ஸ்ரீ திருப்பாவை–கீழ்வானம் வெள்ளென்று- -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

எல்லோரும் திரண்டு வந்து அழைக்க வேண்டும்படி கண்ண பிரானுக்கு மிகவும் அந்தரங்க
வல்லபை யாயிருப்பா ளொருத்தியை உணர்த்தும் பாசுரம் இது.
இங்ஙனே இத்தனை ஆய்ப் பெண்டிரும் இவள் மாளிகை வாசலில் வந்து துவள்தவதற்கு அடி –
இவள் கண்ணபிரானுக்கு மிகவும் அந்தரங்க வல்லபையாயிருக்குமஃதேயாமென்பது
கோதுகலமுடை பாவாய் என்ற விளியாற்போதருமென்க.
கோதுகலம் – கௌதூஹலம் என்ற வடசொல் விகாரம்; ஆசை என்பது அதன் பொருள்;
கண்ணபிரானுடைய ஆசையைத் தன்னிடத்துப் பெற்றுள்ள என்றபடி.

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமல்காத்துஉன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பதவுரை

கோதுகலம் உடைய பாவாய்–கிருஷ்ணனாலே மிகவும் விரும்பத் தக்க பதுமை போன்றவளே!
கீழ் வானம்–கீழ் திசைப் பக்கத்து ஆகாசமானது
வெள்ளென்று–வெளுத்தது ;
(அன்றியும்)
எருமை-எருமைகளானவை
மேய்வான்–(பனிப் புல்) மேய்கைக்காக
சிறுவீடு–சிறு தோட்டங்களில்
பரந்தன–சென்று புக்கன
போவான் போகின்றார்-(திருவேங்கட யாத்திரை போலே) போகையையே பிரயோஜனமாகக் கொண்டு போகின்ற
மிக்குள்ள பிள்ளைகளும்–மற்றமுள்ள எல்லாப் பெண் பிள்ளைகளையும்
போகாமல் காத்து–போக ஒட்டாமல் தடுத்து
உன்னை கூவுவான்–உன்னை அழைத்தர் பொருட்டு
வந்து நின்றோம்–(உன் மாளிகை வாசலில் வந்திரா நின்றோம்)
எழுந்திராய்–(எங்களுடன் கூடுவதற்காக) எழுந்திரு;
பாடி-(கண்ண பிரானுடைய குணங்களைப்); பாடி
பறை கொண்டு–(அவனிடத்துப்) பறையைப் பெற்று,
மா வாய் பிளந்தானை–குதிரை யுருவமெடுத்து வந்த கேசி யென்னுமசுரனுடய வாயைக் கீண்டெறிந்தவனும்
மல்லரை மாட்டிய–மல்லர்களை மாளச் செய்தவனுமான
தேவாதி தேவனை–அத் தேவ தேவனை
நாம் சென்று சேவித்தால்–நாம் அணுகி அடி பணிந்தால் (அவன்,)
ஆராய்ந்து–(நமது குறைகளை) ஆராய்ந்து
ஆ ஆ என்று அருளும்–ஐயோ! என்று இரங்கி யருள்வன்;
ஏல் ஓர் எம் பாவாய் !

பாவாய்! கீழ்வானம் வெள்ளென்றதே; இனியாகிலும் எழுந்திராய் என்றழைக்க;
இதனைக் கேட்ட அவள், அதற்குள் இராக் காலம் கழிகையாவதென்? கீழ் வானம் வெளுக்கையாவதென்?
இஃது உங்களுடைய விபரீத ஞானம்;

அஞ்சுடாவெய்யோனணி நெடுந்தேர் தோன்றாதால் என்று
திங்கள் திருமுகத்துச் சேயிழை யாரான நீங்கள்
நெடும் போதாகக் கீழ்த் திசையை நோக்கிக் கொண்டிருக்கையாலே
உங்களுடைய முக நிலா கீழ்த்திசையிற் சென்று தட்டி உங்கள் முகத்திலே வந்து பிரதிபிம்பித்துத் தோன்றுகையாலே
கிழக்கு வெறுத்தது போலத் தோற்றுகிறது;
இஃது உங்களுடைய அந்யதாஜ்ஞானம்;
வேறு அடையாளமுண்டாகிற் சொல்லுங்கள் என்ன;
எருமைகள் பனிப் புல் மேய்கைக்காகச் சென்று பரந்தமை ஏற்ற அடையாளமன்றோ? என்கிறார்கள்.

சிலர், எருமை சிறை வீடு எனப் பாடங்கொண்டு, எருமைகள் சிறையினின்றும் (தொழுவத்தினின்றும்)
விடுக்கப்பட்டு என்றுரைத்தனர் அது பொருத்தமற்றதென மறுக்க.
சிறுவீடு மேய்கையாவது ஊர்ப் பசுக்களுடனே சென்று வெளி வயல்களில் மேய்வதற்கு முன்னே
அவரவர்கள் சொந்தமாக அமைத்த நல்ல பசும்புல் நிறைந்த சிறு தோட்டங்களில் மேய்கை.
நன்றாகப் பால் தருவதற்காக இப்படி சிறு வீடு மேய விடுதல் ஆயர் வழக்கம்.

இங்ஙனே ஒரு அடையாளங் கூறக்கேட்ட அவள், உங்களது முகவொளியினால் சிதறிப்போகிற இருள்களின் திரள்
எருமைகளாக உங்கட்குத் தோற்றுகின்றனவேயன்றி, அவை மெய்யே எருமைகளல்ல;
இஃது உங்களுடைய விபரிதஞானம் என்ன;

அதுகேட்ட இவர்கள், எங்கள் ஞானம் விரிதமாகில் ஆகிறது;
பொழுது விடிய வில்லையென்கைக்கு அடையாள முண்டாகில் நீ சொல்லாய் பார்ப்போம் என்ன;
அதற்கு அவள், இத் திருவாய்ப்பாடியில் அஞ்சு லக்ஷங் குடிப்பெண்களுண்டு:
இப்போது இங்கு வந்துள்ள பெண்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டிரார்; மற்றவர்களும் உணர்ந்து வர வேண்டாவோ?
அவர்கள் உணர்ந்து எழுந்து வாராமை விடியாமைக்கு அடையாளமாகக் குறையில்லை என்ன;

அதுகேட்ட இவர்கள், இவ்வளவேயோ நீ உணர்ந்தது; உன்னை யொழிந்த பெண்டிரனைவரும் உணர்ந்தெழுந்து
புறப்பட்டுப் பாவைக் களத்தை நோக்கிச் செல்ல, உன்னைத் தவிர்த்துச் செல்லுதல் உரியதன்றென்று
அவர்களைப் போக வொட்டாமல் தடுத்து, உன்னை அழைப்பதற்காக உன் மாளிகை வாசற்கடையிலே
வந்து படுகாடு கிடவா நின்றோங்காண் என்கிறார்கள்.

உத்தேச்யமானதொரு ஸ்தலத்தைச் சென்று சேர்வதிற் காட்டிலும் அத்தலத்தை நோக்கிச் செல்லுகை தானே
அர்ச்சிராதி கதி போல் போகரூபமாயிசுக்குமென்பது தோற்றும்,
போவான் போகின்றாரை என்பதனாலென்ப.
போவான் — போவதற்கு; வான் விகுதி பெற்ற தெரிநிலை வினையெச்சம்.
(வான் என்பதில் ஆன் – வினையெச்சவிகுதி; வ் – எதிர்கால இடைநிலை என்பது ஒரு சாரார் கொள்கை.)
போவதற்குப் போகின்றார் என்றால், போகையே பிரயோஜநமெனப் புலப்படுமன்றே.
போகின்றாரை என்றவிடத்துவள்ள இரண்டனுருபு மிக்குள்ள பிள்ளைகளும் என்றவிடத்துப் பிரித்துக் கூட்டியுரைக்கப்பட்டது.

இங்ஙனே இத்தனை ஆய்ப்பெண்டிரும் இவள் மாளிகை வாசலில் வந்து துவள்தவதற்கு அடி –
இவள் கண்ண பிரானுக்கு மிகவும் அந்தரங்க வல்லபையாயிருக்குமஃதேயாமென்பது
கோதுகலமுடை பாவாய் என்ற விளியாற்போதருமென்க.
கோதுகலம் – கௌதூஹலம் என்ற வடசொல் விகாரம்; ஆசை என்பது அதன் பொருள்;
கண்ணபிரானுடைய ஆசையைத் தன்னிடத்துப் பெற்றுள்ள என்றபடி.

ஸர்வ சேஷியான எம்பெருமான் சேஷ பூதர் இருக்குமிடத்தே வந்து அருள் புரியக் கடமையுடையனாயிருந்து வைத்து,
அவன் அங்ஙன் செய்யாதொழியில்
நாம் நம் ஸ்வரூபத்தைக் குலைத்துக் கொண்டாகிலும் அவனிருக்கு மிடத்தேறச் சென்று சேவித்தால்,
அவன் ஆ! நாம் காரீயத்தை நாம் செய்யத்தவறினோமே; அன்ன நடைய வணங்குகளை ஆயாஸப்படுத்தினோமே!
என்றுதான் கழிவிரக்கமுற்று நம் காரீயத்தைச் செய்து தலைக் கட்டுவன்;
எல்லாருமாகத் திரண்டு போகாமல் எழுந்து வா என்றழைக்கின்றனர், பின்னடிகளால்.

(ஸ்வாபதேசம்) குலசேகரர்க்கு அடுத்த முந்தினவரான நம்மாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது.
கோதுகலமுடைய பாவாய்! என்ற விளி நம்மாழ்வாரை வற்புறுத்தும்.
கோதுகுலமுடைய என்று வழங்கிவரும் பாடம் பரம க்ருபையுடன் மறக்கத் தக்கது.
அப்பாடம் நெடுநாளாகவே நாடெங்கும் பரவியதனாலாய அநர்த்தம் பெரிதுமுண்டு.
ஸ்ரீ பரகாலஸ்வாமி வியாக்கியானம் செய்தருளுமிடத்து குலம் குலமாக வுனக்குப் பரிசர்யை பண்ணும்படி என்றுரைத்திட்டார்.
அது, கோதுகலமுடைய என்கிற (தவறுதலான) பாடத்தில் அபிநிவேசத்தினால் போலும்.
வஸ்துதஸ்து, வடமொழியில் கௌதூஹலம் என்ற சொல் தமிழில் கோதுகலமெனத் திரீந்தது.
இதில் குகரம் நுழைய ப்ரஸக்தியில்லை.
கோதுகலம் உடைக்குட்டனேயோ என்றார் பெரியாழ்வாரும்.)

கோதுகலமாவது ஆசை; ஆசையை யுடைய என்றது.-எம்பெருமானிடத்தில் ஆசையை யுடைய,
அல்லது எம்பெருமானுடைய ஆசையைத் தன்னிடத்திலே கொண்டுள்ள என்று இரு வகையாகவும் பொருள்படும்.

பட்டர் நம்மாழ்வாரைப் பற்றிப் பேசும்போது ரீஷிம் ஜுஷாமஹே க்ருஷ்ணத்ருஷ்ணா தத்வமிவோதிதம் என்று
க்ருஷ்ண குதூஹலமே நம்மாழ்வாராக வடிவெடுத்தது என்றார்.
க்ருஷ்ண த்ருஷ்ணா என்றதும் க்ருஷ்ணனிடத்தில் த்ருஷ்ணை, க்ருஷ்ணனுடைய த்ருஷ்ணை என இருவகையாகவும் விரியும்.
இதனால் தேறின பொருளை
கைம்மா துன்பொழித்தாயென்று கைதலை பூசலிட்டே, மெய்மால யொழிந்தேன் எம்பிரானுமென்மேலானே
என்ற பாசுரத்தினால் நம்மாழ்வார்; தாமே வெளியிட்டருளினர்.
ப்ரியோ ஹி ஜ்ஞாநிதோத்யர்த்தம் அஹம் ஸ ச மம ப்ரிய: என்றபடி.
நானும் எம்பெருமானிடத்துக் குதூகலங் கொண்டேன்,
அவனும் என்னிடத்துக் குதூஹலங் கொண்டான் என்றருளிச் செய்தவர் நம்மாழ்வார்.

பாவாய்! என்ற விளியும் இவர்க்குப் பொருந்தும்.
திருவாய் மொழியில் சூழ்வினை யாட்டியேன் பாவையே என்றும்
என்பாவை போயினித் தண்பழனத் திருக்கோளுர்க்கே என்றும்
பலவிடங்களில் தம்மைப் பாவையாகச் சொல்லிக்கொண்டவர் இவ்வாழ்வார்.

எழுந்திராய் என்ற சொல்லாற்றல் நன்கு நோக்கத்தக்கது;
உட்கார்ந்திருப்பவரையன்றோ எழுந்திரா யென்பது.
மற்றையாழ்வார்களெல்லாரும் அர்ச்சையில் நின்ற திருக் கோலமாகவேயுள்ளார்;
நம்மாழ்வாரொருவரே வீற்றிருந்த திருக்கோலம்.
புத்மாஸநோபவிஷ்டம் என்கிற பூர்வாசார்ய ச்லோக ரத்னமும் இங்கு அநுஸந்தேயம்.

(கீழ்வானம் வெள்ளென்று.) உதய காலத்தில் கிழக்கு வெளுக்கும்.
இங்கும் வகுளுபூஷண பாஸ்கரோதய மாதலாலும்,
அதுதானும் கலி யுகத்தின் உதயகாலத்திலாதலாலும் கிழக்கு வெறுத்ததாகச் சொல்லிற்று.

கீழ் வானமென்றபோதே மேல் வானம் நினைவுக்கு வரும்.
நித்தியவிபூதி மேல் வானமாகும். லீலாவிபூதியானது நம்மாழ்வாருடைய திருவாய்மொழி யவதாரத்தாலே
வையம் மன்னிவீற்றிருந்து விண்ணுமாள்வர் மண்ணூடே இத்யாதிப்படியே தானே பரமபதமாயிற்று.
ஆகவே கீழ்வானமான இவ்விபூதி வெள்ளென்றது.

(எருமை சிறுவீடு மேய்வான்) வீடு என்று மோக்ஷம்; சிறு வீடு என்று கைவல்ய மோக்ஷம்.
இந்த ஸங்கேதமிட்டருளினவர் நம்மாழ்வார்;
திருவாய்மொழியில் (4-1-10) குறுக மிகவுணர்வத்தொடு நோக்கி என்ற பாசுரத்தின் பொருள் கொண்டு இஃது அறியத்தக்கது.

எருமையென்பது தாமஸ ப்ரக்ருதிகளை.
நம்மாழ்வார் திருவவதாரம் செய்தருள்வதற்கு முன்னே பலரும் தாமஸ ப்ரக்ருதிகளாய் நல்வீடு செல்லாது
சிறுவீடு முதலியவற்றிற் சென்று பாழாயினர் என்பது இங்கு ஸுசிதம்.

(மிக்குள்ள பிள்ளைகளுமித்யாதி.) மற்றைப் பிள்ளைகளையும் போகவொட்டாமல் தடுத்து
இப்பிள்ளை வாசலில் வந்துதுவள்வதனால் இவருக்குண்டான விலக்ஷணமான ஏற்றம் தோற்றுவது போல,
மற்றை யாழ்வார்களிற் காட்டில் நம்மாழ்வார்க்குண்டான ப்ரபந்நஜந கூடல்தத்வமாகிற ஏற்றம் தோற்றுவிக்கப் பட்டது.

போவான் போகின்றாரை என்ற பிரயோகம் வெகு ஆச்சரியமானது.
போவதற்காகப் போகிறவர்கள் என்று சொல்லுவதுண்டோ? இல்லை. அப்படியிருக்க ஏன் சொல்லிற்று?
போவதுதானே ஸ்வயம் ப்ரயோஜனமென்று காட்டுவதற்காகவே சொல்லிற்று.
இத்தகைய பிரயோகம் முதன் முதலாக நம்மாழ்வார் திருவாக்கில் தான் வந்தது;
திருவிருத்தத்தில் போவான் வழிக்கொண்ட மேகங்களே! என்றார்.

(உன்னைக் கூவுவான் வந்துநின்றோம்.) கூவிக்கொள்ளும் காலமின்னங் குறுகாதோ
என்னைக் கூவியருளாய் கண்ணனே கூவிக்கொள்ளாய் வந்தந்தோ என்று
பலகாலும் விரும்பினபடியே கூவுவான் வந்து நின்றோமென்கிறாள்,

(மாவாய் பிளந்த தேவாதி தேவனை) இப்போது ஆண்டாள் நோற்பதுபோல
நம்மாழ்வாரும் ஒரு திருவாய் மொழியில் நோன்பு நோற்றார்;
வீற்றிருந்தேழுலகும் என்ற திருவாய் மொழியில் ஏற்ற நோற்றேற்கு என்று முதலிலும்
வண்டமிழ் நூற்க நோற்றேன் என்று முடிவிலும் வருவது காண்க.
அங்ஙனம் நோற்ற திருவாய்மொழியில் தேவாதி தேவனை அநுபவிக்கின்ற ஆழ்வார்
மாவாய் பிளந்தானென்ற விசேஷணத்தையே முதற்பாட்டில் இட்டருளினர்;
வெம்மா பிறந்தான் தன்னை என்றது காண்க.

ப்ரதமப்ரபந்தத்தில் இமையோர் தலைவா! என்றும்;
சரம ப்ரபந்தத்தில் அயர்வறுமமரர்களதிபதி என்றும்
தேவாதி தேவனையே முந்துற முன்னம் சேவித்தாராழ்வார்.

(சென்று நாம் சேவித்தால்) வான நாயகனே! அடியேன் தொழ வந்தருளே என்று
தேவாதி தேவனை நீர் உம்மிடம் வருமாறு அழைத்தீர்;
அங்ஙனமல்லாமல் அவனிடம் நாம் சென்று சேவிக்கலாம் வாரும் என்றழைக்கிறாள் போலும்.

(ஆவா வென்று) ஆவாவென விரங்கார் அந்தோவலிதே கொல், மாவாய் பிளந்தார் மனம் என்றும்;,
அடியேற்கு ஆவா வென்னாயே என்றும்
நீர் விரும்பினபடியே மாவாய்பிளந்த பெருமான் உமக்கு ஆவாவென்பன் என்று காட்டுகிறபடி

(ஆராய்ந்து) ஆரென்னை யாராய்வார் என்ற உம்முடைய குறையும் தீரும் என்று காட்டியபடி.

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading