Archive for the ‘கம்பராமாயணம்’ Category

அகலிகை–‘நெஞ்சினால் பிழைப்பிலாள்’: – கம்ப வாரிதி இலங்கை.ஜெயராஜ்-

April 10, 2023

லகம் தழுவிய இராமகாதை என்னும் விரிந்த கடலுள்,
கம்பனால் அமைக்கப்பட்ட அற்புதப் பாத்திரங்கள் எனும் அரிய முத்துக்கள்,
பலப்பலவாய் சிதறிக் கிடக்கின்றன.
அம் முத்துக்களுள் சில பெரியவை, சில சிறியவை.
பெரியதான முத்துக்கள் நம்மைக் கவர்வது இயற்கையே.
அபூர்வமாய் சில சிறிய முத்துக்கள்,
பெரிய முத்துக்களை விட நம் மனதைக் கவர்ந்து விடுகின்றன.
அங்ஙனம், கம்பனால் அழகுற அமைக்கப்பட்டு,
நம் மனங் கவர்ந்து நிற்கும் ஒரு சிறிய முத்தாய்,
அகலிகை பாத்திரம் அமைந்து விடுகிறது.
♠♠♠♠♠
தமிழிலக்கியப் பரப்பில் அகலிகைக் காதை, பல புலவர்களாலும் பண்டு தொட்டுப் பயிலப்பட்டு வருகின்றது.
பலராலும் கையாளப்பட்ட அக் காதையை, மூல நூலான வான்மீகத்தின் வழி நின்று,
கம்பனும் தன் காவியத்துட் புகுத்துகிறான்.
இராம காதையின் விரிந்த பரப்பில், அகலிகைப் பாத்திரத்தின் அகலம் மிகச் சிறியது.
புருஷோத்தமனாக இராமனைக் காட்டும் புலவனின் நோக்கத்திற்கு, துணை செய்து நிற்பதோடு,
அகலிகைப்பாத்திரத்தின் தேவை, கம்பகாவியத்தைப் பொறுத்தவரை முடிந்து போகிறது.

அது தவிர,
கதைப் போக்கிலோ காவிய ஓட்டத்திலோ, இப் பாத்திரத்தின் பாதிப்பு, இல்லையென்றே சொல்லும்படியானது.
அகலிகையோடு தொடர்புடைய இரண்டு பாத்திரங்கள், இராமகாதையில் வந்து போகின்றன.
அகலிகையின் கணவரான, கௌதம முனிவர் எனும் பாத்திரம்,
ஜனகரின் குலகுருவாய்த் திகழும், அகலிகையின் புதல்வரான,
சதானந்த முனிவர் எனும் பாத்திரம் என்பவையே அவ்விரண்டு பாத்திரங்களுமாம்.
அகலிகைக் காதை மட்டுமன்றி, அதனோடு தொடர்புடைய மற்றைய இரு பாத்திரங்களுங்கூட,
பால காண்டத்தோடு நிறைவுறுகின்றன.

இவ் அகலிகையின் கதை, இருபத்தெட்டுப் பாடல்களில் அமைக்கப்பட்டு, அகலிகைப் படலமாய்,
கம்பராமாயணப் பாலகாண்டத்தில் இடம்பெறுகிறது.

இவ் இருபத்தெட்டுப் பாடல்களுள்,
ஆறு பாடல்கள் தனித்த வர்ணனைகளாய் அமைவன.

பதினைந்து பாடல்கள் இராம காவியத்தோடு அக் கதை இயையுமாற்றைக் கூறுவன.

சர்ச்சைக்குரியதான அகலிகையின் வரலாறு, விசுவாமித்திர முனிவனின் கூற்றாய்,
ஏழே பாடல்களில் கம்பனாற் சொல்லப்படுகிறது.
அவ்வேழு பாடல்களிற் கம்பன் செய்யும் நுட்பங்களை ஆராயுமுன்,
கம்பகாவியத்தில் அகலிகைப்படலம் கூறும், நிகழ்வுகளின் சுருக்கத்தை முதலிற் காண்பாம்.
♠♠♠♠♠
முதலில், இலக்கியப் பரிச்சயம் குறைந்த இளைஞர்க்காய், அகலிகையின் கதைச் சுருக்கம் ஒரு சில வரிகளில்.

கௌதம முனிவரின் மனைவியான அகலிகை,அழகிற் சிறந்தவள்.
அவள் அழகு உலகெங்கும் பேசப்படுகின்றது.-தேவேந்திரன் அவள் அழகு கண்டு மயங்குகிறான்.
பிறனில் விழையும் அறமற்ற பெருவிருப்பு உந்த, அகலிகையை அனுபவிக்கத் திட்டமிடுகிறான்.

ஒருநாள் அதிகாலை விடிவதன் முன், கௌதம முனிவர், நித்திய கருமங்கள் நிறைவேற்ற,
நீர் நிலை நோக்கிச் செல்கிறார்.
முனிவரில்லா அச் சூழ் நிலையைப் பயன் படுத்தி, கௌதமரின் வடிவம் கொண்டு,
ஆச்சிரமத்தினுள் நுழைகிறான் இந்திரன்.
வந்தது கணவனே என நினைந்து, இந்திரனின் வஞ்சனைக்குப் பலியாகி, தன்னை இழக்கிறாள் அகலிகை.

நீர்நிலை சென்ற கௌதமர் நிகழ்ந்தது உணர்ந்து, ஆத்திரத்துடன் ஆச்சிரமம் திரும்புகிறார்.
முனிவரின் வருகை யுணர்ந்து, இந்திரன் பூனையாய் மாறி ஓட, அவனைச் சபித்து,
கலங்கி நிற்கும் அகலிகையையும், கல்லாகச் சாபமிடுகிறார் அவர்.

அகலிகை வருந்தி வேண்ட,
‘தசரத குமாரனான இராமன் கழற் துகள் பட, மீண்டும்  பெண்ணாவாய்!’ என,
சாப விமோசனம் உரைத்துக் கௌதமர் செல்கிறார்.

பின்னாளில்,
வேள்வி காக்க விசுவாமித்திரரோடு இராமன் காடேகிறான்.
யாகம் முடிந்து, மிதிலை செல்லும் வழியில், அவன் கழற்துகள் பட்டு, கல்லாய்க் கிடந்த அகலிகை,
சாபம் நீங்கிப் பெண்ணாகின்றாள்.

பின், அகலிகையைக் கௌதமரிடம் சேர்ப்பித்து, விசுவாமித்திரரும், இராம  இலக்குவரும் மிதிலை சேர்கின்றனர்.
இதுவே, கம்பன் தரும் அகலிகைக் காதையின் சுருக்கம்.
♠♠♠♠♠
மேற்சொன்ன அகலிகைக் காதையை, கம்பன், பின்னோக்கும் உத்தியால் உரைக்கத் தலைப்படுகிறான்.
தசரதனிடம், இராம லட்சுமணர்களை வேள்வி காக்க வேண்டிப் பெற்று, காடேகிறார் விசுவாமித்திரர்.
வழியில் இராமனால் தாடகை வதம் நிகழ்த்தப் படுகிறது.
பின், இராம லட்சுமணர்கள் அரக்கர்களை அழித்து முனிவரின் வேள்வி காத்து வெல்கின்றனர்.
அதன் பின், இராமலட்சுமணர்களை அழைத்துக் கொண்டு, ஜனகனின் வேள்வி காணப்புறப்படுகிறார் விசுவாமித்திரர்.

இவ்விடத்திலேயே, கம்பனின் அகலிகைப்படலம் ஆரம்பிக்கிறது.
சோனை நதிக்கரையிற் தங்கி, கங்கையைக் கண்டு மிதிலைநாடு சேரும் இவர்கள்,
மிதிலை நகரின் மதிற்புறத்தே, ஒளிரும் கல்லொன்றைக் காண்கின்றனர்.
அக்கல்லின்மேல் இராமன் கழற்துகள்பட, அது பெண்ணாகிறது.
ஆச்சரியமுற்ற இராமன், யாரிவள்? என விசுவாமித்திரரை வினவுகிறான்.
இவ்விடத்தில், அகலிகையின் வரலாறு,விசுவாமித்திரரால் விரித்துரைக்கப்படுகிறது.

அகலிகையை இந்திரன் விரும்பியமை ஒரு பாடலிலும்,
இந்திரன் கௌதம முனிவரின் வேடத்தில் வந்த செய்தி ஒருபாடலிலும்,
இந்திரனால் அகலிகை மாசுபடும் செய்தி ஒரு பாடலிலும்,
கௌதம முனிவர்வர, இந்திரன் பூனையாய் ஓடும் செய்தி ஒரு பாடலிலும்,
இந்திரற்கான கௌதமரின் சாபம் ஒரு பாடலிலும்,
அகலிகைக்கான கௌதமரின் சாபம் ஒரு பாடலிலும்,
அகலிகைக்கு முனிவர் சொன்ன சாப விமோசனம் ஒரு பாடலிலுமாக,
மொத்தம் ஏழு பாடல்களில்,
அகலிகை வரலாறு கம்பனால் உரைக்கப்படுகிறது.

இதன்பின், சாபவிமோசனம் பெற்ற அகலிகையை அழைத்துச் சென்று, கௌதம முனிவரிடம் விசுவாமித்திரர் ஒப்படைக்க,
இராமன் கௌதமரை வணங்கி, முனிவரோடு மிதிலை செல்கிறான் என்பதோடு,
கம்பனின் அகலிகைப் படலம் முற்றுப் பெறுகிறது.
♠♠♠♠♠
நம் பழைய மரபுப்புலவர்களால் மட்டுமன்றி, நவீன இலக்கியக் கர்த்தாக்களாலுங்கூட,
அகலிகைக் கதை அழகுறக் கையாளப்பட்டுள்ளது.
பலபுலவர்களாலும் பயிலப்பட்ட அவ் அகலிகைக் காதை, அப்புலவர்களின் மனப்போக்கிற்கேற்ப,
விதவிதமாய் மாற்றியுரைக்கப்பட்டது.
இந்திரனை, அகலிகையின் முன்னைக் காதலனாய் உரைப்பர் ஒருவர்.
இந்திரனின் அழகு கண்டு அவன்பால் விருப்புற்று, அகலிகை, அவனை அணைந்ததாய் உரைப்பார் மற்றொருவர்.
இருளில் வந்தது யாரென்று தெரியாமலே, அகலிகை தன்னையிழந்ததாய் உரைப்பார் வேறொருவர்.
இங்ஙனம், அகலிகைக் கதை பலவிதமாய்ப் பேசப்பட்டிருக்கிறது.
இராமகாவியத்தின் அறநிலை வழுவாமல்,தனக்கென ஒரு தனிப்பாணி அமைத்து,
கம்பன் இக்கதையை அற்புதமாய்க் கையாள்கிறான்.
அவ்வற்புதம் காண்பாம்.
♠♠♠♠♠
கம்பனில் வரும் அகலிகை, தெரிந்தே கற்பிழந்தாளா? ஏமாற்றப்பட்டாளா?
கம்ப காவியத்தினூடு அகலிகையைக் கற்போர் மனதில், இக்கேள்வி விஸ்வரூபம் எடுக்கிறது.
வந்தது இந்திரன் எனத் தெரிந்தே, அகலிகை கற்பிழந்தாள் என, ஒருசாரார் வாதிடுகின்றனர்.
அங்ஙனமன்றி,
அவள் தன்னையறியாமலே தவறிழைத்தாள் என, அடித்துப் பேசுகின்றனர் வேறு சில அறிஞர்கள்.
இவ்விருதிறத்தாரும், முரண்பட்ட தம் வாதத்திற்கு, கம்பன் கவிதையினையே சான்றாய்க் காட்டுவது,
வியப்புத்தருகிறது.
முரண்பட்ட இவ்விருதிறத்தார்க்கும், கம்பன் கவி சான்றாவது எங்ஙனம்?
ஆராய்வது அவசியமாகிறது.
மாறுபட்ட அவ்விருதிறத்தாரினதும், வாதங்களை முதலில் ஆராய்வோம்.
♠♠♠♠♠
அகலிகை தெரிந்தே கற்பிழந்தாள் என, வாதிடுவோரில் ஒரு சாரார்,
கம்ப காவியத்துட் புகாமல்,தம் அறியாமையே சான்றாக, அழுக்குகளை இரசிக்கும் தம் ஆழ்மன விருப்பினை வெளிப்படுத்தி,
கற்பனையான ஒரு வாதத்தினை முன்வைக்கின்றனர்.
அவ்வாதம் ஆராயப்படவேண்டிய ஒன்றன்று.
ஆயினும், இளையோர் மனதில் அவர்கருத்து பதியாதிருக்க, அவர்தம் வாதத்தையும் ஆராய்தல்கூட அவசியமாகிறது.
கற்பனையான அவர்தம் வாதம் தான் என்ன? காண்பாம்.

ண்மை ஒன்றைக் காண,
மூன்று பிரமாணங்களை நம் ஆன்றோர் ஏற்றுக் கொள்வர்.
மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும்,
அறிவுக் கருவிகளால் நேரே காண்பது அவற்றுள் ஒன்று. இது ‘காட்சிப் பிரமாணம்’ எனப்படும்.
தெரிந்தவை கொண்டு, தெரியாதவற்றை ஊகித்து அறிதல் மற்றொன்று.
இது ‘அநுமானப்பிரமாணம்’ எனப்படும்.
உயர்ந்தோர் கருத்தை ஏற்று, ஒன்றை ஒத்துக்கொள்வது இன்னொன்று.
இது ‘ஆகமப் பிரமாணம்’ எனப்படும்.
இவையே ஆன்றோர் ஏற்றுக் கொள்ளும் பிரமாணங்களாம்.
🌾  🌾  🌾
அகலிகை கற்புள்ளவள் என, வாதிடுவோர்தம் மேற் சொன்ன இரண்டு வாதங்களும்,
அநுமானப் பிரமாணத்தினை ஆதாரமாய்க் கொண்டு அமைந்தவை.
வாத நிலையில் அநுமானப் பிரமாணத்தினை, காட்சிப் பிரமாணத்தால் உறுதி செய்தாலன்றி,
ஒப்புதல் முடியாது.
எனவே, மேற்சொன்ன இருவாதங்களும், அகலிகையை, நல்லவளாய் உறுதி செய்ய முடியாது,
நலிவுற்று நிற்கின்றன.
🌾  🌾  🌾
இனி,
அகலிகையை நல்லவளாய் வாதிடுவோர்,
ஆகமப்பிரமாணம் ஒன்றினை எடுத்துக் காட்டி, அகலிகை நல்லவள் என உரைக்கின்றனர்.
அவ்வாகமப் பிரமாணம், விசுவாமித்திரர்; கூற்றாய் வெளிவருகிறது.
இராமனின் காற் துகள்பட்டு சாபவிமோசனமுற்ற அகலிகையை,
கௌதம முனிவரிடம் அழைத்துச் செல்கிறார் விசுவாமித்திரர்.
அவளைக் கௌதமரிடம் ஒப்புவித்து,
‘மனத்தினாற் பிழை செய்யாத இவளை ஏற்றுக்கொள்’ என, உரைக்கிறார் அவர்.
அச்செய்தியைச் சொல்லும் பாடல் இது.

‘அஞ்சன வண்ணத்தான் தன் அடித்துகள் கதுவா முன்னம்,
வஞ்சி போல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகிநின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பிலாளை நீ அழைத்திடுக! என்ன,
கஞ்சமா மலரோன் அன்ன முனிவனும், கருத்துட் கொண்டான்.’

இப்பாடலில் அகலிகையை, ‘நெஞ்சினால் பிழைப்பிலாள்’ என, விசுவாமித்திரர் கூறுகின்றார்.
பிரம்ம ரிஷியாகிய விசுவாமித்திரர், நிதானத்துடன் உரைக்கும் இக்கூற்று,
ஆகமப்பிரமாணமாய்க் கொள்ளத் தக்கதேயாம்.
‘நெஞ்சினாற் பிழைப்பிலாள்’ என, விசுவாமித்திரரைச் சொல்ல வைத்ததன்மூலம்,
அகலிகையை இந்திரன் வஞ்சித்தே கெடுத்தான் என்பதையும்,
தான் தவறுவது தெரியாமல், உடலளவில் மாத்திரமே அகலிகை கெட்டுப்போனாள் என்பதையும்,
அதனாற்றான் அவளுக்கு இராமனால் சாபவிமோசனம் கிட்டியது என்பதையும்,
கம்பன் நமக்கு உணர்த்துகிறான் என உறுதிபட இவர்கள் உரைப்பர்.
அகலிகையை நல்லவளாய்க் காட்ட முயலும் இவ்வாதம், வலிமையானதாகவே தோன்றுகிறது.
🌾  🌾  🌾
அகலிகை,
தெரிந்தே தவறிழைத்தாள் என உரைப்போர், மேற்சென்ன வாதத்தினை ஏற்க முடியாதென்பர்.
தம்மறுப்புக்கு ஆதாரமாய், கவிக்கூற்றாய் அமையும் கம்பனின் பாடலொன்றை,
அவர்கள் எடுத்துக் காட்டுவர்.
அவர்தம் வாதத்தை வலிமையாக்கும், அக்கம்பன் கவியைக் காண்பாம்.
🌾  🌾  🌾
கௌதம முனிவர் வேடத்தில் வந்த இந்திரன், அகலிகையைத் தன் விருப்புக்கு ஆளாக்க,
அவளும் அவனாசைக்கு உடன்படுகிறாள்.
இந்நிலையில், நீர் நிலைக்குச் சென்ற கௌதமன், சூழ்நிலையின் மாற்றத்தை உணர்ந்து,
தான் ஏமாற்றப்பட்டதறிந்து விரைந்து திரும்புகிறான்.
மேற்செய்திகள் கம்பனால் சொல்லப்படும் பாடல் இது.

‘புக்கு, அவளோடும், காமப் புதுமண மதுவின் தேறல்
ஒக்க உண்டிருத்தலோடும், உணர்ந்தனள்; உணர்ந்தபின்னும்,
‘தக்கது அன்று|’ என்னஓராள்; தாழ்ந்தனள் இருப்ப, தாழா
முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும், முடுகி வந்தான்.’

🌾  🌾  🌾
மாறு வேடத்தில் வந்த இந்திரன், அகலிகையை அனுபவிக்கும் செய்தியை,
இப்பாடலில் முதல் ஒன்றரை வரிகள் சொல்கின்றன.
புக்கு, அவளோடும், காமப் புதுமண மதுவின் தேறல் ஒக்க உண்டு இருத்தலோடும்|,
இந்திரன், அகலிகையைச் சேர்ந்து,தன் நீண்டநாட் காமவேட்கையைத் தீர்க்க முனைகிறான்.
எல்லையற்ற இன்பநாட்டம் கொண்ட அவ் இந்திரன், தேவமாதரிடம் பெறாத புதிய இன்பத்தை,
அகலிகையிடம் காண்கிறான் எனும் கருத்தை, இவ் ஒன்றரை வரிகளும் நமக்கு உணர்த்துகின்றன.
இது, இப்பாடலூடு தெரியும் இந்திரனின் மனநிலை.
🌾  🌾  🌾
இனி, நாம் அகலிகையின் மனநிலையைக் காண்போம்.
கம்பன் பாடல் அவள் மனநிலையைத் தெளிவுபடப் பேசுகிறது.
‘உணர்ந்தனள்; உணர்ந்த பின்னும், ‘தக்கது அன்று|’ என்ன ஓராள்; தாழ்ந்தனள் இருப்ப,
தன்னைச் சேர்பவன் இந்திரன் என அகலிகை உணர்ந்தாள் என்றும்,
உணர்ந்த பின்பும் அது தக்கதான செயலல்ல என அறிந்து, அச்செயலை அவள் விலக்கினாளல்லளென்றும்,
இந்திரனின் விருப்புக்கு ஆட்பட்டுத் தாழ்ந்தனள் என்றும், இவ்வடிகளிற் தெளிவுபடச் செய்தி சொல்லப்படுகிறது.
இவையே இப்பாடல் தரும் செய்திகளாம்.
🌾  🌾  🌾
இப்பாடலை ஆதாரம் காட்டியே,தெரிந்தே அகலிகை கற்பிழந்தாள் என, உறுதிபட இப்புலவர்கள் வாதம் செய்வர்.
இவ்வாதமும் ஏற்கத் தக்க ஒன்றாகவே படுகிறது.
🌾  🌾  🌾
மேற்சொன்ன கம்பனின் கூற்றினால், அகலிகை தெரிந்தே கற்பிழந்தவள் என்பது உறுதிப்படுமேல்,
‘நெஞ்சினால் பிழைப்பிலாள்’ என, இவளை எங்ஙனம் விசுவாமித்திரர் உரைத்தல் கூடும்?
கேள்வி பிறக்கிறது.
ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கும்,இவ்விரண்டு பாடல்களால், அகலிகை, தெரிந்து தவறினளா?
தெரியாது தவறினளா? எனும், கேள்விக்கு விடைகாணமுடியாமல், திகைத்து நிற்கிறது இலக்கிய உலகம்.
🌾  🌾  🌾
அறிவுச் சோம்பல் கொண்ட சில இலக்கியவாதிகள், கம்பனின் முரண்பட்ட இவ்விரு கூற்றுக்களையும்,
ஆராய்ந்து முடிவுகாண முயலாமல், வழமையான தம்பாணியில் இவ்விருபாடல்களில் ஒன்று,
பிற் சேர்க்கை என உரைத்துத் தப்ப முயல்கின்றனர்.
இன்று வரை வெளிவந்த எந்த இராமாயணப் பதிப்பிலும், இவ்விருபாடல்களில் எந்தவொன்றும்,
பிற்சேர்க்கையாய் ஒதுக்கப்படவில்லை.
கம்பகாவியத்திற்கு உரைசெய்த அறிஞர் பலரும், முரண்பாடான இப்பகுதிக்கு விடைகாணாது விட்டது,
இப்பகுதி பற்றிய சர்ச்சைகள் மேலும் வளரத் துணையாயிற்று.
முரண்பட்ட இவ்விருகூற்றுக்கள் கொண்டு மோதி நிற்பார்க்கு, கம்பன் தரும்விடைதான் என்ன?
கம்பசூத்திரத்துள் நுழைந்து தேடின் பதில் கிடைக்காமலா விடும்?
முயல்வோம்.
🌾  🌾  🌾
‘நெஞ்சினால் பிழைப்பிலாள்’ என,விசுவாமித்திரர் சொல்லும் கூற்று,
வேறுகருத்துக்கு இடமின்றி, தெளிவுபடச் சொல்லப்பட்டிருப்பதால்,
அப்பாடலுள் நுழைந்து தேடும் அவசியமற்றுப் போகிறது.
அங்ஙனமாயின்,
அகலிகையின் நடத்தையைக் குறைகூறும் பாடல்வரிகளுக்குள்,
அவள் ‘நெஞ்சினால் பிழைப்பிலாள்’ எனும் முனிவர் கூற்றுக்காம்,
ஆதாரம் ஏதும் அகப்படுகிறதா என ஆராய்தல் அவசியமாகிறது.
அகலிகை,மனதால் குற்றம் இழைக்கவில்லை என்பதற்கான ஆதாரத்தினை,
அவள் நடத்தையைக் கூறும் பாடல் வரிகளுக்குள் காண்போமாகில்,
இம்முரண்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
🌾  🌾  🌾
இவ்வெண்ணத்தோடு, அகலிகை தவறிழைத்ததாய்க் கூறும் அப்பாடலுள்,
மீண்டும் புகுந்து தேட நம் நெஞ்சம் விழைகிறது.
அதனால் மீண்டும் ஒருதரம் அப்பாடலைக் காணப் புகுகிறோம்.

தீது இலா உதவி செய்த சேவடிக் கரிய செம்மல்.
கோது இலாக் குணத்தான் சொன்ன பொருள் எலாம் மனத்தில் கொண்டு.
மாதவன் அருள் உண்டாக வழிபடு:படர் உறாதே.
போது நீ. அன்னை!’’ என்ன. பொன் அடி வணங்கிப் போனாள்.

அருந் தவன் உறையுள் தன்னை அனையவர் அணுகலோடும்.
விருந்தினர் தம்மைக் காணா. மெய்ம்முனி. வியந்த நெஞ்சன்.
பரிந்து எதிர்கொண்டு புக்கு. கடன் முறை பழுதுறாமல்
புரிந்தபின். காதி செம்மல் புனித மா தவனை நோக்கி.*

அஞ்சன வண்ணத்தான்தன் அடித் துகள் கதுவாமுன்னம்.
வஞ்சிபோல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகிநின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீ அழைத்திடுக!’ என்ன.
கஞ்ச மா மலரோன் அன்ன முனிவனும். கருத்துள் கொண்டான்.*

குணங்களால் உயர்ந்த வள்ளல் கோதமன் கமலத்தாள்கள்
வணங்கினன். வலம்கொண்டு ஏத்தி மாசு அறு கற்பின் மிக்க
அணங்கினை அவன்கை ஈந்து. ஆண்டு அருந்தவனோடும். வாச
மணம் கிளர் சோலை நீங்கி. மணி மதில் கிடக்கை கண்டார்.*

இராமன் பாதத்துளி பட்டு கல்லுருவாய் இருந்த அகலிகை பெண் உரு பெற்றாள்.
இராமன், விஸ்வாமித்திரன், கௌதமன், லக்ஷ்மணன், அகலிகை என ஐந்து பேரும் நிற்கும் இடம்.
இராமன் அகலிகையை வணங்கி, உன் கணவனோடு சேர்ந்து வாழ் என்று சொல்லி விடை கொடுத்து அனுப்புகிறான்.
முடிவாக விஸ்வாமித்திரன் இந்த படலத்தை முடிக்கிறான்…

“இவள் மனத்தால் பிழை ஏதும் செய்யாதவள். இவளை நீ ஏற்றுக் கொள்ளவேண்டும்” என்று கௌதமனிடம் விஸ்வாமித்திரன் சொல்கிறான்.
அதை கௌதமனும் ஏற்றுக் கொள்கிறான் என்பதோடு அகலிகை கதை முடிவுக்கு வருகிறது.

அஞ்சன வண்ணத்தான்தன் அடித் துகள் கதுவா முன்னம்.
வஞ்சிபோல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகிநின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீ அழைத்திடுக!’ என்ன.
கஞ்ச மா மலரோன் அன்ன முனிவனும். கருத்துள் கொண்டான்.*

அஞ்சன = அஞ்சனம் என்றால் மை. மை போன்ற

வண்ணத்தான்தன் = வண்ணம் கொண்ட இராமனின்

அடித் துகள் = திருவடி துகள்

கதுவாமுன்னம்.= படுவதற்கு முன் (அது ஏன் என்று தெரியவில்லை)

வஞ்சிபோல் = வஞ்சிக் கொடி போன்ற

இடையாள் = இடையை உள்ள அகலிகை

முன்னை வண்ணத்தள் = முன்பு இருந்ததை போன்ற வண்ணத்துடன்

ஆகிநின்றாள்; = மாறி நின்றாள்

நெஞ்சினால் பிழைப்பு இலாளை = மனதால் தவறு செய்யாதவளை

நீ அழைத்திடுக!’ என்ன. = நீ (கௌதமனாகிய நீ) அவளை ஏற்றுக் கொள் என்று கூறினான்

கஞ்ச மா மலரோன் அன்ன = தாமரை மலரில் உள்ள பிரமனை போன்ற

முனிவனும்.= கௌதமனும்

கருத்துள் கொண்டான் = மனத்தில் கொண்டான்

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவடியின் மஹிமை காட்டும் -ஸ்ரீ கம்பனின் கவி அமுதம் —

February 21, 2023

வையம் என்னை இகழவும் மாசு எனக்கு
எய்தவும் இஃது இயம்புவது யாது எனில்
பொய்யில் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வமாக் கவி மாட்சி தெரிவிக்கவே

——–

சூரியனை விழுங்கியவன்
வாயு புத்திரன், அஞ்சனை மைந்தன் என்று போற்றப் படுகின்ற அனுமன் தன் தாயிடம் இந்தக்
காட்டில் தான் எந்தப் பழத்தைச் சாப்பிட வேண்டும் என்று கேட்க,
அதற்கு அஞ்சனை இந்தக் காட்டில் உள்ள சிவந்த நிறப் பழங்களை நீ உணவாகச் சாப்பிடு என்று கூறினாள் .
இதனை
“கை அஞ்சு ஆயுதம் உடைய அக் கடவுளைக் கண்டும் மெய் அஞ்சாதவன்”  என்ற பாடல் வரிகளில் அறியலாம் .

அனுமன் பிறந்த பொழுதே இளஞ்சூரியனைக் கனிந்த பழம் என்று கருதி சிறிதும் அச்சம் கொள்ளாமல்,
அதனைப் பிடிக்கச் சென்றான் என்னும் போது அனுமானின் வீரத்தை அறிய முடிகிறது
கம்பர் சிறு வயதில் இருந்தே அனுமானை வீரம் கொண்ட வலிமையானவனாகவே படைத்துக் காட்டுகிறார் –

பல வரங்களைப் பெற்றவன்
பிரம்ம தேவன், தேவர்களிடம் அஞ்சனையின் மகன் அனுமனுக்கு, பற்பல வல்லமைகளையும் ,
அரிய வரங்களையும், அளிப்பதோடு,
அனுமன் நிறைத்த உருவத்தை எடுத்து நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்லும் திறமை ஏற்படவும்,
போரில் தோல்வி என்பதே கிடையாது என்றும்
இவனுடைய பாதையில் யாரும் குறுக்கிட்டு இவனைத் தடுக்க முடியாது என்றும்,
தன்னுடைய பிரம்ம தண்டத்தால் இவனுக்கு மரணம் ஏற்படாது என்றும்,
சிரஞ்சீவியாக வாழ்வான் என்று அருளி வரம் அளித்தான்.

இதனை
“ஒப்பு இறையும் பெறலரிய ஒருவன்”
“எவரினும் அதிகம் உயர்ந்தான்”
“ஊழி கடந்தீர்”
ஏழும் வீவுற்ற ஞான்றும் இன்று என் இருத்தி”
என்ற பாடல் வரியில் கம்பர் எடுத்துக் காட்டுகிறார்.

மேலும் அனுமனுக்கு தண்ணீர் தீ, ஆயுதம்,
அஸ்திரம், வியாதி போன்ற வற்றாலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதையும் கம்பர்,
வெப்புறு செந்தீ நீர் விளியாளும் விளியாதீர்
செப்புறு தெய்வப் பல் படையாலும் சிதையாதீர்”-என்ற பாடல் வரிகளின் மூலம் வெளிப் படுத்து கிறார்.

எந்த சூழலிலும் , யாராலும், அனுமனுக்கு அழிவில்லை என்பதை தனது படைப்புத் திறத்தின் மூலம் எடுத்துக் காட்டுகிறார்.

கல்வி கற்றல்
பல அரிய வரங்களைப் பெற்ற அனுமன், சூரிய பகவானிடம் இருந்து ரிக்வேதம், யஜூர் வேதம், சாமவேதம், அதர்வண வேதம் என்ற நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்கள், அறுபத்தி நான்கு கலைகள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தான்.

ஸூர்யனின் எதிரில் நின்று கொண்டே வேத சாஸ்திரங்களையும் அதன் ரஹஸ்யங்களையும்
உப ஸாஸ்த்ரங்களையும் அனுமன் கற்றுக் கொண்டான் இதனை
உலகு எங்கும் பேர் இருள் நீக்கும் பகலோன் முன் தேர் முன் நடந்தே
ஆரிய நூலும் தெரிவுற்றீர்  -என்ற வரிகளில் எடுத்து உரைக்கிறார் .

மதி நுட்பம் கொண்டவன் –
சீதையைத் தேடி இராமனும் இலக்குமனனும் சென்ற போது அனுமன் எதிர்படுகிறான்
அவர்களை பார்த்த கண நேரத்திலே அவர்களை நன்றாக எடை போடுகிறான்
அனுமன் அவர்களை பற்றி

தருமமும் தகவும் இவர் தனம் எனும் தகையர் இவர்
கருமமும் பிறிது ஓர் பொருள் சுருதி அன்று அது கருதின்
அரு மருந்து அனையது இடை அழிவு வந்துளது அதனை
இரு மருங்கினும் நெடிது துருவுகின்றனர் இவர்கள்--என தனது மதி நுட்பத்தால் உணர்ந்து விடுகிறான்

அனுமனின் ஆற்றல் மூலம் தான் சீதையைக் கண்டுபிடிக்க முடியும் என்பதையும்
அவனுக்கு நிகர் யாரும் இல்லை என்பதையும் கம்பர்
வன் திசைக்கு இனி மாருதி நீ அலால் என்று இசைக்கு உரியார் பிறர் வேண்டுமோ -என்கிறார் –

பிலத்தைப் பிளந்தவன்
அனுமன் வானர வீரர்களின் பயத்தை நீக்கி ஆண் சிங்கம் போல் கைகளைத் தூக்கி பேர் உருவம் எடுத்து நிமிர்ந்தான் என்பதை கம்பர் –
நடுங்கன் மின் எனும் சொலை நவின்று நகை நாற
மடங்கலின் எழுந்து மழை ஏற அரிய வானத்து
பெருங்கல் இல் பிலம் தலை திறந்து உலகொடு ஒன்ற
வெறும் கைகள் சுமந்து நெடு வான் உற நிமிர்ந்தான் –என்ற பாடலில் அனுமனின் ஆற்றலை வெளிப்படுத்துகிறார் –

தோள் கொடுத்தவன்
வேறு காட்டும் ஓர் வெறுமையை மெல்லிய எனினும்
ஏற நீ ஐய என்னுடைத் தோளின் மேல் என்றான்-என்றும்

ஏறினான் இளம் கோளரி இமையவனாகி
கூறினார் எடுத்து ஆர்த்தது வானவர் குழுவும்
நூறு பத்துடைப் பத்தியின் நொறில் பரி பூண்ட
ஆறு தேரினும் அகன்றது அவ்வனுமன் தன் தடம் தோள் -என்று அனுமானின் தோள் திறமும் வலிமையையும் எடுத்துக் காட்டுகிறான்

சொல்லின் செல்வன்
இம்மலை இருந்து வாழும் எரி கதிர்ப் பாதிச் செல்வன்
செம்மலுக்கு ஏவல் செய்வேன் தேவ நும் வரவு நோக்கி
விம்மல் உற்று அனையன் ஏவ வினவிய வந்தேன் என்றான் –
ஆற்றலும் நிறைவும் கல்வி அமைதியும் அறிவு என்றும்
வேற்றுமை இவனோடு இல்லையாம் என விளம்பலுற்றான்

சொல்லாலே தோன்றிற்று அன்றே யார் கொல் இச் சொல்லின் செல்வன்
வில் ஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ -என்று பெருமாள் பாராட்டினார் –

தெற்கு திசையில் இருந்து வரும் போதே ராமனை வணங்காமல் பிராட்டி இருக்கும் தென் திசையை வணங்கி
நிலத்தில் வீழ்ந்து சீதாப் பிராட்டியின் நிலைமையைக் -கற்புத் திண்மையை -குறிப்பால் உணர்த்தினார்
எய்தினன் அனுமனும் எய்தி ஏந்தல்
மொய் கழல் தொழுகிலன் முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன் கையினன்
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி வாழ்த்தினான் –

கண்டனன் கற்பினுக்கு அணியை கண்களால்
தென் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்
அண்டர் நாயக இனி துறத்தி ஐயரும்
பண்டு உள துயரும் என்று அனுமன் பன்னுவான்

———————
அசோக வனத்தில் இருக்கும் சீதாபிராட்டி அனுமனை இராமதூதன் எனத் தெளிந்த பின் அவனிடம்
~~ அய்ய! சொல்! அனையன் மேனி எப்படித்து அறிவி || என்று கேட்கிறாள்.
இதற்கு அனுமன் இராம அழகை ~~அடி முதல் முடி ஈறாக|| அறிவுறச் சொல்லத் தொடங்கினான்.
இராம அழகு
~~படியெடுத்து உரைத்துக் காட்டும் படித்து அன்று: படிவம்,பண்பின்
முடிவுள உவமைக்கு எல்லாம் இலக்கணம் உரைக்கின் முந்தா||
என்று படி எடுக்கமுடியாத அளவிற்குப் பெருமையும், உவகைளால் எட்டமுடியாத அழகும்
கொண்டு இருப்பதாக அனுமன் கருதுகின்றான்.
இராமபிரானின் உருவ நலனைப் பின்வரும் நிலையில் அனுமன் எடுத்துக்காட்டுகின்றான்.
திருவடிகள்
சேயிதழ் தாமரை போன்றன என்றால் தாமரை மலரும் குவியும். ஆனால் திருவடிகள் மலர்ந்தே இருக்கும்.
பவழத்தை உவமை காட்டினால் பவழம் இராமபிரானின் கால்களின் சிவப்பிற்குப் பொருந்தாமல் குவளை மலர்போல பொலிவழியும்.
திருவடி விரல்கள்
இராமபிரானின் கால் விரல்களுக்குக் கற்பக மரத்தின் மொட்டுகள் ஒக்கும் என்றாலும்,
பவழத்தின் இளங்கொடி ஒக்கும் என்றாலும் அவை ஒரு புறம் அழகற்றுக் கிடக்கும்;.
சூரியனின் இளங்கதிர்; போன்று இராம பிரானின் கால் விரல்கள் ஒளி பெற்றுத் திகழ்ந்தன என்றால் அது சரியாகும்.
திருவடி விரல்களின் நகங்களின் அழகு
திருவடியின் விரல்களில் உள்ள நகங்கள் பிறைச் சந்திரனைப் போன்றன என்றால் திங்கள் பத்து என்ற எண்ணிக்கையில் இல்லை.
விரல்;கள் வயிரம் போன்றன என்றால் அவற்றில் திரட்சி இல்லை. எனவே விரல் நகங்களுக்கு உவமை கூற இயலாது.
திருவடிகளின் செய்கை
நிலவுலகையே அளந்து, கடந்து நிற்கும் திருவடிகள் நிலத்;தில் வந்து பொருந்தின,
காட்டில் நடந்தன என்றால் அவற்றின் எளிமை பாராட்டத்தக்கது.
இராமன் உலகினைக் கடந்து நிற்பவன் என்று ஞான நூல்கள் உரைக்கின்றன.
அவன் நில உலகில நடந்தான் என்றால் அந்த நூல்கள் சொன்ன கருத்துகள் முரண்பாடுகள் உடையதாகும்.
ஞான நூல்களால் உணரப்படாத திருவடிகளின் பெருமையை உரைத்துவிட முடியுமா?
இறையடியார்கள் இறைவின் பாதங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பர்.
இறைவன் பாதங்களை அடையும் சரணாகதி நிலையே உயிரை உய்விக்க வல்லது என்ற நிலையில்;
இங்கு அனுமன் உயிர்களுக்கு இறைவனின் பாதச் சிறப்பினை எடுத்துரைப்பதாக சுந்தரகாண்டம் படைக்கப்பெற்றுள்ளது.
கணைக்கால்
கணைக்கால் அம்பறாத் தூணியை ஒத்திருந்தது என்று சொல்லாம் என்றால் தன்னை அடைந்தவரைக் காக்கும் சிறப்புடையது இறைவனின் கால்கள். அக் கால்களுக்கு அழிக்கத் துணைபுரியும் அம்புகள் வைக்கும் புட்டியை உவமை காட்டுவது பொருத்தமாக இருக்காது.
தொடைகள்
இராமபிரானின் தொடைகள் கருடனின் பிடரியை, மதயானையின் துதிக்கையை ஒத்திருந்தன என்று சொன்னால் அவை நாணம் அடையும்.
அந்த அளவிற்கு அழகு வாய்ந்தனவாக தொடைகள் அமைந்திருந்தன.
திரு வுந்தி
வலப்புறமாகச் சுழித்து ஓடும் கங்கையாற்றின் நீர்ச்சுழலை ஒத்து அமைவது திருவுந்தி என்று சொன்னால் அதுவும் பொருந்தாது.
மகிழம்பூவை ஒத்தது என்று சொன்னாலும் அது பொருந்தாது.
திரு மார்பு
மரகத மலை குறுகும்படியாக அகன்ற மார்பு இராமனுடையது.
அதில் நீங்காமல் உறையும் திருமகள் பெற்ற செல்வமே உயர்ந்த செல்வம்.
இதனில் சீதாபிராட்டி இராமனின் நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கிறாள் என்ற குறிப்பும் உள்ளது.
கைத் தலங்கள்
இராமனின் கரங்கள் தாமரை போன்று காணப்படுவதால் அக்கரங்களைச் சுற்றிலும் வண்டுகள் மொய்த்துக் கொண்டே இருக்கும் பெருமை மிக்கது. அக்கரங்களுக்கு ஐராவத யானையின் துதிக்கையை உவமை காட்டினால் ஓரளவிற்குப் பொருந்தும்.
கைத்தல நகங்கள்
இராமனின் கை சூரியனைக் கண்டால் மலரும் தாமரையை அழகில் ஒத்தன.
அவை வச்சிர யாக்கை உடைய இரணியனைப் பிளந்த செயல் உண்மையானதுதானா என்று அதன் மென்மைத்தன்மை குறித்து ஐயப்படுவார்கள்
ஆனால் அவர்கள் நகங்களைப் பார்த்தால் அச்செயல்; உண்மைதான் என்று காட்டும் அளவிற்கு வலிமையைக் காட்டி நிற்கும்.
திருப் புயங்கள்
புயங்களுக்கு மலையை உவமை காட்டலாம் என்றால் பொருந்தாது.
ஏனெனில் இராமனின் தோள்கள் போல் மலைகள் திரட்சியும் ஒளியும் உடையன அல்ல.
திருமகள் மலையில் சேர்ந்திருப்பதில்லை. மலையில் வில்லின் நாண் புரளாது.
இராமனின் தோள்கள் போல மலைகள் புகழ்பெற்றன அல்ல.
திரு மிடறு
இராமனின் கழுத்துக்கு பாக்கு மரத்தையும், உப்புக்கடலில் கிடக்கின்ற சங்கையும் உவமை காட்டலாம் என்றால் அது பொருந்தாது.
திருமாலின் இடது கரத்தில் உள்ள பாஞ்சசனியம் என்ற சங்கு ஒருவழியில் உவமையாகலாம்.
திரு முகம்
இராமபிரானின் திருமுகம் சந்திரன் போன்றது என்று சொன்னால் அது தேய்வும் வளர்வும் இல்லாத நிறைத்தன்மை உடையது.
எனவே அது பொருந்தாது.
அவரின் முகத்திற்கு தாமரையை உவமை காட்டினால் கண்களுக்கு எதனைக் காட்டுவது.
திருவாய்
தாமரை மலர்போன்றது திருவாய் என்றால் தாமரை அது கேட்டு நாணும்.
பவழம் திருவாய்க்கு உவமையாகும் என்றால் அது வெண்ணகை புரியாது.
இனிய சொற்களைப் பேசாது.
பற்கள்
இராமனின் பற்களுக்கு முத்து, நிலவு, அமுதம், முல்லை, மயிலிறகின் அடிக்குருத்து, புன்னைமொட்டு, அறம்
என்னும் வித்திலிருந்து கிளைத்த முளை ஆகிய யாவும் பொருந்துமா?
அறங்கள் முப்பத்திரண்டு. அதுபோன்று பற்களும் முப்பத்திரண்டு என்று குறித்திருப்பது இங்குக் கருதத்தக்கது.
திருமூக்கு
இந்திர நீலக்கல்லில் எழுந்த ஒளி, மரகதமணியின் ஒளித்திரட்சி ஆகியன இராமபிரானின் மூக்கிற்கு ஒப்புகையாகும் என்றால் அது பொருந்தாது. இந்திரகோபப்பச்சியைக் கவ்வ வரும் பச்சோந்தியும் மூக்கிற்கு உவமையாக அமையாது.
திருப்புருவங்கள்
இராமனின் புருவங்கள் கரன் முதலான அரக்கர்களைக் கண்டதும் வளைந்தன.
இதன் காரணமாக வில்லும் வளைந்தது. அரக்கர்கள் அழிந்தனர். இனி அரக்கர் குலம் அழந்தது என்ற வாழ்த்தொலி கேட்டது.
அந்த வளைந்த வில் போன்றது இராமபிரானின்; புருவங்கள்.
இங்கு இராமபிரான் அரக்கர்களை அழிக்க வருவார் என்ற செய்தியும் இணைத்துச் சீதாபிராட்டிக்கு உணர்த்தப்பட்டு
ஆறுதல் அளிப்பதாக இப்பகுதி அமைகிறது.
திருநெற்றி
எட்டாம் நாள் சந்திரன் வளர்தல், தேய்தல் இல்லாமல், நாள்தோறும் தோன்றல் மறைதல் இல்லாமல்,
இராகு என்ற கோளால் விழுங்கப்படாமல் இருந்தால், களங்கமே இல்லாமல் இருந்தால் இருளின் அழகான நிழலில்
பல காலம் இருந்தால் இராமபிரானின் நெற்றிக்கு உவமையாக அமையலாம்.
திருக்குழல்
நீண்டு, திரண்டு, பளபளப்புடன், கருத்து, நீலமணியின் நிறத்தைப்பெற்று, முறுக்குண்டு, பின்னே தாழ்ந்து,
நுனி சுருண்டு, தெய்வத்தன்மை பொருந்திய இயற்கைமனத்துடன் திகழ்ந்த இராமபிரானின் திருமுடி சடையாக மாறிவிட்டது.
இதனை மழை என்று உவகை காட்டுதல் பொருந்தாது.
நடை
அரசு ஏற்கத் துணிந்த நாளினும், ஆட்சிச் செல்வம் கிடைக்காமல் துன்பம் நிறைந்த காட்டில் வாழும் நாளிலும்
தன்தன்மை மாறாத நடையை உடையவர் இராமபிரான்.
இவரின் நடை காளையிடத்தில் உள்ளது என்று சொன்னால் மதயானை வருந்தும்.
இவ்வாறு இராமபிரானின் அழகை    அடிமுதல் முடிவரை சீதாபிராட்டியிடம் அனுமன் எடுத்துரைக்கிறான்.
மேற்கண்டவற்றில் இருந்து ஒட்டுமொத்தமாகப் பெறப்படும் செய்தி உவகைளுக்கு அப்பாற்பட்ட வடிவழகு உடையவன் இராமன்
அல்லது இறைவன் என்பதை உணரமுடிகின்றது.
மேலும் சங்கப்பாடல்களிலும், காப்பியங்களிலும் பெண்களின் அழகு கேசாதிபாதமாகச் சுட்டப்பெறும்.
பெண்களின் அழகை வருணிக்க உவமைகள் பலவற்றைப் புலவர்கள் புனைந்தேத்துவர்.
ஆனால் கம்பர் இராமன் என்ற ஆண்மகனை அழகின் உயர்நிலையில் படைக்கின்றார்.
இது மிகப்பெரிய வேறுபாடாக கருதத்தக்கது.
ஒரு ஆண்மகன் மற்றொரு ஆண்மகனின் உருவ அழகை வருணிக்கும் நிலைப்பாட்டில் கம்பரின் அழகியல் உணர்வு இங்குச் செயல்பட்டுள்ளது. அனுமனைச் சற்று மறந்து அந்த இடத்தில் கம்பனை அமரவைத்து இராம அழகைத் தரிசித்தால் அது வாசகனுக்கு இன்னும் அழகுணர்வினைக் கூட்டும். கம்பர் கொண்டுள்ள இராம பக்தியை விளக்கும். இராம அழகில் உவரு நலன் காட்டப்பெறுவதைவிட
இராமனின் வீரம், வலிமை, எளிமை, புகழ் ஆகியன எடுத்துரைக்கப்பெற்றுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
இதே கம்பர் அனுமன் சீதையின் அழகை இராமனிடம் கூறும்போது கையாளும் அழகுணர்வு முற்றிலும் வேறுபட்டு அமைகின்றது.
சீதையைக் கண்ட அனுமன்,  சீதாபிராட்டியின் நிலையையும் அவளின் இருப்பையும் காட்டுவதாக இருபது பாடல்களைப் படைத்துள்ளார் கம்பர். இப்பாடல்களில் சொல்லடுக்குகளையும், சொல் விளையாட்டுகளையும் கம்பர் உத்திகளாகப் பயன்படுத்தி அழகுணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இவ்வழகு வெளி;ப்பாட்டில் வருணனைகளோ, உவமைகளோ, கேசாதிபாதமோ, பாதாதி கேசமோ இடம்பெறவில்லை.
ஆனால் படிக்கும் வாசகன் இராமனின் அழகைக் கூறும் பாடல்களை விட சீதையின் அழகு கூறப்படும் பாடல்களை அதிகம் படித்து இன்புறுகின்றான். இதற்கு உரிய காரணங்கள் ஆராயப்படவேண்டியதாகும்.
சீதையின் அழகை குடும்பப் பெருமையில் இருந்து கூறத் தொடங்குகிறான் அனுமன்.
அதிலிருந்து தொடங்கி இராவணன் சிறையில் சீதாபிராட்டியைத் தான் கண்டதுவரை எடுத்துரைக்கின்றான்.
அனுமனின் இக்கருத்து வெளிப்பாட்டில் கதைக்கோப்பு இடையீடுயின்றி வளர்த்துச் செல்லப்பெற்றுள்ளது.
குடும்பப் பெருமை
சீதாபிராட்டி இராமபிரானுக்கு ஏற்ற மனைவியாகவும், தசரத மன்னனுக்கு ஏற்ற மருமகளாகவும்,
மதிலை ஜனக மன்னனின் புதல்வியாகவும் உரிமை, வாய்மை, தகைமை ஆகிய பண்புகளுக்கு இலக்கணமாக விளங்குகிறாள்.
பொறுமை
பொன் அலது இல்லை பொன்னை ஒப்ப எனப் பொறையில்; நின்றாள்
தன் அலது இல்லைத் தன்னை ஒப்பு எனத்தனக்கு வந்த
நின் அலது இல்லை நின்னை ஒப்பு என நினக்கு நேர்ந்தாள்
எனஅலது இல்லை என்னை ஒப்புஎன எனக்கும் ஈந்தாள் (1306)-என்ற இப் பாடலில்
சீதை பொன் போன்று பொறுமையுடன் இருந்தாள் என்ற பண்பு எடுத்துரைக்கப்படுகிறது.
இப் பாடலில் அலது, இல்லை, ஒப்பு, என ஆகிய சொற்கள் அடி தோறும் பயின்று வந்து சொல்லழகு செய்கின்றன.
குலப்பெருமை
சீதை இராமனின் குலப்பெருமைக் காத்து நிற்கிறாள். தன் குலத்தையும் சிறப்புறச் செய்தாள்.
இராவணனின் குலத்தைக் கூற்றுவனுக்குக் கொடுத்தாள். தேவர்கள் குலமும் இதனால் வாழ்ந்தது.
வானவர் குலத்தையும் வாழ வைத்தாள்.
இப்பாடலில் குலம் என்ற சொல் அடிதோறும் வந்து இனிமை கூட்டியுள்ளது.
இற்பிறப்பு, இரும்பொறை, கற்பு
வில்லை உடைய இராமபிரானே, இலங்கையில் சீதை என்ற பெண்ணைக் காணவில்லை. உயர்குடிபிறப்பு, பொறுமை, கற்பு என்ற மூன்றும் களிநடம் புரியக் கண்டேன் என்று அனுமன் கூறுவதாக கம்பர் படைக்கின்றார்.  அனுமன் பெண் என்னும் நோக்கில் சீதையைக் காணவில்லை என்பதற்கு இப்பாடல் மிக முக்கியமான சான்று. உயர்ந்த ஒழுக்க சீலர் ஒருவரைக் கண்ட காட்சியாக சீதாபிராட்டியைக் கண்டுள்ளான் அனுமன்.
கண்ணிலும் கருத்திலும் எண்ணத்திலும் இராமன்
சீதா பிராட்டியின் கண்ணிலும், கருத்திலும், சொல்லிலும், அவள் மார்பகத்திலும் இராமபிரான் இருப்பதைக் கண்டேன் என்று அனுமன் குறிக்கின்ற இப்பாடலில் உளை, நீ ஆகிய சொற்கள் திரும்பத் திரும்ப வந்துப் பாடலுக்கு அழகு சேர்க்கின்றன.
சீதையின் இருப்பிடம்
இலங்கையில் காலை, மாலை எனப் பகுத்தறிய முடியாத ஒளிமிக்கக் கற்பகச் சோலையில் தம்பி இலக்குவன் புல்கொண்டு அமைத்த பர்ணசாலையில் தவம் செய்த தவம் ஆம் தையலாக சீதை வீற்றிருந்தாள் என்று சீதை இருந்த இருப்பிடத்தை அனுமன் காட்டுகின்றான். இப்பாடலில் இடம் பெற்று தவம் செய்த தவமாம் தையல் என்ற சொல் சேர்க்கை அழகுமிக்கது.
இராவணன் பெற்ற சாபம்
சீதையை மண்ணொடும் கொண்டு போனான் இராவணன் என்று அனுமன் குறிப்பிடுகின்றான். இந்தப் பகுதி தமிழ் மரபினைப்பின்பற்றியதாகும். வடமொழியில் பற்றி இழுத்துச் செல்லப்பெற்றாள் சீதை. ஆனால் இங்கு இம்முறை மாற்றப்பெற்றுள்ளது. அதற்குத் துணையாக கம்பர் ஒரு நிகழ்வையும் இதனோடு இணைத்துச்சொல்லுகிறார். பிரம்மன் இராவணனுக்கு விரும்பாத ஒரு பெண்ணைத் தீண்டினால் எண்ணிலாத கூறுகளாய் உடல சிதறி இறப்பாய் என்று ஒரு சாபம் இட்டுள்ளார். அதனால் சீதையின் மேனியைத் தீண்டாமல் மண்ணோடும் பெயர்த்து எடுத்துக்கொண்டு இராவணன் சென்றதாக கம்பர் படைக்கின்றார். தமிழ்மரபினை காக்கும் அழகியல் இங்குச் செயல்பட்டுள்ளது.
சீதையை தீண்டாத இராவணன்
இராவணன் சீதையைத் தீண்டவில்லை என்பதற்கு பிரம்மன் படைத்த அண்டம் வெடிபடவில்லை என்பதாலும், ஆதிசேடனின் ஆயிரந் தலை பெற்ற படங்கள் கிழிந்து போகவில்லை என்பதாலும், கடல் கரையைக் கடக்கவில்லை என்பதாலும், சூரிய சந்திரர்கள் கீழேவிழவில்லை என்பதாலும் இராம பிரானே நீவீர் அறிந்து கொள்ளலாம் என்று அனுமன் இராமனிடம் கூறுகின்றான். இப்பாடலில் இலது, இல என்ற இன்மைக் குறிப்புகள் இடம்பெற்றுப் பாடலைச் சிறக்கச் செய்கின்றன.
தேவர் வியக்கும் கற்பு
சீதாபிராட்டியின் கற்பின் சிறப்பினால் தேவர்களின் தேவியரும் கற்பினால் பெருமை பெற்றனர். சிவபெருமான் இடப்பாகத்தில் இருந்த பார்வதி கற்பின் திண்மையால் சிவன் தலையில் இருக்கலானாள். திருமாலின் மார்பில் இருந்த திருமகளும் அவரின் தலைமீது இருக்கலானாள். சோகத்தாள், பாகத்தாள், மகுடத்தாள், பதுமத்தாள், ஆகத்தாள் என்ற சொற்கள் இங்கு ஒத்த ஒலிக்குறிப்பினைத் தருவதாக உள்ளது.
சீதையைத் தேடிக் கண்டறிந்த முறை
இலங்கை முழுவதும் தேடிப்பார்த்து, இராவணனின் இருக்கையிலும் தேடிப்பார்த்து,  அசோக வனத்தில் கண்ணின் நீர்க்கடலின் இடையே தேவமகள் போன்ற  சீதையைக் கண்டேன்; என்று அனுமன் சீதையைக் கண்டறிந்த செய்தியைக் குறிப்பிடுகிறான். கண்ணின் நீர்க்கடலில் கண்டேன் என்ற தொடர் அழகுமிக்கது.
அரக்கியர் நடுவே சீதாபிராட்டி
பேய் போன்ற அரக்கியர் பாதுகாவலுக்கு இடையில் இராமபிரானே உன் மேல் கொண்ட அன்பின் காரணமாக அச்சத்தைப் போக்;கி இரக்கம் என்ற பண்பு பெண் வடிவம் பெற்றால் எப்படி இருக்;குமோ அப்படி அந்தச் சிறையில்  சீதாபிராட்டி இருந்தாள். நின்பால் நேயமே அச்சம் நீக்க இரக்கம் என்ற ஒன்று தானே ஏந்திழை வடிவம் எய்தி தருக்கு உயர் சிறை உற்றன்ன தகையள் அத்தமியள்|| என்ற அடிகள் அழகியல் வயப்பட்டன.
இதன்பின் இராவணன் வந்து சீதாபிராட்டியைப் பணிந்தது, இரந்தது, அவள் கடுஞ்சொல் சொன்னது, பின் அரக்கியர்களைப் புத்தி கூறச் சொன்னது, அரக்கியர் உறங்கியது, பிராட்டி தற்கொலை புரிந்து கொள்ளச் சென்றது, தடுத்து அனுமன் இராம நாமம் சொன்னது போன்ற செய்திகள் விரிகின்றன.
இதன்பின் மோதிரத்தைச் சீதாபிராட்டியிடம் அனுமன் தருகின்றான். அப்போது அம்மோதிரத்தைச் சீதாபிராட்டி அணைக்க அது உருகியதாம்.  மோதிரம் பட்ட மகிழ்ச்சியால் ஏற்பட்ட குளிர்வால் அம்மோதிரம் உடன் குளிர்ந்து தன் நிலை பெற்றது என்று கம்பர் காட்டுகின்றார்.
அனுமன் சொல்லிய இப்பகுதிகளில்  சீதா பிராட்டியின் உருவ நலன் எடுத்துரைக்கப்படவில்லை. சீதாபிராட்டியின் புறஅழகினைக் கடந்து அக அழகினை அனுமன் கண்டு உரைப்பதாக இப்பாடல்கள் பாடப்பெற்றுள்ளன. மேலும் ~~கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்|| என்ற தொடர் அனுமனின் நிலைப்பாட்டை எடுத்துரைப்பதாக உள்ளது.
இராமனின் அழகை அடி முதல் முடி வரை உவமைகளால் அழகுபட புனைந்த கம்பரால் ஏன் சீதையின் அழகு அவ்வாறு சொல்லப்படவில்லை என்பது இங்கு எண்ணத்தக்கது. மேலும் தமிழ் இலக்கியங்களில் பெண் பாத்திரப்படைப்புகள் உருவ அழகிற்கு முக்கியத்துவம் தந்து அவற்றைப் பல பட விரித்துரைக்கும். இப்படி ஒரு வாய்ப்பு வந்தபோதும் அதனை மறுத்து சீதாபிராட்டியை ஒழுக்க சீலர் ஒருவரைப் பாராட்டும்படியாகக் காட்சிப்படுத்தியிருப்பதற்கான காரணம் என்ன என்று எண்ண வேண்டியுள்ளது.
அனுமன் என்ற ஆண்மகன், திருமணமாகாதவன், தொண்டன் தான் வணங்கும் தெய்வமாக விளங்கும் இராமனின் துணையைக் காணுகையில் அவன் உள்ளத்தில் ஏற்படும் மரியாதை உணர்ச்சி இங்குக் கம்பரால் வெளிப்படுத்தப்பெற்றுள்ளது. ஆண் மற்றொருவரின் மனைவியாக விளங்கும் பெண்ணைக் காட்சிப்படுத்துகையில் இத்தகைய மதிப்பு மிக்க தன்மை வரவேண்டும் என்று கற்போருக்குக் கம்பன் உணர்த்துகிறான். சாதாரண ஆண்மகன் பார்க்கும் சாதாரணப் பார்வையில் இருந்துக் காப்பிய மாந்தர்களை வேறுபடுத்திப் பண்பாடு மிக்க உயர் பாத்திரங்களாக படைக்கக் கம்பர் உறுதி கொண்டுள்ளார். இதைக் கற்கும் அனைவர் உள்ளத்திலும் மற்றவர் மனைவி என்றால் அவளின் அழகு தெரியாமல் அவளின் கற்புத் திறம் தெரியவேண்டும் என்று கம்பர் எண்ணியுள்ளார்.
உவமைகள் வாயிலாக இராம அழகை வெளிப்படுத்த விழைந்த கம்பன் சொல்லடுக்கு, சொல்லழகுகளைக் கொண்டு சீதையின் அழகினை விவரித்திருப்பதற்குக் கம்பருக்குள் உள்ள உயர்பண்பாடு காரணம் என்பதைச் சுந்தர காண்ட அழகுகள்; எடுத்துரைக்கின்றன. அழகு வெறும் உருவ அழகு மட்டும் சாரந்தது அல்ல என்பதை விளக்குவதாகவும் உள்ளது.
இராமன் கேட்கிறான், இராமனை வணங்குபவர்கள் கேட்கிறார்கள் என்ற எண்ணத்தில் சீதாபிராட்டியின் அழகு  மிகுந்த கவனத்துடன் கற்பினை முன்னிறுத்தி கம்பரால் எடுத்துரைக்கப்பெறுகிறது. ஆணை அழகுபட வருணித்தல், பெண்ணை அவளின் குணங்களின் வழியாக அடையாளம் காட்டுதல் என்ற நாகரீக மரபு இந்தச் சுந்தரகாண்டத்திற்குள் இடம்பெற்றுள்ளது, பிறன் மனை நயத்தல் தவறு என்ற அடிப்படை கோட்பாட்டில் சற்றும் விலாகமல் அனுமன் இங்குக் கம்பன் வாயிலாகச் செயல்பட்டுள்ளான்.
இராம அழகைக் கம்பன் பாட உவமைகள் கைகொடுத்தன. சீதை அழகைப் பாட சொற்சேர்க்கைகள் கைகொடுத்துள்ளன. கற்பவர்களுக்கு உவமை அழகைவிட சொல்லழகுகள் சுகம் தருகின்;றன என்பதை சீதாபிராட்டியின் நிலையைக் கூறும் பாடல்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதன் வாயிலாக உணரமுடிகின்றது.
கவிஞன் தன் ஒவ்வொரு பாடலையும் வாசகர் மனதில் இடம்பிடிக்க ஏற்றவகையில் அமைக்கவேண்டும் என்ற பேராவல் கொண்டுப் படைக்கின்றான். கவிச்சக்கரவர்த்தி தன் ஒவ்வொரு பாடலையும் மக்கள் மனதில் இருத்த பற்பல உத்திகளைக் கையாளுகின்றார். சீதையின் அழகினை, இராமனின் அழகினை வாசகர்கள் தமக்குள் ஏற்க இத்தகைய உத்திகளைக் கையாண்டுள்ளார்.
ஒட்டு மொத்தத்தில் அழகு என்பது மற்றவர் பார்வையில் உருவம் சார்ந்து அமைவதல்ல. மனநலன், குணநலன், ஒழுக்க நலன் சார்ந்து அமைவது. மதிப்புகளின் அடிப்படையில் அழகு வரையறுக்கத்தக்கது என்பதை சுந்தரகாண்டம் எடுத்துக் காட்டுகின்றது.
———————

“பஞ்சியொளிர் விஞ்சு  குளிர் பல்லவமனுங்கச்
செஞ்செவிய கஞ்ச நிமிர் சீரடி பெயர்ப்பான்
அஞ்சொலிள மஞ்ஞை யென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்ச மகள் வந்தாள்.’–என்ற சூர்ப்பணகையின் வருகையை வர்ணிக்கும் பாட்டு

  • வெயின் முறைக் குலத் திறையவன் முதலிய மேலோர்
    உயிர் முதற் பொருள் திறம்பினும் உரை திறம்பாதோர்
    மயில் முறைக் குலத் துரிமையை மனு முதன் மரபைச்
    செயிருறப் புலைச் சிந்தையால் என் சொனாய் தீயோய்–மந்தரை சூழ்ச்சி ‘ப் படலத்தில்–
  • இதில் ‘மயிலைப்போல முறை தவறாத குலம்’ என்று சொல்லப்படுகிறது. முறை தவறாத தன்மைக்கு மயிலை உபமானமாகச் சொன்னதின் மர்மம் என்ன? மற்ற பட்சிகளிடத்தில் இல்லாமல் மயிலுக்கு மட்டும் உள்ள எந்த சிறப்பு இதற்குப் பொருந்தும் என்பது ஒன்றும் எங்களுக்கு விளங்கவில்லை.
            • “பலாவம் பொழிலுறை ஒரு தாய் உயிர்த்த
              பலமயிற்குள் கலாபம் புனைந்த களிமயிலே மூத்ததெனக் கொள்க!’
            • அதன் பொருள் : ‘கானகத்திலே வசிக்கின்ற ஒரு தாய் வயிற்றில் பிறந்த பல மயில்களும் சேர்ந்திருக்கும்போது எந்தக் குஞ்சு முதலில் கலாபம் விரிக்கின்றதோ அது தான் மூத்த குஞ்சு என்று தீர்மானம் செய்துகொள்.’ என்பதுகாட்டிலே மயில் இயல்பாக வசிக்கும்போது ஒவ்வொரு தாய் மயிலும் அதன் குஞ்சுகளும், குஞ்சுகள் நன்றாக வளர்ந்த பிறகும் ஒரே குடும்பமாக எங்கே போனாலும் சேர்ந்தே போகும். இரை தேடுவதானாலும் அக்கம்பக்கமாகத்தான் இருக்கும். இப் படி ஒவ்வொரு மயில் குடும்பமும் தனித்தனிக் கூட்ட மாகத்தான் சஞ்சரிக்கும். அப்படி இருக்கும்போது அவைகளுக்குள் களிப்பு வந்து கலாபம் விரிக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் மூத்த ஆண் குஞ்சுதான் முதலில் தோகையை விரித்து ஆடும். அதன் பிறகு தான் இளைய ஆண் குஞ்சுகள் தோகையை விரிக்கும். இப்படி முதலில் கலாபம் விரிக்கிற உரிமை மூத்த ஆண் குஞ்சுக்குத்தான் உண்டு என்பதுதான் இந்த ‘மயில் முறைக் குலத்துரிமை ‘ என்பது” என்றார்.
        • ஒரு மயிலானது தன்னுடைய எல்லாக் குஞ்சுகளுடனும் குடும்ப சகிதமாகத்தான் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் போகும் என்றும் அப்படித் தாய்ப் பறவையோடு குஞ்சுகளெல்லாம் சேர்ந்திருக்கிற சமயத்தில் கலாபம் விரித்து ஆடவேண்டிய சந்தர்ப்பம் வரும்போ-தெல்லாம் அந்தக் குஞ்சுகளில் மூத்த குஞ்சுதான் முதலில் கலாபம் விரிக்கும் என்றும், அதற்குப் பிறகுதான் மற்றக் குஞ்சுகளெல்லாம் கலாபம் விரிக்கும் என்றும், கண்டறியப்பட்டதாக எழுதியிருந்தது. மூத்த குஞ்சு என்பதற்கு என்ன அடையாளம் என்றால் ஒவ்வொரு குஞ்சும் முட்டையிலிருந்து வெளிவந்த உடனே அங்குள்ள ஆராய்ச்சிக்காரன் ஒவ்வொரு குஞ்சின் காலிலும் ஒவ்வொரு நிறமான வளையத்தை – மாட்டிவிட்டுப் பதிவு செய்து கொண்டான் என்ற விளக்கமும் எழுதப்பட்டிருந்தது.
      • ———————–
      • விற்பெரும் தடந்தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பின்
        நற்பெரும் தவத்தளாய நங்கையைக் கண்டேனல்லேன்
        இற்பிறப்பு என்பது ஒன்றும் இரும் பொறை என்பது ஒன்றும்
        கற்பு எனும் பெயரது ஒன்றும் களிநடம் புரியக்கண்டேன்.’
      • “வில்லேந்திய விசாலமான தோள்களையுடைய ராமா! பரந்த கடல் சூழ்ந்த இலங்கையின் மலையில் உனக்காகத் தவம் செய்துகொண்டிருக்கும் சீதை என்ற – ஒரு பெண் உருவத்தை நான் பார்க்கவில்லை.-ஆனால் ‘குடிப் பிறப்பு’ என்று சொல்லப்படுகிற ஒன்றும், ‘பெரும் பொறுமை’ என்ற ஒன்றும், ‘கற்பு’ என்று கருதப்படுகிற ஒன்றும், ஆகிய இந்த மூன்றும் சேர்ந்து அங்கே ஆனந்தத் தாண்டவம் ஆடுவதைத்தான் கண்டேன்,” என்றான் அனுமான். அதைக் கேட்டு ராமனுடைய திகைப்புக் குறைந்தது. போன உயிர் வந்தது போலக் களிப்பினால் பூரிக்கலானான்.
          • பண்டார வளைக்குப் போகுமுன்னால் இலங்கையிலுள்ள மலைப்பிர தேசங்களின் சிகரமாகிய ‘நூவாரா எலியா ‘ என்னும் ஊரையும் அதிலுள்ள சிறப்புகளையும் காட்டினார். அந்த வழியில் பாதைக்குப் பக்கமாக ஒரு பள்ளத்தில் இருந்த சிறு தடாகத்தைச் சுட்டிக்காட்டி இது ’சீதைத் தடாகம்’ என்றார். அந்தத் தடாகத்திலிருந்து ஒரு சிறு ஓடை அந்த மலைச்சாரலில் சல சலத்துக் கீழே ஓடிக்கொண்டிருந்தது. அதை ‘சீதை ஓடை’ என்றார். மேற்படித் தடாகத்திற்கு எதிரில் பாதைக்கு அப் பால் இருந்த மலையைக் காட்டி அங்கே தான் அசோகவனம் இருந்தது என்றும், அந்தக் குன்றின் ஓரத்திலிருந்த ஒரு குகையைக் காட்டி அதிலேதான் சீதை சிறையிருந்தது என்றும் கூறினார்.
          அதன்பின் மோட்டாரை ஓட்டினார். அதே பாதையில் தடாகத்தைவிட்டு சுமார் இரண்டு பர்லாங்கு தூரம் இறங்கி வந்தபின் அங்கே ஒரு சிறு நீர்நிலை இருந்தது. அது தான் சீதை தினந்தோறும் நீராடின துறை என்றார். அந்த நீர் நிலைக்கு அடுத்தாற்போல் ஒரு சிறு கோயில் இருந்தது. அங்கேதான் சீதை ஒவ்வொரு நாளும் ராமனைப் பூசை செய்தது என்றார்.
      • ———————
    • மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகை முடியத் தாவிய
      சேவடி சேப்பத் தம்பியொடும் கான் போந்த’ அந்தப்
      பாதங்கள் விராதனைச் சாப வீடு செய்தன. விராதன் சொல்கிறான்:
    • வேதங்கள் அறைகின்ற உலகெங்கும் விரிந்தன உன்
      பாதங்கள் இவை என்னில் படிவங்கள் எப்படியோ‘உன் பாதங்கள் இப்படிப்பட்டவை என்றால், படிவங்கள் எப்படிப்பட்டவையோ’ என்று விராதன்
    • ————–
    • இராமனோ, தரையின் மேல் நிற்கிறான். அனுமனால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
    • நூறுபத்துடை நொறில் பரித்தேரின்மேல் நுன்முன்
      மாறில் பேரரக்கன் பொர நிலத்து நீ மலைதல்
      வேறுகாட்டும் ஓர் வெறுமையை; மெல்லிய எனினும்
      ஏறுநீ ஐய என்னுடைத் தோளின்மேல் –என்றான்.
    • ஆயிரம் குதிரைகளால் இழுக்கப்படும் தேரின்மேல் உன் முன்னால் அரக்கன் வந்து நிற்கவும், நிலத்தின் மேல் நின்றவண்ணம் நீ போர்புரிவதும் குறைவுடையதாகும். வெறுமை காட்டி நிற்பதற்கு நீ என்ன தனியனா? நாங்களில்லையா உனக்கு? என் தோள்கள் உன்னைத் தாங்கும் அளவுக்கு வலிமையோ தகுதியோ உடையன அல்லவை என்றாலும், மெல்லியவையே என்றாலும், என் தோளில் ஏறுவாய் ஐயனே!
    • —————–

மாணியாய் உலகளந்த நாள் அவனுடை வடிவை
ஆணியாய் உணர் மாருதி அதிசயம் உற்றான்
காணியாகப் பண்டு உடையனாம் ஒரு தனிக் கலுழன்
நாணினான்; மற்றை அனந்தனும் தலை நடுக்குற்றான்.

வாமனனாய் வந்து உலகத்தை எல்லாம் அளந்த நாளில் – இதே இராமன் – எடுத்த பேருருவத்தை அறிந்தவனான மாருதி வியப்புற்றான். திருமாலைச் சுமப்பதைத் தனக்கே தனக்கான தனி உரிமையாகக் கொண்டிருந்த கருடன் நாணம் அடைந்தான். ஆதிசேடனோ தலை நடுக்கம் கொண்டான்.

இராமனின் தெய்வத் தன்மையைக் கம்பன் தொட்டுக்காட்டும் சில இடங்களில் இது ஒன்று.

அவதாரந்தோறும் அவதாரந்தோறும் அவனை உணர்ந்தவன் அனுமன் என்றொரு குறிப்பு கிடைக்கிறது இந்தப் பாடலில்

——–

‘புராரி மற்றி யானும் காற்றின் சேய் எனப் புகன்றான் மற்றைத் திசையுளோர்க்கு அவதி உண்டோ.’

மாருதி வாயுவினுடைய அம்சம் மட்டுமன்று; என்னுடைய அம்சமும்தான்’ என்று புரங்களை அழித்த புராரியான சிவபெருமான் சொன்னான்.

——–

அவ்விடத்து அவர் மறுகி அஞ்சி நெஞ்சு அழி அமைதி
வெவ்விடத்தினை மறுகு தேவர் தானவர் வெருவல்
தவ்விட தனி அருளு தாழ்சடைக் கடவுள் என
இவ்விடத்து இனிது இருமின் அஞ்சல் என்று இடை உதவி….

சுக்ரீவனுடைய பதட்டத்திற்கும் அச்சத்திற்கும் அப்படியே எதிரானதொரு சித்திரம். பாற்கடலிலிருந்து ஆலகாலம் வெளிப்படவும், அதனைக் கண்டு அஞ்சி ஓடிய தேவர்களையும், அசுரர்களையும் ஒன்று போல ‘அஞ்சாதீர்’ என்று சொல்லி அதனைத் தானே உண்ட சிவபெருமானைப் போல் ‘எதற்கும் அஞ்ச வேண்டாம். நீங்கள் இங்கேயே இருங்கள். நான் போய்ப் பார்த்து வருகிறேன்’ என்று சொல்லி பிரமசரிய வேடம் புனைந்துகொண்டான்.

———–

என்பு எனக்கு உருகுகின்றது.’ என்னுள் ஊற்றெடுக்கும் அன்பு என்னை எப்படி நெகிழ்த்துகின்றது என்றால் வெறும் மனம் மட்டுமேயன்று; உடலும் நெகிழ்கின்றது. எலும்பு வரை நெகிழ்ச்சி அடைந்திருக்கிறது. ‘இவர்கின்றது அளவில் காதல்.’ அளவில்லாத நேயம் இவர்கள் மேல் எனக்குத்

தோன்றுகிறது. ‘அன்பினுக்கு அவதி இல்லை.’ என்னை ஆட்கொள்ளும் அன்பு கொஞ்ச நஞ்சமில்லை. ‘அடைவு என்கொல்?’ இதனால் என்ன நேரும்? ‘அறிதல் தேற்றேன்!’ எனக்கு விளங்கவில்லை.

———

மஞ்சு எனத் திரண்ட கோல மேனிய! மகளிர்க்கு எல்லாம்
நஞ்சு எனத் தகைய ஆகி நளிர் இரும் பனிக்குத் தேம்பா
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண! யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் அனுமன் என்றேன்.

என்ன சொல்கிறான்? ‘மேகத்தைப் போல வண்ணம் உடையவனே! உன்னைப் பார்க்கின்ற எந்தப் பெண்ணுக்கும் உடனடியாக மயக்கத்தை ஏற்படுத்தக் கூடிய தாமரையைப் போன்று மலர்ந்த கண்கைள உடையவனே!’ முதலில் தொலைவிலிருந்து பார்க்கும்போது அனுமனை அசைத்தது அவனுடைய மேனி வண்ணம். அப்படிப்பட்ட வண்ணம் உடையவனே என்று அழைத்தான். திருப்தியாகவில்லை. ‘இந்தக் கண்ணு என்னை என்னமோ செய்யுதய்யா! எனக்கே இப்படி இருந்தால், யாராவது பெண் உன்னைப் பார்த்தால் அவளுக்கு என்னதான் ஆகாது? தாமரைக் கண் ஐயா உன் கண்’ என்றான். அதுவும் போதவில்லை அனுமனுக்கு. தாமரை என்றால் என்ன ஆகும்? வெயில் இருந்தால் மலர்ந்திருக்கும்; பனி பெய்தால் வாடிப் போகும். அப்போதும் வாடாத கண்ணாம். ‘நளிர் இரும் பனிக்குத் தேம்பா கஞ்சம் ஒத்து’ இந்தக் கண் தாமரை இருக்கிறதே, எந்தக் கடுமையான பனிக்கும் வாடாத தாமரை ஐயா.’ அது சரி. ஆனால் மாலை ஆனதும் கூம்பிப் போகுமே! அதுவும் இல்லையாம். ‘அலர்ந்த கண்ண!’ ‘எப்போதும் மலர்ந்திருக்கும் கண்ணை உடையவனே!’

முதல் மூன்று அடிகள் முழுவதும் இராமனைப் பற்றிய வருணனை. மூன்றாவது அடியின் கடைசியில் இருந்து, நான்காவது அடியில் தன்னைப் பற்றிய விவரம். எங்க அப்பா வாயு; எங்க அம்மா பேரு அஞ்சனை. என் பெயர் அனுமன்.’

இம்மலை இருந்து வாழும் எரிகதிர்ப் பரிதிச் செல்வன்
செம்மலுக்கு ஏவல் செய்வேன்; தேவ! நும் வரவு நோக்கி
விம்மல் உற்று அனையன் ஏவ, வினவிய வந்தேன் என்றான்
எம் மலைக் குலமும் தாழ இசை சுமந்து எழுந்த தோளான்.

‘அப்பா பேரு வாயு. அம்மா பேரு அஞ்சனை. என் பேரு அனுமன். இந்த மலை இருக்கிறதே, இதற்கு
மேல் சூரியனுடைய பிள்ளை ஒருத்தன் இருக்கிறான். அவனுக்கு நான் ஏவல் செய்கிறேன். வேலைக்காரன். சாமி! நீங்கள் வருவதைப் பார்த்து அவன் பயந்து போய்விட்டான். அவன் சொன்னதன் பேரில் உங்களைப் பற்றி அறிந்துகொள்ள வந்திருக்கிறேன்.’

மிகவும் சுருக்கமாகத்தான் சொல்கிறான் அனுமன். அதிக விவரங்கள் ஒன்றும் இல்லை. ‘சூரியனுடைய பிள்ளை’ என்ற உடனேயே இராமனுக்குப் புரிந்துவிட்டது. ஏனென்றால், அவனைத்தான் தேடிக்கொண்டு வந்திருக்கிறான் இவன். இந்த வார்த்தையக் கேட்ட இராமன் சொல்வதைக் கேளுங்கள்:

‘மாற்றம் அ·து உரைத்தலோடும்’ அனுமன் அப்படிச் சொன்னவுடன், ‘வரிசிலைக் குரிசில் மைந்தன் தேற்றம் உற்று,’ பெரிய கட்டமைந்த விலலை ஏந்திய தலைவனான இராமன் தெளிவடைந்தான். ‘இவனின் ஊங்குச் செவ்வியோர் இன்மை தேறி,’ இவனை விடவும் மேலானவன் இன்னொருவன் இருக்க முடியாது என்பதை உறுதியாக உணர்ந்தான். ‘ஆற்றலும், நிறைவும், கல்வி அமைதியும், அறிவும் என்னும் வேற்றுமை இவனோடு இல்லையாம்’ இவனிடத்திலே எது அதிகம்? அறிவாற்றல் மற்றும் செயலாற்றலா? நிறைந்த குணங்களா? நிறைந்த கல்வியினாலே ஒருவனுக்கு இயல்பாகவே ஏற்படும் அடக்கமா? அல்லது அந்தக் கல்வியால் ஏற்படும் உள்ளளி நிறைந்த ஞானமா? எது அதிகம்? ஒன்றுக்கொன்று வேறுபாடு தெரியவில்லையே! எல்லாம் சம அளவில் இருக்கிறதே!

இராமன் அனுமனைப் பற்றிச் சொல்கிறானே, ஆற்றலும் நிறைவும் கல்வி அமையதியும் அறிவும் என்னும்
வேற்றுமை இவனோடு இல்லையாம்.

சொல்லிக்கொண்டே வருகிறான். பக்கத்தில் திரும்பிப் பார்த்தால் இலக்குவன் கவனம் இன்னும் இவன் மேல் விழுந்ததா இல்லையா என்பது தெரியவில்லை. அவனுடைய பார்வை எல்லாம் சீதை எங்காவது தட்டுப்படுகிறாளா என்பதிலேயே நிலைத்திருந்தது. அவனுடைய கவனைத்தை ஈர்க்கும் விதமாகச் சொல்கிறான் இராமன். ‘இவன் படிக்காத வேதம் இருக்காது; கற்காத கலை இருக்காது. இப்படி எல்லாம் எப்படிச் சொல்றேன் என்று நினைக்கிறாயா? இவன் பேசுகிற பேச்சே சொல்கிறது. ‘சொல்லாலே தோன்றிற்று அன்றே!’ இவன் சொல்லே இவனுடைய நிறைவை ஏந்தி வெளிவருகிறது. இவன் சொல்லே இவனுக்கு சாட்சி. ‘யார்கொல் இச் சொல்லின் செல்வன்?’ பட்டமே கொடுக்கிறான் இராமன், முதல் பார்வையிலேயே. ‘ஆர்ரா இந்தச் சொல்லின் செல்வன்?’ ‘வில் ஆர் தோள் இளைய!’ ஆ ஊ என்றால் உடனே வில்லைத் தூக்கி நாண் ஒலி செய்யத் தயாராக நிற்கிற தம்பிப் பையா! ‘வீர் விரிஞ்சனோ?’ இது யார்ரா? பிரமனாக இருக்குமோ? ‘விடை வலானோ?’ இல்லாட்டி சிவனாக இருக்குமோ? (பிரமனாக இருக்குமோ, சிவனாக இருக்குமோ என்று கேட்டாலும், ‘நாராயணனாக இருக்குமோ’ என்ற கேள்வியை இராமன் எழுப்ப வைக்கவில்லை கம்பன். அங்கே உண்மையான சொல்லின் செல்வன் யார் என்பதற்கான விடை கிடைக்கிறது. சொல்லாமல் விட்டது எதுவோ அதுதான் அதிகம் சொல்லுகிறது. )

உடனே இராமனுக்கு இன்னொன்று தோன்றுகிறது. இந்தத் தம்பி சும்மா நிற்கிறானே, இவனுக்கு இன்னும் ஐயம் போகவில்லையோ என்னவோ? ஒருவேளை, இந்த அண்ணனுக்கு வேற வேலையில்லை, அந்த மானைப் பார்த்தவுடன் அப்படித்தான் அதன் பின்னாலேயே ஓடினான்; இத்தனைத் துன்பங்களையும் வரவழைத்தான். இப்போது இந்தப் பையனைப் பார்த்தவுடன் கிடந்து குதிக்கிறான்’ என்று நினைக்கிறானோ என்னவோ என்று தோன்றியது போலிருக்கிறது. இலக்குவனிடம் சொல்கிறான். ‘மாணி ஆம் படிவமன்று.’ இந்தப் பையன் உண்மையில் பையன் இல்லை. இவனுடைய பிரமச்சரிய வடிவத்தைப் பார்த்து இவனை ஒன்றும் அறியாதவன் என்று நினைத்துவிடக் கூடாது. ‘மற்று இவன் வடிவம், மைந்த, ‘ வேற என்ன வடிவம் என்று கேட்பாய் நீ. சொல்றேன்
கேள். ‘ஆணி இவ் உலகுக்கு எல்லாம் என்னலாம்.’ இவன்தான் இந்த உலகத்துக்கு எல்லாம் அச்சாணி என்று சொல்லலாம்.’ ‘ஆற்றலுக்கு ஏற்ற சேணுயர் பெருமை எல்லாம் சிக்கறத் தெளிந்தேன்.’ கொஞ்சம் கூட சந்தேகத்துக்கு இடமில்லாமல் இவனுடைய ஆற்றலையும், அதற்கேற்ற மிகப் பெரிய பெருமைகளையும் எல்லாம் தெளிவாக உணர்ந்துகொண்டேன்.

இலக்குவன் இன்னும் மாற்றம் ஏதுமின்றி நிற்கிறான். இராமனுக்குப் புன்னகை தோன்றுகிறது. ‘டேய்! இது மான் சமாச்சாரமில்லைடா! அப்பதான் நான் கொஞ்சம் விட்டுவிட்டேன். நீயே சொல்லியும் கேட்கவில்லை. இது அப்படியில்லை. நான் சரியாகத்தான் புரிந்துகொண்டிருக்கிறேன். இவனைப் பற்றி நான் சொல்வது இப்போது உனக்கு முழுமையாகப் புரியாமல் இருக்கலாம். ‘பின்னர்க் காணுதி மெய்ம்மை’ நீயே பின்னால தெரிந்துகொள்வாய்.

மாணிஆம் படிவமன்று மற்றிவன் வடிவம் மைந்த
ஆணிஇவ் உலகுக் கெல்லாம் என்னலாம்; ஆற்றற் கேற்ற
சேண்உயர் பெருமைதன்னைச் சிக்கறத் தெளிந்தேன்; பின்னர்க்
காணுதி மெய்ம்மை என்று தம்பிக்குக் கழறி, கண்ணன்… … …

நாலு அடிக்குள் எத்தனைக் காட்சிகளைத் திணிக்க முடியும்? மிக அலட்சியமாக நுணுக்கி நுணுக்கி இழைக்கிறான் கவிஞன். அது இருக்கட்டும். அவன் என்னடா என்றால் இவனைப் பார்த்து, ‘நீல மேகம் போன்ற நிறத்தழகா, பெண்கள் மனத்துக்கெல்லாம் நேசத் துன்பத்தை உண்டாக்கக் கூடிய, பனியில் வாடாத, எப்போதும் மலர்ந்த தாமரைக் கண்ணா’ என்று கண்ணால் பார்க்கக் கூடியனவற்றைப் பார்த்து மனம் பறிகொடுத்துப் பேசுகிறான். இவன் என்னடா என்றால், கண்ணுக்குப் புலப்படாத அறிவையும், ஆற்றலையும், அகத்தையும், அகத்தின் தெளிவையும், உயர்வையும், அடக்கத்தையும் ஒரே நொடியில் அளந்து பார்த்தேன் என்கிறான். எப்படி அளந்தானாம்? ‘சொல்லினால் தோன்றிற்று அன்றே, யார்கொல் இச் சொல்லின் செல்வன்!’

அப்படி என்னதான்யா சொன்னான் அந்த அனுமன்? ‘எங்க அப்பா பேரு காத்து; எங்க அம்மா பேரு அஞ்சனை; என் பேரு அனுமன். இந்த மலை மேல சூரியனின் பிள்ளை(யான சுக்ரீவன்) இருக்கிறான். அவன் உங்களைப் பார்த்து பயந்து போய்விட்டான். நீங்க யாருன்னு கேட்டுட்டு வரச் சொன்னான். அதான் வந்திருக்கிறேன்.’ இதுல என்னய்யா அப்படி பெருசா தெரியுது அறிவு, ஆற்றல், அடக்கம் இன்ன பிற? எதுக்கு இப்படி ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறாரு இந்த இராமரு? எனக்கு ஒன்றே ஒன்றுதான் தட்டுப்படுகிறது. ‘கவ்வை இன்றாக நுங்கள் வரவு’ என்று அனுமன் சொன்னான் பாருங்கள், அதற்கான முழுப்பொருள் இப்போது விளங்கியிருக்க வேண்டும், இராமனுக்கு. ‘உங்களைப் பார்த்து பயந்துவிட்டான்’ என்று சொன்ன கணத்தில், ‘ஓகோ அதுக்குத்தான் அப்படிச் சொன்னாயா’ என்று அந்த வாக்கியத்தின் நயம் உணர்ந்திருக்கக் கூடும்.

இல்லை. இப்படி அளந்து பார்த்துவிட முடியாது இராமனை; அவன் இதயத்தை. ‘அடியனேன் உன் வேதநூல் எனத்தகைய திருவுளத்தின் குறிப்பு அறியேன்’ என்று அனுமனே, பலகாலம் பழகியபின், வீடணன் அடைக்கலப் படலத்தின் போது சொல்லப் போகிறான். அனுமனே அறிய ஒண்ணாத வேத நூல் அன்ன திருவுளத்தின் குறிப்பை நாமா கண்டுவிடப் போகிறோம்? ஒன்றே ஒன்று தெரிகிறது. இங்கே அனுமனுடைய நிலை இனம் புரியாத அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு, அறிவு அடங்கி நிற்கும், ஆனாலும் அடங்கிய நிலையிலும் தீவிரமாக வேலை செய்துகொண்டிருக்கும் நிலை. இராமனுடைய நிலையோ, அறிவின் செயல்பாட்டைக் குறித்தே சற்றும் கவலைப்படாமல், ஒற்றைச் சொல்லால் உள்ளம் அளந்து, ஒரே பார்வையில் அன்பினுக்கு ஆட்பட்டுத் தன்னுடைய முழு மனத்தையும் ஒரேயடியாக அப்படியே கொடுத்துவிட்ட நிலை. Abundant love and unconditional acceptance. இவர்கள் இப்படி இருந்தால், நம் நிலை? இவர்களை அறிவுகொண்டு அளக்க நினைத்து முற்றிலும தோற்றுப போன நிலை. வேறு என்ன சொல்வது!

அறிவு வேலை செய்துதான் ஆகவேண்டும் என்ற நிலையைத் தாண்டிய சில கணங்கள் உண்டு. ‘அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி’ என்ற இரண்டைக் காட்டிலும் ‘அகத்திலே அன்பின் ஓர் வெள்ளம்’ இன்னது என்று சொல்லத் தெரியாதபடி ஆட்கொள்ளும். அப்படிப்பட்ட அன்பிலே கட்டுண்டார்கள் ஆண்டவனும், அடியவனும். ஆனாலும், அடியவன் கொஞ்சம் அதிகம் சாமர்த்தியசாலிதான். ஆண்டவனுக்கு நடிக்க ஒரு பாத்திரம் இருந்ததென்றால், அடியவனுக்கு நடக்க ஒரு பாத்திரம் இருந்தது. அடியவன் மனத்தில் இப்போது ஓடுகிற எண்ணம் என்ன, அவன் இப்போது ஆண்டவன் முன்னால் பேசுகின்ற விதம் என்ன, அமைச்சனாக அவன் ஆற்றுகின்ற செயல் என்ன? செயலுக்குக் காரணம் இருந்ததா? அவன் உள்ளக் கிடக்கை இப்போது இராமனை நோக்கி
யதா அல்லது சுக்ரீவனை நோக்கியதா?

——————–

நஅன்-ரிக்வேத வினீதஸ்ய ந அ-யஜுர்வேத சாரிணா ந அ-சாம வேத விதூஷா ஷக்யமேவம் விபாஷிதம் (மேற்படி, சுலோகம் 28)

‘ரிக் வேதத்தைப் பொருள் உணர்ந்து ஓதினாலொழிய, யஜுர் வேதத்தை மனனம் செய்திருந்தாலொழிய, சாம வேதத்தை அறிந்திருந்தாலொழிய இப்படிப் பேசுவது இயலாத ஒன்று’

————-

எவ்வழி இருந்தான் சொன்ன கவிக்குலத்து அரசன் யாங்கள்
அவ்வழி அவனைக் காணும் அருத்தியால் அணுக வந்தோம்
இவ்வழி நின்னை உற்ற எமக்கு நீ இன்று சொன்ன
செவ்வழி உள்ளத்தோனைக் காட்டுதி தெரிய’ என்றான்.

ஆதரித்து அவனைக் காண்டற்கு அணுகினிர் என்னின்
தீது அவித்து அமையச் செய்த செய்தவச் செல்வம் நன்றே.

நீங்களே அவனைப் பார்க்க வந்திருக்கிறீர்களா! அப்படியானால், அவனுடைய துன்பம் கெடுமாறு அவன் செய்த தவம் மிகப் பெரியது

கொடுங்குலப் பகைஞன் ஆகிக் கொல்விய வந்த கூற்றை
நடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனினும் நல்லது உண்டோ?

‘தன் குலத்தையே வேரறக் களைவதற்கான செயலைத் தொடங்கி, தனக்குப் பகைவனாக வந்திருக்கும் எமனைக் கண்டு (தன்னை அழிக்க எண்ணியிருப்பவனைக் கண்டு) நடுநடுங்கிக் கிடப்பவர்களுக்கு அபயம் அளிப்பதை விடவும் பெரிய அறம் ஒன்று உண்டா?’ எங்களைக் காப்பது உங்களுக்கு எளிதான செயல் அல்லவா? ‘இமைப்பு இலாதோர் தம்மையே முதல் இட்டு ஆன்ற சராசரம் சமைந்த ஆற்றல் மும்மை ஏழ் உலகும் காக்கும் முதல்வர் நீர்.’ தேவர்கள் முதற்கொண்டு இந்த அண்ட கோளத்தில் அசைகின்ற, அசையாத (சர, அசர) எல்லாவற்றையும் காக்க வல்லவர் நீங்கள். எம்மைக் காத்தல் உங்களுக்கு மிகவும் எளிய ஒன்று.

இவர்களை உற்று நோக்கியபடி நடந்து வந்தானே அப்போது,

காய் எரி கனலும் கற்கள் கள்ளுடை மலர்கள் போல்
தூய செங்கமலப் பாதம் தோய்தொறும் குழைந்து தோன்றும்’

வெய்யிலில் கிடக்கின்ற காரணத்தால் நெருப்பைப் போல் சுடுகின்ற கற்கள், இவர்கள் பாதம் பட்டதும் (இவர்களுடைய பாதத்துக்கு) தேன் நிறைந்த மலர்களைப் போல் குழைந்து போகின்றனவே’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டானல்லவா, இந்த இரண்டு தருணங்களிலும் தாளையும், தோளையும் கவனித்தான். இப்படி கவனித்ததை இங்கே சொல்லவில்லை. அடுத்த காட்சியில் சுக்ரீவனிடம் சொல்லப் போகிறான்.

சங்கு சக்கரக் குறி உள தடக் கையில் தாளில்
எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை
செங்கண் விற்கரத்து இராமன், அத் திரு நெடுமாலே.
இங்கு உதித்தனன் ஈண்டு அறம் நிறுத்துதற்கு இன்னும்.

அவர்களுடைய கையிலும், பாதத்திலும் சங்கு, சக்கரக் குறிகள் உள்ளன. இப்படி ஒரு இலக்கணத்தோடு வேறு யாரும் இல்லை. இருக்கவும் முடியாது. சிவந்த (தாமரை போன்ற) கண்களை உடைய இராமன் வேறு யாரும் இல்லை. அந்த நெடுமாலேதான். அறத்தை நிலை நிறுத்துவதற்காகப் பிறந்திருக்கிறான்.

ததா ச சுமஹாப்ராஞ்ஞா ஹனுமான் மாருதாத்மஜா
ஜகாம ஆதாயதெள வீரெள ஹரி ராஜாய ராகவவ்

(வா. இரா. கிஷ்கிந்த காண்டம், சர்க்கம் 4, சுலோகம்)
அதன் பிறகு மிகுந்த புத்திமானும், வாயுவின் மகனுமான அனுமன் அந்த இரண்டு இராகவர்களையும் (இராம இலக்குவர் இருவருமே இரகு குலத்தவர், ஆகவே இருவருமே இராகவர்கள்) குரங்குகளுக்கு அரசனிடத்தில் அழைத்துச் சென்றான்.

எப்படி அழைத்துச் சென்றான்?

பிக்க்ஷ¤ ரூபம் பரித்யஜ்ய வானரம் ரூபம் அஸ்திதா
ப்ரிஷ்டம் ஆரோப்ய தெள வீரெள ஜகாம கபிகுஞ்சரா.

தான் மேற்கொண்டு வந்த பிரமசரிய உருவத்தை விட்டுவிட்டு, தன்னுடைய குரங்கு உருவத்தோடு, அந்த இரண்டு வீரர்களையும் தன் முதுகிற் சுமந்தவாறு சுக்ரீவனை நோக்கிச் சென்றான் குரங்குளில் யானை போன்ற (பேருருவம் கொண்ட) அனுமன்.

கிம் அர்த்தம் த்வம் வனம் கோரம் பம்ப்பா கானன மந்திதம்?
ஆகத ஸானுஜொ துர்கம் நானா வ்யால ம்ருகாயுதம்.
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 4, சுலோகம் 4)

என்ன காரணத்துக்காக பலவிதமான ஆபத்தான மிருகங்கள் உலவக் கூடியதும் பம்பைக் கரையில் இருப்பதுமான இப்படிப்பட்ட ஆபத்தான வனத்தில் உங்களுடைய தம்பியுடன் வந்திருக்கிறீர்கள்?
‘ஆபத்தான மிருகங்கள் நிறைந்ததும் பம்பைக் கரையில் உள்ளதுமான வனம். இந்த வனத்தில் உங்களுடைய தம்பியையும் கூட அழைத்துக்கொண்டு என்ன காரணத்துக்காக வந்திருக்கிறீர்கள்?

விதிதாநெள குணா வித்வான்! சுக்ரீவஸ்ய மஹாத்மனா
தமேவ சாவா மார்க்காவ சுக்ரீவம் ப்லவகேஷ்வரம்.
(மேற்படி, சர்க்கம் 3, சுலோகம் 37)

பண்டிதரே! சுக்ரீவன் என்ற அந்தப் பெருங்குணசாலியின் தன்மைகளை நாங்கள் அறிவோம். (விண்ணெங்கும்) தாவித் திரிவதான குரங்குகளின் அரசனான அவனைக் காணவே வந்திருக்கிறோம்.

யார் என விளம்புகேன் நான் எம் குலத் தலைவற்கு உம்மை,
வீர நீர் பணித்திர் என்றான் மெய்மையின் வேலி போல்வான்.

‘யார் வந்திருக்காங்கன்னு சொல்லட்டும் எங்க தலைவருக்கு? எனக்கு என்ன உத்தரவு?’ என்று கேட்டானாம், உலகத்தில் வாய்மையைக் காப்பதற்காக இட்ட வேலியைப் போன்றவனான அனுமன்.

தஸ்யஸ்ய வசதோ அரண்யே நியத்ஸ்ய மஹாத்மனா
ராவணேன ஹ்ரிதா பார்யா ஸ த்வம் ஷரணம் ஆகதா.
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 5, சுலோகம் 6)

காட்டிலே நெறியான வாழ்க்கை மேற்கொண்டிருந்த இந்த மகாத்மாவின் மனைவியை இராவணன் கவர்ந்து சென்ற காரணத்தால், உன்னைச் சரண்புகும் பொருட்டு இங்கே வந்திருக்கிறான்.

யானும் என் குலமும் இவ் உலகும் உய்ந்தனம் எனா, மானவன் குணம் எலாம் நினையும் மதியினான்.’ நான் உய்ந்தேன்; என் குலம் உய்ந்தது; நாங்கள் மட்டுமில்லை இந்த உலகமே உய்ந்தது என்றவாறு மனிதனாகத் தோன்றிய இராமனின் நல்ல குணங்களை எல்லாம் சிந்தித்தவாறு சுக்ரீவன் இருந்த இடத்திற்குச் சென்றான்.

மேலவன் திருமகற்கு உரைசெய்தான்.’ சூரியனின் மகனான சுக்ரீவனிடத்தில் சொன்னான். என்ன சொன்னான்? ‘விரைசெய் தார் வாலி என்ற அளவிலா வலியினான் உயிர்தெறக் காலன் வந்தனன்.’ மணமிகுந்த பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்த, அளவில்லாத வலிமை உடையவனான வாலியைக் கொல்வதற்கான எமன் வந்திருக்கிறான். ‘இடர்க் கடல் கடந்தனம்.’ நாம் நம்முடைய துன்பக் கடலைக் கடந்தாகிவிட்டது.

மேலவன் திருமகற்கு உரைசெய்தான் விரைசெய்தார்
வாலிஎன்ற அளவிலா வலியினான் உயிர்தெறக்
காலன் வந்தனன் இடர்க்கடல் கடந்தனம் எனா
ஆலம் உண்டவனின் நின்று அரு நடம் புரிகுவான்.

‘நான் வாழ்ந்தேன்; என் குலம் வாழ்ந்தது, இந்த உலகமே வாழ்ந்தது’ என்று எண்ணியவாறு வந்தவன் என்ன காரணத்துக்காக அவ்வாறு எண்ணினான் என்பது முதல் மூன்றடிகளில் வெளிப்பட்டது. ஏன்? வாலியின் உயிர் கவர்வதற்கு எமன் வந்துவிட்டான். ‘நான் வாழ்ந்தேன், என் குலம் வாழ்ந்தது’ என்பதோடு நிற்காமல் ‘இந்த உலகமும் வாழ்ந்தது’ என்று எண்ணிய காரணத்தால் வாலியின் தன்மை என்ன என்பதும், என்ன காரணத்துக்காக அவன் கொல்லப்படத் தகுந்தவனே என்பதும் கோடிகாட்டப்படுகின்றன.

மண்உளார் விண்உளார் மாறுளார் வேறுளார்
எண்உளார் இயல்உளார் இசைஉளார் திசைஉளார்
கண்உளார் ஆயினார்; பகைஉளார், கழிநெடும்
புண்உளார் ஆருயிர்க்கு அமுதமே போல் உளார்.

அப்பா சுக்ரீவா! பயந்து போனாயே. இவர்கள் வாலி அனுப்பியவர்களோ என்று நடுங்கினாயே. இவர்கள் நீ நினைத்ததைப் போல் இல்லை. இவர்கள் யார் தெரியுமா? இந்த மண்ணில் இருப்பவர்கள், அந்த விண்ணில் இருப்பவர்கள், இந்த இரண்டு உலகங்களுக்கும் மாறான பாதாள உலகத்தில் இருப்பவர்கள், இந்த மூன்றையும் தவிர்த்த உலகங்களில் உள்ளவர்கள், அத்தனை பேர்களின் எண்ணத்திலும், செயலிலும், கண்களிலும் உள்ளவர்கள். யாரெல்லாம் பகைவரை உடையவர்களாக இருக்கிறார்களோ, யாருக்கெல்லாம் பகைவரால் துன்பம் நேர்ந்திருக்கிறதோ, யாரெல்லாம் பகையாலே உடலும் உள்ளமும் புண்பட்டிருக்கிறார்களோ, அப்படிப்பட்டவர்களின் உயிர்களுக்குள் ஊற்றப்படும் அமுதம் போன்றவர்கள்.

சூழிமால் யானையார் தொழு கழல் தயரதன்
பாழியாலர் உலகெலாம் ஒருவழிப் படரவாழ்
ஆழியான் மைந்தர்; பேர் அறிவினார்; அழகினார்;
ஊழியார்; எளிதின் நிற்கு அரசு தந்து உதவுவார்.

அழுகின்ற குழந்தைக்கு மிட்டாய் தருவதைப் போல் செய்தியை ஒவ்வொன்றாக எடுத்து வைக்கிறான் அனுமன். அவர்கள் யார் தெரியுமா? பெரிய பெரிய யானைப் படையை உடைய அரசர்களெல்லாம் தொழுது வணங்கியவனான சக்ரவர்த்தி, தசரதன் தெரியுமில்லையா உனக்கு? இந்த உலகம் முழுவதையும் தன் வலிமையால், தன் குடைக் கீழ் வாழும்படிச் செய்த, ஆணைச் சக்கரத்தை உடையவன் இல்லையா அந்த தசரதன்? அவனுடைய மைந்தர்கள் இவர்கள். என்னா அறிவுள்ளவங்க தெரியுமா? எவ்ளோ அழகா இருக்காங்க தெரியுமா? சரி. அத விட்டுவிடுவோம். இவர்கள் நெறிப்படி நடப்பவர்கள். அறத்தைக் கைக்கொண்டவர்கள். மிக எளிதில் உனக்கு அரசைப் பெற்றுத் தருவார்கள்.

காதிசேய் தரு நெடுங் கடவுள் வெம் படையினார்.’ விஸ்வாமித்திரர் பல தெய்வப்படைகளை இவர்களுக்குத் தந்திருக்கிறான். தவறாத சக்தி உடைய அத்திரங்கள் இவர்களிடத்தில் உண்டு

மாயையால் மதிஇலா நிருதர்கோன் மனைவியைத்
தீயகான் நெறியின் உய்த்தனன்; அவள் தேடுவார்
நீஐயா தவம் இழைத்துடைமையால், நெடு மனம்
தூயையா உடையையால் உறவினைத் துணிகுவார்.

இவ்வளவு பேராற்றல் உடையவர்கள். சரிதான். அப்படியானால் எப்படி இந்த இராமன் தன் மனைவியைத் தொலைத்தான்? ‘மாயையால் மதிஇலா நிருதர்கோன் மனைவியைத் தீயகான் நெறியின் உய்த்தனன்.’ அது வந்து, இந்த இராவணன் இருக்கானே, புத்தி கெட்ட பய, அவன் மாயத்தோற்றம் ஒன்றை உண்டாக்கினான். மாரீசனை மாயமானாக அனுப்பினான். அவர்கள் இல்லாத சமயத்தில் சீதையைத் தன்னுடைய கொடிய வஞ்சனையால் இந்தக் காட்டு வழியில் தூக்கிச் சென்றுவிட்டான். அவளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

தனக்கு உவமை தானேயன்றி இன்னொருவன் இல்லாதவனின் சரணத்தை நாடி வந்து அடைந்தான். அப்படி நடந்து வரும்போது இவர்களைப் பார்த்தவாறே வந்தானில்லையா, அந்தத் தருணத்தில் உள்ளத்தின் அடி ஆழத்தில்
உணர்கிறான் சுக்ரீவன்:

தேறினன் அமரர்க்கு எல்லாம் தேவராம் தேவர் அன்றே
மாறி இப் பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி மன்னோ
ஆறுகொள் சடிலத்தானும் என்று இவர்கள் ஆதி
வேறுள குழுவை எல்லாம் மானுடம் வென்றதம்மா.

இவனே தேவர்களுக்கு எல்லாம் தேவன். மனிதனாக வந்து தோன்றியிருக்கிறான். சடாமுடியில் ஆற்றைத் தரித்த உருத்திரன் முதலான எல்லா தேவர்களையும், இதோ, இந்த மானுடம் வென்றுவிட்டது.

பவான் தர்ம வினீதா ச சுதபா சர்வ வத்சலா
ஆக்யாதா வாயுபுத்ரேண தத்வதோ மே பவத் குணா
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 5, சுலோகம் 9)

தாங்கள் தர்மங்களைப் பயின்றவர்; நற்செயல்களில் நாட்டம் உடையவர்; அனைவரையும் நேசிப்பவர். (அல்லது, ‘அனைவராலும் விரும்பப்படுபவர்’.) வாயு புத்திரனான அனுமன் எனக்கு உங்களுடைய குணநலன்களின் மெய்மையைச் சொல்லியிருக்கிறான்.

ரோசதே யதி மே சக்யம் பாஹ¤ ஏஸ ப்ரசாரிதா
க்ரிஹ்யதாம் பாணினா பாணி மர்யாதா பத்யதாம் த்ருவா
(மேற்படி, சுலோகம் 11)

என்னுடன் நட்பு கொள்வது உனக்குச் சம்மதமானால், இதோ உன் முன்னால் என் கரம் நீட்டப்பட்டிருக்கிறது. (நம்முடைய) இந்தத் தொடர்பு உறுதிப்படும் விதமாக உன் கரத்தால் இதைப் பற்று.

யாங்கள் உற்ற கை அறு துயரம் நின்னால் கடப்பது கருதி வந்தோம்
ஐய! நின் தீரும் என்ன … … … … … … … … … … … …

‘செயல்களற்று நாங்கள் நிற்கும் விதத்தில் எங்களைப் பீடித்துள்ள துயரத்தை உன்னால் (உன் துணையுடன்) கடப்பதற்காக வந்துள்ளோம். இந்தத் துயர் உன்னால் தீரும்’ என்று இராமன் சொன்னான்.

முரணுடைத் தடக்கை ஓச்சி முன்னவன் பின்வந்தேனை
இருள்நிலைப் புறத்தின்காறும் உலகெங்கும் தொடர இக்குன்று
அரண் உடைத்து ஆகி உய்ந்தேன்; ஆர்உயிர் துறக்கல் ஆற்றேன்;
சரண் உனைப் புகுந்தேன். என்னைத் தாங்குதல் தருமம் என்றான்.

தடித் தடியான கைகளை ஓங்கியபடி எங்க அண்ணன் தம்பியாகிய என்னை இருள் நிறைந்த இந்த உலகத்தின் எல்லா இடங்களிலும் துரத்தினான். என்னைப் போட்டு அடித்தான் ஐயா. என்னைக் கொல்லத் துடிக்கிறான். ஏதோ இந்த மலைப் பிரதேசத்தில் அவன் நுழைய முடியாதபடி ஒரு சாபம் இருக்கிற காரணத்தால் இங்கே ஓடிவந்து ஒளிந்துகொண்டு உயிர் வாழ்கிறேன். ‘ஆருயிர் துறக்கல் ஆற்றேன்’. ஐயா, இப்படிப்பட்ட அச்சத்தோடு வாழ்வதை விடவும் உயிரை விட்டுடலாம்னு பாத்தேன். என்னால முடியல. சாகலாம்னாலும் முடியல. நான் என்ன பண்ணுவேன்! ஐயா, உங்களை நான் சரண் புகுந்தேன். என்னைக் காப்பாற்றுவதே உங்கள் தருமம்.’

விருந்தும் ஆகி அம் மெய்ம்மை அன்பினோடு
இருந்து நோக்கி, நொந்து, இறைவன் சிந்தியா
பொருந்து நன் மனைக்கு உரிய பூவையைப்
பிரிந்துளாய் கொலோ நீயும் பின் என்றான்.

விருந்துண்டு அமர்ந்திருந்த போது, தன் மீது பொழியப்பட்ட அன்பில் மனம் குளிர்ந்து, சுற்றிலும் (மறுமுறை) நோக்கினான். சிந்தித்தான். மனம் நொந்து சிந்தித்தான். ஏன் மனம் நொந்தான்? இங்கே பரிமாறியது முழுக்க முழுக்க ஆண்கள். சுக்ரீவனுடைய மனைவி இங்கே இருந்திருக்க வேண்டுமே! அவள் ஏன் கண்களில் தட்டுப்படவில்லை? கேள்வி உறைக்கிறது. ‘என்னப்பா சுக்ரீவா, உன் மனைவியைக் காணோமே, எங்கே அவர்கள்? இங்கே இருக்கிறார்களா? இல்லாவிட்டால் என்னைப் போல நீயும் உன் மனைவியைப் பிரிந்திருக்கிறாயா?’ என்று கேட்டான்.

என்ற வேலையில் எழுந்து மாருதி
குன்றுபோல நின்று, இருகை கூப்பினான்.
‘நின்ற நீதியாய்! நெடிது கேட்டியால்.
ஒன்று யான் உனக்கு உரைப்பது உண்டு எனா.

இராமன் அப்படிக் கேட்ட உடனே குன்று எழுந்து நிற்பது போல் எழுந்தான் மாருதி. இரண்டு கைகளையும் கூப்பினான். வணக்கமாகச் சொன்னான். ‘நிலைத்த நீதியை உடையவனே! நான் உனக்குச் சொல்ல வேண்டியது ஒன்று உண்டு. கொஞ்சம் நீளமான செய்தி அது. கேட்டருள வேண்டும்.’

மற்று இனி உரைப்பது என்னே? வானிடை மண்ணில் நின்னைச்
செற்றவர் என்னைச் செற்றார்; தீயரே எனினும் உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார்; உன் கிளை எனது; என் காதல்
சுற்றம் உன் சுற்றம்; நீ என் இன்னுயிர்த் துணைவன் என்றான்

இன்னும் வேறு என்ன சொல்வது? என்ன சொல்லவேண்டி இருக்கிறது? ஆகாயத்தில் என்றாலும் சரி, பூமியில் என்றாலும் சரி; உன் மீது பகைகொண்டு உன்னை வருத்தியவர்கள் யாரோ, அவரெல்லாம் என்னை வருத்தியவர்கள். உனக்கு உற்றவர் – அது எப்படிப்பட்ட கெட்டவர்களாக இருந்தாலும் சரி – எனக்கும் உற்றவர். உனக்கு யாரெல்லாம் (நேசமுடைய) உறவினர்களோ, அவர்களெல்லாம் எனக்கும் உறவினர்கள்தாம். என் மீது நேசம் பாராட்டும், நான் நேசம் பாராட்டும் என் உறவெல்லாம் உன்னுடைய உறவினரே. நீ என் இன்னுயிர்த் துணைவன். என் சகோதரன்.

உருமை என்று இவற்கு உரிய தாரமாம்
அருமருந்தையும் அவன் விரும்பினான்
இருமையும் துறந்து இவன் இருந்தனன்.
கருமம் இங்கு இது, எம் கடவுள்! என்றனன்.

இதோ இந்தச் சுக்ரீவன் இருக்கிறானே, இவனுக்கு உருமை (ருமா) என்ற பெயருடைய மனைவி உண்டு. அந்தப் பெண்ணையும் வாலி அபகரித்துக்கொண்டான். அரசன் என்ற நிலையில் கொஞ்ச காலம் இருந்தவனேனும், அரசை அண்ணனிடம் திருப்பினாலும் இளவல், இளவரசன் என்ற நிலையில் இருக்கவேண்டியவன் இவன். அதையும் இழந்தான். தன் வாழ்வின் ஆதாரப் பற்றுக்கோடான தன் மனைவியையும் அண்ணனிடத்தில் பறிகொடுத்தான். இதோ, காட்டில் வசிக்கிறான். சாமி! இதுதான் நடந்தது.

ஈரம் நீங்கிய சிற்றவை சொற்றனள் என்ன
ஆரம் வீங்கு தோள் தம்பிக்குத் தன் அரசு உரிமைப்
பாரம் ஈந்தவன், பரிவிலன் ஒருவன் தன் இளையோன்
தாரம் வெளவினன் என்ற சொல் தரிக்குமாறு உள்ளதோ?

கதிரவன் சிறுவன்ஆய கனக வாள் நிறத்தினானை
எதிர்உறத் தழுவி, நட்பின் இனிது அமர்ந்து, அவனின், நீண்ட
வெதிர் பொரு தோளினாளை நாடுதல் விழுமிது என்றான்.
அதிர் கழல் வீரர் தாமும் அன்னதே அமையும் என்றார்.

ஒளிவிடும் பொன் போன்ற நிறத்தை உடையவனும் சூரியனின் புத்திரனுமான சுக்ரீவனுடைய நட்பைப் பெற்று, அவன் மூலமாகச் சீதையைத் தேடுவதே சிறந்தது என்று கபந்தன் என்ற பெயரில் சாபம் பெற்று வாழ்ந்தவனான தனு என்ற கந்தர்வன் சொன்னான். அப்படியே செய்கிறோம் என்று இருவரும் அவனுக்குச் சொன்னார்கள்.

வாலினோ மே மஹாபாக பய ஆர்தஸ்ய அபயம் குரு
கர்தும் அரஹசி காகுத்ஸ்தா பயம்மே ந பவேத் யதா
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 5, சுலோகம் 23 பின்பாதி, 24 முன்பாதி)

‘வாலியால் துன்புறுத்தப்பட்டு, அவனை அஞ்சி வாழும் என்னுடைய இந்த அச்சத்தை மாற்று. எனக்கு அபயம் நல்கு. அவ்வாறு செய்வதே உனக்குப் பொருத்தமானதாகும்’ என்ற சுக்ரீவன் வாய்மொழிக்கு விடையாக,

உபகார பலம் மித்ரம் விதிதம் மே மஹாகபி
வாலினாம் தம் வதிஷ்யாமி தவ பார்யா அபஹாரிணம்
(மேற்படி, சுலோகம் 25 பின்பாதி, 26 முன்பாதி)

‘நட்புக் கொள்வதன் பலன் என்னவென்றால், (ஒருவருக்கொருவர்) உதவியாயிருத்தலே. வலிய வானரனே! உன் மனைவியை அபகரித்தவனான வாலியை நான் கொல்கிறேன்..’

உலகம் ஏழினோடு ஏழும் வந்து அவன் உயிர்க்கு உதவி
விலகும் என்னினும் வில்லிடை வாளியின் வீட்டி
தலைமையோடு நின் தாரமும் உனக்கு இன்று தருவேன்
புலமையோய்! அவன் உறைவிடம் காட்டு என்று புகன்றான்.

பதினான்கு உலகங்களில் வாழ்பவர்களும் ஒன்று கூடி, அவனுக்கு உதவியாக நின்று என்னைத் தடுத்தாலும், என்னுடைய வில்லில் அம்பு தொடுத்து, அவனைக் கொன்று, அரசையும் உன் மனைவியையும் ஒரு சேர உனக்கு மீட்டளிப்பேன். இன்று. இப்போது. இதே நிமிடத்தில் உனக்கு உன் அரசும், உன் மனைவியும் கிடைத்தாகிவிட்டது என்று கொள். அவன் எங்கே இருக்கிறான், அதை எனக்குக் காட்டு. அவன் இருக்கும் இடத்துக்கு என்னை அழைத்துச் செல்.

எழுந்து பேர் உவகைக் கடற் பெருந் திரை இரைப்ப
அழுந்து துன்பினுக்கு அக்கரை கண்டனன் அனையான்
விழுந்ததே இனி வாலிதன் வலி என விரும்பா
மொழிந்த வீரற்கு, ‘யாம் எண்ணுவது உண்டு’ என மொழிந்தான்.

‘வாலியை இப்போதே அழிக்கிறேன். அவன் எங்கிருக்கிறான் காட்டு’ என்று இராமன் எழுந்த அளவில் மகிழ்ச்சியாகிய கடல் பெரிய அலைகளுடன் பொங்கி எழ, இது வரை வாடிக் கொண்டிருந்த துன்பக் கடலுக்கு அக்கரை கண்ணில் தென்பட்டவனாக, ‘வாலியின் வலிமை இத்தோடு தொலைந்தது’ என்றெண்ணி ஆர்ப்பரித்து, விரும்பி நிற்கும் அனுமன் முதலான வானர வீரருக்கும், இராமனுக்கும் ‘எனக்குக் கொஞ்சம் யோசனையாக இருக்கிறது’ என்று சொன்னான்.

மாயாவீ நாம தேஜஸ்வீ பூர்வஜோ துந்துபே சுதா
தேன தஸ்ய மஹத் வைரரம் வாலினா ஸ்த்ரீ க்ரிதம் புரா
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 9, சுலோகம் 4)

துந்துபிக்கு முன் தோன்றியவனான (அவனுடைய மூத்த சகோதரனான என்றும் பொருள் கொள்ளலாம்) மாயாவி என்றொரு அரக்கன் இருந்தான். அவனுக்கும் வாலிக்கும் ஒரு பெண் தொடர்பாகப் பகை இருந்தது.

கதம் ச தர்மம் ஜானீதே யேன ப்ராத்ரா துராத்மனா
யுத்தாய அபிநியுக்தேன பிலஸ்ய பிஹிதம் முகம்.
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 55, சுலோகம் 4)

தன்னுடைய சகோதரனால் குகையின் வாயிலைக் காவல் காக்குமாறு ஆணையிடப்பட்டிருந்த இவன், எந்த அடிப்படையில் தான் செய்வது சரி என்ற முடிவுக்கு வந்து, குகையின் வாயிலைப் பாறை கொண்டு அடைத்தான்? இவன் செய்தது எந்த தர்மத்தின்பாற் பட்டது? எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வந்தான்?

சத்யாத் பாணி க்ரிஹீதா ச க்ரிதா கர்மா மஹாயஷா
விஸ்மிரிதோ ராகவோ யேன ச கஸ்ய சுக்ரிதம் ஸ்மரெத்
(மேற்படி, சுலோகம் 5)

இப்படிப்பட்வனைத்தான் இராமன் கைப்பற்றி நட்புப் பிரதிக்ஞை செய்தான். அண்ணனுக்கு இப்படி ஒரு தீங்கிழைத்தவன் இவன் என்பதை இராமன் கூட கருத்தில் கொள்ளவில்லை அல்லவா? (சொல்லுக்குச் சொல் செய்யப்பட்ட மொழிபெயர்பன்று; கருத்து இதுதான்.)

ஏதத் அஸ்ய அசமம் வீர்யம் மயா ராம ப்ரகாஷிதம்
கதம் தம் வாலினாம் ஹன்தும் சமரே ஷக்ஸ்யசே ந்ருப
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 11, சுலோகம் 68)

என்று இராமனைக் கேட்கிறான் சுக்ரீவன். ‘வாலியின் இணையற்ற வலிமை இத்தகையது. இப்படி இருக்கும்போது, இராமா, நீ எவ்வாறு அவனைப் போரிட்டுக் கொல்வாய்?’ இந்தக் கேள்வி காதில் பட்டதுதான் தாமதம், இலக்குன் சிரித்தான். கோபச் சிரிப்பு என்று சொல்லவேண்டிய அவசியமே இல்லை. அவனுடைய சிரிப்பில் சினம் தெரிந்ததோ இல்லையோ, அவன் கேள்வியில் எரிச்சல் தெரிகிறது.

ததா ப்ருவாணம் சுக்ரீவம் ப்ரஹஸன் லக்ஷ்மணோ அப்ரவீத்.
கஸ்மின் கர்மணி நிர்வ்ரிதே ஷ்ரத்தத்ய வாலினம் வதம்?
(மேற்படி, சுலோகம் 69)

சுக்ரீவன் இவ்வாறு சொல்லவும் இலக்குவன் சிரித்தான். ‘என்ன காரியம் செய்து காட்டினால் (இராமனால்) வாலி வதம் சாத்தியம் என்று நம்புவாய்,’ என்று கேட்டான்.

என்று தானும் அவ்வழி இரும் பிலம்
சென்று முன்னவன் தேடுவேன்; அவற்
கொன்றுளான் தனைக் கொல ஒணாது எனின்
பொன்றுவேன் எனா புகுதல் மேயினான்.’

‘அண்ணன் இறந்திருக்கத்தான் முடியும். இல்லாவிட்டால் இத்தனை மாதங்கள் கழித்தும் வெளி வராமல் இருக்க மாட்டான். ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது. நானும் இந்தக் குகைக்குள்ளே போகின்றேன். என் அண்ணனுக்கு என்ன ஆயிற்று என்று பார்ப்பேன். அவனைக் கொன்றவனோடு நானும் போர் புரிவேன். என் அண்ணனையே வீழ்த்திய அவனை என்னால் வீழ்த்த முடியுமா என்பது எனக்குத் தெரியாது. நான் ஒரு வேளை வெல்லலாம். அப்படி இல்லாவிட்டால் நானும் எங்க அண்ணனோட சேந்து செத்துப் போறேன்’ என்றவாறு குகைக்கு உள்ளே செல்லத் தொடங்கினான்.

தடுத்து வல்லவர் தணிவு செய்து நோய்
கெடுத்து மேலையோர் கிளத்து நீதியால்
அடுத்த காவலும் அரிகள் ஆணையால்
கொடுத்தது உண்டு…….

அன்ன நாளில் மாயாவி அப்பிலத்து
இன்ன வாயிலூடு எய்தும் என்ன யாம்
பொன்னின் மால் வரைப் பொருப்பு ஒழித்து வேறு
உன்னு குன்றெலாம் உடன் அடுக்கினேம்

அப்போதையின் அயர்வாறிய அனுமன் அழல் விழியா
பொய்ப்போர் சில புரியேல் இனி எனவந்திடை புகுந்தான்
கைப்போதகம் என முந்தவன் கடுந்தேர் எதிர் நடந்தான்
‘இப்போர் ஒழி. இனிப்போர் உள. இவைகேள்’என இசைத்தான்.

தளர்ச்சி நீங்கப் பெற்ற அனுமன் சினத்தால் நெருப்பெரியும் விழிகளோடு, (தரைமேல் நின்றிருந்த) இலக்குவனுக்கும் (தேரேறி நின்றிருந்த) இராவணனுக்கும் இடையில் வந்து குதித்தான். யானையைப் போல இராவணன் தேருக்கு எதிரில் நடந்து வந்தபடி, ‘ஏய் எல்லாம் போதும்டா! சும்மா பொய்யாட்டம் ஆடாதே,’ என்றான். ‘போங்காட்டம் ஆடாதே’ என்று சின்னப் பசங்க சொல்ல மாட்டாங்களா, அந்த மாதிரி. ‘பொய்ப்போர் சில புரியேல்.’ ‘அது கிடக்கட்டும். இந்தப் போரை விடு; இன்னும் எத்தனையோ போர் இருக்கிறது. அப்ப காட்டு உன் வீரத்தை. இப்ப நான் சொல்வதைக் கேள்.’

என்றாலும் இன்று இழிவு உன்வயின் எய்தும் என இசையா
நின்றான் அவன் எதிரே உலகு அளந்தான் என நிமிர்ந்தான்.

‘ஆனாலும் கூட, கண்ணு, இன்னிக்கு உனக்கு ஊதிட்டாங்க.’ ‘இன்று உனக்கு எல்லா இழிவும் ஒன்றாக வந்து சேரப் போகிறது,’ என்று சொல்லிக்கொண்டே உலகளந்த திரிவிக்கிரமனைப் போல் தன் பேருருவை எடுத்தான்

பரக்கப் பல உரைத்தென் படர் கயிலைப் பெரு வரைக்கும்
அரக்குற்று எரி பொறிக்கண் திசைக் கரிக்கும் சிறிது அனுங்கா
உரக் குப்பையின் உயர்தோள் பல உடையாய் உரன் உடையாய்.

நீள நெடுக பலவாறாகச் சொல்லவே தேவையில்லை. வலிமை என்பதன் குவியல் என்று சொல்லக் கூடிய வரிசையான பல தோள்களை உடையவன் நீ!

என்தோள்வலி அதனால்எடுத்து யான்எற்றவும் இறவா
நின்றாய்எனின் நீபின்எனை நின்கைத்தல நிரையால்
குன்றேபுரை தோளாய்மிடல் கொடுகுத்துதி குத்தப்
பொன்றேன்எனின் நின்னோடெதிர் பொருகின்றிலென் என்றான்.

ராகவஸ்ய வசஹ ஷ்ருத்வா ஸம்பரிஷ்வஜ்ய பூஜ்ய ச அபிவாத்ய ச ராமாய யயெள ஸெளமித்ரி ராகவே 51

ஸ ராவணம் வராண ஹஸ்தபாஹ¤ம் ததர்ஷ பீமோத்யததீப்த சாபம் ப்ரசாதயந்தம் ஷரவ்ருஷ்டி ஜாலைஸ்தான் வானரான் பின்னவிகீர்ண தேஹான் 52

தமாலோக்ய மஹாதேஜா ஹனுமான் மாருதாத்மஜஹ நிவார்ய ஷரஜாலானி விதுத்ராவ ச ராவணம் 53
ரதம் தஸ்ய ஸமாஸாத்ய பாஹ¤முத்யம்ய தக்ஷ¢ணம் த்ராசயன் ராவணம் பீமான் ஹனுமான் வாக்யம் அப்ரவீத் 54

தேவ தானவ கந்தர்வைர்யஷைஸ்ச சஹ ராக்ஷஸைஹி அவத்யத்வம் த்வயா ப்ராப்தம் வானரேப்யஸ்த்து தே பயம் 55

ஏஷ மே தக்ஷ¢ணோ பாஹ¤ஹ¤ பஞ்சஷாகஹ சமுத்யதஹ விதமிஷ்யதி தே தேஹே பூதாத்மானம் சிரோஷிதம் 56
(வா. இரா. யுத்த காண்டம், சருக்கம் 59, சுலோகம் 51-56)

என்ன அறிவு! என்ன ஆற்றல்! என்ன கூர்த்த மதி! சுந்தர காண்டத்தில் சீதையை முதன் முதலாகப் பார்த்த போது, இவள்தான் தான் தேடி வந்திருக்கும் பெண்ணா என்று உறுதி செய்துகொள்வதற்காக எப்படியெல்லாம் கவனி க்கிறான் அனுமன்! தனிமை, அரக்கர் சூழ்ந்திருந்த தன்மை, கசங்கிய ஆடை, அழுக்கடைந்த மேனி, அழுத கண்கள் என்றிவற்றையெல்லாம் கவனித்த பின்னும் வேறு சில அடையாளங்களையும் கவனித்தான் என்று வால்மீகி சொல்கிறார்:

தாம் சமீக்ஷ்ய விசாலாக்ஷ¢ம் ராஜபுத்ரீம் அநிந்திதாம் தர்க்யாம் ஆச சீதா இதி காரணை உபபாதயன்

(வா. இரா. சுந்தர காண்டம், சருக்கம் 15, சுலோகம் 40)

தான் பார்க்கின்ற அந்தக் குற்றமற்ற (நிந்திக்கத் தக்க ஏதுமற்ற) அரச குமாரி, சீதையேதான் என்பதனை தர்க்க ரீதியாகச் சிந்தித்து, காரணங்களை ஆய்ந்துணர்ந்து அறிந்தான்.

உத்திஷ்ட நரஷார்த்தூல தீர்க்கபாஹோ! த்ருதவ்ரத கிமாத்மானம் மகாத்மானம் ஆத்மானம் நாவ புத்யதே

(வா. இரா. யுத்த காண்டம், சருக்கம் 82, சுலோகம் 43)

நீண்ட வலிய கரங்களையும், கூர்த்த மதியையும் உடைய மனித வேங்கையே! நீயே எல்லா ஆன்மாக்களுக்கும் மகான்மா என்பதை ஏன் உணர மறுக்கிறாய்?

சம்நிவார்ய பரானிகம் அப்ரவீத் தான் வநெள கசஹ

ஹனுமான் சம்நிவர்தத்வம் நஹ ஸாத்யம் இதம் பலம் த்யக்த்வா ப்ராணான் விசேஷ்டந்தோ ராமப்ரிய சிகீர்ஷவஹ

என்நிமிதம் ஹி யுத்யாமோ ஹதா சா ஜனகாத்மஜா இமம் அர்த்தம் ஹி விக்யாப்ய ராமம் சுக்ரீவமேவச

(வா. இரா. யுத்த காண்டம், சருக்கம் 82, சுலோகம் 20 (பின் அரையடி), 21, 22 )

எதிர்த்து ஆர்த்தெழுந்து கொண்டிருந்த வானரப் படையை அடக்கினான் அனுமன். ‘திரும்பிச் செல்லுங்கள். இந்த அரக்க சேனை இனிமேல் வெல்லப்பட வேண்டிய ஒன்றன்று. யாருக்காக நாம் உயிரைப் பணயம் வைத்து, பெரும் அபாயங்களை மேற்கொண்டு தீவிரமாகப் போராடினோமோ, எந்த இராமனுடைய உள்ளம் மகிழ்வதற்காக இவற்றைச் செய்தோமோ, அவனுடைய மனத்துக்கினிய ஜனகபுத்ரி கொல்லப்பட்டுவிட்டாள். இதனைப் போய் இராமனிடமும், சுக்ரீவனிடமும் தெரிவிப்போம்; அதன் பின்னர் அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி செய்வோம்.’

‘தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு முனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல், என்றும் அவண் உறைவிடம் ஆம்; ஆதலினால், அம் மலையை இறைஞ்சி ஏகி, பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திரு நதி பின்பு ஒழிய, நாகக் கன்று வளர் தடஞ் சாரல் மயேந்திர மா நெடு வரையும், கடலும், காண்டிர்.

அந்தப் பொதிய மலையில் அகத்திய முனிவன் தமிழ்ச் சங்கம் வைத்திருக்கிறான். அந்த மலை என்றும் அவன் வாழ்வதற்கு உரிய இடம். ஆகையால் அந்த மலையை (தொலைவில் நின்றபடி) வணங்கிவிட்டுத் தொடர்ந்து செல்லுங்கள். பொன் துகள் நிரம்பிய பொருநை நதி வரும். அதையும் தாண்டியனால் யானைக் கன்றுகள் நி றைந்த மயேந்திர மலையை அடைவீர்கள்.

இராமன் முடி சூடும் சமயத்தில் நிகழ்கிறது இது.

இராமன் சற்று நேரத்துக்கு முன்னால்தான் சானகிக்கு ஒரு முத்து மாலையை அணிவித்திருக்கிறான். அந்த மாலையைக் கைகளால் நெருடியவண்ணம் காட்சியளிக்கிறாள் வைதேகி.

அவேக்ஷமாணா வைதேஹீ ப்ரததெள வாயுஸ¥னவே அவமுச்யாத்மனஹ கண்டாத்தாரம் ஜனகநந்தினி

அவைக்ஷத ஹரீன் ஸர்வான் பர்த்தாரம் ச முஹ¤ர்முஹ¤ஹ¤ தாமிங்திதக்னஹ ஸம்ப்ரேக்ஷ்ய பபாஷே ஜனகாத்மஜாம்

ப்ரதேஹி ஸ¤பகே ஹாரம் யஸ்ய துஷ்டாஸி பாமினி அத ஸா வாயுபுத்ராய தம் ஹாரமஸிதேக்ஷணா

தேஜோ த்ருதிர்யஷோ தாக்ஷ்யம் ஸாமர்த்யம் விநயோ நயஹ பெளருஷம் விக்ரமோ புத்திர்ய யஸ்மின்னே தானி நித்யதா

(வா. இரா. யுத்த காண்டம், சர்க்கம் 128, சுலோகம் 79-82)

அனுமன் தங்களுக்கு ஆற்றிய விலை மதிப்பிட முடியாத சேவைகளை எண்ணிய ஜனக புத்ரி, தன் கணவன் தனக்கு அணிவித்த முத்துமாலையைக் கழற்றி(க் கையில் வைப்பதா)னாள். (அவ்வாறு அந்த மாலையைக் கையில் வைத்தபடி) மீண்டும் மீண்டும் கூடியிருக்கும் வானரர்களைப் பார்ப்பதும், இராமனைப் பார்ப்பதுமாக நின்றாள். இராமன் அவளைக் கூர்ந்து நோக்கினான். ஒருவரின் செயல்களைக் கொண்டு அவரின் உள்ளத்தை அளப்பதில் வல்லவனான அவன், ‘யாருக்கு இதனை அளிக்க வேண்டும் என்று உனக்குத் தோன்றுகிறதோ அவருக்கே சந்தோஷமாகக் கொடு,’ என்று அவளிடம் சொன்னான். கரிய விழிகளைக் கொண்ட அவள், சக்தியும், உறுதியும், புகழும், திறமையும், தகுதியும், அடக்கமும், முன்னறிவும், வீர்யமும், வீரமும், விவேகமும் யாரிடத்தில் எப்போதும் ஒன்றாக உறைந்துளவோ, அந்த வாயு புத்திரனுக்கே அந்த முத்து மாலையை அணிவித்தாள்.

கம்பன் இந்தக் காட்சியை அப்படியே சுருக்கமாகப் படம் பிடிக்கிறான், ஒரே ஒரு விருத்த அளவில்.

பூமலர்த் தவிசை நீத்து, பொன் மதில் மீதிலை பூத்த தேமொழித் திருவை ஐயன் திருவருள் முகத்து நோக்க, பா மறைக் கிழத்தி ஈந்த பரு முத்த மாலை கைக் கொண்டு ஏமுறக் கொடுத்தாள், அந்நாள், இடர் அறிந்து உதவினாற்கே.

தாமரைப் பூ ஆசனத்தை விட்டுவிட்டு, பொன்னால் பொதியப்பட்ட மதில்களை உடைய மிதிலை நகரத்தில் வந்து பூத்தவளான மைதிலியை இராமன் தன்னுடைய அருள் ததும்பும் முகத்தால் நோக்கினான். மறைகளுக்கு உரியவளான கலைமகள் தந்தான, பெரிய முத்துகள் கோக்கப்பட்ட மாலையைக் கையில் எடுத்து, அவள் மிக்க இன்பத்தை அடைந்தவளாகி, அந்தநாளில் தன் துன்பங்களை அறிந்து உதவிய அனுமனுக்கு அளித்தாள்.

விடை கொடுத்த படலத்தில், அனுமனுக்கு விடை கொடுக்கும் தருணத்தில் இராமனுடைய சொல்லையும் செயலையும் உத்தரகாண்டத்தில் வான்மீகி இவ்வாறு சொல்கிறார்:

ஏவம் ப்ருவாணம் ராமஸ்து ஹநூமந்தம் வராஸநாத் உத்தாய ஸஸ்வஜே ஸ்நேஹாத் வாக்யமேத துவாச ஹ

(வா. இரா. உத்தர காண்டம், சர்க்கம் 40, சுலோகம் 20 – 24)

(‘உன்பால் எனக்குள்ள பேரன்பு என்றென்றும் நிற்கட்டும். உன்பால் எனக்குள்ள விசுவாசம் எப்போதும் நிலைக்கட்டும்.

உன்மீது எனக்கள்ள பிரேமை வேறு எந்தப் பக்கத்திலும் சிதறாமல் இருக்கட்டும். தேவதைகள் எல்லாம் எனக்கு உன் காதையைச் சொல்லிக்கொண்டே இருக்கட்டும். நான் அதனைக் கேட்டபடியே, காற்றால் சிதறுண்ணும் மேகங்களைப் போல், (உன்னைப் பிரிந்திருக்கும்) என்னுடைய ஏக்கமெல்லாம் (உன் காதையால்) சிதறுண்டு போகட்டும்’ என்றெல்லாம் வேண்டிய அனுமனுடைய பேச்சைக் கேட்ட இராமன்,)

தன் சிறந்த ஆசனத்திலிருந்து எழுந்து வந்து, அன்புடன் அனுமனைத் தழுவினான். தழுவியவாறு இதனைச் சொன்னான் என்று (பெரியோர்) சொல்கின்றனர்.

யாரை யார் தழுவினார்கள்? இராமன், அனுமனைத் தழுவினான் என்கிறார் வால்மீகி. இந்த உத்தர காண்ட நிகழ்வை, மேற்படி ‘முத்து மாலையைத் தரும் சீதையின்’ காட்சிக்கு இரண்டு விருத்தங்களுக்கு முன்னால் அமைத்தான் கம்பன். Master stroke எந்த இடத்தில் விழுகிறது என்பதைக் கவனியுங்கள்.

மாருதி தன்னை ஐயன் மகிழ்ந்து, இனிது அருளின் நோக்கி, ‘ஆர் உதவிடுதற்கு ஒத்தார், நீ அலால்? அன்று செய்த பேர் உதவிக்கு யான் செய் செயல் பிறிது இல்லை; பைம் பூண் போர் உதவிய திண் தோளாய்! பொருந்துறப் புல்லுக!’ என்றான்.

இராமன், மாருதியை மகிழ்ச்சியோடும், அருள் நிறைந்த கண்களோடும் நோக்கினான். ‘நீ செய்திருக்கும் உதவிகளை வேறு யார் செய்திருக்க முடியும்? நீ செய்திருக்கும் உதவிகளுக்குப் பிரதியாக, ஈடாக, பதிலாக, நான் உனக்குச் செய்யக் கூடிய செயல் எதுவும் இல்லை. அழகிய ஆபரணங்களை அணிந்த, என் போரின்போது (கூட இருந்தும், என்னுடன் நின்று போரிட்டும், என்னைச் சுமந்தும்) உதவிய பெருந்தோள்களை உடையவனே, நீ என்னைத் தழுவிக்கொள்வாயாக.

இந்த, ‘நான் உனக்குச் செய்யக் கூடிய செயல் என்று எதுவுமே இல்லை,’ என்பதற்கான விளக்கத்துக்கு நாம் வான்மீகத்துக்குத்தான் போக வேண்டும். மேலே நாம் காட்டியுள்ள இருபதாம் சுலோகத்தை அடுத்து வரும் நான்கு சுலோகங்கள் இவை.

ஏவமேதத் கபிஸ்ரேஷ்ட பவிதா நாத்ர ஸம்ஷயஹ சரிஷ்யதி கதா யாவதேஷா லோகே ச மாமிகா

தாவத்தே பவிதா கீர்த்திஹி ஷரீரேங்ப்ய ஸவஸ்ததா லோகாஹி யாவத்ஸ்தாஸ்யந்தி தாவத் ஸ்தாஸ்யந்தி மே கதாஹ

ஏகைகஸ்யோபகாரஸ்ய ப்ராணான் தாஸ்யாமி தே கபே ஷேஷஸ்யேஹோபகாரணாம் பவாம் த்ரிணினோ வயம்

மதக்னே ஜீரணதாம் யாது யத் த்வயோபக்ருதம் கபே நரஹ ப்ரத்யுபகாராணாமாபத்ஸ்வாயதி பாத்ரதாம்

(வா. இரா. உத்தர காண்டம், சர்க்கம் 40, சுலோகம் 21 – 24)

வானரரில் சிறந்தவனே! நீ நினைத்தபடியே நடப்பதாக. அப்படியே நடக்கும். அதில் எந்த ஐயமும் இல்லை.

இந்த உலகில் என் காதை வழங்கிவருமளவும் உன் புகழ் நிலைத்து நிற்கும். என் காதை உலகுள்ள அளவும் இருக்கும்.

நீ எனக்குச் செய்திருக்கும் பேருதவிகளில் ஒன்றே ஒன்றுக்குப் பிரதியாக ஏதேனும் தரவேண்டுமாயின் என் உயிரைத்தான் தரவேண்டியதிருக்கும். அப்படியே தந்தாலும், நீ செய்திருக்கும் மற்ற உதவிகளுக்கு எதுவும் ஈடாகத் தரமுடியாத கடனாளியாகவே நான் இருப்பேன். எனவே, உனக்கு என் இதயம் என்றென்றும் கடனாளியாகவே இருக்கட்டும். உனக்கு நான் எதையும் திரும்பச் செய்யும் நிலை தோன்றாமலே போகட்டும். (ஏனெனில், என் உதவி யாருக்குத் தேவைப்படும்? துன்பத்தில் ஆழ்பவனுக்கு. நீயோ துன்பங்களே என்றென்றும் நெருங்க ஒண்ணாதவன். உனக்கு நான் எந்தக் காலத்தில், எப்போது, என்ன உதவியைச் செய்ய முடியும்? ஆகவே, நான் உனக்கு என்றென்றும் கடன்பட்டவனாகவே இருக்க விரும்புகிறேன்.)

இந்தப் பின்னணியில், கம்பனுடைய வாக்குக்குத் திரும்புவோம். இப்போது அனுமனை, இராமன் தழுவுகிறான் என்று வைத்துக்கொள்வோம். இப்போது அனுமனுடைய தராசு என்ன சொல்லும்? ‘உன் திருமேனியைத் தழுவுகின்ற பேறு ஒன்றே நான் செய்த(தாக நீ எண்ணும் – நான் அவ்வாறு எண்ணவில்லை) எல்லா உதவிகளுக்கும் ஈடாகிவிட்டதே! அதற்கும் மேலானது அல்லவா என்னை நீ பொருந்தத் தழுவியது!’ என்றல்லவா அனுமனுடைய பார்வை பேசும்? அதனால்தான், அந்தக் கடன் என்றென்றும் அப்படியே இருந்தாக வேண்டும் என்பதனால்தான், இராமன், ‘நீ என்னைத் தழுவிக்கொள்,’ என்றான். இப்போது இராமனுடைய கடன் சுமைதான் ஏறுகிறதே தவிர, அவன் எதையும் திரும்பச் செலுத்தவில்லை.

‘கொடுப்பதற்குப் பொருளும் இல்லை, செய்வதற்குச் செயலும் இல்லை,’ என்றான பிறகு, தன் மேனியைத் தீண்டுதல் அடியவனால் எப்படிக் கொள்ளப்படுமோ, அந்தக் கணக்கின்படி கூட, ‘கணக்கு நேராகிவிட்டது,’ என்று யாராலும், எப்போதும் சொல்ல முடியாத ஒரு சித்திரம். நேர்த்தி என்றால் அது கம்பன்.

‘பொன்உருக் கொண்ட மேரு புயத்திற்கும் உவமை போதாத் தன்உருக் கொண்டு நின்றான், தருமத்தின் தனிமை தீர்ப்பான்’

என்று இராம-அனும முதல் சந்திப்பின்போது, அனுமன் தன்னுடைய பேருருவை எடுத்து நிற்கும் காட்சியைப் பற்றிச் சொல்லும்போது குறிப்பான் கம்பன். ‘பொன் மலையாகிய மேரு மலை, தன்னுடைய தோளுக்குக் கூட உவமையாகச் சொல்லப்படப் போதுமாயிராத அளவுடைய தன் பேருருவை எடுத்து நின்றான், தருமத்தின் தனிமையைத் தீர்ப்பதற்காக வந்தவனான அனுமன்.’

‘தருமத்தின் தனிமை தீர்ப்பான்,’ என்ற தொடரைப் பாருங்கள். பின்பற்றுவதற்கு யாருமே இல்லாமல், தன்னந் தனியே, கேட்பாரின்றி, நாடுவாரின்றிக் கிடந்ததான தருமம் தனிமையில் வாட விடாமல், அதனைப் பின்பற்றுவார் பல்கிப் பெருகுவதற்காகத் தோன்றியவனான அனுமன். என்ன பொருத்தமான சொற்கள்!

அயோத்தியின் அரியணையைத் தாங்கியவன் அனுமன். ‘அரியணை அனுமன் தாங்க,’ என்றுதான் இராமன் திருமுடி சூடும் காட்சியைச் சொல்லும் விருத்தம் தொடங்குகிறது. இராமன் திருமஞ்சனமாட ‘நான்கு கடல்களிலிருந்தும், ஏழு வகையான நதிகளிலிருந்தும்’ நீர் கொண்டு வந்தவன் அனுமன். ‘என்னை நீ தழுவுக,’ என்று இராமன் சொன்னதும், தன் நாயகன் தனக்குச் செய்கின்ற சிறப்பின் பெருமையை நன்குணர்ந்தவனான அனுமன் என்ன செய்தான்?

என்றலும், வணங்கி நாணி, வாய் புதைத்து, இலங்கு தானை முன் தலை ஒதுக்கி நின்ற மொய்ம்பனை முழுதும் நோக்கி, பொன் திணி வயிரப் பைம் பூண் ஆரமும், புனை மென் தூசும், வன் திறல் கயமும், மாவும், வழங்கினன், வயங்கு சீரான்.

இராமன் அவ்வாறு சொன்னது, வணங்கினான். வெட்கப்பட்டான். கை கொண்டு வாயை மூடியபடி, அவ்வளவு பெரிய சேனைக்கு முன்னால், பணிவோடு, தலை கவிழந்து நின்ற ஆற்றல் மிக்கவனை தலையோடு கால் முற்றும் நோக்கி, அவனுக்கு அணிகலன்களையும், ஆடைகளையும், யானைகளையும், குதிரைகளையும் வழங்கினான். (பதில் உதவியாக அன்று. பரிவின் காரணமாக.)

தன்னைத் தழுவுமாறு இராமன், தன்னைச் சொன்னதே அனுமனுக்குப் பேருவகையைத் தந்தது. ஏனெனில்,

உதவி வரைத்தன்று உதவி. உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து.

ஒருவருக்குச் செய்யும் உதவியின் அளவு, மதிப்பு, செய்யப்பட்ட செயலின் அளவையோ, கொடுக்கப்பட்ட தொகையின் அளவையோ வைத்து நிர்ணயிக்கப்படுவதில்லை. யாருக்கு அது செய்யப்பட்டதோ, அவருடை மன நிறைவின் அளவுதான் அந்த உதவியின் அளவைத் தீர்மானிக்கிறது.

அனுமன் தோன்றுகிற முதற் காட்சியிலிருந்து, கடைசிக் காட்சி வரை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் தோன்றுவதையும், ஒவ்வொன்றும் தோன்றத் தோன்ற வெகு எளிதாக ஒவ்வொன்றையும் அனுமன் தீர்த்து வைப்பதையும் கண்டோம். தன்னுடைய ஆற்றல் தன் தலைவனால் போற்றப்பட்ட சமயம் ஒவ்வொன்றிலும் அவன் நாணம்கொண்டு நிற்பதையே காண்கிறோம்.

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ சடகோபர் அந்தாதி -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

January 15, 2023

இராமன் திருக்கதையில் கம்ப நாடன் கவிதை போல் கற்றோர்க்கு இதயம் களியாதே–
இராம காதையைச் சொல்லுதற்குக் காப்பாக இருப்பது குருகை நாதன் குரை கழலே
கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ –
நம் சடகோபனைப் பாடினாயோ என்று திரு அரங்கன் திரு ஆணையைத் தலை மேல் கொண்டு ஆழ்வார் நூற்று அந்தாதி என்னும்படி சடகோபர் அந்தாதி
பக்தியே ஸ்ருங்காரமாக அகத்துறை பாடல்களும் இதில் உண்டே
ஆழ்வார் திரு நகரியில் -இராப்பத்து இறுதி நாளில் -ஆழ்வாரும் பொலிந்து நின்ற பிரானும் திருச்செவி சாத்தி அருளுகிறார் –

ஸ்ரீ இராமாயணம் இயற்றிய ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் எழுதிய ஒன்பது நூல்களுள் ஸ்ரீ சடகோபர் அந்தாதியும் ஒன்றாகும்.
சோழர்களின் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார்.
இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல்.
இவருடைய காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர்.
இவரது வேறு நூல்கள் ஸ்ரீ ஏரெழுபது, ஸ்ரீ சரசுவதி அந்தாதி, ஸ்ரீ திருக்கை வழக்கம் முதலியவை.

—————

நம்மாழ்வாருக்கு பல திரு நாமங்கள் உண்டே
சடகோபன்
மாறன்
காரி மாறன்
பராங்குசன்
வகுளாபரணன்
குருகைப் பிரான்
குருகூர் நம்பி
குரு கூரான்
திருவாய் மொழிப் பெருமாள்
பொருநல் துறைவன்
குமரித் துறைவன்
பவ ரோக பண்டிதன்
முனி வேந்து
பர ப்ரஹ்ம யோகி
நாவலர் பெருமான்
ஞான தேசிகர்
ஞானப்பிரான்
தொண்டர் பிரான்
நா வீறர்
திரு நா வீறுடைய பிரான்
உதய பாஸ்கரர்
வகுள பூஷண பாஸ்கரர்
ஞானத் தமிழுக்கு அரசு
ஞானத் தமிழ் கடல்
மெய்ஞ்ஞான கவி
தெய்வ ஞானச் செம்மல்
நாவலர் பெருமான்
பாவலர் பெருமான்
வினவாதுணர்ந்த விரகர்
குழந்தை முனி
ஸ்ரீ வைஷ்ணவ குல பதி
ப்ரபந்ந ஜன கூடஸ்தர்

—————-

இரணியன்  வதைப்படலத்தில்
நசை திறந்திலங்கப்பொங்க -என்று தொடங்கும் பாசுரத்தை ஆரம்பித்தது
திசை திறந்து அண்டம் கீறிச் சிரித்தது செங்கட் சீயம் -என்று பாடும் பொழுது
கோயில் வடக்கு வாசலில் உள் கோபுரத்தில் ஸ்ரீ மன் நாதமுனிகளுக்கு எதிரே இருக்கும்
செங்கல் சுண்ணாம்பினால் அமைந்து இருந்த நரஸிம்ஹ திரு உருவம் உயிர் பெற்று தலையை அசைத்ததாம்
இப்பொழுது -இவரே மேட்டு அழகிய சிங்கராகப் -பிரதிஷ்டை செய்யப் பெற்று ஆராதிக்கப் படுகிறார்
இத்தைக் கண்ட ஸ்ரீ மன் நாதமுனிகள் ஸ்ரீ கம்ப நாட்டாழ்வானுக்குத் தீர்த்த பரிவட்டம் பிரசாத்திப்பித்து அருள
திருக் கோயிலுக்குள் கூட்டிச் செல்ல-நம்பெருமாள் அர்ச்சகர் மேல் ஆவேசித்து –நம் சடகோபனைப் பாடினாயோ -என்று கேட்டதால்
அன்று இரவே பாடின பின்பே அரங்கனைச் சேவிக்கச் சென்றாராம் –

—————————————–

சிறப்புப் பாயிரம்

தேவில் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன்
பாவில் சிறந்த திருவாய்மொழி பகர் பண்டிதனே
நாவில் சிறந்த மாறற்குத் தக்க நன் நாவலவன்
பூவில் சிறந்த ஆழ்வான் கம்ப நாட்டுப் புலமையனே.

தெய்வங்களில் சிறந்தவன் ஸ்ரீ திருமால்!–அனைத்துக்கும் அந்தர்யாமியாய் இருப்பவன் இவன் ஒருவனே
அவனுக்குத் தக்க தெய்வீகமான கவிஞன் பலவிதமான பா வகைகளை ஸ்ரீ திருவாய்மொழியில்
சிறப்பாக அமைத்த பண்டிதனான ஸ்ரீ நம்மாழ்வாரே!
நா வண்மையில் சிறந்த அந்த ஸ்ரீ மாறன் சடகோபன் ஸ்ரீ நம்மாழ்வாருக்குத் தக்க நா வண்மை கொண்டவன்
தாமரைப் பூவில் வாழ்வான்-அமர்ந்த பிரமனை ஒத்த ஸ்ரீ கம்ப நாட்டாழ்வானே!-பாகவத நிஷ்டையால் மதுரகவி ஆழ்வாருக்கு ஒப்பு என்றுமாம்

அகத் துறையிலும் புறத் துறையிலும் பாடி புலமைக்கு வெள்ளிக் கம்பம் நாட்டியவன்-

இது முதலில் வெண்ணையூர் நாடாக இருந்தது பின்பு கம்பர் பெயரால் கம்ப நாடு ஆயிற்று என்பர்

மால் -பெருமை கறுமை வ்யாமோஹம்-

மாலே மணி வண்ணா
மால் என்னை மால் செய்தான்
திருமாலே கட்டுரையே
கவி -க்ராந்த தர்சீ

திரு -அழகு
வாய் மொழி -வினைத்தொகை -வாய்க்கிற -வாய்த்த -வாய்க்கும் -முக்காலத்துக்கும் எம்பருமானுக்குப் பொருத்தமான
வாய்மை -கடைக் குறைவாய் உண்மையான -ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை யதாவாக பேசும் மொழி

யஸ்ய ஸர்வே ஸமாரம்பா காம ஸங்கல்ப வர்ஜிதா-
ஜ்ஞாநாக்நி தக்த கர்மாணம் தமாஹு பண்டிதம் புதா—৷৷4.19৷

எவனுக்கு எல்லாக் கர்மங்களையும் பற்றிய முயற்சிகளும் பலன்களில் பற்று அற்றவையாக இருக்கின்றனவோ –
அறிவாளியான அவனையே ஞானம் ஆகிய நெருப்பால் எரிக்கப்பட்ட வினைகளை உடையவனாக தத்வம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்

—————-

ஆரணத்தின் சிரமீது உறை சோதியை ஆந்தமிழால்
பாரணம் செய்தவனைக் குருக்ஷரனைப் பற்பல வா
நாரணனாம் என ஏத்திக் தொழக் கவி நல்கு கொடைக்
காரணனைக் கம்பனை நினைவாம் உள் களிப்புறவே.

பாரணம் -பாரணா பாராயணம் -உணவு -மீண்டும் மீண்டும் திருப்தி அடையும் வரை படித்தல்
நெறி வாசல் தானேயாய் நின்றானை -பற்றற்றானைப் பற்றி
அவன் அருளாலேயே அவனை அடக்கி தம் வசம் ஆக்கிக் கொண்டார் ஆழ்வார் -பராங்குசன் அன்றோ

————–

நம் சடகோபனைப் பாடினையோ என்று நம் பெருமாள்
விஞ்சிய ஆதரத்தால் கேட்பக் கம்பன் விரைந்து உரைத்த
செஞ்சொல் அந்தாதி கலித்துறை நூறும் தெரியும் வண்ண
நெஞ்சு அடியேற்கு அருள் வேதம் தமிழ் செய்த நின்மலனே 

——————–

நாதன் அரங்கன் நயந்துரை என்ன நல் கம்பன் உன் தன்
பாதம் பரவி பைந்தமிழ் நூறும் பரிவுடனே
ஓதும் படி யெனக்கு உள்ளத்தனை யருள் ஓதரிய
வேதம் தமிழ் செய்த மெய்ப் பொருளே இது என் விண்ணப்பமே.

————–

தற்சிறப்புப் பாசுரம்

மன்றே புகழும் திருவழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுரகவிப் பெருமாள் தென் தமிழ்த் தொடையில்
ஒன்றே பதிகம் உரைத்தவன் பொன் அடி யுற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே.

————–

நூல்

வேதத்தின் முன் செல்க மெய்யுணர்ந்தோர் விரிஞ்சன் முதலோர்
கோதற்ற ஞானக் கொழுந்தின் முன் செல்க குணம் கடந்த
போதக் கடல் எங்கள் தென் குரு கூர்ப் புனிதன் கவி ஓர்
பாதத்தின் முன் செல்லுமே தொல்லை மூலப் பரஞ்சுடரே. 1-

உயர்வற உயர் நலம் யுடையவன் எவன் அவன் -என்று ஸ்வரூபத்தை முழுவதுமே  அடியிலே காட்டி அருளினார் அன்றோ

மெய்யுணர்ந்தோர் -தவத்தால் பெற்ற அறிவுடையரான வ்யாஸ அம்பரீஷ ஸூக ஸுகனாதி –
முதலோர் இந்த்ராதிகள்

————

சுடர் இரண்டே பண்டு மூன்றாயின துகள் தீர்ந்துலகத்து
இடர் இரண்டாய் வரும் பேர் இருள் சீப்பன எம் பிறப்பை
அடர் இரண்டாம் மலர்த் தாள் உடையான் குருகைக் கரசன்
படர் இருங் கீர்த்திப் பிரான் திருவாய் மொழிப் பாவொடுமே. 2-

ஸூர்ய சந்திர சுடர் போல் களங்கம் இல்லாத திருவாய் மொழிச் சுடர் ஸர்வருக்கும் உப ஜீவியம்
அவையோ ஒன்றை அலற்றும் மற்ற ஒன்றை மொட்டுவிக்கும்
பண்டு இரு சுடர் என்றது –
ராம திவாகரனான வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காயும்
அச்யுத பானுவாக இருந்த ஆயர் தம் குல விளக்காயும் என்றுமாம்

ஆதித்ய ராம திவாகர அச்யுத பானுக்களுக்கு-போகாத உள்ளிருள் நீங்கி
சோஷியாத பிறவிக் கடல் வற்றி-விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது
வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே–ஆச்சார்ய ஹ்ருதயம் -சூரணை -83-

———

பா வொடுக்கும் நுண் இசை ஒடுக்கும் பலவும் பறையும்
நா வொடுக்கும் நல் அறி வொடுக்கும் மற்றும் நாட்டப் பட்ட
தே வொடுக்கும் பர வாதச் செரு ஒடுக்கும் குருகூர்ப்
பூ வொடுக்கும் அமுதத் திரு வாயிரம் போந்தனவே. 3-

நாட்டப்பட்டதை தேவு -செரு -இரண்டுக்கும் கொண்டு -அவர்கள் பரன் திறம் அன்றி மற்று இல்லை என்றும்
ஈஸ்வரோஹம் என்று இருப்பார் கர்வங்களையும் ஒடுக்கும் நாட்டப் பட்டதே –
ஒடுக்கும் என்றது அடக்கும் என்றும் கண்டித்து அகற்றும் என்றுமாம்

குருகூர்ப் பூ –திருக்குருகூர்ப்பதியிலே ஆழ்வாரது திரு வாய் மலரிலே
பா ஒடுக்கும் -செய்யுள் இலக்கணங்களை எல்லாம் அடக்கி இருக்கும்
நா -புறச்சமயிகளின் நாவை

———

தனமாம் சிலர்க்குத் தவமாம் சிலர்க்குத் தரும நிறை
கனமாம் சிலர்க்கு அதற்கு காரணமாஞ் சிலர்க்கு ஆரணத்தின்
இனமாம் சிலர்க்கு அதற்கு எல்லையுமாம் தொல்லை ஏர் வகுள
வன மாலை எம்பெருமான் குருகூர் மன்னன் வாய் மொழியே. 4-

தரும நிறை கனமாம்-தர்மங்கள் எல்லாம் நிறைந்த கூட்டமாகும்

கனமாம்-பெரும் சிறப்பாகும்
தனம் -இம்மைப் பயனுக்கும்
தவம் =மறுமைப் பயனுக்கும்
திருவாயமொழி இரண்டுக்கும் என்றபடி

ஆரணம் -வேதம்
ஆரண இனம் -வேத சாகை
அதற்கு எல்லை -வேதாந்தம் -உப நிஷத்

வைஸ்யருக்கு தனம் -ப்ராஹ்மணர்க்கு தவம் -ஷத்ரிய சூத்ரருக்கு தர்மம்

வனமாலை -ஆறு ருதுக்களிலும் மலரும் எல்லாப் பூக்களையும் கொண்டு அமைத்து மூலம் கால் வரை தொங்கும்
ஆஜானு வம்பினி மாலா ஸர்வ ருது ஷு சரம உஜ்வலா
மத்யே ஸ்தூல கதம்பாட்யா வனமாலேதி கீர்திதா -இவ்விதமானது ஸ்ரீ வைகுண்டத்தில் தானே உள்ளது

வாட்டமில் வனமாலை மார்வனை –

பெருமானின் வைஜயந்தி வனமாலையின் அம்சமாகக் கருதப்படும் தொண்டரடிப்பொடி ஆழ்வார்

இத்தையே கம்பர் கும்பகர்ணன் வதைப்படலத்தில் -103 பாசுரத்தில் –
என்னலும் இருது வெல்லாம் ஏகின யாவும் தத்தம்
பன்னமரும் பருவம் செய்யாயோகி போற் பற்று விட்ட
பின்னரும் உலகம் எல்லாம் பிணி முதற் பாசம் வீசித்
துன்னமே தவத்தின் எய்தும் துறக்கம் போல் தோன்றிற்று அன்றே-

———–

மொழி பல ஆயின செப்பம் பிறந்தது முத்தி யெய்தும்
வழி பல வாய விட்டொன்றா அது வழுவா நரகக்
குழி பல ஆயின பாழ் பட்டது குளிர் நீர்ப் பொருநை
சுழி பல வாய் ஒழுகுங் குருகூர் எந்தை தோன்றலினே. 5-

குளிர் என்றது தன்னிடம் அமிழ்ந்தோருடைய உடலுக்கும் உயிருக்கும் உள்ள வெப்பங்களைப் போக்கி
உள்ளும் புறமும் குற்றமற்றவராக ஆக்கியதைக் குறிக்கும்
திருச் சங்கணித் துறையில் நீராடுவது அருள் ஒழுகும் தாமரைச் செங்கண்ணான் குணக் கடலிலே ஆடுவதே யாகும்

மொழி -பதம் என்று கொண்டு -கடப்படாதி சர்வ ஸப்த வாஸ்யன் ஒருவனே என்றுமாம்

———–

தோன்றா உபநிடதப் பொருள் தோன்றல் உற்றார் தமக்கும்
சான்றாம் இவை என்ற போது மற்றென் பல காலும் தம்மின்
மூன்றா யினவும் நினைந்து ஆரணத்தின் மும்மைத் தமிழை
ஈன்றான் குருகைப் பிரான் எம்பிரான் தன் இசைக் கவியே. 6-

தோன்றல் உற்றார்–மதுரகவி ஆழ்வார் நாதமுனிகள் போல்வார்

த்ரயீ -ருக் யஜுஸ் சாமம் -என்று மூன்றுமாம் –
பேத அபேத கடக ஸ்ருதிகள் என்று மூன்றுமாம்
இயல் இசை நாடகம்
தத்வ ஹித புருஷார்த்தம்
கர்ம ஞான பக்திகள்
ஸ்வரூபம் உபாயம் புருஷார்த்தம்
சித் அசித் ஈஸ்வரன் -தத்வ த்ரயங்களையும்
ரஹஸ்ய த்ரயங்களையும்

———–

கவிப்பா அமுத இசையின் கறியோடு கண்ணன் உண்ணக்
குவிப்பான் குருகைப் பிரான் சட கோபன் குமரி கொண்கன்
புவிப் பாவலர் தம் பிரான் திரு வாய்மொழி பூசுரர் தம்
செவிப் பால் நுழைந்து புக் குள்ளத்துளே நின்று தித்திக்குமே. 7-

கவிப் பா அமுதம் -பாடலாகிய பரவிய –
பாடல் சோறு -இசை கறி அமுது -சேர்த்து குவிப்பான் -சமைத்துக் குவிப்பவரும்
குமரி கொண்கன்-குமரி நாட்டுத் தலைவருமான
புவிப் பாவல-பூமியில் உள்ள வித்வான்களுக்கு
செவிப் பால்–காதுகளின் வழியே

நிலத்தேவர் காதுக்குள் புகுந்து -உள்ளத்துள் நின்று நாவிலே தித்திக்கும் அன்றோ-

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் என்றபடி –

———

தித்திக்கும் மூலத் தெளி யமுதே யுண்டு தெய்வ மென்பார்
பத்திக்கு மூலப் பனுவற்கு மூலம் பவம் அறுப்பார்
முத்திக்கு மூலம் முளரிக்கை வாணகை மொய் குழலார்
அத்திக்கு மூலம் குருகைப் பிரான் சொன்ன ஆயிரமே. 8-

குருகைப் பிரான் சொன்ன ஆயிரமே.
தித்திக்கும் -இனிமையான
மூலத் தெளி யமுதே -காரணமான தெளிந்த அமுதேயாகும்-சாவா மருந்தான அமிர்தமும் இதுக்கு ஒப்பு அல்ல என்று எதிர்மறை ஏவகாரம் -உடம்பைப் பூண் கட்டிக் கொடுக்கும் அது பக்திக்கும் பனுவலுக்கும் முக்திக்ம்கு மூலமாகாதே
யுண்டு தெய்வ மென்பார்–தெய்வம் உண்டு என்பார் -ஆஸ்திகர்
பத்திக்கு மூலம் -பக்திக்கும் இதுவே காரணம்
பனுவற்கு மூலம் -வரலாற்று முறையில் பாடும் நூல்களுக்கும் மூலமாகும்
பவம் அறுப்பார் முத்திக்கு மூலம்—பிறவியைப் போக்கத் துணிந்தவர்கள் மோக்ஷம் அடைவதற்கும்
முளரிக்கை –தாமரை போன்ற கைகளும்
வாணகை –வாள் நகை -ஒளி பொருந்தின பற்களும் கொண்ட
மொய் குழலார்-நெருங்கிய கூந்தலையுடைய மாதர்கள் இடத்து ஆசையை
அத்திக்கு மூலம் -போக்குகைக்கும் மூலம்

அத்தி -கற்பு -கண்ணன் பால் காமம் -என்ற கற்பு நெறிக்கு மூலம் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகளே -என்றவாறு –

———-

ஆயிரம் மா மறைக்கும் அலங்காரம் அருந் தமிழ்க்குப்
பாயிரம் நாற் கவிக்குப் படிச் சந்தம் பனுவற்கு எல்லாம்
தாய் இரு நாற் றிசைக்குத் தனித் தீபந் தண்ணங் குருகூர்ச்
சேயிரு மா மரபும் செவ்வியான் செய்த செய்யுட்களே. 9–

மறைக்கும் அலங்காரம்-சாமவேதத்துக்கு பூஷணம்
மறைந்து கிடந்த பொருள்களை அனைவரும் அறியும்படி செய்து அருளியதால் பூஷணமாகும்
பனுவல் -ஆகமம் –பனுவலின் வகைகள் -அற நூல் பொருள் நூல் காம நூல் வீட்டு நாள் போல்வன
இவை நான்குமே திருவாயமொழியில் பரக்கத் காண்பதால் தாய் என்கிறார்

கவி -கேள்வி -நூல் -என்கிற பொருளில் வந்தது
கிழக்கே மேற்கே சந்த்ர ஸூ ர்யர்கள் -வடக்கே துருவ மண்டலம் -தனித்தனி தீபம்
திருவாய் மொழி தீபமோ எண் திசையும் எல்லாக் காலத்திலும் வீசும் அன்றோ

இரு நாற் றிசைக்குத் தனித் தீபம் -இரு நான்கு எட்டுத் திக்குகளுக்கும் தீபம் -எண் திசையும் அறியும்படி இயம்பிப் பரப்பினார் அன்றோ மதுரகவியாழ்வார்

ஆசு மதுரம் சித்திரம் விஸ்தாரம் -நான்கு வித கவிகள்-படிச் சந்தம்-ஒப்புக் காண்பதற்கு உரியனவாம்

இரு மா மரபுகள் -கர்ம ஞான மார்க்கங்கள் -ஞானம் அனுஷ்டானங்கள் இரண்டிலும் ஸ்ரேஷ்டர்

இரு மா மரபும் செவ்வியான்-தாய் தந்தையர் இரண்டு வழியும் தொண்டர் குலமாகிய செவ்வி என்றுமாம்

———

செய் ஓடு அருவிக் குருகைப் பிரான் திரு மாலை நங்கள்
கை ஓர் கனி எனக் காட்டித் தந்தான் கழற்கே கமலம்
பொய்யோம் அவன் புகழ் ஏத்திப் பிதற்றிப் பித்தாய்ந் திரியோம்
ஐயோ அறிதும் என்றே உபகாரத்தின் ஆற்றலையே. 10–

செய் ஓடு அருவிக் குருகை–வயல்களில் அருவி நீர் ஓடிப் பாய்கின்ற குருகூர்

செய் ஓடு அருவி-உருவகமாய் -ஞானிகள் மனமாகிய விளை நிலங்களில் ஆழ்வார் சொல் பெருக்கு எடுத்து
ஓடிப் பாய்ந்து திருமால் பக்தி என்னும் பயிர் முளைத்து ஓங்குகிறது என்றவாறு
விதையாகி நற்றமிழை வித்தி என் உள்ளத்தே நீ விளைத்தாய்
திருமால் இத் தகையவர் என்று கையில் கனி என நிற்கும்படி யாயிற்றே

கைத் தலத்து அமலகம் எனக் கண்டு கொள் -என்று
கையில் கனி என்னைக் கண்ணனைக் காட்டித் தந்தார் அன்றோ

ஆழ்வாரை முக்கரணங்களால் ஸ்துதிப்பவர் உள்ளத்திலே அவரது கருணா ப்ரவாஹம் பரவும் அன்றோ
மாயோனைக் கையில் கையில் கனி என்னும் படிக் காட்டித் தந்து பக்திப் பயிரை விளைவிக்கும்-

———-

ஆற்றில் பொதிந்த மணலின் தெகை யரு மா மறைகள்
வேற்றில் பொதிந்த பொருள் களெல்லாம் விழு மாக் கமலம்
சேற்றில் பொதி யவிழ்க்கும் குரு கூரர் செஞ் சொற் பதிகம்
நூற்றில் பொதிந்த பொருளொரு ஒரு கூறு நுவல்கிலவே. 11-

ஆற்றில் பொதிந்த மணலின் தெகை-அநந்தாவை வேதா
வேற்றில் -வேரில் -என்பதன் விகாரம் -பல சாகைகள் கொண்ட வேதங்களின்
மூலப் பொருள்கள் அனைத்தையும் திரட்டி விட்டான் என்றுமாம் –
விழுமாக் கமலம்விழு -யாவராலும் விரும்பத்தக்க –மா -பெரிய –கமலம் -தாமரை ஸஹஸ்ர பத்ரம் கமலம் -ஆழ்ந்த நீரிடையே உண்டாகும்
எறி நீரில் எழு நாள கந்த மலர் –மாரீசன் வதைப் படலம் -53-பாயிரம்

———

இயல் இடம் கூறல்-

பொருள் -அகப்பொருள் –
திணை -உரிப்பொருளால் குறிஞ்சி
கிளவி –பாங்கற் கூட்டம்
துறை -இயல் தென்றல்

இலவே இதழுளவே முல்லை யுள்ளி யம்பும் மொழியும்
சிலவே அவை செழுந் தேனொக்குமே தமிழ்ச் செஞ் சொற்களால்
பல வேதமும் மொழிந்தான் குரு கூர்ப் பதுமத்து இரண்டு
சல வேல்களும் உளவே யது காண் என் தனி யுயிரே. 12-

பல வேதமும்
தமிழ்ச் செஞ் சொற்களால்
மொழிந்தான்
குரு கூர்–குருகூர் பதியிலே
நண்பனே
பதுமத்து-தாமரை மலரிலே
இதழ் -சில இதழ்கள்
இலவே –நிறத்தில் முள்ளிலவ மலரேயாம்
உள் -அந்த இதழ்களுக்கு உள்ளே
முல்லை உளவே -முல்லை அரும்புகளும் சில உள்ளன
யுள் ளியம்பும் மொழியும் சிலவே-அவைகளில் இருந்து சொல்லப்படுகின்ற வார்த்தைகளும் சில வுண்டாம்
அவை செழுந் தேனொக்குமே
இன்னும் அத் தாமரை மலரிலே
இரண்டு சல வேல்களும்–அந்தப் பெண் எனது உயிர் ஆவாள்
காண்-நீ சென்று அதனைப் பார்
தன்னை வசப்படுத்திய அவள் முகம் தாமரை –
அவள் விழிகள் சல வேல்கள்

ஆழ்வார் இடம் ஞானக் காதல் கொண்ட தலை மகனாகிய பாகவதர் பித்தால் பிதற்றி அவர் திரு வுருவத்தைத்
தன் உயிர்க்கு அடைவிடம் என்று அகத் துறையில் பேசும் படி போகத்தில் ஈடுபட்டு நிற்கும் நிலையைச் சொன்னபடி –

———

உயிர் உருக்கும் புக்கு உணர்வு உருக்கும் உடலத்தினு ள்ள
செயிர் உருக் கொண்ட நம் தீங்கு உருக்கும் திருடித் திருடித்
தயிர் உருக்கும் நெய்யொடு உண்டான் அடிச் சட கோபன் சந்தோடு
அயிர் உருக்கும் பொருநல் குருகூர் எந்தை அம் தமிழே. 13-

இந்திரிய பொறி வாயிலாய் உயிர் இன்ப துன்பங்களை அடைவதையும்
அறிவு வாயிலாய் உடல் உணர்ச்சி யுறுவதும் சொல்லப் பட்டது –
திருவாய் மொழி தாபாத் த்ரயங்களையும் போக்கி வேரைக் களைவதால் நோய் முதலியவை தானே அற்றுப் போம்
செயிர் -நோய் -ஊனம் -குற்றம் கோபம் துன்பம் சினம் போன்ற மற்ற பொருள்களும் பொருந்தும்

சந்தோடு அயிர் உருக்கும் பொருநல்–சந்தன மரங்களுடன் நுண் மணலையும் கொணர்ந்து கரை ஓரங்களில் ஒதுக்கித்த தள்ளும் தாமிரபரணி

———

அந்தம் இலா மறை ஆயிரத்து ஆழ்ந்த அரும் பொருளை
செந் தமிழாகத் திருத்திலனேல் நிலத் தேவர்களும்
தந்தம் விழாவும் அழகும் என்னாம் தமிழார் கவியின்
பந்தம் விழா ஒழுகுங் குருகூர் வந்த பண்ணவனே. 14-

அந்தம் இலா மறை–அநந்தாவோ வேதா -பரத்வாஜோ அத்திரி –மூன்று மலைகளைக் காட்டிக் கைப்பிடி என்ற விருத்தாந்தம்

நிலத்தேவர் –பூ ஸூரர் -அர்ச்சா திருமேனி என்றுமாம்
பந்தம் -தொடர்பு -வெளிச்சம் -உறவு
விழா -விழுந்து -பொங்கி வழிந்து -குறையாமல் தவறாமல் பாசுரங்கள் தோறும் ஓடும்
பண்ணவன் -முனிவன் குரு ஆசிரியன் தேவன் கடவுள் போன்ற பொருள்கள் உண்டே –
திருவாய் மொழி இல்லாமல் இருந்தால் உத்ஸவாதிகள் சோபை இழந்து இருக்குமே –

———

பண்ணப் படுவனவும் உளவோ மறை யென்று பல்லோர்
எண்ணப் படச் சொல் திகழச் செய்தான் இயலோடு இசையின்
வண்ணப் படைக்கும் தனித் தலை வேந்தன் மலர் உகுத்த
சுண்ணப் படர் படப்பைக் குருகூர் வந்த சொல் கடலே. 15–

வண்ண -ராகம் -குணம் -வடிவு -செயல் விதம் அழகு -போன்ற பொருள்கள்
எண்ணம் -ஆலோசனை கிலேசம் விசாரம் கவலை மதிப்பு நினைத்தால் போன்ற பொருள்கள்

———-

கடலைக் கலக்கி அமுதம் அமரர்க்கு அளித்தான் களித்தார்
குடலைக் கலக்கும் குளிர் சங்கினான் குறையா மறையின்
திடலைக் கலக்கித் திருவாய் மொழி எனும் தேனைத் தந்தான்
நடலைப் பிறப்பு அறுத்து என்னையும் ஆட் கொண்ட நாயகனே. 16–

நடலை -நடுக்கம் -கபடம் -பொய் -வஞ்சனை -வருத்தம்
களித்தல் –மதத்தல் -செருக்குதல் -மயக்குதல்
திடல் -மலை -மேடு

கடலை வேதமாகவும் -அமுதத்தைத் தேனாகவும் -அமரர் அடியாராகவும்- சங்கினான் நாயகனாகவும்- உவமித்த படி
இது எடுத்துக் காட்டு உவமை அணி யாகும்

————

நாய் போல் பிறர் கடை தோறும் நுழைந்து அவர் எச்சில் நச்சிப்
பேய் போல் திரியும் பிறவி யினேனைப் பிறவி யெனும்
நோய் போம் மருந்தென்னும் நுன் திரு வாய்மொழி நோக்குவித்துத்
தாய் போல் உதவி செய்தாய்க்கு அடியேன் பண்டென் சாதித்ததே. 17-

பிண்டத் திரளையும் பேய்க்கிட்ட நீர்ச் சோறும் உண்டற்கு வேண்டி நீ யோடித் திரியாதே –-பெரியாழ்வார்
திருவாய் மொழியைக் கற்கவே பிறப்பு இறப்பு என்னும் நோய் தன்னடையே போயிற்றே-

———-

சாதிக்குமே பர தத்துவத்தைச் சமயத் திருக்கை
சேதிக்குமே ஒன்று சிந்திக்குமே யதனைத் தெரியப்
போதிக்குமே எங்கும் ஓங்கிப் பொது நிற்கும் மெய்யைப் பொய்யைச்
சோதிக்குமே உங்கள் வேதம் எங்கோன் தமிழ்ச் சொல் எனவே. 18–

திருக்கை -திருகி நிற்கும் தன்மை -நிலை -கோணல் –சேதித்தல் -போக்குதல் -கோணலை நிமிர்த்தல் –சமயத் திருக்கை–புற மதங்களின் மாறுபாடுகளை
முதல் பாசுரமே அகாரம் உகாரம் மகாரம் சேர்த்து ப்ரணவார்த்தம் காட்டி அருளினார் அன்றோ

நீ யாதி பரம்பரமும் நின்னவே யுலகங்கள்
ஆயாத சமயமும் நின்னடியவே அயலில்லை -கம்பர் விராத ஸ்துதியில்

————-

சொல் என்கெனோ முழு வேதச் சுருக்கென்கெனோ எவர்க்கும்
நெல் என்கெனோ உண்ணும் நீர் என்கெனோ மறை நேர் நிறுக்கும்
கல் என்கெனோ முதிர் ஞானக் கனி யென்கெனோ புகல
வல் என்கெனோ குரு கூர் எம் பிரான் சொன்ன மாலையையே. 19-

கல் படிக்கற்கள் என்றபடி
முதிர் ஞானக் கனி-ஞான முதிர் கனி -ரிஷிகள் மனங்களில் பூத்து -எடுத்துக் காய்த்த ஞானம் ஆழ்வார் திரு உள்ளத்தில்
பதிந்த பின் முதிர்ந்து பழுத்து இனிமை யுடைய கனியாயிற்று

கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் –விதையாக
நல் தமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழியாகக் கலந்து -நான்முகன் -81-

நல் தமிழ் -முதிர விளைந்த விதைக்கு வைத்த தமிழ் –
ஆழ்வார் திரு உள்ளத்தில் ஞானம் முதிர்ந்து கனியாகி
முளைத்துப் பயன் தரும் விதைகளாகிய அருளிச் செயல் பாசுரங்களைச் சொரிந்தன -என்கிறார்
———–

பொருள் -அகப்பொருள்
திணை –பாலை
கிளவி -கற்போடு புணர்ந்த கௌவை
துறை -கலந்து உடன் வருவோர் புலம்பல் தேற்றல்

மாறன் திருவருளின் வந்து அடையாதாரை நொந்து-அடைந்தவர் பெரும் பேற்றை -அகத்துறைப் படுத்தி இனி பேசுகிறார்

செல யுணர்த்திச் செவிலியைத் தேற்றுதல்

மாலைக் குழலியும் வில்லியும் மாறனை வாழ்த்தலர் போம்
பாலைக் கடம் பகலே கடந்து ஏகிப் பணை மருதத்து
ஆலைக் கரும்பின் நரேல் என்னும் ஓசையை அஞ்சி யம் பொன்
சாலைக் கிளி உறங்காத் திரு நாட்டிடம் சார்வார்களே. 20-

மாலைக் குழலி–உகந்து அலர் சூட்டி உள் மகிழ்ந்து இருந்து புறப்பட்ட பின்பு இவர்கள் கண்டதால் இந்தப் பத பிரயோகம்
வில்லியும்-கோதண்ட பாணியான தலைவனும் -எதிரே வந்த சிம்ஹத்தைக் கொன்று அவள் அச்சம் போகும்படி வில்லில் நாண் ஏற்றிச் சென்றபடி
இது கண்டவர் கூற்று
கேட்பவள் -செவிலித்தாயார்
இடம் -முன்னிலை
காலம் -நிகழ் காலம்
மெய்ப்பாடு -பெருமிதம்
பயன் -செவிலியை மீள உரைத்தல் -ஆதலால் நீ மீள்வாயாக-என்பது எஞ்சி நின்றது –

பாலைத் திணை என்னும் அகத்துறை
மாறனை வாழ்த்தி வழி படாதார் தேக யாத்திரை உடலுக்கும் உயிருக்கும் யாதொரு ஆறுதலும் இன்பமும் இன்றி நடக்கும் வாழ்வே –
ஆழ்வாரை அறிந்த தலைவனும் தலைவியும் திருக்குருகூர் சென்று சேர்ந்து இருப்பது திண்ணம் என்று செவிலித் தாய் தாயாருக்குச் சொல்வது

————

பொருள் -அகப்பொருள்
திணை –குறிஞ்சி
கிளவி -வரைவு கடாதல்
துறை -நெறி அருமை கூறி வரவு விலக்கல்

பாங்கி நெறி அருமை கூறித் தலை மகனை வரவு விலக்குதல் –

சாரல் குறிஞ்சி தழுவும் பொழில் தளிர் மெல்லடித் தண்
மூரல் குறிஞ்சி நகை முகம் நோக்கற்கு நீ முடுகும்
சூரல் குறிஞ்சி நெறி நினை தோறும் துணுக்கு எனுமால்
வாரல் குருகைப் பிரான் திரு ஆணை மலை யவனே. 21-

குறிஞ்சி திணை -அகத்துறை

மூரல் குறிஞ்சி நகை–குறிஞ்சி அரும்பு போன்ற பற்களை யுடைய தலையினது -மூரல் எறும்புக்கு ஆகு பெயர்
முடுகும் -விரைந்து வருகிற
சூரல் குறிஞ்சி நெறி-பிரப்பங்காடுகள் நெருங்கிய மலை வழியை
வாரல்–நீ வாராது நீங்குவாய்

கூற்று -தோழி கூற்று
கேட்போன் -தலைவன்
இடம் -முன்னிலை
காலம் -எதிர்காலம்
மெய்ப்பாடு -அச்சம் சார்ந்த பெருமிதம்
பயன் -வரைவு கடாதல்

இதர ஸம்ப்ரதாயத்தார்கள் செல்லும் மார்க்கம் தீய வழி என்று அவர்களையும் நல் வழிப் படுத்தி
அடுத்த பாசுரத்தில் ஆழ்வார் திருவடிகளை சேர்ந்து உஜ்ஜீவியுங்கோள் என்று உபதேசிக்கிறார் –

திருவாணை நின்னாணை போல் திருக் குருகைப் பிரான் மீது ஆணை என்கிறார்-

———–

மலை யாரமும் கடல் ஆரமும் பன் மா மணி குயின்ற
விலை யாரமும் விரவுந் திரு நாடனை வேலை சுட்ட
சிலையார் அமுதின் அடி சட கோபனைச் சென்று இறைஞ்சும்
தலையார் எவர் அவரே எம்மை ஆளும் தபோதனரே. 22–

பூமா தேவியின் திரு மார்பு போல் பாண்டிய நாடு சந்தனம் முத்து மாலை மணி மாலைகள் நிறைந்தது
மலை யாரம் கடல் யாரம் இத்யாதிகளால் குறிஞ்சி மருதம் நெய்தல் முல்லை நிலங்கள்

விசேஷ வளப்பங்கள் உடைய நாடாய் இருக்கும் என்று குறிப்பு —

மலையில் சந்தன மரமும் -கடலில் முத்துக்களும் -நிலத்தில் சிறந்த இரத்தனங்களும் -மூவகை ஹாரங்கள் பொருந்திய பாண்டிய நாடு
விலை யாரமும்-என்று இந்திரன் கொடுத்த மாலையையும் உடைய பாண்டிய நாடு
கோவா மலையாரம் கோத்த கடலாரம் தேவர் கோன் பொன்னாரம் தென்னவர் கோன் மரபினமே -சிலப்பதிகாரம்
வேலை சுட்ட சிலையார்–சமுத்திர ராஜனை சாபமானம் கொண்டு அச்ச மூட்டிய சக்ரவர்த்தி திருமகன்
சிலையார் அமுதின் அடி சட கோபனை-வில்லார் அமுது ராம நாம அடிகளான அமுதம் என்றுமாம்

தலையார் -பாகவத நிஷ்டர்களான ஸ்ரீ வைஷ்ணவர்கள்
இந்த பாகவத நிஷ்டையால் வரும் பயனைப் பெற நூலில் நிஷ்டராக வேண்டும் என்கிறார் அடுத்த பாசுரத்தில்

————

போந்து ஏறுக என்று இமையோர் புகலினும் பூந்தொழுவின்
வேந்து ஏறு அடர்த்தவன் வீடே பெறினும் எழில் குருகூர்
நாம் தேறிய வறிவன் திரு வாய்மொழி நாளும் நல்கும்
தீந் தேறலுண்டுழலும் சித்தியே வந்து சித்திக்குமே. 23-

ஏறு ஏழு அடர்த்த கண்ணனின் திருநாடும் வேண்டேன்-நாம் -தெளிவு அடைந்த மகிழ்ச்சியால் தன்மைப் பன்மை
கண்ணி நுண் சிறு தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயனை விட
திருவாய் மொழி பாவின் இன்னிசை பாடித் திரிவதே வேண்டும் என்கிறார் –

———–

சித்தர்க்கும் வேதச் சிரம் தெரிந்தோர்கட்கும் செய்தவர்க்கும்
சுத்தர்க்கும் மற்றைத் துறை துறந்தோர் கட்கும் தொண்டு செய்யும்
பத்தர்க்கும் ஞானப் பகவர்க்குமே யன்றி பண்டு சென்ற
முத்தர்க்கும் இன்னமுதம் சடகோபன் மொழித் தொகையே. 24–

பகவர்க்குமே–பிரிநிலை ஏவகாரம் —பகவர் -வீரம் கீர்த்தி வைராக்யம் இவற்றில் சிறந்தவர்

ஸாம காயந் நாஸ்தே -சாமவேதத்துக்கு நிகரான திருவாய் மொழி பாடும் இன்பம்
அந்தமில் பேர் இன்பம் இங்கேயே கிடைக்கப் பெற்றதாகும் என்கிறார்-

———–

தொகை உளவாய பனுவற் கெல்லாம் துறை தோறும் தொட்டால்
பகை யுளவாம் மற்றும் பற்றுளவாம் பழ நான் மறையின்
வகை யுள வாகிய வாதுளவாம் வந்த வந்திடத்தே
மிகை யுளவாம் குருகூர் எம்பிரான் தன் விழுத் தமிழ்க்கே. 25-

தொகை உளவாய பனுவற் கெல்லாம்–சேர்க்கப் பட்டுள்ளவன வாகிய சாஸ்திரங்களில் எல்லாம்
தொட்டால்–உற்று நோக்கினால்
பகை யுளவாம்-பரஸ்பர விரோதம் உள்ளனவாம்
வாது உளவாம் -விரோதங்களும் உள்ளனவாகும்
விழுத் தமிழ்க்கே–சிறந்த தமிழ் பாடல்களில்
வந்த வந்திடத்தே மிகை யுளவாம்–பார்த்த பார்த்த இடங்களில் எல்லாம் மேம்பாடுகளே உள்ளவை யாகின்றன –

திருமாலே தத்வம்
சரணாகதியை ஹிதம்
கைங்கர்யமே புருஷார்த்தம்
அர்த்த பஞ்சக ஞானம் தெளிவாக அருளும் திருவாய் மொழி -வேத வாதுக்கள் -குறைகள் -ஒன்றுமே இல்லையே –

———–

விழுப்பார் இனி எம்மை யார் பிறவித் துயர் மெய் உற வந்து
அழுப்பாது ஒழிமின் அரு வினைகாள் உம்மை அப்புறத்தே
இழுப்பான் ஒருவன் வந்தின்று நின்றான் இள நாகு சங்கம்
கொழுப்பாய் மருதம் சுலாம் குருகூர் எம் குலக் கொழுந்தே –26-

மெய் உற வந்து அழுப்பாது ஒழிமின்–மெய்யாகவே எங்களை வந்து கிட்டி அப்பால் நீங்கி விடுங்கள்
ஊர்ந்து வருகிற சங்குகளை உழுது வருகிற கொழுவானது –கொழு -கலப்பைப் படை வாள் நுனியில் தைக்கும் இரும்பு
வயிற்றில் குத்தித் தள்ளுவது போல்
அடர்ந்து வரும் வினைகளை ஆழ்வார் கருணை சென்று அழிக்கும் என்பது தொகை மொழியின் கருத்து
இள நாகு –மீமிசைச்சொல்
கொழுந்து –உவமை ஆகு பெயர் –ஆயர் குலக் கொழுந்து அன்றோ

ஆழ்வாரை ஆஸ்ரயித்த எங்களுக்கு புண்ய பப வல் வினைகாள்
உங்களுக்கு எம்மிடம் கார்யம்  இல்லை –இனி எமக்கு ஏது பிறவித் துயர்

————

பொருள் -அகப் புறப் பொருள்
திணை –பெரும் திணை
துறை -மாலை பெறாமல் வருந்தித் தலை மகள் ஏங்கியது அறிந்த பாங்கி புலம்பல்

பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு தோழி இரங்குதல்

கொழுந்தோடு இலையும் முகையு மெல்லாம் கொய்யும் கொய்ம் மகிழ்க் கீழ்
விழுந்து ஓடுவது ஓர் சருகும் பெறாள் விறல் மாறனென்றால்
அழும் தோள் தளரும் மனமுருகும் குருகூர் அறையில்
எழுந்து ஓடவுங் கருத் துண்டு கெட்டேன் இவ் இளங் கொடிக்கே. 27–

விறல் -பெருமை -வலி -வீரம்
அழும் தளரும் உருகும்-அஃறிணையில் குறிப்பது -இவள் மயங்கி ஜடமாய் இருந்தாலும்
மெய்ப்பாட்டாலேயே வரும் மாறுதல்கள் –

முகையு மெல்லாம்–அரும்புகளும் மற்றுள்ள மலர்க் காய்களும்
கொய்யும் கொய்ம் மகிழ்க் கீழ்–மிகக் கொய்யும்படியாக மகிழ மரத்தின் கீழ் சென்று
குருகூர் அறையில்–குருகூர் என்று யாரேனும் சொன்னால்
கருத் துண்டு–நினைவு யுண்டாய் இருக்கிறது
இளங் கொடிக்கே–காமத்துக்கு ஆற்றாதவள்
கெட்டேன்–தோழி செய்யும் உபசாரங்கள் எதுவுமே இவள் ஆற்றாமையைக் குறைக்க பயன் பெறவில்லையே

தோழி செய்யும் உபசாரமாவது —
மலர் அணையிலும் சந்திரகாந்தச் சிலையிலும் படுக்கச் செய்தலும்
கொங்கைகளிலே தளிர்களையும் சந்தனத்தையும் பிறவற்றையும் அப்புதலும்
பன்னீர் தூவுதல் போன்றவை

இதில் கிளைவித் தலைவனது இயல் பெயரைக் கூறினமையால் அகப் பொருள் ஆகாமல் அகப் புறப் பொருள் ஆகிறது
கையற்றுப் புலம்புதலால் கந்தருவத்தின் நழுவிய பெரும் திணை யாயிற்று

தலைவன் வருவதற்கு அடையாளமாக முன்னால் மாலையை வர விடுக்க வில்லையே என்று வருந்திய
தலைவியின் வருத்தம் கண்ட தோழி புலம்பினாள் என்பதே துறையின் கருத்து –

————

கொடி எடுத்துக் கொண்டு நின்றேன் இனிக் கொடுங் கூற்றினுக்கோ
அடி எடுத்துக் கொண்டென் பால் வரலாகுங்கொல் ஆரணத்தின்
படி எடுத்துக் கொண்ட மாறன் என்றால் பதுமக் கரங்கள்
முடி எடுத்துக் கொண்ட அந்தணர் தாள் என் முடி எனவே. 28–

முடி எடுத்துக் கொண்ட –பக்தி மேலிட்டு தலையிலே அஞ்சலி செய்து கொண்ட-
அந்தணர்–அழகிய தண்மை யுடைய எல்லா உயிர்களிடமும் அன்பு பொருந்திய மேலோர்களுடைய
ஆரணத்தின் படி எடுத்துக் கொண்ட மாறன்–நான்கு வேதங்களையும் நான்கு திவ்ய ப்ரபந்தங்களாக தமிழ் செய்த மாறன் என்றபடி

மாறன் அடியார்களின் விஜய த்வஜத்தைத் தூக்கிக் கொண்டு -பக்த தாஸ்ய நிஷ்டையைப் பறை சாற்றிய பின்பு
எமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லையே

———–

என் முடியா தெனக்கி யாதே அரியது இராவணன் தன்
பொன் முடியால் கடல் தூர்த்த வில்லான் பொருநைந் துறைவன்
தன் முடியால் அவன் தாள் இணைக் கீழ் எப் பொருளும் தழீஇச்
சொல் முடியால் அமுதக் கவி ஆயிரம் சூட்டினனே. 29–

தன் முடியால் அவன் தாளிணைக்கீழ்நின்னில் சிறந்த நின் சேவடி இணை -பரிபாடல்

வில்லன் -கோதண்ட பாணியான சக்ரவர்த்தி திருமகன்
அவன் தாள் இணைக் கீழ்–தன் முடியால்–அவனது திருவடித் தாமரைகளைத் தலையாலே வணங்கி

எப் பொருளும்-முதல் கடவுளாகிய மாயோன் நிலையும் -அவனை அடையும் நெறியும் -அடைவதற்கு உரிய உயிர்களின் நிலையும்
அடைவதற்கு உண்டாகும் விரோதிகள் நிலையும் -அடைவதால் வரும் பேறும்

திருச் சங்கணித்துறைக்கு அதிபதியாய் தனது திருவாய் மொழியாகிய ஓடத்தில் ஏறும்
உயிர்களை எல்லாம் கடத்தி விடுவார் என்பது திண்ணம் அன்றோ

———–

சூட்டில் குருகு உறங்கும் குருகூர் தொழுதேன் வழுதி
நாட்டில் பிறந்தவர்க்கு ஆளும் செய்தே னென்னை நல் வினையாம்
காட்டில் புகுத விட்டு உய்யக் கொள் மாறன் கழல் பற்றிப் போய்
வீட்டில் புகுதற்கும் உண்டே குறை மறை மெய் எனிலே. –30–

சூட்டில் குருகு உறங்கும் குருகூர்-நெற் போரில் நாரை முதலிய பறவைகள் உறங்கும்
தாம் கவலை அற்று அந்தமில் பேர் இன்பம் பெற்று நித்ய வாஸம் செய்யப் போவதற்கு இந்த உவமை
வழுதி நாட்டில்–பாண்டிய நாட்டில் -கொடை யுடையவனுக்கும் பெயர் -தவறால் மோக்ஷ இன்பம் அளிப்பவர் என்பதால் இப் பெயரால் குறிக்கிறார்
ஆளும் புகுதற்கும் -உம்மைத் தொகைகள் -இறந்து தழுவிய எச்சப் பொருள்கள்

பாரதந்தர்ய ஞான சித்தியை –காட்டில் புகுத விட்டு -என்று மாறன் செயலாக -உய்யக் கொள்ள அவன் ஸங்கல்பித்தான் –
நல்வினையாம் காட்டில் புகுத விட்டான் -காரண கார்யங்கள் உபாயமும் உபாயமும் அவரே
ரக்ஷண ஸங்கல்ப ஞான ஸூர்ய உதயத்தால் ஸாத்விக அஹங்காரத்தால்
இனி எனக்கு செய்ய வேண்டுவது இல்லையே–பாகவத நிஷ்டையே சரம அவதி அன்றோ –

————

மெய்யும் மெய்யாது பொய்யும் பொய்யாது வேறு படுத்து
உய்யும் மெய்யாய உபாயம் வந்துற்றது உறு வினையைக்
கொய்யும் மெய் வாள் வலவன் குருகைக் கரசன் புலமை
செய்யும் ஐயன்  தனக்கே தனித் தாளன்பு செய்த பின்னே. -31-

புலமை செய்யும் ஐயன்–தன்னை அடைந்தவர்களுக்கு உபதேஸித்து அருளும் தலைவர்-ப்ரபந்ந ஜன கூடஸ்தர்
ஐயன் -எல்லாரிலும் மேலானவன் என்றபடி –
மெய்யும் மெய்யாது –தத்வத் பொருள்கள் எல்லாம் உண்மையாக விளங்கிற்று
பொய்யும் பொய்யாது –தார புத்ர தனாதி ஏஷணாத் த்ரவ்யங்களான -பொய்ப் பொருள்களும் பொய்யாகவே யாதாத்ம்யமாகவே விளங்கிற்று
வேறு படுத்து–இங்கனம் வேறுபடுத்தி பகுத்துக் காட்டி
உய்யும் மெய்யாய உபாயம் வந்துற்றது–பிழைப்பதற்கு உரிய –பரம பதத்தை நாடும் வெளியாகிய -உண்மையான தந்திரமும் வந்து பொருந்திற்று
கொய்தற்கு ஏற்ப வினையைப் பகை என்னாமையால் இது ஏக தேச உருவக அணி

தனித் தாள் -ஒப்பற்ற ஸஹாயாந்தர நிரபேஷ திருவடி இணைகள்
ஐயன் -ஆர்யன் வடமொழி திரிபு -மேம்பட்டவன்
புற மத நிரசனமும் ஸ்வ மத ஸ்தாபனமும் செய்து அருளி -ப்ரபந்ந ஜன கூடஸ்தர் –

————-

செய்யன் கரியன் எனத் திரு மாலைத் தெரிந்துணர
வய்யம் கரி யல்ல மாட்டா மறை மதுரக் குருகூர்
அய்யன் கவி யல்லவேல் பிறவிக் கடலாழ்வது அல்லால்
உய்யும் வகை யொன்றும் யான் கண்டிலேன் இவ் வுயிர்களுக்கே. 32–

திருவாய் மொழியின் அனுசந்தானத்தால் பெற்ற உணர்வும் அறிவும் எத்தகையது என்பதை விளக்குகிறார்

————-

உயிர்த் தாரையில் புக்கு உறு குறும்பாம் ஒரு மூன்றனையும்
செயிர்த்தார் குருகை வந்தார் திரு வாய்மொழி செப்பலுற்றால்
மயிர் தாரைகள் பொடிக்கும் கண்ணீர் மல்கும் மா மறையுள்
அயிர்த்தார் அயிர்த்த பொருள் வெளியாம் எங்கள் அந்தணர்க்கே. 33–

முக்குறும்பு -காமம் வெகுளி மயக்கம் -உயர் குடிப்பிறப்பு கல்வி சீலம் தனம் இவற்றால் வரும் கர்வம்
திருவாய் மொழி ஒருவர் சொல்ல-அத்தைக் கேட்டவர்களும் முக்குறும்பு அறுப்பார்களே
ரோம கர்ஷணம் நேத்ராம்பு பதனம் -தானாகே வருமே

————–

அந்தணர்க்கோ நல் அருந்தவர்க்கோ அறி யோகியராய்
வந்தவர்க்கோ மறம் வாதியர்க்கோ மதுரக் குழை சேர்
சுந்தரத் தோளனுக்கோ அவன் தெண்டர்கட்கோ சுடர் தோய்
சந்தனச் சோலைக் குருகைப் பிரான் வந்து சந்தித்ததே. 34–

மற வாதியர் முதல் மகரக் குழையான் வரை-சந்தித்தது என்று நிரசித்ததையும் பொருந்தியதையும் -காட்டும்

———-

சந்ததியும் சந்திப் பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலுகிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை யறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுதார் செய்யும் தேவரையே. 35–

சந்திப்பதம்-ஸமஸ்த பதம் – -தொடர் மொழி -வெவ்வேறு இடங்களில் பொருத்தி
பல பொருள்கள் தரும் படி பங்க்தி -அபூர்வ பொருள்கள் வருமே-

இவற்றை அனுபவிக்க ததீய பர்யந்தம் சேஷத்வம் வேண்டுமே
இவருக்கு மதுரகவி ப்ரக்ருதிகளே தேவர் ஆவார்

பல் அலங்காரப் பொருளும்-பலவகைப்பட்ட அணி இலக்கணப் பகுதிகளும் –உவமை முதலிய அணியியல் பொருந்திய பொருள் இலக்கணம் என்றுமாம்
தேவரையே–பூ ஸூரர்களாலும் வணங்கப்படுபவர் அன்றோ
சந்ததியும் சந்திப் பதமும் அவை தம்மிலே தழைக்கும் பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலுகிற்பீர்-பஞ்ச லக்ஷணங்களும் படித்து உழல்கின்ற புலவர்களே
திவ்ய தேசத்தை மட்டுமே சிந்திக்க முக்தியே ஸித்திக்குமே
ஆட் செய்யக் கிட்டா விடுனும் ஆழ்வாரது அடியார்களைத் தரிசித்த மாத்திரத்தாலேயே முக்தி ஸித்துக்குமே

————

பொருள் -அகப் புறப் பொருள்
திணை -கந்தருவத்தின் நழுவிய பெரும் திணை
கிளவி –அறத்தொடு நிற்றல்
துறை பாங்கி செவிலி யர்க்கு அறத்தொடு நிற்றல்

பாங்கி வெறி விலக்கிச் செவிலியருக்கு அறத்தொடு நிற்றல்

தேவரை ஏறிய மூதறி வாட்டியைச் சீரழித்தீர்
பூவரை ஏறிய கோதை யுள்ளம் புகுந்தார் எவர் என்று
ஏ வரை ஏறி மொழிகின்ற போது இயம்பிற்று இறைவர்
மூவரையோ குரு கூரரையோ சொல்லும் முந்துறவே. 36–

கம்பர் காதல் ஆழ்வார் மேல் என்றும்
மும்மூர்த்திகள் இடமும் அவர்களில் மேம்பட்ட ராமன் இடமும் இல்லாத காதல் என்றும்
அறியாத கட்டுவிச்சி பாசுரம்-

ஏ வரை ஏறி மொழிகின்ற போது –பெருமை மிக்க நம் குறிச்சியில் வந்து சொல்லுகிற காலத்தில்
பூவரை ஏறிய கோதை யுள்ளம் –விஸ்லேஷத்தால் அணிகள் அணியாமல் மலர்கள் மட்டும் சூடப் பெற்ற கூந்தலை யுடைய தலைவியது மனத்தில் -இத்தால்
தெய்வத்தால் தீண்டப் பெற்றவள் அல்லள் -தெய்வம் தீண்டினால் பூவைச் சூடும் அறிவு பெறாள் அன்றோ

தலைவியின் அபிப்ராயம் அறிந்த தோழி தாய்மாற்கு அறிவித்தல் துரையின் கருத்து

————-

துறவாதவர்க்கும் துறந்தவர்க்கும் சொல்லவே சுரக்கும்
அறவா அவை இங்கு ஓர் ஆயிரம் நிற்க அந்தோ சிலர் போல்
மற வாதியர் சொன்ன வாசக மாம் மலட்டாவைப் பற்றி
கறவாக் கிடப்பர் அங்கு என் பெறவோ தங்கள் கை வலிப்பே. 37–

அற ஆ அவை சொல்லவே சுரக்கும் -தர்ம ரூபமாகிய பசுக்களைப் போல்
ஐஹிக ஆமுஷ்மிக மோக்ஷ பயன்களை எல்லாம் பொழியும் –

புறச் சமயத்தார் நூல்கள் மலட்டுப் பசு போல் பயன் கூடாதது மட்டும் அன்றி படித்தவர்களுக்கு நரகத்தையும் கொடுக்கும் –
இப் பாடல் உருவக அணி

————-

பொருள் -புறப் பொருள்
திணை -பெரும் திணை
கிளவி -இரு பாலில் பெண்பால் கூற்று
துறை -தலைவி மடலூரத் தோழி சாற்றுதல்

மடலூரத் துணிந்த தலை மகளின் வழி ஒழுகித் தோழி இரங்குதல் –

கை தலைப் பெய்து அரும் பூசலிட்டுக் கவியால் உலகை
உய்தலைச் செய்ததும் பொய் என்றுமோ சென்று அவ்வூர் அறிய
வைதலைத்து ஏசுதுமோ குருகூர் என்னும் ஆறு அறியாப்
பைதலைக் கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய பண்பனையே. 38–

ஏடு -பனை ஓலை -பெண் நிலை எய்தி மடலூர ஒருப்படுகிறார்
கை தலைப் பெய்தல் -குருவை நினைத்து சொல்லி தலையில் கை கூப்பிய கை யுடையராகை

குருகூர் என்னும் ஆறு அறியாப் பைதலைக் –குருகூர் என்று சொல்வதற்கும் தெரியாத என் தலை மகளை
கோகு உகட்டிட்டு –தன் தோள்களைத் தட்டிக் கொண்டு
ஏட்டில் -பனை மடலாகிய குதிரையில்
ஏற்றிய பண்பனையே–ஏறும்படி செய்த இயல்புடைய தலைவனை -நம்மாழ்வாரை
பைதல் –ஆண்பால் சிறுவனுக்கும் துன்பத்துக்கு பெயர் -தலைவி பால் அன்பு மிகுதியால் பெண் பாலை ஆண்பாலாக பைதல் என்கிறாள்

———–

பண்ணும் தமிழும் தவம் செய்தன பழ நான்மறையும்
மண்ணும் விசும்பும் தவம் செய்தன மகிழ் மாறன் செய்யுள்
எண்ணும் தகைமைக்கு உரிய மெய் யோகியர் ஞானம் என்னும்
கண்ணும் மனமும் செவியும் தவம் செய்த காலத்திலே. 39–

தபஸ்விகளின் கண் -ஞான த்ருஷ்ட்டி -மனம் -முக்காலமும் அறிதல் –
கண்ணும் மனமும் செவியும் கூறியதால் மெய்யும் நாக்கும் பொறிகளும் தவம் செய்தன
அனைத்து தவங்கள் பலமே திருவாய் மொழி

இத்தால் பண்ணும் இன்றியமையாதது என்றும் காட்டப்படுகிறது

———-

காலத்திலே குருகூர் புக்குக் கைக் கொண்மினோ கடை நாள்
ஆலத்திலே துயின்றோர் கொண்டவை யிரண்டா யமைந்த
கோலத்திலே முளைத்துக் கொழுந் தோடிக் குணங்கடந்த
மூலத்திலே செல்ல மூட்டிய ஞானத்து எம் மூர்த்தியையே. 40–

ஆலிலை அன்ன வசம் செய்து வித்தாக பல அவதாரங்கள்
ஆழ்வார் திவ்ய மங்கள விக்ரஹமும் அதே போல் வித்து -ஞான மூர்த்தியே கொடியில் விளைந்த பலம் -என்கிறார்
திருவாய் மொழி பாசுரங்களே ஓடிய கொழுந்து -அதன் பர்யவசாயம் அர்ச்சிராதி கதியை விளக்கும்
சூழ் விசும்பணி முகில் முனியே நான்முகனே நிகமன தசகங்கள்
குணம் கடந்த மூலம் -விரஜைக்கு அப்பால் உள்ள ஸ்ரீ வைகுண்ட ஆதி மூர்த்தி என்றும்
முக் குணங்கள் கடந்த திருமந்திரம் என்றுமாம்-

———–

மூர்த்தத்தினை இம் முழு ஏழ் உலகு முழுகுகின்ற
தீர்த்தத்தினைச் செய்ய வேதத்தினைத் திருமால் பெருமை
பார்த்தற்கு அருளிய பாரதத்தைப் பணித்தானும் நின்ற
வார்த்தைக் குருகைப் பிரானும் கண்டான் அம் மறைப் பொருளே. 41–

பார்த்தற்கு -என்று உலகோர் காண என்றும் அர்ஜுனனுக்கும் என்றுமாம்
நாராயணனை வியாசரும் ஆழ்வாரும் முழுவதுமாகவே கண்டார்கள்
ப்ரஹ்ம ஸூ த்ரம் ஸ்ரீ பகவத் கீதை இவற்றுக்கு புற மதஸ்தர்கள் வாதம்
பூர்வ பக்ஷங்களைக் காட்டி அவற்றைப் போக்கி முடிவாக ஸ்வ சித்தாந்தம் பண்ண ஸ்ரீ பாஷ்யகாரர் வேண்டிற்று

மூர்த்தத்தினை–உயிர் நிலையினையும்
பாரதத்தைப் பணித்தானும்–கீதை அடங்கிய மஹா பாரதத்தை வெளியிட்டு அருளிய -வ்யாஸ பகவானும்
உயிர் நிலை உலக நிலை ப்ரஹ்ம நிலை ஆகிய தத்வ த்ரயங்களையும் ப்ரஹ்ம ஸூத்ர முகேந வெளியிட்டு அருளிய வியாஸ பகவானும்
நின்ற வார்த்தை -நிலை பெற்ற திருவாய் மொழியை யுடைய
வேதம் மீமாம்சை ப்ரஹ்ம ஸூத்ரம் அனைத்தும் வெளியிட்ட பொருள்களை வியக்தமாக வெளியிட்டு அருளிய ஆழ்வார்
மஹா உபகாரகராய் உலகுக்கு நன்மை செய்து அருளியவர் என்றதாயிற்று –

நின்ற வார்த்தை -என்று யாராலும் அசைக்க முடியாமல் ஸ்திரமான பிரமாணங்கள்
எவ்வித சங்கைகள் இல்லாமல் நாதமுனிகளுக்கு அருளி இவர் இசை அமைத்து நமக்கு அருளினார்
ப்ரஹ்ம குணக்கடலில் ஏழு உலகத்தாருக்கு குடைந்து ஆடி மகிழ்ந்து பரி சுத்தமாக்கும் தீர்த்தங்கள் ஆயிரம் அன்றோ
ஸ்ரீ ரெங்கநாதன் வளம் மிகு தமிழ் மறை மொழிந்து உயர் பதின்மர் ஆடும் குணக்கடல் அன்றோ

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச் சட கோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே.–7-10-11-

———–

பொருள் -அகப்பொருள்
திணை –பாலை
கிளவி -பொருள் வயிற் பிரிவு
துறை -நெஞ்சோடு மறுத்தல்

பொருள் வயிற் பிரியும் தலைவனுக்குத் தோழி தலைவியின் ஆற்றாமை கூறுதல்

பொருளைச் சுவை யென்று போவ தெங்கே குரு கூர்ப் புனிதன்
அருளைச் சுமந்தவள் கண்ணின் கடை திறந்து ஆறுபட்டுக்
குருளைச் சுமந்து வெளி பரந்தோட் டரும் கொள்ளை வெள்ளம்
உருளைச் சுடர் மணித் தேரை அந்தோ வந்து உதைக்கின்றதே. 42–

நெஞ்சமே
குரு கூர்ப் புனிதன்
அருளைச் சுமந்தவள்–தலைவியின்
கண்ணின் கடை திறந்து–கடைக் கண்ணைத் திறந்து கொண்டு
ஆறுபட்டுக்–ஒரு ஆறாகி
வெளி பரந்து -வெளியில் பரவி
குருளைச் சுமந்து –காட்டில் விலங்கின் குட்டிகளை அடித்துக் கொண்டு
ஓட் டரும் –ஓடி வருகின்ற -ஓட்டம் தரும் என்பதின் விகாரம் –
கொள்ளை வெள்ளம்–மிகுதியான கண்ணீர் வெள்ளமானது
உருளைச் –சக்கரங்களை யுடைய
சுடர் மணித் தேரை -இரத்தினங்கள் பிரகாசிக்கின்ற என்னுடைய தேரை
வந்து உதைக்கின்றதே–வந்து தடுக்கின்றதே
அந்தோ –ஐயோ
பொருளைச் சுவை யென்று –பொருளை சிறப்புடையது என்று கொண்டு
போவ தெங்கே –எப்படி நான் போகலாகும்

ஆழ்வார் அருளை சுமந்தவளாது கண்ணீர் வெள்ளம் தடுக்க
அதற்குத் தப்பி நாம் எவ்வாறு பொருளை சன்பாதிக்கப் போவோம் என்று
நெஞ்சோடு கூறி செல்வது தவிர்த்தான்

பிரிவாதலால் பாலை யாயிற்று
மெய்ப்பாடு -அசைவு பற்றி பெருமிதம்
பயன் -நெஞ்சோடு கூறி ஆற்றுதல்

———

பொருள் -அகப்பொருள்
திணை -குறிஞ்சி
கிளவி -இருவருமுள வழி யவள் வரவு ஊர்தல்
துறை -ஆடிடம் புகுதல்

மருங்கு அணைதல் –

வந்து அடிக் கொண்டன கொங்கைகள் மாறன் குருகை வஞ்சி
கொந்து அடிக் கொண்ட குழலும் கலையும் குலைந்தலைய
பந்து அடிக்குந் தொறும் நெஞ்சம் பறை யடிக்கின்றது என்றால்
செந்தடித் தன்ன மருங்கிற்குண்டோ நிற்கும் சிக்கனவே. 43–

மாறன் குருகை வஞ்சி-இம்மாதின்

வந்து அடிக் கொண்டன கொங்கைகள் –தோன்றி மார்பில் அடி பரந்து பெருத்தன
செந்தடித் தன்ன மருங்கிற்குண்டோ நிற்கும் –செவ்விய மின்னல் போன்ற இடைக்கு நிலை நிற்கக்கூடிய
சிக்கனவு உண்டோ -அக் கொங்கைகளைத் தாங்கும் வலிமை யுண்டோ -இல்லை என்றவாறு
என்றால்-கொங்கைப் பெருமனும் இடையின் துவட்சியும் இப்படி என்றால்

கொந்து அடிக் கொண்ட குழலும் -பூம் கொத்துக்கள் சூடப்பெற்ற தலை மயிரும்
கலையும் -இடையில் கட்டிய சேலையும்
குலைந்தலைய–நிலை குலைந்து சொர
பந்து அடிக்குந் தொறும் நெஞ்சம் பறை யடிக்கின்றது -இவள் பந்து அடிக்கும் போதெல்லாம் என் மனம் துடிக்கின்றது

மெய்ப்பாடு -உவகை
பயன் -தலை மகளைச் சார்தல்

கொங்கை -பக்தி
மதுரகவி ப்ரக்ருதிகளின் ஆழ்வார் மேல் உள்ள பக்தி முதிர்ந்து அவர்கள் உகந்து ஈடுபட்டுச் செய்யும்
பல கைங்கர்யங்களை வைராக்ய ஸம்ருத்தி பூர்வகமாக செய்யும் அவர்கள் சீல குணங்களில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்
கொந்து அடிக் கொண்ட குழலும் கலையும் குலைந்தலைய-என்றது அனைத்தையும் அர்ப்பணம் செய்து அடியாருக்கு என்றே முயன்று நிற்றல்
பந்து அடித்தல் -விரைந்து பல பல தொண்டுகள் முயன்று ஆற்றுதல்

———

கன வாயினவும் துரியமும் ஆயவையும் கடந்து
மன வாசகங்களை வீசிய மாறனை மா மறையை
வினவா துணர்ந்த விரகனை வெவ் வினையைத் தொலைத்த
சின வாரணத்தைக் குருகைக்கு அரசனைச் சேர்ந்தனமே. 44–

சின வாரணம் -மத யானை-சடவாயுவைக் கோபித்தவர் அன்றோ

கன வாயினவும்கனவு ஸ்வப்ன தசையையும் ஆயினவும் -என்று முன்பும் பின்பும் உள்ள அவஸ்தைகளையும்
ஆயவையும் -துர்யாதீதி அவஸ்தைகளையும் -இவற்றின் உட்பகுதிகள் பலவாதலால் பன்மைப் பத பிரயோகம்
வீசிய -கடந்த
வினவா துணர்ந்த விரகன் -மயர்வற மதிநலம் அருள பெற்றவர் அன்றோ

துரீயம் -சமாதி நிலை -யான் அறியும் சுடராகி நிற்றல் -ஆத்ம ஸ்வரூபம் கண்டு மனமும் சொல்லும் செயல் இழந்து நிற்கை
நினைக்கவும் சொல்லவும் வேறே பொருள் இல்லை என்பதையே மன வாசகங்களை வீசின நிலை என்கிறார்
அதையும் கடந்த நிலையில் வேதப் பொருள்கள் எல்லாமே தாமாகவே தோன்றுதலை வேத சாஷாத்காரம் அடைந்தார் ஆழ்வார்
ஸர்வ வேத வித்தானார் –

———–

சேராதன உளவோ பெருஞ் செல்வரக்கு வேதம் செப்பும்
பேராயிரம் திண் பெரும் புயம் ஆயிரம் பெய் துளவத்
தாரார் முடியாயிரம் குரு கூர்ச் சட கோபன் சொன்ன
ஆரா அமுதம் கவி ஆயிரம் அவ் வரியினுக்கே. 45–

ஆயிரம் -எண்ணிறந்த -அநந்தாவை வேதா –
ஆழ்வார் அருளிச் செய்து காட்டிய பகவத் ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்களும் அநந்தம் அன்றோ –

————

பொருள் -அகப் புறப் பொருள்
திணை -நெய்தல்
கிளவி -தூதில் பிரிவு
துறை –காமக் கிழத்தி காதல் நிலை கண்டு தாமக் குழலி பாங்கி தளர்தல்

தோழி இரங்கல் –

அரிவளை பொன் மகிழ் ஆயிழைக்கு ஈயும் கொல் அந்தி வந்து
முரிவளை முத்தும் சினையும் மயங்க முறை செறுத்து
வரி வளையும் அன்னமும் தம்மிலே வழக்காட வலம்
புரிவளை யூடறுக்கும் குருகூர் எம் புரவலனே. 46–

முரிவளை முத்தும் –வளைந்த சங்கு பெற்ற முத்தும்
சினையும் –அன்னப்பறவை ஈன்ற முட்டையும்
மயங்க -வேறுபாடு தோன்றாமல் கலந்து இருக்க
அவற்றை ஈன்ற
வரி வளையும் –கோடுகளையுடைய சங்கும்
அன்னமும் -அன்னப் பறவையும்
முறை செறுத்து –முறையே கோபித்து
தம்மிலே –தங்களுக்குள்ளே
வழக்காட –விவகாரம் பேச
அப்பொழுது
வலம் புரிவளை –வலம் புரிச் சங்கானது
யூடறுக்கும் -அவ்விரண்டின் நடுவிலே சென்று அந்த வழக்கைத் தீர்த்து விடுகிற
குருகூர் எம் புரவலனே-எமது இறைவனான ஆழ்வார்
அரிவளை -வண்டுகள் வளைத்து மொய்க்கப் பெற்ற
பொன் மகிழ் -பொன் போன்ற தமது மகிழம்பூ மாலையை
ஆயிழைக்கு ஈயும் கொல் அந்தி வந்து–மாலைக் காலத்தில் வந்து ஆராய்ந்து அணிந்த ஆபரணங்களை யுடைய தலைவிக்குக் கொடுத்து அருளுவாரோ

இரங்குதலால் திணை நெய்தல் ஆயிற்று

முத்துக்களும் அன்னங்களும் தங்கள் முட்டைகள் கலந்து எவை என்று அறிய முடியாமல் சண்டை இட
சங்கின் தலைவனான வலம் புரி வந்து தீர்க்க -ஆழ்வார் தாம் அணிந்த மகிழம் பூவைத் தந்து என் துயரம் தீர்க்கிறார் அல்லை –

இச் சிப்பி ஆயிரமே சூழ்ந்தது இடம் பூரி என்று கூறும்-ஒப்பில் சங்கு ஆயிரம் சூழுறும் வலம் புரி என்று ஓதும் –நிகண்டு –

ஆயிரம் சிப்பிகளில் ஓன்று இடம் புரியாகும்-ஆயிரம் இடம் புரிகளில் ஓன்று வலம் புரி யாகும் –

சிப்பி உலகோர் –அன்னம் ஆச்சார்யர்
வெறும் ஜடங்களை உங்கள் தாய் தந்தையருக்கு கொடுத்து உதவி
ஞான கர்ப்பம் முதிர்ந்து வரும் அதிகாரிகளை ஆழ்வாருக்குப் பாத்யம் என்கிறார்

————

பொருள் -அகப்பொருள்
திணை -நெய்தல்
கிளவி –ஒரு வழித் தணத்தல்
துறை -சென்றோன் நீடலிக் காமம் மிக்க கழி படர் கிளவி

தலைவி கடலை நோக்கித் தேர் வழி தூரல் என்றல் –

புரை துடைத்துப் பெரும் பொய்யும் துடைத்துப் பிறர் புகலும்
உரை துடைத் தங்குள்ள வூச றுடைத் தெம் முறு பிறவித்
துரை துடைத் தாட் கொண்ட தொண்டர் பிரான் துறை நீர்ப் பொருநை
கரை துடைக்குங் கடலே துடையேல் அன்பர் கால் சுவடே. 47–

எம் முறு பிறவித் துரை –எம்முடைய மிக்க விரைந்து போற்றுகிற பிறவிகளை
துடைத்து ஆட் கொண்ட தொண்டர் பிரான்–போக்கி அடிமை கொண்டு அருளிய அடியார் ஜன கூடஸ்தரான ஆழ்வாருக்கு உரிய
துறை நீர்ப் பொருநை கரை துடைக்கும் கடலே –கரையை மோதுகின்ற ஸமுத்ரமே
புரை துடைத்துப் –எனக்குள்ள காமமாகிய துன்பத்தைப் போக்கி
பெரும் பொய்யும் துடைத்துப் –தாம் சொல்லும் வார்த்தைகளில் பொய்யில்லாதபடி போக்கி
பிறர் புகலும்-அயலார் கூறுகின்ற
உரை துடைத்து -பழிச் சொற்களுக்கும் இடம் இல்லாதபடி போக்கி
அங்குள்ள –புன்னை மரச் சோலையாகிய அவ்விடத்திலே யாம் கட்டியுள்ள
வூசல் –அறுந்து போன கொடி ஊஞ்சலை
துடைத்த-மீண்டும் கட்டி அதில் உள்ள வருத்தத்தைப் போக்கினை
துடையேல் அன்பர் கால் சுவடே.-தேர்க்கால் சென்ற வழியை அளித்து விடாதே கொள்

காற் சுவடு -பாகவத சன்மார்க்க வாழ்க்கை நெறி -பூர்வை பூர்வதாம் க்ருதம் –
பொருனைக் கரை -வேத ஸாஸ்த்ர விஹித ஆஞ்ஞா
கடல் -ஆஸ்ரிதர் பக்திக் கடலும் ஆழ்வார் கிருபைக் கடலும்

இரங்குதலால் -நெய்தல் திணை யாயிற்று
நேர்ந்த நம் காதலர் நேமி நெடும் திண் தேர் ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் வாழி கடல் ஓதம் –

—————

பொருள் -அகப் புறப் பொருள்
திணை -நெய்தல்
கிளவி -ஒரு சார் பகற்ப குறி
துறை –பாங்கி புலம்பல்

செவிலித் தாய் நல் தாய்க்கு இருவர் காதலும் உரைத்தல் –

சுவடிறக்கத் தொடர் ஆசைக் களிற்றைத் தொடர்ந்திரண்டு
கவடிறக் கட்டிய பாசத் தளைக் கண் பரிந்து சங்கக்
குவடிறக் குத்திய மாறப் பெயர்க் கொலை யானை நங்காய்
இவடிறத்து ஒன்றும் படர்ந்தி வானம் இருள்கின்றதே. 48–

நங்காய்
படர் அந்தி வானம் இருள்கின்றதே
இரண்டு கவடிறக் –தலையில் கதையாய் யுள்ள இரண்டு கட்டுத் தறிகளையும் ஓடியும்படியாக
உட்பகை புறப்பகை யாகிய இரண்டு வஞ்சனையும் அழி பட என்னவுமாம் –
கட்டிய பாசத் தளைக்–கட்டி இருக்கும் அன்பாகிய சங்கிலிகளை
கண் பரிந்து–அறுத்து எறிந்து
தொடர் ஆசைக் களிற்றைத் -தன்னைத் தொடர்ந்த ஆசையாகிய யானையை
சுவடிறக்கத்–அடிச்சுவடு தெரியாமல் ஓடிப்போம் படி
தொடர்ந்து -பின் தொடர்ந்து வெருட்டி
சங்கக் குவடிறக் –தமிழ்ச் சங்கமாகிய மலையானது சிதறும்படி
குத்திய –குத்திப் பெயர்த்த
மாறப் பெயர்க் –மாறன் என்னும் பெயருடைய
கொலை யானை –கொலை செய்ய வல்ல யானையானது -பொய்ச்சமயங்களை அழித்ததனால் கொலை யானை
இங்கு முற்று உருவகம்
இன்று
இவடிறத்து ஒன்றும் -இவள் நிமித்தமாக வருமோ

இரங்குதலால் -திணை -நெய்தலாகும்

ஆசைக்களிறு -மத களிறு ஐந்திணையும் சேரி திரியாமல் செந்நி றீ இ -இவை அடியாக
வரும் பிறப்பு சூழலைத் தொலைக்க வல்லது ஆழ்வார் கிருபை
இரண்டு சுவடு -ஸஞ்சித ஆகாமி -ஸம்ஸாரத்தில் கட்டி வைக்கும் கயிறுகள்
சங்கக் குவடு இறக் குத்திய -சங்கப் புலவர்களை வென்று ஆட் கொண்டாரே

கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் -விதையாக
நற்றமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழியாகிக் கலந்து ––நான்முகன் -81-

————-

இருளாய்ப் பரந்த உலகங்ககளை விளக்கும் இரவி
பொருளாய்ப் பரந்தது தான் பொது நிற்றலின் மற்றது போல்
மருளாய்ப் பரந்த மயக்கத் துயக்கற்ற மாற னெங்கோன்
அருளால் சமய மெல்லாம் பரன் உண்டென்று அறிவுற்றதே. 49–

பொருளைக் காட்டும் இரவி போல் பரனைக் காட்டும் ஆழ்வார் அனைவருக்கும் பொதுவாக நிற்பவர் –
புற சமய மாய இருளைப் போக்கி அருளும் பராங்குசன் மறுமை யுண்டாக்கும் மயக்கம் தீர்த்து அருளுபவர்

————

அறிவே உனைத் தொழுதேன் மற்றை ஆகம வாதியரைச்
செறிவேன் என ஒன்று சிந்தை செய்யாது செய்தாரை யில்லா
நெறிவே நின்றா நிலை யுணர்ந்தோன் குருகூர் நிலத்தைப்
பிறிவேன் எனவும் எண்ணா தென்னை வீடு பெறுத்தினையே. 50–

குருகூர் நிலத்தை என்றது திருக்குருகூரையும் ஆழ்வார் வகுத்த நெறியையும் –
ஆழ்வார் இடம் அநந்யார்ஹமாய் இருப்பதே கற்பு -அறிவாளிகளின் கொள் கொம்பு
ஆழ்வார் திருவடி இணைகளையே பிடித்து அருளிச் செயல்களில் மண்டி மற்ற வற்றை திரஸ்கரித்தலே அறிவின் ஸ்ரேஷ்டம்

————–

பெறும் பாக்கியமுள்ள போதும் பிழைப்பு முண்டே பிறர் பால்
வெறும்பாக் கிளத்தி மெலிகின்ற என்னை வினை கொடுப் போய்
எறும்பாக்கிய தமியேனை அமரர்க்கும் ஏற விட்டான்
குறும்பாக்கிய முப் பகை தவிர்த்து ஆண்ட குருகை மன்னே. 51–

பிறர் பால் வெறும் பாக் கிளத்தி மெலிகின்ற என்னை -அந்நியர் இடத்தில் பயன் அற்ற பாடல்களை பாடி தளர்கின்றேனும்
இம்மைப்பயன் பெறவே இவை ஆகவே வெறும் பா அன்றோ இவை
அமரர்க்கும் ஏற விட்டான்–தேவர்களுக்கும் மேலாகச் செய்து அருளி விட்டார்
ஆகையால்
பெறும் பாக்கியமுள்ள போதும் பிழைப்பு முண்டே–ஒருவர் பெறக்கூடிய செல்வம் உள்ள காலத்தில் -அதற்கு ஒரு கெடுதியும் உண்டாகுமோ
ஆகாது என்றபடி
இந்த முதல் அடி வேற்றுப் பொருள் வைப்பு அணி

காமம் வெகுளி மயக்கம் –முக் குறும்புகள்
முப்பகை -மனம் மொழி செய்கை களால் அற நெறி நழுவும் நிலை
குலம் கல்வி செல்வம் பற்றிய கர்வமும் முக் குறும்பு -முப்பகை
மன் -ஆழ்வாரே உபய விபூதி நாதன் -இங்கு தானே ஈர் அரசு பட்டு இருக்கும்
எறும்பு போன்ற நீசனான அடியேனை ஆட் கொண்டு உயர் நிலை அளித்து அருளினார் –

———–

குருகூர் நகர் எம்பிரான் அடியாரோடும் கூடி அன்புற்று
ஒரு கூரையில் உறைவார்க்கும் உண்டே எம்மை யுள்ளும் சுற்றும்
இருகூர் வினையும் அறுத்து இறப் பார்க்கும் இயற்கை யவ்வூர்
அருகு ஊர் அருகில் அயல் அயலார்க்கும் அரியதன்றே. 52–

யுள்ளும் சுற்றும் இருகூர் வினையும் அறுத்து-உள்ளேயும் சுற்றிக் கொண்டு இருக்கிற மிகுந்த புண்ய பாப ரூபமாகிய இரண்டையும் போக்கி
இறப் பார்க்கும் இயற்கை–அவைகள் அழியும்படி யாகப் பார்க்கின்ற இயற்கையானது

திருக் குருகூர் வாசிகளுக்கு -அருகில் உள்ளோருக்கும் கூர் வினைகள் அடியோடு அறுபட்டுப் போவது அருமை அல்லவே

———–

பொருள் –அகப் புறப் பொருள்
திணை –பெரும் திணை
துறை -மாலையால் வந்த வருத்தம் உரைத்தல்

தலைவன் பிரிந்த நிலையில் ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்

அன்றாத அன்றிலையும் அன்று வித்து என்னை அன்னையுடன்
பின்றாத வண்ணம் எல்லாம் பின்று வித்துப் பிழைக் கொழுந்தை
ஒன்றாத வண்ணம் உபாயம் இயற்றியது ஊழ் வினையை
வென்றான் குருகைப் பிரான் மகிழே யன்றி வேறில்லையே. 53–

அன்றாத அன்றிலையும் அன்று வித்து–பகைமை கொள்ளாத அன்றில் பிறையையும் பகைமை ஆக்கி

ஆஸ்ரித்தவர்களுக்கு பழ வினை முழுதும் தொலைக்க வல்ல –
பிரிவாற்றைமை தணிக்க வல்ல -வகுள மாலை அளிப்பானா என்று ஏங்குகிறாள்

———

வேறே நமக்கிவன் அன்புடை மெய்யடியான் என்றுள்ளம்
தேறேன் எனலது தேறத் தகும் செந் தமிழ்ப் புலவர்க்கு
ஏறே எதிகளுக்கு இன்னமுதே எறி நீர்ப் பொருநை
ஆறே தொடர் குருகூர் மறையோர் பெற்ற ஆணிப் பொன்னே. 54–

நித்ய விபூதியைக் கொடுக்கும் என்பதால்-இன்னமுதே
ஏறே-இன்னமுதே-ஆணிப் பொன்னே -இம் மூன்றும் உவமை ஆகு பெயர்
தகும்–இது தொழில் பெயராய்த் தேற்றப் பொருள் பட்டு நிற்கும் சொல்

வித்யா கர்வத்தை யுடையோர்க்கு பயங்கரராயும் –
ப்ரயோஜனாந்தர பற்று அற்றவர்களுக்கு இணைத்து தன்னுடன் பற்று உண்டாக்கி அருளி
ஸம்ஸாரிகளுக்கு பெற அரும் செல்வமாக ஆழ்வார் உள்ளார் என்கிறார்

————

பொன்னை உரைப்பது அப் பொன்னொடன்றே புலமைக் கொருவர்
உன்னை உரைத்துரைத் தற்கு உளரோ உயற் நாற் கவியும்
பின்னை உரைக்கப் பெறுவ தல்லால் பெருந் தண் குருகூர்
தென்னை(ஐ) யுரைக்கும் இயற்கும் இசைக்கும் சிகாமணியே. 55–

தென்னை(ஐ) யுரைக்கும் –தென் திசைக்கண்ண தாகிய அழகிய தமிழ் மொழிக்கும் –
ஐ உரை -சிறந்த பொருள் இலக்கணத்தைத் தன்னிடத்தில் கொண்டு இருத்தலால் -ஐ உரை -என்கிறார்
இயற்கும் –அதன் பக்தியாகிய இலக்கணத்துக்கும்
இசைக்கும் –இசைத் தமிழுக்கும்
சிகாமணியே -ஸிரோ ரத்னம் போன்றவரே

இதில் முதல் அடி எடுத்துக்காட்டு உவமை அணி

ஆணிப்பொன் போல் நீரே ஸ்ரேஷ்டர்
உமது தேஜஸ்ஸில் சிறிய பிரதிபலிப்பே மற்றவர் தேஜஸ் என்கிறார்-

———-

மறம் -பல் வரிக்கூத்தில் ஓன்று
மறவரின் மகளை விரும்பி விட்ட அரசனது தூதனை நோக்கிக் கடிந்து மறவர் இயல்பு தோன்றக் கூறுவது

மகட் பாற் காஞ்சி -நின் மகளை எனக்குத் தருக என்ற அரசனிடம் மாறுபடுவது

மணித்தார் அரசன் தன் ஓலையைத் தூதுவன் வாய் வழியே
திணித்தா சழியச் சிதைமின் தலையை எம் தீ வினையைத்
துணித்தான் குருகைப் பிரான் தமிழால் சுருதிப் பொருளைப்
பணித்தான் பணி யன்றெனில் கொள்ளும் கொள்ளு மெம் பாவையையே. 56–

மணித்தார் -முத்து மாலை அணிந்த பாண்டியன் ஆணையும் செல்லாமல்
மோக்ஷ ப்ராப்த்தியே பரம புருஷார்த்தம் என்று இருக்கும் -ஸூத்தாந்த ஸித்தாந்திகள் –
அந்தப்புர கிங்கரர்களான -அடியார் பக்கலிலே ஆழ்வார் ஆணையே செல்லும் என்கிறார் –

ஆசு -ஆழ்வாருக்கு அடிமை என்று அறிந்தும் பெண் கேட்க வந்த குற்றத்தை ஆசு என்கிறார்
கொள்ளும் கொள்ளும் -வெகுளி பற்றி வந்த அடுக்கு
பாவை -உவமை ஆகு பெயர்
இது கொல்லி மலையில் தேவரும் முனிவரும் சேர்ந்து உறையும் காலத்து அங்கு வந்து துன்புறுத்தும் அசுரரை மயக்க
வேண்டித் தேவ தச்சனால் யந்திரத்தோடு செய்து வைத்து இருந்த ஒரு பெண் வடிவம்
இது அசுரரைக் கண்டால் சிரித்து மயக்கிக் கொல்லும்

———–

பாவைத் திருவாய் மொழிப் பழத்தைப் பசும் கற்பகத்தின்
பூவைப் பொரு கடல் போதா அமுதைப் பொருள் சுரக்கும்
கோவைப் பணித்த எம் கோவை யல்லா என்னைக் குற்றம் கண்டென்
நாவைப் பறிப்பினும் நல்லவரன்றோ மற்றை நாவலரே. 57–

பாவைத்-எங்கும் பரவி நிற்கும் பொருள் தோன்ற –பா –என்கிறார்
போதா அமுதை-கடலில் இருந்து வந்த உப்புச் சாற்றில் வியாவ்ருத்தி -கொள்ளக் கொள்ளக் கோதிலா இன்னமுதம் அன்றோ

கோவைப் பணித்த எம் கோவை–காம தேனுவை ஒத்த எங்கள் ஸ்வாமியாக ஆழ்வார்

ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு ஆழ்வார் திருவாய் மொழி பால் அன்றோ –
இன் கனி -கற்பகப்பூ அம்ருதம் வேதப்பொருள் சுரக்கும் காம தேனு அருளிய என் கோ திருக்குருகூர் மன்னன் பற்றிய
இந்த சடகோபர் அந்தாதியும் திருமடல் தனிப் பாடல்களுமே கம்பருடைய சரம அருளிச் செயல் என்பர் –

————-

நாவலந் தீவில் கவிகள் எல்லாம் சில நாள் கழியப்
பூவலந் தீவது போல்வ அல்லால் குருகூர்ப் புலவன்
கேவலந் தீங்கு அறுப்பான் கவி போல் எங்கும் போய்க் கெழுமிக்
கூவலந் தீம் புனலும் கொள்ளுமே வெள்ளம் கோளிழைத்தே. 58–

இதன் கடையடி எடுத்துக்காட்டு உவமை அணி

உலகோர் உஜ்ஜீன அர்த்தமாக அருளிச் செய்த ஆழ்வார் அருளிச் செயல்கள் ஏற்றம் -என்று என்றும் நீடித்து
நின்று உலகோரை ரஷித்து அருளும் –
மன் புகழ் பெருமை நும் கண் மரபினோர் புகழ்கள் எல்லாம் உன் புகழ் ஆக்கிக் கொண்டாய்
உயர் குணத்து உரவத் தோளாய் -குகப்படலாம் -36-போல் இதுவும் –

————

இழைத்தார் ஒருவரும் இல்லா மறைகளை இன் தமிழால்
குழைந்தார் குருகையிற் கூட்டம் கொண்டார் குமரித் துறைவர்
மழைத்தார் தடக் கைகளால் என்னை வானின் வரம்பிடை நின்று
அழைத்தார் அறிவும் தந்தார் அங்கும் போயவர்க்கு ஆட் செய்வனே. 59–

அங்கும் போயவர்க்கு ஆட் செய்வனே--இங்கு ஸ்துதித்தது அன்றியும் என்று இறந்தது தழுவிய எச்சப் பொருளது

உபய விபூதி நாதனே அனைத்தும் ஆழ்வாருக்கு ஆக்கி அருளினான்
இங்கும் அங்கும் அவருக்கே ஆட் செய்வேனாக அடியேனை ஆழ்வாரே ஆக்கி அருள வேண்டும்-

————–

ஆட் செய்யலாவ தெல்லாம் செய் தடி யடைந்தே னதன்றித்
தாட் செய்ய தாமரை என் தலை ஏற்றனன் தண் குருகூர்
நாட் செய்ய பூந்தொடை மாற னென்றேன் இனி நாட் குறித்துக்
கோட் செய்ய லாவதுண்டே யென்றனாருயிர் கூற்றினுக்கே. 60–

இறப்பு என்னும் பயத்தை விட்டாய் இராமன் என்பானைப் பற்றி -கும்ப கர்ணன் வதைப்படலாம் -132-
ஆழ்வார் திருவடிகள் அடியேன் தலை மேல் பதிந்து மாறன் திரு நாமமே ஜபித்த பின்பு யம படர் அடியேனை அணுகுவாரோ

————

பொருள் -அகப் புறப் பொருள்
திணை -பெரும் திணை
துறை -மாலை பெறாமல் வருந்துவது உரைத்தல்

தலைவனைப் பிரிந்த தலைவி தென்றலுக்கு வருந்தி இரங்குதல் –

கூறப் படா மறையின் பொருள் கூறிக் குவலயத்தோர்
மாறப் படா வினை மாற்றிய மாறன் மகிழலங்கல்
நாறப் படா நின்ற போதமுது ஆகும் அதன்றி நஞ்சம்
தேறப் படாது கெட்டேன் மன்றல் நாறும் தண் தென்றலையே. 61–

தென்றலை மன்மதனுடைய தேர் என்பர்-

இனி யான் உண்ணலும் உண்ணேன் வாழலும் வாழேன் என்பதை யடக்கி பசியட நிற்றல் என்ற மெய்ப்பாடு தோன்றி நின்றது

————-

தென் தலைத் தோன்றும் உபநிடதத்தை என் தீ வினையை
நின்று அலைத்து ஓன்றும் நியாயம் நெறியை நிறை குருகூர்
மன்றலைத் தோன்றும் மதுரகவியை மனத்துள் வைப்பார்
என் தலைத் தோன்றும் எம்பிரான்கள் என் நாவுக் குரியவரே. 62–

தென் தலை ஆழ்வார் அருளிச் செயல் தென் திசை தோன்றிய உபநிஷத் அன்றோ
மன் தலை -நம்மாழ்வார் வாக்கில் வந்த உபநிஷத்துக்களின் ஆழ்ந்த பொருள்கள்

நியாயம் நெறியை–தர்க்க நிர்ணயத்தாலும் பரத்வ நிர்ணயம் செய்து அருளியவர் அன்றோ
மதுரகவியை-இனிமையான திவ்ய பிரபந்தங்கள் -வேதம் போல் இல்லாமல் சர்வாதிகாரம்
இவற்றை அத்யயனம் செய்தவர்களே எம்பிரான்கள்
அவர்களையே நாவால் பாட புகழ் பாட நான் கடமைப்பட்டுள்ளேன் -என்கிறார்

————-

உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என ஒன்றுமின்றி
விரிக்குந் தோறும் வெறும் பாழாய் விடும் பிறர் புன் கவி மெய்
தெரிக்கின்ற கோச் சடகோபன் தன் தெய்வக் கவி புவியில்
சுரக்கின்ற நுண் மணல் ஊற்று ஓக்கும் தோண்டச் சுரத்தலினே. 63–

கோடல்–வெண் காந்தள் -கார்த்திகை மாதத்தில் பூக்கும் மணம் இல்லாத பூ
இதே போல் பிறர் கவிகளும் சொல் சுவை பொருள் சுவை இல்லாமல் பயன் அற்றதாய் விடும்

தெய்வக்கவி -தோண்ட தோண்ட ஆழ்ந்த புது அர்த்தங்கள் ஸ்புரிக்கும் -ஊற்று தரும் இனிய நீர் போல்
கல்வி -கல் தோண்ட –வி தொழில் பெயர் விகுதி

————

சுரக்கும் திருவும் வறுமையும் தீரும் தொடக்கு விட்டுக்
கரக்கும் இருவினை மேன்மையும் காணும் கயல் குதிப்பத்
திரக்கும் கழை நெடுந் தாளில் தொடுத்த செந் தேனுடைந்து
பரக்கும் பழன வயல் குருகூர் வளம் படுமினே. 64–

கெண்டை மீன்கள் துள்ளி தேன் கூட்டு உடைந்து வயல்களில் தேன் பெருகுவது போல்
குருகூர் மஹிமையைக் கூறுவதால் நம்மாழ்வார் கருணையாகிய தேன் வெள்ளப் ப்ரவாஹம்
உங்களுக்கு நிரம்ப உண்டாகிப் பரவும் என்பது தொகை மொழியின் கருத்து

குருகூர் வளம்-ஆழ்வார் என்றும் அவர் அருளிச்செயல்கள் என்றும் படுமின் -ஆழ்ந்து அனுபவியுங்கோள்
இந்த வளம் நினைத்தாலே திரு அஷ்ட ஐஸ்வர்யம் பொங்கும் -இரு வினை அகலும் -மேன்மை எல்லாம் கிட்டும்

————-

பாடும் கறங்கும் சிறை வண்டு பாடும் பைந் தாள் குவளை
யோடும் கறங்கும் குருகைப் பிரான் இச் சுழல் பிறவி
ஓடும் கறங்கன்ன வாழ்க்கையை நீக்கி யுணர்வுதவி
வீடும் திறந்து தந்தானை எந்நான்றும் விடகிலமே. 65–

கறங்கன்ன வாழ்க்கையை-காற்றாடி போன்ற பிறவிச் சூழலை

ஆன்மாவைக் குவளை என்கிறார் -சாம்சாரிக தசை மாயையில் ரமிக்கும்
உலக இன்பம் சந்த்ர வெளிச்சத்தில் குவளை மலரும் –
ஆழ்வாராகிய வண்டு பகவத் குணமாகிய தேனை உண்டு அருளிச் செயல்கள் பாடி சுழன்று வர இறக்கை காற்று வெளிச்சத்தால்
குவிந்து இருக்கும் குவளை மெதுவாக நெகிழ்ந்து உணர்வு ஏற்பட்டு உஜ்ஜீவனம் அடைகிறது
1-ஆச்சார்யர் கீழ் போல் முன்னோர் மொழிந்த முறையில் உபதேசம்
2-பூ கொய்யும் பெண் போல் உபதேசங்களை அறிந்து உபதேசிப்பர்
3-ஹம்சம் போல் சாரங்களை உபதேசிப்பர்
4-வண்டு போல் அமுதம் உண்டு பாடி அனுபவித்து -அதில் விமுகரானவர்களையும் திருத்தி பணி கொள்வர்
இப்படி நான்கு விதம்

————-

பொருள் -அகப் புறப் பொருள்
திணை -பெரும் திணை
துறை -வேலமர் கண்ணி மாலை யம் பொழுது கண்டு ஏங்கியது அறிந்த பாங்கி புலம்பல்

விஸ்லேஷத்தில் மாலைப் பொழுதுக்கும் இருளுக்கும் தலைவியின் ஆற்றாத துயர் கண்டு தோழி இரங்கல்

விட வந்தகார வெம் பாலிற் பராங்குசர் மெல்லியலுக்கு
இடர் வந்ததால் என்றி ரங்கிப் புணர்ந்திலர் இன்னுயிரை
அட வந்த காலன் கொலோ அறியேன் இன்று இவ் வந்தி வந்து
பட அந்த காரப் பெரும் புகை யோடிப் பரக்கின்றதே. 66–

விட வந்தகார வெம் பாலிற் –கொடிய நஞ்சு போன்ற இருட்டையுடைய இராக்காலமாகிய பகுதியிலே
வெம்மையை மெல்லியலுக்கு இடர் என்பதுடன் கூட்டிப்பொருள்
மெல்லியல் -காமன் கொடுமைக்கு ஆற்றாதாள்
பராங்குசர் -துன்பம் செய்யும் காமனை அடக்க வல்லார் என்றவாறு

—————

பொருள் -அகப் பொருள்
திணை –பாலைத் திணை
கிளவி –உடன் போக்கு -உட்பகுதி -தேற்றல்
துறை -தலைவிக்குத் தலைவன் தன் பதி அணுகினமை சாற்றல்

உடன் போக்கில் தலைவன் தலைவிக்குத் தன் நகர் அணிமை கூறல் –

பரவாது கேட்டினிப் பைய நட சுருதிப் பசுக்கள்
சுரவா தவற்றைச் சுரப்பித்து அவை சொரியும் பொருள் பால்
கரவாது உதவிய மாறன் கவி அனையாய் இனி ஓர்
சர வாதம் இப்புறம் அப்புறம் காணத் தடம் பணையே. 67–

சரவாதம் -பாலை நிலம் -தடம் பணை -சோலை சூழ்ந்த வூர்
மருதம் தாண்டி விட்டோம்
ஓர் அம்பு போய் விழும் தூரத்தில் நாம் உள்ளோம் பைய நட

இது உருவக அணி

இடையில் எதிர்த்த சிம்மம் போன்றவற்றை அம்பால் எறிந்ததனை தலைவி அறிந்தவள் ஆகையால்
அம்பின் வீழ்ச்சியைக் குறித்து சரவாதம் என்கிறான்
தடம் பணை அருகில் இருப்பதாகக் கொண்டு இனி மருத நிலமே என்கிறான்

நானிலம் வாய் கொண்டு நன்னீர் அற மென்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத் துமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுதம்
பூம்தேன் அலம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே —திரு விருத்தம் -26-பாசுரம் போல் இங்கு

————-

பொருள் -அகப் புறப் பொருள்
திணை –பெரும் திணை
துறை –பா கொத்த சொல்லி பைந்தொடை பெறாள் -மேகத்தைத் தூது போக விடுத்தல்

பிரிவாற்றாது வருந்தும் தலைவி கார் கண்டு கலங்குதல் –

தடம் பணைத் தண் பொருநைக் குருகூரர் தகை வகுள
வடம் பணைக் கொங்கையில் வைக்கின்றிலர் மற்றை மாலை யெல்லாம்
உடம்பு அணைக்குந் தொறும் வெந்து உகும் ஐந்து வெம் பாம்பு உமிழ்ந்த
விடம் பணைக் கொண்டனவே பனி தோய்ந்திடு மேகங்களே. 68–

பனி தோய்ந்திடு மேகங்களே–விடாமல் மழை பெய்வதை மேற்கொண்டுள்ள ஆகாசத்தில் செல்லும் மேகங்களே
பனி -குளிர்ச்சியுமாம்
எனது ஆற்றாமையை ஆழ்வாருக்கு அறிவிப்பீர்
நீங்கள் இங்கே பொழிவதனால் பயனில்லை
அவருடைய மலையில் ஏறி மழை பெய்யத் தொடங்கினால் அவர் நும்மைக் கண்ட வுடன் விரஹ மேலீட்டால் தாமே என்னிடம் வந்து அணைவார்

விரஹ தாபத்தால் மேகக் கூட்டம் இவளுக்கு விஷங்கள் பருத்து உயர்ந்து வானில் பரவியது போல் உள்ளதே
அஷ்ட நாகங்கள் -வாசுகி -அநந்தன் -தக்ஷன் -சங்க பாலன் -குளிகன் -பதுமன் -மஹா பதுமன் -கார்க்கோடன் –
இவர்கள் காஸ்யப கத்ரு மக்கள்
ஆழ்வார் சூடிக் களைந்த வகுள மாலையே இவள் வெப்பம் தணிக்கும் –

—————-

பொருள் –அகப் பொருள்
திணை –முல்லை
கிளவி -வரை விடை வைத்துப் பொருள் வயிற் பிரிதல்
துறை -தலைவன் மேகம் தன்னொடும் சோகம் கொண்டு அவன் சொல்லல்

பொருள் வயில் பிரிந்து சென்று மீளும் தலைமகன் முகிலொடு கூறல் –

மேகத்தை ஆற்றில் கண்டேன் என்று எண்ணாது மெய்யன் குருகூர்ப்
பாகத்தை ஆற்றும் சொல்லாளைக் கண்ணீரின் துளி பரந்த
மோகத்தை ஆற்றிக் கொண்டே கண்ட மாற்ற மொழிந்து சிந்தைச்
சோகத்தை ஆற்றிக் கொண்டே துளித் தூவத் தொடங்குகவே. 69–

மேகத்தை ஆற்றில் கண்டேன் என்று எண்ணாது –வழியிலே கண்டு வார்த்தை சொன்னேன் என்று நினைக்காமல்
நீங்கள்
மெய்யன் குருகூர்ப் பாகத்தை –திருவாய் மொழியை-பாகம் -சுவையை யுடைய திருவாய் மொழிக்குப் பண்பு ஆகு பெயர்
ஆற்றும் சொல்லாளைக் -ஒத்து இருக்கும் சொல்லை யுடைய எனது தலைவியை-அவள் சொற்களைக் கேட்டாலே உங்களுக்கு பெரும் பேறு கிட்டுமே
கண்ணீரின் துளி பரந்த மோகத்தை -கண்ணில் நின்று உண்டாக்கிய நீர்த்துளி மிக்குள்ள என் பால் எழுந்த காம விரஹத்தை
ஆற்றிக் கொண்டே கண்ட மாற்ற மொழிந்து சிந்தைச் சோகத்தை ஆற்றிக் கொண்டே -அவள் மனதில் உண்டாக்கிய சோர்வை சாந்தப் படுத்திக் கொண்டு பிற்பாடு
துளித் தூவத் தொடங்குகவே–மழை பெய்ய ஆரம்பிப்பீர்களாக -பெரியதாக மழை பெய்வீர்களாகில் அவளுக்கு குளிரத் தொடங்கும் –

தலைவியின் மோகத்தை காலம் தாழ்த்தாது தணியுங்கோள் என்று மேகத்துக்கு கட்டளை

————

மதங்கு -மதங்கம் — மதங்கியார் -மண்டலம் சுற்றுதல் –

தொடங்கு கின்றாள் நடம் சொல்லு கின்றேன் குருகூரர் தொழா
மடங்கு கின்றாள் மண்டலம் சுற்றி யாடுகின்றாள் மதங்கி
விடங்கு கண்டார் பிழைப்பார் சவையீர் விரைந்து ஏகுமிந்த
படங்கு விண்டால் பின்னைப் போக ஒண்ணாது உம் பதிகளுக்கே. 70–

மதங்கம் -நாட்டியக்கலை -அக நிகழ்ச்சியை புற உறுப்புக்களால் வெளியிடுதல்
கூடு பாணி யின் இசையோடு முழவொடும் கூட்டித் தோடு சீர் அடி விழி மனம் கை கொடு சேர்த்தி ஆடல் -கம்பர்
இதன் அங்கங்கள் ஒன்பது
சுருதி பாட்டு தாளம் காலடி விழி மனம் கை சீர் தோடு -என்பன
சீர் -பிடிகளின் அமைப்பு -தோடு -அவர்களை வரிசைப்படுத்தி ஆடும் முறை
இங்கு மதங்கி– ஆழ்வார் அருளுக்குப் பாத்ரமான பாகவதர்
அவர் அழகு ஞான சம்ஸ்காரம் -ஆட்டம் -அனுஷ்டானம்
இவற்றைக் கண்டால் அகல ஒண்ணாது – மயங்கி ஈடுபடுவோம் –

————-

பதியந் தமிழ் என்ன நான்மறை என்ன இப் பார் புரக்கும்
மதியந் தமிழ் ஒளி மாலைகள் என்ன மறை தமிழின்
அதியம் தரும் கவி ஆயிரம் செய்தளித் தானமுதம்
பொதியம் தருநதி யங் குருகூர் எந்தை பூசுரர்க்கே. 71–

பதிகம் அதிகம் -இரண்டிலும் ஓசை நயம் பற்றி க -யாவாகத் திரிந்தன
ஓங்கு ஒளி உள்ளிருட்டைப் போக்கி ஆத்ம ஞானத்தையே சொல்லும்
அந்தமில் ஒளி -மோக்ஷம்
பூசுரர்க்கே பிரிநிலை ஏவகாரம்

பொதியம் தருநதி–பொதிகை மலையில் அகஸ்தியர் இடம் இருந்து பிறந்த தமிழ் இலக்கணம் உலகை வாழ்விப்பது போல்
தாமிரபரணி நதியும் பொதிகை மலையில் இருந்து பிறந்து வாழ்விக்கிறது
பூ ஸுரர் -வேதப்பொருளைக் கண்டு மகிழ்பவர் அந்தணர் ஆதலால் அவரே தனது பெருமையை அறிய வல்லவர் என்றவாறு

————-

பூட்சி கண்டீர் பொய்ச் சமயப் புலவர்க்குப் போக்கு வல்வாய்
வாட்சி கண்டீர் மற்றை மாயத்து அருகர்க்கு மன் உயிர் கட்கு
ஆட்சி கண்டீர் தொண்டர்க்கு ஆனந்த வாரி கண்டீர் அறிவைக்
காட்சி கண்டீர் பரவும் குருகூர் வந்த கற்பகமே. 72–

கண்டீர் -அடி தோறும் உறுதிப்பாட்டை வலியுறுத்தும்
கற்பகச் சோலை நம் ஆழ்வார் –
மித்யா வாதிகளுக்கு வாய்ப்பூட்டு போடுபவர்
மாயாவாதிகளான அருகருக்கு வெட்டரிவாள்
திவ்ய ஸ்வ மத அநுசாரி தொண்டர்களுக்கு கூடஸ்தர் -ஆள் படுத்தி அருளுபவர்
இவை எல்லாம் கண்டு அறிந்தீர்கள் அன்றோ

————

கற்றும் செவி யுறக் கேட்டும் பெருகிக் களித்தும் உள்ளே
முற்றும் உகப்பெய்தும் மூழ்கிக் குடைதும் முகந்து கொடு
நிற்றும் நிலையுற நீந்துதும் யாம் நிதம் மாறனெம்மை
விற்றும் விலை கொள்ளவும் உரியான் கவி வெள்ளத்தையே. 73–

ஓயாமல் பருக வேண்டியதனால் முகந்து கொடு நிற்றும் என்கிறார்
விற்றல் -அடியாருக்கு அடியாராக்கி அருளுதல்
விலை கொள்ளுதல் -அவ்வடியாரையும் தம் அடியார் ஆக்குதல்
திருவாய் மொழியை வெள்ளமாக்கி அதற்கு ஏற்ப முழுவதும் உருவகம் செய்தலால் முற்று உருவக அணி

மாறன் அருளிச் செயல் வெள்ளப் பெருக்கே அஷ்டாங்க யோக சித்தி பெற வைக்கும்
1-நாள் தோறும் காதாரக் கேட்போம்
2-பருகிக் களிப்போம் -சுவைப்போம்
3-உள்ளத்தில் முற்றச் செய்வோம்
4-முழுவதும் விழும்படி கொட்டு விழுவித்து மகிழ்வோம்
5-அந்த வெள்ளத்தில் விழுந்து முழுகி விளையாடிக் களிப்போம்
6-அதை முகந்து மேலே கொட்டிக்கொண்டு வேறே எத்தாலும் பாதிக்கப்படாமல் இருப்போம்
7- அந்த வெள்ளத்திலே நீந்தி விளையாடிக் களிப்போம்
8- அவனுக்கே அற்றுத் தீர்ந்து ஆட் செய்து களிப்போம்
இது விசேஷ அஷ்டாங்க யோகமோ
மாறன் எம்மை வாங்கவும் விற்கவும் பெறுவர் என்று பறை சாற்றுவோம்

————–

பொருள் –அகப் பொருள்
திணை –உரிப்பொருளால் குறிஞ்சி
கிளவி –இடத்தலைப்பாடு
துறை -கண் நயந்து உரைத்தல்

தலைவியின் கண் அழகு கண்டு வியந்த தலைவன் கூறுதல்

வெள்ளம் பரந்தனவோ கமலத்தன்றி வெண் மதி மேல்
கள்ளம் பரந்தனவோ முயல் நீக்கிக் கவிக் கரசன்
தெள்ளம் பரந்த வயல் குருகூர்க் கொம்பின் செம் முகத்தே
முள்ளம் பரந்தனவோ கண்களோ ஒன்றும் ஓர்கிலமே. 74–

தலையின் அவயவங்கள் மலர் போல் தோன்றுவதால் -மலர் நிறைந்த கொம்பு என்கிறான்
கடலினும் பெரிய கண்கள் -கம்ப ராமாயணத்தில் உண்டே
இத்துறை முழுவதும் ஐய உவமை
மெய்ப்பாடு -பெருமிதம் -உவகையுமாம்
பயன் -கண் சிறப்பு உரைத்தல் ஹேதுவாக தலைவியைச் சார்தல்

முகம் கமலம் -கண் இணைகள் அதில் நீர் நிலைகள்
வதனம் மைதீர் கஞ்சத்தின் அளவிற்றேனும் கடலினும் பெரிய கண்கள்
அன்றி சந்திரன் குறை யாகிய முயல் நீங்கி பூர்ண சந்திரன் இவள் முகத்தில் கள்ளமாகப் பரந்ததுவோ
அன்றி என் கள்ள மனம் தான் கறுப்பான கண்களாக இடம் கொண்டதோ -யான் அறியேன் –

————–

ஓரும் தகைமைக்கு உரியாரும் ஓங்கிய ஞானியரும்
சாரும் தனித் தலைவன் சட கோபன் தடம் பதிக்கே
வாரும் உமக்கொரு உறுதி சொன்னேன் மயக்கமெல்லாம்
தீரும் திருக்கு அறும் சிந்தை செவ்வே நிற்கும் தீங்கு அறுமே. 75–

க்ஷேத்ர வாசமே உறுதி பயக்கும் உபாயமாகும்
ஆழ்வார் கடாக்ஷம் பெற பாக்யம் செய்து இருக்க வேண்டுமே
பெற்றால் தப்பான மயக்கங்கள் எல்லாம் தீரும் -கோணல் புத்தி போம் -கண் கூடாக தீவினைகள் போம்

திருக்கு அறும் –மாறுபாடுகள் நீங்கி விடும்
வாரும் என்பதற்கு நீங்கள் என்பதைத் தோன்றா எழுவாயாக்கிக் கொள்ள வேண்டும்
சொன்னேன் -தெளிவினால் வந்த கால வழு வமைதி

————–

பொருள் –அகப் பொருள்
திணை –மருதம்
கிளவி –பரத்தையில் பிரிவு
துறை –காமக்கிழத்தி மைந்தனை எடுத்தல்

அறு வகையாய சமயமும் ஐவகைத் தாம்புலனும்
உறு வகையால் சொன்ன ஓட்டம் எல்லாம் ஒழுவித் தொருங்கே
பெறு வகை ஆறெனச் செய்த பிரான் குருகூர்ப் பிறந்த
சிறு வகையார் அவரைத் தொழுதோம் எம்மைத் தீண்டுகவே. 76–

அறு வகை சமயங்கள்
சவ்ரம் -வை நாயிகம் -சுப்ரமண்யம் -ஆக் நேயம் -வைஷ்ணவம் -பாசுபதம்
இவைகள் முறையே சூர்யன் -விநாயகர் -சுப்ரமணியன் -அக்னி -விஷ்ணு -சிவன் -அதி தெய்வங்கள்
சங்கர பாஸ்கர யாதவ பாட்ட பிரபாகர் தங்கள் மதம் என்றும் உண்டே
பொருவரிய சமயங்கள் புகல்கின்ற புத்தேளீர்
இருவினையும் யுடையார் போல் அருந்தவறின்றி யற்றுவார்
திரு உறையும் மணி மார்பன் யுனக்கு என்னை செயற் பால
ஒரு வினையும் மறியார் போல் உறங்குதியால் உறங்காதாய்
ஆழ்வாரைச் சேர்ந்த நம்மை ஷூத்ர மார்க்கத்தில் நடப்பவர் தீண்டுவாரோ

கூற்று -காமக் கிழத்தி கூற்று
பயன் -காமக் கிழத்தி மகிழ்தல்

———-

தீண்டித் திருவடியைப் பற்றிக் கொண்டு சிந்தித்ததையே
வேண்டிக் கொளப் பெற்றிலேன் வினையேன் இவ் வெறும் பிறவி
ஆண்டில் பிறந்த அக் காலத்திலே அன்பனாய் அணி நீர்ப்
பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே. 77–

ஆழ்வார் திவ்ய மங்கள திரு யருவோடே வாழ்ந்த காலத்தில் நான் பற்றிக் கொள்ளாத பிறவியோடே இருந்து கெட்டேனே –
அப்போதே அந்தத் திருவடிகளைப் பற்றி -அதையே சிந்தித்து உய்ந்து போகாமல் கெட்டேனே
அவர் பாவனப் படுத்தி என்னைத் தீ மனம் கெடுத்துபாவகன் -அக்னி -தூய்மைப்படுத்துவன் –
மருவித் தொழும் மனமும் தந்து அருளி இருப்பாரே

———–

பாவகத்தால் தன் திரு அவதாரம் பதி னொன்றென்றிப்
பூவகத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழந்து
நாவகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்தளித்த
கோவகத்தாற் கன்றி என் புறத்தார் செய் குற்றேவல்களே. 78–

பாவகத்தால்–அம்சத்தினால்
கோவகத்தாற் கன்றி—-மேலான இடத்தை யுடையவர் -நித்ய ஸூரியான ஆழ்வாருக்கு அல்லாமல்

ஆழ்வார் 11 அவதாரம் –தானே தன்னைப் பாடிக் கொண்டார்
அவனைப் போலவே அநுகாரம் -கடல் ஞாலம் செய் தேனும் யானே என்னும் -உண்டே –

———–

குற்றேவலும் செய்தும் மெய் கண்டு கை கொண்டு கும்பிட்டன்பு
பெற்றேன் என் போல் எவர் பேறு பெற்றார் பின்னையே பிறந்து
வெற்றேவலின் நின்ற பொய்யன்பர் தாங்களும் மெய் யுணர்ந்தார்
எற்றே குருகைப் பிரான் எம் பிரான் தன் இயலிசைக்கே. 79–

இயலிசைக்கே–இலக்கணமும் பண்ணும் அமைந்த திவ்ய ப்ரபந்தங்களாலே —இயல் இசை -சினை ஆகுபெயர் –
மெய் கண்டு–ஆசிரியருக்கு கைங்கர்யங்கள் செய்து அவர் மூலம் திவ்ய ப்ரபந்தங்களில் தத்வ அர்த்தங்களையும் யதாவாகத் தெரிந்து கொண்டு

அருளிச் செயல்களை அறியாமல் அலகிடுதல் மெழுகிடுதல் கோலமிடுதல் செய்வார்களும்
அதிகார சம்பத்தி உண்டாகி மெய்யுணர்வு பெற்று உஜ்ஜீவனம் அடைவார்கள் அன்றோ
அதே போல் அடியேனும் ஆனேன் என்கிறார்

———–

பொருள் –அகப் புறப் பொருள்
திணை –கைக்கிளை
துறை -காட்சி ஆண்பால் கூற்று

தலை மகளைத் தலை மகன் கண்ணுற்று இஃது ஒரு வியப்பு என்றால் –
ஒரு தலைக் காமம்-கைக்கிளைத் திணையின் முதலான காட்சி என்னும் துறை இது

இயலைத் தொடுத்து இன்னிசையைப் புணர்த்து எம்மை யிப் பிறவி
மயலைத் துடைத்த பிரான் குருகூர் மதியைக் கொணர்ந்து
முயலைத் துடைத்துத் தனுவைப் பதித்து முத்தங்குயிற்றிக்
கயலைக் கிடத்திக் கொள் சாளரத்தூடு கதவிட்டதே.–80–

தனுவைப் பதித்து –இரண்டு விற்களை அமைத்து
முத்தங்குயிற்றி–முத்துக்களை பதித்து
கயலைக் கிடத்தி–இரண்டு கயல் மீன்களை வைத்து

களங்கம் துடைத்த மதி– முகத்துக்கும்
தனு -புருவத்துக்கும்
முத்துக்கள் -பற்களுக்கும்
கயல்கள் -கண்களுக்கும்
உவமை யாதலால் இவை அனைத்தும் உவமை ஆகு பெயர்கள்

பயன் -வியப்பினால் உள்ள மகிழ்ச்சி

கைக்கிளை அகத்துறை
திருக்குருகூரில் அவதரித்த சந்திரனே இவர் -களங்கம் அற்ற பூர்ண சந்திரன்
அப்ராக்ருதமான தெய்விக நிலை

————

இட்டத்திலும் தம் தம் உள்ளத்திலும் எண்ணிலும் இருப்பின்
கிட்டத்திலும் வலியாரும் உருகுவர் கேணியிலும்
பட்டத்திலும் பைந் தடத்திலும் ஓடைப் பழனத்திலும்
குட்டத்திலும் கயல் பாய் குரு கூரர் குணங்களுக்கே. 81–

இருப்பின் கிட்டத்திலும் வலியாரும்–இரும்புகள் உருக்குகின்ற உருக்குக் கிட்டானைக் காட்டிலும் வலிய நெஞ்சு உடையவரும்
ஓடைப் பழனத்திலும்–ஓடையாகிய பழனம் என்று கொண்டு இரு பெயர் ஒட்டு -நீண்ட வயல் என்ற பொருள் என்றுமாம்
இட்டத்திலும்–கருத்துக்களைச் சொல்லும் இடத்திலும்
பட்டத்திலும்-பட்டக் கால்களிலும் -தண்ணீர் பெருகும் காலத்தில் மட்டுமே ஏறிப் பாய்கிற மேட்டு நிலம்
ஏற்றத் தாழ்வு இல்லாமல் மீன்கள் பாய்தல் போல் ஆழ்வார் குண விசேஷத்தால் அறிந்தவரும் அறியாதவரும் கொடிய நெஞ்சுடையவரும் உருகுவார்கள் அன்றோ

திருக்குருகூர் வளம் பேசும் பாசுரம்
மனம் புத்தி செயல் எல்லாவற்றிலும் இரும்பு போல் வலிய நெஞ்சினாரையும் உருக வைக்கும் அருளிச் செயல்கள்

————

குணம் வேண்டுமே நற் குலம் வேண்டுமே யக்குலத் தொழுக் காம்
பிணம் வேண்டுமே செல்வப் பேய் வேண்டுமே பெருந் தண் வகுள
மணம் வேண்டுந் தண் தெரியல் பெருமான் செய்யுள் மா மணியின்
கணம் வேண்டும் என்றறிவாரைக் கண்டால் சென்று கைத் தொழுமே. 82–

பெருந் தண் வகுள மணம் வேண்டும் –பெரிய குளிர்ந்த மகிழ மலரின் மணம் விரும்பி உறைகின்ற
தண் தெரியல் பெருமான் –குளிர்ந்த மாலையுடைய ஆழ்வாரது
செய்யுள் மா மணியின் கணம் –பாடல்களாகிய இரத்தினைக் கூட்டத்தை
வேண்டும் என்றறிவாரைக் –கற்க வேண்டும் என்று அன்புடன் படித்து அறிந்தவரை
கண்டால் –தர்சித்தால்
குணம் வேண்டுமே –அவர்களுக்கு நற் குணங்கள் வேண்டுமோ -வேண்டாமே
நற் குலம் வேண்டுமே -நல்ல குலமாக இருக்க வேண்டுமோ -வேண்டாமே
யக்குலத் தொழுக் காம்-அக் குலத்துக்கு உரிய நடையாகிய
பிணம் வேண்டுமே –பயன் அற்ற பிணம் போல்வதும் வேண்டுமோ -வேண்டாமே
செல்வப் பேய் வேண்டுமே -பொருளாகிய பிசாசுசம் வேண்டுமோ வேண்டாமே
ஆதலால்
சென்று கைத் தொழுமே–உடனே அருகில் சென்று கை கூப்பி வணங்குங்கள்
திருவாய் மொழியை அன்புடன் படிப்பவர்களைக் கண்டால் அவர்கள் குளம் இத்யாதிகளை பார்க்காமல் உடனே சென்று வணங்குங்கல்

குணம் குலம் ஒழுக்கம் செல்வம் அனைத்தையும் அருளும் ஆழ்வார் அருளிச் செயல்கள்
ஆழ்வார் அருளிச் செயல் அனுபவமே வேண்டும் என்று இருப்பாரே நாடிச் சென்று ஆஸ்ரயித்து உஜ்ஜீவிப்போம்

————-

தொழும் பாக்கிய வினைத் தொல்லைப் பிறவிச் சுழியிடை நின்று
எழும் பாக்கியமுடைத் தாக்கவும் தென்னிய லோடிசைந்து
கெழும் பாக் கெழுமிய கீர்த்தியை நாளும் கிளத்தி யென் நாத்
தழும்பாக்கவும் வல்ல கோ சட கோபன் தயா பரனே. 83–

கோ என்னும் எழுவாய் ஆம் என்னும் ஆக்கத்தைக் கொண்டு முடிந்தது

என்னைப் பிறப்பு அறுத்தான் -அவன் கீர்த்தியையே பாட வைத்து என் நா தழும்பு ஏறச் செய்தான்
மனம் மொழி செயல்கள் வேறே எங்கும் பட்டி மேயாதபடி தனக்கேயாம்படி நல் அருள் செய்தான்
குன்ற மாடத் திருக்குருகூர் நம்பி என்றும் என்னை இகழ்விலன் காண்மினே –

———–

பொருள் -அகப் புறப் பொருள்
திணை –பெரும் திணை
கிளவி –அறத்தொடு நிற்றல்
துறை –செவிலி நல் தாயத்து அறத்தொடு நிற்றல்

நல் தாய்க்கு செவிலி அறத்தொடு நிற்றல்

பரந்தலைக்கும் பொருநைக் குரு கூரென்னில் கண் பனிக்கும்
கரம் தலைக் கொள்ளும் உள்ளும் உருகும் கவியால் உலகைப்
புரந்தலைக்கும் வினை தீர்த்தான் புனை மகிழ் பூவுமன்றி
மரந்தலைக் கொள்ளவும் போது நங்காய் உன் மகள் கருத்தே. 84–

தாமிரபரணி நீர் ஆழ்வார் அருள் கரை கடந்து அலை வீசி ஸகல தாபங்களையும் குளிரச் செய்யுமே –
திருக்குருகூர் பெயர் கேட்ட மாத்ரத்திலே கண்கள் நீர் சொரிந்து உள்ளமும் உடலும் உருகுமே
மகிழ மலரை-மரத்தையே – சூடிக் கொள்ளப் பாரிக்கிறாள்

இப்படி அன்றி -உன் மக்கள் கருத்து இது -என்று வருவித்து முடிக்கவுமாம்

————-

பொருள் -அகப் பொருள்
திணை -உரிப்பொருளாற் பாலை
கிளவி –உடன் போக்கு
துறை -பாங்கி தலைவனை உடன் படுத்தல்

தலைவனை நோக்கித் தோழி தலை மகளை உடன் கொண்டு போகச் சொல்லுதல் –

கருத்தில் கருணை வைத்தேகும் இதுவும் கலை மறையோர்
திருத்திற்று ஒரு மணம் தீரும் தின மயல் நீரின் நிறை
முருத்தின் செருந்து அயலே இவளோடு முயற் கரும்பின்
குருத்தில் பிரசம் வைக்கும் குருகூர் சென்று கூடுமினே. 85–

ஒரு மணம்–பிரமம் -பிராசாபத்தியம் -ஆரிடம் -தெய்வம் –
காந்தர்வம் -அசுரம் இராக்கதம் பைசாசம் போன்ற
எட்டு வகை திருமணங்களில் இது காந்தர்வ மணம் ஆகும்-இவளைக் கைக் கொண்டு செல்வீராக

பாகவத நிஷ்டையில் ஆழ்ந்த –கொண்ட பெண்டிர் உடன் இல் வாழ்க்கையும் மெய்யுணர்வைத் தரும் –
அது ஆழ்வார் திருவடி பலத்தால் உண்டாகும்
நீரின் நிறை என்பதை ஒழுக்கத்தின் நிறை -கற்புடைமை -இரட்டுற மொழிதலாகும்
இல் வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நிறை துணை
ஆழ்வார் திருவடி சம்பந்திகள் கைங்கர்ய ஸ்ரீ யில் ஈடுபடுத்தி உய்யச் செய்யும்
ஆழ்வார் அடியார்களான தேன் கிடைத்து அந்தமில் பேர் இன்ப பெரு வீட்டு இன்பமும் பெறப் பெறுவீர்

———–

கூட்டங்கள் தோறும் குருகைப் பிரான் குணம் கூறுமன்பர்
ஈட்டங்கள் தோறும் இருக்கப் பெற்றேம் இருந்து எம்முடைய
நாட்டங்கள் தோறும் புனல் வந்து நாலப் பெற்றேம் இனி மேல்
வீட்டு எங்கள் தோழர்க்கு என்றே பெரும் போகம் விளைகின்றதே. 86–

குணம் -ஆழ்வார் அடியார்களின் -ஸ்வரூப ரூப சேஷ்டிதங்களுக்கும் உப லக்ஷணம்
நாட்டம் -ஆழ்வார் ஆச்சார்யர்கள் தனியன்கள் வாழித் திரு நாமங்கள் சொல்லி ஆனந்த அனுபவ பரிவாஹம்
ஆழ்வாரை அனுபவிக்கும் கூட்டங்களில் அனுபவ கண்ணீர் பெருகி ஓடக்கண்ட இந்த பேறு வீட்டின்பத்தையும் உறுதி செய்யுமே

————–

பொருள் -அகப் பொருள்
திணை –குறிஞ்சி
கிளவி –வரைவு முடுக்கம்
துறை –தினையொடு வெறுத்து வரைவு கடாதல்

பகல் குறியில் தலைமகனுடன் தலை மகளைச் சேர்த்து வைத்த தோழி
பின்பு தலைவன் சிறைப் புறமாக அவன் செவிப்படுமாறு தினையோடே வெறுத்து வரைவு கடாதல்

விளையா தொழிய மருந்தும் உண்டே எம் விளை தினையின்
கிளையாக் கிளர விளைகின்றதால் கிளையாம் பிறவித்
தளை யாசழியத் தடுத்துத் தென் பாலை வழி தடுத்துக்
களை ஆசறத் தடுத் தாண்டான் குருகையின் கார்ப் புனமே. 87–

தென் பாலை வழி -யமபுரத்துக்குச் செல்லும் கொடிய வழி-கார்ப் புனமே–பெரிய தினைக் கொல்லையே
இங்குள்ள தினைப்புனமே எங்கள் வினைகளை அகற்ற வல்லதாய் இருக்குமே-

———–

தலைவன் வரும் புனல் கண்டு வருந்துதல் –

புனம் பாழ் படுத்துப் புகழ் பாழ் படுத்தல்லால் புகுந்தென்
மனம் பாழ் படுத்தனை வாழ்தி யன்றே வழுவா நரகத்
தினம் பாழ் படுத்த பிரான் சட கோபன் இன்னாக் கலியின்
சினம் பாழ் படுத்த நின்றான் குன்று சூழ்கின்ற செந்தினையே. 88–

முற்றிய விளைவை உடையவர் கொண்டு போனார்கள் -வெறும் கட்டையாக நீ அழிய வேண்டியது தான்
ஆழ்வார் திருவடி சம்பந்தத்தாலும் அருளிச் செயல்களின் உணர்வினாலும் வினை விளைவுகள் எல்லாமே அறுபட்டுப் போய் உடல் அழிந்து ஆத்மா உஜ்ஜீவனம் அடைவதைக் காட்டும்
புனம் பாழ் படுத்து என்று மறு பிறப்பு இல்லை என்றது
மனம் பாழ் படுத்தது என்றது உலக நினைவுக்கு சற்றும் இடம் இன்றிக்கே நெஞ்சு நிறையப் புகுந்தான்

திருமால் இருஞ்சோலை என்றேன் திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் போலவே –
இங்கு புனம் என்றது வினை விளையும் இடமான உடலைச் சொன்னவாறு
ஏவினார் கலியார் நலிக என் தன் மேல் எங்கனே வாழுமாறு
ஐவர் கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல் வண்ணா -பெரிய திருமொழி -1-6-8-
நின்றான் குன்று -அசலம் -உறுதியைச் சொன்னவாறு
எவ்வளவு தடைகள் இருந்தாலும் சலியாமல் கரை ஏற்றியே தீருவான்
கதிரும் இல்லாமல் என் தலைவியும் இல்லாமல் நீ பாழாகி விட்டாய் தினைப்புனமே -இனி நீ வாழ மாட்டாய் –

———-

பொருள் –அகப் புறப் பொருள்
திணை –பெரும் திணை
துறை -மையுறு கண்ணி கையற வெய்தக் கண்ட தோழி யுட்க்கொண்டு புலம்புதல்

பிரிவு ஆற்றாத தலைவி அன்றிலின் குரல் கேட்டு அயர்தல்–

தினை ஒன்றிய குற்றம் அற்றுணர்ந்தோர் மகிழின் திறத்தின்
மனை ஒன்றிய கொடியாள் துயின்றாலும் தன் வாய் அடங்கா
வினை ஒன்றிய அன்றிலுக்கு இடம் காட்ட விரிதலைய
பனை யன்றியும் உளதோ தமியேற்குப் பழம் பகையே. 89–

தினை -மிகச் சிறிய –பனை -மிகப் பெரிய-கூவி என்னை நலியும் அன்றில் பறவைகளுக்கு இடம் கொடுக்கும் பனை அன்றோ
அன்றில் -பனை -மகிழ மலர் -இவை எல்லாம் காம உத்தீபனம் அன்றோ

————

பொருள் –அகப் பொருள்
திணை –குறிஞ்சி
கிளவி -பிரிவுழிக் கலங்கல்
துறை -கண் படை பெறாது கங்குல் நோதல்

பகையாய் வருகின்ற மூன்றையும் வேரினோடும் பறித்து
வகையாய் வருவன யாவையும் மாற்றி இவ் வையமுய்யத்
தொகை யாயிரங்கவி சொன்னோன் பெயர் சொல்லச் சூழ் பனியின்
புகையாம் இருள் பின்னை எந்நாள் கழியப் புகுகின்றதே. 90–

மூன்றையும் வேரினோடும் பறித்து–காமம் வெகுளி மயக்கம் -முக்குறும்பையும் ச வாசனமாகப் போக்கி அருளி
வகையாய் வருவன யாவையும் மாற்றி--ஆகாமிய சஞ்சித பிராரப்த கர்மங்கள் எல்லாவற்றையும் போக்கி அருளி

ஆழ்வார் திரு நாமம் -சடகோபன் -ஸக்ருத் உச்சாரணம் -ஒன்றே வினைகளைப் பாற்றி
முக் குறும்புகளையும் அறுத்து தாபத் த்ரயங்களையும் போக்கி அருளும்
சங்கீர்த்திய நாராயண ஸப்த மாத்ரம் விமுக்த துக்காஸ் ஸூ கினோ பவந்து –
மீண்டும் தீ வினைகள் புகா வண்ணம் அருளும்
காலே பொதத் திரிந்து கத்துவராம் இன நாள் மாலார் குடி புகுந்தார் என் மனத்தே -பெரிய திருவந்தாதி -22-
வினைகாள் உமக்கு இனி வேறு இடம் தேட வேண்டும் –பிள்ளை அந்தாதி –

————

பொருள் -அகப் பொருள்
திணை –உரிப்பொருளால் நெய்தல்
கிளவி –வரைவு கடாதல்
துறை –தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி செப்புதல்

பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு பாங்கி இரங்குதல்

பருகின்றது இருள் போகின்றது வண்ணம் பூவை கண்ணீர்
உருகின்ற தென்று உயிர் ஓய்கின்றதால் உலகு ஏழுமுய்யத்
தொகுகின்ற ஆயிரம் சொன்னோன் குருகைச் சொல்லால் விளங்கத்
தகுகின்றனர் அல்லர் மேன் மேலும் காதல் தருமவரே. 91–

தலைவன் ஒரு புறமாக வரும் பொழுது அறியாதவள் பொல்லாத தலைவியின் விஸ்லேஷ விரஹ தாபத்தைத்
தோழி சொல்லுவதால் தலைவன் கேட்டு விரைந்து வருவான் ஆதலால் வரைவு கடாதல் கிளவியும் துறையும் ஆயிற்று

————-

தருமமும் காமமும் தாவில் அரும் பொருளுந் தணவாக்
கருமமும் ஆகிய காரணம் கண்ட அக் காரணத்தின்
பெருமையும் மாயப் பிணக்கும் தவிர்ந்துறு பேதம் செய்யம்
இருமையும் தீர்ந்த பிரான் சட கோபன் தன் இன்னருளே. 92–

இருமையும் தீர்ந்த பிரான்--யானே என் தனதே என்று இருந்த அஹங்கார மமகாரங்களைப் போக்கி அருளிய ஆழ்வார்
தாவில் அரும் பொருள் –கெடாத அரிய செல்வமான பரம புருஷார்த்தம்
யான் எனது என்னும் செருக்கு அறுந்தாலே வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகுவோமே

கைங்கர்ய ரூபமாகவே கர்மங்களை செய்யவே பிறவி சக்கரம் ஒழியும் என்கிறார்

சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –1-5-10-

————–

பொருள் –அகப் புறப் பொருள்
திணை –பெரும் திணை
துறை -இரவு உறு துயர இகுளைக் கூறல்

இருளுக்கு ஆற்றாத தலைவியைக் குறித்துத் தோழி இரங்குதல் –

அருளில் சில மகிழா யிழைக்கு ஈவர் கொல் அந்தி வந்த
இருளில் பிறிது துயரும் உண்டோ இயலோடு இசையின்
பொருளில் சிறந்த அலங்கார வல்லியின் போக்கில் உள்ளம்
தெருளின் கரும்பு ஒக்கும் ஆயிரம் பாப் பண்டு செய்தவரே. 93–

கரும்பு ஒக்கும்–கரும்பு போல் இனியது என்னாமல்-ஆழ்வார் அருளிச் செயல்கள் போல் கரும்பு இனியது என்கிறார்

ஆயிழை –வினைத் தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
துயரைச் செய்கின்ற இருளைத் துயர் என்றது குறிப்பு மொழி

————-

அவரே அயற்கும் அரற்கும் அல்லா அமரர்க்கும் எல்லாம்
பவரே கை யுற்று என் பணி கொள்ளுமோ படர் நீரின் இட்ட
நவ ரேகை யுட் கொள்ளச் செய்ததல்லால் நம்பி மாறனைப் போல்
எவரே திரு வாயிரம் மோக்க மாலை இசைத்தவரே. 94–

மோக்க மாலை–மோக்ஷ மாலை -திருவாய் மொழிக்கு திருநாமம் சாத்தி அருளுகிறார்

—————

தவம் செய்வதும் தழல் வேள்வி முடிப்பதும் தம்மை ஒறுத்து
எவன் செய்யும் மெய்யன் குருகைப் பிரான் எம்மை இன்னம்ஒரு
பவம் செய்கை மாற்றிய பண்டிதன் வண் தமிழ்ப் பாவம் உண்டே
அவம் செய்கை மாற்றச் செவி யுண்டு நா வுண்டு அறிவுமுண்டே. 95–

அருளிச் செய்சல்களைக் காதாலே கேட்பதுவும் -நாவால் பாடுவதும் -பொருள் அறிந்து இயங்கவதும் விட
வேறே சிறந்த தபஸ் உண்டோ

————

பொருள் –அகப் பொருள்
திணை –நெய்தல்
கிளவி –இடந்தலைப்பாடு
துறை -புகழ்தல்

தலைவன் தலைவியின் நோக்கினாலாய வருத்தம் கூறுதல்

உண்டாட் டியலும் திருமால் உருவை உயர்த் துலகைத்
தொண்டாட்டிய வந்து தோன்றிய தோன்றல் துறைக் குருகூர்
நண்டாட்டிய நங்கை நாட்டங் களால் இந்த நாட்டை யெல்லாம்
திண்டாட்டிய கண்கள் போல் செய்யுமோ கயல் தீங்குகளே. 96–

உண்டாட் டியலும்–மகிழ்ச்சி கொண்டு திருக் கூத்துக்கள் மூன்றினையும் செய்து அருளிய
அல்லியம் –மல் –குடம் -என்னும் மூன்று திருக் கூத்துக்கள்
அல்லியம் -குவலயாபீடத்தின் தந்தங்களை முறித்த பொழுது ஆடிய கூத்து
மல் ஆடல் -மல்லர்களை முடித்து ஆடியது
குடம் -வாணாசுரனை வென்ற மகிழ்ச்சியால் தெருவில் குடக் கூத்து ஆடியது
இவை மூன்றும் புறக் கூத்துக்கள் –

திருமாலுக்கு அடிமை
பரத்வத்தில் விஷ்வக் சேனராக
இங்கு நம்மாழ்வாராக
ஆஸ்ரிதர்களுக்கு பரமாச்சார்யராக
திருச்செங்கண் -இத்தையே பெயராக திருச் செங்கணித்துறை
இங்கு துள்ளும் கயல்களும்  தன் பால் ஆதரம் வைக்கும் கமலச் செங்கண் அழகு அன்றோ

———–

பொருள் -அகப் புறப் பொருள்
திணை –பெரும் திணை
துறை -மாலை பெறாது வருந்திய தலைவி காதல் கைம்மிக்கு கையற யுரைத்தல்

பிரிவு ஆற்றாது வருந்தும் தலைவி இரங்கல் –

தீயைக் கிழித்தொரு திங்கள் கொழுந்தெனச் செய்த தல்லால்
பேயைக் கிழித்தென அன்றில் பனை பிளவார் உளவாம்
நோயைக் கிழிக்கும் வகுள் நல்கார் இந்த நுண் பிறவி
மாயைக் கிழியைக் கிழித்தெம்மை வாங்கிட வல்லவரே. 97–

காம நோய் கொண்டாருக்கு நிலவு வெயில் போல் சுடுமாதலால் தீ என்கிறார்
பேய்க்கு பனை மரத்தை உவமித்தார்
கரு நெடும் பனங்காடு முழுமையும் காலும் கையும் யுடையன போல்வன -கலிங்கத்துப் பரணி
மெய்ப்பாடு -அழுகை
பயன் -ஆற்றாமை நீங்குதல்

புலி புண்டரீகம் தாமரை லஷித லஷணம்

————

இதுவும் அது-பொருளும் திணையும் துறையும் கீழ் பாசுரம் போலவே –

வல்லம் புலி முக வாயில் கரும்பின் மறு பிறப்பைக்
கொல்லம் புலியோர் வகுளம் கொடார் கொடுங்கோகு தட்டிச்
சல்லம் புலி யிட்டெதிரிடப் பாய்வது தாயென்றிங்கோர்
இல்லம் புலியும் உண்டு அம்புலி மீள எழுகின்றதே. 98–

கொடுங்கோகு தட்டி -வளைந்த தோள்களைத் தட்டிக் கொண்டு
சல்லம் புலி யிட்டு -முள்ளம்பன்றி போல் ஒத்து

தாயைப் புலி என்று அதற்கு ஏற்பப் பாய்கின்றது என்றதனால் உருவக அணி
விரஹம் கொண்டு கலங்கி விழுதலால் தாய் புலி போல் பாய்கின்றாள் எனவும்
அவள் வார்த்தை முள்ளம்பன்றி யுடைய முள் போல் தைக்கின்றது எனவும்
சந்திரனது நிலவைக் கண்டு அதுவும் விரஹத்தை அதிகரித்தலால் அதுவும் தோன்றிற்று என்று வருந்திக் கூறுகிறாள் –

———–

எழுதிய நாளும் வினையும் தொகுத்தெம்மை இப்பிறவிப்
புழுதியில் நாற்றிட்டு வைப்பரிதால் புகழ் மெய்ப் புலவோர்
தொழுதியல் நாயகன் ஓதும் கனல் துறை நீர்ப் பொருநை
வழுதி நன்னாடன் திருவாய் மொழி எம் மனத்தனவே. 99–

நாற்று இட்டு நெல் பயன் கொள்ளுவது போல்
திருவாய் மொழி எனது மனத்தில் இருப்பதால் இப் பிறப்பால் இன்னும் வினைகளைச் சேர்க்க முடியாதே

திருவாய் மொழி அனுசந்தானம் என்னுள் நிறைந்து உள்ளதால் பிரமன் என்னை மீண்டும் படைக்க வல்லன் அல்லன் என்கிறார்

—————-

மனையும் பெருஞ் செல்வமும் மக்களும் மற்றை வாழ்வும் தன்னை
நினையும் பதம் என நின்ற பிரான் குருகூர் நிமலன்
புனையும் தமிழ்க் கவியால் இருள் நீங்கிப் பொருள்விளங்கி
வினையும் திரி வுற்றன குற்றம் நீங்கின வேதங்கள். 100–

மனை பெரும் செல்வம் வாழ்வு பசு பத்னி சுதன் ஆலயம் -சர்வமும் ஆழ்வாரே-மற்றை வாழ்வு -சுற்றத்தார் சேர்க்கை -எண் வகைப் போகம் தசாங்கம் போல்வன
மாதா பிதா யுவதியை தனய விபூதி -எல்லாம் எனக்கும் எனது சந்ததியாருக்கும் ஆழ்வாரே -ஆளவந்தார்

——–

மன்றே புகழும் திரு வழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுர கவிப் பெருமாள் தென் தமிழ் தொடையில்
ஒன்றே பதிகம் யுரைத்தவன் பொன்னடி உற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே

மன்றே புகழும் மாறனை
மன்றே புகழும் மதுர கவிப் பெருமாள்
மன்றே புகழும் தென் தமிழ் தொடையில் ஒன்றே பதிகம்
மன்றே புகழும் பதிகம் யுரைத்தவன் பொன்னடி
மன்றே புகழும் திரு வழுந்தூர் வள்ளல்
மாறனை முன் சென்றே மதுர கவிப் பெருமாள் –சாஷாத்தாக அனுபவிக்கப் பெற்றார் –முன் சென்று –
அவர் பொன்னடி உற்று நின்ற திரு வழுந்தூர் வள்ளல்
இவர் இடம் செய்த பிரபத்தி பலனாகவே உதித்த இப் பிரபந்தம் என்றபடி

கம்பன் பிறந்தவூர் காவேரி தங்குமூர்
கும்ப முனி சாபம் குலைந்தவூர் -செம் பதுமத்து
தாதகத்து நான் முகனும் தந்தையும் காணா நான் மறையை
ஓதுவித்து வாழும் அழுந்தூர்

இவர் காளி தேவிக்கு அடிமை செய்தவர் ஆதலால் அவளையே பந்தம் பிடிக்கச் சொல்லி கம்ப ராமாயணம் இயற்றினார்
ஒற்றியூர் காக்க யுறைகின்ற காளியே
வெற்றியூர் காகுத்தன் மெய்ச்சரிதை பற்றியே
நந்தன எழுதுதற்கு நல்லிரவில் மாணாக்கர்
பிந்தாமல் பந்தம் பிடி

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-91-100- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

August 5, 2021

பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு பாங்கி இரங்குதல்

பருகின்றது இருள் போகின்றது வண்ணம் பூவை கண்ணீர்
உருகின்ற தென்று உயிர் ஓய்கின்றதால் உலகு ஏழுமுய்யத்
தொகுகின்ற ஆயிரம் சொன்னோன் குருகைச் சொல்லால் விளங்கத்
தகுகின்றனர் அல்லர் மேன் மேலும் காதல் தருமவரே. 91–

பருகின்றது இருள் -இருட்டோ வந்து நிறைகின்றது
போகின்றது வண்ணம் பூவை -இவளது நல்ல நிறமோ நீங்குகின்றதே
கண்ணீர் உருகின்றது -கண்ண நீரும் பெருகுகின்றதே
தென்று உயிர் ஓய்கின்றதால்-இக் காரணங்களால் எனது உயிர் சோர்வடைகின்றது
மேன் மேலும் காதல் தருமவரே–அபிநிவேசத்தை வளர்த்து அருளும் அவரே
உலகு ஏழுமுய்யத் தொகுகின்ற ஆயிரம் சொன்னோன்–தொண்டர்க்கு அமுதால அருளிச் செய்த ஆழ்வார்
குருகைச் சொல்லால் விளங்கத் தகுகின்றனர் அல்லர் -கீர்த்தியால் விளங்கத் தக்கவர் அல்லர்

இன்னமும் பூர்ண கடாக்ஷம் பெறாத குறையால் அலற்றுகிறார்

———

தருமமும் காமமும் தாவில் அரும் பொருளுந் தணவாக்
கருமமும் ஆகிய காரணம் கண்ட அக் காரணத்தின்
பெருமையும் மாயப் பிணக்கும் தவிர்ந்துறு பேதம் செய்யம்
இருமையும் தீர்ந்த பிரான் சட கோபன் தன் இன்னருளே. 92–

தருமமும் காமமும் தாவில் அரும் பொருளும் -தர்மம் அர்த்தம் காமம்
தணவாக் கருமமும் ஆகிய -அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமும்
காரணம் கண்ட அக் காரணத்தின்–அந்த பர ப்ரஹ்மம் போலவே
பெருமையும் மாயப் பிணக்கும் தவிர்ந்து–அனைத்திலும் பெரிய மஹா மாயை என்னும்
பிரகிருதி சம்பந்தமும் அதனால் வரும் மாறுபாடும் இல்லாமல்
உறு பேதம் செய்யம் இருமையும் தீர்ந்த –இருவித கர்மங்களையும் தொடரப் பெறாத
பிரான் சட கோபன் தன் இன்னருளே.–ஆழ்வாரது பரம காருண்யமே காரணம் –
இவை பத்தும் வல்லார் உலகில் எனது பெரும் செல்வராய்த் திருமால் அடியார்களை பூசிக்க நோற்றார்களே

———–

இருளுக்கு ஆற்றாத தலைவியைக் குறித்துத் தோழி இரங்குதல் –

அருளில் சில மகிழா யிழைக்கு ஈவர் கொல் அந்தி வந்த
இருளில் பிறிது துயரும் உண்டோ இயலோடு இசையின்
பொருளில் சிறந்த அலங்கார வல்லியின் போக்கில் உள்ளம்
தெருளின் கரும்பு ஒக்கும் ஆயிரம் பாப் பண்டு செய்தவரே. 93–

இயலோடு இசையின் பொருளில் சிறந்த -இயல் தமிழ் பொருள் அமைதியிலும் இசைத்தமிழ் பொருள் அமைதியிலும் சிறப்புற்ற
குருகையர் கோன் யாழினிசை வேதத்து இயல் –
அலங்கார வல்லியின் -அலங்காரங்கள் அமைந்த பூங்கொடி போலும் படி
கடவல்லி ப்ரஹ்ம வல்லி ஆனந்த வல்லி போல் அலங்கார வல்லி
போக்கில் உள்ளம் தெருளின் கரும்பு ஒக்கும் ஆயிரம் பாப் பண்டு செய்தவரே. –நம்மாழ்வார்
ஆயிழைக்கு —ஆழ்வார் திரு உள்ளம் மகிழும்படி ஆத்ம குணம் நிறைந்த தலை மகளுக்கு –
அருளில் சில மகிழா ஈவர் கொல் -கருணையால் மகிழம் பூவைத் தந்து அருளுவாரோ –
அந்தி வந்த இருளில் பிறிது துயரும் உண்டோ -மாலைப் பொழுதில் இருள் போல் வேறே ஓன்று உண்டோ -இல்லை என்றபடி –

———-

அவரே அயற்கும் அரற்கும் அல்லா அமரர்க்கும் எல்லாம்
பவரே கை யுற்று என் பணி கொள்ளுமோ படர் நீரின் இட்ட
நவ ரேகை யுட் கொள்ளச் செய்ததல்லால் நம்பி மாறனைப் போல்
எவரே திரு வாயிரம் மோக்க மாலை இசைத்தவரே. 94–

அயற்கும் அரற்கும் அல்லா அமரர்க்கும் எல்லாம்-ப்ரஹ்மாதிகளுக்கும் மற்ற தேவர்களுக்கும்
பவரே கை யுற்று என் -பிறப்பு வகை நேர்ந்து என்ன பயன்
படர் நீரின் இட்ட நவ ரேகை யுட் கொள்ளச் செய்ததல்லால் -நீரில் மேல் எடுத்திய புது எழுத்துக்கள் போல்
நிலை இல்லாத பிரபஞ்ச விஷயங்களை மனம் கொள்ளும்படி செய்தது அல்லால்
பணி கொள்ளுமோ -நித்ய கைங்கர்யம் செய்தலைப் பெறுமோ
அவர் எவரே -அவர்களில் எவர் தாம்
நம்பி மாறனைப் போல் திரு வாயிரம் மோக்க மாலை இசைத்தவரே-நம்மாழ்வார் போல்
மோக்ஷ ஸாஸ்த்ரம் அருளிச் செய்தவர் யாரும் இல்லையே –

———-

தவம் செய்வதும் தழல் வேள்வி முடிப்பதும் தம்மை ஒறுத்து
எவன் செய்யும் மெய்யன் குருகைப் பிரான் எம்மை இன்னம்ஒரு
பவம் செய்கை மாற்றிய பண்டிதன் வண் தமிழ்ப் பாவம் உண்டே
அவம் செய்கை மாற்றச் செவி யுண்டு நா வுண்டு அறிவுமுண்டே. 95–

தம்மை ஒறுத்து-தங்களை வருத்தி
தவம் செய்வதும்
தழல் வேள்வி முடிப்பதும்
எவன் செய்யும் -இது நல்ல பயனைக் கொடுக்கும்
அவம் செய்கை மாற்றச்–கொடிய கர்மங்களை ஒழிக்க
மெய்யன் குருகைப் பிரான் -உண்மைப் பொருளை உண்மையாக அறிந்த ஆழ்வார்
எம்மை இன்னம் ஒரு பவம் செய்கை மாற்றிய பண்டிதன் -இனி சம்சாரத்தில் இருக்க ஒட்டாமல் இருக்க
வண் தமிழ்ப் பாவம் உண்டே-திவ்ய ப்ரபந்தகளும் இருக்கின்றனவே
செவி யுண்டு நா வுண்டு அறிவுமுண்டே. –காதுகளும் நாக்கும் அர்த்த பஞ்சகம் அறிய அறிவும் உண்டே –

நா வாயில் உண்டே நமோ நாரணா என்று ஓவாது உரைக்கும் உறையுண்டு
மூவாத மாக்கதிக் கண் செல்லும் வகை யுண்டே என் ஒருவன்
தீக்கதிக் கண் செல்லும் திறம் –பொய்கையார்

———-

தலைவன் தலைவியின் நோக்கினாலாய வருத்தம் கூறுதல் –

உண்டாட் டியலும் திருமால் உருவை உயர்த் துலகைத்
தொண்டாட்டிய வந்து தோன்றிய தோன்றல் துறைக் குருகூர்
நண்டாட்டிய நங்கை நாட்டங் களால் இந்த நாட்டை யெல்லாம்
திண்டாட்டிய கண்கள் போல் செய்யுமோ கயல் தீங்குகளே. 96–

உண்டாட் டியலும் திருமால் –திரு விளையாடல்களை யுடைய ஸ்ரீ யபதி யுடைய –
அலகிலா விளையாட்டுடைய தலைவருடைய
அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே
உருவை -திவ்ய மங்கள விக்ரஹங்களை
உயர்த்து-மோக்ஷ சாதனம் என்று வெளியிட்டு அருளி
உலகைத் தொண்டாட்டிய -கைங்கர்யங்களிலே உலகோரை மூட்ட
வந்து தோன்றிய தோன்றல் -திரு அவதரித்த ஆழ்வார்
துறைக் குருகூர்-திருச்சங்கு அணித் துறையிலே
நண்டாட்டிய நங்கை -திருக்கை வளையல்களை ஓசை எழுப்பி வரும் இவளது
நாட்டங் களால் இந்த நாட்டை யெல்லாம் திண்டாட்டிய கண்கள் போல் -திருக்கண்கள் போல் –
ஞான விசேஷங்களையே திருக்கண்கள் என்பரே
செய்யுமோ கயல் தீங்குகளே.-கயல் மீன்கள் வருந்தச் செய்ய வல்லவே –

———-

பிரிவு ஆற்றாது வருந்தும் தலைவி இரங்கல் –

தீயைக் கிழித்தொரு திங்கள் கொழுந்தெனச் செய்த தல்லால்
பேயைக் கிழித்தென அன்றில் பனை பிளவார் உளவாம்
நோயைக் கிழிக்கும் வகுள் நல்கார் இந்த நுண் பிறவி
மாயைக் கிழியைக் கிழித்தெம்மை வாங்கிட வல்லவரே. 97–

இந்த நுண் பிறவி-இந்த எளிய பிறப்பாகிய
மாயைக் கிழியைக்-மாயா ரூபமான ஆடை எமது உயிரைப் போர்த்து உள்ளதை
கிழித்தெம்மை வாங்கிட வல்லவரே–திருவடிகளில் சேர்த்துக் கொள்ள வல்ல ஆழ்வார்
தீயைக் கிழித்தொரு திங்கள் கொழுந்தெனச் செய்த தல்லால்-நெருப்பைப் பிளந்து ஒரு பிறைச்சந்திரனாக செய்தது அல்லாமல்
அன்றில் பனை-அன்றில் பறவைக்கு இடம் கொடுக்கும் பனை மரத்தை
பேயைக் கிழித்தென பிளவார்-பேயைக் கிழிப்பது போல் பிளந்தார் இல்லையே
உளவாம் நோயைக் கிழிக்கும் வகுளம் நல்கார் -பிரேம நோயைப் போக்கும் மகிழம் பூ மாலையையும் தர மாட்டார்

——–

இதுவும் அது –

வல்லம் புலி முக வாயில் கரும்பின் மறு பிறப்பைக்
கொல்லம் புலியோர் வகுளம் கொடார் கொடுங்கோகு கட்டிச்
சல்லம் புலி யிட்டெதிரிடப் பாய்வது தாயென்றிங்கோர்
இல்லம் புலியும் உண்டு அம்புலி மீள எழுகின்றதே. 98–

அம் புலி முக -நீரில் பொருந்திய தாமரை திரு முகத்தில் உள்ள
வாயில் கரும்பின் -திருவாய் மொழியாகிய அம்ருதம் கொண்டு
வல் மறு பிறப்பைக்-விரைவிலே மறு பிறப்பை ஒழித்திட்ட
அம்புலி -அழகிய ஸிம்ஹம் போன்ற ஆழ்வார்
யோர் வகுளம் கொடார்- அத்விதீயமான மகிழம் பூ கொடுக்க மாட்டார்
கொடுங்கோகு உகட்டிச்-கொடுமையான முறை கேடு தலைக்கு ஏறி -அக்கிரமம் விஞ்சி
சல்லம் புலி யிட்டெதிரிடப் பாய்வது –முள்ளம் பன்றி போல் எதிர்த்துப் பாய்வதாகிய
தாயென்றிங்கோர் இல்லம் புலியும்-வீட்டுப்புலியும்
இங்கு உண்டு -இவ்விடத்தில் என்னை வருத்திக் கொண்டு உள்ளது
இதற்கும் மேல்
கொல்லம் புலி மீள எழுகின்றதே–வானத்திலும் ஓர் அம்புலி என்னை வறுத்த மீள தோன்றுகிறது
சந்த்ர உதயம் அலாப தசையில் விவேகமும் பாதகமான படி –

———

எழுதிய நாளும் வினையும் தொகுத்தெம்மை இப்பிறவிப்
புழுதியில் நாற்றிட்டு வைப்பரிதால் புகழ் மெய்ப் புலவோர்
தொழுதியல் நாயகன் ஓதும் கனல் துறை நீர்ப் பொருநை
வழுதி நன்னாடன் திருவாய் மொழி எம் மனத்தனவே. 99–

புகழ் மெய்ப் புலவோர்-தத்வ ஞானிகள்
தொழுதியல் –வணங்கி அடியார்களாகி
நாயகன் -தலைவன் -ப்ரபந்ந ஜன கூடஸ்தர்
ஓதும் கனல் துறை நீர்ப் பொருநை வழுதி நன்னாடன் –அக்னி கார்யம் விடாத நீர் வளம் மிக்க
திருக்குருகூரிலே திரு அவதரித்த ஆழ்வார் அருளிச் செய்த
திருவாய் மொழி எம் மனத்தனவே.–திருவாய் மொழியை மனத்திலே நிலை கொண்டு
ஆதலால்
எழுதிய நாளும் வினையும் தொகுத்தெம்மை இப்பிறவிப்
புழுதியில் நாற்றிட்டு வைப்பரிதால் -பிரமன் எழுதிய ஆயுஸ்ஸூ காலமும்
அநாதி கால கர்மங்களும் அடியேனை பிறவிச் சூழலில் சிக்க வைக்க மாட்டாவே
ஏதமிழ் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாறே
இப்பத்து அரு வினை நீறு செய்யுமே

———

மனையும் பெருஞ் செல்வமும் மக்களும் மற்றை வாழ்வும் தன்னை
நினையும் பதம் என நின்ற பிரான் குருகூர் நிமலன்
புனையும் தமிழ்க் கவியால் இருள் நீங்கிப் பொருள் விளங்கி
வினையும் திரி வுற்றன குற்றம் நீங்கின வேதங்கள். 100–

மனையும் பெருஞ் செல்வமும் மக்களும் மற்றை வாழ்வும் தன்னை-ஆகிய இவை எல்லாம்
நினையும் பதம் என -ஆழ்வாரை நினைக்கும் அது ஒன்றே ஆகும்
நின்ற பிரான் குருகூர் நிமலன்-ப்ரபந்ந ஜன கூடஸ்தராக நிற்கும் ஆழ்வார்
புனையும் தமிழ்க் கவியால் இருள் நீங்கிப் -அஞ்ஞான அந்தகாரங்களைப் போக்கும் படியாகவும்
பொருள் விளங்கி-யதார்த்த தத்வ அர்த்தங்கள் விளங்கும் படியாகவும்
வினையும் திரி வுற்றன -கர்ம சமூகங்களும் அழியும் படியாகவும்
குற்றம் நீங்கின வேதங்கள்.-தெளியாத மறை நிலங்கையும் தெளியும் படியாகவும் அமைந்தனவே –

சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும்
மீலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவாரே

மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேன மத அந்வயாநாம்
ஆத்யஸ்யன குல பதேர் வகுளாபிராமம் ஸ்ரீ மத் தத் அங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா –

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இன் நீண் நிலத்தோர்
அறி தர நின்ற இராமானுசன்

———

மன்றே புகழும் திரு வழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுர கவிப் பெருமாள் தென் தமிழ் தொடையில்
ஒன்றே பதிகம் யுரைத்தவன் பொன்னடி உற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே –

இது திரு நாமப்பாட்டு –
மார்க்க தர்ஸீ மஹ ரிஷி –
இப்பாடலைப் பாடினவர்களும் ஓதினவர்களும் ஆழ்வாரது
பொன்னடி பேற்றைப் பெறுவார் என்று பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-81-90- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

August 5, 2021

இட்டத்திலும் தம் தம் உள்ளத்திலும் எண்ணிலும் இருப்பின்
கிட்டத்திலும் வலியாரும் உருகுவர் கேணியிலும்
பட்டத்திலும் பைந் தடத்திலும் ஓடைப் பழனத்திலும்
குட்டத்திலும் கயல் பாய் குரு கூரர் குணங்களுக்கே. 81–

கேணியிலும்-கிணறுகளிலும்
பட்டத்திலும்-பெருக்குக் காலத்தில் நீர் ஏறிப் பாயும் பட்டக் கால்களிலும்
பைந் தடத்திலும் -பசுமையான தடாகங்களிலும்
ஓடைப் பழனத்திலும்-நீரோடை சூழ்ந்த வயல்களிலும்
குட்டத்திலும் -ஆழமான குட்டை களிலும்
கயல் பாய் -நீர் வளத்தால் கயல் மீன்கள் பாய்ந்து குதிக்கப் பெற்ற
குரு கூரர் குணங்களுக்கே. -நம்மாழ்வாருடைய கல்யாண குணங்களுக்காகவே
இருப்பின் கிட்டத்திலும் வலியாரும்-இரும்பு உருக்கிய உருக்குக் கிட்டத்தை விட வலிய கல் நெஞ்சு உடையவரும்
இட்டத்திலும் தம் தம் உள்ளத்திலும் எண்ணிலும் உருகுவர் -தம் தம்முடைய மனம் புத்தி சித்தம் என்னும்
அகக் கரணங்களில் கரைவார்கள் –

இரும்பு போல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம்
இரும்பாகில் அக்னியாலே நிமிர்த்துக் கொள்ளலாம்
இது ஒருபடியாலும் திருத்த ஒண்ணாது என்கை

கடின ஸ்தலத்தில் வர்ஷித்தால் காடின்யம் அடங்க நெகிழிச்சிக்கு -உறுப்பு ஆமாப் போலே
விஷயாந்தரத்தாலே மனஸூ அதி கடினமானாலும் சிதிலமாம்படி வயிர உருக்காய் இறே
பகவத் ப்ரபாவம் இருப்பது –

ஆழ்வாரது திரு அருள் பெருக்கால் -இடையறாத நீர்ப்பெருக்கால் மேடு பள்ளம் வாசி இன்றி
எங்கும் ஒக்கக் கயல் பாய்தல் போலே
வலிய நெஞ்சினாரும் மெல் நெஞ்சினாரும் வாசி அற உருகுவார்களே –

———

குணம் வேண்டுமே நற் குலம் வேண்டுமே யக்குலத் தொழுக் காம்
பிணம் வேண்டுமே செல்வப் பேய் வேண்டுமே பெருந் தண் வகுள
மணம் வேண்டுந் தண் தெரியல் பெருமான் செய்யுள் மா மணியின்
கணம் வேண்டும் என்றறிவாரைக் கண்டால் சென்று கைத் தொழுமே. 82–

பெருந் தண் வகுள மணம் வேண்டும் –மகிழ மலர்களின் வாசனை -அனைவராலும் விரும்பப்படுகிற
தண் தெரியல் பெருமான் செய்யுள் –ஆழ்வாரது திவ்ய பிரபங்தங்கள் ஆகிய
மா மணியின் கணம் வேண்டும் என்றறிவாரைக் -ரத்னக் கூட்டங்களை தமக்கு இன்றியமையாதவை என்று அறிந்து ஓதி உணர்பவர்களை
கண்டால் சென்று கைத் தொழுமே–நீங்கள் எங்கே கண்டாலும்-உடனே அருகில் சென்று கை கூப்பி வணங்குங்கோள்

தொழும் -பன்மை ஏவல்
குணம் வேண்டுமே -நல்ல குணங்கள் வேண்டுமோ
நற் குலம் வேண்டுமே -நல்ல குலங்களில் பிறக்க வேண்டுமோ
யக்குலத் தொழுக் காம் பிணம் வேண்டுமே -அதுக்குத் தக்க ஆசாரமாகிய பிணம் வேண்டுமோ
செல்வப் பேய் வேண்டுமே -செல்வப் பொருளாகிய பேய் வேண்டுமோ
ஒன்றுமே வேண்டாம் என்றவாறு

அவாவில் அந்தாதி இப் பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே –
இப் பத்து அறிந்தார் தொண்டர் வாழ்வது சூழ் பொன் விசும்பே -என்றவாறு

———-

தொழும் பாக்கிய வினைத் தொல்லைப் பிறவிச் சுழியிடை நின்று
எழும் பாக்கியமுடைத் தாக்கவும் தென்னிய லோடிசைந்து
கெழும் பாக் கெழுமிய கீர்த்தியை நாளும் கிளத்தி யென்னாத்
தழும்பாக்கவும் வல்ல கோ சட கோபன் தயா பரனே–83-

தொழும் பாக்கிய -உயிரைத் தனக்கு அடிமையாகச் செய்த
வினைத் தொல்லைப் பிறவிச் சுழியிடை நின்று -அநாதியான -பிறவிச் சூழல் நடுவில் இருந்து
எழும் பாக்கியமுடைத் தாக்கவும் –மீண்டு உய்யும் படியான அத்ருஷ்டத்தை யுடையதாம் படி செய்யவும்
தென்னிய லோடிசைந்து கெழும் பாக்–அழகிய இலக்கணங்களோடே கூடிய திவ்யப் ப்ரபந்தங்களிலே
கெழுமிய கீர்த்தியை -எம்பெருமானுடைய புகழை
நாளும் கிளத்தி யென் நாத் தழும்பாக் கவும் -நாளும் சொல்லிச் சொல்லி நாவில் தழும்பு ஏறும்படி செய்யவும்
வல்ல கோ சட கோபன் தயா பரனே-திறமை கொண்ட ஸ்வாமி -கருணையே வடிவானவர்

தயா பரன் -பரம தயாளு
முக்திக்கு மூலம் குருகைப் பிரான் சொன்ன ஆயிரம் என்றாரே முன்னமே
செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனி என்னும் கவிகளே காலப் பண் தேன் உறைப்பத்துற்று
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றி

—————-

நல் தாய்க்கு செவிலி அறத்தொடு நிற்றல்

பரந்தலைக்கும் பொருநைக் குரு கூரென்னில் கண் பனிக்கும்
கரம் தலைக் கொள்ளும் உள்ளும் உருகும் கவியால் உலகைப்
புரந்தலைக்கும் வினை தீர்த்தான் புனை மகிழ் பூவுமன்றி
மரந்தலைக் கொள்ளவும் போது நங்காய் உன் மகள் கருத்தே.–84-

நங்காய்
பரந்தலைக்கும் பொருநைக் குரு கூரென்னில் –யாரேனும் தலைவனது ஊர்ப் பெயரைச் சொன்ன மாத்திரத்திலே
நின் மகள்
கண் பனிக்கும்-கண்ணீர் பெருக்குகின்றாள்
கரம் தலைக் கொள்ளும் -கைகளைக் கூப்பித் தொழுகிறாள்
உள்ளும் உருகும் -மனமும் கரைந்து நீராகுகிறாள்
கவியால் உலகைப் புரந்து –திவ்ய ப்ரபந்தங்களால் உலகை ரக்ஷித்து
அலைக்கும் வினை தீர்த்தான் -கருமங்களைப் போக்கி அருளும் தலைமகனது
புனை மகிழ் பூவுமன்றி– மகிழ மலர்களை சூடிக் கொள்ளுவது மட்டும் அல்லாமல்
மரந்தலைக் கொள்ளவும் போது -மகிழ மரத்தைச் சார்ந்து அத்தையும் தலை மேல் கொள்ளச் செல்கிறாள்
உன் மகள் கருத்தே.

தாராயினும் தழை யதாயினும் தண் கொம்பதாயினும் கீழ் வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே
ஆழ்வார் சம்பந்தத்தை நேராகவோ அடியார்கள் மூலமாகவோ பெற ஆசை விஞ்சி உள்ளபடி
ஆழ்வார் அடியார்கள் வாழும் இடங்களையும் தலை மேல் கொள்ளுகிறார் என்றபடி –

—————

தலைவனை நோக்கித் தோழி தலை மகளை உடன் கொண்டு போகச் சொல்லுதல் –

கருத்தில் கருணை வைத்தேகும் இதுவும் கலை மறையோர்
திருத்திற்று ஒரு மணம் தீரும் தின மயல் நீரின் நிறை
முருத்தின் செருந்து அயலே இவளோடு முயற்கரும்பின்
குருத்தில் பிரசம் வைக்கும் குருகூர் சென்று கூடுமினே. 85–

கருத்தில் கருணை வைத்து -திரு உள்ளத்தில் பேர் அன்பு கொண்டு
ஏகும் இவளோடு-இம்மங்கை யுடன் செல்லக் கடவீர்
இதுவும் -இவ்வாறு இவளைக் கைப் பற்றுவதும்
கலை மறையோர் திருத்திற்று ஒரு மணம் -ஸாஸ்த்ரம் வல்லவர் அமைத்த விவாஹங்களில் ஒரு வகை
அன்றியும்
தீரும் தின மயல் -நாள் தோறும் இருவருக்கும் உள்ள மயக்கமும் நீர் இவளைக் கொண்டு போக நீங்கி விடுமே
நீரின் நிறை-நீர் வளத்தால் நீர் அருகில் முளைத்து நிறைந்துள்ள
முருத்தின் செருந்து -வெண்மையாக அடிக் குருத்துக்கள் உடைய செருந்தி கோரைகள்
அயலே கரும்பின் குருத்தில் -அருகில் உள்ள கரும்பின் குருத்துக்களில்
முயல் பிரசம் வைக்கும் -முயல் கூடான சந்த்ர மண்டலம் போல் தேன் கூடு கட்டப் பெற்ற
குருகூர் சென்று கூடுமினே–இவளை அழைத்துக் கொண்டு போவீராக —

கரும்பினிடைத்தேறல் -கலியன்

சாஸ்திரம் அஷ்ட வித மணங்களைச் சொல்லும்
ப்ராமம் -பிரஜா பத்த்யம் -ஆர்ஷம் -தேவம் -காந்தர்வம் -ஆசுரம் ராஷாஸம் -பைசாஸம்

சேஷி பேற்றுக்கு உகப்பானும் அவனே -ஆகவே இவருடைய முயலும் தீருமே –

———-

கூட்டங்கள் தோறும் குருகைப் பிரான் குணம் கூறுமன்பர்
ஈட்டங்கள் தோறும் இருக்கப் பெற்றேம் இருந்து எம்முடைய
நாட்டங்கள் தோறும் புனல் வந்து நாலப் பெற்றேம் இனி மேல்
வீட்டு எங்கள் தோழர்க்கு என்றே பெரும் போகம் விளைகின்றதே. 86–

கூட்டங்கள் தோறும் -தாம் கூடும் பொழுது எல்லாம்
குருகைப் பிரான் குணம் கூறுமன்பர்-ஆழ்வாருடைய திவ்ய குணங்களையே கூறும் அடியார்கள்
ஈட்டங்கள் தோறும் -கூட்டங்களில் எல்லாம்
இருக்கப் பெற்றேம் -கூடி இருக்கப் பெற்றோம்
இருந்து -இவ்வாறு அடியார் கூட்டங்களில் கூடி இருந்து
எம்முடைய
நாட்டங்கள் தோறும் புனல் வந்து நாலப் பெற்றேம் -ஆனந்தக் கண்ணீர் பெருகப் பெற்றோம்
இனி மேல்-இவ்வாறு ஆன பின்பு
வீட்டு எங்கள் தோழர்க்கு என்றே -பரமபதத்தில் எங்களை சார்ந்தவர்களுக்கு
பெரும் போகம் விளைகின்றதே–பேர் இன்பம் நலம் நிகழா நின்றது –
விண்ணுளாரிலும் சீரியர் அன்றோ –

————

பகல் குறியில் தலைமகனுடன் தலை மகளைச் சேர்த்து வைத்த தோழி
பின்பு தலைவன் சிறைப்புறமாக அவன் செவிப்படுமாறு தினையோடே வெறுத்து வரைவு கடாதல்

விளையா தொழிய மருந்தும் உண்டே எம் விளை தினையின்
கிளையாக் கிளர விளைகின்றதால் கிளையாம் பிறவித்
தளை யாசழியத் தடுத்துத் தென் பாலை வழி தடுத்துக்
களை ஆசறத் தடுத் தாண்டான் குருகையின் காப் புனமே. 87–

கிளையாம் பிறவித்-மேலே மேலே தொடரும் பிறவி சூழலில்
தளை யாசழியத் -பந்தமாகிய குற்றம் போகும்படி
தடுத்துத் -போக்கி
தென் பாலை வழி தடுத்துக் – தெற்குத் திக்கில் -பாலை நில வழியையும் தவிர்த்து
களை ஆசறத் தடுத்து -களைகளை முற்றும் போக்கி
ஆண்டான் குருகையின் காப் புனமே.–ஆழ்வாருடைய திருக்குருகூரைச் சேர்ந்த தினை புலமே
தினையின் கிளையாக் கிளர விளைகின்றதால் -தினைப் பயிர்கள் மிகைத்து வளர்ந்து கதிர் முற்றிப் போகின்றதே
விளையா தொழிய மருந்தும் உண்டே -இப்படி முற்றாமல் கதிர் பரிந்தபடியே இருக்க ஏதேனும் மருந்து உண்டோ
நித்ய விபூதி அனுபவம் தந்து அருள வேண்டும் என்றவாறு –

————–

தலைவன் வரும் புனல் கண்டு வருந்துதல்

புனல் பாழ் படுத்துப் புகழ் பாழ் படுத்தல்லால் புகுந்தென்
மனம் பாழ் படுத்தனை வாழ்தி யன்றே வழுவா நரகத்
தினம் பாழ் படுத்த பிரான் சட கோபன் இன்னாக் கலியின்
சினம் பாழ் படுத்த நின்றான் குன்று சூழ்கின்ற செந்தினையே. 88–

வழுவா நரகத் தினம் பாழ் படுத்த –நரபலி அடியார்களுக்கு இல்லாத படி செய்து அருளும்
பிரான் சட கோபன் இன்னாக் கலியின் சினம் பாழ் படுத்த நின்றான்–உபகாரகர் -காளி கோலாகலம் அடக்கி அருளிய ஆழ்வார்
குன்று சூழ்கின்ற செந்தினையே.-பொதிகை மலை சார்ந்து விளைந்த சிவந்த தினையே
புனல் பாழ் படுத்துப் -கதிர் கொய்து விட்டதால் -கொல்லையைப் பாழாக்கி
புகழ் பாழ் படுத்தல்லால் -உனது கீர்த்தியையும் பாழாக்கி
அத்தோடு நில்லாமல்
புகுந்தென் மனம் பாழ் படுத்தனை வாழ்தி யன்றே -எனது மனத்தையும் சார்ந்து பாழாக்கினாயே -வாழி
கம்பத்து அந்தரங்கம் சிவந்த தினை-
தூராத மனக்காதல் –பலவும் பாடி ஆறாத மனக்களிப்போடே -இருந்தமை

———-

பிரிவு ஆற்றாத தலைவி அன்றிலின் குரல் கேட்டு அயர்தல்–

தினை ஒன்றிய குற்றம் அற்றுணர்ந்தோர் மகிழின் திறத்தின்
மனை ஒன்றிய கொடியாள் துயின்றாலும் தன் வாய் அடங்கா
வினை ஒன்றிய அன்றிலுக்கு இடம் காட்ட விரிதலைய
பனை யன்றியும் உளதோ தமியேற்குப் பழம் பகையே. 89–

மனை ஒன்றிய கொடியாள் துயின்றாலும் — தன்னை நிஷேதித்த கொடியவளான திருத்தாயார் உறங்கினாலும்
தன் வாய் அடங்கா வினை ஒன்றிய அன்றிலுக்கு –அன்றில் பறவைக்கு
இடம் காட்ட விரிதலைய பனை யன்றியும் உளதோ -தங்க இடம் கொடுத்த விரிந்த தலையை யுடைய பனை மரமும்
தமியேற்குப் -தலைவனைப் பிரிந்து தனித்து இருக்கும் எனக்கு
தினை ஒன்றிய குற்றம் அற்றுணர்ந்தோர் மகிழின் திறத்தின்-ஆழ்வாரின் மேல் உள்ள காதலால்
பழம் பகையே–வேறே பழைய பகை இல்லையே

———

பகையாய் வருகின்ற மூன்றையும் வேரினோடும் பறித்து
வகையாய் வருவன யாவையும் மாற்றி இவ் வையமுய்யத்
தொகை யாயிரங்கவி சொன்னோன் பெயர் சொல்லச் சூழ் பனியின்
புகையாம் இருள் பின்னை எந்நாள் கழியப் புகுகின்றதே. 90–

பகையாய் வருகின்ற மூன்றையும் வேரினோடும் பறித்து-காமம் கோபம் மயக்கம் மூன்றையும் அடியோடு ஒழித்து
வகையாய் வருவன யாவையும் மாற்றி -இதன் மூலம் வரும் கர்மங்கள் பிறவிகளை இவற்றை தமக்கும் உலகோருக்கும் போக்கி அருளி
சஞ்சிதம் ப்ராரப்தம் ஆகாமியம்-என்று வகை வகையாக வருமே இவற்றின் அடியாகவே
இவ் வையமுய்யத் தொகை யாயிரங்கவி சொன்னோன் பெயர் சொல்லச் –ஆழ்வாரது திரு நாமம் சொல்லவே
சூழ் பனியின் புகையாம் இருள் பின்னை எந்நாள் கழியப் புகுகின்றதே.–அஞ்ஞானம் இருள் சவாசனமாகப் போகும் நாளும் என்று வருமோ
இருள் தரும் மா ஞாலத்தில் பிரிவாற்றாமையால் ஆற்றாமை விஞ்சி வாய் விட்டுக் கூறி அலற்றுகிறார் –

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-71-80- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

August 4, 2021

பதியந் தமிழ் என்ன நான்மறை என்ன இப் பார் புரக்கும்
மதியந் தமிழ் ஒளி மாலைகள் என்ன மறை தமிழின்
அதியம் தரும் கவி ஆயிரம் செய்தளித் தானமுதம்
பொதியம் தருநதி யங் குருகூர் எந்தை பூசுரர்க்கே. 71–

பொதியம் தரு -பொதிய மலையால் கொடுக்கப் பட்ட -அதிலிருந்து தோன்றும்
நதி யங் குருகூர் எந்தை -ஆழ்வாரது திவ்ய ஸூக்திகளை
பூசுரர்க்கே
பதியந் தமிழ் என்ன –மேலோட்டமாக பார்ப்பவர் தமிழ் பதிகங்கள் என்பர்கள்
நான்மறை என்ன –ஆழ்ந்து நோக்குபவர்கள் நான்கு வேதங்களே இவை என்பர்கள்
இப் பார் புரக்கும் மதியந் தமிழ் ஒளி மாலைகள் என்ன –ப்ரயோஜனாந்த பரர்கள் உலோகோரை
நல்வழிப்படுத்திப் பாதுகாக்கவும் வரம்பில்லா ஞானமாகிய ஒளியை வெளிப்படுத்தும் ஆரங்கள் என்று சொல்லும்படியாகவும்
மறை தமிழின் அதியம் தரும் கவி ஆயிரம் செய்து –வேதம் தமிழ் செய்த மாறன் அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழிகளும்
பூ சுரருக்கு அளித் தானமுதம்-நிலத்தேவரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு -தொண்டர்க்கு அமுதமாய் அருளினான்

பாம்பணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் கழித்து அருந்த நிறைப்பதற்கு அன்றோ அமுதமாய் அருளினான்

———

பூட்சி கண்டீர் பொய்ச் சமயப் புலவர்க்குப் போக்கு வல்வாய்
வாட்சி கண்டீர் மற்றை மாயத்து அருகர்க்கு மன் உயிர் கட்கு
ஆட்சி கண்டீர் தொண்டர்க்கு ஆனந்த வாரி கண்டீர் அறிவைக்
காட்சி கண்டீர் பரவும் குருகூர் வந்த கற்பகமே. 72–

குருகூர் வந்த கற்பகமே.
பூட்சி கண்டீர் பொய்ச் சமயப் புலவர்க்குப் -ப்ரசன்ன புத்தர் மாயாவதி போன்ற மதஸ்தர் வாத வித்வான்களுக்கு பூட்டு போன்றும்
பொய்ச் சமயம் மித்யா வாதம் மாயா வாதம்
போக்கு வல்வாய் வாட்சி கண்டீர் மற்றை மாயத்து அருகர்க்கு -சமணர்களுக்கு மாறுபாட்டை போக்கும்
கூர் வாயை யுடைய வாட்சி-மரத்தைச் சீவும் – கருவியாகவும்
அது மரக் கோணலைத் தீர்ப்பது போல் இது மனக் கோணலைத் தீர்க்கும்
வாள் என்று கொண்டு சி பகுதிப் பொருள் விகுதி என்றுமாம்
மன் உயிர் கட்கு ஆட்சி கண்டீர் -உலகில் நிலை பெற்ற உயிர்களுக்கு அழிவற்ற பொருளாகவும்
ஜீவாத்மாக்கள் நித்யம் என்பதால் மன்னுயிர்
ஜீவ ராசிகளை ஆளுபவர் என்றுமாம்
தொண்டர்க்கு ஆனந்த வாரி கண்டீர் -அடியவர்களுக்குப் பேரின்பப் பெருக்காகவும்
அறிவைக் காட்சி கண்டீர் -அவர்கள் அறிவுக்கு காணத்தக்க பொருளாகவும்
ஞான ஸ்வரூபமான பர ப்ரஹ்மத்தை விசத தமமாக அறிந்தவர் என்றுமாம்
பரவும்
ஆகவே பரவும் -வணங்கி புகழ்ந்து வழி படுங்கோள் என்று உபதேசிக்கிறார்

———

கற்றும் செவி யுறக் கேட்டும் பெருகிக் களித்தும் உள்ளே
முற்றும் உகப்பெய்தும் மூழ்கிக் குடைதும் முகந்து கொடு
நிற்றும் நிலையுற நீந்துதும் யாம் நிதம் மாறனெம்மை
விற்றும் விலை கொள்ளவும் உரியான் கவி வெள்ளத்தையே. 73–

எம்மை விற்றும் விலை கொள்ளவும் உரியான்-எங்களை விற்கவும் வாங்கவும் உரியவர் —
ஆழ்வாருக்கு அத்யந்த பரதந்த்ரராய்
விலை கொள்ளுதல் -விலைக்கு கொள்ளுதல்
மாறன் கவி வெள்ளத்தையே.–ஆழ்வாரது அருளிச் செயல் பிரவாஹத்தை
யாம் நிதம்–யாம் நாள் தோறும்
கற்றும் செவி யுறக் கேட்டும் பெருகிக் களித்தும் -ஓதியும் பிறர் ஒதக் காதில் நன்றாகக் கேட்டும் குடித்து மகிழ்வோம்
உள்ளே முற்றும் உகப்பெய்தும் -அகத்திலே அவ்வெள்ளம் முழுவதும் விழும்படி ஊற்றிக் கொள்வோம்
மறந்து விடாமல் மனதிலே நிரம்பப் பதிந்து வைத்துக் கொள்ளுதல்
மூழ்கிக் குடைதும் -அவ்வெள்ளத்திலே அமிழ்ந்து நீராடுவோம்
முகந்து கொடு நிற்றும் நிலையுற -அப்பெருக்கை மொண்டு எடுத்துக் கொண்டு நிலை பெற நிற்போம்
அப்பொருளை பாராட்டி தாம் உபயோகிக்குமாறு தேக்கிக் கொள்ளுதல்
நீந்துதும் -அவ்வெள்ளத்தில் நீந்துவோம் -அவற்றில் ஈடுபடுதல்

———–

தலைவியின் கண் அழகு கண்டு வியந்த தலைவன் கூறுதல் –

வெள்ளம் பரந்தனவோ கமலத்தன்றி வெண் மதி மேல்
கள்ளம் பரந்தனவோ முயல் நீக்கிக் கவிக் கரசன்
தெள்ளம் பரந்த வயல் குருகூர்க் கொம்பின் செம் முகத்தே
முள்ளம் பரந்தனவோ கண்களோ ஒன்றும் ஓர்கிலமே. 74–

இவை
வெள்ளம் பரந்தனவோ கமலத்து -செந்தாமரை மேல் பிரவாகம் பரவியதாமோ
அன்றி வெண் மதி மேல் முயல் நீக்கி கள்ளம் பரந்தனவோ -சந்திரனின் களங்கத்தை நீக்கி களவுத் தொழில் பரம்பியதாமோ
கருமை நிறத்தை களவு என்பது கவிகள் மரபு
கவிக் கரசன் தெள்ளம் பரந்த வயல் குருகூர்க் கொம்பின் -பூம் கொம்பு போன்ற இந்த மங்கையுடைய
ஆழ்வார் திரு நா வீறு உடைய பிரான் என்பதால் கவிக்கு அரசன் என்கிறார்
செம் முகத்து எம் உள்ளம் பரந்தனவோ -சிவந்த திரு முகத்திலு திரு உள்ளம் பரவியது
கண்களோ -கண்களே தாமோ -உபமானங்கள் உபமேயத்து அளவு போதாமையாலே அவை தம்மையே சொல்லிற்று
ஒன்றும் ஓர்கிலமே.-ஒன்றையும் துணிவாக அறிகின்றிலோமே

ஐய உவமை அணி
திரு உள்ளம் காம மயக்கத்தால் இருந்து அன்றோ போனது
தலைவன் நெஞ்சோடு கூறிக்கொண்டது
நலம் பாராட்டு துறை
கண் அழகு -ஞான வைலக்ஷண்யம்
இவருக்கு பேர் அறிவு ஆழ்வாரது சங்கல்பத்தாலே
இதயக் கமலத்திலே எழுந்து பொங்கும் ஞான வெள்ளத்தை -வெள்ளம் பரந்தனவோ கமலத்து என்கிறார் –
இந்த தெளிந்த ஸூத்த ஞானம் பரமாத்மாவின் திரு உள்ளத்தையும் வசீகரிக்குமே -ஆகையால்
வெண் மதி மேல் முயல் நீக்கிக் கள்ளம் பரந்தனவோ -என்கிறார் –

—————-

ஓரும் தகைமைக்கு உரியாரும் ஓங்கிய ஞானியரும்
சாரும் தனித் தலைவன் சட கோபன் தடம் பதிக்கே
வாரும் உமக்கொரு உறுதி சொன்னேன் மயக்கமெல்லாம்
தீரும் திருக்கு அறும் சிந்தை செவ்வே நிற்கும் தீங்கு அறுமே. 75–

ஓரும் தகைமைக்கு உரியாரும் -தத்வப் பொருளை ஆராயும் தன்மைக்கு உரியவர்களும்
ஓங்கிய ஞானியரும்-அங்கனம் ஆராய்ந்து தெளிந்து உயர்ந்த ஞானத்தைப் பெற்றவர்களும்
கேள்வி -ஞானம் அனுஷ்டானங்கள்
விமர்சம் -ப்ரமாணங்களைக் கொண்டு தெளிய ஆராய்தல்
இவை இரண்டையும் முதலில் சொல்லி அவர்களிலும் மேம்பட்ட ஓங்கிய ஞானியரை –
பாவனை -இடையறாமல் சிந்தித்தல் -உடையாரை அடுத்து சொன்னவாறு

சாரும் தனித் தலைவன் சட கோபன் -சரணம் அடையப்பெற்ற ஒப்பற்ற ஆழ்வார் திரு அவதார ஸ்தலமான
தடம் பதிக்கே வாரும் -வாருங்கோள்
அங்கே வருவீர்களானால்
உமக்கொரு உறுதி சொன்னேன் -கேட்டு உய்வீராக
மயக்கமெல்லாம் தீரும் -விபரீத ஞானம் எல்லாம் போகுமே
திருக்கு அறும் —செருக்கு வஞ்சகம் போன்ற மாறுபாடு நீங்குமே
சிந்தை செவ்வே நிற்கும் -மனம் கோணாமல் நல் வழியில் நிலை நிற்கும்
தீங்கு அறுமே-தீ வினைகள் எல்லாம் தொலையுமே –

திவ்ய தேச மஹிமையை அறிவித்தவாறு

———–

அறு வகையாய சமயமும் ஐவகைத் தாம்புலனும்
உறு வகையால் சொன்ன ஓட்டம் எல்லாம் ஒழுவித் தொருங்கே
பெறு வகை ஆறெனச் செய்த பிரான் குருகூர்ப் பிறந்த
சிறு வகையார் அவரைத் தொழுதோம் எம்மைத் தீண்டுகவே. 76–

அறு வகையாய சமயமும் –ஆறு வகையான சமய நூல்களும்
உறு வகையால் சொன்ன ஓட்டம் எல்லாம் ஒழுவித் தொருங்கே-ஒருங்கே ஒழிவித்து -தம் தமக்குத் தோன்றியபடி
பொருள் விரிவு முழுவதையும் ஒரு சேர போக்கி
பெறு வகை ஆறெனச் செய்த –முக்தி பெரும்படியான வழி இது என்று திவ்ய பிரபந்தகள் அருளிச் செய்த
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகதி தந்து ஒழிந்தாய்
பிரான் குருகூர்ப் பிறந்த சிறு வகையார் அவரைத் தொழுதோம் -மூர்த்தி சிறுத்தும் கீர்த்தி பெருத்தும் –
சிறு மா மானிசராய்த் தோன்றி நம்மை ஆண்டு அருளிய ஆழ்வாரை வணங்கினோம்
ஐவகைத் தாம்புலனும் எம்மைத் தீண்டுகவே.–மெய் வாய் கண் மூக்கு செவி -ஐம் பொறிகளாலும் உண்டாகும்
ஸ்பர்ச ரஸ ரூபம் கந்தம் ஸப்தம் போன்ற ஐந்து வகைப் புலன்களும் எம்மைச் சார்வனவாக –
அவற்றைக் குறித்து அஞ்ச வேண்டாமே

சடகோபர் எம்மைத் தீண்டுகை என்று தலைமகள் பிரணய ரோஷம் அடைந்து
நீங்கப் பெற்றதாகவும் இதற்குப் பொருள் சொல்வர்

சிறு மா மானிடராய் ஆழ்வார் அடியார்களையும் சொன்னவாறு
வழுதி நாட்டில் பிறந்தவர்க்கு ஆளும் செய்தேன்-என்றாரே –

————–

தீண்டித் திருவடியைப் பற்றிக் கொண்டு சிந்தித்ததையே
வேண்டிக் கொளப் பெற்றிலேன் வினையேன் இவ் வெறும் பிறவி
ஆண்டில் பிறந்த அக் காலத்திலே அன்பனாய் அணி நீர்ப்
பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே. 77–

வினையேன் இவ் வெறும் பிறவி ஆண்டில் பிறந்த அக் காலத்திலே –பயன் அற்ற இந்தப் பிறவியாக
அவ்விடத்தில் பிறந்த அக்காலத்திலேயே
அன்பனாய் அணி நீர்ப் பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே–ஆழ்வாருக்கே பக்தனாகி
உருக் காட்டுதல் -ரூபத்தைத் தோன்றுவித்தல் -இச்சா வடிவம் எடுத்து ஆவிர்பவித்தல்
பாவகற்கே-பரிசுத்தராக்குபவர் -ஜ்யோதி ஸ்வரூபமான ஆழ்வாருக்கு

மதுர கவி ஆழ்வார் இந்த தேஜஸ்ஸூ பார்த்தே இவரை வந்து சேர்ந்தார் அன்றோ
ஆதலால் அவருக்கு பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே-என்பது பொருந்துமே
தீண்டித் திருவடியைப் பற்றிக் கொண்டு சிந்தித்ததையே
வேண்டிக் கொளப் பெற்றிலேன் -அடையப் பெற்றேன் அல்லேன்

பழுதே பல பகலும் போக்கினேன் -அஞ்சி அழுகிறார்
வேண்டிய அனைத்தையும் தர வல்லவர் ஆழ்வார் என்பதாலேயே –
சிந்தித்ததையே வேண்டிக் கொளப் பெற்றிலேன் -என்கிறார்
இங்கு சிந்தித்தது முக்தியையே இவருக்கு –

————–

பாவகத்தால் தன் திரு அவதாரம் பதி னொன்றென்றிப்
பூவகத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழந்து
நாவகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்தளித்த
கோவகத்தாற் கன்றி என் புறத்தார் செய் குற்றேவல்களே. 78–

பாவகத்தால் -தனது தோற்றத்தைக் கண்டு அதனால்
தனது தூய்மை செய்து அருளும் தன்மையால்-பாவனத்வத்தால் – என்றுமாம்
தன் திரு அவதாரம் பதி னொன்றென்றிப் பூவகத்தார் அறியாத வண்ணம் –திருமாலது பதினொன்றாவதாகிய
திருவவதாரமே என்று அறிந்து கொள்ளாத படி

வங்கி புரத்து நம்பி -ஆழ்வார் ப்ரபாவத்தாலே எம்பெருமானே இவ்வாறு திரு அவதரித்தார் என்னலாம் படி என்று அருளிச் செய்வார்

தன்னையே புகழந்து நாவகத்தால் கவி ஆயிரம் பாடி -தன்னையே தான் ஸ்துதித்து -திருவாய் மொழி அருளிச் செயலை அருளிச் செய்து
தானே யான் என்பானாகத் தன்னைத் தன்காண் துதித்து
யானாய்த் தன்னைத் தான் பாடி
நாராயணா அடியேன் நாடும் தமிழ் வேத பாராயணா சடகோபா -பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
திருப்புளிய மரம் ஆதி சேஷன் அம்சம் தானே
அத்ரி ஜமதக்கினி -ப்ராஹ்மண -தத்தாத்ரேயர் -பரசுராமன் முதல் யுகத்தில்
சக்ரவர்த்தி திருமகன் க்ஷத்ரியர் அடுத்த யுகத்திலும்
வைஸ்ய யதுகுல கண்ணன் அடுத்தும்
கலியுகத்தில் ஆவேச அவதாரம் -வேத வியாசராய் வேதங்களை வெளியிட்டு அருளினால் போல் திவ்ய பிரபந்தங்களை
வெளியிட்டு அருளவே அன்றோ இவர் திரு அவதாரம் –

நடித்து -வேறான ஒருவரைப் போலவே தம்மைக் காட்டி அருளி
கும்பிடு நட்டமிட்டு ஆடி -அந்தக் கூத்தாடி என்றுமாம் –
அளித்த-திவ்ய பிரபந்தங்கள் மூலம் லோகத்தாரை ரஷித்து அருளி

கோவகத்தாற் கன்றி -திருமாலாகிய ஆழ்வாருக்கே குற்றேவல் செய்யாமல்
கோ அகம் -மேலான இடம் -ஸ்ரீ வைகுண்டம்
கோபகம் -ரக்ஷிப்பவர் என்றுமாம்
என் புறத்தார் செய் குற்றேவல்களே-அந்நியர்களுக்கு செய்யும் கிஞ்சித்காரம் ஒரு நல் பயனையும் அளிக்க மாட்டாவே –
தேவதாந்த்ர பஜனத்தால் என்ன பலன் என்றவாறு

————

குற்றேவலும் செய்தும் மெய் கண்டு கை கொண்டு கும்பிட்டன்பு
பெற்றேன் என் போல் எவர் பேறு பெற்றார் பின்னையே பிறந்து
வெற்றேவலின் நின்ற பொய்யன்பர் தாங்களும் மெய் யுணர்ந்தார்
எற்றே குருகைப் பிரான் எம் பிரான் தன் இயலிசைக்கே 79–

குருகைப் பிரான் எம் பிரான் தன் இயலிசைக்கே-பண் அமைதியோடு கூடிய இயல் தமிழ் அருளிச் செயல்களினால்
பண்ணார் பாடல் இன் கவிகள் அன்றோ -குருகையர் கோன் யாழினிசை வேதத்தியல் அன்றோ –
யான்
மெய் கண்டு-தத்வார்த்தங்களும் உணர்ந்து
கை கொண்டு கும்பிட்டு -கைகளால் வணங்கி
குற்றேவலும் செய்தும் -கைங்கர்யமும் செய்து
அன்பு பெற்றேன் –ஆழ்வாரது கருணையையும் பெற்றேன்
என் போல் எவர் பேறு பெற்றார் -இப் பேறு என்னைப் போல் பெற்றார் யாருமே இல்லை என்னும் படி அன்றோ இப் பேறு
இது அன்றி
பின்னையே பிறந்து-ஆழ்வார் திரு அவதாரத்துக்குப் பின்பு பிறந்து
வெற்றேவலின் நின்ற -தேவதாந்த்ர கைங்கர்யங்கள் செய்து
பொய்யன்பர் தாங்களும் -திரிபு உணர்வுடைய தொண்டர்களும்
மெய் யுணர்ந்தார் எற்றே -ஆழ்வார் அருளிச் செயல்களால் தத்வ ஞானம் பெற்றார்கள் -அறிந்து கொண்டார்களே என்ன வியப்பு –

————

தலைமகளைத் தலைமகன் கண்ணுற்று இஃது ஒரு வியப்பு என்றால் –
ஒரு தலைக்காமம்-கைக்கிளைத் திணையின் முதலான காட்சி என்னும் துறை இது

இயலைத் தொடுத்து இன்னிசையைப் புணர்த்து எம்மை யிப் பிறவி
மயலைத் துடைத்த பிரான் குருகூர் மதியைக் கொணர்ந்து
முயலைத் துடைத்துத் தனுவைப் பதித்து முத்தங்குயிற்றிக்
கயலைக் கிடத்திக் கொள் சாளரத்தூடு கதவிட்டதே.–80–

இன்னிசையைப் புணர்த்து-இனிமையான பண் இசைகளை அமைத்து
இயலைத் தொடுத்து -இயல் தமிழ் பாசுரங்களைப் பாடி
எம்மை யிப் பிறவி மயலைத் துடைத்த –எமது இந்தப் பிறப்பு துன்பங்களைப் போக்கி அருளிய
பிரான் -உபகாரகராகிய நம்மாழ்வாருடைய
குருகூர் –திருக் குருகூரிலே
மதியைக் கொணர்ந்து-சந்த்ர மண்டலத்தைக் கொண்டு வந்து
முயலைத் துடைத்துத் -அதன் நடுவில் உள்ள முயல் என்னும் களங்கத்தைப்[போக்கி
தனுவைப் பதித்து -அதில் இரண்டு விற்களைப் பதிய வைத்து
வில் போலே வளைந்து ஆடவர் நெஞ்சு உறுதியைப் போக்கும் ஆற்றலுடைய புருவங்களின் சிறப்பைக் கூறியவாறு
முத்தங்குயிற்றிக்-முத்துக்களை பதித்து -வெண்மையான பற்களை சொன்னவாறு
கயலைக் கிடத்திக் கொள் -இரண்டு கயல் மீன்களையும் வைத்து –பிறழுகிற கண்களை சொன்னவாறு
சாளரத்தூடு கதவிட்டதே.-பலகணியுனுள்ளே-அச் சந்த்ர மண்டலத்தை நிறுத்தி -புறத்தே கதவு அமைக்கப் பட்டதோ
இத் தோற்றம் எனத் தோன்றா எழுவாய் வருவித்து முடித்துக் கொள்ள வேண்டும் –

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-61-70- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

July 24, 2021

தலைவனைப் பிரிந்த தலைவி தென்றலுக்கு வருந்தி இரங்குதல் –

கூறப் படா மறையின் பொருள் கூறிக் குவலயத்தோர்
மாறப் படா வினை மாற்றிய மாறன் மகிழலங்கல்
நாறப் படா நின்ற போதமுது ஆகும் அதன்றி நஞ்சம்
தேறப் படாது கெட்டேன் மன்றல் நாறும் தண் தென்றலையே. 61–

கூறப் படா மறையின் பொருள் கூறிக் -தெளியா மறை நிலங்களை தெளியும்படி அருளிச் செய்து
குவலயத்தோர் மாறப் படா வினை மாற்றிய -பண்டை வல் வினை பாற்றி அருளிச் செய்து
மாறன் மகிழலங்கல் நாறப் படா நின்ற போது –மகிழம்பூ மணம் வீசப்பெறும் காலத்தில்
அமுது ஆகும் -தென்றல் காற்று அமுதம் போல் இருக்கும்
அதன்றி நஞ்சம் தேறப் படாது –அம்மணம் பெறாத போது விஷம் போலே கொடுமையாக இருக்குமே
கெட்டேன் மன்றல் நாறும் தண் தென்றலையே–ஆகவே தென்றல் காற்றை நம்பப் போகாதே

கெட்டேன் -மிக்க இரக்கத்தால் கூறும் வார்த்தை
கேளார் ஆயர் குலத்தவர் இப்பழி கெட்டேன் வாழ்வில்லை -பெரியாழ்வார்
தென்றலும் தீயினும் கொடி தாம் -கலியன்

லௌகிக பதார்த்தங்கள் ஆழ்வார் சம்பந்தத்தால் உபாதேயமாகவும்
இல்லையாகில் த்யாஜ்யமாகவும் இருப்பது இதுக்கு ஸ்வா பதேசம் –

———–

தென் தலைத் தோன்றும் உபநிடதத்தை என் தீ வினையை
நின்று அலைத்து ஓன்றும் நியாயம் நெறியை நிறை குருகூர்
மன்றலைத் தோன்றும் மதுரகவியை மனத்துள் வைப்பார்
என் தலைத் தோன்றும் எம்பிரான்கள் என் நாவுக் குரியவரே. 62–

தென் தலைத் தோன்றும் உபநிடதத்தை -தெண் திசை உண்டாக்கிய உபநிஷத்தும்
என் தீ வினையை நின்று அலைத்து ஓன்றும் நியாயம் நெறியை –எனது கர்மங்களைப் பாற்றி அருளி
பொருந்திய நீதி மார்க்கம் யுடையதுமாய்
நிறை குருகூர் மன்றலைத் தோன்றும் மதுரகவியை –எல்லா வளங்களும் நிறைந்த திருக்குருகூரில் அவதரித்த
ஆழ்வார் பக்கல் உண்டான சொல்லிலும் பொருளிலும் இனிய பாசுரங்களை
அலைத்து நின்று என்றுமாம் –
மனத்துள் வைப்பார்-ஓதி உணர்ந்து தம் மனதில் வைத்துக் கொள்பவர்கள்
என் தலைத் தோன்றும் எம்பிரான்கள் -என் சென்னியில் வைத்து விளங்கும் என் தலைவராவார்
என் நாவுக் குரியவரே.-என்னால் ஸ்துதிக்கப் படுமவரும் அவரே

அப்பனைப் பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றும் அவர் கண்டீர் மறுமையும் இம்மையும்
நம்மை அளிக்கும் பிராக்களே –
ஆழ்வார் அடியார் அடியார் அடியோங்களே என்கிறார்

————-

உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என ஒன்றுமின்றி
விரிக்குந் தோறும் வெறும் பாழாய் விடும் பிறர் புன் கவி மெய்
தெரிக்கின்ற கோச் சடகோபன் தன் தெய்வக் கவி புவியில்
சுரக்கின்ற நுண் மணல் ஊற்று ஓக்கும் தோண்டச் சுரத்தலினே. 63–

பிறர் புன் கவி -மற்றவரின் புல்லிய பாடல்கள்
உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என –உரிக்கப்படுகின்ற வெண் காந்தளின் பெரிய கிழங்கு போல்
காந்தம் -கிழங்கு
ஒன்றுமின்றி விரிக்குந் தோறும் வெறும் பாழாய் விடும் –வகுத்து நோக்க நோக்க சாரம் ஒன்றும் இல்லாமல்
மிகவும் பயன் அற்றவையாய் போய் விடும்
மெய் தெரிக்கின்ற கோச் சடகோபன் –உண்மைப் பொருளையே உணர்த்தும் ஆழ்வார்
தன் தெய்வக் கவி -யுடைய திவ்ய ப்ரபந்தங்களோ
தோண்டச் சுரத்தலினே–ஆழ்ந்து நோக்க நோக்க மென்மேலும் நற்பொருள் இடையறாது வெளிப்படுதலால்
புவியில் சுரக்கின்ற நுண் மணல் ஊற்று ஓக்கும் -நுண்ணிய மணல் பாங்கில் நீரூற்றைப் போன்று இருக்கும் –

தொட்டனைத்து உறும் மணல் கேணி மாந்தர்க்கு
கற்றனைத்து ஊரும் அறிவு

————–

சுரக்கும் திருவும் வறுமையும் தீரும் தொடக்கு விட்டுக்
கரக்கும் இருவினை மேன்மையும் காணும் கயல் குதிப்பத்
திரக்கும் கழை நெடுந் தாளில் தொடுத்த செந் தேனுடைந்து
பரக்கும் பழன வயல் குருகூர் வளம் படுமினே. 64–

திரக்கும் -உறுதி பெற்ற -நன்கு வளர்ந்து முதிர்ந்த –ஸ்திரம் -வடமொழி
கழை நெடுந் தாளில் -நீண்ட கருப்பந்தண்டிலே
கழை-மூங்கில் என்றுமாம் -மருத நிலா வருணனைக்குச் சேராது
தொடுத்த செந் தேன் -கட்டிய சிவந்த தேனையுடைய கூடுகள்
கயல் குதிப்ப உடைந்து-கயல் மீன்கள் துள்ளி விழும் போது அவை படுதலால் உடைபட்ட
பரக்கும் –தேன் பரவிப் பாயப் பெற்ற
பழன வயல் குருகூர் –கழனி களை யுடைய மருத நிலம் சூழ்ந்த ஆழ்வார் திரு நகரி யுடைய
வளம் படுமினே-மஹிமையை கவி பாடி ஸ்துதியுங்கோள் –
அங்கனம் பாடினீராகில் உங்களுக்கு
சுரக்கும் திருவும் -கைங்கர்ய ஸ்ரீ வளரும்
வறுமையும் தீரும் –தரித்திரம் நீங்கும் -சம்சாரம் தொலையும்
தொடக்கு விட்டுக் கரக்கும் இருவினை –புண்ய பாப இரு வினைகளும் தொடர்ச்சி நீங்கி
இருந்த இடம் தெரியாதபடி அழிந்து விடும் –
தொடக்கு –கட்டு -பந்தம்
மேன்மையும் காணும்–எல்லா மேன்மைகளை உண்டாகும் –

———–

பாடும் கறங்கும் சிறை வண்டு பாடும் பைந் தாள் குவளை
யோடும் கறங்கும் குருகைப் பிரான் இச் சுழல் பிறவி
ஓடும் கறங்கன்ன வாழ்க்கையை நீக்கி யுணர்வுதவி
வீடும் திறந்து தந்தானை எந்நான்றும் விடகிலமே. 65–

இச் சுழல் பிறவி ஓடும் கறங்கன்ன வாழ்க்கையை –காற்றாடி போன்று கர்மங்களால் உண்டாகும் பிறவிச் சூழலை
நீக்கி யுணர்வுதவி-அடியார்களுக்கு போக்கி அருளி நல் ஞானத்தையும் அருளி
வீடும் திறந்து தந்தானை –ஸ்ரீ வைகுண்டமும் கொடுத்து அருளி
பாடும் கறங்கும் சிறை வண்டு பாடும் -வண்டுகள் ரீங்காரம் செய்து கொண்டு
பாடும் -பக்கம் முழுவதும் என்றுமாம் –
பைந் தாள் குவளை யோடும் கறங்கும் -பசுமையான நாளத்தை யுடைய குவளைகளின் இதழ்களும் சுழலப் பெற்ற
குருகைப் பிரான் எந்நான்றும் விடகிலமே.–திருக் குருகையில் திரு அவதாரம் செய்து அருளிய ஆழ்வாரை விட்டுப் பிரிய மாட்டோம்

——-

விஸ்லேஷத்தில் மாலைப் பொழுதுக்கும் இருளுக்கும் தலைவியின் ஆற்றாத துயர் கண்டு தோழி இரங்கல்

விட வந்தகார வெம் பாலிற் பராங்குசர் மெல்லியலுக்கு
இடர் வந்ததால் என்றி ரங்கிப் புணர்ந்திலர் இன்னுயிரை
அட வந்த காலன் கொலோ அறியேன் இன்று இவ் வந்தி வந்து
பட அந்த காரப் பெரும் புகை யோடிப் பரக்கின்றதே. 66–

விட வந்தகார –கருமையாலும் கொடுமையாலும் விஷம் போன்ற இருளை யுடைய
வெம் பாலிற் -கொடிய இரவாகிய காலப்பகுதியில்
பராங்குசர் மெல்லியலுக்கு இடர் வந்ததால் என்று இரங்கிப் புணர்ந்திலர் –மனம் இரங்கி வந்து கூடினார் அல்லர்
இன்று இவ் வந்தி வந்து பட –மாலைப்பொழுதாகிய பெரும் தீயும் வந்து சேர
அந்த காரப் பெரும் புகை யோடிப் பரக்கின்றதே.–இருளாகிய பெரும் புகை எங்கும் பரவி
இன்னுயிரை அட வந்த காலன் கொலோ அறியேன்

——————

உடன் போக்கில் தலைவன் தலைவிக்குத் தன் நகர் அணிமை கூறல்

பரவாது கேட்டினிப் பைய நட சுருதிப் பசுக்கள்
சுரவா தவற்றைச் சுரப்பித்து அவை சொரியும் பொருள் பால்
கரவாது உதவிய மாறன் கவி அனையாய் இனி ஓர்
சர வாதம் இப்புறம் அப்புறம் காணத் தடம் பணையே. 67–

சுருதிப் பசுக்கள் சுரவா தவற்றைச் சுரப்பித்து-வேதப்பொருளாகிய பாலை எளிதில் சுரக்கும்படி செய்து
அவை சொரியும் பொருள் பால் –தத்வப் பொருளாகிய பாலை
கரவாது உதவிய மாறன் –லோபம் செய்யாதே திவ்ய பிரபந்தங்கள் மூலம் அனைவருக்கும் கொடுத்து அருளிய ஆழ்வாருடைய
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபன் அன்றோ
கவி அனையாய் – ஆழ்வாருடைய திவ்ய பாசுரங்களை ஒத்த சிறப்பையும் இனிமையும் யுடைய மங்கையே
இனி இப்புறம் ஓர் சர வாதம் -இனி எனது ஊருக்கு இப்பால் செல்ல வேண்டிய இடம் ஓர் அம்பு வீழ்ச்சி அளவு தான்
சர பாதம் -சர வாதம் என்று விகாரப்பட்டுள்ளது-சர பாத ஸ்தானம் -எய்த அம்பு விழும் தூரம்
அப்புறம் அ தட பணையே காண் –அதற்கு அப்பால் முன்பு நான் சொல்லி இருக்கிற எனது ஊரின் எல்லை யாகிய மருத நிலமே காண்
ஆகவே
இனி பரவாது கேட்டு பைய நட -விரைவு கொள்ளாமல் நான் சொல்லும் வார்த்தையை கேட்டுக் கொண்டு மெல்ல நடப்பாய்
புணர்ந்து உடன் போந்த தலைமகன் நடந்து இளைத்த தலைவியைக் குறித்து இடந்தலைப் பெய்தமை சொன்ன பாசுரம் –
சம்சார மார்கத்தைக் கடந்து ஸ்ரீ வைகுண்டம் அழைத்துச் செல்லும் ஆழ்வார் அந்த ஸ்தானம் அணித்தமையைச் சொன்னவாறு –

——————-

பிரிவாற்றாது வருந்தும் தலைவி கார் கண்டு கலங்குதல் –

தடம் பணைத் தண் பொருநைக் குருகூரர் தகை வகுள
வடம் பணைக் கொங்கையில் வைக்கின்றிலர் மற்றை மாலை யெல்லாம்
உடம்பு அணைக்குந் தொறும் வெந்து உகும் ஐந்து வெம் பாம்பு உமிழ்ந்த
விடம் பணைக் கொண்டனவே பனி தோய்ந்திடு மேகங்களே. 68–

தடம் பணைத் –அகன்ற வயல்களை யுடையதும்
தண் -நீர் வளத்தால் குளிர்ச்சியானதும்
பொருநைக் குருகூரர் –ஆழ்வாருடைய
தகை வகுள வடம் –அழகிய மகிழம் பூ மாலையை
எவ்வகைத் தாபத்தையும் தணிக்க வல்ல வகுள மாலை அன்றோ
பணைக் கொங்கையில் வைக்கின்றிலர் –பாங்கிமார் கொணர்ந்து பருத்த எனது கொங்கைகளிலே வைக்கின்றார் இல்லை
மற்றை மாலை யெல்லாம் உடம்பு அணைக்குந் தொறும் வெந்து உகும் –மற்ற மாலைகள் அனைத்தும்
விரஹ தாபத்தால் வெந்து பொடியாய் உதிர்ந்து விடும்
இந்நிலையில்
பனி தோய்ந்திடு மேகங்களே–நீர்த்துளி நிறைந்த மேகங்களோ
ஐந்து வெம் பாம்பு உமிழ்ந்த விடம் பணைக் கொண்டனவே -கொடிய ஐந்து பாம்புகள் ஒருங்கே உமிழ்ந்த விஷங்கள் போலெ திரண்டனவே
கொடிய ஐந்தலை நாகம் என்றுமாம் –
பொருள் ஈட்டி பின்பு கார் காலத்தில் மீண்டு வருவதாக சொல்லிப் போந்த தலைமகன் வாராமையாலே
ஆழ்வாருக்கு போலியான மேகங்கள் இந்நிலையில் வருத்தத்தை மிகுவிக்கும் -போலி கண்டு அழிதல் –

————-

பொருள் வயில் பிரிந்து சென்று மீளும் தலைமகன் முகிலொடு கூறல் –

மேகத்தை ஆற்றில் கண்டேன் என்று எண்ணாது மெய்யன் குருகூர்ப்
பாகத்தை ஆற்றும் சொல்லாளைக் கண்ணீரின் துளி பரந்த
மோகத்தை ஆற்றிக் கொண்டே கண்ட மாற்ற மொழிந்து சிந்தைச்
சோகத்தை ஆற்றிக் கொண்டே துளித் தூவத் தொடங்குகவே. 69–

மேகத்தை ஆற்றில் கண்டேன் என்று எண்ணாது –மேகங்கள் ஆகிய உங்களை இடை வழியிலே கண்டு
செய்தி கூறினேன் என்று இதனை ஒரு இழிவாக நீங்கள் நினையாமல்
மெய்யன் குருகூர்ப் பாகத்தை ஆற்றும் சொல்லாளைக் –உண்மைப் பொருளையே உணர்த்தும் ஆழ்வாரது
மிக இனிய சொற்களை யுடைய என் காதலியை
கண்ணீரின் துளி பரந்த மோகத்தை ஆற்றிக் கொண்டே –விஞ்சியுள்ள மோஹத்தை தணிவித்துக் கொண்டே
நீங்கள் சமீபிப்பவர்களாய்
கண்ட மாற்ற மொழிந்து சிந்தைச் சோகத்தை ஆற்றிக் கொண்டே –நீங்கள் வருகிற வழியில் நான்
மீண்டு வருவதைக் கண்ட செய்தியைச் சொல்லி அவளது விரஹ வேதனையை சாந்தப்படுத்திக் கொண்டே
துளித் தூவத் தொடங்குகவே.-மழைத் துளி பெய்யத் தொடங்குவீர்களாக
மேகங்களை பாகவதர்களாக சொல்லாத தட்டில்லையே
ஆழ்வார் வரை அறிவித்து ஆஸ்வாசப்படுத்த சொன்னபடி

——————

மதங்கு -மதங்கம் — மதங்கியார் -மண்டலம் சுற்றுதல் –

தொடங்கு கின்றாள் நடம் சொல்லு கின்றேன் குருகூரர் தொழா
மடங்கு கின்றாள் மண்டலம் சுற்றி யாடுகின்றாள் மதங்கி
விடங்கு கண்டார் பிழைப்பார் சவையீர் விரைந்து ஏகுமிந்த
படங்கு விண்டால் பின்னைப் போக ஒண்ணாது உம் பதிகளுக்கே. 70–

சவையீர்–சபையில் உள்ளவர்களே
சொல்லு கின்றேன்-நான் உங்களுக்கு ஒரு உறுதி சொல்கின்றேன் -கேளுங்கள்
மதங்கி–ஆடல் பாடல் வல்ல ஓர் இள மங்கை
நடம் தொடங்கு கின்றாள்–கூத்தாடத் தொடங்குகின்றாள்
குருகூரர் தொழா மடங்கு கின்றாள் –ஆழ்வாரை தொடக்கத்திலே தொழுது திரைக்குள்ளே திரும்பிச் செல்லுகின்றாள்
மண்டலம் சுற்றி யாடுகின்றாள் -மண்டலமாக அங்கேயே இருந்து சுழன்று கூத்தாடுகின்றாள்
விடங்கு கண்டார் பிழைப்பார் -இந்த மதங்கியின் அழகைக் கண்டு காதல் நோயால் மரண வேதனைப்படாது
பிழைப்பவர் எவர் -எவரும் இல்லை என்றபடி
இந்த படங்கு விண்டால் உம் பதிகளுக்கே பின்னைப் போக ஒண்ணாது –இந்தத் திரையை வாங்கி விட்டால் –
அவளது அழகைக் கண்டு மோஹித்து விழாமல் உங்கள் ஊருக்குப் போக முடியாதே
ஆதலால்
விரைந்து ஏகும் -யாத்திரை வாங்குவதற்கு முன்னே அப்பால் போய் விடுங்கோள் –

பக்தி அதிசயத்தைக் கண்டவர் இவர் பக்கல் ஈடுபடுவதை விட்டு
பிரபஞ்ச விஷயங்களில் செல்ல இயலாமையைச் சொன்னவாறு

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-51-60- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

July 23, 2021

பெறும் பாக்கியமுள்ள போதும் பிழைப்பு முண்டே பிறர் பால்
வெறும்பாக் கிளத்தி மெலிகின்ற என்னை வினை கொடுப் போய்
எறும்பாக்கிய தமியேனை அமரர்க்கும் ஏற விட்டான்
குறும்பாக்கிய முப் பகை தவிர்த்து ஆண்ட குருகை மன்னே. 51–

பெறும் பாக்கியமுள்ள போதும் பிழைப்பு முண்டே -அதிர்ஷ்டம் இருக்கும் போதும் அந் நன்மை மிகுதி நேராமல் தவறுதல் உண்டோ -இல்லை என்றபடி
பிறர் பால் வெறும்பாக் கிளத்தி -மற்றவர் மேல் பயன் இல்லாத பாடல்களைப் பாடிக் கொண்டு
மாரி அனைய கை–மால் வரை ஒக்கும் திண் தோள் என்று பாரிலோர் பற்றையைப் பச்சைப் பசும் பொய்கள் பேசவே -திருவாய் மொழி

மெலிகின்ற -திரிந்து இளைக்கின்றவனும்
என்னை வினை கொடுப் போய் எறும்பாக்கிய தமியேனை -தீ வினைகளால்
வலிய இழுத்துக் கொண்டு சென்று எறும்பு போல் எளியவனாக்கி -வேறு கதி அற்றவனான என்னை
இரும் பாடு எரி கொள்ளியினுள் எறும்பு போல் உருகா நிற்கும் என்னுள்ளம் -கலியன்

குறும்பாக்கிய முப் பகை தவிர்த்து-தீமைகள் செய்யும் படியான மூன்றுவகை பகைகளையும்-
காமம் கோபம் மயக்கம் -போன்றவை -வித்யா மதம் குல மதம் சீல மதம் -உயர் பிறப்பு மதம் -போல்வனவும் – போக்கி
ஆண்ட குருகை மன்னே-கைங்கர்ய ஸ்ரீ யும் அளித்து அருளி
அமரர்க்கும் ஏற விட்டான்-தேவர்களிலும் மேலாக்கி அருளி விட்டான் –

விண்ணுளாரிலும் சீரியரே -திரு விருத்தம் -என்றுமாம் –

அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –

———-

குருகூர் நகர் எம்பிரான் அடியாரோடும் கூடி அன்புற்று
ஒரு கூரையில் உறைவார்க்கும் உண்டே எம்மை யுள்ளும் சுற்றும்
இருகூர் வினையும் அறுத்து இறப் பார்க்கும் இயற்கை யவ்வூர்
அருகு ஊர் அருகில் அயல் அயலார்க்கும் அரியதன்றே. 52–

எம்மை யுள்ளும் சுற்றும்–ஜீவாத்மாக்களான நம்மை -புறத்தே அன்றே அகத்தும் சூழ்ந்து உள்ள
இருகூர் வினையும் அறுத்து-மிகுதியாக புண்ய பாப இருவகை கர்மங்களையும் துணித்து
சஞ்சிதம் ப்ராரப்தம் ஆகாம்யம் அனைத்தையும் என்றுமாம்

இறப் பார்க்கும்-அவ்வினை மரத்தை வேரோடு அழியும் படி செய்வதான
பார்த்தல் -செய்தல் என்ற பொருளில் வந்தது இங்கு
இயற்கை-தன்மை கொண்ட
குருகூர் நகர் எம்பிரான் அடியாரோடும் கூடி -ஆழ்வார் அடியார் குழாங்களுடன் கூடி
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் -ஸ்ரீ மன் நாதமுனிகள் -ஸ்ரீ பராங்குச தாஸர் போல்வார்
அன்புற்று-அவர்கள் பக்கல் அன்பு பூண்டு அவரகள் அன்புக்கும் அபிமானத்துக்கும் இலக்காகியும் என்றுமாம்

இன்புற்று -பாட பேதம் –
ஒரு கூரையில் உறைவார்க்கும் உண்டே -அவர்களுடன் நித்ய வாஸம் செய்பவர்களுக்கும் உள்ளதேயாம்
தொண்டக்குடியாக இருந்தால் என்றபடி
மற்றும்
யவ்வூர் அருகு ஊர் அருகில் அயல் அயலார்க்கும் அரியதன்றே–சமீபத்தில் உள்ளாருக்கும்
அடுத்து அடுத்து வேறு ஊரில் உள்ளாருக்கும் உண்டே

அருகு ஊர் -நவ திருப்பதிகள்
அசலூர் -திரு வழுதி வள நாட்டில் உள்ளவை
அதன் அயலார் -ஆழ்வார் சம்பந்தம் உடையார் அனைவரும்
இரண்டு ஏவகாரங்களும் தேற்ற ஏவகாரம்

———-

தலைவன் பிரிந்த நிலையில் ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல் –

அன்றாத அன்றிலையும் அன்று வித்து என்னை அன்னையுடன்
பின்றாத வண்ணம் எல்லாம் பின்று வித்துப் பிழைக் கொழுந்தை
ஒன்றாத வண்ணம் உபாயம் இயற்றியது ஊழ் வினையை
வென்றான் குருகைப் பிரான் மகிழே யன்றி வேறில்லையே. 53–

அன்றாத அன்றிலையும் அன்று வித்து -எவருடன் பகை கொள்ளாத அன்றில் பறைவையுடனும் இப்பொழுது
என்னுடன் பகை கொள்ளும் படி செய்து அருளி
குருகு -கிரௌஞ்சம் -எப்பொழுதும் இணையுடனே இருக்குமே
அன்றுதல் – பகைத்தல்
அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டனை -கலியன்
என்னை அன்னையுடன் பின்றாத வண்ணம் எல்லாம் பின்று வித்துப் -என்னுடைய செவிலித் தாயுடன் மாறுபடத்
தகாத வகைகளில் எல்லாம் மாறுபாடச் செய்வித்து அருளி
பிழைக் கொழுந்தை ஒன்றாத வண்ணம் -இளஞ்சந்த்ரனை என்னுடன் வேறுபாடு கொள்ளும்படி
உபாயம் இயற்றியது –சூழ்ச்சி செய்து அருளியது
யாதோ என்னில்
ஊழ் வினையை வென்றான் குருகைப் பிரான் மகிழே யன்றி வேறில்லையே–விதியை வென்ற ஆழ்வாருடைய
மகிழம்பூ மாலையே தவிர வேறே ஒன்றும் இல்லையே

ஆழ்வார் மனக் கண்ணில் தோன்றி பாஹ்ய ஸம்ச்லேஷம் பெறாமல் வருந்தி அருளிச் செய்யும் பாசுரம் இது –

———–

வேறே நமக்கிவன் அன்புடை மெய்யடியான் என்றுள்ளம்
தேறேன் எனலது தேறத் தகும் செந் தமிழ்ப் புலவர்க்கு
ஏறே எதிகளுக்கு இன்னமுதே எறி நீர்ப் பொருநை
ஆறே தொடர் குருகூர் மறையோர் பெற்ற ஆணிப் பொன்னே. 54–

செந் தமிழ்ப் புலவர்க்கு ஏறே -கவி ஸிம்ஹமே
எதிகளுக்கு இன்னமுதே–ராமானுஜர் போல்வாருக்கு ஆராவமுதமே
எறி நீர்ப் பொருநை ஆறே தொடர் குருகூர் -அலை வீசுகின்ற நீர்ப்பெருக்கை யுடைய தாமிரபரணி
இடையறாது பாயப்பெற்ற திருக்குருகூரில் திரு அவதரித்த
மறையோர் பெற்ற ஆணிப் பொன்னே–வைதிகர்கள் பெறாப் பேறாகப் பெற்ற மாற்று உயர்ந்த அரும் பொன் போன்றவரே
வேறே நமக்கிவன் அன்புடை மெய்யடியான் என்றுள்ளம்
தேறேன் எனல் -இவன் சிறப்பாக அன்பு உள்ள அடியவன் என்று என்னைக் குறித்து மனப் பூர்வகமாக நம்ப மாட்டேன் என்று கொள்ளாதே
அது தேறத் தகும் -அங்கனம் மெய்யடியவனாக என்னை நீ நம்பத்தகும்

———–

பொன்னை உரைப்பது அப் பொன்னொடன்றே புலமைக் கொருவர்
உன்னை உரைத்துரைத் தற்கு உளரோ உயற் நாற் கவியும்
பின்னை உரைக்கப் பெறுவ தல்லால் பெருந் தண் குருகூர்
தென்னை யுரைக்கும் இயற்கும் இசைக்கும் சிகாமணியே. 55–

பெருந் தண் குருகூர்-மகிமையுடைய -நீர் வளம் மிக்கு குளிர்ந்த திருக்குருகூரில் திரு அவதரித்த
தென்னை யுரைக்கும் இயற்கும் இசைக்கும் சிகாமணியே. -இயல் தமிழுக்கும் இசைத் தமிழுக்கும்
தலையில் அணியும் ரத்ன ஆபரணம் போல் அனைவராலும் கொண்டாடப்படுபவரே
பொன்னை உரைப்பது அப் பொன்னொடன்றே –மாற்று அறிய பொன்னோடே அன்றோ பொன்னை உரைத்துப் பார்ப்பது
அங்கனம் நோக்கப் புகும் இடத்து
உயற் நாற் கவியும் பின்னை உரைக்கப் பெறுவ தல்லால் — –எல்லை நிலமாகச் சொல்லத் தக்கது அல்லால்
புலமைக் கொருவர் உன்னை உரைத்துரைத் தற்கு உளரோ –உமக்கு ஈடாக மாற்று சொல்ல ஒருவரும் இல்லையே

தமிழுக்கு தென் மொழி -தென் சொல் -தென் காலை போல் தென்னுரை என்றும் உண்டே
ஆடவர் மேல் மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும் தென்னுரையில் கேட்டு அறிவது உண்டு -பெரிய திருமடல்
குருகையர் கோன் யாழின் இசை வேதத்து இயல் -என்பதால் சிகாமணி

———–

மகட் பாற் காஞ்சி -நின் மகளை எனக்குத் தருக என்ற அரசனிடம் மாறுபடுவது

மணித்தார் அரசன் தன் ஓலையைத் தூதுவன் வாய் வழியே
திணித்தா சழியச் சிதைமின் தலையை எம் தீ வினையைத்
துணித்தான் குருகைப் பிரான் தமிழால் சுருதிப் பொருளைப்
பணித்தான் பணி யன்றெனில் கொள்ளும் கொள்ளு மெம் பாவையையே. 56–

எம் தீ வினையைத் துணித்தான்–கர்மங்களைப் போக்கி அருளியவரும் –
பண்டை பல்வினை பாற்றி அருளியவர் அன்றோ
தமிழால் சுருதிப் பொருளைப் பணித்தான்-வேதம் தமிழ் செய்து அருளியவரும் –
அவ்வருமறையின் பொருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் அன்றோ
குருகைப் பிரான் பணி யன்றெனில் –அவர் கட்டளை அன்றாயின்
மணித் தார் அரசன் தன் ஓலையைத் –இரத்தின மாலை அணிந்த அரசனது திரு முகத்தை
தூதுவன் வாய் வழியே திணித்து -தூதன் வாயினுள்ளே புகுத்தி அவன் வாயை அடைத்து
ஆசழியச் சிதைமின் தலையை -பெண்ணைக் கொடு என்று
கேட்ட குற்றம் தீருமாறு -அத் தூதன் தலையைத் துணுத்திடுங்கோள்
கொள்ளும் கொள்ளு மெம் பாவையையே-எம் குருகைப் பிரான் அன்றி மற்ற ஓர் அரசன் எமது பெண்ணைக் கொள்வான் போலும்
பாவை -சித்திரப் பிரதிமை -கண் மணிப் பாவை –கொல்லிப் பாவை போல் –

———–

பாவைத் திருவாய் மொழிப் பழத்தைப் பசும் கற்பகத்தின்
பூவைப் பொரு கடல் போதா அமுதைப் பொருள் சுரக்கும்
கோவைப் பணித்த எம் கோவை யல்லா என்னைக் குற்றம் கண்டென்
நாவைப் பறிப்பினும் நல்லவரன்றோ மற்றை நாவலரே. 57–

பழத்தைப் -கனிந்த பலம் போன்ற இனிமை யுடையதும்
பசும் கற்பகத்தின் பூவைப் -வேண்டுவார் வேண்டுவற்றைக் கொடுப்பதாலும் அனைவரும்
தலை மேல் கொள்ளும் சிறப்பினாலும் கற்பக வ்ருக்ஷத்தின் மலர் போன்றதும்
பொரு கடல் போதா அமுதைப் -அலை மோதும் பாற் கடலில் நின்றும் தோன்றாத ஆரா அமுதமாயும் –
இல் பொருள் உவமை இது
பொருள் சுரக்கும் கோவைப் -நல்ல பொருளை சுரக்கும் காம தேனு வாகவும்
திருவாய் மொழிப் பாவைப் பணித்த எம் கோவை -திருவாய் மலர்ந்து அருளிச் செய்த எமது ஸ்வாமியான ஆழ்வாரை
யல்லா -அல்லாமல் பிறரை முன்பு கவி பாடிய
என்னைக்
குற்றம் கண்டென்-இவரை முன்னமே பாடாத குற்றம் யுடையவனாக உணர்ந்து
மற்றை நாவலரே என் நாவைப் பறிப்பினும் நல்லவரன்றோ -மற்றைப் புலவர்கள் எனது நாக்கைத் பிடுங்கினாலும் நல்லவர் அல்லரோ
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அது குறித்து அனுதாபம் கொண்டு அக்கழிவு இரக்கத்தால் கூறியது இது –
நாவலர் -கவனம் பிரசங்கம் போதனை முதலிய நாவின் வன்மை யுடையவர் என்றவாறு –

———-

நாவலந் தீவில் கவிகள் எல்லாம் சில நாள் கழியப்
பூவலந் தீவது போல்வ அல்லால் குருகூர்ப் புலவன்
கேவலந் தீங்கு அறுப்பான் கவி போல் எங்கும் போய்க் கெழுமிக்
கூவலந் தீம் புனலும் கொள்ளுமே வெள்ளம் கோளிழைத்தே. 58–

நாவலந் தீவில் –அம் நாவல் தீவில் -அழகிய ஐம்பூத் வீபத்தில்
கவிகள் எல்லாம் சில நாள் கழியப்–பிறர் பாடிய பாடல்கள் சில நாள்கள் கழிகிற அளவிலே
பூவலந் தீவது போல்வ அல்லால் -மலரின் மணம் மென்மை முதலிய சிறப்புக்கள் கெட்டு அழிவது போலேத் தாம் கெட்டிடுமே யல்லாமல்
குருகூர்ப் புலவன் கேவலந் தீங்கு அறுப்பான் கவி போல் -பண்டை வல் வினை பற்றி அருளும் ஆழ்வார் பாசுரங்கள் போல்
எங்கும் போய்க் கெழுமிக்-எல்லா இடங்களிலும் பரவி
வெள்ளம் கோளிழைத்தே–வெள்ளத்தைப் போவதாய்
ஆழ் பொருளான பரமாத்மாவைத் தெளிவாகக் காட்டி அருளும்
பிரளய வெள்ளத்திலும் அழியாமல் நிலை நின்று
அதுக்கும் மேலே
கூவலந் தீம் புனலும் கொள்ளும்மே –கிணற்றில் உள்ள அழகிய இனிய நீரையும் கொள்ள மட்டுமோ -மாட்டாது என்றபடி
கிணற்று நீர் -போல் அந்தர்யாமித்வத்தையும் விளக்கிக் காட்ட வல்லது -என்றபடி

————–

இழைத்தார் ஒருவரும் இல்லா மறைகளை இன் தமிழால்
குழைந்தார் குருகையிற் கூட்டம் கொண்டார்க்கும ரித் துறைவர்
மழைத்தார் தடக் கைகளால் என்னை வானின் வரம்பிடை நின்று
அழைத்தார் அறிவும் தந்தார் அங்கும் போயவர்க்கு ஆட் செய்வனே. 59–

இழைத்தார் ஒருவரும் இல்லா மறைகளை -அபவ்ருஷேயமான நித்யமான வேதங்களை
இன் தமிழால் குழைந்தார் -தமிழால் தளைக்கச் செய்து அருளியவரும் –
குருகையிற் கூட்டம் கொண்டார்-திருக் குருகையில் சேர்ந்த -திரு அவதரித்தவரும் —
ஸ்ரீ மதுரகவி ஆழ்வாருடனும் இங்கேயே சேர்ந்து அவருக்கும் அருள் புரிந்தார்
குமரித் துறைவர்-கன்னியாகுமரி என்னும் தீர்த்தத்துக்கு உரியவருமாகிய ஆழ்வார்
பாண்டிய மன்னனை -குமரித் துறைவன் என்றும் கன்னித் துறைவன் என்றும் சொல்வது உண்டே
வானின் வரம்பிடை நின்று–பரமபதத்தை எல்லையில் நின்று கொண்டு
மழைத்தார் தடக் கைகளால் என்னை அழைத்தார் -மேகம் போன்ற வண்மையான திருக்கைகளால்
என்னை அவ்விடத்துக்கு வா என்று அழைத்தார்
அறிவும் தந்தார் -அது மாத்ரமும் இல்லாமல் அங்கு செல்லுவதற்கு உரிய தத்வ ஞானத்தையும் தந்து அருளினார்
அங்கும் போயவர்க்கு ஆட் செய்வனே–ஆதலால் இங்கு அர்ச்சா ரூபியான ஆழ்வாருக்கு
கைங்கர்யம் செய்வதோடு நிற்காமல் அங்கும் சென்று அவருக்கே அடிமை செய்வேன் என்கிறார் –

———–

ஆட் செய்யலாவ தெல்லாம் செய் தடி யடைந்தே னதன்றித்
தாட் செய்ய தாமரை என் தலை ஏற்றனன் தண் குருகூர்
நாட் செய்ய பூந்தொடை மாற னென்றேன் இனி நாட் குறித்துக்
கோட் செய்ய லாவதுண்டே யென்றனாருயிர் கூற்றினுக்கே. 60–

ஆட் செய்யலாவ தெல்லாம் செய் தடி யடைந்தேன் –அடிமைத் தொழில்கள் அனைத்தையும் செய்து
ஆழ்வார் திருவடி இணைகளை அடைந்தேன்
அதன்றித்-அது மட்டும் அல்லாமல்
தாட் செய்ய தாமரை என் தலை ஏற்றனன் –திருப்பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொருத்தப் பெற்றேன்
தண் குருகூர் நாட் செய்ய பூந்தொடை மாற னென்றேன் –ஆழ்வார் திரு நாமத்தையும் வைபவத்தையும்
திரு அவதார ஸ்தல மஹாத்ம்யத்தையும் பாராட்டிக் கூறினேன்
இனி-இப்படி ஆழ்வாரை சரண் அடைந்து ஏற்றிய பின்பு
நாட் குறித்துக் கோட் செய்ய லாவதுண்டே யென்றனாருயிர் கூற்றினுக்கே–யம பயம் தான் உண்டோ
உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன்
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறு கப் பெறா

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-41-50- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

July 23, 2021

மூர்த்தத்தினை இம் முழு ஏழ் உலகு முழுகுகின்ற
தீர்த்தத்தினைச் செய்ய வேதத்தினைத் திருமால் பெருமை
பார்த்தற்கு அருளிய பாரதத்தைப் பணித்தானும் நின்ற
வார்த்தைக் குருகைப் பிரானும் கண்டான் அம் மறைப் பொருளே. 41–

மூர்த்தத்தினை–ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தையும்
இம் முழு ஏழ் உலகு முழுகுகின்ற தீர்த்தத்தினைச் –ஸமஸ்த உலகங்களும் அடங்கும் இடமான
ஸ்வயம் பரிசுத்தமான பர ப்ரஹ்மத்தின் தன்மையையும்
செய்ய வேதத்தினைத் -செவ்வியை யுடைய வேதங்களையும்
திருமால் பெருமை பார்த்தற்கு அருளிய பாரதத்தைப் –ஸ்ரீ கீதாச்சார்யன்
அர்ஜுனனுக்கு உபதேசித்து அருளிய ஸ்ரீ பகவத் கீதையை யுள் அடக்கிய மஹா பாரதத்தை
பணித்தானும் -அருளிச் செய்த வேத வியாச பகவானும்
நின்ற வார்த்தைக் குருகைப் பிரானும் -நிலை நிற்கும் திவ்ய ஸூ க்திகள் அருளிச் செய்து அருளிய ஆழ்வாரும்
நின்ற வார்த்தை -நிலை பெற்ற புகழ் என்றுமாம் –
ஆகிய இருவருமே
கண்டான் அம் மறைப் பொருளே-ரஹஸ்ய வேத ஸாரார்த்தங்களை அறிந்தவர்கள்
பணித்தானும் கண்டான் -குருகைப் பிரானும் கண்டான் என்றவாறு –

———

பொருள் வயிற் பிரியும் தலைவனுக்குத் தோழி தலைவியின் ஆற்றாமை கூறுதல் –

பொருளைச் சுவை யென்று போவ தெங்கே குரு கூர்ப் புனிதன்
அருளைச் சுமந்தவள் கண்ணின் கடை திறந்து ஆறுபட்டுக்
குருளைச் சுமந்து வெளி பரந்தோட் டரும் கொள்ளை வெள்ளம்
உருளைச் சுடர் மணித் தேரை அந்தோ வந்து உதைக்கின்றதே. 42–

குரு கூர்ப் புனிதன் அருளைச் சுமந்தவள் -ஆழ்வாரது கருணையை மிகுதியாகப் பெற்றவளான தலை மகளினது
கண்ணின் கடை -கண்களின் நுனி இடத்தை
திறந்து -திறந்து -அவ்வழியாக வெளிப்பட்டு
ஆறுபட்டுக்–ஒரு ஆறாகி
குருளைச் சுமந்து வெளி பரந்து ஓட்டரும்–பலவகை விலங்கின் குட்டிகளை இழுத்து மேற் கொண்டு
வெளியான நிலம் எங்கும் பரவி ஓடுவதான
கொள்ளை வெள்ளம்-மிகுதியான கண்ணீர்ப் பெருக்கானது
உருளைச் சுடர் மணித் தேரை அந்தோ வந்து உதைக்கின்றதே.–சக்கரங்கள் பூண்ட -ரத்தினங்கள் பதித்த
தலைமகன் தேரை வந்து மோதுகின்றதே
பிரயாணத்துக்குத் தடை செய்கின்றது என்றவாறு

இங்கனமாக
பொருளைச் சுவை யென்று போவ தெங்கே –தலைமகன் செல்வதை இனியது என்று எண்ணி –
அதன் பொருட்டு இவளைப் பிரிந்து செல்வது எவ்வாறு என்றவாறு –

கண்ணின் கடை திறந்து ஆறுபட்டுக்
குருளைச் சுமந்து வெளி பரந்தோட் டரும் கொள்ளை வெள்ளம்-என்றதும்
தேரை அந்தோ வந்து உதைக்கின்றதே-என்றதும்
அதிசய யுக்தி வகையால் கண்ணீர்ப் பெருக்கை காட்டியவாறு –

உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற -பெரியாழ்வார் –
ஓட்டம் தந்து என்பதையே ஓட்டந்து என்று விகாரப்பட்டது

ஆழ்வார் கம்ப நாட்டாரை விஷயீ கரித்து திவ்ய தேச யாத்திரை செர்ல்ல யத்தனிக்க
அப்பிரிவை ஆற்றாது நின்ற நிலையை அன்பர்கள் ஆழ்வார் பக்கலிலே
விண்ணப்பம் செய்தல் இதுக்கு ஸ்வா பதேசம் –

————

மருங்கு அணைதல் –

வந்து அடிக் கொண்டன கொங்கைகள் மாறன் குருகை வஞ்சி
கொந்து அடிக் கொண்ட குழலும் கலையும் குலைந்தலைய
பந்து அடிக்குந் தொறும் நெஞ்சம் பறை யடிக்கின்றது என்றால்
செந்தடித் தன்ன மருங்கிற்குண்டோ நிற்கும் சிக்கனவே. 43–

மாறன் குருகை வஞ்சி-ஆழ்வார் திரு நகரியிலே வஞ்சிக்கொடி போல் உள்ள இந்த இளைய மாதினிடத்தே
கொங்கைகள் -வந்து அடிக் கொண்டன -கொங்கைகள் -மங்கைப் பருவம் தோன்ற
வளர்ந்து மார்பின் இடம் எல்லாம் தம்மிடமாகக் கொண்டன
இங்கனம் தனது பாரம் மிக்கதானால்
கொந்து அடிக் கொண்ட சூழலும் கலையும் குலைந்தலைய–பூங்கொத்துக்கள் நிறைய சூட்டப் பட்ட கூந்தல் பாரமும்
உடுத்த ஆடையும் நிலை குலைந்து சோருமாறு -இம் மெல்லியலாள்
பந்து அடிக்குந் தொறும் நெஞ்சம் பறை யடிக்கின்றது –இவள் இடைக்கு என்னாகுமோ என்று
நெஞ்சம் பட பட என்று துடிக்கின்றது என்றால்
செந்தடித் தன்ன மருங்கிற்குண்டோ நிற்கும் சிக்கனவே.–செவ்விய மின்னல் போன்ற இவள் இடைக்கு
இப்பாரங்களை -துவளாது நின்று -சுமக்கும் வல்லமை இருக்குமோ

வாடிடை நோக்கி வருந்தினன் போல் ஆடமை தோழியை ஆர்வமோடு அணைதல்

இவரது பக்தி வளர்ச்சியும் ப்ராணாமம் முதலிய முயற்சிகள் நிலை குலையும்படி நேர்கிற
பிரபஞ்ச போக லீலைக்கு அவர் உரியர் அல்லாமையும்
அவரது வைராக்யத்தின் முதிர்ச்சியையும் பாராட்டிக் கூறும் வார்த்தை இதுக்கு ஸ்வா பதேசம்

இடை அழகு -ஒன்றும் பொறாத வைராக்யத்தையே காட்டும்
வேறு ஒன்றின் தொடர்பு உண்டானால் இடையே இல்லாதபடி இடையறாத அன்பின் மிகுதியைக் காட்டும்
கொங்கை பக்தி -பகவத் பாகவத அனுபவ உபகரணம்
வந்து அடிக் கொள்ளுதல் –அதன் முதிர்ச்சி -பரம பக்தியாக பரிணமித்தல்
கொந்து அடிக் கொண்ட குழல் -விதி முறைப்படி செய்யும் பிரணாமம்

—————

கன வாயினவும் துரியமும் ஆயவையும் கடந்து
மன வாசகங்களை வீசிய மாறனை மா மறையை
வினவா துணர்ந்த விரகனை வெவ் வினையைத் தொலைத்த
சின வாரணத்தைக் குருகைக்கு அரசனைச் சேர்ந்தனமே. 44–

கன வாயினவும் -ஸ்வப்ன அவஸ்தையின் வகைகளும்
துரியமும் –துரிய அவஸ்தையும்
ஆயவையும் கடந்து-மற்ற அவற்றின் இனமான ஜாக்ரத ஸூஷ்ப்தி அவஸ்தைகளையும் கடந்து
மன வாசகங்களை வீசிய -மநோ வாக்குகளைக் கடந்த
மாறனை –ஆழ்வாரை
மா மறையை வினவா துணர்ந்த விரகனை -எம்பெருமானாலேயே மயர்வற மதி நலம் அருளப்பட்ட ஆழ்வாரை
வெவ் வினையைத் தொலைத்த சின வாரணத்தைக் –யானை போன்றவரும் -சடகோபர் அன்றோ
குருகைக்கு அரசனைச் சேர்ந்தனமே–ஆழ்வாரை சரணம் அடைந்தோமே
ஆழ்வார் திருவடிகளே சரணம் -என்றபடி

———

சேராதன உளவோ பெருஞ் செல்வரக்கு வேதம் செப்பும்
பேராயிரம் திண் பெரும் புயம் ஆயிரம் பெய் துளவத்
தாரார் முடியாயிரம் குரு கூர்ச் சட கோபன் சொன்ன
ஆரா அமுதம் கவி ஆயிரம் அவ் வரியினுக்கே. 45–

அவ் வரியினுக்கே–அந்த ஸ்ரீ ஹரி -ஸ்ரீ மன் நாராயணனுக்கு
வேதம் செப்பும் பேராயிரம் -நாமோ ஸஹஸ்ரவான் -பேர் ஆயிரம் உடையான் அன்றோ
திண் பெரும் புயம் ஆயிரம் –தோள்கள் ஆயிரத்தாய்
பெய் துளவத் தாரார் முடியாயிரம்– திருத்துழாய் மாலை பொருந்திய முடிகள் ஆயிரத்தாய்
இப்படி அனைத்துமே ஆயிரமாக -எண்ணிறந்தவையாக -அமையப் பெற்ற எம்பெருமானுக்கு
குரு கூர்ச் சட கோபன் சொன்ன ஆரா அமுதம் கவி ஆயிரம் –வான் திகழும் சோலை மதிள் அரங்கன்
வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன் –
மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன் –
சேராதன உளவோ பெருஞ் செல்வரக்கு -மற்றும் இவருக்கு சேராத பொருள் உண்டோ –

————

தோழி இரங்கல் –

அரிவளை பொன் மகிழ் ஆயிழைக்கு ஈயும் கொல் அந்தி வந்து
முரிவளை முத்தும் சினையும் மயங்க முறை செறுத்து
வரி வளையும் அன்னமும் தம்மிலே வழக்காட வலம்
புரிவளை யூடறுக்கும் குருகூர் எம் புரவலனே. 46–

முரிவளை முத்தும் -பெரிய சங்கினால் பெறப்பட்ட முத்தும்
சினையும்-அன்னப்பறவை ஈன்ற முட்டையும்
மயங்க-நீர்த்துறையிலே கலந்து மாறாடினவாக
அவற்றைக் குறித்து
வரி வளையும் அன்னமும் -உள் சுழியை யுடைய சங்கும் அன்னப் பறவையும்
முறை செறுத்து தம்மிலே வழக்காட–ஒன்றன் பொருளை மற்றது தன்னது என்று மயங்குவதால்
நீதி முறை கடந்து தமக்குள்ளே -ஒன்றோடு ஓன்று வழக்காட
வலம் புரிவளை யூடறுக்கும்–வலம்புரி சங்கு சென்று நாடு நின்று அவற்றின் போரை விலக்குவதற்கு இடமான
குருகூர் எம் புரவலனே.-ஆழ்வாரான நம் தலைவர்
அந்தி வந்து-இன்று மாலைப் பொழுதில் மீண்டு வந்து
அரிவளை பொன் மகிழ் -வண்டுகள் சூழ்ந்து மொய்க்கப் பெற்ற அழகிய தனது மகிழம்பூ மாலையை
அரி வளை -தான் கவர்ந்த அபஹரித்த வளை என்றுமாம்
ஆயிழைக்கு ஈயும் கொல் -தேர்ந்து எடுத்து அணிந்த ஆபரணங்களை யுடைய இம்மட மங்கைக்குக் கொடுத்து அருள் வானோ

கம்ப நாட்டாழ்வாருக்கு மனக்கண்ணில் சேவை சாதித்து மறைந்த ஆழ்வார் இடம் பிரிவாற்றாமையாலே
அவர் ஸதா ஸாந்நித்யத்தை அபேக்ஷித்து ஆதாரத்தோடு கூறும் வார்த்தை இதுக்கு ஸ்வா பதேசம்
அரிவளை பொன் மகிழ்–சார க்ராஹிகள் மிக விரும்பி விடாத தம் காட்சி இன்பம்
ஆயிழை -ஆத்ம பூஷணம் -ஸத்குணவாதி
அந்தி வருதல் -உரிய சமயத்தில் உபேக்ஷியாது வருதல் –

——–

தலைவி கடலை நோக்கித் தேர் வழி தூரல் என்றல்

புரை துடைத்துப் பெரும் பொய்யும் துடைத்துப் பிறர் புகலும்
உரை துடைத் தங்குள்ள வூச றுடைத் தெம் முறு பிறவித்
துரை துடைத் தாட் கொண்ட தொண்டர் பிரான் துறை நீர்ப் பொருநை
கடை துடைக்குங் கடலே துடையேல் அன்பர் கால் சுவடே. 47–

புரை துடைத்துப் –ஐம் புலன்களால் உண்டாகும் குற்றங்களை போக்கி
பெரும் பொய்யும் துடைத்துப் -அவற்றுக்கு மூல காரணமான மகா மாயையும் போக்கி
பிறர் புகலும் உரை துடைத்து -புற சமயத்தார் வாதங்களை பொருந்தாமை காட்டிக் கழித்து
அங்குள்ள வூசல் துடைத்து -பரதத்வ நிர்ணயத்தில் தடுமாற்றத்தையும் தீர்த்து
எம் முறு பிறவித் துரை துடைத்து ஆட் கொண்ட -பிறவித்துயர் தீர்த்து கைங்கர்யமும் கொண்டு அருளிய
தொண்டர் பிரான் துறை நீர்ப் பொருநை-ஆழ்வார் திருமஞ்சன துறையுடைய தாமிரபரணி
கடை துடைக்குங் கடலே -பெரு வெள்ளமாக வந்து கரையை உடைக்கப் பெற்ற கடலே
துடையேல் அன்பர் கால் சுவடே.-கருணையால் நிர்ஹேதுகமாக சம்ச்லேஷித்து சென்ற தலைவனது
திருவடிச் சுவட்டை அழித்திடாதே

ஸம்ஸார ஆரணவத்தை நோக்கி கம்ப நாட்டாழ்வார் தமது மநோ ரதம் அழியாமல் இருக்க
பிரார்த்திப்பது இதுக்கு ஸ்வா பதேசம் –
கடலில் நதி கலப்பது -ஆழ்வார் சம்பந்தத்தை இந்த லீலா விபூதிக்குக் காட்டி உறவு கொண்டாடின படி

———————

செவிலித்தாய் நல் தாய்க்கு இருவர் காதலும் உரைத்தல் —

சுவடிறக்கத் தொடர் ஆசைக் களிற்றைத் தொடர்ந்திரண்டு
கவடிறக் கட்டிய பாசத் தளைக் கண் பரிந்து சங்கக்
குவடிறக் குத்திய மாறப் பெயர்க் கொலை யானை நங்காய்
இவடிறத்து ஒன்றும் படர்ந்தி வானம் இருள்கின்றதே. 48–

நங்காய்-செவிலித்தாய் நல் தாயை விளித்து
இரண்டு கவடிறக் -தனக்கு முன்னும் பின்னும் உள்ளனவாய்த்த தன்னைக் காட்டுதற்கு ஆதாரமான மரத்தறிகள் இரண்டும் ஓடிய
உள் பகை புறப்பகை -வஞ்ச வர்க்கம் இரண்டும் அழிய என்றவாறு தலை மகன் பக்ஷத்தில்
கட்டிய பாசத் தளைக் கண் பரிந்து -தன்னைக் கட்டிய கால் விலங்காகிய சங்கிலியின் பொறுத்து வாயைத் துணித்திட்டு
சுவடிறக்கத் தொடர் ஆசைக் களிற்றைத் தொடர்ந்து -மத ஜலம் பெருகுகிற அடையாளம் மிகுதியாகத் தொடர்ந்து
இருக்கப் பெற்ற திக்கஜத்தை நாடிச் சென்று -அதனோடு போர் தொடர்ந்து
சங்கம் குவடிறக் குத்திய -அழகிய மலைச் சிகரங்களை ஓடியுமாறு -தந்தங்களினால் குத்திய
மாறப் பெயர்க் கொலை யானை -மாறன் என்னும் பெயரை யுடைய கொல்லுதல் வல்ல யானையானது
படர்ந்தி வானம் இருள்கின்றதே–பிரிந்தாருக்குத் துன்பத்தைச் செய்கின்ற சாயம் காலத்திலேயே இருள் அடைகிற அளவிலே
இவள் திறத்து ஒன்றும் -இவள் பக்கல் தவறாது வந்து சேர்ந்து விடும்

ஆழ்வார் உரிய காலத்தில் வந்து கைக்கொள்ளுவார் என்பதே ஸ்வா பதேசம் –
கொலையானை -ராமானுஜ முனி வேழம் போல் -வி பக்ஷிகளை சித்ரவதை பண்ணவும்
தாம் பரிக்ரஹித்தவர்களை பட்டாபிஷேக யோக்யராம் படி பண்ணவும் வல்லவர் –
இந்த யானைக்கு மதம் -ப்ரஹ்மானந்தம்
சங்கக் குவடிறக் குத்திய மாறன் -சங்கப்பலகையில் கண்ணன் கழலிணை -ஏத்தி புகழ்ந்த ஐதிக்யம் அனுசந்தேயம்

———–

இருளாய்ப் பரந்த உலகங்களை விளக்கும் இரவி
பொருளாய்ப் பரந்தது தான் பொது நிற்றலின் மற்றது போல்
மருளாய்ப் பரந்த மயக்கத் துயக்கற்ற மாற னெங்கோன்
அருளால் சமய மெல்லாம் பரன் உண்டென்று அறிவுற்றதே. 49–

இருளாய்ப் பரந்த -இருள் மிக்குப் பரவப் பெற்ற
உலகங்களை -நில உலகத்தின் பகுதிகளை எல்லாம்
விளக்கும் -இருள் ஒழித்து விளங்கச் செய்கின்ற
இரவி-ஸூர்ய மண்டலம்
பொது நிற்றலின்-எல்லா வுயிர்கட்க்கும் பொதுப்பட உதவி செய்து நிற்றலால்
பொருளாய்ப் பரந்தது –உலகம் முழுவதும் காணப்படும் பொருளாய் விளங்கிற்று
அது போல்
மருளாய்ப் பரந்த மயக்கத் துயக்கற்ற மாற னெங்கோன்
அருளால் –பலரும் மருளும்படி பரவுகிற மாயையினால் ஆகும் சோர்வு இல்லாத மாறன் கருணையினால்
சமய மெல்லாம் பரன் உண்டென்று அறிவுற்றதே.–ஸ்ரீ மன் நாராயணன் உளன் என்று அறிந்து கொண்டனவே
வகுள பூஷண பாஸ்கரர் அன்றோ

——–

அறிவே உனைத் தொழுதேன் மற்றை ஆகம வாதியரைச்
செறிவேன் என ஒன்று சிந்தை செய்யாது செய்தாரை யில்லா
நெறிவே நின்றா நிலை யுணர்ந்தோன் குருகூர் நிலத்தைப்
பிறிவேன் எனவும் எண்ணா தென்னை வீடு பெறுத்தினையே. 50–

அறிவே -எனது உணர்வே
மற்றை ஆகம வாதியரைச் செறிவேன் என ஒன்று சிந்தை செய்யாது–வேதம் இருக்க அதனை விட்டு
அதற்கு மாறான ஆகமங்களை ப்ரமாணமாகக் கொண்டு துர்வாதம் செய்பவராகிய புறச் சமயத்தாரை சேர்வேன்
என்ற தீய சிந்தனை ஒன்றையும் கொள்ளாமல்
செய்தாரை யில்லா நெறிவே நின்றா நிலை யுணர்ந்தோன் குருகூர் நிலத்தைப் பிறிவேன் எனவும் எண்ணாது -தன்னைச் செய்தவர்
எவரையும் உடையது அல்லாததும் சன்மார்க்கத்தையே போதிப்பதுமாகிய வேதத்தில் ஊன்றி
பரதத்வத்தை அறிந்தவராகிய ஆக்வாறது திரு அவதார ஸ்தலமான திருக்குருகூரை விட்டுப் பிரிய எண்ணவும் செய்யாமல்
தென்னை வீடு பெறுத்தினையே-நீ முக்தி பெறவும் செய்து அருளினாயே -அந்த மஹா உபகாரகத்துக்கு
உனைத் தொழுதேன் –
உன்னை நான் நமஸ்கரித்தேன்

நெஞ்சமே நல்ல நல்ல உன்னைப் பெற்றால் என் செய்யோம் இனி என்ன குறைவினம் போல்
இங்கு தமது உணர்வைக் கொண்டாடுகிறார்

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-31-40- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

July 22, 2021

மெய்யும் மெய்யாது பொய்யும் பொய்யாது வேறு படுத்து
உய்யும் மெய்யாய உபாயம் வந்துற்றது உறு வினையைக்
கொய்யும் மெய் வாள் வலவன் குருகைக் கரசன் புலமை
செய் மெய்யன் தனக்கே தனித் தாளன்பு செய்த பின்னே. 31-

உறு வினையைக்-மிக்க கருமங்களை
கொய்யும் -அறுத்து ஒழிக்கின்ற
மெய் வாள் வலவன் –ஸத்ய வாக்காகிய வாள் படையின் தொழிலில் வல்லவரும்
குருகைக் கரசன் -திருக்குருகூருக்குத் தலைவரும்
புலமை செய் மெய்யன் தனக்கே -ஸ்வரூப ஞானம் உபதேசித்து அருளும் பிரதம ஆச்சார்யரான ஆழ்வாருக்கே
தனித் தாளன்பு செய்த பின்னே.–ஒப்பற்ற திருவடிகளில் நான் பக்தி செய்த பின்பே
எனக்கு
மெய்யும் மெய்யாது -உண்மைப்பொருளும் உண்மையாக விளங்கிற்று –
மெய் -ஜீவ பரமாத்ம ஸ்வரூபங்கள்
பொய்யும் பொய்யாது -பொய்மைப் பொருள்களும் பொய்யாகப் புலப்பட்டன
பொய் -தேகம் பிரகிருதி -பொய் நின்ற ஞானம் போல்வன
வேறு படுத்து-இங்கனம் பகுத்து அறிந்த பின்பே
உய்யும் -ஆத்மா உஜ்ஜீவனத்துக்கு உரிய
மெய்யாய உபாயம் வந்துற்றது -உண்மையான உபாயமும் எனக்கு வந்து ஸித்தித்தது

————-

செய்யன் கரியன் எனத் திரு மாலைத் தெரிந்துணர
வய்யம் கரி யல்ல மாட்டா மறை மதுரக் குருகூர்
அய்யன் கவி யல்லவேல் பிறவிக் கடலாழ்வது அல்லால்
உய்யும் வகை யொன்றும் யான் கண்டிலேன் இவ் வுயிர்களுக்கே. 32–

செய்யன் கரியன் எனத் திரு மாலைத் தெரிந்துணர-ஸ்ரீ யபதியை -செய்யன் கரியன் என்று ஆராய்ந்து அறிய
செய்ய வாய் செய்ய கண் செய்ய கால் செய்ய கை -செய்ய அவயவங்களையும்
நீல மேனி கருமையும் ஆராய்ந்து அறியார்கள் அன்றோ
கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே––ஸ்ரீ திருவாய் மொழி-6-1-7-என்றால் போலே
அடையாளங்களைத் திருந்தக் கண்டு
வய்யம் கரி யல்ல -வையகத்து உயிர்கள் சாக்ஷி யாக மாட்டாதே
மாட்டா மறை -வேதங்களும் அப்படியே
அவன் ஸ்வரூபத்தை இன்னது இப்படிப்பட்டது என்று உரைக்க சக்தி கொண்டவை அல்லவே
யாதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீண்டதே
ஆகவே
மதுரக் குருகூர் அய்யன் கவி யல்லவேல் –ஆழ்வாரது திவ்ய பிரபந்தங்கள் இல்லாமல் போயிருந்தால்
இவ் வுயிர்களுக்கே. பிறவிக் கடலாழ்வது அல்லால்-உயிர்கள் எல்லாம் பிறவிக் கடலில் ஆழ்ந்து போவது அல்லாமல்
உய்யும் வகை யொன்றும் யான் கண்டிலேன் -உஜ்ஜீவன உபாயம் ஒன்றுமே யான் கண்டேன் அல்லேன்

—————

உயிர்த் தாரையில் புக்கு உறு குறும்பாம் ஒரு மூன்றனையும்
செயிர்த்தார் குருகை வந்தார் திரு வாய்மொழி செப்பலுற்றால்
மயிர் தாரைகள் பொடிக்கும் கண்ணீர் மல்கும் மா மறையுள்
அயிர்த்தார் அயிர்த்த பொருள் வெளியாம் எங்கள் அந்தணர்க்கே. 33–

உயிர்த் தாரையில் புக்கு உறு –உயிர் செல்லுகிற வழியிலே உடன் சென்று கூடுகிற
குறும்பாம் ஒரு மூன்றனையும்–முக்குறும்புகளையும்
செயிர்த்தார் -வெறுத்து ஒழித்தவராகிய
குருகை வந்தார் திரு வாய்மொழி -திவ்ய பிரபந்தங்களை
செப்பலுற்றால்-ஓதி உணரத் தொடங்கினால்
எங்கள் அந்தணர்க்கே–எங்களை ஆள உரியவர்களாக ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் ஸ்ரீ மன் நாதமுனிகள் போல்வார்
மயிர் தாரைகள் பொடிக்கும் –உடம்பில் உள்ள மயிர் ஒழுங்குகள் சிலிர்ப்பு கொள்ளும்
கண்ணீர் மல்கும் –ஆனந்தக் கண்ணீர் நிறைந்து பெருகப் பெறும்
மா மறையுள் அயிர்த்தார் அயிர்த்த பொருள் வெளியாம் –பொருள் உணர்த்துவதற்கு அரிய பெருமையை யுடைய
வேதங்களின் கருத்துக்களில் புற சமயத்தார் சந்தேகித்த அர்த்தங்கள் எல்லாம் விளங்கும்

—————-

அந்தணர்க்கோ நல் அருந்தவர்க்கோ அறி யோகியராய்
வந்தவர்க்கோ மறம் வாதியர்க்கோ மதுரக் குழை சேர்
சுந்தரத் தோளனுக்கோ அவன் தெண்டர்கட்கோ சுடர் தோய்
சந்தனச் சோலைக் குருகைப் பிரான் வந்து சந்தித்ததே. 34–

அந்தணர்க்கோ -வேதியர்கட்காகவோ
நல் அருந்தவர்க்கோ -சிறந்த தபஸ்ஸூக்கள் செய்பவர்கட்காககோ
அன்றி யோகியராய் வந்தவர்க்கோ -அல்லது யோக அப்யாஸம் செய்பவர்கட்காகவோ
மறம் வாதியர்க்கோ -பிணக்கர்களாய் புற சமயத்தார்கட்காகவோ
மதுரக் குழை சேர் சுந்தரத் தோளனுக்கோ –ஸ்ரீ மன் நாராயணனுக்கட் காகவோ
அவன் தெண்டர்கட்கோ -அவன் அடியார்களுக்காகவோ
சுடர் தோய்-சந்தன ஸூர்யர்கள் விண் ஒளி கள் தன் மேல் படும்படி
தொடர்பு உயர்வு நவிற்சி அணி -சோலைகளின் மிக்க உயர்ச்சியைக் காட்டும் –
சந்தனச் சோலைக் குருகைப் பிரான் வந்து சந்தித்ததே.–ஆழ்வாரது திரு அவதாரம் –
இவர்களுக்கு எல்லாம் தனித்தனியே ப்ரயோஜன கரமாம் படி அன்றோ இவரது ஆவிர்பாவம்
எனவே இவ்வாறு விகல்பித்து அருளிச் செய்கிறார் –

————-

சந்ததியும் சந்திப் பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலுகிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை யறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுதார் செய்யும் தேவரையே. 35–

சந்ததியும் -எழுத்து புணர்ச்சி இலக்கணத்திலும்
சந்திப் பதமும் -அங்கணம் புணர்வதற்கு உரிய பாதங்களின் இலக்கணத்திலும்
அவை தம்மிலே தழைக்கும் பந்தியும் -அச் சொற்களில் மிக்கு விளங்குகிற பொருள் இலக்கண வகைகளிலும்
பல் அலங்காரப் பொருளும் -பலவகை அலங்கார அணி இலக்கண விஷயங்களிலும்
பயிலுகிற்பீர்-பழகுகிற இலக்கண புலவீர்காள்
தென் குருகூர் தொழுதார் செய்யும் தேவரையே. –திருக்குருகூரை சேவித்து
வந்தியும் -நமஸ்கரியுங்கோள்
வந்திப்பவரை வணங்கும் வகை யறிவீர்-அந்த ஆழ்வார் அடியார்களை வணங்குகிற ஸ்ரீ வைஷ்ணவர்களை
வணங்கும் விதத்தை அறிவீர்கள்
சிந்தியும் -அவர்களை தியானமும் செய்யுங்கோள் –

———-

பாங்கி வெறி விலக்கிச் செவிலியருக்கு அறத்தொடு நிற்றல்

தேவரை ஏறிய மூதறி வாட்டியைச் சீரழித்தீர்
பூவரை ஏறிய கோதை யுள்ளம் புகுந்தார் எவர் என்று
அவரை ஏறி மொழிகின்ற போது இயம்பிற்று இறைவர்
மூவரையோ குரு கூரரையோ சொல்லும் முந்துறவே. 36–

தேவரை ஏறிய மூதறி வாட்டியைச் சீரழித்தீர்–தெய்வ ஆவேசம் கொண்ட கட்டு விச்சியை சீர் கெடுத்து விட்டீர்கள்
பூவரை ஏறிய கோதை –மலர்களை அளவாகச் சூட்டப் பெற்றுள்ள கூந்தலுடைய இவ்விள மங்கையுடைய
யுள்ளம் புகுந்தார் எவர் என்று -மனத்தில் புகுந்து வறுத்துபவர் யார் என்று நீங்கள் வினவியத்தைக் குறித்து
அக்கட்டுவிச்சி
அவரை ஏறி மொழிகின்ற போது இயம்பிற்று -நமது உறை யுள்ளின் எல்லையில் ஏறி-
கட்டுவிச்சி கட்டேறி போல் – வந்து விடை கூறுகிற போது சொன்னது
இறைவர் மூவரையோ -த்ரிமூர்த்திகளையோ
குரு கூரரையோ -ஆழ்வாரையோ
சொல்லும் முந்துறவே. –என் முன்னே சொல்லுங்கோள்

தேவு மற்று அறியேன் –மதுரகவி நிலையைப் பெற்ற கம்ப நாட்டாழ்வார்

—————-

துறவாதவர்க்கும் துறந்தவர்க்கும் சொல்லவே சுரக்கும்
அறவா அவை இங்கு ஓர் ஆயிரம் நிற்க அந்தோ சிலர் போல்
மற வாதியர் சொன்ன வாசக மாம் மலட்டாவைப் பற்றி
கறவாக் கிடப்பர் அங்கு என் பெறவோ தங்கள் கை வலிப்பே. 37–

துறவாதவர்க்கும் -இல்லத்தாருக்கும்
துறந்தவர்க்கும் -துறவறத்தாருக்கும்
சொல்லவே சுரக்கும்-ஓதும் அளவிலேயே சகல புருஷார்த்தங்களையும் அளிக்கும்
அறம் ஆ அவை இங்கு ஓர் ஆயிரம் நிற்க -பரம தர்ம ரூபமான ஆழ்வாரது திவ்ய பிரபந்தங்கள் சிறப்புற்று இங்கே இருக்க
அந்தோ சிலர் போல்
மற வாதியர் சொன்ன வாசக மாம் மலட்டாவைப் பற்றி–மலட்டுப் பசுவை பலன் தருவதாகக் கொண்டு
கறவாக் கிடப்பர் -கறந்து கொள்ள முயல்வர்
அங்கு என் பெறவோ தங்கள் கை வலிப்பே.-அங்கு கை நோவப் பெறுவது பலன் ஒன்றுமே இல்லையே –
இது என்ன பேதைமை
குரு பரம்பரை உள்ள ஸம்ப்ரதாயத்து பால் அன்றோ இது –

————-

மடலூரத் துணிந்த தலை மகளின் வழி ஒழுகித் தோழி இரங்குதல் –

கை தலைப் பெய்து அரும் பூசலிட்டுக் கவியால் உலகை
உய்தலைச் செய்ததும் பொய் என்றுமோ சென்று அவ்வூர் அறிய
வைதலைத்து ஏசுதுமோ குருகூர் என்னும் ஆறு அறியாப்
பைதலைக் கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய பண்பனையே. 38–

குருகூர் என்னும் ஆறு அறியாப்–தலை மகன் இருக்கும் திவ்ய தேசப் பெயரையும்
வாயினால் சொல்லும் விதத்தையும் அறியாது இருந்த
பைதலைக் -இளைமை யுடைய இம்மகளை -சிறு கிளிப் பைதலே -திருவாய் மொழியிலும் உண்டே
கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய –முறை கேடு தலைக்கு ஏறி பனை மடல் குதிரையின் மேல் ஏறுமாறு செய்த
கோகு உகட்டுதல் –கும்பிடு நட்டமிட்டு ஆடி கோகு கட்டுண்டு உழலாதார் –திருவாய் மொழியிலும் உண்டே
கோகு -அடைவு கேடு
உகட்டுதல் -தலை மண்டியிடுதல் -மேலிடுதல்
பண்பனையே–குணத்தை யுடைய தலை மகனை -எதிர்மறை லக்ஷணம்
சென்று–அவனது ஊருக்கு யாம் சென்று
கை தலைப் பெய்து –கைகளைத் தலை மேல் வைத்துக் கொண்டு
அரும் பூசலிட்டுக் -பொறுத்தற்கு அரிய பேர் ஆரவாரத்தைச் செய்து
கவியால் உலகை உய்தலைச் செய்ததும் பொய் என்றுமோ -ஆழ்வார் பாசுரங்களால் உலகத்தின் துன்பம் தீர்ந்து
வாழுமாறு செய்தனன் என்பதையும் பொய் என்று சொல்லி முறையிடுவோமோ
அவ்வூர் அறிய வைதலைத்து ஏசுதுமோ -அங்குள்ளார் அனைவரும் அறியும்படி நிந்தித்து கலக்கம் விளைத்துப் பழிப்போமோ

கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய பண்பனையே
கம்ப நாட்டாழ்வாருக்கு ஆழ்வார் முதலிலே பக்தியை உண்டாக்கி -அதனை அபிவிருத்தியாம்படி செய்து –
அவரை பிரபந்தம் பாடும்படி செய்வித்தது ஆழ்வாரது திரு அருளே –
ஸாந்நித்யம் கால விளம்பம் பொறாமல் -இவ்வாறு கூறும் வகையால் அவரை ஆற்றுதல்

—————

பண்ணும் தமிழும் தவம் செய்தன பழ நான்மறையும்
மண்ணும் விசும்பும் தவம் செய்தன மகிழ் மாறன் செய்யுள்
எண்ணும் தகைமைக்கு உரிய மெய் யோகியர் ஞானம் என்னும்
கண்ணும் மனமும் செவியும் தவம் செய்த காலத்திலே. 39–

மகிழ் மாறன் செய்யுள் எண்ணும் தகைமைக்கு -திவ்ய பிரபந்தங்களை சிந்தனை செய்வதாகிய பெருமைக்கு
உரிய மெய் யோகியர்-ஏற்ற ஞான பக்தி யோகங்களை யுடையவர்களுடைய
பாவின் இன்னிசை பாடித்திரிவனே -மதுர கவி ஆழ்வார் -அருள் பெற்ற நாதமுனிகள் போல்வாருடைய
ஞானம் என்னும் கண்ணும் மனமும் செவியும் – –அறிவாகிய அகக் கண்ணும் -மனமும் -காதுகளும்
தவம் செய்த காலத்திலே
பண்ணும் தமிழும் -குறிஞ்சி முதலிய பண்களும் தமிழ் மொழியும் தவம் செய்தன
பழ நான்மறையும் மண்ணும் விசும்பும் தவம் செய்தன –

———-

காலத்திலே குருகூர் புக்குக் கைக் கொண்மினோ கடை நாள்
ஆலத்திலே துயின்றோர் கொண்டவை யிரண்டா யமைந்த
கோலத்திலே முளைத்துக் கொழுந் தோடிக் குணங்கடந்த
மூலத்திலே செல்ல மூட்டிய ஞானத்து எம் மூர்த்தியையே. 40–

கடை நாள்–கல்பாந்த காலத்திலே
ஆலத்திலே துயின்றோர்–ஆலிலையில் யோக நித்ரை செய்து அருள்பவரான எம்பெருமான்
கொண்ட–கரும வசத்தால் அன்றியே இச்சையாலே எடுத்துக் கொண்ட
ஐ யிரண்டா யமைந்த கோலத்திலே –தசாவதாரங்களிலே
முளைத்து–அடிக் கொண்டு
கொழுந் தோடி-கொழுந்து விட்டு வளர்ந்து
குணங்கடந்த மூலத்திலே செல்ல மூட்டிய -இழி குணங்களைக் கடந்த ஆதி மூலப் பெருமாளாகிய
அந்த ஸ்ரீ மன் நாராயணன் பக்கலிலே -பலரும் செல்லுமாறு —
தமது திவ்ய பிரபந்தம் மூலமாக பலருக்கும் ஆதரத்தை உண்டாக்கி அருளிய
ஞானத்து எம் மூர்த்தியையே–தத்வ ஞான பரி பூர்னரான ஆழ்வாரையையே
குருகூர் புக்குக் கைக் கொண்மினோ -கால விளம்பம் இன்றி -பழுதே பல பகலும் போக்காது –
திருக்குருகூர் சென்று சரண் புக்கு உஜ்ஜீவியுங்கோள்
ஞானத்தை மூட்டிய ஆழ்வார் என்றுமாம் –

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்