கர்மயோகம், ஜ்ஞாநயோகம், பக்தியோகம் என்று சாஸ்த்தரங்களில் உபாயமாகக் கூறப்பட்டவற்றை
அநுஷ்டிப்பதற்கு ஏற்ற ப்ராஹ்மண்யமிருந்தும்
ஐயோ!; எனக்கு ஒன்றிலும் யோக்யதை இல்லையே என்று தமது வறுமையைக் கூறுகின்றார்.
குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தண்மை தன்னை
ஒளித்திட்டேன் என் கண் இல்லை நின் கணும் பக்தனும் அல்லேன்
களிப்பது என் கொண்டு நம்பி கடல் வண்ணா கதறுகின்றேன்
அளித்து எனக்கு அருள் செய் கண்டாய் அரங்க மா நகர் உளானே –
பதவுரை
அரங்கமாநகருளானே
குளித்து –ஸ்நாநம் பண்ணி
மூன்று அனலை –மூன்று அக்நிகளை
ஓம்பும் –வளர்ப்பதற்குரிய யோக்ய தையைத் தருவதும்
குறி கொள் –கஷ்டப்பட்டுக் காப்பாற்றத் தக்கதுமான
அந்தணமை தன்னை –ப்ராஹ்மண்யத்தை
ஒளித்திட்டேன்–பாழாக்கிவிட்டேன்;
என் கண் இல்லை–(ஆத்ம விஷய ஜ்ஞானம்) என் பக்கல் இல்லை;
என் கண் பத்தலும் அல்லேது–உன் விஷயமான பக்தியும் உடையவனல்லேன் நான்;
(இப்படியிருக்க)
கடல் வண்ணா
நம்பீ–;
என் கொண்டு களிப்பது–(நான்) எத்தைக் கொண்டு ஆநந்த்தமடைவேன்
கதறுகின்றேன்–(துக்கத்துக்குப் போக்குவீடாக) வாய்விட்டுக் கூப்பிடா நின்றேன் (ஆதலால்)
எனக்கு–என் விஷயத்தில்
அளித்து அருள்செய்–மிகவும் கிருபை செய்தருள வேணும்.
விளக்க உரை
அக்நி ஹோத்ரம் முதலிய தீத்தொழில்களைக் செய்வதற்கு யோக்யதையைக் கொடுப்பது
ப்ராஹ்மண்யம் என்பது முதலடைமொழியால் விளங்கும்,
குறிகொள் என்பதனால் –
இந்த ப்ராஹ்மண்யம் மிக வருந்திக் காப்பாற்ற வேண்டிய தென்பது போதரும்.
ப்ராஹ்மண யோநியிற் பிறந்தவன் எவ்வளவு அக்ருத்யங்கள் செய்தாலும் ப்ராஹ்மணனாகவே இருக்கிறான்
என்பது கிடையாதாகையாலும்,
சாஸ்த்தரங்களிலே பாபங்களைக் கூறும் போது ஜாதிப்ரம்சாபாதக பாபங்கள்
(அதாவது ஜாதியில் நின்றும் நழுவச் செய்ய வல்ல பாவங்கள்) என்று சில பாதகங்கள் கூறப்பட்டிருத்தலாலும்
அப்படிப்பட்ட பாவங்களுக்கு ஆளாகாதபடி ஒழுங்காக இருந்தாலன்றி
ப்ராஹ்மண்யம் நிலைத்து நிற்கமாட்டாதாகையால், குறிகொள் எனப்பட்டதென்க.
மூன்றனல் –
திரேதாக்னி
அதாவது கார்ஹபத்யம், ஆஹவநீயம், தக்ஷிணாக்நி,
ஒம்புதல் – ஆராதித்தல்.
“அந்தணமைதன்னை ஒளித்திட்டேன்”-
நான் ஒருவன் வரம்பு கடந்து காபேயமாகத் திரிந்தவளவால்
ப்ராஹ்மண்யமென்பதே ஒன்று உலகில் கிடையாதெனறு சொல்லும்படியாய் விட்டதென்கை.
ஆக, ‘ஒளித்திட்டேன்’ என்னுமளவால்
கர்மயோகத்தில் தமக்குச் சிறிதும் அந்வயமில்லாமையை அருளிச்செய்து
“என்கணில்லை” என்பதால்
ஜ்ஞாந யோகமில்லாமையைக் கூறி
“நின்கணும் பத்தனல்லேன்” என்பதால்
பக்தியோகமு மில்லாமையைக் கூறுகின்றார்.
இப்படி உன்னைப் பெறும் வழிகளிலே ஒன்றிலும் எனக்கு அந்வயமில்லாமையாலே
நான் எதைப் பற்றாசாகக் கொண்டு களித்திருப்பேன்;
ஏதாவது ஸ்வல்பம் கைம்முதலாவது என்னிடத்தில் இருக்குமாகில்
‘பேற்றில் நமக்கு அதிகாரமுண்டு’ என்று நினைத்து ஆறியிருக்கலாம்.
அங்ஙன் ஆறியிருக்க விரகில்லாமையால் ஐயோ! ஐயோ!! என்று கதறா நின்றேனென்கிறார் மூன்றாமடியால்.
உம்மை நான் ரக்ஷிப்பதற்கு உறுப்பாக உம்மிடத்தில் ஒருகைம்முதலுமில்லை என்பது
திண்ணமான பின்பு கதறிப் பயனென்?
என்னை என் செய்யச்சொல்லுகிறீர்?’ என்று எம் பெருமான் திருவுள்ளமாக;
ஒரு கைம்முதலுள்ளவர்களைத்தான் ரக்ஷிப்பதென்று உனக்கு நியதியுண்டாகில்
கோயிலிலே வந்து சாய்ந்தருள்வானேன்?
உன்னுடைய ஒப்புயர்வற்ற கருணைக்கு என்னைத் தவிர வேறு விஷயமுண்டோ வென்னும்
கருத்தை நான்காமடியில் வெளியிடுகிறார்.
——————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.
Leave a Reply