ஸ்ரீ திருப்பாவை–மார்கழித் திங்கள்- -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

ஸ்ரீ திருப்பாவை தனியன்கள்

ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்தது

நீளா துங்க3 ஸ்தந கி3ரி தடீ1 ஸுப்தம் உத்3போ3த்யத்4ய க்ருஷ்ணம்
பாரார்த்ய2ம் ஸ்வம் ஶ்ருதி ஶத ஶிரஸ் ஸித்3த4ம் அத்4யாபயந்தீ |
ஸ்வோச்சிஶ்ட்டாயாம் ஸ்ரஜி நிக3ளிதம் யா ப3லாத் க்ருத்ய பு4ங்க்தே
கோ3தா3 தஸ்யை நம இத3ம் இத3ம் பூ3ய ஏவாஸ்து பூ4ய: ||

ஸ்ரீ உய்யக்கொண்டார் அருளிச் செய்தவை

அன்னவயல் புதுவை ஆண்டாள் * அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் * – இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை * பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே! * தொல்பாவை
பாடி அருள வல்ல பல்வளையாய்! * – நாடி நீ
வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம் *
நாம் கடவா வண்ணமே நல்கு

———-

ஆயர் சிறுமிகள் “நாம் நோன்பு நோற்பதற்கீடாக நமக்கு இங்ஙனே விலக்ஷணமானதொரு காலம் நேர்பட்டபடி என் !”
என்று காலத்தைக் கொண்டாடி மார்கழி நீராட்டத்தில் விருப்பமுடைய பெண்களை விளிக்குமாறு கூறுவது, இப்பாட்டு.

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

பதவுரை

சீர் மல்கும்–செல்வம் நிறைந்துள்ள
ஆய்ப்பாடி–திருவாய்ப்பாடியில்
செல்வம் சிறுமீர்காள்–கைங்கர்ய ஸம்பத்தையும் இளம் பருவத்தையுமுடைய பெண்காள் !
நேர் இழையீர்–விலக்ஷணமான பூஷணங்களை அணிந்துள்ளவர்களே !
மார்கழி திங்கள்–(மாதங்களிற் சிறந்த) மார்கழி மாஸமும்
மதி நிறைந்த நல் நாள்–பூர்ண சந்திரோதயத்தை யுடைய (சுக்கில பக்ஷத்திய) நல்ல நாளும் (நமக்கு வாய்த்திரா நின்றன.)
கூர் வேல்–கூர்மை பொருந்திய வேலாயுதத்தை யுடையவனும்
கொடு தொழிலன்–(கண்ண பிரானுக்குத் தீங்கு செய்யவரும் க்ஷுத்ர ஜந்துக்கள் பக்கலிலுஞ் சீறிக் கொடுமைத் தொழிலைப் புரியுமவனுமான
நந்தகோபன்–நந்தகோபனுக்கு
குமரன்–பிள்ளையாய்ப் பிறந்தவனும்,
ஏர் ஆர்ந்த கண்ணி–அழகு நிறைந்த கண்களை யுடையளான
அசோதை-யசோதைப் பிராட்டிக்கு
இள சிங்கம்–சிங்கக் குட்டி போலிருப்பவனும்,
கார் மேனி–காளமேகத்தோடொத்த திருமேனியையும்
செம் கண்–செந்தாமரைப் பூப்போன்ற திருக் கண்களையும்
கதிர் மதியம் போல் முகத்தான்–ஸூர்யனையும் சந்திரனையும் போன்ற திரு முகத்தையுமுடையனுமான
நாராயணணே–ஸ்ரீமந் நாராயணன் தானே
நமக்கே-(‘அவனால் பேறு’ என்றிருக்கிற) நமக்கே
பறை–பறையை
தருவான்–கொடுக்குமவனாயிற் நின்றான்,
ஆல்–ஆதலால்,
பாரோர்-இவ் வுலகத்தவர்கள்
புகழ-கொண்டாடும்படி
படிந்து–(இந் நோன்பிலே)ஊன்றி
நீர் ஆட போதுவீர்–நீராட வர விருப்பமுடையீர்களே !
போதுமின்–வாருங்கள்
ஏல் ஓர் எம்பாவாய் !.-

நெடுநாள் சிறையிற் கிடந்தவன், அதினின்றும்; விடுபட்டுச் சுற்றத்தாருடனே கூடப் பெற்ற நாளில்
“கீழ்க் கழிந்த நாள்களைப் போலனறியே இற்றை நாளின் வைலக்ஷண்யமிருந்தவாறு எனக்கொல்!” என்று
அந் நாளை முந்துறக் கொண்டடுவது போல்,
நெடு நாளாக நிலவறைகளில் அடைபட்டுக் கண்ண பிரானோட்டைக் கருவியை இழந்து கிடந்த
இவ்வாயர் சிறுமியரும் தாங்கள் க்ருஷ்ணனோடு ஸம்ச்லேஷிக்குமாறு வாய்த்த நாளென்று
அந் நாளை முதலடியிற் கொண்டாடுகின்றனர்.

பகவத் கீதையிற் கண்ணபிரான் “மாஸங்களனைத்தினுள்ளும் மார்கழி மாதமாகிறேன் நான்” என்று
இம்மாதத்திற்குள்ள வீறுபாடு தோற்ற அருளிச் செய்தமையால் அம்மாதம் வாய்க்கப் பெற்றவர்கள்
அதனைக் கொண்டாடாதிருக்க வல்லரல்லரே.
இராம பிரானை முடிசூட்டப் பாரித்து முயன்ற போழ்து வஸந்தருதுவில் முதன்மையான மாதம் தன்னடையே நேர்பட,
அதனை அங்குக் கொண்டாடினாற் போல், இவர்களும் நோன்பு நோற்க முயலத் தன்னடையே வாய்த்த
மார்கழி மாதத்தை நினைந்து நெஞ்சு கனிகின்றனர்.
இடைத் தலைவர்கள் குளிர்க்கு அஞ்சிப் புறப்படமாட்டாத மாதமுமாதலால் கொண்டாட்டத்திற்குக் குறையில்லையே.

நற்காரியங்கள் செய்ய விரும்பினார்க்குச் சாஸ்திரங்களில் விதிக்கபட்ட சுக்ல பக்ஷமும் இவர்கட்கு நினைவின்றி வாய்த்தபடியால்,
அதனையுங் கொண்டாடுகின்றனர் மதி நிறைந்த நன்னாள் என்று.
ஒருவரை ஒருவர் முகங்கண்டு அநுபவித்தற்கும், எல்லாருங் கூடிச் சென்று கண்ணபிரானை உணர்த்துவதற்கும்
பாங்காக நிலா நேர்பட்டமையால் மகிழ்ச்சி மிக்கது.
இவர்கள் கண்ணபிரானோடு ஸம்ச்லேஷிப்பதற்கு ஊரார் விரோதிகளயிருக்குங் காலத்தில்
“நந்தகோபாலன் கடைத்தலைக்கே நள்ளிருட்கண் என்னை யுய்த்திடுமின்” என்று நள்ளிருளை வேண்டுவர்கள்;
இப்போது அங்ஙனன்றி க்ருஷ்ண ஸம்ச்லேஷத்திற்கு ஊராரே இசைந்து நின்றமையால்
இருளை வெறுத்து நிலவைக் கொண்டாடுகின்றனரென்க.
கீழ்க்கழிந்த நாட்களெல்லாம் தீயவையென்று தோன்றும், இப்போது நன்னாள் என்றமையால்.

நெடு நாளாகக் கண்ணபிரானைப் பிரிந்திருந்தமையாற் பிறந்த தாபமடங்கலுந்தீருமாறு நீராட விருப்பமுடையீர்!
வாருங்கள் என்று அழைப்பது, இரண்டாமடி.
இங்கு, நீராட எனக் கூறியது, “கண்ணபிரானோடு கலவிசெய்ய” எனக் கூறியவாறு;
தமிழர், கலவியைச் “சுனையாடல்” “புனலாடல்” என்னுமாற்றற் கூறுவர்.

“பெற்றேன் வாய்ச்சொல் இறையும் பேசக்கேளாள் பேர்பாடித் தண் குடந்தை நகரும் பாடிப்,
பொற்றாமறைக் காயம் நீராடப் போனாள் பொருவற்றா ளென்மகள் உம் பொன்னு மஃதே” என்ற
திருமங்கையாழ்வார் பாசுரமும் காண்க.

ஒருவர்க்கொருவர் தோழிகளாயிராநின்ற இவர்கள் “குளிக்க வாருங்கள்” என்று அழைக்கலாமியிருக்க,
“நீராடப் போதுவீர்” என்று கௌரவந்தோற்றக் கூவினமையால்,
பகவத் ஸம்பந்த முள்ளவர்கள் எவராயிருப்பினும் கௌரவிக்கப்பட வேண்டியவரேயென்று கூறப்பட்டதாயிற்று.
“கள்ளவழ்; சோலைக் கணபுரம் கைதொழும், பிள்ளையைப் பிள்ளை யென்றெண்ணப் பெறுவரே” என்றார் திருமங்கை யாழ்வாரும்.

அற்பபலமாகிய சுவர்க்காநுபவத்திற்கு உறுப்பாகக் கூச்மாண்டகண ஹோமம் முதலிய அரிய கருமங்கள் செய்ய வேண்டும்;
மீட்சியின்றி வைகுந்தமாநகர் புகுவதற்கீடான பகவத் ஸங்கத்திற்கு அபேக்ஷை மாத்திரமே போதும்;
வேறு ஒருவகை யதிகாரமும் வேண்டா என்பது, “போதுவீர் ! போதுமினோ” என்ற சொற்போக்காற் போதரும்,
பெறுகிற பேற்றிற்கு ஸத்ருசமான ஸாதநமில்லாமையால் ‘இச்சை மாத்திரமே போரும்’ என்கிறதென்க.
எலுமிச்சம் பழங்கொண்டு மன்னனைக் கண்டு ராஜ்யம் பெற்றார்க்கு அந்தப் பழம் ஸாதநகோடியிற் புகமாட்டாதவாறு போல,
இவ்விச்சையும் ஸாதநமாக வகையில்லை என்பதுமிங்கு உணரத்தக்கது.
போதுவீர் போதுமினோ – ‘வருகிறவர்களெல்லாரும் வரலாம்’ என்பது போல.

‘கண்ணபிரான் நம்மை எப்போது அணைத்துக்கொள்ள வருவனோ’ என்று ஆய்ச்சிகளனைவரும்
என்றுமொக்க ஆபரணம் பூண்டிருத்தலால், “நேரிழையீர்” என விளிக்கப்பட்டனர்.
‘எம்பெருமானோடு ஸம்ச்லேக்ஷிக்க வாருங்கள்’ என்று இவர்கள் விளித்தவுடனே உவப்பினால்
அவர்களது மேனி ஆபரணம் பூண்டாற் போலாயிற்றென்பது உள்ளுறை.

ஏற்கனவே பால் நெய் முதலியவற்றாற் சீர்மை பொருந்திய திருவாய்ப்பாடியில்
திருநாட்டுத் தலைவனான கண்ணபிரான் வந்து பிறந்தமையால், “சீர்மல்குமாய்ப் பாடி” எனப்பட்டது.
பரத்துவம் மாத்திரம் பொலிய நிற்கும் பரமபதம் போலன்றி, ஸௌசீல்ய ஸௌலப்யாதி ஸகல குணங்களும்
சால விளங்குமிடமிது வாதலால் சீர் மல்கச் சொல்ல வேண்டாவே.

எம்பெருமானிடத்து அன்புடைமைக்கு மேற்பட்ட செல்வம் ஆத்துமாவுக்கு இலதாதலாலும்,
தண்டகாரணிய வாசிகளான முனிவர் இராமபிரானது ஸௌந்தர்யாதி சயத்தில் ஈடுபட்டு அன்பு மிகுதியாற்
பெண்மை விரும்பி மற்றொரு பிறப்பில் ஆயர் மங்கையராய்க் கண்ணணைக் கூடினரென்பவாதலாலும்
“செல்வச் சிறுமீர்காள்” என விளிக்கப்பட்டதென்க.

எறும்பு முதலிய சிற்றுயிர்களின் சாவுக்கு அஞ்சிப் பசும்புல்லிற் காலை ஊன்ற வைத்து நடந்தறியாத நந்தகோபன்
கண்ணனை மகனாகப் பெற்றபின்பு அவனிடத்துப் பரிவு மிகுதியால் தொட்டிற்கீழ் ஓர் சிற்றெறும்பு ஊர்ந்தாலும்
அதனைக் கொல்வதென்று எப்போதுங் கூரிய வேலுங்கையுமாயிருந்தமை பற்றிக்
“கூர்வேற் கொடுந்தொழில” னாகக் கூறப்பட்டனன்.

உலகிற் சிறுவர்கள் தந்தையர் பால் அஞ்சி நிற்பதும், தாய் மார்பால் அடங்காதொழிவதுமாயிருத்தல் போலக்
கண்ணபிரானும் நந்தகோபனுக்குக் கோற்கீழ் கன்றாகவும், யசோதைப் பிராட்டிக்குச் சிங்கக் குருகாகவும்
இருந்தமை பற்றி “நந்தகோபன் குமரன்,” “அசோதை யிளஞ்சிங்கம்” எனப்பட்டது.
செருக்கிலும் மேனாணிப்பிலும் கண்ணனுக்குச் சிங்கம் உவமையா மென்க,

“அழுகையுமஞ்சி நோக்குமந் நோக்குமணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்,
தொழுகையுமிவை கண்டவசோதை தொல்லையின்பத்திறுதி கண்டாளே” என்றபடி –
கண்ணனது திவ்விய சேஷ்டிதங்களைக் கண்ட களிப்பின் மிகுதியால் யசோதைக்குக் கண்கள் அலர்ந்து
அழகு மிக்குத் தோற்றுமாறு பற்றி “ஏரார்ந்த கண்ணி” என அவட்கு அடைமொழி கொடுக்கப்பட்டது.

கண்ணபிரானது திருமேனியைக் காண்டலுமே கார் முகிலைக் கண்டாற்போல்
ஸகல தாபங்களும் தீர்வது பற்றிக் “கார்மேனி” எனப்பட்டது.
“ஆற்றிலிருந்து விளையாடுவோங்களைச், சேற்றாலெறிந்து வளைதுகிற் கைக்கொண்டு,
காற்றிற் கடியனாயோடிய கம்புக்கு, மாற்ற முந்தாரானாலின்று முற்றும்; வளைத்திரம் பேசானாலின்று முற்றும்” என்றபடி –
இவன் பொறுக்கொணாத் தீம்புகளைப் போரச் செய்யினும்,
வடிவழகை நினைக்குங்கால் விடமாட்டாது மேல்விழுந்து முகத்தான்” என அழகிலீடுபட்டுக் கூறுகின்றனர்.
திருமுகமண்டலத்தின் ஒளிக்குக் கதிரவனும், குளிர்ச்சிக்குத் திங்களும் உவமையென்க.
இப்படிப்பட்ட அழகு பொருந்தியவன் அயற்புருடனாயிருக்கை யன்றியே
நமக்கு வகுத்த நாயகனுமாயிரா நின்ற னென்கிறார்கள் – நாராயணனே என்பதனால்.

நாராயணனே என்றவிடத்து ஏகாரதம் பிரிநிலைப் பொருளதாய், (பிரிநிலை – அவதாரணம்.)
நாராயணன் அடியார்க்குக் காரியஞ் செய்யுமிடத்துச் சாதனங்களை யெதிர்பாராது செய்து
தலைக்கட்டுபவன் என்பதை உணர்த்தும்.

நமக்கே என்ற விடத்து ஏகாரமும் அப்பொருட்டாய் நாராயணன் ஸர்வ ஸாதாரண ஸ்வாமியாயினும்,
ஆகிஞ்சந்யம், அநந்யகதித்வம் என்னு மதிகாரங்களமைந்த நமக்கன்றி
மற்றை யோர்க்குக் காரியம் செய்யான் எனபதைத் தெரிவிக்கும்.

பறை என்பது நோன்புக்கு அங்கமானதொரு வாத்ய விசேஷம்.
இவ்வாய்ச்சிகள், மேல், “மாலே மணிவண்ணா” என்ற பாட்டில் அபேக்ஷித்தபடி கண்ணபிரான் பறை தரப்புக,
அதுகண்ட இவர்கள் “சிற்றஞ்சிறுகாலே” என்கிற பாசுரத்தில்,
“இவற்றைப் பறைகொள்வானன்று காண் கோவிந்தா; எற்றைக்கு மேகீழழ்பிறவிக்கு
முன்றன்னோடுற்றோமே யாவோ முனக்கே நாமாட் செய்வோம், மற்றை நங்காமங்கள் மாற்று” எனக் கூறினமையால்,
பறை, பறை என்று சொல்லிக்கொண்டு போவது நாட்டார்க்கு ஒரு வியாஜமாத்திரமேயாய்,
அதன் உள்ளுறை கைங்கரிய விருப்பம் என்பது விளங்கும்.

அக் கைங்கரியத்தைத்; தாமாகவே செய்ய இவர்கட்குப் பிராப்தி உளதாயினும்
“ஏவமற்றமாராட் செய்வார்” என்றபடி எதிர்த் தலையின் நியமனங்கொண்டு செய்வதே
ஸ்வரூபத்துக்குச் சேருமென்னும் ரஹஸ்யார்த்தம்,
“பறை தருவான்” என்பதனாற் போதரும்.
ஸ்வயம் துருசிரே தேசே க்ரிய தாமிதி மாம் வத என்ற இளையபெருமாள் பிரார்த்தித்தவாற்றை நோக்குக.

கண்ணபிரானையும் ஆயர்மங்கைகளையும் நெடுநாள் பிரித்திரந்த ஆய்த்தலைவர் இன்று கூட்டியது –
நோன்பு நோற்று மழை பெய்விக்க வாதலால்,
இவர்களது நோன்பினால் மழை பெய்யா தொழியில் அவர்கள் இகழக்கூடும்;
மழை பெய்யில் “ஆ! பெண்கள் நோற்றபடி என்கொல்; மழைபெய்தபடி என்கொல்!” என்று புகழக் கூடும்;
அப்புகழ் உண்டாக வேணுமென்னும் விருப்பத்தைக் காட்டுகின்றனர், பாரோர் புகழ என்பதனால்.
புகழ என்றது – மகிழ என்றபடியுமாம்.

பகவத் கைங்கரியத்தில் ருசியுடைய பாகவதர்கள், பகவத் குணாநுஸந்தாநத்தினால்
“காலாலழும் நெஞ்சழியுங் கண் சுழலும்” என்றபடி எழுந்திருக்க வல்லமையற்று ஸ்தப்தராய்க் கிடக்கும்
பாகவதர்களைக் கைங்கரியத்திற்கு அழைத்தல் இதற்கு உள்ளுறை பொருள்.

“மார்கழித் திங்கள்” என்று – ஸத்துவ குணம் நிறம்பெறும் படியான கால விசேஷத்தைக் கூறியவாறு.
“மதி நிறைந்த நன்னாள்” என்று – ஆசிரினுடைய அருளடியாக ஸ்வருப வுணர்ச்சி பெற்று
எம்பெருமானுடைய விஷயீகாரத்திற்கு இலக்காகப் பெற்ற நாளைக் கூறியவாறு.
“அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்” என்றபடி –
பிறந்தநாள் இதுவாதலால் அதனைக் கொண்டாடுகிறபடி.

ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோஸ்மி க்ரிஷ்மே சீதமிவ ஹரதம் என்று பகவத் ஸமாச்ரயணத்தைப்
புனலாடலோடொக்கக் கூறினமையால் “நீராடப் போதுவீர்” என்று –
‘பகவத் ஸமாச்ரயணம் பண்ண வாருங்கள்’ என்கிறது.

“போதுவீர் போதுமினோ” என்கையால் –
பவித்ர பாணியாய் நீராடுதல், மூக்கைப்பிடித்தல்,
ஸங்கல்பம் செய்து கொள்ளல் முதலிய அங்க காலபங்கள் இதற்கு வேண்டாவென்கிறது.
ஞான பக்தி வைராக்யம் முதலிய குணங்களே ஆத்துமாவுக்கு அலங்காரமாதலால்,
அக்குணமுடைமை கூறுகிறது “நேரிழையீர்” என்று.

எம்பெருமானது எளிமை முதலிய குணங்கள் பரமபதத்தளவுஞ் சென்று அலையெறியும்படி
பொங்கா நிற்கப் பெற்ற திருப்பதிகளில் பகவதநுபவத்திற்குப் பாங்கான அபிநிவேசமுடைய
அநந்யார்ஹ சேஷ பூதர்களை விளிப்பது, மூன்றாமடி.
அந்யசேஷத்வமும் ஸ்வஸ்வாதந்திரியமும் இல்லாதாரைக் குறிப்பது, சிறுமீர்காள் என்பது.

மங்களாசாஸந பரரான ஆசாரியர்கட்கு விதேயனாயிருப்பவன் எம்பெருமான்
என்பதைக் கூறுவது, நான்காமடி.

பூர்ணமான ஞானத்தை விளக்கக் கடவதும், “குலந்தருஞ் செல்வந்தந்திடும்” என்றபடி கலாதிசயங்களையும்
தரக் கடவதுமான பெரிய திருமந்திரத்தில் தனது வீறுபாடு தோற்ற விளங்குபவன்
எம்பெருமான் என்பதைக் கூறுவது, ஐந்தாமடி.

கண் – ஞானம். திருமந்திரம் தாயாகச் சொல்லப்படுவதனால்,
இங்கு “அசோதை” என்று திருமந்திரத்தைக் குறித்தவாறாம்.
மந்திரம் எம்பெருமானைத் தன் கருவிலே வைத்துக் கொண்டு எல்லாருமறியலாம்படி பிரகாசிப்பிக்குந்
தன்மையுடைமை பற்றித் தாயாகக் கூறப்படுதல் பொருந்துமென்க.
ஆச்ரயணீயனுடைய போக்யத்வஞ் சொல்லுகிறது,

ஆறாம் அடியார்க்கு அணுகத்தக்கவனாயும், அல்லாதார்க்குக்கிட்ட வொண்ணாதவனாயுமிருப்பன்
எம்பெருமான் என்பதை விளக்கும்,
“கதிர்மதியம் போல் முகத்தான்” என்பது. அவ்வெம்பெருமான் இடத்தன்றி மற்றையோரிடத்து
யாம் பேறுபெறக் கடமைப்பட்டிலோம் என்பதைக் காட்டுவது, ஏழாமடி.

புகவதாச்ரயணத்தினால் நமக்கு அளவற்ற புகழ் உண்டாகுமென்கிறது, “பாரோர் புகழ” என்பது.
இனி, இந்நடையில் அவரவர்கள் மதிவைசித்திரிக்கேற்ப ஸ்வாபதேசார்த்தங்களை உயத்துணர்க.

(ஏலோரெம்பாவாய்.)
இத்தொடர்மொழிக்குத் தனித்தனியே பொருள் ஆராயப் புகுதல் வேண்டா;
வென்றவர் முன்னே தோற்றார் “தடம் பொங்கத்தம் பொங்கோ” என்பது முதலியவை போல்,
நோன்பு நோற்கப் புக்கவர் “ஏலோர் எம்பாவாய்” என்ற மகுடத்தினாற் பாசுரங் கூறுவது மரபு எனக்கொள்க.

மார்கழி – மார்க்கசீர்ஷமென்னும் வடசொற் சிதைவு.
திங்கள் – சந்திரன்; அமாவாசைக்கு அமாவாசை ஒரு மாதமெனக் கொண்டு சந்திர சம்பந்தத்தாற்
காலத்தை வரையறுக்கும் சாந்திரமாந ரீதிபற்றி, திங்கள் என்று மாதத்திற்குப் பெயர் வழங்கலாயிற்று; இலக்கணை.
முதலடி யிறுதியில் ஆல் – ‘ஆதலால்;’ என்பதை சிதைவு; அசையுமாம்.
போநுவீர், போதுமின் – “போதருவீர், போதருமின்” என்பவற்றின் மரூஉ என்னலாம்.
சீர் – ஸ்ரீ . மல்குதல் – விஞ்சியிருத்தல்.
சிறுமீர்காள் – சிறுமாயர்காள்’ என்பதன் விளி.

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading