பண்டு எல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவாற்கு கோயில் போல் -வண்டு
வளங்கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர் –61-
பதவுரை
வைகுந்தம்–பரமபதத்தை
கொண்டு–இருப்பிடமாகக் கொண்டு
அங்கு–அவ்விடத்திலே
உறைவாற்கு–வாஸம் பண்ணு மெம்பெருமானுக்கு
பால் கடல்–திருப்பாற்கடலும்
வேங்கடம்–திருமலையும்
வண்டு வளம் கிளரும் நீள் சோலை–வண்டுகளின் திரள் மிக்கிருக்கிற பரந்த சோலைகளை யுடைத்தாய்
வண்–அழகியதாய்
பூ–போக்யமான
கடிகை–திருக் கடிகைக் குன்றும்
இள குமரன் தன் விண்ணகர்–நித்ய யுவாவான அவனுடைய தன்னதான திருவிண்ணகரும்
(ஆகிய இத்திருப்பதிகளெல்லாம்)
பண்டு எல்லாம்–என்னை விஷயீ கரிப்பதற்கு முன்பெல்லாம்
கோயில் போல்–கோயில்களாக இருந்தன போலும்.
(இப்போதோவென்னில், என்னெஞ்ச மொன்றே அவனுக்குக் கோயிலாயிருக்கிறது என்பது உள்ளுறை).
இப்பாட்டை இரண்டுவகையாக நிர்வஹிப்பதுண்டு, அவற்றுள் முதல்வகை எங்ஙனே யெனின்,
ஸ்ரீவைகுண்டத்தை வாஸஸ்தானமாகவுடைய எம்பெருமானுக்குத் திருப்பாற்கடல் திருவேங்கடம் திருக்கடிகை
முதலிய திருப்பதிகள் முன்பெல்லாம் கோயிலாக அமைந்திருந்தன,
(அதாவது –என்னுடைய நெஞ்சகம் அவனுக்குக் கோயிலாகக் கிடைப்பதற்கு முன்பு) இப்போதோ வென்னில்,
அவன் விரும்பியெழுந்தருளி யிருப்பதற்குப் பாங்காக என்னுடைய நெஞ்சகம் அவனுக்கு ஆலயமாகக் கிடைத்து விட்டதனால்
அத்திருப்பதிகளிற் பண்ணுமாதாத்தை என்னெஞசிலே பண்ணிக்கொண்டு கிடக்கிறான் என்பதாம்.
மூலத்தில் ‘பண்டெல்லாம்‘ என்றவளவுக்கு இவ்வளவு விசாலமான கருத்துக்கொள்வது சிரமமென்று தோன்றினால்,
வேறொருவகையான நிர்வாஹம் காட்டுவோம், –
ஆழ்வார் இப்பாட்டால் திருக்கடிகைக்குன்றைச் சிறப்பித்துக் கூறுவதாகக்கொள்க.
திருப்பாற்கடல் திருவேங்கடம் முதலிய திருப்பதிகளிற் காட்டிலும்
வண்டு வளங்கிளரும் நீள் சோலை வண்பூங்கடிகையிலே அதிகமான ஆதாரத்தைப் பெருக்கி
அஃதொன்றையே கோயிலாகக் கொண்டிருக்கிற னென்பதாகக் கொள்க.
கடிகை – தொண்டைநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்றாய், ‘
சோளஸிம்ஹபுரம்‘ என்று ப்ரஸித்தமாக வ்யவஹரிக்கப்பட்டு வரும் திருப்பதி.
——————————————————————————————————————————————————–
விண்ணகரம் வெக்கா விரி திரை நீர் வேங்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை -மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி
தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு –62-
பதவுரை
விண்ணகரம்–திருவிண்ணகரமும்
வெஃகா–திருவெஃகாவும்
விரி திரை நீர் வேங்கடம்–விரிந்து துலையெறிகிற நீர்வம் பொருந்திய திருமலையும்
மண் நகரம்–பூமிலுண்டான வைகுந்தமாநகர்போன்ற
மா மாடம் வேளுக்கை–பெரிய மாடங்களை யுடைத்தான திருவேளுக்கையும்
மண் அகத்த தென் குடந்தை–பூமியிலுண்டான அழகிய திருக்குடந்தையும்
தேன் ஆர் திரு அரங்கம்–தேன் (வெள்ளமிடுகிற சோலைகள்) பொருந்திய திருவரங்கமாநகரும்
தென் கோட்டி–தென் திருக்கோட்டியூரும்
(ஆகிய இத்திருப்பதிகள்)
தன் குடங்கை–தனது உள்ளங்கையாலே
நீர் எற்றான்–(மாவலி பக்கல்) உதக தானம் பெற்ற பெருமான்
தாழ்வு–தங்குமிடங்களாம்.
‘ஒப்பிலியப்பன் ஸந்நிதி‘ என்கிற திருவிண்ணகர், ‘யதோக்தகாரி ஸந்நிதி‘ என்கிற திருவெஃகா
திருமலை, ஆளழகிய சிங்கர் ஸந்நிதி‘ என்கிற கச்சித் திருவேளுக்கை, திருக்குடந்தை, திருவரங்கம் பெரியகோவில்,
திருக்கோட்டியூர் ஆகிய இத்திருப்பதிகளெல்லாம் எம்பெருமான் தங்குமிடங்கள் என்று
சில திருப்பதிகளைப் பேசி அநுபவித்தாராயிற்று.
ஈற்றடியில் ‘தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு‘ என்றருளிச் செய்த்தன் கருத்து –
மஹாபலி பக்கல் யாசகனாகப் போகும்போது எவ்வளவு ஸௌலப்யமும் ஸௌசீல்யமும் தோன்றிற்றோ
அவ்வளவு சீலம் இத்திருப்பதிகளிலும் தோன்றும்படி யிருக்கிறானென்பதாம்.
தாழ்வு – தாழ்ச்சிதோற்ற இருக்குமிடமென்கை.
———————————————————————————————————————————————————————————
ஹரிஹரரூபத்தால் காட்டியருளின சீலம் திருவேங்கடமுடையான் பக்கலில்,
பொலிகின்றது என்று அநுபவித்துச் சொன்னரென்க.
ஸ்ரீ சுந்தர பாஹூ ஸ்தவம் -அழகர் கபோலத்தில் யசோதை பிராட்டி முத்த தழும்பு கண்டு அனுபவித்து
கூரத் ஆழ்வான் அனுபவித்தால் போலே –
தாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் -சூழும்
திரண்டருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு
இரண்டு யுருவும் ஒன்றாய் இசைந்து –63-
பதவுரை
தாழ் சடையும்–தாழக் கட்டின ஜடையும்
நீள் முடியும்–நீண்ட திருவபிஷேகமும்
ஒண் மழுவும்–அழகிய மழுவென்னுமாயுதமும்
சக்கரமும்–திருவாழியாழ்வானும்
சூழ் அரவும்–சுற்றிலும் அணிந்துள்ள நாகாபரணமும்
பொன் நாணும்–பொன் னரைநாணுமாய்க்கொண்டு
இரண்டு உருவும்–ஒன்றுக்கொன்று சேராச் சேர்த்தியாயிருக்கிற இரண்டு வடிவும்
சூழும் திரண்டு அருவி பாயும் திரு மலை மேல் எந்தைக்கு–நாற்புறமும் திரள்திரளாக அருவிகள் பெருகப் பெற்ற திருமலைமேலுள்ள அப்பனுக்கு
ஒன்று ஆய் இசைந்து தோன்றும்–ஒரு வடிவமாய் அமைந்துவிளங்கா நின்றது
ஆல்–ஆச்சரியம்!
எம்பெருமான் செய்தருளின பல அவதாரங்களில் சங்கர நாராயணவதார மென்பது மொன்று,
இது ஹரிஹர அவதாரமென்றும் சொல்லப்படும்.
பாதிவடிவம் ஸ்ரீமந்நாராயணமூர்த்தி யாகவும் பாதிவடிவம் பரமசிவமூர்த்தியாகவும் கொண்டதாமிது,
எம்பெருமான் கொண்ட கோலங்களெல்லாம் பகவத்பக்தர்கட்கு உத்தேச்யமாகையாலே
இவ்வுருவந்தன்னையும் ஆழ்வார்கள் அநுஸந்தித்துப் பாசுரங்கள் பேசுவதுண்டு.
“திருமலைமே லுந்தைக்கு இரண்டுருவு மென்றாயிசைந்து தோன்றும்“ என்று இங்கு
ஆழ்வா ரருளிச்செய்திருப்பது கொண்டு இதற்குப் பலர் பொருள்கொள்வ தெங்ஙனேயென்னில்,
திருவேங்கடமுடையானுக்குச் சடையுமுண்டு கிரீடமுமுண்டு, மழுவுமுண்டு, சக்கரமுமுண்டு,
நாகாபரணமுமுண்டு பொன்னுணு முண்டு – என்றிங்ஙனே பொருள்கொள்வர்.
இது பொருந்தாது,
திருவேங்கடமலையில் அரச்சையாக எழுந்தருளியிருக்கு மெம்பெருமான் பக்கல் தாழ்சடையுமில்லை,
ஒண் மழுவுமில்லை, சூழரவுமில்லை, நீண்முடியும் சக்கரமும் பொன்னுணுமேயுள்ளன.
ஆகில் “திருமலைமேலெந்தைக்கு இரண்டுருவு மொன்றாயிசைந்து தோன்றும்“ என்றது எங்ஙனே சேருமென்னில், நன்கு சேரும்,
திருவேங்கடமுடையானாக ஸேவைஸாதிக்கும் திருமலையப்பன்றானே ஒரு மையத்தில் இரண்டுருவையும்
ஒன்றாயிசைத்துக்கொண்டு தோன்றினவன் – என்ற பொருளே இதிலடங்கியுள்ளதாம்.
இதற்கு ஒன்றிரண்டு உதாரணங்களுங் காட்டுவோம்,
திருப்பள்ளியெழுச்சியில் – “மாமுனி வேள்வியைக் காத்து அவ்விரதமாட்டிய அடுத்திறலயோத்தி யெம்மரசே!
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே“ என்கிறார்.
இதனால் திருவரங்கத்தில் சேஷசயனத்தில் பள்ளிகொண்டிருக்கும் அழகிய மணவாளன்றனே
விச்வாமித்ர முனிவனுடன் சென்று வேள்வியைக் காத்துவந்தான் என்றதாகுமோ?
அந்த ஸ்ரீராமபிரானும் இந்த அழகிய மணவாளனும் ஏகதத்துவம் என்றபடியா மத்தனையன்றோ?
இன்னமும், பூதத்தாழ்வார் “அத்தியூரான் புள்ளையூர்வான் அணிமணியின் துத்திசேர் நாகத்தின்மேல் துயில்வான்“
என்றருளிச் செய்கிறார்.
இதனால் கச்சி நகர்ப் பேர்ருளானப் பெருமான் திருவனந்தாழ்வான் மீது பள்ளி கொண்டிருக்கிறார் என்றதாகுமோ?
நாகத்தின்மேல் துயில்கொள்ளும் மெம்பெருமானும் அத்தியூரானும் ஏகதத்துவம் என்ற தாகுமத்தனையன்றி வேறில்லை.
ஹரிஹரரூபத்தால் காட்டியருளின சீலம் திருவேங்கடமுடையான் பக்கலில்,
பொலிகின்றது என்று அநுபவித்துச் சொன்னரென்க.
ஸ்ரீ சுந்தர பாஹூ ஸ்தவம் -அழகர் கபோலத்தில் யசோதை பிராட்டி முத்த தழும்பு கண்டு அனுபவித்து
கூரத் ஆழ்வான் அனுபவித்தால் போலே –
—————————————————————————————————————————————————————————————-
தன்னை விரும்பாதே உபயோகமற்ற க்ஷுத்ரபலன்களை விரும்புமவர்கட்கும் எம்பெருமான்
உடம்பு நோவக் காரியஞ்செய்து பயனளிப்பவன் என்பதை, தேவர்கட்குக் கடல்கடைந்து அமுதமளித்த
வரலாறு கொண்டு அநுஸந்தித்து உள் குழைகின்றார்.
இசைந்த வரமும் வெற்பும் கடலும்
பசைந்து அங்கு அமுதம் படுப்ப-அசைந்து
கடைந்த வருத்தமோ கச்சி வெக்காவில்
கிடந்தது இருந்து நின்றதுவும் அங்கு –64-
பதவுரை
இசைந்த–கடை கயிறாகக் கொள்வதற்குத் தகுதியான
அரவமும்–வாஸுகி நாகமும்
(இசைந்த)
மத்தாக நாட்டுவதற்குத் தகுதியான
வெற்பும்–மந்தரபர்வதமும்
(இசைந்த)
தாழியாக்குவதற்குத் தகுதியான
கடலும்–கடலும்
(ஆகிய இம்மூன்றையும்)
பசைந்து–ஒன்றோடொன்று ஸம்பந்தப் படுத்தி
அங்கு–அந்தக் கடலிலே
அமுது–அம்ருதமானது
படுப்ப–உண்டாம்படி
அசைந்து–அலைச்சல் பட்டு
கடைந்த வருத்தமோ–கடைந்த்தனாலுண்டான ஆயாஸத்தினாலோ
கச்சி–காஞ்சீபுரத்திலுள்ள
வெஃகாவில்–திருவெஃகாவில்
கிடந்து–சயனித்துக் கொண்டும்
அங்கு–அக் காஞ்சீபுரத்தில் (திருப் பாடகத்தில்)
இருந்து–வீற்றிருந்தும் (கிருவூரகத்தில்)
நின்றதுவும்–நின்று கொண்டும் இருப்பது?
பிரானே! இடமும் வலமுமாக அசைந்தசைந்து கடல்கடைந்த கனுலுண்டான ஆயாஸத்தினால்தானோ
கச்சித் திருப்பதிகளிலே கிடப்பதும் இருப்பதும் நிற்பதுமாகப் படுகிறாய்? என்கிறார்.
கச்சிவெஃகாவில் சயளிப்பது மாத்திர முண்டேயன்றி நிற்பதுமிருப்பதும் அங்கில்லையே,
அப்படியிருக்க “கச்சிவெஃகாவில் கிடந்திருந்து நின்றதுவுமங்கு“ என்று கிடத்தலிருத்தல் நிற்றல் மூன்றும்
வெஃகாவிலே நிகழ்வனவாக அருளிச்செய்தது எங்ஙனே? என்று சங்கை பிறக்கும்,
பிரகரணத்திற்குப் பொருத்தமாக, கச்சி என்ற சொல்லால் பாடகத்தையுமூரகத்தையும் சேர்த்து
அநுஸந்தித்துக்கொள்ள வேணுமென்பதே ஆழ்வார் திருவுள்ளமாதலின் ஒரு குறையுமில்லை.
(“நின்றதெந்தையூரகத்து இருந்ததெந்தை பாடகத்து, அன்று வெஃகணைக்கிடந்தது“ என்பது திருச்சந்த விருத்தம்.
இப்பாட்டில் மற்றுமோர் சங்கை பிறக்கலாம், உலகத்தில் சிரமமுண்டானால் அதற்குப் பரிஹாரமாகச் சயனித்துக் கொள்வதுண்டு,
‘இங்ஙனே சயனித்தருள்வது இன்ன ஆயாஸந்தீரவோ? என்று கேட்பது பொருந்தும்,
திருமழிசைப்பிரான் திருச்சந்தவிருதத்தில்
“நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்கஞால மேனமாய், இடந்த மெய்குலுங்கவோ விலங்குமால்வரைச் சுரம்,
கடந்தகால பரந்த காவிரிக்கரைக் குடந்தையுள் கிடந்தவாறு“ என்றும்,
நம்மாழ்வார் திருவாய்மொழியில்
“கொடியார்மாடக் கோளூரகத்தும புளிங்குடியும், மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியாரல்லல் தவிர்த்தவசவோ அன்றேலிப்படிதான் நீண்டு தாவிய அசவோபணியாயே?“ என்றும் அருளிச் செய்தவை போல
இவ்வாழ்வாரும் “அசைந்து கடைந்த வருத்தமோ கச்சிவெஃகாவில் கிடப்பது?“ என்றருளிச் செய்வதன்றோ பொருந்தும்,
“இருந்து நின்றதுவுமங்கு“ என்றது எதுக்கு?
சிரமத்தினால் கிடத்தலுண்டேயன்றி இருத்தலும் நிற்றலும் ச்ரமகார்யமன்றே என்று சிலர் சங்கிப்பர்கள், கேண்மின்,
இங்கு “அசைந்து கடைந்த வருத்தமோ?“ என்றிருந்தலால் ஆடியாடி அசைந்தசைந்து கடைந்ததனாலுண்டான
ஆயாஸம் தீர்வதற்காக நிற்கவுமாம் இருக்கவுமாம் கிடக்கவுமாம்.
—————————————————————————————————————————————————————————————
நரஸிம்ஹாவதாரம் செய்தருளினவனும் ஸ்ரீக்ருஷ்ணாவதாரம் செய்தருளினவனும் ஒருவனே யென்கிறார்.
அங்கற்கு இடர் இன்றி யந்திப் பொழுதத்து
மங்க விரணியன தாகத்தை -பொங்கி
அரி யுருவமாய் பிளந்த வம்மான் அவனே
கரி யுருவம் கொம்பு ஒசித்தான் காய்ந்து -65
பதவுரை
அங்கற்கு–பிள்ளையான ப்ரஹ்லாதனுக்கு
இடர் இன்றி–ஒரு துன்பமும் வராதபடி
அந்தி பொழுதத்து–ஸாயங்காலத்தில்
இரணியனது–ஹரண்யனுடைய
ஆகத்தை–மார்வை
மங்க–அழிந்து போம்படியாக
அரி உருவம் ஆய் பொங்கி–நரஸிம்ஹ ருபியாய்க் கிளர்ந்து
பிறந்த–கிழித்தொழிந்த
அம்மான் அவனே-அப்பெருமானே
காய்ந்து–சீறி
கரி உருவம்–கறுத்த வுருவத்தை யுடைத்தாயிருந்த குவலயா பீடத்தினுடைய
கொம்பு–தந்தத்தை
ஒசித்தான்–முறித்துப் போட்டான்
அங்கற்கு இடரின்றி – வடமொழியில், மகனை ‘ஆத்மஜன்‘ என்று சொல்வது போலத்
தமிழில் அங்கன் என்கிறது. அங்கத்திலிருந்து தோன்றினவன் என்று பொருள்,
எனவே ஹிரண்யபுத்ரனான ப்ரஹ்லாதாழ்வானைச் சொல்லிற்றாயிற்று.
அவனுடைய இடர்தீர்வதற்காக அரியுருவமானான் என்கையாலே, எம்பெருமான் தன் திறத்திலே ஆஸுரப்ரக்ருதிகள்
எத்தனை அபசாரப்பட்டாலும் அதனால் சிறிதும் திருவுள்ளம் சீறமாட்டான்,
தன்னடிவர் பக்கல் அபசாரப்படுமளவில் அவ்வபாதிகளைப் பங்கப்படுத்தியே தீருவன் என்கிற அர்த்தம் வெளியாகிறது.
“ஈச்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்களெல்லாம் பாகவதாபசாரம் பொறாமையென்று ஜீயர் அருளிச்செய்வர்“
என்று ஸ்ரீவசநபூஷணத்தில் ஸ்ரீஸூக்தி. அதாவது –
ஸங்கல்ப மாத்திரத்தாலே எல்லாவற்றையும் நிர்வஹிக்கவல்ல ஸர்வ சக்தியான ஸர்வேச்வரன் தன்னை
யழிய மாறி இதர ஸஜாதீயனாயவதரித்துக் கை தொடனாய் நின்று செய்த ஹிரண்ய ராவணாதி நிரஸந ரூபமான
அதிமாநுஷ க்ருத்யங்களெல்லாம – ப்ரஹ்லாதன் மஹர்ஷிகள் முதலான பாகவதர் திறத்தில்
அவ்வவர் பண்ணின அபசாரம் ஸஹியாமையாலே யென்று நஞ்சீய ரருளிச் செய்வாராம்.
அஸுர ராக்ஷஸர்களாலே தனக்கு நேரும் இடர்களைக் கணிசிக்க மாட்டான் எம்பெருமான்,
அடியார்க்கு ஓரிடர் நேர்ந்தால் அதனை உடனே பரிஹரிக்கப் பாடுபடுவன் என்க,
இது தோன்றவே இங்கு ‘அங்குகற்கு இடரின்றி‘ எனப்பட்டது.
(இடரின்றி – இடரில்லாமலிருக்கும் பொருட்டு) ஈற்றடியில், “கரியின் கொம்பொசித்தான்“ என்றாலே போதுமே,
‘கரியுருவம்‘ என்றதென்? என்னில்,
மேலெழப்பார்வைக்கு அனு யானையாயிருந்த தத்தனை, உண்மையில் அஸுரவடிவேயாம் அது – என்ற கருத்தை வெளியிடுதற்கென்க.
உருவத்தினால் கரியாயிருந்த (யானையாயிருந்த) விலங்கின்கொம்பை முறித்தவன் என்றபடி.
கரீ – வடசொல், துதிக்கை யுடையதென்று காரணக் குறி.
இனி, கரி யென்றதைத் தமிழ்ச் சொல்லாகவே கொண்டு உரைக்கவுமாம், (பதவுரை காண்க)
——————————————————————————————————————————————————————-
தூணில் வந்து தோன்றி ப்ரஹலாத விரோதியை முடித்த வரலாற்றைக் கீழ்ப்பாட்டில் அநுஸந்தித்தார்.
எம்பெருமான் உறங்குவான் போலிருக்கும்போதே அநாயாஸமாக எதிரிகளை முடிக்க வல்லவனாயிருக்கையில்
உணர்ந்திருந்து விரோதிநிரஸநஞ் செய்த்து அவனுக்கு ஒரேற்றமோ? என்று சொல்ல நினைத்து,
மதுகைடபர்களை எளிதாக முடித்திட்டபடியை இப்பாட்டில் அருளிச் செய்கிறார்.
காய்ந்து இருளை மாற்றிக் கதிரிலகு மா மணிகள்
ஏய்ந்த பணக் கதிர் மேல் வெவ்வுயிர்ப்ப-வாய்ந்த
மதுகைடபரும் வயிறுருகி மாண்டார்
அது கேடு அவர்க்கு இறுதி ஆங்கு -66
பதவுரை
காய்ந்து–சீறி
இருளை மாற்றி–இருளைப் போக்கி
கதிர் இலகு–ஒளிவிடா நின்றுள்ள
மா மணிகள்–சிறந்த ரத்னங்கள்
ஏய்ந்த–பொருத்தி யிருக்கிற
பணம்–(தன்னுடைய) படங்களினுடைய
கதிர் மேல்–ஒளிக்கு மேலே (திருவனந்தாழ்வான்)
வெவ் வுயிர்ப்ப–பெரு மூச்சு விட,
வாய்ந்த–கிட்டின
மது கைடபரும்–மதுகைடபர்கள்
வயிறு உருகி மாண்டார்–குடலழுகி முடிந்து போனார்கள்
அவர்க்கு–அந்த மதுகைடபர்களைப் போலே பிரதிகூலராய் வருமவர்களுக்கு
ஆங்கு–அவ் வண்ணாமாகவே
அது இறுதி கேடு–அப்படிப்பட்ட ப்ராண விநாசமான கேடே (பலிக்கும்)
மதுகைடபர்கள் மடிந்த வரலாறு பலவிதமாகச் சொல்லப்படுவதுண்டு,
கூரத்தாழ்வான் ஸுந்தரபாஹு ஸ்தவத்தில் அழகருடைய திருத்துடைகளை வருணிக்குங்கால்,
“பிஷ்டதுஷ்ட மதுகைடபகீடௌ“ என்றும்,
மதுகைடபஸ்ய. .. கிமுபமிமீமஹி ரங்ககுஞ்ஜரோர்வோ. என்றும் அருளிச்செய்திருக்கையாலே
மதுகைடபர்கள் திருமாலின் திருத்துடையில் இறுதி முடிந்தனர் என்பது தெற்றென விளங்கும்.
இதிஹாஸ புராணங்கள் பலவகைப் பட்டிருத்தலால் ஆழ்வாருளிச்செய்கிற விதமாகவும் உண்டென்று கொள்க.
அரவணையில் துயில் கொள்ளும் எம்பெருமானோடு போர் புரிவதாக மதுகைடபர்கள் கிட்டவந்த மாத்திரத்திலே
திருவந்தாழ்வானுடைய உஷ்ணமான மூச்சுக்காற்று வீசினவளவிலே அவ்வசுரர்கள் வயிறுருகி மாண்டொழிந்தனர் என்கிறார்.
“மேருகிரியவுணனுடல் மிடல் கெடுத்தா யென்பர் அது, உன் வுருகிரேயறிந்ததல்லால் கோவே! நீ அறியாயால்“ என்றாற் போலே,
உண்மையில் திருத்துடைகளால் இறுக்கிக் கொல்லப்பட்ட அவ்வசுரர்களை ஆதிசேஷனுடைய வெவ்வுயிர்ப்பினால்
வயிறுருகி மாண்டனராகச் சொல்வதும் பொருந்தியதேயாம். அதிசய்யோக்தியில் ஒரு வகையென்க.
அது கேடவர்க்கிறுதியாங்கு “என்று மென்பிள்ளைக்கு தீமை செய்வார்கள் அங்ஙனமாவார்களே“ என்று
யசோதைப் பிராட்டி கைசுடுக்கி வைதாளே, அது போலக்கொள்க.
கண்ணபிரான் விஷயத்தில் தீமை செய்பவர்கள் வத்ஸாஸுரனும் கபித்தாஸுரனும் பட்டபாடு படுவர்கள் என்று
அவள் சாபமிட்டாற்போல் இவ்வாழ்வாரும் சாபமிடுகிறார் –
எம்பெருமான் விஷயத்தில் பிராதிகூல்யமுள்ளவர்கள் மதுகைடபர்கள் பட்டபாடு படுவர்கள் என்கிறார்.
அவர்க்கு என்றது – அந்த மதுகைடபர்களைப் போன்ற விரோதிகளுக்கு என்றபடி.
———————————————————————————————————————————————————————
ஆங்கு மலரும் குவியும் மால் உந்தி வாய்
ஓங்கு கமலத்தின் ஒண் போது -ஆங்கு கைத்
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்
பகருமதி என்றும் பார்த்து –67-
பதவுரை
மால்–ஸர்வேச்வரனுடைய
உந்தி வாய்–திரு நாபியிலே
ஓங்கு–உயர வளர்ந்த
ஒண் கமலத்தின் போது–அழகிய தாமரைப் பூவானது
கை–அவனுடைய வலத் திருக் கையில்
ஆம்–உண்டான
திகிரி–திருவாழியை
சுடர் என்றும்–ஸூர்யனென்றும்
(கை ஆம்)
இடத் திருக்கையிலுள்ள
வெண் சங்கம்–வெளுத்த சங்கை
வானில் பகரும் மதி என்றும்–ஆகாசத்தில் விளங்குகிற சந்திரனென்றும்
பார்த்து–நினைத்துக் கொண்டு
ஆங்கு–எக் காலத்திலே
மலரும் குவியும்–மலர்வதும் மூடிக் கொள்வதுமா யிரா நின்றது.
சேஷ சயனத்தில் பள்ளிகொள்ளு மெம்பிரானுடைய திருநாபிக்கமலம் நன்றாக விகஸித்ததாகவுமிராதே
நன்றாக மூடிக்கொண்டதாகவுமிராதே மலர்வதும் மொட்டிப்பதுமா யிருக்கிற அழகை அநுபவித்துப் பேசுகிறார்.
எம்பெருமானுடைய வலத் திருக்கையில் திருவாழியாழ்வான் விளங்குகிறான்,
அனேகமாயிரம் ஸூர்யர்களுக்கு ஸமானமாக ஸுதர்சநாழ்வான் சொல்லப்பட்டிருப்பதால் அவ்வாழ்வானைக் கண்டு
ஸூர்யனென்றெண்ணி உந்திக்கமலம் மலரத் தொடங்குகின்றது,
இடத்திருக்கையில் ஸ்ரீபாஞ்சஜந்யாழ்வான் வெள்ளை வெளே லென்று விளங்குகிறான்,
“சந்திரமண்டலம் போல் தாமோதரன் கையில்…. வலம் புரியே!“ என்று அவன் சந்த்ர ஸமாநனாகச் சொல்லப்பட்டிருப்பதால்
அவ் வாழ்வானைக் கண்டு சந்திரனென்றெண்ணி மூடிக் கொள்ளத் தொடங்குகிறது.
இப்படி மாறி மாறி மலர்வதும் மூடுவதுமாயிருக்குமிருப்பொழிய ஸ்திரமான வொரு நிலையில்லை யென்கிறார்.
—————————————————————————————————————————————————————————-
திருமலையில் நிகழ்ச்சியைக் கூறுகின்றார்.
பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு
பேர்த்தோர் கடுவன் எனப் பேர்ந்து -கார்த்த
களங்கனிக்குக் கை நீட்டும் வேங்கடமே மேனாள்
விளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு –68
பதவுரை
சுனை நீர்–திருமலைச் சுனையின் நீரிலே
பார்த்த–கவிந்து பார்த்த
கடுவன்–குரங்கானது
நிழல் கண்டு–நீரினுள்ளே பிரதி பலிக்கிற தன்னிழலைக்கண்டு
பேர்த்து ஓர் கடுவன் என–(தனக்கு எதிரியான) வேறொரு குரங்கு இருப்பதாக ப்ரமித்து
பேர்ந்து–அவ்விடம் விட்டு நீங்கி (மறுபடியும் சாபல்யத்தாலே)
கார்த்த கனங்கனிக்கு கை நீட்டும்–கரிய களாப்பழத்தைப் பறித்துத்தா வென்று கை நீட்டப்பெற்ற
வேங்கடமே–திருவேங்கடம் தான்
மேல் நாள்–முன்பொருகாலத்தில்
விள கனிக்கு–(அஸுராவேசங்கொண்ட) விளாம்பழங்கள் உதிர்வதற்காக
கன்று எறிந்தான்–வத்ஸாஸுரனை (எறிகுணிலாகக் கொண்டு) வீசியெறிந்த பெருமானுடைய
வெற்பு–திருமலை.
ஒருசுனையின் கரையிலே களாச்செடிகளில் களாப்பழங்களைப் பறித்துத்
தின்ன தொடங்கின குரங்கானது அச்சுனை நீரை எட்டிப்பார்த்தவாறே அதில் தன் பிரதிபிம்பத்தைக் கண்டு
அங்கே வேறொரு குரங்கு இருப்பதாகவும் அது களாப்பழங்களைப் பறிப்பதாகவும் பிரமித்து
‘எனக்குக் களாப்பழம் தா‘ என்று கை நீட்டுகின்றதாம்,
இப்படிப்பட்ட திருமலையானது, வத்ஸாஸுரனைக் கொண்டு கபித்தாஸுரனை முடித்த
கண்ணபிரான் திருவுள்ளம் உவந்து வாழும் திவ்யதேசமாம்.
திருமலையப்பனுடைய சேஷ்டிதங்களைப் பேசுவதோடு அங்குள்ள தீர்யக்ஜந்துக்களின் சேஷ்டிதங்களைப் பேசுவதோடு
வாசியில்லை ஆழ்வார்க்கு. திருமலையிலுள்ளது ஏதேனுமாம், எல்லாம் உத்தேச்யமாயிருக்கும்.
“எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனுமவனே“ என்றாரே ஸ்ரீ குலசேகரப் பெருமான்.
———————————————————————————————————————————————————————————
வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்க்
கற்பென்று சூடும் கரும் குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் -69-
பதவுரை
வெற்பு என்று–ஏதேனும் ஒரு மலையைச் சொல்லநினைத்தாலும்
வேங்கடம்–திருமலையைப் பற்றி
பாடும்–பாடுகின்றாள்,
கற்பு என்று–குல மரியாதைக்குத் தகுந்திருப்ப தென்று
வியன் துழாய்–விலக்ஷணமான திருத்துழாயை
கரு குழல் மேல்–(தனது) கரிய கூந்தலில்
சூடும்–அணிந்து கொள்ளுகிறாள்.
மல்–மல்லர்களை
பொன்ற–பொடி படுத்தின
நீண்ட தோள்–நீண்ட திருத்தோள்களையுடைய
மால்–ஸர்வேச்வரன்
கிடந்த–சயனித்திருக்கப்பெற்ற
நீள் கடல்–பரிந்த திருப்பாற்கடலிலே
நீராடுவான்–தீர்த்தமாடுவதற்காக
பூண்ட நாள் எல்லாம்–விடிந்த விடிவுகள் தோறும்
புகும்–புறப்படுகிறாள்.
எம்பெருமானை யநுபவித்தல் பலவகைப்பட்டிருக்கும். அவனுடைய திருநாமங்களைச் சொல்லியநுபவித்தல்,
திருக்கல்யாண குணங்களைச் சொல்லியனுபவித்தல், திவ்யசேஷ்டிதங்களைச் சொல்லியனுபவித்தல்,
வடிவழகை வருணித்தநுபவித்தல், அவனுகந்தருளின திவ்யதேசங்களின் வளங்களைப் பேசியநுபவித்தல்,
அங்கே அபிமாநமுள்ள ஸ்ரீவைஷ்ணவர்களின் பெருமையைப் பேசியநுபவித்தல் –என்றிப்படி பலவகைப் பட்டிருக்கும் பகவதநுபவம்.
இவ்வகைகளில் பாமவிலக்ஷணமான மற்றொரு வகையுமுண்டு, அதாவது –
தாமானதன்மையை (ஆண்மையை) விட்டுப் பிராட்டிமாருடைய தன்மையை ஏறிட்டுக் கொண்டு வேற்று வாயாலே பேசியநுபவித்தல்.
இப்படி யநுபவிக்குந்திறத்தில் தாய்பாசுரம், தோழிபாசுரம், மகள்பாசுரம் என்று மூன்று வகுப்புகளுண்டு,
இவை நம்மாழ்வார் திருமங்கையாழ்வார்களது அருளிச்செயல்களில் விசேஷமாக வரும்
முதலாழ்வார்களின் திருவந்தாதிகளில் ஸ்த்ரீபாவநையினாற் பேசும் பாசுரம் வருவதில்லை.
ச்ருங்கார ரஸத்தின் ஸம்பந்தம் சிறிதுமின்றியே கேவலம் சுத்த பக்திரஸமாகவே பாசுரங்களருளிச் செய்வர்கள் முதலாழ்வார்கள்.
ஆயினும் இப்பாசுரமொன்று தாய் வார்த்தையாகச் செல்லுகிறது.
பேயாழ்வாராகிற பெண்பிள்ளையின் நிலைமையை அவளைப்பெற்றுவளர்த்த திருத்தாயார் பேசுவதாக அமைக்கப்பட்ட பாசுரம் இது.
“என்னுடைய மகளானவள்“ என்ற எழுவாய் இதில் இல்லை யாதலால் கற்பித்துக் கொள்ளவேண்டும்.
என் மகள் ஏதேனுமொரு மலையைச் சொல்லப் புகந்து திருவேங்கட மலையைப் பாடுகின்றாள்.
திருத் துழாய் மலரைச் சூடிக்கொள்வதே தனது கற்புக்கு உரியதென்று தன் குழல் மேல் அதனைச் சூடிக் கொள்ளுகின்றாள்.
மல்ல வதம் செய்தருளின பெருமான் பள்ளிக்கொண்டருளும் திருப்பாற்கடலில் நீராடுவதே தகுதியென்று
அங்கேறப் புறப்படுகின்றாள் என்றதாயிற்று.
இப்பிபந்தத்தில் அந்யாபதேசப் பாசுரம் வேறொன்றுமில்லாதிருக்க இஃதொன்றைமாத்திரம்
இங்ஙனே தாய்பாசுரமாகக் கொள்ளுதல் சிறவாதென்றும்,
‘என்மகள்‘ என்ற எழுவாய் இல்லாமையாலும் இவ்வர்த்தம் உசிதமென்று என்றும் சிலர் நினைக்கக் கூடுமாதலால்
இப்பாசுரத்திற்கு வேறுவகையான நிர்வாகஹமும் பூருவர்கள் அருளிச்செய்துள்ளார்.
எங்ஙனே யெனின்? பாடும், சூடும், புகும் என்ற வினைமுற்றுக்களை முன்னிலையில் வந்தனவாகக் கொண்டு,
‘ஓ உலகத்தவர்களே! நீங்கள் ஏதாவதொரு மலையைப் பாடவேண்டில் திருவேங்கடமலையைப் பாடுங்கள்,
ஏதேனுமொரு மலரைக் குழலில் சூடவேண்டில் திருத்துழாய்மலரைச் சூடிக்கொள்வதே சேஷத்வத்திற்கு
உரியதென்று கொண்டு அதனைச் சூடுங்கள், நீராடுவதற்குத் திருப்பாற்கடலிலே சென்று புகுங்கள்‘ என்பதாக.
இங்கே பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்மின்,
“இப்பிரகரணத்தில் கீழும் மேலும் அந்யாபதேச மின்றிக்கே யிருக்க இப்பாட்டொன்றும் இப்படி கொள்ளுகிற
தென்னென்று நிர்வஹிப்பர்கள், திருமலையைப் படுங்கோள், திருத்துழாயைச் சூடுங்கோள்,
விரோதி நிரஸந சீலனானவன் கிடந்த திருப்பாற்படலிலே முழுகுங்கோள்.“ என்று.
நன்னூல் வினையியலில் “பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையில், செல்லாதாகும் செய்யுமென்முற்றே“ என்ற
சிறப்புவிதிக்கு மாறாக, பாடும், சூடும், புகும் என்ற செய்யுமென் முற்றுக்களுகு முன்னிலைப் பொருள் கொள்ளலாமோ வென்னில்,
இதனைப் புதியன புகுதலாகக் கொள்க. “நீர் உண்ணும் என முன்னிலையிற் பன்மையேவலாய் வருதல் புதியனபுகுதல்“ என்று
நன்னூலுரைகாரர்களும் சொல்லி வைத்தார்கள்.
“பழையன கழிதனும் புதியன புகுதலும், வழுவல காலவகையினானே“ என்ற நன்னூற் சூத்திரமும் காண்க.
மற்பொனற நீண்ட தோள்மால் என்றவிடத்து அறியவேண்டும் வரலாறு வருமாறு –
கண்ணபிரான் கம்ஸனது ஸபையிற் செல்லும்போது எதிர்த்துப் பொருது கொல்லும்படி கம்ஸனால் ஏவப்பட்ட
சாணூரன் முஷ்டிகள் முதலிய பெருமல்லர்கள் சிலர் வந்து எதிர்த்து உக்கிரமாகப் பெரும்போர் செய்ய
அவர்களை யெல்லாம் கண்ணபிரான் மற்போரினாலேயே கொன்று வென்றிட்டனன்.
கண்ணபிரான் பாண்டவ தூதனாய்த் துரியோதனனிடஞ் சென்ற பொழுது துரியோதனன் ரஹஸ்யமாகத் தனது
ஸபா மண்டபத்தில் மிகப்பெரிய நிலவறையொன்றைத் தோண்டுவித்து
அதில் அனேக மல்லர்களை ஆயுதபாணிகளாய் உள்ளே யிருக்க வைத்து அப்படுகுழியைப் பிறர் அறிய வெண்ணாதபடி
மூங்கிற் பிளப்புக்களால் மேலேமூடி அதன்மேற்சிறந்த ரத்நாஸநமொன்றை அமைத்து அவ்வாஸநத்தின்மீது
தன்னை வீற்றிருக்கச் சொல்ல அங்ஙனமே தான் அதன்மேலேறின மாத்திரத்திலே மூங்கிற்பிளப்புக்கள் முறிபட்டு
ஆஸனம் உள்ளிறங்கிப் பிலவறையிற் செல்லுமளவில் மிகப்பெரியதாக விச்வரூப மெடுத்துப்
பல கைகளையுங் கால்களையுங் கொண்டு எதிர்த்து அப்பிலவறையிலிருந்த மல்லர்களை மடிவித்தனன் என்ற வரலாறு முணர்க.
பூண்டநாளெல்லாம் – ஸூர்யனுடைய தேரிலே குதிரை பூட்டின நாளெல்லாம் என்றபடியாய்
‘விடிந்த விடிவுகள் தோறும்‘ என்று பொருள்பட்டது.
——————————————————————————————————————————————————————————————
புகுமதத்தால் வாய் பூசிக் கீழ் தாழ்ந்து அருவி
உகு மதத்தால் கால் கழுவிக் கையால் மிகு மதத்தேன்
விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே
கண்டு வணங்கும் களிறு –70-
பதவுரை
களிறு–(திருமலையிலுள்ள) யானையானது
புகு மதத்தால் வாய் பூசி–மண்டையில் நின்றும் கபோலங்களில் நின்றும் வாயிலே புகுகின்ற
மத ஜலத்தாலே வாய் கொப்பளித்து ஆகமனம் பண்ணி
கீழ் தாழ்ந்து அருவி உகு மதத்தால்–மேலிருந்து கீழ்வரையில் அருவி போலே வந்து பெருகுகிற மத ஜலத்தாலே
கால் கழுவி–கால்களை சுத்தி செய்து கொண்டு
கையால்–துதிக்கையால்
மிகு மதம் தேன்–மிகுந்த மதத்தை யுண்டு பண்ணக் கூடிய தேனை யுடையதும்
விண்ட–மலர்ந்ததுமான
மலர் கொண்டு–புஷ்பத்தைக் கொண்டு
விறல் வேங்கடவனையே–பெரு மிடுக்கனான திருமலை யப்பனையே
கண்டு வணங்கும்–ஸேவித்து வணங்குகின்றது.
திருமலையில் மதயானைகள் தாமரைப் பூக்களைப் பறித்து அப்பன் திருவடிகளில் ஸமர்ப்பித்து வணங்குகிறபடியை
ஒரு சமத்காரம் பொலியப் பேசுகிறார். எம்பெருமான் ஸந்நிதியில் தொண்டுசெய்யப் போமவர்கள்
வாயைக் கொப்பளித்துக் கைகால்களை சுத்திசெய்து கொண்டு புஷ்பங்களை யெடுத்துக் கொண்டு போவது வழக்கம்
இவ்வாசாரம் சாஸ்த்ரவச்யர்களான மானிட சாதியர்க்கு மாத்திரமல்ல, திருமலையிலுள்ள அஃறிணைப் பொருள் கட்கும்
இவ்வாசாரம் கோல்விழுக்காட்டிலே அமைந்திருக்கின்றது என்கிறார்.
மத்தகம், கன்னங்கள் ஆகிய இடங்களிலிருந்து பெருகி வாயிலே புகுகின்ற மத ஜலத்தினால் வாய் கொப்பளித்து
ஆசமனம் பண்ணினது போலும், அருவிபோலே காலளவும் பெருகுகின்ற மதஜலத்தினால் காலைக் கழுவினது போலும்.
விறல் வேங்கடவன் – இங்ஙனே திருமலையிலுள்ள திர்யக் ஜந்துக்களும் தன்னை வணங்குமாறு
ஜ்ஞாநத்தைக் கொடுக்க சக்தனான திருவேங்கடமுடையான் என்ப.
——————————————————————————————————————————————————————————————
களிறு முகில் குத்தக் கையெடுத்தோடி
ஒளிறு மருப்பொசிகை யாளி பிளிறி
விழ கொன்று நின்று அதிரும் வேங்கடமே மேனாள்
குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று –71–
பதவுரை
களிறு–யானையானது
கை எடுத்து ஓடி–தனது துதிக்கையை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடி
முகில்–(மத யானை போலெழுந்து) மேகங்களை
குத்த–(எதிரியானை யென்று நினைத்துக்) குத்த
யாளி–(இதைக் கண்ட) யாளியானது
ஒளிறு மருப்பு–(அந்த யானை யினுடைய) விளங்குகின்ற கொம்பை
ஓசி–முறிக்கிற
கை–கையை யுடைத்தாய்க் கொண்டு
பிளிறி விழ கொன்று–(அந்த யானை) வாய் விட்டலறிக் கொண்டு விழும்படி (அதனைக்) கொன்று
நின்று அதிரும்–அங்கேயே நின்று கொண்டு பெரு முழக்கம் செய்யப் பெற்ற
வேங்கடமே–திருவேங்கடமே
மேல் நாள்–முன்பொரு காலத்தில்
குழ கன்று கொண்டு–இளங்கன்றை (எறி குணிலாகக்) கொண்டு
எறிந்தான்–(விளங்கனிமீது) எறிந்த பிரானுடைய
குன்று–திருமலையாம்.
“மதயானைபோலெழுந்த மாமுகில்காள்!“ நாச்சியார் திருமொழி -8-9–என்றும்,
“கரியமாமுகிற் படலங்கள் கிடந்தவை முழங்கிடக்களிறென்று“ -பெரியாழ்வார் 1-2-10-என்றும் சொல்லுகிறபடியே
யானைக்கும் மேகத்திற்கும் ஒப்புமை ப்ரஸித்தம்.
ஆகவே, திருமலையிலுள்ள யானையானது மலைமுகட்டில் படிந்திருந்த மேகத்தை எதிரியான தொரு யானையென்று
மயங்கிப் பெரிய வேகத்தோடே சென்று துதிக்கையினால் குத்த, இதனை ஒரு யாளி கண்டு
‘இக்களிற்றுக்கு இவ்வளவு மதமா‘ என்று சினந்து ஓடிவந்து அவ் யானையின்மேற் பாய்ந்து
அதன் கொம்பை முறித்தெறிந்து அது வாய்விட்டு அலறிக்கொண்டு விழும்படியாகக் கொலையுஞ் செய்து,
அவ்வளவிலும் சீற்றம் தணியாமையாலே அவ்விடத்திலேயே நின்று மற்றுள்ள மிருகங்களும்
மண்ணுண்ணும்படியாக கர்ஜிக்கின்றதாம் திருமலையில்.
——————————————————————————————————————————————————————————
திருமலையில் வளர்கின்ற மூங்கில்கள் சந்திரமண்டலத்தளவும் ஓங்கியிருக்கின்றன வென்பதை
ஒரு அதிசயோக்தியினால் கூறுகின்றார்.
குன்று ஒன்றினாய குற மகளிர் கோல் வளைக்கை
சென்று விளையாடும் தீங்கழை போய்–வென்று
விளங்கு மதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை
இளங்குமரர் கோமான் இடம் –72
பதவுரை
குன்று ஒன்றினான–அத் திருமலை யொன்று தவிர வேறொரிடமும் அறியாதிருக்கிற
குற மகளிர்–குறத்திகள்
கோல் வளை கை–அழகிய வளைகளணிந்த கைகளினாலே
சென்று–மேலேறி
விளையாடும்–விளையாடா நிற்கப் பெற
தீம் கழை–அழகிய மூங்கில்கள்
போய்–சந்திர மண்டலத்தளவும் போய்
வென்று–ராஹுவைத் தகர்த்து,
விளங்கு மதிகோள் விடுக்கும்–விளங்கா நின்ற சந்திரனுடைய கிரஹணத்தை விடுவிக்கப் பெற்ற
வேங்கடமே–திருமலையே
மேலே–மேலுலகத்திலுள்ள
இளங் குமரர் கோமான்–நித்ய யுவாக்களான நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான பெருமானுடைய
இடம்–திவ்ய தேசமாம்.
குன்றொன்றினாய குறமகளிர் – திருமலையை விட்டு ஒரு நொடிப்பொழுது கீழிழிந்தாலும் குடிப்பழியாம் என்று
திருமலையை விடாதே அங்கே நித்தியவாஸம் பண்ணுகின்ற குறத்திகள் அவர்கள் ஊஞ்சலாடுகை முதலான
விளையாடல்களுக்காக மூங்கில் மரங்களிலே யேறியிருப்ப துண்டாகையாலே “
குறமகளிர் கோல்வளைக்கை சென்று விளாயாடுந் தீங்கழை“ எனப்பட்டது.
அப்படிப்பட்ட மூங்கில்களானவை, சந்திரனை கர்ஹிக்கின்ற ராஹுவைக்குத்தி அப்புறப்படுத்தி அச்சந்திரனை மகிழ்விக்கின்றனவாம்.
இங்ஙனே ஒக்கமுடைத்தான திருமலை நித்ய ஸூரிநாதன் வாழுமிடம்.
இப்பாட்டுக்கு மற்றும் பலவகையாகப் பொருள்கூறுவர்,
விளையாடுகின்ற குறத்திகளின் கோல் வளைக்கையானது சென்று நல்ல மூங்கிற்செறிவை நீக்கி,
சந்திரன் இங்குப் புகுரப் பெறாமையால் பெற்றிருந்த இடரை நீக்கும் என்றுமாம்.
அன்றியே
குறத்திகளின் வளைகளின் ஒளியானது சந்திரனொளி புகுரப்பெறாத மூங்கிலிருளை அகற்றி வெளியாக்கி,
சந்திரன் மறுவையும் போக்கும் என்றுமாம்.
மேலேயிளங்குமரர் – நித்ய ஸூரிகள் என்றும் பன்னிரண்டு வயது வாய்ந்திருப்பரென்க.
———————————————————————————————————————————————————————————————————-
இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேரோட்டி
வடமுக வேங்கடத்து மன்னும்–குட நயந்த
கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே
நாத்தன்னால் உள்ள நலம் –73
பதவுரை
ஏழ் பூண்ட–ஏழு குதிரைகளைப் பூண்ட
இரவி தேர்–ஸூர்யனுடைய தேரை
இடம் வலம்–(மேருவுக்கு) இடப்பக்கமாகவும் வலப்பக்கமாகவும்
ஒட்டி–(அந்தர்யாமியா யிருந்து கொண்டு) நடத்துகிறவனும்
வட முகம் வேங்கடத்து மன்னும்–வடதிசையின் கண்ணுள்ள திருவேங்கடத்தில் நித்யவாஸம் பண்ணுமவனும்
குடம் நயந்த கூத்தன் ஆய் நின்றான்–ஆசையோடு குடக்கூத்தாடின கண்ணபிரான் போன்று நிற்பவனுமான பெருமானுடைய
குரை கழல் கூறுவதே–ஆபரண வொலி பொருந்திய திருவடிகளே ஏத்துவதே
நா தன்னால் உள்ள நலம்–நாவினால் கொள்ளக் கூடிய பிரயோஜனம்.
எம்பெருமானுக்கு ஸூர்யமண்டலமும் ஒரு வாஸஸ்தாநமாதலால் ‘இரவித் தேரோட்டி‘ என்றார்.
எம்பெருமானுடைய அநுப்ரவேசமின்றி எந்த தேவதையும் எக்காரியமும் செய்ய முடியாதாகையாலே
அவன்தானே ஸூர்யனுக்கு அந்தர்யாமியாயிருந்து தேரே நடத்துகின்றானென்க.
ஏழ் பூண்ட –ஏழு குதிரைகளைப் பூண்ட என்றபடி.
காயத்ரீ ப்ருஹதீ, உ ஷ்ணிக், ஜகதீ. த்ரிஷ்டுப், அநுஷ்டுப், பங்க்தி – என்கிற ஏழு சந்தஸ்ஸுக்களும்
ஏழு குதிரைகளாயக் கொண்டு வஹிக்குமென்று சாஸத்ரம் சொல்லும்.
‘ஓட்டி‘ என்பதை வினையெச்சமாகவுங் கொள்ளலாம், ‘இ‘ விகுதிபெற்ற பெயராகவுங் கொள்ளலாம்.
“குன்றமேந்திக் குளிர்மழை காத்தவன்… பரன்சென்று சேர் திருவேங்கடமாமலை“ என்று
கண்ணபிரான்தானே திருவேங்கடமலையில் வந்து ஸந்நிதி பண்ணிருப்பதாக அருளிச் செய்கையாலே
இங்கும் “குடநயந்த கூத்தனாய் நின்றான்“ என்று கண்ணபிரானோடு ஒற்றுமை நயம்படக் கூறப்பட்டது.
திருவேங்கடமுடையானுடைய திருவடிகளைத் துதிப்பதே நாவுக்குப் பயன் என்றதாயிற்று.
——————————————————————————————————————————————————————————–
எம்பெருமானிடத்தில் அந்தரங்கமான அன்பு பூண்டவர்களுள் தலையானவன் யசோதைப் பிராட்டி
யொருத்தி தான் என்பதை வெளியிடுகிறாரிதில்,
நலமே வலிது கொல் நஞ்சூட்டு வன்பேய்
நிலமே புரண்டு போய் வீழ சலமே தான்
வெம் கொங்கை யுண்டானை மீட்டாய்ச்சி யூட்டுவான்
தன் கொங்கை வைத்தாள் சார்ந்து –74-
பதவுரை
சலமே–கபடமாகவே
நஞ்சு–விஷத்தை
ஊட்டு–உண்பிக்க வந்த
வன் பேய்–கொடிய பூதனையானவள்
நிலமே–பூமியிலே
புரண்டு போய் வீழ–(பிணமாய்) மறிந்துபோய் விழும்படியாகக்
தான் சலமே–தானும் கபடமாகவே
வெம் கொங்கை–(அவளது) வெவ்விய முலையை
உண்டானை–அமுது செய்த கண்ணபிரானை
ஆய்ச்சி–யசோதையானவள்
மீட்டு–(அப் பூதனை பக்கலில் நின்றும்) மீட்டு
ஊட்டுவன்–(தனது முலைப் பாலை) உண்பிப்பதற்காக
சார்ந்து–அணுகிச் சென்று
தன் கொங்கை–தனது முலையை
வாய் வைத்தான்–அவனது வாயிலே உண்ணக் கொடுத்தாள்,
நலமே வலிதுகொல்–இந்த ப்ரேமம் எவ்வளவு கனத்தது!
கண்ணபிரான் இளங்குழவியாய் நந்தகோபர் திருமாளிகையில் சயனித்திருக்கும்போது வஞ்சகக் கஞ்சனாலேவப்பட்டுக்
கொல்ல வந்த பூதனையென்னும் பேய்த்தாய் மிக்க பரிவுள்ளவள்போலத் தெய்வக்குழவியை யெடுத்துத்
தனது விஷந்தடவின முலையைக்கொடுக்க, பேதைக்குழவி பிடித்துச் சுவைத்துண்டவாறே
அப்பேய்ச்சி உயர்மாண்டு பிணமாய் விழுந்தாள்,
உடனே யசோதைப்பிராட்டி ஓடிவந்து குழந்தையை வாரியெடுத்தணைத்து முலை கொடுத்தாள் – என்பதாக இதிஹாஸமுள்ளது,
ஒருத்திவந்து முலைகொடுத்துப் பட்டபாடு கண்ணெதிரே காணாநிற்கச் செய்தே இன்னொருத்தி கிட்டவரத்தான் முடியுமா?
அஞ்சாமல் கிட்டவந்து வாரியெடுத்து முலை கொடுத்தாளென்றால் இவளுடைய அன்பின் கனம் விளங்குமன்றோ
பூதனைகொடுத்த விஷத்திற்கு மாற்றான அம்ருதமாகத் தனது ஸ்தந்யத்தைக் கொடுக்க வேணுமென்னும்
அன்பு மிகுதியினால் யசோதை செய்த இக்காரியம் அன்புக்கு ஒக்குமத்தனை.
நலமே வலிதுகொல் – ஸ்த்ரீகளுக்கு அச்சமே வலிதாயிருக்கச் செய்தேயும்
யசோதைப்பிராட்டிக்கு அன்புதான் வலிது போலிருக்கின்றது! என்றவாறு.
‘***‘ என்ற வடசொல் சலமெனத் திரிந்தது.
இச்சொல் இங்கு நடுநிலைத் தீவகமாய் முன்னும் பின்னும் அந்வயிக்கும்.
————————————————————————————————————————————————————————–
திருமலையை அநுபவிக்கிறார்.
சார்ந்து அகடு தோய்ப்ப தடாவிய கோடுச்சி வாய்
ஊர்ந்து இயங்கும் வண் மதியின் ஒண் முதலை -சேர்ந்து
சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன்
புன வேங்கை நாறும் பொருப்பு–75-
பதவுரை
தடாவிய–பரப்பை யுடைத்தான
கோடு-சிகரங்களினுடைய
உச்சி வாய்–உச்சயிலே
அகடு தேய்ப்ப–கீழ் வயிறு உராயும்படியாக
சார்ந்து–கிட்டி
ஊர்ந்து இயங்கும்–மெல்ல ஸஞ்சரிக்கின்ற
வண் மதியின்–அழகிய சந்திரனிடத்துள்ள
ஒண் முயலை–அழகிய முயலை,
சினம் வேங்கை–கோபத்தை யுடைத்தான வேங்கைப் புலியானது
சேர்ந்து–கிட்டி
பார்க்கும்–(அதைப் பிடித்துக் கொள்ளவும்விட்டுப் போகவும் மாட்டாமல்) எப்போதும் பார்த்தபடியே நிற்கப் பெற்ற
ஆயன்–கண்ணபிரானுடையதாய்
புனம் வேங்கை நாறும்–தன்னிலத்தில் வளர்ந்து செழிப்புற்ற வேங்கை மரங்கள் கமழப் பெற்றதான
பொருப்பு–மலை
திருமலையின் சிகரம் சந்திரமண்டலத்தளவும் ஓங்கியிருக்கின்ற தென்பதை
ஒரு அதிசயோக்தியினால் வெளியிடுகிறார்
சந்திரனிடையே கறுப்பாகத் தோன்றுவதைக் கவிகள் பலவிதமாகக் கூறுவதுண்டு.
மான் என்பர் சிலர், முயல் என்பர் சிலர் மற்றும் பல்வகையுங் கூறுவர்.
‘முயல்‘ என்ற கொள்கையைப் பின்பற்றி இப்பாசுரமருளிச் செய்யப்படுகிறது.
ஆகாசத்திலே திரிகின்ற சந்திரன் திருமலையின் சிகாநுனியில் தனது கீழ்வயிறு தேயும்படியாக இதில்
ஸம்பந்தப்பட்டுக் கொண்டே செல்லுகின்றானாம்,
அப்போது அவனது மடியிலிருக்கின்ற முயலைத் திருமலைமீது திரிகின்ற வேங்கைப்புலி கண்டு அ
தனைத் தான் உணவாகக் கொள்ளக்கருதி, பிடித்துக்கொள்ளவும் மாட்டாமல் விட்டுப் போகவும் மாட்டாமல்
உறுத்துப் பார்த்தபடியே நிற்கின்றதாம்.
இப்படிப்பட்ட திருமலை வேங்கைமலர்களின் வாஸனை வீசப்பெற்றதாய்க் கண்ணபிரா னெழுந்தருளி
யிருக்குமிடமான திருமலையாம்.
——————————————————————————————————————————————————————–
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து
நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா விருப்புடைய
வெக்காவே சேர்ந்தானை மொய்ம்மலர் தூயக் கை தொழுதால்
அக்காவே தீ வினைகள் ஆய்ந்து –76-
பதவுரை
(ஒ உலகத்தவர்களே)
நீர்–நீங்கள்
பொருப்பு இடையே–மலைகளின் நடுவே
நின்றும்–நின்று கொண்டும்
புனல்–நீர் நிலைகளிலே
குளித்தும்–முழுகிக் கொண்டும்
ஐந்து நெருப்பு இடையே–பஞ்ச அக்நி மத்யத்திலே
நிற்கவும்–நின்று கொண்டும் தவஞ்செய்ய
வேண்டா–வேண்டியதில்லை,
விருப்பு உடைய–(எல்லாராலும்) விரும்பத் தக்கதா யிருக்கின்ற
வெஃகா–திரு வெஃகாவில்
சேர்ந்தானை–வந்து கண் வளர்த்தருளும் பெருமானை
மெய்–மெய்யாக (அநந்நய ப்ரயோஜநமாக)
மலர் தூய் கை தொழுதால்–புஷ்பங்களைப் பணிமாறி வணங்கப் பெற்றால்
தீ வினைகள்–துஷ் கருமங்களெல்லாம்
ஆய்ந்து–(நமக்கு இவ்விடம் வாஸயோக்யமன்று என்று) நிரூபித்தறிந்து
அஃகாவே–சுருங்கிப் போக மாட்டாவோ? (அகன்றோடிப் போய்விடுமென்கை)
இப்பாட்டில் விளி வருவித்துக் கொள்க. அருமையான தவங்கள் செய்து உடம்பை வருத்துகின்றவர்களே!
நீங்கள் மலைமேல் ஒற்றைக்கால் விரலால் நின்றுகொண்டும், மழைகாலத்தில் நீர்நிலைகளிலே மூழ்கிக்கிடந்தும்,
வேனிற்காலத்திலே பஞ்சாக்நி மத்யத்தில் நின்றுகொண்டும் இப்படிப்பட்ட காயக்லேசங்களுடன்
தவம் புரிவதெல்லாம் எதுக்காக? பாவங்கள் தொலைந்து நற்கதி நண்ணவேணுமென்றுதானே இங்ஙனம் தவம்புரிகின்றீர்கள்,
இனி அங்ஙனம் வருந்தவேண்டா, திருவெஃகா நாயனார் திருவடிகளிலே அந்நயப்ரயோஜநராயப்
புஷ்பங்களைப் பணிமாறி ஆச்ரயித்தால் தீவினைகளெல்லாம் தன்னடையே ஓடிப்போய்விடுமே.
நமக்காக எம்பெருமான் காயக்லேசங்கள் படாநிற்க நாமும் படாவேணுமோ? என்கிறார்.
பிள்ளைப்பெருமாளையங்கார் இப்பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி திருவரங்கக் கலபகத்தில்
“காயிலைதின்றுங் கானிலுறைந்துங் கதிதேடித், தீயிடைநின்றும் பூவலம்வந்துந் திரிவீர்காள்!
தாயிலுமன்பன் பூமகள்நண்பன் தடநாகப் பாயன் மூகுந்தன் கோயிலரங்கம் பணிவீரே“ என்றருளிய பாசுரம் நோக்கத்தக்கது.
விரும்புடைய வெஃகா – பகவானுடையவும் பாகவதர்களுடையவும் விருப்பத்திற்குப் பாத்திரமான வெஃகா என்றபடி.
————————————————————————————————————————————————————————-
ஆய்ந்த வருமறையோன் நான் முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் –77-
பதவுரை
ஆய்ந்த–ஆராய்ந்து அதிகரிக்கப்பட்ட
அரு மறையான்–அருமையான வேதங்களை யுடையனான
நான் முகத்தோன்–சதுர்முக ப்ரஹ்மாவினுடைய
நன் குறங்கில்–அழகிய மடியிலே
வாய்ந்த–நேர் பட்ட
குழவி ஆய்–இளங்குழந்தை யாயிருந்து கொண்டு
வாள் அரக்கன்–இராவணனுடைய
போது ஏய்ந்த–புஷ்ப மாலை பொருந்தின
முடி–தலைகளை
மூன்று ஏழ் என்று எண்ணினான்–பத்து என்று (தனது திருவடியாலே) எண்ணிக் காட்டினவனுடைய
அடி போது–திருவடித்தாமரைகள்
நங்கட்கு–நமக்கு
ஆர்ந்த அரண்–குறையற்ற சரணம்.
இப்பாட்டில் அநுஸந்திக்கப்பட்டிருக்கும் பகவத் கதை முதல் திருவந்தாதியில் (45) “ஆமே யமரர்க்கறிய“ என்ற பாட்டின்
“பூமேய மாதவத்தோன் தாள்பணிந்த வாளரக்கன் நீண்முடியைப், பாதமத்தா வெண்ணினான்பண்பு“ என்ற பின்னடிகளிலும்,
நான்முகன் திருவந்தாதியில் “கொண்டு குடங்கால்மேல் வைத்த குழவியாய்,
தண்டவரக்கன் தலைதாளாற் பண்டெண்ணிப் போங்குமரன் . . .“ என்ற நாற்பத்து நான்காம்பாட்டிலும்
பொய்கையாழ்வாராலும் திருமழிசைப்பிரானாலும் அநுஸந்திக்கப்பட்டுள்ளது.
முன்பு இராவணன் தனது பத்துத்தலைகளை மறைத்துக்கொண்டு நான்முகனிடஞ்சென்று வரம் வேண்டிக்கொள்ளுமளவில்
எம்பெருமான் ஒரு சிறு குழந்தைவடிவாய் அப்பிரமனுடைய மடியிலே உறங்குவான்போலே கிடந்து
‘இவன் பத்துத் தலைகளையுடைய இராவணன், ஸ்வஸ்வரூபத்தை மறைத்துக்கொண்டு உன்னை வஞ்சித்து
வரம் வேண்டிக்கொள்ள வந்திருக்கிறான், இவனுக்கு நீ வரமளித்தால் பெருந்தீய்காக முடியும் என்று தெரிவிப்பவன்
போன்று தன் திருவடியால் அவ்விராவணனுடைய பத்துத்தலைகளையும் எண்ணிக் காட்டினன் – என்பதாக இவ்வரலாறு வளங்குகின்றது.
இக்கதை இதிஹாஸ புராணங்களில் உள்ள விடம் தெரியவில்லை,
பெரியாழ்வார் திருமொழியில் “சீமாலிகனவனோடு தோழமைக்கொள்ளவும் வல்லாய், சாமாறவனை
நீயெண்ணிச் சக்கரத்தால் தலைகொண்டாய்“ என்றும்,
“எல்லியம்போ தினிதிருத்த லிருந்த்தோ ரிடவகையில் மல்லிகை மாமாலைகொண்டு அங்கார்த்ததுமோ ரடையாளம்“ என்றும்
அருளிச்செய்த கதைகள் வியாஸர் வால்மீகி முதலிய முனிவர்களால் ஸாக்ஷாத்கரிக்கப்படாமல்
ஆழ்வாரால் மாத்திரம் நீர்ஹேதுக பகவத் கடாக்ஷமடியாக ஸாக்ஷாத்கரிக்கப்பட்டவை என்ற
நம் பூருவாசாரிகள் நிர்வஹித்திருப்பதுபோலவே இக்கதையும் ஆழ்வார்களால் மாத்திரம்
ஸாக்ஷாத்கரிக்கப்பட்டதென்று பெரியொர் கூறுவர்.
இனி, இதற்கு இதிஹாஸ புராணங்களில் ஆகரமுண்டேல் கண்டுகொள்க. விரிவும் வல்லார்வாய்க் கேட்டுணர்க.
குறங்கு –இச்சொல் துடைக்குப் பேராயினும் இங்கு இலக்கணையால் மடியை உணர்த்தும்.
———————————————————————————————————————————————————————
அரணாம் நமக்கு என்றும் ஆழி வலவன்
முரணாள் வலம் சுழிந்த மொய்ம்பன் -சரணாமேல்
ஏது கதி யேது நிலை யேது பிறப்பு என்னாதே
ஒது கதி மாயனையே யோர்த்து –78-
பதவுரை
ஆழி–திருவாழி யாழ்வானை
வலவன்–வலத் திருக் கையிலுடையவனும்
முரன்–முராஸுரனுடைய
நாள்–ஆயுளையும்
வலம்–வலிமையையும்
சுழித்த–போக்கின
மொய்ம்பன்–மிடுக்கை யுடையவனுமான பெருமான்
சரண் ஆம் ஏல்–ரக்ஷகனாக அமையும் பக்ஷத்தில்
கதி ஏது நிலை எது பிறப்பு எது என்னாதே–(நம்முடைய) ஞானமென்ன!, ஆசார மென்ன! ஜன்ம மென்ன! என்று
(இவற்றின் தாழ்வுகளைப் பார்த்து உபேக்ஷியாமல்
நமக்கு என்றும் அரண் ஆம்–நமக்கு எல்லாக் காலத்திலும் ரக்ஷகனாகவே யிருப்பன், (ஓநெஞ்சமே)
ஓர்த்து–இதை நன்றாக அறிந்து கொண்டு
மாயனையே–ஆச்சரியமான குண சேஷ்டிதங்களை யுடையனான அப்பெருமானையே
கதி–உபாயமாக
ஓது–அநுஸந்தித்துக் கொண்டிரு.
எம்பெருமான் ஸர்வரக்ஷகனென்று பேர் பெற்றாலும் அவனுடைய ரக்ஷகத்வம் எல்லாவிடத்திலும் எக்காலத்தில் புகமாட்டாது,
தம்மை ரக்ஷித்துக்கொள்வதில் தாமே முயற்சிசெய்து கொள்பவர்கள் எத்தனையோ பேர்களுண்டே;
அப்படிப்பட்டவர்களிடத்தில் அவன் தனது ரக்ஷகத்வத்தைச் செலுத்தியருளான். ஏனெனில்,
இருகையும் விட்டு ‘நீயே சரண்‘ என்று ஸர்வபாரங்களையும் தன்மேலேறிட்டு, தம் தலையாலே
ஒரு முயற்சியும் செய்யகில்லாத ஸ்வரூபஜ்ஞாநிகளையேதான் ரக்ஷித்தருள்வன்.
“இருகையும் விட்டேனோ த்ரௌபதியைப்போலே“ என்னும்படியாக அவள் ஒரு கையாலே துகிலைப் பற்றிக் கொண்டு
ஸ்வ ப்ரயத்ந நிஷ்டையாயிருந்தவரையில் அவளுடைய ரக்ஷணத்திலே கண்ணபிரான் திருவுள்ளம் செலுத்திற்றிலன்.
ஸ்ரீகஜேந்திராழ்வான் ஸ்வரக்ஷணத்தில் ஸ்வப்ரவ்ருத்தி பண்ணிக்கொண்டிருந்த வரையில்
ஸ்ரீமந்நாராயணன் அவனுடைய ரக்ஷணத்தைத் திருவுள்ளம் பற்றிற்றிலன். இப்படிப்பட்ட உதாஹரணங்கள் பலபல காணலாம்.
ஆகவே நம்முடைய ரக்ஷணத்தில் நாமும் ஒரு கை பார்த்போம் என்றிருக்கும்வரையில்
எம்பெருமான் உதாஸீநனாகவே இருந்திருவான்.
இந்த ஸத்ஸம்ப்ரதாயப் பொருளை நெஞ்சில் தேக்கிக்கொண்டு
இப்பாசுரத்தின் கருத்தை ஊன்றிப் பார்த்ததால் நன்று விளங்கும்.
ஆழிவலவன் சரண்ஆமேல் நமக்கு என்றும் அரணாம் –எம்பெருமான் நமக்கு ரக்ஷகனாக அமையும் பக்ஷத்தில்
எல்லாக் காலத்திலும் ரக்ஷகனாகவே யிருப்பன், என்றால் இதன் கருத்து என்னவென்று நோக்க வேணும்.
நம்மை நாம் ரக்ஷித்துக்கொள்ள முயலுமளவில் அவன் நமக்கு ரக்ஷகனாக அமையான்;
ஆதலால் நம்முடைய ரக்ஷணத்தில் நாம் முயல்வதை விட்டிட்டு அவனுடைய ரக்ஷகத்வத்திற்கு அவகாசம் கொடுப்போமாகில்
அவன் “என்னுடம்பிலழுக்கை நானே போக்கிக்கொள்ளேனோ“ என்கிறபடியே
எக்காலத்திலும் ரக்ஷண ஜாகரூகனா யிருந்தருள்வன் என்றவாறு.
ஸ்வ பிரவ்ருத்தி நிவ்ருத்தி தானே பிரபத்தி -விலகி இருந்து விலக்காமை காட்டுவதே பிரபத்தி
நம்முடைய அத்யாவசாயம் ஒன்றிலே அவன் திருக்கண் செலுத்துவான் ஒழிய
ஞானத்திலோ ஆசாரத்திலோ ஜன்மத்திலோ சிறிதும் கண் வையான்
நரகன் -ப்ராக் ஜோதிஷம் பட்டணம் இருந்து வந்து
கன்னிகைகளை சிறை வைத்து
வருணன் குடை -மந்தரகிரி சிகரம் -ரத்ன பர்வதத்தையும் –
அதிதி தேவியின் குண்டலங்களையும்
இந்த்ரன் உடைய ஐராவதி யானையையும்
சத்ய பாமை உடன் சென்று சக்ராயுதம் கொண்டு அழித்த போது
அவன் மந்த்ரியான முரனையும் அழித்து அருளியதால் எம்பெருமான் முராரி எனப்படுவான்-
ஆக மூன்றடிகளாலே சிக்ஷித்த அர்த்தத்தை நிகமித்துத் தம் திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிறார் ஈற்றடியால்.
—————————————————————————————————————————————————————————–
ஒரத்த மனத்தராய் ஐந்து அடக்கி யாராய்ந்து
பேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம்-கார்த்த
விரையார் நறும் துழாய் வீங்கோத மேனி
நிரையார மார்வனையே நின்று –79-
பதவுரை
கார்த்த–பசுமையான நிறமுள்ளதாய்
விரை ஆர்–பரிமளம் நிரம்பியதான
நறு துழாய்–செவ்வித் திருத்துழாய் மாலையையுடையவனும்
வீங்கு ஓதம் மேனி-பொங்குங்கடல் போன்ற திருமேனியை யுடையவனும்
நிரை ஆரம் மார்வனையே–ஒழுங்கான ஹாரங்களணிந்த திரு மார்பை யுடையவனுமான பெருமானையே
நின்று–நெஞ்சு நிலைத்து நின்று
ஓர்த்த மனத்தர் ஆய்–அநுஸந்திக்கின்ற மனமுடையாய்
ஐந்து அடக்கி–பஞ்சேந்திரியங்களையும் வென்று
ஆராய்ந்து–ஸம்ஸாரத்தின் கெடுதல்களை ஆராய்ந்து
பேர்த்தால்–ஸம்ஸாரத்தில் நின்றும் நெஞ்சைத் திருப்பிக் கொண்டால்
பிறப்பு ஏழும்–ஒன்றின்பின் ஒன்றாக நேரக்கூடிய ஜன்ம பரம்பரைகளை
போக்கலாம்–தொலைத்து விடலாம்.
கீழ்ப்பாட்டில் “ஓதுகதிமாயனையே யோரத்து“ என்றாரோ, இஃது எப்படி கூடும்?
நமது பஞ்சேந்திரியங்களும் சப்தாதி விஷய க்ராமங்களிலே சென்று கொண்டிருக்கையாலே
நாம் மேன்மேலும் மாறிமாறிப் பலபிறப்பும் பிறக்க வழி தேடுமவர்களாயிருக்கின்றோமேயன்றி
உஜ்ஜீவிக்கும் வழி தேடுமவர்களாயிருக்கின்றிலோமோ‘ என்ன,
தோளிணைமேலும், நன் மார்பின் மேலும், சுடர்முடிமேலும், தாளிணைமேலும் புனைந்த தண்ணந்துழாயுயம்மானது
திருமேனியின் போக்யத்தையிலும் அலங்காரங்களின் அழகிலும் நாம் நெஞ்சைச் செலுத்துவோமாயின்
நம்முடைய இந்திரியங்கள் பகவத் விஷணாநுபவத்திலே ஊன்றி சப்தாதி விஷயங்களின் வழிச் செல்லாமல்
ஸம்ஸாரத்தை யடியறுப்பதற்குப் பாங்காகும் என்கிறார்.
—————————————————————————————————————————————————————————–
தம்முடைய நெஞ்சு எம்பெருமான் திருவடிகளிற் சென்று உத்ஸாஹங் கொண்டிபடியே அருளிச் செய்கிறார்.
நின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள்
ஒன்றிய ஈர் ஐஞஞூருடன் துணிய வென்றிலங்கும்
ஆர் படுவான் நேமி யரவணையான் சேவடிக்கே
நேர் படுவான் தான் முயலும் நெஞ்சு –80-
பதவுரை
நின்று–(கூசாமல்) முன்னே வந்து நின்று
எதிர் ஆய–எதிரியாய்ப் போர் செய்ய வந்தவனும்
நிரைமணி தேர்–ஒழுங்காக அழுத்தின மணிகளை யுடைய தேரின் மேலேறி யுள்ளவனுமான
வாணன்–பாணாஸுரனுடைய
ஒன்றிய ஈர் ஐந்நூறு தோள்–அடியுரமுள்ள ஆயிரந்தோள்களும்
உடன் – ஏக காலத்தில்–
துணிய–அறுப்புண்டு விழும்படியாகக் காரியஞ் செய்து
வென்று–வெற்றி பெற்று
இலங்கும்–விளங்குகின்ற
ஆர்படு–கூர்மையை யுடைய
வான்–திவ்யமான
நேமி–திருவாழியாழ்வானை யுடையவனாய்
அரவு அணையான்–சேஷசாயியான எம்பெருமானுடைய
சே அடிக்கே–திருவடிகளிலே
நெஞ்சு தான்–(எனது) நெஞ்சு தானே
முயலும்–உத்ஸாஹப் படுகின்றது.
நின்று எதிராய – தாமஸ தெய்வத்தைப் பணிந்தவனாகையாலே ஸர்வேச்வரனென்று மதியாதே எதிரிட்டு நின்றானென்ப.
‘ஆர்படு‘ என்பதற்கு ‘கூர்மையை யுடைத்தான்‘ என்றும்
அரங்களை யுடைத்தான‘ என்றும் பொருள் நின்றானென்ப.
வான் நேமி -திவ்யமான திரு வாழி ஆழ்வான் –
———————————————————————————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –