தாம் இப்படி கதறா நிற்கச் செய்தேயும் பெரியபெருமாள் இரங்கி அஞ்சேல்” என்னக் காணாமையாலே,
தம்மையொழிய வேறே ஒரு சுற்றத்தவர் எனக்கு இருப்பதாக நினைத்திருக்கிறாரோ?
ப்ரயோஜநாந்தரங்களை விரும்பி அகன்று போகிறேனென்று நினைத்திருக்கிறாரோ?
‘நம்முடையவன்’ என்று என்னைச் சிறிது அபிமாநித்தால் போதுமாயிருக்க
இவ்வளவுகூட அபிமாநியாமல் கூக்குரல் கேட்டுக்கொண்டே கண்ணுறங்குவதே! அம்மே!
இவர் திருவுள்ளம் இப்போது இங்ஙனே கொடிதாயிற்றே! என்று வருந்துகின்றார்.
தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திரு வரங்கத்துள் ஓங்கும்
ஒளி யுளார் தாமே அன்றே தந்தையும் தாயும் ஆவார்
எளியதோர் அருளும் அன்றே என் திறத்து எம்பிரானார்
அளிய நம் பையல் என்னார் அம்மாவோ கொடியவாறே –
பதவுரை
தெளிவு இலா கலங்கல் நீர் சூழ்–(ஒரு காலும்) தெளிவில்லாமல் கலக்கம் மாறாதிருக்கிற காவேரியாலே சூழப் பெற்ற
திரு அரங்கத்துள் –கோயிலிலே
ஓங்கும் –விஞ்சி யிருக்கிற
ஒளி உளார் தாமே அன்றே–தேஜஸ்ஸை உடையவரான அழகிய மணவாளனொருனே யன்றே
தந்தையும் தாயும் ஆவார் –(நமக்குத்) தகப்பனும் தாயுமாயிருப்பர்;
என் திறத்து–(அவர்) என் விஷயத்தில் (செய்தருள வேண்டுவது)
எளியது ஓர் அருளும் அன்றே–ஸாமான்யமான ஒரு க்ருபா மாத்திரமே யன்றே?
எம்பிரானார்–எனக்கு உபகாரகரான அவர்
நம் பையல் அளியன் என்னார்–“நம்முடைய பையலான இவன் நமது கருணைக்கு உரியன்” என்று திருவுள்ளம் பற்றுகிறாரில்லை;
அம்ம ஓ கொடிய ஆறே–கொடுமையா யிராநின்ற தீ!
விளக்க உரை
காவேரிக்குத் தெளிவில்லாமை-
மேன்மேலும் பெருக்கு மிக்கிருக்கையாலே. இத்தெளிவில்லாமையை பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில்
ஒரு சமத்காரம் தோற்ற வருணிக்கிறார் –
“துக்தாப்திர்ஜநகோ ஜந்ந்யஹமியம்” இத்யாதி ச்லோகத்தால் .
அதன் கருத்து-
பாற்கடல் தகப்பனார்;
பொன்னி என்ற நான் தாய் ;
ஸ்ரீரங்கநாய்ச்சியார் பெண்;
பெரிய பெருமாள் மணவாளன்;
இந்த விஷயத்திலே பெரிய பெருமாளுக்கும் பெரியபிராட்டியார்க்கும் தகுதியாக
நான் என்ன பண்ணப்போகிறேன்? என்று கலங்கினாற்போல,
சாமரம், கருப்பூரம், சந்தந வ்ருக்ஷங்கள், சிறந்த ரத்நங்கள், முத்துக்கள் முதலியவற்றை
அலைகளாகிற கைகாலே உந்தா நின்று கொண்டு ஆழ்ந்து வருகிற காவேரியைப் பற்றுங்கள் என்பதாம்.
திருவரங்கத்துள் ஓங்குமொளியுளார் என்றது –
பரமபதம் முதலிய இடங்கில் எழுந்தருளியிருக்கு மிருப்பைக் காட்டிலும்
கோயிலிலே எழுந்தருளியிருக்கு மிருப்பிலே உள்ள அதிசயம் தோற்ற.
விபீஷணாதிகிளை ரக்ஷித்தாற்போலே வில்லும் கோலுமெடுத்து ரக்ஷிக்க வேண்டியதில்லை;
குளிர ஒருகால் நோக்கியருளினால் என்தாபம் தீரும் என்ற கருத்துப்பட அருளிச்செய்கிறார்
எளியதோரருளுமன்றே என்திறத்து என்று.
எம்பெருமான் சோதிவாய்திறந்து
‘ ஆழ்வீர்’ என்றழைக்க வேணுமென்று இவர் ஆசைப்படுகின்றாரில்லை,
‘அடே பையா’ என்று ஒரு இன்சொல் சொல்லக்கேட்க விரும்புகின்றாரித்தனை.
——————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.
Leave a Reply