ஸ்ரீ திரு மாலை-33–மெய் எல்லாம் போகவிட்டு–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

மெய் எல்லாம் போகவிட்டு விரி குழலாரில் பட்டு
பொய் எல்லாம் பொதிந்து கொண்ட போழ்கனேன் வந்து நின்றேன்
ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால்
பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்யனேனே –

பதவுரை

மெய்எல்லாம்–மெய்யான (நினைவு, சொலவு, செயல் ஆகிய ) எல்லாவற்றையும்
போகவிட்டு–நீக்கி விட்டு
விரி குழலாரில் பட்டு–விரிந்த கூந்தலையுடைய மாதர் திறத்தில் ஆழங்காற்பட்டு (அகப்பட்டு)
பொய் எல்லாம்–எல்லா விதமான பொய்களையும்
பொதிந்து கொண்ட–நிறைத்துக் கொண்டிருக்கிற
போழ்க்கனேன்–க்ருத்ரிமனான அடியேன்
ஐயனே–ஸ்வாமின்!!
அரங்கனே!-;
உன் அருள் என்னும் ஆசை தன்னால்–தேவரீருடைய க்ருபையிலே யுண்டான ஆசையினாலே
வந்து நின்றேன்-;
(நான் எப்படிப்பட்டவனென்றால்)
பொய்யனேன் பொய்யனேன் பொய்யனேன் –மனமொழி மெய்களாகிற மூன்று கரணங்களிலும் பொய்யன்;
வந்து நின்றேன்–(தேவர் திருமுன்பே வெட்க மற்று) வந்து நின்றேன்.

விளக்க உரை

தம்முடைய தாழ்வுகளை வாயாறச் சொல்லி கதறி தேவரீர் உடைய கருணை
யொன்றைய எதிர்பார்திருப்பவ னடியேன் என்கிறார்.

மனம், மொழி, மெய், என்கிற முக்கரணங்களிலும் சத்தியம் நிலையாய் இருக்கப் பெற்ற
உத்தமாதிகாரியாய் இருக்க முடியாமற் போனாலும் ஏதாவது ஒரு காரணத்திலாவது சத்தியமாய் இருக்கலாம்;
அப்படிப்பட்ட நிலைமையும் எனக்கு இல்லை;
விஷயாந்தர ப்ராவண்யத்தாலே பொய் தவிர வேறுயில்லாதவனாயிராநின்றேன்.
ஆயினும் “தேவரீருடைய திருவருள் இருக்குமானால் நமக்கொரு குறைவுமில்லை” என்கிற
விச்வாஸமொன்று மாத்திரம் என்னிடத்தில் உள்ளதாதாலால்
அக்கருணையிலுள்ள நசையாலே,
வெட்கமும்
அச்சமுமற்றுத் திருமுன்பே வந்து நின்றேன் என்கிறார்.

போழ்க்கன் – முறை கேடன், வழிதப்பினவன்.
‘போட்கன்’ என்றலுமுண்டு.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading