்க முழக்கங்களுக்கு இணையான பேரொலியானது. துணிச்சல் மிக்கச் சிருஞ்சயர்களுக்கும், குருக்களுக்கும் இடையில் நடைபெற்றதும், நாங்கள் கண்டதுமான அந்த மோதல் மிகக் கடுமையானதாகவும், பெரும் அற்புதம் நிறைந்ததாகவும் இருந்தது.

சுற்றிலும் தொடுக்கப்பட்ட கணைகளின் விளைவால், ஓ! மன்னா, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, திசைக்காட்டியின் முக்கியமான மற்றும் துணைப் புள்ளிகளையும் {திசைகள் மற்றும் துணைத் திசைகளையும்}, சூரியனையும், ஆகாயத்தையும் வேறுபடுத்திக் காண முடியவில்லை. பளபளப்பான முனைகளையுடைய ஈட்டிகள், (எதிரி மீது) வீசப்படும் தோமரங்கள், நன்கு கடினமாக்கப்பட்ட பட்டாக் கத்திகள், கூன்வாள்கள், பலவண்ணங்களிலான கவசங்கள், (வீரர்கள் மேனியில் இருந்த) ஆபரணங்கள் ஆகியவை கருநெய்தல்களுக்கு {நீலத் தாமரைகளுக்கு} ஒப்பான ஒளியுடன் திசைகள், துணைத்திசைகள் மற்றும் ஆகாயத்தைப் பிரகாசிக்கச் செய்தன.

சந்திரன் மற்றும் சூரியனின் பிரகாசத்திற்கு ஒப்பான ஏகாதிபதிகளின் உடல் காந்தியின் விளைவால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களத்தின் பல இடங்கள் பிரகாசித்தன. துணிச்சல்மிக்கத் தேர்வீரர்களும், மனிதர்களில் புலிகளும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் உள்ள கோள்களைப் போல, அந்தப் போர்க்களத்தில் பிரகாசித்தனர்.

தேர்வீரர்களில் முதன்மையானவரான பீஷ்மர் கோபம் தூண்டப்பட்டவராக, வலிமைமிக்கப் பீமசேனனை துருப்புகளின் பார்வையிலேயே தடுத்தார். தங்கச் சிறகுகள் கொண்டவையும், சாணைக்கல்லில் தீட்டப்பட்டவையும், எண்ணெய் பூசப்பட்டவையும். பீஷ்மரால் தொடுக்கப்பட்ட வேகமான கணைகள், அந்தப் போரில் பீமனைத் துளைத்தன. பெரும் பலம் கொண்டவனான பீமசேனன் அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கோபம் நிறைந்த பாம்புக்கு ஒப்பானதும், கடுமையானதும், வேகமானதுமான ஈட்டி ஒன்றை பெரும் பலத்துடன் அவர் {பீஷ்மர்} மீது வீசினான் {பீமன்}.

ஆனால், தன்னை நோக்கி மூர்க்கமாக விரைந்ததும், தாங்கிக் கொள்ளக் கடினமானதும், தங்கத்தால் ஆன தண்டைக் கொண்டதுமான அந்த ஈட்டியை {சக்தி ஆயுதத்தைத்} தன் நேரான கணைகளால் அந்தப் போரில் பீஷ்மர் வெட்டினார். கூர்மையானதும், நன்கு கடினமாக்கப்பட்டதுமான மற்றொரு பல்லத்தினால், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமசேனனின் வில்லை இரண்டு துண்டுகளாக வெட்டினார். அப்போது அந்தப் போரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரை நோக்கி விரைந்து வந்த சாத்யகி, காது வரை இழுக்கப்பட்ட வில்லின் நாணில் இருந்து கடும் வேகத்துடன் ஏவப்பட்டவையும், கூர்முனை கொண்டவையும், எண்ணற்றவையுமான கணைகளால் உமது தந்தையைத் {பீஷ்மரைத்} தாக்கினான்.

அப்போது, மிகக் கடுமையான கணையொன்றைக் குறிபார்த்த பீஷ்மர், தேரின் நீடத்தில் இருந்த விருஷ்ணி வீரனின் {சாத்யகியின்} தேரோட்டியை விழச்செய்தார். சாத்யகியுடைய தேரின் தேரோட்டி இப்படிக் கொல்லப்பட்டதும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவனது {சாத்யகியின்} குதிரைகள் வெளியே விரைந்தோடின. புயல் போன்ற, அல்லது மனம் போன்ற வேகத்துடன் கூடிய அவை {அந்தக் குதிரைகள்} களத்தில் மூர்க்கமாக ஓடின. அப்போது முழுப் படையாலும் வெளியிடப்பட்ட முழக்கங்கள் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தின. “ஓ” என்றும், “ஐயோ” என்றும் ஆச்சரிய ஒலிகள், பாண்டவப் படையின் உயர் ஆன்ம வீரர்களிடம் இருந்து எழுந்தன. அந்தக் கதறல்கள், “ஓடு”, “பிடி”, “குதிரைகளைத் தடு”, “விரைந்து செல்” என்றன. இந்த ஆரவாரம் யுயுதானனின் {சாத்யகியின்} தேரைப் பின்தொடர்ந்தே சென்றது.

அதே வேளையில், சந்தனுவின் மகனான பீஷ்மர், தானவர்களைக் கொல்லும் இந்திரனைப் போல, பாண்டவப் படைகளைக் கொல்ல ஆரம்பித்தார். இப்படிப் பீஷ்மரால் பாஞ்சாலர்களும், சோமகர்களும் கொல்லப்பட்டாலும், மெச்சத்தகுந்த தீர்மானத்தை ஏற்ற அவர்கள் {பாண்டவப் படையினர்} பீஷ்மரை நோக்கி விரைந்து சென்றார்கள். திருஷ்டத்யும்னனின் தலைமையாகக் கொண்டவர்களும், பாண்டவப் படையினருமான பிற வீரர்கள், உமது மகனின் {துரியோதனனின்} படையணிகளைக் கொல்ல விரும்பி, அந்தப் போரில் சந்தனுவின் மகனை {பீஷ்மரை} நோக்கி விரைந்தனர். மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மர் மற்றும் துரோணரின் தலைமையிலான உமது படையின் வீரர்களும், தங்கள் எதிரிகளை நோக்கி விரைந்து சென்றனர். அதன் பேரில் மற்றுமொரு போர் நடந்தது” {என்றான் சஞ்சயன்}.

லட்சுமணனை விரட்டிய அபிமன்யு! – பீஷ்ம பர்வம் பகுதி – 073-விராடனுக்கும் பீஷ்மருக்கும் இடையில் நடந்த போர்; அஸ்வத்தாமனின் வில்லை அறுத்த அர்ஜுனன்; துரியோதனனுக்கும் பீமனுக்கும் இடையில் நடந்த போர்; சித்திரசேனன், புருமித்திரன், சத்தியவிரதன் ஆகியோரோடு போரிட்ட அபிமன்யு; அபிமன்யுவை எதிர்த்த லட்சுமணன்; லட்சுமணனின் குதிரைகளையும், தேரோட்டியையும் கொன்ற அபிமன்யு; தேரிழந்த லட்சுமணனைத் தனது தேரில் சுமந்து சென்ற கிருபர்; தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்திய பீஷ்மர்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, மன்னன் விராடன் வலிமைமிக்கத் தேர்வீரரான பீஷ்மரை மூன்று கணைகளால் துளைத்தான். அந்தப் பெரும் தேர்வீரர் {பீஷ்மர்}, தங்கச் சிறகுகள் கொண்ட மூன்று கணைகளால் அவனது {விராடனின்} குதிரைகளைத் துளைத்தார்.

பயங்கரமான வில்லாளியும், உறுதியான கரம் படைத்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஆறு கணைகளைக் கொண்டு காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} நடுமார்பில் துளைத்தான். அதன்பேரில், பகை வீரர்களைக் கொல்பவனும், எதிரிகளைக் கலங்கடிப்பவனுமான பல்குனன் {அர்ஜுனன்}, பதிலுக்கு அஸ்வாத்தாமனின் வில்லை அறுத்ததுடன், ஐந்து கணைகளால் அவனை {அஸ்வத்தாமனை} ஆழமாகத் துளைத்தான். கோபத்தில் புலன்களை {உணர்வுகளை} இழந்தவனும், அந்தப் போரில் தனது வில் துண்டாக்கப்பட்டதைத் தாங்கிக் கொள்ள முடியாதவனுமான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மேலும் கடினமான மற்றொரு வில்லை எடுத்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கூரிய தொண்ணூறு {90} கணைகளால் பல்குனனையும் {அர்ஜுனனையும்}, கடுமையான எழுபது {70} கணைகளால் வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} துளைத்தான்.

அப்போது கிருஷ்ணனோடு சேர்ந்த பல்குனன் {அர்ஜுனன்} கோபத்தில் கண்கள் சிவக்க, நீண்ட சூடான மூச்சுகளைவிட்டு ஒருகணம் சிந்தித்தான். எதிரிகளைக் கலங்கடிப்பவனும், இடது கையால் வில்லை உறுதியாகப் பிடித்தவனுமான காண்டீவதாரி {அர்ஜுனன்}, கோபத்தால் தூண்டப்பட்டு, (எதிரியின்) உயிரை எடுக்க வல்லவையும், முற்றிலும் நேராக இருப்பவையும், கூர்மையானவையுமான கடுங்கணைகள் பலவற்றைத் தனது வில்லின் நாணில் பொருத்தினான். பலம்வாய்ந்த மனிதர்களில் முதன்மையான அவன் {அர்ஜுனன்}, அந்தக் கணைகளைக் கொண்டு, அந்தப் போரில் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} விரைவாகத் தாக்கினான். அவனது {அஸ்வத்தாமனின்} கவசத்தைப் பிளந்த அந்தக் கணைகள், அவனது உயிர்க்குருதியைக் குடித்தன.

ஆனால், காண்டீவதாரியால் {அர்ஜுனனால்} இப்படித் துளைக்கப்பட்டாலும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமல்} நடுங்கவில்லை. அந்தப் போரில் பாதிக்கப்படாதவனும், உயர்ந்த நோன்புகளைக் கொண்ட பீஷ்மரைப் பாதுகாக்க விரும்பியவனுமான அவன் {அஸ்வத்தாமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பதிலுக்கு அதே போன்ற கணைகளைப் பார்த்தன் {அர்ஜுனன்} மீது ஏவினான். ஒன்றாகச் சேர்ந்திருந்த இரண்டு கிருஷ்ணர்களையும் {இரண்டு கருப்பர்களையும்_ கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனையும்} எதிர்கொண்ட அவனது {அஸ்வத்தாமனது} அந்தச் செயல், குரு படையின் முதன்மை வீரர்களால் பாராட்டப்பட்டது. அனைத்து ஆயுதங்களைத் தொடுக்கவும், திரும்பப் பெறவும் உரிய முறைகளைத் துரோணரிடம் இருந்த அடைந்திருந்த அஸ்வத்தாமன், உண்மையில், படைகளுக்கு மத்தியில் அச்சமற்ற வகையிலேயே தினமும் போராடி வந்தான்.

எதிரிகளைச் சுடுபவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான வீரன் பீபத்சு {அர்ஜுனன்}, “இவன் {அஸ்வத்தாமன்} எனது ஆசானின் மகன், இவன் துரோணரின் அன்புக்குரிய மகன். அதிலும் குறிப்பாக இவன் பிராமணன், எனவே, எனது மரியாதைக்குரியவன்” என்று நினைத்தே பரத்வாஜரின் மகனுக்கு {அஸ்வத்தாமனுக்குக்} கருணை காட்டினான். (தனது தேரில் பூட்டப்பட்ட) வெண்குதிரைகளைக் கொண்டவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைத்} தவிர்த்துவிட்டு, தன் கரங்களின் பெரும் வேகத்தைக் காட்சிப்படுத்தியபடியும், உமது துருப்புகளுக்குப் பெரும் அழிவை உண்டாக்கியபடியும் போரிடத் தொடங்கினான்.-அப்போது துரியோதனன், சாணைக்கல்லில் கூர்தீட்டப்பட்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், கழுகின் இறகுகளைச் சிறகாகக் கொண்டவையுமான பத்து {10} கணைகளைக் கொண்டு பெரும் வில்லாளியான பீமனைத் துளைத்தான். அதன்பேரில் கோபம் தூண்டப்பட்ட பீமசேனன், கடினமானதும், நன்கு அலங்கரிக்கப்பட்டதும், எதிரியின் உயிரை எடுக்கவல்லதுமான ஒரு வில்லையும், பத்து கூரிய கணைகளையும் எடுத்தான்.-கடும் சக்தியையும், மூர்க்கமான வேகத்தையும், கூர்மையான முனைகளையும் கொண்ட அந்தக் கணைகளைப் பொருத்தி, வில்லின் நாணைத் தனது காதுவரை இழுத்து, உறுதியாகக் குறிபார்த்து, குருக்களின் மன்னனுடைய {துரியோதனனுடைய} அகன்ற மார்பில் ஆழமாகத் துளைத்தான். அதன் பேரில் அவனது மார்பில் தங்க இழைகளில் தொங்கிக் கொண்டிருந்த ரத்தினம், அந்தக் கணைகளால் சூழப்பட்டு, ஆகாயத்தில் கோள்களால் சூழப்பட்ட சூரியனைப் போல மிக அழகாகத் தெரிந்தது.

பெரும் சக்தி கொண்டவனாக இருப்பினும், மனிதர்கள் அறையும் ஒலியைத் தாங்கிக் கொள்ளாத பாம்பைப் போல, பீமசேனனால் இப்படித் தாக்கப்பட்டதை உமது மகனால் {துரியோதனன்} (பொறுமையாகத்) தாங்கிக் கொள்ள முடியவில்லை. கோபத்தால் தூண்டப்பட்டவனும், தனது படையைக் காக்க விரும்பியவனுமான அவன் {துரியோதனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கச் சிறகுகள் கொண்டவையும், கல்லில் கூர்த்தீட்டப்பட்டவையுமான பல கணைகளைக் கொண்டு பீமனைப் பதிலுக்குத் துளைத்தான். இப்படியே போரில் போராடி, ஒருவரை ஒருவர் கடுமையாகச் சிதைத்துக் கொண்டவர்களான வலிமைமிக்க உமது மகன்கள் இருவரும் {துரியோதனனும் – பீமனும்}, அப்போது, தேவர்கள் இருவரைப் போலத் தெரிந்தனர்.

மனிதர்களில் புலியும், பகைவீரர்களைக் கொல்பவனுமான சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, சித்திரசேனனை பல [1] கூரிய கணைகளாலும், புருமித்ரனை ஏழு கணைகளாலும் துளைத்தான். போரில் இந்திரனுக்கு நிகரான வீரனாகிய அவன் {அபிமன்யு}, சத்தியவிரதனையும் எழுபது கணைகளால் அடித்து, அந்தப் போர்க்களத்தில் நடனமாடியபடியே நம்மைப் பெருந்துன்பத்துக்குள்ளாக்கினான். பிறகு, பத்து கணைகளால் சித்திரசேனனும், ஒன்பது கணைகாளல் சத்தியவிரதனும், ஏழு கணைகளால் புருமித்ரனும் பதிலுக்கு அவனைத் {அபிமன்யுவைத்} துளைத்தனர்.

இப்படித் துளைக்கப்பட்ட அர்ஜுனனின் மகன் {அபிமன்யு}, ரத்தத்தில் நனைந்தபடியே, எதிரிகளைத் தடுக்கவல்ல சித்திரசேனனின் அழகிய பெரிய வில்லை வெட்டி வீழ்த்தினான். மேலும் அவன் {அபிமன்யு}, ஒரு கணையால் எதிராளியின் {சித்திரசேனனின்} கவசத்தைப் பிளந்து அவனது மார்பைத் துளைத்தான். பிறகு, கோபத்தால் தூண்டப்பட்டவர்களும், துணிச்சல்மிக்கவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான உமது படையின் இளவரசர்கள் அம்மோதலில் ஒன்று சேர்ந்து, கூரிய கணைகளால் அவனைத் {அபிமன்யுவைத்} துளைத்தனர்.

வல்லமைமிக்க ஆயுதங்களை அறிந்தவனான அபிமன்யுவோ, அவர்கள் அனைவரையும் கூர்மையான அம்புகளால் அடித்தான். அவனது அருஞ்செயலைக் கண்ட உமது மகன்கள், கோடைக்காலத்தில் வைக்கோல் குவியலை எரிக்கும் சுடர்மிகும் நெருப்பின் தழல்களைப் போல உமது படையை எரித்துக் கொண்டிருந்த அந்த அர்ஜுனன் மகனைச் {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்டனர். (இப்படி) உமது துருப்புகளை அடித்துக் கொண்டிருந்த சுபத்திரையின் மகன் {அபிமன்யு} பிரகாசத்தில் ஒளிர்வதாகத் தெரிந்தது.

அவனது {அபிமன்யுவின்} நடத்தையைக் கண்ட உமது பேரன் {உமது பேரனும் துரியோதனன் மகனுமான} லக்ஷ்மணன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சுபத்திரையின் மகன் {அபிமன்யு} மீது விரைந்து பாய்ந்தான். அதன்பேரில் கோபம் தூண்டப்பட்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அபிமன்யு, மங்கலக்குறிகளால் அருளப்பட்ட லக்ஷ்மணனையும், அவனது தேரோட்டியையும் ஆறு கூரிய கணைகளால் துளைத்தான். ஆனால் லக்ஷ்மணனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல கூரிய கணைகளால் சுபத்திரையின் மகனை {அபிமன்யுவைத்} துளைத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த அருஞ்செயல் பெரும் அற்புதம் நிறைந்ததாகத் தெரிந்தது.

அப்போது, வலிமைமிக்கத் தேர்வீரனான அபிமன்யு, தன் கூரிய கணைகளால் லக்ஷ்மணனின் நான்கு குதிரைகளையும், அவனது தேரோட்டியையும் கொன்றுவிட்டு, அவனிடம் {லக்ஷ்மணனிடம்} விரைந்து சென்றான். அதன்பேரில் பகைவீரர்களைக் கொல்பவனான லக்ஷ்மணன், கொல்லப்பட்ட குதிரைகளைக் கொண்ட அந்தத் தேரில் நின்றபடியே, கோபத்தால் தூண்டப்பட்டு, சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} நோக்கி ஒர் ஈட்டியை எறிந்தான். எனினும் அபிமன்யு, பாம்பைப் போன்றதும், தன்னை நோக்கி விரைந்து வந்ததும், கடும் தோற்றம் கொண்டதுமான அந்தத் தடுக்கப்பட முடியாத ஈட்டியைத் தன் கூரிய கணைகளால் துண்டாக்கினான். பிறகு, லக்ஷ்மணனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்ட கிருபர், துருப்புகள் அனைத்தின் பார்வைக்கெதிரிலேயே, அவனை {லக்ஷ்மணனை} அம்மோதலை விட்டு அகற்றிச் சுமந்து சென்றார்.

அச்சம்தரும் அந்தப் போர் மிதமாக மாறிய போது, மற்றவர் உயிரைப் பறிக்க விரும்பிய போராளிகள் ஒருவரை நோக்கி ஒருவர் விரைந்து சென்றனர். போர்க்களத்தில் உயிரைவிடத் தயாராக இருந்த உமது படையின் வலிமைமிக்க வில்லாளிகளும், பாண்டவப்படையின் பெரும் தேர்வீரர்களும் ஒருவரையொருவர் கொன்றனர். தலைமுடி கலைந்தும், தங்கள் கவசங்களை இழந்தும், தேர்களை இழந்தும், விற்கள் ஒடிந்தும் இருந்த சிருஞ்சயர்கள், தங்கள் வெறுங்கைகளைக் கொண்டே குருக்களுடன் போரிட்டனர். அப்போது கோபத்தால் தூண்டப்பட்டவரும், பெரும் பலமும், வலிமையான கரமும் கொண்டவருமான பீஷ்மர். தன் தெய்வீக ஆயுதங்களைக் கொண்டு உயர் ஆன்மப் பாண்டவர்களின் துருப்புகளைக் கொன்றார். பாகன்களை இழந்த யானைகள், குதிரைகள், தேர்வீரர்கள், குதிரைவீரர்கள் ஆகியோரின் வீழ்ந்த உடல்களால் பூமி மறைக்கப்பட்டது” {என்றான் சஞ்சயன்}.

சாத்யகியின் மகன்களைக் கொன்ற பூரிஸ்ரவஸ்! – பீஷ்ம பர்வம் பகுதி – 074-துரியோதனன் ஏவிய படைகளைக் கொன்ற சாத்யகி; சாத்யகியின் படையினரைத் தாக்கி விரட்டிய பூரிஸ்ரவஸ்; பூரிஸ்ரவசை சவாலுக்கழைத்த சாத்யகியின் மகன்கள்; சாத்யகியின் பத்து மகன்களைக் கொன்ற பூரிஸ்ரவஸ்; சாத்யகியும், பூரிஸ்ரவசும் தங்கள் தேர்களை இழந்தது; சாத்யகியைப் பீமசேனனும், பூரிஸ்ரவசைத் துரியோதனனும் தங்கள் தங்கள் தேரில் ஏற்றிச் சென்றது; இருபத்தைந்தாயிரம் கௌரவத் தேர்வீரர்களைக் கொன்ற அர்ஜுனன்; ஐந்தாம் நாள் போர் முடிவுக்கு வந்தது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் ஒப்பற்றவனான வலிய கரங்களைக் கொண்ட சாத்யகி, அம்மோதலில் பெரும் வலிமையைத் தாங்கக்கூடிய ஓர் அற்புத வில்லை இழுத்து, கொடும்நஞ்சு மிக்கப் பாம்புகளைப் போன்றவையும், சிறகு படைத்தவையுமான எண்ணற்ற கணைகளைத் தொடுத்து, தனது கரங்களின் அற்புத வேகத்தைக் காட்சிப்படுத்தினான். போரில் தன் எதிரிகளைக் கொன்றபோது, விரைவாக வில்லை இழுத்த அவன் {சாத்யகி}, தன் கணைகளை எடுத்து, வில்லின் நாணில் பொருத்தி, எதிரிக்கு மத்தியில் அவற்றை ஏவிய போது, கன மழையைப் பொழியும் மேகத் திரள்களைப் போலத் தெரிந்தான்.

(வளரும் நெருப்பைப் போலச்) சுடர்விட்டெரியும் அவனைக் {சாத்யகியைக்} கண்ட மன்னன் துரியோதனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவனுக்கு {சாத்யகிக்கு} எதிராகப் பத்தாயிரம் {10,000} தேர்களை அனுப்பினான். ஆனால், கலங்கடிக்கப்படமுடியாத ஆற்றலும், பெரும் சக்தியும் கொண்டவனான பெரும் வில்லாளி சாத்யகி, வலிமைமிக்க அந்தத் தேர்வீரர்கள் அனைவரையும் தனது தெய்வீக ஆயுதங்களால் கொன்றான். கையில் வில்லுடன் அருஞ்செயலைச் செய்து கொண்டிருந்த அந்த வீரன் {சாத்யகி}, அடுத்ததாகப் போரிட பூரிஸ்ரவசை அணுகினான்.

குருக்களின் புகழைப் பெருக்குபவனான பூரிஸ்ரவசும், யுயுதானனால் {சத்யகியால்} வீழ்த்தப்படும் தார்தராஷ்டிர படையணிகளைக் கண்டு, அவனை {சாத்யகியை} நோக்கி விரைந்தான். இந்திரனை {இந்திராயுதத்தைப்} போன்ற நிறத்தில் இருந்த தனது பெரும் வில்லை இழுத்த அவன் {பூரிஸ்ரவஸ்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தனது கரங்களின் வேகத்தைக் காட்சிப்படுத்தும் வகையில், கடும்நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போலத் தெரிந்தவையும், இடியின் பலத்தைக் கொண்டவையுமான ஆயிரக்கணக்கான கணைகளை அடித்தான். அதன்பேரில், சாத்யகியைப் பின்தொடர்ந்த போராளிகள், அந்தக் கணைகளின் மரணத் தீண்டலை அந்த மோதலில் தாங்கிக் கொள்ள முடியாமல், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒப்பற்ற சாத்யகியைக் கைவிட்டுத் திக்குகள் அனைத்திலும் சிதறி ஓடினர்.

இதைக் கண்டவர்களும், பெரும் புகழ்பெற்றவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும், கவசம் தரித்தவர்களும், பல்வேறு வகையிலான ஆயுதங்களைத் தரித்தவர்களும், அற்புத கொடிமரங்களைக் கொண்டவர்களுமான யுயுதானனின் {சாத்யகியின்} வலிமைமிக்க மகன்கள் [1], அந்தப் போரில் பெரும் வில்லாளியான பூரிஸ்ரவசை அணுகி, வேள்விப்பீடப் {யூபஸ்தம்பப்} பொறியைத் தனது கொடிமரத்தில் தாங்கிய அந்த வீரனிடம் {பூரிஸ்ரவசிடம்} கோபத்துடன், “ஓ! கௌரவர்களின் சொந்தக்காரா, ஓ! பெரும்பலம் கொண்டவனே {பூரிஸ்ரவசே}, சேர்ந்திருக்கும் எங்கள் அனைவரிடமோ, எங்கள் ஒவ்வொருவருடன் தனித்தனியாகவோ வந்து போரிடுவாயாக. ஒன்று, போரில் எங்களை வீழ்த்தி, நீ பெரும்புகழை அடைவாயாக, அல்லது உன்னை வீழ்த்தி நாங்கள் பெரும் மனநிறைவு கொள்வோம்” என்றனர்.

அவர்களால் {சாத்யகியின் மகன்களால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், பெரும் பலம் கொண்டவனும், தன் ஆற்றலில் செருக்குடையவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அந்த வலிமைமிக்க வீரன் {பூரிஸ்ரவஸ்}, அவர்களைத் தன் முன்பு கண்டு, அவர்களிடம் {சாத்யகியின் மகன்களிடம்}, “வீரர்களே, நன்றாகச் சொன்னீர்கள். இப்போது உங்கள் விருப்பம் இத்தகையதே என்றால், அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கவனத்துடன் போரிடுவீர்களாக. போரில் நான் உங்கள் அனைவரையும் கொல்வேன்” என்றான். அவனால் {பூரிஸ்ரவசால்} இப்படிச் சொல்லப்பட்டவர்களும், பெரும் சுறுசுறுப்புடைய வலிமைமிக்க வில்லாளிகளுமான அவ்வீரர்கள் {சாத்யகியின் மகன்கள்}, அடர்த்தியான கணைமழையால் அந்த எதிரிகளைத் தண்டிப்பவனை {பூரிஸ்ரவசை} மறைத்தார்கள்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருபுறம் தனியனான பூரிஸ்ரவசுக்கும், மறுபுறம் ஒன்றுசேர்ந்த பலருக்கும் {சாத்யகியின் மகன்களுக்கும்} இடையில் நடைபெற்ற அந்தப் பயங்கரப் போர் பிற்பகலில் நடந்தது. மழைக்காலத்தில் மலை முகட்டில் மழையைப் பொழியும் மேகங்களைப் போல, அந்தப் பத்து வீரர்களும் {சாத்யகியின் பத்து மகன்களும்}, தனியனான வலிமைமிக்க அந்தத் தேர்வீரனைத் {பூரிஸ்ரவசை} தங்கள் கணை மழையால் மறைத்தார்கள். எனினும், அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {பூரிஸ்ரவஸ்}, அவர்களால் தொடுக்கப்பட்டவையும், மரணத்தைத் தரும் காலனின் ஈட்டிகள், அல்லது பிரகாசத்தில் இடியைப் போன்றவையான அந்தக் கணை மேகங்கள் தன்னை நெருங்கும் முன்னரே அறுத்தெறிந்தான். பிறகு, வலிய கரங்கள் கொண்ட அந்த வீரனை {பூரிஸ்ரவசைச்} சூழ்ந்து கொண்ட அவர்கள் {சாத்யகியின் மகன்கள்}, அவனைக் கொல்ல முயற்சி செய்தனர். ஆனால் அந்தச் சோமதத்தன் மகனோ {பூரிஸ்ரவசோ}, கோபத்தால் தூண்டப்பட்டு, ஓ! பாரதரே, அவர்களது விற்களையும், பிறகு அவர்களது தலைகளையும் கூரிய கணைகளால் அறுத்தான். இப்படிக் கொல்லப்பட்ட அவர்கள் {சாத்யகியின் மகன்கள்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இடியால் விழுந்த வலிமைமிக்க மரங்களைப் போலக் கீழே விழுந்தார்கள் [2].

தன் வலிமைமிக்க மகன்கள் போரில் இப்படிக் கொல்லப்பட்டதைக் கண்ட அந்த விருஷ்ணி வீரன் (சாத்யகி), ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உரக்க முழங்கியபடி பூரிஸ்ரவசை எதிர்த்து விரைந்தான். பெரும் தேர்வீரர்களான அவர்கள் ஒவ்வொருவரும் {சாத்யகியும், பூரிஸ்ரவசும்}, தங்கள் தேரை மற்றவர் தேரில் நெருக்கி அழுத்தினார்கள் {மோதினார்கள்}. அம்மோதலில் அவர்கள் இருவரும், மற்றவரின் தேரில் பூட்டப்பட்ட குதிரைகளைக் கொன்றார்கள். பிறகு, தேர்களை இழந்த அந்த வலிமைமிக்க வீரர்கள் இருவரும் தரையில் குதித்தார்கள். பெரும் கத்திகளையும், அற்புத கேடயங்களையும் எடுத்துக் கொண்ட அவர்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டனர். {இப்படி} மோதிக் கொண்ட அம்மனிதப் புலிகள் பிரகாசமாக ஒளிர்ந்தனர்.

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிறந்த கத்தியுடன் இருந்த சாத்யகியை நோக்கி விரைந்து வந்த பீமசேனன், அவனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்டான். அதே போல உமது மகனும் {துரியோதனனும்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் வில்லாளிகள் அனைவரின் பார்வைக்கெதிராகவே பூரிஸ்ரவசைத் தனது தேரில் விரைந்து ஏற்றிக் கொண்டான்.

அந்தப் போர் தொடர்ந்து கொண்டிருந்த அதேவேளையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட பாண்டவர்கள், வலிமைமிக்கத் தேர்வீரரான பீஷ்மருடன் போரிட்டார்கள். சூரியன் சிவப்பு நிறத்தை எட்டியபோது, செயலூக்கத்துடன் முயன்ற தனஞ்சயன் {அர்ஜுனன்}, பெரும் தேர்வீரர்கள் {மகாரதர்கள்} இருபத்தைந்தாயிரம் {25,000} பேரைக் கொன்றான்.

பார்த்தனை {அர்ஜுனனைக்} கொல்வதற்காகத் துரியோதனனால் ஏவப்பட்ட அவர்கள், சுடர்மிகும் நெருப்பில் விழும் பூச்சிகளைப் போல, அவனை {அர்ஜுனனை} வந்தடைவதற்கு முன்பே இப்படி முற்றாக அழிந்தனர். பிறகு, ஆயுதங்களின் அறிவியலை அறிந்தவர்களான மத்ஸ்யர்கள் மற்றும் கேகயர்கள் வலிமைமிக்கத் தேர்வீரனான பார்த்தனையும் {அர்ஜுனனையும்}, அவனது மகனையும் {அபிமன்யுவையும்} (அவர்களை ஆதரிப்பதற்காகச்) சூழ்ந்து கொண்டார்கள். சரியாக அதே நேரத்தில் சூரியனும் மறைந்தான், போராளிகள் அனைவரும் தங்கள் புலன்களை {உணர்வுகளை} இழந்ததாகவும் தெரிந்தது.

பிறகு அந்த மாலை சந்திப் பொழுதில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, களைப்படைந்த விலங்குகளைக் {குதிரைகளைக்} கொண்ட உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, துருப்புகளைப் பின்வாங்கச் செய்தார். பாண்டவர்கள் மற்றும் குருக்கள் ஆகிய இருதரப்புத் துருப்புகளும், அந்தப் பயங்கர மோதலால் அச்சத்திலும், கவலையிலும் நிறைந்து, தங்கள் தங்களின் பாசறைகளுக்குச் சென்றனர். கௌரவர்களும், சிருஞ்சயர்களுடன் கூடிய பாண்டவர்களும், (படை அறிவியலின்) விதிகளுக்கு ஏற்புடைய வகையில் இரவில் ஓய்ந்திருந்தனர்” {என்றான் சஞ்சயன்}.

ஐந்தாம் நாள் போர் முற்றிற்று

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ  பீஷ்ம பர்வம்-ஸ்ரீ பீஷ்மவத பர்வம்-நான்காம் நாள் போர்-

October 13, 2025

கருடார்த்தச்சந்திர வியூகங்கள்! – பீஷ்ம பர்வம் பகுதி – 056-பீஷ்மர் கருட வியூகத்தை அமைத்தது; அர்ஜுனனும், திருஷ்டத்யும்னனும் அர்த்தச்சந்திர வியூகத்தை அமைத்தது; இரு படைகளிலும் முக்கியப் பகுதிகளில் நின்ற வீரர்களின் பட்டியல்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த {இரண்டாம் நாள்} இரவு கடந்து {மூன்றாம் நாள்} பொழுது விடிந்ததும், எதிரிகளைத் தண்டிப்பவரான சந்தனுவின் மகன் பீஷ்மர், போருக்குத் தயாராகுமாறு (குரு) படைக்கு உத்தரவிட்டார். சந்தனுவின் மகனும் முதிர்ந்தவருமான குரு பாட்டன் {பீஷ்மர்}, உமது மகன்களுக்கு வெற்றியை விரும்பி, கருடனின் பெயரால் அழைக்கப்படும் வலிமைமிக்க அணிவகுப்பை {கருட வியூகத்தை} அமைத்தார்.

அந்தக் கருடனின் அலகில் உமது தந்தையான தேவவிரதர் {பீஷ்மர்} நின்றார். அதன் இரு கண்களில் பரத்வாஜர் மகனும் {துரோணரும்}, சாத்வத குலத்தின் கிருதவர்மனும் நின்றனர். திரிகார்த்தர்கள், மத்ஸ்யர்கள் [1], கேகயர்கள், வாடதானர்கள் ஆகியோரால் ஆதரிக்கப்பட்டவர்களும், புகழ்பெற்ற போர் வீரர்களுமான அஸ்வத்தாமன், கிருபர் ஆகியோர் அதன் {கருட} வியூகத்தின் தலையில் நின்றார்கள். பூரிஸ்ரவஸ், சலன், சல்லியன் மற்றும் பகதத்தன் ஆகியோரும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஜெயத்ரதனுடன் சேர்ந்த மத்ரகர்கள், சிந்து-சௌவீரர்கள், பஞ்சநதர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் ஆகியோரும் அதன் {கருட வியூகத்தின்} கழுத்தில் நின்றார்கள்

அதன் {கருட வியூகத்தின்} முதுகில் மன்னன் துரியோதனனும் அவனது தொண்டர்களும் நின்றார்கள். ஓ! ஐயா, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், காம்போஜர்கள், சகர்கள், சூரசேனர்கள் ஆகியோர் அதன் {கருட வியூகத்தின்} வால் பகுதியில் நின்றார்கள். கவசம் பூண்டவர்களான மகதர்கள், கலிங்கர்கள், தாசேரகர்கள் ஆகியோர் அந்த {கருட வியூக} அணிவகுப்பின் வலது சிறகாக அமைந்தார்கள். பிருஹத்பலனோடு சேர்ந்த கரூஷர்கள் [2], விகுஞ்சர்கள், முண்டர்கள், குண்டீவிருஷர்கள் ஆகியோர் அதன் {கருட வியூகத்தின்} இடது சிறகில் நின்றார்கள்.

அப்போது, எதிரிகளைக் கொல்பவனான சவ்யசச்சின் {அர்ஜுனன்}, அந்தப் படையின் போர் அணிவகுப்பைக் கண்டு, திருஷ்டத்யும்னன் துணையுடன், தனது துருப்புகளின் எதிர் அணுவகுப்பை அமைத்தான். உமது அணிவகுப்புக்கு {கருட வியூகத்திற்கு}  எதிராக அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பாதி நிலவின் {அர்த்தசந்திர} வடிவிலான கடும் அணிவகுப்பை அமைத்தான். பற்பல ஆயுதங்களை அபரிமிதமாகத் தரித்தவர்களும், பல்வேறு நாடுகளைச் சார்ந்தவர்களுமான மன்னர்களால் சூழ அதன் {அர்த்தச் சந்திர வியூகத்தின்} வலது கொம்பில் பீமசேனன் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.

அவனுக்கு அடுத்ததாக வலிமைமிக்கத் தேர்வீரர்களான விராடன், துருபதன் ஆகியோரும்; விஷமேற்றப்பட்ட ஆயுதங்களைக் கொண்ட நீலன் அவர்களுக்கு அடுத்ததாகவும் நின்று கொண்டிருந்தான். நீலனுக்கு அடுத்துச் சேதிகள், காசிகள், கரூஷர்கள், பௌரவர்கள் ஆகியோரால் சூழப்பட்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான {சிசுபாலனின் மகன்} திருஷ்டகேது நின்றான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனும், சிகண்டியும் பாஞ்சாலர்கள், பிரபத்ரகர்கள் மற்றும் பிற துருப்புகளால் ஆதரிக்கப்பட்டு, போருக்காக அதன் {அந்த வியூகத்தின்} மத்தியில் நின்றார்கள். தன் யானைப்படையால் சூழப்பட்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனும் அங்கேதான் இருந்தான்.

அவனுக்கு அடுத்ததாக, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சாத்யகியும், திரௌபதியின் ஐந்து மகன்களும் நின்றார்கள். அவர்களுக்கு அடுத்து இராவான் {அரவான்} நின்றான். அவனுக்கு அடுத்து பீமசேனனின் மகனும் (கடோத்கஜனும்), வலிமைமிக்கத் தேர்வீரர்களான கேகயர்களும் [3] நின்றார்கள். அதற்கு அடுத்து (அந்த அணிவகுப்பின் {அர்த்தச் சந்திர வியூகத்தின்}) இடது கொம்பில் அண்டம் முழுமையையும் பாதுகாப்பவனான ஜனார்த்தனனைத் தனது பாதுகாவலனாகக் கொண்டவனான மனிதர்களில் சிறந்தவன் {அர்ஜுனன்} நின்றான். இப்படியே உமது மகன்கள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்களின் அழிவுக்காகப் பாண்டவர்கள் தங்கள் வலிமைமிக்க எதிரணிவகுப்பை அமைத்தார்கள்.

அதன் பிறகு, ஒருவரை ஒருவர் தாக்கியபடி உமது துருப்புகளுக்கும், எதிரி துருப்புகளுக்கும் இடையேயான போர் தொடங்கியது. அந்த மோதலில் தேர்களும், யானைகளும் ஒன்று கலந்தன. பெரும் எண்ணிக்கையிலான யானைகளும், தேர்க்கூட்டங்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} ஒருவரை ஒருவர் கொல்லும் நோக்கோடு விரைந்து வருவது எங்கும் காணப்பட்டது. (சண்டையில் கலந்து கொள்வதற்காக) விரைந்த எண்ணிலடங்கா தேர்களின் சடசடப்பொலியும், பேரிகைகளின் ஒலியும் ஒன்றாகக் கலந்து உரத்த ஆரவாரத்தை அங்கே எழுப்பின. அந்தக் கடும் மோதலில் ஒருவரை ஒருவர் கொன்றவர்களான, உமது படையையும், அவர்களது படையையும் சேர்ந்த வீரப் போராளிகளின் முழக்கங்கள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சொர்க்கத்தையே எட்டின” {என்றான் சஞ்சயன்}. 

தாக்குதலும் படுகொலைகளும்! – பீஷ்ம பர்வம் பகுதி – 057-யுகமுடிவின் அந்தகனைப் போலப் போரிட்ட அர்ஜுனன்; சலிக்காமல் போரிட்ட போர்வீரர்கள்; சிதறி ஓடிய படையணியினர்; குதிரை, யானை, தேர்ப்படைகள் கலந்து போய் ஒன்றையொன்று தாக்கியது; போர்க்களமெங்கும் சிதறிக் கிடந்த ஆயுதங்களும், தளவாடங்களும்; போரால் ஏற்பட்ட புழுதி இரத்தத்தால் நனைந்து தணிந்தது; இரத்தத்தாலும், சதையாலும் சகதியான போர்க்களம்; மூன்றாம் நாளின் போர் தொடக்கத்தின் போது ஏற்பட்ட அமளியின் விவரிப்பு..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது படையும், அவர்களது {பாண்டவர்களின்} படையும் அணிவகுத்துப் புறப்பட்ட பிறகு, வலிமைமிக்கத் தேர்வீரனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தேர்ப்படை வீரர்களைத் தனது கணைகளால் விழச் செய்து, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தத் தேர்ப்படை அணிகளுக்கு மத்தியில் பெரும் அமளி செய்தான். (இப்படி) யுக முடிவின் அந்தகனைப் போல இருந்த பிருதையின் மகனால் {அர்ஜுனனால்} தார்தராஷ்டிரர்கள் கொல்லப்பட்டாலும் பாண்டவர்களுடன் விடாமல் {சலிக்காமல்} போரிட்டுக் கொண்டிருந்தனர்.

பிரகாசமான புகழை (வெல்ல) விரும்பியும், மரணம் மட்டுமே போரை நிறுத்தும் (நிறுத்துவதற்கான ஒரே வழி) எனக் கொண்டும், வேறு எதிலும் மனத்தைச் செலுத்தாமலும் அவர்கள் {கௌரவப் படையினர்} பாண்டவப் படையணிகளைப் பல இடங்களில் உடைத்து, தாங்களும் உடைந்தனர் {தங்கள் படையணிகளையும் உடைத்துக் கொண்டனர்}. இப்படி உடைந்த பாண்டவ மற்றும் கௌரவத் துருப்புகள் தங்கள் நிலைகளை மாற்றிக் கொண்டு சிதறி ஓடினர். எதையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. சூரியனையே மறைக்கும் அளவிற்க்கு புழுதி பூமியில் இருந்து எழுந்தது. அங்கே இருந்த எவராலும் திசைகளையோ, துணைத்திசைகளையோ வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.

ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, போர் நடந்த இடத்தில் எல்லாம்,  நிறங்கள், ஆளறி சொற்கள் {சங்கேத வார்த்தைகள்}, பெயர்கள் மற்றும் இனத்தின் தனித்தன்மைகள் ஆகிய அறிகுறிகளால் போராளிகள் வழிநடத்தப்பட்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கௌரவர்களின் அணிவகுப்பு {கருட வியூகம்}, பரத்வாஜரின் மகனால் {துரோணரால்} பாதுகாக்கப்பட்டதால் உடைக்க முடியாததாக இருந்தது. சவ்யசச்சினாலும் {அர்ஜுனனாலும்}, பீமனாலும் நன்றாகப் பாதுகாக்கப்பட்டதும் வல்லமைமிக்கதுமான பாண்டவ அணிவகுப்பும் உடைக்க முடியாததாகவே இருந்தது.

போரில் ஒன்றோடு ஒன்று எதிர்த்துப் போரிடுகின்ற தேர்களையும், யானைகளையும் கொண்ட இரண்டு படையின் போர்வீரர்களும் படை முகப்பில் இருந்து வெளிப்பட்டு நன்கு போரிட்டனர். அந்தக் கடுமையான போரில் குதிரைப்படை வீரர்களைப் பளபளப்பாக்கப்பட்ட கூரிய வாட்களாலும், நீண்ட வேல்களாலும் {எதிர்ப்படையின்} குதிரைப்படைவீரர்கள் வீழ்த்தினார்கள்.

(அருகில் உள்ள) தேர்வீரர்களை அடைந்த {எதிர்ப்படையின்} தேர்வீரர்கள் தங்கச் சிறகுகள் கொண்ட கணைகளால் அவர்களை வீழ்த்தினர். உமது தரப்பையும், அவர்களது தரப்பையும் சேர்ந்த யானைப்படை வீரர்கள் அருகில் இருந்த {எதிர்ப்படையின்} யானைப் படைவீரர்களை, அகன்ற தலை கொண்ட கணைகளாலும் {நாராசங்களாலும்}, அம்புகளாலும், வேல்களாலும் {தோமரங்களாலும்} பெரும் எண்ணிக்கையில் வீழ்த்தினர். பெரும் அளவிலான காலாட்படையில் ஒருவருக்கொருவர் கோபத்தை வளர்த்து, தங்கள் வர்க்கப் போராளிகளையே குறுங்கணைகளாலும் {பிண்டிபாலங்களாலும்}, போர்க்கோடரிகளாலும் மகிழ்ச்சியாக வீழ்த்தினர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (அருகில் இருந்த) யானை வீரர்களை {கஜபதிகளை} அடைந்த தேர்வீரர்கள்,  யானைகளோடு அந்த மோதலில் அவர்களை வீழ்த்தினார்கள். அதே போல யானை வீரர்களும் தேர்வீரர்களை வீழ்த்தினார்கள். மேலும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, குதிரை வீரன் வேலைக் கொண்டு தேர்வீரனை வீழ்த்தினான். அதே போலத் தேர்வீரனும் குதிரைவீரனை வீழ்த்தினான். காலாட்படை வீரன் தேர்வீரனை வீழ்த்தினான், தேர்வீரன் காலாடபடை வீரர்களைத் தன் கூரிய கணைகளால் வீழ்த்தினான். யானைவீரர்கள் குதிரைவீரர்களை வீழ்த்தினார்கள். குதிரைவீரர்கள் யானைகளின் முதுகில் இருந்த வீரர்களை வீழ்த்தினார்கள். இவை அனைத்தும் மிகவும் அற்புதம் நிறைந்ததாகத் தெரிந்தது.

அங்கேயும், இங்கேயும் காலாட்படை வீரர்கள், யானை வீரர்களில் முதன்மையானோரால் வீழ்த்தப்பட்டனர். காலாட்படை வீரர்களால் யானை வீரர்கள் வீழ்த்தப்படுவதையும் காண முடிந்தது. நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலுமான காலாட்படை கூட்டம் குதிரை வீரர்களை வீழ்த்துவதையும், குதிரைவீரர்கள் காலாட்படை வீரர்களை வீழ்த்துவதையும் காண முடிந்தது. உடைந்த கொடிக்கம்பங்கள், விற்கள், வேல்கள், யானை மேலுள்ள கூடுகள், விலைமதிப்புமிக்கக் கம்பளங்கள், தோமரங்கள், கதாயுதங்கள், பரிகங்கள் {முள் பதித்த தண்டங்கள்}, கம்பனங்கள், ஈட்டிகள், விதவிதமான கவசங்கள், கணபங்கள், அங்குசங்கள், பட்டாக்கத்திகள், தங்கச் சிறகுகள் கொண்ட கணைகள் எனக் களத்தில் சிதறிக் கிடந்த இவை, ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, மலர் படுக்கைகளைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தன.

சதை மற்றும் இரத்தத்துடன் கூடிய சேறாக மாறிய பூமி, அந்தப் பயங்கரமான போரில் கொல்லப்பட்ட மனிதர்கள், குதிரைகள், யானைகளின் சடலங்களால் கடக்க முடியாததாகியது. மனித இரத்தத்தால் நனைந்த பூமியின் புழுதி மறைந்து போனது {தணிந்தது}. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சுற்றிலும் இருந்த திசைப்புள்ளிகள் முற்றாகத் தெளிவடைந்தது. சுற்றிலும் தலையற்ற உடல்கள் எழுந்து நின்று, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பூமியின் அழிவைக் குறிப்பிட்டன. பயங்கரமானதும், அச்சம் நிறைந்ததுமான அந்தப் போரில், தேர்வீரர்கள் அனைத்துத் திசைகளிலும் சிதறி ஓடுவது தெரிந்தது.

அப்போது, போரில் ஒப்பற்றவர்களும், சிங்கத்தைப் போன்ற ஆற்றலைக் கொண்டவர்களுமான பீஷ்மர், துரோணர், சிந்துக்களின் ஆட்சியாளன் ஜெயத்ரதன், புருமித்ரன், விகர்ணன், சுபலனின் மகன் சகுனி, சல்லியன் ஆகியோர் போரில் நிலைத்தபடி பாண்டவர்களின் படையணிகளை உடைத்தனர். அதே போல, (தங்கள் தரப்பு) மன்னர்கள் அனைவராலும் ஆதரிக்கப்பட்ட பீமசேனன், ராட்சசன் கடோத்கஜன், சாத்யகி, சேகிதானன், திரௌபதின் மகன்கள் ஆகியோர் தானவர்களைக் கலங்கடிக்கும் தேவர்கள் போல, உமது துருப்புகளையும், உமது மகன்களையும் கலங்கடிக்கத் தொடங்கினர்.

க்ஷத்திரியர்களில் காளையரான அவர்கள் அந்தப் போரில் ஒருவரை ஒருவர் தாக்கிக் காண்பதற்குப் பயங்கரர்களாக மாறி, இரத்தத்தால் நனைந்து புரச மரங்களைப் போலப் பிரகாசித்தனர். இருபடைகளையும் சேர்ந்த வீரர்களில் முதன்மையானோர், தங்கள் எதிரிகளை வீழ்த்தியபடி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் உள்ள ஒளிக்கோள்களைப் போலத் தோன்றினர்.

ஆயிரம் தேர்களால் ஆதரிக்கப்பட்ட உமது மகன் துரியோதனன், பாண்டவர்களுடனும், ராட்சசனுடனும் {கடோத்கசனுடனும்} போரிட விரைந்து வந்தான். பெரும் அளவிலான போராளிகளுடன் இருந்த பாண்டவர்கள் அனைவரும், எதிரிகளைத் தண்டிப்பவர்களான பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய வீரர்களை எதிர்த்துப் போரிட விரைந்தார்கள். சினம் தூண்டப்பட்ட கிரீடம் தரித்தவனும் (அர்ஜுனனும்) மன்னர்களில் முதன்மையானோரை எதிர்த்து விரைந்தான். அர்ஜுனனின் மகன் (அபிமன்யு) மற்றும் சாத்யகி ஆகியோர், சுபலனின் மகனுடைய {சகுனியின்} படைகளை எதிர்த்து முன்னேறிச் சென்றனர். அப்போது, மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வண்ணம், ஒருவரை ஒருவர் வீழ்த்த விரும்பிய உமது துருப்புகளுக்கும் எதிரிகளின் துருப்புகளுக்கும் இடையே அச்சம் நிறைந்த போர் மீண்டும் தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.

கர்ணனை நினைத்த துரியோதனன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 058-அர்ஜுனனுக்கும் மன்னர்கள் பலருக்கும் இடையில் ஏற்பட்ட போர்; சாத்யகி மற்றும் அபிமன்யுவைச் சூழ்ந்து கொண்ட சகுனி; சாத்யகியின் தேரைக் காந்தார வீரர்கள் தூள் தூளாக்குவது; யுதிஷ்டிரனின் படைப்பிரிவைத் தாக்கிய துரோணரும், பீஷ்மரும்; துரியோதனனின் மார்பைத் துளைத்து, மயங்கச் செய்து களத்தை விட்டு ஓடச் செய்த பீமன்; சிதறி ஓடிய துரியோதனனின் படைப்பிரிவு; பீஷ்மர் மற்றும் துரோணரின் படைப்பிரிவுகளைச் சிதறி ஓடச் செய்த திருஷ்டத்யும்னனும், யுதிஷ்டிரனும்; கௌரவப் படையைச் சிதறி ஓடச் செய்த அர்ஜுனன்; சிதறி ஓடும் கௌரவப் படையைத் தடுத்த துரியோதனன்; பீஷ்மரைக் கண்டித்த துரியோதனன்; பீஷ்மர் ஏற்ற உறுதி…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போரிடும் பல்குனனை {அர்ஜுனனைக்} கண்ட அந்த மன்னர்கள் அனைவரும் கோபத்தால் தூண்டப்பட்டு, பல்லாயிரம் தேர்களுடன் அவனை {அர்ஜுனனைப்} அனைத்து புறங்களிலும் சூழ்ந்து கொண்டனர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இப்படிப் பெருமளவிலான தேர்ப்படைகளுடன் அவனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டு, அனைத்துப் புறங்களில் இருந்தும் பல்லாயிரம் கணைகளால் அவனை மறைத்தனர். கோபத்தால் தூண்டப்பட்ட அவர்கள் {கௌரவத் தரப்பின் மன்னர்கள்}, கூரிய முனை கொண்ட பிரகாசமான வேல்கள், கதாயுதங்கள், பரிகங்கள் {முள் பதித்த தண்டங்கள்}, தோமரங்கள் போர்க்கோடரிகள், முத்கரங்கள் {சம்மட்டி போன்றவை} மற்றும் உலக்கைகள் {கனத்த தடிகள்} ஆகிய ஆயுதங்களைப் பல்குனனின் {அர்ஜுனனின்} தேர்மீது வீசினார்கள்.

வெட்டுக்கிளிகளின் கூட்டத்தைப் போல, அனைத்துப் புறங்களிலும் (தன்னை நோக்கி) வரும் ஆயுதங்களின் மழையைப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் கணைகளைக் கொண்டு தடுத்தான். அச்சந்தர்ப்பத்தில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட கர வேகத்தை வெளிப்படுத்திய பீபத்சுவை {அர்ஜுனனைக்} கண்ட தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், பிசாசர்கள், உரகர்கள், ராட்சசர்கள் ஆகியோர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} “அற்புதம், அற்புதம்” என்று சொல்லி அவனைப் {அர்ஜுனனைப்} புகழ்ந்தனர்.

பெரும்படையுடன் இருந்த சுபலன் மகனின் {சகுனியின்} காந்தார வீரர்கள் [1], சாத்யகியையும், அபிமன்யுவையும் சூழ்ந்து கொண்டார்கள். சுபலனின் மகனால் {சகுனியால்} தலைமை தாங்கப்பட்டவர்களும், துணிவுமிக்கவர்களும், கோபமடைந்தவர்களுமான அந்த வீரர்கள், பல்வேறு விதமான ஆயுதங்களுடன் இருந்த அந்த விருஷ்ணி வீரனின் {சாத்யகியின்} அற்புதத் தேரைத் துண்டுகளாக வெட்டினார்கள். அந்தக் கடும் மோதலில் தனது தேரைக் கைவிட்ட சாத்யகி, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, அபிமன்யுவின் தேரில் விரைந்து ஏறிக் கொண்டான். ஒரே தேரில் இருந்த அவ்விருவரும் சுபலன் மகனின் {சகுனியின்} படையைக் கூரிய முனை கொண்ட தங்கள் நேரான கணைகளால் விரைந்து கொல்லத் தொடங்கினர்.

போரில் நிலைத்துப் போராடிக் கொண்டிருந்த துரோணரும், பீஷ்மரும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் படைப்பிரிவைக் கங்கப் பறவையின் {கழுகின்} இறகுகளைக் கொண்ட கூரிய கணைகளால் படுகொலை செய்யத் தொடங்கினர். அப்போது தர்மனின் மகனும் {யுதிஷ்டிரனும்}, மாத்ரியின் மூலம் பிறந்தவர்களான பாண்டுவின் மற்ற இரு மகன்களும் {நகுலனும், சகாதேவனும்}, மொத்தப்படையும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, துரோணரின் படையைக் கலங்கடிக்கத் தொடங்கினர். அங்கே நடைபெற்ற போர், பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே நடைபெற்ற பயங்கரப் போரைப் போலக் கடுமையானதாகவும், அச்சம் நிறைந்ததாகவும், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தது.

பீமசேனன் மற்றும் கடோத்கசன் ஆகிய இருவரும் பெரும் காரியங்களைச் செய்தனர். அப்போது அங்கே வந்த துரியோதனன் அவர்கள் இருவரையும் தடுத்தான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்} அதுவரை தான் போரிட்டதைவிட மிக அற்புதமாகத் தன் தந்தையை விஞ்சும் அளவுக்குப் போரிட்டான்.

கோபத்தால் தூண்டப்பட்டும் புன்னகைத்தவாறே இருந்த பாண்டுவின் மகன் பீமசேனன், பழிவாங்கும் தன்மையுடன் துரியோதனனின் மார்பை ஒரு கணையால் துளைத்தான். அந்தத் தாக்குதலின் பலத்தால் பீடிக்கப்பட்ட மன்னன் துரியோதனன் தனது தேர்த்தட்டில் அமர்ந்தவாறே மயக்கமடைந்தான். உணர்விழந்தவனை {துரியோதனனைக்} கண்ட அவனது தேரோட்டி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} விரைவாகக் களத்தைவிட்டு வெளியே {தேரில்} அவனைச் சுமந்து சென்றான். அப்போது துரியோதனனை ஆதரித்த துருப்புகள் சிதறி ஓடினர். இப்படி அனைத்துப் புறங்களிலும் ஓடிப்போகும் குரு படையைக் கூர்முனைக் கணைகளால் தாக்கியபடியே பீமன் துரத்திச் சென்றான்.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, போர்வீரர்களில் முதன்மையான பிருஷதன் மகனும் (திருஷ்டத்யும்னனும்), பாண்டுவின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனும், எதிரிப்படைகளைக் கொல்லும் கூரிய கணைகளால், துரோணர், கங்கையின் மைந்தன் {பீஷ்மர்} ஆகிய இருவரின் படையை அவர்களது கண்ணெதிரிலேயே கொன்றனர். இதனால் சிதறி ஓடிய உமது மகனின் படையைத் தடுக்க இயலாதவர்களாகவே, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பீஷ்மரும், துரோணரும் இருந்தனர். பீஷ்மரும், உயர் ஆன்மத் துரோணரும் தடுக்க முயற்சித்தும், அந்தப் படைத் துரோணர் மற்றும் பீஷ்மர் ஆகியோரின் கண் முன்பே சிதறி ஓடினர்.

ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, ஆயிரக்கணக்கான தேர்வீரர்கள் அனைத்துப் புறங்களிலும் ஓடிய போது, சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, சினி {சிநி} குலத்துக் காளை {சாத்யகி} ஆகிய இருவரும் ஒரே தேரில் இருந்து கொண்டு, போரிட்டுக் கொண்டிருந்த சுபலன் மகனின் {சகுனியின்} படையைக் கொல்லத் தொடங்கினர். சிநியின் பேரனும் {சாத்யகியும்}, குரு குலத்துக் காளையும் {அபிமன்யுவும்}, தேய்பிறையின் கடைசித் திதியைக் {புதுநிலவைக் [அமாவாசைக்]} கடந்து ஆகாயத்தில் சேர்ந்திருக்கும் சூரியனையும், சந்திரனையும் போலப் பிரகாசித்தனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனனும், நீரோடைகளில் மழை பொழியும் மேகங்களைப் போல உமது படையின் மீது அம்புகளைப் பொழிந்தான். பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் போரில் இப்படிக் கொல்லப்பட்ட அந்தக் கௌரவப்படை துயரத்திலும் அச்சத்திலும் நடுங்கி சிதறி ஓடினர். சிதறி ஓடும் படையைக் கண்டவர்களும், வலிமைமிக்கவர்களுமான பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவரும், கோபத்தால் தூண்டப்பட்டும், துரியோதனனின் நன்மையை விரும்பியும் அதை {அந்தப் படை ஓடிப்போவதைத்} தடுக்க முனைந்தனர்.

பிறகு, மன்னன் துரியோதனனே நேரடியாகப் போராளிகளைத் தேற்றி [2], அனைத்துப் புறங்களிலும் சிதறி ஓடும் அந்தப் படையைத் தடுத்தான். அந்த வலிமைமிக்க க்ஷத்திரிய வீரர்கள் அனைவரும் உமது மகனை {துரியோதனனை} எங்குக் கண்டார்களோ அங்கேயே நின்றனர். அப்படி நின்றவர்களைக் கண்டு பொதுவான வேறு பல வீரர்களும் வெட்கத்தாலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் வீரத்தை ஒருவருக்கு ஒருவர் வெளிக்காட்ட விரும்பியும் நின்றனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்படி மீண்டும் திரட்டப்பட்ட அந்தப் படையின் வேகம், நிலவு உதிக்கும் நேரத்தில் ஆர்ப்பரிக்கும் கடலைப் போல வேகமுடையதாயிற்று.

போரிடுவதற்காக மீண்டும் திரண்ட தனது படையைக் கண்ட மன்னன் துரியோதனன், விரைவாகச் சந்தனுவின் மகன் பீஷ்மரிடம் சென்று, “ஓ! பாட்டா {பீஷ்மரே}, நான் சொல்வதைக் கேளும். ஓ! பாரதரே {பீஷ்மரே}, நீரும், ஆயுதமறிந்தோரில் முதன்மையான துரோணரும், அவரது மகனும் {அஸ்வத்தாமனும்}, நமது நண்பர்கள் பிறரும் உயிரோடிருக்கையிலேயே, ஓ! குருவின் மகனே {பீஷ்மரே}, மேலும், வலிமைமிக்க வில்லாளியான கிருபர் உயிரோடிருக்கையிலேயே இப்படி எனது படை சிதறி ஓடுவதை நம்பத்தகுந்ததாக நான் கருத இல்லை.

போரில் பாண்டவர்களை, உமக்கோ, துரோணருக்கோ, துரோணரின் மகனுக்கோ {அஸ்வத்தாமனுக்கோ}, கிருபருக்கோ எவ்வழியிலும் இணையாக நான் கருதவில்லை. ஓ! வீரரே {பீஷ்மரே}, எனது படை கொல்லப்படுவதை மன்னிக்கும் நீர், ஓ! பாட்டா {பீஷ்மரே}, பாண்டுவின் மகன்களுக்குச் சாதகமாக இருக்கிறீர் என்பதில் ஐயமில்லை. ஓ! மன்னா {பீஷ்மரே}, போர் நடைபெறுவதற்கு முன்னரே, பாண்டவர்களுடன் போரிட மாட்டீர் என்பதை என்னிடம் நீர் சொல்லியிருக்க வேண்டும். உம்மிடமிருந்தும், துரோணரிடமிருந்தும் அத்தகு வார்த்தைகளை நான் கேட்டிருந்தால், ஓ! பாரதரே {பீஷ்மரே}, என்ன வழியைப் பின்பற்ற வேண்டும் எனக் கர்ணனுடன் கூடி நான் சிந்தித்திருப்பேன். உங்கள் இருவரினாலும் போரில் கைவிடத்தகாதவன் நான் எனில், ஓ! மனிதர்களில் காளையரே {பீஷ்மரே, துரோணரே}, உங்கள் ஆற்றல்களுக்குத் தக்கவாறு போரிடுவீராக” என்றான் {துரியோதனன்}.

இந்த வார்த்தைகளைக் கேட்டு மீண்டும் மீண்டும் சிரித்த பீஷ்மர், கோபத்தால் தனது கண்களைச் சுழற்றிக் கொண்டு, உமது மகனிடம் {துரியோதனனிடம்}, “ஓ! மன்னா {துரியோதனா}, உனக்கு ஏற்புடையதும், நன்மை நிறைந்ததுமான வார்த்தைகளை நான் பல முறை உனக்குச் சொன்னேன். வாசவனைத் {இந்திரனைத்} தங்களுடன் கொண்ட தேவர்களாலும் கூடப் பாண்டவர்களைப் போரில் வெல்ல இயலாது. எனினும், கிழவனான என்னால் என்ன செய்ய முடியுமோ, ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, அதை என் சக்திக்குத் தக்கபடி இந்தப் போரில் நான் செய்வேன். உனது சொந்தங்களுடன் கூடி அதை இப்போது நீ சாட்சியாகக் காண்பாயாக. தனியனான நான், அனைவரின் பார்வையிலும் இன்று, தங்கள் துருப்புகளின் தலைமையில் உள்ள பாண்டுமகன்களை அவர்களது சொந்தங்களுடன் சேர்த்துத் தடுக்கப் போகிறேன்” என்றார் {பீஷ்மர்}.

பீஷ்மரால் இப்படிச் சொல்லப்பட்டதும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியால் நிறைந்த உமது மகன் {துரியோதனன்}, சங்குகளை முழக்கவும், பேரிகைகளை அடிக்கவும் ஏற்பாடு செய்தான். உரத்த முழக்கங்களைக் கேட்ட பாண்டவர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் சங்குகளை முழக்கி, பேரிகைகளையும், முரசுகளையும் அடிக்கச் செய்தனர்” {என்றான் சஞ்சயன்}.

பீஷ்மர் நடத்திய கடும் தாக்குதல்! – பீஷ்ம பர்வம் பகுதி – 059அ- வீரர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைக்கலப்பும்; அவர்களுக்குள் பேசிக்கொண்ட வார்த்தைகளும்; போரில் பீஷ்மர் வெளிப்படுத்திய வேகம்; பீஷ்மரைக் கண்டு பாண்டவப் படைகள் அஞ்சி ஓடுவது; நடக்கும் காரியங்களை அர்ஜுனனுக்கு எடுத்துரைக்கும் கிருஷ்ணன்; பீஷ்மரை நோக்கிச் செல்லும்படி கிருஷ்ணனிடம் அர்ஜுனன் சொல்வது….

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “என் மகனின் வார்த்தைகளால் சீற்றமடைந்த பீஷ்மர் அந்தப் பயங்கர உறுதிமொழியை {சபதத்தை} ஏற்ற பிறகு, ஓ! சஞ்சயா, பாண்டுவின் மகன்களைப் பீஷ்மர் என்ன செய்தார்? அல்லது, பாட்டனை {பீஷ்மரை} அந்தப் பாஞ்சாலர்கள் என்ன செய்தார்கள்? ஓ! சஞ்சயா, அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த நாளின் முற்பகல் கடந்ததும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சூரியன் தனது மேற்கு நோக்கிய பாதையில் இருந்த போது, அந்த உயர் ஆன்ம பாண்டவர்கள் வென்ற பிறகு, அறநெறியின் குறியீடுகள் அனைத்தின் வேறுபாடுகளையும் அறிந்தவரும், வேகமான குதிரைகளால் சுமந்து செல்லப்பட்டவரும், பெரும் படையாலும், உமது மகன்கள் அனைவராலும் பாதுகாக்கப்பட்டவரும் உமது தந்தையுமான தேவவிரதர் {பீஷ்மர்}, பாண்டவர்களின் படையை நோக்கி விரைந்து சென்றார்.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாவம் நிறைந்த உமது கொள்கையின் {அநீதியின்} விளைவால், நமக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் ஒரு பயங்கரமான போர் அப்போது தொடங்கியது. விற்களின் நாணொலிகளும், (வில்லாளிகளின் கைகளில் உள்ள) தோலுறைகளும் மோதும் ஒலிகளும் ஒன்றாகக் கலந்து, மலைகள் பிளப்பதற்கு ஒப்பான பேரொலியை ஏற்படுத்தின. “நில்”, “இங்கே நான் நிற்கிறேன்”, “இவனைத் தெரிந்து கொள்”, “திரும்பு”, “எழுந்து நில்”, “உனக்காகக் காத்திருக்கிறேன்”, “அடி” என்ற வார்த்தைகளே எங்கும் கேட்கப்பட்டன.

தங்கத்தாலான கவசங்கள், கிரீடங்கள், கொடிமரங்கள் ஆகியன விழும் ஒலிகள் கற்தரையில் {மலைகளில்} விழும் கற்களின் ஒலியை ஒத்திருந்தன. ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த தலைகளும், கரங்களும், நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் தரையில் கீழே விழுந்து கொந்தளித்தன {துடித்தன}. உடலில் இருந்து தலை துண்டிக்கப்பட்ட சில துணிவுமிக்கப் போராளிகள், ஆயுதங்களைப் பிடித்தபடியோ, அல்லது வில்லை வளைத்தபடியோ தொடர்ந்து நின்றனர். சதை மற்றும் இரத்தத்தாலான மூர்க்கமான ஓடை ஒன்று, (இறந்த) யானைகளின் உடல்களைத் தனது (குறைநீர்) பாறைகளாகக் கொண்டு ஒரு பயங்கரமான ஆறாக அங்கே ஓடத் தொடங்கியது. குதிரைகள், மனிதர்கள், யானைகள் ஆகியவற்றின் உடல்களில் இருந்து பாய்ந்த அது {அந்த ஆறு}, கழுகுகளுக்கும், நரிகளுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்து, அடுத்த உலகம் எனும் கடலை நோக்கி ஓடியது. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது மகன்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் (அப்போது) நடைபெற்ற அது போன்ற ஒரு போர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} இதற்கு முன்னர்ப் பார்க்கவோ, கேட்கவோ படவில்லை. அந்த மோதலில் கொல்லப்பட்ட போராளிகளின் உடல்கள் கிடந்ததன் விளைவாக, தேர்களால் தங்கள் பாதையில் செல்ல முடியவில்லை. கொல்லப்பட்ட யானைகளின் உடல்கள் கிடந்ததன் விளைவாக, மலைகளின் நீலச் சிகரங்கள் போர்க்களமெங்கும் பரந்து கிடப்பதாகத் தெரிந்தது.

பல்வேறு நிறங்களிலான கவசங்கள், தலைப்பாகைகள் ஆகியன சிதறிக் கிடந்த அந்தப் போர்க்களத்தைப் பார்க்க கூதிர்கால {சரத்ருது- இலையுதிர்கால} ஆகாயம் போல அழகாகத் தெரிந்தது. கடுமையான காயம்பட்டாலும் சில போராளிகள் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் எதிரியை நோக்கிப் போரிட விரைந்ததைக் காண முடிந்தது. போர்க்களத்தில் வீழ்ந்த பலர், “ஓ! ஐயா”, “ஓ! சோதரா”, “ஓ! நண்பா”, “ஓ! உறவே”, “ஓ! தோழா”, “ஓ! மாமா” “என்னைக் கைவிடாதே” என்றும், மேலும் சிலர், “{போரிட} வா, இங்கே வா, ஏன் அஞ்சுகிறாய்? எங்கே செல்வாய்? போரில் நிற்கிறேன், அஞ்சாதே” என்று உரக்க கூச்சலிட்டார்கள்.

அந்த மோதலில், சந்தனுவின் மகனான பீஷ்மர், தொடர்ந்து தனது வில்லை வட்டமாக வளைத்தபடி, கடும் விஷமிக்கப் பாம்புகளைப் போன்றதும், சுடர்மிகும் முனைகளைக் கொண்டதுமான கணைகளை அடித்துக் கொண்டிருந்தார். அனைத்துப் புறங்களிலும் கணைச்சரங்களைத் தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தவரும், கடும் நோன்புகளைக் கொண்டவருமான அந்த வீரர் {பீஷ்மர்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாண்டவத் தேர்வீரர்களை ஒவ்வொருவரையும் முன்பே பெயர் சொல்லி அழைத்து, பின்னர் அடித்தார். தனது கரங்களின் மிகையான வேகத்தை வெளிக்காட்டியபடி, தனது தேர் சென்ற இடமெல்லாம் ஆடிக் கொண்டிருந்த (ஆடுவதைப் போலச் செயல்பட்ட) அவர் {பீஷ்மர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எங்கும் இருக்கும் நெருப்பு வளையத்தைப் போலத் தோன்றினார்.

தனது அசைவுகளின் வேகத்தின் விளைவாக, போரில் இருந்த பாண்டவர்களுக்கும், சிருஞ்சயர்களுக்கும் அந்த வீரர் பலராகக் காட்சியளித்தார். மாயையால் பீஷ்மர் தன்னைப் பலராகப் பிரித்துக் கொண்டார் என்றே அனைவரும் கருதினார்கள். இப்போது அவரைக் கிழக்கில் பார்த்தால், அடுத்தக் கணம் மேற்கில் அவரைக் கண்டார்கள். வடக்கில் பார்த்தால் அடுத்தக் கணம் அவரைத் தெற்கில் கண்டார்கள். அந்தப் போரில் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} இப்படியே காணப்பட்டார்.

பாண்டவர்களில் யாராலும் அவரை {பீஷ்மரைப்} பார்க்கக்கூட முடியவில்லை. அவர்கள் கண்டதெல்லாம் அவரது வில்லில் இருந்து புறப்பட்ட எண்ணற்ற கணைகளை மட்டுமே. தங்கள் படையணிகளைக் கொன்று இத்தகு காரியங்களைச் செய்த அவரை {பீஷ்மரைக்} கண்ட வீரமிக்கப் போராளிகள், புலம்பல்கள் பலவற்றைச் உதிர்த்தார்கள். உமது தந்தையை {பீஷ்மரை} நோக்கி வந்த ஆயிரக்கணக்கான மன்னர்கள், மனித சக்திக்கு அப்பாற்பட்ட வகையில் களத்தைக் கடந்து, சினத்தால் தூண்டப்பட்ட பீஷ்மர் எனும் நெருப்பில், தன்னழிவுக்காகவே வரும் விட்டில் பூச்சிகளைப் போல வந்து விழுந்தார்கள்.

வேகமான கரங்களை உடைய அந்த வீரரால் {பீஷ்மரால்} அடிக்கப்பட்டு, (அவரை எதிர்த்த) மனிதர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றின் உடல்களில் மீது விழுந்த எண்ணிலாத கணைகளில் ஒன்று கூட இலக்கு தவறவில்லை. ஒரே நேரான கணையைக் கொண்டு, வஜ்ரத்தால் பிளக்கப்படும் மலையைப் போல ஒரு யானையை அவர் {பீஷ்மர்} அப்புறப்படுத்தினார். கவசம் தரித்தவர்களும், ஒன்று சேர்ந்திருந்தவர்களுமான இரண்டோ, மூன்றோ யானை வீரர்களை, கூர்முனை கொண்ட ஒரே கணையால் உமது தந்தை {பீஷ்மர்} துளைத்தார்.

அந்தப் போரில், மனிதர்களில் புலியான பீஷ்மரை அணுகிய எவரும், அடுத்தக் கணம் தரையில் கிடப்பதையே காணமுடிந்தது. இப்படி ஒப்பற்ற ஆற்றலைக் கொண்ட பீஷ்மரால் கொல்லப்பட்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் பெரும்படை ஆயிரம் திசைகளில் சிதறடிக்கப்பட்டது. கணைமாரியால் பீடிக்கப்பட்ட அந்தப் பெரும்படை, வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் உயர் ஆன்ம பார்த்தன் {அர்ஜுனன்} ஆகியோரின் முன்னிலையிலேயே நடுங்கத் தொடங்கியது. பாண்டவப் படையின் வீரத் தலைவர்கள் பெரும் முயற்சி செய்தாலும், பீஷ்மரின் கணைகளால் பீடிக்கப்பட்ட தங்கள் தரப்பின் பெரும் தேர்வீரர்கள் ஓடுவதைக் கூட அவர்களால் தடுக்க முடியவில்லை. அந்தப் பரந்த படை முறியடிக்கப்பட்டதற்குக் காரணமான அந்த ஆற்றல் தேவர்களின் தலைவனுடைய {இந்திரனுடைய} ஆற்றலுக்கு நிகராக இருந்தது. இருவராக இருக்கும் மனிதர்கள் எவரையும் காண முடியாதபடி, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் படை {பாண்டவப் படை} முழுமையாக முறியடிக்கப்பட்டது.

தேர்கள், யானைகள், குதிரைகள் எங்கும் துளைக்கப்பட்டிருந்தன, கொடிமரங்கள், தேர்களின் கூபரங்கள் {தேர்க்கால்கள்} ஆகியன களமெங்கும் சிதறிக் கிடந்தன. பாண்டு மகன்களின் படை “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கதறி உணர்விழந்து போயிற்று. தந்தை மகனைத் தாக்கினான், மகன் தந்தையைத் தாக்கினான்; விதிவசத்தால் நண்பன் ஒருவன் தன் ஆருயிர் நண்பனைப் போருக்கழைத்தான். பாண்டு மகன்களின் போராளிகளில் சிலர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்கள் கவசங்களைத் தூக்கி எறிந்துவிட்டு கலைந்த தலைமயிருடன் தலைதெறிக்க ஓடினார்கள். உரத்த புலம்பல்களில் ஈடுபட்டவர்களான பாண்டு மகன்களின் படையின், தேர்வீரர்களில் சிறந்த தலைவர்களே கூட, பசுக்கூட்டத்தைப் போல மிகவும் குழம்பிப் போனதாகத் தெரிந்தது.

யாதவர்களை மகிழ்வூட்டுபவன் {கிருஷ்ணன்}, இப்படி முறியடிக்கப்பட்ட படையைக் கண்டு, தேர்களில் சிறந்த (தான் செலுத்திய) தேரை நிறுத்தி, பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, உன்னால் விரும்பப்பட்ட நேரம் இதோ வந்துவிட்டது. ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, பீஷ்மரைத் தாக்கு, இல்லையேல் நீ உணர்வுகளை இழப்பாய். ஓ! வீரா {அர்ஜுனா}, “பீஷ்மர் மற்றும் துரோணரின் தலைமையில் உள்ள திருதராஷ்டிர மகன்களின் போர்வீரர்கள் அனைவரையும், உண்மையில், என்னோடு போரிடப்போகும் அனைவரையும் நான் கொல்வேன்” என்று மன்னர்களின் கூட்டத்தில் முன்பு நீ சொன்னாய். ஓ! குந்தியின் மகனே, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, உனது அந்த வார்த்தைகளை நீ மெய்ப்பிப்பாயாக. ஓ! பீபத்சு {அர்ஜுனா}, அனைத்துப் புறங்களிலும் முறியடிக்கப்படும் உனது படையைப் பார். அகல விரிந்த வாயைக் கொண்ட அந்தகனைப் போல இருக்கும் பீஷ்மரைக் கண்டு, நாலாபுறமும் ஓடும் யுதிஷ்டிரப்படையின் மன்னர்களைப் பார். சிங்கத்தைக் கண்ட பலவீனமான விலங்குகளைப் போல அச்சத்தால் பீடிக்கப்பட்டுத் தங்களைத் தாங்களே அரிதாக்கிக் கொள்கிறார்கள்” என்றான் {கிருஷ்ணன்}.

இப்படிச் சொல்லப்பட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}, “கடலெனும் இந்த எதிரிப்படைக்குள் மூழ்கி, பீஷ்மர் இருக்கும் இடத்திற்குக் குதிரைகளைத் தூண்டுவாயாக. ஒப்பற்ற வீரரான மரியாதைக்குரிய அந்தக் குரு பாட்டனை {பீஷ்மரை}, கீழே வீழ்த்தப்போகிறேன்” என்றான் {அர்ஜுனன்}.

பாண்டவப் படையைச் சூறையாடிய பீஷ்மர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 059ஆ-போரிடுவதற்காகப் பீஷ்மரை அணுகிய அர்ஜுனன்; பீஷ்மரின் வில்லை இரு முறை அறுத்த அர்ஜுனன்; கோபம் மூண்ட பீஷ்மர் பாண்டவப் படையைச் சூறையாடியது; தலைதெறிக்க ஓடிய பாண்டவப் படை; போரின் நிலை குறித்துக் கிருஷ்ணன் கவலை கொள்வது

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொன்னான்}, “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது மாதவன் {கிருஷ்ணன்},  சூரியனைப் போன்றதும், காணக் கண் கூசுவதுமான பீஷ்மரின் தேரை நோக்கி, அந்த வெள்ளி நிறக் குதிரைகளைச் செலுத்தினான். பீஷ்மருடன் மோத விரையும் வலிய கரங்களைக் கொண்ட பார்த்தனைக் {அர்ஜுனனைக்} கண்ட, யுதிஷ்டிரனின் வலிமையான படை மீண்டும் அணிதிரண்டது.

சிங்கம் போலத் தொடர்ச்சியாக முழங்கியவரும், குரு போர்வீரர்களில் முதன்மையானவருமான பீஷ்மர், தனது கணை மாரியால் விரைவாகத் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} தேரை மறைத்தார். அந்தக் கணத்தில், கொடிமரம் மற்றும் தேரோட்டியோடு கூடிய அவனது {அர்ஜுனனின்} தேர், அந்தக் கணை மாரியால் மறைந்தது. எனினும், பெரும் வல்லமை படைத்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, பீஷ்மரின் கணைகளால் சிதைக்கப்பட்ட அந்தக் குதிரைகளைப் பொறுமையுடனும், அச்சமில்லாமலும் வழிநடத்திச் சென்றான். அப்போது, மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான நாணொலி கொண்ட தெய்வீக வில்லை எடுத்த பார்த்தன் {அர்ஜுனன்}, தன் கூரிய கணைகளால் பீஷ்மரின் வில்லை அறுத்துக் கீழே தள்ளினான்.

தனது வில் அறுபட்டதைக் கண்ட குரு வீரரான உமது தந்தை {பீஷ்மர்}, மற்றொரு வில்லைக் கண் இமைக்கும் நேரத்திற்குள் எடுத்து நாணேற்றினார். மேகங்களின் முழக்கத்தை ஒத்திருக்கும் நாணொலி கொண்ட அந்த வில்லைத் தன் இரு கைகளாலும் வளைத்தார். ஆனால், கோபம் தூண்டப்பட்ட நிலையில் இருந்த அர்ஜுனன், அந்த வில்லையும் அறுத்தான். அப்போது, சந்தனுவின் மகன் {பீஷ்மர் அர்ஜுனனிடம்}, “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அற்புதம். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அற்புதம். ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, உண்மையில், இத்தகு வல்லமைமிக்கக் காரியம் உனக்குத் தகுந்ததே. நான் உன்னிடம் மனநிறைவு கொண்டேன். ஓ! மகனே {அர்ஜுனா}, என்னோடு கடினமாக நீ போரிடுவாயாக” என்று (அர்ஜுனன் வெளிப்படுத்திய) கரவேகத்தை மெச்சினார்.

இப்படிப் பார்த்தனை {அர்ஜுனனை} மெச்சி, மற்றொரு பெரிய வில்லை எடுத்த அந்த வீரர் {பீஷ்மர்}, தனது கணைகளைப் பார்த்தனின் {அர்ஜுனனின்} தேர் மீது பொழிந்தார். அந்தக் கணைகளைக் கலங்கடிக்கும் வகையில், தனது தேரை வட்டமாக விரைந்து சுழற்றிய வாசுதேவன் {கிருஷ்ணன்}, தேரை வழிநடத்துவதில் தான் கொண்ட பெருந்திறனை வெளிப்படுத்தினான்.

பிறகு, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பீஷ்மர், பெரும்பலத்துடன் தனது கூர்முனைக் கணைகளால் வாசுதேவன் {கிருஷ்ணன்}, தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரையும்,   உடல் முழுவதும் துளைத்தார். பீஷ்மரின் அந்தக் கணைகளால் சிதைந்த அந்த இரு மனிதப்புலிகளும், கொம்புகளால் கீறப்பட்ட உடல்களுடன் முழங்கிக் கொண்டிருக்கும் இரு காளைகளைப் போல அப்போது தோன்றினார்கள். மீண்டும் கோபம் தூண்டப்பட்ட பீஷ்மர், அந்த இரு கிருஷ்ணர்களையும் {கருப்பர்களான கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் ஆகியோரையும்} நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான கணைகளால் அனைத்துப் புறங்களிலும் மறைத்தார். கோபம் தூண்டப்பட்ட அந்தப் பீஷ்மர், தனது கூரிய கணைகளால், அந்த விருஷ்ணி குலத்தவனை {கிருஷ்ணனை} நடுங்கச் செய்தார் [1]. உரக்கச் சிரித்த அவர் {பீஷ்மர்} கிருஷ்ணனை வியப்படையச் செய்தார்.

இரு படைகளுக்கு மத்தியில் இருந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணன், அந்தப் போரில் பீஷ்மரின் ஆற்றலையும், அர்ஜுனனின் மென்மையையும், அதனால் பீஷ்மர் போரில் பொழிந்த தொடர்ச்சியான கணைமாரிகளையும் கண்டு, அனைத்தையும் எரிக்கும் சூரியனைப் போல ஆனான். யுதிஷ்டிரப்படையில் உள்ள முதன்மையான போராளிகளை அவ்வீரர் {பீஷ்மர்} கொல்வதையும், அண்ட அழிவுக்கான நேரம் வந்துவிட்டதைப் போல அப்படையை அவர் {பீஷ்மர்} சூறையாடுவதையும் கண்டவனும், அளவிலா ஆன்மா கொண்டவனும், படைக்கூட்டங்களைக் கொல்பவனும், புகழத்தக்கவனுமான கேசவனால் {கிருஷ்ணனால்} தான் கண்டதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. யுதிஷ்டிரனின் படையால் அந்தப் படுகொலையில் இருந்து மீள முடியாது என்றே நினைத்தான்.

மேலும், “ஒரே நாளில் தைத்தியர்கள் மற்றும் தானவர்களோடு கூடிய அனைவரையும் பீஷ்மரால் கொன்றுவிட முடியும் எனும்போது, பாண்டுமகன்களின் துருப்புகள் அனைத்தையும், அவர்களது தொண்டர்களையும் எவ்வளவு எளிதாகக் கொல்ல முடியும்? பாண்டுவின் ஒப்பற்ற மகனுடைய {யுதிஷ்டிரருடைய} பரந்த படை மீண்டும் சிதறி ஓடுகிறது. சோமகர்கள் முறியடிக்கப்பட்டதைக் கண்ட கௌரவர்கள், பாட்டனை {பீஷ்மரை} மகிழ்வூட்டியபடியே உற்சாகமாகப் போரிட விரைகிறார்கள். அர்ஜுனனைப் பொறுத்தவரை, கூரிய கணைகளால் தாக்கப்பட்டாலும், பீஷ்மரின் மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தான் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாதிருக்கிறான். எனவே, பாண்டவர்களுக்காகக் கவசம் தரித்து பீஷ்மரை இன்று நானே கொல்வேன். இந்த உயர் ஆன்மப் பாண்டவர்களின் சுமையை நான் குறைப்பேன்” என்றும் நினைத்தான் {கிருஷ்ணன்}.

கிருஷ்ணன் இப்படி ஆலோசித்துக் கொண்டிருந்தபோது, கோபம் தூண்டப்பட்ட பாட்டன் {பீஷ்மர்}, மீண்டும் தனது கணைகளைப் பார்த்தனின் {அர்ஜுனனின்} தேர் மீது அடித்தார். அந்தக் கணைகள் பெரும் எண்ணிக்கையிலானவையாக இருந்தமையால், அனைத்துத் திசைகளும் முழுமையாக மறைக்கப்பட்டன. ஆகாயமோ, திசைகளோ, பூமியோ, பிரகாசமான கதிர்களைக் கொண்ட சூரியனோ கூடத் தெரியவில்லை. வீசிய காற்றும் புகை கலந்து இருப்பதாகத் தெரிந்தது; அனைத்துத் திசைகளும் நடுங்குவதைப் போலத் தெரிந்தது.

சந்தனுவின் அரச மகனுடைய {பீஷ்மருடைய} கட்டளையின் கீழ் இருந்த துரோணர், விகர்ணன், ஜெயத்ரதன், பூரிஸ்ரவஸ், கிருதவர்மன், கிருபர், சுருதாயுஸ் [2], அம்பஷ்டர்களின் ஆட்சியாளன், விந்தன் மற்றும் அனுவிந்தன், சுதக்ஷிணன், மேற்கத்தியர்கள், சௌவீரர்களின் பல்வேறு இனங்கள், வசாதிகள், க்ஷுத்ரகர்கள், மாலவர்கள் ஆகியோர் போரிடுவதற்காகக் கிரீடியை {அர்ஜுனனை} விரைந்து அணுகினர்.

பல்லாயிரக்கணக்கான குதிரைகள், காலாட்படை, தேர்கள், வலிமைமிக்க யானைகள் ஆகியவற்றால் சூழப்பட்ட கிரீடியைச் {அர்ஜுனனைச்} சிநியின் பேரன் {சாத்யகி} கண்டான். காலாட்படை, யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றால் இப்படிச் சூழப்பட்டவர்களான வாசுதேவனையும், அர்ஜுனனையும் கண்ட சிநிகளின் தலைவன் {சாத்யகி}, அவ்விடத்திற்கு விரைந்து சென்றான். வில்லாளிகளில் முதன்மையான சிநிகளின் தலைவன் {சாத்யகி} அந்தத் துருப்புகளை நோக்கி வேகமாக விரைந்து விருத்திரனைக் கொன்றவனின் {இந்திரனின்} துணைக்கு வந்த விஷ்ணுவைப் போல அர்ஜுனனை அணுகினான்.

பீஷ்மரைக் கண்டு அஞ்சியவர்களும், தங்கள் யானைகள், குதிரைகள், தேர்கள், எண்ணிலடங்கா கொடிமரங்கள் ஆகியன சிதைக்கப்பட்டு, தூள் தூளாக்கப்பட்டவர்களும், களத்தை விட்டுச் சிதறி ஓடியவர்களுமான யுதிஷ்டிரப் படையின் போராளிகள் அனைவரிடமும், போர்வீரர்களில் முதன்மையானவனும் உற்சாகமிக்கவனுமான அந்தச் சிநி குலத்தவன் {சாத்யகி}, “க்ஷத்திரியர்களே, எங்கே செல்வீர்கள்? நீதிமான்களின் கடமையென மூதாதையர்களால் தீர்மானிக்கப்பட்டது இதுவல்ல. வீரர்களில் முதன்மையானவர்களே, உங்கள் உறுதிமொழிகளை மீறாதீர். வீரர்களைப் போல உங்கள் தன்னறங்களை {ஸ்வதர்மத்தை = க்ஷத்ரிய அறங்களை} நோற்பீராக” என்றான் {சாத்யகி}.

“பீஷ்மரைக் கொல்வேன்!” என்ற கிருஷ்ணன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 059இ-சாத்யகியை மெச்சிய கிருஷ்ணன், பீஷ்மரைத் தானே கொல்லப் போவதாகச் சொன்னது; கைகளில் சக்கரத்துடன் பீஷ்மரை எதிர்த்துச் சென்ற கிருஷ்ணன்; தன்னைக் கொல்லக் கிருஷ்ணனை வரவேற்ற பீஷ்மர்; கிருஷ்ணனின் காலைப் பிடித்துக் கெஞ்சிய அர்ஜுனன்; கோபம் தணிந்த கிருஷ்ணன் மீண்டும் தேரில் ஏறி கடிவாளத்தைப் பிடித்தது; கௌரவப் படையில் எழுந்த ஆரவாரம்…

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “{பாண்டவத் தரப்பின்} அந்த மன்னர்களில் முதன்மையானோர் ஒன்றாகப் போர்க்களத்தை விட்டு ஓடிக் கொண்டிருந்ததைக் கண்டும், பார்த்தன் {அர்ஜுனன்} மென்மையாகப் போரிட்டதைக் குறித்துக் கொண்டும், போரில் பீஷ்மர் பெரும் பலத்துடன் முயற்சித்துக் கொண்டிருந்ததையும், அனைத்துப் புறங்களில் இருந்து விரையும் கௌரவர்களையும் கண்டும் பொறுத்துக் கொள்ள முடியாதவனும், தாசார்ஹர்களின் உயர் ஆன்மப் பாதுகாவலனுமான அந்த வாசவனின் {இந்திரனின்} தம்பி {கிருஷ்ணன்}, சிநியின் புகழ்பெற்ற பேரனை {சாத்யகியை} மெச்சிப் பேசியபடி, “ஓ! சிநி குலத்து வீரா {சாத்யகி}, எவர் பின்வாங்கிச் செல்கிறார்களோ, அவர்கள் புறமுதுகிடுகிறார்கள் என்பது உண்மையே. எவர் இருக்கிறார்களோ, ஓ! சாத்வத குலத்தோனே {சாத்யகி}, அவர்களையும் வெளியேற விடுவாயாக. விரைவில் இப்போரில் தொண்டர்களோடு கூடிய பீஷ்மரையும், துரோணரையும் அவர்களது தேரில் இருந்து நான் வீழ்த்தப் போவதைப் பார். ஓ! சாத்வத குலத்தோனே {சாத்யகி}, குரு படையில் ஒருவரும் என் கோபத்திற்குத் தப்பப்போவதில்லை. எனவே, கடுமையான எனது சக்கரத்தை எடுத்து உயர்ந்த நோன்புகளைக் கொண்ட பீஷ்மரை நான் கொல்லப்போகிறேன். தேர்வீரர்களில் முதன்மையான பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவரையும், அவர்களின் தொண்டர்களோடு சேர்த்துப் போரில் கொன்று, ஓ! சிநியின் பேரனே {சாத்யகி}, தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்}, மன்னரையும் {யுதிஷ்டிரரையும்}, பீமனையும், அஸ்வினி இரட்டையர்களையும் {நகுலன் மற்றும் சகாதேவனையும்} மகிழ்விக்கப் போகிறேன். திருதராஷ்டிரர் மகன்கள் அனைவரையும், அவர்களின் தரப்பை அடைந்த மன்னர்களில் முதன்மையானோர் அனைவரையும் கொன்று, மகிழ்ச்சியாக நான் மன்னன் அஜாதசத்ருவிடம் {யுதிஷ்டிரரிடம்} நாட்டைக் கொடுப்பேன்” என்றான் {கிருஷ்ணன்}.

இதைச் சொன்ன அந்த வசுதேவர் மகன் {கிருஷ்ணன்}, குதிரைகளைக் (குதிரைகளின் கடிவாளத்தைக்) கைவிட்டு, ஆயிரம் வஜ்ராயுதங்களுக்கு நிகரான பலத்தைக் கொண்டதும், சூரியனைப் போன்ற பிரகாசத்தைக் கொண்டதும், கத்தியைப் போன்று கூர்மையான முனைகளைக் கொண்டதும், அழகிய துளை கொண்டதுமான சக்கரத்தைத் தன் (வலது) கரத்தில் சுழற்றிக் கொண்டே, தேரில் இருந்து கீழே குதித்தான். தனது நடையால் பூமியை நடுங்கச் செய்த உயர் ஆன்மக் கிருஷ்ணன், பீஷ்மரை நோக்கி மூர்க்கமாக விரைந்தான். கோபத்தால் தூண்டப்பட்டவனும், தேவர்களின் தலைவனுடைய {இந்திரனின்} தம்பியுமான {விஷ்ணுவுமான} அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவன் {கிருஷ்ணன்}, சினத்தால் குருடானதும், தாக்குதலுக்காகச் செருக்குடன் நிற்பதுமான யானைகளின் இளவரசனைக் {தலைமை யானையைக்} கொல்லும் விருப்பதுடன் செல்லும் சிங்கத்தைப் போல, தனது துருப்புகளுக்கு மத்தியில் இருந்த பீஷ்மரை நோக்கி விரைந்தான்.

காற்றில் ஆடிய அவனது மஞ்சள் ஆடையின் நுனி, வானத்தில் இருக்கும் மின்னலுடன் கூடிய மேகம் போலத் தோன்றியது. சுதர்சனம் என்றழைக்கப்படும் சக்கரமான அந்தத் தாமரை, சௌரியுடைய {கிருஷ்ணனுடைய} அழகிய கரத்தைத் தனது தண்டாகக் கொண்டு, காலைச் சூரியனைப் போல {பால சூரியனைப் போல} பிரகாசமானதும், நாராயணனின் நாபிக்கமலத்தில் உதித்ததுமான ஆதிகாலத்துத் தாமரை போல அழகுடன் திகழ்ந்தது. கிருஷ்ணனின் கோபமே காலைச் சூரியனாகி அந்தத் தாமரையை மலரச் செய்தது. அந்தத் தாமரையின் அழகிய இலைகள் கத்தியின் முனை போலக் கூர்மையாக இருந்தன. கிருஷ்ணனின் உடலே அழகியத் தடாகமாக இருந்தது. அவனது (வலது) கரமே அந்தத் தாமரை உதித்து ஒளிர்ந்து கொண்டிருக்கும் தண்டானது.

கோபத்தால் தூண்டப்பட்டவனும், உரக்க முழங்கியவனும், சக்கரத்தை ஏந்தியவனுமான மகேந்திரனின் {இந்திரனின்} தம்பியைக் {கிருஷ்ணனைக்} கண்ட உயிரினங்கள் அனைத்தும் குருக்களின் அழிவு நெருங்கிவிட்டதென எண்ணி உரக்க ஓலமிட்டன. தனது சக்கரத்தை ஏந்திய வாசுதேவன் {கிருஷ்ணன்}, உலகத்தை எரிப்பதற்காக யுக முடிவின் போது தோன்றும் சம்வர்த்த நெருப்பைப் {ஊழித்தீயைப்} போலத் தோன்றினான். உயிரினங்கள் அனைத்தையும் உட்கொள்ள உதித்த,  ஒரு கடும் விண்மீன் போல அண்டத்தின் ஆசான் {கிருஷ்ணன்} சுடர்விட்டெரிந்தான்.

இரண்டு கால் படைத்த உயிரினங்களில் {மனிதர்களில்} முன்மையானவனான அந்தத் தெய்வீக மனிதன் {கிருஷ்ணன்}, கைகளில் சக்கரத்துடன் முன்னேறி வருவதைக் கண்டச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, தனது தேரில் நின்றபடியே, கையில் வில் மற்றும் கணையுடன், அச்சமற்ற வகையில், “வா, ஓ! தேவர்களின் தலைவா {தேவநாதா, கிருஷ்ணா} வா. ஓ! அண்டத்தை வசிப்பிடமாகக் கொண்டவனே {ஜகந்நிவாசா, கிருஷ்ணா}, ஓ! கதாயுதம், வாள் மற்றும் சாரங்கம் தரித்தவனே, நான் உன்னை வணங்குகிறேன். ஓ! அண்டத்தின் தலைவா {லோகநாதா, கிருஷ்ணா}, இந்தப் போரில், ஓ! உயிர்களனைத்தின் புகலிடமானவனே {சர்வசரண்யனே, கிருஷ்ணா}. இந்த அற்புதத் தேரில் இருந்து என்னைப் பலவந்தமாகத் தூக்கி எறிவாயாக. உன்னால் இங்குக் கொல்லப்பட்டால் , ஓ! கிருஷ்ணா, இவ்வுலகிலும், அடுத்த உலகிலும் {இம்மையிலும் மறுமையிலும்} நான் அடையும் நற்பேறு பெரியதாக இருக்கும். ஓ! விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் தலைவா {கிருஷ்ணா}, நீ எனக்குக் கொடுக்கும் மதிப்பு {கௌரவம்} பெரியதாகும். எனது கண்ணியம் மூவுலகத்தாலும் கொண்டாடப்படும்” என்றார் {பீஷ்மர்}.

சந்தனுமகனின் {பீஷ்மரின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ணன் மூர்க்கமாக அவரிடம் விரைந்து, “பூமியில் நடைபெறும் இந்தப் பெரும் படுகொலைக்கான வேர் நீரே. துரியோதனன் கொல்லப்படுவதை இன்று நீர் காண்பீர். நீதியின் பாதையில் நடக்கும் அறிவுள்ள அமைச்சன் ஒருவன், தீமையான சூதாட்டத்திற்கு அடிமையாக இருக்கும் மன்னனைத் தடுக்க வேண்டும். விதியால் தவறாக வழிநடத்தப்பட்ட புத்தி கொண்டவன் கைவிடப்படுவதைப் போல, தன் குலத்தில் இழிந்தவனான கடமை மீறுபவன் எவனோ, அவன் கைவிடப்பட வேண்டும்” என்றான் {கிருஷ்ணன்}.

அரசனைப் போன்ற பீஷ்மர், இவ்வார்த்தைகளைக் கேட்டு, யதுக்களின் தலைவனிடம் {கிருஷ்ணனிடம்}, “விதியே வலிமை நிறைந்தது. யதுக்கள், தங்கள் நன்மைக்காகக் கம்சனைக் கைவிட்டார்கள். இதை நான் மன்னனிடம் (திருதராஷ்டிரனிடம்) சொன்னேன். ஆனால், அவன் {திருதராஷ்டிரன்} அதைப் பொருட்படுத்தவில்லை. கேட்பதில் பயனேதும் இல்லாமல் செவிகொடுப்பவன், (விதியின் ஆதிக்கத்தின்) மூலம் மாறுபட்ட புரிதலை அடைந்து, (தனது தனிப்பட்ட) துயரத்தைத் தானே ஈட்டிக் கொள்கிறான்” என்று மறுமொழி கூறினார் {பீஷ்மர்}.

அதேவேளையில், தனது தேரில் இருந்து குதித்தவனும், நீண்ட பருத்த கரங்களைக் கொண்டவனுமானப் பார்த்தன் {அர்ஜுனன்}, நீண்ட பருத்த கரங்களைக் கொண்ட யதுகுலத் தலைவனிடம் {கிருஷ்ணனிடம்} கால்நடையாகவே விரைந்தோடி, தன் இரு கரங்களாலும் அவனைப் {கிருஷ்ணனைப்} பிடித்துக் கொண்டான். தன்னில் {ஆத்மாவில்} அர்ப்பணிப்புக் கொண்ட தேவர்கள் அனைவரிலும் முதன்மையான கிருஷ்ணன் அப்போது கோபத்தால் தூண்டப்பட்டிருந்தான். எனவே, இப்படிப் பிடிக்கப்பட்டிருந்தாலும், அந்த விஷ்ணு {கிருஷ்ணன்}, தனி மரத்தைச் சுமந்து செல்லும் புயலைப் போல, ஜிஷ்ணுவைத் {அர்ஜுனனைத்} தன் பின்னே இழுத்துச் சென்றான். எனினும், பீஷ்மரை நோக்கி வேகமாக நடந்த அவனது {கிருஷ்ணனின்} கால்களைப் பெரும்பலத்துடன் பற்றிய அந்த உயர் ஆன்மப் பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் சிரமத்திற்குப் பிறகு பத்தாவது {10} அடியில் {எட்டில்} அவனைத் {கிருஷ்ணனைத்} தடுப்பதில் வென்றான்.

கிருஷ்ணன் நின்றதும், அழகிய பொன்மாலையைப் பூண்டவன் {அர்ஜுனன்} அவனை {கிருஷ்ணனை} மகிழ்ச்சியாக வணங்கி, “இந்த உனது கோபத்தைத் தணிப்பாயாக. ஓ! கேசவா {கிருஷ்ணா}, பாண்டவர்களின் புகலிடம் நீயே. ஓ கேசவா {கிருஷ்ணா}, உறுதியேற்றபடியே நான் செயல்களில் இருந்த விலக மாட்டேன் என்று எனது மகன்கள் மீதும், எனது சகோதரர்கள் மீதும் ஆணையிடுகிறேன். ஓ! இந்திரனின் தம்பியே {உபேந்திரனே, கிருஷ்ணா}, உனது கட்டளையின் பேரில், நிச்சயம் நான் குருக்களை நிர்மூலமாக்குவேன்” என்றான்.

அவனது {அர்ஜுனனின்} உறுதிமொழியையும், ஆணையையும் கேட்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} மனநிறைவை அடைந்தான். குருக்களில் சிறந்தவனான அர்ஜுனனுக்கு ஏற்புடையதையே எப்போதும் செய்வதில் ஈடுபடுபவனான அவன் {கிருஷ்ணன்} கைகளில் சக்கரத்துடன் மீண்டும் தனது தேரில் ஏறினான். அந்த எதிரிகளைக் கொல்பவன் {கிருஷ்ணன்}, (தான் கைவிட்ட) அந்தக் கடிவாளங்களை மீண்டும் பற்றினான். பாஞ்சஜன்யம் என்று அழைக்கப்படும் தனது சங்கை எடுத்த சௌரி {கிருஷ்ணன்}, திக்குகள் அனைத்தும், ஆகாயமும் நிறையும்படி முழக்கினான்.

ஆரம், தோள்வளை, குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவனும், வளைந்த இமைமயிர்கள் புழுதியடைந்தவனும், முற்றிலும் வெண்மையான பற்களையுடையவனுமான கிருஷ்ணன், மீண்டும் தனது சங்கை எடுத்ததைக் கண்ட குரு வீரர்கள் உரக்கக் கதறினர். மிருதங்கங்கள், பேரிகைகள், பணவங்கள் ஆகியவற்றின் ஒலிகளும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலிகளும், சிறிய வகைத் துந்துபிகளின் ஒலிகளும், குருவீரர்களின் படையணிகளுக்கு மத்தியில் இருந்து எழுந்த சிம்ம முழக்கங்களோடு கலந்து கடுமையான ஆரவாரத்தை உண்டாக்கின. இடியின் உறுமலை ஒத்த பார்த்தனுடைய {அர்ஜுனனுடைய} காண்டீவத்தின் நாணொலி ஆகாயத்தையும், அனைத்துத் திசைகளையும் நிறைத்தது. பாண்டு மகனின் {அர்ஜுனனின்} வில்லில் இருந்த அடிக்கப்பட்டவையும், பிரகாசமானவையும், சுடர்விடுபவையுமான கணைகள் அனைத்துப் புறங்களுக்கும் சென்றன” {என்றான் சஞ்சயன்}.

குரு படையைச் சிதறடித்த அர்ஜுனன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 059ஈ-அர்ஜுனன் செய்த போர்; மகேந்திர ஆயுதத்தைப் பயன்படுத்திய அர்ஜுனன்; களத்தில் இரத்த ஆறைப் பாய வைத்த அர்ஜுனன்; மூன்றாம் நாள் போர் முடிவு…

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “அப்போது பெரும் படையுடனும், பீஷ்மர் மற்றும் பூரிஸ்ரவஸ் ஆகியோருடனும் கூடிய குரு மன்னன் {துரியோதனன்}, கையில் கணையுடன், நட்சத்திரத்தை எரிப்பதற்கு உதித்த எரிகல் போல அவனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்து சென்றான். அர்ஜுனனை நோக்கி பூரிஸ்ரவஸ், தங்கச் சிறகுகள் கொண்ட ஏழு பல்லங்களை {எறிவேல்களை} வீசினான். சல்லியன் ஒரு கதாயுதத்தையும், சந்தனுவின் மகன் {பீஷ்மர்} ஓர் ஈட்டியையும் வீசினர். அதன் பேரில், அர்ஜுனன், கணைகளைப் போல வேகத்துடன் வந்தவையும், பூரிஸ்ரவஸால் அடிக்கப்பட்டவையுமான அந்த ஏழு பல்லங்களை ஏழு கணைகளாலும், மற்றொரு கூரிய கணையால் துரியோதனனின் கரங்களில் இருந்து வீசப்பட்ட வேலையும் கலங்கடித்தான். சந்தனு மகனால் {பீஷ்மரால்} வீசப்பட்டதும், மின்னலின் பிரகாசத்தைக் கொண்டதுமான அந்தச் சுடர்மிகும் ஈட்டியையும், மத்ரர்களின் ஆட்சியாளன் கரத்தால் வீசப்பட்ட கதாயுதத்தையும் (இன்னும்) இருகணைகளால் அந்த வீரன் {அர்ஜுனன்} துண்டித்தான்.

பிறகு, அளவிலா ஆற்றலைக் கொண்ட தனது அழகிய வில்லான காண்டீவத்தைப் பெரும் பலத்துடனும், இரு கரங்களாலும் வளைத்து, உரிய மந்திரங்களால் அற்புதம் நிறைந்ததும், பயங்கரமானதுமான மகேந்திர ஆயுதத்தை {மஹேந்திராஸ்திரத்தை} வானத்தில் தோன்றச் செய்தான். உயர் ஆன்மா கொண்டவனும், கிரீடம் மற்றும் பொன்மாலை தரித்தவனுமான அந்த வலிமைமிக்க வில்லாளி {அர்ஜுனன்}, கணைகளின் பெரும் மழையை உற்பத்தி செய்வதும், சுடர்மிகும் நெருப்பின் பிரகாசத்தைக் கொண்டதுமான அந்த வல்லமைமிக்க ஆயுதத்தை {மகேந்திராஸ்திரத்தைக்} கொண்டு மொத்த கௌரவப் படையையும் தடுத்தான். பார்த்தனின் {அர்ஜுனனின்} வில்லில் இருந்த வந்த அந்தக் கணைகளானது,  {எதிரிகளின்} கரங்கள், விற்கள், கொடிமர நுனிகள், தேர்கள் ஆகியவற்றை வெட்டியபடி மன்னர்களின் உடல்களையும், எதிரியின் பெரும் யானைகள் மற்றும் குதிரைகளின் உடல்களையும் துளைத்தன.

திசைகளையும், துணைத் திசைகளையும் கூர்மையான அந்தப் பயங்கரக் கணைகளால் நிறைத்தவனும், கிரீடம், தங்கமாலை ஆகியவற்றைத் தரித்தவனுமானப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, தன் காண்டீவத்தின் நாணொலியால் எதிரிகளின் இதயங்களை நடுங்கச் செய்தான். அச்சம் நிறைந்த அந்த ஆயுத வழியில் {போர்க்களத்தில்}, சங்கொலிகளும், துந்துபி ஒலிகளும், தேர்களின் ஆழ்ந்த சடசடப்பொலிகளும் காண்டீவத்தின் நாணொலியால் அமைதிப்படுத்தப்பட்டன {பேரொலியால் மறைக்கப்பட்டன}. அந்த நாணொலியைக் காண்டீவத்தின் ஒலி என உறுதிசெய்து கொண்ட மன்னன் விராடன், மனிதர்களில் இன்னும் சில வீரர்கள், துணிவு மிக்கப் பாஞ்சால மன்னன் துருபதன் ஆகிய அனைவரும் கட்டுப்படாத இதயங்களுடன் அந்த இடத்துக்கு முன்னேறினர். உமது போராளிகள் {கௌரவர்கள்} அனைவரும் அச்சத்தால் தாக்குண்டு, காண்டீவத்தின் நாணொலியை எங்கே கேட்டார்களோ அங்கேயே நின்றனர். அவர்களில் எவரும் எங்கிருந்த அந்த ஒலி கேட்டதோ அந்த இடத்திற்குச் செல்லத் துணியவில்லை.

மன்னர்களின் அந்த மோசமான படுகொலையில், வீரப் போராளிகளும், தேர்வீரர்களும், தேரோட்டிகளும் கொல்லப்பட்டனர். பிரகாசமான பொற்கூடுகளைக் கொண்டவையும், (தங்கள் முதுகில்) மிக அழகிய கொடிகளைக் கொண்டவையுமான யானைகள், தங்கள் மேல் விழுந்த நாராசங்களால் பீடிக்கப்பட்டு, கிரீடியால் {அர்ஜுனனால்} தங்கள் உடல்கள் சிதைக்கப்பட்டு உயிரிழந்து திடீரெனக் கீழே விழுந்தன. சிறகு படைத்த பெரும் கணைகள் மற்றும் கூரிய முனைகளைக் கொண்ட பல்லங்களால், யந்திரங்கள் மற்றும் இந்திரஜாலங்களின் [1] தலைமையில் நின்றிருந்த எண்ணிலடங்கா மன்னர்களின் கொடிமரங்கள், வேகமாகவும், பலமாகவும் அர்ஜுனனால் தாக்கப்பட்டு வெட்டிவீழ்த்தப்பட்டன.

காலாட்படை கூட்டங்களும், தேர்வீரர்களும், குதிரைகள் மற்றும் யானைகளும், தனஞ்சயனின் {அர்ஜுனனின்} அந்தக் கணைகளால் பீடிக்கப்பட்டு உறுப்புகள் செயலிழந்து களத்தில் வேகமாக விழ்ந்தன, அல்லது, விரைவாகத் தங்கள் உயிரை விட்டன. அந்தப் பயங்கரச் சண்டையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்திரனின் பெயரைக் கொண்ட அந்த வலிமைமிக்க ஆயுதத்தால் {மகேந்திராஸ்திரத்தால்}, தங்கள் கவசங்களும் உடல்களும் பிளக்கப்பட்ட வீரர்கள் பலராவர். பயங்கரமாவையும், கூர்மையானவையுமான அந்தத் தனது கணைகளால், கிரீடி {அர்ஜுனன்}, போராளிகளின் சிதைந்த உடல்களில் இருந்து பாய்ந்த இரத்தத்தை நீராகவும், அவற்றின் கொழுப்பை நுரையாகவும் கொண்ட ஒரு பயங்கர ஆறை அங்குத் தோன்றச் செய்தான். அதன் ஓடை அகலமானதாகவும் மூர்க்கமானதாகவும் பாய்ந்தது.

அடுத்த உலகத்திற்கு அனுப்பப்பட்ட யானைகள் மற்றும் குதிரைகளின் உடல்கள் அதன் கரைகளாயின. மனிதர்களின் மஜ்ஜைகளும், சதைகளும் கரையோரத்தின் சேறாகின. இயல்புக்கு மாறான பெரும் ராட்சசர்கள் (அதன் கரைகளில் நிற்கும் உயர்ந்த) மரங்களானார்கள். அதிக அளவில் இருந்த மயிர் நிறைந்த மண்டையோடுகளை அதில் மிதக்கும் கழிவுகளாகவும், குவியல்களாகக் கிடந்த மனித உடல்கள் அதன் மணற்கரைகளாகவும் கொண்ட அந்த ஓடை ஆயிரம் திசைகளில் பாய்ந்தன. எங்கும் பரவி கிடந்த கவசங்கள் அதன் கடினமான கூழாங்கற்களாயின. அதன் கரைகள் பெரும் எண்ணிக்கையிலான நரிகள், ஓநாய்கள், நாரைகள், கழுகுகள், ராட்சசக் கூட்டங்களாலும், கழுதைப் புலிகளாலும் மொய்க்கப்பட்டன. அர்ஜுனனின் கணைமாரியால் உண்டான அந்த ஆற்றை, எவரெல்லாம் உயிரோடு இருந்தார்களோ, அவர்கள், கொழுப்பு, மஜ்ஜை, இரத்தம் ஆகியவற்றால் ஆனதும்,  கொடூரத்தின் உருவமுமான அந்தப் பயங்கர நதியைப் பெரும் வைதரணீயைப் [2] போல (தம் மனதில்) கண்டார்கள்.

பல்குனனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்ட குருக்கள் படையின் முதன்மை வீரர்களைக் கண்டவர்களான சேதிகள், பாஞ்சாலர்கள், கரூஷர்கள், மத்ஸ்யர்கள், பாண்டவத் தரப்பின் போராளிகள் அனைவருமான அந்த மனிதர்களில் முதன்மையானோர் வெற்றியால் உற்சாகமடைந்து கௌரவ வீரர்களை அச்சுறுத்தும் வகையில் உரக்க முழக்கமிட்டார்கள். சிறு விலங்குகளின் கூட்டங்களை அச்சுறுத்தும் சிங்கத்தைப் போல (குரு) படையின் முதன்மையான போராளிகளை அச்சுறித்தியவனும், எதிரிகளுக்குப் பயங்கரமானவனுமான கிரீடி {அர்ஜுனன்}, {கௌரவப்} படைப்பிரிவின் வலிமைமிக்கத் தலைவர்களால் பாதுகாக்கப்பட்ட அந்தத் துருப்புகளைக் கொன்றதைக் கண்டு வெற்றியைக் குறிக்கும் வகையில் முழக்கமிட்டார்கள். காண்டீவந்தாங்கி {அர்ஜுனன்}, ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} ஆகிய இருவரும் கூட மிகவும் மகிழ்ந்து சிங்க முழக்கம் செய்தார்கள்.

(அர்ஜுனனின்) ஆயுதங்களால் மிகவும் சிதைக்கப்பட்டவர்களான பீஷ்மர், துரோணர், துரியோதனன், பாஹ்லீகன் ஆகியோருடன் கூடிய குருக்கள், சூரியன் தனது கதிர்களை நிறுத்துவதைக் கண்டும், இந்திரனின் பெயரால் அழைக்கப்பட்டதும், தடுக்கப்பட முடியாததும், அச்சத்தைத் தரவல்லவதும், யுகத்தின் முடிவல் தோன்றும் விளைவுகளை உண்டாக்குவதுமான அந்த ஆயுதத்தைக் கண்டும், இரவு ஓய்வுக்காகத் தங்கள் படைகளை விலக்கிக் கொண்டனர். பெரும் சாதனையை அடைந்தவனும், தனது எதிரிகளை நசுக்குவதால் புகழ்பெற்றவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, சூரியன் சிவப்பு நிறம் கொள்வதையும், மாலை சந்தி தொடங்கியதையும் கண்டு, தனது வேலையை முடித்துக் கொண்டு, இரவு ஓய்வுக்காகத் தன் சகோதரர்களுடன் பாசறைக்குச் சென்றான்.

இருள் தொடங்குவதற்குச் சற்று முன்னர், குரு துருப்புகளுக்கு மத்தியில் எழுந்த ஒலி பெரியதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது. அனைவரும், “இன்றைய போரில் மட்டும் அர்ஜுனன் பத்தாயிரம் {10000} தேர்வீரர்களையும், எழுநூறு {700} யானைகளையும் கொன்றிருக்கிறான். மேற்கத்தியர்கள், சௌவீரர்களின் பல்வேறு இனங்கள், க்ஷுத்ரகர்கள், மாலவர்கள் ஆகிய அனைவரும் கொல்லப்பட்டவிட்டனர். தனஞ்சயன் {அர்ஜுனன்} அடைந்திருக்கும் சாதனையானது மகத்தானதாகும். அதை அடைய யாராலும் முடியாது” என்றனர்.

உலகின் வல்லமைமிக்கத் தேர்வீரனும், கோபம் நிறைந்த பிருதையின் மகனுமான கிரீடி {குந்தியின் மகனுமான அர்ஜுனன்}, நூற்றுக்கணக்கான பெரும் பிற வீரர்களுடன் கூடிய சுருதாயுஸ், அம்பஷ்டர்களின் ஆட்சியாளன், துர்மர்ஷணன், சித்ரசேனன், துரோணர், கிருபர், சிந்துக்களின் ஆட்சியாளன், பாஹ்லீகன், பூரிஸ்ரவஸ், சல்லியன், சலன் ஆகியோர் மற்றும் பீஷ்மரையும் சேர்த்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் தனிப்பட்ட கரங்களின் ஆற்றலால் இன்று வீழ்த்தியிருக்கிறான்” என்றனர்.

இப்படிப் பேசிய உமது தரப்பின் வீரர்கள் அனைவரும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தில் இருந்து தங்கள் பாசறைகளுக்குத் திரும்பினர். கிரீடியிடம் {அர்ஜுனனிடம்} அச்சம் கொண்ட குரு படையின் போராளிகள் அனைவரும் ஆயிரக்கணக்கான கொள்ளிகளால் ஒளியூட்டப்பட்டவையும், எண்ணிலடங்கா தீவட்டிகளால் அழகூட்டப்பட்டவையுமான தங்கள் பாசறைக்குள் நுழைந்தனர்” {என்றான் சஞ்சயன்}.

அபிமன்யுவைத் தவிர்த்த பீஷ்மர் – பீஷ்ம பர்வம் பகுதி – 060-பீஷ்மரின் தலைமையில் அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்ட கௌரவ வீரர்கள்; இருதரப்பும் அமைத்துக் கொண்ட வியூகங்கள்; இருதரப்பு படையணிகளுக்கு இடையில் ஏற்பட்ட கடும் போர்; இடையில் புகுந்த அபிமன்யு; அபிமன்யுவைத் தவிர்த்த பீஷ்மர்; பீஷ்மருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இரவு கடந்ததும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கோபம் தூண்டப்பட்டவரும், பெரும்படையால் ஆதரிக்கப்பட்டவரும், பாரதப் படையின் தலைமையில் நின்றிருந்தவருமான உயர் ஆன்ம பீஷ்மர் எதிரியை {அர்ஜுனனை} நோக்கி முன்னேறினார். துரோணர், துரியோதனன், பாஹ்லீகன், துர்மர்ஷணன், சித்திரசேனன், வலிமைமிக்க ஜெயத்ரதன் மற்றும் பிற அரச வீரர்கள் ஆகியோர் பெரும்படைப்பிரிவுகளால் ஆதரிக்கப்பட்டு அனைத்துப் புறங்களிலும் அவனைச் {அர்ஜுனனை} சூழ்ந்து கொண்டார்கள்.

பெரும் ஆற்றலும், சக்தியும் படைத்தவனும், வலிமைமிக்க அந்தப் பெரும் தேர்வீரர்களால் சூழப்பட்டவனுமான அவன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் தேவர்களின் தலைவனைப் {இந்திரனைப்} போல, அந்த அரசவீரர்களில் முதன்மையானோருக்கு மத்தியில் ஒளிர்ந்து கொண்டிருந்தான். படையணிகளுக்கு முன்னணியில் நின்ற யானைகளின் முதுகில் இருந்தவையும், சிவப்பு, மஞ்சள், கருப்பு, பளுப்பு போன்ற பல்வேறு நிறங்களில் இருந்தவையுமான பிரம்மாண்டக் கொடிகள் மிக அழகாகக் காற்றில் அசைவது தெரிந்தது.

பிற வலிமைமிக்கத் தேர்வீரர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றைக் கொண்ட சந்தனுவின் அரச மகனுடைய {பீஷ்மருடைய} படை, மின்னல் நிறைந்த மேகக் குவியல் போலவோ, மழைக்கால மேகங்களுடன் கூடிய ஆகாயம் போலவோ இருந்தது. போரை நோக்கமாகக் கொண்டதும், சந்தனுவின் மகனால் {பீஷ்மரால்} பாதுகாக்கப்பட்டதுமான குருக்களின் அந்தக் கடும் படை, கடலை நோக்கிப் பாயும் கங்கையின் கடும் ஊற்றைப் போல அர்ஜுனனை நோக்கி வேகமாக விரைந்தது.

குரங்குகளின் இளவரசனைத் {அனுமனைத்} தன் கொடியில் கொண்ட அந்த உயரான்மா (அர்ஜுனன்), பல்வேறு வகைகளிலான படைகளைக் கொண்டதும், எண்ணிலடங்கா யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள், தேர்கள் ஆகியவற்றைத் தன் சிறகில் கொண்டதும், பெரும் மேகத்திரளுக்கு ஒப்பானதுமான அந்த {கௌரவ} அணிவகுப்பை [1] {வியூகத்தைத்} {அதே கருட வியூகமாக இருக்க வேண்டும்} தூரத்தில் இருந்தே கண்டான். மனிதர்களில் காளையான அந்த உயர் ஆன்ம வீரன் {அர்ஜுனன்}, உயர்ந்த கொடியைக் கொண்டதும், வெண்குதிரைகள் பூட்டப்பட்டதுமானத் தன் தேரில், தனது (தனிப்பட்ட) படைப்பிரிவின் தலைமையில் நின்று, வலிமைமிக்க {பிற} படை சூழ, எதிரிப்படை முழுவதையும் எதிர்த்து முன்னேறினான்.

அற்புதக் கொடியுடன் கூடியவனும், (விலையுயர்ந்த மூடியால்) தேர்க்கால் மறைக்கப்பட்ட தேருடன் கூடியவனும், அந்தப் போரில் தனது தேரோட்டியாக இருந்த யது குலக் காளையின் {கிருஷ்ணனின்} துணையுடன் கூடியவனுமான அந்தக் குரங்குக் கொடியோனை (வீரனை) {அர்ஜுனனைக்} கண்டு, உமது மகன்களுடன் கூடிய கௌரவர்கள் அனைவரும் திகைப்பில் நிறைந்தனர். உலகத்தின் வலிமையான தேர்வீரனால் பாதுகாக்கப்பட்டதும், ஆயுதங்களை உயர்த்தி வைத்திருந்ததும், ஒவ்வொரு மூலையிலும் நாலாயிரம் {4000} யானைகளைக் கொண்டதுமான அந்தச் சிறந்த அணிவகுப்பை {வியூகத்தை} உமது படை கண்டது.

குருக்களில் முதன்மையானவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனால் முந்தைய நாள் அமைக்கப்பட்டதும், மனிதர்கள் இதற்கு முன் கேள்விப்படாததும், காணாததும் போன்ற அந்த அணிவகுப்பே இன்றும் (பாண்டவர்களால்) அமைக்கப்பட்டது. அப்போது போர்க்களத்தில் ஆயிரம் பேரிகைககள் ஓங்கி அடிக்கப்பட்டன. படைப்பிரிவுகள் அனைத்தில் இருந்தும் எழும்பிய சங்கொலிகள், தூரிய ஒலிகள் மற்றும் சிங்க முழக்கங்கள் அங்கே பேரொலியை ஏற்படுத்தின.

நாண்களில் கணைகளைப் பொருத்திய துணிவுமிக்கப் போர்வீரர்களால் வளைக்கப்பட்ட (எண்ணிலா) விற்களின் உரத்த நாணொலிகளும், சங்குகளின் முழக்கங்களும், பேரிகைகள் மற்றும் பணவங்களின் ஆரவாரத்தை அமைதிப்படுத்தின {மறைத்து ஓங்கி ஒலித்தன}. சங்கொலிகளால் நிறைந்த மொத்த ஆகாயத்திலும் பூமியின் புழுதி பரவிக் காண்பதற்கு அற்புதமாக இருந்தது. புழுதியால் நிறைந்த வானம் தலைக்கு மேல் பெரிய கூடாரம் அமைக்கப்பட்டதைப் போலத்தெரிந்தது. அந்தக் கூடாரத்தைக் கண்ட துணிவுமிக்கப் போர்வீரர்கள் அனைவரும் (போரிடுவதற்காக) வேகமாக விரைந்தனர்.

தேர்வீரர்களால் தாக்கப்பட்ட தேர்வீரர்கள், தங்கள் தேரோட்டிகள், குதிரைகள், தேர்கள், கொடிகளுடன் வீழ்த்தப்பட்டார்கள். யானைகளால் தாக்கப்பட்ட யானைகளும், காலாட்படைவீரர்களால் தாக்கப்பட்ட காலாட்படை வீரர்களும் அப்படியே விழுந்தனர். வேல்கள் மற்றும் வாள்களுடன் விரைந்த குதிரைவீரர்களால் தாக்கப்பட்டவர்களும், விரைந்து வந்தவர்களுமான குதிரைவீரர்கள், அச்சம்நிறைந்த முகங்களுடன் கீழே விழுந்தனர். இவை அனைத்தையும் காண மிக அற்புதமாகத் தெரிந்தது.

தங்க நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், சூரியப் பிரகாசத்தைக் கொண்டவையுமான அற்புதக் கேடயங்கள், போர்க்கோடரிகளாலும், வேல்களாலும், வாட்களாலும் (தாக்கப்பட்டு) களத்தில் விழுந்தன. யானைகளின் தந்தங்களாலும், {அவற்றின்} வலிய துதிக்கைகளாலும் தாக்கப்பட்டு, சிதைக்கப்பட்ட பல தேர்வீரர்கள், தங்கள் தேரோட்டிகளோடு சேர்ந்து விழுந்தனர். தேர்வீரர்களில் காளைகளால் தாக்கப்பட்ட தேர்வீரர்களில் காளைகளான பலர் தங்கள் கணைகளுடன் தரையில் விழுந்தனர்.

யானைகளின் தந்தங்களாலும், பிற அங்கங்களாலும் தாக்கப்பட்டோ, படையணிகளின் நெருக்கத்தில் விரையும் அந்தப் பெரும் உயிரினங்களின் {யானைகளின்} வேகத்தால் நசுக்கப்பட்டோ ஓலமிடும் குதிரைவீரர்கள் மற்றும் காலாட்படை வீரர்களின் ஓலங்களைக் கேட்டே கூட அந்தப் போர்க்களத்தில் பல மனிதர்கள் விழுந்தனர். குதிரைப்படை மற்றும் காலாட்படைவீரர்கள் வீழ்ந்து, யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியன அச்சத்தால் புறமுதுகிட்டு ஓடிக் கொண்டிருந்த போது, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர் சூழ இருந்த பீஷ்மர், குரங்குகளின் இளவரசனைத் {அனுமனைத்} தனது கொடியில் கொண்டவனைக் {அர்ஜுனனைக்} கண்டார்.

ஐந்து {5} பனைமரங்களுடன் கூடிய கொடிமரத்தைக் கொண்டவரும், பனைமரக் கொடி வீரருமான சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, வேகமான, அற்புத சக்தி கொண்ட சிறந்த குதிரைகள் பூட்டப்பட்டதும், தன் பலமிக்க ஆயுதங்களின் சக்தியால் மின்னலைப் போல ஒளிர்வதுமான தேரில் இருந்த அந்தக் கிரீடம் தரித்தவனை {கிரீடியை [அ] அர்ஜுனனை} எதிர்த்து விரைந்து சென்றார்.

இந்திரனைப் போன்றே இருந்த அந்த இந்திரனின் மகனை {அர்ஜுனனை} எதிர்த்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணர், கிருபர், சல்லியன், விவிம்சதி, துரியோதனன் மற்றும் சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்} ஆகியோர் தலைமையிலான (பிற) வீரர்களும் விரைந்தனர். ஆயுதங்கள் அனைத்தையும் அறிந்தவனும், அழகிய தங்கக் கவசம் தரித்தவனும், அர்ஜுனனின் மகனுமான வீர அபிமன்யு, படையணிகளில் இருந்து விரைந்து வெளிப்பட்டு, {அர்ஜுனனை எதிர்த்து வந்த} அவ்வீரர்களை எதிர்த்து விரைந்து முன்னேறினான். தாங்கிக் கொள்ள முடியாத காரியங்களைச் செய்பவனான அந்தக் *கிருஷ்ணனின் {அர்ஜுனனின்} மகன் {அபிமன்யு}, பெரும் பலமிக்க அவ்வீரர்களின் ஆயுதங்கள் அனைத்தையும் கலங்கடித்து, வேள்விப்பீடத்தில் இருப்பவனும், மந்திரங்களால் எழுப்பப்படுபவனும், சுடர்விடும் தழல்களைக் கொண்டவனுமான புகழத்தக்க அக்னியைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.

எதிரிகளின் இரத்தத்தை நீராகக் கொண்டு பாயும் ஆறை அந்தப் போரில் உண்டாக்கிய வலிய சக்தி கொண்ட பீஷ்மர், அப்போது, சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} விரைவாகத் தவிர்த்துவிட்டு, வலிமைமிக்கத் தேர்வீரனான பார்த்தனிடமே {அர்ஜுனனிடமே} நேரடியாக மோதினார். கிரீடத்தாலும், மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனன், அற்புத வடிவத்தையும், இடிமுழக்கம் போன்ற உரத்த நாணொலியையும் கொண்ட தனது காண்டீவத்தைக் கொண்டு கணைமாரியைப் பொழிந்து {பீஷ்மரால் ஏவப்பட்ட} அந்த வலிய ஆயுதமழையைக் கலங்கடித்தான்.

குரங்குகளின் இளவரசனை {அனுமனைத்} தனது கொடியில் கொண்டவனும், தாங்கிக் கொள்ள இயலா காரியங்களைச் செய்பவனுமான அந்த உயர் ஆன்ம வீரன் {அர்ஜுனன்}, வில்லைத்தாங்கும் அனைவரிலும் சிறந்தவரான பீஷ்மர் மீது கூரிய முனை கொண்ட கணைகள் மற்றும் பளபளப்பான நாராசங்களைப் பதிலுக்குப் பொழிந்தான். குரங்குகளின் இளவரசனைத் {அனுமனைத்} தனது கொடியில் கொண்டவனால் {அர்ஜுனனால்} அடிக்கப்பட்டதும், இரவின் இருளைப் போக்கி பகலை உண்டாக்குபவனைப் {சூரியனைப்} போன்ற பீஷ்மரால் எதிர்க்கப்பட்டதும், விடுக்கப்பட்டதுமான வலிமைமிக்க ஆயுத மழையை உமது துருப்புகள் கண்டன. உறுதியாக நடைபெற்றதும், பீஷ்மர் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகியோரின் விற்களுடைய பயங்கர நாணொலிகளால் {அவற்றின் தனித்தன்மையால்} வேறுபட்டுத் தெரிந்ததும், மனிதர்களில் முதன்மையான அவ்விருவருக்கும் இடையில் ஏற்பட்டதுமான அந்தத் தனிப்போரை குருக்கள், சிருஞ்சயர்கள் மற்றும் அங்கே இருந்த அனைவரும் கண்டனர்” {என்றான் சஞ்சயன்}.

அர்ஜுனனின் பத்து பெயர்கள்:அர்ஜுனன், பல்குனன், ஜிஷ்ணு, கிரீடி, ஸ்வேதவாஹனன், பீபத்சு, விஜயன், கிருஷ்ணன் [1], சவ்யசச்சின், தனஞ்சயன் என்பவையே அவை” என்றான். -செல்வத்தின் மத்தியில் நான் வாழ்ந்ததாலும், அனைத்து நாடுகளையும் அடக்கி, அவர்களது செல்வங்களைக் கொள்ளை கொண்டதாலும், என்னைத் தனஞ்சயன் என்று அழைக்கிறார்கள்.ஒப்பற்ற மன்னர்களுடன் போர்புரியச் சென்று, அவர்களை வீழ்த்தாமல் (களத்தைவிட்டு) நான் திரும்பியதில்லை என்பதால், என்னை விஜயன் என்று அழைக்கிறார்கள்.
எதிரிகளுடன் போரிடும்போது, எனது தேரில், தங்கக் கவசம் பூண்ட வெள்ளைக் குதிரைகளையே நான் பூட்டுவதால், என்னை ஸ்வேதவாஹனன் என்று அழைக்கிறார்கள்.
அடிவானில் உத்திர நட்சத்திரக்கூட்டம் {உத்தரப் பல்குனி} தோன்றிய நாளில் {உத்திரம் நட்சத்திரம் கொண்ட நாளில்} இமயத்தின் மார்பில் நான் பிறந்ததால், என்னைப் பல்குனன் என்று அழைக்கிறார்கள்.
முன்னர், வலிமைமிக்கத் தானவர்களுடன் நான் மோதும்போது, சூரியப்பிரகாசம் கொண்ட ஒரு மணிமுடியை இந்திரன் எனது தலையில் சூட்டியதால், நான் கிரீடி என்று பெயர் பெற்றேன்.
போர்க்களத்தில் இதுவரை வெறுக்கத்தக்க எந்தச் செயலையும் நான் செய்யாததால், தேவர்கள் மற்றும் மனிதர்கள் மத்தியில் பீபத்சு என்று நான் அறியப்படுகிறேன்.
காண்டீவத்தை எனது இருகரங்களாலும் இழுக்கவல்லவனாக நான் இருப்பதால், சவ்யசச்சின் {சவ்யசாசி} என்று தேவர்கள் மற்றும் மனிதர்களுக்கு மத்தியில் நான் அறியப்படுகிறேன்.
பூமியின் நான்கு எல்லைகளுக்குள் எனது நிறம் மிக அரிதானதாலும், எனது செயல்கள் எப்போதும் களங்கமற்றவையாக இருப்பதாலும் என்னை அர்ஜுனன் என்று அழைக்கிறார்கள்.
அணுகமுடியாதவனாகவும், அடக்கப்பட முடியாதவனாகவும், எதிரிகளை அடக்குபவனாகவும், பகனைக் கொன்றவனின் {இந்திரனின்} மகனாகவும் இருப்பதால் மனிதர்கள் மற்றும் தேவர்களுக்கு மத்தியில், நான் ஜிஷ்ணு என்ற பெயரால் அறியப்படுகிறேன்.
எனது பத்தாவது பட்டப்பெயரான கிருஷ்ணன் [2] என்பது, கரிய தோலும் {நிறமும்} பெரும் தூய்மையும் கொண்ட சிறுவனான என் மீது பாசம் கொண்ட எனது தந்தையால் {பாண்டுவால்} எனக்கு வழங்கப்பட்டதாகும்.

சாம்யமணியின் மகனும், திருஷ்டத்யும்னனும்! – பீஷ்ம பர்வம் பகுதி – 061- அபிமன்யுவைச் சூழ்ந்து கொண்ட ஐவர்; அபிமன்யு புரிந்த அற்புதப் போர்; தன் மகனைக் கண்டு பெருமையால் கர்ஜித்த அர்ஜுனன்; அபிமன்யுவுக்கும், அர்ஜுனனுக்கும் உதவி புரிய நடுவில் புகுந்த திருஷ்டத்யும்னன்; சாம்யமணியின் மகனுக்கும் திருஷ்டத்யும்னனுக்கும் இடையில் மூண்ட போர்; சாம்யமணியின் மகனைக் கொன்ற திருஷ்டத்யும்னனன்; திருஷ்டத்யும்னனை எதிர்த்து விரைந்த சாம்யமணியும், சல்யனும்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, பூரிஸ்ரவஸ், [1], சித்திரசேனன், சாம்யமணியின் [2] மகன் ஆகியோர், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சுபத்திரையின் மகனுடன் {அபிமன்யுவுடன்} போரிட்டனர். மனிதர்களில் புலிகளான அந்த ஐவருடன் தனியாகப் போரிட்டுக் கொண்டிருந்தபோது, பெரும் சக்தி கொண்ட அவனை {அபிமன்யுவை}, ஐந்து யானைகளுடன் போரிட்டுக் கொண்டிருந்த ஓர் இளம் சிங்கத்தைப் போல மக்கள் கண்டனர்.

இலக்கில் துல்லியம், ஆற்றல், கரத்தின் வேகம், ஆயுத அறிவு ஆகியவற்றில் அவர்களில் ஒருவரும் *கிருஷ்ணனின் {அர்ஜுனனின்} மகனுக்கு {அபிமன்யுவுக்கு} ஈடாக இல்லை. இப்படிப் போரிடுபவனும், போரில் தனது ஆற்றலை வெளிப்படுத்துபவனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான தனது மகனைக் {அபிமன்யுவைக்} கண்ட பார்த்தன் {அர்ஜுனன்} சிம்ம முழக்கம் செய்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது பேரன் {அபிமன்யு}, உமது {கௌரவப்} படையைத் துன்புறுத்துவதைக் கண்ட உமது வீரர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அனைத்துப் புறங்களிலும் அவனை {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்டார்கள்.

எதிரிகளைத் தாக்குபவனான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தனது ஆற்றல் மற்றும் பலத்தை மட்டுமே நம்பி, உற்சாகமிழக்காத இதயத்துடன் தார்தராஷ்டிரப் படையை எதிர்த்து முன்னேறினான். அந்த மோதலில் எதிரியுடன் போரிட்ட போது, சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்ட அவனது {அபிமன்யுவின்} வலிமையான வில், அடிப்பதற்கான நிலையில் எப்போதும் வளைந்தே காணப்பட்டது. துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} ஒரு கணையாலும், சல்லியனை ஐந்தாலும் துளைத்த அவன் {அபிமன்யு}, எட்டு கணைகளால் சாம்யமணியின் மகனுடைய கொடியை வீழ்த்தினான். சோமதத்தன் மகனால் {பூரிஸ்ரவசால்} தன் மீது வீசப்பட்டதும், பாம்புக்கு ஒப்பானதும், தங்கப்பிடி கொண்டதுமான வலிமைமிக்க ஈட்டியைக் கூர்முனை கொண்ட மற்றொரு கணையால் அடித்தான்.

சல்லியனின் பார்வைக்கு எதிரிலேயே, அவனது நூற்றுக்கணக்கான பயங்கரக் கணைகளையும் கலங்கடித்த அந்த அர்ஜுனனின் வாரிசு {அபிமன்யு}, அவனது {சல்லியனின்} நான்கு குதிரைகளையும் கொன்றான். அதன்பேரில், கிருஷ்ணனின் {அர்ஜுனனின்} மகன் {அபிமன்யு} வெளிப்படுத்திய கரப் பலத்தின் காரணமாக அச்சத்தால் பீடிக்கப்பட்ட பூரிஸ்ரவஸ், சல்லியன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சாம்யமணி மற்றும் சலன் ஆகியோரால் அவனுக்கு {அபிமன்யுவுக்கு} முன்பு நிற்க முடியவில்லை.

அப்போது, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்டவர்களும், ஆயுதங்களின் அறிவியலை நன்கு அறிந்த மனிதர்களில் முதன்மையானவர்களும், போரில் எதிரிகளால் வீழ்த்தப்பட இயலாதவர்களுமான இருப்பத்தைந்தாயிரம் {25,000} எண்ணிக்கையிலான திரிகார்த்தர்கள், மத்ரர்கள், கேகயர்கள் ஆகியோர் கிரீடி {அர்ஜுனன்}, அவனது மகன் {அபிமன்யு} ஆகிய இருவரையும் கொல்வதற்காக அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரிகளை வீழ்த்துபவனும், பாண்டவப் படையின் தலைவனுமான பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, (எதிரிகளால் இப்படிச்) சூழப்பட்ட தந்தை {அர்ஜுனன்} மற்றும் மகன் {அபிமன்யு} ஆகியோரின் தேர்களைக் கண்டான்.

ஆயிரக்கணக்கான யானைகள் மற்றும் தேர்களாலும், நூறாயிரம் {இலட்சக்} கணக்கான குதிரைப்படை மற்றும் காலாட்படைகளாலும் ஆதரிக்கப்பட்ட அவன் {திருஷ்டத்யும்னன்}, பெரும் கோபத்துடன் தனது வில்லை வளைத்தவாறு, மத்ரர்கள், கேகயர்கள் ஆகியோரின் படைப்பிரிவுகளை எதிர்த்துத் தனது துருப்புகளைத் தலைமைதாங்கி அழைத்துச் சென்றான். புகழ்பெற்றவனும், உறுதியான வில்லாளியுமான அவனால் {திருஷ்டத்யும்னனால்} பாதுகாக்கப்பட்டதும், தேர்கள், யானைகள், குதிரைப்படை ஆகியவற்றைக் கொண்டதுமான (பாண்டவப் படையின்) அந்தப் படைப்பிரிவு  முன்னேறிச் சென்றபோது பிரகாசமாகத் தெரிந்தது.

பாஞ்சாலக் குலத்தைத் தழைக்க வைப்பவனான அவன் {திருஷ்டத்யும்னன்} அர்ஜுனனை நோக்கி முன்னேறிச் சென்ற போது, மூன்று கணைகளால் சரத்வானின் மகனுடைய {கிருபரின்} தோள் பூட்டில் தாக்கினான். பத்து கூரிய கணைகளால் மத்ரர்களைத் துளைத்த {கொன்ற} அவன் {திருஷ்டத்யும்னன்}, கிருதவர்மனின் பின்புறத்தைக் காத்தவனையும் விரைவாகக் கொன்றான். எதிரிகளைத் தண்டிப்பவனான அவன் {திருஷ்டத்யும்னன்}, நாராசம் {அகன்ற தலை கொண்ட கணை} ஒன்றினால், உயர் ஆன்ம பௌரவனுடைய வாரிசான தமனனையும் கொன்றான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது சாம்யமணியின் மகன்,  போரில் வீழ்த்தப்பட முடியாதவனான பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னனை} பத்து கணைகளால் துளைத்து, மேலும் பத்து கணைகளால் அவனது {திருஷ்டத்யும்னனின்} தேரோட்டியையும் துளைத்தான். (இப்படி) கடுமையாகத் துளைக்கப்பட்ட அந்த வலிமைமிக்க வில்லாளி {திருஷ்டத்யும்னன்}, தன் கடைவாயை நாவால் நக்கியபடித் தன் எதிரியின் {சாம்யமணியின் மகனுடைய} வில்லை மிகக்கூரிய ஒரு பல்லத்தைக் {அகன்ற தலை கொண்ட கணை} கொண்டு அறுத்தான்.

விரைவில் அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்} தனது எதிரியை {சாம்யமணியின் மகனை} இருபத்தைந்து கணைகளால் துளைத்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவனது குதிரைகளையும், அவனது சிறகுகளை {இருபக்கங்களைக்} காக்கும் இருவரையும் கொன்றான். பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, குதிரைகளை இழந்த அந்தத் தேரில் நின்று கொண்டிருந்த சாம்யமணியின் மகன், புகழ்பெற்ற பாஞ்சால மன்னனின் {துருபதனின்} மகனைப் {திருஷ்டத்யும்னனைப்} பார்த்தான். அப்போது, எஃகினால் ஆன சிறந்த வகையிலானதும், வாள் ஒன்றை எடுத்துக் கொண்ட சாம்யமணியின் மகன் நடந்தே சென்று, தேரில் இருக்கும் துருபதன் மகனை {திருஷ்டத்யும்னனை} அணுகினான்.

வானத்தில் இருந்து விழுந்த பாம்பைப் போலவும், தன்னை நோக்கி வரும் ஓர் அலையைப் போலவும் வந்து கொண்டிருந்த அவனை {சாம்யமணியின் மகனை} அந்தப் பிருஷத குலத் திருஷ்டத்யும்னனும் கண்டான்; பாண்டவர்களும், படைவீரர்களும் கண்டார்கள். சூரியனைப் போலத் தெரிந்த அவன் {சாம்யமணியின் மகன்} தனது வாளைச் சுழற்றியபடி, ஒரு மதங்கொண்ட யானையைப் போல நடந்து சென்றான். சினத்தால் தூண்டப்பட்ட பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, விரைவாக ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, தன்னை நோக்கி முன்னேறி வருபவனும், கூர்முனை கொண்ட வாளையும், கேடயத்தையும் தரித்திருப்பவனும், தன் எதிரியுடைய தேரின் மிக அருகே வந்தவனுமான சாம்யமணியின் மகனுடைய தலையை நொறுக்கினான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்படி அவன் {சாம்யணியின் மகன்} உயிரற்று கீழே விழும்போது சுடர்மிகும் வாள் மற்றும் கேடயத்தில் கொண்டிருந்த பிடி தளர பூமியில் தன் உடலைச் சாய்த்தான். தன் கதாயுதத்தைக் கொண்டு தனது எதிரியைக் கொன்ற பாஞ்சால மன்னனின் உயர் ஆன்ம மகன் {திருஷ்டத்யும்னன்} பெரும்புகழை வென்றான். வலிமைமிக்கத் தேர்வீரனும், பெரும் வில்லாளியுமான அந்த இளவரசன் {சாம்யமணியின் மகன்} (இப்படிக்) கொல்லப்பட்ட போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகளில் இருந்து “ஓ” என்றும், “ஐயோ” என்றும் அலறல்கள் எழுந்தன.

தன் மகன் கொல்லப்பட்டதைக் கண்டு சினம் தூண்டப்பட்ட சாம்யமணி, போரில் வீழ்த்தப்பட இயலாதவனான பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னனை} எதிர்த்து மூர்க்கமாக விரைந்தான். குரு மற்றும் பாண்டவப் படைகளைச் சேர்ந்த மன்னர்கள் அனைவரும், தேர்வீரர்களில் முதன்மையான அந்த இளவரசர்கள் இருவரும் போரில் ஈடுபடுவதைக் கண்டார்கள்.

கோபத்தால் தூண்டப்பட்டவனும், பகை வீரர்களைக் கொல்பவனுமான சாம்யமணி, வலிமைமிக்க யானையை அங்குசங்களால் துளைப்பது போல, மூன்று கணைகளைக் கொண்டு, அந்தப் பிருஷத மகனை {திருஷ்டத்யும்னனைத்} தாக்கினான். அதே போல, சபைகளின் ரத்தினமான சல்யனும் சினத்தால் தூண்டப்பட்டு, பிருஷதனின் வீரமகனை {திருஷ்டத்யும்னனை} மார்பில் தாக்கினான். பிறகு (மற்றுமொரு) போர் (அங்கே) தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.

பீமசேனனின் ருத்ரத்தாண்டவம்! – பீஷ்ம பர்வம் பகுதி – 062-திருதராஷ்டிரனின் வருத்தம்; சல்லியனுக்கும், திருஷ்டத்யும்னனுக்கும் இடையில் நடைபெற்ற போரை வர்ணித்த சஞ்சயன்; அபிமன்யு இடையில் புகுந்தது; ஒருபுறம் பத்துப் பேரும், மறுபுறம் இன்னும் பத்துப் பேரும் இருந்து போரிட்டது; மகத யானைகளைக் கொன்ற பீமன்; அபிமன்யுவுக்கும் மகதமன்னனுக்கும் இடையில் ஏற்பட்ட போர்; மகத மன்னனின் தலையைக் கொய்த அபிமன்யு; பீமனால் யானைகள் அடைந்த துன்பம்; ஊழிக்கால ருத்திரனைப் போல இருந்த பீமன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “என் மகனின் {துரியோதனனின்} படைகள் அனைத்தும், பாண்டவப்படையால் தொடர்ந்து கொல்லப்படுவதால், ஓ! சஞ்சயா, உழைப்பைவிட {முயற்சியைவிட} விதியே மேன்மையானது என நான் கருதுகிறேன். ஓ! சூதா {சஞ்சயா}, எனது துருப்புகள் கொல்லப்படுவதாகவே நீ எப்போதும் சொல்கிறாய். மேலும், பாண்டவர்களைக் கொல்லப்படாதவர்களாகவும் உற்சாகம் நிறைந்தவர்களாகவும் எப்போதும் சொல்கிறாய்.

உண்மையில், ஓ! சஞ்சயா, என்னுடையவர்களை ஆண்மையற்றவர்களாகவும், தங்கள் சக்தியைச் சிறப்பாகப் பயன்படுத்தினாலும், வெற்றிக்காகக் கடினமாக முயற்சித்தாலும் அவர்கள் வீழ்த்தப்பட்டதாகவும், வீழ்த்தப்படுவதாகவும், கொல்லப்பட்டதாகவும் நீ சொல்கிறாய். பாண்டவர்கள் வெற்றி அடைவதாகவும், என்னவர்கள் மேலும் மேலும் பலவீனமடைந்ததாகவுமே எப்போதும் நீ என்னிடம் சொல்கிறாய். ஓ! குழந்தாய் {சஞ்சயா}, துரியோதனனின் செயல்களால், தாங்கிக் கொள்ள முடியாததும், எரிச்சலூட்டுவதுமான எண்ணற்ற துயரங்களை நான் இடவிடமால் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஓ! சஞ்சயா, போரில் பாண்டவர்களைப் பலவீனப்படுத்தவும், எனது மகன்கள் வெற்றியை அடையவும் எந்த வழியையும் நான் காணவில்லை” என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்தப் பெரும் தீமை உம்மில் இருந்தே வந்திருக்கிறது. மனிதர்கள், யானைகள், குதிரைகள் மற்றும் தேர்வீரர்கள் ஆகியவற்றின் படுகொலையை இப்போது பொறுமையாகக் கேட்பீராக.

சல்லியனின் ஒன்பது கணைகளால் பீடிக்கப்பட்ட திருஷ்டத்யும்னன், பதிலுக்கு எஃகால் ஆன பல கணைகளைக் கொண்டு மத்ர ஆட்சியாளனைப் {சல்லியனைப்} பீடித்தான். சபைகளின் ரத்தினமான சல்லியனை விரைவாகத் தடுத்த திருஷ்டத்யும்னனின் அற்புதமான ஆற்றலை நாங்கள் கண்டோம். அவர்கள் இருவருக்கும் இடையிலான அந்தப் போர் குறுகிய காலமே நீடித்தது. கோபத்துடன் மோதலில் ஈடுபட்ட அவர்கள் ஓய்வதை ஒருக்கணம் கூட யாராலும் காணமுடியவில்லை.

அப்போது அந்தப் போரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கூர்முனையுடனும், அற்புத திடத்துடனும் கூடிய ஒரு பல்லத்தை {அகன்ற தலை கொண்ட கணையைக்} கொண்டு திருஷ்டத்யும்னனின் வில்லைச் சல்லியன் அறுத்தான். மேலும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவன் {சல்லியன்}, மழைக்காலங்களில் மலையின் சாரலில் தங்கள் துளிகளைப் பொழியும் மழைநிறைந்த மேகங்களைப் போல, கணை மழையால் அவனை {திருஷ்டத்யும்னனை} மறைத்தான். இப்படித் திருஷ்டத்யும்னன் பீடிக்கப்பட்ட போது, சினம் தூண்டப்பட்ட அபிமன்யு, மத்ர ஆட்சியாளனை {சல்லியனை} நோக்கி மூர்க்கமாக விரைந்தான். அளவிலா ஆன்மா கொண்டவனான கிருஷ்ணனின் {அர்ஜுனனின்} கோபம்நிறைந்த மகன் {அபிமன்யு} மத்ர ஆட்சியாளனின் தேரை அடைந்து (அம்பு ஏவும் தொலைவை அடைந்து} மூன்று கணைகளால் அர்த்தாயனியைத் [1] {சல்லியனைத்} துளைத்தான். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} எதிர்க்க விரும்பிய உமது படையின் போர்வீரர்கள், மத்ர ஆட்சியாளனின் {சல்லியனின்} தேரை விரைவாகச் சூழ்ந்து கொண்டனர்.

துரியோதனன், விகர்ணன், துச்சாசனன், விவிம்சதி, துர்மர்ஷணன், துஸ்ஸஹன், சித்திரசேனன், துர்முகன், சத்யவிரதன், புருமித்ரன் ஆகியோர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மத்ர ஆட்சியாளனின் {சல்லியனின்} தேரைப் பாதுகாத்தபடி அங்கேயே நிலைநின்றனர். அப்போது, கோபம் தூண்டப்பட்டவனான பீமசேனன், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், திரௌபதியின் ஐந்து மகன்கள், அபிமன்யு, மாத்ரியின் இரட்டை மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல்வேறு வகை ஆயுதங்களால் தங்களைத் தாக்கிக் கொண்டிருந்த திருதராஷ்டிரப் படையின் அந்தப் பத்து வீரர்களை எதிர்த்தனர்.

உமது தீயக் கொள்கையின் விளைவால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் ஒருவரை ஒருவர் கொல்ல விரும்பிய அவர்கள், மற்றவர்களை அணுகித் தங்களுக்குள் மோதிக்கொண்டனர். அச்சந்தரும் அந்தப் போரில், சினத்தால் தூண்டப்பட்ட அந்தப் பத்து தேர்வீரர்களும், பிற பத்து வீரர்களுடன் போரில் ஈடுபட்ட போது, உமது படை மற்றும் எதிரியின் படை ஆகிய இரண்டையும் சேர்ந்த மற்ற தேர்வீரர்கள் அனைவரும் பார்வையாளர்களாகவே நின்றனர். அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், பல்வேறு வகைகளிலான ஆயுதங்களை ஏவிக் கொண்டும், ஒருவரை நோக்கி ஒருவர் முழக்கமிட்டபடியும், மிகக் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். நெஞ்சங்களில் உதித்த கோபத்துடன் ஒருவரை ஒருவர் கொல்லவிரும்பிய அவர்கள், தங்களுக்குள் ஒருவரை ஒருவர் சவாலுக்கழைத்துக் கடுமையாக முழக்கமிட்டனர். தங்களுக்குள் பொறாமை கொண்ட அந்த உறவினர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்துடன் ஒன்றுகூடி வலிமைமிக்க ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

கோபத்தால் தூண்டப்பட்ட துரியோதனன் அந்தப் போரில் நான்கு கூரிய கணைகளால் திருஷ்டத்யும்னனைத் துளைத்தான் என்பதைச் சொல்ல அற்புதமாகத்தான் இருக்கிறது [2]. துர்மர்ஷணன் இருபது கணைகளாலும், சித்திரசேனன் ஐந்தாலும், துர்முகன் ஒன்பதாலும், துஸ்ஸஹன் ஏழாலும், விவிம்சதி ஐந்தாலும், துச்சாசனன் மூன்று கணைகளாலும் அவனைத் {திருஷ்டத்யும்னனைத்} துளைத்தனர். அப்போது, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரிகளை எரிப்பவனான பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, பதிலுக்கு அவர்கள் ஒவ்வொருவரையும் இருபத்தைந்து கணைகளால் துளைத்துத் தனது கர வேகத்தை வெளிப்படுத்தினான்.

அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சத்தியவிரதன், புருமித்திரன் ஆகியோர் ஒவ்வொருவரையும் பத்து கணைகளால் அபிமன்யு துளைத்தான். தங்கள் தாய்க்கு மகிழ்ச்சியை அளிப்பவர்களான மாத்ரியின் மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, கூரிய கணை மழையால் தங்கள் மாமனை {சல்லியனை} மறைத்தார்கள். இவை அனைத்தும் காண அற்புதமாக இருந்தன. அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தேர்வீரர்களில் முதன்மையானவர்களும், தங்கள் மாமனின் {சல்லியனின்} செயல்களுக்குப் பதிலடி கொடுக்க விரும்புபவர்களுமான தன் மருமகன்கள் இருவரையும் சல்லியன் கணைகளால் மறைத்தான். எனினும் அந்த மாத்ரியின் மகன்கள் நடுங்கவில்லை.

துரியோதனனைக் கண்டவனும், பாண்டுவின் மகனுமான வலிமைமிக்கப் பீமசேனன், போருக்கு ஒரு முடிவைக் கொண்டு வர விரும்பித் தன் கதாயுதத்தை எடுத்தான். உயர்த்திப் பிடிக்கப்பட்ட கதாயுதத்துடன் கூடியவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், சிகரங்களுடன் கூடிய கயிலாய மலையைப் போன்றவனுமான பீமசேனனைக் கண்ட உமது மகன்கள் அச்சத்தால் ஓடினார்கள். எனினும், கோபத்தால் தூண்டப்பட்ட துரியோதனன், பெரும் சுறுசுறுப்புடையவையும், பத்தாயிரம் {10000} யானைகளைக் கொண்டவையுமான மகதப் படைப்பிரிவை ஏவினான். அந்த யானைப் படையின் துணையுடனும், மகத ஆட்சியாளனை {?} [3] தனக்கு முன்னிலையில் நிறுத்திக் கொண்டும், பீமசேனனை நோக்கி மன்னன் துரியோதனன் முன்னேறினான்.

தன்னை நோக்கி முன்னேறும் அந்த யானைப்படையைக் கண்ட விருகோதரன் {பீமன்}, கையில் கதாயுதத்துடன் தேரில் இருந்து கீழே குதித்து, சிங்கத்தைப் போல உரக்க முழக்கமிட்டான். பெரும் கனமும், கடுமையான வலிமையும் கொண்ட அந்தப் பலமிக்கக் கதாயுதத்துடன் கூடிய அவன் {பீமன்}, வாயை அகல விரித்திருக்கும் அந்தகனைப் போல அந்த யானைப்படையை நோக்கி விரைந்தான். பெரும் பலம்பொருந்தியவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான பீமசேனன், தானவப் படைக்கு மத்தியில் விருத்திரனைக் கொன்றவனை {இந்திரனைப்} போல, தன் காதாயுதத்தால் யானைகளைக் கொன்றபடி களத்தில் திரிந்தான். மனத்தையும், இதயத்தையும் அச்சத்தால் நடுங்கச் செய்யும் பீமனுடைய உரத்த முழக்கங்களால், வெருண்ட {நெருங்கிப் பதுங்கிய} யானைகள் தங்கள் அசையும் சக்திகள் அனைத்தையும் இழந்தன.

திரௌபதியின் மகன்கள், வலிய தேர்வீரனான சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, நகுலன் மற்றும் சகாதேவன், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன் ஆகியோர் பீமனின் பின்புறத்தைப் பாதுகாத்தபடி, மலையின் சாரலில் மழையைப் பொழியும் மேகங்களைப் போலத் தங்கள் கணைமாரியைப் பொழிந்து அனைவரையும் தடுத்தனர். யானையின் முதுகில் இருந்து போரிடும் தங்கள் எதிரிகளின் தலைகளை, அந்தப் பாண்டவவீரர்கள், நன்கு கடினமாக்கப்பட்டவையும், கூரிய முனை கொண்டவைகளும், பல்வேறு வடிவங்களிலானவையுமான கணைகளால் [4] வெட்டி வீழ்த்தினர். (யானைவீரர்களின்) தலைகளும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கரங்களும், அங்குசங்கள் பிடித்த கைகளும் விழுவது ஒரு கல்மழையை ஒத்திருந்தது. தாங்கள் செலுத்திய விலங்குகளின் {யானைகளின்} கழுத்தில் இருந்த யானைவீரர்களின் தலையற்ற உடல்கள், மலைக்குன்றுகளில் இருக்கும் தலையற்ற மரங்களைப் போலத் தெரிந்தன.

அப்போது அந்தப் போரில் மகதர்களின் ஆட்சியாளன் {?}, ஐராவதம் போன்றிருந்த தன் யானையைச் சுபத்திரைமகனின் {அபிமன்யுவின்} தேரை நோக்கிச் செலுத்தினான். பகைவீரர்களைக் கொல்பவனான சுபத்திரையின் வீர மகன் {அபிமன்யு}, தன்னை நோக்கி வரும் வலிமைமிக்க யானையைக் கண்டு, ஒரே கணையால் அதைக் கொன்றான். இப்படித் தனது யானையை மகதர்களின் ஆட்சியாளன் இழந்த போது, பகை நகரங்களை வெல்பவனான அந்தக் கிருஷ்ணனின் {அர்ஜுனனின்} மகன் {அபிமன்யு}, வெள்ளிச் சிறகுகள் கொண்ட ஒரு பல்லத்தினால் அந்த {மகத} மன்னனின் தலையைக் கொய்தான்.

அந்த யானைப் படைக்குள் ஊடுருவிய பாண்டுவின் மகனான பீமசேனன், மலைகளை நசுக்கும் இந்திரனைப் போலத் தன்னைச் சுற்றிலும் இருந்த அந்த விலங்குகளை {யானைகளை} நசுக்கியபடி களத்தில் திரியத் தொடங்கினான். இடியினால் பிளக்கப்படும் மலைகளைப் போல, (தன் கதாயுதத்தின்) ஒரே அடியில், ஒவ்வொரு யானையையும் அந்தப் போரில் பீமசேனன் கொல்வதை நாங்கள் கண்டோம். மலைகளைப் போன்று பெரிதாக இருந்த பல யானைகள், தந்தங்கள் உடைக்கப்பட்டோ, நெற்றிப்பொட்டு, எலும்புகள், முதுகுகள் அல்லது கும்பம் {முன் மண்டை} உடைக்கப்பட்டோ கொல்லப்பட்டன.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இன்னும் அங்கே கிடந்த பிற {யானைகள்}, வாயில் நுரை தள்ளி உயிரை விட்டன. வலிமைமிக்கப் பல யானைகள் முற்றிலும் தங்கள் கும்பம் நொறுக்கப்பட்டுப் பெருமளவில் உதிரத்தைக் கக்கின. இன்னும் சில அச்சத்தால் சிறு குன்றுகளைப் போலத் தங்களை அந்தப் பூமியில் கிடத்திக் கொண்டன. (யானைகளின்) கொழுப்பு, உதிரம் ஆகியவை பூசப்பட்டு, அவற்றின் {யானைகளின்} மஜ்ஜையில் கிட்டத்தட்ட குளித்திருந்த பீமன், அந்தகனைப் போலக் கையில் கதாயுதத்துடன் களத்தில் திரிந்தான்.

யானைகளின் உதிரத்தால் நனைத்திருந்த தனது கதாயுதத்தைச் சுழற்றிய விருகோதரன் {பீமன்}, பிநாகையைத் தரித்திருக்கும் பிநாகைதாங்கியைப் போல {சிவனைப் போல} பயங்கரமானவனாகவும், பார்ப்பதற்கு அச்சத்தை ஏற்படுத்துபவனாகவும் இருந்தான். கோபக்கார பீமனால் (இப்படி) நசுக்கப்பட்ட அந்தப் பெரும் யானைகள், பெரிதும் பீடிக்கப்பட்டு, தங்கள் படையணிகளையே நசுக்கிய படி திடீரென ஓடத் தொடங்கின. சுபத்திரையின் மகனால் {அபிமன்யுவால்} தலைமை தாங்கப்பட்ட இந்த வலிமைமிக்க வில்லாளிகளும், தேர்வீரர்களும், வஜ்ரதாங்கியைப் {இந்திரனைப்} பாதுகாக்கும் தேவர்களைப் போல, யானைகளின் உதிரத்தால் நனைந்த தன் பயங்கரக் கதாயுதத்தைச் சுழற்றிப் போரிட்டுக் கொண்டிருந்த வீரனை {பீமனை} (அவ்வளவு நேரமும்) பாதுகாத்தனர். பயங்கர ஆன்மா கொண்ட பீமசேனனைக் காண அந்த அந்தகனைப் போல இருந்தான்.

உண்மையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கைகளில் கதாயுதத்துடன் அனைத்துப் புறங்களிலும் தன் பலத்தைச் செலுத்திய பீமசேனனை, (யுக முடிவின் போது) கூத்தாடும் சங்கரனைப் போல நாங்கள் கண்டோம். யமனின் தண்டாயுதத்தைப் போலக் கனமானதும், கடினமானதும், ஒலிபெருக்குவதுமான அவனது {பீமனது} கதாயுதம், இந்திரனின் வஜ்ரத்தைப் போன்ற ஒலியைக் கொண்டிருந்தது. மஜ்ஜைகளாலும், மயிர்களாலும் பூசப்பட்டிருந்ததும், கோரமானதுமான அவனது கதாயுதம், அனைத்து உயிர்களையும் அழிக்கும் கோபம் மிகுந்த ருத்திரனின் {சிவனின்} பிநாகையைப் போலவும் இருந்தது.

கால்நடைக்கூட்டத்தைத் தனது கோலால் தண்டிக்கும் மந்தையாளனைப் போலவே, பீமனும், தன் கதாயுதத்தால் அந்த யானைப்படையை அடித்தான். பீமனின் கதாயுதத்தாலும், (அவனுக்குப் பின்பு இருந்து பாதுகாத்தவர்கள் அடித்த) கணைகளாலும் இப்படிக் கொல்லப்பட்ட அந்த யானைகள் அனைத்துப் புறங்களிலும் ஓடி தங்கள் சொந்தப் படையையே நசுக்கின. அதன் பிறகு, மேகத்திரளை விரட்டும் வலிமைமிக்கக் காற்றைப் போல அந்தக் களத்தில் இருந்து யானைகளை விரட்டிய பீமன், சுடலையில் நிற்கும் திரிசூலந்தாங்கியைப் {சிவனைப்} போல அங்கே நின்றான்.

பகைவரைத் தடுத்த பீமன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 063-பீமனைக் கொல்ல முழுப் படையையும் ஏவிய துரியோதனன்; கடலென விரைந்த கௌரவப்படை; தன் கதாயுதத்தை மட்டுமே கொண்டு அந்தக் கௌரவப்படையைச் சிதறடித்த பீமன்; பீமனை எதிர்த்து விரைந்த பீஷ்மர்; பீஷ்மரைத் தாக்கிய சாத்யகி; சாத்யகியைத் தாக்கிய அலம்புசன்; சாத்யகியுடன் மோத விரும்பி அவனை நோக்கி விரைந்த பூரிஸ்ரவஸ்….

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த யானைப் படை நிர்மூலமாக்கப்பட்டபோது, உமது மகன் துரியோதனன், பீமசேனனைக் கொல்ல வீரர்களுக்கு உத்தரவிட்டு தனது முழுப் படையையும் ஏவினான். உமது மகனின் {துரியோதனனின்} கட்டளையின் பேரில் அந்த மொத்தப்படையும், கடும் முழக்கங்களிட்டுக் கொண்டிருந்த பீமசேனனை நோக்கி விரைந்தது.

தேவர்களே தாங்கிக் கொள்ளக் கடினமானதும், பரந்திருப்பதும், வரம்பற்றதுமான அந்தப் படை, முழு நிலவு {பௌர்ணமி}, புது நிலவு {அமாவாசை} ஆகிய நாட்களில், கடக்க முடியாததாக பொங்கி வரும் கடலைப் போல, தேர்கள், யானைகள், குதிரைகள் நிறைந்ததும், சங்கொலிகள் மற்றும் துந்துபி ஒலிகள் நிறைந்ததும், சொல்ல முடியாத எண்ணிக்கையிலான காலாட்படை வீரர்கள் மற்றும் தேர்வீரர்களைக் கொண்டதும், (எழுந்த) புழுதியால் மறைக்கப்பட்டதும், கலங்கடிக்கப்பட முடியாததுமான எதிரித் துருப்புகள், பீமசேனனை நோக்கி இப்படி வந்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவன் {பீமன்} பெருங்கடலைத் தடுக்கும் கரையைப் போல அந்தப் படையைப் தடுத்தான்.

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் உயர் ஆன்ம மகன் பீமசேனன் செய்தவையும் நாங்கள் கண்டவையுமான அந்தச் செயல்கள் மிக அற்புதமானதாகவும், மனித சக்திக்கு அப்பாற்பட்டதாகவும் இருந்தன. குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியவற்றுடன் தன்னை நோக்கி வந்த அந்த மன்னர்கள் அனைவரையும் தன் கதாயுதத்தைக் கொண்டே அச்சமற்ற வகையில் அவன் {பீமன்} தடுத்தான். தன் கதாயுதத்தைக் கொண்டு அந்தப் பெரும்படையைத் தடுத்தவனும், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவனுமான பீமன், அந்தக் கடும்போரில் அசையாத மேரு மலையைப் போல நின்றான்.

அச்சம் நிறைந்ததும், கடுமையானதும், பயங்கரமானதுமான அந்த மோதலில், அவனது சகோதரர்கள், மகன்கள், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், திரௌபதியின் மகன்கள், அபிமன்யு, வீழ்த்தப்பட முடியாதவனான சிகண்டி ஆகிய வலிமைமிக்க வீரர்கள் அச்சந்தரும் அவ்வேளையிலும் அவனை {பீமனைக்} கைவிடவில்லை. கூர்மையானதும், உருக்கினால் செய்யப்பட்டதும், கனமானதுமான பெரும் கதாயுதத்தைக் கையில் எடுத்த அவன் {பீமன்}, தண்டாயுதத்தைக் கையில் கொண்ட அந்தகனைப் போல உமது வீரர்கள் நோக்கி விரைந்தான். தேர்க்கூட்டங்களையும், குதிரைவீரர்களின் கூட்டங்களையும் பூமியில் நசுக்கியபடி, யுக முடிவின் நெருப்பு போலப் பீமன் களத்தில் திரிந்து கொண்டிருந்தான்.

எல்லையில்லா ஆற்றல் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தனது தொடைகளின் வேகத்தால் தேர்க்கூட்டங்களை நசுக்கியபடியும், போரில் உமது வீரர்களைக் கொன்றபடியும், யுக முடிவின் அந்தகனைப் போல அங்கே திரிந்து கொண்டிருந்தான். காட்டு மரங்களை நடுக்கும் ஒரு யானைப் போல, அவன் {பீமன்} உமது துருப்புகளை மிக எளிதாகக் கலங்கடிக்கத் தொடங்கினான்.

காற்றானது தன் சக்தியால் மரங்களை நசுக்குவதைப் போலத் தேர்வீரர்களைத் தங்கள் தேரில் இருந்தும், குதிரைகளின் முதுகில் இருந்த வீரர்களை அவற்றிலிருந்தும் இழுத்துப் போட்டு, தரையில் இருந்து போரிடும் காலாட் படை வீரர்களைத் தன் கதாயுதத்தைக் கொண்டும் அவர்கள் அனைவரையும் கொன்றான். யானைகளையும், குதிரைகளையும் கொன்ற அவனது {பீமனின்} கதாயுதம், கொழுப்பாலும், மஜ்ஜையாலும், சதையாலும், இரத்தத்தாலும் பூசப்பட்டுக் காண மிகப் பயங்கரமாக இருந்தது. கொல்லப்பட்ட மனித உடல்கள், சிதறிக் கிடக்கும் குதிரைப்படை என அந்தப் போர்க்களம் யமனின் வசிப்பிடத்தைப் போன்று தெரிந்தது.

பயங்கரமானதும், படுகொலை செய்வதுமான பீமசேனனின் கதாயுதம், கோபத்துடன் உயிரினங்களை அழிக்கும் ருத்திரனின் {சிவனின்} பிநாகம் போன்றும், காலனின் {யமனின்} கடுங்கோலைப் போன்றும், இந்திரனின் வஜ்ராயுதம் போன்ற பிரகாசத்துடனும் இருந்தது. உண்மையில், சுற்றிலும் அனைவரையும் கொன்று கொண்டிருந்த குந்தியின் உயர்ஆன்ம மகனுடைய {பீமனுடைய} கதாயுதம், அண்ட அழிவின் போது அந்தகனிடம் உள்ள தண்டாயுதம் போன்றே கடும்பிரகாசம் கொண்டதாக இருந்தது.

இப்படித் தொடர்ந்து அந்தப் பெரும்படையை முறியடித்துக் கொண்டு, காலனைப் போன்றே முன்னேறி வந்த அவனை {பீமனைக்} கண்ட வீரர்கள் அனைவரும் உற்சாகத்தை இழந்தனர். கதாயுதத்தை உயர்த்திய படி அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} எங்கெல்லாம் பார்த்தானோ, அங்கெல்லாம் அவனது பார்வையின் விளைவால் மட்டுமே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துருப்புகள் அனைத்தும் உருகி ஓடுவதாகத் தெரிந்தது.

பயங்கரச் செயல்புரியும் விருகோதரன் {பீமன்}, இப்படி {தங்கள்} படையை முறியடிப்பதையும், இவ்வளவு பெரிய படையைக் கொண்டும் அவன் {பீமன்} வீழ்த்தப்பட முடியாதவனாக இருப்பதையும், அகல விரித்த வாயைக் கொண்டு பகையணியை விழுங்கும் அந்தகனைப் போல படையை அழிப்பதையும் கண்ட பீஷ்மர், சூரியப் பிரகாசம் கொண்ட தனது தேரில், மேகங்களைப் போல உரத்த சடசடப்பொலியைக் கிளப்பிக் கொண்டு, மழை நிறைந்த ஆவிக் கூடாரம் {மேகம்} போல (வானத்தை மறைத்தபடி) கணைமாரியைப் பொழிந்து கொண்டு அவனை {பீமனை} நோக்கி விரைந்து வந்தார்.

வாயை அகல விரித்த அந்தகனைப் போலத் தன்னை நோக்கி விரைந்து வரும் பீஷ்மரைக் கண்டவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான பீமசேனன், கோபம் தூண்டப்பட்டு அவரை {பீஷ்மரை} நோக்கி விரைந்தான். அந்த நேரத்தில், சிநி குலத்து வீரர்களில் முதன்மையானவனும், இலக்கில் துல்லியம் கொண்டவனுமான சாத்யகி, (வரும் வழியெங்கும்) தனது உறுதியான வில்லால் எதிரிகளைக் கொன்றபடியும், உமது மகனின் {துரியோதனனின்} படையை நடுங்கச் செய்தபடியும் பாட்டன் {பீஷ்மர்} மீது விழுந்தான். அழகிய சிறகுகள் படைத்த தன் கூரிய கணைகளைச் சிதறடித்தப்படி, தனது வெள்ளி நிறக் குதிரைகளோடு இப்படி முன்னேறும் அந்த வீரனை {சாத்யகியை} உமது வீரர்களால் தடுக்க இயலவில்லை.

அந்நேரத்தில் ராட்சசன் அலம்புசன் மட்டுமே அவனை {சாத்யகியைப்} பத்து கணைகளால் துளைத்தான். ஆனால் பதிலுக்கு அலம்புசனை நான்கு கணைகளால் துளைத்த சிநியின் பேரன் {சாத்யகி}, தொடர்ந்து தனது தேரில் முன்னேறிச் சென்றான். இப்படித் தன் எதிரிகளுக்கு மத்தியில் முன்னேறி விரைந்து செல்லும் அந்த விருஷ்ணி குல வீரனைக் {சாத்யகியைக்} கண்ட குரு வீரர்களில் முதன்மையானோர் அவனை {சாத்யகியைத்} தடுக்க முயன்றனர். அந்தப் போரில் தொடர்ந்து உரக்க முழக்கமிட்ட உமது வீரர்கள், மலையின் சாரலில் வெள்ளமாகப் பொழியும் மேகங்களின் திரள்களைப் போல அவன் {சாத்யகி} மீது தங்கள் கணைமாரியைப் பொழிந்தனர். எனினும், நன்கு பிரகாசிக்கும் நாளின் மதிய வேளை சூரியனைப் போல இருந்த அந்த வீரனின் {சாத்யகியின்} முன்னேற்றத்தைத் தடுக்க முடியாதவர்களாகவே அவர்கள் இருந்தார்கள்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் படையில் சோமதத்தன் மகனைத் {பூரிஸ்ரவசைத்} தவிர வேறு ஒருவனும் உற்சாகத்துடன் இல்லை. தன் தரப்பின் தேர்வீரர்கள் துரத்தப்படுவதைக் கண்ட சோமதத்தனின் மகனான பூரிஸ்ரவஸ், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கடும் வேகம் கொண்ட தனது வில்லை எடுத்துக் கொண்டு சாத்யகியுடன் போரிடும் விருப்பத்தால் அவனை {சாத்யகியை} எதிர்த்து விரைந்தான்” {என்றான் சஞ்சயன்}.

திருதராஷ்டிரன் மகன்கள் எட்டு பேரைக் கொன்ற பீமன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 064அ-சாத்யகிக்கும், பூரிஸ்ரவசுக்கும் இடையில் நடந்த மோதல்; துரியோதனன்  தலைமையிலான திருதராஷ்டிர மகன்களுடன் பீமன் செய்த போர்; திருதராஷ்டிரன் மகன்கள் எண்மரைக் கொன்ற பீமன்; பீஷ்மரின்  கட்டளை ….

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெருங்கோபத்தால் தூண்டப்பட்ட பூரிஸ்ரவஸ், பெரும் யானையை அங்குசத்தால் துளைக்கும் யானைப்பாகனைப் போல, சாத்யகியை ஒன்பது கணைகளால் துளைத்தான். அளவிலா ஆன்மா கொண்டவனான சாத்யகியும், அனைத்துத் துருப்புகளின் பார்வையிலேயே, அந்தக் கௌரவ வீரனை {பூரிஸ்ரவசை} ஒன்பது கணைகளால் துளைத்தான். அப்போது, மன்னன் துரியோதனன், இப்படிப் போராடிக் கொண்டிருந்த சோமதத்தன் மகனைச் {பூரிஸ்ரவசைத்} தனது தம்பிகளுடன் சேர்ந்து சூழ்ந்து கொண்டான். அதே போலப் பெரும் சக்தி வாய்ந்த பாண்டவர்களும், விரைந்து சாத்யகியைச் சூழ்ந்து கொண்டு தங்கள் நிலைகளை அவனைச் {சாத்யகியைச்} சுற்றி அமைத்துக் கொண்டனர்.

கோபம் தூண்டப்பட்டவனும், உயர்த்திய கதாயுதத்துடன் கூடியவனுமான பீமசேனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துரியோதனன் தலைமையிலான உமது மகன்கள் அனைவருடனும் மோதினான். பல்லாயிரம் தேர்களுடையவனும், கோபமும், பொறாமையும் கொண்டவனுமான உமது மகன் நந்தகன், கல்லில் கூர்தீட்டப்பட்டுக் கூர் முனைகளைக் கொண்டிருந்தவையும், கங்கப் பறவையின் {கழுகின்} இறகுகளைச் சிறகுகளாகக் கொண்டவையுமான {ஆறு} கணைகளால் பெரும் பலம் வாய்ந்த பீமசேனனைத் தாக்கினான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு, அந்தப் போரில் சினம் தூண்டப்பட்ட துரியோதனன்,  ஒன்பது {9} கணைகளால் பீமசேனனை மார்பில் அடித்தான். அப்போது, வலிய கரங்களையும், பெரும் பலத்தையும் கொண்டவனான பீமன் தனது அற்புதத் தேரில் ஏறி (தனது தேரோட்டியான) விசோகனிடம், “துணிவுமிக்கவர்களும், வலிமையானவர்களும், பெரும் தேர் வீரர்களுமான அந்தத் திருதராஷ்டிர மகன்கள் அனைவரும் என் மீது பெருங்கோபம் கொண்டு, என்னைப் போரில் கொல்ல விரும்புகின்றனர். இவர்கள் அனைவரையும் நான் உன் பார்வைக்கு எதிராகவே கொல்வேன் என்பதில் ஐயமில்லை. எனவே, ஓ! தேரோட்டி {விசோகா}, என் குதிரைகளைக் கவனத்துடன் வழிநடத்துவாயாக” என்றான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இதைச் சொன்ன அந்தப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் பீமன்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கூர்முனைக் கணைகளால் உமது மகனைத் {துரியோதனனைத்} துளைத்தான்.

மேலும் அவன் {பீமன்}, மூன்று கணைகளால் நந்தகனை நடு மார்பில் துளைத்தான். அப்போது ஆறு கணைகளால் வலிமைமிக்கப் பீமனைத் துளைத்த துரியோதனன், வேறு மூன்று கூரிய கணைகளால் விசோகனைத் துளைத்தான். மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனன் நகைத்துக் கொண்டே வேறு மூன்று கூரிய கணைகளால் {பல்லங்களால்} பீமனின் பிரகாசமிக்க வில்லை அதன் கைப்பிடியருகே வெட்டினான்.

மனிதர்களில் காளையான அந்தப் பீமன், அம்மோதலில், வில்தரித்த உமது மகனின் {துரியோதனனின்} கூரிய கணைகளால் தனது தேரோட்டியான விசோகன் பீடிக்கப்பட்டதைக் கண்டு, தாங்கிக் கொள்ள முடியாமல், கோபத்தால் தூண்டப்பட்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகனின் அழிவுக்காக மற்றொரு அற்புத வில்லை எடுத்தான். பெரும் கோபத்தால் தூண்டப்பட்ட அவன் {பீமன்} அற்புதச் சிறகுகளைப் படைத்த க்ஷுரப்ரம் {குதிரை லாடம் போன்ற தலை கொண்ட அம்பு} ஒன்றை எடுத்தான். அதைக் கொண்டு மன்னனின் {துரியோதனனின்} அற்புத வில்லை அறுத்தான் பீமன்.

பிறகு, அதிகபட்ச கோபத்தால் தூண்டப்பட்ட உமது மகன் {துரியோதனன்}, அந்த முறிந்த வில்லை ஒரு புறமாக வீசி, மற்றொரு கடினமான வில்லை விரைவாக எடுத்தான். மரணக் கோலைப் {காலமிருத்யுவைப்} போலச் சுடர்விட்ட அந்தப் பயங்கரக் கணையைக் குறிபார்த்த அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, கோபத்தால் தூண்டப்பட்டு, பீமசேனனை நடு மார்பில் அடித்தான். அதனால் ஆழமாகத் துளைக்கப்பட்டு, பெரும் வலியை உணர்ந்த அவன் {பீமன்}, தனது தேரின் தட்டில் அமர்ந்தான். அப்படித் தனது தேர்த்தட்டில் அமர்ந்த அவன் {பீமன்} அப்படியே மயக்கமடைந்தான்.

அபிமன்யுவின் தலைமையில் இருந்த ஒப்பற்றவர்களும், பாண்டவப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களும் பீமன் இப்படித் துன்புறுவதைக் கண்டு, அதைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்களானார்கள். பெரும் உறுதி கொண்ட அந்த வீரர்கள், உமது மகன் {துரியோதனன்} முடியின் மீது கடும் கணைகளை மழையாகப் பொழிந்தனர். அப்போது, தனது சுயநினைவை அடைந்தவனான வலிமைமிக்கப் பீமசேனன் முதலில் மூன்று [1] கணைகளாலும், பிறகு ஐந்து கணைகளாலும் துரியோதனனைத் துளைத்தான். மீண்டும், வலிமைமிக்க வில்லாளியான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தங்கச்சிறகுகளைக் கொண்ட இருபத்தைந்து {25} கணைகளால் சல்லியனைத் துளைத்தான். இப்படித் துளைக்கப்பட்ட சல்லியன் களத்திற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டான்.

பிறகு, சேனாபதி, சுஷேணன், ஜலசந்தன் [2], சுலோசனன், உக்ரன், பீமரதன், பீமன், வீரபாகு, அலோலுபன், துர்முகன், துஷ்ப்ரதர்ஷன், விவித்சு, விகடன், சமன் என்கிற உமது பதினான்கு {14} மகன்கள் அந்தப் போரில் பீமசேனனுடன் மோதினார்கள். கண்கள் சிவக்க ஒன்று சேர்ந்து பீமசேனனுக்கு எதிராக விரைந்த அவர்கள் எண்ணற்ற கணைகளைப் பொழிந்து, அவனை {பீமனை} ஆழமாகத் துளைத்தனர். அப்போது, பலம்வாய்ந்த கரங்களைக் கொண்டவனும், வீரனுமான வலிமைமிக்கப் பீமசேனன், உமது மகன்களைக் கண்டு, சிறு விலங்குகளுக்கு மத்தியில் உள்ள ஓநாயைப் போல [3] கடைவாயை நக்கிக் கொண்டு, கருடனைப் போல அவர்கள் மீது மூர்க்கமாக விழுந்தான்.

பிறகு, அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, க்ஷுரப்ரம் {குதிரை லாடம் போன்ற தலை கொண்ட கணை} ஒன்றினால் சேனாதிபதியின் தலையைக் கொய்தான்.

பிறகு, மகிழ்ச்சி நிறைந்த ஆன்மாவுடன் இருந்த அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரன் {பீமன்}, சிரித்துக் கொண்டே மூன்று கணைகளால் ஜலசந்தனைத் துளைத்து அவனை {ஜலசந்தனை} யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்.

அடுத்ததாகச் சுஷேணனை அடித்த அவன் {பீமன்}, அவனை {சுஷேணனைக்} காலனின் {மிருத்யுவின்} முன்னிலைக்கு அனுப்பி வைத்தான்.

பிறகு, நிலவைப் போன்று அழகானதும், தலைப்பாகையுடன் கூடியதும், காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான உக்கிரனின் தலையை ஒரு பல்லத்தினால் பூமியில் விழச் செய்தான்.

மேலும் அந்தப்போரில் பாண்டுவின் மகன் பீமன், எழுபது {70} கணைகளால், குதிரைகளோடும், கொடிமரத்தோடும், தேரோட்டியோடும் கூடிய வீரபாகுவைப் அடுத்த உலகத்திற்கு அனுப்பிவைத்தான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிரித்தபடியே இருந்த பீமசேனன், உமது மகன்களான பீமன் மற்றும் பீமரதன் ஆகிய இரு சகோதரர்களும் யமனின் வசிப்பிடத்தை அடையும்படி செய்தான்.

பிறகு அந்தப் பெரும்போரில், துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு க்ஷுரப்ரத்தால் சுலோசனனையும் மரணவாசலுக்கு அனுப்பி வைத்தான்.

ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, எஞ்சி இருந்த உமது மகன்கள் அனைவரும் அந்த ஒப்பற்ற வீரனால் {பீமனால்} தாக்கப்படும்போது, அந்தப் பீமசேனனின் ஆற்றலைக் கண்டும், அவன் {பீமன்} மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்டும் போர்க்களத்தை விட்டு ஓடினார்கள்.

பிறகு, நோக்கிய சந்தனுவின் மகன் (பீஷ்மர்), (தனது படையின்) பெரும் தேர்வீரர்கள் அனைவரிடமும், “போரில் கோபத்தால் தூண்டப்பட்டவனும், கடுமையான வில்லாளியுமான அந்தப் பீமன், திருதராஷ்டிரனின் வலிமைமிக்க மகன்களையும், ஒன்றுசேர்ந்திருக்கும் வீரர்களான பிற தேர்வீரர்களையும் அவர்கள் என்ன ஆயுத அறிவைப் பெற்றிருந்தாலும், என்ன வீரத்தைக் கொண்டிருந்தாலும் கொல்கிறான். எனவே, நீங்கள் அனைவரும் அவனை {பீமனைப்} பிடிப்பீர்களாக” என்றார்.

இப்படிச் சொல்லப்பட்ட திருதராஷ்டிரப் படையின் துருப்புகள் அனைத்தும், கோபத்தால் தூண்டப்பட்டு, பெரும் வலிமைமிக்கப் பீமசேனனை நோக்கி விரைந்தன” {என்றான் சஞ்சயன்}.

கடோத்கசன் பகதத்தன் மோதல்! – பீஷ்ம பர்வம் பகுதி – 064ஆ-பீமனை மயக்கமடையச் செய்த பகதத்தன்; கோபமடைந்த கடோத்கசன் பகதத்தனைத் தாக்கியது; கடோத்கசன் மீது கொண்ட அச்சத்தால் கௌரவர்கள் நான்காம் நாள் போரான அன்றைய போரை நிறுத்தியது….

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்  தொடர்ந்தான்}, “மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மதங்கொண்ட யானையின் மீதிருந்த பகதத்தன், பீமசேனன் எங்கே இருந்தானோ அந்த இடத்திற்குத் திடீரென விரைந்தான். அங்கே நடந்த மோதலில், அவன் {பகதத்தன்}, சூரியனை மறைக்கும் மேகங்களைப் போல, சாணைக்கல்லில் கூர்த்தீட்டப்பட்ட தனது கணைகளைக் கொண்டு பீமனை மறைத்து கண்ணிற்குப் புலப்படாதவனாக்கினான்.

எனினும், தங்கள் கரங்களின் ஆற்றலையே நம்பியிருந்த (பாண்டவப் படையின்) அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களால் (பகதத்தனின் கணைமாரியால்) பீமன் மறைக்கப்பட்டதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே, அனைத்துப் புறங்களிலும் பகதத்தனைச் சூழ்ந்து கொண்ட அவர்கள் {பாண்டவப் படையினர்}, அவன் {பகதத்தன்}  மீது கணைமாரியைப் பொழிந்தனர். மேலும் அவர்கள் அவனது {பகதத்தனின்} யானையின் மீதும் கணைமாரியைப் பொழிந்தனர்.

பிராக்ஜோதிஷதர்கள் ஆட்சியாளனின் {பகதத்தனின்} யானை, வலிமைமிக்கத் தேர்வீரர்களால் பொழியப்பட்ட, பல்வேறு வகைகளிலான கடுங்கணைகளின் காரணமாக, உடல் முழுவதும் இரத்தஞ்சொட்டி, சூரியக் கதிர்களால் கோர்க்கப்பட்ட மேகத்திரள்களைப் போல அந்தப் போர்க்களத்தைப் பார்ப்பதற்கு அழகாக்கியது. பகதத்தனால் தூண்டப்பட்டதும், மதநீர் பெருக்கும் தன்மை கொண்டதும், அந்தகனைப் போன்றதுமான அந்த யானை, தன் முந்தைய வேகத்தைவிட இரண்டு மடங்கு வேகத்தில் ஓடி, தனது நடையால் பூமியையே நடுங்கச் செய்தது. அவ்விலங்கின் கொடூர முகத்தைக் கண்ட வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள் அனைவரும் அதைத் தடுக்கமுடியாததாகக் கருதி உற்சாகமிழக்கத் தொடங்கினர்.

பிறகு, கோபத்தில் தூண்டப்பட்டவனும், மன்னர்களில் புலியுமான மன்னன் பகதத்தன், நேரான தனது கணையொன்றால் பீமசேனனை நடுமார்பில் அடித்தான். மன்னனுடைய {பகதத்தனுடைய} அந்தக் கணையால் ஆழமாகத் துளைக்கப்பட்ட பெரும் வில்லாளியும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அவன் {பீமன்}, மயக்கத்தின் விளைவாகத் தன் உறுப்புகளின் உணர்வுகளை இழந்து, தனது கொடிமரத்தைப் பிடித்தபடி தனது தேரில் அமர்ந்தான். அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அச்சமடைந்ததையும், பீமசேனன் மயக்கமடைந்ததை கண்டவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான பகதத்தன் உரக்க முழக்கமிட்டான்.

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமனை அந்த நிலையில் கண்டவனும், பயங்கரமானவனுமான ராட்சசன் கடோத்கசன், கோபத்தால் தூண்டப்பட்டு, அப்போதைக்கப்போது காட்சியில் இருந்து மறைந்தான். பயங்கர மாயையை உண்டாக்கி, மருண்டவர்களின் அச்சத்தை அதிகரித்துக் கொடும் வடிவத்தை ஏற்று ஒரு கணத்தில் மீண்டும் அவன் {கடோத்கஜன்} தோன்றினான். தன் மாய சக்திகளால் உண்டாக்கப்பட்ட ஐராவதத்தில் தானே பயணித்து, இன்னும் பிற திக்கஜங்களான அஞ்சனம், வாமனம், நல்லொளி பொருந்திய மகாபத்மம் ஆகியவற்றில் பிறரும் தன்னைப் பின்தொடரச் செய்தான். ராட்சசர்களால் செலுத்தப்பட்டவையும், பெரும் வடிவத்திலானவையுமான அந்த வலிமைமிக்க மூன்று யானைகளும் மும்மதங்களையும் பெருக்கியபடி, பெரும் வேகத்துடனும், ஆற்றலுடனும் இருந்தன.

அப்போது, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, பகதத்தனையும், அவனது யானையையும் கொல்ல விரும்பி கடோத்கஜன் அந்தப் போரில் தன் யானையைத் தூண்டினான். அப்போது, பெரும் பலம் மிக்க ராட்சர்களால் தூண்டப்பட்டவையும், உக்கிரமானவையும், நான்கு தந்தங்களைக் கொண்டவையுமான அந்த யானைகள், பகதத்தனின் யானை மீது அனைத்துப் புறங்களில் இருந்தும் பாய்ந்து, தங்கள் தந்தங்களால் அதைப் {பகதத்தனின் யானையைத்} துன்புறுத்தின. இப்படி அந்த யானைகளால் துன்புறுத்தப்பட்ட பகதத்தனின் யானை (ஏற்கனவே) அம்புகளால் அடிபட்டதாலும், பெரும் வலியை உணர்ந்து இந்திரனின் இடிக்கு ஒப்பாக உரக்கப் பிளிறியது.

முழக்கமிடும் அந்த யானையின் பயங்கரமான உரத்தக் கதறல்களைக் கேட்டுத் துரோணர், சுயோதனன் {துரியோதனன்} மற்றும் மன்னர்கள் அனைவரிடமும் பீஷ்மர், “வலிமைமிக்க வில்லாளியான பகதத்தன், கொடிய ஆன்மா கொண்ட ஹிடிம்பையின் மகனிடம் {கடோத்கசனிடம்} போரிட்டு, பெரும் துயரில் விழுந்திருக்கிறான். அந்த ராட்சசன் {கடோத்கசன்} பெரும் வடிவத்தைக் கொண்டவன். அந்த மன்னனும் {பகதத்தனும்} பெரும் கோபம் கொண்டவன். இவர்கள் இருவரும் போரிட்டால், ஒருவரை ஒருவர் கொன்று விடுவார்கள் என்பது நிச்சயம். மகிழ்ச்சி நிறைந்த பாண்டவர்களின் உரத்த ஒலிகள் கேட்கப்பட்டன. (மன்னன் பகதத்தனுடைய) யானையின் பயங்கரமான துயரக் கதறலும் கேட்டது.

நீங்கள் அருளப்பட்டிருப்பீராக. மன்னனை {பகதத்தனை} மீட்க நாம் அனைவரும் அங்கே செல்வோமாக. ஏனெனில் இப்போரில் அவன் {பகதத்தன்} பாதுகாக்கப்படாவிட்டால், விரைவில் அவன் தன் உயிரை விட்டுவிடுவான். பெரும் சக்தி கொண்ட வீரர்களே, நான் சொல்வது போல இப்போது நீங்கள் கேளுங்கள். பாவமற்றவர்களே, தாமதிக்காதீர்கள். கடுமையான அந்த மோதல் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உக்கிரமடைகிறது. பெரும் வீரம்படைத்தவனும், உயர் பிறப்பைக் கொண்டவனுமான அந்தப் படைத்தளபதி {பகதத்தன்} நமக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவனாவான். மங்காப் புகழ் கொண்ட வீரர்களே, நம்மால் அவன் {பகதத்தன்} பாதுகாக்கப்பட வேண்டியவனாவான்” என்றார் {பீஷ்மர்}.

பீஷ்மரின் இவ்வார்த்தைகளைக் கேட்டவர்களும், பரத்வாஜமகனின் {துரோணரின்} தலைமையிலானவர்களுமான மன்னர்கள் அனைவரும் பகதத்தனை மீட்க விரும்பி, அந்தப் பிராக்ஜோதிஷர்கள் ஆட்சியாளன் {பகதத்தன்} இருக்கும் இடத்திற்குப் பெரும் வேகத்துடன் சென்றனர். எதிரி முன்னேறுவதைக் கண்டவர்களும், யுதிஷ்டிரனின் தலைமையிலானவர்களுமான பாஞ்சாலர்களும், பாண்டவர்கள் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார்கள். பெரும் ஆற்றல் கொண்ட அந்த ராட்சசர்களின் இளவரசன் {கடோத்கசன்}, முன்னேறி வரும் (எதிரியின்) அந்தப் படைப்பிரிவைக் கண்டு, இடியைப் போன்று ஆழமாக உரக்க கர்ஜித்தான்.

அவனது {கடோத்கஜனின்} முழக்கத்தைக் கேட்டும், போரிடும் யானைகளையும் கண்டும், சந்தனுவின் மகனான பீஷ்மர், மீண்டும் பரத்வாஜரின் மகனிடம் {துரோணரிடம்}, “அந்தத் தீய ஆன்மா கொண்ட ஹிடிம்பையின் மகனிடம் {கடோத்கசனிடம்} போரிட (இன்று) நான் விரும்பவில்லை. பெரும் பலமும் சக்தியும் கொண்ட அவன் {கடோத்கசன்}, தற்போது நன்கு ஆதரிக்கப்பட்டிருக்கிறான். வஜ்ரதாங்கியாலும் {இந்திரனாலும்} கூட இப்போது அவனை {கடோத்கசனை} வீழ்த்த முடியாது. இலக்கின் துல்லியத்திலும், தாக்குவதிலும் அவன் சிறந்தவன். நம்மைப் பொறுத்தவரை, (இன்று) நமது விலங்குகள் களைப்படைந்திருக்கின்றன. பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டவர்களால் நாமும் பெரிதும் சிதைவடைந்திருக்கிறோம். வெற்றிப் பெற்றிருக்கும் பாண்டவர்களுடன் புதிய மோதலை நான் விரும்பவில்லை. எனவே, இன்றைக்கு நமது படையைத் திரும்ப அழைப்பது அறிவிக்கப்படட்டும். நாளை நாம் எதிரியுடன் போரிடலாம்” என்றார் {பீஷ்மர்}.

பாட்டனின் {பீஷ்மரின்} வார்த்தைகளைக் கேட்டவர்களும், கடோத்கசன் மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்டவர்களுமான கௌரவர்கள், இரவின் தொடக்கத்தை ஒரு போலிக் காரணமாகக் கொண்டு, பாட்டன் {பீஷ்மர்} சொன்னதை மகிழ்ச்சியுடன் செய்தனர்.

கௌரவர்கள் பின்வாங்கியதும், வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பாண்டவர்கள், சங்குகள் மற்றும் குழல்களின் இசையுடன் கலந்து சிங்க முழக்கங்களிட்டனர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இப்படியே குருக்கள் மற்றும் கடோத்கசனைத் தலைமையாகக் கொண்ட பாண்டவர்களுக்கும் இடையிலான அந்த நாளின் {4ஆம் நாளின்} போர் நடந்தது.

பாண்டவர்களால் வீழ்த்தப்பட்ட கௌரவர்கள் நாணிக் குறுகி, இரவு வந்ததும் தங்கள் கூடங்களுக்குச் சென்றனர். வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டுவின் மகன்கள், கணைகளால் சிதைந்த தங்கள் உடல்களுடன், போரின் விளைவால் நிறைந்து {மகிழ்ந்து}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமசேனன் மற்றும் கடோத்கசனைத் தங்கள் தலைமையில் கொண்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கள் கொட்டகையை நோக்கிச் சென்றனர். மகிழ்ச்சியால் நிறைந்த அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வீரர்களை {பீமனையும், கடோத்கசனையும்} கொண்டாடினார்கள். தூரிய இசையுடன் கலந்து பல்வேறு விதமான முழக்கங்களை இட்டனர். அந்த உயர் ஆன்ம வீரர்களின் முழக்கம் பூமியையே நடுங்கச் செய்து, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களின் இதயங்களையும் கலங்கடித்தது. இரவு வந்ததும், இப்படி எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவர்கள் தங்கள் பாசறைகளை நோக்கிச் சென்றனர்.

தன் சகோதரர்களின் மரணத்தால் உற்சாகமிழந்த மன்னன் துரியோதனன், துயர் மற்றும் கண்ணீரையும் மேலிட்ட சிந்தனையில் சில மணிநேரத்தைக் கழித்தான். பிறகு, (படை அறிவியலின்) விதிகளின் படி தன் பாசறைக்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்த அவன் {துரியோதனன்}, தன் தம்பிகளின் {தம்பிகளின் மரணத்தின்} நிமித்தமான சோகத்தினால் பீடிக்கப்பட்டும், துயரால் எரிக்கப்பட்டும், தியானத்தில் {ஆலோசனையில்} பல மணி நேரத்தைக் கழிக்கத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.

நான்காம் நாள் போர் முற்றிற்று 

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ  பீஷ்ம பர்வம்-ஸ்ரீ பீஷ்மவத பர்வம்-இரண்டாம் நாள் போர்-

October 13, 2025

கிரௌஞ்ச வியூகம்! – பீஷ்ம பர்வம் பகுதி – 050-முதல் நாள் தோல்வி குறித்து யுதிஷ்டிரன் கவலைப் பட்டு கிருஷ்ணனிடம் செல்வது; அர்ஜுனனின் அக்கறையின்மை குறித்து யுதிஷ்டிரன் கிருஷ்ணனிடம் வருந்துவது; கிருஷ்ணன் யுதிஷ்டிரனுக்கு ஆறுதலைச் சொல்வது; யுதிஷ்டிரன் திருஷ்டத்யும்னனிடம் கிரௌஞ்ச வியூகத்தை அமைக்கும்படி சொல்வது; திருஷ்டத்யும்னனும் அவ்வாறே அமைப்பது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, முதல் நாளில் துருப்புகள் திரும்பப் பெறப்பட்டு, போரில் பீஷ்மரின் கோபத்தால் {கோபத்தைக் கண்டு} துரியோதனன் மகிழ்ச்சி கொண்ட போது, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தனது தம்பிகள் அனைவருடனும் மற்றும் (தனது தரப்பின்) மன்னர்கள் அனைவருடனும் சேர்ந்து ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்} சென்றான்.

பீஷ்மரின் ஆற்றலைக் கண்டும், தனது தோல்வியை நினைத்தும் பெரும் துக்கத்தில் நிறைந்த அவன் {யுதிஷ்டிரன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த விருஷ்ணி குலக்கொழுந்திடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! கிருஷ்ணா, வலிமைமிக்க வில்லாளியான பீஷ்மரின் பயங்கர ஆற்றலைப் பார். காய்ந்த புல்லை {வைக்கோலை} எரிக்கும் நெருப்பைப் போல, அவர் {பீஷ்மர்} எனது துருப்புகளை எரிக்கிறார். தெளிந்த நெய்யால் ஊட்டப்படும் நெருப்பைப் போல எனது துருப்புகளை நக்கிக் கொண்டிருக்கும் அந்த உயர் ஆன்ம வீரரை {பீஷ்மரை} நம்மால் காணக்கூட முடியுமா?

வில் தரித்தவரும், மனிதர்களில் புலியுமான அந்த வலிமைமிக்க வீரரை {பீஷ்மரைக்} கண்டு, கணைகளால் பீடிக்கப்பட்டு, எனது துருப்புகள் ஓடுகின்றன. சினம் கொண்ட யமனோ, வஜ்ரம் தரித்தவனோ {இந்திரனோ}, கையில் வருண பாசத்தைக் கொண்டவனோ {வருணனோ}, கதாயுதத்துடன் கூடிய குபேரனோ கூடப் போரில் வீழ்த்தப்படலாம், ஆனால், வலிமைமிக்கத் தேர்வீரரும், பெரும் சக்தி படைத்தவருமான பீஷ்மரை வீழ்த்துவது இயலாது. இப்படிப்பட்ட நிலையில், பீஷ்மர் எனும் அடியற்ற கடலில் (என்னைக் காக்க) ஒரு படகில்லாமல் நான் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்.

ஓ! கேசவா {கிருஷ்ணா}, எனது புரிதலில் உள்ள பலவீனத்தின் விளைவாக, (போரில் எதிரியாகப்) பீஷ்மரை அடைந்த நான், ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, காட்டுக்குச் செல்வேன். பூமியின் தலைவர்களான இவர்களை {பாண்டவர்களைப்}, பீஷ்மர் என்ற உருவத்தில் உள்ள மரணத்திற்கு {காலனுக்கு} அளிப்பதைவிட நான் அங்கே {காட்டில்} வாழ்வதே விரும்பத்தக்கது.

வலிமைமிக்க ஆயுதங்களை அறிந்த பீஷ்மர், ஓ! கிருஷ்ணா, எனது படையை அழித்துவிடுவார். சுடர்விடும் நெருப்பில், தங்கள் சொந்த அழிவுக்காக விழும் பூச்சிகளைப் போல, எனது படையைச் சேர்ந்த போராளிகளும் விழுவார்கள்.

ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, நாட்டுக்காக ஆற்றலை வெளிப்படுத்துவதில், நான் அழிவை நோக்கியே இட்டுச் செல்லப்படுகிறேன். வீரர்களான எனது தம்பிகள், தங்கள் அண்ணனின் மேல் கொண்ட அன்பினால், அரசுரிமையையும், மகிழ்ச்சியையும் இழந்து, எனக்காகக் கணைகளால் பீடிக்கப்பட்டு வலியோடு இருக்கின்றனர். உயிரை மிக உயர்வாக நாம் கருதுகிறோம். ஏனெனில், இத்தகு சூழ்நிலையில் உயிர் என்பது (தியாகம் செய்ய முடியாத அளவுக்கு) விலைமதிப்பில்லாததாகும்.

எஞ்சிய எனது நாட்களில் நான் கடுந்தவங்களைப் பயில்வேன். ஓ! கேசவா {கிருஷ்ணா}, இந்த எனது நண்பர்கள் கொல்லப்படுவதற்கு நான் காரணமாக மாட்டேன். வலிமைமிக்கவரான பீஷ்மர், அடிப்பவர்களின் முதன்மையான எனது தேர்வீரர்கள் பல்லாயிரம் பேரை எதிர்த்து, தனது தெய்வீக ஆயுதத்துடன் இடைவிடாமல் {களத்தில்} நிற்கிறார். ஓ! மாதவா {கிருஷ்ணா}, எதைச் செய்தால், அஃது எனக்கு நன்மையைச் செய்யும் என்பதைத் தாமதிக்காமல் சொல்வாயாக.

அர்ஜுனனைப் பொறுத்தவரை, அக்கறையில்லாத ஒரு பார்வையாளனாகவே நான் அவனைக் காண்கிறேன். பெரும் வலிமை கொண்ட இந்தப் பீமன் மட்டுமே, க்ஷத்திரியக் கடமைகளை நினைவில் கொண்டு, தனது கரங்களின் ஆற்றலை வெளிப்படுத்தி, தனது சக்தியை முழுமையாகப் பயன்படுத்துகிறான். வீரர்களைக் கொல்லும் தனது கதாயுதத்தைக் கொண்டு, தனது சக்தியை முழுமையாகப் பயன்படுத்திக் காலாட்படை வீரர்கள், குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகள் ஆகியவற்றுடன் மோதி மிகக் கடினமான சாதனைகளை அடைகிறான். எனினும், ஓ! ஐயா {கிருஷ்ணா}, நூறுவருடங்கள் நன்கு போரிட்டாலும் எதிரிப் படையை அழிப்பதற்கு இவனால் {பீமனால்} ஆகாது.

(நமக்கு மத்தியில்) இந்த உனது நண்பன் (அர்ஜுனன்) மட்டுமே (வலிமைமிக்க) ஆயுதங்களை அறிந்தவனாவான். எனினும், பீஷ்மராலும், உயர் ஆன்ம துரோணராலும் நாம் எரிக்கப்படுவதைக் கண்டும், அக்கறையே இல்லாமல் நம்மைப் பார்க்கிறான். பீஷ்மர் மற்றும் உயர்ஆன்ம துரோணரின் தெய்வீக ஆயுதங்கள் தடையில்லாமல் பயன்படுத்தப்பட்டு க்ஷத்திரியர்கள் அனைவரையும் எரித்துக் கொண்டிருக்கின்றன. ஓ! கிருஷ்ணா, கோபம் தூண்டப்பட்ட பீஷ்மரின் ஆற்றலும், (அவரது தரப்பில்) இருக்கும் மன்னர்களின் துணையும், ஐயமில்லாமல் நம்மை நிர்மூலமாக்கிவிடும். ஓ! யோகத்தின் தலைவா {கிருஷ்ணா}, காட்டுத்தீயைத் தணிக்கும் மழைநிறைந்த மேகங்களைப் போலப் பீஷ்மருக்கு மரணத்தை எவன் அளிப்பானோ, அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை, அந்தப் பெரும் வில்லாளியை {அர்ஜுனனை} நீ பார்ப்பாயாக. ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, (பிறகு) உனது கருணையின் மூலம், எதிரிகள் கொல்லப்பட்டு பாண்டுவின் மகன்கள் தங்கள் நாட்டை மீட்டு, தங்கள் சொந்தங்களுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள்” என்றான் {யுதிஷ்டிரன்}.

இதைச் சொன்ன உயர் ஆன்ம பிருதையின் மகன் {குந்தியின் மகன் யுதிஷ்டிரன்}, துன்பத்தால் பீடிக்கப்பட்ட இதயத்துடனும், மனம் ஒடுக்கப்பட்டும், சிந்திக்கும் மனநிலையோடு நீண்ட நேரம் அமைதியாக இருந்தான்.

துன்பத்தால் பீடிக்கப்பட்டு, கவலையால் உணர்வுகளை இழந்த அந்தப் பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனைக்} கண்ட கோவிந்தன் {கிருஷ்ணன்}, பாண்டவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியூட்டும்படி, “ஓ! பாரதர்களின் தலைவரே {யுதிஷ்டிரரே}, வருந்தாதீர். உமது தம்பிகள் அனைவரும் வீரர்களாகவும், உலகப் புகழ்பெற்ற வில்லாளிகளாகவும் இருக்கும்போது வருந்துவது உமக்குத் தகாது. வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி, வயதால் மரியாதைக்குரிய இருவரான விராடர் மற்றும் துருபதர், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன் ஆகியோரும் {கிருஷ்ணனான} நானும் உமக்கு நன்மையைச் செய்வதில் ஈடுபட்டிருக்கிறோம். ஓ! மன்னர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, (தங்கள்) துருப்புகளுடன் கூடிய இந்த ஏகாதிபதிகள் அனைவரும் உமது உதவியை வேண்டியும், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே} உமக்கு அர்ப்பணிப்புடனும் இருக்கின்றனர். உமது படையின் தலைவனும், பிருஷத குலத்தின் வலிமைமிக்கத் தேர்வீரனுமான இந்தத் திருஷ்டத்யும்னனும், நிச்சயமாகப் பீஷ்மரைக் கொல்லப் போகிறவனான இந்தச் சிகண்டியும் உமது நன்மையையே எப்போதும் வேண்டி, உமக்கு ஏற்புடையதையே செய்து வருகிறார்கள்” என்றான் {கிருஷ்ணன்}.

இந்த வார்த்தைகளைக் கேட்ட மன்னன் (யுதிஷ்டிரன்), அந்தச் சபையில், வாசுதேவன் {கிருஷ்ணன்} கேட்டுக் கொண்டிருக்கையிலேயே, வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னனிடம், “ஓ! திருஷ்டத்யும்னா, நான் உன்னிடம் சொல்லும் வார்த்தைகளைக் குறித்துக் கொள். ஓ! பிருஷத குலத்தைச் சேர்ந்தவனே, நான் உதிர்க்கும் வார்த்தைகள் மீறப்படக்கூடாது. வாசுதேவனின் {கிருஷ்ணனின்} அங்கீகாரத்துடன், நீ எங்கள் படைகளின் தலைவனாக இருக்கிறாய். பழங்காலத்தில் தேவர்களின் படைக்குத் தலைவனாக {சேனாதிபதியாக} எப்போதும் இருந்த கார்த்திகேயனைப் {முருகனைப்} போல, ஓ! மனிதர்களில் காளையே {திருஷ்டத்யும்னா}, நீயும் பாண்டவப் படைக்குத் தலைவனாக இருக்கிறாய்.

ஓ! மனிதர்களில் புலியே {திருஷ்டத்யும்னா}, உனது ஆற்றலை வெளிப்படுத்திக் கௌரவர்களைக் கொல்வாயாக. ஓ! ஐயா {திருஷ்டத்யும்னா}, நானும், பீமனும், கிருஷ்ணனும், மாத்ரியின் மகன்களும், கவசம் பூண்ட திரௌபதியின் மகன்களும் [1] மற்றும் பிற மன்னர்களில் முதன்மையானவர்களும், ஓ! மனிதர்களில் காளையே {திருஷ்டத்யும்னா} உன்னைப் பின்பற்றுவோம்” என்றான் {யுதிஷ்டிரன்}.

பிறகு, (கேட்பவர்களை) மகிழ்விக்கும் வண்ணம் திருஷ்டத்யும்னன் {யுதிஷ்டிரனிடம்}, “பழங்காலத்தில் சுயம்புவால் விதிக்கப்பட்டது போலவே, ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரரே}, நானே துரோணரைக் கொல்பவனாவேன். இப்போதோ இந்தப் போரில் பீஷ்மர், துரோணர், கிருபர், சல்லியன், ஜெயத்ரதன் மற்றும் (குரு தரப்பில் இருக்கும்) செருக்கு நிறைந்த ஏகாதிபதிகள் அனைவருடனும் நான் போரிடுவேன்” என்றான் {திருஷ்டத்யும்னன்}.

இளவரசர்களில் முதன்மையானவனும், எதிரிகளைக் கொல்பவனுமான பிருஷதனின் மகன் {திருஷ்டத்யும்னன்} இதைத் துணிச்சலாகச் சொன்ன போது, பெரும் சக்தி கொண்டவர்களும், போரில் தோற்கடிக்கப்பட முடியாதவர்களுமான பாண்டவ வீரர்கள் பேரொலியுடன் ஆரவாரம் செய்தனர். பிறகு, பிருதையின் {குந்தியின்} மகனான யுதிஷ்டிரன், தனது படைத்தலைவனான பிருஷதன் மகனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} (இவ்வார்த்தைகளால்), “எதிரிகள் அனைவரையும் அழிக்கவல்லதும், பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில் பிருஹஸ்பதியால் இந்திரனுக்குச் சொல்லப்பட்டதும், பகையணியின் படைப்பிரிவுகளை அழிக்கவல்லதுமான ஓர் அணிவகுப்பு {வியூகம்} உண்டு. கிரௌஞ்சருமா {Krauncharuma – கொக்கு போன்ற வடிவம் கொண்ட வியூகம்} என்ற பெயரில் அறியப்பட்ட அந்த அணிவகுப்பை {வியூகத்தை} நீ அமைப்பாயாக. இதற்கு முன்னால் காணப்படாத அதை {கிரௌஞ்ச வியூகத்தை}, குருக்களுடன் சேர்ந்து பிற மன்னர்களும் காணட்டும்”, என்றான் {யுதிஷ்டிரன்}.

[2] 

விஷ்ணுவால் சொல்லப்பட்ட வஜ்ரதாங்கியைப் போல {இந்திரனைப்போல} மனிதர்களில் தேவனால் {யுதிஷ்டிரனால்} சொல்லப்பட்ட அவன் {திருஷ்டத்யும்னன்}, காலை விடிந்ததும், முழுப் படையின் முன்னணியில் தனஞ்சயனை {அர்ஜுனனை} நிறுத்தினான். இந்திரனின் கட்டளையின் பேரில் தேவதச்சனால் செய்யப்பட்ட தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கொடி, வானத்தில் அசைந்து கொண்டிருந்த போது, அஃது அற்புதமான அழகுடன் திகழ்ந்தது. இந்திரவில்லின் {வானவில்லின்} நிறங்களை ஒத்த நிறங்களைக் கொண்ட கொடிகள், விண்ணதிகாரிகளை {பறவைகளைப்} போலப் பறந்து கொண்டிருந்தன. வானத்தில் பறக்கும் நீராவியால் ஆன மாளிகை போல அது தெரிந்தது. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தேர் சென்ற பாதையெங்கிலும் அது நடனமாடிக் கொண்டு செல்வதைப் போலவும் தெரிந்தது. அந்தக் காண்டீவந்தாங்கி {அர்ஜுனன்}, ரத்தினங்கள் நிறைந்த அதனுடனும் (கொடிக்கம்பத்துடனும்), அந்தக் கொடிக்கம்பம் காண்டீவந்தாங்கியுடனும் {அர்ஜுனனுடனும்} எனச் சுயம்புவுடன் சூரியனைப் போல (சூரியனுடன் சுயம்புவைப் போல என) [2] உயர்ந்த அலங்காரத்துடன் தெரிந்தது.பெரிய எண்ணிக்கையிலான துருப்புகளால் சூழப்பட்ட மன்னன் துருபதன் (அந்த அணிவகுப்பின் {வியூகத்தின்} தலைமையில் இருந்தான். குந்திபோஜன் மற்றும் சைப்யன் ஆகிய இரு மன்னர்களும் அதன் கண்களாகினர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தாசர்ணர்கள் {தாசேரகர்கள்}, பிரயகர்கள் {பிரபத்ரர்கள்}, அநூபகர்கள், கிராதர்கள் ஆகியோரின் ஆட்சியாளர்கள் அதன் {கிரௌஞ்ச வியூகத்தின்} கழுத்தில் நிறுத்தப்பட்டார்கள். ஓ! மன்னா, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, யுதிஷ்டிரன், படச்சரர்கள் {Patachcharas}, ஹூனர்கள் {Hunas}, பௌரவகர்கள் {Pauravakas}, நிஷாதர்கள் ஆகியோர் அதன் {அந்தக் கிரௌஞ்ச வியூகத்தின்} இரு சிறகுகள் ஆனார்கள். அதேபோல, பிசாசர்கள், குண்டவிஷர்கள் {குண்டீவிஷர்கள்}, மந்தகர்கள், லடாகர்கள், தங்கணர்கள், உத்திரர்கள் {உத்பசர்கள்}, சரபர்கள் {சபரர்கள்}, தும்புமர்கள், வத்சர்கள், நாகுலர்கள் ஆகியோரும் அப்படியே {கிரௌஞ்ச வியூகத்தின் சிறகுகள்} ஆனார்கள். நகுலனும் சகாதேவனும் தங்களை இடது சிறகில் நிறுத்திக் கொண்டார்கள் [3].அந்தச் சிறகுகள் இரண்டும் சந்திக்கும் இடத்தில், பத்தாயிரம் தேர்களும், தலையில் நூறாயிரமும் {ஒருலட்சமும்}, பின்புறத்தில் ஆயிரம் லட்சத்து இருபதாயிரமும் {ஓர் அர்ப்புத்ததிற்கு மேல் இருபதாயிரம்}, கழுத்தில் நூற்று எழுபதாயிரம் {ஒரு லட்சத்து எழுபதாயிரம்} தேர்களும் நிறுத்தப்பட்டன. சிறகுகளின் இணைப்புகள், சிறகுகள், சிறகுகளின் எல்லைகள் ஆகியவற்றில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுடர்விடும் மலைகளைப் போன்ற பெரும் உடல் படைத்த யானைகள் முன்னேறிக் கொண்டிருந்தன.

கேகயர்கள், காசி ஆட்சியாளன், முப்பதாயிரம் தேர்களுடன் கூடிய சேதிகளின் மன்னன் ஆகியோரின் துணையோடு விராடன் அதன் {அந்த வியூகத்தின்} பின்புறத்தைக் காத்தான் [4]. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்கள் வலிமைமிக்க அணிவகுப்பை {கிரௌஞ்ச வியூகத்தை} இப்படி வகுத்துக் கொண்ட பாண்டவர்கள் அனைவரும் கவசங்களைத் தரித்துக் கொண்டு சூரிய உதயத்தை எதிர்பார்த்துப் போருக்காகக் காத்திருந்தார்கள். சுதமானவையும், விலையுயர்ந்தவையுமான அவர்களது வெண்குடைகள் சூரியனைப் போலப் பிரகாசமாக அவர்களது தேர்களிலும், யானைகளிலும் ஒளிர்ந்து கொண்டிருந்தது”. {என்றான் சஞ்சயன்}

பாண்டவர்களின் கிரௌஞ்ச வியூகம் – பீஷ்ம பர்வம் பகுதி – 051-இரண்டாம் நாள் போர் துவங்குவதற்காகக் கௌரவர்களும் பாண்டவர்களும் செய்த ஏற்பாடுகள்; சங்கு முழக்கங்கள்; சிங்க முழக்கங்கள்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அளவிலா சக்தி கொண்ட பாண்டுவின் மகனால் {யுதிஷ்டிரனால்} அமைக்கப்பட்டதும், வலிமையானதும், பயங்கரமானதும், கிரௌஞ்சம் என்று அழைக்கப்பட்டதுமான அந்த அணிவகுப்பை {கிரௌஞ்ச வியூகத்தைக்} கண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஆசான் {துரோணர்}, கிருபர், சல்லியன், சோமதத்தனின் மகன் {பூரிஸ்வரவஸ்}, விகர்ணன், அஸ்வத்தாமன், துச்சாசனன் தலைமையிலான தனது தம்பிகள் மற்றும் {தன் தரப்பில்} போருக்காகத் திரண்டிருந்த எண்ணிலடங்கா வீரர்களை அணுகி, அவர்கள் அனைவரையும் மகிழ்விக்கும் வண்ணம் நேரத்திற்குத் தகுந்த வார்த்தைகளைச் சொன்னான். அவன் {துரியோதனன்}, “பல்வேறு வகைகளிலான ஆயுதங்களைத் தரித்திருக்கும் நீங்கள் அனைவரும் சாத்திரங்களை அறிந்தவர்களாக இருக்கிறீர்கள். வலிமைமிக்கத் தேர்வீரர்களே, நீங்கள் ஒவ்வொருவரும் பாண்டு மகன்களையும் அவர்களது துருப்புகளையும் தனியாகவே கொல்லத் தகுந்தவர்களாக இருக்கிறீர்கள். அப்படியிருக்கையில், ஒன்றாகத் திரண்டிருக்கும் நீங்கள் அனைவரும் சேர்ந்து எவ்வளவு அதிகம் செய்ய முடியும்? {என்பதை நினைத்துப் பாருங்கள்}.

எனவே, பீஷ்மரால் பாதுகாக்கப்படும் நமது படை அளவிட முடியாததாக இருக்கிறது. அதே வேளையில், பீமனால் பாதுகாக்கப்படும் அவர்களது {பாண்டவர்களின்} படை அளவிடக்கூடியதாகவே இருக்கிறது [1]. சம்ஸ்தானர்கள், சூரசேனர்கள், வேணிகர்கள் {வேத்ரிகர்கள்} [2], குகுரர்கள், ரேசகர்கள் {ஆரோசகர்கள்}, திரிகார்த்தர்கள், மத்ரகர்கள், யவனர்கள், சத்ருஞ்சயன், துச்சாசனன், அற்புத வீரனான விகர்ணன், நந்தன், உபநந்தகன், சித்திரசேனன், மணிபத்ரகர்கள் {பாரிபத்ரகர்கள்} ஆகியோர் தங்கள் (அவரவர்) துருப்புகளோடு பீஷ்மரைப் பாதுகாக்கட்டும்” என்றான் {துரியோதனன்}

பிறகு, பீஷ்மர், துரோணர், உமது மகன்கள் ஆகியோர், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பார்த்தர்களுடையதை {பாண்டவர்களின் வியூகத்தை} தாக்குப்பிடிக்கும் வண்ணம் வலிமைமிக்க ஓர் அணிவகுப்பை {வியூகத்தை} {??} வகுத்தார்கள். அதிக அளவிலான துருப்புகளால் சூழப்பட்ட பீஷ்மர், தேவர்களின் தலைவனைப் போலவே, ஒரு வலிமைமிக்கப் படைக்குத் தலைமை தாங்கி முன்னேறினார். பெரும் சக்தி கொண்டவரும், வலிமைமிக்க வில்லாளியுமான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குந்தலர்கள், தசார்ணர்கள், மகதர்கள் {மாகதர்கள்}, விதர்ப்பர்கள், மேலகர்கள் {மேகலர்கள்}, கர்ணர்கள், பிராவரணர்கள் {கர்ணப்பிராவரணர்கள்} ஆகியோரோடு அவரை {பீஷ்மரைப்} பின்தொடர்ந்தார். காந்தாரர்கள், சிந்துசௌவீரர்கள், சிபிக்கள், வசாதிகள், போர்க்களத்தின் ரத்தினமான பீஷ்மரைப் பின்தொடர்ந்தார்கள். தனது துருப்புகள் அனைத்துடனும் சேர்ந்த சகுனி பரத்வாஜரின் மகனைப் {துரோணரைப்} பாதுகாத்தான்.

தனது தம்பிகள் அனைவருடனும், அஸ்வாதகர்கள், விகர்ணர்கள், அம்பஷ்டர்கள், கோசலர்கள், தரதர்கள், சகர்கள் க்ஷுத்ரகர்கள், மாலவர்கள் ஆகியோருடனும் கூடிய மன்னன் துரியோதனன், பாண்டவப் படைக்கு எதிராக உற்சாகமாக முன்னேறினான். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பூரிஸ்ரவஸ், சலர், சல்லியன், பகதத்தன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோர் {பீஷ்மரின்} இடது பக்கத்தைப் பாதுகாத்தனர். சோமதத்தன், சுசர்மன், காம்போஜ ஆட்சியாளன் சுதக்ஷிணன், சதயு மற்றும் சுருதயு ஆகியோர் வலது பக்கத்தைப் பாதுகாத்தனர். அஸ்வத்தாமன், கிருபர், சத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோர் பெரும் பிரிவுகளிலான துருப்புகளுடன் படையின் பின்புறத்தில் நின்றனர். அவர்களுக்கும் பின்னால், கேதுமான், வசுதானன், காசி மன்னனின் பலமிக்க மகன் {அபிபூ} ஆகியோர் இருந்தனர்.

ஓ! பாரதரே, போருக்காக உற்சாகமாகக் காத்திருந்த உமது துருப்புகள் அனைத்தும் பெரும் மகிழ்ச்சியுடன் தங்கள் சங்குகளை ஊதி, சிங்க முழக்கம் செய்தார்கள். அந்தப் (போராளிகளின்) ஒலிகளைக் கேட்டு மகிழ்ச்சியால் நிறைந்தவரும், பெரும் ஆற்றலைக் கொண்டவரும் மரியாதைக்குரியவருமான குரு {கௌரவ} பாட்டன் {பீஷ்மர்}, சிங்க முழக்கம் முழங்கி தனது சங்கை எடுத்து ஊதினார். அதன்பேரில், பிறரும் தங்கள் சங்குகள், பேரிகைகள், பல விதங்களிலான காகளங்கள், ஆனகங்கள் ஆகியவற்றை முழங்கினார்கள். அந்த ஒலி ஆரவாரமிக்கப் பேரொலியாக இருந்தது.

வெண்குதிரைகள் பூட்டப்பட்ட பெருந்தேரில் நின்றிருந்த மாதவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும், தங்கத்தால் ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த தங்கள் அற்புத சங்குகளை முழங்கினார்கள். ரிஷிகேசன் {கிருஷ்ணன்} பாஞ்சஜன்யம் என்று அழைக்கப்பட்ட சங்கை ஊதினான். அர்ஜுனன் தேவதத்தையும், பயங்கரச் செயல்களைப் புரியும் விருகோதரன் {பீமன்}, பௌண்ட்ரத்தையும் முழங்கினார்கள். குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரன் அனந்தவிஜயம் என்ற அழைக்கப்பட்ட சங்கை ஊதினான். அதே வேளையில், நகுலனும் சகாதேவனும் சுகோஷம், மணிபுஷ்பகம் என்று அழைக்கப்பட்ட சங்குகளை எடுத்து முழங்கினார்கள் [3].

காசி ஆட்சியாளன் [4], சைப்யன், வலிமைமிக்கத் தேர்வீரனான சிகண்டி, திருஷ்டத்யும்னன், விராடன், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி, பெரும் வில்லாளியான பாஞ்சாலர்களின் மன்னன் {துருபதன்}, திரௌபதியின் ஐந்து மகன்கள் ஆகியோர் அவரவர் சங்குகள் எடுத்து ஊதி சிங்க முழக்கம் செய்தார்கள். அந்த வீரர்களால் எழுப்பப்பட்ட ஆரவாரமிக்கப் பேரொலி பூமியிலும் வானத்தில் உரக்க எதிரொலித்தது. இப்படியே, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியில் நிறைந்திருந்த குருக்களும் பாண்டவர்களும் மீண்டும் போரிட்டு ஒருவரை ஒருவரை அழிக்க விரைந்து முன்னேறினார்கள்.” {என்றான் சஞ்சயன்}.

பீஷ்மார்ஜுனப் போர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 052-போர்வீரர்களை உற்சாகப்படுத்திய துரியோதனன்; பீஷ்மர் செய்த பெரும்போர்; பாண்டவர்களின் படை சிதறி ஓடுவதைக் கண்ட அர்ஜுனன் பீஷ்மரை எதிர்த்து தானே செல்வது; பீஷ்மரின் துணைக்குக் கௌரவர்களில் சிலரும், அர்ஜுனனின் துணைக்குப் பாண்டவப் படையில் சிலரும் விரைந்தது; அர்ஜுனனுக்கும் பீஷ்மருக்கும் இடையில் நடைபெற்ற ஒப்பற போர்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “இப்படி எனது படைகளும், பகைவர்களின் படைகளும் போர்வியூகத்தை அமைத்துக் கொண்ட பின்னர், அடிப்பவர்களில் முதன்மையானவர்கள் {அவர்கள் அனைவரும்} எப்படித் தாக்கினார்கள்?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அனைத்துப் பிரிவுகளும் இப்படி அணிவகுக்கப்பட்ட பின்னர், கவசம் தரித்திருந்த ஒவ்வொரு போராளியும் தங்கள் அழகிய கொடிகளை உயர்த்திப் பிடித்த வண்ணம் {போருக்காகக்} காத்திருந்தனர். எல்லையற்ற கடலைப் போன்றிருந்த (குரு) படையைக் கண்ட உமது மகன் துரியோதனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, படைக்குள் இருந்தபடியே உமது தரப்பின் போராளிகள் அனைவரிடமும், “கவசம் தரித்த நீங்கள், போரிடத் தொடங்குவீராக” என்றான். உயர்த்தப்பட்ட கொடிகளுடன் கூடிய போராளிகள் அனைவரும், கொடூர எண்ணங்களை வளர்த்துக் கொண்டு, தங்கள் உயிர்களையே துச்சமாக மதித்து, பாண்டவர்களுக்கு எதிராக விரைந்தனர். அதன்பிறகு அங்கே நடைபெற்ற போர் கடுமையானதாகவும், மயிர் சிலிர்ப்பை ஏற்படுத்துவதாகவும் இருந்தது.

தேர்கள் மற்றும் யானைகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலந்தன. தேர்வீரர்களால் அடிக்கப்பட்டவையும், அழகிய இறகுகளும், கூரிய முனைகளும் கொண்டவையுமான பெரும் சக்தி படைத்த கணைகள் யானைகளின் மீதும் குதிரைகள் மீதும் பொழிந்தன. இப்படிப் போர் ஆரம்பித்த போது, மதிப்பிற்குரிய குரு பாட்டனும், பயங்கர ஆற்றல் கொண்டவரும் வலிய கரங்களைக் கொண்டவருமான பீஷ்மர், கவசம் தரித்து, தனது வில்லை எடுத்துக் கொண்டு, அவர்களை {கௌரவர்களை} அணுகி, சுபத்திரையின் வீர மகன் {அபிமன்யு}, வலிமைமிக்கத் தேர்வீரனான அர்ஜுனன், கேகயர்களின் ஆட்சியாளன், விராடன், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், சேதி மற்றும் மத்ஸ்ய வீரர்கள் ஆகியோர் மீது கணைமாரியைப் பொழிந்தார்.

(பாண்டவர்களின்) வலிமைமிக்க அந்த அணிவகுப்பு {வியூகம்}, அந்த வீரர் {பீஷ்மர்} போரிடத் தொடங்கியதும் நடுங்கத் தொடங்கியது. போராளிகள் அனைவருக்கும் இடையில் நடைபெற்ற போரானது பயங்கரமாக இருந்தது. குதிரைவீரர்கள், தேர்வீரர்கள் மற்றும் குதிரைகளில் முதன்மையானவை ஆகியன விரைவில் விழுந்தன. பாண்டவர்களின் தேர்ப்படைப் பிரிவுகள் சிதறி ஓடிப் போகத் தொடங்கின. பிறகு, மனிதர்களில் புலியான அர்ஜுனன், வலிமைமிக்கத் தேர்வீரரான பீஷ்மரைக் கண்டு, விருஷ்ணி குலத்தோனிடம் {கிருஷ்ணனிடம்} கோபத்துடன், “பாட்டன் {பீஷ்மர்} இருக்கும் இடத்திற்கு முன்னேறுவாயாக. ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, கோபம் தூண்டப்பட்ட இந்தப் பீஷ்மர், துரியோதனனின் நலனுக்காக எனது படையை அழித்துவிடுவார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இந்தத் துரோணர், கிருபர், சல்லியன், விகர்ணன் ஆகியோர் துரியோதனன் தலைமையிலான திருதராஷ்டிரர் மகன்களுடன் சேர்ந்து கொண்டும், உறுதிமிக்க இந்த வில்லாளி {பீஷ்மர்} தரும் பாதுகாப்பிலும், பாஞ்சாலர்களைப் படுகொலை செய்துவிடுவார்கள். எனவே, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, எனது துருப்புகளுக்காக நானே பீஷ்மரைக் கொல்வேன்” என்றான் {அர்ஜுனன்}.

அவனிடம் {அர்ஜுனனிடம்} வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, கவனமாக இருப்பாயாக. ஏனெனில், ஓ! வீரா {அர்ஜுனா}, பாட்டனின் {பீஷ்மரின்} தேரை நோக்கி உன்னை நான் விரைவாகக் கொண்டு செல்வேன்” என்றான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இதைச் சொன்ன சௌரி {கிருஷ்ணன்}, உலகத்தால் கொண்டாடப்படும் அந்தத் தேரை, பீஷ்மரின் தேருக்கு முன்பாக நிறுத்தினான். எண்ணிலடங்கா கொடிகள் அசைந்து கொண்டிருக்க, (வெள்ளை) நாரைக்கூட்டங்களைப் போன்ற அழகான குதிரைகள் வேகமாகச் செல்ல, கடுமுழக்கம் செய்யும் குரங்கைப் {குரங்கின் உருவத்தை} பொறித்த கொடி உயர்ந்திருக்க, சூரியப் பிரகாசத்துடனும், மேகங்களின் முழக்கத்தைப் போன்ற சடசடப்பொலியுடனும் கூடிய தனது பெரிய தேரில், கௌரவப் படைகளையும், சூரசேனர்களையும் கொன்றபடி சென்றவனும், நண்பர்களின் மகிழ்ச்சி அதிகரிப்பவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} அங்கே மோதலுக்கு விரைந்து வந்தான்.

(இப்படி) மிக வேகமாக மதங்கொண்ட யானையைப் போல விரைந்து வந்த அவன் {அர்ஜுனன்}, போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வீரமிக்கப் போராளிகளுக்கு (இப்படியே) அச்சமூட்டி, தனது கணைகளால் அவர்களை வீழ்த்தி, சைந்தவன் தலைமையிலான வீரர்களாலும், கிழக்குப் பகுதி {கிழக்கு நாடுகளின்} வீரர்கள், சௌவீரர்கள், கேகயர்கள் ஆகிய போராளிகளால் பாதுகாக்கப்பட்ட சந்தனுவின் மகன் பீஷ்மருடன் பெரும் வேகத்துடன் மோதினான். காண்டீவம் என்று அழைக்கப்படும் வில்லைத் தாங்குபவனை {அர்ஜுனனை} எதிர்க்க, குரு பாட்டனையும் {பீஷ்மரையும்}, தேர்வீரர்களான துரோணர் மற்றும் விகர்த்தனன் மகனையும் {கர்ணன்} தவிர வேறு யாரால் முடியும்?

பிறகு, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, கௌரவர்களின் பாட்டனான பீஷ்மர் அர்ஜுனனை எழுபத்தேழு {77} கணைகளால் {நாராசங்களால்} அடித்தார். துரோணர் இருபத்தைந்தாலும் {25}, கிருபர் ஐம்பதாலும் {50}, துரியோதனன் அறுபத்துநான்காலும் {64}, சல்லியன் ஒன்பது {9} கணைகளாலும் (அவனை {அர்ஜுனனை}) அடித்தனர். மனிதர்களில் புலியான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} அறுபது {60}, விகர்ணன் மூன்று {3}, சைந்தவன் ஒன்பது {9}, சகுனி ஐந்து {5} என அவனை {அர்ஜுனனை} அம்புகளால் அடித்தனர். மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அர்த்தயாணி {சல்லியன்}, [1] அந்தப் பாண்டுவின் மகனை அகன்ற தலை கொண்ட மூன்று {3} கணைகளால் {பல்லங்களால்} துளைத்தான். அனைத்துப் புறங்களில் இருந்தும் அவர்கள் அடித்த கூரிய கணைகள் துளைத்தபடியே இருந்தாலும், அந்தப் பெரும் வில்லாளி, அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவன் {அர்ஜுனன்}, (கணைகளால்) துளைக்கப்பட்ட ஒரு மலையைப் போல நடுங்காதிருந்தான்.

அதன் பேரில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கிரீடம் தரித்தவனான அளவிலா ஆன்மா கொண்டவன் {அர்ஜுனன்}, பீஷ்மரை இருபத்தைந்து {25} கணைகளாலும், கிருபரை ஒன்பது {9} கணைகளாலும், துரோணரை அறுபதாலும் {60}, ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டரரே}, விகர்ணனை மூன்றாலும் {3}, அர்த்தயாணியை {சல்லியனை} மூன்று {3} கணைகளாலும், மன்னனை {துரியோதனனை} ஐந்து {5} கணைகளாலும் அடித்தான்.

அதன்பிறகு, சாத்யகி, விராடன், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், திரௌபதியின் மகன்கள், அபிமன்யு ஆகிய அனைவரும் (அவனுக்கு உதவும் பொருட்டு) அவனைச் {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டார்கள். சோமகர்களால் ஆதரிக்கப்பட்ட பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, கங்கை மைந்தரின் {பீஷ்மரின்} நலம் நாடுவதிலேயே ஈடுபட்டுக் கொண்டிருந்த பெரும் வில்லாளியான துரோணரை நோக்கி முன்னேறினான்.

பிறகு, தேர்வீரர்களில் முதன்மையான பீஷ்மர், எட்டு {8} கூரிய கணைகளால் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} விரைந்து துளைத்தார். இதனால் உமது தரப்புப் போராளிகள் மனம் நிறைந்தனர். தேர்வீரர்களில் சிங்கங்களான அவர்களின் முழக்கங்களைக் கேட்டவனும், பெரும் ஆற்றல் கொண்டவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தேர்வீரர்களில் சிங்கங்களான அவர்களுக்கு மத்தியில் உற்சாகமாக நுழைந்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களை (தொடர்ந்து) குறி வைத்து, தனது வில்லைக் கொண்டு விளையாடினான்.

அப்போது, மனிதர்களின் ஆட்சியாளனான மன்னன் துரியோதனன், போரில் பிருதையின் மகனால் {குந்தியின் மகன் அர்ஜுனனால்} பீடிக்கப்படும் தனது துருப்புகளைக் கண்டு பீஷ்மரிடம், “ஓ! கங்கையின் மைந்தரே {பீஷ்மரே}, கிருஷ்ணனோடு கூடியவனும், பாண்டுவின் மகனுமான வலிமைமிக்க இவன் {அர்ஜுனன்}, நீரும், தேர்வீரர்களில் முதன்மையான துரோணரும் உயிரோடிருக்கையிலேயே, நமது துருப்புகள் அனைத்தையும் வீழ்த்தி, நமது வேர்களை வெட்டிக் கொண்டிருக்கிறான். ஓ! ஏகாதிபதி {பீஷ்மரே}, கர்ணன் எனது நலன் விரும்பியாக இருப்பினும், உம் நிமித்தமாகவே, பிருதையின் {குந்தியின்} மகன்களுடன் போரிடாமல் ஆயுதங்களை ஒதுக்கி வைத்தான். எனவே, ஓ! கங்கையின் மைந்தரே {பீஷ்மரே}, பல்குனனைக் {அர்ஜுனனைக்} கொல்ல என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வீராக” என்றான் {துரியோதனன்}.

இப்பபடிச் சொல்லப்பட்ட உமது தந்தை தேவ விரதர் {பீஷ்மர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, “க்ஷத்திரிய பழக்கவழக்கத்திற்கு {அறத்திற்கு} ஐயோ” என்று சொல்லி பார்த்தனின் {அர்ஜுனனின்} தேரை நோக்கி முன்னேறினார். மேலும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வெண்குதிரைகள் பூட்டப்பட்ட தங்கள் தேரில் (போருக்காக) அந்த இரு வீரர்களும் நிற்பதைக் கண்ட மன்னர்கள் அனைவரும் சிங்க முழக்கம் செய்த படி, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தங்கள் சங்குகளை முழக்கினர்.

துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, துரியோதனன், உமது மகன் விகர்ணன் ஆகியோர், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே} அந்த மோதலில் {பீஷ்மருக்குத் துணை நிற்க} பீஷ்மரைச் சூழ்ந்து கொண்டு போருக்காக நின்றனர். அதே போலப் பாண்டவர்கள் அனைவரும் தனஞ்சயனை {அர்ஜுனனை} சூழ்ந்து கொண்டு கடும் மோதலுக்கு நின்றனர். போரும் ஆரம்பித்தது. அந்த மோதலில் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, பார்த்தனை {அர்ஜுனனை} ஒன்பது {9} கணைகளால் துளைத்தார். அர்ஜுனனும் பதிலுக்குப் பத்து {10} கணைகளால் அவரது உயிர்நிலைகளில் துளைத்தான். பிறகு, பாண்டுவின் மகனான அர்ஜுனன், நன்கு அடிக்கப்பட்ட ஓர் ஆயிரம் {1000} கணைகளால் பீஷ்மரை அனைத்துப் புறங்களிலும் மூழ்கடித்தான். எனினும், பார்த்தனின் {அர்ஜுனனின்} அந்த அம்புகளாலான வலையை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சந்தனுவின் மகனான பீஷ்மர் (தனக்குச் சொந்தமான) மற்றொரு அம்புவலையால் கலங்கடித்தார். போரில் மகிழ்வு கொண்டு, மனம் நிறைந்த அந்த இருவரும் {பீஷ்மரும்-அர்ஜுனனும்}, ஒருவரின் மேல் மற்றவர் ஆதிக்கம் பெற முடியாமல், சாதனைகளுக்கு எதிரான சாதனைகளை ஒருவருக்கொருவர் செய்ய விரும்பினர். பீஷ்மரின் வில்லில் இருந்து அடிக்கப்பட்ட தொடர்ச்சியான அம்புகள், அர்ஜுனனின் கணைகளால் விலக்கப்பட்டன. அதே போல அர்ஜுனனால் அடிக்கப்பட்ட கணைகள் அனைத்தையும், தனது கணைகளால் தரையில் வீழ்த்தினார் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}.

கூரிய முனைகள் கொண்ட இருபத்தைந்து {25} கணைகளால் பீஷ்மரை அர்ஜுனன் துளைத்தான். அந்த மோதலில் பீஷ்மரும் பார்த்தனை {அர்ஜுனனை} ஒன்பது {9} கணைகளால் துளைத்தார். வலிமைமிக்க வீரர்களும், எதிரிகளைத் தண்டிப்பவர்களுமான அவர்கள் இருவரும் ஒருவரின் குதிரைகளை மற்றவர் துளைத்தனர். அவர்களின் கணைகளும், தேர்களின் சக்கரங்களும் கூட விளையாடத் தொடங்கின.

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அடிப்பவர்களில் முதன்மையான பீஷ்மர், மூன்று {3} கணைகளால் வாசுதேவனை {கிருஷ்ணனை} நடு மார்பில் அடித்தார். பீஷ்மரின் வில்லில் இருந்து அடிக்கப்பட்ட அந்தக் கணைகளால் தாக்கப்பட்ட மதுசூதனன் {கிருஷ்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} மலர்ந்திருக்கும் பலாச {கின்சுக} மரத்தைப் போலக் காணப்பட்டான். மாதவனைக் {கிருஷ்ணனைக்} கண்டு கோபமுற்ற அர்ஜுனன், அந்த மோதலில் கங்கை மைந்தருடைய {பீஷ்மரின்} தேரோட்டியை மூன்று {3} கணைகளால் துளைத்தான். அந்த இருவீரர்களும், அந்தப் போரில் ஒருவரை ஒருவர் குறிபார்க்க எண்ணி, அதில் வெல்ல முடியாதவர்களாக இருந்தனர். அந்த இரண்டு வீரர்களின் தேரோட்டிகளின் திறமை, கரங்களின் வேகம் ஆகியவற்றின் விளைவாக, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முன்னேறுவதிலும், பின்வாங்குவதிலும், அழகிய வளையங்களாகச் சுழல்வதிலும் தங்கள் தேர்களை ஈடுபடுத்தித் தங்கள் திறமைகளை அவர்கள் வெளிக்காட்டினார்கள்.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தாக்குவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக்கொண்டே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} தாங்கள் எதிர்பார்த்ததை அடைவதற்காக அவர்கள் இருவரும் அடிக்கடி தங்கள் நிலைகளை மாற்றிக் கொண்டே இருந்தனர். இரு வீரர்களும் சிங்க முழக்கங்களுடன் சங்குகளையும் ஊதினர். அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களுடைய வில்லின் நாணொலிகளும் ஒன்று போலவே இருந்தன. சங்கு முழக்கம், தேர்களின் சடசடப்பொலி ஆகியவற்றால் திடீரெனப் பூமி பிளந்தது {பூமியில் விரிசல் விட்டது}. இப்படியே நடுங்கத் தொடங்கிய அது {பூமி}, பாதாள ஒலிகளையும் உண்டாக்கத் தொடங்கியது. ஓ! பாரதக் குலத்தின் காளையே, அவர்கள் இருவருக்குள்ளும் எந்த ஏற்றத்தாழ்வையும் யாராலும் காண முடியவில்லை. பெரும் வலிமையும், போரில் பெரும் துணிவும் கொண்ட அவ்விருவரும் ஒருவருக்கொருவர் இணையானவர்களாகவே இருந்தனர்.

பீஷ்மரின் கொடியைக் கொண்டு (கண்டு) மட்டுமே, (உதவி செய்ய) அவரைக் கௌரவர்களால் அணுக முடிந்தது. அதே போல, பாண்டவப் படையினரும் (உதவி செய்ய) பிருதையின் மகனை {குந்தியின் மகன் அர்ஜுனனை} அணுக அவனது கொடியே வழிகாட்டியது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்களில் முதன்மையானவர்களான அவ்விருவரும் தங்கள் ஆற்றல்களை இப்படி வெளிக்காட்டிய போது, போர்க்களத்தில் இருந்த உயிரினங்கள் அனைத்தும் ஆச்சரியத்தால் நிறைந்தன. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, யாராலும் அவர்களுக்குள் எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை. அறநெறிகளை நோற்கும் மனிதர்களால் அவர்களிடம் எந்த அற மீறலையும் காண முடியவில்லை. கணை மேகங்களின் விளைவால் (சில நேரங்களில்) அவ்விருவரும் யார் கண்ணுக்கும் தெரியாதவாறு மறைந்தார்கள். விரைவில் அவ்விருவரும் மீண்டும் தெரியவும் ஆரம்பித்தனர்.

அவர்களது ஆற்றல்களைக் கண்ட கந்தர்வர்கள், சாரணர்கள் மற்றும் பெரும் முனிவர்களுடன் கூடிய தேவர்கள் தங்களுக்குள், “இந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் கோபத்தால் தூண்டப்பட்டிருக்கும்போது, தேவர்கள், அசுரர்கள் மற்றும் கந்தர்வர்களுடன் கூடிய உலகங்கள் அனைத்தினாலும் கூட, {இந்தத் தேர்வீரர்களைப்} போரில் வீழ்த்த முடியாது. பெரும் ஆச்சரியங்கள் நிறைந்த இந்தப் போர், உலகங்கள் அனைத்திலும் ஆச்சரியம் நிறைந்ததாகவே உண்மையில் இருக்கும், இது போன்ற ஒரு போர் இனி எப்போதும் நடைபெறாது. பெரும் புத்திக்கூர்மை கொண்டவனும், குதிரைகள், தேர் மற்றும் வில்லைக் கொண்டவனும், போரில் கணைமாரி பொழிபவனுமான பிருதையின் மகனால் {அர்ஜுனனால்} இந்த மோதலில் பீஷ்மரை வீழ்த்த முடியாது. தேவர்களாலேயே போரில் வீழ்த்தப்பட முடியாத பெரும் வில்லாளியான பாண்டுவின் மகனையும் {அர்ஜுனனையும்} இந்த மோதலில் பீஷ்மரால் வீழ்த்த முடியாது. இந்த உலகம் எவ்வளவு காலம் நீடித்திருக்குமோ, அவ்வளவு காலம் இந்தப் போரும் தொடரவே செய்யும்” என்றனர் {தேவர்கள்}.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தில் போரிட்டுக் கொண்டிருந்த கங்கையின் மைந்தரையும் {பீஷ்மரையும்}, அர்ஜுனனையும் புகழ்ந்த {தேவர்களின்} இவ்வார்த்தைகளை நாங்களும் கேட்டோம். அவ்விருவரும் போரில் தங்கள் ஆற்றலை இப்படி வெளிப்படுத்திக் கொண்டிருந்தபோது, உமது தரப்பின் வீரர்களும், பாண்டவர்கள் தரப்பு வீரர்களும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} கூரிய குறுவாள்களையும், பளபளக்கும் போர்க்கோடரிகளையும், எண்ணிலடங்கா கணைகளையும், பல்வேறு விதமான ஆயுதங்களையும் கொண்டு ஒருவரை ஒருவர் கொன்றனர். இரு படைகளின் துணிச்சல்மிகுப் போராளிகளும் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டும், அடித்துக் கொண்டும் நடந்த அந்தக் கொலைகார மோதல் இப்படி நீடித்துக் கொண்டே இருந்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணருக்கும், பாஞ்சாலர்களின் இளவரசனுக்கும் {திருஷ்டத்யும்னனுக்கும்} இடையில் நடைபெற்ற மோதலும் பயங்கரமாகவே இருந்தது”. {என்றான் சஞ்சயன்}.

துரோணர் திருஷ்டத்யும்னன் மோதல்! – பீஷ்ம பர்வம் பகுதி – 053-துரோணருக்கும் திருஷ்டத்யும்னுக்கும் இடையில் நடைபெற்ற போர்; இடையில் குறுக்கிட்ட பீமன்; பீமனுக்கு எதிராகக் கலிங்கர்களைத் தூண்டிய துரியோதனன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, சிறந்த முறையில் போரில் முயற்சி செய்பவர்களான பெரும் வில்லாளி துரோணர், பிருஷத குலத்தின் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்} ஆகிய இருவரும் தங்களுக்குள் எப்படிப் போரிட்டுக் கொண்டனர்? சந்தனுவின் மகனான பீஷ்மரால் (கூட) போரில் பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்} தப்ப இயலவில்லை எனும்போது, ஓ! சஞ்சயா, முயற்சியை விட விதி மேன்மையானது என்றே நான் கருதுகிறேன். உண்மையில், கோபத்தால் தூண்டப்பட்டிருக்கும் பீஷ்மரால் அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் அழித்து விட முடியும் எனும்போது, ஓ! சஞ்சயா, போரில் தனது ஆற்றலை வெளிப்படுத்தும் அவரால் {பீஷ்மரால்} பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்} ஏன் தப்ப இயலவில்லை?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்தப் பயங்கரப் போரைக் குறித்து அமைதியுடன் கேட்பீராக. தேவர்களுடன் கூடிய வாசவனாலும் {இந்திரனாலும்} கூடப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} வெல்ல முடியாது. துரோணர், திருஷ்டத்யும்னனை பல்வேறு வகையான கணைகளால் {பல்லங்களால்} துளைத்து, அவனின் {திருஷ்டத்தும்னனின்} தேரோட்டியைத் தேர் தட்டில் இருந்து விழச் செய்தார். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கோபம் தூண்டப்பட்ட அந்த வீரர் {துரோணர்}, அற்புதமான தனது நான்கு கணைகளைக் கொண்டு திருஷ்டத்யும்னனின் நான்கு குதிரைகளைத் துன்புறுத்தினார். வீரனான திருஷ்டத்யும்னனும் ஒன்பது {9} கணைகளால் துரோணரைத் துளைத்து, அவரிடம், “நில்லும், நில்லும்” என்று சொன்னான்.

பெரும் ஆற்றல் கொண்டவரும், அளவிலா ஆன்மா கொண்டவருமான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, கோபம் நிறைந்த திருஷ்டத்யும்னனைத் தனது கணைகளால் மறைத்தார். பிறகு அவர் {துரோணர்} மரணத்தின் இரண்டாவது கோலைப் போன்றதும், சக்ரனின் {இந்திரனின்} வஜ்ரத்தைப் போன்றதுமான ஒரு பயங்கரக் கணையைப் பிருஷதனின் மகனுடைய {திருஷ்டத்யுன்மனின்} அழிவுக்காக எடுத்தார். பரத்வாஜர் {துரோணர்} அந்தக் கணையைக் கொண்டு குறி பார்ப்பதைக் கண்ட போராளிகளுக்கு மத்தியில் “ஓ” என்றும், “ஐயோ” என்றும் ஓலங்கள் எழுந்தன.

வீரனான திருஷ்டத்யும்னன் அந்தப் போர்க்களத்தில் மலைபோல அசைவற்றுத் தனியாக நின்றான். ஆச்சரியகரமான அவனது ஆற்றலை நாங்கள் அப்போது கண்டோம். தனக்கான மரணத்தைப் போலத் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்ததும், பயங்கரமானதுமான சுடர்விடும் அந்தக் கணையை வெட்டிய அவன் {திருஷ்டத்யும்னன்}, பரத்வாஜரின் மகன் {துரோணரின்} மீது கணைமாரியைப் பொழிந்தான். கடுஞ்சாதனையைச் செய்த அந்தத் திருஷ்டத்யும்னனைக் கண்ட பாஞ்சாலர்களும், பாண்டவர்களும், அப்போது மகிழ்ச்சியால் நிறைந்து பேரொலியுடன் ஆரவாரம் செய்தனர்.

துரோணரைக் கொல்ல விரும்பியவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான அந்த இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, தங்கம் மற்றும் வைடூரியம் ஆகியவறால் அலங்கரிக்கப்பட்ட ஈட்டி ஒன்றை துரோணரின் மீது ஏவினான். சிரித்து நின்ற பரத்வாஜரின் மகன் {துரோணர்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், தன்னை நோக்கி வேகமாக வந்துகொண்டிருப்பதுமான அந்த ஈட்டியை மூன்று துண்டுகளாகத் துண்டித்தார். இப்படித் தனது ஈட்டி கலங்கடிக்கப்பட்டதைக் கண்டவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரின் மேல் கணைகளை மழையெனப் பொழிந்தான்.

அப்போது, வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணர், அந்தக் கணை மாரியைக் கலங்கடித்தபடி, வாய்ப்புக் கிடைத்த சமயத்தில், துருபதன் மகனுடைய {திருஷ்டத்யும்னனுடைய} வில்லை ஒடித்தார். (இப்படி) அந்த மோதலில் தனது வில் ஒடிக்கப்பட்டவனும், பெரும் புகழ் கொண்டவனுமான வலிமைமிக்க வீரன் {திருஷ்டத்யும்னன்}, மலை போன்ற பலம் நிறைந்த ஒரு கனமான கதாயுதத்தைத் துரோணர் மீது விசினான். அவனது {திருஷ்டத்யும்னனின்} கரங்களில் இருந்து வீசப்பட்ட அந்தக் கதாயுதம் துரோணரின் அழிவுக்காகக் காற்றில் நகர்ந்து சென்றது.

அதன் பிறகு நாங்கள் பரத்வாஜர் மகனின் {துரோணரின்} அதிசயம் நிறைந்த ஆற்றலைக் கண்டோம். (தனது தேரின்) வேகத்தால், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அந்தக் கதாயுதத்தைக் கலங்கடித்த அவர் {துரோணர்}, கூரிய முனைகள் கொண்டதும், நன்கு கடினமாக்கப்பட்டதும், தங்க இறகுகள் படைத்ததும், சாணைக்கல்லில் கூர் தீட்டப்பட்டதுமான பல கணைகளைப் பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} நோக்கி அடித்தார். பிருஷதனின் {திருஷ்டத்யும்னனின்} கவசத்தைக் கடந்த அவை, அந்தப் போரில் அவனது இரத்தத்தைக் குடித்தன.

உயர் ஆன்மா கொண்ட திருஷ்டத்யும்னன் அப்போது, அந்த மோதலில் தனது ஆற்றலை வெளிப்படுத்தி, வேறு ஒரு வில்லை எடுத்துக் கொண்டு, ஐந்து {5} கணைகளால் துரோணரைத் துளைத்தான். பிறகு, இரத்தத்தில் நனைந்த அந்த மனிதர்களில் காளைகளான அவ்விருவரும், வசந்த காலத்தில் மலர்ந்திருக்கும் பலாச மரங்களைப் போலத் தோன்றினார்கள். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்டுத் தனது ஆற்றலை வெளிப்படுத்தியவரும், தனது படைப்பிரிவின் தலைமையில் இருந்தவருமான துரோணர், துருபதன் மகனுடைய {திருஷ்டத்யும்னனின்} வில்லை மீண்டும் ஒரு முறை ஒடித்தார்.

வில் ஒடிந்தவனும், அளவிலா ஆன்மா கொண்டவனுமான அந்த வீரனை {திருஷ்டத்யும்னனை} மலையில் மழையைப் பொழியும் மேகங்களைப் போல எண்ணிலா நேர்க் கணைகளால் அவர் {துரோணர்} மூடினார். மேலும், அவர் {துரோணர்} தனது எதிரியின் {திருஷ்டத்யும்னனின்} தேரோட்டியைத் தேர்த் தட்டில் இருந்து {மீண்டும்} விழச் செய்தார். நான்கு கணைகளால் குதிரைகளையும் விழச்செய்த அந்தத் துரோணர் சிம்ம கர்ஜனை புரிந்தார். மேலும் அவர் {துரோணர்}, மற்றொரு கணையால், திருஷ்டத்யும்னன் கரங்களை மூடியிருந்த தோலுறைகளையும் அறுத்தார். வில் ஒடிக்கப்பட்டு, தேரிழந்து, தனது குதிரைகள் கொல்லப்பட்டு, தேரோட்டி வீழ்த்தப்பட்ட அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, கைகளில் கதாயுதத்துடன் தனது தேரில் இருந்து இறங்கி பெரும் ஆற்றலை வெளிப்படுத்தினான்.

ஆனால், தனது தேரில் இருந்து அவன் {திருஷ்டத்யும்னன்} இறங்குவதற்கு முன்பே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துரோணர், தனது கணைகளால் அந்தக் கதாயுதத்தைச் சுக்குநூறாக வெட்டினார். இந்தச் சாதனை எங்களுக்குப் பெரிதாகத் தெரிந்தது. அதன் பிறகு, பலமிக்கக் கரங்களைக் கொண்டவனும், வலிமைமிக்கவனுமான அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய, பெரிய கேடயத்தையும், அழகிய வாள் ஒன்றையும் எடுத்துக் கொண்டு, சினமிக்க யானையை நோக்கி விரையும் பசிமிகுந்த சிங்கத்தைப் போலத் துரோணரைக் கொல்ல விரும்பி விரைந்தான்.

அதன் பிறகு, நாங்கள் கண்ட பரத்வாஜர் மகனின் {துரோணரின்} ஆற்றலும், ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் அவரது (கரங்களின்) வேகமும், அவரது கரங்களின் பலமும் அற்புதம் நிறைந்தனவாக இருந்ததன. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தனியாகவே அவர் {துரோணர்}, தனது கணை மாரியால் பிருஷதனின் மகனைத் {திருஷ்டத்யும்னனைத்} தடுத்தார். போரில் பெரும் பலத்தைக் கொண்டிருந்தாலும், அவனால் {திருஷ்டத்யும்னனால்} மேலும் முன்னேற முடியாமல் போனது. தான் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு, அந்தக் கணை மேகங்களைத் தனது கரங்களின் வேகத்தைப் பயன்படுத்திக் கேடயத்தால் விலக்கிக் கொண்டு இருந்த வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னனை நாங்கள் கண்டோம்.

பிறகு, அந்த உயர் ஆன்ம பிருஷதன் மகனுக்கு {திருஷ்டத்யும்னனுக்கு} உதவ விரும்பியவனும் வலிமைமிக்கக் கரங்களும், பெரும் பலம் கொண்டவனுமான பீமன், அங்கே விரைந்து வந்தான். கூரிய ஏழு கணைகளால் துரோணரைத் துளைத்த அவன் {பீமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விரைவாகப் பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} மற்றொரு தேரில் ஏற்றச் செய்தான்.

பிறகு, மன்னன் துரியோதனன், பெரும் படைப்பிரிவால் ஆதரிக்கப்பட்ட கலிங்கர்களின் ஆட்சியாளனிடம் பரத்வாஜர் மகனைப் {துரோணரைப்} பாதுகாக்கத் தூண்டினான். பயங்கரமானதும், வலிமைமிக்கதுமான கலிங்கர்களின் படைப்பிரிவு, உமது மகனின் {துரியோதனனின்} உத்தரவின் பேரில் பீமனுக்கு எதிராக விரைந்தது. அப்போது, தேர்வீரர்களில் முதன்மையான துரோணர், பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னனை} கைவிட்டு விட்டு, விராடனுடனும், துருபதனுடனும் ஒரே சமயத்தில் மோதினார்.

போரில் மன்னன் யுதிஷ்டிரனை ஆதரிக்கத் திருஷ்டத்யும்னனும் முன்னேறினான். அப்போது, பயங்கரமானதும், மயிர் கூச்சத்தை ஏற்படுத்துவதும், உலகை அழிப்பதுமான அச்சம் நிறைந்த அந்தப் போர் கலிங்கர்களுக்கும், உயர் ஆன்ம பீமனுக்கும் இடையில் நடைபெற்றது.

பீமன் புரிந்த கோரத்தாண்டவம்! – பீஷ்ம பர்வம் பகுதி – 054அ-பீமனைத் தாக்க நிஷாத மன்னன் கேதுமானுடன் சேர்ந்து விரைந்த கலிங்க மன்னன் சுருதாயுஸ்; போர்க்களத்தின் கொடூர நிலை; பீமசேனனைக் கைவிட்டு சேதி நாட்டு வீரர்கள் பின்வாங்குவது; பீமன் தனியாகப் போராடுவது; பீமனின் குதிரைகளைக் கொன்ற சக்ரதேவன்; பீமன் சக்ரதேவனைக் கொல்வது; பானுமானைக் கொன்ற பீமன்; வாளை எடுத்துக் கொண்டு பீமன் புரிந்த கோரத்தாண்டவம்….

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “எனது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்டவனும், தனது துருப்புகளால் ஆதரிக்கப்பட்டவனும், பெரும் படைப்பிரிவின் தலைவனுமான கலிங்கர்களின் ஆட்சியாளன் {சுருதாயுஸ்}, அற்புதம் நிறைந்த சாதனைகளுக்குச் சொந்தக்காரனும், மரணத்தைப் போன்ற கதாயுதத்தைக் கையில் கொண்டு போர்க்களத்தில் உலவும் வீரனுமான வலிமைமிக்கப் பீமசேனனை எதிர்த்து எப்படிப் போரிட்டான்?” என்று கேட்டான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, இப்படி உமது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்ட கலிங்கர்களின் வலிமைமிக்க மன்னன் {சுருதாயுஸ்}, ஒரு பெரும் படையின் துணையுடன் பீமனின் தேரை நோக்கி முன்னேறினான். அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சேதிகளால் {சேதி நாட்டு வீரர்களால்} ஆதரிக்கப்பட்ட பீமசேனன், நிஷாதர்களின் மன்னனுடைய மகனான கேதுமானுடன் சேர்ந்து கொண்டு தன்னை நோக்கி வருவதும், யானைகள், குதிரைகள் மற்றும் தேர்கள் நிறைந்ததும், வலிமைமிக்கதுமான கலிங்கர்களின் பெரும் படையை நோக்கி விரைந்தான்.

கவசம் தரித்தவனும், கோபத்தால் தூண்டப்பட்டவனுமான சுருதாயுசும் அணிவகுக்கப்பட்ட தனது துருப்புகளால் பின்தொடரப்பட்டு, மன்னன் கேதுமான் துணையுடன் அந்தப் போரில் பீமனுக்கு முன்பாக வந்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல்லாயிரம் தேர்களுடன் கூடிய கலிங்கர்களின் ஆட்சியாளனும் {சுருதாயுசும்}, பத்தாயிரம் {10,000} யானைகள் மற்றும் நிஷாதர்களுடன் கூடிய கேதுமானும், பீமசேனனை அனைத்துப் புறங்களில் இருந்தும் சூழ்ந்தனர்.

பிறகு, பீமசேனனைத் தங்கள் தலைமையில் கொண்டவர்களான சேதிகள், மத்ஸ்யர்கள், கரூசர்கள், ஆகியோர் பல மன்னர்களுடன் சேர்ந்து நிஷாதர்களுக்கு எதிராக விரைவாகச் சென்றனர். ஒருவரை ஒருவர் கொல்லும் விருப்பத்தில் விரைந்து கொண்டிருந்த வீரர்களுக்கிடையில், கடுமையான பயங்கரப் போர் தொடங்கியது. பீமனுக்கும், அவனது எதிரிகளுக்கும் இடையில் திடீரென மூண்ட அந்தப் போர், ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் இந்திரனுக்கும், திதியின் மகன்களுடைய வலிமைமிக்கப் படைக்கும் இடையில் நடந்த போரைப் போன்று பயங்கரமானதாக இருந்தது. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, போரில் போராடிக் கொண்டிருந்த அந்த வலிமைமிக்கப் படையின் ஆரவாரம், முழங்கிக் கொண்டிருக்கும் கடலின் ஒலியைப் போலப் பேரொலியாக இருந்தது.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்ட போராளிகள் அந்தப் போர்க்களம் முழுவதையும் சதையும், இரத்தமும் பரவிய ஒரு சுடுகாடு போல ஆக்கினர். படுகொலை செய்யும் விருப்பத்தால் உந்தப்பட்ட போராளிகளுக்கு நண்பனையும் எதிரியையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரியவில்லை. போரில் எளிதில் வெல்லப்பட முடியாத அந்தத் துணிவுமிக்க வீரர்கள், தங்கள் சொந்த நண்பர்களையே தாக்கத் தொடங்கினர். சேதிகள் {சேதி நாட்டு வீரர்கள்} ஒரு புறத்திலும், கலிங்கர்களும், நிஷாதர்களும் ஒருபுறத்திலுமென, சிலருக்கும், பலருக்கும் இடையில் நடந்த அந்த மோதல் பயங்கரமாக இருந்தது.

தங்கள் சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்தித் தங்கள் ஆண்மையை வெளிப்படுத்திய சேதிகள் பீமசேனனைக் கைவிட்டு திரும்பிச் சென்றனர். சேதிகள் தன்னைத் தொடர்வதை நிறுத்தியதும், கலிங்கர்கள் அனைவருடனும் போரிட்ட அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தனது சொந்த கரங்களின் பலத்தை மட்டுமே நம்பி திரும்பாமல் போரிட்டான்.

உண்மையில், வலிமைமிக்க அந்தப் பீமசேனன் அசையாமல் தனது தேர் தட்டில் நின்றபடி கலிங்கர்களின் படைப்பிரிவின் மேல் தனது கூரிய கணைகளை மழையெனப் பொழிந்தான். அப்போது, வலிமைமிக்க வில்லாளியும், தேர்வீரனுமான அந்தக் கலிங்கர்களின் மன்னன் {சுருதாயுஸ்}, சக்ரதேவன் என்ற பெயரால் அறியப்பட்ட அவனது {சுருதாயுசின்} மகன் ஆகிய இருவரும் தங்கள் கணைகளால் அந்தப் பாண்டுவின் மகனைத் {பீமனைத்} தாக்கத் தொடங்கினர். தனது அழகிய வில்லை அசைத்தவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமன், தனது கரங்களின் தனிப்பட்ட பலத்தை மட்டுமே நம்பி அந்தக் கலிங்கனுடன் {சுருதாயுசுடன்} போரிட்டான். எண்ணிலாக் கணைகளை அந்தப் போரில் அடித்த சக்ரதேவன், அவற்றைக் கொண்டு பீமசேனனின் குதிரைகளைக் கொன்றான்.

எதிரிகளைத் தண்டிப்பவனான பீமசேனன் தேரிழந்து நிற்பதைக் கண்ட சக்ரதேவன், அவன் {பீமன்} மீது கூரிய கணைகளை அடித்தபடியே அவனிடம் விரைந்தான். ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, கோடை காலம் கடந்ததும் {கார்காலத்தில்} மழையைப் பொழியும் மேகங்களைப் போல அந்த வலிமைமிக்கச் சக்ரதேவன் கணைமாரியைப் பொழிந்தான். ஆனால், வலிமைமிக்கப் பீமசேனனோ, குதிரைகள் கொல்லப்பட்ட தனது தேரில் நின்று கொண்டே, கடுமையான இரும்பிலான {எஃகால் ஆன} ஒரு கதாயுதத்தைச் சக்ரதேவன் மேல் வீசினான். அந்தக் கதாயுதத்தால் கொல்லப்பட்ட கலிங்க ஆட்சியாளரின் மகன் {சக்ரதேவன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கொடியும் தேரோட்டியும் கொண்ட தனது தேரில் இருந்து கீழே தரையில் விழுந்தான்.

தனது மகன் {சக்ரதேவன்} கொல்லப்பட்டதைக் கண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான கலிங்கர்களின் மன்னன் {சுருதாயுஸ்}, பல்லாயிரம் தேர்களுடன் பீமனை அனைத்துப் புறங்களிலும் சூழ்ந்து கொண்டான். பெரும் வலிமை கொண்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமன் கதாயுதத்தைக் கைவிட்டு, கடுஞ்சாதனை செய்ய விரும்பி, வாளை எடுத்துக் கொண்டான். மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த மனிதர்களில் காளை {பீமன்}, தங்கத்திலானதும், சந்திரப்பிறைகளைக் கொண்டதுமான ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்டான். கோபத்தால் தூண்டப்பட்ட கலிங்கர்களின் ஆட்சியாளனும் {சுருதாயுசும்}, தனது வில்லின் நாண் கயிற்றைத் {கைகளால்} தேய்த்துக் கொண்டு, (அந்தப் பாண்டவனை {பீமனைக்}) கொல்ல விரும்பிய அந்த ஏகாதிபதி {சுருதாயுஸ்} பாம்பின் விஷத்தைப் போன்ற ஒரு பயங்கரக் கணையை எடுத்து பீமசேனனின் மீது எய்தான். இப்படித் தொடுக்கப்பட்ட அந்தக் கூரிய கணையை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனது பெரும் வாளால் பீமசேனன் இரண்டாகப் பிளந்தான். அதனால் பெரிதும் மகிழ்ந்த அவன் {பீமன்}, துருப்புகளை அச்சுறுத்தும் வகையில் பேரொலியுடன் முழங்கினான்.

பீமசேனனுடனான அந்த மோதலில் பெரும் கோபம் தூண்டப்பட்டவனான கலிங்கர்களின் ஆட்சியாளன் {சுருதாயுஸ்}, சாணைக்கல்லில் கூர் தீட்டப்பட்ட பதினான்கு தோமரங்களை {ஈட்டியில் ஒரு வகை} அவன் {பீமன்} மீது வீசினான். எனினும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பாண்டுவின் மகன் {பீமன்}, தான் கொண்டிருந்த அந்தச் சிறந்த வாளைக் கொண்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வானில் வந்து கொண்டிருந்த அந்தத் தோமரங்கள் தன்னை அடையும் முன்பே அவற்றைத் துண்டு துண்டாக வெட்டிப் போட்டான். (இப்படி) அந்தப் போரில் அந்தப் பதினான்கு தோமரங்களையும் வெட்டியவனும் மனிதர்களில் காளையுமான அந்தப் பீமன் பானுமானைக்[1] கண்டு அவனிடம் விரைந்தான்.

அப்போது, பானுமான் கணைமாரியால் பீமனை மறைத்து, குரலால் பேரொலியை எழுப்பி அவ்வொலியை வானில் எதிரொலிக்கச் செய்தான். எனினும், அந்தக் கடும்போரில், பீமனால் அந்தப் பேரொலியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தானே உரத்த குரலைக் கொண்டவனான அவன் {பீமன்}, அதைவிட அதிக ஒலியுடன் ஆரவாரம் செய்தான். அவனது ஆரவாரத்தைக் கேட்ட கலிங்கர்களின் படை அச்சத்தால் நிறைந்தது. அந்தப் போரில், ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, அதற்கு மேலும் பீமனை யாரும் மனிதனாகக் கருதவில்லை.

ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, கையில் வாளுடன் உரக்க ஆரவாரம் செய்த அந்தப் பீமன், (பானுமானின்) அற்புதமான யானையின் மீது குதித்தான். அந்த யானையுடைய தந்தங்களின் உதவியைக் கொண்டு {தந்தங்களைப் பிடித்துக் கொண்டு} அந்த யானைகளின் இளவரசனுடைய {யானையின்} முதுகில் ஏறிய அவன் {பீமன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தனது கனமான வாளைக் கொண்டு பானுமானை நடுவில் இரண்டாகப் பிளந்தான். இப்படிக் கலிங்கர்களின் இளவரசனை அந்தப் போரில் கொன்ற அந்த எதிரிகளைத் தண்டிப்பவன் {பீமன்}, அடுத்து பெரும் சுமையைத் தாங்க வல்ல தனது வாளை அந்த யானையின் கழுத்தில் இறக்கினான். தலை வெட்டப்பட்ட அந்த யானைகளின் இளவரசன் பெரும் ஒலியோடு அலறிக் கொண்டு, வேகமான கடலின் அலைகளால் உண்ணப்படும் {அரிக்கப்படும்} அடிவாரம் கொண்ட சிகரத்துடன் கூடிய மலையைப் போலப் பூமியில் விழுந்தது. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அப்படி விழும் யானையில் இருந்து கீழே குதித்தவனும், உற்சாகமிழக்காத ஆன்மா கொண்டவனுமான அந்தப் பாரதக் குலத்தின் இளவரசன் {பீமன்}, (முன்பு போலவே) கவசத்துடனும், கையில் வாளுடனும் பூமியில் நின்றான்.

அனைத்துப் புறங்களிலும் எண்ணற்ற யானைகளை விழச்செய்து (போர்க்களத்தில்} பல பாதைகளை உண்டாக்கிக் கொண்டு திரிந்தான். குதிரைப்படை, யானைகள், தேர்கள், காலாட்படையின் பெரும்பகுதி என அனைத்தையும் கொன்றபடி நெருப்புச் சக்கரத்தைப் போல அவன் சுழல்வதாக அப்போது தெரிந்தது. மனிதர்களில் தலைவனும், வலிமைமிக்கவனுமான பீமன், கூரிய முனை கொண்ட தனது வாளைக் கொண்டு, யானை மீதிருந்த போராளிகளின் உடல்களையும் தலைகளையும் விரைவாக வெட்டிக் கொண்டு பருந்தின் சுறுசுறுப்புடன் களத்தில் பறப்பதாகத் தெரிந்தது.

காலாட்படை வீரனாக நின்று, கோபத்தால் தூண்டப்பட்டு, பிரளய காலத்து யமனைப் போலத் தனியனாகவே நின்று தனது எதிரிகளுக்கு அச்சமூட்டிய அவன் {பீமன்}, அந்தத் துணிவுமிக்க வீரர்களைக் கலங்கச் செய்தான். அவர்களில் புத்தியற்றிருந்தவர்கள் மட்டுமே, கையில் வாளுடன் அந்தப் பெரும்போரில் வேகமாக உலவி கொண்டிருந்த அவனை நோக்கிப் பெரு முழக்கம் செய்து கொண்டு விரைந்தார்கள். எதிரிகளைக் கலங்கடிப்பவனும், பெரும் பலம் கொண்டவனுமான அவன் {பீமன்} அந்த வீரர்களுடைய தேரின் ஏர்க்கால்களையும், நுகத்தடிகளையும் வெட்டி, இறுதியில் அந்த வீரர்களையும் கொன்றான்.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமசேனன் பல்வேறு விதமான அசைவுகளை அங்கே வெளிப்படுத்துவதாகத் தெரிந்தது. வேகமாக நகர்தல், உயரமாகச் சுழன்று வருதல், இருபக்கங்களிலும் அசைதல், நேராகக் குதித்தல், ஓடுதல், உயரமாகக் குதித்தல் என {களத்தில்} அசைந்து கொண்டிருந்தான். மேலும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவன் {பீமன்} முன்னோக்கி விரைந்தும், மேல்நோக்கி விரைந்தும் காணப்பட்டான் [2]. உயர் ஆன்ம பாண்டுவின் மகனுடைய {பீமனுடைய} அற்புதமான வாளால் சிதைக்கப்பட்ட சிலர், உயிர்நிலைகளில் தாக்கப்பட்டோ, உயிரிழந்து கீழே விழும்போதோ உரக்க அலறினர்.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துதிக்கைகள் வெட்டப்பட்ட சிலவும், தந்தங்கள் வெட்டப்பட்ட சிலவும், தலை பிளக்கப்பட்ட சிலவும் எனப் பல யானைகள் தங்கள் ஓட்டுநர்களை {பாகன்களை} இழந்து, தங்கள் படைகளையே கொன்றபடி பெரும் அலறலுடன் கீழே விழுந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உடைந்த ஈட்டிகள், யானை செலுத்தும் வீரர்களின் தலைகள், யானைகளுக்கு மேலிருந்த கூடுகள், தங்கம் போன்ற பிரகாசமான கச்சைகள், கழுத்தணிகள், சக்திகள், உலக்கைகள், அம்பறாத்தூணிகள், பல்வேறு வகைகளிலான பொறிகள், அழகிய விற்கள், பளபளக்கும் தலைகளைக் கொண்ட குறு அம்புகள் {பிண்டிபாலங்கள்}, யானைகளை வழிநடத்தப் பயன்படும் அங்குசங்கள் {வேணுகங்கள்}, இரும்பு மாவெட்டிகள், பல்வேறு வடிவங்களிலான மணிகள், தங்கத்தால் இழைக்கபட்ட வாள் பிடிகள் ஆகியவை கீழே விழுவதையும், அல்லது (ஏற்கனவே) விழுந்து கொண்டிருக்கும் குதிரை ஓட்டிகளிடம் இருந்து அவை விழுவதையும் நாங்கள் கண்டோம்.

உடலின் முன்புறமும், கீழ்ப்புறமும், துதிக்கையும் வெட்டப்பட்டோ, முழுவதும் கொல்லப்பட்டோ கிடந்த யானைகளைக் கொண்ட பூமி, நொறுங்கி விழுந்த மலைகள் பரவியிருக்கும் போர்க்களம் போலத் தோன்றியது. இப்படிப் பெரும் யானைகளை நசுக்கிய அந்த மனிதர்களில் காளை {பீமன்}, அடுத்ததாகக் குதிரைகளையும் நசுக்கினான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த வீரன் {பீமன்}, குதிரை வீரர்களில் முதன்மையானவர்களையும் சாய்த்தான்.

ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அவர்களுக்கும், அவனுக்கும் {பீமனுக்கும்} இடையில் நடந்த அந்தப் போர் எல்லையில்லா கடுமை கொண்டதாக இருந்தது. கடிவாளங்கள், பூட்டங்கயிறுகள், பொன்னொளிவீசும் கச்சைகள், குதிரையின் மேல்விரிப்புகள், ஈட்டிகள், விலைமதிப்புமிக்க ரிஷ்டிகள் {வளையும் தன்மைமிக்க ஒரு வகை வாள்}, கவசங்கள், கேடயங்கள், அழகிய ஆபரணங்கள் ஆகியன அந்தப் போர்க்களத்தில் தரையில் பரவிக் கிடந்தன. அவன் {பீமன்}, (இரத்தத்தால்) பற்பல நிறமுள்ள அல்லி மலர்களால் நிரம்பியதைப் போலத் அந்தப் போர்க்களத்தைப் தோன்றச் செய்தான்.

வலிமைமிக்கவனான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, உயரக் குதித்து, கொடிமரங்களுடன் கூடிய சில தேர்வீரர்களைத் தன் வாளால் இழுத்துக் கிழே தள்ளினான். அடிக்கடி மேலே குதித்தும், பெரும் சுறுசுறுப்புடன் அனைத்துப் புறங்களிலும், பல்வேறு வழிகளில் விரைந்தும் சென்ற அந்த வீரன் {பீமன்} போராளிகளை வியக்கச் செய்தான். காலால் சிலரைக் கொன்றான். தரையில் இழுத்துப் போட்டு, பூமியில் அழுத்தி சிலரைக் கொன்றான். தனது வாளால் சிலரைக் கொன்றான். தனது முழக்கங்களால் சிலரை அச்சுறுத்தினான். (தான் ஓடும்போது உண்டான) விசையால் சிலரைத் தரையில் வீழ்த்தினான். சிலர் அவனைக் {பீமனைக்} கண்ட அச்சத்தால் புறமுதுகிட்டு ஓடினார்கள். இப்படியே, பெரும் சுறுசுறுப்புக் கொண்ட கலிங்கர்களின் பெரிய படை அந்தப் போர்க்களத்தில் பீமசேனனைச் சூழ்ந்த படி அவனிடம் விரைந்து சென்றது” {என்றான் சஞ்சயன்}.

திருஷ்டத்யும்னனுக்கு அன்பான பீமனும், சாத்யகியும்! – பீஷ்ம பர்வம் பகுதி – 054ஆ-தரையில் நின்று போரிட்ட பீமனைக் கணைகளால் துளைத்த கலிங்க மன்னன் சுருதாயுஸ்; தேரோட்டி அசோகன் பீமனுக்காகத் தேரைக் கொண்டு வருவது; சுருதாயுசைக் கொன்ற பீமன்; கலிங்கப்படையின் சத்தியதேவன், சத்யன், கலிங்க இளவரசனான கேதுமான் ஆகியோரைப் பீமன் கொன்றது; பீமனைச் சூழ்ந்த கொண்ட கலிங்கர்கள்; ஆயிரக்கணக்கான கலிங்கர்களைப் பீமன் கொல்வது;  பீமனின் உதவிக்கு விரைந்த திருஷ்டத்யும்னனும், சாத்யகியும்; பீமசேனனைப் பீஷ்மர் எதிர்ப்பது; பீஷ்மரின் தேரோட்டியைக் கொன்ற சாத்யகி; தேரோட்டி இல்லாத குதிரைகள் பீஷ்மரைக் களத்தைவிட்டே கொண்டு செல்வது; கலிங்கர்கள் அனைவரையும் பீமன் கொல்வது; திருஷ்டத்யும்னன், பீமன், சாத்யகி ஆகியோர் ஒருவரையொருவர் தழுவிக் கொள்தல்…

சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “அப்போது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கலிங்கத் துருப்புகளின் தலைமையில் நிற்கும் சுருதாயுஸைக் கண்ட பீமசேனன், அவனை {சுருதாயுசை} நோக்கி விரைந்தான். அவன் {பீமன்} முன்னேறி வருவதைக் கண்டவனும், அளவிலா ஆன்மாக் கொண்டவனுமான கலிங்கர்களின் ஆட்சியாளன் {சுருதாயுஸ்}, ஒன்பது  {9}கணைகளைக் கொண்டு பீமசேனனின் மார்பைத் துளைத்தான். கலிங்கர்களின் ஆட்சியாளனால் {சுருதாயுசால்} அடிக்கப்பட்ட கணைகளால் தாக்குண்டு, அங்குசத்தால் துளைக்கப்பட்ட யானை போலவும், விறகெனும் உணவூட்டப்பட்ட நெருப்பு போலவும் பீமசேனன் கோபத்தால் சுடர்விட்டெரிந்தான்.

அப்போது, தேரோட்டிகளில் சிறந்தவனான அசோகன் தங்கத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரைக் கொண்டு வந்து அதில் பீமனை ஏறச் செய்தான். அதன்பேரில், எதிரிகளைக் கொல்பவனான குந்தியின் மகன் {பீமன்}, அந்தத் தேரில் ஏறினான். பிறகு, “நில், நில்” என்று சொன்னபடி கலிங்கர்களின் ஆட்சியாளனை {சுருதாயுசை} நோக்கி விரைந்தான். கோபத்தால் தூண்டப்பட்ட வலிமைமிக்கச் சுருதாயுஸ், தனது கரத்தின் வேகத்தை வெளிக்காட்டியபடி பீமன் மீது கூரிய பல கணைகளைச் செலுத்தினான் அந்தக் கலிங்கனின் {சுருதாயுசின்} அற்புத வில்லில் இருந்து அடிக்கப்பட்ட ஒன்பது கணைகளால் தாக்குண்டவனும், வலிமைமிக்க வீரனுமான பீமன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தடியால் அடிக்கப்பட்ட ஒரு பாம்பைப் போலப் பெரும் கோபத்துக்கு உள்ளானான்.

வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவனும், பிருதையின் {குந்தியின்} மகனுமான பீமன், கோபத்தால் தூண்டப்பட்டுப் பெரும்பலத்துடன் தனது வில்லை வளைத்து, முழுவதும் இரும்பாலான {உருக்காலான} ஏழு கணைகளால் அந்தக் கலிங்க ஆட்சியாளனைக் {சுருதாயுசைக்} கொன்றான் [1]. இரண்டு கணைகளால், கலிங்கனின் தேர்ச்சக்கரங்களைப் பாதுகாத்த இரு வலிமைமிக்கப் பாதுகாவலர்களையும் கொன்றான். இப்படியே {சுருதாயுசின் தேர்ச்சக்கரங்களின் பாதுகாவலர்களான} சத்தியதேவன் மற்றும் சத்யனை அவன் {பீமன்} யமனுலகிற்கு அனுப்பி வைத்தான். அளவிலா ஆன்மா கொண்ட பீமன், பல கணைகளையும், நீண்ட ஈட்டிகளையும் கொண்டு கேதுமானையும் யமனுலகிற்கு அனுப்பி வைத்தான். அதன்பிறகு கோபத்தால் தூண்டப்பட்ட கலிங்க நாட்டு க்ஷத்திரியர்கள், பல்லாயிரக்கணக்கான போராளிகளால் ஆதரிக்கப்பட்டு, கோபம் நிறைந்த பீமசேனனுடன் அந்தப் போரில் மோதினார்கள்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஈட்டிகள் {சக்திகள்}, கதாயுதங்கள், வாள்கள், தோமரங்கள், ரிஷ்டிகள் {சுருள் கத்திகள்}, போர்க்கோடரிகள் ஆகியவற்றைக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான கலிங்கர்கள் பீமனைச் சூழ்ந்து கொண்டார்கள். அப்படி எழுந்த கணைமாரியைச் சிதறடித்த அந்த வலிமைமிக்க வீரன் {பீமன்}, தனது கதாயுதத்தை எடுத்துக் கொண்டு (தனது தேரிலிருந்து) பெரும் வேகத்துடன் கீழே குதித்தான். அதன் பிறகு பீமன் எழுநூறு {700} வீரர்களை யமனுலகு அனுப்பி வைத்தான். அதற்கும் கூடுதலாக, எதிரிகளைக் கலங்கடிப்பவனான அவன் {பீமன்}, இரண்டாயிரம் {2000} கலிங்கர்களை மரணலோகம் அனுப்பி வைத்தான். அந்தச் சாதனை உயர்வானதாகவும், அற்புதம் நிறைந்ததாகவும் தெரிந்தது. இப்படியே பயங்கர ஆற்றல் கொண்டவனும், வீரனுமான அந்தப் பீமன் கலிங்கர்களின் பெருங்கூட்டத்தைத் தொடர்ச்சியாக வீழ்த்திக் கொண்டிருந்தான்.

அந்தப் போரில், பாண்டுவின் மகனால் {பீமனால்}, தங்கள் பாகனை இழந்த யானைகள், கணைகளால் பீடிக்கப்பட்டு, தங்கள் படையினரையே மிதித்தபடி காற்றால் செலுத்தப்படும் மேகங்களின் திரளைப் போல உரத்த பிளிறல்களை உதிர்த்துக் கொண்டும் களத்தில் உலவின. வாளைக் கையில் கொண்டிருந்தவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமன், மகிழ்ச்சியால் நிறைந்து, பயங்கரமான பேரொலியை எழுப்பும் தனது சங்கை எடுத்து ஊதினான். அந்தச் சங்கொலியால் அவன் {பீமன்} கலிங்கத் துருப்புகள் அனைத்தின் இதயங்களையும் அச்சத்தால் நடுங்கச் செய்தான்.

ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, ஒரே நேரத்தில் கலிங்கர்கள் அனைவரும் தங்கள் உணர்வுகளை இழப்பதாக அங்கே தெரிந்தது. போராளிகள் அனைவரும் மற்றும் விலங்குகள் அனைத்தும் அச்சத்தால் பீடிக்கப்பட்டன. பல பாதைகளில் பீமன் விரைந்ததன் விளைவாகவோ, யானைகளின் இளவரசனைப் போல அனைத்துப் புறங்களில் விரைந்ததன் விளைவாகவோ, தொடர்ச்சியாகக் குதித்ததன் விளைவாகவோ, அவனது {பீமனின்} எதிரிகள், தங்கள் புலனுணர்வுகளை இழந்து மயக்கமடைவதாகத் தெரிந்தது.

முதலையால் கலக்கப்பட்ட ஒரு பெரும் தடாகத்தைப் போலப் பீமசேனனால் அந்த முழுப் (கலிங்கப்) படையும் அச்சத்தால் நடுங்கியது. பீமனின் அற்புதச் சாதனைகளின் விளைவால் பீதியடைந்திருந்த கலிங்கப் போராளிகள் அனைவரும் திக்குகள் அனைத்திலும் சிதறி ஓடினர். எனினும் அவர்கள் மீண்டும் அணிதிரண்ட போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாண்டவப்படையின் தலைவன் (திருஷ்டத்யும்னன்), தன் தனிப்பட்ட துருப்புகளிடம் “போரிடுங்கள்” என்று கட்டளையிட்டான். சிகண்டியின் தலைமையில் இருந்தவர்களும், தாக்குவதில் சாதித்த தேர்ப்படைகளால் ஆதரிக்கப்பட்டவர்களுமான (பாண்டவப் படையின்) பல தலைவர்கள், தங்கள் படைத்தலைவனின் வார்த்தைகளைக் கேட்டு, பீமனை அணுகினார்கள்.

பாண்டுவின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், மேகத்தின் நிறத்தைக் கொண்ட பெரும் யானைப் படையுடன் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றான். இப்படித் தனது படையினர் அனைவரையும் தூண்டிக் கொண்டிருந்த பிருஷதனின் மகன் {திருஷ்டத்யும்னன்}, பல அற்புத வீரர்களால் சூழப்பட்டு, பீமசேனனின் ஒரு பக்கத்தை {ஒரு புறத்தைப்} [2] பாதுகாப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.

பாஞ்சாலர்களின் இளவரசனுக்குத் {திருஷ்டத்யும்னனுக்குத்} தனது உயிரை விட அன்புக்குரியவர்களாகப் பீமனையும், சாத்யகியையும் தவிர இவ்வுலகில் வேறு யாரும் இருக்கவில்லை. பகைவீரர்களைக் கொல்பவனான பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், எதிரிகளைக் கொல்பவனுமான பீமசேனன் கலிங்கர்களுக்கு மத்தியில் உலவுவதைக் கண்டான். ஓ! மன்னா, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியால் நிறைந்த அவன் {திருஷ்டத்யும்னன்} பல முழக்கங்களை {கர்ஜனைகளைச்} செய்தான். உண்மையில், அவன் தனது சங்கை எடுத்து ஊதியவாறும், சிம்மமுழக்கம் செய்தவாறும் இருந்தான். புறாக்களைப் போல வெண்ணிறக் குதிரைகள் பூட்டப்பட்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான திருஷ்டத்யும்னனுடைய தேரின் சிவப்புக் கொடிக்கம்பத்தைக் {கோவிதாரக் கொடியைக் [3]} கண்ட பீமசேனனும் ஆறுதல் அடைந்தான்.

கலிங்கர்களுடன் மோதிக் கொண்டிருந்த பீமசேனனைக் கண்ணுற்ற அளவிலா ஆன்மாகக் கொண்ட திருஷ்டத்யும்னன், அவனது {பீமனின்} உதவிக்கு விரைந்தான். பெரும் சக்தி கொண்ட வீரர்களான திருஷ்டத்யும்னனும், விருகோதரனும் {பீமனும்}, தூரத்தில் சாத்யகியைக் கண்டு, அப்போரில் இன்னும் மூர்க்கமாகக் கலிங்கர்களுடன் போரிட்டனர்.

வெற்றிவீரர்களில் முதன்மையானவனும், மனிதர்களில் காளையுமான அந்தச் சினியின் {சிநியின்} பேரன் {சாத்யகி}, அந்த இடத்தை நோக்கி விரைவாக முன்னேறி பீமன் மற்றும் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} ஆகிய இருவரின் பக்கவாட்டை அடைந்தான். கையில் இருந்த வில் பெரும் அழிவை உண்டாக்கத் தன்னை மேலும் கடுமையாக்கிக் கொண்ட அவன் {சாத்யகி} போரில் எதிரியைக் கொல்லத் தொடங்கினான். கலிங்கத்தில் பிறந்த வீரர்களின் இரத்தம் மற்றும் சதை ஆகியவை கலந்த இரத்த வெள்ளத்தாலான ஆறை அங்கே பீமன் தோன்றச் செய்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது பீமசேனனைக் கண்டத் துருப்புகள், “பீமனின் வடிவில் காலனே வந்து கலிங்கர்களுடன் போரிடுகிறான்” என்று கதறினர்.

போரில் இந்தக் கதறல்களைக் கேட்ட சந்தனுவின் மகனான பீஷ்மர், பீமனை நோக்கி விரைந்து வந்து, படையில் உள்ள போராளிகளுடன் சூழ்ந்து கொண்டார். அதன்பேரில், சாத்யகி, பீமசேனன், பிருஷதக் {பார்ஷதக்} குலத்துத் திருஷ்டத்யும்னன் ஆகியோர், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த பீஷ்மரின் தேரை நோக்கி விரைந்தனர். அந்தப் போரில் கங்கையின் மைந்தரை விரைந்து சூழ்ந்த கொண்ட அவர்கள் அனைவரும், நேரத்தைக் கடத்தாமல், ஆளுக்கு மூன்று பயங்கரமான கணைகளால் பீஷ்மரைத் துளைத்தனர்.

எனினும், உமது தந்தையான தேவவிரதர் {பீஷ்மர்}, வலிமைமிக்க வில்லாளிகளாகப் போரில் போராடிக் கொண்டிருந்த அவர்கள் ஒவ்வொருவரையும் மூன்று நேரான கணைகளால் பதிலுக்குத் துளைத்தார். ஆயிரக்கணக்கான கணைகளால் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களைத் தடுத்த அவர் {பீஷ்மர்}, தங்கக் கவசத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த பீமனின் குதிரைகளைக் கொன்றார். குதிரைகள் கொல்லப்பட்டாலும் தேரிலேயே தங்கிய பெரும் சக்தி கொண்ட பீமன், பெரும் வேகத்துடன் ஓர் ஈட்டியை பீஷ்மரின் தேர் மீது எறிந்தான்.

உமது தந்தையான தேவவிரதர் {பீஷ்மர்}, அந்த ஈட்டி தன்னை எட்டும் முன்பே அதை இரண்டாகத் துண்டித்துத் தரையில் வீழ்த்தினார். அப்போது, மனிதர்களில் காளையான பீமசேனன், எஃகினால் {சைக்கிய இரும்பினால்} ஆனதும், கனமானதுமான ஒரு பெரிய கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, தனது தேரில் இருந்து விரைவாகக் குதித்தான். தேர்வீரர்களில் முதன்மையான அவனை {பீமனைத்} தன் தேரில் ஏற்றிக் கொண்ட திருஷ்டத்யும்னன், அந்தப் புகழ்பெற்ற வீரனை {பீமனை}, மற்றவர்கள் கண்ணெதிரிலேயே கூட்டிச் சென்றான் [4].

பீமனுக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பிய சாத்யகி, தனது கணையால் மதிப்புக்குரிய குரு பாட்டனின் {பீஷ்மரின்} தேரோட்டியை வீழ்த்தினான். தனது தேரோட்டி கொல்லப்பட்டதும், காற்றின் வேகத்தைக் கொண்ட தனது குதிரைகளால், பீஷ்மர், போர்க்களத்திலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டார். (இப்படி) அந்த வலிமைமிக்கத் தேர்வீரர் {பீஷ்மர்} களத்தை விட்டுக் கொண்டு செல்லப்பட்ட போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வைக்கோலை எரிக்கும் பெரும் நெருப்பைப் போலப் பீமசேனன் சுடர்விட்டு எரிந்தான். கலிங்கர்கள் அனைவரையும் கொன்ற அவன் {பீமன்} துருப்புகளின் மத்தியிலேயே இருந்தான். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, உமது தரப்பைச் சேர்ந்த யாரும் அவனோ {பீமனோடு} மோதத் துணியவில்லை.

பாஞ்சாலர்களாலும், மத்ஸ்யர்களாலும் வழிபடப்பட்ட அவன் {பீமன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனைத் தழுவி கொண்டு சாத்யகியை அணுகினான். கலங்கடிக்கப்படமுடியாத ஆற்றல் கொண்டவனும், யதுக்களில் புலியுமான சாத்யகி, பீமசேனனை மகிழ்விக்கும் வண்ணம், திருஷ்டத்யும்னனின் முன்னிலையில் அவனிடம் {பீமனிடம்}, “கலிங்கர்களின் மன்னன் {சுருதாயுஸ்}, கலிங்கர்களின் இளவரசன் கேதுமான், அதே நாட்டைச் {கலிங்க நாட்டைச்} சேர்ந்த சக்ரதேவன் மற்றும் கலிங்கர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டது நற்பேறாலேயே. யானைகளும், குதிரைகளும், தேர்களும், உன்னத வீரர்களும், துணிவுமிக்கப் போராளிகளும் நிறைந்த கலிங்கர்களின் அந்தப் பெரும்படை உமது கரத்தின் பலம் மற்றும் ஆற்றலால் மட்டுமே நசுக்கப்பட்டது” என்றான் {சாத்யகி}.

இதைச் சொன்னவனும், எதிரிகளைத் தண்டிப்பவனும், நீண்ட கரங்களைக் கொண்டவனுமான சினியின் பேரன் {சாத்யகி}, அவனது {பீமன் இருந்த} தேரில் விரைந்து ஏறி, பாண்டுவின் மகனைத் {பீமனைத்} தழுவி கொண்டான். பிறகு, மீண்டும் தனது தேருக்கே திரும்பிய அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {சாத்யகி} கோபத்தால் தூண்டப்பட்டு உமது துருப்புகளைக் {கௌரவத் துருப்புகளைக்} கொல்லத் தொடங்கி, பீமனை {பீமனின் கரங்களைப்} பலப்படுத்தினான்.” {என்றான் சஞ்சயன்}.

அர்ஜுனன் செய்த போர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 055-அஸ்வத்தாமனுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் திருஷ்டத்யும்னனைக் கண்டு அபிமன்யு அங்கே விரைவது; பெரும் வீரர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்த அபிமன்யுவைக் எதிர்த்து, துரியோதனன் மகனான லக்ஷ்மணன் விரைவது; அபிமன்யுவிடம் துன்புறும் தனது மகனைக் கண்டு துரியோதனன் அங்கே விரைவது; அபிமன்யுவைக் காக்க அர்ஜுனன் அங்கே விரைவது; அர்ஜுனன் புரிந்த பெரும் போர்; கௌரவவீரர்கள் அனைவரும் நாலா பக்கமும் சிதறி ஓடுவது; இரண்டாம் நாள் போரைப் பீஷ்மர் முடிவுக்குக் கொண்டு வருவது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த நாளின் முற்பகல் கடந்தும் [1], ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள், குதிரைப்படை வீரர்கள் ஆகியோரின் அழிவு தொடர்ந்த போது, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சல்லியன் மற்றும் உயர் ஆன்ம கிருபர் ஆகிய மூன்று வலிமைமிக்கத் தேர்வீரர்களுடனும் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்} போரிட்டுக் கொண்டிருந்தான்.

பாஞ்சால மன்னனின் {துருபதனின்} வலிமைமிக்க அந்த வாரிசு {திருஷ்டத்யும்னன்}, உலகம் முழுதும் கொண்டாடப்படும், துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} குதிரைகளைக் கொன்றான். தன் விலங்குகளை {குதிரைகளை} இழந்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, விரைவாகச் சல்லியனின் தேரில் ஏறிக் கொண்டு, பாஞ்சால மன்னனின் வாரிசின் {திருஷ்டத்யும்னனின்} மீது தன் கணைகளைப் பொழிந்தான்.

துரோணரின் மகனுடன் {அஸ்வத்தாமனுடன்} திருஷ்டத்யும்னன் போரில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் கண்ட சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தனது கூரிய கணைகளை இறைத்தபடி அங்கே விரைந்து வந்தான். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அவன் {அபிமன்யு}, சல்லியன் மீது இருபத்தைந்தும் {25}, கிருபரின் மீது ஒன்பதும் {9}, அஸ்வத்தாமன் மீது எட்டும் {8} எனத் தன் கணைகளை அடித்தான். எனினும், இறகு படைத்த பல கணைகளால் அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அர்ஜுனன் மகனைத் {அபிமன்யுவைத்} துளைத்தான். சல்லியன் பனிரெண்டு {12} கணைகளாலும், கிருபர் மூன்று {3} கூரிய கணைகளாலும் அவனை {அபிமன்யுவைத்} துளைத்தனர்.

உமது பேரனான லக்ஷ்மணன் {துரியோதனனின் மகன்}, சுபத்திரையின் மகன் {அபிமன்யு} போரில் ஈடுபடுவதைக் கண்டு சினம் தூண்டப்பட்டு அவனிடம் {அபிமன்யுவிடம்} விரைந்தான். அவர்களுக்கு இடையிலான போரும் தொடங்கியது. சினம் தூண்டப்பட்ட துரியோதனனின் மகன் {லக்ஷ்மணன்}, அந்த மோதலில் கூரிய கணைகளைக் கொண்டு சுபத்திரையின் மகனைத் {அபிமன்யுவைத்} துளைத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அது (அந்தச் செயல்) மிகுந்த அற்புதம் நிறைந்ததாகத் தோன்றியது.

ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கோபம் தூண்டப்பட்டவனும், வேகமான கரங்களைக் கொண்டவனுமான அபிமன்யு, தனது சகோதரனை {லஷ்மணனை} ஐநூறு {500} [2] கணைகளால் துளைத்தான். லக்ஷ்மணனும், தன் கணைகளைக் கொண்டு அவனது (தனது சகோதரனின் {அபிமன்யுவின்}) வில் தண்டின் நடுப்பகுதியில் {வில்லை பிடிக்கும் இடத்தில்} வெட்டினான். இதனால், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மக்கள் அனைவரும் உரக்கக் கூச்சலிட்டனர். பகைவீரர்களைக் கொல்பவனான சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தனது ஒடிந்த வில்லை ஒரு பக்கம் விட்டுவிட்டு, அழகானதும், கடுமையானதுமான மற்றொரு வில்லை [3] எடுத்துக் கொண்டான். இப்படி மோதலில் ஈடுபட்டவர்களும், மனிதர்களில் காளையருமான அவ்விருவரும், ஒருவரையொருவர் சாதனைகளில் விஞ்ச விரும்பி, கூரிய பல கணைகளால் ஒருவரையொருவர் துளைத்துக் கொண்டனர்.

அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது பேரனால் (அபிமன்யுவால்) இப்படித் துன்புறுத்தப்படும் தனது வலிமைமிக்க மகனைக் {லக்ஷ்மணனைக்} கண்ட மன்னன் துரியோதனன், அந்த இடத்திற்கு விரைந்து சென்றான். (அந்த இடத்தை நோக்கித்) உமது மகன் {துரியோதனன்} திரும்பியதும், மன்னர்கள் அனைவரும் தேர்க்கூட்டங்களுடன் அனைத்துப் புறங்களில் இருந்து அர்ஜுனனின் மகனைச் {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் வீழ்த்தப்பட முடியாதவனும், கிருஷ்ணனுக்கு நிகரான ஆற்றல் கொண்டவனுமான அந்த வீரன் {அபிமன்யு} இப்படி அந்த வீரர்களால் சூழப்பட்டாலும், சிறிதும் நடுங்காதிருந்தான்.

சுபத்திரையின் மகன் {அபிமன்யு} போரில் ஈடுபட்டு வருவதைக் கண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, கோபத்தால் தூண்டப்பட்டும், தனது மகனைக் காக்க விரும்பியும் அந்த இடத்திற்கு விரைந்து வந்தான். அதன் பேரில், பீஷ்மர் மற்றும் துரோணரின் தலைமையில் இருந்த மன்னர்கள் தங்கள் தேர்கள், யானைகள் மற்றும் குதிரைகள் ஆகியவற்றுடன் சவ்யசச்சினை {அர்ஜுனனை} நோக்கி வேகமாக விரைந்து வந்தனர்.

அப்போது, யானைகள், குதிரைகள், தேர்கள், காலாட்படை ஆகியவற்றால் திடீரென எழுப்பப்பட்ட பூமியின் புழுதி, அடர்த்தியாக வானத்தை மூடுவது தெரிந்தது. மேலும் ஆயிரக்கணக்கான யானைகளும், நூற்றுக்கணக்கான மன்னர்களும், அர்ஜுனனின் கணைகளை அடைந்த போது {நெருங்கிய போது}, எந்த முன்னேற்றத்தையும் மேற்கொண்டு அடைய முடியவில்லை. உயிரினங்கள் அனைத்தும் உரத்த அலறல்களை வெளியிட்டன. திசைப்புள்ளிகள் அனைத்தும் இருளடைந்தன.

குருக்களுடைய அத்துமீறலின் விளைவுகளைப் பொறுத்தவரை, அப்போது அது {அத்துமீறலின் விளைவு} கடுமையான மற்றும் கொடூரமான தன்மையை அடைந்தது [4]கிரீடியால் {அர்ஜுனனால்} அடிக்கப்பட்ட அம்புகளின் விளைவால், வானத்தையோ, திசைப்புள்ளிகளையோ, சூரியனையோ வேறுபடுத்திக் காண முடியவில்லை [5].

(தங்கள் முதுகில் இருந்த) கொடிகளை இழந்த யானைகள் பலவாக இருந்தன. தங்கள் குதிரைகளை இழந்த தேர்வீரர்களும் பலராக இருந்தனர். தங்கள் தேர்களை இழந்து உலவி கொண்டிருந்த தேர்ப்படைத் தலைவர்கள் சிலரும் காணப்பட்டனர். தங்கள் தேர்களை இழந்த சில தேர்வீரர்கள், தோள்கள் அங்கதங்களால் {தோள்வளைகளால்} அலங்கரிக்கப்பட்டு, கைகளில் ஆயுதத்துடன் அங்குமிங்கும் உலவிக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. குதிரையோட்டிகள் தங்கள் குதிரைகளைக் கைவிட்டும், யானையோட்டிகள் தங்கள் யானைகளைக் கைவிட்டும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அர்ஜுனன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக அனைத்துப் புறங்களிலும் சிதறி ஓடினர். அர்ஜுனனுடைய கணைகளின் விளைவால் மன்னர்கள் விழுவதும், தேர்கள், யானைகள் மற்றும் குதிரைகளில் இருந்து அவர்கள் வீழ்த்தப்படுவதும் காணப்பட்டது.

கடுமையாக மாறிய முகம் கொண்ட அர்ஜுனன், கதாயுதத்தைப் பிடித்தபடி உயர்த்தப்பட்ட வீரர்களின் கரங்களையும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வாள்களையோ, ஈட்டிகளையோ, அம்பறாத்தூணிகளையோ, கணைகளையோ, விற்களையோ, அங்குசங்களையோ, கொடிகளையோ தாங்கிக் கொண்டிருந்த கரங்களையும் தனது பயங்கரக் கணைகளைக் கொண்டு போர்க்களமெங்கும் வெட்டினான். அந்தப் போரில், உடைந்து சுக்குநூறாக்கப்பட்ட முள் பதித்த தண்டங்கள், உலக்கைகள், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே} சவளங்கள் {பிராசங்கள் – ஈட்டிகளில் ஒரு வகை}, குறுங்கணைகள் {பிண்டிபாலங்கள்}, பட்டா கத்திகள், கூர்முனை கொண்ட போர்க்கோடரிகள், வேல்கள் {தோமரங்கள்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துண்டுதுண்டான கேடயங்கள், கவசங்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கொடிமரங்கள், வீசி எறியப்பட்ட அனைத்து வகை ஆயுதங்கள், பொற்காம்புகள் கொண்ட குடைகள், இரும்பு கொக்கிகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தாற்றுக் கோல்கள் {அங்குசம் போன்றது}, சாட்டைகள் மற்றும் பூட்டாங்கயிறுகள் ஆகியவை குவியல்களாகக் கொட்டப் பட்டிருப்பதை அந்தப் போர்க்களத்தில் காண முடிந்தது.

ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, வீர அர்ஜுனனைப் போரில் எதிர்த்து முன்னேற உமது படையில் ஒரு மனிதனும் இல்லை. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிருதையின் மகனை {குந்தியின் மகன் அர்ஜுனனைப்} போரில் எதிர்த்து சென்ற எவரும், கூரிய கணைகளால் துளைக்கப்பட்டு அடுத்த உலகத்திற்கு அனுப்பப்பட்டனர். உமது போராளிகள் அனைவரும் ஓடும்போது அர்ஜுனனும், வாசுதேவனும் {கிருஷ்ணனும்} தங்கள் அற்புத சங்குகளை முழங்கினர்.

அந்தப் போரில் (குரு) படை நிர்மூலமாக்கப்பட்டதைக் கண்ட உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, புன்னகைத்தவாறே பரத்வாஜரின் வீர மகனிடம் {துரோணரிடம்}, “கிருஷ்ணனின் துணையைக் கொண்டவனும், பாண்டுவின் வீரமகனுமான இந்த வலிமைமிக்கத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தான் ஒருவனே (நமது) துருப்புகளைக் கையாளத் தகுதி வாய்ந்தவன் போல, அவர்களைக் கையாள்கிறானே. நாம் இப்போது காணும் இவனுடைய வடிவம் யுக முடிவில் தோன்றும் அந்தகனுக்கு {அனைத்தையும் அழிப்பவனுக்கு} ஒப்பாக இருப்பதால், இன்று இந்தப் போரில், எவ்வழியிலும் இவன் {அர்ஜுனன்} வீழ்த்தப்பட முடியாதவனாகவே இருக்கிறான். (நம்முடைய) இந்தப் பரந்த படையை மீண்டும் திரட்டுவது இயலாது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ஓடும் நமது துருப்புகளைப் பாரும். அதோ, அனைத்து வழிகளிலும் முழு உலகின் பார்வையைக் கொள்ளையடிக்கும் சூரியன், அஸ்தம் [6] என்று அழைக்கப்படும் சிறந்த மலையை அடையப் போகிறான். இதனால், ஓ! மனிதர்களில் காளையே {துரோணரே}, (படைகளைத்) திரும்ப அழைக்கும் நேரம் வந்துவிட்டதாக நான் நினைக்கிறேன். சோர்வும், பீதியும் அடைந்திருக்கும் வீரர்கள் அனைவரும் போரிட மாட்டார்கள்” என்றார் {பீஷ்மர்}.

ஆசான்களில் சிறந்த துரோணரிடம் இதைச் சொன்னவரும், வலிமைமிக்கத் தேர்வீரருமான பீஷ்மர், உமது படைகளைத் திரும்ப அழைக்க ஏற்பாடு செய்தார். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சூரியன் மறைந்து, மாலையின் சந்திப்பொழுது ஏற்பட்டதும், உமது படைகளும், அவர்களது படைகளும் பின்வாங்கின” {என்றான் சஞ்சயன்}.

இரண்டாம் நாள் போர் முற்றிற்று

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ  பீஷ்ம பர்வம்-ஸ்ரீ பீஷ்மவத பர்வம்-முதல் நாள் போர்-

October 13, 2025

“யுதிஷ்டிரன் இழிந்தவன்” என்ற வீரர்கள்! – பீஷ்ம பர்வம் பகுதி – 043அ-அர்ஜுனன் மீண்டும் வில்லை எடுத்ததும் பாண்டவர் தரப்பு ஆரவாரம் செய்ந்தது; அனைவரும் போருக்குத் தயாரான போது யுதிஷ்டிரன் தனது கவசத்தையும் ஆயுதங்களையும் துறந்து எதிரிப்படையை நோக்கி நடந்து சென்றது; கௌரவப் படை வீரர்கள் யுதிஷ்டிரனை நிந்தித்தது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தனஞ்சயன் {அர்ஜுனன்} மீண்டும் (தனது) கணைகளையும், காண்டீவத்தையும் எடுத்ததைக் கண்ட (பாண்டவத் தரப்பில் உள்ள) வலிமைமிக்கத் தேர்வீரர்கள் உரத்த குரலில் ஆர்ப்பரித்தனர். பாண்டவர்களும், சோமகர்களும், அவர்களைப் பின்தொடர்பவர்களும், மகிழ்ச்சியால் நிறைந்து, கடலில் பிறந்தவைகளான தங்களது சங்குகளை முழங்கினர். பேரிகைகள், காகளங்கள், ஜயமங்களைகள், மாட்டுக் கொம்புகள் ஆகியன ஒன்றாக அடிக்கப்பட்டும், ஊதப்பட்டும் அங்கே எழுந்த முழக்கமானது, பெரும் ஒலியுடையதாக இருந்தது.

பிறகு, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, அங்கே கந்தர்வர்கள், பித்ருக்கள், சித்தர் மற்றும் சாரணர்களின் கூட்டங்கள் ஆகியவற்றுடன் கூடிய தேவர்கள், (அக்காட்சியைச்) சாட்சியாகக் காணும் விருப்பத்தில் அங்கே வந்தனர். உயர்ந்த அருளைக் கொண்ட முனிவர்களும், அந்தப் பெரும் படுகொலையைக் காண்பதற்காக, நூறுவேள்விகளைச் செய்தவனின் {இந்திரனின்} தலைமையிலான அந்தக் கூட்டத்துடன் அங்கே வந்தனர்.

பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இரு கடல்களைப் போல இருந்த அந்த இரு படைகளும் மோதலுக்குத் தயாராகவும், தொடர்ச்சியாக நகர்ந்து கொண்டும் இருப்பதைக் கண்ட நீதிமானான வீர மன்னன் யுதிஷ்டிரன், தனது கவசத்தைக் கழற்றி, தனது அற்புத ஆயுதத்தை ஒரு புறமாக வைத்துவிட்டு, கூப்பிய கரங்களுடன் தனது தேரில் இருந்து விரைவாக இறங்கி, கட்டுப்படுத்தப்பட்ட பேச்சுடன் {மௌனமாக}, பாட்டனைப் {பீஷ்மரைப்} பார்த்துக் கொண்டே, எதிரிப்படை (நின்று கொண்டு) இருந்த திசையை நோக்கி, கிழக்கு முகமாகக் கால்நடையாகச் சென்றான்.

(இப்படி) அவன் {யுதிஷ்டிரன்} செல்வதைக் கண்ட குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, விரைவாகத் தனது தேரில் இருந்து இறங்கி, தனது (பிற) சகோதரர்களுடன் அவனை {யுதிஷ்டிரனைப்} பின்தொடர்ந்து சென்றான். தலைவன் வாசுதேவனும் {கிருஷ்ணனும்} அவனுக்குப் பின்னே பின்தொடர்ந்து சென்றான். இதனால் பதட்டம் நிறைந்த (அவனது {யுதிஷ்டிரனின்} படையில் இருந்த) முக்கியமான மன்னர்களும், அதே பாதையில் பின்தொடர்ந்து சென்றார்கள்.

அப்போது அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, உமது தம்பிகளைக் கைவிட்டு, கால்நடையாக, கிழக்கு முகம் நோக்கி, எதிரிக்கூட்டத்திடம் செல்லும் உமது செயல் யாது?” என்று கேட்டான் {அர்ஜுனன்}.

பீமசேனன் {யுதிஷ்ட்ரனிடம்}, “ஓ! மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, உமது கவத்தையும் ஆயுதங்களையும் கைவிட்டு, கவசம் தரித்திருக்கும் எதிரி வீரர்களை நோக்கி, ஓ! பூமியின் ஆட்சியாளரே {யுதிஷ்டிரரே}, உமது தம்பிகளையும் விட்டுவிட்டு எங்கே செல்கிறீர்?” என்று கேட்டான் {பீமன்}.

நகுலன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, எனது மூத்த அண்ணனான நீர் இந்த வழியில் செல்வது (கண்டு) எனது நெஞ்சம் கலங்குகிறது. (எங்களுக்குச்) சொல்லும், எங்கே செல்கிறீர்?” என்று கேட்டான் {நகுலன்}.

சகாதேவன் {யுதிஷ்டிரனிடம்}, “எண்ணற்றவர்களாகவும், பயங்கரமாகவும் இருக்கும் இந்த எதிரிப் படைப்பிரிவுகள் நம்மிடம் போரிடவே இங்கு வந்திருக்கின்றன. ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நமது எதிரிகளின் திசையில் நீர் எங்கே செல்கிறீர்?” என்று கேட்டான் {சகாதேவன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “தனது தம்பிகள் இப்படிக் கேட்டுக் கொண்டிருந்தாலும், ஓ! குருகுலத்தின் மகனே {திருதராஷ்டிரரே}, மௌனத்துடன் எதுவும் சொல்லாமல் தொடர்ந்து சென்றான்.

பெரும் அறிவும், உயர் ஆன்மாவும் கொண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, புன்னகைத்தபடியே அவர்களிடம், (அப்போது), “இவரது நோக்கத்தை நான் அறிவேன். தனக்கு மேன்மையான பீஷ்மர், துரோணர், கிருபர், சல்லியன் (போன்றவர்களுக்கு) தனது மரியாதைகளைச் செலுத்திய பிறகு, எதிரியுடன் இவர் போரிடப் போகிறார். தனது ஆசான்கள், வயதில் மூத்த மரியாதைக்குரியவர்கள், தனது சொந்தங்கள் ஆகியோருக்கு விதிப்படி தனது மரியாதைகளைச் செலுத்திய பிறகு, தனக்கு மேன்மையானவர்களுடன் எவன் போரிடுவானோ, அவன், போரில் நிச்சயமாக வெற்றிபெறுவான் என்பது பழங்கால வரலாறுகளில் இருந்து கேள்விப்படப்படுகிறது. இதுவே என் எண்ணமும் கூட” என்றான் {கிருஷ்ணன்}.

கிருஷ்ணன் இதைச் சொல்லிக் கொண்டிருந்த போது, திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} படைப்பிரிவின் மத்தியில் “ஐயோ” என்றும் “ஓ” என்றும் பெருத்த ஆரவாரம் எழுந்தது. ஆனால் (படையில் இருந்த) பிறரோ அமைதியாக இருந்தனர். யுதிஷ்டிரனைக் கண்ட திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} போர்வீர்கள் தங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர், “இவன் தனது குலத்தின் இழிந்தவன். இந்த மன்னன் {யுதிஷ்டிரன்} அச்சத்தால் பீஷ்மரை நோக்கி வருகிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது. தனது தம்பிகளுடன் கூடிய யுதிஷ்டிரன் (பீஷ்மரின்) பாதுகாப்பை நாடுபவன் ஆகிவிட்டான். தனஞ்சயன் {அர்ஜுனன்}, பாண்டு மகனான விருகோதரன் {பீமன்}, நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரின் பாதுகாப்பைக் கொண்ட இந்தப் பாண்டுவின் (மூத்த) மகன் {யுதிஷ்டிரனே} ஏன் அஞ்சுகிறான்? இந்த உலகத்தால் கொண்டாடப்பட்டாலும் கூட, இவன் பலமற்றவனாகவும், போரில் நெஞ்சம் நிறைந்த அச்சம் கொண்டவனாகவும் இருப்பதால், ஒரு போதும் இவன் க்ஷத்திரிய வகையில் பிறந்திருக்க முடியாது” என்று பேசிக் கொண்டனர். பிறகு அந்த வீரர்கள் அனைவரும் கௌரவர்களைப் புகழ்ந்தனர். பிறகு இன்புற்ற அவர்கள் அனைவரும், மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் தங்களது ஆடைகளை அசைத்தவண்ணம் இருந்தார்கள்.

மேலும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கே (அப்போது) தனது தம்பிகள் அனைவரோடும், கேசவனோடும் {கிருஷ்ணனோடும்} கூடிய யுதிஷ்டிரனை அந்த வீரர்கள் அனைவரும் நிந்தித்தனர். இப்படி யுதிஷ்டிரனை நிந்தித்த அந்தக் கௌரவப் படையினர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விரைவில் மீண்டும் அமைதியடைந்தனர். “இந்த மன்னன் என்ன சொல்வான்? பீஷ்மர் என்ன பதில் சொல்வார்? தன் பலத்தில் தற்பெருமை நிறைந்த பீமன் என்ன சொல்வான், கிருஷ்ணனும் அர்ஜுனனும் என்ன சொல்வார்கள்? உண்மையில் யுதிஷ்டிரனுக்குச் சொல்ல வேண்டியது என்ன?” என்று யுதிஷ்டரனைக் குறித்த ஆர்வம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த இரு படைகளிலும் பெரிதாக இருந்தது.

பாட்டனையும் ஆசானையும் வணங்கிய யுதிஷ்டிரன் – பீஷ்ம பர்வம் பகுதி – 043ஆ-தன் தேரைவிட்டு இறங்கி கைகூப்பிய படி சென்ற யுதிஷ்டிரன் நேரே பீஷ்மரிடம் சென்று அனுமதி கோருவது; வரமும் கேட்பது; பிறகு துரோணரிடம் சென்று அனுமதி கோருவது; வரமும் கேட்பது..

(அதே வேளையில்), அம்புகளும் வேல்களும் நிறைந்த எதிரிப்படையைத் ஊடுருவிச் சென்ற மன்னன் {யுதிஷ்டிரன்}, தனது தம்பிகள் சூழ பீஷ்மரை நோக்கி முன்னேறினான். அவரது {பீஷ்மரின்} பாதங்களைத் தன் இரு கைகளாலும் பற்றிய அந்தப் பாண்டுவின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, போருக்குத் தயாராக இருந்த சந்தனுவின் மகனிடம் {பீஷ்மரிடம்} (இவ்வார்த்தைகளைப்) பேசினான்.

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! வெல்லப்பட முடியாதவரே {பீஷ்மரே}, நான் உம்மை வணங்குகிறேன். உம்முடன் நாங்கள் போரிடப் போகிறோம். இக்காரியத்தில் (எங்களுக்கு) உமது அனுமதியை அருள்வீராக. (உமது) ஆசியையும் (எங்களுக்கு) அளிப்பீராக” என்றான் {யுதிஷ்டிரன்}.

அதற்குப் பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பூமியின் தலைவா, ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, இந்தப் போரில் இப்படி என்னிடம் நீ வராமல் இருந்திருந்தால், ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, நீ தோல்வி அடையவே நான் உன்னைச் சபித்திருப்பேன். ஓ! மகனே {யுதிஷ்டிரா}, நான் (உன்னிடம்) மனம் நிறைந்தேன். போரிட்டு வெற்றியை அடைவாயாக. ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, போரில் நீ வேறு எதை விரும்புவாயோ அவற்றையும் அடைவாயாக. ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே யுதிஷ்டிரா}, எங்களிடம் நீ விரும்பும் வரத்தையும் கேட்பாயாக. ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, இது {இந்தக் காரியம்} இப்படி நடந்திருப்பதால் தோல்வி உனதாகாது. மனிதன் செல்வத்திற்கு அடிமையானவன். ஆனால் செல்வம் எவனுக்கும் அடிமையில்லை. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இதுவே உண்மை. நான் கௌரவர்களின் செல்வத்தால் கட்டப்பட்டு இருக்கிறேன். ஓ! குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, இதன் காரணமாகவே, ஓர் அலியைப் போல, “கௌரவர்களின் செல்வத்தால் நான் கட்டப்பட்டிருக்கிறேன்” என்ற இந்த வார்த்தைகளைச் சொல்கிறேன். போரைத் தவிர்த்து, நீ வேறு எதை விரும்புகிறாய்?” என்று கேட்டார் {பீஷ்மர்} [1].

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பெரும் அறிவைக் கொண்டவரே {பீஷ்மரே}, நீர் கௌரவர்களுக்காகப் போரிடுவீராக. எனினும், நாளுக்கு நாள் எனது நன்மையையும் விரும்பி, எனது நலன்களையும் ஆலோசிப்பீராக. எப்போதும் இதுவே (உம்மிடம்) எனது வேண்டுதலாகும்” என்றான் {யுதிஷ்டிரனிடம்}.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, ஓ! குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, இதில் என்னால் உனக்கு என்ன உதவ முடியும்? நிச்சயமாக, நான் (உனது) எதிரிகளுக்காகவே {துரோனாதிபதிகளுக்காகவே} போரிடுவேன். நீ சொல்ல வேண்டியதை என்னிடம் சொல்வாயாக” என்றார் {பீஷ்மர்}.

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஐயா, ஓ! பாட்டா {பீஷ்மரே}, வெல்லப்பட முடியாத உம்மை நாங்கள் எவ்வாறு போரில் வீழ்த்துவது? எனது நன்மைக்கான இதில், நீர் ஏதாவது நன்மையைக் கண்டால், உண்மையில் இஃதை எனக்குச் சொல்வீராக” என்றான் {யுதிஷ்டிரன்}.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, தேவர்களின் தலைவனாகவே {இந்திரனாகவே} எவனும் இருந்தாலும் கூட, நான் போரிடும்போது, என்னைப் போரில் வீழ்த்துபவன் எவனையும் நான் காணவில்லை” என்றார் {பீஷ்மர்}.

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா {பீஷ்மரே}, எனது வணக்கங்கள் உமதாகட்டும். எனவே, (இதை) நான் உம்மிடம் கேட்கிறேன். போரில் எதிரிகளால் உமது மரணத்தைப் எவ்வாறு ஏற்படுத்த முடியும் என்பதை எங்களுக்குச் சொல்வீராக” என்று கேட்டான் {யுதிஷ்டிரனிடம்}.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஐயா {யுதிஷ்டிரா}, போரில் என்னை வீழ்த்த வல்ல ஒருவனையும் நான் காணவில்லை. எனது மரணத்திற்கான நேரமும் இன்னும் வரவில்லை. என்னிடம் மீண்டும் வருவாயாக” என்றார் {பீஷ்மர்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடன்} தொடர்ந்தான், “பிறகு, ஓ! குரு குலத்தின் மகனே {திருதராஷ்டிரரே}, மீண்டும் பீஷ்மருக்குத் தலை வணங்கிய யுதிஷ்டிரன், அவரது வார்த்தைகளை ஏற்றான். பிறகு அந்த வலிய கரங்களைக் கொண்டவன் {யுதிஷ்டிரன்}, தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த வீரர்கள் அனைவருக்கும் மத்தியில், தன் தம்பிகள் துணையுடன் ஆசானின் (துரோணரின்) தேரை நோக்கி முன்னேறினான். துரோணரை வணங்கி அவரை வலம் வந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, தனது நன்மைக்கான வார்த்தைகளை அந்த வெல்லப்பட முடியாத வீரரிடம் {துரோணரிடம்} பேசினான்.

யுதிஷ்டிரன் {துரோணரிடம்}, “ஓ! வெல்லப்பட முடியாதவரே, ஓ மறுபிறப்பாளரே {பிராமணரே_துரோணரே}, உமது அனுமதியுடன், எனது எதிரிகள் அனைவரையும் வீழ்த்தும் வண்ணம், பாவமீட்டாமல் நான் போரிடுவது எவ்வாறு? [2]” என்று கேட்டான்.

துரோணர் {யுதிஷ்டிரனிடம்}, “போரிடத் தீர்மானித்து, (இப்படி) நீ என்னிடம் வராது இருந்திருந்தால், உனது முழுமையான வீழ்ச்சிக்கு நான் உன்னைச் சபித்திருப்பேன். எனினும், ஓ! பாவமற்றவனே, ஓ! யுதிஷ்டிரா, உன்னிடம் மனநிறைவையும், மதிப்பையும் {கௌரவத்தையும்} அடைந்தேன். நான் உன்னை அனுமதிக்கிறேன், போரிடு, வெற்றியை அடைவாயாக. நான் உனது விருப்பத்தையும் நிறைவேற்றுவேன். நீ என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல். இந்தச் சூழ்நிலையில், போரைத் தவிர்த்து, நீ என்ன விரும்புகிறாய்? மனிதன் செல்வத்திற்கு அடிமையாக இருக்கிறான். ஆனால் செல்வம் எவனுக்கும் அடிமையில்லை. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இஃது உண்மையே. நான் கௌரவர்களின் செல்வத்தால் கட்டப்பட்டு இருக்கிறேன். இதன் காரணமாகவே, ஓர் அலியைப் போல நான் கௌரவர்களுக்காகப் போரிட வேண்டியிருக்கிறது. மேலும், இதன் காரணமாகவே, ஓர் அலியைப் போல, “போரைத் தவிர்த்து, நீ வேறு எதை விரும்புகிறாய்?” என்ற இந்த வார்த்தைகளைச் சொல்கிறேன். நான் கௌரவர்களுக்காகப் போரிடுவேன். ஆனால் உனது வெற்றிக்காகவே வேண்டுவேன்” என்றார் {துரோணர்}.

யுதிஷ்டிரன் {துரோணரிடம்}, “ஓ! மறுபிறப்பாளரே {துரோணரே}, எனது வெற்றிக்காக வேண்டி, எனது நன்மைக்காக ஆலோசிப்பீராக. எனினும், கௌரவர்களுக்காகப் போரிடுவீராக. இதையே நான் உம்மிடம் வரமாகக் கேட்கிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.

துரோணர் {யுதிஷ்டிரனிடம்}, “நான் எதுவரை போரிடுவேனோ, அதுவரை வெற்றி உனதாக முடியாது. (எனவே), ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, என்னை விரைவாகக் கொல்ல உனது தம்பிகளுடன் முயல்வாயாக” என்றார் {துரோணர்}.

யுதிஷ்டிரன் {துரோணரிடம்}, “இதற்கு ஐயோ, ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே {துரோணரே}, உமது மரணத்திற்கான வழிமுறைகளை (எங்களுக்குச்) சொல்லும். ஓ! ஆசானே {துரோணரே}, நெடுஞ்சாண் கிடையாக என்னைக் கிடத்திக் கொண்டு நான் உம்மிடம் இதைக் கேட்கிறேன். உமக்கு (எனது) வணக்கங்கள்” என்றான்.

துரோணர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஐயா {யுதிஷ்டிரா}, “கோபம் தூண்டப்பட்ட நிலையில் போரில் ஈடுபட்டு, தொடர்ச்சியாக அம்புகளைப் பொழிந்து கொண்டு களத்தில் நிற்கும் என்னைக் கொல்லத்தக்க எதிரி எவனையும் நான் காணவில்லை. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, எப்போது நான் என் ஆயுதங்களைக் கைவிட்டு, சுற்றுப்புறத்தில் இருந்து விடுபட்டு (யோகத் தியானத்தில்) இருக்கிறேனோ, அப்போது தவிர என்னைக் கொல்ல எவனாலும் முடியாது. நான் இதை உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். நம்பத்தகுந்த பேச்சுக் கொண்டவனிடம் இருந்து முற்றிலும் ஏற்கத்தகாத {இனிமையற்ற} எதையாவது கேட்டால், போரில் நான் எனது ஆயுதங்களைக் கைவிடுவேன் என்பதையும் நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்” என்றார் {துரோணர்}

கிருபர், சல்லியன், யுதிஷ்டிரன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 043இ-துரோணரிடம் இருந்து அகன்றதும் யுதிஷ்டிரன் கிருபரிடம் சென்று, அவரிடம் அனுமதியும் ஆசியும் பெறுவது; பிறகு சல்லியனிடம் சென்று அவனது அனுமதியையும், ஆசியையும் யுதிஷ்டிரன் பெறுவது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பரத்வாஜரின் அறிவுடைய மகனின் {துரோணரின்} இந்த வார்த்தைகளைக் கேட்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆசானுக்கு {துரோணருக்கு} மரியாதை செலுத்திவிட்டு, சரத்வானின் மகனை {கிருபரை} நோக்கி முன்னேறினான் (யுதிஷ்டிரன்). ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பேச்சில் வல்லவனான யுதிஷ்டிரன், கிருபரை வணங்கி, அவரை வலம் வந்து, பெரும் வீரம் கொண்ட அந்த வீரரிடம் {கிருபரிடம்} இவ்வார்த்தைகளைப் பேசினான்.

யுதிஷ்டிரன் {கிருபரிடம்}, “ஓ! ஆசானே {கிருபரே}, உமது அனுமதியைப் பெற்று, பாவமீட்டாமல் நான் போரிடுவேன். உம்மால் அனுமதிக்கப்பட்டு, ஓ பாவமற்றவரே {கிருபரே}, நான் (என்) எதிரிகள் அனைவரையும் வீழ்த்துவேன்” என்றான்.

கிருபர் {யுதிஷ்டிரனிடம்}, “போரிடத் தீர்மானித்த பிறகு, (இப்படி) நீ என்னிடம் வந்திருக்க மாட்டாயென்றால், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, முற்றான உனது தோல்விக்கு நான் உன்னைச் சபித்திருப்பேன். மனிதன் செல்வத்திற்கு அடிமையாக இருக்கிறான். ஆனால் செல்வம் எவனுக்கும் அடிமையில்லை. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இஃது உண்மையே. கௌரவர்களின் செல்வத்தால் நான் கட்டப்பட்டிருக்கிறேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நான் அவர்கள் சார்பாகவே போரிட வேண்டும். இதுவே என் கருத்து. எனவே, “போரைத் தவிர நீ என்ன விரும்புகிறாய்?” என்று ஓர் அலியைப் போலக் கேட்கிறேன்” என்றார் {கிருபர்}.

யுதிஷ்டிரன் {கிருபரிடம்}, “ஐயோ, எனவேதான், ஓ! ஆசானே {கிருபரே} நான் உம்மைக் கேட்கிறேன். எனது வார்த்தைகளைக் கேளும்” என்றான். இதைச் சொன்ன அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} மிகவும் கலங்கி உணர்வற்றுப் போய் அமைதியாக நின்றான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “எனினும், அவன் சொல்ல நினைத்ததைப் புரிந்து கொண்ட கௌதமர் {கிருபர்} அவனிடம் மறுமொழியாக, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா} நான் கொல்லப்பட முடியாதவன். போரிட்டு வெற்றியை அடைவாயாக. உனது வருகையால் நான் மனம் நிறைந்தேன். (படுக்கையில் இருந்து) தினமும் எழுந்ததும், நான் உனது வெற்றிக்காகவே வேண்டுவேன். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்” என்றார் {கிருபர்}.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கௌதமரின் {கிருபரின்} இந்த வார்த்தைகளைக் கேட்டு, அவருக்கு உரிய மரியாதையை வழங்கிய மன்னன் {யுதிஷ்டிரன்}, மத்ர ஆட்சியாளன் {சல்லியன்} இருந்த இடத்திற்கு முன்னேறினான். சல்லியனை வணங்கி அவனை வலம் வந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, வெல்லப்பட முடியாத அந்த வீரனிடம் {சல்லியனிடம்}, தனது நன்மைக்கான இந்த வார்த்தைகளைப் பேசினான்.

யுதிஷ்டிரன் {சல்லியனிடம்}, “ஓ! வெல்லப்பட முடியாதவரே {சல்லியரே}, உமது அனுமதியைப் பெற்று, பாவமீட்டாமல் நான் போரிடுவேன். ஓ! மன்னா {சல்லியரே}, உம்மால் அனுமதிக்கப்பட்டு, வீரமிக்க (என்) எதிரிகளை நான் வீழ்த்துவேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்}, “போரிடத் தீர்மானித்த பிறகு, (இப்படி) நீ என்னிடம் வந்திருக்க மாட்டாயென்றால், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, போரில் தோல்வியுற நான் உன்னைச் சபித்திருப்பேன். நான் (உன்னிடம்) மனம் நிறைந்தேன். (உன்னால்) மதிக்கவும் பட்டேன். நீ விரும்பியவாறே நடக்கட்டும். நான் உனக்கு அனுமதியளிக்கிறேன், போரிட்டு வெற்றியை அடைவாயாக. ஓ! வீரா {யுதிஷ்டிரா}, சொல். உனது தேவை என்ன? நான் உனக்கு என்ன தர வேண்டும்? இந்தச் சூழ்நிலையில், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, போரைத் தவிர என்ன நீ விரும்புகிறாய்? மனிதன் செல்வத்துக்கு அடிமையாக இருக்கிறான். ஆனால் செல்வம் எவனுக்கும் அடிமையில்லை. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இஃது உண்மையே. ஓ! மருமகனே {யுதிஷ்டிரா}, கௌரவர்களின் செல்வத்தால் நான் கட்டப்பட்டிருக்கிறேன். இதன் காரணமாகவே, “நீ விரும்பும் ஆசையை நான் நிறைவேற்றுவேன்” என்று ஓர் அலியைப் போலப் பேசுகிறேன். போரைத் தவிர, நீ என்ன விரும்புகிறாய்?” என்று கேட்டான் {சல்லியன்}.

யுதிஷ்டிரன் {சல்லியனிடம்}, “ஓ! மன்னா {சல்லியரே}, எனக்குப் பெரும் நன்மை எதுவோ அதைத் தினமும் நினைப்பீராக. உமது விருப்பப்படியே நீர் எதிரிக்காகப் போரிடுவீராக. நான் வேண்டும் வரம் இதுவே” என்றான் {யுதிஷ்டிரன்}.

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்}, “இந்தச் சூழ்நிலையில், ஓ! மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, நான் உனக்கு என்ன உதவியைச் செய்ய முடியும் என்பதைச் சொல்வாயாக? நான் நிச்சயமாக (உனது) எதிரிக்காகவே போரிடுவேன். ஏனெனில், கௌரவர்கள் தங்கள் செல்வத்தைக் கொண்டு என்னை அவர்கள் தரப்பாக்கிக் கொண்டார்கள் [1].

யுதிஷ்டிரன் {சல்லியனிடம்}, “ஓ! சல்லியரே, (போருக்கான) ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த போது, என்னால் வேண்டப்பட்டதே, அதுவே எனது வரமாகும். சூத மகனின் (கர்ணனின்) சக்தி போரில் உம்மால் குறைக்கப்பட வேண்டும்” என்றான் {யுதிஷ்டிரன்}.

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குந்தியின் மகனே, ஓ! யுதிஷ்டிரா, இந்த உனது விருப்பம் நிறைவேறும். செல்வாயாக. உனது விருப்பப்படி போரிடுவாயாக. உனது வெற்றியை நான் கவனித்துக் கொள்கிறேன் [2]” என்றான்.

கௌரவர்களைக் கைவிட்ட யுயுத்சு! – பீஷ்ம பர்வம் பகுதி – 043ஈ-சல்லியனிடம் விடைபெற்ற யுதிஷ்டிரன் கௌரவப் படையை விட்டு வெளியேறுவது; கர்ணனிடம் கிருஷ்ணன் தங்கள் தரப்புக்கு வருமாறு கோருவது; கர்ணன் மறுப்பது; கௌரவப் படை வீரர்களிடம் யுதிஷ்டிரன் கோரிக்கை வைப்பது; யுயுத்சு பாண்டவர் தரப்பை அடைவது; பாண்டவர்களின் நடத்தையை அங்கிருந்த அனைவரும் மெச்சுவது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “தனது தாய்மாமனான மத்ர ஆட்சியாளனின் {சல்லியனின்} அனுமதியைப் பெற்ற அந்தக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, தனது தம்பிகள் சூழ அந்தப் பரந்த படையை விட்டு வெளியே வந்தான். பிறகு வாசுதேவன் {கிருஷ்ணன்}, அந்தப் போர்க்களத்தில் இருந்த ராதையின் மகனிடம் {கர்ணனிடம்} சென்றான். பாண்டவர்களுக்காகக் கர்ணனிடம் அந்தக் கதனின் அண்ணன் {கிருஷ்ணன்} பேசினான். “ஓ! கர்ணா, பீஷ்மர் மீதிருக்கும் வெறுப்பால் நீ போரிடப் போவதில்லை என்று நான் கேள்விப்பட்டேன். ஓ! ராதையின் மகனே {கர்ணா}, எங்கள் தரப்புக்கு வருவாயாக. பீஷ்மர் கொல்லப்படாதவரை (எங்களுடன் தங்கி) இருக்கலாம். பீஷ்மர் கொல்லப்பட்ட பிறகும், ஓ! ராதையின் மகனே {கர்ணா}, நீ எத்தரப்பையும் விரும்பவில்லையெனில், துரியோதனன் தரப்பில் இருந்து கொண்டு மீண்டும் நீ போரில் ஈடுபடலாம் [1]” என்றான் {கிருஷ்ணன்}.

கர்ணன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! கேசவா {கிருஷ்ணா}, திருதராஷ்டிரன் மகனுக்கு {துரியோதனனுக்கு} ஏற்பில்லாத எதையும் நான் செய்ய மாட்டேன். துரியோதனனுடைய நன்மையில் அர்ப்பணிப்புள்ள நான் எனது உயிரையும் (அவனுக்காக) விடுவேன் என்பதை அறிவாயாக” என்றான். (கர்ணனின்) இவ்வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ணன் {பேசுவதை} நிறுத்திக் கொண்டு யுதிஷ்டிரனின் தலைமையிலான பாண்டுவின் மகன்களுடன் {பாண்டவர்களுடன்} மீண்டும் இணைந்து கொண்டான்.

பிறகு, பாண்டுவின் மூத்த மகன் {யுதிஷ்டிரன்}, வீரர்கள் அனைவருக்கும் மத்தியில், “எவன் எங்களைத் தேர்ந்தெடுப்பானோ {விரும்பி ஏற்பானோ}, அவனை எங்கள் கூட்டாளியாக நாங்களும் தேர்ந்தெடுப்போம் {விரும்பி ஏற்போம்}” என்று உரக்கச் சொன்னான்.

அவர்களின் {பாண்டவர்களின்} மீது கண்களைச் செலுத்திய யுயுத்சு, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், குந்தியின் மகனும், நீதிமானுமான மன்னன் {தர்மராஜா} யுதிஷ்டிரனிடம், “பாவமற்றவரே {யுதிஷ்டிரரே}, நீர் என்னை ஏற்பீரென்றால், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, உமக்கு {உமது தலைமையின்} கீழ் {இருந்து கொண்டு}, உங்கள் அனைவருக்காகவும் திருதராஷ்டிரர் மகன்களுடன் போரிடுவேன்” என்றான் {யுயுத்சு}.

யுதிஷ்டிரன் {யுயுத்சுவிடம்}, “வா, வருவாயாக, மூடர்களான உனது சகோதரர்களுடன் நாம் அனைவரும் போரிடுவோம். ஓ! யுயுத்சு, வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, நாங்கள் அனைவரும், உன்னிடம், “ஓ! வலியகரங்களைக் கொண்டவனே {யுயுத்சு} உன்னை ஏற்கிறோம். என் காரியமாக நீ போரிடுவாயாக” என்றே சொல்கிறோம். திருதராஷ்டிரப் பரம்பரையின் நூலும் {தொடர்ச்சியும்}, அவரது {திருதராஷ்டிரரின்} ஈமப் பிண்டமும் உன்னிடமே உள்ளது என்றே தெரிகிறது. ஓ! இளவரசே, ஓ! பெரும் காந்தியுடையவனே {யுயுத்சுவே}, உன்னை ஏற்கும் எங்களை நீயும் ஏற்பாயாக. தீய புரிதல் {புத்தி} கொண்டவனும், சினம் நிறைந்தவனுமான துரியோதனின் வாழ்வு முடியப்போகிறது” என்றான் {யுதிஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “குருக்களான உமது மகன்களைக் கைவிட்ட யுயுத்சு, பிறகு, துந்துபி மற்றும் பேரிகைகளின் முழக்கத்தோடு பாண்டவர்களின் படைக்குச் சென்றான். மகிழ்ச்சியால் நிறைந்தவனான வலிய கரங்களைக் கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், தங்கத்தின் ஒளி பொருந்தியதும் பளபளப்பு கொண்டதுமான தனது கவசத்தை மீண்டும் அணிந்து கொண்டான். பிறகு, மனிதர்களில் காளையரான அவர்கள் அனைவரும் தங்கள் தங்களுக்குரிய தேர்களில் ஏறினர். மேலும், அவர்கள் முன்பு போலவே தங்கள் துருப்புகளின் எதிர் வியூகத்தை அமைத்துக் கொண்டனர். துந்துபிகளையும், காகளங்களையும் நூற்றுக்கணக்கில் அவர்கள் ஒலிக்கச் செய்தனர். பிறகு, மனிதர்களில் காளையரான அவர்களும் பல்வேறு வகைகளில் சிம்ம முழக்கமிட்டார்கள்.

மனிதப் புலிகளான அந்தப் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, தங்கள் தேர்களில் ஏறுவதைக் கண்ட (அவர்களது தரப்பு) மன்னர்களும், திருஷ்டத்யும்னனும், பிறரும் மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

மரியாதைக்குரியவர்களுக்கு முறையான மரியாதையைச் செய்த பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} உயர்ந்த பண்பைக் கண்டவர்களும், அப்போது அங்கிருந்தவர்களுமான மன்னர்கள் அனைவரும் அவர்களை {பாண்டவர்களை} உயர்வாக மெச்சினார்கள். நட்பு, பரிவு, சொந்தங்களிடம் அன்பு ஆகியவற்றை உரிய காலத்தில் வெளிப்படுத்திய அந்த உயர் ஆன்ம மனிதர்களைக் {பாண்டவர்களைக்} குறித்து அந்த ஏகாதிபதிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். அந்தப் புகழ்மிக்க மனிதர்களைக் {பாண்டவர்களைக்} குறித்த துதிபாடல்களுடன் இணைந்து “அருமை, அருமை” என்ற இனிமை வார்த்தைகளே எங்கும் வெளிப்பட்டன.

இதன் விளைவாக அனைவரின் மனங்களும், இதயங்களும் அவர்களின் {பாண்டவர்களின்} பால் ஈர்க்கப்பட்டன. பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} அந்த நடத்தையைச் சாட்சியாகக் கண்டவர்களும், அல்லது கேட்டவர்களும், மிலேச்சர்களும், ஆரியர்களுமான அனைவரும் தடைபட்ட {தழுதழுத்த} குரல்களுடன் அழுதனர். பெரும் சக்தி கொண்ட அந்த வீரர்கள் {மிலேச்சர்களும், ஆரியர்களும்} நூறு நூறாக பேரிகைகளையும், *புஷ்கரங்களையும் முழங்கச் செய்து, பசுவின் பாலைப் போன்று வெண்மையா்க இருந்த தங்கள் சங்குகள் அனைத்தையும் முழங்கினர்” {என்றான் சஞ்சயன்}.

முதலில் தாக்கியது யார்? – பீஷ்ம பர்வம் பகுதி – 044-துச்சாசனன் முதலான கௌரவர்கள் முழங்கிக் கொண்டு முன்னேறி வந்த பீமனின் மீது பாய்வது; அவர்களின் மீது திரௌபதியின் மகன்கள், அபிமன்யு, திருஷ்டத்யும்னன், நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் பாய்வது; போர் ஆரம்பமாவது; போர்க்களத்தைக் குறித்த சஞ்சயனின் வர்ணனை…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “என் தரப்பு மற்றும் எதிரி தரப்பு ஆகிய இரண்டு படைப்பிரிவுகளும் இப்படி அணிவகுக்கப்பட்ட போது, யார் முதலில் அடித்தது? குருக்களா? பாண்டவர்களா?” என்று கேட்டான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தன் அண்ணனின் {துரியோதனனின்} அந்த வார்த்தைகளைக் கேட்ட உமது மகன் துச்சாசனன், பீஷ்மரைத் தங்கள் தலைவராகக் கொண்ட தனது துருப்புகளுடன் முன்னேறினான். பீஷ்மருடன் போரிட விரும்பிய பாண்டவர்களும், பீமசேனனைத் தங்கள் தலைமையில் கொண்டு மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் முன்னேறினர். பிறகு, இரு படைகளில் இருந்தும், சிங்க முழக்கங்களும், ஆரவாரவொலிகளும், ஜயமங்களைகளின் {கிரகசங்களின் Krakachas} ஒலிகளும், மாட்டுக் கொம்புகளின் {மாட்டுக் கொம்பால் செய்யப்பட்ட இசைக்கருவிகளின்} ஒலிகளும், பேரிகைகள், மிருதங்கங்கள், மேளங்கள் ஆகியவற்றின் ஒலிகளும் எழுந்தன. எதிரிகளின் வீரர்கள் நம்மை {கௌரவர்களை} நோக்கி விரைந்தார்கள். நாமும் அவர்களை {பாண்டவர்களை} எதிர்த்துப் பேரொலிகளுடன் விரைந்தோம். இந்த (விரைவின் விளைவால் எழுந்த) ஆரவாரம் {காதுகளைச்} செவிடாக்குவதாக இருந்தது.

அந்த அச்சந்தரும் கொலைகார மோதலில், காற்றினால் அசைக்கப்பட்ட காடுகளைப் போல, சங்குகள் மற்றும் மிருதங்கங்களால் எழுந்த அமளியின் விளைவால் பாண்டவ மற்றும் திருதராஷ்டிரப்படைகள் நடுங்கின. அந்தத் தீய வேளையில் ஒருவருக்கு எதிர் மற்றொருவராக விரைந்த மன்னர்கள், யானைகள், குதிரைகள் ஆகியன நிறைந்த அந்தப் படைகள் செய்த ஆரவாரம், புயலால் கலங்கடிக்கப்படும் கடலின் பேரொலியைப் போன்று இருந்தது.

பேரொலியாகவும், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அந்த ஆரவாரம் எழுந்த போது, வலிய கரங்களைக் கொண்ட பீமசேனன், காளையைப் போல உரத்து முழங்கத் தொடங்கினான். பீமசேனனின் அந்த முழக்கம், போராளிகளின் சிங்கமுழக்கங்கள், யானையின் பிளிறல்கள், சங்கு மற்றும் பேரிகைகளின் ஒலிகள் ஆகியவற்றை மீறி மேலே எழுந்தது. உண்மையில், பீமசேனனின் முழக்கங்கள் இருதரப்பு படைகளிலும் இருந்த ஆயிரக்கணக்கான குதிரைகளின் கனைப்பொலிகளையும் விஞ்சியிருந்தது. சக்ரனின் {இந்திரனின்} இடியைப் போன்றும், மேகங்களைப் போன்றும் முழங்கிக் கொண்டிருந்த பீமசேனனின் அந்த ஒலியைக் கேட்டு, உமது வீரர்கள் அச்சத்தால் நிறைந்தனர். அந்த வீரனின் {பீமனின்} கர்ஜனையால், சிங்கத்தின் முழக்கத்தைக் கேட்ட பிற விலங்குகளைப் போல, குதிரைகள் மற்றும் யானைகள் அனைத்தும் சிறுநீர் மற்றும் மலத்தைக் கழித்தன. மேகங்களின் திரள்களைப் போல ஆழமான முழக்கத்தைச் செய்து, பயங்கர உருவம் ஏற்ற {பயங்கர உருவத்தை அடைந்த} அந்த வீரன் {பீமன்}, உமது மகன்களை அச்சுறுத்தி அவர்கள் மீது பாய்ந்தான்.

அதன் பேரில், சகோதரர்களும் உமது மகன்களுமான துரியோதனன், துர்முகன், துஸ்ஸஹன், சலன், வலிமைமிக்கத் தேர்வீரனான துச்சாசனன், துர்மர்ஷணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விவிம்சதி, சித்ரசேனன், பெரும் தேர்வீரனான {மகாரதனான} விகர்ணன், புருமித்ரன், ஜயன், போஜன் ஆகியோரும் சோமதத்தனுடைய வீரமிக்க மகனும் {பூரிஸ்ரவசும்} மேகங்களின் திரள்கள் மின்னல் கீற்றுகளை வெளிப்படுத்துவதைப் போல, தங்கள் அற்புதமான விற்களை அசைத்து, (தங்கள் அம்பறாத்தூணிகளில் இருந்து) சமீபத்தில் சட்டை உதிர்த்த பாம்புகளைப் போன்ற நீண்டிருந்த கணைகளை எடுத்தனர். (தங்களை நோக்கி) விரைந்து வந்த அந்த வலிமைமிக்க வில்லாளியை {பீமனைச்} சூழ்ந்து கொண்ட அவர்கள், சூரியனை மறைக்கும் மேகங்களைப் போல, தங்கள் கணைகளால் அவனை {பீமனை} மறைத்தார்கள்.

திரௌபதியின் (ஐந்து) மகன்கள், வலிமைமிக்கத் தேர்வீரனான சுபத்திரன் {அபிமன்யு}, நகுலன், சகாதேவன் மற்றும் பிரிஷத குலத்தின் திருஷ்டத்யும்னன் ஆகியோர் ({பீமனை நோக்கி விரைந்த} அந்த) தார்தராஷ்டிரர்களை நோக்கி விரைந்து, சொர்க்கத்தின் மூர்க்கமான கணைகளால் {வஜ்ராயுதங்களால்} பிளக்கப்படும் மலைச்சிகரங்களைப் போல, கூர்மையான தங்கள் கணைகளால் அவர்களைக் கிழித்தார்கள். வில் நாண்களின் பயங்கர நாணொலி மற்றும் (வீரர்களின்) கையுறைகள் ஒன்றோடொன்று மோதும் ஒலியாலும் வகைப்படுத்தப்பட்ட அந்த முதல் மோதலில் உமது தரப்பிலோ, எதிரி தரப்பிலோ எந்தப் போராளியும் புறமுதுகிடவில்லை.

ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, எண்ணிலடங்கா கணைகளால், குறியை அடித்து எப்போதும் வெல்பவர்களாக இருந்தவர்களில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (குறிப்பாக) துரோணருடைய சீடர்களின் கை வேகத்தை {லாகவத்தை} நான் கண்டேன். வில்நாண்களின் நாணொலி ஒருக்கணமும் நிற்கவில்லை, (காற்றில்) அடிக்கப்பட்ட சுடர்மிகும் அம்புகள், வானத்தின் (வானத்திலிருந்து விழும்) விண்கற்களைப் போல வெளிப்பட்டன. பிற மன்னர்கள் அனைவரும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சொந்தங்களுக்கிடையில் நடந்ததும், பயங்கரம் நிறைந்ததும், கவனத்தைக் கவர்வதுமான அந்தப் போரை பார்வையாளர்களாகக் கண்டு (அமைதியாக) நின்றனர். பிறகு வலிமைமிக்க அந்தத் தேர்வீரர்கள், சினம் தூண்டப்பட்ட நிலையில், ஒருவரிடம் மற்றொருவர் அடைந்த காயங்களை நினைவு கூர்ந்து ஒருவரை ஒருவர் சவாலுக்கழைத்து அந்தக்களத்தில் போரிட்டனர்.

யானைகள், குதிரைகள், தேர்கள் நிறைந்தவையான குருக்கள் மற்றும் பாண்டவர்களின் இரு படைகளும் திரையில் வண்ணம் தீட்டப்பட்ட ஓவியங்களைப் போல அந்தப் போர்க்களத்தில் மிக அழகாகத் தோற்றமளித்தன. அதன் பிறகு, (பிற) மன்னர்கள் அனைவரும் தங்கள் விற்களை எடுத்தனர். போராளிகளால் எழுப்பப்பட்ட புழுதியினால் சூரியன் மறைந்தான். (தங்கள் தங்கள்) துருப்புகளின் தலைமையில் இருந்தவர்கள், உமது மகனின் {துரியோதனனின்} கட்டளையின் பேரால் ஒருவரின் மேல் மற்றவர் பாய்ந்தனர். மோதலுக்கு விரைந்த அந்த மன்னர்களின் யானைகள் மற்றும் குதிரைகளால் எழுப்பப்பட்ட பேரொலிகள், போராளிகளின் சிம்ம முழக்கங்களுடனும், சங்கு முழக்கம் மற்றும் பேரிகைகளின் ஒலி ஆகியவற்றில் எழுந்த ஆரவாரத்துடனும் கலந்தது.

கணைகளை முதலைகளாகவும், விற்களைப் பாம்புகளாகவும், வாள்களை ஆமைகளாகவும், போர் வீரர்களின் சாடல்களைப் புயலாகவும் கொண்ட அந்தப் பெருங்கடலின் {படைகளின்} பேரொலி, (உண்மையான) கடல் கலங்கிய நிலையில் ஏற்படுத்தும் அமளியையே ஒத்திருந்தது. யுதிஷ்டிரனால் கட்டளையிடப்பட்ட ஆயிரக்கணக்கான மன்னர்கள், (தங்கள் தங்கள்) துருப்புகளுடன் உமது மகனின் படையணியினர் மீது பாய்ந்தனர். அந்த இருபடைகளின் போராளிகளுக்கிடையில் நடைபெற்ற அந்த மோதல் மிகக் கடுமையானதாக இருந்தது.

போரிடும்போதோ, உடைந்த அணிவகுப்பில் {வியூகத்தில்} [1] இருந்து திரும்பும்போதோ, மீண்டும் போரிடச் செல்லும்போதோ நமது தரப்பு மற்றும் எதிரி தரப்புப் போராளிகளுக்கிடையில் எந்த வேற்றுமையையும் காண முடியவில்லை. அச்சந்தரும் அந்தப் பயங்கரப் போரில், கணக்கிடமுடியாத அந்தக் கூட்டத்தை விஞ்சி உமது தந்தை (பீஷ்மர்) ஒளிர்ந்து கொண்டிருந்தார்” {என்றான் சஞ்சயன்}.

தாக்குதலும் எதிர் தாக்குதலும்! – பீஷ்ம பர்வம் பகுதி – 045அ-எவர் எவருடன் எவரெவர் போரிட்டனர் என்று சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் விளக்கிச் சொல்வது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்தப் பயங்கர நாளின் மத்திய வேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (பற்பல) மன்னர்களின் உடல்களைச் சிதைத்த அந்தப் பயங்கரப் போர் தொடங்கியது. போரில் வெற்றியை விரும்பியவர்களான குருக்கள் மற்றும் சிருஞ்சயர்களின் பேரொலிகள் சிம்ம முழக்கங்களை ஒத்திருந்தது. அது வானத்திலும் பூமியிலும் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. தோல் கையுறைகள் ஒன்றின் மேல் ஒன்று மோதிய ஒலிகளும், சங்கொலிகளும் கலந்த அந்த அமளி, ஆரவாரமிக்கப் பேரொலியாக இருந்தது. சிம்ம முழக்கங்களைச் செய்த பலர் ஒருவரை நோக்கி ஒருவர் கர்ஜித்துக் கொண்டிருந்தனர்.


ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மேகங்களின் முழக்கத்தை ஒத்தவையான, (கையில் பொதிந்த) கையுறைகளுடன் நீட்டி இழுக்கப்பட்ட வில் நாண்களின் ஒலிகளும், யானைப்படையின் கனமிக்க நடையின் ஒலியும், குதிரைகளின் மூர்க்கமான கனைப்பொலிகளும், அங்குசங்கள் மற்றும் தடிகள் விழும் ஒலிகளும், ஆயுதங்கள் மோதும் ஒலிகளும், ஒன்றை நோக்கி மற்றொன்றாக விரையும் யானைகளின் மணியோசைகளும் ஏற்படுத்திய ஆரவாரம் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. தங்கள் உயிரையே துச்சமாகக் கருதிய குரு வீரர்கள் அனைவரும், கொடிக்கம்பங்களை உயர்த்திவயாறும், கொடிய நோக்கங்களோடும் பாண்டவர்களுக்கு எதிராக விரைந்தனர்.

சந்தனுவின் மகனும் {பீஷ்மனும்} கூட, மரணக் கோலுக்கு ஒப்பான ஒரு பயங்கர வில்லை எடுத்துக் கொண்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தில், தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} எதிராக விரைந்தார். பெரும் சக்தி கொண்ட அர்ஜுனனும், உலகம் முழுதும் கொண்டாடப்பட்ட வில்லான காண்டீவத்தை எடுத்துக் கொண்டு கங்கையின் மைந்தருக்கு {பீஷ்மருக்கு} எதிராகப் போர்க்களத்தில் விரைந்தான். குருக்களுக்கு மத்தியில் புலிகளான அந்த இருவரும் {பீஷ்மரும், அர்ஜுனனும்} ஒருவரை ஒருவர் கொல்லவே விரும்பினர். வலிமைமிக்கவரான கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, போர்க்களத்தில் என்னதான் பிருதையின் மகனை {குந்தியின் மகன் அர்ஜுனனை} துளைத்துக் கொண்டிருந்தாலும், அவரால் அவனை {பீஷ்மரால் அர்ஜுனனை} நடுங்கச் செய்ய முடியவில்லை. அதே போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகனாலும் {அர்ஜுனனாலும்} போரில் பீஷ்மரை நடுங்கச் செய்ய முடியவில்லை.

வலிமைமிக்க வில்லாளியான சாத்யகி, கிருதவர்மனை எதிர்த்து விரைந்தான். இந்த இருவருக்கும் இடையில் ஏற்பட்ட போரானது (காண்போருக்கு) மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும்வண்ணம் கடுமையானதாக இருந்தது. சாத்யகி, கிருதவர்மனைத் துன்புறுத்தினான். கிருதவர்மனும், சாத்யகியைத் துன்புறுத்தினான். பேரொலிகளால் ஒருவரை ஒருவர் என இருவரும் தங்களைப் பலவீனப் படுத்தினர். உடலெங்கும் அம்புகளால் துளைக்கப்பட்ட அவ்விரு வலிமைமிக்க வீரர்களும் (சாத்யகியும், கிருதவர்மனும்} வசந்த காலத்தில் பூக்கும் கின்குசக மலர்களைப் போலக் காட்சியளித்தனர்.

வலிமைமிக்க வில்லாளியான அபிமன்யு, பிருஹத்பலனுடன் போரிட்டான். எனினும், விரைவில் அந்த மோதலில், ஓ, மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கோசல ஆட்சியாளன் {பிருஹத்பலன்}, சுபத்திரையின் மகனுடைய {அபிமன்யுவுடைய} கொடிக்கம்பத்தை வெட்டி வீழ்த்தி, அவனது தேரோட்டியையும் வீழ்த்தினான். தனது தேரோட்டியின் வீழ்ச்சியில் பெரும் கோபம் கொண்ட சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, ஒன்பது கணைகளால் பிருஹத்பலனைத் துளைத்தான். எதிரிகளைக் கலங்கடிப்பவனான அவன், மேலும் இரு கணைகளால் (பிருஹத்பலனின்) கொடிக்கம்பத்தை வெட்டி  வீழ்த்தினான். (மேலும்) ஒரு கணையால், அவனது {பிருஹத்பலனின்} தேர்ச்சக்கரங்களைக் காப்பவன் ஒருவனையும், இன்னும் ஒன்றால் {ஒரு கணையால்} அவனது தேரோட்டியையும் வெட்டினான். மேலும் அந்த எதிரிகளைக் கொல்பவன் {அபிமன்யு} தனது கூரிய கணைகளால் எதிரிகள் ஒவ்வொருவரையும் பலவீனப்படுத்தினான்.

ஏற்கனவே (பாண்டு மகன்களைக்) காயப்படுத்தியவனும், செருக்குடையவனும், வீண்பெருமிதம் கொண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான உமது மகன் துரியோதனனுடன் பீமசேனன் போராடினான். குருக்களின் மத்தியில் முதன்மையான அந்த (இளவரசர்கள்) இருவரும் மனிதர்களில் புலியாகவும், வலிமைமிக்கத் தேர்வீரர்களாகவும் இருந்தனர். அந்தப் போர்க்களத்தில் அவர்கள் ஒருவரை ஒருவர் தங்கள் கணை மழையால் நிறைத்தனர். பாரதரே {திருதராஷ்டிரரே}, உயர் ஆன்மா கொண்டவர்களும், போர்வகைகள் அனைத்தையும் அறிந்தவர்களும், சாதித்த போர்வீரர்களுமான அவர்களை {பீமனையும், துரியோதனனையும்} அனைத்து உயிரினங்களும் ஆச்சரியத்துடன் பார்த்தன.

வலிமைமிக்கத் தேர்வீரனான நகுலனை எதிர்த்து விரைந்த துச்சாசனன், கூரிய பல கணைகளால் அவனது {நகுலனின்} உயிர்ப்பகுதிகளைத் துளைத்தான். அதே வேளையில் சிரித்துக் கொண்டிருந்த மாத்ரியின் மகன் {நகுலன்}, (தனது) எதிரியின் கொடிக்கம்பத்தையும், வில்லையும் தனது கூரிய கணைகளால் அறுத்து, இருபத்தைந்து சிறுதலைக் கணைகளால் {க்ஷூத்ரகப் பாணங்களால்} அவனை {துச்சாசனனை} அடித்தான். எனினும், வீழ்த்தப்படக் கடினமான உமது மகன் {துச்சாசனன்}, அந்தக் கடும் மோதலில் நகுலனின் குதிரைகளையும், கொடிக்கம்பத்தையும் வெட்டி வீழ்த்தினான்.

அந்தப் பயங்கர மோதலில் வலிமைமிக்கச் சகாதேவனை எதிர்த்து விரைந்த துர்முகன், அவனை {சகாதேவனை} கணைகளின் மழையால் துளைத்தான். வீரனான சகாதேவனும், அச்சந்தரும் அந்தப் போரில், பெரும் கூர்மை வாய்ந்த ஒரு கணையால் துர்முகனின் தேரோட்டியை வீழ்த்தினான். போரில் ஒடுக்க முடியாத அவ்விருவரும் மோதலுக்காக ஒருவரை ஒருவர் அணுகித் தாக்கி, அடுத்தவரை விரட்டியடிக்க விரும்பி, கொடூரமான கணைகளால் ஒருவருக்கொருவர் தாக்கத் தொடங்கினர்.

மன்னன் யுதிஷ்டிரன், மத்ர ஆட்சியாளனுடன் {சல்லியனுடன்} மோதினான். பிறகு, அந்த மத்ரத் தலைவன் {சல்லியன்}, யுதிஷ்டிரனின் வில்லை அவன் பார்வையிலேயே இரண்டாகத் துண்டித்தான். அதன் பேரில், துண்டான அந்த வில்லை வீசி எறிந்த குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, மேலும் வலிமையானதும், வேகத்தைக் கொடுப்பதுமான ஒரு வில்லை எடுத்தான். பிறகு அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, நேரான அம்புகளைக் கொண்டு அந்த மத்ர ஆட்சியாளனை {சல்லியனை} மறைத்து, பெரும் கோபத்துடன், “நில்லும், நில்லும்” என்றான்.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னன் துரோணரை எதிர்த்து விரைந்தான். பெரும் கோபம் கொண்ட துரோணர், எதிரிகளின் உயிரை எப்போதும் எடுக்க வல்ல அந்த உயர் ஆன்ம பாஞ்சால இளவரசனின் {திருஷ்டத்யும்னனின்} கடினமான வில்லைத் துண்டித்தார். அதே வேளையில் மரணத்தின் இரண்டாவது கோல் போன்ற பயங்கரக் கணையையும் அந்த மோதலின் போது அவர் {துரோணர்} அடித்தார். அந்தக் கணை இளவரசனின் {திருஷ்டத்யும்னனின்} உடலைத் துளைத்தது. பிறகு மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட துருபதன் மகன் {திருஷ்டத்யும்னன்} அந்த மோதலின் போது பதினான்கு கணைகளால் துரோணரைத் துளைத்தான். ஒருவரின் மேல் மற்றவர் எனக் கோபம் மூண்ட அவர்கள் தங்களுக்குள் கடுமையாகப் போரிட்டனர்.

ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டவர்கள்! – பீஷ்ம பர்வம் பகுதி – 045ஆ-எவர் எவருடன் எவரெவர் போரிட்டனர் என்று சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் விளக்கிச் சொல்வது…

சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்} “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வேகம் கொண்டவனான சங்கன் {விராடனின் மகன்}, போரில் தனக்கு நிகரான வேகம் கொண்டவனான சோமதத்தன் மகனுடன் {பாஹ்லீகரின் பேரனான பூரிஸ்ரவசுடன்} மோதி, “நில், நில்” என்று சொன்னான். பிறகு அந்த வீரன் {சங்கன்}, அவனது {எதிரியான பூரிஸ்ரவசின்} வலக்கையை அந்த மோதலில் துளைத்தான். அதன் பேரில் சோமதத்தனின் மகன் {பூரிஸ்ரவஸ்}, சங்கனின் தோள்களைத் தாக்கினான். செருக்கு மிகுந்த அந்த இரு வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற அந்தப் போர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெகு விரைவில் தேவர்களுக்கும் தானவர்களுக்கும் இடையிலான மோதலைப் போலப் பயங்கரமாக மாறியது.

கோபம் தூண்டப்பட்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனும், அளவற்ற ஆன்மா கொண்டவனுமான திருஷ்டகேது {சிசுபாலனின் மகன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} கோபத்தின் உருவமே ஆன பாஹ்லீகனுக்கு {பூரிஸ்ரவசின் பாட்டனுக்கு} எதிராகப் போரில் விரைந்தான். பிறகு சிம்ம கர்ஜனை செய்த பாஹ்லீகன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபம் நிறைந்த திருஷ்டகேதுவை எண்ணிலா கணைகளால் பலவீனப்படுத்தினான். எனினும், அந்த மோதலில் {கோபத்தால்} மிகவும் தூண்டப்பட்ட சேதிகளின் மன்னன் {திருஷ்டகேது}, ஒன்பது கணைகளால் பாஹ்லீகனை விரைந்து துளைத்தான். மதங்கொண்ட யானையை எதிர்த்த மற்றொரு மதங்கொண்ட யானையைப் போல, ஒருவரை எதிர்த்து மற்றொருவர் எனத் தொடர்ச்சியாகச் சிங்க முழக்கமிட்ட இருவரும் மிகவும் கோபம் தூண்டப்பட்டவர்களாக இருந்தனர். பெரும் கோபத்துடன் மோதிக்கொண்ட அந்த இருவரும் கோள்களான அங்காரகன் மற்றும் சுக்ரனைப் போலத் தெரிந்தனர் [1].(அங்காரகன் என்பது செவ்வாய்க் கிரகமாகும். சுக்கிரன் என்பது வெள்ளி கிரகமாகும் )

கொடிய செய்கைகளையுடைய கடோத்கசன், வலனை {என்கிற அசுரனை} சக்ரன் {இந்திரன்} எதிர்த்துப் போரிட்டது போல, கொடும் செய்கைகளைச் செய்யும் ராட்சசன் அலம்புசனுடன் மோதினான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சினம் மிக்கவனும், பலம் நிறைந்தவனுமான அந்த ராட்சசனை {அலம்புசனை} தொண்ணூறு {90} கணைகளால் கடோத்கசன் துளைத்தான். அந்த மோதலில் அலம்புசனும் பீமசேனனின் வலிமைமிக்க மகனை {கடோத்கசனை} (தனது) நேரான கணைகளால் பல இடங்களில் துளைத்தான். (பழங்காலத்தில்) தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் போரிட்ட வலிமைமிக்கச் சக்ரனைப் போன்றும், பலம் நிறைந்த வலனைப் போன்றும் கணைகளால் சிதைக்கப்பட்ட அவர்கள் {கடோத்கசனும், அலம்புசனும்} ஒளிர்ந்தனர்.

பலம் நிறைந்த சிகண்டி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரின் மகனான அஸ்வத்தாமனுக்கு எதிராக விரைந்தான். எனினும், அஸ்வத்தாமன், (தன் முன்) கோபத்துடன் நின்ற சிகண்டியை கூர்மையான கணையால் ஆழமாகத் துளைத்து அவனை {சிகண்டியை} நடுங்கச்செய்தான். சிகண்டியும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}. சாணையில் தீட்டப்பட்டு, கடினமாக இருந்த ஒரு கணையால் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} அடித்தான். இப்படி அவர்கள் இருவரும் அந்தப் போரில், பல்வேறு வகையான கணைகளால் ஒருவரை ஒருவர் தொடர்ந்து தாக்கினர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும்படைப் பிரிவின் தலைவனான விராடன், வீரனான {நரகனின் மகனும், பிராக்ஜோதிஷ நாட்டின் மன்னனுமான} பகதத்தனை எதிர்த்து வேகமாக விரைந்தான். அவர்களுக்கிடையான போரும் தொடங்கியது. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மிகவும் கோபம் தூண்டப்பட்ட விராடன், மலையின் மார்பில் மழையைப் பொழியும் மேகங்களைப் போல, பகதத்தனின் மீது கணைமாரியைப் பொழிந்தான். ஆனால், பூமியின் தலைவனான பகதத்தனோ, அந்தப் போரில், உதயச் சூரியனை மறைக்கும் மேகங்களைப் போல, விராடனை வேகமாக (கணைகளால்) மறைத்தான்.

சரத்வானின் மகனான கிருபர், கைகேயர்களின் ஆட்சியாளனான பிருஹத்க்ஷத்திரனை [2] எதிர்த்து விரைந்தார். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கிருபர் அவனைக் {பிருஹத்க்ஷத்திரனை} கணைமாரியால் மறைத்தார். பிருஹத்க்ஷத்திரனும் சீற்றமிகுந்த கௌதமரின் மகனைக் {கிருபரைக்} கணைமாரியால் மறைத்தான். ஒருவரின் குதிரையை மற்றவர் கொன்றும், ஒருவரின் வில்லை மற்றவர் துண்டித்தும் கொண்ட அந்த வீரர்கள் இருவரும், தங்கள் தேரையும் இழந்தனர். பெரும் கோபத்தில் இருந்த அவர்கள் இருவரும் வாள்களை எடுத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் அணுகினர். அதன் பிறகு, அவர்களுக்கு இடையே நடந்த போர் இணையற்றதாகவும், தன்மையில் பயங்கரமானதாகவும் இருந்தது.

எதிரிகளைத் தண்டிப்பவனான மன்னன் துருபதன், (போருக்காக) மகிழ்ச்சியாகக் காத்திருந்த சிந்துக்களின் ஆட்சியாளன் ஜெயத்ரதனுக்கு எதிராகப் பெரும் கோபத்துடன் விரைந்தான். சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, அந்த மோதலில் துருபதனை மூன்று கணைகளால் துளைத்தான். துருபதனும் பதிலுக்கு அவனை {ஜெயத்ரதனைத்} துளைத்தான். அவர்களுக்கு இடையில் நடைபெற்ற அந்தப் போர் பயங்கரமாகவும் கடுமையானதாகவும், பார்வையாளர்கள் அனைவரின் இதயங்களுக்கும் நிறைவைக் கொடுக்கும் வண்ணமும் இருந்தது. அந்த மோதல், சுக்கிரனுக்கும், அங்காரகனுக்கும் [3] இடையில் நடைபெற்ற மோதலைப் போன்று இருந்தது.

உமது மகன் விகர்ணன், வேகமான குதிரைகளுடன், {பீமனின் மகனான} வலிமைமிக்கச் சுதசோமனை எதிர்த்து விரைந்தான். அவர்களுக்கிடையிலான மோதலும் தொடங்கியது. விகர்ணன் பல கணைகளால் சுதசோமனைத் துளைத்தாலும், அவனால் {விகர்ணனால்} அவனை நடுங்கச் செய்ய முடியவில்லை. அதே போலச் சுதசோமனாலும் விகர்ணனை நடுங்கச் செய்ய முடியவில்லை. அஃது (அனைவருக்கும்) ஆச்சரியமாக இருந்தது.

வலிமைமிக்கத் தேர்வீரனும், மனிதர்களில் புலியும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான சேகிதானன் {சத்வத {யாதவ-விருஷ்ணி} குல மன்னன்}, பாண்டவர்களின் சார்பாகப் பெரும் கோபத்துடன், {திரிகார்த்த மன்னனான} சுசர்மனை நோக்கி விரைந்தான். சுசர்மனும், ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, அடர்ந்த கணைமழையால் வலிமைமிக்கத் தேர்வீரனான சேகிதானனின் முன்னேற்றத்தை தடுத்தான். அந்தப் பயங்கரப் போரில், பெரிதும் தூண்டப்பட்ட சேகிதானன், மலைகளின் மார்பில் மழையைப் பொழியும் மேகத்திரள்களைப் போலச் சுசர்மன் மேல் கணைமாரியைப் பொழிந்தான்.

பெரும் ஆற்றலைக் கொண்ட சகுனி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மதங்கொண்ட யானையை நோக்கி விரையும் சிங்கத்தைப் போலப் பெரும் ஆற்றல் கொண்ட பிரதிவிந்தியனை நோக்கி விரைந்தான். அதன் பேரில், கோபம் தூண்டப்பட்ட அந்த யுதிஷ்டிரனின் மகன் {பிரதிவிந்தியன்}, தானவனைச் சிதைக்கும் மகவத்தை {இந்திரனைப்} போல, அந்த மோதலில், தனது கூரிய கணைகளால் சுபலனின் மகனைச் {சகுனியைச்} சிதைத்தான். பதிலுக்குச் சகுனியும், அந்தக் கடும் மோதலில், பெரும் புத்திசாலி வீரனான பிரதிவிந்தியனை, நேரான கணைகளால் துளைத்தான்.

ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில், காம்போஜர்களின் ஆட்சியாளனும், பெரும் ஆற்றல் கொண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சுதக்ஷிணனை எதிர்த்து சுரூதகர்மன் விரைந்தான். எனினும், ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தச் சகாதேவன் மகனை {சுரூதகர்மனை} சுதக்ஷிணன் துளைத்தாலும், (இந்திரனின் தாக்குதல்களை எதிர்த்து நின்ற} மைநாக மலையென நின்ற அவனை {சுரூதகர்மாவை} நடுங்கச்செய்வதில் அவன் {சுதக்ஷிணன்} தோல்வியுற்றான். இதனால் மிகவும் கோபம் தூண்டப்பட்ட சுரூதகர்மன் எண்ணிலா கணைகளைக் கொண்டு, காம்போஜர்களின் வலிமைமிக்கத் தேர்வீரனுடைய {சுதக்ஷிணனுடைய} உடலின் அனைத்துப் பகுதிகளைச் சிதைத்து அவனைப் பலவீனமாக்கினான்.

எதிரிகளைத் தண்டிப்பவனான இராவான் {அரவான்} [4], பெரும் கோபத்துடன் கவனமாக முயற்சி செய்து, கோபம் நிறைந்த {கலிங்க மன்னன்} ஸ்ருதாயுசை போரில் எதிர்த்து விரைந்தான். பலம் நிறைந்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்த அர்ஜுனன் மகன் {இராவான்}, தனது எதிரியின் {ஸ்ருதாயுசின்} குதிரைகளைக் கொன்று சிம்ம முழக்கம் செய்தான். அதன் பேரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (அந்தச் செயலைக்) கண்ட போர் வீரர்கள் அனைவரும் அவனைப் {இராவானைப்} பெரிதாகப் புகழ்ந்தார்கள். கோபம் தூண்டப்படச் சுரூதாயுசும், போரில் அந்தப் பல்குனன் மகனுடைய {அர்ஜுனன் மகனான இராவானுடைய} குதிரைகளை ஒரு பலம்நிறைந்த கதாயுத்தால் அடித்துக் கொன்றான். அவர்களுக்கு இடையிலான போரும் தொடர்ந்தது.

அந்தப் போரில், தனது துருப்புகளின் தலைமையில் தன் மகனின் துணையுடன், நின்ற வலிமைமிக்கத் தேர் வீரனான குந்திபோஜனை, அவந்தியின் இளவரசர்களான விந்தன் அனுவிந்தன் ஆகிய இருவரும் அணுகினார்கள். அந்த இளவரசர்கள் இருவரும் அச்சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்திய ஆற்றல் அற்புதமானதாக இருந்தது. ஏனெனில், அவர்கள் பெரும் அளவிலான துருப்புகளுடன் போரிடும் போதும் கவலையில்லாமல் உறுதியுடன் போரிட்டார்கள். அனுவிந்தன் குந்திபோஜனை நோக்கி ஒரு கதாயுதத்தை எறிந்தான். ஆனால் குந்திபோஜனோ விரைவில் கணைமாரியால் அவனை {அனுவிந்தனை} மறைத்தான். குந்திபோஜனின் மகன் [5] விந்தனை பல கணைகளால் துளைத்தான். பின்னவனும் {விந்தனும்} பதிலுக்கு அவனை {குந்திபோஜன் மகனைத்} துளைத்தான். (அவர்களுக்கு இடையிலான) அந்த மோதலைக் காண மிக அற்புதமாக இருந்தது.

ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, மேலும், தங்கள் துருப்புகளின் தலைமையில் இருந்த கேகயச் சகோதரர்கள், தங்கள் துருப்புகளுடன் இருந்து ஐந்து காந்தார இளவரசர்களுடன்{?} அந்தப் போரில் மோதினார்கள். தேர்வீரர்களில் சிறந்தவனும், விராடனின் மகனுமான உத்தரனுடன் போரிட்ட உமது மகன் வீரபாகு {திருதராஷ்டிரனின் மகன் வீரபாகு}, அவனை {உத்தரனை} ஒன்பது கணைகளால் துளைத்தான். உத்தரனும் கூரிய முனை கொண்ட கணைகளால் அந்த வீரனை {வீரபாகுவைத்} துளைத்தான். சேதிகளின் ஆட்சியாளன் [6], ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உலூகனை எதிர்த்துப் போரில் விரைந்தான். அவன் உலூகனைத் தனது கணை மாரியால் துளைத்தான். உலூகனும் அற்புத இறகுகள் கொண்ட தனது கூரிய கணைகளால் அவனைத் துளைத்தான். அவர்களுக்கு இடையில் நடைபெற்ற போரானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மிகக் கடுமையானதாக இருந்தது. ஏனெனில், ஒருவரை ஒருவர் வீழ்த்த முடியாததால், அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பயங்கரமாகச் சிதைத்தனர்.

இப்படியே அந்த மோதலில் பொதுவாக, அவர்கள் தரப்பிலும், உமது தரப்பிலும், தேரில் இருந்த மனிதர்களுக்கு இடையிலும், யானைகளில் இருந்த போர்வீரர்களுக்கு இடையிலும், குதிரைவீரர்களுக்கு இடையிலும், காலாட்படை வீரர்களுக்கு இடையிலும் என ஆயிரக்கணக்கான தனி மோதல்கள் நடந்தன. குறுகிய காலத்திற்கு மட்டுமே அந்த மோதல் அழகிய காட்சியாக இருந்தது. எனினும், விரைவில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அது மூர்க்கமானதாகவும், எதையும் அடையாளம் காண முடியாததாகவும் மாறியது.

(அப்படி நடந்த) அந்தப் போரில் யானைகள், யானைகளை எதிர்த்தும், தேர்வீரர்கள், தேர்வீரர்களை எதிர்த்தும், குதிரைகள், குதிரைகளை எதிர்த்தும், காலாட்படை வீரர்கள், காலாட்படை வீரர்களை எதிர்த்தும் விரைந்தனர். விரைந்து வந்த வீரர்கள் அனைவரும், ஒருவருக்கு எதிராக ஒருவர் கைக்கலப்பு செய்த போது, அந்த மோதல் குழம்பியதாக மிகக் கடுமையானதாக மாறியது.

அங்கே இருந்த தெய்வீக முனிவர்கள், சித்தர்கள், சாரணர்கள் ஆகியோர் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த மோதலைப் போன்ற அந்தப் பயங்கரப் போரைக் கண்டனர். ஆயிரக்கணக்கான யானைகளும், ஆயிரக்கணக்கான தேர்களும், பெரும் அளவிலான குதிரைப் படைகளும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தங்கள் தன்மையை மாற்றிக் கொள்வதாகத் தெரிந்தது [7]. மேலும், ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, தேர்களும், யானைகளும், குதிரைகளும், காலாட்படையும், அதே இடங்களிலேயே மீண்டும் மீண்டும் ஒருவருக்கு எதிராக ஒருவர் போரிட்டனர் [8]” {என்றான் சஞ்சயன்}.

வாழும் ஆசையால் ஓலமிட்ட போராளிகள்! – பீஷ்ம பர்வம் பகுதி – 046-இரு படைகளிலும் இருந்த யானைகள், தேர்வீரர்கள், குதிரைகள், காலாட்படை ஆகியோர் போரிட்டதைச் சஞ்சயன் வர்ணிப்பது; யானைகளால் ஏற்பட்ட சேதங்கள், வீரர்கள் அடைந்த துன்பங்கள், உறவினர்களையும் நண்பர்களையும் அறியாது கொன்ற வீரர்கள்; போரில் அடிபட்டு கதறியவர்கள், காயப்பட்டிருந்தாலும் கதறாதவர்கள் எனப் பல வகைப் போர்வீரர்களைச் சஞ்சயன் வர்ணிப்பது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நூறாயிரம் {ஒரு லட்சம் 1,00,000} காலாட்படை வீரர்களின் மோதல் குறித்து நான் இப்போது உமக்கு விவரிப்பேன். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பிற கருத்துகள் அனைத்திலும் ஏற்பட்ட முற்றான மறதியின் காரணமாக, அங்கே, மகன் தந்தையை அறியவில்லை, தந்தையும் தனக்குப்பிறந்த மகனை அறியவில்லை. சகோதரன் சகோதரனை அறியவில்லை,மருமகன் அம்மானை அறியவில்லை. தாய்மாமனும் தனது சகோதரியின் மகனை {மருமகனை} அறியவில்லை. அதே போல, நண்பனும் தனது நண்பனை அறியவில்லை.

பாண்டவர்களும், குருக்களும், தாங்கள் ஏதோ பேய்களால் பீடிக்கப்பட்டவர்களைப் போலப் போரிட்டனர். மனிதர்களில் புலிகளான சிலர் தேர்கள் மீது பாய்ந்து அவற்றைத் தூள் தூளாக்கினர். தேர்களின் நுகத்தடிகள் ஒன்றோடு ஒன்று மோதி நொறுங்கின. தேரின் ஏர்க்கால்களும், இருப்புமுளைகளும் ஒன்றோடு ஒன்று மோதி நொறுங்கின. ஒன்றாகக் கூடியிருந்த சிலர் (வீரர்கள்), ஒன்றாகக் கூடியிருந்த வேறு பிறருடன் மோதினர். அவர்கள் அனைவரும் ஒருவரின் உயிரை மற்றவர் எடுக்கவே விரும்பினர். சில தேர்கள், வேறு தேர்களால் தடுக்கப்பட்டு, அசைய முடியாமல் அப்படியே நின்றிருந்தன.

பெரும் உடல் படைத்த மதங்கொண்ட யானைகள், வேறு பெரும் யானைகள் மீது பாய்ந்து, தங்கள் தந்தங்களினால் ஒன்றை ஒன்று பல இடங்களில் கிழித்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மேலும் பிற {யானைகள்}, தங்கள் வகையில் {யானை வகையில்} வேகமுள்ளவையும், பெரியனவாகவும், முதுகில் கூண்டு பொருத்தப்பட்டவையும், கொடிக்கம்பங்கள் கொண்டவையுமாக இருப்பவற்றுடன் மோதின. போரிடும் பயிற்சி அளிப்பட்ட அவை தங்கள் தந்தங்களால் தாக்கிக் கொண்டு பெரும் வேதனையில் பிளிறின. பயிற்சியால் ஒழுங்கு செய்யப்பட்டவையும், வேணுகங்களாலும் {ஒருவகை யானை ஓட்டும் கருவி}, அங்குசங்களாலும் தூண்டப்பட்டவையும், மதப்பெருக்கிலாதவையுமான யானைகள், மதங்கொண்ட யானைகளை எதிர்த்து விரைந்தன.

அந்தப் போரில் சில பெரிய யானைகள், மதங்கொண்ட யானைகளோடு மோதி அன்றில் பறவைகளைப் போல அலறிக் கொண்டே நான்கு திசைகளிலும் ஓடின. போருக்காக நன்கு பயிற்றுவிக்கப்பட்டவையும், மதங்கொண்ட கன்னத்தையும் முகத்தையும் கொண்டவையுமான பல யானைகள் வாள்கள், ஈட்டிகள் மற்றும் கணைகளால் உயிர்நிலைகளில் அடித்துச் சிதைக்கப்பட்டு, அலறிக் கொண்டு கீழே விழுந்து உயிரிழந்தன. சிலவை பயங்கரமாகப் பிளிறிக் கொண்டு அனைத்து திசைகளிலும் ஓடிக்கொண்டிருந்தன.

யானைகளைப் பாதுகாத்தவர்களும், அகன்ற மார்புகளை உடையவர்களும், திறனுடன் தாக்குபவர்களும், வேணுகங்களையும், அங்குசங்களையும் தரித்துக் கொண்டிருந்தவர்களுமான காலாட்படை வீரர்கள், கோபத்தால் தூண்டப்பட்டு, பிரகாசமிக்கப் போர்க்கோடரிகள், கதாயுதங்கள், தண்டாயுதங்கள், குறுங்கணைகள், ஈட்டிகள், நாராசங்கள், இரும்பு முள் பதிக்கப்பட்ட பருத்த பரிகங்களையும், பளபளக்கும் வாள்களையும் எடுத்துக் கொண்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரின் உயிரை மற்றவர் எடுக்கத் தீர்மானித்து அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர்.

ஒருவரை எதிர்த்து ஒருவர் விரையும் துணிச்சல் மிக்கப் போராளிகளின் பட்டாக்கத்திகள் மனித இரத்தத்தில் மூழ்கி பிரகாசமாக ஒளிர்வதாகத் தோன்றியது. சுழலும் வாள்களின் “விஸ்” என்ற ஒலியும், எதிரிகளின் (உடல்களின்) உயிர் நிலைகளைத் தாக்கும் வீரமிக்கக் கரங்களின் ஒலிகளும் சேர்ந்து பேரொலியாக ஒலித்தது. கதாயுதங்கள், முசலங்கள் {உலக்கை போன்ற ஆயுதம்} ஆகியவற்றால் அடிக்கப்பட்டும், சிறந்த வாள்களால் வெட்டப்பட்டும், யானைகளின் தந்தங்களால் பிளக்கப்பட்டும், யானைகளால் தாக்கப்பட்டும், ஒருவரை ஒருவர் அழைப்போரின் குரல்கள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நரகங்களில் வீழ்ந்தோரின் கதறல்களைப் போல இருந்தன.

பெரும் வேகம் கொண்டவையும், அன்னங்களைப் (அன்னங்களின் கொண்டையைப்) போன்ற ஓங்கிய வால்களைக் கொண்டவையுமான குதிரைகளில் சென்ற வீரர்கள் ஒருவரை எதிர்த்து மற்றவர் விரைந்தனர். பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்டவையும், வேகமானவையும், பளபளப்பானவையும், கூரிய முனை கொண்டவையுமான நீண்ட ஈட்டிகளை அவர்கள் {குதிரை வீரர்கள்} வீசினர். விரைந்து செல்லும் சில குதிரை வீரர்கள், {குதிரைகளோடு} எம்பி உயர்ந்து, தேரில் இருந்த தேர்வீரர்களின் தலைகளைத் துண்டித்தனர். மேலும் (ஆங்காங்கே) ஒரு தேர்வீரன், அடிக்கும் தொலைவில் எதிர்ப்பட்டு வரும் குதிரைவீரர்கள் பலரை நேரான பல்லங்களால் {பிறைவடிவ முனை கொண்ட அம்புகளால்} கொன்றான்.

புதிதாய் எழுந்த மேகங்களைப் போன்றவையும், மதங்கொண்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான பல யானைகள், குதிரைகளை வீழ்த்தி தங்கள் கால்களாலேயே அவற்றை மிதித்து நசுக்கின. மத்தகங்களிலும் {யானையின் முகம் மற்றும் நெற்றி}, விலாப்புறங்களிலும் ஈட்டிகளால் பிளக்கப்பட்ட சில யானைகள் பெருந்துன்பத்தால் வீரிட்டு உரக்கப் பிளிறின. மலைக்க வைக்கும் அந்தக் கைகலப்பில், பல பெரிய யானைகள், ஓட்டுநருடன் கூடிய குதிரைகளை வீசி எறிந்தன. சில யானைகள் தங்கள் தந்தங்களால், குதிரைகளையும் அதன் ஓட்டுநர்களையும் வீசி எறிந்து, கொடிக்கம்பத்துடன் கூடிய தேர்களை நசுக்கியபடி திரிந்து கொண்டிருந்தன. மதப்பெருக்கும், சக்தியும் கொண்ட சில பெரிய ஆண் யானைகள், தங்கள் தந்தங்களாலும் கால்களாலும் குதிரைகளையும், அதன் ஓட்டுனர்களையும் கொன்றன. கூரிய முனை கொண்டவையும், பாம்பைப் போன்றவையும், வேகமானவையுமான அம்புகள் யானைகளின் தலைகளிலும், நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், உடல்களிலும் பாய்ந்தன.

பெரிய விண்கற்களின் கீற்றுகள் போலத் தெரிந்தவையும் வீரர்களின் கைகளில் இருந்து அங்கும் இங்கும் வீசப்பட்டவையுமான பளபளப்பான பயங்கரத் தோற்றம் கொண்ட ஈட்டிகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கவசங்களைப் பிளந்து கொண்டு மனிதர்களின் உடல்களையும், குதிரைகளையும் துளைத்தன. சிறுத்தை மற்றும் புலிகளின் தோல்களால் ஆன உறைகளில் இருந்து எடுக்கப்பட்ட பளபளக்கும் தங்கள் பட்டாக்கத்திகளைக் கொண்டு, அப்போரில் தங்களை எதிர்த்த போராளிகளைப் பலர் கொன்றனர். தாங்களே தாக்குண்டிருந்தாலும், தங்கள் உடலின் விலாப்புறங்கள் பிளக்கப்பட்டிருந்தாலும், வாள்கள், கேடயங்கள் மற்றும் போர்க்கோடரிகளைக் கொண்டு (தங்கள் எதிரிகள் மீது) கோபத்துடன் பலர் பாய்ந்தனர். சில யானைகள், தங்கள் தந்தங்களைக் கொண்டு குதிரைகளுடன் சேர்ந்த தேர்களை இழுத்துப்போட்டு, வீசி எறிந்து, தங்கள் பின்னால் கேட்ட கதறல்களால் வழிநடத்தப்பட்டு, அனைத்துப் புறங்களிலும் திரிய ஆரம்பித்தன.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அங்கேயும், இங்கேயும், ஈட்டிகளால் துளைக்கப்பட்ட சிலரும், போர்க்கோடரிகளால் வெட்டப்பட்ட சிலரும், யானைகளால் நசுக்கப்பட்ட சிலரும், குதிரைகளால் மிதிக்கப்பட்ட சிலரும், தேர்ச்சக்கரங்களாலும், கோடரிகளாலும் வெட்டப்பட்ட சிலரும், தங்கள் சொந்தங்களை நோக்கி உரக்க அழைத்தனர். சிலர் தங்கள் மகன்களையும், சிலர் தங்கள் தந்தைமாரையும், சிலர் தங்கள் சகோதரர்கள் மற்றும் சொந்தக்காரர்களையும் அழைத்தனர். சிலர் தங்கள் அம்மான்களையும், சிலர் தங்கள் சகோதரிகளின் மகன்களையும் {மருமகன்களையும்} அழைத்தனர். இன்னும் சிலர் அந்தப் போர்க்களத்தில் இருந்த வேறு சிலரை அழைத்தனர். பெரும் எண்ணிக்கையிலான போராளிகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்கள் ஆயுத்தங்களை இழந்தனர், அல்லது தங்கள் தொடைகள் உடைந்திருந்தனர். மேலும் பிறர் கரங்கள் பிளக்கப்பட்டோ, விலாப்புறங்கள் துளைக்கப்பட்டோ, பிளக்கப்பட்டோ உயிர்வாழும் விருப்பத்தால் உரக்க ஓலமிட்டனர்.

ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பலமிழந்த சிலர், தாகத்தால் வதைக்கப்பட்டு, போர்க்களத்தின் வெறுந்தரையில் கிடந்து தண்ணீர் கேட்டனர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே},  இரத்த வெள்ளத்தில் புரண்டு கொண்டிருந்த சிலர், மிகவும் பலமிழந்த நிலையில், போருக்காக ஒன்று கூடியிருக்கும் உமது மகன்களையும் {கௌரவர்களையும்}, தங்களையே தாங்களும் பெரிதும் நிந்தித்துக் கொண்டனர்.

ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, மறுபுறம், ஒருவரை ஒருவர் காயப்படுத்திக் கொண்டு, தங்கள் ஆயுதங்களையும் கைவிடாமல், எந்த ஓலமும் இடாமல், மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் முழக்கம் செய்தபடி, கோபத்தால் தங்கள் உதடுகளை தங்கள் பற்களால் கடித்தபடி, புருவங்களைச் சுருக்கி, ஒருவரை நோக்கி மற்றவர் கடுமுகம் காட்டியபடி, கிடந்த இடத்திலேயே கிடந்த வீரமிக்க க்ஷத்திரியர்களும் அங்கே இருந்தார்கள். பெரும் பலம் கொண்ட சிலர், அம்புகளால் பாதிக்கப்பட்டு, தங்கள் காயங்களுக்காக அவமானப்பட்டு, பெரும் வலியிலும் விடாப்பிடியாக முழு அமைதியுடன் இருந்தனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்களை இழந்து, கீழே வீசப்பட்டு, பெரும் யானைகளால் காயப்பட்டு இருந்த சில தேர்வீரர்கள், பிறரின் தேர்களில் தங்களை ஏற்றிக் கொள்ளக் கேட்டனர். பலர் தங்கள் காயங்களால் பூத்துக் குலுங்கும் பலாச {Kinsuka} மரங்களைப் போல இருந்தனர். படைப்பிரிவுகள் அனைத்திலும், கணக்கிட முடியாத அளவில் எண்ணிலா பயங்கரக் கதறல்கள் கேட்டன.

வீரர்களின் அழிவுக்கான அந்த அச்சம் நிறைந்த மோதலில், தந்தை மகனைக் கொன்றான், மகன் தந்தையைக் கொன்றான், மருமகன் அம்மானைக் கொன்றான், தாய்மாமன் சகோதரியின் மகனைக் {மருமகனைக்} கொன்றான். நண்பன் நண்பனைக் கொன்றான், உறவினர்கள் சொந்தங்களைக் கொன்றனர். பாண்டவர்களுடன் குருக்கள் மோதிய அந்தப் போரில் படுகொலைகள் இப்படியே நடந்தன.

(எவனுக்கும் எவனாலும்) கருணை காட்டப்படாத, அச்சம்நிறைந்த அந்தப் பயங்கரப் போரில், பீஷ்மரை அணுகிய பாண்டவப் படைப்பிரிவுகள் நடுங்கத் தொடங்கின. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, வெள்ளியாலான கொடிக்கம்பத்தையும், பனைமரமும் ஐந்து நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்ட கொடியையும் கொண்ட வலிய கரங்களைக் கொண்ட அந்தப் பீஷ்மர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனது பெரும் தேரில் ஏறி, மேருவின் சிகரத்தில் இருக்கும் சந்திர வட்டிலைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தார்” {என்றான் சஞ்சயன்}.

அபிமன்யுவின் வீரம்! – பீஷ்ம பர்வம் பகுதி – 047அ-பாண்டவப் படையைக் கலங்கடித்துக் கொண்டிருந்த பீஷ்மரைக் கண்ட அபிமன்யு, அவரிடம் விரைவது; ஐந்து பெரும் வீரர்களால் காக்கப்பட்ட பீஷ்மருடன் அபிமன்யு சளைக்காமல் போரிட்டது; பீஷ்மரைப் பலவீனப்படுத்தி, கிருபரின் வில்லை அபிமன்யு இரண்டாகப் பிளப்பது; பனைமரக்கொடியைக் கொண்ட பீஷ்மரின் கொடிக்கம்பத்தை அபிமன்யு வெட்டி வீழ்த்துவது;  அபிமன்யுவின் வீரத்தைக் கண்ட பீமன் உரக்க முழக்கமிடுவது; பீஷ்மர் தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்த தொடங்குவது; அபிமன்யுவைக் காக்க பாண்டவத் தரப்பில் இருந்து எட்டு பேர் விரைவது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அச்சம்நிறைந்த அந்த நாளின் முற்பகலில் பெரும்பகுதி கழிந்ததும், மனிதர்களில் முதன்மையானோரின் அழிவுக்கான அந்தப் பயங்கர மோதலில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்ட துர்முகன், கிருதவர்மன், கிருபர், சல்லியன், விவிம்சதி ஆகியோர் பீஷ்மரை அணுகி அவரைப் பாதுகாக்கத் தொடங்கினர். வலிமைமிக்க அந்த ஐந்து {5} தேர்வீரர்களால் {அதிரதர்களால்} பாதுகாக்கப்பட்ட அந்தப் பெரும் தேர்வீரர் {மகாரதர் பீஷ்மர்} பாண்டவப் படைக்குள் ஊடுருவினார்.

சேதிகள் {சேதி நாட்டவர்}, காசிகள் {காசி நாட்டவர்}, கரூசர்கள், பாஞ்சாலர்கள் ஆகியோருக்கு மத்தியில் தொடர்ச்சியாகப் பீஷ்மரின் பனைமரக்கொடி இழைந்து செல்வதாகக் காணப்பட்டது. பெரும் வேகம் கொண்டவையும், நேரானவையுமான பல்லங்களால் {அகன்ற தலை கொண்ட அம்புகளால்}, (எதிரிகளின்) தலைகளையும், நுகத்தடிகள் மற்றும் கொடிகளுடன் கூடிய தேர்களையும் அந்த வீரர் {பீஷ்மர்} துண்டாடினார். மேலும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அதன் பாதையில் ஓடிக்கொண்டிருந்த தனது தேரில், பீஷ்மர் ஆடிக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது. (அவரால்) உயிர் நிலைகளில் {மர்மஸ்தானத்தில்} அடிக்கப்பட்ட சில யானைகள் வேதனையில் அலறின.

அப்போது, மஞ்சட்பழுப்பு நிறக் {பொன்னிறக்} குதிரைகள் பூட்டப்பட்ட தனது தேரில் இருந்த அபிமன்யு, பெரும் கோபத்துடன் பீஷ்மரின் தேரை நோக்கி விரைந்தான். கோங்கு மரத்தைப் போன்றதும், பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்டதுமான தனது கொடியுடன் அவன் {அபிமன்யு}, பீஷ்மரையும், அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானோரையும் (ஐந்து பேரையும்) அணுகினான். பனைமரக்கொடி கொண்ட வீரரின் {பீஷ்மரின்} கொடிக்கம்பத்தைக் கூரிய கணைகளால் அடித்தவண்ணம், அந்த வீரன் {அபிமன்யு}, பீஷ்மருடனும், அவரைப் பாதுகாத்து நின்ற தேர்வீரர்களுடனும் போரில் ஈடுபட்டான்.

கிருதவர்மனை ஒரு கணையாலும், சல்லியனை ஐந்தாலும் {5 கணைகளாலும்} துளைத்த அவன் {அபிமன்யு}, தனது பூட்டனை {தனது பாட்டனின் தந்தையான பீஷ்மரை} ஒன்பது கணைகளால் அடித்துப் பலவீனப்படுத்தினான். முழுமையாக நீட்டி இழுக்கப்பட்ட தனது வில்லில் இருந்து நன்றாக அடிக்கப்பட்ட கணையால், பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்டிருந்த (தனது எதிரியின்) {துர்முகனாக இருக்க வேண்டும்} கொடிக்கம்பத்தை வெட்டி வீழ்த்தினான். அனைத்து தடுப்புகளையும் {கவசங்களையும்} துளைக்கவல்லதும், நேரானதுமான ஓர் அகன்ற தலை கொண்ட கணையால், துர்முகனுடைய தேரோட்டியின் தலையை அவனது உடலில் இருந்து துண்டித்தான். மற்றுமொரு கூர்முனை கணை கொண்டு, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கிருபருடைய வில்லை இரண்டாகப் பிளந்தான்.

அவர்களும் {அந்த அறுவரும்} பல கூர்முனை கணைகளால், எப்போதும் ஆடிக்கொண்டிருப்பவனாகத் தெரிந்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை {அபிமன்யுவை} தாக்கினர். அவனது {அபிமன்யுவின்} கரங்களின் வேகத்தைக் கண்டு தேவர்களும் கூட மனம் நிறைந்தனர். இலக்கை அடிப்பதில் அவனுக்கு {அபிமன்யுவுக்கு} இருந்த நிச்சயத்தன்மையின் விளைவால், பீஷ்மரின் தலைமையில் இருந்த தேர்வீரர்கள் அனைவரும், அவன் {அபிமன்யு}, தனஞ்சயனின் {அர்ஜுனனின்} திறமையைக் கொண்டிருப்பதாகவே கருதினர். காண்டீவத்தைப் போன்றே நாணொலியை எழுப்பிய அவனது வில் நீட்டி வளைக்கப்பட்ட போது, அது நெருப்பு வளையமாகச் சுழல்வதைப் போலத் தெரிந்தது.

பிறகு, எதிரிவீரர்களைக் கொல்பவரான பீஷ்மர், அவனிடம் {அபிமன்யுவிடம்} மூர்க்கமாக விரைந்து, அந்த மோதலில் ஒன்பது {9} கணைகளால் அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} துளைத்தார். மேலும் அவர் {பீஷ்மர்}, அகன்ற தலை கொண்ட மூன்று {3} கணைகளால், பெரும் சக்தி கொண்ட அந்த வீரனின் {அபிமன்யுவின்} கொடிக்கம்பத்தை அறுத்தார். கடும் நோன்புகளைக் கொண்ட பீஷ்மர், அவனது (எதிரியான அபிமன்யுவின்) தேரோட்டியையும் தாக்கினார். கிருதவர்மன், கிருபர், சல்லியன் ஆகியோரும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அர்ஜுனன் மகனை {அபிமன்யுவைத்} துளைத்தாலும், மைநாக மலை போல உறுதியாக நின்ற அவனை {அபிமன்யுவை} அவர்களால் நடுங்கச் செய்ய முடியவில்லை.

தார்தராஷ்டிரப்படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களால் சூழப்பட்டாலும், அர்ஜுனனின் அந்த வீர மகன் {அபிமன்யு}, அந்த ஐந்து தேர்வீரர்கள் மேலும் இன்னும் கணைமாரியைப் பொழிந்து கொண்டே இருந்தான். தனது கணைகளின் மழையால், அவர்களது வலிமைமிக்க ஆயுதங்களைக் கலங்கடித்தும், பீஷ்மர் மீது தனது கணைகளைக் கொட்டிய வண்ணமும், அந்தப் பலம்நிறைந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு} உரத்த முழக்கத்தைச் செய்தான். போரில் இப்படிப் போராடி, (தனது) கணைகளால் பீஷ்மரைப் பீடித்த அவனது கரங்களில் நாம் கண்ட பலம் பெரிதாக இருந்தது. அவன் இத்தகு ஆற்றலைக் கொண்டிருந்தாலும், பீஷ்மரும் அவன் மீது கணைகளை அடிக்கவே செய்தார். ஆனால் பீஷ்மரின் வில்லில் இருந்து அடிக்கப்பட்ட கணைகளை அந்த மோதலில் அவன் வெட்டி வீழ்த்தினான்.

பிறகு, தோற்காத கணைகளைக் கொண்ட அந்தப் போர்வீரன் {அபிமன்யு}, அந்த மோதலில், ஒன்பது {9} கணைகளைக் கொண்டு, பீஷ்மரின் கொடிக்கம்பத்தை அறுத்தான். அச்சாதனையைக் கண்ட மக்கள் பெரும் கூச்சலிட்டார்கள். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், வெள்ளியால் செய்யப்பட்டதும் பனைமரம் பொறிக்கப்பட்ட கொடியைக் கொண்டதுமான அந்த நெடிய கொடிக்கம்பம், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சுபத்திரையின் மகனால் {அபிமன்யுவால்} வெட்டப்பட்டுப் பூமியில் வீழ்த்தப்பட்டது. ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} கணைகளால் சாய்க்கப்பட்ட கொடிக்கம்பத்தைக் கண்டு பெருமையடைந்த பீமன், சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} உற்சாகமூட்டும் பொருட்டு உரத்த முழக்கமிட்டான்.

பிறகு, வலிமைமிக்கப் பீஷ்மர், பெரும் திறம் கொண்ட தெய்வீகக் கணைகளை, அந்தக் கடும் மோதலில் தோன்றச் செய்தார். அளவிடமுடியாத ஆன்மா கொண்ட அந்தப் பூட்டன் {பீஷ்மர்}, சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} ஆயிரக்கணக்கான கணைகளால் மூழ்கடித்தார். இதன்பேரில், பாண்டவத் தரப்பில் வலிமைமிக்கத் தேர்வீரர்களான பத்து {10} பெரும் வில்லாளிகள், சுபத்திரையின் மகனைப் {அபிமன்யுவைப்} பாதுகாக்க தங்கள் தேர்களில் விரைந்து சென்றனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனது மகனுடன் {உத்தரனுடன்} கூடிய விராடன், பிரிஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், பீமன், கேகயச் சகோதரர்கள் ஐவர், சாத்யகி ஆகியோரே அவர்கள் {அந்த பத்து (10)பெரும் வில்லாளிகள்}.

அந்த மோதலில், சந்தனுவின் மகனான பீஷ்மரை நோக்கி கடும் வேகத்துடன் பாய்ந்து சென்றவர்களில், பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னன்} மூன்று {3} கணைகளாலும், சாத்யகியை பத்து {10} கணைகளாலும் அவர் {பீஷ்மர்} துளைத்தார். இறகு படைத்ததும், சாணைக்கல்லில் கூர் தீட்டப்பட்டுக் கூர்மையாக இருந்ததுமான ஒரு கணையைக் கொண்டு, வில்லை முழுமையாக இழுத்து, பீமசேனனின் கொடிக்கம்பத்தை அவர் {பீஷ்மர்} அறுத்தார். ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, தங்கத்தாலானதும், சிங்கம் பொறிக்கப்பட்ட கொடி கொண்டதுமான பீமசேனனின் கொடிக்கம்பம், பீஷ்மரால் வெட்டப்பட்டு, தேரில் இருந்து விழுந்தது. பிறகு பீமன், அந்த மோதலில், சந்தனுவின் மகனான பீஷ்மரை மூன்று{3} கணைகளாலும், கிருபரை ஒரு கணையாலும், கிருதவர்மனை எட்டு{8} கணைகளாலும் துளைத்தான்.

உத்தரனின் மரணமும்! ஸ்வேதனின் வெஞ்சினமும்!! – பீஷ்ம பர்வம் பகுதி – 047ஆ-அபிமன்யுவைக் காக்க யானையில் வந்த உத்தரன், சல்லியனை எதிர்த்துப் போரிட்டது; சல்லியனின் குதிரைகளை உத்தரனின் யானை கொன்றது; சல்லியன் ஒரே கணையால் உத்தரனைக் கொன்றது; இதனால் கோபம் கொண்ட உத்தரனின் தம்பி ஸ்வேதன் சல்லியனைக் கொல்ல அவனிடம் விரைந்தது; ஆபத்தில் இருந்த சல்லியனைக் காக்க கௌரவப்படையின் ஏழு பேர் விரைந்தது; அந்த எழுவரையும் திக்கு முக்காட வைத்த ஸ்வேதன்; ஸ்வேதன் சல்லியனின் மகனான ருக்மரதனைக் காயப்படுத்தி மயங்கச் செய்தது; ஸ்வேதனிடம் ஆபத்திலிருந்த சல்லியனைத் துரியோதனன் காத்தது…

விராடனின் மகனான உத்தரனும், துதிக்கை உயர்த்திய நிலையில் தந்தத்தோடு கூடிய யானையில் மத்ர ஆட்சியாளனை {சல்லியனை} எதிர்த்து விரைந்தான். எனினும், சல்லியன் தன் தேரை நோக்கி வேகமாக விரைந்து வந்த அந்த யானைகளின் இளவசரனை {உத்தரனின் யானையை} இணையற்ற வேகத்துடன் தடுப்பதில் வென்றான். பெரும் கோபம் கொண்ட அந்த யானைகளின் இளவரசன் {யானை}, (சல்லியனின்) தேருடைய நுகத்தில் தனது காலை வைத்து, அற்புத வேகம் கொண்டவையும், பெரியவையுமான அவனது {சல்லியனின்} நான்கு குதிரைகளைக் கொன்றான் {அந்த யானை கொன்றது}. குதிரைகள் கொல்லப்பட்ட தேரில் நின்ற மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, முழுவதும் இரும்பால் செய்யப்பட்டதும், பாம்பு போன்றதுமான ஒரு கணையை எடுத்து, ஒரே அடியாக உத்தரனைக் கொல்வதற்காக அடித்தான். அந்தக் கணையால் கவசம் பிளப்பட்ட அவன் {உத்தரன்}, முற்றிலும் புலன் உணர்வை இழந்து, தனது பிடியில் இருந்து அங்குசத்தையும் ஈட்டியையும் விட்டு, தன் யானையின் கழுத்தில் இருந்து கீழே விழுந்தான்.

பிறகு தன் வாளை எடுத்துக் கொண்ட சல்லியன், தனது அற்புதத் தேரில் இருந்து கீழே குதித்து, தனது ஆற்றல் அனைத்தையும் செலுத்தி, அந்த யானைகளின் இளவரசனுடைய {உத்தரனின் யானையுடைய} பெரிய துதிக்கையைத் துண்டித்தான். கணைமாரியால் தனது கவசமெங்கும் துளைப்பட்டும், தனது துதிக்கை துண்டிக்கப்பட்டும் இருந்த அந்த யானை உரக்க அலறி கீழே விழுந்து இறந்தது. இத்தகு சாதனையை அடைந்த மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிருதவர்மனின் அற்புதத் தேரில் ஏறினான்.

தனது சகோதரனான {அண்ணனான} உத்தரன் கொல்லப்பட்டதையும், கிருதவர்மனோடு இருந்த சல்லியனையும் கண்ட விராடனின் மகன் ஸ்வேதன், தெளிந்த நெய்யின் {நெய்யினால் எரியும்) நெருப்பைப் போலக் கோபத்தால் சுடர்விட்டு எரிந்தான். அந்த வலிமைமிக்கப் போர்வீரன் {ஸ்வேதன்}, சக்ரனின் {இந்திரனின்} வில்லை ஒத்திருந்த தனது பெரிய வில்லை நீட்டி வளைத்து, மத்ர ஆட்சியாளன் சல்லியனைக் கொல்லும் விருப்பத்துடன் விரைந்தான். வலிமைமிக்கத் தேர்களின் படைப்பிரிவுகள் அனைத்துப் புறங்களிலும் சூழ முன்னேறிய அவன் {ஸ்வேதன்}, சல்லியனின் தேர் மீது கணைமாரியைப் பொழிந்தான்.

மதங்கொண்ட யானையின் ஆற்றலுக்கு இணையாகப் போரிட விரைந்த அவனை {ஸ்வேதனைக்} கண்டவர்களும், உமது தரப்பைச் சேர்ந்தவர்களுமான ஏழு {7} தேர்வீரர்கள், ஏற்கனவே மரணத்தின் கோரப்பற்களுக்குள் இருந்த மத்ர ஆட்சியாளனைக் {சல்லியனைக்} காக்க விரும்பி, அனைத்துப் புறங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கோசலகர்களின் ஆட்சியாளன் பிருஹத்பலன், மகதத்தின் ஜயத்சேனன், சல்லியனின் வீரமிக்க மகனான ருக்மரதன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், காம்போஜர்களின் மன்னன் சுதக்ஷிணன், பிருஹத்க்ஷத்ரனின் [1] இரத்தஉறவும், சிந்துக்களின் ஆட்சியாளனுமான ஜெயத்ரதன் ஆகியோரே அந்த ஏழு {7} போர்வீரர்களாவர்.

பல்வேறு நிறங்களில் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த உயர் ஆன்ம போர்வீரர்களின் நீட்டி வளைக்கப்பட்ட விற்கள், மேகங்களில் இருக்கும் மின்னல் கீற்றுகளைப் போலத் தெரிந்தன. அவர்கள் அனைவரும், கோடை காலம் முடிந்ததும் காற்றால் புரட்டப்படும் மேகங்கள் எப்படி மலையின் மார்பில் மழையைப் பொழியுமோ, அப்படி, ஸ்வேதனின் தலையில் தொடர்ச்சியான கணைமாரியைப் பொழிந்தனர். படைகளின் தலைவனான அந்த வலிமைமிக்க வில்லாளி {ஸ்வேதன்}, இதனால் கோபமடைந்து, அகன்ற தலை கொண்ட ஏழு கணைகளைத் தனது வில்லில் இருந்து பெரும் வேகத்துடன் அடித்து, தொடர்ச்சியாக அவர்களைக் கலங்கடித்தான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவர்களின் {அந்த எழுவரின்} விற்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதை நாம் கண்டோம். அதன் பேரில், கண் இமைப்பதில் பாதி நேரத்திலேயே வேறு விற்களை அவர்கள் அனைவரும் எடுத்துக் கொண்டனர். பிறகு அவர்கள் ஸ்வேதனின் மீது ஏழு கணைகளை அடித்தார்கள். அளவிலா ஆன்மா கொண்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்தப் போர்வீரன் {ஸ்வேதன்}, மிக வேகமான ஏழு கணைகளைக் கொண்டு, மீண்டும் அந்த வில்லாளிகளின் (வேறு) விற்களை{யும்} துண்டித்தான்.

தங்கள் பெரும் விற்கள் துண்டிக்கப்பட்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அந்தப் போர்வீரர்கள், ஏழு ரதசக்திகளை {ஈட்டி போன்ற ஆயுதம்} எடுத்துக் கொண்டு உரக்க முழங்கினர். ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, அந்த ஏழு ரதசக்திகளைச் ஸ்வேதனின் தேர் மீது அவர்கள் எறிந்தனர். பெரும் விண்கற்களைப் போல, இடியின் ஒலியுடன் (காற்றில்) சென்ற அந்தச் சுடர்மிகும் ரதசக்திகள், அவனைச் {ஸ்வேதனைச்} சென்றடையும் முன்பே, வலிமைமிக்க ஆயுதங்களை அறிந்த அந்த வீரன் {ஸ்வேதன்}, ஏழு பல்லங்களால் {அகன்ற தலை கொண்ட ஏழு கணைகளால்} அவற்றை அறுத்தான்.

பிறகு, உடலின் அனைத்துப் பகுதியையும் துளைக்கவல்ல கணையொன்றை எடுத்த அவன் {ஸ்வேதன்}, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, அதை ருக்மரதன் {சல்லியனின் மகன்} மீது எறிந்தான். வஜ்ரத்தின் சக்தியை விஞ்சிய அந்த வலிமைமிக்கக் கணை பின்னவனின் {ருக்மரதனின்} உடலைத் துளைத்தது. பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கணையால் பலமாகத் தாக்கப்பட்ட ருக்மரதன், தனது தேரில் கீழே அமர்ந்தபடி மரண மயக்கத்தில் விழுந்தான். பிறகு அவனுடைய {ருக்மரதனின்} தேரோட்டி, உணர்வற்று மயக்கத்தில் இருந்த அவனை அனைவரின் பார்வையிலேயே அச்சத்துடன் தூக்கிச் சென்றான்.

பிறகு தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த வேறு ஆறு கணைகளைக் கொண்டு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஸ்வேதன், தனது ஆறு எதிரிகளின் கொடிக்கம்பங்களையும் வெட்டினான். அவர்களது குதிரைகளையும், தேரோட்டிகளையும் துளைத்த அந்த எதிரிகளைத் தண்டிப்பவன் {ஸ்வேதன்}, தடையற்ற கணைகளால் அந்த ஆறு வீரர்களையும் மூழ்கடித்து, சல்லியனின் தேரை நோக்கி முன்னேறினான். சல்லியனின் தேரை நோக்கி விரைவாக முன்னேறிய அந்தப் (பாண்டவப்) படைகளின் தலைவனை {ஸ்வேதனைக்} கண்ட உமது படையினர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, “ஓ!” என்றும் “ஐயா!” என்றும் உரக்க ஒலி எழுப்பினர்.

அங்கே, பீஷ்மரின் தலைமையில் வந்த உமது மகன் {துரியோதனன்}, துணிச்சல் மிக்கப் போர்வீரர்கள் மற்றும் பல துருப்புகளின் ஆதரவுடன், ஸ்வேதனின் தேரை நோக்கி முன்னேறினான். ஏற்கனவே மரணத்தின் கோரப்பற்களுக்கிடையில் நுழைந்திருந்த மத்ர ஆட்சியாளனை {சல்லியனை} (இப்படியே) அவன் {துரியோதனன்} மீட்டான். அதன் பிறகு, உமது துருப்புகளுக்கும், எதிரிகளின் துருப்புகளுக்கும் இடையில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதும், பயங்கரமானதும், தேர்களும் யானைகளும் கலந்து குழம்பிப் போனதுமான ஒரு போர் தொடங்கியது.

சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, பீமசேனன், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி, கேகய ஆட்சியாளன் {பிருஹத்க்ஷத்திரன்}, விராடன், பிரிஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், சேதி துருப்புகள் ஆகியோர் மீது குருக்களின் முதிர்ந்த பாட்டன் {பீஷ்மர்} கணைமாரியைப் பொழிந்தார் [2]” {என்றான் சஞ்சயன்}.

ஸ்வேதன் பீஷ்மர் மோதல்! – பீஷ்ம பர்வம் பகுதி – 048அ-விராடனின் மகன் ஸ்வேதனுக்குத் துணையாகச் சிகண்டி; பீஷ்மர் புரிந்த பயங்கரப் போர்; போரிட்ட போர்வீரர்களின் நிலை; ஸ்வேதனைக் கண்டு அஞ்சிய கௌரவர்கள் பீஷ்மரைக் கைவிட்டது; பீஷ்மரின் தாக்குதல்; ஸ்வேதனுக்கும் பீஷ்மருக்கும் இடையில் மூண்ட பயங்கரப் போர்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “பெரும் வில்லாளியான ஸ்வேதன் சல்லியனின் தேரை நோக்கி முன்னேறிய போது, ஓ! சஞ்சயா, கௌரவர்களும், பாண்டவர்களும் என்ன செய்தார்கள்? சந்தனுவின் மகனான பீஷ்மர் என்ன செய்தார்? இவை அனைத்தையும் கேட்கும் எனக்கு நீ சொல்வாயாக” என்று கேட்டான்.

அதற்குச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, படைத்தலைவனாக ஸ்வேதனைத் தங்கள் முன்னணியில் நிறுத்தி, துணிவு மிக்கவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும், நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் இருந்தவர்களான க்ஷத்திரியக் காளைகள் தங்கள் பலத்தை வெளிக்காட்டினார்கள். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (ஸ்வேதனை) விடுவிக்க விரும்பி, சிகண்டியைத் தலைமையாகக் கொண்டவர்களும், உமது அரச மகனுக்கு {துரியோதனனுக்கு} தங்கள் வலிமையை வெளிக்காட்டினார்கள். போர்வீரர்களில் முதன்மையானவரும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தேரைக் கொண்டவருமான பீஷ்மரைக் கொல்ல விரும்பி அவரை நோக்கியும் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் {சிகண்டியின் தலைமையிலான வீரர்கள்} விரைந்தனர். அதைத் தொடர்ந்து நேரிட்ட போர் பயங்கரமானதாக இருந்தது. உமது துருப்புகளுக்கும், எதிரி துருப்புகளுக்கும் இடையிலான அந்த அற்புதம் நிறைந்த பயங்கரப் போர் எப்படி நடந்ததோ, அவ்வாறே நான் உமக்குச் சொல்கிறேன்.

அந்தச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்} பல தேர்களின் கூடுகளை வெறுமையாக்கினார். (ஏனெனில்), அந்தத் தேர்வீரர்களில் சிறந்தவர் {பீஷ்மர்}, (தனது) அம்புகளால், பல தலைகளை வெட்டி வீழ்த்தினார். சூரியனுக்கு நிகரான சக்தி கொண்ட அவர் {பீஷ்மர்}, சூரியனையே தனது கணைகளால் மறைத்தார். இருளை விலக்கி எழுந்த சூரியனைப் போலத் தன்னைச் சூழ்ந்திருந்த எதிரிகளை அந்த மோதலில் அவர் {பீஷ்மர்} அகற்றினார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் அவரால் {பீஷ்மரால்} அடிக்கப்பட்ட பலம் நிறைந்த, பெருவேகம் கொண்ட நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான கணைகள், எண்ணற்ற க்ஷத்திரியர்களின் உயிர்களை அந்த மோதலில் பறித்தன.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த மோதலில் அவர் {பீஷ்மர்} நூற்றுக்கணக்கான போர்வீரர்கள் மற்றும் முள் கவசம் பூண்ட யானைகள் ஆகியவற்றின் தலைகளை, வஜ்ரத்தின் தாக்குதலால் மலைகளில் இருந்து விழுந்த சிகரங்களைப் போல விழச்செய்தார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்கள் மற்ற தேர்களோடு கலப்பது தெரிந்தது. ஒரு தேரை மற்றொரு தேரோடும், ஒரு குதிரையை மற்றொரு குதிரையோடும் அப்போது காண முடிந்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உயிரிழந்தும், {அடிபட்டு, உயிருடன்} தொங்கிக் கொண்டும் இருந்த, (குதிரைகளின் சேணங்களில் இருந்த)  இளம் வீரர்களை, வேகமான குதிரைகள், அங்கேயும் இங்கேயும் சுமந்து திரிந்தன.

(தம் மேனியில்) வாள்களும், அம்பறாத்தூணிகளும் பொருந்தியிருக்க, (தம் உடல்களில் இருந்து) கவசங்கள் தளர்ந்திருக்க, உயிரிழந்த வீரர்களின் உடல்கள், தரையைப் படுக்கையாக்கி உறங்கிக் கொண்டிருந்தன. ஒருவருக்கு எதிராக ஒருவர் விரையும் போது, கீழே விழுந்து, மீண்டும் எழுந்து, எழுந்த பிறகு மீண்டும் விரைந்த போராளிகள் கைக்குக் கையெனப் கைகளாலேயேப் போரிட்டனர். ஒருவரால் காயப்பட்ட மற்ற பலர் போர்க்களத்தில் உருண்டு கொண்டிருந்தனர். மதம் கொண்ட யானைகள் அங்குமிங்கும் விரைந்தன. நூற்றுக்கணக்கான தேர்வீரர்கள் கொல்லப்பட்டார்கள்.

தேர்வீரர்கள் தங்கள் தேர்களோடு சேர்த்து அனைத்துப் புறங்களில் இருந்தும் நசுக்கப்பட்டனர். ஒருவனின் கணையால் கொல்லப்பட்ட மற்றவன், அந்தத் தேர்வீரனின் {தனது எதிரியின்} தேரிலேயே பாய்ந்து விழுந்தான். தம் தேரோட்டி கொல்லப்பட்ட வலிமைமிக்கத் தேர்வீரர்கள் உயரத்தில் இருந்து பாயும் காட்சியும் காணப்பட்டது. அங்கே அடர்த்தியான புழுதி எழுந்தது. அது போர்க்களத்தில் வில்லின் நாணொலியுடன் போரிட்டுக் கொண்டிருந்தவர்களை {எதிரிகளை}, போராடிக் கொண்டிருந்த எதிராளிகளுக்குச் சுட்டிக் காட்டியது. தங்கள் உடல்களில் கொண்ட அழுத்தத்தின் காரணமாகப் போராளிகள் தங்கள் எதிரிகளை ஊகித்தனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (எதிரி) படைப்பிரிவுகளின் நாணொலிகளால் வழிநடத்தப்பட்ட போர்வீரர்கள், கணைகளுடன் போரிட்டனர். “ஹிஸ்” என்று போராளிகளால் அடிக்கப்பட்ட கணைகளின் ஒலி அவர்களின் எதிரிகளால் கேட்கப்பட்டது. காதுகளையே துளைக்கும் வண்ணம், பேரிகைகளின் ஒலி பேரொலியாக இருந்தது. போர்களத்தில் ஒரு போராளி தனது ஆற்றலை வெளிப்படுத்தியபடி உச்சரித்துக் கொண்ட அவனது பெயர், மயிர் சிலிர்ப்பை ஏற்படுத்தி ஆரவாரமிக்கப் பேரொலியாக எழுந்தது, இருப்பினும் அவற்றை நம்மால் கேட்க முடியவில்லை. தனக்குப் பிறந்த மகனைத் தந்தையால் அடையாளம் காண முடியவில்லை. நேரான கணைகளின் மூலம் தேரின் சக்கரங்களில் ஒன்று உடைக்கப்பட்டோ, குதிரைகளில் ஒன்று கொல்லப்பட்டோ, தேரோட்டியுடன் கூடிய தேர்வீரர்கள் வீழ்த்தப்பட்டனர். இப்படியே தங்கள் தேர்களை இழந்த பல போர் வீரர்கள் ஓடிக் கொண்டிருப்பது {அங்கே பரவலாகத்} தெரிந்தது.

எதிரியைப் பீஷ்மர் தாக்கிய போது, வெட்டப்பட்டவன் கொல்லப்பட்டான், கொல்லப்படாதவன் உயிர்நிலைகளில் தாக்கப்பட்டான்; ஆனால் தாக்கப்படாதவன் என்று எவனும் இல்லை. அந்தப் பயங்கரப் போரில் குருக்களைப் படுகொலை செய்த ஸ்வேதனின் செயல் பெரிதாக இருந்தது. அவன் {ஸ்வேதன்} நூற்றுக்கணக்கான உன்னத இளவரசர்களைக் கொன்றான். அவன் {ஸ்வேதன்}, தேர்வீரர்களின் தலைகளையும் அங்கதங்களால் {தோள்வளைகளால்} அலங்கரிக்கப்பட்டு, வில்லுடன் கூடிய (அவர்களது) கரங்களையும் தனது கணைகளைக் கொண்டு நூற்றுக் கணக்கில் வெட்டினான். தேர்வீரர்கள், தேர்ச்சக்கரங்கள், தேரில் இருந்த பிறர், தேர்கள், சிறிய மற்றும் விலை உயர்ந்த கொடிக்கம்பங்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குதிரைகள், தேர்க்கூட்டங்கள், மனிதர்களின் கூட்டங்கள் ஆகியவற்றை, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, ஸ்வேதன் அழித்தான்.

ஸ்வேதனின் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக, அந்தத் தேர்வீரர்களில் சிறந்தவரைக் {பீஷ்மரைக்} கைவிட்டு, பின்னோக்கி புறமுதுகிட்டு நாம் ஓடினோம் {நமது படை ஓடியது}. அதனால்தான் (இப்போது) தங்களைக் காண்கிறோம். ஓ! குரு குலத்தின் மகனே {திருதராஷ்டிரரே}, கணைகள் தாக்கும் எல்லையைக் கடந்த குருக்கள் அனைவரும், அந்தப் போரில் சந்தனுவின் மகனான பீஷ்மரைக் கைவிட்டு, (பார்வையாளர்களாக மட்டுமே தாங்கள் இருந்தாலும்) மோதலுக்காகத் தங்கள் ஆயுதங்களுடன் காத்திருந்தார்கள். அந்தப் பயங்கரப் போரில், (உலகளாவிய) மகிழ்ச்சியற்ற அந்த நேரத்திலும், நமது படையில், மனிதர்களில் புலியான பீஷ்மர் மட்டுமே மேரு மலையைப் போல அசையாதிருந்து மகிழ்ச்சியாக இருந்தார். பின்பனிக் காலத்தின் {சிசிரருதுவின் – மாசி, பங்குனியின்} முடிவில் [1]சூரியன் தனது கதிர்களால் நீரை உறிஞ்சுவது போல, (எதிரிகளின்) உயிர்களைப் பறித்த பீஷ்மர், சூரியனைப் போன்ற தனது தேரின் தங்கக் கதிர்களால், அந்தச் சூரியனைப் போலவே ஒளிர்ந்தார். மேலும், அந்தப் பெரும் வில்லாளி கணை மேகங்களை அடித்து அசுரர்களைத் {???} தாக்கினார்.

அச்சம் நிறைந்த அந்த மோதலில் பீஷ்மரால் கொல்லப்படும்போது, அவ்வீரர்கள், தங்கள் படையணிகளில் இருந்து உடைந்து, விறகால் எரியும் நெருப்பிடம் இருந்து ஓடுவதைப் போல அவரிடம் {பீஷ்மரிடம்} இருந்து ஓடினர். அந்தத் தனி வீரனிடம் (ஸ்வேதனிடம்) மோதியவர்களில், எதிரிகளைக் கொல்பவரான பீஷ்மர் மட்டுமே மகிழ்ச்சியாகவும், முழுமையாகவும் இருந்தார். துரியோதனனின் நலத்தில் அர்ப்பணிப்புக் கொண்ட அவர் {பீஷ்மர்} அந்தப் பாண்டவ வீரனை {ஸ்வேதனை} துன்புறுத்த ஆரம்பித்தார். கைவிடுவதற்குக் கடினமான தனது உயிரையே துச்சமாக மதித்து, அச்சமனைத்தையும் கைவிட்டு, அந்தக் கடும் மோதலில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர் {பீஷ்மர்} அந்தப் பாண்டவப் படையைக் கொன்றழித்தார்.

(தார்தராஷ்டிரப்) படைப்பிரிவுகளைத் தாக்கும் படைத்தலைவனை (ஸ்வேதனைக்) கண்டவரும், தேவ விரதன் என்று அழைக்கப்பட்டவரும், உமது தந்தையுமான பீஷ்மர், அவனை {ஸ்வேதனை} நோக்கி வேகமாக விரைந்தார். அதன்பேரில், ஸ்வேதன், கணைகளால் ஆன வலையால் பீஷ்மரை மறைத்தான். பீஷ்மரும் தனது கணைகளின் தாக்குதலால் ஸ்வேதனை மறைத்தார். முழங்கிக் கொண்டிருக்கும் இரு காளைகளைப் போலவும், மதங்கொண்ட இரண்டு பெரிய யானைகள் மோதிக் கொள்வது போலவும், ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளும் புலிகள் போலவும் அவர்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்து விரைந்தனர். ஒருவரின் ஆயுதங்களைத் தனது ஆயுதங்களின் மூலம் கலங்கடித்த மனிதர்களில் காளைகளான பீஷ்மரும், ஸ்வேதனும், ஒருவரின் உயிரை மற்றவர் பறிக்கும் விருப்பத்துடன் ஒருவருக்கொருவர் போரிட்டனர்.

ஸ்வேதன் பாண்டவப்படையைப் பாதுகாக்கவில்லையெனில், சினத்தில் சீறும் பீஷ்மர், ஒரே நாளில் அந்தப் படை முழுவதையும் எரித்திருப்பார். ஸ்வேதனால் தடுக்கப்பட்ட தங்கள் பாட்டனைக் {பீஷ்மரைக்} கண்ட பாண்டவர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர். அதே வேளையில் உமது மகன் {துரியோதனன்} உற்சாகமிழந்தான். கோபத்தால் தூண்டப்பட்ட துரியோதனன், பல மன்னர்கள் சூழப் பாண்டவப் படையை எதிர்த்து தனது துருப்புகளுடன் விரைந்தான்.

இதனால் கங்கையின் மைந்தரை {பீஷ்மரைக்} கைவிட்ட ஸ்வேதன், மரங்களை வேருடன் பிடுங்கிப் போடும் பலத்த காற்று போல வேகமாக விரைந்து உமது மகனின் {துரியோதனனின்} படையைக் கொன்றழித்தான். கோபத்தில் உணர்விழந்த அந்த விராடன் மகன் {ஸ்வேதன்}, உமது படையை நிர்மூலமாக்கியபடி முன்னேறி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மர் நிலைபெற்றிருந்த இடத்திற்கு (மீண்டும்) வந்தான். பிறகு அந்த உயர் ஆன்ம வீரர்கள் இருவரும், சுடர்மிகும் தங்கள் கணைகளோடு, பழங்காலத்தின் விருத்திரன் மற்றும் வாசவன் {இந்திரன்} போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரை ஒருவர் கொல்ல விரும்பி தங்களுக்குள் போரிட்டனர்.

ஸ்வேதனின் வீரமும், மரணமும்! – பீஷ்ம பர்வம் பகுதி – 048ஆ-பீஷ்மரின் வில்லைப் பலமுறை ஒடித்த ஸ்வேதன்; பீஷ்மரின் பனை மரக் கொடியை வெட்டி வீழ்த்திய ஸ்வேதன்; பீஷ்மர் ஸ்வேதனால் கொல்லப்பட்டார் எனக் கௌரவர்கள் நினைப்பது; ஸ்வேதன் தனது தேரை இழப்பது; பீஷ்மரின் தேரை ஸ்வேதன் தூள் தூளாக்குவது; பிரம்மாஸ்திரம் கொண்டு பீஷ்மர் ஸ்வேதனைக் கொல்வது; முதல் நாள் போரின் முடிவில் பாண்டவர்கள் சோகத்துடன் தங்கள் பாசறைக்குத் திரும்புவது…

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “(தனது) வில்லை முழுமையாக வளைத்த ஸ்வேதன், பீஷ்மரை ஏழு கணைகளால் துளைத்தான். பிறகு, தனது ஆற்றலை வெளிப்படுத்திய அந்த வீரமிக்கவர் (பீஷ்மர்), சீற்றமிகுந்த யானையொன்று, தனக்கு இணையான மற்றொரு சீற்றமிக்க யானையைத் தடுப்பதைப் போலத் தனது எதிரியின் வீரத்தைத் தடுத்தார். க்ஷத்திரியர்களை மகிழ்வு கொள்ளச் செய்யும் ஸ்வேதன் பீஷ்மரை மேலும் தாக்கினான். அதற்குப் பதிலடியாக, சந்தனுவின் மகனான பீஷ்மரும் பத்து கணைகளால் அவனைத் {ஸ்வேதனைத்} துளைத்தார். இப்படி அவரால் {பீஷ்மரால்} துளைக்கப்பட்டாலும், அந்த வலிமைமிக்கப் போர்வீரன் {ஸ்வேதன்} மலையென அசையாமல் நின்றான்.

அதன்பிறகு ஸ்வேதன், அனைவரும் வியக்கும் வகையில் இருபத்தைந்து நேரான கணைகளால் சந்தனுவின் மகனைத் {பீஷ்மரைத்} துளைத்தான். புன்னகைத்தபடியே தனது கடைவாயை நாவால் நக்கிய ஸ்வேதன் அந்த மோதலில் மேலும் பத்து கணைகளால் பீஷ்மரின் வில்லைப் பத்து துண்டுகளாக வெட்டினான். முழுதும் இரும்பாலானதும், இறகு படைத்ததுமான மற்றொரு கணையால் (ஸ்வேதன்), அந்த உயர் ஆன்மா கொண்டவரின் (பீஷ்மரின்) பனைமரக் கொடிக்கம்பத்தின் உச்சியைக் குறிபார்த்துத் தகர்த்தான்.

பீஷ்மரின் கொடிக்கம்பம் வெட்டி வீழ்த்தப்பட்டதைக் கண்ட உமது மகன்கள், ஸ்வேதனிடம் வீழ்ந்து பீஷ்மர் கொல்லப்பட்டார் என்றே நினைத்தனர். மகிழ்ச்சியால் நிறைந்த பாண்டவர்களும், சுற்றிலும் தங்கள் சங்குகளால் முழக்கம் செய்தனர். உயர் ஆன்ம பீஷ்மரின் பனைமரக் கொடிக்கம்பம் வீழ்த்தப்பட்டதைக் கண்ட துரியோதனன் சினம் கொண்டு, தனது சொந்தப் படையைப் போரிடத் தூண்டினான். அவர்கள் அனைவரும், பெருந்துன்பத்தில் இருந்த பீஷ்மரை மிகக் கவனமாகப் பாதுகாத்தனர்.

(வெறுமனே) பார்வையாளர்களாக நின்று கொண்டிருந்த அவர்களின் மன்னன் {துரியோதனன்}, “ஒன்று (இன்று) ஸ்வேதன் சாவான், அல்லது சந்தனுவின் மகனான பீஷ்மர் சாவார். இதை நான் உண்மையாகச் சொல்கிறேன்” என்றான். நால்வகைப் படைகளையும் கொண்டவர்களான வலிமைமிக்கத் தேர்வீரர்கள், மன்னனின் {துரியோதனனின்} வார்த்தைகளைக் கேட்டு, கங்கையின் மைந்தரைப் பாதுகாக்க முன்னேறினர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாஹ்லீகன், கிருதவர்மன், கிருபர், சல்லியன், ஜராசந்தனின் மகன் {ஜயத்சேனன்}, விகர்ணன், சித்திரசேனன், விவிம்சதி ஆகிய அவர்கள், வேகம் தேவைப்பட்ட நேரத்தில், பெரும் வேகத்துடன் அனைத்துப்புறங்களில் இருந்தும் அவரை {பீஷ்மரைச்} சூழ்ந்து கொண்டு, ஸ்வேதனின் மேல் தடையற்ற கணைமாரியைப் பொழிந்தனர்.

அளவிலா ஆன்மா கொண்ட அந்த வலிமைமிக்க வீரன் {ஸ்வேதன்}, கூரிய கணைகளால் அந்தச் சினம் மிகுந்த போர்வீரர்களைத் தடுத்து தனது கரங்களின் வேகத்தை வெளிக்காட்டினான். யானைக்கூட்டத்தைத் தடுத்த சிங்கத்தைப் போல, அவர்கள் அனைவரையும் தடுத்த ஸ்வேதன், அடர்ந்த கணை மாரியால் பீஷ்மரின் வில்லை வெட்டினான். அந்தப் போரில் மீண்டும் வேறு வில்லை எடுத்த சந்தனுவின் மகனான பீஷ்மர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கங்கப் பறவையின் {கழுகின்} இறகு படைத்த கணைகளால் ஸ்வேதனைத் துளைத்தார்.

அந்த மோதலில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினம் தூண்டப்பட்ட அந்தத் (பாண்டவப் படையின்) தலைவன் {ஸ்வேதன்}, அனைவரின் கண்களுக்கு முன்பாகவும் பீஷ்மரைப் பல கணைகளால் துளைத்தான். உலகமனைத்திலும் உள்ள வீரர்களில் முதன்மையான பீஷ்மர், போரில் ஸ்வேதனால் தடுக்கப்பட்டதைக் கண்ட மன்னன் (துரியோதனன்) பெரிதும் துன்புற்றான். உமது படை முழுவதும் கொண்ட துன்பமும் பெரிதாக இருந்தது. வீரரான பீஷ்மரை, ஸ்வேதன் தடுத்துத் தனது கணைகளால் சிதைத்ததைக் கண்ட அனைவரும் ஸ்வேதனால் பீஷ்மர் வீழ்த்தப்பட்டுக் கொல்லப்பட்டார் என்றே நினைத்தனர்.

தனது கொடிக்கம்பம் வீழ்த்தப்பட்டு, (தார்தராஷ்டிரப்) படையும் தடுக்கப்பட்டதைக் கண்டு கோபவசப்பட்ட தேவவிரதர் {பீஷ்மர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஸ்வேதனின் மீது பல கணைகளைத் தொடுத்தார். எனினும், தேர்வீரர்களின் முதன்மையான ஸ்வேதன், பீஷ்மரின் அந்தக் கணைகள் அனைத்தையும் கலங்கடித்து, அகன்ற தலை கொண்ட கணை ஒன்றால், மீண்டும் உமது தந்தையின் {பீஷ்மரின்} வில்லை ஒடித்தான். அந்த வில்லை ஒருபுறம் தூக்கி எறிந்த கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரிதானதும் அதிக வலிமையானதுமான மற்றொரு வில்லை எடுத்து, சாணைக்கல்லில் கூர்தீட்டப்பட்ட அகன்ற தலை கொண்ட ஏழு கணைகளில் {பல்லங்களில்} நான்கு கணைகளைக் கொண்டு, படைத்தலைவன் ஸ்வேதனின் நான்கு குதிரைகளைக் கொன்றார். பெரும் ஆற்றலைக் கொண்ட அந்தப் போர்வீரர் {பீஷ்மர்}, இரண்டால் {இரண்டு கணைகளால்} அவனது {ஸ்வேதனின்} கொடிக்கம்பத்தை வெட்டி வீழ்த்தி, ஏழாவதால் {ஏழாவது கணையால்}, அவனது {ஸ்வேதனின்} தேரோட்டியின் தலையையும் கொய்தார்.

அதன் பேரில், அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {ஸ்வேதன்}, தனது தேரோட்டியும், குதிரைகளும் கொல்லப்பட்ட தனது தேரில் இருந்து கீழே குதித்தான். தேர்வீரர்களில் முதன்மையான ஸ்வேதன் தன் தேரை இழந்ததைக் கண்டப் பாட்டன் {பீஷ்மர்}, தனது கணைமாரியால் அனைத்துப் புறங்களிலும் அவனை {ஸ்வேதனைத்} தாக்கினார். பீஷ்மரின் வில்லில் இருந்து தொடுக்கப்பட்ட கணைகளால் அந்த மோதலில் தாக்கப்பட்ட ஸ்வேதன், (கைவிடப்பட்ட) தனது தேரிலேயே தனது வில்லை விட்டுவிட்டு, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், கடுமையானதும், மரணக் கோலுக்கு ஒப்பானதும், மரணத்தையே கொடுக்கவல்லதுமான ஒரு பயங்கர ஈட்டியை {சக்தி ஆயுதத்தை} எடுத்தான்.

பெருஞ்சினத்தில் இருந்த ஸ்வேதன், அந்த மோதலில், சந்தனுவின் மகனான பீஷ்மரிடம், “ஓ! மனிதர்களில் சிறந்தவரே {பீஷ்மரே}, சற்றுப் பொறும். என்னைப் பாரும்” என்றான். போரில் பீஷ்மரிடம் இதைச் சொன்னவனும், எல்லையற்ற ஆற்றல் கொண்டவனும், அளவிலா ஆன்மா கொண்டவனுமான அந்தப் பெரும் வில்லாளி {ஸ்வேதன்}, பாண்டவர்களுக்காகத் தனது வீரத்தை வெளிப்படுத்தி, உமக்குத் தீமையை விரும்பி, பாம்புக்கு ஒப்பான அந்த ஈட்டியை வீசினான். ஸ்வேதனின் கரங்களில் இருந்து வீசப்பட்ட அஃது (அந்த ஈட்டி), அண்மையில் சட்டை உதிர்த்து வந்த பாம்பு போலவும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் இருந்து விழும் பெரும் விண்கல்லைப் போலவும் பெரும் வேகத்தில் விழுந்தது.

இதனால் கிஞ்சிற்றும் அஞ்சாத உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, பசும்பொன்னால் ஆனதும், ஆகாயத்தில் வரும்போதே எரிந்து தீச்சுடர்கள் நிறைந்தது போலத் தெரிந்ததுமான அந்த ஈட்டியை, இறகு படைத்த எட்டு {8} கூரிய கணைகளால் ஒன்பது {9} துண்டுகளாகத் துண்டித்தார். அப்போது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகள் அனைத்தும் மகிழ்ச்சியால் பேரொலி எழுப்பின.

தனது ஈட்டி துண்டுகளாகத் துண்டிக்கப்பட்டதைக் கண்ட விராடனின் மகன் {ஸ்வேதன்}, காலத்தால் வெல்லப்பட்டு, கோபத்தால் உணர்விழந்து, என்ன செய்வதென்று அறியாதவனாக இருந்தான். கோபத்தால் உணர்விழந்த விராடனின் மகன் {ஸ்வேதன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கதாயுதத்துடன் கூடிய இரண்டாவது யமனைப் போல, பீஷ்மரைக் கொல்ல கையில் கதாயுதத்தை ஏந்தி, மகிழ்ச்சியுடன் புன்னகைத்து, சினத்தால் கண்கள் சிவந்து பாறைகளை {மலையை} எதிர்த்து விரையும் வேகமான நீரூற்று போல, பீஷ்மரை எதிர்த்து விரைந்தான். பெரும் ஆற்றல் கொண்டவரும், (பிறரின்) பலத்தை அறிந்தவருமான பீஷ்மர், தடுக்கப்பட முடியாத அவனது {ஸ்வேதனின்} வேகத்தைக் கண்டு, அந்தத் தாக்குதலில் இருந்து தப்ப திடீரெனத் {தனது தேரில் இருந்து} தரையில் இறங்கினார்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கனமான கதாயுதத்தைக் கோபத்துடன் சுழற்றிய ஸ்வேதன், மகேஸ்வர தேவனைப் {சிவனைப்} போல, அதைப் பீஷ்மரின் தேரின் மீது வீசினான். பீஷ்மரின் அழிவைக் கருதி அந்தக் கதாயுதம் வீசப்பட்டதன் விளைவாக, கொடிக்கம்பம், குதிரைகள், கணைகள் ஆகியவற்றுடன் கூடிய அந்தத் தேர் சாம்பலாகக் குறைக்கப்பட்டது {தூள் தூளானது}. தேர்வீரர்களில் முதன்மையான பீஷ்மர் {தரையில் நின்று போரிடும்} காலாட்படை வீரராக ஆனதைக் கண்டச் சல்லியன் மற்றும் பிற தேர்வீரர்கள் பலர் (அவரது உதவிக்காக) வேகமாக விரைந்தனர். வேறொரு தேரில் ஏறிய பீஷ்மர், உற்சாகமற்ற வகையில் தனது வில்லை வளைத்துத் தேர்வீரர்களில் முதன்மையான ஸ்வேதனை நோக்கி மெதுவாக முன்னேறினார்.

அதேவேளையில், தனக்கு நன்மை நிறைந்ததும், தெய்வீகமானதுமான ஒரு வலிமையான குரல் வானத்தில் இருந்து வருவதைப் பீஷ்மர் கேட்டார். (அந்தக் குரல்), “ஓ! பீஷ்மா, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, காலத்தை வீணாக்காமல் முயற்சி செய்வாயாக. இவனை {விராடனின் மகன் ஸ்வேதனை} வெல்வதற்கான காலமாக இந்தக் காலத்தையே அண்டத்தைப் படைத்தவன் {பரமாத்மா} நிர்ணயித்திருக்கிறான்” {என்றது [அந்தக் குரல்]}.

தேவ தூதனால் உதிர்க்கப்பட்ட இவ்வார்த்தைகளைக் கேட்ட பீஷ்மர் மகிழ்ச்சியால் நிறைந்து, ஸ்வேதனை அழிப்பதில் தனது இதயத்தை நிலைக்கச் செய்தார். தேர்வீரர்களில் முதன்மையான ஸ்வேதன் காலாட்படை வீரனானதைக் கண்ட (பாண்டவத் தரப்பின்) வலிமைமிக்க வீரர்கள் பலர் (அவனது உதவிக்காக) ஒன்றாகத் திரண்டு விரைந்து வந்தனர். சாத்யகி, பீமசேனன், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், (ஐந்து) கேகயச் சகோதரர்கள், திருஷ்டகேது மற்றும் பெரும் சக்தி கொண்ட அபிமன்யு ஆகியோரே அவர்கள் {ஸ்வேதனின் உதவிக்காக வந்த பாண்டவத் தரப்பு வீரர்கள்}.

(உதவி செய்ய) விரைந்து வரும் அவர்களைக் கண்ட அந்த அளவிலா ஆன்மா கொண்டவர் (பீஷ்மர்), துரோணர், சல்லியன், கிருபர் ஆகியோரின் உதவியோடு, காற்றின் பலத்தைத் தடுக்கும் மலையைப் போல, அவர்கள் அனைவரையும் தடுத்தார். பாண்டவத் தரப்பின் உயர் ஆன்ம வீரர்கள் அனைவரும் (இப்படித்) தடுக்கப்பட்ட போது, வாளை எடுத்த ஸ்வேதன் பீஷ்மரின் வில்லை வெட்டி வீழ்த்தினான்.

அந்த வில்லை ஒருபுறம் வீசிய பாட்டன் {பீஷ்மர்}, தேவ தூதனின் வார்த்தைகளைக் கேட்டு, ஸ்வேதனின் அழிவைத் தனது மனதில் விரைவாகத் தீர்மானித்தார். (ஸ்வேதனால்) கலங்கடிக்கப்பட்டிருந்தாலும், வலிமைமிக்கத் தேர்வீரரான உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்} பிரகாசத்தில் சக்ரனின் {இந்திரனின்} வில்லுக்கு நிகரான வேறொரு வில்லை எடுத்து, அதில் ஒரு கணத்தில் நாணேற்றினார். பிறகு, ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, பீமசேனன் முதலான மனிதர்களில் புலிகளால் சூழப்பட்ட வலிமைமிக்கத் தேர்வீரன் ஸ்வேதனைக் கண்ட உமது தந்தை கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, படைத்தலைவன் ஸ்வேதனை மட்டுமே குறிவைத்து விரைவாக முன்னேறினார்.

பீஷ்மர் முன்னேறுவதைக் கண்ட பெரும் ஆற்றல் படைத்த பீமசேனன், அறுபது {60} கணைகளால் அவரைத் {பீஷ்மரைத்} துளைத்தான். ஆனால் வலிமைமிக்கத் தேர்வீரரான உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, பயங்கரக் கணைகளைக் கொண்டு பீமசேனன், அபிமன்யு ஆகிய இருவரையும் மற்றும் பிற தேர்வீரர்களையும் தடுத்து, நேரான மூன்று கணைகளால் அபிமன்யுவைத் தாக்கினார். அந்த மோதலில் பாரதர்களின் பாட்டன் {பீஷ்மர்}, சாத்யகியை நூறு{100} கணைகளாலும், திருஷ்டத்யும்னனை இருபது{20} கணைகளாலும், கேகயச் சகோதரர்களை ஐந்து{5} கணைகளாலும் தாக்கினார். பயங்கரக் கணைகளைக் கொண்ட அந்தப் பெரும் வில்லாளிகள் அனைவரையும் தடுத்த உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, ஸ்வேதனை நோக்கி மட்டுமே முன்னேறிக் கொண்டிருந்தார்.

பிறகு, வலிமை நிறைந்த பீஷ்மர், பெரும் பலத்தைத் தாங்க வல்லதும், தடுக்கப்பட முடியாததும், மரணத்திற்கு ஒப்பானதுமான ஒரு கணையை எடுத்துத் தனது வில்லில் பொருத்தினார். பிரம்ம ஆயுதத்தின் {பிரம்மாஸ்திரத்தின்} சக்தியை முறையாகக் கொண்டதும், இறகுகள் படைத்ததுமான அந்தக் கணை தேவர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், உரகர்கள் மற்றும் ராட்சசர்கள் ஆகியோரால் பார்க்கப்பட்டது. சுடர்மிகும் நெருப்பைப் போன்ற பிரகாசம் கொண்ட அந்தக் கணை, வஜ்ராயுதம் மின்னுவதைப் போல மின்னி, அவனது {ஸ்வேதனின்} கவசத்தைத் துளைத்து (அவனது உடலைக் கடந்து) பூமியைத் தாக்கியது.

மேற்கில் இருக்கும் தனது மாளிகைகளுக்குள் விரைந்து ஓடும் சூரியன், தனது ஒளிக்கதிர்களையும் உடன்கொண்டு செல்வதைப் போலவே அந்தக் கணையும் ஸ்வேதனின் உயிரை எடுத்துக் கொண்டு அவனது உடலைக் கடந்து போனது. இப்படி அந்தப் போரில் பீஷ்மரால் கொல்லப்பட்ட அந்த மனிதர்களில் புலி {ஸ்வேதன்}, மலையில் இருந்து தளர்ந்து விழும் சிகரம் போலக் கீழே விழுவதை நாங்கள் கண்டோம். பாண்டவத் தரப்பைச் சேர்ந்தவர்களும், க்ஷத்திரியக் குலத்தின் வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அனைவரும் {ஸ்வேதனுக்காக} அழுது புலம்பத் தொடங்கினர். எனினும், உமது மகன்களும், குருக்கள் அனைவரும் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஸ்வேதன் வீழ்த்தப்பட்டதைக் கண்ட துச்சாசனன், சங்குகள் மற்றும் பேரிகைகளின் உரத்த இசையுடன் போர்க்களத்தில் கூத்தாடினான். போர்க்களத்தின் ரத்தினமான அந்தப் பெரும் வில்லாளி {ஸ்வேதன்} பீஷ்மரால் கொல்லப்பட்டதைக் கண்டவர்களும், சிகண்டியைத் தலைமையாகக் கொண்டவர்களுமான (பாண்டவத் தரப்பின்) வலிமைமிக்க வில்லாளிகள் அச்சத்தால் நடுங்கினர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் படைத்தலைவன் கொல்லப்பட்டவுடன், தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, விருஷ்ணி குலத்தவனும் {கிருஷ்ணனும்} மெதுவாகத் {தங்கள்} துருப்புகளைப் (இரவு ஓய்வுக்காகப்) பின்வாங்கச் செய்தனர்.

பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவர்கள் படைகள் மற்றும் உமது படைகள் ஆகிய இரண்டும் தொடர்ச்சியாக உரத்த முழக்கமிட்டபடி பின்வாங்கினர். பார்த்தர்களின் {பாண்டவர்களின்} வலிமைமிக்கத் தேர்வீரர்கள், தனிப்போரில் பயங்கரமாகக் கொல்லப்பட்ட (தங்கள் படைத்தலைவனை) நினைத்தபடி, உற்சாகமற்று (தங்கள் பாசறைகளுக்குள்) நுழைந்தனர்” {என்றான் சஞ்சயன்}.

பெருமையுடன் நின்ற பீஷ்மர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 049-ஸ்வேதன் கொல்லப்பட்டதும் என்ன நடந்தது என்று சஞ்சயனிடம் திருதராஷ்டிரன் கேட்பது; சங்கனுக்கும் சல்லியனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; சங்கனைப் பீஷ்மரிடம் இருந்து பாதுகாக்க அர்ஜுனன் பீஷ்மருடன் மோதுவது; பாண்டவப் படையைப் பீடித்த பீஷ்மர்; முதலாம் நாள் போர் முடிவுற்றது.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “போரில் எதிரியால் படைத்தலைவன் ஸ்வேதன் கொல்லப்பட்டதும், ஓ! மகனே {சஞ்சயா}, வலிமைமிக்க வில்லாளிகளான பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் என்ன செய்தார்கள்? தங்கள் படைத்தலைவன் ஸ்வேதன் கொல்லப்பட்டதைக் கேட்டதும், அவனுக்காகப் போரிட்டவர்களுக்கும், அவனால் புறமுதுகிடச் செய்யப்பட்ட எதிரிகளுக்கும் இடையில் என்ன நடந்தது? ஓ! சஞ்சயா, நமது வெற்றியைக் கேட்டதால், (உனது) வார்த்தைகள் எனது இதயத்தை மகிழச் செய்கின்றன. எங்கள் அத்துமீறலை [1] நினைத்து எனது இதயம் வெட்கத்தை அடையவில்லை.

குரு குலத்தின் முதிர்ந்த தலைவர் {பீஷ்மர்} எப்போதும் உற்சாகமாகவும், (எங்களிடம்) அர்ப்பணிப்பு கொண்டவராகவும் இருக்கிறார். (துரியோதனனைப் பொறுத்த வரை) தனது சிறிய தந்தையின் அறிவார்ந்த மகனுடன் {யுதிஷ்டிரனுடன்} பகைமையைத் தூண்டிய பிறகும், யுதிஷ்டிரன் மீது கொண்ட பயம் மற்றும் கவலையின் காரணமாகவும் அந்தப் பாண்டுவின் மகன்களிடமே ஒரு முறை பாதுகாப்பை நாடினான். அந்த நேரத்தில் அவன் {துரியோதனன்}, அனைத்தையும் கைவிட்டுவிட்டு, துயரிலேயே வாழ்ந்தான். பாண்டு மகன்களின் ஆற்றல் மற்றும் அனைத்துப் புறங்களில் இருந்தும் தான் கண்ட தடைகள் ஆகியவற்றின் விளைவால், சிக்கல்களுக்கு மத்தியில் தன்னை இருத்திக் கொண்ட துரியோதனன் அப்போது (சில காலத்திற்கு) நல்ல நடத்தைகளைக் கொண்டிருந்தான். தீய மனம் கொண்ட அந்த மன்னன் {துரியோதனன்} முன்பொரு சமயம் அவர்களின் {பாண்டவர்களின்} பாதுகாப்பின் கீழேயே தன்னை வைத்துக் கொண்டான்.

அப்படியிருந்தும், ஓ! சஞ்சயா, யுதிஷ்டிரனுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த ஸ்வேதன் ஏன் கொல்லப்பட்டான்? உண்மையில், இந்தக் குறுகிய மனம் கொண்ட இளவரசன் {துரியோதனன்}, {நல்ல} வாய்ப்பு அனைத்தையும் தாண்டி, இழிவான பலரால் பாதாள உலகங்களுக்குள் வீசப்பட்டிருக்கிறான். பீஷ்மரோ, ஆசானோ {துரோணரோ}, கிருபரோ, காந்தாரியோ போரை விரும்பவில்லை. ஓ! சஞ்சயா, நானோ, விருஷ்ணி குலத்தின் வாசுதேவனோ {கிருஷ்ணனோ}, பாண்டுவின் மகனான நீதிமிக்க மன்னனோ {தர்மராஜன் யுதிஷ்டிரனோ}, பீமனோ, அர்ஜுனனோ, அந்த மனிதர்களில் காளையரான இரட்டையர்களோ {சகாதேவன் மற்றும் நகுலனோ} போரை விரும்பவில்லை [2].

என்னாலும், காந்தாரியாலும், விதுரராலும், ஜமதக்னியின் மகன் ராமராலும் {பரசுராமராலும்}, உயர் ஆன்ம வியாசராலும் எப்போதும் தடுக்கப்பட்டும், கர்ணன் மற்றும் சுபலனின் மகன் {சகுனி} ஆகியோரின் ஆலோசனைகளை எப்போதும் பின்பற்றியவனும், துச்சாசனனுடன் கூடியவனும், தீய மனம் கொண்டவனும், பாவம் நிறைந்தவனுமான துரியோதனன், பாண்டவர்களிடம் தீய நோக்குடனே நடந்து கொண்டான். ஓ! சஞ்சயா, அவன் {துரியோதனன்} கொடுந்துயரத்தில் விழுந்திருக்கிறான் என்றே நான் நினைக்கிறேன். ஸ்வேதனின் படுகொலை, பீஷ்மரின் வெற்றி ஆகியவற்றுக்குப் பிறகு, சினம் தூண்டப்பட்டவனும், போரில் கிருஷ்ணனின் துணையைக் கொண்டவனுமான பார்த்தன் {அர்ஜுனன்} என்ன செய்தான்? உண்மையில், அர்ஜுனன் நிமித்தமாகவே எனது அச்சங்கள் எழுகின்றன. ஓ! சஞ்சயா, அந்த அச்சங்கள் விலக்கப்பட முடியாததாகவும் இருக்கின்றன.

குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, வீரமிக்கவனாகவும், பெரும் செயல்களைச் செய்பவனாகவும் இருக்கிறான். தனது கணைகளைக் கொண்டு எதிரிகளின் உடல்களை அவன் {அர்ஜுனன்} சுக்கு நூறாக்குவான் என்றே நான் நினைக்கிறேன். இந்திரனின் மகனும், போரில் இந்திரனின் தம்பியான உபேந்திரனுக்கு இணையானவனும், சினமும், நோக்கங்களும் பொய்க்காதவனுமான அவனை {அர்ஜுனனைக்} கண்ட போது, உங்கள் மனநிலைகள் என்னவாகின {எப்படி மாறின}? வீரனும், வேதங்களை அறிந்தவனும், நெருப்பையும், சூரியனையும் போன்ற பிரகாசம் கொண்டவனும், ஐந்திர ஆயுதத்தை அறிந்தவனுமான அவன் {அர்ஜுனன்}, எதிரியின் மீது பாயும்போது எப்போதும் வெற்றிவாகை சூடுபவனாக அல்லவா இருக்கிறான்? அவனது ஆயுதங்கள் எதிரியின் மீது விழும்போது, வஜ்ராயுதத்தின் பலத்துடனே விழுகின்றன. வில்லின் நாணை வளைப்பதில் அற்புத வேகத்தைக் கொண்ட அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்} ஒரு வலிமைமிக்கத் தேர்வீரனே {மகாரதனே}.

ஓ! சஞ்சயா, கடுமையானவனான துருபதனின் மகனும் {திருஷ்டத்யும்னனும்} பெரும் அறிவுள்ளவனே. உண்மையில், போரில் ஸ்வேதன் கொல்லப்பட்ட போது அந்தத் திருஷ்டத்யும்னன் என்ன செய்தான்? பழங்காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகள் மற்றும் அவர்களது படைத்தலைவனின் {ஸ்வேதனின்} படுகொலை ஆகியவற்றின் விளைவால் உயர் ஆன்ம பாண்டவர்களின் இதயங்கள் {கோபத்தால்} எரிந்து கொண்டிருக்கும் என்றே நான் நினைக்கிறேன். துரியோதனனின் நிமித்தமாக, அவர்களின் கோபத்தை நினைத்து இரவிலும் பகலிலும் நான் ஆறுதல் இல்லாமலேயே இருக்கிறேன். அந்தப் பெரும்போர் எப்படி நடைபெற்றது? ஓ சஞ்சயா, அது குறித்த அனைத்தையும் எனக்கு நீ சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது அத்துமீறல்களைக் குறித்து அமைதியாகக் கேளும். அதன் பலனை துரியோதனன் மீது சுமத்துவது உமக்குத் தகாது. தண்ணீர் வற்றியதும் அணைகட்டுவதைப் போல உமது புரிதல் இருக்கிறது. அல்லது, வீடு பற்றி எரியும்போது கிணறு வெட்டுவதைப் போல {உமது புரிதல்} இருக்கிறது [3].ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, முற்பகலைக் கடந்து நடந்த அந்தக் கடும் மோதலில் படைத்தலைவனான ஸ்வேதன் பீஷ்மரால் கொல்லப்பட்டான் [4].எதிரிப் படை அணிகளைக் கலங்கடிப்பவனும், போரில் எப்போதும் மகிழ்பவனும், விராடனின் மகனுமான சங்கன், கிருதவர்மனோடு {அவனது தேரில்} சல்லியன் இருப்பதைக் கண்டு, தெளிந்த நெய்யால் சுடர்விடும் நெருப்பைப் போலத் திடீரெனக் கோபத்தால் சுடர்விட்டெரிந்தான். இந்திரனின் வில்லை ஒத்திருந்த தனது பெரிய வில்லை வளைத்த அந்த வலிமைமிக்க வீரன் {சங்கன்}, அந்தப்போரில் மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனைக்} கொல்ல விரும்பி தனக்கு உதவியாகப் பெரும் தேர்ப்படையை அனைத்துப் புறங்களிலும் சூழச் செய்து கொண்டு விரைந்தான்.

கணைமாரியைப் பொழிந்த சங்கன், சல்லியனின் தேரை நோக்கி விரைந்தான். மதம் கொண்ட யானையாக முன்னேறி வரும் அவனைக் {சங்கனைக்} கண்டு, ஏற்கனவே மரணத்தின் {காலனின்} கோரப்பற்களில் {அகப்பட்டு} இருந்த மத்ரர்களின் ஆட்சியாளனைக் {சல்லியனைக்} காக்க விரும்பி, உமது தரப்பின் ஏழு வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அவனைச் சூழ்ந்தார்கள் [5].பிறகு, அந்தப் போரில், வலிய கரங்களைக் கொண்ட பீஷ்மர் மேகங்களைப் போல முழங்கியபடி, முழுமையாக ஆறு முழம் நீளம் இருந்த வில்லை எடுத்துக் கொண்டு சங்கனை எதிர்த்து விரைந்தார். வலிமைமிக்கத் தேர்வீரரும், பெரிய வில்லாளியுமான அவர் {பீஷ்மர்}, இப்படி விரைவதைக் கண்ட பாண்டவப் படை, புயலின் தாக்கத்தால் அடிக்கப்பட்ட படகைப் போல நடுங்கத் தொடங்கியது.

பீஷ்மரிடம் இருந்து சங்கன் காக்கப்பட வேண்டும் என்று நினைத்த அர்ஜுனன் விரைவாக முன்னேறி சங்கனுக்கு முன்பு தன்னை நிறுத்திக் கொண்டான். அதன் பிறகு, பீஷ்மருக்கும் அர்ஜுனனுக்கும் இடையிலான போர் தொடங்கியது. போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வீரர்களுக்கு மத்தியில் “ஓ” என்றும், “ஐயோ” என்றும் அலறல்கள் எழுந்தன. ஒரு படை மற்றொரு படையில் கலப்பதைப் போல அப்போது தெரிந்தது [6]. இப்படியே அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.

பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கைகளில் கதாயுதத்துடன் கூடிய சல்லியன், தனது தேரில் இருந்து இறங்கி, சங்கனின் நான்கு குதிரைகளைக் கொன்றான். இப்படிக் குதிரைகளை இழந்த சங்கன், அந்தத் தேரில் இருந்து குதித்து, பீபத்சுவின் {அர்ஜுனனின்} தேரை நோக்கி ஓடி (அதில் ஏறிக் கொண்டு) தேறுதல் அடைந்தான். பிறகு, பீஷ்மரின் தேரில் இருந்து பாய்ந்த எண்ணற்ற கணைகள், வானத்தையும் பூமியையும் முழுமையான மறைத்தன. தாக்குபவர்களில் முதன்மையானவரான பீஷ்மர், பாஞ்சால, மத்ஸ்ய, கேகய மற்றும் பிரபத்திரகப் படைகளைத் தனது கணைகளால் கொன்றழித்தார்.

இடது கையாலும் வில் வளைக்க இயன்றவனான பாண்டுவின் மகனுடனான (அர்ஜுனனுடனான) போரை விரைவில் கைவிட்ட பீஷ்மர், தனது படையால் சூழப்பட்டவனும், பாஞ்சாலர்களின் மன்னனுமான துருபதனை எதிர்த்து விரைந்தார். விரைவில் அவர் {பீஷ்மர்}, தனது அன்புக்குரிய உறவினனை {சம்பந்தியான துருபதனை} எண்ணற்ற கணைகளால் மறைத்தார். பின்பனிக் காலத்தில் {சிசிர ருதுவில்} நெருப்பால் எரிக்கப்படும் காட்டைப் போலத் துருபதனின் துருப்புகள் எரிக்கப்படுவதாகவே அப்போது தெரிந்தது. புகையற்ற நெருப்பு சுடர்விட்டுக் கொண்டிருப்பதைப் போலவோ, நன்பகலில் தனது வெப்பத்தால் அனைத்தையும் எரிக்கும் சூரியனைப் போலவோ அந்தப் போர்க்களத்தில் பீஷ்மர் நின்றார்.

பாண்டவர்களின் போராளிகளால் பீஷ்மரைப் பார்க்கக்கூட இயலவில்லை. அச்சத்தால் பீடிக்கப்பட்டு, கண்களைச் சுற்றிலும் சுழல விட்டு, பாதுகாவலர் எவரும் இல்லாததைக் கண்ட அந்தப் பாண்டவப் படை, குளிரால் பீடிக்கப்பட்ட பசுக்கூட்டத்தைப் போலத் தெரிந்தது. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கொல்லப்படும்போதும், நன்கு அடிக்கப்பட்டு உற்சாகமிழந்து ஓடும்போதும், பாண்டவத் துருப்புகளுக்கு மத்தியில், “ஓ” என்றும், “ஐயோ” என்றும் அலறல்கள் எழுந்தன.

பிறகு, சந்தனுவின் மகனான பீஷ்மர், தனது வில்லை எப்போதும் வட்டமாக வளைத்துக் கொண்டு, கடும் விஷத்தை ஒத்திருந்த சுடர்மிகும் கணைகளை அடிக்க ஆரம்பித்தார். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, முன்கூட்டியே பாண்டவத் தேர்வீரர்களைப் பெயர் சொல்லி அழைத்து, அவர்களைக் கொன்றவரும், கடும் நோன்புகளைக் கொண்டவருமான அந்த வீரர் {பீஷ்மர்}, அனைத்துப் புறங்களிலும் கணைகளின் தொடர்ந்த வரிசைகளை உண்டாக்கினார். போர்க்களம் அனைத்திலும் பாண்டவத் துருப்புகள் நசுக்கப்பட்டு, நிர்மூலமாக்கப்பட்ட போது, சூரியன் மறைந்ததால் ஒன்றும் புலப்படவில்லை. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தில் பெருமையாக நின்று கொண்டிருந்த பீஷ்மரைக் கண்ட பார்த்தர்கள் (இரவு ஓய்வுக்காகத்) தங்கள் படைகளைப் பின்வாங்கச் செய்தனர்.” {என்றான் சஞ்சயன்}.

முதல் நாள் போர் முற்றிற்று

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்