ஸ்ரீ திரு மாலை-31–தவத்துள்ளார் தம்மில் அல்லேன்–ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

தவத்துள்ளார் தம்மில் அல்லேன் தனம் படைத்தாரில் அல்லேன்
உவர்த்த நீர் போலே என்தன் உற்றவருக்கு ஒன்றும் அல்லேன்
துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கறத் துரிசனானேன்
அவத்தமே பிறவி தந்தாய் அரங்க மா நகர் உளானே

பதவுரை

அரங்கமா நகருளானே!–;
தவத்துளார் தம்மில் அல்லேன் –தபஸ்ஸை அனுஷ்டித்தவர்களில்
தனம் படைத்தாரில் அல்லேன்–(ததீயாராதனம் முதலியவற்றுக்காகப்) பொருள் ஸம்பாதித்தவர்களிலும் சேர்ந்தவனல்லேன்;
என்றன் உற்றவர்க்கு–என்னைச் சேர்ந்தவர்களுக்கு
உவர்த்த நீர் போல–உப்புத் தண்ணீர் போல
ஒன்றும் அல்லேன்–ஒன்றுக்கும் உதவாதவனாயிரா நின்றேன்.
துவர்த்த செவ்வாயினார்க்கே–பழுப்பேறின அதரத்தையுடைய மாதர்கட்கும்
துவக்கு அற–ஸம்பந்தம் அற்றுப் போம்படி
துரிசன் ஆனேன்–கள்ளனாயினேன்
(இப்படிப்பட்ட எனக்கு)
பிறவி அவத்தமே தந்தாய்–ஐந்மத்தை வ்யர்த்தமாகவே கொடுத்தாய்

விளக்க உரை

தவமாவது – சரீரத்தை வருத்தப்படுத்திச் செய்யும் காரியம்;
முமுக்ஷுக்களாயிருப்பார் மோக்ஷார்த்தமாகத் தவம் புரிவர்கள்;
புபுக்ஷுக்களாயிருப்பார் ஸ்வர்க்கம் முதலிய ப்ரயோஜ நாந்தரங்களைக் குறித்துத் தவம் புரிவார்கள்;
நான் ஒருவிதமான தவமும் செய்திலேன்.

ஸத்விஷயத்திலே விநியோகப்படுகிற தனத்தை நான் படைக்கவில்லை என்கிறார்
‘தனம் படைத்தாரிலல்லேன்’ என்பதனால்.
“பொருள் கையுண்டாய்ச் சொல்லக்காணில் போற்றி யென்றேற்றெழுவர்” (திருவாய்மொழி – கூ- 1-3) என்றபடி
கையில் நாலுகாசு நடமாடுமளவு கழிந்தால் பந்துக்களும் நோக்கமாட்டார்களென்ற
கருத்துடன் இரண்டாமடி அருளிச்செய்கிறார்.
உவர்த்த நீர் போல உப்புத் தண்ணீரை முகத்திலே இறட்டிக்கொண்டால் கண்விழிக்க வொண்ணுதபடி
கரிக்குமாபோலே ஏன்னை அவர்கள் நேர்முகம் பார்க்கமுடியாதபடி அவர்கட்கு நான் தீயனாய்விட்டேனென்கை.

இப்பாசுரத்திற்கு உள்ளுறை பொருள் :-
(தவத்துளார் இத்யாதி) உன்னுடைய நிர்ஹேதுக விஷயீகாரத்துக்கு விரோதியாக
நான் ஒரு ஸ்வப்ரவ்ருத்தியும் செய்யவில்லை:
கையில் காசுள்ளவனாயிருந்தேனாகில் ஆகிஞ்சந்யத்தில் குறையுடையேனாவேன்; அங்ஙனுமில்லை;
அகிஞ்சநர்களில் தலைவனாயிராநின்றேன்.

கொண்டபெண்டிர் மக்களுற்றார் சுற்றத்தவர் என்ற ஆபாஸபந்துக்களோடே போதுபோக்காநின்றேனாகில்
“சேலேய்கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாத்தாய் தந்தையுமவரே யினியாவாரே” என்னும்
நிலைவாய்ந்த பிறகு நாம் கைப்பற்றுவோமென்று நீ ஆறியிருக்கலாம்; அங்ஙனுமில்லை:

பந்துக்களுக்கு என்னால் ஆகக் கூடிய நன்மை ஒன்றுமில்லாமையாலே அவர்கள் என்னை விட்டொழிந்தனர்;

சேலேய்கண்ணி யரிடத்தும் நான் கள்ளனாய்ப் போந்தபடியாலே அவர்களும் என்னைத் துரத்திவிட்டனர்.

இனி உன்னுடைய விஷயீகாரம் இடையூறின்றி உள்புகுரலாமென்றவாறு.

இந்த உள்ளுறை பொருளுக்கு நான்காமடியோடே ஸங்கதி எங்ஙனேயென்னில்:
இப்படி உன் விஷயீகாரத்திற்கு நான் உசிதனுயிருக்கச்செய்தேயும்
என்னை நீ உபேக்ஷிப்பதால் என்னை நீ வீணே படைத்தாயிறே என்கிறார்.
அவத்தம் -அவத்யம் என்ற வடசொல் விகாரம்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading