தமக்கு ஒருவிதத்தாலும் ‘பேறு தப்பா’ தென்று நிச்சயித்து
விசாரமற்றிருப்பதற்கு
இடமில்லாமையை விரிய உரைக்கும் பாசுரம் இது.
ஊரிலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
கார் ஒளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்க மா நகர் உளானே –
பதவுரை
பாரில்–இந்தப் பூமியிலே
ஊர் இலேன்–தேவரீர் உகந்திருக்கும் திருப்பதிகளிலே பிறக்கப் பெற்றிலேன்;
காணி இல்லை–(திருப்பல்லாண்டு பாடுகை முதலானவற்றுக்காக விடப்பட்ட) காணியாட்சியும் எனக்கில்லை;
உறவு இல்லை–பந்துக்களுமில்லை;
மற்று ஒருவர் இல்லை–தோழன்மார் முதலானவர்களும் ஒருவருமில்லை.
நின் பாதம் மூலம்–தேவரீருடைய திருவடிகளையும்
பற்றிலேன்–(தஞ்சமாகப்) பற்றாதவனா யிராநின்றேன்;
பரமமூர்த்தி–மிகச் சிறந்தவனே!
கார் ஒளி வண்ணனே–மேகத்தின் காந்திபோன்ற மேனி நிறமுடையவனே!
கண்ணனே–ஸ்ரீ க்ருஷ்ணனே!
கதறுகின்றேன்–(வேறு புகலற்று உன்னையே) கூப்பிடா நின்றேன்;
அம்மா–ஸ்வாமிந்!
அரங்கமா நகருளானே!-;
களை கண் ஆர் உளர்–(உன்னை யொழிய வேறு ரக்ஷகர் யார் இருக்கிறார்!
விளக்க உரை
ஊரிலேன் –
வேறு எவ்வித யோக்யதையுமில்லாமற் போனாலும் ஸாளக்ராமம், கோயில் திருமலை, பெருமாள் கோயில்
முதலிய திவ்யதேசங்களில் ஜந்மமாவது கிடைத்தால் அதைக் கொண்டு உய்வு பெறலாம்.
அப்படிப்பட்ட ஒரு தேசத்திலும் எனக்குப் பிறவி நேரவில்லையே!
காணி யில்லை.–
திவ்யதேசத்தில் ஐந்மமில்லாவிடினும் உதரபோஷணார்த்தமாக ஏதாவது கொஞ்சம் க்ராம பூமிகள் ஏற்பட்டிருந்தால்
அங்குப் போக வேண்டிய காலங்களில் யாத்ருச்சிகமாக இடையிலே ஒரு திவ்யதேவஸேவை கிடைக்கக்கூடும்
அப்படிப்பட்ட ப்ரஸக்தி நேருவதற்கு ஒரு குழியளவு காணியுமில்லை யென்கிறார்.
இவையொன்றுமில்லையாகிலும்
திவ்யதேசவாஸிகளோடு உறவு இருக்குமாகில்
பந்து க்ருத்ய பரிபாலனத்துக்காகச் சிலகாலம் அங்குப்போகவும்
அதடியாக பகவத்ஸேவை கிடைக்கவும் ப்ரஸக்தியுண்டு;
அப்படிப்பட்ட உறவினர்களும் எனக்கில்லை.
ஆனபின்பு ஒரு வழியிலும் உன்னைப்பெற உபாயமில்லாமையாலே “ நின்பாத மூலம் பற்றிலேன்” என்கிறார்.
இப்படி ஒரு கைம்முதலுமில்லாதவனென்ற காரணத்தினால் என்னை நீ விடலாகாது;
கெட்டுப்போன உடைமையைப் பெறுவதற்கு உடையவன் முயற்சி செய்யுமாபோலே
கெட்டுப் போன அடியேனைப் பெறுவதற்கு நீர் முயலவேண்டும்படியான இங்கொழிக்க வொழியாத உறவு
இருப்பதை நோக்கவேணுமென்கிறார்,
பரமமூர்த்தி என்று தொடங்கி.
——————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.