ஸ்ரீ திரு மாலை-38—மேம்பொருள் போக விட்டு –ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

“அளியல் நம் பையலென்னார் அம்மவோ கொடியவாறே!” என்று கீழ்ப்பாட்டில் ஆழ்வார் வருந்தினவாறே
“இவ்விருள் தருமாஞாலத்திலே ஸ்வரூபாநு ரூபமான புருஷார்த்தத்தை அபேக்ஷிப்பதும்
அதற்காக நம் கைபார்த்திருப்பதும்
அதுக்கு மேலே விளம்பம் பொறாமல் கூப்பிடுவதும்! இதென்ன ஆச்சரியமாயிருக்கிறதே!
இப்படிப்பட்ட ஒரு உத்தமாதிகாரியைக் கிடைக்கப்பெற்றோமே!” என்று பெரியபெருமாள் திருவுள்ளம் மிகவும் ப்ரஸந்நமாய்,
அந்த ப்ரஸாதமெல்லாம் திருமுகத்திலே தோற்றும்படி யிருக்கக்கண்ட ஆழ்வார்,
“பெருமானே! தேவரீரைக் கிட்டி தேவரீர் பக்கலிலே ஸர்வபாரங்களையும் ஸமர்பித்து
நிச்சிந்தையாயிருப்பவர்களைக் கண்டால் தேவரீருடைய திருவுள்ளம் இங்ஙனேயோ மலர்ந்திருப்பது!” என்று
பெரியபெருமாள் திருமுகத்தை நோக்கி விண்ணப்பம் செய்கிறார்.

மேம்பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம்பரி சறிந்து கொண்டு ஐம்புலன் அகத்தடக்கிக்
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத் தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே

பதவுரை

புனல் சூழ் அரங்கத்தானே –காவிரி சூழ்ந்த கோயிலிலே கண் வளர்ந்தருளுமவனே!
மேம்பொருள்–(ப்ராக்ருத ஜநங்கள்) விரும்புகிற லெளகிக பதார்த்தங்களை
போக விட்டு–வாஸகையோடு விட்டிட்டு
மெய்ம்மையை–ஆத்ம ஸ்வரூபத்தை
மிக உணர்ந்து–உள்ளபடி அறிந்து
ஆம் பரிசு–ஸ்வரூபாநுரூபமான ஸமாசாரங்களையும்
அறிந்து கொண்டு-தெரிந்து கொண்டு
ஐம்புலன்–ஐந்து இந்திரியங்களையும்
அகத்து அடக்கி–(விஷயாந்தரங்களில் போக வொட்டாமல்) தம்முள்ளே பதிய அடக்கி,
காம்பு அற–அடியோடே
தலை சிரைத்து–தன் தலையிலுள்ள சுமையைத் தொலைத்து
உன் தலைக்கடை இருந்து –உனது திருவாசலிலே (காவலாளராக) வாஸஞ்செய்து
வாழும்–உஜ்ஜீவிக்கின்ற
சோம்பரை–(தம்முடைய ஹிதத்தில்) சோம்பியிருக்குமவர்களை
உகத்தி போலும்–உகக்குமவனல்லையோ நீ.

விளக்க உரை

மேம்பொருள் என்பதற்கு
மேலெழுந்த பொருளென்றும்,
மேவின பொருளென்றும்,
மேம்பாட்டை விளைக்கும் பொருளென்றும், மூன்றுபடியாக நிர்வாஹம்;

கருமங்கள் காரணமாக வந்தேறியாய் பகவத்விஷய உணர்ச்சி வந்தவாறே
விட்டகலும்படியாயிருக்கும் பொருள்-மேலெழுந்த பொருள் எனப்படும்.
அதாவது
ஸம்ஸாரஸம்பந்தம்.

மேவின பொருளாவது-
சிக்கன ஒட்டிக்கொண்டிருக்கும் பொருள்;
சேதநனால் பிரிக்கவெண்ணாதபடியிருக்கை.
அதாவது
தேஹஸம்பந்தம்,
அவித்யா ஸம்பந்தம்.

மேம்பாட்டை விளைக்கையாவது-
தன்னைப் பற்றினாரை ஸர்வஜ்ஞராக அபிமாநித்திருக்கும்படி பண்ணவற்றாகை.
அப்படிப்பட்ட பொருளாவது-ப்ரக்ருதி ப்ராக்ருத பதார்த்த ஸம்பந்தம்; ஆ
கிற இவற்றை வாஸநையோடே ஒழித்து, தேஹத்தை ஆத்மாவென்று நினைக்கை.
தேஹத்தைப்பற்றின ப்ராக்ருத பதார்த்தங்களில் ‘இவை என்னுடையவை’ என்கிற மமதாபுத்தி
தேஹத்திற்காட்டில் வேறுபட்ட ஆத்மாவில் ஸ்வாதந்திரியபுத்தி முதலியவற்றை அடியோடு ஒழித்து என்றபடி.

அதற்குமேல் ஆத்மஸ்வரூபத்தை உள்ளபடி உணரவேணும்:
அதாவது ஆத்மா ஸ்வயம் ப்ரகாசன்,
நித்யன், உணர்வைக் குணமாகவுடையவன்: அணுபரிமாணன்,
எம்பெருமானுக்கு அநந்யார்ஹ சேஷபூதன்,
அந்த சேஷத்வத்தை பாகவதரளவும் உடையவன் என்றிங்ஙனே விரிவாக உணருகை.

ப்ரக்ருதி ப்ராக்ருதங்கள் ஹேயம் என்றறிந்து ஆத்மாவையும் உள்ளபடி யறிந்த
பிறகு பின்னையும் ஆம் பரிசு அறிந்துகொள்ளுகையாவது –
கைங்கரியமே புருஷார்த்தம் என்றறிக்கை.

ஐம்புலனகத்தடக்குகையாவது-
எம்பெருமானுக்குப் பண்ணும் கைங்கரியத்தில் ஸ்வப்ரயோஜநத்வபுத்தி பிறவாதபடி நோக்குகை.
“தனக்கேயாக எனைக்கொள்ளுமீதே” என்றபடி.
எம்பெருமானுக்கே இனிதாகப் பண்ணும் கைங்கர்யமே புருஷார்த்தம் ஸூக்ஷ்மார்த்தம் இங்கு உணரத்தக்கது.

காம்பு அறத் தலைசிரைத்து –
உபாயாந்தரங்களில் தனக்குள்ள பற்று அறும்படி தன் தலையிலுண்டான துரிதங்களைப்போக்கி.
அதாவது
பேற்றுக்கு எம்பெருமான் ஸாதநமே யொழிய நாம் செய்யும் க்ரியாகலாபங்களொன்றும் ஸாதநமல்ல என்று
உறுதியான அத்யவஸாயம் வஹித்து என்றபடி.
அஹங்கார கர்ப்பமான உபாயாந்தரங்களின் விடுகையைச் சொன்னபடி.

இப்படி பரமைகாந்திகளாய் எப்போதும் உன் திருவாசலையே பற்றிக்கிடந்து வாழுஞ் சோம்பராகிய
பரமபாகவதர்கள் விஷயத்திலே தேவரீர் திருவுள்ளம் உப்ந்திருக்கும்படியே! என்று வியக்கிறபடி.

வாழும் சோம்பர் என்றது
கெடுஞ்சோம்பரை வ்யாவர்த்திக்கிறது.
கெடுஞ்சோம்பராவார் ஈச்வரனில்லை, சாஸ்த்ரமில்லை, பரலோகமில்லை என்றாற்போலே
எல்லாவற்றையும் இல்லைசெய்து
விஹிதகர்மங்களை அநுஷ்டியாமல் தோன்றிற்றுச் செய்து சோம்பேறிகளாய்த் திரிவார்.

வாழுஞ் சோம்பராவார்-
சாஸ்த்ரத்தில் நாஸ்திகராய்க் கர்த்தவ்யங்களை விடுகையன்றிக்கே
ஆஸ்திகசிகாமணிகளாய் ஸித்தோபாயமான எம்பெருமானை ஸ்வீகரித்து
அவ்வெம்பெருமானுடைய அநுபவமே காலக்ஷேபமாய்த்
தமது ஹிதத்தைத் தாமே தேடிக்கொள்ளுவதில் சோம்பியிருப்பவர்கள்.

உகத்தி- முன்னிலையொருமை வினைமுற்று

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading