மநுஷ்யனாய்ப் பிறந்தவன் செய்யக்கூடிய கிஞ்சித்காரங்களில் மாத்திரமே யன்று
எனக்கு அந்வயமில்லையென்பது;
ஸாமந்யமான திர்யக்குகள் செய்யக்கூடிய கிஞ்சித்காரமம் பாவியேன்
செய்யப் பெற்றிலேன் என்று வருந்துகின்றார்.
குரங்குகள் மலையை நூக்கக் குளித்து தாம் புரண்டிட்டு ஓடித்
தரங்க நீர் அடிக்கல் உற்ற சலமிலா வணிலம் போலேன்
மரங்கள் போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே –
பதவுரை
குரங்குகள்–வாநர வீரர்கள் (கிஞ்சித்கரித்து ஸ்வரூபம் நிறம் பெறுவதற்கு)
மலையை நூக்க –மலைகளைத் தள்ளிக் கொண்டு வர
குளித்து புரண்டிட்டு ஓடி–நீரிலே முழுகி (கரையிலுள்ள உலர்ந்த மணலிலே) புரண்டு ஓடி
தரங்கம் நீர் அடைக்கல் உற்ற–அலைக் கிளர்ச்சியை யுடைய கடலைத் தூர்க்கையிலே ஒருப்பட்ட
சலம் இலா–கபடமற்ற
அணிலும் போலேன்–அணில்களையும் ஒத்திருக்கின்றேனில்லை;
மரங்கள் போல் வலிய நெஞ்சம்–மரங்களைப் போலே கடிநமான நெஞ்சை யுடையனாய்
வஞ்சனேன்–வஞ்சநையையே தொழிலாக யுடையனாய்
அளியத்தேன்–அருமந்த மநுஷ்யனான நான்
அரங்கனார்க்கு–அழகிய மணவாளனுக்கு
நெஞ்சு தன்னால் –பாவநா வ்ருத்தியாலுங்கூட
ஆள் செய்யாதே–அடிமை செய்யாமல்
அயர்க்கின்றேன்–அநர்த்தப்படா நின்றேன்.
விளக்க உரை
ஸ்ரீராமாவதாரத்தில் பெருமாள் இலங்கைநகர் எழுந்தருள்வதற்காகக் கடலில் அணை கட்ட நேர்ந்தபோது
வாநர வீரர்கள் மலைகளைக் கொணர்ந்து எறிந்து கடலைத் தூர்ப்பதைக் கண்ட அணிற்பிள்ளைகள்
‘இவ் வாநரங்கள் தமது சக்திக்கு இயன்ற காரியத்தைச் செய்து பெருமாள் விஷயத்திலே கிஞ்சித்கரித்தால்
நாமும் நமது சக்திக்கு ஏற்றவாறு இப்பெரிய காரியத்திலே சிறது கிஞ்சித்கரிப்போம்’. என்றெண்ணி,
எல்லா அணிற்பிள்ளைகளும் கடலிலே முழுகுவது,
உடனே அந்த ஈரவுடம்போடே கரைமேல் மணலில் புரண்டு உடலில் ஒட்டிக்கொண்ட மணல்களைக் கடலிலே கொண்டு உதறுவதாய்
இப்படிப்பட்ட ஒரு காரியத்திலே ஸேதுபந்தன கைங்கரியத்திற்கு உதவிபுரிந்ததாக ஒரு இதிஹாஸம் உண்டு;
அதனை அருளிச்செய்கிறார் முன் இரண்டடிகளில்.
வாநரங்கள் போலவும்
அணிற்பிள்ளைகள் போலவும்
சரீர ச்ரமப்பட்டு ஒருகைங்கரியமும் செய்யமுடியாமற் போயினும்,
நெஞ்சாலேயாவது எம்பெருமானை நினைத்து அவ்வழியாலே பகவத் கைங்கர்யபரர்களில் ஒருவனாக நிற்கலாமே;
அதுவுமில்லாமல் என் அருமருந்தன்ன மானிடப் பிறவியைப் பாழே போக்கினேனே! என்று கதறுகின்றார் பின்னடிகளில்.
——————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.
Leave a Reply