Archive for the ‘Aandaal’ Category

ஸ்ரீ திருப்பாவை–கீழ்வானம் வெள்ளென்று- -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

March 2, 2021

எல்லோரும் திரண்டு வந்து அழைக்க வேண்டும்படி கண்ண பிரானுக்கு மிகவும் அந்தரங்க
வல்லபை யாயிருப்பா ளொருத்தியை உணர்த்தும் பாசுரம் இது.
இங்ஙனே இத்தனை ஆய்ப் பெண்டிரும் இவள் மாளிகை வாசலில் வந்து துவள்தவதற்கு அடி –
இவள் கண்ணபிரானுக்கு மிகவும் அந்தரங்க வல்லபையாயிருக்குமஃதேயாமென்பது
கோதுகலமுடை பாவாய் என்ற விளியாற்போதருமென்க.
கோதுகலம் – கௌதூஹலம் என்ற வடசொல் விகாரம்; ஆசை என்பது அதன் பொருள்;
கண்ணபிரானுடைய ஆசையைத் தன்னிடத்துப் பெற்றுள்ள என்றபடி.

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமல்காத்துஉன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பதவுரை

கோதுகலம் உடைய பாவாய்–கிருஷ்ணனாலே மிகவும் விரும்பத் தக்க பதுமை போன்றவளே!
கீழ் வானம்–கீழ் திசைப் பக்கத்து ஆகாசமானது
வெள்ளென்று–வெளுத்தது ;
(அன்றியும்)
எருமை-எருமைகளானவை
மேய்வான்–(பனிப் புல்) மேய்கைக்காக
சிறுவீடு–சிறு தோட்டங்களில்
பரந்தன–சென்று புக்கன
போவான் போகின்றார்-(திருவேங்கட யாத்திரை போலே) போகையையே பிரயோஜனமாகக் கொண்டு போகின்ற
மிக்குள்ள பிள்ளைகளும்–மற்றமுள்ள எல்லாப் பெண் பிள்ளைகளையும்
போகாமல் காத்து–போக ஒட்டாமல் தடுத்து
உன்னை கூவுவான்–உன்னை அழைத்தர் பொருட்டு
வந்து நின்றோம்–(உன் மாளிகை வாசலில் வந்திரா நின்றோம்)
எழுந்திராய்–(எங்களுடன் கூடுவதற்காக) எழுந்திரு;
பாடி-(கண்ண பிரானுடைய குணங்களைப்); பாடி
பறை கொண்டு–(அவனிடத்துப்) பறையைப் பெற்று,
மா வாய் பிளந்தானை–குதிரை யுருவமெடுத்து வந்த கேசி யென்னுமசுரனுடய வாயைக் கீண்டெறிந்தவனும்
மல்லரை மாட்டிய–மல்லர்களை மாளச் செய்தவனுமான
தேவாதி தேவனை–அத் தேவ தேவனை
நாம் சென்று சேவித்தால்–நாம் அணுகி அடி பணிந்தால் (அவன்,)
ஆராய்ந்து–(நமது குறைகளை) ஆராய்ந்து
ஆ ஆ என்று அருளும்–ஐயோ! என்று இரங்கி யருள்வன்;
ஏல் ஓர் எம் பாவாய் !

பாவாய்! கீழ்வானம் வெள்ளென்றதே; இனியாகிலும் எழுந்திராய் என்றழைக்க;
இதனைக் கேட்ட அவள், அதற்குள் இராக் காலம் கழிகையாவதென்? கீழ் வானம் வெளுக்கையாவதென்?
இஃது உங்களுடைய விபரீத ஞானம்;

அஞ்சுடாவெய்யோனணி நெடுந்தேர் தோன்றாதால் என்று
திங்கள் திருமுகத்துச் சேயிழை யாரான நீங்கள்
நெடும் போதாகக் கீழ்த் திசையை நோக்கிக் கொண்டிருக்கையாலே
உங்களுடைய முக நிலா கீழ்த்திசையிற் சென்று தட்டி உங்கள் முகத்திலே வந்து பிரதிபிம்பித்துத் தோன்றுகையாலே
கிழக்கு வெறுத்தது போலத் தோற்றுகிறது;
இஃது உங்களுடைய அந்யதாஜ்ஞானம்;
வேறு அடையாளமுண்டாகிற் சொல்லுங்கள் என்ன;
எருமைகள் பனிப் புல் மேய்கைக்காகச் சென்று பரந்தமை ஏற்ற அடையாளமன்றோ? என்கிறார்கள்.

சிலர், எருமை சிறை வீடு எனப் பாடங்கொண்டு, எருமைகள் சிறையினின்றும் (தொழுவத்தினின்றும்)
விடுக்கப்பட்டு என்றுரைத்தனர் அது பொருத்தமற்றதென மறுக்க.
சிறுவீடு மேய்கையாவது ஊர்ப் பசுக்களுடனே சென்று வெளி வயல்களில் மேய்வதற்கு முன்னே
அவரவர்கள் சொந்தமாக அமைத்த நல்ல பசும்புல் நிறைந்த சிறு தோட்டங்களில் மேய்கை.
நன்றாகப் பால் தருவதற்காக இப்படி சிறு வீடு மேய விடுதல் ஆயர் வழக்கம்.

இங்ஙனே ஒரு அடையாளங் கூறக்கேட்ட அவள், உங்களது முகவொளியினால் சிதறிப்போகிற இருள்களின் திரள்
எருமைகளாக உங்கட்குத் தோற்றுகின்றனவேயன்றி, அவை மெய்யே எருமைகளல்ல;
இஃது உங்களுடைய விபரிதஞானம் என்ன;

அதுகேட்ட இவர்கள், எங்கள் ஞானம் விரிதமாகில் ஆகிறது;
பொழுது விடிய வில்லையென்கைக்கு அடையாள முண்டாகில் நீ சொல்லாய் பார்ப்போம் என்ன;
அதற்கு அவள், இத் திருவாய்ப்பாடியில் அஞ்சு லக்ஷங் குடிப்பெண்களுண்டு:
இப்போது இங்கு வந்துள்ள பெண்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டிரார்; மற்றவர்களும் உணர்ந்து வர வேண்டாவோ?
அவர்கள் உணர்ந்து எழுந்து வாராமை விடியாமைக்கு அடையாளமாகக் குறையில்லை என்ன;

அதுகேட்ட இவர்கள், இவ்வளவேயோ நீ உணர்ந்தது; உன்னை யொழிந்த பெண்டிரனைவரும் உணர்ந்தெழுந்து
புறப்பட்டுப் பாவைக் களத்தை நோக்கிச் செல்ல, உன்னைத் தவிர்த்துச் செல்லுதல் உரியதன்றென்று
அவர்களைப் போக வொட்டாமல் தடுத்து, உன்னை அழைப்பதற்காக உன் மாளிகை வாசற்கடையிலே
வந்து படுகாடு கிடவா நின்றோங்காண் என்கிறார்கள்.

உத்தேச்யமானதொரு ஸ்தலத்தைச் சென்று சேர்வதிற் காட்டிலும் அத்தலத்தை நோக்கிச் செல்லுகை தானே
அர்ச்சிராதி கதி போல் போகரூபமாயிசுக்குமென்பது தோற்றும்,
போவான் போகின்றாரை என்பதனாலென்ப.
போவான் — போவதற்கு; வான் விகுதி பெற்ற தெரிநிலை வினையெச்சம்.
(வான் என்பதில் ஆன் – வினையெச்சவிகுதி; வ் – எதிர்கால இடைநிலை என்பது ஒரு சாரார் கொள்கை.)
போவதற்குப் போகின்றார் என்றால், போகையே பிரயோஜநமெனப் புலப்படுமன்றே.
போகின்றாரை என்றவிடத்துவள்ள இரண்டனுருபு மிக்குள்ள பிள்ளைகளும் என்றவிடத்துப் பிரித்துக் கூட்டியுரைக்கப்பட்டது.

இங்ஙனே இத்தனை ஆய்ப்பெண்டிரும் இவள் மாளிகை வாசலில் வந்து துவள்தவதற்கு அடி –
இவள் கண்ண பிரானுக்கு மிகவும் அந்தரங்க வல்லபையாயிருக்குமஃதேயாமென்பது
கோதுகலமுடை பாவாய் என்ற விளியாற்போதருமென்க.
கோதுகலம் – கௌதூஹலம் என்ற வடசொல் விகாரம்; ஆசை என்பது அதன் பொருள்;
கண்ணபிரானுடைய ஆசையைத் தன்னிடத்துப் பெற்றுள்ள என்றபடி.

ஸர்வ சேஷியான எம்பெருமான் சேஷ பூதர் இருக்குமிடத்தே வந்து அருள் புரியக் கடமையுடையனாயிருந்து வைத்து,
அவன் அங்ஙன் செய்யாதொழியில்
நாம் நம் ஸ்வரூபத்தைக் குலைத்துக் கொண்டாகிலும் அவனிருக்கு மிடத்தேறச் சென்று சேவித்தால்,
அவன் ஆ! நாம் காரீயத்தை நாம் செய்யத்தவறினோமே; அன்ன நடைய வணங்குகளை ஆயாஸப்படுத்தினோமே!
என்றுதான் கழிவிரக்கமுற்று நம் காரீயத்தைச் செய்து தலைக் கட்டுவன்;
எல்லாருமாகத் திரண்டு போகாமல் எழுந்து வா என்றழைக்கின்றனர், பின்னடிகளால்.

(ஸ்வாபதேசம்) குலசேகரர்க்கு அடுத்த முந்தினவரான நம்மாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது.
கோதுகலமுடைய பாவாய்! என்ற விளி நம்மாழ்வாரை வற்புறுத்தும்.
கோதுகுலமுடைய என்று வழங்கிவரும் பாடம் பரம க்ருபையுடன் மறக்கத் தக்கது.
அப்பாடம் நெடுநாளாகவே நாடெங்கும் பரவியதனாலாய அநர்த்தம் பெரிதுமுண்டு.
ஸ்ரீ பரகாலஸ்வாமி வியாக்கியானம் செய்தருளுமிடத்து குலம் குலமாக வுனக்குப் பரிசர்யை பண்ணும்படி என்றுரைத்திட்டார்.
அது, கோதுகலமுடைய என்கிற (தவறுதலான) பாடத்தில் அபிநிவேசத்தினால் போலும்.
வஸ்துதஸ்து, வடமொழியில் கௌதூஹலம் என்ற சொல் தமிழில் கோதுகலமெனத் திரீந்தது.
இதில் குகரம் நுழைய ப்ரஸக்தியில்லை.
கோதுகலம் உடைக்குட்டனேயோ என்றார் பெரியாழ்வாரும்.)

கோதுகலமாவது ஆசை; ஆசையை யுடைய என்றது.-எம்பெருமானிடத்தில் ஆசையை யுடைய,
அல்லது எம்பெருமானுடைய ஆசையைத் தன்னிடத்திலே கொண்டுள்ள என்று இரு வகையாகவும் பொருள்படும்.

பட்டர் நம்மாழ்வாரைப் பற்றிப் பேசும்போது ரீஷிம் ஜுஷாமஹே க்ருஷ்ணத்ருஷ்ணா தத்வமிவோதிதம் என்று
க்ருஷ்ண குதூஹலமே நம்மாழ்வாராக வடிவெடுத்தது என்றார்.
க்ருஷ்ண த்ருஷ்ணா என்றதும் க்ருஷ்ணனிடத்தில் த்ருஷ்ணை, க்ருஷ்ணனுடைய த்ருஷ்ணை என இருவகையாகவும் விரியும்.
இதனால் தேறின பொருளை
கைம்மா துன்பொழித்தாயென்று கைதலை பூசலிட்டே, மெய்மால யொழிந்தேன் எம்பிரானுமென்மேலானே
என்ற பாசுரத்தினால் நம்மாழ்வார்; தாமே வெளியிட்டருளினர்.
ப்ரியோ ஹி ஜ்ஞாநிதோத்யர்த்தம் அஹம் ஸ ச மம ப்ரிய: என்றபடி.
நானும் எம்பெருமானிடத்துக் குதூகலங் கொண்டேன்,
அவனும் என்னிடத்துக் குதூஹலங் கொண்டான் என்றருளிச் செய்தவர் நம்மாழ்வார்.

பாவாய்! என்ற விளியும் இவர்க்குப் பொருந்தும்.
திருவாய் மொழியில் சூழ்வினை யாட்டியேன் பாவையே என்றும்
என்பாவை போயினித் தண்பழனத் திருக்கோளுர்க்கே என்றும்
பலவிடங்களில் தம்மைப் பாவையாகச் சொல்லிக்கொண்டவர் இவ்வாழ்வார்.

எழுந்திராய் என்ற சொல்லாற்றல் நன்கு நோக்கத்தக்கது;
உட்கார்ந்திருப்பவரையன்றோ எழுந்திரா யென்பது.
மற்றையாழ்வார்களெல்லாரும் அர்ச்சையில் நின்ற திருக் கோலமாகவேயுள்ளார்;
நம்மாழ்வாரொருவரே வீற்றிருந்த திருக்கோலம்.
புத்மாஸநோபவிஷ்டம் என்கிற பூர்வாசார்ய ச்லோக ரத்னமும் இங்கு அநுஸந்தேயம்.

(கீழ்வானம் வெள்ளென்று.) உதய காலத்தில் கிழக்கு வெளுக்கும்.
இங்கும் வகுளுபூஷண பாஸ்கரோதய மாதலாலும்,
அதுதானும் கலி யுகத்தின் உதயகாலத்திலாதலாலும் கிழக்கு வெறுத்ததாகச் சொல்லிற்று.

கீழ் வானமென்றபோதே மேல் வானம் நினைவுக்கு வரும்.
நித்தியவிபூதி மேல் வானமாகும். லீலாவிபூதியானது நம்மாழ்வாருடைய திருவாய்மொழி யவதாரத்தாலே
வையம் மன்னிவீற்றிருந்து விண்ணுமாள்வர் மண்ணூடே இத்யாதிப்படியே தானே பரமபதமாயிற்று.
ஆகவே கீழ்வானமான இவ்விபூதி வெள்ளென்றது.

(எருமை சிறுவீடு மேய்வான்) வீடு என்று மோக்ஷம்; சிறு வீடு என்று கைவல்ய மோக்ஷம்.
இந்த ஸங்கேதமிட்டருளினவர் நம்மாழ்வார்;
திருவாய்மொழியில் (4-1-10) குறுக மிகவுணர்வத்தொடு நோக்கி என்ற பாசுரத்தின் பொருள் கொண்டு இஃது அறியத்தக்கது.

எருமையென்பது தாமஸ ப்ரக்ருதிகளை.
நம்மாழ்வார் திருவவதாரம் செய்தருள்வதற்கு முன்னே பலரும் தாமஸ ப்ரக்ருதிகளாய் நல்வீடு செல்லாது
சிறுவீடு முதலியவற்றிற் சென்று பாழாயினர் என்பது இங்கு ஸுசிதம்.

(மிக்குள்ள பிள்ளைகளுமித்யாதி.) மற்றைப் பிள்ளைகளையும் போகவொட்டாமல் தடுத்து
இப்பிள்ளை வாசலில் வந்துதுவள்வதனால் இவருக்குண்டான விலக்ஷணமான ஏற்றம் தோற்றுவது போல,
மற்றை யாழ்வார்களிற் காட்டில் நம்மாழ்வார்க்குண்டான ப்ரபந்நஜந கூடல்தத்வமாகிற ஏற்றம் தோற்றுவிக்கப் பட்டது.

போவான் போகின்றாரை என்ற பிரயோகம் வெகு ஆச்சரியமானது.
போவதற்காகப் போகிறவர்கள் என்று சொல்லுவதுண்டோ? இல்லை. அப்படியிருக்க ஏன் சொல்லிற்று?
போவதுதானே ஸ்வயம் ப்ரயோஜனமென்று காட்டுவதற்காகவே சொல்லிற்று.
இத்தகைய பிரயோகம் முதன் முதலாக நம்மாழ்வார் திருவாக்கில் தான் வந்தது;
திருவிருத்தத்தில் போவான் வழிக்கொண்ட மேகங்களே! என்றார்.

(உன்னைக் கூவுவான் வந்துநின்றோம்.) கூவிக்கொள்ளும் காலமின்னங் குறுகாதோ
என்னைக் கூவியருளாய் கண்ணனே கூவிக்கொள்ளாய் வந்தந்தோ என்று
பலகாலும் விரும்பினபடியே கூவுவான் வந்து நின்றோமென்கிறாள்,

(மாவாய் பிளந்த தேவாதி தேவனை) இப்போது ஆண்டாள் நோற்பதுபோல
நம்மாழ்வாரும் ஒரு திருவாய் மொழியில் நோன்பு நோற்றார்;
வீற்றிருந்தேழுலகும் என்ற திருவாய் மொழியில் ஏற்ற நோற்றேற்கு என்று முதலிலும்
வண்டமிழ் நூற்க நோற்றேன் என்று முடிவிலும் வருவது காண்க.
அங்ஙனம் நோற்ற திருவாய்மொழியில் தேவாதி தேவனை அநுபவிக்கின்ற ஆழ்வார்
மாவாய் பிளந்தானென்ற விசேஷணத்தையே முதற்பாட்டில் இட்டருளினர்;
வெம்மா பிறந்தான் தன்னை என்றது காண்க.

ப்ரதமப்ரபந்தத்தில் இமையோர் தலைவா! என்றும்;
சரம ப்ரபந்தத்தில் அயர்வறுமமரர்களதிபதி என்றும்
தேவாதி தேவனையே முந்துற முன்னம் சேவித்தாராழ்வார்.

(சென்று நாம் சேவித்தால்) வான நாயகனே! அடியேன் தொழ வந்தருளே என்று
தேவாதி தேவனை நீர் உம்மிடம் வருமாறு அழைத்தீர்;
அங்ஙனமல்லாமல் அவனிடம் நாம் சென்று சேவிக்கலாம் வாரும் என்றழைக்கிறாள் போலும்.

(ஆவா வென்று) ஆவாவென விரங்கார் அந்தோவலிதே கொல், மாவாய் பிளந்தார் மனம் என்றும்;,
அடியேற்கு ஆவா வென்னாயே என்றும்
நீர் விரும்பினபடியே மாவாய்பிளந்த பெருமான் உமக்கு ஆவாவென்பன் என்று காட்டுகிறபடி

(ஆராய்ந்து) ஆரென்னை யாராய்வார் என்ற உம்முடைய குறையும் தீரும் என்று காட்டியபடி.

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருப்பாவை–கீசுகீசு என்று எங்கும்- -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

March 2, 2021

சிலரை உணர்த்திக் கூட்டிக் கொண்டு கண்ணபிரான் பக்கற் போமவர்களன்றே இவர்கள்;
நம்மைப் போலவே அனைவரும் நன்மை பெற வேணுமென்னுங் கருத்துடையோரன்றோ.
பகவத் ஸம்பந்தம் மெய்யே உண்டாகில் தன் வயிற்றிற் பிறந்த ப்ரஜையினுடைய ஸம்ருத்திக்கு உகக்குமாறு போலவே
அனைவருடைய ஸம்ருத்திக்கும் உகக்க வேணுமன்றே?

ஆட்கொண்ட வில்லி ஜீயர் எழுந்தருளா நிற்கச் செய்தே நஞ்சீயர் தெண்டனிட்டு நிற்க,
“பகவத் விஷயத்தில் ருசி நமக்கு மெய்யே பிறந்ததில்லை காணும்’ என்று ஆட் கொண்ட வில்லி ஜீயர் அருளிச் செய்ய,
நஞ்சீயர், “உம்மைப்போல் ஆசார்யவான்கள் ஆரேனுமுளரோ? நீர் இங்ஙனே அருளிச்செய்வானென்?” என்று கேட்க;

“பாகவதர்களின் ஸம்ருத்தியைக் கண்டு மிக உகக்கை யன்றோ பகவத் விஷயத்தில் ருசி மெய்யே பிறக்கையாவது;
அஃது இல்லாமையைப் பற்றச் சொன்னேன் காணும்” என்று ஆட்கொண்ட வில்லி ஜீயர் அருளிச் செய்தார்
என்ற ஐதிஹ்யம் இங்கு நினைக்கத் தக்கது–

கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.

பதவுரை

பேய் பெண்ணே–மதி கெட்ட பெண்ணே!
எங்கும்–எல்லா விடங்களிலும்
ஆனைச் சாத்தன்–பரத்வாஜ பக்ஷிகளானவை
கலந்து–(ஒன்றோடொன்று) ஸம்ஸ்லேக்ஷித்து
கீசுகீசு என்று–கீச்சு கீச்சு என்று
பேசின–பேசிய
பேச்சு அரவம்–பேச்சினுடைய ஆரவாரத்தை
கேட்டிலையோ–(இன்னும் நீ) கேட்கவில்லையோ?
வாசம்–பரிமள வஸ்துக்களினால்
நறு–மணம் கமழா நின்றுள்ள
குழல்–கூந்தலை யுடைய
ஆய்ச்சியர்–இடைப் பெண்கள்
காசும்–(கழுத்தில் அணிந்துள்ள) அச்சுத் தாலியும்
பிறப்பும்–ஆமைத் தாலியும்
கலகலப்பு–கலகலவென்று சப்திக்கும் படியாக
கைபேர்த்து–கைகளை அசைத்து
மத்தினால்–மத்தாலே
ஓசை படுத்த–ஓசை படுத்தின
தயிர் அரவம்–தயிரின் ஒலியையும்
கேட்டிலையோ–கேட்க வில்லையோ?
நாயகப் பெண் பிள்ளாய்–பெண்களுக்கெல்லாம் தலைமையாயிருப்பவளே
நாராயணன் மூர்த்தி கேசவனை–ஸ்ரீமந் நாராயண அவதாரமான கண்ண பிரானை
பாடவும்–(நாங்கள்) பாடா நிற்கச் செய்தேயும்
நீ–நீ
கேட்டே–(அப் பாட்டைக்) கேட்டு வைத்தும்
கிடத்தியோ–(இங்ஙனே) உறங்குவாயோ?
தேசம் உடையாய்–மிக்க தேஜஸ்ஸை யுடையவளே!
திற–(நீயே எழுந்து வந்து கதவைத்) திற
ஏல் ஓர் எம் பாவாய்!

இங்ஙனே எல்லார்க்குமொக்க இந் நன்மை உண்டாக வேணுமென்ற பாரிப்புடன் எல்லாரையுந் திரட்டிக் கொண்டு
மற்றொருத்தியின் மாளிகை வாசலிற் சென்ற ஆயர் மாதர், ‘பெண்ணே! போது விடிந்தது காண், எழுந்திராய்’ என்ன;
‘விடிந்தமைக்கு அடையாளமென்?’ என்று அவள் கேட்க;
‘ஆனைச் சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் முதலியன அடையாளமல்லவோ?’ என்கிறார்கள்.

கீசுகீசு – ஒலிக் குறிப்பு; அநக்ஷரரஸமாயிருக்கிறபடி
‘ஆனைச் சாத்தம்’ எனினும் ‘ஆனைச் சாத்தன்’ எனினும் ஒக்கும்;
பரத்வாஜ பக்ஷி-வலியனெனப்படுமென்ப “செம்போத்து” என்பாருமுளர்.
உணர்த்த வந்த ஆய்ச்சிகள் ஆனைச் சாத்தத்தினுடைய தொனி விடிவுக்கு அடையாளமன்றோ?’ என்ன;
‘ஒரு ஆனைச் சாத்தமுணர்ந்த விது விடிவுக்கு அடையாளமாகப் போருமோ?’ என்று அவள் கேட்க;

இவர்கள் “எங்கும்” என்ன;

‘எங்கும் நீங்களில்லையோ அவற்றை உணர்த்துகைக்கு’ என்று அவள் சொல்ல;

‘அவை நாங்களுணர்த்த உணர்ந்தனவல்ல; கலந்து பேசின பேச்சுக் காண்’ என்று இவர்கள் சொல்ல;

‘இரவெல்லா முறங்கிப் பொழுது விடியும் போதோ கலப்பது?’ என்று அவள் கேட்க;

‘மரக்கலம் (கப்பல்) ஏறிப் போமவன் மீண்டு வருமளவும் ஜீவநமேற்றிக்கொண்டு போவது போல,
இவையும் பிரிவு காலமாகிய விடியற் காலத்திலே கலந்து பகல் முப்பது நாழிகைக்கும் விளைநீர் அடைத்துக் கொண்டு
‘அந்தோ! பிரிவு வருகின்றதே!’ என்னுந் தளர்த்தி தோற்றப் பேசுகிற பேச்சு
விடிவுக்கு அடையாளமாக வற்றன்றோ என்கிறார்கள்.

இங்ஙன் கூறக் கேட்ட அவள்,
மாளிகைகளில் துதி பாடகர்கள் வம்சாவளி சொல்லக்கேட்டு உணரக் கடவார்
பறவைகளின் பேச்சுக் கேட்டு உணர வேண்டும்படியாவதே! அஹஹ! இஃதென்ன விபரீத காலம்!’ என்று வெறுத்துக் கிடக்க,

பேய்ப் பெண்ணே! என்று நிந்திக்கின்றனர்.
பாகவத ஸம்ஸ்லேஷத்திற்கு வரைந்து ஓடி வாராமே ஆறியிருக்கையின் மிக்க பேய்த்தனமில்லையே.

இங்ஙன் கூறக்கேட்ட அவள், ‘நள்ளிருட்கண் வந்து பொழுது விடிந்ததெனப் பிதற்றுகின்ற நீங்களன்றோ பேய்ப் பெண்கள், என்ன;

இவர்கள், ‘பொழுது விடிந்ததில்லை’ என்கிற நீ தான் பேய்ப்பெண் என்ன;

அவள், ‘விடிந்தமைக்குக் கூறிய இவ்வடையாளம் போதாது; வேறடையாளமுண்டாகிற் சொல்லுங்கள்’ என்ன;

இவ்வூரில் ஆய்ச்சிகள் அனைவரும் உணர்தெழுந்து தயிர் கடைகிற ஓசைகூடச் செவிப்பட்டதில்லையோ?
அஃது அடையாளமாகவற்றேயன்றோ? என்கிறார்கள்.

காசு பிறப்பு – மாதர் அணியும் ஆபரண விசேஷம்.
கல கலப்ப – ஒலிக் குறிப்பு.
கடைய வேண்டிய தயிர் அளவற்றுள்ளமையாலும்,
கடைகின்ற தங்களுடைய ஸௌகுமார்யத்தாலும்,
கிருஷ்ணன் அருகில் வந்திருந்து கொண்டு ‘தயிரை மோராக்க வொட்டேன்’ என்று கடை கயிற்றைப் பற்றி வலிக்கையாலும்
கடைகையிலுள்ள அருமையைக் கூறுவது, கை பேர்த்து என்பது.

கை பேர்த்து – தயிர் கடைகையில் கையை வியாபரிக்கச் செய்து என்றபடி.
கடைகிற போதைச் சிரமத்தாலே மயிர்முடி கட்டு நெகிழ்ந்து முடைநாற்றத்தை மறைக்கும்படி
மணங்கமழா நின்றுள்ளமைபற்றி ‘வாசநறுங் குழலாய்ச்சியர்’ எனப்பட்டது.

“உத் காயதீநாம அரவிந்த லோசநம் வரஜாங்கநாநாம் திவமஸ்ப்ருசத் த்வநி:-
தத்நச்ச நிர்மந்தந சப்த மிஸ்ரிதோ நிரஸ்யதே யேந திசாம மங்களம்.”
கண்ணபிரானுடைய கண்ணழகுக்குத் தோற்றுப் பாடுகிற ஆயர் மாதருடைய பாட்டினொலி
தயிர் கடைகிற ஓசையோடே கலசிப் பரமபதத்தே செந்றொலித்ததெனப்; புராண நூல் கூறுமாறறிக.

ஆய்ச்சிகள் தயிர் கடையும்போதும் கண்ணபிரானைப் பாடுவார்களோ வென்னில்;
“விக்ரேதுகாமா கில கோப கந்யா முராரி பாதார்ப்பித சித்த வ்ருத்தி:-
தத்யாதிகம் மோஹவசாதவோசத் கோவிந்த தாமோதர மாதவேதி.”
ஓராய்ப்பெண், கண்ணபிரான் முரனை முடித்த வீரத்தில் தோற்று அவன் பக்கல் கருத்தை ஊன்ற வைத்து
வேறு சிந்தையின்றியிருக்க, வீட்டிலுள்ள பெரியோர் ‘இவளை இதினின்றும் மீட்கும் விரகு ஏதோ’ என்று பார்த்து,
பாலையும் தயிரையும் நெய்யையும் தந்து ‘இவற்றை விற்றுவா’ என்றனுப்ப,
அவளும் அங்ஙனமே விற்கச் செல்ல, நினைவு கண்ணபிரான் பக்கலிலாகையாலே,
‘கோவிந்தன் வாங்க வில்லையோ கோவிந்தன், கிருஷ்ணன் வாங்க வில்லையோ க்ருஷ்ணன்,
மாதவன் வாங்கவில்லையோ மாதவன்’ என்று க்ருஷ்ண நாமங்களைக் கூறிக் கொண்டு திரிந்தாள் என்னா நின்றால்,
தயிர் கடையும் போது கண்ணபிரானைப் பாடுவார்களென்னத் தட்டுண்டோ? நிற்க.

இவ்வடையாளம் சொல்லக்கேட்ட அவள், ‘பெண்காள்! இப்போது இப்பாடி பண்டு போலோ இருப்பது?
க்ருஷ்ணன் பிறந்த பின்னர் வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளற் பெரும் பசுக்களாகையாலே
அறுபது நாழிகையும் கறப்பது கடைவதாய்ச் செல்லுமத்தனையேயன்றோ? இது விடிவுக்கு அடையாளமாகவற்றோ!
என்று அவர்கட்கு மறுமாற்றத்திற்கு இடமில்லாதபடி கூற,
வேறு விடை சொல்ல வல்லமையின்மையாலே நாயகப் பெண்பிள்ளாய்! என்கிறார்கள்.
இங்ஙனே நாங்கள் சொல்லுமடையாளங்கட்கெல்லாம் அந்யதாஸித்தி சொல்லுகிறதற்கு அடி
உன் வீறுடைமையன்றோ என்றவாறு.

இப் பாட்டில், ஒருகால் ‘பேய்ப்பெண்ணெ!’ என்பது,
மற்றொருகால், ‘நாயகப்பெண்பிள்ளாய்!’ என்பதாய்ச் சொல்லுகிறபடியைக் காண்மின்;

“ஒரு மிதுநமாய்ப் பரிமாற நின்றால் தாழச் சொன்ன
போதும் உயரச் சொன்ன போதுமாயிறே யிருப்பது” என்பர், அழகிய மணவாளப்பெருமாள் நாயனார்;”

‘பேய்ப்பெண்ணே’ என்றத்தோடு ‘நாயகப்பெண்பிள்ளாய்’ என்றத்தோடு வாசி இல்லையிறே
அகவாயில் பாவம் ஒன்றாகையாலே” என்பர், பெரியவாச்சான் பிள்ளை.

நாயகப் பெண்பிள்ளாய்! — இத்திரளுக்கெல்லாம் நீ தலைவியானபடி இதுவோ?
எல்லோரையும் திரட்டிக் கொண்டு போய் உத்தேச்யத்தைப் பெறுகை யன்றோ தலைவியின் காரியம் என ஏசியவாறு.

இங்ஙன் ஏசக் கேட்ட அவள், ‘என்னை நீங்கள் தலைவி என்னலாமோ, உங்களுக்கு நான் அடிமைப்பட்டவளல்லேனோ?
இதோ வந்து கதவைத் திறக்கிறேன்; எம்பெருமானுடைய சில அபதாநங்களைப் பாடிக்கொண்டிருங்கள் என்ன;
இவர்கள் கேசி வத வ்ருத்தாந்தத்தைப் பாடத் தொடங்கினார்கள்.

கேசியின் வாயைக் கீண்டெறிந்த வரலாறு:–
கம்ஸனால் ஏவப்பட்ட அஸுரர்களில் கேசி என்பவன் குதிரையின் உருவத்தோடு ஆயர்கள் அஞ்சி நடுங்கும்படி
கனைத்துத் துரத்திக் கொண்டு கண்ணபிரான் மேற் பாய்ந்து வர,
அப் பெருமான் திருக் கையை நன்றாகப் பெருக்கி நீட்டி அதன் வாயிற்கொடுத்துத் தாக்கிப் பற்களை உதிர்த்து
உதடைப் பிளந்து அதனுடம்பையும் இருபிளவாக வகிர்ந்து தள்ளினன் என்பதாம்.

நாராயணன் மூர்த்தி கேசவனை –
நாராயணமூர்த்தியாகிய கேசவனை;
அன்றி,
மூர்த்தி என்று ஸ்வாமிக்கும் பெயராகையாலே,
நாராயணாவதாரமாய் ஸர்வ ஸ்வாமியான கேசவனை என்றும் உரைக்கலாம்.
கேசவன் என்பதற்கு,
கேசியைக் கொன்றவன், சிறந்த மயிர் முடியையுடையவன், அயனரர்கட்குத் தலைவன் என மூவகைப் பொருள்களுண்டு.

இவர்கள் கேசவனைப் பாடச் செய்தேயும் அவள் பேசாதே கிடக்க,
நீ கேட்டே கிடத்தியோ என்கிறார்கள்.
நாங்கள் பாடின பாட்டு உன் உறக்கத்திற்குத் துடை குத்தினவாறாயிற்றுப் போலுமென்ற கருத்துக் காண்க.
உள்ளே அவள் எம்பெருமானுடைய வெற்றியை அநு ஸந்தித்துக் கொண்டு பேசாதே கிடந்தமையால்,
இவர்கள் சாலக வாசலாலே நோக்கிக் கண்டனர்;
எம்பெருமானுடைய விஜயா நுஸந்தாநத்தினால் அவள் வடிவிற்றோன்றியுள்ள புகரைக் கண்டு
“தேசமுடையாய்!” என விளித்துக் கதவை திறவென்கிறார்கள்.

கிடத்தி – முன்னிலை யொருமை வினைமுற்று.
தேசம் — தேஜஸ் என்னும் வடசொல் விகாரம்.

(ஸ்வாபதேசம்)–
இது; பெரியாழ்வார்க்கு அடுத்த முந்தினவரான குலசேகராழ்வாரை யுணர்த்தும் பாசுரம்,
‘பேய்ப்பெண்ணே!, நாயகப் பெண்பிள்ளாய்?, தேசமுடையாய்!, என்ற மூன்று விளிகளும்
குலசேகராழ்வாரை வற்புறுத்துவன.
பெருமாள் திருமொழியில் மெய்யில் வாழ்க்கையை என்றவொரு பதிகத்தினால்
தம்மைப் பெரும் பேயராகச் சொல்லிக் கொண்டவர் இவ்வாழ்வார்.

ஏர் மலர்ப்பூங்குழல், ஆலை நீள் கரும்பு, மன்னு புகழ்க் கௌசலை தன் என்ற பதிகங்களில்
பல பெண்களின் தன்மையை யடைந்து பேசினாருமிவர்.

“கொல்லி காவலன் கூடல் நாயகன்” என்று அரசரான தன்மை தோற்றப் பேசினராதலால்
நாயகப் பெண் பிள்ளாய் என்றது.
அன்றியும்,
ஒரு ஹாரத்தில் நட்ட நடுவிலுள்ள மணியை ‘நாயகக்கல்’ என்பதுண்டு.
குரு பரம்பரையில் எம்பெருமானாரை நடுநாயகமென்று யதிராஜ ஸப்ததியில் தேசிகன் கூறினர்;
யதிராஜேந நிபத்த நாயக ஸ்ரீ: மஹதீ குரபங்க்தி ஹாசயஷ்டி:” என்கிறார்
அது போலவே ஆழ்வார்களுள் குலசேகரர் நடுநாயகமாக வுள்ளவர்.
பொய்கையார் பூதத்தார் பேயார் மழிசையர் மாறன் என முன்னே ஐவர்;
பட்டநாதன் கோதை தொண்டரடிப்பொடிகள் பாண்பெருமாள் கலியன் எனப்பின்னே ஐவர்;
நடுவே குலசேகரர்.
ஆகவே இதுபற்றயும் நாயகப்பெண் பிள்ளாய் என்ற பிறி நன்கு பொருந்தும்.

(தேசமுடையாய்!)
பகவத் கீதையில் (18-43) (சௌர்யம் தேஜோத்ருதிர் தாக்ஷ்யம் — க்ஷாத்ரம் கர்ம ஸ்வபாவஜம்.)
என்று தேஜஸ்ஸு க்ஷத்திரிய தர்மமாகச் சொல்லப்பட்டிருப்பதற்கிணங்க இந்த விளி
இவ்வாழ்பாருடைய க்ஷத்திரியத்வத்தைத் தெரிவிக்கும்.
அன்றியும்,
“தேவத்வமும் நிந்தையானவனுக்கு ஒளிவரும் ஜநிகள் போலே ப்ரஹ்மஜன்மமும் இழுக்கென்பார்க்குப்
பண்டை நாளில் பிறவி உண்ணாட்டுத் தேசிறே” என்ற ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸுக்தியின்படியும்,
அதற்கு மூலமான “மண்ணாட்டிலாராகியெவ்விழிவிற்றானாலும்;, ஆழியங்கைப் பேராயற்கு
ஆளாம் பிறப்பு – உண்ணாட்டுத் தேசன்றே” என்ற பெரிய திருவந்தாதிப் பாசுரத்தின்படியும்
பகவத் சேஷத்வத்திற்கு அநுகூலமான பிறப்பே தேஜஸ்ஸென்று நிர்ணயிக்கப்படுகிறது;
அப்படிப்பட்ட பிறப்பை ஊனேறு செல்வத்து என்ற பதிகத்தில் பாசுரந்தோறும் ஓரோ விதமாக விரும்பினவர்
இவ்வாழ்வாரேயாதலால் தேசமுடையார் இவரேயாகத்தகும்.

இப்பாட்டில் “ஆனைச்சாத்தன்” என்ற பதப்பிரயோகம் கவனிக்கத் தக்கது.
இச்சொல் மலையாள பாஷையிலிருந்து திசைச் சொல்லாகத் தமிழில் வழங்குவதென்பர்.
(ஆன சாதம்) என்று மலை நாடர் வலியனென்னும் பறவையை வழங்குவராம்.
இவ்வாழ்வார் மலைநாட்டில் திருவவதாரித்தவராதலால் அத்திசைச்சொல் இங்குட் பரவசமாகவே அமைந்தது போலும்.

காசும் பிறப்பும் என்று ஆபரண விசேஷங்களைப் பற்றின ப்ரஸ்தாவமிருப்பது இவ்வாழ்வாருடைய சரிதையில்
ஆபரண ப்ரஸ்தாவமுள்ளவாற்றை ஒருவாறு நினைப்பூட்டும்.
“ஆரங்கெடப் பரனன்பர் கொள்ளாரென்று அவர்களுக்கே வாரங்கொடு குடப்பாம்பில் கையிட்டவன்” என்ற தனியனும் ஸ்மரிப்பது.

“வாசநறுங் குழ லாய்ச்சியர் மத்தின லோசைபடுத்த தயிரரவம்” என்றது பெருமாள் திருமொழியில்
“கெண்டை யொண்கணை மடவாளொருத்தி கீழையகத்துத் தயிர் கடையக்கண்டு…..
வண்டமர் பூங்குழல் தாழ்ந்துலாவ….. தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம்” என்ற பாசுரத்துச் சொற் சுவைகளை நன்கு நினைப்பூட்டும்.

(நாராணயன் மூர்த்தி கேசவனைப் பாடவும்) திருஷ்ணாவதாரத்தில் குதிரை வடிவாக வந்த கேசியென்னு மஸுரணை
வதஞ்செய்ததனால் கேசவனென்றது.
இவ்வாழ்வார் தமது திருமொழியில் முதன் முதலாக இந்த வரலாற்றையே பேசியநுபவித்தார்
மாவினை வாய் பிளந் துகந்தமாலை என்று.
ஸ்வ ப்ரபந்தத்தை “நலந்திகழ் நாரணனடிக் கீழ் நண்ணுவாரே” என்று நாராயணனைப் பாடித் தலைக் காட்டினார்.

(கேட்டே கிடத்தியோ) இவ்வாழ்வார் நாடோறும் அந்தணர்களைக் கொண்டு ஸ்ரீராமாயண பாராயணஞ் செய்வித்துத்
தாம் கேட்டவர்.
கேட்டு, இருந்தவிடத்திலிராமல் படையெடுத்துஞ்சென்றவர்.

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருப்பாவை–புள்ளும் சிலம்பின காண்- -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

March 2, 2021

இப் பாட்டு முதல், மேல் “எல்லே யிளங்கிளியே” என்ற பாட்டளவாகப் பத்துப் பாசுரங்களாலே
அநுபோக்தாக்களைக் குறித்துத் திருப்பள்ளியெழுச்சி பாடப் படுகின்றது.

கிருஷ்ணாநுபவத்திற்குப் பிரதான உபகரணமான காதலும்,
ஏகாந்தமான காலமும்,
கோவலக் கிழவர்களின் இசைவும்
பஞ்சலக்ஷங்குடியிற் பெண்களுக்கும் ஒருங்கே வாய்த்திருக்கையாலே
அவரவர் தனித்தனியே அநுபவிக்க அமைந்திருக்க,
ஒருவரை ஒருவர் சென்றெழுப்புவானென் எனில்;

பெருக்காற்றில் இழிவார் துணையின்றி இழிய மாட்டாதவாறு போல’
“காலாழும் நெஞ்சழியுங் கண் சுழலும்” என்றும்,
“செஞ்சொற்கவிகாள்! உயிர்காத்தாட் செய்மின்” என்று மருளிச் செய்தபடி –
இழிந்தாரைக் குமிழ் நீரூட்டவல்ல ஆழியானென்னுமாழமோழையில் இழியுமிவர்கள்
துணையின்றி இழிய அஞ்சித் துணை கூட்டிக் கொள்வதற்காக ஒருவரை ஒருவர் உணர்த்துகின்றனரென்க.

அன்றியும்,
“ஏக: ஸ்வாது ந புஞ்ஜீத”
“இன் கனி தினயருந்தான்” என்றபடி சுவைமிக்க பொருள் தனியே புஜிக்கத் தக்கதல்லாமையால்
தோழிமார்களுடன் கூடிப் புசிக்கப் பாரிக்கின்றன ரென்றுங்கொள்க.

“வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து” என்றபடி
பகவத் ஸமாச்ரயணம் பாகவத புரஸ்கார பூர்வகமாகச் செய்யப்பட வேண்டுதலால்,
அதனை அனுட்டித்துக் காட்டுகின்றனரென்பது, ஆழ்கருத்து.

இனி. அனைவர்க்கும் கிருஷ்ணாநுபவத்தில் அவா ஒத்திருக்குமாகில்
சிலர் எழுப்பச் சிலர் உறங்குகை அவாவிற்குக் குறையன்றோ எனின்; அன்று;

கண்ண பிரானது திவ்ய சேஷ்டிதங்களும் கல்யாண குணங்களும்
சிலரை நஞ்சுண்டாரைப் போலே மயங்கப்பண்ணும்;

சிலரை இருந்தவிடத்தில் இருக்கவொட்டாதே துடிக்கப் பண்ணும்;

ஆகையால் அவாவிற்குக் குறையாமாறு ஒன்றுமின்றென்க.

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்தங் கரிஎன்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

பதவுரை

புள்ளும்-பறவைகளும்
சிலம்பின காண்–(இரை தேடுகைக்காக எழுந்து) ஆரவாரங்கள் செய்யா நின்றன காண்;
புள் அரையன்-பறவைத் தலைவனான பெரிய திருவடிக்கு
கோ–ஸ்வாமியான ஸர்வேஸ்வரனுடைய
இல்லில்–ஸந்நிதியிலே
வெள்ளை–வெண்மை நிறமுடையதும்
விளி-(அனைவரையும்) அழையா நிற்பதுமான
சங்கின்–சங்கினுடைய
பேர் அரவம்–பேரொலியையும்
கேட்டிலையோ–செவிப்படுத்துகின்றலையோ?
பிள்ளாய்–(பகவத் விஷய ரஸ மறியப் பெறாத) பெண்ணெ!
எழுந்திராய்–(சடக்கென) எழுந்திரு;
பேய் முலை நஞ்சு–பூனையின் முலையில் (தடவிக் கிடந்த) விஷத்தை
உண்டு-(அவளது ஆவியுடன் அமுது செய்து
கள்ளம் சகடம்–வஞ்சனை பொருந்திய (அஸுரா விஷ்டமான) சகடமானது
கலக்கு அழிய–கட்டுக் குலையும்படி
கால்–திருவடியை
ஒச்சி–ஓங்கச் செய்தவனும்
வெள்ளத்து–திருப்பாற்கடலில்
அரவில்–திருவனந்தாழ்வான் மீது
துயில் அமர்ந்த–திருக்கண் வளர்ந்தருளின
வித்தினை-ஐகத் காரண பூதனுமான எம்பெருமானை
முனிவர்களும்–மநந சீலரான ரிஷிகளும்
யோகிகளும்–யோகப் பயிற்சியில் ஊன்றினவர்களும்
உள்ளத்து கொண்டு–(தமது) ஹ்ருதயத்தில் அமர்த்திக் கொண்டு
மெள்ள எழுந்து-(ஹ்ருதயஸ்தனான அவ்வெம்பெருமான் அசையாதபடி) ஸாவதாநமாக எழுந்து
அரி என்ற–‘ஹரிர் ஹரிர் என்ற
பேர் அரவம்-பேரொலியானது
உள்ளம் புகுந்து-(எமது) நெஞ்சிற் புகுந்து
குளிர்ந்து–குளிர்ந்தது;
ஏல் ஓர் எம் பாவாய்
(இனியாகிலும் எழுந்திரு என்று ஒருத்தியை உணர்த்துகின்ற படி)

இனி இப் பாட்டின் கருத்து:-
முந்துற உணர்ந்த பெண் பிள்ளைகள், பொழுது வடிந்தமையையு மறியாமற் கிடந்துறங்குகின்றாளொருத்தியின்
மாளிகை வாசலிற் சென்று சேர்ந்து
பிள்ளாய்! விடிந்த பின்பும் இங்ஙனே கிடந்துறங்கலாகுமோ?’ என்று வெறுக்க,

அதனைக் கேட்ட அவள் ‘பொழுது விடிந்தாலன்றோ எழுந்திருக்க வேண்டுவது;
பொழுது விடிந்தமைக்கு அடையாளமேது? என்று கேட்க;
‘நாங்கள் இங்ஙனே உணர்ந்து வந்தது அடையாளமாகவற்றன்றொ?’ என்று இவர்கள் கூற,
அதற்கு அவள் ‘உறங்கினார் உணரிலன்றோ விடிந்ததாவது;
“கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கு முண்டோ கண்கள் துஞ்சுதலே” என்றபடி
உங்களுக்கு உறக்கந்தானில்லையே; ஆன பின்பு உங்களுணர்த்தி விடிவுக்கு அடையாளமாக மாட்டாது;

வேறடையான முண்டாகிற் சொல்லுங்கள்’ என்ன;
“புள்ளுஞ் சிலம்பினகாண்” என்று முந்துற ஓரடையாளங் கூறுகின்றனர்.

பறவைகள், மார்கழி நீராடவேணு மென்னும் விரைவுமின்றி,
வைகி எழுந்திருக்கில் குற்றமுண்டென்னுமறிவுமின்றி யிருக்க உணர்ந்தது –
காலமுணர்த்த உணர்ந்தபடியாதலால் இது போது விடிவுக்கு ஏற்ற அடையாளமாமென்பது இவர்களின் கருத்து.

இவ்வடையாளங் கூறக்கேட்ட அவள்,
‘உங்களுணர்த்தி விடிவுக்கு அடையாளமாக மாட்டாதவாறு போலவே
உங்களூரிலுள்ள பறவைகளின் உணர்த்தியும் விடிவுக்கு அடையாளமாக மாட்டாது;
“ஊரும் நாடு முலகமுந்தன்னைப் போலவனுடைய, பேருந்தார்களுமே பிதற்ற” என்றாற்போல
நீங்கள் நுமதருகிலுள்ள அனைத்தையும் தமமோடொத்தன வாக்குமவரர்களன்றோ’ என்று கூற,
அதனைவிட்டு வேறடையாளங் கூறுகின்றனர் –

திருப்பள்ளியெழுச்சிக்கு ஊதின சங்கின் ஒலியும் செவியிற்பட்டதில்லையோ? என்கிறார்கள்.

கண்ண பிரானுடைய குணங்களில் ஈடுபட்டிருப்பார் உறையுமிடமான திருவாய்ப்பாடியிலும் கோயிலுண்டோ என்னில்;
“ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாமபவந்கதா:” என்று திருவயோதியில் சக்ரவர்த்தித் திருமகனாருடைய
குணங்களிலே தோற்றுச் செல்லா நிற்கச் செய்தே,
“ஸஹ பத்ந்யா விசாலாக்ஷயா நாராயணமுபாகமத்” என்று பெருமாள் பிராட்டியுடன் கூடிப்
பெரிய பெருமாளை உபாஸித்ததாகச் சொல்லிற்றிறே;
அங்குப் போலே இங்கும் ஒரு திருக்கோயில் உண்டென்னலாம்.

புள் அரையன் –
புள் என்றே பெரிய திருவடியைச் சொல்லிற்றாய்,
அரையன் என்று அவற்குத் தலைவனான எம்பெருமானைச் சொல்லிற்றாகவுமாம்.

இப்படி பெரிய திருவடியை யிட்டு எம்பெருமானை நிரூபிக்கிறவிது – “ராமம் லக்ஷமண பூர்வஜம்” என்று
இளைய பெருமாளையிட்டுப் பெருமாளை நிரூபித்தாற்போலுமென்ப.
எம்பெருமானை அடியார் பக்கலிற் கொண்டு வந்து கூட்டுமவன் கருடனாகையாலே அவனிடத்துள்ள உகப்புத் தோற்ற
அவனையிட்டு நிரூபிக்கிறபடி;
“புள்ளின் பின் போன தனி நெஞ்சமே” என்றிருக்குமவர்களன்றோ.

இனி இவ்வடையாளத்துக்கும் மறுப்புக் கூறுகின்றாள் உள்ளுறங்குமவள்;-
“வெள்ளை விளி சங்கின் பேரரவம்” என்றீர்கள்;
சங்குக்கு வெண்மை நிறம் இயற்கை யாகையால், வெள்ளை என்ற அடைமொழி வியர்த்தம்;
விளி சங்கு என்கிறீர்கள்; சாமர் தோறும் அழைக்கக் கடவதான சங்கு என்றதாகிறது;
ஆகையாலே இது பொழுது விடிவை உணர்த்தவல்ல சங்கன்று;
பேரரவம் என்கிறீர்கள்; பெருத்த ஒலியாகில் உங்களுக்குப் போலே எனக்கும் செவிப்பட வேணும்;
செவிப்படாமையாலே அப்ரஸித்தம்;
ஆன பின்பு நீங்கள் சொல்லுமதெல்லாம் போது விடிவுக்கு அடையாளமாக மாட்டாது என்றனள்.

இனி இதற்கு ஸமாதாநம் –
கேட்டிலையோ என்பது.
இப்படிப்பட்ட பேரொலியும் செவிப்படாதபடி நீ உள்ளே செய்யுஞ்செய்கை என்னே என்கை.

பிள்ளாய் – பேதைமை யுடையவளே! என்றபடி;
இது ஸாபிப்ராய ஸம்போதநம். பாகவத ஸம்ஸ்லேஷத்தளவு முண்டானாலல்லது பகவத் விஷய
ப்ராவண்த்திற்குப் பரிபூர்த்தியில்லை; நீ அங்ஙனன்றியே கிருஷ்ண ஸம்ஸ்லேஷத் தளவிலேயே நின்று
பாகவத ஸம்ஸ்லேஷத்தில் விருப்பமற்றிருப்பது பேதைமையின் பணியன்றோ என்றவாறு.

இங்ஙன் சொல்லக் கேட்ட அவள், “நானோ கிருஷ்ண ஸம்ஸ்லேஷத்தளவில் நிற்கிறேன்?
உங்களது இனிய பேச்சுக்களைக் கேட்டு உளங்கனிந்திருக்கிற என்னைப் பிள்ளை யென்கிற நீங்களன்றோ பிள்ளைகள்” என்ன;
இவர்கள், ‘வெறுமனே பேச்சுக் கேட்டுக் கிடக்க வொண்ணுமோ?
“அடியார்கள் தம், ஈட்டங் கண்டிடக் கூடுமேல் அது காணுங் கண் பயனாவதே”
“அடியார்கள் குழாங்களை உடன்கூடுவ தென்றுகொலோ”
“பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே” என்றிப்புடைகளிலே யன்றோ
பெரியார் பணித்த பாசுரமிருப்பது;
அப்படியே உன் வடிவை நாங்கள் கண்டு எங்கள் வடிவை நீ கண்டு அநுபவிக்க விரும்பாதே
எங்கள் வார்த்தைகளுக்குக் கண்ணழிவுஞ் சொல்லுகிற நீ யன்றோ பிள்ளை’ என்ன;
அது கேட்ட அவள், “நீங்கள் சொன்னபடியே நான் பிள்ளையாகிநேன்;
கர்ணாமிருதமான சில பேச்சுக்களைச் சொல்லுங்கள்” என்னச் சொல்லுகிறார்கள்,
பேய்முலை நஞ்சுண்டு என்று தொடங்கி.

பேய்முலை நஞ்சுண்ட வரலாறு :-
கிருஷ்ணனைப் பெற்ற தாயான தேவகியினது உடன் பிறந்தவனாதலால் அக் கண்ணபிரானுக்கு மாமனாகிய கம்ஸன்,
தன்னைக் கொல்லப் பிறந்த தேவகீ புத்திரன் ஒளித்து வளர்தலை அறிந்து, அக்குழந்தையை நாடி யுணர்ந்து
கொல்லும் பொருட்டுப் பல அசுரர்களை ஏவ, அவர்களில் ஒருத்தியான பூதனையென்னும் ராக்ஷஸி
நல்ல பெண்ணுருவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து, அங்குத் தூங்கிக் கொண்டிருந்த
கண்ணனாகிய குழந்தையை எடுத்துத் தனது நஞ்சு தீற்றிய முலையைக் கொடுத்துக் கொல்ல முயல,
பகவானான குழந்தை அவ்வரக்கியின் தனங்களைக் கைகளால் இறுகப் பிடித்துப் பாலுண்ணுகிற பாவனையிலே
அவளுயிரையும் உறிஞ்சி அவளைப் போpரைச்சலிட்டுக் கதற உடம்பு நரம்புகளின் கட்டெல்லாம் நீங்கி
விழுந்து இறக்கும்படி செய்தனன் என்பதாம்.

கள்ளச்சகடங் கலக்கழியக் காலோச்சின வரலாறு:-
நந்தகோபர் திருமாளிகையில் ஒரு வண்டியின் கீழ்ப்புரத்திலே தொட்டிலிற் பள்ளி கொண்டிருந்த ஸ்ரீகிருஷ்ணன்,
ஒரு கால் அச்சகடத்திற் கஞ்சனால் ஏவப்பட்ட அசுரனொருவன் வந்து ஆவேசித்துத் தன்மேலே விழுந்து
தன்னைக் கொல்ல முயன்றமை அறிந்து பாலுக்காக அழுகிற பாவனையிலே தன் சிறிய திருவடிகளை
மேலே தூக்கி உதைத்தருள, அவ்வுதைபட்ட மாத்திரத்தில் அச்சகடு திருப்பப்பட்டுக் கீழே விழுந்து அசுரனுட்பட அழிந்ததென்பதாம்.

இவ்விரண்டு அபதாநங்களையும் இங்கெடுத்துக் கூறியது –
உள்ளுறங்குமிவள் அஞ்சிக் கடுக எழுந்தோடி வருதற்கென்க.
ஸர்வேஸ்வரனாலே தத்தம் இடர்களைக் களைந்து கொள்ளக் கருதுவார் அல்லாதார்;
பெரியாழ்வாரோட்டைச் சம்பந்தமுடையார் அங்ஙனன்றி “எம்பெருமானுக்கு என்ன அவத்யம் விளைகின்றதோ” என்று
வயிறு பிடிக்குமவர்களாகையாலே,
பூதனையினுடையவும் சகடத்தினுடையவும் பிரஸ்தாவத்தை தொடங்கினால்
“கண்ண பிரானுக்கு இங்ஙனே சில தீமைகள் வினைந்தனவே!” என்று நெஞ்சு வெதுப்புண்டு
துணுக்கென் றெழுந்திருக்கக் கூடுமென்பது வாசலிற் கூவுமாய்ச்சிகளின் கருத்து.
இங்குக் குலசேகராழ்வார் சரித்திரம் நினைக்கத்தக்கது.

திருப்பாற்கடலிற்கிடை அவதாரங்கட்கு அடிக்கிழங்காதல்பற்றி
“வெள்ளைத் தரவில் துயிலமர்ந்த வித்தினை” எனப்பட்டது.
உழவர் விரையை நீரீலே சேர்ப்பது போல் உலக்ஙகட்கெல்லாம் விதை போன்ற தான் நிரீலே சேர்ந்தானென்பது ரஸோக்தி.

முனிவர்கள் – மநந சீலர்கள்;
அவராவார் – ஒரு ப்ரவ்ருத்திக்குங் கடவராகமாட்டாதே குணா நுபவ மாத்திரத்தில் ஒருப்பட்டவர்கள்.

யோகிகள் – கைங்கர்ய நிஷ்ட்டர்கள்.
ஸ்ரீ பரதாழ்வானையும் இளைய பெருமாளையும் அடைவே ஒப்புக்கொள்க.

மெள்ள எழுந்து –
வயிறு வாய்க்கப் பெற்ற மாதர் (கர்ப்பிணி ஸ்திரீகள்) வயிற்றினுள் உறையும் பிள்ளைக்கு
நோவு வராதபடி மெள்ள எழுந்திருப்பது போலவும்,
மகனை நலியுமாறு இரணியனால் எவப்பட்ட கிங்கரர்களினால் ப்ரஹலாதாழ்வான் மலைமுடிகளினின்று
தள்ளுண்ணம் போது “ஹ்ருதயேநோத்வஹந் ஹரிம்” என்றபடி – ‘பார்த்தருள் பார்த்தருள்” என்று
ஹ்ருதய குஹரவாஸியான ஸர்வேச்வரனைப் பிடித்துக்கொண்டாற் போலவும்
எம்பெருமானை உள்ளத்துக் கொண்ட இம்முனிவர்களும் யோகிகளும்
அவ் வெம்பெருமான் தறும்பாதபடி எழுந்திருப்பார்க ளென்றுணர்க.

உஷ: காலத்தில் உணரும் போது ‘ஹரிர் ஹரி:’ ‘ஹரிர் ஹரி:’ என்ற அநுஸந்தானத்துடன்
உணர வேண்டுமென்பது விதியாதலால், அதன்படி அவர்கள் அத்தனை பேருந்திரண்டு அநுஸந்தித்த
ஹரி நாமத்தின் பேரொலி இப்பாடியெங்கும் பரவிச்செல்ல, அதுகேட்டு நாங்கள் உணர்ந்து வந்தோம்;
இது பொழுது விடிவுக்கு ஏற்ற அடையாளம்; இதற்குக் கண்ணழிவு சொல்ல உன்னாலாகாது;
ஆனபின்பு கடுக எழுந்து எங்களுடன் கூடப்பெறாய் என்று கூவியவாறு.

“புள்ளரையன் கோயில்” என்ற பாடமும் கொள்ளற்பாலதே.
“பேரரவம்” என்றவிடத்து, அரவம் – ரவ: என்ற வடசொல் விகாரம்.
வெள்ளம் – திருப்பாற் கடற்கு ஆகுபெயர்.
வித்தினை – வித்து இன் ஐ – , இன் சாரீயை; வித்தை யென்றபடி.
குளிர்ந்து-‘குளிர்ந்து’ என்னும் வினைமுற்றின் தொகுத்தல்.

(ஸ்வாபதேசம்)
இது பெரியாழ்வாரைத் திருப்பள்ளி யுணர்த்தும் பாசுரம்.
பிள்ளாய்! என்பது இதில் விளி. அறிவில்லாதவனைப் பிள்ளை யென்பது.
எம்பெருமானுடைய ஸர்வ ரக்ஷகத்வம் முதலிய திருக் குணங்களை மறந்தே இவ்வாழ்வார்;
மங்களாசாஸனத்தில் ஒருப்பட்டாராதலால் பள்ளை யென்னத் தகுதியுடையாராயினர்.
“ஜ்ஞாந விபாக கார்யமான அஜ்ஞானத்தாலே வருமவை யெல்லாம் அடிக் கழஞ்சு பெறும்” என்ற
ஸ்ரீவசனபூஷண திவ்ய பூஷ ஸூக்தியும் மங்களாசாஸநத்திற்கு அஜ்ஞானத்தையே மூலமாகக் காட்டிற்று.

இவ்வாழ்வார் பெரும்பாலும் நந்தனவனத்திலேயே போது போக்குவராதலால் அவ்விடத்து அடையாளமாகிய
‘புட்களின் சிலம்புதல்’ முன்னே கூறப்பட்டது.

புள்ளரையன் என்று பெரிய திருவடியின் ப்ரஸ்தாவம் செய்திருப்பதில் இப்பெரியாழ்வார்
பெரிய திருவடியின் அம்சமாகத் திருவவதரித்தவர் என்று குருபரம்பரா ப்ரபாவாதிகளிற் கூறியுள்ள
விஷயம் முத்ராலங்காராPதியில் ஸூசிதமாகிறது,

‘வெள்ளை விளிசங்கு’ என்கிற சொல்தொடர் முதன் முதலாகப் பெரியாழ்வாருடைய திருவாக்கில் தோன்றியது.
வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர் திருச் சக்கரம் ஏந்தும் கையன்
உள்ளவிடம் வினவில் உமக்கு இறை வம்மின் சுவடு உரைக்கேன்
வெள்ளைப் புரவி குரக்கு வெல் கொடிதேர் மிசை முன்பு நின்று
கள்ளப் படை துணையாகி பாரதம் கை செய்யக் கண்டார் உளர் – (பெரியாழ்வார் திருமொழி 4-1-7 காண்க.)
அதனை இங்கு அநுவதித்துக் காட்டுவது ஒருவகையான லிங்கம்.

(பேய்முலை நஞ்சுண்டு) பெரியாழ்வார் திருமொழியில் (சீதக் கடலில்) கண்ணபிரானுடைய சரித்திரங்களில்
பேய்முலை நஞ்சுண்ட கதை முதன் முதலாக அநுஸந்திக்கப்பட்டது.
சீதக் கடலுள் அமுதன்ன தேவகி
கோதை குழலாள் அசோதைக்கு போத்தந்த
பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே -1-2-1-

பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு
உறங்குவான் போலே கிடந்த இப்பிள்ளை
மறம் கொள் இரணியன் மார்வை முன் கீண்டான்
குறங்குகளை வந்து காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-5-என்றது காண்க.

மறுபடியும் அந்தச் சரித்திரத்தை அநுஸந்திக்கையில் சகடாஸுரபங்கத்தையும் கூட்டி யநுஸந்தித்தார்.
நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே
தாளை நிமிர்த்து சகடத்தை சாடிப் போய்
வாள் கொள் வளை எயிறு ஆர் உயிர் வவ்வினான்
தோள்கள் இருந்தவா காணீரே சுரி குழலீர் வந்து காணீரே –1-2-11—என்ற பாசுரங் காண்க.
அதற்குப் பொருந்த இங்கு
“பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடங் கலக்கழியக் காலோச்சி” என்றது.

“வெள்ளத்தரவில்” என்று தொடங்கிப் பெரியாழ்வார்க்குள்ள ‘விஷ்ணுசித்தர்’ என்னுற்திருநாமமும்
அதற்கு விவரணமான “அரவத்தமளியினோடும்”
“பனிக்கடலில் பள்ளிகோளை” என்ற பாசுரங்களின் தாற்ரியமும் நன்கு ஸூசிதம்.

அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும்
அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து
பரவை திரை பல மோத பள்ளி கொள்கின்ற பிரானை
பரவுகின்றான் விட்டு சித்தன் பட்டினம் காவல் பொருட்டே -5 2-10 –

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5 4-9 –

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருப்பாவை–மாயனை மன்னு வடமதுரை- -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

March 2, 2021

நோன்பு நோற்கும் பெண்களில் ஒருத்தி,
‘நாம் நோன்பு நோற்று எம்பெருமானை அநுபவிக்க இலையகலப் பாரியா நின்றோம்; இஃது அழகியவாறே;
‘ச்ரேயாம்ஸி பஹு விக்நாநி பவந்தி மஹதாமபி” என்று மேலையார் செய்யும் நற்சிரிசைகட்கும்
பல இடையூறுகள் மிடைதரமென்று நூல்கள் கூறும்;

இராமபிரானை முடிசூட்டுதற்காகச் சம்பராந்தகனான தசரத சக்கரவர்த்தி பாரித்தான்;
பிரமவிருடியான வசிட்டன் முஹூர்த்தமிட்டான்; ஸாக்ஷாத் தரும்மெனப்பட்ட இராமன் முடிசூட நின்றான்;
பிராட்டியோடே கூடிப் பெரிய பெருமாளைத் தொழுதிறைஞ்சினான்;
நாடடங்கலும் இவ்வபிஷேக மங்களத்தைப் பிரார்த்தித்து மங்களாசாஸநம் செய்யா நின்றது;
இங்ஙனம் அமைந்திடவும் அந்த மங்கள காரியத்திற்குமன்றோ இடையூறு மிடைதந்தது;

நாம் நெடுநாளாகப் பண்ணியுள்ள பாவங்கள் பல கிடக்க இன்று செய்யக் கருதிய நற்கிரிசை நன்னர் நிறைவேறுமோ?’ என்று கேட்க;

நாம் பகவந்நாம ஸங்கீர்த்தநம் பண்ணவே பாவங்களனைத்தும் தீயிலிட்ட பஞ்சு போல உருமாய்ந்தொழியுமாதலால்
அத்திரு நாமங்களை ஸங்கீர்த்தநம் பண்ணக் கடவையென்று
அவளை நோக்கி மற்றொருத்தி உரைக்கும் பாசுரமாய்ச் செல்லுகிறது இப்பாட்டு.

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

பதவுரை

மாயனை–மாயச் செயல்களை யுடையவனும்
மன்னு வடமதுரை மைந்தனை-(பகவத் ஸம்பந்தம்) நித்யமாகப் பெற்றுள்ள வட மதுரைக்குத் தலைவனும்,
தூய பெரு நீர்–பரிசுத்தமாய் ஆழம் மிக்கிருக்கிற தீர்த்தத்தை யுடைய
யமுனை துறைவனை–யமுனை யாற்றங்கரையை நிரூபகமாக வுடையயவனும்,
ஆயர் குலத்தினில் தோன்றும்–இடைக் குலத்தில் விளங்கா நின்றுள்ள
அணி விளக்கை–மங்கள தீபம் போன்றவனும்
தாயை குடல் விளக்கஞ்செய்த–தாயாகிய தேவகி பிராட்டியின் வயிற்றை விளங்கச் செய்தவனுமான
தாமோதரனை–கண்ண பிரானை,
நாம்–(அடிச்சியோமாகிய) நாம்
தூயோம் ஆய் வந்து–பரி சுத்தி யுள்ளவர்களாய்க் கிட்டி
தூ மலர்கள் தூய்–நல்ல மலர்களைத் தூவி
தொழுது–வணங்கி
வாயினால் பாடி–வாயாரப் பாடி
மனத்தினால் சிந்திக்க–நெஞ்சார தியானம் பண்ண (அதன் பிறகு)
போய பிழையும்–(சேஷ சேஷிபாவ ஜ்ஞான முண்டாவதற்கு) முன்பு கழிந்த பாவங்களும்,
புகு தருவான் நின்றனவும்–பின்பு (தன்னை அறியாமல்) வரக் கூடிய பாவங்களும்
தீயினில் தூசு ஆகும்–நெருப்பிலிட்ட பஞ்சு போலே உருமாய்ந்து போம்; (ஆன பின்பு)
செப்பு–அவ் வெம்பெருமான் திரு நாமங்களைச் சொல்;
ஏல் ஓர் எம் பாவாய்!

ஸர்வேஸ்வரன் பரமபத நிலயனாயிருந்து வைத்துத் திருவாய்ப்பாடியிற் கண்ண பிரானாய் அவதரித்துக்
கோவலர்க்கும் கோக்களுக்குந் தான் எளியனாய்,
வெண்ணெய் களவு காண்பது, மாதரைக் களவு காண்பதாய்ச் செய்த ஆச்சரியச் செயல்களின்
அளவின்மையை நினைத்து “மாயனை” என்றது.
“சூட்டுநன் மாலைகள்” என்ற பாசுரமுங் காண்க.

திருவடமதுரையில் ஸித்தாஸ்ரமத்தில் ஸ்ரீவாமநனாய்த் தவம் புரிந்திருந்தமையாலும்
ஸ்ரீசத்ருக்நாழ்வான் படை யெடுத்துப் பகை யறுத்துத் தனக்குப் படை வீடாகப் பெற்று நெடுநாள் அரசாண்டமையாலும்,
கிருஷ்ணனாய் வந்து பிறந்தமையாலும்
இவ்வகைகளாலே மதுரைக்குப் பகவத் ஸம்பந்தம் நித்தியமாயிருக்குந் தன்மை பற்றி
மன்னு என்று வடமதுரைக்கு அடைமொழி கொடுக்கப்பட்டது.

மைந்தன் – மிடுக்கை யுடையவன்; மைந்து – மிடுக்கு,
“தந்தைகாலிற் பெருவிலங்கு தாளவிழ நள்ளிட்கண், வந்தவெந்தை” என்றபடி
கண்ணபிரான் தான் பிறக்கும் போதே
வஸுதேவ தேவகிகளின் காலில் விலங்கு இற்று முறியுமாறு பிறந்த மிடுக்கைக் கூறியவாறு;
பருவம் நிரம்புவதற்கு முன்னே கஞ்சன் குஞ்சி பிடித்துதைத்த மிடுக்கைக் கூறியவாறுமாம்.

கண்ணன் திருமதுரையிற் பிறந்தவாறே வஸுதேவன் கம்ஸனிடத்துள்ள அச்சத்தினால்
அப் பிள்ளையைத் திருவாய்ப்பாடியில் ஒளிந்து வளர்க்கக் கருதி எழுந்தருள்வித்துக் கொண்டு செல்ல,
வழியிடையிற் பெரு வள்ளமாய்ப் பெருகிக் கொண்டிருந்த யமுனையாறு தன்னை முழந்தாளளவாக வற்றுவித்து
வழி தந்தமையால், அவ்வாற்றிற்கு இதனை ஒப்புயர்வற்ற தூய்மையாகக் கருதித் தூய பெருநீர் என விசேஷிக்கப்பட்டது.

இங்கு, “யமுநாஞ்சாதி கம்பீராம் நாநாவர்த்த ஜஷாகுலாம் –
வஸுதேவோ வஹந் க்ருஷ்ணம் ஜாநுமாத்ரோத கோயயௌ.” என்ற ஸ்ரீவிஷ்ணுபுராண வசநம் நோக்கத் தக்கது.

பிராட்டி சரணம் புகவும் ராவண பயத்தாலே, அஞ்சியிருந்த கோதாவரி போலன்றியே
கம்ஸன் மாளிகை நிழற்கீழே வற்றிக் கொடுத்ததே தூய்மையாம்.

பெருநீர் – அஞ்சுலக்ஷங்குடியிற் பெண்களும் கண்ணனுங்கூடி ஜலக்ரீடை பண்ணுவதற்கும்,
பெண்கள் விரஹ தாபந்தீரக் குளிக்கைக்கும் பரியாப்தமான நீரை யுடைய வென்றபடி.
பெருமை பொருந்திய நீரையுடைய வென்றுமாம்.

கவிபாடுவார்க்கு ஊர், பேர், ஆறு முதலியவை வேண்டுமாகையால்,
“வடமதுரை மைந்தனை” என்று ஊரும்,
“தாமோதரனை” என்று பேரும்,
“யமுனைத்துறைவனை” என்று ஆறுங் கூறப்பட்டன.

“முத்துப்படுந்துறை, நவமணி படுந்துறை” என்னுமாபோலே,
கண்ணபிரானுக்கு எமுனையாறு பெண்கள் படுந்துறையாகையால் “யமுனைத்துறைவனை” எனப்பட்டது.

“ஆயர் குலத்தினிற் பிறந்த” என்னாது, “தோன்றும்” என்றது,
“தேவகீ பூர்வ ஸந்த்யாயா மாவிர்ப்பூதம் மஹாத்மநா,” என்ற புராண நடையை அடியொற்றி யென்க:

கீழ்த் திசையில் உதிக்கின்ற ஆதித்தியனுக்கு அத் திசையிற் பற்றுண்டாவதென்ற கருத்துத் தோன்றக் கூறினான் முனிவனென்பர்.
ஆகில், “கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்”
“மன்னு நாரணன் நம்பி பிறந்தமை”
“பிறந்தவாறும்” என்றிப்புடைகளிலே கூறப்பட்டுள்ளவற்றுக்குப் பொருந்த மெங்ஙனே யெனில்;

ஸம்ஸாரிகள் பத்து மாதம் கர்ப்ப வாஸம் பண்ணினால்,
“பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட வப்பாங்கினால்” என்றபடி
தான் பன்னிரண்டு மாதம் கர்ப்ப வாஸம் பண்ணுகையாலும்,
பெற்ற தாய்க்கு முலை சுரக்கையாலும்,
முலை பெறாவிடில் இவன் தான் நோவுபடுகையாலும்,
தன்னைக் கட்டவு மடிக்கவுமாம்படி எளியனாக்கி வைக்கையாலும் அங்ஙன் கூறப்படுகின்றதெனக் கொள்க.

இனி, வடமதுரையிற் பிறந்த கண்ணபிரானை ஆயர் குலத்தினிற் பிறந்தனனாகக் கூறுவானென்னெனில்;
முலைப்பால் குடித்து அழுதவிடமே பிறந்த இடமாதல் பற்றி யென்க.
அன்றி, மதுரையில் மறைந்திருந்து ஆய்க் குலத்தில் வெளிப்பட்டமை பற்றியுமாம்.

உடலை நீக்கித் தலையையும், தலையை நீக்கி உடலையுங் கழுவுமவர்களான இடைச்சிகள்
“தூயோமாய்” என்கிறார்களே, இவர்கட்குத் தூய்மையாவதென்? எனில்;

எம்பெருமானிடத்தில் ஸம்பந்தவுணர்ச்சிக்கு மேற்பட வேறொரு சுத்தியும் ஆத்மாவுக்கு இலதாதலால்
அத் தூய்மை கூறப்படுகின்றது.

“மமசாப்யந்தராத்மாயம் சுத்தம் வேத்தி விபீஷணம்.” என்று –
ஸுக்ரீவ மஹாராஜர; இராமபிரானிடத்து விபீஷணழ்வானைச் சுத்தனென்றது, மேற்கூறிய தூய்மையைக் கருதியன்றோ.

தூமலர்கள் – மலர்க்குத் தூய்மையாவது –
ஒரு பிரயோஜநத்தை விரும்பி இடப்படாதொழிகை.
தூய் என்ற சொற்போக்கால், எம்பெருமானது திருவடிகளில் மலர்களை மிக்க ஆதரத்துடன்
ஸமர்ப்பிக்க வேணுமென்றொரு நியதியில்லை;
அடைவு கெடத்தூவிலும்மையு மென்பது போதரும்.

தொழுது, பாடி, சிந்திக்க என்று
மனமொழி மெய்களாகிற முக்கரணங்களினுடையவும் வியாபாரங்கள் கூறப்பட்டன.

இனி, தொழுகை, பாடுகை, சிந்தனையாகிய இக்காரியங்களினாற் பெறும் பேறு கூறுவன்,
கடையிரண்டடிகள்.

எம்பெருமானை யடிபணிவதற்கு முன்பு செய்யப்பட்ட பிழைகள் – போய பிழை; (பூர்வாகம்) எனப்படும்.
அடி பணிந்த பின்னர் பிரகிருதி வாஸனையினால் அபுத்தி பூர்வமாகச் செய்யும் பிழைகள் –
புகுதருவான் நின்றான்; உத்தராக மெனப்படும்.
இவை யிரண்டும் தீயிலிட்ட தூசு போல உருமாய்ந்தொழியுமென்று பலன் கூறிற்றாயிற்று.

‘நாம் நெடு நாளாகப் பண்ணியுள்ள பாவங்கள் பல கிடக்க, இன்று செய்யக் கருதிய நற்கிரிசை
நன்னர் நிறைவேறுமோ?’ என்று வினவியவளை நோக்கியது,
செப்பு என்ற முன்னிலை வினைமுற்று!
இங்ஙன் ஒருத்தியை முன்னிலைப்படுத்திக் கூறியவிது அனைவரையும் நோக்கிக் கூறியவாறே யாமெனக் கொள்க;
உபலக்ஷணமென்க.

செப்ப என்று பிரிக்கவுமாம்.

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருப்பாவை–ஆழி மழைக்கண்ணா- -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

March 2, 2021

ஆயர் சிறுமியர் தாம் மார்கழி நீராடினால் நாட்டுக்கு விளையும் நன்மைகளை இங்ஙனே மநோ ரதித்துக் கொண்டிருக்க,

பர்ஜந்யனும், ‘எம்பெருமானடிபணியுமவர்கட்குச் சிறிது கிஞ்சித்கரித்து நாமும் நமது ஸ்வரூபத்தை
நிறம் பெறுவித்துக் கொள்ள வேணும்” எனக் கருதி,
‘நான் உங்கள் திறத்துச் செய்ய வேண்டுமடிமைத் திறத்தை ஆய்ந்துரைக்க வேணும்’ என்று
இவர்களின் நியமநத்தைப் பிரார்த்தித்து நிற்க,

ஆய்ச்சிகள், “பர்ஜந்யனே ! ‘பெண்கள் நோற்றபடி யென் ! மழை பெய்தபடி யென்!’ என்று
அனைவரும் தலை துலுக்கிக் கொண்டாடும்படி வர்ஷிக்க வேணும்” என்று
அவன் செய்ய வேண்டு மடிமையைக் கையோலை செய்து கொடுக்கின்றனர்; இப்பாட்டால்.
(பர்ஜந்யன் – மழைக்கு நிர்வாஹகன்; மேகமென்றவாறு.)

ஆழி மழைக் கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பதவுரை

ஆழி மழை கண்ணா–மண்டல வர்ஷத்துக்குத் தலைவனான பர்ஜந்யனே !
நீ–நீ
கை-(உன்னுடைய) கொடையில்
ஒன்றும்-ஒன்றையும்
கரவேல்–ஒளியா தொழியவேணும்; (நீ செய்ய வேண்டிய பணி என்ன வென்றால்)
ஆழியுள் புக்கு–கடலினுட் புகுந்து
முகந்து கொடு–(அங்குள்ள நீரை) மொண்டு கொடு
ஆர்த்து–கர்ஜனை பண்ணி (பேரொலி செய்து)
ஏறி–(ஆகாயத்தே) ஏறி,
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து–காலம் முதலிய ஸகல பதார்தத்ங்களுக்குங் காரண பூதனான
எம் பெருமானுடைய திருமேனி போல் (உனது) உடம்பிற் கருமை பெற்று
பாழி அம் தோள் உடை பற்பநாபன் கையில்–பெருமையும் அழகும் கொருந்திய தோள்களை யுடையவனும்,
நாபிக் கமல முடையனுமான எம் பெருமானுடைய கையில் (வலப் பக்கத்திலுள்ள)
ஆழி போல் மின்னி–திருவாழி யாழ்வானைப் போல் ஒளி மல்கி,
வலம்புரி போல் நின்று அதிர்ந்து–(இடப் பக்கத்திலுள்ள) பாஞ்ச ஜந்யாழ்வானைப் போல் நிலை நின்று முழங்கி,
சார்ங்கம் உதைத்த–ஸ்ரீ சார்ங்கத்தாலே தவளப்பட்ட
சரம் மழை போல்–பாண வர்ஷம் போல்,
வாழ (உலகத்தாரனைவரும்) வாழும்படியாகவும்
நாங்களும்–(கண்ண பிரானோட்டைக் கலவிக்கு நோன்பு நோற்கிற) நாங்களும்
மகிழ்ந்து–ஸந்தோஷித்து
மார்கழி நீராட–மார்கழி நீராட்டம் செய்யும் படியாகவும்
உலகினில்–இல் வுலகத்தில்
தாழாதே–தாமதம் செய்யாமல் (சடக்கென)
பெய்திடாய்–மழை பொழியக் கடவை.
ஏல் ஓர் எம் பாவாய் !.

வாராய் பர்ஜந்யனே ! உனது ஔதார்யத்தை நீ எள்ளளவும் ஒளிக்கலாகாது;
கடலினுட் புகுந்து அங்குள்ள நீரை முற்றும் முகந்து கொண்டு பெரு முழக்கஞ்செய்து வானத்தின் மீதேறி
எம்பெருமானது திருமேனி போலக் கருமை பூண்டு,
அவனது வலங்கை யாழிபோல் மின்னி இடங்கைச் சங்கம்போல் அதிர்ந்து,
ஸ்ரீ சார்ங்கம் சரமழை பொழியுமாறு போல நாடெங்கும் நீரைச் சொரிந்து
எமது மார்கழி நீராட்டத்தை மகிழ்ச்சியுடனே தலைக் கட்டவேணும் என்பது –
இவர்கள் கட்டளை யிடும் பரிசு.

ஸந்நிதிகளில் கைங்கர்ய பரர்களை அருளிப் பாடிடும் போது,
“குடை தூக்குவான்!, சாமரை வீசுவான்!, திருச்சின்ன மூதுவான் !” என்றிங்ஙனே அவரவர்கள் அதிகரித்த
காரியத்தை யிட்டு அருளிப் பாடிடுவது ஸம்ப்ரதாய மாதலால்
இவர்களும் அந் நடையை அடி யொற்றி “ஆழி மழைக் கண்ணா!” என்று
அவன் அதிகரித்த காரியத்தையிட்டு அழைக்கின்றனரென்க.

எம்பெருமான் படைப்புத் துடைப்புத் தொழில்களை அயனரர் தலையிலிட்டுத் தான் காத்தற்றொழிலைக் கைப்பற்றினாற்போல,
‘பிடி, அடி’ என்னுங் காரியத்தை நமன் முதலியோர் தலையிலிட்டு,
உனது நீர்மைக்குப் பொருந்த எல்லாரையுங் குளிர நோக்குங் காரியத்தில்
நியமிக்கப்பட்டவனன்றொ நீ எனப் புகழ்கின்றவாறு காண்க.

ஒன்றும் நீ கை கரவேல் :-
உன் கொடையில் ஒன்றும் வஞ்சியாதொழிய வேணும் என்றபடி.
புண்ணியம் பண்ணினாரிருந்தவிடத்து வர்ஷித்தல், பாவம் பண்ணினாரிருந்தவிடத்து வர்ஷியாதொழிதல்
என்றொரு விஷம நியதி கொள்ளற்பாலதன் றென்கை.
கை கரக்கை – கொடை மாறுகை.

மேகத்தின் முழக்கம் மகிழ்ச்சிக்கு உறுப்பாதலால் ஆர்த்து என்று அம் முழக்கத்தை வேண்டுகின்றனர்.
கடல் கடந்து இலங்கைக்குச் சென்ற அனுமன் செய்தியை உணராத குரக்கினங்கள்
கடற்கு இக் கரையில் வருந்தி ஏங்கிக் கிடந்த போழ்து, அனுமன் பிராட்டியைக் கண்ட களிப்பின் மிகுதியால்
ஆரவாரித்துக் கொண்டு வந்து இவ் வாநர வீரர்களை மகிழ்வித்தவாறு போல
நீயும் ஆரவாரத்தினால் எம்மை மகிழ்விக்க வேணுமென வேண்டியவாறு.

ஏறி என்றதனால்,
முகந் தோற்றாமே நின்று காரியஞ்செய்யும் எம்பெருமானைப் போலன்றி,
“விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல்” என்றபடி ஆகாசாவகாசமெல்லாம் வெளி யடையும்படி
உன் வடிவைப் பரப்பிக் காட்டிக் காரியஞ் செய்ய வேணுமென்ற விருப்பம் தோன்றும்.

ஊழி முதல்வன் –
ஊழி என்று காலத்துக்குப் பெயர்;
இங்குக் காலத்தைக் கூறியது மற்றுமுள்ள எல்லாப் பதார்த்தங்களையுங் கூறியவாறாம்;
இஃது உபலக்ஷணமெனப்படும்.
“உருவம் போல் மெய் கறுத்து” என்ற சொல் நயத்தால்,
அவ் வெம்பெருமானது திருமேனியின் நிறத்தை மாத்திரம் நீ ஒருபுடை ஏறிட்டுக் கொள்ளலாம் அத்தனை யொழிய,
அவன்றன் அக வாயில் தண்ணளி எவ் வகையானும்
உன்னால் ஏறிடுவித்துக் கொள்ள அரிது என்னுங்கருத்துத் தோன்றுமென்ப.

இங்கு, “நாச்சியார் விழி விழிக்க வொண்ணாது என்றாற்போலே” என்ற
ஆறாயிரப்படி அருளிச் செயல் நோக்கத் தக்கது;
அவ் வாக்கியத்தின் பொருள் வருமாறு:-
திருவரங்கம் பெரிய கோயிலில் சிறிய திருவத்யயநோத்ஸவத்திற் கடைநாளிரவு ஸ்ரீரங்கநாதன்,
நாச்சியார் திருக் கோலம் பூண்டு, ஸேவை ஸாதித்தருள, ஸ்ரீபட்டர் ஸேவித்துப் பெருமானை நோக்கி
‘நாச்சியாருடைய வேஷத்தை ஏறிட்டுக் கொண்டதத்தனை யொழிய அவள் போல் விழி விழிக்க உன்னாலாகாதே’
என்றுரைத்தருளினாரென்ற ஐதிஹ்யத்தை உளப்படுத்தியவாறு.

கண்ண பிரானது திருமேனி நிறத்தைக் காண விருப்பமுடைய இவர்கள்
அதன் போலியை யாகிலுங்கண்டு களிப்போமென்னுமாசையால்
“ஊழி முதல்வனுருவம் போல் மெய் கறுத்து” என்கிறார்கனென்னுங் கருத்துமுணரற்பாலது.

பாழி அம் தோள் –
வலிமையும் அழகும் பொருந்திய தோள்;
எனவே, ரக்ஷகத்வ போக்யத்வங்களிரண்டும் தோளுக்குள்ளன வென்றதாயிற்று.

பற்பநாபன் கையிலாழி போல் மின்னி –
“பற்பநாபன் போல் மின்னி” என்னாதொழிந்ததென் எனில்;
அரசனை நோக்கி ‘உனக்கு மகன் பிறந்தான்’ என்றால் அவன் தனது காம்பீர்யந் தோற்றம் பேசாதிருப்பினும்
உரிய அடியார் பக்கலில் உகப்பும் அதனாலாய கார்யங்களுங் காணப்படுதல் போல,
வெற்றி பெற்ற எம்பெருமான் தான் ஸாதாரணமாயிருப்பினும் திருவாழி யாழ்வான்
மிக மின்னித் தோற்றுவனாதலால் “ஆழி போல் மின்னி” என்றனரென்க.

“சார்ங்கமுதைத்த சர மழைபோல்” என்றவுடனே,
அச் சார்ங்கத்துச் சர மழை ராவணாதியரை முடித்தாற் போல்
இதுவும் முடித்து விடிற் செய்வதென் என்றஞ்சி வாழ உலகினிற் பெய்திடாய்” என்றனர்.

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருப்பாவை–ஓங்கி உலகளந்த- -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

March 2, 2021

உலகத்தில் ஸ்வர்க்கத்தை முக்கியமான பேறாகக் கொண்டு ஜ்யோதிஷ்டோம யாகஞ் செய்பவற்கு,
ஆயுஸ்ஸு, ஸந்தாநம் என்று சில அவாந்தர பலங்களும் உடன் கூடும்;
இவ் வாயர் மங்கைகள் எம்பெருமானையே எல்லா வகைப் பயனாகவும் உள்ளத்துக் கொண்டுள்ளவர்களாதலால்
அவ்வெம்பெருமானொழிய வேறொரு பயனையும் விரும்ப மாட்டார்கள்;

ஆயினும் இவர்கள் விரும்ப வேண்டுவதொன்றுண்டு;
அதாவது தாங்கள் நோன்பு நோற்குமாறு
அநுமதி அளித்தவர்கட்குச் சில ஸம்ருத்திகளை ஆசாஸிக்கை.
அஃது இப்பாட்டிற்செல்லும்.

யத்ராஷ்டாக்ஷரஸம் ஸித்தோ மஹா பாகோ மஹீயதே –
ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்யாதி துர்ப்பிக்ஷ தஸ்கரா; என்று
திருவெட்டெழுத்து வல்லனொருவனிருந்த நாடு ஸம்ருத்தமாயிருக்குமென்னா நின்றால்
இத்தனை மஹாநுபாவைகளிருக்கும் நாடு ஸம்ருத்தமாகச் சொல்ல வேண்டாவே–

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

பதவுரை

ஓங்கி–(மஹாபலி வார்த்த நீர் கையில் விழுந்தவாறே) ஆகாசத்தளவும் வளர்ந்து
உலகு-(மூன்று) லோகங்களையும்
அளந்த-(திருவடிகளாலே தாவி) அளந்து கொண்ட
உத்தமன்–புருஷோத்தமனுடைய
பேர்–திருநாமங்களை
நாங்கள்–(பிரயோஜநாந்தரத்தை விரும்பாத) நாங்கள்
பாடி–(ப்ரீதிக்குப் போக்கு வீடாகப்) பாடி
நம் பாவைக்கு சாற்றி–நம் நோன்புக்கென்று சங்கற்பித்துக் கொண்டு
நீர் ஆடினால்–நீராடினால்
நாடு எல்லாம்–தேசமெங்கும்
தீங்கு இன்றி–(அதிவிருஷ்டி, அநாவ்ருஷ்டி ஆகிற) தீங்கு ஒன்றுமுமில்லாமல்
திங்கள் மும்மாரி பெய்து–மாதந்தோறும் மூன்று தரம் மழை பெய்ய (அதனால்)
ஓங்கு பெரு செந் நெல் ஊடு–ஆகாசத்தளவும் வளர்ந்து பெருத்துள்ள செந்நெற் பயிர்களின் நடுவே
கயல் உகள–மீன்கள் துள்ள
பூ–அழகிய
குவளை போதில்-நெய்தல் மலரில்
பொறிவண்டு–மிக்க புகரையுடைய வண்டுகளானவை
கண் படுப்ப–உறங்க,
புக்கு–(மாட்டுத்தொழுவிற); புகுந்து
தேங்காதே இருந்து–சலியாமல் பொருந்தி யிருந்து
சீர்த்த முலை பற்றி வாங்க-(பசுக்களின்) பருத்த முலைகளை (இரு கையாலும்) பிடித்து வலிக்க.
வள்ளல்–(எல்லார்க்கும் கட்டி அடிக்கலாம்படி விதேயமா யிருக்கை யாகிற) உதார ஸ்வபாவமுடைய
பெரும் பசுக்கள்–பெரிய பசுக்களானவை
நீங்காத செல்வம் நிறைந்து–நீங்காத ஸம்பத்து நிறையும்படி
குடம் நிறைக்கும்–(பால் வெள்ளத்தாலே) குடங்களை நிறைக்கும்.
ஏல் ஓர; எம் பாவாய் !

முதற் பாட்டில் “நாராயணனே” என்பதனால் எம்பெருமானுடைய உபய விபூதி நாதத்வஞ் சொல்லப்பட்டது;
இரண்டாம் பாட்டில், “பாற்கடலுள் பையத்துயின்ற பரமன்” என்பதனால் அவதாரார்த்தமாகத்
திருப்பாற்கடலில் வந்து சாய்ந்தபடி சொல்லப்பட்டது.
இப்பாட்டில் “ஓங்கி யுலகளந்த உத்தமன்” என்பதனால் அவதரித்தருளினபடி சொல்லப்பட்டது.

உலகங்களைக் காப்பதற்காகத் திருப்பாற்கடலிற் சாய்ந்த போது ஆர்த்த ரக்ஷணம் பண்ணப் பெறாமையாலே
எம்பெருமான் பனிப்பட்டுச் சாய்ந்த மூங்கில் போலக் குன்றி,
அம் மூங்கில் இரவியின் கதிர் படக் கிளம்புமாறு போல
இவனும் மாவலி வார்த்த நீர் கையிற் பட்டவாறே கிளம்பின படியைக் கூறுவது “ஓங்கியுலகலந்த” என்பது.

மஹாபலி யென்னும் அஸுர ராஜன் தன் வல்லமையால் இந்திரன் முதலிய யாரையும் வென்று
மூன்று உலகங்களையும் தன் வசப்படுத்தி அரசாண்டு செருக்குக் கொண்டிருந்த பொழுது,
அரசிழந்த தேவர்கள் திருமாலைச் சரணமடைந்து வேண்ட,

அப்பெருமான் குள்ள வடிவான வாமநாவதாரங்கொண்டு
அம்மாவலியினிடஞ் சென்று தன் காலடியால் மூவடி மண் வேண்டி அது கொடுத்தற்கு அவன் இசைந்தவுடனே
திரி விக்கிரமனாய் ஆகாசத்தை அளாவி வளர்ந்து
ஓரடியாற் பூலோகத்தையும்,
மற்றோரடியால் மேலுலகத்தையும்
அளந்து மூன்றாமடிக்காக அவன் முடியிற் காலை வைத்து அவனைப் பாதாளத்திலழுத்தி யடக்கின வரலாற்றை உணர்க.

“இவன் இன்று செல்வனாயினன்” என்றால், நேற்று வரை தரித்ரனாயிருந்தமை தன்னடையே விளங்குவது போல்,
இங்கு “ஓங்கி உலகளந்த” என்றமயால், கீழ் வாமநனாயிருந்தமை தன்னடையே போதருமென்க.

இங்கு, உத்தமன் என்றதற்குக் கருத்து யாதெனில்,
அதமாதமன், அதமன், மத்யமன், உத்தமன் என்று உலகில் பிராணிகள் நால் வகைப்பட்டிருப்பார்கள்;
பிறரை நலிந்து தன் வயிறு வளர்ப்பவன் அதமாதவன்;
பிறரும் வாழ்ந்தால் வாழட்டு மென்றிருப்பவன் அதமன்;
பிறரும் வாழ வேணும், நாமும் வாழவேணுமென்றிருப்பவன் மத்யமன்;
தான் கெட்டும் பிறரை வாழ்விக்குமவன் உத்தமன்.
(தானுங்கெட்டுப் பிறரையுங் கெடுப்பவனுடைய வகுப்பு அறிவரிது)

எம்பெருமான் தன் வடிவைக் குறுகச் செய்வதும்,
பிறர்பாற் சென்று இரப்பதுமாகிய கேடுகளைத் தானடைந்தும்
இந்திரன் முதலிய தேவர்களை வாழ்வித்தமை பற்றி, இங்கு உத்தமனாகக் கூறப்பட்டனனென்க.

இப்போது உலகளந்த அபதாநத்தைக் கூறுவதற்குக் காரணம் யாதெனில்;
‘என் முடி மேல் அடி வைக்க வேணும்’ என்று ஒருவரும் வேண்டாதிருக்கச் செய்தேயும்
விலக்காமையையே பற்றாசாகக் கொண்டு அனைவர் முடியிலும் அடியிட்டருளின எம்பெருமான்
இன்று இரந்து வேண்டும் நமது காரியத்தைத் தலைக் கட்டாதொழியான் என்னுங் கருத்துத் தோன்ற வென்க.

உலகளந்தருளினவன்று சிலர் கழஞ்சு மண் பெற்றறுக் களித்தொழிந்தனர்;
சிலர் கழஞ்சு மண் இழந்து வருந்தி யொழிந்தனர்;
இவ்வளவே யொழிய, அவ்வபதாநத்திற்குப் பல்லாண்டு பாடினார் யாருமிலராதலால்
அக்குறை தீர இன்று இவர்கள் பாவேணுமென்று பாரிக்கின்றனர் “உத்தமன் பேர்பாடி” என்று.

தங்களுக்கு ப்ரயோஜநாந்தாத்தில் ப்ராவண்யமில்லாமையை நாங்கள் என்பதானாலும்,
தமது நோன்பு மற்றையோர் நோன்பிற் காட்டிலும் விலக்ஷணமென்பதை “நம் பாவைக்கு” என்பதனாலும் விளக்குகின்றனர்.

“பாவைக்குச்சாற்றி” என்றது – “பாவைக்கென்று சாற்றி” என்றபடி.
“நமது நோன்பை வியாஜமாகக் கொண்டு” எனப் பொருள் கூறலுமாம்.

“தீங்கின்றி” என்று தொடங்கி மேல் ஆறு அடிகளினாலும் இம்மார்கழி நீராட்டத்தினால்
நாட்டுக்கு விளையும் வளம் கூறப்படுகின்றது.
ஓன்பது நாள் வெயிலும் ஒருநாள் மழையுமாக மாதந்தோறும் மும்மாரிபெய்தல் நாட்டுக்கு நன்மையென்க.
தீங்கு இன்றி நோய், பஞ்சம், கள்ளர் முதலிய தீங்கொன்றுமின்றி என்றுமாம்.

இங்ஙன் திங்கள் மும்மாரி பெய்தால் வயல்கள் செழிப்புறுமாறு கூறுகின்றது நான்காமடி.
செந்நெற்கு இட்ட ஓங்கு என்னுமடைமொழி – உயர்த்தியையும்,
பெரு என்னுமடைமொழி சுற்றிலே பணைக்கையையுங் கூறும்.
“செய் கொள் செந்நெலுயர்” என்றது காண்க.

நெல்லு வைரத் தூண் போல் நிற்கையால் கயல்கள் நேரே ஸஞ்சரிக்கப் பெறாது
ஒருக்கடுத்து உலாவும்படியைக் கூறுவது, “ஊடுகயலுகள” என்பது.
உகளுதலாவது – நீரிலும் நிழலிலுங்கிடந்து வளர்ந்த செலுக்காலே களித்து மேல் நோக்கிப் பாய்தல்.
“சலங்கொண்டு மலர் சொரியும் மல்லிகை யொண் செருந்தி செண்பகங்கள் மண நாறும்
வண்பொழிலுனூடே, வலங்கொண்டு கயலோடி விளையாடும்” என்றார் திருமங்கை யாழ்வார்.

காலங்களில் மாறாது மழை பெய்வதனால் செழிப்புற்று வளர்ந்த செந்நெற்பயிர்களினூடே,
உகளுங்கயல்களினுடல் உறாயப் பெற்று ஊசல் போலசையா நின்றுள்ள மலர்ந்த குவளை மலர்களில்
வண்டுகள் தேனை அருந்திப் பேடைகளுடன் விளையாடிக் கண்ணுறங்குமாற்றைக் கூறுவது ஐந்தாமடி.

பசுக்கள் மிக்க பால் தருதற்கு ஏதுவான புல்லுணவின் வளத்திற்கு மழையே ஏதுவாதலால்,
மேற்குறித்தவாறு மழை பெய்யவே பசுக்கள் அளவற்ற பால் வெள்ளத்தினாற் பாற் குடங்களை மிகுதியாக
நிறைக்கும் படியைக் கூறுவன மற்ற மூன்றடிகள்.

பசுக்கள் பால் சுரக்கத் தொடங்கினால் பெரு வெள்ளமாய்ப் பெருகுமென்றஞ்சி மாட்டுத்தொழுவிற்
கறக்கப் புகுவகற்குப் பெரும்பாலும் பலர் தேங்குவர் என்பதை
உள்ளுறையாய்க் காட்டும், “தேங்காதே புக்கிருந்து” என்ற சொற்போக்கு. தேங்குதல் – அஞ்சுதல்.

(பற்றி வாங்க) – முலையை ஒருகால் தொட்டு விட்டால் மாறாது பால் பெருகிக் குடங்குடமாக
நிறையும் என்பது ஒரு கருத்து.
பற்றிப் பற்றி வலிக்கக் குடங்களை நிறைக்குமென்றலு மொன்று.

இதற்கு உள்ளுறை பொருள் வருமாறு:-
பகவந் நாம ஸங்கீர்த்தநம் பண்ணிப் பகவதநுபவம் பண்ணினால் இவ்வுலகமெங்கும்
தேஹாத்மாபிமாநம் முதலிய தோஷங்களொன்று மின்றியே யொழியும்.

ஸத்வோத்தரமான காலத்தில்,
அநந்யார்ஹசேஷத்வம்,
அநந்யசரணத்வம்,
அநந்யபோக்யத்வமாகிற
ஆகார த்ரய ஜ்ஞானமுண்டாம்; (இது மூன்றாமடிக்கு)

பிரகிருதி மண்டலத்திலும் ஆத்ம வர்க்கங்கள் களித்துத் துள்ளும்; (இது நான்காமடிக்கு)
ஞானிகளுடைய போதிற்கமலவன்னெஞ்சினுள் தெய்வ வண்டெனப்படும்;

எம்பெருமான் வந்து புகுந்து சுகமாகக் கண் வளர்ந் தருள்வன்; (இஃது ஐந்தாமடிக்கு)
(தீரச் சரண முபகத:) என்றபடி –

சிஷ்யன் பிற்காலியாதே குருகுலத்திற் புக்கு நிலைத்திருந்து தனக்குத் தாரகங்களான ஆசிரியன்
பொற்பதங்களைப் பற்றிப் பிரார்த்திக்க,
உபதேச பாத்ர பூதரான சிஷ்யரைப் பரிபூரண ஞானிகளாக்குமவர்களாய்,
சிஷ்ய ஸுலபராய், இடைவிடாத பகவத் குணாநுபவத்தினால் பரிபுஷ்டரான ஆசார்யர்களுடைய
அவிச்சிந்நமான ஸம்பத்து மல்கும்படியைக் கூறுவன மற்ற மூன்றடிகள்.

பெய்து, நிறைந்து என்பன – பெய்ய, நிறைய என்னும் பொருள்பட நின்றமையால், எச்சநஷத்திரிபு.
“சொல் திரியினும் பொருள் திரியா வினைக்குறை” என்பது நன்னூல்.

ஏழாமடியில் “நிறைக்கும்” என்பதை வினைமுற்றாகக் கொள்ளாமல் பசுக்களுக்கு அடைமொழியாக்கி,
‘நிறைக்க வல்ல பசுக்கள்’ எனப் பொருள் கொண்டு,
எட்டாமடியில் “நிறைந்து” என்னும் வினை யெச்சத்தை வினைமுற்றாகக் கொண்டு ‘நிறையும்’ எனப்பொருளுரைத்தலுமாம்.

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருப்பாவை–வையத்து வாழ்வீர்காள்- -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

March 2, 2021

ஒரு விசேஷ காரியத்தில் ஒருப் பட்டவர்கள் அக் காரியம் தலைக் கட்டுமளவும் சிலவற்றைப் பரிஹரிக்க
வேண்டுமென்றும் சிலவற்றைப் பற்ற வேண்டுமென்றும் அந்த வீடு பற்றுக்களை முதலில்
ஸங்கல்பித்துக் கொள்ள வேண்டுமென்றும் சாஸ்திரங்களிற் கூறியுள்ளதனால்,
அதற்கேற்ப, நோன்பு ஆகிற விசேஷ காரியத்தில் ஒருப்பட்ட இவ்வாயர் மங்கைகள்
தாங்கள் விடுமவற்றையும் பற்றுமவற்றையும் ஸங்கல்பிக்கிறார்கள், இப்பாட்டில்–

வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

பதவுரை

வையத்து–இப் பூமண்டலத்தில்
வாழ்வீர்காள்–வாழ்ந்திரா நின்றுள்ளவர்களே!
நாமும்–(எம்பெருமானாலேயே பேறு என்ற அத்யவஸாய முடைய) நாமும்
உய்யும் ஆறு எண்ணி–உஜ்ஜீவிக்கும் வழியை ஆராய்ந்து,
பால் கடலுள் பைய துயின்ற பரமன் அடி பாடி–திருப்பாற்கடலில் அவதாநத்துடன் கண் வளர்ந்தருளா நின்ற
பரமபுருஷனுடைய திருவடிகட்கு மங்களாசாஸணம் பண்ணி
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி–(ஆசார்யாதிகளுக்கு இடு கையாகிற) ஐயத்தையும்,
(ஆர்த்தர்கட்கு இடுகையாகிற) பிக்ஷையையும் சக்தியுள்ளவளவும் இட்டு
உகந்து–மகிழ்ந்து
ஈம் பாவைக்கு செய்யும்–நமது நோன்புக்கு (அங்கமாகச்) செய்ய வேண்டிய
கிரிசைகள்–க்ரியைகளை
கேளீர்–காது கொடுத்துக் கேளுங்கள்
நாம்–நோன்பு நோற்கத் தொடங்கின நாம்
நெய் உண்ணோம்–நெய் உண்ணக் கடவோமல்லோம்;
பால் உண்ணோம்–பாலை உண்ணக் கடவோமல்லோம்;
நாட்காலே நீர் ஆடி–விடியற் காலத்திலேயே ஸ்நாநஞ்செய்து விட்டு
மை இட்டு எழுதோம்–(கண்ணில்) மையிட்டு அலங்காரம் பண்ணக் கடவோமல்லோம்;
மலர் இட்டு முடியோம்–(குழலிற்) பூ வைத்து முடிக்கக் கடவோமல்லோம்;
செய்யாதன–(மேலைத் தலைவர்கள்) செய்யாதவற்றை
செய்யோம்–செய்யக் கடவோமல்லோம்;
தீ குறளை–கொடிய கோட் சொற்களை
சென்று ஓதோம்–(எம்பெருமானிடத்துச்) சென்று கூறக் கடவோமல்லோம்;
ஏல் ஓர் எம்பாவாய்

பாற்கடலுள் பையத்துயின்ற பரமனடிபாடுகை,
நாட்காலே நீராடுகை,
ஐயமும் பிச்சையு மாந்தனையுங் கைகாட்டுகை
ஆகிற இம்மூன்றும் செய்யப்படுமவை.

நெய்யுண்ணாமை,
பாலுண்ணாமை,
மையிட்டெழுதாமை,
மலரிட்டு முடியாமை,
செய்யாதன செய்யாமை,
தீக்குறளை சென்றோதாமை என்பன விடப்படுமவை.

“உண்ணோம், செய்யோம், ஓதோம்” என்ற தன்மைப் பன்மை வினைமுற்றுக்கள் ஸங்கல்பத்தைக் காட்டுமவை.

“செய்யுங் கிரிசைகள் கேளீரோ” என்றாற்போலவே
“விடுங்கிரிசைகள் கேளீரோ” என்றுஞ் சொல்ல வேண்டாவோ வென்னில்; வேண்டா;
விடுகையென்பதும் செய்யுங் கிரிசையினுள் அடங்கக்கூடுமாதலின் எனவே, “செய்யுங் கிரிசைகள்” என்ற
ஒரு சொற்போக்கிற்றானே வீடு பற்றுக்களிரண்டும் வெளியாயின வென்க.

வாழ்ச்சிக்கு நிலமல்லதா இருள் தருமா ஞாலத்தில் வாழ்வதென்பது
நெருப்புச் சட்டியில் தாமரை பூப்பதை யொக்குமாதலால், இங்ஙன் வாழப்பிறந்தவர்களின் பெருமை என்னே!
என வியந்து ‘வையத்து வாழ்வீர்காள்’ என விளிக்கின்றனர்.

நீர்மை மேன்மை முதலிய குணங்களனைத்தும் விளங்குமாறு கண்ணபிரான் அவதரித்த
ஆய்ப்பாடியிற் பிறவியின் மிக்க வாழ்ச்சி யில்லையே.
கண்ணபிரானுடைய விருப்பத்திற்கு இலக்காக மாட்டாதே முரட்டாண்களாய்ப் பிறத்தல்,
பருவங்கழித்த பெண்களாயிருத்தல் செய்யாதே
ஒத்த பருவத்திற் பெண்களாயிருக்குமவர்களின் வாழ்ச்சி பேச்சுக்கு நிலமல்லவென்க.

நாமும் என்றவிடத்து உம்மைக்குக் கருத்தென் எனில்;
ஸ்வாமிக்குப் பரதந்த்ரமான ஸ்வம் பேற்றுக்காகத்தானே ஒரு ப்ரவ்ருத்தி பண்ணுகைக்கு உரிமை யற்றதாயிருக்க,
ருசி இருந்தவிடத்தில் இருக்க வொட்டாமையாலே பதறிச் செல்லுகின்றமையைக் காட்டும்.

“ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்”
“நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு” என்றிருக்கையாகிற
அநந்யோபாயத்வத்தைக் குலைக்க வல்ல செயல்களில் நோன்பும் ஒன்றாதலால்
அது ஆத்மாவுக்கு அப்ராப்த கரும மெனப்படுகிறது.

ஆகில் அப்ராப்த காரியத்தில் இவர்கள் கை வைப்பது ஸ்வரூப விருத்தமே யன்றோ வென்னில்; அன்று;
“அப்ராப்த விஷயங்களிலே ஸக்தனானவன் அது லபிக்க வேணுமென்றிரா நின்றால்
ப்ராப்த விஷய ப்ரவணனக்குச் சொல்ல வேண்டாவிறே;
அநுஷ்டாநமும் அநநுஷ்டாநமம் உபாய கோடியில் அந்வயியாது.
அநந்யோ பாயத்வமும், அநந்யோபேயத்வமும் அநந்யதைவத்வமும் குலையும் படியான ப்ரவ்ருத்தி காணா நின்றோமிறே.

ஜ்ஞாந விபாக கார்யமான அஜ்ஞாநத்தாலே வருமவையெல்லாம் அடிக்கழஞ்சு பெறும்.
உபாய பலமாய் உபேயாந்தர்ப்பூதமாயிருக்குமது உபாயப்ரதி பந்தகமாகாது” இத்யாதி ஸ்ரீவசநபூஷண ஸூக்திகளையும்
அவ்விடத்து வியாக்கியான வாக்கியங்களையுங் கண்டு தெளிக.

இந்திரஜித்து முதலியவர்கள் எம்பெருமானையும் அவனடியாரையும் அழிக்கைக்குச் செய்த யாகம் போலன்றியே,
பிரயோஜநாந்தரங்களை விரும்பிச் செய்யும் விரதங்கள் போலுமன்றியே
க்ருஷ்ணனும் க்ருஷ்ண விபூதியும் ஸத்தை பெறுதற்குச் செய்யும் நோன்பு இது என்ற வாசியைக் காட்டுகிறது,
“நம் பாவைக்கு” என்ற சொற்போக்கு.

செய்யுங் கிரிசைகள் என்றது –
சேதநராகையாலே பேறு கைபுகுமளவும் கால க்ஷேபத்துக் குறுப்பாகச் செய்யும் செயல்கள் என்றபடி.
“பெருந்தெருவே ஊராரி கழிலும் ஊராதொழியேன் நான் வாரார்பூம் பெண்ணைமடல்” என்று
மடலெடுப்பதாகக் காட்டி விட்டவளவே போலன்றி
அநுஷ்டான பர்யந்தமாகச் செய்கிற நோன்பு இது என்பதைக் காட்டும், செய்யும் என்ற சொற்போக்கு.

‘பெண்களையும் கிருஷ்ணனையும் நெடுநாள் கடுமையாகப் பிரித்து வைத்த இவ் வாய்ப்பாடியில்
இங்ஙனே ஒரு சேர்த்தி யுண்டானவாறு என்கொல்!’ என்றும்,
‘இவ் விருள் தரு மா ஞாலத்தில் பகவத் விஷயத்தை அநுபவித்தற்கு இத்தனை பேர் திரள்வது என்ன விசித்திரம்!’ என்றும்
வியந்து மரம் மலை முதலியன போல ஸ்தப்தராய மயங்கிக் கிடக்குமவர்களைத் துடை தட்டியெழுப்புவாரைப் போல்
“கேளீர்” என்று துடை தட்டி உணர்த்துகிறார்கள்.
அந்ய பரத்வத்தைத் தவிர்க்கைக்காக வன்றோ சொல் நடுவில் கேளீர் என்ன வேண்டுவது.

‘பசுக்களுக்கு மேய்ச்சல் வாய்த்தால் அப்போது கிடைப்பனவற்றை யெல்லாம் விரைந்து உட்கொண்டு
பின்னர் ஸாவகாசமாக அசை யிடுவது போல,
பகைவர் பரம்பின் இப் பாடியில் க்ருஷ்ண ஸம்ச்லேஷத்திற்கு வழி பிறந்த இந் நாளிற்
செய்ய வேண்டியவற்றைச் சடக்கெனச் செய்துவிட்டுப் பின்பு ஸாவகாசமாக இருந்து நெஞ்சார மகிழ வேண்டும்;

அன்றி இப்போது மேற்காரியத்திற் பதற்றமற்று ‘இங்ஙனே வாய்த்தவாறு என்னே!’ என்றாற் போலச்
சில பேசிக் கொண்டு மகிழ்ந்து மயங்கி ஸ்தப்தைகளாய் நின்றால் க்ருஷ்ணாநுபவத்துக் கென்று வாய்த்த
அற்ப காலமும் பழுதே கழியும்;
இந்நாலு நாளுங் கடந்தால் க்ருஷ்ண னெங்கே, நாம் எங்கே’ என்றிருக்கும் அவர்களாதலால்
“செய்யுங் கிரிசைகள் கேளீரோ” எனப் பதற்றந்தோற்றக் கூறுகின்றனர்.
அவர்கள் கேட்கைக்கு உடன் பட்டவாறே சொல்லைத் தொடங்குகின்றனர் ‘பாற் கடலுள்’ என்பது முதலாக.

இடர்ப் பட்டாரை இன்பக் கடலில் ஆழ்த்துவதை இயற்கைத் தொழிலாக வுடைய எம்பெருமான்,
தாமரை மலர் வேண்டி வானத்தே நிற்பவன்போற் சேணுயர் வானமாகிற வைகுந்த நாட்டிலிருந்தாற் காரியமாகாதெனக் கருதி,
ஆர்த்தர்களின் கூச்சல் செவிப்படுமாறு இவ் வண்டத்திற்குட்பட்ட திருப்பாற்கடற் கெழுந்தருளி அங்கு
உறங்குவான் போல் யோகு செய்த பெருமானாயிருப்பன் என்னும் வரலாறு அறிக.

அங்குப் பிராட்டிமார் போகத்தில் திருவுள்ளமூன்றாது ஆர்த்த ரக்ஷணத்தில் அவஹிதனாயிருக்குமாற்றைக் கூறும்,
பைய என்றுங் குறிப்பு வினையெச்சம்

ஒரு மாணிக்கத்தைத் தகட்டிலழுத்தினால் அது மிக்க புகர் பெற்றுத் தோற்றுமாறுபோல,
எம்பெருமான் திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான் மேற் சாய்ந்த பிறகு திருமேனியிற் புகர் நிறம் பெற்றுப்
பரம புருஷனெனத் தெற்றென விளங்குமாறிருக்குந் தன்மையை உளப்படுத்திப் பரமன் என்றனர்.

அன்றி,
ஆர்த்த ரக்ஷணத்தில் ஆவல்கொண்டு வானடையும் விட்டு வருகையாகிற குண விசேஷத்தால்
வந்த மேன்மையை உளப்படுத்திக் கூறுகின்றனரெனினு மொக்கும்.

எம்பெருமானுடைய மேன்மையை நினைத்தவாறே
தங்களுடைய தாழ்மையும் தன்னடையே நினைவுக்கு வருமாதலால்,
பின்பு அவனை ஏத்துகையே பணியாதல் பற்றி
அடிபாடி என்றனர்.

எல்லா வகைகளாலும் விஞ்சின மேன்மையை யுடைய கண்ணபிரானடியைப் பாடி என்ன வேண்டியிருக்க,
அங்ஙன் சொல்லாது, திருப்பாற்கடல் நிலைமையைப் பாடுவதாகச் சொல்லுகிறவிதற்குக் கருத்து யாதெனில்;
“கிருஷ்ணணையும் நம்மையும் நோக்கிப் பண்டே அதி சங்கை கொண்டிருக்கிற இடையர்,
நமக்குத் தெய்வம் தந்த இச் சேர்த்தியைச் சீறி அழிக்கிற் செய்வதென்?” என்னுமச்சத்தினால்
கண்ணனடி பாடுவதாகக் கூறுகின்றிலரெனக்கொள்க.

ஏஷ நாராணய : ஸ்ரீமாந் க்ஷீரார்ணவ நிகேதந :-நாகபர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம்”
என்னும் பிரமாணத்தை அவ்விடையர் அறியாரென நினைத்தனர் போலும்.

“உண்ணுஞ்சோறு பருகுநீர்த் தின்னும் வெற்றிலையு மெல்லாங் கண்ணன்” என்றபடி
ஸகல போக்யமயனான எம்பெருமான்றனடி பாடுதலையே உண்கையாக நினைக்கும் உறுதி இவர்கட்கு உளதாதலால்,
வேறு உணவில் விருப்பமொழியுமாறு பற்றி, நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்கிறார்கள்.
உண்டார்க்கு உண்ண வேண்டாவே.

‘நெய் குடியோம், பால் குடியோம்’ என்ன வேண்டி யிருக்க,
‘நெய் உண்ணோம், பால் உண்ணோம்’ என்றது சாதிப் பேச்சு ஆனது பற்றியே
‘நெய்யுண்டான், பாலுண்டான்’ என்று கண்ண பிரானுக்குப் பேர் வழங்குவதும்.
அன்றியே, திருவாய்ப்பாடியிற் கண்ண பிரான் பிறந்த பின்னர் நெய் பால் முதலியவற்றை ஒருவரும்
கண்டறியாதராய்ப் பேர் மாத்திரத்தைக் காதிற்கேட்டுள்ளவர்களாய்,
அவை உண்ணத் தகுந்தவையோ, குடிக்கத் தகுந்தவையோ வென்பதையும் ஆராய்ந்தறிந்திலராதலால்,
‘அவை உட்கொள்ளப் படுமவை’ என்னுமளவையே கொண்டு “நெய்யுண்ணோம் பாலுண்ணோம்” என்கிறார்களென்று
ரஸோக்தியாகவுமருளிச் செய்வர்.

“அடிபாடி நெய்யுண்ணோம்” என்ற சொற் போக்கால்
அடிபாடுவதற்கு முன்னே நெய்யும் பாலும் தாரகமாயிருந்தன வாயினும்
அடிபாடப் பெற்ற பின்னர் “எல்லாங் கண்ணன்” என்றிருக்கும் நிலைமை வாய்த்தமை தோற்றுமென்பர்.

நோன்பு நோற்கைக்கு அங்கமாகவும் விரஹதாப மாறுகைக்காகவும் குளிக்கும் படியைச் சொல்லுகிறது,
நாட்காலே நீராடி என்று.
சக்ரவர்த்தித் திருமகன் நாடு துறந்து காடு சென்ற பின் பரதாழ்வான்
“இராமபிரனைக் காட்டுக்கு ஓட்டிய பாவி காண் இவன்” என்னும் உலக நிந்தைக்கு அஞ்சி
ஒருவர் கண்ணுக்கு மிலக்காகாதபடி பொழுது விடியுமுன்னமே சரயுவிற்சென்று நீராடி வந்தாற்போல்,
இவர்களும் ஸ்வப்ர வ்ருத்தி பரத்வ ப்ரகாசந ப்ரயுக்தமான லோக கர்ஹைக்கு அஞ்சி ஒருவராலுங் காண வொண்ணாதபடி
பின் மாலையிற்றானே போய் நிராட நினைக்கிறார்கள், நாட்காலே என்று.

இந்திரியங்களுள் பிரதானமான கண்களுக்கு,
“காணாதார்கண்ணென்றுங் கண்ணல்ல கண்டாமே” என்றபடி எம்பெருமானை அநுபவிக்கை யொழிய
வேறு பேறு இலதாதலால் அப்பேறு வாய்க்குமுன் அக்கண்களை அலங்கரிக்கக் கடவோ மல்லோம்;

“நின் பாத பங்கயமே தலைக்கணியாய்”
“தாள் கண்டு கொண்டேன் தலைமேற் புனைந்தேனே” என்றபடி எம்பெருமான் தன் இணையடிகளைப் புனைதலே
தலைக்குப் பேறாதலால் அப்பேறு பெறுதற்கு முன் தலையை அலங்கரிக்கக் கடவேலமல்லோ மென்கிறார்கள், ஐந்தாமடியால்.

ஒரு காரியம் பிரமாணங்களில் அநுஷ்டேயமாகச் சொல்லப்பட்டிருப்பினும் சிஷ்டாநுஷ்டாநமின்றி யொழியில்
அது விடத்தக்கதெயாமென்னும் சம்ப்ர தாயார்த் தத்தை, வெளியிடும், செய்யாதன செய்யோம் என்பது.
தசரத சக்ரவர்த்தியின் கட்டளையாலும் பெருமாள் நியமனத்தாலும் பரதாழ்வான் அரசாளுகைக்கு உரியனாயிருந்தும்
அங்ஙன் ஆளாதொழிந்தது முத்தாரிருக்க இளையார் முடிசூடுகை பூர்வாநஷ்டாநத்திற்குச் சேராதென்னும் நினைவாலன்றோ.

ஆபஸ்தம்பராலும் தர்மஜ்ஞ ஸமய: ப்ரமாணம் வேதாச்சழூ என்று சிஷ்டாநுஷ்டாநமே முதற் பிரமாணமாகக்
கூறப்பட்டமை அறியத்தக்கது.

இனி, இவர்கள் நோன்பு நோற்கையாகிறவிது சிஷ்டாநுஷ்டாந ஸித்தமோ? ஏனில்; ஆம்;
பூர்வமீமாம்ஸையில் ஹோளாதி கரணங்யாபத்தை ஆராய்ந்துணர்க.

(ஹோளையாவது வஸந்தோத்ஸவம்; இதனை ஹோளாஹமெனவுங் கூறுவர். இது பங்குனி மாதத்துப்
பௌர்ணமாஸிக்கடுத்த ப்ரதிபத்தில் ஒருவர் மேல் ஒருவர் மஞ்சனீர் தெளித்துச் செய்யப்படும் உத்ஸவம் இது
திஸ்டா சாரஸித்த மென்னுமிடம் அவ்வதிகரணத்தில் நிஷ்கர்ஷிக்கப்பட்டது.
அதுபோலவே இந்நோன்பும் சிஷ்டாசாரஸித்தமெனக்கொள்க;
“மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்” என்று மேலுங் கூறுவர்.)

தோழிமார் ஒருவர்க்கொருவர் உரையாடும் போது “பேய்ப் பெண்ணே” என்றும்,
“நாயகப் பெண்பிள்ளாய்” என்றும் பலவகையாக விளிப்பர்களாதலால், ‘
அவளைக் கௌரவப்படுத்தினாள், என்னை லாகவப்படுத்தினாள்” எனச் சீறி எம்பெருமான் பக்கலிற் சென்று
ஒருவர் மேலொருவர் குற்றங்குறை கூறுதல் கூடாதென்று தம்மிலே தாம் ஸங்கேதித்துக் கொள்ளுகின்றனர்,
தீக்குறளை சென்றோதோம் என்று.

ஒரு விரதத்தில் அதிகரித்தவர் தீய சொற்களைச் சொல்வதைத் தவிர வேண்டுமென்று விதியாதலால்,
அவ்விதிக்கிணங்கச் சங்கற்பித்துக் கொள்கின்றன ரென்க.
‘பேய்ப்பெண்ணே!’ என்று வையவுங்கடவோம்;
‘நாயகப் பெண்பிள்ளாய்!’ என்று காலிலே விழவுங்கடவோம்; அவன் செவிப்படுத்தோம்;
பத்து மாஸம் சுற்றுமிருந்து ராக்ஷஸிகள் பண்ணின தர்ஜங்பர்த்ஸநாதிகளை ஏகாந்தத்திலும்
பெருமாளுக்கு விண்ணப்பஞ் செய்யாத பிராட்டியைப் போலே” என்ற ஆறாயிரப்படி அருளிச்செயல் இங்கு அறியத்தக்கது.

யோக்ய புருஷர் விஷயத்திலும் ஆசார்ய விஷயத்திலும் உரிய காலங்களில் பஹுமாநத்துடன்
வெகுவாக ஸமர்ப்பிக்குமது ஐயம்;
“தேஹி” என்று அர்த்தியா நின்ற பிக்ஷுக்கள் விஷயத்தில் ஆதரத்துடன் பரிமிதமாக ஸமர்ப்பிக்குமது பிச்சை.
இவ்விரண்டையும் இயன்ற வளவு செய்யக் கடவோ மென்கிறார்கள், ஏழாமடியில்;.

ஆந்தனையும் என்றது ஆமளவுமென்றபடி; சக்தியுள்ளவளவும் என்க.
‘இந்நோன்பு ஆந்தனையும்’ என்று உரைப்பாருமுளர்.
“அவர்கள் கொள்ளவல்லராந்தனையும்” என்று முரைப்பர்.
கைகாட்டி என்ற சொல் நயத்தால் எவ்வளவு கொடுத்தாலும் ‘நாம் என்ன கொடுத்து விட்டோம்’ என்ற
நெஞ்சிலோட வேணுமென்பது போதருமென்ப.

உள்ளுறைபொருள் :-
எம்பெருமானையே ஸர்வ போக்யமுமாகக் கொள்ள வேண்டுமென்கிறது, நெய்யுண்ணோமித்யாதியால்.
வர்ணாசரமங்கட்கு உரிய, நித்ய கருமங்கள் குறையற அநுஷ்டிக்கக்கடவன வென்கிறது, “நாட்காலே நீராடி” என்பதனால்.
மை கண்ணுக்கு ப்ரகாசகமாகையாலே ஆத்ம யாதாத்மிய ப்ரகாசகமான ஜ்யாந யோகத்தில் அந்வயிக்கலாகாதென்றும்,
மலரிட்டு முடிகை ஸ்வ போக ருபமாகையாலே பக்தி யோகத்தைச் சொல்லிற்றாய்,
அதில் அந்வயிக்கலாகாதென்றுங் கூறுகின்றது ஐந்தாமடி.

“நாம் முடியோம்” என்கையாலே பகவத் ப்ராப்தி ஸாதனங்களான ஞான யோக பக்தி யோகங்களில்
நாமாக அந்வயியாதொழிகையே வேண்டுவது; அவன்றானே இவ்வாதம் வஸ்துவை அநுபவிக்கும்போது
ஞானபக்திகள் இரண்டையுந் தந்து
‘இவற்றை நீ தவிராதொழிய வேணும்’ என்றால் செய்யலாவதில்லை என்னுமிடம் தோற்றும்.

இனி “மையிட்டெழுதோ” மென்பதனால் ஐச்வரியத்தில் ஆசை கொள்ளக்கடவோ மல்லோமென்றும்,
“மலரிட்டு முடியோ” மென்பதனால் ஆத்மாநுபவமாகிற கைவல்யத்தில் ஊன்றக்கடவோமல்லோ மென்றுஞ்
சொல்லுகிறதெனவுங் கூறக்குறையில்லை.

எம்பெருமான் வாத்ஸல்யாதிகுண யுக்தனாகிலும்
“வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர்பெருமான் திருப்பாதம் பணிந்து” என்றபடி
பாகவதரை முன்னிட்டல்லது ஆச்ரயிக்கலாகாது என்பதைக் காட்டும், “செய்யாதன செய்வோம்” என்பது.
பிறர்க்கு அநர்த்தத்தை விளைக்கவல்ல பொய் சொல்லலாகாது என்கிறது, “தீக்குறளை சென்றோதோம்” என்று.

ஐயமாவது – பகவத் வைபவம்;
பிச்சையாவது – பாகவத வைபவம்;
இவை இரண்டையும் தானறிந்தவளவும் பிறர்க்கு உபதேசிக்க வேண்டுமென்கிறது.

புகவத் ஸந்நிதியில் பாகவத வைபவத்தையும்,
பாகவத ஸந்நிதியில் பகவத் வைபவத்தையும் யதா சக்தி கூற வேண்டுமென்க.

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருப்பாவை–மார்கழித் திங்கள்- -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

March 2, 2021

ஸ்ரீ திருப்பாவை தனியன்கள்

ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்தது

நீளா துங்க3 ஸ்தந கி3ரி தடீ1 ஸுப்தம் உத்3போ3த்யத்4ய க்ருஷ்ணம்
பாரார்த்ய2ம் ஸ்வம் ஶ்ருதி ஶத ஶிரஸ் ஸித்3த4ம் அத்4யாபயந்தீ |
ஸ்வோச்சிஶ்ட்டாயாம் ஸ்ரஜி நிக3ளிதம் யா ப3லாத் க்ருத்ய பு4ங்க்தே
கோ3தா3 தஸ்யை நம இத3ம் இத3ம் பூ3ய ஏவாஸ்து பூ4ய: ||

ஸ்ரீ உய்யக்கொண்டார் அருளிச் செய்தவை

அன்னவயல் புதுவை ஆண்டாள் * அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் * – இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை * பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே! * தொல்பாவை
பாடி அருள வல்ல பல்வளையாய்! * – நாடி நீ
வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம் *
நாம் கடவா வண்ணமே நல்கு

———-

ஆயர் சிறுமிகள் “நாம் நோன்பு நோற்பதற்கீடாக நமக்கு இங்ஙனே விலக்ஷணமானதொரு காலம் நேர்பட்டபடி என் !”
என்று காலத்தைக் கொண்டாடி மார்கழி நீராட்டத்தில் விருப்பமுடைய பெண்களை விளிக்குமாறு கூறுவது, இப்பாட்டு.

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

பதவுரை

சீர் மல்கும்–செல்வம் நிறைந்துள்ள
ஆய்ப்பாடி–திருவாய்ப்பாடியில்
செல்வம் சிறுமீர்காள்–கைங்கர்ய ஸம்பத்தையும் இளம் பருவத்தையுமுடைய பெண்காள் !
நேர் இழையீர்–விலக்ஷணமான பூஷணங்களை அணிந்துள்ளவர்களே !
மார்கழி திங்கள்–(மாதங்களிற் சிறந்த) மார்கழி மாஸமும்
மதி நிறைந்த நல் நாள்–பூர்ண சந்திரோதயத்தை யுடைய (சுக்கில பக்ஷத்திய) நல்ல நாளும் (நமக்கு வாய்த்திரா நின்றன.)
கூர் வேல்–கூர்மை பொருந்திய வேலாயுதத்தை யுடையவனும்
கொடு தொழிலன்–(கண்ண பிரானுக்குத் தீங்கு செய்யவரும் க்ஷுத்ர ஜந்துக்கள் பக்கலிலுஞ் சீறிக் கொடுமைத் தொழிலைப் புரியுமவனுமான
நந்தகோபன்–நந்தகோபனுக்கு
குமரன்–பிள்ளையாய்ப் பிறந்தவனும்,
ஏர் ஆர்ந்த கண்ணி–அழகு நிறைந்த கண்களை யுடையளான
அசோதை-யசோதைப் பிராட்டிக்கு
இள சிங்கம்–சிங்கக் குட்டி போலிருப்பவனும்,
கார் மேனி–காளமேகத்தோடொத்த திருமேனியையும்
செம் கண்–செந்தாமரைப் பூப்போன்ற திருக் கண்களையும்
கதிர் மதியம் போல் முகத்தான்–ஸூர்யனையும் சந்திரனையும் போன்ற திரு முகத்தையுமுடையனுமான
நாராயணணே–ஸ்ரீமந் நாராயணன் தானே
நமக்கே-(‘அவனால் பேறு’ என்றிருக்கிற) நமக்கே
பறை–பறையை
தருவான்–கொடுக்குமவனாயிற் நின்றான்,
ஆல்–ஆதலால்,
பாரோர்-இவ் வுலகத்தவர்கள்
புகழ-கொண்டாடும்படி
படிந்து–(இந் நோன்பிலே)ஊன்றி
நீர் ஆட போதுவீர்–நீராட வர விருப்பமுடையீர்களே !
போதுமின்–வாருங்கள்
ஏல் ஓர் எம்பாவாய் !.-

நெடுநாள் சிறையிற் கிடந்தவன், அதினின்றும்; விடுபட்டுச் சுற்றத்தாருடனே கூடப் பெற்ற நாளில்
“கீழ்க் கழிந்த நாள்களைப் போலனறியே இற்றை நாளின் வைலக்ஷண்யமிருந்தவாறு எனக்கொல்!” என்று
அந் நாளை முந்துறக் கொண்டடுவது போல்,
நெடு நாளாக நிலவறைகளில் அடைபட்டுக் கண்ண பிரானோட்டைக் கருவியை இழந்து கிடந்த
இவ்வாயர் சிறுமியரும் தாங்கள் க்ருஷ்ணனோடு ஸம்ச்லேஷிக்குமாறு வாய்த்த நாளென்று
அந் நாளை முதலடியிற் கொண்டாடுகின்றனர்.

பகவத் கீதையிற் கண்ணபிரான் “மாஸங்களனைத்தினுள்ளும் மார்கழி மாதமாகிறேன் நான்” என்று
இம்மாதத்திற்குள்ள வீறுபாடு தோற்ற அருளிச் செய்தமையால் அம்மாதம் வாய்க்கப் பெற்றவர்கள்
அதனைக் கொண்டாடாதிருக்க வல்லரல்லரே.
இராம பிரானை முடிசூட்டப் பாரித்து முயன்ற போழ்து வஸந்தருதுவில் முதன்மையான மாதம் தன்னடையே நேர்பட,
அதனை அங்குக் கொண்டாடினாற் போல், இவர்களும் நோன்பு நோற்க முயலத் தன்னடையே வாய்த்த
மார்கழி மாதத்தை நினைந்து நெஞ்சு கனிகின்றனர்.
இடைத் தலைவர்கள் குளிர்க்கு அஞ்சிப் புறப்படமாட்டாத மாதமுமாதலால் கொண்டாட்டத்திற்குக் குறையில்லையே.

நற்காரியங்கள் செய்ய விரும்பினார்க்குச் சாஸ்திரங்களில் விதிக்கபட்ட சுக்ல பக்ஷமும் இவர்கட்கு நினைவின்றி வாய்த்தபடியால்,
அதனையுங் கொண்டாடுகின்றனர் மதி நிறைந்த நன்னாள் என்று.
ஒருவரை ஒருவர் முகங்கண்டு அநுபவித்தற்கும், எல்லாருங் கூடிச் சென்று கண்ணபிரானை உணர்த்துவதற்கும்
பாங்காக நிலா நேர்பட்டமையால் மகிழ்ச்சி மிக்கது.
இவர்கள் கண்ணபிரானோடு ஸம்ச்லேஷிப்பதற்கு ஊரார் விரோதிகளயிருக்குங் காலத்தில்
“நந்தகோபாலன் கடைத்தலைக்கே நள்ளிருட்கண் என்னை யுய்த்திடுமின்” என்று நள்ளிருளை வேண்டுவர்கள்;
இப்போது அங்ஙனன்றி க்ருஷ்ண ஸம்ச்லேஷத்திற்கு ஊராரே இசைந்து நின்றமையால்
இருளை வெறுத்து நிலவைக் கொண்டாடுகின்றனரென்க.
கீழ்க்கழிந்த நாட்களெல்லாம் தீயவையென்று தோன்றும், இப்போது நன்னாள் என்றமையால்.

நெடு நாளாகக் கண்ணபிரானைப் பிரிந்திருந்தமையாற் பிறந்த தாபமடங்கலுந்தீருமாறு நீராட விருப்பமுடையீர்!
வாருங்கள் என்று அழைப்பது, இரண்டாமடி.
இங்கு, நீராட எனக் கூறியது, “கண்ணபிரானோடு கலவிசெய்ய” எனக் கூறியவாறு;
தமிழர், கலவியைச் “சுனையாடல்” “புனலாடல்” என்னுமாற்றற் கூறுவர்.

“பெற்றேன் வாய்ச்சொல் இறையும் பேசக்கேளாள் பேர்பாடித் தண் குடந்தை நகரும் பாடிப்,
பொற்றாமறைக் காயம் நீராடப் போனாள் பொருவற்றா ளென்மகள் உம் பொன்னு மஃதே” என்ற
திருமங்கையாழ்வார் பாசுரமும் காண்க.

ஒருவர்க்கொருவர் தோழிகளாயிராநின்ற இவர்கள் “குளிக்க வாருங்கள்” என்று அழைக்கலாமியிருக்க,
“நீராடப் போதுவீர்” என்று கௌரவந்தோற்றக் கூவினமையால்,
பகவத் ஸம்பந்த முள்ளவர்கள் எவராயிருப்பினும் கௌரவிக்கப்பட வேண்டியவரேயென்று கூறப்பட்டதாயிற்று.
“கள்ளவழ்; சோலைக் கணபுரம் கைதொழும், பிள்ளையைப் பிள்ளை யென்றெண்ணப் பெறுவரே” என்றார் திருமங்கை யாழ்வாரும்.

அற்பபலமாகிய சுவர்க்காநுபவத்திற்கு உறுப்பாகக் கூச்மாண்டகண ஹோமம் முதலிய அரிய கருமங்கள் செய்ய வேண்டும்;
மீட்சியின்றி வைகுந்தமாநகர் புகுவதற்கீடான பகவத் ஸங்கத்திற்கு அபேக்ஷை மாத்திரமே போதும்;
வேறு ஒருவகை யதிகாரமும் வேண்டா என்பது, “போதுவீர் ! போதுமினோ” என்ற சொற்போக்காற் போதரும்,
பெறுகிற பேற்றிற்கு ஸத்ருசமான ஸாதநமில்லாமையால் ‘இச்சை மாத்திரமே போரும்’ என்கிறதென்க.
எலுமிச்சம் பழங்கொண்டு மன்னனைக் கண்டு ராஜ்யம் பெற்றார்க்கு அந்தப் பழம் ஸாதநகோடியிற் புகமாட்டாதவாறு போல,
இவ்விச்சையும் ஸாதநமாக வகையில்லை என்பதுமிங்கு உணரத்தக்கது.
போதுவீர் போதுமினோ – ‘வருகிறவர்களெல்லாரும் வரலாம்’ என்பது போல.

‘கண்ணபிரான் நம்மை எப்போது அணைத்துக்கொள்ள வருவனோ’ என்று ஆய்ச்சிகளனைவரும்
என்றுமொக்க ஆபரணம் பூண்டிருத்தலால், “நேரிழையீர்” என விளிக்கப்பட்டனர்.
‘எம்பெருமானோடு ஸம்ச்லேக்ஷிக்க வாருங்கள்’ என்று இவர்கள் விளித்தவுடனே உவப்பினால்
அவர்களது மேனி ஆபரணம் பூண்டாற் போலாயிற்றென்பது உள்ளுறை.

ஏற்கனவே பால் நெய் முதலியவற்றாற் சீர்மை பொருந்திய திருவாய்ப்பாடியில்
திருநாட்டுத் தலைவனான கண்ணபிரான் வந்து பிறந்தமையால், “சீர்மல்குமாய்ப் பாடி” எனப்பட்டது.
பரத்துவம் மாத்திரம் பொலிய நிற்கும் பரமபதம் போலன்றி, ஸௌசீல்ய ஸௌலப்யாதி ஸகல குணங்களும்
சால விளங்குமிடமிது வாதலால் சீர் மல்கச் சொல்ல வேண்டாவே.

எம்பெருமானிடத்து அன்புடைமைக்கு மேற்பட்ட செல்வம் ஆத்துமாவுக்கு இலதாதலாலும்,
தண்டகாரணிய வாசிகளான முனிவர் இராமபிரானது ஸௌந்தர்யாதி சயத்தில் ஈடுபட்டு அன்பு மிகுதியாற்
பெண்மை விரும்பி மற்றொரு பிறப்பில் ஆயர் மங்கையராய்க் கண்ணணைக் கூடினரென்பவாதலாலும்
“செல்வச் சிறுமீர்காள்” என விளிக்கப்பட்டதென்க.

எறும்பு முதலிய சிற்றுயிர்களின் சாவுக்கு அஞ்சிப் பசும்புல்லிற் காலை ஊன்ற வைத்து நடந்தறியாத நந்தகோபன்
கண்ணனை மகனாகப் பெற்றபின்பு அவனிடத்துப் பரிவு மிகுதியால் தொட்டிற்கீழ் ஓர் சிற்றெறும்பு ஊர்ந்தாலும்
அதனைக் கொல்வதென்று எப்போதுங் கூரிய வேலுங்கையுமாயிருந்தமை பற்றிக்
“கூர்வேற் கொடுந்தொழில” னாகக் கூறப்பட்டனன்.

உலகிற் சிறுவர்கள் தந்தையர் பால் அஞ்சி நிற்பதும், தாய் மார்பால் அடங்காதொழிவதுமாயிருத்தல் போலக்
கண்ணபிரானும் நந்தகோபனுக்குக் கோற்கீழ் கன்றாகவும், யசோதைப் பிராட்டிக்குச் சிங்கக் குருகாகவும்
இருந்தமை பற்றி “நந்தகோபன் குமரன்,” “அசோதை யிளஞ்சிங்கம்” எனப்பட்டது.
செருக்கிலும் மேனாணிப்பிலும் கண்ணனுக்குச் சிங்கம் உவமையா மென்க,

“அழுகையுமஞ்சி நோக்குமந் நோக்குமணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்,
தொழுகையுமிவை கண்டவசோதை தொல்லையின்பத்திறுதி கண்டாளே” என்றபடி –
கண்ணனது திவ்விய சேஷ்டிதங்களைக் கண்ட களிப்பின் மிகுதியால் யசோதைக்குக் கண்கள் அலர்ந்து
அழகு மிக்குத் தோற்றுமாறு பற்றி “ஏரார்ந்த கண்ணி” என அவட்கு அடைமொழி கொடுக்கப்பட்டது.

கண்ணபிரானது திருமேனியைக் காண்டலுமே கார் முகிலைக் கண்டாற்போல்
ஸகல தாபங்களும் தீர்வது பற்றிக் “கார்மேனி” எனப்பட்டது.
“ஆற்றிலிருந்து விளையாடுவோங்களைச், சேற்றாலெறிந்து வளைதுகிற் கைக்கொண்டு,
காற்றிற் கடியனாயோடிய கம்புக்கு, மாற்ற முந்தாரானாலின்று முற்றும்; வளைத்திரம் பேசானாலின்று முற்றும்” என்றபடி –
இவன் பொறுக்கொணாத் தீம்புகளைப் போரச் செய்யினும்,
வடிவழகை நினைக்குங்கால் விடமாட்டாது மேல்விழுந்து முகத்தான்” என அழகிலீடுபட்டுக் கூறுகின்றனர்.
திருமுகமண்டலத்தின் ஒளிக்குக் கதிரவனும், குளிர்ச்சிக்குத் திங்களும் உவமையென்க.
இப்படிப்பட்ட அழகு பொருந்தியவன் அயற்புருடனாயிருக்கை யன்றியே
நமக்கு வகுத்த நாயகனுமாயிரா நின்ற னென்கிறார்கள் – நாராயணனே என்பதனால்.

நாராயணனே என்றவிடத்து ஏகாரதம் பிரிநிலைப் பொருளதாய், (பிரிநிலை – அவதாரணம்.)
நாராயணன் அடியார்க்குக் காரியஞ் செய்யுமிடத்துச் சாதனங்களை யெதிர்பாராது செய்து
தலைக்கட்டுபவன் என்பதை உணர்த்தும்.

நமக்கே என்ற விடத்து ஏகாரமும் அப்பொருட்டாய் நாராயணன் ஸர்வ ஸாதாரண ஸ்வாமியாயினும்,
ஆகிஞ்சந்யம், அநந்யகதித்வம் என்னு மதிகாரங்களமைந்த நமக்கன்றி
மற்றை யோர்க்குக் காரியம் செய்யான் எனபதைத் தெரிவிக்கும்.

பறை என்பது நோன்புக்கு அங்கமானதொரு வாத்ய விசேஷம்.
இவ்வாய்ச்சிகள், மேல், “மாலே மணிவண்ணா” என்ற பாட்டில் அபேக்ஷித்தபடி கண்ணபிரான் பறை தரப்புக,
அதுகண்ட இவர்கள் “சிற்றஞ்சிறுகாலே” என்கிற பாசுரத்தில்,
“இவற்றைப் பறைகொள்வானன்று காண் கோவிந்தா; எற்றைக்கு மேகீழழ்பிறவிக்கு
முன்றன்னோடுற்றோமே யாவோ முனக்கே நாமாட் செய்வோம், மற்றை நங்காமங்கள் மாற்று” எனக் கூறினமையால்,
பறை, பறை என்று சொல்லிக்கொண்டு போவது நாட்டார்க்கு ஒரு வியாஜமாத்திரமேயாய்,
அதன் உள்ளுறை கைங்கரிய விருப்பம் என்பது விளங்கும்.

அக் கைங்கரியத்தைத்; தாமாகவே செய்ய இவர்கட்குப் பிராப்தி உளதாயினும்
“ஏவமற்றமாராட் செய்வார்” என்றபடி எதிர்த் தலையின் நியமனங்கொண்டு செய்வதே
ஸ்வரூபத்துக்குச் சேருமென்னும் ரஹஸ்யார்த்தம்,
“பறை தருவான்” என்பதனாற் போதரும்.
ஸ்வயம் துருசிரே தேசே க்ரிய தாமிதி மாம் வத என்ற இளையபெருமாள் பிரார்த்தித்தவாற்றை நோக்குக.

கண்ணபிரானையும் ஆயர்மங்கைகளையும் நெடுநாள் பிரித்திரந்த ஆய்த்தலைவர் இன்று கூட்டியது –
நோன்பு நோற்று மழை பெய்விக்க வாதலால்,
இவர்களது நோன்பினால் மழை பெய்யா தொழியில் அவர்கள் இகழக்கூடும்;
மழை பெய்யில் “ஆ! பெண்கள் நோற்றபடி என்கொல்; மழைபெய்தபடி என்கொல்!” என்று புகழக் கூடும்;
அப்புகழ் உண்டாக வேணுமென்னும் விருப்பத்தைக் காட்டுகின்றனர், பாரோர் புகழ என்பதனால்.
புகழ என்றது – மகிழ என்றபடியுமாம்.

பகவத் கைங்கரியத்தில் ருசியுடைய பாகவதர்கள், பகவத் குணாநுஸந்தாநத்தினால்
“காலாலழும் நெஞ்சழியுங் கண் சுழலும்” என்றபடி எழுந்திருக்க வல்லமையற்று ஸ்தப்தராய்க் கிடக்கும்
பாகவதர்களைக் கைங்கரியத்திற்கு அழைத்தல் இதற்கு உள்ளுறை பொருள்.

“மார்கழித் திங்கள்” என்று – ஸத்துவ குணம் நிறம்பெறும் படியான கால விசேஷத்தைக் கூறியவாறு.
“மதி நிறைந்த நன்னாள்” என்று – ஆசிரினுடைய அருளடியாக ஸ்வருப வுணர்ச்சி பெற்று
எம்பெருமானுடைய விஷயீகாரத்திற்கு இலக்காகப் பெற்ற நாளைக் கூறியவாறு.
“அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்” என்றபடி –
பிறந்தநாள் இதுவாதலால் அதனைக் கொண்டாடுகிறபடி.

ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோஸ்மி க்ரிஷ்மே சீதமிவ ஹரதம் என்று பகவத் ஸமாச்ரயணத்தைப்
புனலாடலோடொக்கக் கூறினமையால் “நீராடப் போதுவீர்” என்று –
‘பகவத் ஸமாச்ரயணம் பண்ண வாருங்கள்’ என்கிறது.

“போதுவீர் போதுமினோ” என்கையால் –
பவித்ர பாணியாய் நீராடுதல், மூக்கைப்பிடித்தல்,
ஸங்கல்பம் செய்து கொள்ளல் முதலிய அங்க காலபங்கள் இதற்கு வேண்டாவென்கிறது.
ஞான பக்தி வைராக்யம் முதலிய குணங்களே ஆத்துமாவுக்கு அலங்காரமாதலால்,
அக்குணமுடைமை கூறுகிறது “நேரிழையீர்” என்று.

எம்பெருமானது எளிமை முதலிய குணங்கள் பரமபதத்தளவுஞ் சென்று அலையெறியும்படி
பொங்கா நிற்கப் பெற்ற திருப்பதிகளில் பகவதநுபவத்திற்குப் பாங்கான அபிநிவேசமுடைய
அநந்யார்ஹ சேஷ பூதர்களை விளிப்பது, மூன்றாமடி.
அந்யசேஷத்வமும் ஸ்வஸ்வாதந்திரியமும் இல்லாதாரைக் குறிப்பது, சிறுமீர்காள் என்பது.

மங்களாசாஸந பரரான ஆசாரியர்கட்கு விதேயனாயிருப்பவன் எம்பெருமான்
என்பதைக் கூறுவது, நான்காமடி.

பூர்ணமான ஞானத்தை விளக்கக் கடவதும், “குலந்தருஞ் செல்வந்தந்திடும்” என்றபடி கலாதிசயங்களையும்
தரக் கடவதுமான பெரிய திருமந்திரத்தில் தனது வீறுபாடு தோற்ற விளங்குபவன்
எம்பெருமான் என்பதைக் கூறுவது, ஐந்தாமடி.

கண் – ஞானம். திருமந்திரம் தாயாகச் சொல்லப்படுவதனால்,
இங்கு “அசோதை” என்று திருமந்திரத்தைக் குறித்தவாறாம்.
மந்திரம் எம்பெருமானைத் தன் கருவிலே வைத்துக் கொண்டு எல்லாருமறியலாம்படி பிரகாசிப்பிக்குந்
தன்மையுடைமை பற்றித் தாயாகக் கூறப்படுதல் பொருந்துமென்க.
ஆச்ரயணீயனுடைய போக்யத்வஞ் சொல்லுகிறது,

ஆறாம் அடியார்க்கு அணுகத்தக்கவனாயும், அல்லாதார்க்குக்கிட்ட வொண்ணாதவனாயுமிருப்பன்
எம்பெருமான் என்பதை விளக்கும்,
“கதிர்மதியம் போல் முகத்தான்” என்பது. அவ்வெம்பெருமான் இடத்தன்றி மற்றையோரிடத்து
யாம் பேறுபெறக் கடமைப்பட்டிலோம் என்பதைக் காட்டுவது, ஏழாமடி.

புகவதாச்ரயணத்தினால் நமக்கு அளவற்ற புகழ் உண்டாகுமென்கிறது, “பாரோர் புகழ” என்பது.
இனி, இந்நடையில் அவரவர்கள் மதிவைசித்திரிக்கேற்ப ஸ்வாபதேசார்த்தங்களை உயத்துணர்க.

(ஏலோரெம்பாவாய்.)
இத்தொடர்மொழிக்குத் தனித்தனியே பொருள் ஆராயப் புகுதல் வேண்டா;
வென்றவர் முன்னே தோற்றார் “தடம் பொங்கத்தம் பொங்கோ” என்பது முதலியவை போல்,
நோன்பு நோற்கப் புக்கவர் “ஏலோர் எம்பாவாய்” என்ற மகுடத்தினாற் பாசுரங் கூறுவது மரபு எனக்கொள்க.

மார்கழி – மார்க்கசீர்ஷமென்னும் வடசொற் சிதைவு.
திங்கள் – சந்திரன்; அமாவாசைக்கு அமாவாசை ஒரு மாதமெனக் கொண்டு சந்திர சம்பந்தத்தாற்
காலத்தை வரையறுக்கும் சாந்திரமாந ரீதிபற்றி, திங்கள் என்று மாதத்திற்குப் பெயர் வழங்கலாயிற்று; இலக்கணை.
முதலடி யிறுதியில் ஆல் – ‘ஆதலால்;’ என்பதை சிதைவு; அசையுமாம்.
போநுவீர், போதுமின் – “போதருவீர், போதருமின்” என்பவற்றின் மரூஉ என்னலாம்.
சீர் – ஸ்ரீ . மல்குதல் – விஞ்சியிருத்தல்.
சிறுமீர்காள் – சிறுமாயர்காள்’ என்பதன் விளி.

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருப்பாவை உபன்யாசம் -2020/21-ஸ்ரீ உ .வே .வேளுக்குடி ரெங்க நாதன் ஸ்வாமிகள் –

February 2, 2021

இந்த ஆனந்த வேளையில், கீர்த்திமூர்த்தி வாகம்ருதவர்ஷீ வேளுக்குடி
ஸ்ரீ உ.வே. வரதாச்சாரியார் ஸ்வாமி-யின் தனியனை அடியார்கள் அனைவரும் சேவிப்போம்.

ஸ்ரீமது சடாரி ஜகதார்ய வசோநிமக்த்னம்
ஸ்ரீபாஷ்யமங்கள மஹார்த்தர வாக்விலாசம்
ஸ்ரீமந் மஹார்ய வரவேங்கட பாதபத்மம்
ஸ்ரீரங்க சப்த வரதார்யம் அஹம் ப்ரபத்யே.

அமர கோசம் -சப்த கல்ப த்ருமம்-காடு போல் -மலைக்கு
ஏழு மலைகள் -திருமலை மா மலை பொன் மலை -மலையே திரு உடம்பு -பூ மேல் இருப்பாள் பத்மாவதி பரிமளம் வடிவு
சேஷாசலம்- வேதாசலம்- கருடாசலம்- அஞ்சனாசலம்- வ்ருஷாசலம்- வேங்கடாசலம் -நாராயணாசலம்
அத்ரி -அசலம் -கிரி -பர்வதம் -சைலம் -சிகரி -மஹீத்ரா –
அத்யத இதி அத்ரி -உண்ண வழி -உஜ் ஜீவனம் -அதனம் -உண்ணுதல் -அன்னகூட உத்சவம் கோவர்தனம் –
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம்
ந சலதி -அசையாமல் -ப்ரதிஜ்ஜை சத்ய வாக்யன் -த்ருட வ்ரதன்
கிரதி – தாரயதி -தாங்குவதால் கிரி -வாழ்க்கைக்கு ஆதாரம் -அசலம் -அத்ரி — இத்யாதி தாங்காதே –
பூமிக்கு முளை அடித்தால் போல் குல பர்வதங்கள் –
பர்வாணி -சந்தி -மலைத் தொடர் -நல்ல மலா தொடர் தலைப்பகுதி இது -அஹோபிலம் ஸ்ரீ சைலம்
பூரயதி பர்வத நிறைவேற்றுகிறது
சைலம்-சிலைகள் கற்கள் சேர்ந்து -சைலம் -பத்ரி கற்கள் சரிந்து -வழி -கல்லும் கனை கடலும் –
சிலா ரூபம் -கல் வெட்டு போல் -சரம ஸ்லோக அர்த்தம் காட்டி -தேர் தட்டு கடல் கரை வார்த்தை போல் இல்லாமல்
சிகரி -சிகரம் மலை உச்சி -மலையே திரு உடம்பு -சிகரங்களுக்குள் மேரு –
மஹீ தரதீ -பூமியை தூக்கிக் காட்டி -ஸ்ரீ வராஹ க்ஷேத்ரம்

கல் -மலை -வரை -குன்றம் -வெற்பு -பொருப்பு -எழு சிகரம் –
கட்டியாக -கல்லும் கனை கடலும் புல் என்று ஒழிந்தன -பெரிய திருவந்தாதி -68
மால் இரும் சோலை என்னும் பொருப்பிடம்
தங்கு ஸ்தலம் –
வட மலை -மா மலை -பெரிய -பொன் மலை ஸ்ப்ருஹனீயம்
வரை -பெருகு மத -வேழம் -வான் கலந்த வண்ணன் வரை -பற்றும் வரை தான் சம்சாரம் –
கல் அசையாமல்
குன்றம் நின்று -வான் இருந்து -நீள் கடலில் கிடந்து -கலியன் –
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம் –
வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி நிற்கிறேன்
பேயாழ்வார் -சார்ந்த -சின வேங்கை பார்க்கும் –திரு மலையே பொருப்பு –
மதி தவழ் குடுமி மால் இரும் சோலை -நம்மாழ்வார்
வழு வில்லா வாள் செய்ய மாலுக்கு எழு சிகர வேங்கடத்துப் பாரித்த மிக்க நலம் சேர் மாறன் -23-
எழுந்து இருக்கும் சிகரம் -ஏழு சிகரம் என்றுமாம் கைங்கர்ய பாரிப்பும் எழும்

வ்ருஷபாத்ரி அஞ்சனாத்ரி சேஷாத்ரி வேங்கடாத்ரி -யுகம் தோறும் பெயர் மாறும்
வ்ருஷபாசுரன் -க்ருத யுகம் -நரகாசுரன் நன்றாக சதுர்த்தி போல்
கேசரி அஞ்சனா தேவி தவம் -அஞ்சனாத்ரி -த்ரேதா யுகம் -திருமலைக்கு ரக்ஷகம்
அஞ்சன மலை -மைப்படி மேனியன் -என்றுமாம்
சேஷாத்ரி -வாயு வேகமாக சேஷன் சுற்றிய மேரு மலையை அசைக்க போட்டி -தம்புரா மீட்டி நாரதர் -சிகரம் பெயர்ந்து
வேதாசலம் -ரிக்வேதம் -வேத நாயகன்
கருடாசலம் -கோல வராஹம் -க்ருத யுகம் -ஒய்வு எடுக்க வர -ஆனந்த நிலைய விமானம் -கருடன் -கொண்டு வந்ததால் கருடாத்ரி –
விளையாட்டு க்ரீடாத்ரி என்றும் பெயர்
நாராயணாய ஸலம் -நாராயண ரிஷிக்காக

திருமங்கை ஆழ்வார் காட்டி அருளும் ஏழு போக்க வேண்டியவை
1-தாயே தந்தை -ஆபாச பந்துக்கள் -நிரு பாதிக சகல பந்து இவனே
2-கண் மடவார் -அல்ப போக்யங்கள் ப்ராவண்யம் -மயக்கும் -மறைக்கும் –
பகவத் ஸ்வரூப திரோதானகரி -யோகம் போகம் மாற்றி -ஏகாக்ர மனாஸ் இந்திரியங்கள் கொண்டு அணுகி
3-கொன்றேன் பல்லுயிரை -ஹிம்சித்தேன் -இனிதாக உரைத்து அறியேன் –
4-பிறந்தே ஏய்த்து ஒழிந்தேன் -அறம் செய்திலேன்
5-எப்பாவம் செய்து -பிறந்து செய்தவை -அப்பா -கீழே அபசாரம் -இங்கு பாவங்கள் –
அதி மஹா அநு உப பாதகம் -பஞ்ச மஹா பாதகங்கள்
6-புண்ணார் ஆக்கை -கர்ம பலன் பெற்றேன் –

ஆகாச ராஜா தாரணி தேவி -பத்மாவதி தந்தை தாய் -வேகவதியே தாயார்
தொண்டைமான் சக்ரவர்த்தி இளையவன்
வகுள மாலிகை -யசோதை
ஸூ காச்சார்யருக்கு கொடுத்த -திருச் சுகவனூர்

——–

ஐந்து குடிக்கு ஒரு சந்ததி
அம் தமிழால் நல் கலைகள் ஆய்ந்து உரைத்த பெரும் தமிழன் -தமிழ் தலைவன் -பாலேய் தமிழர் –
பரதேவதா ஸ்தாபிதம் -திரு மழிசை
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -நம்மாழ்வார்
பாகவத சேஷத்வம் -குலசேகரப்பெருமாள்
மங்களா சாசனம் -சோராத பெரும் காதல் -பெரியாழ்வார்

பர்வத பரம அணு –
சம்சாரிகள் -ரிஷிகள் -ஆழ்வார்கள் -பெரியாழ்வார் -ஆண்டாள் -இவர்கள் செயலை விஞ்சி நிற்கும் தன்மை
பிஞ்சாய் பழுத்தாள் -ஜென்ம சித்த ஸ்த்ரீத்வம் -பள்ள மடை -உறங்கும் அவனை திருப்பள்ளி எழுப்பி –

நாளைக் கொண்டாடி -உத்தராயணம் -தேவர்களுக்கு பகல் -மார்கழி ப்ரஹ்ம முஹூர்த்தம் -ஸத்வ குணம் ஓங்கி இருக்கும்
என் நாள் நாம் மண்ணை அளந்த இணைத் தாமரைகள் காண்பது அந்நாளே நல் நாளே -இவர்களுக்கு அமைந்ததே –
ப்ரஹ்ம அனுபவமே நீராட்டம் —

பிரபந்த சுருக்கம் –
கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர் என்னும் திரு நாமம் திண்ணம் நாரணமே
நலம் தோறும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா யஹின்னும் நாமம்
நாராயணனே நமக்கே பறை தருவான் —
படிந்து நீராடாவ் பொதுவீர் போதுமினோ -ஆசை உடையோர் எல்லாரும் உகந்து பணி செய்ய அழைக்கிறாள்
பயனை முதலில் சொல்லி பிராப்பகமும் அவனே -ப்ராப்ய ப்ராபக சுருக்கம் -சாரம் இதுவே

—–
செல்வ சிறுமீர்காள் -பொற்றாமரை அடியே -ப்ராப்யம் -அத்தை பெறவும் அவனே பிராபகம்
நாராயணனே நமக்கே பறை தருவான் -அர்த்த பஞ்சகமும் இந்த நான்கு பாதங்களால் -ஏவகாரம் -விரோதி ஸ்வரூபம்

ஸம்பாவித ஸ்வ பாவங்கள் –
ஆத்மாவுக்கு நன்மை தேடுபவர்கள் -அன்றோ இவர்கள்
தேகத்தை நிழலிலே வைத்து ஆத்மாவை வைப்பர் சம்சாரிகள் –
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து திருவடிக்கீழ் வாழ்பவர்கள்
பாகவத மங்களா சாசனம்

யஸ் ஸ்மர்த்த புண்டரீகாஷா -பாஹ்ய அந்தர் ஸூதிதிக்கு -த்வயத்தையே சொன்னவாறு -ஆயி ஸ்வாமிகள் காட்டி அருளுகிறார்
ஐயம் -சம்பாவனை -கொடுப்பவன் கை கீழே-பாகவத விஷயம் –
பிச்சை -தானம் -கொடுப்பவன் கை மேல் -பகவத் விஷயம்

ரஹஸ்ய த்ரய அர்த்தங்களையே சொல்ல வந்தவை திவ்ய பிரபந்தங்கள் -இத்தை ஒழிய வேறே கால ஷேபம் இல்லையே
தத்வ ஹித புருஷார்த்தம் -கோதை உபநிஷத் –
துயர் அறு அடி தொழுது எழு -துயர் அறு அடி-வஸ்து நிர்தேசம் –எழு ஆசீர்வாதம் – தொழுது -தேவதா நமஸ்காரம்
அகில புவன-இதே போல் மூன்றும் உள்ளதே
பவது -ஆசீர்வாதம் –
ஸ்ரீ பாஷ்யம் சுருக்கம் -காரணத்வம் -அபாதகாத்வம் -உபாயத்வம் -உபேயத்வம்
முதல் ஐந்தும் உபோத்காதம் –நான்கு ஸூத்ரங்கள் -ஸ்ரீ பாஷ்யம் போல்
மூன்று முன்னுரை -ப்ராசங்கிகம் நாலாம் ஐந்தாம் பாசுரம் –
ப்ராப்ய ப்ராபக அதிகாரி ஸ்வரூபம் முதலில் –
முதலில் வஸ்து நிர்தேசம்
அடுத்து அடி பாடி -நமஸ்காரம்
அடுத்து ஆசீர்வாதம்
உகாரம் -லஷ்மீ வாசகம் -உயர்வற
வேதார்த்தம் -மங்கள வாவஹம்
போலவே மார்கழி -மா -பிராட்டி வாசகம் –
மஹா பிரவேசம் -மூன்று ஸ்ரீயப்படி ஈட்டில் –

———-

மேற்கு வெளி ஆண்டாள் சன்னதி
கிழக்கு -பரமபத நாதன் சந்நிதியிலும் ஆண்டாள்
தெற்கு -ரெங்க விலாஸ் மண்டபம் உல் ஆண்டாள் -ஆக மூன்றும் -உண்டே –
ஸ்ரீ ரெங்க நாயகி வடக்கு திசை மட்டுமே –
பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால் அன்றோ –
பித்தர் பனி மலர் பாவை
ஸ்ரீ வல்லபன் –
பூமி நீளா நாயகன் –

—–

இளம் சிங்கம் -மா முனிகளையே குறிக்கும் –
வலி மிக்க சீயம் ராமானுஜன் -ராமானுஜ முனி வேழம் –
கலைப்பெருமாள் ஒலி மிக்க பாடலால் -கலியன் வடிவு அழகு வர்ணனை மா முனிகள்

மறை பாற் கடல் அமுது -ஈடு அளித்து -பெருக்கர் -மா முனிக்கும் பொருந்தும் –
பரம ஸ்பஷ்ட -ராமர்-மண்டோதரி -தாரை

———-

வையத்து வாழ்வீர்காள் –

மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய்
மாலை யுற்ற வரை பெரும் திரு மார்வனை மலர் கண்ணனை
மாலை உற்று எழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே– 2-8-

—–

முந்தி வானம் மழை பொழிய -அந்தி மூன்றும் அனல் ஓம்பும் -அழுந்தூர் -சங்கல்பித்த உடனே மழை பொழியுமே

——–
அத்புத காரணன் நிஷ் காரணன் –
நாராயணனே -பாற் கடல் பையத் துயின்ற பரமன்
நாராயணனே ஓங்கி உலகு அளந்த உத்தமன்
நாராயணனே ஊழி முதல்வன் -பத்ம நாபன் -மாயன் இத்யாதி

——–

உத்தமன் –பகவத் பாகவத விஷயங்களில் மண்டி நிந்தா யுக்திகள் இல்லாமல் வியாக்யானம்
பொரி வண்டு -இரண்டு பதங்களும் மா முனிகள் -ஸாரார்த்த க்ராஹி -விரேபம் -இரண்டு ரகாரம் -வர வர முனி அன்றோ –
திருவாய் மொழி நூற்று அந்தாதியாம் தேன்
குரோர் நாம ஸதா ஜபேத் -உத்தமன் பேர் பாடி -யா யா விருத்தி யோ யோ ஜல்ப உம்மையே சொல்லும் படி-எறும்பி அப்பா –
பிச்சேறினாலும் ஒத்து சொல்லுமா போல் -உத்தமன் பேர் -திருமந்திரம் –
வண்டு கிளி கன்று குழந்தை -கோவிந்த நாமம் பெரியதா கோவிந்தன் பெரியவனா –
நாரதர் -கண்ணன் கதை -அவன் தூரஸ்தானாயினும் இது கிட்டி நின்று உதவும்
திரௌபதிக்கு -கோவிந்த நாமமே உதவ வியாபக மந்த்ர மஹிமையைச் சொல்லவும் வேணுமோ

நின்றது எந்தை ஊரகத்து பிரணவம் -ஸ்வரூபம் -பரம சேஷித்வம்
இருந்தது எந்தை பாடகத்து -உபாய வைபவம் -தூது போனவன் ஏற்றம் -நமஸ் அர்த்தம்
அன்று வெக்கணை கிடந்தது – நாராயணாயா -போகம் –
திருமந்த்ரார்த்தம் கிடைத்ததும் பிறந்தேன் ,முன்பு பிறந்திலேன் -தீங்கு இன்றி -அல் வழக்கு ஒன்றும் இல்லா –
வியாதி -துர்பிக்ஷம் -திருட்டு -விலக்ஷண மந்திரத்தால் விலக்ஷண விஷயங்கள்
ஆத்ம அபஹாரமே திருட்டு -ஸ்வ ரக்ஷண ஸ்வ அந்வயமே துர்பிக்ஷம் -வியாதி -அப்ராக்ருத புருஷார்த்தங்கள் –

———

மாயன் -பரத்வம் வ்யூஹம் விபவம் அந்தர்யாமி அர்ச்சா -ஐந்திலும் உண்டே -ஆழ்வார் பாசுரங்கள் ஒவ் ஒன்றுக்கும்
மங்க ஒட்டு உன் மா மாயைகள் -ஆனை காத்து –ஆ நெய் உண்டு —மாயம் என்ன மாயமே –
பிறந்த மாயா பாரதம் பொருத மாயா -மாயப்போர் தேர்ப்பாகன் -கண்ணி நுண் சிறுத் தாம்பால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன்
கொள்வன் மாவலி மூவடி -யந்த்ரா ரூடா மாயயா -அரவின் அரவின் மிசை மேய மாயனார் -இத்யாதிகள்
யோக மாயா -ஆணை இட்டதும் உண்டே -பிரக்ருதிக்குச் சேர -முழுவதுமே கண்ணன் பரமாக –
மதுரா -புண்யா பாப ஹரி ஸூபா –ஸாஷாத் விஷ்ணு ஸநாதனம்

———

பாழி அம் தோள்
வியாக்கியான ஸ்டைலி -அவதாரிகை -திருவாய் மொழியை ரஷித்த குணவாளர்கள் வியாக்யாதா -கிரந்த லக்ஷணம் –
அணி மா தட தோள் -ரஹஸ்ய சதுஷ்ட்யம் –
சங்கதி -ஸூ த்ரார்த்த விவரணம் -அனைத்து யோஜனைகளையும் காட்டி அருளி –
அடுத்த அவதாரிகையில் அனைத்து யோஜனைகளுக்கும் சேரும் படி -குறைகளையும் காட்டி -பிரமாணங்களையும் காட்டி அருளி –
சத்ர சாமரம் தங்கியது பட்டாபிஷேகம் ஆனபின்பு பாத்ம புராணம்
மேகம் -காரேய் கருணை ராமானுஜர் போல் இவரும் -ஆச்சார்ய ஹ்ருதய வியாக்யானம் சரம தசையில் –
அணையில் சாய்ந்து ஸ்ரமம் பட்டு -உம்முடைய புத்தரை பவ்த்ராதிகளுக்காக –

கீழே நாம வைபவம் -இதில்-ஆழி – பாகவத வைபவம் –
பார்ஸ்வத்தில் உள்ள வழிப் போக்கனும் செல்வ நாரணன் என்று சொல்லும்படி அன்றோ ஆழ்வார் மஹத்வம்

———

மீனாய் இன்னம் கார் வண்ணனே -காருண்யம் வற்றாதே –
தீதும் ஒன்றும் சாரா ஏதம் ஒன்றும் அடையா -பூர்வாகம் உத்தராகம் –
கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம -அபரிச்சேதயம் -ஆனந்த மயம் -அளப்பரிய ஆரமுது -இந்த இரண்டையும்
அன்னமாய் அரு மறையை வெளிப்படுத்திய அம்மான் -வேதம் அருளியதே பறவை தானே
ஜான ஸ்ருதி -ப்ரஹ்ம ஞானம் கொடுப்பதும் பறவை
பஷியே -கடகர் -தாரகம் -மடக்கிளியை மடக் கிளியை கை கூப்பி வணங்கி

——-

மா முனிகள் – மாயன் -மதுரை மைந்தன் -திருவாய் மொழிப்பிள்ளை சிஷ்யர்
பகவத் ஏக போக பரர் -ஆயர் குலம்
ப்ரஹ்ம ஞான வைபவம் சொல்லும் இப்பாசுரம் -வேங்கடங்கள் மெய் மேல் வினை -பூர்வாகம் உத்தாராகம்
வேம் -கடன் -இரண்டு சப்தங்கள் -மெய் -சத்யம் -மேல் வரும் வினைகள் சாரா- ஒட்டாது –
தாடகா -ஸு பாஹு மாரீசன் போல் இந்த இரண்டும் -அஞ்ஞானம் காரணமாக இரண்டும் –

——–

25 பட்டம் வானமா மலை ஸ்வாமி -ஆனைச்சாத்தன் சொல்லக் கேட்டாராம் -தேச பாஷை
ஸஹ பத்ந்யா விசாலாஷ்ய
கௌசல்யா ஸூ ப்ரஜா
அம்மம் உண்ண துயில் எழாய்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்து அருளாய்
இவள் விஞ்சி பிள்ளாய் –எழுந்திராய் –

புள்ளும் –திற ஏலோர் எம்பாவாய் -இதில்
நாயகனாய் -நீக்கு ஏலோர் எம்பாவாய்
அம்பரமே –உம்பியும் நீயும் உறங்கேல் ஓர் எம்பாவாய்
பிரிக்கும் பொழுது சரியாக பிரிக்க வேண்டுமே
கலந்து பேசின பேச்சு அரவங்களே உபநிஷத் அனைத்தும் -இதிஹாச புராணங்களும் –
வால்மீகி நாரதர் -ராமாயணம் –
பராசரர் முத்ரேயர் /கண்ணன் அர்ஜுனன் -ஆழ்வார் மதுரகவி
கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லி

——-

வர வர முனி வர யோகி -இவரே முனிவரும் யோகியும் -கைங்கர்யங்களும் குண அனுபவமும்
ரிஷி முனி கவி என்னும் -நாயனார்
இனிமை தரும் பாதங்கள் மணவாள யோகி -பிரதிவாதி பயங்கர அண்ணா

——–
கோது காலமுடைய குட்டனேயோ -பெரியாழ்வார் -இவள் பாகவதர்களை -ஒருவருக்கு ஒருவர் -கிருஷ்ண த்ருஷ்ணா போல் இதுவும் –
ப்ரிய ஞானிகள் -மம ச -கீதையிலும் உண்டே –

——–

ரஷ்யா அபேஷ்யா பிரதீஷ்யே -ஆசை உடையார்க்கு எல்லாம் —
ஸத்வ குணம் வளர தமோ குணம் போகும் -பிரகிருதி சம்பவம் –
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி -பகவத் விஷய செல்வம் அனைவருக்கும் -ஒருத்தி உளள் என்பதே போகாமல் காத்து
மல்லானாம்-அசனி இடி போல் -நரவரர்களுக்கு புருஷோத்தமன் -ஸ்த்ரீனாம் சாஷாத் மன்மதன் -கோபர்கள் ஸூ ஜன -கம்சனுக்கு உதவ வந்த அரசர்களுக்கு -சாஸ்தா -கால தேவதை -ஸூ பித்ரோ சிசு –போஜ பாதி கம்சனுக்கு ம்ருத்யு -அவிதுஷாம் -அறிவிலிகளுக்கு விராட் -யோகிகளுக்கு பரம தத்வம் வ்ருஷனு வாசுதேவ குலத்துக்கு தெய்வம்- ரெங்கம் கத நம்பி மூத்த பிரான் உடன் வந்த கண்ணனை -இப்படி பார்த்தார்கள் -என்று ஸ்ரீ மத் பாகவதம் சொல்லுமே –

———

ஆனை -நான்கு திக்கு -சாஸ்தா -ஆச்சார்யர் -மா முனிகள் அன்றோ
ஸாஷாத் நாராயண தேவன் ஸாஸ்த்ர பாணிந நாராயணன் மூர்த்தி -உறங்கும் பெருமாளே உலாவும் பெருமாள்
ஆத்மாநாம் ரதி நம் வித்தி சரீரம் -புத்தி சாரதி -மனஸ் கடிவாளம் -கேசி ஹந்தா கேசவன் இந்த்ரியங்களே குதிரைகள் -காம தோஷாதி ஹரம்

——

பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -கேட்டாலே நம்மாழ்வாருக்கு –

——-

தூ மணி -உபாயத்தில் அத்யாவசிய நிறைந்து சீதா பிராட்டி நிலை இவள்
புள்ளும் -பர பக்தி -கீசு -பர ஞானம் -கீழ் வானம் -பரம பக்தி -தூ மணி -ப்ரபன்னன் –
கோதற்ற பாவை கோதை தங்கை –
வாதுக்கு வல்லவன் மருமகன் -தம்பி எம்பார்-சீதற்ற செல்வப்பிள்ளை பிள்ளை /நம்பி சிஷ்யன் -எதுக்கு எதி என்பர்
பசு மனுஷ்ய பக்ஷி–வைஷ்ணவ ஸம்ஸ்ராய -தேனைவ -அதுவே போதுமே சித்தி அடைய
ஏம பட்டாளோ -காவல் உண்டோ -மந்த்ரம் பட்டாளோ -பிரித்து

———-

பத்து இந்திரியங்களை சொன்னவாறு
வஸ்து கதம் இல்லையே சுகமோ துக்கமோ -வேறு வேறு காலத்தில் வேறு வேறு -விவஸ்திதம் relative
நோற்று கற்று கனைத்து -மூன்றும் சேர்த்து அனுபவம் -ஒன்றில் இருக்கும் சந்தேகம் அடுத்ததில் விலகும் –
ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் -அனந்தல் -வாழ்க்கை வியாபாரம் ஒன்றும் இல்லாமல் -கைங்கர்ய ஏக பரர்
——–

நோற்று சுவர்க்கம் -சரம ஸ்லோகார்த்தம் இதில்
திருமந்திரம் முதல்
த்வயம் -28-29 பாசுரங்கள்
உணர்வில் உள்ளே இருத்தினேன் ஸூ வ கத ஸ் வீ காராம் கீழ்
இதில் அதுவும் அவனது இன்னருள் -பர கத ஸ்வீ காரம்
நானும் ரக்ஷகத்வமும் – நீர் என்னைக் கூட்டிக்கொண்டு அவர் இடம் சேர்த்தால் -நீரும் ராவணன் போல் ஒரு சொத்தை அளித்தவர் ஆவீரே
கா ககா -என்று சொன்ன காக்கைக்கு அதே பெயர் –
பிதா மாதா சர்வமும் -அஹம் சர்வம் கரிஷ்யாமி என்றவனை -சுற்றம் எல்லாம் பின் தொடர -என்னலாமே
நோற்று -இடைச்சுவர் இல்லாமல் -இரண்டு விபூதிக்கும் இவள் செல்லலாம்

———

கிரஹணம் பொழுது பிடித்தது தொடங்கி முடியும் வரை நம்பெருமாளை திரு மஞ்சனம் உண்டாம் –
கைங்கர்ய பரர்கள் முடிந்த பின்பே தர்ப்பணம் –ஜாதி ஆஸ்ரம தீக்ஷை -அத்தாணிச் சேவகத்தில் பொதுவானவை நழுவும் –
விட வேண்டாம் -அந்த கர்மா உறங்குவான் கைப்பண்டம் போலே தன்னடையே நழுவும்
நற் செல்வன் -ஒருமை இங்கு -கோவலர் கீழே பன்மை –

——–
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -உயிர்க்கு அது காலன் -நம்மாழ்வார் –
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் கண்ணன்
ராமன் -ம்ருத ஸஞ்ஜீவினி
———

ப்ரத்யக்ஷம் -அனுமானம் -சப்தம் மூன்று பிரமாணங்களை உங்கள் புழக்கடை பாசுரம்
லோகித சுக்ல கிருஷ்ண -முக்குணம்
நாகம் -துக்கம் இல்லாத ஆனந்தம் -சந்நியாச யோகம் -ந்யாஸம் -பிரபத்தி –

————–

நாயக பதக்கம் -இப்பாசுரம் –
நாயக ரத்னம் -நானே தான் ஆயிடுக –
ரண சிகிச்சை -பட்டர் திருப்பாவையில் ஆழ்ந்து -இப்பாசுரம் அனுசந்திக்க -வேதனையே அறியாமல் இருந்தாராம் -காஞ்சி ஸ்வாமி
பெரிய பெருமாளுக்கு ஸ்வீ காரமாக கூரத்தாழ்வான் கொடுத்தாராம் –
நானே தான் ஆயிடுக -அனுஷ்ட்டித்து -தோஷம் சொன்னவருக்கு சால்வை பஹுமானம் தந்து அருளி னார் அன்றோ –

————

அர்ச்சாவதார சந்நிதி அனுபவமே நாயகனாய் -இங்கு கொடி தோரணம் -கோயில் காப்பான் -வாசல் காப்பான் -உண்டே
இடைச்சி பாவத்தில் இந்த முறை எப்படி -என்ற கேள்விக்கு -வேதம் இவர்கள் வழி பின்னால் போகுமே –
ஆஸ்ரிதர்களுக்கு ஸ்ருஷ்ட்டி யாதி சக்திகள் விளையாட்டாகவே வரும் –
த்வதீயம் -தேவர் திரு உள்ளம் -ததீய ஆராதனம் -போல் இங்கு உம்முடைய ஆஸ்ரிதர் –

———

கோ பன் -பசு பிராயரை ரஷித்து அருளும் ஆச்சார்யர் -நந்த கோபன் —
யஸசா ததாதி -பெட்ரா தாயினும் ஆயினும் செய்யும் யசோதா திரு மந்த்ரம்
அதன் உள்ளீடான வஸ்துவும் பாகவத சேஷத்வமும் அனுசந்தேயம் –
ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் -அனைவருக்கும் உண்டே
யாதிருச்யா ஸூஹ் ருதம் –
விஷ்ணோ கடாக்ஷம் -விசேஷ அனுக்ரஹம்
அத்வேஷம்
ஆபி முக்யம்
சாது சமாஹம் –
ஆறு படிகளின் பின்பே தானே -ஆச்சார்யரை அணுகி-
பிராட்டி மூலம் அவனைப் பற்ற வேண்டுமே –
வைத்த மா நிதி எடுத்த பேராளன் —
வைத்த மா நிதி -அலற்றிய இப்பத்து -சித்தம் வைத்து உரைப்பார் திகழ் பொன்னுலகு ஆள்வார் –
உபநிஷத் -அர்த்தம் -அந்தர்யாமி அறிந்தவன் பெரும் பேறு -தஹராகாசம் -அந்தர் ஹித நிதி –
அசேஷ பும்ஸாம் நிதி -அனைவருக்கும் -ஆனால் புண்ய புருஷர் சிலரால் லப்தம் ஆகிறாய் -கூரத்தாழ்வான் –
சிந்தாஞ்சானத்தால்-அறிகிறார்கள் தேசிகன் – அநபாய மஹா நிதிம் த்வாம் -குறைவற்ற வைத்த மா நிதி –
நிதிர்அவ்யய-ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் – எடுத்து கொஞ்சப் பெற்றான் -நங்கள் கோன் வஸூதேவன் பெற்றிலனே
எடுத்த பெருமைக்கு மேல் பேராளன் -பர கத ஸ்வீகாரம் -அதுவும் அவனது இன்னருள் –
போக்யம் முதலில் -போஷகம் -அடுத்து -தாரகம் -ஆச்சார்ய கடாக்ஷ மஹிமை
அவனது உண்ணும் சோறு -பருகும் நீர் -பின்பே தின்னும் வெற்றிலை

——-

நப்பின்னை பிராட்டியே திரு ஸ்ரீ மஹா லஷ்மி க்ருஷ்ண அவதாரத்தில்
வராஹ அவதாரத்தில் பூமிப்பிராட்டி போல்

———–

இது தத்வம் -பிரியாமை தான் ஆனால் தகவு அன்று -கிருபா குணத்துக்குச் சேராதே

———
தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு சார்வு -பிராட்டியை எழுவாய் -இது போன்ற அருளிச் செயல்கள் மிகவும் குறைவு –
சுவாமிநாத ஐயர் குரு மீனாட்சி சுந்தரம் பிள்ளை -இலக்கியம் கற்க -எழுவாய் -எழுந்து இருந்து போ-பயன் இல்லை –
அதுவே செயப்படு பொருள் -சுய சரிதையில் எழுத்து வைத்து இருக்கிறார் நடந்த இத்தை
காட்டும் திருமாலை நாங்கள் திரு -இதுவும் அப்படியே –
தொடர்ந்து மூன்று பாசுரங்கள் பிராட்டி பரமாகவே இங்கு –
———-
தத்வம் அன்று தகவும் அன்று -க்ருபை பாரதந்தர்யம் அநந்யார்ஹம் உள்ள இவளைக் குற்றம் சொல்வதா –
கோபித்து இருக்க -சமாதானம் இந்த முப்பத்து மூவர் பாசுரம் –
கம்பனம் வடசொல்லே கப்பம் –
வடிவு அழகு குண பூர்த்தி சொல்லி புகழ்ந்து சமாதானம் -அபிமத அநு ரூபை அன்றோ இவள்
——–

போக தசை -சரண்ய தசை இல்லையே ஆகவே முறை தப்பவில்லையே –
நென்னலே வாய் நேர்ந்தேன் -வார்த்தை பிறந்தபின்பு உபாய தசை முடிந்ததே –

———–
வாங்க குடம் நிறைக்கும் -3
இதில் ஏற்ற காலங்கள் எதிர் பொங்கி மீது அளிக்கும்
வாஸூ தேவன் -ஸர்வஸ்ய வசதி பரத்வம் —
நமஸ் திருமந்திரம் மத்யம பதமாக -த்வயம் சரமத்தில் இரண்டு வருவது போல் -இங்கும் இரண்டு பாசுரங்களில் —
நெஞ்சு என்னும் உள் கண் கடாக்ஷமும் வேண்டுமே –
———–

குளிர் அருவி கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து இருப்பேனே -நம்மாழ்வார் போல்
செயல் இழந்து கால் ஆளும் என்னாதே -குணங்களே தூண்டி பாட வைக்கும் இவர்களுக்கு
போக்கடி கிடைக்காமல் -வேறே வழி இல்லாமல் வந்தார்களோ -ஆசை தூண்ட வந்தார்களோ -சங்கையால்

—————-
சததம் கீர்த்த யந்த -நித்ய யுக்தர் -சேர்ந்தே இருக்க ஆசை கொண்டவர் –
உடனாய் மன்னி -வழு விலா அடிமை செய்வார் -ஆழ்வார் கீதா ஸ்லோஹார்த்தம்
இராப்பத்து திருமுடி சேவை பத்து நாள்களும் உண்டாம்
பாவியேன் காண வந்து பாவியேன் என்று சொல்லாய் –
அனுக்ரஹம் விட வாய் அழகைக் காண்பதே புருஷார்த்தம் போல் -எழும் போதை அழகையும் நடை அழகையும் -காண்பதே இவர்களுக்கு –
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதனாய் இருந்து வைத்து இவர்கள் பட்ட பாடுகளை உள்ளி திரு உள்ளம் வருந்தி வார்த்தை –
கர்ப்ப பூதா -தபோ தன -ரிஷிகள் போல் இருப்பதே இவர்கள் –
வஸசா சாந்தநத்வம் -ராக்ஷஸாநாம் பலாபலம் -கேட்டு இஷ்வாகு வம்சராகவே மதுர பாஷாணம் கேட்டு
உருக பருகினான் அன்றோ பெருமாள் விபீஷண ஆழ்வானை -பிராட்டி இல்லாத சமயமும் –
இங்கோ நப்பின்னை பரிகரம்
சார்த்தூல -புலி -அதஸி புஷ்ப்பம் -கிருஷ்ண அஷ்டகம் -சொல்லுவதே பூவைப்பூ -காயாம்பூ
நத்யஜேயம் -விடுவதற்கு அசக்தன் -சர்வ சக்தன் வார்த்தை
ஆஸ்ரித தோஷம் பார்க்க அறியாத சர்வஞ்ஞன்
என்னில் முன்னம் பார்த்து என்னை முற்றும் பருகினான் –
——–

விஜிதாத்மா -விதேயாத்மா -சொன்ன வண்ணம் செய்பவன் அன்றோ –
பக்த புண்டரீகனுக்காக செங்கல் மேல் நிற்கிறான் பண்டர புரத்தில் -பாண்டுரெங்கன் –
———–

சேவகம் -அடிமை -வீர்யம் இரண்டு அர்த்தங்கள் -செய்த நின் சிறுச் சேவகமும்

அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்கும் இனையை என்று உன்னை அறியகிலா அலற்றி
அங்கம்சேரும் பூ மகள் மண் மகள் ஆய் மகளாய்
சங்கு சக்கரக் கை யவன் என்பர் சரணமே –மங்களாசானம் பண்ணாமல் ஸ்ரீயபதியை சரணம் பற்றுகிறார்களே ரக்ஷணத்துக்கு உறுப்பாக –
எழுந்து இரு பேசு வாழி கேசனே
———

உன்னை -இரண்டாம் வேற்றுமை உருபு – உன்னிடத்தில் -ஐந்தாம் வேற்றுமை –உன்னிடத்தில் உன்னையே –
———
ஸத்ய பராக்கிரம –
ஸத்ய பர ஆக்ரம -மாறாத எதிரிகளையே ஆக்ரமிக்கிறான் -கூடாரை வெல்லும்
ஸத் யபராக்ரம -ஆஸ்ரிதர் இடம் தோற்று –
——–

எங்கள் இடம் ஏதாவது ஒன்றை எதிர்பார்க்கும் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா

———–

த்யானம் -தைல தாராவத் -எண்ணங்கள் எண்ணை ஓட்டம் போல் இருக்க வேண்டுமே
நாராயணனே நமக்கே பறை தருவான் -புருஷார்த்தம் சொல்லி உபாயம் -அது உபதேச காலம்
இனி அனுஷ்டான காலத்தில்
கறவைகள் -உபாயம் முதலில் -சிற்றம் சிறு காலை -புருஷார்த்தம் -பிரார்த்தனை
சித்தமாக-நிர்ஹேதுகமாக -பலத்தைக் கொடுத்தான் குறையாத-தனது பேறாக கொடுத்து –
தடுப்பார் இல்லாத மூன்றும் குறை -குறை ஓன்று -குறை ஒன்றும் மூன்றும் சொன்னபடி
சரணாகதி அடைய 6தகுதிகளாக 6நிலைகளை அருமையாய் வரிசைப்படுத்தினார் .
நம்மை ரக்ஷிப்பதில் நமக்கு முயற்சி இருக்கக்கூடாது .
நம்மிடத்தில் கர்மா ,ஞான ,பக்தி போன்ற எந்த உபாயங்கள் இல்லை .
நீயே _ பகவானே குண பூர்ணன் .
உன்தன்னோடு இருக்கும் உறவு ஒழிக்க ஒழியாது என ஜீவாத்மா ,பரமாத்மா சம்பந்தத்தை குறிப்பிட்டார் .
செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பது .
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா ப்ராப்யம் நீயே நாங்கள் தேடி வந்த புண்ணியம் .
எங்களிடத்தில் புண்ணியம் ஓன்றும் இல்லை

——–
சம்பந்தம் நித்யம் -சம்பந்த ஞானமே கார்யகரம் -ராஜகுமாரன் கதை -இதுவே உற்றோமே ஆவோம் –

——–

ஹிரண்ய கர்பா பூ கர்பா மாதவா -ஹ்ருஷீ ச லஷ்மி
இவளை தலையால் தங்கி அவளுக்கு திரு மார்பு -இளையாள் -என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் -வானவர்க்கு ஈசன் –
ஜீவனம் வைப்பாரோ பாதி –

——–
முனிவர்களும் யோகிகளும் -முன்னே சிற்றம் சிறு காலை-தயிரினால் ஓசை சிறு காலை -சங்கிடுவான் திரு ஆராதனம் காலை
மார்கழி -உபக்ரமம் -இன்புறுவர் உபஸம்ஹாரம் –உயர்வே பிறந்தார் -திருக்கண்டேன் -பூ மேல் திரு
அடியில் உபக்ரமம் கேசவனில் உபஸம்ஹாரம் -கேசவ நம்பியைக் கால் பிடிக்கும் பாக்யம் -பாதாதி கேசம் பாடி –
———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ .வே .வேளுக்குடி ரெங்க நாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ.வே. வேளுக்குடி வரதாச்சாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருப்பாவை உபன்யாசம் –2020/2021- ஸ்ரீ. உ. வே. திருக்குடந்தை வெங்கடேஷ் ஸ்வாமிகள் –

February 2, 2021

திரு
பாவை -நோன்பு -விக்ரஹம்- அழகான பெண் -மதிள் சுவர் -வேதத்துக்கு அரண் –
கண் pupil -இமை பாதுகாப்பது போல் -இஞ்சி அர்த்தமும் உண்டு

திருப்பு ஆவை -கண்ணபிரான் -புத்திகள் லௌகிக விஷயத்தில் போக திருப்பி கண்ண பிரானைப் பார்க்க
அநு காரம் -கோபிகள் போலவே -ஏறிட்டுக் கொள்ளாமல் அதுவாகவே -அதே பாஷை பழக்கம்

நிலவறை -under ground cell அடைத்து வைக்க –
நீரில் இருந்து பிரிந்த மீன் போல் துடித்து சரண் அடைய -லீலை -பஞ்சம்
வருவது போல் அறிகுறி-பஞ்சம் வராதே இவன் இருப்பதால் –
கார்க்காச்சார்யார் குல குரு மூலம் நோன்பு -உபதேசம் –
திருடன் கையில் சாவி போல் கண்ணனே காவலாக –

திருப்பாவை பாட்டி ஆறு ஐந்தும் -11-சுளைகள் இருக்கும் -வேறே வேறே கோணங்களில் வியாக்கியானங்கள் –
ஆழ்வார்கள் -திவ்ய தேச பிராட்டிகள் -விஷயமாகவும் சொல்லலாம்
ஆறு காட்சிகள் -தலைவி அறிமுகம் -ஐந்து தோழிகள் -அந்தரங்க தோழிகள் -கோயில் பரிகரங்கள் -கண்ணனை -நிறைவு காட்சி -நாடகம் –

முதல் நாள் -யமுனைக்கரை -அமுது பொழியும் நிலவு -ஆண்டாள் தலைவி –
நோன்பு விளக்கம் -தொடக்கமே மகிழ்ந்து -மார்கழி -திங்கள் -மதி நிறைந்த நல் நாள்
தேவர்கள் ப்ரஹ்ம முஹூர்த்தம் -ஸாத்விகராக இருப்பார்கள் -நோன்பை தடுக்காமல் இருப்பார்கள் —

சித்திரையை விட ஏற்றம் –
மாதங்களில் ஆதி -ஆதி பகவான் -அகார வாஸ்யன் -புண்ணியம் தூய்மை –
புஷ்பித்த -செடிகளில் கிரீடம் -போல் இதுவும் -தொண்டர்களுக்கு சேஷி கிடைத்த மாதம்
அவனுக்கு சேஷ பூதர்கள் கிடைத்த மாதம் இது -வைகுண்ட ஏகாதசி கூட்டம் கண்டு மகிழ்வான் –

வந்து அவர் எதிர் கொள்ள -முன்பு வந்தவர் -அவர் வந்து எதிர் கொள்ள -நாராயணனே -வந்து அழைத்து –
மதி நிறைந்ததால் ஒருவர் முகம் ஒருவர் பார்க்கும் படி -உள்ள நாளும் வாய்த்ததே –
நல் நாள் ஆல் -நினைத்து நினைத்து மகிழும் படியான நாள் –
வாயு குமாரன் வந்து விரஹ காட்டு தீயை அணைத்தால் போல் –
அவன் முகத்தில் சீதையையே கிட்டினால் போல் இங்கு கண்ணனையே கிட்டியது போல் இவர்களுக்கு மகிழ்ச்சி –

நேர் இழையீர் -அணி கலன் போல்வார் அன்றோ இவர்கள்
சீர் மல்கும் -ஸுலப்யம் இங்கு தானே -வெண்ணெய் மணம் -வேத மாயம் அயோத்யா -வில் இல்லை புல்லாங்குழல் –
பிரிந்த கண்ணனை போஷித்து வளர்த்து திரும்பி கொடுத்த ஏற்றம்
வெண் கொற்றக்குடை அங்கு கோவர்த்த குடை இங்கு –

தருவான் -தருவதற்காகவே நாராயணனானே கண்ணனாக வந்துள்ளான் -நமக்கு அனுக்ரஹம் பண்ணவே
கூர் வேல் கொடும் தொழிலன் -கண்ணனுக்கும் நந்தகோபனுக்கும்
சந்திரனுக்கு ஆதித்யனுடைய தேஜஸ்ஸைக் கூட்டி விட்டால் போல் -உவமை சொல்லி -போதாமையால் –
அம் -சேர்த்து முகத்தான் -அவன் முகம் போல் முகம்
ராம ராவண யுத்தத்துக்கு அதுவே உவமை -வால்மிகி போல்
சங்க கால மரபு ஸூர்ய சந்த்ரர் களைச் சொல்வது உண்டே
திங்களை போற்றுதும் ஞாயிறைப் போற்றுதும் -சிலப்பதிகாரம் –

ஏவ கார சீமாட்டி அன்றோ –
நாராயணனே நமக்கே பறை -உபேயம் -பலன் -புருஷார்த்தம்
நாராயணனே நமக்கே பறை தருவான்
அவனே அவனைக் கொடுத்து அருளுவான்
சமிது பத்தி சாவித்ரி பாதி இல்லாமல் -சாதனம் நைரபேஷ்யம் -first baal sixer
எழு நூறு -எழுந்து இரு யுத்தம் பண்ணு சாரம் –

நாராயணனே நமக்கே பாரோர் புகழ படிந்து பறை தருவான் – –
அருள் தருவான் அமைகின்றன அது நம் விதி வகையே -ராமானுஜர்
பக்த பராதீனன்

———-

அஹங்காரம் விட்டு -மார் தட்டும் கழித்து -அது தானே வாழ்வில் நல்ல நாள் —
ஆசை உடையார் எல்லாரும் ஆச்சார்யரை ஆஸ்ரயிக்கலாமே –
பக்தி ஞானம் வைராக்யம் -அணி கலன்கள் –
அவர் கை பார்த்து -அவன் உகப்புக்காகவே -சிஷ்யர்
கூர்வேல் -சங்கு சங்கர லாஞ்சனை –
நந்த -பெருமாள் அனுபவத்தால் மகிழ்ந்து -யுவா குமாரா சாம்யம்
யசோதை -திருமந்திரம் -பாபங்களுக்கு சிங்கம் –
கதிர் ஸ்ரீ பாஷ்யம் / மதியம் போல் -அருளிச் செயல் -ஸாஸ்த்ர பாணி -சரம பர்வ நிஷ்டை
கட்டை விறல் சிஷ்யன் -ஆள் காட்டி விறல் –
கைப்பாவையாக பொம்மையாக இருக்க வேண்டும் –

———

ஆறு பந்துகளில் ஆறு six
செய்வதையும் செய்யாதவையும் -ஆறு விஷயங்கள் –
விஷய வை லக்ஷண்யம் காட்டிய பின்பு -ருசி விளைந்த பின்பு -சொன்னால் தானே சிறக்கும்

குறளை சென்று ஓதோம் -ச் சேர்க்கக் கூடாது –
வம்பு -குறளை ஒரே வார்த்தை -ஐ சரிகை உள்ளது இல்லை -குறள் நூலை சொல்லோம் அல்லயே
நாமும் – -நாம் கூட என்றவாறு -கீழே நமக்கே பறை -உம் என்று இந்த அர்த்தம்
கர்மம் கைங்கர்யத்தில் புகும்
நம் பாவை -சிறப்பான நோன்பு -நம் ஆழ்வார் நஞ்சீயர் நம் பிள்ளை போல் –
கிரியா -கிரிசைகள் –
கேளீரோ -கவனமாக –கார் மேனி செங்கண் அவன் அழகில் ஆழ்ந்து மயங்கி அன்றோ இருந்தார்கள்
பாற் கடல் -ஷீராப்தி -பால் சாகரம் -ஆய்ப்பாடி –
துயின்ற -துயிலும் இல்லை -முன்பு -இப்பொழுது கூப்பீடு கேட்டு யோகு செய்கிறான் –
அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவான் -ஈஸ்வரனே ரக்ஷகன் என்று ப்ரபந்ந பரித்ராணத்தில் சொன்னோம்
பாதேயம் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தனம் -அடி பாடி -வேறே நெய் பால் உண்ணோம் -ஆயர் -மெய்ப்பாடு-உள் உணர்வு -slang
பாடுவது நீராட்டம் முன்பே -இதுக்கு வேறே தூய்மை வேண்டாமே –

பாத பூர்ண அர்த்தம்
ஏல் கேள்
ஓர் பின்பற்று
பாவை -விக்ரகம் வழி பாடு
முப்பதாம் பாட்டில் எம்பாவாய் மட்டுமே -அவனை அனுபவித்ததால்

——-

பாவை -கண் கண்ட ஆச்சார்யர் உறங்கும் பெருமாளே உலாவும் பெருமாள்
கைம்மாறு செய்ய உபதி சதுஷ்ட்யம் இரண்டு பரமனும் வேண்டுமே
செய்நன்றி ஒன்றே காட்டி உபதேசம் படியே வாழ வேண்டும்
போற்றி யூகிப்பது புந்தியில் கொள்வது
அடியார் -அடி பிரதிநிதி
நெய் -கைவல்யம் -ஒளிந்து இருக்குமே
பால் -உலகியல் சிற்று இன்பம்
நீராடி -குண அனுபவம் ஆழ்ந்து
மை இட்டு -ஞான யோகம் செய்யோம்
மலர் இட்டு -பக்தி யோகமும் இல்லை
பாகவத அபசாரம் பட மாட்டோம் -திமிங்கிலம் -திமி மீனை சாப்பிடும்
திமிங்கில கில கில கில -அளவு பாபம் செய்தாலும் -தீர்க்கும் சரணாகதி -அத்தையும் விழுங்கும் பாகவத அபசாரம்
ஐயம் –கால ஷேபம் -நல்ல பொழுது போக்கு –
பிச்சை -உபன்யாசம் -நியாசம் -சமர்ப்பித்தல் -அருகில் சமர்ப்பித்தல் –
உய்யும் ஆறு -கங்கை –சிலம்பாறு –
ஆறு வார்த்தை த்வயம் -ஆதி -இதுவே -வேறே பல ஆறு வார்த்தைகள் உண்டே
கீழே திருமந்திரம் -இதில் த்வயம் -மேலே சரம ஸ்லோகம் –

—-

வாயால் சொல்லும் பலன் கிட்டுமா
மனசால் நினைக்கும் பலன் கிட்டுமா
சங்கை ஒரு தோழி எழுப்ப
விலோசன் ஸ்வாஹா வாயால் சொல்லி மனசால் அசுரர்களை நினைத்து பலன் போனதே -அது தேவதா விஷயம் –
உத்தமன் திருப்பேர் மகிமையால் -இஹ பர -பலன் கிட்டும் -maal -மால் அன்றோ -இவன்
பையத்துயின்ற பரமன் அன்றோ ஓங்கி உலகு அளக்கிறான்
ஓங்கி-வளர்ந்து -எழுந்து -உயர்ந்து-வேகமாக -உகந்து-என்றுமாம்
ஜீவனத்துக்கு அந்தர்யாமி -உஜ்ஜீவனத்துக்கு இது -முதல் முதல் சடாரி
இவன் அனைத்து ஜீவர்களுக்கு சாதித்து -தாய் குழந்தை அணைப்பு போல்
கால்பதி வைத்தியம் அலோபதி இத்யாதி போல்
இதனால் அன்றோ திருப்பாவை கேட்க கூடி உள்ள சத்வ குணம் நமக்கு
உத்-பாபங்களில் மேம் பட்டவன் -பர வாஸூ தேவன் good நாராயணன் முதல் பாசுரம்
உத்தரன் -ஷீராப்தி வாசன் better-பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -இரண்டாம் பாசுரம்
உத்தமன் -இவன் best-ஓங்கி உலகு அளந்த -மூன்றாம் பாசுரம்
அதம அந்தமன் – அதமன் -மத்யமன் -உத்தமன் –
முழு திருமேனி முதலில் -திருவடி -அடுத்து -திருப்பெயர் -இதில்
ஓங்கி பேர் பாடி -என்றுமாம்
நாங்கள் -நம் பாவைக்கு -தரிப்புக்கு பேர் பாடும் நாங்கள் -ஸ்வா பாவிகம் -மூச்சு விடுவது போல் இயல்பு நமக்கு
சாற்று முறை -உரத்த குரலில் -சாற்றி பேர் பாட

தோஷம் -பிரதிபந்தகங்கள் போக -இதம் விஷ்ணு விசக்ரமே -த்ரேதான் கதாம் பதம்—
மூன்று திருவடியால் அளந்தான் -சொல்லவே பிராயச்சித்தம் -வேதம் சொல்லுமே
இந்த மந்த்ரத்தை தமிழ் ஆக்கி
அதிதி தேவி -பயோ விரதம் -வாமனன் -அவதாரம் -ஒருத்தி நோன்புக்கே பலம் கொடுத்தவன் –
லௌகிக பலன் அங்கு இந்திரனுக்கு -தானே பிறந்து -இரண்டும் போல் இங்கும் இரண்டும் அருளுவான்
சுக்கிரன் கண்ணை துரும்பால் கிள்ளி தண்ணீர் பொழிந்தால் போல் இங்கும் மழை பொழிய அனுக்ரஹம்
உலகம் -ஸாஸ்த்ரம் =லோகனம் =பார்ப்பதால்
ஸாஸ்த்ரம் -எல்லீரும் வீடு பெற்றால் உலகில்
உறைந்த குரலில் பகவத் கீதை சாதித்து
மத்ஸ்ய அவதாரம் -dolphin -ஓங்கி -தமிழ் -பிரளயத்தில் சாஸ்திரம் அழியாமல் காத்து
பாண்டிய நாட்டில் க்ருதமாலா -சத்ய வரதன் அரசனுக்கு அனுக்ரஹம் -மீன் கொடி இதனாலே
நீர் வளம் நில வளம் பால் வளம்
வேத மந்த்ரம் சொல்லும் பலன்கள்
நீங்காத செல்வம் -இவர்கள் மனோ ரதித்ததும் கிடைக்கும்
தனம் மதீயம்

——–
ஓங்கி -எட்டாவது -அடித்து பேசி வாதம் பண்ணும் ஆச்சார்யர்
உலகு அளந்த -ஸாஸ்த்ர நிர்ணயம்
நம் பாவை -வாழ்க்கையே விரதம் –அல் வழக்கு எல்லாம் ஒழிய பண்ணுவார் உத்தமரான ஆச்சார்யர்
மும்மாரி -ரஹஸ்ய த்ரயார்த்தம்
சரணாகதர் -பயிர்கள் -வளரப்பண்ணும் ஆச்சார்யர்
மீன் -நாடாயினன் திருக்கண் -க்ருஷி பலித்தது என்று துள்ளும்
குவளை -செங்கழு நீர் -உள்ள ஹ்ருதய கமலத்தில் தெய்வ வண்டு குடி இருக்குமே

நிறைந்த -ஞானம் கனிந்து பக்தியாகி அது வளர்ந்து பரமபக்தி பர்யந்தம் -ஆச்சார்யர் மூலம்

——

பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் – நீராழி வண்ணன்-கடல் வண்ணன் – –
சீராழி அங்கை -வளையல் /கூராழி மாயனை -/ஓராழி தேர் மறைத்தான் -சக்கரம் –
ஆழி மழைக் கண்ணா -சுழன்று -கம்பீரமான –

மானமிலா பன்றி -வராஹ அவதாரம் தனது கருணைக்குத் தக்க வளர்ந்தது போல் -எங்களைப் பாராமல் பொழிய
ஸூத்தாந்த சித்தாந்திகள் -அந்தப்புர மனைவிகள் போல் -நாம்
உள் ஆழி புக்கு -நடுக்கடலுள் புகுந்து -முகர்ந்து –மொண்டு –
கொண்டையில் உள்ள தாழம்பூ மலர மின்னல் வேண்டுமே -பாகவத கைங்கர்யம்
பாழி -அம் -வலிமை -அழகு -வருவாய் -come -in come –
சார்ங்கம் உதைத்த -சாரங்க பாணி -அமுதன் -வில் திருவடி தொட்டு இருக்குமே -அவனே உதைக்க முடியும் –
திருவெம்பாவை -16- பார்வதி கூந்தல் மின்னல் சிலம்பு ஒலி -தொடர்பு மேகம் மின்னல் இவற்றுக்கு
கார்ப்பண்யம் தோஷ ஸ்வ பாவ -சிஷ்யன்-சாதி மாம் ப்ரபந்நாம் -குரு க்ஷேத்ரம் மனம் -பஞ்ச இந்திரியங்கள் –
இந்த ஸ்லோகம் தமிழ் படுத்தி –
ஆச்சார்யர் வைபவம் -கண் -கண்ணீர் -பகவத் அனுபவம் -கண்ண நீர் கைகளால் இறைக்கும் /
மேகம் போல் ஆச்சார்யர் -வேதக்கடல் அருளிச் செயல் கடல் -அமுதம் -தீர்த்தரகரராய் திரிந்து –
பள்ளம் நிரப்பி -மும்மாரி தத்வ ரஹஸ்ய த்ரயம் –
நம்மாழ்வார் மேகம் -நாதமுனிகள் மலை -அருவிகள் -காட்டாறு -ஐந்து ஆறு -ஏரி -ராமானுஜர் ஏரி காத்த ராமர் –74 மடுக்கள் –
ஸமாச்ரயண பிரார்த்தனா பாசுரம் -மார்க்க ஸீர்ஷம் இதுவே

——-

தூ மலர் தூவி -வாயினால் பாடி -பூ மாலை பா மாலை -தாம் வந்த ரஹஸ்யம் வெளியிட்டு –
நம்மையும் அவளை போலவே ஆக்கி அருள்கிறாள்
மாயன் -அடியவர் பட்டாபிஷேகம் ஆனபின்பே தனக்கு கொண்ட மாயன் –
ஆஸ்ரிதற்காகவே வியப்பாய் வியப்பு செய்து அருளும் மாயன்
அக்ஷய பாத்திரம் -திரௌபதி – -ஒட்டி இருக்க -அடியவர் விரதம் தீர அகத்திக்கீரைக்கு வரம் –
நாராயணனே ஹிரண்ய கசிபுவாக ஒரு வருஷம் இருந்து பக்தி செய்து -விஷ்ணு புராணம் கதை –
மாயா அவதாரம் -பிரகலாதன் பிரார்த்தித்த படி செய்த கதை உண்டே
துருவனுக்கும் மதவனம் -மதுராவில் தர்சனம் -பின்பு வாமனன் -சத்ருக்கனன் -கண்ணன்
ஆயர்பாடிக்கு தெற்கு தானே மதுரை -யமுனா நதிக்கு வடகரையில் ஆயர்பாடி –
வட -ஆல மரம் -நன்கு பொருந்தி -பூமியில் நித்ய சம்பந்தம் -மன்னு -நித்ய -வட மன்னு மதுரை –
உன் மைந்தன் ஆணை –ஈன்ற எடுத்தவள் -இவளே என்னும்படி -கைகேயி -வளர்ந்த இடமே தோன்றிய இடம் –
யது குலம் – அவதரித்து -ஆயர் குலம் தோன்றும் –
ஆறு வாசி -நம் ஜென்மம் அவன் அவதாரம் -1-முன் பிறவிகளை அறிபவன் -2-மேன்மை குறையாமல் 3-அப்ராக்ருதம் –
4-ஆத்ம மாயயா -கருணையால் -5-கால வரையறை இல்லாமல் யதா –சதா –6- தர்ம ஸம்ஸசநார்த்தம் பிரயோஜனம் –
சந்த்ர குலத்தில் சூர்யன் மணி விளக்கு
மார்கழி திங்கள் மடி நிறைய பொங்கல்-என்பதற்காக வந்தாலும் திருப்பாவை பலத்தால் வாயாலே சொல்ல மெல்ல மெல்ல மனசும் ஈடுபடும்
ப்ராசீனர் விண்ணுலகம் -தலை மட்டும் -சத்யஞ்ஞர் சூர்யன் -கண்ணை மட்டும் -இந்திரஜிம்னர் வாய் -மூச்சு –
ஜனகர் ஆகாசம் உடல் பகுதி -குடிலர் தண்ணீர் அடி வயிறு =உத்தாலகர் பூமி பாதம் மட்டும்
உருவகம் -அபி வியக்கதே -அநு அம்ருதி பாதாரயணர் -த்யானம் பண்ண இப்படி -திவ்ய மங்கள விக்ரஹம் சுத்த சத்வ மயம் –
அஸ்வபதி உபதேசம் -மொத்தமாக தியானிக்க -தீயில் இட்ட தர்ப்பை புல் போக போகும் –
இங்கே செப்பு மட்டுமே போதும் -இதுக்காக செப்ப வில்லை -ஸ்வயம் பிரயோஜனம் -இது சம்பாவிதம் தன்னடையே போகும்

ஆச்சார்யர் மாயன் -நம்மையும் மாற்றி –
இவர் உள்ள தேசமே திவ்ய தேசம் –
நம்மையும் உஜ்ஜீவிப்பித்து அருளும் மிடுக்கும்
கடாக்ஷம் தூய்மை
ஆளவந்தார் காட்டும் துறை
ஆயர் குலம் -ஆர்யர் வம்சம் -74 ஸிம்ஹாஸனாபதிகள்
அணி விளக்கு ஞான தீபம்
திருமந்திரம் தாய் –
தாம் ஓதும் அதரனை -தாமோதரன் -தானும் அனுஷ்ட்டித்து -நம்மையும் அனுஷ்ட்டிப்பித்து
அஹிம்சா -இந்திரிய நிக்ரஹம் சர்வ பூத தயா ஷமா -சமம் தமம் த்யானம் சத்யம் அஷ்ட தூ மலர் தூவி
———-
புள்ளும்-
ஆறு விஷய -கஜேந்திர மோக்ஷ த்யானம் -பரத்வாதி பஞ்சக த்யானம் -காலையில் தியானிக்க -இப்பாசுரம் –
நஞ்சு -கண்ணன் அழகான அமுதம் போதையால் மயங்கி ஈடுபட்டு -இருக்க -தனி அனுபவம் கள்ளத்தனம் –
பட்ட போது எழும் போது அறியாள் -அஸ்தமனம் உதயம் தமிழில் –
சிலம்பின் கேள் -என்றதும் -mimicry -காண் -அருள் மொழி கூறும் பறவையின் ஒலி நான் கேட்டேன் –
ஆலய மணி ஓசையும் நான் கேட்டேன்
புள் -அரையன் -கோ -இல் -ராமானுஜம் -லஷ்மண பூர்வஜன் -பக்தனுக்கு பகவத் சம்பந்தமும் —
பகவானுக்கும் பாகவத சம்பந்தமும் பிரியதமம் -அன்றோ –
பதின்மர் பாடிய பெருமாள் -ஏற்றம் சொல்வது போல்
ஆயர் பாடி கோயில் -விரோசனன் நுழைய பெரிய திருவடி காவல் -உள்ள விட -அவன் -வைரக் கிரீடம் -களவு மீட்டு –
வெறும் கையுடன் வந்து -அதே கோலம் கல் கருடன் -கண்ணனுக்கு கொடுத்து வந்தேன் –
குழந்தை அளவுக்கு தானே மாறிக் கொள்ளுமே -யசோதை -த்ருஷ்ட்டி -கோயில் பெருமாளுக்கு சமர்ப்பிக்க –
திரு நாராயண பெருமாள் -அங்கு இருந்தாராம் -யாதவா கிரி -யாதவர்கள் ஆராதித்த -பெருமாள் –
ஆகவே வைரவ முடி சேவை இன்றும் பிரசித்தம் -ஆகவே புள் அரையன் கோயில் இங்கு –
வெண்மை -ஸத்வ குணம்
விளி உருபு -சம்போத விபக்தி -எட்டாம் வேற்றுமை உருபு –
எழுவாய் என்று சொல்லாமல் எழுந்து இராய் -எழுந்தாள் தான் சத்தை -உண்டு -நஞ்சு -உயிர் – மறு பிறவியையும் உண்டான்
மது கைடபர் -ஆபத்து திருப்பாற் கடலில் -திரு மெய்யம் ஸ்தல புராணம் -அரவமே முடிக்க –ஆதி சேஷன் குனிந்து பணிவுடன் சேவை
நடக்கும் பொழுது கேசவா உண்ணும் பொழுது கோவிந்தா சயனம் மாதவா -ஷீர சாகர தரங்க ஸ்ரீதரன் த்யானம் –
காலையில் ஹரி -கஜேந்திர ஆழ்வான் ரக்ஷணம்-பாபங்களை அபகரித்து –
ஜெயம் கிடைக்கும் -இவளும் எழுந்து வந்தாளே
ஜகம் மறந்து கஜம் காக்க வந்த ஹரியை நினைக்கவே –
வித்து வைகுண்டம் -வ்யூஹம் -விபவம் – அந்தர்யாமி -அர்ச்சை –இப்படி ஆறையும் சொல்லும் பாசுரம்

புள்ளரையன் அம்சம் -ஸம்போதநம் -கோயில் -அரண்மனை -வல்லப தேவன் -கொண்டாட -ஈண்டிய சங்கம் எடுத்தூத
குழந்தை மனஸ்ஸூ -பொங்கும் பரிவு –
பனிக்கடலில் -மாய மணாளா நம்பி -அதே பொருள் இதிலும்
ஸ்ரீ பெரிய பிராட்டியார் -ஸ்ரீ ரெங்கம் -முரலும் ஆலும் சோலை -கருடன் ஸ்ரீ ரெங்க திவ்ய பவனம் -பட்டர் –
இரண்டு இறக்கைகள் மதிள் -க்ரீடமே கோபுரம் -கோயில் என்றாலே ஸ்ரீ ரெங்கம்
சங்கு ஒலி -ப்ரணவாகார விமானம் –
பிள்ளையை போல் -குண ரத்ன கோசத்தில் அனுபவம் சைஸவ யவ்வன –
கண்ணனே பெரிய பெருமாள் –
திவ்ய தேசங்களுக்கு வித்து
முனிவர்கள் ஆழ்வார்கள் யோகிகள் ஆச்சார்யர்கள் மண்டிய
பேர் அரவம் உபய வேதாந்த –

ஆழ்வார்கள் -பெரியாழ்வார் -ஆச்சார்யர் ஸ்தானம் –
புள்ளரையன் அம்சம் -ஸம்போதநம் -கோயில் -அரண்மனை -வல்லப தேவன் -கொண்டாட -ஈண்டிய சங்கம் எடுத்தூத
குழந்தை மனஸ்ஸூ -பொங்கும் பரிவு –
பனிக்கடலில் -மாய மணாளா நம்பி -அதே பொருள் இதிலும்

————

ஆனைச் சாத்தான் -வலியன் குருவி -பரத்வாஜ பக்ஷி சமஸ்க்ருதம் –
மூன்று வேதம் -கற்றது கை அளவு கல்லாதது மலை அளவு
கிச்சு கிச்சு -செல்லமாக நாம சங்கீர்த்தனம் -சாஸ்தா -ஸ்வேத கஜ -ஐயப்ப பக்தர்கள் பஜனை –
காசு -புகுந்த வீட்டு தாலி அச்சுத்தாலி -பர் மாதிரி அச்சு வைத்து பண்ணுவது
பிறப்பு -இவள் விருப்பம் படி பிறந்த வீட்டில் செய்த தாலி -ஆமைத்தாலி
உத்காத -தாம்பு கயிறு நீளமாக அரவிந்த லோசனனின் திருக்கண்களை நினைவு படுத்தும் -விஷ்ணு புராணம்
ஹையங்கவீனம் -கண்ணன் இருப்பானே -தயிர் கடையும் இடத்தில் -நீ தியானிக்க வேண்டாம் -நேராகக் காணலாமே
திவ்யம் ஸூ கந்தம் -வாஸ நறும் குழல் -பாண்டிய நாட்டில் அவதார ரஹஸ்யம் –
ஹாலஸ்ய மஹாத்ம்யம் -செண்பக பாண்டியன் -திரு விளையாடல் புராணம்
மனசில் பாடிய பாட்டை தெரிவிக்கும் புலவருக்கு பரிசு -மண் வாசனை பூமா தேவி அன்றோ –
ஸூ மௌலி கந்த உபக்ருத மாலாம் -தேசிகன் -மாலையை சூடிக்கொடுத்த ஆண்டதால் ஆண்டாள் –
முப்போதும் கடைந்து ஈட்டிய வெண்ணெய்
நாசக பெண் பிள்ளை சொல்ல வந்தவள் மங்களமாக நாயக- கீசு ஓசை சேர நாச
தென் திசைக்கும் -ஆடிக்கும் -பூரத்துக்கும்-செவ்வாய் கிழமைக்கும் -நாசக சப்தத்துக்கும் -மங்களம் கொடுத்து
நாராயணனுடைய மூர்த்தியாகிய கேசவன் -கீழே முதல் பாட்டில் நாராயணன் -நாரங்களுக்கு அயனம்-
macro form -பஹிஸ்ஸா தங்கி -இதில் நாரங்களை இருப்பிடமாக -அந்தர் -micro form
வாத்சல்யத்தால் வியாப்தி -ஸுசீல்யத்தால் அவதாரம்
கேட்டு கிடத்தியோ -கேட்டே -இது ரசிப்பதால் மெய் மறந்து உள்ளேயோ –
அதுக்கும் பதில் இல்லை -உள்ளே பார்க்க தேஜஸ் -த்யானம் -பொங்கி முகத்தில் காட்ட
திற -வாசல் கதவை இல்லை -மனசை திறந்து உனது தேஜஸ் வெள்ளத்தில் நாங்கள் நீராட -பக்தி வெள்ளம்

———-

திருச்சானூர் தாயார் -high decibel -திருமலையில் ஆனைச்சான் ஒலி –
பேய்ப் பெண்ணே -பெரிய இடத்து பெண் -ஆகாச ராஜ மகள் -வேதக்கடல் –கடைந்து –
காசு –த்வயம் -பிறப்பு -அஷ்டாக்ஷரம் -தொண்டைமான் சக்கரவர்த்திக்கு கலந்து உபதேச த்வனி –
நாயக-குபேரன் இடமும் -ஸ்ரீ நிவாஸ திருக்கல்யாணம் -இங்கு மட்டும் அவன் பெயரால் –
வேகவதி தானே இவள் -ஸ்ரீ லஷ்மியைக் குறிக்காதே –
வேதா திரு வேங்கடம் மேய விளக்கே -சுருதி சிரஸ் -தேஜஸ் இவளே

—–

திரு மழிசை –கிடைத்தவரை எழுப்பி -guide -கலந்து -மதங்கள் அனைத்திலும் -பேசியவர் –
பேயாழ்வார் சிஷ்யர் -பேய்பெண்ணே –
நேர் நேர் நாள் மலர் காசு பிறப்பு -வெண்பா –96-
கல கலப்ப-விருத்தம் –
கை பேர்த்து -பல பாசுரங்கள் -உண்டே
ஞானம் மத்து -இனி அறிந்தேன் -நூலாட்டி கேள்வன் -திருவில்லா தேவரை -வேத சாரம் -வெண்ணெய் –
நாயகன் -பிரான் -ஆராவமுத ஆழ்வார்
நான் உன்னை அன்றி இலேன் -நாராயணனே நீ என்னை அன்றி இலேன் –
நாராயணன் இரண்டு அர்த்தங்களும் -அருளிச் செய்து –
பெரும் புலியூர் -அடிகள் -தேஜஸ் கண்டு பெருமாள் திரும்பி -உட் கிடந்த வண்ணமே புறம்பு ஓசித்து-காட்ட –

——

ராமானுஜர் பரம ஹம்சர் புகழால் -வேதம் அனைவரும் அறியும் படி செய்த பின்பு –
எங்கும் வெண்மை -அன்னம் தனது வன்மை இழந்ததே -தேசிகன் –
அதே போல் இவர்கள் முக ஒளி கிழக்கு வெளுக்கப் பண்ணிற்று

———

மேய்வான் -போவான் -கூவுவான் -நீராடுவான்
லவண வர்ஜித வேங்கடேசன் -உப்பிலியப்பன்
லவணம் எருமை மாட்டு சாணி –
சதக்ரது நியாயம் -எதை நினைக்கிறோமோ அதுவாகவே ஆகி விடுவோம் -ஆயர் வார்த்தை கை வருமே
கோதுகலமுடைய பாவாய் நீ வரவில்லை என்றதுமே போவார் போகாமல் நின்றார்கள்
ஆ ஆ -சந்தோஷத்துக்கு ஓன்று வருத்தத்துக்கு ஓன்று
ஐயோ -மங்களம் -அமங்களம் -நீல மேனி ஐயோ -வர்ணிக்க வார்த்தை இல்லை -செய்ய வாய் ஐயோ -இப்படியே –

——-
பெரும் தேவி தாயார் -கல்யாண கோடி விமானம் கீழே சேவை -புண்ய கோடி விமானம் வரதன் –
முதலில் கிழக்கு முகமாக இருந்தாராம் -கோயில் கட்டின அரசன் கணக்கு பண்ண கோபித்து மேற்கு முகம் -செவி வழி
நான்முகன் கிழக்கு முக யாகம் -இவன் மேற்கு என்றுமாம் –
தாயார் கிழக்கு முகம் இருந்து-இருள் போகும் படி -எருமை இருள் –
மிக்கு உள்ள பிள்ளைகள் உடன் போக விந்திய மலையில் இருந்து மீண்டும் ராமானுஜரை காஞ்சி நோக்கி கூட்டி வந்த பெருமை
உன்னை கூவுவான் கைங்கர்யம் செய்யவே
வைஷ்ணவ சம்ப்ரதாயம் வளர்க்க கொடுக்கலாம் -பொய்கை ஆழ்வார் -பிள்ளை லோகாச்சார்யார் வரத்தானே -ஆச்சார்யர்கள் அனைவரும்
மா வாய் -நமது அறியாமை போக்கி
மல்லர் -அஹங்கார மமகார
தேவராஜ பெருமாள் திருக்கோயில் -இமையோர் தலைவன் -அமரர்கள் அதிபதி –
நல்லது ஆராய்ந்து அருளுவதால் பேர் அருளாளன் வரத ராஜன் -வரம் தருபவர்களுக்குள் அரசன் –

முதல் மரியாதை -எடுத்துக்காட்டு -முதல் இரண்டும் -இதில் வரிசை க்ரமம் –
கீழ் வானம் வெளுப்பும் படி வையம் -விளக்கு
மற்ற இருவர் போகாமல் காத்து உம்மைக் கூவ வந்தார்கள் –
பெருமாள் தடுத்து சேர்த்து
முதல் விளக்கு ஏற்றிய குதூகலம்
நா வாயில் உண்டே –95-
மாவாய் பிளந்து –27-
13 ஆதியாய் 14 முதல் -முதலாவார் 14-தேவாதி தேவன் மூன்று பாட்டுகளால்
நீரும் காஞ்சி -உடன் சென்று சேவித்தால்
ஆராய்ந்து-தமர் உகந்த -வடிவிலே சேவை –
——

பதில் சொல்லாத பாசுரம் -நிஜமாகவே உறங்கும் கோபி இவள் –
சிலந்தி மால்யமான் -திருவானைக்கா புஷ்ப கந்தன் யானை -ஒட்டடை என்று சுத்தம் பண்ண -மீண்டும் மீண்டும் –
தும்பிக்கைக்கு உள்ளே போக -இருவரும் மாண்டு -செய்வதிலும் வைஷ்ணவத்திலும் ஸ்தல புராணம் உண்டே -பொன்னி அம்மன் பார்வதி வந்து வேண்ட
நம்பி -நம்பிக்கை நாச்சியார் -நம்பியை கைக்குள் வைத்து -தோழி -பொன்னி அம்மன் கல் கருடனுக்கு எதிரில் இன்றும்
சிலந்தி – சுபதேவன் கமலா தேவி சோழ அரசன் -தலை கீழ் தாய் தொங்கி பிரசவ வலி தாங்கி -கண்கள் சிவந்து இருக்க –
கோ செங்கணான் சோழன் -சிவா பக்தி தொடர்ந்து -70 மணி மாடக்கோயில் கட்டி -யானை உள்ளே வராமல் -இருக்க –
மணி முத்தாறு திருக்குளம் அருகில் -தெய்வ வாள் வலம் கொண்டு வெற்றி -பெற்று –
ஸ்ரீ வைஷ்ணவன் -நாயன்மாராக இருந்தவர் -71 -கோயிலாக இத்தைக் கட்டினான் –
எழில் மாடம் எழுவது செய்து –சேர்ந்த கோயில் -வைகானச ஆகமம் -தெற்கு நோக்கி சந்நிதி இருக்க கல் கருடன் எழுந்து அருளப்பண்ணி
தெற்கு வாசல் -மற்ற கோயிலில் வடக்கு நோக்கி இருக்கும்
இங்கும் திரு நீர் மாலையிலும் வைகுண்ட வாசல் தெற்கு நோக்கி இருக்கும்
சிவா ஆகமம் படி தெற்கு சன்னதி தெற்கு வாசல் –
மார்பில் கை வைத்து தூங்குகிறாள் –
மாமான் மகளே-ஆயர் பாவனை மாறி -மீளுகிறாள் -ஊரிலேன் –பாகவத சம்பந்தம் ஆசைப்படுகிறாள்
பேரை உடையவன் பேரன் ஆள்பவள் அக்கா -என்றும் தொடர்பு மாமான் மகள்
சங்கல்ப சூரியோதயம் -பகுத்தறிவு ராஜர் புத்தி ராணி -சேனை செயல்பாடு –குரு ராமானுஜர் -சிஷ்யர் தாமே –

———-

வஞ்சுள வல்லித்தாயார் -தூ மணி மாடம் -குத்து விளக்கு பிரசித்தம் இங்கு -நறையூர் –
தூபம் கமழும் ஸூ கந்த வனம் – உள்ளமே -துயில் -இருவருக்கும் பதக்கம்
மேதாவி ரிஷி மகள் –
பொன்னியலும் மாடம் கவாடம் -மங்களா சாசனம்
பொன்னி அம்மன் -மாமீர் –உமை இல்லையே திருமங்கை ஆழ்வாரைப் பாட வைத்தவள் -செவிடும் இல்லையே –
அனந்தலும் இல்லை தானே முன்னே ஹம்சா வாஹனம் முன் கல்கருடனில் பின்னே
மா மாயன் -தாழ நின்று –கோயில் சாவியும் இவள் இடுப்பில்
நமோ நாராயணா -நாமம் பலவும் -நடந்த நம்பி நாமம் சொல்லில் பத்தும் -கேட்டு கதவைத் திறப்பாள்

பூதத்தாழ்வார் -வையகமே தகளி சுற்றும் விளக்கு எரிய -பக்தி மணம் கமழும் ஞான சுடர் விளக்கு –
பெரும் தமிழன் -மா மகான் -பெருகு மத வேழம் -ராமானுஜ முனி வேழம் –
தாள் திறவாய் பேயாழ்வார் கேட்க –
பர ஞானம் ஈடுபட்டு -உலகியல் விஷயத்தில் ஊமை செவிடு அனந்தல் –
17 பாசுரங்கள் நாம சங்கீர்த்தன மஹிமைகள் உண்டே –

————-
நோற்று -எதிர்மறை -நோற்காமலே -கிண்டல் பேச்சு -விபரீத லக்ஷணை
வ்ருஷம் -மரம்
மகா வ்ருக்ஷம் -கள்ளிச்செடி
நல்ல பாம்பு
அம்மனாய் -இதுவும் குத்தல் பேச்சு
நாற்றத் துழாய் முடி நாராயணன்
சிகாயம் துளசி -தலையில் துளசி வைப்பது அவனுக்கு -நாம் கொள்ள கூடாது –
காதில் பூ வைத்துக் கொள்ளக் கூடாது -ஆண்கள் கழுத்தில் சந்தனம் பூசக் கூடாது –
சந்தனம் பூசி கையை அலம்ப வேண்டும் – திருமண சேஷத்துக்கு கையை அலம்பிக்கக் கூடாது –
முதல் நாராயணனே நமக்கே பறை macro-அடுத்து நாராயணன் மூர்த்தி ஸூஷ்ம -இரண்டு ஸமாஸ அர்த்தங்கள்
இதில் அழியாத இதில் கல்யாண குணங்கள் கொண்டவன் -அதுக்கு உபலக்ஷணம் நாற்றத் துழாய்
ராமர் சென்ற வழி இன்றும் துளசி கமழும் -ராமர் கட்டிய சேது என்கிறான் அர்ஜுனன் -வில்லி பாரதம்
சாளக்ராமமுடைய நம்பி சாய்த்து பருகிப் போனானே -அங்கு இருந்து வந்த கண்ணன் -பெரியாழ்வார்
நம்மால் -நம் மால் -நமக்கும் பொவின் மிசை நங்கைக்கும் இன்பனை -அதிக அன்பு
பாலனாய் -பதிகம் துழாய் -கிடைக்கா விட்டால் அனுசந்தித்தால் போதும்
-புண்ணியனால் வீழ்த்தப்பட்ட -இங்கு அவதார ரஹஸ்யம் -இங்கு இவனாகவே வீழ்ந்தான் –
தயரதன் பெற்ற மணி மரகத தடத்தில் புக்கு அழிந்தான்

துளசி வனம் -பூமி தேவி -திரு விண்ணகரம் -வைகுண்ட வாசல் தனியாக இல்லை -அம்மனாய் -பூமி தேவிக்கு பிரதானம் –
வசுமதி சதகம் -ஆசு கவி -பூமி தேவி காட்டி மா ஸூ ச -திருவடி காட்டாமல் -துளசி பிராட்டி பிரார்த்திக்க -சூடி ஸ்ரீ சாம்யம் –
நம் மால் -மார்க்கண்டேயர் மாமனார் வீடு -வீட்டோடு மாப்பிள்ளை -உப்பு இல்லாமல் -வெட்கப்பட வேண்டாம்
பக்தன் -அபசாரம்-கோபப்படாமல் –தந்தான் தன தாள் நிழலே -இலங்கை அடர்த்த வில்லா –
புண்ணியனே -பெருமாள் –பூமிக்கே ஆபரணம் -யரும் கலமே-உப்பு சப்போடு வந்து அனுக்ரஹிக்க தேற்றமாய் –

பேயாழ்வார் -விளக்கே ஏற்றாமல் கண்டார் -hard work இல்லாமல் smart work-
நாயகி பாவம் -வெற்பு என்று வேங்கடம் பாடும் -அம்மனாய் –
வாசலே திறக்காதவர் -இவர் –
14 பாசுரங்கள் துளசி பற்றி -நம் மால் -இவருக்கு முதல் காட்சி –தமிழ் தலைவன் கும்பம் காரணமாக கொண்ட அகஸ்தியர் –
தாயார் அருளுக்குப் பாத்திரம் -திருவில் தொடங்கி முடித்தவர் -பேய் போல் திறக்காமல் தேற்றமாய் திறக்க –

———-

ஐம்புலன் பற்றி -புற்றரவு பாம்பு செவி -எழுப்பி / தங்காய் -உடலை -/கண்ணினாய் -/
நாவுடையாய் -/கிளி மூக்கு தட்டி எழுப்புகிறாள் இந்த ஐந்து பாசுரங்களால் –
மூப்பு உன்னை சிந்திப்பார்க்கு இல்லை திரு மாலே -பவாமி த்ருஷ்ட்வா யுவா -கண்டு தசரதன் –
குண கணவ் ஆர்ணவம் -குண கண பல –
ருக்மிணி தமிழ் ஆக்கம் பொற்கொடி -ருக்மம் பொன்
natural habitat புனம் மயில் -புற்று அரவு போல் பாகவதர் கோஷ்ட்டி தானே உனக்கும் ஸ் வா பாவிகம்
சுற்றது தோழி உறவினர்களே நண்பர்கள் -நண்பர்களும் உறவினர்கள்
முகில் வண்ணன் பாடவும் புன மயிலான நீ உறங்கலாமா –
———-

செங்கமல வல்லித்தாயார் -மன்னார்குடி –கோபால நந்தன -கீதாம்ருதம் –
செற்றார் புலன்கள் குதிரைகள்-கேசி-பூதனை அஞ்ஞானம் மல்லர் காமம் க்ரோதம் காளியன் பாம்பு -மனம் –
கோ பாலன் -கோவலர் -ஹேமாப்ய நாயகி -பொற்கொடி -கோபிகள் உடன் ஜலக்ரீடை -ஹரித்ரா புஷ் கரணி
வேதங்கள் கற்றுக் கறவை -மாறாமல் இளமை -மறைப்பால் -கடைந்து -நா மத்து -திருவாய் மொழி பக்தாம்ருதம் –
நால் முகங்களில் பாசுரம் -தன் -தலைவி -தோழி -தாயார் –
கோ வலர் -வாக்கு -பண் மிகு மாறன் தமிழ் -பாவின் இன்னிசை –
பொற் கொடி -அங்கி -குலபதி -பூதம் தலை -பெரியாழ்வார் திரு முகம் –

———–

லஷ்மணன் -2 நாள் பின் அவதாரம் -1 நாள் முன்னே ஸ்ரீ வைகுண்டம் -ஆக மூன்று நாள்கள் தான் இவனுக்கு பிரிவு
சீதா பிராட்டியைக் கூட்டி வால்மீகி ஆஸ்ரமம் விட [பிரிந்தாலும் அது ராமன் கைங்கர்ய கார்யம் தானே
ஸ்ரீ ருத்ரம் வேத மந்த்ரம் தமிழ் ஆக்கம் இது
ராமன் லஷ்மணன் -ராமயதீ இதி ராம -மனத்துக்கு இணையான -லஷ்மணன் -லஷ்மீ ஸம்பன்னன் -நற் செல்வன்
பொறி இடுதல் கட்டம் -எங்கே மைத்துனன்-சீதைக்கும் -ருக்மிணிக்கும் ஐவர் இருந்தாலும் அங்கும் இல்லை –
குறை போக்கவே இப்பாட்டில் நற் செல்வன் –
கறவை -கீழே -எருமை இதில் -பசு பால் கறந்து பகவத் ஆராதனம் செய்தவன் -லௌகிக விஷயம் தவிர்த்தான் –
எருமை தமோ -ஸத்வ குணம் கைக் கொண்டான்
அந்தரங்க கைங்கர்யம் -பாகவத கைங்கர்யம் முதலில் -பசு பால் கறந்து -அடுத்து பகவத் கைங்கர்யம் -கூட போக –
பின்பு கர்மா அனுஷ்டானம் -இப்படி மூன்றும் உண்டே
பால் வழிய கூடாதே -என்றால் -நின்னையே தாள் நயந்தால் செல்வம் தானே ஓடி வருமே
ராமன் அயோத்யா சாம்ராஜ்யம் இழந்தாலும் இவன் கைங்கர்ய சாம்ராஜ்யம் இழக்கவே இல்லையே
ஆனந்த கண்ணீர் விட வைப்பதால் -ராமனும் ருத்ரன் -கோபத்துக்கும் அம்புக்கும் வில்லுக்கும் நமஸ்காரம் -ருத்ர மந்த்ரம் –
மிருத ஸஞ்சீவி-மந்த்ரம் -இனித்தான் -திருவடி -மரக்கிளையில் மேல் இருந்து ராமாயணம்
தமிழில் பாட -ராவணனுக்கு தெரியாத மொழி -ராமன் சீதை -அகஸ்தியர் சந்தித்து கற்றவர்
தசரத -ஆரம்பம் -ராம என்று ஆரம்பித்தாள் என்னவோ என்று- துக்கம் மேலிடுமே –

பரதன் அக்னி பிரவேசம் பொழுதும் இதே யுக்தி திருவடி
கம்பர் -சிவாச்சாரியார் 3000 பெயரையும் ஓன்று சேர -அன்று இரண்டு power centres –
இங்கும் பண்ணிய பின்பு ஸ்ரீ ரெங்கம் வரச் சொல்ல -கோவிந்த ராஜர் கனவு -சுடுகாட்டு பிணம் எரிய காட்ட –
வாழ்வில் விழும்பில் போன கம்பரை யும் மீட்ட வ்ருத்தாந்தம் -பாடினால் இறந்த சிறுவனும் மீள்வான் சொல்லி பாட –

————–

ராமானுஜர் -காரேய் கருணை -அர்த்த விசேஷங்களை -ஆசை உடையார்க்கு எல்லாம் –
மனத்துக்கு இனியான் –18 தடவை இராமாயண அர்த்தம் -குடி கொண்ட கோயில் –
பாரதி தாசனும் பாடும் படி அனைத்து இல்லாரும்

தக்ஷிண அயோத்யா -பட்டாபிஷேகம் -ஏக ஸ்தானம் -வீராஸனம் -ராமஸ்ய கோஷ்ட்டி லகுதரா ஆக்கி -மாதர் மைதிலி –
நற் செல்வன் லவ குசர்களை -தங்கு ஆய் -தாங்கிய
திருவடி தம்பூரா ராமாயணம் பாட –
இனித்தான் -எழுந்து உத்தர அயோத்யா எழுந்து அருள வேண்டுமே –
அனைவருக்கும் ஸ்ரீ ராமாயணம் -மூன்று அடுக்கில் சித்ரா ரூபம் -அவதாரம் தொடங்கி பட்டாபிஷேகம் பர்யந்தம்

குலசேகரப்பெருமாள் -நற் செல்வன் -ராஜ்ய பரிபாலனம் செய்யாமல் -அரங்கன் திரு முற்றம் சேறை -சென்னிக்கு அணிந்து –
மணத்தூணை பற்றி -ஸ்ரீ ராமாயணம் பத்து பாசுரங்கள் -திருச்சித்ர கூடம் –

———

மண்ணின் மைந்தனை -கண்ணுக்கு இனியான் -கோஷ்ட்டி -மனத்துக்கு இனியான் கோஷ்ட்டி -இருவரும் ஒருவரே –
அரக்கன் -அசுரர் -இரண்டு வகை -ஹிரண்ய கசிபு அசுர குலம் -ராவணன் அரக்கன் -கிள்ளிக் களைய முடியுமே பிசாசான் —
ஹரி கணேஸ்வர அங்குளி யக்ரேண -முந்திய அவதாரம் நினைவு –
18 இராமாயண ரஹஸ்யங்கள் உத்தமூர் ஸ்வாமி -மஹா லஷ்மி -ஹிரண்ய கசிபு திருந்த வாய்ப்பு இல்லாமல் முடித்ததால் கோபம் –
மடியில் உட்க்கார்ந்து கவனிக்க -லஷ்மி நரசிம்மர் -அடுத்து வாய்ப்பு கொடுக்க -சிசுபாலனுக்கும் ஒரு நாளுக்கு 100 வாய்ப்பு வசவுகள் சொல்ல
முராரி கராரி -முரனுக்கும் காரனுக்கும் அரி எதிரி போல் பொது அரி -புஷ்பத்துக்கு எதிரி வென்ற
புள் இன் வாய் -ஆயுஷ்மான் -பெரிய உடையார் -ச தேவி மம பிராணன் -சேர்ந்து அபகரித்து போனான் –
ராவணன் உபயம் க்ருத -இந்தம் முஹூர்த்தம்-காணாமல்போனது அப்படியே கிட்டும் –
இந்த மந்த்ரம் சொன்னததும் கிள்ளிக் களைந்தான்

கோமள வல்லித்தாயார் -சாரங்க பாணி பெருமை சொல்லி -கருடனை -வினதை சிறுவன் –
த்வதாச அக்ஷர மந்த்ரம் -த்வஜ ஸ்தம்பம் முன்னும் ஒருகருடன் -கர்ப்ப க்ருஹம் ஆகர்ஷ கருடனாகக் ஆராவமுதனைப் பருகி
காமாதி பொல்லா அரக்கனை கிள்ளிக் களையும்
அனைவருக்கும் -தனக்கும் ஆராவமுதம் –
தூணிலா முற்றம் -பிள்ளைகள் –
வெள்ளிக்கிழமை விசேஷ திருமாஞ்சனம்
த்விஜ -வேதம் -பறவை -பல் -ப்ராஹ்மணம் -மூன்றையும் சொல்லும் –
வைதிக விமானம் –

சிலையினால் இலங்கை செற்ற தேவன் -என்றும் கற்றினம் மேய்த்த எந்தை —
காட்டினான் திருவரங்கம் உய்யும் வண்ணம் –தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் –
நரகமே சுவர்க்கம் ஆகும் நாமங்கள் உடைய நம்பி
கதிரவன் -வெள்ளி -இருள் உறங்க
போது பரிப்பதே கண்ணாய் இருந்தாரே –

————

நங்கள் -சொல்லாமல் உங்கள் -பிரித்து காட்டி –
போகின்றார் போ தந்தார் பாட பேதம்
வெள்ளை வேஷ்ட்டி தான் கல்யாணத்தில் கட்ட வேண்டுமாம் -மஞ்சள் படுத்த கூடாது -சிகப்புக்கரை விசேஷம்

ஹனுமான் -குரு சிஷ்யர்
யாஜ்ஜ வர்க்யர் ஸூர்ய சிஷ்யர்
சகபாடி என்பதால் ஆச்சார்யர் ஸ்தானம் -சிகப்புக்கரை போட்ட வெள்ளை வேஷ்ட்டி –
புன்னகை வெள்ளை வேஷ்ட்டி -சிவந்த உதடு -மந்தஸ்மிதா ராமாயணம் -இதுவே திருவடி உகந்த பரிசு

———————

அர்ச்சகர் ஹரி சாஷாத் -1000 ஸ்ரோத்ர்யர்களுக்கு சாம்யம் –
கம்சனுக்கு தான் சங்கு சக்கரம் காட்ட வேண்டாம் -ஆகவே வதம் செய்த பின்பு
வெளியே கொண்டு வந்து அனைவருக்கும் காட்டி அருளினான்
திரு வெள்ளறை -திருவரங்கத்து புழக்கடை
புண்டரீகாக்ஷ பெருமாள் -செங்கழு நீர் -மலர்ந்து அஞ்ஞானம் அல்லி தூங்க –
மார்க்கண்டேய ரிஷி -தவம் புரிந்த ஸ்தலம்
நா வன்மை -எங்கள் ஆழ்வான் -விஷ்ணு சித்தீயம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6000 படி –
ஆனால் வியாக்யானம் 4000 படி -தினவு கெட சொல்வான் திரு வெள்ளறை சோழியன்
நடாதூர் அம்மாள் -நா செத்து வா -என்றவர் -அடியேன் –
கொல்லம் கொண்டான் ஸ்ரீ வில்லி புத்தூர் அருகில் உள்ள இடத்தில் கால ஷேபம்
அகில -ஸ்ரீ ரெங்க விமானம் போல் -ப்ரணவாகாரம் –
2-2- உக்தம் ஜகத் -தொடங்கி
இது சர்வம் சமஞ்சசம் மகாரம் முடித்து
ஸூத பிரகாசர் -கேட்டு எழுதி -ஸூ தர்சன பட்டர் -ஸ்ரீ கூரத்தாழ்வான் வம்சம் –
நடாதூர் அம்மாள் காஞ்சியில் அருளிச் செய்த ஸ்லோகம்
சேஷியில் பள்ளி கொண்ட அரங்கன் சேஷி
ஸூத பிரகாசிகை -மங்கள ஸ்லோகம்
ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரெங்க விபபரம் பரஸ்ய சேஷித்வம் ஸ்புடமித்யே
பேர் சொல்ல வராத பெருமாள் என்பார்களாம்-அதையும் ஏற்றுக் கொண்டு அருள் பாலிக்கும் வாத்சல்யம் –
அங்குள்ள -பங்கய கண்ணான் –

திருப்பாண் ஆழ்வார் –உணர்த்தி
நீசனேன் -புழக்கடை ஒதுங்கி இருக்க
செங்கழு நீர் ரத்தம் வர அரங்கன் முகம் வாடா -லோக சாரங்க முனிவர் மூலம் கோயிலுக்கு
நாணாதாய் -அகங்காரம் -நாண் -நான் -இரண்டுக்கும்
நாண் பெரியோன் அல்லோம் -தேசிகன் –
பெயரைக் கூட சொல்லிக் கொள்ளாமல் -அமுதினைக் கண்ட கண்கள் மாற்று ஒன்றைக் காணாவே –
பலனையும் கூட பார்க்காமல் -நாணாதாய்
குறைந்த பாசுரம் -நா உடையார் -அரங்கனையே அடக்கி –
கையினார் -கரியவாகி –இத்யாதி

குளத்தில் பூத்த தாமரை வாவியுள் செங்கழு -கம்பீராம்ப ஸமுத்பூத
செங்கழு நீர் -செம்மையான -தண்டுடன் கூடிய- ஸ்ம்ருஷ்ட நாள
ஸூர்யனால் அலர்த்தப்பட்ட வாய் நெகிழ்ந்து -ரவிகர விகசித – கப்யாஸம் புண்டரீகம் -அமலாய தேஷணா -பங்கயக் கண்ணான் –
தாழ்வு ஓன்று இல்லா –சூடிக் கொடுத்தவள் தொல் அருளால் வாழ் கின்ற வள்ளல் ராமானுஜன்

————

ஆண் கிளி -கையில் உட்க்கார்ந்து -தொண்டைக்குள் பெண் கிளி -பார்க்க ஆசையால் காத்துக் கொண்டு இருக்கிறதே –
அபராத பரிகார விஷயம் -ரஹஸ்ய த்ரய அதிகாரம் -நானே தான் ஆயிடுக –ப்ரணாம பூர்வகம் ஷமாயா –
இந்த்ரத்யும்னன் -அகஸ்தியர் சாபம் மூலம் கஜேந்திரன் -உலகம் புகழும் படி -அடியார் சாபமும் அனுக்ரஹ விஷயம் –
ஸூ க ப்ரஹ்மம் -sugar -பழம் கிளி –
எல்லே -wow -ஸ்ரீ மத் பாகவதம் விட கண்ணன் அனுபவம் -இவள் -வந்தே வால்மீகி கோகுலம் –
பழி என்னும் பாரத்தை தைரியமாக சுமப்பதால் பரதன்
சேஷ அங்கம் பூவோ பர -ஸ்பர்சம் பெறாத அங்கம் பூமிக்கு பாரம் =போந்து எண்ணிக் கொள்
பகவத் விஷயம் அனுபவிக்க வேண்டும் -யார் யார் என்ன மொழியில் பேசினாலும்
அடியார் தாதியாராதனம் -அங்கு விதைத்தது போல்
இன் சொல்லே பேசி
பரஸ்பர நீச பாவம் -உப்பு போல் -கண்ணில் படாமல் –

அம்புஜ வல்லித் தாயார் -ஸ்ரீமுஷ்ணம் -ஸ்வேத வராஹ கல்பம் -புற்று -வால்மீகி -காதே மஹா கவி -பண்டே அறிவோம்
நானே தானே நீயும் -பூமா தேவி – குமுத வல்லித்தாயார் காமத்தால் ஆழ்வார் வேறுடையாய் -மடல் திரு நறையூர் –மதிள் -அரங்கனுக்கு
1165-தேசிகன் -5 வயசு -103 வயசு வாசி -நடாதூர் அம்மாள் கால ஷேபம் -விட்ட இடம் தொடங்கி -மடியில் அமர்த்தி —
ராஜ கோபாலன் சந்நிதி -பெரிய கடை வீதி சேவிக்கலாம் -கண்டாவதாரம் -அடியேன் -வெண்ணெய் -பிரசாதம் –
வாக்கு வன்மை கண்ணனுக்கு மணியாகவே -பண்டே வாக்கு வன்மை அறிவோம் –

——

கல் மழை பொழிந்த அபசாரத்தால் பயந்து
காம தேனு வாலைப்பிடித்து இந்திரன் கண்ணன் இடம் கோவர்த்தன -அது ஸ்தோத்ரம் பண்ண –
ப்ரசன்னமான -பின்பு -இந்திரன் திருவடி பற்றிய வ்ருத்தாந்தம் -நாராயணீயம் –

நாயகனாய் நின்ற விளங்கிய -கண்ணனுக்கும் -நாயகன் –
யத்ர யோகேஸ்வர பார்த்த –வஸூ தேவ குமாரனான கிருஷ்ணன் -கீதா பாஷ்யம் –
ஸ்ரீ கீதா உபன்யாசம் -போர் செய்தவர்கள் -மயங்கி -நின்றார்கள் -பேச்சு ஆற்றலால் அசரீரி வார்த்தை கேட்ட கம்சனை மயக்கியது போல் –
தண்ணீர் பந்தல் வைத்தவரைக் கொண்டாடுவது போல் உபகார வஸ்து கௌரவம் ஆச்சார்யர்களுக்கு உண்டே –
அரசர் மருத்துவர் வீட்டு வாசலில் கொடி பறந்து -அடையாளம் காட்டும் -மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன் அன்றோ இவன் –
அறை பறை-வினைத்தொகை -முக்காலத்துக்கும் கொள்ளலாமே
நென்னலே கன்னடா பாஷை
செப்பு ஆந்திர பாஷை
ஆனைச்சாத்தான் மலையாளம் –
துயில் எழுப்ப பாட இல்லை எழ -அவனாகவே எழுந்து அருளும் வரைக் காத்து இருந்து -பாடுவான் -பாடுவதற்காகவே
பாதுகை -தூங்கும் பொழுதும் விலகாமல் மொட்டு மலரும் போல் மலரும் அழகைக் கண்டு களிக்கவே -பாதுகா சஹஸ்ரம் —
திருவடி -ராமன் கமல பத்ராக்ஷ -கண் அழகைக் கண்டவன் பேச முடியும் -காட்டவே கண்டவன் அன்றோ –
நேசம் நிலைத்து இருக்கும் நித்யர் அன்றோ கதவு இங்கு
திருமந்திரம் கோயில் காக்கும் ஆச்சார்யர் -கோ இருப்பிடம் கோயில் -த்வயம் -காக்கும் ஆச்சார்யர் –
கொடித் தோன்றும் வைகுண்ட வாசல் அடைவிக்கும் -நென்னலே வாய் நேர்ந்த சரம ஸ்லோகம் காக்கும் ஆச்சார்யர்
தூயோமாய் -ஆச்சார்ய அபிமானம்
துயில் எழ -அஞ்ஞானம் போக நாடி வந்தோம் –
நேசம் கொண்ட திரு உள்ளக் கதவைத் திறந்து உபதேசித்து அருள பிரார்த்தனை
நாத முனிகள் –முதல் ஆச்சார்யர் -நாயகன் -தலைமை -மாடு மேய்த்து ஆனந்திக்கு காட்டு மன்னார் கோயில் திவ்ய தேச செல்வம் காத்து வளர்த்து
அடைவிக்கும் அருளிச் செயல்கள் காத்து அருளி
தாளத்தோடு வாய் திறந்து -தாள் திரை வாய் -இன்னிசை தந்த வள்ளல்
பவிஷ்யகார ஆச்சார்யர் வருவதை மாயன் மணி வண்ணனான நம் மாழ்வார் நென்னலே வாய் நேர்ந்தாரே
கண்ணி நுண் சிறுத்தாம்பு -12000-மீண்டும் மீண்டும் உரு சொல்லி –
எண்ணவே வேண்டாமே பூர்த்தியானதும் தானாகே அருளுவார் –

——–

த -ஓர் எழுத்து -தேவர்களுக்கு -தாம் யத -இல்லாத ஒன்றை உபதேசம் புலன்களை அடக்க -தமயத்வம்
அசுரர் -ego -தயத்வம் -கருணை காட்ட
மனுஷ்யர் -தத்த -தானம் கொடுக்க உபதேசம் –
இடி ஓசை -ததத இம்மூன்றையும் காட்டும் -வேதம் சொல்லும் கதை -காஞ்சி பெரியவர் ஸ்வாமி -MS -சகல ஜனனம்
யது மஹா ராஜர் -தானம் கொடுக்க வாங்கியவராலே தானம் கொடுக்கும் படி -ஆகவே நந்த கோபர் தந்தையாக கண்ணன் ஸ்வீகரித்தான்
ரஜோ குணத்துடன் கர்ணன் தர்மம் -அர்ஜுனன் கொல்லும் வரை -விகர்ணன் தேரில் ஏறி தப்பினான் –
ஸ்ரத்தையா தேயம் அஸ்ரத்தையா தேயம்
ஈடுபாட்டுடன் தானம் – பொருளில் ஈடு பாடு இல்லாமல் -அவமரியாதை இல்லாமல் –
தாரா பித்ரு க்ருதா-வால்மீகி -நந்தகோபன் ஒத்துக் கொண்ட பின்பே பெண்ணாக கொள்வான்
சம்ஹாரமே பண்ணாத வாமன த்ரிவிக்ரமன்
விசுவாமித்திரர் தர்ப்பை -படுக்கையாக மாறின லஷ்மணன் -கௌசல்யை ஸூ ப்ரஜா பாடி
அனந்த சரஸ் சில் அத்தி வரதர்
படுக்கையை உருவி

ஆச்சார்யர் -கை வந்தால் -திருமந்திரம்-யசோதை – -பொருள் -கண்ணன் –சாரம்-பலதேவன் -நான்கும் இப்பாட்டில்
வைகுண்ட வான் போகம் -அம்பரமே -சர்வ வியாபி பொருள் -உற்றதும் அடியார்க்கு அடிமை

———

1-தாயாரை மட்டுமே சொல்லும் ஒரே பாசுரம் நாலாயிரத்திலும் இது -unique-
2-கேட்டு அறிவித்து தூய்மைப்படுத்தி பக்தி விளைவித்து ஆஸ்ரயிக்கப் பட்டு ஆஸ்ரயிக்கிறாள் -ஆறு செயல்கள் –
இந்த ஆறையும் இதில்
3-ஸ்ரீ ஸூக்தம் -தமிழ் ஆக்கம் இது –
4-திருப்பாவை ஜீயர்
அக்ரே நயதி அக்னி-விஷ்ணுவே நம்மை முன்னே கூட்டி வருகிறான் –நெருப்பை ஆற்ற வைக்க இவள் -ஸ்ரீ பார்ஸ்வம் -சிபாரிசு –
கும்பன் திருக்குமாரி –2 வருஷம் பின்பு பிறந்தவள் -முன்னிலும் பின் அழகு பின்னை -நல் பின்னை –
ஏழு எருது -அடக்கியது இவளுக்கு 3 வயசு -கண்ணனுக்கு 5 வயசு -யசோதை வீட்டிலே வளர்ந்தவள் –
ஜெய தேவர் -வ்ருஷபானு மகள் ராதை -18 -கார் மேகம் லீலை
தன்னையும் கொடுத்து அனுபவிக்க வலிமையையும் கொடுத்து
யானை போன்ற கறவைகள் என்றுமாம் –
சாம வேதம் தக்ஷிண ஹஸ்தி யானையாக திருமால் இருஞ்சோலை
தன்னை விட்டு ஓடாத தோள் வலிமை -இளமை கீழ் நோக்கி போகுமே கண்ணனைப் பார்த்துக் கொண்டே இருந்து –
லஷ்மண ரேகா வால்மீகி கம்பர் இல்லையே -தாய் ஸ்தானம் பிள்ளை கோடு போடுவானா
ராவணன் இடம் ஜனக மகள் -பிரச்சினை ஆரம்பம் -code கோட்ப்பாடு தாண்டி யதால்
பின்பு ஸூந்தர -சக்ரவர்த்தி மருமகள் -நல்லவை விளைய
கடை திறவாய் -தாழ்பாள் திறக்க

ஹஸ்த நாத ப்ரபோதிதம் -யானை பிளிறல் கேட்டு எழுந்து இருந்து
காந்தத்வாராம் -காந்தம் கமழும் குழலி
ஈஸ்வரீம் சர்வ பூதா நாம் -பந்தார் விரலி
நித்ய புஷ்டாம் -சீரார் வளை ஒலிப்ப
பத்மபிரிய -இத்யாதி -செந்தாமரைக்கை
ஸ்ரீ துஷதாம் -மகிழ்ந்து திறவாய்

குயில் இனங்கள் கூவின -கேட்டு
கடை திறவாய் வாய் திறந்து கேட்க வைக்கிறாள்
பாபம் போக்கி -கந்தம் கமழும் குழலி
பக்தி -வந்து திறவாய் உள்ளக்கதவை திறந்து
வந்து எங்கும் கோழி -ஆஸ்ரயிக்கப் பண்ணுகிறாள்
நப்பின்னையாக ஆஸ்ரயித்து
வேண்டு உரை கேட்டு –தேசிகன் -தீ வினைகள் மாண்டிட தன் அடி சேர் –

வஞ்சுள வல்லித்தாயார் நப்பின்னாய் -ந பின்னா -பிரியாமல் சேர்ந்து -நம்பிக்கை நாச்சியார் -தனி சந்நிதி இல்லையே -சேர்ந்தே புறப்பாடு –
நறையூர் -கந்தம்-மேதாவி முனிவர் மகள் -ஸூ கந்த வனம் -கருடன் திருக்கல்யாணம் பண்ணி வைத்து
குயில் கூவும் அழகாய சோலைகள்
மாலை வடக்கு பிரகாரம் பறவைகள் இன்றும் சப்திக்குமாம் புள் அரையன் ஸ்தோத்ரம் பண்ணுமாம்
பெண் அரசு நாடு -நம்பி கையில்
வளையல்கள்-பிரசித்தி –

ஆச்சார்யர் -பெருமாளை வசப்படுத்து -அனுபவிக்கும் வலிமை -கோபாலனை பார்த்து நந்திக்கும் ஆனந்திக்கும்
பின்னாய் -பிற்பட்ட நைச்ய பாவம்
கந்தம் -ஞானம் -பரப்பி -சிஷ்யர்கள் ஸ்தோத்ரம் குயில் -பெருமாள் கைப்பாவை பந்தார் விரலி –
மைத்துனன் பூர்வர் பேர் பாடி சாஸ்த்ர உபதேசம்

திருக்கோட்டியூர் நம்பி திருக்குமாரத்தி -தேவகி பிராட்டியார் -வங்கி புரத்து நம்பி -பாசுரம் இயற்றி –
ராமானுஜ முனி வேழம் -உந்தி மத களிற்றன்
தென் அத்தியூர் தோள் அண்ணல் ஈடுபாடு -ஓடாத தோள் வலியன்
பின்னாய் -நைச்ய
சிகை முடியும் -கந்தம்
பந்தார் விரலி -உபய விபூதி உடையவர்
வியாக்யான கராம்புஜா -உபதேச முத்திரை -நகத்தின் ஒளியால் உள்ளம் தூய்மை படுத்தி
வேதாந்த தத்வம் வரைந்து -வேறே பொய் பொருள் பொறுத்தப்படாதே -அமுதனார் –

——–

குத்து விளக்கு-mobile lamb -சோக ஸ்ருங்கார ரசங்கள் -தனியன் இத்தை ஒட்டியே
வெண்மை -வேஷ்ட்டி விரித்து படுப்பார்களாம்
மெத்து -மென்மை பிரதானம் பஞ்ச லக்ஷணங்களில் -கை வருட மலர் போது சிவக்குமே
தண் தாமரை சுமக்கும் -ஆசன பத்மத்தில் அழுந்திய திருவடிகள்
அஞ்சல் ஓதி -அழகு குளிர்ச்சி வெண்மைக்கு பதில் கருப்பு -வாசனை மென்மை -அல் -கருப்பு -இது பிரதானம் போல்
பஞ்ச -அகன்ற -ஐந்து லக்ஷம் பெண்களையும் கொள்ளும் படி -பஞ்ச கச்சம் -அகன்ற கறை வைத்து என்னுமா போல் –
யாகத்தின் பூமா தேவி அணைக்க ஆடை கடல் உப்பு -உண்ண முடியாதே -விலக்கி உண்பேன் என்றானாம்
சிருங்கார ரசம் கேட்டு ரக்ஷிக்கப் படுவோம் -இத்தை நினைவூட்டவே இன்றும் இப்பாசுரம் அன்று –
இவள் மேல் அவன் அவன் மேல் அவள் -மாற்று அலங்காரம் கோமள வல்லித்தாயார் -ஆராவமுதன் –
மலர் மார்பா -மலர்ந்த மலரும் மலர்ந்து கொண்டு இருக்கும் -பஞ்ச லக்ஷம் அணைத்து கொள்வதால் மேலும் மலரும் –
ஏறு திரு உடையான் இதே போல் -இவள் ஏறப் போகும் திரு மார்பு அன்றோ –
எத்தனை -எள் தனை -சிறிய அளவும் –
உன் மணாளனை -ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வம் அன்றோ -பிரித்து பேசி உணர்த்துகிறாள் –
சீதா அசோகா வனம் -ராமன் சோக வனம் -வால்மீகி கவனம் -கதை -நமக்கு ஆனந்த கண்ணீர் வனம் -சிறை இருந்தவள் ஏற்றம்
காண்டவனம் எரிக்க பக்ஷி ராஜன் -கல்லால் அடிக்க -கல்லாக சாபம் -மாற்றி வரப் பிரசாதமாக அனுக்ரஹம்
தண்டனையும் அனுக்ரஹம் -பலம் இரட்டிப்பாகி அனுக்ரஹம் –
தற் காலமாக தடுத்து -ego mode -மாற்றி அனுக்ரஹ mode மாற்றவே தடுத்து -சிதை குரைக்குமேல் -ஆட்டிப் பார்த்து –
என் அடியார் செய்யார் -என்னடி யார் அது செய்யார் -செய்தாரேல் நன்றே செய்தார்

ஆச்சார்யர் குத்து விளக்கு -அஞ்ஞானம் போக்கி -சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே
நான்கு வேதங்கள் நாலாயிரம் -ஸிம்ஹாஸனம் கோட்டுக் கால் கட்டில்
பஞ்ச சயனம் -அர்த்த பஞ்சகம் –கொங்கை மேல் -திருமலை திருமாலிருஞ்சோலை இவையே முலை யாக –
எல்லாம் வகுத்த இடமே -இருப்பிடம் வைகுந்தம் -இத்யாதி
மலர் மார்பா -பரந்த திரு உள்ளம்
மைத்தடம் கண்ணினாய் பக்தாஞ்சனம் –
பிரியாமல் –
தத்வ ஞானத்தால் மோக்ஷம் இல்லை தகவு தயை கருணை அபிமானத்தாலே பேறு

——-

வேங்கடவற்கு என்னை விதி என்று முப்பத்து மூவர் பாசுரத்தில்
18- பிராட்டி மட்டும் பற்றிய ராவணன் –
19-அவனை மற்றும் பற்றிய சூர்ப்பணகை-
20-மிதுனம் பற்றிய விபீஷணன் – முதல் நான்கு வரிகள் கண்ணன் -அடுத்த நான்கும் நப்பின்னை இதில்
ஆராவமுதனின் வியர்வை துளிகள் சிந்தி பாற் கடலில் அமுதம் -33 கோடி தேவர்கணம் சேவித்து கர்ப்ப க்ருஹம்
த்யான ஸ்லோகம் இப்பாசுரம் அடி
தேவாதி தேவன் தானே முன் வந்து ஹவிர்பாகம்-கொண்டு -மிடுக்குடன் -பெருமாள் வந்தார் –
கஜேந்திர வரதன் -ஆதி காரணன்–அகில காரணன் -நிஷ் காரணன் -அத்புத காரணன் –
நாரணன் காத்த வாரணம் -தேவர்கள் பின் வாங்க -சென்று நின்று ஆழி தொட்டானே –
ஆழி இவன் வேகத்துக்கு ஈடு கொடுக்க மாட்டாமல் இருக்க நின்ற பின்பு ஆழி வர முடிந்ததே –
கஜேந்திர மோக்ஷம் சேவிக்க ருத்ரன் பிரேமா இந்திரன் ரிஷபம் ஹம்சம் ஐராவதம் -whats up -தூக்கி வந்தானே
எட்டுக்கைகளால் எட்டு திவ்ய ஆயுதங்கள் கஜம் த்ராதும் -க ஜம் -கலியே –
சொன்ன வண்ணம் செய்த பெருமாள் முன்னே செல்ல அனைத்து தேவர்களும் பின்னே போக –
சந்தேகம் -சமஸ்க்ருதம் இடைக்கு –
வஞ்சுளவல்லித் தாயார் வர்ணனை -பொன்னியல் மாடம் –வஞ்சிக்கொடி போல் நின்றது –
அன்னமாய் -மானாய் -அணி மயிலாய் -இடையாய் -இள வேய் இரண்டாய் இணை செப்பாய் -கெண்டை
சம்ச்லேஷம் அகத்துறை மார்கழி மாசம் விசிறியும் -கண்ணாடி -சேர்ந்த அழகை கண்டு மகிழ
எம்மை நீராட்டு -வேங்கடவற்கு என்னை விதி –
ஸ்ரீ நிவாஸன் -பத்மாவதி -தாயாரை திருக்கல்யாணம் பண்ணிய வைத்து அருளினை திரு அன்றோ
12 வருஷம் தபஸ் இருந்தானே -திருமணம் ஆனதும் தான் வருவேன் –தாயார் பஞ்சமி கார்த்திகை சுக்ல பஷம்
நாம் கடவா வண்ணம் -பிராட்டி மூலம் உன்னை அடையும் நெறியில் நின்றும் வழுவாமல் இருக்க அருள வேண்டும் –
கொல்லை அரைக்கி கொல்லை வழியே போகப் பார்த்தாள் –

தேவதாந்த்ர போஜனம் தவிர்க்கும் ஆச்சார்யர் –
ஞானம் அனுஷ்டானம் -செப்பென்ன மென் முலை –
உக்கம் -த்வயம் -கற்பூரமும் கண்ட சக்கரையும் -போல் -சம்சார வெப்பம் ஆற்றும்
தட்டு ஒளி -அஷ்டாக்ஷரம் -ஸ்வரூபம் காட்டும்

———-

ஆசிஷ்டன் -தந்தை நீண்ட காலம் இருக்கும் பையன் நித்யம் வணங்கி மனசார ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டவன்
கணவர் பெயரை மனைவியும் மனைவியின் பெயரை கணவனும் சொல்லக் கூடாதாம் –
ஆர்ய புத்திரர் -தீர்க்க ஆயுசு உள்ள அவரது புத்திரர் -ஆற்றப் படைத்தான் மகனே
நப்பின்னைப் பிராட்டி -இவர்கள் கோஷ்ட்டியில் வந்து சொல்லிக் கொடுத்து -கீழே அழைத்தமை மாற்றி இனி மேல்
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
பசுக்கள்
பெரும் பசுக்கள்
வள்ளல் பெரும் பசுக்கள்
சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்-இப்படிக் கட்டு அமைப்பு –
சக்கரவர்த்தி திருமகன் என்றே சம்பிரதாய வார்த்தை போல் –
பிள்ளை -தென்னம்பிள்ளை -கீரிப்பிள்ளை
மகன் -அடங்கி உள்ளவன் -வாசி உண்டே
கீழே இவன் எத்தனை பெண்கள் பாக்கி கணக்கு பார்க்க -அறிவுறாய்
ஆற்றப் படைத்தான் மகனே -பொதுப்படை -இல்லாமல் -ப்ரத்யமேக இவனது குணங்கள் மேல்
ஊற்றமுடையாய் பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
நல்லவன் ரக்ஷிக்கப் பட வேண்டியவன் -right result wrong formala-
சாந்தோக்யம் –வார்த்தை -வாக்கு பேச்சு ஆற்றல் -மனம் உயர்ந்தது -சங்கல்பம் உறுதிப்பாடு –
சித்தம் -சமயோஜித புத்தி -timely intelligence -த்யானம் -விஞ்ஞானம் புரிந்து கொண்ட அறிவு –
பலம் உடல் வலிமை இவற்றை விட உயர்ந்தது -அறிவை சம்பாதிக்க -சுவர் சித்திரம் -உணவு -நீர் -தேஜஸ் –
ஆகாசம் -நினைவாற்றல் -ஆர்வம் -பிராணன் ஜீவாத்மா இங்கு -பூமா -பஹு மா -மிகப்பெரியவன் –
யாத்ர நாந்யத்ர பஸ்யதி -ஒன்றைக் காணும் பொழுது வேறே ஒன்றைக் காணாவே-ஸர்வஸ்ய ஸூகம் –
அவனை அறிய உலகமே ஆனந்தமயமாகும் -ராஜகுமாரன் -கதை –
பெரியாய் ஒரே வார்த்தையில் இவைற்றைக் காட்டி –
பொடி தலை மூலிகை -மொட்டைத்தலை -நசுக்கிக் கட்ட எழுதவில்லையே -self medication
பிறவிப்பணிக்கு மருந்து கேட்ப்பார் பாற் கடலில் கிடைக்க வில்லையே -ஆகவே அவதாரம்

மா முனிகள் வைபவம் -இதில் -சிஷ்யர்கள் ஞானம் பொங்கும் படி -விசத வாக் சிகாமணி -மகனே மஹானே -ஈட்டு பெருக்கர் –
———-
ஸஹ அஹம் -சோகம் -சொல்லு நிம்மதி -கிட்டாது –
தாஸோஹம் -ஸதா ஸோஹம் –தாஸ தாஸ அஹம் -அபிமான பங்கமாய் -அம் ஜலதி -அஞ்சலி -total unconditional surrender
பிறந்த அகத்துக்கும் ஆகாதபடி வந்தோம் -நாயனார் -விபீஷணன் போல் –
அரசர் கோமான் மன்னன் சொல்லாமல் – -அ ரசர் பக்தி ரசம் இல்லாதவர் –
அஸ்வபதி -கைகேயி அப்பா –
பாதுகாப்பு பாதுகைக்கு பூ சாத்தி ஆராதிப்பதே -அடியில் புக -தான் அடியானாகி -பாதுகை -சிம்ஹாசனத்தில் -திரு அபிஷேகம் சஸ்பெண்ட் -14-வருஷம் –
விதேயாத்மா -விழியாவோ -கட்டளை -பொம்மனாட்டி -பொம்மை போல் ஆட்டி வைப்பாள்
எம் மேல் விழியாவோ
சிறுச் சிறிதே எம் மேல் விழியாவோ -தாமரைப் பூ போல்
கிண் கிணி வாய்ச் செய்த போல் -ஐந்து லக்ஷம் பெண்களை கண்டு அனுபவிக்க சாத்திமிக்க உனக்கு -என்றுமாம்
hard on dirt soft on cloth -திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்
கல்யாணம் நுகத்தடி பெண்ணின் தலையில் வைத்து மந்த்ரம் -அபாலா சஹி பதே பெண் இந்திரன் ரக்ஷித்து –
சூர்யன் போல் அனுக்ரஹம் – மற்றவர்களுக்கு கணவனுக்கு சந்திரன்
முதலை சக்கரம் -கஜேந்திரன் கை -சிவன் வியர்வை -மதுகைடபர் -தொடை -எங்களுக்கு திருக்கண் –
கல்யாணம் –11 பொருத்தம் -ஆபஸ்தம்பர் ஸூ த்த்ரம்
கண்ணோடு கண் பார்த்து -பொருந்துவதை பெரியோர்கள் பார்த்து -நுட்பம் –
என் கண் மேல் -எங்கள் -ஐந்து லக்ஷம் பெண்களை நோக்கு –
சேஷ ஹோமம் -யஜுர் வேதம் –காலையில் கண்ணுடன் கண் பார்த்து -அபஸ்யந்தாம் -மந்த்ரம் -குடும்ப உறவு சிறக்கும்

சரீரமே அம் கண் மா ஞாலம் -அண்டத்தில் உள்ளவை பிண்டத்தில் உண்டே -பஞ்ச பூதங்கள் -தன மாத்திரைகள் –
ஞான கர்மா இந்திரியங்கள் -மனாஸ் -அஹங்காரம் மஹான் மூலப்பிரக்ருதி -24-தத்துவங்களும் a-x
ஜீவ பர தத்துவங்களும் உள்ளே உண்டே -26-y-why 24 படிக்கட்டு -நாம் -25-z தேவப்பெருமாள் -26
அரசர் ஜீவன் -ஆச்சார்யர் இடம் அபிமான பங்கமாய் -அவரே கதி -சாத்மிக்க உபதேசம் -பிள்ளைக்கு இறை தேடும்
ஆச்சார்யர் ஒரு கண்ணுக்கு -1000-8-3- சமம் இல்லையே -ஞானக் கண் -அகக் கண் -இரண்டாலும் கடாக்ஷித்து
——-
உறுதியோடு கிடத்தல் -சாதாரணமாக படுக்கை -கிடந்த பெருமாள் -கிடந்ததோர் கிடக்கை -சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் –
கிடந்த நம்பி குடந்தை மேவி -கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு -என்றார் கோலம் திகழக் கிடக்கிறான்
கர்ஜனை -முழங்கும் -ஈரத்தமிழ்
பாதுகா தேவி பெண் ஸிம்ஹம் -ஆண் சிம்மம் -பெருமாள் -ராகவ ஸிம்ஹம் -ஒன்பது செயல்கள் இதில் -நவ நரஸிம்ஹர்
கராவலம்ப ஸ்தோத்ரம் -ராஜ ஹம்சம்–16- திருக்கரங்களுடன் சேவை -சங்கரருக்கு -மண்டல மிஸ்ரர் உபய பாரதி -சரஸ்வதி அம்சம்
அழகிய சிம்கர் -அழகியான தானே அரி உருவம் தானே –
காயம் பூ வாசனை உள்ள டிசெம்பர் பூ
கோபத்துக்குள்ளும் கருணை -ஆழ் துயர் -ஹிம்ஸை பண்ணுபவன் -அசுரர் பாப அனுபவை பல நரக அனுபவம் –
ஒரே நொடியில் -reverse -ஸிம்ஹம் -இவரைப் போல் உள்ள காட்டு ராஜாவுக்கு ஸிம்ஹம் பெயர் வந்ததாம் –
யாம் வந்த கார்யம் -உள்ளூவார் உள்ளத்து உடன் இருந்து அறிவாயே -எங்களுக்கு எது நல்ல புருஷார்த்தம் நீயே அறிவாய்-
நாரதர் பர்வதர் கரடி குரங்கு முகம் -அம்பரீஷர் புத்ரி ஸ்ரீ மதி -கதை -தன் வினை தன்னைச் சுடும் -தானே திரு மணம் –
எது நன்மையோ நீயே ஆராய்ந்து அருள் இவள் பிரார்த்தித்த படி

ராமானுஜ வலி மிக்க சீயம்
மழையில் நனைந்தவர் முக்தி வழங்கும் முகில் வண்ணர் -அருள் மழை -தென் அத்தியூரர் கழல் இணைக்கீழ்
வேதம் -மலை குகை -உபநிஷத் -சாரம் வழங்கி -சீரிய சிங்கம் -மலைகள் தாண்டிய புழு -சிங்கம் கால் பற்றி –
சம்சாரம் தாண்ட -ராமானுஜர் தாசர் ஆவோம் –
தத் த்வம் அஸி -சர்வாத்மாவாக உள்ள ப்ரஹ்மம் தானே உனது ஆத்மாக்குள் உள்ள ப்ரஹ்மம்
வேரி -வேத அருளிச் செயல் வாசனை
எப்பாடும் -திவ்ய தேச தீர்த்த யாத்திரை
ஸந்த்யாகாலம் –120 திரு நக்ஷத்ரம் வருந்து எழுந்து இருந்து ஜலாஞ்சலி அனுஷ்டானம் -மூரி எழுந்து சோம்பலை வென்று –
அண்ணா -கோதாக்ரஜர் -பேத அபேத கடக ஸ்ருதி -சீரிய ஸிம்ஹாஸனம் -பத்ர வேதி த்ரி வேதி –
யாம் -ஆழ்வார்களைச் சேர்த்து -தமிழ் மறைக்கு -வளர்த்த தாய் -வியாக்கியானங்கள்
பட்ட நாத பரகால முக தாமரைகள் விகாசிக்கப் பண்ணினவர்
———–

ஆழ்வார் -ஆழ போகிறார்கள் -ஆண்டாள் -ஆண்டு விட்டாள் -அடி தோறும் போற்று -அடி தோறும் தாய் -திருப்பாவையில் திருப்பல்லாண்டு
super உபரி இந்திரன் -உப இந்திரன் -எளிமை ஏற்றுக் கொண்ட குணம் –
வேல் நெடும் கண்ணி சைக்கிள் பார்வதி வேலைக் கொடுத்து வாங்கி சூதபத்மம் வதம் செய்ய -திருமலை தவம் இருந்து பெற்ற வேல் –
வேளாங்கண்ணி அவர்கள்
திருமாலிருஞ்சோலை அழகர் இடம் கொடுக்க பக்தர்
பிள்ளை ஞான சம்பந்தர் முருகன் அம்சம் -திருமங்கை ஆழ்வார் இடம் –
சீர்காழி சிறப்பை சித்தரித்து ஒரு குறள் பாடும் ஒரு குறள் பாடும்
திருக்குறள் பேசும் குறள் -வாமனன்
மடியிலா மன்னவன் அரசு அடி அளந்தான் தாயது எல்லாம்
சோம்பல் இல்லா மன்னவன் அடி அளந்தான் உலகு எல்லாம் அடைவான் –
இரங்கு -அன்று மங்களா சாசனம் பண்ணாததுக்கும் எழுப்பியத்துக்கும் மெல்லடியால் நடக்கச் சொன்னதுக்கும்

சின்ன உபதேசத்தால் மிக பெரிய விஷயம் -இரண்டு முட்டாள் -கதை –
இலங்கை எரித்த திருவடி போல் ஆச்சார்யர் -விவேக ராஜன் -சங்கல்ப சூரியோதயம் –
அசோகவனம் உடல் -ஞான இந்திரியங்கள் கர்ம இந்திரியங்கள் மனஸ் -ராவணன் –
விபீஷணன் சத்வம் -கும்பகர்ணன் தமோ குணம் -சூர்ப்பணகை ரஜஸ்
சம்சார சுழற்சி சகடம் பொன்றுவிப்பார்
கள்ள வாதிகளைக் கொண்டே கள்ள வாதிகள் நிரஸனம் -குணங்களையே குன்றாக அடைக்கலம் தரும் ஆச்சார்யர்
வேல் -சங்கு சக்ர லாஞ்சனை பண்ணி
சேவகம் -கைங்கர்யம்
இன்றி யாம் -கைம்முதல் இல்லாமல் -வந்தோம் –

———-

தந்தை சொல் மிக்க மந்த்ரம் இல்லை -தாய் சொல்லைத் தட்டாதே –
இவள் சொல்லால் அவன் வார்த்தையும் மீறலாம் ஆபஸ்தம்ப சாஸ்த்ர ஓட்டை வைத்து போவது தவிரேன்
பெருமாள் கௌசல்யை இடம்
அவன் நம்மைத் தன்னைப் போல் ஆக்கவே அவன் நம்மைப் போல் பிறந்து –
ஒருத்தி -மாமியார் பெயர் சொல்லக் கூடாதே -கம்சனுக்கு தெரியக் கூடாதே –
பிரசித்தம் ஒருத்தி மயங்கி -அம்பு எய்தவன் உணர்வான் -பாக்யவதி-பெயர் சொல்லக் கூடாதே -unique -ஆயிரத்தில் ஒருவன் –
பால க -பேரன் மாட்டுப்பெண் உடன் பிறக்கும் பொழுது -அத்புதம் பாலகம் –
யாதவாப்யுதம் இரவுக்கு 60 ஸ்லோகம் –
அந்த ஒன்றைத் தெரியுமா -உத்தாலகர் -ஸ்வேத கேது -ஏகம் ஏவ அத்வதீயம் ஸத்வித்யா பிரகரணம் –
ஒருத்தி -அநேக அர்த்த புஷ்டாம் ஒருத்தியாலே பாட முடியும் -அதே வார்த்தையால் பாட தொடங்கினேன் –
ஓ குறில் சமஸ்க்ருதம் இல்லை -மஹா லஷ்மி ஒருத்தி என்று கை கூப்பவே முடியும் -பாட முடியாதே –
ஆசு கவி -ஆண்டாள் தமிழை ஆண்டாள்
ஆயர்களுக்காகவே அவதாரம் -அவதார ரஹஸ்யம் -கும்பகர்ணன் தானே விழுந்தான் கீழே பார்த்தோம்
பூதனை பால் குடித்த கம்சன் -தீங்கு -கொல்ல நினைத்தான் சொல்ல மாட்டாளே
தான் தீங்கு -தனக்குத் தானே தீங்கு நினைத்தான் -அவதார ரஹஸ்யம் இங்கும்
நெருப்பு -கம்சன் பாபங்களும் தீயினில் தூசானதே -வைச்வானர அக்னி -ஜாடராக்னி- ஜெரிக்க வைக்கும் –
நாராயணனாலும் கொல்ல முடியாமல் பரமசிவன் வரம் பார்வதி சாபம் இடுப்புக்கு கீழே பலம் இல்லாமல் பிறந்தவன் துரியோதனன் –
பலராமன் சொல்லிக் கொடுத்தான் – மைத்ரேயர் சாபம் -கதை பீமன் கையில் இருந்து நழுவி இவனை முடிக்கும் படி
கதா யுதம்-இடுப்பு கீழே அடிக்க கூடாதே –
மெய்யானாகும் விரும்பி தொழுவார்க்கு -உன்னையே தான் வேண்டி –
பொய்யனாகும் புறம்பே தொழுவார்க்கு தன்னைத் தராமல் அபேக்ஷித்த அத்தைத் தருவான்
திருவுக்கும் திருவாகிய செல்வனே- திருத்தக்க செல்வமே உன்னைப் பாடுவோம்
மகிழ்ந்து நாங்கள் பாட உனக்கு வருத்தமும் தீருமே –

திருமந்திரத்தில் பிறந்து –த்வயத்தில் வளர்ந்து -பக்குவம் பிறந்து -சம்சாரமே இரவு -ஆச்சார்யர்கள் -ஒளித்து பணிவுடன்
கலியே -கம்சன் -கலிபுருஷன்- திருத்தக்க -புருஷகாரம் -சேவகம் -கைங்கர்ய விசேஷங்கள்
தஹர வித்யை அஷ்ட குண ஸாம்யம் -அபஹத பாப்மா -முதல் ஆறு வருத்தமும் தீர்ந்து -ஸத்யகாம ஸத்யஸங்கல்ப -மகிழ்ந்து –
————–
ஐ ஐந்தும் –கீழே பரத்வம் -இனி ஐந்து -எளிமை -அறியாதவாரை வையம் சுமப்பது வம்பு -ஆச்சர்யம்
என்னில் முன்னம் பாரித்து என்னை முற்ற பருகினான்
சேனா நாவிதர் -பாண்டு ரெங்கன் கதை -பித்தனைப் பெற்றும் அந்தப் பிறவியுள் பிணங்குமாறு
கிண்டிக்கு தீர்த்த சேஷம் வராது -வரவு அதிகம் செலவு அதிகம் காட்டும் அமைப்பு -சந்தியாவந்தனம் அதிலே தான் பண்ணுவார்களாம் –
வைகானச பாஞ்சராத்ர பெருமாள் சேர்ந்து எழுந்து அருள மாட்டார்களாம்
திரு நகரி கலியன் வைகானச ஆகமம் -மற்ற 11 பெருமாள் பாஞ்சராத்ரம்
நவ திருப்பதி ஆழ்வார் திரு நகரி-ஸ்ரீ வைகுண்டம் தென் திருப்பேரை மூவரும் பாஞ்ச ராத்ரம் -வைகானஸம் மற்றவர் –
இங்கும் மேலையார் செய்வனகள் இருப்பதால் பண்ணுகிறோம்
பாஞ்ச ஜன்யமே -இது ஒன்றே என்று இல்லை -போல்வன என்பதுக்கு அடை மொழி -500000 பெண்களுக்கும் வேண்டுமே -ஆகவே பல
ருக்மீ உடன் பிறந்த இந்திரியங்கள் தீவாய் வல் வினையார் –
பல்லாண்டு இசைப்பாரே -அரையர் வேண்டும்-all in இலையாய்-ஆதி சேக்ஷனில் சயனம் -எதில் சயனித்தாலும் ஆதி சேஷன்
உட்கார்ந்தால் கருடன் -விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பார் -மாலைகள் எல்லாம் துளஸீ அம்சம் -பத்மாவதி தாயாரும் மஹா லஷ்மீ அம்சம் போல்
வெள்ளை விளி சங்கு ஆநிரை அழைக்க உபயோகித்த சங்கு
பறை -ஜாம்பவதி -பெரும் பறை முதலிகள் ராவண வத அநந்தரம் -சாலை பெரும் பறை தானே குடக்கூத்தில் ஆடிய பறை
பீதாம்பரம் விதானம்
மலைமேல் உள்ள தங்கக்கட்டி தரைமேல் உள்ள கூழாங்கல் இல்லாமல்-பரத்வம் ஸுலப்யம் இரண்டும் உள்ள இடத்திலே சரணாகதி பலிக்கும்
மாம் அஹம் -மாலே ஆலின் இலையாய்

மயிலே பெருகும் ராமானுஜன் -நாயகர் மணி வண்ணன் -மார்க்க ஸீர்ஷம் -ஆச்சார்ய அபிமானம் -மார்கழி நீராடுவான் -சங்கு ஸத்வ குணம்
பறை குரு பரம்பரை தனியன் -chain – பல்லாண்டு ப்ரேமம் பக்தி ஞானம் விளக்கு-கைங்கர்யம் செய்யும் பாக்யம் –
கொடி ஸ்ரீ வைகுண்ட பிராப்தி அருள பிரார்த்தனை
ஆலின் நிலையாய் -தங்கும் வ்ருஷம் -எம்பார் -அனைவரும் விஸ்ரமி தலி -பட்டர் தனியன் -இளைப்பாற –
———-
நோன்பு முடிந்ததே -உன்னைக்காண்பதே எங்களுக்கு -நீராட்டம் குணத்தில் தானே –
குளத்தில் நீராட்டம் ஊராருக்கு தானே -சம்பாவனை பெற்று மகிழ வேண்டுவது தானே
எழு நூறு -எழுந்து சண்டை போடு -நம்மைப் பார்த்து -தீய சக்திகளை வெல்லவே ஸ்ரீ கீதா -நம்மை பார்த்த சாரதி
நோற்க வேண்டாத நோன்புக்கு உபகரணங்கள் கீழே -ஊராருக்காகவே
சம்பாவனை கொடுக்காமல் உன்னால் இருக்க முடியாதே
நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் முன் நண்ணாரை வெல்லும் விருத்த விபூதியன் –
கூடாரை வீழ்த்துமவன் அல்ல -வெல்லுபவன் -கல்யாணத்துக்குப் பின் பேச்சு இலர் bachelor-
big unexpected nosecut-bun
நீயே சூடகம் –கன்றுக்குட்டி கோபர் போலே ஆனாயே -ஆகவே -ஏவகாரம்–
நெய் இடை நல்லதோர் சோறும் -இடைக்கு இடை நெய்
ஹரி காலையில் எழுந்த உடன் – மாதவா இரவில் தூங்கும் பொழுது -கோவிந்தா உண்ணும் பொழுது

பவ நக்ஷத்ரம் -திருவாதிரை -பவம் சம்சாரம் அளிக்க -பவ -சிவன்
மது மாசம் சித்திரை மது சூதனன் -சேராதவை சேர்க்கும் ராமானுஜர்
வராத சிஷ்யர்களை திருத்தும் ஆச்சார்யர் -நம்பிள்ளை இடம் கால ஷேபம் கேட்க நமஸ்காரம் பண்ணி சொல்லி –
ஆச்சார்யர் புகழை உலகம் அறிய –பட்டர் பிரான் கோதை -வில்லி புத்தூர் கோன் சொல்
எம்பாரை புகழ -தகுமே -பஞ்ச சம்ஸ்காரம் -சம்பாவனை சூடகம் இத்யாதி
சூடகம் -திரு வாராதனம் செய்யும் முறை கற்றுக் கொடுத்து
கைக்கு ஆபரணம் -தோள் வளையே -சங்கு சக்ர லாஞ்சனம் தோடே -மந்த்ர உபதேசம் —
செவிப்பூ தாஸ்ய நாமம் -பாடகம் -துவாதச திருமண் காப்பு –
ஆடை படுப்போம் -சேஷத்வ ஞானமே ஆடை –
பால் சோறு -பகவானே – நெய்-ஸாமவேதம் -திருவாய் மொழி -கொண்டு அனுபவம் –

————-

ஹனுமத் ஜெயந்தி மார்கழி மூலம்
கறவைகள் -சொரிகின்றனர் சொல் அமுதம் -நவ வியாகரண பண்டிதர் -ஸூர்யன் இடம் -கற்றவர் -பின் சென்றவர் –
கானம் -பேச்சே பாட்டு -மதுரா மதுரா -ந ரிக்வேத -சாம வேதமும் கற்றவர் –
வைதேஹி சகிதம் -வீர ஆசனம் -புஷ்பக -அழகாக -ப்ரபஞ்சந ஸூ தன் -கானம் சேர்ந்து அனுபவம்
குரங்கு குலம் –
ஒப்பற்ற -மூன்று வேத பாண்டியர் -நான்முகன் அருள் -பஞ்ச -ஞானாதி குணங்கள் ஷட் -ஏழு குதிரை -பத்து தலை ராவணன் எதிரி
குறை ஒன்றும் இல்லா -காசி ராஜன் -ராமன் யாகம் -சென்று விசுவாமித்திரர் நமஸ்காரம் பண்ணாமல் –
தலையை காலில் போட ராமருக்கு -மஹதி வீணை மேல் ஏற்று அஞ்சனா தேவி இடம் விட -திருவடிக்கு தாய்
சரயு -கூட்டி நாம சங்கீர்த்தனம் -பானம் உடைய -ரிஷிகள் பயப்பட
வசிஷ்டர் -தலையைப் போடுவதுக்காக நமஸ்காரம் பண்ண -ராம நாம மகிமைக்கு இந்த லீலை –
குறை ஒன்றும் இல்லா கோவிந்தா
கோ நல்ல வாக்கு -சொல்லின் செல்வன் வாக்மீ ஸ்ரீ மான்
ஒழிக்க ஒழியாத -பாவோ நான்யத்ர கச்சதி –
பறை தரும் ஆச்சார்யர் இவரே

கோ ரஜஸ் ஸ்நானம் ஸ்ரேஷ்டம்
கறவைகள் -ஆடு எருமை பசு
ஆடு கால் பட்ட ரஜஸ் தீட்டு -குளிக்க வேண்டுமே
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா -குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -வெறும் கோவிந்தா -என்று
அவனது எளிமை குணத்தை சரமாவதியாக பேசி சம்ஸ்லேஷம்
சின் முத்ரை – ஆள் காட்டி விரல் தாழ்ந்தே கட்டை விரலுடன் ஸம்ச்லேஷம்
அனுகூல சங்கல்பாதி கள் -ஐந்து அங்கங்கள் -ஐயங்கார் -இப்பாசுரம் ஐந்தும் உண்டே
இறை அருகில் வா -ஆச்சார்யர் பரம்

———

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -ஸூர்ய நமஸ்காரம் பண்ண வந்தோம்
ஸவிது தேவஸ்ய பர்ஹ -முடிச்சோதியாய் -வரேண்யம் -ஆசைப்படும் படி
தீமஹி -போற்றுவோம் -அது நல்ல வழியில் செலுத்தும்
கேளீரோ இரண்டாம் இங்கு கேளாய் -அத்யாபயந்தீ -ஆச்சார்யர் ஸ்தானம் -இருந்து –
ஆகவே சூடிக் கலைந்த மாலை சூடி மகிழ்கிறான்
கோ தா இரண்டில் அவனைப் பூட்டி வைத்து-கோவிந்தா – கைங்கர்ய பிரார்த்தனை
நீ எழும் பிறவிகள் தோறும் -பிராட்டி மூலம் -கருணையால் பல உண்டே -அவனுக்கு –
நமது கர்மம் தொலைய பிறவிகள் முடியுமே – உடமைக்கு ஒரு முழுக்கு உடையவனுக்கு ஒன்பது முழுக்கு
நம்மை மீட்க அவன் இச்சா மீனா -இத்யாதி பஹுதா விஜாயதே
பிறப்பில் பல் பிறவிப் பெருமான்
பிறவி -பல சரீரங்கள் -ஏகதா பவதி ஸஹஸ்ராணி –இத்யாதி-பல வடிவங்கள் என்றுமாம்
பல வடிவுடன் கும்பேஸ்வரர் ருத்ரன் பல வடிவுடன் சுற்றி ஆராவமுதனை ஸேவிக்குமா போல் –
உனக்கே -உன் மகிழ்ச்சிக்காகவே -கைங்கர்யத்தில் களை அறுக்க வேண்டுமே –
மற்றை எம் காமங்கள் இல்லை நம் காமங்கள் -அவனையும் சேர்த்து
எங்க வீடு நம்ம வீடு அஸ்மாத் -our -ஒரே வார்த்தை அங்கு
அஷ்டாக்ஷரம் இதில் -உன் தன்னோடு உற்றோமே ஆவோம் ஓம் மற்றை நம் காமங்கள் மாற்று -நமஸ் —
உனக்கே நாம் ஆட் செய்வோம் -நாராயணாயா

ஆச்சார்ய ஸமாச்ரயணம் -உடனே -ஸத்வ குணம் உள்ள நிலையிலே -பஞ்ச ஸம்ஸ்காரத்துக்கு நாள் பார்க்க வேண்டாமே
மதுராந்தகத்திலே பெரிய நம்பி செய்து அருளினார் -சம்பிரதாய -ஏரி காத்த ராமர் -கருணாகர -கருணையின் சுரங்கம் –
விராலி மலையில் ஆச்சார்யரை சேவித்து -விராலிமலை மதுராந்தகமே –
உன் அடியே -வடுக நம்பி நிஷ்டையே
குற்றேவல்-ஆச்சார்ய கைங்கர்யமே வேண்டுவது -பறை -பகவத் கைங்கர்யம் வேண்டாம் -அனந்தாழ்வான்
அரங்கனுக்கு தன் சரண் தந்திலன் தான் அது தந்து -கஷ்டப்பட்டால் அவன் மோக்ஷம் -இஷ்டப்பட்டாலே இவர் மோக்ஷம்
ஆச்சார்யர் முன்னால் கூரத்தாழ்வான் -அங்கும் உனக்கே நாம் ஆட் செய்ய வேண்டும் –

————–

மா -லஷ்மி உடன் தொடங்கி -மாயனை மாரி மாலே -நான்கு பாசுரங்கள் -லஷ்மீ கல்யாண வை போகம் பல ஸ்ருதி பாசுரம்
நித்ய ஸூரிகள் பாற் கடல் மத்யம் சயனிக்கும் பெருமாளை சேவிக்க கப்பலில் -வந்து -வைகுந்தம் என்னும் தோனி பெறாமல் –

வங்கம் தரங்கம் அலைகள் –
குழல் புல்லாங்குழல் கூந்தல் -விசேஷணங்கள் -துளையார் –கரு மென் குழல் -துளை உள்ள -வேங்கை புலி மரம் -பாவா வேங்கை பூவா வேங்கை

அக்கரைக்கு அக்கரையாக சேர்க்கும் விஷ்ணு போதம் -அஷ்ட லஷ்மி திருக்கோயில் -திகழும் மாதவன் -bay of bengal
கேசவன் பிள்ளை பேரன் உடன் -ஜாம்பவதி உடன் பிள்ளை வரம் -சாம்பன் பிள்ளைக்கு சிவன் பெயர் சூட்டி –
திங்கள் திரு -சந்திரன் ஒளி தாமரையின் பரிமளம் -சேராச் சேர்க்கை -வண்டுகள் கண்கள் மூக்கு -செண்பக பூ -கதிர் மதியம் போல் ஆக்கி –
ஆங்கு அப்பறை கோபிகளுக்கு பறை நாட்டுக்கு மழை -ஸ்ரீ வைகுண்டம் -ஆய்ப்பாடி ஆச்சார்யர் திருவடி
மறை நான்கும் முன்பு ஓதின பட்டன் -அவனுக்கும் பிரான்
கோ வாக்கு மங்களம் பூமியில் உதித்த – பூ போலே பெண் இருக்கு –
மந்த்ராஸனம் -மாரி -/ ஸ்நாநாசனம் -நீராடுவான் / அலங்காராசனம் -சூடகமே -ஆடை உடுப்போம் /
போஜ்யாசனம் கூடாரை கறவை உண்போம் -புனர் மந்த்ராஸனம் -எற்றைக்கும் பிரார்த்தனை /
பர்யங்காசனம் -மாதவனை கேசவனை /
மால் பெரிய வரை மலை

———–

உடல்-உயிர் உறவு – ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ – புறநானூறு)!
உன் தன்னோடு (அவன்) = அ
உறவேல் = உ
நமக்கு (நாம்) = ம்

(ஸப்த படி)
நீ (வாழ்க்கையில்) ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும், விஷ்ணு உன் பின்னாலேயே இருந்து, உன்னை (என்னையும்) காக்கட்டும்!
– விஷ்ணு உனக்கு, உன் குடும்பத்திற்கு வற்றாத உணவு அளிக்கட்டும்!
– விஷ்ணு உனக்கு, வியாதியற்ற உடம்பையும், சக்தியையும் அளிக்கட்டும்!
– விஷ்ணு உனக்கு, விரதங்களைக் கடைப்பிடிக்க மனமும், சக்தியும், அளிக்கட்டும் (தர்மபத்னியாக இரு!)
– விஷ்ணு உனக்கு, ‘மண வாழ்வு’ இனிமையாக இருக்கட்டும்!
– விஷ்ணு உனக்கு, வற்றாத செல்வம் (பசு, குதிரை, யானை, நிலம், ஆபரணம்) அளிக்கட்டும்!
– விஷ்ணு உனக்கு, எல்லாக் காலங்களிலும் கணவனிடம் இருந்து பிரியா வரம் அளிக்கட்டும்!
– விஷ்ணு உனக்கு, என்னுடன் சேர்ந்து நல்ல குழந்தைகளை அளிக்கட்டும்!

ஏல் -கேட்டு ஓர் அனுசந்தித்து -எம்பாவாய் -விக்ரக சேவை அர்ச்சாவதாரமே பூர்ணம்
சாஸ்திரம் கடைந்து -மா தபஸ்வீ ஆச்சார்யர்-புலன்கள் குதிரை அடக்கும் கேசவன் இவரே -ஞானம் பக்தி வைராக்யம் ஆத்மகுணங்கள் –

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ. உ. வே. திருக்குடந்தை வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .