மழைக்கன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுரவாறே
உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையில் பட்டு
உழைக்கின்றேற்கு என்னை நோக்காது ஒழிவதே யுன்னை என்னே
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி அரங்க மா நகர் உளானே –
பதவுரை
அன்று–(இந்திரன் பசிக்கோபத்தாலே ஏழு நாள் விடா மழை பெய்வித்த) அக் காலத்திலே
முன்–(பசு முதலியவை மழையினால் கஷ்டமடைவதற்கு) முன்பாகவே
மழைக்கு–மழையைத் தடுப்பதற்காக
வரை ஏந்தும் மைந்தனே–கோவர்த்தன பர்வதத்தை (கையில் குடையாக) ஏந்திய மிடுக்கை யுடையவனே!
மதுர ஆறே–இனிய ஆறு போல் எல்லார்க்கும் விடாயைத் தீர்ப்பவனே!
உழைக் கன்று போல நோக்கம் உடையவர்–மான் குட்டியின் விழி போன்ற விழியை யுடைய மாதர்களின்
வலையுள்–(அந்த நோக்காகிற) வலையினுள்ளே
பட்டு–அகப்பட்டு
உழைக்கின்றேற்கு என்னை–துடிக்கிற என்னை
நோக்கா தொழிவதே–கடாக்ஷியாம லிருப்பதும் தகுதியோ?
ஆதி மூர்த்தி–முழுமுதற் கடவுளே!
அரங்கமா நகருளானே!-;
உன்னை அன்றே -தேவரீரை நோக்கி யன்றோ
அழைக்கின்றேன் –நான் கூப்பிடா நின்றேன்.
விளக்க உரை
பேறு பெறுவதில் விரைவு மிகுதியாலே ஆற்றாமை கரை புரண்டு பெரு மிடறு செய்து கூப்பிடுகிறார்.
இந்திரன் பசிக் கோபத்தாலே ஏழு நாள் விடா மழை பெய்வித்து வருத்தப் படுத்தின காலத்தில்
கோவர்த்தந கிரியைக் கொற்றக் குடையாக வெடுத்து ஆயரையும் ஆநிரையையும் காத்தருளினவனன்றோ நீ;
அப்படி அவர்களைக் காப்பதற்கு அவர்களிடத்தில் என்ன குணம் கண்டுபிடித்தாய்?
அவ்விடையருடைய கோஷ்டியிலாவது
பசுக்களின் திரளிலாவது
அடியேனையும் சேர்த்துக்கொள்ளலாகாதா? என்னும் இரக்கப் பொருள் தோன்ற
மழைக்கன்று வரைமுனேந்தும் மைந்தனே! என்கிறார்.
மதுர ஆறே! –
ரக்ஷித்தருளாமல் உபேக்ஷித்த போதிலும் உன்னை விட முடியவில்லையே! என்பது கருத்து.
ஆறானது ஏரி, குளம் முதலியவை போலே ஒரிடத்திலேயே இராமல்
நாநா தேசங்களிலும் போய்ப் பெருகுவது போல்
எம்பெருமான் அடியார் இருக்குமிடங்களிலெல்லாம் போய் ஸேவை ஸாதித் தருள்கின்ற ஸௌலப்யமும்
இந்த முற்றுவமையால் தோற்று மென்க.
“உன்னையன்றே யழைக்கின்றேன்” என்றவாறே
எம்பெருமான்
“ஆழ்வீர்! நீர் அழைத்தவுடனே நான் ‘ஏன்?’ என்ன வேணுமோ? என்ன ஆவச்யகதை? என்று கேட்க,
ஆதிமூர்த்தி என்கிறார் –
இவ்வுலகம் உரு மாய்ந்து கிடந்த காலத்திலே ஒருவருடைய அபேக்ஷையும் எதிர்பாராமல்
இவற்றை உண்டாக்கின உனக்கு இவற்றின் ரக்ஷணம் அவஸ்ய கர்த்தவ்யமன்றோ என்கை.
——————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.
Leave a Reply