ஸ்ரீ முதல் திருவந்தாதி- பாசுரங்கள் -11-20- -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

[வாயவனையல்லது.] எம்பெருமான் ஆச்ரிதரை ரக்ஷிப்பதிலும் கொடியவர்களைத் தண்டிப்பதிலும்
தீக்ஷிதனாயிருக்கின்றான் என்கிற திருக்குணங்களிலே யீடுபட்டுத்
தம்முடைய இந்திரியங்கள் அவன் திறத்தே அவகாஹிக்கும்படியைப் பேசுகிறாரிதில்.

வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை யுலகம்
தாயவனை அல்லது தாந்தொழ  பேய் முலை நஞ்
சூணாக வுண்டான் உருவோடு பேர் அல்லால்
காணாக் கண் கேளா செவி —11-

பதவுரை

வாய்–எனது வாயானது
அவனை அல்லது–ஸர்வேச்வரனைத் தவிர
வாழ்த்தாது–(மற்றொன்றைப்) புகழாது;
கை தாம்–கைகளானவை
உலகம் தாயவனை அல்லது தொழா–உலகங்களைத் தாவி யளந்து கொண்ட
திரு விக்கிரமனை யல்லது வேறொருவனைத் தொழ மாட்டா;
பேய் முலை நஞ்சு–பேயான பூதனையின் முலைகளில் தடவியிருந்த விஷத்தை
ஊண் ஆக–உணவாக
உண்டான்–அமுது செய்த கண்ண பிரானுடைய
உருவொடு பேர் அல்லால்–திருமேனியையும் திருநாமத்தையு மல்லது (மற்றெதையும்)
கண் கணா செவி கேளா–கண்கள் காணமாட்டா; காதுகள் கேட்க மாட்டா.

உலகம் தாயவன் என்றதனால் ஆச்ரிதரை ரக்ஷிப்பதில் தீக்ஷிதனென்பதும்,
பேய் முலை நஞ்சு ஊணாகவுண்டா னென்றதனால் கொடியவர்களைத் தண்டிப்பதில் தீக்ஷிதனென்பதும்
தெரிவிக்கப்பட்டன வென்க.

மூன்றாமடியில், உருவொடு- உருயையும் என்றபடி.
உருவை யல்லால் கண் காணா பேரை யல்லால் செவி கேளா என்று அடைவே அந்வயிப்பது.
இது- முறைநிரனிறைப் பொருள்கோள்.

————-

[செவி வாய் கண்.] ‘நமக்கு உபாயமு உபேயமும் எம்பெருமானே யாவன்’ என்கிற சாஸ்த்ரார்த்தம்
பலர்க்கும் தெரியுமாயினும் பக்தி முதலானவற்றையும் எம்பெருமானைப் பெறுகைக்கு உபாயமாகச் சிலர் ப்ரமித்திருப்பர்கள்.
அந்தோ! இப்படியும் சில மஹான்களுங்கூட மயங்கியிருக்கிறார்களே! என்று ஆழ்வாரிரங்குகிறாரிப்பாட்டில்.

செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செந்தீ
புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத்
ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே
ஏனமாய் நின்றார்க்கு இயல்வு —12-

பதவுரை

ஏனம் ஆய் நின்றாற்கு–வராஹாவதாரம் செய் தருளித் தானே காரியங்களை கடத்துகிற பெருமானைப் பெறுவதற்கு
(இயல்வு ஏற்ற ஸாதனமாவது-,)
செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும்–செவி தொடக்கமாகச் சொல்லப்படுகிற ஞானேந்திரியங்கள் ஐந்தும்
செம் தீ புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும்–தேஜஸ் முதலான பஞ்ச பூதங்களினாலியன்ற தேஹமும்
அவியாத ஞானமும்–(இந்தக் கரண களேபரங்களாலே ஸாதிக்கப் படுவதாய்) இடை விடாது எம்பெருமானைச் சிந்திப்பதான பக்தியும்
வேள்வியும்–அந்த பக்தி உண்டாகி வளர்வதற்குக் காரணமான அக்நிஹோத்ரம் முதலிய சடங்கும்
நல் அறமும்–(நாடோறும் பக்தியை வளர்க்கக் கடவதான) விவேகம் முதலிய நற்குணங்களும்
இயல்வு என்பரே–ஸாதனங்கள் என்று சொல்லுகிறார்களே (இது தகுதியோ? என்றவாறு)

ஆபத்து நேரிடும்போது, தானே வந்து பாதுகாப்பவனன்றோ எம்பெருமான் என்ன வேண்டி ஏனமாய் நின்றாற்கு என்கிறார்.
* மாசுடம்பில் நீர்வாரா மானமிலாப் பன்றியாய்த் திருவவதரித்து அரியன செய்ததெல்லாம் தன்னுடைய
நிர்ஹேதுக கிருபையாலேயன்றி வேறொரு உபாயத்தை எதிர்பார்த்தன்றே என்று குறிப்பித்தவாறு.

இப்பாட்டின் முதலடியில் இந்திரியங்கள் ஐந்தையும் இரண்டா மடியில் பஞ்ச பூதங்களையும் சொல்லி யிருப்பதன் கருத்தாவது-
இந்திரியங்களோடு கூடினதாய்ப் பஞ்ச பூதங்களால் இயன்றதான சரீரத்தைச் சொன்னபடி.
சரீரத்தை மோக்ஷஸாதநமாக ஆரும் சொல்லவில்லையே யெனில்;
அவியாத ஞானம் என்பதனால் சொல்லப்பட்ட பக்திரூபாபந்ந ஜ்ஞானமானது கரண களேபர ஸாத்யமாகையாலே
கரண களேபரங்களுக்கும் பரம்பரையா மோக்ஷ ஸாதநத்வம் சொல்லக்கூடு மென்றுணர்க.

அக்நி ஹோத்ரம் முதலிய வேள்விகளும் விவேகம் தயை ஸத்யம் முதலிய நற்குணங்களாகிற நல்லறமும்
ஸாக்ஷாத் மோக்ஷ ஸாதனமாகக் கொள்ளப்படுகின்றனவோ வென்னில்;
அவையும் பக்தி உண்டாகி வளர்வதற்குக் காரணங்களாக சாஸ்த்ரங்களில் சொல்லப்படுகையாலே
அவற்றுக்கும் பரம்பரயா மோக்ஷ ஸாதநத்வமே சொல்லகூடும்.

ஆகவே, இப்பாட்டில் அவியாத ஞான மென்று சொல்லப்பட்ட பக்தி யொன்றே மோக்ஷோபாயமாக வழங்கக் கூடியது.
எம்பெருமானுக்கே நிரபேஷ உபாயத்வம் கொள்ளுகிற ஆழ்வார் திருவுள்ளத்தாலே
அந்த பக்தி யுபாயத்வமும் கழிக்கப்பட்டுகின்றது. என்பரே! என்ற ஏகாரம் இதனை காட்டும் .

இனி என்பரே என்றவிடத்து ஏகாரத்தை அசையாகக்கொண்டு
‘பகவத் ப்ராப்திக்கு பக்தியை உபாய மென்பர்’ என்று சொல்லிவிடுவதாக உரைப்பாரு முண்டு, இயல்வு- உபாயம்.

———-

[இயல்வாக] எம்பெருமான் திருவடிகளிலே நித்ய கைங்கரியம் செய்வதற்கு தக்க யோக்யதை யுடையவர்கள் நித்ய ஸூரிகளேயன்றோ,
ஸம்ஸாரிகளான நமக்கொல்லாம் அப்பெருமானைப் பணிந்து உய்தற்கு உரிய விரகு உண்டோ? என்று ஒரு சங்கை உதிக்கக்கூடுமே;
அதற்கு உத்தரமாக அவதரித்த பாசுரம் இது.

இயல்வாக யீன் துழாயான் அடிக்கே செல்ல
முயல்வார் இயல் அமரர் முன்னம் -இயல்வாக
நீதியால் ஓதி நியமங்களால் பரவ
ஆதியாய் நின்றார் அவர் –13–

பதவுரை

ஈன் துழாயான் அடிக்கே செல்ல இயல்வு ஆக–அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ள எம்பெருமானது திரு வடிகளில் கிட்டுதற்குத் தகுதியாக
முன்னம்–அநாதி காலமாக
முயல்வார்–முயற்சி செய்பவர்கள்
(யாரென்றால்)
இயல் அமரர்–யோக்யதையுள்ள நித்ய ஸூரிகளேயாவர்;
(நம் போன்றவர்களும் அவனை இழக்க வேண்டாதபடி)
இயல்வு ஆக–பொருத்தமாக
நீதியால் ஓதி–முறைமை தவறாமல் வேதத்தை அத்யயனம் செய்து
நியமங்களால் பரவ–(அந்தவேதத்தின் பொருளை உணர்ந்து அதிற் சொன்ன நியமங்களோடே தன்னைத் துதி செய்யுமாறு
அவர்–அந்த எம்பெருமான்
ஆதி ஆய் நின்றார்–முற்பட்டு ஸித்தராக இருக்கின்றார்.

நித்ய ஸூரிகள் தாம் எம்பெருமான் திருவடிகளிலே ஆழ்ந்திருப்பவர்; இருக்கட்டும்;
ஸம்ஸாரிகளுக்கு பகவத் ஸமாச்ரயண யோக்யதையே கிடையாதென்று கொள்ள இடமில்லை
ஸம்ஸாரிகளும் வேதங்களை யோதி அவற்றின் பொருள்களைத் தெரிந்து கொண்டு படிப்படியாகத் திருந்தி
எம்பெருமானை வந்து கிட்டும்படியாக அப்பெருமான் தானே மூல ஸுக்ருதமாக அமைந்திரா நின்றானென்கிறார் .

இப்படியருளிச்செய்வதன் கருத்து யாதெனில்; எம்பெருமானை யடைவதாகிற காரியம் சேதநருடைய தலையிலே கிடப்பதன்று; .
“எதிர்சூழல்புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய, விதி சூழ்ந்ததா லெனக்கே லெம்மான் திரிவிக்கிரமனையே” என்கிறபடியே
நெடுநாளே பிடித்து ஸம்ஸாரியைப் பெறுவதற்கு அப்பெருமான்தானே பலவகையான க்ருஷிகளைப் பண்ணிக் கொண்டிருக்கிறான் என்றவாறு.

“ஆதியாய் நின்றாரவர்” என்றதன் கருத்து இதுவே. ஸ்ரீ வேதாந்த தேசிகனும் இதனையே திருவுள்ளம்பற்றி
ஸ்ரீ ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே “ நிதாநம் தத்ராபி ஸ்வய மகில நிர்மாண நிபுண:’ என்றருளிச் செய்தா ரென்றுணர்க.

———-

அவரவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி
இவர் இவர் எம்பெருமான் என்று சுவர் மிசைச்
சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகளந்த
மூர்த்தி யுருவே முதல் –14-

பதவுரை

அவர் அவர்–ராஜஸரும் தாமஸருமாகிய சில அதிகாரிகள்
தாம் தாம் அறிந்த ஆறு ஏத்தி–(தங்களுடைய ரஜஸ் தமோ குணங்களுக்குத் தக்கபடி) தாங்கள் எப்படி அறிந்திருக்கிறார்களோ அப்படி வாய்விட்டுப் புகழ்ந்து
இவர் இவர் எம்பெருமான் என்று–தாங்களறிந்த சில தேவதாந்தரங்களையே கடவுளாகச் சொல்லிக் கொண்டு
சுவர்மிசை சார்த்தியும்–சுவரிலே சித்திர ரூபமாக எழுதியும்
வைத்தும்–பிரதிமையாக ஆங்காங்கு ஸ்தாபித்தும்
தொழுவர்–தொழுகின்றார்கள்;
(எவர் என்ன செய்தாலும்)
உலகு அளந்த மூர்த்தி–(எல்லாத் தெய்வங்களும் தன் காலின் கீழே அடங்கும்படி) உலகங்களை யளந்த ஸ்வாமியினுடைய
உருவே–திருமேனி யொன்றே
முதல்–முக்கியமானது

[அவரவர்தாந்தாம்.] கீழ்ப்பாட்டில் “ஆதியாய் நின்றாரவர் என்றதை விவரித்துப் பேசுகிறது இப்பாட்டு.
உலகத்திலுள்ள ஜனங்கள் ஒவ்வொரு தெய்வங்களைப் பரதேவதையாகக் கொண்டு தாம் தாம் கற்ற சொற்களைக் கொண்டு
அத்தெய்வங்களைத் துதித்து விக்ரஹாராதநம் விசேஷ மென்றறிந்து சுவர்களிலே சித்திர ரூபமாக
அத்தெய்வங்களை யெழுதியும் லோஹமய பிம்பங்களாக ஆலயங்களில் பிரதிஷ்டை செய்தும் தொழா நின்றார்களாகிலும்,
அம்மன் பிடாரி முதற்கொண்டு சிவன் முடிவாகவுள்ள தெய்வங்களுக்கெல்லாம்
ஸ்ரீமந்நாராயணமூர்த்தியே பிரதான தேவதையாம் என்றாராயிற்று.
கீழ்ப்பட்ட தெய்வங்களுக்கெல்லாம் எம்பெருமானை ஆச்ரயித்தே ஸத்தை பெறவேண்டும்படி அவனே முழுமுதற் கடவுள் என்கை.

அவரவர் என்ற சுட்டு – அவர்களின் குணக்குறைவைக் காட்டும். ஸத்வகுண பூர்த்தியில்லாத ஜனங்களெல்லாம் என்றபடி.
தாந்தாமறிந்தவாறாவது- சாஸ்த்ரங்களையும் சிஷ்டா சாரங்களையுங்கொண்டு அறியகில்லாமல்
தங்களுடைய ராஜஸ தாமஸபுத்திகளுக்கு எட்டியவாறு.

இப்பாட்டில் ஸ்ரீமந் நாராயணனை ‘உலகளந்தமூர்த்தி’ என்ற திருநாமத்தால் குறிப்பிட்டது கருத்தோடு கூடியதாம்;
புருஷோத்தமனான எம்பெருமானை விட்டு க்ஷூத்ர தெய்வங்களைப் பணிகின்ற ஸம்ஸாரிகளோடு அத்தெய்வங்களோடு வாசியின்றியே
எல்லாரும் தன்னுடைய திருவடியின் கீழே துகையுண்ணுமாறு உலகங்களை வியாபித்தவனென்று சொல்லுமாற்றால்
இவனே முழுமுதற் கடவுளென்று மூதலித்தாராய்த்து.
மூர்த்தி- ஸ்வாமி.

———-

முதலாவார் மூவரே அம்மூவருள்ளும்
முதலாவான் மூரி நீர் வண்ணன் -முதலாய
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப்
பல்லார் அருளும் பழுது ——–15-

பதவுரை

(உலகத்தில் பலபல தெய்வங்கள் வழங்கப்பட்டாலும்)
மூவரே–ஸ்ருஷ்டி ஸ்திதி (ஸம்ஹாரங்களுக்கு உரியவரான) பிரமன் விஷ்ணு ருத்ரன் என்கிற மூவருமே
முதல் ஆவார்–முக்கியரான தேவர்களாவார்;
அம்மூவர் உள்ளும்–அந்த த்ரிமூர்த்திகளுக்குள்ளே
மூரி நீர் வண்ணன்–கடல் வண்ணனாகிய திருமாலே
முதல் ஆவான்–தலைவனாயிருப்பவன்;
முதல் ஆய–உலகுக்கெல்லாம் காரண பூதனும்
நல்லான்–நற் குணங்களமைந்தவனுமான அப்பெருமானுடைய
அருள் அல்லால்–கிருபையானது நன்மையை விளைக்குமே யொழிய
நாமம் நீர் வையகத்து–கடல் சூழ்ந்த இப்பூமியில்
பல்லார்–அத் திருமால் தவிர மற்றும் பலருடைய
அருளும்–தயையும்
பழுது–பயனற்றதாம்

[முதலாவார்.] கீழ்ப்பட்டில் “உலகளந்த மூர்த்தி யுருவே முதல்” என்றருளிச்செய்த ஆழ்வாரை நோக்கிச் சிலர்
‘கீழ்ப்பட்ட தெய்வங்களென்று உம்மால் கூறப்படுகின்ற தெய்வங்களும் தம்மைத் தொழுகின்றவகளுக்குப்
பலன்களை யளிக்கக் காண்கிறோமே; அவர்களது அருளைப் பலரும் பெற்று வாழ்கின்றனரன்றோ என்று கூற,
அவர்களுக்கு விடை யளிக்கிறாரிப்பாட்டில்.

தெய்வம் தெய்வமென்று நாட்டிலே பலர் வழங்கப்படினும், படைத்தல் காத்தல் அழித்தல் என்கிற மூன்று தொழில்களுக்கும்
கர்த்தாக்களாக ஏற்பட்ட ப்ரஹ்மா விஷ்ணு ருத்ரன் என்ற மூவருமே முதன்மைபெற்ற தேவர்களாவார்;
அந்த த்ரிமூர்த்திகளுக்குள்ளே கடல் வண்ணனாகிய ஸ்ரீமந்நாராயணனே தலைமை பெற்றிருப்பவன்.
ஸகல ஜகத் காரண பூதனாய் எல்லாரிடத்திலும் வாத்ஸல்யம் நிறைந்தவனான அந்தத் திருமாலின் திருவருள்
நன்மையைத் தருமேயொழிய வேறு எந்த தெய்வத்தினருளும் சாச்வதமான நன்மையை நல்க மாட்டாது;
அவ்வருளைபெற நினைப்பது வீணேயாகும் என்றாராயிற்று.
க்ஷூத்ர தெய்வங்களின் அருள் க்ஷூத்ர பலன்களுக்கே காரணமாவதனாலும்
பரமபுருஷனுடைய பேரருள் ஒப்புயர்வற்ற அழிவில்லாத பேரின்பத்தைப் பெறுவிக்கக் காரணமாவதனாலும்
‘முதலாய நல்லானருளே நன்று, பல்லாரருளும் பழுது’ என்னத் தட்டில்லை யென்க.

———–

[பழுதேபலபகலும்.] கீழ்ப்பாட்டில் முதலாய நல்லானருளல்லால் …. பல்லாரருளும் பழுது” என்றருளிச் செய்த ஆழ்வார்
அவ்வெம்பெருமானுடைய அருள் தம்மிடத்தில் நெடுங்காலம் பயன்படா திருந்ததை நினைத்து,
‘அந்தோ! நெடுங்காலம் பாழாய்ப் போய்விட்டதே!’ என்று அநுதாபப் படுகிறாரிதில்.

பழுதே பலபகலும் போயினவென்று அஞ்சி
அழுதேன் அரவணை மேல் கண்டு தொழுதேன்
கடலோதம் காலலைப்பக் கண் வளரும் செங்கண்
அடலோத வண்ணரடி———16–

பதவுரை

கடல் ஓதம்–கடலலையானது
கால்–தன் திருவடி வாரத்திலே
அலைப்ப–(துடைதட்டி உறங்கச் செய்வது போல) வீச
கண் வளரும்–யோக நித்திரை செய்கின்ற
செம்கண்–செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையவரும்
அடல் ஓதம் வண்ணர்–அநுபவிக்க இழிந்தவர்களை அநுபவிக்க வொட்டாமல் அடர்கின்ற செளந்தரியமாகிற
அலைகளோடு கூடிய வடிவையுடையவருமான பெருமாளுடைய
அடி–திருவடிகளை
அரவு அணை மேல்–சேஷ சயனத்தின் மீது
கண்டு தொழுதேன்–கண்ணாரக் கண்டு (இன்று) ஸேவிக்கப் பெற்ற அடியேன்
பல பகலும்–“கீழ்க்கழிந்த கால மெல்லாம்
பழுதே போயின என்று–(இவ்விதமாகக் கழியாமல்) வீணாகக் கழிந்தனவே!” என்று
அஞ்சி அழுதேன்–மிகவும் சோகமுற்றுக் கிடக்கின்றேன்.

இப்பாட்டில், இறந்தகாலத்தைப் பற்றி வருத்தமும் நிகழ்காலத்தைப் பற்றி மகிழ்ச்சியும் எதிகாலத்தைப்பற்றி அச்சமும்
ஆக மூன்றுகாலங்களைப் பற்றின மூன்று விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. (எங்ஙனே யெனின்?)
“கடலோதம் காவலைப்பக்கண்வளரும் செங்கணடலோத வண்ணரடியை அரவணை மேல் கண்டு (இன்று) தொழுதேன்”
என்றமையால் நிகழ்காலத்தில் பகவத்ஸேவை வாய்க்கப்பெற்ற ஆநந்தம் வெளியிடப்பட்டதாயிற்று;

“பழுதே பலபகலும் போயினவென்று அழுதேன்” என்றமையால், கீழ்க்கழிந்த அநாதிகாலமெல்லாம் இவ்விதமாக
ஆநந்தமயமாய்க் கழியவில்லையே யென்கிற வருத்தம் காட்டப்பட்டது”,

“அஞ்சியழுதேன்” என்றமையால் – இனிமேல் வரப்போகிற காலமும் கீழ்க்கழிந்த காலம்போலே
வீணாகக்கழிந்து விடுமோ வென்கிற அச்சம் காட்டப்பட்டது.

“கண்டு தொழுதேன்” என்னப்பெற்ற பின்பு எதிர்கால நிலைமைக்கு அஞ்ச வேண்டுவானேன்? என்னில்;
தாம் இருப்பது இருள் தருமாஞாலத் திலாகையாலே
“விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறுமைம்புலனிவை. மண்ணுளென்னைப் பெற்றால் என் செய்யா?” என்கிறபடியே
இந்த லீலா விபூதியின் ஸ்வபாவத்தை நினைத்து அஞ்சாதிருக்க முடியாதிறே.
பரம பக்தனாயிருந்த ப்ரஹ்லதழ்வானையுமன்றோ ஒருகால் எதிரியாக்கிற்று இம்மண்ணுலகம்
”ஆற்றங்கரை வாழ்மரம்போ லஞ்சுகின்றேன்” என்றாரே திருமங்கையாழ்வாரும்.

கீழ் ஆறாம்பாட்டில் “ ஒன்று மறந்தறியேன் ஓதநீர்வண்ணனை நான்” என்றும்
“அன்று கருவரங்கத்துக்கிடந்து கைதொழுதேன் கண்டேன்” என்றும் கர்ப்பவாஸ காலம் முதற்கொண்டே தாம்
பகவத் விஷய ப்ரவணராயிருப்பதாகச் சொல்லிக் கொண்ட இவ்வாழ்வார் இங்கே
பழுதே பலபகலும் போயினவென்று அழுவதாகச் சொல்லிக்கொள்வதேன் என்னில்;
இப்பிறவிக்கு முன்னே மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து போந்த காலங்களில் நாள்கள் பலவும் பழுதாயினவே யென்று வருந்துகிறபடி.
இப்பிறவியிலும் ஆதியே பிடித்து இங்ஙனே பாசுரம் பேசி அநுபவிக்க ப்ராப்தியிருந்தும்
கீழே பல நாள்கள் பாழாயினவேயென்று வருந்துவதாகக் கொள்ளவுமாம்.

பேயாழ்வார் -சென்றநாள் செல்லாத செங்கண்மாலெ கண்மாலென்ற நாள் எந்நாளும் நாளாகும்” என்கிறார்;
(அதாவது) நிகழ்கால நிலைமை நன்றாயிருக்கப் பெற்ற ஆனந்த மிகுதியினால் இறந்தகால எதிர்கால நிலைமைகளிற்
கவலையற்று எல்லாக் காலமும் எனக்கு நல்ல காலமே யென்றார்; அஃதொரு சொற் சமத்கார விசேஷமென்க.

அடலோத வண்ணர்= ஓதம் என்று கடலுக்கும் அலைக்கும் பெயர்; இவ்விடத்தில் அலை என்னும் பொருள் விவக்ஷிதம்;
அதாவது திருமேனியிலே பரவுகின்றலாவண்ய தரங்கங்களைச் சொன்னபடி.
அநுபவிக்க வருமவர்களை அடர்த்துத் தள்ளுகிற லாவண்ய தரங்கங்களோடு கூடிய திருமேனியையுடையவர் என்ற தாயிற்று.

————-

[அடியும்படிகடப்ப.] கீழ்ப்பாட்டில் “பழுதே பல பகலும் போயின”என்றருளிச் செய்ததையே விவரிக்கிறது இப்பாட்டு.
இப்போது ஒரு மனிதனாகப் பிறந்திருக்கிற நான் திடீரென்று பிறந்துவிடவில்லை;
ஜீவாத்மாவுக்குப் புதிதாக ஸ்ருஷ்டியென்பது இல்லை யாகையால் “மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து” என்கிறபடியே
அநாதி காலமாகவே பல பல பிறவிகள் பெற்று ஸம்ஸாரியாய் வந்து கொண்டிருக்கிறேன்;
எம்பெருமான் உலகளந்தருளின காலத்திலும் நான் ஏதோ ஒரு ஜந்துவாகப் பிறந்திருந்தவனேயொழிய
அன்று நான் இல்லாமலிருக்கவில்லை; அப்போது நான் விவேகி யாயிருந்து அந்த திவ்ய சரிதையிலே ஈடுபட்டிருந்தேனாகில்
அப்போதே இந்த ஸம்ஸாரத்தில் நின்றும் விடுபட்டு முக்தனாய்ப் போயிருப்பேன்;
அன்று நான் அறிவிலியாய்க் கிடந்து வாணாளை வீணாளாகப் போக்கிவிட்டேன்;
ஆகவே பழுதே பலபகலும் போயினவென்று கதறியழவேண்டியதாயிற்று- என்பதே இப்பாட்டின் உட்கருத்தாகும்.

“முடியும் விசும்பளந்தது என்பர்” என்ற சப்தஸ்வாரஸ்யம் நோக்கத்தக்கது. என்பர் என்கையாலே-
உலகளந்தவாற்றை நான் இன்று பிறர்சொல்லக் கேட்க வேண்டியதாயிற்றே யொழிய
நேரிலிருந்து ஸேவிக்கப் பெறவில்லையே யென்கிற அநுதாபம் நன்கு விளங்குமிறே.

கீழ் இரண்டாம்பாட்டில் “ என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீரேற்றது “ என்று புராதன சரிதங்களெல்லாம்
ப்ரத்யக்ஷம் போலப் பேசப் பட்டிருந்தாலும், கிரமமாக அவை நடந்த காலத்திலே
அவற்றைத் தாம் ஸேவிக்கப் பெறவில்லையே என்கிற வருத்தம் ஸம்பாவிதமேயன்றோ.

அடியும் படி கடப்பத் தோள் திசை மேல் செல்ல
முடியும் விசும்பும் அளந்தது என்பர் வடி யுகிரா
லீர்ந்தான் ஈராணியன தாகம் இருஞ்சிறைப் புள்
ளூர்ந்தான் உலகளந்த நான்று –17-

பதவுரை

இரணியனது–ஹிரண்யாஸுரனுடய
ஆகம்–மார்வை
வடி உகிரால்–கூர்மையான நகங்களாலே
ஈர்ந்தான்–கிழித்தெறிந்தவனும்
இரு சிறை புன் ஊர்ந்தான்–பெரிய சிறகை யுடைய கருடனை ஏறி நடத்துபவனுமாகிய எம்பெருமான்
உலகு அளந்த நான்று–உலகளந்த காலத்திலே
அடியும்–திருவடி
படி கடப்ப–பூமியை அளந்து கொள்ள
தோள்–திருத் தோள்கள்
திசை மேல் செல்ல–திக்குகளிலே வியாபிக்க
முடியும்–கிரீடம்
விசும்பு–மேலுலகத்தை
அளந்தது–அளவு படுத்திக் கொண்டது
என்பர்–என்று சொல்லுவர்கள்.
(ஐயோ! நான் நேரில் ஸேவிக்கப் பெறவில்லையே!!)

அடியும் படிகடப்ப “கோலமாமென் சென்னிக் கமலமன்ன குரைகழலே”என்றாற்போல அடியவர்களுக்கு சிரோபூஷணமாக
அமைய வேண்டிய திருவடிகளைக் கொண்டு கல்லும் கரடுமான உலகங்களை யளப்பதே! என்கிற வருத்தமும்.

[தோள் திசைமேல் செல்ல] பிராட்டியை அணைக்க வேண்டிய திருத்தோள்களைக்கொண்டு திசைகளின் மேல் வியாபரிப்பதே! என்கிற வருத்தமும்,

[முடியும் விசும்பளந்தது] எங்கள் கண்முன்னே விளங்கி
“முடிச் சோதியாய் உனது முகச்சோதிமலர்ந்ததுவோ?” என்று நாங்கள் பாசுரம் பேசவேண்டும் படியான திருமுடியை
அஹங்காரிகளும் பகவத் விஷயச் சுவடறியாதவர்களுமான தேவதைகளுள்ள விடங்களிலே நிமிர்ப்பதே! என்கிற வருத்தமும் உள்ளுறையும்.

பின்னடிகளின் கருத்தையும் ஆழ்ந்து நோக்கினால், இரணியனைப் பிளந்து ப்ரஹ்லாதனுக்கு அருள் செய்த காலத்திலும்,
ஸ்ரீகஜேந்திராழ்வானைக் காத்தருளப் பெரிய திருவடியின் மீதேறி அரை குலையத் தலை குலைய விரைந்தோடி வந்த காலத்திலும்
நேரில் ஸேவித்து வாழா தொழிந்தேனே! என அநுதாபப்படுவதும் தோன்றும்.

————

[ நான்றமுலைத்தலை.] இப்பாசுரமும் கீழ்ப்பாசுரம் போலே இழந்தநாளைச் சொல்லி அநுதாபப்படுவதாம்.

நான்ற முலைத்தலை நஞ்சுண்டு உறி வெண்ணெய்
தோன்ற வுண்டான் வென்றி சூழ் களிற்றை ஊன்றிப்
பொருதுடைவு கண்டானும் புள்ளின் வாய் கீண்டானும்
மருதிடை போய் மண்ணளந்த மால் –18-

பதவுரை

(பேய்ச்சியான பூதனையினுடைய)
நான்ற முலைத் தலை–சரிந்து தொங்குகின்ற முலையிலுள்ள
நஞ்சு–விஷத்தை
உண்டி–(அவள் பிணமாய் விழும்படி) அமுது செய்து
உறி–உறிகளிலே வைத்த
வெண்ணெய்–வெண்ணெயை(க் களவு செய்து)
தோன்ற–இச் செயல் எங்கும் ப்ரஸித்தமாம்படி
உண்டான்–அமுது செய்தவனாகி
வென்றி–ஜயத்தை யுடைய
சூழ்–எதிர்ப்பவர்களைத் தப்பாமல் தன் கையில் அகப்படுத்திக் கொள்ள வல்ல
களிற்றை–(கம்ஸனுடைய) யானையை
ஊன்றி பொருது–எதிர் நின்று யுத்தம் செய்து
உடைவு கண்டாலும்–அழித்தொழித்தவனும்
புள் வாய் கீண்டானும்–பகாசுரனுடய வாயைக் கிழித்து போகட்டவனும் ( யாவனெனில்?)
மருது இடை போய்–இரட்டை மருத மரங்களின் நடுவே தவழ்ந்து சென்றவனாய்
மண் அளந்த–உலகங்களை அளந்து கொண்டவனான
மால்–எம்பெருமானேயாவன்.

ஸ்ரீ கிருஷ்ணனாய்த் திருவவதரித்துப் பேய்ச்சியை முலையுண்கிற வியாஜத்தாலே முடித்தும்,
நவநீதம் முதலியவற்றைக் களவாடி அமுது செய்தும் குவலயாபீடமென்கிற கம்ஸனது மதயானையை முடித்தும்
பகாஸுரனை வாய்பிளந்தும் இரட்டை மருதமரங்களை முறித்துத் தள்ளியும் இப்படி பலவகையான
சிறுச் சேவகங்களைச் செய்தருளின காலத்திலும் ஸேவிக்கப் பெறாதே இழந்தேனே! என்கிறார் போலும்.

இழந்ததற்கு அநுதாபப்படுவதாகப் பாசுரத்தில் வாய்ச் சொல் இல்லை யாயினும்
கீழ்ப்பாசுரங்களின் ஸந்தர்ப்பத்தை நோக்குங்கால் இழந்த நாளைக்கு அநுதாபம் தோன்றவே
இப்பாசுர மருளிச்செய்வதாகக் கொள்ளலாம்.
“ இடக்கை வலக்கை அறியாதாரும் வாழும்படி இடைக்குலத்திலே வந்து பிறந்தவிடத்திலும்
இழந்தேனிறே என்று சோகிக்கிறார்.” என்றார் முன்னோர்களும்.

இனி, கிருஷ்ணாவதார சரித்திரங்கள் சிலவற்றைச்சொல்லி ஆநந்தமாகப் போது போக்குகிறார் எனினும் குற்றமில்லை.

“மருதிடைபோய் மண்ணளந்த” -உலகளப்பதற்கு முன்னே மருதிடைபோனான் என்று பொருளன்று;
மருதிடைபோனது ஒருகாலத்திலும் மண்ணளந்தது ஒருகாலத்திலுமாகிலும் ஆழ்வாருடைய ஜ்ஞாந வைசத்யத்தாலே
அநுஸந்தாந தோரணியில் முன்னது பின்னதென்கிற வாசி யின்றியே எல்லாம் ஒன்று சேர விளங்குகிறபடி .

————

[மாலுங்கருங்கடலே.] *பழுதே பலபகலும் போயினவென்று அழுத ஆழ்வார்,
‘நம்மைப் போலே எல்லாரும் ஏமாந்தவர்கள் தானோ, அன்றி யாராவது எம்பெருமானை ஒரு நொடிப் பொழுதும்
விடாது அநுபவிக்கப் பெற்றவர்களுண்டோ’ என்று ஆராய்ந்து பார்த்தார்;
“மாகடல்நீருள்ளான்” என்கிறபடியே ஸமுத்ரத்தில் ஸர்வ காலமும் எம்பெருமான் திருக்கண் வளர்ந்தருளும் செய்தி நினைவுக்கு வந்தது;
ஹா! ஹா!! ஸமுத்ர ராஜனுடைய பாக்கியமே பாக்கியம்; ஒரு நொடிப்பொழுதும் விடாமல் எம்பெருமானது திருமேனியைத்
தீண்டப் பெற்றிருக்கிறானன்றோ வென்றநுஸந்தித்து அக்கடல் தன்னையே நோக்கி
‘இப்படி உனக்குப்’ பகவதநுபவம் நித்யமாய்ச் செல்லும்படி நீ என்ன நோன்பு நோற்றாய் கொல்?’ என வினவுகின்றார்.

நீ நோற்ற நோன்பைச் சொல்லுவாயாகில் நானும் அந்த நோன்பை நோற்று இப் பேறு பெறுவேன் காண் என்பது உள்ளுறை.

அஃறிணைப் பொருளான கடலை நோக்கிக் கேள்வி கேட்பதாகப் பேசின இப்பாசுரத்தின் கருத்தாவது
எம்பெருமான் இடைவிடாது திருப்பாற்கடலில் சயனித்திக்கொண்டு உறங்குவான்போல்
யோகு செய்யும் பெருமானாயிருக்கின்றா னென்பதைக் காட்டுவதேயாமென்க.

மாலும் கருங்கடலே என்நோற்றாய் வையகமுண்
டாலி னிலைத் துயின்ற வாழியான் கோலக்
கருமேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும்
திருமேனி நீ தீண்டப் பெற்று –19-

பதவுரை

வையகம்–இவ் வுலகத்தை யெல்லாம்
உண்டு–(பிரளயம் கொள்ளாதபடி) திரு வயிற்றினுள்ளே வைத்து
ஆலின் இலை–ஆலந்தளிரிலே
துயின்ற–சயனித்துக் கொண்டவனும்
ஆழியான்–திரு வாழியை யுடையவனும்
கோலம் கரு மேனி–அழகிய கறுத்த திருமேனியை யுடையவனும்
செம் கண்–செந்தாமரைக் கண்ணனுமான
மால்–எம்பெருமான்
கண்படையுள்–உறங்குகையில்
என்றும்–எப்போதும்
திருமேனி–அவனுடைய திருமேனியை
தீண்ட பெற்று–ஸ்பர்சிக்கப்பெற்று
மாலும்–(அந்த ஸ்பர்ச ஸுகத்தினால்) மயங்கிக் கிடக்கிற
கரு கடலே–கரிய ஸமுத்ரமே!
நீ என் நோற்றாய்–(இந்தப் பாக்கியம் உனக்குக் கிடைக்குமாறு) நீ என்ன நோன்பு நோற்றாயோ?

கருங்கடலே!= திருப்பாற்கடல் வெண்ணிறமுள்ளதாயினும் கார்முகில் வண்ணனான எம்பெருமானுடைய நிழலீட்டாலே கருங்கடலாயிற்று.
பட்டர் ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவத்திலே ஸ்ரீரங்கவிமானத்தைப்பற்றிப் பேசிம்போது
அபி பணிபதியதிபாவாத் சுப்ரம், அந்தச் சயானோ; மரகதஸீகுமாரை; ரங்கபர்த்துர் மயூகை: –
ஸகல ஜலதிபாநச்யாமஜீமூதஜைத்ரம் புளகயதி விமாநம் பாவநம் லோசநே ந:” என்றருளிச் செய்த ச்லோகம் இங்கு ஸ்மரிக்கத்தகும்.
இதன் கருத்தாவது- திருவனந்தாழ்வானே ஸ்ரீரங்கவிமாநமாக எழுந்தருளியிருக்கையாலே
இவ்விமானம் வெண்ணிற முள்ளதாயினும் உள்ளே சயனித்திருக்கின்ற ஸ்ரீரங்கநாதனுடைய மைவண்ணத் திருமேனி
நிறத்தின் நிழலீட்டாலே கடலைப் பருகிக் கிளர்ந்த காளமேகத்தை வென்று விளங்குகின்றது–என்பதாம்.

“கருங்கடலே!” என்ற விளியில் – பகவத் விரஹ வ்யஸநத்தாலே நான் மாத்திரம் உடம்பு வெளுத்திருக்க,
நீ நித்ய ஸந்தோஷச் செருக்குத் தோன்ற மாமை பெற்று விளங்குகிறாயே! என்பதாகக் கருத்துக்தொனிக்கும்.
“உவர்க்குங் கருங்கடல் நீருள்ளான்” என்று உப்புக் கடலிலும் எம்பெருமான் உளனாகக் கூறுகையாலே
இங்கு ‘மாலுங் கருங்கடலே!’ என்று உப்புக் கடலையே விளித்ததாகக் கொள்ளுதலும் கூடும்.

———–

[பெற்றார் தளைகழல.] கிருஷ்ணாவதார காலத்திலும் த்ரிவிக்ரமாவதார காலத்திலும் எம்பெருமானுடைய
திருவடித் தாமரைகளை ஏத்தி யிறைஞ்சப் பெற்ற பாக்கியசாலிகள் பலரிருந்தனரன்றோ;
அப் பாக்கியம் அடியேனுக்கு வாய்க்கவில்லையே! என்று நோவு படுகிறார்.

பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச்
செற்றார் படி கடந்த செங்கண் மால்  நற்றா
மரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி
நிரை மலர் கொண்டேத்துவரால் நின்று—20–

பதவுரை

பெற்றார்–மாதா பிதாக்களான வஸுதேவ தேவகிகளுடைய
தளை கழல–கால் விலங்கு அற்றுப் போம்படியாக
பேர்ந்து–(திருப்பாற் கடலில் நின்றும்) பெயர்ந்து (க்ருஷ்ணனாக வந்து பிறந்தவனும்,
ஓர் குறள் உரு ஆய்–விலக்ஷண வாமந வேஷத்தை யுடையனாய்).
செற்றார் படி–ஆச்ரித விரோதியான மாவலி தன்னதென்று நினைத்திருந்த பூமியை
கடந்த–அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட
செம் கண் மால்–புண்டரீகாக்ஷனுடைய
நல் தாமரை மலர் சே அடியை–அழகிய தாமரைபோற் சிவந்த திருவடிகளை
வானவர்–இந்திராதி தேவர்கள்
கை கூப்பி–அஞ்ஜலி செய்து கொண்டு
நிரை மலர் கொண்டு நின்று–தொடை வாய்த்திருந்துள்ள பூக்களை ஸமர்ப்பித்துக் கொண்டு பணிந்து
ஏத்துவர்–துதிப்பர்கள்;
ஆல்–ஐயோ! (அப்போது அவர்களைப் போலே தாமும் துதிக்கப் பெறவில்லையே யென்கிற துக்கத்தைச் காட்டுகிறது.)

“பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்” என்றிருப்பது கொண்டு
கிருஷ்ணனாய்ப் பிறந்த பின் வாமநனாய்ப் பிறந்தானென்று கருத வேண்டா;
ஒருகாலத்தில் கிருஷ்ணனாய்ப் பிறந்தவனும் மற்றொருகாலத்தில் வாமநனாய்ப் பிறந்தவனுமான ஸர்வேச்வரன் என்றபடி.
அன்றி,
“பெற்றார் தளை கழலப் பேர்ந்து” என்பதும் வாமநாவதாரச் செயலையே கூறுவதெனவும் கொள்வர்;
அப்போது, பெற்றார் என்றது – தன்னை ஆச்ரயிக்கப் பெற்றவர்களென்றபடி;
அவர்களுடைய தளையாவது= கருமபந்தம்;
அது நீங்கும்படியாகப் பரமபதத்தில் நின்றும் வந்து ஓர் குறளுருவானபடியைச் சொல்லிற்றாகக் கொள்க.

செற்றார்படி= செற்றாரென்று சத்ருக்களுக்குப் பெயர்; படி யென்று பூமிக்குப் பெயர்;
ஆச்ரித விரோதிகளான மஹாபலி போல்வார் தங்களுடையதென்று அபிமாநித்திருந்த பூமியை என்றதாயிற்று.

ஈற்றடியில் “ஏத்துவராம் நின்று” “ஏத்துவரால் நின்று” என்பன பாடபேதங்கள்.
தங்கள் காரியத்தையே பார்ப்பவரான தேவர்களும் எம்பெருமானது திருவடிகளை ஏத்தி யிறைஞ்சப்பெற்றார்களே!
என்கிற ஆச்சரியமும் தொனிக்கும்.

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading