Archive for the ‘Thirumangai Aazlvaar’ Category

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -10-9-புள்ளுருவாகி நள்ளிருள் வந்த பூதனை மாள இலங்கை-

April 8, 2015

திருத் தாயார் பாசுரமாகச் செல்கிறது இத் திரு மொழி –
பரத்வம் மேல் எல்லையில் இருந்து எனது பெண் பிள்ளையை உபேஷித்து இருப்பது முறையோ –
ஒவ் ஒரு பாசுரத்திலும் ஒரு பழ மொழியை எடுத்து உரைத்து சொல்லும்  முகத்தாலே

ஆழ்வாருடைய காதலின் மிகுதியையும் உபேஷியாமல் கடுகக் கைப் பற்றி ஆக வேணும் என்னுமத்தையும்
விண்ணப்பம் செய்கிறார்-

அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதீர்
ஈங்கோர் பெண் பால் பொருளோ எனும் இகழ்வோ இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
தெருளோம் அரவணையீர் இவள் மாமை சிதைக்கின்றதே -திரு விருத்தம் -33-பாசுரம் ஒப்பு நோக்கத் தக்கது –

——————————————

புள்ளுருவாகி நள்ளிருள் வந்த பூதனை மாள இலங்கை
ஒள்ளெரி மண்டி யுண்ணப் பணித்த ஊக்கமதனை   நினைந்தோ
கள்ளவிழ் கோதை காதலும் எங்கள் காரிகை மாதர் கருத்தும்
பிள்ளை தன கையில் கிண்ணமே யொக்கப் பேசுவது எந்தை பிரானே –10-9-1-

சிறுபிள்ளை கவர்ந்த கிண்ணத்தை வாங்குவதில் ஸ்ரமம் இல்லையே -இவளை அப்படியே அலஷியம் செய்து உள்ளாய் என்கிறாள்
கள்ளவிழ் கோதை காதலும்-இவள் காதலை நோக்கி நீ பதறி ஓடி வந்து இவளைக் கைப் பற்ற வேணும்
எங்கள் காரிகை மாதர் கருத்தும்-வகுத்த விஷயத்தில் காதல் கொண்ட இது நன்றே என்று உகக்காமல்
பழி சொல்லை நோக்கி யாகிலும் வந்து இவளைக் கைக் கொண்டு
பழிப்பவர்களின் முகத்தை பங்கம் செய்திட வேணும் –
இரண்டையும் அலஷியம் செய்து இருக்கிறாய்
நல்ல என் தோழீ நாகணை மிசை நம்பரர் செல்வர் பெரியர் சிறுமானிடவர் நாம் செய்வது என் -நாச்சியார் -10-10- என்னும்படி
உன்னுடைய பெருமைகளைப் பாராட்டியோ இப்படி அலஷியம் செய்து இருக்கிறது
பூதனையை முடித்த பெரு மிடுக்கன்  –  இராவாணனை  முடித்த மகா வீரன் -ஸ்ரீ கிருஷ்ண ஸ்ரீ ராமாவதார பராக்ரமங்களை
நினைத்து செருக்கி இருக்கிறாய் போலும்
புள்ளுருவாகி நள்ளிருள் வந்த பூதனை மாள என்றது மேலே சஞ்சரித்து குழந்தைகளை அனுங்கப் பண்ணும்
பறவைகள் யுண்டே -அப்படிப் பட்டவளாய் வந்தாள்
அன்றிக்கே புள்ளுருவாகி -ஹம்சமாகி செய்து அருளின செருக்கோ -என்றும் கொள்ளலாம்
ஊக்கம் -பரத்வம் -அஹங்காரம் -மிடுக்கு  –

—————————-

மன்றில் மலிந்து கூத்து வந்தாடி மால் விடை ஏழும் அடர்த்து ஆயர்
அன்று நடுங்க வா நிரை காத்த ஆண்மை கொலோ வறியேன் நான்
நின்ற பிரானே நீள் கடல் வண்ணா நீ யிவள் தன்னை நின் கோயில்
முன்றில் எழுந்த முருங்கையில் தேனா முன் கை வளை கவர்ந்தாயே -10-9-2-

நின்ற பிரானே -திருமலையில் நின்று அருளும் பிரானே –
குடக்கூத்தாடி ஸ்திரீ ரத்னங்களை மயக்கி அருளிய செருக்கோ
ஏழு ரிஷபங்களின் வலிமையை அடக்கி நப்பின்னை பிராட்டியை திரு மணம் புரிந்து அருளிய செருக்கோ
கோவர்த்தன கிரியை குடையாக பிடித்து ஆ நிரைகளை காத்த நமக்கு இவளை உபேஷித்தால் என்ன
குண ஹாநி வந்து விடும் என்ற எண்ணமோ
கையிலே வளைகள்  நிற்க மாட்டாதபடி துரும்பு போலே இளைக்கப்  பண்ணி யுள்ளாயே
கோயில் வாசலிலே உள்ள மரத்திலே தேனை கவருவது போலே இவள் வளைகளைக்  கவர்ந்து அருளினாயே  –

————————————————————–

ஆர்மலி யாழி சங்கோடு பற்றி ஆற்றலை யாற்றல் மிகுத்து
கார் முகில் வண்ணா  கஞ்சனை முன்னம் கடந்த நின் கடுந்திறல் தானோ
நேரிழை மாதை  நித்திலத் தொத்தை நெடுங்கடல் அமுதனை யாளை-
ஆரெழில் வண்ணா அங்கையில் வட்டாம் இவள் எனக் கருதுகின்றாயே –10-9-3-

இவளை ஒரு சரக்காக மதிக்காதே -உள்ளம் கையில் உள்ள கருப்பம் கட்டி போன்றவள் -என்ற எண்ணமோ –
கையில் இருந்த கறுப்புக் கட்டி -தின்னவுமாய் பொகடவுமாய் இருக்கும் இ றே –
அப்படியே நினைத்து இருக்கிறாயோ இவளையும் –
கைப்பட்ட பொருள்களிலே உபேஷை பிறக்குமே அது போலே என்றவாறே
ஆர் மலி யாழி-ஆர் -கூர்மை -ஆர் -அரங்கங்கள் –
ஆற்றலை ஆற்றல் மிகுத்து -பராக்ர்மத்தை ஆறுதல் மிகும் படி செய்தருளி –
யாற்றல் மிகுத்து -ஒரு ஜகது உபசம்ஹாரத்துக்கு போந்து இருக்கச் செய்தே கம்சன் அளவிலே யாம் படி யமைத்து –
கார் முகில் வண்ணா -ஆர் எழில் வண்ணா -இரண்டு விசேஷணங்கள் அவனுக்கு –
நேரிழை மாதை  நித்திலத் தொத்தை நெடுங்கடல் அமுதனை யாளை-மூன்று விசேஷணங்கள் இவளுக்கு
உன்னைக் காட்டிலும் வீறு பெற்றவள் -அஸி தேஷிணா-போலே
நம்பியைக் காண நங்கைக்கு ஆயிர நயனம் வேண்டும் -கொம்பினைக் காணும் தோறும் குரிசிற்கும் அன்னதேயாம் –
ஆகையால் உபேஷித்தல்  தகாது -என்கிறாள் –

————————————

மல்கிய தோளும் மானுரியதளும் உடையவர் தமக்குமோர் பாகம்
நல்கிய நலமோ நரகனைத் தொலைத்த  கரதலத்தது அமைதியின் கருத்தோ
அல்லியங்கோதை யணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய்
சொல்லியென் நம்பி இவளை நீ யுங்கள் தொண்டர் கைத் தண்டு என்றவாறே –10-9-4-

அணி நிறம் கொண்டு -விலஷணமான மேனி நிறத்தை அபஹரித்ததும் அன்றி
முன்னே வந்து நின்று போகே -உரு வெளிப்பாட்டாலே எப்போதும் கண் எதிரே தோற்றி புறம்பு போகிறாய் இல்லை
வ்ருஷே வ்ருஷே ச பஸ்யாமி சீர க்ருஷ்ணாஜி நாம்பரம் -மாரீசனுக்கு தோற்றினாப் போலே
எங்கனே நீர் முனிவது காண்–அங்கன் உருவெளிப்பாடா யுரைத்த தமிழ் மாறன் –
அஹங்காரியான ருத்ரனுக்கும் உடம்பு கொடுத்து அருளிய சீலத்தை நினைத்தோ  –
இவளை உபேஷிப்பது ஒரு அபகீர்த்தி யாகுமோ
நரகாசுரனை முடித்த மிடுக்குடைய திருக் கையை நினைத்தோ -பல்லாயிரம் தேவிமார் இருக்க இவள் ஒரு பொருளோ –
இவளை நீ யுங்கள் தொண்டர் கைத் தண்டு என்றவாறே – சாபமாநய சௌமித்ரே-என்று நினைத்த போதே
வாங்கிக் கார்யம் கொள்ளலாம் படி உரிய அடியார் கையில் ஆயுதத்தோபாதியாக நினைத்திரா நின்றாய் –

————————————————

செரு வழியாத மன்னர்கள் மாளத் தேர் வலம் கொண்டவர் செல்லும்
அரு வழி வான  மதர் படக் கண்ட ஆண்மை கொலோ வறியேன் நான்
திரு மொழி எங்கள் தே மலர்க் கோதை சீர்மையை நினைந்திலை யந்தோ
பெரு வழி நாவல் கனியினும் எளியள் இவள் எனப் பேசுகின்றாயே -10-9-5-

பார்த்தன் தன் சிலை வளைய திண் தேர் மேல் முன்னின்று மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய
நூற்றுவரும் பட்டழியச் செய்த மிடுக்கை நினைத்தோ –
தேர் வலம் கொண்டு -தேர் காலாலே பிரதிபஷங்களை உழக்கினான் அன்றோ –
பெரு வழி நாவல் கனியினும் எளியள் இவள் என-எட்டா நிலத்தில் இருந்தால் அபேஷை இருக்கும்
சர்வ சாதாரண வழியில் வீழ்ந்து கிடந்தால் பொருளாகத் தோற்றாது -இறே-
குனிந்து எடுக்கவுமாம் தவிரவுமாம்-

பேசுகின்றாயே என்றது கருதுகின்றாயே என்றபடி –

—————————————————————

அரக்கியர் ஆகம் புல்லென வில்லால் அணி மதிள் இலங்கையர் கோனை
செருக்கழித்து அமரர் பணிய முன்னின்ற சேவகமோ செய்ததின்று
முருக்கிதழ் வாய்ச்சி முன்கை வெண் சங்கம் கொண்டு முன்னே நின்று போகாய்
எறிக்கிலைக்காக வெறி  மழு வோச்சல் என் செய்வது எந்தை பிரானே  –10-9-6-

கை வளையை கழலச் செய்தாய்
மறந்து பிழைக்க ஒட்டாமல் உரு வெளிப்பாட்டாலே நலிகின்றாய்
தன்னடியே பழுத்து நெகிழ்ந்து  விழக் கடவதான எருக்கிலையை உதிர்க்க மழுப்படை வேண்டுமோ
இவளை நலிய இத்தனை பிரயாசப் பட வேண்டுமோ
இராவணனை வென்ற வீரச் செயலை அபலை இவள் இடம் காட்ட வேண்டுமோ
அரக்கியர் ஆகம் புல்லென ராஷச மாதர்கள் தாலி இழக்கும் படி –
செருக்கழித்து-செருக்கு அழித்து என்றும் செரு கழித்து போர் களத்திலே நிரசித்து –
அமரர் பணிய முன்னின்ற-
ராவண வத அநந்தரம்-பிராட்டி எழுந்து அருளி வர
பெருமாள் முகம் கொடாதே ஒழிய
தேவ ஜாதி வந்து -பவான் நாராயணோ தேவ -என்றும்
சீதா லஷ்மீர் பவான் விஷ்ணு -என்றும் உணர்த்த –
சேவகமோ செய்ததின்று –
முகம் கொடாதே நின்ற அச்சேவகம் போலே இருந்ததி-இச் சேவகமும் –

————————————————————————

ஆழி யம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச அலை கடலுலக முன்னாண்ட
பாழி யம் தோள் ஆயிரம் வீழப் படை மழுப் பற்றிய வலியோ
மாழை மென்னோக்கி மணி நிறம் கொண்டு வந்து  முன்னே நின்று போகாய்
கோழி வெண் முட்டைக்கு என் செய்வது எந்தாய் குறுந்தடி நெடுங்கடல் வண்ணா –10-9-7-

ஆழி யம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச அலை கடலுலக முன்னாண்ட
பாழி யம் தோள் ஆயிரம்-யுடைய -கார்த்த வீர்யார்ஜுனனை -நிரசித்த வீரத்தை இவள் இடம் காட்ட வேண்டுமோ
இவளை மாய்ப்பதற்கு இத்தனை பிரயாசம் வேண்டுமோ
தன்னடையே உடைந்து போகக் கூடிய கோழி முட்டையைத் தகர்க்க தடி வேண்டுமோ  –

———————————————————

பொருந்தலன் ஆகம் புள்ளு வந்தேற  வள்ளுகிரால் பிளந்து அன்று
பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த பெருமை கொலோ செய்ததின்று
பெரும் தடங்கண்ணி சுரும்புறு கோதை பெருமையை நினைந்திலை பேசில்
கருங்கடல் வண்ணா கவுள் கொண்ட நீராம் இவள் எனக் கருதுகின்றாயே –10-9-8-

பெரும் தடம் கண்ணி -தோள்கள் ஆயிரத்தாய்-விஸ்வரூபம் கொண்டு  அனுபவிக்கப் புக்காலும்
திரு மேனிப் பரப்பை எல்லாம் தனது கடைக்கண் நோக்கத்தில் ஒரு மூலையில் ஆழம் கால் படுத்த வல்லவள் –
ஆஸ்ரித வத்சலன் -ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் ஸ்ரீ ஸூக்ரீவ மகா ராஜர் திறத்தில் காட்டி அருளினாய் –
இவள் திறத்தில் இங்கனேயோ பலிக்க வேண்டும்
கபோலம் -கவுள்-என்று சிதைத்து யுள்ளது -நீரை உள்ளே இழுச்சிக்கைக்கும் கொப்பளிக்கவும் யுரித்தாய் இருக்கும் அன்றோ
பொருந்தலன் -மனம் பொருத்தம் அற்றவன் -பிரகாரன பலத்தால் இரணியனைச் சொன்னவாறு
பெரும் தகை -கம்பீர ஸ்வ பாவம் யுள்ள ஸூ க்ரீவன்-

—————————————————–

நீரழல் வானே நெடு நிலம் காலாய் நின்ற நின்நீர்மையை நினைந்தோ
சீர் கெழு கோதை என் அலது இலள் என்று அன்னதோர் தேற்றன்மை  தானோ
பார் கெழு பவ்வத் தாரமுதனைய பாவையைப் பாவம் செய்தேனுக்கு
ஆரேழல் ஓம்பும் அந்தணன் தோட்டமாக நின் மனத்து வைத்தாயே –10-9-9-

ஆரேழல் ஓம்பும் அந்தணன் தோட்டமாக –
அக்நி பரிசர்யை பண்ணவே காலம் போந்து இருக்கிற பிராமணன் தோட்டமாக நினைத்தாயே –
நின் மனத்து வைத்தாயே –
வேறேயும் ஒரு கர்த்தவ்யம் உண்டாகா நினைத்து இரா நின்றாய் –
அலஷ்யதா  புத்தி இருக்குமா போலே என்றவாறு
பஞ்ச பூதங்களும் நாம் இட்ட வழக்காக இருக்கும் பொழுது இவள் ஒரு சரக்கா என்ற நினைவோ
வேறு புகலாவார் இல்லாமையாலே நம் கையையே எதிர்பார்த்துக் கதறித் துடிக்கட்டும் என்ற நினைவோ-

———————————————————–

வேட்டத்தைக் கருதா தடியிணை வணங்கி மெய்ம்மை நின்று எம்பெருமானை
வாள் திறல் தானை மங்கையர் தலைவன் மான வேற்  கலியன் வாய் ஒலிகள்
தோட்டலர் பைந்தார்ச் சுடர் முடியானைப் பழ மொழியால் பணிந்து உரைத்த
பாட்டிவை பாடப் பத்திமை பெருகிச் சித்தமும் திருவோடு மிகுமே—10-9-10-

பரம பக்தி தலை எடுக்கப் பெற்று -நித்ய கைங்கர்ய சாம்ராஜ்ய லஷ்மியையும் பெறுவார்கள் –
திருவோடு மிகும் -கைங்கர்ய விருப்பமே திரு –
லஷ்மண லஷ்மி சம்பன்ன -அந்தரிஷிகத ஸ்ரீ மான் -ஸ து நாகவர ஸ்ரீ மான் –
வேட்டம் -ஆசைப் பெருக்கம்
-ஸ்வயம் பிரயோஜனமாக திருவடி பணியுமவர்கள்
மெய்ம்மை நிற்றல் -சாஸ்த்வதமான நித்ய விபூதியில் நித்ய கைங்கர்யம் ஆகிய பரம புருஷார்த்தம்-

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -10-8–காதில் கடிப்பிட்டுக் கலிங்கம் உடுத்துத்-

April 8, 2015

இத் திரு மொழி -புணர்ந்து பிரிந்து பிரிவாற்றாதாருடைய ஊடல் திறத்தை பேசி அனுபவிப்பதாக செல்லுகிறது –
சிறிது காலம் தாழ்ந்து வந்ததால் பிரணய ரோஷம் -மின்னிடை மடவார் -திருவாய்மொழி போலேயும்
ஏர்மலர் பூங்குழல் -பெருமாள் திருமொழி போலேயும்
ஆய்சிகளின் பாவனையில் முதிர்ந்து அனுபவித்து பேசுகிறார் —

————————————————————-

காதில் கடிப்பிட்டுக் கலிங்கம் உடுத்துத்
தாது நல்ல தண்ணம் துழாய் கொடு அணிந்து
போது மறுத்துப் புறமே வந்து நின்றீர்
ஏதுக்கு யிதுவென் யிது வென் யிது வென்னொ –10-8-1-

கேசவ நம்பீ உன்னைக் காது குத்த ஆய்ப்பாலர் பெண்டுகள் எல்லாம் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் -என்றும்
மகரக் குழை கொண்டு வைத்தேன்  வெய்யவே காதில் திரியை இடுவன் நீ வேண்டியது எல்லாம் தருவன்-என்றும்
இக்கடிப்பு இட்டால் இனிய பலாப் பழம் தந்து  சுண நன்றணி முலை யுண்ணத் தருவன்
நான் சோத்தம்பிரான் இங்கே வாராய் -என்றும்
சொல்லியும் குத்தாமல் பருவம் நிரம்பியவாறே பெண்டுகள்  -விடு காது அழகியார் -சுனை காது அழகியார் -என்று
பரிஹாசம் பண்ணத் தொடங்கவே காது குத்திக் கடிப்பிட்டு வரத் தொடங்கினான் –
கலிங்கம் யுடுத்து -கறுப்புத் திரு பரிவட்டம் -போர்வை  பொத்திக் கொண்டு பிறருக்குத் தெரியாமல் வந்தான்
மேல் பாட்டில் துவராடை யுடுத்து -முற்பட உடுத்ததுக்கு ஈடுபடாமையாலே அதுக்கு மேலே சிவப்பு நிறப் புடைவையை
சிமிழ்த்துக் கொண்டு வந்தான் ஆயிற்று
பிரணய ரிஷம் நீங்கிக் கடுக அனைத்துக் கொள்வாள் என்னும் விருப்பத்தாலே அலங்கரித்துக் கொண்டு வந்தான் ஆயிற்று –
தாது நல்ல தண்ணம் துழாய் கொடு அணிந்து –என்பதால் முகம் கொடுத்து பேச மாட்டிற்று இலள்
அதுவே ஹேதுவாக இவனும் விரைந்து செல்லாமல் கதவின் புறமே கவிழ்தலை இட்டு நிற்க வேண்டியவன் ஆனான்
போது மறுத்துப் புறமே வந்து நின்றீர் ஏதுக்கு யிதுவென் யிதுவென் யிதுவென்னொ-வெறும் காதே பரம போக்யமாக இருக்க
காதில் கடிப்பிடுவான் என் -இது என் –
பூணித் தொழுவினில் புக்கு புழுதி அளைந்த பொன்மேனியை காணப் பெரிதும் உகப்பார் நாங்களாய் இருக்க
கலிங்கம் யடுத்து அத திரு மேனி அழகை மறைப்பான் என் -இது என் –
சர்வகந்த என்கிறபடியே திருமேனி தானே பரிமள பிரசுரமாய் இருக்க திருத் துழாய் பரிமளம் ஏறிடுவான் என் –
இருந்தபடியே உகக்கிற எங்களுக்காக அலங்கரித்து வர வேண்டுமோ -ஏதுக்கு இது –
கொடும் பசி வேளையில் கிடையாத சோறு ஏதுக்கு
உம் அழகை நீரே கண்டு கொண்டு உம் உடம்பையும் நீரே தொட்டுக் கொண்டு நீரே மோந்து கொண்டு
நீரே கட்டிக் கொண்டு நீரே மகிழ்ந்து இரும்
எங்களுக்கு  ஏதுக்கு வேண்டா வேண்டா -கதவு அடைக்கிறாள் –

———————————————

துவராடையுடுத்து ஒரு செண்டு சிலுப்பி
கவராக முடித்துக் கலிக்கச்சுக் கட்டி
சுவரார் கதவின் புறமே வந்து நின்றீர்
இவராரிது வென் யிதுவென் யிதுவென்னொ–10-8-2-

கையிலே பூஞ்செண்டையும் சிலுப்பிக் கொண்டு வந்தான் ஆயிற்று
கவர் ஆக முடித்து -கவர் -இரண்டாக பிரிகை -மயிரைப் பகுந்து முடித்து -அலகலகாக வாருதல்
வலிய கச்சுப் பட்டையை அறையிலே இறுக்கிக் கட்டிக் கொண்டும் ஆற்று வெள்ளத்தில் இழிவாரைப் போலே வந்தான்
ஆய்சியினுடைய முகக் குறிப்பைக் கண்டவாறே சுவரார்ந்த கதவுக்கு புறம்பே நின்றான்
அத்தை அறிந்து அவள் சொல்ல அதுவே பற்றாசாக அணுகிச் சென்று மடி பிடிக்கப் புகுந்தான் –
புகவே -இவராரிது வென் யிது வென் யிது வென்னொ –

————————————————

கருளக் கொடி ஒன்றுடையீர் தனிப் பாகீர்
உருளச் சகடமது உறக்கில் நிமிர்த்தீர்
மருளைக் கொடு பாடி  வந்து இல்லம் புகுந்தீர்
இருளத்து இது என் இது என் இது வென்னோ-10-8-3-

நீர் பெரியீர் -நாங்கள் உனக்கு லஷியமோ
இப்படி குழைச் சரக்காக நினைத்து உபேஷிக்கிற நீர் எங்களை நெஞ்சிலும் இட்டு எண்ணாதே இருந்திடல் ஆகாதோ
பெண் பிறந்தார் எல்லாரும்  நஞ்சுண்டாரைப் போலே மோஹிக்கும் படியான பண்ணை நுணுங்கிக் கொண்டு
அபர ராத்ரியிலே இங்கு வந்து புகுந்தீரே -இது ஏதுக்கு போம் போம்
மருளைக் கொடு பாடி -பாடம் பிழை
மருள -வினையெச்சம்
கொடுபாடி -பாடிக் கொடு பாடிக் கொண்டு என்பதன் சிதைவு-

——————————————

நாமம் பலவுமுடை நாரண நம்பீ
தாமத் துளவம் மிக நாறிடுகின்றீர்
காமன் எனப்பாடி வந்து இல்லம் புகுந்தீர்
ஏமத்து இது என்  இது என் இது என்னோ -10-8-4-

நாமம் பலவுமுடை நாரண நம்பீ -பேராயிரம் யுடைய பீடுடையீர் பொருள் அன்று இங்கே  –
இன்னாளுக்கு சேஷ பூதன் -இன்னாளுக்கு சேஷ பூதன் -என்று நீ படைத்த பேருக்கு எல்லை உண்டோ – சொல்ல வேணுமோ
நீர் ஊர் பொது அல்லீரோ நீர் நிரபேஷர் அல்லீரோ –

நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர் -நாச்சியார் -4-11-எம்பார் அருளிச் செய்யும் ஸ்ரீ ஸூகதிகள் –
ஆய்ச்சிகளுக்கு நிறை புகழாவது கிருஷ்ணனை இன்னாள் நாலு பட்டினி கொண்டாள் –
இன்னாள் பத்து பட்டினி கொண்டாள் என்னும் புகழ் காணும் –
வாசுதேவன் வரவு பார்த்து கூர் மழை போலே பனிக்கு ஊதல் எய்தி  கூசி நடுங்கி யமுனை யாற்றில் வார் மணல் குன்றில் புலர நிற்க
இன்னம் என் கையகத்து தீங்கு ஒரு நாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே -பெருமாள் திரு -6-8-
அவர்கள் யுடைய தேக குணம் ஆத்ம குணம் பற்றி பட்டினி கிடப்பான் அவனும் –
இன்னாளுக்கு அடியான் இன்னாளுக்கு அடியான் என்று பெயர் பெற்றவன் –
தாமத் துளபம் மிக நாறிடுகின்றீர்-விரஹ அக்னியால் துளப மாலை கருகிப் போயிருக்க வேணுமே -இப்படி பரிமளிக்க பிரசக்தி யுண்டோ
ஏமத்து இதுவென் -ஏமம் -இரவுக்கு பெயர் -காவலுக்கும் பெயர்
கட்டுக் காவலுமான இடத்துக்கு ஏதுக்கு வந்து சேர்ந்தீர் -இரவிலே நீர் தேடி போக வேண்டிய இடம்
வேறாய் இருக்க இங்கே ஏதுக்கு வந்தீர் –

————————————————

சுற்றும் குழல் தாழச் சுரிகை அணைத்து
மற்றும் பல மா மணி பொன் கொடணிந்து
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர்
எற்றுக்கு இது என் இது என் இது  என்னோ –10-8-5-

இரண்டாம் பாட்டில் கவராக முடித்து -வந்தும் ஈடுபடக் காணாமையாலே
களி வண்டு எங்கும் கலந்தால் போலே கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல் மிளிர நின்று விளையாட -குழல்களைத் தாழ விட்டான்
சுரிகை -இடுப்பில் அழகுக்கு சொருகும் கத்தி -உகப்பாருக்கும் உகவாதாருக்கும் கருவி ஒன்றாயிற்று –
சத்ருக்களை இரு துண்டமாக விட்டு முடிக்கும் அனுகூலரை அழகாலே கொல்லும்-
மற்றும் பல ரத்ன பூஷணங்களையும் பொன் ஆபரணங்களையும் சாத்திக் கொண்டு வந்தீர்
முற்றத்தளவில் நின்று புன்முறுவலும் செய்தீர்-

———————————————-

ஆனாயரும் ஆநிரையும் அங்கு ஒழியக்
கூனாய தோர் கொற்ற  வில் ஓன்று கை ஏந்திப்
போனார் இருந்தாரையும் பார்த்துப் புகுதீர்
ஏனோர்கள் முன் இது என் இது என் இது என்னோ –10-8-6-

வேட்டையாடப் போவது போலே பாவனையில் வில் கையில் ஏந்தி
கள்ள விழி இட்டுப் பார்த்துக் கொண்டே வந்தீர்
அது கண்டு இவ் ஊர் ஓன்று புணர்க்கின்றதே -பெரியாழ்வார் -3-4-3-என்னும் படியான விரோதிகளின் கண் வட்டத்திலே
வீண் பழியை மாத்ரம் விளைப்பதான இவ்வருகை ஏதுக்கு-
இங்கே புகாதே எழுந்து அருளீர்-ஏனோர்கள் -பிரதிகூலர்கள் –

——————————————

மல்லே பொருத திரள் தோள் மணவாளீர்
அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தைச்
சொல்லாது ஒழியீர் சொன்ன போதினால் வாரீர்
எல்லே இது என் இது என் இது என்னோ–10-8-7-

உம்முடைய தோள்களை அணைக்க மல்லர் -முரட்டு ஆண்களே இட்டுப் பிறந்தவர்கள்
அவர்களை பொடி பண்ண வேண்டி பொருதேன் என்ன -அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தை –
நினைவு ஓன்று செயல் ஓன்று -செருப்பு வைத்து திருவடி தொழுவாரைப் போலே
சொன்ன போதினில் வாரீர் -ஊர்ப் பொதுவான நீர் ஏதுக்கு சமயம் குறிப்பிட்டு போவது
துடிக்க வைத்து விட்டு இருக்கவே சொல்லிச் சென்றீர் தாமதமாக வந்தீர் -பேச்சுக்கும் செயலுக்கும் சேர்த்தி இல்லையே
அல் -இரவு நேற்று இரவு என்றபடி-

——————————————–

புக்கு ஆடு அரவம் பிடித்து ஆட்டும் புனிதீர்
இக்காலங்கள் யாம் உமக்கு ஏதொன்றும் அல்லோம்
தக்கார் பலர் தேவிமார் சால யுடையீர்
எல்லே இது என் இது என் இது என்னோ –10-8-8-

காளியனை முடித்து அருளிய உம்முடைய மிடுக்குக்கு நாங்கள் இலக்கோ
உமக்கு நாங்கள் ஒரு சரக்கோ -தேவிமார் தக்கார் பலர் சால வுடையீர்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலம் நாங்கள்
மன்னு நரகன் தன்னை சூழ் போகி வளைத்து எறிந்து கன்னி மகளிர் தம்மை கவர்ந்த கடல் வண்ணர் அல்லீரோ
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பௌவம் ஏறி துவரை எல்லாரும் சூழ சிங்கா சனத்தே இருந்தானே கண்டார் உளர் -என்றும்
பதினாறாமாயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னுமதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் -என்றும்
மதுரம் ப்ராப்ய கோவிந்த சதம்  கோகுலமேஷ்யதி -நகர ஸ்திரீ கலாலாபமது ஸ்ரோத்ரேண பாச்யதி-
உன்னுடைய அபி நிவேசங்களை நாங்கள் அறியோமோ   –

—————————————–

ஆடி அசைந்து ஆய் மடவாரொடு நீ போய்க்
கூடிக் குரவை பிணை கோமளப் பிள்ளாய்
தேடித் திரு மா மகள் மண் மகள் நிற்ப
ஏடி இது என் இது என் இது என்னோ -10-8-9-

என் சாயத்தை வெளியிட வேண்டா என்று காலைப் பற்றிக் கொள்ள
நீ ஒருவருக்கும் மெய்யன் அல்ல -கடக்க நில்
கரு மலர்க் கூந்தல் ஒருத்தி தன்னைக் கடைக் கணித்து ஆங்கே ஒருத்தி தன் பால் மருவி மனம் வைத்து
மற்று ஒருத்திக்கு உரைத்து ஒரு பேதைக்கு பொய் குறித்து புரி குழல் மங்கை ஒருத்தி தன்னைப் புணர்த்தி
அவளுக்கும் மெய்யன் அல்லை மருது இறுத்தாய் உன் வளர்தியோடே வளர்கின்றதால்
உன் தன் மாயை தானே -பெருமாள் திருமொழி
குரவை புனைதல் -ஆய்ச்சிகள் யுடன் கை கொத்தாடுதல் -ராசக் கிரீடை என்றுமாம்
இவனை உள்ளே புகவிட்ட தோழியை அன்றோ பொடிய வேண்டும்
கோமளப் பிள்ளாய் இந்த வார்த்தையும் முகத்தைப் பார்த்து சொல்ல ஒண்ணாதே –
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடைதான் தருமேல் மிக நன்றே -நாச்சியார் -13-9-
பெருமையாக நினைத்திடுவானே-தோழி முகத்தை பார்த்து குறை வார்த்தையும் கூறினாள்-

தருண மந்திர க்ருத்வா–துரும்பை நடுவிலே இட்டு பிராட்டி பேசினால் போலே

——————————————–

அல்லிக் கமலக் கண்ணனை  யங்கோர் ஆய்ச்சி
எல்லிப் பொழுதூடிய ஊடல் திறத்தைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
சொல்லித் துதிப்பார் அவர் துக்கமிலரே -10-8-10-

அல்லிக் கமலக் கண்ணனை -பரமானந்தம் அவனுக்கு இத்தால் -காமம் புணர்தலின் ஊடல் இனிது
திரு உள்ளத்தில் ஹர்ஷம் திருக் கண்களில் புற வெள்ளம் இட்டமை தோன்றுமே
துக்கம் இன்றி இன்பமாக வாழப் பெறுவார்கள் -பலன் சொல்லித் தலைக் கட்டு அருளுகிறார்-

————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -10-7-மானமுடைத்து உங்கள் ஆயர் குல மதனால் பிறர் மக்கள் தம்மை-

April 7, 2015

ஸ்ரீ யபதி -ஸ்ரீ கிருஷ்ணனாய் திரு வவதரித்து வெண்ணெயும் பெண்களையும் ஒக்க  களவு செய்து
அருளிய சேஷ்டிதங்களை அனுபவிக்க இழிகிறார் –
அது தான் மகா பாரதமாய்ச் செல்லும் இறே
ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை சேற்றால் எறிந்தான் -என்று முறையிடுவாரும்
வளை துகில் கைக் கொண்டு காற்றில் கடியனாய் ஓடி அகம் புகுந்தான் என்று முறையிடுவாரும் –
மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம்மிடம் புக்கு கச்சோடு பட்டைக் கிழித்து காம்புதுகிலவை கீறி
நிச்சலும் தீம்புகள் செய்கின்றானே -என்று முறையிடுவாரும்
தொத்தார் பூங்குழலி கன்னி யொருத்தியைச் சோலைத் தடம் கொண்டு புக்கு முத்தார் கொங்கை
புணர்ந்து வந்தான் என்று முறையிடுவாரும்
திருவாய்ப்பாடியில் முழுதும் பேர் ஆரவாரமாய்ச் செல்லும் பருவம் இறே
ஊரில் உள்ளார் அடங்கலும் முறையிட  அவை கேட்டு யசோதை பிராட்டியார் சொல்லும் பாசுரமும் முறையிடுவார் பாசுரமுமாக
அவர்கள் அவர்கள் பாவனையாகவே தாம் பேசி அனுபவிக்கிறார் இத் திரு மொழியில் –
ஸ்ரீ கிருஷ்ணாவதார சேஷ்டிதங்கள் தவிர வேறு அவதார லவலேசமும் கலசாத திரு மொழியாய்ச் செல்லுகிறது –

———————————————–

மானமுடைத்து உங்கள் ஆயர் குல மதனால் பிறர் மக்கள் தம்மை
ஊனமுடையன செய்யப்  பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன்
நானும் உரைத்திலன் நந்தன் பணித்திலன் நங்கைகாள் நான் என் செய்கேன்
தானுமோர் கன்னியும் கீழை யகத்துத் தயிர் கடைகின்றான் போலும் –10-7-1-

அவனைத் தண்டிக்கும் வன்மை எனக்கு இல்லையே
குல மரியாதைக்கு இழுக்கு என்று பிரார்த்திக்கத் தான் முடியும்
நந்த கோபரும் வாய் விட்டுக் கண்டித்து அறியார்
கீழ் அண்டை அகத்தில் ஓர் இளம் பெண்ணுடன் உட்கார்ந்து அவளும் தானுமாக தயிர் கடைவதாகத் தெரிகிறது –
உங்கள் ஆயர் குலம் மானமுடைத்து -கேளார் ஆயர் குலத்தவர் இப்பழி கெட்டேன் வாழவில்லை -பெரியாழ்வார்
உரப்பகில்லேன் – அஞ்ச உரைப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும் -நாச்சியார் -உரப்புதல் -அரட்டுதல்
நானும் உரைத்திலேன்-கீழே உரப்பகில்லேன் -என்றதன் அனுவாதமே இதுவும் –

———————————————————

காலை எழுந்து கடைந்த விம்மோர் விற்கப் போகின்றேன் கண்டே போனேன்
மாலை நறுங்குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை
மேலை யகத்து நங்காய் வந்து காண்மின்கள் வெண்ணெயே யன்றிருந்த
பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ –10-7-2-

வெண்ணிறத் தோய் தயிர் தன்னை வெள்வரைப்பின் முன் எழுந்து கண் உறங்காதே இருந்து கடைய -பெரியாழ்வார் -3-8-9-
மோர் விற்கப் போக நடு வழியிலே கண்ணன் எதிர்பட –
வீட்டில் புகுந்து என்ன அனர்த்தம் செய்யப் போகிறானோ -சிந்தனை பண்ண
வந்து பார்த்த அளவில் வெண்ணெயும் காணோம் பத்துப் பானை பாலையும் காணோம்
நான் முறையிட்டு என்ன பலன் -தண்டிக்க கடமை பட்டவர்களே ஆணாட விட்டிட்டு இருக்க என் செய்வேன் –
வெறுத்து உரைக்கிறாள் ஒருத்தி
வெண்ணெயும் பாலையும் இழந்த வயிறு எரிச்சல் இருக்கச் செய்தேயும் மாலை நறுங்குஞ்சி
நந்தி மகன் -பரம போக்யமாகப் பேசுகிறாள்
தருனௌ ரூப சம்பன்னௌ-போலே வயிர உருக்கான வடிவு அழகு படுத்தும் பாடு
அரக்கியே அப்பாடு பட்டாள் -இங்கே பேசுவதோ இடைச்சி -பேசப் படுகிறவனோ கண்ணபிரான் –
வைய வந்த வாயாலே வாழ்த்த வேண்டி அல்லது இராதே –
மேலை யகத்து நங்காய் -யசோதை பிராட்டியை விளிக்கிறது-என்னவுமாம் –
வேறு ஒரு அயல் வீட்டு இடைச்சியை விளிக்கிறது என்னவுமாம்
நங்காய் -ஜாத்யேக வசனமாய்க் கொண்டு பன்மைப் பொருள் கொள்ளலாம் -காண்மின்கள் -என்ற பன்மை முற்று இருக்கையாலே
அன்றி
நங்காய் -ஒருத்தியை அழைத்தவாறே தீம்புகளைக் கேட்கும் ஆவலினால் பல பெண்கள் எழுந்தோடி வர –
வந்து காண்மின்கள் -என்று அவர்கள் எல்லாரையும் நோக்கிச் சொல்கிறாள் என்னவுமாம்

———————————————

தெள்ளியவாய்ச் சிறியான் நங்கைகாள் உறி மேலைத் தடா நிறைந்த
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கிட்டு
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள் கையெல்லாம் நெய் வயிறு
பிள்ளை பரமன்று இவ் வேழ்   உலகும் கொள்ளும் பேதையேன் என் செய்கேனோ –10-7-3-

யசோதை தானே முறையிட்டு பேசும் பாசுரம் இது
வெள்ளி மலை இருந்தால் போன்ற வெண்ணையை அள்ளி விழுங்கி விட்டு -ஒன்றும் அறியாதவன் போலே
உறங்குவதாக பாவனை செய்கிறான்
கழவு கற்றானே  ஒழிய கழவை   மறைக்க கற்றான் அல்லன் -கை எல்லாம் நெய்யாக இருக்கின்றதே
வாரி நின்றும் வயிறு நிரம்பின படி இல்லையே
பேதையேன் என் செய்கேன் -ஜீரணம் ஆக வேண்டுமே என்ற கவலையே –
தெள்ளியவாய்ச் சிறியான் -கண்ணுக்கு இருக்கிறபடியும் செயல் இருக்கிற படியும் காண்  –
கள்ளத் தனம் முகத்துக்கு தோற்றாமல் –
தெள்ளிய வா சிரியா -பாட பேதம் -நாளிளம் திங்களை கோள் விடுத்து வேயகம் பால் வெண்ணெய் தோடு யுண்ட –
திரு முத்துக்களின் ஒளி புறப்படவே அதையே கை விளக்காகக் கொண்டு வாரி விழுங்குவான்
தெள்ளியவா -தெளிவாக –சிரியா -சிரித்து என்றபடி –
முந்தின பாடமே வ்யாக்யானத்துக்குக் சேரும்
வாயிலோ கையிலோ வெண்ணெய் இருக்கக் கண்டால் அன்றோ களவு வெளிப்படும் -கையிலும் வாயிலும் இல்லாதபடி ஆக்கி
உடம்பிலே தடவிக் கொள்வானாம் -அதி மானுஷ ஸ்தவம்
இங்கு நெய்யை நக்கியும் உண்ணாமல் உடம்பிலும் தடவிக் கொள்ளாமல் கையிலே தோய வைத்துக் கொண்டு
இருப்பது மௌக்யத்திலும் மிக்க  மௌக்யம் –
என் செய்கேன் என் செய்கேனோ -அத்யாபகர்கள் இதிலும் ஓதுவார்கள் -யாப்புக்கு சேராது –

———————————————-

மைந்நம்பு வேற் கண் நல்லாள் முன்னம் பெற்றவளை வண்ண நன் மா மேனி
தன்னம்பி நம்பியும் இங்கே வளர்ந்தது அவனிவை செய்து அறியான்
பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம் பொதியறை போகின்றவா தவழ்ந்திட்டு
இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வில்லை என் செய்கேன் என் செய்கேனோ -10-7-4-

கள்வம் பொதி அறை -கள்ளத் தனத்துக்கு கொள்கலமாய் இருப்பவனான இக்கண்ணபிரான்
முன்னலோர் வெள்ளிப் பருமலைக் குட்டன் -சூது வஞ்சனை கள்வம் ஒன்றும் அறியானவன் –
மை நம்பு வேற்கண் நல்லாள் -தேவகி ஆகவுமாம் –ரோகிணி -ஆகவுமாம் -மையை விரும்புகின்ற கண்களை யுடையவள்
நம்பும் மேவும் நசையாகுமே
வளை வண்ண நன் மா மேனி -வளை கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல் -என்பார் கீழும் –
வெள்ளிப் பருமலைக் குட்டன் -என்பர் பெரியாழ்வார்
நம்பி நம்பியும் -நம்பி மூத்தபிரான் -தன் நம்பி நம்பியும் -என்றதை நம்பி தன் நம்பியும் -என்று அந்வயம்
இந் நம்பி நம்பியா நம்பியால் -என்ற பாடம் மறுக்கத் தக்கது -நம்பியா -என்றது நம்பியாக -என்றபடி
நிரபேஷனான இவன்–இவனாக–இவ்வூரிலே இடைச்சிகளுக்கு உஜ்ஜீவிக்க விரகு இல்லை –
இவன் இவனாக என்றது -இவன் இப்படி தீம்பில் குறையற்றவனாக இருக்கையாலே -என்றபடி –

——————–

தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன் தோழிமார் ஆரும் இல்லை
சந்த மலர்க் குழலாள் தனியே விளையாடும் இடம் குறுகி
பந்து பறித்துத் துகில் பற்றிக் கீறிப் படிறன் படிறு செய்யும்
நந்தன் மதலைக் கிங்கு என் கடவோம் நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ -10-7-5-

காரார் குழல் எடுத்துக் கட்டி கதிர் முலையை வாரார வீக்கி மணி மேகலை திருத்தி
ஆராரயில் வேற்கண் அஞ்சனத்தின் நீறணிந்து சீரார் செழும்  பந்து கொண்டு அடியா நின்றேன் நான் -சிறிய திரு மடல்
எந்த பெண் எங்கே தனியாக இருப்பாள் ஆராய்பவன்   அன்றோ
தீமைகளை விவரிக்க முடியாமல் படிறு செய்தான் என்றே சுருங்கச் சொல்லலாம் படி -படிறு -தகாத கார்யம் –

————————————-

மண் மகள் கேள்வன் மலர்மங்கை நாயகன் நந்தன் பெற்ற மதலை
அண்ணல் இலைக் குழலூதி நஞ்சேரிக்கே  அல்லிற்றான் வந்த பின்னை
கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மிக் கமலச் செவ்வாய் வெளுப்ப
என் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ –10-7-6-

கீழ்ப் பாட்டில் சம்போக உபக்ரம மாதரம் -இது சம்போகம் தலைக் கட்டினபடி
மணமகள் கேள்வன் மலர் மங்கை நாயகன் -இவனுக்கு என்ன கேடு -அகாலத்திலே நம்மை நம் மனையிலே
வந்து இப்பாடு படுத்த வேணுமோ
அன்றிக்கே கண்ணனைத் தாலாட்ட தாய் சொல்லும் வார்த்தைகளை அனுவதிக்கிறார்கள்
இரவில் வந்து இலைக் குழலூதி என் மகளைக் கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மி கமலச் செவ்வாய் வெளுப்ப
விவரணப் படுத்துவதும் தகுதியோ
அல்லிற்றான் பாடமே பொருந்தும் -குழலையும் ஊதிக் கொண்டு ராத்ரியிலே வந்த பின்னை
அல்லுற்றான் பாடம் பொருந்தாது-

————————————————-

ஆயிரம் கண்ணுடை  இந்திரனாருக்கு என்று ஆயர் விழவு எடுப்ப
பாசன நல்லன பண்டிகளால் புகப் பெய்தவதனை எல்லாம்
போயிருந்து அங்கு ஒரு பூத வடிவு கொண்டு உன் மகன் இன்று நங்காய்
மாயனதனை எல்லாம் முற்ற வாரி வளைத்துண்டு இருந்தான் போலும் –10-7-7-

நல்லன பாசனம் -நல்ல பாத்ரங்களால்
பண்டிகளால் -பல பல வண்டிகளால்
அசோதை பெரிய வயிறு தாரியான ஒரு பிள்ளையைப் பெற்றாயே -என்று ஏசுவது வெளிப்படை
கோவலரையும் கோ நிரைகளையும் காத்து அருளின பெருமான் அன்றோ
தனது சௌலப்யம்   காட்டி அருள செய்த சேஷ்டிதங்களை  பழித்தல் தகுதியோ -உள்ளுறை போரில்
அதனை எல்லாம் –இரண்டாம் அடியிலும் ஈற்று அடியிலும் இரட்டிப்பு
அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய் அளறுமாக திரட்டின திரளிலே
ஒரு சிறு அவிழும் மிச்சம் ஆகாதபடி அடங்கலும்- துற்றினான் என்பதைக் காட்டவே  –

—————————————————-

தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும் ஒரோ குடந்துற்றிடும் என்று
ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் நான் இதற்க்கு எள்கி யிவனை நங்காய்
சோத்தம்பிரான் இவை செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன்
பேய்ச்சி முலை யுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே–10-7-8-

இடைச்சிகள் எல்லாம் திரண்டு முறையிட்டால் நான் வருந்தாமல் இல்லை
கண்ணபிரானை தண்டிக்க முடியாதே
ஸ்தோத்ரம் பண்ணி வேண்டிக் கொள்ளத் தானே முடியும்
பூதனையை முலையுண்டு முடித்த பின்பு இவனைப் பொடிந்து ஓன்று சொல்ல அஞ்சிக்  கிடக்கின்றேன்-

—————————————————————————————————————————————————————————————————————————–

ஈடும் வலியும் உடைய இந்நம்பி பிறந்த வெழு திங்களில்
ஏடலர் கண்ணியினானை வளர்த்தி எமுனை நீராடப் போனேன்
சேடன் திரு மறு மார்பன் கிடந்தது திருவடியால் மலை போல்
ஓடும் சகடத்தைச் சாடிப் பின்னை உரப்புவது அஞ்சுவனே ———————–10-7-9-

பாலுக்கு அழுகிற பாவனையில் தன சிறிய திருவடிகளை மேலே தூக்கி உதைத்து அச் சகடாசுரனை சின்னா பின்னம் ஆக்கி அருளிய பிரான்
ஈடும் வலியும் யுடைய
ஈடு -தேக பலம்
வலி -எதிரிகளை அநாயாசமாக   அடர்க்கும் வலிமை -சௌர்யம் வீரம் பராக்கிரமம் போலே
ஏழு திங்களில் சாந்திர மாந ரீதி -மிக்க சிறிய பிராயத்தில்
ஏடலர் கண்ணியினானை வளர்த்தி -இதழ் விரிகின்ற மாலையை அணிந்த இப்பிள்ளையை கண் வளரச் செய்து விட்டு  –

சேடன் -மிக்க இளைய பிள்ளையாய்

——————————————————————————————————————————————————————————————————————-

அஞ்சுவன் சொல்லி யழைத்திட நங்கைகாள் ஆயிர நாழி நெய்யை
பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகள் உண்கின்று பாகம் தான் வையார்களே
கஞ்சன் கடியன் கறவெட்டு நாளில் என்கை வலத்தாது மில்லை
நெஞ்சத் திருப்பன செய்து வைத்தாய் நம்பீ என் செய்கேன் என் செய்கேனோ –10-7-10-

அஞ்சுவனே என்று சொன்னது திண்ணமே
ஆயிரம் பிள்ளைகளும் களவு கொள்ளும் விதம் நீர் அறியீரோ -பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகள் -பூனை போலே
ஓசைப்படாமல் புகுந்து களவு செய்கிறார்கள்
உண்கின்று-அமரர் கோன் அர்ச்சிக்கின்று -திருவாய் -10-2-5- போலே -உண்ணும் போது என்றவாறு
கஞ்சனுக்கு   தீர்வை கட்டும் நாளும் வந்ததே -கறவு -கப்பம்
வருஷத்துக்கு ஒரு முறை கப்பம் கட்டுவது ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் சொல்லப் படுகிறதே-

————————————————————–

அங்கனும் தீமைகள் செய்வார்களோ நம்பீ ஆயர் மட மக்களை
பங்கய நீர் குடைத்தாடு கின்றார்கள் பின்னே சென்று ஒளித்து இருந்து
அங்கவர் பூந்துகில் வாரிக் கொண்டிட்டு அரவு ஏர்  இடையர் இரப்ப
மங்கை நல்லீர் வந்து கொண்மின் என்று மரமேறி யிருந்தாய் போலும் -10-7-11-

அவன் அறியாத பொய்கை தேடி ஆய்ச்சிகள்  போக இருளன்ன மேனி அவர்கள் நிழலைப் பற்றிக் கொண்டு
முன்னமே போய்ச் சேர்ந்தான்
கோழி அழைப்பதன் முன்னம் -நாச்சியார் -திருமொழியின் சுருக்கம் இப்பாசுரம்
இருந்தாய் போலும் -தான் நேராக கண்டது இல்லையே –
அங்கனும் தீமைகள் செய்வார்களோ நம்பி என்னும்
பங்கய நீர் -தாமரைத் தடாகம்-

——————————————

அச்சம் தினைத்தனை யில்லை யப்பிள்ளைக்கு ஆண்மையும் சேவகமும்
உச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு உரைத்திலன் தான் இன்று போய்
பச்சிலைப் பூங்கடம்பு ஏறி விசை கொண்டு பாய்ந்து புக்கு ஆயிர வாய்
நச்சழற் பொய்கையில் நாகத்தினோடு பிணங்கி நீ வந்தாய் போலும் -10-7-12-

ஆண்மையும் சேவகமும் -சௌர்யமும் வீர்யமும்
நம்பி மூத்த பிரானை கூட்டிச் செல்லாமல் தன்னுடனும் வார்த்தை சொல்லாமல் மடுவுக்கு சென்று காளிய நிரசனம் பண்ணி அருளினான்
ஆயிர வாய் நாகத்தினோடு -சில இடங்களில் ஐந்தலை நாகம் -பயங்கரம் தோற்ற
கண்ணபிரான் திருவடி ஸ்பர்சத்தால் பச்சிலை பூம்  கடம்பு ஆயிற்று-

————————————————-

தம்பர மல்லன வாண்மைகளைத் தனியே நின்று தாம் செய்வரோ
எம்பெருமான் உன்னைப் பெற்ற வயிறுடையேன் இனி யான் என் செய்கேன்
அம்பரம் ஏழும் அதிரும் இடிகுரல் அங்கனற் செங்கண் உடை
வம்பவிழ்  கானத்து மால் விடையோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –10-7-13-

ரிஷப வடிவு கொண்ட அசுரன் அரிஷ்டாசுரன்-அரிஷ்ட நேமி என்றும் பெயர் சொல்லுவர் இந்த அசுரனுக்கு
நப்பின்னை பிராட்டிக்காக ஏழு ரிஷபங்களையும் அடக்கியதும் ஆகவுமாம்
தம்பரமல்லன-தன்னாலே தாங்க முடியாதவற்றை-

————————————————————–

அன்ன நடை மட வாய்ச்சி வயிறு அடித்து அஞ்ச அருவரை போல்
மன்னு கருங்களிற்று ஆர் உயிர் வவ்விய   மைந்தனை மா கடல் சூழ்
கன்னி நன் மா மதிள் மங்கையர் காவலன் காமரு சீர்க் கலிகன்றி
இன்னிசை மாலைகள் ஈரேழும் வல்லவர்க்கு ஏதும் இடர் இல்லையே —10-7-14-

குவலயா பீட நிரசனத்தை சொல்லி நிகமிக்கிறார்
இப்பதிகம் கற்று வல்லார்க்கு துன்பம் சிறிதும் இல்லையாம்
யசோதைப் பிராட்டியைப் போலே அனுபவத்தில் குறை இல்லாத இன்பமே  அதிகரிக்கப் பெறுவார்
தொல்லை இன்பம் பெறுவார்கள் என்றபடி-

————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -10-6-எங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே நர நாரணனாய் யுலகத் தற நூல்-

April 7, 2015

ஸ்ரீ யபதி அநந்த கல்யாண நிதி யுடையவன்
ஜ்ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் போல்வன மேன்மை பரமான திருக் கல்யாண குணங்கள்
வாத்சல்யம் சௌலப்யம் சௌசீல்யம் போல்வன எளிமை பரமான திருக் கல்யாண குணங்கள்
குணாநுபவம் செய்பவர் பலவகைகள்  உண்டே -பரத்வம் மட்டும் -சௌலப்யம் மட்டும் -இரண்டையும் சேர்த்து அனுபவிப்பவர்கள் உண்டே
எவ்வளவு மேன்மையானவன் இப்படி எளியவன் என்பாரை அநு கரித்து செல்லும் இத் திரு மொழி
மேல் 11 பத்திலும் மானமரும் மென்னோக்கி -இது போலே யுண்டு
பரத்வத்தை முன்னே பேசி சௌலப்யத்தை பின்னே பேசுகிறது அவ்விடத்தில்
இங்கே சௌலப்யம் முன்னே பேசி பரத்வம் பின்னே பேசும்
ஒருவர் பேச்சாகவே செல்லும் இத் திரு மொழி –
அங்கே இகழ்வாரும் புகழ்வாருமாக   இருவர் பேச்சாக செல்லும்-

இத் திரு மொழியிலும் ஈற்றடியை முன்னே கொண்டு சௌலப்யம் முன்னே சொல்லி
பரத்வம் பின்னே சொல்வதாக நிர்வஹிக்க குறை இல்லை
ஆனாலும் பரத்வத்தை பூர்வ பஷமாக்கி சௌலப்யத்தை சித்தாந்தம் ஆக்கி அனுபவிப்பதே ஆழ்வாருக்கு அபிமதம்
என்று தோன்ற பாசுரம் அமைந்த படியே அனுபவிப்பதே நன்று
அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான் யானார் என்று வெறுத்து போய் விடாமல் சௌலப்யம் கண்டு அணுகுமின்-
கற்றினம்  மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான்  காடு வாழ் சாதியையும் ஆகப் பெற்றான்
பற்றி  யுரலிடை யாப்பும் யுண்டான் பாவிகாள் யுங்களுக்கு ஏச்சுக் கொலோ –
இடைச்சி கட்டின கட்டை அவிழ்க்க முடியாதவனா நம்முடைய சம்சாரக் கட்டை அவிழ்க்க போகிறான் என்று
குழைச் சரக்காக நினைத்து விடாமல் மேன்மைக் குணங்கள் யுண்டே என்று உகந்து ஆஸ்ரியுமின்
என்பதாகவும் வெளியிடுதல் இத் திருமொழிக்கு பரமார்த்தமாகும்-

——————————-

எங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே நர நாரணனாய் யுலகத் தற நூல்
சிங்காமை விரித்தவன் எம்பெருமான் அதுவன்றியும் செஞ்சுடரும் நிலனும்
பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகப் பொன் மிடறத்தனை போது
அங்காந்தவன்  காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே-10-6-1-

தொடங்கும் பொழுதே -எங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே -என்ற அழகு என்னே
மேன்மையின் எல்லையில் நிற்கும் பராத்பரன் எளிமையின் எல்லையிலும் நின்று
அருளிக் காட்டுகின்றானே -என்ன கபடச் செயல் –
சீரிய சிங்காசனத்தில் வீற்று இருந்து ஆச்சார்ய பதம் செலுத்த வேண்டிய தான் தன்னை சிஷ்யனாக
ஆக்கிக் கொண்ட மாயம் -நர நாரணனாய்  –
அற நூல் சிங்காமை விரித்தவன் –வேத இதிஹாச புராணங்கள் -அர்த்த பஞ்சகத்தையும் கை இலங்கு
நெல்லிக் கனியாக காட்டி அருளும்
திரு அஷ்டாஷர மகா மந்த்ரத்தை வெளியீடு அருளினான் என்னவுமாம்
மேலும் சர்வ சம் ரஷகன் -திரு வயிற்றிலே வைத்து நோக்கி அருளி –
தாழ் குழலார் வைத்த தயிருண்ட பொன்வயிறு இவ்  ஏழ்   உலகும் யுண்டு  இடமுடைத்தால் சாழலே –
இங்கே நெருக்கிப் புக -என்பது – என் நாம் எங்கே தவறிப் போகிறோமோ என்று புகுகிற படி
அங்காத்தல் -வாய் திறத்தல்
அளை வெண்ணெய் -அளையும் வெண்ணெயும் -தயிரும் வெண்ணெயும் -என்றபடி –
அளையப் படுகிற வெண்ணெய் என்றுமாம் -அளைத்தல் -துழாவுதல் –

—————————————

குன்றொன்று மத்தா வரவமளவிக் குரை மா கடலைக் கடைந்திட்டு ஒரு கால்
நின்றுண்டை கொண்டோட்டி வன்கூன் நிமிர நினைந்த  பெருமான் அதுவன்றியும் முன்
நன்றுண்ட தொல் சீர் மகரக் கடலேழ்  மலையேழ்   உலகேழ்  ஒழியாமை  நம்பி
அன்றுண்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப் புண்டு இருந்தவனே -10-6-2-

நைக வக்ரை சந்தனம் கொடுத்து அதனால் கூனை நிமிர்த்தி அருளிய ஸ்ரீ கிருஷ்ணன்
கூனே சிதைய வுண்டை வில் நிறத்தில் தெறித்தாய் -திருவாய் -1-5-5-
கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன் உண்டை கொண்டரங்கவோட்டி
உள் மகிழ்ந்த நாதன் -திருச்சந்த விருத்தம்

——————————————————

உளைத்திட்டு எழுந்த மதுகைடவர்கள் உலப்பில் வலியாலவர்பால் வயிரம்
விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ அவர் நாள் ஒழித்த பெருமான் முன நாள்
வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போலே அவுணன் உடல் வள்ளுகிரால்
அளைந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே-10-6-3-

காய்ந்து இருளை மாற்றி கதிர் இலகு மா மணிகள் ஏய்ந்த பணக் கதிர் மேல் வெவ் வுயிர்ப்ப 
வாய்ந்த மது கைடபரும் வயிர் உருகி மாண்டார் -மூன்றாம் திருவந்தாதி-

————————————————

தளர்ந்திட்டு இமையோர் சரண் தா வெனத் தான் சரணாய் முரணாயவனை உகிரால்
பிளைந்திட்டு அமரர்க்கு அருள் செய்துகந்த பெருமான் திருமால் விரி நீருலகை
வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மா வலியை மண் கொள்ள வஞ்சித் தொரு மாண் குறளாய்
அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே -10-6-4-

ஸ்ரீ நரசிம்ஹமாய் ஆஸ்ரித விரோதிகளை ஒழித்த பிரானே
உலகு அளந்த உத்தமனே  அளை வெண்ணெய் அளந்தான்

——————————————————

நீண்டான் குறளாய் நெடு வானளவும் அடியார் படும் ஆழ்  துயராய வெல்லாம்
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது வன்றியும் முன்
வேண்டாமை நமன் தமர் என் தமரை வினவப் பெறுவார் அலர் என்று உலகேழ்
ஆண்டான் அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே -10-6-5-

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் –
அடியார் துயர் எல்லாம் தன்னடையே கழிந்து ஒழியுமாறு
திரு உள்ளம் பற்றி ஞான பக்தி விரக்திகளை வளரச் செய்து கொண்டு போந்து அவர்களை
நித்ய ஸூரி துல்யராக ஆக்கி வைக்கும் பெருமான் -இமையோர் அளவும் செல –
அன்றிக்கே ஓங்கி உலகு அளந்த சமயத்தில் நெடு வான் அளவும் நீண்டவனாகி இமையோர் அளவும்
செல்லும்படியாக திரு வடிகளை நீட்டி அருளிய பிரான்
தன்னடியார் -யமபடர் திறத்தில் -இறைஞ்சியும் சாதுவராய்ப் போதுமின்கள் என்றான் நமனும் தன தூதுவரை கூவிச் செவிக்கு –
என் தமரை நமன் தமர் வினவப் பெறுவார் அலர்-வினவுதல் தண்டனை செய்தலுக்கு பர்யாயம்
இப்படிப் பட்ட பராத்பரன் ஆய்சிகளால் கட்டுண்டு இருக்கும் எளிவு என்னே-

———————————————-

பழித்திட்ட வின்பப் பயன் பற்றறுத்துப் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம்
ஒழித்திட்ட வரைத் தனக்காக வல்ல பெருமான் திருமால் அதுவன்றியும் முன்
தெழித்திட்டு  எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத் தோள் அவை   யாயிரமும் மழுவால்
அழித்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியாரால் அளை வெண்ணெய் யுன்டாப்புண்டு இருந்தவனே –10-6-6-

ஹேய புருஷார்த்தங்களில் பற்று இன்றிக்கே உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் –

அத்யவசாயம் கொண்டு பணிந்து துதிக்க வல்லார்களை அத்தாணிச் சேவகத்துக்கு ஆளாக்கி அருள்வான் –
கார்த்த வீர்யார்ஜூனனை நிரசித்து அருளிய சக்தன் அசக்தியை அபி நயித்து ஆப்புண்டு இருக்கிறான் –

—————————————-

படைத்திட்டது இவ்வையம் உய்ய முன நாள் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம்
துடைத்திட்ட வரைத் தனக்காக வென்னத் தெளியா வரக்கர் திறல் போயவிய
மிடைத்திட்டு  எழுந்த குரங்கைப் படையா விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம கடலை
அடைத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே–10-6-7-

கரண களேபரங்களைக் கொடுத்து அருளி தன்னைப் பணிந்து ஏத்த வல்லவர்களுக்கு துயர்களைத் தொலைத்து
அந்தர கிங்கரர்களாக்கி அருளுபவன்
அடியார்களுக்கு தீங்கு இழைத்த ராஷசர்களை நிரசித்து அருளியவன்
இன்று அஜ்ஞனாயும்  அசக்தனுமாய்க் கொண்டு  இடைச்சி கையிலே கட்டுண்டு கிடக்கிறான் –

——————————————————–

நெறித்திட்ட   மென் கூழை நன்னேரிழையோடு உடனாய வில்லென்ன வல்லேயதனை
இருத்திட்டவள் இன்பம் அன்போடணைந்தித்திட்டு இளங் கொற்றவனாய்த் துளங்காத முந்நீர்
செறித்திட்டி லங்கை மலங்க வரக்கன் செழு நீண் முடி தோளோடு தாள் துணிய
அறுத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே -10-6-8-

பிராட்டியோடு ஒக்கப் பிறந்த தனுஸ்
பிரசித்தியை உடைத்தாய் மிடுக்கை உடைத்தாய் இருக்கிற அந்த வில்லை –
இவ்வில்லை முறித்தாருக்கு இவளைக் கொடுக்கக் கடவதாக நியமித்த படியாலே உடையனாய் -என்கிறது
அல்லன்ன வில்லேயதனை –
வல்லன்ன வில்லேயதனை –
வில்லென்ன வல்லேயதனை -பாட பேதங்கள்
அல் -என்று இருளாய் -இருண்ட வில் -வல்லென்ன -கடினமான –
இளம் கொற்றவனே -பன்னிரண்டு வருஷம் திரு அயோத்யையில் சீதா பிராட்டியுடன் போக ரசம் அனுபவித்தமை
அதற்கு மேலே கைகேயி வரம் வேண்ட கானகம் சென்று இராவணனை முடித்த வீரப் பாடுடையவன் கிடீர்
தனது பெருமை எல்லாம் ஒளித்து எளிமையைக் காட்டா நின்றான் –

——————————————————————-

சுரிந்திட்ட  செங்கேழ் உளைப் பொங்கரிமாத தொலையப் பிரியாது சென்று எய்தி எய்தாது
திரிந்திட்டு   இடம் கொண்ட அடங்காத தன் வாய் இரு கூறு செய்த பெருமான் முன நாள்
வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து மலை போல் உருவத்தோர் ராக்கதி மூக்கு
அரிந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே -10-6-9-

கேசியை நிரசித்து அருளியவனும்
சூர்பணகைக்கு அங்க பங்கம் செய்து அருளினவனும்
மராமரம் ஏழும் எய்து அருளினவனும்
இங்கே வெண்ணெய் களவுக்கு கட்டுண்டு கிடக்கிறான்
கேழ் -ஒளியும் நிறமும் –
பிடரி மயிர் சுருண்டு செந்நிறம் கொண்டதால் -சுரிந்திட்ட செங்கேழ் உளை
சேஷ்டிதங்கள் க்ரம மாறாடி அனுபவம் -திவ்ய சேஷ்டிதங்களை அனுபவித்தல் மாத்ரம் இங்கே விவஷிதம்-

——————————————————

நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் உறியில் தயிர் நெய்
அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டு இருந்த பெருமான் அடி மேல்
நன்றாய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை வல்லார்
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்து இமையோர்க்கும் அப்பால் செல வெய்துவாரே –10-6-10-

நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் உறியில் தயிர் நெய்
அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டு இருந்த பெருமான் அடி மேல்-என்பதால்
சௌலப்ய அனுபவத்திலே  ஆழ்வார் நோக்கம்
அபூர்ணரன் போலே வாரி வாரி விழுங்கி  -ஏச்சு பேச்சுக்கு சுணங்காமல் -ஆஸ்ரிதர் ஹஸ்த ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தாலே
தரிப்பு கொண்டவன் -மகா குணம் விளங்கும் –
சம்சாரிக துக்கங்களை அனுபவிக்கப் பெறார்கள் – பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார்
அந்தமில் பேரின்பத்தையும் அடைந்து ப்ரஹ்மாதிகள் குடி இருப்பும் பெறுவார் –

———————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -10-5-பூங்கோதை ஆய்ச்சி கடை வெண்ணெய் புக்கு உண்ண-

April 7, 2015

சப்பாணி கொட்டுதல் –சப்பாணி -சஹ பாணி -ஒரு கையுடன் கூட -பொருள் -ஒரு கையோடு மற்று ஒரு கை
வைத்து சேர்த்துக் கொட்டுதல் –
மாணிக்கக் கிண்கிணி யார்ப்ப -பெரியாழ்வார் திரு மொழி போலே –
யசோதா பாவனையிலே பேசி அருளுகிறார் இதிலும் –

————————————-

பூங்கோதை  ஆய்ச்சி கடை வெண்ணெய் புக்கு உண்ண
ஆங்கு அவள் ஆர்த்துப் புடைக்கப் புடையுண்டு
ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும்
ஒங்கோத வண்ணனே சப்பாணி யொளி மணி வண்ணனே சப்பாணி –10-5-1-

பூங்கோதை யாய்ச்சி-தன்னையே படர்க்கையாக சொல்லிக் கொள்கிறாள்  -சீதக்கடலில் இது போலே பல இடங்கள் உண்டே
கடை வெண்ணெய்-முக்காலத்துக்கும் பொது -கடையப்பட்ட -கடையப் படுகிற -கடையப் போகிற -வெண்ணெய்
பிரகரணத்துக்கு நிகழ் காலப் பொருள் சிறக்கும்
கடைந்து திரட்டிச்   சேமித்து வைத்தால் களவு காண்கை அன்றிக்கே–கடைகிற போதே நிழலிலே ஒதுங்கி
களவு கண்டாயிற்று அமுது செய்வது –
ஏங்கி இருந்து -பெரிய திரு நாளில் கள்ளர்களை சிறைப் படுத்தினால் போலே தீம்பு செய்ய முடியாதபடி
கட்டிப் போட்டு இருக்கிறாள் என்ற ஏக்கம் தான்
யசோதை தானும் ஆணாட விட்டிட்டு இருப்பள்
வண்ணக் கரும் குழல் மாதர் வந்து அலர் தூற்றிட பண்ணிப் பல செய்து இப்பாடி எங்கும் திரியாமே
கண்ணுக்கு இனியானை கானதரிடைக் கன்றின் பின் எண்ணற்கு அரியானை போக்கினேன் எல்லே பாவமே –
என்று வயிறு பிடிப்பவள்–சீராட்டத் தொடங்குவள் -அவனும் விளையாட்டில் கை வைக்கத் தொடங்குவான் -சிணுங்கி விளையாடும் –

————————————————

தாயர் மனங்கள் தடிப்பத் தயிர் நெய் யுண்
டே ஏய் எம்பிராக்கள்  இரு நிலத்து எங்கள் தம்
ஆயர் அழக வடிகள் அரவிந்த
வாயவனே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி-10-5-2-

நெய்யும் வெண்ணெயும் உண்டால் ஜரிக்குமோ என்று தாய்மார் நெஞ்சு துடிக்கும்படி களவு கண்டு புஜித்தும்
ஏய்-பொருத்தமான கார்யம் செய்ததாக நினைத்து இருக்கும் எம்பெருமானே
ஏய்தல் -பொருந்துதல் -நிறைதலுமாம்
அரவிந்தமாயவனே -பாட பேதம்
மால் வண்ணனே -மால் -கருமை -வ்யாமோஹம்-வ்யாமோஹமே வடிவு எடுத்தவன் என்னவுமாம்  –

———————————-

தாம் மோர் உருட்டித் தயிர் நெய் விழுந்கிட்டுத்
தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால்
தாம்மோதரக் கையால்  ஆர்க்கத் தழும்பு இருந்த
தாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரைக் கண்ணனே சப்பாணி -10-5-3-

மோர்குடத்தை வெறுத்து உருட்-மோரார் குடமுருட்டி -சிறிய திரு மடல்
ஒன்றும் அறியாதவன் போலே தவழ்  நடை இட்டு இருப்பான்
தாம்புகளால் கட்டியும் கையால் அடித்தும் நலிவுகளைப் பண்ண காய்ப்புக் காய்த்து இதுவே நிரூபகமாக தாமோதரன்
முதலடியில் தாவி -எனபது தா -என்று குறைந்து கிடக்கிறது
தாம் மோதரக் கையால் -அலங்க்ருதமான கையால் கட்ட –
தாம்மோதரக் கையால்-என்று பிரித்து மோதரத்தை
மோதிரம் என்று வ்யவஹரித்தது இத்தனை
படாகை கணறு -என்கிற இவற்றை பிடாகை கிணறு -என்கிறாப் போலே –
இப்படி வ்யாக்யானத்தில் புகுந்து இருக்கலாம்
ஆய்ச்சியர் தாம்பினால் ஆர்க்க -கையால் மோதர -என்பதே பழைய வியாக்யான ஸ்ரீ ஸூ க்திகள்-

——————————————————-

பெற்றார் தளை கழலப் பேர்ந்து அங்கு அயல் இடத்து
உற்றார் ஒருவரும் இன்றி உலகினில்
மற்றாரும் அஞ்சப் போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட
கற்றாயனே  கொட்டாய் சப்பாணி  கார் வண்ணனே கொட்டாய் சப்பாணி -10-5-4-

மக்கள் அறுவரை கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில் சிக்கென வந்து பிறந்து நின்றாய் –
தந்தை காலில் பெரு விலங்கு தாள விழ நள்ளிருள் கண் வந்த வெந்தை –
தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல்
பேர்ந்து -நாகபர்யாங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம்
அயலிடத்து உற்றார் -சமீப பந்து
பெற்றார் தளை கழல-அங்கு -வடமதுரையில் நின்றும் -அயலிடத்துப் பேர்ந்து
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர -திரு வாய்ப்பாடிக்கு சென்று என்னவுமாம் –
கன்று ஆயன் கற்றாயன்    –

————————————————————

சோத்தென நின்னைத் தொழுவன் வரம் தரப்
பேய்ச்சி  முலையுண்ட பிள்ளாய் பெரியன
ஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காகச்
சாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி தடம் கைகளால் கொட்டாய் சப்பாணி–10-5-5-

அப்பம் கொடுக்கும் ஆய்சிகளுக்காக சப்பாணி கொட்டாய்
ஆயிரம் சப்பாணி -ஆயிர கணக்கான ஆய்ச்சிகள் அப்பம் கொடுப்பதால்
அஞ்சலி பண்ணுபவர்கள் தாழ்ச்சி தோற்ற சோத்தம்
அவர்க்காகச் சாற்றி -நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால் -என்றது போலே –

—————————————————————–

கேவலம் அன்று உன் வயிறு வயிற்றுக்கு
நானவலப்பம் தருவன் கருவிளைப்
பூவலர் நீண் முடி நந்தன் தன் போரேறே
கோவலனே கொட்டாய் சப்பாணி குடமாடி கொட்டாய் சப்பாணி –10-5-6-

அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய் அளறும் அடங்க பொட்டத் துற்றின திரு வயிற்றுக்கு
அப்பப் பணியாற வகை ஓன்று போருமோ –
பேழை வயிற்று எம்பெருமான் நீ
அதற்கு ஏற்றவாறு அவலும் அப்பமும் தருவேன் -சப்பாணி கொட்டாய்
நான் வலவப்பம்-பாட பேதம் -தப்பானது
கருவிளைப் பூவலர் -கருவிளைப் பூவை அலர்விப்பவன் – தனது திருமேனி நிறத்தினால் விளங்கச் செய்பவன்-

————————————

புள்ளினை வாய் பிளந்து பூங்குருந்தம் சாய்த்துத்
துள்ளி விளையாடித் தூங்குறி வெண்ணெயை
அள்ளிய கையால் அடியேன் முலை நெருடும்
பிள்ளைப் பிரான் கொட்டாய் சப்பாணி பேய் முலை உண்டானே கொட்டாய் சப்பாணி –10-5-7-

அடியேன் முலை நெருடும் -பரத்வ சௌலப்யங்களில் தோற்று அடிமைப் பட்டமை
ஆழ்வார் சமாதியும் கூட கலசி என்றுமாம்
ஆழ்வார் சமாதியால் பின்புள்ள சேஷ்டிதங்களை சொல்லி சப்பாணி கொட்டச் சொல்வதும் பொருந்தும்-

———————————————-

யாயும் பிறரும் அறியாத யாமத்து
மாயா வலவைப்  பெண் வந்து முலை தரப்
பேய் என்று அவளைப் பிடித்து உயிர் உண்ட
வாயவனே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி -10-5-8-

தொட்டில் பருவத்திலே நடந்த சிறுச் சேவகம் என்பதால் பூதனா நிரசனத்தை மீண்டும்மீண்டும் அனுசந்தித்து
அவள் உயிரைக் கவர்ந்துண்ட பிரானே சப்பாணி கொட்டாய் என்கிறாள்
யாய் -மோய்-தாய்க்குப்  பெயர்
அலவை -கெட்டுப் போனவள் -பஹூ வாக ஜல்பிதம் பண்ணிக் கொண்டு வருபவள்
என் குட்டனே வா -என்முத்தமே வா -என் செல்லமே வா -போன்ற போலி பிதற்றல்களைச் சொல்லிக் கொண்டே வந்தாள் என்றபடி

————————————————-

கள்ளக் குழவியாய்க் காலால் சகடத்தை
தள்ளி உதைத்திட்டுத் தாயாய் வருவாளை
மெள்ளத் துடர்ந்து பிடித்து ஆர் உயிர் உண்ட
வள்ளலே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி –10-5-9-

பாலுக்கு அழுத பாவனையிலே சிறிய திருவடிகளை தூக்கி உதைத்து சகடத்தை சின்னா பின்னம் ஆக்கினாய் –
பூதனையை நிரசித்தாய்
அருமையான கார்யங்களை செய்து அருளின நீ எளிதான சப்பாணி கொட்டுதலையும் செய்து அருளுவாய்-

————————————————

காரார் புயல் கைக்கலி கன்றி மங்கையர் கோன்
பேராளன் நெஞ்சில் பிரியாது இடம் கொண்ட
சீராளா செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த்
தாராளா கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி –10-5-10-

நிகமன  பாசுரத்திலும் வழக்கத்துக்கு  மாறாக யசோதை பாவனை தொடருகிறது
என் நெஞ்சிலே போலேவே திரு மங்கை ஆழ்வார் திரு உள்ளத்திலும் குடி கொண்டு இருக்கும் திருமாலே
சப்பாணி கொட்ட வேணும் -என்று யசோதை பிராட்டி சொல்வதாகவே அமைந்துள்ளது
இப்படிப் பட்ட பிரார்த்தனையே பயன் என்று ஸூசிப்பித்து வேறு பயன் சொல்லாமல் தலைக் கட்டி அருளுகிறார்-

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -10-4-சந்த மலர்க் குழல் தாழத் தானுகந்தோடித் தனியே–

April 7, 2015

இனி ஸ்ரீ கிருஷ்ணாவதார அனுபவம்
த்வேஷத்தின் எல்லையில் நின்றவர்களின் பாசுரத்தால் ஸ்ரீ ராமாவதாரத்தை அனுபவித்தார் இது வரை –
பிரேமத்தின் எல்லையில் நின்றவர்களின் பாசுரத்தால் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தை அனுபவிக்கிறார் இப்போது –
பகவத் விஷயத்தில் த்வேஷம் ஆகவுமாம் -ப்ரீதி ஆகவுமாம் -ஏதேனும் ஒரு படியால் பகவத் குணங்களை
எடுத்து உரைக்கப் பெறில் அது உத்தேச்யமாகக் குறை இல்லை -என்பதே சூசகம்
ராஷசர் நிலையை ஏறிட்டுக் கொண்டதோடு யசோதை பிராட்டியுடைய நிலையை ஏறிட்டுக் கொண்டதோடு வாசி இல்லை
ஆழ்வார் யசோதை பிராட்டியாகவே பாவித்து முலை யுண்ண நிர்பந்திக்கும் படியாகச் செல்லுகிறது இத் திருமொழி –
பெரியாழ்வார் -அரவணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ணத் துயில் எழாயே -திரு மொழியோடு ஒக்கும்
உச்சிப் போதில் முலை யுண்ண அழைத்தது அத் திருமொழி –
அந்தியம் போதிலே முலை யுண்ண அழைக்கிறது இத் திரு மொழியில் -எனபது வாசி –

——————————————-

சந்த மலர்க் குழல் தாழத் தானுகந்தோடித் தனியே
வந்து என் முலைத் தடம் தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து
நந்தன் பெறப் பெற்ற நம்பி நானுகந்து உண்ணும் அமுதே
எந்தை பெருமானே உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே -10-4-1-

சந்த மலர்க் குழல் -என்பதால்-செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி எண்பகர் பூவும்
கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா –
என்று ஏற்கனவே திருக் குழலிலே சூட்டி இருக்கின்றாள் –
குழல் தாழ வர வேணும் என்றது தன்னைப் பேணாதே -ஓடி வர வேணும்
தன்னேராயிரம் பிள்ளைகள் உடன் விளையாடுகிறான் ஆகையாலே அவர்களையும் பலராமனையும்
விட்டு தனியே வர வேணும் -என்கிறாள்
அவன் தானே பிடித்து வாயில் மடித்து உண்ணப் பெறில் அதிலே ஒரு போக்யாதிசயம் கண்டவள் –
முலைத் தடம் தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து -என்கிறாள் –

நந்தன் பெறப் பெற்ற நம்பி -பெற்ற நம்பி -என்னாமல் -பெறப் பெற்ற நம்பி -என்றது அலாப்ய லாபம்
நந்தன் -பெயரிலே ஆனந்தம் -நிர்ஹேதுகமாக விஷயீ காரத்துக்கு இலக்கான ஏற்றம்
தனக்குக் கிடையாத பிறப்பைப் பெற்றானே –தான் வேண்டித் தேவர் இரக்க -என்றபடி
நான் உகந்து உண்ணும் அமுதே -உப்புச் சாறு இல்லையே -அமுதிலும் ஆற்ற இனிய அமுதம் அன்றோ
அப்படிப் பட்ட அமுதுக்கு அமுதூட்டப் பாரிக்கின்றாள்
அம்மம்  உண்ணத் துயில் எழாயே -உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -போலே
சேமம் -ஷேமம்-பிரபுகளுக்கு காவலோடு வரும் சோறு -சேமத்தளிகை-என வழங்கப்படும் –

————————————

வங்கமறி கடல் வண்ணா  மா முகிலே ஒக்கு நம்பி
செங்கண் நெடிய திருவே செங்கமலம் புரை வாயா
கொங்கை சுரந்திட யுன்னைக் கூவியும் காணாது இருந்தேன்
எங்கிருந்து ஆயர் தங்களோடு என் விளையாடுகின்றாயே–10-4-2-

கடல் போலேயும் காள மேகம் போலேயும் விளங்குபவனே –
அவயவ சோபை ஒரு தட்டும் -கண் அழகு ஒரு தட்டும்
கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப் பெரியவாய திருக் கண்களை யுடையவன் அன்றோ
திருவுக்கும் திருவாகிய செல்வன்
செங்கமலப் பூ போன்ற திரு வாயை யுடையவனே
கூவி அழைத்தும் வாராது இருக்கிறாயே
இதுவா விளையாட்டுக்கு சமயம் –

—————————————————

திருவில் பொலிந்த எழிலார் ஆயர் தம் பிள்ளைகளோடு
தெருவில் திளைக்கின்ற நம்பீ செய்கின்ற தீமைகள் கண்டிட்டு
உருகி என் கொங்கையின் தீம் பால் ஓட்டந்து பாய்ந்திடுகின்ற
மருவிக் குடங்கால் இருந்து  வாய் முலை உண்ண நீ வாராய்–10-4-3-

தன்னேராயிரம் பிள்ளைகளுடன் திரு வீதியிலே
கன்றுகளோடே   செவியில் கட்டெறும்பு பிடித்து இடுவதும் –
இளம்பிள்ளை கிள்ளி எழுப்பி கண்ணைப் புரட்டி விழிப்பதும் -விளையாட
சீறாமல் -அஞ்ச உரைப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டு  இருக்கும்
உள் மகிழ்ந்து அந்த மகிழ்ச்சியினால் இன்னமுதம் விஞ்சி பால் சுரக்கப் பெற்று -அந்த நிலையை வாய் விட்டுச் சொல்லி
என் குடம் காலில் இருந்து பாலுண்ண வாராய் -என்கிறாள் –
திருவில் பொலிந்த எழிலார் -தன்னுடைய அழகுக்கு தகுதியான பிள்ளைகள்
தீமைகள் கண்டித்து உருகி பிரேமத்தால் ஏற்கனவே பெருகின பல தீமைகள் செய்யும் படிகளைக் கண்டு
உள்ளுருகி வெள்ளம் இடுகின்றது –
தீம்பால் -மதுரமான பால்
ஓட்டந்து -ஓட்டம் தந்து -பிரவஹித்தலைச் சொன்னபடி –

————————————————-

மக்கள் பெறு தவம் போலும் வையத்து வாழும் மடவார்
மக்கள் பிறர் கண்ணுக்கு ஒக்கும் முதல்வா மதக் களிறன்னாய்
செக்கர் இளம்பிறை தன்னை வாங்கி நின் கையில் தருவன்
ஒக்கலை மேல் இருந்து அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய் –10-4-4-

வையத்து வாழும் மடவார் -பிறர் மக்கள்  கண்ணுக்கு -மக்கள் பெறு தவம்-ஒக்கும் முதல்வா -என்று அந்வயம்-
போலும் -அசை சொல்
திவ்ய ஸூந்தர மங்கள விக்ரஹம் படைத்தவனே
மதக் களிறன்னாய்-யானை போலே நடக்கும் நடை நெஞ்சைக் கவருமே
செக்கர் இளம்பிறை தன்னை வாங்கி நின் கையில் தருவன்
சந்த மாமா வா வா -அழைத்து குழந்தைக்கு சொல்வதும் இயற்க்கை
ஸ்ரீ கிருஷ்ணன் இந்த விருப்பத்தையும் கொண்டு இருந்தான் -தன் முகத்து சுட்டி -பெரியாழ்வார் -1-4- போலே-

————————————-

மைத்த கருங்குஞ்சி மைந்தா மா மருதூடு நடந்தாய்
வித்தகனே விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா
இத்தனை போதன்றி எந்தன் கொங்கை சுரந்து இருக்ககில்லா
உத்தமனே அம்மம் உண்ணாய் யுலகளந்தாய் அம்மம் உண்ணாயே –10-4-5-

நீ உத்தமன் அன்றோ
உனது நோவைக் காட்டிலும் தாயின் நோயை  அறியுமவன் அன்றோ –
உலகு அளந்தாய் -யாருமே அபேஷிக்காமல் இருக்க நீயே உலகை அளந்தாயே
நான் அபேஷிப்பதும் உனக்கு மிகை அன்றோ
விகிர்தா -விலஷணனே
வித்தகன் -ஆச்சர்யப் பட்ட குண சேஷ்டிதங்களை யுடையவன்-

விரையாதே வெண்ணெய் விழுங்கும் -ஆரப் பொறுத்து மெதுவாகச் சென்று வாரி விழுங்கு வானாம்

—————————————–

பிள்ளைகள் செய்வன செய்யாய் பேசில் பெரிதும் வலியை
கள்ள மனத்தில் உடையைக் காணவே தீமைகள் செய்தி
உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற
பள்ளிக் குறிப்புச் செய்யாதே பாலமுது உண்ண நீ வாராய் –10-4-6-

பல்லாயிரவர் இவ் ஊரில்  தீமைகள் செய்வார் -இருந்தாலும் நீ செய்கிற தீம்புகள் விலஷணம் ஆனவை
மிடுக்குடையாய் நீ
கள்ள நெஞ்சன் –
சிஷிக்க நினைப்பாரும் கண்டு வியக்கும் படி தீமைகள் செய்கிறாய்
தீமைகளைக் காணவே ஹர்ஷம் மிக்கு முலை வழிய  தீம் பால் பெருக
நீயோ முலை உண்ணாமல் கண்கள் சிவப்பது -மூரி நிமிர்ப்பது -கொட்டாவி கொள்வது –
உறக்கம் குறிகளைக் காட்டிக் கொண்டு இருக்கிறாய்
நீ செய்யும் தீமைகளை பாசுரம்  இட்டுச் சொல்ல முடியாமல் -பிள்ளைகள் செய்வன செய்யாய் -என்றும்
பேசில் பெரிதும் வலியை -என்றும் சொல்லுகிறார்கள் –

————————————————–

தன் மகனாக வன் பேய்ச்சி தான் முலை யுண்ணக் கொடுக்க
வன் மகனாய் அவள் ஆவி வாங்கி முலை யுண்ட நம்பீ
நன் மகள் ஆய் மகளோடு நானில மங்கை மணாளா
என் மகனே அம்மம் உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே –10-4-7-

உன்னைக் கண்ட பின்பும் நெஞ்சு நெகிழாத வன்மை யுடைய பூதனை
நப்பின்னைப் பிராட்டிக்கும் பூமிப் பிராட்டிக்கும் வல்லபன்
நன் மகள் -ஸ்ரீ மகா லஷ்மி என்னவுமாம்
என் மகனே -சௌலப்யத்தையே பற்றாசாகக் கொண்டு பிரார்த்திக்கிறேன்-

————————————————-

உந்தம் அடிகள் முனிவர் உன்னை நான் என் கையில் கோலால்
நொந்திட மோதவும் கில்லேன் உங்கள்  தம் ஆநிரை எல்லாம்
வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண
அந்தியம்போது அங்கு நில்லேல் ஆழி யங்கையனே வாராய் –10-4-8-

அஞ்ச யுரைப்பாள்  அசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும் -நாச் -3-8-
இவளைக் கண்டால் தீம்பு  பத்தாக பணைக்கும்
உந்தம் அடிகள் சீறுவர் முனிவர்
மாலைப் பொழுதில் துர்தேவதைகள் யுண்டே -கண் பட்டால் என்னாகும்
அஞ்சாதே அம்மா கையிலே திரு ஆழி யுண்டே என்ன
ஆழி கொண்டு யுன்னை எறியும் ஐ யுற வில்லை காண் வாழ வுறுதியேல்
மா மதி  மகிழ்ந்தோடி வா –பெரியாழ்வார் -1-4-9-என்று சொல்லி இருக்கிறாயே
ஆழியங்கையனே வாராய் -என்கிறாள் -திவ்ய ஆயுத  சேர்த்திக்கு
பல்லாண்டு -வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு -என்னுமவர்கள்
இதில் அம்மம் உண்ண -சொல்ல வில்லை கீழ் பாசுரங்கள் போலே -வாராய் -அவத்யம் விளையாத படி
அவ்விடம் விட்டு வந்தாலே போதும் என்றபடி-

——————————————————

பெற்றம் தலைவன் என் கோமான் பேர் அருளாளன் மதலாய்
சுற்றக் குழாத்து இளங்கோவே தோன்றிய தொல் புகழாளா
கற்றினம் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே
எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே எம்பெருமான் இருந்தாயே-10-4-9-

அவன் மேல் விழுந்து வந்து முலை யுண்ண புகழ்ந்து பேசுகிறாள்
பசுக்களுக்குத் தலைவனே -ரஷகனே –
அவற்றில் வாசி அற்ற எங்களுக்கும் ரஷகனே
பேர் அருளாளன் மதலாய்  -பசும் புல்லில் நடந்தாலும் தரையில் காலூன்றாதே எந்த ஜந்துக்கு என் வருமோ –
கண்ணபிரான் திருக் குமாரனாக வரும் வரையில்
பின்பு தான் கூர் வேல் கொடும் தொழிலன் ஆனான்
முன்னைய நிலை பற்றி பேர் அருளாளன் -காதில் தோடு கழற்றினாலும் தோடு இட்ட காது-என்னலாம் இறே
சுற்றக் குழாத்து இளங்கோவே -வான் இளவரசு வைகுண்ட குட்டன் -இளவரசாக குலாவப் படுபவன்
தோன்றிய தொல் புகழாலா-தாய் தந்தையர் சொல் கேட்பவன் என்றி பண்டே ஸ்ரீ ராமாவதாரத்தில்
அனுஷ்டித்து காட்டி அருளி புகழ் பெற்றவனே
நான் அழைக்க வந்து முலை உண்ணா விடில் அதற்கும் அவத்யம் விளையுமே
கானம்  தோறும் கற்றினம் மறித்து திரிந்த களிறே-காடுகளூடு போய் கன்றுகள் மேய்த்து
மறியோடிய விடாய் தீர நீ முலை யுண்ண வேணும்
நான் தரிப்பதற்கும் முலை யுண்ண வேணும் –

———————————————

இம்மை இடர் கெட வேண்டி ஏந்து எழில் தோள் கலிகன்றி
செம்மைப் பனுவல் நூல் கொண்டு செங்கண் நெடியவன் தன்னை
அம்மம் உண் என்று உரைக்கின்ற  பாடல் இவை ஐந்தும் ஐந்தும்
மெய்ம்மை மனத்து வைத்து ஏத்த விண்ணவர் ஆகலுமாமே –10-4-10-

மெய் அன்புடன் அனுசந்திப்பவர்கள் நித்ய சூரிகளோடே ஒக்கும் படியான தரம் பெறுவார்
இம்மை இடர் கெட வேண்டி ஏந்து எழில் தோள் கலிகன்றி –
இவள் முலை கொடுத்து அல்லது தரியாதாப் போலே
கவி பாடி அல்லது தரியாதாராய் பாடின கவி யாயிற்று –
மிக்க எழிலை உடைத்தான தோளை உடைய ஆழ்வார் –

————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -10-3-ஏத்துகின்றோம் நாத்தழும்ப இராமன் திருநாமம்-

April 6, 2015

கீழ் திரு மொழி போலே இத் திரு மொழியும் இலங்கை அரக்கர்கள் தோல்விக்கு ஈடாக ஆடுவதொரு கூத்து –
குழ மணி தூரம் –
அக்கூத்தை ஆடும் அரக்கர்களின் நிலைமையிலே நின்று ஸ்ரீ ராமபிரானின்  விஜயத்தை பேசி அனுபவிக்கிறார் —

————————————————-

ஏத்துகின்றோம் நாத்தழும்ப இராமன் திருநாமம்
சோத்த நம்பி சுக்ரீவா யும்மைத் தொழுகின்றோம்
வார்த்தை பேசீர் எம்மை யுங்கள் வானரம் கொல்லாமே
கூத்தர் போலே ஆடுகின்றோம் குழமணி தூரமே  –10-3-1-

பாசுரம் தொடங்கும் பொழுதே ஏத்துகின்றோம் நாத் தளும்ப இராமன் திரு நாமம் -அழகாய் என் சொல்வோம்
ராமோ ராமோ ராம இதி பிரஜா நாம பவன் கதா -ராம பூதம் ஜகத்பூத் ராமே ராஜ்யம் பிரசாசதி –
இலங்கையும் ஸ்ரீ  ராம நாமமயம் ஆயிற்றே
வார்த்தை பேசீர் -நீர் எங்களுடன் அனுகூல வார்த்தை அருள வேணும்
அந்தரங்கர் என்று நினைத்து வானர முதலிகள் அனுகூலிப்பார்கள் அன்றோ
குரங்குகள் யுடன் வார்த்தை அருளிச் செய்ய வேணும் என்றுமாம்
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சரணம் புகுந்த வேளையில் இடையூறு   செய்தவர்களில் தலைவர் ஸூ க்ரீவ மகா ராஜர
என்பதால் அவனையே கால் கட்டுகிறார்கள்-

———————————————–

எம்பிரானே என்னை ஆள்வா என்று என்று அலற்றாதே
அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது இந்த்ரஜித் அழிந்தான்
நம்பி அனுமா சுக்ரீவா வங்கதனே நளனே
கும்பகர்ணன் பட்டுப் போனான்  குழமணி தூரமே –10-3-2-

அனுமான் ஸூக்ரீவன் அங்கதன் நளன்-நால்வரையும் சேர்த்து பேசுகிறார்கள்
எம்பிரானே என்னை ஆள்வாய் -என்று சொல்வது பிராப்தமாய் இருக்க செய்ய மாட்டாதே
அம்புக்கு இலக்காகி மாண்டனர்-

———————————————

ஞாலம் ஆளும் உங்கள் கோமான் எங்கள் இராவணற்கு
காலனாகி வந்தவா கண்டு அஞ்சிக் கருமுகில் போல்
நீலன் வாழ்க சுடேணன் வாழ்க வங்கதன் வாழ்க என்று
கோலமாக வாடுகின்றோம் குழமணி தூரமே –10-3-3-

உங்களுக்கு  மங்களா சாசனம் செய்வதையே யாத்ரையாக கொண்டோம்
நீலனுக்கு பல்லாண்டு -ஸூ ஷேனனுக்கு பல்லாண்டு -அங்கதனுக்குப் பல்லாண்டு -என்கிறார்கள்
வாலிக்கு மாமனார் ஸூ ஷேனன் –

——————————————-

மணங்கள் நாறும் வார் குழலார் மாதர்கள் ஆதாரத்தைப்
புணர்ந்த சிந்தைப் புன்மையாளன் பொன்ற வரிசிலையால்
கணங்கள் யுண்ண வாளியாண்ட காவலனுக்கு இளையோன்
குணங்கள் பாடி யாடுகின்றோம் குழமணி தூரமே –10-3-4-

இளைய பெருமாள் திருக் குணங்களைப் பாடி குழ மணி தூரம் ஆடுகின்றோம்
கணம் -கழுகு போன்ற பறவைகள் -பிசாசு கட்கும் பெயர்-

——————————————–

வென்றி தந்தோம் மானம் வேண்டோம் தானம் எமக்காக
இன்று தம்மின் எங்கள் வாணாள் எம்பெருமான் தமர்காள்
நின்று காணீர் கண்கள் ஆர நீர் எம்மைக் கொல்லாதே
குன்று போலே ஆடுகின்றோம் குழ மணி தூரமே –10-3-5-

மானம் வேண்டாம் -அஹங்காரத்தைக் கை விட்டோம்
எங்கள் ஜீவனம் நீங்கள் இட்ட வழக்கு -ஆயுஸை தாரை வார்த்து தத்தம் செய்து அருளுவீர்
நீங்கள் கண் படைத்த பிரயோஜனத்தை நாங்கள் ஆடும் இந்த கூத்தை காண வேண்டும் அதற்க்கு ஜீவனம் வேண்டுமே
இந்த கூத்தை கண்ட பின் இரக்கம் வந்து கொள்ளாமல் விடுவீர்கள்
குன்று போலே ஆடுகின்றோம் -குன்று ஆடாதே -உருவத்துக்கும் அணி வகுத்து நிற்கும் நிலைமைக்கும் குன்று உவமை-

——————————————————

கல்லின் முந்நீர் மாற்றி  வந்து காவல் கடந்து இலங்கை
அல்லல் செய்தான் உங்கள் கோமான் எம்மை அமர்களத்து
வெல்ல கில்லாது அஞ்சினோம் காண் வெங்கதிரோன் சிறுவா
கொல்ல வேண்டா ஆடுகின்றோம்  குழ மணி தூரமே –10-3-6-

இறுமாந்து  இருந்தோம்
அமிழ்ந்து  போகக் கடவ மலைகளைக் கொண்டு அணை கட்டி வந்தீர்கள்
இலங்கை சுடுகாடு ஆயிற்று என்னும்படியாக வாயால் சொல்ல ஒண்ணாத அனர்த்தம் பட்டோம்
எங்களை விட்டு விட பிரார்த்திக்கிறோம்-

———————————————-

மாற்றம் ஆவது இத்தனையே வம்மின் அரக்கர் உள்ளீர்
சீற்றம் நும்மேல் தீர வேண்டில் சேவகம் பேசாதே
ஆற்றல் சான்ற தொல் பிறப்பில் அனுமனை வாழ்க என்று
கூற்றம் அன்னார் காண வாடீர் குழ மணி தூரமே —10-3-7-

சேவகம் பேசாதே -செருக்கி மிடுக்குச் சொல்லைப் பேசாதே
கீழ்த் திரு மொழியில் தடம் பொங்கத் தம் பொங்கோ என்றும் இதில் குழ மணி தூரமே -என்றும் ஆடும் குழுவில் சேராதே –
த்விதா பஜ்யேயம் அப்யேவம் ந நமேயம் து கஸ்யசித்-என்று ராவணன் ரீதியில் உள்ளாரை
தங்கள் திரளிலே வந்து புகுமாறு அழைக்கிறார்கள் -வம்மின் அரக்கர் உள்ளீர்
மாற்றம் -வாய் வார்த்தை
ஆற்றல் சான்ற தொல் பிறப்பின் -பிறந்த உடனே சூர்யனை பசிக்க ஆஞ்சநேயர் கிளம்பியதால் தொல் பிறப்பின் -ஆற்றல் என்கிறார்
ஆஞ்சநேயரை வாழ்த்தினால் மற்ற முதலிகள் பிரசன்னராய் விடுவார்கள் சூசகம் –

——————————————————

கவள யானைப்  பாய் புரவி தேரோடு அரக்கர் எல்லாம்
துவள வென்ற வென்றியாளன் தன் தமர் கொல்லாமே
தவள மாட நீடு அயோத்தி காவலன் தன் சிறுவன்
குவளை வண்ணர் காண வாடீர்  குழ மணி தூரமே –10-3-8-

இதிலும் அரக்கர் உள்ளீர் -வருவித்துக்  கொண்டு குவளை வண்ணரான அந்த சக்கரவர்த்தி திருமகன் கண்டு மகிழும் படி
எங்கள் உடன் குழ மணி தூரம் ஆட வம்மின்
தவலம் -சிறந்த சுண்ணாம்பு பூசப் பெற்று வெண்ணிறமாய் இருக்கின்ற மாட மாளிகைகள் யுடைத்தான
அயோத்யா புரிக்கு இறைவனான தசரத சக்கரவர்த்தி திருக் குமாரன்

—————————————————-

ஏடு ஒத்து ஏந்தும் நீண் இலை வேல் எங்கள் இராவணனார்
ஓடிப் போனார் நாங்கள் எய்தோம் உய்வதோர் காரணத்தால்
சூடிப் போந்தோம் உங்கள் கோமான் ஆணை துடரேன்மின்
கூடிக் கூடி யாடுகின்றோம் குழ மணி தூரமே –10-3-9-

ஏடு ஒத்த -பனையோலை விரிந்தால் போலே அகலமாயும் –
நாங்கள் கூட்டம் கூட்டமாய் இருக்கிறோம் என்பதை போர் புரிய -என்று நீங்கள் நினைக்கல் ஆகாதே
குழ மணி தூரம் ஆடுதற்கே திரள் திரளாக இருக்கின்றோம் –
யம லோகத்துக்கே இராவணன் ஓடிப் போனான்
உயிர் உடன் இருந்தாலும் இல்லை என்று சொல்லும்படியாக ஆகி விட்டான்
உய்வதோர் காரணத்தால் நாங்கள் எய்த்தோம்
உய்வதோர் காரணத்தால் உங்கள் கோமான் ஆணை சூடிப் போந்தோம் -நடுநிலைத் தீபமாக முன்னும் பின்னும் அந்வயிக்கும்-

———————————————

வென்ற தொல் சீர் தென்னிலங்கை வெஞ்சமத்து அன்று அரக்கர்
குன்றமன்னார் ஆடியுய்ந்த  குழ மணி தூரத்தைக்
கன்றி நெய்நீர் நின்ற  வேற்கைக் கலியன் ஒலி மாலை
ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் பாடி நின்றாடுமினே –10-3-10-

குன்று போல் ஆடுகின்றோம் குழ மணி தூரமே என்று பல சொல்லிக் கூத்தாடி
உயிர் தப்பிப் பிழைத்தபடி யைத் திரு மங்கை ஆழ்வார்
எடுத்து உரைத்த இத் திரு மொழியைக் கொண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாரும் பாடி ஆடுங்கோள் என்கிறது  –
அரக்கர் ஜீவனம் பெற ஆட -நீங்கள் உஜ்ஜீவனம் பெற ஆடுமின் –
ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் —
மகா ராஜரை நோக்கிச் சொன்ன ஒன்றும் ஒன்றும் -இரண்டு பாசுரங்கள் வானர முதலிளைக் குறித்துச்
சொன்ன ஐந்து பாசுரங்கள் -பரோபதேச ரூபமான மூன்று பாசுரங்கள் –

——————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -10-2-இரக்கமின்றி எங்கோன் செய்த தீமை யிம்மையே எமக்கு எய்திற்று காணீர்-

April 6, 2015

ஸ்ரீ யபதி இன்னமும் இவ் வாழ்வாரைக் கொண்டு லோக உஜ்ஜீவனார்த்தமாக
இன்னமும் பல பாசுரங்களை வெளியிட திரு உள்ளம் பற்றி
இவருடைய அபிமதத்தைத் தலைக்கட்டி செய்யாதே -தன்னுடைய திவ்ய சேஷ்டிதங்களை அனுபாவ்யமாகக் காட்டிக் கொடுத்தேன்
ஸ்ரீ ராம ஜெயத்தை ராஷசர் வாயாலே அருளிச் செய்கிறார்
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ராஷச யோனியில் பிறந்து இருந்தாலும் சாத்விகராய் இருந்து உத்தேச்யரானாப் போலே
இந்த அரக்கர்களும் இராவணன்   தோல்வியையும் ஸ்ரீ ராமபிரான் ஜெயத்தையும் சொல்வதால் உத்தேச்யம் –
இதிலே -தமக்கு அபிமதமான -ஸ்ரீ ராம விஜயத்தை எதிரிகள் மேல் எழுத்திட்ட பாசுரத்தாலே அனுபவிக்கிறார் –
அங்குத்தை விஜயம் தமக்கு இஷ்டம் ஆகையாலே அந்த விஜயத்துக்கு இலக்காய்த்-தோற்ற ராஷசர் தசை பிறந்து-
பிராட்டிமார் தசை பிறந்து பேசுமா போலே -தாமான தன்மை தோற்றாதே-
தோற்ற ராஷசர் பாசுரத்தாலே -ஸ்ரீ ராம விஜயத்தை பேசி அனுபவிக்கிறார் –
இத் திரு மொழியும் மேல் உள்ள திரு மொழியும் இங்கனே செல்லும்-

நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –
எதிரிகளை வென்று அவ் வெற்றியாலே தூரய கோஷத்தைப் பண்ணுவித்து  அதுக்கீடாக ஆடும் கூத்துப் போலே –
தோற்றவர்கள் தோல்வியாலே பறையடிக்க ஆடுவதொரு  கூத்துண்டு – 
அந்த சப்த அநுகாரம் -பொங்கத்தம் பொங்கோ –என்கிற இது-
பொங்கத் தம் பொங்கம்-என்ன தொடங்கின வாய் அஞ்சினபடிக்கு — ஸூசகமாய் பொங்கோ என்று குறைத்து நிர்த்தேசித்தார்-

———————————–

இரக்கமின்றி எங்கோன் செய்த தீமை யிம்மையே எமக்கு எய்திற்று காணீர்
பரக்க யாம் இன்று உரைத்தென்  இராவணன் பட்டன இனி யாவர்க்கு உரைக்கோம்
குரக்கு நாயகர்காள் இளங்கோவே கோல  வல்விலி  ராமபிரானே
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-1-

அத்யுத்  கடை புண்ய பாபை இஹைவ பலம் அஸ்நுதே -இந்த சாஸ்திரம் தங்கள் திறத்திலே பலித்து விட்டது
எங்கோன் இரக்கமின்றிச் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்று
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு -என்று மங்களா சாசனம் பண்ணப் பிராப்தமாய்  
இருக்க மிதுனத்தைப் பிரித்த கொடுமை
இதன் பலன் நமது சம்பந்தம் உள்ளார்கள் அளவிலும் பலிக்கும் என்று அறிந்தும் இரக்கம் இன்றி செய்தானே –
கொடுமையை வாயாலே சொல்ல மாட்டாமையால் எங்கோன் செய்த தீமை -என்கிறார்கள்
இராவணன் பட்டனன் -மேல் ஏழாம் பாட்டில் -ஏழையை இலங்கைக்கு இறை தன்னை
எங்களை  யொழியக் கொலையவனை-என்று
குற்றம் செய்யாத எங்களை விட்டு இராவணனை மாத்ரம் கொள்ள வேண்டிக் கொள்கிறார்கள்
இங்கே பட்டனன் -என்றது இவனுக்கு மரணம் சித்தம் -பிழைப்பது  கிடையாது -ஜீவச்சவம் என்பதால் பட்டனன் –
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை -ஆடு -வெற்றி -ஆடு போலே கூப்பிடுவாரும் இல்லை
தோற்றோம் தோற்றோம் என்று சொல்லுவார்கள் தான் உண்டு விஜயத்தை சொல்லுவார்  இல்லை –

———————————

பத்து நீண் முடியும் அவற்றிரட்டிப் பாழித் தோளும் படைத்தவன் செல்வம்
சித்தம் மங்கையர் பால் வைத்துக் கெட்டான் செய்வதொன்று அறியா வடியோங்கள்
ஒத்த தோள் இரண்டும்   ஒரு முடியும் ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம்
அத்த யெம்பெருமான் எம்மைக் கொல்லேல் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ–10-2-2-

விசித்ரா  தேக சம்பத்திர் ஈஸ்வராய நிவேதிதும் –பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன்  ஹஸ்த பாதாதி சம்யுதா —
தொழுது உய்வதற்கே சரீரம் -தலையானது தலை -தலை வணங்கி கை தொழுது உஜ்ஜீவிக்கலாம் –
அது செய்யாதே மாண்டு போனானே-
இந்த்ரியாணி புரா ஜித்வா ஜிதம் த்ரி புவனம் த்வயா ஸ்மரித் பிரிவ தத் வைரம்
அத்ய தைரேவ நிர்ஜித -மண்டோதரி புலம்புவாள் –
அது போலே மங்கையர் பால் சித்தம் வைத்துக் கெட்டான்
வாழ்ந்தோம் -விபரீத லஷனை கெட்டோம் என்றபடி  –
ஒத்த தோள் இரண்டும் -இந்து இந்துரிவ ஸ்ரீ மான் -என்னுமா போலே ஒரு தோளுக்கு மற்றது ஒன்றே உவமை-

——————————

தண்ட காரணியம் புகுந்து அன்று தையலைத் தகவிலி  எங்கோமான்
கொண்டு போந்து கெட்டான் எமக்கு  இங்கோர் குற்றமில்லை கொல்லேல் குலவேந்தே
பெண்டிரால் கெடும் இக்குடி தன்னைப் பேசுகின்றது என் தாசரதீ உன்
அண்ட வாணர் உகப்பதே செய்தாய் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ —-10-2-3-

குற்றம் அற்றாரை நலியாத இஷ்வாகு  குலத்துக்கு விளக்கே
சூர்ய குலத்தில் மனு அரசனின் குமாரர் இஷ்வாகு -நூற்றுவர் பிள்ளைகளில் கடைசி பிள்ளை
மூடம் மூர்க்கன் துஷ்டன் -தண்டன் -என்பவன்
விந்திய  மலை -சைவல  மலை -இடைப்பட்ட இடம் -மதுமந்தனம் பட்டணம் அமைத்து தன் புரோஹிதர் சுக்ராச்சார்யர்
மகள் அரசை என்பவளை காதலித்து கற்பழிக்க சாபம் பெற்று -குடம்பதோடும் சேனையோடும் அழிவான் –
நாடு மண் மழையால் ஜீவ ஜந்துவும் இல்லாமல்  பாழாகும்-சாபம் பெற்று–ஏழு நாள்களில் ஆனது -தண்டகாரண்யம்
அண்ட வாணர் -அண்ட வாழ் நர்-

——————————————————-

எஞ்சலில் இலங்கைக்கு இறை எங்கோன் தன்னை முன் பணிந்து எங்கள் கண் முகப்பே
நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான்
விஞ்சி வானவர் வேண்டிற்றே பட்டோம் வேரிவார் பொழில் மா மயிலன்ன
அஞ்சலோதியைக் கொண்டு நடமின் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-4-

எங்கள் கண் முகப்பே ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ஹித உபதேசம் செவியில் புகாமையாலே தேவதைகளின்
கோரிக்கை நிறைவேறப்   பெற்றது
எஞ்சல் இல் -திருவடி மதித்த ஐஸ்வர்யம் -குறை இல்லாத-
விஞ்சை வானவர் -வித்யா என்ற சொல் விஞ்சை -வித்யாதரர்கள் -தேவ ஜாதிக்கு உப  லஷணம்
ச ஹி தேவை ருதீர்ணச்ய ராவணச்ய வதார்த்திப -அர்த்திதோ மானுஷ லோகே ஜஜ்ஞே விஷ்ணுஸ் சநாதன –
என்ற வேண்டுகோள் நிறைவேறப் பெற்றது
அஞ்சு அல் ஓதியை -ஓதியை கூந்தலை -அல் இருண்ட கூந்தல் -மிருது -குளிர்ந்து -நறு மணம் -கறுத்து -நீண்டு
அஞ்சலோதி -அன் மொழித் தொகை -ஐம் பாலோதி -திரு எழு கூற்று இருக்கை –

——————————————-

செம்பொன் நீண் முடி எங்கள் ராவணன் சீதை என்பதோர் தெய்வம் கொணர்ந்து
வம்புலாம் கடிகாவில் சிறையா வைத்ததே குற்றமாயிற்றுக் காணீர்
கும்பனொடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி
அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது   அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ–10-2-5-

கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி –
இராவணன் மானிடரை ஒரு பொருளாக மதியாமல் பெற்ற வரம் மானிடரைத் தவிர்த்து சாவு வாராமை –
அவன் உபேஷித்த மானிட உருவத்தில் திரு வவதரித்தான்
தங்கள் சாதி மொழிக்கு ஏற்ற கூடம் என்கிறார்கள்
உடலையும் உயிரையும் வேறு வேறு கூறாகக ஆக்குவதால் கூற்றம் காரணப் பெயர்-

————————————–

ஓதமாகடலைக் கடந்தேறி யுயர்கொள் மாக்கடிகாவை யிறுத்துக்
காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடலிலங்கை மலங்க எரித்துத்
தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே
ஆதர் நின்று படுகின்றது  அந்தோ   அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ–10-2-6-

ஆதர -அவிவேகிகளான நாங்கள்
தோன்றல் -ஸ்வாமி-

—————————————-

தாழமின்றி முந்நீரை யஞ்ஞான்று தகைந்ததே கண்டு வஞ்சி நுண் மருங்குல்
மாழை மான் மட நோக்கியை விட்டு வாழகில்லா மதியின் மனத்தானை
ஏழையை இலங்கைக்கு இறை தன்னை எங்களை  யொழியக் கொலையவனைச்
சூழுமா நினை மா மணி வண்ணா சொல்லினோம் தடம் பொங்கத்தம்  பொங்கோ —10-2-7-

தாழம் இன்றி -கால தாமதம் இல்லாமல்
தகைந்ததே கண்டு -அணை செய்தத்தையே பார்த்தும்
சூழும் ஆ நினை -தேவரீரை சூழ்ந்து பிரார்த்திக்கிற இத்தனை திரு உள்ளம் பற்ற வேணும்
பிராட்டி யுடைய கண் அழகையும் வடிவு அழகையும் அனுபவிக்க பெருமாளே உரியவன் என்று எண்ணாமல்
வஞ்சி நுண் மருங்குல் மாழை மான் மட நோக்கியை –
மாழை -அறிவின்மை -அழகுமாம்
ஏழை -தகாத விஷயத்தில் வீணான சாபல்யம் கொண்டவன்-

————————————————

மனம் கொண்டேறும் மண்டோதரி முதலா அங்கயல் கண்ணினார்கள் இருப்பத்
தனம் கொள் மென்முலை நோக்கம் ஒழிந்து தஞ்சமே சில தாபதர் என்று
புனம் கொள் மென் மயிலைச் சிறை வைத்த புன்மையாளன் நெஞ்சில் புக வெய்த
அனங்கன் அன்ன திண தோள் எம்மிராமற்கு அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ–10-2-8-

மாதர்க்குச் செல்வம் தனம் ஆதலால் -தனம் கொள் மென்முலை –
தஞ்சமே சில தாபதர் என்று -மரவுரியும் சடையுமான சில தாபச வேஷம் பூண்டவர் இவளுக்கு தஞ்சமோ
என்று எண்ணினான் இராவணன்
புன்மையாளன் -அற்பன்
அநங்கன் -மன்மதன்-

————————————————-

புரங்கள் மூன்றுமோர் மாத்திரைபோதில் பொங்கு எரிக்கு இரை கண்டவன் அம்பில்
சரங்களே கொடிதாய் அடுகின்ற சாம்பவான் உடன் நிற்கத் தொழுதோம்
இரங்கு நீ எமக்கு  எந்தை பிரானே இலங்கு வெங்கதிரோன் சிறுவா
குரங்குகட்கு அரசே எம்மைக் கொல்லேல் கூறினோம்  தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-9-

ஸ்ரீ ஜாம்பவானை புருஷகாரமாகக் கொண்டு -ஆதித்யன் புதல்வனான -ஸூ க்ரீவ மகா ராஜரை சரணம் புகுகிறார்கள்
இந்த்ரன் புத்திரன் வாலி –
ஒரு மாத்திரைப்  போதில் -கண் இமைப் பொழுதும் கை நொடிப் பொழுதும் மாத்ரைக்கு அளவாம்-

—————————————————–

அங்கு வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை யழித்தவன் தன்னைப்
பொங்கு மா வலவன் கலிகன்றி புகன்ற பொங்கத்தம் கொண்டு இவ்வுலகினில்
எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர் இம்மையே இடரில்லை இறந்தால்
தங்குமூர் அண்டமே கண்டு கொண்மின் சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-10-

பொங்கு மா வலவன் கலிகன்றி -கிளர்த்தியையுடைய ஆடல் மா குதிரையை நடத்த வ்ல்லரான ஆழ்வார்
இத் திருமொழியைக் கொண்டு பாடி ஆடுமின்
இம்மையிலே இடர் இன்று வாழப் பெறுவீர்
இறந்த பின்பு மீட்சி இன்றி வைகுண்ட மா நகர் மற்றது கையதுவே
இதனை எல்லாரும் அறியச் சொன்னோம்
அங்கவ்வானவர்க்கு -பாட பேதம்
பொங்கத்தம் -தடம் பொங்கத்தம் பொங்கோ-என்றதன் ஏக தேச அநுகாரம்
கீழ் ஒன்பது பாசுரங்களில் ராஷசர்கள் ஸ்ரீ ராமபிரான் விஜயத்தை சொல்லி 
இதில் ஆழ்வார் அத்தை தாமே சொன்னபடி-

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -10-1-ஒரு நல் சுற்றம் எனக்கு உயிர் ஒண் பொருள்-

April 6, 2015

ஸ்ரீ யபதி பல திவ்ய தேசங்களைக் காட்டி அருளி இவருடைய நித்ய விபூதி அபேஷிதம் மறக்கப் பண்ணி
வைத்து அருளி இருந்தான் இது காறும்
மீண்டும் கொடு உலகம் நீக்கி  நலமந்த மில்லதோர் நாடு  செல்ல அபி நிவேசம் மிக்கது
எம்பெருமான் நமது அபி நிவேசத்தை தலைக் கட்டி அல்லது நில்லான் என்று நிச்சயித்தார்
பயணம் புறப்படுவதாகவே பாரிப்பு  கொண்டார்
பெண்கள் தம்முடன் பிறந்தகத்தில் பழகிய குறடுகள் ஏறி இறங்குமா போலே பயணத்துக்கு பூர்வாங்கமாக
தமக்கு மிக்க ஈடுபாடு யுண்டான திருப்பதிகளிலே சொல்லிக் கொள்வதாக நுழைந்து நுழைந்து புறப்படுகிறார்
ஒன்பது பாசுரங்களில் பதினெட்டு திருப்பதிகளை அனுபவிக்கும் அழகு இத் திரு மொழி ஒன்றுக்குமே உண்டு-

—————-

ஒரு நல் சுற்றம் எனக்கு உயிர் ஒண் பொருள்
வரு நல் தொல் கதியாகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர் மலை இன்று போய்
கரு நெல் சூழ் கண்ண மங்கையுள் காண்டுமே–10-1-1-

ஒரு நல் சுற்றம் -அத்விதீயமான -விலஷண -பந்து
பிதா ச ரஷகச் சேஷீ பர்த்தா ஜ்ஞேயோ ரமாபதி  -ஸ்வாம்யாதாரோ மமாத்மாச போக்தாதாச்ய மநூதித-
அகவாயில் நின்று சத்தையே பிடித்து  நோக்கிக் கொண்டு போரும் பரம பந்து -சாஸ்திர அர்த்தம்
பிரிந்து தரித்து இருக்க மாட்டாமையால் -எனக்கு உயிர்
ஒண் பொருள் -சத்தையே உண்டாக்கும் பொருள்
வரு நல தொல் கதி -பிராப்ய பூமியும் தானே-

———————————————

பொன்னை மா மணியை யணி யார்ந்ததோர்
மின்னை வேங்கடத் துச்சியில் கண்டு போய்
என்னை யாளுடை யீசனை யெம்பிரான்
தன்னை  யாம் சென்று காண்டும் தண் காவிலே—10-1-2-

பொன் போலேயும் நீல மணி போலேயும் ச்ப்ருஹணீயமாக விரும்பத் தக்கவன்
ஹேமன கோதோ ந தா ஹேந சேதேந கஷணேந வா -ஏத தேவ மஹத் துக்கம் யத் குஜ்ஞா சமதோல நம் –
குந்துமனிக்கு ஒப்பாக சொல்வதே மகா துக்கம்
இன்னார் தூதன் -வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சியால் வன் தாம்புகளால் புடைக்க
அலந்தானை-திரு விருத்தம் -86-அலர்ந்தான் -என்பர் நஞ்சீயர்  –
கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் அன்றோ -அவதார பிரயோஜனம் பெற்ற ஹர்ஷம்
ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயனை அதி சூத்திர வஸ்துக்களுக்கு சமமாக சொல்வது துக்ககரம்
ஒட்டுரைத்து இவ் உலகு உன்னைப் புகழ்வு எல்லாம் பெரும்பாலும் பட்டுரையாய் பிற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி-

மணி -உள்ளாரை கண்ணுறங்க ஒட்டாதே –
கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே -சதா பஸ்யந்தி சூரய
தலைப்பில் முடிந்து ஆளலாம்
கடல் மலையில் இருக்கும் ரத்னம் மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய்
எனக்கு யாரும் நிகரில்லையே -என்னப் பண்ணும்
மைத்ரேய பரிபப்ரேச்ச ப்ரணிபத்யா பிவாத்யச -உலகம் எல்லாம் அனுவர்த்திக்கும்
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிவோம்
ஆஸ்ரயம் பொறுத்து மதிப்பு -உகந்து அருளின திவ்ய தேசங்கள் ஆழ்வார்கள் வாக்கால் பிரசித்தம்
ஒளியை விட்டு ரத்னம் இராது -பிராட்டி நித்ய வாஸம்
தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ
ஒளியால் ரத்னம் மதிப்பு -அப்ரமேயம் ஹி தத் தேஜோ யஸ்ய யா ஜனகாத்மஜா –
இழந்தவனை கதறப் பண்ணும் ரத்னம் -பழுதே பல காலமும் போயின -இன்பத்தை இழந்த பாவியேன் எனதாவி நில்லாதே
எழில் கொள் நின் — உன்னைக் காண்பான் நான் அலப்பாய் ஆகாயத்தை நோக்கி அழுவன் தொழுவனே -என்னப் பண்ணுவன் இவனும்-
இப்படிப் பட்டவனை நேற்று திரு வேங்கட மலையில் சேவித்து
இன்று திருத் தண்கா -விளக்கொளி பெருமாள் சந்நிதியில் சேவிக்கப் பெற்றேன் –

———————————

வேலை யாலிலைப் பள்ளி விரும்பிய
பாலை யாரமுதினைப் பைந்துழாய்
மாலை யாலியில் கண்டு மகிழ்ந்து போய்
ஞாலம் உன்னியைக் காண்டும் நாங்கூரிலே–10-1-3-

ஆலிலை சயனித்து அருளிய பிரானை நேற்று திருவாலியிலும் இனி திரு நாங்கூரிலே சென்று காணக் கடவோம்
வேலா -கடல் கரையை சொல்லி இலக்கணையால் கடலை உணர்த்தும்
ஞாலம் உன்னி -ரஷணம் செய்து அருள இவன் யோகு செய்து கொண்டு இருக்கும் பிரான் என்றும்
உலகம் இவனை உன்னும் என்றும் –

————————————–

துளக்கமில் சுடரை அவுணன்  உடல்
பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப் போய்
அளப்பில் ஆரமுதை அமரர்க்கு அருள்
விளக்கினைச் சென்று வெள்ளறை காண்டுமே–10-1-4-

ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு விரோதியைப் போக்கி அருளி அதனாலேயே பரம உஜ்வலனாய் பரம கிருபாவாளான
பெருமானை திருப்பேரிலே கண்டோம் இனி திரு வெள்ளறையில் காண்போம் –
துளக்கமில் சுடரை -காற்றாலும் வேறு எது ஒன்றாலும் அணைக்க முடியாத விலஷண பிரகாச யுக்தன் –

———————————-

சுடலையில் சுடு நீறன் அமர்ந்ததோர்
நடலை தீர்த்தவனை நறையூர்க் கண்டு என்
உடலையுள் புகுந்து உள்ளம் உருக்கி யுண்
விடலையைச் சென்று காண்டும் மெய்யத்துள்ளே–10-1-5-

நடலை -துன்பம் -என் நடலைகளை எல்லாம் நாகணைக்கே சென்று உரைத்தியே -என்றாள் சூடிக் கொடுத்த நாச்சியாரும்
ருத்ரன் சாபம் தீர்த்து அருளி பெருமானை -இப்படிப் பட்ட குணசாலி யுண்டோ –
ஈடுபட்டு உடலுள் புகுந்து உள்ளம் உருக்கி என்பதாம் –
விடலை -ஆண்மகன் -திண்ணியன் -பாலை நிறத் தலைவன் -மணவாளன் -முப்பது வயதுக்குள் பட்டவன்
விடலை -என்று பாலை வனத்தில் தலை மகனை சொல்லுகிறது
இப்பாலையான பூமியை தனக்கு இருப்பிடம் ஆக்கின படியாலே
பாலை நிலமான சம்சாரத்துக்கு தலைவன் ஆனவனை
-தம்முடைய ஹிருதயத்தில் காட்டில் பாலை நிலம் இல்லை என்று இருக்கிறார் –

————————————-

வானையார் அமுதம் தந்த வள்ளலைத்
தேனை நீள் வயல்  சேறையில் கண்டு போய்
ஆனை வாட்டி யருளும் யமரர் தம்
கோனை யாம் குடந்தை சென்று காண்டுமே –10-1-6-

திரு மேனியைப் பேணாதே பிரயோஜனாந்த பரர்களுக்கு கார்யம் செய்து அருளிய பிரானை
திருச்  சேறையில்  சேவித்து திருக் குடந்தையில் கண்டு சேவிப்போம்
வானையார்  -வானத்தை இருப்பிடமாக யுடைய தேவர்கள்
ஆனை வாட்டி அருளும் –ஆனை -எருதுக்கும் பெயர் -கம்சன்  ஏவிய அசுரன் எருது உருவம் கொண்டு -நிரசித்து அருளினவன்
நப்பின்னைப் பிராட்டிக்காக ஏழு எருதுகளை நிரசித்து அருளினவன் என்றுமாம்-

———————————–

கூந்தலார் மகிழ் கோவலனாய் வெண்ணெய்
மாந்து அழுந்தையில் கண்டு மகிழ்ந்து போய்
பாந்தள் பாழியில் பள்ளி விரும்பிய
வேந்தனைச் சென்று காண்டும் வெக்காவுளே  —10-1-7-

பாந்தள்  பாழி -திரு வநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே
திரு வெக்காவில் சேஷ சாயி இறே-
வெக்கா- சேது வணை -நாக ஆணை நாகணை போலே வேகணை ஆக மாறி
வெக்கணை  யாக திரிந்து -வெக்கா என மருவிற்று
வெண்ணெய் யுண்டு மகிழ்ந்த ஸ்ரீ கிருஷ்ணனை திரு அழுந்தூரிலே சேவித்து
திரு வெக்காவில் சேவிக்கப் பெறுவோம்
கூந்தலார் மகிழ் கோவலனாய் -ஆ மருவி அப்பன் என்பதால்
பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரைப் பெருதும் என் ஆசையினால் கண்டவர்கள் போக்கு ஒழிந்தார்
கண் இணையால் கலக்க நோக்கி வண்டுலாம் பூம் குழலினார் உன் வாயமுதம் உண்ண
வேண்டிக் கொண்டு போவான்  வந்து நின்றார் -என்றும்
முந்தை நன்முறை அன்புடை மகளிர் முறை முறை தந்தம் குறங்கிடை இறுத்தி
எந்தையே எந்தன் குலப் பெரும் சுடரே எழு முகில் கணத்து எழில்  கவரேறே உந்தை யாவன் என்று உரைப்ப -என்றும்
கூந்தலார் மகிழ்ச்சி விளங்குமே-

—————–

பத்தராவியைப் பான்மதியை யணித்
தொத்தை மாலிருஞ்சோலை தொழுது போய்
முத்தினை மணியை மணி மாணிக்க
வித்தினைச் சென்று விண்ணகர் காண்டுமே -10-1-8-

தன் திருவடிகளுக்கு நல்லானாரானவர்களுக்கு உயிராய் இருப்பவனை தெற்குத் திருமலையில்
சேவித்து திரு விண்ணகரிலே சேவிப்பேன்
பத்தராவி -பக்தர்களுக்கு ஆவியாய் இருப்பவன் என்றும் பக்தர்களை ஆவியாகக் கொண்டு இருப்பவன் -என்றுமாம்
ஜ்ஞாநீத்வாத் மைவ  மே மதம்
பால் மதியை -பால சந்தரன் போலே களங்கம் அற்ற -ஆனந்தமாக -கண்டு கொண்டே
இருக்கும் படியாக வடிவு அழகை யுடையவன்
அணித்தொத்தை -மணித்தொத்தை -பாட பேதங்கள் -தொத்து பூம் கொத்து -மாலையையும் சொல்லும்-

—————————

கம்ப மா களிறு அஞ்சிக் கலங்க வோர்
கொம்பு கொண்ட குரை கழல் கூத்தனைக்
கொம்புலாம் பொழில் கோட்டியூர்க் கண்டு போய்
நம்பனைச் சென்று காண்டும் நாவாயுளே—10-1-9-

குவலயா பீடத்தின் கொம்பை பறித்த பெருமானை திருக் கோட்டியூரிலே கண்ட  பின்
இனி திரு நாவாயில் காண்போம் -என்கிறார்
கம்பம் -நடுக்கம் -யானை கட்டும் தறிக்கும் பெயர் -இப்பொருளில் ஜாதி உசித விசேஷணம்
நம்பன் -ஒரு நாளும் கை விடாதவன்
திரு நாவாய் -நம் ஆழ்வார் 9 பத்தில் மங்களா சாசனம் அருளிச் செய்த மலை நாட்டுத் திருப்பதி-

————————————

பெற்றம் ஆளியைப் பேரில் மணாளனைக்
கற்ற நூல் கலிகன்றி  யுரை செய்த
சொல் திறமிவை சொல்லிய தொண்டர்க்கு
அற்றமில்லை அண்டம் அவர்க்கு ஆட்சியே –10-1-10-

பசுக்களை ஆளப் பிறந்தவன் -திருப்பேர் நகரில் மணவாளப் பெருமாளானாக சேவை சாதித்து அருளுபவன்
பெற்றமாளிகை -பாட பேதம் -பெருமை பொருந்திய மாளிகைகள் யுடைத்த திருப் பேர் நகர்
ஓத வல்லார்கள் ஒரு நாளும் பிரியாத நித்ய அனுபவமாம் படி பரமபதம் இவர்கள் இட்ட வழக்காகும்
கற்ற நூல் கலிகன்றி -ஆழ்வார் நூல்களை கற்றாரா -திரு மந்த்ரம் கற்ற இடத்தில் கற்கும் இத்தை இறே அல்லாதவையும்
எம்பெருமான் பக்கலிலே திருமந்த்ரார்த்தம் கற்றதால் சகல சாஸ்திரங்களையும் கற்றவர் ஆவாரே –

———————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -9-10-எங்கள் எம்மிறை யெம்பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்த அடியவர்-

April 6, 2015

திருப் பாண்டி நாட்டுக்கு திலகம் போன்று இருக்கும் திருக் கோஷ்டியூரை
மங்களா சானனம் பண்ணி அருளும் திருப்பதிகம்
கோஷ்டீபுரம் -ஹிரண்யாசுரனை முடிக்க தேவர்கள் கூடி ஆலோசிக்க ஏகாந்தமான ஸ்தலம்
பட்டர் இங்கே நெடு நாள் வாழ்ந்து அருளிய விசேஷமும் -எம்பெருமானாரும் கூரத் ஆழ்வானும்
பல முறை எழுந்து அருளி திருக் கோஷ்டியூர் நம்பி இடம் பெரு நிதி பெற்ற விசேஷங்களும் உண்டே –

————————————

எங்கள் எம்மிறை யெம்பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்த அடியவர்
தங்கள் தம் மனத்துப் பிரியாது அருள் புரிவான்
பொங்கு தண்ணருவி புதம் செய்யப் பொன்களே சிதறும் இலங்கொளி
செங்கமல மலரும் திருக் கோட்டியூரானே –9-10-1-

எங்கள் இறை -எம் இறை -என்னாமல்-எங்கள் எம் இறை -என்றது -எங்களுக்கே இறை -அசாதாரண ஸ்வாமி-
அகில ஜகத் ஸ்வாமி க்கு மேலே அஸ்மத்  ஸ்வாமி என்றாப் போலே
பர வாசுதேவன் -நித்ய முக்தர்கள் அனுபவத்துக்கு -வ்யூஹ நிலை ப்ரஹ்மாதிகள் கூக்குரல் கேட்க –
ஸ்ரீ ராமகிருஷ்ணாதி அவதாரங்கள் அக்கால
குருடர்க்கு ஏற்பட்ட இடத்திலே விழி கண்ணார் புகுரலாமோ
பதியே பரவித் தொழும் தொண்டர் அனைவரையும் -எங்கள் –

எங்கள் எம் இறை -சொத்தை யுடையவன் -சேஷத்வத்திலே நிறுத்தி வைத்து அருளி –
எம்பிரான் -சொத்துக்கு ஆவன செய்யும் உபகாரகன் -கைங்கர்யம் கொண்டு அருளியும்-
அதற்கு இடையூறான  பிரதி பந்த்கங்களை போக்கி அருளுகையும் -அவிச்சின்ன கைங்கர்யம் கொள்ளுகையே உபகாரகம்
இப்படிச் செய்பவன் -அமரர்கள் அதிபதி -மீனுக்கு தண்ணீர் வார்ப்பது போலே அது ஒரு சிறப்போ –
எங்கள் எம் இறை எம்பிரானே இருப்பதுவே சிறப்பு என்றபடி
திரிகரண வ்ருத்திகளையும் தம் பக்கல் வைத்திருப்பார்களுக்கு
வட தடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -என்கிறபடியே
நித்ய வாசம் செய்து அருளுவான்
இங்கு அருவிப் பெருக்குகள் குதிரை தாவுமா போலே பிரவஹிக்கும் -பொங்கு தண்ணருவி புதம் செய்ய –
திருப் புல்லாணி திருப் பதிகத்திலும் -வெண் திரைப் புரவி என்னப் புதம் செய்ய –புதம் செய்ய -தாவிப் பாவுதல்
பொன்களே சிதற -அருவிப் பெருக்காலே  ரத்னங்கள் கொழித்து வருதலை சொன்னபடி
மேகம் பொன்களே சிந்த -என்னவுமாம் அம்புதம் -மேகம் -புதமிகு விசும்பில் -என்றால் போலே
சிதறு மிலங்கொளி -பாடமே பெரும்பான்மையாக -பொன்கள்  சிதறப் பெற்ற திருக் கோட்டியூர் –
எம்பெருமானார் ஆசை உடைற்கு எல்லாம் ஆரியர்காள் வம்மின்  என்று பொன்களை வழங்கிய ஸ்தலம் அன்றோ –

————————————————-

எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்குஇறை இன்னகைத் துவர்வாய் நிலமகள் தம்
செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான்
மௌவல் மாலை வண்டாடும் மல்லிகை மாலையோடும் அணைந்த மாருதம்
தெய்வ நாற வரும் திருக் கோட்டியூரானே –9-10-2-

எவ்வம் -துக்கம் –சம்சாரம் ஆகிய பெரிய வியாதியைத் தீர்த்து அருள தீர்ப்பதற்காக
திருமடந்தை  மண் மடந்தை இரு பாலும் திகழ நித்ய சந்நிதி பண்ணி அருளுகிறான்
எருத்துக் கொடி யுடையானும் பிரமனும் இந்த்ரனும் மற்று ஒருத்தரும் இப்பிறவி என்னும் நோய்க்கு
மருந்து அறிவாரும் இல்லை -அத்விதீயன்
எமக்கு இறை யாகையாலே எவ்வ நோய் தவிர்ப்பான் -காரண கார்ய பாவம்
இன்னகைத் துவர்வாய் நிலமகள் தம் செவ்வி தோய வல்லான்-பிரபுவத்தை பரிஹசிப்பது தோற்ற புன்சிரிப்பு
ஒழிக்க ஒழியாத சம்பந்தம் உண்டே ஒரு சேதனனைப் பெற என்ன பாடு பட்டீர்
சர்வஜ்ஞ்ஞராய் இருந்து வைத்து நன்று செய்யப் பார்த்தீர் -ஈடுபட்டு மயங்கிப் போவான்
நிலமகள் செவ்வி தோய வல்ல்னாகையாலே-அதுவே ஹேதுவாக பெரிய பிராட்டியாருக்கு
இனியனாய் இருப்பன் -திரு மா மகட்கு இனியான்
மௌவல் -மல்லிகைக்கும் முல்லைக்கும் மாலதிக்கும் பெயர் –
மல்லிகை மௌவல் -மௌவலும் தளவும் கற்பு முல்லை -மாலதி மௌவல் ஆகும் என்ப –
அணைந்து -மணந்து -பாட பேதங்கள்-

——————————————

வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் விண்ணவர் தமக்கு இறை எமக்கு
ஒள்ளியான் உயர்ந்தான் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான்
துள்ளு நீர் மொண்டு கொண்டு சாமரைக் கற்றை சந்தந முந்தி வந்தசை
தெள்ளு நீர் புறவில் திருக் கோட்டியூரானே —9-10-3-

கிருத யுகம் -சாத்விகர் -வெள்ளியான்
த்வாபர யுகம் -பசுமை -மணி நிற வண்ணன்
கலியுகம் -கரியான் -இயற்கையான வண்ணம்
ஒள்ளியான் -வைத்த கண் வாங்க ஒட்டாத தேஜஸ்வீ
சம்சார பிரளய ஆபத்தில் இருந்து எடுக்க வல்லவன்
சாமரக் கற்றை சந்தன வ்ருஷம் கொழித்துக் கொண்டு வருகிற மணி முத்தாறு அருகே விளங்கப் பெற்ற ஸ்தலம் –

————————————————

ஏறும் ஏறி  இலங்கும் ஒண் மழுப் பற்றும் ஈசற்கு இசைந்து உடம்பிலோர்
கூறு தான் கொடுத்தான் குல மா மகட்கு இனியான்
நாறு செண்பக மல்லிகை மலர் புல்லியின் இளவண்டு நன்னறும்
தேறல் வாய் மடுக்கும் திருக் கோட்டியூரானே –9-10-4-

ஈஸ்வரோஹம் என்பாருக்கும் திருமேனியில் இடம் கொடுத்து அருளும் சீலவான்
வேதாத்மா விஹகேஸ்வர -இவனுக்கு -அட மாடே -என்னும் எருது அவனுக்கு
அருளார் திருச் சக்கரம் இவனுக்கு -கொலைத் தொழிலுக்கு ஏற்ற மழு அவனுக்கு
குலமா மகட்கு இனியான் -இப்படி சீலவானைப்   பெற்றோமே -போக்யதையை முற்றூட்டாக அனுபவிக்குமவன்
வண்டுகள் நறு மணம் மிக்க செண்பகப் பூக்களையும் மல்லிகை மலர்களையும் தழுவி
அவற்றால் வந்த வெப்பம் ஆற தேனிலே வாய் வைக்கும் இடம் –

—————————————————-

வங்க மா கடல் வண்ணன் மா மணி வண்ணன் விண்ணவர் கோன் மது மலர்
தொங்கல் நீண் முடியான் நெடியான் படி கடந்தான்
மங்குல் தோய் மணி மாட வெண் கொடி மாகமீது உயர்ந்தேறி வானுயர்
திங்கள் தான் அணவும் திருக் கோட்டியூரானே —9-10-5-

கடல் போலவும் நீல மணி போலவும் உள்ள திரு மேனி நிறத்தை நித்ய சூரிகளுக்கு நித்ய போக்யமாகக் கொடுத்து அருளுபவன்
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் –
திருத் துழாய் மாலை அணிந்த திரு அபிஷேகத்தை யுடையவன்
ஒப்பார் மிக்கார் இல்லாத சர்வாதிகன்
இந்தரனுக்கு உதவும் வ்யாஜ்யத்தாலே திருவடிகளாலே உலகம் அனைத்தும் தீண்டி  புனிதம் ஆக்கி அருளினவன்
ஓங்கின மாட மாளிகைகள் யுடைத்தான திருக் கோட்டியூர்
மாகம் -பரம்பின ஆகாசம்-

——————————————-

காவலன் இலங்கைக்கு இறை கலங்கச் சரம் செல உய்த்து மற்றவன்
ஏவலம் தவிர்த்தான் என்னை யாளுடை யெம்பிரான்
நாவலம் புவி மன்னர் வந்து வணங்க மாலுறைகின்றது இங்கு எனத்
தேவர் வந்து இறைஞ்சும் திருக் கோட்டியூரானே -9-10-6-

நானே ரஷகன் என்று அஹங்கரித்து இருந்த ராவணனை முடியும் படி பானன்களை பிரயோகித்து
அவனுடைய ஏ வலம் -பாண பிரயோக சாமர்த்தியத்தை தொலைத்து அருளிய பெருமாள்
என்னை ஆளுடை -அடிமை கொண்டு அருளினவன் -அவனுடைய வீரச் செயலாலே தோற்ப்பித்து ஆட்கொண்டான்
காவலன் -எம்பெருமானுக்கு விசேஷணம் ஆக்கவுமாம்
நாவலம் புவி மன்னர் உப்புக்கடல் -கருப்புக் கடல் -கள்ளுக்கடல் -நெய்க்கடல் -தயிர்க்கடல் -பாற் கடல் -நீர்க்கடல்
இவற்றால் சூழப் பட்ட தீவுகள் ஜம்பூத்வீபம் -ப்லஷத்வீபம்-சால்மலத்வீபம்-குசத்வீபம் -க்ரௌஞ்சத்வீபம்-சாகத்வீபம் -புஷ்கரத்வீபம் –
இவற்றில் ஜம்பூத்வீபம் -நடுவில் உள்ளது –

அதன் நடுவில் மேரு என்னும் பொன் மலை உள்ளது -அதனைச் சுற்றி உள்ள இளா வ்ருத வருஷத்தில்  
சிருஷ்டிக்கப் பட்டுள்ள நான்கு மலைகளைச் சுற்றி நான்கு திசையிலும் நான்கு மரங்கள் உள்ளன –
அவற்றில் ஒன்றாகிய நாவல் மரத்தால் இப்பெயர் -ஜம்பூ -நாவல்
மற்றைத் தீவுகள் கரும பலன் அனுபவிக்கவும் இது ஒன்றே கர்மம் அனுஷ்டிக்கவும் உண்டான சிறப்பும் உண்டே
இதில் நவம கண்டமான பாரத வருசத்துக்கே இந்த உரிமை –
இத் தீவினில் மானிடப் பிறவி அரிது -தவங்களைச் செய்து அரசர்களாக திருக் கோட்டியூரை வணங்குகிறார்கள்
இதைக் கண்ட இந்த்ராதி தேவர்களும்-இங்கே தேவ சந்நிதானம் உண்டு என்று அறிந்து – இறைஞ்சுகிறார்கள்
ஏ வளம் -நாமே அம்பு எய்ய வல்லோம் ஒப்பார் இல்லை -என்னும் மிடுக்கு –

———————————————

கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆநிரைக்கு அழிவன்று  மா மழை
நின்று காத்து உகந்தான் நில மா மகட்கு இனியான்
குன்றின் முல்லையின் வாசமும் குளிர் முல்லையின் மணமும் அளைந்து இளம்
தென்றல்  வந்து உலவும் திருக் கோட்டியூரானே –9-10-7-

அதி மானுஷ திவ்ய  சேஷ்டிதங்களாலே சிஷ்டர்களை வாழ்வித்து துஷ்டர்களை மாள்வித்து மண்ணின் பாரம்
நீக்குகையாலே நிலா மா மகட்கு இனியான்
அவனே இங்கு நித்ய சந்நிதி பண்ணி அருளுகிறான்
தென்றல் நறு மணத்தை கொய்து கொண்டு வந்து உலவுகின்றதாம்
அழிவன்று-சரியான பாடம் -அழிவு -கெடுதல் /அன்று நேர்ந்த காலத்திலே-அழிவென்று -பாட பேதம் –

————————————————————–

பூங்குருந்து ஒசித்தானை காய்ந்த அரிமாச் செகுத்து  அடியேனை ஆளுக
ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான்
தூங்கு தண் பலவின் கனித்தொகு வாழையின் கனியொடு மாங்கனி
தேங்கு தண் புனல் சூழ்த் திருக் கோட்டியூரானே –9-10-8-

குருந்த மரத்தை ஒசித்து அழித்தவனும்-குவலயா பீடத்தை அழித்து  ஒழித்தவனும் -குதிரை வடிவால் வந்த கேசியை முடித்தவனும் –
அடிமை கொள்ளவே அயர்வரும் அமரர்கள் அதிபதியாக இருந்தும் இங்கே நித்ய சந்நிதி கொண்டு அருளும் தேவாதி தேவன்
இங்கே பலா வாழை மாம்பழங்கள் விழுந்து தேங்கும் தீர்த்தங்களால் புடை சூழப் பெற்ற ஸ்தலம்
ஆனை காய்ந்து -உபசார வழக்கு- கொன்று என்றவாறு-

—————————————————————

கோவையின் தமிழ் பாடுவார் குடமாடுவார் தட மா மலர் மிசை
மேவு நான் முகனில் விளங்கு புரி நூலர்
மேவு நான் மறை வாணரை வகை வேள்வி ஆறங்கம் வல்லவர் தொழும்
தேவ தேவபிரான் திருக் கோட்டியூரானே–9-10-9-

கோவை இன் தமிழ் -ஒழுங்குடைத்தான இனிய தமிழ் பாசுரமாகிய இத் திரு மொழியை
இங்கு உள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களின் சிறப்பை -பெரியாழ்வாரும்
நா அகாரியம் சொல்லாதவர் நாடொறும் விருந்தோம்புவார் தேவ கார்யம் செய்து
வேதம் பயின்று வாழ் திருக் கோட்டியூர் -என்றும்
குற்றம் இன்றிக் குணம் பெருக்கி குருக்களுக்கு அனுகூலராய் செற்றம் ஒன்றிலாத
வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர் -என்றும்
பூதம் ஐந்தோடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால் ஏதம் ஒன்றிலாத
வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர் -என்றும்
காசின் வாய்க் கரம் விறகிலும் கரவாது மாற்றிலி சோறிட்டு தேச வார்த்தை படைக்கும்
வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர் -என்றும்
ஸ்ரீ சௌம்ய நாராயணனைக் காட்டிலும் அவ்விடத்து பாகவதர்களின் வைபாவத்தையே
போரப் பொலிய கொண்டாடி அருளிச் செய்து இருக்கிறார்
தொண்டர்க்கு அமுதுண்ண சொன்மாலைகள் சொன்னேன் -போலே கோவை இன் தமிழ்
கோவை -கோக்கப் பட்ட மாலை -அதில் போலே பரம போக்யமான தமிழ் பாசுரம்-
குடமாடுவார் -செருக்காலே திருவாய்ப்பாடியில் படியாக குடக் கூத்தை யாடுவாராய் –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் இடையர் கூத்து போலே ஆட –
வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் –என்றும்
செந்நெலார் வயல் சூழ் திருக் கோட்டியூர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை -ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துக்கு
வேர் பற்று என்பதால் ஆடுவார்கள்
அன்றிக்கே உப லஷணம் செருக்குக்குப் போக்கு வீடாக செய்யும் செயல் -கோவை இன் தமிழ் பாடுதலும்
ப்ரீதிக்கு போக்குவீடாக மொய்ம்மாம் பூம் பொழில் பொய்கை -படியே சசம்ப்ரம ந்ருத்தம் பண்ணுவார்கள் என்றுமாம்
பரம வைதிகர்கள் -வாழும் ஸ்தலம் -என்றபடி –
மேவு நான் மறை வாணரை வகை வேள்வி ஆறங்கம் வல்லவர் தொழும்
தன்னை உள்ளபடி பேச வல்ல வேதங்களுக்கு வியாச பதம் செலுத்த வல்லராய் 
பஞ்ச மகா யஞ்ஞம்  அங்கங்கள் ஆறும்  கை வந்து இருக்கிறவர்கள் என்றுமாம் –

——————————–

ஆலுமா வலவன் கலிகன்றி மங்கையர் தலைவன் அணி பொழில்
சேல்கள் பாய்  கழனித் திருக் கோட்டியூரானை
நீல மா முகில் வண்ணனை நெடுமாலை யின் தமிழால் நினைந்த விந்
நாலும்  ஆறும் வல்லார்க்கு இடமாகும் வானுலகே –9-10-10-

ஆலும் மா வலவன் -ஆடல் மா குதிரை செலுத்துவதில் சமர்த்தர்
பரமபதமே வாசஸ் ஸ்தானம் -பலமாக அருளித் தலைக் கட்டுகிறார் -அவர்கள் வசிக்கும் இடமே பரமபதம் என்றுமாம்
ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் உரைக்க வல்லாருக்கு வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் -திருவாய் 5-3-11-
திருவாய் மொழியின் மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும்–புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் இராமானுசன்  -60
திருக் கல்யாண குணங்களை நினைக்க அந்த அனுபவம் உள் அடங்காமல் வெளி வந்த பாடல் -என்றவாறு-

————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .