Archive for the ‘நம்பிள்ளை’ Category

ஸ்ரீ முதல் திருவந்தாதி- பாசுரங்கள் -31-40 -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

August 16, 2021

அடியவர்கள் திறத்தில் எம்பெருமானுக்குண்டான பாரதந்திரியத்தையும் வாத்ஸல்யத்தையும் அநுஸந்தித்தால்
அப்பெருமானைத் தவிர்த்து வேறொரு விஷயத்தை ஒரு நொடிப் பொழுதாகிலும் நினைக்க வழியுண்டோ? என்ன வேண்டி,
அப்பெருமான் பரம பக்தனாகிய ப்ரஹ்லாதனிடத்துள்ள வாத்ஸல்யத்தாலே செய்தருளின செயலை யெடுத்துப் பேசுகிறார்.

புரியொருகை பற்றியோர் பொன்னாழி ஏந்தி
அரியுருவும் ஆளுறுவுமாகி எரியுருவ
வண்ணத்தான் மார்பிடந்த மாலடியை யல்லால் மற்று
எண்ணத்தான் ஆமோ இமை –31-

பதவுரை

ஒரு கை புரி பற்றி–ஒரு திருக் கையிலே வலம்புரிச் சங்கத்தை ஏந்தி
(மற்றொரு திருக் கையிலே)
ஓர் பொன் ஆழி ஏந்தி–ஒப்பற்ற அழகிய திருவாழியை ஏந்தி
ஆள் உருவம் அரி உருவம்–நரமும் சிங்கமும் கலந்த வடிவை யுடையனாய்க் கொண்டு
எரி உருவம் வண்ணத்தான்—அக்நியின் வடிவம்போலே [கண்ணெடுத்துக்காண முடியாத] வடிவத்தை யுடையனான இரணியனுடைய
மார்பு–மார்பை
இடந்த–நகத்தால் குத்திப் பிளந்து போட்ட
மால்–திருமாலினுடைய
அடியை அல்லால்–திருவடிகளைத் தவிர
மற்று–வேறொரு விஷயத்தை
இமை–க்ஷண காலமேனும்
எண்ணத்தான் ஆமோ–நினைப்பதற்கேனும் முடியுமோ? [முடியாது.]

புரியொருகைபற்றி = ‘வலம்புரி ‘ என்னும் பதத்தில் ‘வலம்’ என்பதை நீக்கி, புரியென்பதை மாத்திரம்
இங்குப் பிரயோகித்திருப்பது நாமைகதேசத்தை கொண்டு நாமத்தை க்ரஹிக்கும் முறையாலென்க:
ஸத்யபாமையைப் பாமையென்பதுபோல.
எம்பெருமானுடைய அவதாரங்களெல்லாவற்றிலும் திவ்யாயுதங்களின் சேர்த்திக்குக் குறையில்லாமையாலே
“புரியொருகைபற்றியோர் பொன்னாழியேந்தி” எனப்பட்டது.
இத்திவ்யாயுதங்கள் சில அவதாரங்களில் மறைந்திருப்பதும் சில அவதாரங்களில் வெளித்தோன்றியேயிருப்பதும் காரணார்த்தமாகவாம் .

அசுரர்களுடைய உடல் நெருப்புநிறமா யிருக்குமாதலால் எரியுருவ வண்ணத்தான் என்ற சொல்லால் இரணியனைக் கூறினர்.
பாசுரத்தினிறுதியுலுள்ள இமை என்பதை வினைமுற்றாகக்கொண்டு உரைக்கவுமாம்; இதை ஆராய்ந்துபார் என்கை:
நெஞ்சே!’ என்று வருவித்துக்கொள்க.

——–

இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி
அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல்
ஆகத் தணைப்பார் அணைவரே ஆயிர வாய்
நாகத் தணையான் நகர்-32–

பதவுரை

இமையாத கண்ணால்–[ஞானத்தில் குறைவில்லாத நெஞ்சு என்னும்] உட்கண்ணாலே
இருள் அகல–[அஜ்ஞாநமாகிய] அந்தகாரம் நீங்கும்படியாக
நோக்கி–(தன் ஸ்வரூபத்தையும் பரப்ரஹ்ம ஸ்வரூபத்தையும் உள்ளபடி) கண்டு
அமையா–த்ருப்தி பெற்று அடங்கியிராத
பொறி புலன்கள் ஐந்தும்–பஞ்சேந்திரியங்களையும் (அவற்றிற்கு உரிய சப்தாதி) பஞ்ச விஷயங்களையும்
நமையாமல்–அடக்காமலே
ஆகத்து அணைப்பார்–(மாதர்களின்) தேஹத்தை அணைத்துக் கொண்டு கண்டபடி திரிபவர்கள்
ஆயிரம் வாய் நாகத்து அணையான்–ஆயிரம் வாய்களைக் கொண்ட ஆதி சேஷனைப் படுக்கையாக வுடைய எம்பெருமானது
நகர்–நகரமாகிய ஸ்ரீவைகுண்டத்தை
அணைவரே–கிட்டப்பெறுவர்களோ?.

இப்பாட்டுக்கு இரண்டு வகையாகக் கருத்துரைக்க இடமுண்டு.
மூன்றாமடியில், அணைவரே என்ற விடத்து ஏகாரத்தைத் தேற்றப் பொருளதாகக் கொண்டால்,
அணைவர்-கிட்டப்பெறுவர்கள் என்று பொருளாய்விடும்.
அன்றி ஏகாரத்தை எதிர்மறைப் பொருளதாகக் கொண்டால், அணைவரே?- சேருவர்களோ? சேரமாட்டார்கள் என்றதாகும்.
ஒன்றோடொன்று முரண்படுகின்ற இரண்டு பொருள்களும் பொருந்துமோ எனின்; கேண்மின்:

இந்திரியங்களைப் பட்டிமேயவொட்டாமல் அடக்கி ஆளாதே ஸ்த்ரீகளின் உடம்போடே அணைத்து மனம் போனபடியே
திரியுமவர்கள் பரமபதத்தைக் கிட்டமாட்டார்கள்; இவ்வுலகத்துக்கும் நரகத்துக்குமே போக்குவரத்தாயிருப்பர்கள் என்பது ஒரு கருத்து.
இந்திரியங்களை அடக்கி ஆளாவிட்டாலும் எம்பெருமான் தானாகவே கடாக்ஷிக்கும்போது அவனை விலக்காதவர்களுக்கு
உஜ்ஜீவிக்க வழியுண்டு என்கை மற்றொரு கருத்து.

இதில், “ஆகத்து அணைப்பார்” என்பதற்கு – எம்பெருமானாலே அந்தரங்கத்தில் விஷயீகரிக்கப் பெறுமவர்கள் என்று பொருள் கொள்ளுதல் நன்று.
இவ்விரண்டு கருத்துகளில் முந்தின கருத்து சேதநஸ்வ ரூபத்துக்குப் பொருந்தினது;
பிந்தின கருத்து பகவந்நிர்ஹேதுக க்ருபாவைபவோக்திக்குப் பொருந்தினது:
இதுவே ஆழ்வார்க்கும் ஆசாரியர்கட்கும் அபிமதமாயிருக்கும்.

இமையாதகண் என்றது-ஞானக்கண். அது திறந்தால் அஜ்ஞானவிருள் அகலுமாதலால் இருளகலநோக்கி என்றார்.
பொறிபுலன்களைந்தும்—பொறியைந்தும் புலனைந்தும் என்ற படி: சப்தாதிவிஷயக்களைக் கவர்கின்ற செவி வாய் கண் மூக்கு உடலென்னும்
பஞ்சேந்திரியங்களும், இவ்விந்திரியங்களுக்கு இலக்காகின்ற சப்தம் ரூபம் ரஸம் கந்தம் ஸ்பர்சம் என்னும் பஞ்ச விஷயங்களும்.

இந்திரியங்களுக்கு ‘அமையா’ என்றிட்ட விசேஷனம் – பெற்றவற்றைக் கொண்டு த்ருப்தி பெற்று அடங்கி யிராமையைக் காட்டும்.

———-

நகர மருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல்
பகர மறை பயந்த பண்பன் பெயரினையே
புந்தியால் சிந்தியா தோதி யுரு வெண்ணும்
அந்தியா லாம் பயன் அங்கு என் –33–

பதவுரை

பூ மேல்–திருநாபிக் கமலத்திலே
நான்முகற்கு–பிரமனுக்கு
நகரம் அருள் புரிந்து–இருப்பிடத்தை ஏற்படுத்தி யருளியும்
பகர–(யோக்யர்களெல்லாரும்) ஓதும்படியாக
மறை–வேதத்தை
பயந்த–உபகரித்தும் வைத்த
பண்பன்–குணசாலியான எம் பெருமானுடைய
பெயரினை–திருநாமங்களை
பிந்தியால்–மனத்தினால்
சிந்தியாது–எண்ணாமல்
ஓதி உரு எண்ணும்–ஜபம் செய்வதும் உருச் சொல்வதுமான ஸந்த்யாவந்தனம் முதலிய கர்மாநுஷ்டாநங்களால்
அங்கு ஆம் பயன் என்–உண்டாகப்போகிற பிரயோஜனம் என்ன?(ஒன்றுமில்லை.)

உலகில் சிலர் இரவும் பகலும் வேதங்களை உருச் சொல்லிக் கொண்டும் ஜபங்கள் செய்து கொண்டும்
ஸந்தியாவந்தனம் முதலிய கருமங்களை அநுஷ்டித்துக் கொண்டும் போதுபோக்குகிறார்களே, இது நல்ல போது போக்குத்தானே.
இப்படிப்பட்டவர்களுக்குப் புருஷார்த்த ஸித்தியில் ஸந்தேஹமில்லையே என்று சிலர் கேட்டனர் போலும்;
அவர்கட்கு உத்தரமுரைக்கின்றார்-

எம்பெருமானை உள்ளீடாகக் கொள்ளாதே செய்கிற ஜபம் தவம் முவலியவை யாவும் பயனற்றனவாமென்கிறார்.
அந்தரங்கத்தில் பகவத்பக்தி முக்கியமாக இருக்கவேண்டும்;
அஃது இன்றியே கையை மூடிக்கொண்டும் வாயை மொணமொணத்துக் கொண்டும் செய்யுமவை பிறரை ப்ரமிக்கச் செய்வதற்கு
உபயோகப்படு மத்தனையேயொழிய புருஷார்த்தஸித்திக்குப் பயன்படாதென்றாராயிற்று.

பண்பன்பெயரினைப் புந்தியால் சிந்தியாது= பகவந்நாமங்களின் பொருளாகிய திவ்யகுண சேஷ்டிதங்களைச் சிந்திப்பதைவிட்டு என்றபடி.

ஸந்த்யா என்ற வடசொல் அந்திஎன விகாரப்பட்டது; ஸந்த்யாவந்தனத்தைச் சொன்னபடி.
மனப்பூர்வமாக வல்லாமல் செய்யும் ஆபாஸ ரூபமான கருமங்களால் எம்பெருமானை அகன்று விடுகை பலிக்குமே யொழிய
அணுகுகை பலிக்கமாட்டாது என்றாராயிற்று.

அந்தரங்கர்க்கு அருகிலே மாளிகை அமைக்குமாபோலே, திருமால் தனது நாபிக் கமலத்திலே நான்முகனுக்கு
இருப்பை அருளினன் என்கிறார் முதலடியில்.
மத்ஸ்யாவதாரம் ஹம்ஸாவதாரம் முதலியவற்றால் வேதோபதேசம் செய்தருளினமையை இரண்டாமடியிலருளிச்செய்தாரென்க

நகரம்- வடசொல். புந்தி – புத்தி

——————–

எம்பெருமானிடத்தில் அந்தரங்கமான அன்பு பூண்டவர்களுள் தலையானவள் யசோதைப் பிராட்டி யொருத்தி தான்
என்று வெளியிடக்கருதிய ஆழ்வார் அதனை ஒரு சமத்காரச் சொல்லாலே வெளியிடுகிறார்.
கண்ணபிரான் இளங்குழவியாய் நந்தகோபர் திருமாளிகையில் சயனித்திருக்கும்போது வஞ்சகக் கஞ்சனாலே ஏவப்பட்டுக்
கொல்ல வந்த பூதனையென்னும் பேய்த்தாய் மிக்க பரிவுள்ளவள் போலத் தெய்வக் குழவியை யெடுத்துத் தனது
விஷந்தடவின முலையைக்கொடுக்க பேதைக்குழவிபிடித்துச் சுவைத்துண்டவாறே அப்பேய்ச்சி உயிர்மாண்டுபிணமாய் விழுந்தாள்;
உடனே யசோதப் பிராட்டி ஓடிவந்து குழந்தையை வாரியெடுத்தணைத்து முலைகொடுத்தாள்-
என்பதாக இதிஹாஸம் சொல்லப்படுகின்றதே! இது மெய்யாயிருக்கமுடியுமா? என்கிறார்–

என்னொருவர் மெய்யென்பர் ஏழு உலகு உண்டு ஆலிலையில்
முன்னோருவனாய முகில் வண்ணா நின்னுருகிப்
பேய்த்தாய் முலை தந்தாள் பேரிந்திலளால் பேரமர்க்கண்
ஆய்த்தாய் முலை தந்தவாறே –34–

பதவுரை

முன்–முற்காலத்தில்
ஏழ் உலகு உண்டு–ஏழுலகங்களையும் (பிரளயத்திலழியாதபடி) அமுது செய்து
ஆல் இலையில்–ஓர் ஆலந்தளிரிலே
ஒருவன் ஆய–துணையற்றவனாய்க் கண் வளர்ந்தருளின
முகில்வண்ணா–காளமேகத் திருவுருவனான பெருமானே!
நின் உருகி–உன்விஷயத்தில் உருக்கம் கொண்டவள் போல மேலுக்குக் காட்டி
முலை தந்தாள்–முலை கொடுத்தவளான
பேய் தாய்–பேய்த் தாயாகிய பூதனை யானவள்.
பேர்ந்திலள்–அவ்விடத்தில் றின்றும் பேர மாட்டாமல் (பிணமாய்) விழுந்தாள்;
பேர் அமர் கண்–பெரிய அந்த யுத்த பூமியில்
ஆய் தாய்–இடைத் தாயாகிய யசோதை யானவள்
முலை தந்த ஆறு–முலை கொடுத்த விதத்தை
ஒருவர்–ஞானத்தில் ஒப்பற்றவர்களான வ்யாஸ பராஸராதி ரிஷிகள்
மெய் என்பர்–மெய்யென்று சொல்லா நிற்பர்கள்;
என்–இது என்ன ஆச்சரியம்?

ஒருத்தி வந்து முலை கொடுத்துப் பட்டபாடு கண்ணெதிரே காணா நிற்கச் செய்தே இன்னொருத்தி கிட்டவரத்தான் முடியுமா?
அஞ்சாமல் கிட்டவந்து எடுத்து முலை கொடுத்தாளென்பது ஸம்பாவிதமாகுமோ? என்கிறார்.
நாட்டில் இவ்வாறு வேறு எவர்களிடத்திலேனும் நாம் கண்டிருந்தால் இதை மெய்யெனக் கொள்ளலாம்;
இப்படி எங்குங்காணாமையாலே இதனை எங்ஙனே மெய்யெனக் கொள்ளலாம்? என்றாலும்,
பூதனை கொடுத்த விஷத்திற்கு மாற்றான அம்ருதமாகத் தனது ஸ்தந்யத்தைக் கொடுக்க வேணுமென்னும் அன்பு மிகுதியினால்
யசோதை செய்த இக்காரியம் அவளுடைய பக்திபோன்ற பக்தியையுடைய மெய்யன்பர்க்கு நம்பத் தகுந்ததாயிருக்குமே யொழிய
மற்றையோர்க்கு இதில் விச்வாஸம் பிறப்பது அரிதே என்றதாய்த்து.

பேரமர்க்கண் – கண்ணபிரானைக் கொல்லக் கருதி அதற்காக முயன்று பேய்ச்சி இறந்த இடமாதல் பற்றி அதனைப் போர்க்கள மென்றார்,
“பேரமர்க்கண்” என்றதை யசோதைக்கு விசேஷணமாக்கி. அமர் – ஒன்றோடொன்று சண்டைசெய்வன போன்றிருக்கிற,
பேர்—பெரிய, கண்- கண்களை யுடையளான, ஆய்த்தாய்-, என்று உரைத்தலுமொன்று.

———–

கீழ்ப்பாட்டில் யசோதைபிராட்டியினுடைய ஒப்புயர்வற்ற அன்பை அநுஸந்தித்த ஆழ்வார்க்குத்
தாம் போல்வாருடைய அன்பு ஒரு அன்பாகவே தோற்றவில்லை;
கம்சன் முதலானாருடைய பிராதிகூல்யத்தோடு ஸமமாகவே தம்முடைய அன்பை நினைக்கலாயினர்;

அதனால் சிறிது கலக்கமுற்ற ஆழ்வார் “ மிகக் கொடியனான இராவணனிடத்திலிருந்த பிராதி கூல்யமே,
அவன்றானே சிசுபாலனாகப் பிறந்த பிறவியில் உன்னடிச் சேர்வதற்கு அநுகூலமாகப் பலித்ததே!;
அப்படியிருக்க; என் போல்வாரிடத்துள்ள போலியான ஆநுகூல்யம் [அன்பு] அநுகூலமாவதற்குத் தடையுண்டோ?
என்று தமக்குத் தாமே தேறிக் கூறுகின்ற பாசுரம் இது–

ஆறிய வன்பில் அடியார் தம் ஆர்வத்தால்
கூறிய குற்றமாகக் கொள்ளல் நீ தேறி
நெடியோய் அடி யடைதற் கன்றே ஈரைந்து
முடியான் படைத்த முரண் -35–

பதவுரை

ஆறிய அன்பு இல்–நிரம்பின பக்தியில்லாதவர்களாய்
அடியார்–சேஷத்வ ஜ்ஞாந மாத்திரத்தை யுடையராயிருப்பவர்கள்
தம் ஆர்வத்தால்–தங்களுடைய ஸ்நேஹத்தாலே
கூறிய–சொல்லும் வார்த்தைகளை
குற்றம் ஆ–குற்றமாக
நீ கொள்ளல்–நீ கொள்ளாதே;
(அது ஏனெனில்)
ஈர் ஐந்து முடியான்–பத்துத் தலைகளை யுடையனான ராவணன்.
படைத்த–புத்தி பூர்வகமாகப் பண்ணின
முரண்–தப்புக் காரியமானது
நெடியோய்–பெருமை பொருந்திய உன்னுடைய
அடி–திருவடிகளை
தேறி அடைதற்கு அன்றே–தெளிந்துவந்து (காலக்ரமத்திலே சிசுபாலனாகிக் ) கிட்டுகைக்குக் காரணமாகி விட்டதன்றோ?

“ஆறியவன்பிலடியார்” என்று தம்மையே சொல்லிக் கொள்ளுகிறார் போலும்! தன்மையில் வந்த படர்க்கை!
கூறிய= பலவிபால் வினையாலணையும் பெயர்; கூறியவற்றை யென்று பொருள் .
கொள்ளல் – எதிர்மறை வியங்கோள்வினைமுற்று.
நெடியோய் –முன்னிலையொருமை வினையாலணையும் பெயர்; ஆறாம்வேற்றுமைத்தொகை.
முரண் – கோணலான காரியங்கள்.
தேறி என்னும் வினையெச்சத்தை முன்னடிகளிற் கூட்டியுமுரைக்கலாம், பின்னடிகளிற் கூட்டுயுமுறைக்கலாம்.

———

முரணை வலி தொலைதற்காம் என்றே முன்னம்
தரணி தனதாகத் தானே இரணியனைப்
புண்ணிரந்த வள்ளுகிரால் பொன்னாழிக் கையால் நீ
மண்ணிரந்து கொண்ட வகை –36-

பதவுரை

முன்னம்–முற்காலத்தில்
தரணி தனது ஆக தானே–பூமியெல்லாம் தன்னுடையதென்று அஹங்காரங்கொண்டிருந்த
இரணியனை–ஹிரண்யாஸுரனை
புண் நிரந்த–புண்படுத்திப் பிளந்த
வள் உகிர் ஆர்–கூர்மையான நகங்கள் பொருந்திய
பொன் ஆழி கையால்–அழகிய திருவாழியைக் கொண்ட திருக் கையினால்
நீ–நீ
மண் இரந்து கொண்ட வகை–(மாவலியிடத்தில்) பூமியை யாசித்துப் பெற்றதானது
முரணை வலி தொலைதற்கு ஆம் என்றே–(ஸம்ஸாரிகளின்) முரட்டுத்தனத்தின் மிடுக்கைத் தொலைக்கலாமென்றல்லவோ?.

ஆச்ரித விரோதியான இரணியனைக் கிழித்தெறிந்தது போல மஹாபலியையும் கொன்றொழிக்கலாமா யிருக்கச் செய்தேயும்
அங்ஙனஞ் செய்யாது . அழகிய வடிவெடுத்து யாசகனாய் நிற்கும் வகையாலே உலகங்கொண்டது ஏதுக்காக?
“எம்பெருமான் இவ்வளவு ஸெளலப்யகுணமுடையவன்” என்று எல்லாரும் தெரிந்து கொண்டு இக் குணத்தில் ஈடுபட்டும்
தங்களுடைய அஹங்காரத்தை விட்டொழிந்து ஆட்படக்கூடுமென்கிற திருவுள்ளத்தாலோ? என்கிறார்.

“இரணியனைப் புண்ணிரந்த வள்ளுகிரார் பொன்னாழிக்கையால்” என்ற சொல்லாற்றலால்,
மாவலியையும் இரணியனைப் போலவே பங்கப்படுத்தவேண்டியது ப்ராப்தமாயிருக்கவும் அங்ஙனஞ் செய்யாதது
மேற்குறித்த கருத்தினாலாம் – என்பது விளங்கும்.

தரணி- வடசொல்.

———–

மூன்று பாசுரங்களாலே திருமலையை அநுபவிக்கிறார்.
எம்பெருமான் திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்குமிடம் திருவேங்கடமலை யென்கிறார்.

வகையறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும்
புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திசை திசையின்
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம்
ஊதிய வாய் மால் உகந்த ஊர் –37—

பதவுரை

வகை அறு–அற்ப பலன்களையும் பரம புருஷார்த்தத்தையும் உட்புகுந்து இன்ன வகை இன்ன வகை என்று அறுதியிடுவதற்குறுப்பான
நுண் கேள்வி வாய்வார்கள்–ஸூக்ஷ்மார்த்த ச்ரவண முடையவர்களான
வேதியர்கள்–வைதிகர்கள்
நாளும்–நித்தியமும்
புகை விளக்கும்–தூப தீபங்களையும்
பூ புனலும்–புஷ்பங்களையும் தீர்த்தத்தையும்
ஏந்தி–தரித்துக் கொண்டு
திசை திசையின்–பல திக்குக்களில் நின்றும்
சென்று–வந்து சேர்ந்து
இறைஞ்சும்–வணங்குமிடமான
வேங்கடம்–திருவேங்கடமலையானது,
வெண்சங்கம் ஊதிய வாய் மால்–வெளுத்த சங்கைத் திருப்பவளத்திலே வைத்து ஊதின எம்பெருமான்
உகந்த–திருவுள்ளமுவந்து எழுந்தருளி யிருக்கப் பெற்ற
ஊர்–திவ்யதேசமாம்.

அத்திருமலை எப்படிப்பட்ட தென்னில்; தினந்தோறும் பல பல திசைகளினின்றும் வைதிகர்கள் வந்து
தூபதீபம் முதலிய திருவாராதந ஸாமக்ரிகளைக் கொண்டு ஆச்ரயிக்கப் பெற்றது – என்கிறார்.
அந்த வைதிகர்கட்கு விசேஷணமிடுகிறார் வகையறு நுண்கேள்வி வாய்வார்கள் என்று
ஸூக்ஷ்மமான சாஸ்த்ரார்த்தங்களையும் அலகலகாக நிச்சயித்தறியக் கூடிய கேள்வி வாய்ந்தவர்கள்- பஹூச்ருதர்கள் என்றபடி.

வெண்சங்க மூதியது பாரதப்போரில்

——————

திருவேங்கடமலையே நித்ய ஸூரி நிர்வாஹகனான எம்பெருமான் திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்குமிடமென்கிறார்.
திவ்யதேசங்களிலுள்ள சராசரங்கள் முற்றும் மெய்யன்பர்கட்கு உத்தேச்யமாயிருக்கும்.
ஸ்ரீகுலசேகராழ்வார் தம்முடைய பிரபந்தத்திலே * நான்காந்திருமொழியிலே
“வேங்கடத்துக்கோனேரிவாழுங் குருகாய்ப்பிறப்பேனே” என்று தொடங்கித்
திருமலையிற் பலவகை பிறவிபிறக்கக் குதூஹலித்து,
கடைசியாக “ எழில் வேங்கடமென்னு மெம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனுமாவேனே” என்று தலைக்கட்டியிருப்பதற்கேற்ப,
இக்குலசேகராழ்வாரைப் போன்ற அத்யவஸாயமுடைய மஹான்களே திருமலையில்
பாம்பாகவும் குறவராகவும் யானையாகவும் புற்றாகவும் பிறந்திருப்பர்களாகையாலே
அப்பொருள்களையும் எம்பெருமானைப் போலவே உத்தேச்யமாகக் கொண்ட இவ்வாழ்வார்
இப்பாசுரத்தாலே தம்முடைய ப்ரதிபத்தியை வெளியிடுகின்றாரென்க.

ஊரும் வரியரவ மொண்  குறவர் மால் யானை
பேர வெறிந்த   பெரு மணியை காருடைய
மின்னென்று புற்றடையும் வேங்கடமே மேலசுரர்
எம்மென்னு மால திடம் -38-

பதவுரை

ஊரும்–திரிகின்ற
வரி அரவம்–(உடம்பில்) கோடுகளை யுடைய ஸர்ப்பமானது,
ஒண் குறவர்–அழகிய குறவர்கள்
மால் யானை பேர–(பட்டி மேய்கின்ற ) பெரிய யானைகள் (தங்களுடைய புனத்தில் நின்றும் ) அப்பால் போவதற்காக
எறிந்த–(அவ் யானைகளின் மேல்) வீசி யெறிந்த
பெரு மணியை–பெரியதொரு மாணிக்கத்தை (கண்டு)
கார் உடைய மின் என்று–மேகத்தினிடையே தோன்றுகிற மின்னலென்று பிரமித்து (இடிக்கு அஞ்சி)
புற்று அடையும் வேங்கடம்–புற்றினுள்ளே நுழையுமிடமான திருமலை,
மேல சுரர்–மேற்பட்டவர்களான நித்ய ஸூரிகள்
எம் என்னும் மாலது–‘எங்களுடையவன்’ என்று அபிமாநிக்கும் படியாக வுள்ள எம்பெருமானது
இடம்–திவ்ய தேசமாம்.

குறவர்களுக்குப் புனங்காப்பது தொழில்; புனங்களிலே யானை முதலிய ஜந்துக்கள் பட்டிமேயப் புகும்;
அவற்றைத் துரத்திப் புனத்தைக் காவல்செய்து கொள்ளவேண்டிய குறவர் தாங்கள் பரண்களிலே யிருந்தபடியே
தங்கள் கையிலுள்ள பெரிய மாணிக்கக் கட்டியை யானையின் மீது எறிவர்கள் – யானை புனத்தைவிட்டு அப்பால்
போவதற்காக. அப்போது அங்குத் திரியா நின்ற மலைப் பாம்புகளானவை யானையின் மேற்பட்ட ரத்னத்தைக் கண்டு,
யானையை மேகமாகவும் ரத்னத்தை மின்னலாகவும் பிரமித்து மேகத்தில் மின்னலுண்டானவுடனே இடி உண்டாகுமாகையாலும் ,
பாம்புகள் இடிக்கு அஞ்சி ஒளிக்கு மியல்புடையனவாகையாலும் அப்பாம்புகள் புற்றினுள்ளே புகா நிற்கும்.
இப்படிப்பட்ட தன்மை வாய்ந்த திருமலை எம்பெருமானது திருப்பதியாம் என்றாராயிற்று.

———–

எம்பெருமானுடைய பல செயல்களை அநுஸந்தித்து இனியராகிறார்.

இடந்தது பூமி எடுத்தது குன்றம்
கடநதது கஞ்சனை முன்னஞ்ச  கிடந்ததுவும்
நீரோத மா கடலே நின்றதுவும் வேங்கடமே
பேரோத வண்ணர் பெரிது –39–

பதவுரை

பேர் ஓதம் வண்ணர்–பெரிய கடலின் நிறம் போன்ற நிறமுடைய பெருமான்
முன்–முற்காலத்தில்
இடந்தது–(மஹா வராஹமாகிக்) கோட்டார்குத்தி யெடுத்தது
பூமி–பூமியாம்;
எடுத்தது–குடையாக வெடுத்துப் பிடித்தது
குன்றம்–கோவர்த்தன மலையாம்
அஞ்ச கடந்தது–அஞ்சி முடிந்து போம்படி செய்தது
கஞ்சனை–கம்ஸனையாம்;
கிடந்ததுவும்–திருக் கண் வளர்ந்தருளினது
ஓதம் நீர் மாகடல்–பெரு வெள்ளமுடைய திருப்பாற்கடலிலாம்
பெரிது நின்றதும்–பெருமை யெல்லாம் தோற்ற நின்றது
வேங்கடம்–திருமலையிலாம்.

முன்பு மஹாப்ரளயத்தில் அண்ட பித்தியில் ஒட்டிக் கிடந்த பூமியை மஹா வராஹமாகி உத்தரித்தான்;
இந்திரன் பசிக் கோபத்தால் ஏழு நாள் விடாமழை பெய்வித்தவன்று திருவாய்ப்பாடியைக் காத்தருள்வதற்காகக்
கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்துப் பிடித்தான்;
சாது சனங்களை நலிந்துகொண்டிருந்த கம்சனைக் கொன்றொழித்தான்;
அவதாரங்களுக்கு மூலகந்தமாகத் திருப்பாற்கடலிலே திருக்கண் வளர்ந்தருளாநின்றான்;
வானோர்க்க்கும் மண்ணோர்க்கும் வைப்பாகத் திருவேங்கடமலையிலே தன் பெருமையெல்லாம் பொலிய நின்றருள்கின்றான் –
என்று இப்பாட்டில் அநுஸந்திப்பதன் கருத்தாவது
இப்படி ஓயாமல் பிறர் காரியமே போது போக்காயிருக்கின்ற எம்பெருமானுடைய நீர்மை வருணிக்க முடியாதது என்றதாம்.

———–

“வேங்கடமே அசுரர் கோன் வீழக்கண்டு உகந்தான் குன்று“ – பாகவத விரோதியான இரணியனைத் தொலைத்துப்
பரம பாகவதனான ப்ரஹ்லாதனைக் காத்தருளின பெருமானந்த ஆச்ரித பக்ஷபாத மஹா குணத்தை வெளியிட்டுக் கொண்டு
இன்றைக்கும் ஸேவை ஸாதிக்குமிடம் திருமலை யென்கிறார்.
அத்திருவேங்கடம் எப்படிப்பட்டதென்ன அவ்விடத்துச் செய்திகளில் ஒன்றை யெடுத்துரைக்கிறாரிதில்.

பெருவில் பகழிக் குறவர் கைச் செந்தீ
வெருவிப் புனந்துறந்த  வேழம் இரு விசும்பில்
மீன் வீழக் கண்டஞ்சும் வேங்கடமே மேலசுரர்
கோன்  வீழக்  கண்டுகந்தான் குன்று-40—

பதவுரை

பெரு வில்–பெரிய வில்லையும்
பகழி–அம்புகளை முடையரான
குறவர்–குறவர்களினுடைய
கை–கையிற்பிடித்திருந்த
செம் தீ–சிவந்த நெருப்புக்கு
வெருவி–பயப்பட்டு
புனம் துறந்த–கொல்லையை விட்டு நீங்கின
வேழம்–யானையானது,
இரு விசிம்பில்–பரந்த ஆகாசத்தில் நின்றும்
மீன் வீழ–நக்ஷத்திரம் விழ
கண்டு–அதனைப் பார்த்து (நாம் அப்பால் போக முடியாதபடி குறவர்கள் கை கொள்ளியைப் பூமியிலே எறிந்தார்கள் என்று ப்ரமித்து)
அஞ்சும்–பயப்படுமிடமான
வேங்கடம்–திருவேங்கடமானது
மேல்–முன்பொருகால்
அசுரர் கோன் வீழ கண்டு–இரணியாசுரனை முடித்து
உகந்தான்–ப்ரஹ்லாதனுடைய விரோதி தொலைந்தது என்று மகிழ்ந்த பெருமானுடைய
குன்று–திருமலையாம்

திருமலையிற் கொல்லைகளில் (இராக் காலங்களில்) யானை பட்டி மேய, அதனைத் துரத்துவதற்காக
அம்பு தொடுத்த வில்லை ஒரு கையிலே கொண்ட குறவர்கள் மற்றொரு கையிலே
தீவட்டியைக் கொளுத்திப் பிடித்துக் கொண்டு அதட்டிச் செல்ல, அத்தீவட்டியையும் அம்பு கோத்த வில்லையும் கண்ட
அக் களிறு அஞ்சி ஓடிப் போக, அகஸ்மாத்தாக ஆகாசத்தில் நின்றும் நக்ஷத்திரம் அவ்யானை பதறி செல்லும் வழியிடையே வந்து
பெருஞ்சோதியுடனே விழ, அதைக் கண்டு இது நக்ஷத்ரமென்ருணராது ‘குறவர்கள் கைத் தீவட்டியையே கீழெறிந்தார்கள்’ என்று
ப்ரமித்து ‘இவ்வழியை நாம் எப்படி கடந்து செல்ல வல்லோம்? ‘ என்றஞ்சித் திகைத்து நிற்குமிடமாம் அத்திருமலை.

அஸ்தாநே பயசங்கை பண்ணுகிற யானையின் செய்தியைக் கூறின விதனால் – அஸ்தாநே பயசங்கை பண்ணி
எம்பெருமானுக்கு மங்களாசாஸநம் பண்ணுகிற மஹான்களின் இருப்பை நினைப்பூட்டினாராகக் கொள்ளலாமென்ப.

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி- பாசுரங்கள் -21-30 -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

August 16, 2021

[நின்றுநிலமங்கை.] தம்முடைய திருவுள்ளத்தை நோக்கி எம்பெருமானுடைய ஸெளசீல்ய குணத்தை உரைக்கின்றார்.

நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்
சென்று திசை யளந்த செங்கண் மாற்கு என்றும்
படையாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம்
அடையாழி நெஞ்சே அறி –21-

பதவுரை

சென்று நின்று–(மஹாபலியின் யாக பூமியிற்) போய் நின்று
அம் கை–(தனது) அழகிய திருக்கையினால்
நிலம் நீரேற்று–பூமி தானம் வாங்கி
மூ அடியால்–மூன்றடிகளாலே
திசை அளந்த–எல்லாயிடங்களையும் ஸ்வாதீனப் படுத்திக் கொண்ட
செம்கண்மாற்கு–செந்தாமரைக் கண்ணனான எம்பெருமானுக்கு
என்றும்–எப்போதும்
ஆழி–சக்கரமானது
படை–ஆயுதமாயிருக்கும்;
புள்–கருடன்
ஊர்தி–வாஹனமா யிருப்பன்;
ஆழி நெஞ்சே–கம்பீரமான மனமே!
அறி–நான் சொல்வதை ஆராய்ந்து கொள்;
பாம்பு அணையான் பாதம் அடை–சேஷ சயனனான அப்பெருமானுடைய திருவடிகளை அடைந்திடு.

முன்னடிகளில் உலகளந்த வரலாற்றை எடுத்துரைத்ததன் கருத்து –
இப்படிப்பட்ட அவனது மேன்மையைப் பார்த்து நெஞ்சே! நீ பின்வாங்கவேண்டா என்றவாறு.
நம்முடைய விரோதிகளைத் தலை துணிப்பதற்கு அப்பெருமான் கையுந்திருவாழியுமாயிருப்பவன்;
நாம் இடர் பட்டால் நம்முடைய கூக்குரல் கேட்டவுடனே சடக்கென ஓடிவந்து நம்மைக் காப்பதற்குப் பாங்காகப்
பெரிய திருவடியை வாஹனமாக வுடையவன் என்கிறார் என்றும் படையாழி புள்ளுர்தி என்பதனால்.

———-

எம்பெருமானுடைய ஸெளலப்ய குணத்தை யறியாதார் ஆருமில்லை யென்கிறார்.

அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன்
பொறி கொள் சிறை யவண  மூர்த்தாயை வெறி கமழும்
காம்பேய் மென் தோளி கடை வெண்ணெய் யுண்டாயைத்
தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு –22-

பதவுரை

பொறி கொள் சிறை–பல நிறங்களையுங்கொண்ட சிறகுகளை யுடைய
உவணம்–கருடாழ்வானை
ஊர்ந்தாய்–ஏறி நடத்தும் பெருமானே!
காம்பு ஏய் மென் தோளி–மூங்கிலை யொத்த மெல்லிய தோள்களை யுடைய யசோதையினாலே
கடை–கடையப்பட்டு
வெறி கமழும்–பரிமளம் வீசப்பெற்ற
வெண்ணெய்–வெண்ணெயை
உண்டாயை–(களவிலே) அமுது செய்த வுன்னை
தாம்பே கொண்டு–(கையில் கிடைத்ததொரு) தாம்பை கொண்டு
ஆர்த்த–கட்டியதனாலுண்டான
தழும்ப–காய்ப்பை (அறிபவன்)
யானேயும் அல்லேன்–நானொருவனே யன்று;
உலகு எல்லாம் அறியும்–உலகத்திலுள்ளாரெல்லாரும் அறிவர்கள்.

“ ஆங்கொருநாள் ஆய்ப்பாடி, சீரார்கலையல்குல் சீரடிச்செந்துவாவாய், வாரார்வனமுலையாள் மத்தாரப்பற்றிக்கொண்டு,
ஏராரிடைநோவ எத்தனையோர்போதுமாய்ச், சீரார் தயிர்கடைந்து வெண்ணெய் திரண்டதனை,
வேரார் நுதல்மடவாள் வேறோர்கலத்திட்டு நாராருறியேற்றி நன்கமைய வைத்ததனைப்,
போரார்வேற்கண் மடவாள் போந்தனையும் பொய்யுறக்கம் ஒராத வன்போல் உறங்கியறிவுற்றுத்,
தாராந் தடந்தோள்களுள்ளளவுங் கைநீட்டி, ஆராத வெண்ணெய் விழுங்கி அருகிருந்த,
மோரார்குடமுருட்டி முன்கிடந்ததானத்தே, ஓராதவன்போல் கிடந்தானைக்கண்டவளும்
வாராத் தான்வைத்தது காணாள் வயிறடித்திங்கு, ஆரார் புகுதுவார் ஐயரிவரல்லால்,
நீராமிது செய்தீரென்றோர் நெடுங்கயிற்றால் ஊரார்களெல்லாருங் காணவுரலோடே,
தீராவெகுளியளாய்ச்சிக்கன ஆர்த்து அடிப்ப” (சிறிய திருமடல்) என்ற திருமங்கை யாழ்வாரருளிச்செயல்
இங்கே பரம போக்கியமாக அநுஸந்திக்கத்தக்கது.

வெண்ணெயுண்ட குற்றத்திற்காக யசோதைப்பிராட்டி உன்னைக்கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டிவைத்திருந்தனால்
உன்னுடம்பு தழும்பேறிக்கிடக்குஞ் செய்தியை நானொருவன் மாத்திரமேயோ அறிவேன், உலகமெல்லா மறியாதோ என்கிறார்.

ஸெளலப்யகுணம் பாராட்டத் தகுந்ததாயினும் பரத்வமுள்ளவிடத்தில் அஃது இருந்தால்தான் பாராட்டத்தகும்;
காஷ்டம், லோஷ்டம் முதலிய குழைச்சரக்குகள் ஸுலபமாயிருந்தாலும் அந்த ஸெளலப்யம் மெச்சத்தக்கதன்று,
அங்குப் பரத்வமில்லாமையால் இப்படியே ஸெளலப்யத்தோடு கூடியிராத பரத்வமும் புகழத்தக்கதன்று;
மேருமலையில் பரத்வ முள்ளதெனினும் அங்கே ஸெளலப்யமில்லாமையால் அப்பரத்வத்தைப் பாராட்டுவாரில்லை.
ஆகையால் ஸெளலப்யத்தோடுகூடின பரத்வமும், பரத்வத்தோடுகூடின ஸெளலப்யமுமே போற்றத்தக்கனவாம்;
இவை யிரண்டுங்கூடி எம்பெருமானிடத்திலுள்ளன என்று காட்ட வேண்டி, “பொறிகொள் சிறையுவணமூர்ந்தாய்!” என்கிறார்,
கருடனை வாஹனமாகக் கொண்டிருத்தல் பரத்வலக்ஷணமென்றுணர்க.
வடமொழியில் கருடனுக்கு ‘ஸுபர்ண;’ என்று பெயர்; அதுவே தமிழில் உவணம் எனச் சிதைந்து கிடக்கின்றது.

வெறிகமழும் என்பது வெண்ணெய்க்கு விசேஷணமாகவுமாம், காம்பேய்மெந்தோளி [யசோதை]க்கு விசேஷணமாகவுமாம்.
காம்பு என்ற பலபொருளொருசொல் இங்கு மூங்கிலெனப் பொருள்படும்;
பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் மூங்கிலைத் தோளுக்கு உவமை கூறுவர்.
உண்டாயை- உண்டான்’ என்பதன் முன்னிலையின் மேல் இரண்டனுருபு ஏறியிருக்கிறதென்க. தழும்பு-வடமொழியில் கிணம் எனப்படும்.

————–

தழும்பு இருந்த சாரங்க நாண் தோய்ந்தவா மங்கை
தழும்பிருந்த தாள் சகடம் சாடி தழும்பிருந்த
பூங்கோதையாள் வெருவப் பொன் பெயரால் மார்பிடந்த
வீங்கோத வண்ணர் விரல் –23-

பதவுரை

வீங்கு ஓதம் வண்ணர்–பொங்கி அலை யெறியுங் கடல் போன்ற வடிவை யுடைய எம்பெருமானது
அம் கை–அழகிய திருக் கைகளில்
சார்ங்கம்–சார்ங்க வில்லினுடைய
நாண்–நாணி
தோய்ந்–உராய்ந்த்தனா லுண்டான
தழும்பு–காய்ப்பானது
இருந்த ஆம்-இருக்கின்றது காண்;
தாள்–திருவடிகளிலே
சகடம் சாடி–சகடத்தை யுதைத்து (அதனாலுண்டான)
தழும்பு இருந்த–காய்ப்பு இருக்கின்றது;
பூங் கோதையாள்–அழகிய மயிர் முடியையுடைய பிராட்டி
வெருவ–(என்ன நேரிடுமோ என்று) அஞ்சும்படியாக மிக்க சீற்றத்துடனே
பொன் பெயரோன்–இரணியாசுரனுடைய
மார்பு இடந்த தழும்பு–மார்பைக் கிழித்தெறிந்த தனாலுண்டான காய்ப்பு
விரல்–விரல்களிலே
இருந்த–இருக்கின்றது.

“தாம்பேகொண்டார்த்த தழும்பு- அறியுமுலகெல்லாம்” என்று கீழ்ப்பாட்டிலருளிச் செய்ததைகேட்ட எம்பெருமான்
‘நான் வெண்ணெய் திருடினதாகவும் அதனால் தழும்பு உண்டாயிருப்பதாகவும் அதனை உலகெல்லாம் அறிவதாகவும்
நீர் சொல்லுவது முழுப்பொய்’ என்று சொல்ல; அதுகேட்ட ஆழ்வார்
‘பிரானே! ஒரு தழும்பாயிருந்தால் உன்னால் மறைக்கமுடியும்; உனது கையிலும் காலிலும் விரலிலுமாக
உன்னுடம்பு முழுதும் ஆச்ரிதர்க்காகச்செய்த ஒவ்வொரு காரியத்தினால் தழும்பேறிக்கிடக்கிறதே!’ என்று
ஸ்ரீராமாவதாரத்திலும் கிருஷ்ணாவதாரத்திலும் நரஸிம்ஹாவதாரத்திலுமாக நேர்ந்த தழும்புகளை
யெடுத்துரைக்கின்றாரிப்பாட்டில்.

மூன்றாமடியில், பூங்கோதையாள் என்று பெரிய பிராட்டியாரைச் சொல்லுகிறது.
அவள் எம்பெருமானுடைய திருமார்பிலே இறையுமகல கில்லாது உறையுமவளாகையாலே,
அப்பெருமான் பெரிய சீற்றத்துடனே உக்ரமான நரசிங்க வுருவைக்கொண்ட போது
‘ஜகத்துக்கே பிரளயம் விளைந்திடுமோ!’ என்று அஞ்சி நடுங்கினளென்க.

கடை நிலைத்தீவகமாக நின்ற வீங்கோதவண்ணர் என்றது- கை தாள் விரல் என்ற மூன்றினோடும் அந்வயிக்கத்தக்கது;
கடல் வண்ணனுடைய கை , கடல்வண்ணனுடைய தாள், கடல்வண்ணனுடைய விரல் என்று.

கை , தாள் விரல் என்பவற்றையே எழுவாயாகக்கொண்டு,
கைகளும் கால்களும் விரல்களும் தழும்பைச் சுமந்திருக்கின்றன் என்று பொருள் கொள்ளவுமாம்.

———-

‘தாம்பால் ஆப்பூண்ட தழும்பு எனக்கு உண்டோ?’ என்ற எம்பெருமானை நோக்கி ஆழ்வார்
‘அஃது ஒரு தழும்புதானா? உடம்பெல்லாம் தழும்பு மயமே காண்’ என்றார் கீழ்ப்பாட்டில்
சார்ங்கநாண் தோய்ந்த தழும்பும், சகடம் சாடின தழும்பும், இரணியன் மார்பிடந்த தழும்பும்
வீரச்செயல்களை விளக்குவன வாதலால் அம்மூன்று தழும்புகளையும் எம்பெருமான் இசைந்துகொண்டு,
* தாம்பாலாப் புண்ட தழும்பு மாத்திரம் பரிஹாஸா ஸ்பதமாயிருக்குமே யென்றெண்ணி அதனை இல்லை செய்யத் தொடங்கினான்;

‘ நான் வெண்ணெய் திருடினது மில்லை, ஆய்ச்சி யென்னைப் பிடித்ததுமில்லை;
உரலோடு சேர்த்து என்னைக் கட்டினதுமில்லை; தழும்பு உண்டானது மில்லை’ என்று எல்லாவற்றையும் மறைத்துப் பேசினான்.

அதற்குமேல் ஆழ்வார் என்ன செய்யக்கூடும்? பிரானே! முழுப்பூசினியைச் சோற்றில் மறைக்க நினைப்பாரைப் போலே செய்த
காரியங்களை யெல்லாம் இப்படி மறைத்துப் பொய் சொல்லுவது தகுதியோ?
“ஸத்யம் வத” என்று மெய்யே சொல்லுமாறு பிறர்க்கு விதிக்கிற நீ பொய் சொல்லலாகுமோ?
வெண்ணெயை விரல்களால் அள்ளியெடுத்து நீ வாயிலே யிட்டுக்கொண்ட போது யசோதை கண்டு உன்னைப் பிடித்துக் கொள்ளவில்லையா?
வெறுமனே கயிற்றினால் உன்னைக் கட்டிவைத்தால் அறுத்துக்கொண்டு போய்விடுவாய் என்று
பெரியவொரு உரலோடே இணைத்துப் பிணைத்து வைக்கவில்லையா? அதனால் நீ நெடும்போது ஏங்கி யேங்கி அழவில்லையா?
அந்த நிலைமையை எத்தனையோ பேர்கள் வந்து காணவில்லையா?
இவை யொன்றும் நடந்ததேயில்லை யென்று உன்னால் மறைக்கமுடியுமா? நீயேசொல் நாயனே!’ என்கிறார்.

விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய்  கண்டு ஆய்ச்சி
உரலோடு உறப் பிணித்த நான்று -குரலோவா
தேங்கி நினைந்த அயலார் காண இருந்திலையே
ஒங்கோத வண்ணா வுரை —24–

பதவுரை

ஓங்கு ஓதம் வண்ணா–ஓங்கிக் கிளர்ந்த கடல் போன்ற வடிவை யுடையவனே!
(நீ வெண்ணெய் திருடி உண்ணும்போது)
விரலோடு வாய் தோய்ந்த–உன் விரலிலும் வாயிலும் படிந்திருந்த
வெண்ணெய்–வெண்ணெயை
ஆய்ச்சி–யசோதை யானவள்
கண்டு–பார்த்து
(உன்னைத் தண்டிக்க வேண்டி)
உரலோடு உற பிணித்த நான்று–உரலோடு சேர்த்துக் கட்டி வைத்த போது
குரல் ஓவாது–நீ கத்துகிற கத்தல் நீங்காமல்
ஏங்கி–ஏங்கிக் கொண்டு
நினைந்து–(அப்போதும் வெண்ணெய் திருடுவதையே) சிந்தித்துக் கொண்டு
அயலார் காண–அயலாரெல்லாரும் வேடிக்கை பார்க்கும்படி
இருந்திலையே–இருந்தாயல்லவோ?
உரை–உண்மையாகச் சொல்லு.

அவாப்த ஸமஸ்தகாமனாய் ஸர்வஜ்ஞனாய் ஸர்வசக்தியுக்தனான நீ ஒரு குறையுள்ளவன் போலவும்,
அந்தக் குறையை நீக்கிக் கொள்ளக் களவு செய்தவன் போலவும், அதற்காகக் கயிற்றினால் கட்டித் தண்டிக்கப்பட்டவன் போலவும்,
அந்தக் கட்டில் நின்று தப்புவதற்கு சக்தியற்றவன்போலவும் கட்டை யவிழ்க்கும் உபாயத்தை உணராதவன் போலவும், இருந்தாயே!
இது என்ன ஆச்சரியம்! என்று ஈடுபட்டவாறு.

ஓங்கோதவண்ணா!” என்ற விளியின் ஆழ் பொருளைப் பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்கிறார் காண்மின்-
“இவனைக் கட்டி வைத்தது ஒரு கடலைத் தேக்கி வைத்தாற்போலே காணும்” என்று.

————–

கீழ்ப்பாட்டில், கண்ணபிரான் ஓயாமல் ஏங்கி யழுத சீல குணத்தை அநுஸந்தித்த ஆழ்வார்,
அவன் ஓயாமல் ஏங்கினது போலவே தாமும் ஓயாமல் அவனுடைய சீல குணத்தைப் பேசுவதில்
உத்ஸாஹங் கொண்டிருப்பதை இப்பாட்டிலருளிச் செய்கிறார்.

உரை மேல் கொண்டு என்னுள்ளம் ஓவாது எப்போதும்
வரை மேல் மரகதமே போலே திரை மேல்
கிடந்தானைக் கீண்டானைக் கேழலாய்ப் பூமி
இடந்தானை யேத்தி எழும்  –25-

பதவுரை

வரை மேல்–ஒரு மலையின் மேலே
மரகதமே போல–மரகதப் பச்சை படிந்தாற்போல
திரை மேல்–திருப்பாற்கடலிலே
கிடந்தானை–சயனித்திருப்பவனும்
கீண்டானை–இரணியனுடலைப் பிளந்தவனும்
கேழல் ஆய்–வராஹ மூர்த்தியாகி
பூமி இடந்தானை–பூமியை உத்தரிப்பித்தவனுமான எம்பெருமானை.
என் உள்ளம்–எனது மனமானது
உரை மேற்கொண்டு–உரைப்பதில் ஊற்றங்கொண்டு
ஓவாது எப்போதும்–இடைவிடாமல் எப்போதும்
ஏத்தி–அப்பெருமானது சரிதைகளைப் (புகழ்ந்து)
எழும்–உஜ்ஜீவிக்கும்.

‘என்னுள்ளம் உரைமேற்கொண்டு ஏத்தியெழும்” என்றதனால் –நெஞ்சு தந்தொழிலாகிய சிந்தனையோடு நில்லாமல்
வாக்கின் தொழிலையும் ஏற்றுகொண்டமை கூறப்பட்டது.
திருவாய்மொழியில் “முடியானே மூவுலகுந் தொழுதேத்தும்” என்ற பாசுரத்தை இங்கே நினைப்பது .
“உரைமேற்கொண்டு” என்பதை ‘மேல் உரை கொண்டு” என்று மாற்றி மேலான சொற்களைக் கொண்டு என்று முரைக்கலாம்.

[வரைமேல் மரகதமேபோலத் திரைமேற்கிடந்தானை.] திருப்பாற்கடலிலே எம்பெருமான் பள்ளிகொண்டிருப்பது-
வெண்ணிறமானதொரு மயிலில் மரகதக்கல்லைப் பதித்தாற் போன்றிருப்பதாக அபூதோபமை கூறப்பட்ட்தென்க.

[கீண்டானை.] ‘இரணியன் பார்வை’ என்பது மூலத்திலில்லை யாயிலும் கீண்டா னென்னும்போதே
‘இரணியன் மார்வு’ ஞாபகத்திற்கு வந்துவிடும்.
இரணியனுடலைக் கீண்டது போலவே, குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியென்னுமஸுரனது வாயைக் கீண்டதும்
பகாஸுரனுடைய வாயைக் கீண்டது முண்டாதலால் அவையும் நினைவுக்குவரின் அவற்றையும் கொள்ளத் தட்டில்லை.
அன்றியே,
“ கேழலாய்க் கீண்டானை இடந்தானை” என்று சேர்த்து வராஹரூபியாய் அண்டபித்தியிலே ஒட்டின பூமியை
அதனின்று ஒட்டு விடுவித்துப் பிறகு கோட்டாற் குத்தியெடுத்தவனை என்று பொருள் கூறுவதும் பொருந்தும்.
“திரைமேற்கிடந்தானைக் கீண்டானை” என்ற சேர்த்தியால்- எம்பெருமான் ‘நம் அடியார்க்கு எப்போது என்ன தீங்கு வருமோ’என்ற
சிந்தனையுடனே சயனித்திருப்ப, துன்புற்ற அடியாரின் கூக்குரல் செவிப்பட்டவுடனே பதறி அத்துன்பத்தைத் தீர்க்க ஏற்றதொரு
திருக்கோலங்கொண்டு இங்குத்தோன்றி ரக்ஷித்தருள்கிறானென்பது விளங்கும்.
இப்படிப்பட்ட எம்பெருமானை எனது நெஞ்சு இடைவிடாது துதித்து உஜ்ஜீவிக்கின்றது என்றாராயிற்று.

————–

கீழ்ப் பல பாசுரங்களில் விபவாவதார சேஷ்டிதங்களைப் பேசி அநுபவித்த ஆழ்வார்,
என்றைக்கோ கழிந்த அவ் வவதாரங்களின் திருக்குணங்கள் இன்றைக்கும் நன்கு விளங்குமாறு
* பின்னானார் வணங்குஞ் சோதியாக ஸேவை ஸாதித்தருள்கின்ற அர்ச்சாவதாரங்களையும் அநுபவிக்க ஆசைகொண்டு,
தென்னனுயர் பொருப்பும் தெய்வவடமலையும் என்னுமிவையே முலையா வடிவமைந்த” என்கிறபடியே
பூமிப்பிராட்டிக்குத் திருமுலைத்தடங்களாகச் சொல்லப்பட்டுள்ள இரண்டு திருமலைகளுள் திருவேங்கடமலையிலே
திருவுள்ளஞ் சென்று அவ்விடத்தைப்பேசி அநுபவிக்கிறாரிப்பாட்டில்.

எம்பெருமானிலுங்காட்டில் எம்பெருமானோடு ஸம்பந்தம்பெற்ற பொருள்களே பரம உத்தேச்யமென்று கொள்ளுகிறவர்களாகையாலே
திருவேங்கடமுடையான் வரையில் போகாமல் அவனுடைய ஸம்பந்தம் பெற்றதான திருமலையோடே நின்று அநுபவிக்கிறார்.

திருமலை எப்படிப்பட்டதென்றால் ப்ரயோஜநாந்தரங்களை விரும்புமவர்களோடு அநந்ய ப்ரயோஜநரோடு வாசியற
எல்லாருடைய வினைகளையும் போக்கிப் பலனைப் பெறுவிக்குமது; இதனையே மூன்றடிகளில் அருளிச் செய்கிறார்.

எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து  வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை –26-

பதவுரை

எழுவார்–(தாங்கள் விரும்பின ஐச்வரியம் கிடைத்தவுடனே எம்பெருமானைக்) கைவிட்டுப் போகின்ற ஐச்வர்யார்த்திகளும்
விடை கொள்வார்–(தாங்கள் விரும்பின கைவல்யமோக்ஷம் கைப்பட்டபின் எம்பெருமானைத் திரும்பிப்பாராமல்)
விடைப்பெற்றுக் கொண்டு போமவர்களான கைவல்யார்த்திகளும்
ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்–இனிய திருத்துழாயை அணிந்தவனான திருமாலை
ஒருநாளும் விட்டு நீங்காதபடி சிந்தித்து எப்போதும் அநுபவிப்பவர்களான முமுக்ஷூக்களுமாகிய
இம் மூவகை அதிகாரிகளுடைய
வினை சுடரை–(அவரவர் வேண்டுகின்ற பலன்களுக்குத் தடையான ) தீவினையாகிய நெருப்பை
நந்துவிக்கும்–அணைக்கின்ற
வேங்கடமே–திருவேங்கடமலையே
வானோர்–நித்ய ஸூரிகளுடைய
மனம் சுடரை–ஹ்ருதயமாகிற விளக்கை
தூண்டும்–தூண்டி ஜ்வலிப்பிக்கின்ற
மலை–மலையாகும்.

எழுவார் என்றால் எழுந்துபோகிறவர்களையும் சொல்லும்; மேன் மேலும் ஆசைப் பெருக்கமுடையவர்களையும் சொல்லும்.
இரண்டு படியாலும், ஐச்வர்யார்த்திகளைச் சொல்லுகிறது இங்கு,
‘எங்களுக்கு ஐச்வர்யத்தைத் தரவேணும்’ என்று பிரார்த்தித்து அது கைப்பட்டதும்
எம்பெருமானைவிட்டு எழுந்துபோகிறவர்கள் என்றாவது,
ஐச்வரியம் வேணுமென்று மேலே மேலே பிரார்த்திக்குமவர்கள் என்றாவது கொள்க.

இவர்களுடைய வினைச்சுடரை நந்துவிக்கையாவது- ஐச்வர்ய ப்ராப்திக்கு விரோதியான பாவங்களைத் தொலைத்து
ஐச்வர்ய விருப்பத்தை நிறைவேற்றுகை.

விடை கொள்வார் என்றால் விட்டு நீங்குகிறவர்கள் என்கை; ஸந்தர்ப்பம் நோக்கி இங்கே கைவல்யார்த்திகளைச் சொல்லுகிறது.
அவர்களுடைய வினைச்சுடரை நந்துவிக்கையாவது –
ஆத்மாநுபவத்திற்கு விரோதியான பாவங்களைத் தொலைத்து கைவல்யா நுபவத்தை நிறைவேற்றுகை.

ஈன்துழாயானை வழுவரவகை நினைந்து வைகல் தொழுகிறவர்கள் – பரமைகாந்திகளான பகவத்பக்தர்கள்;
அவர்களுடைய வினைச்சுடரை நந்துவிக்கையாவது –
மாறி மாறிப் பலபிறப்பும் பிறக்கும்படியான தீவினைகளைத் தொலைத்து முத்தியளிக்கை.

ஆக, வேண்டுவோர் வேண்டின படியே அநிஷ்ட நிவ்ருத்தியையும்
இஷ்டப்ராப்தியையும் செய்விக்கவல்லது திருவேங்கடம் என்றதாயிற்று.

[வினைச்சுடரை நந்துவிக்கும்]- பாவங்களை நெருப்பாக ரூபித்துக் கூறினமைக்கு இணங்க “நந்துவிக்கும்” எனப்பட்டது;
நந்துவித்தல்- (நெருப்பை)அணைத்தல்.

[வானோர் மனச் சுடரைத் தூண்டும் மலை.] –
ஒரு நெருப்பை அணைக்கும்; ஒரு நெருப்பை அபிவிருத்தி செய்யும் என்று சமத்காரமாக அருளிச் செய்கிறார்.
வானோர் மனச் சுடரைத் தூண்டுகையாவது-
பரமபதத்திலே பரத்வ குணத்தை அநுபவித்துக் கொண்டிருக்கிற நித்யஸூரிகளை ,
இங்கு வந்து ஸெளலப்ய ஸெளசீல்யாதி குணங்களை அநுபவிக்குமாறு உத்ஸாஹமூட்டுதலாம்.

திருவேங்கடமலையின் தன்மை இப்படிப்பட்டதென்று அநுஸந்தித்தாராயிற்று

———–

கீழ்ப்பாட்டில் திருவேங்கட மலையை அநுபவித்துப்பேசின ஆழ்வார் பிறகு
திருவேங்கட முடையானையும் ஸேவித்து அவனது திருக்கைகளினழகிலே ஆழங்காற்பட்டார்;

மலையால் குடை கவித்து மாவாய் பிளந்து
சிலையால் மராமரம் ஏழ் செற்று கொலையானைப்
போர்க்கோடு ஒசித்தனவும் பூங்குருந்தம் சாய்த்தனவும்
கார்க்கோடு பற்றியான் கை -27-

பதவுரை

மலையால்–கோவர்த்தன கிரியைக் கொண்டு
குடை கவித்து–குடையாகப் பிடித்தும்,
மா வாய் பிளந்து–குதிரை வடிவங்கொண்டு வந்த கேசி யென்னும் அஸுரனுடைய வாயைப் பிளந்தும்,
சிலையால்–வில்லைக் கொண்டு
மராமரம் ஏழ் செற்று–ஸப்த ஸால விருக்ஷங்களை அழித்தும்,
(இச்செயல்களோடு நிற்காமல்)
கொலை யானை–கொலை செய்வதாக வந்த குவலயா பீடமென்னும் யானையினுடைய
போர் கோடு–சண்டை செய்ய உதவியாயிருந்த தந்தங்களை
ஒசித்தனவும்–பிடுங்கினவையும்.
பூ குருந்தம்–பூ வோடு கூடிய குருந்த மரத்தை
சாய்த்தனவும்–வேரோடே பறித்துத் தள்ளினவையும்
(எவையென்றால்)
கார்–(கம்பீரமாக முழங்குவதில்) மேகத்தை யொத்த
கோடு–சங்கை
பற்றியான்–ஏந்தி யிருக்கின்ற பெருமானுடைய
கை–திருக் கைகளேயாகும்.

திருக் கைகள் மிகவும் ஸுகுமாரமாக இருந்தும் ராமகிருஷ்ணாதியவதாரங்களில் பெரிய வீரச்செயல்களை யெல்லாம்
சிறிதும் வருத்தமின்றிச் செய்தனவே! என்று ஈடுபட்டு,
அத்திருக்கைள் இன்றைக்கும் அந்த வீரப்பாடு தோன்ற விளங்கும்படியை யாவரும் காணலாமென்கிறார்.

ஆக மலையால் குடை கவித்ததும்
மாவாய் பிளந்ததும்
மராமரமேழ் செற்றதும்,
யானைக் கொம்பு பறித்ததும்
பூங்குருந்தம் சாய்த்ததும்
இத் திருக்கைகளே காண்மின் என்று பழைய வீரச் செயல்களை ஸ்மரித்து அநுஸந்தித்தாராயிற்று.

————-

திருவேங்கடமுடையானை நோக்கி உனது திருமேனியிலே அழகும் ஐச்வரியமும் சீலம் முதலிய குணங்களும்
நிழலிட்டுத் தோற்றுகின்றனவே! என்று ஈடுபடுகிறார்.
சங்கும் சக்கரமும் திருக்கைகளிலே உள்ளன என்றதனாலும் மலர்மகள் நின்னாகத்தாள் என்றதனாலும் ஈச்வரத்வம் சொல்லப்பட்டது;
‘கார்வண்ணத்துஐய!’ என்ற விளியினால் அழகு அறிவிக்கப்பட்டது.
பிரமனுக்கும் சிவனுக்கும் முதன்மையுண்டாகுமாறு திருநாபியிலும் திருமேனியின் வலப்பக்கத்திலும்
இடம் கொடுத்திருப்பதைக் கூறுகின்ற பின்னடிகளால் சிலகுணம் தெரிவிக்கப்பட்டது.

கைய  வலம் புரியும் நேமியும் கார் வண்ணத்
தைய மலர்மகள் நின்னாகத் தாள் செய்ய
மறையான் நின்னுந்தியான் மா மதிள் மூன்று எய்த
இறையான் நின்னாகத் திறை ——–28-

பதவுரை

கார் வண்ணத்து ஐய–மேகம் போன்ற வடிவையுடைய பெருமானே
வலம் புரியும்–வலம்புரிச் சங்கமும்
நேமியும்–சக்கரமும்
கைய–என் கையிலுள்ளன;
மலர் மகள்–பெரிய பிராட்டியார்
நின் ஆகத்தாள்–உனது திருமார்பைப் பிரியாதிருப்பவள்;
செய்ய மறையான்–சிறந்த வேதத்தை நிரூபகமாக வுடைய பிரான்
நின் உந்தியான்–உனது உந்திக்கமலத்திலுள்ளான்;
மா மதிள் மூன்று எய்த இறையான்–பெரிய மதிளையுடைய மூன்று பட்டணங்களை முடித்த சிவபெருமான்
நின் ஆகத்து இறை–உனது திருமேனியின் ஏக தேசம்

கைய=கைகளிலே யுள்ளன; ‘கையது’ என்பதன் பன்மை.
வலம்புரி- வலப்பக்கத்தால் சுழிந்திருப்பது. (இதற்கு எதிர்- இடம்புரி.)

சக்கரத்தின் விளிம்பைச் சொல்லுகிற நேமி என்னும் வடசொல் தமிழில் சக்கரத்துக்கும் பேராக வழங்கும்.
ஐய!- அண்மைவிளி .
மலர்மகள் நின்ஆகத்தாள்=” அகலகில்லேனிறையுமென்று அலர்மேல் மங்கையுறை மார்பன்” திருவேங்கடமுடையானிறே.
பிரமன் நான்கு முகங்களாலும் நான்கு வேதங்களையும் எப்போதும் ஓதிக்கொண்டிருப்பதனாலும்,
வேதங்களே எனக்குச் சிறந்த கண்; வேதங்களே எனக்குச் சிறந்த செல்வம்” என்று சொல்லுவனாதலாலும்
செய்ய மறையானெனப்பட்டான்.

இறையான்– ஈச்வரனாகத் தன்னை அபிமானித்திருக்கிற ருத்ரன் என்கை.
நின்ஆகத்து இறை–‘இறை’ என்பதற்குப் பல பொருளுண்டு;
உனது திருமேனியிலே சிவன் அற்ப பாகமாக அமைந்திருக்கிறானென்றவாரு.
திருவாய்மொழியில் “ ஏறாலுமிறையோனும் திசைமுகனும் திருமகளும் கூறாளுந்தனியுடம்பன்” [4-8-1] என்ற பாட்டின்
இருபத்தினாலாயிரப்படி வியாக்கியானத்தில்-
‘தபஸா தோஷிதஸ் தேந விஷ்ணுநா ப்ரபவிஷ்ணுநா ஸ்வபார்ச்வே தக்ஷிணே சம்போ: நிவாஸ: பரிகல்பித:”
என்றெடுத்துக் காட்டப்பட்டுள்ள பிரமாண வசனம் இங்கு அநுஸந்திக்கத்தகும்.
[இதன்பொருள் பரமசிவன் தவம் புரிந்ததனால் திருவுள்ளமுவந்த ஸ்ரீமஹாவிஷ்ணு தனது வலப்பக்கத்திலே
அவனுக்கு இடம் கற்பித்துத்தந்தருளினனென்பதாம்.]

————

நித்யவிபூதி யென்னப்படுகிற பரமபதத்திற்கும் லீலாவிபூதியென்னப்படுகிற ஸம்ஸாரமண்டலத்திற்கும்
நாதனாய்க்கொண்டு உபயவிபூதி நாதனென்று பேர் பெற்றிருக்குமெம்பெருமான் தன்பெருமையை நினைத்து மேனாணித்திருப்பவனல்லன்;
அடியவர்கள் துன்புறுங்காலத்து நேரில் ஓடிவந்து காத்தருளும்படியான வாத்ஸல்யகுண முடையவன்காண் என்று
தம் திருவுள்ளத்துக்கு உபதேசிக்கிற முகத்தால் எம்பெருமானது மேன்மையையும் வெளியிடுகிறார்.

இறையும் நிலனும் இரு விசும்பும் காற்றும்
அறை புனலும் செந்தீயும் ஆவான் பிறை மருப்பின்
பைங்கண் மால் யானை படு துயரம் காத்தளித்த
செங்கண் மால் கண்டாய் தெளி -29-

பதவுரை

இறையும்–ஸ்ரீவைகுண்ட நாதனாயும்
நிலனும் இருவிசும்பும் காற்றும் அறை புனலும் செம்தீயும் ஆவான்–பூமியென்ன பரவிய ஆகாச மென்ன வாயுவென்ன
அலை யெறிகிற ஜலமென்ன சிவந்த நிறமுள்ள அக்நியென்ன ஆகிய பஞ்ச பூதங்களினாலாகிய
லீலா விபூதியையுடையவனாயுமிருக்கிற எம்பெருமான்,
பிறை மருப்பின்–பிறை போன்ற தந்தத்தை யுடையதும்
பைங்கண்–பசுமை தங்கிய கண்களை யுடையதுமான
மால் யானை–பெரிய கஜேந்திரனை
படு துயரம்–(முதலையின் வாயிலே அகப்பட்டுப்) பட்ட துக்கத்தில் நின்றும்
காத்து அளித்த–ரக்ஷித்தருளின
செம் கண் மால் கண்டாய்–புண்டரீகாக்ஷனான பெருமான் காண்;
தெளி–[நெஞ்சே!] நீ இதனைத் தெரிந்துகொள்.

இறை என்று ஸ்வாமிக்குப் பெயர்; “ வீற்றிருந்தேழுலகும் தனிகோல் செல்ல வீவில்சீர், ஆற்றல் மிக்காளுமம்மான்” என்றபடி:
பரமபதத்தில் ஸர்வஸ்வாமித்வம் தோன்றுமாறு எழுந்தருளியிருக்கிற ஸ்ரீவைகுண்ட நாதத்வம் இங்கே விவக்ஷிதம்.
ஆகவே, இறை யென்றது இங்கே நித்யவிபூதிநாதனைச் சொன்னபடி.
நிலனும் என்று தொடங்கிச் செந்தீயுமாவான் என்ற வளவால் லீலாவிபூதி நாயகத்வம் சொல்லப்படுகிறது;
பஞ்சபூதங்களினாலாகிய பதார்த்தங்கள் நிறைந்தவிடமே லீலாவிபூதியாதலால் பஞ்ச பூதங்களையிட்டு அருளிச்செய்தாரென்க.

“இறையும்“ என்ற உம்மைக்குச் சேர (இரண்டாமடியில்) “ஆவான்” என்ற விடத்திலும் உம்மை கூட்டிக்கொள்ளவேணும்; ஆவானும் என்க.
ஆக இவ்வளவால் – உபய விபூதி நாதனாயிருக்கும் பெருமையையுடையவனா யிருந்தாலும் என்றதாயிற்று .

இதற்குப் பிரதிகோடியான நீர்மையைப் பின்னடிகளில் அருளிச்செய்கிறார்.
முதலைவாய்க் கோட்பட்ட கஜேந்திராழ்வான் துயரை அரைகுலையத் தலைகுலைய ஓடிவந்து காத்தருளினது பிரசித்தம்.

[பிறைமருப்பின் பைங்கண்மால்யானை]
யானைக்கு வெளுத்த தந்தமிருப்பதும் பசுமை தங்கிய கண்களிருப்பதும் அதிசயமான விஷயமன்றே;
இதைச்சொல்லி வருணிப்பதற்குப் பிரயோஜன மென்னெனில்;- ஒரு குழந்தை கிணற்றில் விழுந்துபோக,
அதனையெடுத்துக்கரையிலே போட்டவர்கள் ‘அந்தோ! இதொரு காலழகும் இதொரு கையழகும் இதொரு முகவழகும் என்ன!’ என்று
சொல்லிச் சொல்லி மாய்ந்து போவர்களன்றோ; அப்படியே எம்பெருமானும் யானையின் காலை முதலைவாயினின்றும் விடுவித்தபின்
அதனுடைய தந்தத்தினழகிலும் கண்ணினழகிலும் ஆழ்ந்து கரைந்தமை தோற்ற
அந்த பகவத் ஸமாதியாலே ஆழ்வார் யானையை வருணிக்கின்றாரென்க.

பசுமை + கண், பைங்கண். கண்டாய் – முன்னிலையசைச்சொல்.
இப்பாட்டில் நெஞ்சமே!’ என்கிற விளி வருவித்துக் கொள்ள வேண்டும்.

—————-

ஆழ்வாரை நோக்கிச் சிலர் ‘உம்முடைய நெஞ்சுபோலே எங்களுடைய நெஞ்சு பகவத் விஷயத்திலே
ஊன்றப் பெறவில்லையே, இதற்கு என்ன காரணம்?’ என்று கேட்க;
அவர்கட்கு உத்தரமாக அருளிச்செய்வது போலும் இப்பாட்டு.

தெளிதாக உள்ளத்தைச் செந்நிறீஇ ஞானத்
தெளிதாக நன்குணர்வார் சிந்தை எளிதாகத்
தாய் நாடு கன்றே போல் தண்  துழாயான் அடிக்கே
போய் நாடிக் கொள்ளும் புரிந்து ——30-

பதவுரை

உள்ளத்தை–மனத்தை
தெளிது ஆக–[ஐம்புலன்களில் மேய்வதனாலுண்டான கலக்கம் நீங்கித்] தெளிவையுடைய தாம்படி
செம் நிறீஇ–செவ்வனே நிறுத்தி [எம்பெருமானிடத்தில் மனத்தை மூட்டி]
ஞானம்–பகவத் விஷய பக்தியாலே
தெளிது ஆக–‘அவன் தலைவன் நாம் அடிமை’ என்கிற தெளிவு உண்டாகும்படி
நன்கு–நன்றாக
உணர்வார்–அறிபவர்களுடைய
சிந்தை–மனமானது.
எளிது ஆக–வருத்தமில்லாமல்
தாய்நாடு கன்றேபோல்–[பெரிய பசுக்கூட்டத்தினிடையே] ‘தன் தாயைத் தேடிக் கொண்டு கிட்டுகிற கன்றைப்போல,
தண் துழாயான் அடிக்கே–குளிர்ந்த திருத்துழாய் மாலையை யணிந்த எம்பெருமானது திருவடிகளையே
புரிந்து–விரும்பி
போய் நாடிக் கொள்ளும்–தானே சென்று தேடிச் சேரும்.

பட்டிமேய வொண்ணாதபடி மனத்தை யடக்கி எம்பெருமானோடு தமக்குள்ள உறவை அறிந்திருப்பவர்களின் மனமானது
மற்றெவரையும் பற்றாமலும் ஐம்புலன்களிலும் செல்லாமலும் அவ்வெம்பெருமானையே பதறிக்கொண்டு
மிக்க ஆவலுடன் சென்று கிட்டும்;
ஒரு கன்றுக்குட்டியானது பல்லாயிரம் பசுக்களின் திரளினுள்ளே தனது தாயைக் கண்டுபிடித்துக் கொள்வது
எப்படியோ அப்படியே இதுவும் . இதற்கு ஸம்பந்தவுணர்ச்சியே காரணம்.
ஸம்பந்த ஜ்ஞான மில்லாதவர்களுக்கு ஒருநாளும் எம்பெருமானைக் கிட்டுதல் ஸாத்யமன்று;
அஃது உள்ளவர்களுக்கு அது மிகவும் ஸுலபம் என்றாராயிற்று.

மூன்றாமடியில் “ அடிக்கே” என்றும் “அடியே” என்றும் பாடபேதங்கள் …

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி- பாசுரங்கள் -11-20- -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

August 16, 2021

[வாயவனையல்லது.] எம்பெருமான் ஆச்ரிதரை ரக்ஷிப்பதிலும் கொடியவர்களைத் தண்டிப்பதிலும்
தீக்ஷிதனாயிருக்கின்றான் என்கிற திருக்குணங்களிலே யீடுபட்டுத்
தம்முடைய இந்திரியங்கள் அவன் திறத்தே அவகாஹிக்கும்படியைப் பேசுகிறாரிதில்.

வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை யுலகம்
தாயவனை அல்லது தாந்தொழ  பேய் முலை நஞ்
சூணாக வுண்டான் உருவோடு பேர் அல்லால்
காணாக் கண் கேளா செவி —11-

பதவுரை

வாய்–எனது வாயானது
அவனை அல்லது–ஸர்வேச்வரனைத் தவிர
வாழ்த்தாது–(மற்றொன்றைப்) புகழாது;
கை தாம்–கைகளானவை
உலகம் தாயவனை அல்லது தொழா–உலகங்களைத் தாவி யளந்து கொண்ட
திரு விக்கிரமனை யல்லது வேறொருவனைத் தொழ மாட்டா;
பேய் முலை நஞ்சு–பேயான பூதனையின் முலைகளில் தடவியிருந்த விஷத்தை
ஊண் ஆக–உணவாக
உண்டான்–அமுது செய்த கண்ண பிரானுடைய
உருவொடு பேர் அல்லால்–திருமேனியையும் திருநாமத்தையு மல்லது (மற்றெதையும்)
கண் கணா செவி கேளா–கண்கள் காணமாட்டா; காதுகள் கேட்க மாட்டா.

உலகம் தாயவன் என்றதனால் ஆச்ரிதரை ரக்ஷிப்பதில் தீக்ஷிதனென்பதும்,
பேய் முலை நஞ்சு ஊணாகவுண்டா னென்றதனால் கொடியவர்களைத் தண்டிப்பதில் தீக்ஷிதனென்பதும்
தெரிவிக்கப்பட்டன வென்க.

மூன்றாமடியில், உருவொடு- உருயையும் என்றபடி.
உருவை யல்லால் கண் காணா பேரை யல்லால் செவி கேளா என்று அடைவே அந்வயிப்பது.
இது- முறைநிரனிறைப் பொருள்கோள்.

————-

[செவி வாய் கண்.] ‘நமக்கு உபாயமு உபேயமும் எம்பெருமானே யாவன்’ என்கிற சாஸ்த்ரார்த்தம்
பலர்க்கும் தெரியுமாயினும் பக்தி முதலானவற்றையும் எம்பெருமானைப் பெறுகைக்கு உபாயமாகச் சிலர் ப்ரமித்திருப்பர்கள்.
அந்தோ! இப்படியும் சில மஹான்களுங்கூட மயங்கியிருக்கிறார்களே! என்று ஆழ்வாரிரங்குகிறாரிப்பாட்டில்.

செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செந்தீ
புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத்
ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே
ஏனமாய் நின்றார்க்கு இயல்வு —12-

பதவுரை

ஏனம் ஆய் நின்றாற்கு–வராஹாவதாரம் செய் தருளித் தானே காரியங்களை கடத்துகிற பெருமானைப் பெறுவதற்கு
(இயல்வு ஏற்ற ஸாதனமாவது-,)
செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும்–செவி தொடக்கமாகச் சொல்லப்படுகிற ஞானேந்திரியங்கள் ஐந்தும்
செம் தீ புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும்–தேஜஸ் முதலான பஞ்ச பூதங்களினாலியன்ற தேஹமும்
அவியாத ஞானமும்–(இந்தக் கரண களேபரங்களாலே ஸாதிக்கப் படுவதாய்) இடை விடாது எம்பெருமானைச் சிந்திப்பதான பக்தியும்
வேள்வியும்–அந்த பக்தி உண்டாகி வளர்வதற்குக் காரணமான அக்நிஹோத்ரம் முதலிய சடங்கும்
நல் அறமும்–(நாடோறும் பக்தியை வளர்க்கக் கடவதான) விவேகம் முதலிய நற்குணங்களும்
இயல்வு என்பரே–ஸாதனங்கள் என்று சொல்லுகிறார்களே (இது தகுதியோ? என்றவாறு)

ஆபத்து நேரிடும்போது, தானே வந்து பாதுகாப்பவனன்றோ எம்பெருமான் என்ன வேண்டி ஏனமாய் நின்றாற்கு என்கிறார்.
* மாசுடம்பில் நீர்வாரா மானமிலாப் பன்றியாய்த் திருவவதரித்து அரியன செய்ததெல்லாம் தன்னுடைய
நிர்ஹேதுக கிருபையாலேயன்றி வேறொரு உபாயத்தை எதிர்பார்த்தன்றே என்று குறிப்பித்தவாறு.

இப்பாட்டின் முதலடியில் இந்திரியங்கள் ஐந்தையும் இரண்டா மடியில் பஞ்ச பூதங்களையும் சொல்லி யிருப்பதன் கருத்தாவது-
இந்திரியங்களோடு கூடினதாய்ப் பஞ்ச பூதங்களால் இயன்றதான சரீரத்தைச் சொன்னபடி.
சரீரத்தை மோக்ஷஸாதநமாக ஆரும் சொல்லவில்லையே யெனில்;
அவியாத ஞானம் என்பதனால் சொல்லப்பட்ட பக்திரூபாபந்ந ஜ்ஞானமானது கரண களேபர ஸாத்யமாகையாலே
கரண களேபரங்களுக்கும் பரம்பரையா மோக்ஷ ஸாதநத்வம் சொல்லக்கூடு மென்றுணர்க.

அக்நி ஹோத்ரம் முதலிய வேள்விகளும் விவேகம் தயை ஸத்யம் முதலிய நற்குணங்களாகிற நல்லறமும்
ஸாக்ஷாத் மோக்ஷ ஸாதனமாகக் கொள்ளப்படுகின்றனவோ வென்னில்;
அவையும் பக்தி உண்டாகி வளர்வதற்குக் காரணங்களாக சாஸ்த்ரங்களில் சொல்லப்படுகையாலே
அவற்றுக்கும் பரம்பரயா மோக்ஷ ஸாதநத்வமே சொல்லகூடும்.

ஆகவே, இப்பாட்டில் அவியாத ஞான மென்று சொல்லப்பட்ட பக்தி யொன்றே மோக்ஷோபாயமாக வழங்கக் கூடியது.
எம்பெருமானுக்கே நிரபேஷ உபாயத்வம் கொள்ளுகிற ஆழ்வார் திருவுள்ளத்தாலே
அந்த பக்தி யுபாயத்வமும் கழிக்கப்பட்டுகின்றது. என்பரே! என்ற ஏகாரம் இதனை காட்டும் .

இனி என்பரே என்றவிடத்து ஏகாரத்தை அசையாகக்கொண்டு
‘பகவத் ப்ராப்திக்கு பக்தியை உபாய மென்பர்’ என்று சொல்லிவிடுவதாக உரைப்பாரு முண்டு, இயல்வு- உபாயம்.

———-

[இயல்வாக] எம்பெருமான் திருவடிகளிலே நித்ய கைங்கரியம் செய்வதற்கு தக்க யோக்யதை யுடையவர்கள் நித்ய ஸூரிகளேயன்றோ,
ஸம்ஸாரிகளான நமக்கொல்லாம் அப்பெருமானைப் பணிந்து உய்தற்கு உரிய விரகு உண்டோ? என்று ஒரு சங்கை உதிக்கக்கூடுமே;
அதற்கு உத்தரமாக அவதரித்த பாசுரம் இது.

இயல்வாக யீன் துழாயான் அடிக்கே செல்ல
முயல்வார் இயல் அமரர் முன்னம் -இயல்வாக
நீதியால் ஓதி நியமங்களால் பரவ
ஆதியாய் நின்றார் அவர் –13–

பதவுரை

ஈன் துழாயான் அடிக்கே செல்ல இயல்வு ஆக–அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ள எம்பெருமானது திரு வடிகளில் கிட்டுதற்குத் தகுதியாக
முன்னம்–அநாதி காலமாக
முயல்வார்–முயற்சி செய்பவர்கள்
(யாரென்றால்)
இயல் அமரர்–யோக்யதையுள்ள நித்ய ஸூரிகளேயாவர்;
(நம் போன்றவர்களும் அவனை இழக்க வேண்டாதபடி)
இயல்வு ஆக–பொருத்தமாக
நீதியால் ஓதி–முறைமை தவறாமல் வேதத்தை அத்யயனம் செய்து
நியமங்களால் பரவ–(அந்தவேதத்தின் பொருளை உணர்ந்து அதிற் சொன்ன நியமங்களோடே தன்னைத் துதி செய்யுமாறு
அவர்–அந்த எம்பெருமான்
ஆதி ஆய் நின்றார்–முற்பட்டு ஸித்தராக இருக்கின்றார்.

நித்ய ஸூரிகள் தாம் எம்பெருமான் திருவடிகளிலே ஆழ்ந்திருப்பவர்; இருக்கட்டும்;
ஸம்ஸாரிகளுக்கு பகவத் ஸமாச்ரயண யோக்யதையே கிடையாதென்று கொள்ள இடமில்லை
ஸம்ஸாரிகளும் வேதங்களை யோதி அவற்றின் பொருள்களைத் தெரிந்து கொண்டு படிப்படியாகத் திருந்தி
எம்பெருமானை வந்து கிட்டும்படியாக அப்பெருமான் தானே மூல ஸுக்ருதமாக அமைந்திரா நின்றானென்கிறார் .

இப்படியருளிச்செய்வதன் கருத்து யாதெனில்; எம்பெருமானை யடைவதாகிற காரியம் சேதநருடைய தலையிலே கிடப்பதன்று; .
“எதிர்சூழல்புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய, விதி சூழ்ந்ததா லெனக்கே லெம்மான் திரிவிக்கிரமனையே” என்கிறபடியே
நெடுநாளே பிடித்து ஸம்ஸாரியைப் பெறுவதற்கு அப்பெருமான்தானே பலவகையான க்ருஷிகளைப் பண்ணிக் கொண்டிருக்கிறான் என்றவாறு.

“ஆதியாய் நின்றாரவர்” என்றதன் கருத்து இதுவே. ஸ்ரீ வேதாந்த தேசிகனும் இதனையே திருவுள்ளம்பற்றி
ஸ்ரீ ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே “ நிதாநம் தத்ராபி ஸ்வய மகில நிர்மாண நிபுண:’ என்றருளிச் செய்தா ரென்றுணர்க.

———-

அவரவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி
இவர் இவர் எம்பெருமான் என்று சுவர் மிசைச்
சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகளந்த
மூர்த்தி யுருவே முதல் –14-

பதவுரை

அவர் அவர்–ராஜஸரும் தாமஸருமாகிய சில அதிகாரிகள்
தாம் தாம் அறிந்த ஆறு ஏத்தி–(தங்களுடைய ரஜஸ் தமோ குணங்களுக்குத் தக்கபடி) தாங்கள் எப்படி அறிந்திருக்கிறார்களோ அப்படி வாய்விட்டுப் புகழ்ந்து
இவர் இவர் எம்பெருமான் என்று–தாங்களறிந்த சில தேவதாந்தரங்களையே கடவுளாகச் சொல்லிக் கொண்டு
சுவர்மிசை சார்த்தியும்–சுவரிலே சித்திர ரூபமாக எழுதியும்
வைத்தும்–பிரதிமையாக ஆங்காங்கு ஸ்தாபித்தும்
தொழுவர்–தொழுகின்றார்கள்;
(எவர் என்ன செய்தாலும்)
உலகு அளந்த மூர்த்தி–(எல்லாத் தெய்வங்களும் தன் காலின் கீழே அடங்கும்படி) உலகங்களை யளந்த ஸ்வாமியினுடைய
உருவே–திருமேனி யொன்றே
முதல்–முக்கியமானது

[அவரவர்தாந்தாம்.] கீழ்ப்பாட்டில் “ஆதியாய் நின்றாரவர் என்றதை விவரித்துப் பேசுகிறது இப்பாட்டு.
உலகத்திலுள்ள ஜனங்கள் ஒவ்வொரு தெய்வங்களைப் பரதேவதையாகக் கொண்டு தாம் தாம் கற்ற சொற்களைக் கொண்டு
அத்தெய்வங்களைத் துதித்து விக்ரஹாராதநம் விசேஷ மென்றறிந்து சுவர்களிலே சித்திர ரூபமாக
அத்தெய்வங்களை யெழுதியும் லோஹமய பிம்பங்களாக ஆலயங்களில் பிரதிஷ்டை செய்தும் தொழா நின்றார்களாகிலும்,
அம்மன் பிடாரி முதற்கொண்டு சிவன் முடிவாகவுள்ள தெய்வங்களுக்கெல்லாம்
ஸ்ரீமந்நாராயணமூர்த்தியே பிரதான தேவதையாம் என்றாராயிற்று.
கீழ்ப்பட்ட தெய்வங்களுக்கெல்லாம் எம்பெருமானை ஆச்ரயித்தே ஸத்தை பெறவேண்டும்படி அவனே முழுமுதற் கடவுள் என்கை.

அவரவர் என்ற சுட்டு – அவர்களின் குணக்குறைவைக் காட்டும். ஸத்வகுண பூர்த்தியில்லாத ஜனங்களெல்லாம் என்றபடி.
தாந்தாமறிந்தவாறாவது- சாஸ்த்ரங்களையும் சிஷ்டா சாரங்களையுங்கொண்டு அறியகில்லாமல்
தங்களுடைய ராஜஸ தாமஸபுத்திகளுக்கு எட்டியவாறு.

இப்பாட்டில் ஸ்ரீமந் நாராயணனை ‘உலகளந்தமூர்த்தி’ என்ற திருநாமத்தால் குறிப்பிட்டது கருத்தோடு கூடியதாம்;
புருஷோத்தமனான எம்பெருமானை விட்டு க்ஷூத்ர தெய்வங்களைப் பணிகின்ற ஸம்ஸாரிகளோடு அத்தெய்வங்களோடு வாசியின்றியே
எல்லாரும் தன்னுடைய திருவடியின் கீழே துகையுண்ணுமாறு உலகங்களை வியாபித்தவனென்று சொல்லுமாற்றால்
இவனே முழுமுதற் கடவுளென்று மூதலித்தாராய்த்து.
மூர்த்தி- ஸ்வாமி.

———-

முதலாவார் மூவரே அம்மூவருள்ளும்
முதலாவான் மூரி நீர் வண்ணன் -முதலாய
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப்
பல்லார் அருளும் பழுது ——–15-

பதவுரை

(உலகத்தில் பலபல தெய்வங்கள் வழங்கப்பட்டாலும்)
மூவரே–ஸ்ருஷ்டி ஸ்திதி (ஸம்ஹாரங்களுக்கு உரியவரான) பிரமன் விஷ்ணு ருத்ரன் என்கிற மூவருமே
முதல் ஆவார்–முக்கியரான தேவர்களாவார்;
அம்மூவர் உள்ளும்–அந்த த்ரிமூர்த்திகளுக்குள்ளே
மூரி நீர் வண்ணன்–கடல் வண்ணனாகிய திருமாலே
முதல் ஆவான்–தலைவனாயிருப்பவன்;
முதல் ஆய–உலகுக்கெல்லாம் காரண பூதனும்
நல்லான்–நற் குணங்களமைந்தவனுமான அப்பெருமானுடைய
அருள் அல்லால்–கிருபையானது நன்மையை விளைக்குமே யொழிய
நாமம் நீர் வையகத்து–கடல் சூழ்ந்த இப்பூமியில்
பல்லார்–அத் திருமால் தவிர மற்றும் பலருடைய
அருளும்–தயையும்
பழுது–பயனற்றதாம்

[முதலாவார்.] கீழ்ப்பட்டில் “உலகளந்த மூர்த்தி யுருவே முதல்” என்றருளிச்செய்த ஆழ்வாரை நோக்கிச் சிலர்
‘கீழ்ப்பட்ட தெய்வங்களென்று உம்மால் கூறப்படுகின்ற தெய்வங்களும் தம்மைத் தொழுகின்றவகளுக்குப்
பலன்களை யளிக்கக் காண்கிறோமே; அவர்களது அருளைப் பலரும் பெற்று வாழ்கின்றனரன்றோ என்று கூற,
அவர்களுக்கு விடை யளிக்கிறாரிப்பாட்டில்.

தெய்வம் தெய்வமென்று நாட்டிலே பலர் வழங்கப்படினும், படைத்தல் காத்தல் அழித்தல் என்கிற மூன்று தொழில்களுக்கும்
கர்த்தாக்களாக ஏற்பட்ட ப்ரஹ்மா விஷ்ணு ருத்ரன் என்ற மூவருமே முதன்மைபெற்ற தேவர்களாவார்;
அந்த த்ரிமூர்த்திகளுக்குள்ளே கடல் வண்ணனாகிய ஸ்ரீமந்நாராயணனே தலைமை பெற்றிருப்பவன்.
ஸகல ஜகத் காரண பூதனாய் எல்லாரிடத்திலும் வாத்ஸல்யம் நிறைந்தவனான அந்தத் திருமாலின் திருவருள்
நன்மையைத் தருமேயொழிய வேறு எந்த தெய்வத்தினருளும் சாச்வதமான நன்மையை நல்க மாட்டாது;
அவ்வருளைபெற நினைப்பது வீணேயாகும் என்றாராயிற்று.
க்ஷூத்ர தெய்வங்களின் அருள் க்ஷூத்ர பலன்களுக்கே காரணமாவதனாலும்
பரமபுருஷனுடைய பேரருள் ஒப்புயர்வற்ற அழிவில்லாத பேரின்பத்தைப் பெறுவிக்கக் காரணமாவதனாலும்
‘முதலாய நல்லானருளே நன்று, பல்லாரருளும் பழுது’ என்னத் தட்டில்லை யென்க.

———–

[பழுதேபலபகலும்.] கீழ்ப்பாட்டில் முதலாய நல்லானருளல்லால் …. பல்லாரருளும் பழுது” என்றருளிச் செய்த ஆழ்வார்
அவ்வெம்பெருமானுடைய அருள் தம்மிடத்தில் நெடுங்காலம் பயன்படா திருந்ததை நினைத்து,
‘அந்தோ! நெடுங்காலம் பாழாய்ப் போய்விட்டதே!’ என்று அநுதாபப் படுகிறாரிதில்.

பழுதே பலபகலும் போயினவென்று அஞ்சி
அழுதேன் அரவணை மேல் கண்டு தொழுதேன்
கடலோதம் காலலைப்பக் கண் வளரும் செங்கண்
அடலோத வண்ணரடி———16–

பதவுரை

கடல் ஓதம்–கடலலையானது
கால்–தன் திருவடி வாரத்திலே
அலைப்ப–(துடைதட்டி உறங்கச் செய்வது போல) வீச
கண் வளரும்–யோக நித்திரை செய்கின்ற
செம்கண்–செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையவரும்
அடல் ஓதம் வண்ணர்–அநுபவிக்க இழிந்தவர்களை அநுபவிக்க வொட்டாமல் அடர்கின்ற செளந்தரியமாகிற
அலைகளோடு கூடிய வடிவையுடையவருமான பெருமாளுடைய
அடி–திருவடிகளை
அரவு அணை மேல்–சேஷ சயனத்தின் மீது
கண்டு தொழுதேன்–கண்ணாரக் கண்டு (இன்று) ஸேவிக்கப் பெற்ற அடியேன்
பல பகலும்–“கீழ்க்கழிந்த கால மெல்லாம்
பழுதே போயின என்று–(இவ்விதமாகக் கழியாமல்) வீணாகக் கழிந்தனவே!” என்று
அஞ்சி அழுதேன்–மிகவும் சோகமுற்றுக் கிடக்கின்றேன்.

இப்பாட்டில், இறந்தகாலத்தைப் பற்றி வருத்தமும் நிகழ்காலத்தைப் பற்றி மகிழ்ச்சியும் எதிகாலத்தைப்பற்றி அச்சமும்
ஆக மூன்றுகாலங்களைப் பற்றின மூன்று விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. (எங்ஙனே யெனின்?)
“கடலோதம் காவலைப்பக்கண்வளரும் செங்கணடலோத வண்ணரடியை அரவணை மேல் கண்டு (இன்று) தொழுதேன்”
என்றமையால் நிகழ்காலத்தில் பகவத்ஸேவை வாய்க்கப்பெற்ற ஆநந்தம் வெளியிடப்பட்டதாயிற்று;

“பழுதே பலபகலும் போயினவென்று அழுதேன்” என்றமையால், கீழ்க்கழிந்த அநாதிகாலமெல்லாம் இவ்விதமாக
ஆநந்தமயமாய்க் கழியவில்லையே யென்கிற வருத்தம் காட்டப்பட்டது”,

“அஞ்சியழுதேன்” என்றமையால் – இனிமேல் வரப்போகிற காலமும் கீழ்க்கழிந்த காலம்போலே
வீணாகக்கழிந்து விடுமோ வென்கிற அச்சம் காட்டப்பட்டது.

“கண்டு தொழுதேன்” என்னப்பெற்ற பின்பு எதிர்கால நிலைமைக்கு அஞ்ச வேண்டுவானேன்? என்னில்;
தாம் இருப்பது இருள் தருமாஞாலத் திலாகையாலே
“விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறுமைம்புலனிவை. மண்ணுளென்னைப் பெற்றால் என் செய்யா?” என்கிறபடியே
இந்த லீலா விபூதியின் ஸ்வபாவத்தை நினைத்து அஞ்சாதிருக்க முடியாதிறே.
பரம பக்தனாயிருந்த ப்ரஹ்லதழ்வானையுமன்றோ ஒருகால் எதிரியாக்கிற்று இம்மண்ணுலகம்
”ஆற்றங்கரை வாழ்மரம்போ லஞ்சுகின்றேன்” என்றாரே திருமங்கையாழ்வாரும்.

கீழ் ஆறாம்பாட்டில் “ ஒன்று மறந்தறியேன் ஓதநீர்வண்ணனை நான்” என்றும்
“அன்று கருவரங்கத்துக்கிடந்து கைதொழுதேன் கண்டேன்” என்றும் கர்ப்பவாஸ காலம் முதற்கொண்டே தாம்
பகவத் விஷய ப்ரவணராயிருப்பதாகச் சொல்லிக் கொண்ட இவ்வாழ்வார் இங்கே
பழுதே பலபகலும் போயினவென்று அழுவதாகச் சொல்லிக்கொள்வதேன் என்னில்;
இப்பிறவிக்கு முன்னே மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து போந்த காலங்களில் நாள்கள் பலவும் பழுதாயினவே யென்று வருந்துகிறபடி.
இப்பிறவியிலும் ஆதியே பிடித்து இங்ஙனே பாசுரம் பேசி அநுபவிக்க ப்ராப்தியிருந்தும்
கீழே பல நாள்கள் பாழாயினவேயென்று வருந்துவதாகக் கொள்ளவுமாம்.

பேயாழ்வார் -சென்றநாள் செல்லாத செங்கண்மாலெ கண்மாலென்ற நாள் எந்நாளும் நாளாகும்” என்கிறார்;
(அதாவது) நிகழ்கால நிலைமை நன்றாயிருக்கப் பெற்ற ஆனந்த மிகுதியினால் இறந்தகால எதிர்கால நிலைமைகளிற்
கவலையற்று எல்லாக் காலமும் எனக்கு நல்ல காலமே யென்றார்; அஃதொரு சொற் சமத்கார விசேஷமென்க.

அடலோத வண்ணர்= ஓதம் என்று கடலுக்கும் அலைக்கும் பெயர்; இவ்விடத்தில் அலை என்னும் பொருள் விவக்ஷிதம்;
அதாவது திருமேனியிலே பரவுகின்றலாவண்ய தரங்கங்களைச் சொன்னபடி.
அநுபவிக்க வருமவர்களை அடர்த்துத் தள்ளுகிற லாவண்ய தரங்கங்களோடு கூடிய திருமேனியையுடையவர் என்ற தாயிற்று.

————-

[அடியும்படிகடப்ப.] கீழ்ப்பாட்டில் “பழுதே பல பகலும் போயின”என்றருளிச் செய்ததையே விவரிக்கிறது இப்பாட்டு.
இப்போது ஒரு மனிதனாகப் பிறந்திருக்கிற நான் திடீரென்று பிறந்துவிடவில்லை;
ஜீவாத்மாவுக்குப் புதிதாக ஸ்ருஷ்டியென்பது இல்லை யாகையால் “மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து” என்கிறபடியே
அநாதி காலமாகவே பல பல பிறவிகள் பெற்று ஸம்ஸாரியாய் வந்து கொண்டிருக்கிறேன்;
எம்பெருமான் உலகளந்தருளின காலத்திலும் நான் ஏதோ ஒரு ஜந்துவாகப் பிறந்திருந்தவனேயொழிய
அன்று நான் இல்லாமலிருக்கவில்லை; அப்போது நான் விவேகி யாயிருந்து அந்த திவ்ய சரிதையிலே ஈடுபட்டிருந்தேனாகில்
அப்போதே இந்த ஸம்ஸாரத்தில் நின்றும் விடுபட்டு முக்தனாய்ப் போயிருப்பேன்;
அன்று நான் அறிவிலியாய்க் கிடந்து வாணாளை வீணாளாகப் போக்கிவிட்டேன்;
ஆகவே பழுதே பலபகலும் போயினவென்று கதறியழவேண்டியதாயிற்று- என்பதே இப்பாட்டின் உட்கருத்தாகும்.

“முடியும் விசும்பளந்தது என்பர்” என்ற சப்தஸ்வாரஸ்யம் நோக்கத்தக்கது. என்பர் என்கையாலே-
உலகளந்தவாற்றை நான் இன்று பிறர்சொல்லக் கேட்க வேண்டியதாயிற்றே யொழிய
நேரிலிருந்து ஸேவிக்கப் பெறவில்லையே யென்கிற அநுதாபம் நன்கு விளங்குமிறே.

கீழ் இரண்டாம்பாட்டில் “ என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீரேற்றது “ என்று புராதன சரிதங்களெல்லாம்
ப்ரத்யக்ஷம் போலப் பேசப் பட்டிருந்தாலும், கிரமமாக அவை நடந்த காலத்திலே
அவற்றைத் தாம் ஸேவிக்கப் பெறவில்லையே என்கிற வருத்தம் ஸம்பாவிதமேயன்றோ.

அடியும் படி கடப்பத் தோள் திசை மேல் செல்ல
முடியும் விசும்பும் அளந்தது என்பர் வடி யுகிரா
லீர்ந்தான் ஈராணியன தாகம் இருஞ்சிறைப் புள்
ளூர்ந்தான் உலகளந்த நான்று –17-

பதவுரை

இரணியனது–ஹிரண்யாஸுரனுடய
ஆகம்–மார்வை
வடி உகிரால்–கூர்மையான நகங்களாலே
ஈர்ந்தான்–கிழித்தெறிந்தவனும்
இரு சிறை புன் ஊர்ந்தான்–பெரிய சிறகை யுடைய கருடனை ஏறி நடத்துபவனுமாகிய எம்பெருமான்
உலகு அளந்த நான்று–உலகளந்த காலத்திலே
அடியும்–திருவடி
படி கடப்ப–பூமியை அளந்து கொள்ள
தோள்–திருத் தோள்கள்
திசை மேல் செல்ல–திக்குகளிலே வியாபிக்க
முடியும்–கிரீடம்
விசும்பு–மேலுலகத்தை
அளந்தது–அளவு படுத்திக் கொண்டது
என்பர்–என்று சொல்லுவர்கள்.
(ஐயோ! நான் நேரில் ஸேவிக்கப் பெறவில்லையே!!)

அடியும் படிகடப்ப “கோலமாமென் சென்னிக் கமலமன்ன குரைகழலே”என்றாற்போல அடியவர்களுக்கு சிரோபூஷணமாக
அமைய வேண்டிய திருவடிகளைக் கொண்டு கல்லும் கரடுமான உலகங்களை யளப்பதே! என்கிற வருத்தமும்.

[தோள் திசைமேல் செல்ல] பிராட்டியை அணைக்க வேண்டிய திருத்தோள்களைக்கொண்டு திசைகளின் மேல் வியாபரிப்பதே! என்கிற வருத்தமும்,

[முடியும் விசும்பளந்தது] எங்கள் கண்முன்னே விளங்கி
“முடிச் சோதியாய் உனது முகச்சோதிமலர்ந்ததுவோ?” என்று நாங்கள் பாசுரம் பேசவேண்டும் படியான திருமுடியை
அஹங்காரிகளும் பகவத் விஷயச் சுவடறியாதவர்களுமான தேவதைகளுள்ள விடங்களிலே நிமிர்ப்பதே! என்கிற வருத்தமும் உள்ளுறையும்.

பின்னடிகளின் கருத்தையும் ஆழ்ந்து நோக்கினால், இரணியனைப் பிளந்து ப்ரஹ்லாதனுக்கு அருள் செய்த காலத்திலும்,
ஸ்ரீகஜேந்திராழ்வானைக் காத்தருளப் பெரிய திருவடியின் மீதேறி அரை குலையத் தலை குலைய விரைந்தோடி வந்த காலத்திலும்
நேரில் ஸேவித்து வாழா தொழிந்தேனே! என அநுதாபப்படுவதும் தோன்றும்.

————

[ நான்றமுலைத்தலை.] இப்பாசுரமும் கீழ்ப்பாசுரம் போலே இழந்தநாளைச் சொல்லி அநுதாபப்படுவதாம்.

நான்ற முலைத்தலை நஞ்சுண்டு உறி வெண்ணெய்
தோன்ற வுண்டான் வென்றி சூழ் களிற்றை ஊன்றிப்
பொருதுடைவு கண்டானும் புள்ளின் வாய் கீண்டானும்
மருதிடை போய் மண்ணளந்த மால் –18-

பதவுரை

(பேய்ச்சியான பூதனையினுடைய)
நான்ற முலைத் தலை–சரிந்து தொங்குகின்ற முலையிலுள்ள
நஞ்சு–விஷத்தை
உண்டி–(அவள் பிணமாய் விழும்படி) அமுது செய்து
உறி–உறிகளிலே வைத்த
வெண்ணெய்–வெண்ணெயை(க் களவு செய்து)
தோன்ற–இச் செயல் எங்கும் ப்ரஸித்தமாம்படி
உண்டான்–அமுது செய்தவனாகி
வென்றி–ஜயத்தை யுடைய
சூழ்–எதிர்ப்பவர்களைத் தப்பாமல் தன் கையில் அகப்படுத்திக் கொள்ள வல்ல
களிற்றை–(கம்ஸனுடைய) யானையை
ஊன்றி பொருது–எதிர் நின்று யுத்தம் செய்து
உடைவு கண்டாலும்–அழித்தொழித்தவனும்
புள் வாய் கீண்டானும்–பகாசுரனுடய வாயைக் கிழித்து போகட்டவனும் ( யாவனெனில்?)
மருது இடை போய்–இரட்டை மருத மரங்களின் நடுவே தவழ்ந்து சென்றவனாய்
மண் அளந்த–உலகங்களை அளந்து கொண்டவனான
மால்–எம்பெருமானேயாவன்.

ஸ்ரீ கிருஷ்ணனாய்த் திருவவதரித்துப் பேய்ச்சியை முலையுண்கிற வியாஜத்தாலே முடித்தும்,
நவநீதம் முதலியவற்றைக் களவாடி அமுது செய்தும் குவலயாபீடமென்கிற கம்ஸனது மதயானையை முடித்தும்
பகாஸுரனை வாய்பிளந்தும் இரட்டை மருதமரங்களை முறித்துத் தள்ளியும் இப்படி பலவகையான
சிறுச் சேவகங்களைச் செய்தருளின காலத்திலும் ஸேவிக்கப் பெறாதே இழந்தேனே! என்கிறார் போலும்.

இழந்ததற்கு அநுதாபப்படுவதாகப் பாசுரத்தில் வாய்ச் சொல் இல்லை யாயினும்
கீழ்ப்பாசுரங்களின் ஸந்தர்ப்பத்தை நோக்குங்கால் இழந்த நாளைக்கு அநுதாபம் தோன்றவே
இப்பாசுர மருளிச்செய்வதாகக் கொள்ளலாம்.
“ இடக்கை வலக்கை அறியாதாரும் வாழும்படி இடைக்குலத்திலே வந்து பிறந்தவிடத்திலும்
இழந்தேனிறே என்று சோகிக்கிறார்.” என்றார் முன்னோர்களும்.

இனி, கிருஷ்ணாவதார சரித்திரங்கள் சிலவற்றைச்சொல்லி ஆநந்தமாகப் போது போக்குகிறார் எனினும் குற்றமில்லை.

“மருதிடைபோய் மண்ணளந்த” -உலகளப்பதற்கு முன்னே மருதிடைபோனான் என்று பொருளன்று;
மருதிடைபோனது ஒருகாலத்திலும் மண்ணளந்தது ஒருகாலத்திலுமாகிலும் ஆழ்வாருடைய ஜ்ஞாந வைசத்யத்தாலே
அநுஸந்தாந தோரணியில் முன்னது பின்னதென்கிற வாசி யின்றியே எல்லாம் ஒன்று சேர விளங்குகிறபடி .

————

[மாலுங்கருங்கடலே.] *பழுதே பலபகலும் போயினவென்று அழுத ஆழ்வார்,
‘நம்மைப் போலே எல்லாரும் ஏமாந்தவர்கள் தானோ, அன்றி யாராவது எம்பெருமானை ஒரு நொடிப் பொழுதும்
விடாது அநுபவிக்கப் பெற்றவர்களுண்டோ’ என்று ஆராய்ந்து பார்த்தார்;
“மாகடல்நீருள்ளான்” என்கிறபடியே ஸமுத்ரத்தில் ஸர்வ காலமும் எம்பெருமான் திருக்கண் வளர்ந்தருளும் செய்தி நினைவுக்கு வந்தது;
ஹா! ஹா!! ஸமுத்ர ராஜனுடைய பாக்கியமே பாக்கியம்; ஒரு நொடிப்பொழுதும் விடாமல் எம்பெருமானது திருமேனியைத்
தீண்டப் பெற்றிருக்கிறானன்றோ வென்றநுஸந்தித்து அக்கடல் தன்னையே நோக்கி
‘இப்படி உனக்குப்’ பகவதநுபவம் நித்யமாய்ச் செல்லும்படி நீ என்ன நோன்பு நோற்றாய் கொல்?’ என வினவுகின்றார்.

நீ நோற்ற நோன்பைச் சொல்லுவாயாகில் நானும் அந்த நோன்பை நோற்று இப் பேறு பெறுவேன் காண் என்பது உள்ளுறை.

அஃறிணைப் பொருளான கடலை நோக்கிக் கேள்வி கேட்பதாகப் பேசின இப்பாசுரத்தின் கருத்தாவது
எம்பெருமான் இடைவிடாது திருப்பாற்கடலில் சயனித்திக்கொண்டு உறங்குவான்போல்
யோகு செய்யும் பெருமானாயிருக்கின்றா னென்பதைக் காட்டுவதேயாமென்க.

மாலும் கருங்கடலே என்நோற்றாய் வையகமுண்
டாலி னிலைத் துயின்ற வாழியான் கோலக்
கருமேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும்
திருமேனி நீ தீண்டப் பெற்று –19-

பதவுரை

வையகம்–இவ் வுலகத்தை யெல்லாம்
உண்டு–(பிரளயம் கொள்ளாதபடி) திரு வயிற்றினுள்ளே வைத்து
ஆலின் இலை–ஆலந்தளிரிலே
துயின்ற–சயனித்துக் கொண்டவனும்
ஆழியான்–திரு வாழியை யுடையவனும்
கோலம் கரு மேனி–அழகிய கறுத்த திருமேனியை யுடையவனும்
செம் கண்–செந்தாமரைக் கண்ணனுமான
மால்–எம்பெருமான்
கண்படையுள்–உறங்குகையில்
என்றும்–எப்போதும்
திருமேனி–அவனுடைய திருமேனியை
தீண்ட பெற்று–ஸ்பர்சிக்கப்பெற்று
மாலும்–(அந்த ஸ்பர்ச ஸுகத்தினால்) மயங்கிக் கிடக்கிற
கரு கடலே–கரிய ஸமுத்ரமே!
நீ என் நோற்றாய்–(இந்தப் பாக்கியம் உனக்குக் கிடைக்குமாறு) நீ என்ன நோன்பு நோற்றாயோ?

கருங்கடலே!= திருப்பாற்கடல் வெண்ணிறமுள்ளதாயினும் கார்முகில் வண்ணனான எம்பெருமானுடைய நிழலீட்டாலே கருங்கடலாயிற்று.
பட்டர் ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவத்திலே ஸ்ரீரங்கவிமானத்தைப்பற்றிப் பேசிம்போது
அபி பணிபதியதிபாவாத் சுப்ரம், அந்தச் சயானோ; மரகதஸீகுமாரை; ரங்கபர்த்துர் மயூகை: –
ஸகல ஜலதிபாநச்யாமஜீமூதஜைத்ரம் புளகயதி விமாநம் பாவநம் லோசநே ந:” என்றருளிச் செய்த ச்லோகம் இங்கு ஸ்மரிக்கத்தகும்.
இதன் கருத்தாவது- திருவனந்தாழ்வானே ஸ்ரீரங்கவிமாநமாக எழுந்தருளியிருக்கையாலே
இவ்விமானம் வெண்ணிற முள்ளதாயினும் உள்ளே சயனித்திருக்கின்ற ஸ்ரீரங்கநாதனுடைய மைவண்ணத் திருமேனி
நிறத்தின் நிழலீட்டாலே கடலைப் பருகிக் கிளர்ந்த காளமேகத்தை வென்று விளங்குகின்றது–என்பதாம்.

“கருங்கடலே!” என்ற விளியில் – பகவத் விரஹ வ்யஸநத்தாலே நான் மாத்திரம் உடம்பு வெளுத்திருக்க,
நீ நித்ய ஸந்தோஷச் செருக்குத் தோன்ற மாமை பெற்று விளங்குகிறாயே! என்பதாகக் கருத்துக்தொனிக்கும்.
“உவர்க்குங் கருங்கடல் நீருள்ளான்” என்று உப்புக் கடலிலும் எம்பெருமான் உளனாகக் கூறுகையாலே
இங்கு ‘மாலுங் கருங்கடலே!’ என்று உப்புக் கடலையே விளித்ததாகக் கொள்ளுதலும் கூடும்.

———–

[பெற்றார் தளைகழல.] கிருஷ்ணாவதார காலத்திலும் த்ரிவிக்ரமாவதார காலத்திலும் எம்பெருமானுடைய
திருவடித் தாமரைகளை ஏத்தி யிறைஞ்சப் பெற்ற பாக்கியசாலிகள் பலரிருந்தனரன்றோ;
அப் பாக்கியம் அடியேனுக்கு வாய்க்கவில்லையே! என்று நோவு படுகிறார்.

பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச்
செற்றார் படி கடந்த செங்கண் மால்  நற்றா
மரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி
நிரை மலர் கொண்டேத்துவரால் நின்று—20–

பதவுரை

பெற்றார்–மாதா பிதாக்களான வஸுதேவ தேவகிகளுடைய
தளை கழல–கால் விலங்கு அற்றுப் போம்படியாக
பேர்ந்து–(திருப்பாற் கடலில் நின்றும்) பெயர்ந்து (க்ருஷ்ணனாக வந்து பிறந்தவனும்,
ஓர் குறள் உரு ஆய்–விலக்ஷண வாமந வேஷத்தை யுடையனாய்).
செற்றார் படி–ஆச்ரித விரோதியான மாவலி தன்னதென்று நினைத்திருந்த பூமியை
கடந்த–அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட
செம் கண் மால்–புண்டரீகாக்ஷனுடைய
நல் தாமரை மலர் சே அடியை–அழகிய தாமரைபோற் சிவந்த திருவடிகளை
வானவர்–இந்திராதி தேவர்கள்
கை கூப்பி–அஞ்ஜலி செய்து கொண்டு
நிரை மலர் கொண்டு நின்று–தொடை வாய்த்திருந்துள்ள பூக்களை ஸமர்ப்பித்துக் கொண்டு பணிந்து
ஏத்துவர்–துதிப்பர்கள்;
ஆல்–ஐயோ! (அப்போது அவர்களைப் போலே தாமும் துதிக்கப் பெறவில்லையே யென்கிற துக்கத்தைச் காட்டுகிறது.)

“பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்” என்றிருப்பது கொண்டு
கிருஷ்ணனாய்ப் பிறந்த பின் வாமநனாய்ப் பிறந்தானென்று கருத வேண்டா;
ஒருகாலத்தில் கிருஷ்ணனாய்ப் பிறந்தவனும் மற்றொருகாலத்தில் வாமநனாய்ப் பிறந்தவனுமான ஸர்வேச்வரன் என்றபடி.
அன்றி,
“பெற்றார் தளை கழலப் பேர்ந்து” என்பதும் வாமநாவதாரச் செயலையே கூறுவதெனவும் கொள்வர்;
அப்போது, பெற்றார் என்றது – தன்னை ஆச்ரயிக்கப் பெற்றவர்களென்றபடி;
அவர்களுடைய தளையாவது= கருமபந்தம்;
அது நீங்கும்படியாகப் பரமபதத்தில் நின்றும் வந்து ஓர் குறளுருவானபடியைச் சொல்லிற்றாகக் கொள்க.

செற்றார்படி= செற்றாரென்று சத்ருக்களுக்குப் பெயர்; படி யென்று பூமிக்குப் பெயர்;
ஆச்ரித விரோதிகளான மஹாபலி போல்வார் தங்களுடையதென்று அபிமாநித்திருந்த பூமியை என்றதாயிற்று.

ஈற்றடியில் “ஏத்துவராம் நின்று” “ஏத்துவரால் நின்று” என்பன பாடபேதங்கள்.
தங்கள் காரியத்தையே பார்ப்பவரான தேவர்களும் எம்பெருமானது திருவடிகளை ஏத்தி யிறைஞ்சப்பெற்றார்களே!
என்கிற ஆச்சரியமும் தொனிக்கும்.

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி- பாசுரங்கள் -1-10- -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

August 15, 2021

வையம் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக -செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடர் ஆழி நீங்குகவே யென்று -1-

பதவுரை

வையம் தகளி ஆ–பூமி அகலாகவும்
வார் கடலே நெய் ஆக–அந்தப் பூமியைச் சுற்றியிருக்கிற கடலே நெய்யாகவும்.
வெய்ய கதிரோன் விளக்கு ஆக–உஷ்ண கிரணனான ஸூர்யன் விளக்காகவும்,
செய்ய சுடர் ஆழியன் அடிக்கே–செஞ்சுடர்ச் சக்கரைக் கையனான எம்பெருமானது திருவடிகளில்.
சொல் மாலை–இப் பாமாலையகிற பூ மாலையை
சூட்டினேன்–சாத்தினேன்;
(ஏதுக்காகவென்னில்;)
இடர் ஆழி நீங்குக என்று–(பகவத் கைங்கரியத்திற்கு இடையூறாகவுள்ள) துன்பக்கடல் நீங்குகைக்காக.

[வையம் தகளியா.] தகளியாவது-நெய்க்கும் திரிக்கும் ஆதாரமாயிருக்கிற அகல்.
(தாளி என்று உலக வழக்கு. பூமியானது கடிந வஸ்துவாயிருப்பதால் அதைத் தகளியாகவும்,
கடலானது த்ரவ வஸ்துவாயிருப்பதால் அதை நெய்யாகவும்,
ஸூர்யன் ப்ரகாசஸ்வரூபனாயிருப்பதால் அவனை விளக்காகவும் ரூபித்து அருளிச் செய்கிறார்.
இங்கு இங்ஙனே ரூபணம் செய்வதன் கருத்து யாதெனில்; சூந்யமே தத்துவமென்றும்,
உலகம் ஒரு ஈச்வரனையுடையதல்ல என்றும் பலபடியாகப் பகரும் மதாந்தரங்ளை மறுத்து
விசித்திரமான பிரபஞ்சத்தை நிருமிக்கவல்ல ஞான சக்தி முதலிய குணங்களையுடைய திவ்விய மங்கள விக்ரஹத்தோடு கூடிய
ஸர்வேச்வரன் உளனென்றும் அவனுக்கு அடிமை செய்கையே புருஷார்த்தமென்றும் இப்பாசுரத்தால் விளக்கப்பட்டதாகும்.

ஸூர்யன் சிறிதும் தவறாமல் உதிப்பதும் அஸ்தமிப்பதுமாக நீடுழியாய் நடந்து வருவதானது-
விசித்ரசக்தி வாய்ந்த ஸர்வேச்வரனொருவனுளன் என்பதை நமக்கு நன்றாக விளக்குகின்ற தன்றோ.
வார்கடலின் நிலைமையும் வையத்தின் நிலைமையும் இவ்வுண்மையையே வற்புறுத்துகின்றன.
கடலானது தன்னிடத்தில் பல பல ஆற்றுப் பெருக்குகள் வந்து விழுதலால் நிறைந்து வழிதலாவது,
அவை வந்து விழாத காலத்தில் வடிந்து குறை படுதலாவது ஒன்றுமின்றியே
எப்போதும் ஸமநிலைமையாகவே யிருந்துகொண்டு எல்லையை மீறாதிருப்பதும்,
ஐம்பதுகோடி யோஜனை தூரத்தளவும் பரந்து கடினமாயிராநின்ற இப்பூமியானது பெரியவெள்ளத்தில் ஒரு கழற்காய் மிதப்பதுபோல
மஹார்ணவ ஜலத்தில் மிதந்துகொண்டிருப்பதும் இவை தம்மைப் படைத்தவொரு முழு முதற் கடவுளின்
அற்புதமான சக்தி விசேஷத்தைப் புலப்படுத்துகின்றனவன்றோ.

அப்படிப்பட்ட அபாரசக்தியுக்தனான ஒரு ஜகத்காரணபூதன் ஸித்திக்கும்போது அப்பெருமானுக்குக் கைங்கரியம் செய்யவேண்டுதல் முக்கியம்;
கைங்கரியம் மாநஸிக மென்றும் வாசிகமென்றும் காயிகமென்றும் மூன்று வகைப்படும்;
அவற்றுள் வாசிக கைங்கரியமான பாசுரம் பாடுதலை அடியேன் செய்கின்றேன்;
இக்கைங்கரியத்தை இதுவரையில் நான் செய்யக்கூடாதபடி இடையூறாகவிருந்த ஸம்ஸாரத் துன்பத் திரள்கள் இன்றோடு ஒழிந்திடுக-என்றாயிற்று.

முன்னடிகளின் கருத்தை ஊன்றி நோக்குமிடத்தில் இவ்வாழ்வார் அநுமாநத்தினால் ஈச்வரனை ஸாதிப்பதாக ஏற்படுகின்றது;
சராசரரூபமான இந்த பிரபஞ்சம் முழுவைதையும் படைத்து நடத்திக்கொண்டு போவதற்குப் பாங்கான வல்லமை வாய்ந்த
ஸர்வேச்வரனொருவனுண்டு என்பதை வையம் கடல் ஸூர்யன் என்ற மூன்று பொருள்களின் நிலைமையைச் சொல்லுகிற
முகத்தினால் ஸமர்த்தித்தபடியால் அநுமாநத்தாலே ஈச்வரனை ஸாதிக்கிற தார்க்கிகர்களின் படியை அடியொற்றினாராகிறார்;
இதுகூடுமோ?
சாரீரகமீமாம்ஸையில் சாஸ்த்ரயோநித்வாதிகரணத்தில் அநுமாநத்தால் ஈச்வரனை ஸாதிக்கலாகாதென்று மறுத்து
வேதப்ரமாணமொன்றினாலேயே ஈச்வரனுடைய உண்மையை உணரவெணுமென்று ஸ்தாபித்திருப்பதற்கு மாறாக
இஃது இருக்கின்றதே! என்று சிலர் சங்கிக்கக்கூடும்;
வேதத்துக்கு விருத்தமாக அநுமாநங்கொண்டு ஸாதிப்பதை அங்கு மறுத்துரைத்த மாத்திரத்தினால்
வேதத்துக்கு விருத்தமல்லாத அநுமாநங் கொள்வதில் பிசகுள்ளதாக நினைக்கலாகாது . இது ஸ்ரீபாஷ்யாதி ஸம்மதமுமாம் விரிப்பிற் பெருகும்.

இடராழி நீங்குகவேயன்று–
இதுவரையில் எம்பெருமானைத் துதியாதிருந்ததனாலுண்டான வருத்தம் நீங்குவதற்காக என்றும்,
துதிக்கவொட்டாமல் பிரதிபந்தகமாயிருந்த பாவங்கள் தொலைவதற்காக என்றும்,
இப்பிரபந்தத்தைக் கற்று ஸம்ஸாரிகளும் துயர்தீர்ந்து வாழ்வதற்காக என்றும்
மூன்றுபடியாக உரைக்கலாம்.

———–

[என்றுகடல்கடைந்து.] ஸர்வேச்வரனை அநுமாநத்தால் ஸாதிப்பது தோன்றக் கீழ்ப்பாட்டு அருளிச் செய்யப்பட்டது;
அவனை அநுமாநங்கொண்டு ஸாதிக்கவேண்டிய வருத்தமில்லை; அவன் செய்தருளியிருக்கும் எல்லையற்ற
அதிமாநுஷங்களான செயல்களே அவனுடைய உண்மையை ஸாதித்துக் கொடுக்கக்கூடியவை என்று வெளியிடக்கருதி,
கடல் கடைந்தது உலகளந்தது முதலிய சில சேஷ்டிதங்களை அருளிச்செய்யும் முகத்தால் அவனுடைய உண்மையை மூதலிக்கின்றார்.

ஆளவந்தார் எம்பெருமானுடைய உண்மையை உணர்வதற்கு உரிய ஸாதநங்களை அருளிச் செய்யுமிடத்து
“த்வாம் சீல ரூப சரிதை:” (ஸ்தோத்ரரத்நம்.) இத்யாதிகள் அருளிச் செய்ததும்
அப்படியே ஆழ்வானும் ஸ்ரீவைகுண்டஸ்தவத்தில்—”சித்ரைச்ச கைச்சிதுசிதை: பவதச் சரித்ரை:” என்றருளிச் செய்ததும் ஸ்மரிக்கத்தக்கன.

கடல்கடைந்து தேவர்களுக்குச் சாவாமருந்து எடுத்துத்தந்து அவர்களை ரக்ஷித்ததும்,
மாவலி பக்கல் மாணுருவாய்ச்சென்று மூவடி நீரேற்றுப்பெற்று உலகளந்து இந்திரனது துன்பத்தைத் தீர்த்தொழித்ததும்
ஸ்ரீமந் நாராயணனுடைய உண்மையை விளக்கவல்லன காண்மின் என்கிறார்.

என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீர் ஏற்றது
ஒன்றும் அதனை யுணரேன்  நான் -அன்று  அது
அடைத்து உடைத்துக் கண் படுத்த வாழி இது நீ
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் ——-2-

பதவுரை

கடல் கடைந்தது–(தேவர்களுக்காகக்) கடலைக் கடைந்தது
என்று–எந்த நாள்?
நீர் ஏற்றது–(மாவலி) தாரை வார்த்து தத்தஞ் செய்யப்பெற்றது
எ உலகம்–எந்த உலகம்?
அதனை–அவற்றை
நான் ஒன்றும் உணரேன்–நான் அடியோடு அறிகின்றிலேன்;
அது–அந்தக் கடலானது
அன்று–ஸ்ரீராமாவதார காலத்தில்
அடைத்து–மலைகளைக்கொண்டு திருவணை கட்டித் தூர்த்து
உடைத்து–(இராவணனை முடித்துத் திரும்புங்கால் அந்தத் திருவணையை) உடைத்து.
கண்படுத்த–எப்போதும் பள்ளிகொள்ளுமிடமாகக் கொண்டிருக்கப்பெற்ற
ஆழி–ஸமுத்ரமாம்;
இது–(நீரேற்றுப் பெற்ற) இவ் வுலகமானது
நீ–ஸர்வேச்வரனான உன்னாலே
படைத்து–ஸ்ருஷ்டிக்கப்பட்டும்
இடந்து–(வராஹாவதார காலத்தில் அண்டபித்தியில் நின்று) ஒட்டு விடுவித்தெடுக்கப்பட்டும்
உண்டு–(பிரளய வெள்ளம் கோத்தபோது) திருவயிற்றிலே வைத்துப் பாதுகாக்கப்பட்டும்
உமிழ்ந்த–பின்பு வெளிப்படுத்தப்பட்டதுமான
பார்–பூமியாகும்.

என்றுகடல்கடைந்தது? என்கிற கேள்வியும் எவ்வுலகம் நீரேற்றது? என்கிற கேள்வியும் கேள்வி கேட்பதில் நோக்குடையனவல்ல;
கடல் கடைந்தபோது தோன்றிய திரையும் நுரையும் மாறாமல் இப்போதுதான் கடல் கடைந்ததுபோலத் தோன்றுகின்றதே!;
உலகளக்கும் போது வைத்த அடிச்சுவடு மாறாமல் “வாமனன் மண்ணிது” என்னும்படி இதோ தோன்றுகின்றதே! என்று
ப்ரத்யக்ஷஸமமாக்க் காட்டுபவர் போலச் சொல்லுகிறபடி.

கடல் கடைந்ததும் உலகளந்ததும் என்றைக்கோ நிகழ்ந்ததாயினும் மயர்வற மதிநலமருளப்பெற்ற இவ்வாழ்வாரது
அகக் கண்ணுக்கு அச்சரிதைகளெல்லாம் ஸ்பஷ்டமாகத் தோற்றி விளங்குதலால் இங்ஙனே அருளிச்செய்யக் குறையில்லை யென்க.

நெடுநாளைக்கு முன்னே நடந்த செயல்கள் ஆழ்வார்க்கு இன்று பரத்யக்ஷம்போல் தோற்றினாலும்,
‘ஐயோ! கடல்கடைந்த வக்காலத்து நாம் நேரில்கண்டு மங்களாசாஸனம் செய்யப் பெறவில்லையே!
உலகளந்த அக்காலத்திலே காடும் மேடும் தாவின திருவடிகளின் கீழே நம்முடைய தலையை மடுக்கப் பெற்றிலோமே!’
என்கிற வருத்தம் தோன்றி அவ்விழவு விளங்க ஒன்றுமதனை யுணரேன் நான் என்கிறார்;
அச்செயல்கள் நடந்தகாலத்திலே அவற்றை நான் அநுபவியா தொழிந்தேனே! என்றவாறு.

நம்மாழ்வார் *மத்துறுகடை வெண்ணெய்களவினிலுரலிடையாப்புண்ட சரிதையை அநுஸந்தித்ததும்] “எத்திறம்!” என்று
மோஹித்து கிடந்தது போல் இவரும் முதலடியில் அநுஸந்தித்த செயல்களிலே மோஹித்து
“ஒன்றும் அதனை யுணரேன்” என்கிறார் என்று முரைப்பர்.

முதலடியிலே கடல் கடைந்ததும் உலகளந்ததும் அநுஸந்திக்கவே அக்கடலிலும் அவ்வுலகத்திலும் எம்பெருமானுக்குள்ள
ஸம்பந்தங்கள் திருவுள்ளத்திலே ஞாபகத்திற்கு வர அவற்றைப் பின்னடிகளிற் பேசி அநுபவிக்கிறார்.
கடலில் எம்பெருமான் செய்த காரியங்களை மூன்றாமடியிலும் உலகுக்காக அவன் செய்த காரியங்களை நான்காமடியிலும் அருளிச் செய்கிறார்.

இராவண ஸம்ஹாரம் செய்து பிராட்டியை மீட்டிக் கொணர்வதற்காக இலங்கைக் கெழுந்தருளும்போது
“மறிகடல் நெறிபட மலையால் அரிகுலம் பணிகொண்டு அலைகடலடைத்தான்” என்றபடி ஸேதுபந்தனம் பண்ணுனதும்,
பிராட்டியைக் கைக்கொண்டு மீண்டெந்தருளும்போது அதனை உடைத்ததும்,
“வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தயாக விரித்து அதன்மேலே கள்ள நித்திரை கொள்கின்ற” என்றபடி
* தன் தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பிப் பள்ளிகொண்டிருத்தலுமாகிய கடலிலே செய்த காரியங்கள் அநுஸந்திக்கப்பட்டன.

ஆதியில் படைத்ததும், வராஹாவதாரத்தில் ஹிரண்யாக்ஷனைக் கொன்று இடந்ததும்,
ப்ரளயம் வந்த போது திருவயிற்றினுள்ளே வைதிட்டதும், பிறகு வெளிப்படுத்தியதுமாகிய
இவை உலகுக்காகச் செய்த செயல்களாக அநுஸந்திக்கப்பட்டன.

இப்படிப்பட்ட அதிமாநுஷ சேஷ்டிதங்களைச் செய்தருளின ஸ்ரீமந்நாராயணனே பரம்பொருளென்றும்,
அவனுடைய உண்மையை இச்செயல்களே ஸாதித்துத் தரவல்லன என்றும் இப்பாசுரத்தால் அறிவிக்கப்பட்டதாயிற்று.

——–

[பாரளவும்.] எம்பெருமானுடைய திவ்ய சேஷ்டிதங்கள் பலவற்றினுள்ளும் உலகளந்த சரிதையிலே நம் ஆழ்வார்கள் அதிகமாக ஈடுபடுவர்கள்;
விசேஷித்து முதலாழ்வார்கள் மிகவு மதிகமாக ஈடுபடுவர்கள்.
கீழ்ப்பாட்டில் “எவ்வுலகம் நீறேற்றது” என்று அந்தச் செயலைச் சிறிது ப்ரஸ்தாவித்த மாத்திரத்திலே
அதிலே திருவுள்ளம் மிகவும் அவகாஹிக்கப் பெற்று அந்த வரலாற்றைப் பேசி அநுபவிக்கத் தொடங்கி
நிலை கொள்ள மாட்டாமல் நின்று தளும்புகின்றார்.

பாரளவும் ஓரடி வைத்து ஓரடியும் பாருடுத்த
நீரளவும் செல்ல நிமிர்ந்ததே –சூருருவின்
பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன்
நீயளவு கண்ட நெறி ———3–

பதவுரை

ஓர் அடி–ஒரு திருவடியை
பார் அளவும் வைத்து–பூமிப் பரப்பு உள்ள வரையிலும் போரும்படி வைக்க
ஓர் அடியும்–மற்றொரு திருவடியும்
பார் உடுத்த–இந்த அண்ட கடாஹத்தைச் சூழ்ந்துகொண்டிருக்கிற
நீர் அளவும்–ஆவரண ஜலம் வரையில்
செல்ல–செல்லும்படி
நிமிர்ந்தது–ஓங்கிற்று;
சூர் உருவின் பேய்–தெய்வ மகளான யசோதையின் வடிவு கொண்டு வந்த பூதனையை
அளவு கண்ட பெருமான்–முடித்த ஸ்வாமியியே!
நீ அளவு கண்ட நெறி–நீ உலகளந்த விதத்தை
அறிகிலேன்–அளவிட்டுக் காணவல்ல அறிவுடையேனல்லேன்.

சூருருவிற்பேயளவுகண்டபெருமான் என்பது ஸம்போதநம்(விளி);
தமது வல்லமையால் எம்பெருமானை அளவிட்டுக் காணவேணுமென்று நினைப்பவர்கள் பூதனை பட்டபாடுபடுவர்கள்
என்பது தோன்ற இந்த ஸம்போதநமிடுகின்றார். உன்னை முடிப்பதாக வந்த பூதனையை முடித்த பிரானே!
நீ மாவலிபக்கல் மூவடி மண் நீரேற்றுப் பெற்று ஒரு திருவடியைப் பூமிப் பரப்படங்கலும் மலரவைத்து,
மற்றொரு திருவடியை மேலில் அண்டத்தைச் சூழ்ந்த ஆவரண ஜலத்தளவும் செல்லவைத்து உலகளந்த விதத்தை யானறிகின்றிலே னென்கிறார்.

அளப்பதாவது-அளக்கிறவன் தான் நின்றவிடந்தவிர மற்றோரிடத்தில் மாறிக்காலிடுதல் என்று உலகத்திலே நாம் காண்கிறோம்.

ஓரிடத்திலேயே நின்றுகொண்டிருப்பதை அளப்பதாக யாரும் சொல்லமாட்டார்கள்;
ஆகவே, எம்பெருமான் உலகளந்தான் என்று பலரும் சொல்லுகிறார்களே இது எப்படி பொருந்தும்?
ஒரு திருவடிக்கும் கீழுலகமும் மற்றொரு திருவடிக்கு மேலுலகமும் சரிசமமாக இடமாகப் போந்துவிட்ட படியால்
மாறி மாறி அடியிடுவதற்கு அவகாசமேயில்லையாதலால் அளந்தானென்பது எங்ஙனே சேரும்? என்று ஒரு சமத்காரமாகப் பேசுவார் போல
“நீ அளவுகண்ட நெறி அறிகிலேன்” என்கிறார்.

இதனையே நம்மாழ்வார் திருவிருத்தத்தில்-
“கழல்தல மொன்றே நிலமுழுதாயிற்று ஒரு கழல் போய், நிழல்தர எல்லாவிசும்பும் நிறைந்தது,…..
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக் கின்றதே?” (58) என்ற பாசுரத்தினால் விரித்துரைத்தாரென்க.
அவ்விடத்து வியாக்கியானத்திலே-
”அளக்கைக்கு ஒரு அவகாசம் காண்கிறிலோம்; நின்ற நிலையிலே நின்றாரை அளந்தாரென்ன வொண்ணாதிறே;
அடிமாறியிடிலிறெ அளந்ததாவது; இவனிங்கு அளந்தானாக ஒன்றும் காண்கிறிலோமீ!” என்றுள்ள
பெரியவாச்சான் பிள்ளையின் ஸ்ரீஸூக்திகளும் இங்கு அநுஸந்திக்கத்தக்கன.

“நீ அளவுகண்ட நெறி அறிகிலேன்” என்பதற்கு மற்றும் சிலவகையாகவும் பொருள் கூறுவர். அளவு காண்கையாவது அளக்கை.

[சூருருவிற்பேயளவுகண்ட] “ சூருமணங்கும் தெய்வப் பெண்பெயர்” என்பது நிகண்டு,
பூதனை யென்னும் பேய்மகள் தெய்வப் பெண்ணுருவாக வந்தாளோ வென்னில்;
கண்ணபிரானுக்குத் தாயாகிய யசோதைபோல வடிவெடுத்து வந்தாளாகையாலும்,
அவ்வசோதை “தெய்வநங்கை” என்று குலசேகரப் பெருமாளால் கூறப்பட்டிருக்கையாலும் சூருருவின் பேய் என்னக் குறையில்லை யென்க.
அன்றி, பதினெண் தேவகணத்தில் பேயும் ஒன்றாகக் கூறப்பட்டிருத்தல் பற்றியும் “சூருருவின் பேய்” என்றாகவுமாம்.

பேயளவு காண்கையாவது அவளுடைய ஆயுளின் அளவைக்கண்டுவிடுதல்; கொல்லுதலைக் கூறியவாறு.
கண்ணபிரானைக் கொல்லுமாறு கம்ஸனாலேவப்பட்ட பூதனை யென்னும் பேய்ச்சி தன் முலையிலே விஷத்தைத் தடவிக்கொண்டு
யசோதைபோல வடிவெடுத்துத் திருவாய்ப்பாடிக்கு வந்து தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த ஸ்ரீ கிருஷ்ண சிசுவையெடுத்து
நஞ்சுதீற்றிய முலையை உண்ணக்கொடுக்க பேயென்றறிந்த பெருமான்
முலைப்பாலோடு அவளுயிரையும் உறிஞ்சி உண்டிட்டனனென்ற வரலாறு ப்ரஸித்தம்.

————–

[நெறிவாசல்.] எம்பெருமானுடைய இன்னருளால் ஞான விகாஸம் பெற்ற நானே
அவனுடைய ஸ்வரூபம் குணம் சேஷ்டிதம் முதலியவற்றை நன்கு அறியமாட்டாமல்,
கடலிலே நீஞ்சிக் கரையேறமாட்டாதே கிடந்து அலைவாரைப்போலே அலையா நிற்க,
தன் முயற்சியால் சிறிது ஞானம்பெற்ற சிவன் அவற்றை எங்ஙனே அறிய வல்லான்?
எனக்குத் தெரிந்தவற்றில் ஏகதேசமும் அறியமாட்டாத அவன் தன்னை ஸர்வஜ்ஞனாக நினைத்துக் கொண்டு
பகவத் விஷயத்தைத் தான் உபதேசிக்கவல்லவன் போலச் சில சிஷ்யர்களைச் சேர்த்துக் கொண்டு ஆலமரத்தடியிலே
உட்கார்ந்துகொண்டு ஆசார்யபதம் வஹித்து எம்பெருமானுடைய தன்மைகளை உபதேசிப்பதாக இழிந்துவிட்டானே!
இஃது என்ன அறிவுகேடு! என்று ருத்ரனைப் பரிஹஸித்துப்பேசுகிறார்
“அரன் அறிவானாம்” என்ற சொல்லின் காம்பீர்யத்தை நோக்குமின். நானே அறியமாட்டாதிருக்க அவனோ அறியப்போகிறான்;
தான் தெரிந்து கொள்ளவும் ப்ரஸக்தியில்லாதிருக்கப் பிறர்க்குப் போதகாசிரியனாக வீற்றிருந்தானே! என்று கர்ஹிக்கிறபடி.

நெறி வாசல் தானேயாய் நின்றானை யைந்து
பொறி வாசல் போர்க்கதவம் சாத்தி அறிவானாம்
ஆலமர நீழல் அறம் நால்வர்க்கு அன்றுரைத்த
ஆலமர் கண்டத் தரன் –4—

பதவுரை

அன்று–முன்பொரு காலத்தில்,
ஆலமரம் நீழல்–ஆலமரத்தின் நிழலிலே
(இருந்துகொண்டு)
நால்வர்க்கு–அகஸ்தியர்,புலஸ்தியர், தக்ஷர், மார்க்கண்டேயர் என்கிற நான்கு சிஷ்யர்களுக்கு
அறம் உரைத்த–தருமோபதேசம் செய்தவனும்
ஆலம் அமர் கண்டத்து–விஷத்தைக் கழுத்தளவிலே அடக்கிக் கொண்டுள்ளவனுமான
அரன்–சிவன்
ஜந்து பொறி வாசல்–செவி வாய் கண் மூக்கு உடல் என்கிற ஐந்து இந்திரியங்கள் செல்லும் வழியில்
போர் கதவம் சார்த்தி–வலிய கதவுகளையிட்டு அடைத்து [இந்திரியங்கள் பட்டிமேய வொண்ணாதபடி அவற்றை வென்று]
நெறி வாசல் தானே ஆய் நின்றானை–உபாயமும் உபேயமும் தானேயாயிருக்கிற எம்பெருமானை
அறிவான் ஆம்–அறிந்து விட்டதாகச் செருக்குற்றிருக்கிறானே! (இஃது என்ன அறிவு கேடு!.)

”அரன், நெறிவாசல் தானேயாய் நின்றானை அறிவானாம்” என்று அந்வயிக்க.
நெறி என்று வழிக்குப் பேராகையாலே பலனைப் பெறுவிக்கும் வழியாகிய உபாயத்தைச் சொன்னபடி.
வாசல் என்று புகுமிடத்துக்குப் பேராகையாலே இறுதியில் அடையத் தக்க பலனைச்சொல்லுகிறது;
ஆகவே, உபாயமும் உபேயமும் தானேயாயிருக்கிற எம்பெருமானை என்றதாயிற்று அன்றி,
நெறி –ஸ்வரூபத்துக்கு ஏற்ற, வாசல்-உபாயம், தானேயாய் நிற்பவனை என்று முரைக்கலாம்.

சிவன் ஒரு காலத்திலே அகஸ்தியர் புலஸ்தியர் தக்ஷர் மார்க்கண்டேயர் என்கிற நான்கு முனிவர்களைச் சிஷ்யர்களாக அமைத்துக் கொண்டு
ஆலமரத்தடியிலே ஸ்ரீமந்நாராயண தத்வோபதேசம் செய்தனனென்று நூல்கள் கூறும்;
திருமழிசையாழ்வாரும் நான்முகன் திருவந்தாதியிலே-
”ஆலநிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு, மேலையுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன்-
ஞால மளந்தானை ஆழிக்கிடந்தானை ஆல்மேல், வளர்ந்தானைத் தான் வணங்குமாறு” (17.) என்ற பாசுரத்தினால்
இக்கதையை அநுஸந்தித்தமை காண்க.

ப்ரஹ்மஜ்ஞாநமில்லாத பாலாகி யென்பவன் ப்ரஹ்ம ஜ்ஞாநமுடையனான அஜாதசத்ரு வென்பவனுக்கு
ப்ரஹ்ம ஜ்ஞாநத்தை உபதேசிக்கத் தொடங்கியது போலும் சிவனது உபதேசமும் என்ற இழிவுதோன்ற “அறிவானாம்” என்று பழித்துக் கூறுகின்றார்.

[ “ஐந்து பொறிவாசல் போர்க்கதவம் சார்த்தி”]
ஒரு வாசலை அடைக்கத் தொடங்கினால் மற்றொரு வாசற்கதவு திறந்துகொள்ளும்படியாயுள்ள பஞ்சேந்திரியங்களாகிற
யந்த்ரம் போன்ற ஐந்து வாசல்களையும் அடைத்தாலன்றி பகவத் தத்துவத்தை உபதேசிக்க வொண்ணாதென்பதும்,
அந்த வாசற்கதவுகளை அடைப்பது மிகவும் அருமை என்பதும் இவ்வாக்கியத்தில் தோன்றும் ஐந்து பொறி வாசற்கதவுகளை
அடைக்கமாட்டாத் ருத்ரன் எங்ஙனே அறிவான்? என்றவாறு.

போர்க்கதவம் என்றது- அடைக்கத் தொடங்குகிறவர்களின் முகத்திலே அறைகிற கதவு என்றபடியாய்;
எப்படிப்பட்டவர்களையும் விஷய ப்ரவணராக்கவல்ல இந்திரியங்களின் வன்மையைக் கூறியவாறு.

எம்பெருமான் திருப்பாற்கடலைக் கடையும்போது அதனின்றும் தோன்றிய விஷத்தை ஸ்ரீமந்நாராயணனுடைய கட்டளையாலே
சிவன் தான் வாங்கி உண்ண அதனையறிந்த பார்வதி அஞ்சி அவ்விஷம் கழுத்துக்குகீழே இறங்காதபடி
அவனது கழுத்தை இறுகப் பிடித்துக் கொள்ள விஷம் கழுத்தளவிலே நின்றுவிட்டது;
அதனால் சிவன் கறுத்த கழுத்தை யுடையனாய் காலகண்டனென்று பேர்பெற்றனன் என்ற வரலாறு தோன்ற “ஆலமமர்கண்டத்தான்” என்றார்.
ஆலம்-வஷம்; ஹாலாஹலமென்ற வடசொற் சிதைவு என்பர். சிவன் தனது தமோகுணத்துக்குத் தக்க செயலைச் செய்ய வல்லவனே யன்றி
ஸாத்விகர் செய்யும் செயல் அவனால் செய்யமுடியா தென்பதும் இவ்விசேஷணத்தின் கருத்தாம்.

ஹர: என்ற வடசொல் அரனெனத் திரிந்தது; ஸம்ஹார கர்த்தா என்கை

————–

[அரன்நாரணன்நாமம்] கீழ்ப்பாட்டில் சிவனுடைய ஒருசெய்தியை எடுத்துப் பேசின ஆழ்வார்
“அரன் அறிவானாம்” [சிவனுக்கு என்ன தெரியும்?] என்று இழித்துப் பேசவே அதனைக் கேட்ட சிலர்
“நாட்டங்கலும் ஈச்வரனென்று கொண்டாடப்படுகிற அச்சிவபெருமானை இப்படி நீ ஏசிப் பேசலாமோ?
அவன் காற்கீழே பலரும் தலையை மடுத்து ஏத்தியிரைஞ்சக் காண்கிறோமே, அவன் பரதெய்வமன்றோ?” என்று சொல்ல,
அது கேட்ட ஆழ்வார்-ஸ்ரீமந்நாராயணனே பரதேவதை யென்பதும் ருத்ரன் அங்ஙனல்லன் என்பதும்
இருவருடையவும் நாமம் ரூபம், வாஹனம், தொழில் முதலியவற்றால் நன்கு விளங்கக் காணலாமென்று
அவற்றை யெடுத்துரைத்துக் காட்டுகிறாரிதில்–

அரன் நாரணன் நாமம் ஆன் விடை புள்ளூர்தி
உரை நூல் மறையுறையும் கோயில் வரை நீர்
கருமம் அழிப்பு அளிப்புக் கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி  யொன்று —5-

பதவுரை

நாமம்–ஒருவனுடைய பெயர்
அரன்–எல்லாவற்றையும் அழிப்பதையே தொழிலாக வுடையவனென்று காட்டுகிற ஹரனென்பது;
(மற்றொரு மூர்த்தியின் திருநாமமோ வென்னில்)
நாரணன்–(ஸர்வ வ்யாபகனென்றும் ரக்ஷகனெனெறும் காட்டுகிற) நாராயணனென்பது
ஊர்தி–ஒருவனுடைய வாஹனம்
ஆன் விடை–மூடத்தனத்துக்கு உதாரணமாகக் காட்டப்படுகிற எருதாம்;
(மற்றொரு மூர்த்தியின் வாஹனமோ வென்னில்)
புள்–(வேத மூர்த்தியான) கருடப் பறவையாகும்;
உரை–ஒருவனைப் பற்றிச் சொல்லுகிற பிரமாணம்
நூல்–மனிசரால் ஆக்கப்பட்ட ஆகமம்;
(மற்றொரு மூர்த்தியைப்பற்றிச் சொல்லுகிற பிரமாணமோ வென்னில்)
மறை–(ஸ்வயம் வ்யக்தமான) வேதமாகும்;
உறையும் கோவில்–ஒருவனுடைய வாஸஸ்தானம்
வரை–(கடினத்தன்மையுள்ள) கைலாசமலையாம்;
(மற்றொரு மூர்த்தியின் இருப்பிடமோ வென்னில்)
நீர்–(அவனுடைய நீர்மைக்குத் தகுதியான) திருப்பாற்கடலாம்;
கருமம்–ஒருவனுடைய தொழில்
அழிப்பு–(கல்நெஞ்சனென்று சொல்லும்படியான) ஸம்ஹாரத்தொழிலாம்;
(மற்றொரு மூர்த்தியின் காரியமோ வென்னில்)
அளிப்பு–(இன்னருளுக்குரிய) ரக்ஷணத் தொழிலாம்;
கையது–ஒருவனுடைய கையிலுள்ள அயுதம்.
வேல்–(கொலைத் தொழிலுக்கு ஏற்ற) சூலாயுதம்;
(மற்றொரு மூர்த்தியின் ஆயுதமோ வென்னில்)
நேமி–அருளார் திருச்சக்கரம்
உருவம்–வடிவம்
எரி–(கண்கொண்டு காண வொண்ணாதபடி) காலாக்நி போன்றதாம்;
(மற்றொரு மூர்த்தியின் திருமேனியோ வென்னில்
கார்–(கண்ட போதே தாபங்களெல்லாம் தீரும்படியான) காளமேகவுருவாம்;
ஒன்று–சிவனாகிய ஒருவன்
மேனி–(ஸ்ரீமந் நாராயணனுக்கு) சரீர பூதன்;
[ஸ்ரீமந்நாராயண மூர்த்தியோ அந்த சிவனுமுட்பட எல்லாவற்றையும் சரீரமாக வுடையவனென்பது ஸித்தம்]

இருவருடைய பெயரையும் நோக்குமிடத்து சிவன்பெயர் அரனென்றும் விஷ்ணுவின் பெயர் நாராயணனென்றும் ப்ரசித்தமாகவுள்ளன;
அரனென்றால் ஹரிப்பவன் எல்லாவற்றையும் ஒழிப்பவன் என்று பொருள்படும்;
நாராயணனென்றால், நாரங்களாகிய நித்ய வஸ்துக்களெல்லாவற்றிலும் உறைந்திருந்து அவற்றை நோக்குமவன் என்று பொருள்படும்;
ஆகவே, ஸர்வ ரக்ஷகன் பரதேவதையாயிருக்கத் தகுமோ அன்றி ஸர்வபக்ஷகன் பரதேவதையாயிருக்கத் தகுமோ
என்பதை நீங்களே ஆராயலாம் என்றாராயிற்று.

இப்படியே இருவருடைய வாஹனங்களையும் நோக்குங்கால், ‘அடா மாடே!’ என்று மூர்க்கரை நிந்திப்பதற்கு
த்ருஷ்டாந்தமாகக் கொள்ளப்படுகிற எருதை வாஹனமாகவுடையவன் அரன்;
“ஸுபர்ணேஸி கருத்மாந்” என்ற வேத வாக்கியத்தாலும்
“வேதாத்மா விஹகேச்வர:” என்ற ஆளவந்தார் ஸ்ரீஸூக்தியாலும்,
“சிரஞ்சேதனன் விழிதேகம் சிறையின் சினைபதம் கந் தரம் தோள்களூரு வடிவம் பெயரெசுர்சாமமுமாம்…..
அரங்கர்தமூர்திச் சுவணனுக்கே” என்ற ஐயங்கார் பாசுரத்தாலும்
வேத ஸ்வரூபியாகப் பிரதிபாதிக்கப்பட்ட பெரிய திருவடி யென்னும் கருடாழ்வானை வாஹனமாகவுடையவன் ஸ்ரீமந்நாராயணன்.

இனி இருவரையும் பற்றிச் சொல்லுகிற பிரமாணங்களை ஆராய்ந்தால்,
வேதவிருத்தமான பொருள்களைச் சொல்லுமதாயும் ராஜஸதாமஸ புருஷர்களால் செய்யப்பட்டதாயுமுள்ள
சைவாகமம் அரனைப்பற்றிச் சொல்லுவது;
ஒருவராலும் செய்யப்படாமல் அநாதியாய் எவ்வகையான தோஷமுமற்று உண்மைப் பொருளையே உரைக்கின்ற வேதம்
ஸ்ரீமந்நாராயணனைப் பிரதிபாதிக்கும் பிரமாணம்.

இனி இருவருடைய இருப்பிடங்களையும் நோக்குங்கால்,
தனது நெஞ்சின் கடினத் தன்மைக்கு ஏற்றவாறு கடினமான கைலாசமலை அரனுக்கு உறைவிடம்,
தனது திருவுள்ள நீர்மைக்குத் தக்கபடி நீர்மையே வடிவான திருப்பாற்கடல் ஸ்ரீம்ந்நாராயணனுக்கு உறைவிடம்.
இதற்குத் தக்கபடி அழித்தல் தொழில் அரனது; காத்தல் தொழில் நாராயணனது.
அதற்குத் தக்கபடி கொலைத் தொழிலுக்கு ஏற்ற முத்தலைச் சூலம் அரனது,
*அருளார் திருச்சக்கர மென்றே புகழ்பெற்று உலகங்களை யெல்லாம் பாதுகாக்குமாறுள்ள சக்கரப்படை நாராயணனது.

இவை யெல்லாம் ஒரு புறமிருக்கட்டும்; “ரூபமேவாஸ்ய ஏதந்மஹிமாநம் வ்யாசஷ்டே”
[உருவமே வ்யக்தியின் பெருமையைத் தெரிவிக்கும்] என்ற வேத வாக்கியத்தின்படி
இருவருடையவும் உருவத்தை நோக்குவோமாயின், கண்ணெடுத்துப் பார்க்க முடியாதபடி காலாக்நிபோலேயிருக்கும் அரனுருவம்;
கண்டார் கண்குளிரும்படியான காளமேகம்போலே யிருக்கும் செல்வநாரணன் திருவுருவம்.
“ஒன்று செந்தீ ஒன்று மா கடலுருவம்” என்றார் திருமங்கையாழ்வாரும் திருநெடுந்தாண்டகத்திலே.

இப்படி ஒன்றுக்கொன்று மாறுபட்டுக் கிடக்கிற இரண்டு பொருள்களில் “அங்கந்யந்யா தேவதா:” இத்யாதி
உபநிஷத் வாக்கியங்களின்படி அரன் நாராயணனுக்கு அங்கமாயும் நாராயணன் அங்கியாயு மிருப்பர்கள்.
சரீரி தலைமையானதோ? சரீரம் தலைமையானதோ? ஆராய்ந்து சொல்லுங்கள் என்றவாறு

“மேனி ஒன்று” என்று அரனுடைய சரீரத் தன்மை சொன்னது போல நாராயணனுடைய சரீரித் தன்மை மூலத்தில்
சொல்லப்படவில்லையாயினும், ஒன்று சரீர மென்றால் மற்றொன்று சரீரி யென்பது தன்னடையே விளங்குமிறே.
அந்தர்யாமிப்ராஹ்மண மென்னும் வேதப்பகுதியில் ஸ்ரீமந்நாராயணனே ஸர்வசரீரி யென்பது பன்னியுரைக்கப்பட்டுள்ளமை காண்க.

“உருவமெரி கார்மேனியொன்று” என்பதை இரண்டு வாக்கியமாகக் கொள்ளுதலின்றியே ஏகவாக்கியமாகவே கொண்டு,
இருவருடையவும் உருவத்தைப் பார்த்தால், ஒன்று எரிமேனி, மற்றொன்று கார்மேனி என்பதாக உரைத்தலும் ஒக்கும்.

————

[ஒன்றுமறந்தறியேன்.] கீழ் நான்காம் பாட்டில் “அரன் அறிவானாம்” என்று சிவபிரானை மாத்திரம் இழித்துக் கூறி விட்டீரே;
அவனுக்கு பகவத் விஷயமே தெரியாதென்றும், தெரிந்தவனை போலப் பாவித்து சிஷ்யர்களுக்கு உபதேசிக்கவும்
தொடங்கிவிட்டானே யென்று ஏசியும் பேசினிரே; அவனைக் காட்டிலும் நீர் பகவத் விஷயஜ்ஞானத்தில் சிறந்தவரோ?
நீர் தாம் எம்பெருமானை யறிந்து பிறர்க்கு உபதேசிக்க வல்லீரோ? பிரபந்த முகத்தால் உணர்த்தத் தொடங்கிவிட்டீரே,
இஃது எங்ஙனே? என்று ஆழ்வாரை நோக்கி ஒரு கேள்வி பிறக்க
ஆழ்வார் அதற்கு உத்தரம் அருளிச் செய்கிறது போலே யிருக்கிறது இப்பாட்டு.

அந்த அரனுக்கும் எனக்கும் எவ்வளவோ வாசியுண்டு; அவன் ஸத்வகுணம் தலையெடுத்தபோது எம்பெருமானது
திருவருளாலன்றி ஸ்வப்ராயத்நத்தாலெ அப்பெருமானது ஸ்வரூபஸ்வபாவங்களைச் சிறிது அறிந்து பரமஸாத்விகன்போல இருப்பன்;
அடுத்த ஷணத்திலேயே ரஜோ குணமும் தமோ குணமும் தலையெடுக்கப் பெற்று
‘என்னைக் காட்டிலும் வேறொரு ஈச்வரன் உண்டோ? நானே ஸர்வேச்வரன்’ என்று செருக்குக் கொள்வன்;
அவனை போலவோ நான்? நான் கர்ப்பவாஸம் செய்யும்போதே பிடித்து அப்பெருமானால் நிர்ஹேதுகமாகக் கடாக்ஷிக்கப் பெற்று,
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை யெல்லாம் அவன் தானே காட்டக் கண்டு,
“ஜாயமாநம் ஹி புருஷம்யம் பச்யேத் மதுஸூதந:- ஸாத்விகஸ்ஸது விஜ்ஞேய: ஸவை மோக்ஷார்த்த சிந்தக:”-
[கர்ப்பத்திலேயே எம்பெருமான் எவனைக் கடாஷித் தருள்வனொ அவனே ஸாத்விகன்; அவனே முமுக்ஷூவாவான்] என்கிறபடியே
சித்த ஸாத்விகனாய் அப்பெருமானுடைய திருக்கல்யாண குணம் முதலியவற்றை ஸ்வயம் அநுபவிப்பதும்
பிறர்க்கு எடுத்து உபதேசிப்பதுமாக இவற்றையே காலக்ஷேபமாகக் கொண்டிருந்தவன்;
பெரும்பாலோர் பகவானை மறந்திருக்கும்படியான கர்ப்பவாஸ காலத்திலுங்கூட அவனை மறவாது வாழ்த்திக் கொண்டிருந்த நான்
இனி ஒரு காலாகிலும் மறக்க வழியுண்டோ? அரனுக்குப்போலே எனக்கும் முக்குணங்களும் மாறி மாறி வருமோ?
ஸத்வகுணகார்யமே நிலை நின்றிருக்கப் பெற்ற வெனக்கு
அவனை உணர்தலும் உணர்ந்தவற்றைப் பிறர்க்கு உபதேசித்தலும் உசிதமே என்றாராயிற்று.

ஓன்று மறந்து அறியேன் ஓதம் நீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ வேழைகாள் -அன்று
கருவரங்கத் துட்கிடந்து கை தொழுதேன் கண்டேன்
திருவரங்க மேயான் திசை –6-

பதவுரை

அன்று–அறிவு நடையாடுகைக்கு யோக்யதை யில்லாத காலத்திலே
கரு அரங்கத்துள் கிடந்து–கர்ப்பப்பையாகிற ஸ்தானத்திலே இருந்துகொண்டு,
திருஅரங்க மேயான்–ஸ்ரீரங்கத்திலே வந்து பள்ளி கொண்டிரா நின்ற பெரிய பெருமாளுடைய
திசை–ஸ்வபாவங்களை யெல்லாம்
கண்டேன்–ஸாக்ஷாத் கரித்தவனாய்
கை தொழுதேன்–அஞ்ஜலியும் செய்தவனாகிய நான்
ஓதம் நீர் வண்ணனை–வெள்ளம் பரந்த ஸமுத்ர ஜலம் போலே குளிர்ந்த வடிவழகுள்ள அப் பெருமானை.
ஒன்றும் மறந்து அறியேன்-க்ஷண காலமும் மறந்தறிய மாட்டேன்:
ஏழைகாள்–(விஷயாந்தரங்களை விரும்பித் திரிகிற) அறிவு கேடர்களே!
நான்–(அவனை மறக்கக் கூடிய கர்ப்ப ஸ்தானத்திருக்கச் செய்தேயும் மறவாதிருந்த) தான்.
இன்று–(மறக்க முடியாதபடி ஞான விகாஸம் பெற்ற இக் காலத்திலே)
மறப்பனே–எப்படி மறப்பேன் [மறக்கவே மாட்டேன்.]

ஓதநீர் வண்ணனை என்ற சொல்லாற்றலால்- அவனுடைய வடிவழகு நெஞ்சிலே ஊன்றப் பெற்றவர்கட்கு
அவனை மறப்பது ஒருநாளும் ஸம்பாவிதமல்ல என்பது பெறப்படும்.
கர்ப்பவாஸ காலத்தில் வந்து ஸேவை ஸாதித்தது மாத்திரமே யல்லாமல் எப்போதும் கடாக்ஷித்து விஷயீகரிப்பதற்காகவே
திருவரங்கம் முதலான திருப்பதிகளிலே ஸந்நிதனாயிரா நின்றா னென்பது தோன்றத் திருவரங்கமேயான் என்கிறார்.
மேயான் – மேவியிருப்பவன் திருவுள்ளமுவந்து எழுந்தருளி யிருப்பவன்.

இப்பாட்டின் முடிவிலுள்ள திசை என்னும் பதத்திற்கு ‘திக்கு’ என்னும் பொருளாயினும்
‘தன்மை’ என்னும் பொருளில் அஃது இங்குப் பிரயோகிக்கப்பட்டது. இப்பிரயோகம் வட நூல்களிலே விசேஷமாகவுண்டு.

இதில் மூன்றாம் மடியில் ஒரு சங்கை பிறக்கும்; அதாவது –பொய்கையிலே ஒரு செங்கமலப் பூவிலே திருவவதரித்ததனால்
அயோநிஜராகிய இவ்வாழ்வார்க்கு கர்ப்பவாஸ மென்பது கிடையாதே; அப்படி யிருக்க கருவரங்கத்துள் கிடந்து” என்று
இவர்தாம் எங்ஙனே அருளிச் செய்கிறார் என்று;
இதற்கு உத்தரமாவது- “கருவரங்கத்துள் கிடந்து” என்ற விதனால், *தீண்டாவழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறி தசையுமாய்
வேண்டா நாற்றம்மிக்கிருக்கிற கர்ப்பத்தும்பையில் நின்றும் ஆழ்வார் பிறந்தாரென்று கொள்ளவேண்டிய அவசியம் யாதுமில்லை;
எவ்விடத்தில் நின்று அவதரித்தாரோ அவ்விடமே கர்ப்பஸ்தாநமாகும்;
இந்தவாழ்வாருடைய வாழித்திருநாமத்தில் “வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே” என்றிருப்பதும் இவ்வர்த்தத்தை வற்புறுத்தும்
‘நான் இவ்விருள் தருமா ஞாலத்தில் வந்து தோன்றுவதற்கு முன்னமே எம்பெருமானுடைய கடாக்ஷம் பெற்றவன்’ என்று
சொல்லுவதே இங்கு விலக்ஷிதம் “அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்” என்றாற்போலுமாம்.

“கருவரங்கத்துள்” என்ற விடத்து அரங்கம் என்னும்சொல் ரங்கம் என்ற வடசொல்லின் விகாரம்;
அச்சொல் –நர்தனம் செய்யுமிடம், போர் செய்யுமிடம் என்று சிறப்பிடப் பொருளதாயினும்
இங்கே ‘இடம்’ என்னும் பொதுப் பொருளிலே நிற்கிறது …..

————–

[திசையும்.] ஸ்ரீமந்நாரயணனே பரதேவதையாகில்,
பலரும் பரதேவதை யென்று மயங்கும் படியான பல பல தேவதைகள் ஏற்படுவானேன்?
அந்தத் தெய்வங்கள் தாம் விசித்திரமான் செயல்களைச் செய்ய வல்லமை பெற்றிருப்பானேன்?
என்றொரு கேள்வி உண்டாக எம்பெருமான் தானே, தன்னை உகவாதவர்கள் தன்னை வந்து கிட்டாமல்
தேவதாந்தரங்களைப் பணிந்து க்ஷூத்ர பலன்களைப் பெற்று அகன்று போவதற்காகச் செய்து வைத்த
மயக்குக்கள் காண்மின் இவை-என்று மறுமொழி கூறுகின்றார் –

திசையும் திசையுறு தெய்வமும் தெய்வத்
திசையும் கருமங்கள் எல்லாம் அசைவில் சீர்க்
கண்ணன் நெடுமால் கடல் கடைந்த காரோத
வண்ணன் படைத்த மயக்கு -7–

பதவுரை

திசையும்–திக்குக்களோடு கூடிய உலகங்களும்
திசைஉறு தெய்வமும்–அந்தந்த திசைகளிலே வாழும் தேவதைகளும்
தெய்வத்து இசையும் கருமங்கள்–அந்தந்த தேவதைகளுக்கு ஏற்ற (ஸ்ருஷ்டி முதலிய) வியாபாரங்களும்
எல்லாம்–ஆகிய இவையெல்லாம்,
அசைவு இல் சீர்–கேடில்லாத [நித்யமான] குணங்களை யுடைய
கண்ணன்–ஸ்ரீகிருஷ்ணனாயவதரித்த
நெடு மால்–மிகப் பெருமையை யுடையவனாய்
கடல் கடைந்த–(தன்பெருமையைப் பாராது சரணா கதர்களுக்காக உடம்பு நோவக்) கடல் கடைந்தவனாய்
கார் ஓதம் வண்ணன்–மேகம் போலவும் கடல் போலவும் குளிர்ந்த வடிவை யுடையவனான எம்பெருமான்
படைத்த–(தன்னிடம் வந்து பணிய மாட்டா தவர்களை அகற்றுகைக்காக உண்டாக்கி வைத்த
மயக்கு–அறிவை மயக்கும் பொருள்களாம்.

சர்க்கரை, கற்கண்டு, த்ராக்ஷை முதலிய சிறந்த வஸ்துக்களை வாங்கி உண்டு களிக்க இயற்றி யில்லாத ஜனங்களுக்காக
உப்பு, புளி முதலிய சிறு பொருள்களைக் கடை பரப்பி வைத்த மாத்திரத்திலேயே எல்லாப் பொருள்களுக்கும்
கடைகள் ஏற்பட்டிருக்கின்றன வென்று எல்லாம் சிறந்த பொருள்களாய் விடுமோ?
செல்வம் மிகுந்தவர்களுக்காக விலையுயர்ந்த உண்மையான ரத்னங்கள் ஏற்பட்டிருப்பது போல
ஏழைகளுக்காக அற்பவிலையுள்ள க்ருத்ரிமங்களான ரத்னங்களும் ஏற்பட்டிருக்கின்றன்;
இவை தம்மில் வாழ்வின்றிக்கே யொழியுமோ? சிறந்த வஸ்துக்களை அநுபவிக்க யோக்யதை யில்லாதவர்களை
மயக்குவதற்கு ஸாமாந்ய வஸ்துக்கள் எப்படி ஏற்பட்டனவோ,
அப்படியே பரமவிலக்ஷணனான திருமாலை அநுபவித்து வாழமாட்டாத க்ஷூத்ர ஜநங்களை மயக்குவதற்காகத்
திசையும் திசையுறு தெய்வமும் தெய்வத் திசையுங் கருமங்களுமெல்லாம் ஏற்படுத்தப்பட்டனவென்று கொள்ளவேணுமென்கிறார்.

“திசையும்” என்றது பல பல வுலகங்களைச் சொன்னபடி.
எம்பெருமா னொருவனையே தொழுது இறைஞ்சுதற்கு உரிய உலகமொன்றே யிருக்கலாமாயினும்,
‘இது சிவஸாலோக்யம் பெறும் உலகம்’ ‘இது இந்த்ரஸாலோக்யம் பெறும் உலகம்’ என்றிப்படி
பல பல ஸ்தானங்களைக் கற்பித்தது காரோதவண்ணன் படைத்த மயக்கு என்றபடி.

திசையுரு தெய்வமும்- இன்ன ஸ்தானத்திற்கு இன்னான் கடவன், இன்ன ஸ்தானத்திற்கு இன்னான் கடவன் என்று
ஒவ்வொரு ஸ்தானத்திலும் நிர்வாஹகமாக ஒவ்வொரு தேவதையை ஏற்படுத்தினதும் காரோத வண்ணன் படைத்த மயக்கு.

தெய்வத்து இசையும் கருமங்கள்- நான்முகன் படைப்புத்தொழிலை நிர்வஹிக்கக்கடவன்;
சிவபிரான் ஸம்ஹாரத் தொழிலை நிர்வஹிக்கக்கடவன்;
இந்திரன் தேவதைகளை மெய்க்காட்டுக்கொள்ளுந் தொழிலை நோக்கக்கடவன்;
யமன் உயிர் நீத்துந் தொழிலை நடத்தக் கடவன் என்றிப்படி அவ்வத் தெய்வங்கட்கு இசைந்தவாறாகத் தொழில்களை
வகுத்திருப்பதும் காரோதவண்ணன் படைத்த மயக்கு.
திரிபுர மூன்றெரித்தல், காமதஹநம், வ்ருத்ராஸுரவதம் முதலிய அரிய பெரிய செயல்களை இங்குக் கொள்ளவுமாம்.

கடல் கடைந்து அமுதங் கொண்ட காலத்திலே தேவாஸுரச்ம்வாதம் ப்ரஸங்கிக்க,
எம்பெருமான் மோஹிநி யுருவம் பூண்டு உகவாதாரை மயக்கினது போலவே இவையும் மயக்காக உண்டு பண்ணி
வைக்கப்பட்டவை என்கிற உட்பொருளுந் தோன்றக் “ கடல் கடைந்த காரோதவண்ணன் படைத்த மயக்கு” என்றருளிச் செய்தாரென்க.
கடைந்த கடலிலே அமுதம் விஷம் யானை குதிரை சந்திரன் கல்பவ்ருக்ஷம் அப்ஸரஸ் முதலிய பல விசித்திரப் பொருள்களை
படைத்தருளின பெருமான் இவை யித்தனையும் செய்யவல்லவனே யென்பதும் மூதலிக்கப்பட்டதாம்.

மயக்கு என்றது- மயங்கச் செய்யும் பொருள் என்றபடி;
‘விளக்கு’ என்றால் விளங்கச் செய்யும் பொருள் என்று பொருள் யிடுதல்போல.

———

[மயங்கவலம்புரி.] எம்பெருமான் தன்னை யுகவாதாரை அகற்றுகைக்காகச் சில மயக்குப் பொருள்களை
ஏற்படுத்தினனென்றார் கீழ்ப்பாட்டில் ஸர்வரக்ஷகனான எம்பெருமானுக்கு இது தகுதியோ? என்று ஒரு சங்கை தோன்ற,
ஆச்ரிதர்களை எவ்விதத்திலும் பரிந்து பாதுகாப்பதும் தன்னை மதியாத ஆஸுரப்ரக்ருதிகளை விலக்கி விடுதலும்
அப்பெருமானுடைய காரியம்; துஷ்டநிக்ரஹமும் சிஷ்ட பரிபாலநமும் செய்வதே ஸர்வரக்ஷகத்வமாதலால்
அங்ஙனே செய்தருள்கின்ற எம்பெருமானுடைய ஸர்வரக்ஷகத்வ குணத்திற்கு யாதொரு கேடுமில்லை,
மேன்மெலும் விளக்கமேயுள்ளது என்று ஸமாதான முரைப்பவர் போல இப் பாட்டு அருளிச் செய்கிறார்.

மயங்க வலம்புரி வாய் வைத்து வானத்
தியங்கு மெரி கதிரோன் தன்னை முயங்க மருள்
தோராழி யால் மறைத்த தென் நீ திரு மாலே
போராழிக் கையால் பொருது –8-

பதவுரை

திருமாலே நீ–லஷ்மீநாதனே!, நீ
முயங்கு அமருள்–(எண்ணிறந்த மன்னர்கள்) நெருங்கிக் கிடந்த பாரதப் போர்க் களத்திலே
மயங்க–எதிரிகள் அஞ்சி அறிவு கலங்கும்படியாக்
வலம்புரி–ஸ்ரீபாஞ்சஜந்ய மென்னும் திருச்சங்கை
வாய் வைத்து–தனது திருப்பவளத்திலே வைத்து ஊதி
போர் ஆழிக் கையால்–போர் செய்வதற்கு உபகரணமான திருவாழியை ஏந்தின கையாலே
பொருது–(பீஷ்மர் முதலானவர்களைத் துரத்தி) யுத்தம் செய்து
வானத்து இயங்கும் எறி கதிரோனை–ஆகாயத்தில் ஸஞ்சரித்துக் கொண்டே யிருக்கிற ஸூர்யனை
தேர் ஆழியால்–சக்கராயுதத்தினால்
மறைத்தது என்–மறைத்தது எதுக்காக?

மயங்க வலம்புரி வாய்வைத்தது பகவத்கீதையின் முதலத்தியாயத்திற் சொல்லிற்று எறிகதிரோன் தன்னைத்தேராழியால் மறைத்த வரலாறு:-
பாரதப்போரில் பதின்மூன்றாநாளிலே அர்ஜுநனது மைந்தனான அபிமந்யுவைத் துரியோதநனது உடன் பிறந்தாளின்
கணவனான ஸைந்தவன் கொன்றுவிட, அங்ஙனம் தன் மகனைக்கொன்ற ஜயத்ரதனை மற்றைநாள் ஸூர்யாஸ்தமனத்திற்குள்
தான் கொல்லாவிடில் தீயில்குதித்து உயிர் துறப்பதாக அர்ஜுநன் சபதஞ்செய்ய,
அதனையறிந்த பகைவர்கள் பதினாலாநாள் பகல் முழுவதும் ஜயத்ரதனை வெளிப்படுத்தாமல் சேனையின் நடுவே
நிலவறையில் மறைத்துவைத்திருக்க, அர்ஜுநனுடைய சபதம் பழுதாய்விடுமே என்று சிந்தித்துக் கண்ணபிரான்
ஸூர்யனை அஸ்தமிப்பதற்குச் சில நாழிகைக்கு முன்னமே தனது திருவாழியினால் மறைத்துவிட,
அப்பொழுது எங்கும் இருள் பரவியதனால் அர்ஜுநன் தன் உறுதியின்படி அக்நிப்ரவேசம் செய்யப்புக,
அதனைக் களிப்போடு காண்பதற்குத் துரியோதனாதிகளுடனே ஸைந்தவன் வந்து எதிர்நிற்க,
அப்போது கண்ணபிரான் திருவாழியை வாங்கிவிடவே பகலாயிருந்ததனால் உடனே அர்ஜுநன் ஜயத்ரதனைத் தலை துணித்தனன் என்பதாம்–
“நாழிகை கூறிட்டுக் காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே நாழிகை போகப் படை பொருதவன் தேவகிதன் சிறுவன்” என்றார் பெரியாழ்வாரும்.

இவ்வரலாற்றில் ஒரு சங்கை பிறப்பதுண்டு;- திருமாலின் சக்கராயுதத்தின் ஒளியானது ஸூர்யனுடைய ஒளியிற் காட்டிலும்
பலகோடி நூறாயிரம் மடங்கு மேம்பட்டதென்று சொல்லியிருக்க, கோடி ஸூர்யப்ரகாசனான அத்திருவாழியினாலே
இருளை உண்டாக்கினதாக வுரைப்பது எங்ஙனே? என்று. இதற்குப் பலர் பலவகையான ஸமாதானங்கள் கூறுவர்;
ஒரு ஸமயவிசேஷத்தில் திருவாழியின் பிரகாசம் சிறிதுபோது மழுங்கிப் போகக் கடவதென்று முக்கிய ஸமாதானமாகக் கூறுவதுண்டு.

போராழிக் கையால் பொருது” என்ற நான்காமடியில்- பாரதப்போரில் கண்ணபிரான் பீஷ்மரைக் கொல்வதாகத்
திருவாழியைக் கையிலே கொண்டு தேரில் நின்றும் கீழிறங்கித் துரத்திக்கொண்டு சென்ற கதை அநுஸந்திக்கத்தக்கது.
[மஹாபாரதம்-பீஷ்மபர்வம்-ஐம்பத்தொன்பதா மத்தியாயத்தில் விரிவு காண்க]

மயங்கவலம்புரி வாய்வைத்ததும் எறிகதிரோன்தன்னை ஆழியால் மறைத்ததும் போராழிக்கையால் பொருந்தும் ஏதுக்காக?
என்று ஆழ்வார் எம்பெருமானைக் கேள்வி கேட்கிறார் இப்பாட்டால்.
‘போரில் நான் ஆயுதமெடுப்பதில்லை என்று பிரதிஜ்ஞைசெய்து வைத்து அதற்கு மாறாக்க் காரியஞ் செய்தது
எல்லாரோடும் ஒரு நிகராகவுள்ள உனது உறவுக்குத் தகுமோ? ஸத்யஸங்கல்பனான உன் இருப்புக்குத் தகுமோ?
உன் பெருமைக்குத் தகுமோ? இவை யொன்றையும் பாராமல் நீ செய்த செயல்கள் எதற்காக? என்ற இக் கேள்வியானது-
ஆச்சரிதர்களான பாண்டவர்களிடத்திலே நீ கொண்டிருந்த பக்ஷபாதமே யன்றோ இத்தனையும் செய்வித்தது என்று
வெளியிடுகிற முகத்தால் அவனுடைய ஸெளஹார்த்ய குணத்தை வெளியிடுவதில் நோக்குடைத்தென்க.

முயங்கு அமர் என்றது பலபேர்கள் திரண்டு நெருங்கியிருக்கும் போர்களமென்றபடி.
போர்புரிய வந்தவர்களும் போர்காண வந்தவர்களுமாகத் திரண்ட திரளுக்கு எல்லையில்லையிறே

தேராழியால் மறைத்தது’ என்கிறாரே, தேர்ச்சக்கரத்தை யெடுத்தோ ஸூர்யனை மறைத்தது? என்று சிலர் சங்கிப்பர்;
அன்று; தன் திவ்யாயுதமான சக்கரத்தைக் கொண்டே மறைத்தது;
சக்கரம் தேருக்கு உறுப்பாயிருக்குந் தன்மையுடையதாதலால் வடநூலார் ’ரதாங்கம்’ என வழங்குதல் போலத் தேராழியெனப்பட்டதென்க.
’போராழிக் கையால்’ -கையிற்கொண்ட போராழியினால் என்று கொள்ளலாம்.

———–

[பொருகோட்டோர்.] எம்பெருமான் தான்செய்த பிரதிஜ்ஞையைப் பங்கப்படுத்திக் கொண்டாகிலும்
ஆச்ரிதருடைய காரியமே கண்ணாயிருப்பனென்றார் கீழ்ப்பாட்டில்;
அவ்வளவேயல்ல; தன் வடிவத்தை மாறுபடுத்திக் கொண்டும் இழி பிறப்பை ஏற்றுக் கொண்டும் காரியம் செய்பவன்
காண்மின் என்றருளிச் செய்வதாக வராஹாவதாரத்தை ப்ரஸங்கிக்கிறாரிதில்

பொரு கோட்டு ஓர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன்
ஒரு கோட்டின் மேல் கிடந்த தன்றே விரி தோட்ட
சேவடியை நீட்டித் திசை நடுங்க விண் துளங்க
மாவடிவின் நீ யளந்த மண் –9-

பதவுரை

விரி தோட்ட–ஒளி விரிகின்ற திருக் குண்டலங்களை அணிந்துள்ளவனே!
சே அடியை நீட்டி–செந்தாமரை போன்ற திருவடிகளை வளரச் செய்து
திசை நடுங்க–பூதலத்திலுள்ளவர்கள் நடுங்கும்படியாகவும்
விண் துளங்க–மேலுலகங்களிலுள்ளவர்கள் நடுங்கும்படியாகவும்
மா வடிவில்–(திரிவிக்கிரமனாக வளர்ந்த) பெரிய உருவத்தோடு
நீ அளந்த–நீ அளந்து திருவடி கீழ் இட்டுக் கொண்ட
மண்–பூமியானது,
பொருகோடு ஓர் ஏனம் ஆய்–நிலத்தைக் குத்தி யெடுத்துக் கொண்டு திரிகிற கோரப் பற்களை யுடைய விலக்ஷணமான வராஹ மூர்த்தியாய்
புக்கு–(பிரளய ஜலத்திலே முழுகி)
இடந்தாய்க்கு அன்று–அண்ட பித்தியில் நின்றும் இந்தப் பூமியைக் குத்தி யெடுத்துக் கொண்டு வந்த அக்காலத்தில்
உன்–உன்னுடைய
ஒரு கோட்டின் மேல்–ஒரு கோரப் பல்லின் ஏக தேசத்திலே
கிடந்தது அன்றே–அடங்கிக் கிடந்த தல்லவோ?

பொருகோட்டோரேனமாய்ப்புக்கிடந்த வரலாறு:- ஹிரண்யகசிபுவின் உடன்பிறந்தவனான ஹிரண்யாக்ஷனென்னுங் கொடிய அசுரன்
தன் வலியையாற் பூமியைப் பாயாகச் சுருட்டி எடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிச் சென்றபோது
தேவர் முனிவர் முதலியோரது வேண்டிகோளினால் திருமால் மஹாவராஹரூபியாகத் திருவ்வதரித்துக் கடலினுட்புக்கு
அவ்வசுரனை நாடிக்கண்டு பொருது கோட்டினாற்குத்திக் கொன்று பாதளலோகத்திற் சார்ந்திருந்த பூமியைக்
கோட்டினாற்குத்தி அங்கு நின்று மெடுத்துக்கொண்டு வந்து பழையபடி விரித்தருளினன் என்பதாம்.
இப்பொழுது நடக்கிற ச்வேதவராஹகல்பத்துக்கு முந்தின பாத்மகல்பத்தைப்பற்றிய பிரளயத்தின் இறுதியில்
ஸ்ரீமந்நாராயணன் ஏகார்ணவமான பிரளயஜலத்தில் மூழ்கியிருந்த பூமியை மேலே யெடுக்க நினைத்து
மஹாவராஹரூபியாகிக் கோட்டு நுனியாற் பூமியை எடுத்து வந்தனனென்ற வரலாறும் உண்டு.
“பாராருலகம் முதுமுந்நீர் பரந்தகாலம் வளைமருப்பில் ஏராருருவத்தேனமா யெடுத்த வாற்றலம்மான்-” என்ற
திருமங்கையாழ்வாரருளிச் செயலை நோக்குக.

இவ்வரலாற்றினாலும் பின்னடிகளிற் குறித்த திரிவிக்கிரமாவதார சரிதையினாலும்-
எம்பெருமான் ரக்ஷ்ய வர்க்கங்களை இன்னபடி தான் ரக்ஷிப்பனென்கிற ஒருநியதியில்லை யென்பது வெளியிடப்பட்டதாம்.-
“ஆபத்துவந்தால் தலையாலே சுமந்து நோக்குதல், தலையிலே காலை வைத்து நோக்குதல் செய்யுமவனன்றோ நீ;
ரக்ஷயவர்க்கத்தை நோக்குமளவில் உனக்கொரு நியதியுண்டோ வென்று உகந்தனுபவிக்கிறார்” என்றும்;
” உதாரனாயிருப்பானொருவன் நாலு பேருக்குச் சோறிட நினைத்து நாற்பதுபேருக்கு இட்டுமிகும்படி
சோறுண்டாக்குமாபோலே ரக்ஷ்யத்தினளவன்றிறே ரக்ஷகன் பாரிப்பு” என்றுமுள்ள வியாக்கியான வாக்கியங்கள் அநுஸந்திக்கத் தக்கன.

மிகப்பெரிய வடிவுகொண்டு உலகளந்தபோது எங்கும்பரந்த திருவடிக்குச் சரிசமமாகப் போந்திருந்த பூமியானது
வராஹாவதாரகாலத்தில் உனது திருஎயிற்றிலே ஒரு நீலமணி போலே சிறுகிக்கிடந்ததே!
இஃது என்ன ஆச்சரியம் என வியக்கின்றார். இப்பிரபந்தத்தில் மேலே
“ பிரானுன் பெருமை பிறராரறிவார், உராயுலகளந்தநான்று- வராகத், தெயிற்றளவு போதாவாறென்கொலோ;
எந்தை அடிக்கு அளவு போந்தபடி” என்றருளிச் செய்துள்ள எண்பத்து நாலாம் பாசுரமும் இங்கு ஸ்மரிக்கத்தக்கது.

‘விரிதோட்ட’ என்பதை விளியாகக் கொண்டு ஒளி விரிகின்ற தோடுகளை யணிந்தவனே!-
மகர நெடுங்குழைக்காதனே! என்று பொருள்கொள்ளும் பக்ஷத்தில் ‘விரிதோட’ என்றிருக்க வேண்டுவது
விரித்தல் விகாரம் பெற்று ‘விரிதோட்ட’ என்றாயிற்றென்று கொள்ள வேண்டும்;
இஃது அருமையெனின்; வேறுவகையாகவே பொருள் கொள்ளலாம்-
மலர்ந்த இதழ்களை யுடைய தாமரை போலேயிருக்கிற என்று. இப்போது இது சேவடிக்கு விசேஷணம்.

————–

[மண்ணும் மலையும்.] ஏனமாய் நிலங்கீண்ட போது மிகப் பெரிதான பூமி ஒருகோட்டின் மேலே அடங்கிக் கிடந்த
விசித்திரத்தைக் கீழ்ப்பாட்டில் பேசியநுபவித்த ஆழ்வார்க்கு மற்றொரு அற்புதச் செயலும் நினைவுக்கு வந்தது;
பிரளய காலத்தில் சிறிய பாலகனாய் ஏழுலைகையும் அமுது செய்தாயென்று ப்ராமாணிகர்களான வைதிக புருஷர்கள் சொல்லுகின்றனர்;
இது ஸத்யமான விஷயமேயன்றி ஈஷத்தும் அஸத்யமல்ல; சிறிய வாயினாலே பெரிய வுலகங்களை அமுது செய்யக் கூடமையாலே
உலகுண்ட அக்காலத்தில் உனது வாயும் உலகங்களின் பெருமைக்குத் தகுதியாகப் பெருத்திருந்ததோ என்று வினவுகின்றார்.

இங்ஙனே கேள்வி கேட்கிற முகத்தால் எம்பெருமானுடைய ஒப்புயர்வற்ற சக்தி விசேஷத்தை வெளிப்படுத்துகின்றாராழ்வார் என்றுணர்க.
சிறிய வாயினாலே பெரிய வுலகங்களை எல்லாம் எளிதில் விழுங்கவல்ல அபாரசக்தி யுக்தனன்றோ நீ என்றவாறு.

மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும்
விண்ணும் விழுங்கியது மெய்யன்பர் எண்ணில்
அலகளவு கண்ட சீராழி யாய்க்க்கு அன்றிவ்
வுலகளவும் உண்டோ வுன் வாய்—10-

பதவுரை

மண்ணும்–பூமியும்
மலையும்–குல பர்வதங்களும்
மறி கடலும்–அலை யெறிகிற ஸமுத்ரங்களும்
மாருதமும்–காற்றும்
விண்ணும்–ஆகாசமும் ஆகிய இவற்றை யெல்லாம்
விழுங்கியது–(உனது திருவயிற்றின் ஒரு மூலையிலே அடங்கும்படி) அமுது செய்ததை
மெய் என்பர்–ஸத்யமாகச் சொல்லுவர்கள் (வைதிகர்கள்);
எண்ணில்–இதனை ஆராயுமளவில்
அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு உன் வாய்–அளவிடுதற்கு உறுப்பான எண்ணிக்கைகளை யெல்லாம்
எல்லை கண்டிருக்கிற [-எண்ணிறந்த] கல்யாண குணங்களுக்குக் கடல் போன்றவனான உன்னுடைய வாயானது
அன்று–இவற்றை யெல்லாம் விழுங்கின வக்காலத்தில்
இஉலகு அளவும் உண்டோ–இந்த ஜகத்தளவு விசாலமாகவும் இருந்திருக்குமோ?

[அலகளவுகண்டசீர்] நூறு ஆயிரம் பதினாயிரம் லக்ஷம் கோடி சங்கம் மஹாசங்கம் பத்மம் என்றாற்போன்ற எண்கள் அலகு எனப்படும்;
அவற்றை அளவு காண்கையாவது-அந்த எண்களின் எல்லைக்குத் தாள் மேற்பட்டுபோதல்; அளவுகடந்து போவதைச்சொன்னபடி.
‘அஸங்க்யேய கல்யாண குணகணெளகமஹார்ணவ!” என்பர் ஸ்ரீ பாஷ்யகாரரும்.

சீராழியாய்க்கு = ஆழியென்று ஸமுத்ரத்துக்குப் பெயர்; ஆழியான் – சமுத்ரமாயிருப்பவன்;
முன்னிலைப் பெயர் நான்காம் வேற்றுமையுருபு பெற்று “ ஆழியாய்க்கு” என்றாயிற்று;
அன்றி,
ஆழியையுடையவன் ஆழியான் என்றாகி,
எல்லை கடந்த திருக்குணங்களையும் சக்கராயுதத்தையும் உடைய உனக்கு என்று பொருளாகவுமாம்; இ
துவே வியாக்கியானத்திற்கும் பொருந்தியதென்க.

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அருளிச் செயல்களில் கண்டு கொண்டமை —

August 11, 2021

ஸ்ரீ அருளிச் செயல்களில் –கண்டேன் -கண்டு கொண்டேன் -போன்ற -பாசுரங்கள்
ஞானம் தர்சன பிராப்தி -நடு நிலை -காலஷேபம் -உத்தர க்ருத்யம்
அஹம் அஸ்மி அபராதானாம் ஆலய -அகிஞ்சநோ- அகதி — த்வம் ஏவ உபாய பூத மே பவ –
இதி பிரார்த்தனா மதி சரணாகதி ச தேவப்ஸ்மின் ப்ரயுஜ்யதாம் –ஸ்ரீ பாஞ்ச ராத்ர வசனம்

கண்டு கொண்டேன் -பிரதம பர்வ ஸ்வ கத நிஷ்டை –
நாம் அவனைக் கண்டு -ஸ்வரூப ரூப குண விபூதிகளை அறிந்து பற்றிக் கொள்ளுகை

அவன் நம்மைக் கண்டு
வாழும் சோம்பராய் இருக்கும் நிலையைக் கண்டு உகந்து
நம்மைக் கைக் கொள்ளுகை

பாகவத நிஷ்டை மத்யம பர்வம்
ஆச்சார்ய நிஷ்டை சரம பர்வம்
இவற்றிலும் பரகத சரம பர்வ நிஷ்டைகள் உண்டே

கண்டு கொண்டார் ஆழ்வார்
நாம் பயன் அல்லாமலும் பாங்கு இல்லாமையாலும்
நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் கை விட்ட அளவையும் கண்டு தாமே கைக் கொள்ளுவார்

கனவில் கண்டேன்
இன்று கண்டமையால் என் கண் இணைகள் களிப்பக் களித்தேனே—

————————

இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி
திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை கண்டு கொண்டு என்
கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–பெருமாள் திருமொழி-–1-1-

ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே ஒரு நீல ரத்னம் சாய்ந்தால் போலே கண் வளர்ந்து அருளுகிறவனை
கோமளத்தை –கண்ணார துகைக்க ஒண்ணாத சௌகுமார்யம் உடையவன்
கண்டு கொண்டு –கலியர் -சோற்றைக் கண்டு கொண்டு -என்னுமா போலே
என் கண் இணைகள்-பட்டினி விட்ட என் கண்கள்
என்று கொலோ களிக்கும் நாளே-
அங்கே கண்டு -அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்று களிக்கும் களிப்பை
இங்கே கண்டு களிப்பது என்றோ –

மணி வண்ணன் அம்மானை கண்டு கொண்டு என்
மலர் சென்னி என்று கொலோ வணங்கும் நாளே ?—1-5-

ஒளி மதி சேர் திரு முகமும் கண்டு கொண்டு என்
உள்ளம் மிக என்று கொலோ வுருகும் நாளே—1-6-

——————————

மொய்த்த வல் வினையுள் நின்று மூன்று எழுத்துடைய பேரால்
கத்திர பந்தும் அன்றே பராங்கதி கண்டு கொண்டான்
இத்தனை அடியரானார்க்கு இரங்கும் நம் அரங்கனாய
பித்தனைப் பெற்றும் அந்தோ பிறவியுள் பிணங்குமாறே–திரு மாலை-4-

பராங்கதி கண்டு கொண்டான்-
பாப விமோசனமே பலம் போந்து இருக்க-அவ்வளவு அன்றிக்கே-ஸ்வர்க்காதி பலங்களின் அளவும் அன்றிக்கே –
ஐஸ்வர்யாம் கைவல்யங்கள் அளவும் அன்றிக்கே – உத்தம புருஷார்தத்தைக் கிடீர் லபித்தது –
சம்சாரிகளில் கடையனானவன் அச்ப்ர்ஷ்ட சம்சார கந்தம் உடைய அனுபவத்தை இறே பெற்றது –

கண்டு கொண்டான் -என்றது
இழந்தது பெற்றால் போலே இருக்கை –
திரு நாமம் சொன்னதுக்கு பலம் பெற்றானாய் இருக்கை அன்றிக்கே தன்னது தான் பெற்றானாக வாய்த்து இவன் நினைத்து இருப்பது –
அஞ்ஞானத்தாலே மறைந்து கிடந்ததாய்-பகவத் விஷயீ காரத்தால் அதில் நிவ்ருத்தி பிறந்தால் ஸ்வரூபமும் –
ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷமும் பிரகாசிக்கும் இத்தனை இறே –
பிரகாச்யந்தே ந்ஜந்யந்தே-என்னக் கடவது இறே –

————-

விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதியிலேன் மதி யொன்று இல்லை
இரும்பு போல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த வரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டேன் கண்ணினை களிக்குமாறே –17-

கண்டு கொண்டு
நிதி எடுத்துக் கொண்டு -என்னுமா போலே
கண்ணாலே பருகும் கரும்பாய்த்து இது –
லோச நாப்யாம் பிபந்நிவ-

என் கண்ணினை களிக்குமாறே –
நரஹாவகமான விஷயங்களைக் கண்டு களித்துப் போந்த
என் கண்கள் கிடீர்
இவ் விஷயத்தைக் கண்டு களிக்கின்றன

———-

கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றி யருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ் சடகோபன் அருளையே–கண்ணி நுண் சிறுத் தாம்பு-7–

கண்டு கொண்டு என்னை
இருந்தான் கண்டு கொண்டு -என்று எம்பெருமான் ஆழ்வாரைக் கண்டு கொண்டு இருந்தாப் போலே
ஆழ்வாருக்கு அலாப்ய லாபம் ஆகிறபடி-காட்சி இத்தலைக்காக வன்றிக்கே தம் பேறாக இருக்கிறபடி-
(பெருமாள் -அந்யோன்யம் அபிவிஷணை மஹாராஜர் போலே-மூவர் அனுபவம் – )

கண்டு கொண்டு என்னை-தம்முடைய துர்க்கதியைச் சொல்லுகிறார்
என்னைக் கண்டு-சத்துக்களாலே அசமீஷ்யனான என்னைக் கூசாதே கடாஷித்து
என்னைக் கண்டு-இவருடைய யம் பச்யேத்-என்கிற பிரதம கடாஷம் இருக்கிற படி
கொண்டு-தோஷம் பட்டவாறே காற்கடைக் கொள்ளாதே கைக்கொண்டார்
என்னைக்கண்டு -என்னைக் கொண்டு–பார்க்க ஒண்ணாத என்னைப் பார்த்தார்
எல்லாரும் கை விட்ட வென்னைக் கைக் கொண்டார்-இவர் ச்வீகரித்தால் அவனாலும் விடப் போகாதே

————

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெரும் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர் தரும் கல்வியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -1-1-1-

இத்தால் சொல்லிற்று ஆயிற்று என்ன என்றால் –
அநதிகாரியானவனுக்கு அதிகாரம் சம்பாதிக்க வேண்டா -அதிகாரியானவனுக்கு அநதிகாராம் சம்பாதிக்க வேண்டா –
நின்ற நிலைகளிலே அதிகாரிகளாம் இத்தனை -சர்வாதிகாரம் -என்றபடி –

கண்டு கொண்டேன் –
தனம் இழந்தவனுக்கு தந லாபம் போலே இருக்கையாலும்
தாய ப்ரப்தமாய் இருக்கையாலும் –

நான் கண்டு கொண்டேன் –
கெடுத்தவன் தானே கண்டால் போலே இருக்கை

நாராயணா
பிரணவம் ஆதல் -நமஸ் ஆதல் -சதுர்த்தி யாதல் -கூட்டாமையாலே
திருவிடை யாட்டத்திலே இழிய அமையும் (ஐஸ்வர்யத்துக்குள் ஒருவனாக இருந்தாலே போதும் )
பல பர்யந்தம் ஆகைக்கு சாங்கமாகவும் வேண்டா என்கிறது-
(நார சப்தத்துக்குள் நாமும் உள்ளோம் என்ற இசைவே வேண்டியது)

என்னும் நாமம் –
என்னும் என்கிறது -பலகால் ஆதரித்து சொல்லுகிற அநந்ய பரமான ஸ்ரீ நாராயண அநுவாகப் ப்ரசித்தி
நாமம் -என்கையாலே இருந்தபடியே உத்தேச்யம் –
இச்சை பிறந்த போதே காலம் –
சொல்லுவோம் என்றவன் அதிகாரி -என்கிறது-
(மந்த்ரம் என்று சொல்ல வில்லையே -ஆசையே அதிகாரி)

ஸ்ரீ திரு மந்த்ரம் சொல்லும்போது ப்ரயதராய்க் கொண்டு சொல்ல வேணுமோ வேண்டாவோ –
என்று ஸ்ரீ ஜீயர் ஸ்ரீ பட்டரைக் கேட்க -வேண்டா என்று அருளிச் செய்தார்
கங்கையாடப் போமவனுக்கு நடுவே ஒரு உவர்க் குழியிலே முழுகிப் போக வேணுமோ
இந் நன்மை எல்லாம் உண்டாகப் புகுகிறது கீழே அயோக்யதை இத்தனையும் போக்க மாட்டாதோ -என்று அருளிச் செய்தார்-

———

உடம்புருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறாய்
உலகுய்ய நின்றானை அன்று பேய்ச்சி
விடம்பருகு வித்தகனைக் கன்று மேய்த்து
விளையாட வல்லானை வரை மீ கானில்
தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக் கோயில்
தவ நெறிக்கோர் பெரு நெறியை வையம் காக்கும்
கடும்பரி மேல் கற்கியை நான் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே —-2-5-3-

கண்டு கொண்டேன் -ஒவ் ஒன்றிலும் சேர்த்து
உலகுய்ய நின்றானை கண்டு கொண்டேன்
விளையாட வல்லானை கண்டு கொண்டேன்
தடம்பருகு கருமுகிலை கண்டு கொண்டேன்
தஞ்சைக் கோயில் தவ நெறிக்கோர் பெரு நெறியை கண்டு கொண்டேன்
வையம் காக்கும் கடும்பரி மேல் கற்கியை கண்டு கொண்டேன்

ஜகத்தை அடைய ரஷிக்க கடவனாய் இருக்கிறவனுடைய
ரஷணத்துக்கு நான் இப்போது விஷய பூதன் ஆனேன் என்கிறார்

———

பேரணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேரருளாளன் எம்பிரானை
வாரணி முலையாள் மலர் மகளோடு மண் மகளும் உடன் நிற்ப
சீரணி மாட நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
காரணி மேகம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே–4-3-1-

கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே/ வாழ்ந்து ஒழிந்தேனே /அல்லல் தீர்ந்தேனே —
பாசுரங்கள் தோறும் உண்டே -கண்களால் தரிசித்து -காதால் மட்டும் கேட்டுப் போகாமல் க்ருதார்த்தன் ஆனேன் –

————-

சினவில் செங்கண் அரக்கருயிர்மாளச்
செற்ற வில்லியென்று கற்றவர் தந்தம்
மனவுட் கொண்டு,என்று மெப்போதும் என்றேத்தும்
மா முனியை மரமேழெய்த மைந்தனை,
நனவில் சென்றார்க்கும் நண்ணற் கரியானை
நானடியேன் நறையூர் நின்ற நம்பியை,
கனவில் கண்டேனின்று கண்டமையாலென்
கண் இணைகள் களிப்பக் களித்தேனே–7-3-1-

————–

சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த
சங்க மிடத்தானைத் தழலாழி வலத்தானைச்
செங்கமலத் தயனனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அங்கமலக் கண்ணனை அடியேன் கண்டு கொண்டேனே —7-6-1-

பிரவேசம் –

போன புனிதர் -என்று இன்னாதானார் –நாம் எங்கேனும் போனோமோ – உமக்காகா வன்றோ இவ்வவோ இடங்களில்
வந்து நிற்கிறது –என்று உகந்து அருளின கோயில்களில் நிலையைக் காட்டினான் –
இனித்தான் சிறுக்கன் உடைய பிரதிஞ்ஞா சம காலத்திலேயே வந்து உதவினவன் என்று நம்மை நீர் அறிந்து இலீரோ –
உமக்கு நினைத்த வகை எல்லாம் பரிமாறுகைக்காக இங்கே வந்து நின்றோம் –
உம்முடைய விரோதியைப் போக்கி-உம்மை அடிமை கொள்ளுகைக்காக இங்கே வந்து நின்றோம் –
என்று ஸ்ரீ திரு வழுந்தூரிலே நிற்கிற நிலையைக் காட்டக் கண்டு த்ருப்தராய் அனுபவிக்கிறார் –
ததேவ கோபாயா யத பிரசாதாயச ஜாயதே -என்கிறபடியே
இந்நிலை தான் இவர்க்கு இழவுக்கும் உடலாய் பேற்றுக்கும் உடலாய் யாய்த்து இருப்பது –
ஆகையால் இப்போது தமக்கு சமாதானமாய் விட்டது –

அவ் ஊரில் உள்ளார் உடைய ஜன்மமும் இன்றிக்கே
ஸ்ரீ பிரகலதான் உடைய படியும் இன்றிக்கே இருக்கிற நான் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –

ஆவா வென்று இரங்கித் தென் அழுந்தையில் மன்னி நின்ற
தேவாதி தேவனை யான் கண்டு கொண்டு திளைத்தேனே –7-6-2-

அயர்வறும் அமரர்கள் அதிபதியை நான் கண்ணாலே காணப் பெற்று
ஷோபம் அடையத் தீர்ந்து களிக்கப் பெற்றேன் –
(ஷோபம் -கலக்கம் -ஸ்திதோஸ்மி –நாஷ்டோ மோஹ -அர்ஜுனன் போல் )

தென்னிலங்கை அழித்தானை யணி யழுந்தூர்
உடையானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே –7-6-3-

பிராதி கூல்யமேயாய் அதிலே நிலை நின்றாரை அழியச் செய்யுமவனை –
நித்ய விபூதி உக்தனான சம்பத்துக்கு மேலே ஓன்று காணும் –திரு வழுந்தூருக்கு கடவன் ஆனது –
கீழே உபய விபூதி யோகத்தையும் சொல்லி யணி யழுந்தூர் உடையானை -என்னும் போது
அதுக்கு மேலே ஒரு சம்பத்து ஆக வேணும் இறே –
(த்ரிதீய விபூதி அரங்கம் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்)
அநந்ய கதியான நான் கிட்டப் பெற்று –அசந்நேவ -என்னும் நிலை தவிர்ந்து –
உஜ்ஜீவித்து –க்ருதார்த்தனாகப் பெற்றேன் –

அன்று ஆவின் நறு நெய் அமர்ந்து உண்ண வணி யழுந்தூர்
நின்றானை யடியேன் கண்டு கொண்டு நிறைந்தேனே –7-6-4-

திரு வழுந்தூர் நின்றானை-திருவாய்ப்பாடியிலே நின்ற படி யாய்த்து இங்கு நிற்பது –
(பசுமாடு கன்றுகளை தேடி ஆ மருவி அன்றோ இங்கு நின்று அருளுகிறார் )
கண்ணாலே காணப் பெற்று–அபூர்ணனான நான்-பூர்ணனாகப் பெற்றேன் –

செஞ்சொல் நான் மறையோர் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அஞ்சனக் குன்றம் தன்னை அடியேன் கண்டு கொண்டேனே –7-6-5-

ஸ்ரமஹரமான வடிவை உடையனாய்க் கொண்டு தாப த்ரயம் போம் படி நின்றவனை
தாபத் த்ரயத்தாலும் தப்தனாய் இருக்கிற நான் கண்டு என்னுடைய தாப த்ரயங்கள் தீரப் பெற்றேன் –

அழுந்தூர் மறையோர்கள் அடி பணியும்
கரியானை அடியேன் கண்டு கொண்டு களித்தேனே –7-6-6-

திரு அழுந்தூரில் உண்டான பிராமணர் ஆனவர்கள் திருவடிகளில் ஆஸ்ரயிக்கும் படியாக நிற்கிற
ஸ்ரமஹரமான வடிவை உடையவனை –
அனந்யார்ஹனான நான் கண்டு கொண்டு களிக்கப் பெற்றேன் –

தென் அழுந்தையில் மன்னி நின்ற கருவார் கற்பகத்தைக் கண்டு கொண்டு களித்தேனே -7-6-7-

திரு வழுந்தையிலே நித்ய வாஸம் பண்ணுகிற –
கருவார் கற்பகத்தைக் கண்டு கொண்டு களித்தேனே —அடி உடைத்தான கல்பகம் ஆய்த்து-
ஸ்வர்க்கத்திலே நிராலம்பநமாக நிற்கிறது அன்றிக்கே பூமியிலே வேர்ப் பற்று உண்டான கற்பகத்தைக்
கண்டு கொண்டு என் சர்வ அபேஷிதங்களையும் பெற்று ஹ்ருஷ்டன் ஆனேன் –

தென் அழுந்தையில் மன்னி நின்ற கலையார் சொற் பொருளைக் கண்டு கொண்டு களித்தேனே —7-6-8-

சகல கலைகளாலும் புருஷார்த்தமாக பிரதிபாதிக்கப் பட்டவனைக் கண்டு கொண்டு
என் சர்வ அபேஷிதங்களையும் பெற்று ஹ்ருஷ்டன் ஆனேன் –

தென் அழுந்தையில் மன்னி நின்ற காரர் கரு முகிலைக் கண்டு கொண்டு களித்தேனே –7-6-9-

திரு அழுந்தூரிலே நித்ய வாஸம் பண்ணுகிற –கார் காலத்திலேயே மேகம் போலே
ஸ்ரமஹரமான வடிவு அழகை உடையவனை –கண்கள் குளிரக் காணப் பெற்று ஹ்ருஷ்டன் ஆனேன் –

———–

பெரும் புறக் கடலை யடல் ஏற்றினைப் பெண்ணை யாணை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-

அம்ருதத்தை நீராகப் பாய்ச்சி வளர்த்தால் போலே நிரதிசய போக்ய பூதமான
கரும்பு போலே இனியனாய் இருக்கிறவனை –அப்போதே நுகரலாம்படி பக்வ பலமாய் இருக்கிறவனை –
பசித்த இடத்தே-ஸூக போஜனம் பண்ணப் பெறுவாரைப் போலே அபேஷை பிறந்த இடத்தே
கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –

கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-2-
கங்குலைப் பகலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே—7-10-3-
காசினை மணியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-4-
காற்றினைப் புனலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-5-
(வாழ் முதல் மகிழ் முதல் வளர் முதல் -தாயகம் -போக்யம் -போஷகம்
யந்தணர் கற்பினை கழுநீர் மலரும் வயல் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-6-
(கற்பினை-சங்கல்பம் -அத்யயனம் இரண்டையும் சொல்லிற்று )
மறையோர் தங்கள் கண்ணினைக் கண்கள் ஆர அளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-9-
வேதத்தை எங்கும் ஒக்க அதிகரித்து இருப்பார்க்கு-தன்னை ஒழிய பதார்த்த தர்சனம் பண்ண ஒண்ணாத படி
அவர்களுக்கு -திருஷ்டி பூதனாய் உள்ளவனை –கண்கள் ஆர அளவும் நின்று – காணப் பெறாமையால்
உறாவின கண்களின் உறாவுதல் தீரும்படி -நின்று கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை=7-10-10-

——————

வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி யுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன்
ஆனா வுருவிலானா யவனை யம்மா விளை வயலுள்
கானார் புறவில் கண்ண புரத்தடியேன் கண்டு கொண்டேனே —8-8-1-

ஆமையாய் விலங்கல் திரியத் தடங்கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை
கலங்கல் முந்நீர்க் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே–8-8-2-

ஏரார் உருவத் தேனமாய் எடுத்த வாற்றல் அம்மானை
கூரார் ஆரல் இரை கருதிக் குருகு பாயக் கயல் இரியும்
காரார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-3-

வெஞ்சமத்து பிளந்து வளைந்த வுகிரானைப் பெரும் தண் செந்நெல் குலை தடிந்து
களம் செய் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-4-

தொழு நீர் வடிவில் குறள் உருவாய் வந்து தோன்றி மா வலி பால்
முழு நீர் வையம் முன் கொண்ட மூவா வுருவின் அம்மானை
உழு நீர் வயலுள் பொன் கிளைப்ப ஒரு பால் முல்லை முகையோடும்
கழு நீர் மலரும் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே —8-8-5-

வடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி மூ வெழு கால்
படியார் அரசு களை கட்ட பாழியானை அம்மானை
குடியா வண்டு கொண்டு உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்
கடியார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே —8-8-6-

வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி
வெய்ய சீற்றக் கடியிலங்கை குடி கொண்டோட வெஞ்சமத்து
செய்த வெம்போர் நம் பரனைச் செழும் தண் கானல் மண நாறும்
கைதை வேலிக் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-7-

ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒரு பால் தோன்றத் தான் தோன்றி
வெற்றித் தொழிலார் வேல் வேந்தர் விண் பால் செல்ல வெஞ்சமத்து
செற்ற கொற்றத் தொழிலானைச் செந்தீ மூன்றும் இல்லிருப்ப
கற்ற மறையோர் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-8-

துவரிக் கனிவாய் நில மங்கை துயர் தீர்ந்து உய்யப் பாரதத்துள்
இவரித் தரசர் தடுமாற இருள் நாள் பிறந்த வம்மானை
உவரியோதம் முத்துந்த ஒரு பால் ஒரு பால் ஒண் செந்நெல்
கவரி வீசும் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே —8-8-9-

———

ஆழியும் சங்கு முடைய நங்கள் அடிகள் தாம்,
பாழிமை யான கனவில் நம்மைப் பகர்வித்தார்,
தோழியும் நானு மொழிய வையம் துயின்றது,
கோழியும் கூகின்ற தில்லைக் கூரிரு ளாயிற்றே–11-2-6-

————

நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே–திருக் குறும் தாண்டகம் –1-

கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே –
சுவடு அறிவிக்கும் தனையும் இறே வருத்தம் உள்ளது – பின்னை அத்தலை -இத்தலையாம் -இத்தனை –
கண்டு கொண்ட –
நான் கண்டு கொண்டேன் -என்று திரு அரசடியிலே காட்டிக் கொடுத்த காட்சி
ஏது செய்தால் மறக்கேன் -என்று மறந்து விட ஒண்ணாதபடி இறே மனசிலே புகுந்து காட்டிக் கொடுத்தது –
கண்டு கொண்ட –
கேட்டது கண்டால் போலே இருக்கிறது காணும்
ஸ்வரூப ஞானம் பிறந்தவர் ஆகையாலே -பண்டே வுண்டாய் – இழந்தது கண்டால் போலே இருக்கிறது –

———

கண்டாயே நெஞ்சே! கருமங்கள் வாய்க்கின்று ஓர்
எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு
உண்டானை உலகு ஏழும் ஓர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே–1-10-5-

கண்டாயே நெஞ்சே-
நான் சொன்னபடியே பலத்தோடே -வியாப்தமானபடி -நிறைவு பெற்றபடியைக் கண்டாயே.

நெஞ்சே –
ஞான பிரசர த்வாரமான -ஞானம் செல்லுதற்கு வழியாக வுள்ள உனக்குச் சொல்ல வேண்டா அன்றே?

கருமங்கள் வாய்க்கின்று –
காரியங்கள் பலிக்குமிடத்தில்.

ஓர் எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு கண்டாயே –
‘எண்ணிலும் வரும்’ என்று தான் மிகையாம்படி வந்து பலித்துக் கொண்டு நிற்கிறபடி கண்டாயே.
இயலுகை -பலிக்கை
இதனால், பகவானுடைய பிரபாவம் சொல்லுவார் சொல்லும் அளவு அன்று காண் என்பது பெறுதும்.
இத் தலையில் எண் இன்றிக்கே இருக்கப் பலிக்கும் என்னுமிடத்துக்கு உதாரணம் காட்டுகிறார் மேல் :

உலகு ஏழும் உண்டானை –
பிரளயம் கொண்ட உலகத்துக்கு ‘இறைவன் நம்மை வயிற்றிலே வைத்து நோக்குவான்’ என்னும் நினைவு உண்டோ?

உலகு ஏழும் ஓர் மூன்று அடி கொண்டானை –
இறைவன் உலகத்தை முழுதும் அளக்கிற போது ‘நம் தலையிலே திருவடியை வைக்கப் புகா நின்றான்’ என்னும் நினைவு உண்டோ?
இதற்கு உதாரணம் தேடிப் போக வேண்டுமோ ஒன்று?

கண்டு கொண்டனை நீயும் –
விலக்குகைக்குப் பரிகாரமுடைய நீயும் அன்றோ கண்டு கொண்டாய்?
பிரளயத்தில் அகப்பட்ட உலகத்திற்குத் தடுப்பதற்கு வழி இல்லை;
உலகத்தை அளக்கிற காலத்தில் அறிந்து தடுப்பதற்கு அங்குச் சமயம் இல்லை;
அறிந்தால் விலக்கி இருப்பார்கள் அன்றே? அசங்கிதமாக வருகையாலே பேசாதிருந்தார்கள் இத்தனை,
அவ்வாறு அன்றி விலக்குதற்கு எல்லா வழிகளையும் பெற்றிருந்த நீ விலக்காதிருந்தமையே அருமை’ என்பார்,
‘நீயும்’ என உம்மை கொடுத்து ஓதுகின்றார்.

———–

தலைப் பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
அலைப் பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம் அகலக்
கலைப் பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு
நிலைப் பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடு உயிரே–3-2-10–

கலைப் பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு –
வேதைஸ் ச சர்வைர் அஹம் ஏவ வேத்ய ’எல்லா வேதங்களாலும் அறியத்தக்கவனும், வேதங்களைச் செய்தவனும்,
வேதங்களை யறிந்தவனும் நானே,’ என்கிறபடியே,
பல கலைகளாலும் அறியப்பட்ட உத்கர்ஷத்தை ஏற்றத்தை யுடையனாயிருந்து, நெடுங்கை நீட்டாகப் பிரமாணங்களால்
கேட்டுப் போகாதபடி கண்களுக்கு விஷயமாகக் கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவனைக் கண்டு கொண்டு.

என் நெஞ்சம் நிலைப் பெற்று – ‘
சிந்தாமற் செய்யாய்’ என்ற நெஞ்சும் ஒரு படி தரிக்கப் பெற்றது.

உயிர் நீடு பெற்றது –
அச்சேத்யமாய் அதாஹ்யமாய் -‘வெட்டத்தகாததாய் எரிக்கத் தகாததாயிருக்கிற ஆத்ம வஸ்துவும்’ அழியப் புக்கது;
அங்ஙனம் அழியப் புக்க ஆத்மாவும் இப்போதாயிற்று -நித்யத்வம் -அழிவின்மையைப் பெற்றது.
‘ஆயின், ஆத்மாவிற்கு அழிவு உண்டோ?’ எனின்,
ச்சேத்யாதி விச ஜாதீயம் – ‘சேதிக்க முடியாத வேறுபட்ட சிறப்பினை யுடையது’ என்ற இத்துணையே யல்லது,
தன்னில் ஸூக்ஷ்மமாய்ப் புக்கு வியாபித்து அழிக்க வல்ல பகவானுடைய குணங்களுக்கு அழியாமை யில்லை என்க.
இனி நித்யமான ஆத்மாவிற்கு நாசமாவது, தாஸ்ய அசித்தி;
‘சேஷமான பொருளுக்குச் சேஷத்துவம் நிரூபகமானால், நிரூபகத்தை யொழிய நிரூப்ய சித்தியில்லையே’ என்னுதல்.

————

அறிந்து அறிந்து, தேறித் தேறி, யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந் துழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே–4-7-7-

பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் –
சாவது பிறப்பதாய்க் கொண்டு தடுமாறுகிற அறிவு கேடு தவிரப் பெற்றேன்.-என்றது,
அறிவு பிறந்த பின்பு, ‘இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை’ என்று அபேக்ஷித்த -விரும்பிய அது பெற்றேன்’என்றபடி.

நறுந்துழாயின் கண்ணி வேந்தே –
வைத்த வளையத்தைக் காட்டி அவ்வடிவிலே குருகுல வாசத்தைப் பண்ணுவித்து அறிவு பிறப்பித்தாயிற்றுத் தனக்கு ஆக்கிக் கொண்டது.
இவ்வறிவு பிறக்கைக்கு அவன் இட்ட பச்சை இருக்கிறபடியைத் தெரிவித்தபடி.-
(ரசோக்தி. ‘பச்சை’என்றது, சிலேடை : திருத்துழாய் என்பதும், உபகாரம் என்பதும் பொருள் )
பரிமள பிரசுரமான திருத் துழாயை யுடைத்தான திரு மாலையை யுடைய சர்வாதிகனே

நான் உன்னைக் கண்டு கொண்டு –
உன் போக்யதையை இனிமையை அறிந்த நான்,
நிரவதிக – எல்லையற்ற -போக்ய பூதனான -இனியனான உன்னைக் கண்டு கொண்டு.

நறுந்துழாயின் கண்ணி அம்மா! நான் உன்னைக் கண்டுகொண்டு,
அறிந்து அறிந்து தேறித் தேறி
யான் எனது ஆவியுள்ளே நிறைந்த ஞானமூர்த்தியாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன்! இது நான் பெற்ற அம்சம் – என்கிறார்.

(இத்திருப்பாசுரம் எச்சமாய்க் கிடக்கிறது; அதாவது, ‘பேதைமை தீர்ந்தொழிந்தேனித்தனை;
மார்பும் மாலையுமான வடிவழகைக் கண்ணிட்டுக் காணப் பெற்றிலேன்,’ என்பது எச்சம்.)

———–

இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று
அருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என் தன்
கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே–8-7-1-

வீற்றிருந்தான் –
இவரைப் பெற்றதால் உண்டான வேறுபாடு வடிவிலே தோற்ற
கிருதக்ருத்தியனாய் இரா நின்றான் –

கண்டு கொண்டே –
மஹா வியாதியை -பெரிய நோய்க்கு தப்பின புத்திரனை
தாய் தந்தையர்கள் பார்த்துக் கொண்டு இருக்குமா போலே
மாயக் கூத்தா -என்ற திருவாய்மொழி யிலே
விடாய்க்கு தப்பினவர் என்று பார்த்துக் கொண்டே இருந்தான் –

———-

இருந்தான் கண்டு கொண்டே என தேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே—8-7-2-

இருந்தான் கண்டு கொண்டே-
கண்டு கொண்டே-இருந்தான்-
தரித்ரன் -வறிஞன் -தன லாபம் -செல்வப் பேறு உண்டானால் பார்த்துக் கொண்டு இருக்குமா போலே
பார்த்த படியே இரா நின்றான் –
தத ஸூ ப்ரீத மனசௌ தௌ உபௌ கபிராகவென
அன்யோன்யம் அபி வீஷந்தௌ ந த்ருப்திம் உபஜக்மது -கிஷ்கிந்தா -5-18
சுக்ரீவனும் ஸ்ரீ ராம பிரானும் ஆகிய இவர்களும் மிகுந்த களித்த மனமுடையவர்களாய்
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மன நிறைவு பெற்றார்கள் -என்கிறபடியே
சொல்ல எதிர் தலையான தம்மை காண்கின்றிலர்

எனதேழை நெஞ்சாளும்-
எனது ஏழை நெஞ்சு ஆளும் –
கண்டன எல்லா வற்றிலும் சபலமாய் இருக்கிற -ஆசை கொள்ளுகின்ற என்னுடைய நெஞ்சை -மனத்தை –
அதுவே பற்றாசாக இந்திரியங்கள் பொதி எடுக்கத் தொடங்கிற்று -என்றது
ஒரு பிரபலனைப் பற்றாதே-விஷயங்களில் உள்ள ஆசையால்
நடுவே நின்றவாறே பணி கொள்ளத் தொடங்கிற்று – என்றபடி-

———–

உருவாகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்
பொருவாகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும்
அருவாகிய வாதியைத் தேவர்கட்கு எல்லாம்
கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே–9-4-8-

கண்டு கொண்டேனே –
அவதாரத்துக்கு பிற்பாடராய் இருக்க
கண்டு கொண்டேன் -என்கிறார் -இதற்கு கருத்து என் -என்னில் –
ப்ரேமார்த்த சித்தருக்கு -அன்பினால் நனைந்த மனத்தினர்க்கு என்றும் காணலாம்
அவதார சம காலத்திலும் காண ஒண்ணாது சிசுபாலன் முதலாயினர்க்கு-
பாஹ்ய -புறச் சமயங்களால் அவிஸால்யனாய் அசைக்க முடியாதவனாய்
எல்லாப் பொருள்கட்கும் அந்தர்யாமியாய்க் கொண்டு
எல்லாரையும் நியமிக்கின்றவனாய்
பிரமன் முதலாயினார்க்கும் உத்பாதகனாய் -காரணனாய் இருந்து வைத்து
ஆஸ்ரித -அடைந்தார்க்கு ஸூலபன் ஆனவனைக் காணப் பெற்றேன் -என்கிறார்

———

கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன் மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –9-4-9-

கண்டு கொண்டு-
நான் அழைப்பன் -என்ற விடாய் எல்லாம் கெட கண்களால் காணப் பெற்று –

என் கண்ணினை ஆரக்-
காணக் கருதும் என் கண்ணே -என்ற கண்கள் விடாய் கெட
கலியர் -வயிறார உண்டேன் -என்னுமா போலே-ஆரக் கண்டு கொண்டு -என்கிறார்

களித்து-
மறுகின நெஞ்சு களித்து –

பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத் –
இவ் வுகப்புக்கு இடைச் சுவரான பிராரக்தந -பழைய கர்மங்களை
வாசனையோடு போக்கி –

தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் –
என்னளவும் அன்றிக்கே –
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் உபகாரகன் ஆகப் பெற்றேன் –
நானும் உண்டு-என் பரிகரமும்- வேலையாள்களும் ஜீவித்து
என் உறவினர்களுக்கும் விருந்திட வல்லேன் ஆனேன் – என்பாரைப் போலே –
சொல் மாலைகள் சொல்லப் பெற்றேன்
ததீய சேஷத்வ பர்யந்தமான -அடியார்கட்கு அடிமை யாதலை எல்லையாக உடைய பேற்றினைப் பெற்றேன் –
பெற்ற பேற்றின் கனம் இருந்த படியாலே
இது தான் தோன்றியான கைப்பற்று அடியாக வந்தது ஓன்று அன்று –

அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –
சர்வேஸ்வரனாலே அடியவனாக-விஷயீ அங்கீகரிக்கப் பட்டவன் ஆனேன் –

————

ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்
மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே–10-4-3-

தாள் கண்டு கொண்டு –
காட்சிக்கு ஹேது காரணம் சொல்லிற்றோ அன்றோ –

என் தலை மேல் புனைந்தேனே –
துயர் அறு சுடர் அடி தொழுது எழு -1-1-1-என்றும்
பாத பங்கயமே தலைக்கு அணியாய் -92-2-என்றும்
கோலமாம் என் சென்னிக்கு -4-3-6-என்றும் சொல்லுகிறபடியே
மயிர் கழுவிப் பூச்சூட இருப்பாரைப் போலே இருக்கிற போக்யதையை – இனிமை சொல்லுகிறது –
நின் செம் மா பாத பற்புத் தலை சேர்த்து -2-9-1-என்று பிரார்த்தித்தவத்தை -வேண்டிக் கொண்ட அதனை
தலையாகப் பெற்று கிருதகிருத்யன் ஆனேன்-

————

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9-

கண்டேன் –
என்றும் கேட்டே போகக் கூடிய விஷயத்தை -பொருளை கண்களால் காணப் பெற்றேன் –
தன்னுடைய பிரபத்தி ஸ்வ சாத்யத்தோடு -அதன் பலத்தோடு பொருந்தின படியை
அதாவது-சாஷாத் கரிக்க -நேராக கண்ட படியையைச் சொல்கிறார்
இதனால் ப்ரத்யக்ஷ சாமானகாரமான -புறக் கண்களால் கண்டது போன்று-ஞான சாஷாத்காரத்தை –
ஞானக் கண்களால் கண்டபடியைச் சொன்னபடி –

கமல மலர்ப் பாதம் –
ப்ராப்தியை ஒழிய -பெறுகிற பேறு வேண்டாதபடி-ஞான லாபமே அமையும்படி யாயிற்று
போக்யதை – இனிமை இருக்கும் படி

காண்டலுமே –
கண்ட அளவிலே –

விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம் –
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-மாஸூச -ஸ்ரீ கீதை -18-66- என்கிறபடியே
அவன் அடியாக வருகிறதே அன்றோ

வினை யாயின அடங்கலும் –
இவர் கேவலர் அல்லர் -அடி வுடையராய் இருந்தார் -என்று விட்டுப் போயிற்றின –

———–

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-

கண்டேன் இத்யாதி
ஆத்மாவுக்கு நித்ய தர்மமான ஞானம்
பிரத்யஷிக்கைக்கு ஆனைத் தாளான மனஸ்ஸாலே
புறப்பட்டு
பாஹ்ய இந்த்ரியங்களாலே காண்கை அன்றிக்கே
ஸ்வப்னதீ கம்யம் -என்கிறபடியே
மனஸ்ஸாலே காண்கை கனவிலே காண்கை யாவது
ஆங்கு இத்யாதி
அபாதிதமாகக் –கண்டேன்
கண்டேன் இத்யாதி
அனுபவிக்கக் கடவதான புண்ய பாபங்களைப் போக்கி
பின்பு வாசனையும் போக்குமவனுடைய
மிடுக்கைக் கண்டேன்
வாசனையைப் போக்குகைக்கு வலி கண்டேன் என்றுமாம்-

———-

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-

பகல் கண்டேன்
காள ராத்ரியாய் செல்லாதே விடியக் கண்டேன் –
வடுகர் வார்த்தை போலே தெரிகிறது இல்லை –
எங்களுக்கு தெரியும் படி சொல்லீர் என்ன –
நாரணனைக் கண்டேன் –
அஸ்தமிதியாத ஆதித்யனைக் கண்டேன்
கனவில் மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே –
பிரத்ய பிஜ்ஞார்ஹமாக கண்டேன் –
மிகக் கண்டேன் ஊன் திகழும் நேமி யொளி திகழும்சேவடியான் வான் திகழும் சோதி வடிவு –
வடிவில் திகழா நின்ற திரு ஆழியையும்
ஒளி திகழா நின்றுள்ள திருவடிகளையும் உடையவனுடைய
பரம பதத்தில் திகழா நின்ற ஜோயோதிசை உடைத்தான
திருமேனியைக் கண்டேன்
மேகம் போலே திகழா நின்ற ஜ்யோதிசை உடைய வடிவு
என்னவுமாம் –

————————

இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்
பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் -அன்று
திருக் கண்டு கொண்ட திருமாலே உன்னை
மருக்கண்டு கொண்டேன் மனம் —-மூன்றாம் திருவந்தாதி–2-

இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன் –கழல் கண்டேன்-ஏழ் பிறப்பும் இன்றே அறுத்தேன்
திருவடிகளைக் காண்கைக்கும் ஜன்மத்துக்கும் சஹாவஸ்தானம் இல்லாமை –
காண்கைக்கு ஒரு காலமும்-விரோதி போகைக்கு ஒரு காலமும் இல்லை கிடீர்-அக் காலத்திலேயே கிடீர் போயிற்று
த்ருஷ்டே நைவ ஹி நச்சோகம் அப நேஷ்யதி ராகவ -அயோத்யா -8-4-
அத்ய மே ஹி கதஸ் சோக –

இன்றே கழல் கண்டேன் –
கைங்கர்யமே யாத்ரையாம் படி யானேன் –

ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன் –
பிரதி பந்தகம் போய்த்து யென்னும்படியாய் யாயிற்று-அடிமை செய்யவும் பெற்றேன்
சம்சாரம் போனவற்றோ பாதியாகவும் பெற்றேன் –

பொன் தோய் வரை மார்பில் –
பொன் தோய்ந்த மலை போல் இருக்கும் மார்பில் –

பூந்துழாய் -அன்று திருக் கண்டு கொண்ட –
தோளில் மாலையைப் பிராட்டி கண்டு கொள்ளும் படி நின்ற –

அன்று திருக் கண்டு கொண்ட –
பிராட்டியோட்டை சம்பந்தம் அநாதி இறே –

பொன் தோய் வரை மார்பில் –
பிராட்டி பிச்சேறும்படியான மார்பை யுடையவன் –

அன்று திருக் கண்டு கொண்ட –
அம்ருத மதன காலத்தில்
பஸ்யதாம் சர்வ தேவா நாம் யயௌ வஷச்தலம் ஹரே -ஸ்ரீ விஷ் புரா-1-9-105-என்று
பிராட்டி தானே ஆசைப் பட்டு ஏறும்படியான மார்வைப் படைத்த ஸ்ரீ யபதியே

திருமாலே –
அவள் பக்கலிலே அவன் பிச்சேறி இருக்கும் படி –

உன்னை மருக்கண்டு கொண்டேன் மனம் –
அவள் விரும்புகிற விஷயம் என்று
பிற்காலியாதே
மருவிக் கண்டு கொண்டது என்னுடைய மனஸ் ஸூ –
பிராட்டியோபாதி பரிவு உண்டாய்க் கண்டேனோ –
விலக்காமையே உள்ளது –
ஒரு பிரயோஜனத்தை கொண்டு போகை அன்றிக்கே உன் பக்கலிலே மருவிற்று
பிராட்டியோட்டை சம்பந்தம் உறவு அறியாதார்க்கு வெருவுகைக்கு உடலாம்
உறவு அறிந்தார்க்கு அயோக்யன் என்று அகலாமைக்கு உடலாம் –

——–

மற்றுத் தொழுவார் ஒருவரையும் யானின்மை
கற்றைச் சடையான் கரிக்கண்டாய் -எற்றைக்கும்
கண்டு கொள் கண்டாய் கடல் வண்ணா நான் உன்னை
கண்டுகொள் கிற்குமாறு–நான்முகன் திருவந்தாதி –26-

எற்றைக்கும் கண்டு கொள் கண்டாய் கடல் வண்ணா நான் உன்னை கண்டுகொள் கிற்குமாறு –
ஸ்ரமஹரமான வடிவை உடைய நீயே-மேலும் இந்த நன்மை நிலை நிற்கும் படியாக பார்த்து அருள வேணும் –

——-

காணப் புகில் அறிவு கைக் கொண்ட நன்னெஞ்சம்
நாணப்படும் அன்றே நாம் பேசில் -மாணி
யுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்
திருவாகம் தீண்டிற்றுச் சென்று–-ஸ்ரீ பெரிய திருவந்தாதி–20-

காணப் புகில் அறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம் நாணப்படும் அன்றே நாம் பேசில் –
நாம் அறியாதே காணப் புகுதல்
அர்த்த தத்வம் இருந்த படியே பேசப் புகுதல் செய்தால்
அறிவுக்கு வாய்த் தலையான நெஞ்சுக்கு நாண வேண்டாவோ

மாணி யுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்
இத்தைத் தீண்டுகைக்கு அவன் ப்ரவர்த்தித்த படி
அவன் செய்த வியாபாரம் ஆகையால்
இதுவும் கூசாமல் தீண்டிற்று என்னவுமாம்

திருவாகம் தீண்டிற்றுச் சென்று
தன்னை அறிந்தால்
விலக்ஷணமான வடிவைச் சென்று தீண்டக் கடவதோ –

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–10-2–கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன—சாரங்கள்—

June 2, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தனு வ்ருத்திகளுக்கு அஸ்ய பிராப்யத்வம் துரித ஓகம்
நிவர்த்தனம் வைகுண்ட மேத்ய கரணீய
அசேஷ தாஸ்யம் அத்ரைவ கேவலம்
அநந்த புரே சடஜித் த்வதீயே –

தனு வ்ருத்திகளுக்கு -சரீரம் உடைய சம்சாரிகளுக்கு
அசேஷ தாஸ்யம் அத்ரைவ -இந்த தேகத்துடன் இந்த தேசத்தில்

———

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

ஸ்ரீ கேஸவாத்வேனே அத்புத சரிதேனே கதாதீச தாஸ்ய சஹா –
த்ரயீ மயன் ஆஸந்நத்வாத் பதித்வாத் அமர பரிஷதாம் ஆதி பூதத்வாத்
வியாபாரை ஸ்ருஷ்ட்டி முக்யை மதன ஜனனதா
புஜ சாய்த்தவம் முக்யைகி சரித்ரை அத்பத் கிலேச அபஹர்த்தா-

1–ஸ்ரீ கேஸவாத்வேனே–கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும் கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்

2–அத்புத சரிதேனே–அனந்த புர நகர் மாயன் நாமம் ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே

3–கதாதீச தாஸ்ய சஹா -த்ரயீ மயன்–தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம் பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே

4–ஆஸந்நத்வாத்–அனந்த புரம் நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே

5–பதித்வாத்–அனந்த புரத்து அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்

6–அமர பரிஷதாம் ஆதி பூதத்வாத்–அனந்த புரத்து அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்

7–வியாபாரை ஸ்ருஷ்ட்டி முக்யை–துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும் படைத்த வெம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான்

8–மதன ஜனனதா–படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்–

9–புஜ சாய்த்தவம்–அனந்த புரம் தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு வாமனன் அடிக்கென்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே

10-முக்யைகி சரித்ரை–அனந்த புர நகர் எந்தைக்கு என்று சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே

அத்பத் கிலேச அபஹர்த்தா–மாய்ந்து அறும் வினைகள் தாமே-

———

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே-10-2-1-

———–

இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா
குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்றலர் பொழில் அனந்த புர நகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே–10-2-2-

——–

ஊரும் புள் கொடியும் அக்தே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தண்ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே-10-2-3-

————

பேசுமின் கூசமின்றிப் பெரிய நீர் வேலை சூழ்ந்து
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்த புரம்
நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே–10-2-4-

——–

புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5-

——–

அமரராய்த் திரிகின்றார் கட்கு ஆதிசேர் அனந்த புரத்து
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே-10-2-6-

———

துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும்
படைத்த வெம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான்
மடைத் தலை வாளை பாயும் வயல் யணி யனந்த புரம்
கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினை களையலாமே–10-2-7-

————

கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை
இடவகை கொண்ட தென்பர் எழில் அணி அனந்த புரம்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்–10-2-8-

———

நாமும் உமக்கு அறியச் சொன்னோம் நாள்களும் நணியவான
சேமம் நன்குடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்த புரம்
தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு
வாமனன் அடிக்கென்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே–10-2-9-

———

மாய்ந்து அறும் வினைகள் தாமே மாவதா வென்ன நாளும்
ஏய்ந்த பொன் மதிள் அனந்த புர நகர் எந்தைக்கு என்று
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே–10-2-10-

———

அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே–10-2-11-

——–

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -92-பாசுரம்–

அவதாரிகை

இதில் – ஸ்ரீ பரமபதத்தில் செய்யும் அடிமையை ஸ்ரீ திருவனந்த புரத்திலே செய்யப் பாரிக்கிற ஸ்ரீ ஆழ்வார்
ஸ்ரீ ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில்
குறைவற ஸ்ரீ பரம பதத்தினில் போனால்- வானிளவரசான வைகுந்த குட்டனுக்குச் செய்யக் கடவ
வழு விலா அடிமைகளை-நித்ய சூரிகளில் தலைவரான ஸ்ரீ சேனாதிபதி ஆழ்வான் எடுத்துக் கை நீட்டும்படி
நிரதிசய போக்யமான ஸ்ரீ திருவனந்த புரத்திலே ஸ்ரீ திருவனந்த ஆழ்வான் மேலே
பள்ளி கொண்டு அருளுகிற பரம பிராப்ய பூதரான ஸ்ரீ பத்ம நாபப் பெருமாள் திருவடிகளிலே
அனுகூல ஜனங்களும் தாமுமாய் போய் அடிமை செய்ய வேண்டும் என்று மநோ ரதிக்கிற
கெடும் இடரில் அர்த்தத்தை-கெடும் இடர் வைகுந்தத்தை -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் -என்கை-

——————————————————–

கெடுமிடர் வைகுந்தத்தைக் கிட்டினால் போல்
தடமுடை அனந்தபுரம் தன்னில் -படவரவில்
கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் மாறன் உயர்
விண் தனில் உள்ளோர் வியப்பவே—-92-

கெடும் இடர் வைகுந்தம் -துக்க ரஹிதமான பரம பதம் -வினைகள் போக்கி தானே -அங்கே போக முடியும் –
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை பற்றி இடர் கெடும் சொல்ல வேண்டாமே –
அதனால் பலன் சொல்லாமல்- பாசுரம் சொல்லவே இடர் கெடுமே –

———————————————————–

வியாக்யானம்–

கெடுமிடர் வைகுந்தத்தைக் –
கைங்கர்ய சித்தியாலே நிவ்ருத்த துக்கராம்படி பண்ண வற்றான ஸ்ரீ வைகுண்டத்தை –
அன்றிக்கே –
துக்க ரஹிதமான ஸ்ரீ வைகுண்டத்தை என்னுதல்-
கிட்டினால் போல் – அத்தை பிராபித்து அடிமை செய்யப் பெற்றால் போலே

தடமுடை அனந்தபுரம் தன்னில் -படவரவில் கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் –
ஏபிஸ் ச சசிவை -இத்யாதியாலே ஸ்ரீ பரத ஆழ்வான் பாரித்தால் போலே
தடமுடை அனந்த புரம் தன்னில்-படமுடை அரவில் பள்ளி பயின்ற ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அடிமை செய்ய அபேஷித்தார்-

அதாவது –
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே -என்றும்
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல ஆய்ந்து கொண்டு-ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே -என்றும்
அமரராய் திரிகின்றார்கட்கு -என்று தொடங்கி-நாமும் போய் நணுக வேணும் -என்றும்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ-நமர்கள் உள்ளீர் -என்றும் –
தாமும்-தம் திரு உள்ளத்தோடு ஒத்த ஸ்ரீ வைஷ்ணவர்களும் கூட அடிமை செய்த மநோ ரதித்த -என்கை –

படவரவில் கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் -மாறன் உயர் விண் தனில் உள்ளோர் வியப்பவே –
சர்வோத்தரமான பரம ஆகாசத்திலுள்ளராய்-ஸ்ரீ கோயில் கொள் தெய்வங்களான
ஸ்ரீ திருவடி-ஸ்ரீ திருவனந்த ஆழ்வான்-ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் தொடக்கமானவர்கள் –
நாம் தெளி விசும்பு திரு நாட்டில் இருந்து செய்யும் அடிமையை
இவர் – இருள் தரும் மா ஞ்லாலத்தில் இருந்து பாரிப்பதே -என்று விஸ்மயப்ப்படும்படி
ஸ்ரீ சேஷசாயியாய்-ஸ்ரீ யபதியான-ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு சர்வ வித கைங்கர்யங்களையும்
செய்ய வாதரித்தார் ஸ்ரீ ஆழ்வார் – இவரும் ஒருவரே -என்று இவருக்கு ஈடுபாடாய் இருக்கிறது-
அங்கே செய்வதை விட இங்கே பாரிப்பது மேல் -ருசி வந்தால் தானே கிட்டும் –

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி/ஸ்ரீ ஆதேஸ உபநிஷச் சாயை /ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி- –2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்–சாரங்கள் —

May 21, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

மோஷ ஆதரம் ஸ்புடம் அவேஷ்ய முநிர் முகுந்தே
மோஷம் பிரதாதும் அஸத்ருஷ பலம் ப்ரவ்ருத்தே
ஆத்மேஷ்ட மஸ்ய பத கிங்கரத ஏக ரூபம்
மோஷாக்ய வஸ்து நவமே நிரணாயி தேந –19-

———–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

ஸ்ரத்தேய ஸ்வ அங்க்ரி யோகம் ஸூபம் அதி கரதம் ஸ்தோத்ர சாமர்த்ய ஹேதும்
ஸ்வ ஆர்த்தி கர உபகாரம் ஸ்ம்ருதி ரஸம் சமிதா அன்யாதரம் ப்ரீதி வஸ்யம்
பிராப்தௌ காலா ஷமத்வ ப்ரதம் அம்ருத ரஸ தியானம் ஆத்ம அர்ப்பண அர்ஹம்
வைமுக்யா த்வார யந்தம் வ்ருத பரி சரணம் சக்ர பாணிம் ஜகாத–2-9-

1-ஸ்ரத்தேய ஸ்வ அங்க்ரி யோகம் —நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து—ப்ரார்த்த நீயமான தன் திருவடிகள் சம்பந்தத்தை யுடையனுமாய் —

2-ஸூபம் அதி கரதம் —-நின் கழல் யான் எய்த ஞானக்
கைதா –தன் திருவடிகளைப் பிராபிக்கும் படிக்கு ஈடான ஞானம் ஆகிற கையைக் கொடுக்குமவனாய் –

3-ஸ்தோத்ர சாமர்த்ய ஹேதும்—-நின் கழல் எய்யாது ஏத்த அருளிச் செய்–தன் திருவடிகளையே
ஸர்வ காலத்திலும் ஏத்துகைக்கு சாமர்த்தியத்தை உண்டாக்குமவனாய் –

4-ஸ்வ ஆர்த்தி கர உபகாரம் —-தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே–ஸ்வார்த்தமாகவே உபகரிக்குமவனாய் —

5-ஸ்ம்ருதி ரஸம் சமிதா அன்யாதரம் –மறப்பு ஓன்று இன்றி என்றும்—ஸ்வ விஷய ஸ்ம்ருதியாலேயே
அந்நிய விஷய ஆதாரத்தை சமிப்பிக்குமவனாய்

6-ப்ரீதி வஸ்யம் —என்றும் மகிழ்வுற்று உன்னை வணங்க–ஸ்வ விஷயத்தில் ப்ரீதி உடைய பேர்களுக்கு வஸம் வதனுமாய் –

7-பிராப்தௌ காலா ஷமத்வ ப்ரதம் —வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ்பேராதே நான் வந்தடையும் படி தாராதாய்—
ஸ்வ ப்ராப்தியில் கால ஷேப ஷமன் ஆகாதபடி பண்ணுமவனாய் –

8-அம்ருத ரஸ தியானம் —-வேத விமலர் விழுங்கும் என் அக்காரக் கனியே–அம்ருதம் போலே அத்யந்தம் போக்யமாகப் பிரகாசிக்குமவனாய் —

9-ஆத்ம அர்ப்பண அர்ஹம்—யானே நீ என்னுடைமையும் நீயே வானே ஏத்தும் எம் வானவர் ஏறே—
நானும் என் உடைமையும் உன்னது -என்று ஸூ ரிகளாலும் ஏத்தப் படுக்கையாலே ஆத்மாத்மீயங்களை சமர்ப்பண யோக்யமானவனுமாய் –

10-வைமுக்யா த்வார யந்தம் —என்னை உன் பொன்னடி சேர்த்து ஒல்லை வேறே போக எஞ்ஞான்றும் விடலே—
ஆஸ்ரிதரைத் தன் திருவடிகளில் நின்றும் விமுகராயப் போகாதபடி பண்ணுமவனாய் இருக்கிற – எம்பெருமானை

11-வ்ருத பரி சரணம் சக்ர பாணிம் ஜகாத–எம்மா வீட்டு திருவாய் மொழியிலே
கைங்கர்ய உத்தேச்ய பூதனாக ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –

———-

ஸ்ரீ ஆதேஸ உபநிஷச் சாயை –ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் —

பிரவேசம் –
கீழில் திருவாய் மொழியில் நலம் அந்தம் இல்லாதோர் நாடு –2-8-4-என்று
இவர் அருளிச் செய்த பரமபதத்தை எம்பெருமான் இவருக்கு கொடுக்கப் பார்க்க
அந்தப் புருஷார்த்தத்தை சோதித்து -இங்கனே தர வேணும் என்கிறார் -எம்மா வீட்டில் —

—-

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-

எவ்வகையாலும் நன்றான மோக்ஷத்தின் இடையாட்டமும் சொல்லோம் நாம்
நீயே -அகவாய் சிவந்து புறவாய் ஸ்யாமமாய் -விகாசாதிகளுக்கு எல்லாம் தாமரை போலே இருக்கிற
திருவடிகளைக் கொண்டு வந்து என் தலையிலே வைக்க வேணும்
ஸீக்ரமாக இப்படிச் செய்ய வேணும் –
ஆணையினுடைய ஆர்த்தியைத் தீர்த்த உபகாரகனே
சேஷியான உன் பக்கலிலே -அடியேனான நான் -அபேக்ஷிப்பது
இதுவே என்கிறார் -எம்மா வீட்டுத் திறமும் செப்பம்-இத்யாதியாலே –

———

ஈதே யானுன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என்
மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்
கை தா காலக் கழிவு செய்யலே –2-9-2-

சேஷமான நான் -புராண -பிராண -சேஷியான உன் பக்கலிலே எக்காலத்திலும் கொள்வது இதுவே –
மை தோய்ந்து இருந்துள்ள தேஜஸ்ஸை யுடைத்தான மணியினுடைய நிறம் போன்ற திரு நிறத்தை
என்னை அனுபவிப்பித்த என் ஸ்வாமியே
ஸ்வ யத்னத்தாலே ஒருவருக்கும் பிராபிக்க ஒண்ணாத திருவடிகளை
உன்னாலே பெற இருக்கும் நான் பிராபிக்க ஞானம் ஆகிற கையைத் தந்து அருள
விளம்பம் செய்ய வேண்டா என்கிறார்–ஈதே யானுன்னைக் கொள்வது- இத்யாதியாலே –

———

செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என்
கையார் சக்கரக் கண்ண பிரானே
ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல்
எய்யாது ஏத்த அருளிச் செய் எனக்கே –2-9-3-

திருக் கையும் திருவாழியுமான அழகைக் காட்டி
நான் வேணுமாகில் தீ வினையைச் செய்யாதே கொள் -என்று கிருபை செய்யும் கிருஷ்ணனே
செறிந்த கோழைப் பையலார் வந்து கண்டத்தை அடைக்கும் போதும் உன் கல்யாண குணங்களை
இளையாதே ஏத்தும் படி எனக்கு அருள் செய்ய வேணும்
என்கிறார் –செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும்-இத்யாதியாலே –

———

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4-

சர்வ காலத்திலும் எனக்கு ஆட் செய் என்று கொண்டு
என் ஹ்ருதயத்தில் வந்து இருந்து நிரந்தரமான ஸ்தாவரமான ப்ரதிஷ்டையாய் இருந்து
உனக்கே அநந்யார்ஹ சேஷமான என்னைக் கொள்ளுகையாகிற இதுவே எனக்கு விலக்ஷணமாக
எம்பெருமானை அநந்யார்ஹனான நான் கொள்ளும் விசேஷ பரம புருஷார்த்தம்
என்கிறார்–எனக்கே யாட்செய் எக்காலத்தும்- இத்யாதியாலே –

———

சிறப்பில் வீடு ச்வர்க்க நரகம்
இறப்பில் எய்துக எய்தற்க யானும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஓன்று இன்றி என்றும் மகிழ்வேனே –2-9-5-

ஸர்வ உத்க்ருஷ்டமான மோக்ஷம்
பரிமித ஸூகமான ஸ்வர்க்கம்
நிஷ்க்ருஷ்ட துக்கமான நரகம்
இவற்றை ஆத்மா சரீர வியாக சமயத்திலே பிராபிக்க -பிராபியாது ஒழிக
பிறக்கைக்கு ஹேதுவான கர்மம் இன்றிக்கே இருக்க ஆஸ்ரித அநுக்ரஹ அர்த்தமாகப் பல பிறவிகளுடைய பெருமானை
நானும்-விஸ்ம்ருதி என்கிறது ஓன்று இன்றிக்கே
என்றும் அனுபவித்து மகிழக் கடவேன்-சிறப்பில் வீடு ச்வர்க்க நரகம்–என்கிறார் இத்யாதியாலே –

————

மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்
மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்
மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே –2-9-6-

ஆனந்த பிரசுரராய் இருந்துள்ள தேவர்கள்
இந்திரிய விஷயமான அசித்து
ஸாஸ்த்ர ஏக கம்யமான சித் வஸ்து
தாஹகமான தேஜஸ்ஸூ பதார்த்தம்
இவற்றை உண்டாக்கின ஸர்வேஸ்வரனே
ஆநந்தியா நின்றுள்ள சிந்தையும் வாக் வ்யவஹாரமும் கொண்டு நான் ஆனந்திக்கு படி
உன்னை வணங்க நீ வர வேணும் என்கிறார்–மகிழ் கொள் தெய்வம்– இத்யாதியாலே–

———–

வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ்
பேராதே நான் வந்தடையும் படி
தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும்
ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே –2-9-7-

உன்னுடைய நிரதிசய போக்யமான திருவடிகளின் கீழே புணரா வ்ருத்தி இல்லாத பேற்றை
நான் பெறும்படி உன்னை எனக்குத் தாராது இருக்கிறவனே
என்னுடைய ஹ்ருதயத்தில் உன்னைக் கொண்டு வந்து வைக்கும் இடத்திலே
ஏக தேசமும் திருப்தியை அடையாதபடி இருக்கிறவனே
எனக்கு எல்லாக் காலத்திலும் எல்லா அவஸ்தையிலும் வாராய் என்கிறார்–வாராய்- இத்யாதியாலே –

———-

எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்
அக்காரக் கனியே உன்னை யானே –2-9-8-

எல்லாக் காலத்திலும் எனக்கு சேஷியாய் நான் சேஷமான முறை தப்பாமல் வந்து
என்னுடைய ஹ்ருதயத்திலே புகுரப் பெறில்
இக்காலம் எல்லாவற்றிலும் மற்று ஒன்றையும் வேண்டேன் –
பகவத் அனுபவத்தில் மிக்கராய் -வேதத்தில் விமலராக ப்ரதிபாதிக்கப் பட்டுள்ள நித்ய ஸூரிகளை
அநுபவியா நின்றுள்ள -அக்காரம் போலேயும் கனி போலவும் -நிரதிசய போக்யனான உன்னை
யான் வேண்டேன் என்கிறார்–எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் இத்யாதியாலே —

————–

யானே என்னை யறியகிலாதே
யானே என் தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9-

யானே யேந கேந உபாயேந ஸ்வரூபத்தை அறிய மாட்டாதே
நான் என்றும் -என்னது என்றும் -அஹங்கார மமக வஸ்யனாய் -அநாதி காலம் இருந்தேன்
யான் என்கிறதும் என்னது என்கிறதும் நீர் இட்ட வழக்கு
பரம பதத்தில் உள்ளாராலே ஏத்தப்படும் நித்ய ஸூரி நிர்வாஹகனே –
என்கிறார் –யானே என்னை யறியகிலாதே-இத்யாதியாலே –

———-

ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை
நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி
தேறேல் என்னை உன் பொன்னடி சேர்த்து ஒல்லை
வேறே போக எஞ்ஞான்றும் விடலே –2-9-10-

ஏறாகில் ஏழையும் வென்று -கம நீயமாய் -கட்டு உடைத்தான லங்கையை பஸ்மா சேஷமாம் படி
பண்ணின மிக்க தேஜஸ்ஸை யுடையவனே -உன்னைத் தெளிய மாட்டு கிறிலேன் –
உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான திருவடிகளை ஸீக்ரமாகக் கொக்குவாயும் படு கண்ணியும் போலே சேர்க்க வேணும்
நான் அந்நிய பரனாம் போம்படி ஒரு காலும் விட ஒண்ணாது என்கிறார் –ஏறேல் ஏழும் வென்று –இத்யாதியாலே —

———-

விடலில் சக்கரத் தண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடலில் யாயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே –2-9-11-

நிகமம்
ஒரு காலும் விடாதே திருவாழியைக் கையிலே உடைய ஸர்வேஸ்வரனை
அவனைக் கிட்டிப் பிரிவில் தரியாத பரம உதாரரான ஆழ்வார் அருளிச் செய்த
ஆத்மாவுக்கு அநர்த்தம் வராதபடி ஹிதத்தை அருளிச் செய்த ஆயிரத்திலும் இவை பத்தும்
அப்யஸித்தார்க்கு -ஸ்ரத்தை பண்ணு மவர்க்கு அஹங்கார மமகாரங்கள் ஆகிற -அநர்த்த ரஹிதமான
மோக்ஷத்தைத் தரும் என்று உக்த அர்த்தத்தை நிகமிக்கிறார் –விடலில் சக்கரத் தண்ணலை–இத்யாதியாலே –

——-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -19-பாசுரம்–

அவதாரிகை –

இதில்
பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணின பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
பிறர்க்கு அவன் மோஷ பரதன் -என்னுமத்தை உபதேசிக்கிற அளவில்-2-8-
முதல்
நடுவு
இறுதி
இவர் மோஷத்தை ஸ்லாகித்துக் கொண்டு பேசுகையாலே
இவருக்கு மோஷத்தில் அபேஷையாய் இருந்தது -என்று
ஈஸ்வரன் அத்தைக் கொடுக்கப் புக –
தமக்கு உகப்பாகத் தரும் மோஷமும்
அஹங்கார கர்ப்பம் ஆகையாலே அபுருஷார்த்தம் -என்று அத்தை கழித்து –
பரமபதஸ்தனாய் ஸூகிக்கவுமாம்
சம்சாரஸ்தனாய் துக்கிக்கவுமாம்
எனக்கு அதில் ஒரு நிர்பந்தம் இல்லை
தேவர்க்கு உறுப்பாம் அதுவே எனக்கு வடிவாம்படி பண்ணி அருள வேணும்
என்று ஸ்வ பிராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிற
எம்மா வீட்டில் அர்த்தத்தை –
எம்மா வீடும் வேண்டா –-என்று துடங்கி அருளிச் செய்கிறார் -என்கை-

எம்மா வீடும் வேண்டா என் தனக்குன் தாளிணையே
அம்மா அமையும் என ஆய்ந்து உரைத்த -நம்முடைய
வாழ் முதலாம் மாறன் மலர்த் தாளிணை சூடி
கீழ்மை யற்று நெஞ்சே கிளர் –—19—

வியாக்யானம்–

எம்மா வீடும் வேண்டா என் தனக்குன் தாளிணையே அம்மா அமையும் என ஆய்ந்து உரைத்த –
எவ்வகையாலும் விலஷணமான மோஷமும் வேண்டா –
சேஷ பூதனான எனக்கு
யாவந்ன சரனௌ சிரஸா தாரயிஷ்யாமி -என்னும்படி
சேஷியான தேவருடைய அங்க்ரி யுகளமே அமையும் என்று
உபய அனுகுணமாக முக்தியை ஆராய்ந்து தலை சேர
நிஷ்கர்ஷித்து அருளிச் செய்த –

வாய்ந்து- என்று
இவ்வர்த்தத்திலே பொருந்தி என்றுமாம் –
இது –எம்மா வீட்டை -அடியே துடங்கி அடி ஒத்தின படி –

நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து –என்று துடங்கி
உன் பொன்னடிச் சேர்த்து -என்று இறே தலைக் கட்டுத் தான் இருப்பது –
தலைக்கு கட்டு -தலைக்கட்டினார் -சாடு
தாளிணையே -என்கையாலே
தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்றது ஸூசிதம்-
திருமுடியை திருவடிகளுக்கு பாத பீடம் ஆக்குகிறது
அத்யந்த பாரதந்த்ர்யம் இறே –

நம்முடைய வாழ் முதலாம் மாறன் –
நம்முடைய ஸ்வரூப அனுரூபமான சம்பத்துக்கு அடியாம் ஆழ்வார்
ஆழ்வார் உடைய வாழ்வுக்கு அடி –தனியேன் வாழ் முதலே -2-3-5–என்கிற ஈச்வரனாய் இருக்கும்
இவருடைய வாழ்வுக்கு அடி ஆழ்வாராய் இருக்கும் –

மலர்த் தாளிணை சூடி –
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -4-3-6–என்றும்
பாத பற்புத் தலை சேர்த்து -என்கிறபடியே
செவ்விப் பூ சூடுவாரைப்போலே
பூ போன்ற அடி இணையைச் சூடி –

கீழ்மை யற்று நெஞ்சே கிளர் –
தத் இதர சேவை ஆகிற தாழ்ச்சி அற்று-தேவு மற்று அறியேன் -என்று அவனையும் தவிர்க்கிறார் –
(தாழ்ச்சி எங்கும் தவிர்ந்து நின் தாள் இணை கீழ் வாழ்ச்சி என்றார் ஆழ்வார் –
இவர் அதையும் தவிர்ந்து –
கீழ்மை அற்று ஆழ்வார் மலர் தாளிணை சூடி இருப்பதே நம்முடைய வாழ் முதல் என்று அருளிச் செய்கிறார் )
ஆழ்வார் சேவையாலே
சத்தை பெற்று மனசே மயங்காமல்
மேன்மேல் எனக் கிளர்ந்து போரு –

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி/ஸ்ரீ ஆதேஸ உபநிஷச் சாயை /ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி- –2-7–கேசவன் தமர்–சாரங்கள் —

May 21, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தே கேசவ அபிமத தாம பஜந்த ஹந்த
யே மாமகா இதி வதன் நதி ஸப்தமம் ச
தஸ்ய ஸ்வரூப குண சேஷ்டித வாசி நாம
பூதன் விஷட் க முகரோ முமுதே முதீந்த்ர–17-

ஹந்த —என்ன ஆச்சர்யம்
யே மாமகாகா இதி வதன் —திருதராஷ்ட்ரன் மாமகாகா கூட உள்ளோர் அனைவரையும் தொலையப் பண்ணிற்று —
இவரது மாமகாகா இவர் சம்பந்த சம்பந்திகள் அனைவரையும் உஜ்ஜீவித்தது
அதி சப்தமம் -சக —ஏழாவது பதிகம் -21 தலைமறை என்றுமாம்

———-

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்

ஸர்வாதிஸ் ஸர்வ நாதஸ் த்ரிபுவன ஜநநீ வல்லபஸ் ஸுவ ஆஸ்ரிரார்த்தி
விஷ்வக் வியாப்த்யா அதி தீப்தோ விமத நிரசனஸ் ஸுவ அங்க்ரி சத்  பக்தி தாயீ
விஸ்வாப்த்யை வாமநாங்கஸ் – ஸுவ விபவ ரஸதஸ் ஸ்வாந்த நிர்வாஹ யோக்ய
ஸ்வார்த்தேஹோ பந்த மோக்தா ஸ்வ ஜன ஹித தயா த்வாத சாக்யாபி ரூசே –2-7-

1-ஸர்வாதிஸ் –கேசவன் தமர் இத்யாதி -க இதி ப்ரஹ்மணோ நாம -இத்யாதிகள் படியே ஸர்வ காரணமாய்

2-ஸர்வ நாதஸ் —நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன்–ஸர்வ ஸ்வாமியுமாய்

3-த்ரிபுவன ஜநநீ வல்லபஸ் –மாதவன் என்றதே கொண்டு–பெரிய பிராட்டிக்கு வல்லபனுமாய் –

4-ஸுவ ஆஸ்ரிரார்த்தி–எமர் ஏழேழு பிறப்பும் மேவும் தன்மையம் ஆக்கினான்—
பஹு வாக ஆஸ்ரிதர் உண்டாக வேணும் என்று பிரார்த்திக்குமவனாய் –

5-விஷ்வக் வியாப்த்யா அதி தீப்தோ —விட்டிலங்கு கருஞ்சுடர் இத்யாதி –நிரவதிக தேஜோ ரூபனுமாய்

6-விமத நிரசனஸ் —மது சூதனை யன்றி மற்றிலேன்—விரோதி நிராசனனுமாய் –

7-ஸுவ அங்க்ரி சத்  பக்தி தாயீ —நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய்—தன் திருவடிகளிலே அநந்ய ப்ரயோஜனையான பக்தியை ஆஸ்ரிதற்குக் கொடுக்குமவனாய் –

8–விஸ்வாப்த்யை வாமநாங்கஸ் – -வாமனன் என் மரகத வண்ணன்—மஹா பலி யாலே அபஹ்ருதமான வாமன யுடையவனுமாய் –

9–ஸுவ விபவ ரஸதஸ் –சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்–
தன்னுடைய ஸ்ரீ யபதிவத்தையும்-புண்டரீகாக்ஷதை-போன்ற ஐஸ்வர்யத்தை ஸர்வ காலமும் சொல்லி அலற்றும்படி பண்ணுமவனாய் –

10–ஸ்வாந்த நிர்வாஹ யோக்ய—இருடீகேசம் எம்பிரான் இத்யாதி –ஹ்ருஷீகேசன் ஆகையால் மனசை
தன் திருவடிகளில் நின்றும் பேராதபடி நிர்வஹிக்க வல்லவனுமாய் –

11–ஸ்வார்த்தேஹோ –எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம்–
ஸ்வார்த்தமாகச் சேதனரை அர்த்திகள் ஆக்கித் தன்னை அனுபவிக்கக் கொடுக்குமவனை

12-பந்த மோக்தா—-தாமோதரனைத் தனி முதல்வனை–தாமோதரம் பந்த கதம் -என்கிறபடியே பந்த கதருக்கு
மோக்ஷ ஹேதுவான தாமோதரத்வத்தை யுடையனுமாய் இருக்கிற எம்பெருமான் –
நியாய சாஸ்திரம் வெட்கி காட்டில் ஒழியும் படி பண்ணினார்
எதோ உபாசனம் ததோ பலம் -பொய்த்ததே
தந்தை காலில் விலங்கற வந்து தோன்றியவன் -கர்மங்கள் விலங்கு பட்டன படும்

ஸ்வ ஜன ஹித தயா த்வாத சாக்யாபி ரூசே -ஆஸ்ரிதருடைய சம்பந்த சம்பந்திகளுக்கும் ரக்ஷகன் என்று –
கேசவன் தமர் -என்கிற துவாதச நாம காதையிலே ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –

———-

ஸ்ரீ ஆதேஸ உபநிஷச் சாயை –ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் —

பிரவேசம்
கீழில் திருவாய் மொழியில் ஆழ்வாரோடே வந்து கலந்த ஸர்வேஸ்வரன்
க்ருபா ப்ரவாஹம் தத் சம்பந்த சம்பந்தி பர்யந்தம் வெள்ளமிட்ட படி சொல்கிறது
கேசவன் தமரில் —

———

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1-

நம்முடைய சம்பந்த சம்பந்திகளும் கீழும் மேலுமாக ஏழு பிறப்பும்
கேசவனுக்கு அநந்யார்ஹ சேஷ பூதராகி விட்டார்கள் –
இப்படிப்பட்ட நல்ல சதிரைப் பெற்று நம்முடைய வாழ்வு வாய்த்த பிரகாரம் என் தான் –
ஆராலே என்னில் –
ஈஸ்வரனாய்
எனக்கு போக்யனான கரு மாணிக்கம் போன்ற வடிவு அழகை யுடையவனாய் –
அதுக்குப் பரபாகமான சிவந்து அழகிய திருக்கண்களை யுடையனாய்
அதுக்கு நித்ய லஷ்ய பூதரான நித்ய ஸூ ரிகளுக்கு நாயகனாய்
அவர்களைப் போலே என்னையும் அனுபவிப்பித்த நாராயணனாலே
எமர் கேசவன் தமரானார் -என்கிறார் –இத்யாதியால் –

———-

நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேதமயன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே –2-7-2-

க்ருத்ஸ்னமான ஸர்வ லோகங்களுக்கும் நாதனாய்
இதுக்குப் பிரமாணம் வேதங்களாலே ஓதப்படுபவனாய்
காரணமும் -அது அடியாக வரும் கிரியையும் -தத் சாத்யமான கார்யமுமாகிற இவற்றுக்கு நிர்வாஹாகனாய்
எனக்கு ஜனகனானவனாய்
ஸ்ரீ யாகிய தெய்வப்பெண்ணும் நித்ய ஸூ ரிகளும் மற்றும் உண்டான பலரும் எல்லாரும் தொழுது ஏத்தும் படியாக நின்று
குவலயா பீடத்தின் கொம்பை அநாயாசேன முறித்த உபகாரகனாய் இருக்கிற
ஸ்ரீ மன் நாராயணனே எனக்கு ஸ்வாமி -என்கிறார் –இத்யாதியாலே –

———

மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து
தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கட்குன்றம்
கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –2-7-3-

நான் மாதவன் என்ற யுக்தி மாத்ரத்தையே கொண்டு அஞ்ஞனான என்னை
இனி மேலாகிலும் -இனி மேலுள்ள காலமாகிலும் -ஓர் அவத்யங்களும் சேரும்படி விடேன் என்று ஸங்கல்பித்து
என் ஹ்ருதயத்தில் வந்து புகுந்து
ஸ்தாவர ப்ரதிஷ்டையாக இருந்து
பூர்வாகங்களையும் உத்தராகங்களையும் கெடுத்து
தன்னுடைய போக்யதையை அனுபவிப்பித்த
செந்தாமரை போலே திருக்கண்களும்
மணி பர்வதம் போலே திருமேனியையும் யுடையவன்
கோதும் அவமும் அற்றவன்
கன்னல் கட்டி போல் போக்யமானவன்
என் ஸ்வாமியான கோவிந்தன் -என்கிறார் -மாதவன் என்றதே கொண்டு-இத்யாதியால் –

————

கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து
தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழேழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே –2-7-4-

கோ ஸம்ருத்தியால் உள்ள ஐஸ்வர்யத்தை உடையவன்
அத்தால் வந்த செருக்காலே குடக்கூத்து ஆடுமவன்
இவற்றுக்கு அடியான ஆபி ஜாத்யத்தை யுடையவன்
என்று இக்குணங்களை மாறாதே சொல்லா நின்று கொண்டு ஹர்ஷத்தாலே கூத்தாடி
ஈஸ்வரத்வத்தையும் -ஆஸ்ரித பாரதந்தர்யத்தையும் ஸஹ்ருதயமாகப் பாடி ஆடும்படி திருத்தி என்னை அங்கீ கரித்து
என்னால் போக்கிக் கொள்ளாத பாபங்களையும் பாறவடித்து
என்னுடைய சம்பந்தம் உடையார் ஏழு பிறப்பு தன்னைக் கிட்டுக்கையே ஸ்வ பாவமாக யுடையராம் படி பண்ணினான்
எனக்கு உபகாரகனான விஷ்ணுவே ஸர்வ ஸக்தி
அவனுக்கு மாட்டாதது உண்டோ என்கிறார் -கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன்–இத்யாதியால் —

————-

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –2-7-5-

விட்டு விளங்கா நின்றுள்ள சிவந்த ஒளியை யுடைத்தான தாமரை போலே
திருவடிகளையும் கைகளையும் கண்களையும் யுடையவன் –
விட்டு இலங்குகிற நீல ஜ்யோதிஸ்ஸை யுடைய மலை போல் இருக்கிற திரு உடம்பை யுடையவன் –
விட்டு விளங்கா நின்றுள்ள பிரகாஸத்தை யுடைய சந்திரனைப் போலே அழகிய ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை யுடையவன் –
ஸூர்ய பரிவேஷம் போலே இருக்கிற திரு ஆழியை யுடையவன் –
விட்டு விளங்கா நின்றுள்ள பிரகாசத்தை யுடைய திரு அபிஷேகத்தை யுடையவன்
ஸர்வ சேஷியான மது ஸூ தனன் -என்கிறார் –தமக்கு
இவை எல்லாம் அடைய –விட்டிலங்கு –இத்யாதியாலே –

———–

மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6-

விரோதி நிரசன ஸ்வ பாவனாய் அவனை ஒழிய ரக்ஷகாந்தரத்தை யுடையேன் அல்லேன் -என்று
ஒன்றாலும் ஒரு கார்யம் இன்றிக்கே ஸ்தோத்ராத்மகமான பகவத் குண வ்யாப்தங்களான பாடல்களை பாடி யாடி நின்று
கல்பம் தோறும் கல்பம் தோறும் சர்வ ஜென்மங்களிலும் எதிராகவும் சூழவும் புக்கு
எனக்கு அருள் செய்கைக்காக சேஷியான த்ரிவிக்ரமனை இப்படி அநிவார்யமான
கிருபை சூழ்ந்து கொண்டது என்கிறார் -மது சூதனை யன்றி மற்றிலேன்-இத்யாதியாலே –

———-

திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7-

மூன்று அடியால் சகல லோகங்களையும் அளந்து கொண்டவன் –
திருக்கண்களாலே என்னை அளந்து கொண்டவன்
சிவந்து கனிந்த திருப்பவளத்தின் அழகிலே விளங்கா நின்றுள்ள
ஸூத்த ஸ்படிகா வர்ணமான மந்த ஸ்மிதத்தை யுடையவன் என்று என்று நினைத்து -ஸ்தோத்ரம் பண்ணி –
நிர் மமனாய் இத்திருவடிகளிலே விழுந்து கல்பம் தோறும் கல்பம் தோறும் பரம போக்யனான உன் திருவடிகளையே
அநந்ய ப்ரயோஜனமாகக் கொண்டு தோலும் மனஸ்ஸைத் தந்தாய்
என்னுடைய வாமனனே -நீ சமர்த்தன் காண் -என்கிறார் -திரிவிக்ரமன்-இத்யாதியாலே –

———-

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-

நன்மைகளைத் தருமவன் –
மரகதம் போல் வடிவு அழகை யுடையவன் –
தாமரை போல் கண்களை யுடையவன் –
மன்மதனுக்கும் ஜனகன் ஆனவன்
என்று சொல்லிச் சொல்லி திருவடிகளில் விழுந்து பரி ஸூ த்தமான ஹ்ருதயத்தை யுடையவனாய்
ஜென்ம துக்கம் நீங்கும் படி என்னை துஷ்ட ஹ்ருதயத்தைப் போக்கினாய்
என்னுடைய ஸ்ரீ தரனே -இப்படி உபகாரகனான உனக்கு
என்ன பிரதியுபகாரம் செய்வேன் -என்கிறார் –இத்யாதியால் –

———-

சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீ இய தீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –-2-7-9-

பெரிய பிராட்டியாரைத் திரு மார்பிலே உடையவன் –
சிவந்த தாமரை போல் கண்ணை யுடையவன் –
என்று இப்படி மாறாதே சொல்லி திவா ராத்ரி விபாகம் அற வாய் வெருவி அலமாப்பை அடைந்து
கண்ணீர் பிரவஹிக்கும் படி பெரு மூச்சு எறிந்து எறிந்து மருவி இருக்கிற தீ வினைகள் மாளும்படி
இப்படி பொருந்தின விஸ்லேஷ வியசனம் ஆறும்படியாக
கழிகிற காலம் தோறும் உன்னை என்னுள்ளே இருத்தி வைத்தாய்
என் ஹ்ருஷீகேசனே என்கிறார் -சிரீ இதரன்-இத்யாதியால் —

———-

இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10-

என்னுடைய விஷய இந்திரியங்களுக்கு நியாமகனாய் -அத்தை ப்ராப்த விஷய பிரவாகம் ஆக்கின உபகாரகன்
இலங்கையில் ராக்ஷஸ ஜாதியில் முரடரானவர்களை நிரசித்த உபகாரகன் –
நித்ய ஸூரிகளுக்குத் தன்னை அனுபவிக்கக் கொடுக்குமா போலே எனக்குத் தன்னை அனுபவிக்கத் தந்தவன் –
என்று இப்படி சொல்லா நின்று கொண்டு ஞான பிரசுர த்வாரமாகில் நெஞ்சே -வணங்கு
இத்தை ஒலக்க வார்த்தை என்று இராதே த்ருடமாகப் புத்தி பண்ணு –
இப்படி அறிந்து -வள வேழுலகு தலை எடுக்கிலும் அவனை விடாதே கண்டாய் –
கல்யாண குண பூர்ணனான பத்ம நாதனை விட்டுப் புறம்பே போய்
மணலை முகக்கவோ என்கிறார் -இருடீகேசன்-இத்யாதியாலே –

———–

பற்பநாபன் உயர்வற உயரும் பெரும் திறலோன்
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த
கற்பகம் என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே –2-7-11-

ஸகல ஜகத் உத்பத்தி காரணமான திரு நாபி கமலத்தை யுடையவன் –
பேசப்புக்கால் பரிச்சேதித்துப் பேச ஒண்ணாத படியான ஸுர்ய வீர்யாதி குண ப்ரதையை யுடையவன் –
இப்படி இருக்கிறவன் மத் ஏக சித்தன்
என்னை உண்டாக்கிக் கொண்டு எனக்கு ஒருவனுக்கும் குறைவறத் தன்னைத் தந்த பரம உதாரன் –
எனக்கு நிரதிசய போக்யமுமானவன் –
கொடுத்தத்தை நினையாதே கொடுக்கும் ஸ்வ பாவத்தை யுடைய திருமலையைத்
தனக்கு வாஸஸ் ஸ்தானமமாக யுடையவன் –
நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனாய் இருந்து ஆஸ்ரிதரான இடையருக்கும் இடைச்சிகளுக்கும்
கட்டவும் -அடிக்கவுமாம் படி வந்து அவதரித்து அத்தாலே என்னை அடிமை கொண்டவன் என்கிறாள் –இத்யாதியால் –

———-

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை
ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும்
ஆமோ தரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே —2-7-12-

அவன் ஆஸ்ரித பரதந்த்ரனாய் நிற்கும் நிலையை அறியப் போமோ –
த்ரிவித காரணமும் தானேயாய் இருக்கும் இருப்பை அறியப் போமோ
ஆபத்சகனாய் நிற்கும் நிலையை அறியப் போமோ
மற்று ஒருவருக்கும் அன்றி -இப்படி தொழுமவர்களாய் –
தாமோதரற்கு சரீர பூதரான சிவற்கும் ப்ரஹ்மாவுக்கும் ப்ரதான
குண ஆர்னவாமாய் இருக்கும் இருப்பை எனக்கு அறிவித்தவனை
நிர்ஹேதுகமாக அவன் காட்டக் நான் கண்டால் போலே காணலாம் அத்தனை போக்கி
ஸ்வ யத்னத்தாலே பார்க்கும் அவர்களுக்கு அறியப் போமோ என்கிறார் –இத்யாதியால் –

————

வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே–2-7-13-

நிகமம்
அழகிய நிறத்தை யுடையதாய் -பெரு விலையனான ரத்னம் போலே இருக்கிற விக்ரஹத்தை யுடையவனை –
நித்ய ஸூரிகளுக்கும் பிரதான புருஷனாய் இருக்குமவனை
கண்ணனாய் அவதரித்து ஆஸ்ரித ஸூ லபனாய் இருக்குமவனை
அபர்யந்தமான வ்யாமோஹத்தை யுடையவனை –
தென் குருகூருக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரத்தில் வைத்துக் கொண்டு
இவை பன்னிரண்டுமான பண்ணியே நடந்த திரு த்வாதச நாம சிஹ்னிதமான பாட்டானவை
அனுசந்திப்பார்களை சர்வேஸ்வரன் திருவடிகளிலே சேர்த்து விடும் -என்று
உக்த அர்த்தத்தை நிகமிக்கிறார் -வண்ண மா மணிச் சோதியை-இத்யாதியாலே –

——–

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -17-பாசுரம்–

அவதாரிகை –

இதில்
கீழ் மேல் உண்டானவர்கள் எல்லாரும்
தம்முடைய சம்பந்தத்தாலே
பகவத் தாஸ்ய லாபத்தை லபித்தார்கள் என்று
ஹ்ருஷ்டராய்ப் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ்
தம் அளவில் உண்டான உகப்பு தம் ஒருவர் அளவிலும்
சுவறி விடுகை அன்றிக்கே
தம்முடைய சம்பந்தி சம்பந்திகள் அளவும்
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினர் -என்கிற
விரோதி நிவ்ருத்தி அளவன்றிக்கே
பலத்தாலும் வெள்ளமிட்டு-அலை எறிகிற படியைக் கண்டு –
மமாப்யேஷ யதாதவ -என்னும்படி
ஒருவனுடைய வ்யாமோஹம் இருக்கும் படியே என்று வித்தராய்
தம்மை இப்படி சபரிகரமாக விஷயீ கரிக்கைக்கு அடியான
அவன் குண சேஷ்டிதங்களை
திருத் த்வாதச நாம முகத்தாலே பேசி அனுபவித்து ப்ரீதர் ஆகிற
கேசவன் தமரில் -அர்த்தத்தை
கேசவனால் எந்தமர்கள் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் —

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும்
தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த -வீசு புகழ்
மாறன் மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு
ஆறு என்று நெஞ்சே அணை—-17-

வியாக்யானம்–

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும் தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த –
எம்பிரான் எம்மான் நாராயணனாலே-
எமர் -கீழ் மேல் ஏழ் பிறப்பும் –
கேசவன் தமர் -ஆனார்கள்
மாசரிது பெற்று –
அத்தாலே –நம்முடைய வாழ்வு வாய்க்கின்ற வா –
என்றத்தை நினைக்கிறது –

கேசவனால் எந்தமர்கள் –
ஜகத் காரண பூதனாய்
விரோதி நிரசனம் பண்ணுமவனாய் –
பிரசஸ்த கேசவனான
அவனாலே

மதீயர் தேசு அடைந்தார் என்று
தேஜஸ் சைப் பிராபித்தார்கள் என்று –
கேசவன் தமராகை இறே இவர்களுக்கு தேஜஸ்
தாஸ்யம் இறே ஆத்மாவுக்கு தேஜஸ் கரமாவது –
அத்தை தம்மோட்டை சம்பந்தத்தாலே
கீழ் மேல் உண்டான சம்பந்தி பரம்பரையில் உள்ளவர்கள் எல்லாரும்
லபித்தார்கள் என்று
அந்த யுபகார கௌரவத்தாலே
அவன் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமாய்
வைஷ்ணத்வ சிஹ்னமாய்
கேசவன்
நாரணன்
மாதவன்
கோவிந்தன்
விட்டு
மது சூதனன்
திரி விக்ரமன்
வாமனன்
சிரீதரன்
இருடீகேசன்
பற்ப நாபன்
தாமோதரன் –
என்கிற திரு த்வாதச திரு நாமங்களை பேசி அனுபவித்து
ஹ்ருஷ்டராய்
அத்தை இப்படி நன்றாக அருளிச் செய்த –
சிறப்பு -நன்று –

வீசு புகழ் மாறன்-
சம்பந்த சம்பந்திகள் அளவும்
வைஷ்ணத்வம் ஏறிப் பாயும் படியான
வைபவத்தால்
வந்த பிரசுரமான யசஸ்சை உடைய
ஆழ்வார் உடைய-

மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு ஆறு என்று –
புஷ்பம் போன்ற திருவடிகளே
நித்தியமான ஆத்மாக்களுக்கு எல்லாம்
உஜ்ஜீவிக்கைக்கு
உசித உபாயம் என்று –

நெஞ்சே அணை-
அவர்களிலே ஒருவனாய்
அம்சம் பெறும்படியான எனக்கு உபகரணமாய்
சௌமனச்யம் உள்ள மனசே
பிரஸூன சமமான திருவடிகளை நீயும் சமாஸ்ரயணம் பண்ணு–

நாராயணனாலே -என்று –
அவனுடைய ச்வீகாரமே நிரபேஷ உபாயம் என்றதின்
அனுவாதமான
கேசவனால் என்கிற இப்பதத்திலே -தத் விவரணமாக
மாதவன் என்றதே கொண்டு -என்றும்
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும் மேவும் தன் மயமாக்கினான் -என்றும்
என்னைக் கொண்டு -என்றும்
தன் பேறு ஆனமைக்கு –விட்டிலங்கு செஞ்சோதி -என்றும்
அம்மான் திரிவிக்ரமனை எனக்கே அருள் செய்ய –எனக்கு என்ன –விதி சூழ்ந்தது –என்றும்
தொழும் மனமே தந்தாய் -என்றும்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -என்றும்
உன்னை என்னுள் வைத்தேன் என் இருடீகேசனே -என்றும்
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -என்றும்
தாமோதரனை -என்றும்
அருளிச் செய்த சந்தைகளும் அனுசந்தேயங்கள்-

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி/ஸ்ரீ ஆதேஸ உபநிஷச் சாயை /ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி- –2-5—அந்தாமத் தன்பு செய்து-சாரங்கள் —

May 21, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஆகம்ய ஸூரி ஸஹிதஸ் சம பாக்ருத ஆர்த்தி
அத் உஜ்வலன் மரகத அசல சன்னிப அங்க
ஈச பிரபுல்ல கமல அஷி கர அங்க்ரி ராஸீத்
தத் பஞ்சமே ஸ கதயன் முநிர் ஆனந்த –15-

சம பாக்ருத ஆர்த்தி -அபாக்ருதம் பண்ணி-ஆர்த்தியை போக்கி

——–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்

ஸ்வ பிராப்த்யா சித்த காந்திம் ஸூகடித தயிதம் விஸ் புரத் துங்க மூர்த்திம்
ப்ரீத் உன்மேஷாதி போக்யம் நவ கன ரஸம் ந ஏக பூஷாதி  த்ருஸ்யம்
பிரத்யாத ப்ரீதி லீலம்  துரபி லபரசம் சத் குண ஆமோத ஹ்ருத்யம்
விஸ்வ வியாவ்ருத்த சித்ரம் விரஜ யுவதி கண க்யாத ரீத்யா அனுபவ புங்க்த -2-5-

1-ஸ்வ பிராப்த்யா சித்த காந்திம் -அந்தாமத் தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு-
ஆஸ்ரிதரோடே ஸம்ஸலேஷிக்கை யாலே நிரதிசய தீப்தி யுக்தனுமாய்

2-ஸூகடித தயிதம் –திருவிடமே மார்வம்–பெரிய பிராட்டிக்கு வாஸஸ் ஸ்தானமான திரு மார்பை யுடையவனுமாய் –

3-விஸ் புரத் துங்க மூர்த்திம்–மின்னும் சுடர் மலைக்கு–தேஜிஷ்டமாய் மலை போலே வளர்ந்த திரு மேனியை யுடையவனுமாய் –

4-ப்ரீத் உன்மேஷாதி போக்யம் –அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே -ப்ரீதி அதிசயத்தாலே பிரதி க்ஷணம் அபூர்வவத் போக்யனுமாய்

5-நவ கன ஸரஸம் –காரார் கரு முகில் போல் என்னம்மான்–வர்ஷுக வலாஹகம் போலே காருண்ய ரஸத்தை வர்ஷிக்கும் ஸ்வபாவனுமாய்

6-ந ஏக பூஷாதி  த்ருஸ்யம் –பலபலவே யாபரணம் பேரும் பலபலவே-பஹு வித பூஷண நாமதே யாதிகளாலே பூஷிதனுமாய்

7-பிரத்யாத ப்ரீதி லீலம்  –பாம்பணை மேல் இத்யாதி -ப்ரஸித்தமாய் -ப்ரீதி ரூபமாண -வ்ருஷ கண தமந –
ஸப்த சாலை பஞ்ச நாதி லீலா வியாபாரங்களை யுடையவனுமாய்

8-துரபி லப ரசம் -என்னுள் கலந்தானை சொல் முடிவு காணேன்–ஆஸ்ரித விஷயத்தில் அநிர் வச நீயமான பிரமத்தை யுடையனுமாய் –

9-சத் குண ஆமோத ஹ்ருத்யம்–எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை-அஸந்கயேய கல்யாண குணங்களை
யுடைத்தவனாகையாலே நிகர் இல்லாத நீல ரத்னம் போலே ஹ்ருத்யனுமாய் –

10-விஸ்வ வியாவ்ருத்த சித்ரம் –ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்-லோகத்தில் காணப்படுகிற
ஸ்த்ரீ புருஷாதி விலக்ஷண -அத்தியாச்சார்யா ரூபனுமாய் இருக்கிற எம்பெருமானை

விரஜ யுவதி கண க்யாத ரீத்யா அனுபவ புங்க்த —அந்தாமத்து அன்பு செய்த -என்னும் தசகத்திலே ஆழ்வார் –
தம்மோடு வந்து கலக்கையாலே புதுக்கணித்த திவ்ய ஆயுத திவ்ய ஆபரணங்களை யுடையவன் ஆனான் -என்று அத்பரீதியோடே –
கோபால குலத்திலே வந்து பிறந்து தங்களோடு கலக்கையாலே மிகவும் நிறம் பெற்ற குண விக்ரஹாதிகளை யுடைய
ஸ்ரீ கிருஷ்ணனை ஸ்ரீ கோபிமார் அதி ப்ரீதியோடே அனுபவித்தால் போலே அனுபவித்து அருளினார் என்கிறார் –

——

ஸ்ரீ ஆதேஸ உபநிஷச் சாயை –ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் —

பிரவேசம்
ஆடியாடியில் ஆர்த்தி தீர
இவர் ஆசைப்பட்ட படியே நித்ய ஸூரிகளோடே வந்து கலந்த எம்பெருமானை
ப்ரீதி அதிசயத்தாலே அனுபவிக்கிறார் -அந்தாமத்து அன்பில் –

——–

அந்தாமத் தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனி வாய் செங்கமலம்
செந்தாமரை யடிக்கள் செம் பொன் திருவுடம்பே –2-5-1-

அழகிய பரம பதத்தில் செய்யும் விருப்பத்தைச் செய்து என்னுடைய ஹேயமான ஆத்மாவிலே வந்து சேர்ந்த ஸ்வாமிக்கு
அழகிய மாலையும் -ஒளி விடுகிற திரு அபிஷேகமும் -திருப் பாஞ்ச ஜன்யமும் -திருவாழியும் -திரு யஜ்ஜோபவீதமும் -திரு வாரமும் –
சிவந்த தாமரை போல் விஸ்த்ருதமான திருக் கண்களும் -சிவந்து கனிந்த திருப் பவளமாகிற செங்கமலமும் –
செந்தாமரை போன்ற திருவடிகளும் -செம்பொன் போன்ற திரு மேனியும் -உளவாயிற்று இன்றே -என்று
தம்மோட்டைக் கலவியால் வந்த அவனுடைய அவயவ ஆபரண ஆயுத சோபையை -அருளிச் செய்கிறார் –
அந்தாமத் தன்பு-இத்யாதியாலே –

——

திருவுடம்பு வான் சுடர் செந்தாமரைக் கண் கை கமலம்
திருவிடமே மார்வம் அயனிடமே கொப்பூழ்
ஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ
ஒருவிடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே –2-5-2-

ஸ்வரூப ரூப குண விபூதிகளில் நீங்கும் இடம் ஓன்று இன்றிக்கே என்னுள் கலந்தவனுக்குத்
திருமேனியானது ஆதித்யனைப் போலவே ஒளி விடா நின்றது –
திருக்கண்கள் செந்தாமரைப் போலே இரா நின்றது –
திருக்கைகள் கமலம் போலவே இரா நின்றது –
திரு மார்பு பிராட்டிக்கு இடமாயே இரா நின்றது –
திரு நாபீ கமலமானது பிரம்மாவுக்கு இடமாகவே இரா நின்றது –
எனக்கு ஸ்வாமியான உபகாரகனுக்கு நீங்கி உள்ள இடமும் ருத்ரனுக்கு இடமாய் இரா நின்றது –
ஓ இது என்ன ஆச்சர்யம் -என்று விபூதி சோபையை அருளிச் செய்கிறார் -திருவுடம்பு-இத்யாதியாலே –

——

என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்
மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம்
மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள
தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே –2-5-3-

தன் சத்தைக்காக என்னுள் கலந்தவனாய் -பாத்தாலே விளங்கின சுடரை உடைய மலை போன்றவனுக்கு
கண் பாதம் கை இவை கமலம் போலே உஜ்ஜவலமாய் இரா நின்றது –
ஸ்திரமாய் பூர்ணமான ஸப்த லோகங்களும் தன் வயிற்றிலே சத்தை பெற்று இரா நின்றன
தன்னுள்ளே சம்பந்தியாது இருப்பது ஏதேனும் ஒரு பொருள் இல்லை என்று ஸர்வ சத்தா ஹேதுவான தான்
என்னுள் கலந்து சத்தை பெற்றான் என்கிறார் -என்னுள் கலந்தவன் -இத்யாதியால் –

———–

எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4-

எப்பேர்ப்பட்ட வஸ்துக்களும் தான் என்கிற சொல்லுக்கு உள்ளே அடங்கும்படி தனக்கு பிரகாரமாய் -தான் பிரகாரியாய் –
மரகத ஸைலம் போன்ற அசாதாரண விக்ரஹ யுக்தனாய் இருக்கிறவனுடைய கண் பாதம் கையாகிற கமலங்கள்
அப்போது அலர்ந்த தாமரைப் பூப் போலே இரா நின்றன –
நாள் தோறும் மாஸம் தோறும் வருஷம் தோறும் கல்பம் தோறும் கல்பம் தோறும் ஸர்வ காலத்திலும் அனுபவித்தாலும்
அவ்வவ காலம் தோறும் அபூர்வ ரஸமாய் எனக்கு அபர்யாப்தமான அம்ருதம் போலே இரா நின்றன -என்று
அவனுடைய நித்ய அபூர்வதையை அருளிச் செய்கிறார் எப்பொருளும் தானாய்-இத்யாதியிலே –

————

ஆராவமுதமாய் யல்லாவி யுள் கலந்த
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு
நேராவாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம்
பேரார நீண் முடி நாண் பின்னும் இழை பலவே –2-5-5–

எப்போதும் புஜித்தாலும் பின்னையும் திருஷ்ணையை விளைக்கும் அம்ருதம் போலே போக்யனாய்
அவஸ்துவான என் ஆத்மாவின் உள் கலந்து அத்தாலே காளமேகம் போலே
அத் யுஜ்ஜ்வலனாய் இருக்கிற என் ஸ்வாமியான கண்ணனுக்கு
சிவந்த பவளமானது ஜாதியாக வாய்க்கு ஒப்பாக மாட்டாது –
திருக்கண்கள் திருவடிகள் திருக்கைகள் இவற்றுக்குத் தாமரைப்பூ ஜாதியாக ஒப்பாக மாட்டாது –
இரட்டை மடிப்பிட்டுச் சாத்தும் படி பெரிய முத்து வடமும் நீண்ட முடியும் அப்படிப்பட்ட அரை நாணும்
பின்னையும் ஆபரணங்களும் பலவே -என்கிறார் -ஆராவமுதமாய்-இத்யாதியிலே –

————-

பலபலவே யாபரணம் பேரும் பலபலவே
பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில்
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம்
பலபலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ–2-5-6-

திவ்ய அவயவங்களில் சாத்தும் திரு ஆபரணங்களும் அநேகமாய் இரா நின்றன –
அப்படியே திரு நாமங்களும் அநேகமாய் இரா நின்றன
தேஜோ மயமான திரு மேனிகளும் அநேகமாய் இரா நின்றன
பிரகாரங்களை அனுசந்திக்கில் –
கண்டும் -உண்டும் -கேட்டும் -தொட்டும் -மோந்தும் -அனுபவிக்கும் விஷயங்களும் அநேகமாய் இரா நின்றன
ஸப்தாதி விஷய ஞானங்களும் அநேகங்களாய் இரா நின்றன –
இவை எல்லாம் ஆருக்கு என்னில்
திரு அனந்தாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளினவனுக்கே –
ஓ ஆச்சர்யம் -என்கிறார் -பல பலவே -இத்யாதியாலே

பாம்பணை மேலாற்க்கு அனுபாவ்ய பிரகாரங்களை அனுசந்திக்கில்
இவை எல்லாம் பல பலவே -என்று அந்வயம் –

————–

பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
காம்பணை தோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழ் செற்றதவும்
தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும்
பூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே –2-5-7—

திருப்பாற் கடலிலே திரு அனந்தாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளிற்றும்
மூங்கிலை அணைந்து இருந்துள்ள தோள் அழகை யுடைய நப்பின்னைப் பிராட்டிக்காக
ஏழு விருஷபங்களை ஊட்டியாக ஏக காலத்திலேயே நிரசித்ததும்
பூத்துப் பணைத்துச் சோலை போலே இருந்த மராமரம் ஏழையும் எய்ததும்
பூவோடு புனைபட்ட திருத்துழாய் மாலையை உடைய ஸ்ப்ருஹ ணீயமான திரு அபிஷேகத்தை யுடைய
என்னுடைய சமர புங்கவர் என்று இது எல்லாம் தமக்காகவே -என்கிறார் –பாம்பணை மேல்-இத்யாதியாலே –

———–

பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே –2-5-8-

பொன் முடியை யுடைய என்னுடைய போர் ஏறு போலே இருக்கிற என்னுடைய ஸ்வாமியை
தன் அழகுக்கு ஒரு முடிவு இல்லாது இருக்கிற குளிர்ந்த திருத் துழாய் மாலையை யுடையவனை
என்னுடைய நாஸத்தைக் காண மாட்டாதே காருண்யத்தாலே ஹேயமான என்னுள்ளே
ஒரு நீராகக் கலந்தவனைப் புகழ்கைக்கு நான் ஒரு அந்தம் காண்கிறிலேன்-
எத்தைத் தான் சொல்வது -சொல்லவல்ல நீங்கள் ஆகிலும் சொல்லீர் -என்கிறார் -பொன் முடி -இத்யாதியால் –

————

சொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தனை
எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை
நல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய்
அல்லிமலர் விரையொத்தான் ஆண் அல்லன் பெண் அல்லன் –-2-5-9-

எனக்கு சேஷி யானவனை -என்னுடைய அந்தராத்மாவுக்கு அந்தராத்மா ஆனவனை –
அமர்யாதமான கல்யாண குணங்களையும் யுடைய என்னுடைய நீல ரத்னம் போலே
விளங்கா நின்று உள்ளவனைச் சொல்லீர்
விலக்ஷணமான அம்ருதமுமாய் -பெறுகைக்கு அரிய மோக்ஷ ஸூ கமுமாய்
தாமாரைப் பூவினுடைய பரிமளம் போலே போக்யமுமாய்
புருஷோத்தமனுமாய் இருக்குமவன் -என்கிறார்-சொல்லீர் என் அம்மானை -இத்யாதியாலே –

———-

ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்
பேணும் கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே –2-5-10-

ஸ்த்ரீ புன்ன பும்ஸக பேத பின்னமான லௌகிக பதார்த்தங்களின் படி இன்றிக்கே புருஷோத்தமனாய்
லௌகிக ப்ரமாணங்களாலே காண்கைக்கும் அரியனாய்
அநாஸ்ரிதருக்கு உளன் அல்லனாய்
ஆஸ்ரிதர்களுக்கு இல்லை அல்லனாய்
பிரார்த்தித்த காலத்தில் ப்ரார்த்த நியாமான திருமேனியோடே அவதரிக்குமவனாய்
இந்நிலையில் கம்சாதிகளுக்கும் கிட்ட அரியனாய் இருக்கும் எம்பெருமானை
இன்னபடி என்று சொல்லுகை பெரிய ப்ரயாஸத்தை யுடைத்தானது -என்கிறார் -ஆண் அல்லன்-இத்யாதியாலே –

———–

கூறுதல் ஓன்று ஆராக் குடக் கூத்த வம்மானை
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
கூறின வந்தாதி யோராயிரத்துள் இப்பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே –2-5-11-

தன் படிகளைப் பேசப் புக்கால் பேசித் தலைக்கட்ட ஒண்ணாத படி இருக்கிற
கூத்தாடின ஸ்வாமியைப் பேசுகையிலே அபி நிவேசித்து இருக்கிற திரு நகரிக்கு
நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த அந்தாதியான ஆயிரத்தில் இப்பத்தையும்
சொல்ல வல்லார் உண்டாகில் வானவர் வைகுந்தத்தைப் பெறுவார் என்று
யுக்த அர்த்தத்தை நிகமிக்கிறார் -கூறுதல் ஓன்று–இத்யாதியாலே –

————–

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -15-பாசுரம்–

அவதாரிகை –

இதில் ஆடியாடியில் -விடாய் தீர
அடியார்கள் குழாங்களுடனே வந்து கலந்த படியைப் பேசின
பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
இவருடைய ஆர்த்தி தீரக் கலந்து
வாட்டமில் புகழ் வாமனனாவன் –
ஆயிரம் ஆண்டு முதலையின் கையிலே அகப்பட்டு இடர் பட்ட ஆனையின் இடரைச்
சடக்கென வந்து போக்கினால் போலே
ஆடியாடி யிலே தாம் பட்ட இடர் எல்லாம் போம்படி
ஆசைப் பட்டபடியே அடியார் குழாங்கள் உடன் கூடி வந்து
சம்ச்லேஷித்து அருளக் கண்டு
தம்மோட்டைக் கலவியாலே
அவன் வடிவிலே பிறந்த புதுக் கணிப்பை
மண்டி அனுபவித்து
ப்ரீதராய்ச் செல்லுகிற
அந்தாமத்து அன்பில் அர்த்தத்தை
அந்தாமத்து அன்பாலே -அருளிச் செய்கிறார் –

அந்தாமத்து அன்பால் அடியார்களோடு இறைவன்
வந்து ஆரத் தான் கலந்த வண்மையினால் -சந்தாபம்
தீர்ந்த சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே
வாய்ந்த வன்பை நாடோறும் வை–———–15-

வியாக்யானம்–
அந்தாமத்து அன்பால் –
அழகிய ஸ்ரீ வைகுண்ட தாமத்தில் பண்ணும் விருப்பத்தாலே –
அத்தேசத்திலும்
அத்தேசிகர் இடத்திலும் உண்டான அதி ச்நேஹத்தாலே –

அடியார்களோடு இறைவன் –
அடியார்கள் உண்டு –
அஸ்த்ர பூஷன பிரமுகராய் உள்ள நித்ய சூரிகள் –
அவர்களோடு கூட சர்வேஸ்வரன்
சபரிகரனாய் உளனாம் படி சம்ஸ்லிஷ்டனாய்-
அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்காழி நூலாரமுள-என்றத்தை நினைக்கிறது –

வந்து ஆரத் தான் கலந்த வண்மையினால் –
சர்வ ஸ்மாத் பரனான தான்
பரமபதத்தின் நின்றும்
பரமா பதமாபன்னரான–பெரிய ஆபத்தில் இருந்த -இவர் இருந்த இடத்து அளவும் வந்து
பரிபூர்ணமாக சம்ச்லேஷித்த ஔதார்யத்தாலே –

சந்தாபம் தீர்ந்த –
விசோதித ஜடஸ் ஸநாத-தஸ்தௌ தத்ர ஸ்ரியாஜ்வலன் -என்றும்
அதிவ ராமஸ் ஸூஸூபே-என்றும்
செந்தாமரை தடங்கண் செங்கனிவாய் செங்கமலம் செந்தாமரை அடிக்கள் செம்பொன் திரு உடம்பே -என்றும்
திரு உடம்பு வான் சுடர் –என்னுள் கலந்தானுக்கே -என்றும்
என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம் மின்னும்
சுடர் மலைக்கு கண் பாதம் கை கமலம் -என்றும்
எப்பொருளும் தானாய் மரகத குன்றம் ஒக்கும் -என்றும்
வாட்டமில் புகழ் வாமனன் மலை போலே பெருத்து
அவயவ சௌந்தர்யாதி களையும் யுடையனாய்
இருக்கிற படியை அனுபவித்து
சந்தாபம் ஆனது சவாசனமாக நிவ்ருத்தமான –

சந்தாபம் ஆவது
ஆடியாடி யில்
வாடுதல்
இரக்கம் இல்லாமல் தவித்து
வெவ்வுயிர்த்தல்
வாய் வெருவுதல்
உள்ளம் உக உருகுதல்
உள்ளுள் ஆவி உலருதல்
தன் நெஞ்சம் வேதல் துடக்கமானவை –
உள்ளுள் ஆவி உலர்ந்து -தீர -என்றும்
அல்லாவியுள் கலந்த -என்றும்
என் முடிவு காணாதே என்னுள் கலந்தான் -என்றும்
என்னுள் கலந்தவன் -என்றும் இறே இவர் அருளிச் செய்தது –
சந்தாபம் தீர்ந்த சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே வாய்ந்த வன்பை நாடோறும் வை –
வானோர் தனித் தலைவன்
அந்தாமத்து அன்பு செய்யும் படியான
ஆழ்வார் திருவடிகளிலே
உன் தன் மொய் கழற்கு அன்பை முயல்கின்றேன் -என்கிறபடியே
மனசே ஸூசங்கதமான சங்கத்தை நித்யமாக நிஷிப்தம் ஆக்கு
நிதியை அடியிலே இட்டு வைப்பாரைப் போலே
அன்பை அடியிலே இட்டு வை-

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி/ஸ்ரீ ஆதேஸ உபநிஷச் சாயை /ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–திண்ணன் வீடு–2-2-சாரங்கள் —

May 21, 2021

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர்

ஸம்ஸ் லிஷ்ய துக்க சமநாத் முதித பிரசங்காத்
தந் மூலமப் ஜநயநஸ்ய மஹேஸ் வரத்வம்
ஆஹாந் வயாதி தாதோ அபி மநுஷ்ய பாவே
பவ் ராணி கோத்த நயதஸ் சடஜித் த்விதீயே

ஸம்ஸ் லிஷ்ய —1-10-நம்பியை சேராத துக்கம்-
துக்க சமநாத் –2-1-வாயும் திரைஉகளும் -சமாஹிதர் ஆனாரே
முதித –ஆனந்தப்பட்டு
பிரசங்காத்
தந் மூலமப் ஜநயநஸ்ய மஹேஸ் வரத்வம் –சர்வேஸ்வரவேஸ்வர-
ஆஹாந் வயாதி தாதோ அபி மநுஷ்ய பாவே
பவ் ராணி கோத்த நயதஸ் -விபவத்வதில் -இதிகாச புராண பிரக்ரியை-
சடஜித் த்விதீயே

—————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

பூர்ண ஐஸ்வர்ய அவதாரம் பவ துரித ஹரம் வாமநத்வே மஹாந்தம்
நாபீ பத்மோத்த விஸ்வம் தத் அநு குண த்ருஸம் கல்ப தல்பீ க்ருதாப்திம்
ஸூப்தம் ந்யக்ரோத பத்ரே ஜகத வநதியம் ரக்ஷணா யாவ தீர்ணம்
ருத்ராதி ஸ்துத்யலீலம் வ்யவ்ருணுத லலித உத்துங்க பாவேந நாதம் —

பூர்ண ஐஸ்வர்ய அவதாரம் -விபவ பரத்வம்
பவ துரித ஹரம்-சம்சார துக்க –சிவன் துக்கம் -போக்கி/பவன் –சிவன் சம்சாரம்
வாமனத்வே மஹாந்தம்
நாபி பத்மோத்ப விச்வம்
தத் அணுகுண த்ருசம் –திருக்கண் படைத்து -தகும் கோல தாமரைக் கண்ணன்
கல்ப தல்பீ –ஆழியை படுக்கை யாக
ஸூக்தம்–பத்ரே –ஆலிலை
ஜகத் அவதீர்ணம்
ரஷணாய அவதீர்ண்யம்
ருத்ராதி துத்ய லீலம்
விவ்ருணத லலிதோத்துங்க பாவேனே நாதம் –

1-பூர்ண ஐஸ்வர்ய அவதாரம் -திண்ணன் வீடு -இத்யாதி -நம் கண்ணன் கண் அல்லையோர் கண்ணே –
பூர்ணமான ஐஸ்வர்யத்தோடே கிருஷ்ணனாய் வந்து அவதரித்ததும்

2-பவ துரித ஹரம் -மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
ஹரனுடைய துரிதத்தைப் தீர்த்ததும்

3-வாமநத்வே மஹாந்தம் –மேல் தன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
வாமனனாக தான் த்ரி விக்ரமனாய் வளர்ந்து பூமிப் பரப்பு எல்லாம் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டும் –

4-நாபீ பத்மோத்த விஸ்வம் -தேவும் எப்பொருளும் படைக்கப் பூவில் நான்முகனைப் படைத்த
தேவாதி பதார்த்தங்களை உண்டாக்குகைக்காகத் திரு நாபீ கமலத்தில் திசை முகனை ஸ்ருஷ்டித்தும்

5-தத் அநு குண த்ருஸம் -தாக்கும் கோலத் தாமரைக் கண்ணன்
அதுக்குத் தகுதியாய்த் தாமரைப் பூ போலே இருக்கிற திருக்கண் மலரை யுடையனாயும்

6-கல்ப தல்பீ க்ருதாப்திம் -எம் ஆழி யம் பள்ளியாரே
பிரளய காலத்தில் பயோ நிதியைப் படுக்கையாகக் கொண்டும்

7-ஸூப்தம் ந்யக்ரோத பத்ரே -பள்ளி ஆலிலை ஏழுலகும் கொள்ளும் வள்ளல்
அப்போது அகடி கடநா சாமர்த்தியத்தாலே ஸப்த லோகங்களையும் திரு வயிற்றிலே வைத்துக் கொண்டு
ஆலிலை மேல் கண் வளர்ந்து அருளியதும்

8-ஜகத வநதியம் -மூ உலகும் தம்முள் இருத்திக் காக்கும்
த்ரி லோகீ ரக்ஷணத்தை எப்போதும் சிந்தித்தும்

9-ரக்ஷணா யாவ தீர்ணம்-காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
தத் அர்த்தமாக கிருஷ்ணனாய் வந்து அவதரித்ததும்

10-ருத்ராதி ஸ்துத்யலீலம் -வெள்ளேறன் நான்முகன் இத்யாதி
பிரம்மா ருத்ராதிகளாலே ஸ்துதிக்கப் படுமவையான சேஷ்டிதங்களை யுடையனுமாய் இருக்கிற எம்பெருமானை

வ்யவ்ருணுத லலித உத்துங்க பாவேந நாதம் –மநுஷ்ய ஸஜாதீயனாய் அவதரிக்கச் செய்தேயும்
பரத்வம் தோற்ற இருக்கும் என்று திண்ணன் வீடு -என்கிற ஸதகத்திலே
ஆழ்வார் தெளிவித்து அருளினார் என்கிறார் –

———–

ஸ்ரீ ஆதேஸ உபநிஷச் சாயை -ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள்-

திண்ணன் வீடு
ப்ரவேஸம்
கீழ் வேவேரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்து மருதிடை போய் மண்ணளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10-என்று ப்ரஸக்தமான
காரணத்வத்தை அருளிச் செய்கிறார் -திண்ணன் வீட்டில்

—–

திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –2-2-1-

முதல் பாட்டு
அகர்ம உபாதிகமான நித்ய விபூதி முதலாய் இருந்துள்ள விபூதி எல்லாவற்றையும் உடையனாய்
அஸங்யாதமான கல்யாண குணங்களை யுடையனாய் இருக்கிற ஸ்வாமியாய்
பூம் யந்தரிஷாதிகள் எல்லாவற்றையும் திரு வயிற்றிலே வைத்து ரஷித்து அருளிய
நம்முடைய கிருஷ்ணனாகிற த்ருஷ்ட்டி ஒழிய ஜகத்துக்கு வேறு த்ருஷ்டி இல்லை என்கிறார் -திண்ணன் இத்யாதியால்

——-

ஏ பாவம் பரமே யேழு லகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார்
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
கோபால கோளரி யேறன்றியே –2-2-2-

இரண்டாம் பாட்டு
சேதனர் இப்படி மந்த மதிகள் ஆவதே -இது என்ன பாபம் –
இவர்களுக்கு பகவத் குண அநுபவம் பண்ணுகை ஒழிய பகவத் பரத்வ உப பாதநம் பண்ணுகை நமக்குப் பரம் ஆவதே
ஸப்த லோகங்களையும் பாபங்களைப் போக்கி கிருபையால் ரஷிப்பார் ஆர்
ஒருவரும் இல்லையோ என்னில் –
ப்ரஹ்மஹத்யை யாகிற மஹா பாபம் விடும்படி ஹரனுக்குப் பிச்சையிட்ட கோபாலன் ஆகிற
ஸிம்ஹ ஸ்ரேஷ்டம் ஒழிய வேறு ஒருவரும் இல்லை -என்கிறார் ஏ பாவம் -இத்யாதியால் –

——–

ஏறனைப் பூவனைப் பூ மகள் தன்னை
வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து
மேறன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
மாறனில் மிக்குமோர் தேவுமுளதே–2-2-3-

மூன்றாம் பாட்டு –
கைக்கொள் ஆண்டி போலே ஒரு எறுத்தை யுடையவனாய் இறுமாந்து இருக்கிற ருத்ரனையும்
திரு நாபீ கமலத்திலே அவ்யதாநேந பிறந்து ஜாத் யபிமானியாய் இருந்துள்ள ப்ரஹ்மாவையும்
அநந்ய ப்ரயோஜனை யான பெரிய பிராட்டியாரையும்
இந்த ஸீல குணத்தைக் கண்டு நித்ய ஸூரிகள் எல்லாரும் தொழும் படி அபி பக்தமாய் தன்னுள்ளே வைத்து
ஆகாசத்தையும் மேலிடும் படி வளர்ந்து பூமியை அளந்து கொண்ட எம்பெருமானைக் காட்டிலும்
உத்க்ருஷ்டமாய் இருபத்தொரு தைவம் உண்டோ என்கிறார் -ஏறனை -இத்யாதியால்

——–

தேவும் எப்பொருளும் படைக்க
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே –2–2-4–

நாலாம் பாட்டு
தேவதைகளையும் சகல பதார்த்தங்களையும் ஸ்ருஷ்டிக்கைக்காகத் திரு நாபீ கமலத்தில்
சதுர் முகனை உண்டாக்கின தேஜோ மயனான எம்பெருமானுக்கு அல்லது மற்ற ஒருவருக்குப்
புஷ்பமும் ஆராதனமும் யோக்யமோ -என்கிறார் -தேவும் இத்யாதியால்

———-

தகும் சீர்த் தனி முதலினுள்ளே
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேலறிவார் யவரே –2-2-5-

அஞ்சாம் பாட்டு
ஸ்ருஷ்டிக்கு உபயோகியான ஞான சக்த்யாதிகளை யுடைய ஸங்கல்ப ரூப ஞானத்துக்கு உள்ளே
தன்னோடு ஒக்கச் சொல்லலாம் படியான தேவ ஜாதியையும்
மற்றும் உண்டான ஸகல பதார்த்தங்களையும் உண்டாக்குகைக்கு யோக்யன் என்னும் இடத்தைத் தெரிவிப்பதாய்
தர்ச நீயமாய் குளிர்ந்து இருக்கிற திருக் கண்களை யுடையனாய்
என்னை அடிமை கொண்டவனே மிக்க தேஜஸ்ஸை யுடையவன் –
இவனை ஒழிய மேலே ஒரு வஸ்து உண்டு என்று
அறிவார் ஆர் -அவர் அவைதிகர் -என்கிறார் தகும் சீர் -இத்யாதிகள்

———

யவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி
அவர் எம் ஆழியம் பள்ளியாரே –2-2-6-

ஆறாம் பாட்டு
சேதன வர்க்கமும் அசேதன வர்க்கமும் ஆகிற ஸகல பதார்த்தங்களும் ஒருவரை ஒருவர்
நெருக்காத படித் தன ஸங்கல்ப ஏக தேசத்திலே ஒடுங்கும்படி நின்ற
விஸ்த்ருதமான ஞான சமுத்திரத்தை யுடைய தேஜிஷ்டமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையரான அவர்
எங்களுடைய ரக்ஷண அர்த்தமாக
ஏக ஆர்ணவத்தை அழகிய படுக்கையாக யுடையரானார் என்கிறார் -யாவரும் இத்யாதியால் –

———–

பள்ளி யாலிலை யேழுலகும் கொள்ளும்
வள்ளல் வல் வயிற்றுப் பெருமான்
உள்ளுள்ளார் அறிவார் அவன் தன்
கள்ள மாய மனக் கருத்தே –-2-2-7-

ஏழாம் பாட்டு
படுக்கையாய் இருபத்தொரு பவனான ஆலந்தளிரிலே ஏழுலகும் கொள்ளும் படி உதாரமாய்
த்ருடமான திரு வயிற்றை யுடையனாய்க் கொண்டு கண் வளரும் உபகாரகனானவனுடைய
அதி கம்பீரமாய் ஒருவருக்கும் தெரியாதபடி ஆச்சர்யமாய் இருக்கிற மந அபிப்ராயத்தை யார் அறிவார் –
அறிவார் இல்லை -என்கிறார் -பள்ளி இத்யாதியால்

——-

கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப்பிரானை யன்றி யாரே
திருத்தித் திண்ணிலை மூவுலகும் தன்னுள்
இருத்திக் காக்கும் இயல்வினரே –2-2-8-

எட்டாம் பாட்டு
தன்னுடைய ஸங்கல்பத்தாலே தேவ ஜாதியையும் மற்றும் உள்ள ஸகல பதார்த்தங்களையும்
உண்டாக்கின ஆச்சர்ய பூதனான ஸர்வேஸ்வரனை அன்றி
மூன்று லோகங்களையும் த்ருடமான ஸ்திதியை யுடைத்தாம் படி திருத்தித்
தத் அநு ரூபமான ரக்ஷணங்களையும் திரு உள்ளத்தே வைத்து ரஷிக்கும்
சாமர்த்தியத்தை யுடையவர் ஆர் என்கிறார் -கருத்தில் இத்யாதியால் –

———-

காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்து தன்னுந்தி யுள்ளே
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ வுலகுகளே –2-2-9-

ஒன்பதாம் பாட்டு
ரஷிக்கையே ஸ்வ பாவமாக யுடையவன் கிருஷ்ணனாய் வந்து திரு அவதரித்ததும்
ஸம்ஹார காலம் வந்தவாறே
கார்ய ரூப பிரபஞ்சம் அடையத் தன் பக்கலிலே சேருகை யாகிற செயலைச் செய்தும்
தன்னுடைய திரு நாபீ கமலத்திலே நன்றாக வாய்ந்த சதுர் முகன் இந்திரன் தேவதைகள் என்கிற
தேவ லோகங்களை யுண்டாக்கினான் -என்கிறார் காக்கும் இயல்வினன் -இத்யாதியால்

———-

கள்வா எம்மையும் ஏழுலகும் நின்
னுள்ளே தோற்றிய இறைவ என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்
புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே–2-2-10-

பத்தாம் பாட்டு
க்ருத்ரிமனே என்றும்
எங்களையும் ஸர்வ லோகங்களையும் உன் ஸங்கல்பத்தாலே உண்டாக்கின ஸ்வாமியே என்றும்
வெளுத்த எருத்தை யுடைய ருத்ரனும் சதுர் முகனும் இந்திரனும் தேவர்களும்
கருட வாஹநனுடைய திருவடிகளிலே விழுந்து ஏத்தா நிற்பர்கள் -என்கிறார் -கள்வா -இத்யாதியால்

———-

ஏத்த வேழுலகும் கொண்ட கோலக்
கூத்தனை குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்ந்த வாயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லார்க்கு இல்லையோ ரூனமே –2-2-11-

நிகமத்தில்
தேவ சமூகங்கள் ஸ்தோத்ரம் பண்ணா நிற்க அந்த ஹர்ஷத்தாலே
ஸகல லோகங்களையும் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்ட அழகிய கூத்தனை
திரு நகருக்கு நிர்வாஹகரான ஆழ்வாருடைய சொல் வாய்த்த ஆயிரத்துள்
இந்தப் பத்தையும் அப்யஸிக்க நல்லவர்களுக்கு தேவதாந்த்ர பரத்வ புத்தி யாகிற
ஓர் அவத்யமும் இல்லை என்று உக்தார்த்தத்தை நிகமிக்கிறார் -ஏத்த -இத்யாதியால் –

———–

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம்–

அவதாரிகை –

ப்ராசங்கிகமாக பிரஸ்துதமான பரத்வத்திலே
அவதாரத்திலே அனுசந்தித்து
பரோபதேசம் பண்ணுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
பிரிந்தாரை கண்ணாஞ்சுழலை இடப் பண்ணும் அளவன்றிக்கே
கூடினாலும் பிரிவை மறக்கும்படி பண்ணவற்றான விஷய வைலஷண்யம்
அதுக்கு ஈடான குண வைலஷண்யம்
அதுக்கு அடியான சர்வேஸ்வரத்வம்
இவற்றை அனுவதித்து
இப்படி ப்ராசங்கிகமாக பிரஸ்துதமான சர்வேஸ்வரத்வத்தை
இதிஹாச புராண பிரக்ரியையாலே
பிறரைக் குறித்து உபதேசித்துச் செல்லுகிற
திண்ணன் வீட்டில் அர்த்தத்தை –
திண்ணிதாம் மாறன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

திண்ணிதா மாறன் திருமால் பரத்துவத்தை
நண்ணி யவதாரத்தே நன்குரைத்த -வண்ணம் அறிந்து
அற்றார்கள் யாவரவர் அடிக்கே ஆங்கு அவர் பால்
உற்றாரை மேலிடா தூன் —திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 12-

வியாக்யானம்-

திண்ணிதா மாறன் –
கீழே
மூவா முதல்வா இனி வெம்மைச் சோரேல் -2-1-10-
என்ற அநந்தரம் –
சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதி -2-1-11–என்கிற
காரணத்வத்தால் வந்த பரத்வத்தைக் காட்டி சமாதானம் பண்ண
அத்தாலே தரித்த தார்ட்ட்யத்தை யுடைய ஆழ்வார் -என்னுதல்
எல்லாருக்கும் ஸூ த்ருடமாம்படி பரத்வத்தை-அருளிச் செய்த ஆழ்வார் -என்னுதல் –

திருமால் பரத்துவத்தை –
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரனுடைய பரத்வத்தை
நீயும் திருமாலால் -என்று இறே அருளிச் செய்தது –

நண்ணி யவதாரத்தே நன்குரைத்த –
திருமால் பரத்வத்தை
அவதாரத்தே நண்ணி
நன்குரைத்த
முதல் திருவாய் மொழியிலே ஸ்ருதி சாயலிலே
பரத்வே பரத்வத்தை அருளிச் செய்தால் போல் அன்றிக்கே
இதிஹாச புராண பிரக்ரியை யாலே
அதி ஸூலபமான அவதாரத்திலே
பரத்வத்தை ஆஸ்ரயணீயமாம் படி நன்றாக அருளிச் செய்த
-அன்றிக்கே –
திருமால் பரத்வத்தை தாம் நண்ணி
அவதாரத்திலே நன்கு உரைத்த -என்றாகவுமாம்-

நன்கு உரைத்த வண்ணம் அறிந்து –
நன்கு உரைத்த வண்ணம் அறிகை யாவது –
இப்படி அவதாரே பரத்வத்தை
ஸூஸ்பஷ்டமாம்படி
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே -என்றும்
கோபால கோளரி ஏறு அன்றி ஏழுலகும் ஈ பாவம் செய்து
அருளால் அளிப்பார் யார் -என்றும்
அருளிச் செய்த பிரகாரத்தை அறிகை –
மற்றும் தத் சேஷமாக-
தேவன் எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனையும் தகுமே -என்றும்
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான் மிகுஞ்சோதி மேல் அறிவார் எவரே -என்றும்
கள்வா -என்று துடங்கி –புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவர்
என்றும் அருளிச் செய்தவையும் உண்டு இறே –
இப்படி அருளிச் செய்யும் இடத்தில்
கிருஷ்ண ஏவஹி லோகா நாம் உத்பத்தி ரபி சாப்யாய -என்றும்
ஸ ஏஷ ப்ருது தீர்க்கா ஷச சம்பந்தி தேஜ நார்த்தன -என்றும்
அர்ச்சய மர்ச்சிதும் இச்சா மஸ்சர்வம் சம்மதம் து மர்ஹத -என்றும்
பாதேன கமலா பேன ப்ரஹ்ம ருத்ரார்சித நச -என்றும்–பேதைக் குழவி பிடித்து உண்ணும் பாதக் கமலங்கள் காணீரே -என்றும்
சொல்லுகிற பிரமாணங்களைப் பின் சென்று இறே அருளிச் செய்தது –
ராமா– கமலா பத்ராஷஸ் –சர்வ சத்வ மநோஹரா-என்றும்–படி எடுத்து உரைக்கும் படி யன்றே அவன் படி -மூவாறு மாசம் மோகித்து –
சொல் எடுத்து தன் கிளியை சொல்லே என்று –முலை மேல் சோர்கின்றாளே -கல் எடுத்தது பெரியது இல்லை சொல் என்று –
லாவண்யம் சௌந்தர்யம் -இரண்டையும் சுருங்கச் சொல்லி –
பாவநஸ் சர்வ லோகா நாந்த்வமேவர ரகு நந்தன -இத்யாதி
பிரமாணங்களைப் பற்ற
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான் -என்றும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர் -என்றும் அருளிச் செய்தார் இறே
இப்படி பரோபதேச பிரகாரத்தை அறிந்து
பரத்வ ஸ்தாபகரான ஆழ்வார் இடத்திலே –

வண்ணம் அறிந்து -அற்றார்கள்யாவர் –
அற்றுத் தீர்ந்து
அனந்யார்ஹராய் இருப்பார் யாவர் சிலர் –

அவர் அடிக்கே ஆங்கு அவர் பால் உற்றாரை மேலிடா தூன்
அவர்கள் திருவடிகளுக்கு அனந்யார்ஹராய்
அவ்விடத்திலே அப்படியே
அவர்கள் விஷயத்தில் அந்தரங்கராய் கிட்டினவர்களை
மாம்ஸாஸ்ருகாதி மல ரூபமான தேஹம் அபி பவியாது-
இத்தால் தேக சம்பந்தம் மேலிடாது -என்றபடி-

——————————————————————-—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்