Archive for the ‘Aandaal’ Category

ஸ்ரீ கோதா ஸ்துதி–15-29-

January 12, 2021

ஸ்ரீ கோதா ஸ்துதி

ஸ்ரீமாந் வேங்க‌ட‌நாதார்ய‌: க‌விதார்க்கிக‌ கேஸ‌ரீ |
வேதாந்தாசார்ய‌வ‌ர்யோ மே ஸ‌ந்நிதத்தாம் ஸ‌தா ஹ்ருதி ||

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –

————

ஆமோதவத்யபி ஸதா ஹ்ருதயங்கமாபி
ராகாந்விதாபி லளிதாபி குணோத்தராபி |
மௌளிஸ்ரஜா தவ முகுந்தா கிரீடபாஜா
கோதே பவத் யதரிதா கலு வைஜயந்தீ || (15)

கோதே — கோதாய்!
வைஜயந்தீ — வனமாலை;
ஸதா — எப்பொழுதும்;
ஆமோதவத்யபி — பரிமளம் நிறைந்து சிரிப்பு விகாஸத்தோடு கூடியிருந்தும்;
ஹ்ருதயங்கமாபி — திருமார்பில் இருந்துகொண்டு மனதை ஹரிப்பதாயிருந்தும்;
ராகந்விதாபி — செவ்வி மாறாமலும் பெருமாள் திருமார்பில் மிக்க ராகத்தோடும்;
லளிதாபி — மிகவும் ஸுகுமாரமாயும்;
குணோத்தராபி — உயர்ந்த குணங்களை (நாறுகளை) உடையது;
முகுந்த கிரீட பாஜா — மோஷ ஸுகத்தை அளிக்கும் பெருமாள் கிரீடத்தை அடைந்த;
தவ மௌளிஸ்ரஜ — உன்னுடைய கூந்தலை அலங்கரித்த மாலையால்;
அதரிதா பவ கலு — கீழே போனதாக ஆகிவிட்டதல்லவா?

அம்மா கோதாய்! பெருமாள் திருமார்பில் ஸர்வ காலத்திலுமுள்ள வைஜயந்தீ என்னும் வனமாலையானது,
எப்பொழுதும் பரிமளத்தோடும், ஸந்தோஷ மலர்ச்சியோடும், செவ்வியோடும் பெருமாள் திருமார்பை
அலங்கரிப்பதில் ராகத்தோடும், ச்ரேஷ்ட குணங்களோடும், ஸௌகுமார்யம் என்னும் மார்த்தவத்தோடும் கூடி
பெருமாள் திருமார்பிலேயே வசித்துக் கொண்டு மனத்துக்கினியதாயிருந்தாலும்,
அது அவர் திருமுடியிலுள்ள கிரீடத்தை அடைந்த உன் சிரோமாலையால் கீழாக்கப்பட்டதே!

கோதா பிராட்டியே ——நீ , மலர் மாலையை, உன் திருமார்பில் சூடிப் பிறகு அதைக் களைந்து,
எம்பெருமான் சூடிக் கொள்ளச் செய்தாய் .அவன் அதைத் திருமுடியில் கிரீடத்தில் அணிந்தான்.
இப்போது மணம் செய்துகொண்ட இளையாளைத் தலையாலே ஏற்று, மூத்தாளான வைஜயந்தியை மார்பிலேயே வைத்துவிட்டான்.
உன்னுடைய மாலை, வைஜயந்தி மாலை இரண்டுமே மணம் மிக்கவை; இரண்டிலுமே சிகப்பு உண்டு; இரண்டுமே அழகு;
இரண்டுமே ம்ருதுவானவை; இவ்வளவு விஷயங்கள் பொதுவாக இருந்தும், உனது மாலை அவன் திருமுடியில் ஏறியுள்ளது ,
உன் பெருமையைச் சொல்கிறது.

அவதாரிகை

(1) என்னை ஈஸ்வரீ யென்னலாமோ? எனது உயிரும் அம்சியுமான பெரிய பிராட்டியாரல்லவோ ஈஸ்வரீ?
அம்மா! உன்னை ஈஸ்வரீ என்று அழைக்க என்ன தடை? மோக்ஷத்தை அளிக்கும் முகுந்தனான ஸர்வேஸ்வரரின்
கிரீடத்தை உன் சிரோமாலை அடைந்ததே? உன் சிரஸுக்கு ஈச்வர கிரீடம் கிடைத்தாலென்ன?
உன் சிரோலங்காரமான மாலைக்கு அது கிடைத்தாலென்ன?

(2) ஆண்டாள் சரித்திரத்திலும் திருக் கல்யாணத்திலும் மாலைக்குத்தான் ப்ரதான்யம்.
அநேகம் ஸ்லோகங்களில் இங்கே கோதைமாலையின் ஸ்துதிமாலை. இது சூடிக்கொடுத்த மாலையின் துதியென்ன வேணும்.
அந்த மாலை தானே இம் மிதுனத்தைச் சேர்த்து வைத்த கடகவஸ்து! புருஷகாரத்திற்கும் புருஷகாரமாயிற்று.
கடகர் சிறப்பினும் மிக்கதுண்டோ? பரமான ப்ரஹ்ம வித்யையை ப்ரதிஜ்ஞையுடன் பேச ஆரம்பித்த முண்டகோபநிஷத்து மேலே
“ஆகையால் க்ஷேமத்தை விரும்புகிறவன் ஆத்மஞனான ஆசிரியனை யல்லவோ அர்ச்சிக்க வேண்டும்” என்றது.
‘தஸ்மாத்’ என்று ஹேது புரஸ்ஸரமாய்ப் பேசுவதோடு த்ருப்தியில்லாமல்
‘ஹி’ என்று ப்ரஸித்தியையும் ஹேதுவையும் காட்டும் பதத்தையும் சேர்த்துக் கொண்டது.
“தஸ்மாத் ஆத்மக்ஞம் ஹி அர்ச்சயேத் பூதிகாம:”
மதுரகவி காட்டும் மதுரமார்க்கம் நல்வழியான தொல்வழி

(3) முன் ஸ்லோகத்தில் ‘நீ சூடிய மாலை வந்து திருமுடியில் ஏறி கிரீடம் பெற்றதும்,
வைஜயந்தியில் மொய்த்துக் கொண்டிருந்ததை விட்டு, உன் மாலையின் பரிமளாதிகளால் மேலே இழுக்கப்பட்டு
அங்கே சூழ்ந்து சுழன்று ஆடிப் பாடுகின்றன’ என்றார்.
புதிதாக கிரீட மாலைக்கு வந்தால் வரட்டும்;
கையில் கிடைத்து ஸித்தமான உத்தமமாலையாகிய வைஜயந்தியை அலக்ஷ்யம் செய்து தாழ்வாக்குமோ?
இது என்ன பக்ஷபாதப் பேச்சு? பொய்த்துதி? இதற்கும் பதில் கூறுகிறார்.

கோதே! —
நீ பாமாலை பாடிக்கொண்டே பூமாலை தொடுத்துக் கட்டிச் சூடிக் கொடுத்தாய்.
உன் தோழிகளும் ப்ரஜைகளுமான உன் தோட்ட வண்டுகள் உன் பூமாலையைச் சுற்றி ஆடிப்பாடி வந்தன;
உன்னை அநுகரித்தன.

வைஜயந்தீ —
வனமாலையானது பஞ்சபூதங்களையும் அபிமானிக்கும் நித்யஸூரியான சேதன தத்துவம்.
இப்படிக்கு உத்க்ருஷ்டமான சேதன மாலை உன் பூமாலையால் ஜயிக்கப் பட்டது.
ப்ருந்தாவனத்து கோபாலனுக்கு இதுவே திருமார்புக்கு அலங்காரம். ஒருகால் குந்துமணியும் சேரலாம்.

ஸதா — எப்பொழுதும்.

ஆமோதவத்யபி — பரிமளம்,

ஸந்தோஷ விகாஸம். சேதனமான அபிமானி தேவதையானதால் ஸந்தோஷமும் உண்மையாகும்.

ஹ்ருதயங்கமாபி — ஹ்ருதய தேசத்திலிருப்பது. ஹ்ருதயத்துக்கு இனிதே.

ராகாந்வி தாபி —
வாடாத மாலை புஷ்பராகம் . மாறுவதேயில்லை. திருமார்பில் ராகம் குறைவதே இல்லை
திருமார்பில் ராகமில்லாவிட்டால் இளப்பம் செய்யக் காரணமேற்படலாம்.

லளிதாபி — மார்த்தவ ஸௌகுமார்யங்கள் குறைவதேயில்லை.

குணோந்ததாபி —
புஷ்பங்களின் உயர்த்தி குறையாவிடினும் மாலையின் நார்கள் (குணங்கள்) கெடுகின்றனவோயென்றால்,
நார்கள் ஸர்வோத்தரமாகவேயுள.

மௌளிஸ்ரஜா —
ஓர் குறைவுமில்லையென்றால், கீழாவதற்குக் காரணம்தான் என்ன? வைஜயந்தீ பெருமாள் திருமுடியிலும் ஏறவில்லை,
உன் மௌளியிலும் ஏறப்பெறவில்லை. இந்த மாலை உன் மௌளியில் சூடப்பட்டுப் பெருமாள் முடியையும் சூடுகிறது.
இந்த மாலை ஈஸ்வரீ ஈஸ்வரர் இருவர் முடியிலும் சம்பந்தம் பெற்றது. ஸ்தானத்தால் உயர்த்தி பெற்றதல்லவோ!
மற்ற தாரதம்யத்தை நாம் நினைக்க வேண்டாம். பேசவேண்டாம். மௌளி உத்தம அங்கமல்லவோ, மார்புக்கு உயர்ந்ததன்றோ?

தவ — ஈச்வரீயான உன் மௌளி சூடியது, அங்கிருந்து.

முகுந்த கிரீட பாஜா —
பெருமாள் திருமேனியிலேயே யல்லவோ ஸ்தானங்களின் உத்தமத்வமும் அதரத்வமும் காட்டவேணும்!
முகுந்தன் மோக்ஷப்ரதன். ஸர்வேஸ்வரன்தான் மோக்ஷப்ரதன். அவன் கிரீடத்தில் சூடப்பட்டது இம்மாலை.
கிரீட ஸம்பந்தம் உத்தமமல்லவோ? மாலைகளுக்குள் ஆதிராஜ்ய ஸூசனம் அந்த ஸம்பந்தம்.

அதரிதா —
கீழாய்ச் செய்யப்பட்டது. திருமுடியில் கிரீடத்திலுள்ள மாலைக்குக் கீழேயுள்ளதுதானே திருமார்பு மாலை?

பவதி கலு —
ஆகிறது அல்லவா? இது எல்லோரும் அறியும்படி ஸ்பஷ்டம்தானே! இங்கே ஓர் ரஸமுண்டு.
பகவத் கைங்கர்ய ரஸிகர் மற்றெல்லோருக்கும் தாழ்மையையே ஆசைப்படுவர்.
தாழ்மை கிடைத்ததும் ‘இன்றுதான் பிறந்தோம்’ என்கிற நினைப்பு வருவதை ‘அதரிதா பவதி’ என்று
சேர்த்துப் பணிப்பால் விளக்குகிறார்.
கோதை சூடிய மாலை சேதனமல்லாததால் அதற்கு அந்தத் தாழ்மை ஆசையில்லை.
மேலும் பெருமாளாக அதைத் தலையில் சூடிவிட்டார்.
நித்ய ஸூரியான வைஜயந்தி தேவதை தாழ்மையையே ஸத்தையாக மதித்தார். (15)

———-

த்வந் மௌளி தாமநி விபோ: ஶிரஸா க்ருஹீதே
ஸ்வச் சந்த கல்பித ஸ பீதி ரஸ ப்ரமோதா|
மஞ்ஜு ஸ்வநா மதுலிஹோ விதது: ஸ்வயம் தே
ஸ்வாயம்வரம் கமபி மங்கள தூர்ய கோஷம் || .16.

விபோ — விச்வ ப்ரபுவினுடைய;
ஶிரஸா — சிரஸினால்;
த்வந் மௌளி தாமநி — உன் சிரஸை அலங்கரித்த மாலை;
க்ருஹீதே — க்ரஹிக்கப்பட்டபோது;
ஸ்வச் சந்த — தங்கள் ஸ்வேச்சையாக (இஷ்டப்படிக்கெல்லாம்);
கல்பித — செய்த;
ஸ பீத ரஸ — ஸஹபான ரஸத்தால்; (எல்லாம் கூடித் தேனைப் பானம் செய்து);
ப்ரமோதா: — அதிக சந்தோஷத்தோடு கூடியனவாக;
மஞ்ஜுஸ்வநா: — இனிய சப்தத்தோடே;
மதுலிஹ: — தேனை ஆஸ்வாதிக்கும் வண்டுகள்;
ஸ்வயம் — தாமாகவே (வேறு ஒருவரும் சொல்லாமல்);
ஸ்வாயம்வரம் — ஸ்வயம்வரமான விவாஹ ப்ரகரணத்திற்குத் தக்கபடி;
கமபி — வர்ணனத்திற்கு அடங்காத மாதுர்யத்தை உடைய ஓர் விசித்ரமான;
மங்கள தூர்ய கோஷம் — மங்கள வாத்ய சேவையை;
வித்து: — செய்தன (விதித்துக் கொண்டன)

நீ உன் சிரஸில் சூடிய மாலை ப்ரபுவின் சிரஸால் ப்ரதி க்ரஹிக்கப் படபோது, தேன் வண்டுகள் தங்கள்
இஷ்டப்படிக் கெல்லாம் வேண்டிய மட்டும் ஸஹ பானம் செய்து அந்த ரஸத்தாலே களித்து
இனிய சப்தத்தோடே உன் ஸ்வயம்வரத்தில் ஸ்வயமாக ஓர் விலக்ஷணமான மங்கள வாத்ய கோஷம் செய்தன.

கோதா தேவியே—–உன் மாலையை, எம்பெருமான் சிரஸா ஏற்றுக் கொண்டான்.
தேனைத் தேடும் வண்டுகள், அந்த மாலையில் உள்ள ரஸங்களைத் தங்களுடைய ஆசைக்கு ஏற்பப் பருகி,
அதிக ஆனந்தத்துடன் ,ரீங்காரமிட்டு அழகாகப் பாடுகின்றன.
அந்த ரீங்கார ஓசையே ஸ்வயம் வரத்துக்கான வாத்திய கோஷம் போல் உள்ளது.
நீ சூடிக் கொடுத்த மாலையில் , மாலை மாற்றுதலும், அதற்கான வாத்திய கோஷமும் —ஆஹா

அவதாரிகை

(1) அனந்த நாதரைப்போல வண்டுக் கூட்டங்கள் தங்கள் சரீரத்தாலேயே குடையாயின.
கருடனைப் போலே விசிறியுமாயின என்றார் 14ல்.
வைஜயந்தியை வண்டுகள் விட்டதைப் பேசினதை உபபாதிக்க முன் ஸ்லோகம் வந்தது.
அது முடிந்ததும், மறுபடியும் வண்டுகள் ஆனந்தப்பட்டு ஸ்வயம் செய்யும் வாத்ய கோஷ கைங்கர்யத்தை ஸாதிக்கிறார்.

(2) ஸ்வயம்வரத்தில் மங்கள வாத்ய கைங்கர்யமும் ஸ்வயமாக வண்டுகளால் வரிக்கப் படுகிறது.
எல்லாம் இங்கே ஸ்வயமாகும். வண்டுகள் ஸ்வச் சந்தமாகத் தேனை ஸஹபானம் செய்து களிக்கின்றன.
ஒருவரும் அவற்றிற்குத் தேனைப் பானம் செய் என்று தேனை எடுத்துக் கொடுக்கவில்லை, பரிமாறவில்லை.
தங்கள் இஷ்டமாகத் தாமே மாலையில் பெருகும் தேனைப் பானம் செய்கின்றன.

இந்த ஸ்வயம்வரத்தில் சேஷர்களான யாவரும் தங்கள் தங்கள் இஷ்டத்தை ஆஃவயமாகச் செய்யலாம், போகங்களையும் புஜிக்கலாம்.
ஸ்வக்ருஹே கோ விசாரோஸ்தி அஸ்யாஜ்ஞா ஸம்ப்ரதீக்ஷ்யதே என்றார் ஜனகர் ஸீதா விவாஹத்தில்.
“ஸ்வக்ருஹத்தில் யாருக்கு என்ன விசாரம் வேண்டும்? யாருடைய ஆஜ்ஞை எதிர்பார்க்கப் படுகிறது?
ஏன் ஸ்வயமாக உங்கள் இஷ்டப்படிக்கெல்லாம் இந்த உத்ஸவத்தில் ப்ரவ்ருத்திக்கலாகாது ” என்று ஜனகர் கேட்டார்.
இங்கே அப்படிப் பேசவே அவஸரம் நேரிடவில்லை.
எல்லாரும் ஸ்வயமாகவே விவாஹ மங்களத்திற்கு வேண்டிய கார்யங்களைச் செய்கின்றனர்.
விவாஹத்திற்கு மருஷ்டாந்ந பானாதிகள் அங்கமாகையால் விவாஹ பூர்த்திக்காக அதையும் செய்கின்றன.
‘விதது’ என்பதால் வாத்யகோஷம் செய்ய ஒன்றையொன்று விதித்தன, கட்டளையிட்டன என்றும் கொள்ளலாம்.
விதியின் பயன் பிறர்க்கு. பரஸ்மை பதப்ரயோகம்.

த்வந்மௌளிதாமநி —
நீ உன் கூந்தலில் சூடிய மாலையானது உன் உத்தமாங்கத்தில் சூடிய மாலை.

விபோ:ஶிரஸா —
ப்ரபுவின் சிரஸால். உன் உத்தமாங்கத்தில் சூடிய மாலையைத் தம் உத்தமாங்கத்தில் தரிப்பது தானே
இந்த உத்தம ப்ரபுவின் லக்ஷணம்!

ஶிரஸா க்ருஹீதே —
“ஶிரஸா ப்ரதிக்ருஹ்ணாதி வைஸ்வயம்” என்ற வசன க்ரமத்தை இவர் விடாத ப்ரபுவே.
எவர் செய்யும் பூஜையையும் இப்படி சிரஸால் க்ரஹிப்பவர். கோதை சூடிய மாலையை இப்படி க்ரஹிக்காமலிருப்பாரோ?
தம் ஸ்வச்சந்தமான ஸ்மிருதி வசனப்படி, ஸ்வயமே சிரஸா க்ரஹித்தார். தம்மையே விதித்துக் கொண்டார்.
இந்த ஸ்வயம்வரத்திலே பெருமாளுடைய சிரஸால் க்ரஹணமும் ஸ்வயம்.
பெருமாளை ஒருவரும் ப்ரார்த்திக்கவில்லை, விதிக்கவில்லை. அவர் ஸ்வச்சந்தமாக அப்படிச் செய்தார்.
ராகத்தால் செய்தார். ஸ்வச்சந்த விதானம். மாலையை சிரஸால் க்ரஹித்த பொழுதே “யஸ்யச பாவே பாவ லக்ஷணம்”
பாவத்தை இரட்டிக்கும் பாணினி ஸூத்ரமும் இந்த பாவ ப்ரகரணத்தில் பாவத்தோடு சேருகிறது.

ஸ்வச்சந்த கல்பித ஸபீதி ரஸப்ரமோதா: —
பல்லாயிரம் வண்டுகளாக சிரோமாலையில் பெருகும் தேனை ரீங்காரம் பண்ணிக்கொண்டு ஸஹபானம்
செய்யும் போது தடுப்பாரில்லை, ஓட்டுவாரில்லை. கூட்டங்களான வ்யக்திகளுக்கு ஒரே காலத்தில்
அன்னம் இட்டு அவர்கள் புஜிப்பார்கள். பானகாதிகளைக் கூடிப் பானம் செய்வர்.
இவை ஸ்வச் சந்தமாய்த் தலை மேலேறி அங்கே ஒரே கூட்டமாய்ப் பானம் செய்கின்றன.

குமார ஸம்பவத்தில் தன் பேடையான பெண்வண்டை அநுவர்த்திக்கொண்டு ஆண்வண்டு ஒரே
குஸும பாத்ரத்தில் ஸஹபானம் செய்தது என்று காளிதாஸர் வர்ணித்தார்.
அங்கே பரச்சந்தானுவர்த்தன மென்னும் தாக்ஷிண்யம் காட்டப் பட்டது.
இங்கே எல்லா வண்டுகளும் ஏககாலத்தில் ஸஹபானம் செய்தன.
பானத்தில் ராகமுடையவர் பலபேர்கூடி ஸஹபானத்தை மிகவிரும்புவர்.
இங்கே இப்படிப் பல்லாயிரம் வண்டுகளும் வாத்தியம் ஸேவிக்கின்றன.
வாத்யக்காரர் எல்லோரும் கூடிச் சேர்ந்து விவாஹ ஸமயத்தில் அன்னபானங்களில் அந்வயிப்பர்.

மஞ்ஜுஸ்வநா: —
பானம் பண்ணின தேனிலும் இனிமையான சப்தத்தோடு தேன் சாப்பிட்ட வாயிலிருந்து
சப்தம் தேனாகவே வருகிறது. ராகத்திற்கு எல்லையில்லை, தித்திப்புக்கும் எல்லையில்லை.

விதது: ஸ்வயம் —
ஸ்வயமாகச் செய்தன. ஒருவர் ஆஜ்ஞையால் விதிக்கப்பட்டுச் செய்யவில்லை.
ஆஜ்ஞா கைங்கர்யமல்ல, விதிக்கப் பட்டதல்ல. அநுக்ஞா கைங்கர்யம். ராகத்தால் ஸ்வயம் செய்தன.

‘ஸ்வயம் விதானம் செய்தன’ என்பதில் ரஸமுண்டு.
பிறர் விதித்துயவில்லை. தாங்களே ஸ்வயம்விதானம் செய்துகொண்டன.
எப்படித் தங்கள் ஸ்வச்சந்தத்தால் ஸ்வேச்சையால் தேனைப் பானம் செய்தனவோ, அப்படியே ஸ்வேச்சையால்
இக் கைங்கர்யத்தையும் மிக்க களிப்போடு செய்தன.
“களம விரளம் ரஜ்யத் கண்டா: க்வணந்து சகுந்தய”
“அவ்யக்த மதுரமாக ஓயாமல ராகம் நிரம்பின கண்டத்தோடு பெண் பக்ஷிகள் சப்திக்கட்டுமே.
தேவன் ராமன் ஸ்வயமாக இந்தப் பஞ்சவடிக்கு மறுபடியும் எழுந்தருளியிருக்கிறார்” என்று கோதாவரீ தேவி விதித்தாள்.
அப்படி இங்கு விதிக்க அவஸரமில்லை, ஸ்வயம் ராகமிருப்பதால்.

தே —
உன் வண்டுகள்.
அந்த வண்டுகள். 14வது ச்லோகத்தில் குடையான வண்டுகள்.
உன் ஸ்வயம்வர ஸம்பந்தமாக

ஸ்வயம்வரம் —
நீ எப்படி நிரவதிகமான ராகத்தோடு உன் மணாளரை வரித்தாயோ, அப்படியே
வண்டுகளும் இந்த மங்களவாத்ய ஸேவையை வரித்தன.

மங்கள தூர்ய கோஷம் —
மாலை சிரஸால் க்ரஹிக்கப்படும் க்ஷணத்தில் இப்படி வாத்ய கோஷம் செய்தன.

———–

விஶ்வாயமாந ரஜஸா கமலேந நாபௌ
வக்ஷஸ்த்தலே ச கமலாஸ்தநசந்தநேந |
ஆமோதிதோபி நிகமைர் விபுரங்க்ரியுக்மே
தத்தே நதேந ஶிரஸா தவ மௌளி மாலாம் || .17.

விபு: — ப்ரபுவானவர்;
நாபௌ — உந்தியில்;
விஶ்வாயமாந ரஜஸா — ஓரோர் துளியும் ஒரண்டமாகும் பெருமையையுடைய;
கமலேந — தாமரைப் பூவினாலும்;
கமலாஸ்த்தந சந்தநேந — தாமரையாளின் தனச்சந்தனத்தால்;
வக்ஷஸ்த்தலே ச — திருமார்பிலும்;
நிகமை — வேதங்களால்;
அங்க்ரியுக்மே (ச) — இரண்டு திருவடிகளிலும்;
ஆமோதிதோபி — வாஸனை யேறப் பெற்றதும்;
தவ — உன்னுடைய;
மௌளிமாலாம் — சிரோமாலையை;
நதேந — வணங்கிய;
ஶிரஸா — தலையால்;
தத்தே — தரிக்கிறார்.

ஓரோர் துளியும் ஓரோருலகமாக மாறும் பெருமையை உடைய தாமரையாலுந்தியிலும்,
தாமரையாளின் தனச் சந்தனத்தால் திருமார்பிலும், வேதங்களால் கழலிணையிலும்,
கந்தம் கமழப் பெற்றும், வணங்கிய தலையால் உன் சிரோ மாலையை ப்ரபு தரிக்கிறார்.

தாயே—-கோதா—-
பகவானிடம் மூன்று மணங்கள் உள்ளன ;
பகவானின் திருநாபியில்,
கமலப் பூவின் மணம் ;அதில் உள்ள ஒவ்வொரு மகரந்தப் பொடியும், ஒவ்வொரு உலகம்;
அனந்த ப்ரஹ் மாண்டங்களையும் நாபியில் வைத்துள்ளான் என்பது ப்ரமாணமல்லவா !

அவனது திரு மார்பில் ,வக்ஷஸ்தலத்தில்,
மஹா லக்ஷ்மி இருப்பதாலே அவளது திருவடியில் சாத்திய செம்பஞ்சுக் குழம்பின் ரஸம்,
அவளது திருமார்பில் சாத்திய திவ்ய சந்தனத்தின் மணம் —

மூன்றாவது, அவனின் திருவடியின் மணம் .
வேதங்களின் மணம் , திருவடிகளில் மணக்கிறது;
இரண்டு திருவடிகள்—தமிழ், வடமொழி வேதங்களின் மணம் என்றும் புகழ்ந்து உரைப்பர்.

இப்படி,மும்மணம் பொருந்திய மணவாளன்—-அழகிய மணவாளன்—இம்மணங்களைஎல்லாம் விட்டு,
நீ சூடிக் கொடுத்த மாலைகளின் மணத்தைத் திருமுடியாலே ஏற்றான்
இங்கிதம் தெரிந்தவன் என்கிறார் ,ஸேவா ஸ்வாமி ..
அவனோ நெடுமால்; நீயோ சிறு பெண்;உனக்குத் தலை குனிந்து, உன் மாலையை ஏற்றுக் கொண்டானே —
உனக்குத் தலை வணங்கிய பெருமை உனக்கா ? அவனுக்கா?

அவதாரிகை

(1) பெருமாளை விபு என்றார் முன் ஸ்லோகத்தில். இங்கும் விபுவென்கிறார்.
எல்லா உலகங்களுக்கும் நாயகன், எங்கும் பரந்துளன். அவன் உந்திக் கமலத்தின்
ஓரோர் துளியும் ஓரோர் விச்வமாகும் என்று காட்டி அவன் விபு என்று விளக்குகிறார்.

(2) வைஜயந்தியைக் காட்டிலும் கோதை சூட்டிய மாலையின் ஏற்றத்தைக் காட்டினார்.
இங்கே உந்திக் கமலத்தினிலும் ஏற்றத்தையும், கந்தத்வாரமான தாமரையாள் தனச்சந்தனத்திலும்
வேத வாஸனை ஏறிய திருவடித் தாமரைகளிலும் அதிக வாஸனையைப் பேசுகிறார்.

(3) உலகநாயகன் உன் மாலைக்கு வணங்கி அதை சிரஸால் தரிக்கிறார்.

விஶ்வாயமாந ரஜஸா —
தாமரைப் பூவுக்கு தூளிகளால் வாசனை. ஓரோர் துளி ஓரோர் அண்டமாய் விரிவதால்,
வாசனை எல்லா அண்டங்களிலும் பரவுவதைக் காட்டுகிறது. வாசனை எத்தனை தூரம் வீசுகிறதோ,
அது அதற்கு ஏற்றம். அகிலமான அண்டங்களும் பரவும் உந்திக் கமல வாசனையிலும் மேன்மை (வ்யதிரேகம்)

கமலேந —
தாமரையால்.
ஓரோர் துளி வாசனை ஓரோரண்டம் பரவியது.
எத்தனையோ தூளிகளை உடைய கமலத்தின் வாசனைப் பலப்பை என் சொல்வது?

நாபௌ (ஆமோதிதோபி) — உந்தியில் வாஸிக்கப்பட்டும்

கமலாஸ்த்தந சந்தநேந —
முன்பு கமலத்தின் வாசனை. இங்கே கமலையின் (தாமரையாளின்) தன வாசனை கலந்த சந்தன வாசனை.
அச்சந்தன வாசனையால், பெரிய பிராட்டியாரைத் திருமார்பில் சுமந்துகொண்டு இருவர் திருமார்பிலும் பூசிய
சந்தனத்தோடே கோதையைப் பாணிக்கரஹணம் செய்து கொள்ள அவள் மாலையை வணங்கிய முடியால் சுமக்கிறார்.

ஆண்டாள் வாசனைக்கு ஒப்பாவதற்காக ஸர்வகந்தன் கமலையின் கந்தத்தையும் சேர்த்துக் கொண்டார்.
பெரிய பிராட்டியாரிலும் மணமேற்றமென்று நேராகப் பேசுவதில்லை.
கோதையும் அவளுக்குத தனம் போன்ற அவயமாதலால்
அவள் தனத்திலும் கோதைக்கு அதிக வாசனையைப் பேசினாலும் அதுவும்
கமலையின் ஓர் ஸ்தன விசேஷத்தின் வாசனைப் பெருமையேயாகுமென்று காட்ட ஸ்தனசந்தனமென்கிறார்.

வக்ஷஸ்தலே ச —
திருமார்பிலும், தாமரையாளும் எங்கும் பரந்த விபுஸ்வரூபம்.
அவள் வாசனையும் எல்லை யற்றுப் பரவியது. (ஆமோதிதோபி — வாஸிக்கப் பெற்றும்)

நிகமை —
வேதங்களுக்கு நித்யாபூர்வமான வேலாதீதமான திவ்ய வாசனை உண்டு. வேதங்கள் அனந்தங்கள்.
ஆழ்வார் தமிழ்வேதத்தின் மகிழம் பூ வாசனை திருவடிகளில் கங்குலும் பகலும் நித்யகாலமும் ஒட்டிக் கொண்டிருக்கும்.
அனந்த வேதங்களின் எல்லையற்ற அபூர்வ வாசனைகள் திருவடிகளில் சேர்ந்துள.

நிகமமென்று கடைத்தெருவுக்கும் பெயர்.
விவாஹ காலங்களில் கடைத்தெருவிலிருந்து உயர்ந்த வாசனைகளை வாங்கித் தரிப்பர்.
இந்த வேத வேத்யனான திவ்ய புருஷனுக்குக் கடைத்தெருவென்ற நிகமங்களின் மணம் பொருந்தாது.
வேதமென்னும் நிகமங்களின் வாசனைப் பரப்பே சிறந்தது. கடைத்தெரு வாசனை த்ரவ்யங்களின் மணம் க்ருதரிமம் (செயற்கை),
வேத வாசனை அக்ருத்ரிமம் (இயற்கை). இங்கே நிகமங்கள் தங்கள் சிரஸுகளோடு (வேதாந்தங்களோடு)
திருவடிகளைத் தொழுகின்றன. பன்மையினால் அனந்தமான வேதங்களைக் காட்டி வாசனையின் எல்லையற்ற பரப்பைக் காட்டுகிறது.

அங்க்ரியுக்மே ச —
திருவடி ஜோடியிலும். உந்திக் கமலத்தில் உலகங்களையெல்லாம் படைக்கும் காரணத் தன்மையைக் கண்டதும்,
அக்காரணம் லக்ஷ்மீபதியானதால், திருமார்பில் கண் சென்று சேர்த்தியை ஸேவித்து, திருவடிகளில் கண் சென்றது.

விபு: —
ப்ரபு. எங்கும் ஸ்வரூபத்தால் பரந்துளன். எங்கும் வாசனையாலும் பரந்துளன்.
“ஸர்வகந்த:” என்று நிகமங்களால் புகழ்பவன். ஸ்வயமாகவே எங்கும் பரந்த வாசனையை உடையவர்.

ஆமோதிதோபி —
வாஸனையேறியும். தூரம் சென்று பரவும் வாஸனையை ஆமோதம் என்பர்.

நதேந சிரஸா —
வணங்கின சிரஸால். நெடியோன் வணங்கித்தான் ஆண்டாள் திருக்கையால் மாலையை க்ரஹிக்கவேணும்.

தவ மௌளிமாலாம் தத்தே —
உன் சிரோமாலையைத் தரிக்கிறார்.

———

சூடாபதேந பரிக்ருஹ்ய தவோத்தரீயம்
மாலாமபி த்வதௌகைரதிவாஸ்ய தத்தாம் |
ப்ராயேண ரங்கபதிரேஷ பிபர்த்தி கோதே
ஸௌபாக்ய ஸம்பதபிஷேக மஹாதிகாரம் || (18)

கோதே — கோதாய்!
ரங்கபதி:
ஏஷ: — ரங்கபதியாகிய இவர்;
தவ உத்தரீயம் — உனது ஸ்தன உத்தரீயத்தையும்;
த்வதௌகை: — உன்னுடைய குழற் கற்றைகளால்;
அதிவாஸ்ய — வாஸனையேற்றி;
தத்தாம் — கொடுக்கப்பட்ட;
மாலாமபி — மாலையையும்;
சூடாபதேந — கிரீடத்தின் ஸ்தானமான சிரஸால்;
பரிக்ருஹ்ய — பெற்று (அணிந்து);
ஸௌபாக்யஸம்பதபிஷேக மஹாதிகாரம் — மங்களத்தன்மை, மங்களம் செய்யும் தன்மையாகிய
ஸௌபாக்ய ஸம்பத்தில் முடிசூடப் பெறும் அரிய யோக்யதையை;
ப்ராயேண — மிகவும்;
பிபர்த்தி — தரிக்கிறார்.

கோதாய்! ரங்க ப்ரபுவாகிய இவர் உன் திருமார்ப்புக் கச்சையையும், நீ சூடி வாசனை ஏற்றிக் கொடுத்த
மாலையையும் சிரஸினால் க்ரஹித்து ஸௌபாக்ய ஸம்பத்தென்னும் ஐச்வர்யத்தில் முடிசூடப்பெறும்
அரும்பெரும் அதிகாரத்தை நன்றாய் தரிக்கிறார்.

கோதாப்பிராட்டியே….நீ சாத்திய பட்டு வஸ்த்ரத்தைத் தலையில் அணிந்து இருக்கிறான்;
உன் கூந்தலினால் வாசனை சேர்க்கப்பட்ட மாலையையும் மேலே திருமுடியில் அணிந்து இருக்கிறான்;
அதாவது உன் மேலாடையை ,அவன் திருமேனியின் முடியிலே கட்டி வைத்துக்கொண்டான்.
அவன் உடுத்துக் களைந்தது ,எங்களுக்குப் போக்யம்; நீ உடுத்திய மேலாடை அவனுக்குப் போக்யம்
ஆடையை அவனே எடுத்துக் கொண்டான்; மாலையை நீ அளித்தாய்; இரண்டும் அவன் திருமுடியிலே !
இத்தனை நாள் இல்லாத ஸௌபாக்யம் ,ரங்கபதிக்குக் கிடைத்தவுடன், புதியதோர் மிடுக்கும், செல்வமும், அதிகாரமும்
பெற்றுப் பிடிபடாத பெருமையில் இருக்கிறான்

அவதாரிகை

(1) கந்யை ரூபத்தை வரிப்பாளென்பர். திவ்ய தேசத்தெம்பெருமான்கள் அழகுக்கடல்கள்.
மற்ற எம்பெருமான்களிலும் அழகுமிக்கோன் என்று சொல்லக்கூடியதால் ஆண்டாளால் மணாளனாக வரிக்கப்பட்டதை
நேரில் தம் திருவாக்கால் பேசாமல் அதை வ்யஞ்ஜனம் செய்கிறார்.
ஆண்டாள் திருவாக்கினால், காளிதாஸர் அற்புதமாக ஈடுபட்டு வர்ணித்திருக்கும் திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட
அழகுக்கடலைக் காட்டிலும், அழகரென்று அஸாதாரணமாகத் திருநாமம் பெற்ற திருமாலிருஞ்சோலை மாமாயனிலும்,
திருவேங்கடத்துக் கார்முகிலிலும், ‘அரங்கம் தன்னுள் துயிலும் எங்கள் மாலே’ என்று வரிக்கப்படும் மஹா பாக்யத்தை வர்ணிக்கிறார்.

(2) பெருமாள் ஸந்நிதியில் சிரஸில் பரிவட்டம் கட்டி மாலை சேர்த்து சிரஸில் ஸ்ரீசடாரியாகிய கிரீடத்தை நமக்குச் சாற்றுவர்.
இங்கே ஆண்டாள் கோயிலில் பெருமாள் சிரஸில் ஆண்டாள் திருமார்ப்க்கச்சைப் பரிவட்டமும், மாலையும் சாற்றப்படுகிறது.
சிரஸிலிருந்து ஸர்வேச்வரத்தின் சிந்ஹமான கிரீடத்தைக் கழட்டிவிட்டு சிரஸில் இவ்விரண்டையும் பரிக்ரஹித்தார்.
இவை ஸௌபாக்ய ஸம்பதபிஷேகத்திற்குக் கிரீடமாயிற்று. ஸர்வேஸ்வரத் தன்மையைக் காட்டிலும் இது பெரிய அதிகாரம்.

தவ உத்தரீயம் —
உன் மேலாடையை; கோபிகள் கண்ணன் எழுந்தருளியதும் தங்கள் ஸ்தன குங்குமங்களால் முத்திரை போட்ட
உத்திரீயங்களால் ஆத்ம பந்துவான காந்தனுக்கு ஆஸனம் ஸம்ர்ப்பிவித்தார்கள் என்றார் சுகர்.
கோதையின் ஸ்தன சந்தனம் கலந்த ஆடையை.

த்வதௌகை:அதிவாஸ்ய —
உன்னுடைய குழற் கற்றைகளால் மணமூட்டி; கூந்தல் முழுவதின் முழுவாஸனையையும் மாலையிலேற்றி.
பன்மையால் குழலில் ஓரிடமும் பாக்கியில்லாமல் சூடி என்று காட்டுகிறார்.

தத்தாம் — கொடுக்கப்பட்ட; மாலாமபி — மாலையையும்;

சூடாபதேந — சிகைஸ்தானத்தால்;

பரிக்ருஹ்ய —
ஆதரத்துடன் க்ரஹித்து;
“பரிக்ருஹ்ய” என்பது
மணம் புரிதலையும் சொல்லும். விவாஹ ஸந்தர்ப்பத்தையும் விளக்குகிறது.

கோதே — கோதாய்!
ரங்கபதியையும் கோதையையும் “ரங்கபதிரேஷ கோதே” என்று ஓரடியில் ஜோடி சேர்த்தார்.

ஏஷ ரங்கபதி —
இந்த ரங்கபதி; விவஸைப்ரகரணம் ஸ்வாமிக்கு எதிரில் ஸாக்ஷாத்காரமாகிறது.
‘பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழிலரங்கம் தன்னுள் துயிலும் எங்கள் மாலே’ என்று வரிக்கப்பட்ட இவர்.

ஸௌபாக்ய ஸம்பதபிஷேகமஹாதிகாரம் —
ஸர்வேஸ்வரத் வாதிகாரத்திலும் பெரியதோர் ஸௌபாக் யஸ்வைர்யாதிகாரம். ஸமரான பெருமாள்களிலும் மஹத்தான ஓரதிகாரம்.
தமயந்தி ஸ்வயம்வரத்தில் பல தேவர்கள் கூடினார்கள். இங்கே ஒரே தேவர் பல ரூபங்களோடு பலராகக் கூடினர்.
எம்பெருமான்கள் கூட்டத்திலும் ‘எங்கள் மாலே’ என்று மஹா வ்யாமோஹத்துடன் வரிக்கப்படும் ரஹாஸௌபாக்யம்.

ப்ராயேண —
அதிகமாக; பெருமாள்களுக்குள் தாரதம்யத்தை நான் அறுதியிடேன்.
உத்ப்ரேக்ஷையாகக் கவிபாடுவது மட்டுமே தேவிமார் பேசலாம்.

—————

துங்கைரக்ருத்ரிமகிர: ஸ்வயமுத்தமாங்கை:
யம் ஸர்வகந்த இதி ஸாதரமுத்வஹந்தி |
ஆமோதமந்யமதிகச்சதி மாலிகாபி:
ஸோபி த்வதீயகுடிலாளகவாஸிதாபி: || .19.

அக்ருத்ரிமகிர: — ஒருவராலும் செய்யப்படாத ச்ருதிகள்; துங்கை: — உயர்ந்த;
உத்தமாங்கை: — சிரஸுகளால் (உபநிஷத்துகளால்); யம் — எவனை;
ஸர்வகந்த இதி — எல்லா நற்கந்தங்களையுமுடையவனென்று; ஸாதரம் — ப்ரியத்தோடு;
உத்வஹந்தி — தாங்குகின்றனவோ; (விவாஹம் செய்துகொள்ளுகிறார்களோ, மாலையிடுகிறார்களோ,);
ஸோபி — அவனும்; த்வதீயகுடிலாள கவாஸிதாபி: — உன் சுருட்டைக் குழல்களால் மணமேற்றிய;
மாலிகாபி: — மாலைகளால்; ஆமோதம் அந்யம் — ஓர் புதிய விலக்ஷண வாஸனையை; அபிகச்சதி — பெறுகிறார் (அனுபவிக்கிறார்)

அபௌருஷேயமான ச்ருதிகள் தங்கள் உன்னதமான சிரஸுகளால் எவனை ‘ஸர்வகந்தன்’ என்று
தாங்குகின்றனவோ (மாலையிடுகின்றனவோ), அவனும் உன்னுடைய வக்ரமான குந்தளங்களால் மணமூட்டப்பட்ட
மாலைகளால் ஓர் ‘புதிய மணத்தை’ப் பெறுகிறான்.
(உன் மாலை மணத்தைப் பெற்று உன்னை மணம் புரிந்து திருமால் ஓர் புதுமணம் பெறுகிறார்.)

கோதா மாதா! அநாதியான வேதங்களின் சிரஸ் என்று சொல்லப்படும் உபநிஷத்துக்கள், பகவானை
“ஸர்வ கந்தமயன்” , “ஸர்வகந்தன் ‘ என்று கொண்டாடி தங்கள் சிரஸ்ஸில் தரிக்கின்றன.
அத்தகைய முழுதும் மணம் கமழும் எம்பெருமான், நீ, உனது சுருண்ட கூந்தலில் சாத்திக் கொண்டுப் பிறகு
சமர்ப்பிக்கப்பட்ட மாலைகளைத் தன சிரஸ்ஸில் வகித்து விலக்ஷ்ணமான , பரம போக்யமான , வாசனையை அடைகிறான்.

அவ: —
எல்லா ஸுகந்தங்களை யுடையவனென்று ஸ்ருதிகள் உன் நாயகன் உத்தம கந்தத்தைப் புகழ்ந்து தங்கள் தலைகளால்
அந்த வாசனையோடு கூடினவனைச் சூடி வாஸனை பெறுகின்றன. ஸ்ருதி சூடைகள் ஸர்வகந்தனைச் சூடுகின்றன.
எவனை அனந்த ஸ்ருதி தேவிகள் சிரஸால் ஆதரத்தோடு சூடுகின்றனவோ! ஸர்வ கந்தத்திற்குள் ளகப்படாத கந்தமுண்டோ? உண்டு.

துங்கை —
ஸ்ருதி தேவிகளின் சிரஸுகள் உபநிஷத்துக்கள். உபநிஷத்துக்களிலும் உன்னதமானதுமுண்டோ?
ஸர்வோத்தங்களை எட்டி அவனருகிலுள்ள உபநிஷத்துக்களும் ஸர்வோத்தங்கள்.

அக்ருர்த்திமகிர: —
ஒருவராலும் செய்யப்படாமல் தாமாக நித்யமாயுள்ள ச்ருதிகளான வாக்கு தேவிகள்.
கோதை ஸ்துதியில், கோதை கல்யாணத்தில், எல்லாம் இயற்கையானதே யல்லாது, செயற்கைப் பொருளே இல்லை.

ஸ்வயம் —
ஸ்ருதி தேவிகள் ஸ்வயமாக பூர்ண பாவத்தோடு உன் மணாளனிடம் நாயக ப்ரீதி செய்கிறார்கள்.

உத்தமாங்கை: —
ஸ்ருதி தேவிமாரான அபூர்வ பரிமளமுடைய ஸ்ருதி தேவிகளான பெண்கள் தங்கள் சிரஸில் ஸர்வகந்தனென்று
உன் மணாளனைச் சுமந்து அவன் பரிமளத்தைத் தங்கள் சிரஸில் ஏற்றுகிறார்கள்.

உத்தமாங்கை: — சிரஸுகளால்,
சுடர்மிகு சிரஸுகளால். யம் — யவனை

ஸர்வகந்த: இதி –
எல்லா ஸுகந்தங்களையுமுடையவனென்று. ‘ஸர்வகந்த:ஸர்வரஸ’ என்று சாண்டில்யோபநிஷத்து.
சாண்டில்யர் பக்திஸூத்ரங்களியற்றியவர். பஞ்சராத்ரத்தில் அர்ச்சைப் பெருமாள்களின் மஹிமையை விஸ்தரித்திருக்கிறார்.
ச்ருதியின் பதத்தையே இங்கே அமைக்கிறார்.

ஸாதரம் —
‘ஸர்வகந்த:’ என்பதை அந்த உபநிஷத்து வாக்கியம் திருப்பித் திருப்பிப் பேசுகிறது. அதனால் அந்த கந்தத்தில்
ச்ருதியின் ஆதரம் தோற்றுகிறது. ‘ஆதராதலோப:’ என்கிற ஸூத்ரத்தின் பாஷ்யத்தை இங்கே நினைக்கிறார்.
அப்யாஸத்தால் தாத்பர்யமதிகம்.

உத்வஹந்தி —
உத்வாஹமென்பது விவாஹத்தையும் சொல்லும். ச்ருதிதேவிகள் உன் மணாளனை மணம் புரிகிறார்கள்.
எனவே வாஸனை மாலையாகத் தலையில் சூடுகிறார்களோ

ஸோபி — அந்த ஸுகந்தக் களஞ்சியமான பெருமாளும்

அதீயகுடிலாளக வாஸிதாபி: —
உன்னுடைய சுருட்டைக் குழல்களால் மணமேற்றப்பட்ட. ஆர்ஜவமே வடிவுகொண்ட உனக்குக் குழல்களொன்று
தான் வக்ரகுணமுடையது. அதுவும் அழகு ஸ்வபாவத்தால். ‘ஸ்வபாவ வக்ராண்யௌகாநி தாஸாம்’ என்பர்.
மயிர்கள் சுருண்டிருப்பது போல வாசனையும் சுருண்டு சுருண்டு வீசுகிறது. (அகிற்புகை சுருள்வதுபோல)

மாலிகாபி — மாலைகளால். ‘மாலைகளே மாலிகைகள்’

ஸ்வார்தம் — நீ சூடினாலும், மாலைகள் தேவார்ஹமாக தேவ போக்யமான மாலைகளாகவே இருக்கின்றன.

அந்யம் — எல்லாமென்பதிலும் அகப்படாத ஓர் புதிய

ஆமோதம் — வாஸனையை

அதிகச்சதி — அடைகிறார், அநுபவிக்கிறார். பரிமளரங்கனிலும் வாசனா ரஸிகனுண்டோ? (19)

——————

தந்யே ஸமஸ்த ஜகதாம் பிதுருத்தமாங்கே
த்வந் மௌளி மால்ய பர ஸம் பரணேன பூய:|
இந்தீவரஸ்ரஜ மிவாதததி த்வதீயாந்யா
கேகராணி பஹுமாந விலோகிதாநி || .20.

த்வந் மௌளி மால்ய ஸம்பரணேந — உன் சிரோமாலைகளைத் தரிப்பதால்;
பூயோ தந்யே — மிகவும் (முன்னிலும்) தந்யமான (க்ருதார்த்தமான);
ஸமஸ்த ஜகதாம் பிது: — எல்லாவுலகுக்கும் தகப்பனான (பகவானுடைய);
உத்தமாங்கை: — சிரஸில்;
த்வதீயாநி — உன்னுடையதான;
பஹுமான விலோகிதாநி — கௌரவத்தைக் காட்டும் த்ருஷ்டிகளான;
ஆகேகராணி — அழகிய அரைக்கண் பார்வைகள்;
இந்தீவரஸ்ரஜம் — கரு நெய்தல் மாலையை;
ஆதததீவ — செய்கின்றன போலும்

உலகுக்கெல்லாம் தகப்பன் பகவான். அவனுடைய சிரஸு உலகுக்கெல்லாம் தந்யம்.
உன் மாலைகளைத் தரிப்பதால் அச் சிரஸு இன்னும் மிக்க தந்யமாயிற்று.
அதில் உன்னுடைய பஹுமானத்தோடு கூடிய ஆசை நிறைந்த அரைக்கண் பார்வைகள்
கரு நெய்தல் மாலை போல சேர்ப்பிக்கின்றன.

ஸமஸ்த லோக நாயகனான —எல்லா உலகங்களுக்கும் பிதாவான, ரங்கநாதனின் உத்தம அங்கமானது,
நீ, உன் உத்தமாங்கத்தில் தரித்து சமர்ப்பித்த மாலையால் –அதைத் தரித்ததால்,தந்யமாயிற்று மேலும்,
நீ, அடங்காத காதலுடன் அரைக்கண்களால் , பார்வையை அவன்மீது வீசுகிறாய். அந்தப் பார்வை அலை அலையாக எழுந்து,
அவன் கழுத்தில் நீலோற் பல (கருநெய்தல்) மாலைபோல் அமைந்துள்ளது.
தலை குனிந்து நீ நாணி நிற்கிறாய்;
ஆனால், அவனோ, நீ அவனைப் பார்க்கவேண்டும் என்கிற ஆசையில்,
நீ ஸமர்ப்பித்த எல்லாவற்றையும், திருமுடியில் ஏந்தி இருக்கிறான்

அவதாரிகை

(1) ரகுபதியின் திருவடிகள் எல்லோருக்கும் தந்யம் என்றார் காளிதாஸர். “தன்யை: பும்ஸரம் ரகுபதி பதை:”
ஸர்வலோக பிதாவான பெருமாள் சிரஸு எல்லா உலகங்களுக்கும் ஸ்வயம் தந்யமே.
உன் மாலைகளை யணிந்து அது இன்னும் அதிநயமாக தந்யமாகிறது.
வாஸனையின் அதிசயம் கிடைத்தது மட்டுமல்ல, தந்யையுமதிகமாயிற்று.

(2) ஆசையோடு தொடுத்த பூமாலைகள் ஸமர்ப்பிப்பது மட்டுமல்ல, பாமாலைகள் ஸமர்ப்பிப்பது மட்டுமல்ல,
ஓர் நாயனார் தன் கண்ணையே பிடுங்கித் தன் தேவனுக்கு அப்பினாரென்பர்.
அது பக்தியைக் காட்டினாலும் ஜுகுப்ஸா ரஸத்தையும் தரும்.

‘அஸிதேக்ஷணா’ என்று ஸீதைப் பிராட்டிக்கு ராகவனிலும் ஏற்றத்தைப் பணித்தார்,
இருவரையும் தராஸில் நிறுத்து அனுபவித்த ருஷி.
“மையார் கருங்கண்ணிக் கமலமலர்மேற் செய்யாள்”.
தன் கருவிழியின் அரைக்கண் திருஷ்டிகளின் நீலகாந்திகளால் ஸ்நேஹமயமான கருநெய்தல் புஷ்பமாலையை
சிரஸில் ஸமர்ப்பிக்கின்றாள் போலும்.
‘யாரிடம் மனத்திற்கும் கண்ணுக்கும் நிர்ப்பந்தமுளதோ, அவரை வரிப்பது ச்ரேயஸ்ஸு’ என்பர்.
மனமும் கண்ணும் இந்த வார் முடியில் மாலையாக பத்தமாயின.
பெருமாள் தாமரைக் கண்கள் தாமரைப் பூமாலையை ஸமர்ப்பிக்கும்,
இவள் கண்கள் கருநெய்தல் மாலையை ஸமர்ப்பிக்கின்றன.
‘மீனப்பெருமானின் கண்கள் தாமரைக் காடுகளைச் சொரிந்தன’ என்ற அனுபவத்தை நினைக்கவும்.

தந்யே —
இதை முதலிலேயே பேசுவது அழகு. பெருமாள் தந்யர், பூயோதந்யர் (இன்னும் மேலும் மேலும் தந்யர்) என்கிறார்.
தந்யரென்று எத்தனை தரம் பேசினாலும் தகும். நம் பெருமாள் திருமுடிக்கு என்ன பாக்யம் கிடைத்தது!

ஸமஸ்தே ஜகதாம் —
உலகுக்கெல்லாம். இதை நடுவில் வைத்தது மிக அழகு. உலகுக்கெல்லாம் தந்யம், உலகுக்கெல்லாம் தகப்பன்.
கோதை விவாஹ விஷயத்தில் நம் ஸ்வாமியிடம் இத்துதியான பாமாலை கிடைத்ததும் பெருமாள் பாக்யம்.
அவரிடம் பிருதம் பெற்ற கவி ஸிம்ஹம்.

பிது: —
உலகுக்கெல்லாம் தகப்பனுடைய.
‘உலகுக்கோர் தனியப்பன் தன்னை’.
இவரை மாலையிடுவதால் நீ உலகுக்கெல்லாம் ஓர் தாயாகிறாய்.
விவாஹ க்ஷணத்திலேயே ஸர்வ லோகத்துக்கும் நீ தாயாகிறாய்.
“பத்துப்பிள்ளைகள் பெறுவாயாக” என்று பெரியோர் அதிசயமாக விவாஹத்தில் ஆசீர்வதிப்பர்.

உத்தமாங்கை: —
அவர் திருவடி உலகுக்கெல்லாம் தந்யம்.
அவர் திருமுடி ஸர்வேஸ்வர கிரீடம் தரிப்பது.
மௌளிபர்யாதம். அவரை ஸேவிப்பது மஹாபாக்யம்.

த்வ மௌளி மால்ய ஸம்பரணேன —
உன்னுடைய மாலைச் சுமையை வஹிப்பதால். மாலைச்சுமை, வாசனைச்சுமை, கோதையின் ஸ்நேகச்சுமை.
சுமை சுமப்பதால் தந்யமாவரோவென்று கேட்கலாம்.
இச்சுமை இன்பச்சுமை . இன்பமான வாசனைச்சுமை என்று பதில்.
‘பாரத்தைப் பரிப்பதால்’ என்னுமிடத்தில்,
‘பாரத்தை அழகாக, இன்பமாக, புருஷார்த்தமாகச் சுமக்கிறார்’ என்பதைக் காட்ட
“ஸம்” என்று சேர்த்து
“ஸம்பரணத்தால்” என்று பேசுவது மிகவழகு.
ஸமன்வய ஸூத்ரத்தில் “ஸம்” போல.

இந்தீவரஸ்ஜ —
கரு நெய்தல் பூ மாலையை.
“இந்தீவரரக்ஷி” என்பர். கண்ணை இந்தீவரமாக (கருநெய்தல் புஷ்பமாக) ரூபணம் செய்வர்.
கண்களில் கருங்காந்திகள் நெய்தல் புஷ்பங்களாகின்றன. புஷ்பங்களுக்கு அன்பு ஸூத்ரமாகும்.
கண்கள் ஜ்யோதிஸ். ஸூர்யகிரணங்கள் கண்களுக்குள் புகுந்துள்ளனவென்பர்.
ஜ்யோதிர்மயமான கண்களிலிருந்து வரும் காந்திமாலை.

த்வதீயாநி — உன்னுடையவைகளான.

ஆகேகராணி — பாதி மூடிய கண்களால். அரைக்கண் திருஷ்டிகளான.

பஹுமானவிலோகிதாநி — பஹுமானத்தோடு கூடிய பார்வைகள்.

ஆதததீவ —
(நெய்தல் மாலையாக) ஆகின்றனபோல (மாலை ஸமர்ப்பிக்கின்றன போல).
“பூய:” என்பதை இங்கேயும் சேர்த்து அந்வயிக்கலாம்.
பூமாலைகள் சிலவே. கடாக்ஷமாலைகள் ஏராளமானவை.
இப்படியும் அந்வயத்தைத் திருவுள்ளம் பற்றி 2 பாதிகளுக்கும் நடுவில் இம்மாலையை நடுநாயகமாக வைத்தது.

———–

ரங்கேஸ்வரஸ்ய தவ ச ப்ரணயாநுபந்தாத்
அந்யோந்ய மால்ய பரிவ்ருத்தி மபிஷ்டுவந்த: |
வாசாலயந்தி வஸுதே ரஸிகாஸ் த்ரிலோகீம்
ந்யூநாதி கத்வ ஸமதாவிஷயைர் விவாதை: || .21.

வஸுதே — பூமிப்பிராட்டியே (விஷ்ணுபத்நியே);
ரங்கேஸ்வரஸ்ய — ரங்கேஸ்வரனுக்கும்;
தவ ச — உனக்கும்;
ப்ரணயாநுபந்தாத் — பரஸ்பர ஸ்நேஹ வெள்ளத்தால்;
அந்யோந்ய மால்ய பரிவ்ருத்திம் — ஒருவருக்கு ஒருவர் மாலை மாற்றிக்கொள்வதை;
அபிஷ்டுவந்த: — நன்றாய்த் துதிப்பவரான;
ரஸிகா — ரஸிகர்கள்;
ந்யூநாதி கத்வ ஸமதா விஷயை: – தாழ்ச்சி உயர்த்தி ஸமத்வமென்ற கக்ஷிகளைப் பேசும்;
விவாதை: — விவாதங்களால்;
த்ரிலோகம் — மூவுலகையும்;
வாசாலயந்தி — ஒரே சப்தமாகச் செய்கிறார்கள்.

அம்மா பூதேவியே! ரங்கேஸ்வரனுக்கும் உனக்கும் அந்யோந்ய ஸ்நேஹத்தால் அந்யோந்யம் மாலை மாற்றிக் கொள்ளும் போது
அவ்வழகைத் துதிப்பவரான ரஸிகப் பெரியோர்கள் தாழ்த்தி, உயர்த்தி, ஸமம் என்ற கக்ஷிகளைப் பற்றிய
விவாதங்களால் லோக த்ரயத்தையும் சப்திக்கச் செய்கிறார்கள். (அதிகப் பேச்சுக் காரர்களாக்குகிறார்கள்.)

பூமியில் அவதரித்த கோதா தேவியே…..நீயும் ரங்கநாதனும், மாலைகளை ஒருவருக்கொருவர் பரிமாறி,
மாலை மாற்றிக்கொள்ளும்போது, சூழ இருக்கும் ரஸிகர்கள் -பக்தர்கள்,
உங்களில் ஒருவரைத் தாழப் பேசியும், ஒருவரை உயர்த்திப் பேசியும், இருவரையும் சமமாகப் பேசியும்,
இந்த ஆரவாரம் , உலகம் முழுவதும் பரவி, எதிரொலிக்கச் செய்கிறார்கள்.

அவதாரிகை

(1) 14 முதல் 7 சுலோகங்களால் கோதை மாலையைப் புகழ்ந்தார். இந்த விவாஹத்தில் ‘மாலை’ கடகராகும்.
உலகத்திற்குப் புருஷகாரமாகும் ஆண்டாளுக்கும் புருஷகாரமாகிற பெருமையை யுடையது.
மாலையை எத்தனை புகழ்ந்தாலும் தகும். விவாஹம் சப்த பதங்களால் ஏற்படும். 7 ஸ்லோகங்களால் மாலா வர்ணனம்.
ஆண்டாள் மாலையை மட்டும் புகழ்ந்ததை 7 ஸ்லோகங்களோடு நிறுத்தி, விவாஹத்திற்கு முக்யமான அங்கமான
மாலை மாற்றுதலை வர்ணித்து விவாஹத்தைப் பூர்த்தியானதாகக் காட்டுகிறார்.

(2) இதுவரையிலும் கோதை கன்யாப் பெண்ணாயிருந்தாள். இப்போது பத்நியாகிறாள்.
“அஸ்யேசாநா ஜகதோ விஷ்ணு பத்நீ” என்ற ஸ்ருதிக்கு விஷயமான பூமிப்பிராட்டியாகிறாள்.
இதைப்பற்றி இங்கே ‘வஸுதே’ என்று கூப்பிடுகிறாரென்ற ரஸத்தை அனுபவிக்கவேண்டும்.
‘ஈசானா’ என்ற பதத்திற்கு ஆண்டாள் என்று பொருள்.
இவரை, இந்த ரங்கேஸ்வரரை ஆண்டாள் — ஜகத: உலகத்தை ஆண்டாள்.

(3) விவாஹத்தில் கன்யையைச் சேர்ந்தவர் கன்யையை உயர்த்திப் பேசுவர்.
வரனைச் சேர்ந்தவர் வரனை உயர்த்திப் பேசுவர்.
உண்மையில் இருவரும் மஹிமையில் ஸமமென்று சொல்லக்கூடுமானாலும்,
அந்தந்த பக்ஷத்தார் அந்யோந்யம் ஏற்றத் தாழ்ச்சியைப் பேசுவதும், இரைச்சல் போடுவதும்,
ரஸப் பேச்சுக்கள். அதெல்லாம் தத்துவமல்ல.;

ப்ரணயாநுபந்தாத்’, தங்கள் பரிவின் மிகுதியால், ரஸத்தின் மிகுதியால், ரஸிகர்களாகப் பேசுகிறார்கள்.

ரங்கேண்வரஸ்ய –அண்டர்கோன் அணியரங்கம் — புருஷஸூக்தத்தால் புகழப்படும் ஸர்வேச்வரனுக்கும்.

தவ ச — உனக்கும்

ப்ரணயாநுபந்தாத் —
ஸ்நேஹப் பெருக்கால். முன்பே பந்தம் (பதிபத்நீ ஸம்பந்தம்) உளதே.
இப்பொழுது கோதை என்ற கந்யையாக அவதரித்ததில் ஆசையோடு கோடித்த இந்த வதுவையில் ஸ்நேஹம் மிகப் பெருகியது.
இப்படி ஸ்நேஹப் பெருக்குக்காகவே அவதரித்து வதுவை கோடிப்பது.
அரங்கனும் இவரவதரிக்கப்போகும் திக்கை நோக்கிக்கொண்டே யிருந்தார்.
‘ப்ரணயாநுபந்தாத்’ என்பதை வாசாலந்தி’ என்பதற்குக் காரணமாகவும் அந்வயிக்கலாம்.
அப்படி உச்சாவசமாகத் தாழ்த்திப் பேசுவதும் ஸ்நேஹப்பெருக்கால்தான். நிந்திப்பதில் தாத்பர்யமேயில்லை.
ஸ்நேஹத்தால் மற்றொன்றைப் புகழ்வதில் மட்டும் தாத்பர்யம். நஹிநிந்தாந்யாயம்.

அந்யோந்ய மால்ய பரிவ்ருத்திம் —
ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொள்வதை. பெரிய பிராட்டியார் ஸ்தனசந்தனமாலையான
வைஜயந்தீ ஆண்டாளுக்கும், ஆண்டாள் மாலை திருவுடன் கூடிய பெருமாள் மார்புக்கும் சேருகிறது.
கழுத்திலுள்ள மாலைகளின் மாற்றம். பெருமாள் சிரஸிலேறிய மாலை இந்த மாற்றத்தில் வாராது.
அதன் ஏற்றத்தை மறுப்பாரொருவருமில்லை.

அபிஷ்டுவந்த: —
நன்றாய்த் துதிக்க ஆசைப்படுபவர். துதிக்கும் ஆசையால் அதிகமாகப் பேசுவது ஸஹஜமே.
ஒருவரைத் துதிக்கையில் அத்துதிக்காகவே மற்றொருவரைக் கொஞ்சம் தாழப் பேசுவதும் ஸஹஜமே.
இங்கே சத்ருப்ரத்யம் அழகு. ஹேதுப்பொருள். அதற்காகவே அடுத்தாற்போல் கிரியையும் வைக்கிறார்.

வாசாலயந்தி —
ஒரே சப்த கோஷமாக்குகிறார்கள். அதிகப் பேச்சுக்காரர்களாகிறார்கள்.
ஸத்யாய மிதபாஷிணம் என்றிருப்பவரையும் பஹுபாஷிகளாக அதிகப்ரஸங்கம் செய்யும்படி செய்துவிடுகிறார்கள்.
ஒரு கக்ஷியைக் குறைத்துப் பேசவே பேச்சு தடித்துவிடுகிறது.

வஸுதே —
அம்மா பூமிதேவியே! பூமி முழுவதையும் (மூவுலகையும்) இக்கலஹசப்தத்தால் உத்கோஷிக்கச் செய்கிறார்கள்.
அம்மா! நீ பூமிப்பிராட்டியானதால் பூமியிலுள்ளாரெல்லாரும் பெண்கக்ஷி. ஏகக் கூக்குரலாய் விடுகிறது.

ரஸிகா: — ரஸப்பேச்சுக்களம்மா, நிந்தை போன்றதும் துதிகளே யம்மா. உன் நாயகனை இளப்பமாக்காது.
ஆகையால் நீ தாபப்படவிடமில்லை. உன்னையும் இளப்பம் செய்யாது.
ஆகையால் உன் நாயகனுக்கும் தாபத்திற்கு இடமில்லை. எல்லாம் ஒரே ஸ்நேஹரஸம்.
ஸ்நேஹப்பெருக்கு. உண்மையில் விரஸமான எண்ணமே ஒருவருக்குமில்லை.

த்ரிலோகீம் —
த்ரிபுவனகமனமான, த்ரிலோகேச்வரரான. தம்பதிகளின் விவாஹத்தில் மூவுலக ஜனங்களும் பேசுகிறார்கள்.
பெண்கக்ஷியோர், பிள்ளை கக்ஷியோர், மத்யஸ்தர் ஆகிய மூவரையும் முறையே
தாழ்ச்சி, உயர்த்தி, ஸமம் என்ற மூன்று கக்ஷிகளையும் பேசச் செய்கிறார்கள். மூவுலகையும் சப்தமயமாக்குகிறார்கள்..

ந்யூநாதிகத்வஸமதாவிஷயை —
ஒருவர் தாழ்த்தி, ஒருவர் உயர்த்தி. இருவரும் ஸமம் என்ற மூன்று கக்ஷிகளான.

விவாதை: —
விவாதங்களாலே. விவாஹமும், விவாதமும் ஸமர்களுக்குத்தான் சோபிக்குமென்பர்.
இந்த விவாஹத்தில் வதூவரர்கள் ஸமராயிருந்துதீர வேண்டுமாகையால் விவாதப்படுபவர்களும் ஸமர்களாகி
ஸமத்வக் கக்ஷியையே ஸித்தாந்தப் படுத்துகிறார்கள். .
முன் கக்ஷிகள் இரண்டும் பூர்வபக்ஷம். ஸமத்வம் ஸித்தாந்தம்.
துல்யகுணமான வதூவரர்களை ஒன்று சேர்த்து (ஸமமாகச் சேர்த்து) ப்ரஜாபதி நீண்டகாலமான
அபவாதத்தை நீக்கிக்கொண்டார் என்று சாகுந்தலம்.
‘துல்ய’ என்ற அடைமொழியோடு த்ருப்தியில்லாமல் ‘ஸமமாகச்சேர்த்து’ என்ற க்ரியாபதத்தையும் கவி வைத்தார்.
“மைச்சேர்த்தி அரிது அரிது.” (21)

———–

துர்வாதளப்ரதிமயா தவ தேஹகாந்த்யா:
கோரோசனாருசிரயா ச ருசேந்திராயா: |
ஆஸீதநுஜ்ஜித சிகாவனகண்டசோபம்
மாங்கள்யதம் ப்ரணமதாம் மதுவைரிகாத்ரம் || .22.

மதுவைரிகாத்ரம் — வேதத்தைத் திருடிய மதுவென்னும் அஸுரனுக்குச் சத்ருவான மதுஸூதனனுடைய திருமேனியானது;
துர்வாதளப்ரதிமயா — அருகம்புல்லைப்போல் பசுமையான;
தவ தேஹகாந்த்யா — உன் திருமேனியொளியாலும்;
கோரோசனாருசிரயா — கோரோசனையைப்போல் பொன்னிறமான;
இந்த்ராயா — லக்ஷ்மியின்;
ருவா ச — காந்தியாலும்;
அநுஜ்ஜிதசிகாவள கண்டசோபம் –மயில் கழுத்தின் சோபையை விடாததாகி;
ப்ரணமதாம் — அடிபணிபவர்க்கு;
மாங்கள்யதம் ஆஸீத் — மங்களத்தை அளிப்பதாயிற்று.

மதுஸூதனனுடைய திருமேனியானது அருகம்புல்லைப் போலப் பசுமையான உன் திருமேனியின் பச்சைக் காந்தியாலும்,
கோரோசனையைப் போன்ற லக்ஷ்மீ தேவியின் பொன்னிறத்தாலும், மயிலின் கழுத்தின் சோபையை விடாமல்
வஹித்துக் கொண்டு அடிபணிபவருக்கெல்லாம் மங்களத்தை அளிக்கிறது.

ஹே…கோதாப் பிராட்டியே–
பெரிய பிராட்டியின் நிறம் பொன் நிறம்; உன்னுடைய நிறம் அருகம்புல் பச்சை; பகவானின் நிறம் நீலம் ;
பகவானை சேவிப்பவர்கள், திருமேனியில் ,மயில் கழுத்து நிறம் —-அதாவது, பொன் நிறம், அருகம்புல் நிறம் மற்றும் நீல நிறம் சேர்ந்து—
மயில் கழுத்துச் சாயல் —திருமேனியில் விளங்கிட, மங்கலத்தைக் கொடுப்பதாக அமைந்துள்ளது.
திருக்கல்யாணோத்ஸவம் முடிந்து ,நீங்கள் ஏக ஆஸனத்தில் எழுந்தருளி இருக்கும் பாங்கை வெளிப்படுத்துகிறது.

அவதாரிகை

மாலைமாற்றி விவாஹம் நடந்து, கோதையும் பெரியபிராட்டியாரோடு விஷ்ணுபத்நியானாள்.
பிராட்டிமாரிருவரும் உபய நாச்சிமாராய் இருபக்கமுமிருக்கிறார்கள்.
அவர்கள் காந்திகள் பெருமாள் கரிய திருமேனியில் பரவுகின்றன. கோதையின் நிறம் அருகம்புல்லைப் போன்றது.
பெரியபிராட்டியார் நிறம் பொன்நிறம், கோரோசனையைப் போன்றது.
இருபக்கமும் இருவித காந்திகளும் பெருமாள் நீலத்திருமேனியில் இடைவிடாமல் பரவுகின்றன.
நீலகண்டமென்னும் மயிலின் கழுத்தைப்போல பெருமாள் திருமேனி முழுவதும் ஆகின்றது.

விவாஹத்தில் தம்பதிகளைப் பார்வதீபரமேச்வர மிதுனத்திற்கு ஒப்பிடுவார். அவர்களுடம்புமொன்றாயுளது.
காடோவகூடமாகில் பிரிவுக்கே ப்ரஸக்தியில்லாமல் இருக்கும்.
உபய நாச்சிமார் திருமேனிக் காந்திகளும் பெருமாள் திருமேனியும் ஒன்றாகச் சேர்ந்து பிரியாச் சேர்த்தியாகின்றன.
நீலகண்டரை மூன்றாவது அடியிலும், கௌரியை இரண்டாமடியிலும் ஒருவாறு ஸூசிக்கிறார்.

‘மஹேஸ்வரம் பர்வதராஜ புத்ரீ’ என்று பாஞ்சாலீ ஸ்வயம்வரத்தில் த்ரௌபதீ அர்ஜுனனை மாலையிட்டதை வ்யாஸர் வர்ணித்தார்.
‘அநுஜ்ஜித’ என்று நீங்காச் சேர்த்தியை ஸூசிக்கிறார்.
நீலகண்டருக்குக் கழுத்து மட்டும் நீலம்; மயிலுக்குக் கழுத்து இப்படி விசித்ர வர்ணமாயிருக்கும்.
பெருமாள் திருமேனி முழுதும் தேவிமார் காந்திகளால் மயில் கழுத்துக்கொப்பாகிறது.
சிவசப்தம் மங்களத்தைச் சொல்லும். நீலகண்டசோபையை உடைய திருமேனி மங்களமாகிறது என்று ஓர்வித வேடிக்கை.
ஈஸ்வரர் இத்தம்பதிகளுக்குப் பௌத்திரர். அவர் புத்ரர்களான அருகம்புல்லை விரும்பும் பிள்ளையாரும்,
மயில்வாஹனரான கார்த்திகேயரும் ப்ரபௌத்திரர்கள்.
‘சதுர்முகர் ஈச்வரர் முதலியவராகிய புத்திர பௌத்திரர்களோடு கூடிய ஸீதா ஸமேதரான ராமனென்னும்
க்ருஹமேதிக்கு நமஸ்காரம்’ என்று ரகுவீரமங்கள கத்யம் ஸாதித்ததை இங்கும் நினைக்கவேணும்.
‘சிவனொடு பிரமன் வண்திருமடந்தை சேர் திருவாக மெவ்வாவியீரும்’

தூர்வாதளப்ரதிமயா —
அருகம்புல்லைப் போலொத்த பசுமையான. இது மங்களத்ரவ்யம். விக்நேச்வரப்ரியம், விஷ்வக்ஸேநாராதன ஸூசகம்.

தவ தேஹகாந்த்யா — உன் திருமேனி காந்தியால்;

கோரோசனாருசிரயா — கோரோசனை வர்ணமான

இந்திராயா:ருசாச —
லக்ஷ்மீதேவியின் காந்தியாலும்; கோதையும் ஓர் பக்கத்தில் பத்நியாகக்கூட நிற்பதில் லக்ஷ்மீதேவியின் ருசியையும் ஸூசிக்கிறார்.
இந்த ஸந்தோஷத்திற்கு இத்தனை காலமாய்க் கோடித்துக் கொண்டிருந்ததால் விவாஹ க்ஷணத்திலேயே
தன்னோடு ஜோடியாக மற்றோர் பக்கத்தில் நிறுத்தி வைத்து சந்தோஷித்தான்.
ரோசனா, ருசோரா, ருசா என்று மூன்றுதரம் ருசியைக் காட்டும் சப்தங்கள். ருசிம் — ராதி, ருசியைக் கொடுக்கிறது, ருசிரம்.

ஆஸீத் — ஆயிற்று.

அநுஜ்ஜித சிகாவளகண்டசோபம் — ‘சிகாவள’ என்பது மயில், நீலகண்டம். அதன் கழுத்தின் சோபையை விடாமல்.

மாங்கள்யதம் —
திருமேனியே மங்களத்தையளிக்கிறது. பெருமாள் திருமேனியே ஆச்ரிதருக்கு மாங்கல்யத்தைக் கொடுக்கும்.
பார்வதீச்வரர்கள் மாங்கல்யத்தை, தாம்பத்யத்தை, மங்களத்தைக் கொடுப்பதென்பதும்
பெருமாள் அவர்களுக்குள்ளிருந்து கொடுப்பதால்தான்.
பெருமாள் திருமேனியுடன் உபயநாச்சிமார் திருமேனிக்காந்திகள் பிரியாமல் சேர்ந்ததும்,
அவர்கள் திருமேனிகள் கூடிய சுபாச்ரயம் ஸகல மங்களங்களையும் அளிக்க யோக்யமாயிற்று.
இத்தம்பதிகள் பிரியாமல் சேர்ந்தே ஸகல ச்ரேயஸ்ஸுகளையும் அளிப்பவர்.
‘மாங்கல்யம் தந்துநாநேந’ என்ற ச்லோகத்தையும் ஸூசிக்கிறார். மாங்கல்யத்தைக் கொடுக்கும் நூலென்று பொருளையும் ஸூசிக்கிறார்.

மதுவைரிகாத்ரம் —
இதனால் சில அழகிய பொருள்களின் வ்யஞ்ஜனம்.
(1) வேதங்களாகிய கண்களையிழந்த ப்ரஹ்மாவுக்கு வேதங்களைத் திருப்பிக் கொணர்ந்து
அவருக்கு ஞானப்ரதானம் பண்ணி மயர்வை நீக்கிய அவதாரம். புத்ரனுக்கும் லோகத்திற்கும் வேதமளித்த அவதாரம்.
இதனால் ப்ரஹ்மாவின் நினைப்பையும் இங்கே சேர்த்து பௌத்திர ப்ரபௌத்திரர்களோடு (பேரர், கொள்ளுப்பேரரோடு)
புத்திரரையும் சேர்த்துத் தம்பதிகளை க்ருஹமேதிகளாக அநுஸந்திப்பது.
‘புத்திரரைப் பெற்று’ என்று ஆஸீர்வதிப்பர். ப்ரபௌத்திரர் பர்யந்தம் இங்கே காட்சி.

(2) சரணாகதி ஸ்லோகமடங்கிய கீதை பாடினதும் மதுசூதனன் திருவாக்கு.
கண்ணில்லாத புத்திரர்களான நமக்கு கீதோபநிஷத்தை அருளிய திருமேனி.
வெகுகாலமாக நஷ்டமான யோகத்தைத் திருப்பிக்கொண்டுவந்து உபதேசித்தது.
கீதாசார்யன் திருமேனி சரணாகதியை உபதேசித்தது போதுமோ? அநுஷ்டானமில்லையாயின் அப்ரமாணமென்பரே!
பிராட்டிமார் சேர்த்தியில் காடோபகூடமான தசையில் விசிஷ்டத்திலன்றோ பரத்தை சமர்ப்பிக்கவேணும்!
கோதையாகிய பக்கபலமும் சேரவே பெருமாள் தப்பியோட வழியில்லை.
பெரிய பிராட்டியாருக்கு ப்ரஜா ரக்ஷணத்தில் பார்ஸ்வபலம் (பக்கபலம்) சேர்ந்துவிட்டதும்
அவனுடைய ருசிக்கு ஸந்தோஷத்திற்கு அளவில்லை.

(3) நாம் ஜ்ஞான விரோதிகள், அஜ்ஞானக் களஞ்சியங்கள். மதுவென்னும் அஸுரனைச் சீறியது போல,
நம்மையும் சீறுவது உசிதம். இது ‘வைரி’ என்பதால் ஸூசிக்கப் படுகிறது.
பிராட்டிமார் இருபக்கமும் இருக்கவே அவர்கள் காருண்ய ப்ரபை படியவே அச்சீற்றம் பரந்து போகிறது.

(4) இம் மூவர் சேர்த்தியில் வணங்கி ஆதி ராஜ்யத்தை அநுபவித்தார்களென்று அடுத்த 23ம் ஸ்லோகத்திலும்,
ஆத்மபரம் ஸமர்ப்பிப்பதற்காகப் புருஷகாரத்தை 24லிலும்,
பெருமாள் ஸ்வாதந்த்ரியத்தைக் குறைத்து அநந்தாபராதங்களைப் போக்குவதை 25லிலும்,
‘ப்ரபத்ய’ என்று ப்ரபத்தியை 26லிலும் பேசிப் போவதையும் கவனிக்க.

(5) ப்ரஹ்ம ருத்திராதிகளைத் தம் புத்திர பௌத்திரர்களாகத் தம் திருமேனியிலே சேர்த்துக் கொண்டிருப்பதாக,
விசிஷ்டமாகப் பெருமாளை அனுபவிப்பார் மயர்வற மதிநலமருளப் பெற்றவர்.
‘புரமொரு மூன்றெறித்தமரர்க்கு மறிவியந்தரனயனென வுலகழித்தமைத்தனனே’ என்று துடக்கத்திலும்,
கடைப்பத்தில் ‘சடையானைப் பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே’ என்றும் பாடி,
கடைத் திருவாய்மொழியிலும் ‘முனியே நான்முகனே முக்கண்ணப்பா’ என்று பாடியுள்ளது.

‘உலகுக்கோர் தனியப்பனை’ என்பதை ‘ஸமஸ்த ஜகதாம் பிது:’ என்று பாடி அதே பாசுரத்தில்
‘பிரமனப்பனை யுருத்திரனப்பனை முனிவர்க்குரியவப்பனை யமரரப்பனை’ என்று முன்னுள்ளதை இங்கே அனுஸரிக்கிறார்.
எல்லோர்க்கும் அப்பன் என்றதால் ‘தமியனேன் பெரியவப்பனே’ என்றபடி எனக்கும் பிதாவென்று கருத்து..
என் தகப்பன் விவாஹம், என் தாய் விவாஹம். என் தந்தை விவாஹத்தில் நான் மங்களம் பாடுகிறேன்.
இதென்ன பாக்யம்! என்ன ஆச்சர்யம்! ‘ஸர்வான் தேவாந் நமஸ்யந்தி ராமஸ்யார்த்தே யசஸ்விந:’ என்றபடி
இந்தத் தம்பதிகளின் சேர்த்தியின் மங்களத்திற்காக எல்லாத் தேவரையும் நினைக்கலாம். கால் கட்டலாம்,
பிராட்டி அலங்கரிக்கும் திருமேனியில் புத்ரபௌத்ராதிகளான அவர்கட்கும் பாகமுண்டு.

(6) ‘மதுவைரி’ என்றதால் மறையை அனுக்ரஹித்த உபகாரத்தைக் காட்டுகிறது.
விஷ்வக்ஸேநரான ஆழ்வார் மூலமாகவும் இப்பொழுது பத்நியாகச் சேர்ந்த கோதை மூலமாகவும்
தமிழ்மறைகளை அநுக்ரஹிக்கும் உபகாரமும் இங்கே ஸூசிக்கப்படுகிறது.
ஸம்ஸ்க்ருத வேதங்களைக் கொணர்ந்தது, வேதம் தமிழ் செய்த,
தெளியாத மறைநிலங்கள் தெளியச்செய்த இத்தமிழ்மறைகளால் ஸபலமாயிற்று.

————-

அர்ச்யம் ஸமர்ச்ய நியமைர் நிகமப்ரஸூனை:
நாதம் த்வயா கமலயா ச ஸமேயிவாம்ஸம் |
மாதச்சிரம் நிரவிசந் நிஜமாதிராஜ்யம்
மாந்யா மநுப்ரப்ருதயோபி மஹீக்ஷிதஸ்தே || .23.

மாத: — தாயே!;
மாந்யா — பூஜ்யர்களான;
தே — அந்த;
மஹீக்ஷித: — அரசர்களான;
மநுப்ரப்ருதயோபி — மநு முதலியவரும்;
த்வயா — உன்னோடும்;
கமலயாச — தாமரையாளோடும்;
ஸமேயிவாம்ஸம் — (ஸமேதரான) கூடிய;
தாநம் — நாதனை;
அர்ச்யம் — அர்ச்சிக்க யோக்யரை;
நியமை: — நியம நிஷ்டைகளோடு;
நிகமப்ரஸூனை: — மறைகளான புஷ்பங்களைக் கொண்டு;
ஸமர்ச்ய — நன்றாக அர்ச்சித்து; சேர்த்தியில் சேர்த்து அர்ச்சித்து;
நிஜம் — தங்கள் ஸ்வந்தமான;
ஆதிராஜ்யம் — உலகுக்கு ஆதிபத்யத்தை;
சிரம் — நீடூழி காலம்;
நிரசிஶந் — அநுபவித்தார்கள்.

அம்மா! பூஜ்யர்களான அந்த மஹா மஹிமையையுடைய மநுமாந்தாதா முதலியவர்களும் உன்னோடும்
தாமரையாளோடும் கூடிய அர்ச்சிக்க யோக்யமான நாதனை நியமங்களில் நிஷ்டராய்,
வேதமந்த்ர புஷ்பங்களால் நன்றாகச் சேர்த்து அர்ச்சித்துத் தங்கள் ஆதிராஜ்யத்தை நீடூழிகாலம் அநுபவித்தார்கள்.

கோதாப் பிராட்டியே….நீ, ரங்கநாதனை அடைந்த பிறகு, அவன் உன்னோடும், எப்போதும் பிரியேன் என்று சொன்ன
பெரிய பிராட்டியோடும் கூடி நின்று, அனைவர்க்கும் நாதன் ஆனான்.
எல்லாரும் ஆராதிக்கும்படி, அர்ச்சாவிபவத்தில் , எழுந்தருளி இருக்கிறான். இக்ஷ்வாகு வம்ஸத்தைச் சேர்ந்த,
மனு, மாந்தாதா முதலிய ராஜாக்கள்–மகான்கள், நியமத்தொடு வேதங்களாகிய மந்திர புஷ்பங்களினால், உன்னை அர்ச்சித்து,
பெரியதான ராஜ்யத்தை அடைந்தார்கள். காலத்தினால், ரங்கநாதன் முன்னும், நீ பின்னும் எண்ண வேண்டாம்.
பூமியின் உருவில் நீ என்றும் ரங்கநாதனுடன் இருப்பவளே!

அவதாரிகை

தமிழ்மறை பாடிய கோதையோடும் லக்ஷ்மீதந்த்ரம் பாடிய லக்ஷ்மீயோடும் கூடிய (வேதங்களை மீட்டு உபதேசித்து கீதை பாடிய)
மதுஸூதனன் திருமேனியைப் பாதம் பணிபவருக்கு மங்களங்கள் கிடைக்குமென்றார்.
இச்சேர்த்தியைப் பூஜித்து மநு முதலிய ரவிகுலத்தரசர் தங்கள் ராஜ்யத்தை இவர்களுக்கு சேஷமாக அநுபவித்தார்கள்.
மதுஸூதனன் அக்குல கூடஸ்தரான விஸ்வானென்னும் ஸூர்யனுக்கு மோக்ஷோபாயத்தை உபதேசித்து,
இப்படி உபதேச பரம்பரை வந்ததையும் ‘மநு முதலியவர்கள் அர்ச்சித்தார்கள்’ என்பதால் காட்டுகிறார்.

ஸூர்யகுல பரம்பரை, நம் குரு பரம்பரை, இச்சேர்த்தியின் சிஷ்ய பரம்பரை.
திவ்ய மிதுனச் சேர்த்தியை மங்களகாமர்கள் ஆத்மஜ்ஞானரான ஆசார்யராக அர்ச்சிப்பது உசிதம்.
மநு முதலியவரும் அப்பரம்பரையில் சேர்ந்தவர்கள். மநுகுலமஹீபாலர் உபயநாச்சிமாரோடு கூடிய இப்பெருமாளை அர்ச்சித்தவர்.
மைதிலீரமண காத்ரத்தால் பெருமாளும் பிராட்டியும் தாமாகிய இச்சேர்த்தியை அர்ச்சித்து ராஜ்யமாண்டார்கள்.
ஈச்வரமிதுனத்திற்கும் அர்ச்யமும் மங்களமளிப்பதுமான சேர்த்தி இது. ‘அங்கம்சேரும் பூமகள் மண்மகளாய்மகள்.’

அர்ச்யம் —
முன் ச்லோகத்தில் சொன்ன விசிஷ்டம் அர்ச்சிக்கத் தக்கது. அச்சேர்த்தியில் செய்யும் அர்ச்சனை பலத்தையளிக்கும்.
சேர்த்தியை முன் ச்லோகத்தில் ஸேவித்ததும் உடனே அர்ச்சனை செய்வது உசிதம்.
அர்ச்சனை செய்வதை உடனே பேசுகிறார். முதலில் பேசுகிறார்.

ஸமர்ச்யம் —
நன்றாயர்ச்சித்து. ‘ஸம்’ என்பதற்கு ‘ஒன்று சேர்த்து’ என்றும் பொருள்.
ஒன்று சேர்த்து அர்ச்சிப்பதே சீர். தம்பதி பூஜை.

நியமை: —
பக்தி யோகத்திற்குச் சக்தர்களாதலால் ஸகல வைதிக நியமங்களோடு கூட பக்தியை அனுஷ்டிக்கிறார்கள்.,
தயை, க்ஷமை, சாந்தி முதலிய ஆத்மகுண நியமங்களான புஷ்பங்களாலும்.

நிகம ப்ரஸூனை: —
வேதமந்த்ர புஷ்பங்களால். நிகம கல்ப வ்ருக்ஷத்தின் மந்த்ரங்களான புஷ்பங்களால்.
வேதங்களிலிருந்து பிறந்த (வேதங்கள் சொல்லும்)எல்லா நியமங்களோடும் என்றும் கொள்ளலாம்.
லகுவான சரணாகதியைக் காட்டிலும் வேற்றுமை. ‘நிகமம்’ என்னும் கடைவீதி புஷ்பங்களிலும் வைஜாத்யம்.
நிகமமென்னும் வேத புஷ்பங்களோடு மற்ற உயர்ந்த புஷ்பங்களும் சேரட்டும்.

நாதம் —
திருநாமத்தில் ஏக தேசத்தைச் சொன்னாலும் முழுப் பெயராகும். ‘ரங்கநாதன்’ என்பதை ‘நாதன்’ என்கிறார்.
தேவிமாருக்கு நாதனென்பதையும் காட்டவேணும்.
‘யாரை அர்ச்சித்து சுபத்தை, மங்களத்தை மானவர்கள் அடையக்கூடும்’ என்று தர்ம்புத்திரர் பீஷ்மரைக் கேட்டதற்கு
‘புண்டரீகாக்ஷனை ஸ்தவங்களால் பக்தியோடு ஸதா காலமும் அர்ச்சிப்பதிலும் மிக்க தர்மமில்லை.
மங்களங்களுக்கெல்லாம் மங்களமும், தைவதங்களுக்கெல்லாம் தைவதமுமான எல்லா உலகத் தாதையான
ஜகந்நாதனை ஸஹஸ்ரநாமார்ச்சனை செய்வது நலம்’ என்று உபதேசித்தார்.
அந்த ஜகந்நாதனை ‘நாதன்’ என்கிறார். அவர் மங்களமங்களர், தேவதேவனென்றார் முன் ஸ்லோகத்தில்.
அர்ச்யம்’ என்று பீஷ்மர் உபதேசித்த ஸஹஸ்ரநாமார்ச்சனையை இங்கே முதலிலேயே பேசுகிறார். ‘

ஸ்ரீச: ஸ்ரீத: ஸ்ரீநிவாஸ:’ என்று அக்கிழவரும்,
‘தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்குமுணர்வு’ என்ற உறுதியையே கொண்டவர்.
‘ஸ்ரீசன் — ஸ்ரீயை அளிப்பவன்’, ஸ்ரீத: என்பதற்கு ‘மாங்கள்யத:’ என்பது பொருள்.
இத்தனையும் ஸ்வாமி நெஞ்சிலோடுகிறது. ரஸிகர் மனதின் ஸம்வாதமே ப்ரமாணம்.
‘மானவர்கள்’ என்றார் தர்மர். மானவர்க்கும் தாதையான மநு முதலியவர் இப்படி அர்ச்சித்து
மங்களமடைந்ததை இங்கே பேசுகிறார். ‘மனோர்ஜாதா: மானவா’ நாதம் — ரங்கநாதனை ,
ஜகந்நாதனை, உங்கள் ப்ராணநாதனை.

த்வயா கமலயா ச —
உங்களிருவரோடு. ‘உங்களிருவராலும் நாதன் ஜகந்நாதனாகிறான்’ என்னும் ஓர் அந்வயம் சேர்க்க வேணும்.
‘ஸ்ரத்தயா தேவோ தேவத்வமஸ்னுதே’, ‘ஹ்ரீஶ்ச தே லக்ஷ்மீஶ்ச பத்ந்யௌ’.
வேதம் ஓதிய க்ரமத்தை அனுஸரித்து பூமியாகிய கோதையை முன்னே வைத்தார்.
‘கமலயா’ என்று ‘தாமரையாள் கேள்வன் ஒருவனையே’ என்னும் ஆழ்வார் ஸம்ப்ரதாயத்தைக் காட்டுகிறார்.

ஸமேதிவாம்ஸம் —
‘ஸம்’ என்பது ஏகீகாரம் செய்யும் (ஒன்றாக்கும்) பொருளுடையது. தேவிமாரோடு கூடி ஒன்றேயாகி. விசிஷ்டம் ஒன்றே.
இந்த ப்ரயோகம் வைதிகமானது. மந்த்ர புஷ்பங்களைக்கொண்டு அர்ச்சிக்கும் சேர்த்தியைச்
சாந்தஸ ப்ரயோகத்தாலேயே பேசுவதும் அழகு. ப்ரகரணத்திற்கேற்றது.
பாலகாண்டம் முடிவில் விவாஹமானதும், ஸீதை கூடிய ராமனை ‘தயா ஸமேயிவாந்’ என்று ருஷி வர்ணித்ததை
இங்கே ‘த்வயா ஸமேயிவாந்’ என்று பேசுகிறார். இன்னுமொரு ரஸம் உண்டு.
‘கதா ஸீமேஷ்யாமி பரதேந த்வயா ச’ என்று லக்ஷ்மணனைப் பார்த்துப் பேசினவிடத்திற்போல
பிரியாமல் கூடவே யிருக்கும் லக்ஷ்மியும் கோதையோடு கூடச் சேருங்கால் ஓர் புதுச் சேர்த்தி போலாகின்றாள் என்பது ரஸம்.
கோதை கல்யாணம் லக்ஷ்மீ கல்யாணமுமாகின்றது.

மாத: —
எல்லா ப்ராணிகளுக்கும் அவ்ய்யமான பிதா. ;
நாம் மாறி மாறிப் பலபிறப்பும் பிறந்தாலும் அவன் மாறாத பிதா’.
அப்பிதாவுக்குப் பத்நியான நீ எல்லோருக்கும் தாய் என்பதில் என்ன தடை?

சிரம் —
தீர்க்க காலம். உங்கள் சேர்த்தியை அர்ச்சித்துக் கொண்டேயிருந்தால்
இம்மண்ணுலகும் பொன்னுலகே. அயோத்திமாநகரும் திருவிண்ணகரான அயோத்தியே.

நிரசிஶந் — ஸம்பூர்ணமாய் அநுபவித்தார்கள்.

நிஜம் ஆதி ராஜ்யம் —
அவர்கள் ராஜ்யம் ஸர்வாதிகமான அகண்ட பூமண்டலாதி ராஜ்யம். அது அவர்களுக்கு ஸொந்தமாயினும்,
“ஸகலம் தத்தி தவைவ மாதவ”,
‘உன் சேஷித்வ விபவத்திற்கு வெளிப்பட்டதைக் கண்ணெடுத்தும் பாரேன்’ என்றபடி
உங்களுக்கு சேஷமாக அனுபவித்து இன்புற்றார்கள்.

மாந்யா மநு ப்ரப்ருதயோபி மஹீக்ஷிதஸ்தே —
பூஜ்யர்களான மனு, இக்ஷ்வாகு முதலியவர்கள் பூஜித்தார்கள்.
மநு ப்ரப்ருதிபிரமாந்யை:’ வைவஸ்வதோ மநுர்நாம மாநநீயோ மநீஷிணாம்!
ஆஸீத் மஹீக்ஷிதாமாத்ய:’ ப்ரணவஶ்சந்தஸாமிவ’ என்ற காளிதாஸ ஸ்லோகங்கள் இங்கே ஸ்வாமி நெஞ்சிலோடுவது திண்ணம்.
அதே பதங்களை அமைத்துள்ளது.
செழுமறையின் முதலெழுத்துச் சேர்ந்த கோயில் என்னுமதும் காளிதாஸர் த்ருஷ்டாந்தப் பணிப்புக்குச் சேரும்.
ரங்கம் ப்ரணவம். ‘மனு சொன்னதெல்லாம் ஔஷதம்’ என்றது வேதம்.
மனு ஆசிரியர் இச்சேர்த்தியைத் தாம் அர்ச்சித்து அவ்வாசாரத்தில் நம்மை நிலைநாட்டுகிறார்.
‘ஆசாரே ஸ்தாபயதி ஸ்வயம் ஆசரதே’ .23.

——–

ஆர்த் ராபராதிநி ஜநேப் யபிரக்ஷணார்த்தம்
ரங்கேஸ்வரஸ்ய ரமயா விநிவேத்யமானே |
பார்ச்வே பரத்ர பவதீ யதி தஸ்ய நஸ்யாத்
ப்ராயேண தேவி வதனம் பரிவர்த்திதம் ஸ்யாத் ||–24-

தேவி — கோதாதேவியே!;
ஆர்த்ராபராதிநி — பச்சையான அபராதத்தைச் செய்து ஈரங்காயாத;
ஜநே — ஜனத்தை;
அபிரக்ஷணார்த்தம் — நன்றாய் உஜ்ஜீவிப்பதற்காக;
ரமயா — லக்ஷ்மீதேவியால்;
ரங்கேஸ்வரஸ்ய – ரங்கநாதனுக்கு;
விநிவேத்யமாந்யே — சிபாரிசு செய்யும் போது;
தஸ்ய – அவருடைய;
பரத்ர பார்ச்வ – மற்றோர் பக்கத்தில்;
பவதீ — நீர்;
யதி ந ஸ்யாத் — இல்லாமற்போனால்;
வதனம் — அவருடைய திருமுகம்;
ப்ராயேண – அனேகமாக (மிகவும்);
பரிவர்த்திதம் ஸ்யாத் — திரும்பியேயிருக்கும்.

பிழைப்பதையே ஸ்வபாவமாகவுடைய நாங்கள் குற்றங்கள் இன்னமுலராமல் ஈரமாய்ப் புதியதாயிருக்கையிலேயே,
உன்னைப் புருஷகாரமாகப் பணிந்ததும், எங்களை ரங்கேச்வரனுக்குச் சிபாரிசு செய்யும் போது,
அவருக்கு மற்றொரு பக்கத்தில் நீ இல்லாமல் போனால், அவர் முகம் (அந்தப் பக்கத்தில்) திரும்பியே இருக்கும்.

ஹே…தேவி.. நீ எங்களைக் காப்பாற்றுகிறாய் …ஜீவன், கணக்கிலாப் பாவங்களைச் செய்து, பெரிய பாவியாகி கஷ்டப்படுகிறான்.
அவன் செய்த பாவங்கள் , அவனைத் துன்புறுத்தும்போதே, அவனைக் காப்பாற்றுங்கள் என்று பெரிய பிராட்டி
எம்பெருமானின் வலதுபுறம் நின்று விண்ணப்பிக்கிறாள் . அது தகாத வேண்டுகோளாகப் படுகிறது;
எதிரே திருமுக மண்டலத்தைத் திருப்புகிறான்; பகவானுக்கு எதிரே அபராதிகள்; அவர்களைப் பார்க்க மனம் இசையவில்லை ;
இடது பக்கமாக முகத்தைத் திருப்புகிறான்; ஹே…கோதா.. நீ அங்கே நின்று , நீயும் அவனை வேண்டுகிறாய்;நீ,
அங்கு , நித்ய வாஸம் செய்வதால்தான் —பகவானுக்கு இடப்புறம் நின்று பகவானை வேண்டுவதால் தான்,
அந்தக் கார்யம் அனுகூலமாகிறது; நாங்கள் ,பகவானின் க்ருபையைப் பெற்றோம்.

அவதாரிகை

(1) மனு முதலியவர்கள் சக்தர்கள். பக்தியோக நிஷ்டர்கள். வேத நியமங்களை யெல்லாம் அனுஷ்டித்து
உபாஸனத்தை சமதமாதி குண பூர்வணராய் அனுஷ்டித்தார்கள். மாந்யரான அவர்களுக்கு இச்சேர்த்தி உபாஸ்யம்.
அசக்தர்களான பேதை ஜனங்களுக்கு இச்சேர்த்தி ப்ரபத்தவ்யம். பெரியபிராட்டியாரே புருஷகாரமாவதற்காக
அத்தாயைச் சரணம் புகுந்ததும், அன்று செய்த புதுக்குற்றங்களையும் கவனியாது பெருமாளுக்குச் சிபாரிசு செய்கிறாள்.
‘மாதர் மைதிலி’ என்ற ஸ்லோகத்தில் ‘ஆர்த்ராபாரதா:’ என்று ராக்ஷஸிகளைப் பட்டர் வர்ணித்தது நெஞ்சிலோடுகிறது.

(2) தேவிமாரிருவரோடும் ஒன்றாகக் கூடினார் என்றார் முன் ஸ்லோகத்தில்.
ஒருவனுமொருத்தியும் ஒன்றுகூடி ஒற்றிருக்கலாம்.. பார்யாத்வயமெப்படி ஸர்வகாலமும் ஒன்றுகூடி ஒன்றாயிருப்பது.
அனேக ஸபத்நிகள் வெவ்வேறு திக்குகளில் க்ருஹபதியை இழுத்து ஹிம்ஸிப்பதுபோல’ என்றாரே சுகர்.
பெருமாள் இரண்டு பத்நிகளிடமும் ப்ரியமாக இருக்கட்டும். பத்நிகளொருவருக்கு ஒருவர் கலஹப்படாரோ?
பத்நியால் பெரியபிராட்டியாருக்குச் சிறந்த பக்கபல மேற்படுகிறதென்று அழகாக வர்ணிக்கிறார்.
அற்புதமான ரஸங்களுள்ளதைக் காட்டுவோம்.

ஆர்த்ராபராதிநி அபி —
நெஞ்சில் ஈரமில்லை. ஈரச்சொற்களான ஆழ்வார்கள் தேன்மொழிகளை ரஸிப்பதில்லை.
நெஞ்சு சுஷ்கசுஷ்கம். மனோவாக் காயங்களால் புதிதுபுதிதாய்க் குற்றங்களைச் செய்த வண்ணமாயுள்ளோம்.
அபராதம் செய்த கை ஈரமுலறுவதன் முன்னமே அம்மா காப்பாற்றென்கிறோம். அப்படிக்கொத்த நம்மையும்.

ஜநே — அசோகவனத்து ராக்ஷஸிகளைப்போன்ற ஜனமாயினும்

அபிரக்ஷணாரத்த்ம் —
நன்றாக அபிமுகமாக்கி ஸர்வோத்கிருஷ்டமான ரக்ஷணத்தைச் செய்யவேண்டுமென்று.
ஆபிமுக்யத்தை அளித்து ஸ்வஜனமாக்கிக் கொள்ளவேண்டும் என்று.
‘ஸ்வஜநயஸி’ (ஸ்வஜனமாக்குகிறாய்) என்ற பட்டரது அனுபவத்தை நினைக்கிறார்.
அபராதி ஜனத்தை விரோதி ஜனத்தை ஸ்வஜனமாக்க என்பது கருத்து.

இப்படி விரோதி ஜனத்தினிடமும் அபிமுகமாகி ரக்ஷிக்க ப்ரார்த்திப்பதில், தனக்கே பதியின் ஆபிமுக்யத்தை
இழக்கக்கூடிய அபாயம் வருவதாயிருக்கிறதென்று இந்த ச்லோகத்தில் அழகாகக் காட்டப்படுகிறது.
என் பக்கத்திலிருந்து திருமுகத்தைத் திருப்பி மறுபுறத்தில் அபிமுகமானாலும் ஆகட்டும்.
எப்படியாவது குழந்தை விஷயத்தில் அபிமுகரானால் போதும். ஸபத்நியிடம் அபிமுகமாகத் திரும்பினாலும் திரும்பட்டும்.
நான் குழந்தையைக் காப்பாற்றச் சிபாரிசு செய்தே தீருவேன்.

ரங்கேஸ்வரஸ்ய –
ப்ரணவ ப்ரதிபாத்யமான ஸர்வேஸ்வரன். ஈஸ்வரனென்றால் ஸம்ஸார தந்த்ரத்தை வஹிப்பதில்
தண்ட தத்வ நியமத்தைக் காட்டுகிறது. பத்நீ வல்லபைதான். ஆயினும் ஸாம்யநிலையை விடலாமோ?
வைஷம்யத்தையும் பக்ஷபாதத்தையும் ஈச்வரன் பெண்டாட்டி பேச்சிற்காகக் கைப்பற்றலாமோ?
இந்த க்ஷணத்திலேயே செய்த ஈரமான (புது) அபராதத்தோடே என்னெதிரிலிருக்கிற
விரோதி ஜனத்தை ஈச்வரனான நான் தண்டிக்கவேண்டாவோ?

ரமயா —
ஈஸ்வரனாலென்ன? பத்நியின் போகமயக்குகளில் மயங்குபவன்தான். ரமையின் வால்லப்யத்தை மறுக்க முடியுமோ?
இவள் முகத்தைப் பார்த்துக் கொண்டு அங்குள்ள இங்கிதபராதீனனாய் ஜகத் ஸ்ருஷ்டி, மோக்ஷம் முதலியதைச் செய்பவனாயிற்றே!

விநிவேத்யமாநே —
பலமாகச் சிபாரிசு செய்யப்படும் பொழுது. ‘வி’ என்பது விசேஷமாக, அனேகமாக, வற்புறுத்தி என்பதைச் சொல்லுகிறது.
அபராதம் பச்சை, கொடிய விரோதிஜனம், இவனை அங்கீகரிப்பது கஷ்டமென்று சிபாரிசு மிக்க பலமாகச் செய்யப் படுகிறது.
‘நிவேதயத மாம்’ என்று விபீஷணாழ்வார் போலன்று. ‘விநிவேதனம்’ வேணும்.

பார்ஸ்வே பரத்ர –
மற்றோர் பக்கத்தில். எதிர்ப்பக்கத்தில். கோதைப்பிராட்டி பெரியபிராட்டியாருக்கு பலமான
பக்க பலமாகிறாளென்பதைக் காட்டவேண்டும். தன் பக்கத்தில் இல்லாமல் எதிர்ப்பக்கத்தில், அப்பக்கத்தில்.
அப்பாலிருந்தும், உயர்ந்த பக்கபலமாகிறாளென்பது அழகு. ‘பார்ச்வ பலம் — பக்கபலம் ‘ என்பர்.
எதிர்ப்பக்கம் தன் பக்கமாயிற்று. ஸபத்நிகள் ஒரு பக்கமாயிருப்பரோ? கிழக்கும் மேற்குமாயிருப்பர், இருக்கிறார்கள்.
எழுந்தருளியிருக்கிற பக்கம் வேறாயினும், இருவருக்கும் ஒரே பக்ஷமென்பது அழகு.
இரண்டு தாய்களுக்கும் இந்த துஷ்டப்பையல் பெற்ற பிள்ளையாகிறான்.
அவனை மன்னித்து அவனைச் சேர்த்துக் கொள்ளுவது இருவருக்கும் ஒரே பக்ஷமே.
கோதை எதிர்ப்பக்கத்தில் இருப்பதும், பெரிய பிராட்டியாரிடம் பெருமாள் ஆபிமுக்யம் தவறக்கூடாதென்பதற்கும்,
தானிருக்கும் பக்கம் திரும்பாமல், லக்ஷ்மீதேவியையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்றே எதிர்ப்பக்கத்திலிருப்பது.
லக்ஷ்மியோடு ஒரே பார்ஸ்வத்திலிருந்தால் லக்ஷ்மிக்கு பக்கபலமேற்படாது.

பவதீ — இப்படி அற்புதமான ஸபத்நீஸ்நேஹத்தையுடைய நீ பூஜ்யை என்பதில் என்ன தடை?

யதி தத்ர நஸ்யாத் —
அந்த இடத்தில், அந்த சந்தர்ப்பத்தில். ‘தத்ர’ அவ்விடத்தில் என்றும், ‘பரத்ர’ மற்றோர் இடத்தில் என்றும்,
இருக்குமிடத்தில் சப்தமாத்ரத்தால் விரோதம் காட்டுவது ஓரழகு. இருப்பது அப்புறம், கருத்து இப்புறம்.

ப்ராயேண – அனேகமாய்.

தேவி —
விளையாடும் சீலமுடையவளே! ரங்கமெனும் நாடகசாலையில் ஈச்வரன் முன் அவன்
ஸ்வாதந்த்ரியத்தைக் குலைத்து, தேவிமாரிருவரும் என்னமாய் நடிக்கிறீர்களம்மா!

வதனம் —
‘மோக்ஷநிஸ்யாமி’ ‘உன் பரத்தை ஏற்போம்’ என்று பேசவேண்டிய முகமாயிற்றே!
முகத்தைத் திருப்பிக்கொண்டால் அனுக்ரஹப் பேச்சுக்கிடமேது? ப்ரணவரங்கத்தில் ‘ஓம்’ என்று பேசவேண்டுமே!

பரிவர்த்திதம் ஸ்யாத் —
அப்புறத்தில், பரத்ர, பார்ஸ்வத்தில் திரும்பியிருக்கும். அப்புறம் காலியாயிருந்தால், ஸபத்நியாகிய நீ இல்லாவிடில்,
அப்புறமே திரும்பியிருக்கும். குழந்தைக்கு சிபாரிசு செய்து அவனைக் காப்பாற்ற நீ எதிர்ப்பக்கத்தில் இருந்து
இப்படி லக்ஷ்மீதேவிக்குப் பக்கபலமாகிறாய். உன் பக்கம் திரும்பினால் லக்ஷ்மியின் கருணைக்குக்
குறையாமலோ மேற்பட்டோ உன் கருணை இருக்கிறது. அங்கீகரிக்க ஏன் இத்தனை தாமதமென்று உன் முகஜாடை.
பெருமாள் உன் பக்கம் திரும்பினால், லக்ஷ்மி சொன்னதைக் கேட்காவிடில் உன் முகத்தை அப்புறம் திருப்ப நேரும்.
நீ லக்ஷ்மீதேவியையே பார்த்துக்கொண்டு அவள் கக்ஷியிலிருக்கிறாய். … 24…

—————

ஸ்லோகம் 25

கோதே குணைரபநயந் ப்ரணதாபராதாந்
ப்ருக்ஷேப ஏவ தவ போகரஸாநுகூல:|
கர்மாநுபத்தபலதா நரதஸ்ய பர்த்து:
ஸ்வாதந்த்ரிய துர் விஷஹ மர்மபிதா நிதாநம் || .25.

கோதே — கோதாய்!
போகரஸாநுகூல: — இன்பரஸத்திற்கு அனுகூலமான;
தவ – உன்னுடைய” ப்ருக்ஷேப ஏவ – புருவத்தின் அசைப்பே;
குணை: — மனோஹரமான உன் விலாஸகுணங்களாலே;
ப்ரணதாபராதாந் — வணங்கினவர்களின் அபராதங்களை;
அபநயந் — போக்கிக் கொண்டு;
கர்மாநுபத்த பலதாநரதஸ்ய – செய்த கர்மங்களுக்குத் தக்க பலன்களை அளிப்பதிலே ஆஸக்தியுடைய;
பர்த்து: — நாயகனுடைய;
ஸ்வாதந்த்ரிய துர்விஷஹ மர்மபிதா நிதாநம் — ஈஸ்வர ஸ்வாதந்த்ரியமென்னும் பொறுக்கக் கூடாத
மர்ம ஸ்தானப் பிளப்பிற்கு முதற்காரணமாகும்.

கோதாய் இன்பரஸத்திற்கு அனுகூலமான உன் புருவ அசைப்பே அதன் குணங்களால் ஆஸ்ரிதரின்
குற்றங்களைப் போக்கி, செய்த வினைகளுக்குத் தக்க பலனைக் கொடுக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும்
ஈஸ்வரனுடைய ஸ்வாதந்த்ரியத்தின் மர்மச் சேதத்திற்கு முதற்காரணமாகும்.

கோதே….. தாயே….நீ புருவத்தை நெறிக்கும்போது ,அது உனக்கும் உன் நாதனுக்கும் ,பெரியதொரு போகத்தைக் கொடுக்கிறது.
அவன் புருவ நெறிப்பு , உலகங்களை நடுங்கச் செய்கிறது; எங்களின் பாபங்களைப் பொறுக்கமாட்டேன் என்கிறான்;
அந்த சமயத்தில், உனது புருவ நெறிப்பு ,அவனுடைய புருவ நெறிப்பை அடக்கி விடுகிறது.
அவன் உனக்கு நாதன்; உலகங்களுக்கு எல்லாம் நாதன்; தன்னைக் குறை சொல்லா வண்ணம் காத்துக் கொள்கிறான்;
அதற்காக அவன் ஏற்படுத்திக்கொண்ட சங்கல்பம், அவரவர் கர்மாக்களுக்கான பலனை அளிப்பது;
இதில் அவன் ஸ்வதந்த்ரனாக இருந்தாலும்,உன் புருவ நெறிப்பு , அவனை அடக்கி விடுகிறது. என்ன பாக்யம், எங்களுக்கு!

அவதாரிகை

‘இடது பக்கத்திலேயே அவன் முகம் திரும்பி இருந்துவிடும்’ என்று முன் ஸ்லோகத்தில் சாதித்தார்.
அதனால் கோதை அங்கேயிருப்பதால், அங்கே திரும்புவதில்லையோ? கோதையை அபிமுகமாகப் பார்த்து
அவள் அழகிலும் முகவிலாஸங்களிலும் ரஸிப்பதில்லையோ என்கிற சங்கை வரக்கூடும். அந்த சங்கையைப் போக்குகிறார்.

உங்கள் சேர்த்தியில் வந்து ப்ரணாமம் பண்ணுகிறவர்களுக்கு தம்பதிச்சேர்த்தி அவஸரத்திற்குத் தக்கபடி
தம்பதிகள் பலதானம் செய்யவேண்டும். பலதானம் செய்யும்பொழுது தானம் வாங்குகிறவர்களின்
குற்றங்களைப் பரிசீலனம் செய்யமாட்டார். சேர்த்தி சந்தோஷத்திற்கேற்றபடி அர்த்திகளுக்கெல்லாம் பலதானம் செய்வர்.
வதுவைச் சேர்ந்த அவள் அநுபந்திகள் குற்றமுடையாராயினும், வதுவின் குணங்களையும்
அவள் அநுபந்திகளென்பதையும் நோக்கி அவர்களுக்கு உயர்ந்த பலன்களைத் தானம் செய்வர்.

கோதே — கோதாய்! குணை:

(தவ) –உன்னுடைய குணங்களால்;
‘செய்த பாபங்களைத் தர்மத்தால் (ஸுக்ருதங்களால், குணங்களால்) போக்கலாம்’ என்று வேதமோதுகிறது.
உன்னை ஆஸ்ரயித்தவர்களின் பாபங்களை அவர்கள் தங்கள் குணங்களால் போக்காவிடினும்
உன்னுடைய குணங்களால் நீ போக்குகிறாய். பெருமாள் உபேக்ஷிக்கும்படி செய்கிறாய்.
உன் ஆஸ்ரிதர் குணங்களானாலென்ன, உன் குணங்களானாலென்ன !

ப்ரணாதாபராதாந் — வணங்கி ஆஸ்ரயித்தவர்களின் அபராதங்களை.

அபநயந் — போக்கிக்கொண்டு;
‘அபநுததி’ என்ற ஸ்ருதி பதத்தில் உபஸர்க்கத்தை அனுஸரிக்கிறார்.

தவ ப்ரூக்ஷேப ஏவ –
உன் புருவத்தின் அழகிய அசைப்பே. பெருமாளுடைய துர்விஷஹமான நிக்ரஹாஸ்த்ரத்திற்கு ப்ரணதனுடைய
அஞ்ஜலி ஓர் ப்ரத்யஸ்த்ரமாகுமென்பர்.
அது ப்ரத்யஸ்த்ரமாவதற்கு நிதானம் (மூல காரணம்) மன்மதனுடைய
தனுஸின் வடிவான உன்னுடைய புருவத்தின் வளைத்தலே. அந்த வளைத்தல் அஸ்த்ரக்ஷேபம் போன்றது.
பெருமாள் நிக்ரஹாஸ்த்ரத்திற்கு ப்ரத்யஸ்த்ரமாக காமன் வில்போன்ற புருவத்திலிருந்து எய்தப்படுவது
ஆஸ்ரிதரின் அஞ்ஜலியென்னும் ப்ரத்யஸ்த்ரம், உன்னுடைய இந்த ப்ரத்யஸ்த்ரம் வலிமை பெற்றது.

போகரஸாநுகூல: —
உன்னுடைய புருவத்தின் அழகிய அசைப்புகளின் விநோதம். போகரஸத்திற்கு அநுகூலம்.
லீலாரஸம், போகரஸம் என்று இரண்டுவித ரஸங்கள். பரமபதமென்னும் போகவிபூதிக்குப் புதிய ப்ரணதர்கள் சேர்ந்தால்,
அந்த ரஸம் இன்னும் வ்ருத்தியாகும். புதிது புதிதாகக் குழந்தைகள் வீடுவந்து சேரச்சேர அதிசயம் அதிகம். இன்பமதிகம்.
கர்மத்திற்குத் தக்கபடி தண்டனையளிப்பது லீலாரஸத்திற்கு அநுகூலம். ஒரு வணக்கை வ்யாஜமாகக்கொண்டு
முன் செய்த கொடுவினைகளை மன்னித்து வீடு சேர்த்துக் கொள்வது போக ரஸத்திற்கு அநுகூலம் என்பதும் இங்கே ரஸம்.
லீலாரஸத்திற்கு எதிர்த்தட்டு போகரஸம். அவர் தண்டனை பலன்களைக்கொடுத்து லீலாரஸத்தைத் தேடுகிறார்.
‘அது வேண்டாம், என் மனதை அநுஸரிப்பது, என் ப்ரூக்ஷேபவிலாஸபோக ரஸத்தை மட்டுமன்று
போக விபூதிரஸத்தையும் பெருக்கும்’ என்று நீ ஸூசிப்பிக்கிறாய்.

கர்மாநுபத்தபலதாநரதஸ்ய –
எந்த ரதி வேணும். அபராதிகளின் கர்மங்களுக்குத் தக்கபடி தண்டனை பலத்தை அளிப்பதில் ரதி வேணுமா?
இந்த உத்தமவதுவின் விலாஸ போகரதி வேணுமா என்ற விகல்பத்தை ஸூசிக்கின்றது ‘ரத’ என்கிற சப்தம்.
தம்பதிகள் சேர்த்தியில் வதூவரர்கள் வதுவின் அநுபந்திகளுக்குப் பலதானம் செய்யாரோ?
பலதானம் செய்யும் தம்பதிகள் உயர்ந்த பலன்களைத் தானம் செய்வரோ?
அல்லது தண்டனைகளை (ப்ரஹாரங்களை)த் தானம் செய்வரோ? ததீயாராதனை தடியாராதனை ஆகலாமோ?
கர்மானுபத்தர்கள் எனபது பெருமாள் வாதம். ‘மதனுபத்தர்கள்’ என் திறத்தார் என்று கோதை எதிர்வாதம்.
எந்த அனபந்தம் உயர்த்தி? கர்மானுபந்தமா? உன் அனுபந்தமா? என்று விகல்பம்.
இங்கே ‘அனுபத்த’, ‘பலதானம்’, ‘ரத’ என்கிற பதங்களால் இந்த ரஸங்கள் ஸூசிதமென்பது ரஸிகமனோவேத்யம்.

பர்த்து: —
உன்னுடைய பர்த்தாவினுடைய. உலகத்தின் பர்த்தாவினுடைய உலகத்தை ரக்ஷணத்தால்
மரிக்க வேண்டியவனல்லவோ. ஈச்வரனாயினும் பர்த்தாவுமாவான், ரக்ஷகனுமாவான்.

ஸ்வாதந்த்ரிய துர் விஷஹ மர்மபிதா நிதாநம் —
ஐஸ்வர்யம் என்பது ஸ்வாதந்த்ரியம். ஓரிடத்தி லிருந்தும் அதற்கு பங்கம் வ்யாஹதி வரக்கூடாது.
ஐஸ்வர்யம்தானே ஈச்வரனுக்கு உயிர்நிலையானது. அந்த உயிர்நிலையில் அம்பே க்ஷேபம் செய்து சேதித்தால்
ஈஸ்வர தத்வத்திற்கே அழிவு வருமே என்று சங்கை. ‘ஸ்வச்சந்தம் விததாம்யஹம்’ என் சந்தப்படிக்கு,
என் இஷ்டப்படிக்கு நான் பலன்களை விதிக்கிறேன் என்கிறார் பெருமாள். அது ஈஸ்வர லக்ஷணமான ஐஸ்வர்யம்.

இப்படி ‘ஸ்வச்சந்தப்படி’ ஸ்வதந்த்ரமாக பலமளிப்பது மேன்மையா?
அல்லது உன் சந்தப்படி (பரச்சந்தப்படி) அநுவர்த்திப்பதென்கிற தாக்ஷிண்யம் மேன்மையா? என்று விகல்பம்.

“நாயகர்களுக்குத் தாக்ஷிண்யம் குலவ்ரதம்” என்பது மாளவிகாக்நிமித்ரத்தில் அக்நிமித்ரர் பேச்சு.
கோதையின் சந்தத்தை அநுவர்த்திக்காமற்போனால் நாயகர்களென்னும் பர்த்தாக்களுக்கு உயிர்நிலையான தாக்ஷிண்யம் குலையும்.
ப்ரணதர்களான அடியாரை பரிக்கவேண்டியது பர்த்தாவென்னும் யஜமானனுடைய கடமை.
“சரணாகத ரக்ஷணம்” ஓர் உயிர்நிலை. மன்னித்து ரக்ஷிப்பதில் இந்த உயிர்நிலைகள் ரக்ஷிக்கப்படுகின்றன.

—–

ரங்கே தடித்குணவதோ ரமையைவ கோதே
க்ருஷ்ணாம்புதஸ்ய கடிதாம் க்ருபயா ஸுவ்ருஷ்ட்யா |
தௌர்கத்யதுர்விஷவிநாச ஸுதாஅந்தீம் த்வாம்
ஸந்த: ப்ரபத்ய சமயந்த்யசிரேண தாபாந் || .26.

கோதே– கோதாய்!
ரங்கே — ஸ்ரீரங்கத்திலுள்ள;
ரமையைவ – பெரியபிராட்டியாராலே;
தடித்குணவத: — மின்னற்கொடியோடுகூடிய;
க்ருஷ்ணாம்புதஸ்ய – கருமேகத்தினுடைய;
க்ருபயா — க்ருபையென்னும்;
ஸுவ்ருஷ்ட்யா — நல்ல வர்ஷத்தால்;
கடிதாம் — கடனை செய்யப்பட்ட;
தௌர்கத்ய துர்விஷ விநாச ஸுதாநதீம் — ஸம்ஸாரமென்னும் துர்கதியாகிய கொடிய விஷத்தைப் போக்கும் அம்ருத நதியான;
த்வாம் — உன்னை (உன் திருமொழியை, உன் நீராட்ட ஸரஸ்வதியை;
ப்ரபத்ய – அவகாஹித்து (சரணம் பற்றி) ;
ஸந்த: — ஸத்துக்கள்;
அசிரேண – சீக்கிரத்தில்;
தாபாந் — எல்லாத் தாபங்களையும்;
சம்யந்தி — போக்கிக் கொள்கிறார்கள்.

கோதாதேவியே! பெரியோர்கள் ஸ்ரீரங்கத்தில் உள்ளதும், லக்ஷ்மியாகிற மின்னற்கொடியோடு கூடினதுமான
கருத்த மேகத்தினுடைய க்ருபையாகிற நல்ல மழையாலே உண்டாக்கப்பட்டிருக்கிற கெட்ட விஷத்தைப்
போக்கடிப்பதில் அமுதநதியான உன்னைச் சரணம் அடைந்து உடனே (ஸம்ஸார) தாபங்களைப் போக்கடிக்கின்றனர்.

ஸ்ரீ ஆண்டாள் அமுத நதி; எப்படிஎன்றால், திருவரங்கச் செல்வன் ஒரு கார்முகில்; அதில் பெரியபிராட்டி மின்னல்கொடி;
இந்த இரண்டுமாக அருள் என்கிற மழை பொழிகிறது; இது வெள்ளமாகப் பெருக்கெடுக்கும் போது, மேடுபள்ளங்களில் நிறைந்து,
அங்கு சிக்கித் தவிக்கும் சேதனர்களின் சம்சார தாபத்தை——அந்தத் தீய விஷத்தை, அடித்துத் தூரத் தள்ளி ,
மிகவும் தெளிந்த அமுத நதியாக இருக்கிறது—
அது — ஹே கோதா—நீயே உன்னை அடைந்து சேதனர்கள், தங்கள் தாபங்களைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

அவதாரிகை
தன் ப்ரியமான நாயகனான ஈஸ்வரனுடைய நிருபதமான ஈஸ்வரத்வம் ஸ்வாதந்த்ரியமென்னும்
உயிர்நிலையைச் சேதிப்பதாகப் பேசப்பட்டது. இது என்ன அழகு?
நாயகனுடைய உயிர் மர்ம ஸ்தானத்தை ஓர் சதியான நாயகி பிளப்பளோ? இப்படிப் பேசுவது கோதா ஸ்துதியாகுமோ?
இதற்கு பதில் கூறுகிறார்.

பெருமாள் ஈஸ்வர ஸ்வாதந்த்ரியத்தாலேயே புருஷகாரமான ஆசிரியர்களோடு
தம்முடைய க்ருபையால் சேர்த்து வைத்த ப்ரணதியென்னும் வ்யாஜமாத்ரத்தால் ரக்ஷிப்பதென்பதும்
ஈஸ்வரன் திருவுள்ளத்தாலே உள்ளதே. ஆசார்ய ப்ராப்திக்கும் அவள் க்ருபை வேண்டும்.
கோதை ஆசார்ய தத்துவம். புருஷகார தத்துவம். கடகரான ஆசாரியரை கடிப்பித்து வைப்பது ஈஸ்வர க்ருபை.
ஆகையால் தாமே கடிப்பித்து வைக்கும் புருஷகார சம்பந்தத்தைக் கொண்டு சேதனர் அபராதங்களை மன்னித்து
ரக்ஷிப்பதும் ஓர்விதமாக அவர் ஸ்வாதந்த்ரியத்தைச் சேர்ந்ததே.
ஈஸ்வர ஸ்வாதந்த்ரியமே தண்டனைகளைச் செய்யாமல் ரக்ஷிப்பதற்கும் நிதானமாகிறது.

பிராட்டியோடு கூடி அவனே தான் தன்னுடைய ஸ்வாதந்த்ரியத்தால், தன் க்ருபையால், தன் சந்தத்தால்
கோதை என்னும் புருஷகாரத்தின் ப்ராப்தியை, ப்ரணதியை கடிப்பித்தான்.
விபுவின் ஸ்வாதந்த்ரிய விசிஷ்டமான கருணை ரக்ஷணத்திற்கு ஹேது.
இப்படிக்கு ஈஸ்வரன் சந்தமே நிறைவேறுவதால் அவன் ஸ்வச்சந்தத்திற்குக் குறைவில்லை என்கிறார்.
முன்பு கோதையைப் பல நதிகளாக வர்ணித்தார்.
இங்கே அவளும் அவள் திருமொழியும் அம்ருத நதீ என்கிறார். விரஜையிலுமுயர்ந்த நதி.

கோதே — திருமொழி, திருப்பாவை தரும் கோதாய்!
ரங்கே — அரங்கத்தில்;

ரமையைவ –
ரமணத்தைச் செய்விப்பதையே ஸ்வபாவமாகவுடைய லக்ஷ்மீயாலேயே.
கோதையை ஆசிரிய தத்துவமாகச் செய்தது லக்ஷ்மியே.

தடித்குணவத: —
மின்னலென்னும் கொடியோடு (குணத்தோடு) கூடியவரான.
மேகமும் மின்னலும் கூடினால் குளிர்ந்த வர்ஷமுண்டாகித் தாபங்கள் தீரும்.
பெருமாளும் பெரியபிராட்டியாரும் சேர்ந்துதான் க்ருபாவர்ஷத்திற்குக் காரணமாவாரென்பதை இது விளக்குகிறது.
பெருமாளும் லக்ஷ்மியுமாகச் சேர்ந்து தங்கள் க்ருபா வர்ஷத்தால் கோதை நாச்சியார்,
அவள் திருமொழி ஆகிய அம்ருத நதியை கடனை செய்வித்தார்கள்.

க்ருஷ்ணாம்புதஸ்ய – கிருஷ்ணமேகத்தினுடைய;
க்ருபயா — க்ருபையினாலே, க்ருபையென்னும்.
ஸுவ்ருஷ்ட்யா — நல்ல வர்ஷத்தாலே.

கடிதாம் — கடனை செய்விக்கப்பட்ட, ஏற்படுத்தப்பட்ட.
கடகையான உன்னை அடைவிப்பது ஸ்வதந்த்ரேச்வரனாகிய ச்ரிய:பதியின் க்ருபை.
கடக ப்ராப்தியையும் லக்ஷ்மீ விசிஷ்டமான ஈச்வரனுடைய க்ருபை கடிப்பிக்கும்.

தௌர்கத்ய துர்விஷ விநாச ஸுதாநதீம் —
ஸம்ஸாரம் என்பதற்கு ‘நற்கதி’ என்பது சொற்பொருள்.
அது உண்மையில் துர்கதியே என்பதைக் காட்ட ‘தௌர்கத்யம்’ என்கிறார். ஸம்ஸாரம் என்பது காலகோடிவிஷம்.
இந்தக் கொடிய விஷத்தால் குழந்தைகள் மூர்ச்சிதராயிருக்கிறார்கள். அவர்கள் ம்ருத ப்ராயராயிருக்கிறார்கள்.
குழந்தைகளைத் தீண்டிய கொடிய விஷத்தை நாசம் செய்வதிலும் பெருமாளுக்குப் பெரிய பேறுண்டோ?
அந்த விஷத்தை அமிர்த நதியாகிய உன்னைச் சரணம் பற்றி உன் அமுத ஸரஸ்வதீயில் நீராடிப் போக்கலாம்.
‘பராசர்யவசஸ்ஸுதையானது ப்ராணன் போய் மூர்ச்சிதரான குழந்தைகளை உயிர்ப்பிக்கும்’ என்று
ப்ரஹ்ம ஸூத்ரங்களை வர்ணித்ததை நினைக்க. அம்ருத ப்ரவாஹமான ஸுதாநதியாவாய்.

த்வாம் — உன்னை (உன் தேன்மொழியை)
ஸந்த: — ஸம்ஸார விஷ மூர்ச்சிதராய் அஸத் ப்ராயராயிருந்தவர் இப்பொழுது உன்னைச் சரணம் பற்றி ஸத்தானார்.
ப்ரபத்ய (ஸந்த:) — உன்னைச் சரணம் பற்றி உன் ஸரஸ்வதீயில் நீராடி (ஸத்தானார்)
அசிரேண – விரைவில். ‘தாபதேவ சிரம்’ என்றபடி ப்ராப்தகர்ம ப்ரயுக்தமான அனேக சரீரங்களின் தாமதமில்லை.
உடனே வேண்டுமென்ற ஆர்த்தியிருந்தால், உடனே.
தாபாந் — ஸகல ஸம்ஸார தாபங்களையும்;
சமயந்தி — போக்கிக் கொள்ளுகிறார்கள். (26)

——————

ஜாதாபராதமபி மாமநுகம்ப்ய கோதே
கோப்த்ரீ யதி த்வமஸி யுக்தமிதம் பவத்யா: |
வாத்ஸல்ய நிர்பரதயா ஜநநீ குமாரம்
ஸ்தந்யேந வர்த்தயதி தஷ்டபயோதராபி || 27

கோதே — கோதையே!
த்வம் — நீ;
ஜாதாபராதமபி — அறிந்தோ அறியாமலோ செய்யப்பட்ட குற்றங்களோடு கூடியிருந்தாலும்;
மாம் — என்னை;
அநுகம்ப்ய – தயவு பண்ணி;
கோப்த்ரீ அஸி யதி — ரக்ஷிப்பவளாக ஆகியிருந்தால்;
இதம் — இவ்விஷயம்;
பவத்யா: — உனக்கு;
யுக்தம் — தகுந்தது;
ஜநநீ — தாயாரானவள்;
குமாரம் — குழந்தையை;
தஷ்டபயோதரதராபி — கடித்த முலையை யுடையவளாயினும்;
வாத்ஸல்யநிர்பரதயா — குழந்தையினிடத்தில் உள்ள ஆசை மிகுதியால்;
ஸ்தந்யேந – முலைப்பாலினால்;
வர்த்தயதி — காப்பாற்றுகிறாளன்றோ.

கோதே! (நான்) அறிந்தோ அறியாமலோ செய்யப்பட்ட அபராதங்களை உடையவனாயிருந்தாலும் நீ என்னை
தயவு பண்ணி ரக்ஷிப்பவளாக ஆவாயேயாகில், இவ்விஷயம் உனக்கு உசிதமே. எப்படித் தாயானவள் குழந்தை தன்
முலையைக் கடித்துவிட்டாலும் அதனிடத்திலுள்ள அன்பினால் அதைத் தன்பாலினால் காப்பாற்றுகின்றாளல்லவா? அதுபோல,

அடியேன் பலகாலும் குற்றம் செய்தவன்; குற்றமே செய்துகொண்டு இருப்பவன்; என்றாலும், நீ, என்னைப் புறக்கணிப்பதில்லை .
காக்கின்றாய். இது உனக்கு ஏற்ற செயல். தாயார், குழந்தையிடம், அளவில்லா அன்பு கொண்டவள்.
அதன் பசி அறிந்து, பாலூட்டுபவள். ஆனால், குழந்தைக்கு, தாயார் செய்யும் உபகாரமும், தாயாரின் அன்பும் பாசமும், எப்படித் தெரியும் ?
ஸ்தன்ய பானம் செய்யும்போது , குழந்தை கடித்தாலும், இதற்காக அந்தக் குழந்தையைத் தாயார், தூக்கி எறிந்து விடுவதில்லையே !
வேறு உபாயத்திலும் இறங்குவது இல்லையே !முன்போலவே அல்லவா, ஸ்தன்ய பானம் கொடுக்கிறாள் . ஆஹா , இது உனக்குத் தகுந்ததே !

அவதாரிகை
பெருமாள் குற்றத்திற்குத் தக்கபடி தண்டிக்கிறதென்ற தர்மமுள்ளவரல்லவோ? ஸஹதர்மசரியான கோதையும்,
அந்த தர்மத்தை அவரோடுகூட அநுஷ்டிக்கவேண்டாவோ என்று சங்கை வரக் கூறுகிறார். அவர் பிதா, நீ மாதா.
மாதாவின் வாத்ஸல்ய குணம் உனக்கு ஸஹஜம். புதிதாகச் செய்து இன்னம் ஈரமுலராத அபராதங்களையும் பாராட்டாமல்
ஸ்நேஹத்தைப் பெருக்குவது வாத்ஸல்யமாகும். தாய்க்குத் தாய் தர்மம் ப்ரபலம், ஸ்வபாவத்தை ஒருவரும் மீறமுடியாது.
ஸ்வ தர்மம் ப்ரபலம். பர தர்மம் பயாவஹம். தாய் ஸ்வபாவத்தை, தாய் தர்மத்தைக் காட்டுகிறார்.
பர்த்தாவோடு ஸஹ தர்ம சரியானாலும் மாத்ருத்வத்தை விடுவளோ? ஸ்திரீத்வமே அழியுமே.

கோதே — கோதாய்!

ஜாதாபராதமபி மாம் —
(1) அபராதம் நேர்ந்தவனாகிய என்னையும். வேண்டுமென்றே குற்றத்தை நான் செய்தாலும், ஏதோ அறியாமல்
குற்றம் நேர்ந்துவிட்டதென்று உன் நினைப்பு என்பதை வ்யஞ்ஜிக்கிறார், ‘ஜாத’ என்று. ‘க்ருதாபராதஸ்ய ச தே ‘ என்று
திருவடி ஸுக்ரீவரிடம் பேசியதுபோல ‘க்ருத’ பதத்தை வைக்கவில்லை.

(2) ‘ஜாதன்’ என்பது ‘ப்ரியமான குழந்தை’யைச் சொல்லும். உன் அருமைக்குழந்தை அறியாமற் குற்றம் செய்துவிட்டதென்று
உன் நினைப்பும், பரிவும். ‘ஸத்யோ ஜாத:’ இன்று ஈன்ற கன்று வத்ஸம், அதனிடம்போல வாத்ஸல்யம்.
மூன்றாமடியில் சொல்லும் ‘பூர்ணவாத்ஸல்யத்திற்கு’ இந்த ‘இன்று பிறந்த கன்று’ என்பது ஸமர்த்தகம்.
ஸத்யோஜாத சிசுவின் அபராதம், கன்று உதைத்தது, கன்றின் பல் மடியில் பட்டது என்று உன் நினைப்பு.

(3) குற்றம் ஈரமாயிருந்தாலும், இப்பொழுதே செய்து இன்னம் உலராமலிருந்தாலும். ‘ஆர்த்ராபராதிநி ஜநே’ ‘ஆர்த்ராபராதா: ஸதீ’
அநுகம்ப்ய – என்னிடம் தயவு பண்ணி இரங்கி.
கோப்த்ரீ யதி த்வமஸி — நீ ரக்ஷகையாகிறாயென்பது.
யுக்தம் இதம் பவத்யா: — உனக்கு இது ஏற்றதே.
வாத்ஸல்யநிர்பரதயா — புத்ரஸ்நேஹம் சுமை தாங்காதபடி நிரம்பியிருப்பதால்.
ஸ்தந்யம் — ஸ்நேஹமென்னும் பால் நிரம்பிப் பெருகும் கடுப்பினால்.
ஜநநீ — பெற்ற தாய்

குமாரம் —
(1) இளங்குழந்தை, பச்சைக்குழந்தை என்று தாயின் நினைப்பு. என்ன முதிர்ந்த வயதாயினும் தாய்க்குச் சிசுவே.
(2) ராஜகுமாரன் ராஜ்யத்திற்குப் பட்டப்பிள்ளை என்று நினைப்பு.
(3) குமரன் போன்ற குமாரனென்று அருமை. “குமாரகல்பம் ஸுஷுவே குமாரம்”, ‘குமரனைப்போன்ற குமாரனைப் பெற்றாள்’.

ஸ்தந்யேந –
பாலால் குழந்தையை வளர்க்க, பெருக்க.. ஸ்தனத்தில்தானே பாலுண்டாகும்?
ஸ்தனத்தில் குழந்தை பல்லால் கடித்தது. கடித்த இடத்திலிருந்தே பால் சொரிகிறது என்று காட்ட ‘ஸ்தந்யம்’ என்கிறார்.

வர்த்தயதி —
குழந்தையைப் பருக்கச் செய்யவேண்டாவோ? பால் பெருக்கால் குழந்தை பருக்கிறது. பால் ஸ்தனத்தில்தானே பெருகும்?
கடித்த இடமென்று அதை விட்டால் பாலுக்கு வேறு இடமேதுளது? வர்த்தயதி என்பதில் மிக்க ரஸமுண்டு.
“ப்ருஹப்ருதௌ ப்ரும்ஹயதி” என்று பொருள் திருவுள்ளம். ப்ரும்ஹணம் செய்கிறாள், ப்ரஹ்மம் போலச் செய்கிறாள்.

தஷ்டபயோதராபி —
பல்லால் கடிக்கப்பட்ட ஸ்தனத்தை உடையவளானாலும். ‘பயோதர’ என்னும் பதத்தில் மிக்க ரஸம்.
‘நீரோ பாலோ நிரம்பிய’ தோல் பையைப் பொத்து விட்டால் ஜலமும் பாலும் ஒழுகி விழாமலிருக்குமோ? .

——————-

சதமக மணி நீலா சாருகல்ஹார ஹஸ்தா
ஸ்தநபரமிதாங்கீ ஸாந்த்ரவாத்ஸல்யஸிந்து: |
அளகவிநிஹிதாபி: ஸ்ரக்பிராக்ருஷ்டநாதா
விலஸது ஹ்ருதி கோதா விஷ்ணுசித்தாத்மஜா ந: || .28.

ஶதமக மணி நீலா — இந்த்ரநீலக் கல்லு போல நீலமானவளும்;
சாருகல்ஹார ஹஸ்தா — அழகிய செங்கழனிப் புஷ்பத்தைக் கையில் கொண்டவளாயும்;
ஸ்தனபரமிதாங்கீ — ஸ்தனத்தின் பரத்தால் சிறிது வணக்கப்பட்ட திருமேனியை உடையவளாயும்;
ஸாந்த்ர வாத்ஸல்ய ஸிந்து: — கனத்த (நிரம்பிய) ஸ்நேஹக் கடலாயும்;
அளகவிநிஹிதாபி: — கூந்தலில் சூடிய;
ஸ்ரக்பி — மாலைகளால்;
ஆக்ருஷ்டநாதா — இழுக்கப்பட்ட நாதனோடு கூடியவளாயுமான;
விஷ்ணுசித்தாத்மஸா கோதா — பட்டர்பிரான் புத்திரி கோதை;
ந: — நமது;
ஹ்ருதி — ஹ்ருதயத்தில்:
விலஸது — விளங்கட்டும்.

இந்த்ரநீலக் கல்லுபோல நீலமானவளும், அழகிய செங்கழுநீர்ப் புஷ்பத்தைக் கையில் கொண்டவளாயும்,
தனபரத்தால் சிறிது வணங்கின தேஹத்தை உடையவளாயும் கனத்த ஸ்நேஹக்கடலாயும், தன் சிரஸில் சூடிய
மாலையால் தன் வசமாக்கப்பட்ட நாதனையுடையவளாயும் பட்டர்பிரான் புத்ரியுமான கோதையானவள் நமது மனதில் விளங்கட்டும்.

த்யான ஸ்லோகம்
இந்த்ர நீலக்கல் போல நீல வர்ணம் உடையவள்; அழகான கருநெய்தல் புஷ்பத்தைத் தன் கரத்திலே வைத்திருப்பவள்;
ஸ்தனங்களின் பாரத்தினால் வணங்கிய திருமேனி உடையவள்;
அடர்த்தியான அன்புக்கடல்; முடியில் ,முன்னுச்சியில் மாலைகளை அணிந்து, கணவனை—ரங்கபதியைத் தன் வசப்படுத்திக்கொண்டவள்;
விஷ்ணுசித்தரின் அருமைக் குமாரத்தி; கோதை—-நமது மனத்தில் என்றும் விளங்குவாளாக

அவதாரிகை
(1) முதல் ஸ்லோகத்தில் ‘கோதை’யைச் சரணம் புகுகிறேன் என்று அவளைப் பரோக்ஷமாகப் பேசினார்.
பிறகு 26 ஸ்லோகங்களில் கோதையை அழைத்து நேருக்கு நேராக ப்ரத்யக்ஷமாகப் பேசினார்.
தேவியான கோதையைப் பரோக்ஷமாக ‘அவள்’ ‘அவள்’ என்று பேசித் துதிப்பது உசிதம்.
‘பரோக்ஷப்ரியா தேவா:’ மனுஷ்யர்களில் அவதாரம் பண்ணினாலும், கோதை தேவியே.
ஆயினும் தாயானதால், தேவியாயிருந்தும் நீ என்றே கூப்பிட்டுப் பேசினார்.
தேவியாயுமிருப்பதால், உபஸம்ஹாரத்திலும் உபக்ரமத்திலும் (முதலிலும், முடிவிலும்) ‘அவள்’ ‘அவள்’ என்று பேசுகிறார்.
முதலிலும், முடிவிலும், ஒரே விதமாக ‘அவள்’ என்று பேசுவது தேவீ என்கிற தாத்பர்யத்தைக் காட்டும்.

(2) ஓர் ஆச்சர்ய மூர்த்தியாக ஹ்ருதயத்தில் எப்பொழுதும் த்யானம் செய்யும்படி க்ருபையால் விளங்கவேண்டும் என்று ப்ரார்த்திக்கிறார்.

‘நீளாதுங்க ஸ்தநகிரிதடீ’ என்னும் தனியன் த்யான ஸ்லோகத்தையும் அநுஸரிக்கிறார்.
நக்ஷத்ரக்கணக்கான 27 ஸ்லோகங்களால் துதித்து பாவனை செய்து,
இங்கே ஹ்ருதயத்தில் பரமப்ரஸக்யாய் வீற்றிருப்பதைப் பிரார்த்திக்கிறார்

ஶதமகமணிநீலா —
இந்த்ர நீலம் போல நீலவர்ணமானவள். ஸ்ரீ, பூமி, நீளை என்று மூன்று தேவிமாரில்
முதல் ஸ்லோகத்திலிருவரைப் பேசினார். இங்கே நீளையை சப்தமாத்ரத்தாலேயாயினும் ஒருவாறு குறிக்கிறார்.
‘நீளாதுங்கஸ்தன’ என்ற த்யான ஸ்லோகத்திலுள்ள முதற்பதத்தை இங்கும் முதல் பதமாக வைக்கிறார் என்றும் ரஸம்.

சாருகல்ஹாரஹஸ்தா —
அழகிய செங்கழுநீர்ப் பூவைக் கையில் உடையவளாய். “அவள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் வாய் செங்கழுநீர்”
ஆகியதால், அது சாரு (அழகியது). ஸ்வாராதானத்தில் தன்தோட்டத்தில் தான்வைத்து வளர்ந்த கொடிப் புஷ்பம்.

ஸ்தனபரநமிதாங்கீ — தனபரத்தால் கொஞ்சம் வணங்கிய காத்திரமுடையவளாய். தனங்களும் கிரிபோன்றன.
தனங்களின் வாத்ஸல்யப் பெருக்கால் ஸ்தந்யப் பெருக்கை முன் ச்லோகத்தில் பேசினார்.
தனத்தின் பாரத்துடன் ஸ்தந்யத்தின் பாரமும் சேர்ந்தது.

ஸாந்த்ரவாத்ஸல்யஸிந்து: — கனத்த புத்ரஸ்நேஹக் கடல். முன்பு அம்ருதநதீ என்றார். இங்கே ஸ்நேஹக்கடல் என்கிறார்.
அளகவிநிஹிதாபி: — கூந்தலில் அழகாகச் சூடிய. (யார் கூந்தலில் என்று குறிப்பிடவில்லை) முதலில் கோதைசூடிப் பிறகு பெருமாள் சூடிய.
ஸ்ரக்பி: — மாலைகளால். ‘ஸ்ரஜி’ என்று தனியனிலுள்ளது.

ஆக்ருஷ்டநாதா —
இழுக்கப்பட்ட நாதனையுடையவளாய். தன்னால் உச்சிஷ்டமான (சூடிய) மாலையால் விலங்கிடப்பட்ட என்று
பச்சையாக உன் மேன்மை பேசப்பட்டது. இங்கே கட்டுண்டு இழுக்க இடம் கொடுத்தது குடுமி.
விலங்கு போட்டாற்போல சலிக்காமலிருக்கும் பயன் கிடைப்பதைச் சொன்னது தனியன். சிரஸில் விலங்கு போடமாட்டார்கள்.
‘குடுமியைப் பிடித்துக் கயிறால் இழுக்கப் படுகிறான்’ என்பது இங்கே பேச்சு. சூடிக் கொடுத்த மாலையை முடி மேற் கொண்ட
நாதனோடுகூட ஹ்ருதயத்தில் ஸர்வதா ஸேவை ஸாதிக்கவேண்டும்..

விலஸது — நன்றாய்ப் பிரகாசிக்கட்டும்.
ஹ்ருதி — த்யாதம் ஹ்ருதம்புஜே, த்ருஷ்டம் ஸ்ரீரங்கதாமநி.

கோதா — கோதாம் சரணம் ப்ரபத்யே என்பது முதல் ஸ்லோகத்தின் கடையடி.
இங்கேயும் முடிவில் கடைசிப் பதத்தில் கோதா என்று அமைக்கிறார்.
அங்கே இரண்டாம் வேற்றுமை. சரணமடைந்ததற்குப் பயனாக அவள் ஸேவை அளிப்பதால் இங்கே முதல் வேற்றுமை.

விஷ்ணுசித்தாத்மஜா —
ஸ்ரீவிஷ்ணுசித்த குலதந்தன என்று தொடக்கத்திற்குத் தக்கபடி முடிவு.
பட்டர்பிரான் கோதை சொன்ன என்ற திருப்பாவை முடிவையும் இது அநுஸரிக்கிறது.
இங்கே ‘கோதை பட்டர்பிரான் குமரீ’ என்ற க்ரமத்தை மாற்றியுளது. அதற்கடியென்?
இங்கே பல விசேஷணங்களிலும் ‘பட்டர்பிரான் புத்ரி’ என்பது உயர்த்தி என்று திருவுளம். ‘ஜநகாத்மஜா’ என்பது போல. (28)

——————-

இதி விகஸிதபக்தேருத்திதாம் வேங்கடேசாத்
பஹுகுணரமணீயாம் வக்தி கோதாஸ்துதிம் ய: |
ஸ பவதி பஹுமாந்ய: ஸ்ரீமதோ ரங்கபர்த்து:
சரணகமலஸேவாம் சாச்வதீமப்யுபைஷ்யன் || .29.

இதி — இந்தத் தோத்திரம் முழுவதிலும் காணும் ப்ரகாசமாக,
விகஸித பக்தே: — (கோதை திருவடியில்) மலர்ந்த பக்தியையுடைய;
வேங்கடேஶாத் — வேங்கடேசரிடமிருந்து ;
உதிதாம் — தோன்றி எழுந்த;
பஹுகுணரமணீயாம் — பற்பல காவ்யகுணங்களால் நிரம்பி மனோரஞ்ஜகமான;
கோதாஸ்துதிம் — கோதைவிஷயமான துதியை;
ய: — எவர்;
வக்தி — சொல்லுகிறாரோ;
ஸ: — அவர்;
ஸ்ரீமத்: — லக்ஷ்மீயோடு கூடிய;
ரங்கபர்த்து: — ரங்கநாதனுக்கு;
ஶாஶ்வதீம் — சாஸ்வத காலமும்;
சரணகமலஸேவாம் — திருவடித்தாமரையின் ஸேவையை;
அப்யுவைஷ்யந் — அடைபவனாக (அவருக்கு) ;
பஹுமாந்ய: — வெகுமதி பாத்ரமாக;
பவதி — ஆகிறான்.

கோதை திருவடியில் விஸ்தாரமான பக்தியையுடைய வேங்கடேசரிடமிருந்து தோன்றியெழுந்த
அனேகவிதமான காவ்ய குணங்களால் அழகிய கோதாஸ்துதியை எவர் பாராயணம் செய்கிறாரோ அவர்
லக்ஷ்மீயோடு கூடிய ரங்கநாதனின் திருவடி ஸேவையை அடைபவனாய்க்கொண்டு அவருக்கு வெகுமதி பாத்ரனாக ஆகிறான்.

பக்தியின் பெருக்காக, வேங்கடேச கவியிடமிருந்து, பற்பல காவ்யங்களின் குணங்களை உடைய
இந்த கோதா ஸ்துதியைப் பாராயணம் செய்பவன், ஸ்ரீ ரங்கநாதனின் திருவடியில், அவ்வுலகில் நீண்ட காலம்
கைங்கர்யம் செய்வதோடு மட்டுமல்லாமல், இவ்வுலகிலும் அவனுடைய க்ருபைக்குப் பாத்ரமாவான்

அவதாரிகை
விஷ்ணுசித்தரிடமிருந்து கோதை தோன்றினாள் என்று 9ல் ஸாதித்தார்.
‘விஷ்ணுசித்தாத்மஜை’ என்று முன் ஸ்லோகம் முடிவில் பேசியது அதைக் காட்டுகிறது.
கோதை விஷ்ணுசித்தரிடம் தோன்றியதுபோல, கோதை ஸ்துதி பக்தி நிரம்பிய என் சித்தத்திலிருந்து தோன்றியதென்கிறார்.
“ஸமுக்திதவதீம் அதிவிஷ்ணுசித்தம்” என்பதுபோல ‘விகஸிதபக்தே: வேங்கடேசாத் உத்திதாம்’ என்கிறார்.
முதல் ஸ்லோகத்தின் உரையில் இந்த ஸ்லோகத்தின் பொருள்களை விஸ்தரித்திருக்கிறோம்.
அதையெல்லாம் இந்த ச்லோக உரையில் சேர்த்துக் கவனிக்க.

இதி — இப்படி. முன் ஸ்லோகங்களில் அநுபவம் சென்றபடி. ;இங்கிப்பரிசுரைப்பார்’

விகஸிதபக்தே: —
புதுவைப் பூந்தோட்டத்தில் பெருமாளிடம் தன்மயத்வத்தோடு கோதை வளர்த்த பூஞ்செடிகள் புஷ்பித்து மலர்ந்ததுபோல,
கோதையின் பக்தியும் பெருமாளிடம் புஷ்பம் போல் மலர்ந்து வாஸித்துப் பாமாலையாயிற்று.
அதுபோல கோதையிடமும் அவள் பூமாலை பாமாலைகளிடமும் இந்த ஸ்தோத்ர பாவனையால் நம் ஸ்வாமியும்,
தன் மயத்வத்தை யடைந்து, கோதையிடம் பக்தி அத்புதமாக மலர்ந்தது.
‘இப்படி மலர்ந்து வாஸிக்கும் பக்தியையுடைய வேங்கடேசனிடமிருந்து இந்தத்துதி எழுந்தது’ என்றும் சொல்லலாம்.
வேங்கடேசனிடமிருந்து அவருடைய இப்படி மலர்ந்த பக்தியிலிருந்து இத்துதி எழுந்தது’ என்றும் பொருள் கொள்ளலாம்.

உதிதாம் —
கோதை விஷ்ணுசித்தரிடமிருந்து தோன்றியதுபோல, இத்துதியும் ஸ்வாமி சித்தத்தில் தோன்றியது.
இருவருக்கும் கர்த்ருத்வமில்லை, ஆவிர்பாவாதிகரணத்வமேயுண்டு.

வேங்கடேசாத் —
இப்படி கோதையிடம் ஸ்வாமிக்கு பக்தியமைந்ததற்குக் காரணமுண்டு. வேங்கடவற்கென்றேயிருப்பாள் கோதை.
அவள் பெருமையை வேங்கடவர் கண்டை உலகமறிய இத்துதியால் சப்திக்கவேண்டியது உசிதம்.
இரண்டு சம்ப்ரதாயஸ்தரும் தேசிகன்காலம் முதல் சேர்ந்து ஏக கோஷ்டியாகப் பாடும் பாக்யம் பெற்ற ஸரஸ்வதி.

பஹுகுண ரமணீயாம் —
கோதை சூடிய மாலை அநேக குணங்களாலும் நார்களாலும் அரங்கனுக்கு ஹ்ருத்யமானது போலே
அநேக குணங்களையுடைய இத்துதியும் அரங்கன்முன் அரங்கேற்றி அவனுக்கு ஹ்ருத்யமாயிற்று.

வக்தி — சொன்னால் போதும். தப்பிச் சொன்னாலும் போதும். பெருமாள் விஷயமான திருப்பாவையை
‘தப்பாமே’ சொல்லவேண்டுமென்ற நிர்ப்பந்தம் உண்டு. கோதை விஷயமான இப்பாமாலையை ப்ரஜல்பநம்
பண்ணாலும் போதும் அரங்கர்க்கு பஹுமான்யராவதற்கு. ஆனால் ஒரு நிர்ப்பந்தம் மட்டும் உண்டு. அதென்ன?
“இதி விகஸிதபக்தே: வக்தி” என்றும் அந்வயித்து ‘இப்படி மலர்ந்த பக்தியாலே சொல்லுவனேல்’ என்று பொருள் கொள்ளவேணும்.
ஸ்வாமி பக்தியைப்போல நமக்கும் பக்தி மலரவேணும். ஹ்ருதயபுண்டரீகம் விகஸிக்க வேணும்.

கோதாஸ்துதீம் —
வாக்கைக் கொடுத்தவள் விஷயமான ஸ்தோத்திரம். இந்த ஸ்துதி ரூபமான வாக்கு பிக்ஷையும் கோதைத் தாயார் கொடுத்தது.
ஆகையால் இத்துதியை ‘பஹுகுணரமணீய’ என்று கொண்டாடினது. ஆத்மச்லாகை அன்று.
“வாசா நிர்மலயா ஸுதாமதுரயா யாம் நாத பிக்ஷாம் அதா:” (க்ருஷ்ண! என் நாதனே! அமுதத்தைப்போல் இனிமையும்,
நிர்தோஷமுமான வாக்கை பிக்ஷையாக எனக்கு நீர் கொடுத்ததை நான் ஸ்வப்னத்திலும் நினைத்து
க்ருதஜ்ஞதையை அநுஸந்திக்காமல், என் வாக்கு என்று அஹங்காரமதம் பிடித்திருக்கிறேனே) என்றார் பண்டிதராஜ ஜகந்நாதர்.

முதல் ஸ்லோகத்திலேயே ஸ்வாமி இத்தாயாரை வாக்பிக்ஷைக்காகச் சரணம் புகுந்ததைக் காட்டியுள்ளோம்.
‘வாக்கைத் தானம் செய்பவள்’ என்ற திருநாமமுடைய கோதை இந்தத் துதிவாக்கையும் கொடாமலிருந்தால்,
கோதையாகாளே! கோதை துதியென்னும் பெயரும் பொய்யாமே! அவள் பேரும் இத்துதி பேரும் நிலைப்பதற்கு
இத்துதியும் வாக்கும் அவளதேயாய்த் தீரவேணும்.

ய:ஸ: —
‘யவனவன்’. ஶ்ரிய:பதியைப் பற்றித் திருவாய்மொழி தொடங்கியதுபோலும்.
ப்ரஹ்ம ஸூத்ரமும் உபநிஷத்தும் ப்ரஹ்ம லக்ஷணம் பேசுவது போலும்,
இத்துதியை இப்படி மலர்ந்த பக்தியோடு சொல்லுமவன் மஹிமையை ‘யவனவன்’ என்று வர்ணிக்கிறார்.

பவதி —
நித்யமும் ஆகிறான். முக்காலத்தையும் சொல்லுகிறது. ‘பவதி’, அம்மா என்று கூப்பிடுவதுமாகலாம்.
கடைசி ஸ்லோகத்திலும் ‘அம்மா’ என்று கூப்பிட்டு முடிப்பதழகு.
பவதிபஹுமாந்ய என்று சேர்த்து ஒரு பதமாகவும் ஓர் அந்வயம் கொள்ளலாம்.

ஸ்ரீக்கும் பஹுமாந்யன். ரங்கபர்த்தாவுக்கும் பஹுமாந்யன். உனக்கும் பஹுமாந்யன்.
உன் வாக்காயினும், எனக்குத் தானம் செய்துவிட்டதால், உன் குழந்தையாகிய நான் உச்சரித்த துதியென்று உனக்கும் அதில் பஹுமானம்.
என்முகமாக வெளிப்பட்ட துதியைப் படித்தானென்று என்னிடம் ஸ்நேஹத்தால் படிப்பவனிடம் பஹுமானம்.
பஹுமாந்ய: காரணமான துதியிலுள்ள குணத்தின் பஹுத்வம் கார்யமானமானத்திலும் வருகிறதென்பது ரஸம்.

ஸ்ரீமத: —
ஸ்ரீவிசிஷ்டனாகிய. கோதை பெருமையைக் கேட்பதில் ஸ்ரீக்கு மிக்க இன்பம்.
“ஸ்ரீரங்கராஜஹரிசந்தன” என்று முதல் ஸ்லோகத்தில் பேசினபடி உபஸம்ஹாரமும் அப்படியே.
முதலில் ஸமாஸம், இங்கே முடிவில் வ்யாஸம். “ஸமாஸவ்யாஸதாரணம்” வித்வான்களுக்கு அழகு.

ரங்கபர்த்து: — அரங்கத்தின் ப்ரபு. காவ்யங்களையெல்லாம் அரங்கேற்றும் ப்ரபு.

சரணகமலஸேவாம் —
பக்தியென்னும் புஷ்பம் மலர்ந்தது. ஹ்ருதயகமலம் மலர்ந்தது. இப்படி ஓர் புஷ்பம் மலர்ந்ததுக்கு அளிக்கும் பலன் என்ன?
திருவடிக் கமலமென்னும் ஓர் அபூர்வ புஷ்பத்தை சாஸ்வதமாய் அனுபவிக்கும்படி அளிப்பதே.
புஷ்பம் மலர்ந்ததற்குச் சாஸ்வத பலமான புஷ்பாநுபவமே பயன் என்று ஆநுரூப்யம். கமலத்திற்குப் பரிசு அபூர்வகமலம்.
ஹ்ருதய கமலம் மலர்ந்தபோது, இந்தத் திருக்கமலமும் அங்கே வீற்றிருந்து ஸமகத்தைக் கொடுக்கும்.
தாமரையோடு தாமரையின் யோகம் வரும். “கேசவநம்பி கால்பிடித்தல்”

சாஸ்வதீம் —
சாஸ்வதீ மம ஸம்ஸித்தி: என்றவிடத்தில் போல ஸேவையென்னும் வணக்கமே, ப்ரஹ்வீபாவமே, பரமமான ஸித்தியாகும்.
இதைப் படிப்பவருக்கும் சாஸ்வத ஸுகம் நியதம். ‘சாஸ்வதம், ஸுகம்’ என்று ஸ்ருதி பேசியதை
‘சாஸ்வதமான சரணகமல ஸேவாம்’ என்று ஸூசிக்கிறார். உன்னேச் சேவித்து உன் பொற்றாமரையடியே போற்றும் பொருள்,
உனக்கே நாமாட் செய்வோம்’ என்று கோதை ஆசைப்பட்ட பயன்.
‘திருமாலால் இன்புறுவர்’ ஸேவையென்கிற நமஸ்ஸு (ந மம) என்பது சாஸ்வதப் பயனையளிக்கிறது. “ந மமேதி ச சாச்வதம்”

அப்யுபைஷ்யந் —
அடையப்போகிறவனாய். பரமபதத்தில் சாச்வதமான திருவடிஸேவை பாக்யத்தை அடைவானாம்.
“மாமுபேத்ய து கௌந்தேய” என்கிற ச்லோகத்தில் ‘ஆசாச்வதமான துக்காலயத்தை அடையமாட்டார்,
பரமமான ஸம்ஸித்தியையடைவார்’ என்பதை “உபைஷ்யந்” என்பதால் ஸூசிக்கிறார்.
‘மாம்’ என்றவிடத்தில் அப்பதத்தைக் கொண்டே லக்ஷ்மியையும் கொள்ளலாம். ததந்தர்பாவ ந்யாயத்தாலும் கொள்ளலாம்.

———-

பூ ஸ்துதி “என்பதாக, பூமிப் பிராட்டியை ஸ்தோத்ரம் செய்தவர்,
பூமிப் பிராட்டியின் அவதாரமான கோதையை இங்கு 28 சுலோகங்களால் ஸ்தோத்ரம் செய்கிறார்.
இது கோதா பரிணயம் என்பர்,ஆன்றோர்

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே !
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்தகுரவே நம: ||

ஸ்ரீ கோதா ஸ்துதி முற்றிற்று.

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கோதா ஸ்துதி-1-14-

January 12, 2021

ஸ்ரீமாந் வேங்க‌ட‌நாதார்ய‌: க‌விதார்க்கிக‌ கேஸ‌ரீ |
வேதாந்தாசார்ய‌வ‌ர்யோ மே ஸ‌ந்நிதத்தாம் ஸ‌தா ஹ்ருதி ||

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –

————

1-12- ஸ்ரீ கோதா சரித்ரம் விவரணம் -முதல் ஸ்லோகத்தில் சரணாகதி
13-22-திருக்கல்யாண விவரணம்
23-28- மிதுன தம்பதிகளின் அருள் விவரணம் -த்யான ஸ்லோகம் -28-
29- பல சுருதி

——–

ஸ்ரீவிஷ்ணு சித்த‌ குல‌நந்த‌ன‌ க‌ல்ப‌ வ‌ல்லீம்
ஸ்ரீர‌ங்க‌ராஜ‌ ஹ‌ரி ச‌ந்த‌ன‌ யோக‌ த்ருஸ்யாம்|
ஸாக்ஷாத் க்ஷ‌மாம் க‌ருண‌யா க‌ம‌லா மிவாந்யாம்
கோதா ம‌நந்ய‌ ச‌ர‌ண‌: ச‌ர‌ண‌ம் ப்ர‌ப‌த்யே || (1)-நந்தனத்தில் பிறந்து சந்தனத்தில் சேர்ந்தாள் என்கிறார்-அநந்ய‌ ச‌ர‌ண‌: ச‌ர‌ண‌ம் ப்ர‌ப‌த்யே-கத்ய த்ரய ஸ்ரீ ஸூக்திகள்

ஸ்ரீவிஷ்ணுசித்த‌ருடைய‌ குல‌மென்னும் நந்த‌ன‌த் தோட்ட‌த்தில் (தோன்றிய‌) க‌ற்ப‌கக்கொடியும்,
ஸ்ரீர‌ங்க‌ராஜ‌னென்னும் ஹ‌ரி ச‌ந்த‌ன‌ க‌ற்ப‌க‌ விருக்ஷ‌த்தை அணைவ‌தால் (ம‌ண‌ம் புரிவ‌தால்) பார்க்க‌த் த‌க்க‌வ‌ளாயும்,
க்ஷ‌மையின் வ‌டிவேயான‌வ‌ளாயும், (ஸாக்ஷாத் பூமிதேவியாயும்), க‌ருணையினால் ம‌ற்றோர் ல‌க்ஷ்மிதேவி
போன்ற‌வ‌ளாயுமான‌ கோதையை (வாக்கை ய‌ளிக்கும் தேவியை) புக‌லொன்றில்லாவ‌டியேன் ச‌ர‌ண‌ம் ப‌ணிகிறேன்.

ஸ்ரீ பெரியாழ்வாரின் குலத்தில் தோன்றிய கற்பகக்கொடி ; அழகிய மணவாளனாகிய ஹரி சந்தன மரத்தைத் தழுவி விளங்கும் கொடி ;;
பூமிப் பிராட்டியின் அவதாரம்; கருணையே உருவாகி, பெரிய பிராட்டியைப் போல இருப்பவள்;
இப்படிப்பட்ட கோதா பிராட்டியை ,எந்தப் புகழும் இல்லாத அடியேன் சரண் அடைகிறேன்

ஸ்லோகத்தின் முதல் வரி, ஸ்ரீ ஆண்டாளின் அவதாரத்தையும் ,
இரண்டாவது வரி, அவளது திருக் கல்யாண விசேஷத்தையும் ,
மூன்றாவது வரி, ஸ்ரீ மஹா லக்ஷ்மியைப்போலக் கருணையே உருவானவள் என்றும்,
அப்படிப்பட்ட கோதா தேவியைப் புருஷகாரமாகப் பற்றி சரணம் அடைகிறேன் என்று நாலாவது வரியிலும் சொல்கிறார்

தாத்ப‌ர்ய‌ம்

கோதையை அம்ருத‌ வாக்கால் ஸ்துதிக்க‌ வேண்டிய‌த‌ற்கு ஸாம‌க்ரியான‌ ஓர் அத்புத‌ க‌விதா ச‌க்திக்காக‌
க‌விப்பெண்ணான‌ கோதையை இங்கே ச‌ர‌ண‌ம் புகுகிறார்.
“கோதா” என்கிற‌ திருநாம‌த்தைச் சொல்லி ச‌ர‌ண‌வ‌ர‌ண‌ம் செய்வ‌தாலே இது ஸூசித‌ம்.

“கோ” என்ப‌து “வாக்கை, ஸ‌ர‌ஸ்வ‌தியை”ச் சொல்லும். கோதா என்ப‌த‌ற்கு “வாக்கைக் கொடுப்ப‌வ‌ள்” என்று அர்த்த‌ம்.
வேத‌ங்க‌ளால் க‌வி என்று புக‌ழ‌ப்ப‌டுப‌வ‌ரும், கீதை பாடிய‌வ‌ருமான‌ பெருமாளுக்கு அத்புத‌மான‌ பாமாலை கொடுப்ப‌வ‌ள்.
என்ன‌ க‌வி ஸிம்ஹ‌மானாலும், ஸ்வ‌ய‌ம் அத்புத‌ க‌வியான‌ கோதைக்கு ஸ்தோத்ர ‌மாலை கொடுக்க‌த் த‌ம‌க்குச் ச‌க்தி
போதாதென்று ப‌ய‌ந்து, அவ‌ளே அவ‌ளைப்பாட‌ ப்ர‌ஸூம‌துர‌மான‌, ப‌ஹுகுண‌ர‌ம‌ணீய‌மான‌, ஸ‌ர‌ஸ்வ‌த்யாதி புனித‌மான‌
ம‌ஹாநதிக‌ள் போன்ற‌ க‌விதா ப்ர‌வாஹ‌த்தை அளிக்க‌ வேண்டும் என்று இங்கே ச‌ர‌ண‌ம‌டைகின்றார்.

இதை மூன்றாவ‌து ஸ்லோக‌த்தில்
“தாயே! நீயே உன்னைத் துதிக்க‌ யோக்ய‌மாக‌ ப்ர‌ஸ‌ந்ந‌ம‌துர‌மான‌ வாக்கு என‌க்க‌மைய‌ க்ருபை புரிய‌வேணும்” என்று
ப்ரார்த்திப்ப‌தாலும்,
க‌டைசி ஸ்லோக‌த்தில்,
“ம‌ல‌ர்ந்த‌ ப‌க்தியால் ப‌ஹுகுண‌ ர‌ம‌ணீய‌மான‌ இந்த‌ கோதா ஸ்துதி வெளிப்ப‌ட்ட‌து” என்று தாம் கோரிய‌ ப‌ல‌ம்
ஸித்தித்ததைப் ப‌ணிப்ப‌தாலும் விள‌க்குகிறார்.

ஸீதாதேவி த‌ன் தாய் பூமிதேவியின் ஸ்ரோத்ர‌மென்னும் வ‌ல்மீக‌த்தில் தோன்றிய‌வ‌ரும்,
த‌ன்னுட‌ன் பிற‌ந்த‌வ‌ருமான‌ வால்மீகி க‌வியைக் கொண்டு ராமாய‌ண‌த்தைப் பாடுவித்தாளே யொழிய‌, தானே க‌வி பாட‌வில்லை.
ருக்ம‌ணீ தேவி விவாஹ‌த்திற்கு முன் ஸ‌ப்த‌ப‌தியென்னும் விவாஹ‌ ப்ரார்த்த‌னைக்காக‌ ஏழே சுலோக‌ம் பாடினாள்.
தேவிமாரில் ஒருவ‌ரும் ஆண்டாளைப் போல‌க் க‌வி பாட‌வில்லை.
ஆண்டாளுடைய‌ ஸ‌ர‌ஸ்வ‌தி குளிர்ந்த‌ ப்ர‌ஹ்ம‌ குண‌ வெள்ள‌த்தில் நீராடி ம‌கிழ‌ச் செய்யும் நீராட்ட‌ ஸ‌ர‌ஸ்வ‌தி.
அது ஒரு அத்புத‌மான‌ ப‌க்தி வெள்ள‌ம். ப‌க்தி ப்ர‌வாஹ‌த்தில் நீராட‌ ஒரு அழ‌கிய‌ துறை.

“ஸ‌ம்ஸார‌ ம‌ருகாந்த‌ர‌த்தில் ப‌ரிச்ராந்த‌ரான‌ தேஹிக‌ளுக்குப் பெருமாள் விஷ‌ய‌மான‌ ப‌க்தியென்னும்
அம்ருத‌வாஹினியில் அவ‌காஹ‌ந‌ம் உப‌தேசிக்க‌ப்ப‌டுகிற‌து” என்று ஸாதிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து.
அப்ப‌டி அவ‌காஹிக்க‌ ஆண்டாளுடைய‌ நீராட்ட‌ ஸ‌ர‌ஸ்வ‌தியாகிய‌ ப்ர‌ஹ்ம‌ நதி சிற‌ந்த‌ ஸாத‌ன‌ம், மார்க்க‌த‌ர்சி.
ஆண்டாளுடைய‌ ஸ‌ர‌ஸ்வ‌தியை ய‌முனாம‌ஹாநதியாக‌ வ‌ர்ணிக்க‌ப் போகிறார்.
ஸ்ரீ என‌ற‌ பெரிய‌ பிராட்டியார் திருநாம‌த்தோடு ம‌ங்க‌ள‌மாக‌த் துதியை ஆர‌ம்பிக்கிறார்.
இங்கே கோதைக்கு ஸ்ரீர‌ங்க‌ராஜ‌னுடைய‌ யோக‌ம் ஏற்ப‌டுவ‌தை இர‌ண்டாம் அடியில் ஸாதிக்கிறார்.

யோக‌ம் என்ப‌து முன்பு அடைய‌ப்ப‌டாத‌ பொருள் புதிதாக‌ அடைய‌ப்ப‌டுவ‌தைச் சொல்லும்.
இங்கே இருவ‌ருக்கும் அல‌ப்ய‌லாப‌மான‌ விவாஹ‌ம‌ங்க‌ள‌ யோக‌த்தைச் சொல்லும்.
க‌ற்ப‌கக்கொடி புதிதாக‌ ஹ‌ரிச்ச‌ந்த‌ன‌ வ்ருக்ஷ‌த்தைச் சுற்றி அணைவ‌தை இங்கே ஸாதிக்கிறார்.
‌விவாஹ‌ம் பெரிய‌பிராட்டியாரால் கோடிக்க‌ப்ப‌ட்டு ந‌ட‌ப்ப‌தாக‌ இர‌ண்டாம‌டியில் ர‌ங்க‌ராஜ‌னுக்கு முன்
ஸ்ரீயை நிவேசிப்ப‌தால் காட்டுகிறார். ஒருத‌ர‌ம் முத‌ல் பாதத்தில் ஸ்ரீயைச் சொன்ன‌தோடு த்ருப்தியில்லை.
திரும்ப‌வும் திருவின் திருநாம‌த்தை நிர்தேசிப்ப‌தால், இந்த‌ விவாஹ‌ ம‌ங்க‌ள‌த்தை நிறைவேற்றுவ‌தில் ஸ்ரீக்கு
அத்த‌னை த்வ‌ரையும், பாரிப்புமிருக்கின்ற‌தென்று அழ‌காக‌ ஸூசிக்கிறார்.
பெரிய‌பிராட்டியாரோடும் ர‌ங்க‌ராஜ‌னோடும் சேர்த்தி. அதிலும் முன்பு திருவோடு சேர்த‌தி. பின்புதான் பெருமாளோடு.

கோதையைத் த‌ன் ஸ்த‌ன‌ம் முத‌லிய‌ போக‌ஸாத‌னாவ‌ய‌மாக‌ப் பாவிப்ப‌தால், கோதையோடு யோக‌ம்
த‌ன் (ஸ்ரீயின்) ஸ்த‌ன‌த்தோடு யோக‌மாகிற‌தென‌று ஸ்ரீப‌ட்ட‌ருடைய‌ அழ‌கான‌ ப்ர‌த‌ர்ச‌ன‌ம்.
த‌ன்னோடு யோக‌த்திலும் த‌ன் த‌ன‌த்தோடு யோக‌ம் ப்ரிய‌த‌ர‌மே. கோதை ஓர் க‌ற்ப‌கக் கொடி.
பூந்தோட்ட‌த்தில் ஆவிர்ப‌வித்த‌ கோதை ஓர் தைவ‌க்கொடியே.
இந்த‌க் கொடி அணைவ‌த‌ற்கு ஹ‌ரி என்னும் ஹ‌ரிச‌ந்த‌ன‌மான‌ தேவ‌ வ்ருக்ஷ‌ம் அநுரூப‌மாகும்.
இர‌ண்டும் தேவ‌ஜாதி. இர‌ண்டும் வேண்டிற்றெல்லாம் த‌ரும்.

ஸ்ரீர‌ங்க‌ராஜ‌னென‌னும் ஹ‌ரி என்றும் பிரிக்க‌லாம். அப்பொழுது “ச‌ந்த‌ன‌” என்று ச‌ந்த‌ன‌ ம‌ர‌த்தைச் சொல்லலாம்.
முன் பாதத்தில் ஸ்ரீவிஷ்ணு என்ற‌து ஸ்ரீர‌ங்க‌ராஜ‌ன் என்று இர‌ண்டாம் பாதத்தில் சொல்ல‌ப்ப‌டுவ‌தோடொன்றாகும்
என்று அந்த‌ யோஜ‌னையில் ப‌ல‌ம். ஸ்ரீயென்ன‌, விஷ்ணுவென்ன‌, இவ‌ர்க‌ளுடைய‌ சித்த‌மான‌ குல‌த்தில் (நந்த‌ன‌த் தோட்ட‌த்தில்)
அவ‌ர்க‌ள் ம‌கிழ‌த் தோன்றிய‌ க‌ற்ப‌கக் கொடியாவாள் கோதை.
ம‌ன‌த்தை ஆராமம், தோட்ட‌ம் என்று பேசுவ‌ர் வேதாந்திக‌ள். திவ்ய‌ த‌ம்ப‌திக‌ள் இருவ‌ரும் த‌ம்முடைய‌ சுப‌மான‌ ம‌ன‌தில்
த்யான‌மும் ம‌னோர‌த‌மும் செய்து அவ‌ர்க‌ளுடைய‌ ம‌ன‌தான‌ ஆராம‌த்தில் (நந்த‌வ‌ன‌த்தில்) தோன்றிய‌
க‌ற்பகக்கொடியாவாள் கோதை.

9வ‌து ஸ்லோக‌த்தில், “விஷ்ணுவின் சித்தத்தில் ச‌ந்திர‌ம‌ண்ட‌ல‌ம் உதித்ததுபோல் நீ உதித்தவ‌ள்.
நீயும் ச‌ந்திர‌னுடைய‌ ஓர் மூர்த்தி விசேஷ‌மாவாய். திருப்பாற்க‌ட‌லில் ச‌ந்திர‌னோடுகூட‌ உதித்த‌
பெரிய‌பிராட்டியாருக்கு நீ உட‌ன்பிற‌ந்த‌வ‌ளுமாவாய்” என்று ஸாதிப்ப‌தால்
இங்கே “ஸ்ரீவிஷ்ணு சித்தத்தில‌ உதித்த‌வ‌ள்” என்றும் பொருள் கொள்ளுவ‌து உசித‌மே. க‌வியின் க‌ருத்தே.

ஸ்ரீவிஷ்ணுசித்த‌ருடைய‌ குல‌மென்னும் நந்த‌னோத்யான‌த்தில் தோன்றிய‌ க‌ற்ப‌கக்கொடி என்னும் பொருளுள்ள‌வே உள்ள‌து.
“விஷ்ணுவை நினையாத‌வ‌ர் பூமிபார‌ம் என்றும்,
அவ‌ர்க‌ள் தின்னும் சோற்றைப் பிடுங்கி நாய்க்கிடுமின்” என‌றும் பேசுப‌வ‌ர் விஷ்ணுசித்த‌ர்.
திருவையும் பெருமாளையும் ஸ‌ர்வ‌கால‌மும் த்யானித்துக் கொண்டே இருக்கையில்
திருவின் அம்ச‌மான‌ கோதையெனும் தூய‌ க‌ற்ப‌கக்கொடி அவ‌ர் தூய‌ சித்த‌மாகிய‌ பூந்தோட்ட‌த்தில் அவ‌த‌ரித்தாள்.

க்ருத‌ யுக‌த்தில் ம‌ன‌தாலே மாத்ர‌ம் ஸ்ருஷ்டி, உட‌ம்பாலல்ல‌.
க‌லியிலும் இந்த‌ க்ருத‌யுக‌ப் பெண் பெரியாழ்வார் சித்தத்தில் ஆவிர்ப‌வித்தாள்.
சீதை க‌ர்ம‌ட‌ரும் ஜ்ஞானியுமாகிய‌ ஜ‌ன‌க‌ராஜ‌னுடைய‌ யாக‌பூமியில் அவ‌த‌ரித்தாள்.
ஜ‌ன‌க‌ரைப்போல‌ பெரியாழ்வாரும் சிற‌ந்த‌ க‌ர்ம‌ட‌ர். ஸ்ரௌத‌விஷ‌ய‌மான‌ க‌ல்ப‌ஸூத்ர‌ வ்யாக்யான‌ மிய‌ற்றிய‌வ‌ர்.

இர‌ண்டாம‌டியில் ஆண்டாளோடு யோக‌த்தைச் சொல்லுகையில் ச‌ந்த‌ன‌ யோக‌த்தைப் பேசுவ‌து விவாஹ‌த்திற்கேற்ற‌தாகும்.
ஆண்டாளை ஸ்ம‌ரிப்ப‌திலும் பேசுவ‌திலும் ப‌ரிம‌ள‌த்தையும் புஷ்ப‌த்தையும் பேசாம‌லிருக்கக் கூடுமோ?
தேவோத்யான‌மான‌ பூந்தோட்ட‌த்தையும், க‌ற்ப‌கக்கொடியையும், ஹ‌ரிச்ச‌ந்த‌ன‌ வ்ருக்ஷ‌த்தையும், ச‌ந்த‌ன‌த்தையும்,
“க‌ந்தத்வாராம் துராத‌ர்ஷ‌ம்” என்று வேத‌ம் கொண்டாடிய‌ க‌ந்த‌ங்க‌ம‌ழும் ஸ்ரீயை
இருத‌ர‌மும் இங்கே குறிப்ப‌து ப‌ரிம‌ள‌ங்க‌ளின் சேர்த்தியைக் காட்டுகிற‌து.

ம‌ற்ற‌ தேவிமாரும் கோதையும் ஒரு ம‌ன‌தே என்ப‌தைக் காட்ட‌ பூதேவியே கோதை என்ப‌தை
“இவ‌ள் ஸாக்ஷாத் க்ஷ‌மாதேவியே” என்று மூன்றாம‌டியில் காட்டுகிறார்.
“இவ‌ள் பொறுமையின் அவ‌தார‌மே” என்ப‌து அத‌ற்குப் பொருள்.
“க‌ருணாமிவ‌ ரூபிணீம்” என்ற‌ப‌டி க‌ருணைக் க‌ட‌லாகிய‌ ல‌க்ஷ்மீதேவி த‌யையின் மூர்த்தியாவாள்.
கோதையும் க‌ருணைக் க‌ட‌லாகையால், த‌ன்னுடைய‌ எல்லையில்லாத‌ க‌ருணையால் அப‌ர‌ல‌க்ஷ்மீயாவாள் என்கிறார்.
இப்ப‌டி பொறுமைக்கும், க‌ருணைக்கும் நிதியான‌வ‌ளைச் ச‌ர‌ண் புகுந்தால் ப‌ல‌ம் கிடைப்ப‌து நிச்ச‌ய‌ம் என்று விள‌க்குகிறார்.

இங்கே “ந‌ப்பின்னை” என்றும் நீளாதேவியைக் குறிப்பிட்டுச் சொல்ல‌வில்லை.
“ந‌ப்பின்னாய் க‌ந்த‌ம் க‌ம‌ழும் குழ‌லீ”,
“மைத்த‌ட‌ங்க‌ண்ணினாய்” என்றும் ஆண்டாளால் துதிக்க‌ப்ப‌டுப‌வ‌ளும்,
“ந‌ப்பின்னை ந‌ங்காய்த் திருவே துயிலெழாய்” என்று திருவோடு பிரியாத‌வ‌ளென்று பேச‌ப்ப‌டுப‌வ‌ளும்,
கூடாரை வெல்லுஞ்சீரில் பெருமாளோடுகூட‌ச் சேர்ந்து ஆண்டாளுக்குப் “ப‌ல்க‌ல‌னும‌ணிவ‌து” முத‌லிய‌
ச‌ம்மான‌ம‌ளிப்ப‌தாக‌ப் பாடும் விஷ‌ய‌முமான‌ ந‌ப்பின்னையும் கூடித்தான் ஆண்டாள் திருக்க‌ல்யாண‌ம்
முத‌லிய‌ ம‌ங்க‌ள‌ங்க‌ள் ந‌ட‌க்குமென்ப‌து திண்ண‌மாகையால் இங்கே த‌னித்துப்பேச‌ வேண்டிய‌ அவ‌ச்ய‌மில்லை.

முடிவில் 28வ‌து ஸ்லோக‌த்தில் “ச‌த‌க ‌ம‌ணி நீலா” என்று ஒருவாறாக‌ நீளா நாம‌த்தையும் நிர்த்தேசிக்கிறார்.
“வ‌ல‌ந்திக‌ழும் திரும‌க‌ளும‌ற்றிட‌த்தே ம‌ன்னிய‌ ம‌ண்ம‌க‌ளோடு நீளையாரும் ந‌ல‌ந்திக‌ழ் வீற்றிருந்த‌
நாத‌ன் பாத‌ம் ந‌ம‌க்கிதுவே முடியென்றெண்ணினோமே” என்ப‌தையும் நினைக்க‌வேணும்.
ஸ்ரீர‌ங்க‌ராஜ‌னோடு சேர்த்தியில் ஸ்ரீபூதேவிக‌ளான‌ உப‌ய‌நாய்ச்சிமாரே த்ருச்ய‌ராய் ஸேவை ஸாதிப்ப‌தால்,
இர‌ண்டு தேவிமாரை ம‌ட்டும் குறிப்பாக‌ இங்கே நிர்த்தேசிக்க‌ப் ப‌ட்ட‌து.

இந்தத் துதியில் ஸ்லோக‌ங்க‌ளின் எண்ணிக்கை 29. தத்துவ‌ங்க‌ள், ஜ‌ட‌ம் 24, ஜீவாத்மா 1, 26வ‌து தத்துவ‌மாகிய‌ பெருமாள் 1,
அவ‌ருடைய‌ தேவிமார் 3, ஆக‌ தத்துவ‌க் க‌ண‌க்கு மொத்த‌ம் 29ஐ அநுஸ‌ரித்ததாயிருக்க‌லாம்.

கோதை பாடின‌ திருப்பாவையின் க‌ண‌க்கு 30ல், “ப‌ட்ட‌ர்பிரான் கோதை சொன்ன‌ ச‌ங்க‌த்த‌மிழ்மாலை முப்ப‌தும்” என்று
திருப்பாவையின் வ‌ர்ண‌ன‌ம் ம‌ட்டுமான‌ க‌டைசிப் பாட்டைச் சேர்க்காம‌ல் “சிற்ற‌ஞ்சிறு காலை”யோடு பூர்த்தி
செய்து 29 க‌ண‌க்காக‌த் திருவுள்ள‌மாயிருக்க‌லாம்.

இங்கே 29வ‌து ஸ்லோக‌த்தில் “ச‌ர‌ண‌ க‌ம‌ல‌ ஸேவாம் ஶாஶ்வ‌தீ மப்யுபைஷ்ய‌ந்” என்று இருப்ப‌து
“உன்னைச் சேவித்து உன் பொற்றாம‌ரைய‌டியே போற்றும் பொருள்”
“நீ குற்றேவ‌ல் எங்க‌ளைக்கொள்ளாம‌ல் போகாது இற்றைப் ப‌றை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கு மேழேழ் பிற‌விக்கும் உன்த‌ன்னோடுற்றோமே யாவோமுன‌க்கே நாமாட்செய்வோம்”
என்று 29ம் பாட்டிலுள்ள‌தையே அநுஸ‌ரிப்ப‌து ஸ்ப‌ஷ்ட‌ம்.

“இதி ப‌ஹுகுண‌ர‌ம‌ணீயாம் வ‌க்தி கோதாஸ்துதிம் ய‌” என்று 29ம் ஸ்லோக‌த்திலுள்ள‌து.
30ம் பாட்டில் “கோதை சொன்ன‌ ச‌ங்க‌த் த‌மிழ்மாலை முப்ப‌துந் த‌ப்பாமே இங்கிப்ப‌ரிசுரைப்பார்” என்ப‌தை
முழுவ‌தும் அநுஸ‌ரிப்ப‌தும் ஸ்ப‌ஷ்ட‌ம். “இதி வ‌க்தி” என்ப‌த‌ற்கு “ம‌ல‌ர்ந்த‌ ப‌க்தியோடு தேசிக‌ன் (வேங்க‌டேச‌ன்)
ம‌ன‌திலிருந்து உருகி (வாக்காக‌) வெளிவ‌ரும் ப்ர‌கார‌மாக‌ இப்ப‌டியே யார் த‌ப்பாமே உச்ச‌ரிக்கிறாரோ” என்ப‌து பொருள்.

“இப்ப‌ரிசுரைப்பார்” என்ப‌த‌ற்கும்,
“கோதை எப்ப‌டி ப‌க்தி வெள்ள‌மாக‌ ம‌ன‌ம‌கிழ்ந்து உரைத்தாளோ அப்ப‌டியே ஓதுப‌வ‌ர்” என்ப‌து பொருள்.

ர‌ங்க‌ராஜ‌னிட‌ம் கோதையின் ப‌க்தியை யொக்கும், கோதையிட‌ம் ஸ்ரீதேசிக‌ன் ப‌க்தி.

“ச‌ங்க‌த்த‌மிழ்மாலை” என்ப‌த‌ற்குச் சிற‌ந்த‌ த‌மிழாகிய‌ ச‌ங்க‌த் த‌மிழாலிய‌ற்றிய‌ பாமாலை என்றும் சொல்லலாம்.
“ப‌ஹுகுண‌ர‌ம‌ணீயாம்” என்ப‌து ச‌ங்க‌த் த‌மிழ்போல‌ உய‌ர்ந்த‌ ஸ‌ம்ஸ்க்ருத‌மான‌ வைத‌ர்ப்பீ பாஞ்சாலி ரீதிக‌ளில‌மைந்தது.
கோதையினின்ன‌ருளால் இத்துதி என்று பேசுவ‌தாக‌ச் சொல்லலாம்.
இத்துதியை ஓதும‌வ‌ன் ஸ்ரீமானான‌ ர‌ங்க‌ப‌ர்த்தாவுக்கு ப‌ஹுமாந்ய‌னாவான்.

திருப்பாவை முப்ப‌துந் த‌ப்பாமே உரைப்ப‌வ‌ர்
“ஈரிர‌ண்டு மால்வ‌ரைத்தோள் செங்க‌ட்திருமுக‌த்துச் செல்வ‌த் திருமாலால் எங்குந் திருவ‌ருள் பெற்று இன்புறுவ‌ர்”
கோதைக்கு “செங்க‌ட்திருமுக‌த்துச் செல்வ‌த் திருமால்” ஸ்ரீர‌ங்க‌ராஜ‌ன்.
“ஆண்டாள‌ர‌ங்க‌ர்க்குப் ப‌ன்னு திருப்பாவை” என்ற‌ப‌டி ஸ்ரீர‌ங்க‌ராஜ‌னே திருப்பாவைக்கு விஷ‌ய‌ம்.
இம் முப்ப‌துந் த‌ப்பாமே உரைப்ப‌த‌னால் திருமாலால் வைய‌த்து வாழ்வோர்க‌ள் அருள் பெற்றின்புற‌ச் செய்வ‌தே
“த‌ன‌க்குப் பாவை, வ்ர‌த‌ம்” என்ப‌தை “என் பாவாய்” என்ற‌டுத்த‌ பேச்சால் காட்ட‌ப் ப‌டுகிற‌து.
“இதுவே என‌க்கு வ்ர‌த‌ம்” என்று இவ‌ள் ப‌தி இராம‌ன் ச‌ப்த‌ம் செய‌ததுபோல் கோதைக்கு இப்ப‌டி வ்ர‌த‌ம்.

வாக்கைக் கொடுத்த‌ கோதை விஷ‌ய‌மான‌ இந்த‌ ஸ்துதி 29ம் கோதை சொல்லுவித்ததாகையால்
இத‌ற்கும் திருப்பாவையை ஓதுவ‌து போல‌ ப‌ல‌முண்டு என்ப‌து திருவுள்ள‌ம்.

“திங்க‌ட்திருமுக‌த்துச் சேயிழையார்” என்று க‌ண்ண‌னைக் குறித்து விர‌த‌ம் அநுஷ்டிக்கும் ஆய்ச்சிய‌ரைச்
ச‌ந்த்ர ‌பிம்ப‌ம்போன்ற‌ முக‌முடையார் என்று புக‌ழ்ந்தாள்.
ஒரு பெண்ம‌ணி ம‌ற்ற‌ப் பெண்க‌ளின் அழ‌கை ஒப்புவ‌ளோ? புக‌ழ்வ‌ளோ?
கோதையின் கோதிலாக் குண‌ங்க‌ள் இத‌னால் வெளியாகும்.

திருப்பாவை முடிவில் ஆண்டாள் பேசிய‌ “திங்க‌ட் திருமுக‌த்தை”,
முத‌ல் பாட்டிலேயே “திங்க‌ள், ம‌தி, நிறைந்த‌ ம‌தி, ம‌திய‌ம்போல் முக‌த்தான்” என்று த்வ‌நிப்ப‌தை ர‌ஸிக‌ர் க‌வ‌னிக்க‌ வேண்டும்.

இப்ப‌டி முத‌லிலும் முடிவிலும் பேசுவ‌தால் திங்க‌ள் (ம‌தி) ம‌தி நிறைந்திருந்தது ஆண்டாள் நெஞ்சில் என்ப‌தை
ஸ்ரீதேசிக‌ன் அநுப‌வித்து இங்கே முத‌ல் சுலோக‌த்தில் “ச‌ந்திர‌ன் (புருஷ‌னுடைய‌) ம‌ன‌திலிருந்து ஜாத‌ன்” என‌ற‌
புருஷ‌ஸூக்த‌ ச்ருதியை அநுஸ‌ரித்து “விஷ்ணுசித்தத்தை நந்த‌ன‌ம் செய்து அதில் தோன்றிய‌வ‌ள்” என்ப‌தையும்,
இர‌ண்டாம‌டியில் ச‌ந்த்ர‌ப‌ர்யாய‌மான‌ ராஜ‌ச‌ப்தத்தை ப்ர‌யோகிப்ப‌தால்,
ஸ்ரீர‌ங்க‌ச‌ந்த்ர‌ன் என்றும் பேசுகிறார் என்ப‌தையும் ர‌ஸிக‌ர் அறிய‌வேணும்.

“ஸ்ரீர‌ங்க‌ச‌ந்த்ர‌ம‌ஸ‌ம் இந்திர‌யா விஹ‌ர்த்தும்” முத‌லிய‌ ஸ்ரீப‌ட்ட‌ர் அநுப‌வ‌ங்க‌ளையும் நினைக்க‌வேண்டும்.

இங்கே “கோதாம்” என்ப‌து விசேஷ்ய‌ம். இது ஸாபிப்பிராய‌ம்.
“வாக்கைக் கொடுப்ப‌வ‌ளைச் ச‌ர‌ண‌ம‌டைகிறேன்” என்ற‌தால் ப‌ரிக‌ராங்குர‌ம் என்னும் அணிமுறையாக‌
வாக்கின் அபேக்ஷையை ஸூசிக்கும் ஸ்வார‌ஸ்ய‌மும் க‌வ‌னிக்க‌த் த‌க்க‌து.

இங்கே ஆண்டாளுக்கும் ஸ்ரீர‌ங்க‌ராஜ‌னோடு யோக‌ம், அவ‌ள் திருநாமமாகிய‌ “கோதா” ச‌ப்தத்திற்கும் யோக‌ம்
என்னும் அவ‌ய‌வ‌ப் பொருள். இங்கே “விஷ்ணுசித்த‌குல‌நந்த‌ன‌” என்ப‌தால்
“ஜ‌ன‌க ‌வ‌ம்ச‌த்தர‌ச‌ர்க‌ள் குல‌த்திற்கு என் பெண் கீர்த்தியைக் கொண‌ர்வாள்” என்ற‌ ஜ‌ன‌க‌ர் வார்த்தையை நினைக்க‌ வேண்டும்.

———

வைதேசிக: ஸ்ருதி கிராமபி பூயஸிநாம்
வர்ணேஷு மாதி மஹிமா ந ஹி மாத்ருசாம் தே|
இத்தம் விதந்தமபி மாம் ஸஹஸைவ கோதே
மௌந த்ருஹோ முகரயந்தி குணாஸ் த்வதீயா|| .2.

“எண்ணிறந்த ஸ்ருதி வாக்குகளுக்கு நிலமல்லாத (எட்டாத) உன்னுடைய மஹிமை என் போன்றவருடைய
எழுத்துக்களுக்குள் அடங்காதே. இப்படி அறிந்தவனான என்னையும் ஆலோசிக்கவே இடமில்லாமல்
சடக்கென்றும் பலாத்காரமாயும் ஓ, கோதையே! மௌனத்தைக் கோபிக்கும் உன் குணங்கள்
என் வாயைத் திறந்து வைத்துப் பேசச் செய்கின்றன.”

உனது மஹிமை ,வேதங்களுக்கும் எட்டாதது; என் போன்றவர்களின் வார்த்தைகளால் அது எப்படி சொல்லத் தகும்;
இவ்வுண்மையை அறிந்த என்னையும், உனது குண ப்ராபங்கள் என் மௌனத்தைக் கலைத்து, தேவரீரைப் பற்றிப் பேச வைத்து விட்டது.
த்ரி விக்ரமாவதாரத்தை ஒரு உருவில் அடக்கி விடலாம்; உனது மஹிமையை ஒருவராலும் அடக்க இயலாது;
நானே பேசினால் ” முகரதை” என்கிற குற்றம் வந்து விடும் ( பலர் வாய்க்கு வந்தபடி பேசுவது)
ஆனால் உன் குணங்கள் என்னைப் பேச வைக்கின்றன

தாத்பர்யம்

கோதா என்கிற திருநாமத்தைச் சொல்லி அவளைச் சரணமடைகின்றேன் என்றார்.
தேவ ஜாதியர் பரோக்ஷணமான பேச்சில் ரஸிப்பர். தேவியான கோதையை ‘கோதையைச் சரணமடைகிறேன்’ என்று
முதலில் த்வய மந்த்ரத்தில் போல பரோக்ஷமாகப் பேசிச் சரணம் புகுந்தார்.
மஹா கவியான கோதை, கண்டையின் அவதாரமான உத்தம (த்வநி) கவி தேசிகன் ப்ரயோகித்த
‘கோதா’ சப்தத்தின் த்வயர்த்தத்தை உடனே அறிந்தாள்.
பரிகராங்குராலங்காரத்தால் ஆசைப்படுவது கவிதை என்பது வஸ்து த்வனி.
தன்னைத் துதிக்க அர்ஹமான உத்தம வாக்கைக் கேட்கிறார் இவர் என்று அறிந்து கொண்டாள்.

“ஸ்ரீரங்கராஜனுடைய திவ்யாஜ்ஞையால் வேதாந்த தேசிகன் என்றும், அவர் திருவோலக்கத்தில்
பெரியோரால் கவிதார்க்கிக ஸிம்ஹம் என்றும் பிருதளிக்கப்பட்ட நீர் என்னைத் துதிக்க கவிதா பிக்ஷை கேட்பீரேயானால்,
எம் நாயகன் கொடுத்த பிருதங்கள் பொய்யாகாவோ?
ரங்கபர்த்தா தானம் செய்த வேதாந்தாசார்ய ஸம்ஜ்ஞையை அந்வர்த்தமாகச் செய்கிறேனென்று ப்ரதிஜ்ஞை செய்து,
ஸஹஜ பஹுகுணமான ஸ்ரக்தரைப் பாற்கடலான ஸாராவளியைப் பாடினீரே?
எம் நாயகர் கொடுத்த கவிதைப் பிச்சையால் நீர் பூரணரல்லவா?
அரை வயிற்றுக்குத்தான் “கொள்ளக் குறைவிலனும் வேண்டிற்றெல்லாம் தருபவனுமான” ஸ்ரீரங்கராஜன் பிச்சை கொடுத்தாரோ?
நீர் வேதாந்த தேசிகராயிற்றே, நான் ஈஸ்வரியாயிருந்தாலும், ஈஸ்வர தத்வத்தின் நிலையை வேதாந்தங்கள் அறியாவோ?
வேதாந்த தேசிகருக்கு வேதாந்தங்களுக்கு நிலமான ஈஸ்வர மஹிமை நிலமாகாதோ? ஓய் தேசிகரே” என்று கோதை வினவ,

உன் மஹிமையிருக்குமூரிலேயே வேதாந்தங்கள் அணுகக் கூடவில்லை.
வேதாந்தங்களுக்கு உன்னுடைய மஹிமை வைதேசிகம் என்பதால் கைமுத்யத்தால்,
வேதாந்த தேசிகனுக்கும் அவன் பெருமை வைதேசிகமென்று ஸித்திக்கிறது.
ஒருவர் ப்ரபாவம் அவருக்கு ஸமீபத்திலிருந்தால் தெரியலாம். ஒரே ஊரிலிருந்தாலும் தெரியலாம்.
ஸாமீப்யம் அல்லது ஸாலோக்யமாவது இருக்க வேணும். ஸாலோக்யமேயில்லை. ஸாமீப்யத்திற்கு ஆசையேது?
வேதங்கள் அனந்தங்களென்பர். என் போன்றவர்களுக்கு சில எழுத்துக்கள் கூட்டத்தான் தெரியும்.
என் போன்றவர் எழுத்துகளுக்குள் உன் மஹிமை அளவடங்குமோ?

வர்ணம் என்பது எழுத்தையும் சொல்லும். ஸ்தோத்ரத்தையும் சொல்லும்.
(வர்ண்யதே அநேந — இதனால் வர்ணிக்கப் படுகிறது) எங்கள் எழுத்துக்களிலடங்காது.
நாங்கள் வெட்கத்தை விட்டுக் கோணாமாணாவென்று ஸ்தோத்ரங்களை (வர்ணங்களால் வர்ணநங்களைச்) செய்தாலும்
உன் மஹிமை அதிலடங்குமோ? ஸ்துதிப்பாடலுக்கும் வர்ணமென்று பெயர்.

இந்த ஸ்லோகத்தில் ‘கர்த்தும் ததீய மஹிமஸ்துதிம்’ என்ற ஆளவந்தார் ஸ்லோக வார்த்தை ஸ்வாமி நெஞ்சிலோடுகிறது.
ஸ்துதியென்றால் மஹிமையின் துதியாகும். மஹிமையை அறியாமல் எப்படித் துதி செய்கிறது?
‘யதாவத் வர்ணநே தஸ்ய கிமுதாந்யே மிதம் பசா:‘ என்று யாதவாப்யுதயத்தில்
‘வேதங்களே பாடிப்பாடி ஓரோர் குணத்தின் ஏகதேசத்திலே சோர்வடையும் விஷயத்தில் மிதக்ஞரானவர்
யதாவத்தாய் உள்ளபடி வர்ணிப்பதில் ஸமர்த்தராகாரென்பதற்குக் கேட்க வேணுமோ?’ என்று ஸாதித்ததை நினைக்க வேணும்.
உள்ளபடி வர்ணிப்பது வர்ணமென்னும் ஸ்துதி. அங்கே கைமுத்யம் ஸ்பஷ்டமாக்கப்பட்டது.
இங்கே கைமுத்யம் வ்யஞ்ஜிதம். என் அறியாமையை நான் நன்கறிந்தும் திடீரென்று பலாத்காரமாய்,
உன் குணங்கள், உன் சிசுவாகிய நான் ஊமையாயிருப்பதை ஸஹிக்காமல், என் மௌனத்தின்மீது கோபித்து,
என் வாயைத் திறந்துவிட்டு என்னைப் பேச்சைக் கொடுக்கும் வ்யாபாரத்தில் தள்ளி விடுகின்றன.

‘ஸஹஸைவ’ அதிவேகமாகவே, பலாத்காரமாகவே. ஒன்றுமறியேனென்கிறீர்,
மௌனத்தைக் காணோமே, வாய் திறக்கிறீரே, இதென்ன ஸாஹஸம் என்பாயோ?
அம்மா இது உன் குணங்களின் ஸாஹஸம், அவற்றின் பலாத்காரம், என் ஸாஹஸமல்ல.
உன் குணங்கள் உன் குழந்தையாகிய என் மௌனத்தைக் கோபிக்கின்றன.
பெருமாள் குணங்கள் மௌனத்தை நிர்ப்பந்திக்கும். அவர் ஆனந்த குணத்தைப் பேசி ஓய்ந்து
வாயை மூடிக்கொண்டு சும்மாயிருப்பதே அழகு என்று வேதம் நிவ்ருத்தி அடைந்தது.

‘முகலாயம் நிலில்யே’ ‘ஊமையாக லயமடைந்தது’ என்று ஸ்ரீபட்டர் ஸாதித்தார்.
பெருமாள் குணங்கள் அவருடைய ஐஸ்வர்யப் பெருமையால் மௌனத்தையும், ஊமைத் தன்மையையும் ஸஹிக்கும்.
பேசாமலும் செய்யும். தாயாகிய உன்னுடைய குணங்களோ குழந்தை வாயை மூடி ஊமையாயிருப்பதை ஸஹிக்காது.
மௌனத்தைக் கோபித்து வாயை உடனே திறந்து விடும். வேறொன்றையும் உன் குணங்கள் கோபிக்கமாட்டா.
மௌனத்தை மட்டும் கோபிக்கும்.

பெருமாள் குணங்களுக்கும் உன் குணங்களுக்கும் இந்த வாசியுண்டு. என்ன குணங்கள்?
முன் ஸ்லோகத்தில் மூன்று சொன்னேன். அவையென்ன? க்ஷமை, கருணை, கோதை என்ற திருநாமத்திற்கேற்ற
“வாக்கைத் தானம் செய்வதென்னும் குணம்”. என்ன பிதற்றினாலென்ன?
சொற்குற்றம், பொருள் குற்றம் எத்தனையிருந்தாலுமென்ன? உன் பொறுமை அதையெல்லாம் பொறுக்காதோ?
ஏன் அஞ்ச வேணும்? உன்னைத் துதி செய்தாலல்லது நான் தரிக்க முடியாத என் ஆர்த்தியைக் கண்டும்
உன் கருணை என்னைக் கைவிடுமோ? “கோதா — வாக்கையளிப்பவள்” என்னும் உன் திருநாமம் கோபியாதோ?
இரண்டுக்கும் பரஸ்பரம் சத்ருத்வமில்லையோ? வாக்கைக் கொடுக்கும் குணம் கொள்வாரில்லாமற் போனால்
கானக நிலவு போல வீணாகாதோ?

“முகரயந்தி” என்பதிலும் மிக்க ரஸமுண்டு. ‘முகம்’ என்பது வாய்க்குப் பெயர்.
லக்ஷணையாக வாய்ப்பேச்சை, வாக்கைச் சொல்லும். முகத்தைக் கொடுப்பது முகரம்.
முகம்ராதி. ராதி என்பதற்கு, கொடுக்கிறது என்று பொருள். வாய்ப்பேச்சை, வாக்கை, துதியைக் கொடுப்பது முகரம் —
வாயைக் கொடுக்கச் செய்கிறது என்று மொத்தப் பொருள். என் வாயைக் கொடுக்கச் செய்தால்தானே,
உனக்கு கோதா என்னும் திருநாமம் நிலைக்கும். (2)

—————-

த்வத் ப்ரேயஸ: ஸ்ரவணயோ ரம்ருதாயமாநாம்
துல்யாம் த்வதீய மணி நூபுர சிஞ்ஜிதாநாம்|
கோதே த்வமேவ ஜநநி த்வதபிஷ்ட வார்ஹாம்
வாசம் ப்ரஸந்ந மதுராம் மம ஸம் விதேஹி || .3.

உன் காந்தனுடைய செவிகளுக்கு அம்ருதம் போன்றதாயிருப்பதும்,
உன்னுடைய மணிச் சிலம்பி னோசைக்குத் துல்யமானதும்,
உன்னை நன்கு துதிக்க யோக்யமுமான ப்ரஸந்ந மதுர வாக்கைத் தாயாகிய நீயே எனக்கு அமைத்தருள வேணும்.

கோதே …நீ வாக்கை அளிப்பவள்…உனது நாதனுடைய செவிகளுக்கு அமுதம் போன்று இருக்கும்படியாயும்,
உனது திருவடிகளில் அணிவிக்கப்பட்டிருக்கும் ரத்னச் சலங்கையின் ஓசைகளுக்கு நிகராக இருக்கும்படியாயும்
உன்னைத் துதிக்கும் சொற்கள் தெளிவும், இனிமையுமாக அடியேனிடமிருந்து வெளி வரும்படியாக ,அருள்வாயாக
உன் திருவடிகளில் அணிந்திருக்கும் நூபுர மணி நாதத்தை, இரு செவிகளாலும் ஆதரித்து அனுபவிக்கிறான்,அரங்கன்.
அப்போதே உன் கரத்தலம் பற்றத் தீர்மானித்தானோ !

தாத்பர்யம்

(1) நீர் சரணம் புகுகிறதாகவும், நீர் என் மஹிமையை அறியவும் பாடவும் அசக்தர் என்றும் பேசுகிறீர்.
ஆனால் கவி பாடிய இரண்டு சுலோகங்களும் அழகியதே. அப்படியே நீர் பாடலாம்.
(2) சரணம் புகுகிறேனென்கிறீர். வாய் திறக்கப்படுகிறது என்கிறீர்.
முழு வாயால் கவிதா சக்தி வேணும் என்று அர்த்திக்க மாட்டேனென்கிறீரே!
திறந்த வாயால் வேண்டியதை நன்றாய்ச் சொல்லிக் கேளும் ! வெட்கப்படாதேயும். இப்படிச் சொன்னதும்,
உன் மணிச் சிலம்பினோசையைப்போல் உன் நாயகன் செவிகளுக்கு அமிர்தத்தை வார்க்கும்
இனிய கவிகளையல்லவோ நான் ஆசைப்படுவது!
அப்படிக்கினிய கவிகள் எனக்கு நீ கொடாமல் போனால் ஸ்வயமாய் எனக்கு அவை சக்யமல்ல.
தாயாகிய உன்னிடமெனக்கு என்ன வெட்கம்? வாய்விட்டு நன்றாக யாசிக்கிறேன் என்றார்.

ஸ்ருதிகளுக்கெட்டாதது உன் மஹிமையென்றார் முன்பு. இங்கே உன் நாயகன் சுருதிகளுக்கு மதுரமாய் எட்டவேணும் என்கிறார்.
உன் நாயகன் எத்தகையவர் தெரியுமோ? எல்லாக் கவிகளும் அவரிடம் தங்கள் காவ்யங்களைப் பாடி அரங்கேற்றிப் பரிசு பெறவேணும்.
எல்லாக் கவிகளும் அவரிடம் பாடி இற்றைப் பறை பெற்றால்தான் உலகம் அவர்கள் கவிகளை பஹுமானிக்கும்.
தம் விஷயமான காவ்யமாயின், அதன் இனிப்புக் குறையலிருந்தாலும் குறை சொல்லமாட்டார்.
ப்ரிய காந்தையும், உத்தம கவியுமான உன் விஷயமான கவியாதலால், அமிர்தமாயிருந்தாலொழிய அபிநந்தனம் செய்யார்.
ப்ரதிதினமும் தன் முன்பு அரங்கேற்றப்படும் காவ்யங்களைக் கேட்டுக்கேட்டு காவ்ய குணதோஷங்களைப் பூர்ணமாய்
பரீக்ஷிக்கத் தெரிந்த செவிகளை உடையவர் அரங்கராஜர். அவருக்கு பஹுகுணரமணீயமென்று பஹுமானிக்கத் தக்கதாய் வேணும்.
அமிர்தம் போல் இனிப்பென்றதோடு திருப்தியில்லை. மற்றோருபமானமும் செய்கிறார்.
அந்த உவமையையும் கோதை ஸம்பந்தமாகவே எடுக்கிறார். உன்னுடையது உன்னுடையது என்று இங்கே பலதரம் பேசுகிறார்.

உனக்கு மிகப்ரியன், உன்னுடைய மணிச்சிலம்புகளினொலிகள் த்வமேவ (நீயே, நீயாகவே) உன்னை
நன்கு துதிக்க அர்ஹமாக என்றே திரும்பவும் திரும்பவும் பேசுகிறார். எல்லாம் உனதாகவே இருக்கவேணும்.
என்னதென்பதே கூடாது.
உன்னுடைய மணிச்சிலம்பின் ஓசை காதில் விழுவதை அவர் எல்லையில்லாத ஆவலுடன் ப்ரதீக்ஷித்துக் கொண்டிருப்பர்.
அதனிலும் இனியது அவர் செவிக்குக் கிடையாது. உன் வரவை அல்லவோ, அது முன்பே காட்டும்!
“மணியோசை வருமுன்னே, நீ கஜகாமினியாய் ஆடியாடி நடந்து வருவதையல்லவோ அவ்வோசை காட்டும்.
கோதையின் அடிச்சிலம்பின் ஓசையைப் போன்ற மதுரவாக்கை யாசிக்கிறார்.
சேஷனாகிய தம் வாக்குக்கு அவள் திருவடி ஸம்பந்தமான சிலம்போசையின் உவமையைச் சொல்லுவதுதான் அழகு.
அவள் “வந்த்ராரவிந்த மகரந்த துல்ய”மான வாக்கைக் கேட்கவில்லையென்பதைக் கவனிக்கவேணும்.
“கோதே த்வமேவ ஜநநி வாசம் ஸம்ஹிதேஹி” வாக்கைக் கொடுப்பதையே ஸ்வபாவமாக உடைய
நீ (கோதை) நீயாகவே ஸ்வயமாய்க் கொடுக்க வேணும். தாதாக்கள் நிர்ப்பந்தித்தால் கொடுப்பவரல்லரே.
தம்பேறாகத் தாமாகவேதான் கொடுப்பர்.

‘ஜநநி’
தாயே, என்னைப் பெற்றவளே, என்னைப் பெற்ற நீ என் துதியையும் நீயே பெறுவாயாக.
(பிறக்கச் செய்வாய்) பெற்ற ஜநநியைத்தானே “பவதி பிக்ஷாம் தேஹி” என்று என்று குழந்தைகள் யாசிப்பர்!
பிக்ஷாம் தேஹி என்பதுபோல் சப்தம் இருக்க, ‘ஸம்ஹிதேஹி’ என்று ஸாதித்தார்.
நான் உன்னை யாசிக்க வெட்கப்படவில்லை. பெற்றவள்தானே என்போன்ற ப்ரஹ்மசாரிகளுக்கு பிச்சை போடவேணும்
! உன் நாயகனுக்கு செவிக்குக் கொடுக்கவல்லவோ நான் உன்னை யாசிக்கிறேன்!
நீ எனக்குக் கொடுக்கும் வாக்குப் பிச்சை உன் நாதன் செவிகளுக்கு அமிர்தமாகும்.
க்ருஷ்ண கர்ணாம்ருதம், ராமகர்ணாம்ருதம் என்ற பகவத் ஸ்தோத்ரங்களைக் காட்டிலும் கோதை கர்ணாம்ருதமே
அவர் செவிக்கு அத்யந்தமின்பத்தைப் பயக்கும்.
“நானே வாக்கைக் கொடுத்து என்னைத் துதிக்கச் செய்து அதை நானே கேட்டு மகிழலாமோ?” என்று நீ கேட்பாயோ?
நீ எனக்கு வாக்கைக் கொடுத்து உன்னைப் பற்றிப் பாடச் செய்தால் போதும். அப்பாட்டை நீ காது கொடுத்துக் கேட்கவேண்டாம்.
உன் நாயகன் கேட்பதே போதும்.

த்வதபிஷ்டவார்ஹாம்.
கவிச் சக்ரவர்த்தினியான உன்னை நன்கு இனியப் பாட யோக்யமான வாக்கு உன் கவிதையே.
இங்கே ‘அபிஷ்டவம்’ என்னும் பதத்தைக் கவனிக்க வேணும்.
கோபால பாலனை ப்ரஹ்மதேவன் வத்ஸாபஹாரப்ரகரண முடிவில் ப்ரஹ்மஸ்துதி என்று பெயர் பெற்ற
அத்புத ஸ்தோத்ரத்தால் துதி செய்து முடிந்ததும்
“இத்யபிஷ்டூய பூமானம் த்ரி:பரிக்ரம்ய பாதயோ” (இப்படி எல்லையில்லாப் பெருமையும் ஸுகமுமான கண்ணனை
நன்கு துதித்து மூன்று ப்ரதக்ஷிணங்கள் செய்து திருவடிகளில் விழுந்தார்) என்று அவர் மகிழ்ந்து வர்ணிப்பதில்
நான்கு முகங்களாலும் ஸர்வகாலமும் நான்கு வேதங்களையும் அத்யயனாத்யாயனம் செய்யும்
ஸரஸ்வதீகாந்தரான ப்ரஹ்மதேவன் ஸ்துதியை “அபிஷ்டவம்” என்று பேசினார். அதுபோன்ற ஸ்தவத்தில் ஆசை.

திருவேங்கடமுடையான் தயா விஷயத்திலும் “அபிஷ்டௌமி நிரஞ்ஜநாம்” என்று இப்படித் துதிக்க ஆசையைக் காட்டினார்.
ஆளவந்தார் சதுஸ்லோகியும் இப்படி அபிஷ்டவமாக அமைந்ததென்பதை “அபிஷ்டௌதிஸ்துத்யாம்” என்று
அதை வர்ணித்ததால் காட்டினார். எந்த ரீதியான வாக்கு வேணும்? ஸமாஸங்கள் நிறைந்த ஓஜஸ்,
அக்ஷரடம்பரம் (தடபுடல்) என்னும் கௌடரீதி வேணுமா? மாதுர்ய சௌகுமார்யங்களோடு கூடிய பாஞ்சாலிரீதி வேணுமா?
தோஷலேசங்களாலும் ஸ்பர்சிக்கப் படாததும் ஸமக்ரகுண கும்பிதமும் வீணையின் ஸ்வரத்தின் ஸௌபாக்யத்தை யுடையதும்
(விபஞ்சீஸ்வர ஸௌபாக்யையான) வைதர்பரீதி வேணுமா? உமக்கு எல்லாம் பிடிக்கும் என்று நீரே
ஸங்கல்ப ஸூர்யோதயத்தில்
“கௌடவைதர்ப்ப பாஞ்சால மாலாகாரம் ஸரஸ்வதீம் ! யஸ்ய நித்யம் ப்ரசம்ஸந்தி ஸந்தஸ்ஸௌபரபவேதின:” என்று பாடியிருக்கிறீரே !
வேண்டிய வாக்கைக் கேளும். அம்மா! கௌடரீதி வேண்டாம். ஸமக்ரகுணா பேதமான வைதர்ப்பரீதியையும்,
மாதுர்ய ஸௌகுமார்யங்களோடு கூடிய பாஞ்சால ரீதியையும் அளிக்க வேணும்.

விபஞ்சீ (வீணை) ஸ்வரம் போன்ற இனிப்புடையது வைதர்பீ என்பர். யாழிலுமினிதாகும் உன் சிலம்பின் ஓசை.
கோதை சிலம்பின் ஓசையைப் போன்ற என்றதால் உயர்ந்த வைதர்ப்பரீதியைக் கேட்டதாயிற்று.
ப்ரஸந்ந மதுரமான வாக்கை அளிக்க ப்ரார்த்திக்கிறார். மதுரம் என்பது பாஞ்சாலிரீதியை அஸாதாரணமாகக் காட்டும்.
ப்ரஸாதம் முதலிய சிறந்த எல்லாக் குணங்களையும் உடையது வைதர்ப்பீ ரீதி. ‘ப்ரஸந்ந’ என்பதால் அந்த ரீதியையும் கேட்கிறார்.
இந்த ரீதிகளால் கந்தங் கமழும் மாலை போன்ற ஸரஸ்வதியை யாசிக்கிறேன்.
உன் பாமாலை போன்ற இனிப்பும், ஸௌரப்யமுமிருக்க வேணும். வாக்கின் பரிமளத்தை உன்னிடம் யாசிக்கிறேன்.
புஷ்பம் போன்ற வாக்கு வேணும். பெருமாளுக்கு வாக்கு மாலை ஸமர்ப்பிக்க உன்னிடம்தானே யாசிக்க வேணும்!
நியே விதானம் செய்யவேணும். விதானம் மட்டும் போதாது. நன்றாய் விதனம் செய்யவேணும்.
(அமைக்கவேணும்) ஸம்விதானம் செய்விதர்ப்பாதிபதியின் புத்திரி ருக்மிணீ. கிருஷ்ணனுக்கு பரம மித்ரமானவள் பாஞ்சாலி, த்ரௌபதி.
அவள் ருக்மிணிக்கு ப்ராண ஸமமான ஸகியாவாள். வைதர்ப்பி, பாஞ்சாலி என்னும் திருநாமங்களே பெருமாளுக்கும் கோதைக்கும் அமிர்தமாகும்.

————-

க்ருஷ்ணாந்வயேந ததீம் யமுனாநுபாவம்
தீர்த்தைர் யதாவதகாஹ்ய ஸரஸ்வதீம் தே |
கோதே விகஸ்வரதியாம் பவதீகடாக்ஷாத்
வாசஸ் ஸ்புரந்தி மகரந்தமுச: கவீயாம் || (4)

கோதே — கோதாய்,
க்ருஷ்ணாந்வயேந — கிருஷ்ண ஸம்பந்தத்தால்;
யமுனானுபாவம் — யமுனையின் பெருமையை;
தததீம் — தரிப்பவளான;
தே — உன்னுடைய;
ஸரஸ்வதி — ஸரஸ்வதியை (வாக்கை, நதியை);
தீர்த்தை — குருக்களின் முகமாக; (இறங்கும் துறைகள் வழியாக);
ததாவத் — உள்ளபடி (சாஸ்திர முறைப்படி);
அவகாஹ்ய — இறங்கி ஸ்நானம் செய்து;
பவதீகடாக்ஷாத் — உன் கடாக்ஷத்தால்;
விகஸ்வரதியாம் — மலர்ச்சி அடைந்த புத்திகளையுடைய;
கவீநாம் — கவிகளுடைய;
வாச: — வாக்குகள்;
மகரந்தமுச: — தேனைப் பொழிந்துகொண்டு;
ஸ்புரந்தி — விளங்குகின்றன.

கோதாய்! க்ருஷ்ண ஸம்யோகத்தால் யமுனையின் பெருமையை உடையதான உன்னுடைய ஸரஸ்வதியை
(வாக்கை, நதியை), குருக்களின் முகமாக (இறங்கும் துறைகள் வழியாக) உள்ளபடி (சாஸ்த்ர முறைப்படி)
இறங்கி ஸ்நானம் செய்து உன் கடாக்ஷத்தால் மலர்ச்சி யடைந்த புத்திகளையுடைய கவிகளுடைய
வாக்குகள் தேனைப் பொழிந்துகொண்டு விளங்குகின்றன.

க்ருஷ்ண சம்பந்தத்தினால் , உனது வாக்காகிய சரஸ்வதி , யமுனையாகவும் ஆகிறது.
இந்த யமுனைத் துறைகளில் இறங்கியவர்கள், உனது கிருபையால் மேதா விலாசம் வரப்பெற்று,
மஹா கவிகளாக மாற்றப்பட்டு, அபார க்ஜானத்தை அடைகிறார்கள். அவர்களுடைய வாக்குகள் தேனைத் தெளிப்பதுபோல் உள்ளது.
அந்த சரஸ்வதி ,அங்கு—கங்கையும் ,யமுனையும் கலக்குமிடத்தில் — அந்தர்வாஹினி உனது சரஸ்வதி (வாக்கு) யமுனையாகத் தோன்றுகிறது.
அதனால், சரஸ்வதிக்கும் துறைகள் ஏற்பட்டன ( இறங்கி நீராடும் துறைகள்) அதில் இறங்கி ஸ்நானம் செய்பவர்கள்
உனது கடாக்ஷத்தால், கவிகளாக ஆகி, அவர்களுடைய வாக்குகள் தேனைப் பொழிகின்றன.

அவதாரிகைகள்

(1) என் நாயகனுடைய ஓர் அவதாரமான ஹயக்ரீவ மூர்த்தியை நீர் துதிக்கையில்
ம‌ஞ்சுப்ர‌ணாத‌ம் ம‌ணிநூபுரம் தே ம‌ஞ்சூஷிகாம் வேத‌கிராம் ப்ர‌தீம‌: என்று பேசினீர்.
அவ‌ர் ர‌த்ன‌ச் சில‌ம்பின் இனிய‌ ஓசையில் வேத‌ ஸ‌ர‌ஸ்வ‌திக‌ள் பெட்டியில்போல் அட‌ங்கியிருக்கின்ற‌ன‌ என்று பாடினீர்.
இங்கே பெண்பிள்ளையாகிய‌ என் சில‌ம்பின் ஓசையைப் போல் இனிய‌ வாக்கென்கிறீர்.
இர‌ண்டிட‌த்திலும் “ம‌ணி நூபுர‌ம்” என்று ஒரேவித‌ப் பேச்சு.

பரலோக‌த்தில் க‌டாக்ஷா: ஶ்ரோத்ரேஷு பும்ஸாமம்ருத‌ம் க்ஷ‌ர‌ந்தீம் ஸ‌ர‌ஸ்வ‌தீம் திஸ‌ந்து என்று பாடினீர்.
உம்முடைய‌ க‌டாக்ஷ‌ங்க‌ள் ம‌நுஷ்ய‌ர்க‌ள் காதுக‌ளில் அம்ருதத்தை வார்க்கும் ஸ‌ர‌ஸ்வ‌தியை என‌க்க‌ருள‌ வேணும்
என்று ஹ‌ய‌க்ரீவ‌ தேவ‌னைப் பிரார்த்தித்தீர். அம்ருத‌ வாக்கை அவ‌ரிட‌மே ப்ரார்த்திக்க‌லாமே!
அவ‌ரிட‌ம் ப்ரார்த்தித்ததை அவ‌ர் முன்பே உம‌க்கு அருளியிருக்கிறார்.
இப்பொழுது வெறும் பேச்சாக‌ முக‌ஸ்துதியாக‌ நீர் அதே வார்த்தைக‌ளைக்கொண்டு யாசிக்கிறீர்.
ஹ‌ய‌க்ரீவ‌னிட‌மிருந்து அடையாம‌ல் என்னிட‌மிருந்து பெற‌வேண்டிய‌து மீதியுண்டோ?

இத‌ற்கு ப‌தில் கூறுகிறார்:–
அம்மா! நீ ந‌ன்றாய்க் க‌வ‌னிக்க‌வேண்டும். ப‌ர‌மபுருஷ‌னாகிய‌ உன்னுடைய‌ நாய‌க‌ன் காதுக‌ளில்
அம்ருதத்தை வார்ப்ப‌துபோல் இனிமையான‌ வாக்கைய‌ல்ல‌வா நான் முன் சுலோக‌த்தில் ப்ரார்த்தித்தது!
என் இஷ்ட‌ தெய்வ‌மான‌ ஹ‌ய‌க்ரீவ‌ரை “பும்ஸாம்” என்று பொதுவாக‌ ம‌நுஷ்ய‌ர்க‌ள் செவிக‌ளுக்கு
இனிய‌ ஸ‌ர‌ஸ்வ‌தியைத் தானே ப்ரார்த்தித்தேன்!

இங்கே உன்னை யாசிப்ப‌து ப‌ர‌மபுமானுடைய‌ செவிக‌ளுக்கு அம்ருத‌மான‌ சொற்க‌ள். உன் நாய‌க‌ன் ர‌ங்க‌ந‌ட‌ர‌ல்ல‌வோ?
சில‌ம்பில்லாம‌லும், சில‌ம்போசையில்லாம‌லும் ந‌ர்த்த‌ன‌ம் செய்வ‌ரோ! நான் ம‌ன‌ப்பூர்வ‌மாக‌ உண்மையாக‌த்தான் துதிக்கிறேன்.

ஹ‌ய‌க்ரீவ‌ ஸ்தோத்ர‌த்தில் “க‌டாக்ஷா: திஶ‌ந்து” என்று அனேக‌ க‌டாக்ஷ‌ங்க‌ள் நேர்ந்து
வாக்கை அனுக்ர‌ஹிக்க‌ட்டும் என்று ப்ரார்த்தித்தேன். உன்னுடைய‌ ஒரு க‌டாக்ஷ‌த்தைப் பெற்றுத் தேன் பொழியும்
ப‌ல‌ வாக்குக‌ள் ப்ர‌வ‌ஹிக்கும் என்று இந்த‌ சுலோக‌த்தில் “ப‌வ‌தி க‌டாக்ஷாத் வாச‌: ஸ்புர‌ந்தி” என்று பேச‌ப் போகிறேன் அம்மா!

(2) என் க‌விக‌ளைக் க‌ற்று யாரேனும் க‌விஞ‌ர்க‌ளானார்க‌ளா? அம்ருத‌வாக்கைப் பெற்றிருக்கிறார்க‌ளா?
வாக்தேவியான‌ ஸ‌ர‌ஸ்வ‌தியை உபாஸித்துக் க‌விக‌ள் அம்ருத‌ வாக்கைப் பெறுவ‌ரென்ப‌ரே!
“தேவீம் வாச‌முபாஸ‌தே ஹி ப‌ஹ‌வ‌: என்ப‌ர்.

இத‌ன் ப‌தில்:– உன்னுடைய‌ வாக்குத்தான் ப‌ரிசுத்த‌மான‌ ஸ‌ர‌ஸ்வ‌தி ர‌ஸ‌ம் ஓர் அவிச்சிந்ந‌ ப்ர‌வாஹ‌மாக‌ப்
புண்ய ‌நதியைப்போல் பெருக்கு உடைய‌து. உன் ஸ‌ர‌ஸ்வ‌தியை குருக்க‌ள் முக‌மாகக் க‌ற்றுத் தேன் மொழியைப் பெற்று
ப்ர‌காசித்த‌வ‌ர் ஆள‌வ‌ந்தார், ஆழ்வான், ப‌ட்ட‌ர் முத‌லிய‌வ‌ர். ஸ‌ர‌ஸ்வ‌தி தேவி க‌டாக்ஷ‌ம் பெற்ற‌ க‌விக‌ளிலும்
ந‌ம் பூர்வாசார்ய‌ரான‌ க‌விக‌ள் சிற‌ந்த‌வ‌ர்க‌ள். இவ‌ர்க‌ள் க‌விக‌ள் இனிப்போடு நிக‌ர‌ற்ற‌ ப‌ரிசுத்தியையுமுடைய‌ன‌.
உன் ப்ர‌ப‌ந்த‌ங்க‌ள் ப‌ரிசுத்த‌மான‌ இனிய‌ ஸ‌ர‌ஸ்வ‌தி, அவ‌ர்க‌ள் வாக்ஸ‌ர‌ஸ்வ‌தியும் அப்ப‌டியே.
“த‌ச்சாவ்யாஜ‌வித‌ப்த‌முப்த‌ம‌துராம் ஸார‌ஸ்வ‌த‌ம் ஶாஶ்வ‌த‌ம்” என்று அவ‌ர்க‌ள் வாக்கை வ‌ர்ணித்துள்ள‌து.
அவ‌ர்க‌ள் ம‌தியும் வாக்கும் ஆஜாந‌சுத்த‌ம். “செஞ்சொற்க‌விக‌ள்”

க்ருஷ்ணாந்வ‌யேந‌ —
க்ருஷ்ண‌ன் ஸ‌ம்ப‌ந்தத்தால். க்ருஷ்ண‌ த்ருஷ்ணாம‌ய‌ம் உன்னுடைய‌ ஸ‌ர‌ஸ்வ‌தி.
க்ருஷ்ண‌னிட‌ம் சுத்த‌மான‌ பாவ‌ம் ஓர் ஸ‌ர‌ஸ்வ‌திவெள்ள‌மாக‌ப் பெருகியுள‌து. க்ருஷ்ண‌ர‌ஸ‌ நதியாகுமுன்னுடைய‌ ஸ‌ர‌ஸ்வ‌தீ.
க்ருஷ்ண‌னிட‌ம் ஸ‌ம‌ந்வ‌ய‌முடைய‌ன‌ உன் காவ்ய‌ங்க‌ள். ப்ர‌ஹ்ம‌த்தினிட‌த்தில் வேதாந்த‌ ஸ‌ர‌ஸ்வ‌திக‌ளுக்கு
ஸ‌ம‌ந்வ‌ய‌த்தை நிரூபிக்கும் ப்ர‌ஹ்ம‌ஸூத்ர‌ங்க‌ள் க்ருஷ்ண‌னென்னும் அம்ருத‌ ஸ‌முத்ர‌த்தில்
த்ருஷ்ணையைப் பெருக்குகின்ற‌ன‌ என்று ஸாராவ‌ளியில் பேசியுள‌து.
ம‌ஹ‌ர்ஷியின் ஸூத்ர‌ங்க‌ளே அப்ப‌டி க்ருஷ்ண‌ த்ருஷ்ணையைப் பெருக்கும் பொழுது,
ப்ரிய ‌த‌மையான‌ பெண்க‌ளின் ப்ர‌ப‌ந்த‌ங்க‌ள் க்ருஷ்ண ‌த்ருஷ்ணையைச் சூழ்ந்தத‌னிற் பெரிய‌தாக‌ப் பெருக்குவ‌தில் என்ன‌ ஸ‌ந்தேக‌ம்?
க்ருஷ்ண‌ன் ஒருவ‌னிட‌த்திலேயே உன் ஸ‌ர‌ஸ்வ‌தி அவ்வித‌ம். பூமிப்பிராட்டி கோதை.
“ய‌த் க்ருஷ்ண‌ம் தத் வ்ருத்திவ்யா:” என்ப‌து வேத‌ம்.
பூமியின் வ‌ர்ண‌ம் க‌ருப்பு (க்ருஷ்ண‌ம்) ய‌முனை நீரும் க்ருஷ்ண‌ வ‌ர்ண‌ம். க்ருஷ்ண‌வ‌ர்ண‌ தத்வ‌ம் கோதைக்கே.

ய‌முனாநுபாவ‌ம்:–
க்ருஷ்ண‌ ஸ‌ம்ப‌ந்தத்தால் “தூய‌பெருநீர் ” ய‌முனையின் பெருமையுள‌து உன்னுடைய‌ ஸ‌ர‌ஸ்வ‌தீ.
க்ருஷ்ண‌னுடைய‌ யௌவ‌ன‌ லீலைக‌ள் க்ருஷ்ணா நதியிலும், அந்நதிக்க‌ரையிலும் நிக‌ழ்ந்த‌ன‌.
“ய‌முனாஸாக்ஷிக‌யௌவ‌ன‌ம் யுவாந‌ம்” யௌவ‌ன‌ கேளிக்கைக‌ளுக்கெல்லாம் ய‌முனை ஸாக்ஷி.
அநுபாவ‌ம் என்ப‌து ம‌ன‌தில‌ழுந்தியிருக்கும் ஸ்ருங்கார‌ பாவ‌த்தை ஸூசிக்கும் விகார‌ சேஷ்டைக‌ளையும் சொல்லும்.
முகுந்த‌ன் வேணு கான‌த்தைக் கேட்ட‌ நதிக‌ள் ம‌ன்ம‌த‌ விகார‌ம் நிர‌ம்பி “நெஞ்ச‌ழியும், க‌ண்க‌ழ‌லும்” என்ப‌துபோல்,
ம‌னோ விகார‌ங்க‌ளைச் சுழ‌ல்க‌ளாலும், குமிழிக‌ளாலும் காட்டிக் கொண்டு, க‌ண்ண‌னை ஆலிங்க‌ன‌ம் செய்ய‌
ஆசையைக் காட்டுவ‌து போல், அலைக‌ளாகிய‌ கைக‌ளை உய‌ர்த்திக் கொண்டு, ஆவ‌லுட‌ன் க‌ரையிலிருக்கும்
க்ருஷ்ண‌னிட‌ம் ஓடி வ‌ந்து தாம‌ரை ம‌ல‌ர்க‌ளை அவ‌ன் திருவ‌டிக‌ளில் ஸ‌ம‌ர்ப்பித்துத் திருவ‌டிக‌ளைத் த‌ழுவுகின்ற‌ன ‌போலும்” என்று
சுக‌ர் வ‌ர்ணித்தது ய‌முனா நதி விஷ‌ய‌ம். பின்பு ய‌முனை (காளிந்தீ) க‌ண்ண‌னுக்கு அஷ்ட‌ம‌ஹிஷிக‌ளில் ஓர் ம‌ஹிஷியானாள்.

அநு+அயம் அந்வயம் , அநு+பாவம் அநுபாவம் — காரண கார்யங்களுக்கு ஆநுரூப்யம்

தததீம் —
உன் ஸரஸ்வதிநதி யமுனையின் பெருமையை உடையது (வஹிக்கிறது).
தூயபெருநீர் யமுனை என்று யமுனைத்துறைவன் ஸம்பந்தமுடையதாக (அந்வயமுடையதாக) யமுனை நீரை வர்ணித்தாய்.
அப்படி வர்ணிக்கும் உன் ஸரஸ்வதிக்கும் அந்த வர்ணனம் தகும். இங்கே ததாநாம் என்று ஆத்மநேபதமாக
ப்ரயோகிக்காமல் தததீம் என்று பரஸ்மைபதமாக ப்ரயோகித்தது ரஸம்.
க்ருஷ்ண ரஸ வெள்ளத்தில் நீ நீராடி மகிழ்வதைப்போல், உன் ஸரஸ்வதியில் நீராடுகிறவர்களும் அதில் ஆழ்வதால்,
அந்த ரஸமுள்ள கவிதையை அவர்களும் பெற்று உத்தம கவிகளாகும்படிக்கும் செய்கிறாய்.

தே ஸரஸ்வதீம்:–
உன் ஸரஸ்வதியை. உன் க்ருஷ்ணபக்திரஸ கவிதா நதியில்.
ஸரஸ்வதீம் என்பதால் நுட்பமான பொருள் உள்ளே மறைந்திருப்பதனையும் கொள்ளவேணும். வ்யங்கியமே மிகுதி.

தீர்த்தை:–
வெள்ளமிட்டோடும் ரஸப்ரவாஹ நதியில் இறங்கும் துறைகளைக் காட்டும் பல ஆசிரியர்கள் முகமாக.
‘அனேக குருக்களிடம் அனேகம்தரம் கேட்கவேண்டும்’ என்பதைக் காட்டுகிறது பன்மை.
‘தீர்த்தம்’ என்பதற்குள்ள அனேகம் பொருள்களையும் கொள்ளவேணும்.
சாஸ்த்ரங்களை எல்லாம் கற்று உன் ஸரஸ்வதியில் நீராடவேணும். யஜ்ஞங்களை அநுஷ்டித்து
சித்த சுத்தியை ஸம்பாதித்துக் கொண்டு உன் பரிசுத்த ஸரஸ்வதியில் இறங்கவேணும். ‘விவிதிஷந்தி யஜ்ஞேந’

யதாவத்:–
உள்ளபடி உன் ஸரஸ்வதியின் ஹ்ருதயத்தை குருமுகமாக அறியவேணும். சாஸ்த்ரவிதிப்படி நீராடவேணும்.
சுத்த சுபஸங்கல்பம் செய்துகொண்டு மனச்சுத்தியோடு நீராட வேணும்.
அந்தர்வாஹினியானதால் (பொருள்கள் உள்ளே மறைந்து கிடப்பதால்) உள்ளபடி உன் கருத்தை அறிய
ஆசிரியர்கள் வழிகாட்ட வேணும். படிப்படியாய் உன் பா4வங்களிலாழ வேண்டும்.

அவகாஹ்ய:–
இறங்கி நீராடி. ராமாயணகவி “இதமேவா வகாஹிஷ்யே தமஸாதீர்த்தமுத்தமம்” என்று
புண்ய நதியிலே நீராடி அந்நதிக்கரையில் ராமாயணம் பாடினார்.
அதுபோல, உன் ஸரஸ்வதியில் எங்கள் பெரியோர் நீராடி மஹாகவிகளானார்கள்.

கோதே —
நீ இன்பத்துடன் கவி பாடினதால் உன் காவ்யத்தில் இனிய ரஸமுடையவருக்கு
உன் கடாக்ஷத்தால் உன் போன்ற வாக்கைக் கொடுக்கக் கவிதானம் செய்பவளே

பவதீகடாக்ஷாத்:–
உன் க்ருஷ்ணரஸ நதியான ப்ரபந்தங்களில் ரஸிப்பவரை நீ கடாக்ஷிக்கிறாய்.
உன் ஒரு கடாக்ஷம் போதும் அவர்களுக்கு அனேக உயர்ந்த புத்தி வ்ருத்திகள் கொழுந்துவிட்டு மலரும்படி செய்ய.
கடாக்ஷத்தில் ஒருமை, அதனால் மலர்ந்து வளரும் புத்திகளில் பன்மை. ‘விகஸ்வரதியாம்” என்பது பன்மை.
‘பவதீ கடாக்ஷாத்’ என்னுமிடத்தில் பவதீ என்பது ஸர்வநாம சப்தமன்று. அப்படியிருந்தால் ‘பும்வத்பாவம்’ வரும்.
கோதை கல்யாணம் வர்ணிக்கப்படுகிறது. அதற்கும் அது அநுசிதம். எல்லோரையும் சொல்லக்கூடிய ஓர்
ஸர்வநாமசப்தத்தால் ‘நாரீணாம் உத்தமவது’வான கோதையைச் சொல்லுவது அழகல்ல.
வேறு உணாதிவிகுதியை உடைய சப்தம் இது. இங்கே வர்ணிக்கப்படும் கவிகள் பட்டர் முதலியவர்.
“பவதீ ஸம்பந்தத்ருஷ்ட்யா ஹரிம்” என்று ப்ரயோகிப்பவர் அப்பெரியோர்.
அவர்கள் வாக்குகளை வர்ணிக்கையில் அவர்கள் ப்ரயோகத்தை அநுஸரிப்பது அழகு.

விகஸ்வரதியாம்:–
புத்தியும் புஷ்பமாயிற்று. அதற்கு மலர்ச்சியும், மலருகையில் வீசும் மணமுமுண்டு.
பூமாலை கோதை அனுக்ரஹிக்கும் வாக்கும் கவிபுத்தியும் புஷ்பமாக வர்ணிக்கப்படுவது உசிதமே.

கவீநாம்:–
ஆளவந்தார், ஆழ்வான், பட்டர், அம்மாள் முதலிய கவிகளுக்கு.

மகரந்தமுச:–
தேன் பொழிவதான

வாச: —
வாக்குகள்,

ஸ்புரந்தி —
ப்ரகாசிக்கின்றன. இத்தேனைக் காதாலும் பருகலாம்,
கண்ணாலும் காணலாம் போல் இருக்கிறது. “முடியானே”யிற்போல் அநுபவம். (4)

————-

அஸ்மாத்ருஶாம் அப‌க்ருதௌ சிர‌ தீக்ஷிதாநாம்
அஹ்நாய‌ தேவி த‌ய‌தெ ய‌த‌ஸௌ முகுந்த‌: |
த‌ந் நிஶ்சித‌ம் நிய‌மித‌ஸ் த‌வ‌ மௌளி தாம்நா
த‌ந்த்ரீநி நாத‌ ம‌துரைஶ்ச‌ கிராம் நிகும்பை:||–5-

தேவி — தேவி கோதாய்!
அப‌க்ருதௌ — அப‌ராத‌ம் செய்வ‌தில்,
சிர‌ தீக்ஷிதாநாம் — வெகுகால‌மாய் தீக்ஷையாய்க் கொண்டிருக்கும்,
அஸ்ம‌த்ருஶாம் — என் போன்ற‌வ‌ரிட‌ம்,
அஹ்நாய‌ — உட‌னே,
அஸௌ முகுந்த‌ — இந்த‌ முகுந்த‌ன்,
த‌ய‌தே இதிய‌த் — த‌ய‌வு ப‌ண்ணுகிறான் என்ப‌து யாதொன்று உண்டோ,
தத் — அதான‌து,
த‌வ‌ — உன்னுடைய‌,
மௌளி தாம்நாம் — சிரோமாலையின் நாரினாலும்,
த‌ந்த்ரீநி நாத‌ ம‌துரைஶ்ச‌ — வீணைக்க‌ம்பிக‌ளின் நாதத்தைப்போல் ம‌துர‌மான‌,
த‌வ‌ — உன்னுடைய‌,
கிராம் நிகும்பை: — நூல்க‌ளாலும்,
நிய‌மித‌: — நிய‌மிக்க‌ப்ப‌ட்டான்,
நிஶ்சித‌ம் — நிச்ச‌ய‌மாய்.

தேவி கோதாய்! அப‌ராத‌ங்க‌ளைச் செய்வ‌தையே தீக்ஷையாக‌ (வ்ர‌த‌மாக‌) வெகு கால‌மாகக் கொண்டிருக்கும்
என் போன்ற‌வ‌ரிட‌மும், உட‌னே (விரைவில், அன்றே) மோக்ஷ‌ம் கொடுப்ப‌தாக‌ முகுந்த‌ன் த‌ய‌வு ப‌ண்ணுகிறான்
என்ப‌து நிச்ச‌ய‌மாய் உன்னுடைய‌ சிரோமாலையின் நாரினாலும், வீணைக் க‌ம்பிக‌ளின் நாதத்தைப் போல்
ம‌துர‌மான‌ உன்னுடைய‌ நூல்க‌ளாலும் க‌ட்டுப்ப‌ட்டுத்தான். அத‌னாலே தான் அப்ப‌டி அவ‌ன் உட‌னே த‌ய‌வு செய்து முக்தி அளிப்பது.

என் போன்ற அபராதிகள், பகவானுக்கு பிரதிகூலமே செய்தாலும், எங்களுக்கு முகுந்தன் கருணை செய்கிறான்.
அப்படி செய்யக் காரணம், ஒன்று , தன்னைக் காட்டிலும் பெரியதொரு சக்திக்குக் கட்டுப்பட்டு அடங்கி இதைச் செய்வது ;
இரண்டாவது, முகுந்தனைக் கட்டிப் போட்டுக் கையெழுத்து வாங்குவார் இருக்க வேண்டும்.
நீ, உனது திருமுடியில் சூடிக் கொடுத்த பூமாலைகளாலும் , உன்னுடைய பாமாலைகளாலும், முகுந்தனை வசப்படுத்தி வைத்திருக்கிறாய்.

அவ‌தாரிகை

(1) என் வாக்கில் முறைப்ப‌டி ஈடுப‌ட்டு ர‌ஸிப்ப‌வ‌ர் இனிய‌ க‌விக‌ளாகித் தேன்மொழி செவிக‌ளார‌ப் பொழிகிறாரென்றீர்.
என் ப்ர‌ப‌ந்த‌ங்க‌ள் எப்ப‌டி இனிய‌தோ? க‌விஸிம்ஹ‌மே! உம் வாயால் கேட்க‌வேணும்.
அர‌ங்க‌ன் புக‌ழ்வ‌து போதாது. என்ன‌து என்று ப‌க்ஷ‌பாதத்தால் புக‌ழ்வ‌ர்.

(2) ய‌ஜ்ஞ‌ங்க‌ளால் (தீர்த்த‌ங்க‌ளால்) சுத்திய‌டைந்து என் வாக்கை அறிய‌ விரும்புகிறார்க‌ள் என்று
ய‌ஜ்ஞாதி சுருதியைப் பேசினீர். உம்முடைய‌ த‌க‌ப்ப‌னார் , பாட்ட‌னார் யாக‌தீக்ஷித‌ர்க‌ள். நீரும் தீக்ஷித‌ரோ?

(3) விப‌ஞ்சீஸ்வ‌ர‌ம‌துர‌ம் வைத‌ர்ப்ப‌ரீதியென்ப‌ரே! என் வாக்கு அந்த‌ ல‌க்ஷ‌ண‌த்திற்கு ஏற்ற‌தோ?

தேவி —
கோதா தேவியே! மோஷ‌ ப்ராப்தியையும், மோஷ‌ ப்ராபண‌த்தையும் பேசுகிற‌ப‌டியால்
இங்கே தேவி என்று கூப்பிடுகிறார்.

அப‌க்ருதௌசிர‌தீக்ஷிதாநாம் —
ஒரு விதத்தில் நானும் தீக்ஷித‌ன்தான்.
யாக‌தீக்ஷித‌ர்க‌ள் யாக‌மென்னும் “க்ருதி”யில் தீக்ஷித‌ர்.
நாங்க‌ள் “அப‌க்ருதி”யில் தீக்ஷித‌ரென்று வேடிக்கையாகக் காட்டுகிறார்.
வெகுகால‌மாய் நாங்க‌ள் இப்ப‌டி அநாதி தீர்க்க‌ஸ‌த்ர‌த்தில் தீக்ஷித‌ர்க‌ள்.

அஸ்மாத்ருஶாம் —
என் போன்ற‌வ‌ர்க‌ளுக்கு, ப‌க‌வ‌த்த்ருஶேப்ய‌: என்ப‌துபோல‌,

அஸௌ —
உன் துதியைக் கேட்க‌ இதோ நிற்கிறாரே, “அஸ்மாத்ருஶாம்” என்ப‌து ப‌ரிஹாஸ‌ வ‌ர்ண‌ன‌ம்.

முகுந்த‌: —
மோக்ஷ‌த்தை ய‌ளிக்கும் முகுந்த‌ன். இத‌னால் செய்யும் த‌ய‌வு மோக்ஷ‌ம‌ளிப்ப‌தென்ப‌து ஸூசிக்க‌ப் ப‌டுகிற‌து.

அஹ்நாய‌ —
தாம‌தியாம‌ல், உட‌னே, அன்று தின‌மே. நாங்க‌ள் சிர‌ கால‌ம் அப‌ராத‌ தீக்ஷித‌ர்க‌ள்.
“ஸுசிரேண‌” விள‌ம்ப‌மில்லாம‌ல் உன் நாய‌க‌ன் அன்றே மோக்ஷ‌ம‌ளிக்கிறான். மோக்ஷ‌ம‌ளிக்க‌ அவ‌ர் வெகுகால‌ தீக்ஷை!

த‌ய‌தே ய‌த‌ஸௌ — அவ‌ன் த‌ய‌வு செய்வ‌து என்ப‌து எதுவோ

தத் — அது,
நிஶ்சித‌ம் — க‌ட்டாய‌மாக‌. த‌வ‌ மௌளிதாம்நா — உன் கூந்த‌லில் சூடிக்கொடுத்த‌ மாலைக் க‌யிற்றாலும்

த‌ந்த்ரீநிநாத‌ம‌துரைஶ்ச‌ —
வீணையின் நாதத்தைப் போல் இனிமையான‌.
(த‌வ‌) கிராம் நிகும்பை: — அழ‌காகக் கோர்த்துள்ள‌ உன்னுடைய‌ வாக்குக‌ளால் (பாமாலைநார்க‌ளால்).
இர‌ண்டுவித‌ மாலைக‌ளும் அவ‌னைக் க‌ட்டியிழுத்துச் சொன்ன‌ப‌டி கேட்க‌வைக்க‌ உப‌யோக‌ப்ப‌டுகிற‌து.
குடுமியைக் கொடுத்து விடுகிறார். உன் பாமாலைக்கு த்ருஷ்டாந்த‌மான‌ வீணையிலும்
த‌ந்திக் க‌ம்பிக‌ளிருக்கின்ற‌ன‌ என்று த‌ந்த்ரீ என்னும் ப‌தத்தால் வேடிக்கையாகக் காட்டுகிறார்.

நிய‌மித‌ —
க‌ட்டுப்ப‌டுகிற‌த‌னால்தான். வீணைக்க‌ம்பியின் நிநாத‌ம் வாக்குக‌ளின் நிகும்ப‌ங்க‌ள்,
எல்லாம் நிய‌ம‌ன‌த்திற்கு உப‌யோக‌ப்ப‌டுகின்ற‌ன‌.
“அள‌க‌நித‌மிதாபி:” என்று முடிவிலும் சாதிக்க‌ப் போகிறார்.
“நிஶ்சித‌ம்”, “நிய‌மித‌ம்” என்னும் ப‌த‌ங்க‌ளின் சேர்த்தியும‌ழ‌கு.
முன் ஸ்லோக‌த்தில் “அநு”வைக் கார்ய‌கார‌ண‌ங்க‌ளில் கோர்த்தது.
இங்கே “நித‌ராம்” என்னும் பொருளுடைய‌ “நி” என்ப‌தைக்கொண்டு கோர்வை. பூமாலை கோர்ப்பது போல‌.
இத்த‌னை கால‌ம் ப‌ல‌ம் கைகூடாம‌ல் தாம‌தித்தது -சிர‌ம் – நிச்ச‌ய‌மாய் எங்க‌ள‌து.
இப்பொழுது தாம‌த‌மே யில்லாம‌ல் வெகு சீக்கிர‌த்தில் ப‌ல‌ம் ஸித்திப்ப‌து (த‌வ‌) உன் பெருமை. (5)

———-

சோணாத‌ரேZபி குச‌யோர‌பி துங்க‌ப‌த்ரா
வாசாம் ப்ர‌வாஹ‌விப‌வேZபி ஸ‌ர‌ஸ்வ‌தி த்வ‌ம்|
அப்ராக்ருதைர‌பி ர‌ஸைர் விர‌ஜாஸ் ஸ்வ‌பாவாத்
கோதாபி தேவி க‌மிதுர் நநு ந‌ர்ம‌தாஸி|| .6.

த்வ‌ம் — நீ,
அத‌ரே — திருவ‌த‌ர‌த்தில்,
ஶோணா அபி — சோணாநதியாக‌வும், (சோணையாயிருந்தாலும்), (சோணாநதியோ),
குச‌யோ — ஸ்த‌ன‌ங்க‌ளில்,
துங்க‌ப‌த்ரா அபி — துங்க‌ப‌த்ரா நதியாக‌வும், (துங்க‌ப‌த்ரையாயிருந்தாலும்),
(துங்க‌ப‌த்ரா நதியோ) வாசாம் பிர‌வாஹ‌விப‌வே — வாக்குக‌ள் ப்ர‌வ‌ஹித்து ஓடி வ‌ரும் பெருமையில்,
ஸ‌ர‌ஸ்வ‌தி அபி — ஸ‌ர‌ஸ்வ‌தியாக‌வும், (ஸ‌ர‌ஸ்வ‌தியாயிருந்தாலும்), (ஸ‌ர‌ஸ்வ‌தியோ),
அப்ராக்ருதை: ர‌ஸை: — ப்ர‌க்ருதி ஸ‌ம்ப‌ந்த‌மே யில்லாத‌ திவ்ய‌ ர‌ஸ‌ங்க‌ளால்,
விர‌ஜா அபி — விர‌ஜா நதியாக‌வும், (விர‌ஜையாயிருந்தாலும்),(விர‌ஜா நதியோ),
ஸ்வ‌ப‌வாத் — உன் த‌ன்மையால், (உன் ஸ்வ‌பாவ‌த்தாலே),
கோதா அபி — கோதாவ‌ரியாக‌வும், (கோதாவ‌ரியாயிருந்தாலும்), (கோதாவ‌ரியோ),
தேவி — திவ்ய ‌ம‌ஹிஷியே, (விளையாடும் த‌ன்மை உடைய‌வ‌ளே),
கமிது: — ஆசைப்படும் நாயகனுக்கு,
நநு நர்மதா அஸி — நீ நர்மதை தானம்மா. நீ நர்மதையோ, நர்ம பரிஹாஸப் பேச்சுக்களைப் பேசி ரமிப்பிக்கிறாய்.

(1) பாசுரங்களைப் பாடும் உன் திருப்பவழத்தைப் பார்க்கையில் (சிவப்பினால்) நீ சோணா நதியோ என்றும்,
பாடுங்கால் உயர்ந்ததும் ஜகன் மங்களமுமான ஸ்தனங்களைக் கொண்டு துங்கபத்ரா நதியோ என்றும்,
உன் வாக்குகளின் ப்ரவாஹப் பெருமையைப் பார்த்தால், நீ ஸரஸ்வதியோ என்றும்,
ப்ரக்ருதி ஸம்பந்தமே யில்லாத திவ்ய ரஸங்களால் நீ விரஜையோ என்றும்,
உன்னுடைய ஸ்வந்தத்தன்மையாலே கோதாவரியோ என்றும் உல்லேஹிக்கப்படுகிறாய்.
உன்னுடைய காந்தனுக்கோ என்றால் நிச்சயமாய் நீ (மனதை ஹரிக்கும் நர்மஹாவசனங்களைக் கொடுப்பதால்)
நர்மதா நதியாகவே இருக்கிறாய்.

(2) அல்லது, திருப்பவழத்தில் சோணையாயிருந்தாலும், தனங்களில் துங்கபத்ரையாயிருந்தாலும்,
வாக்ப்ரவாஹ மஹிமையில் ஸரஸ்வதியாக இருந்தாலும், அப்ராக்ரத ரஸங்களாலே விரஜையாயிருந்தாலும்,
ஸ்வயமாக நீ கோதை (கோதாவரியாக) இருந்தாலும், உன் காந்தனுக்கு நீ நர்மதைதான்.

(3) அல்லது, ஓரோர் காரணத்தால் சோணையாகவும், துங்கபத்ரையாயும், ஸரஸ்வதியாயும், விரஜையாயும்,
கோதாவரியாயும் இருக்கும் நீ உன் காந்தனுக்கு நர்மதையாகவே இருக்கிறாய்.
எல்லாப் புண்ய நதிகளின் சுத்தியும், மஹிமையும் உன் ஸரஸ்வதி வெள்ளத்தில் சேர்ந்துளது.

தாயே…..உன்னை சேவிக்கும்போது, வார்த்தைகள் வெள்ளம் போல் வருகின்றன. ஏனென்றால் நீயே வெள்ளமாக இருக்கிறாய்.
உனது திருநாமமே கோதா…அதாவது.. கோதா ( கோதாவரி ) ஆனாலும்,
உன் திருவதரத்தை சேவித்தால், சிவந்த ஜலத்தை உடைய சோணையாறாகத்( சோண பத்ரா ) தோன்றுகிறாய்.
சொல் வளத்தில் ஸரஸ்வதி நதி, அந்தர் வாஹினியாக இல்லாமல், பஹிர் வாஹினியாக ஆகிறாய்.
திவ்யமான ச்ருங்கார ரஸங்களினால் (ஜலம்—தீர்த்தம்) ஸ்வயம் வ்ரஜை நதி ஆகிறாய் –வ்ரஜை —குற்றமற்றவள்–.
உன் கணவனுக்கு, நர்மதை ( இன்பம் தருபவள்– பரிஹாச வார்த்தைகளைச் சொல்லி மகிழ்விப்பவள்– நர்மதை நதி ) ஆகிறாய்.
மார்பகங்களில் , நீ , துங்கபத்ரை —துங்கமான தன்மை, பத்திரமான தன்மை —துங்கபத்ரை நதியாக ஆகிறாய்.

இது ஆறாவது ஸ்லோகம். ஆறுகளைப் பற்றியே நிரூபணம்.
ஆறு ஆறுகள்—கோதாவரி, சோணையாறு, சரஸ்வதி நதி, வ்ரஜா நதி ,நர்மதா, துங்கபத்ரா

அவதாரிகை

(1) என் வாக்கை ஸரஸ்வதி என்றீர், நான் வாக்தேவியாகேனோ?
என்னை ஸரஸ்வதியாக வர்ணித்து என்னை உபாஸிக்கவேண்டாவோ?
அம்மா, நீ ஸரஸ்வதிதான். ‘ஸரஸ்வதீ த்வம்’

(2) நதிகள் ப்ராயேண ப்ராசீமுகமாகப் போகும். என் ஸரஸ்வதியும் அப்படித்தானோ?
ப்ரத்யக்முகமாக (ஆத்மா என்னும் ப்ரத்யக் வஸ்துவைக் குறித்ததாய் அத்யாத்மமாய்) இருக்குமோ?
அம்மா, உன் வாக்குகள் சோணாநதி, அது மேற்கு முகமாக ஓடும் நதி. உன் வாக்கும் ப்ரத்யங்முகம். அது சோணை போன்றது.

(3) அரங்கனுக்கு இனிப்பான வாக்கு வேணுமென்கிறீர். அரங்கத்தில் என்ன ரஸம்?
மிக்க விநோதம் விளைவிக்கும் ஹாஸ்யரஸம் வேண்டுமே? அம்மா, உன் வாக்கு நர்ம பரிஹாஸங்களமைந்துளது.
அது அரங்கனுக்கு மிக்க இனிப்பை உண்டாக்கும்.

அபி என்பதற்கு மூன்று விதப் பொருள்கள் கொள்ளலாம்.
(1) அந்த நதியோ, இந்த நதியோ என்று உல்லேஹிக்கும்படி யிருப்பது ஓர் பொருள்.
(2) ஓர் நதியாயிருந்தும் மற்றோர் நதியுமாவாய் என்று விரோதி ஸமுச்சயம். வேறுவேறான பல நதிகளாயிருந்தும்,
விரோதமில்லாமல் உன்னிடத்தில் ஒன்றாகச் சேர்ந்திருக்கின்றன.
(3) இந்த நதியும் அந்த நதியுமாகப் பல புண்ய நதிகளும் உன்னிடமும் சேர்ந்துள என்பது கூட்டுப் பொருள்.
முதல் பொருளில் ரஸமதிகம்.

அதரே —
வாக்கை உச்சரிக்கும் திருப்பவழத்தில். உன் நாயகன் உன் வாக்குகளால் கட்டுப்படுவதற்கு
இதெல்லாம் ஓர் ஓர் விசித்ர நிமித்தம். பேசும் திருப்பவழத்தைப் பார்க்கையில் அவன் என் செய்வான், எப்படித் தப்பிப்பான்!

அபி ஶோணா —
(ஶோணாபி) சோணாநதியோ. சோணா என்பது சிவப்பு நிறத்தைச் சொல்லும்.
ஒருவளே எப்படிப் பல நதிகளாவது? ஓர் ஓர் அவயவத்தால் ஓரோர் குணத்தால், ஓர்ஓர் நதியாகிறாள்.
சோணை மேற்குமுகமாக (ப்ரத்யங்முகமாக) ஓடும் நதி.
உன் வாக்கு சோணாநதியைப்போல் ப்ரத்யங்முகம் (அத்யாத்மம்) ஸ்வாபதேசம் கனத்தது.
அத்யாத்மப் பொருளிலேயே முக்கிய நோக்கம் உள்ளதென்பதைக் காட்ட உபக்ரமத்திலேயே சோணையாக நிரூபித்தது.
இதனால் சொல்லப்படும் அத்யாத்ம நோக்குக்கு அநுகுணமாகவே மற்ற குணங்களும் உல்லேகங்களும் பொருந்தும்.

குசயோ: அபி துங்கபத்ரா —
இரு ஸ்தனங்களும் உந்நதம். பேசுகையில் இன்னும் உயரும்.
துங்கத்தின்பேரில் துங்கமாகும். சைதந்யஸ்தந்யத்தைக் கொடுக்கும். ஜகன்மங்களமான (பத்ரமான) ஸ்தனங்கள்.
ஸ்தனங்கள் ஓர் திருமேனியில் இரட்டையாக அமைந்திருப்பதைப்போல், இயற்கையாய் துங்கா பத்ரா என்று
இரண்டு சேர்ந்த துங்கபத்ரையை எடுத்தது அழகு. நீ பாடும்போது உயர்ந்து அமரும் உன் பத்ர ஸ்தனங்களைப் பார்த்து
அவன் எப்படி வ்யாமோஹ பரவசனாகாமல் தப்புவான்?

வாசாம் ப்ரவாஹவிபவே —
பாஹ்யமான திருப்பவழத்தின் அழகாலும், ஸ்தனங்களின் அழகினாலும் மட்டுமா
நீ பாடும் பாசுரங்களுக்குக் கௌரவம்? லாவண்யமுடைய யுவதி பாடுகிறாள் என்பதாலா உன் பாசுரங்களுக்குக் கௌரவம்?
உன் வாக்குகளின் ப்ரவாஹம் ஸ்வயம் ஸரஸ்வதீப்ரவாஹம். பாடும் உன்னுடைய அழகால் ஆரோபிதமான பெருமையன்று.
ஸ்வயம் அந்தர்வாஹினியான ஸரஸ்வதி யாகும். அரும்பெரும் கருத்துக்கள் உள்ளே ஆழ்ந்து கிடக்கும்.
உள்ளேயிருந்து கந்தம் வீசும். அந்த ஸ்திர பரிமளம் உன் ஸரஸ்வதி. மறையேயம்மா, மறையிலும் மறை.
பொருள்கள் உள்ளே மறைந்திருந்தாலும், உள்ளே அவிச்சின்ன ப்ரவாஹமாக ஓடிக்கொண்டேயிருக்கும்.
நீ பூமிதேவியானதால் உன் ஸரஸ்வதி பூமிக்குள் மறைந்து ஓடுகிறதோ?
உம்மை ஒரு க்ஷணமேனும் த்யானிப்பவர் அநிவாரிதமான வாக்குகளின் ப்ரவாஹங்களால்,
மந்தாகினியையும் மந்தமாகச் செய்கிற சக்தியை உடையவராவார் என்று உன் நாயகன் ஹயக்ரீவரைத் துதிக்கையில்
கங்கா ப்ரவாஹத்தை அதிசயிப்பதைப் பேசினேன். கங்கை அந்தர்வாஹினி யன்று.
இங்கே அந்தர்வாஹினியான ஸரஸ்வதி நீ என்று வ்யதிரேகம் (உயர்வு).

அப்ராக்ருதை: ரஸை: —
கவிஸிம்ஹமே, என் ப்ரபந்தங்களில் என்ன ரஸங்கள்? ப்ரக்ருதரஸங்களா?
அலௌகிக திவ்யரஸங்களா? அதிலுள்ள ச்ருங்கார ரஸத்திற்கு என்ன ஸ்தாயீபாவம்?
ப்ரக்ருதி மண்டலத்தில் பூமியிலோடும் (இந்த மானவாவர்த்தத்தில் ஓடும்) நதிகளாக என்னை வர்ணிப்பது உசிதமா?
அம்மா, கவிமுறையில் பலபலவிதமாய் உல்லேகாலங்காரமாகப் பேசினேன். தேவதைகளான புண்ய நதிகளாகப் பேசினேன்.
உன் ஸ்வபாவத்திற்குத் தக்கபடி உள்ளபடி பேசினால் உன் கவி ரஸங்களெல்லாம் திவ்யரஸமாயிருப்பதால்
நீ விரஜையம்மா. ‘ஸ்வபாவாத்’ என்பதை இங்கேயுமொட்டலாம். பின்பும் ஒட்டலாம். அது ‘மத்யமணி’.
வாக்ப்ரவாஹத்தை வர்ணித்தீரே! ப்ரவாஹமானால் ரஜஸ் இல்லாமல் இருக்குமோ?
இல்லையம்மா! உன் வாக்ப்ரவாஹம் ஸ்வத்ஸித்தம். நித்யமாயுளது. புதிதாக உற்பத்தியாகி ஓடிவருவதன்று.
ஸ்வபாவாத் — ஸ்வாபாவிகம் — நித்யம். ஆகையால் ரஜஸ்ஸுக்கிடமில்லை.
ச்ருங்கார ரஸத்திற்கு ரதிதான் ஸ்தாயீபாவம். ஆனால் இது ஆத்மாதி, ப்ராக்ருதியன்று.
அலௌகிகாதி,ப்ரத்யங்முகமான ரதி. ‘அத்யாத்ம ஜ்ஞானத்ருப்தத்வம்’

ஸ்வபாவாத் விரஜா அஸி —
எங்கள் ரஜஸ் தமஸ்ஸுகளை எல்லாம் போக்கி திவ்யவிபூதியை
உடனே அடையச் செய்யும் உன் வாக் ப்ரவாஹத்தில் ரஜஸ்ஸுக்கு ப்ரஸக்தியேது?

ஸ்வபாவாஅபி கோதா —
கோதா என்னும் சப்தம் கோதாவரி நதியையும்,
ஸ்ரீவிஷ்ணுசித்தர் பெண்ணையும் சொல்லும் என்று நிகண்டு. நீ ஸ்வயம் கோதாவரியாவாய்.
நீ கோதாவரி என்பதற்கு ஓர் குணவிசேஷத்தைக் கொண்டு ஆரோபிக்க வேண்டியதில்லை.
நீ கோதாவரி என்பதில் ஆரோபமுமில்லை. யமுனை கண்ணன் யௌவன விஹாரங்களுக்கு சாக்ஷி.
பஞ்சவடியில் சிரகாலம் ராமவைதேஹீ விஹாரங்களுக்கு கோதாவரி சாக்ஷியாவாள்.
ஜனகராஜன் புத்திரியாகிய ஜானகி நீராடினதால், புண்யமான நீர்களையுடையதாக,
கோதாவரி தீர்த்தத்தைக் காளிதாஸர் மேகஸந்தேச ஆரம்பத்தில் வர்ணித்தார்.
உத்தமராமசரிதத்தில் பவபூதியின் வர்ணனங்களையும் நினைக்கவேணும்.

கமிது: நநு நர்மதா அஸி —
இத்தனை நதிகளாக இருக்கையிலும், உன் நாயகனுக்கு நீ
நர்ம பரிஹாஸ வார்த்தைகளைப் பேசுவதில் உள்ள விநோதம் எல்லையற்றது.
ராமாயண ரஸங்களைப் பேசுகையில், ஆதிகவி “ஹாஸ்ய ச்ருங்கார பீபத்ஸ” என்று ஹாஸ்ய ரஸத்தை முதலில் பேசினார்.

எங்கள் அநாதிகாலமான கொடிய அந்த அபராதங்களினால் உள்ள சீற்றத்தை மாற்ற ஹாஸ்ய ரஸம்தான் சிறந்த உபாயம்.
அந்த நதியோ, இந்த நதியோ என்று ஓரோர் காரணத்தையிட்டு உல்லேகம்.
உன் காந்தனுக்கு நீ நர்மதை என்பதுதான் தத்துவம். நர்மதா த்வம் அஸி, ஸா த்வமஸி! (6)

———

வல்மீகத: ஸ்ரவணதோ வஸுதாத்மநஸ் தே
ஜாதோ பபூவ ஸ முநி: கவிஸார்வபௌம: |
கோதே கிமத்புதம் யதமீ ஸ்வதந்தே
வக்த்ராரவிந்த மகரந்தநிபா: ப்ரபந்தா: || (7)

கோதே — கோதாய்!;
வஸுதாத்மந: — பூமிப்பிராட்டி ரூபமான;
தே — உனது;
ஸ்ரவணத: — செவியாகிற;
வல்மீகத: — புத்திலிருந்து;
ஜாத: — பிறந்த;
ஸ – அந்த;
முநி — மஹர்ஷி;
கவிஸார்வ பௌம: — கவிகளுக்குள் சக்கரவர்த்தியாக;
பபூவ — ஆனார்; (ஆகையால்),
தே — உனது;
வக்த்ராரவிந்த — முகமென்னும் கமலத்திலிருந்து (பெருகும்);
மகரந்தநிபா: — தேன்போன்ற;
அமீ ப்ரபந்தா: — இந்த ப்ரபந்தங்கள்;
ஸ்வதந்தே — ருசிக்கின்றன;
இதியத் — என்னும் இது;
கிமத்புதம் — என்ன ஆச்சரியம்?

கோதாய்! பூமிப் பிராட்டியேயான உன்னுடைய காதென்று சொல்லும் வல்மீகத்திலிருந்து (புற்றினின்று) பிறந்த
அந்த முனி (வால்மீகி முனிவர்) கவிச் சக்கரவர்த்தியானார். அப்படியிருக்க, உன்னுடைய திருவாயாகிய
தாமரையிலிருந்து பெருகும் தேனுக்கு ஒப்பான இப்பிரபந்தங்கள் இனிமையாயிருக்கின்றன என்பது என்ன ஆச்சர்யம்.

நீ கோதை ! உன் வாக்கு மிகப் போக்யமானது. நீ பூமியே வடிவானவள். புற்று என்று சொல்கிறார்களே அது உன் செவி போல் உள்ளது.
அதற்கு வல்மீகம் என்று பெயர். அதிலிருந்து உண்டானவர் வால்மீகி .
ஆதிகவி உனது செவியிலிருந்து பிறந்தவருக்கே எவ்வளவு வாக்கு வன்மை. கவித்திறன்.
அப்படியிருக்கும்போது, உன் திருவாக்கிலிருந்து, நேராகவே அவதரித்த பாசுரங்கள் ,
தேனினும் இனியதாக இனிப்பதற்குக் கேட்பானேன் ! இது அத்புதம்; அதி அத்புதம்.

(1) வால்மீகியை யல்லவோ உத்தம கவி என்பர்! அவரை யல்லவோ கவிகள் நல் வாக்குகளுக்காகப் பிரார்த்திப்பர்!
“இதம் குருப்ய: பூர்வேப்யோ நமோவாகம் ப்ரஸாஸ்மஹே” என்று பவபூதி வால்மீகியை முதலிலேயே பணிந்தார்.
அவர் தானே கவிகளுக்கு மார்க்க தர்சீ! நீரும் உம்முடைய தேவநாயகன் ஸ்துதியில்
“ப்ராச; கவீந் நிகமஸம்மித ஸூந்ருதோக்தீந், ப்ராசேதஸ ப்ரப்ருதிகாந் ப்ரணமாமி நித்யம்” என்று அம்முனிவரைப் பணிந்தீர்.

பாதுகா ஸஹஸ்ரத்திலும், “யஸ்யாஸூதரவிந்த ஸம்பவ வதூ மஞ்ஜீர சிஞ்ஜாரவ ஸ்பர்த்தா துர்த்தர பாதபத்தபணிதி வல்மீகஜந்மா கவி:” என்று
அவர் ராமாயணத்தைப் புகழ்ந்தீர். பெரிய பிராட்டியாருடைய அவதாரமாகிய ஸீதாதேவியின் சரித்ரத்தைப் பாடிய கவியிலும் உயர்ந்த கவியுண்டோ?
“கவிப்ரதம பத்ததிம்” என்றல்லவோ காளிதாஸர் ராமாயணத்தைப் புகழ்ந்தார்.
“பரம் கவீநாம் ஆதாரம்” என்றபடி அக்காவ்யந்தானே எல்லாக் கவிகளுக்கும் மூலாதாரம்.!

(2) பெருமாள் கேட்டு மகிழும்படி பாட நான்தான் வாக்கு அளிக்கவேண்டும் என்று இச்சகம் பேசுகிறீர்.
ராமாயணம் 24000 சுலோகங்களையும் பெருமாள் “பபூஷயா ச்ரோத்ருமாநா பபூவ” என்றபடி தன் ஸத்தையும்
தாரணமும் அதனால்தானென்று “மஹாநுபாவம் சரிதம்” என்றும், “மமாபி பூதிகரம்” என்றும் புகழ்ந்து கொண்டு
கேட்கவில்லையே! என் விஷயமாக ஓர் சின்ன ஸ்துதி பண்ணுவதற்கு என்னையே வாக் பிக்ஷை கேட்கிறீரே?

(3) ஓரிரவில் பாதுகா ஸஹஸ்ரம் பாடி அதைப் பெரியபெருமாளே திருவோலக்கத்தில் தூக்கத்தைத் தள்ளி
லக்ஷ்மியோடு கூடத் திருச்செவி சாற்றவில்லையோ! அந்தப் பாதுகா ஸஹஸ்ரத்திற்கு திவ்ய வாக்கை
வால்மீகியைப் பிரார்த்தித்து அடையவில்லையோ? அதற்கு என்னைக் கூப்பிடவில்லையே?
ஸமயத்திற்குத் தகுந்தபடி பேசுவது அழகோ? நான் கவியா? அவர் கவியா? இதற்கெல்லாம் பதில் கூறுகிறார் இங்கே.

வால்மீகி ஆதிகவி என்பதும், அவரை மற்றக் கவிகள் பணிந்து வாக்கைப் பெற்றனர் என்பதும் உண்மையே.
அடியேனும் அவரைப் பணிந்து யாதவாப்யுதயம் பாடினேன். பாதுகா ஸஹஸ்ரமும் பாடினேன்.
பெருமாளும் அவர் ஸீதைப் பிராட்டி விஷயமாய்ப் பாடிய ஆதிகாவ்யத்தை இன்புறக் கேட்டருளினார்.
நான் இப்பொழுது உன்னைப் பிரார்த்திப்பதற்கும் நான் முன் வால்மீகியைப் பிரார்த்தித்தற்கும் ஓர் விரோதமுமில்லையே அம்மா!
வால்மீகியைப் பிரார்த்தித்துக் கவிதை பெற்றதைக் கொண்டு கைமுத்யத்தால் உன்னைப் பிரார்த்தித்து
வாக்குப் பெறவேண்டியதற்கு ஔசித்யம் ஸித்திக்கிறதே. வாதத்தில் இதுபோன்ற உன் கேள்வியை
‘சுங்கத்தில் போது விடிந்ததுபோலும்’ என்பாரம்மா! வால்மீகி யாரம்மா? வல்மீகத்தில் பிறந்தவர்தானே?
வல்மீகம் என்பது என்ன? “வஸுதாச்ரோத்ரம்”தானே? பூமிதேவியின் காது (ச்ரவணம், ச்ரோத்திரம்). நீதானே பூமிதேவி?
உன் செவியிற் பிறந்த மஹிமையாலே அவர் கவிஸார்வ பௌமரானார். உன்னுடைய குழந்தை (அம்சம்) விபூதிதானே அவர்!
அவர் கவிதாசக்திக்கு நீதானே மூலம்! ஆதாரம்! உன்னை த்யானித்துக் கொண்டே தான் யாதவாப்யுதயமும் பாதுகாஸஹஸ்ரமும் பாடினேன்.
“வஸுதா ச்ரோத்ரஜே தஸ்மிந்” என்று உன் ச்ரோத்ரத்தில் பிறந்தவரென்றுதானே அவரை ஆரம்பத்தில் இரண்டாவது ச்லோகத்தில் புகழ்ந்தேன்?
அப்படியே பாதுகா ஸஹஸ்ரத்திலும் “வஸுதா ச்ரோத்ர ஜந்மா முநிர்மே” என்று உன் மூலமான புத்ர ஸம்பந்தத்தைப்
பேசிக்கொண்டேதானே திவ்யவாக்கின் அநுக்ரஹத்தை யாசித்தேன்?
உன் ச்ரோத்ரத்திலிருந்து பிறந்த கவி பாடின க்ரந்தமானதால், ராமாயணம் முழுவதையும் பரிஷத்தில் பெருமாள் இன்புறக் கேட்டார்.

(4) இப்படிப் பதில் சொல்வது அழகாயிருந்தாலும், ஓர் கேள்வி கேட்கிறேன். அதில் நீர் அகப்பட்டுக்கொண்டே தீரவேணும்.
ஸீதைப் பிராட்டியார் தன்னுடன் பிறந்தவரான (ஸஹஜரான) கவீச்வரரைக் கொண்டு தன் சரித்ரமான ராமாயணத்தைப்
பாடிவைத்தாள் என்று பாதுகாஸஹஸ்ரம் முடிவில் பாடினீரே! இப்பொழுது ராமாயண காவ்யம் என் மூலம் என்கிறீரே?
இந்த விரோதத்தை எப்படிப் பரிஹரிப்பீர்? பெரியபிராட்டியார் எனக்கு அம்சி, நான் அம்சம். அம்சத்திற்குள் அம்சி அடங்குமோ?

அம்மா, இந்தக் கேள்வியும் ஸுபரிஹரம். நீ பெரிய பிராட்டியாருடைய அம்சமாயிருந்த போதிலும்,
பெரியபிராட்டியார் உன்னிடமுள்ள நிரதிசய ப்ரீதியால், உன் பெண்ணாகப் பிறந்து உன்னை பஹுமானித்து
உனக்கு சேஷமாயிருக்கும் ரஸத்தை அநுபவிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு பூமிஸுதையாக
(உன் பெண்ணாய், ஸீதையாக) அவதரித்தாள். அந்த அவதாரத்தில் பெரியபிராட்டியார் இச்சாவசத்தால்
அம்சாம்சி பாவம் மாறிவிட்டது. நீ அம்சியும், ஸீதை உன் அம்சமான புத்திரியுமானாள். தாயும் அம்சியுமான நீ
பாடிவைத்ததைத் தானே அங்கே ஸீதை பாடி வைத்ததாக ஔபசாரிகமாகப் பேசினேன்.
“ஸஹஜோ கவீச்வரேண” என்றதால் இது வ்யஞ்ஜிதம். வால்மீகிக்கும் ஸீதைக்கும் ஸஹஜத்வம் எப்படி?
பூமிதேவியே நீ! உன்னிடமிருந்து இருவரும் பிறந்தாரென்பதுதானே! உன்னிடம் பிறந்தவர் ஸஹஜகவி.
கவீச்வரியான தாயாருடைய பிள்ளைதானே ஸஹஜகவீச்வரரானார்? “கரிணீ”தானே களபத்தைப் பெறும்?
தாய் வேறு ஜாதி குட்டி வேறு ஜாதியாமோ? நீ கவீச்வரி. உன்னிடம் ஜாதர் கவீச்வரர்.
“மாதரம் த்விபதா இதி”. ஆண் பிள்ளைகள் தாய் ஸ்வபாவத்தை அநுஸரித்திருப்பர். ஆகையால் விரோதம் இல்லை அம்மா!

வஸுதாத்மந: —
பூமிஸ்வரூபமான (பூமிதேவியான) பூமி வடிவுடைய உன்னுடைய.
“ஸாக்ஷாத் க்ஷமாம்” என்று முதல் ஸ்லோகத்திலேயே இதை ஸாதித்தார்.
“வல்மீகம்” – புற்று. அதற்கு “வஸுதாச்ரோத்ரம்” என்று பெயர். வல்மீகத்தில் பிறந்தவர். பூமியின் செவியில் பிறந்தவர்.
“வஸுதாச்ரோத்ர:” என்ற பர்யாய பதத்தைப் புத்திக்கும் கொண்டு வருவதற்காக “வஸுதா” சப்தத்தைப் பிரயோகித்தது.

தே — உன்னுடைய;

ஸ்ரவணத —
திருச்செவியிலிருந்து. ஜன்ஹுமஹர்ஷியின் ஸ்ரவணத்திலிருந்து கங்கை அவதரித்தாள்.
அதுபோல உன்னுடைய ஸ்ரவணத்திலிருந்து ராமாயண கங்கா ப்ரவாஹ ஹேதுவான வால்மீகிமுனி பிறந்தார்.

வல்மீகத: — கரையான் புற்றிலிருந்து;

ஜாத: — பிறந்த. (ஜாதோ பபூவ) பிறவியாலே ஆனார். பிறந்ததும் ஆனார்.

ஜாத: கவிஸார்வபௌம:
கவீச்வரராகவே பிறந்தார். “ரூபதாக்ஷிண்ய ஸம்பந்த: ப்ரஸூத:” என்ற இடத்தில்
போல பிறவிக் கவீச்வரர். உன்னிடத்திலிருந்து பிறந்ததே அவருடைய நிரதிசயமான கவிதைக்கு மூலம்.

ஸ முனி: —
அந்த முனி. முனீச்வரர் கவீச்வரரானார். ‘முனி’ என்பது வாய் திறவாத மௌனியைச் சொல்லும்.
வாய் திறவாதவரும் வாசஸ்பதியாகப் பேசுவர். “மூகையான் பேசலுற்றேன்”, “மூகம் கரோதி வாசாலம்”,
“ரகுவரசரிதம் முனிப்ரணீதம்”, “ஸ்ரீமத்பாகவதே மஹாமுனிக்ருதே பராசரம் முநிவரம்”.

கவிஸார்வபௌம: —
கவிச்சக்கரவர்த்தியாய், கவீச்வரராய். முனி என்பவர் யோகி.
யோகத்தில் 7 பூமிகள், மேல்மேல் உப்பரிகைகள், மேல்மேல் ஏறவேண்டும் (ஆரோஹம்).
7 பூமிகளையும் ஏறுவர். 7 பூமிகளேறின யோகத்தை ஸார்வபௌமமென்பர். யோகி ஸார்வபௌமர் கவி ஸார்வபௌமரானார்.
யோகத்தில் 7 பூமிகள்போல், ராமாயணம் ஸப்த காண்டம். ராமாயணத்தைப்போல்,
திவ்யதம்பதிகளிடம் மனம் லயிக்க வேறு ஸாதனமில்லை. ராவண ஜயம் மனோ ஜயமாகும்.
ராவண லயம் மனோ லயம். அது யோக காஷ்டை.
பபூவ– ஆனார்.

கோதே! —
வாக்கை யளிக்கும் தேவியே! உன் புத்திரரான வால்மீகிக்கு நீதான் வாக்கை யளித்தாய்.
ஆகையால் தான் அவருக்கும் கவிதா மூலமான உன்னை பிக்ஷை கேட்கிறேன்.
“பரம் கவீநாம் ஆதாரம்” என்பதற்கும் மூலாதாரம் நீ.

(தே) வக்த்ராரவிந்த மகரந்தநிபா: —
உன் திருமுகக் கமலத்திலிருந்து பெருகும் தேனுக்கு ஒப்பான (உன் ப்ரபந்தங்கள்).
ஸாமான்யமான தாமரையிலிருந்து பெருகும் தேனுக்கு ஒப்பிடமுடியாது. உன் திருவாயாகிய தாமரையிலிருந்து பெருகும்
தேனுக்குத்தான் ஒப்பிடலாம். உன் ப்ரபந்தங்களாகிய தேனுக்கு உனக்கு பாஹ்யமான உபமானமொன்றும் ஒப்பாது.
கண்ணன் பாடிய கீதையை “யா:ஸ்வயம் பத்மநாபஸ்ய முகபத்மாத் விநிஸ்ஸ்ருதா:” என்று வர்ணிப்பர்.
“வால்மீகேர் வதநாரவிந்த கபிதம் ராமாயணாக்யம் மது” என்று தித்திப்பதற்கும் நீதான் மூலமென்பதை ஸூசிப்பிக்கிறார்.

(தே) ப்ரபந்தா: —
உன்னுடைய தேன் ப்ரபந்தங்கள். ப்ரபந்தமென்பதற்குப் பரம்பரை விஸ்தாரம் என்றும் பொருள்.
த்வநி பரம்பரை போய்க் கொண்டிருக்கும். கட்டிலடங்காது. திருநாமம் மட்டும் கட்டுப்பட்டது என்ற பொருளைக் கொடுக்கும்.
பொருள் விஸ்தாரம் கட்டிலடங்காது. பொருள் பரம்பரை எல்லையில்லாமல் மேல்மேலே போய்க்கொண்டிருக்கும்.
“மங்களாநாம் ப்ரபந்தாந்”, “க்ரியாப்ரபந்தா தயமத்வராணா மஜஸ்ர மாஹூத ஸஹஸ்ரநேத்ர:”

அமீ ப்ரபந்தா: —
இப்பிரபந்தங்கள். இந்த என்று சொல்லலாமே யொழிய, இப்படிக்கொத்தது என்று
வரையறுத்துப் பேச முடியாது. இதோ என் மனதுக்கும், காதுக்கும், நாக்குக்கும் சுவைக்கிறதே அந்தப் பிரபந்தங்கள்.
“க்ருஷ்ணேத்யக்ஷரயோரயம் மதுரிமா” என்று ஜகந்நாத பண்டிதர். “க்ருஷ்ண” என்ற இரண்டு அக்ஷரங்கள்
தன் மனதிற்குச் சுவைத்த இனிப்பை “இவ்இனிப்பு” என்று பேசியதுபோல.

யத் ஸ்வதந்தே — தித்திப்பது என்னும் இதம் இது, தித்திப்பது.

கிமத்புதம் — என்ன ஆச்சரியம்? இது ஓர் ஆச்சரியமா? கைமுத்தியத்தால் கிடைப்பது ஆச்சர்யமாகுமோ?
‘அத்புதம்’ என்பதை அத்புதம் ஸ்வதந்தே என்று ஒட்டிக் கொள்ள வேண்டும். இங்கே இரண்டு கைமுத்தியங்கள்.
(1) உன்னிடம் பிறந்தவர் லோகோத்தர கவியாகையால் உன் காவ்யங்கள் லோகோத்தரமென்பதற்கு என்ன தடை?
(2) உன் காதில் பிறந்தவர் வாக்கு அத்தனை இனிமையாகையில் உன் திருவாயிலிருந்து வரும் வாக்குகளின் இனிப்புக்குக் கேட்பானேன்?

வால்மீகி விஷயமான இந்த சுலோகத்தை 7வது ஸ்லோகமாக வைக்கப்பட்டது.
உன் “ஸ்ரவணத்திலிருந்து” என்பதற்கு எதிர்த்தட்டு உன் “வக்த்ராரவிந்தத்திலிருந்து” என்பது. (7)

—-

போக்தும் தவ ப்ரியதமம் பவதீவ கோதே
பக்திம் நிஜாம் ப்ரணயபாவநயா க்ருணந்த: |
உச்சாவசைர் விரஹஸங்கமஜை ருதந்தை:
ஸ்ருங்காரயந்தி ஹ்ருதயம் குரவஸ்த்வதீயா:|| (8)

கோதே — கோதாய்;
தவ — உன்னுடைய;
ப்ரியதமம் — அத்யந்த ப்ரியனான பர்த்தாவை;
பவதீவ — உன்னைப் போலவே;
போக்தும் — அநுபவிப்பதற்காக;
நிஜாம் — தங்களுடைய (சொந்தமான);
பக்திம் — பக்தியை;
ப்ரணயபாவநயா — ப்ரணய மார்க்கமாக; (நாயகீபாவமாக);
க்ருணந்த: — பேசிக்கொண்டு;
த்வதீயா — உன்னுடைய;
குரவ: — பெற்றோர்கள்;
உச்சாவசை: — மிகவும் அதிக்ரமித்த;
விரஹஸங்கமஜை: — பிரிவு கூடல்களால் ஏற்படும்;
உதந்தை: — வ்ருத்தாத்தங்களால்;
ஹ்ருதயம் — தங்கள் மனதை;
ஸ்ருங்காரயந்தி — ஸ்ருங்கார பாவமுடையதாக ஆக்கிக் கொள்கிறார்கள்.

கோதா தேவியே! உன் குருக்கள் (பெரியோர்கள், ஆழ்வார்கள், உன் பிதா விஷ்ணு சித்தர்) உன்னைப் போலவே
உன் பிரிய தமரான பெருமாளை அனுபவிக்க ஆசை கொண்டு, தங்கள் பக்தியை ராகம், ஸ்நேஹம் என்னும்
காம பாவத்தினால் பேசிக் கொண்டு, கீழும், மேலுமான பற்பல விரஹ ஸ்ருங்கார ஸம்ச்லேஷ ச்ருங்கார
வ்ருத்தாத்தங்களால் தங்கள் மனதை ச்ருங்கார பாவத்தால் நிரப்புகிறார்கள்.

பகவான் உனக்கு மிக மிகப் பிரியமானவன் அவனை உன்னைப் போல் அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லாருக்கும் வந்துவிட்டது.
உள்ளம் கனிந்து ,அவனையே நினைத்துப் பேசுகிறார்கள். ப்ரேமத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
ப்ரேமமும் பக்தி தானே. பக்தி ஸ்ருங்காரமாக மாறிவிட்டது.அவர்கள் ஆண்களாகப் பிறந்தாலும், பகவானிடம் ஈடு பட்டு,
அனுபவிக்கும் வழியை உன்னிடம் கற்றுக்கொண்டார்களோ !
உனக்குப் பின் வந்தவர்கள், இப்படிச் செய்தால் உன்னிடம் கற்றுக் கொண்டார்கள் எனலாம்;
ஆனால், உன் திருத் தகப்பனார் கோஷ்டியில் சேர்ந்த வர்களே இவ்வாறான நிலையை அடைந்தார்கள் என்றால், அது ,அதிசயம் அல்லவா !

அவதாரிகை
(1) வால்மீகி புத்தேறின தபஸ்வி. காமங்களெல்லாம் வற்றி உலர்ந்துபோன நெஞ்சுடைய விரக்தமுனி.
அத்புதமான விப்ரலம்பக ச்ருங்கார, ஸம்ச்லேஷ ஸ்ருங்கார ரஸங்களை எப்படி நெஞ்சில் வாங்கி ப்ரத்யக்ஷம் போல் வர்ணித்தார்?

(2) நீர் சுஷ்கசுஷ்கமான விரக்தராயிற்றே, “தருணீகுணபம்” என்று பேசுகிறவராயிற்றே!
எனக்கும் என் நாயகனுக்கும் உள்ள ப்ரணய ரஸங்களை எப்படி வர்ணிப்பீர்?

(3) என் புத்திரரான ஆதிகவி வால்மீகியின் மதுரவாக்கைப் புகழ்ந்தீர். என் பெரியோரான அபிநவ தசாவதாரமான
ஆழ்வார்கள் வாக்கின் இனிப்பெப்படி? என்னைப்பெற்ற என் தகப்பனார் வாக்கு எப்படி?
என் நாயகனுக்கும் எனக்குமுள்ள ப்ரணய ரஸத்தையும், எங்கள் திருக்கல்யாணத்தையும் வர்ணிக்கப் போகிறீரே!
ஜாமாதாவான என் நாயகனுடைய மாதுர்யம் எப்படி?

இதற்கெல்லாம் பதில்:– வால்மீகி நெஞ்சம் அத்யந்த விரக்தமும், சுஷ்கமுமானதுதான். அவரென்ன பண்ணுவார்?
வர்ணிக்கப்படும் ரகுவரனிடத்தில் பக்தி அவரைத் தம்பதிகளுக்குள்ள ஸ்ருங்கார பாவத்தை வர்ணிக்கச் செய்கிறது.
“பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்” என்று தன்னைப் பெண்ணுடையுடுத்தச் செய்யும் ரூபாதிகளில்
ஸ்வாநுபவத்தாலே அவர் பேசுகிறார்.

நான் என்ன விரக்தனானாலென்ன? பரமாத்மாவான உன் நாயகனிடம் ரக்தி (ரதி)யுடையவனே.
சாஸ்த்ரீய சுத்த நிருபாதிக நிரதிசய ரஸமான உன் நாயகன் விஷயத்தில் விரக்தி கூடுமோ?
“அத்யர்த்தம் ப்ரிய”, ‘ப்ரியதம ஏவ வாணீயோ பவதி’ என்றபடி தனக்கு ப்ரியதமமாக அவனை பஜித்து,
அவனுக்குப் பிரியதமமானால்தானே ஆத்மா பிழைக்கலாம்! உன் பெரியோர்களான, மயர்வற மதிநலமருளப் பெற்றவரும்
பெண்ணுடையுடுத்திக் கொள்ளச்செய்யும் மாப்பிள்ளை யம்மா. மற்ற ஆழ்வார்கள் போகட்டும்.
உன்னைப் பெற்ற ஆழ்வார் பெரிய ஆழ்வாரானாரேயம்மா!

ரூபவதியான பார்யை அநேக ஸபத்நர்கள் (விரோதிகள்)
ஏற்படுவதற்குக் காரணமாவாரென்பர். ‘கந்யா வரயதே ரூபம்’. ஸர்வாதிசாயியான லாவண்யத்தையுடைய அரங்கனைத்தான் நீ தேடினாய்.
நீ ஈடுபடும் உன் நாயகன் அழகே புமான்களுடைய த்ருஷ்டி சித்தங்களை அபஹரித்து உனக்கு ஸபத்னீக்களாக்குகிறது.
உன் தகப்பனார் கூடத் தன் மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்பட ஆசைப்பட்டுப் பெண்ணுக்கே ஸபத்னீயானாரே.
அதோடு நிற்காமல் “வந்து மண்ணும் மணமும் கொண்மின்” என்று உலகத்தை முழுவதும் கூப்பிட்டு,
என் மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்படுங்கள் என்று கூப்பிடுகிறாரே. ஆண் பெண் விபாகமற உலகத்தாரெல்லோரையும்
உனக்கு ஸபத்னீக்களாக வாருங்கள் என்று அழைக்கிறாரே! யாரென்ன செய்வதம்மா!

பெற்ற தகப்பனார் பெண்ணின் பதியிடம் ஆழ்வது ஓர் ஆச்சர்யமானதால் அவரைப் பெரிய ஆழ்வாரென்பது.
வெறும் ஆண்களாய் ஆழ்வார் ஆழ்வார். மாமனாராயிருந்தும் ஆழ்வார் பெரியாழ்வார். 13வது ஸ்லோகம் வரையில்
கோதையின் பிறப்பு முதலிய ஸம்பந்தத்தால் அடையப்படும் பெருமைகளைப் பேசுகிறார்.
கோதையின் குடிப்பெருமை, அவளுக்கு ஜனகத்வாதி ஸம்பந்தங்களால் அடையப்படும் பெருமையைப் பேசுகிறார்.
கன்யையின் பிறப்பகத்தின் மஹிமைகள்.

போக்தும் —
பேரின்பத்துடன் அநுபவிக்க. பெண்ணுக்குப் பதிஸம்யோக ஸுலபமான வயது வந்ததைப் பார்த்து,
இந்தக் கற்பகக் கொடியை ஓர் கற்பக வ்ருக்ஷத்திலணைத்து விட வேண்டுமே என்று சிந்தார்ணவ மக்னராய்,
அதன் கரை காண அநுரூப வரனைத் தேடுவர். வரனைப் பார்க்கவே இவர் ஸ்ருங்கார சபளிதஹ்ருதயராய்,
ஸ்வயம் போகத்தில் ஆசையாகிய சிந்தார்ணவத்தில் ஆழ்ந்து மூழ்குகிறார்.
அந்த ராகக் கடலிற்குக் கரையையே காண்கிறாரில்லை. ‘ந ஜாநே போக்தாரம் கமிஹ’ என்று
காந்தர், காந்தைகளது ரூபதாம்பத்யத்தைக் கோரி வரிக்கப்பட்ட ப்ரியவஸ்துவின் போகத்திலாழ்வார்.
உன் பெரியோரான ஆழ்வார்களும், உன் பிதாவும் ஜாமாதாவைக் கண்டதும் தாங்களே போகத்தில் ஆழ்ந்தார்கள்.

தவ ப்ரியதமம் —
பெண்ணாகிய உனக்கு வரன் தேடினாரோ? ஆணாகிய தமக்கு ஓர் பதி தேடினாரோ?
பெண்ணுக்கு ப்ரியதமராகப் போக்யராக ஆசைப்படவேண்டியிருக்க, தமக்கே ப்ரியதமராகவும் ஏகபோக்யமாயும் கொண்டார்.
நீ ஸ்ருங்கார பாவங்களையும், பக்தி பாவங்களையும், அத்புதமாய்ப் பாடினாய் என்றேன் முன் ஸ்லோகத்தில்.
உன் தகப்பனாரே அப்படிப் பாடுகையில் நீ பாடுவது அத்புதமா? “கோதே கிமத்புதம் இதம்”

பவதீவ —
உன்னைப்போல. (அநுபவிக்க) இந்த ப்ரஹ்ம ஜாமாதா விஷயத்தில்
‘ஜாமாத்ருபோக்யதாம் புத்ரீ வேத்தி நோ பிதா” என்ற வைஷம்யமில்லை.

கோதே — நீ ப்ரணயரஸப் பாசுரம் கொடுப்பவள். உன்னைப் போலவே அவர்கள்
ஸ்ருங்கார ரஸப் பாமாலை தொடுத்து ஸமர்ப்பிக்கிறார்கள்.

பக்திம் நிஜாம் —
தங்கள் ஸ்வந்த பக்தியை. இதில் எல்லாவற்றிற்கும் பரிஹாரம் ஸூசிதம்.
வாஸ்தவத்தில் அவர்கள் பாவம் ஸ்வரூபத்திற்குப் பிராப்தமும், அத்யந்தோசிதமுமான விச்வபதி விஷயமான பக்தியம்மா!
அந்த பக்தியே நிரதிசய ப்ரீதி ரூபமாய் ஸ்நேஹ ரூபமாய் விட்டது.
அடைய வேண்டிய அநுபவமான நித்திய விபூதி போக விபூதி தானே! இங்கு போகம் நித்ய போகத்திற்கு ஸாதனம்.
வேறு கதியில்லையே, என்ன செய்வது? விஸ்வத்திற்கே ஒரு பதிதானேயுள்ளது.
‘ப்ரியதமம்’ என்பது பரஸ்பர ப்ரிய தமத்வத்தைப் பேசும் ஸ்ரீபாஷ்ய பாஷணத்தை ஸ்மரிப்பிக்கிறது. அங்கும் வரணப்பேச்சே.

ப்ரணயபாவநயா —
பக்தி என்பது மஹநீய விஷயத்தில் ப்ரீதி. அதுவே ஓர் சமயத்தில் ஸ்ருங்காரம் என்னும் வ்ருத்தியாகப் பரிணமிக்கிறது.
‘ஸ்நேஹோ மே பரம: பக்திஶஃச நியதா, பாவோ நாந்யத்ர பச்சதி’ என்று பேசுவது உசிதம்தானே.
ராகமும் முற்றிப் பிச்சேறக்கூடியதுதானே! க்ருணந்தே –பேசுவது பக்திதான்.
ஆயினும் அதில் ‘ஸதீவ ப்ரியபர்த்தாரம்’ என்னும் ராகமும் கலக்கிறதம்மா!

உச்சாவசை: — உதக்ச அவாக்ச வடக்கும் தெற்குமாய். மேலும் கீழுமாய்.
வில்லிப்புத்தூரிலிருந்து மனத்தால் வடக்கே கோயிலுக்கு ஓடுகிறார்.
மனது திரும்பவும் ஊருக்கு உன்னிடம் ஓடிவருகிறது. “யாந்தீமிவ மநோரதை:” என்று வடக்கே ஓடுகிறார்.

விரஹஸங்கமஜை: —
விரஹத்தில் தவிப்புகள். ஸம்ச்லேஷ மனோரதத்தோடு நிற்காமல் ஸம்ச்லேஷத்தையே அடைந்து
அதனால் சித்தித்த ஹர்ஷத்தைப் பாடுவது.

உதந்தை:–
வ்ருத்தாந்தங்களால். ஸுந்தரகாண்டத்திலுள்ள விரஹ வ்ருத்தாந்தத்திற்கு மேல் இவர் வ்ருத்தாந்தம்.
உதந்தை: — அந்தமில்லாத. உத்கதோ அந்தோ யேப்ய: — “உத்” என்பது ஸர்வ பாப்மோதிதரான
அப்ராக்ருத திவ்ய மங்கள வீக்நஹமுடைய ஸூர்யமண்டலாந்தர்வர்த்தியான பெருமாளுக்குத் திருநாமம்.
அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹமென்று “உத்” என்னும் சப்தத்தாலும்,
அதில் ‘அந்தத்தை நிச்சயத்தை’ உடையவர் என்று ‘அந்த’ சப்தத்தாலும் காட்டி,
ப்ராக்ருத திருமேனியல்லாததால் அணைவதில் யாதொரு தோஷமுமில்லை என்று பரிஹாரத்தை ஸூசித்தார்.

ஸ்ருங்காரயந்தி ஹ்ருதயம் —
தங்கள் ஹ்ருதயத்திலேயே ஸ்ருங்கார பாவமுள்ளது போல் செய்கிறார்கள்.
“பும்ஸ: ஸ்த்ரியாம் ஸ்த்ரியா: பும்ஸி ஸம்போகம் ப்ரதி யா ஸ்ப்ருஹா|
ஸ ச்ருங்கார இதி க்யாத:க்ரீதாரத்யாதிகாரக:” என்பது ச்ருங்காரத்திற்கு லக்ஷணம்.
ஸ்ருங்காரம் போன்ற பாவமுடைய பெரிய ஆழ்வாருக்கு அத்திருநாமம் ஏற்பட்டதற்குக் காரணமும் இங்கே ஸூசிதம்.
மற்ற ஆழ்வார்கள் பெண்ணைக் கொடுத்தவர்களல்ல. பெருமாளுக்குக் குரு முறைமையான தான்,
பெருமாளுக்கு ஸ்வசுரராயிருந்தும், தன் அருமைப் பெண்ணுக்குப் பிதாவாயிருந்தும்
அவரும் நாயகீபாவத்தில் ஆழ்ந்தாரே என்று ஆழ்வதில் அவருக்கு மஹத்தரத்வம்.
பெருமாளுக்கு ஸேவிக்கத்தக்க குருவாயிருந்த ஆழ்வார் என்பதாலும் அத்திருநாமம்.
இந்த ஸ்லோகத்தில் முதல் உபபத்தியையும், 10வது ச்லோகத்தில் இரண்டாமுபபத்தியையும் ஸாதிக்கிறார்.

‘ராமஜாமாதரம் ப்ராப்ய ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம்’ என்று ஸீதைப்பிராட்டியாரேசல்.
‘ரங்கஜாமாதரம் ப்ராப்ய’ அரங்கனென்னும் ஜாமாதாவை அடைந்த ஸ்வசுரரே, புருஷவிக்ரஹமான
தன்னைப் பெண்ணாக நினைத்தாரே, அதனையே வலுவாக ஸமர்ப்பிக்க மனோரதம்.
‘ஆத்மாதி, ஆத்மக்ரீட, ஆத்மமிதுன’ இதுவிஷயத்தை தேவநாயக பஞ்சாசத் வ்யாக்யானத்தில் விஸ்தரித்துள்ளது.
‘ப்ரவ்ரஜ்யாதியுதா பரத்ர புருஷேபாதிர்வதீம் பிப்ருதீ பக்தி:ஸா’ என்று ஸங்கல்ப ஸூர்யோதயத்தில்
பக்தியை ஸந்யாஸம் முதலிய துறவி குணங்களோடு கூடியதாய பரபுருஷனிடத்தில்
பதிவ்ரதா நிஷ்டையை உடையதாயும் வர்ணித்தார். அதிலுள்ள வேடிக்கைகளும் கவனிக்கத்தக்கன.

———

மாதஸ் ஸமுத்திதவதீமதி விஷ்ணுசித்தம்
விஸ்வோபஜீவ்ய மம்ருதம் வசஸா துஹாநாம் |
தாபச்சிதம் ஹிமருசேரிவ மூர்த்திமந்யாம்
ஸந்த: பயோதிதுஹிதுஸ் ஸஹஜாம் விதுஸ்த்வாம் || (9)

மாத: — தாயே!;
அதிவிஷ்ணுசித்தம் — (1) விஷ்ணுசித்தரிடம், (2) விஷ்ணுவின் மனதில்,
(3) விஷ்ணுவை நடுவில் கொண்ட (கடலில்);
ஸமுத்திதவதீம் — அழகாய் அவதரித்தவளும்;
விஸ்வோபஜீவ்யம் –ஸகல ஜீவர்களும் பருகி உஜ்ஜீவிப்பதற்கு யோக்யமான;
அம்ருதம் — அமுதினை;
வசஸா — வாக்கினாலே, (பாசுரங்களாலே);
துஹாநாம் — சுரக்கிறவளாயும்;
தாபச்சிதம் — தாபத்திரயங்களையும் போக்கிக்கொண்டு,
ஹிமருசே — குளிர்ந்த பனிக்கிரணமுடைய சந்த்ரனுடைய,
அந்யாம் மூர்த்திமிவ — மற்றோர் (விலக்ஷணமான) மூர்த்தி போன்றவளுமான,;
த்வாம் — உன்னை;
ஸந்த: — பெரியோர் (ப்ரஹ்மவித்துக்கள்);
பயோதிதுஹிது — பாற்கடலின் பெண்ணாகிய பெரியபிராட்டியாரின்,
ஸஹஜாம் — உடன்பிறந்தவளாக;
விது — அறிகிறார்கள்.

அம்மா! விஷ்ணு சித்தரிடம் தோன்றியவளும், அநுபவித்து உய்யத் தக்க அமுதை வாக்கினால் சுரக்கிறவளாயும்,
ஸாம்ஸாரிக ஸகல தாபங்களையும் நீக்கத் தக்க குளிர்ச்சியை யுடைய ஓர் விலக்ஷணமான சந்திர மூர்த்தி யென்று
சொல்ல வேண்டியவளுமான உன்னைப் பாற்கடலிலவதரித்த பெரிய பிராட்டியாருக்கு உடன் பிறந்தாளென்று
ப்ரஹ்ம வித்துக்களான ஸத்துக்கள் அறிகிறார்கள்.
(அல்லது பெரியபிராட்டியார் கூடப்பிறந்த உன்னை ஓர் விலக்ஷண சந்திரமூர்த்தியென்று அறிகிறார்கள்)

வாக்கைக் கொடுத்த தாயே ! நீயே பெரிய பிராட்டி. அவளுக்கும், உனக்கும் வேற்றுமை இல்லை.
விஷ்ணுவின் ஹ்ருதாயத்தில் சந்த்ரன் தோன்றினான்; நீயும் விஷ்ணுவைச் சித்தத்தில் கொண்டவளாய்த் தோன்றினாய்;
சந்திரனைப்போல் சந்தோஷப் படுத்துகிறாய்; நீ சந்திர சஹோதரி ஆகிறாய்; உலகம் வாழ அமுதப் பாசுரங்களை அளித்தாய்;
உனக்கு அம்ருத சம்பந்தம் உள்ளது; பாற்கடலில் உதித்த ,பிராட்டிக்கு உள்ள தன்மைகள் எல்லாம் உன்னிடம் உள்ளன;
அதனால், பிராட்டியின் உடன்பிறந்தவள் என்றே கூறுகின்றனர்; தகப்பனாரோ விஷ்ணுசித்தர் —விஷ்ணுவிடம் சித்தத்தை உடையவர். பெரியாழ்வார் .
நீங்கள் இருவரும் உலகங்கள் உய்யுமாறு அமுதத்தை, கிரணங்களாலும், வாக்குகளாலும் வாரி வழங்குகிறீர்கள்

அவதாரிகை

(1) “உன்னுடைய தகப்பன்மார்” என்று அநேக பிதாக்கள் சேர்ந்து என்னைப் பெற்றவரென்றீர் முன் ஸ்லோகத்தில்.
‘ஸ்ரீவிஷ்ணுசித்தகுலக் கற்பகக்கொடி’ என்று முதல் ஸ்லோகத்தில் என்னைப் பேசினீர்.
நிகண்டுகாரரும் என்னை விஷ்ணுசித்தர் பெண் (விஷ்ணுசித்தாத்மஜா) என்பர்.
“த்வதீயா: குரவ:” என்று பன்மை பேசுகிறீரே? ‘பட்டர்பிரான் கோதை’ அல்லவோ நான்!
மற்ற ஆழ்வார்களும் பட்டர்களோ? ‘அஞ்சுகுடிக்கு ஒரு ஸந்ததி’ என்ற முறையாக என்னைப் பேசுகிறீரே,
இது யுக்தமோ? இதற்கு பதில் கூறுகிறார்.

பதில்கூற ஆரம்பிக்கையிலேயே ‘மாத:’ “தாயே’ என்றழைக்கிறார். உண்மையில் நீ ஒருவரும் பெற்ற பெண்ணல்லள்.
நீ எல்லோருக்கும் தாய் அம்மா! அபிமானத்தால் தங்கள் குடிப்பெண், தங்கள் குல ஸந்ததி என்று நினைப்பும் பேச்சும்.
உன் அபிமானத்தாலும் அவர்கள் பிதாக்கள். பரஸ்பர அபிமானமே இப்பேச்சிற்குக் காரணம்.

அவ்வபிமானத்திலும் விஷ்ணு சித்தருக்கு ஸந்நிகர்ஷம் அதிகம். ‘பட்டர்பிரான் கோதை’ என்று சொல்லுவதும்,
விஷ்ணு சித்தாத்மஜை என்று சொல்லுவதும் அத்யந்தம் உசிதமே.
‘விஷ்ணுசித்தரிடம் தோன்றியவளே’ என்றே இங்கே பேசுகிறேன். ஆனால் அப்படிப் பேசுவதிலும் அவரோடு
இன்னமிரண்டு சேர்ந்து விடுகிறது.
‘பெருமாள் சித்தம்’ என்பதும், பெருமாள் தன் நடுவில் வசிக்கப்பெற்ற ஸமுத்திரம்’ என்பதும்
‘விஷ்ணுசித்த’ என்பதில் சிலேடையாகச் சேர்ந்து விடுகிறது.
அப்படிச் சிலேஷைப் பொருள்களுக்கும் ஔசித்யம் ரொம்பவும் ஏற்பட்டுவிடுகிறது.
விஷ்ணு சித்தரான பட்டர்பிரானொருவரை மட்டுமே நான் பேசப் பார்த்தாலும், பாஷை இன்னமிரண்டைச் சேர்க்கிறது.
அப்படிச் சேர்ப்பதும் உன்னுடைய ஏற்றத்திற்கே யாகிறது.

(2) திருமணப் பெண்ணான கோதையை வர்ணிக்குமிடத்தில் அவளை மதிமுக மடந்தை என்று பேசவேண்டாமோ?
அவளுடைய தேன்போன்ற பாட்டுக்களைப் புகழ வேண்டாமோ? ஓர் பிராட்டியைப் பெற, கடலைக் கடைவர் பெருமாளென்பரே,
அப்படிப் பேசவேண்டாமோ? பெரியபிராட்டியாரை மனைவியாயுடையவர் மணம் செய்யவேண்டுமானால்,
அவள் கூடப்பிறந்து அவளுக்கு அத்யந்த ப்ரியஸஹோதரியென்று பேசவேண்டாமோ?
இதையெல்லாம் இதோ பேசுகிறேனம்மா! வாக் கர்மிகமென்பர். ஒன்றொன்றாய்த்தானே பேசவேண்டும்!

(3) “ஸ்த்ரீ ரத்னமான ஊர்வசியைப் படைத்தவர் ப்ரஹ்மாவன்று; காந்தியைப் பரப்பும் சந்திரன் இவளைப் படைத்தானோ?
அல்லது, ஸ்ருங்கார நிதியான மன்மதன் படைத்தானோ? அல்லது, புஷ்பாகரமான வசந்த மாதம் படைத்ததோ?’ என்று விக்ரமர் பேசினார்.
“ப்ரஹ்மா எல்லா ஸ்ரேஷ்ட ரூபங்களையும் சேர்த்து ஒருமிக்கப் பார்க்கவேண்டுமென்று பொருள்களில்
பொறுக்கிச் சேர்த்து மனதினாலேயே ஸ்ருஷ்டித்தாரோ? கைபட்டால் கெட்டுப்போகுமென்று மனதாலேயே
அழகைக் கூட்டிக்கூட்டி ஸ்ருஷ்டித்தாரோ?” என்று துஷ்யந்தன் சகுந்தலையை வர்ணித்தான்.
“ஒரே வடிவில் விஸ்வத்திலுள்ள முழு அழகுக் கூட்டத்தையும் சேர்த்துப் பார்க்கவேண்டுமென்ற ஆசையினால்
பார்வதியை ப்ரயத்தனப்பட்டு ஸ்ருஷ்டித்தார்” என்று காளிதாஸர் குமார ஸம்பவத்தில் வர்ணித்தார்.
இந்த அபூர்வமான கல்யாணப் பெண்ணைப் பற்றி அந்த வழிகளில் கவி ஸிம்ஹமாயிருப்பவர் பாடவேண்டாமோ?
அதற்கு மேலே பாடுகிறார். —

நான்முகன் மனதினால் நிர்மிதமானாள் பார்வதியென்றால், நான்முகனைப் படைத்த நாராயணன் மனம்
எப்படி எப்படி ஆசைப்பட்டதோ, அப்படியே அவன் திருவுள்ளத்திலிருந்தே தோன்றியவள் கோதை.
படைக்கப்பட்டவளல்ல, தானாக ஆவிர்பவித்தவள்.
‘பெருமாள் உகந்ததெவ்வுருவம் அவ்வுருவம் தானானவள்.’ பெருமாள் திருவுள்ளப்படி அங்கே உதித்தவளென்றதால்,
சந்த்ரன் அவ்விடமிருந்து உதித்ததுபோல் உதித்தவள். சந்திரனெப்படி இவளை ஸ்ருஷ்டிக்கும் ப்ரஜாபதியாகக்கூடும்?
கூடப்பிறப்பவன் ஸ்ருஷ்டித்தவனாவானோ? சந்திரன் பிறந்தவன். கோதை பிறவாதவள்.
நாயகன் மனதிற்கினிதாம்படி ஓர் விலக்ஷணச் சந்திரமூர்த்தியாகத் தோன்றியவள்.
அவளைப்போலவே அவளவதரித்த திவ்யதேசத்தில் அவள் அர்ச்சாமூர்த்தியும்.
பெருமாள் மனதிலிருந்தே கிளம்புவதால் அவர் பிள்ளைகளான ப்ரஹ்மாவிற்கும் ப்ரத்யும்னனுக்கும் ஸ்ருஷ்டிக்க அதிகாரம் எப்படிக்கூடும்?
அழகுக்கடலும், ரஸ்ஸ்வரூபருமான பெருமாள் ஆசைப்பட்டபடியெல்லாம் உருவம் அடைந்து தோன்றினாளென்றால்,
அதினிலும் அழகில் உயர்த்தியுண்டோ? பதனாயிரம் பூர்ண சந்திரர்கள் சேர்ந்த காந்தியையுடைய
பெருமாளிலும் அழகனோ சந்திரன்? ஸாக்ஷாத் மந்மத மன்மதனிலும் உயர்ந்தவனோ மன்மதன்?
‘மாஸானாம் குஸுமாகர’ என்றபடி வசந்தமாசம் பெருமாளுடைய ஓர் விபூத்யேகதேசந்தானே?

மாத: — தாயே! யாருக்குத் தாய்? விஶ்த்திற்குத் தாய். விஸ்வோபஜீவ்ய மாத்ருத்வம்.
முன் சொன்ன ஆழ்வார்களுக்கும் உண்மையில் நீ தாய். பெரியபிராட்டியாருக்கு மட்டும் நீ தங்கை.
மற்ற உலகுக்கெல்லாம் நீ தாய். ‘தாயே’ என்று முதலில் பொதுவில் கூப்பிட்டு,
முடிவில் ‘லக்ஷ்மிக்குத் தங்கை’ என்பதால் அங்கே மட்டும் ‘தாய்’ என்பதற்கு ஸங்கோசம்.

ஸமுத்தி தவதீம் —
“அம்ருதம் வெளிக்கிளம்பி மிதக்கும் ஸமயத்தில் கடைந்த பாற்கடலில் பெரியபிராட்டியார் உத்திதையானாள்” என்று
ஸ்ரீஸ்துதியில் வர்ணித்ததுபோல. நாயகன் மனதிலிருந்து அவரிச்சையை அநுஸரித்த உன் ஸ்வேச்சையினால் கிளம்பியவள்.
அவர் மனதிலிருந்து சந்திரபிம்பம் போல உதுத்தவள். ‘அழகாக மேலே கிளம்பினாள்’ என்பது இதற்குப் பொருள்.
குழந்தை பிறப்பதானால், பூமியில் கீழே விழுமா? பூமிக்கு மேலே கிளம்புமா?
பூமிப் பிராட்டியான நீ கர்ப்பத்திலிருந்து பூபதனமாய் விழுந்த குழந்தையல்லவே?
உலகத்தையெல்லாம் உன் கர்ப்பத்திற்கொண்ட விஸ்வம்பரையல்லவோ நீ!

அதிவிஷ்ணுசித்தம் —
பட்டர்பிரான் ஸ்ரீவிஷ்ணுசித்தரிடம் நீயாகத் தோன்றினாய். பெருமாள் திருவுள்ளத்தில் அவர் உகந்த மூர்த்தியாய்த் தோன்றினாய்.
ஜகத்துக்கு ஆஹ்லாதத்தை உண்டு பண்ணும் சந்திரன் பிறந்தவிடத்திலிருந்து நீயும் உதித்தாய்.
இதனால் சந்திரஸஹஜை என்று சொல்லவேண்டும். சித்தமென்பது நடுவைச் சொல்லுமென்பர்.
விஷ்ணுவை நடுவில் வஸிக்கப் பெற்ற பாற்கடலில் பெரியபிராட்டியாரோடும், சந்திரனோடும், அம்ருதத்தோடும்
கூடப்பிறந்தவளென்பர் பெரியோர். அதினிலும் உயர்த்தி பட்டர்பிரானாகிய விஷ்ணுசித்தரிடம் தோன்றியது.
‘விஷ்ணுசித்த’ என்பதற்கு அவர்தான் முக்கியமான (ரூடமான) முதற்பொருள்.

விஸ்வோபஜீவ்யம் அம்ருதம் —
தாரதம்மியமில்லாமல், அதிகாரி பேதமில்லாமல், எல்லோருக்கும் எளிதான அம்ருதத்தை.
தாய் கறக்கும் எந்தப் பாலில் குழந்தைக்குப் பங்கில்லை? பாற்கடலைக் கடைந்தெடுத்த அம்ருதம் தேவஜாதிக்கு மட்டுமேயுண்டு.
மானிடருக்குக் கிடையாது. இவ்வம்ருதம் எல்லோர்க்கும் கிடைப்பது. எல்லோரையும் போஷிப்பது, உஜ்ஜீவனம் செய்வது.
யஜ்ஞ்சிஷ்டமான அம்ருதமும் எல்லோருக்கும் கிடைக்காது. ஓர் விலக்ஷணமான சந்திர பிம்பமென்று அடுத்த பாதத்தில் ஸாதிக்கிறார்.
இங்கே ஓர் விலக்ஷணமான அம்ருதத்தைத் தன் பாசுரங்களால் வார்க்கிறாளென்கிறார்.
விக்ரமோர்வசீயத்தில் விக்ரமனுடைய அழகில் ஈடுபட்ட ஊர்வசீ ராஜாவைச் சந்திரனென்றும்,
அவருடைய மொழி (வசனம்) அம்ருதமென்றும் மனதிற்குள் புகழ்கிறாள்.
“அழகாயிருக்கிறதே இவருடைய வசனம்” அல்லது “சந்திரனிடமிருந்து அம்ருதம் பிறக்கிறது என்பது என்ன ஆச்சர்யம்” என்று
ஆக்ஷேபாலங்கார ரீதியாகத் தன் மனதிற்குள் பேசுகிறாள். அதை இங்கே ஸ்வாமி நினைத்து முதலில்
அம்ருத வசனங்களைப் பொழிவதைப் பேசி, அடுத்த பாதத்தில் சந்த்ரமூர்த்தி என்று வர்ணிக்கிறார்.

வசஸா துஹாநாம் —
வாக்கினால் அம்ருதத்தைச் சுரக்கிறாள். பாற்கடலை 33 கோடி தேவர்களும், கணக்கில்லாத அஸுரர்களும்
சேர்ந்து மந்தரமலையை மத்தாகக்கொண்டு கடைந்து அம்ருதத்தை எடுத்தார்கள்.
நீ அனாயாஸமாக உயர்ந்து தூயதான அம்ருதத்தைப் பால் கறப்பதுபோல் லகுவாகக் கறக்கிறாய்.
சந்த்ரன் தன் கரங்களினால் அம்ருதத்தைப் பொழிவான். நீ வாக்கினால் (மொழியினால்) பொழிகிறாய்.
சுகருடைய முகத்திலிருந்து (வாயிலிருந்து) ‘அம்ருதத்ரவஸம்யுத’மாய் வேதகல்ப வ்ருக்ஷத்திலிருந்து
பாகவதமென்னும் ரஸப்பழம் (பழரஸம்) விழுகிறதென்பர்.
உன் முகத்திலிருந்து அம்ருதத்ரவமாய்ப் பெருகுகிறது உன் ப்ரபந்த பாகவதம். எந்தப் பசுக்களைக் கறக்கிறாள்?
உபநிஷத்துக்களான பசுக்களை, கண்ணன் கறந்து கீதாம்ருதத்தைத் துக்தமாக்கினதுபோல (பால் ஆக்கினதுபோல).
ஆத்மநே பதத்தால் நாம் பருக, நமக்குக் கறந்து கொடுப்பதைத் தன் பேறாக நினைப்பதை வர்ணிக்கிறார்.

ஹிமருசே: —
குளிர்ந்த பனிக்கிரணமுடையவன் சந்த்ரனென்பர். இனிய காந்திக்காக சந்த்ரமூர்த்தியை ஓர் உவமையாக எடுத்தது.
பாற்கடலில் பெரியபிராட்டியாரோடும், அம்ருதத்தோடும் பிறந்தவளென்று சந்த்ரனை எடுத்தது.
சந்த்ரன் தாபங்களையெல்லாம் தீர்க்கக் கூடியவன் அல்லன். “ஹிமத்தை (பனியை) கர்ப்பத்திற்கொண்ட
கிரணங்களால் அக்கினியைப் பொழிகிறான்.” என்றான் துஷ்யந்தன். ஹிமருசி என்று பெயர் மட்டுந்தான்.
அக்னி ருசியென்றால் தகும். “அடே பாபி ! துச்சரித சந்த்ரசாண்டாள” என்று காதம்பரியில் சந்த்ரனைப் பற்றி வாழ்த்து!

தாபச்சிதம் — ஸம்ஸார தாபத்திரயங்களையும் போக்குவதான. சந்த்ரமூர்த்தியைக் காட்டிலும்,
வைலக்ஷண்யம் (வ்யதிரேகம்) சொல்லப்படுகிறது. அம்ருதத்தைக் காட்டிலும் வைலக்ஷண்யம்
‘விஸ்வோபஜீவ்யம்’ என்று காட்டப்பட்டதுபோல. ‘அந்யாம்’ என்று சொல்லப்படும் வேற்றுமையையும்,
ஏற்றத்தையும் இந்த அடைமொழி விளக்குகிறது. நீ சுரக்கும் வாகம்ருதத்தைப் பருகினால்,
அம்ருதத்வமென்னும் மோக்ஷம் ஸித்திக்கும். தாபத்திரயங்களும் தொலையும்.
ஸ்வர்க்கிகளின் அம்ருதம் ம்ருதமென்னும் ஸம்ஸாரத்தைக் கறக்கும்.

அந்யாம் மூர்த்திமிவ — வேறு விலக்ஷணமான ஒரு மூர்த்தி

த்வாம் — உன்னை; ‘தாயே’ என்று தொடங்கி ‘உன்னை’ என்று முடிக்கிறார்.

பயோதிதுஹிது — பாற்கடலில் தோன்றிய பெரிய பிராட்டியாருடைய;
“யாருக்காக, யாரை அடைய, ‘அம்போதி’ என்னும் ஸமுதிதரம் கடையப்பட்டதோ, அணையால் கட்டப்பட்டதோ”
என்று ஆளவந்தார் பிராட்டி பெருமையை வர்ணித்தார்.
‘பயோதி’ என்றால் பாற்கடலுக்கும் சேரும், உப்பு நீருக்கும் சேரும்.
‘பய’ என்பதற்கு ஜலமென்றும் பொருள், பாலென்றும் பொருள். இங்கே ‘பயோதி’ என்று பிரயோகித்ததால்,
இரண்டுக்கும் பொதுவான சப்தமாகுமானாலும், முதலில் திருவணை கட்டத் தடங்கல் செய்த
ஸமுத்ரத்தைப் ‘பாற்கடல்’ என்னுமோர் பொருள்படக் கூடிய சப்தத்தால் பேச ஆளவந்தாருக்குத் திருவுள்ளமில்லை.
கல் நெஞ்சனைப் பாற்கடலென்பரோ? அதனால் ஆங்கே ‘பாற்கடலையும்’ ‘அம்போதி’ என்று ரூடிப்பெயரால் பேசுகிறார்.
இங்கே பாற்கடலை மட்டும் பேசுவதால் ‘பயோதி’ என்று பிரயோகிக்கிறார்.
‘பாற்கடலில் தோன்றிய பெண்’ என்பதால், அங்கே தோன்றியதால் மட்டும் எப்படி ‘புத்திரி’ என்ற அபிமானமோ,
அப்படித்தான் நீ புத்திரி என்ற அபிமானமும் என்பது கருத்து. ஸமஸ்த ஜநநியான லக்ஷ்மியும் துஹிதையென்பது
போலத்தான் உன்னையும் மகள் என்பது என்று காட்டப் பெரியபிராட்டியாரைத் துஹிதா என்று குறிக்கிறார்.
துஹாநா — துஹிதையின் ஸஹஜை.

ஸஹஜாம் — கூடப் பிறந்தவளென்று. ‘அம்ருத ஸஹஜை’ என்று ஸ்ரீஸ்துதியில் பெரியபிராட்டியாரை வர்ணித்தது
தேவஜாதியின் புத்தியைக் கொண்டு. தேவஜாதிக்கு அம்ருதமே ப்ரதானமாய்த் தோன்றியது.
‘அம்ருதத்துடன் பிறந்தாள் லக்ஷ்மி’ என்றார்கள். முதலில் அம்ருதத்தைப் பார்த்து மகிழ்ந்தார்கள்.
பிறகு பிராட்டி அவதரித்து விஷ்ணு மார்பிலேறியதும், அவள் காலில் விழுந்தார்கள்.’ என்பது ஸ்ரீஸ்துதியின் வர்ணனம்.
காலில் விழுந்ததற்குக் காரணம் முன் சாபம் வந்ததனால் ஏற்பட்ட பயமென்றும் அங்கே காட்டினார்.
“ஆலோக்ய த்வாமம்ருதஸஹஜை விஷ்ணுவக்ஷ:ஸ்தலஸ்தாம் ஶாபாக்ராந்தாஶ்ஶரணமகமந்’ .
பெரியபிராட்டியாருடைய உடன் பிறந்தாள் என்று இங்கே வர்ணனம்.
அம்ருதத்தை இவள் கறக்கிறாளென்பதால் அம்ருதத்திற்குப் பின் பிறந்தவளன்று என்று ஸூசனம்.

ஸந்த: —
ப்ரஹ்மத்தை அறிந்த ஸத்துக்கள். ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் சேர்ந்த பெரிய பிராட்டியாருடைய
உடன் பிறந்தாளும் அம்சமுமான உன்னை ப்ரஹ்மவித்துக்கள்தானே அறியக்கூடும். விது: — அறிவர்.

ஸ்ரீவிஷ்ணுசித்தரிடம் உதித்ததாலும், அம்ருதத்தைப் பொழிவதாலும், பெரிய பிராட்டியாரோடு உடன் பிறந்ததனாலும்,
தாபத்தைப் போக்குவதாலும், ஓர் விலக்ஷண சந்த்ர பிம்பம், ஓர் விலக்ஷண கௌமுதி, —
ஜ்யோத்ஸ்னை என்று இங்கே ஸாதிப்பதில் நோக்கு. மூன்றாம் பாதத்திலுள்ளதை விதேயமாக வைத்துக் கொள்ளலாம்.
ஜ்யோத்ஸ்நேவ ஹிமதீதிதே: – சந்த்ரனுடைய சந்த்ரிகை போன்றவள்.
ஆனால் பெருமாளென்னும் சந்த்ரனுடைய சந்த்ரிகை இவள்.

———-

தாதஸ்து தே மதுபித: ஸ்துதி லேசவச்யாத்
கர்ணாம்ருதை: ஸ்துதிஶதைரநவாப்த பூர்வம் |
த்வந் மௌளிகந்த ஸுபகாமுபஹ்ருதய மாலாம்
லேபே மஹத்தர பதாநுகுணம் ப்ரஸாதம் || (10)

தே — உன்னுடைய;
தாதஸ்து — தகப்பனாரோ என்றால்;
ஸ்துதி லேஶ்வஶ்யாத் — கொஞ்சம் தோத்திரத்தாலேயே கூட வசப்படக் கூடிய;
மதுபித: — பெருமாளிடமிருந்து;
கர்ணாம்ருதை: — செவிக்கு அமுதமான;
ஸ்துதிஶதை: — பல நூறு துதிப் பாசுரங்களாலும்;
மஹத்தரபதாகுணம் — மஹத்தரர் (மிகப் பெரியவர்) என்னும் திருநாமம் பெறுவதற்கேற்ற; (பதவிக்கேற்ற);
ப்ரஸாதம் — அநுக்ரஹத்தை;
த்வந் மௌளி கந்த ஸுபகாம் — உன்னுடைய கூந்தல் வாசனை ஏறியதால் ஸௌபாக்யம் பெற்ற;
மாலாம் — மாலையை;
உபஹ்ருத்ய — உபஹாரமாக ஸமர்ப்பித்து;
லேபே — பெற்றார்.

கொஞ்சம் ஸ்துதி செய்தாலேயே வசப்பட்டு விடக்கூடிய மதுஸூதனன் நூற்றுக்கணக்கான கர்ணாம்ருதமான
ஸ்துதிப் பாசுரங்களாலும் முன்பு மகிழ்ந்து அளிக்காத மஹத்தர பத லாபத்திற்கு அநுகுணமான அநுக்ரஹத்தை
உன்னுடைய தக‌ப்பனார்தானே (அம்மா) உன் கூந்தல் வாசனை ஏறியதால் ஸுபகமான மாலையை ஸமர்ப்பித்துப் பெற்றார்!

ஹே….கோதா….உன் பெருமை அளவிடற்கு அரியது. உன் நாதனாகிய பகவான் ,ஸ்துதி ப்ரியன்.
மது என்கிற அசுரனை மாய்த்தவன். உன் தகப்பனார் , பகவானைப் பலப் பலப் பாசுரங்களால் பாடினார்.
அப்போதெல்லாம் அவருக்குப் பலன் கிட்டவில்லை. உன் கூந்தலில் சூடிய மாலைகளைக் களைந்து ,
அவனுக்கு அணிவித்த பிறகு தான் அவருக்குப் பெரியாழ்வார் என்கிற விருதைக் கொடுத்தான்.

அவதாரிகை

(1) ஆழ்வார்களெல்லோரும் உன்னைப் புத்திரி என்று அபிமானிக்கிறார்கள். ஆனால் நீ விஷ்ணு சித்தரிடமிருந்து
தான் தோன்றியவளென்றீர். எல்லா ஆழ்வார்களும் அபிமானத் தாதைகளாய் இருந்தாலும் விஷ்ணுசித்தரை விசேஷித்துப்
பிதா என்று கொள்ளக் காரணம் என்ன? அம்மா! எல்லா ஆழ்வார்களும் பொதுவில் ஆழ்வார்களென்ற
மஹத்தான பதத்தைப் பெற்றவர்கள். ஆழ்வார் பதம் மஹத்தானது என்பதில் ஐயமில்லை.
பெருமாளுடைய தசாவதாரங்கள் போல், அவர்கள் அவருடைய அபிநவ தசாவதாரங்கள்.
தமிழ் வேத மந்த்ர த்ரஷ்டாக்களான தச ரிஷிகள். மஹத் பதம் மஹர்ஷி பதம்தான்.
ஆழ்வார் பதமே மஹாபதமாயிருக்கையில், ‘பெரியாழ்வார்’ என்று உன் தகப்பனாருக்குத் தானே ‘மஹத்தர’ பதம் கிடைத்தது!
மஹத்தான ஆழ்வார் பதத்திற்கும் மேற்பட்ட ‘பெரிய’ பதம் கிடைத்தது. அவர் வேதப் பாசுரங்களால் கிடைத்தது ஆழ்வார் பதம்.
உன் பிதாவால் நீ சூடிக்கொடுத்த மாலையை ஸமர்ப்பித்ததால் ஆழ்வார்களிலும் ‘பெரிய ஆழ்வார்’ என்னும்
பஹுமான பதம் கிடைத்தது. மற்ற ஆழ்வார்கள் குடிக்கும் நீ ஸந்ததி என்று அபிமானத்தில் பேசினாலும்
அவர்களுக்கு அது கிடைக்கவில்லையே!

(2) பெரிய பிராட்டியாருக்கு உடன் பிறந்தாளென்று முன் ச்லோகத்தின் முடிவில் ஸாதித்தார்.
பெரியபிராட்டியாரை ‘கந்தத்வாராம்’ என்று ஸர்வகந்தரான பெருமாளுடைய ஸௌகந்தயத்திலீடுபட்ட வேதம் புகழ்ந்தது.
அவளுக்கு உடன் பிறந்தாளும், அவளோடுகூட பெருமாளுக்குப் பத்தினியுமாவதற்கு ஆநுகுண்யத்தைக்
கோதையின் ஸர்வோத்தரமான ஸௌகந்த்யத்தைக் காட்டி ஸமர்த்திக்கிறார்.

தாதஸ்து தே —
உன் தகப்பனாரான பெரியாழ்வாரோ என்றால்; விசேஷித்து உன் பிதாவானதால்
மற்ற ஆழ்வார்களிலும் மேலாக ‘பெரிய’ என்னும் உயர்த்தியான உபபதத்தைப் பெற்றார்.
‘து’ என்பதால் இந்த வைலக்ஷண்யத்தைச் சொல்லுகிறது. ‘உன் தகப்பனார்’ ஆனது பற்றித் தான் இந்த ஏற்றம்.
ஆழ்வாரானதால் மட்டுமல்ல. உன் விஷயமான இந்த கோதாஸ்துதியைப் படிப்பவன்கூட அவருக்கு (பெருமாளுக்கு)
பஹுமான்யராகும் போது உன் மாலையை ஸமர்ப்பித்த உன் தகப்பனாரை இப்படி அவர் பஹுமானியாது இருப்பாரோ?

மதுபித:–
வேதங்களை அபஹரித்த மது என்னும் அஸுரனை ஸம்ஹரித்து வேதங்களை மீட்ட பெருமாளிடமிருந்து.
இதனால் வேதங்களின் அரும்பெருமையைப் பெருமாளே அறிந்தவர் என்பது ஸூசனம்.
வேதங்களை அப்படி அரும் பெரும் பாடுபட்டுப் பஹுமானிக்கும் பெருமாள் வேதங்களான ஆழ்வார்கள்
ப்ரபந்தங்களைப் பஹுமானித்து அவர்களுக்கு ‘ஆழ்வார்கள்’ என்று ‘மஹத்’ பதத்தை அளிப்பது உசிதமே.
வேதங்களை அஸுரர் அபஹரித்தாலும், தமிழ் வேதங்களிருந்தால் போதும்.
ஸம்ஸ்க்ருத வேதங்களை மீட்டுக்கொண்டு வந்தது போதுமோ? அதன் பொருளைத் தெளிய தமிழ் மறைகளும் வேணும்.

ஸுத்திலேஶவஶ்யாத் –
‘ஸ்தவப்ரிய:’ என்று திருநாமம். ஸ்வாராதரென்பர். ஓர் அஞ்ஜலிக்குக் கிங்கரரென்பர்.

கர்ணாம்ருதை: —
“ப்ரதி ச்லோகமும் அபத்தமாயிருந்தாலும், அநந்தனுடைய யசோமுத்ரை உடைய திருநாமங்கள்
கலந்திருப்பதால், ஸாதுக்கள் கேட்டும், பாடியும் மகிழ்வர்” என்று பகவத் ஸ்தோத்ரங்களின் பெருமையை
சுகர் மகிழ்ந்து பாடினார். “கிருஷ்ணகர்ணாம்ருதம்”, “ராமகர்ணாம்ருதம்” என்று பகவத் ஸ்தவங்களுக்குத் திருநாமமிடுவர்.

ஸ்துதிஶதை: —
யோகியான ஒரு ஆழ்வார் ‘பத்தே’ பாசுரங்கள் பாடினார். உன் தகப்பனார் கிட்டத்தட்ட ஐந்நூறுகள் பாடினார்.

அநவாப்தபூர்வம் —
கர்ணாம்ருதமான வேதங்களான பல நூறுகள் பாடியதற்கு மற்ற ஆழ்வார்களைப் போல,
‘ஆழ்வார்’ என்று திருநாமம் மட்டும் கிடைத்தது. ‘பெரிய” என்று ஏற்றப் பதம் கிடைக்கவில்லை.
மற்ற ஆழ்வார்களுக்கும் அது கிடைக்கவில்லை.

த்வந் மௌளிகந்த ஸுபகாம் —
தம்முடைய கர்ணாம்ருத வேதப் பாசுரங்களால் கிடைக்கவில்லை.
தம் மாலைகளால் கிடைக்கவில்லை. நீ அவதரிக்குமுன் எத்தனையோ பூமாலைகள் ஸமர்ப்பித்தவரே.
உன் பூமாலையால் கிடைத்தது. பாக்களால் கிடைக்கவில்லை. உன் ஒரு பூமாலையால் கிடைத்தது.
நீ சூடி வாசனையேற்றிக் கொடுத்த ஒரு பூமாலையை உபஹாரமாக ஸமர்ப்பிக்கும் பாக்யம் உன் பிதாவுக்குத்தானே கிடைத்தது!
உன் சிரஸான மூளையின் (புத்தி வ்ருத்திகளின்) வாசனை உன் பாமாலையிலேறியுளதுபோல், நீ சூடின பூமாலையிலும் ஏறியது.
“மௌளி” என்பது மூளையென்னும் புத்திஸ்தானமுமாகும்.
உன் கூந்தல் வாசனையால் மாலை ஸுபகமாயிற்று என்றால், உன் ஸௌபாக்யத்திற்குக் கேட்க வேணுமோ?

மாலாம் உபஹ்ருத்ய —
மாலையை உபஹாரமாக ஸமர்ப்பித்து (உடனே)

லேபே — உபஹ்ருத்ய லேபே — இரண்டு பதங்களையும் சேர்த்தது ரஸம். ஸமர்ப்பித்த உடனே பெற்றார்.
நடுவில் ஒரு க்ஷணமேனும் தாமதமில்லை. “நாகாரணா தாநந்தர்யம்” என்று ந்யாயம்.
உன் மாலையை ஸமர்ப்பித்ததுதான் ‘பெரிய’ என்ற ‘மஹத்தர’ பதம் கிடைத்ததற்குக் காரணம்.
அந்வய வ்யதிரேகங்களால் கார்ய காரண பலம் ஸித்திக்கும். நூற்றுக்கணக்கான பாமாலைகளாலும்
பூமாலைகளாலும் முன்பு அடையப்படாதது என்று வ்யதிரேகம் காட்டப்பட்டது. இங்கே அந்வயம் காட்டப்பட்டது.

மஹத்தரபதாநுகுணம் ப்ரஸாதம் —
ஆழ்வார்களிலும் உயர்த்தியாய் ‘பெரிய ஆழ்வார்’ என்னும் ஏற்ற பதவி கிடைக்கும்படியான அநுக்ரஹத்தைப் பெற்றார்.
ஏனைய ஆழ்வார்கள் சிலர் நாயகீ பாவத்தில் ஆழ்ந்து மூழ்கினார்கள். ஆனால் அவர்கள் தங்கள் பெண்ணுக்கே
ஸபத்நியாகவில்லை. உன் பிதா சில அவஸரங்களில் உனக்கே ஸபத்நீ பாவத்தை அடைந்தார்.
மூன்றாம் சதகத்தில் ‘ஐயபுழுதி’யில் “மாயன் மாமணிவண்ணன் மேலிவள் மாலுறுகின்றாளே” என்றும்,
“நல்லதோர் தாமரை”யில் “என் மகளை எங்கும் காணேன்”, “செங்கண்மால்தான் கொண்டுபோனான்” என்றும்,
இவ் வாழ்வாரைப் பெற்ற தாயலற்றியதைக் கவனிக்கவேண்டும்.
புருஷ‌ப் பிள்ளையாய்ப் பெற்று வளர்த்தது, ஏதோ பெண்ணாக மாறிவிட்டது. அது போகட்டும்.
பெண்ணாக மாறிவிட்ட என் புருஷ‌க் குழந்தையை இந்தப் பாடா படுத்தவேண்டும் என்று அலற்றல்.
உன் மணாளனுக்கே பத்தினியாகி அவருடைய அந்த ரீதியான அநுபவ ஆழ்ச்சி மற்றவர் ஆழ்ச்சியிலும் பெரிதாயிற்று.
மிக வியக்கத் தக்கதாயிற்று.

இன்னுமொரு ரஸமும் உண்டு. ‘பெருமாள்’, ‘பெரிய புருஷர்’, ‘மஹாபுருஷர்’. ஆண் என்பது ‘ஓர் புருஷன்’.
ஜீவாத்மாக்கள் ‘புருஷர்கள்’. பெருமாள் மஹத்தான ‘மஹா புருஷர்’.
உன் பிதா அவருக்கும் மாமனாராகி அம்மஹா புருஷனுக்குக் குருவானார்.
ஹிமவானை “த்ரயம்பக ஈச்வரரான குரு” என்று ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் வர்ணிக்கப்பட்டது.
‘பூர்வரான குருக்களுக்கும் குருதமர்’ என்று ஜனகர் வசிஷ்டரை வர்ணித்தார்.
மஹாபுருஷனுக்கு மஹனீயரான ச்வசுர குருவானதால் ‘மஹத்தரர்’ என்னும் பதம்.

‘மஹத்தரபதம்’ என்பது பரமபதத்தைச் சொல்லுவதாகவும் உரை கொள்ளுவர். ‘விஷ்ணுவின் பரமம் பதம்’ என்று ச்ருதி.
விஷ்ணுசித்தர் விஷ்ணுவின் பரமமான பதத்தைப் பெற்றார்.
இது எல்லா ஆழ்வார்களுக்கும் பொதுவானதால், வைலக்ஷண்யம் ஏற்படாமற் போகும். ரஸிகர் மனமே ப்ரமாணம்.
“பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடி வந்தென் மனக்கடலில் வாழவல்ல மாயமணாள நம்பீ”
என்பதைக் கவனிக்கவேண்டும்.
ஸ்வசுரராகிய பாற்கடலில் பள்ளி கொண்டிருந்தவர் இவர் மணாளனானதும்,
அந்த ஸ்வசுரராகிய வீட்டையும் படுக்கையையும் விட்டு இந்த ச்வசுரர் மனக்கடலில் பள்ளிகொண்டார்.
“மாயனை மன்னு வடமதுரை மைந்தனை” என்றபடி இவர் மணாளன் மாயன்.
“ஔதந்வதே மஹதி ஸத்மதி” என்ற பாற்கடலாகிய அந்த மஹாக்ருஹத்திலும் மஹத்தரமான க்ருஹமாயிற்று இவர் மனக்கடல்.
பெரிய பெருமாளான மஹாபுருஷருக்கும் பெரிய குருவானார், மஹத்தரானார். முத்ராராக்ஷஸாதி நாடகங்களில்
‘ஸ்வஜாதிமஹத்தர’ என்று கௌரவமாயழைப்பர்.
‘உம் ஜாதியில் (குலத்தில்) உயர்ந்தவரே’ என்று ‘மஹத்தர’ பதத்தாலழைப்பர்.
ஆழ்வார் ஜாதியில் (குலத்தில்) பெரியவரே, மஹத்தரரே என்று அழைப்பு. .10.

————

திக்தக்ஷிணாபி பரிபக்த்ரிம புண்யலப்யாத்
ஸர்வோத்தரா பவதி தேவி தவாவதாராத் |
யத்ரைவ ரங்கபதிநா பஹுமாநபூர்வம்
நித்ராளுநாபி நியதம் நிஹிதா: கடாக்ஷா:|| (11)

தேவி — கோதாதேவியே!
திக் தக்ஷிணாபி — தெற்குத் திக்குங்கூட;
பரிபக்த்ரிம் புண்ய லப்யாத் — பரிபக்குவமான புண்யத்தால் கிடைக்கத்தக்க;
தவ அவதாராத் — உன்னுடைய அவதாரத்தால்;
ஸர்வோத்தரா — எல்லா விதத்திலும் உத்தரமாய் (ச்ரேஷ்டமாய், வடக்காய்);
பவதி — ஆகிறது;
யத்ரைவ — எந்தத் திக்கிலேயே;
நித்ராளு நாபி — தூங்கிக் கொண்டிருந்தாலும்;
ரங்கபதிநா — ரங்கேச்வரரால்;
பஹுமாந பூர்வம் — பஹுமானத்தோடு கூட;
நியதம் — இடைவிடாமல்; (நியமமாக);
காடாக்ஷ: — கடாக்ஷங்கள்;
நிஹித: — வைக்கப்பட்டுளவோ?

அம்மா கோதாதேவியே! பரிபாகமுடைய புண்யத்தால் பெறக்கூடிய உன் அவதார ஸம்பந்தத்தால்,
தென் திசை கூட வடகோடி திசையாயிற்று. (ஸர்வோத்தரமாயிற்று, ஸர்வ ச்ரேஷ்டமாயிற்று).
ஏனெனில் அந்த திக்கில்தானே ரங்கபதியாகத் தூங்கிக் கொண்டிருக்கையிலும் கௌரவத்தோடு
கடாக்ஷங்கள் இடைவிடாமல் நியதமாக வைக்கப் பட்டிருக்கின்றன!

ஹே தேவி….நீ அவதரித்ததால், இந்தத் தக்ஷிண தேசமே ஸர்வோத்தரமாக ஆகிவிட்டது
ஸ்ரீ ரங்க பதியான ரங்கநாதன், உறங்குகிறவன் போல, தெற்குத் திக்கையே நோக்கி
ஸ்ரீ வில்லிபுத்தூரில் உன் அவதாரத்தை எதிர் நோக்கும் கருத்துடையான் ஆனான்

அவதாரிகை

(1) நம்மாழ்வாரிலும் என் பிதா மஹத்தரரான பெயரை அடைந்தார் என்றீரே! என் பிதா வாங்கி என் மாலையை
ஸமர்ப்பித்ததால் அப்படி அரும் பெரும் ஏற்றம் கிடைக்குமோ? அம்மா! இது என்ன ஆச்சர்யம்!
நீ அவதரித்த மஹிமையால் தக்ஷிண திக்கும் ஸர்வோத்தரமாயிற்றே! ஓர் ஆழ்வார் உன்னை அவதரிப்பித்து
வளர்த்த பிதாவானதால், மஹத்தரராவது அரிதோ? ‘ஸர்வோத்தரம்’ என்பதால் உத்தமமாயிற்று.
ஓர் திக்கு நீ பிறந்த திக்கு என்கிற ஏத்தோ ஒரு ஸம்பந்தத்தாலே ஸர்வோத்தமாகையில்,
ஆழ்வாரான உன் பிதா நீ அவதரித்ததால், மஹத்தரராவது கொஞ்சமே என்று சொல்ல வேண்டும்.

(2) பெருமாளுடைய அபிநவ தசாவதாரங்களான ஆழ்வார்களைப் பேசினார். இங்கே கோதைப் பிராட்டியான
தேவி ஆழ்வார்களைப் போல பிரபந்தமியற்றிய கவியாக அவதாரம் செய்ததைப் பேசுகிறார்.

திக் தக்ஷிணா அபி —
தென்திசை கூட; தென் திக்கின் அதிபதி ‘பித்ரு பதி’ என்பர். அவர் பேரே நடுங்கச் செய்யும்.
பித்ரு நாமத்தை உடையவராய் அதிஷ்டிதமான ஓர் திக்கின் ஓர் மூலையில் பிறப்பென்னும் ஸம்பந்தம் கூட
பயத்தைக் கொடுக்கக் கூடிய திக்குக் கூட.

பரிபக்த்ரிம புண்யலஹ்யாத் —
எத்தனை புண்யங்கள் பரிபாக தசையை அடைந்து இப்படிக் கொத்த
பயனைக் கொடுக்கவேணும்! ‘தர்மராஜர்’ பயங்கரரென்று உலகம் பயந்தாலும், அவர் தர்மமூர்த்தி யல்லவோ?
தர்மம், புண்யம். அந்த திக்பதியின் மஹாபுண்யங்களெல்லாம் அந்தத் திக்கைச் சேர்ந்தது. பதியின் புண்யம் பத்நிக்குடையது.

தேவி தவ் அவதாராத் —
தேவி! என்னுடைய திவ்யமான அவதாரத்தால், விபீஷணாழ்வார் அவதரித்ததும்,
அரசு செலுத்துவதுமான திக்கென்று முன்பு ஏற்றமுண்டு. நம்மாழ்வார் அவதரித்ததால், அந்தத் திக்கு முன்பே ஓர் ஏற்றம் பெற்றது.
அந்த அவதாரமும் மஹா புண்ய பரிபாகத்தால் ஸப்யம். ஆனால், அது தேவன் அவதாரம்.
பெருமாளோ, விஷ்வக்ஸேன தேவரோ நம்மாழ்வாராய் அவதரித்தார். இங்கே தேவியான உன்னுடைய அவதாரம்.
‘உன்னுடைய அவதாரக்ஷணத்திலிருந்து’ என்றும் பொருள். விபீஷணர் தேவரல்ல.

ஸர்வோத்தரா பவதி —
எல்லாவற்றிலும் சிரேஷ்டமாயாகிறது. தெற்குத் திக்கு வடகோடியாகி விடுகிறது என்பது ஆச்சரியம்!
‘உத்தர’ என்பது ச்ரேஷ்டத்தையும் சொல்லும், வடக்கையும் சொல்லும்.
‘ரொம்ப தூரம் கிழக்கே போனால், அது மேற்காகி விடும்’ என்று ஓர் ஆங்கிலப் பழமொழி.
‘கிழக்கும் மேற்கும் ஓரிடத்தில் சேரும்’ என்பர். ‘தெற்கும் வடக்கும் ஒருகாலும் சேராது, நித்திய விரோதிகள்’ என்பர்.
உன் அவதார மஹிமையால் இளப்பமானது லோகோத்தரமாகும். சேராத விருத்தங்களும் விரோதத்தை விட்டுச் சேர்ந்து விடும்.

யத்ரைவ — எந்தத் திக்கை நோக்கியே

ரங்கபதிநா —
“தென்னாடும் வடநாடும் தொழநின்ற திருவரங்கம்” என்பர்.
தென் நாட்டுக்கும் வடநாட்டுக்கும் மத்தியத்திலுள்ள ரங்கபதி. இரண்டு திக்குகளுக்கும் பொதுவாய்ப்
பக்ஷபாதமில்லாமல் மத்தியஸ்தமாயிருக்க வேண்டியவர். அப்படி மத்தியஸ்தராக இருக்கவேண்டியவரான “ரங்கபதியாலேகூட” .
திருவரங்கத் திருப்பதி மத்தியஸ்தமாய் இருப்பதுபோல அத்திருப்பதியின் பதியும் மத்தியஸ்தமாய் இருக்க வேண்டாவோ?

பஹுமான பூர்வம் —
பஹுமானத்தோடுகூட. அரங்கத்தில் தூக்கம் நடனமே யம்மா!
நீ பிறந்த திக்கென்று பஹுமதியாய் எண்ணிக் கொண்டேயிருக்கிறார். மனது லயமடைந்தால் அல்லவோ தூக்கம்!
தெற்குத் திக்கிலேயே உன் அவதார ஸம்பந்தத்தையிட்டும் இத்தனை பஹுமானமிருக்கும்போது,
அதை ‘உத்தம’மாக ‘ஸர்வோத்தர’மாகச் செய்யும்போது, உன் பிதாவை மஹத்தரராக்குவது அரிதாகுமோ?
திக்கை ‘தம’மாக்குபவர் உன் பிதாவை ‘தா’ரராக்காரோ?

நித்ராளுநா அபி —
தூக்கமாயிருந்தாலும், ரங்கத்தில் தூக்கத்தை நடிப்பது போலத் தான் ரங்கபதியின் தூக்கம்.
‘நித்ராதி ஜாகர்யயா’ ‘விழித்துக்கொண்டே தூங்குகிறார்’, ‘யோகநித்ரை’. என்ன யோகம்?
ஆண்டாள் யோகம். “அநித்ர:ஸததம் ராம” என்று சொல்லி நிறுத்திவிட வேணும்.

நியதம் — நிரந்தரமாய். யோகத்தில் எப்படி இடைவிடாமல் அவிச்சின்னமான நினைப்போ, அப்படியே.

கடாக்ஷ: நிஹித: —
கடாக்ஷங்கள் வைக்கப் பட்டிருக்கின்றனவோ. ‘உன்னுடைய அவதார காலத்திலிருந்து
இப்படி நியதமாக த்ருஷ்டி வைக்கப் பட்டுளது’
‘தவ அவதாராத்’ என்பதை இங்கும் அந்வயிக்க. ‘எப்போ வருவாளோ?’ என்று த்யானம்.

————

ப்ராயேண தேவி பவ தீவ்யபதேச யோகாத்
கோதாவரி ஜகதிதம் பயஸா புநீதே|
யஸ்யாம் ஸமேத்ய ஸமயேஷு சிரம் நிவாஸாத்
பாகீரதி ப்ரப்ருதயோபி பவந்தி புண்யா: || .12.

தேவி — ஏ கோதா தேவியே!
பவ தீவ்யபதேஶ யோகாத் — உன் பெயரைப் பெற்ற ஸம்பந்தத்தால் (பாக்யலாபத்தால்),
கோதாவரீ — கோதாவரி நதியானது;
இதம் ஜகத் — இவ்வுலகை;
பயஸா — தன் தீர்த்தத்தால்;
ப்ராயேண — மிகவும்;
புநீதே — பரிசுத்தப்படுத்துகிறது.
யஸ்யாம் — எந்த கோதாவரி நதியில்;
ஸமயேஷு — புண்ய காலங்களில்;
பாகீரதி ப்ரப்ருதயோ அபி — கங்கை முதலிய புண்ய நதிகளும் ;
ஸமேத்ய — சேர்ந்து;
சிரம் நிவாஸாத் — வெகு காலம் கூடி வஸிப்பதால்;
புண்யா: — பரிசுத்தங்களாக;
பவந்தி — ஆகிறார்களோ.

அம்மா கோதா தேவியே! உன் பெயரை வஹித்த ஸம்பந்தத்தாலும், பாக்யத்தாலும் கோதாவரீ நதி
இவ்வுலகத்தைத் தன் தீர்த்தத்தால் மிகவும் புண்யமாக(சுத்தமாக)ச் செய்கிறாள்.
எந்த கோதாவரீ நதியில் கங்கை முதலிய புண்ய நதிகளும் சில புண்ய காலங்களில் கூடி
நீண்ட காலம் வஸிப்பதால், பரிசுத்தமாகின்றார்களோ.

கோதாப் பிராட்டியே——-கோதாவரி நதி உன் பெயரைத் தாங்கி உள்ளதால் அல்லவா,
இந்த உலகத்தைத் தன்னுடைய தீர்த்தத்தால் நனைத்துப் புனிதமாக்குகிறது.
கங்கை முதலிய நதிகளும் இங்கு கோதாவரி நதியில் வந்து தங்கித் தன பாவங்களைக் களைந்து ,புண்ய நதியாக ஆகிறது.
கோதா என்கிற உன் திருநாமத்தின் பெருமை வர்ணிக்க இயலாதது.

அவ — தென் திக்கின் ஓர் கோணத்தில் நீ அவதரித்தாய் என்ற வஸ்து ஸம்பந்தமாவது அந்தத் திக்குக்கு உண்டு.
அந்த ஸம்பந்தம் லேசமுமில்லை கோதாவரீ நதிக்கு. உன் பெயரைத் தன் பேராகப் பெற்ற ஸம்பந்தந்தானுண்டு.
பேர் ஒற்றுமை என்ற சப்த ஸம்பந்தம் நாமமாத்ர ஸம்பந்தம் தானுண்டு. அந்த ஸம்பந்தத்தாலும்,
அந்நதி ஸர்வோத்தரமான (உத்தமமான) பரிசுத்தியை உடையது. உலகத்தையெல்லாம் பரிசுத்தமாக்குகிறாள்.
உலகத்தை எல்லாம் புனிதமாக்கும் புண்யநதிகளையும் தன் சேர்க்கையால் புண்யமாகச் செய்யும் சக்தியை அடைகிறாள்.
பெருமாள் ஸ்ரீபாத தீர்த்தமான கங்கையும் கோதாநதியில் தீர்த்த யாத்திரை செய்து அங்கே க்ஷேத்ரவாசம் செய்து
அசுத்தியை நீக்கிப் புண்யமாகிறாள். அதெல்லாம் உன் திருநாமத்தைப் பெற்ற பாக்கியத்தின் மஹிமை.
“நாமவஹனம்” ஓர்விதமான தாஸ்யமாகும். ‘த்வத்தாஸ தாஸீகண” என்பதுபோல.
கோதாநதீ என்னும் தேவீ தாஸீகணத்தில் சேர்வாள், உன் திருநாமத்தை வஹிப்பதால்.

தேவி —
கோதாதேவியே! கோதாவரீதேவி, பாகீரதீதேவீ முதலிய புண்யநதீதேவிகள் உன் விபூதிகள், உன் தாஸிகள்.

பவ தீவ்யதேஶ யோகாத் —
உன் திருநாமம் தனக்கும் பெயரான ஓர் ஸம்பந்தத்தால், பெயர் ஸம்பந்தத்தால் மாத்ரம்.
யோகம் என்பதற்கு ‘ஸம்பந்தம்’ என்று பொருள். அது கிடைக்காதது கிடைப்ப தென்னும் அலப்த லாபத்தையும் சொல்லும்..
அநவாப்த பூர்வமானதைப் புதிதாக அடைதலைச் சொல்லும். உன் திருநாமம் தனக்கும் அமையப் பெறும் பாக்கியம் அலப்ய லாபமே.
10இல் “உன் தாதைக்கு முன்பு கிடையாதது உன்னால் கிடைத்தது” என்றார்.
11இல் “மஹாபுண்ய பரிபாகத்தால் லப்யம் உன் அவதார ஸம்பந்தம்” என்றார்.
இங்கும் “யோகாத்” என்பதால் உன் பெயர் தனக்கும் அமையப் பெற்ற (கிடையாதது கிடைத்த)
பாக்கியத்தால் என்று விளக்குகிறார்.
எல்லாம் இங்கே பாக்யமும் புண்யமும், இலப்ய லாபமும், பரிசுத்தி லாபமுமாகவே இருக்கின்றன.
நிகண்டுவில் “கோதா” என்பது ‘கோதாவரீ நதிக்கும்’ ‘விஷ்ணுசித்தர்’ ஆத்ரஜைக்கும் பெயர் என்று
சேர்த்துப் படிக்கப்பட்ட சப்த ஸம்பந்தந்தான். வேறு வஸ்து ஸம்பந்தமில்லை. நிகண்டுவில் ஸஹயோகந்தான்.
சப்த மாத்ரமான ஸம்பந்தத்திற்குக்கூட இத்தனை மஹிமையுளது. உன் பிதாவான ஆழ்வார்
‘பெரிய ஆழ்வாராவது’ என்ன ஆச்சரியம்! இப்படி கைமுத்யங்களால் அதை ஸமர்த்திப்பதில் திருவுள்ளம்.

கோதாவரீ — ‘கோதாவரீ’ என்பது நதிக்கு மட்டும் பெயர். ‘கோதா’ என்பது உங்களிருவருக்கும் நிருநாமம்.

இதம் ஜகத் —

இவ்வுலகனைத்தையும். தீர்த்த ஸ்நானம் எல்லோருக்கும் பொது.
உன் ஸரஸ்வதீ நீராட்டமும் எல்லோர்க்கும் பொது.

பயஸா ப்ராயேண புநீதே — தீர்த்தத்தால் விசேஷமாய்ப் பரிசுத்தமாக்குகிறாள். தீர்த்தத்தால் சுத்தமாக்குகிறாள்.
நீ உன் நாம மாத்ரத்தாலும் கோதாவரீ நதிக்கு ஸர்வோத்தரமாகும் மஹிமையை அளிக்கிறாய்.
ப்ராயேண — அநேகமாய்ப் பரிசுத்தமாக்குகிறாள் கோதாவரீ.
பூர்ணமாக, ஏகாந்தமாக சுத்தமாவது உன் ஸரஸ்வதீ நீராட்டத்தினால்தான்.

யஸ்யாம் —
எந்த கோதாவரீ நதியில். ஸீதைப்பிராட்டி சிர காலம் பஞ்சவடியில் அந்நதியில் நீராடி
அதைப் புண்யமாக்கினாள். ‘ஹநகதநயா ஸ்நான புண்யோதகேஷு’ என்று காளிதாஸர் கோதாவரீ தீர்த்தங்களைப் புகழ்ந்தார்.

ஸமயேஷு — சில புண்யகால விசேஷங்களில்.

ஸமேத்ய —
சேர்ந்து. ‘நதிகளின் சங்கமம்’ உயர்த்தி என்பர். இங்கே மற்ற புண்ய நதிகள் தங்களுக்கு
நேர்ந்த பல பாபிகளின் ஸம்பந்தத்தால் வந்த அசுத்தியைப் போக்குவதற்காக கோதாவரீ நதிக்குத்
தீர்த்த யாத்திரையாக வந்து, அங்கே சேர்ந்து பஹுகாலம் வஸித்து அதனால் சக்தி பெறுகிறார்கள்.
தீர்த்தங்கள் செய்யும் தீர்த்த யாத்திரை, தீர்த்த வாஸம்.

சிரம் நிவாஸாத் —
சிர காலம் வஸிக்கிறார்கள். உன் பெயரைப் பெற்ற நதியென்னும் அந்த
உன் ஸம்பந்தத்தால் மஹா பரிசுத்தமான நதியென்னும் கௌரவம். ‘தே புந்யேந்துருகாலேந’
‘ஜலமயமான தீர்த்தங்கள் வெகுகாலத்தால் பரிசுத்தியைச் செய்கின்றன’ என்கிற வசனப்படி
நதீ ஸாமான்ய வாஸனையால் சிரகாலம் வஸிக்கிறார்கள்.

பாகீரதீ ப்ரப்ருதயோபி —
கங்கை முதலிய மஹாநதிகளும். பகீரத ப்ரயத்தினத்தின் பேரில் ஸ்வர்க்கத்திலிருந்து
இங்கே அவதீர்ணமான கங்கையும், உத்தம புண்ய நதிகளும். “கங்கை கங்கையென்ன வாசகத்தாலே
கடுவினை களைந்திடுகிற்கும் கங்கையின் கரைமேல்”, “எழுமையும் கூடி யீண்டிய பாவமிறைப் பொழுதளவினிலெல்லாம்
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல்” என்றபடி பிறர் பாவங்களைக் கழுவினாலும்,
அந்தப் பாபங்கள் தங்களோடு சேர்ந்து தமக்கே செய்த அசுத்தியைத் தாமே கழுவச் சக்தியில்லை.

புண்யா: பவந்தி —
புண்யங்களாக (பரிசுத்தங்காள) ஆகின்றார்கள். இதனால் புண்ய நதிகளெல்லா வற்றிலும்,
கோதாவரீ, உன் திருநாம ஸம்பந்த மாத்ரத்தால், ஸர்வோத்தரமான புண்ணியநதி யாகிறாளென்று ஸூசனம்.
வடக்குத் திக்கிலுள்ள கங்கா யமுனா நதிகளிலும் கோதாவரீயென்னும் தென் நதி உத்தரமாகின்றாள்.
கோதாவரீ தீரத்தில் பிறந்த பவபூதி கவியும், உத்தரராம சரிதத்தின் இரண்டாமங்கம் முடிவில்
“தக்ஷிணதேச மலைகளின் குஹைகளில் கோதாவரீ தீர்த்தங்கள் புகுந்து சப்திக்கின்றன” என்று வர்ணித்திருக்கிறார்.
கோதாவரீ நதியை அவர் தக்ஷிணதேச நதியென்றார்.
முராரி நாடகத்தில் புஷ்பக விமானத்தில் அயோத்திக்குச் செல்லும் பெருமாள்
“கோதாவரீயை வந்தனம் செய்” என்று ஸீதைக்குச் சொன்னார். .12.

——–

நாகேஶயஸ் ஸுதநு பக்ஷிரத: கதம் தே
ஜாத: ஸ்வயம்வரபதி: புருஷ: புராண: |
ஏவம்விதாஸ் ஸமுசிதம் ப்ரணயம் பவத்யா:
ஸந்தர்ஶயந்தி பரிஹாஸகிரஸ் ஸகீனாம் || .13.

ஸுதநு — அழகிய மேனி யமைந்தவளே!;
நாகேஶய: — பாம்பணையிற் பள்ளி கொண்டவனும்;
பக்ஷிரத: — பக்ஷியின் மேல் சவாரி செய்கிறவனுமான;
புராண: புருஷ: — கிழவர்;
கதம் — எப்படி;
தே — உனக்கு (உனக்கிஷ்டமான);
ஸ்வயம்வரபதி — ஸ்வேச்சையால் வரிக்கப்பட்ட பதியாக;
ஜாத: — ஆனார்.
ஸகீநாம் — (உன்னுடைய தோழிமாருடைய;
ஏவம்விதா — இப்படிக்கொத்த;
பரிஹாஸகிர: — பரிஹாஸப் பேச்சுக்கள்;
பவத்யா: — உன்னுடைய;
ப்ரணயம் — நாயகன் விஷயமான ராகத்தை,(விருப்பத்தை);
ஸமுச்சித: — தகுதியுள்ளதாக;
ஸந்தர்ஶயந்தி — நன்றாய் விளக்குகின்றன.

அழகிற் சிறந்தவளே! பாம்பின்மேல் படுப்பவரும், பக்ஷியின் மேலேறிப் பறப்பவரும், தனக்கு மேல்பட்ட
மூத்தோரில்லாத கிழவருமானவர் எப்படி நீ ஆசைப்பட்டு வரித்தவரானார்? என்றிம்மாதிரியான தோழிகளின்
பரிஹாஸ மொழிகள் (உண்மையில்) உன்னுடைய பதி விஷய ப்ரணயம் மிகவும் உசிதம் என்று நன்கு காட்டுகின்றன.

அழகான மெல்லிய திருமேனியை உடையவளே …”..நீ வரித்த புருஷன், பாம்பில் படுக்கிறான்;
பக்ஷியின் மீது அமர்ந்து செல்கிறான்; புராண புருஷன் …..மிக மிக வயதானவன்;
நீ ,எப்படி இந்த வரனைத் தேர்ந்தெடுத்தாய் ….” என்று உன் தோழிகளின் பரிகாசப் பேச்சுக்கு ஆளாகி இருக்கிறாயே
இவைகளைக் கேட்டு நீ பூரிக்கிறாய். குணமாகவே எடுத்துக் கொள்கிறாய்.
இவையெல்லாம் தத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றன என்று உன் அன்பை வெளிப்படுத்துகிறாய்

அவதாரிகை

(1) ஆண்டாள் பிறப்பையும், அவள் பிறப்பு முதலிய ஸம்பந்தலேசங்களாலும் வரும் லோகோத்தரமான
ஏற்றங்களையும் ஸாதித்தார். ஆண்டாள் கல்யாணம் ப்ரஸ்துதம். வதூவின் பிறப்பின் சிறப்பை ஸாதித்தார்.
வரனின் சிறப்பைப்பற்றி என்ன பேசுவது? பிறவாதவனுக்குப் பிறப்பேது?
இந்த வரனுக்கு ஜாதகமென்ன? ஜாதனானாலல்லவோ ஜாதகமிருக்கும்!

(2) கல்யாண விஷயத்தில் ‘சீலம், வயசு, வ்ருத்தம்’ முதலியதெல்லாம் துல்யமாக அநுரூபமாக இருக்கிறது.
ஆகையால் ராகவனும் ஸீதைக்குத் தக்கவர், ஸீதையும் ராகவனுக்கேற்றவள் என்பரே!
இங்கே சேர்க்கை ஔசித்யங்கள் எப்படி?

(3) கல்யாண ஸந்தர்ப்பத்தில் தோழிமார் மாப்பிள்ளையப் பற்றிப் பரிஹாஸங்கள் பேச வேண்டுமே!
கோதை நர்த பரிஹாஸோக்திகளில் மிகக் கெட்டிக்காரியான நர்மதையல்லவோ!
அவளுக்கு இன்பமான பரிஹாஸ வசனங்களைப் பேசவேண்டுமே! அந்தத் தாயார் கல்யாண விஷயத்தில்
மேல் பார்வைக்கேனும் பழிப்புகள் போன்ற நர்ம ஹாஸங்களை நாம் பேசக்கூடாது.
அடியோடு ஏசல் இல்லாமையும் கல்யாணத்திற்கு ஒவ்வாது. தோழிகள் மூலமாகத் துளியே பேசுவோம்.
பாதி ச்லோகத்தோடு பேசி நிறுத்துவோம். அரைகுறையாகவே பேசுவோம்.

(4) பரிஹாஸம் பேசிப் பழிப்பது துதியாகுமோ? துதியல்லவோ இங்கே ப்ரஸ்துதம்!
இந்த க்ரந்தம் கோதை நிந்தை க்ரந்தமல்லவே! அல்ல. துதிதான். நிந்நையே துதியாகும். இது வ்யாஜஸ்துதி அணி.

(5) ரங்கத்தில் ஹாஸ்யம் ப்ரதானமே. அரங்கர் கல்யாணத்தில் ஹாஸ்யம் வேணுமே!

நாகேஶய: —
பாம்பின் மேற்படுப்பவர். ஸஹ சயன மனோரதம் தானே முதன்மையானது?
‘பாம்போடு ஒரு கூரையில் வசிப்பதே துன்ப’மென்பர். படங்களை விரித்திருக்கும் ஆயிரம் தலை பாம்பின் மேல்
என்றும் சயனிப்பவராயிற்றே! நாகேசயன் என்று அலுக்ஸமாஸத்தினால் இப் படுக்கை தான் நித்யம்,
இதற்கு லோபமேயில்லை என்று வேடிக்கை. பத்னியோடு சேர்க்கை போல படுக்கைக்கும் நித்ய யோகம்.
பாம்பின் விரித்த படங்களே படுக்கைக்குமேல் அஸமானகிரி. இந்த விதானத்திற்கு ஸமானமில்லையாம்.
அஸமானமாம். பாம்பின் சிரோரத்னங்களே படுக்கையறை தீபங்கள். இது என்ன படுக்கை ஜோடிப்பு?

பெருமாள் நித்ராளுவானாலும், இப்பாம்புக்குத் தூக்கமேயில்லை. பாம்பு தூங்கினாலும், அக்காலத்திலாவது பயமற்றிருக்கலாம்.
நீர் ஜாக்ரதையாயிருந்தாலும், தூங்கினாலும், நான் தூங்காமல் கண்ணைக் கொட்டாமல் விழித்திருந்து
காவல் ஊழியம் செய்வேன் என்று வ்ரதம் அனுஷ்டிக்கும் படுக்கை.

கல்யாணத்தில் பரதேசம் போவதற்குக் குடை பிடித்துக் கொள்ள வேணுமே!
நான்தான் குடை என்று பாம்பே குடையாக முன்வருமே! வேறு குடைக்கு இடம்கொடாமல் சீறுமே!

பர தேசம் போம பாதுகை வேணுமே! அதற்கும் நானே என்று முன்வருமே! நிவாஸமும் தானாகுமே! ரஹஸ்யம் தெரியாதோ?
இப்பாம்பு தானே உன் வேங்கடவர் வசிக்கும் வேங்கடம்! மனைப் பலகையில் உட்கார வேண்டுமே மாப்பிள்ளை!
வேறு ஆசனத்திற்கு இடம் கொடாதே! பூம் பட்டு வேண்டுமே! அதுவும் தானே என்று முன்வருமே! அம்மா!
இந்த ரஹஸ்யமெல்லாம் உன் தாதைகளான ஆழ்வார்களுக்குத் தெரியுமே!

“சென்றாற் குடையா மிருந்தாற் சிங்காதனமாம் நின்றால் மரவடியாம் நீள்கடலுள் என்றும் புணையாம்
மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கு மணையாம் திருமாற்கரவு” என்று அவர்கள் பாடுகிறார்களே!
அவர்கள் எப்படி இந்த வரனுக்கு வாழ்க்கைப்பட சம்மதித்தார்கள்?
“பையரவினணைப் பள்ளியானொடு கைவைத்தின் வருமே” என்றாரே விஷ்ணுசித்தரும்!

பக்ஷிரத: —
படுக்கை யிருக்கட்டும். ஊரெல்லாம் கூட வந்து வாத்ய கோஷங்களோடு ரதத்தில் ஊர்வலம் மெள்ள மெள்ள
விடியும் வரையில் வரவேண்டுமென்று ஒரு பெண் ஆசைப்பட மாட்டாளோ?
ஆகாயத்தில் பறக்கும் பக்ஷியல்லவோ இந்த மாப்பிள்ளைக்கு வாஹனம்! ரதம்! ஒருத்தர் கூடவர முடியுமோ?
நீதான் அந்தப் பக்ஷியின் முதுகிலேறிப் பறப்பாயோ! சிறு பெண்ணுக்கு ஆகாயத்தில் பறக்க பயமிராதோ?
பயமிருந்தால் ஸுகமிருக்குமோ? ஸந்தோஷமிருக்குமோ? ஊர்வலம் மெள்ள மெள்ள ஊர்ந்தல்லவோ வரவேண்டும்?
மெள்ள அடியடியாக ஊர்வது ஊர்வலத்திற்கு அழகு. பக்ஷி பூமியில் நடக்குமோ? வேறு வாஹனம் இவருக்கு ஆகாதே!
‘பெருமாளும் நல்ல பெருமாள், திருநாளும் நல்ல திருநாள், ஆயினும் இப்பெருமாளைப் பருந்து தூக்கிப் போவதே’
என்று காளமேகக் கவி பாடினார். ‘பறவையேறு பரம்புருடா’ என்றார் உன் தந்தை.

ஸுதநு —
அழகிற் சிறந்தவளே! இதைப் ‘பாம்பணையோன்’ என்பதற்கும் ‘பக்ஷிரதர்’ என்பதற்கும்
நடுவில் வைத்தது ரஸம். இரண்டும் உன் அழகிய மேனிக்கு மிகவும் அநுசிதம்.
உன் ஆத்மா ஒத்துக்கொண்டாலும், உன் காத்திரமொவ்வாதே! நாகமும் பக்ஷியும் ஸஹஜ சத்ருக்களல்லவோ!
நடுவே ஈஸ்வரதத்துவம் நின்று விரோதமே மனதிலுதிக்காமல் தடுக்கிறது என்று வேடிக்கை.
‘பையுடை நாகப்பகைக் கொடியோனுக்குப் பல்லாண்டு கூறுதுமே’ உன் பூந்தோட்ட புஷ்பமய சய்யை உனக்கேற்றது.
‘தஸ்யா:புஷ்பமயீ சய்யா’ என்றார் காளிதாஸர் சகுந்தலை விஷயத்தில்.
‘குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல் மெத்தென்ன பஞ்சசயனத்தின் மேலேறி’
என்றல்லவோ படுக்கை மனோரதம் ஸஹஜம்!

கதம் ஜாத: ஸ்வயம்வரபதி: —
எப்படி அவர் உனக்கு வரனானார்? இவரையா நீ ஸ்வயம்வர பதியாக வரித்தாய்?
எப்படி இவரைப் பதியாக்க ஸ்வயம்வரம் கோடித்தாய்? உனக்குத் தெரியாமல் உன் தாதை இதை கடிப்பிக்க வில்லையே!
இவர் பிறப்பு எப்படி? யார் அறிவார்? கதம் ஜாத: — என்ன ஜாதி? என்ன குலம்? ஜனன காலம் எது? ஒன்றும் தெரியாதே!
இவர் ப்ரவரமென்ன? “நமேவது: ஸுரகணா: ப்ரபவம் ந மஹர்ஷய:’ (என் பிறப்பை தேவருமறியார், மஹர்ஷிகளுமறியார்)
என்கிறார் கீதையில். எந்த ருஷி ப்ரவரம் இவருக்குச் சொல்லக் கூடும்? ப்ரவரம் சொல்லாமல் கல்யாணமுண்டோ?

புருஷ: புராண: — வயதுதான் ஏற்குமோ? இவரிலும் கிழவருண்டோ?
பவத்யா: ஸகீநாம் — உன் தோழிகளுடைய. அம்மா இந்த ஏசல் பேச்சு என்னதல்ல. உன் தோழிகளின் பேச்சின் அநுவாத மாத்திரம்.
ஏவம் விதா: — இப்படிக்கொத்த. இரண்டொன்றே மாதிரிக்காக எடுத்தேன். எத்தனையோ பேசினர்ரஃ.
பரிஹாஸ கிர: — பரிஹாஸப் பேச்சுகள். பவத்யா: — உன்னுடைய. ப்ரணயம் — பர்த்ரு விஷமான ராகம்.
ஸமுச்சிதம் — மிகவும் உசிதமானது. ஆநுரூப்யமுடையது என்று. இது ஸந்தர்ஶயந்தி என்னும் கிரியைக்கு விசேஷணம்.
‘அடியோடு அநுசிதம்’ என்று பரிஹாஸம் பண்ணினது ‘இதுதான் அத்யந்தம் உசிதம்’ என்று ஸமர்த்திப்பதாகிறது.
அவர்கள் பரிஹாஸப் பேச்சே அவர்கள் பரிஹாஸத்திற்கு விரோதம். அதுவே அத்யந்தம் ஔசித்யத்தை நிரூபிக்கிறது.
நீ இந்த வரனை வரித்தது மிகவும் உசிதமென்று முடிவான நோக்கு.

ஸந்தர்ஶயந்தி —
நன்றாக உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளக்குகின்றன. அவர்கள் பரிஹாஸமாக
எண்ணிப் பேசியதே உயர்ந்த ஸ்துதியாகி, இச்சேர்த்தியின் முழு ஆநுரூப்யத்தை மிகவும் அழகாக, தெளிவாகக் காட்டுகிறது.
உசிதத்திலும் ‘தர்ஶயந்தி’ என்பதிலும் ஸம் என்பதைச் சேர்த்தார். அநுசிதமா? இல்லவேயில்லை. அத்யந்தமுசிதம்.
அவர்கள் பரிஹாஸம்போல் பேசியது நிந்தையா? இல்லவேயில்லை. நீ இந்த வரனையே வரிப்பது மிக உசிதம்
என்று அழகாக, ஹேதுபூர்வமாய் நன்றாய் நிரூபிக்கிறேன். அவர்கள் ஏசலும் உண்மையில் துதியே. எப்படித் துதியாகும்?

பெருமாளுக்கும் தேவிமாருக்கும் எப்படி எப்படி ஸுதமோ, எப்படியெப்படி உசிதமோ, (யதோசிதம்)
அப்படிக்கெல்லாம் பணி செய்யும் சேஷனல்லவோ அநந்தனென்னும் நாகன்.
சேஷிகளுக்கு அமிர்தமயமானவன், பணிபதி உனக்கு சயனம் ஆசனம் என்று ஆளவந்தார் பெரியபிராட்டியார் துதியை ஆரம்பித்தார்.
நாகேசனாயிருப்பதிலும் ஆசைப்படும்படி ரஞ்ஜிப்பிக்கும் ஸுக ஸாமக்ரீ வேறுண்டோ?
ஸுகந்தம் கமழ்வதில் இந்நாகத்திற்கு நிகருண்டோ? மென்மையிலும் இதற்கு ஸமமுண்டோ? என்ன ஸுக சீதனம்?
பூமியைத் தாங்கும் அநந்தனைத் தவிர எந்தப் படுக்கை ப்ரஹ்மத்தையும் ஈச்வரிகளையும் தாங்கமுடியும்?
பாரம் தாங்க மாட்டாமல் மளமளவென்று முறியும் கட்டிலில் படுப்பரோ?

“ப்ரக்ருஷ்ட விஜ்ஞான பலைகதாம” என்று ஆளவந்தார் இந்நாகப் படுக்கையின் மேன்மையைப் புகழ்ந்தார்.
அசேதனப் படுக்கை தம்பதிகள் ஸுகத்துக்குத் தக்கபடி அறிந்து தன்னை சரிப்படுத்திக் கொள்ள வல்லதோ?
ஆனால் ஆசேதனமான ஆசனம் அல்லது கட்டிலில் ஓர் குணமுண்டு.
மேல் பாரம் அதிகமாயிருந்தால் அதனால் வலியுண்டாகி வருந்தாது; பெருமூச்சு விடாது.; வலியினால் கத்தாது.
இரும்புக் கட்டிலானால், பாரத்தால் வருந்தாது. அது பலமாய் கெட்டியாய் இருக்கும்.

இந்த பலரென்னும் குணமும் இப்பாம்பினிடம் ப்ரக்ருஷ்டமாயுள்ளது. ஞானமும் ப்ரக்ருஷ்டமாயுள்ளது.
பலம் அநந்தமாயிருப்பதால் சைதன்யம் இருந்தாலும் நோவே உண்டாகாது. லகுவாய்த் தூக்கும்படி அநந்த பலமிருக்கிறது.
சேஷிகளுக்குற்ற சேஷர்களில் இவர் முதல்வர். பக்ஷிரதராயிருப்பவர் வேதாத்மா.
அண்டத்தைத் தூக்கிக் கொண்டு பறக்கக்கூடியவர். அநந்தநாகர் தூக்கிக்கொண்டு ஆகாயத்தில் பறக்க மாட்டார்.
இவர் அநாயாஸமாக திவ்ய தம்பதிகளையும் தூக்கிக் கொண்டு பறப்பார். பெரிய ஆகாயக் கப்பல் போலிருப்பார்.

ஆகாய ரதத்திலும் ஆசைப்படக் கூடிய ரதமுண்டோ? வேதங்கள் அநந்தம். வேதாத்மாவான இவரும் அநந்தரே.
அவர் பெரிய புஷ்பக விமானம். பரம மங்களமானவர். பெருமாள் ‘புராணம்’ என்பதால் எத்தனை மூதோராயினும்
என்றைக்கும் நவமானவர். அப்பொழுதுக்கப்பொழுது ஆராவமுதமாயிருப்பவர்.

புராபி நவ: — பிரதிக்ஷணமும் அபூர்வமாயிருப்பவர். பிறப்பருக்கு இறப்புமுண்டு. பிறவாத இவர் அமரர்களதிபதி.
பெரிய பெருமாளாக இவருக்கு ஸ்வேச்சையினால் ஆவிர்பாவமுண்டு. இவருடைய ஜந்மம் திவ்யம்.
தன்னிச்சையாலே ஜந்மம். திவ்ய ஜந்மங்கள் இவருக்குமுண்டு. ஜந்மம் பலபல.
‘ஸகிகள்’ என்பவர் ஸமானமான க்யா(ख्या)நமுடையவர். ஒரேவிதமான சித்த வ்ருத்தியுடையவர்.
ஸமான சித்த வ்ருத்தியை உடைமை தான் ஸகித்வத்திற்கு லக்ஷணமென்று ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் ஸாதிக்கப் பட்டது.
வேத பாஷ்யங்களில் அப்படியே ‘ஸகி’ பதத்திற்குப் பொருளுரைக்கப் பட்டிருக்கிறது.

“என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே” என்று இந்த ஸகிகளைப் பற்றிப் பேசவேண்டியதில்லை.
மேலுக்கு ஏசல் போலிருந்தாலும் இந்த ஸகிகள் பேச்சு உண்மையில் துதியானது என்று அறிந்தே
பேசினார்களென்று ‘ஸகி’ பதத்தால் வ்யஞ்ஜநம். பார்வதீபதி அகேசயர். இவர் நாகேசயர்.
அவர் புங்கவரதர்;புங்கத்வஜர். இவர் விபுங்க வரதர், விபுங்கத்வஜர்.
ஓர் கவி கூறும் இந்த வேற்றுமைகளும் கவி திருவுள்ளத்திலுள்ளன. 13.

—————

த்வத் புக்த மால்ய ஸுரபீக்ருத சாருமௌளே:
த்யக்த்வா புஜாந்தர கதாமபி வைஜயந்தீம்|
பத்யுஸ்தவேஶ்வரி மித:ப்ரதிகாதலோலா:
பர்ஹாத பத்ர ருசிமாரசயந்தி ப்ருங்கா:|| .14.

ஈஶ்வரி — ஈஶ்வரியே!
ப்ருங்கா — வண்டுகள்;
புஜாந்தரகதாமபி வைஜயந்தீம் — திருமார்பில் இருக்கும் வஹஜயந்தி என்னும் வனமாலையை;
த்யக்த்வா — விட்டுவிட்டு;
மித:ப்ரதிகாதலோலா — ஒன்னுக்கொன்று மேல் விழுந்து பக்ஷங்களை யடித்துக் கொண்டு சஞ்சலமாய் சுற்றிக்கொண்டு;
தவ பத்யு: — உன் பதியினுடைய;
த்வத் புக்த மால்யஸுரபீக்ருத சாருமௌளே — உன்னால் சூடப்பட்ட மாலையின் வாசனை ஏறிய திருமுடிக்கு;
பர்ஹாதபத்ர ருசிம் — மயில் தோகையால் அமைந்த குடை போன்ற சோபையை;
ஆரசயந்தி — உண்டு பண்ணுகின்றன.

அம்மா ஈஶ்வரியே! ஆண்டாளே! வண்டுகள் உன் நாயகன் திருமார்பிலுள்ள வைஜயந்தி வனமாலையை விட்டுவிட்டு,
நீ சூடிய மாலையால் பரிமளமாய்ச் செய்யப்பட்ட உன் நாயகன் திருமிடிக்கு மேல் தாங்கள் ஒன்றின் மேலொன்று
இறக்கைகளை அடித்துக் கொண்டு ஒன்றையொன்று மோதிக் கொண்டு சுற்றிச் சுழன்றுகொண்டு மயில் தோகை
போன்ற குடையின் ஆகாரமான சோபையைச் செய்கின்றன.

லோகேஶ்வரீ …நீ சூடிக் களைந்து , எம்பெருமான் அணியக் கொடுத்த மாலை, அவன் திருமுடிமேல்
அமர்ந்து வாசனை வீசுவதை உணர்ந்த வண்டினங்கள், அவன் அணிந்திருந்த வைஜயந்தி மாலையை விட்டு விட்டு,
மேலே பறந்து ஒன்றுக்கொன்று தள்ளிக் கொண்டு ,வட்டமிட்டு, எம்பெருமான் திருமுடிக்கு மேலே
மயில் தோகையால் ஆன குடை போல ஆகி அவனது திருமுடிக்கு நிழலைக் கொடுக்கிறது.

அவதாரிகை

அநந்தரென்னும் சேஷர் குடைக் கைங்கர்யம் என்னதே என்று முன் வருவார்.
மற்றொருவரும் அப்பணியைச் செய்ய இடம் கொடார். தம் திருமேனியைக் குடையாக ரசனை செய்து கொள்ளுவார்
என்று முன் ஶ்லோகத்தில் ஸூசிப்பிக்கப் பட்டது. ஆண்டாள் திருக்கல்யாணத்தில் யார் குடை பிடிக்கிறார்?
அல்லது யார் குடையாகிறார்? நாகரா அல்லது வேறு யார்? அநந்தர் குடையாகவில்லை.

ஆண்டாள் பூந்தோட்டத்து ஸ்நேகமுள்ள வண்டுகளே ஆசைப்பட்டுக் குடையாகின்றன. குடையே சுற்றும் விசிறியுமாகிறது.
இந்த வண்டுக் கூட்டத்தாலமைந்த குடை, பாடும் குடையுமாயிற்று. சுற்றிச் சுழன்றுகொண்டு கல்யாணப் பாட்டுப் பாடுகின்றன.
தங்களுக்கும் பூந்தோட்ட ப்ரிய ஸகியும், ஈச்வரியுமான கோதையின் வதுவையில் மங்கள வாத்யகோஷம் செய்கின்றன.
பல்லாயிரம் சேஷர்களாக வண்டுகள் கூடி தங்களையே மயில் தோகைக் குடை போல மாப்பிள்ளை திருமுடிக்கு மேல்
சித்ர வர்ணக் குடையாக ரசனை செய்து கொண்டு சுற்றிச் சுழன்று பறந்து கொண்டு ஆனந்த பரவசமாய்
நர்த்தனமும் கானமும் செய்கின்றன. மங்களகான கைங்கர்யத்தை இந்த வண்டுகள் மகிழ்ந்து
தாமாகவே செய்வதை 16ம் சுலோகத்தில் ஸாதிக்கப் போகிறார்.

(2) ஸகிகள் பரிஹாஸப் பேச்சுகளை இந்த வண்டு ஸகிகள் பொய்யாக்குகின்றன.
பூந்தோட்டத்தில் கோதை ப்ரியமாய் வளர்த்த வண்டுகள்.
ராமாவதாரத்தில் பெருமாள் காடு போகையில் மரங்கள், புஷ்பங்கள், அங்குரங்களெல்லாம் வாடின.
பக்ஷிகளும் ‘வேண்டாம், வேண்டாம்’ என்று கதறி மறித்தன.
‘எந்த தண்டகாவனத்தில் வ்ருக்ஷங்களும் ம்ருகங்களும் எனக்கு பந்துக்களோ’ என்று உத்தரராம சரிதத்தில் ராமன் வார்த்தை.
பூந்தோட்டத்தில் மரங்களொடும் மான்களோடும் பந்துவாய்ப் பழகினாள் சகுந்தலை.
ஆனால் வண்டுகளோடு அப்படி ஸ்நேகமாய்ப் பழகத் தெரிய வில்லை. ஓர் வண்டு படுத்திய பாட்டை அவள்
பொறுக்க மாட்டாமல் ராஜா வந்து காக்க வேண்டியதாயிற்று.
கோதை ஈச்வரி, வண்டுகளுக்கும் அவள் ஈச்வரி, வண்டுகளுக்கும் அவளிடம் மிகுந்த ஸ்நேஹம்.

ஈஶ்வரி —
ஈஶ்வரியே! ஆண்டாள் ஈச்வரி என்பதில் என்ன தடை? பிறவியிலேயே ஆண்டாள் விஷ்ணு பத்நி யாகையால்
ஜகத்திற்கு ஈசானை யென்பதில் என்ன சந்தேகம்? ‘அஸ்யேசானா’ என்னும் ச்ருதி ஸாக்ஷாத்தாகப் பூமிப் பிராட்டியாகிய
உன்னைச் சொல்லும். இந்த ச்லோகத்தில் தான் முதலில் ஈச்வரி என்று அழைப்பது.

ப்ருங்கா: —
வண்டுகள். வண்டுகளுக்கும் நீயே ஈச்வரி. ப்ரியமான ஸகி. வண்டுகளுக்குள் தலைமையானது
‘ராணி வண்டு’ என்பர் ப்ராணி ஸ்வபாவ சாஸ்த்ரக்ஞர். வண்டுகளின் ஈச்வரியான ராணி வண்டு,
எல்லா வண்டுகளையும் கூட்டிக் கொண்டு ஈச்வரியான உனக்கு ஆசையுடன் பணிவிடை செய்கிறது.
‘குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி’ வால்மீகி கோகிலம் போன்ற நம் குருகூர்க் கோகிலம்
கூவின தாம்ரபர்ணீ நதிச் சோலையில் நாமும் கூவி மணம் பெறுவோம் என்று குருகூர்க் குயில்கள் கூவுவது போல்,
அக் குயில்களோடு குயிலாய் மதுரகவியும் மதுரமாய் மதுராக்ஷரமாய் மாறனைக் கூவினார்.

புஜாந்தரகதாம் அபி —
வைஜயந்தியைக்கூட; லோகோத்தரமான வனமாலையையும்
வைஜயந்தியின் ரஸ பரிமளத்தை ப்ருந்தாவன ப்ருங்கங்களறியும்.

தவ பத்யு: —
உன் பதியின். உன் பதியினுடைய ஈஶ்வரீ என்று இருக்கிறபடி சேர்த்து அந்வயிப்பதிலும் திருவுள்ளம்.
‘தவ பத்யு:ஈச்வரி’ உன் பதிக்கும் நீ ஈச்வரியானவளே. ‘பும் ப்ரதானேச்வரேச்வரீ’ என்பதைக் கவனிக்க.
சிதசித்துக்களுக்கும் ஈச்வரனுக்கும் ஈச்வரி, அல்லது சிதசித்பரரான தத்வத்ரயத்திற்கும் ஈஶ்வரீ.
விவாஹ அவஸரத்தில் “மூர்த்தாநம் பத்யுராரோஹ” என்று ஆசீர்வாதத்தைப் பணிப்பர்.
‘உன் பதியின் தலைமேல் ஏறுவாயாக’. கோதை தன் பாரதந்த்ரியத்தையே நினைந்து நாயகன் வற்புறுத்தியும்
அவர் அவளைத் தலையிலேற்றிக் கொள்ள இடம் கொடுக்கவில்லை.
அவள் சூடிய மாலை அவர் தலையில் ஆரோஹம் செய்தது. ஆசீர்வாதம் ஏதோ ஒரு ப்ரகாரமாய் ஸத்யமாயிற்று.

த்வத் புக்த மால்ய ஸுரபீக்ருத சாரு மௌளே: —
நீ சூடிக் கொடுத்த உன்னால் புக்தமான மாலையால்
அதிக பரிமளமுடையதாகச் செய்யப்பட்ட மைவண்ண நறுங்குஞ்சிக் குழலோடுகூடிய அழகிய திருமுடிமேல் (திருமுடிக்கு).
உன்னால் புக்தமானாலும் அந்த மாலை நிர்மால்யமாகவில்லை. நீ சூடியும் பெருமாளுக்கு மால்யமாகவே ஆயிற்று.

‘புக்த’ என்பதற்கு ரக்ஷிக்கப்பட்ட என்றும் பொருள். அனுபவிக்க ஆசையால் நீ சூடவில்லை.
பெருமாளுக்கு ப்ரியமான பரிமளத்தை கந்தம் கமழும் உன் கூந்தலிலிருந்து ஏற்றி
அம் மாலையை பரிமளப் பெருக்கால் ரக்ஷிக்கவே சூடினாய்.
‘ஸுரபீக்ருத’ என்பதற்கு ‘முன்பு வாசனையற்றதாயிருந்து இப்பொழுதுதான் உயர்ந்த கந்தத்தால் வாஸிதமாயிற்று’ என்று பொருள்.
அனுபவிக்க ஆசையால் நீ சூடவில்லை. பெருமாளுக்கு ப்ரிநமான பரிமளத்தைக் கந்தம் கமழும் உன் கூந்தலிலிருந்து ஏற்றி
அம்மாலையை பரிமளப் பெருக்கால் ரக்ஷிக்கவே சூடினாய்.

‘ஸுரபீக்ருத’ என்பதற்கு
‘முன்பு வாசனையற்ற தாயிருந்து இப்பொழுதுதான் உயர்ந்த கந்தத்தால் வாஸிதமாயிற்று’ என்று பொருள்.
‘அபூததத்பாவே ச்வி:’ ஸர்வகந்தனுடைய குழல் முன்பு அற்புத கந்தமுடையது தான்.
ஆயினும் இப்பொழுது ஏறிய புது அதிக வாசனையைக் கவனித்தால், முன்னிருந்த அற்புத வாசனையும்
இல்லையென்று சொல்லவேண்டியதாயிற்று. வாசனை மட்டுமல்ல, இம்மாலையால் அழகும் அதிகமாயிற்று.

மித:ப்ரதிகாதலோலா: —
வண்டுகள் ஸ்வபாவத்தால் சஞ்சலம். இப்பொழுது ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு
நான் முன்னே நான் முன்னே என்று மேல்விழுந்து கொண்டு ஒன்றின் பக்ஷங்கள் மற்றொன்றின் பக்ஷங்களை
நெருக்கிக் கொண்டு ஒன்றோடொன்று அவிச்சின்னமான தொடர்ச்சியாக கனமான சங்கிலிக் கோர்வையாய்ச் சுற்றிச் சுழன்று
(ரீங்கார கானம் செய்துகொண்டு) பெருமாள் திருமுடிமேல் இவ் வண்டு மாலை யிருப்பதால் திருமுடிக்கு மேலே
அதைச் சுற்றிலும் விசித்ரமான மயில்கொடையாயின; மயில்வசிறியுமாயின.

‘மதுரமா வண்டு பாட மாமயிலாட ரங்கத்தம்மான்’ அல்லவோ மணாளர்.
அரங்கத்தில் பாடும் வண்டு வேறு, ஆடும் மயில் வேறு’.
புதுவை நந்தனத்தோட்ட ஆண்டாள் வதுவையில் வண்டுகள் கூடி மயிலுமாகின. வண்டுகளே ஆடிப்பாடின.

‘லோலா:’ என்பது சாஞ்சல்யமென்னும் சுழலாட்டத்தையும் சொல்லும், மிக்க ஆசையையும் சொல்லும்.
அநந்த நாகருக்கு மேல்பட்ட ஆசை. அநந்தர் குடையானார். கருடன் விசிறியுமாவார். வண்டுகள் இருவர் பணியையும் செய்தன.
அவர்கள் இருவரும் பாடார். சேஷத்வத்தில் இத்தனை ருசியைப் பார்த்ததும் அநந்தர் கிட்டவராமல் ஒதுங்கி
சாக்ஷியாகப் பார்த்து ஆனந்தபரிதராய் ஸ்தப்தராய் இருக்கிறார்.
இந்தச் சிறு பக்ஷிகளின் கைங்கர்ய ருசியைப் பார்த்து பக்ஷிராஜன் மகிழ்ந்து நிற்கிறார்.
ஒன்றுக்கொன்று நெருங்கிக் கொள்வதால் வண்டுக் கூட்டங்கள் குடையின் ஒற்றுமையை அடைந்தன.
நடுவில் இடைவெளியே இல்லாமல் நெருங்கிக் கோர்த்தன.

விஷ்ணுசித்தர் பல்லாண்டு கானத்தைக் கேட்டிருந்த வண்டுகள் பலகோடி நூறாயிரமாகச் சேர்ந்து
குடையும் விசிறியுமாகி மாப்பிள்ளையின் முடிக்குமேலே இன்புற்றுப் பல்லாண்டு பாடின.
‘பத்ரம் தே’ என்று பல்லாண்டு ஆசாஸனம் செய்தார்.
“பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா” என்று பேசும் பாணி க்ரஹண அவஸரத்தில் சீதைப் பிராட்டியின்
பாணி க்ரஹண ச்லோகத்தை நினைத்து ‘என்னை முன்னே நிறுத்தி அரிமுகன் அச்சுதன் கைமேல் என் கை வைத்து ‘
என்று கனாக் கண்டாள். ஸ்வப்ன வதுவையில் மூன்று அவதாரங்களைச் சுட்டி அனுபவம்.

பர்ஹாத பத்ர ருவிம் ஆரசயந்தி —
மயில் தோகையாகும் சேஷத்வ ருசியைச் செய்கின்றன.
குடையின் சோபையை அடைகின்றன. குடைபோல சோபிக்கின்றன.
‘ருசி’ என்பதற்கு ஸாத்ருச்யம், சோபை, காந்தி, ஆசை முதலிய பொருள்கள் உண்டு.
எல்லாம் இங்கே கவியின் ருசியிலுள்ளன.

‘ஆ’ என்பதால் குடையின் நீட்டமும் அகலமும், நெடுமையும், ஆசையின் நீட்டமும் ஸூசிக்கப் படுகின்றன.
‘உஷ்ணம் தெரியாமல் காப்பத’ விசிறிக்கும் பொது. ஸ்வாரஸ்யாதிக்யத்திற்காக குடையென்னும் ரூடிப்பொருளை
ஒரு யோஜனையில் விட்டுவிட்டு யோகப்பொருளில் ருசியைக் கொண்டு வ்யஜனமென்றும் பொருள் கொள்ளலாம்.
சிரஸுக்கு மேலே விசிறி சுற்றவிட்டு சூட்டைப் போக்குவதைக் கண்டுளோம்.
ஆரண்யகரான ஈச்வரருக்கும் பூந்தோட்டக் கோதைக்கும் திருமண உத்சவத்தில்
தங்கள் ஈச்வரிக்கும் ப்ரிய ஸகிக்கும் மணாளனுக்கும் வண்டுகள் தாமே இப்பணிகளை ருசியுடன் செய்கின்றன.
எல்லா ப்ராணிகளுக்கும் ஈச்வரரும் ஈச்வரியும் பொதுதானே! தித்திரி பக்ஷிகள் ஆனந்தமாய்ப் பாடுகையில்
ஆனந்தமயப் பெருமாளையும் பக்ஷியாகவே பாடின. புச்சப்ரஹ்ம வாதத்தில் இந்த ரஸமில்லை.
பாடும் பக்ஷிகள் பெருமாளைப் பக்ஷியன்றென்று பாடுமோ?
‘ரஸோ வை ஸ:’ என்னும் ரஸ ப்ரகரணத்தில் ரஸத்தை விடுவரோ? (14)

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கோதா ஸூப்ரபாதம் / ஸ்ரீ கோதா ஸ்துதி / ஸ்ரீ கோதா பிரபத்தி / -ஸ்ரீ உ . வே . கோவிந்த ஸ்வாமிகள் –

January 10, 2021

ஸ்ரீ விஷ்ணு சித்த ஸூதே கோதே பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட ஜகதீ சித்ரி கர்தவ்யம் லோக ரக்ஷணம் -1-லோக ரக்ஷண அர்த்தமாக திருப்பள்ளி எழுச்சி

உத்திஷ்ட உத்திஷ்ட ஹே கோதே உத்திஷ்ட துளஸீ ஸூதே
உத்திஷ்ட லோக மாதஸ் த்வம் த்ரை லோக்யம் மங்களம் குரு -2-

மாத ஸமஸ்த ஜகதாம் வட வ்ருஷ தாமா
வஷஸ் ப்ரதேச ஸம் அலங்க ரணார்த மத்ய
த்வந் மௌலி பந்த ஸூர பீக்ருத சாரு மாலாம்
வாஞ்சன் ஹி திஷ்டதி தரே தவ ஸூ ப்ரபாதம் -3-

லோக ஜநநீ -வடபத்ர ஸாயி -சூடிக் கொடுக்கும் மாலைக்கு ஆசைப்பட்டுள்ளான் –
திருப்பள்ளி எழுந்து அருளுவாய் –

தவ ஸூப்ரபாதம் அருணாப்ஐ லோசனே
பவது ப்ரஸன்ன வதந இந்து மண்டலே
கிரி புத்ரி காதி வநித அபி ரர்சிதே
வர ரங்க நாத தயிதே தயா நிதே –4—தேவ ஸ்த்ரீகளால் பூஜிக்கப் பட்டவள்

திக்மாம் சுனா விகசி தானி மநோ ஹராணி
பத்மா தளாநி குமுதானி நிமீலி தானி
கூஜந்தி கோகில கணா ஸூக ஸாரி காத்யா
ஸ்ரீ விஷ்ணு சித்த தனயே தவ ஸூ ப்ரபாதம் -5-

தாமரை மலர்கள் சூரியனால் அலர்த்தப்பட்டன -ஆம்பல் மலர்கள் கூடி விட்டன -குயில் இனங்கள் கூவுகின்றன –
கிளி சாரிகைகள் ஸப்திக்கின்றன -நல் விடிவு ஆகட்டும் –

ஸத் மாந்த ரேஷு நிவஸ வ்ரஜ கன்ய காத்யா
ஸ்வர்ணாதி பூஷண கரா ததி மந்தனேந
ஸ்ரோத்ராஸ்ர யோத்யந துகிம் மது ரோர வஸ்தே
ஸ்ரீ விஷ்ணு சித்த தனயே தவ ஸூ ப்ரபாதம் –6-

அருகில் வசிக்கும் இடைப்பெண்கள்- வாஸ நறும் குழல் ஆய்ச்சியர் தங்க மயமான வளையல்கள்
அணிந்த கைகளினால் தயிர் கடையும் இனிமையான த்வனி உனது காதில் விழ வில்லையோ –
நல் விடிவு ஆகட்டும் –

பட்டரா காதி முனய சமுபாஸ்ய ஸந்த்யாம்
ஷீராதி பக்வ பல ஹஸ்த தரா மஹாந்த
த்வத் தேஹ போஷண ரதா கலு தாதவர்கா
திஷ்டந்தி தேவிவ ஸூ தே தவ ஸூ ப்ரபாதம் –7-

பெரியாழ்வார் முதலான முனிவர்கள் ஸந்த்யாவந்தனத்தை அனுஷ்ட்டித்து விட்டு
உன் தேஹ போஷணத்தில் ஆசை உடையவர்களாக தகப்பன்மார்கள் ஆகையால் பால் பழம் முதலான
வஸ்துக்களுடன் வந்து நிற்கின்றார்கள் -ஓ பூமிப்பிராட்டியே உனக்கு நல்விடிவு ஆகட்டும் –

வைகான ஸா க்ய வர வம்ஸ ஸூ ஜாத விப்ரா
ஸ்ரீ மல்லி காதி ஸூ மநோ ஹர புஷ்பகாணி
ஆதாய பாத யுகம் அர்ச்சயிதும் ப்ரபந்நா
ஸ்ரீ விஷ்ணு சித்த தனயே தவ ஸூ ப்ரபாதம் –8-

வைகானஸ வம்ஸர்-ப்ராஹ்மண உத்தமர் -அர்ச்சகர்கள் -உன் திருவடிகளை அர்ச்சிக்க
மல்லிகை முதலிய மலர்கள் கொண்டு –

ஸ்ரீ மத் த்ரி வேணி வர தீர்த கடான் வஹந்த
த்வன் மஜ்ஜனார்த மதுநாத்ர ஸமாக தாஸ்ச
த்வத் கிங்கரா ப்ரிய தமா ஸூவி ஸூத்த பாவா
திஷ்டந்தி தேவி வஸூ தே தவ ஸூ ப்ரபாதம் –9-திரு முக்குள தீர்த்தம் திருமஞ்சனத்துக்கு

ஸ்ரீ தர்ம நாம வர சைல ஸூரம்ய ஸாநவ்
ஸ்ரீ சம்பகாக்ய வன ஸோபித தேச மத்யே
ஸ்ரீ தன்வினவ்யவர பத்தன வாஸ ஸீலே
ஸ்ரீ விஷ்ணு சித்த தனயே தவ ஸூ ப்ரபாதம் –10-
சம்பகாரண்ய வானம் சூழ்ந்த தாழ்வரையில் ஸ்ரீ வில்லி புத்தூரில் நித்ய வாஸம்

ஸ்ரீ பட்ட நாத க்ருத க்ருத்ரிம கானநேது
ஸ்ரீ வைஜயந்தி தரு மூல ஸூரம்யதேசே
ஸ்ரீ மத் குலீர குஜ வாஸர பல்குனி பே
ஸஞ்ஜாத தேவி வரதே தவ ஸூ ப்ரபாதம் –11-
திருத் துளஸீ அடியிலே ஆடி செவ்வாய் திருப்பூர நக்ஷத்ர திரு அவதாரம்

பஞ்சானனாதி சக்களத்தி விவர்தமானா
அத்ராக தாத்ய விபுதா தயிதா சமேதா
த்வத் தர்சநோத் ஸூக மநா ஸூ க்ருதாபி லாஷா
திஷ்டந்தி தேவி வஸூதே தவ ஸூ ப்ரபாதம் –12-சிவாதி தேவர்களின் தேவிமார்கள் உடன் வந்துள்ளார்கள்

ஸூர்யேந்து பவ்ம புத வாக்பதி ஸூக்ர மந்தா
மோஷாதி ராஸி பத யோ த்வஐ ராஹ வாத்யா
ஸ்ரீ தன்வி நவ்ய நகரம் சமுபாக தாஸ்து
த்வாம் ஆஸ்யந்தி வஸூதே தவ ஸூப்ர பாதம் –13-மேஷம் முதலான ராசிகளுக்கு அதிபதிகள் உன்னை ஆஸ்ரயிக்கிறார்கள்

ஸ்ரீ வல்ல பாக்ய வர ராஜ மஹாதி ராஜ
ஸ்ரீ சோழ ராஜ ந்ரு வரா கலு கேரளாத்யா
மாணிக்ய கோடி மகுடா தவ பாத பத்மம்
தேவ்ய ஆஸ்ரயந்தி வஸூதே தவ ஸூ ப்ரபாதம் –14-

ஸ்ரீ வல்லப தேவ பாண்டியன் -சோழ சேர மஹாராஜர்கள் க்ரீடங்களை திருவடித் தாமரைகளில்
தாழ்த்து ஆஸ்ரயிக்கிறார்கள்

ஸ்ரீ மந் வநாத்ரி வர வேங்கட சைல அரங்க
ஸ்ரீ கிருஷ்ண பத்தன வராதி நிவாஸ தேவா
த்வன் மங்கள யுக்தி மதுரை அபக்ருஷ்ட சித்தா
திஷ்டந்தி தேவி வஸூ தே தவ ஸூ ப்ரபாதம் –15-
திருமலை -திரு மாலிருஞ்சோலை திருக்கண்ண புரம் ஸ்ரீ ரெங்கம் முதலான திவ்ய தேச எம்பெருமான்கள்
தேவரீருடைய மங்களா சாசன பாசுரங்களினால் அபஹரிக்கப் பட்ட திரு உள்ளத்தை கொண்டுள்ளார்கள் –

ஸ்ரீ த்வாரகா ஸூ மதுரா வ்ரஜ பத்த நாதி
ப்ருந்தாடவீ நிவஸநா ஹரயோது நாத்ர
த்வத் திவ்ய ஸூக்தி மதுரை பரி துஷ்ட சித்தா
திஷ்டந்தி தேவி வஸூதே தவ ஸூ ப்ரபாதம் –16-

ஸ்ரீ வடமதுரை ஸ்ரீ மத் த்வாரகை ஸ்ரீ ஆயர்பாடி ஸ்ரீ பிருந்தாவனம் -முதலிய திவ்ய தேச
எம்பெருமான்கள் தேவரீருடைய திவ்ய ஸூ க்திகளினால் மிகுந்த ஸந்தோஷத்தை அடைகிறார்கள் –

வாசா ஸூ தத்த ஸூ கடாஹ ஸூ தான்ன பூர்ண
ஸ்ரீ ஸூ ந்தராக்ய ந்ருபதி ஸ்வ தலம் விஹாய
தர் மாத்ரி சானுமகமத் தவ தர்ச நார்தம்
ஸ்ரீ விஷ்ணு சித்த தனயே தவ ஸூப்ரபாதம் -17-

தேவரீர் திருவாக்கினால் சமர்ப்பிக்கப் பற்ற நூறு தடா அக்கார அடிசிலினால் மிக்க திருப்தி அடைந்த அழகர்
தன்னுடைய திருமாலிருஞ்சோலை திருமலையையும் விட்டு உன்னைக் காணும் ஆசையினால்
ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகிலே உள்ள தர்மாதிரியின் அடிவாரத்திலே எழுந்து அருளி உள்ளார் –

தங்கால பூதர நிவாஸ ரமா நிவாஸ
அத்ராகதோய மதுநா கருடாதி ரூட
த்வத் திவ்ய வக்த்ர கமலம் அவலோக நார்தம்
ஸ்ரீ விஷ்ணு சித்த தனயே தவ ஸூ ப்ரபாதம் –18-

உமது தாமரை போன்ற திருமுகத்தைக் காணும் ஆசையினால் திருத்தண்கால் திருமலையில்
நித்ய வாசம் செய்து அருளும் இன்பெருமான் கருடாரூடனாய் கொண்டு எழுந்து அருளி உள்ளார் –

ஸ்ரீ வேங்கடாசல நிவாஸ ரமா நிவாஸ
த்வத் புக்த மால்ய ஸூரபீ க்ருத திவ்ய காத்ர
சைலேது திஷ்டதி தரே தவ ஸூ ப்ரபாதம் –19-

திருவேங்கட மலையில் உறையும் அலர் மேல் மங்கை உறை மார்பன் உமது சூடிக் களைந்த மாலையை
சூடிக் கொண்டு அதனாலே மிகவும் பரிமிளிதமான திவ்ய மங்கள விக்ரஹம் கொண்டு
ஸ்ரீ வில்லி புத்தூர் சமீபத்திலே வடக்கே உள்ள சேஷாசலத்திலே எழுந்து அருளி விட்டார் –

இஷ்வாகு பூஜித ஹரி வர ரங்கநாத
த்வா முத்வ ஹார்த மதுநா கருடாதி ரூட
அத் ராக தோயம் அரவிந்த தளாய தாஷ
ஸ்ரீ விஷ்ணு சித்த தனயே தவ ஸூ ப்ரபாதம் –20-

இஷ்வாகு மஹா ராஜ வம்ஸ அரசர்களால் திருவாராதனம் செய்யப்பட ஸ்ரீ ரெங்கநாதன் -தாமரைக் கண்ணன் –
இங்கே கருடனில் ஆரோகணித்து உம்மைத் திருமணம் புரிந்து கைக்கொள்ள எழுந்து அருளி உள்ளார்
ஸ்ரீ பெரியாழ்வார் திருமகளாரே உமக்கு நாள் விடிவு ஆகட்டும் —

——–

ஸ்ரீ கோதா ஸ்துதி –

பஜ ஸுவ்ம்ய விமான தலே நிவஸம் வர ரங்க பதிம் வினதா தனயம்
அத பட்ட பதே தனயாம் வஸூதாம் கமலாமபராம் கருணா பரிதாம் –21-

ஸுவ்ம்ய விமானத்தில் எழுந்து அருளியுள்ள மற்ற ஒரு பிராட்டியோ என்னும்படி யானவளும் –
கருணை பொருந்தியவளுமான ஸ்ரீ பெரியாழ்வார் திருமகளான
ஸ்ரீ ஆண்டாளையும் ஸ்ரீ ரெங்க மன்னரையும் ஸ்ரீ வினதைச் சிறுவனையும் பூஜிக்கக் கடவீர் –

கிரிஜா வரவாணி புலோமா ஸூ தாதி சிரோமணி பாத யுகே வஸூ தே
துளஸீ வனஜே குண வாரி நிதே யதிராஜா ஸஹோதரி பாலயமாம் –22-

துளஸீ வனத்தில் திரு அவதரித்தவளும் -குணக்கடலும் -பார்வதி சரஸ்வதி இந்திராணி
முதலானவர்களுடைய ஸிரோ ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்ட திருவடி யுடையவளும்
யதிராஜ ஸஹோதரியுமான பூமி தேவியே அடியேனை ரசிக்கக் கடவாய் –

அயித் விஜ நந்தினி ரங்கி குடும்பினி விஸ்வ ஸூர ரஷிணி நந்தனஜே
யதுகுல வாரித சந்த்ர ஸூ ஸோபிணி விஷ்ணு மனஸ்தித விப்ர ஸூதே
உபநிஷதம்புதி மந்தன சம்பவ சங்கத ஸஞ்சித ஸூக்தி கரி
ஜய ஜய ஹே யதிராஜ ஸஹோதரி கிருஷ்ண விநோதினி தே விதரே –23-

ஸ்ரீ பெரியாழ்வாருக்கு மிகுந்த ஸந்தோஷம் உண்டுபண்ணுபவரும் ஸ்ரீ ரெங்கநாதனுடைய திவ்ய மஹிஷியாயும் –
ஸமஸ்த ரக்ஷகராயும் – ஸ்ரீ துளஸீ வனத்தில் திரு அவதரித்து அருளி ஆயர் குலத்தை ஆஸ்தானம் பண்ணி அருளுபவளும் –
ஸ்ரீ விஷ்ணு சித்தர் திருமகளாயும் உபநிஷத் சமுத்திரம் கடைந்து திருப்பாவை அம்ருதம் வழங்கியவளும் –
ஸ்ரீ கிருஷ்ணனுக்கு பிரியதமமாய் இருப்பவளும் யதிராஜ ஸஹோதரியுமான பூமிப் பிராட்டியே நீ ஜெயத்துடன் விளங்குவாயாக –

வட தரு ஸோபித தேச வரே ஸ்தித தேவ வரே த்ருட பக்தி யுதே
நிஐ கச தாரித மால்யக பந்தித வாசித ரங்க பதேர் தயிதே
யதுகுல நந்தன சங்கம காமினி சாபர வவ் க்ருத மஜ்ஜனகே
ஜய ஜய ஹே யதிராஜ ஸஹோதரி கிருஷ்ண விநோதினி தேவி தரே –24-

ஆல மரங்கள் சூழ்ந்த சோபை மிக்க பிரதேசம் -வட பெரும் கோயில் உடையான் இடம் மிகுந்த பக்தி உடையவள் –
சூடிக் கொடுத்த மாலை சூடி அதனாலே வாசனை மிக்க ஸ்ரீ ரெங்க ராஜதானி உடைய ஸ்ரீ ரெங்கநாதன் மஹிஷி –
யாதவ குல விளக்கான கண்ணனை அடைய நீராட்டம் அனுஷ்டித்து அவனை மகிழப் பண்ணியவள் –
யதிராஜ ஸஹோதரி -பூமிப்பிராட்டியே நீர் ஐயத்துடன் விளங்குவாய் –

விநா விஷ்ணு சித்தஸ்ய புத்ரீம் கதிர் நோ
ஸதா விஷ்ணு சித்தஸ்ய புத்ரீம் ஸ்மராமி
ஸ்திரே விஷ்ணு சித்தஸ்ய புத்ரி ப்ரஸீத
ப்ரியம் விஷ்ணு சித்தஸ்ய புத்ரி ப்ரயச்ச –25-

உம்மைத் தவிர வேறு கதி உடையோம் அல்லோம் -எப்பொழுதும் ஸ்மரிக்கிறோம் –
கிருபை செய்து கைக் கொண்டு ப்ரீதி காரித கைங்கர்யங்களும் அருள வேண்டும் –

நாளாபி தே ஸமே ஸூபே திவாகரேச கர்கடே
சுதா கரேச பூர்வ பல்குநீ யுதே குஜே தினே
துளஸ் யனர்த கானேன வஸூந்தர அம்ச சம்பவாம்
வர ப்ரதாம் பஜே நிஸம் வடேஸ் வரேஸ்ய நாயிகாம் –26-

நள வருஷம் -ஆடி மாசம் -செவ்வாய் கிழமை -திருப்பூர நக்ஷத்ரம் -திருத் துளஸீ வனத்தில்
ஸ்ரீ பூமா தேவி அம்சம் -ஸமஸ்த அபீஷ்டங்கள் அருளுபவள் –
வட பெரும் கோயிலுடையான் திவ்ய மஹிஷி -ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரை பூஜிப்போம் –

——-

ஸ்ரீ கோதா பிரபத்தி –

ஸ்யாமாம் கமல பத்ராஷிம் லஷ்மணார்ய அநுஜாம் மஹீம்
தேவீம் கோதாம் அஹம் வந்தே ரெங்க நாதஸ்ய நாயிகாம் –27-

தன்வினவ்ய புரே ஜாதாம் தனுர் மாச வ்ரதோத்ஸூகாம்
விஷ்ணு சித்த ஸூதாம் வந்தே கிருஷ்ண பக்தி ஸமந்விதம் -28-

நந்த கோப ஸூதம் மத்வா வட மூல நிவாஸினம்
தனுஷ்மந் நூதன புரம் ஸ்ரீ கோப புரமேவச –29-

த்விஜ ராஜ குலே ஜாதாம் வ்ரஜ கன்யா அநு காரிணீம்
உபாஸ்மஹே ஸதாம் கோதாம் வ்ரதம் ஆசரிதம் யயா –30-

த்ரி ஸத்வாரிம் ச ததிகம் காதானாம் ச சதம் துயா
சக்ரே நிஜாப தேஸேன வந்தே தாம் வஸூ தாம் ஸஜாம் –31-
நாச்சியார் -தனது திருநாமம் கிட்டே 142 பாசுரங்கள் அருளிச் செய்த
ஸ்ரீ பூமா தேவி அம்சமான ஆண்டாளை வணங்குகிறேன் –

ஸர்வ உபநிஷத் ஸாரா த்ரிம் ஸத் காதாய யாக்ருதா
தாம் வந்தே வஸூதாம் கோதாம் ஸர்வ ஸுவ்பாக்ய தாயகாம் –32-திருப்பாவை முப்பதும் உபநிஷத் சாரம் தானே –

ஸ்ரீ விஷ்ணு சித்த தனயாம் ஸ்ரித பாரிஜாதாம்
ஷித்யம்ச ஸம்பவ வராம் கமலாமி வாந்யாம்
ஸ்ரீ ரெங்கராஜ மஹிஷீம் நவ பத்த நஸ்தாம்
கோதாம் அநந்ய சரண சரணம் ப்ரபத்யே –33-ஆஸ்ரிதர்களுக்கு பாரிஜாதம் –

மல்லி தேச வர்தமான தன்விநவ்ய பத்தநே
பக்த பாலநோத்யதாமி ஹாக தாமிமாம் மஹீம்
வடாக்ய வ்ருஷ ஸாயிநே ஸ்வீய முக்த மால்யதாம்
விஷ்ணு சித்த புத்ரிகாம் அஹம் பஜே ஸூப்ரபாதம் –34-

ஹித்வா வைகுண்ட போகம் நிரதிசய ஸூகம் பிரம்ம ருத்ராத் யலப்யம்
நித்யைர் முக்தைச் ச ஸேவ்யம் புத வர விதிதம் ஸாஸ்வதம் பக்த கம்யம்
ஸ்ரீ பாண்ட்யே பூமி லோகே பிரதித யஸஸா யாகதா தன்வினவ்யம்
ஸா கோதா ரக்ஷது நோ ஹிம கர வதனா விஷ்ணு சித்தஸ்ய புத்ரீ –35-

கோதா ரக்ஷதுநோ ஜக த்ரய ஹிதா கோதாம் உதார அம்பஜே
சித்தே திஷ்டது கோதாயா ஸஹரி கிருஷ்ணஸ்துமே மாதவ
கோதாயை ஸததம் நமோஸ்து ஜகதாம் மாத்ரைஷ்ட தாயை நம
கோதாயா கலு காஸ்தி வத்ஸலதமா மத்யே மஹிஷ்யா ஹரே –36–

கோதாயா சரணாம் புஜம்து மனஸா த்யாத்வாது யஸ் திஷ்டதி
ஸோஹி க்ஷேமம் அவாப்னுயாதிஹ பரே முக்திம் ச நான்யத் த்ருவம்
கோதா யாம் த்வயி பக்தி லேச ரஹிதம் தோஷேரதம் துர்ஜனம்
ஹே கோதே வரதே ஸ்ரி தார்த்தி ஹரிணி ஸர்வம் ஸஹே ரக்ஷமாம் –37-

ஸ்ரீ மத் ஸுவ்ம்ய முனிம் வரம் குரு வரம் நத்வாது லோகார்யகம்
ஈஸானீம் திஸமாஸ்ரிதம் ச கருடன் ஸ்ரீ கோபுர த்வாரகம்
ஸ்ரீ மத் ஹஸ்தி யுதாம் ப்ரசன்ன வதனாம் லஷ்மீம் ச ராம ப்ரபும்
ஸீதா லஷ்மண ஸேவிதம் ச கமலா வாஸம் ச காம்ய ப்ரதம்–38-

ஸ்ரீ பூமீ ஸஹிதம் வனாத்ரி நிவஸம் ஸ்ரீ ஸூ ந்தராக்யம் ந்ருபம்
கோதா தாத ஸூ பூஷி தம்ச கமலா நாதம் ச சைன்யேஸ்வரம்
கோதா தர்பண தீர்த்த மத்புத வரம் தார்ஷ்ம்யம் ச வேதாத்மகம்
கோபாலா கோபாலா பித பூப திம்ச வஸுதாம் கோதாம் உதாராம் பஜே –39-

ஸ்ரீ மத் தன்வி நவீன பத்தன வரே ப்ரக்யாத கீர்த்யாயுத
ஸ்ரீ மச் சைல கிடாம்பி ஸூரி குலஜ ஸ்ரீ சைல ஸூரே ஸூத
ஸர்வ அபீஷ்ட பல ப்ரதம் விஜயதம் கோதா ப்ரபோத ஸ்த்வம்
கோதா ப்ரீதி கரம் முதாஸ க்ருதவான் கோவிந்த நாமா கவி –40-

———-

ஸ்ரீ கோதா மங்களம்

வேண் வாக்ய வம்ஸ ஸம்பூத பட்ட நாத சுதே தரே
துளஸீ வனஜே தேவி ஹே கோதே தவ மங்களம் –41-

ரம்ய ஜாமாத்ரு தேவஸ்ய வல்லபே மஹிஷீ வரே
நீலோத் பல தளஸ் யாமே ஹே கோதே தவ மங்களம் –42-

த்விஜ ராஜ ஸூதே கோதே கோபீ கன்ய அநு காரிணி
ஸ்ரீ ராமானுஜ யோகீந்த்ரா வரஜே தவ மங்களம் –43-

நந்த கோப ஸூதம் த்யாத்வா லோக உஜ்ஜீவன ஹேதுநா
வ்ரத கர்மாத்ய நுஷ்டாத்ர்யை கோதாயை நித்ய மங்களம் –44-

ஸ்ரீ சைலார்ய தநூஜேந கோவிந்தேந க்ருதாத்வியம்
விஷ்ணு சித்த தநூஜாய மங்களா வளி ரேததாம் –45-

ஸ்ரீ தன்வி நவ்ய புராபிஜன கிடாம்பி குல திலக ஸ்ரீ சைலார்ய தநூஜ
ஸ்ரீ வைஷ்ணவ கவி கோகிலம் ஆஸூ கவி கோவிந்தார்ய க்ருதி ஷு
ஸ்ரீ கோதா ஸூ ப்ரபாதம் சம்பூர்ணம் –

——————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ உ . வே . கோவிந்த ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை சாரம் – ஸ்ரீ. உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி உபன்யாசத்தில் முத்துக்கள்.-

December 24, 2020

பேடிகா விபாகம்.
ஐந்தினோடு பத்துமொரு மூன்றும் பதியொன்றும்
தந்தநம் கோதை திருப்பாவை– அந்தமோடு
ஒன்றுமாய முப்பதும் எப்போதும் செப்பவே
ஒன்றுமவள் பேறு நமக்கு.

முதல் பாசுரம் – ஆண்டாள் பஞ்ச நாராயண பிரதிஷ்டை :
ஸ்வாமி எம்பெருமானார் , கிருமிகண்ட சோழன் உபத்தரவம் பொறுக்க மாட்டாமல் மேல்நாட்டில் எழுந்தருளி
இருந்த காலத்தில் பிட்டிதேவன் என்கிற விஷ்ணுவர்த்தனான ஹொய்சள மன்னரின் உதவியோடு
1-தலக்காடு கீர்த்தி நாராயணன்
2-தொண்டனூர் நம்பி நாராயணன்
3-மேலகோட்டை திரு நாராயணன்
4-பேலூர் கேசவ நாராயணன்
5-கடக வீர நாராயணன்
என்பதான பஞ்ச நாராயண க்ஷேத்ரங்களை பிரதிஷ்டாபித்தார் என்பது வரலாறு.
கோயில் அண்ணரான இராமானுஜர் எவ்வழி அவ்வழியில் தங்கையான ஆண்டாளும் இந்த பாசுரத்தில்
1-கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் நாராயணன்
2-ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் நாராயணன்
3-கார்மேனி நாராயணன்
4-செங்கண் நாராயணன்
5-கதிர் மதியம் போல் முகத்த நாராயணன்
ஆகிய பஞ்ச நாராயணர்களை பிரதிஷ்டாபனம் பண்ணுகிறாள் என்பதை யுக்தி ரசத்தோடு பார்க்கலாம்.

1-கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் -;
திருமந்திரார்த்த பிரதனான ஆச்சாரியனைச் சொல்லும். எப்படி என்றால் தனக்கு விதேயனாக இருக்கிற
கண்ணனெம்பெருமானை ரக்ஷிக்க வேண்டி , கூரிய வேலை பிடித்தவன் நந்தகோபன். ஆசாரியனும்,
பகவத் ரக்ஷண தத்பரர் ஆகையால், பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையர். இவருடைய மங்களாஸாசன தத்பரத்தையே இவர்கைவேல்.
திருமந்திரம் இவருக்கு விதேயமாய் சிஷ்யனுடைய ஆத்ம ரக்ஷணத்தில் காரியம் செய்கையாலும்,
நந்தித்தவமும் கோப்திருத்வமும் இவருக்கும் உண்டு ஆகையால் நந்தகோபன் குமரன் நாராயணன் என்றபடி.

2-ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் நாராயணன் -;
என்பது கண்ணியாக உள்ள துவய மந்திர பிரதிபாத்யன் நாராயணன் என்றபடி. கண்ணனுடைய பிரதாபங்கள் எல்லாம்
யசோதை இடத்திலாய், அவள் கண்வட்டத்துள் நின்று அகலாது முந்தாணையில் முடியாலாம்பட்டி இருக்கிற தன்மைகொண்டு –
ஆசாரியன் கைபுகுந்தவாறே திருமந்திரம் கை புகுரும் என்ற கணக்கிலே மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்துவான
நாராயணனைச் சொல்லுகிறது இத்தால்.

3-கார்மேனி நாராயணன் -;
என்றது மேகத்தைப்போல் இன்னார் இனையார் என்று பார்க்காது , அவர்கள் இருக்கிற இடம் சென்று வர்ஷிக்கிற
வர்ஷாகால மேகத்தைப்போலேயான ஒளதார்யமும், சௌலப்யமும் சொல்லிற்று.
நீர் அந்த்ரேண சம்ஸ்லேய : என்று மழைநீர் அது விழுகிற இடத்தின் தன்மையை –
செம்மண் பூமியானால் செந்நிறமும், பால்நிற பூமியானால் பால் நிறமும் பெறுவதுபோல –
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது உம்பி எம்பி என்று தோழமை கொண்டதும்,
மாடு கன்றுகளோடும், இடையர்களோடும் பொறையற கலக்கின்ற சௌசீல்யகுணத்தையும் சொல்லிற்று எனலாம்.

4-செங்கண் நாராயணன் -;
என்றது செவ்வரியோடிய நீண்டவப் பெரியவாய கண்கள் என்று ஸ்வாமித்வ, ஸ்ரீமத்வ சூசகங்கள். மையகண்ணாள் என்று பிராட்டியையும்,
செய்யக்கோல தடங்கண்ணன் என்று ஸ்ரீயப்பதித்தவமும், ஸ்ரீமத்வமும் இறே இவனுக்கு நிரூபணங்கள்.
இந்த ஸ்வாமித்வ, சௌலப்ய, சௌசீல்யாதிகள் அல்லவோ ஆஸ்ருத ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதக குணங்கள்?

5-கதிர் மதியம் போல் முகத்த நாராயணன் -;
என்றது தண்ணளியும், பிரகாசமும் ஒருங்கேயான ஸ்வாமித்வ, சக்தி சாமர்த்தியாதி களுக்கு உப லக்ஷணம்.
இவை ஆஸ்ருத காரிய ஆபாதக குணங்களாய் நாராயண ஸப்தார்த்த குண போக்யதைகளையும் சொல்லிற்று.

அப்படிப்பட்ட நாராயணனே
மந்திரத்திலும், மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும், மந்திர பிரதனான ஆசாரியன் பாக்கலிலும் பிரேமம்
கனக்க உண்டான நமக்கே ஸ்வரூபனுரூபமான கைங்கர்யமாகிற பறை தருவான் என்கிறது இப்பாசுரத்தில்.

———-

4-ஊழி முதல்வன் :
பொன்னை மெழுகொற்றி தேற்றுமா போலேயாய்
தன்னைக் கொடு தரணி எல்லாமும் — முன்னை போல்
தான் தோற்று மஃது சம நோக்கே! ஊன் உயிர்
கண்ஏற்றல் ஆம்தனி நோக்கு.

நாராயணனே நமக்கே பறை – தண்டுழாய் நமகன்றி நல்கான் – தனி நோக்கு – (விஷம) வியஷ்டி ஸ்ருஷ்டி
நாமும்-நாங்கள்-நாங்களும் மார்கழி நீராட – பொது நோக்கு – ஸமஷ்டி ஸ்ருஷ்டி.

———-

5-தூயோமாய் வந்து தூய பெருநீர் தூமலர் தூய் :

தன் கை கால் மெய் வாயும் கொடு அளைந்த காளிந்தி
போன்கரணம் மூன்றும் கொடு கண்ணன் — தன் நினைவால்
எண்ணம் மொழி செய்கை ஒன்றிச் செய் கிரியை
வண்ணம் அழகிய பூ நாறு.

———-

6. பிள்ளாய் :
கற்றதன்றி உற்றத வன்னடியார்க் காள் எற்றோ ?
பெற்ற பரமன் நமை உடைத்தாய் — மற்றையார்
விற்கவும் பாற்றென போக்க இசைந்தது
ஏற்கை நம என்பார் சாற்று.

———

7. கலந்து பேசின பேச்சரவம் :
வதரிவான் வைகுந்தம் பார்த்தன்தேர் முன்னாய்
கதிரொளி மால் கண்ணன் கேசவனன் — றோதிய
மெய்மைப் பெரு வார்த்தை ஒவ்வொன்றும் மால் மாறன்
வாய் மொழிக் குள்ளாதல் கொள்ளு.

———

8. வந்து நின்றோம் :
காசை இழந்தவன் பொன்னை இழந்தவன்
ஆசை மணியை இழந்தவன் — பேச நின்ற
மால் நிற்க பத்தர் பரவுவார், வீடணன் போல்
கோல் கொழுந்த தற்றே அவர்.

———-

9. பாகவத ஸம்பந்தம் ஸ்வதந்திரோபாயம்:
இருகால் விலங்கு இறகுடை பட்சி
ஒருகால் திருமால் அடியார் — அருள் நோக்
கிலக்கதேல் ஞான மநுட்டான மில்லா
நிலையரேனும் சேரும்மால் வீடு.

——–

9. மாமன் மக்களே :உனக்கே நாம் ஆட்செய்வோம் என்று தொடங்கி
உனக்கும் உனதடிய ராவார் — தமக்குமாய் பின்
மாலே! உனதடியார் பாலேயாய் கோலுமது
ஏலுவதும் என்கொள் குறிப்பு?

ஆசார்ய ருசி பரி கிருஹீத பகவத் சேஷத்வத்திலே இழிந்தவாரே பகவத் பாகவத கைங்கர்யமாகிற
ஈரஅரசு படுதல் தேட்டமேலும் அதுக்கு எல்லை நிலமான ததீயத்வேக சேஷனாகை எம்பிரார்க்கு இனியவாறே.

———-

10. ஆற்ற அனந்தல் :
ஆறும் அடைவும் அவன் தாள் எனவாகக்
கூறும் நினைவும் உறுதியும் — பேறெனத்
தேறி அதன் வழி வாழு நற் சோம்பர்
உறவும் முறையும் விழைவு.

———-

11. பொற்கொடி :
தனக்கும் பிறர்க்குமாய் அன்றி உறவு
எனக்கு நீயே அன்றோ? எனவாய் — புனக்காயா
மேனி புனிதன் புணர்தியில் ஆம் உணர்த்திக்
கானகூட்டு மாலடியார் மாட்டு.

————

12. மனத்துக் கினியானை அனைத்தில்லத்தாரும் அறிந்து :
பெண்ணுக்கும், பேதைக்கும் ஞான பக்தி கார்மிகர்க்கும்
நண்ணித் தொழுவார்க்கும் நண்ணல் — விழையார்க்கும்
அண்ணல் இராமா நுசனை இராமனும் போல்
எண்ண இனிக்கும் உளம்.

மண்டோதரி, தாரை, சூர்பணகை ஆகிய பெண்களின் மனத்துக்கு இனியர் பெருமாள் .
திரிபுராதேவி, கொங்கில் பிராட்டி, திருக்கோளூர் பெண்பிள்ளை ஆகிய பெண்சிஷ்யைகள் மனத்துக்கு இனியர் ராமாநுசர்.
பேதையர்களான வானர ஜாதிக்கும், பட்சி ஜாதியான ஜடாயுவுக்கும், திர்யக்கான அணிலுக்கும் மனத்துக்கு இனியர் பெருமாள்.
பேதையான ஒரு ஊமையின் தலையில் தன்திருவடி ஸ்பர்சம் செய்வித்து இனியரானார் ராமாநுசர்.
சத்யேந லோகாந் ஜயதி, தானேந தீன : என்று சகல மநுஜ மனோஹாரி பெருமாள்.
ஞானிகளை ஶ்ரீபாஷ்யம் கொண்டும், பக்தர்களை சரணாகதி சாஸ்திரம் கொண்டும், அநுஷ்டான பிரதராய் கர்மயோகிகளுக்கும் ஸ்வஜன பிரியர் ராமாநுசர்.
அன்னு சராசரங்களை வைகுந்தத்து ஏத்தி என்று சாமான்யர்களுக்கு இனியர் பெருமாள்.
ஆசை உடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் கூறுமென்று வரம்பறுத்த பெருமாளாய் ஜகதாசார்யர் ஆனார் ராமாநுசர்.
சத்ரு சைன்ய பிரதாபர் என்கிற விருது பெற்ற பெருமாள் ராவண, மாரீசாதிகளின் புகழ்சிக்கு விஷயமானவர் பெருமாள்.
அப்பொழுது ஒரு சிந்தை செய்து- யாதவபரகாசன், யஞ்ஞமூர்தி போன்ற பரபக்ஷ வாதிகளை சிஷ்ய பிரந்தமாக்கிய மனத்துக்கு இனியர் ராமாநுசர்.

இப்படி அனைத்து கொத்துக்கும் இனிய நற்செல்வன் ராமாநுசர்.
அவர் தங்கையான ஆண்டாள் கோயில் அண்ணர் பிரபாவம் பேசினபடி இது.

———-

13. கீர்த்திமை பாடிப் போய் :
ஆறும் பயனுமாய் தேறாது பாடிப்போம்
பேறு அதுவேயாய் கந்தல் — கழிந்தமை
கூறு மொரு நாலும் மூன்றும் இரண்டும் வான்
ஏற பரமனைப் போய்ப் பாடு.

அறம், பொருள், இன்பம், வீடு என்கிற புருஷார்த்த சதுஷ்டய கோஷ்டிக்கும்;
அர்த்தார்த்தி, ஜிக்ஞாஸு , ஞானிகளாகிய கோஷ்டி திரயத்துக்கும்;
முனிவர்களும், யோகிகளுமாகிற நித்ய, முக்த உபய கோஷ்டிக்கும்;
உண்ணும் சோறு பருகு நீர் எல்லாம் கண்ணன் – என்று ஆழ்வாருக்கு
திருக்கோளூர் எம்பெருமானும் என்னில் முன்னம் பாரித்து தான் என்னை முற்றப் பருகினானான் என்று
காட்கரையப்பனுக்கு ஆழ்வாருமாக அனன்ய சாபீஷ்ட்டா கோஷ்டிக்கும் உத்தேஸ்யம் இதுவேயாய்
இங்குத்தையார்க்கு பகவத் ஸன்னதிக்கு (திருப்பாவை ) பாடிப் போகையே பிரயோஜனம்.
அங்குத்தையார்க்கு பகவத் முக்கோலாசகர கைங்கர்யனுவர்தனமாகிற – போய்ப் (சாமகானம்) பாடுகையே பிரயோஜனம்.

————-

16. நென்னலே வாய் நேர்ந்தான் :
கூடி இருந்ததாம் காலத்து கண்ணன் தான்
தேடி உரைத்தவையே கொண்டு யாம் — நாடி வந்தோம்
நாயகநீ! கை நீட்டி ஆகாதென் ஓவாதே
நேய நிலைக் கதவம் நீக்கு.

பூ வராஹன் வார்த்தை – அஹம் ஸ்மராமி மத் பக்தம் – நாராயணனே நமக்க பறை என்கிற உபேய புத்தி அத்யவசாயத்தோடே வந்தோம்.
பெருமாள் வார்த்தை – தவாஸ்மி இதீச யாசதே ததாம் ஏதத் விரதம் – பரமனடிப் பாடி பாகவதேக உபாய புத்தியோடே வந்தோம்.
கீதாசார்யன் வார்த்தை – அஹம் துவா மோக்ஷ இஷ்யாமி மாஸுச : – நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்று உபாயாந்தரங்களை விட்டு வந்தோம்.
இப்படி பேற்றுக்கு துவரிக்கையும், உபய உபேய நிஷ்டையாகிற தூய்மையோடே வந்தோம் என்றவாறு.

விபவாவதார எம்பெருமான்கள் மட்டுமல்லாது, அர்ச்சாவதார பெருமாள்கள் மொழிந்தமை கேட்ட வந்தோம் என்பதை
நம்பெருமாள் வார்த்தை – அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ –
நீராட என்று பகவத் ஸம்ஸ்லேஷத்தையும்,
பாடி என்று மங்களாசாஸன தத்பரதையோடே ஸாலோக, ஸாமீப்ய ஸாயுஜ்யத்தை ஆஸாசித்து வந்தோம்.
மலையப்பன் வார்த்தை – தொண்டை மன்னவன் திண்திறல் ஒருவருக்கு வளங்கொள் மந்திரம் அருளிச் செய்தவாறு –
திருமந்திரத்தில் உள்ள நம பதத்தை பூர்வ உத்தர ஸ்தானாதிகளில் வைத்து பார்க்கிற வகையில்
ஓம் நம :
நமோந் நம :
நாராயணாய நம :
என்ற கணக்கிலே
நாராயணனே நமக்கே (1) என்றும்
நாராயணன் மூர்த்தி (7) என்றும்
நாற்றத்துழாய்முடி நாராயணன் (10) என்றும்
ஸ்வ சேஷத்வம் , அன்ய சேஷத்வம் கழிந்தவர்களாய் பகவத்தேக சேஷர்களாய் பாடிக்கொண்டு வந்தோம்.

தேவப் பெருமாள் ஆறு வார்த்தை – நாகணைமிசை நம்பரர் செல்வர் பெரியர் சிறுமானிட்டவர் நாம் செய்வதென்
வில்லிபுத்தூர் கோன் விட்டுசித்தன் வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே – என்ற கணக்கில்
பகவத் வசனங்களே யானாலும், கபிலாவதாரம், புத்தாவதாரம் போன்ற ஆழ்வார் ஆசார்யர்கள் கைக்கொள்ளாத
உபதேசங்களை கழித்து, எம்பெருமானார் மதித்த வார்த்தை என்று கொண்டு – உய்யுமாறு எண்ணி வந்தோம்.

இன்னும் திருமாலிருஞ்சோலை மலை அழகர் வார்த்தை – ராமானுஜ சம்பந்திகள் அகதிகள் அல்லர் என்றும்,
அவருடைய திருவடி சம்பந்தம் போலே திருமுடி சம்பந்தமும் உத்தாரகம் என்பதை வெளியிட்ட படியே
ராமானுஜ அனுயாயிகளாக – தனித்த தேட்டமாக அல்லாது, துணைத் தேட்டமாக வந்தோம்.

நாதமுனிகள் யோக சாஸ்திரத்தை குருகை காவலப்பனிடம் வைத்துப் போக்கி,
பிரபன்னாம்ருதமான திருவாய்மொழி மற்றும் ஏனைய ஆழ்வார்கள் பாசுரங்கள் 4000மும் அர்த்தத்தோடே
நம்மாழ்வாரிடம் பெற்றபடி உய்யக் கொண்டார் பக்கலில் கொடுத்து மணக்கால் நம்பி, ஆளவந்தார் வழி 74 மதகுகளைக் கொண்ட
வீராணம் ஏரியைப் போன்ற எம்பெருமானார் வரை சேர்த்த கணக்கிலே சாதன பக்தியைக் கழித்து, சித்தோபாயமான கண்ணனையே நாடி
விபவத்திலும், அர்ச்சையிலும் கண்ணன் தான் வாயமலர்ந்தருளிய படிக்கும்.
ஆழ்வார் ஆச்சார்யர்கள் காட்டிக் கொடுத்த படிக்குமாய் வந்தோம் வந்தோம் .

தூமலர் தூவித் தொழுது என்று உபாய புத்தி தியாகமும்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் என்று உபேயத்தில் களை அறுக்கையுமாக
நீராடம் – பாஹ்ய கரண சுத்தி
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க – ஆந்தர சுத்தி
ஆகிற தூய்மையோடே வந்தோம்.

நீ நேய நிலைக் கதவம் நீக்கு – என்று துவார சேஷிகள் காலில் விழுகிறாள் ஆண்டாள்.

————-

17. அறம் :

அம்பரமே தண்ணீரே சோறே அறம் கண்ணன்
எம்பெருமான் தம்மின் இரக்கமும் — அம்மனோய்!
செம்மை சேர் நற் தருமம் என்றாக செய்த வேள்வி
தன்மையார் நற் பேறும் அஃது.
வஸ்திர தானம், தீர்த்த தானம், அன்ன தானம் என்று வேண்டியவர்களுக்கு அத்தை கொடுத்ததைப் போல்
தாரக போஷக போக்கியம் எம்பெருமான் கண்ணன் என்றிருக்கிற எங்களுக்கு அவனைத் தந்தால் ஆகாதோ?-என்கிறார்கள்.
சாதன தர்மங்களைக் கொண்டு கண்ணனை அடைகையிலும், சித்த தர்மமான கண்ணனைக் கொண்டே அவனை அடைகை உத்தேச்யம்.
அவனைக் கொண்டு அவனை அடையாகிறது, அவனுடைய கிருபை வாத்சல்யத்துக்கு இலக்காகை.
ந சமஸ்ய கஸ்ச்சிது அப் அதிக குதோந்யோ? என்கிற ரீதியில், தனக்குத்தானே பிரதிபந்தியாய்,
தன்னை ஆஸ்ரயித்துள்ள குணங்களுக்கு இடையில் போட்டி இருந்தால், வெல்லுகிற குணம் தயையும், இரக்கமும் ஆம்.

ரக்ஷிக்கும் போது அதற்கு பிரதி பந்தகங்களான புண்ய பாபங்களைத் தொலைத்தே ஸ்வீகரிக்கிறான்
எம்பெருமான் என்பது புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபயிது – என்பதிலிருந்து தெரிகிறது.
அப்படி புண்ய பாபங்களை கழித்தலாவது
ஈஸ்வரன் அவைகளை தன் அஜ்ஞானத்துக்கு விஷயமாக்குகையும் காணாக் கண் வைகையும் என்பர்.
இப்படி கிருபை உயர்ந்து, அவனுடய ஞானத்துக்கு – அஜ்ஞானமாகிற கொத்தை தோஷமன்றோ என்னில்
அநிருஸம்சயமடியாக வருகிற எதுவும் அடிக்கழஞ்சு பெறும் .

ஆக , அதுவே பற்றாசாக சரணாகதியை அனுட்டித்தவர்கள் – செய்த வேள்வியராய், சித்த தர்மம் கை புந்தவாறே,
சாதன தர்மங்கள் பார்த்தியாஜ்யமோ என்றால்? அன்று.
பகவத் ப்ரீதிகாரித்த முக்கோலாச கார்யம் கைங்கர்யம் என்று பகவத் ஆநிருஸம்சயத்துக்கு விஷயமாய்
வர்ண தர்மம்,புருஷ தர்மம் புத்ர தர்மம் ஆகிய
சாமான்ய விசேஷத்தர விசேஷதம தர்மங்களை விடாதே பாலாபிஸந்தி இன்றி, கிருஷ்ணார்ப்பணம் என்கிற அளவிலே
அனுஷ்டித்துப் போர வேண்டுவது அவஸ்யாபேக்ஷித்தம் என்பதே இப்பாசுர ஸ்வாபதேசம்.

எம்பெருமான் நந்த கோபாலன் :

சுள்ளிக்கால் அன்ன அடியார் அவர் தலைவர்
உள்ளம் பெரியதன் போதமுடன் — எள்ளி நமைத்
தள்ளாதே கொள்ளும் தகைமை கொழு கொம்பாய்
வள்ளி மேய பந்தல் கிடத்து.

———

18-உந்து மத களிற்றன் பாசுரம்
பிராட்டியின் புருஷகார வைபவம் சொல்ல வந்தது. நாயகனாய் நின்ற பாசுரத்தில் துவார சேஷிகளின்
அனுமதியை பெறுவதன் மூலம் ஸ்தாநீகர்களை முன்னிட்டார்களாய் , பின் அம்பரமே தண்ணீரே பாசுரத்தில்
நந்தகோபன், யசோதை, நம்பி மூத்த பிரான் இவர்களை வேதம் வல்லார்கள் என்ற கணக்கிலே
அவர்களையும் முன்னிட்டுக் கொண்டு கண்ணனை துயிலெழுப்ப பார்க்க,
அது பிராட்டி புருஷகார வனந்தரம் மாகவேண்டி, அவனும் வாளா கிடந்தான் .

தூதோஹம் என்று சொன்ன திருவடி, பிராட்டி தரிசனவனந்தரம் தாசோஹம் என்றதும் அவள் ராவணன் விஷயமாக
செய்த மித்ர ஒளபயிதம் கர்த்தும் ஸ்தாநம் பரீப்ஸதா என்கிற உபதேசங்கள் அவனுக்கு பலித்ததாக கண்டில்லையாயினும் –
கண்ணனெம்பெருமான் தேர்த்தட்டில் சொன்ன வார்த்தை அருச்சனர்க்கு பலிக்காமல் –
மாயன் உரைக்கிடக்கும் உள்ளத்து எனக்கு (நான்முகன் திருவந்தாதி-50) என்று திருமழிசை ஆழ்வாருக்கு
எப்படி காரியகரமாயித்தோ – அதுபோல ஹநூமானுக்கு சேஷத்வ ஸ்வரூபத்தை உண்டாக்கி
பரீஷ்வங்கோ ஹநூமத : என்று ராம ஆலிங்கன பல பர்யந்தமாயிற்று.
பிராட்டி சன்னதியாலே காகம் தலை பெற்றது. அதில்லாமையால் ராவணன் மாண்டான் – இத்யாதி பிரபத்தி தர்மங்களை
மீறியதான தங்கள் தவற்றை ஆண்டாளும் கோபியர்களும் உணர்ந்து ,
கிருஷ்ணாவதாரத்தில் புருஷகார பூதையாக விளங்குகிற நப்பின்னை பிராட்டியைத் துயில் உணர்த்துகிறார்கள் இதில்.

இப்படி இந்த மூன்று பாசுரங்களுக்குமான சங்கதி அமைத்திருக்க, மூன்றிலுமே நந்த கோபனை பிரஸ்தாபித்தாளாய்
நாயகனாய் நின்ற நந்த கோபன் (16)
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் எம்பெருமான் நந்த கோபாலன் (17)
உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன் நந்த கோபாலன் (18)-என்பதாக அழைக்கிறாள் ஆண்டாள்.
எம்பெருமான் கண்ணன் வகுத்த சேஷியாய் இருக்க, நந்த கோபனை எம்பெருமான் என்றது,
பகவத் சமாஸ்ரயணசாலியான ஆசார்ய கிருதயத்தைக் பண்ணுவிப்பதைக் கொண்டு.
தேவு மற்று அறியேன் என்று இருக்கிற மதுரகவி, வடுக நம்பி நிலையில் நின்றவர்களுக்கு ஆச்சர்யனே பிரதம சேஷி அன்றோ?

நந்தன் என்றால் ஆனந்த வர்த்தகன். பகவத் குணானுபவ கைங்கர்யங்களில் எப்போதும் ஆழ்ந்தவர்களுக்கு
ஆனந்தத்தில் குறைவு இல்லையாய் நந்திதர் ஆவர் இவர்.
கோபன் ரக்ஷகன். தன்னை ஆஸ்ரயித்தவர்களுடைய ஆத்ம க்ஷேமத்தில் ஊன்றி இருப்பவராய்,
மங்களாஸாசனத்துக்கு அவர்களை ஆளாக்கும் இவருக்கு ரக்ஷகத்வம் ஸ்வாபாவிகம்.
அடுத்து , அம்பரமே, தண்ணீரே,சோறே அறம் செய்யும் நந்த கோபாலன் என்றது
அஹமன்னம் அஹமன்னம் என்பதான ஆத்ம வஸ்துவை சோறாக பகவானுக்கு சமைக்குமவர். அப்படி
எனக்காராவமுதாய் எந்தவியை இன்னுயிரை
மணக்காராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டொழியாய்
என்று போக்கிய உண்ணும்போது விக்கித் தடுமாறினால் தண்ணீர் குடிப்பது போல, பிராப்பியத்திலே வந்தால்,
என்னுடைய ஆனந்தத்துக்காக என்கிற ஸ்வபோக்த்ருத்வ புத்தியை விலக்குமவர்.
உண்டு பசியாறி அடைக்காய் திருத்துவது போலே , தேக விலக்ஷண சின்னங்களான ஆடை அலங்கார மேனிமினுக்கம் அம்பரம் –
அவையும் பகவானோட்டை உண்டான ராஜகுல மாஹாத்மியத்துக்காக என்னப் பாந்தம்.

இன்னும், உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன் நந்தகோபன் என்றது
அகங்கார செருக்காகிற மதம் கொண்டு வாதிட வரும் பரபக்ஷ வாதிகளுக்கு சளைக்காத ஞானாதிகர் ஆசாரியன் என்பதாக
கிருஷ்ணனோடு தங்களை சேர விடுதலாகிற கடக்க கிருத்யம் செய்ய வேண்டி நந்த கோபரை, ஆச்சாரியனாகவே ஆண்டாள் காட்டினபடி இவை.

————

19. குத்து விளக்கு :

தன்னையும் காட்டிபுறச் சூழலும் காட்டுவதாம்
மின்னனய நல் விளக்கு போல் ஆசான் — துன்னிருள்
நம்மின் துறத்துவனேல் அன்னை அவளுணர்த்த
தம்மின் வழி நடத்தும் மால்.

உன்னுடைய மைத்துனனை எங்கள் மணாளன் ஆக வேண்டும் படியாய் விசிறி கண்ணாடி அத்தோடு தந்து
எம்மை நீராட்ட வேண்டும் என்று நப்பின்னை பிராட்டியை பிரார்த்திப்பதாக அமைந்த பாசுரம்.
மாஸுச : என்றிருக்கிற பவனுடைய அபய ஹஸ்தம் தாமரைக் கை என்றால்
அவன் ஸ்வாதந்திரனாய் வந்தாய்ப் போல் வாராதான் ஆனபடியால் அதற்கு அஞ்ச வேண்டா என்கிற
பிராட்டியினுடைய கை செந்தாமரைக் கை ஆனபடி.
கேசவன் தமர் பதிகத்தில் ஆழ்வார் – மாசதிர் இது பெற்று நம்முடைய வாழ்வு வாய்கின்றவா – என்றதும்
ஸ்வ பிரயத்னத்தால் பகவானைக் கிட்டுவது இளிம்பு.
பாகவதேக உபாய நிஷ்டராய் அவனுடைய கிருபாதிசயத்தாலே அவனைக் கிட்டுவது சதிர்.
மா – பிராட்டி. அவள் கொடுக்கப் பெறுவது மா சதிர்
என்று காட்டினபடி உக்கமும் தட்டொளியும் தந்து உன்மணாளனையம் தந்து இப்போதே எம்மை நீராட்டு என்று
பிராட்டி பரிகாரமாய் நின்று பேசுகிறாள் ஆண்டாள்.

கோதா கீதையான திருப்பாவையும் – ஸ்ரீ கிருஷ்ண கீதையாம் பகவத் கீதையைப் போன்ற
அமைப்பைக் கொண்டு இருப்பது அதற்கான சிறப்பு. அதுதான் எங்கனே என்னில்?
குத்துவிளக்கு எரிய – ஞானம் பிரஜ்வலிக்கிறது என்ற பொருளில் ஒளி இருந்தால் இருட்டு போய்விடும்.
இங்கு சொல்லப்பட்ட இருட்டுதான் – அகவிருளும், புறவிருளும் . இத்தை போக்க
பொய்கையாழ்வார் ஏற்றிய விளக்கு – வருத்தும் புறவிருள் மாற்ற
பூதத்தாழ்வார் – இறைவனைக் காணும் இதயத்திருள் கெட
பேயாழ்வார் – கோவலூள் மாமலராள் கண்டமை காட்டும்
மூவர் ஏற்றிய ஜ்ஞான விளக்கு.

கீதாசார்யன் காட்டும் சோபான படிக்கட்டில்
படிக்கட்டு – 1
பகவத் ஸாட்சாத்காரத்துக்கு பிரதிபந்தகமாக உள்ள இதயத்திருள் கெட
நியதம் குரு கர்மத்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண : – கீதை 3.8.
அப்படி கர்மாநுஷ்டானங்களை விடாது செய்யச்செய்ய கர்ம யோகத்தில் வருவதற்கான –
தேஹ அதிரிக்த ஆத்ம ஞானம் மாகிற ஓடம் அநாதிகால பாபமாகிற கடலை தாண்டுவிக்கும்.
ஜ்ஞான ப்லவேநைவ வ்ரிஜினம் ஸந்தர்ஷயஸி – கீதை 4.36.
ஓடம் மறுகரைக்கு மீண்டுவிடுமோ என்று பயந்தாயே ஆகில்
ஞாநாக்னி ஸர்வ கர்மாணி பஸ்ம ஸாத் குருதே ததா – கீதை 4.37.
இல்லை அர்ஜுனா – அதே ஜ்ஞானம், அக்கினியைப்போலே பாபா கூட்டத்தைப் பஸ்மமாக்கிவிடும்.
எல்லா பாபங்களையும் என்றால், பக்தியை ஆரம்பிக்க தடையாய் யாயா பாபங்கள் உள்ளனவோ
அவை அனைத்தும் என்று பொருள் கொள்ள வேண்டும்.
படிக்கட்டு – 2
யதா தீபோ நிவாதஸ்தோ நேங்கதே ஸோபமா ஸ்ம்ருதா
யோகிநோ யதசித்தஸ்ய யுஞ்ஜதோ யோகமாத்மந : – கீதை 6.19.
எப்படி காற்று வீசாத இடத்தில் தீபமானது அசையாது நின்று ஒளிவிடுமோ அதுபோல
விஷயாந்தர சுகத்தில் மனது லயிக்காத படிக்கு ஆத்ம விஷயத்தில் மனதை உறுதிபடுத்த வேண்டும்.
படிக்கட்டு – 3
ஜ்ஞாநாஞ்சன சலாகையா ஸக்ஷுர் உன்மீலனம் – ஆசார்ய உபதேசம்.
அதற்கு ஆத்ம சிந்தனம் மட்டும் போதாது. ஆத்ம ஜ்ஞானம் பகவத் ஜ்ஞானமளவாக வளர
ஆசார்ய உபதேசங்களாகிற திறவுகோல் கொண்டு ஜ்ஞானக்கண்ணை திறந்து கொள்ள வேண்டும்.
அதற்கு ஆச்சார்ய ஸந்நிதி அவசியம்.
அடுத்து பகவத் விஷயத்தில் ஜ்ஞானம் மேன்மேலும் வளர ஆசார்யா அநுவர்த்தனம் பண்ணக் கடவதாய்
தத்வித்தி பிரணி பாதேந பரி பிரச்நேன சேவையா
உபதேஷ்யந்தி தே ஜ்ஞானம் ஜ்ஞானிந : தத்வ தர்ஸிந : – கீதை – 4.34.

என்கிற கீதையின் வழியிலேயே ஆண்டாளும்
செய்யும் கிரிசைகள் கேளீரோ என்று
நாட்காலே நீராடி
செய்யாதன செய்யோம்
தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
என்பதாக கீதையில் சொல்லப்பட்ட நியதம் குரு கர்மத்வம் என்பதை பேசினாள்.
அதை ஆத்ம வித்தையோடு செய்ய வேண்டும் என்பதையும்
நாராயணனே நமக்கே பறை – என்கிற உபாய-உபேய அத்யாவசாயம் சொன்னபடி.
கர்மாநுஷ்டானங்களால் அநாதிகால கர்ம வாசனா ரூபமான பாபங்கள் கழியும் என்பதை
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் என்றாள்.
இனி ஜ்ஞானம் பகவத் விஷயமளாவாக வளர
அஜ்ஞானம் குறைந்து ஜ்ஞானம் வளர வேண்டும் என்பதை வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று என்றும் ,
பாபம் குறைந்து புண்யம் வளர வேண்டும் என்பதை செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பினகாண்
என்று பேசினாள் ஆண்டாள் .
தவிரவும், பகவத் விஷயத்தில் ஜ்ஞானம் மென்மேலும் வளர ஆசார்யா அநுவர்த்தனம் பண்ணக் கடவதாய்
பாசுரம் 16-17-18 களில் கடக கிருத்யரான நந்தகோபரைப் பற்றி பிரஸ்தாபித்தாள்.
பாசுரம் 18-19-20 களில்
நப்பின்னையை புருஷகாரமாக பற்றி கண்ணனோடு சேர்ப்பிக்க பிரார்திக்கிறாள். இங்கு உள்ள சுவாரஸ்யம் என்ன வென்றால்,
பாசுரம் 18-ல் ஆசார்ய சம்பந்தமும், புருஷகார பிரபத்தியும் சேர்த்து சொன்னதுக்கு தாத்பர்யம்
ஆசார்யன் ஆஸ்ருதரான நமக்கு ஆத்ம-பரமாத்மா விஷயமான ஜ்ஞானத்தை கிளப்பி விடுவதை போலே,
புருஷகார பூதையான பிராட்டி பகவன் நிக்ரகத்தை அனாஸ்ருந்தார்கள் விஷயத்தில் மடை மாற்றி,
ஆஸ்ருதர்கள் விஷயத்தில் ஸ்வாதந்திரியம் தலை சாய்ந்தால் தலை எடுக்கும் குணங்களை கிளப்பி விடுகிறாள் –
என்பதான கிருபை இருவருக்கும் பொதுவானதாய்க் கொண்டு.

மேலும்
தமேவ சரணம் கச்ச ஸர்வ பாவேந பாரத – அந்த நாராயணனையே சரணமாக பற்று என்று கண்ணன் சொல்ல ,
அர்ஜுணன் – கண்ணன் இவன் தானே நாராயணன், அந்த நாராயணனை பற்று என்கிறானே – என்று குழம்ப அதை விலக்கவே பின்பகுதியில்
மாமேகம் சரணம் விரஜ – என்று பேசினான்.

ஆனால் ஆண்டாளோ – நாராயணனே நமக்கே பறை தருவான் என்றும்
உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் – உனக்கே நாமாட் செய்வோம் என்றும் ஸு ஸ்பஷ்டமாக பேசினாள்.

இங்கு சாந்தோக்யம் 4வது பிரபாடகத்தில் உள்ள உபகோஸல விதை பிரகரணத்தில் சொல்லப் பட்ட
ஜாபால – உபகோஸல விருத்தாந்தம் ஸ்மரிக்கத்தக்கது .
ஆசாரியரான ஜாபாலர் சிஷ்யனான உபகோஸலனுக்கு பிரஹ்ம வித்யை பூர்ணமாக உபதேசிக்காமல் காலம் தாழ்த்த ,
பிள்ளைக்கு ஆசார்யானுகிரகம் ஏற்படவேயில்லையே என்று ஏக்கம் பிறந்து தவிக்க, இடையில் ஆசாரியன் காரியாந்தரமாக
வெளியூர் சொல்ல வேண்டி வந்தது. எனவே சிஷ்யனிடத்தில் அக்நி சந்தானத்தை ஆராதித்துக் கொண்டு காத்திரு என்று சொல்லி
பயணத்தில் உத்தியுக்தரானார். சிஷ்யப்பிள்ளைக்கு சோறு தண்ணீர் செல்லாமல் , ஆசார்யன் நியமித்த கைங்கர்யத்தை நடத்திப் போர ,
ஆச்சார்ய பத்நி விசாரித்தும் நிலைமை சீர்படாது போக, நித்ய ஆராத்ய அக்நி தேவதை மூவரும்,
பிள்ளைக்கு இரங்கி தாங்கள் சில அர்த்தங்களை உபதேசித்தனர்.
பிராணன் தான் பிரஹ்மம்.
அந்த பிரஹ்மத்துக்கான ஸ்தானம், அதை அடைய உண்டான கதி இது விஷயமாக அக்நி தேவதைகள்
க(1)ம் பிரஹ்ம – சுகம் = பிரஹ்ம ஸ்வரூபம் ஆனந்தம்.
க(2)ம் பிரஹ்ம – ஆகாசம் = பிரஹ்மம் அபரிச்சின்னம் .
யதேவஹ க(1)ம் ததேவ க(2)ம்.
யதேவ க(2)ம் ததேஹ க(1)ம்
என்று பிரஹ்ம ஸ்வரூபத்தைச் அக்நி தேவதைகள் சொல்லி நிற்க,
அந்த பிரஹ்மத்தை அடைய அவன் ஸ்தானத்தை உபாஸிக்க உபயுக்தமான அவன் குணத்தை அவனை அடைவிக்கும் கதி
இவை பற்றி சொல்ல வேண்டும் என்று பிள்ளை கேட்க
ஸம்யக் வாமநத்தவம்
வாமநீத்தவம்
பாமநீத்வம்
அக்ஷி புருஷன் பிரஹ்மம் என்பதாக முதல் இரண்டுக்கு விளக்கம் ஓரளவு சொல்லி
ஆச்சார்ய ஸ்துதே கதிம் வக்தா – என்று மார்க்கத்தை ஆச்சர்யனிடம் உபதேசமாய் பெற்றுக்கொள் என்று சொல்லி நிறுத்தினர்.
திரும்பி வந்த ஆச்சர்யனிடம் நடந்தத்தைக் கூறி, மார்க்கமான அர்ச்சிராதி கதியை உபதேசமாகப் பெற்றான் உபகோஸலன் என்பது சாந்தோக்யம்.

கீதை 1-6 அத்யாயம் ஆத்மோபாசனம்
7- 12 அத்யாயம் கர்மத்தால் வளர்ந்த ஜ்ஞானத்தால் வந்த பக்தி உபாசனம்.
அந்த பக்தி வளர்வதற்கான பகவத் ரூப, குண, ஒளதார்யங்களைப் பற்றி
தேஷாம் ஸதத யுக்தாநாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம்
ததாமி பக்தி யோகம் யேந மாம் உபயாந்தி தே – கீதை 10.10.
தேஷாமேவ அநுகம்பார்த்தம் அஹம் அஜ்ஞான ஜந்தமஹ
நாசயாமி ஆத்ம பாவஸ்த : ஜ்ஞான தீபேன பாஸ்வதா – கீதை 10.11.
என்னுடைய அழகான திருமேனியை அவர்கள் உள்ளத்துக்கு விஷயமாக்கி குணாநுபவத்தை வர்த்திப்பித்து, கர்ம வினை பாசம் கழற்றுகிறேன்.

ஸ்தானம், குணம், கதி என்று மூன்று விஷயங்கள் போலே ஆண்டாளும்
அம்பரம், தண்ணீர், சோறு என்பதாக சொல்லி உபகோசலனுக்கு அருளிய மூன்று அக்நி போலே இவர்களுக்கு அருள
நந்தகோபனை மூன்று முறை பிரஸ்தாபித்து, கீழே சொன்ன விளக்குகளைக் காட்டிலும் பிரஜ்வலமான விளக்கு,
பகவத் ஸ்வாதந்திரியமாகிற இருட்டு களைய , நப்பின்னை பிராட்டியாகிற விளக்கு என்பதாக இந்த பாசுர ஸ்வாபதேசம்.

——–

20. உன்மணாளனைத் தந்து :

மைத்துணன் உன் மணாளன் மாலோலன் மாலரையன்
மைய கண்ணி நாதன் திருவுக்கும் — ஐய
திருவான செல்வன் மலராள் தனத்தன்
ஒருவன் அவன்தா எமக்கு!

———

21. ஏற்ற கலங்கள்:

ஏதிலார் எம்மனோர் ஆதரித்து ஆசரியன்
ஈதானாய் அல்பா வதிஆயுள் — போதில்
பொழுதறிந்து போற்றி அலகில் தருமம்
விழைந்து கேட்ப்பார் ஏற்ற கலம்.

சிஷ்யன் தன் சரீரம் வஸு விஞ்ஞானம் அனைத்தையும் அதாவது
சரீரம் அர்த்தம் பிராணம் ச ஸத்குருப்யோ நிவேதயேத் என்று ஆசாரியனுக்கு சமர்ப்பித்து அவர் கைகாட்டிகிற இடத்தில்
அவருக்கு பிரதிநிதியாய் இருந்து அவருக்கு அளித்த மிச்சத்தில் ஜீவனம் நடத்துவதாக பாவிக்க வேண்டும்.
அங்கனே ஆசார்யன் தானும் சிஷ்யனுடைய ஆத்ம உஜ்ஜீவனத்தில் உத்யோகிக்கும் போது
தன்னை ஸ்வ-ஆசாரிய சிஷ்யனாய் , தன்சிஷ்யனை ஸபிரம்மசாரியாய் நினைத்து பரிமாற வேண்டும் .
இதுவே சத் பாத்ர சத் வினியோக ஏற்ற கலத்துக்கான லக்ஷணம். மாறாடி நினைகை அவத்யமாம்.

இப்படி குறைந்த ஆயுசில் அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற பேராசையோடே
ஸுக பிரம்மத்திடம் பரீக்ஷித்து ஸ்ரீமத் பாகவதமும் ;
வைசம்பாயனரிடம் ஜனமேஜயன் மஹா பாரதமும் ;
ஸ்ருத்வா தர்மான் அஸேஷேண என்று தர்மங்களை கேட்பதில் விருப்பம் உடையவனாய்
பீஷ்ம பிதாமஹரிடம் யுதிஷ்டிரர் விஷ்ணு ஸகஸ்ரநாம அத்தியாயமும் ;
மைத்ரேயர் கேள்விகள் கேட்க கேட்க விஷ்ணு புராணம் விரிந்தார்ப்போல்,
ஒருத்தருக்காய் சொன்னது ஊருக்கய் பராச மஹரிஷியிரிடம் மைத்ரேயர் விஷ்ணு புராணமும்;
தான் கிருபணன். சிஷ்யஸ்தேஹம் சாதிமாம் பிரபும் என்று கீதாரியனிடம் அர்ஜுணன் பகவத் கீதையும்;

ஆழ்வாருடைய மைத்ரேய பகவான் ஆயிற்று அவருடைய அவா என்று
பரபக்தி, பரஜ்ஞான, பரம பக்தி இன்னும் சாதன பக்தி, சாத்திய பக்தி, சகஜ பக்தி கொண்டு
அவருடைய பிரபந்தம் வளரக் காரணம் அவருடைய பகவத் பிரேமமாகிற காதல் –
பயன் அன்றாகிலும் பாங்கல்லர் ஆயினும் – நெஞ்சில் நிற்கப்பாட்டி – முயல்கின்றேன் உன்தன் மொய்கழற்கு அன்பையே
என்கிற கிருதஜ்ஞதை யோடே நம்மாழ்வாரிடம் மதுரகவி ஆழ்வார் பெற்ற திருவாய் மொழியும் ;

நின்றனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே – என்று பேசிய திருமங்கை ஆழ்வாரிடம் ,
தான் பெரியவாச்சான் பிள்ளையாகவும் , ஆழ்வார் கலிகன்றிதாஸர் என்கிற நம்பிள்ளையாகவும் பிறக்க –
அவரிடம் சிஷ்ய விருத்தி பண்ணி பிரபந்தங்கள் நாலாயிரத்துக்கும் பொருள் கேட்டு உபகரித்த
திருக்கண்ணமங்கை பத்தராவி பெருமாள் போலேயும்

கேட்டவர்கள் அனைவரும் ஏற்ற கலங்கள் என்றாலும்
ராமனுக்கு விஸ்வாமித்திரரும், கிருஷ்ணனுக்கு சாந்தீபினியும் ஆசார்யனாக கிடைத்த போது அடைந்த அபூர்த்தி
பெரிய பெருமாள், நம்பெருமாள் இருவரும் கண்ணனும், ராமனுமாய் மணவாள மாமுனி பக்கல்
துவயார்த்த விவரணியும் தீர்க்க சரணாகதி பிரபந்தமாயும் இருக்கிற திருவாய்மொழி ஈடு காலக்ஷேபம் பண்ணினார்களாய்,
தாம் அவருக்கு சிஷ்யனான தன்மைக்குச் சேர பகுமானமாக தன்னுடைய
சேஷாபீடத்தையும்
ஸ்ரீசைலேச தனியனும் ஸமர்ப்பித்து
அவருடைய திருவத்யயன உற்சவாதிகளை நடத்திப் போருவர்களாய்
எதிர் பொங்கி மீதளித்த பிரபாவம் மேல் சொன்ன மற்ற யாருக்கும் இல்லை என்றே சொல்லலாம்.

பதரியிலே தானே ஆச்சாரியனுமாய், சிஷ்யனுமாய் திருமந்திரத்தை வெளியிட்டருளினது போக ,
மாமுனிகள் பக்கல் ஆசார்ய பிரதிபத்தியோடே , சிஷ்யன் இருக்கும் இருப்பை நாட்டாருக்கு காட்டிய –
ஏற்ற கலத்துக்கு – ஸத்தான திருஷ்டாந்தம் பெரிய பெருமாளே எனலாம்.

————-

22. செங்கண் :

கழிவிரக்கம் காட்டி கழித்தன போக்கி
அழல விழித்து அகல்விப்பான் — பாழே
பலபல செய்து புகல்அயல் இல்லா
புலையனேர்க்கு அங்கண் அருள்.

அ-கார வாச்ய சமாகமத்துக்கு ஆறு படிக்கட்டு :
ஈஸ்வரஸ்ய ஸௌஹார்த்தம்
எதுர்ச்சா ஸுக்ருதம்
விஷ்ணோர் கடாக்ஷம்
அத்வேஷம்
ஆபிமுக்யம்
சாது சமாகமம்
அதில் நடுவாக உள்ளது விஷ்ணோர் கடாக்ஷம்.
கதிர் மதியம் போல் முகத்தான் என்று தொடங்கி செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாயாவோ என்று
கடாக்ஷ வீக்ஷண்யத்தை பிரார்த்திக்கிற படி இது.
தேய்தல், வளர்தல், ராகு-கேதுவால் பீடித்தல் இவை உள்ள சூரிய-சந்திரர்கள் அவனுடைய திருக் கண்களுக்கு
நேர்கொடு நேர் ஒவ்வார் என்று தெளிந்து, ’செங்கண்’ என்றே சொல்லி
”தத்-தஸ்ய சதுர்சம்” ஆக்குகிறாள். அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்து
என்று பிராப்பிய விரோதி கழிக்கையும்
இனி மேலில் பாட்டுகளில் வெப்பம் கழிந்து கூடி இருந்து குளிர்தலும் சொல்லுகிற படி.
போற்றியாம் வந்தோம் புகழ்ந்து என்று இருப்பதால் இது ஒரு புகழ் மாலை.

கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ – என்பதாக
எம்பெருமான் செங்கண்ணுக்கு உபமானமாக தாமரையை சொல்லுகிறது சாந்தோக்யம் ;
அவனுடைய கண்ணுக்கு உபமானம் இட்டுச் சொல்லுகை என்பது அதனை அழகாக்குமத்தனை.
உபமானம் நேர் நில்லாமையாலே உபமேயம் தன்னை விசேஷிக்கிறது.
தன்னுடை பூர்வபக்ஷ கிரந்த வாசிப்பின் போது இந்த வாக்யத்திற்கு யாதவ பிரகாசர் சொன்ன அபார்தத்தைக்க கேட்டு
கலங்கி , பகவத் ராமானுஜர் காட்டுகிற விசேஷார்த்தம் இங்கு நோக்கத்தக்கது :

கப்யாஸம் = கபி + ஆஸம் = சூரிய மண்டலத்தை இருப்பிடமாக உள்ள பிரஹ்மத்தை உபாஸ்யமாக சொல்வது போல,
புண்டரீகம் போலேயான அக்ஷிணியை இருப்பிடமாக உள்ள பிரஹ்மம் உபாஸ்யம் என்கிறது .
கப்யாஸம் என்பதற்கு உபாசன ஸ்தானம் அர்த்தம் என்கிற முதல் யோஜனை இங்கு சேராது.
கபி + ஆஸம் – கபி = குரங்கு பிருஷ்டம் , புண்டரீகம் என்று உபமான துவயமும்;
உயர்ந்த பிரஹ்மத்துடைய திருக்கண்களுக்கு தீன உபமானமும் கூடாது ஆகையால் இந்த இரண்டாவது யோசனையும் தள்ளுபடி.
ஈஷத் விகசித = சிறிதளவு மலர்ந்த என்று பொருளும் சரிப்படாது. அவன் மலங்க விழித்தால் நம்மால் தரிக்கப் போகாது.
அத்தாலேயே ஆண்டாள் செங்கண் சிறுச்சிறிதே சாத்மிக்க சாத்மிக்க எம்மேல் விழியாவோ என்கிறாள்.

ஸ்வாமி எம்பெருமானார் காட்டுகிற அர்த்தமோ ஆழ்வார்கள் திருவாக்கை அடி யொற்றித் தந்த விளக்கமாகும்.
கம்பீரம்பு சமத்பூத (1) ஸுவிருஷ்ட நாள அஸ (2) ரவி கர விகசித (3) புண்டரீக தள அமலஆயத ஈக்ஷணம்
என்பதாக சொல்லுகிற அழகு – ஈதோர் அற்புதம் கேளீர் என்று வாய் வெறுவத் தகும்.

————-

23. சீரிய சிங்காசனத்து இருந்து :
நடுவிலாச்சிக் கீத்த படுக்கை அறை வார்த்தை
காடேற வாயித்தால் கண்ணா! — அடிசியோம்
காண நடந்து அரி ஆசனத்தே வீற்றிருந்து
வேணுமவை ஆய்ந்து அருள்.

ஸவ்யம் பாதம் பிரசரித துரித ஹரம் தக்ஷிணம் குஞ்சையித்வா
ஜாநூன் ஆதாய ஸ்வே இதர புஜம் நாக போகே நிதாய
பஸ்சாத் பாகுத்துவயேன பிரதிபட ஸமநே தாரயந் சங்கசக்ரே
தேவி பூஷாது ஜூஷ்டோ விதரது ஜகதாம் சர்ம வைகுண்ட நாத :-என்று பரமபதத்திலான அமருகை காண
அங்குற்றோம் அல்லோம்

வைதேஹி ஸகிதம் ஸுரத்ரு முதலே ஹைமே மஹா மன்டபே
அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க இருவரும் கவரி பற்ற
விரைசெறி குழலி ஓங்க வெண்ணையூர் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி.–என்று பட்டாபி ராமனாய் இருந்தமை
அப்போதுற்றோம் அல்லோம்
எனவே இப்போது எமக்காக நாலெட்டு நடை நடந்து வந்து உன் நடை அழகையும்
சீரிய சிங்காசனத்தில் வீற்றிருக்கும் அழகையும்
நம்பெருமாள் நமக்கு திருமாமணி மண்டபத்தில் சேர-பாண்டியன் ஒலகத்தில்
அமர்ந்தமை காட்டி, யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள் என்கிறார்கள்.

———–

24. அஞ்சும் குடி :

அன்புடை ஆழ்வார்கள் போற்றி என ஏற்றி
நன்குடனே நாளும் வழுத்துலும் — இன்னும்
பெரியாழ்வார் அஞ்சாமைக் காட்டியதுக் கஞ்சும்
பெருமை ஆண்டாளுக்கும் உண்டு.

பிறர் நன்பொருளான ஆத்மபகரம் திருட்டு. பொருள் சரீம். நன்பொருள் ஆத்மா. பிறர் நன் பொருள் பகவானுடைய சொத்தான ஆத்மா.
இந்திரனுடைய சொத்தான மூன்று லோகங்களை மஹாபலி தன் சொந்தமாக்கினான். அதை மீட்க அன்று
திருவிக்கிரமனாய் மூன்றடி மண் கேட்டு, இரண்டடியால் அளந்து கொண்டதோடு, மூன்றாவது அடியால்
துரபிமானகள் தலையில் கால் வைத்து அவர்களையும் தனதாக்கிக் கொண்டு
தளிர் புரையும் திருவடி என் தலைமேலவே என்று அபிமானம் களைந்தான்.

அடிபாடி என்று தொடங்கி, அடிபோற்றி என்று இடையில் இந்த பாசுரமும்,
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் என்று முடிவிலுமாய் ஆண்டாள் மங்களாசாசனம்.
அளந்து தன்னதாக்கிக் கொண்டதால் ஸ்வாமித்வம் பிரகாசிக்கிறது. ஸ்வம் = சொத்து.
தளிர் புரையும் திருவடி தலை மேலவே என்றதால் சேஷித்வம் பிரகாசிக்கிறது.
உலகமளத்த பொன்னடியே அடந்துய்ந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம்மானே என்றதால் சரண்யத்வம் பிரகாசிக்கிறது.
உழலை இன்ப பேய்ச்சி முலையூடவள் உயிருண்டவன் கழல்கள் அவையே சரணாகக் கொண்ட என்றும்
நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் என்று நாடொறும் ஏக சிந்தையனாகி என்றும்
தன்னைத் தவிர்ந்த வேறு ஒன்றையும் சகியாத நிரபேட்சோபாயத்வம் சொல்லிற்று.
தாவி வையம் கொண்ட தடந்தாமரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ? என்று ஆர்த்தித்தவம் பிரகாசிக்கிறது.
தடந்தாமரை தாள் என்று சொல்லாமல் தடந்தாமரைகட்கே என்று உபமானத்தை சொல்லி
உபமேயத்தை சொல்லாமல் விட்டது முற்றுவமை என்கிற ஸ்வாரஸ்யம் இங்கு நோக்கத் தக்கது.

சதுமுகன் கையில் சதுப்புஜன் தாளில் சங்கரன் சாடையினில் தங்கி வருகிற – விஷ்ணு பாதோதகமாகிற
கங்கை கங்கை என்ற வாசகம் கொண்டு கடுவினை காளையலாமே –
கண்டமென்னும் கடிநகர்-தேவபிரயாகை பாசுரம் இதில் பாவனத்வம் பிரகாசிக்கிறது.
உன்வையம் தாய மலரடிக்கீழ் முந்தி வந்து முகப்பே கூவிப் பணிகொள்ளாய் என்று பரிச்சர்யம் பிரார்த்திக்கிறது .
தாளால் அளந்த அசைவேகொல் ? பின்னும் தன்வாய் திறவான் நீளோதம் வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்
ஐந்தலைவாய் நாகத் தணை – என்று சிரமிஸித திருவடிகளை ஆஸ்வாஸ படுத்த அலை அடிப்பதாக ஆழ்வார்.
தீர்த்தன் உலகளந்த சேவடிமேல் பூதாமம் சேர்த்து அவையே சிவன் முடிமேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்ததொழிந்த பைந்துழாயான் பெருமை – என்று பரத்வ சூசகம் .

மாமுதல் அடிப்போது ஒன்று கவிழ்த்தலர்த்தி மண்முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடிப்போது ஒன்று
விண்செலீஇ நான்முகப் புத்தேள் நாடு வியந்துவப்ப வானவர் முறை முறை வழிபட நெறீஇ தாமரை காடு
மலர்க்கண்னொடு மலர்க் கனிவாய் உடையது போல் இரு ஞாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன
கற்பக காவு பற்பல வன்ன முடிதோள் ஆயிரம் தழைத்த நெடியோர்க்கல்லதும் அடியதோ உலகே? – என்கிற மாதுர்யம், அழகு பேசப்பட்டது.

இப்படியான உன் விக்கிரமங்களுக்கு அன்று பல்லாண்டு பாடாத குறை தீர, இன்று யாம் வந்தோம்.
அறுசுவை அபதானங்களுக்கு ஆறு முறை போற்றி சொல்லி வந்த எங்களுக்கு நீ இரங்க வேண்டும் என்கிறார்கள்.
அதவா
அவனுடைய இரக்கத்துக்கு விருத்தமாய்
உறங்குமவனை எச்சரப் படுத்துவது,
நாலடி நடக்கும் படியாய் விக்ஞாபிப்பது–இத்யாதி காரியங்கள் – அதிபிரவ்ருத்தியாய் முடியாது இருக்க, ’இரங்கு’ என்கிறார்கள்,

————-

25. ஒருத்தி மகனாய்ப் பிறந்து :

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கரும வினை
கூற பிரிவினை இங்காகல் — மாறமால்
தானும் பிறந்து இருமை வினை தீர்த்துப்
பேணும் கருணை பெரிது.

ஜன்ம கர்மச மே திவ்யம் யோ வேத்தி தத்வத : என்றும்
அப்யுக்தானம் அதர்மசஸ்ச ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம் என்றும்
தேவகி பூர்வஸந்தியாயாம் ஆவிர்பூதம் மஹாத்மநா என்றும்
தாஸாம் ஆவீரபூத் பூமௌ ஸ்வயமான முகாம்புஜ : என்றும்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுடைய அவதாரத்தை உயர்வான வார்த்தைகளால் ஸ்ரீ கிருஷ்ணன் தானும், ரிஷிகளும் பேசி இருக்க,
ஆண்டாள் அவன் பிறந்தமையை மநுஷ்யர்கள் பிறப்பைப் போலே கூறல் தகுமோ? என்னில்
ஆவிர் பூதம்
பிராதுர் பூதம்
என்பதற்கு மறைந்து இருந்தவன் வெளிப்பட்டானாக, தோற்றினதாக பொருள் படும்.
இல்லாதது உண்டாகாது. இருப்பதுதான் புலன்களுக்குத் தோற்ற புலப்படும்.
பூ = ஸத்தாயாம் என்று இருப்பைச் சொல்லி, ஆவிர்பூதம், பிராத்துர்பூதம் என்று வெளிப்படுதலைச் சொல்லுகிறது.

மாறி மாறி பல பிறப்பும் பிறந்து என்பது ஜனி = ஜாயதி என்ற பொருளில் பிறப்பு என்றாகிறது.
எனவே அர்த்தத்தை வைத்துப் பார்க்கில், இருவருடைய பிறப்பும் வெளிப்படுகை அன்றி உண்டாகுகை இல்லை.
என்றானால் நம்முடையது பிறப்பு, அவனுடையது அவதாரம் என்பது ஏன்?
இருப்பு இருவருக்கும் பொது. எப்படி இருக்கிறார் என்று கேட்டுக் கொண்டால் இருவருமே ஜ்ஞான, ஆனந்த ஸ்வரூபத்தோடே
இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். இதுவரை ஸாம்யாப்பத்தி போல தோன்றினாலும் ,
ஆத்ம பரமாத்ம ஸ்வரூபத்தில் தாரதம்யம், மற்றும் ஆத்ம தத்வங்களிடையே தாரதமயத்துக்கும் ஹேது
இன்னும் வேறு சில குணங்கள் காரணம்.
அவற்றில் இருவர் பிறக்கைக்கும் பிரதான காரணம் பகவானுடையது கிருபை. நம்முடையது கர்மம்.

பூ ஸத்தாயாம் என்று இருக்கும் நாம் கர்மத்தால் பாதிக்கப் பட்டு வெளிப்படுவது பிறப்பு.
பூ ஸத்தாயாம் என்று இருக்கும் அவன் கிருபையால் உந்தப்பட்டு கண்களுக்கு புலப்படும்படியாக வெளிப்படுவது
அவதாரம் (அ)ஆவிர்பூதம் . இப்படி இருவர் வெளிப்படுகைக்கும் பிரயோஜனம் ,
நம்முடையது சேர்த்து வைத்த, சேர்த்துக் கொள்கிற புண்ய, பாபங்களை அனுபவிக்க (அ) நஷ்டமாக்கை .
அவனுடையது நம்மை தன் கிருபைக்கு இஷ்டமாக்கை .

நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்
தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி
நாள்கள் கடலை கழிமினே .

ஜனனோ ஜன ஜன்மாதிஹி பீமா பீம பராக்கிரம :
இருவரும் ஜன என்பது பொதுவானாலும்,
அவர் ஜனன : கர்ம பாரவஸ்யத்தால் நமக்கு சரீரத்தை கொடுத்து பிறப்பிக்குமவர். தவிர
ஜன -; ஜனங்களின்
ஜன்மம் -; பிறப்புக்கு
ஆதி -; நிமித்தம் (அ) பிரயோஜனம்
பகவான் – அவர் தான். ஆக, நம்முடைய பிறப்புக்கு பிரயோஜனம் அவரை அடைவது .
அவருடைய பிறப்புக்கு பிரயோஜனம் ஜனங்களைத் திருத்திப் பணிக் கொள்வது.

இப்படி கர்மா கழிந்தபின் உண்டாகிற ஜ்ஞான ஆவிர்பாவத்தை உபநிஷத்
ஸதா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபயிதி – என்றும்
அஸ்மாது சரீராய ஸமுத்தாய பரம்ஜியோதிர் உபஸம்பத்ய ஸ்வேந ரூபேண அபிநிஷ்பத்யதே – என்றும்
கர்மம் தொலைந்து ஜ்ஞானம் விகசித்து பக்குவமான சக்கரைப் பொங்கல் பிரசாதம் போலே இவன் விளங்க
அத்தை அவன் ஆனந்தமாக விநியோகம் கொண்டு களிப்பிக்கிறான்.
இது நடத்தவே ஒருத்தி மகனாய் அவன் பிறந்து என்கிறாள் ஆண்டாள்.

———–

26. மாலே : ஆர்த்தி பூர்த்தி :

சரணமானால் வைகுந்தம் சேர் வழக்கு கொண்டு
மரணமானால் மேவப் பெறுவதூம் — ஆரணமால்
ஊழ் வினை நம் போக்க மற்ற பற்று அற்றராய்
சூழ் வினை அவனடியார் காத்து.

ஆலின் இல்லையாய் – பரத்வம்.
மாலே – சௌலப்யம்.
மணிவண்ணா – சௌந்தர்யம்.
ஸ்ரீ ராமாயணத்தில் எப்படி சரணாகத வத்சலத்வம் ராமனுடைய பிரதான குணமோ, அதுபோல
மஹா பாரதத்தில் கிருஷ்ணனுக்கு பிரதான குணம் ஆஸ்ருத வியாமோகம் என்பது .
நாராயணன்
ஓங்கி உலகளந்த உத்தமன்
தேவாதி தேவன்
என்று கீழே பரத்வத்தை பிரஸ்தாபித்த ஆண்டாள், 25 வது பாசுரம் வந்த வாறே
வந்து தலைப் பெய்த்தோம் ;
வந்து நின்றோம்;
இன்று யாம் வந்தோம்;
யாம் வந்த காரியம் – என்று இவர்கள் தாங்கள் வந்தமைக்கு இரங்கு என்று சஹேதுகமாய் சொல்லி வந்தவர்கள்,

அத்தை மாறி
ஆலின் இலையாய் அருள் – என்று நிர்ஹேதுக மாக்கினர்.
வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்
ஈண்டு அன்றன்னை புலம்பப்போய் ஓர் ஆய்க்குலம் புக்கதும்
காண்டலின்றி வளர்ந்து –என்கிற படியே – க்ஷீராப்தியிலிருந்து மதுரைப்போந்து, அங்கிருந்து
திருவாய்ப்பாடிக்கு தான் வந்த வரத்தை கணிசித்தார்கள் இல்லையோ என்று கண்ணன் வாய் திறவாமல் இருக்க
நாராயணனே நமக்கே பறைதருவான் என்று ஸ்வயத்ன ராஹித்யம் சொன்னவர்கள்
தாங்கள் வந்தமை உபாயமாக நினைப்பிட்டனரோ என்று உதாசீனனாகவும் இருந்தமை போக்கி
உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் என்று
அனன்ய பிரயோஜனர்களாக வந்தார்களே என்று வியாமுக்தனாய் அது மணியின் நீரோட்டம் புறம்
பொசிந்து காட்டுமா போலே அவனில் வெளிக்காட்ட ,
மாலே! மணிவண்ணா என்கிறார்கள்.

இதம் ஸ்ரீரங்கம் தியஜதாம் இஹாங்கம்
புனர்நசாங்கம் யதிஸாங்கமேதி
பானொவ் ரதாங்கம் சரணேச காங்கம்
யாநேச விஹங்கம் ஸயநேச புஜங்கம் — ஆதி சங்கரர்.

ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபயிதி – என்கிற ஸாம்யப்பத்தி மோக்ஷம் சொல்லுகிற பாசுரம்.
போல்வன சங்கங்கள்
சாலப் பெரும் பறை
பல்லாண்டு இசைப்பார்
கோல விளக்கு
கொடி
விதானம்
உக்கம்
தட்டொளி
என்கிற 8 விஷயங்களை பிரார்த்தித்து அஷ்டவித ஆவிர்பாவத்தை
ஸோஸ்நுதே ஸர்வான் காமாந் ஸஹ பிரஹ்மணா விபஸ்சிதே – என்கிற முக்த போகத்தை கேட்கிறாள்.

ததா வித்வான் -; தியானம், வேதனம், நிதித்யாசனம் இவை ஒருபொருள் பன் மொழியாய்,
ஜ்ஞான யோக அதிகாரி தம் முயற்சியால் பக்தி செய்து புண்யபாபங்களைத் தொலைத்து
சாம்யாபத்தி மோக்ஷத்தைப் பெறுகிறான். அதேபோல
ததா வித்வான் -; சரணாகதனான ஒருவன் – பகவான் அவனே உபாயம் என்று பிரபத்தி பண்ணின அதிகாரி –
தன் முயற்சி ஏதும் இன்றி பகவத் சங்கல்பத்தாலே புண்ய பாபங்களை உதரி சாம்யாபத்தி மோக்ஷத்தைப் பெறுகிறான்.
வித்யாசம் என்னவென்றால் இருவருடைய சஞ்சித கர்மங்களையம் பகவான் போக்கிக் கொடுத்தாலும் , உபாசகனான
பக்தி யோக நிஷ்டன் தன்னுடைய பிராரப்த கர்மங்களை
(இந்த ஜன்மத்தில் கழிக்க வேண்டியுள்ள புண்ய+பாபங்களின் கூட்டறவு) தானே போக்கிக் கொள்ள வேண்டும்.
யாவந்ன விமோக்ஷே அசஸம்பத்ச்யே தஸ்ய தாவதேவ சிரம் – என்பதாக இவர்களுக்கு ஜன்மாந்தரத்திலே மோக்ஷம்.

ஆனால் பிரபன்னாதிகாரியினுடைய சஞ்சித + ஆரப்த கர்மங்கள் இரண்டையும் பகவான் தானே –
அஹம் துவா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி – என்று காணாக் கண்ணிட்டு தள்ளி விடுகிறான்.
என்றாலும் பிரபன்னாதிகாரி விஷயத்திலும்
1. விஷயாந்தர ஸம்பந்தம்
2. தேவதாந்தர ஸம்பந்தம்
3. பாகவத அபசாரம்
மூன்றின் சம்பந்தமும் இல்லாத பக்ஷத்தில் மட்டும் – அஸ்மாத் சரீராது ஸமுத்தாய பரஞ்சோதிர் உபஸம்பத்ய – என்று
தேஹாவசானே மோக்ஷம் என்ற படி .

———–

27. பாலேபோல் சீர் :

தே மதுர பாலே போல் சீர் தன்னால் தன் பால்
நமவெனலார் தாம் தோற்ப தன் குணம் காட்டி
சமன் கொள் நல் வீடு செய் மாலுக்கு தொண்டு
அமைந்தோமாய் கூடிக் களித்து .

கீழ் பாசுரத்தில் நோன்புக்கு உபகரணமாக
போல்வன சங்கங்கள்
சாலப் பெரும் பறையே
பல்லாண்டு இசைப்பாரே
கோலா விளக்கே
கொடியே
விதானமே
என்று தன்னதேயான
பாஞ்சஜன்யம்
பேரிகை
நம்மாழ்வார், பெரியாழ்வார்,
நப்பின்னை
கருடன்
ஆதிசேஷன்
ஆன கேட்டவை அனைத்தும்
நதே ரூபம் நசாகாரம் நஆயுதாநி . . . பக்கத்தானாம் துவாம் பிரகசாஸசே என்பதாக கொடுத்தாகி விட்டது.
அது ஸாரூப மோக்ஷம் என்றால்,
மாரி மலை முழைஞ்சில் பாசுரத்தில் இங்கனே போந்தருளி என்று ஸாலோக , ஸாமீப்ய மோக்ஷத்தைப் பெற்றாள்.
இப்போது இந்த பாசுரத்தில், நோன்பு நோற்றதற்கான சன்மானம் என்ற பெயரில் ஸாயுஜ்ய மோக்ஷத்தைப் பிரார்த்திக்கிறாள் ஆண்டாள்.

பேற்றுக்கு வேண்டியது விலக்காமையும், இரப்பும் என்ற கணக்கில் -2 ஆம் பாட்டில் நெய் உண்ணோம், பாலுண்ணோம்,
மலரிட்டு நாம் முடியோம் என்று தாங்கள் விலகினதை இப்போது இந்த பாட்டில்
சூடகமே, தோள்வளையே, தோடே , செவிப்பூவே என்று பல்கலனும் யாம் அணிவோம் .
அத்தை நீ கொடுக்கும் போது விலக்க மாட்டோம் என்பதான அப்பிரதிசேஷத்தை சூசிப்பிக்கிறாள்.

சரணாகதி கத்யமும் கோத கீதையும் :
பகவத் விஷயத்தில் செய்யப் போகிற சரணாகதி பலிக்க வேண்டி முதலில் புருஷகார பிரபத்தி.
அடுத்து பகவத் குணாநுசந்தானம்.
அடுத்து அவனுடைய பூஷணங்கள்.
அதை அடுத்து பத்னி பரிவாரங்கள் பற்றி அநுசந்தித்து
ஶ்ரீமந் நாராயண! துவத் பாதரவிந்த சரணமஹம் பிரபத்யே என்று சரணாகதியை அநுட்டித்தார்.

இதுவரை துவய பூர்வகண்டார்த்த அநுசந்தானமாயித்து.

மேலே கீதா ஸ்லோகங்கள் மூன்றை உதாகரித்து ஸ்லோக த்ரியோஜித, ஸ்தான த்ரியோஜித ஞானமாகிற –
பரபக்தி, பரஞான, பரமபக்தியைக் கொடு என்கிறார் ஸ்வாமி எம்பெருமானார்.
ஸம்ஸ்லேஷத்தில் தரிக்கையும், விஸ்லேஷத்தில் தரியாமையும் பரபக்தி. ஆர்த்தி தலை எடுத்து
வழியல்லா வழியிலாவது அவனை அடைய நினைப்பது , தர்சன ஸமாகார ஸாட்சாத்கரம் இரண்டும் பரஞானம்.
பிரியாதே கூடி அநுபவிக்ககை பரமபக்தி.
பகவத் குணானுப கைங்கரயத்துக்கு பசி போலே இந்த பரபக்தி, பரஞான, பரம்பக்தி.

ஆண்டாள்
இந்த பாசுரத்தில் சொல்லப்பட்ட பாலே போல் சீர்குணங்களை அனுபவிக்க வேண்டிய அவளுடைய அவாதான் பசி. அத்தால்
அவனை
வாயினால் பாட , மனத்தினால் சிந்திக்க,
முகில் வண்ணன் பேர்பாட,
மனத்துக்கினியானைப் பாட
என்ற இவையே பரபக்தி, பரஞான, பரமபக்தியாய் பசி வளர வளர பகவத் குணானுபவம் சிறக்கும் படியாய்
ஸோஸ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ பிரஹ்மணா விபஸ்சிது – என்று
பரம பதத்தில் பெரும் களிப்பாய் கூடி இருந்து குளிர்வதையே ஆண்டாளும்
பால் சோறு மூடநெய் பெய்து கூடி இருந்து குளிர்ந்து என்கிறாள் .

இங்கு முழங்கை வழி வார கூடி இருந்து குளிர்ந்து என்பதின் ஸ்வாரஸ்யம், முக்தபோக அனுபவத்தில் ,
அன்நாதனாக அவனிருக்க, அன்னமாய் இவர்கள் நின்று, அவனானந்தம் கண்டு
இவர்கள் ஆனந்திப்பதையே முழங்கை வழிவார என்கிறாள் .
அனுபவம் நித்யமாய், எப்போதும் நடவா நிற்பதை முழங்கை வழிவார என்று continuous tense ல் அமைத்தமை நோக்கத்தக்கது.
பாலே போல் சீரை அனுபவிக்க முதல் நிலை பசி பர பக்தி. அது இன்னும் அதிகமாக அதிகமாக
பரஞான பரம பக்தியாக பழுக்கிறது. அதுபோல அனபவாதிசயமும் விசத, விசத தர, விசத தமமாக
பரார்த்த ஆனந்தம்; பரார்த்த கைங்கர்யம்; குணானுபவமே புருஷார்த்தமாக கனிவது சொல்லப்பட்டது.

————-

28. கறவைகள் :

புறம்புண்டாம் வேத நெறி யாவும் விட்டு
திறம் காட்டும் என் ஒருவன் தாள்கிட்டல் — தேறுமென்
உரைத்த மொழி வழியே கை முதல் வேட்டா
குறையில்லா கோவிந்தன் நாட்டு.

திருமந்திரத்தில் பிறந்து, கிருஷ்ண சரம ஸ்லோகத்தில் வளர்ந்து துவாயார்த்த நிரதராய் வர்த்திக்கை ஸ்வரூபம்.
திருமந்திரம் ஜ்ஞான பிரதானமான மந்திரம் என்றால், சரம ஸ்லோகம் விதி ரஹஸ்யம். துவய மஹாமந்திரம் அனுஷ்டான பரமான மந்திரம்.
திருமந்திரத்தில் ஆத்மாவாலே பேறு என்கிறது.
சர்ம ஸ்லோகத்தில் ஈஸ்வரனாலே பேறு என்கிறது.
துவயத்தில் பிராட்டியாலே பேறுஎன்கிறது.
ஆசார்ய சம்பந்தம் பெற்று ரஹஸ்ய த்ரிய உபதேசமும் பெற்று அனுஷ்டாதாவாய் போருகைக்கு
துவயார்த்தம் நன்றாக நெஞ்சில் பட வேண்டும். அதில் பூர்வகண்ட வாக்கியம் உபாயத்தையும்,
உத்தர கண்ட வாக்கியம் பலம்-புருஷார்த்தத்தையும் சொல்லுகிறது.
இதன் விளக்கமாக அவதரித்த ஆண்டாள் திருப்பாவை பாசுரங்கள் 27, 28 இரண்டும்.
ஆக , கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம் பாசுரம் உபாய சுவீகாரமும், 29ம் பாசுரம்
சிற்றம் சிறுகாலை கைங்கர்ய பிரார்த்தனையையும் சொல்லுகின்றன.

அனன்ய ஸாத்யே ஸாபீஷ்டே மஹா விஸ்வாச பூர்வகம்
ததேக உபாயதா யாஞ்சா –இதி பிரார்த்தனா மதி : சரணாகதி : என்ற கணக்கில்
உபாய ஸ்வீகாரம் தானும் விதி வாக்கியத்தில் சொன்னபடி
மற்ற எல்லா தர்மங்களை விடுகையும்
பகவதாஸ்ரயணமுமாக விட்டவை எல்லாம் அவனேயாகப் பற்றுகையும்
சொல்வதே – கறவைகள் பாசுரம்.

1. கறவைகள் பின் சென்று – ஜாத்யுச்சித கருமம் செய்தீர்களாய் பிராபாந்தரங்களை விடீர்கள் இல்லீகோள் என்ன
கானம் சேர்ந்துண்போம் – கோ ரக்ஷணமாக சென்றோம் அல்லோம். உண்கையே பிரதானமாக சென்றோம்.
எங்கள் ஆசாரியன் மாடு கன்றுகள். பகவானுக்கு கண்டருளப்பண்ணி உண்டீர்கள் போலும் என்ன – அதுவும் இல்லை –
சென்று உண்போம் அத்தால் கர்மாநுஷ்டானம் இல்லை – நீ பரமபதம் விட்டு திருவாய்ப்பாடிக்கு வந்தாயால்,
நாங்கள் விமுக்த்தர்கள் போலே அங்கிருந்து கானம் சென்றமை கண்டீயே என்கிறாள்.

2. அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம் – இதுவரை இல்லையாகிலும், இன்னும் முன்னே சம்பாதிக்க வழியும் இல்லை.
வலக்கை இடக்கை அறியா ஆய்க்குல மாதலால் அறிவில்லாத – ஜ்ஞான யோகம் இல்லாத – அறிவொன்றுமில்லாத –
பக்தி யோகமும் இல்லாத பிள்ளைகளோம். ஆத்தால் ஆர்ஜித ஸுக்ருதம் எதுவும் இல்லை.

3. குறை ஒன்றில்லாத கோவிந்தா! உன்தன்னைப் பிறவி பெறும் தனைப் புண்ணியம் யாமுடையோம் –
அயத்ன சுக்ருதமாக உன்னையே சித்த புண்யமாக உடையோம். நீயோ நிறைவாளன். நாங்கள் ஜ்ஞான பக்திகளில் குறைவாளர்கள்.

4. உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது – இருவருக்குமான சம்பந்தம் தானும் அங்கு ஒழிக்க முடியாது வாஸ்தவம்.
இங்கு ஒழிக்கலாமோ என்னில் நித்யம். அநிவாரியம் .

5. அறியாத பிள்ளைகளும் அன்பினால் உன்தன்னைச் சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே – பூர்வாபதாரங்களுக்கு க்ஷமணம் வேண்டி

6. இறைவா நீ தாராய் பறை – நீ கொடுத்தன்றி எங்களுக்கு நிறக்க வழியில்லை என்கிறாள்.

அஹம் , மத் ரக்ஷண பரம், மத் ரக்ஷண பலம் ஈஸ்வராதீனம் – ஸ்வாமி தேசிகன்.
பிராப்தாவும், பிராப்யமும், பிராப்திக்கு உகப்பானும் அவரே இனி ஆவாரே – ஸ்வாமி பிள்ளை லோகாச்சார்யார்.
அறிவொன்றுமில்லாத ஆய்க்குலம் என்றது தாழ்குலம், கர்ம ஜ்ஞான பக்கத்தி நெறிக்கு விலக்கான குலம் என்பதல்ல.
இயலாத குலம் என்று பொருள். பிராம்மணர்களாக பிறந்தவர்கள் இயன்றவர்களோ என்னில் ?
அவர்களும் விட்டே பற்றுகைக்கு அசக்தி காரணம் அன்று. ஸ்வரூப பிரயுக்தமே பிரதான ஹேது.
அறிவொன்றுமில்லாத என்பது ஜ்ஞான அனுதயமன்று . சாட்சாத் தர்மமான கோவிந்தா நீயே உபாயாம் என்கிற
வேதாந்த விழுப்பொருள் அறிவு ஆண்டாளுக்கு உண்டான படியாலே .
ந வேதாந்தாது சாஸ்திரம்
ந மதுமதனாது தத்வம் அகிலம்
ந ஸத்வாது ஆரோக்கியம்
ந துவயவசனத : க்ஷேமகரம் — ஸ்வாமி தேசிகன்.
பரித்யஜ்ய என்று விடுகை சொன்னவிடத்து ஆண்டாள் அறிவொன்றுமில்லாத ஆய்க்குலம் என்று
கர்ம ஜ்ஞான பக்தி யோகங்களை செய்ய பிரசக்தியே இல்லை. விடுகை என் வந்தது என்று சொல்லி விட்டாள்.அடுத்து
மாம் ஏகம் சரணம் விரஜ – ஸ்ரீமந் நாராயண சரணநௌ சரணம் பிரபத்யே என்று பற்றுகையைச் சொன்ன விடத்து –
உன் தன்னைப் பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாமுடையோம் – என்றது ஸ்வீகாரம் தானும் பரகதமான படிக்கு.
மாம் சரணம் விரஜ அல்ல. மாம் ஏகம் சரணம் விரஜ என்ற விதி வழி கண்ணன் தானே நடத்தி கொடுத்த படியுமன்றோ விது.

———

29. மற்றை நம் காமங்கள் மாற்று :

அடிமைக் கண் அன்பு செய் ஆர்வத் தறிவு
உடைமைக் கண் தேடும் மகிழ்ச்சித் — தடையாம்
அடைந்து அனுபவிக்க புக்கால் நில் என்ன
மிடையாது நிற்றல் தலை.

சிற்றம் சிறுகாலை வந்துன்னை சேவித்து – பிராபியத்தில் த்வரை
உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் – அதில் கலக்கம்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாதே போகாது – ஆர்த்தியை ஆவிஷ்கரித்தல்.
இற்றைப்பறை கொள்வான் அன்றுகாண் கோவிந்தா – உபேக்ஷையைச் சொன்னது.
எற்றைக்கும் ஏழழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் – கைங்கர்ய அபேக்ஷை.
மற்றைநம் காமங்கள் மாற்று – கைங்கர்யத்தில் காளையாகிற வைராக்கியத்தை – ஸ்வபோக்த்ருத்வ புத்தியை விலக்குகிறாள்.

நாராயணனே நமக்கே தருவான் – என்றது முதல் பாசுரம்.
உனக்கே நாமாட்ச் செய்வோம் – 29 ஆம் பாசுரம். இத்தால்
நாராயணனே நமக்கே – உனக்கே நாம் = நாராயணனே உனக்கே நாம் என்றாகிறது.
நாம் என்பது ஜீவாத்மாவைக் குறிக்கும்.
எப்படிப்பட்ட நாம் என்று விசாரித்தால் – சுவாமி பிள்ளைலோகாசார்யர் காட்டுவது
அஹமர்த்தத்துக்கு ஜ்ஞானந்தங்கள் தடஸ்தமானால் தாஸ்யமிறே அந்தரங்க நிரூபகம் – என்பதாக.
ஜ்ஞானம் உடையவன் என்பதால் கர்த்ருத்வ- போக்த்ருத்வங்கள் முன் நிற்கும். ஆனால்
கர்த்ருத்வத்துக்கு தடைக்கல் பாரதந்திரியம்.
போக்த்ருத்வத்துக்கு தடைக்கல் சேஷத்வம்.
சேஷத்வம் பர-அதிசயத்துக்கே இருப்பது
பாரதந்த்ரியம் பர-வசப்பட்டு செயல் படுவது.
ஆக ஜ்ஞாத்ருத்வத்தால் வந்த கர்த்ருத்வம் பரனான பகவத் ஆதீனப்பட்டுதானே இருக்க வேண்டும்.
அதாவது ஸ்வபிரயர்த்தன நிவிர்த்தி பாரதந்த்ரியத்துக்குப் பலம். பிரவிருத்தியே கூடாதோ என்னில் அன்று.
பாரதந்த்ரியத்துக்கு குந்தகமில்லாத கர்த்ருத்வமும்
அதேபோல சேஷத்வத்துக்கு விரோதமில்லாத போக்த்ருத்வமும் நோக்கிக் கொள்ள வேண்டும்.

ஜ்ஞான காரியமான பிரயத்னமும் பலமும்
ஸ்வரூப தர்மமான பாரதந்த்ரியமும், சேஷத்வத்வத்தையும் அனுசரித்தே ஆற்றக்கடவது.
பகவான் ஸ்வதந்திரன். நாம் பரதந்திரர். எனவே பகவத் பிரயோஜனமாக செய்கிற கர்த்ருத்வம் பாரதந்திரியம் – உனக்கே நாமாட் செய்வோம்.
எனக்கு, எனக்கும் உனக்கும் என்றல்லாமல் உனக்கே என்பதான வழுவிலா அடிமை.
பகவான் சேஷி. நாம் சேஷப்பட்டவர்கள். எனவே தத் விஷய ப்ரீதி சைதன்ய பலம். பிரகர்ஷயிஷ்யாமி என்பதாக
பகவத் ஆனந்த அநுயாக போக்த்ருத்வம் சேஷத்வம் – மற்றை நம் காமங்கள் மாற்று .

ம – என்பது தாயம் என்றால்
நம – என்பது இலக்கம் 2.
பரமபத சோபனா படத்தில் (அஹம்) – ம என்கிற 1 போட்டு விளையாட ஆரம்பித்து , கடைசீ பாம்பு வாயில் விழாமல்
தப்பிக்க, நம – என்று 2 போட்டு பரமபதம் சேருவர். ம – என்கிற 1 போட்டால் பெரிய பாம்பு வாயில் விழுவர்.
அதேபோல பிரணவத்தில் உள்ள மகாரம் அவுக்கு சேஷப்பட்டவன் என்று சொல்வதோடு , இடையில் உள்ள நம பதத்தால்
பாரதந்த்ரியத்தைச் சொல்கிறது. அந்த நம பதத்தின் அர்த்தமான ”பாரார்த்யம் ஸ்வம் ” என்பதை சொல்ல
வந்ததுதான் திருப்பாவை என்கிற பட்டர் திருவாக்கு பிறந்ததும் இது கொண்டு.

———-

30. வங்க கடல் : ஆண்டாள் அரங்கக்குப் பன்னு திருப்பாவை :

அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்குப் பான்னு திருப்பாவை பல்பதியம் – பராசர பட்டர் திருவாக்குப்படி
திருப்பாவை 30 ம் திருவரங்கன் விஷயமானவை . எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.
1. நாராயணன் – ஸக பத்நியா விசாலாக்ஷியா நாராயண உபாகமது – வால்மீகி வாக்குப்படி
ரங்கநாதன் தான் ஜகந்நாதன் – பெருமாள் ஆராதித்த பெரிய பெருமாள்.
2. பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் – கார்ய வைகுண்டத்திலுள்ள க்ஷீராப்தி நாதன்தனான வியூக வாசுதேவன்தான்
ஸ்ரீ ரங்கத்துக்கு பிரதானம் – பிரத்யக்ஷ பரமம் பதம் ஸ்ரீரங்கம்.
3. திங்கள் மும் மாரி – லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் என்று குருபரம்பரையில் பிரதம குருவாய் நின்று
ரஹஸ்ய த்ரியங்களை ஸ்ரீரங்க நாச்சியாருக்கு உபதேசிக்க, அவள் வழி விஸ்வக்ஷேனர் , நம்மாழ்வார் உபதேசித்த கிரமம் – மும்மாரி
4. ஆழி மழை – சார்ங்கம் உதைத்த சரமழைபோல் என்று சார்ங்கவில் சேவகனாக இராமபிரானைப் பற்றி பிரஸ்தாவம் இதில். –
ராமோ த்விர் நாவிபாஷதே என்று கத்யத்தில் நம்பெருமாள் தன்னை ராமனாகக் கொண்டு சொன்ன வார்த்தை .
5. மாயனை – அரவின் அணைமிசை மேயமாயனார் என்று திருப்பாணாழ்வார் சொன்ன தாமோதரன் பெரிய பெருமாள்தானே.

6. முனிவர்களும் யோகிகளும் ஹரி என்று – சிற்றெயிற்று முற்ற மூங்கில் அற்ற பற்றர் வாழும் அந்தணீர் அரங்கன் –
விமானத் தூண் ஹ + ரி என்ற வாசகத்தோடே ஆனது .
7. கீச்சு கீசு – கிளிச் சோழன் கிளி மண்டபம் இங்குதான் உண்டு.
8. தேவாதி தேவன் – தேவரையும் அசுரனையும் திசைகளும் படைத்தவனே யாவரும் வந்து அடி வணங்க
அரங்கநகர் துயின்றவனே என்று குலசேகர ஆழ்வார். தேவாதி பிரம்மா அவன் ஆராதனம் செய்த பெரிய பெருமாள்.
செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார் – ஆண்டாளுக்கு.
9. மாமாயன் மாதவன் வைகுந்தன் – அரங்கன் அழகிய மணவாளன் நம்பெருமாள் என்ற மூன்றும்
பரத்வம் ஸ்ரீயப்பதித்வம் சௌலப்யத்துக்கான திருநாமங்கள் தானே.
10. மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் – லோகாசாரங்க முனி திருப்பாணாழ்வார் விஷயமாக அபசாரப்பட,
பின் அவர் திருவாராதனத்துக்கு வந்த போது அரங்கன் சன்னதி கதவு திறக்காமல் மௌனியாய் காலம் தாழ்த்தி,
பிறகு ஆழ்வாரை எழுந்தருள பண்ணி அவருக்கு அதுவரை திறவாத வாசலை திறந்துவிட்டவன் அரங்கன்.

11. முற்றம் புகுந்து – அரங்கன் முற்றம் சேறு செய்யும் தொண்டர் – சுற்றத்து தோழிமார் எல்லாரும் 105 திவ்யதேச
எம்பெருமான்களும் பள்ளி கொள்ளுமிடம் திருவரங்கம்.
12. அனைத்தில்லத்தாரும் அறிந்து – சாத்தின சாத்தாத 10கொத்து பரிவாரங்களை நியமித்து
எம்பெருமானார் திருவரங்கத்தை நிர்வகித்து போந்த படி இங்குதான்.
13. பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் – பிள்ளைகள் திருவரங்கம் காவிரிக் கரையில் அன்ன கூட உற்சவம் விளையாடும்
போது ஜீயோ! என்று அழைக்க , எம்பெருமானார் மணல்சோற்றை
தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தமருகந்தது எப்பேர் மற்றப்பேர் என்பதாக அதை
பிரசாதமாகவே நினைத்து பெற்றறுக் கொண்ட சரித்திர சங்கேத்யம்.
14. வாய் பேசும் நங்காய் நாணாதாய் நாவுடையாய் – வாயழகர் என்னரங்கத்து இன்னமுதர்; திருவரங்கர் தாம் பணித்த
மெய்மை பெரு வார்த்தை ; பேசி இருப்பனவைகள் பேர்க்கவும் பேறாவே ; ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ என்று
எம்பெருமானாருக்கு அருளிய வார்த்தைகள் எல்லாம் அரங்கன் நாவுடைமைக்கு சான்று.
15. எல்லாரும் போந்தாரோ ? – அத்யயன உற்சவத்தில் ஆழ்வார்கள் எல்லாரும் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி
இருந்து 21 நாட்கள் தமிழ்மறை திருநாள் கண்டருளுவதில் திருவரங்கம் திருப்பதி பிரதானம்,
காரணம் இவரே பதின்மர் பாடும் பெருமாள் . பாசுரங்களின் எண்ணிக்கை 247 போலே தமிழ் உயிர் மெய் எழுத்துக்கள் தொகையும் 247.

16. வாசல் காப்பான், கோயில் காப்பான் – உத்தர வீதி, சித்தரை வீதி, நான்முகன் கோட்டை வாசல் (ரங்கா ரங்கா கோபுரம்)
கார்த்திகை கோபுர வாசல், ஆரிய படாள் வாசல் (கருட மண்டபம்), நாழி கேட்டான் வாசல் (துவஜ ஸ்தம்பம்),
ஜெய விஜயாள் வாசல், திருமணத்தூண் திருவாசல் களில் உள்ள துவார பாலர், க்ஷேத்ர பாலர்கள் எழுப்பினது.
17. அம்பரமே தண்ணீரே சோறே அறம் – அரங்கனுலா சென்ற காலத்து ஆழ்வாருக்கு வஸ்திரமும்,
ஸ்ரீவைஷ்ணவ வெள்ளத்தானுக்கு ஈரவாடை தீர்த்தமும், ஆழ்வான் திருகுமாரர்கள் அவதரிக்க ஹேதுவாய்
பிரசாதம் அனுப்பிய விருத்தாந்தங்கள் இந்த வகை கணக்கு.
18. உன் மைத்துனன் பேர்பாட(வசவு பாட) – ஸ்ரீரங்கம் பங்குனி உத்திரமுதல் நாள் நடக்கிற பிரணய கலக்கத்தன்று
அனைவரும் நாச்சியார் பரிகரமாக நின்று, அரங்கனை ஏசினபடிக்கு .
19. மைத்தடம் கண்ணினாய் – உல்லாச பலவித (பட்டர்) , சேதனனை அருளாலே திருத்தும். ஈஸ்வரனை அழகாலே திருத்தும்
தத் இங்கித பராதீன : நம்பெருமாள். (ஆழ்வான்) என்று ஸ்ரீரங்க நாச்சியார் வைபவம் .
20. செப்ப முடையாய், திறலுடையாய் – நம்பி இராமானுசனை முதலில் அரையர்மூலம் நேர்மையாக கேட்டு பெறாது போக,
இரண்டாம் முறை காஞ்சி தேவப்பெருமாளை பாட்டுக்கு போர இசைய வைத்து ,
ஸ்ரீரங்கம் அழைத்துக் கொண்ட திறல் = சாமர்த்தியம் அரங்கனுக்கே அன்றோ?

21. ஏற்ற காலங்கள் எதிர் போங்க – முதலில் ஆழ்வாரைக் கொடுத்தார். அவர் பவிஷ்யத் ஆச்சாரியரைக் கொடுக்க,
அந்த ராமானுசர் எதி புனராவதாரமான மாமுனிகள் எதிர் பொங்கி மீதளித்த பிரபாவம், முதலில் கொடுத்த அரங்கனுக்கே ஆச்சாரியனான படி இது.
22. செங்கண் சிறுச்சிறிதே – திருப்பாணாழ்வார் – காரியவாகி புடை பரந்து என்று பாடிய படி.
உய்யக் கொண்டார் வழி ஆளவந்தாருக்கு ராஜ்ய வியாபாரத்தை விட்டு சம்பிரதாயத்துக்கு ஆக்கின படி;
பிள்ளை உறங்காவில்லி தாஸர் பொன்னாச்சியோடு அரங்கனுக்கு ஆட்பட்டது ராமாநுசர் சொல்லிக் காட்டிய அக் கண்ணழகுதானே.
23. சீரிய சிங்கம் போதருமா போலே – நடைக்கு கோயில். குடைக்கு பெருமாள் கோயில். வடைக்கு திருமலை. முடிக்கு யாதவாத்ரி பிரசித்த மிறே.
24. அன்றிவ் உலகம் அளந்தாய் – எல்லை மண்டபம், ஜீபயர்புரம், உறையூர் என்று எல்லை நடந்து அளந்தது
திருவானைக் காவல் கோஷ்டியாரிடம் இருந்து மீட்டது.
25. ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஒருத்தி மகனாய் ஒளித்து வளர – ராமானுசர் கைப்பிள்ளையாய் பிறந்து
பிள்ளை லோகாச்சார்யார் மகனாய் ஜோதிஷ்குடியில் ஒளித்து வளர்ந்தது.

26.மார்கழி நீராடுவான், மேலையார் செய்வனகள் – மார்கழி நீராட்டமாகிற அத்யயன உற்சவமான திருவாய்மொழித் திருநாளாக
நம்பெருமாளிடம் பிரார்த்தித்து திருமங்கை ஆழ்வார் தொடங்கி வைக்க , நாதமுனிகள் காலத்தில் பகல் பத்து நாளும் சேர்த்து
அது 21 நாள் உற்சவமாக ஆயித்து. அதுவே நமக்கு மேலையார் செய்வனகள் ஆயிற்று.
27. நாடு புகழும் பரிசு – ஸ்ரீரங்க விமானத்தோடு பெரிய பெருமாளை , பெருமாள் விபீஷணனுக்கு கொடுத்தது.
உபய விபூதியையும் எம்பெருமானார் இட்ட வழக்காக்கி அவரை உடையவர் என்று நியமித்தது இவை பார் புகழும் பரிசு.
28. சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே – முதலியாண்டான் – வாங்கீபுரத்து நம்பி பேச்சு –
பெருமாள் உற்சவமாக எழுத்தருளும்போது என்ன பாடினீர் என்ன, ஜெய விஜயீ பவ ஸ்ரீரங்க விபோ ஜெய ஜெய என்றேன் என்ன –
நெய் உண்பீர் , பாலுண்பீர், பட்டுடுப்பீர், நூறு பிராயம் புகுவீர் என்று இன்னொருவர் சொல்ல,
முரட்டு சமஸ்கிருத பெரிய பேர்கள் இங்கு எதற்கு என்று, வர்த்திக்கிற தேசத்தைக் கொண்டு அத்தை சிறுபேறாக அவர்கள் கணிசத்தபடி.
29. பொற்றாமரை அடியே போற்றும் பொருள் – ரங்கமணி பாதுகா பிரபாவம் பற்றி ஸ்வாமி நிகமாந்த தேசிகன் 1000 ஸ்லோகம்
பண்ணக் கூடிய மகிமை. ஆசன பத்மத்திலே அழுத்தின திருவடி அவன் கைவிட்டாலும், அவன் பாதுகையான
நம்மாழ்வார் இல்லை மாறன் அடிபணிந்துய்ந்த எம்பெருமானார் கைவிட மாட்டார் என்கிற பெருமையும் கொண்ட திருவடி அரங்கனுடையது.
30. ஈரிரண்டு மால் வரைத் தோள் செங்கண் திருமுகத்து சொல்வது திருமாலால் – பட்டர்- அனந்தாழ்வான் ஸம்வாதம்.
ஸ்ரீ வைஷ்ணவ திவயதேசங்கள் பலதும் இருக்க பட்டரோ ஸ்ரீரங்கநாத பக்ஷபாதி. எப்படி என்றால்
நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி ஆயிரமும் வான்திகழும் சோலை மதிள் அரங்கர் வான் புகழ்மேல் ஆன்ற
தமிழ்மறை ஆயிரம் என்று அங்கு சொன்னது போல திருப்பாவை முப்பதும்
அன்ன புகழ் புகழ்புதுவை ஆண்டாள் அரங்கர்க்கு பான்னு திருப்பாவை என்று ஸ்ரீரங்கநாதன் விஷயமாக்கி தனியன்கள் சாதித்தார்.
அவரைப் பார்த்து அனந்தாழ்வான் ஒருமுறை, நீர் வைகுந்தம் சென்றால் அங்கு பராமநாதன் த்விபுஜனாக இருந்தால் சேவிப்பீரா,
சதுர் புஜனாக இருந்தால் சேவிப்பீரா என்று வினவ, அதற்கு பட்டர் சதுர் புஜனாக இருந்தால் நம்பெருமாள் என்று நினைப்பேன்.
த்விபுஜனாக இருந்தால் பெரிய பெருமாள் என்று நினைத்து சேவிப்பேன். பெரிய பெருமாளாகவோ, நம்பெருமாளாகவோ
சேவை தரவில்லை என்றால், கூரயைப் பிய்த்துக் கொண்டு ஸ்ரீரங்கத்துக்கே குதித்து விடுவேன் என்றாராம்.
அதை நிரூபிக்கும் வகையில் ஆண்டாளும் நான்கு திருத்தோள் என்று சொல்லாமல்
ஈரிரண்டு மால்வரைத் தோள் மாதவன், கேசவன் என்றது நம்பெருமாள், பெரிய பெருமாளாக நினைத்து அவள் பாடினாளாகக் கூறலாம்.
அந்த மாதவன், கேசவன்தான் – ஆண்டாளை திருக்கல்யாணம் பண்ணி அங்கப் பறை கொண்ட மன்னாரும் அரங்கன் தாமே.

—————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே -தாசரதி தாஸன், கிடாம்பி ஶ்ரீநிவாஸ ரங்கன் ஶ்ரீநிவாஸ தாஸன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ. உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் – –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஆண்டாள் வைபவம் –மாலை கட்டிய மாலை– ஸ்ரீ உ வே இளையவல்லி பூவராகாச்சார்யார் ஸ்வாமிகள்–

December 19, 2020

ஸ்ரீ பெரியாழ்வார் கொத்தி வைத்த பூமியில் ஸ்ரீ துளசி மடியில் கிடந்த பெண் குழந்தை
கலியுகத்தின்-98- ஒரு நள வருஷத்தில் ஸ்ரீ ஆடி மாதம் சுக்ல செவ்வாய் கிழமை கூடிய ஸ்ரீ பூர நட்சத்திரத்தில்
சதுர்த்தசி-அவர் பிறந்தது கி.பி. 885 நவம்பர் 25 அல்லது அல்லது 886 டிசம்பர் 24.

கர்க்கடே பூர்வ பல்குந் யாம் துளஸீ காந நோத் பவாம்
பாண்ட் யே விஸ்வம் பராம் கோதாம் வந்தே ஸ்ரீ ரெங்க நாயகீம்

ஸ்ரீ ஆண்டாள் அவதார காலம் அவள் இயற்றிய திருப்பாவையில் வரும் ”புள்ளின் வாய் கீண்டானை“ என்று
தொடங்கும் பாடலில் வரும் ”வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று“ என்று சொற்றொடரை
ஆராய்ச்சி செய்து அறுதியிடப் பட்டுள்ளது.
(ஆழ்வார்கள் கால நிலை பக் 123-128 ஆரய்ச்சிப் பேரறிஞர் ஸ்ரீ திரு.மு.இராகவைய்யங்கார்)

இந்த நோன்பு சங்க இலக்கியங்களான அகநானூறு, நற்றிணை, பரிபாடல்களில்
பாவை நோன்பும் தைந்நீராடலுமாகக் குறிப்பிடப்படுகிறது.
”நேரிழை மகளிர் வார்மணல் இழைத்த வண்டற் பாவை“ என்று நற்றிணையில் உள்ளது.
அகநானூறிலும் உள்ள கடற்கரையோரப் பாவை விளையாட்டுகள் தாம் நாளடைவில் சமய வடிவு பெற்றது என்று கூறுகிறார்கள்.
‘தைந்நீராடல்’ என்றாலும் மார்கழித் திங்களில் பௌர்ணமியில் திருவாதிரையில் தொடங்கியதால்
இந்த நீராடல் தை மாதத்தில் தொடர்ந்தது.
அதனால் தைந்நீராடல் என்பதும் பொருந்தும் என்று ஸ்ரீ இராகவையங்கார் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியும் மகளிரின் பாவை நோன்பு பழந்தமிழ் வழக்கம் என்பதில் சந்தேகமில்லை.

————

ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாளின் இடக்கையில் கிளி இருக்கிறது.
இது தினமும் புதியதாக இன்றளவும் செய்யப்படுகிறது. இந்த கிளியைச் செய்வதற்கு தோராயமாக நான்கிலிருந்து
நாலரை மணி நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இக் கிளியைச் செய்வதற்கு, மாதுளம் மரத்தின் பூக்கள் கிளியின்
அலகு மற்றும் வாய்ப்பகுதி செய்வதற்கும், மூங்கில் குச்சிகள் கிளியின் கால் பகுதிக்கும்,
வாழை மரத்தின் இலைகள் மற்றும் நந்தியாவட்டை மரத்தின் இலைகள் உடல் பகுதி செய்வதற்கும் பயன்படுத்தப் படுகின்றன.

———–

ஸ்ரீ வில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், ஸ்ரீ கவுசிக ஏகாதசியை முன்னிட்டு
ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்க மன்னார், ஸ்ரீ பெரிய பெருமாள், ஸ்ரீ பூதேவி, ஸ்ரீ தேவி மற்றும் ஸ்ரீ ஆழ்வார்களுக்கு 108 பட்டுப்புடவை
அணிவிக்கும் வைபவம் விடிய, விடிய நடந்து- மேள தாளங்கள் முழங்க ஸ்ரீ பெரிய பெருமாள் சன்னதி பகல் பத்து மண்டபத்திற்கு
கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்து- நள்ளிரவு 12 மணி முதல் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரங்க மன்னார் உள்ளிட்ட
தெய்வங்களுக்கு 108 பட்டுப்புடவைகள் அணிவிக்கும் வைபவம் துவங்கி அதிகாலை வரை நடக்கிறது –

—————-

ஸ்ரீ ஆண்டாள் தநுர் மாச பிறப்பு அன்று திருப்பாவை புடவை சாத்தி சேவை –
ஒரே புடவையில் முப்பது பாசுர முதல் அடிகளை வைத்து பக்தர் ஒருவர் ஐம்பது வருஷங்கள் முன்பு சமர்ப்பிக்க
வருஷம் தோறும் இத்தை சாத்தி சேவை சாதித்து அருளுகிறாள் –

—-

பகல் பத்து முதல் நாளான அன்று மாலை 4 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்
பச்சை பரப்புதல் நிகழ்ச்சி நடைபெறும். ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்க மன்னாருடன் மூல ஸ்தானத்திலிருந்து
ஸ்ரீ பெரியாழ்வாரின் வம்சா வழியை சேர்ந்த ஸ்ரீ வேத பிரான் பட்டர் திருமாளிகைக்கு சென்று அங்கு பரப்பி வைக்கப்பட்ட
காய்கறிகளை சந்தோஷமாக பார்க்கும் வைபவமே பச்சை பரப்புதல் நிகழ்ச்சி என்று அழைக்கப்படும்

———–

ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த தனியன் –

நீளா துங்கஸ்தன கிரி தடீ ஸுப்தம் முத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்தயம் ஸ்வம் ச்ருதி சக சிரஸ் ஸித்தம் அத்யாப யந்தீ
ஸ்வேர்ச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யாவாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இத மிதம் பூய ஏவாஸ்து பூய:

ஸ்ரீ நப்பின்னையினுடைய உயர்ந்த மலை போன்ற முலைகளின் தடத்திலே தலை சாய்த்து உறங்கினவனான
ஸ்ரீ கண்ணனை எழுப்பி அடிமை செய்யும் விஷயத்தில் தனக்குள்ள ஆவலை அறிவித்துத்
தன்னால் சூடிக் களையபெற்ற பூமாலையிலே விலங்கிடப்பட்ட அவனை அனுபவித்த ஸ்ரீ ஆண்டாளைத் திருவடி தொழுகின்றேன்

ஸ்ரீ உய்யக்கொண்டார் அருளிச்செய்த தனியன் –

அன்ன வயற் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப் பாவைப் பல் பதியம் – இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை; பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

அன்னங்கள் உலவுகின்ற வயல்களை உடைய ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஸ்ரீ ஆண்டாள்.
ஸ்ரீ அரங்கனுக்கு பல (முப்பது) பாசுரங்களை ஆராய்ந்தருளிய ஸ்ரீ திருப்பாவையை இனிய இசையோடு கூட்டி
நல்ல பாமாலையாக (பாட்டுக்கலான மாலையாக), பாடிக் கொடுத்தவளும்,
பூக்களாலான மாலையைத், தான் சூடிக் களைந்து கொடுத்தவளுமான ஸ்ரீ ஆண்டாளின் புகழைச் சொல்லு!

சூடிக் கொடுத்த சுடர்க் கொடுயே தொல் பாவை
பாடி யருள வல்ல பல் வளையாய்! – நாடி நீ
“வேங்டவற்கு என்னை விதி” யென்ற இம் மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு

பூமாலையை சூடிக்கொடுத்த சுடர்கொடியே பழமையான பாவை நோன்பை (ஸ்ரீ திருப்பாவை மூலமாக) பாடி
எல்லோருக்கும் அருளவல்ல பல வளையல்களை அணிந்திருப்பவளே. நீ மன்மதனை நாடி
“காமதேவா திருவேங்கட பெருமானுக்கு வாழ்க்கைப் படுத்த வேணும்” என்று (காமனைக் குறித்து) சொன்ன
இவ் வார்த்தையை, நாங்களும் தப்பாமல் பின்பற்றும்படி அருள் புரிவாயாக.
(* …வேங்கடவற் கென்ன விதிக்கிற்றியே., நாச்சியார் திருமொழி 504 (1:1) )

————

1.நாராயணனே நமக்கே– பாரோர் புகழ்மாலை
2.வையத்து வாழ்வீர்காள்- உஜ்ஜீவன மாலை
3.ஓங்கி உலகளந்த- நீங்காத நிறைந்த செல்வ மாலை
4.ஆழிமழைக்கண்ணா- மார்கழி நீராட்ட மாலை
5.மாயனை மன்னு வட- பாபநாச மாலை
6.புள்ளும் சிலம்பின காண்- உள்ளங்குளிர் மாலை
7.கீசுகீ சென்றெங்கும்- தேஜோ மாலை
8.கீழ்வானம் வெள்ளென்- ஆராய்ச்சியருள் மாலை
9.தூமணி மாடத்து- ஸஹஸ்ர நாம மாலை
10.நோற்றுச் சுவர்கம்- தேற்ற மாலை
11.கற்றுக் கறவை- பொருள் மாலை
12.கனைத்திளங் கற்றெருமை- மான மாலை
13.புள்ளின் வாய் கீண்டானை- கள்ளம் தவிர் மாலை
14.உங்கள் புழக்கடை- பங்கயக் கண்ணான் மாலை
15.எல்லே இளங்கிளியே- மாயன் மாலை
16.நாயகனாய் நின்ற- நேய மாலை
17.அம்பரமே தண்ணீரே- உறங்கா மாலை
18.உந்து மதகளிற்றன்- திறப்பு மாலை
19.குத்து விளக்கெரிய- தகவு மாலை
20.முப்பத்து மூவர்- விளம்பாஸஹத்வ மாலை
21.ஏற்ற கலங்கள்- போற்றும் மாலை
22.அங்கன் மா ஞாலத்து- கடாக்ஷ மாலை
23.மாரி மலைமுழஞ்சில்- பகவந் நியமன மாலை
24.அன்றிவ்வுலகம்- பகவத் க்ருபா மாலை
25.ஒருத்தி மகனாய்ப் பிறந்து- துக்க நிவாரண மாலை
26.மாலே மணிவண்ணா- பகவதநுக்ரஹ மாலை
27.கூடாரை வெல்லும்- பகவத்ஸம்ச்லேஷ மாலை
28.கறவைகள்- புருஷார்த்த மாலை
29.சிற்றம் சிறுகாலே- பாரமைகாந்த்ய மாலை
30.வங்கக் கடல் கடைந்த- ப்ரம்மானந்த மாலை

————-

மாலை கட்டிய மாலை–
ஸ்ரீ உ வே இளையவல்லி பூவராகாச்சார்யார் ஸ்வாமிகள் உபன்யாச சுருக்கம் –
தொகுத்து அருளியவர் –ஸ்ரீ உ வே -தாசரதி தாஸன், கிடாம்பி ஶ்ரீநிவாஸ ரங்கன் ஶ்ரீநிவாஸ தாஸன்.

ஆழ்வார் திருமகளார் ஆண்டாள், பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் அவதரித்து, அஞ்சுகுடிக்கு ஒரு சந்ததியாய்
ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் வளரப்பெற்றாள்.
வட பெரும் கோயிலுடையானோடே தழுவி முழுசி பரிமாறவும் பாரித்தாள். அர்ச்சா சமாதியில் இருந்த அவன்
முகம் காட்டாதே ஒழிய, இன்னாப்படைந்தவளாய், அவனோடு கலந்து பரிமாறின திருவாய்ப்பாடிப் பெண்கள்
விருத்தாந்தம் கேட்டு தானும் அநுகரித்து தரிக்கப் பெற்றாள் என்கிறதான அவளுடைய சரித்திரத்தை பலரும் அறிவர் .
மடலெடுக்காதே, அவள் நோன்பிலே கை வைத்தது கிருஷ்ணனுடைய உபாயாந்தர அஸஹிஷ்ணுத்வத்தை கருத்திலே கொண்டு என்பர்.

பெரியாழ்வார் பகவத் ஸம்ருத்தியை ஆசைப்பட்டிருந்தார். ஆண்டாளோ பாகவத ஸம்ருத்தியை ஆசைபட்டாள்.
ஆண்டாள் பாடிய திருப்பாவை இதுக்கு ப்ரதீகம். பெரியாழ்வார் பிரதம பர்வத்திலே நிற்க,
இவளோ சரம பர்வத்திலே ஊன்றினளாய்- சத்ருக்நாழ்வான் படியிலே நிற்கப்பெற்றாள்.
”விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேலது காண்டும்”என்கிற
நாச்சியார் திருமொழி பாசுரம் (10-10) இதுக்கு விஷயம்.

அந்த வகையிலே அவள் பாடிய பாசுரங்கள் ஒவ்வொன்றுமே ஒரு புஷ்ப குஞ்ஜா (ஹாரம்) என்று சொல்லலாம்.
பாசுரங்களின் ஈற்றடியிலே வருகிற சொற்றொடர் களைக் கொண்டே அந்தந்த மாலைக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது இங்கு.
இதற்கு முன்னால் இப்படி மாலை மலையால் கட்டியவர்கள் உண்டோ என்னில், ஆம் ! உண்டு என்றே சொல்லலாம் .

இலங்கைக்குத் தூது சென்ற திருவடி பிராட்டியைக் கண்டு சக்ரவர்த்தித் திருமகன் கூறியதாக சில அடையளங்களை
பெரியாழ்வார் ”நெறிந்த கருங்குழல் மடவாய்…” (3-10-1) என்கிற பதிகத்திலே
‘எல்லியம் போதினி திருத்தல் இருந்ததோர் இடவகையில் மல்லிகை மாமாலை கொண்டு அங்கார்த்தும் ஓரடையாளம் ‘
என்று பாசுரம் இட்டருளினார். அதன்படி சீதாபிராட்டி ராமனை மல்லிகை மாலையால் விளையாட்டாக கட்டியது ராமாயண பிரசித்தம்.
பெரியழ்வாரோ நந்தவனம் அமைத்து மாலை கட்டி சமர்ப்பித்த தோடு ஆண்டாளை ரங்கமன்னாருக்கு மணாட்டியாய்க் கட்டிக் கொடுத்து
மாமனாராகவும் ஆனார். ஆக, ‘மாலை மாலையால் கட்டிய மாலை’ என்றே ஆண்டாள் பற்றி ஒரு வழக்கு உண்டு.
அதாவது – திருமாலை பாமாலை கொண்டு கட்டிய கோதையாகிற மாலை – என்பதே அதன் பொருள்.

1. பாரோர் புகழ் மாலை :

அதாவது முதல் பாட்டின் ஈற்றடியில் ’பாரோர் புகழ படிந்து ஏலோரெம் பாவாய்’ என்று வருவதால்
இந்த பாசுரம் ’பாரோர் புகழ் மாலை’ ஆகிறது. அநந்யப் பிரயோஜன பரர்க்கு, புகழ்சி புருஷார்த்தமாகக் கூடுமா?
கியாதி, லாப, பூஜையில் கண்வைத்து பாசுரம் பாடலாமா? என்னில் ஸ்வவிஷயத்தில் அல்லாமல் பரார்த்தமான கியாதி உத்தேஸ்யமே.

மகிழ்சி ஒருவர் புகழ்தல் காரணமாக வருமது. ஆக காரணத்தைச் சொல்ல வேண்டிய இடத்தில் கார்யத்தைச் சொன்னதாகப்
பார்க்கில், ’பாரோர் மகிழ படிந்து ஏலோரெம்பாவாய்’ என்று கொள்ள இடமுண்டு.
ஸ்வயம் பிரயோஜனமாகாதே பாரோர் மகிழ்வதைத்தான் ஆண்டாள் இங்கே பேசுகிறாள்.
’படிந்து’ என்பதில் உள்ள ஸ்வாரஸ்யம் ’விதேயனாய்’ இருந்து நாரயணன் நமக்கு கிருபை செய்வான்
என்பதை விசேஷித்து நோக்கத்தக்கது.
’நாராயணனே நமக்கே பாரோர் புகழ படிந்து பறை தருவான்’ என்று அன்வயித்துக் கொள்ள வேண்டும்.

கிருபை செய்யுமிடத்து எம்பெருமான் ஆஸ்ருத பரதந்திரனாய் இருந்து கார்யம் செய்யும் என்பதை ஆழ்வார்
’அருள்பெறுவார் அடியார்தம் அடியனேற்கு ஆழியான் அருள் தருவான் அமைகின்றான்,
அது நமது விதிவகையே’ (திருவா.10-7-1) என்று முன்மொழிந்ததை, வழிமொழிகிறாள் ஆண்டாள்.
அதாவது, பிராப்ய-பிராபக விவேக ஞானம் உடைய பிரபன்னாதிகரிகள் விஷயத்தில்
எம்பெருமான் இப்படி கார்யம் செய்யும் என்பதிலே நோக்கு.
இப்படி பர ஸமிர்த்தியால் இவர்களுக்கு வந்த புகழ் என்பதால் இது ஏற்புடைத்து அல்லவே?

————–

2. இரண்டாம் பாட்டு -’உய்வு மாலை’ :

இப்பாட்டின் ஈற்றடி ’உய்யுமாறெண்ணி உகந்து’ என்பது. நோன்பில் ஒருப்பட்ட ஆண்டாள்
தத்விஷயமாய் விடவேண்டியவை இன்னது, அநுஷ்ட்டிக்க வேண்டியவை இன்னது என்கிற
கிருத்யாகிருத்ய விவேகம் பண்ணி யருளுகிறாள்.
அந்த வகையில் ஆண்டாள் சாதித்த ஆறு நியமங்களும்,
காஞ்சி தேவப்பெருமள் ஆறு வார்தைகளும்,
ஆழ்வார்கள் ஆறு வார்த்தைகளும் போல
நமக்கு உஜ்ஜீவன ஹேது என்றால் மிகையாகாது.

தேவப்பெருமாள் ஆறு வார்த்தைகளாவன :
௧. அஹமேவ பரம் தத்வம்;
௨. தர்சனம் பேதயேவச;
௩. உபாயேஷு பிரபத்திஸ்யாத்;
௪. அந்திம ஸ்மிருதி வர்ஜனம்;
௫. தேஹாவஸாநே மோக்ஷம்ச
௬. பூர்ணாசார்யம் (பெரிய நம்பி) ஸ்மாஸ்ரயேத் – என எம்பெருமானாரோடு மிக்குள்ள நம்மையும்
விஷயீகரிக்க திருக்கச்சி நம்பிகள் மூலம் அருளிச் செய்த வார்த்தைகளாகும்.

ஆழ்வாரகள் ஆறு வார்த்தைகளாவன :
௧. வதுவை வார்த்தை(திருவா.௫-௧0-௨);
௨. நெய்யூண் வார்த்தை(திருவா.௫-௧0-௩);
௩. வெண்ணை வார்த்தை(திருவா.௬-௨-௧௧);
௪. நடந்த நல்வார்த்தை(-“-௭-0௫-௯);
௫. மெய்மைப் பெருவார்த்தை (நாச்.௧௧-௧0);
௬. விடுத்ததோர் வார்த்தை (பெரி.௨-௮-௬).

1-வதுவை வார்த்தையாவது – எருதுகள் ஏழையும் நிரசித்தார்க்கு நப்பின்னையை மணமுடிப்போம் என்கிற வார்த்தை.
அது பிறந்தவளவிலே ஏறுகள் ஏழின்மேல் விழுந்து கண்ணன் கொன்ற விருத்தாந்தமும் ,

2-நெய்யூண் வார்த்தையாவது – நெய்களவு கண்டான் என்னும் வார்த்தை பிரஸ்துதமாக, தாய் யசோதை கையில்
கோல்கொள்ளவும் தன் தாமரைப்பூ போன்ற கண்களில் அச்சத்தோடே நீர்மல்க நின்ற கண்ணனின் எளிவரவும் ,

3-வெண்ணை வார்த்தையாவது – வெண்ணை களவு போயிற்று என்கிற வார்த்தையிலே ’கண்ணனே களவு செய்தான்’ என
தாயார் வைக்கோல் கொண்டு புடைத்தாளாக, கண்ணும் கண்ணீருமாய் நிற்கிற அவன் நிலை எதைப்போன்றது என்றால் –
ஒரு சத்திரத்தில் வழிப்போக்காக தங்க வந்த யாத்ரிகர்களிலே ஒருவர், மடம் இவ்வளவு பெரியதாக உள்ளதே,
இதனை மெழுகி கோலமிடுவார் யாரே? (அதி சிரமமான காரியமாகவிருக்கும் என்கிற அர்த்தத்தில்) வினவ,
யாரோ ஒரு அஸ்ரோத்ரியன் என்று இன்னொருவர் பதில் இறுத்தார்.
’இவ்வளவு பெரிய மடத்தை தன்னாலே மெழுகப்போகாது’ என்றானாம் அவர்களிலே ஒருத்தன்.
இப்படி அவன் தன்னை அஸ்ரோத்திரியன் என்று வெளிப்படுத்தினாப் போலே, வெண்ணை களவு போயிற்று
என்கிற வார்த்தையிலே தன்னைத்தான் சொல்கிறார்கள் என்று கண்ணன் அழத் தொடங்கினது, என்னே அவன் மௌடியம்.

4-நடந்த நல் வார்த்தையாவது – கண்ணனெம்பெருமான் தன்மேன்மையை அழித்துக் கொண்டு தாழவிட்ட நீர்மை
குணத்தை உணரலாகா தண்ணிய பூமியினின்றும் விடைப்பெற்று தன்னுடைச் சோதிக்கு எழுந்தருளிய போது
திரௌபதி விஷயமாய் ’தன்னைக் கடன்பட்டவனாக’ அதிருப்தியோடே மொழிந்த சீரிய வார்த்தைகள்.

5-மெய்மைப் பெரு வார்த்தையாவது – மாயன் அன்றைவர் தெய்வத் தேரினிற் செப்பிய கீதா-சரம ஸ்லோகத்தின்
செழும்பொருளை விட்டுசித்தர் கேட்டு அதன்படி இருப்பர் என்கிற ஆண்டாள் நாச்சியாரின் பெருமிதமான வார்த்தை.

6-விடுத்ததோர் வார்த்தையாவது – கஞ்சன் வஞ்சிப்பதற்கு விடுத்த வார்த்தைகளாகும். அஸரீரி வாக்கியம் கேட்டவன்று
தொடங்கி, தீயபுத்தி கஞ்சன் இருள்தான் ஒருவடிவு கொண்டாப்போலே கறுத்த நிறத்தையும், அக்நிஜ்வாலை போலே
சிவந்த தலைமயிரையும் உடையளான பேய்சியை, நேர்கொடு நேர்சென்றால் சாதிக்கலாகாது, வஞ்சத்தால் சாதிப்பாய் என்று
ஏவிவிட்ட வார்த்தை, கண்ணன் பிறந்தபோதே உண்டு என்ற இப்பெரியாழ்வார் வார்த்தையும் நமக்கு ஸ்மாரகம்.

எம்பெருமானார் ஆறு வார்த்தை :
1-பிரஸ்தான திரியங்களை வாசித்து வாசிப்பிப்பது , மாட்டிற்றாகில்
2-ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்து வாசிப்பிப்பது , மாட்டிற்றாகில்
3-அருளிச் செயல்களை வாசித்து வாசிப்பிப்பது , மாட்டிற்றாகில்
4-ரஹஸ்ய திரியங்களை வாசித்து வாசிப்பிப்பது , மாட்டிற்றாகில்
5-இவை அறிந்த ஸ்ரீவைஷ்ணவனோடே சகவாசம் பண்ணுகை, மாட்டிற்றாகில்
6-திருநாராயண புரத்திலே ஒரு குடில் கட்டி நித்யவாஸம் செய்வது.

”அநந்யசாத்யா சாபீஷ்டா… ” என்ற பிரமாண வசனத்தின்படி சரணாகதிக்கு நம்பக்கல் இருக்க வேண்டிய
ஆறும் உத்கிருஷ்ட உஜ்ஜீவனோபாயம் என்பதில் விசம்வாதம் உண்டோ? இல்லை.

௧. பரமனடி பாடுகை,
௨. (நோன்புக் கனுகுணமாக) நெய், பால் உண்ணாமை, மை தீட்டல், மலர் சூடுகை இவை தாமாக செய்து கொள்ளாமை,
௩. (மேலையார்) செயாதவைகளை தவிர்கை,
௪. தீகுறளை (பகவத், ஆசார்ய சன்னிதியில்) விண்ணப்பிக்காமை,
௫. ஐயம் (சாஸ்திர விஹித) தானங்களையும்,
௬. பிச்சை (ஆஸ்ரம விஹித) தானங்களையும்,
ஆம்தனையும் அநுஷ்டித்துப் போருகை, ஆண்டாள் நமக்கிட்ட கட்டளை களாகும்.

’அது, இது, வுது என்னலாது, ”உன்செய்கை” என்னை நைவிக்கும்’ என்கிறபடியே பகவானால்,
பகவானுக்காக, பவானை குறித்து சொல்லப்பட்ட இவை அனத்துமே நமக்கு உஜ்ஜீவன ஹேது.

————–

7. ஏழாம் பாட்டு – தேச மாலை :

’தேசுடையாய் திற’ என்பது ஈற்றடி. இங்கு தேசு என்பது தேஜஸ் என்ற பொருளிலும், தேசம் என்ற பொருளிலும் வந்துள்ளது.
அதாவது, பிரஹ்ம ஞானமாகிற தேஜஸால் வந்த புகரை உடையவள் இந்த பெண்பிள்ளை என்பது.

’பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு (திருவாய்.௯-௨-௧) என்று ஆழ்வார்
தமக்கு எல்லா உறவின் காரியமும் குறைவில்லாமல் அருளப் பிரார்த்திதுப் பெற்ற சேஷத்வமே இங்கு தேஜஸ்.
அத்தையே இவர்களும் கண்ணனுக்கே உற்றோமாய் இருப்பதை ’பறை’ என்று இலை மறைவு காய் மறைவாய் வெளியிட்டார்களிறே.

எம்பெருமானார் மாறனேர்நம்பி போல்வார் ஹஸ்த ஸ்பர்சம் கொண்டு காவிரியில் ஸ்நானம் முடித்து கரைக்கு மீண்டவராய்
ஸன்னதி ஏற புறப்படுவார் என்றால் அது ஐஸ்வர்ய, ஆபிஜாத்யத்தால் வந்த அங்கீகாரம் அன்றி, ஆசார்ய பிரதிபத்தியால் வந்ததொன்று.

தேசம் என்ற பொருளில், பகவத் சன்னதி, இவள் இட்ட வழ்க்காய் கண்ணன் ஆக்கி இருக்கிறபடி.
எம்பெருமானார் ’உபய விபூதி’ ஸம்பன்னராய் இருந்தாப்போலே ஒரு பெண்பிள்ளை இவள் எனலாம்.

’பொன்னுலகு ஆளீரோ? புவனமுழுதாளீரோ? (திருவா.௬-௮-௧) என்று எம்பெருமானுக்கே சொந்தமான
பரமபதத்தை ஆழ்வார் பக்ஷிகளுக்கு அளிப்பதும் இவருக்கு விதேயமாய் அதனை பகவான் ஆக்கிவைத்த படியாலே.

நம்பிள்ளை காலக்ஷேப கூடம் விரியடைய வேண்டி, அருகிருந்த மனையும் கேட்டுப் பெற அதுக்கு ஈடாக
பரமபத்ததுக்கு சீட்டு எழுதிப் பெற்றாள், மனைக்குறிய ஒரு பெண்பிள்ளை என்பதிலே இது த்ருடீக்ருதமாகிறது அல்லவா?

———

8. எட்டாம் பாட்டு – அருள் மாலை :

ஆவா வென்றருள்! என்பது ஹ! ஹ!! என்கிற சந்தோஷ சூசகம் அன்றி வருத்தக் குறியும் ஆகக்கூடும்.
ஸந்தோஷமாக பேசினதுக்கு இடம் திருப்பாணாழ்வாரின் ’நீலமேனி ஐயோ! என்னை சிந்தை கவர்ந்ததுவே’ என்பதனைக் காட்டலாம்.
’தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால் ஆவவென்று ஆராய்ந்து அருள்’ என்று முடிகிறது பாசுரம்.
கண்ணன் தான்சென்று அருள வேண்டி இருக்க, இவர்கள் நம் திருமாளிகை தேடி வந்ததோடு பிரார்த்திக்கும்படியும்
ஆனதே என்று வருத்தம் இரட்டிப்பாக, ஆ! ஆ!! என்று ஆவர்த்தி சொல்லிற்று.

சபரி, குகன், வீடணன் இவர்கள் விஷயத்தில் பரகதமான பகவத் ஸ்வீகாரம் தானும் இவர்கள் விஷயத்தில்,
ஸ்வகதமாகக் கடவதே? என்கிற வருத்தம் அவனது.

ராஜ்யத்துக்கு எலுமிச்சம் பழம்போல், ரத்னதுக்கு பலகரையும் பகவத் கிருபைக்கு பிரபத்தி அஸதுர்சம். அல்ப்பம்.
அவனை இவன் பற்றும் பற்று அஹங்கார கர்பம். அவத்யக்ரம், என்று ஸ்வாமி பிள்ளை லோகாசார்யர் திருவாக்கு.

மர்கட கிஷோரம் போல் ஸ்வகத ஸ்வீகாரம். மார்ஜால கிஷோரம் போல் பரகத ஸ்வீகாரம்.

அருள் பெறுகை அடியார்க்கு லக்ஷணம். அவர்களுக்கு விதேயனாய் இருந்து அத்தை பண்ணுவிக்கை,
’ஆராதனைக்கு எளியவன்’ என்கிற அவனுடைய ஸௌலப்யம் பிழைக்கவும் ஒரே வழி பரகத ஸ்வீகாரத்தாலேயே அன்றோ?.

———–

9. ஒன்பதாம் பாட்டு – திருமாம மாலை :

மாயா வயூனம் ஞானம் என்கிற நிகண்டு படி, எம்பெருமான் தன் இச்சா சக்தி-சங்கல்ப ஞானத்தைக் கொண்டு
பிறக்கிறான் என்பதை தானே கீதா ஶாஸ்திரத்தில் – பிரக்ருதி ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி ஆத்ம மாயயா என்றானிறே.
அத்தை ஆழ்வாரும் ”ஆதியம் சோதி” உருவை அங்கு வைத்து இங்கு பிறப்பதாக பேசியருளினார்.
தைவீக்யேஷா குணமயி மம மாயா துரத்யயா என்று ஆத்மாக்களை பந்திப்பதும்,
மாமேவ ஏதாம் தரந்திதே என்று விடுவிப்பதும் தானே என்றும் பேசினபடியை நோக்கலாம்.
இது தவிற அவனுடைய ஆஸ்சர்யகரமான சேஷ்டிதங்கள், மநுஷ்யத்வே பரத்வத்துக்கு விவக்ஷிதங்கள் என்றால் மிகையாகாது.

மாதவன் : என்றால் பெரிய பிராட்டிக்குத் தவன் – கேள்வன் என்றும்,
”மற்றவரை சார்த்தி இருப்பார் தவம்” என்கிற நான்முகன் திருவந்தாதி (௧௮) பாசுர கணக்கில்,
தவமாவது சேதன லாபத்துக்காக அவன் உத்யோகிக்குமது தொடக்கமானவை.
அன்றிலே.
தவமாவது ஈஶ்வரனை ஆஶ்ரயிப்பது. மாதவமாவது அவன் அடியார்களை ஆஶ்ரயிப்பது என்று கொண்டால்
அவர்களுக்கு பரதந்ரனாய் கார்யம் செய்து தலைக்கட்டுவது, அவன் மாதவனாக இருந்தமைக்குப் பிரயோஜனம் எனலாம்.

வைகுந்தன் : ’வேர் முதல் வித்து’ என்று தன் பரத்வே பரத்வம் தோற்ற பரமபதத்தில் இருக்கும் இருப்பு.

பகவத் விஷயத்தில் சொன்ன இவை தமயே ஆசார்ய பரமாக பார்ப்போமாகில் –

மாமாயன் என்பதை ”பார்த்தான் அறுசமயங்கள் பதைப்ப, இப்பார் முழுதும் போர்த்தான் புகழ் கொண்டு,
புன்மையினோரிடைத்தான் புகுந்து தீர்த்தான் இருவினையும் தீர்த்து அரங்கன் செய்ய தாளிணையோடு ஆர்த்தான்,
இவை எம்பி இராமாநுசன் செய்யும் அற்புதமே” (௫௨) என்கிற இராமானுச நூற்றந்தாதிப் பாசுரத்தைக் கொண்டு பார்க்கில்,
எம்பெருமானைப் போலவே, எம்பெருமானாரும் புற மதத்தவர்களை ஒருபாடு நடுங்கச்செய்தது;
ஆஶ்ரயித்திருக்கு மவர்களை தன்னைப் போலவே ஆத்ம குண ஸ்ம்பன்நர்களாக்கி பாபங்களையும் கட்டோடு கழித்து,
நம்பெருமாள் திருவடிகளுக்காக்கும் இவர் செயல்களும் ஆச்சரிய்மானவையே அன்றோ?

மாதவன்: என்பது ஸ்வாத்யாய நிரதம். இதுவும் ஒருவகையில் தபஶுதான்.
பரபக்ஷ நிரஸனுத்துக்காக வேத, வேதாந்தங்களிலே அந்வயித்தவராய்,
அருளிச்செயல்களே பொழுது போக்காய் தலை நின்றவர் எம்பெருமானார்.

வைகுந்தன்: என்பது இவர் விஷயத்தில் வைகுண்ட பிரதத்வமாகிற ”உபாய” கிருத்யமாகும்.
’வைகுண்ட மணிமண்டப மார்கதாயி’ என்று இவர் ஸம்பந்தம் உண்டாமால் மோக்ஷம் என்பது ஸம்பிரதாயம்.

ஆக, எம்பெருமான் விஷயமாகவும், ஆசார்ய விஷயமாகவும் பல நாமங்களைச் சொன்னோம் –
நாமம் பலவும் நவின்று – என்று பூங்கண்ணி புநைதமையைப் பேசினாள் ஆண்டாள்.
இதுவே அவள் கட்டிய ”திரு நாம மாலை”.

———

10. பத்தாம் பாட்டு – தேற்ற மாலை :

தேற்றமாய் வந்து திற. நீயும் தேறி, எங்களையும் தேறும்படியாக வந்து திற என்பது பொருள்.

தேற்றம் தெளிவு. அதாவது, ஞானத்தில் தெளிவு.
திருநெடுந்தாண்டகப் பாசுரம் (௨௧) ’இருவராய் வந்தார் என்முன்னே நின்றார்’ என்றவிடத்தில் வியாகியானம்
இருவராம்படி வந்தார் என்று காட்டியுள்ள படியால், தேற்றமாய் வந்து என்ற இந்த இடத்திலேயும்
தெளிவு ஏற்படும் படி என்கிற அர்த்தத்தை தருவித்துக் கொண்டால், இந்த பாசுரத்தில் எழுப்பப் படும் பெண்பிள்ளை
இவள் வாயைத் திறக்க, கலங்கிய பிறர் புத்தி தெளியும் என்றபடி.

பகவத் விஷயத்தில் பேற்றுக்கு உபாயமாக ஒன்றை செய்ய முற்படுகை கலக்கம்.
’மாம் ஏகம் சரணம் விரஜ’ என்ற கீதாசாரியன், உபாயாந்தர்ங்களை விட்டே தன்னைப் பற்ற வேண்டும் என்றருளிச் செய்தான்.
திருவேங்கட மலையிலே அத்தை அபிநயித்து காட்டியும் நிற்கிறான்.
இதையே, பகவத் பிரவ்ருத்திக்குத் தடையான ஸ்வப்பிரவ்ருத்தி நிவிர்த்தி சரணாகதி என்பர் .
’சித்த வேண்டா, சிந்திப்பே அமையும்’என்று பேசினார் ஆழ்வாரும்.

சாஸ்த்ரிகள் தெப்பக் கையரைப் போலே சாஸ்த்ர விஹிதமான கர்மாக்களையும், எம்பெருமான் ஆகிய இரண்டையும் பற்றி
பிறவிக் கடல் நீந்துவர். ஸாரக்ஞர்கள் விட்டத்தில் இருப்பாரைப் போலே இருகையும் விட்டு கரைகுறுகும் காலம் பார்த்திருப்பர்.
இப்படி செய்த வேள்வியராய் பர ஸமர்பணம் செய்து விஸ்வசித்து இருக்க, மார்பிலே கைவைத்து உறங்கலாம்.

கலக்கமும், அதன் பரிஹாரமும் :

தேஹாத்மபுத்தி கழிய வேண்டுவது மகார வாச்யனான ஆத்மா ஞாநானத்தால் தேஹ வியதிரிக்தன் என்கிற அறிவு.

ஸ்வாதந்ரிய புத்தி கழிய வேன்டுவது பகவத் சேஷ வஸ்து ஜீவாத்மா என்கிற அறிவு.
அகாரத்திலே ஏறிக்கழிந்த லுப்த சதுர்த்தி இதைத் தெளிவிக்கும்.

அன்ய சேஷத்வ புத்தி கழிவது உகாரத்தால். ஏவ என்ற பொருளில், பகவானுக்கே சேஷப்பட்டவன் ஜீவாத்மா என்ற இத்தால்.

ஸ்வ ரக்ஷணே ஸ்வான்வய புத்தி கழிவதும் நம: பதத்தாலே. ம: ந என்று, பகவதேக ரக்ஷணத்வம் காட்டப்பட்டது இதிலே.

ஆபாச பந்துக்கள் பக்கல் புத்தி விலகுவதும் நாரயணனே ஸர்வவித பந்து என்று விஸ்வசித்த போது.

விஷய சபல புத்தி கழிகையும், ஆய என்கிற வியக்த சதுர்தி அநந்யப் ப்ரயோஜனதையை விளைவித்து.

பிராப்திக்கு வேண்டுவது ருசியும் விலக்காமையும். திரௌபதியும், கஜேந்திர ஆழ்வானும், ஸ்வயத்னத்தை விட்டவளவிலே –
நம: பதார்த்தம் தெரிந்து அநுஷ்டான பர்யந்தம் ஆனவளவிலே – ரக்ஷணம் பிறந்தது.
’சசால சாபஞ்ச விமோச வீர: என்று ரக்ஷணதுக்காக பிடித்திருந்த வில் விலகின அளவிலே,
’இன்றுபோய் போர்க்கு நாளை வா’ என்கிற வார்த்தை பிறந்தது. தலை வணக்கி அப்போதே வாழ்ந்து போயிருக்கலாம்.
அதற்கு அவகாசம் கொடாதே, தாக சாந்திக்காக உண்டான தடாகத்திலே கழுத்திலே கல்லைக் கட்டி விழுந்து
சாவாரைப்போலே, மாண்டு போனான் ராவணன்.

நீயும் தேறி, எங்களையும் தேறும்படியாக வந்து திற என்பதிலே உண்டான தெளிவு இவையே.

———-

11. பதினோறாம் பாட்டு – பொருள் மாலை :

நீ எற்றுக்குறங்கும் பொருள் ஏல் என பிரச்னம் இடுகிறாள் ஆண்டாள். இதுபோன்ற பிரச்னங்கள்தாம்
ஞாத பிரிச்னம் என்றும், அஞாத பிரச்னம் என்று இரண்டு வகை.
தெரியாத விஷயத்தை தெரிந்து கொள்ளவே பிரச்னங்கள் எழுகின்றன.

பொருள் = அர்த்தம், பிரயோஜனம் ஏது என்று வினவுகிறாள் ஆண்டாள்.

எம்பெருமான், ஒரு ’வெள்ள வெள்ளத்தின் மேல் யோக நித்திரை’ செய்வது வைதிக உறக்கமாகும்.
நம்மவர்கள் உறக்கம் தமோ குண கார்யம். பகவான் கிருஷ்ணன் கீதை ௨-௬௬ ஸ்லோகத்தில்,
’யா நிஷா ஸர்வ பூதாநாம்’, ’யஸ்யாம் ஜாக்ருதி பூதாநி’ எது என்று விளக்க மளிக்கிறான்.
இதர விஷயங்களில் வைராக்யம் உறக்கம். பகவத் விஷயத்தில் ஈடுபாடு உணர்த்தி என்று பொருள் படும் இதற்கு.

’ஸுப்ரபாதாஸ்ச மே நிஷா’ என்று அக்ரூரரும்
’அன்று நான் பிறந்திலேன், பிறந்தபின் மறந்திலேன்’ என்று திருமழிசை ஆழ்வாரும்
பகவானின் முகத்தில் விழித்தலையே விடியலாக, ஸத்தா பிரயுக்தமாக நோக்க, மற்றது அதற்கு எதிர் தட்டான,
இரவு (அ) அசத்கல்பம் என்னவும் வேண்டுமோ?

——-

12. பன்னிரண்டாம் பாட்டு – அறிவு மாலை :

அனைத்தில்லத்தாரும் அறிந்து ஏலோரெம்பாவாய்.
அதாவது இவள் ஸகாசத்திலே எல்லோருக்கும் உணர்த்தி ஏற்பட்டது என்கிறாள்.
எம்பெருமானார் பிறந்தாற் போலே ஆயித்து, இவள் சேர்த்தியிலே எல்லோரும் பகவத் விஷயமறிந்தது.

ஓராண் வழியாச் சென்ற உபதேசம் தான் ’ஆசையுடையோர்க் கெல்லாம் ஆரியர்காள்! கூறுமின்’ என்று
பேசி வரம்பறுத்தார் எம்பெருமானார்.

’போதுவீர் போதுமினோ’ என்று இச்சையே அதிகார மாக்கினதும் இவளைக் கூடினபோதிறே.
எல்லோரும் அறிய வேண்டும் என்கிற விசாலமான திருவுள்ளம் படைத்த எம்பெருமானார் போல்வாள் ஒருத்தி யல்லளோ இவள்?

’மனத்துக் கினியான்’ என்று திருவாய்ப் பாடியிலே கண்ணனைத் தவிற வேறு ஒருத்தரைப் பாடுவதா?
ராமன் மனத்துக்கு இனியான் ஆகில், கண்ணன் இன்னாப்புக்கு விஷயமா என சில பெண்கள் கிளர்சி செய்ய,
இவள் ஒருத்தி ’இருவரும் ஒரே வியக்திதான்’ என்று சமாதனப் படுத்தி, எல்லோரும் அத்தை உணரும்படிச் செய்தாள்.
அதுக்குச் சேர, கிருஷ்ண விருத்தாந்தமும், ராம விருத்தாந்தமும் மாறி மாறி பேசும்படியான
’புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனை’ பாசுரம் பிறந்தது அடுத்தது என்று அந்வயம்.

————–

13. கள்ளம் தவிர் மாலை :

போதரிக் கண்ணினாய் :
போது = போதம் என்பது போது என்று ஆகியுள்ளது.
அரிதலாவது அந்த ஞானத்தை சேகரிப்பதாகும்.
ஆசாரியனானவன் எப்போதும் ஞானத்தை சேகரிப்பதிலே கண்ணும், கருத்தாய் இருப்பர்.
பாவாய் : ஸ்த்ரீத்வம் அல்லது பாரதந்த்ரியத்துக்கு உடல்.
பரதாழ்வானைப் போலே வைத்த இடத்தில் இருக்கும் இருப்பு. இங்கே ஒரு ஐதிஹ்யம் காணலாம்.

ஒரு சமயம் பாஹ்யர்களால் ஸ்ரீரங்கத்துக்கு ஆபத்து வர, பெரிய நம்பிகள் எம்பெருமானாரிடத்தில் வந்து விண்ணப்பித்தார்.
பகவத் விஷயத்தில் ஆபத்தை போக்க அவனிடத்திலேயே பிரார்த்திக்க வேணுமாய்
”சூழ வலம் செய்ய கடுவினை களையலாமே” என்கிறபடி திருவரங்க வீதிகளிலே பிரதக்ஷணமாய் வர ஆபத்து விலகும்,
அதற்கு பெரிய நம்பிகள் தன்பின்னே நிழல் போல் வருவாரைப் பிரார்த்தித்து வேண்ட,
உடையவரும் கூரத்தாழ்வானை அனுப்பி வைத்தார் என்பது குருபரம்பரை சரித்திரம்.
முக்குறும்பு அறுத்தவரான ஆழ்வானும் ப்ராசாரியரின் பின்னே செல்ல தயங்குவாரோ?
ஆனபோது எம்பெருமானாருக்கு பரதந்திரராய் மாற்றுப் பேச்சு உண்டோதான்?

ஸ்ரீமத் ராமானுஜ சரனௌ சரணம் பிரபத்யே |
ஸ்ரீ மதே ராமானுஜாய நாம: ||
என்ற ஜகதாசாரியர் விஷயமான துவய மஹா மந்திரத்தில் ”மதுப்பு” பிரத்யாத்தல் பகவத் விஷயமான
துவயத்தில் பிராட்டிகீடாக இங்கே பேசப் படுமவர் கூரத்தாழ்வான் என்றால் அவருக்குண்டான
ஸ்த்ரீத்வ பூர்த்தி யோடேயான ஆசாரியனைச் சொல்லுகிறது இங்கு.

கள்ளம் தவிர்கையாவது ”ஓராண் வழியாய்ப்” மற்றையோர்க்கு ஒளித்துப் போந்ததை
”ஆசை உடையோர்க்கு” எல்லாம் ஆக்கின கிருபாமாத்ர பிரசன்னா சாரியர் இருந்தபடி.

ஸ்வயம் பாகத்திலே வயிறு வளர்க்காமல் ”சாது கோஷ்டியில் உட்கொள்ளப் படுவாரே” என்கிறபடி
எம்மையும் அங்கீகரித்து அனுபவத்தை பகுமுகமாக்கப் பிரார்த்தனை.

——————–

14. பதினாலாம் பாட்டு – பாடல் மாலை :

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடு.

’ராமம் மாநுஷம் மந்யே’ என்று ராமன் தன்னை மநுஷ்யனாகவே காட்டிக்கொள்ள ஆசைப்பட்டான்.
அதற்காகவே, சதுர் புஜங்களை மறைத்து, த்விபுஜனாகவே அவதாரத்தை நடத்தி முடித்தான். என்றாலும்
ஹநூமான், மண்டோதரி போல்வாருக்கு தன் நான்கு தோள்களை காட்டினான் என்பதை ருஷி வெளியிட்டுள்ளார்.

மண்டோதரி வியக்தமாக கண்டதுபோல் ஹநூமான் காணவில்லை ஆனாலும், ’ஆயதாஸ்ச, ஸுவ்ருதாஸ்ச’ என்கிற
பகு வசன சப்தங்களால் இதனை ஊகிக்கமுடிகிறது. ராம லக்ஷ்மணர்களைச் சேர்த்து பகுவசனப் ப்ரயோகம் என்று
மறுக்க வழியுண்டானாலும், வால்மீகி, த்விவசன இலக்கணம் கொண்டே அதனை ஸ்லோகமாக்கி யிருக்கலாம்.
அப்படியல்லாமல், பகுவசனமாகவே ஸ்லோகம் அமைத்ததுக்குத் தாத்பர்யம், ராமன் ஹனூமானுக்கு
நான்கு தோள்களோடே தன்னைக் காட்ட ஹனுமான் அவனக் கண்டார் என்பது உறுதியாகிறது.

எம்பெருமான் திருக்கண்கள் காதுவரை நீண்டதின் தாத்பர்யத்தை பராசர பட்டர்,
ராஜாக்கள் நாடு பிடிக்கும் ஆசையில் பக்கத்து தேசங்கள்மேல் படை எடுத்து வசமாக்குவது போல்,
அவனுடைய கண்களும் அருகிருந்த காதுவரை நீண்டு பாய்ந்தாக் கிரமித்ததாய் அருளிச் செய்தார்.

உய்ந்த பிள்ளை என்கிற அரையர், பெரியாழ்வார் திருமொழியில் உள்ள, ’அப்பூச்சி’ காட்டும் பிரகரணத்துக்கு
அபிநயம் பண்ணா நிற்க, எம்பார் உள்ளீரோ? என்று கேட்டதான, எம்பெருமானார் விஷயமான ஐதிஹ்யம் இங்கு நோக்கத்தக்கது.

————

15. பதினைந்தாம் பாட்டு – மாயனைப் பாடு ஏலோரெம்பாவாய்.

’நானே தான் ஆயிடுக’ என்று பாகவத விஷயத்தில் இருக்கும் இருப்பு சொல்லப்பட்டது இதிலே.

கந்தாடை தோழப்பர் நம்பிள்ளை விஷயத்திலே இல்லாத குற்றங்களை ஏறிட, அதற்கு பிள்ளயும் இசைந்தித்டார்,
”என்ன உலகாரியனோ?” என்று அவரால் அழைக்கப்பட, அப்பேர் அவருக்கு விலகாமல் வந்து பரந்தது.

செய்யாத குற்றத்தை ஏறிட்டாலும், இசைந்து, அதற்கு க்ஷமாபணம் வேண்டுவது உத்தம ஶ்ரீவைஷ்ணவ லக்ஷணம்.

இப்படிபட்ட ஆத்ம குணம் உடைய பெண் பிள்ளையை எழுப்புகிறாள் ஆண்டாள்.
எழுந்திருந்து செய்ய வேண்டிய காரியம் தான் என்ன, என்று வினவ, மாயனை பாட வேண்டும் என்கிறாள்.

கண்ணன் மாயங்களாவன வல்லானை கொன்றது, மாற்றார்களை அதாவது சாணூர-முஷ்டிகர்களை அழித்தது இத்யாதி.
தொண்டரடிப் பொடியாழ்வார் ’கவளமால் யானை கொன்ற கண்ணன்’ என்றும்,
நம்மாழ்வார் ’வார்கடா வருவி யானை மாமலையின் மருப்பினைக் குவடிறுதுருட்டி(திருவா. ௮-௪-௧)என்றும் பாடி விஸ்மயித்தனர்.

ராக்ஷசர்களில் ஒருத்தனான ஹிரண்யனனைக் கொன்று, ப்ரஹ்லாதனை ரக்ஷித்தான்.
ராவணனைக் கொன்று, விபீஷணனை ஏற்றான். பக்ஷிகளில் ஒன்றான காகாசுரனை நிக்ரஹித்து ஜடாயுவை வானேற்றினான்.
நாகங்களின் ஒன்றான காளியனை விரட்டி, கருடனின்று காத்து தக்ஷனுக்கு அடைகலம் கொடுத்தான். இதுவல்லவா அவன் மாயம்.

முதல் ’பாடல் மாலைக்கு’, பகவத் அநேக குணங்கள் விஷயம்.
இரண்டாவது ’பாடல் மாலைக்கு’ அவனுடய வீர தீர பிரதாபங்கள் விஷயம்.

————

16. பதினாறாம் பாட்டு – நீ நேய நிலைக் கதவம் நீக்கு என்றபடியாலே இது ஒரு ”நேச மாலை” :

இதிலே உள்ள வெஞ்சார்த்தம், ஸ்வாமி எம்பெருமானார் விஷயமான ஸ்வாபதேசம் எனலாம்.

நந்த கோபன் குமரன் – எதிராஜ சம்பத் குமாரர்க்கு பிதாவான இவர்,
நந்த கோபனுடைய கோயில் – தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்த கோயில் சாவியை
திருவரங்கத்து அமுதனார் கையினின்றும் ஒரு உபாயத்தால் பெற்றார்,
கொடித் தோன்றும் தோரண வாசல் காப்போன் – ’கொடியணி நெடுமதில் கோபுரம்’ (திருவா. ௧0-௯-௮)
பரமபதமாகிற விஷ்ணுலோக மணிமண்டப மார்க்க தாயியாகிற நீர்,
மணிக்கதவம் – நவ ரத்னங்கள் போன்ற கிரந்தங்கள் வாயிலாக, வேதாந்த விழுப்பொருள்களை,
தாள் திறவாய் – காலக்ஷேபம் ஸாதித்தருள வேண்டும்.
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் – ’பவிஷ்யத்’ புராணதிலேயும், ஆழ்வருமாக
’பொலிக, பொலிக பொலிக’ பதிகத்திலே இவர் அவதாரத்தை சூசிப்பித்ததோடு
’பவிஷ்யத்’ ஆசார்ய விக்ரகத்தையும் உபகரித்த படியால்,

தூயோமாய் வந்தோம் – உபாய, உபேயங்களில் சுத்தியோடே வந்த எங்கள்,
துயிலெழப் – ’அநாதி மாயயா ஶுப்த’ என்கிற அக்ஞான அந்தகாரத்தை விலக்கக் கடவீர்.
பாடுவம் – ’கலியும் கெடும் கண்டு கொள்மின்’ என்கிற பாட்டு பிரஸ்துதமாகக் கடவது.
நீ நேச நிலைக் கதவம் நீக்கு –

கதவு இரண்டு கபாடங்களாக விருக்கும். நிலைக்கதவம் நிலைத்த ரக்ஷண லாபத்துக்காக நேசத்தோடே
ஒன்றொடு ஒன்று கவ்வி இணந்திருக்கும். அந்த வகையில்
மந்த்ரம், மந்த்ர சேஷம் என்று இரண்டு பாகமாய் இருக்கும் திருமந்த்ரம்;
நிலை நின்ற ரக்ஷண ஆஸ்வாசகர பகவத் வசனமாகிற சரம ஸ்லோகமும்;
பூர்வார்த்தம்-உத்தரார்தம் என்று இரண்டு பகுதியாய்;
அதுபோலே பூர்வ கண்டம், உத்தர கண்டம் என்று இரண்டு கண்டங்களோடே கூடியதுமான துவய மஹ மந்த்ரம் –
நேர்த்தியான பிராட்டி ஸம்பந்தத்தோடே கூடியதாய்,
மந்த்ரத்துக்கு உள்ளீடான வஸ்துவை கோயில் கதவம் போலே ரக்ஷிகின்றன.
இவைகளின் விசேஷார்த்தங்களை ஸ்வாமி, உம்முடைய நிர்ஹேதுக கிருபை கொண்டு
உபகரிக்க வேண்டும் என்கிறாள் இந்த ’நேச மாலை’ கொண்டு ஆண்டாள்.

————-

17. பதினேழாம் பாட்டு – உறங்கா மாலை :

உம்பியும் நீயும் உறங்கேல் எம்பாவாய்.

இதிலே சொல்லப் பட்ட ஸ்வாபதேசார்த்தம் ஆசாரியன், திருமந்திரம், திருமந்திரார்த்தம் மற்றும்
மந்திர ஸாரம், முறையே நந்தகோபன், யசோதை, கிருஷ்ண, பலராமர் இவர்களைக் கொண்டு சூசிப்பிக்கப் படுகின்றன.

நந்தகோபன் என்கிற பதம் ஆனந்தம் அளிப்பவர், ஶ்ரீசூக்திகளை ஸம்ரக்ஷிபவர் என்கிற
தத் விந்யாசத்தின்படி, ஆசாரியனைக் காட்டும்.
பர்தாவினுடைய படுக்கையும், ப்ரஜையையினுடைய தொட்டிலையும் விடாதே இருக்கும் யசோதை,
பிரதம சரம பதங்களை விடாதே பற்றி இருக்கும் மத்யம பதம் (’உ’ காரம்) போலே அமைந்தது, இவர்கள் மூவரின் கிடக்கை

அம்பரம் ஊடறுத்தது ஓங்கி உலகளந்த வியாபாரம் வியாப்திக்கு விஷயமாகையாலே, நாராயண பதார்தமுமாக, திருமந்திரம்,
அடுத்ததான, கிருஷ்ண, பலராமர்களின் ஸ்நிக்த்த பாவம் திருமந்திர சாரத்தையும் உபன்யஸிக் கின்றன..
ஆசாரியன் அம்பரம், தண்ணீர், சோறு என்று அவர் செய்யும், தானம்-உபகாரம்தான், பரமபதம், விரஜை ஸ்நானம்,
மற்றும் அஹமன்னம், அஹமன்னம் என்கிற ஆத்ம ஸமர்பணத்துக்கான வழி.

மந்திர ஸாரமாவது, ’நின் திருவெட்டெழுத்தும் கற்று, உற்றதும் உன் அடியார்க்கடிமை’ என்கிறபடியே
ததீயத்வத்தை ஸ்தாபிப்பது, பலராமனுக்குத் தம்பியாக பிறந்திருக்கிற படியாலே, அவதாரத்துக்குச் சேர
சேஷத்வமும், அண்ணனானாலும் பலராமன் ஸ்வரூபத்துக்க்ச் சேர சேஷத்வம் பாராட்டி உணர்த்தி மறுக்கில் நாம் இழந்தே போம் அத்தனை.

ஆசார்ய ருசிபரிக்ரஹீதமான பகவத் பிரேமம், பகவத் ருசிபரிக்ரஹீதமான ஆசார்ய அபினிவேசம் இவைதானும்,
ஒன்றை மற்றொன்றிலே மூட்ட, ’பெரிய வண்குருகூர் நம்பிக்கு ஆள் உரியனாய் திரிதந்தாகிலும் தேவபிரானுடை
கரிய கோல திருவுருக் காண்பன் நான்’ என்னக் கடவதிறே. ஆதிநாதன்-தேவபிரான் தண்ணளி பெறுகையும் இதுகொண்டு.

ஆழ்வாருக்கு ’நெடுமாற்கடிமை’ பதிகம் பாட, கீழில் ௮-பத்து வரை செல்ல வேண்டியிருந்தது.
இவ்விடத்தில் ஒரு ஐதிஹ்யம் காட்டப் படுகிறது. ஸ்வந்திரனாய் இருந்து ஒருவன் மீண்டு பகவத் சேஷத்வத்துக்கு இசைந்தவனாய்,
பின் பாகவத சேஷத்வத்துக்கு வரக் காணில், பகவான்தானும் முகம் சுளிக்குமோ? என்று பட்டர் வினவ,
’அல்லிக் கமல கண்ணனாய்’ இருக்கும் என்று அவர் சிஷ்யர் நஞ்சீயர் பதில் அளித்தார் என்று காட்டப் பட்டுள்ளது.
அதாவது ’ஈஸ்வர சேஷம்’ என்று அறிந்த வன்று பிரமித்து மிளலாம். ததீய சேஷத்வ பர்யந்தமாக உணர்ந்தால் மீள வேண்டாவிறே.

————-

18. பதினெட்டாம் பாட்டு – வந்து திறவாய் மகிழ்ந்து – மகிழ் காலை :

நப்பிந்னை நங்காய் என்று ஸ்திரீத்வ பூர்த்தியும், புருஷகர பூர்த்தியும் உடையவள். எங்கனே என்னில்,
ஈஸ்வரனை அழகாலே திருத்துமவள், சேதனனை அருளாலே திருத்தும்.
கிருஷ்ணா வதாரத்திலே புருஷகார பூதை நப்பிந்னை பிராட்டியாதலால், திருவாகிறாள்.

கந்தம் கமழ் குழலி, செந்தாமரைக் கை, சீரார் வளை ஒலி என்று மூக்கு, கண், காது இவை பட்டினி போகாதே
தளிர்க்கும்படி வந்து திறவாய் மகிழ்ந்து, என்பது ஆண்டாள் விண்ணப்பம். ஆசாரியனுக்கும் உபாய வைபவம் உண்டாகையால்,
அவனைக் காட்டுவதாகவும் தொன்யர்த்தால் விளங்கிக் கொள்ளலாம்.

பந்து – சிஷ்ய வர்கத்துக்கு உபலக்ஷணம். செந்தாமரைக் கை அவருடைய உபதேச முத்திரைக்கும்,
வளை ஒலிப்ப என்பது பாசுரங்களின் தொன்யர்த்த விளக்கங்களுக்குமாய்,
வந்து திறவாய் மகிழ்ந்து – திருமாளிகை கதவை திறந்து, வாயைத் திறந்து, பட்டினி கிடந்து அறிய வேண்டிய
அர்த்தங்களை ’ஆசையுடையோர்கெல்லாம் ஆரியர்காள் கூறும்’ என்ற வகையிலே,
’கூடு மனமுடையீர்கள் வந்து கூடுமின்’ என்றிவைகளிலே சொன்ன மர்ம சிரத்தை உடைய அதிகாரிகளாகிய எங்களுக்கு,
’நனும் சொன்னேன், நமரும் உரைமின்’ என்று அத்தை ஸர்வாதிகர மாக்கி உபதேசிக்க வேண்டும்.
இத்தால் பயன் எமக்காய், மகிழ்சி உம்மதாக வேண்டும் என்கிறாள். இதுவே ஆண்டாள் காட்டிய ’மகிழ் மாலை’.

————

19. பத்தொன்பதாம் பாட்டு – தத்துவமன்று, தகவன்று ஏலோரெம் பாவாய் – தகவு மாலை :

மைத்தடங் கண்ணி – பக்தி சித்தாஞ்சனம் ஆகிற பகவத் விஷயத்தில் ஈடுபாடு.
நீ, உன் மணாளனை – ஈஸ்வராய நிவேதிதும் என்றும்,
நாரீணாம் உத்தமை என்றும் சிஷ்யனை ஈஸ்வர சேஷமாக்குகை.
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் – ஆத்மாக்கள் எல்லாம் அவனுக்கு மஹிஷி பிராயரே ஆயினும்,
ஆசாரியன் அபிமத மஹிஷியாகிறர். பிராட்டி பரிகரங்களாய் இருக்கிற நம்மை, தன்பரிகரமாக்கி
முந்துர காரியம் செய்ய வேண்டி ஸ்வகதமாக தான் விழைபவன்.

தத்துவ மன்று – ”தது+த்வம்” அன்று.
’தத்வமஶி’ ஸ்வேதகேதோ! என்கிற வேத வாக்யத்துக்கு சொல்லப்பட்ட அத்வைத பரமான அர்த்தம் தவறு என்று காட்டி மீட்காவிடில்,
தகவன்று – உம்முடைய கிருபைக்குச் சேராது. இதுவே ’தகவு மலை’.

—————–

20. இருபதாம் பாட்டு – இப்போதே எம்மை நீராட்டு – நீராட்ட மாலை :

’இஹிபஸ்யதி ஶரீராணி’ என்று தண்டகாரண்ய ருஷிகள் ராமனிடம் காட்டியது போல,
விரஹம் தின்ற தங்கள் உடம்பைக் காட்டி ’எம்மை நீராட்டு’ என்கிறார்கள்.

உன் மணாளனையும் தந்து – விசிரி, கண்ணாடி அத்தோடு உன்மணாளனையும் தர வேண்டும்.
’எம் தமை விற்கவும் படுவார்களே’ என்கிற ரீதியில், அசேதன வஸ்துக்களுக் கீடாக எடுத்தாளும்படி
பகவானும் தன்னை ஆக்கி வைதிருக்கிற ஸௌலப்யம்.

இப்போதே எம்மை நீராட்டு – கைங்கர்யம் கொள்ளாமை அவனுக்கு தாபம் என்றால் அதை இழக்கை எமக்கு வெக்கை.
’க்ரீஷ்மே ஸீதமிவக்ருதம்’ என்கிறபடியும், ’த்வதீக்ஷண ஸுதாஶிந்து வீஶிவிக்ஷேப ஸீகரைஹி’ என்கிறபடியும்
உன் திருக் கண்நோக்காகிற தீர்த்தம் கொண்டு நீராட்டு என்றபடி.

’ஒருபகல் ஓர் ஊழியாலோ’ என்று பேசினபடி பிரியில் தரியாமை யாகிற வாற்றாமை,
விலகும்படியாக இப்போதே எம்மை நீராட்டு என்று த்வரிக்கிறார்கள்.

——————-

21. இருபத்தோராம் பாட்டு – போற்றியாம் வந்தோம் புகழ்ந்து – புகழ் மாலை :

துயிலுணர்ந்தவாறே வந்த வரத்துக்குக் காரணம் போற்றிப் புகழ்தல் என்கிறார்கள்.
குணத்துக்குத் தோற்று வந்தவர்களாதலால், அவைதம்மையே விஷயமாக்கிப் பாடுகிறார்கள்.

ஊற்றமுடையாய் – ’ஶாஸ்த்திர யோனித்வாத்’ என்கிறபடியே, ஶாஸ்த்திர வாக்கியங்களைக் கொண்டே ”ப்ரஹ்மம் ” அறியத்தக்கது .

பெரியாய் – யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஶாஸஹ’ என்கிறபடியே, வேதத்தாலேயே அறியப்படுமவனாகிலும், ’வேதாதிகன்’

உலகினில் தோற்றமாய் நின்ற – வேதாதிக்னாய் இருந்து வைத்தும், ஸகல மனுஜ நயன விஷயமாம்படி பிறந்து, அத்தால்

சுடரே – பிரகாசிக்கிறான். ’ஸ உ ஸ்ரேயான் பவதி ஜாயமாந:’ என்று பெருமை அடைகிறான்.
இதிலே ’உ’ என்பது ’ஏவ’ என்கிற பொருள்பட, பிறந்தே பெருமை அடைகிறான் என்றும்,
பிறந்து பெருமையே அடைகிறான் என்றும், பிறந்து பெருமை அடைந்தவனாகவே ஆகிறான் என,
புரத: பஶ்சாதபி ஸ்தாந: என்பதாக ஸ்தானத்ரயத்திலும் அந்வயம்.

அன்றியே,
ஊற்றமுடையாய் – ஆஶ்ருதர்களை ரக்ஷிப்பதில் சுதி இல்லாதவன்.
வானர முதலிகள் விபீஷணனை ’கெட்டவன்’ சேர்கக்கூடாது என்ன,
ஹநூமான் ’நல்லவன்’ சேர்த்துக் கொள்ளலாம் என்ன, இருவரையும் ஒப்புவித்து,
’கெட்டவன் அதனால் சேர்த்துக் கொள்ளலாம்’ என்று அங்கீகரிக்கிற விரத்ததை உடையவன்.

பெரியாய் – மறுதலித்த ஸுக்ரீவன் தானும், ராமனை இதற்காக கொண்டாடும் படியாக அமைந்த பிரபாவத்தை உடையவன்.

தோற்றமாய் நின்ற – தன்னுடைய ஆஶ்ருத பக்ஷபாதம் பிரகாசிக்கும் படியாகவும், அத்தை ’தன் பேறாகவும்’ செய்து முடிப்பவன்.
’பீஷ்ம, த்ரோண அதிக்ரம்ய, மாம்ஸ்ச மதுஸூதந. கிமர்த்தம் புக்தம் விருஷட போஜனம்’ என்று கேட்கும்படியாய் அமைந்த பக்ஷபாதம்.

சுடரே – ’ஐவர்க்கு அருள் செய்து, பார்மல்கு சேனை அவித்த, பரம் சுடர்!’ என்றும்,
’இன்னார் தூதன் என நின்றான், எவுள் கிடந்தானே’ என்றும் அவனுடைய, நீர்மை, எளிவரவால் வந்த ஔஜல்யம்.

இப்புடைகளிலே போற்றிப்-புகழ்ந்து வந்தோம் என்பதான ’புகழ் மாலை’.

—————

22. இருபத்திரண்டாம் பாட்டு – எங்கள் மேல் நோக்குதியேல், எங்கள் மேல் சாபம் இழிந்து – சாப நிவர்த்த மாலை :

நம்முடைய அபராதங்கள் எம்பெருமான் கண்களை செம்பளிக்கப் (மூடப்) பண்ணும்.
அவனுடைய அபராத ஸஹத்வம் (க்ஷமை) திருக்கண்களை அலரப்பண்ணும். கோடை ஓடிய பயிரிலே ஒருபாட்டம்
மழை பெய்தாப் போலே, ஸாத்மிக்க, ஸாத்மிக்க அவனுடைய அருள் நோக்கை வேண்டுகிறாள், இப்பாசுரத்தில் ஆண்டாள்.

’இவையும், அவையும் உவையும்’ (திருவா. ௧-௯-௧) – பதிகத்திலே ஆழ்வாருக்கு பகவான்
தன்னுடைய ’ஸாத்மிய போக பிரதத்வமாகிற’ குணத்தைக் காட்டி கொடுத்தான்.

போக மண்டபமாகிற ஶ்ரீரங்கத்தில், திருமணத் தூண்களைப் பற்றியன்றி பெரிய பெருமாளின்
திருக்கண் நோக்காகிற பிரவாகத்திற்கு எதிர்விழி கொடுக்கப் போகாது.

’அற்றார்க்கு’ சீற்றத்துடனும், மற்றயோர்க்கு அருள் கொண்டும் நோக்க வேண்டி,
திங்களும், ஆதித்யனுமாய் இருக்கிற கண்கள் என்றாள். பின்னை தவறு என்றுணர்ந்து,
தேய்தல், வளர்தல், ராகு-கேதுவால் பீடித்தல் இவை உள்ள சூரிய-சந்திரர்கள் அவனுடைய திருக் கண்களுக்கு
நேர்கொடு நேர் ஒவ்வார் என்று தெளிந்து, ’செங்கண்’ என்றே சொல்லி ”தத்-தஸ்ய சதுர்சம்” ஆக்குகிறாள்.

இவர்கள் சாபம் விஸ்லேஷ ஜனித விரக தாபமாகும். அதுக்கு வழி, அவன் சன்னதி யேற வந்து
தலைப் பெய்தலாகிற யாதிருச்சிக சங்கதிகளை ஆண்டாள் இயம்புகிறாள். எவை என்னில் –

தேஹாத்மாபிமானத்தை தொலைத்து – ஆசார்ய ஸஹாசத்திலே -; ஈஸ்வர சேஷத்வத்துக்கு இசைந்தனாய் -;
பகவாதேகே உபாயத்தின் மூலம் -; அவர்களின் கைங்கர்யமே பிராப்யம் என்பது வரையிலான
யாதிருச்சிக, ஆநுஷங்கிக, பிராசங்கிக ஸுக்ருதங் களாகும்.

அகல்யை திருவடியாலும், தூர்வாசர் திருகரங்களாலும், நள-கூபர்கள் முழந் தாள்களாலும்,
மது-கைடபர்கள் தொடையினாலும், ருத்ரன் மார்பு வேர்வையினாலும் சாபம் விலகப் பெற்றனர்.
அவனுடைய ஜாயமான கடாக்ஷத்தால் வந்த ஞானம், அவன் திருவடிகளிலே விழப்பண்ணும்.
விழுந்தவனை அஞ்சேல் என்று கைகவித்து ரக்ஷிக்கும்.
ஆக, அவனுடைய, கண், கால், கை மூன்றும் உத்தேஸ்யம் நமக்கு.

பகவத் பிரபாவம் இதுவானால், ஆசாரியனின் ஒருகண் (உட்கண்) நோக்கு -திருஷ்டி யதிசயம்-
முக்கண்ணன், எண்கண்ணன், ஆயிரம் கண்ணர்களாகிற ஹரி, பிரம்மா, சிவன் இவர்கள் யாருக்கும் சமன் செய்யப் போகாது.

ஆளவந்தார், ’ஆமுதல்வன்’ என்று இளையாழ்வாரை கடாக்ஷித்த படியாலேயே அன்றோ
ஸம்பிரதாயத்துக்கும், ஸம்சாரிகளுக்கும் வாழ்சி வானளவாயிற்று?.

————-

23. இருபத்து மூன்றாம் பாட்டு – யாம் வந்த காரியம் ஆராய்ந்தருள் – அருள் மாலை(௨) :

’ஆவா வென்றருள்’ என்கிற திருப்பாவை ௮-ஆம் பாட்டில் ஒரு ’அருள் மாலை’ புனையப்பட்டது.
இங்கே ௨௩ ஆம் பாட்டிலும் ஒரு ’அருள் மாலை’ பிரஸ்துதமாகிறது.
அங்கே சொன்னது ’அருள்வான்’ என்று பவிஷ்யத் வசனமாக.
தாங்கள் சொல் பாவினை ’வினவி அருள்’ என்கிற பொருளிலே இங்கே இப்பாட்டு பிரஸ்துதமாகிறது எனலாம்.

அகதிகளாக வந்தோம். ஆற்றாமையால் குண ஜிதர்களாக வந்தோம். மற்றையோர்களுக்கு ஆகாதபடி வந்த
எங்களை பெற்றாலும் பெறு! இழந்தாலும் இழ!! என்று வந்த சிறுமிகள் விண்ணப்பித் தார்களாக,
தன்னைப் பெற்றும் அகதிகள் என்று சொல்லப் போமோ? உங்கள் காரியம் செய்ய சித்தமாய் இருகிற என்னிடம்,
வந்த காரணத்தை சொல்லுங்கோள் என்ன, கண்ணன் கிடந்த கிடக்கையும், ஸுப்ரபதாமும் சேவித்த தங்களுக்கு
நடை அழகும், வீற்றிருந்த கோலமும் காட்டியருள வேண்டும் என்பதாக இப்பாசுரம்.

நடை, கொடை, வடை, முடி என்று கோயில், பெருமாள் கோயில், திருமலை, திருநாராயண புரம் பிரசிதமாய்
நம்பெருமள் நடை அழகு லோகவிஸ்ருதம். சிம்ம கதி, மத்த கதி, வியாகிர கதி, ஸர்ப்பகதி என்று சதுர்கதி பிரசித்தி அவருக்கு.

பெருமாள் நடையழகு காவ்ய பிரசித்தம் என்பதற்கு, சுமித்ரை வசனம் ஓர் எடுத்துக்காட்டு.
’ராமே பிரமாதம் மாகார்ஷி’ என்று லக்ஷ்மணனுக்கு அவள் செய்த உபதேச வார்த்தை இங்கு நினைவு கூறத்தக்கது.

’அக்ருதப் பிரயயௌ ராம, சீதா மத்யே, ஸுமத்யம’ என்கிற வால்மீகி வாக்குப் படி,
சீதை ராகவ சிம்மத்தின் பின் நடந்தது, அவன் நடை அழகை பின் இருந்து காண ஆசைப்பட்டாப் போலே.
யாதவ சிம்மமாகிற கண்ணனெம் பெருமானுடைய நடையழகை அனுபவிக்க ஆசைப்படுகிறாள் ஆண்டாள் இங்கு.

தாங்கள் வேண்டி வந்ததை கொடுக்கும்போது, படுக்கை அறை வார்த்தை ஆகாதபடி, கொலுமண்டபத்தில்
சேர-பாண்டியன் சிம்மாசனத்தில் வீற்றிருந்து ஆராய்ந்தருள வேண்டும் என்கிறாள்.
எம்பெருமானார் கத்யம் விண்ணப்பித்த போது, ”அஸ்துதே|| தயைவ ஸர்வம் ஸம்பத்ஸ்யதே||” என்றருளிச் செய்தாப் போலே
’சீரிய சிங்காசனத் திருந்து’ வாக்தானம் பண்ண பிரார்த்திக்கிறாள்.

’முனிவேழம்’ (இரா.நூ-௬௪) என்றும், ’மறைவாதியராம் புலிமிக்கது’ (இரா.னூ-௮௮) என்கிற அமுதனார்
வாக்குப்படி சடங்கர் வாயடங்க த்ரிவேதியாம் பத்ரவேதியிலே அமர்ந்து ’இரமானுச தர்சனத்தை’ நிர்வகித்தார், எம்பெருமானார்.

த்ரயீ வேத: என்று பொருள் படாமல், பேத ஸ்ருதிகளை நீக்கி அபேத ஸ்ருதிகளையே அவலம்பித்த சங்கரர்,
மற்றும் அபேத ஸ்ருதிகளை விலக்கி, பேத ஸ்ருதிகளையே கணிசித்த ஆநந்த தீர்த்தர் இவர்களைப்போல் அல்லாமல்,
கடக ஸ்ருதியோடு, பேத-அபேத ஸ்ருதிகள் வாசியற வேதம் முழுவதுமாக பிரமாண சித்தமாக்கின மதம்
விசிஷ்டாத்வைத ஸித்தாந்தம் அல்லது இராமானுஜ தர்சனம் என்று இதற்குப் பெயர்.
ஆராய்ந்து அருள் – திருச்செவி சாத்தியருள் என்பதாய் அமைந்த மாலை ’அருள் மாலை’ (௨).

————–

24. இருபத்துநாலாம் பாட்டு – இன்று யாம் வந்தோம் இரங்கு – இரக்க மாலை:

’சேனையோர் உபயோர் மத்யே ரதம் ஸ்தாபய மே அச்சுதா!’ என்ற அர்ஜுணன் வார்த்தைப்டி நடந்த
கண்ணனெம் பெருமான், அவனைவிட அதிக பக்தி யுக்தையளான ஆண்டாள் சொல்ல கேட்க மேட்டானோ?
’மே ரதயம் ஸ்தாபய அச்சுதா’ என்றதை ’மே அச்சுதா’ என்று கொண்டான் கண்ணன்.
அப்படியானால், அனன்ய ப்ரயோஜனை களான இவர்களுக்கு உகந்து கார்யம் செய்யத் தடை என்?

பிரேமத்தால் வந்த கலக்கத்தால், அஸ்தானே பயசங்கிகளாய், ரக்ஷகனான அவனை
ரக்ஷ்ய வஸ்துவாய் நினைப்பிட்டு ’போற்றி’ பாடுகிறார்கள். மங்களாசாசனம் ஸ்வரூப விருத்தமன்றோ? என்று கேட்டுக் கொண்டு,
ஸ்வரூப பிரயுக்தமே என்கிறார் முடிவில் ஸ்வாமி பிள்ளை லோகாசாரியர்.
கதே-ஜல சேது பந்தனம் போலே, அதீதகால விருத்தாந்தங் களுக்கு, காலோத்தரத்திலே மங்களாசாசனம் செய்யப் புகுவது இவளுக்கும்,
இவள் தந்தையான பெரியாழ்வாருக்கும் தொழில் எனலாம்.
அன்றிவ்வுலகம் என்று முன் அவதாரங்களில் நடந்தவைக் எல்லாம், கண்ணன் இந்த அவரத்தில் செய்தானக்கக் கொண்டு
’உன்சேவகமே ஏத்திப்பறை கொள்வான் இன்றுயாம் வந்தோம்’ என்கிறார்கள்.
பூர்வாவதார அபதானங்கள் என்றாலும் அத்தை இந்த அவரத்தில், பூர்வாவஸ்தோசித கார்யம் என்றே நினைப்பு இவர்களுக்கு.

கிருபையினால் கிட்டுமவை களுக்கு பிரார்த்திக்கவும் வேண்டுமா? என்னில்,
போஜனத்துக்கு க்ஷுத்துப் போலே இச்சையை ஆவிஷ்கரிக்கை உத்தேஸ்யம். இவன் நினைவு அவன் அறியானோ? என்னில்,
இவன் பாசுரம் கேட்டவாறே அவன் உகக்கும், என்பது ஸ்வாமி பிள்ளை லோகாசாரியர் திருவாக்கு..

இன்று யாம் வந்தோம் என்பதை ’இன்றியாம்’ வந்தோம் என்பதாக பார்க்குமிடத்து –
கர்ம-ஞான-பக்தி யோகங்கள் லவலேசமும் இல்லாதபடிக்கு – ஆகிஞ்சின்யத்தோடு வந்தமையைச் சொல்கிறது.

அவனுடைய இரக்கத்துக்கு விருத்தமாய்-உறங்குமவனை ,நாலடி நடக்கும் படியாய் விக்ஞாபிப்பது
இத்யாதி காரியங்கள் – அதிபிரவ்ருத்தியாய் முடியாது இருக்க, ’இரங்கு’ என்கிறார்கள், இந்த ’இரக்க மாலை’யில்.

———————

25. இருபத்தஞ்சாம் பாட்டு – வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து – வருத்தம் தீர் மாலை :

வந்ததும், பல்லாண்டு பாடினதும் ஒன்றை பெற்றுப் போகவோ?
என்னையும் வேண்டி, பறை என்றும் இதில் எதை உத்தேசித்து வந்தீகோள்? என்ன
பிரயோஜனாந்தர பரர்கள் போல் அல்லாமல், உன்னையே அருத்தித்து வந்தோம்.
பரமபதத்தினின்றும் எங்கள் இடம்தேடி வந்த உன்னை நாடி நாங்கள் வருவதில் என்ன குறை?
’துல்ய சீல வயோவிருத்த’ என்றபடி திருவுக்குத் தக்க உன் சீர்மையும், மூவாறு மாசம் மோகிக்கப் பண்ணும்
உன் விக்ரமங்களையும் பாடுவதையே பிரயோஜனமாகக் கொண்டு வந்தோம்.
பறை தருதியாகில் – நோன்பை வியாஜமாக வைத்து வந்தோம். நாட்டாருக்காக பறை என்று சொன்ன எங்கள்
காரியம் செய்ய திருவுள்ளமாகில் இசைந்து செய் என்கிறார்கள் இப்பாட்டில்.

’தம்சேயம் அஶிதேக்ஷணா’ என்று இருவருக்கும் ஸாம்யம் பலபடி இருந்தாலும், கண்ணழகில் வந்தால்,
பிராட்டிக்கே உன்னதி. ’நாச்சியார் விழி விழிக்க ஒண்ணாதிறே’ என்பது பட்டர் திருவாக்கு.

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி – ’நாரீணாம் உத்தமை’ யினுடைய அவஸ்தை வரக்கடவதான
பரம பத பிராப்தியும், இருவருமான சேர்த்தியிலே செய்கிற கைங்கர்யம் இரண்டையும் பிரார்த்தித்து வந்தோம் என்றுமாகக் கடவது.

வருத்தம் தீர்கையாவது – நித்ய கைங்கர்யத்துக்கு தடையான சரீரம் விலகுகை, சம்ஶாரம் கழிகை
அதன்றியும் மகிழ்வாவது, அவ்விருவரின் ஆனந்தத்தைக் கண்டு இவன் ஆனந்திக்கை.

”ஆத்யந்த துக்கத் துவம்ச: மோக்ஷம்” என்பது கைவல்யர்களுடைய ஸித்தாந்தம். ஶ்ரீவைஷ்ணவ ஸ்ம்பிரதயத்தில்,
ஶ்ரீ வைகுண்டப் பிராப்தியோடு, நித்யசூரிகளோடே கூடி இருந்து பகவத், பாகவத கைங்கர்யத்திலே திளைக்கை,
மோக்ஷம். அத்தை ஆண்டாள் பிரதிபாதிக்கிறள் இந்த ”வருத்தம் தீர்” மாலையில்.

—————

26. இருபத்து ஆறாம் பாட்டு – ஆலின் இலையாய் அருள் – அருள் மாலை (௨) :

ஒருத்தி மகனாய் பிறந்த போது, தன் மேன்மை தோற்ற வந்து ’பிறந்தான்’. தோன்றினான் என்பதைக் காட்டிலும்,
பிறந்தான் என்று சொல்வதிலே அவனுக்கு ஆனந்தம். ஒருத்தி மகனாய் வளர்ந்தபோது,
தன் நீர்மை, எளிமை எல்லாம் பிரகாசிக்கும்படி வளர்ந்தான் என்கிற மர்மம் அறிந்து பேசுகிறாள் ஆண்டாள் இதிலே.

”பிரம்மஸூத்திராதி” களிலே அவன் பிறந்ததாக பிரஸ்தாபமில்லை. பராசர மஹரிஷியும் ’தேவகி பூர்வசந்தியா ஆவிர்பாகம்’
என்று அவன் அலௌகிக கர்பவாசம் செய்த்தாகவேப் பேசினார்.
’ஆயர் குலத்தில் தோன்றும் அணிவிளக்கை’ என்று ஆண்டாளும் கீழில் சொல்லி இருக்க,
அத்தை மாற்றி ’ஒருத்தி மகனாய்ப் பிறந்து’ என்றபோதே கண்ணன் முகம் முகிழ்ந்ததாக வாயித்து.
’பிறந்தவாறும், வளர்ந்த்வாறும்…’ என்று ஆழ்வார் சாதித்தபடி இவளும் பேசலுற்றது அவனுக்கு மகிழ்வே.

ஆனால் கம்சனுக்கு பயந்து நந்தகோபருடைய திருமாளிகைக்கு ’காரிருள் எல்லில் பிழைத்து’ வந்தேனாக சொன்னது தவறு.
உண்மையில் மதுரையிலிருந்து குடிபெயர்ந்தது ’ஜாத் யிடயனுக்குத்’ தான், கும்பக் கோனார் தன் பெண்ணான,
நப்பினையை மணம் முடிது வைப்பதாக அறிவித்திருந்தார். முடியுடை யதுகுல பிறப்பால் அது சாத்தியம் அகாதென்பதற்குச் சேர,
குழந்தை அழுது, பால்குடிப்பது போன்ற வியாபாரங்களை திருவாய்ப் பாடிக்கு வந்தபிறகே வைத்துக் கொண்டானானான்.
அன்றி கம்ச பயம் தனுக்கில்லை என விவரித்து பின் நீங்கள் வேண்டி வந்த பறைதான் ஏது என்ன,
நோன்புக்கு வேண்டிய உபகரணங்களை தர பிரார்த்திக்கிறார்கள்.

என்னையே வேண்டி சாதனாந்தரத்திலே கைவைப்பதே? என்று அவன் வினவ, உன் சன்னிதி கிடைக்கும் என்று
இசைந்தோம் அன்றி. இப்படி அனுமதிப்ரதானம் பண்ணினவர் பக்கல் கிருதக்ஞதா ஆசக்தியாலே
அவற்றை தந்தருள வேண்டும் என்கிறார்கள்.

மாலே என்று தொடங்கி, ஆலின் இலை என்று முடித்த படியால், இப்பாட்டுக்கு விஷயம் ’மால்’.
அதாவது, மாலே-விலுள்ள ’மா’ மற்றும் ’ஆல்’-லிலுள்ள ’ல்’ இரண்டுமாக, ’மால்’ எனவாயித்து.
மால் என்பது அவனுக்குண்டான ஆஸ்ருத வியாமோகத்தைச் சொல்லும். தூத-சாரத்தியம் பண்ணின ஸௌலபியம்,
அருச்சுணன் தேர்த்தட்டிலே ’மாம்’ என்று தன்னை தொட்டுக் காட்டின ’ஸர்வசக்தி யோகம் ’ இரண்டும் இதுக்கு விஷயம்.

சரணாகதையளான திரௌபதிக்காக எல்லாம் செய்து, ஒன்றும் செய்யப் பெற்றிலேன் என வியசனிப்பதும்,
இத்தனை எளியனானாலும் ’கொல்லாமாக் கோல் கொண்டு, பாரதத்துள் எல்லா சேனையை அவித்ததும்’
அவனுடைய ’அகடித-கடனா’ சாமர்தியத்தாலே அன்றோ?

பல்லாண்டு பாடுகைக்கு பெரியாழ்வாரையும், மங்கல தீபத்துக்கு நப்பின்னை பிராட்டியயும், கொடிக்கு பெரிய திருவடியும்,
விதானத்துக்கு திருவநந்தாழ்வானையு மாக நித்திய விபூதி பரிகரங்கள் எல்லாரையும் கொடுத்து
ஸ்வரூபம் நிறம்பெற செய்தவனுடைய ’அருள் மாலை’ இதுவாகும்.

————

27. இருபத்து ஏழாம் பாட்டு – கூடியிருந்து குளிர்ந்து – குளிர் மாலை :

கூடமாட்டேன் என்கிறவர்களை சௌரிய பராக்கிரமங்களாலும்,
அபிமுகர்களை சௌசீல்யாதி ஆத்மகுணங்களாலும்,
உதாசீனர்களை சௌந்தர்யாதி சரீரகுணங்களும் கொண்டு ஜெயித்தவனாகிறான் கண்ணனெம் பெருமான்.

ராமனுக்கு பட்டாபிஷேகம் என்று முடிவு செய்த தசரதன், அவனை அழைத்துவரக் கூற,
சுமந்திரன் ராமனை திருமனையில் கண்டு செய்தி தெரிவித்தான். அந்தப்புர வாயில் வரை வந்த சீதையின்
காலைத் தொட்டு ராமன் அவளை அங்கேயே நிற்கச் சொல்ல, பதிஸந்மாநிதையளான சீதை கறுமுகை மாலைபோல்
தன் இருகண்ணாலே இராகவனுக்கு மாலையிட்டாள். அஶிதேக்ஷணை அல்லவா அவள்.
அப்படியான சன்மானம் தங்களுக்கு வேண்டும் என்கிறார்கள்.

ராவணவதம் ஆனபின்பு, அபிஷிக்தனாய் இருக்குகிற ராமன் கையில், தன் குடியிருப்பை பெற்றுத் தந்த
உபகார ஸ்மிருதியோடே இந்திரன் ஓர்முத்து மாலையை பரிசளிக்க, அதனை அவன் தன் பாமினியான
சீதையின் கையில் கொடுத்தான். அவளும் இங்கிதத்தால் புரிந்து கொண்டு, ஹிருஷ்ட மனத்தளாய் ஹநுமனுக்கு வழங்கினாள்.
அப்படிப்பட்ட பரிசு தங்களுக்கு வேண்டும் என்றும் விண்ணப்பிக்கிறாள் ஆண்டாள்.

அத்தைக் கொடுக்கும்போது, பாரோர்புகழம்படி அவை இருக்க வேண்டும் என்கிறார்கள் மேல்.
சுக-சாரணர்கள் ராமனின் வானர சேனையின் பிரபாவத்தை ராவணனிடம் ஒற்றர் வார்த்தையாக புகழ்ந்து சொன்னது போலேயும்,
தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் கிருஷ்ணனை அண்டைகொண்ட பலத்தால் பாண்டவகளுக்கே ஜெயம் என்பதை
சஞ்சயன், திருதராஷ்டனுக்கு படிந்து சொன்னாப் போலேயும், நாடுபுகழும் பரிசு தங்களுக்கு வேண்டும் என்கிறார்கள்.

’மாறாளன் கவராத மணிமாமைக் குறைவிலமே’ (திருவா.௪-௮-௧) என்று ஆழ்வார் இரந்தது போல,
கண்ணனைப் பிரிந்த காலத்திலே ’மலரிட்டு நாம் முடியோம்’ என்ற ஆண்டாளும்,
அவனை கூடியபோது பெற வேண்டிய பரிசுகள் இன்னவை என்று பட்டியல் இடுகிறாள் அடுத்து.
சூடகம், தோள் வளை, தோடு, செவிப்பூ என்று கண்ணன் பிடித்த கைக்கும், அணைந்த தோளுக்கும்,
குழல் கொண்டு தூது விட்ட காதுக்குமாக அலங்கார அணிகலனும், பால் சோறு, கூறை இவையோடு
கூடி இருந்து குளிர வேண்டும் என்கிறாள்.

இவர்கள் நீராட்டம் கூடி இருந்து குளிர்வதே. அன்றி திருமுக்குளத்தில் சென்று குளிப்பதோ,
பால்சோறு உண்கையோ அல்ல.
”த்வதீக்ஷண ஸுதாஸிந்து வீசிவிக்ஷேப ஶீகரை:| காருண்ய மாருதாநீதை: ஶீதலை ரபிஷிஞமாம்||” என்பதே இவர்கள் நீராட்டம்.
அத்தை ’துணைத் தேட்டமாக’ அமையப் பிரார்த்தித்தாள். க்ஷுத்ர விஷயத்துக்குத் தனித்தேட்டம் போல்,
பகவத் விஷயத்துக்கு துணைத்தேட்டம் உத்தேஸ்யமே.
’அந்தமில் பேரின்பத்து அடியரோடு இருந்தமை’(திருவா.௧0-௯-௧௧) போலேயாம் மிது.

———————-

28. இருபத்து எட்டாம் பாட்டு – சித்த சாதன நிஷ்டை (துவய பூர்வ கண்டார்த்தம்) : ’ஸ்வ நிகர்ஷ மாலை’ :

௧. பேற்றுக்கு உபயமக நல்லது ஏதும் எம்மிடம் இல்லை.
௨. அத்தை சம்பாதிப்பதற் கீடான ஞானமும் இல்லை என்கிற உபாயத்தில் சுத்தியுடையோம்.
௩. ஆர்ஜித ஸுக்ருதமில்லை ஆனாலும் அயத்ன-சித்த ஸுக்ருதமான கண்ணனே நீ! உள்ளாய்.
௪. எங்களாலோ, உன்னாலோ அல்லது இருவரும் கூட்டாகவோ ஒழிக்க ஒழியாத நவவித சம்பந்தமும் உள்ளபடியால்,
௫. பூர்வபராதங்களை, தட்டியில் வார்த்தைகளான நாராயண நாம ஸ்வீகாரத்துக்கும், ஸ்வாராத்யனை துராராத்யனாக
காட்டினமைக்கும் மாகச் சேர்த்து க்ஷாமணம் வேண்டுகிற எங்களுடைய
௬. உபாய கிருத்யத்தை, புருஷகார பூதையான நப்பின்னையின் பேரில் ஏறிடாதே இறைவா! நீ தாராய் பறை என்று அர்த்திக்கிறாள்.

யக்ஞசிஷ்டாசநி என்கிற கர்ம யோகம்,
சாஸ்திர வஸ்யதை என்கிற ஞான யோகம் இரண்டும் இல்லை ஆனாலும்,
பும்ஸாம் நயதீயிதி புண்ய: என்கிற சாக்ஷாத் புண்யம் எங்களிடம் உண்டு.

கர்ம, ஞான யோகங்கள் கார்ய வேளையில் புருஷனையும்,
பல வேளையில் ஈஸ்வரனாகிய உன்னையும் எதிர்பார்த்து இருக்கும்.
நீயோ ஸ்வீகார வேளையில் புருஷனையும், புருஷகார பூதையான பிராட்டியையும் அபேக்ஷித்தாலும்,
கார்ய வேளையில் உபய-நிரபேக்ஷனாய் தானே கார்யம் செய்யக் கடவாய் – என்கிற சித்த சுத்தியும்,
கார்ய சுத்தியும் உடைய எங்கள் கார்யம் செய்துமுடிப்பாய் என்கிற ’ஸ்வநிகர்ஷ மாலை’ இதுவாகும்.

—————-

29. இருபத்து ஒன்பதாம் பாட்டு -கைங்கர்யப் பிரார்த்தனை (துவய உத்தர கண்டார்த்தம்)- பிராப்ய மாலை :

’பறை’, ’பறை’ என்று ஒன்பது முறை சொன்னதின் தாத்பர்யம் இதில் விளக்கப்படுகிறது .

௧. பிராப்ய ருசி இருக்க ஒட்டாதே விடியோரை வந்தோம்.
௨. பிராப்யமான திருவடியை பிராபகமாகவும் கொண்டோம்.
௩. கைங்கர்ய பிரதிசம்பந்தியான உனக்கு அத்யாபகை களானோம்.
௪. எங்கள் கண்ணிலும், முலையிலும், இடையிலும் அன்யபரதையை விலக்கி அதாவது
ஞான, பக்தி, வைராக்கியங்களிலே தப்தனாகாதே, பிரியில் மூச்சடங்கும் படியான
தரதன் போன்ற உறவும், சீதை, லக்ஷ்மணன் போல ’நாங்களும் அக்குளத்தில்’ மீனாக வேண்டும்.
௫. பரமபதத்தில் இருந்து எங்களைத் தேடி வந்த கண்ணனான உனக்கே நாம் ஆட்செய்வோம்.
௬. கைங்கர்யத்தில் களையாகிற ஸ்வபோக்த்ருத்வ புத்தியாகிற காமத்தைக் களைந்து
எங்கள் சேஷத்வம் நிறம்பெறச் செய்வாய் என்றும் நியமிக்கிறபடி இதுவாகும்.

உபேயத்தில் சுத்தியாகிற பரார்த்த-கைங்கர்யம் இவர்களுக்கு உத்தேஸ்யம். எம்முடைய ஆனந்தம்,
எமக்கும் உனக்குமான ஆனந்தம் என்றல்லாமல், உனக்கேயான ஆனந்தம் ஏற்படும்படியாக குற்றேவல்லளைக்,
ஏவிட்டு பணிகொள்ள வேணும் என்கிறாள் என்னவுமாம்.

”தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே” என்று ஆழ்வார் ’எம்மாவீட்டில்’ புருஷார்த்த நிஷ்கர்ஷம் பண்ணினபடியும் இதுவாகும்.

அடுத்து :

கோவிந்தா – அகாரம்.
உனக்கே – ஏவகார சப்தத்தால் உகாரம்.
நாம் – மகாரம்.
பொற்றாமரை அடி – உபாய வாச்யமாய் ’நமஸின்’ அர்த்தம்.
உற்றோமேயாவோம், உனக்கே நாமாட்செய்வோம் – நாராயண பதம்.
மற்றைநம் காமங்கள் மாற்று – ஆய பதார்த்தம் என்கிற வின்யாசத்தாலே

பெரிய திருமந்ரார்த்தமும் இதுக்குள்ளே உண்டு என்பர்.

முதற் பாட்டில் ’நாராயணனே நமக்கே பறை தருவான்’ என்று ஸங்க்ரஹேண சொன்ன
’ப்ராப்ய-ப்ராபகங்கள்’ விவரிக்கப் பட்டன இந்த இரண்டு பாடல்களால்.
’தூயோமாய் வந்து நாம்’ என்கற ௫ஆம் பாட்டு உபாயத்தில் சுத்தியும்,
’தூயோமாய் வந்தோம்’ என்கிற ௧௬ஆம் பாட்டு உபேயத்தில் சுத்தியுமாக சொல்லப்பட்டவை,
இங்கு மேலும் விளக்கப் பட்டன என்பதும் நோக்கத்தக்கன.

—————-

30. இனி பலஸ்ருதியான முப்பதாம் பாட்டு ’திருவருள் மாலை’ எனலாம்.

பலம், பிராப்யம் நமக்கு மிதுன சேஷத்வமாகையாலே, பிராட்டி ஸம்பந்தத்தையிட்டே உபஸம்ஹரிகிறாள் ஆண்டாள்.
பட்டர்பிரான் கோதை என்று தன்னை ஆசார்ய சம்பந்தத்தையிட்டும் நிரூபிக்கிறாள்.
ஈஸ்வரன் புருஷகாரமானால் அல்லது காரியம் செய்யான்.
ஆசார்ய சம்பந்தமோ நேரே பிராப்யத்தைப் பெற்றுத் தரும் என்பதற்கு ஆண்டாள் அவதார முடிவே நமக்கு நிதர்சனம்.

’செங்கண் திருமுகம்’ – பகவத் அனுக்ரஹம் தானும் ஸ்வாதந்ரியம் கலசினபடியாலே பயஹேது.
பிராட்டி அனுக்ரஹம் கேவலம் கிருபை மட்டுமே.

செல்வத் திருமால் – திருமந்திரம், சரம ஸ்லோகம் இரண்டிலும் ஶ்ரீசம்மந்தத்தை ஸ்தான விசேஷத்தாலும்,
அர்த்த பலத்தாலும் தருவித்துக் கொள்ள வேண்டும்.
அப்படியல்லாமல் துவய பூர்வ, உத்தர கண்டங்களில் சொன்னபடியே இதில் பிராட்டி ஸம்பந்தம் சுஸ்பஷ்டம்.

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் – பெரிய பிராட்டியாலே பேறாகையாலே-
இவள் புருஷகாரமானால் அல்லது ஈஸ்வரன் கார்யம் செய்யான், ஆகையால், அவளுடைய வருளாலே
ஸம்சாரதிலும், பரம பதத்திலுமாய் – பகவத் ஸாந்நித்யத்தைப் பெற்று இன்புறுவர் என்கிறாள்.

ஆண்டாள் இயற்றிய திருப்பாவை பாமாலையானது –
பூமாலையும் ஆகக்கடவது என்று உபகிரமித்தது அர்த்த புஷ்டியோடே முற்றிற்று.

————-

வேயர் புகழ் வில்லிபுத்தூர் ராடிப்பூரம்
மேன்மேலும் மிக விளங்க விட்டு சித்தன்
தூய திரு மகளாய் வந்த ரங்கனார்க்குத்
தூழாய் மாலை முடி சூடித் கொடுத்த மாதே!
நேயமுடன் திருப்பாவை பாட்டாறந்தும்
நீ யுரைத்த தை யொரு திங்கட் பா மாலை
ஆய புகழ் நூற்று நாற்பத்து மூன்றும்
அன்புடனே யடியேனுக்கு கருள் செய் நீயே–ஸ்ரீ தேசிகன் பிரபந்தம் –

கோதை பிறந்தவூர் கோவிந்தன வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றுமூர் – நீதியால்
நல்ல பத்தர் வாழுமூர் நான்மறைகளோ துமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்.

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்துக்கும் வித்தாகும் – கோதை தமிழ்
ஐயைந்தும் மைந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.–ஸ்ரீ வேதப் பிரான் பட்டர் அருளியவை

இன்றோ திருவாடிப்பூர மெமக்காக
அன்றோவிங் காண்டா ளவதரித்தாள் – குன்றாத
வாழ்வாக வைகுந்த வான்போகந் தன்னையிகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய். (22)

பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப் பூரத்தின் சீர்மை – ஒருநாளைக்
குண்டோ மனமே யுணர்ந்துபார் ஆண்டாளுக்
குண்டாகி லொப்பிதற்கு முண்டு (23)

அஞ்சு குடிக்கொரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சிநிற்கும் தன்மையளாய் – பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளைப் பக்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து (24)

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப் பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும் புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண் புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே.

—————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே -தாசரதி தாஸன், கிடாம்பி ஶ்ரீநிவாஸ ரங்கன் ஶ்ரீநிவாஸ தாஸன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே இளையவல்லி பூவராகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் – –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஆண்டாள் கொட்டிய பறையும், கேட்ட பறையும் December 28, 2009 By ஸ்ரீ ஜெயஸ்ரீ சாரநாதன்–

October 16, 2020

வேதமனைத்துக்கும் வித்து’ என்று ஆன்றோரால் போற்றப்படும் திருப்பாவையில்
அடிக்கடி சொல்லப்படும் ஒரு சொல், ‘பறை’ என்பதாகும்.

ஐந்திணைகளுக்கும் உரிய பறைகள் தொண்டகப்பறை (குறிஞ்சி), துடிப்பறை (பாலை) , ஏறுகோட்பறை (முல்லை),
மணப்பறை மற்றும் கிணைப்பறை (மருதம்) , மீன்கோட்பறை (நெய்தல்).
இவை தவிர வேறு சில பறைகளும் அந்த நாளில் இருந்திருக்கின்றன.
புறநானூறில் 12 விதமான பறைகள் சொல்லப்படுகின்றன.
இவற்றுள் ஸ்ரீ ஆண்டாள் எந்தப் பறையைக்கொட்டியிருப்பாள் எனக் காண்போம்.

(1) அரிப்பறை :- அரிப்பது போல ஓசை எழுப்பும். வயல் வெளியில் பறவைகள், இலைகளின் மீது உரசிச் செல்லும்
சப்தம் போலவும், பெண்டிர் அணிந்த நகைகள் ஒன்றனோடு ஒன்று உரசுவது போலவும் என்று,
அரிப்பறை ஓசை உவமை காட்டப் படுகிறது.

(2) அனந்தன் பறை :- சுடுகாட்டுப் பகுதிகளில், பேயாட்டம் ஆடும் மகளிர் இதைக் கொட்டுவர்.
சரசரவென்று பாம்பு செடிகளுக்கிடையே ஓடும் ஓசை போல் இருக்கும் போலிருக்கிறது. இதன் ஓசை கேட்டு பருந்துகள் வருமாம்.

(3) ஆகுளிப் பறை மற்றும் (4 ) சிறு பறை :- மிகச் சிறிய, கைக்கடக்கமான பறை இது. பாணர்கள் யாழுடன் எடுத்துச் செல்லும் பறை.
அரசனைக் குறித்தோ, கடவுளைக் குறித்தோ பாடுவதற்குப் பயன் படுவது. இதை விடிவதற்கு முன் கொட்டுவார்கள்.

(5) சல்லிப்பறை :- இதைப் பெரும் பறை என்பார்கள். விழாக்களிலும், ஊர்வலங்களிலும் கொட்டுவார்கள்.

6) சாக்காட்டுப்பறை :- இது சாவுக்கு அடிக்கும் பறை.

(7) செருப் பறை :- அரசன் போர்க்களத்தில் நுழையும் போது அடிப்பது. யானைப் படைக்கு முன்னால் அடித்துச் செல்வர்.

(8) போர்ப் பறை :- இது போர் அறிவிக்கும் பறை. போருக்குச் செல்லும் போது அடிக்கும் பறை.

(௯) நெய்தல் பறை :- சாக்காட்டுப் பறை போல, சாவின் போது நெய்தல் நிலத்தில் அடிக்கபடுவது.

(10) தடாரிப் பறை :- இதைக் கிணைப் பறை என்றும் பம்பைப் பறை என்றும் கூறுவர். இது உடுக்கையாக இருக்கலாம்.

(11) ஒரு கண் பறை:- அளவில் பெரியதான இப்பறையில், கண் போன்ற அடையாளம் தெரியும்.
அது யானையின் பாத வடிவில் இருக்கும், செய்திகளை அறிவிப்பதற்கும், போர்க் களங்களிலும், இது பயன் படுத்தப்பட்டது.

(12) மணப் பறை :- திருமணங்களில் கொட்டப்படுவது.

புறநானூறில் ஆங்காங்கே பேசப் படும் இந்த 12 பறைகளில், ஆகுளிப் பறையும், சிறுபறையும் மென்மையாகவும்,
பாடலுக்கு இசைந்தும் கொட்டப்படுவதுடன், கடவுளைக் குறித்து, விடிவதற்கு முன்னமேயே கொட்டப் படுவதால்,
ஸ்ரீ ஆண்டாளும் அவள் தோழிகளும், கொட்டிய பறை சிறு பறை அல்லது ஆகுளிப் பறை எனக் கொள்ளலாம்.

இனி, பறை என்று ஸ்ரீ ஆண்டாள் கூறும் செய்திகளைப் பார்ப்போம்.
மொத்தம் 10 இடங்களில் ஸ்ரீ ஆண்டாள் பறை என்று குறிப்பிடுகிறாள்.

ஸ்ரீ ஆண்டாள் கூறும் பறை

1. பறை தருவான் (பாசுரம் – 1)
2. பாடிப்பறை கொண்டு (பாசுரம்- 8 )
3. போற்றப் பறை தரும் – (பாசுரம்- 10)
4. அறை பறை – (பாசுரம் -16)
5–என்று என்றும் உன் சேவகமே ஏற்றிப் பறை கொள்வான் –(பாசுரம் -24)
6. பறை தருகியாகில் – (பாசுரம் -25)
7. சாலப்பெரும் பறை – (பாசுரம் -26)
8. உன்றன்னை பாடிப் பறைகொண்டு – (பாசுரம் -27)
9. நீ தாராய் பறை – (பாசுரம் -28)
10. இற்றைப் பறை கொள்வான் – (பாசுரம் -29)
11.அங்கப் பறை கொண்ட ஆற்றை – (பாசுரம் -30)

அவற்றுள், 26 -ஆம் பாசுரத்தில் வரும் சாலப் பெரும் பறை, மேற் கண்ட 12 பறைகளுள் சல்லிப் பறையை ஒத்திருக்கிறது.
சல்லிப் பறை என்பது, விழாக்களில் கொட்டப்படுவது. சுற்றுப் புறத்து ஓசைகளையும் மீறி ஓங்கி ஒலிக்க வேண்டிய பறை.

‘மாலே மணி வண்ணா’ எனத் தொடங்கும் பாசுரத்தில், ‘சாலப் பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே’ என்று
ஸ்ரீ ஆண்டாள் கூறும் வர்ணனை இறைவன் வரும் வீதி ஊர்வலம் போல உள்ளது.

ஞாலத்தை எல்லாம் நடுங்கச் செய்யும் வகையில் ஸ்ரீ பாஞ்சசன்னியம் என்னும் சங்கூதும் ஒலியோடு,
பிற ஒலி முழக்கங்களும், பல்லாண்டு இசைத்த வண்ணம் செல்வதும், கோல விளக்கும், கொடியும், விதானமும்
செல்லும் பாங்கினையும் உரைத்திருப்பது, மார்கழி மாதத்து வைகுண்ட ஏகாதசி அன்று ஸ்ரீ திருமால் வீதி வலம் வரும்
ஸ்ரீ கருட சேவை போன்று இருக்கிறது. வீதி ஊர்வலத்தில் கொட்டப்படும் சல்லிப் பறையை
ஸ்ரீ ஆண்டாள் சாலப் பெரும் பறை என்று கூறியிருக்கலாம்.

மார்கழி பௌர்ணமியில், பாவை நோன்பு ஆரம்பிக்கும் என்று பரிபாடல் – 11 தெரிவிக்கிறது.
மார்கழி மாதம், திருவாதிரையில், சந்திரன் செல்லும் போது, பூரண சந்திரன் ஆகிறது.
அன்று விடிகாலை, ஆற்றங்கரையில் ஹோமத் தீ வளர்த்து, ஆதிரையானை வழி படுவர்.
அவ்வமயம், அனைத்து பெண்களும் பாவை நோன்பு ஆரம்பிப்பார்.
திருமணமானவர்களும், கன்னிப் பெண்களும், சிறுமியரும் என, அனைத்துப் பெண்களும், அந்த வழிபாட்டில் கலந்து கொள்வர்.
அது முடிந்த மறு நாள் முதல், இளம் சிறுமியர் மட்டும ஆற்றங்கரை சென்று பாவை செய்து, பறை கொட்டி,
அந்தப் பாவைக்குப் பூச் சொரிந்து, விளையாட்டாகக் கடவுளை வணங்குவர்.

இதையே ஸ்ரீ ஆண்டாள் துவங்கி வைக்கிறாள். பாவை நோன்பிருந்து நல்ல கணவனை அடைவது என்னும் வழக்கப்படி
ஸ்ரீ கண்ணனையே கணவனாக அடைய விரும்பி ஸ்ரீ ஆண்டாள் பாவைக் களம் புக விரும்புகிறாள்.
பௌர்ணமி கழிந்த மறுநாள் சிறுமியர் துவங்கும் பாவை நோன்புடன் முதல் பாசுரம் துவங்குகிறது.
அப்பாசுரத்தில் வரும் வர்ணனை, பௌர்ணமி கழிந்த மறு நாள் விடிவதற்கு முன் இருக்கும் வானத்தைச் சொல்கிறது.
பௌர்ணமிக்கு மறுநாள் வைகறையில், முழு மதி இன்னும் வானில் இருக்கும்.
அன்று காலை நிறை மதி இன்னும் வானில் தெரிய, அதை தான் ஸ்ரீ ஆண்டாள்,
மதி நிறைந்த நன்னாள் என்று சொல்லி இருக்கிறாள்.

நாள் ஒன்றுக்கு ஒரு பாசுரம் என்ற கணக்கில், பௌர்ணமிக்குப் பதினைந்தாம் நாள் வரும் அமாவாசை
‘எல்லே இளங்கிளியே’ பாசுரத்தில் வருகிறது. அதற்கு மறு தினத்திலிருந்து, வளர் பிறை ஆரம்பம்.
வளர் பிறையின் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி ஆகும். அது 11-ஆம் நாள் வருவது.
அப்படி கணக்கு பார்த்தால் ‘மாலே மணி வண்ணா’ பாசுரம் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி என்றாகிறது .
அன்று தான், எல்லா ஸ்ரீ விஷ்ணு ஆலயங்களிலும், கருட வாகனத்தின் மீது ஸ்ரீ திருமால் வீதிப் புறப்பாடு கிளம்பி விடுவார்.
ஸ்ரீ ஆண்டாளின் தந்தையான ஸ்ரீ பெரியாழ்வார், பாண்டிய அரசனின் சந்தேகத்தைத் தீர்த்து, அவனால் கொண்டாடப்பட்டு,
பட்டத்து யானை மீது நகர் வலம் வந்தபோது, அவருக்கு ஸ்ரீ கருட வாகனத்தின் மீது காட்சி தந்த ஸ்ரீ திருமாலைப் பார்த்து,
‘பல்லாண்டு பல்லாண்டு’ என்று இறைவனையே வாழ்த்திப் பாடினார்.
சாலப் பறை பற்றி சொல்லும், ‘மாலே மணி வண்ணா’ பாசுரத்திலும், பல்லாண்டு இசைப்பதைப் பற்றி கூறுவதாலும்,
அது வீதி வலம் வரும் ஸ்ரீ கருட சேவையாகவும், அந்தப் பாசுரம் இசைத்த அன்று ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியாகவும் இருந்திருக்கலாம்.
மறுநாள் துவாதசி என்பதற்கு ஏற்றாற் போல், அடுத்த பாடலான ‘கூடாரை’ யில் உண்ணுவது பற்றி சொல்லப்படுகிறது.

ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி அன்று, நாம் இருக்கும் பூமியானது, இந்தப் பால் வெளி அண்டத்தின் மையத்திலிருந்து
அதிக பட்சத் தொலைவை அடைகிறது. தனுர் மாதம் என்னும் மார்கழி மாதமுடைய தனுர் ராசியானது
நம் பால் வெளி அண்டத்தின் மையப் பகுதியாகும்.
தனுர் ராசிக்கு நேர் எதிரில் சூரியன் வரும் இந்த மாதத்தில், நாம் சூரியனுக்கு அப்பால் –
சூரியனிடமிருந்தும், பால் வெளி மையத்திடமிருந்தும், அதிக பட்ச தொலைவை அடைகிறோம்.
இதை வேறு விதமாகக் கூறுவதென்றால், பால் வெளி கேலக்ஸ்சியின் (galaxy) வெளியே – எங்கிருந்தோ அது வந்து
கொண்டிருக்கிறதே, அந்த அண்ட வெளிக்கு அருகே – அதிக பட்ச அருகாமையை வைகுண்ட ஏகாதசி அன்று நாம் அடைகிறோம்.
இந்த வெளி, தேவயானம் என்றும் உத்தர வீதி என்றும் சொல்லப்படும். இது நமது கேலக்ஸ்சியின் மேல்புறமான இடம்.
பிறவா நிலையடையும் ஜீவன்கள் உத்தர வீதியில் செல்லும் என்பது ஐதிகம்.
அப்படிப்பட்ட உத்தர வீதியின் புறம், நமது பூமிக் கோளம், அதிகபட்ச அருகாமையைப் பெறும் வைகுண்ட ஏகாதசி நாள்,
மோக்ஷ வாயில் திறக்கப்படும் நாளாகக் கருதப்படுகிறது.
பிரபஞ்ச இயலும், அதன் வழி ஆன்மீக நிலையையும் அறிந்த நம் முன்னோர் வகுத்த வழிகள் ஒப்புவமையே இல்லாதவை.

அத்தகு சிறப்பும், தொன்மை வழக்கமும் கொண்ட ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி அன்று,
சாலப் பெரும் பறை கொட்டினர் என்று ஸ்ரீ ஆண்டாள் கூறுவது சாலவும் பொருத்தம்.

பறை கொட்டி, பாவை நோன்பு நோற்ற ஸ்ரீ ஆண்டாள், தனக்கு ஸ்ரீ நாராயணன் பறை தருவான் என்கிறாள்.
மேற்கூறிய சாலப் பெரும் பறை தவிர மற்ற இடங்களில், அவள் கேட்கும் பறை, அதாவது
ஸ்ரீ நாராயணன் தருவான் என்று சொல்லும் பறை என்பது, தட்டும் பறை அல்ல.
அவள் பெற வேண்டும் என்று கேட்கும் அந்தப் பறை எப்படிப்பட்டது என்பது, மீதம் ஒன்பது இடங்களில்
அவள் சொல்லும் பறையை இணைத்துப் பார்த்தால் விளங்குகிறது.

அவள் ஸ்ரீ நாராயணன் திருக்கோவிலின் வாசல் கதவைத் தட்டி, கதவைத் திறக்கச் சொல்லி வாயில் காப்பாளனிடம்
‘தான் ஒன்றும் அழையா விருந்தாளி அல்ல, அறை பறை மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தானே.
அதனால் தான் வந்தோம். கதவைத் திற’ என்கிறாளே அங்கே இருக்கிறது சூட்சுமம்.

இங்கே பறை என்பது கொட்டும் பறை அல்ல.
ஸ்ரீ மாயன் மணிவண்ணன் என்னும் கண்ணன் அறை பறை அறிவித்து அன்றே சொன்னானே, அதை நம்பி
அவனைத் தேடி நாங்கள் வந்திருக்கிறோம். கதவைத் திறக்காவிட்டால் எப்படி என்று கேட்கிறாள்.

அப்படி என்ன அறை பறை அறிவித்து ஸ்ரீ மாயவன் சொன்னான்?

அறை பறை என்னும் சொல்லே ஒரு சிறப்புப் பொருளுடையது.
‘அறை பறை அன்ன கயவர்’ என்னும் குறள் – 1076 -இல், ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டிய
விஷயங்களைப் பகிங்கிரமாகச் சொல்லுவது அறை பறை என்கிறார் உரை ஆசிரியர் பரிமேலழகர்.
ரகசியமாக சொல்லப்பட்டு வந்த ஒரு விஷயத்தை கண்ணன் பகிங்கிரமாகச் சொல்லி இருக்கிறான்.
அதை உண்மை என்று நம்பி ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ கண்ணன் திருக் கோயில் தேடி வந்திருக்கிறாள்.

அபப்டி என்ன ரகசியம் – அதை ஊரறிய பகிங்கிரமாக ஸ்ரீ கண்ணன் சொல்லி விட்டான் என்றால்,
அதுவே அவன் போர்க்களத்தில், அர்ஜுனனுக்கு, கொடுத்த வாக்குறுதி!

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூச

எல்லா தர்மங்களையும் விட்டு விட்டு என்னையே சரணடை. நான் எல்லாப் பாபங்களிலிருந்தும் உனக்கு
விடுதலை அளிக்கிறேன் என்று ஸ்ரீ கண்ணன் கூறுவது, பிறவி பெரும் கடலைக் கடக்க அவன் கொடுக்கும் ஒரு உறுதிப் பிரமாணம்.
இது என்றுமே உள்ள பிரமாணம் தான். ஆனால் அந்நாளில் மக்கள், கடினமான ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு
அதன் பயனாக இதை அறிந்தார்கள். எனவே இது ரகசியம் எனப்பட்டது. அப்படியான ஒரு ரகசியத்தை,
எல்லார் முன்னிலையிலும், எல்லோரும் அறியும் வண்ணம் போட்டு உடைத்து விட்டான் ஸ்ரீ கண்ணன்.
அறை பறை என அறிவித்து விட்டான்.

அன்றைக்கு அவன் அர்ஜுனனுக்கு அறிவித்தது, உரக்க அறிவித்தது, பறை கொட்டியது போல் அறிவித்தது,
மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. அவன் கொடுத்த உறுதி பிரமாணத்தை நம்பி,
அவனே எல்லாம் என்று அவனைச் சரணடைந்து, அவனைத் தேடி வந்திருக்கிறோம்.
நீ கதவைத் திறக்க மாட்டேன் என்கிறாயே என்று ஸ்ரீ ஆண்டாள் இங்கு கூறுகிறாள்.

அறை பறை மாயன் மணி வண்ணன் ‘நென்னேலே வாய் நேர்ந்தான்’.
அன்றே வாய் விட்டு விட்டான். அதை நம்பி ‘தூயோமாய் வந்தோம்’ நாங்கள்.
எல்லா தர்மங்களையும் விட்டு விட்டுத் தூயவர்களாய் வந்தோம் என்று ஸ்ரீ ஆண்டாள் சொல்லுவதிலிருந்து,
ஸ்ரீ நாராயணன் தரும் பறை – அது அவன் உரை- அது நமக்கு மோட்சம் தருவேன் என்று அவன் தரும் உறுதி – என்று புலனாகிறது.

இந்த ஸ்ரீ மாயன் உரையை (ஸ்ரீ பகவத் கீதையில் அவன் கொடுத்த உறுதி), ஸ்ரீ திருப்பாவையில் பறை என்று
வரும் மற்ற இடங்களில் சேர்த்துப் பார்த்தால், இதுவே உள்ளுறைப் பொருளாக விளங்குவது தெரியும்.

இப்பொழுது, ஆண்டாள் கூறும் பறை – பட்டியலைப் பார்ப்போம்.

1. பறை தருவான் – (பாசுரம் – 1)

“நாராயணனே நமக்கே பறை தருவான்”.

அன்று அர்ஜுனனுக்குப் பறை என்னும் உரை தந்தான். அர்ஜுனனைப் போல நாமும் அவனை அடைவோம்.
நமக்கும் அந்த உரை தந்து, உறுதி அளிப்பான்.

2. பாடிப் பறை கொண்டு (பாசுரம் -8)

“பாவை, எழுந்திராய் பாடிப் பறை கொண்டு…….
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆவா வென்று ஆராய்ந்து அருளேல்..”

அவன் கொடுத்த உரை என்னும் பறையை நம்பி, அவனிடம் சென்று நாம் வணங்கி -‘
இது நீ கொடுத்த உறுதி தானே, எங்களையும், ஏற்றுக் கொள் என்று சொன்னால்,
‘ஆஹா’ என்று ஆஹா-காரம் செய்து ஆராய்ந்து சொல்கிறேன் என்பான். ‘

அவன் ஸ்ரீ சக்கரவர்த்தித் திருமகனான இராமனைப் போல் அல்ல. ஒருவனிடம் தவறு இருந்தாலும்,
அவன் தன்னைப் பணிந்தால் ஸ்ரீ இராமன் தன்னடி சேர்த்துக் கொண்டு விடுவான்.
இராவணனே, ‘அபயம்’ என்று அவன் அடி பணிந்தால் அவனைத் தண்டிக்காமல் விட்டு விடுவான் என்று ஸ்ரீ சீதை சொல்கிறாள்.
அவளுக்குத் தீங்கு செய்த காகாசுரனை அப்படித் தான் அவன் மன்னித்தான்.
ஆனால், இந்த தேர்த் தட்டு பாகன் இருக்கிறானே, அவன் அப்படி அல்லன்.

பாவத்துடன் வரினும் சரி, பரவாயில்லை என்பவன் ஸ்ரீ இராமன்.
ஆனால் புண்ணியத்தையும் விட்டு விட்டு வா என்பவன் ஸ்ரீ கிருஷ்ணன்.
அதனால் “பறை (உறுதி) வேண்டும் என்று சொல்லி விட்டீர்கள் இல்லையா. பார்க்கலாம். ஆராய்ந்து சொல்கிறேன்.”
என்று கூறுபவன் ஸ்ரீ கிருஷ்ணன். அதனால் சீக்கிரம் போவோம், அவனைப் பார்த்து கேட்டு –
இன்னும் காத்திருக்க வேண்டும் என்னும் தொனியில், ஸ்ரீ ஆண்டாள் இந்த இடத்தில் பறை என்னும்
சொல்லைக் கையாண்டு உள்ளாள்.

3. போற்றப் பறை தரும் – (பாசுரம்- 10)

“போற்றப் பறை தரும் புண்ணியன்”

அதனால், அவனை நன்கு போற்றிப் பாடுவோம், நமக்கும் உறுதி கொடுத்து விடுவான் –
அர்ஜுனன இவ்வாறு தான், அவனைத் தொடர்ந்து, அவனை விடாது இருந்தான். அவனுக்கு உறுதி கொடுக்கவில்லையா?

4. அறை பறை – (பாசுரம் -16)

‘அறை பறை மாயன் மணி வண்ணன் நென்னேலே வாய் நேர்ந்தான்’.

இதன் கருத்தை முன்னமேயே பார்த்தோம். ரகசியமாக இருந்த மோக்ஷம் என்னும் பெரும் உபாயத்தை,
அறைந்து பறை அறிவித்தாற் போல் அன்றே அர்ஜுனனிடம் சொல்லி விட்டானே.
அதை நம்பித் தானே நாங்கள் இன்று வந்திருக்கிறோம்.

5-என்று என்றும் உன் சேவகமே ஏற்றிப் பறை கொள்வான் –29-
இங்கு பறை என்று பரம புருஷார்த்தம் -அனுபவ ஜெனித
ப்ரீதி காரித கைங்கர்யத்தைச் சொன்னவாறு

6. பறை தருதியாகில் – (பாசுரம் -25)

“நெடு மாலே உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்”

அன்றைக்கு உன்னைக் கொண்டாடிய அர்ஜுனனுக்குத் தந்தாயே உறுதி மொழி, அதைப் போல நாங்களும்
உன்னைக் கொண்டாடிக் கேட்கின்றோம், எங்களுக்கும் அந்த உறுதி மொழி கொடுத்து விடு.

7. சாலப் பெரும் பறை – (பாசுரம் -26)

“சாலப் பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே”

இதுவும் முன்னமே ஆராய்ந்தது. சாலப் பெரும் பறை கொட்டி, பல்லாண்டு இசைத்து
அவனை வணங்கிய முறைமையை இவ்வரிகள் புலப்படுத்துகின்றன.

8. உன்றன்னை பாடிப் பறைகொண்டு – (பாசுரம் -27)

இங்கே அந்தப் பறை என்னும் உரையான உறுதி மொழி கிடைத்த பின் வரக்கூடிய பலன் கூறப்படுகிறது.
“கோவிந்தா உன்றன்னை பாடிப் பறைகொண்டு யாம் பெரும் சன்மானம்” எதுவென்றால்,
கூடி இருந்து குளிர்தல் என்று முடிக்கிறாள்.

அன்று போர்க்களத்தில், அர்ஜுனனுக்கு உரை தந்த பின், அவனை விட்டு நீ பிரிந்தாயோ? இல்லையே.
அவன் கூடவே ரத சாரதியாகவும் இருந்து, அவன் மனத்தை ஓட்டும் யோகேஸ்வரனாகவும் கூடி இருந்தாயே.
அந்தக் கூடி இருக்கும் தன்மைதான் நான் பரிசாகக் கேட்பது.

9. நீ தாராய் பறை – (பாசுரம் -28)

“அன்பினால் சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே, இறைவா நீ தாராய் பறை “.

உன்னைப் பலவாறாக சிறுமைப் படுத்தியும் பேசியுள்ளோம். அதை எல்லாம் நீ பெரிது படுத்தாதே.
அன்று அர்ஜுனன் உன்னைப் பேசாததா? இந்த அண்டத்தையே தன்னுள் கொண்டு, தன்னுள் விரிந்து இருக்கும் உன்னை,
நண்பனை ஏசிப் பேசி பரிகாசம் செய்வது போல், உன்னிடம் நடந்து கொண்ட அர்ஜுனனிடம் நீ கோபம் கொண்டாயா? இல்லையே.
அதைப்போல, அன்பினால் நாங்களும் உன்னை இரு மாறாகப் பேசி யுள்ளோம். அதற்காகச் சீற்றம் கொண்டு
பறை தாராமல் இருந்து விடாதே. நீ பறை என்னும் உறுதி மொழியை எங்களுக்குத் தர வேண்டும்.

10. இற்றைப் பறை கொள்வான் – (பாசுரம் -29)

“இற்றை பறை கொள்வான் அன்று காண்”

ஏதோ இன்றைக்கு மட்டும் நீ பறை கொடுத்தால் போதும் என்றில்லை.
அர்ஜுனனுடன் என்றென்றைக்கும் கூடவே இருந்து அவனை கவனித்துக் கொண்டாய் அல்லவா?
அது போல இன்றைக்கு மட்டும் எங்களுக்கு நீ தலை ஆட்டுவது போதாது.
என்றென்றைக்கும், ஏழேழ் பிறவிக்கும் எங்களை நீ ஆட் கொண்டு இருக்க வேண்டும்.

11.அங்கப் பறை கொண்ட ஆற்றை – (பாசுரம் -30)

இவ் வரிகள் கடைசிப் பாசுரத்தில், பலன் கூறுவது போல் அமைந்துள்ளன.
அங்கு, அன்று அப் பறை கொண்ட விதத்தை, ஸ்ரீ பட்டர் பிரான் மகளான ஸ்ரீ ஆண்டாள் சொன்ன கருத்தை
ஏற்றுக் கொண்டு அவன் அடி பணிபவர்கள், என்றும் அவனது திருவருளைப் பெற்று இனிதுடன் இருப்பர்
என்று ஸ்ரீ திருப்பாவை முடிகிறது.

ஸ்ரீ மாயன் தந்த இந்த உரையை ஸ்ரீ நம்மாழ்வார் ‘வார்த்தை’ என்கிறார்.
ஸ்ரீ மாயன் தந்த வார்த்தை அறிந்தால், “பிறப்போடு, நோயோடு, மூப்பொடு இறப்பில்லை’ என்கிறார் (ஸ்ரீ திருவாய் மொழி 7-5-10)
பிறவா நிலையைத் தருவது பறை ஒலியான அவன் வார்த்தை.
அதனால் அவன் சரணன்றி வேறொன்றும் நமக்கில்லை என்று இருக்க வேண்டும்.

ஸ்ரீ நம்மாழ்வார் “வார்த்தை” என்று சொன்னதை “ஸ்ரீ மாயன் உரை” என்று ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் கூறுகிறார்.

“ஆற்றம் கரை கிடக்கும், கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத்தெனக்கு”
(ஸ்ரீ நான் முகன் திருவந்தாதி- 10)

அவன் ஆற்றங்கரை தோறும் படுத்துகொண்டிருக்கிறான். ஒருவர் படுத்துக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?
ஓய்வாக இருக்கிறார். இப்பொழுதைக்கு இந்த இடத்தை விட்டுச் செல்ல மாட்டார் என்பது.
நாமும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி முடித்து, அவன் பறை தருவான் என்பதை உணரும் போது,
‘ ஐயோ அவன் எங்கிருக்கிறானோ, அவனை எங்கே தேடுவது’ என்று கவலைப் பட வேண்டாம்.
ஆற்றங்கரை ஏதாவது தென்படுகிறதா என்று பாருங்கள். கண்டிப்பாக அங்கே பள்ளி கொண்டிருப்பான்.
பறை கேட்டு சிறுமியரான நாம் வரும் போது, நாம் ஏமார்ந்து விடக் கூடாது அல்லவா?
தூங்கிக் கொண்டிருப்பவனை ஸ்ரீ ஆண்டாள் எழுப்பியது போல, நாமும் அவனை எழுப்பிக் கேட்பதில்,
பாவைச் சிறுமியர் போல நமக்கும் ஒரு கிளுகிளுப்பு.
‘என்னையா தேடி வந்தீர்கள்’ , என்று ஒன்றும் தெரியாதது போல் எழுந்திருப்பதில் அவனுக்கும் ஒரு ஆனந்தம்.

அதனால் தான் ‘கடல் கிடக்கும் மாயன்’ – ஸ்ரீ பாற்கடலில் கிடக்கும் மாயவன், நமக்கு எளிதாக இருக்கும் வண்ணம்
ஆற்றங்கரை தோறும் தூங்குவது போல் பாசாங்கு செய்து படுத்துக் கொண்டிருக்கிறான்.

அவன் கொடுக்கும் உரையால் நமக்கு என்ன பயன் என்றால்,
“கூற்றமும் சாரா, கொடு வினையும் சாரா, தீ மாற்றமும் சாரா” என்கிறார் ஸ்ரீ ஆழ்வார்.
யம பயமும் வராது, இறப்பையே வெல்வோம்.
கொடிய பாபங்களும் நம்மைத் தீண்டாது, வினை அறுப்போம்.
கெட்ட பெயரும் நம்மைச் சேராது.

இப்படி எல்லாம் அந்தப் பரம் பொருள் தரும் பயனை வேதமும், ஸ்ரீ ஆழ்வார்களும் பலவிதமாகச் சொன்னாலும்,
சிற்றறிவினரான நம்மை ஈர்க்கும் வண்ணம் ஸ்ரீ ஆண்டாள், பறை என்னும் ஒரு சொல்லில் புதையலையே கொடுத்துள்ளாள்.
பறை கொட்டி, பறை கேட்டு அவனைப் பணிந்தாலே போதும். அவள் சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் வாசித்தாலே போதும்,
அவனாகவே நம் மனத்தில் உள்ள மற்ற எண்ணங்களைப் போக்கி ‘மற்றை நம் காமங்கள் மாற்றி’ விடுவான்.

’ஸ்ரீ நாராயணனே, என்றவிடத்து ஏகாரம் பிரி நிலைப் பொருளதாய் ஸ்ரீ நாராயணன் அடியார்க்குக் காரியஞ் செய்யுமிடத்துச்
சாதனங்களை யெதிர் பாராது செய்து தலைக் கட்டுபவன் என்பதை உணர்த்தும்.
நமக்கே என்றவிடத்து ஏகாரமும் அப்பொருட்டாய், ஸ்ரீ நாராயணன் ஸர்வ ஸாதாரண ஸ்வாமியாயினும்,
‘ஆகிஞ்சன்யம், அநந்யகதித்வம் என்னு மத்காரங்களமைந்த நமக்கன்றி மற்றயோர்க்குக் காரியம் செய்யான் என்பதைத் தெரிவிக்கும்.

பறை என்பது நோன்புக்கு அங்கமானதொரு வாத்ய விசேஷம்.
இவ்வாய்ச்சிகள், மேல், “மாலே மணிவண்ணா” என்ற பாட்டில் அபேஷித்த படி ஸ்ரீ கண்ணபிரான் பறை தரப்புக,
அதுகண்டு இவர்கள் “சின்னஞ்சிறுகாலே” என்கிற பாசுரத்தில்,
“இற்றைப் பறை கொள்வானன்று காண் கோவிந்தா, எற்றைக்கு மேழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோமுனக்கு நாமாட் செய்வோம், மற்றை நங்காமங்கள் மாற்று” எனக் கூறினமையால்,
பறை, பறை என்று சொல்லிக் கொண்டு போவது நாட்டார்க்கு ஒரு வியாஜ மாத்திரமேயாய்,
அதன் உள்ளுறை கைங்கரிய விருப்பம் என்பது விளங்கும்.

“ஏவ மற்றமராட் செய்வார்” என்றபடி எதிர்த் தலையின் நியமனங்கொண்டு செய்வதே
ஸ்வரூபத்துக்குச் சேருமென்னும் ரஹஸ்யார்த்தம், “பறை தருவான்’ என்பதனாற் போதரும்.

—————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆண்டாள் அனுபவித்து அருளிச் செய்யும் ஸ்ரீ நாச்சியார் திருமொழி —

August 11, 2020

புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை விருப்புடை இன் தமிழ் மாலை–1-10-

விருப்பம் அடியாகப் பிறந்த -பிராப்ய த்வரை விஞ்சி -அருளிச் செய்த இனிய தமிழ் தொடை
சாத்விக அக்ரேசரான பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து வைத்து பகவல் லாபத்துக்காக மடல் எடுப்பரோபாதி-
காமன் காலில் விழ வேண்டும் படியான இப்பிரபந்தம்

வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டு சித்தன் தன் கோதை வாய்த் தமிழ் வல்லவர்–2-10-

வாயால் உச்சரிப்பது அடங்கலும் வேத சப்தம் ஆகையாலே செய்வது அடங்கலும் வைதிக கிரியையாய் இருக்கிற
பிராமணர் வர்த்திக்கிற ஸ்ரீ வில்லி புத்தூருக்கு பிரதானரான பெரியாழ்வார் –திரு மகளுடைய -பகவத் அனுபவம் –
வாச க்ரம வர்த்தித்வாத் -வழிந்து புறப்பட்ட சொல்

புதுவையர் கோன் பட்டன் கோதை இன்னிசை யால் சொன்ன மாலை–3-10-

இவ்விஷயத்தில் இவ்வளவான அவகாஹாநத்துக்கு அடி பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பு யாய்த்து –

நிறை புகழ் ஆய்ச்சியர் கூடலைக் குழல் கோதை முன் கூறிய பாடல் –4-10-

இவர்களுக்கு நிறை புகழாவது –கிருஷ்ணனை இன்னாள் நாலு பட்டினி கொண்டாள்-இன்னாள் பத்து பட்டினி கொண்டாள்
என்னும் புகழ் காண்-என்று அருளிச் செய்வர் –
இவள் மயிர் முடியாலே அவனை கூடல் இழைப்பிக்க வல்லவள் –

பண்ணு நான் மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை சொன்ன நண்ணுற வாசக மாலை–5-11-

ஸ்வர பிரதானமான நாலு வேதங்களும் வைத்து இருப்பவர்கள் -ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிர்வாஹகரான பெரியாழ்வார் திருமகள் சொன்ன –
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீண்ட வேதம் போல் அன்றிக்கே விஷயத்தை மாறுபாடுருவும் படி அருளிச் செய்த இவை-

வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல் தூய தமிழ் மாலை–6-11-

ஆப்திக்கு ப்ராஹ்மணராலே ஸ்துதிக்கப் பட்டு இருக்கிற ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாஹகரான பெரியாழ்வார் திருமகள் ஸ்ரீ ஸூக்தி
அனுபவத்துக்கு பாசுரமிட்ட அத்தனை அல்லது நெஞ்சோடு கூட கவி பாடிற்று அல்லவாய்த்து –

ஒண் புதுவை ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ்–7-10-

ஒண் புதுவை ஏய்ந்த புகழ் -விசேஷணங்கள் பட்டர் பிரானுக்கும் கோதைக்கும் சேரும் –
பெரியாழ்வார் பெண் பிள்ளை அன்றோ-என்னும் புகழ்

போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ் –8-10-

பகவத் போகத்தில் ஒன்றும் தப்பாத படி எல்லா வகையாலும் அனுபவித்த பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பாய்த்து இவ்வாசைக்கு ஊற்று
விபவம் உண்டான வன்று தொடங்கி போகத்தில் அன்வயித்தவர் இறே பெரியாழ்வார்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் – என்று தொடங்கி அனுபவித்தவர் இறே

குழல் கோதை தொகுத்து உரைத்த செந்தமிழ்–9-10-

தன்னுடைய ஏகாங்க சௌந்தர்யத்தாலே -இவை அடையக் குமிழ் நீர் உண்ணும் படி பண்ண வல்லவள் யாய்த்து இப்பாடு பட்டாள்
ரத்னங்களைச் சேரத் திரட்டினால் போலே கல்யாண குணங்களை சேர்த்துச் சொன்ன செவ்வியதமிழ் –
பாவ பந்தம் வழிந்து சொல்லாய்ப் புறப்பட்ட இத்தனை –

வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே–10-10-

சர்வ சாதாரணமாக இருக்கும் வஸ்து என்று பற்றக் கடவது அன்று
ஆச்சார்யனுக்கு விதயம் அவ்வஸ்து –விஷ்ணு சித்தே யஸ்ய -அனந்தன் பாலும் -5-4-8–
அவன் வழியாலே நமக்குக் கிடைக்கும் என்று இருக்க அடுக்கும்
சம்பந்தம் நமக்கும் அவனுக்கும் ஒக்கும் என்று நினைக்கலாகாது
சம்பந்தம் நித்தியமாய் இருக்கச் செய்தே இ றே இந்நாள் வரை கிடந்தது
தங்கள் தேவரை -என்று தன்னோடு உறவு அறுத்து பெரியாழ்வார் உடன் சேர்த்து சொல்லுகிறாள்
பெரியாழ்வார் உகந்தது என்றாய்த்து உகந்தது-திரிபுரா தேவியார் வார்த்தையை நினைப்பது –
பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரசீத -ஸ்தோத்ர ரத்னம் -65-என்னுமா போலே
த்வத் பாதமூலம் சரணம் ப்ரபத்யே -ஸ்தோத்ர ரத்னம் -22-என்று சரணம் புக்குவைத்து பிரபத்தி பண்ணினோம் நாம் ஆகையாலே
அதுவும் போட்கனாகக் கூடும் என்று அக்குறை தீர நாத முனிகளை முன்னிட்டால் போலே பெரியாழ்வாரை முன்னிடுகிறாள் –

பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டுச்சித் தன் கோதை இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை-12-10-

ஸ்ரீ மத் த்வாரகையிலே மாளிகையோடு ஒக்குமாய்த்து இவ் ஊரும்
இனி தான் பண் மிக்கு -பாவ பந்தம் வழிந்து புறப்பட்ட சொல்

வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிக விரும்பும் சொல்–13-10-

இவளுடைய விருப்பத்தில் ஊற்றமாய்த்துச் சொல்லித் தலைக் கட்டப் பார்க்கிறது
இவ்வளவான பிராவண்ய அதிசயத்துக்கு எல்லாம் வாய்த்தலை பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பாய்த்து-
வில்லைத் தொலைத்த புருவத்தாள்
தன்னோடு சாம்யம் கொண்டாடி இருக்குமவை எல்லாம் அழிக்கும் படி யாய்த்து அவயவ சோபை இருக்கும் படி
வில் தான் ஒப்பாக போராத படியான புருவத்தை உடையவள்
வேட்கை யுற்று மிக விரும்பும் சொல்லைத்-
அபி நிவேசமானது விஞ்சி அது தான் –என்னளவன்றால் யானுடைய அன்பு –இரண்டாம் திரு -100-என்கிறபடியே
ஆஸ்ரயத்தின் அளவில்லாத படி அபி நிவேசத்தை உடைய வாளாய்ச் சொன்ன அவளுடைய பாசுரம்
பகவத் அனுபவம் வழிந்து புறப்பட்ட சொல்

பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப் பாரின் மேல் விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல் மருந்தாம் -14-10-

பிறந்த பக்தியும் -அந்த பக்திக்கு அனுரூபமாகப் பெற்ற பேறும் ஓர் ஆஸ்ரயத்தில் கிடக்கும் அளவு அல்லாமையாலே
கண்டீரே -என்று -பரம பக்தி தசையை -கேட்கிறவர்கள் பாசுரத்தாலும்
கண்டோம் -என்று-தான் பெற்ற பேற்றை – சொல்லுகிறவர்கள் பாசுரத்தாலும் –
ஆக தான் பெற்ற பேற்றைச் சொல்லித் தலைக் கட்டுகிறது
திருவாய்ப்பாடி விருத்தாந்தத்தைச் சொல்லுகையாலே -அன்யாபதேசமாகையும் தவிராதே
ஆனாலும் விட்டு சித்தன் கோதை சொல் -என்கிறதும் தவிர்க்க ஒண்ணாதே

ஸ்ரீ வைகுண்டத்தில் அன்றிக்கே பூமியிலேயாய் அது தன்னிலும் திருவாய்ப்பாடியில் அன்றிக்கே
ஸ்ரீ பிருந்தா வனத்தே கண்டமை -(இவளுக்கும் சூடிக் கொடுத்த மாலையை மாலுக்கு சூடும் படி அருள் புரிந்தான் )
விட்டு சித்தன் கோதை சொல்-காட்சிக்கு கைம்முதல் இருந்தபடி –
விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே -10-10- என்று முன்னனே அருளிச் செய்தாள் அன்றோ –
மருந்தாம் என்று இது தான் சம்சார பேஷஜம்

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ கோதா உபநிஷத் – ஸ்ரீ ஆண்டாள் கீதை – ஸ்ரீ நாச்சியார் ராமாயணம் – ஸ்ரீ சூடிக் கொடுத்தவள் பாகவதம் –ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் =

July 29, 2020

ஸ்ரீ கோதா உபநிஷத்

ஸ்ரீ பெரியாழ்வார் -பா மாலை பூ மாலை பெண் மாலை –
வேதம் அனைத்துக்கும் வித்து ஆகுமே –
மறை -மறைத்து சொல்வதை எளிமையாக அனைவரும் அறியும்படி -வேதக் கருத்தையே காட்டி அருளி –
வேதாந்தமே உப நிஷத் -ப்ரஹ்மம் சமீபத்தில் நம்மை வைக்கும்-பாதகங்கள் தீர்க்கும் -பரமன் அடி காட்டும்
பரமன் அடி பாடி உபக்ரமம் –பொற்றாமரை அடி உப ஸம்ஹாரம் –

அநாதி மாயையால் ஸூப்தா யதா ஜீவா ப்ரப்புத்தயா- நாம் தூங்க -நம்மை எழுப்புகிறாள் -லௌகிக விழிப்பு இருந்தாலும் –
ஆன்மிக விழிப்பு உணர்வு இல்லாமல் பல பிறவிகளில் இருக்க -பிள்ளாய் -இத்யாதி விழிச் சொற்கள் –
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் –
பாரார்த்யம் ஸ்வம் -ஸ்வாமி -யஸ்யாஸ்மி -அந்தர்யாமி -கண்ணாடியில் அழுக்கு போலே சம்சாரம் –
நித்ய அனுசந்தானம் ஆராதனம் இதுக்குத் தானே –

நாராயணனே -ஒருமை -நமக்கே-பன்மை -பறை தருவான் -இனியது தனி அருந்தேல் –
தகுதியை உருவாக்கி அருளுகிறார்
ஏக பஹு -நித்யன் -ஒருவன் -சேதனன்
நாம் -நித்யம் -பலர் -சேதனர்கள் –
நமக்கே -ஆத்ம ஞானம் உடையவர்களாக நமக்கு
அறிவு இல்லாதவர்களுக்கும் அறிவை அருளுகிறார் -சகல பல பிரதன் -சர்வ லாபாய கேசவ –
ஸ்ரீ கிருஷ்ண கர ஸ்பர்சத்தால் தானே பாலைப் பொழியும் –

சத்யம் வத தர்மம் சர –ஆச்சார்ய பிரியம் கொடுக்க வேண்டும் –மாதா தேவோ பவ –
ப்ரஹ்மம் அருகில் இருக்க பயம் போகுமே –தைத்ரியம் உபநிஷத்-இதம் குரு –செய்யும் கிரிசைகள் கேளீரோ
செய்யாதன செய்யோம் –மேலையார் செய்வனகளையே செய்வோம்
ஸ்ரத்தயா தேயம் அஸ்ரத்தயா அதேயம்-ஸ்ரீ யா தேயம் -ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் –

அனுக்ரஹம் செய்பவனுக்கு சொத்தை பறித்து -குந்தி தேவியும் சொத்தைப் பறித்துக் கொள்ள பிரார்த்தனை –
இவளோ நீங்காத செல்வம் -குலம் தரும் செல்வம் தந்திடும் –
செல்வம் பாகவத கைங்கர்யம் -ஆந்தனையும் கை காட்டவே -மழை செல்வம் பால் செல்வம் நெல் செல்வம் சோலைச் செல்வம் –
ஸதாயுர் வை புருஷ–தனம் தானம் பஹு புத்ர லாபம் -வேதம் -படிப்படியாக கூட்டி -அவாந்தர பலம் —
ஸாஸ்த்ரம் கொண்டே ப்ரஹ்மம் -சம்சாரம் த்யாஜ்யம் ப்ரத்யக்ஷம் மூலம் அறிகிறோம் —
வைராக்யம் பிறந்து நாமே ப்ரஹ்மம் தேடிப் போவோமே -பர்ஜன்ய வர்ஷதி –முகில் வண்ணன் –

போய பிழையும் புகுதருவான் நின்றனவும் –ஆகாமி தெரியாத் தனத்தால் -தாமரை இலைத் தண்ணீர் –
பத்ம பத்ம இவ -முன் செய்தவை தீயினில் தூசாகும் –
புஷ்கல பலாசம் ஆப –
இஷீக ஸ்தூலம்-
உத்தர பூர்வ ஆகம் அஸ்லேஷ வினாசம் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்
மாரீசனை விரட்டி ஸூபாஹு முடித்து ராமர் அனுஷ்டித்துக் காட்டி –

வாயில் காப்போன் -நாயகனாய் நின்ற
எட்டு த்வாபர எட்டு க்ஷேத்ர பாலகர்கள் -ஆகமங்கள் பெயர்கள் சொல்லும் –
த்வார சேஷி –க்ஷேத்ர சேஷி –ஆச்சார்யர் பாகவதர்கள் மூலமே அவனைப் பெற வேணும்

வள்ளல் பசுக்கள் –ஊற்றம் உடையாய் பெரியாய்–வேதங்களால் -வேதைக சமைதிகன்–யஸ்ய அமதம் தஸ்ய மதம்-
சொல்லி முடிக்காதே -யதோ வாசோ நிவர்த்தந்தே -அப்ராம்ய மனசா ஸஹ-

மாலே –ஆலின் இலையாய் அருள் -பாஞ்ச ஜன்யம் போல்வன சங்கங்கள் -சாலப் பெரும் பறை –
பல்லாண்டு இசைப்பார் கோல விளக்கு கொடி விதானம்
சாம்யா பத்தி–
ஆதி சேஷன் -வேண்டும் -கருடக்கொடி -நப்பின்னைப்பிராட்டி -பெரியாழ்வார் –
நிரஞ்சனம் பரமம் சாம்யம் உபைதி
ருக்ம வர்ணம் -கர்த்தாராம் ஈசன் புருஷம் பச்யதே –பார்த்ததுமே ததா புண்ய பாப விதய –
ஆனந்தத்தில் சாம்யம் -தாரதம்யம் இல்லாமல் -ஸ்வரூப ஆவிர்பாவம்
அபஹத பாப்மா விஜய விமிருத்யு –சத்ய காம ஸத்ய சங்கல்ப -எட்டும் பெறுவோம் -மம சாதரம்யம் ஆகதா
ஸ்வாமியாக அவன் ஆனந்தம் -சொத்தாக நமக்கு ஆனந்தம்

கூடாரை –சூடகமே தோடே செவிப்பூவே –சம் மானம் பிரார்த்தனை
சோச்னுதே ஸர்வான் காமான் சக ப்ரஹ்மணா விபச்சிதா -கல்யாண குணங்களை பெற்று ஆனந்தம்
அவன் குணம் நினைக்க பயம் போகுமே -சாயுஜ்யம் சொல்லும் பாசுரம் இது
கூடி இருந்து குளிர்ந்து -பாலே போல் சீர் நினைக்க குளிரும்
வைகும் சிந்தையிலும் நீ கொடுக்கும் வைகுந்தம் பெரியதோ –

அநு காரம் செய்த ஆண்டாள் போல் அநுஸந்திக்கும் நமக்கும் பேறு சித்தம்

————————

ஸ்ரீ ஆண்டாள் கீதை

முதல்வன் -ஜகத் காரணன் -அவனையே த்யானம் -ஞானம்
புருஷோத்தம வித்யை அறிந்து -பக்தி செய்தவன் ஆகிறான் என்னையே அடைகிறான் –
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -அவனே பரமன் -நாராயணன்
முக்கரணங்களால்-மன் மநா பவ -மத் பக்த -மத் யாஜி -மாம் நமஸ்குரு-பக்தி யோகம்-
மாஸூ ச -புண்ணியம் யாம் உடையோம் -இறைவா நீ தாராய் பறை -கைங்கர்யம்

அறிவு இல்லாத -கர்மம் யோகம் இல்லாத
அறிவு ஓன்று இல்லாத -ஞானம் யோகம் இல்லாத
அறிவு ஒன்றும் இல்லாத – பக்தி யோகம் இல்லாத
சரணாகதி -மூன்றுக்கும் தகுதி இல்லாததால் -உபாயமாக இல்லாமல்
எங்களைத் தேடி வந்த புண்ணியமே நீயே –இறங்கி வந்து கூட்டிச் சென்று சாம்யாபத்தி–ஸாயுஜ்யம் -அருளுகிறாய்

தத்வ விவேகம்
நித்ய அநித்ய -ஆத்ம தேக விலக்ஷணம் -பரம சேதனன் -புருஷோத்தமன் -வெட்டவோ உலர்த்தவோ நினைக்கவோ முடியாதே
நாராயணன் -நமக்கே -பறை -பிரித்து எளிதாக அருளி -தத்வ த்ரய ஞானம் –
நான் நேற்று இருந்தேன் அல்லேன் என்பது இல்லை – -மன்னர்கள் நேற்று இருந்தார்கள் என்பது இல்லை –இத்யாதி-

வையத்து வாழ்வீர்காள் -ஆண்டாள் –
அரக்கர் அசுரர் உள்ளீரேல் -நம்மாழ்வார்
வாழாட்பட்டு உள்ளீர் -கூழாட்பட்டாரை எங்கள் குழுவினில் புகுதல் ஓட்டோம் -பெரியாழ்வார்

ஐந்தாம் அத்யாய ஸ்லோகங்கள் –
வித்யா வினய சம்பன்ன -பண்டித சம தர்சன -த்ரிவித தியாகம் -ப்ரஹ்ம ஞானம் -சம தர்சனம்
நிரதோஷம் -சமம் -ஆத்ம ஸ்வரூபம் ப்ரஹ்மம் -சரீரத்தை விலக்கி ஆத்மாவைப் பார்த்தால் ஞான ஆனந்த ஸ்வரூபம் அறிவோம்
மற்று ஒரு இடத்தில் சரீரமே ப்ரஹ்மம் என்பர்
இஹைவ -ஜித சர்க்கம் -இங்கேயே சம்சாரம் ஜெயிக்கிறான் கர்மயோகம் தொடங்கும் போதே -சாம்யத்தில் மனம் நின்றால்
விசிஷ்ட வேஷம் -நிஷ்க்ருஷ்ட வேஷம் -சமதர்சனம் இருந்தால் தான் ப்ரஹ்மத்தில் நிலை நிற்போம்
சம்சாரம் இத்தால் இங்கேயே வெல்லலாம் –வையத்து வாழ்வீர்காள் –
செல்வச் சிறுமீர்காள் -பிள்ளாய் இவள் சூட்டிய பெயர்கள்-

நீங்காத செல்வம் நிறைந்து –உத்தமன் பேர் பாடி –சாற்றி நீராடினால் -பரமன் அடியே நீங்காத செல்வம் –
அருள் இல்லார்க்கு அவ்வுலகு இல்லை பொருள் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை தப்பாக சொல்வர் -இதுக்கும் அருள் வேண்டும்
பக்தி ஒன்றே நிறைவை நிம்மதியை சாந்தியைத் தரும்
அநந்யா சிந்தயந்தாம்-தேஷாம் நித்யாபி யுக்தானாம் யோக க்ஷேமம் வஹாம் அஹம் –
கிடைக்காதது கிடைக்கவும்-செல்வம் யோகம் – கிடைப்பது நிலைக்கவும் க்ஷேமம் -நீங்காமல் இருக்க –
திருப்தி வேறே ஸந்தோஷம் வேறே
படாடோபங்கள் குறைந்து -நேரம் நல்ல முறையில் செலவளித்து -சாந்தி
சாஸ்த்ரா விதி -மீறி நடந்தால் சித்தி இல்லை -இங்கும் அங்கும் செல்வம் கிட்டாதே
அஸ்ரத்தயா குதம் தபஸ் தத்தம்–அஸத் செயல்

கர்மயோகம் மூன்றாவது -ப்ரஹ்மம் -சரீரத்தையே கீதையில் -ஏவம் ப்ரவர்த்திதம் -இந்திரிய ராமனாக
புலன்களின் பிடியில் ஆயுளை வீண் அடிக்கிறான்
சக்கரம் –உன் பங்கை நீ ஆற்ற வேண்டும் -அன்னம் -பர்ஜன்யம் -மழை வேண்டும் -ஆழி மழை க் கண்ணா
யாகங்களினால் -மழை -பெய்யும் -கர்மயோகத்தில் ஒரு வகை –
கர்மம் சரீரம் இருந்தால் தானே முடியும் -இத்தையே ப்ரஹ்மம் என்று அறிவாய்
தேவர்கள் -பரஸ்பரம் -வாயு காற்று அக்னி நெருப்பு குபேரன் செல்வன்
ஆத்மா சரீரத்தை தூண்டி கர்மம் -யாகம் -மழை -அன்னம்-ஜீவராசிகள் இது தான் சக்கரம்
மநு பகவான் -அக்னி ஆஹுதி கொடுக்க- ஆதித்யன் -மழை பெய்து -இத்தையே

தூ மலர் தூவித் தொழுது -தூய்மை
பத்ரம் புஷ்ப்பம் பலம் தோயம் –பக்தியா பிரயச்சதி –அஸ்நாமி
சததம் கீர்த்தயந்த– -பக்தி தோய்ந்த
மடி தடவாத சோறு
பக்தியுடன் கொடுக்கிறானோ அப்படி பக்தியுடன் -மீண்டும் சொல்லி அதில் உள்ள
தனது பிரியத்தை கீதையில் -தொழும் காதல் களிறு

அம்பரமே -தண்ணீரே -சோறே-தானம் செய்யும் இல்லை அறம் செய்யும் தர்ம சிந்தனை –
சாத்விக தானம் -ராஜஸ தானம் -தாமஸ தானம் மூன்று வகை கீதையில்
பிரதி உதவிக்காகக் கொடுக்காமல் எதிர்பார்ப்புடன் செய்யாமல்
ஸத்காரம் பண்ணி மரியாதையுடன் சாஸ்த்ர விதிப்படி செய்ய வேண்டும்
அத்தேச காலம் அபாத்ரம் தேவை அற்ற முறையில் தாமஸ தானம்

கப்பம் தவிர்க்கும் –விமலா –செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் -ஆஸ்ரித விரோதிகள் –
பாகு பாடு பார்க்கும் -கருணை இல்லாத தோஷம் இல்லாதவன் -என்னை கர்மம் தீண்டாது –
நீங்கள் செய்யும் கர்மங்களை அனுமதித்துக் கொண்டு உள்ளேன் -அதன் வழி பலத்தைக் கொடுக்கிறேன் –
இனிமேல் விட்டு வைத்தால் ஆஸ்ரிதர் பாதிப்பு -சீறி அருளுகிறார்

கறைவைகள் -சரணாகதி பாசுரம்
வருத்தம் தீர்ந்து
வருத்தமும் தீர்ந்து
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து

—————

ஸ்ரீ நாச்சியார் ராமாயணம்

ஸூந்தரே ஸூந்தரோ சீதா ஸூந்தரே ஸூந்தரோ ராமோ ஸூந்தரே ஸூந்தரோ அசோக வனம்
ஸூந்தரே ஸூந்தரோ ஸ்லோகம் -எது தான் இதில் ஸூந்தரமாக இல்லை
ஸ்ரீ ராமாயணமும் ஸ்ரீ திருவாய் மொழியுமே ஸ்ரீ வைஷ்ணவத்துக்கு அரண் -அவ்யபதேசனுக்கு வனாந்தரத்தில் அவன் பிள்ளை வார்த்தை
இன்னார் தூதன் என நின்றான் -திருவடி பெயராலே ஒரு காண்டம் -இதன் பெருமையை உணர்ந்து பாண்டவ தூதனாக ஆனபின்பு
தரித்து நின்றான் -வேறே அவதாரம் இல்லாமல் நின்றானே -பார்த்தன் தன் தேர் முன்னும் நின்றானே –

ரூப உதார குணத்தால் பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரினாம்
ரஞ்சநீ யஸ்ய விக்ரமே
ந நமேயம் என்று இருப்பாரையும் மித்ர பாவேந வும் அமையும் என்பார் பெருமாள்
அப்ரமேய ஜநகாத்மஜா -மாரீசன்
உத்தம தார்மிகஸ்ய அக்ஷய கீர்த்தி- -தாரை
வைய வந்த வாயாலே வாழ்த்திப் போவார்கள்
பரமாத்மனே சனாதன சங்கு சக்ர கதாதரா -மண்டோதரி –
தருணவ் ரூப சம்பன்னவ் ஸூ குமாரவ் –புண்டரீகாக்ஷவ் சூர்ப்பணகை-
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய் –மூல மந்த்ரத்தை ஏழு உலகுக்கும் மருந்து –வாலி

ஆதி காவ்யம்–ஆறு காண்டங்கள் –500 க்கும் மேலான சர்க்கங்கள் –25000 ஸ்லோகங்கள்
குணங்களைப் பற்றியே உபக்ரமம் உப சம்ஹாரம் கோன் வஸ்மி குணவான் -16-குணங்கள் நாரதர் வால்மிகி சம்வாதம் –
குண சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் -ராமம் ரத்ன மய பீடம் -பகவோ கல்யாண குணவ் –
ஆசாரம் பிரபு பெருமாள் -நடுவிலும் குணங்களைப் பற்றி அயோத்யா மக்கள் தசரதன் இடம்-

மனத்துக்கு இனியான்
சினத்தினால் மனத்துக்கு இனியான்
தென் இலங்கை கோமானுக்கும் இனியான்
செற்ற மனத்துக்கு இனியான்
தேவர்களுக்கும் -சக்கரவர்த்திக்கும் -கௌசல்யாதிகளுக்கும் -குகாதிகளுக்கும் -இளைய பெருமாளாதிகளுக்கும் –
ஸூக்ரீவாதிகளுக்கும் -ரிஷிகளுக்கும் -சர்வருக்கும்- இனியான்

பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான் மனத்துக்கு இனியான்-
நல்லா அரக்கரனுக்கும் மனத்துக்கு இனியான் –

சதுர்விதமாக பிரித்து தாய் தந்தையை கொண்டு –அனுஷ்டானம் காட்ட பெருமாள் –
நேர்மையாக வாழ்தல் குரங்குகளும் உதவும் சாமான்ய தர்மம் -காட்ட ராமன்
பொல்லாதவனாக இருந்தால் தம்பியும் உதவான்
கைங்கர்ய செல்வம் காட்ட இளைய பெருமாள் -கிரியதாம் மாம் வத -சர்வம் கரிஷ்யாமி -சேஷத்வம்
பாரதந்தர்ய சிறப்பைக் காட்ட பரதாழ்வான்
பாகவத சேஷத்வம் பரதந்த்ரம் சத்ருக்னன் -அநகன்
ராமனைத் தவிர மற்ற ஒரு தெய்வம் இல்லாத பரதனை அல்லது தெய்வம் அறியாத சத்ருக்னனைத் தவிர
மற்று தெய்வம் இல்லை என்று இருப்பதே நமக்கு கர்தவ்யம்
ஆயில்யம் நக்ஷத்ரம் -புஷ்யம் பரதாழ்வான் -தனது மாமா யுகாஜித் இடம் செல்ல -உடை வாள் போல்-
நிழல் போல் பின்னே சென்றான்

அபிமான பங்கமாய் -அடியார்க்கு அடியார் -நானே தான் ஆயிடுக –
நெடுமாற்கு அடியான் -கொடு மா வினையேன் –பழுதே கிருஷ்ண த்ருஷ்ண தத்துவமாக கீழே இருந்ததுக்கு —
நொந்து கொண்டார்
இவளோ அனைத்தும் பாகவத -ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
உச்சிஷ்ட புருஷ ஹரி உபநிஷத்
கௌசல்யா ஸூப்ரபாதம்
அரவணையாய் துயில் எழாய்
திருப்பள்ளி எழுச்சி
இவளோ பாகவத ஸூப்ரபாதம்

எல்லே இளங்கிளியே பாகவத லக்ஷணம் -அனந்தாழ்வான் -திருமேனியில் நோவு சாத்திக் கொள்ள –
திருமலை அப்பன் ஆள் விட்டு -அனுப்ப தானே வந்தாலும் தாழ்ந்து வர –
பாகவதனைக் காக்க வைக்கவில்லையே -நீ எனக்குள்ளே எத்தனை ஜென்மங்கள் காத்து இருந்தாய் –

ஸ்வம் பாரார்த்யம் –திருப்பாவை முழுவதும் -பரதாழ்வான் படி
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து –குற்றம் ஓன்று இல்லாத கோவலன் தன் பொற்கொடி —
கர்மம் செய்வதிலே நோக்கம் -இளைய பெருமாள் படி இது
கனைத்து –நற் செல்வன் தங்காய் -பால் வெள்ளம் பனி வல்லம் மால் வெள்ளம் -இருவரையும் கொண்டாடுகிறான்
பரதாழ்வான் படி இது -அந்தரங்க கைங்கர்யம்-அவன் திரு உள்ளபடி நடந்து –

ராமனை பிரிந்த மூச்சு அடங்கிய உறவும் வேண்டும்
தூது போகும் உறவும் வேண்டும்
கூடச் சென்ற படியும் வேண்டும்
இருந்து கைங்கர்யம் செய்த படியும் வேண்டும்
அனைத்தும் ஆண்டாளுக்கு வேண்டும் –

மத் பாபமே நிமித்தம் –நானே தான் ஆயிடுக -மந்தரையோ -கைகேயியோ –தசரதனோ –
பெருமாளோ -மூத்தவன் குல மரியாதை -இவர்கள் யாவரும் இல்லை
இல்லாத குற்றத்தை உண்டு என்று ஏறிட்டு ச் சொன்னாலும் இல்லை செய்யாதே உண்டு என்று இசைந்தான் -பாகவத லக்ஷணம்

செய்யாதன செய்யோம் -2-
மேலையார் செய்வனகள் -26-
பரத்வாஜர் சொல்படி தங்கி -தார்மிகன் பரதாழ்வான் உடன் தான் அடுத்த ஸ்நானம் என்று இருந்தவர்
ரிஷி சொல்லைத் தட்ட மாட்டாமல் இருந்தாரே

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் ;போகாது -இளைய பெருமாள் படி –

கோபஸ்ய வசம் -திருவடியை ராவணன் அடிக்க
கொண்ட சீற்றம் ஓன்று உண்டு என்று நாம் நிர்பயமாய் நிர்பரராய் இருப்போம்

பாவோ நான்யத்ர கச்சதி -ராமனே மனத்துக்கு இனியான் -கல்யாண ராமன் –
சிந்தையில் வைக்கும் இதுக்கு ஸ்ரீ வைகுந்தம் ஒக்குமோ -பக்திச்ச வீரோ –

லோக நாதம் ஸூ க் ரீவம் நாதம் இச்சதி –ஸ்ரீ விபீஷண ஆழ்வான் நமக்குக் கிடைப்பானோ என்று இருக்கும்
அஸஹாய ஸூரன் -வீரத்தினால் சீலத்தால் அலகால் மனத்துக்கு இனியன்
சென்று அங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி

உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து -பெண் இனத்துக்கு எல்லாம் மனத்துக்கு இனியான்
கொல்லை அரக்கியை மூக்கு அறிந்த குமரனார் சொல்லும் பொய்யானால் —
ஸ்ரீ ராம சரம ஸ்லோகம் -நமக்கு உஜ்ஜீவன மந்த்ரம் –
நத்யஜேயம் கதஞ்சன–அங்குல அக்ரேன -அபயம் சர்வ பூதேப்யோ ததாமி ஏதத் விரதம்
சபரி மோக்ஷம் -எங்கள் மேல் சாபம் போக -செங்கண் சிறுச் சிறுதே எங்கள் மேல் விழித்து –
பூதாத்ம ரகு நந்தன -போல் அருள வேணும்

————

ஸ்ரீ சூடிக் கொடுத்தவள் பாகவதம்

ஸ்ரீ மத் பாகவதம் -12 ஸ்கந்தங்கள் –18000 ஸ்லோகங்கள்
சர்க்கச்ச பிரதி சர்க்கச்ச வம்ச மன்வந்தராணி ச அநு சரித்திரங்கள் பஞ்ச லக்ஷணம் பூர்ணமாக இதில் உண்டே –
ஸூராணாம் அபி துர்லப
ஸூ ஸ்தாம கம்நம் –கலியுகத்தில் பாகவத புராணத்தில் இருப்பேன் என்று உத்தவர் இடம் சொல்லிச் சென்றான்
பரீக்ஷித் மஹாராஜருக்கு ஸூ கர் அருளிச் செய்தது -பல அவதாரங்கள் -இதில் உண்டே
அஜிதன் அலை கடல் கடைந்தான் -கிடந்து கடைந்து அணை கட்டி –
புராண ரிஷிகளுக்கும் ஆழ்வார்களும் ஆண்டாளுக்கும் நெடு வாசி

ஸ்ரீ கஜேந்திர வ்ருத்தாந்தம்
மதம் ஒழுகு வாரணம் உய்ய அளித்த நம் அழகனார் -ஸ்ரக் பூஷ அம்பரம் அலைய –ரஷிக்க ஓடி வர வேண்டாமா
அபலை பெண் ஐந்து முதலைகள் அநாதி கால சம்சாரம் கடலில் -ஜனனம் மரணம் இரண்டு தாடைக்குள் மாட்டி உள்ளோம்-
இங்கே உள்ளேயே இருந்தும் ரஷிக்காமல்
பரும் தாள் களிற்றுக்கு –பரமன் தன்னை பாரின் மேல் ப்ருந்தாவனத்தே கண்டமை –
அருளிச் செய்த நாச்சியார் திருமொழியை மருந்தாம் என்று
தன் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள் –பெரும் தாள் பிரான் அடிக்கீழ் பிரியாது இருப்பாரே
சாது பரித்ராணத்துக்கு நேராக வர வேண்டும் –இதுவே சிறப்பு பயன் –
உன்னால் வந்த ஆபத்து -நீ வந்து சேவை காட்டப் பிரார்த்திக்க-நேராக கண்டு -அருளிச் செய்தாள்

வ்யூஹம் -ஷீராப்தி நிகேதன் -ஏஷ நாராயண ஸ்ரீ மான் -பாற் கடலில் பையத் துயின்ற பரமன் –
ஆகதோ மதுராம் புரிம் -தூய பெரு நீர் யமுனைத் துறைவன்–
ஒப்பில்லாத அப்பன் -கிடந்த அவஸ்தையில் பரமன்
பொங்கிய பாற் கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால்
சந்திரனைப் பார்த்துப் பொங்கும் -அஷ்டமி சந்திரன் போல் திருவடி திரு நகங்கள்
சந்திரன் -மனஸோ ஜாத –சூர்யன் கண்களில் இருந்து -இதனாலும் பொங்கும்

வட பெரும் கோயில் உடையான் -ஆலின் இலை மேல் துயின்றான் –ஆலின் இலையாய் அருள் –மாலே மணி வண்ணா பாசுரம் –
மூன்று பண்புகள் ஸுவ்லப்யம் எளிமை அழகு பரத்வம் -பித்தன் -மாலே -நீல மணி ஸுவ் ந்தர்யம் -ஆலின் இலையாய் -பரத்வம்

அன்று பாலனாகி –மார்கண்டேயருக்கு மட்டும் காட்ட கராரவிந்தே –பால முகுந்தம் –
ஆலின் இலை மேல் துயின்ற எம் ஆதியாய் –தொட்டிலில் யசோதாதிகள் இருக்க –
இங்கே தனியாக முகிழ் இலையில் -அகடி கட நா சாமர்த்தியம் –
பால் ஆல் இலையில் துயின்ற -13-பதிகம் -பரமன் வலைப்பட்டு இருந்தேன்
இங்கும் பரமன்

அம்ருத மதனம் –
கடலே கடலே –படுக்கை அறை என்று பார்க்காமல் கடைந்து ப்ரயோஜனாந்தர பரர்களுக்காக —
உன்னைக் கடைந்து கலக்குற்று
மந்த்ரம் நாட்டி அன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்டார் —சுந்தர தோளுடையான் —
ஆராவமுதன் பிராட்டியை பெண்ணமுதை கொண்டதை
அஸ்வம் -அப்சரஸ் பாரிஜாதம் -பெண்ணமுது –
கொண்டு உகந்த அம்மான் -உப்புச்சாறு தானே கொடுத்தான் -ஈந்தான்
வங்கக் கடல் கடைந்த மாதவன் கேசவனை -மா வந்து அமர்ந்ததால் தானே மாதவன் ஆனார்
கேசபாசம் -கட்டுக் குடுமி அவிழ கடைந்தான் -அந்த அழகையும் அனுபவிக்கிறாள்
வண்டமர் –கடைந்திட்ட வண்ணம் மெய் அறிவேன் நானே -குலசேகரர்

பாசி தூர்த்து கிடந்த பார் மகள் -தன்னைப் பற்றியும்
மாசு உடம்பில் நீர் வாரா மானமிலா பன்றியாய் தேசுடைய –திருவரங்கச் செல்வனார் பேசி ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம்
அஹம் ஸ்மராமி -நயாமி மத் பக்தம் -பேர்க்கவும் பேராதே

ஊன் கொண்ட வள்ளுகிரால்– எட்டாம் பதிகம் -தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் —
வேஷம் மாற்ற வேண்டாம் தூணில் இருந்து வர வேண்டும்
சங்கு தங்கு முங்கை நங்கை சீரார் வளையாக இருக்க வேண்டும்

காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர் –வாமன நம்பி வர –கூடல் -முத்துக்குறி உத்சவம் –
பெரியாழ்வார் இடம் பெண்ணைக் கேட்பது -எவ்வளவு உயர்ந்தது மண்ணை மஹாபலியிடம் பிச்சைக் குறளாகி —
குறை அதில் -தன்னது என்ற அபிமானம்
அத்தைப் போக்க இச்சை கொண்டு இத்தெரு வழி வரக் கூடாதோ

பொல்லாக் குறளாகி -பொற் கையில் நீர் ஏற்று த்ருஷ்டிக்காக
ஓங்கி -உத்தமன் -அம்பரம் -உம்பர் கோமான் அன்று உலகு அளந்தான் அடி போற்றி -மூன்று இடங்களில்
பிச்சை எடுத்தாதவாது சொத்தை மீட்டுக் கொள்ளும் ஸ்வாமி அன்றோ
உலகம் அளந்த பொன்னடிக்கே அடிமை செய்ய வேண்டும் -மூன்று பதார்த்தம் -மூன்று அக்ஷரங்கள்–மூன்று பதங்கள்

செல்வா பலதேவா -பரசுராமர் -செம் பொன் கழல் அடி –கிருஷ்ண அவதாரத்துக்கு பொற் கால் இட்டார்
படுக்கையும் தூங்குமோ

மாலாய்ப் பிறந்த நம்பியை-
வினைதை சிறுவன் மேலாப்பின் கீழ் வருவான் -மாலே செய்யும் மணாளன் –
ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போத க் கண்டீரே
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் -கண்ணன் என்னும் கரும் தெய்வம்
கண்ணன் என்று இருந்தேன் தெய்வமாக இருந்தானே
மறக்கவும் முடியாமல் கரும் வண்ணன் -காட்சி பழகிக் கிடந்தேன்
மனத்துக்கு இனியான் அவனை
அரையில் பீதக வாடை கொண்டு என் வாட்டம் தணிய வீசீரே
துஷ்கரம்-பிரபு -ராமனை திருவடி
ஒருத்தி மகனாய் பிறந்து –சரித்திரம் முழுவதும் சொல்லும் பாசுரம்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர –அத்புதம் பாலகம் –
சங்கு சக்கரம் உப ஸம்ஹர சொன்னதும் மறைத்துக் கொண்ட இவன் அன்றோ மகன்
பிறந்தவாறும் வளர்ந்தவாறும் கம்சனை நிரசித்ததும்
புள்ளும் சிலம்பின –பேய் முலை நஞ்சுண்டு -விஷமே அமுதமாகும் வேளையில் பிறந்தான்
கள்ளச் சகடம் காலோச்சி ஏழு மாதக் குழந்தை
வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்து -விஷத்துக்கு விஷம் மருந்து
மாயனை –தாமோதரனை -உபநிஷத் -கீதை பக்தி -இன்று பாகவத அர்த்தமும் இதில்
மன்னு -வராஹ -விஸ்ராம் காட் –சத்ருக்னன் 12 வருஷம் ஆண்டு –
யமுனைத் துறைவன் தூய்மை -வாய் கொப்பளித்த தூய்மை –
கருமை -யமுனை -கண்ணன் குளித்து -இவனுக்கும் உடலில் ஏறி
இது தான் மாயம்
தாமோதரன் -தாயைக் குடல் விளக்கம் -கட்டி வைத்து பேர் பெற்றவள்

கற்றுக் கறவை –பாசுரம் நின் முற்றம் புகுந்து முகில் வண்ணம் பேர் பாட -திருப்பாவை -சிற்றில் கட்டி விளையாட சிதைப்பான் –
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்
வேறு ஒன்றில் இன்பம் பார்க்கக் கூடாதே
முற்றத்தூடு புகுந்து -அதே முற்றம் -நின் முகம் காட்டி புன் முறுவல் செய்து -அனைத்துக்கும் அந்தராத்மா –
நமட்டுச் சிரிப்பு -சிற்றிலோடு சிந்தையும் சிதைத்தான்
தோழியும் நானும் தொழுதோம்
லஜ்ஜை விட்டு கண்ணனே ரக்ஷகன் என்று இருக்க வேண்டுமே -கோலம் கரிய பிரானே –
உன் இடம் உள்ள கூறை வேண்டாம் -குருந்திடை கூறை பணியாய்

மதுரை புறம் உய்த்திடுமின் –கோவர்த்தனம் –யமுனை -ஸ்பர்சம் உள்ள அனைத்தும் உத்தேச்யம்
இட்டீறிட்டு விளையாட –இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி -திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவாத்தி

வாரணம் –திருக்கல்யாணம் -நடக்கின்றான் -காளை புகுதக் கனாக் கண்டேன் –புனிதன் –குளித்த புனிதன் –
மைத்துனன் நம்பி மது சூதனன் வந்து
இயம் கோதா –சூடிக் கொடுத்தவள் –மம ஸூ தா –ஆயனுக்காக தான் கண்ட கனா
அரங்கனே ஆயன் -கொண்டல் வண்ணன் கோவலன்

குருந்திடை கூறை பணியாய்

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கோதா ஸ்லோகங்கள் —ஸ்ரீ மதி திருவேங்கடத்தம்மாள்

July 29, 2020

ஸ்ரீ கோதா பஞ்ச ரத்னம்,
ஸ்ரீ கோதா அஷ்டகம்,
ஸ்ரீ கோதா மதுர ஸ்தோத்திரம்,
ஸ்ரீ கோதா கோபால ஸ்தோத்திரம்
ஸ்ரீ கோதா த்யான ஸ்லோகம் − ஸ்ரீ மதி திருவேங்கடத்தம்மாள்–

————

ஸ்ரீ கோதா கோபால ஸ்தோத்ரம் –ஸ்ரீ மதி திருவேங்கடம் அம்மாள்

யது வம்ச ஸமுத்பூதம் த்விஜ வம்ச
வஸூ தேவ ச ஸத்புத்ரம் விஷ்ணுசித்தர் ச புத்ரீ
தேவகி கர்ப்ப ஸம்பூதம் துளஸீ கர்ப்ப ஸம்பூதம் காண உத்பவம்
யதுநாம் குலதீபம் பட்டார்ய குல தீபிகாம்
கார்க்காச்சார்யா விஷ்ணு சித்த மதம் அவரோ ரிஷி
இவர் ஆழ்வார் வாழ் முதல் வளர் முதல் மகிழ் முதல் எல்லாம் கண்ணன்
நீல ஜீமுத இந்திர நீல மணிப்ரபாம் இவள் யுவா குமார ரூபஞ்ச யுவதிசய குமாரிணி
மஞ்சு மஞ்சீரா பாதாம் நூபுரம் ஸ்நிக்த பீதாம்பரம் ரத்னா சிகப்பு வஸ்திரம்
சிங்க நடை அன்ன நடை
ஹரிசந்தன குங்குமப்பூ
மணிரத்ன விபூஷணம் திவ்ய மங்கல்ய பூஷணம்
யாஷிடி சாட்டை இவள் கிளி கையில்
சந்த்ர சூர்யா முகாம்புஜாம் சந்த்ர இவ
இந்தீவர கரு விழியாள் -அவனுக்கு செங்கண் சினந்து
கிரீடம் -பின்னல் இவளுக்கு
த்ரிபங்கி லலிதா இருவருக்கும்
சர்வ லோக விதாதா -அவனையும் சேர்ந்து தாங்குபவள் இவள் விஸ்வம் பரா இவள்
சரணாகத கோப்தா அவன் -வத்சலாம் இவள்
திவ்ய ஸிம்ஹாஸனம் ஆரூடம் திவ்ய அலங்கார சோபினாம் அன்யோன்ய காஷினாம்
த்ரைலோக்ய திவ்விய தம்பதி அன்யோன்யா சத்ருசம்
ஏகாசனம் அடியேனுடன் அருளி -திருவடி பண்ணாங்க மூவரையும் வணங்கி
வழு விலா அடிமை செய்ய நாமும் பிரார்த்தனை செய்வோம்

————-

ஸ்ரீ கோதா பஞ்ச ரத்னம்

ஸ்ரீ கமலாதாய நயனாம் -நத கரணாம்-வைகுந்தம் என்னும் தோனி
சசி வதனாம் மம சரணாம்
பய ஹரணாம்
வர பூஸூர தனயாம் -நிலத்தேவர் விஷ்ணு சித்தர் திருமகள்
நூதன நகரம் பஜ
நானே தான் ஆயிடுக -சேஷ பூதர் ஹ்ருதய தாமரை

இரண்டாம் ரத்னம் யதி சேகர ஸஹஜாம் சகோதரி
பர உபகார தூய்மை
ப்ரஹ்மாதிகள் தொழும் -பர்ஜன்ய தேவதைக்கு ஆணை ஆழி மழை பாசுரம்
கிளியையும் வணங்கி கோதாவையும் வணங்குவோம்

ரெங்க மன்னர் -ஸூ மணி நீல -கருணை ரசம் பொங்கும்
கண்கள் கடாக்ஷம் இது என்ன மாய மயக்குகள்
ஜன போஷணம்

சரணாகத ஜன ரக்ஷணம்
பிருந்தாவனம் -அயோத்யை இருக்க ஆசைப்படுகிறீர்
யமுனைக் கரையில் ஆசை
அநு காரம்
கழலாத வளைகள்
பந்தார்விரலி -சீரார் வளை
நீங்காத செல்வம் நிறைய

அத்புத சரிதாம் -கேசவ நம்பியைக் கால் பிடித்து

———-

ஸ்ரீ கோதா
ஸ்ரீ எதிராஜா சகோதரி
ஸ்ரீ ரெங்க நாத பிரியா–காந்தஸ்யே புருஷோத்தம
ஸ்ரீ நாச்சியார்
ஸ்ரீ சூடிக் கொடுத்த சுடர்க்கொடி

————
ஸ்ரீ கோதா அஷ்டகம்

த்ராஹி தவ தாச ஜனம் -ஸ்ரீ மத் அலங்க பரிபூர்ண சசி கோடி
ஸ்ரீதர பெருமாளாலே அலர்ந்த திரு முகம்
நூதன பூஸூர குமாரி
ஸ்ரீ ரெங்கபதி தேவி –மிருது வாணி -மம கோதா -மங்கள மநோ
கிங்கர -தேவர்கள்–பாத கமலா -வதனம் பாவனா பாதாப்ஜ -ஸமஸ்த ஜன ரக்ஷணம்
லலாடா மணி நூபுரம் ஸூ மாலா -பூஷித -உள்ளம் இருந்து தியானித்து பாபங்களைத் தொலைக்கும் படி அருள வேணும்
பட்டர் –
பூஷணம் -வல ஹஸ்தே –கிளி பூஷணம் போலே -யோகி ஹ்ருதய -திருவடிகள் -சிரஸ் நிகமானாம் –
உள்ளத்துக்கு கொண்டு முனிவர் களும் யோகிகளும்-லோக க்ஷேமம் நினைப்பவர் முனி -கைங்கர்யம் செய்பவர்கள்
பக்தியுடன் பெருமாளுடன் என்னைக் கட்டுவிப்பாய் ஹரி -ஏழு தடவை ஸ்ரீ சாஹி ஸூ தா சாஹி -மம பந்தய
திரு நாம சங்கீர்த்தனம் –சததம் கீர்த்தயந்த –
அந்ய சரணம் –சகலவித பந்து -சகல செல்வம் -பிள்ளாய் -நற்செல்வன் தேங்காய் -மாமான் மகளே –
பொற்கொடி -பல உறவுகள் பாகவத ஆத்ம பந்துத்வம் உத்தேச்யம்
அம்ப ஜகதம்ப
சரம தசையில் காஷ்ட -உன்னை மறக்காமல் இருக்க அருள வேணும் ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம்
ஹம்ஸ வாஹனம் -அவன் கருட வாஹனம் -ஜகத் அம்ப-
கைங்கர்ய ஸ்ரீ பலனாகச் சொல்லி நிகமிக்கிறார்

———————

அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்
அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:
தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நா
தந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:

ஆண்டாள் அன்னையே, உம்மை வணங்குகின்றோம். சாத்திரங்கள் அனுமதிக்காத தவறுகள் பலவற்றை நெடுங்காலமாக
நாங்கள் செய்து வருகிறோம். ஆனாலும் எங்களுக்கெல்லாம் தங்கள் கணவரான அரங்கத்துப் பெருமாள் திருவருள் புரிகிறார்.
இவையெல்லாம் உன்னால் அன்னையே நீ சூடிக் கொடுத்த பூமாலையால் அவர் வசப்பட்டிருப்பதால் தான்.
அது மட்டுமல்லாமல் வீணையின் நாதம் போன்ற உன் குரலால் தீந்தமிழில் பிரபந்தமும் பாடித் துதித்திருக்கிறாய்.
அதனாலேயே உன் குழந்தைகளாகிய எங்களை பெருமாள் தண்டிக்காமல் விட்டிருக்கிறார்.
அதற்காக ஆண்டாள் அன்னையே உம்மை மீண்டும் வணங்குகின்றோம்.

———-

ஸ்ரீ கோதா த்யான ஸ்லோகம்
காருண்ய ரூபை -நிழல் போல்வார் -சாயாம் இவ -இருவரும்
பெருமாள் சீதா -கண்ணன் நீளா தேவி நப்பின்னை -ஸ்ரீ வராஹ பூமா தேவி -ஆண்டாள்
ஆண்டாள் ஆழ்வாரா பிராட்டியா -தானே திருவடி அடைய பாசுரங்கள் -இந்த சங்கை மஹா லஷ்மி இடம் இல்லை
ருக்மிணி சந்தேசமும் உண்டே –
புருஷகார பூதை -தேவ தேவ திவ்ய மஹிஷி-வைகுண்ட மா நாடு இகழ்ந்து நமக்காக அன்றோ அவதாரம்
ஆழ்வார் அவஸ்தை நமக்காகவே -இரண்டு பெருமையும் இவளுக்கே

ஹே கோதே ஸூ பதே ஸமஸ்த ஜனனே -அபீஷ்ட ப்ரதே –ஸூந்தரி
சம்சார ஆர்ணவ ஸூ வ பாத பத்மம் ரசியதி மாம் சர்வம் சாஹி துளசி மூல க்ருத அவதாரே
ஸ்ரீ விஷ்ணு சித்த பால்ய பரிவ்ருதே ஸ்ரீ ரெங்க நாத பிரியே கோதே
யா கோ தேவி யாவாம் ஆஸ்ரித -ஸர்வ மாம் பாஹி சர்வம் சஹா –

இடது திருக்கையில் கிளி
ப்ரஹ்மாதிகள் வணங்கும் -சர்வ பூஷண -வர ரெங்கராஜன் அழகிய மணவாளன்

பாபம் செய்யாதவர்கள் யார் -ஸ்ரீ சீதாப் பிராட்டி -ராம தாசன்-திருவடியை சீதா ராம தாஸனாக –
அப்ரமேயம் -ச ஜனகாத்மஜா -மாரீசன் வார்த்தை
பூமா தேவி -ஆண்டாள் -குற்றம் செய்தவர் உலகில் உண்டா -அருளிச் செய்து நம்மை திருவடிகளில் சேர்த்துக் கொள்கிறாள்

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மதி திருவேங்கடத்தம்மாள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கோதா ஸ்லோகங்கள் —

July 20, 2020

“ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம்
ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருச்யாம் |
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாம் அநந்யசரண: சரணம் ப்ரபத்யே ||” [“கோதாஸ்துதி” _ஸ்லோ.1) வேதாந்த தேசிகர் அருளியது.]

(ஶ்ரீவிஷ்ணுசித்தர் என்னும் வேயர் குலக்கொடியாம், நந்தவனத்தில் வளர்ந்த அழகு மிக்க கற்பகத்தருவினைச் சுற்றிப்
படர்கின்ற பெண்கொடியாகவும், திருவரங்கநாதனான அரிச்சந்தன மரத்தைத் தழுவும் அழகு மிக்க பொறுமையுடன் கூடிய
பூமிப் பிராட்டியாகவும், இனிமையான மற்றுமொரு ஸ்ரீதேவியாகவும் விளங்கும் கோதையை அல்லாமல்,
மற்றொரு தெய்வம் சரணடையாது அவளையே அடைந்தேன்.)

———–

ஏகாரச் செல்வியாகிய ஶ்ரீ கோதை ஆண்டாள் புகழ் பாடும் நூல்கள் கீழ்வருமாறு:
கோதா சதுஸ் ஸ்லோகி – ஶ்ரீஅனந்தாழ்வான்;
கோதா ஸ்துதி – ஶ்ரீவேதாந்த தேசிகர்;
ஶ்ரீகோதா உபமான அஷ்டகம் − ஶ்ரீ வேதப்பிரான் பட்டர்;

கோதை வெண்பா,ஶ்ரீஆண்டாள் அந்தாதி, சூடிக்கொடுத்த நாச்சியார் மாலை (கோதா ஸ்துதி தமிழ்ப்பனுவல்),
ஶ்ரீஆண்டாள் அஞ்சுமணிமாலை – மதுரகவி ஶ்ரீநிவாசஐயங்கார்;

ஆமுக்த மால்யதா (தெலுங்கு) − ஶ்ரீகிருஷ்ணதேவராயர்;
ஶ்ரீநாச்சாரு பரிணயம் (தெலுங்கு) − பாஷ்கர சேஷாசலம்;
ஶ்ரீஆண்டாள் சந்திரகலா மாலை, ஶ்ரீஆண்டாள் பிள்ளைத் தமிழ் – வில்லி;
அபிநவ கோதா ஸ்துதி − காஞ்சீபுரம் மகாவித்வான் பி.ப.அண்ணங்கராச்சார்யர் ஸ்வாமி;

ஶ்ரீஆண்டாள் கும்மி – அழகிய சொக்கநாத பிள்ளை;
கோதை மாலை, திருப்பாவை மாலை – ரெ.திருமலை ஐயங்கார்;
மார்கழி நோன்பு (அ) ஶ்ரீஆண்டாள் திருமணம் – திருமலை நல்லான்;
கோதா வைபவம் – எக்கிராள கிருஷ்ணமாச்சார்யா;
புதுவைச் சிலேடை வெண்பா,ஶ்ரீவில்லிபுத்தூர் தல புராணம் – கூத்திப் பாறை முத்து கிருஷ்ண ராமாநுச தாஸர்;

சூடிக்கொடுத்த நாச்சியார் பிரபந்தம் – வடிவழகிய நம்பி தாஸர்;
கோதா பரிணய சம்பு, ஶ்ரீஆண்டாள் அஷ்டோத்திர சத நாமாவளி – கேசவாச்சாரியார்;

சூடிக்கொடுத்த நாச்சியார் மாலை (கோதா ஸ்துதி தமிழ்ப்பனுவல்), ஶ்ரீஆண்டாள் குறவஞ்சி நாடகம்,
ஶ்ரீவில்லிபுத்தூர் ஸ்தல புராணம், ஶ்ரீவரமங்கை சதகம் – வரகவி அப்புவய்யங்கார்(எ) ஶ்ரீநரசிம்மாச்சாரியர்;

ஶ்ரீகோதா நக்ஷத்ர மாலிகை – சடகோப இராமாநுசர்;
ஶ்ரீஆண்டாள் ஆடி உத்ஸவ நாடகம் − கணபதி ஐயர்;
ஶ்ரீவில்லிபுத்தூர் மான்மியம் − ஶ்ரீஅலங்கார தேவராஜ ஸ்வாமி;
கோதா சுப்ரபாதம், கோதா ஸ்தவம் − கிடாம்பி கோவிந்த ஐயங்கார்;
கோதா பஞ்ச ரத்னம், கோதா அஷ்டகம்,கோதா மதுர ஸ்தோத்திரம்,கோதா கோபால ஸ்தோத்திரம் − திருவேங்கடத்தம்மாள்;

———–

தேடிக் கிடையாத் திரவியத்தைத்
தெவிட்டாத அமுதைத் திருமாலைப்
பாடிப் பரவும் பசுங்கிளியைப்
பவ வெம்பிணி தீர்த்திடும் மருந்தை
ஆடிப்பூரத் தவதரித்த அகில
நிகமாகம விளக்கைச்
சூடிக் கொடுத்த சுடர் கொடியைத்
தொழுது வினைக்கு விடை கொடுப்போம்!” –வரகவி அப்புவைய்யங்கார் என்கிற ஶ்ரீநரசிம்மாச்சாரியார்-

———-

ஆண்டாள் பாட்டு-01 :: அழகெல்லாம் ஆண்டாளின்-ராகம் – புன்னகவராளி-தாளம் – ஆதி

அழகெல்லாம் ஆண்டாளின் அழகாகுமா…அவள்
அசைந்து வரும் நடைக்கு இணையகுமா (அழகெல்லாம்)
அடியார் துயரன்றோ அவள் ஏக்கம்
அதை துடைப்பதன்றொ அவள் நோக்கம் (அழகெல்லாம்)
பால்வடியும் முகத்தைப் பார்க்க பசிதீரும்
பக்கத்தில் மன்னாருடன் பரவசத்தைக் கொடுக்கும்
வேதம் நிறைந்த வில்லிபுத்தூரில்
விஷ்ணுசித்தன் மகளாய் விளையாடி வளர்ந்தவள் (அழகெல்லாம்)
தினமும் ஒரு கோலம் [மார்கழியில்] உள்ளத்தை உருக்கும்
கைதனில் வண்ணக்கிளி வடிவழகைப் பெருக்கும்
அல்லும் பகலும் அவளை நினைந்தால்
அல்லல்கள் யாவும் இல்லையென்றே ஆகும் (அழகெல்லாம்)

————-

ஆண்டாள் பாட்டு-02 :: அனைவரும் கூடி
அனைவரும் கூடி ஆண்டாள் தேவிக்கு மங்களம் பாடி மகிழ்ந்திடுவோம்
மங்கள கோதை ரெங்கமன்னாருடன் அன்பு பொங்கிடும் மங்களமே
பல்லாண்டு பாடி பக்தியினாலே உள்ளமே பரவசமாகாதா
தேவர்கள் புகழ ஆழ்வார் மகிழ ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தாள்
மங்கள தீபங்கள் அலங்காரமாகவே ஜோதிப் பிரகாசமாய் விளங்கிய
சூடிக் கொடுத்த ஆண்டாள் தேவிக்கு ஜெய ஜெய ஆரத்தி எடுப்போமே (அனைவரும்)

—————–

ஆண்டாள் பாட்டு-03 :: பார் பார் பார்–ராகம் – மாண்டு–தாளம் – ஆதி

பார் பார் பார் இந்த ஆண்டாளைப் பார்
பக்கத்தில் மன்னார் கருடனைப்பார்
ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த பெரியாழ்வார் மகளாம் கோதையைப் பார் (பார்)
கையினில் கிளியாம் கருணையின் முகமாம் காதினில் வைரம் ஜொலிப்பதைப் பார்
கோதை முகத்தைப் பார் பூமாதேவியை பார் ஆனந்தமாம் பரமானந்தமாம் (பார்)

ஆடிப்பூரத்தில் உதித்தவளாம் இங்கு அனைவரும் வந்து சேவிக்கலாம்
வடபத்ர சயனரை சேவிப்போமே வாழ்வில் இன்பம் பெறுவோமே (பார்)

—————-

ஆண்டாள் பாட்டு-04 :: மார்கழி மாதம்–ராகம்: அமீர் கல்யாணி

மார்கழி மாதத் திருப்பாவை ஊரெங்கும் மால் மணப் புகழோசை (2)
பாரளந்த மன்னன் ஏற்றமிகு புகழ்பாடி
பாருக்கெல்லாம் தந்த அருள்மாலை (மார்கழி)
பறையென்னும் கைங்கர்யம் பெறுவதற்கு
பண்ணவேண்டும் வழிகள் இன்னதென்று
பெரியோர் வகுத்த முறை கொண்டு கோதை தந்த
பேரின்ப வீடையும் பேற்றினைத் தருமே (மார்கழி)

————

ஆண்டாள் பாட்டு-05 :: ஆண்டாள் கல்யாண
ஆண்டாள் கல்யாண காட்சியைக் காணவே அந்தணர் பலரும் வந்தார்
ஆசையுடன் பல தேசங்கள் வாழ்ந்திடும் அரசரும் பார்க்க வந்தார்
வேங்கடமாமலை வாசனும் வேகமாய் வில்லிபுத்தூரில் வந்தார்
வேதியர் போலே வேஷம் பூண்டார் விரும்பியே மனமுவந்தார்
மாவிருஞ்சோலை வாழ் மாயனும் கேட்டுடன் மையலாய் மனம் தளர்ந்தார்
மாது கோதையை மணம் புரிவேனென்று மகிழ்வுடன் வந்திருந்தார்
திருத்தங்கலப்பனும் கேட்டுடன் கோதை மேல் தீரா மையல் கொண்டார்
தேவி கோதையைக் கல்யாணம் செய்வேனென்று திருவுள்ள்ந்தனில் நினைந்தார்
வாடா மலரை பூவைச் சூடிக் கொடுத்த திருவடபத்திரர் நினைந்தார்
ஆடி பூரத்தில் உதித்தவள் தனக்கென்று ஆசையாய்ப் படுத்திருந்தார்
பகிரங்கமாகவே பணீயரங்கேசனை பாராமலே கோதை
பரபரப்பாகவே தோழியர் கூட்டுடன் பகர்ந்தனளப்போதே

—————-

ஆண்டாள் பாட்டு-06 :: மல்லி வளர்னாடியாய்
மல்லி வளர்னாடியாய் வா வா வா
மலர் துழவில் தோன்றினாய் வா வா வா
பாடக மெல்லடியினாய் வா வா வா
பாதரசத் தாளினாய் வா வா வா
பட்டணிந்த இடையினாய் வா வா வா
மட்ட விழும் குழலினாய் வா வா வா
பக்தி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
முத்து மணி மாலையாய் வா வா வா
குவளை மலர் கண்ணினாய் வா வா வா
தவளை மலர் நகையினாய் வா வா வா
ஒளி படைத்த உடலினாய் வா வா வா
கிளி பிடித்த கையினாய் வா வா வா
கோதை என்னும் பெயரினாய் வா வா வா
கோவிந்தன் உயிரினாய் வா வா வா
வடிவெடுத்து அருளினாய் வா வா வா
அடியார்களை காக்கவே வா வா வா

—————

ஆண்டாள் பாட்டு-07 :: கோதை பிறந்த
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர்
ஜோதி மணிமாடம் தோன்றிடும் ஊர்
நீதியால் நல்ல பக்தர்கள் வாழ்ந்திடும்
வேதக்கோன் நித்தம் வசித்திடும் ஊர்

பாதகம் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்துக்கும் வித்தாகும்
கோதைத் தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாதவரை
வையம் சுமப்பதும் வம்பன்றோ

மென்னடையன்னம் பறந்து விளையாடும் வில்லிபுத்தூரின் மகிமை சொல்ல
பன்னகமாய் பல நாவு படைத்துள்ள அன்னவனாலேயும் ஆகாது

வண்டுகள் பாடும் பொழிலழகும் – நல்ல தொண்டர்கள் வாழும் எழில் மிகவும்
கெண்டைகள் ஓடும் வயலழகும் – அதைக் கண்டு வணங்கித் துதிப்போமடி

மின்னார் தட மதில் சூழ்ந்தழகைச் சொல்லி மேனகையார் பலர் சேர்ந்தழகாய்
பொன்னார் மணிகள் அணிந்த கோதை முன்பு நன்றாக கும்மியடிங்கோடி

——————-

ஆண்டாள் பாட்டு-08 :: மங்களம் கோதையார்க்கும் மன்னார்க்கும்
மங்களம் கோதையார்க்கும் மன்னார்க்கும் மங்களம்
வங்கக்கடல் உலகில் வளரும் திவ்ய ஸ்தலங்களுக்கும் மங்களம்
மலர்யது பூமிகட்கும் வடபத்ரசயனருக்கும் மங்களம்
பாரிஜாத விரஜயர்க்கும் பட்டர்பிரான் மாமுனிக்கும் மங்களம்
ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் ஆத்மகுரு பரம்பரைக்கும் மங்களம்
திருவேங்கட தாசன் சொல்லும் செந்தமிழ் கீர்த்தனங்களுக்கும் மங்களம்

—————

ஆண்டாள் பாட்டு-09 :: லாலி ஆடினாள்
லாலி ஆடினாள் லட்சுமி லாலி ஆடினாள்
ஸ்ரீ ஆண்டாள் இன்று இங்கு லாலி ஆடினாள்
ஸ்ரீரங்கபதியில் ஆதிசேஷனரவணையில்
ரெங்கநாதன் சகிதமாக மந்தகாச வதன்மோடு (லாலி)
வ்ருஷபாத்ரி திருப்பதியில் வேங்கடேசன் சகிதமாக
அபய ஹஸ்த அலங்கார அலமேலு மங்கையாக (லாலி)
ப்ரஹலாதனின் முறையை கேட்டு தூணைப்பிளந்து
காட்சி தந்த நரசிம்ம ரூபனான லட்சுமி நரசிம்மரோடு (லாலி)
காஞ்சி மாநகரிலே கருட வாகனத்திலே
வரதராஜ பெருமாளுடன் பெருந்தேவி தாயாராக (லாலி)
சரயு நதிக் கரையினிலே அயோத்தி மாநகரிலே
ஸ்ரீராம சந்திரனோடு சீதா தேவியாக (லாலி)
திருவிண்னகர திருத்தலத்தில் கல்யாண உற்சவத்தில்
ஒப்பில்லா அப்பனோடு பூமிதேவி தாயார் (லாலி)
திருவள்ளூர் திருத்தலத்தில் வீக்ஷாரண்ய க்ஷேத்தரத்தில்
வீரராகவ பெருமாளுடன் கனகவல்லி தாயாராக (லாலி)
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் திருமகளாய்
சூடிக் கொடுத்த சுடர் கொடியாய் ரங்கமன்னார் சகிதமாக லாலி ஆடினாள்…

—————–

ஆண்டாள் பாட்டு-10 :: வில்லிபுத்தூர் வளர் கோதை
வில்லிபுத்தூர் வளர் கோதை

விஷ்ணுசித்தன் மகள் பாவை (இரண்டு முறை)
துளப திருமண் மீதிலே பூ மகளாய் வந்துதித்தாய் (வில்லி)

மாந்தர்கள் பேதமை நீங்கவே இந்த மாநிலத்தில் வந்துமே
மாதவன் தன்னையே மனதினில் எண்ணியே மணமுடித்தாள் மாதரசி (வில்லி)

மானிடவர்க்கென்று பேசிடில் நானும் மாள்வேன் என்று சொல்லியே
நாரணன் தன்னையே நாடியே பாடியே நற்றமிழ்கோர் ஒப்புமுண்டோ (வில்லி)

கோவிந்தன் தன்னையே நாடியே கோபிமார்கள் யமுனை ஆடியே
பாவனை தன்னையே பாமாலை பாடியே பக்தி செய்தாள் பைங்கிளியே..(வில்லி)

—————

ஆண்டாள் பாட்டு-11 :: கனவிலும் நினைவிலும்–ராகம்: பிலஹரி–தாளம்: ஆதி

பல்லவி
கனவிலும் நினைவிலும் பஜனை செய்ய
கருணை செய்தருள் ஸ்ரீ கோதா தேவியே (கனவிலும்)
அனுபல்லவி
கண்ணணை நினைந்து நோன்பிருந்தாயே (இரண்டு முறை)
சூடிக் கொடுத்தவளே சுடர்க் கொடியே (சேர்த்து இரண்டு முறை) (கனவிலும்)
சரணம்
பெரியாழ்வார் பெற்ற திருமகளே
பெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாயே (சேர்த்து இரண்டு முறை)
வில்லிபுத்தூர் நகரம் செழிக்க வந்தாயே (இரண்டு முறை)
ஒரு நூற்றூ நாற்பத்து மூன்றும் உரைத்தாயே (கனவிலும்)

—————-

ஆண்டாள் பாட்டு-12 :: தேவி நீயே துணை–ராகம்: கீரவாணி–தாளம்: ஆதி
பல்லவி
தேவி நீயே துணை – ஸ்ரீ சுடர்கொடியே
வில்லிபுத்தூர் வாழ் கோத தேவியே (தேவி…)
அனுபல்லவி
தேவாதி தேவன் ஸ்ரீ ரெங்கநாதன்
சித்தம்கவர் புவன சுந்தரி ஸ்ரீ (தேவி…)
சரணம்
பெரியாழ்வாரின் மாதவமே – திருப்பாவை முப்பதும் எமக்குரைத்தாயே
வாரணமாயிரம் பாடிய கோதையே – நல்ல வரமளிக்கும் திவ்ய மங்களச் செல்வியே (தேவி…)

————

ஆண்டாள் பாட்டு-13 :: (கோலாட்டம்) உறியில் வெண்ணெய் திருடி
உறியில் வெண்ணெய் திருடி, உரலோடு கட்டுண்டு
மரமாகி நின்றவர்க்கு முக்த்தியும்/வதமும் கொடுத்து
கோவர்த்தனமதனை, குடையாய் பிடித்த
கோபால கிருஷ்ணனுக்கு ஜெய மங்களம்
நித்ய சுப மங்களம்

பட்டு ரவிக்கையும் பவளதவளமும்
பதிமுத்துமாலையும், மூக்குத்தியும் சார்த்தி
நடனமாய் ஆண்டாள், மார்கழி நீராடி
நளினம் பெருகியே, திருவீதி தன்னில் வாராள் (வருகிறாள்)
மங்களம் மங்களம், மன்னார் கோதை உனக்கு மங்களம் மங்களம்

நாடு நகரிலுள்ள ஜீவன்களை தேடி
பாடி அழகில் திருப்பாவைதனைப் பாடி
ஆடிப்பூரமதனில் வந்து அரங்கர்க்கு மாலை
சூடிக் கொடுத்த தாயே கோதா உனக்கு மங்களம்
நித்ய கல்யாணி ஆண்டாள் உனக்கு மங்களம் மங்களம் மங்களம்

—————–

ஆண்டாள் பாட்டு-14 :: ஆண்டாள் கோதை வந்தாளே
ஆண்டாள் கோதை வந்தாளே அனைவருக்கும் அருள் தந்தாளே
ரெங்கமன்னாரை மணந்தாளே ராஜாங்க கோலம் கொண்டாளே (ஆண்டாள்)
ஸ்ரீவில்லிபுத்தூரில் உதித்தாளே சிறப்புடன் நாளும் வளர்ந்தாளே
பெரியாழ்வாரும் மகிழ்ந்தாரே பல்லாண்டு பாடி துதித்தாரே (ஆண்டாள்)
துளபம் மாலை அணிந்தாளே கண்ணனும் கண்டு மகிழ்ந்தாரே
திவ்ய தரிசனம் கண்டாளே ஜகமெங்கும் ஒளியாய் நின்றாளே (ஆண்டாள்)
அன்பே அமுதே ஆரணங்கே அடியார்க்கிரங்கி அருள்புரிவாய்
துன்பங்கள் அனைத்தும் தீர்ப்பவளே திருவே அருளே பூமகளே (ஆண்டாள்)

——————

ஆண்டாள் பாட்டு-15 :: கோதை நாயகியே–ராகம்: பிலஹரி–தாளம்: ஆதி
பல்லவி
கோதை நாயகியே – அம்மா கோதை நாயகியே
அனுபல்லவி
திருவில்லிபுத்தூர் தனில் பெரியாழ்வார் கண்டெடுத்த
திருமகளே ஸ்ரீ மகாலட்சுமியே (கோதை நாயகியே…)
சரணம்
நீ சூடிய மாலை தன்னை கண்ணனும் சூடிக்கொண்டான் (இரண்டு முறை)
பாடிய பாவைக்கு நாயகனாய் ஆகி நின்றான் – உன்
கனவிலே தோன்றி திருக்கரம் பற்றினான் – கருடாழ்வார்
துணையோடு ரங்கமன்னார் மாலை சூட்ட (கோதை நாயகியே…)

————–

ஆண்டாள் பாட்டு-16 :: பச்சைக் கிளியே
பச்சைக் கிளியே பச்சைக் கிளியே பறந்துமே ஓடி அந்த
பணி அரங்கராஜனை நீ அழைத்துமே வாடி
தென்னரங்கேசனுடைய திருவடி போற்றி
தேவி கோதை அழைத்தாள் என்று திடமுடன் பேசி…(பச்சைக் கிளியே)
தேன் பெருகும் சோலை சூழ்ந்த தென்னரங்கனை…
தேவி கோதை அழைத்தாள் என்று திகழ்ந்து நீ பேசி…(பச்சைக் கிளியே)
வண்டாடும் மாலையணிந்த மாலரங்கனை
வல்லி கோதை அழைத்தாள் என்று வணங்கிட நீ பேசி…(பச்சைக் கிளியே)
பாம்பணை மேல் பள்ளி கொண்ட பணியரங்கனை
பாவை கோதை அழைத்தாள் என்று பணிந்து நீ பேசி…(பச்சைக் கிளியே)

—————

ஆண்டாள் பாட்டு-17 :: ஸ்ரீவில்லிபுத்தூர் விஷேஷம்
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர்
ஜோதி மணிமாடம் தோன்றிடும் ஊர்
நீதியால் நல்ல பக்தர்கள் வாழ்ந்திடும்
வேதக்கோன் நித்தம் வசித்திடும் ஊர்

பாதகம் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்துக்கும் வித்தாகும்
கோதைத்தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாதவரை
வையம் சுமப்பது வம்பன்றோ

மென்னடையன்னம் பறந்து விளையாடும் வில்லிபுத்தூரின் மகிமை சொல்ல
பன்னகமாய் பல நாவு படைத்துள்ள அன்னவனாலேயும் ஆகாது
வண்டுகள் பாடும் பொழிலழகும் நல்ல தொண்டர்கள் வாழும் எழில் மிகவும்
கெண்டைகள் ஓடும் வயலழகும் – அதைக் கண்டு வணங்கித் துதிப்போமடி
மின்னார் தடமதில் சூழ்ந்தழகைச் சொல்லி மேனகையார் பலர் சேர்ந்தழகாய்
பொன்னார் மணிகள் அணிந்த கோதை முன்பு நன்றாக கும்மியடியுங்க்கோடி

—————

ஆண்டாள் பாட்டு-18 :: சுட்டிச்சுழி நெற்றிச்சரம்
சுட்டிச்சுழி நெற்றிச்சரம் ஜடை அலங்காரத்தோடு
அம்மா உந்தன் தரிசனம் காண வேண்டும்
கட்டித் தங்க காசுமாலை கருநீல கல்ஹாரம்
அணிந்தவளே உன்னைக் காண வேண்டும் (சுட்டிச்சுழி)

பச்சை பசுங்கிளியேந்தி சந்திர ப்ரபைதனில்
வரும் பவனியை நானும் காண வேண்டும்
அச்சமெல்லாம் தீர்த்து வைத்து ஆனந்தம்
நல்கிடும் அன்னையே உன்னை நான் காண வேண்டும் (சுட்டிச்சுழி)

நித்தம் மாலை சூடித்தந்து நீலவண்ணக் கரங்களை
அடைந்தவளே உன்னைக் காண வேண்டும்
சித்தம் கவர் பாவை தந்த செங்கமல நாயகி – உன்
சேவை தன்னை நானும் காண வேண்டும் (சுட்டிச்சுழி)

சொல்லிலே வெள்ளமென நல்வாக்கு பெறுகிட
சௌந்தர்ய அன்னை உன்னை காண வேண்டும்
வில்லிபுத்தூர் விளங்கிட வேதங்கள் துலங்கிட
விளங்கிடும் அன்னை உன்னைக் காண வேண்டும் (சுட்டிச்சுழி)

————–

ஆண்டாள் பாட்டு-19 :: கிளி கண்ணி
இன்பமளிப்பவளே எழிலூறும் கோதை வள்ளி
என்னரும் தெய்வமடி – கிளியே எண்ணி துதிப்போமடி
பட்டர்பிரான் பெற்றெடுத்த பாவை அழகுடைய பெண்ணாகி நின்றாளடி – பேதையே
பேசும் நல் தெய்வமடி
ஜோதி மதி முகமும் சொர்ண மணி முடியும்
காதில் அணி துலங்க – சகியே காட்சி அளிப்பாளடி
பூங்குயில் பண்ணிசைக்க புதுவை அணிபுரத்து வேங்கடம் கண்டேனடி – கோதையே
வேண்டியதை தருவாளடி

—————–

ஆண்டாள் பாட்டு-20 :: லக்ஷ்மி கல்யாண
லக்ஷ்மி கல்யாண வைபோகமே
வசுதேவ தவபாலா அசுரர்குல காலா
சசிவதன ருக்மணி சத்யபாமா லோலா… (லக்ஷ்மி)
சாரங்கராஜன் உம்மை சரணமென்று பணிந்து
பார் புகழும் க்ருப சரித்திரம் பாட உமை நினைந்து… (லக்ஷ்மி)
கொப்போடு வாழைமரம் கொண்டு வந்து நிறுத்தி
சோப்புடைய பந்தலில் மேல்கட்டு கட்டி (லக்ஷ்மி)
மேல்கட்டு கட்டியதில் வெடிபூக்கள் சிதற
தெடில் பூக்கள் தொங்கவிட்டு தோரணங்கள் ஆட (லக்ஷ்மி)
தங்கவளை தளதளவென சரிகைபட்டு மின்ன
முன் முகத்தில் சுட்டி மின்ன மூக்குத்திகள் அசைய (லக்ஷ்மி)
முத்து முத்தாய் கோலமிட்டு குத்து விளக்கேற்றி
தவழ்ந்த கிருஷ்ணன் விளையாட, தங்கப்பாய் விரித்து (லக்ஷ்மி)
ராமாயணக் கதையை நாடி நான் கூற
நான்முகனும் சரஸ்வதியும் மகிழ்ந்து வரம் தார (லக்ஷ்மி)

—————-

ஆண்டாள் பாட்டு-21 :: வரம் தருவாய் ஸ்ரீ வர மங்கையே–ராகம்: கல்யாணி–தாளம்: ஆதி

பல்லவி

வரம் தருவாய் ஸ்ரீவரமங்கையே
என் வாழ்வெல்லாம் உன்னையே வாழ்த்தி வணங்கிடவே (வரம்)

அனுபல்லவி

மறந்தும் நான் தீவினை கறைபடாதிருக்கவும்
(உன்) மலர்பதம் தொழுதே
மகிழ்ச்சியில் திளைக்கவும் (வரம்)

சரணம்

திருமலையில் நீ அலர்மேல் மங்கையாக
திருத்தங்காலில் நீ செங்கமலத்தாயாராக (இரண்டு வரிகளும் இரண்டு முறை)
திருவில்லிபுத்தூரில் நீ ஆண்டாளக
திருவரங்கத்தில் நீ ரெங்க நாயகியாக (வரம்)

———-

ஆண்டாள் பாட்டு-22 :: ரங்கமன்னார் கிருபை வேண்டும்
ரங்கமன்னார் கிருபை வேண்டும்… அவன் திருவருள் பெற வேண்டும்
வேறென்ன வேண்டும்… (ரங்கமன்னார்…)

அவலப் பிறப்பொழிய வேண்டும் – அதற்கு வித்தம்? அவமாயை? அகல வேண்டும்
வேறென்ன வேண்டும்… (ரங்கமன்னார்…)
தொல்லுககில் நரரும் எல்லா உயிரும் சுகவாழ்வு வாழ வேண்டும்
வேறென்ன வேண்டும்… (ரங்கமன்னார்…)

காமம் முதல் பகையும் குரங்கு மனமும் செத்து?
உலகிலெல்லோரும் உய்ய வேண்டும் வேறென்ன வேண்டும்… (ரங்கமன்னார்…)

———–

ஆண்டாள் பாட்டு-23 :: ஆண்டாள் சரித்திரம்-ராகம்: ஆரபி

சூடிக் கொடுத்த எங்கள் சுடர் கொடி திருமண சோபன வைபவம் காண்போம் – அவள்
பாடிக் கொடுத்த திருப்பாவை தனையும் அந்த பரமன் திருவடிகள் பாடுவோம்.. (இரண்டு முறை…இரண்டாவது முறை மெதுவாக)

ராகம்: குந்தலவராளி

நீலத்திருமேனியன் நெடுமாலை அடைந்திட நிலமடந்தை உள்ளம் கொண்டாள்
சீலத்திலே சிறந்த ஸ்ரீவிஷ்ணுசித்தரின்
செல்வ திருமகளாய் வந்தாள்..அ..ஆ (இரண்டு முறை…இரண்டாவது முறை மெதுவாக)

ராகம்: ஆனந்த பைரவி

ஸ்ரீவில்லிபுத்தூரில்…வடபத்ரஸயனனின் சேவகராம் பெரியாழ்வார்…
கோவில் அருகிலிலே துளஸிவனம் தனிலே
குழந்தை என அவளை கண்டார் (இரண்டு முறை…இரண்டாவது முறை மெதுவாக)

ராகம்: ஸாமா

சீதையை கண்டெடுத்த ஜனகனை போலவே சிந்தையிலே நிறைவு கொண்டார்
கோதை என பெயர் சூட்டியே அவளையும் கொள்ளை யன்புடன் வளர்த்து வந்தார் (இரண்டு முறை)

ஹம்ஸாநந்தி

பாமாலை கொடுத்தவள்..பரிமளரங்கனை பாடி பரவசமடைந்தாள்
பூமாலைகள் சூட்டு பூகணனங்கள்? போற்றி வழிபடவும் செய்தாள் (இரண்டு முறை)

ராகம்: ரஞ்சனி

தந்தை தொடுக்கும் மலர் மாலைகள் அனைத்தையும்
தான் முதலில் சூடிக் கொண்டாள்
அந்த மாலைகளை ஆலயத்திறைவனாம்
அரங்கனுக்கே அர்ப்பணம் செய்தாள் (இரண்டு முறை)

பாகேஸ்வரி

ஓங்கி உலகளந்த உத்தமனை பாடி
உள்ளன்புடன் வழிபட்டாள்
“வேங்கடவற்கென்னை விதி” என்ன இறைவனை
வேண்டியவள் துதி செய்தாள் (இரண்டு முறை)

ராகம்: ஸிந்து பைரவி

சங்கத்தமிழ் மாலை முப்பதும் தப்பாமல்
சாற்றியவண் புகழ்பாடி, வங்கக் கடல் கடைந்த வேங்கட நாதனை
வாய் மணக்க துதி செய்தாள் (இரண்டு முறை)

ராகம்: ஸாரங்கா

அனவரதமும் அந்த அரங்கனை அன்பினாலே அவனை ஆண்டாள்
கனவிலும் நினைவிலும் காவேரி ரங்கனே கணவன் என உறுதி கொண்டாள் (இரண்டு முறை)

ராகம்: காபி

ஆயனும் தனக்காக அவதரித்த கோதையின் அன்பினுக்கே அடிமை ஆனார்
நேயமுடன் அவளை நேரில் வதுவை கொள்ள நீலமாலவன் உள்ளம் கொண்டார் (இரண்டு முறை)

ராகம்: கல்யாண வஸந்தம்

வாரணங்கள் சூழி வரிசங்கம் முழங்க வாஸுதேவன் அவனும் வந்தான்
தோரண பந்தலில் தோழியருடன் கூட்க் தோகை மயில் அவளும் வந்தாள்

ராகம்: ரேவதி

மறையவர்கள் ஓத மற்றையோர் மகிழ்ந்து மங்கள மடந்தையர் பாடிட…ஆ
குறையொன்றுமில்லாத கோவிந்த ரங்கனும் கோதையின் கைத்தலம் கொண்டான் (இரண்டு முறை, இரண்டாவது முறை உயர்த்தி)

ராகம்: மத்யமாவதி

தேவரும் முனிவரும் திருமண வைபவம் தரிசனம் செய்து மகிழ்ந்தார்
பாவை நோன்பிருந்து பூமிதேவி ரங்கனை பதியென அடைந்து மகிழ்தாள்…அ..ஆ (இரண்டு முறை(

உடனே…

திருவாடிப் பூரத்து ஜகத்துதிதாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளாய் வாழியே
பெரும்புதூர் மாமனுக்கு பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயிரரங்கற்கே கன்னியுகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடு வாழியே
வண் புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே..

—————-

ஆண்டாள் பாட்டு-24 :: ஆண்டாள் பாத சரம்
ஆண்டாள் பாத சரம் விலை மதிக்க பரமனால் முடியாது
அதைப் பணித்திடப்பவுன் ஏது?
பாருலகில் அதன் பெருமை பகர்வார் இப்போது
திருக்கை வளையல் அழகு செய்ய முடியாது
இந்த ஜெகத்தினிலேயது
அருள் கொடுக்கும் ஹஸ்தமது ஜொலிக்கும் சேவிக்கும் போது
கூந்தல் அழகைச் சொல்ல குவலயத்தில் முடியாது
அதைக் குறிப்பிடப்படாது
பின்னல் சடை வண்ணம் போலே பூலோகத்தினில் ஏது?

ஆண்டாளருளிச் செய்த திருமொழியைக் கேளும்
அந்தத் திருப்பாவையை நாளும் பாடிப் பறை கொள்வதற்கும் பாருலகில் எல்லோரும்
அந்தணர்கள் வேதியர்கள் அரம்பையர்கள் சூழ இந்த அகிலமெல்லாம் வாழ
ஆண்டாள் நீராடினாளே அடியார்கள் சூழ

நீராடும் நாள் முதலாய் முக்காலம் உனைத்தேடி முக்காலம் உன் பதம் பாடி
உன் முன்னழகை பார்த்தோம் அம்மா முச்சந்தினில் கூடி முப்பத்து முக்கோடி தேவரெல்லாம் கூடி
ஆண்டாள் சன்னதியை நாடி சேவிக்கக் காத்திருக்கிறார் சேதனர்கள் கோடி
வானுலகத் தேவரெல்லாம் வாசலில் காத்திருக்க ஆண்டாள் – கருணையுள்ளம் பெருக்க
சேவை காட்ட வேண்டுமென்று சிந்தை அதிகரிக்க
கண்ணன் போலும் ராமன் போலும் கள்ளழகர் போலும்
ஆண்டாள் – வடபத்திரர் போலும் வந்து சேவை காட்டினாலே வானுலகர் எல்லோர்க்கும்

———–

ஆண்டாள் பாட்டு-25 :: கோதாய் உனக்கு மங்களம்
கோதாய் உனக்கு மங்களம்
நித்ய கல்யாணி ஆண்டாள் உனக்கு மங்களம்
கோதாய் உனக்கு மங்களம்
நித்ய கல்யாணி ஆண்டாள் உனக்கு மங்களம்
நாடி நரையிலுள்ள ஜீவன்களைத் தேடி(இரண்டு முறை)
கோதாய் உனக்கு மங்களம்
நித்ய கல்யாணி ஆண்டாள் உனக்கு மங்களம்
பாடிய அழகியதோர் திருப்பாவை தனைப்பாடி
கோதாய் உனக்கு மங்களம்
நித்ய கல்யாணி ஆண்டாள் உனக்கு மங்களம்

ஆடி உத்ஸவத்தில் கார்த்திகை கொடியற
தம்பதி இருவரும் பதினார் வண்டி ரதம்தனில் வர
கோதாய் உனக்கு மங்களம்
நித்ய கல்யாணி ஆண்டாள் உனக்கு மங்களம்
ஆடிப்பூரம் தனிலே வந்தரங்கர்க்கு மாலை
சூடிக் கொடுத்த தாயே சொன்னேன் உன் புகழை

கோதாய் உனக்கு மங்களம்
நித்ய கல்யாணி ஆண்டாள் உனக்கு மங்களம்
ஆழ்வார் குமரி? நாச்சியார் உனக்கு மங்களம்
கோதாய் உனக்கு மங்களம்
நித்ய கல்யாணி ஆண்டாள் உனக்கு மங்களம்

—————–

ஆண்டாள் பாட்டு-26 :: கோதாதேவியே! அநந்த கல்யாண
ராகம்: கல்யாணி
பல்லவி
கோதாதேவியே! அநந்த கல்யாண குணநிதியே அருளமுதவாநிதியே
மத்யமகாலம்
கோதிலா உன் திருவாக்கில் ப்ரவாஹம்
கலைவாணி எனவரும் கவிதா ரஸம் தந்த (கோதாதேவியே)
அநுபல்லவி
சேதநர் உய்ந்திடவே ஜகந்தனில் அவதரித்த
தேனமுதத் திருமொழி தீந்தமிழ்ச் சுவைதந்த (கோதாதேவியே)
சரணம்
சோபிதமாம் உனது சிவந்த அதராம்ருதம்
சோனை எனும் நதி தாண்டிவா?
தேவி! உன் அங்க சௌந்தர்ய குசதடமோ?
துங்கபத்ரை எனும் நதி தடமோ?

மத்யகோலம்

அப்ராக்ருதாநந்த விரஜை நதியோ – உன் அருளிச்செயல் (தந்த) கற்கண்டிதுவோ?
இப்புவியிற் தானும் ஸுபநர்மசைவியனும் அத்புத வெள்ளமது அச்சுத ——- அதுவோ? (கோதாதேவியே)

————–

ஆண்டாள் பாட்டு-27 :: வெள்ளிக் கிழமையில் ஆண்டாள் வைபோகம்
ராகம்: ஆனந்த பைரவி
பல்லவி
வெள்ளிக் கிழமையில் ஆண்டாள் வைபோகம்
வேடிக்கை என்ன சொல்வேன் (இரண்டு முறை)
அனுபல்லவி
திருவாடிப்பூரத்திலே திருத்துழாய் வனத்திலே – ஸ்ரீ விஷ்ணுசித்த்ர் குலத்திலே
வில்லிபுத்தூர் ஸ்தலத்திலே…. (வெள்ளி..)
சரணம்
தங்க குறட்டிலே ரெங்கமன்னாருடன்
பெண்கள் இருபுறமும் மங்களம் பாட
எங்குமுள்ள அடியார்கள் இன்புற்றிருக்கவே
இங்கு வந்தவதரித்த கோதை நாயகியே

————–

ஆண்டாள் பாட்டு-28 :: கோதா! உன் மஹிமை
ராகம்: அடானா
தாளம்: ஆதி
பல்லவி
கோதா! உன் மஹிமை பேசவும் தரமா ரங்க நாதப்ரியே ! தேவி ! க்ருபாநிதியே
அனுபல்லவி
மாதா, உன் திருமொழியாம் ப்ரேம பக்தியினால்
மாதவன் கண்ணனையே காதற்கவி பாடும்

மத்யம காலம்
மதுரவசனாம்ருத கானரஸம் தந்த
மங்கையே! ஜகம் உய்ய அவதரித்த (கோதா!)
சரணம்
ஆயகலை அறிந்துணர்ந்த உன் தாதை நல்லாழ்வார்கள்
நாயகனை நினைத்துருகும் நாயகி பாவம் கொண்டார்
ஆராய்ந்துணரவும் முடியுமோ! ஆணினம் ஆனதாலே
நாயகியே நீயுணர்ந்த ப்ரேம ரஸம்

மத்யம காலம்
பக்தி பெருகும் ஸார பேரின்ப காதற் பாவனை ப்ரணய ஊடற் கூடலும்
யுக்தியாய் மடலூறும் தன்மையும்
பாவையே! நீ அறிந்த ப்ரேம ரஸாநுபவம் (கோதா!)

————

ஆண்டாள் பாட்டு-29 :: அன்னை கோதாதேவி அருள் பெற்ற வெங்கட குரு
அன்னை கோதா தேவி அருள் பெற்ற வெங்கட குரு
அருளின கோதாஸ்துதி வைபவமதனை
பன்னிசை பாடிய பரமானந்தம் பெருகும்
பாரினில் புகழ் ஓங்கும் பவபிணி நீங்கும்
தென்னரங்கேசரும், தேவி ரெங்கநாயகியும்
திருவுள்ளம் உகந்து தரும் திருவருள் பெருகும்
இன்னல் அகன்றிடும் அரங்கன் இணையடி பணிந்திட
இகபரசுகமே… எங்கும் நிறை சுப மங்களமே..
மங்களம், மங்களம், மங்களம்…
மன்னார் கோதைக்கு மங்களம் மங்களம்….

————-

ஸ்ரீ கோதா கோபால ஸ்தோத்ரம் –ஸ்ரீ மதி திருவேங்கடம் அம்மாள்

யது வம்ச ஸமுத்பூதம் த்விஜ வம்ச
வஸூ தேவ ச ஸத்புத்ரம் விஷ்ணுசித்தர் ச புத்ரீ
தேவகி கர்ப்ப ஸம்பூதம் துளஸீ கர்ப்ப ஸம்பூதம் காண உத்பவம்
யதுநாம் குலதீபம் பட்டார்ய குல தீபிகாம்
கார்க்காச்சார்யா விஷ்ணு சித்த மதம் அவரோ ரிஷி இவர் ஆழ்வார் வாழ் முதல் வளர் முதல் மகிழ் முதல் எல்லாம் கண்ணன்
நீல ஜீமுத இந்திர நீல மணிப்ரபாம் இவள் யுவா குமார ரூபஞ்ச யுவதிசய குமாரிணி
மஞ்சு மஞ்சீரா பாதாம் நூபுரம் ஸ்நிக்த பீதாம்பரம் ரத்னா சிகப்பு வஸ்திரம்
சிங்க நடை அன்ன நடை
ஹரிசந்தன குங்குமப்பூ
மணிரத்ன விபூஷணம் திவ்ய மங்கல்ய பூஷணம்
யாஷிடி சாட்டை இவள் கிளி கையில்
சந்த்ர சூர்யா முகாம்புஜாம் சந்த்ர இவ
இந்தீவர கரு விழியாள் -அவனுக்கு செங்கண் சினந்து
கிரீடம் -பின்னல் இவளுக்கு
த்ரிபங்கி லலிதா இருவருக்கும்
சர்வ லோக விதாதா -அவனையும் சேர்ந்து தாங்குபவள் இவள் விஸ்வம் பரா இவள்
சரணாகத கோப்தா அவன் -வத்சலாம் இவள்
திவ்ய ஸிம்ஹாஸனம் ஆரூடம் திவ்ய அலங்கார சோபினாம் அன்யோன்ய காஷினாம்
த்ரைலோக்ய திவ்விய தம்பதி அன்யோன்யா சத்ருசம்
ஏகாசனம் அடியேனுடன் அருளி -திருவடி பண்ணாங்க மூவரையும் வணங்கி
வழு விலா அடிமை செய்ய நாமும் பிரார்த்தனை செய்வோம்

————-

ஸ்ரீ கோதா பஞ்ச ரத்னம் ஸ்ரீ
கமலாதாய நயனாம் -நத கரணாம்-வைகுந்தம் என்னும் தோனி
சசி வதனாம் மம சரணாம்
பய ஹரணாம்
வர பூஸூர தனயாம் -நிலத்தேவர் விஷ்ணு சித்தர் திருமகள்
நூதன நகரம் பஜ
நானே தான் ஆயிடுக -சேஷ பூதர் ஹ்ருதய தாமரை

இரண்டாம் ரத்னம் யதி சேகர ஸஹஜாம் சகோதரி
பர உபகார தூய்மை
ப்ரஹ்மாதிகள் தொழும் -பர்ஜன்ய தேவதைக்கு ஆணை ஆழி மழை பாசுரம்
கிளியையும் வணங்கி கோதாவையும் வணங்குவோம்

ரெங்க மன்னர் -ஸூ மணி நீல -கருணை ரசம் பொங்கும்
கண்கள் கடாக்ஷம் இது என்ன மாய மயக்குகள்
ஜன போஷணம்

சரணாகத ஜன ரக்ஷணம்
பிருந்தாவனம் -அயோத்யை இருக்க ஆசைப்படுகிறீர்
யமுனைக்கரையில் ஆசை
அநு காரம்
கழலாத வளைகள்
பந்தார்விரலி -சீரார் வளை
நீங்காத செல்வம் நிறைய

அத்புத சரிதாம் -கேசவ நம்பியைக் கால் பிடித்து

———-

திருப்பாவையில்
மார்கழி ( 3 முறை ), திங்கள் ( 4 முறை )
பறை (11 முறை ) நீராட்டம் (6 முறை )
திருவடி (6 முறை), பாடி (18 முறை )
நாராயணன் (3 முறை ),ஓங்கி உலகளந்த (3 முறை), கோவிந்தன் (3 முறை),
கேசவன் (2 முறை ), மாதவன் (2 முறை ),
மாயன் (2 முறை ), மணிவண்ணன் ( 2 முறை ),
நப்பின்னை (4 முறை ) ,நந்தகோபன் (5 முறை ),
யசோதை (2 முறை ),செல்வம் (7 முறை ),
ஆராய்ந்து (2 முறை), செங்கண் (3 முறை),
புள் (4 முறை ), முலை ( 4 முறை),
மாரி ( 2 முறை), மழை ( 2 முறை),
பால் (6 முறை ), கோயில் ( 4 முறை),
விளக்கு ( 5 முறை ), தாமரை ( 3 முறை ),
மலர் ( 3 முறை ), தூயோமாய் (3 முறை),
கண்ணி ( 3 முறை ), கறவை (3 முறை ),
போற்றி ( 7 முறை ), பிள்ளாய் ( 2 முறை ),
பிள்ளை ( 3 முறை ), எழுந்திராய் (19 முறை), எம்பாவாய் (30 முறை ) பிரயோகங்கள் செய்யப்பட்டுள்ளன.
திருமாலின் இடக்கைச் சங்கு ( 5 முறை ),
திருமாலின் திருக்கண் ( 4 முறை ),
திருமாலின் திருவாய்
( 3 முறை ), திருமாலின் திருவடி
( 3 முறை ), திருமால் அவதரித்த ஆயர்குலம் ( 5 முறை ) பிரயோகங்கள் செய்யப்பட்டுள்ளன.

செந்தமிழுக்கே உரிய சிறப்பு எழுத்தாக அமைவது “ழ”கரமாகும்.
இந்த ழ கரத்தை தனது திருப்பாவை மூன்றாம் பாசுரமான “ஆழி மழைக் கண்ணா” எனும்
ஒரே பாசுரத்தில் 11முறை பயன்படுத்தியுள்ள பான்மை “பாடவல்ல நாச்சியார்” ஶ்ரீகோதை ஆண்டாளுக்கே பொருந்தும்.

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.