இனிமேல், கீழ்ப்பாட்டில் சொன்ன ஞானமுடைய பாகவதர்களின் வைபவம் கூறுகிறது.
எம்பெருமான் தன் திருவடித்தாமரைகளில் பக்திசெய்யாதவர்கள் உயர்குலத்திற் பிறந்தவர்களாயிருந்த போதிலும்
அவர்களை ஒருபதார்த்தமாகவும் நினையாமல் உபேஷித்துவிட்டு,
தனது திருவடிகளில் பகதி செய்பவர் மிகவும் இழிகுலத்தவராயினும்
அவரையே விரும்புவன் என்கிறது இப்பாட்டில்.
அடிமையில் குடிமை யில்லா அயல் சதுப் பேதிமாரில்
குடிமையில் கடமை பட்ட குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய் மொய் கழற்கு அன்பு செய்யும்
அடியரை உகத்தி போலும் அரங்க மா நகர் உளானே
பதவுரை
முடியினில் துளபம் வைத்தாய்–திருமுடியிலே திருத்துழாய் மாலையை அணிந்தவனே
அரங்கம் மாநகர் உளானே!-:
அடிமையில்–(உனக்குக்) கைங்கரியம் செய்வதில்
குடிமை இல்லா–உயிர்குடிப் பிறப்பிற்கு ஏற்ற ஒழுக்கமில்லாத
அயல்–(அடிமைக்கு) அயலான
சதுப்பேதிமாரில்–நான்கு வேதங்களையு மோதின அந்தணர்களைக் காட்டிலும்.
குடிமையில் கடைமைபட்ட –குடிப்பிறப்பினால் இழிவடைந்த இழிமுலத்திற் (பிறந்த மிகவும்)
குக்கரில்–பரம சண்டாள ஜாதியில்
பிறப்பர் ஏனும்–பிறப்பர்களானாலும்
மொய் கழற்கு–(உனது) நெருங்கிய திருவடிகளிடத்து
அன்பு செய்யும்–பக்தி செய்கின்ற
அடியரை–அடியார்களையே
உகத்தி போலும் –நீ விரும்புவாய் போலும்
விளக்க உரை
மேன்மைக்குக் காரணம் –
எம்பெருமான் பக்கல் தொண்டு பூண்டு ஒழுகுவதே தவிர, உயர்குடிப்பிறப்பு அன்று.
அவ்வாறு தொண்டுபூண்டு ஒழுகாமலிருப்பதே தாழ்ச்சிக்குக் காரணம்;
இழிகுலப்பிறப்பு அன்று,
ஆகையால் யோநிஜந்மத்தைச் சிறிதும் பாராட்ட வேண்டாவென்க.
குடிமை-
குடிப் பிறப்பிற்கு ஏற்ற நல்லொழுக்கம்.
அயலாதலாவது ‘
எம்பெருமானுடைய கைங்கர்யத்தைச் செய்தற்கு அநுகூலமாக வேதமோதுகிறோம் என்று அறியாதிருக்கை.
அத்யயநத்திற்குப் பலன் வேதத்தின் பொருளை உள்ளபடி அறிந்து நடப்பதுதான்’ என்று உணராதவர்கள்
நான்கு வேதங்களிலும் வல்லவரானாலும் பயனில்லை என்பது முதலடியில் விளங்கும்.
சதுப்பேதிமார் -சதுர் வேதிமார்; இருக்கு, யஜூஸ், ஸாமம், அதர்வணம் என்ற
நான்கு வேதங்களை ஓதினவர்களென்கை.
குக்கர் – மிகவும் தாழ்ந்தவர் என்பது பொருள்
(க்ஷுத்ர) என்ற வடசொல் குக்கர் எனத்திரிந்தது.
ஏனும்-எனினும் என்பதன் மரூஉ.
——————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.