Archive for the ‘Thondar -adi-podi Aazlvaar’ Category

ஸ்ரீ திரு மாலை-34-உள்ளத்தே உறையும் மாலை-ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 1, 2022

உள்ளத்தே உறையும் மாலை யுள்ளுவார் உணர்வு ஓன்று இல்லாக்
கள்ளத்தேன் நான் உன் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்லிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி என்று
வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே

பதவுரை

உள்ளத்தே உறையும் மாலை–நெஞ்சினுள்ளே வாஸஞ்செய்கிற எம்பெருமானாகிய உன்னை
கள்ளத்தேன் நானும்–கள்ளனாகிய அடியேனும்
தொண்டு ஆய்–(உன்) அடிமையிலேயே அந்வயித்தவனாய்
தொண்டுக்கே கோலம் பூண்டு–அவ்வடிமைக்கு உரிய வேஷங்களை அணிந்து
(இருந்த போதிலும்)
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம்–சிந்திப்பவர்கள் சிந்திப்பதெல்லாவற்றையும்
உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லா-சிந்திப்பதற்குறுப்பான அறிவு சிறிதும் இல்லாத
உடன் இருந்து அறிதி என்று–நீ கூடவே யிருந்து அறிகின்றாய் என்று
(நான் உணர்ந்து)
நான்-நான்
என் உள்ளே–எனக்குள்ளே
வெள்கிப்போய்–மிகவும் வெட்கப் பட்டு
விலவு அற சிரித்திட்டேன்–விலாப் பக்கத்து எலும்பு முறியும்படி சிரித்தேன்.

தொண்டுக்கே கோலம் பூண்டு வெள்கிப்போய் என்னுள்ளே
நான் விலவறச் சிரித்திட்டேன் என்று அந்வயம்.

விளக்க உரை

நாம் ஓரிடம் தேடி ஓட வேண்டாதபடி நம் ஹ்ருதயத்திலுள்ளே எப்போதும் வந்து நெருங்கி யிருக்கிற உன்னைச்
சிந்தைசெய்வதற்கு ஏற்ற அறிவு இல்லாத ஆத்மாபஹாரக் கள்ளனாகிய அடியேன்
உனக்கு அடிமைசெய்பவன்போலத் தோன்றி
“இவன் பரமபாகவதன், பரமபக்தன்” என்று கண்டாரடங்கலும் புகழும்படியாக
“தொடையொத்த துவளமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி” என்றபடி
கைங்கர்ய வேஷங்களைப் போட்டுக் கொண்டு திரிந்த போதிலும்
“இன்னாரின்னார் இன்னது நினைக்கிறார்கள்” என்று எல்லாருடைய நினைவையும் நீ நெஞ்சினுள்ளேயே இருந்து
கொண்டு அறிகின்றாயென்று உனது ஸர்வஜ்ஞத்வத்தை நான் அநுஸந்தித்தவாறே
‘ஐயோ! நமது கள்ளவேஷம் வெளிப்படையாயிற்றே!’ என்று வெட்கமடைந்து
எனக்குள்ளேயே நான் சிரித்துக்கொண்டேனென்கிறார். –

ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே” என்ற கருத்து ஈற்றடியில் உறையும்.

விலவறச் சிரித்திட்டேன் என்றது – எல்லை கடந்து சிரித்தமையைக் கூறியவாறு.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-33–மெய் எல்லாம் போகவிட்டு–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 1, 2022

மெய் எல்லாம் போகவிட்டு விரி குழலாரில் பட்டு
பொய் எல்லாம் பொதிந்து கொண்ட போழ்கனேன் வந்து நின்றேன்
ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால்
பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்யனேனே –

பதவுரை

மெய்எல்லாம்–மெய்யான (நினைவு, சொலவு, செயல் ஆகிய ) எல்லாவற்றையும்
போகவிட்டு–நீக்கி விட்டு
விரி குழலாரில் பட்டு–விரிந்த கூந்தலையுடைய மாதர் திறத்தில் ஆழங்காற்பட்டு (அகப்பட்டு)
பொய் எல்லாம்–எல்லா விதமான பொய்களையும்
பொதிந்து கொண்ட–நிறைத்துக் கொண்டிருக்கிற
போழ்க்கனேன்–க்ருத்ரிமனான அடியேன்
ஐயனே–ஸ்வாமின்!!
அரங்கனே!-;
உன் அருள் என்னும் ஆசை தன்னால்–தேவரீருடைய க்ருபையிலே யுண்டான ஆசையினாலே
வந்து நின்றேன்-;
(நான் எப்படிப்பட்டவனென்றால்)
பொய்யனேன் பொய்யனேன் பொய்யனேன் –மனமொழி மெய்களாகிற மூன்று கரணங்களிலும் பொய்யன்;
வந்து நின்றேன்–(தேவர் திருமுன்பே வெட்க மற்று) வந்து நின்றேன்.

விளக்க உரை

தம்முடைய தாழ்வுகளை வாயாறச் சொல்லி கதறி தேவரீர் உடைய கருணை
யொன்றைய எதிர்பார்திருப்பவ னடியேன் என்கிறார்.

மனம், மொழி, மெய், என்கிற முக்கரணங்களிலும் சத்தியம் நிலையாய் இருக்கப் பெற்ற
உத்தமாதிகாரியாய் இருக்க முடியாமற் போனாலும் ஏதாவது ஒரு காரணத்திலாவது சத்தியமாய் இருக்கலாம்;
அப்படிப்பட்ட நிலைமையும் எனக்கு இல்லை;
விஷயாந்தர ப்ராவண்யத்தாலே பொய் தவிர வேறுயில்லாதவனாயிராநின்றேன்.
ஆயினும் “தேவரீருடைய திருவருள் இருக்குமானால் நமக்கொரு குறைவுமில்லை” என்கிற
விச்வாஸமொன்று மாத்திரம் என்னிடத்தில் உள்ளதாதாலால்
அக்கருணையிலுள்ள நசையாலே,
வெட்கமும்
அச்சமுமற்றுத் திருமுன்பே வந்து நின்றேன் என்கிறார்.

போழ்க்கன் – முறை கேடன், வழிதப்பினவன்.
‘போட்கன்’ என்றலுமுண்டு.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-32–ஆர்த்து வண்டு அலம்பும் சோலை—ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 1, 2022

எம்பெருமான் ஆழ்வாரை நோக்கி
“ஸம்ஸாரிகளுக்குங்கூட ஆகாதபடி அஸாரமான நீர் என்னிடத்தில் வந்து நிற்பதேன்?” என்று கேட்க;
என்னுடைய மூர்க்கத்தனத்தாலே வந்து நின்றேன் காண் என்கிறார்.

ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கம் தன்னுள்
கார்த்திரள் அனைய மேனிக் கண்ணனே உன்னைக் காணும்
மார்க்கம் ஒன்றும் அறிய மாட்டா மனிசரில் துரிசனாய
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே

பதவுரை

வண்டு ஆர்த்து அலம்பும் சோலை அணி–வண்டுகள் ஆரவாரம் செய்துகொண்டு அலைந்து
கொண்டிராநின்ற சோலைகளாலே அழகு பெற்றிருக்கிற
திருஅரங்கம் தன்னுள்–ஸ்ரீரங்கத்திலே (பள்ளி கொண்டருளாநின்ற)
கார்திரள் அனைய மேனி கண்ணனே–மேகஸமூஹத்தை ஒத்த திருமேனியையுடைய பெருமானே!
உன்னை காணும் மார்க்கம் ஒன்று அறியமாட்டா–உன்னை ஸாக்ஷாத்தரிக்கக் கூடிய உபாயமொன்றையும் அறியமாட்டாதவனாய்
மனிசரில்–மனிதர்களுக்குள்
துரிசன் ஆய–கள்ளனாய்,
மூர்க்கனேன்–பிடித்தது விடமாட்டாத மூடனாகிய அடியேன்
வந்து நின்றேன்–(வேறு புகலற்று, தேவர் திருமுன்பே) வந்து நின்றேன்;
மூர்க்கனேன் மூர்க்கனேன் –என்னுடைய தண்மையை நன்றாகக் கடாக்ஷித்தருள வேணுமென்றபடி.

விளக்க உரை

வண்டுகள் பலவகைப்பட்ட மலர்களிற் பெருகும் தேனைப் பருகுவதற்காகப் பேராரவாரம் செய்துகொண்டு
அலையாநிற்கப்பெற்ற சோலைகள் சூழ்ந்த திருவரங்கம் பெரியகோயிலில் காளமேகங்களெல்லாம்கூடி
இங்ஙனே ஒரு உருவெடுத்துக்கிடக்கின்றனகொல் என்று சங்கிக்கும்படியாகப் பரமபோக்யமாய்ப்
பள்ளிகொண்டருளாநின்ற பெருமானே!
தேவரீரை ஸாக்ஷாத்கரிக்கப் பெறும் உபாயம் இன்னதென்று அறியமாட்டாதவர்களில் பெருங்கள்ளனாகிய அடியேன்
என் நிலைமையை நினைத்துப்பார்த்தால் தேவர் திருமுன்பே வந்து நிற்கைக்கு யோக்யதையே இல்லை;
ஆயிருக்கச்செய்தேயும் யுக்தாயுக்தம் ஆராயமாட்டாத மூர்க்கனாகையாலே லஜ்ஜாபயங்களற்று வந்து நின்றேனென்கை.

அவனைக் காணும் மார்க்கங்களாவன :-
கர்மயோகம்,
ஜ்ஞாநயோகம்,
பக்தியோகம்,
அவதாரஹஸ்யஜ்ஞானம்,
புருஷோத்தமவித்யை,
புண்யக்ஷேத்ரவாஸம்,
திருநாமஸங்கீர்த்தனம் முதலிய உபாயங்கள்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-31–தவத்துள்ளார் தம்மில் அல்லேன்–ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 1, 2022

தவத்துள்ளார் தம்மில் அல்லேன் தனம் படைத்தாரில் அல்லேன்
உவர்த்த நீர் போலே என்தன் உற்றவருக்கு ஒன்றும் அல்லேன்
துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கறத் துரிசனானேன்
அவத்தமே பிறவி தந்தாய் அரங்க மா நகர் உளானே

பதவுரை

அரங்கமா நகருளானே!–;
தவத்துளார் தம்மில் அல்லேன் –தபஸ்ஸை அனுஷ்டித்தவர்களில்
தனம் படைத்தாரில் அல்லேன்–(ததீயாராதனம் முதலியவற்றுக்காகப்) பொருள் ஸம்பாதித்தவர்களிலும் சேர்ந்தவனல்லேன்;
என்றன் உற்றவர்க்கு–என்னைச் சேர்ந்தவர்களுக்கு
உவர்த்த நீர் போல–உப்புத் தண்ணீர் போல
ஒன்றும் அல்லேன்–ஒன்றுக்கும் உதவாதவனாயிரா நின்றேன்.
துவர்த்த செவ்வாயினார்க்கே–பழுப்பேறின அதரத்தையுடைய மாதர்கட்கும்
துவக்கு அற–ஸம்பந்தம் அற்றுப் போம்படி
துரிசன் ஆனேன்–கள்ளனாயினேன்
(இப்படிப்பட்ட எனக்கு)
பிறவி அவத்தமே தந்தாய்–ஐந்மத்தை வ்யர்த்தமாகவே கொடுத்தாய்

விளக்க உரை

தவமாவது – சரீரத்தை வருத்தப்படுத்திச் செய்யும் காரியம்;
முமுக்ஷுக்களாயிருப்பார் மோக்ஷார்த்தமாகத் தவம் புரிவர்கள்;
புபுக்ஷுக்களாயிருப்பார் ஸ்வர்க்கம் முதலிய ப்ரயோஜ நாந்தரங்களைக் குறித்துத் தவம் புரிவார்கள்;
நான் ஒருவிதமான தவமும் செய்திலேன்.

ஸத்விஷயத்திலே விநியோகப்படுகிற தனத்தை நான் படைக்கவில்லை என்கிறார்
‘தனம் படைத்தாரிலல்லேன்’ என்பதனால்.
“பொருள் கையுண்டாய்ச் சொல்லக்காணில் போற்றி யென்றேற்றெழுவர்” (திருவாய்மொழி – கூ- 1-3) என்றபடி
கையில் நாலுகாசு நடமாடுமளவு கழிந்தால் பந்துக்களும் நோக்கமாட்டார்களென்ற
கருத்துடன் இரண்டாமடி அருளிச்செய்கிறார்.
உவர்த்த நீர் போல உப்புத் தண்ணீரை முகத்திலே இறட்டிக்கொண்டால் கண்விழிக்க வொண்ணுதபடி
கரிக்குமாபோலே ஏன்னை அவர்கள் நேர்முகம் பார்க்கமுடியாதபடி அவர்கட்கு நான் தீயனாய்விட்டேனென்கை.

இப்பாசுரத்திற்கு உள்ளுறை பொருள் :-
(தவத்துளார் இத்யாதி) உன்னுடைய நிர்ஹேதுக விஷயீகாரத்துக்கு விரோதியாக
நான் ஒரு ஸ்வப்ரவ்ருத்தியும் செய்யவில்லை:
கையில் காசுள்ளவனாயிருந்தேனாகில் ஆகிஞ்சந்யத்தில் குறையுடையேனாவேன்; அங்ஙனுமில்லை;
அகிஞ்சநர்களில் தலைவனாயிராநின்றேன்.

கொண்டபெண்டிர் மக்களுற்றார் சுற்றத்தவர் என்ற ஆபாஸபந்துக்களோடே போதுபோக்காநின்றேனாகில்
“சேலேய்கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாத்தாய் தந்தையுமவரே யினியாவாரே” என்னும்
நிலைவாய்ந்த பிறகு நாம் கைப்பற்றுவோமென்று நீ ஆறியிருக்கலாம்; அங்ஙனுமில்லை:

பந்துக்களுக்கு என்னால் ஆகக் கூடிய நன்மை ஒன்றுமில்லாமையாலே அவர்கள் என்னை விட்டொழிந்தனர்;

சேலேய்கண்ணி யரிடத்தும் நான் கள்ளனாய்ப் போந்தபடியாலே அவர்களும் என்னைத் துரத்திவிட்டனர்.

இனி உன்னுடைய விஷயீகாரம் இடையூறின்றி உள்புகுரலாமென்றவாறு.

இந்த உள்ளுறை பொருளுக்கு நான்காமடியோடே ஸங்கதி எங்ஙனேயென்னில்:
இப்படி உன் விஷயீகாரத்திற்கு நான் உசிதனுயிருக்கச்செய்தேயும்
என்னை நீ உபேக்ஷிப்பதால் என்னை நீ வீணே படைத்தாயிறே என்கிறார்.
அவத்தம் -அவத்யம் என்ற வடசொல் விகாரம்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-30 -மனத்திலோர் தூய்மை இல்லை–ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 1, 2022

“குளித்து மூன்றனலையோம்பும்” என்ற பாட்டுத் தொடங்கி ஐந்து பாட்டுகளாலே
தம்மிடத்தில் ஒருவித நன்மையும் கிடையாதென்பதை வெளியிட்ட ஆழ்வாரை நோக்கி
எம்பெருமான், “ஆழ்வீர்! உம்மிடத்தில் ஒரு நன்மையும் இல்லையென்றீர்; இருக்கட்டும்,
ஒருவித நன்மையுமில்லாதாப் போலே ஒருவித தீமையுமில்லா திருந்தாலும் போதும்; அப்படி உண்டோ?” என்று கேட்க;
நநிந்திதம் கர்மததஸ்திலோகே ஸஹஸ்ரசோ யந்நமயாவ்ய தாயி” என்ற ஆள வந்தாரைப்போலே
என்னிடத்திலில்லாத தீமை உலகத்திலேயே இல்லை!
எல்லா வித தீமைகளும் என் பக்கல் சூடிகொண்டிருக்கின்றன வென்கிறார்.

மனத்திலோர் தூய்மை இல்லை வாயிலோர் இன் சொல் இல்லை
சினத்தினால் செற்றம் நோக்கித் தீ விளி விளிவன் வாளா
புனத் துழாய் மாலையானே பொன்னி சூழ் திருவரங்கா
எனக்கு இனிக் கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே

பதவுரை

புனம் துழாய் மாலையானே–தந்நிலத்திலே வளர்ந்து செவ்விதான திருத்துழாயை மாலையாக அணிந்துள்ளவனே!
பொன்னி சூழ் திரு அரங்கா-காவேரியாலே சூழப்பட்ட ஸ்ரீரங்கத்தில் சாய்ந்தருள் பவனே!
என்னை ஆள் உடைய கோவே-அடியேனை அடிமையாகக் கொண்ட ஸ்வாமியானவனே!
மனத்தில்–(என்) மநஸ்ஸிலே
ஓர் தூய்மை இல்லை–தெளிவு கொஞ்சமும் இல்லை;
வாயில் ஓர் இன் சொல் இல்லை–வாயிலே ஒரு நற்சொல்லும் கிடையாது;
வாளா–நிஷ்காரணமாக
சினத்தினால்–கோபத்தாலே
செற்றம் நோக்கி–பகைமை தோற்றப் பார்த்து
தீ விளி விளிவன்–மிகக் கொடுமையாக வார்த்தை சொல்லா நிற்பேன்;
எனக்கு–இப்படிப்பட்ட துர்க்குணங்கள் நிறைந்த எனக்கு
இனி கதி என் சொல்லாய் –இனி மேல் என்ன கதி? அருளிச் செய்ய வேணும்.

விளக்க உரை

மனத்தில் ஓர் தூய்மை இல்லை —
காமம், க்ரோதம், லோபம், மோஹம், மதம் மாத்ஸர்யம் என்று சொல்லப்படும்
பல துர்க்குணங்களில் ஒன்றாவது குறைந்தால் கொஞ்சமாவது சித்த ஸூத்தி ஏற்படும்,
அப்படியுமில்லை யென்கை.

நெஞ்சு பூர்ணமாகக் கெட்டுப்போயிருந்தாலும் வாயில் நாலு நல்ல சொற்கள் வந்தாலாவது நாலுபேர் பார்த்து
‘இவன் நல்லவன்’ என்று சொல்லக்கூடும், இப்படியுமில்லை;
தப்பிப் போயும் ஒரு நல்லவார்த்தை வாயில் வருவதில்லை.
ஒருவன் நல்லாடை யுடுத்து நால்வர்க்கு நல்லனாகத் திரிந்தானாகில்
அவனுடைய அந்த மேன்மையைப் பொறுக்கமாட்டாமல் நிஷ்காரணமாக
நான் அவர்களைப் பழித்துக்கூறும் சொற்களுக்கு எல்லையேயில்லை.

இப்படி தமது தீமைகளைப் பரக்க உரைத்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்
“ஆழ்வீர்! பேற்றுக்கு ப்ரதிபந்தகம் எவ்வளவு வேணுமோ அவ்வளவும் உம்மிடத்தில் இருப்பதாகக் கூறுகின்றீர்;
இப்படிப்பட்ட உம்மை நான் என்செய்யவல்லேன்.
உம்முடைய கருமபலனை நீர் அநுபவிக்கக்கடவீர்!” என்று உபேக்ஷை தோற்ற அருளிச் செய்ய,

அதற்கு உத்தரமாகப்
“புனத்துழாய் மாலை யானே” என்கிறார்;
நம்முடைய குறைகளைப் பார்த்து அகலவொண்ணாதபடி, ஒழிக்க வொழியாத உறவே ஹேதுவாகக்
கைப்பற்றக் கடவோமென்று காக்கு மியல்வினனாயிருக்கு மிருப்புத்தோற்றத் தனிமாலை யிட்டிருப்பவரன்றோ தேவரீர்;

நாங்கள் கருமபலனை அனுபவிப்பதற்கு
நீர் தனிமாலை யிட்டுக்கொண்டிருப்பானேன்? என்கை.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-29 -ஊரிலேன் காணி இல்லை -ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 1, 2022

தமக்கு ஒருவிதத்தாலும் ‘பேறு தப்பா’ தென்று நிச்சயித்து
விசாரமற்றிருப்பதற்கு
இடமில்லாமையை விரிய உரைக்கும் பாசுரம் இது.

ஊரிலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
கார் ஒளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்க மா நகர் உளானே –

பதவுரை

பாரில்–இந்தப் பூமியிலே
ஊர் இலேன்–தேவரீர் உகந்திருக்கும் திருப்பதிகளிலே பிறக்கப் பெற்றிலேன்;
காணி இல்லை–(திருப்பல்லாண்டு பாடுகை முதலானவற்றுக்காக விடப்பட்ட) காணியாட்சியும் எனக்கில்லை;
உறவு இல்லை–பந்துக்களுமில்லை;
மற்று ஒருவர் இல்லை–தோழன்மார் முதலானவர்களும் ஒருவருமில்லை.
நின் பாதம் மூலம்–தேவரீருடைய திருவடிகளையும்
பற்றிலேன்–(தஞ்சமாகப்) பற்றாதவனா யிராநின்றேன்;
பரமமூர்த்தி–மிகச் சிறந்தவனே!
கார் ஒளி வண்ணனே–மேகத்தின் காந்திபோன்ற மேனி நிறமுடையவனே!
கண்ணனே–ஸ்ரீ க்ருஷ்ணனே!
கதறுகின்றேன்–(வேறு புகலற்று உன்னையே) கூப்பிடா நின்றேன்;
அம்மா–ஸ்வாமிந்!
அரங்கமா நகருளானே!-;
களை கண் ஆர் உளர்–(உன்னை யொழிய வேறு ரக்ஷகர் யார் இருக்கிறார்!

விளக்க உரை

ஊரிலேன் –
வேறு எவ்வித யோக்யதையுமில்லாமற் போனாலும் ஸாளக்ராமம், கோயில் திருமலை, பெருமாள் கோயில்
முதலிய திவ்யதேசங்களில் ஜந்மமாவது கிடைத்தால் அதைக் கொண்டு உய்வு பெறலாம்.
அப்படிப்பட்ட ஒரு தேசத்திலும் எனக்குப் பிறவி நேரவில்லையே!

காணி யில்லை.–
திவ்யதேசத்தில் ஐந்மமில்லாவிடினும் உதரபோஷணார்த்தமாக ஏதாவது கொஞ்சம் க்ராம பூமிகள் ஏற்பட்டிருந்தால்
அங்குப் போக வேண்டிய காலங்களில் யாத்ருச்சிகமாக இடையிலே ஒரு திவ்யதேவஸேவை கிடைக்கக்கூடும்
அப்படிப்பட்ட ப்ரஸக்தி நேருவதற்கு ஒரு குழியளவு காணியுமில்லை யென்கிறார்.

இவையொன்றுமில்லையாகிலும்
திவ்யதேசவாஸிகளோடு உறவு இருக்குமாகில்
பந்து க்ருத்ய பரிபாலனத்துக்காகச் சிலகாலம் அங்குப்போகவும்
அதடியாக பகவத்ஸேவை கிடைக்கவும் ப்ரஸக்தியுண்டு;
அப்படிப்பட்ட உறவினர்களும் எனக்கில்லை.

ஆனபின்பு ஒரு வழியிலும் உன்னைப்பெற உபாயமில்லாமையாலே “ நின்பாத மூலம் பற்றிலேன்” என்கிறார்.

இப்படி ஒரு கைம்முதலுமில்லாதவனென்ற காரணத்தினால் என்னை நீ விடலாகாது;
கெட்டுப்போன உடைமையைப் பெறுவதற்கு உடையவன் முயற்சி செய்யுமாபோலே
கெட்டுப் போன அடியேனைப் பெறுவதற்கு நீர் முயலவேண்டும்படியான இங்கொழிக்க வொழியாத உறவு
இருப்பதை நோக்கவேணுமென்கிறார்,
பரமமூர்த்தி என்று தொடங்கி.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-28-உம்பரால் அறியலாகா –ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 1, 2022

உம்பரால் அறியலாகா யொளி உளார் ஆனைக்காகிச்
செம் புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார்
நம்பர மாயதுண்டே நாய்களோம் சிறுமை யோரா
எம்பிராற்கு ஆட் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே

பதவுரை

உம்பரால் அறியல் ஆகா ஒளி உளார்–தேவர்களாலும் (இவ்வகை யென்று பரிச்சேதித்து) அறிய முடியாத
தேஜோ மயமான பரமபதத்தை விபூதியாகவுடைய எம்பெருமான்
ஆனைக்காகி–கஜேந்திராழ்வானுக்காக
செம்புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி–சிவந்த மாம்ஸத்தை புஜித்து வாழ்கிற முதலையின் மேலே சீற்றங்கொண்டு
வந்தார் –(மடுவின் கரையிலே) எழுந்தருளினார்.
(இப்படி ஆஸ்ரித பக்ஷபாதியாய் ரக்ஷிக்குமவனிருக்க;)
நம்பரம் ஆயது உண்டே–(நம்முடைய ரக்ஷணத்தில்) நமக்கொரு பழுவுண்டோ?
நாய்களோம் சிறுமை ஓரா –நாய்போல் நிஷ்ருஷ்டரான நம்முடைய தண்மையை ஆராயாதவரான
எம்பிராற்கு–எம்பெருமானுக்கு
ஆள் செய்யாதே–அடிமை செய்யப் பெறாமல் (இருக்கிற நான்)
என் செய்வான் தோன்றினேன்–எதுக்காக பிறந்தேன்!

விளக்க உரை

மடுவின் கரையிலே முதலையின் வாயில் அகப்பட்டு வருந்தின கஜேந்த்ராழ்வான்
“நாராயணா! ஓ! மணிவண்ணா நாகணையாய்!” என்று அழைத்தவாறே
அரை குலையத் தலை குலைய மடுவின் கரையிலே ஓடி வந்தவனன்றோ எம்பெருமான்;
இப்படி ஆஸ்ரித ஸுலபனாய் ஆஸ்ரித பக்ஷபாதியான எம்பெருமானிருக்க அவனைக் கடகாகப் பற்றாமல்
நம்மை நாமே ரக்ஷித்துக் கொள்ளப் பார்ப்பதும் ஒரு காரியமாகுமோ?
ஆனால் பரமோத்க்ருஷ்டனான அவன் பரம நிக்ருஷ்டரான நம்மை ஒரு பொருளாக நினைப்பனோ என்று சிறிது சங்கிக்கலாம்;
இதுவும் அவனுடைய ஸ்வரூபத்தை அறியாதாருடைய சங்கையாகும்;
‘இவன் நீசன், இவன் உத்கிருஷ்டன்’ என்று ஏற்றத் தாழ்வுகளைப் பார்ப்பவனல்லன் எம்பெருமான்.
இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயத்திலே சிறிதும் அடிமை செய்யப்பெறாத பாவியேன் ஏதுக்காக
ஒரு மனிதனாகப் பிறந்தேனென்று தலையிலடித்துக் கொள்ளுகிறபடி
பரமபதத்தை ஒளி என்ற சொல்லாற் கூறியது வடமொழி வேதப்ரக்ரியையை அடியொற்றியாம்.

“செம்புலாலுண்டு வாழும்” என்று
முதலைக்கு இட்ட அடைமொழியின் கருத்து என்னென்னில்;
“திர்யக்ஷு நைவஹி விபக்ஷதயோபசார:” (அதிமாநுஷஸ்தவம்) என்றபடி
எதிரியாக நினைக்கவும் தகாத ஒரு ஹீநஜந்துவை எதிரியாக்கி அதன்மேல் கோபங்கொண்டது
ஆஸ்ரித பக்ஷபாதத்தலான்றோ என்னுங் கருத்து வெளிவரும்.

நம்பரம் –
பழுவு என்னும் பொருளதான பர: என்ற வடசொல் பரமெனத் திரிந்தது.
“ந்யஸ்ய த்வத் பாதபத்மே வரத நிஜபரம் நிர்ப்பரோ நிர்ப்பயோஸ்மீ” என்று அநுஸந்திப்பது
அறிவுடையார் செயலாதலால் நமக்குப் பரமான தொன்றுமில்லையென்க.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-27- குரங்குகள் மலையை நோக்க—ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 1, 2022

மநுஷ்யனாய்ப் பிறந்தவன் செய்யக்கூடிய கிஞ்சித்காரங்களில் மாத்திரமே யன்று
எனக்கு அந்வயமில்லையென்பது;
ஸாமந்யமான திர்யக்குகள் செய்யக்கூடிய கிஞ்சித்காரமம் பாவியேன்
செய்யப் பெற்றிலேன் என்று வருந்துகின்றார்.

குரங்குகள் மலையை  நூக்கக் குளித்து தாம் புரண்டிட்டு ஓடித்
தரங்க நீர் அடிக்கல் உற்ற சலமிலா வணிலம் போலேன்
மரங்கள் போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே –

பதவுரை

குரங்குகள்–வாநர வீரர்கள் (கிஞ்சித்கரித்து ஸ்வரூபம் நிறம் பெறுவதற்கு)
மலையை நூக்க –மலைகளைத் தள்ளிக் கொண்டு வர
குளித்து புரண்டிட்டு ஓடி–நீரிலே முழுகி (கரையிலுள்ள உலர்ந்த மணலிலே) புரண்டு ஓடி
தரங்கம் நீர் அடைக்கல் உற்ற–அலைக் கிளர்ச்சியை யுடைய கடலைத் தூர்க்கையிலே ஒருப்பட்ட
சலம் இலா–கபடமற்ற
அணிலும் போலேன்–அணில்களையும் ஒத்திருக்கின்றேனில்லை;
மரங்கள் போல் வலிய நெஞ்சம்–மரங்களைப் போலே கடிநமான நெஞ்சை யுடையனாய்
வஞ்சனேன்–வஞ்சநையையே தொழிலாக யுடையனாய்
அளியத்தேன்–அருமந்த மநுஷ்யனான நான்
அரங்கனார்க்கு–அழகிய மணவாளனுக்கு
நெஞ்சு தன்னால் –பாவநா வ்ருத்தியாலுங்கூட
ஆள் செய்யாதே–அடிமை செய்யாமல்
அயர்க்கின்றேன்–அநர்த்தப்படா நின்றேன்.

விளக்க உரை

ஸ்ரீராமாவதாரத்தில் பெருமாள் இலங்கைநகர் எழுந்தருள்வதற்காகக் கடலில் அணை கட்ட நேர்ந்தபோது
வாநர வீரர்கள் மலைகளைக் கொணர்ந்து எறிந்து கடலைத் தூர்ப்பதைக் கண்ட அணிற்பிள்ளைகள்
‘இவ் வாநரங்கள் தமது சக்திக்கு இயன்ற காரியத்தைச் செய்து பெருமாள் விஷயத்திலே கிஞ்சித்கரித்தால்
நாமும் நமது சக்திக்கு ஏற்றவாறு இப்பெரிய காரியத்திலே சிறது கிஞ்சித்கரிப்போம்’. என்றெண்ணி,
எல்லா அணிற்பிள்ளைகளும் கடலிலே முழுகுவது,
உடனே அந்த ஈரவுடம்போடே கரைமேல் மணலில் புரண்டு உடலில் ஒட்டிக்கொண்ட மணல்களைக் கடலிலே கொண்டு உதறுவதாய்
இப்படிப்பட்ட ஒரு காரியத்திலே ஸேதுபந்தன கைங்கரியத்திற்கு உதவிபுரிந்ததாக ஒரு இதிஹாஸம் உண்டு;
அதனை அருளிச்செய்கிறார் முன் இரண்டடிகளில்.

வாநரங்கள் போலவும்
அணிற்பிள்ளைகள் போலவும்
சரீர ச்ரமப்பட்டு ஒருகைங்கரியமும் செய்யமுடியாமற் போயினும்,
நெஞ்சாலேயாவது எம்பெருமானை நினைத்து அவ்வழியாலே பகவத் கைங்கர்யபரர்களில் ஒருவனாக நிற்கலாமே;
அதுவுமில்லாமல் என் அருமருந்தன்ன மானிடப் பிறவியைப் பாழே போக்கினேனே! என்று கதறுகின்றார் பின்னடிகளில்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-26-போது எல்லாம் போது கொண்டு —ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 1, 2022

“கடல்வண்ணா! கடல்வண்ணா!!” என்று கதறின ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்,
‘த்ரைவர்ணிகாதிகாரமான உபாயங்களில் உமக்கு அந்வயமில்லையென்றீர்; இருக்கட்டும்;
ஸர்வாதிகாரமான அர்ச்சகம், ஸ்தோத்ரம் முதலியவற்றில் எதாவது அந்வயமுண்டோ? என்று கேட்க,
ஐயோ! ஒன்றிலும் அந்வயமில்லையே! என்று கையை விரிக்கிறார்.

போது எல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக் குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே
ஏதிலேன் அரங்கற்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே

பதவுரை

போது எல்லாம்–எல்லாக் காலங்களிலும்
போது கொண்டு –பூக்களைக் கொண்டு
உன் பொன் அடி புனைய மாட்டேன் –உன்னுடைய அழகிய திருவடிகளிலே ஸமர்ப்பிக்க மாட்டுவேனல்லேன்;
தீது இலா மொழிகள் கொண்டு–குற்றமற்ற சொற்களினால்
உன் திருக் குணம் செப்ப மாட்டேன் –உன்னுடைய நற்குணங்களைக் கீர்த்தநம் செய்ய மாட்டுவேனல்லேன்;
காதலால் அன்பு –உண்மையான பக்தியால் உண்டாகிற அபிநிவேசத்தை
நெஞ்சம் –நெஞ்சிலே
கலந்திலேன்–வைத்துக் கொண்டிருக்கின்றேனில்லை;
அது தன்னாலே–ஆதலால்
அரங்கர்க்கு–அழகிய மணவாளனாகிய தேவரீர்க்கு
ஏதிலேன்–ஒரு காரணத்தாலும் ஸ்பர்சிக்கப் பெற்றவனல்லேன்;
(இப்படிப்பட்ட நான்)
என் செய்வான் தோன்றினேனே–எதற்காகப் பிறந்தேனோ (அறியேன்)
எல்லே -ஐயோ!

விளக்க உரை

“கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும், முள்ளார் முளரியும்ஆம்பலும் முன் சண்டக்கால்,
புள்ளாயோரேனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கென்று உள்ளாதா ருள்ளத்தை உள்ளமாக்கொள்ளோமே” என்றபடி
கண்ணிற்கண்ட பூக்களைக் கொணர்த்து பெருமாள் திருவடிகளிலே ஸமர்பிக்க வேண்டியது ப்ராப்தமாயிருக்க,
அது செய்யமாட்டுகிறிலேன்;

இவ்வளவு கஷ்டமும் வேணடா; வாயில்வந்த நாலு சொற்களைச் சொல்லி ஸ்தோத்ரமானது செய்யலாமே;
அதுவும் செய்யப் பெற்றிலேன்;

அவ்வளவு சிரமமும் வேண்டா; நெஞ்சிலேயாவது சிறிது ஸ்நேஹம் வஹிக்கலாமே;
அதுவும் பெற்றிலேன்;

இப்படி ஒருவிதத்தாலும் எப்பெருமான் விஷயத்திலே தான் கிஞ்சித்கரிக்கப் பெறாதவனான பின்பு
அட்டின் கழுத்தில் முலைக்கும் எனக்கும் ஒரு வாசியில்லை;
என்னுடைய பிறவி வீண்! வீண்!! வீண்!!! என்கிறார்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-25- -குளித்து மூன்று அனலை ஓம்பும் —ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 1, 2022

கர்மயோகம், ஜ்ஞாநயோகம், பக்தியோகம் என்று சாஸ்த்தரங்களில் உபாயமாகக் கூறப்பட்டவற்றை
அநுஷ்டிப்பதற்கு ஏற்ற ப்ராஹ்மண்யமிருந்தும்
ஐயோ!; எனக்கு ஒன்றிலும் யோக்யதை இல்லையே என்று தமது வறுமையைக் கூறுகின்றார்.

குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தண்மை தன்னை
ஒளித்திட்டேன் என் கண் இல்லை நின் கணும் பக்தனும் அல்லேன்
களிப்பது என் கொண்டு நம்பி கடல் வண்ணா கதறுகின்றேன்
அளித்து எனக்கு அருள் செய் கண்டாய் அரங்க மா நகர் உளானே –

பதவுரை

அரங்கமாநகருளானே
குளித்து –ஸ்நாநம் பண்ணி
மூன்று அனலை –மூன்று அக்நிகளை
ஓம்பும் –வளர்ப்பதற்குரிய யோக்ய தையைத் தருவதும்
குறி கொள் –கஷ்டப்பட்டுக் காப்பாற்றத் தக்கதுமான
அந்தணமை தன்னை –ப்ராஹ்மண்யத்தை
ஒளித்திட்டேன்–பாழாக்கிவிட்டேன்;
என் கண் இல்லை–(ஆத்ம விஷய ஜ்ஞானம்) என் பக்கல் இல்லை;
என் கண் பத்தலும் அல்லேது–உன் விஷயமான பக்தியும் உடையவனல்லேன் நான்;
(இப்படியிருக்க)
கடல் வண்ணா
நம்பீ–;
என் கொண்டு களிப்பது–(நான்) எத்தைக் கொண்டு ஆநந்த்தமடைவேன்
கதறுகின்றேன்–(துக்கத்துக்குப் போக்குவீடாக) வாய்விட்டுக் கூப்பிடா நின்றேன் (ஆதலால்)
எனக்கு–என் விஷயத்தில்
அளித்து அருள்செய்–மிகவும் கிருபை செய்தருள வேணும்.

விளக்க உரை

அக்நி ஹோத்ரம் முதலிய தீத்தொழில்களைக் செய்வதற்கு யோக்யதையைக் கொடுப்பது
ப்ராஹ்மண்யம் என்பது முதலடைமொழியால் விளங்கும்,

குறிகொள் என்பதனால் –
இந்த ப்ராஹ்மண்யம் மிக வருந்திக் காப்பாற்ற வேண்டிய தென்பது போதரும்.
ப்ராஹ்மண யோநியிற் பிறந்தவன் எவ்வளவு அக்ருத்யங்கள் செய்தாலும் ப்ராஹ்மணனாகவே இருக்கிறான்
என்பது கிடையாதாகையாலும்,
சாஸ்த்தரங்களிலே பாபங்களைக் கூறும் போது ஜாதிப்ரம்சாபாதக பாபங்கள்
(அதாவது ஜாதியில் நின்றும் நழுவச் செய்ய வல்ல பாவங்கள்) என்று சில பாதகங்கள் கூறப்பட்டிருத்தலாலும்
அப்படிப்பட்ட பாவங்களுக்கு ஆளாகாதபடி ஒழுங்காக இருந்தாலன்றி
ப்ராஹ்மண்யம் நிலைத்து நிற்கமாட்டாதாகையால், குறிகொள் எனப்பட்டதென்க.

மூன்றனல் –
திரேதாக்னி
அதாவது கார்ஹபத்யம், ஆஹவநீயம், தக்ஷிணாக்நி,

ஒம்புதல் – ஆராதித்தல்.

“அந்தணமைதன்னை ஒளித்திட்டேன்”-
நான் ஒருவன் வரம்பு கடந்து காபேயமாகத் திரிந்தவளவால்
ப்ராஹ்மண்யமென்பதே ஒன்று உலகில் கிடையாதெனறு சொல்லும்படியாய் விட்டதென்கை.

ஆக, ‘ஒளித்திட்டேன்’ என்னுமளவால்
கர்மயோகத்தில் தமக்குச் சிறிதும் அந்வயமில்லாமையை அருளிச்செய்து
“என்கணில்லை” என்பதால்
ஜ்ஞாந யோகமில்லாமையைக் கூறி
“நின்கணும் பத்தனல்லேன்” என்பதால்
பக்தியோகமு மில்லாமையைக் கூறுகின்றார்.

இப்படி உன்னைப் பெறும் வழிகளிலே ஒன்றிலும் எனக்கு அந்வயமில்லாமையாலே
நான் எதைப் பற்றாசாகக் கொண்டு களித்திருப்பேன்;
ஏதாவது ஸ்வல்பம் கைம்முதலாவது என்னிடத்தில் இருக்குமாகில்
‘பேற்றில் நமக்கு அதிகாரமுண்டு’ என்று நினைத்து ஆறியிருக்கலாம்.
அங்ஙன் ஆறியிருக்க விரகில்லாமையால் ஐயோ! ஐயோ!! என்று கதறா நின்றேனென்கிறார் மூன்றாமடியால்.

உம்மை நான் ரக்ஷிப்பதற்கு உறுப்பாக உம்மிடத்தில் ஒருகைம்முதலுமில்லை என்பது
திண்ணமான பின்பு கதறிப் பயனென்?
என்னை என் செய்யச்சொல்லுகிறீர்?’ என்று எம் பெருமான் திருவுள்ளமாக;

ஒரு கைம்முதலுள்ளவர்களைத்தான் ரக்ஷிப்பதென்று உனக்கு நியதியுண்டாகில்
கோயிலிலே வந்து சாய்ந்தருள்வானேன்?
உன்னுடைய ஒப்புயர்வற்ற கருணைக்கு என்னைத் தவிர வேறு விஷயமுண்டோ வென்னும்
கருத்தை நான்காமடியில் வெளியிடுகிறார்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.