மூலவர் -அரவிந்த லோசனன் -செந்தாமரைக் கண்ணன் / வீற்று இருந்த திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -கருந்தடங்கண்ணி நாச்சியார்
விமானம் -குமுதா விமானம்
தீர்த்தம் -வருண தீர்த்தம் –தாமிரபரணி ஆறு
மங்களா சாசனம் -நம்மாழ்வார்
மூலவர் -தேவபிரான் / ஸ்ரீ நிவாஸன் / நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -உபய நாச்சிமார்
விமானம் -குமுதா விமானம்
தீர்த்தம் -வருண தீர்த்தம் -தாமிரபரணி ஆறு
மங்களாசாசனம் -நம்மாழ்வார்
ஸூப்ரபர் -என்ற முனிவர் யாக சாலை ஏற்படுத்தி அதைச் சோதிக்கும் பொழுது அவ்விடத்தில் மிகவும்
பிரகாசமான தராசும் வில்லும் கண்டு எடுத்தார்
தராசு ஒரு பெண்ணாகவும் -வில் ஒரு புருஷனாகவும் உருமாறினார் –
குபேரன் சாபத்தில் இருந்து விடுபட்ட துலை -தராசும் வில்லும் முக்தி அடைந்ததால் துலை வில்லி மங்கலம் என்ற
பெயர் ஏற்பட்டதாக ஸ்தல வரலாறு கூறும்
அஸ்வினி தேவதைகள் இங்கு த்வம் இருந்து அருள் பெற்றார்கள் -நவ திருப்பதிகள் கணக்கில் இவை இரண்டாக கொள்ளப்படும் –
திருக் கண்ண புரம் திருமங்கை ஆழ்வாருக்கு போலே இந்த திவ்ய தேசம் நம்மாழ்வாருக்கு –
அப்பன் கோயில் -அவதாரம் –
வித்யாதரனும் மனைவியும் சாபத்தால் தராஸாகவும் வில்லாகவும் -கலப்பையால் தீண்டி சாப விமோசனம் –
சிந்தையாலும் சொல்லாலும் செயலாலும் தேவ பிரானையே தந்தை தாயாக அடைந்த –
இருந்து இருந்து அரவிந்த லோசன் என்றே நைந்து நைந்து -இரங்குமே
ஸூ ப்ரவர் பூ பறிக்க -பெருமாளும் பின் தொடர்ந்து உதவ -திருக்கை பூவா திருக்கண் பூவா –
கருணை பொழியாதே -தாமரை –
அஸ்வினி தேவைதைகள் -மருத்துவர்கள் —
5 திருநாள் நவ கருட சேவை -6 நாள் காலையில் பிரியா விடை -கண் பார்வை மறையும் வரை குறுக்கே யாரும் வராமல் இன்றும் –
தொழும் அத்திசை உற்று நோக்கியே –
மாசி அத்யயயன உத்சவம் –பாசுரம் தொடக்கம் ஆழ்வார் எழுந்து அருளி –
மூலவர் ஸ்ரீ தேவப் பிரான், ஸ்ரீனிவாசன், ஸ்ரீ அரவிந்த லோசனன்
கோலம் நின்ற, வீற்றிருந்த
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ செந்தாமரைக் கண்ணன்
தாயார் ஸ்ரீ உபய நாச்சியார்கள், ஸ்ரீ கருந் தடங் கண்ணி நாச்சியார்
தீர்த்தம் ஸ்ரீ வருண தீர்த்தம்,ஸ்ரீ தாமிரபரணி ஆறு
விமானம் ஸ்ரீ குமுத விமானம்
மண்டலம் ஸ்ரீ பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ திருநெல்வேலி
நாமாவளி ஸ்ரீ கருந் தடங் கண்ணி ஸமேத ஸ்ரீ தேவப் பிரான் ஸ்வாமிநே ஸ்ரீ அரவிந்த லோச நாயக நமஹ
——————-
ஸ்ரீ நம்மாழ்வார் -11-பாசுரங்கள் மங்களாசாசனம் –
துவளில் மா மணி மாட மோங்கு தொலை வில்லி மங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக் காசை இல்லை விடுமினோ;
தவள ஒண் சங்கு சக்கர மென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே–6-5-1-
குமுறு மோசை விழ வொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென் மொழி யாளை நீர் உமக் காசை யின்றி அகற்றினீர்
திமிர் கொடா லொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபிரான் என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக் கொசிந்து கரையுமே–6-5-2-
கரை கொள் பைம் பொழில் தண் பணைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
உரை கொள் இன் மொழி யாளை நீர் உமக் காசை யின்றி அகற்றினீர்
திரை கொள் பௌவத்துச் சேர்ந்ததும் திசை ஞாலம் தாவி அளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங் கண் நீர் மல்க நிற்குமே–6-5-3-
நிற்கும் நான் மறை வாணர் வாழ் தொலை வில்லி மங்கலம் கண்ட பின்
அற்க மொன்றும் அறவுறாள் மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர்!
கற்கும் கல்வி யெல்லாம் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்துகந்து உண் மகிழ்ந்து குழையுமே–6-5-4-
குழையும் வாண் முகத் தேழையைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
இழை கொள் சோதிச் செந் தாமரைக் கண் பிரான் இருந்தமை காட்டினீர்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள்
நுழையுஞ் சிந்தையள் அன்னைமீர் தொழும் அத் திசை உற்று நோக்கியே–6-5-5-
நோக்கும் பக்கமெல்லாம் கரும்பொடு செந் நெல் ஓங்கு செந் தாமரை
வாய்க்கும் தண் பொருநல் வடகரை வண் தொலை வில்லி மங்கலம்
நோக்கு மேல் அத் திசை யல்லால் மறு நோக்கிலள் வைகல் நாடொறும்
வாய்க் கொள் வாசகமும் மணி வண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!-6-5-6-
அன்னைமீர்! அணி மா மயில் சிறு மானிவள் நம்மைக் கை வலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன் சின்னமும் திரு நாமமும் இவள் வாயனகள் திருந்தவே–6-5-7-
திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம் மலிந்து
இருந்து வாழ் பொருநல் வட கரை வண் தொலை வில்லி மங்கலம்
கருந்தடங் கண்ணி கை தொழுத அந் நாள் தொடங்கி இந் நாள் தொறும்
இருந் திருந்து அரவிந்த லோசந! என் றென்றே நைந் திரங்குமே–6-5-8-
இரங்கி நாள்தொறும் வாய் வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணவோ என்று கூவுமால்
துரங்கம் வாய் பிளந்தா னுறை தொலை வில்லு மங்கலம் என்று தன்
கரங்கள் கூப்பித் தொழும் அவ் வூர்த் திரு நாமம் கற்றதற் பின்னையே–6-5-9-
பின்னை கொல்?நில மா மகள் கொல்? திரு மகள் கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயங்கொலோ? இவள் நெடு மால் என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்றிருந்துறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ் வூர்த் திரு நாமம் கேட்பது சிந்தையே–6-5-10-
சிந்தை யாலும் சொல் லாலும் செய்கை யினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண் குருகூ ரவர் சட கோபன்
முந்தை ஆயிரத் துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமா லுக்கே–6-5-11-
பிரம்மாண்ட புராணமே இதைப்பற்றியும் புகழ்கிறது. பாத்ம புராணத்தில் சிறு குறிப்புத் தென்படுகிறது. வடநூற்கள் “கேதார நிலையம்” என்று
இத்திருப்பதியைக் குறிக்கின்றது.
முன்னொரு காலத்தில் ஆத்ரேய கோத்திரத்தில் உதித்த சுப்ரபர் என்னும் முனிவர் திருமாலைக் குறித்துப் பெரும் யாகஞ் செய்ய பல
இடங்களிலும் முயன்றும், ஒரு இடத்திலும் தனது மனம் ஒருநிலைப்படாது. யாகமும் தொடர இயலாது, அலைந்து தேடுங்காலை புஷ்பங்களாலும் அழகிய சோலைகளாலும், இனிய கீதம் பாடும் பறவைகளாலும் சூழப்பட்ட இவ்விடத்தை தெரிவு செய்து, தம் யாகத்தை தொடங்க எத்தனித்தார்.
இவ்விடத்தில் யாகசாலை அமைக்க பூமியை உழுது சமப்படுத்த முனைந்து கொண்டிருக்கும்போது உழுதவிடத்தில் ஒளிபொருந்திய ஒரு
தராசையும் வில்லையுங்கண்டு. ஆச்சர்யத்துடன் அதைக் கையில் எடுத்ததும், இவை இரண்டும் இளம் வயதான ஒரு ஆணாகவும், பெண்ணாகவும் மாறி
சுப்ரபரை வணங்கி நின்றனர்.
வியப்புற்ற சப்ரபர் இத்தகு சாபம் விளைந்த காரணத்தை வினவ அவர்கள் கீழ்வருமாறு கூறினர்.
வில்லாயிருந்த அந்த ஆண்மகன் சுப்ரபரை நோக்கி சுவாமி, முன் பிறப்பில் வித்யாதரன் என்னும் தேவனாயிருந்த நான், அதோ அருகிலிருக்கும்
என் மனையாளுடன் வெகுவான காமத்திலீடுபட்டு இச் சோலை வந்து மோகித்திருந்தேன். அப்போது ஆகாய மார்க்கத்தில் சென்று கொண்டிருந்த
குபேரனை நான் கண்டும் காணததுபோல் இருந்தேன். இதையறிந்த குபேரன் மிக்க சினங்கொண்டு எங்களிருவரையும் வில்லாகவும், தராசாகவும் மாறுமாறுசபித்தான்.
குபேரனின் பாதத்தில் வீழ்ந்து சாபவிமோசனம் வேண்டினேன். என்னை மதியாதிருந்த உமக்கு இச்சாபம் செல்லும். சாப விமோசனத்தை நான்
கொடேன். பின்னொரு காலத்தில் சுப்ரபர் என்னும் முனிவர் யாகம் செய்ய இவ்விடத்தை தோண்டும் போது அவர் கரங்கள் பட்டதும் சாபம் விலகும்.
அதுவரை இப்பூமியில் அமிழ்ந்து கிடக்கவும் என்று கூறி செல்லலுற்றான்.
இதுவரை இங்கு அமிழ்ந்து கிடந்த நாங்கள் இன்று உங்கள் திருக்கரம் பட்டதும் மீண்டும் பழைய நிலை எய்தினோம் என்று கூறி தொழுது நின்றனர்.
முனிவர் அவர்களை வாழ்த்திவிட்டு, தம்யாகத்தை தொடங்கலானார்.
சுப்ரபர் யாகத்தை வெகு விமரிசையாக நடாத்தி திரண்டு வந்த யாகத்தின் பலனை “அவிர்ப்பாகமாக” தேவர்களுக்கும் கொடுத்தார். அவிர்ப்பாகம் தமக்கு
கிடைக்க காரணமாயிருந்த எம்பெருமானை தேவர்களும் சுப்ரபருடன் கூடித் தொழ திருமால் அப்போதே தோன்றி காட்சியளித்தார்.
அதுமுதல் இங்கு எழுந்தருளிய பிரானுக்குத் தேவப்பிரான் என்னும் திருநாமம் நிலைக்கலாயிற்று.
மூலவர்- தேவப்பிரான் நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார்- உபயநாச்சியார்கள் (கருந்தடக்கண்ணி நாச்சியார்)
தீர்த்தம்- தாமிரபரணி, வருணதீர்த்தம்
விமானம்- குமுத விமானம்
காட்சி கண்டவர்கள்– இந்திரன், வாயு, வருணன் (அவிர்ப்பாகம் பெற்ற தேவர்கள்) சுப்ரபர்
இரட்டைத் திருப்பதிகள் என்றழைக்கப்படும் துலைவில்லி மங்கலத்தின் முதலாவது திருப்பதியான இந்த தேவப்பிரான் சன்னதி
தாமிரபரணி நதிக்கரையினிடையே அமைந்துள்ளது.
அரவிந்த லோசனப் பெருமாள் எழுந்தருளியுள்ள இரண்டாவது திருப்பதி இதிலிருந்து சுமார் அரை பர்லாங் தூரத்தில் தாமிரபரணியிலிருந்து
பிரியும் வாய்க்கால் கரையில் உள்ளது.
இவ்விரண்டுகோவில்களும் சேர்ந்து ஒரே திவ்ய தேசமாக கருதப்பட்டாலும் இரட்டை திருப்பதி என்று பெயர் பெற்றமையால் இரண்டு
பெருமாள்களின் பெயரையும் ஆழ்வார், தம் பாசுரங்களில் தனித்தனியே குறிப்பதாலும், நவதிருப்பதிகளில் இரண்டு திருப்பதியாகக் கொள்ளப்படுகிறது.
1. திருவைகுண்டம்
2. திருவரகுணமங்கை
3. திருப்புளிங்குடி
4. திருத்துலை வில்லிமங்கலம்
5. திருக்குளந்தை
6. திருக்கோளூர்
7. திருப்பேரை
8. திருக்குருகூர்
துலைவில்லி மங்கலமென்னும் இரட்டைத் திருப்பதியில் இரண்டாவதான ஸ்ரீ அரவிந்த லோசன சன்னதி
பிரம்மாண்ட புராணமே இத்தலத்தைப் பற்றி உரைக்கிறது.
தேவப்பிரான் சன்னதியில் துலையும், வில்லும் சுவர்க்கம் பெற்றபின் இவ்விடத்தே பெரும் யாகஞ் செய்து முடித்த சுப்ரபர், தினந்தோறும் அருகில்
உள்ள பொய்கையிற் சென்று தூய்மையும், மணமும், பேரழகும் வாய்ந்த தாமரை மலர்களைக் கொய்து தேவப்பிரானுக்கு வழிபாடு செய்து வரலாயினர்.
தினந்தோறும் இத்தகைய அழகு மலர்களைக் கொணர்ந்து சுப்ரபர் பூஜை செய்வதைக்கண்ட பெருமான், இம்முனிவர் மலர் பறிக்கும் அழகையும்,
எங்கிருந்து இதனைக் கொணர்கிறார் என்றும் அறிய சுப்ரபரின் பின்னாலேயே வரலாயினர்.
பொய்கையில் தியானத்தோடு பூப்பறிக்கும் சுப்ரபரைக் கண்டு வியந்து பெருமாள் அங்கேயே (தாமிர பரணியின் வடகரையிலே) நின்றார்.
இத்திருக்கோலத்தைக் கண்ட சுப்ரபர் மிகவும் வியந்து இவ்வண்ணம் பின் தொடரக் காரணம் கேட்க, பெருமானும் பக்தியோடு நீர் செய்யும் தாமரைப்
புஷ்ப பூஜைக்கு உகந்தே இங்கே நின்றோம்.
தாமரை மலர்களை விரும்பி நான் இங்கு நின்றதால் அரவிந்த லோசனன் என்ற திரு நாமமே எனக்கு நிலைத்திடும். நீவிர் எப்போதும்
போன்று தேவப்பிரானோடு, எனக்கு சேர்த்து தாமரை மலர்களாலேயே அபிஷேகம் செய்யுங்கள். எவனொருவன் தாமரை மலர்களால் இங்கு என்னை
பூஜிக்கின்றானோ அவனது சகல பாவங்களையும் நான் போக்குகிறேன், என்று திருவாய் மலர்ந்தருளினார்.
இஃதிவ்வாறிருக்க, முனிவர்கள் நடத்தக்கூடிய யாகத்தின் அவிர்ப்பாகம் யாகத்தின் முடிவில் திரண்டுவரும் பலன்) தேவர்களுக்கு மட்டுமே கிடைத்து
வந்தது.-அப்போது அசுவினி தேவர்கள் என்னும் இருவர் பிரம்மனிடம் சென்று யாகவேதியில் கிடைக்கும் அவிர்ப்பாகத்தில் தமக்கும் பங்கு வேண்டுமென்று
கேட்டனர்.
பூமியில் வைத்தியர்கள் தர்மம் பிறழாமல் வைத்தியம் செய்து வருங்காலத்தில் அத்தர்மத்தின் பலன் அசுவினி தேவர்களிரு வருக்கும்
கிடைத்து வந்ததாம். பூவுலகில் வைத்தியர்கள் தர்மத்தினின்றும் பிறழ்ந்ததால் வைத்ய தர்மப்பலன் கிடைக்காததால் அவர்கள் சென்று பிரம்மனிடம்
முறையிட்டனர். (தேவலோகத்தில் அஸ்வினி தேவர்களிருவரும் வைத்தியத்திற்கு தலையாயவர்கள் என்பது புராணக்கருத்து)
பிரம்மன் அவ்விருவரையும் நோக்கி, தங்களுக்கு அவிர்ப்பாகம் கிடைக்க வேண்டுமெனில் பூவுலகில் தாமிர பரணியின் வடகரையில் உள்ள
அரவிந்த லோசனப் பெருமாளை தாமரைப் பூக்களால் அர்ச்சித்து கடுந்தவம் மேற்கொள்ளுங்கள் என்று கூற அவ்விருவரும் அவ்விதமே ஆயிரம்
வருடங்கள் கடுந்தவம் மேற்கொண்டனர்.
இவர்களின் தவத்தை மெச்சிய ஸ்ரீமந் நாராயணன் தாமரைப் பு ஷ்பங்களைக் கையில் ஏந்திய திருக்கோலத்தோடு காட்சி தந்து
அவ்விருவருக்கும் அவிர்ப்பாகம் பெறுவதற்கான சக்தியினையும் வரத்தினையும் அளித்தார்.
அசுவினி தேவர்கள் நீராடினமையால் அங்குள்ள பொய்கை நீர் அஸ்வினி தீர்த்தமாயிற்று.
மூலவர்- ஸ்ரீஅரவிந்த லோசனன் (செந்தாமரைக் கண்ணன்)
தாயார்- கருந்தடங்கண்ணி நாச்சியார்
விமானம்- குமுத விமானம்
தீர்த்தம்- அஸ்வினி தீர்த்தம்
காட்சி கண்டவர்கள்- அஸ்வினி, தேவர்கள், சுப்ரபர்
பிரம்மாண்ட புராணத்தில் இத்தலம் சம்பந்தமாக கூறப்படும் இன்னொரு முக்கியமான கதையும் (வரலாறும்) உண்டு. கங்கை நதிக்கரையில்
உள்ள அகளங்கமென்னும் அக்ரஹாரத்தில் பரத்வாஜ கோத்திரத்தில் வந்த சத்யசீலர் என்பாருக்கு, வண்ணிசாரன், விபீதகன், சுவர்ணகேது என்னும்
மூன்று புத்திரர்கள் இருந்தனர்.
இவர்களில் விபீதகன் குஷ்ட நோயால் பீடிக்கப்பட்டு எவ்வித சிகிச்சையும் பலனளிக்காது துன்புற்று வந்தான். அவ்வமயம் அங்குவந்த
நாரதரைத் தொழுது விபீதகனுக்கு எவ்வாறு நிவாரணம் கிடைக்கும் என்று வினவினார். நாரதர் முப்பிறப்பில் இவன் தனது குருவின் பசுவைத்
திருடினான். குருவின் சாபத்தால் கைவிரல், கால் விரலில் உள்ள நகங்கள் எல்லாம் குறைந்து விகாரத்தை (குஷ்டத்தை) அடைந்துள்ளான்.
தாமிரபரணியின் வடகரையில் உள்ள அஸ்வினி தீர்த்தத்தில் நீராடி அங்குள்ள பெருமானை வழிபட்டால் குஷ்டம் நீங்கும் என்றார். பின்பு எல்லோரும்
அங்குவந்து பெருமாளைத் தரிசித்தனர். விபீதகன் அஸ்வினி தீர்த்தத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றான்.
வெகு காலம் அங்கேயே தங்கியிருந்து, இரண்டு ஸ்தலத்தின் பெருமாள்களுக்கும் எண்ணற்ற பணி விடைகள் செய்து இறுதியில் மோட்சம்
பெற்றான்.
வாயும் மனைவியர் பூ மங்கையர்கள் எம்பிராற்கு
ஆயுதங்கள் ஆழி முதல் ஐம் படைகள் தூய
தொலை வில்லி மங்கலம் ஊர் தோள் புருவம் மேனி
மலை வில் இமம் கலந்த வான் –50–
எம்பிராற்கு
வாயும் மனைவியர்
பூ மங்கையர்கள் -தாமரை மலராள் -என்றும் ஸ்ரீ தேவி பூ தேவிமார் என்றுமாம்
பங்கய மின்னொடு பார் மகள் தேவி -பூ மடந்தையும் நில மடந்தையும் தேவியர் -தேவிமார் ஆவார் திருமகள் பூமி –
ஆயுதங்கள் ஆழி முதல் ஐம் படைகள்
தூய தொலை வில்லி மங்கலம் ஊர்
தோள் புருவம் மேனி –முறையே -மலை வில் இமம் கலந்த வான் –குளிர்ச்சி பொருந்திய ஆகாசம் -போலும்
பனி பொருந்திய விசும்பு என்றுமாம் –
——————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply