மூலவர் -வைஷ்ணவ நம்பி -குறுங்குடி நம்பி -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -குறுங்குடி வல்லி நாச்சியார்
விமானம் -பஞ்சகேதாக விமானம்
தீர்த்தம் -திருப் பாற் கடல்
மங்களா சாசனம் -திரு மழிசை ஆழ்வார் -நம்மாழ்வார் -பெரியாழ்வார் -திருமங்கை ஆழ்வார் –
மகேந்திர கிரி —ஏழு சிகரங்கள் உடன் கூடிய இது வாமன க்ஷேத்ரம் -குறுகியவனுடைய குடில் –ஆகியபடியால் குறுங்குடி –
மிகப் பிரசித்தமான நம் பாடுவான் சரித்திரம் கைசிக ஏகாதசி அன்று இந்த ஷேத்ரத்தில் நடை பெற்றது –
இன்றும் நம் பாடுவானின் வம்சஸ்தவர்களால் அந்த சரித்திரம் கைசிக ஏகாதசி அன்று இரவு பெருமானின் முன்னிலையில் அரங்கேற்றப் படுகிறது –
உடைய நங்கையார் திருக் குறுங்குடி நம்பியைப் பிரார்த்தித்துப் பெருமாளையே நம்மாழ்வாராகப் பெற்றவர் –
திரு மங்கை ஆழ்வார் இந்த ஷேத்ரத்தில் இருந்து பரமபதத்து எழுந்து அருளினார் -அவரின் திரு வரசு இங்கு உள்ளது –
திருக் குறுங்குடி நம்பி ஐந்து நம்பிகளாக சேவை சாதிக்கிறார் -ஸ்ரீ ராமானுஜர் இடம் இருந்து உபதேசம் பெற்ற படியால்
அவருக்கு கர்ப்பக்கிருகத்தில் சிறப்பாக ஒரு சிங்காசனம் உள்ளது
அனைத்து பகவான்களும் விஷ்ணு என்று போற்றப்பட இவர் மட்டுமே ஸ்ரீ வைஷ்ணவ நம்பி -என்று அழைக்கப் படுகிறார் -வட்ட பாறை –
அண்ணல் ராமா னுசன் வந்து தோன்ற அப்பொழுதே –ஆளாயினர் –
லாவண்யம் –நம்பியை நான் கண்ட பின் –நெஞ்சம் நிறைந்ததே -பக்கம் நின்றார் -சிவ பெருமான் அருகில் –
நம்பி ஆறு -ஓடுகிறது – தக்ஷிண சிந்து -திருப் பாற் கடல் –
அறிய கற்று வல்லவர் வைஷ்ணவர் ஆவார் ஆழ் கடல் ஞாலத்துள்ளே –
மூலவர் ஸ்ரீ நின்ற நம்பி, ஸ்ரீ குறுங்குடி நம்பி, ஸ்ரீ பரி பூரணன்
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ அழகிய நம்பி, ஸ்ரீ வைணவ நம்பி
தாயார் ஸ்ரீ குறுங்குடி வல்லி நாச்சியார்
தீர்த்தம் ஸ்ரீ திருப் பாற்கடல்,ஸ்ரீ பஞ்ச துறை
விமானம் ஸ்ரீ பஞ்ச கேதக விமானம்
மண்டலம் ஸ்ரீ பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ திருநெல்வேலி
நாமாவளி ஸ்ரீ குறுங்குடி வல்லீ ஸமேத ஸ்ரீ வைஷ்ணவ நம்பி ஸ்வாமிநே நமஹ
——————-
ஸ்ரீ பெரியாழ்வார் -1-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருமழிசைப் பிரான்-1- பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -25-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ நம்மாழ்வார் -13- பாசுரங்கள் மங்களாசாசனம்
மொத்தம் –40-பாசுரங்கள் மங்களாசாசனம்
———————–
ஸ்ரீ பெரியாழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம் –
உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில் மருவி
உன்னொடு தங்கள் கருத்தாயின செய்து வரும்
கன்னியரும் மகிழக் கண்டவர் கண் குளிரக்
கற்றவர் தெற்றி வரப் பெற்ற எனக்கு அருளி
மன்னு குறுங்குடியாய்! வெள்ளறையாய்! மதிள் சூழ்
சோலை மலைக் கரசே! கண்ணபுரத் தமுதே!
என்ன வலம் களைவாய்! ஆடுக செங்கீரை
ஏழுலகு முடையாய்! ஆடுக ஆடுகவே. –பெரியாழ்வார் திருமொழி -1-5-8-
————-
ஸ்ரீ திருமழிசைப் பிரான்-1- பாசுரம் மங்களாசாசனம் –
கரண்ட மாடு பொய்கையுள் கரும் பனைப் பெரும் பழம்
புரண்டு வீழ, வாளை பாய் குறுங்குடி நெடுந்தகாய்!
திரண்ட தோளிரணியஞ் சினங் கொளாக மொன்றையும்
இரண்டு கூறு செய்துகந்த சிங்க மென்ப துன்னையே. –திருச் சந்த விருத்தம் – 62
—————–
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -25-பாசுரங்கள் மங்களாசாசனம் –
ஏவினார்க் கலியார் நலிக வென்று என் மேல் எங்ஙனே வாழுமாறு? ஐவர்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடுங்கடல் வண்ணா!
பாவினாரின் சொல் பன் மலர்க் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து என்
நாவினால் வந்து உன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்! –1-6-8-
பேரானைக் குறுங்குடி யெம்பெருமானை திருதண்கா
லூரானைக் கரம்பனூ ருத்தமனை முத்திலங்கு
காரார்த் திண் கடலேழும் மலையே ழிவ்வுலகே ழுண்டும்
ஆரா தென்றிருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே. –5-6-2-
மானேய் நோக்கு நல்லார் மதி போல் முகத்து உலவும்
ஊனேய் கண் வாளிக்கு உடைந்தோட்டந்து உன்னடைந்தேன்
கோனே! குறுங்குடியுள் குழகா! திருநறையூர்த்
தேனே! வரு புனல் சூழ் திருவிண்ணகரானே! –6-3-3-
தவள இளம்பிறை துள்ளும் முந்நீர் தண் மலர்த் தென்றலோடு அன்றில் ஒன்றித்
துவள வென் நெஞ்சகம் சோர வீரும் சூழ் பனி நாள் துயிலாது இருப்பன்
இவளுமோர் பெண் கொடி என்று இரங்கார் என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன
குவளை மல் நிற வண்ணனர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் –9-5-1-
தாதவிழ் மல்லிகை புல்லி வந்த தண் மதியின் இளவாடை இன்னே
ஊதை திரி தந்து உழறி உண்ண ஓர் இரவும் உறங்கேன் உறங்கும்
பேதையர் பேதமையால் இருந்து பேசிலும் பேசுக பெய் வளையார்
கோதை நறு மலர் மங்கை மார்பன் குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின்–9-5-2-
காலையும் மாலை யொத்துண்டு கங்குல் நாழிகை யூழியின் நீண்டுலாவும்
போல்வதோர் தன்மை புகுந்து நிற்கும் பொங்கழலே யொக்கும் வாடை சொல்லில்
மாலவன் மா மணி வண்ணன் மாயம் மற்றுளவை வந்திடா முன்
கோல மயில் பயிலும் புறவில் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின் —9-5-3-
கரு மணி பூண்டு வெண்ணாகணைந்து காரி இமில் ஏறு அணர் தாழ்ந்து உலாவும்
ஒரு மணி யோசை என்னுள்ளம் தள்ள ஓர் இரவும் உறங்காது இருப்பேன்
பெரு மணி வானவருச்சிவைத்த பேரருளாளன் பெருமை பேசி
குரு மணி நீர் கொழிக்கும் புறவில் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின்–9-5-4-
திண் இமில் ஏற்றின் மணியும் ஆயன் தீங்குழ லோசையும் தென்றலோடு
கொண்டதோர் மாலையும் அந்தி ஈன்ற கோல விளம்பிறையோடு கூடி
பண்டை வல்லவிவை நமக்குப் பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும்
கொண்டல் மணி நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின்–9-5-5-
எல்லியும் நன் பகலும் இருந்தே ஏசிலும் ஏசுக வேந்திழையார்
நல்லரவர் திறம் நாம் அறியோம் நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை
வல்லன சொல்லி மகிழ்வரேலும் மா மணி வண்ணரை நாம் மறவோம்
கொல்லை வளரிள முல்லை புக்கு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமினே –9-5-6-
செங்கண் நெடிய கரிய மேனித் தேவர் ஒருவர் இங்கே புகுந்து என
அங்கம் மெலிய வளை கழல ஆது கொலோ வென்று சொன்ன பின்னை
ஐங்கணை வில்லி தன்னாண்மை என்னோடு ஆடுமதனை யறிய மாட்டேன்
கொங்கலர் தண் பனை சூழ் புறவில் குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின்–9-5-7-
கேவலம் அன்று கடலின் ஓசை கேண்மின்கள் ஆயன் கை யாம்பல் வந்து என
ஆவி யளவும் அணைந்து நிற்கும் அன்றியும் ஐந்து கணை தெரிந்து இட்டு
ஏவலம் காட்டி யிவன் ஒருவன் இப்படியே புகுந்து எய்திடா முன்
கோவலர் கூத்தன் குறிப்பறிந்து குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின் –9-5-8-
சோத்தென நின்று தொழ விரங்கான் தொன்னலம் கொண்டு எனக்கு இன்று தாறும்
போர்ப்பதோர் பொற் படம் தந்து போனான் போயின ஊர் அறியேன் என் கொங்கை
மூத்திடுகின்றன மற்றவன் தன் மொய்யகலம் அணையாது வாளா
கூத்தன் இமையவர் கோன் விரும்பும் குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் —-9-5-9-
செற்றவன் தென்னிலங்கை மலங்கத் தேவபிரான் திரு மா மகளைப்
பெற்றும் என்னெஞ்சகம் கோயில் கொண்ட பேரருளாளன் பெருமை பேசக்
கற்றவன் காமரு சீர்க் கலியன் கண்ணகத்தும் மனத்தும் அகலாக்
கொற்றவன் முற்றுலக ஆளி நின்ற குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் -9-5-10-
அக்கும் புலியின தளமுடையார் அவரொருவர்
பக்கம் நிற்க நின்ற பண்பரூர் போலும்
தக்க மரத்தின் தாழ்சினை ஏறி தாய் வாயில்
கொக்கின் பிள்ளை வெள்ளிற வுண்ணும் குறுங்குடியே —–9-6-1-
துங்க வரவத் திரை வந்துலவத் தொடு கடலுள்
பொங்கா ரரவில் துயிலும் புநிதரூர் போலும்
செங்கால அன்னம் திகழ் தண் பணையில் பெடையோடும்
கொங்கார் கமலத் தலரில் சேரும் குறுங்குடியே——-9-6-2-
வாழக் கண்டோம் வந்து காண்மின் தொண்டீர்காள்
கேழல் செங்கண் மா முகில் வண்ணர் மருவுமூர்
ஏழைச் செங்காலின் துணை நாரைக்கு இரை தேடிக்
கூழைப் பார்வைக் கார் வயல் மேயும் குறுங்குடியே ——-9-6-3-
சிரம் முன் ஐந்தும் ஐந்தும் சிந்தச் சென்று அரக்கன்
உரவும் கரமும் துணித்த வுரவோனூர் போலும்
இரவும் பகலும் ஈன் தேன் முரல மன்று எல்லாம்
குரவின் பூவே தான் மண நாறும் குறுங்குடியே —–9-6-4-
கவ்வைக் களிற்று மன்னர் மாளக் கலி மாந்தேர்
ஐவர் க்காய் அன்று அமரில் உய்த்தானூர் போலும்
மைவைத்திலங்கு கண்ணார் தங்கள் மொழி யொப்பார்
கொவ்வைக் கனிவாய்க் கிள்ளை பேசும் குறுங்குடியே—9-6-5-
தீ நீர் வண்ண மா மலர் கொண்டு விரை ஏந்தி
தூ நீர் பரவித் தொழுமின் எழுமின் தொண்டீர் காள்
மா நீர் வண்ணர் மருவி யுறையும் இடம் வானில்
கூநீர் மதியை மாடம் தீண்டும் குறுங்குடியே ——9-6-6-
வல்லிச் சிறு நுண்ணிடை யாரிடை நீர் வைக்கின்ற
அல்லல் சிந்தை தவிர அடைமின் அடியீர்காள்
சொல்லில் திருவே யனையார் கனிவாய் எயிறு ஒப்பான்
கொல்லை முல்லை மெல்லரும்பீனும் குறுங்குடியே ———9-6-7-
நாராரிண்டை நாண் மலர் கொண்டு நந்தமர்காள்
ஆராவன்போடு எம்பெருமானூர் அடைமின்கள்
தாராவாரும் வார் புனல் மேய்ந்து வயல் வாழும்
கூர்வாய் நாரை பேடையோடாடும் குறுங்குடியே –9-6-8-
நின்ற வினையும் துயரும் கெட மா மலரேந்திச்
சென்று பணிமின் எழுமின் தொழுமின் தொண்டீர்காள்
என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாடக்
குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே —–9-6-9-
சிலையால் இலங்கை செற்றான் மற்றோர் சினவேழம்
கொலையார் கொம்பு கொண்டான் மேய குறுங்குடி மேல்
கலையார் பனுவல் வல்லான் கலியன் ஒலி மாலை
நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே –9-6-10-
முளைக் கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர் தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தைத் திருத் தண்காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே. –திருநெடுந்தாண்டகம் – 14
பொன்னி மணி கொழிக்கும் பூங்குடந்தைப் போர் விடையை தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை –பெரிய திருமடல் – 114
j———————
ஸ்ரீ நம்மாழ்வார் -13- பாசுரங்கள் மங்களாசாசனம்
நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதியஞ் சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பனோ? —1-10-9-
உளனாகவே யெண்ணித் தன்னை யொன்றாகத் தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடி யென்?
குளனார் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளனாய வெந்தையை எந்தை பெம்மானை யொழியவே?–3-9-2-
எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றி னோடும் செல்கின்றது என் நெஞ்சமே–5-5-1-
என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே
தென்னன் சோலைத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திரு மறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே–5-5-2-
நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுளும் நீங்காவே–5-5-3-
நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர்
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
பூந்தண் மாலைத் தண் துழாயும் பொன் முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே–5-5-4-
பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே–5-5-5-
மேலும் வன் பழி நங்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
கோல நீள் கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனி வாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே–5-5-6-
நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அம் கை உளதே–5-5-7-
கை யுள் நன்முகம் வைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
மை கொள் மாடத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே–5-5-8-
முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்
மன்னு மாடத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சென்னி நீண் முடி ஆதியாய உலப்பில் அணி கலத்தன்
கன்னல் போல் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே–5-5-9-
கழிய மிக்கதொர் காதலள் இவள் என்று அன்னை காணக் கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத் தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே–5-5-10-
அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன் மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக் குறுங்குடி யதன் மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ் கடல் ஞாலத் துள்ளே–5-5-11-
இத்தலத்தைப் பற்றி வராக புராணம் மிக விரித்துப் பேசுகிறது. கைசிக புராணம் இத்தலத்திற்கு ஏற்பட்ட பெரும்பேறு வராஹ அவதாரங் கொண்ட
பெருமாள் தன் பிராட்டியோடு இங்குள்ள சிறுகுடிலில் சில காலம் தங்கினமையால் குறுங்குடியாயிற்றென்பர். பயங்கரமான வராகரூபத்தை மிகவும்
குறுகச் செய்தமையாலும். குறுங்குடியாயிற்று என்பர்.
மூலவர் நின்ற நம்பி, குறுங்குடி நம்பி, , வைஷ்ணவ நம்பி என்ற பல பெயர்கள் உண்டு. கிழக்கு நோக்கி நின்ற கோலம்
தாயார் குறுங்குடி வல்லி நாச்சியார்
தீர்த்தம் திருப்பாற்கடல்
விமானம் பஞ்சகேதக விமானம்
காட்சி கண்டவர்கள் சிவபெருமான், கஜேந்திரன்.
நம்மாழ்வாரின் தந்தையாகிய காரியாரும் தாயாராகிய உடைய நங்கையாரும் தமக்கு நெடுங்காலம் புத்திரப்பேறில்லாது போக இந்த
திருக்குறுங்குடி நம்பியை வந்து வேண்டிக்கொள்ள, நாமே வந்து உங்கட்குப் பிள்ளையாகப் போகிறோம் என்று இப்பெருமான் கூறி அவ்விதமே
நம்மாழ்வாராக அவதரித்தார். வேதம் தமிழ் செய்த மாறனாகப் பிறந்தது இந்நம்பியே. அதனால் இத்தலத்தில் நம்மாழ்வாருக்கு விக்ரகம் இல்லை.
திருமங்கையாழ்வார் இத்தலத்தில்தான், பரமபதம் பெற்றார்.அரங்கனுக்கு (ஸ்ரீரங்கம்) பல பணிவிடைகள் செய்த திருமங்கை ஆழ்வார்
தனக்கு மோட்சம் வேண்டுமென அரங்கனிடம் வேண்டினார். அவ்வாறாயின் நீ நம் தெற்கு வீட்டுக்குப் போ என்று அரங்கன் கூற அவ்விதமே தெற்கு
வீடான திருக்குறுங்குடி வந்து சேர்ந்து இங்கும் எம்பெருமானுக்கு பல நற்பணிகள் புரிந்து இறுதியில் திருக்குறுங்குடி நம்பியிடம் மோட்சம் வேண்ட
அவரும் இவருக்கு வீடு தந்து ஏற்றுக்கொண்டார். ஸ்ரீரங்கத்தின் தெற்கு கோபுரம் போலவே (ஜீயர் ஸ்வாமிகளால் ராஜகோபுரமாக கட்டப்பட்ட நிலைக்கு முன்பு இருந்தது) திருக்குறுங்குடியின் கிழக்கு கோபுரமும் அமைந்துள்ளது. திருமங்கையாழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்தது
இந்த திவ்ய தேசம்தான். இங்கு கழனிகளின் நடுவே அமைந்துள்ள திருவரசு எனப்படும் திருமங்கையாழ்வார் முக்தி பெற்ற இடம் இன்றும் நித்ய
பூஜைகளை ஏற்றுக்கொள்கிறது. இறைவனிடம் வீடு பேற்றை வேண்டி தமது இருகரத்தையும் கூப்பிய வண்ணம்
திருமங்கையாழ்வார் இங்கு எழுந்தருளியுள்ளார். இதற்கடுத்து திருவாலி திருநகரியில் மட்டுமே இதே போன்று அமைந்துள்ளது.
இங்கிருந்துதான் திருமங்கையாழ்வாரின் மங்கள விக்ரகத்தை திருவாலி திருநகரிக்கு கொண்டு சென்றனர்.
இராமானுஜர் வைணவத்தைப் பரப்பி எல்லோரையும் எம்பெருமானிடம் ஈடுபாடு செய்துவரலானார். இராமாவதாரம்,
கிருஷ்ணவதாரத்தில் தம்மால் செய்ய முடியாத இக்காரியத்தை நீர் இவ்வளவு சுலபமாய் செய்த விந்தை எப்படி என்று திருக்குறுங்குடி எம்பெருமான் கேட்க
அதற்கு இராமானுஜர் கேட்கும் விதத்தில் கேட்டால் பதில்தருவோம் என்றுசொல்ல இத்தலத்தின் நம்பியும் சீடனாக அமர்ந்து இவரை குருவாக ஏற்று
விளக்கம் கேட்க இராமானுஜர் நம்பியின் செவியில் நாராயண மந்திரத்தை யோதி இம்மந்திரத்தால்தான் என்றார்.
திருமங்கையாழ்வாருக்கு திருநறையூர் எம்பெருமான் நாராயண மந்திரத்தை உபதேசித்தார். ஆனால் இங்கு இறைவனுக்கு எம்பெருமானாரே
(எம்பெருமானார்] திருமந்திர உபதேசம் செய்து ஆசிரிய ஸ்தானம் பெற்றது இத்தலத்தில்தான்.
திருவனந்தபுரத்தில் இராமானுஜர் ஸ்ரீவைஷ்ணவத்தை போதிக்கச் செல்கையில் அதை விரும்பாத நம்பூதிரிகள் எங்கே இவரால் தம் தொழிலுக்கு
இடையூறு வருமோ என்றஞ்சி அனந்தபுர பத்மநாபனை வேண்டிக்கொள்ள அவரும் தம் எதிரே இருந்த கருடாழ்ழ்ழ்வாரை நோக்கி இவரைக்கொண்டு
திருக்குறுங்குடியிலே விட்டுவாருமென்றார். கருடாழ்வார் அவ்வாறே செய்தார்.
எனவே தான் இத்தலத்தில் கருடாழ்வார் இல்லை (திருவனந்தபுரத்தில்)
தூங்கச் சென்ற இராமானுஜர் விடிந்தெழுந்து பார்த்தபோது தாம் திருக்குறுங்குடியிலே இருப்பதை யுணர்ந்து இதுவும் அவன் மாயையே என்று
கருதிக் கொண்டு, திருமண் தரிப்பதன் பொருட்டு எப்போதும் தன் சீடனைஅழைப்பது போல் வடுகநம்பி என்றழைக்க, திருக்குறுங்குடி எம் பெருமானே
வடுகநம்பி வேடங்கொண்டு இவர் பின்னே வந்து தமது திருக்கரத்தால் இராமானுஜருக்கு திருமண் காப்பிட்டு விட்டு திருமன் பெட்டி
போன்றவற்றை எடுத்துக்கொண்டு இராமானுஜரின் பின்னேவர, எம்பெருமானை சேவித்தற் பொருட்டு திருக்குறுங்குடி திவ்ய தேசத்தில் உள்ளே நுழைய
துவஜஸ்தம்பத்தில் திருமண் பெட்டியை வைத்துவிட்டு இராமானுஜரை கடந்து சென்ற வடுகநம்பி கோவிலுக்குள் சென்றதும் மறைந்துவிட்டார். வடுகநம்பி
வராதபடியால் எம்பெருமானே இவ்விதம் செய்தாரோ என்றெண்ணி இப்பெருமானுக்கு வடுகநம்பி என்ற பெயரிட்டு அழைத்தார் இராமானுஜர்.
இதன்பின் திருவனந்தபுரம் செல்லும் வழியில் இராமானுஜரைத் தேடியலைந்து வருந்திய வடுகநம்பியின் கனவில் தோன்றிய எம்பிரான் இராமானுஜர்
திருக்குறுங்குடியில் உள்ளாரென்றுரைக்க சிலநாள் கழித்து வடுகநம்பி திருக்குறுங்குடி வந்தடைந்தார்.
வராகமூர்த்தியின் மடியிலிருந்த பூமிப்பிராட்டி அவரால் உரைக்கப்பட்ட கைசிக மகத்துவத்தைக் கேட்டுத் தாமும் பூலோகம் சென்று
இறைவனின் பெருமையைப் பரப்ப வேண்டுமென்று நினத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளாக அவதாரம் செய்தார். எனவே ஆண்டாள் அவதாரத்திற்கு
வித்திட்ட விளை நிலம் இதுதான்.
இந்தக் கைசிக புராணத்தை ஸ்ரீ பராசரபட்டர் என்பவர் ஸ்ரீரங்கத்தில் தெளிவாக வாசிக்க கேட்ட அரங்கன் பட்டரே உமக்கு மேலைவீடு தந்தோம்
என்று கூறி பட்டரை ஏற்றுக்கொண்டார். இன்றும் இக் கைசிக புராணம்,குறுங்குடி, அரங்கம், ஆழ்வார் திருகரி, திருவாலி திருநகரி, போன்ற திவ்ய
தேசங்களில் வாசிக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி எல்லா ஸ்தலங்களிலும் கொண்டாடுதல் போல் கைசிக ஏகாதசியும் எல்லாச் சேத்திரங்களிலும்
கொண்டாடப்படுகிறது. இம்மகத்துவம் பிற திவ்யதேசங்களுக்குண்டான திருவிழாக்களுக்கு இல்லை.
இத்தலத்தில் சிவபெருமானுக்கும் சன்னதி உள்ளது. திருமங்கையாழ்வார் “அவரொருவர் பக்கம் நிற்க நின்ற பண்பர்” என்று சிவன்
இவரோடு இருக்கும் இருப்பை உணர்த்துகிறார். இப்பொழுதும் திருக்குறுங்குடி ஜீயர் சுவாமிகள் பக்கம் நின்றார்க்கு குறையேதும் உண்டோ என்று கேட்கும்
வழக்கம் நடைமுறையில் உள்ளது.
குறுங்குடிக்கு வைகுந்தம் கூப்பிடுதூரமே என்று சொல்வது போல் வைகுண்டம் இங்கிருந்து மிக அருகில் என்பது பெரியோர் வாக்கு.
இன்றும் நம்பாடுவான் வேடம் பிரம்ம ராட்சசன் வேடம் கிழப்பிராம்மணன் வேடம் போட்டு கைசிக புராணத்தை நாடகமாக நடத்திடும்
பழக்கம் இங்குண்டு.
பரவுதய மார்த்தாண்டம் பந்தற்கீழுண்மை
வருராம தேவமகராசன் தருபீடத்
துறப்பனமாய் பூமகளும் ஓங்கு நிலமகளும்
விற்பனமாய் நீங்காத மேன்மையான்” என்று அழகிய நம்பியுலாவில் வரும் பாடலால் உதயமார்த்தாண்டர்
என்னும் சேர அரசரால் செய்யப்பட்ட பந்தலின் கீழ், ராமவர்மன் என்ற அரசனால் (இராமதேவன்) செய்யப்பட்ட பீடத்தின் மேல் திருக்குறுங்குடி
நம்பி எழுந்தருளியிருந்தார். இதில் குறிக்கப்படும் மன்னர்கள் யாவரும் சேர நாட்டினரே.
இத்தலத்தில் உள்ள மணியின் மேற்புரத்தில் செய்துங்க நாட்டுச் சிறைவாய் மன்னாதித்தன் தென் வஞ்சியான் என்ற பாடல் செய்துங்க நாடு
என்று குறிக்கப்படும், திருவிதாங்கோட்டு அரசர்கள் இத்திருத்தலத்திற்கு பல நற்பணிகள் செய்ததை அறிய முடிகிறது.
ஸ்ரீரங்கத்து அரங்கன் திருப்பானாழ்வாரை ஆட்கொண்ட விடத்து ஸ்ரீலோக சாரங்கன் என்னும் முனிவர் மூலமே ஆட்கொண்டார். ஆனால்
நம்பாடுவானை இப்பெருமான் நேரிலேயே சென்று ஆட்கொண்டார்.
இங்குதான் நாத முனிகளின் வம்ஸத்தவர்கள் சுமார் 50 குடும்பங்களுக்குமேல் வசித்துவந்தார்கள். அவர்கள் தமது வீட்டின் பின்னால்
உள்ள அவரைக் கொடி பந்தலின் கீழ் தனது குமாரர்கட்குத் தாளத்துடன் பாசுரங்களைக் கற்று கொடுக்கும் சமயம் இந் நம்பியே ஒரு வைணவன்
வேடத்தில் வந்து அதைக் கேட்டு ரசித்தாராம்.
வளர் அரையர் திருமனையில் வந்து அவரை நிழல்தனில் வன்காணம் கேட்ட பெருமான்’ என்ற பாடலால் உணரலாம்.
இராமானுஜர் திவ்ய தேச யாத்திரை மேற்கொண்டு செல்லுமிடத்து மைசூரில் உள்ள திருநாராயணபுரம் செல்ல அங்கு கைங்கர்யத்திற்கு
ஸ்ரீவைஷ்ணவர் வேண்டுமென்று இராமானுஜரிடம் விண்ணப்பம் செய்ய, இராமானுஜர் திருக்குறுங்குடி ஜீயருக்கு கடிதம் மூலம் தெரிவித்தார். அரையர்
வம்சத்தில் வந்த ஒருவரையும் அங்கு அனுப்பி வைத்தார். இன்றும் அங்கு அவர்கள் திருக்குறுங்குடி தாசர் என்ற பெயரில் ஸ்தானிகம் (கைங்கர்யம்)
செய்து வருகின்றனர்.
இதனை தட்சிண பத்ரி (தென்பத்ரிசாச்சிரமம்) என்று வடவாணர் கூறுவர்.
இப்பெருமாளை சேவிக்க ஒரு சமயம் இராஜாக்கள், கூட்டம் கூட்டமாய் வந்தபோது வானமாமலை மூர்த்திகளான ஸ்ரீதெய்வநாயகன்
ஸ்ரீவரமங்கைத் தாயார் முதலானோர்கள் பூமியில் அமிழ்ந்து இருப்பதாகவும், அவ்விடம் சென்றால் எந்த இடத்தைச் சுற்றிக் கருடன் பறக்கிறானோ அந்த
இடத்தில் தோண்டினால் அவர்கள் வெளிப்படுவார்கள் என்று (அசரீரீயாய்) சொல்ல அவ்விதமாய் செய்துதான் வானமாமலை திவ்யதேசத்தை ஸ்தாபித்தனர் என்பர்.
எனவே வானமாமலை திவ்ய தேசம் உருவாவதற்கும் இத்திருப்பதியே காரணமாயிற்றென்றால் அது மிகையல்ல.
இச்சன்னதி திருக்குறுக்குடி ஜீயர் ஆதிக்கத்தில் உள்ளது. இராமானுஜரால்தான் இந்த ஜீயர் மடம் உருவாக்கப்பட்டது.
இங்கிருந்து சுமார் 3 பர்லாங் தூரத்தில் திருப்பாற்கடல் என்ற ஓடையருகே திருப்பாற்கடல் நம்பி சன்னதியும் உள்ளது. இதே போன்று
இங்கிருந்து 6 1/2 மைல் தூரத்தில் மலைமேல் உள்ள ஒரு குன்றில் மலைமேல் நம்பி சந்நிதியும் உள்ளது. ஒரு ராட்சசன் ஒரு பிராம்மணனைக் கொல்லவர,
கொல்வது பாவமென்று பிராமணர் சொல்ல, அதுதான் எனது தொழில் என்று ராட்சசன் சொல்ல இருவருக்கும் விவாதம் முற்ற வேடன் வடிவங்கொண்டு
வந்த பெருமான் அவ்விருவருக்கும் உபதேசம் செய்து திருப்பாற்கடலில் ஸ்நானம் செய்ய இருவரும் மோட்சம் பெற்றனர் என்பது திருப்பாற்கடல்
ஸ்தல வரலாறு.
திருக்குறுங்குடி மேன்மையை நன்கு அறிந்து கற்றாலே அவன்தான் முழு வைணவன் அப்போதுதான் வைணவ சித்தியுண்டாகும். வைணவ பூரண
ஞானமே திருக்குறுங்குடி எம்பெருமானின் திவ்ய விஷயங்களை அறிந்து அவன்பாற் அன்பு பூண்டலால் ஏற்படுகிறது என்று நம்மாழ்வாரே
அறுதியிட்டுள்ளார்.-இவை பத்தும் திருக்குறுங் குடியதன்மேல் அறியக் கற்று வல்லார் வைட்டணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே”
எட்டெழுத்தைக் கருதிற் குறித்திட்டு நித்தம் பரவும்
சிட்டர்கட்கு திருப்பொற்பதத்தை சிறக்கத் தருமவ்
வட்டநெட்டைப் பணிமெத்தை யதிற்கிட வாரிசப்போ
குட்டினத்துக் குலம் தத்தி முத்தீனும் குறுங்குடியே.–புகழேந்திப் புலவர்
தாலத்து இழி குலத்துச் சண்டாளர் ஆனாலும்
மேல் அத்தவத்தோரின் மேன்மைத்தே -கோலக்
குறுங்குடி வாழ் மாயன் குறை கழற்கு ஆள் ஆகப்
பெறும் குடியாய் வாழ்வார் பிறப்பு –57-
கோலக் குறுங்குடி வாழ் மாயன் குறை கழற்கு ஆள் ஆகப்
பெறும் குடியாய் வாழ்வார் பிறப்பு –
தாலத்து இழி குலத்துச் சண்டாளர் ஆனாலும்
மேல் அத்தவத்தோரின் மேன்மைத்தே –
நம்பாடுவான் -ப்ரஹ்ம ராஜஸூ–கைசிக வ்ருத்தாந்தம் உட்கொண்டே இத்தை அருளிச் செய்கிறார்
ப்ரஹ்மண்யம் விலைச் செல்லுகிறது -வேத அத்யாய நாதி முகத்தாலே பகவல் லாப ஹேது வென்று
அது தானே இழவுக்கு உறுப்பாகில் த்யாஜ்யமாம் இறே
ஜன்ம வருத்தங்களின் யுடைய உத்கர்ஷமும் அபகர்ஷமும் பேற்றுக்கும் இழவுக்கும் அபிரயோஜகம்
பிரயோஜகம் பகவத் சம்பந்தமும் தத் அசம்பந்தமும் —
வாமன ஷேத்ரம் என்பதால் திருக் குறுங்குடி -வைஷ்ணவ நம்பி -வ்ருத்தாந்தம் பிரசித்தம் –
நம்மாழ்வார் திருவவதாரத்துக்கும் பீஜம்
——————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்