வையம் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக -செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடர் ஆழி நீங்குகவே யென்று -1-
பதவுரை
வையம் தகளி ஆ–பூமி அகலாகவும்
வார் கடலே நெய் ஆக–அந்தப் பூமியைச் சுற்றியிருக்கிற கடலே நெய்யாகவும்.
வெய்ய கதிரோன் விளக்கு ஆக–உஷ்ண கிரணனான ஸூர்யன் விளக்காகவும்,
செய்ய சுடர் ஆழியன் அடிக்கே–செஞ்சுடர்ச் சக்கரைக் கையனான எம்பெருமானது திருவடிகளில்.
சொல் மாலை–இப் பாமாலையகிற பூ மாலையை
சூட்டினேன்–சாத்தினேன்;
(ஏதுக்காகவென்னில்;)
இடர் ஆழி நீங்குக என்று–(பகவத் கைங்கரியத்திற்கு இடையூறாகவுள்ள) துன்பக்கடல் நீங்குகைக்காக.
[வையம் தகளியா.] தகளியாவது-நெய்க்கும் திரிக்கும் ஆதாரமாயிருக்கிற அகல்.
(தாளி என்று உலக வழக்கு. பூமியானது கடிந வஸ்துவாயிருப்பதால் அதைத் தகளியாகவும்,
கடலானது த்ரவ வஸ்துவாயிருப்பதால் அதை நெய்யாகவும்,
ஸூர்யன் ப்ரகாசஸ்வரூபனாயிருப்பதால் அவனை விளக்காகவும் ரூபித்து அருளிச் செய்கிறார்.
இங்கு இங்ஙனே ரூபணம் செய்வதன் கருத்து யாதெனில்; சூந்யமே தத்துவமென்றும்,
உலகம் ஒரு ஈச்வரனையுடையதல்ல என்றும் பலபடியாகப் பகரும் மதாந்தரங்ளை மறுத்து
விசித்திரமான பிரபஞ்சத்தை நிருமிக்கவல்ல ஞான சக்தி முதலிய குணங்களையுடைய திவ்விய மங்கள விக்ரஹத்தோடு கூடிய
ஸர்வேச்வரன் உளனென்றும் அவனுக்கு அடிமை செய்கையே புருஷார்த்தமென்றும் இப்பாசுரத்தால் விளக்கப்பட்டதாகும்.
ஸூர்யன் சிறிதும் தவறாமல் உதிப்பதும் அஸ்தமிப்பதுமாக நீடுழியாய் நடந்து வருவதானது-
விசித்ரசக்தி வாய்ந்த ஸர்வேச்வரனொருவனுளன் என்பதை நமக்கு நன்றாக விளக்குகின்ற தன்றோ.
வார்கடலின் நிலைமையும் வையத்தின் நிலைமையும் இவ்வுண்மையையே வற்புறுத்துகின்றன.
கடலானது தன்னிடத்தில் பல பல ஆற்றுப் பெருக்குகள் வந்து விழுதலால் நிறைந்து வழிதலாவது,
அவை வந்து விழாத காலத்தில் வடிந்து குறை படுதலாவது ஒன்றுமின்றியே
எப்போதும் ஸமநிலைமையாகவே யிருந்துகொண்டு எல்லையை மீறாதிருப்பதும்,
ஐம்பதுகோடி யோஜனை தூரத்தளவும் பரந்து கடினமாயிராநின்ற இப்பூமியானது பெரியவெள்ளத்தில் ஒரு கழற்காய் மிதப்பதுபோல
மஹார்ணவ ஜலத்தில் மிதந்துகொண்டிருப்பதும் இவை தம்மைப் படைத்தவொரு முழு முதற் கடவுளின்
அற்புதமான சக்தி விசேஷத்தைப் புலப்படுத்துகின்றனவன்றோ.
அப்படிப்பட்ட அபாரசக்தியுக்தனான ஒரு ஜகத்காரணபூதன் ஸித்திக்கும்போது அப்பெருமானுக்குக் கைங்கரியம் செய்யவேண்டுதல் முக்கியம்;
கைங்கரியம் மாநஸிக மென்றும் வாசிகமென்றும் காயிகமென்றும் மூன்று வகைப்படும்;
அவற்றுள் வாசிக கைங்கரியமான பாசுரம் பாடுதலை அடியேன் செய்கின்றேன்;
இக்கைங்கரியத்தை இதுவரையில் நான் செய்யக்கூடாதபடி இடையூறாகவிருந்த ஸம்ஸாரத் துன்பத் திரள்கள் இன்றோடு ஒழிந்திடுக-என்றாயிற்று.
முன்னடிகளின் கருத்தை ஊன்றி நோக்குமிடத்தில் இவ்வாழ்வார் அநுமாநத்தினால் ஈச்வரனை ஸாதிப்பதாக ஏற்படுகின்றது;
சராசரரூபமான இந்த பிரபஞ்சம் முழுவைதையும் படைத்து நடத்திக்கொண்டு போவதற்குப் பாங்கான வல்லமை வாய்ந்த
ஸர்வேச்வரனொருவனுண்டு என்பதை வையம் கடல் ஸூர்யன் என்ற மூன்று பொருள்களின் நிலைமையைச் சொல்லுகிற
முகத்தினால் ஸமர்த்தித்தபடியால் அநுமாநத்தாலே ஈச்வரனை ஸாதிக்கிற தார்க்கிகர்களின் படியை அடியொற்றினாராகிறார்;
இதுகூடுமோ?
சாரீரகமீமாம்ஸையில் சாஸ்த்ரயோநித்வாதிகரணத்தில் அநுமாநத்தால் ஈச்வரனை ஸாதிக்கலாகாதென்று மறுத்து
வேதப்ரமாணமொன்றினாலேயே ஈச்வரனுடைய உண்மையை உணரவெணுமென்று ஸ்தாபித்திருப்பதற்கு மாறாக
இஃது இருக்கின்றதே! என்று சிலர் சங்கிக்கக்கூடும்;
வேதத்துக்கு விருத்தமாக அநுமாநங்கொண்டு ஸாதிப்பதை அங்கு மறுத்துரைத்த மாத்திரத்தினால்
வேதத்துக்கு விருத்தமல்லாத அநுமாநங் கொள்வதில் பிசகுள்ளதாக நினைக்கலாகாது . இது ஸ்ரீபாஷ்யாதி ஸம்மதமுமாம் விரிப்பிற் பெருகும்.
இடராழி நீங்குகவேயன்று–
இதுவரையில் எம்பெருமானைத் துதியாதிருந்ததனாலுண்டான வருத்தம் நீங்குவதற்காக என்றும்,
துதிக்கவொட்டாமல் பிரதிபந்தகமாயிருந்த பாவங்கள் தொலைவதற்காக என்றும்,
இப்பிரபந்தத்தைக் கற்று ஸம்ஸாரிகளும் துயர்தீர்ந்து வாழ்வதற்காக என்றும்
மூன்றுபடியாக உரைக்கலாம்.
———–
[என்றுகடல்கடைந்து.] ஸர்வேச்வரனை அநுமாநத்தால் ஸாதிப்பது தோன்றக் கீழ்ப்பாட்டு அருளிச் செய்யப்பட்டது;
அவனை அநுமாநங்கொண்டு ஸாதிக்கவேண்டிய வருத்தமில்லை; அவன் செய்தருளியிருக்கும் எல்லையற்ற
அதிமாநுஷங்களான செயல்களே அவனுடைய உண்மையை ஸாதித்துக் கொடுக்கக்கூடியவை என்று வெளியிடக்கருதி,
கடல் கடைந்தது உலகளந்தது முதலிய சில சேஷ்டிதங்களை அருளிச்செய்யும் முகத்தால் அவனுடைய உண்மையை மூதலிக்கின்றார்.
ஆளவந்தார் எம்பெருமானுடைய உண்மையை உணர்வதற்கு உரிய ஸாதநங்களை அருளிச் செய்யுமிடத்து
“த்வாம் சீல ரூப சரிதை:” (ஸ்தோத்ரரத்நம்.) இத்யாதிகள் அருளிச் செய்ததும்
அப்படியே ஆழ்வானும் ஸ்ரீவைகுண்டஸ்தவத்தில்—”சித்ரைச்ச கைச்சிதுசிதை: பவதச் சரித்ரை:” என்றருளிச் செய்ததும் ஸ்மரிக்கத்தக்கன.
கடல்கடைந்து தேவர்களுக்குச் சாவாமருந்து எடுத்துத்தந்து அவர்களை ரக்ஷித்ததும்,
மாவலி பக்கல் மாணுருவாய்ச்சென்று மூவடி நீரேற்றுப்பெற்று உலகளந்து இந்திரனது துன்பத்தைத் தீர்த்தொழித்ததும்
ஸ்ரீமந் நாராயணனுடைய உண்மையை விளக்கவல்லன காண்மின் என்கிறார்.
என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீர் ஏற்றது
ஒன்றும் அதனை யுணரேன் நான் -அன்று அது
அடைத்து உடைத்துக் கண் படுத்த வாழி இது நீ
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் ——-2-
பதவுரை
கடல் கடைந்தது–(தேவர்களுக்காகக்) கடலைக் கடைந்தது
என்று–எந்த நாள்?
நீர் ஏற்றது–(மாவலி) தாரை வார்த்து தத்தஞ் செய்யப்பெற்றது
எ உலகம்–எந்த உலகம்?
அதனை–அவற்றை
நான் ஒன்றும் உணரேன்–நான் அடியோடு அறிகின்றிலேன்;
அது–அந்தக் கடலானது
அன்று–ஸ்ரீராமாவதார காலத்தில்
அடைத்து–மலைகளைக்கொண்டு திருவணை கட்டித் தூர்த்து
உடைத்து–(இராவணனை முடித்துத் திரும்புங்கால் அந்தத் திருவணையை) உடைத்து.
கண்படுத்த–எப்போதும் பள்ளிகொள்ளுமிடமாகக் கொண்டிருக்கப்பெற்ற
ஆழி–ஸமுத்ரமாம்;
இது–(நீரேற்றுப் பெற்ற) இவ் வுலகமானது
நீ–ஸர்வேச்வரனான உன்னாலே
படைத்து–ஸ்ருஷ்டிக்கப்பட்டும்
இடந்து–(வராஹாவதார காலத்தில் அண்டபித்தியில் நின்று) ஒட்டு விடுவித்தெடுக்கப்பட்டும்
உண்டு–(பிரளய வெள்ளம் கோத்தபோது) திருவயிற்றிலே வைத்துப் பாதுகாக்கப்பட்டும்
உமிழ்ந்த–பின்பு வெளிப்படுத்தப்பட்டதுமான
பார்–பூமியாகும்.
என்றுகடல்கடைந்தது? என்கிற கேள்வியும் எவ்வுலகம் நீரேற்றது? என்கிற கேள்வியும் கேள்வி கேட்பதில் நோக்குடையனவல்ல;
கடல் கடைந்தபோது தோன்றிய திரையும் நுரையும் மாறாமல் இப்போதுதான் கடல் கடைந்ததுபோலத் தோன்றுகின்றதே!;
உலகளக்கும் போது வைத்த அடிச்சுவடு மாறாமல் “வாமனன் மண்ணிது” என்னும்படி இதோ தோன்றுகின்றதே! என்று
ப்ரத்யக்ஷஸமமாக்க் காட்டுபவர் போலச் சொல்லுகிறபடி.
கடல் கடைந்ததும் உலகளந்ததும் என்றைக்கோ நிகழ்ந்ததாயினும் மயர்வற மதிநலமருளப்பெற்ற இவ்வாழ்வாரது
அகக் கண்ணுக்கு அச்சரிதைகளெல்லாம் ஸ்பஷ்டமாகத் தோற்றி விளங்குதலால் இங்ஙனே அருளிச்செய்யக் குறையில்லை யென்க.
நெடுநாளைக்கு முன்னே நடந்த செயல்கள் ஆழ்வார்க்கு இன்று பரத்யக்ஷம்போல் தோற்றினாலும்,
‘ஐயோ! கடல்கடைந்த வக்காலத்து நாம் நேரில்கண்டு மங்களாசாஸனம் செய்யப் பெறவில்லையே!
உலகளந்த அக்காலத்திலே காடும் மேடும் தாவின திருவடிகளின் கீழே நம்முடைய தலையை மடுக்கப் பெற்றிலோமே!’
என்கிற வருத்தம் தோன்றி அவ்விழவு விளங்க ஒன்றுமதனை யுணரேன் நான் என்கிறார்;
அச்செயல்கள் நடந்தகாலத்திலே அவற்றை நான் அநுபவியா தொழிந்தேனே! என்றவாறு.
நம்மாழ்வார் *மத்துறுகடை வெண்ணெய்களவினிலுரலிடையாப்புண்ட சரிதையை அநுஸந்தித்ததும்] “எத்திறம்!” என்று
மோஹித்து கிடந்தது போல் இவரும் முதலடியில் அநுஸந்தித்த செயல்களிலே மோஹித்து
“ஒன்றும் அதனை யுணரேன்” என்கிறார் என்று முரைப்பர்.
முதலடியிலே கடல் கடைந்ததும் உலகளந்ததும் அநுஸந்திக்கவே அக்கடலிலும் அவ்வுலகத்திலும் எம்பெருமானுக்குள்ள
ஸம்பந்தங்கள் திருவுள்ளத்திலே ஞாபகத்திற்கு வர அவற்றைப் பின்னடிகளிற் பேசி அநுபவிக்கிறார்.
கடலில் எம்பெருமான் செய்த காரியங்களை மூன்றாமடியிலும் உலகுக்காக அவன் செய்த காரியங்களை நான்காமடியிலும் அருளிச் செய்கிறார்.
இராவண ஸம்ஹாரம் செய்து பிராட்டியை மீட்டிக் கொணர்வதற்காக இலங்கைக் கெழுந்தருளும்போது
“மறிகடல் நெறிபட மலையால் அரிகுலம் பணிகொண்டு அலைகடலடைத்தான்” என்றபடி ஸேதுபந்தனம் பண்ணுனதும்,
பிராட்டியைக் கைக்கொண்டு மீண்டெந்தருளும்போது அதனை உடைத்ததும்,
“வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தயாக விரித்து அதன்மேலே கள்ள நித்திரை கொள்கின்ற” என்றபடி
* தன் தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பிப் பள்ளிகொண்டிருத்தலுமாகிய கடலிலே செய்த காரியங்கள் அநுஸந்திக்கப்பட்டன.
ஆதியில் படைத்ததும், வராஹாவதாரத்தில் ஹிரண்யாக்ஷனைக் கொன்று இடந்ததும்,
ப்ரளயம் வந்த போது திருவயிற்றினுள்ளே வைதிட்டதும், பிறகு வெளிப்படுத்தியதுமாகிய
இவை உலகுக்காகச் செய்த செயல்களாக அநுஸந்திக்கப்பட்டன.
இப்படிப்பட்ட அதிமாநுஷ சேஷ்டிதங்களைச் செய்தருளின ஸ்ரீமந்நாராயணனே பரம்பொருளென்றும்,
அவனுடைய உண்மையை இச்செயல்களே ஸாதித்துத் தரவல்லன என்றும் இப்பாசுரத்தால் அறிவிக்கப்பட்டதாயிற்று.
——–
[பாரளவும்.] எம்பெருமானுடைய திவ்ய சேஷ்டிதங்கள் பலவற்றினுள்ளும் உலகளந்த சரிதையிலே நம் ஆழ்வார்கள் அதிகமாக ஈடுபடுவர்கள்;
விசேஷித்து முதலாழ்வார்கள் மிகவு மதிகமாக ஈடுபடுவர்கள்.
கீழ்ப்பாட்டில் “எவ்வுலகம் நீறேற்றது” என்று அந்தச் செயலைச் சிறிது ப்ரஸ்தாவித்த மாத்திரத்திலே
அதிலே திருவுள்ளம் மிகவும் அவகாஹிக்கப் பெற்று அந்த வரலாற்றைப் பேசி அநுபவிக்கத் தொடங்கி
நிலை கொள்ள மாட்டாமல் நின்று தளும்புகின்றார்.
பாரளவும் ஓரடி வைத்து ஓரடியும் பாருடுத்த
நீரளவும் செல்ல நிமிர்ந்ததே –சூருருவின்
பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன்
நீயளவு கண்ட நெறி ———3–
பதவுரை
ஓர் அடி–ஒரு திருவடியை
பார் அளவும் வைத்து–பூமிப் பரப்பு உள்ள வரையிலும் போரும்படி வைக்க
ஓர் அடியும்–மற்றொரு திருவடியும்
பார் உடுத்த–இந்த அண்ட கடாஹத்தைச் சூழ்ந்துகொண்டிருக்கிற
நீர் அளவும்–ஆவரண ஜலம் வரையில்
செல்ல–செல்லும்படி
நிமிர்ந்தது–ஓங்கிற்று;
சூர் உருவின் பேய்–தெய்வ மகளான யசோதையின் வடிவு கொண்டு வந்த பூதனையை
அளவு கண்ட பெருமான்–முடித்த ஸ்வாமியியே!
நீ அளவு கண்ட நெறி–நீ உலகளந்த விதத்தை
அறிகிலேன்–அளவிட்டுக் காணவல்ல அறிவுடையேனல்லேன்.
சூருருவிற்பேயளவுகண்டபெருமான் என்பது ஸம்போதநம்(விளி);
தமது வல்லமையால் எம்பெருமானை அளவிட்டுக் காணவேணுமென்று நினைப்பவர்கள் பூதனை பட்டபாடுபடுவர்கள்
என்பது தோன்ற இந்த ஸம்போதநமிடுகின்றார். உன்னை முடிப்பதாக வந்த பூதனையை முடித்த பிரானே!
நீ மாவலிபக்கல் மூவடி மண் நீரேற்றுப் பெற்று ஒரு திருவடியைப் பூமிப் பரப்படங்கலும் மலரவைத்து,
மற்றொரு திருவடியை மேலில் அண்டத்தைச் சூழ்ந்த ஆவரண ஜலத்தளவும் செல்லவைத்து உலகளந்த விதத்தை யானறிகின்றிலே னென்கிறார்.
அளப்பதாவது-அளக்கிறவன் தான் நின்றவிடந்தவிர மற்றோரிடத்தில் மாறிக்காலிடுதல் என்று உலகத்திலே நாம் காண்கிறோம்.
ஓரிடத்திலேயே நின்றுகொண்டிருப்பதை அளப்பதாக யாரும் சொல்லமாட்டார்கள்;
ஆகவே, எம்பெருமான் உலகளந்தான் என்று பலரும் சொல்லுகிறார்களே இது எப்படி பொருந்தும்?
ஒரு திருவடிக்கும் கீழுலகமும் மற்றொரு திருவடிக்கு மேலுலகமும் சரிசமமாக இடமாகப் போந்துவிட்ட படியால்
மாறி மாறி அடியிடுவதற்கு அவகாசமேயில்லையாதலால் அளந்தானென்பது எங்ஙனே சேரும்? என்று ஒரு சமத்காரமாகப் பேசுவார் போல
“நீ அளவுகண்ட நெறி அறிகிலேன்” என்கிறார்.
இதனையே நம்மாழ்வார் திருவிருத்தத்தில்-
“கழல்தல மொன்றே நிலமுழுதாயிற்று ஒரு கழல் போய், நிழல்தர எல்லாவிசும்பும் நிறைந்தது,…..
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக் கின்றதே?” (58) என்ற பாசுரத்தினால் விரித்துரைத்தாரென்க.
அவ்விடத்து வியாக்கியானத்திலே-
”அளக்கைக்கு ஒரு அவகாசம் காண்கிறிலோம்; நின்ற நிலையிலே நின்றாரை அளந்தாரென்ன வொண்ணாதிறே;
அடிமாறியிடிலிறெ அளந்ததாவது; இவனிங்கு அளந்தானாக ஒன்றும் காண்கிறிலோமீ!” என்றுள்ள
பெரியவாச்சான் பிள்ளையின் ஸ்ரீஸூக்திகளும் இங்கு அநுஸந்திக்கத்தக்கன.
“நீ அளவுகண்ட நெறி அறிகிலேன்” என்பதற்கு மற்றும் சிலவகையாகவும் பொருள் கூறுவர். அளவு காண்கையாவது அளக்கை.
[சூருருவிற்பேயளவுகண்ட] “ சூருமணங்கும் தெய்வப் பெண்பெயர்” என்பது நிகண்டு,
பூதனை யென்னும் பேய்மகள் தெய்வப் பெண்ணுருவாக வந்தாளோ வென்னில்;
கண்ணபிரானுக்குத் தாயாகிய யசோதைபோல வடிவெடுத்து வந்தாளாகையாலும்,
அவ்வசோதை “தெய்வநங்கை” என்று குலசேகரப் பெருமாளால் கூறப்பட்டிருக்கையாலும் சூருருவின் பேய் என்னக் குறையில்லை யென்க.
அன்றி, பதினெண் தேவகணத்தில் பேயும் ஒன்றாகக் கூறப்பட்டிருத்தல் பற்றியும் “சூருருவின் பேய்” என்றாகவுமாம்.
பேயளவு காண்கையாவது அவளுடைய ஆயுளின் அளவைக்கண்டுவிடுதல்; கொல்லுதலைக் கூறியவாறு.
கண்ணபிரானைக் கொல்லுமாறு கம்ஸனாலேவப்பட்ட பூதனை யென்னும் பேய்ச்சி தன் முலையிலே விஷத்தைத் தடவிக்கொண்டு
யசோதைபோல வடிவெடுத்துத் திருவாய்ப்பாடிக்கு வந்து தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த ஸ்ரீ கிருஷ்ண சிசுவையெடுத்து
நஞ்சுதீற்றிய முலையை உண்ணக்கொடுக்க பேயென்றறிந்த பெருமான்
முலைப்பாலோடு அவளுயிரையும் உறிஞ்சி உண்டிட்டனனென்ற வரலாறு ப்ரஸித்தம்.
————–
[நெறிவாசல்.] எம்பெருமானுடைய இன்னருளால் ஞான விகாஸம் பெற்ற நானே
அவனுடைய ஸ்வரூபம் குணம் சேஷ்டிதம் முதலியவற்றை நன்கு அறியமாட்டாமல்,
கடலிலே நீஞ்சிக் கரையேறமாட்டாதே கிடந்து அலைவாரைப்போலே அலையா நிற்க,
தன் முயற்சியால் சிறிது ஞானம்பெற்ற சிவன் அவற்றை எங்ஙனே அறிய வல்லான்?
எனக்குத் தெரிந்தவற்றில் ஏகதேசமும் அறியமாட்டாத அவன் தன்னை ஸர்வஜ்ஞனாக நினைத்துக் கொண்டு
பகவத் விஷயத்தைத் தான் உபதேசிக்கவல்லவன் போலச் சில சிஷ்யர்களைச் சேர்த்துக் கொண்டு ஆலமரத்தடியிலே
உட்கார்ந்துகொண்டு ஆசார்யபதம் வஹித்து எம்பெருமானுடைய தன்மைகளை உபதேசிப்பதாக இழிந்துவிட்டானே!
இஃது என்ன அறிவுகேடு! என்று ருத்ரனைப் பரிஹஸித்துப்பேசுகிறார்
“அரன் அறிவானாம்” என்ற சொல்லின் காம்பீர்யத்தை நோக்குமின். நானே அறியமாட்டாதிருக்க அவனோ அறியப்போகிறான்;
தான் தெரிந்து கொள்ளவும் ப்ரஸக்தியில்லாதிருக்கப் பிறர்க்குப் போதகாசிரியனாக வீற்றிருந்தானே! என்று கர்ஹிக்கிறபடி.
நெறி வாசல் தானேயாய் நின்றானை யைந்து
பொறி வாசல் போர்க்கதவம் சாத்தி அறிவானாம்
ஆலமர நீழல் அறம் நால்வர்க்கு அன்றுரைத்த
ஆலமர் கண்டத் தரன் –4—
பதவுரை
அன்று–முன்பொரு காலத்தில்,
ஆலமரம் நீழல்–ஆலமரத்தின் நிழலிலே
(இருந்துகொண்டு)
நால்வர்க்கு–அகஸ்தியர்,புலஸ்தியர், தக்ஷர், மார்க்கண்டேயர் என்கிற நான்கு சிஷ்யர்களுக்கு
அறம் உரைத்த–தருமோபதேசம் செய்தவனும்
ஆலம் அமர் கண்டத்து–விஷத்தைக் கழுத்தளவிலே அடக்கிக் கொண்டுள்ளவனுமான
அரன்–சிவன்
ஜந்து பொறி வாசல்–செவி வாய் கண் மூக்கு உடல் என்கிற ஐந்து இந்திரியங்கள் செல்லும் வழியில்
போர் கதவம் சார்த்தி–வலிய கதவுகளையிட்டு அடைத்து [இந்திரியங்கள் பட்டிமேய வொண்ணாதபடி அவற்றை வென்று]
நெறி வாசல் தானே ஆய் நின்றானை–உபாயமும் உபேயமும் தானேயாயிருக்கிற எம்பெருமானை
அறிவான் ஆம்–அறிந்து விட்டதாகச் செருக்குற்றிருக்கிறானே! (இஃது என்ன அறிவு கேடு!.)
”அரன், நெறிவாசல் தானேயாய் நின்றானை அறிவானாம்” என்று அந்வயிக்க.
நெறி என்று வழிக்குப் பேராகையாலே பலனைப் பெறுவிக்கும் வழியாகிய உபாயத்தைச் சொன்னபடி.
வாசல் என்று புகுமிடத்துக்குப் பேராகையாலே இறுதியில் அடையத் தக்க பலனைச்சொல்லுகிறது;
ஆகவே, உபாயமும் உபேயமும் தானேயாயிருக்கிற எம்பெருமானை என்றதாயிற்று அன்றி,
நெறி –ஸ்வரூபத்துக்கு ஏற்ற, வாசல்-உபாயம், தானேயாய் நிற்பவனை என்று முரைக்கலாம்.
சிவன் ஒரு காலத்திலே அகஸ்தியர் புலஸ்தியர் தக்ஷர் மார்க்கண்டேயர் என்கிற நான்கு முனிவர்களைச் சிஷ்யர்களாக அமைத்துக் கொண்டு
ஆலமரத்தடியிலே ஸ்ரீமந்நாராயண தத்வோபதேசம் செய்தனனென்று நூல்கள் கூறும்;
திருமழிசையாழ்வாரும் நான்முகன் திருவந்தாதியிலே-
”ஆலநிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு, மேலையுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன்-
ஞால மளந்தானை ஆழிக்கிடந்தானை ஆல்மேல், வளர்ந்தானைத் தான் வணங்குமாறு” (17.) என்ற பாசுரத்தினால்
இக்கதையை அநுஸந்தித்தமை காண்க.
ப்ரஹ்மஜ்ஞாநமில்லாத பாலாகி யென்பவன் ப்ரஹ்ம ஜ்ஞாநமுடையனான அஜாதசத்ரு வென்பவனுக்கு
ப்ரஹ்ம ஜ்ஞாநத்தை உபதேசிக்கத் தொடங்கியது போலும் சிவனது உபதேசமும் என்ற இழிவுதோன்ற “அறிவானாம்” என்று பழித்துக் கூறுகின்றார்.
[ “ஐந்து பொறிவாசல் போர்க்கதவம் சார்த்தி”]
ஒரு வாசலை அடைக்கத் தொடங்கினால் மற்றொரு வாசற்கதவு திறந்துகொள்ளும்படியாயுள்ள பஞ்சேந்திரியங்களாகிற
யந்த்ரம் போன்ற ஐந்து வாசல்களையும் அடைத்தாலன்றி பகவத் தத்துவத்தை உபதேசிக்க வொண்ணாதென்பதும்,
அந்த வாசற்கதவுகளை அடைப்பது மிகவும் அருமை என்பதும் இவ்வாக்கியத்தில் தோன்றும் ஐந்து பொறி வாசற்கதவுகளை
அடைக்கமாட்டாத் ருத்ரன் எங்ஙனே அறிவான்? என்றவாறு.
போர்க்கதவம் என்றது- அடைக்கத் தொடங்குகிறவர்களின் முகத்திலே அறைகிற கதவு என்றபடியாய்;
எப்படிப்பட்டவர்களையும் விஷய ப்ரவணராக்கவல்ல இந்திரியங்களின் வன்மையைக் கூறியவாறு.
எம்பெருமான் திருப்பாற்கடலைக் கடையும்போது அதனின்றும் தோன்றிய விஷத்தை ஸ்ரீமந்நாராயணனுடைய கட்டளையாலே
சிவன் தான் வாங்கி உண்ண அதனையறிந்த பார்வதி அஞ்சி அவ்விஷம் கழுத்துக்குகீழே இறங்காதபடி
அவனது கழுத்தை இறுகப் பிடித்துக் கொள்ள விஷம் கழுத்தளவிலே நின்றுவிட்டது;
அதனால் சிவன் கறுத்த கழுத்தை யுடையனாய் காலகண்டனென்று பேர்பெற்றனன் என்ற வரலாறு தோன்ற “ஆலமமர்கண்டத்தான்” என்றார்.
ஆலம்-வஷம்; ஹாலாஹலமென்ற வடசொற் சிதைவு என்பர். சிவன் தனது தமோகுணத்துக்குத் தக்க செயலைச் செய்ய வல்லவனே யன்றி
ஸாத்விகர் செய்யும் செயல் அவனால் செய்யமுடியா தென்பதும் இவ்விசேஷணத்தின் கருத்தாம்.
ஹர: என்ற வடசொல் அரனெனத் திரிந்தது; ஸம்ஹார கர்த்தா என்கை
————–
[அரன்நாரணன்நாமம்] கீழ்ப்பாட்டில் சிவனுடைய ஒருசெய்தியை எடுத்துப் பேசின ஆழ்வார்
“அரன் அறிவானாம்” [சிவனுக்கு என்ன தெரியும்?] என்று இழித்துப் பேசவே அதனைக் கேட்ட சிலர்
“நாட்டங்கலும் ஈச்வரனென்று கொண்டாடப்படுகிற அச்சிவபெருமானை இப்படி நீ ஏசிப் பேசலாமோ?
அவன் காற்கீழே பலரும் தலையை மடுத்து ஏத்தியிரைஞ்சக் காண்கிறோமே, அவன் பரதெய்வமன்றோ?” என்று சொல்ல,
அது கேட்ட ஆழ்வார்-ஸ்ரீமந்நாராயணனே பரதேவதை யென்பதும் ருத்ரன் அங்ஙனல்லன் என்பதும்
இருவருடையவும் நாமம் ரூபம், வாஹனம், தொழில் முதலியவற்றால் நன்கு விளங்கக் காணலாமென்று
அவற்றை யெடுத்துரைத்துக் காட்டுகிறாரிதில்–
அரன் நாரணன் நாமம் ஆன் விடை புள்ளூர்தி
உரை நூல் மறையுறையும் கோயில் வரை நீர்
கருமம் அழிப்பு அளிப்புக் கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி யொன்று —5-
பதவுரை
நாமம்–ஒருவனுடைய பெயர்
அரன்–எல்லாவற்றையும் அழிப்பதையே தொழிலாக வுடையவனென்று காட்டுகிற ஹரனென்பது;
(மற்றொரு மூர்த்தியின் திருநாமமோ வென்னில்)
நாரணன்–(ஸர்வ வ்யாபகனென்றும் ரக்ஷகனெனெறும் காட்டுகிற) நாராயணனென்பது
ஊர்தி–ஒருவனுடைய வாஹனம்
ஆன் விடை–மூடத்தனத்துக்கு உதாரணமாகக் காட்டப்படுகிற எருதாம்;
(மற்றொரு மூர்த்தியின் வாஹனமோ வென்னில்)
புள்–(வேத மூர்த்தியான) கருடப் பறவையாகும்;
உரை–ஒருவனைப் பற்றிச் சொல்லுகிற பிரமாணம்
நூல்–மனிசரால் ஆக்கப்பட்ட ஆகமம்;
(மற்றொரு மூர்த்தியைப்பற்றிச் சொல்லுகிற பிரமாணமோ வென்னில்)
மறை–(ஸ்வயம் வ்யக்தமான) வேதமாகும்;
உறையும் கோவில்–ஒருவனுடைய வாஸஸ்தானம்
வரை–(கடினத்தன்மையுள்ள) கைலாசமலையாம்;
(மற்றொரு மூர்த்தியின் இருப்பிடமோ வென்னில்)
நீர்–(அவனுடைய நீர்மைக்குத் தகுதியான) திருப்பாற்கடலாம்;
கருமம்–ஒருவனுடைய தொழில்
அழிப்பு–(கல்நெஞ்சனென்று சொல்லும்படியான) ஸம்ஹாரத்தொழிலாம்;
(மற்றொரு மூர்த்தியின் காரியமோ வென்னில்)
அளிப்பு–(இன்னருளுக்குரிய) ரக்ஷணத் தொழிலாம்;
கையது–ஒருவனுடைய கையிலுள்ள அயுதம்.
வேல்–(கொலைத் தொழிலுக்கு ஏற்ற) சூலாயுதம்;
(மற்றொரு மூர்த்தியின் ஆயுதமோ வென்னில்)
நேமி–அருளார் திருச்சக்கரம்
உருவம்–வடிவம்
எரி–(கண்கொண்டு காண வொண்ணாதபடி) காலாக்நி போன்றதாம்;
(மற்றொரு மூர்த்தியின் திருமேனியோ வென்னில்
கார்–(கண்ட போதே தாபங்களெல்லாம் தீரும்படியான) காளமேகவுருவாம்;
ஒன்று–சிவனாகிய ஒருவன்
மேனி–(ஸ்ரீமந் நாராயணனுக்கு) சரீர பூதன்;
[ஸ்ரீமந்நாராயண மூர்த்தியோ அந்த சிவனுமுட்பட எல்லாவற்றையும் சரீரமாக வுடையவனென்பது ஸித்தம்]
இருவருடைய பெயரையும் நோக்குமிடத்து சிவன்பெயர் அரனென்றும் விஷ்ணுவின் பெயர் நாராயணனென்றும் ப்ரசித்தமாகவுள்ளன;
அரனென்றால் ஹரிப்பவன் எல்லாவற்றையும் ஒழிப்பவன் என்று பொருள்படும்;
நாராயணனென்றால், நாரங்களாகிய நித்ய வஸ்துக்களெல்லாவற்றிலும் உறைந்திருந்து அவற்றை நோக்குமவன் என்று பொருள்படும்;
ஆகவே, ஸர்வ ரக்ஷகன் பரதேவதையாயிருக்கத் தகுமோ அன்றி ஸர்வபக்ஷகன் பரதேவதையாயிருக்கத் தகுமோ
என்பதை நீங்களே ஆராயலாம் என்றாராயிற்று.
இப்படியே இருவருடைய வாஹனங்களையும் நோக்குங்கால், ‘அடா மாடே!’ என்று மூர்க்கரை நிந்திப்பதற்கு
த்ருஷ்டாந்தமாகக் கொள்ளப்படுகிற எருதை வாஹனமாகவுடையவன் அரன்;
“ஸுபர்ணேஸி கருத்மாந்” என்ற வேத வாக்கியத்தாலும்
“வேதாத்மா விஹகேச்வர:” என்ற ஆளவந்தார் ஸ்ரீஸூக்தியாலும்,
“சிரஞ்சேதனன் விழிதேகம் சிறையின் சினைபதம் கந் தரம் தோள்களூரு வடிவம் பெயரெசுர்சாமமுமாம்…..
அரங்கர்தமூர்திச் சுவணனுக்கே” என்ற ஐயங்கார் பாசுரத்தாலும்
வேத ஸ்வரூபியாகப் பிரதிபாதிக்கப்பட்ட பெரிய திருவடி யென்னும் கருடாழ்வானை வாஹனமாகவுடையவன் ஸ்ரீமந்நாராயணன்.
இனி இருவரையும் பற்றிச் சொல்லுகிற பிரமாணங்களை ஆராய்ந்தால்,
வேதவிருத்தமான பொருள்களைச் சொல்லுமதாயும் ராஜஸதாமஸ புருஷர்களால் செய்யப்பட்டதாயுமுள்ள
சைவாகமம் அரனைப்பற்றிச் சொல்லுவது;
ஒருவராலும் செய்யப்படாமல் அநாதியாய் எவ்வகையான தோஷமுமற்று உண்மைப் பொருளையே உரைக்கின்ற வேதம்
ஸ்ரீமந்நாராயணனைப் பிரதிபாதிக்கும் பிரமாணம்.
இனி இருவருடைய இருப்பிடங்களையும் நோக்குங்கால்,
தனது நெஞ்சின் கடினத் தன்மைக்கு ஏற்றவாறு கடினமான கைலாசமலை அரனுக்கு உறைவிடம்,
தனது திருவுள்ள நீர்மைக்குத் தக்கபடி நீர்மையே வடிவான திருப்பாற்கடல் ஸ்ரீம்ந்நாராயணனுக்கு உறைவிடம்.
இதற்குத் தக்கபடி அழித்தல் தொழில் அரனது; காத்தல் தொழில் நாராயணனது.
அதற்குத் தக்கபடி கொலைத் தொழிலுக்கு ஏற்ற முத்தலைச் சூலம் அரனது,
*அருளார் திருச்சக்கர மென்றே புகழ்பெற்று உலகங்களை யெல்லாம் பாதுகாக்குமாறுள்ள சக்கரப்படை நாராயணனது.
இவை யெல்லாம் ஒரு புறமிருக்கட்டும்; “ரூபமேவாஸ்ய ஏதந்மஹிமாநம் வ்யாசஷ்டே”
[உருவமே வ்யக்தியின் பெருமையைத் தெரிவிக்கும்] என்ற வேத வாக்கியத்தின்படி
இருவருடையவும் உருவத்தை நோக்குவோமாயின், கண்ணெடுத்துப் பார்க்க முடியாதபடி காலாக்நிபோலேயிருக்கும் அரனுருவம்;
கண்டார் கண்குளிரும்படியான காளமேகம்போலே யிருக்கும் செல்வநாரணன் திருவுருவம்.
“ஒன்று செந்தீ ஒன்று மா கடலுருவம்” என்றார் திருமங்கையாழ்வாரும் திருநெடுந்தாண்டகத்திலே.
இப்படி ஒன்றுக்கொன்று மாறுபட்டுக் கிடக்கிற இரண்டு பொருள்களில் “அங்கந்யந்யா தேவதா:” இத்யாதி
உபநிஷத் வாக்கியங்களின்படி அரன் நாராயணனுக்கு அங்கமாயும் நாராயணன் அங்கியாயு மிருப்பர்கள்.
சரீரி தலைமையானதோ? சரீரம் தலைமையானதோ? ஆராய்ந்து சொல்லுங்கள் என்றவாறு
“மேனி ஒன்று” என்று அரனுடைய சரீரத் தன்மை சொன்னது போல நாராயணனுடைய சரீரித் தன்மை மூலத்தில்
சொல்லப்படவில்லையாயினும், ஒன்று சரீர மென்றால் மற்றொன்று சரீரி யென்பது தன்னடையே விளங்குமிறே.
அந்தர்யாமிப்ராஹ்மண மென்னும் வேதப்பகுதியில் ஸ்ரீமந்நாராயணனே ஸர்வசரீரி யென்பது பன்னியுரைக்கப்பட்டுள்ளமை காண்க.
“உருவமெரி கார்மேனியொன்று” என்பதை இரண்டு வாக்கியமாகக் கொள்ளுதலின்றியே ஏகவாக்கியமாகவே கொண்டு,
இருவருடையவும் உருவத்தைப் பார்த்தால், ஒன்று எரிமேனி, மற்றொன்று கார்மேனி என்பதாக உரைத்தலும் ஒக்கும்.
————
[ஒன்றுமறந்தறியேன்.] கீழ் நான்காம் பாட்டில் “அரன் அறிவானாம்” என்று சிவபிரானை மாத்திரம் இழித்துக் கூறி விட்டீரே;
அவனுக்கு பகவத் விஷயமே தெரியாதென்றும், தெரிந்தவனை போலப் பாவித்து சிஷ்யர்களுக்கு உபதேசிக்கவும்
தொடங்கிவிட்டானே யென்று ஏசியும் பேசினிரே; அவனைக் காட்டிலும் நீர் பகவத் விஷயஜ்ஞானத்தில் சிறந்தவரோ?
நீர் தாம் எம்பெருமானை யறிந்து பிறர்க்கு உபதேசிக்க வல்லீரோ? பிரபந்த முகத்தால் உணர்த்தத் தொடங்கிவிட்டீரே,
இஃது எங்ஙனே? என்று ஆழ்வாரை நோக்கி ஒரு கேள்வி பிறக்க
ஆழ்வார் அதற்கு உத்தரம் அருளிச் செய்கிறது போலே யிருக்கிறது இப்பாட்டு.
அந்த அரனுக்கும் எனக்கும் எவ்வளவோ வாசியுண்டு; அவன் ஸத்வகுணம் தலையெடுத்தபோது எம்பெருமானது
திருவருளாலன்றி ஸ்வப்ராயத்நத்தாலெ அப்பெருமானது ஸ்வரூபஸ்வபாவங்களைச் சிறிது அறிந்து பரமஸாத்விகன்போல இருப்பன்;
அடுத்த ஷணத்திலேயே ரஜோ குணமும் தமோ குணமும் தலையெடுக்கப் பெற்று
‘என்னைக் காட்டிலும் வேறொரு ஈச்வரன் உண்டோ? நானே ஸர்வேச்வரன்’ என்று செருக்குக் கொள்வன்;
அவனை போலவோ நான்? நான் கர்ப்பவாஸம் செய்யும்போதே பிடித்து அப்பெருமானால் நிர்ஹேதுகமாகக் கடாக்ஷிக்கப் பெற்று,
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை யெல்லாம் அவன் தானே காட்டக் கண்டு,
“ஜாயமாநம் ஹி புருஷம்யம் பச்யேத் மதுஸூதந:- ஸாத்விகஸ்ஸது விஜ்ஞேய: ஸவை மோக்ஷார்த்த சிந்தக:”-
[கர்ப்பத்திலேயே எம்பெருமான் எவனைக் கடாஷித் தருள்வனொ அவனே ஸாத்விகன்; அவனே முமுக்ஷூவாவான்] என்கிறபடியே
சித்த ஸாத்விகனாய் அப்பெருமானுடைய திருக்கல்யாண குணம் முதலியவற்றை ஸ்வயம் அநுபவிப்பதும்
பிறர்க்கு எடுத்து உபதேசிப்பதுமாக இவற்றையே காலக்ஷேபமாகக் கொண்டிருந்தவன்;
பெரும்பாலோர் பகவானை மறந்திருக்கும்படியான கர்ப்பவாஸ காலத்திலுங்கூட அவனை மறவாது வாழ்த்திக் கொண்டிருந்த நான்
இனி ஒரு காலாகிலும் மறக்க வழியுண்டோ? அரனுக்குப்போலே எனக்கும் முக்குணங்களும் மாறி மாறி வருமோ?
ஸத்வகுணகார்யமே நிலை நின்றிருக்கப் பெற்ற வெனக்கு
அவனை உணர்தலும் உணர்ந்தவற்றைப் பிறர்க்கு உபதேசித்தலும் உசிதமே என்றாராயிற்று.
ஓன்று மறந்து அறியேன் ஓதம் நீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ வேழைகாள் -அன்று
கருவரங்கத் துட்கிடந்து கை தொழுதேன் கண்டேன்
திருவரங்க மேயான் திசை –6-
பதவுரை
அன்று–அறிவு நடையாடுகைக்கு யோக்யதை யில்லாத காலத்திலே
கரு அரங்கத்துள் கிடந்து–கர்ப்பப்பையாகிற ஸ்தானத்திலே இருந்துகொண்டு,
திருஅரங்க மேயான்–ஸ்ரீரங்கத்திலே வந்து பள்ளி கொண்டிரா நின்ற பெரிய பெருமாளுடைய
திசை–ஸ்வபாவங்களை யெல்லாம்
கண்டேன்–ஸாக்ஷாத் கரித்தவனாய்
கை தொழுதேன்–அஞ்ஜலியும் செய்தவனாகிய நான்
ஓதம் நீர் வண்ணனை–வெள்ளம் பரந்த ஸமுத்ர ஜலம் போலே குளிர்ந்த வடிவழகுள்ள அப் பெருமானை.
ஒன்றும் மறந்து அறியேன்-க்ஷண காலமும் மறந்தறிய மாட்டேன்:
ஏழைகாள்–(விஷயாந்தரங்களை விரும்பித் திரிகிற) அறிவு கேடர்களே!
நான்–(அவனை மறக்கக் கூடிய கர்ப்ப ஸ்தானத்திருக்கச் செய்தேயும் மறவாதிருந்த) தான்.
இன்று–(மறக்க முடியாதபடி ஞான விகாஸம் பெற்ற இக் காலத்திலே)
மறப்பனே–எப்படி மறப்பேன் [மறக்கவே மாட்டேன்.]
ஓதநீர் வண்ணனை என்ற சொல்லாற்றலால்- அவனுடைய வடிவழகு நெஞ்சிலே ஊன்றப் பெற்றவர்கட்கு
அவனை மறப்பது ஒருநாளும் ஸம்பாவிதமல்ல என்பது பெறப்படும்.
கர்ப்பவாஸ காலத்தில் வந்து ஸேவை ஸாதித்தது மாத்திரமே யல்லாமல் எப்போதும் கடாக்ஷித்து விஷயீகரிப்பதற்காகவே
திருவரங்கம் முதலான திருப்பதிகளிலே ஸந்நிதனாயிரா நின்றா னென்பது தோன்றத் திருவரங்கமேயான் என்கிறார்.
மேயான் – மேவியிருப்பவன் திருவுள்ளமுவந்து எழுந்தருளி யிருப்பவன்.
இப்பாட்டின் முடிவிலுள்ள திசை என்னும் பதத்திற்கு ‘திக்கு’ என்னும் பொருளாயினும்
‘தன்மை’ என்னும் பொருளில் அஃது இங்குப் பிரயோகிக்கப்பட்டது. இப்பிரயோகம் வட நூல்களிலே விசேஷமாகவுண்டு.
இதில் மூன்றாம் மடியில் ஒரு சங்கை பிறக்கும்; அதாவது –பொய்கையிலே ஒரு செங்கமலப் பூவிலே திருவவதரித்ததனால்
அயோநிஜராகிய இவ்வாழ்வார்க்கு கர்ப்பவாஸ மென்பது கிடையாதே; அப்படி யிருக்க கருவரங்கத்துள் கிடந்து” என்று
இவர்தாம் எங்ஙனே அருளிச் செய்கிறார் என்று;
இதற்கு உத்தரமாவது- “கருவரங்கத்துள் கிடந்து” என்ற விதனால், *தீண்டாவழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறி தசையுமாய்
வேண்டா நாற்றம்மிக்கிருக்கிற கர்ப்பத்தும்பையில் நின்றும் ஆழ்வார் பிறந்தாரென்று கொள்ளவேண்டிய அவசியம் யாதுமில்லை;
எவ்விடத்தில் நின்று அவதரித்தாரோ அவ்விடமே கர்ப்பஸ்தாநமாகும்;
இந்தவாழ்வாருடைய வாழித்திருநாமத்தில் “வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே” என்றிருப்பதும் இவ்வர்த்தத்தை வற்புறுத்தும்
‘நான் இவ்விருள் தருமா ஞாலத்தில் வந்து தோன்றுவதற்கு முன்னமே எம்பெருமானுடைய கடாக்ஷம் பெற்றவன்’ என்று
சொல்லுவதே இங்கு விலக்ஷிதம் “அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்” என்றாற்போலுமாம்.
“கருவரங்கத்துள்” என்ற விடத்து அரங்கம் என்னும்சொல் ரங்கம் என்ற வடசொல்லின் விகாரம்;
அச்சொல் –நர்தனம் செய்யுமிடம், போர் செய்யுமிடம் என்று சிறப்பிடப் பொருளதாயினும்
இங்கே ‘இடம்’ என்னும் பொதுப் பொருளிலே நிற்கிறது …..
————–
[திசையும்.] ஸ்ரீமந்நாரயணனே பரதேவதையாகில்,
பலரும் பரதேவதை யென்று மயங்கும் படியான பல பல தேவதைகள் ஏற்படுவானேன்?
அந்தத் தெய்வங்கள் தாம் விசித்திரமான் செயல்களைச் செய்ய வல்லமை பெற்றிருப்பானேன்?
என்றொரு கேள்வி உண்டாக எம்பெருமான் தானே, தன்னை உகவாதவர்கள் தன்னை வந்து கிட்டாமல்
தேவதாந்தரங்களைப் பணிந்து க்ஷூத்ர பலன்களைப் பெற்று அகன்று போவதற்காகச் செய்து வைத்த
மயக்குக்கள் காண்மின் இவை-என்று மறுமொழி கூறுகின்றார் –
திசையும் திசையுறு தெய்வமும் தெய்வத்
திசையும் கருமங்கள் எல்லாம் அசைவில் சீர்க்
கண்ணன் நெடுமால் கடல் கடைந்த காரோத
வண்ணன் படைத்த மயக்கு -7–
பதவுரை
திசையும்–திக்குக்களோடு கூடிய உலகங்களும்
திசைஉறு தெய்வமும்–அந்தந்த திசைகளிலே வாழும் தேவதைகளும்
தெய்வத்து இசையும் கருமங்கள்–அந்தந்த தேவதைகளுக்கு ஏற்ற (ஸ்ருஷ்டி முதலிய) வியாபாரங்களும்
எல்லாம்–ஆகிய இவையெல்லாம்,
அசைவு இல் சீர்–கேடில்லாத [நித்யமான] குணங்களை யுடைய
கண்ணன்–ஸ்ரீகிருஷ்ணனாயவதரித்த
நெடு மால்–மிகப் பெருமையை யுடையவனாய்
கடல் கடைந்த–(தன்பெருமையைப் பாராது சரணா கதர்களுக்காக உடம்பு நோவக்) கடல் கடைந்தவனாய்
கார் ஓதம் வண்ணன்–மேகம் போலவும் கடல் போலவும் குளிர்ந்த வடிவை யுடையவனான எம்பெருமான்
படைத்த–(தன்னிடம் வந்து பணிய மாட்டா தவர்களை அகற்றுகைக்காக உண்டாக்கி வைத்த
மயக்கு–அறிவை மயக்கும் பொருள்களாம்.
சர்க்கரை, கற்கண்டு, த்ராக்ஷை முதலிய சிறந்த வஸ்துக்களை வாங்கி உண்டு களிக்க இயற்றி யில்லாத ஜனங்களுக்காக
உப்பு, புளி முதலிய சிறு பொருள்களைக் கடை பரப்பி வைத்த மாத்திரத்திலேயே எல்லாப் பொருள்களுக்கும்
கடைகள் ஏற்பட்டிருக்கின்றன வென்று எல்லாம் சிறந்த பொருள்களாய் விடுமோ?
செல்வம் மிகுந்தவர்களுக்காக விலையுயர்ந்த உண்மையான ரத்னங்கள் ஏற்பட்டிருப்பது போல
ஏழைகளுக்காக அற்பவிலையுள்ள க்ருத்ரிமங்களான ரத்னங்களும் ஏற்பட்டிருக்கின்றன்;
இவை தம்மில் வாழ்வின்றிக்கே யொழியுமோ? சிறந்த வஸ்துக்களை அநுபவிக்க யோக்யதை யில்லாதவர்களை
மயக்குவதற்கு ஸாமாந்ய வஸ்துக்கள் எப்படி ஏற்பட்டனவோ,
அப்படியே பரமவிலக்ஷணனான திருமாலை அநுபவித்து வாழமாட்டாத க்ஷூத்ர ஜநங்களை மயக்குவதற்காகத்
திசையும் திசையுறு தெய்வமும் தெய்வத் திசையுங் கருமங்களுமெல்லாம் ஏற்படுத்தப்பட்டனவென்று கொள்ளவேணுமென்கிறார்.
“திசையும்” என்றது பல பல வுலகங்களைச் சொன்னபடி.
எம்பெருமா னொருவனையே தொழுது இறைஞ்சுதற்கு உரிய உலகமொன்றே யிருக்கலாமாயினும்,
‘இது சிவஸாலோக்யம் பெறும் உலகம்’ ‘இது இந்த்ரஸாலோக்யம் பெறும் உலகம்’ என்றிப்படி
பல பல ஸ்தானங்களைக் கற்பித்தது காரோதவண்ணன் படைத்த மயக்கு என்றபடி.
திசையுரு தெய்வமும்- இன்ன ஸ்தானத்திற்கு இன்னான் கடவன், இன்ன ஸ்தானத்திற்கு இன்னான் கடவன் என்று
ஒவ்வொரு ஸ்தானத்திலும் நிர்வாஹகமாக ஒவ்வொரு தேவதையை ஏற்படுத்தினதும் காரோத வண்ணன் படைத்த மயக்கு.
தெய்வத்து இசையும் கருமங்கள்- நான்முகன் படைப்புத்தொழிலை நிர்வஹிக்கக்கடவன்;
சிவபிரான் ஸம்ஹாரத் தொழிலை நிர்வஹிக்கக்கடவன்;
இந்திரன் தேவதைகளை மெய்க்காட்டுக்கொள்ளுந் தொழிலை நோக்கக்கடவன்;
யமன் உயிர் நீத்துந் தொழிலை நடத்தக் கடவன் என்றிப்படி அவ்வத் தெய்வங்கட்கு இசைந்தவாறாகத் தொழில்களை
வகுத்திருப்பதும் காரோதவண்ணன் படைத்த மயக்கு.
திரிபுர மூன்றெரித்தல், காமதஹநம், வ்ருத்ராஸுரவதம் முதலிய அரிய பெரிய செயல்களை இங்குக் கொள்ளவுமாம்.
கடல் கடைந்து அமுதங் கொண்ட காலத்திலே தேவாஸுரச்ம்வாதம் ப்ரஸங்கிக்க,
எம்பெருமான் மோஹிநி யுருவம் பூண்டு உகவாதாரை மயக்கினது போலவே இவையும் மயக்காக உண்டு பண்ணி
வைக்கப்பட்டவை என்கிற உட்பொருளுந் தோன்றக் “ கடல் கடைந்த காரோதவண்ணன் படைத்த மயக்கு” என்றருளிச் செய்தாரென்க.
கடைந்த கடலிலே அமுதம் விஷம் யானை குதிரை சந்திரன் கல்பவ்ருக்ஷம் அப்ஸரஸ் முதலிய பல விசித்திரப் பொருள்களை
படைத்தருளின பெருமான் இவை யித்தனையும் செய்யவல்லவனே யென்பதும் மூதலிக்கப்பட்டதாம்.
மயக்கு என்றது- மயங்கச் செய்யும் பொருள் என்றபடி;
‘விளக்கு’ என்றால் விளங்கச் செய்யும் பொருள் என்று பொருள் யிடுதல்போல.
———
[மயங்கவலம்புரி.] எம்பெருமான் தன்னை யுகவாதாரை அகற்றுகைக்காகச் சில மயக்குப் பொருள்களை
ஏற்படுத்தினனென்றார் கீழ்ப்பாட்டில் ஸர்வரக்ஷகனான எம்பெருமானுக்கு இது தகுதியோ? என்று ஒரு சங்கை தோன்ற,
ஆச்ரிதர்களை எவ்விதத்திலும் பரிந்து பாதுகாப்பதும் தன்னை மதியாத ஆஸுரப்ரக்ருதிகளை விலக்கி விடுதலும்
அப்பெருமானுடைய காரியம்; துஷ்டநிக்ரஹமும் சிஷ்ட பரிபாலநமும் செய்வதே ஸர்வரக்ஷகத்வமாதலால்
அங்ஙனே செய்தருள்கின்ற எம்பெருமானுடைய ஸர்வரக்ஷகத்வ குணத்திற்கு யாதொரு கேடுமில்லை,
மேன்மெலும் விளக்கமேயுள்ளது என்று ஸமாதான முரைப்பவர் போல இப் பாட்டு அருளிச் செய்கிறார்.
மயங்க வலம்புரி வாய் வைத்து வானத்
தியங்கு மெரி கதிரோன் தன்னை முயங்க மருள்
தோராழி யால் மறைத்த தென் நீ திரு மாலே
போராழிக் கையால் பொருது –8-
பதவுரை
திருமாலே நீ–லஷ்மீநாதனே!, நீ
முயங்கு அமருள்–(எண்ணிறந்த மன்னர்கள்) நெருங்கிக் கிடந்த பாரதப் போர்க் களத்திலே
மயங்க–எதிரிகள் அஞ்சி அறிவு கலங்கும்படியாக்
வலம்புரி–ஸ்ரீபாஞ்சஜந்ய மென்னும் திருச்சங்கை
வாய் வைத்து–தனது திருப்பவளத்திலே வைத்து ஊதி
போர் ஆழிக் கையால்–போர் செய்வதற்கு உபகரணமான திருவாழியை ஏந்தின கையாலே
பொருது–(பீஷ்மர் முதலானவர்களைத் துரத்தி) யுத்தம் செய்து
வானத்து இயங்கும் எறி கதிரோனை–ஆகாயத்தில் ஸஞ்சரித்துக் கொண்டே யிருக்கிற ஸூர்யனை
தேர் ஆழியால்–சக்கராயுதத்தினால்
மறைத்தது என்–மறைத்தது எதுக்காக?
மயங்க வலம்புரி வாய்வைத்தது பகவத்கீதையின் முதலத்தியாயத்திற் சொல்லிற்று எறிகதிரோன் தன்னைத்தேராழியால் மறைத்த வரலாறு:-
பாரதப்போரில் பதின்மூன்றாநாளிலே அர்ஜுநனது மைந்தனான அபிமந்யுவைத் துரியோதநனது உடன் பிறந்தாளின்
கணவனான ஸைந்தவன் கொன்றுவிட, அங்ஙனம் தன் மகனைக்கொன்ற ஜயத்ரதனை மற்றைநாள் ஸூர்யாஸ்தமனத்திற்குள்
தான் கொல்லாவிடில் தீயில்குதித்து உயிர் துறப்பதாக அர்ஜுநன் சபதஞ்செய்ய,
அதனையறிந்த பகைவர்கள் பதினாலாநாள் பகல் முழுவதும் ஜயத்ரதனை வெளிப்படுத்தாமல் சேனையின் நடுவே
நிலவறையில் மறைத்துவைத்திருக்க, அர்ஜுநனுடைய சபதம் பழுதாய்விடுமே என்று சிந்தித்துக் கண்ணபிரான்
ஸூர்யனை அஸ்தமிப்பதற்குச் சில நாழிகைக்கு முன்னமே தனது திருவாழியினால் மறைத்துவிட,
அப்பொழுது எங்கும் இருள் பரவியதனால் அர்ஜுநன் தன் உறுதியின்படி அக்நிப்ரவேசம் செய்யப்புக,
அதனைக் களிப்போடு காண்பதற்குத் துரியோதனாதிகளுடனே ஸைந்தவன் வந்து எதிர்நிற்க,
அப்போது கண்ணபிரான் திருவாழியை வாங்கிவிடவே பகலாயிருந்ததனால் உடனே அர்ஜுநன் ஜயத்ரதனைத் தலை துணித்தனன் என்பதாம்–
“நாழிகை கூறிட்டுக் காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே நாழிகை போகப் படை பொருதவன் தேவகிதன் சிறுவன்” என்றார் பெரியாழ்வாரும்.
இவ்வரலாற்றில் ஒரு சங்கை பிறப்பதுண்டு;- திருமாலின் சக்கராயுதத்தின் ஒளியானது ஸூர்யனுடைய ஒளியிற் காட்டிலும்
பலகோடி நூறாயிரம் மடங்கு மேம்பட்டதென்று சொல்லியிருக்க, கோடி ஸூர்யப்ரகாசனான அத்திருவாழியினாலே
இருளை உண்டாக்கினதாக வுரைப்பது எங்ஙனே? என்று. இதற்குப் பலர் பலவகையான ஸமாதானங்கள் கூறுவர்;
ஒரு ஸமயவிசேஷத்தில் திருவாழியின் பிரகாசம் சிறிதுபோது மழுங்கிப் போகக் கடவதென்று முக்கிய ஸமாதானமாகக் கூறுவதுண்டு.
போராழிக் கையால் பொருது” என்ற நான்காமடியில்- பாரதப்போரில் கண்ணபிரான் பீஷ்மரைக் கொல்வதாகத்
திருவாழியைக் கையிலே கொண்டு தேரில் நின்றும் கீழிறங்கித் துரத்திக்கொண்டு சென்ற கதை அநுஸந்திக்கத்தக்கது.
[மஹாபாரதம்-பீஷ்மபர்வம்-ஐம்பத்தொன்பதா மத்தியாயத்தில் விரிவு காண்க]
மயங்கவலம்புரி வாய்வைத்ததும் எறிகதிரோன்தன்னை ஆழியால் மறைத்ததும் போராழிக்கையால் பொருந்தும் ஏதுக்காக?
என்று ஆழ்வார் எம்பெருமானைக் கேள்வி கேட்கிறார் இப்பாட்டால்.
‘போரில் நான் ஆயுதமெடுப்பதில்லை என்று பிரதிஜ்ஞைசெய்து வைத்து அதற்கு மாறாக்க் காரியஞ் செய்தது
எல்லாரோடும் ஒரு நிகராகவுள்ள உனது உறவுக்குத் தகுமோ? ஸத்யஸங்கல்பனான உன் இருப்புக்குத் தகுமோ?
உன் பெருமைக்குத் தகுமோ? இவை யொன்றையும் பாராமல் நீ செய்த செயல்கள் எதற்காக? என்ற இக் கேள்வியானது-
ஆச்சரிதர்களான பாண்டவர்களிடத்திலே நீ கொண்டிருந்த பக்ஷபாதமே யன்றோ இத்தனையும் செய்வித்தது என்று
வெளியிடுகிற முகத்தால் அவனுடைய ஸெளஹார்த்ய குணத்தை வெளியிடுவதில் நோக்குடைத்தென்க.
முயங்கு அமர் என்றது பலபேர்கள் திரண்டு நெருங்கியிருக்கும் போர்களமென்றபடி.
போர்புரிய வந்தவர்களும் போர்காண வந்தவர்களுமாகத் திரண்ட திரளுக்கு எல்லையில்லையிறே
தேராழியால் மறைத்தது’ என்கிறாரே, தேர்ச்சக்கரத்தை யெடுத்தோ ஸூர்யனை மறைத்தது? என்று சிலர் சங்கிப்பர்;
அன்று; தன் திவ்யாயுதமான சக்கரத்தைக் கொண்டே மறைத்தது;
சக்கரம் தேருக்கு உறுப்பாயிருக்குந் தன்மையுடையதாதலால் வடநூலார் ’ரதாங்கம்’ என வழங்குதல் போலத் தேராழியெனப்பட்டதென்க.
’போராழிக் கையால்’ -கையிற்கொண்ட போராழியினால் என்று கொள்ளலாம்.
———–
[பொருகோட்டோர்.] எம்பெருமான் தான்செய்த பிரதிஜ்ஞையைப் பங்கப்படுத்திக் கொண்டாகிலும்
ஆச்ரிதருடைய காரியமே கண்ணாயிருப்பனென்றார் கீழ்ப்பாட்டில்;
அவ்வளவேயல்ல; தன் வடிவத்தை மாறுபடுத்திக் கொண்டும் இழி பிறப்பை ஏற்றுக் கொண்டும் காரியம் செய்பவன்
காண்மின் என்றருளிச் செய்வதாக வராஹாவதாரத்தை ப்ரஸங்கிக்கிறாரிதில்
பொரு கோட்டு ஓர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன்
ஒரு கோட்டின் மேல் கிடந்த தன்றே விரி தோட்ட
சேவடியை நீட்டித் திசை நடுங்க விண் துளங்க
மாவடிவின் நீ யளந்த மண் –9-
பதவுரை
விரி தோட்ட–ஒளி விரிகின்ற திருக் குண்டலங்களை அணிந்துள்ளவனே!
சே அடியை நீட்டி–செந்தாமரை போன்ற திருவடிகளை வளரச் செய்து
திசை நடுங்க–பூதலத்திலுள்ளவர்கள் நடுங்கும்படியாகவும்
விண் துளங்க–மேலுலகங்களிலுள்ளவர்கள் நடுங்கும்படியாகவும்
மா வடிவில்–(திரிவிக்கிரமனாக வளர்ந்த) பெரிய உருவத்தோடு
நீ அளந்த–நீ அளந்து திருவடி கீழ் இட்டுக் கொண்ட
மண்–பூமியானது,
பொருகோடு ஓர் ஏனம் ஆய்–நிலத்தைக் குத்தி யெடுத்துக் கொண்டு திரிகிற கோரப் பற்களை யுடைய விலக்ஷணமான வராஹ மூர்த்தியாய்
புக்கு–(பிரளய ஜலத்திலே முழுகி)
இடந்தாய்க்கு அன்று–அண்ட பித்தியில் நின்றும் இந்தப் பூமியைக் குத்தி யெடுத்துக் கொண்டு வந்த அக்காலத்தில்
உன்–உன்னுடைய
ஒரு கோட்டின் மேல்–ஒரு கோரப் பல்லின் ஏக தேசத்திலே
கிடந்தது அன்றே–அடங்கிக் கிடந்த தல்லவோ?
பொருகோட்டோரேனமாய்ப்புக்கிடந்த வரலாறு:- ஹிரண்யகசிபுவின் உடன்பிறந்தவனான ஹிரண்யாக்ஷனென்னுங் கொடிய அசுரன்
தன் வலியையாற் பூமியைப் பாயாகச் சுருட்டி எடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிச் சென்றபோது
தேவர் முனிவர் முதலியோரது வேண்டிகோளினால் திருமால் மஹாவராஹரூபியாகத் திருவ்வதரித்துக் கடலினுட்புக்கு
அவ்வசுரனை நாடிக்கண்டு பொருது கோட்டினாற்குத்திக் கொன்று பாதளலோகத்திற் சார்ந்திருந்த பூமியைக்
கோட்டினாற்குத்தி அங்கு நின்று மெடுத்துக்கொண்டு வந்து பழையபடி விரித்தருளினன் என்பதாம்.
இப்பொழுது நடக்கிற ச்வேதவராஹகல்பத்துக்கு முந்தின பாத்மகல்பத்தைப்பற்றிய பிரளயத்தின் இறுதியில்
ஸ்ரீமந்நாராயணன் ஏகார்ணவமான பிரளயஜலத்தில் மூழ்கியிருந்த பூமியை மேலே யெடுக்க நினைத்து
மஹாவராஹரூபியாகிக் கோட்டு நுனியாற் பூமியை எடுத்து வந்தனனென்ற வரலாறும் உண்டு.
“பாராருலகம் முதுமுந்நீர் பரந்தகாலம் வளைமருப்பில் ஏராருருவத்தேனமா யெடுத்த வாற்றலம்மான்-” என்ற
திருமங்கையாழ்வாரருளிச் செயலை நோக்குக.
இவ்வரலாற்றினாலும் பின்னடிகளிற் குறித்த திரிவிக்கிரமாவதார சரிதையினாலும்-
எம்பெருமான் ரக்ஷ்ய வர்க்கங்களை இன்னபடி தான் ரக்ஷிப்பனென்கிற ஒருநியதியில்லை யென்பது வெளியிடப்பட்டதாம்.-
“ஆபத்துவந்தால் தலையாலே சுமந்து நோக்குதல், தலையிலே காலை வைத்து நோக்குதல் செய்யுமவனன்றோ நீ;
ரக்ஷயவர்க்கத்தை நோக்குமளவில் உனக்கொரு நியதியுண்டோ வென்று உகந்தனுபவிக்கிறார்” என்றும்;
” உதாரனாயிருப்பானொருவன் நாலு பேருக்குச் சோறிட நினைத்து நாற்பதுபேருக்கு இட்டுமிகும்படி
சோறுண்டாக்குமாபோலே ரக்ஷ்யத்தினளவன்றிறே ரக்ஷகன் பாரிப்பு” என்றுமுள்ள வியாக்கியான வாக்கியங்கள் அநுஸந்திக்கத் தக்கன.
மிகப்பெரிய வடிவுகொண்டு உலகளந்தபோது எங்கும்பரந்த திருவடிக்குச் சரிசமமாகப் போந்திருந்த பூமியானது
வராஹாவதாரகாலத்தில் உனது திருஎயிற்றிலே ஒரு நீலமணி போலே சிறுகிக்கிடந்ததே!
இஃது என்ன ஆச்சரியம் என வியக்கின்றார். இப்பிரபந்தத்தில் மேலே
“ பிரானுன் பெருமை பிறராரறிவார், உராயுலகளந்தநான்று- வராகத், தெயிற்றளவு போதாவாறென்கொலோ;
எந்தை அடிக்கு அளவு போந்தபடி” என்றருளிச் செய்துள்ள எண்பத்து நாலாம் பாசுரமும் இங்கு ஸ்மரிக்கத்தக்கது.
‘விரிதோட்ட’ என்பதை விளியாகக் கொண்டு ஒளி விரிகின்ற தோடுகளை யணிந்தவனே!-
மகர நெடுங்குழைக்காதனே! என்று பொருள்கொள்ளும் பக்ஷத்தில் ‘விரிதோட’ என்றிருக்க வேண்டுவது
விரித்தல் விகாரம் பெற்று ‘விரிதோட்ட’ என்றாயிற்றென்று கொள்ள வேண்டும்;
இஃது அருமையெனின்; வேறுவகையாகவே பொருள் கொள்ளலாம்-
மலர்ந்த இதழ்களை யுடைய தாமரை போலேயிருக்கிற என்று. இப்போது இது சேவடிக்கு விசேஷணம்.
————–
[மண்ணும் மலையும்.] ஏனமாய் நிலங்கீண்ட போது மிகப் பெரிதான பூமி ஒருகோட்டின் மேலே அடங்கிக் கிடந்த
விசித்திரத்தைக் கீழ்ப்பாட்டில் பேசியநுபவித்த ஆழ்வார்க்கு மற்றொரு அற்புதச் செயலும் நினைவுக்கு வந்தது;
பிரளய காலத்தில் சிறிய பாலகனாய் ஏழுலைகையும் அமுது செய்தாயென்று ப்ராமாணிகர்களான வைதிக புருஷர்கள் சொல்லுகின்றனர்;
இது ஸத்யமான விஷயமேயன்றி ஈஷத்தும் அஸத்யமல்ல; சிறிய வாயினாலே பெரிய வுலகங்களை அமுது செய்யக் கூடமையாலே
உலகுண்ட அக்காலத்தில் உனது வாயும் உலகங்களின் பெருமைக்குத் தகுதியாகப் பெருத்திருந்ததோ என்று வினவுகின்றார்.
இங்ஙனே கேள்வி கேட்கிற முகத்தால் எம்பெருமானுடைய ஒப்புயர்வற்ற சக்தி விசேஷத்தை வெளிப்படுத்துகின்றாராழ்வார் என்றுணர்க.
சிறிய வாயினாலே பெரிய வுலகங்களை எல்லாம் எளிதில் விழுங்கவல்ல அபாரசக்தி யுக்தனன்றோ நீ என்றவாறு.
மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும்
விண்ணும் விழுங்கியது மெய்யன்பர் எண்ணில்
அலகளவு கண்ட சீராழி யாய்க்க்கு அன்றிவ்
வுலகளவும் உண்டோ வுன் வாய்—10-
பதவுரை
மண்ணும்–பூமியும்
மலையும்–குல பர்வதங்களும்
மறி கடலும்–அலை யெறிகிற ஸமுத்ரங்களும்
மாருதமும்–காற்றும்
விண்ணும்–ஆகாசமும் ஆகிய இவற்றை யெல்லாம்
விழுங்கியது–(உனது திருவயிற்றின் ஒரு மூலையிலே அடங்கும்படி) அமுது செய்ததை
மெய் என்பர்–ஸத்யமாகச் சொல்லுவர்கள் (வைதிகர்கள்);
எண்ணில்–இதனை ஆராயுமளவில்
அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு உன் வாய்–அளவிடுதற்கு உறுப்பான எண்ணிக்கைகளை யெல்லாம்
எல்லை கண்டிருக்கிற [-எண்ணிறந்த] கல்யாண குணங்களுக்குக் கடல் போன்றவனான உன்னுடைய வாயானது
அன்று–இவற்றை யெல்லாம் விழுங்கின வக்காலத்தில்
இஉலகு அளவும் உண்டோ–இந்த ஜகத்தளவு விசாலமாகவும் இருந்திருக்குமோ?
[அலகளவுகண்டசீர்] நூறு ஆயிரம் பதினாயிரம் லக்ஷம் கோடி சங்கம் மஹாசங்கம் பத்மம் என்றாற்போன்ற எண்கள் அலகு எனப்படும்;
அவற்றை அளவு காண்கையாவது-அந்த எண்களின் எல்லைக்குத் தாள் மேற்பட்டுபோதல்; அளவுகடந்து போவதைச்சொன்னபடி.
‘அஸங்க்யேய கல்யாண குணகணெளகமஹார்ணவ!” என்பர் ஸ்ரீ பாஷ்யகாரரும்.
சீராழியாய்க்கு = ஆழியென்று ஸமுத்ரத்துக்குப் பெயர்; ஆழியான் – சமுத்ரமாயிருப்பவன்;
முன்னிலைப் பெயர் நான்காம் வேற்றுமையுருபு பெற்று “ ஆழியாய்க்கு” என்றாயிற்று;
அன்றி,
ஆழியையுடையவன் ஆழியான் என்றாகி,
எல்லை கடந்த திருக்குணங்களையும் சக்கராயுதத்தையும் உடைய உனக்கு என்று பொருளாகவுமாம்; இ
துவே வியாக்கியானத்திற்கும் பொருந்தியதென்க.
———————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply