Archive for July, 2022

தாண்டகம் -இலக்கணக் குறிப்புகள் —

July 7, 2022

அறுசீரடி அல்லது எண்சீரடி பயின்ற செய்யுளினால்  கடவுளரை பாடுவதற்குரியது தாண்டகம் எனும் சிற்றிலக்கிய வகை (பிரபந்தம்).
அறுசீரடியினாலாகிய தாண்டகத்தினைக் குறுந்தாண்டகம் என்றும்
எண்சீரடியால் அமைந்ததினை நெடுந்தாண்டகம் என்றும் பன்னிரு பாட்டியல் பகருகிறது.

  • பாடலின் ஒவ்வொரு அடியும் இடையிலே தாண்டுவதை இந்தப் பாடல்களில் காணலாம். பாடலின் அகத்தே தாண்டுவது தாண்டகம்.
  • தாண்டகம் என்பது ஒருவகைச் செய்யுள் யாப்பு ஆகும். தாண்டக யாப்பினால் இயற்றப்பட்டவை தாண்டகம் என்னும்
    இலக்கிய வகையாகப் பெயர் பெறுகின்றன.

    இதனை முறையே யாப்பருங்கல விருத்தியாலும் (95-ம் நூற்பா உரை)வீரசோழியத்தாலும் (129) அறிய முடிகின்றது.
    இவ்வகையான நூல்களையும் பக்தி இலக்கியம் தான் நமக்கு முதலில் அறிமுகம் செய்கின்றது.
    திருநாவுக்கரசரின் ஆறாம் திருமுறை முழுவதும் இத்தாண்டக யாப்பே.
    981 பாடல்கள் கொண்ட அவரது 99 பதிகங்கள் திருத் தாண்டகம் என்றே வழங்குகின்றன

———-

திவ்வியப் பிரபந்தத்தில் திருமங்கையாழ்வார் பாடிய
திருத் தாண்டகங்கள் பாவின் குறுமை, நெடுமை ஆகிய அளவு கருதி முறையே
திருக்குறுந்தாண்டகம்,திருநெடுந்தாண்டகம் எனப் பெயர் பெறுகின்றன.
வடமொழித் தாண்டகத்தையே தமிழுக்குரிய தாண்டகமாக்கி வீரசோழியமும் யாப்பருங்கல விருத்தியும் குறிப்பிடுகின்றன.
இங்கு ஒரு வேறுபாடு எண்ணத்தகும்.
வீரசோழியம் தண்டகம் என்றே குறிக்க யாப்பருங்கல விருத்தி மட்டும் தாண்டகம் எனக் கூறுகிறது.
வடமொழி யாப்புப்படி விருத்தம் என்னும் பொதுப்பெயர்,
அளவொத்த  நான்கடியையும் அனைத்துச் செய்யுளையும் குறிக்கும்.
அடிகளிற் பயிலும் எழுத்துகளின் எண்ணிக்கை அடிப்படையில் விருத்தங்களைச் சந்தம் எனவும், தண்டகம் எனவும் பிரிப்பர்.
ஓரெழுத்து முதல் இருபத்தாறு எழுத்தளவும் உடைய அடிகளால் ஆகிய செய்யுள் சந்த விருத்தமாம்.
இருபத்தேழு  எழுத்துகளுக்கு மேல்வரின் அது தண்டக விருத்தமாகும்.
இதனையே தாண்டக விருத்தம் எனப் பெயரிட்டு விளக்குகிறது
யாப்பருங்கல விருத்தி.
ஆழ்வாரின் திருநெடுந்தாண்டகத்தில் சிற்சில அடிகள் 27 எழுத்துகளும்
அவற்றின்மிக்கு 28, 29 எழுத்துகளும் பெற்று வருகின்றன.
முப்பது பாசுரத்திற்கும் மொத்தம் உள்ள நூற்றிருபது அடிகளில் இவ்வாறு தாண்டக  அடிகளாக வருவன 24 அடிகள் மட்டுமே.
எனினும் ஒரு பாசுரம் கூட முழுவதும் தாண்டக அடிகளைக்  கொண்டிருக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
உதாரணத்திற்கு முதல் பாசுரத்தில் முதலாம் அடியில் 26 எழுத்துகள், 2-ம் அடியில் 27 எழுத்துகள், 3-ம் அடியில் 28
எழுத்துகள், 4-ம் அடியில் 27 எழுத்துகள் அமைந்துள்ளன.
இவ்வாறு எழுத்துகளைக் கணக்கிட்டால், திருநெடுந்தாண்டகத்தில் தாண்டக அடிகளாக
அதாவது 27 முதலாக அவற்றின் மிக்க எழுத்துகளைப் பெற்று வருவன 24 அடிகள் மட்டுமே.
(எழுத்துகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும் போது, குற்றியலுகரமும், ஒற்றும் நீங்கலாகக் கணக்கிடப்படும்)
யாப்பருங்கல விருத்தி கூறும் தாண்டக யாப்பு, தமிழில் உள்ள திருத்தாண்டகங்களுக்குப் பொருந்தி வரவில்லை
இனித் தாண்டகம் தமிழ் யாப்பே என்பார் கூற்றினை நோக்குவோம். அதற்கு முன்னர் ஆழ்வார் பாடிய
திருத்தாண்டகங்களின் யாப்பமைதி பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆழ்வார் காலத்திற்குப் பின்னர் வளர்ச்சியுற்ற யாப்பிலக்கணத்தின்படி நோக்கினால்,
ஆழ்வாரின் திருநெடுந்தாண்டகம் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் முப்பது கொண்டதாகும்.
இவ்வகை விருத்தத்தில் 1,2,5,6 ஆகிய நான்கு சீர்களும் காய்ச்சீர்களாகவும் 3,4,7,8 ஆகிய நான்கு சீர்களும் இயற்சீர்களாகவும் வரும்.
இயற்சீர் நான்கினுள் 3,7 ஆகிய சீர்கள் புளிமா, அன்றித் தேமாவாக வரும். 4,8 ஆகிய சீர்கள் தேமாவாக மட்டுமே அமையும்.
எனவே இவ்வகை விருத்தம்
காய்-காய்-மா-தேமா-காய்-காய்-மா-தேமா–என்னும் வாய்பாடு கொண்டதாகும்.
இப்போது திருக்குறுந்தாண்டகத்தை நோக்குவோம். இவ்வகை விருத்தத்தில் எல்லாச் சீர்களும் இயற்சீர்களாகவே வரும்.
சிறுபான்மை காய்ச்சீர் வருதலுமுண்டு. பெரும்பாலும் 1,4 ஆகிய சீர்கள் விளச்சீராகவும், 2,3,5,6 ஆகிய சீர்கள் மாச்சீர்களாகவும் வரும்.
சுருங்கக் கூறின்,
விளம்-மா-தேமா-விளம்-மா-தேமா–என்னும் வாய்பாடு கொண்டதாகும்.
தாண்டக யாப்பு தமிழ் மரபினதே எனக் கூறும் க.வெள்ளை வாரணன், தொல்காப்பியர் கருத்துப்படி
அதனை எண்சீரான் வந்த கொச்ச ஒரு போகு என்பர்.
ஆதலின் இயல்வகை குறித்த தாண்டகம் என்னும் இப்பெயரினை பெறாவாயின என விளக்குகிறார்.
மேலும், அவர் திருநாவுக்கரசரது திருத்தாண்டக யாப்பு, கழிநெடிலடிக்கு மேலெல்லையாகிய இருபது எழுத்தென்னும் அளவினைக்
கடந்து இருபத்தேழு எழுத்திற்கு உட்பட்டு வருவதாகும்.
யாப்பருங்கல விருத்தியில் தாண்டகம் என்ற பெயராற் குறிக்கப்பட்ட தாண்டக யாப்பு இருபத்தேழு எழுத்து முதலாக
அவற்றின் மிக்க எழுத்துகளை பெற்று வருவதாகும் என இரண்டனுக்குமுள்ள வேற்றுமையையும் எடுத்துக் காட்டுகிறார்.
இங்குத் தாண்டகம் தமிழ் யாப்பின் வழிப்பட்டதே என்பதற்கு அவர் கூறும் விளக்கமும்
யாப்பருங்கல விருத்தியில் கூறப்படும் தாண்டகம் வேறு,
திருநாவுக்கரசரின் தாண்டகம் வேறு என்பதற்கு அவர் சில காரணங்களைக் காட்டுகிறார்.
மேற்குறித்தவாறு திருநாவுக்கரசரின் திருத்தாண்டகத்தைத் தமிழ் மரபினதாகக் காட்டும் வெள்ளைவாரணன்,
திருமங்கையாழ்வாரின் திருத்தாண்டகங்களையும் தமிழ் யாப்பு வழிப்பட்டதாகவே ஏற்றுக் கொள்கிறார்.
அவர் கருத்துப்படி, ஆழ்வாரின் நெடுந்தாண்டகம் அப்பரின் திருத்தாண்டகத்துக்கும்,
ஆழ்வாரின் குறுந்தாண்டகம் அப்பரின் திருநேரிசைக்கும் இணையாகின்றன.
திருநாவுக்கரசரின் திருநேரிசைப் பதிகங்களும், ஆழ்வாரின் குறுந்தாண்டகமும் ஒரே வகை யாபில் அமைந்தவை.
அதாவது, விளம்-மா-தேமா, விளம்-மா-தேமா என்னும் வாய்பாடு கொண்ட அறுசீர் விருத்தங்கள் அவை.
இங்ங்கனமாக, ஒன்று திருநேரிசை எனவும், மற்றொன்று திருக்குறுந்தாண்டகம் எனவும் வெவ்வேறு பெயர் பெறுகின்றன.
இப் பெயர் மாற்றத்துக்கு என்ன காரணம்?
அறுசீரில் இருபது பாசுரங்கள் கொண்ட தாண்டகமும் எண்சீரில் முப்பது பாசுரங்கள் கொண்ட தாண்டகமும் ஆழ்வார் பாடினார்.
எண்சீரினும் ச்றுசீர் குறியது.
அன்றியும் அறுசீர் யாப்பிலான பாடற்பகுதி, எண்சீர் யாப்பிலான பாடற்பகுதியினும் குறைந்த எண்ணிக்கை கொண்டது.
ஆதலின் அவை குறுந்தாண்டகம், நெடுந்தாண்டகம் என வேறுபடுத்தப்பட்டன எனலாம்.
இவ்வமைதி ஆழ்வாரின் இரண்டு தாண்டகங்களைப் பொறுத்தவரை ஏற்கத்தக்கதாகும்.
ஆயின் அப்பரின் திருநேரிசைப் பதிகங்கள் குறுந்தாண்டகமாகக் கொள்ளப்படவில்லையே. இது ஏன்?என்னும் வினாவுக்கு
விடை காண இயலவில்லை. மற்றொரு சிக்கலும் உண்டு.
குறுந்தாண்டகம் என்று அழைக்கப்படும் ஆழ்வாரின் பாடற்பகுதி முதலில் தாண்டகம் ஆகுமா? என்பதுவே அச் சிக்கலாகும்.
ஆழ்வாரின் குறுந்தாண்டகப் பாடல்களும், அப்பரின் திருநேரிசைப் பாடல்களும் இருபது எழுத்துக்கு மேற்படாது
அடங்கிவரும் அடிகளையுடைய அறுசீர் விருத்த யாப்பினமாகும்.
அங்ஙனமாயின் க.வெள்ளைவாரணன் தாண்டகத்துக்குக் கூறிய இலக்கணப்படி
அடிக்கு இருபது எழுத்துகளைத் தாண்டாத இவை தாண்டகமாகா.
வடமொழி மரபுப்படி இருபத்தேழு எழுத்து என்னும் எல்லைக்கு இங்கு இடமே இல்லை.
ஆகத் தமிழ்மரபு வடமொழி மரபு ஆகிய இரண்டினாலும் தாண்டகமாகாத ஆழ்வாரின் பாடற்பகுதி
குறுந்தாண்டகம் எனப் பெயர் பெற்றது எவ்வாறு என்பது விளங்கவில்லை.
இயற்சீர் = ஈரசைச் சீர்= அகவற்சீர் . பழம் பெயர் தான்.
“ ஈரிசை கூடிய சீரியற் சீர் ; அவை  ஈரிரண் டென்ப இயல்புணர்ந்  தோரே “
இயலல்- பொருந்துதல்
  • பின்வந்த பாட்டியலாரும் இச் சிக்கலுக்கு ஓர் தீர்வினைத் தந்திடவில்லை.
    மூவிரண் டேனும் இருநான் கேனும்
    சீர்வகை நாட்டிச் செய்யுளி னாடவர் 
    கடவுளர்ப் புகழ்வன தாண்டகம் அவற்றுள்
    அறுசீர் குறியது நெடியதெண் சீராம்-எனப் பன்னிருபாட்டியல் கூறுகின்றது.
  • இந்நூற்பாவில் தாண்டகத்துக்குரிய எழுத்தெண்ணிக்கை பற்றிய குறிப்பு இல்லை.
    அன்றியும் ஆழ்வார் அறுசீர் யாப்பில் பாடியவற்றைக் குறுந்தாண்டகம் என ஏற்றுக்கொண்டே இந்நூற்பா இலக்கணம் கூறுகின்றது.
  • பன்னிரு பாட்டியலார் கூறும் இவ்விலக்கணம் திருமங்கையாழ்வார் முறையே அறுசீரிலும் எண்சீரிலும்
    பாடிய இலக்கியங்களுக்கான இலக்கணம் ஆகின்றது. அஃதாவது இலக்கியம் கண்டதற்கு அமைந்த இலக்கணம் இது.
    எனினும் தாண்டக சதுரர் எனச் சிறப்பிக்கப் பெற்ற திருநாவுக்கரசரின் ‘தாண்டக இலக்கியம்’ பற்றிப் பன்னிரு பாட்டியல் குறிப்பிடவில்லை.
    ஆழ்வாரின் திருத்தாண்டகப் பாசுரங்களினும் (30+20) திருநாவுக்கரசரின் திருத்தாண்டகப் பாடல்கள் எண்ணிக்கையில் (981)
    பன்மடங்கு மிக்கன.
  • போற்றித் திருத்தாண்டகம், காப்புத் திருத்தாண்டகம், நின்ற திருத்தாண்டகம், தனித் திருத்தாண்டகம்,
    வினா விடைத் திருத்தாண்டகம் எனப் பொருளடிப்படையில் பலவாறு பெயர் பெறுவன. இவ் வியல்புகளைப் பாட்டியல்கள்
    கருத்திற்கொண்டு இலக்கணம் கூறாததற்கான காரணம் தெரியவில்லை. திருநாவுக்கரசர், திருமங்கையாழ்வார் ஆகிய
    இருவரது தாண்டகங்களையும் ஒப்ப வைத்தும் உறழ்ந்து நோக்கியும் பாட்டியல் நூலார் இலக்கணம் கூறியிருந்தால்
    இன்று நமக்கு எழக்கூடிய சிக்கல்கள் தோன்றியிருக்க மாட்டா.
    பின்வந்த முத்து வீரியம் தாண்டக யாப்புக்குரிய இலக்கணத்தையும் பின்வருமாறு கூறுகின்றது.
    இருபத்தேழு எழுத்து ஆதி யாக
    உயர்ந்த எழுத்தடி யினவாய் எழுத்தும்
    குருவும் இலகுவும் ஒத்து வந்தன
    அளவியல் தாண்டகம் எனவும் அக்கரம்
    ஒவ்வாதும் எழுத்தலகு ஒவ்வாதும் வந்தன
    அளவழித் தாண்டகம் எனவும் பெயர்பெறும் —என்பது அந்நூற்பாவாகும்.
  • (நூற்பா-1115) வீரசோழியம், யாப்பருங்கல விருத்தி ஆகிய நூல்கள் புகுத்திய புதுமரபிற்கேற்ப
    முத்து வீரியம் இங்குத் தாண்டகத்திற்கு இலக்கணம் கூறுகின்றது.
  • அளவியல் தாண்டகம், அளவழித் தாண்டகம் ஆகிய
    இரு வகைகளையன்றி குறுந்தாண்டகம், நெடுந்தாண்டகம் என்னும் பகுப்புமுறை இங்கு இடம் பெறாமை கவனிக்கத்தக்கது.
  • ஆக பாட்டியல்கள் கூறும் தாண்டக இலக்கணம் இரு வகையில் அமைகின்றது.
    1. பன்னிருபாட்டியல் இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் கூறியது ஒரு வகை
    2.முத்துவீரியம், யாப்பருங்கலவிருத்தியைத் தழுவிப் புதிய மரபில் இலக்கியம் காண்பதற்கு இலக்கணம் கூறியது மற்றொரு வகை.
    மற்றொரு வகை.
    இங்ங்னம் தாண்டகம் பற்றிய கருத்துகள் தமிழ் இலக்கண ஆசிரியர்களிடம் மாறுபட்டும் குழம்பியும் காணப்படுவதால்
    அதனை நாம் இன்று தெளிவாக உணர முடிவதில்லை.
  • ஆழ்வார் பாசுரங்களுக்கு யாப்பு வகை குறித்த திவ்யபிரபந்தப் பதிப்பாசிரியர்களும் தாண்டகம் பற்றித் தெளிவான விளக்கம் தரவில்லை.
  • “பகவானுடைய திவ்ய சேஷ்டிதங்களைத் தாண்டக ரூபத்தில் நிரூபிக்கிறபடியால் . . . ” இத்திருநாமம் பெற்றதாகக் கூறுவர் கோமடம் எஸ்.எஸ்.ஐயங்கார். இங்கு அவர் தாண்டக ரூபம் என்றாரே தவிர அதன் ரூபம் (வடிவம்) பற்றியோ இலக்கணம் பற்றியோ எதுவும் கூறாதது
    கவனிக்கத்தக்கது.
  • திருமங்கையாழ்வாரின் தாண்டகங்களைப் பொறுத்தவரை மற்றொரு தடையும் உண்டு. எண்சீரும் அறுசீருமாகப் பாடிய
    பாசுரப்பகுதிகள் திவ்யபிரபந்தத்தில் உள்ளன.
    விளம்-மா-தேமா, விளம்-மா-தேமா –என்பது குறுந்தாண்டக யாப்பு
    காய்-காய்-மா-தேமா, காய்-காய்-மா-தேமா–என்பது நெடுந்தாண்டக யாப்பு.
    இதே வாய்பாடில் இதே ஆழ்வார் எழுதிய பாடல்கள் அனைத்தும் தாண்டகம் எனப்பெயர் பெறாமை கவனிக்கத்தக்கது.
    தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய திருமாலை முழுவதும் குறுந்தாண்டகம் போல அறுசீர் ஆசிரிய விருத்த  யாப்பிலானதே.
  • மேலும் திருமாலை, குறுந்தாண்டகம் ஆகிய இவ்விரு நூல்களிலும் முறையே 17, 13 ஆம் பாசுரங்களின்
    ஈற்றடிகள் மிகுதியும் ஒத்திருத்தலும் இங்குச் சுட்டத்தக்கது.
    விரும்பிநின் றேத்த மாட்டேன் விதியிலேன் மதியொன் றில்லை
    இரும்புபோல் வலிய நெஞ்சம் இறையிறை உருகும் வண்ணம்
    சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட
    கரும்பினைக் கண்டு கொண்டென் கண்ணிணை களிக்கு மாறே (திருமாலை-17)
    இரும்பனன் றுண்ட நீரும் போதரும் கொள்க என்றன்
    அரும்பிணி பாவ மெல்லாம் அகன்றன என்னை விட்டு
    சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட
    கரும்பினைக் கண்டு கொண்டென் கண்ணிணை களிக்கு மாறே (திருக்குறுந்தாண்டகம்-13)
    3,4 ஆம் அடிகள் முற்றிலும் ஒத்திருந்தாலும் திருமாலை ஏன் தாண்டகம் என்ற பெயர் பெறவில்லை?
    சைவத்திலும் இந்நிலையுண்டு.
  • அப்பர் தாண்டகத்துக்குக் கையாண்ட அதே எண்சீர் யாப்பில் திருஞானசம்பந்தர் 11 பதிகங்களும், சுந்தரர் 27 பதிகங்களும், மாணிக்கவாசகர் 6 பதிகங்களும் பாடியுள்ளனர்.
  • ஒன்பதாம் திருமுறையில் 11 பாடல்களும், பதினொராந்திருமுறையில் 36 பாடல்களும் அதே யாப்பில் அமைந்துள்ளன.
  • எனினும் அவை தாண்டகம் எனக் குறிக்கப் பெறாமையை அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
    இந்நிலையில் யாப்பருங்கல விருத்தியுரை காரர் தரும் ஒரு குறிப்பு, சிறிது வெளிச்சம் காட்டுகிறது.
  • தாண்டகம் என்பது தொல்காப்பியரால் கொச்சக ஒருபோகு எனவும், காக்கைபாடினியார் போன்ற ஒருசார் ஆசிரியரால் பாவினமாகவும்
    கொள்ளப்பட்டது என்பது அவர் தரும் குறிப்பாகும்.
  • அதன்படி தாண்டகத்துக்குப் பயன்பட்ட அறுசீர் யாப்பு, ஒருசார் ஆசிரியரால்ஆசிரியப்பாவின் இனமான விருத்தமாகக் கொள்ளப்பட்டது என்பது உறுதி ஆகின்றது. அவ்வகை விருத்தங்கள் வடமொழித் தாண்டகத்தின் தனித்தன்மைகளுள் ஏதேனும் ஒன்றைப் பெற்றுத் தமிழில் தாண்டகம் எனப்பெயர்
    பெற்றிருக்கலாம் எனக் கருத இடமுள்ளது. அளவொத்த நான்கு அடிகளைக் கொண்ட வடமொழித் தாண்டக யாப்பு, ஓர்
    அடிக்கு 27 முதல் 999 வரை நீண்டு சென்று முடியும் என்பர். அவ்வகை நீட்சி காரணமாக எச்சங்களைத் தொடர்ந்து
    செல்லும் போக்குத் தண்டக விருத்தங்களில் அமைந்தது. குறிப்பிடத்தக்க இத்தனித் தன்மையைத் தமிழ்த் தாண்டகப் பாக்களிலும் காண முடிகின்றது.
    தேசிகரின் கருட தண்டகத்தையும், காளிதாசனின் சியாமளா தண்டகத்தையும் எழுத்தெண்ணிக்கை பார்த்ததில்,
    கருட தண்டகத்தில் ஒவ்வொரு பாடலும் 108 எழுத்துகள் இருக்கின்றன.
  • அடிமுடி தெரியாதலால், ஒரு அடிக்கு சராசரி 27 எழுத்துக்கள் என்று கொள்ளலாம்.
    சியாமளா தண்டகத்தில் என்னிடம் உள்ள பதிப்பில் பாடல்கள் தொடர்ச்சியாக உரைநடைபோல் தட்டச்சு
    செய்யப்பட்டிருப்பதால் எழுத்தெண்ணிக்கையை அறுதியிட்டுக் கூற முடியவில்லை.
  • ஒரு மாதிரியாக, பகுத்துப் பார்த்ததில் ஒரு சீரான எழுத்தெண்ணிக்கை வரவில்லை என்றுதான் தோன்றுகிறது.
  • வேறு பதிப்புகளில் பாடல் ஒவ்வொன்றும் சரியாகப் பகுத்துக் கொடுக்கப் பட்டிருந்தால் அன்பர்கள் எழுத்தெண்ணிக்கையைச் சரி பார்க்கவும்.
    எச்சங்களாகத் தொடர்ந்து செல்லும் போக்கு நெடுந்தாண்டகத்தில் எவ்வாறு அமைந்துள்ளது என்று பார்ப்போம்.
    மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்
    . . விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்
    பின்னுருவாய் முன்னுருவில் பிணிமூப் பில்லாப்
    . . பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணா தெண்ணும் 
    பொன்னுருவாய் மணியுருவில் பூத மைந்தாய்
    . . புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி
    தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை
    . . தளிர்புரையும் திருவடியென் தலைமே லவே
     (ஈற்றுச்சீர் தேமாவாக இருக்க லாவே என்றிருக்கலாம். ஆயின் மூலத்தில் இப்படித்தான் உள்ளது)
    என்னும் திருநெடுந்தாண்டகத்தில் முதற்பாகத்தைக் கவனித்தால் பாசுர அடிகளின் இடையிலோ முடிவிலோ முற்றின்றி,
    வினையெச்சமாய்த் தொடர்ந்து இறுதியிலேயே முற்றுப் பெறுதலைக் காணலாம். பெரும்பாலான பாசுரங்கள் இவ்வகைப்
    போக்கிலேயே3 அமைந்து உள்ளமை கவனிக்கத்தக்கது.
  • திருநெடுந்தாண்டகத்தில் முதல் பத்துப் பாசுரங்கள் தாமான  தன்மையிலும்,
  • அடுத்த பத்துப் பாசுரங்கள் தாய் கூற்றிலும்,
  • இறுதிப்பத்துப் பாசுரங்கள் மகள் கூற்றிலும் அமைந்தன  என்பர்.
  • இங்ங்னம் கூற்றுநிலை மாறுபட்டபோதும் மேற்குறித்த அமைப்பு மாறுபடவில்லை.
    இப்போது தாய் கூற்றாக அமைந்த ஒரு பாடலை ஆராய்வோம்.
    கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய் என்னும்
    . . காமருபூங் கச்சியூ ரகத்தாய் என்னும்
    வில்லிறுத்து மெல்லியள்தோள் தோய்ந்தாய் என்னும்
    . . வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே என்னும்
    மல்லடர்த்து மல்லரையன் றட்டாய் என்னும்
    . . மாகீண்ட கைத்தலத்தென் மைந்தா என்னும்
    சொல்லெடுத்துத் தன்கிளியைச் சொல்லே என்று
    . . துணைமுலைமேல் துளிசோரச் சோர்கின் றாளே
    என்னும் பாசுரத்தில் மகள் கூற்று தனித் தனியாக முற்றுப் பெறுவதுபோல் தோன்றினும் தாய் அதனை மீண்டும் எடுத்துச் சொல்லும் போக்கில்,
    கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய் என்னும்
    . . காமருபூங் கச்சியூ ரகத்தாய் என்னும்
    இடையறாத் தொடர்ச்சியுடன் கூற்று அமைதல் காணலாம்.
  • இப்போது மகள் கூற்றாக அமைந்த ஒரு பாடலின் பகுதியைக் காண்போம்.
    மைவண்ண நறுங்குஞ்சிக் குழல்பின் தாழ
    . . மகரம்சேர் குழையிருபா டிலங்கி யாட
     
    எய்வண்ண வெஞ்சிலையே துணையா யிங்கே
    . . இருவராய் வந்தாரென் முன்னே நின்றார்
    என்னும் பாசுரப்பகுதி மகள் கூற்றாக அமைவது.
  • இதன்கண், இருவராய் வந்தார்என் முன்னே நின்றார் என்பதில் வந்தார் என்னும் முற்று வந்து என எச்சப் பொருளே தந்து தொடர்தலும் நோக்குதற்குரியது.
    வந்தார் என்பது வந்தவர் என்னும் பொருள்படும். மேற்படி  சொன்னவண்ணம் வந்தவராகிய அவர் என்றும் கொள்ளலாம்]
திருக்குறுந்தாண்டகத்தில் இத் தன்மை மிகுந்து காணப்படுகிறது.
நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டுமுன் அண்ட மாளும்
மதியினை மாலை வாழ்த்தி வணங்கியென் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகி லேனே–என்பது முதற்பாசுரம்.
இப் பாசுர முடிவில் விதியினை என்பதற்குப் பின்னர் முற்றாக வருகின்ற (கண்டு . . விடுகிலேனே)
பகுதிகளை விலக்கி, அடுத்துவரும் மூன்று பாசுரங்களிலும் இம்முறையே மேற்கொண்டால் ஆழ்வார் இறைவனைத் தொடர்ச்சியாக அடுக்கிப் போற்றுதல் பின்வருமாறு அமையும்.
“நிதியினை, பவளத்தூணை, நினைய வல்லார் கதியினை, அண்டமாளும் மதியினை, மாலை, விதியினை, காற்றினை,
புனலை, தீயை, இலங்கை செற்ற ஏற்றினை, எழில்மணித்திரளை, இன்ப ஆற்றினை, அமுதம் தன்னை, அவுணர்
கூற்றினை, வானோர்க்கு அமுதம் கொண்ட அப்பனை, எம்பிரானை, மாலிருஞ்சோலை மேய மைந்தனை, கேழலாய்
உலகங்கொண்ட பூக்கெழு வண்ணனை, வேட்கை மீதூர விழுங்கினேன்”
என்பது முதல் நான்கு பாசுரங்களின் பொருட்சுருக்கம் ஆகும்.
இடையில் 5-ஆம் பாசுரம் ஒன்று தவிர 6,7,8 ஆகிய  பாசுரங்களிலும் இவ்வகையான தொடர் அடுக்கினைக் காணலாம்.
9 முதல் 11 முடியவுள்ள பாசுரங்கள் இறைவனை முன்னிலைப்படுத்திப் பேசும் முறையில் உள்ளன.
12 முதல் 20 முடியவுள்ள எஞ்சிய பாசுரங்களில் ஆழ்வார் தமது
பலவாறான இறையனுபவங்களைச் சொல்லி இப்பிடபந்தத்தைத் தலைக்கட்டுகிறார்.
இவ்வாறு கூற்றுநிலை மாறுபடினும்  எச்சங்களை வருவித்து அடுக்கிக்கூறும் தொடர்ச்சிப் போக்கு நூல் முழுதும் ஒத்திருக்கின்றது.
எனவே இத்தகையதொரு தனித்தன்மை ஒன்றினால் அறுசீர் விருத்தங்களால் ஆன பிற நூல்களினின்றும் வேறுபடுத்தி
இவை தாண்டகம் என அழைக்கப் பெற்றன போலும். அன்றியும் இசையும் ஒரு காரணமாய் இருந்திருக்கக் கூடும்.
ஆழ்வாரின் தாண்டகங்கள், பெரிய திருமொழியின் இறுதியில் இடம் பெறுகின்றன.
திவ்யபிரபந்தத்தில் இயற்பா நீங்லாக  உள்ள ஏனைய மூன்று ஆயிரங்களும் இசைப்பாக்கள் என்பது இங்கு மனக்கொள்ளத்தக்கது.
திருநெடுந்தாண்டகப் பாசுரம்  ஒன்றில் “நைவளம் ஒன்றாயா நம்மை நோக்கா” என்னும் தொடர் காணப்படுகின்றது.
இதில் வரும் நைவளம் என்னும் பண்ணைக் குறித்துப் பின்வருமாறு விளக்கம் தருவார் பெரியவாச்சான்பிள்ளை.
“கேட்டாரோடும் சொன்னாரோடும்  வாசியற நைவிக்கும் படியான அழகையுடைத்தான பண்ணை நுணுங்கி” என்பது அவர் தரும் விளக்கம்.
இதனால், உள்ளத்தை உருக்கும் அந்தப்பண்ணின் இயல்பினை அறியலாம்.
நைவளம் என்னும் பண் நாட்டக்குறிஞ்சி என்று சொல்கிறார். கண்ணன்
குழலூதும் போது இந்தப் பண்ணை மிக உகந்து குழலூதுவான் என்றும், அதுகேட்ட சேதன, அசேதனப் பொருட்கள் யாவும்
இப்பண்ணில் மயங்கி நிற்கும் என்பார். இப்படிப்பட்ட பண்ணில் பாடி, பரகால நாயகியை (ஆழ்வாரை) ஆட்கொள்ளக்
கண்ணன் வந்தபோதும் பாராமுகமாக ஆழ்வார் இருந்துவிட்டார் என்று இந்தப் பாடலில் பொருள் வருகின்றது. அதாவது
சேதன, அசேதனப் பொருட்களையும் மயக்கவல்ல பண்ணிற்கும் மயங்காமல் என் மனம் கல்லாகிப் போனதே என்ற வருத்தம் தோன்றப் பாடிய பாசுரம்]
ஆழ்வாரின் தாண்டகத்தில் இடம்பெறும் இசை பற்றிய இக்குறிப்பு மட்டுமன்றிக் குரு பரம்பரை கூறும் மற்றொரு செய்தியும் இங்குச் சுட்டத் தகும். திருமங்கையாழ்வார் தாமே தமது திருநெடுந்தாண்டகப் பாசுரங்களைத் திருவரங்கன்
சன்னிதியில் மனமுருகிப் பாடினார் எனக் குருபரம்பரை கூறுகின்றது.
எனவே இவற்றைப் பாடுதற்கென்று அந்நாளிற் பின்பற்றப்பெற்ற ஒருவகை இசைமரபு பற்றியும் இவை,
தாண்டகம் எனப் பெயர் பெற்றிருக்கலாம். அம்மரபினை இன்று நாம் அறியமுடியவில்லை.
மேலும் ஒன்று; தாண்டகம் இசைப்பாட்டே என்றும் அதில் சிறப்பாகக் கையாளப்படும் இலக்கியக்கொள்கை
இறைவனிடம் விண்ணப்பம் செய்து கொள்வதற்கு இசைப்பாட்டைப் பயன்படுத்துவதாகும் என்று கூறுவர்.
இதுவரைக் கூறிய வற்றால், தாண்டகம் என்பதே தனிவகையான யாப்பு என்பது புலப்படும்.
ஆனால், இதுவரை அச்சான திவ்யபிரபந்தப் பதிப்புகளில் திருக்குறுந்தாண்டகம் அறுசீர்விருத்தமென்னும்
திருநெடுந்தாண்டகம் எண்சீர் விருத்தமென்னும் குறிக்கப் பட்டுள்ளன.
கால ஓட்டத்தில் தாண்டகம் பற்றிய கருத்து தமிழ் இலக்கிய உலகில் மறைந்தது போலும்.
எனவே கடந்த நூற்றாண்டு தொட்டு, திவ்யபிரபந்தப் பதிப்பாசிரியர்கள் தாண்டகத்தை ஆசிரிய விருத்தமாகக்
கொண்டுள்ளனர். அவர்தம் கொள்கை இற்றைநாள் திறனிகளுக்குத் தாண்டகத்தைத் தனி யாப்பாக அறிய உதவவில்லை.
தாண்டகம் என்பது ஒருவகை யாப்பே ஆகும். தாண்டக யாப்பினைப் பற்றிய கருத்துகள் தமிழ் இலக்கண ஆசிரியர்களிடம்
மாறுபட்டும் தெளிவின்றியும் காணப்படுவதால் இன்றைய நிலையில் அதனை நாம் முழுமையாக அறிய முடியவில்லை.
‘பாசுரங்களில் எச்சங்களாகத் தொடர்ந்து செல்லும் போக்கு’ அவற்றைப் பாடுதற்குப் பின்பற்றிய ‘ஒருவகை இசை மரபு’
ஆகிய தனித்தன்மைகளால் தாண்டக யாப்பு முன்னாளில் வேறுபடுத்தி அறியப்பட்டிருக்கலாம்.
 அவை பற்றிய விளக்கமான குறிப்புகள் இன்று நமக்குக் கிடைக்கவில்லை.
தாண்டக யாப்பினைத் தனியே கருத்திற் கொள்ளாமல் திருக்குறுந்தாண்டகம் அறுசீர் விருத்தமென்றும்,
திருநெடுந்தாண்டகம் எண்சீர் விருத்தமென்றும் திவ்யப்ரபந்தப் பதிப்பாசிரியர் சிலர் யாப்புவகை காட்டியது பொருத்தமாகத் தோன்றவில்லை.
திருமங்கையாழ்வார், திருநாவுக்கரசர் ஆகியோரது தாண்டகங்களுக்குப் பிறகு தமிழில் தாண்டக இலக்கியங்கள் தோன்றவில்லை.
எனவே, தமிழில் பிற்றைநிலை வளர்ச்சி பெறாத ஓர் இலக்கிய வகையாகத் திகழ்வது தாண்டகம் எனலாம்.

திருநாவுக்கரசர் பாடிய திருத்தாண்டகங்களுக்குள் கிடைக்கப்பெற்றனவற்றுள் முதலாகப் பாடப்பெற்ற பதிகம் 

மறுமாற்றத் திருத்தாண்டகம்‘ (6.98).

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
.. நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
.. இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
.. சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
.. கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே.–6.98.1

வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்
.. வெய்ய வினைப்பகையும் பைய நையும்
எம்பரிவுந் தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்
.. எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம்
அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி
.. அனலாடி ஆன்அஞ்சும் ஆட்டு கந்த
செம்பவள வண்ணர்செங் குன்ற வண்ணர்
.. செவ்வான வண்ணரென் சிந்தை யாரே.-6.95.2

சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து
.. தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
.. மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
.. ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
.. அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே.–6.95.10

அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும் மடி
.. அழகெழுத லாகா அருட்சே வடி
சுரும்பித்த வண்டினங்கள் சூழ்ந்த வடி
.. சோமனையுங் காலனையுங் காய்ந்த வடி
பெரும்பித்தர் கூடிப் பிதற்றும் மடி
.. பிழைத்தார் பிழைப்பறிய வல்ல வடி
திருந்துநீர்த் தென்கெடில நாடன் னடி
.. திருவீரட் டானத்தெஞ் செல்வன் னடி.–6.6.4-

—-
தருமை ஆதீனம் வெளியிட்ட ஆறாம் திருமுறை உரைநூலின் முன்னுரைகளில் காண்பது:

“…..நாவரசர் அருளிய தேவாரம் நம்மை இறைவன் திருவருளிலே அழுந்தச் செய்யும் மந்திரங்கள்.

தேவாரத் திருமுறைகள் பண்ணாங்கம்சுத்தாங்கம் என இரண்டு பிரிவுகள் உடையன.

அவற்றுள் பண்ணாங்கம் தாள அமைப்புடன் கூடிய பதிகங்களாகும்.

திருநாவுக்கரசர் தேவாரத்தில் திருவிருத்தம்திருத்தாண்டகம் ஆகியன சுத்தாங்கமாகப் பாடுவதற்கு உரியன. …. …

திருவிருத்தம் நான்காம் திருமுறையில் அமைந்துள்ளது.

திருத்தாண்டகம் ஆறாம் திருமுறையாக விளங்குகிறது.

பன்னிரு திருமுறைகளில் தாண்டகம் என்ற யாப்பு வகையில் திருமுறை அருளியவர் திருநாவுக்கரசு சுவாமிகளே ஆவார்.

அதனால் இவர் தாண்டக வேந்தர்தாண்டகச் சதுரர் எனப் போற்றப்படுகிறார்.

இறைவன் புகழை விளங்க விரித்துரைக்கும் முறையில் தாண்டக யாப்பு வகை இவருக்குப் பெரிதும் துணை செய்துள்ளது. …..”

பெரிய புராணத்தில்:
நாமார்க்குங் குடியல்லோ‘ மென்றெடுத்து நான்மறையின்
கோமானை நதியினுடன் குளிர்மதிவாழ் சடையானைத்
தோமாலைச் செந்தமிழின் செழுந்திருத்தாண் டகம்பாடி
யாமாறு நீரழைக்கு மடைவிலமென் றருள்செய்தார்.

தேமாலைச் செந்தமிழின் செழுந் திருத்தாண்டகம் – திருத்தாண்டகப் பதிகத்தைப் பற்றிக் கூறநேர்ந்த இடம் இதுவே முதலாதலின் அதன் தன்மையை இவ்வாறு விரித்தனர்.

தேம் – சொல்லினிமையும் ஓசையினிமையும்,

மாலை – ஒரு பாட்டினுள்ளே பல பெயரும் தொடர்ந்துவந்து ஓரிடத்து முடிபுறும் தன்மையும்,

செந்தமிழ் – நிரம்பிய தமிழினிமையும்,

இன் – பொருளினிமையும்,

செழுமை – பயனினிமையும்,

திரு – இறைவனது தன்மை பற்றிய நிலையும்,

தாண்டகம் – யாப்பும் பண் வகையும் உணர்த்தின.

இங்குக் கூறிய அடைமொழிகள் தாண்டகங்கட்குப் பொதுவாகவும்இப்பதிகத்துக்குச் சிறப்பாகவும் உரியன.

தேவாரத்தினைத் தாண்டகச் செய்யுளால் திருநாவுக்கரசர் ஒருவரே யருளியிருத்தலால் அவர்க்குத் தாண்டக வேந்தர் என்று பெயராயிற்று.

—————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -12–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

July 6, 2022

ஆவியயை யரங்க மாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால்,

தூய்மையில் தொண்டனேன் நான் சொல்லினேன் தொல்லை நாமம்,

பாவியேன் பிழைத்தவாறு என் என்று அஞ்சினேற்கு அஞ்சல் என்று

காவி போல் வண்ணர் வந்தென் கண்ணுளே தோன்றினாரே.–12-

 

பதவுரை

ஆவியை

உலகங்கட்லெல்லாம் ஓருயிராயிருப்பவனும்
அரங்கம் மாலை

திருவரங்கத்தி லுள்ளவனுமான எம்பேருமானைக் குறித்து,
அழுக்கு உடம்பு எச்சில் வாயால்

இவ் வழுக்குடம்பின் எச்சில் வாயினால்
தூய்மை இல் தொண்ட நான்

அபரிசுத்தனும் கண்ட விடங்களில் தொண்டு பட்டவனுமான நான்
தொல்லை நாமம்

அநாதியான திருநாமங்களை
சொல்லினேன்

சொன்னேன்;
பாவியேன் பிழைத்த ஆறு என்று அஞ்சினேற்கு

பாவியான நான் பிழை செய்த விதம் என்னே!“ என்று அநுதாபமுற்ற வெனக்கு
அஞ்சல் என்று

அபயமளித்து
காவி போல்

கருங் குவளை நிறத்தரான
வண்ணர் வந்து என் கண் உள்ளே தோன்றினார்

என் கண்களினுள்ளே ஸேவை ஸாதித்தார்.

பரம புருஷனான எம்பெருமானை மிகவும் அபரிசுத்தனான நான் எனது எச்சில் வாயால் ஸங்கீர்த்தனம் பண்ணி ‘

ஐயோ! இப்படி அபசாரப்பட்டோமே!‘ என்று அஞ்சின என்னுடைய அச்சம் தீர

அப்பெருமான் வந்து என் கண்ணுள்ளே தோன்றி அபயமளித்தானென்கிறார்.

ஆவியை – “ஓருயிரேயோ உலகங்கட்கெல்லாம்” என்கிறபடியே அனைத்துலகுக்கும் பிராணனாயிருப்பவன் எம்பெருமான்.

இப்படிப்பட்டவனை யன்றோ என்னுடைய எச்சில் வாயில் கொண்டு கெடுத்தேனென்கை.

(அரங்கமாலை) கண்ணுக்குத் தோன்றாதபடி நிற்கிற உயிர் போலன்றியே எல்லாருங் காணலாம்படி

திருவரங்கம் பெரிய கோயிலிலே காட்சி தந்து

ஆச்ரிதர் பக்கலில் வியாமோஹமே வடிவெடுத்தவன் போலிருக்கிற எம்பெருமானையன்றோ நான் தூஷித்தேனென்கை.

தூஷிக்கையாவது எச்சில் வாயிற் கொள்ளுகை. அதனைச் சொல்லுகிறார். அழுக்குடம்பேச்சில் வாயால் என்று.

கண்டவர்களின் காலிலும் விழுந்து உடம்பு அழுக்காயிற்று;

கண்டவர்களையும் தோத்திரம் பண்ணி வாய் எச்சிலாயிற்று.

‘ஐயோ! தப்பாக இவை செய்தோம்‘ என்கிற அநுதாபமு மில்லாமையாலே தூய்மையற்ற தொண்டனாயினேன்.

இப்படிப்பட்ட நான். இவ்வழுக் குடம்பிலமைந்த எச்சில் வாயினால் (சொல்லினேன் தொல்லைநாமம்)

‘தொல்லை நாமம்‘ என்றது – அநாதிகாலமாக நித்யஸூரிகள் முதலானார்க்கு ஜீவனமாயிருக்கின்ற திருநாமம் என்றபடி.

பல பெரியோர்களுக்கு உதவும் படியான வஸ்துவை அநியாயமாக நான் வாய் வைத்துக் கெடுத்து விட்டேனே!,

இனி அவர்கள் எங்ஙனே ஜீவிக்கப் போகிறார்கள்! என்று நைச்யாநுஸந்தானமாகப் பேசுகிறபடி.

தொல்லை நாமங்களை அழுக்குடம்பெச்சில் வாயால் நான் சொன்னது மாத்திரமன்றியே

”நானுஞ் சொன்னேன் நமருமுரைமின்“ என்று நமர்களையும் சொல்லுவித்தன்றோ கெடுத்தேன்;

ஆ ஆ! என்ன அபசாரப்பட்டோம்!, என்ன அபசாரப்பட்டோம்!!, இனி நமக்கு உய்யும் வழியுண்டோ?” என்று

நான் அஞ்சினவளவிலே

‘ஆழ்வீர்! அஞ்சவேண்டா‘ என்று வடிவழகைக் காட்டி மருந்தை யிட்டுப் பொருந்தவிட்டான் எம்பெருமான் என்றாராயிற்று.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அர்ச்சாவதார பெருமாள்கள் கொண்டாடும் ஸ்ரீ ஸ்ரார்த்த உத்சவங்கள் —

July 5, 2022
ஸ்ரீ அர்ச்சாவதார பெருமாள்கள் கொண்டாடும் ஸ்ரீ ஸ்ரார்த்த உத்சவங்கள்
—————
1-ஸ்ரீ நூபுர கங்கை தொட்டித் திரு மஞ்சனம் -ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசி திதி-
ஸ்ரீ திருமாலிரும் சோலை அழகர் கோவிலில் தினமும் இரவு அர்த்த ஜாம ஆராதனம் முடித்து விட்டு
ஸ்ரீ திருமலை யாண்டான் ஸ்வாமி தன் திருமாளிகைக்கு செல்லும் போது அவருக்கு வயதாகி கண்பார்வை மங்கியதால்
ஒரு கைங்கரிய பரர் திருவடி பந்தம் பிடித்துக் கொண்டு அவருக்கு முன்னாள் வழிகாட்டி கொண்டு செல்லுவார்.
அதாவது திருவடிபிச்சன் அவர் பெயர் சுந்தர்ராஜன் என்பது காரணம்.
அந்தகாலம் சோலைக்கு செல்லும் வழி முழுவதும் பொதுவாகவே இருட்டாக தான் இருக்கும்
அதுவும் திருமாலிருஞ்சோலை வழி ஒரே வனாந்திரபகுதி.
மரம் அடர்த்தியாக இருப்பதால் ஒரே இருட்டாகவும் இருக்கும். தன் கண்பார்வை மங்கியதால் வழி காட்ட திருவடி பிச்சன் வைத்திருந்தார்
திருமலையாண்டான்
இப்படி ஒருநாள் பகவத் ஆராதன கைங்கர்யம் முடித்து அர்த்தஜாம ஆராதனமும் முடித்து விட்டு
தன் திருமாளிகை செல்ல ஆயத்தமானபோது திருவடிபந்தம் பிடிக்கும் சிஷ்யனை காணவில்லை
(அக்காலத்தில் தன் கைங்கர்யம் செய்யும் அடியார்களை சிஷ்யனாக வரிப்பது வழக்கம்)
திருமலையாண்டான் திருவடி பந்தம் பிடிக்கும் அந்த சிஷ்யன் பெயரை ஒரு முறைக்கு இருமுறை
“சுந்தரராஜா” – ன்னு அழைத்தார்.
உடனே கையில் திருவடி பந்தத்துடன் வந்து
“ஸ்வாமின் அடியேன்” வந்துள்ளேன் என்று சொல்லி அவருக்கு முன்னாள் சென்று வழிகாட்டி சென்றபடியே
திருமலையாண்டான் திருமாளிகை வந்த உடன் அவரிடம் ஸ்வாமி “அடியேன் திரும்பி செல்ல நியமம் வாங்கிக்கின்றேன்” என்று சொல்லி திரும்பிவிட்டார்
மறுநாள் அதிகாலை திருவடி பந்தம் பிடிக்கும் திருவடிபிச்சான் சுந்தரராஜன் திருமலையாண்டான் திருமாளிகைக்கு
சாஷ்டாங்கமாக அவரை சேவித்து “ஸ்வாமின் அடியேன் தெரியாமல் உமக்கு திருவடிபந்தம் பிடிக்கும்
கைங்கர்யத்தில் நேற்று அபச்சாரம் செய்துவிட்டேன்” தயவுகூர்ந்து அடியேனை மன்னித்து அருள வேண்டும் என கூற.
திருமலையாண்டான் “என்ன சொல்கிறாய் ? என்ன அபச்சாரம் செய்தாய்?என்று கேட்க,
“ஸ்வாமி நேற்று மாலை உடல் அசதியால் மாலையில் இருந்து இரவு வரை நன்கு தூங்கி விட்டேன்
அதனால் எப்போதும் தேவரீருக்கு திருவடி பந்தம் பிடித்து வழிகாட்டும் கைங்கர்யத்துக்கு நேற்று வர முடியவில்லை.”
“ஸ்வாமி தேவரீர் நேற்று வனாந்திர இருட்டில் விளக்கு இல்லாமல் எப்பிடி இந்த திருமாளிகைக்கு எழுந்தருளினீர்” என சுந்தரராஜன் கேட்க
“நீதானே நேற்றும் எப்போதும் போல் எனக்கு திருவடிபந்தம் பிடித்து வந்து இங்கே என்னை விட்டு விட்டு
நியமம் பெற்று போனாய்” – என்று சொல்ல
“ஸ்வாமி அடியேன் வரவேயில்லை” என்று சுந்தர்ராஜன் மறுக்க
அப்போது தான் திருமலையாண்டான் க்கு தெரிந்தது நேற்று பந்தம் பிடித்து வந்தவன் தன் சிஷ்யனான
இந்த சுந்தர்ராஜன் அல்ல சாட்சாத் ஆதிமூலமான அந்த சுந்தர்ராஜனே என உணர்ந்து
உடனே திருமாலிருந்சோலை சென்று “ஸ்வாமியே தேவரீரே நேற்று திருவடி பந்தம் பிடிப்பவனாக வந்து
இந்த அடியவனைக்கு நீரா வழி காட்டினீர்…” என அழகர் திருவடிகளை பிடித்து கொண்டு கதறி அழுதாராம்
திருமலையாண்டான் சுந்தர்ராஜனான அந்த அழகர் திருவடிபந்தம் பிடித்து தன்னையும் சிஷ்யனாகவே பாவித்து
கைங்கர்யம் செய்த உண்மை தெரிந்ததும் திருமாலையாண்டான் திருமாலிருஞ்சோலை அழகரின்
சௌலப்பியத்தை நினைத்து ஆனந்த கண்ணீர் மல்க அவனை அன்று ஆனந்தமாக ஆராதித்தாராம்
சிஷ்யனாக வந்து திருவடிபந்த சேவை செய்ததால் திருமலையாண்டான் பரமபதித்ததும் அவருக்கான
இறுதி காரியங்களை அழகர் தம் பரிவாரங்களை கொண்டு அர்ச்சக பரிசாரக முகேனமாக செய்கிறார்
திருமலை யாண்டான் பரமபதித்த நன்னாள் ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசி திதி
அதனால் தான் அழகர் வருடாவருடம் அந்நாளில் திருமாலிருஞ்சோலை மலைக்கு சென்று எண்ணெய் குளியல் செய்கிறார்
அழகர் வருடம் இரண்டு முறை நூபுர கங்கைக்கு வருவார்
ஒன்று ஆடிமாதம் அழகரின் வருடாந்திர பிரம்மோச்சவத்திற்க்கு
மற்றொன்று ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசியான திருமலை யாண்டான் பரம்பதித்த நாளன்று
கலியுகத்தில் பகவான் மனிதரூபமாகவே வந்து கைங்கர்யம் செய்வான்
எனவே அபிமானிகளே ஆபத்தில் உங்களுக்கு யாரேனும் உதவினால் அவர் உங்களூர் பெருமாளாகவே கூட இருக்கலாம்
எனவே யாரையும் அலட்சியம் செய்யாதீர்கள்
திருமாலிருஞ்சோலை மலைமென்றேன் என்ன திருமால்வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான
குருமா மணியுந்து புனல் பொன்னித் தென்பால் திருமால் சென்று சேர்விடம் தென்திருப் பேரே
———–
2-ஸ்ரீ சார்ங்க பாணிப் பெருமாள் கண்டு அருளும் தீபாவளி ஸ்ரார்த்த உத்சவம்
தீபாவளியன்று ஸ்ரீசாரங்கபாணி ஆலயத்தில் சாரங்கபாணியின் திருக் கரங்களில் தர்ப்பை பவித்ரம் கொடுத்து, சிராத்த சமையல் செய்து வைணவர்களுக்கு அன்னம் கொடுப்பது வழக்கமாக உள்ளது. அதற்கான காரணத்தை அறிந்து கெள்ளலாம்.
கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி சந்நிதித் தெருவில் பிரம்மச்சாரி ஒருவர் இருந்தார்.
ஸ்ரீசாரங்கபாணி பெருமாளிடம் அதீத பக்தி கொண்டவர் இவர். தினமும் ஆராவமுதனை சேவிப்பதுடன்,
சதாசர்வ காலமும் அவரையே சிந்தையில வைத்து ஆராதித்து வந்தார். வயதாகி, உடல் தளர்ந்த நிலையிலும்
ஸ்ரீசாரங்கபாணியை தரிசிப்பதை அந்த பிரம்மச்சாரி விடாமல் தொடர்ந்தார்.
அவரைச் சுற்றி இருந்தவர்கள் ‘சுவாமி, தாங்கள் இப்படித் தனியாக இருக்கிறீர்களே…
கடைசி காலத்தில் உங்களுக்கு அந்திமக் கிரியைகளை யார் செய்வார்கள்? என்று கேட்டனர்.
அப்போதும் ‘என் ஆராவமுதன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான். அவன் தான் எனக்கு குழந்தை’ என்றார் அவர்.
ஒரு தீபாவளி தினத்தில் இறைவனடி சேர்ந்தார் அந்த பிரம்மச்சாரி.
‘தீபாவளி புண்ணிய நாளில், துக்கம் அனுஷ்டிக்க முடியுமா? என்ற எண்ணத்தில்
அக்கம் பக்கத்தவர்கள் அவர் வீட்டுக்குச் செல்லவோ, எதுவும் செய்யவோ முற்படவில்லை. ச
ற்று நேரத்தில் அழகான இளைஞன் ஒருவன். பிரம்மச்சாரியின் வீட்டுக்கு வந்தான்.
அவரது உடலைத் தன் மடியில் கிடத்திக் கொண்டு அழுதவன், ஆக வேண்டிய அனைத்துக் காரியங்களையும் செய்து முடித்தான்.
இதைக்கண்டு அக்கம் பக்கத்தவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
அவர்கள் சாப்பிடுவதற்காக அவனை அழைக்கச் சென்ற போது அந்த இளைஞன் மாயமாக மறைந்தான்!
மறுநாள் ஸ்ரீசாரங்கபாணி ஆலயத்தில் பூஜை செய்யும் அர்ச்சகருக்கு அருள் வந்தது.
‘சந்நிதித் தெருவில் இருந்த பிரச்சச்சாரிக்கு அந்திம கிரியைகளைச் செய்தது சாட்சாத் ஸ்ரீஆராவமுதனே! என்றார் அவர்.
அன்று முதல்.. தீபாவளித் திருநாளில், ஸ்ரீசாரங்கபாணியின் திருக்கரங்களில் தர்ப்பை பவித்ரம் கொடுத்து,
சிராத்த சமையல் செய்து வைணவர்களுக்கு அன்னம் பாலிப்பது வழக்கமாக உள்ளது.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். அந்த ராஜகோபுரத்தை கட்டியவனுக்காக ஆரவாமுதன் வேறொரு கடனை நிறைவேற்றினான். அது என்ன கடனென்று ராஜகோபுரத்தைக் கடந்து சென்று கொண்டிருந்த கோயிலில் பணியாற்றும் பட்டாச்சார்யாரிடம் கேட்டபோது கண்களை மூடிக் கொண்டார்.

கோபுரத்து மாடங்களில் புறாக்கள் கூட்டமாக அமர்ந்திருந்தன. மெல்ல சிரித்து சொல்லத் தொடங்கினார். ‘‘ஆரவாமுதன். உச்சரிக்கும் போதே உள்ளத்தில் அமுதூறும் அழகான திருப்பெயர். ஆதலாலே ‘‘ஆரா அமுதன் எனும் நாமமே இப்படி மயக்குவிக்கிறதே.

தொண்டையில் சிக்கிக் கொண்ட பிரதிமையைப்போல் எனக்குள் மையம் கொண்டாயோ’’ என ஆழ்வார்கள் உன்மத்த அவஸ்தையில் திளைத்த திவ்யதேசமே, கும்பகோணம் சார்ங்கபாணி பெருமாள் கோயில். எல்லோரும் தீபாவளியன்று பெருமாளை கொண்டாடுவர்.

நரகாசுரனை வதம் செய்த நாளன்று நரக சதுர்த்தி என மாலவனாம் கிருஷ்ணனை ஆராதிப்பர்.

ஆனால், கும்பகோணம் சார்ங்கபாணி எனும் ஆராவமுதன் தானே மகனாய், தந்தையாய், பரம்பரையில் ஒருவனாக அமர்ந்து சிராத்தம் எனும் திதி செய்தான். அதுவும் ஊர் கூடி தீபாவளியில் களித்திருக்க உள்ளம் கனிந்து ஒரு அடியவனுக்காக திவச அன்னம் கொடுத்து ஆற்றுப்படுத்தினான்,

ஆரவாமுதன். அது யதேச்சையாக ஐப்பசியும், தீபாவளியும், அமாவாசையும் ஒன்றாக சங்கமிக்கும் நாளில் நிகழ்ந்தது.அது நாயக்கர்களின் காலம்.

தென் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர்.

காஞ்சிக்கும், வந்தவாசிக்கும் அருகேயுள்ள நாவல்பாக்கம் எனும் தலத்தில்  அய்யா குமாரதாதா தேசிகன் எனும் மகான் வளர்ந்து கொண்டிருந்தார். முக்காலமும் வேதத்தை ஓதினார். கற்றதை பிறருக்கு கற்றுக் கொடுத்தார். வேள்விகள் செய்து நாட்டின் வளத்தை பெருக்கினார்.

ஞானத் தாகத்தோடு அருகே நின்றவர்களுக்கு பாசுரங்களையே தீர்த்தமாகக் கொடுத்தார். தாகம் தணிந்து சாந்தமுற்றோர்களை நாலா திக்கும் அனுப்பினார். வைகுந்தனின் வாசத்தை விண்ணுலகம் வரை பரப்புங்கள் என பயணிக்க பாதை காட்டினார்.

அச்சுதப்ப நாயக்கர் இவரின் அருட்பெருமையை அறிந்தார். ‘‘உங்களின் திருவடி என்றும் என் சிரசில்’’ என பணிந்து வணங்கினான்.
எங்களின் எல்லா தலைமுறைக்கும் தாங்களே குருவாக இருத்தல் வேண்டும் என வேண்டினான்.
‘‘திருமலை பெருமாளின் சித்தம் அதுவெனில் ஏற்கிறேன்’’ என ஆசி கூறினார். ஞான ஊற்றொன்று மெல்ல பொங்கியது.
அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர், விஜயராகவ நாயக்கர் என மூன்று தலைமுறையையும் அருளால் நனைத்தது.பாத்திரா பாத்திரம் பார்க்காது நிறைக்கும் அட்சய பாத்திரம் எங்கோ குருவருளை வேண்டி ஒரு ஜீவன் நிற்பதை அகக் கண்ணில் கண்டது.
அதுவும் இவர் வருவாரா என காத்துக் கிடந்தது. குடந்தை சார்ங்கபாணி கோயில் வாயிலில் ஒரு பக்தன் கண்களில் நீர் துளிர்க்க வானம் பார்த்துக் கொண்டிருந்தான். முழங்கால் அளவு வேட்டி. இடுப்பில் ஒரு துண்டு. கட்டுக் குடுமியும், நெற்றி நிறைய திருமண்ணோடும் நின்றிருந்தான்.
‘‘என்னடா பார்க்கற. யாராவது மேல போறாளா’’ விஷமமாக சில இளைஞர்கள் லஷ்மி நாராயணன் எனும் அந்த பிரம்மச்சாரியை சீண்டினார்கள்.‘
‘ஆமா… என்னிக்காவது ஒருநாள் வானம் முட்டற கோபுரம் பெருமாளுக்கு எப்போ வரும்னும் பார்க்கறேன்.
ராஜா மட்டும் மாளிகைல உசரமா இருக்கார். நம்ம சாரங்க ராஜாக்கு மட்டும் மொட்டை கோபுரமா. வரட்டும் கேட்கறேன்.’’ விளக்கம் சொன்னான்.
‘‘ சரி.. சரி… உனக்கொரு இடத்தை பார்த்துக்கோ. அப்புறம் பெருமாளுக்கு திருமாளிகை… கோபுரம்னு கட்டுவ.’’ அலுப்போடு ஒருவன் அலட்சியம் செய்தான்.
‘‘கட்டிக்கவே துணியில்லை. இதுல கோபுரம் கட்டுவானா இவன்’’ தெருவோடு போகிறவன் சொன்னான்.அவன் காதில் விழவில்லை.
கேட்கக் கூடாது என்று காதுக்கு உத்தரவிட்டிருந்தான். அமுதனின் புகழல்லாது வேறொன்றையும் என் காதில் போடாதே என்று பெருமாளிடம் கேட்டுக் கொண்டிருந்தான். 
அய்யா குமாரதாதா தேசிகன் எப்போது வருவார் என்று மட்டும் எல்லோரிடமும் விசாரிப்பான்.
‘‘வாசல்லயே நின்னுண்டேயிரு. வந்துடுவார்’’ என்று விஷமமாக ஒரு கிழவர் சொன்னார்.
தினமும் பல மணிநேரம் காத்துக் கிடப்பான். நாளை வந்துவிடுவார் என தனக்குள் தேற்றிக் கொள்வான்.
இப்போதும் அதுபோன்று காத்திருந்தான். ஆரவாமுதா… சாரங்கராஜா.. என்று தொலைதூரத்தினின்று குழுவாக பாடிக் கொண்டு
வரும் நாதம் காற்றில் வந்தது. மெல்ல திரும்பினான். ஆனந்த அதிர்ச்சியில் தன் வயமிழந்தான்.
ஆஹா… சீடனை காத்திருக்க வைக்க வேண்டாமே என அந்த ஞானகுருவும் இவனைக் காணும் ஆவலில் நெருங்கி வந்தது.
காலமும், தேசமும் சம்பமந்தமில்லாத அந்த குரு சீடனின் உறவு ஜென்மாந்திர விஷயம் என்பதை அவர் அறிந்திருந்தார். அவனை நெருங்கினார்.செந்தாமரை போன்று மலர்ந்திருந்த அந்த திருமுகத்தை கண்டவன் தழுதழுத்தான்.

ஏன் நான் உங்களையே நினைத்தேன் என்று புரியாத உணர்வு அவன் முகத்தில் படர்ந்தது.

இதற்கெல்லாம் எனக்கு ஏதேனும் தகுதி உள்ளதா என உடல் விதிர்த்துப் போட்டது.

இரண்டடி நடுக்கத்தோடே கைகளைக் கட்டிக் கொண்டு தள்ளி நின்றான். ஞான சூரியன் விடாது உள் வரை ஊடுருவியது.

உயிரை உரசியது. நெடுமரம் தானாக விழுவதைபோல அவர் திருவடியில் தடேரென்று விழுந்தான். பாத தூளியை சிரசில் ஏற்றான்.

தலைதூக்கி வானம் பார்க்க, சிரித்துக் கொண்டே மகான் நகர்ந்தார். வயதான சிங்கமொன்று கம்பீரம் குறையாது நடப்பது போன்றிருந்தது

அவர் நடந்துபோவது.முதல் தரிசனம் லஷ்மி நாராயணனை முற்றிலும் மாற்றியிருந்தது.

முன்னிலும் அதீத தெளிவும், அமைதியும் அவனுக்குள் குடி கொண்டிருந்தது.

அவருக்கு அருகேயே சென்று கைங்கர்யங்களை செய்யும் பாக்கியத்தை பெற்றான். உள்ளுக்குள் கனிந்தான்.

வெகுநாட்களாக மனதுள் இருந்த தனது வேட்கையை வெளிவிட்டான். இடுப்பில் அங்கவஸ்திரத்தைக் கட்டிக் கொண்டு

வினயமாக வாய்பொத்தி குனிந்து அவரிடம் பேசத் தொடங்கினான்.

‘‘தேவரீர்…  எனக்கு மாதா, பிதா எல்லாமும் ஆரவாமுதன்தான். நான் நினைவு தெரியாத நாள்லயே கும்பகோணத்துக்கு பெருமாள் அழைச்சுண்டதா சொல்றா. என் அம்மா, அப்பாக்கு ஒரு மாளிகை கட்டித் தருவேனோல்லியோ. அது மாதிரி எனக்கு எல்லாமுமா இருக்கற பெருமாளுக்கு ராஜகோபுரம் கட்டித்தரணும்ங்கிற ஆசை இருக்கு. பெருமாள்கிட்ட விண்ணப்பித்திண்டிருக்கேன். தேவரீரும் அருள் செய்யணும்’’ என்று அழுதான்.

வேறெதுவும் பேசத் தோன்றாது நமஸ்கரித்து நிமிர்ந்தான்.‘‘நான் போய் சொல்றேன். அவனும் உனக்கு எல்லாம் செய்வான்.

உனக்குப் பிறகும் உனக்காக செய்வான்’’ என்று அவன் பேசிய மொழியிலேயே பதிலுரைத்தார். ஆனந்தமாக சென்றான்.

இரண்டொரு நாளில் ஆராத துயர செய்தியொன்று இடியாக அவனுக்குள் இறங்கியது. தனது ஆச்சார்யனான அய்யா குமாரதாதா தேசிகன் வைகுந்தத்திற்கு ஏகிவிட்டார் என்பதே அது. திருவுடலை தரிசிக்கக்கூட மனதில் பலமில்லாது தனியே அமர்ந்து அழுது கொண்டிருந்தான்.

பிரம்ம மேத சம்ஸ்காரங்கள் எனப்படும் மாபெரும் ரிஷிக்குரிய ஒரு மரியாதையுடன் நாயக்க மன்னர்கள் சூழ திருவுடலுக்குரிய கிரியைகள் செய்தனர்.

பத்து நாட்களும் விதம் விதமான தானங்களை விஜயராகவ நாயக்கர் அளித்தார். பதினோராவது நாள் விடியற்காலை இருளில் கோயிலின் ஒரு மூலையிலிருந்து விசும்பல் சத்தம் வெளிப்பட்டது. ஒரு தூணோரம் லஷ்மி நாராயணன் அமர்ந்து அழுது கொண்டிருந்தான்.
‘சார்ங்கா… இப்போது என்னவர்கள் என நான் நினைத்துக் கொண்டிருந்த ஆச்சார்யன் இல்லை.

குருநாதர் நான் சென்ற பிறகு என்று அன்று கூறினாரே. இந்த மூடனுக்கு புரியவில்லையே’ என கோயில் தூணில் சாய்ந்தபடி கண்மூடி கிடந்தான்.

‘‘குடந்தையிலுள்ளோர் லஷ்மி நாராயணன் என்ன பண்ணப் போறான்’’ என்ற அளவுக்கு குருவாகவும், சிஷ்யராகவும் பேசினார்கள்.

அந்த அளவு குருவை நெஞ்சு முழுதும் நினைத்துச் சுமந்தான். அவர் பரமபதம் பதித்த பதினோராவது நாள் சூரியன்

குருவின் கிருபை எனும் கிரணங்களை சுமந்து வியாபித்தான். நாயக்க மன்னன் பரிவாரங்களோடு வந்தான்.

ஒரு வயதான அந்தணர் லஷ்மி நாராயணனை சுட்டிக்காட்டி பேசினார். மன்னன் ஆச்சரியத்தில் விழி விரித்தார்.

விஜயராகவ நாயக்கர் லஷ்மி நாராயணனுக்கு அருகே சென்றார். அவனின் தோள் தொட்டு ‘‘என்ன பாக்கியம் செய்திருக்கிறாய். உன்னிடம் நிறைய பேசியிருப்பாரே. உன்னிடம் என்ன கேட்டார்.’’‘‘அவருக்கென்று கேட்க எதுவுமில்லாத நிலையில் இருந்தார்.

ஏதேனும் வேண்டுமெனில் நாம்தான் கேட்க வேண்டும். நான் கேட்டேன் மன்னா…’’
‘‘என்ன கேட்டாய்’’ தன்னையேகூட கொடுக்கும் அளவுக்கு அருகே சென்றார்.‘‘ராஜகோபுரம் கட்டித் தர அருள் புரியவேணும் என வேண்டிக் கொண்டிருந்தேன்’’.நாயக்கருக்கு ‘சுருக்’ என்றிருந்தது. நான் செய்ய வேண்டியதை இவன் ஆசைப்பட்டிருக்கிறானே.

ஆழ யோசித்தபடி குனிந்திருந்த மன்னர் நிமிர்ந்தார். கண்களில் குளமாக நீர் தேங்கி நின்றது. நாராயணா… என விளித்தார். கண்ணீர் கன்னம் வழிந்தது.

‘‘நீயே வானம் தொடும் அளவுக்கு கோபுரம் கட்டு. இந்தா… என சகல தானங்களையும், பொற்கட்டியுமாக கொடுத்தான். குருவருளும், குடந்தை ஆரவாமுதனின்  அருளும் சேர்ந்து கொட்டியது. கோபுரமாக உயர்ந்தது. பதினோராவது நாள் கிரியையான ஏகோதிஷ்டகம் என்றழைக்கப்படும் நாளன்று கொடுக்கப்பட்ட தானத்தால் நிமிர்ந்த ராஜகோபுரமாக இருந்ததால் பதினோரு நிலைகள் இடம் பெற்றிருந்தன.
லஷ்மி நாராயணர் வயோதிகரானார். சார்ங்கணின் கைங்கர்யத்தில் இளைஞனைப்போல இருந்தார்.

குடந்தை மக்கள் தீபாவளித் திருநாளை கொண்டாடிக் கொண்டிருந்தனர். தூணோரமாக அமர்ந்தார். கண் மூடினார்.

காம்பினின்று உதிரும் மலர்போல உயிர் தனியே பிரிந்தது. ஊர் மக்கள் தகனக் கிரியைகளை செய்தனர்.

திதி எப்படி கொடுப்பது என்று யோசித்தனர். அப்படியே மறந்தும் போயினர். ஆனால், சார்ங்கபாணி எழுந்து அமர்ந்தான்.

ஆத்ம சக்தியாக சூட்சுமத்திற்குள் உறைந்திருந்த உயிர் திரட்சியை கண்டார். அது சரியாக பயணித்து அதற்குரிய உலகத்திற்குள் செல்ல வேண்டுமே என சாத்திரப் பார்வையில் பார்த்தார். மனித உருவில் கோயிலில் அமர்ந்தார்.

கைகளில் தர்ப்பைப்புல் ஏந்தி, பஞ்சபாத்திர உத்தரணியில் தீர்த்தமும், எள்ளும் எடுத்துக் கொடுத்து திவச அன்னங்கள் சமைத்து பிண்டம் வைத்து திதி கொடுத்தார். இவை யாவும் எவரும் கவனியாமலேயே நிகழ்ந்தன.

மறுநாள் கோயிலின் கருவறையை திறந்த பட்டாச்சார்யார் அதிர்ச்சியடைந்தார்.

உற்சவ மூர்த்தியான பெருமாள் ஈர வஸ்திரத்துடன், அபர காரியங்களின் போது பூணுலை வலமிருந்து இடம் அணிவது போல அணிந்து,

ஆங்காங்கு தர்ப்பைப்புல்லும், எள்ளும் இறைந்திருந்தன. ஆபரணங்கள் எல்லாமும் சிதறிக்கிடந்தது.

ஒரு திதி செய்தவர்களுடைய முகம் எந்த அலங்காரமுமில்லாமல் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது.

பட்டாச்சார்யார் மயங்கினார். சுற்றியுள்ளோர் உடல் விதிர்த்தபடி நடுங்கி நின்றனர். அசரீரி ஒலித்தது.
‘‘லட்சுமி நாராயணான என் பக்தனுக்கு இனி நானே வருடா வருடா திதி கொடுப்பேன். சிராத்தம்  செய்து வைப்பேன்.

திவச அன்னங்கள் கொடுத்து பசியாறச் செய்வேன். ஒவ்வொரு ஐப்பசி அமாவாசையன்றும் இது போன்று நிகழும்’’ என்றார்.

தொடர்ந்து இதை செய்ய வேண்டுமென அருளாணையிட்டார்.

நீத்தாருக்கு நெருங்கியவர்கள் யாரும் இல்லையென எண்ண வேண்டாம். என் பக்தன் என்னோடு நெருங்கிய ஸ்நேகம் கொண்டவன்.

பூவுலகை விட்டு மறைந்தாலும், வைகுந்தம் வரையில் அவனைதாங்கிச் செல்வேன் என உறுதியோடு சொன்ன தலம் குடந்தை.

சகலரும் அதிர்ச்சியில் உறைந்தனர். பெருமாளின் கருணையை நினைத்து உருகினர். இன்றும் தீபாவளி அமாவாசையன்றும்,

ஐப்பசி மாதம் அமாவாசை இணைந்து வரும் திதியில் சார்ங்கபாணி பெருமாள் சிராத்தம் கொடுக்கிறார்.

கோயிலுக்குள்ளேயே கோமளவல்லித் தாயார் சந்நதிக்கு எதிரேயே குமாரதாதா தேசிகன் தனிச் சந்நதியில் குடி கொண்டிருக்கிறார்’’ என்று உணர்ச்சி பாவத்தோடு கண்களில் நீர் துளிர்க்க சொல்ல, ராஜகோபுரத்துப் புறாக்கள் ஜிவ்வென்று கூட்டமாக சிறகடித்து மேலே கிளம்பியது.

திதி கொடுக்கப்படும் தேசிகர் சந்நதிற்கு அழைத்துச் சென்றார்.‘‘இங்கதான் திதி கொடுக்கறது வழக்கம்.

இப்போ நினைச்சாலும் அந்த சரித்ரம் உள்ளத்தை உருக்கும். பாராயணத்திற்குரிய ஒரு சரித்ரம்னுதான் நினைக்கிறேன்.

ஏன்னா… கேட்கறச்சேயே பக்தி திடப்படறது. அந்த காலத்துல இதை கதையா சொல்றச்சே கதறி அழுதவா உண்டு.

பெருமாளுக்கு சிராத்தம் செய்யறச்சே யாரும் பார்க்க முடியாது. கோயிலையே சாத்திடுவோம்.

நாங்க மட்டும் மூணு நாலு பிராமணர்களா தேசிகன் சந்நதிகிட்ட உட்கார்ந்துண்டு பண்ணுவோம்.

பெருமாள் நாமத்தை மட்டும் சொல்லி சிராத்தம் செய்வோம். திவச சாப்பாடுதான் அன்னிக்கு வைப்போம்.

சாதாரண மனுஷாளுக்கு சொல்ற மந்த்ரங்கள் கிடையாது. ஏன்னா… பண்றவரே பெருமாளா இருக்கறச்சே அவர் திருநாமம்தான் முக்கியம்.

எல்லாத்தையும் முடிச்சுட்டு கோயிலை திறப்போம். கிட்டத்தட்ட நானூத்தி அம்பது வருஷத்துக்கும் மேல இது நடந்துண்டு வரது.

சிராத்தத்தை தான் பண்றேங்கற விஷயத்தை தவிர, எங்கேயோ இருந்த பிஞ்சு பக்தனுக்காக, அதையும் தாண்டி குருவை பிடிச்சுண்டா போதும் என்னை அடைஞ்சுடலாம்கறதைதான் இந்த கதை சொல்றது’’ என முத்தாய்ப்போடு முடித்தபோது தேசிகர் சந்நதியில்

காய்ந்திருந்த தர்ப்பைப் புல்லிலும் பச்சை வாசனை கூடித்தான் இருந்தது.


3-ஸ்ரீ நம்பெருமாள் கண்டு அருளும் மா முனிகள் திரு நாடு அலங்கரித்த மாசி கிருஷ்ண பக்ஷ துவாதசி திதி

தனது 74 வது வயதில் 1444ம் ஆண்டு ருத்ரோத்காரி என்ற தமிழ் வருஷத்தில்,
மாசி மாதத்தில்,திருவோண நக்ஷத்ரம், சனிக்கிழமை, கூடிய கிருஷ்ணபக்ஷ த்வாதசி அன்று திருநாடு எய்தினார்.

மாசில்லாத மணவாள மாமுனிகள் மாசி கிருஷ்ணபக்ஷம் துவாதசியன்று திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

அவர் வசித்து வந்த திருமலையாழ்வார் கூடம் நிரம்பி வழிந்தது. உத்திர வீதிகளெங்கும் நெற்றியில் பளீரென
திருமண், திருச்சூர்ணம் துலங்க ஸ்ரீவைஷ்ணவர்கள் அலைப் பொங்கியது.

ஜீயர் நாயனார் மன்னுலகு சிறக்க வந்த மாமுனிகளின் சரம கைங்கர்யத்திற்கு பொறுப்பேற்கின்றார்.

சீடர்கள் குழாமுடன் திருக்காவேரி எழுந்தருளி நீராடி பெரிய திருமஞ்சனக் குடத்தில் கங்கையிற் புனிதமான
காவிரியின் நன்னீர் சேந்தி சகலவிதமான மங்கள வாத்யங்கள் முழங்க, அலங்காரமாக திருமஞ்சன குடத்தினைக் கொண்டு வருகின்றனர்.

ஜீயரின் விமல சரம திருமேனியினை திருமஞ்சன வேதிகையில் எழுந்தருளப் பண்ணுகின்றனர்.

நான்கு உத்திரவீதிகளிலும் அலைப்போன்று ஆர்ப்பரித்து நின்ற ஸ்ரீவைணவர்கள் புருஷசூக்தத்தினை
தழுதழுத்தக் குரலுடன் பாராயணம் செய்கின்றனர்.

அந்த சந்தர்ப்பத்திற்கேற்ப வானம் மூட்டமிட்டு கதிரவன் சற்றே மறைந்து மெல்லிதாக பூமாரி பொழிகின்றது.

திருமஞ்சனம் முடிந்து திருவொற்றுவாடையினால் திருமேனியை ஒரு குழந்தை குளித்து முடித்தபின்பு
துவட்டுவது போன்று கவனமாக ஒத்தி ஒத்தி துவட்டுகின்றனர்.

திருப்பரிவட்டம் சாற்றுகின்றனர்.

த்வாதசோர்த்வ புண்டரங்களை திருமேனியில் சாற்றுகின்றனர். காந்தி வீசும் விசாலமான நெற்றியில்
விசாலமான அத்திருமண்காப்பும். ஸ்ரீசூர்ணமும் தேஜஸ்ஸோடு விளங்கியது.

ஜீயரை திவ்ய சிம்ஹாசனத்திலே எழுந்தருளப் பண்ணுகின்றனர். அனைத்து ஸ்ரீவைணவர்களும்
‘எம்பெருமானாரை சேவியாத குறையெல்லாம் இவரையடைந்து தீர்ந்தோம் நாம்! இப்போது இவ்வவதாரமும் தீர்த்தம் பிரஸாதித்துப் போவதே!”
என்று மிகவும் துக்கித்து கண்ணீர் மல்க கதறுகின்றனர்.

ஒவ்வொருவராக அவர்தம் திருவடியினை தம் தம் சிரஸ்ஸிலும் நெஞ்சிலும் ஒற்றிக் கொள்கின்றனர்.

‘அத்தன் மணவாள யோகி அடியிணையைச் சித்தப் பெருங்கோயில் கொண்டருளி” என்றபடி
அவரது திவ்யமங்கள சொரூபத்தினை தம் தம் திருவுள்ளங்களில் கடைசிமுறையாக தேக்கிக் கொண்டு
வைத்தக் கண் வாங்கதே விமல சரம விக்ரஹ அனுபவத்திலே விக்கித்தவாறு இருக்கின்றனர்.

உத்தமநம்பி மூலமாக அரங்கன், ‘தாம் அரைச்சிவக்கச் சாற்றிக் கழித்த பீதகவாடையான சிகப்புப் பட்டினையும்,
அவன் திருமார்பணிந்த வனமாலையையும்’ ஒரு பொற் தட்டிலே வைத்து கோயில் மரியாதையுடனே,
சகல வாத்ய கோஷங்களுடனே, சகல பரிகரர்களையும் உடன் அனுப்பி, மடத்து வாசலுக்கு அனுப்பி,
கோயிலின் மூலஸ்தானத்தில் தான் மட்டும் தனித்திருந்து துக்கித்து அதனால் அவனது திருமேனி கறுத்து வாடியபடியிருக்கின்றான்.

மாமுனிகளின் மடத்து வாசலில் ஜீயர் நாயனார் உட்பட அனைத்து முதலிகளும் அரங்கனிடமிருந்து வந்த
கோயில் மரியாதையினை எதிர்கொண்டு, சாஷ்டாங்கமாக வீழ்ந்துசேவித்து அங்கீகரித்து
‘உடுத்து களைந்த பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு தொடுத்துழாய் மலர் சூடிக்களைந்தன சூடுமித்தொண்டரான
ஜீயருக்கு அவற்றைச் சூட்டி அலங்கரிக்கின்றனர்.

கோயிலார்கள் அனைவருமே சோகார்த்தராய் ஜீயரை சேவிக்கின்றனர்.

திருச்சூர்ண பரிபாலனம் நடக்கின்றது.

பின்பு எண்ணெய் சுண்ணங்கொண்டாடுகின்றனர். (சிறிது எண்ணெய் அவரது சிரஸ்ஸில் தேய்த்து, தேய்த்த கையிலுள்ள
மீதமுள்ள நல்லெண்ணையை கொப்பரையிலுள்ள எண்ணெயோடு கலந்து அனைவருக்கும் பிரஸாதிப்பது)

நறுமணம் வீசும் அனைத்து ஜாதி புஷ்பங்களினாலும் பல்லக்கை அலங்கரித்து அதனில் அவரது திருமேனி ஏறியருளப் பண்ணுகின்றனர்.
அரங்கனது ஸ்ரீமாந்தாங்குவோர் அனைவரும் காவிவண்ண ப்ரபன்னபாகையுடன் கவனமுடன் பல்லக்கினை எழுந்தருளப் பண்ணுகின்றனர்.

சத்ர, சாமர, தாள வ்ருந்தாதிகள் பணிமாற, மத்தளங்கள், சங்க, காஹள பேரிகள் தொடக்கமான ஸகல வாத்யங்களும் ஒரு சேர முழங்க,

பொய்யில்லாத பெரிய ஜீயர் – கர்வம் அறியாத கர்மவீரன் – சாத்வீகமே உருவெடுத்த சத்தியன் –
அரங்கனே அடியவனாய் வந்தும் அகங்காரம் சற்றும் கொள்ளாத அழகிய மணவாளன் – கைங்கர்யத்திற்காகவென்ற
சம்ஸாரம் துறந்து சந்நியாசம் மேற்கொண்ட ஸௌம்ய ஜாமாத்ரு முனி, பூவுலகு நீங்கி புறப்படுகின்றார்.
அவரது விமல சரம திருமேனி வருகையையொட்டி உத்திர வீதி, சித்திரை வீதியெங்கும் கொடிகள் அழகாக
ஒரு சீரான க்ரமத்தில் நாட்டப்பட்டு நடுநடுவே மகரதோரணம் போன்று தோரணங்கள் கட்டப்பட்டு, வீதியெங்கும் நீர் தெளித்து,
சுத்தமாக மொழுகி, கோலமிடப்பட்டு, நடுநடுவே புஷ்பங்களை சொரிந்து, அங்காங்கு கமுகு, குலையுடன் கூடிய வாழைமரங்கள் நட்டு,
மஹாஞானியின் கடைசி வருகைக்காகக் காத்திருந்தது.

அடியார்கள் சூழ அரங்கநகரே பிரிவாற்றமையினால் அழுதது. மாமுனிகளின் புஷ்பகவிமானம் ஊர்ந்தது.

பின்னால் ஸ்ரீவைணவர்கள் அனைவரும் கையில் கரும்புடன் இராமானுஜ நூற்றந்தாதி முதலாக அனுசந்திக்கின்றனர்.
ஜீயரின் திருமேனி முன் பொரியும் புஷ்பமும் சிதறுகின்றது. ‘தர்ஸநத்திலே மணவாளமாமுனிகள் திருநாட்டுக்கு எழுந்தருளினார்;”
என்று ஒற்றை திருச்சின்னம் பணிமாற, ஸூமங்கலிகள் அனைவரும் கையில் மங்கள தீபமேந்தி நிற்க,
எட்டு திருவீதிகளிலும் மாமுனிகள் கடைசியாக அனைவருக்கும் ஸேவை தந்து வலம் வருகின்றார்.

வடக்கு வாசல் வழியே தவராசன் படுகையிலே ‘மகிழாதிகேசவன் தன்னடிக் கீழாக” என்கிறபடியே
அங்குள்ள ஆதிகேசவ பெருமாளின் திருவடிக் கீழாக தென்பாலில், ஆளவந்தார், இராமானுஜர் ஆகியோருக்கு
செய்த கிரமம் போன்று யதி ஸம்ஸ்கார விதி யடங்க திருப்பள்ளிப்படுத்துகின்றனர்.

பூமிதேவியானவள் ஜனகனின் திருமகளான சீதையை தம் மடியிலே வைத்து அணைத்துக் கொண்டு ஆதரித்தாற்போன்று,
மாமுனிகளான இவரையும் தம் மண்ணால் மூடி தம் மடி மீது கிடத்தி அணைக்கின்றாள்.

சீயரெழுந்தருளி விட்டார் செகமுழுதும்
போயிருள் மீளப் புகுந்ததே தீய
வினைநைய வெம்புலனா வீடழிந்து மாய்வோ
ரனைவார்க்குமேதோ வரண்?

என்று சிஷ்யர்கள் அனைவரும் மிகவும் துக்கித்து, தங்களுடைய திருமுடியினை விளக்குவித்துக் (தலைச்சவரம்) கொண்டு,
வடதிருக்காவிரியில் நீராடி மீண்டும் மடத்துக்கு எழுந்தருளுகின்றனர்.

நம்மாழ்வார் மோட்சம் முடிந்து நம்பெருமாள் ஆஸ்தானம் அடைந்த பின் வெறிச்சோடும் திருமாமணி மண்டபம் போன்று,
ஜீயரின்றி வெறித்துப் போய் கிடந்த திருமலையாழ்வார் கூடம் கண்டு மீண்டும் அழுகின்றனர்.

நானெதென்னும் நரகத்திடையழுந்திப்
போனவிந்த காலமெல்லாம் போதாதோ? – கானமலர்
மாலையணிதிண்டோன் மணவாள மாமுனியே
சால நைந்தேன் உன் பாதம் தா!–என்றும்

புண்ணாராக்கை தன்னுள் புக்குழலும் தீவினையேன்
தண்ணாருமென் கமலத்தாளணைவதென்று கொலோ
பண்ணரு நால்வேதம் பயின்றுய்யும் பண்டிதனே
மண்ணாள வந்த மணவாள மாமுனியே–என்றும்
மண்ணுலகம் சிறக்க வந்த மாமுனிகளை நினைத்து நினைத்து திருமிடறு தழுதழுப்ப விண்ணப்பஞ்செய்து,
தமக்குத் தானே ஒருவாறு தேறி ஜீயரின் திருவத்யனன கைங்கர்யத்தினைப் பெருக்கச் செய்கின்றனர்.
தீர்த்த பிரஸாதங்களை ஸ்வீகரித்து ஜீயர் அவரவர்க்கிட்ட பணி செய்ய திரும்புகின்றனர் அனைவரும்.

பெரியபெருமாள், ஜீயர் நாயனாருக்கு தீர்த்தம் பிரஸாதம் திருப்பரிவட்டம் ஸ்ரீசடகோபம் எல்லாம் சாதித்து,
ஜீயர் நாயனாரை ”ஸ்ரீரங்கராஜரையும் மடத்தையும் நோக்கிக்கொண்டு போரும்” என்று நியமிக்கின்றார்.

இத்தைக் கண்டு ஜீயருடைய அபிமாந அந்தர்பூதரெல்லோரும் சற்றே ஆறுதலடைந்தவர்களாய், ஜீயர் நாயனாரை
பெரிய ஜீயரைக் கண்டாற் போல கண்டு அநுவர்த்தித்து, ஆஸ்ரயித்து ஸேவித்துக் கொண்டிருந்தார்கள்.

———————-

ஜயது யஶஸாதுங்கம் ரங்கம் ஜகத் த்ரய மங்களம்
ஜயது ஸுசிரம் தஸ்மிந் பூமா ரமாமணி பூஷணம்
வரத குருணா ஸார்த்தம் தஸ்மை ஶுபாந்யபி வர்த்தயந்
வரவரமுநி: ஸ்ரீமாந் ராமாநுஜோ ஜயதுக்ஷிதௌ

பெருமையினால் உயர்ந்து மூவுலகுக்கும் மங்களாவஹமான ஸ்ரீ திருவரங்கமானது பெருமையுற்று விளங்க வேணும்;
அத்திருப்பதியிலே ஸ்ரீ பெரிய பிராட்டியாரையும் ஸ்ரீ கௌஸ்துபத்தையும் திவ்யாபரணமாக உடைய ஸ்ரீ எம்பெருமான்
பல்லாண்டு பல்லாண்டாக விளங்க வேண்டும்;
அந்த ஸ்ரீ ரங்கநாதனுக்காக ஸ்ரீ வரதகுருவான அண்ணனுடன் மங்களங்களை மேலும் மேலும் உண்டாக்குபவரான
ஸ்ரீ ராமாநுஜரின் அபராவதாரரான ஸ்ரீ மணவாளமாமுனிகள் இப்புவிதனில் விளங்க வேண்டும்.

“சேற்றுக் கமல வயல் சூழரங்கர் தம் சீர் தழைப்ப
போற்றித் தொழும் நல்ல அந்தணர் வாழ விப் பூதலத்தே
மாற்றற்ற செம் பொன் மணவாள மா முனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே ”

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தண்தமிழ் நூல் வாழ – கடல் சூழ்ந்த
மனனுலகம் வாழ மணவாள மா முனியே !
இன்னுமொரு நூற்றாண்டிரும்.

—————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகர் ஸ்ரீ ஆராவமுத ஆழ்வார் ஸ்ரீ நம்பெருமாள் திருவடிகளே சரணம் சரணம் !!🙏🙏🙏
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவையின் ஏற்றம் –ஸ்ரீ மாங்கள்ய வ்ருத்தி ஸ்தவ ஸ்தோத்ரம் -ஸ்ரீ தால்ப்யர் ஸ்ரீ புலஸ்ய மஹ ரிஷி ஸம்வாதம்–ஸ்ரீ விஷ்ணு தர்மம்–

July 5, 2022

தேறா ஒருவன் தெங்கின நீர் செவ்வே நிறைந்த தீங்காயைச் செங்கை வருந்த அசைத்து அசைத்து
மாறாம் இது நீர் இலை என்று மருண்டு மாந்த முயலாது வெறிதே யிகத்து விட்டு ஆங்கு வைய முழுதும் நிறைந்த எவர்க்கும்
பேறா அருளுக்கு உருவான பெருமான் ஊனப் பேய் விழிக்குப் பிறங்கா வகையால் இலை என்று பேணாது இருந்த பெரும் பிழையால்
நீறாய் நிலத்து விளிவேனை நெடுமாற்கே நீ அடிமை என்று நினைவித்து எடுத்து ஆண்டது ஞான நிதி போல் கோதை நெறித் தமிழே

விவாகம் அற்றவனான ஒருவன்-மூடன் – விடாய் மிகு இருக்க
தார்மிகன் ஒருவன் இளநீர் நிறைந்த தேங்காயைத் தர
அவனோ இளநீர் பருகினவன் இல்லை -அதனுள் நீர் இருப்பதையும் அறியான் –
கை நோவ அசைத்து அசைத்துப் பார்த்தானாம்
அதனுள் இளநீர் நிறைந்து இருப்பதால் தளும்ப வில்லை -ஆகவே அதனுள் ஒன்றும் இல்லையென்று வீசி எரிந்து விட்டானாம் –

தேறா ஒருவன் தெங்கின நீர் செவ்வே நிறைந்த தீங்காயைச் செங்கை வருந்த அசைத்து அசைத்து
மாறாம இது நீர் இலை என்று மருண்டு மாந்த முயலாது வெறிதே யிகத்து விட்டு

இந்த உவமைக்கு உப மேயம் மேலே சொல்லுகிறது
எம்பெருமான் உலகம் எங்கும் வியாபித்து -நிறைந்துள்ளன
இளநீரின் படியைக் காட்டிலும் விசேஷம் உண்டே
அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வியாப்ய நாராயண ஸ்தித
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த அண்டம் இது என நில விசும்பு ஒழிவறக்
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் –

பாக்கியசாலிகள் அனுபவிக்கஞான ஹீனர்களோ நிரீஸ்வர வாதம் செய்து படு குழியில் வீழ்ந்து அவதிப்படுகிறார்கள்

ஆங்கு வையமுழுதும்நிறைந்த எவர்க்கும்
பேறா அருளுக்கு உருவான பெருமான் ஊனப் பேய் விழிக்குப் பிறங்கா வகையால் இலை என்று பேணாது இருந்த பெரும் பிழையால்
நீறாய் நிலத்து விளிவேனை

நெடுமாற்கே நீ அடிமை என்று நினைவித்து எடுத்து ஆண்டது ஞான நிதி போல் கோதை நெறித் தமிழே
இவர்களுக்கும் ஆண்டாளுடைய திருப்பாவையை தஞ்சமாகிறது
சர்வேஸ்வரன் உளன்
நீ அவனுக்கு அடிமை
நாராயணனே நமக்கே பறை தருவான்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா
உன் தன்னோடு உறவேல் இங்கே ஒழிக்க ஒழியாது
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
சீறி அருளாதே -இறைவா நீ தாராய் பறை –
போன்றவற்றை அருளிச் செய்து
நம்மை எடுத்து ஆண்ட ஞான நிதி அன்றோ

யமோ வைவஸவதோ ராஜா யஸ தவைஷ ஹ்ருதி சதிதஸ் தேந சேத விவாதஸ தே மாகங்காம மா குரூந கம -மநு ஸ்ம்ருதி -8-92-

சர்வ நியாமகன் -தண்டதரன் -ஸூர்ய வம்ச -ஆதித்ய மண்டலா வாசி -அனைவருக்கும் இனியவன் -உனது உள்ளத்தில் உள்ளவனாய் இருந்தும் நெடுநாளவனுடன் விவாதம் அனுவர்த்தித்து -த்வம் மே -அஹம் மே -தொடருகிறதே-இது தொலைந்தால் கங்கா முதலிய புண்ய நதி தீர்த்தங்கள் ஆட வேண்டா =புண்ய க்ஷேத்ரம் சேவிக்கப் போக வேண்டா-விவாதம் நீங்கும் அளவே வேண்டுவது –

ஸாவதகா வீராதீன ஸூதே சாகர மேகலா மருத சஞ்சீவநீ யதா மருதய மாண தசாம கதா -அசாரங்கள் மலிந்து சாரங்கள் மெலிந்து இருப்பதே இவ்வுலக இயற்க்கை

உன் தன்னோடு உறவு நமக்கு இங்கு ஒழியாது

திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்

தோண்டத் தோண்ட சுரக்கும் உபநிஷத் அர்த்தங்கள் பொதிந்து அன்றோ உள்ளன
பாதங்கள் தீர்க்கும் -பரமன் அடி காட்டும் -வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்

 

————-

ஸ்ரீ மாங்கள்ய வ்ருத்தி ஸ்தவ ஸ்தோத்ரம் -ஸ்ரீ விஷ்ணு தர்மம்

ஸ்ரீ தால்ப்யர் ஸ்ரீ புலஸ்ய மஹ ரிஷி ஸம்வாதம்

ஸ்ரீ தால்ப்ய உவாஸ
கார்ய ஆரம்பேஷு ஸர்வேஷு ஸூஸ் ஸ்வப்னேஷு ச சத்தம
அமங்கல்யேஷு ஜூஷ்டேஷு யஜ் ஜப்தவ்யம் ததுஸ்யதாம்

யே நாரம்பாஸ் ச ஸித்த்யந்தி துஸ் ஸ்வப்னஸ் ஸோப சாம்யதி
அமங்கல நாம் த்ருஷ்டா நாம் பரிகாதஸ் ச ஜாயதே–1-2-

பூஜ நீயரான ஸ்ரீ புலஸ்ய மஹ ரிஷியே
ஏதாவது நற் கார்யங்கள் தொடங்கும் போதும்
தீய கனாக்கள் கண்ட போதும்
அமங்கல வஸ்துக்களைப் பார்க்க நேர்ந்த போதும்
எதை ஜபித்தால் தொடங்கின கார்யங்கள் எல்லாம் ஸித்தி பெறுமோ
தீய கனாக்கள் கெட்ட பலன்களைத் தராமல் தொலையுமோ
கண்ட அமலங்கள் கெடுதல் விளைக்காமல் நிற்குமோ
அத்தைச் சொல்ல வேணும் என்று கேட்க

———-

புலஸ்யர் சொல்கிறார் –

புலஸ்த்ய உவாஸ
ஜ நர்த்தனம் பூத பதிம் ஜகத் குரும் ஸ்மரன் மனுஷ்யஸ் ஸததம் மஹா முநே
துஷ்டான் அசேஷாண் யப ஹந்தி ஸாதயத் யசேஷ கார்யாணி ச யான்யபீப்ஸதி –3-

வாரீர் மஹ ரிஷியே
ஸகல பிராணிகளுக்கும் சேஷியாய்
ஸகல ஜகத்துக்களுக்கும் அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்குமவராய்
ஜனார்த்தன என்ற பேர் பெற்ற பெருமாளை
இடைவிடாது சிந்தனை செய்யும் மனிதன் எந்த வித கெடுதல்களை தவிர்த்துக் கொள்வான்
சாதித்துக் கொள்ளும் ஸகல காரியங்களையும் நிறைவேற்றிக் கொள்வான்

ஸ்ருணுஷ்வ ச அந்யத் கததோ மாம் அகிலம் வாதாமி யத் நே த்விஜ வர்ய மங்களம்
ஸர்வார்த்த சித்திம் ப்ரததாதி யத் ஸதா நிஹந்த்ய சேஷாணி ச பாதகாநி –4-

இன்னும் யான் உரைக்கக் கேளீர் மஹா முனிவரே
ஸர்வார்த்த சித்தியைத் தரவல்லதும்
ஸகல பாதகங்களையும் தொலைக்க வல்லதுமான
மங்கள ஸ்தவம் யாது ஓன்று உண்டோ அத்தைச் சொல்கிறேன்

————-

ப்ரதிஷ்டிதம் யத்ர ஜகத் சராசரம் ஜகத் த்ரயே யோ ஜகதஸ் ச ஹேது
ஜகத் ச பாத் யத்தி ச யஸ் ச ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி –5-

ப்ரதிஷ்டிதம் யத்ர ஜகத் சராசரம்
கிருஷ்ணே திஷ்டதி ஸர்வ மேதத் அகிலம் -என்ற படி ஸர்வ சராசன்களும் யாவன் ஒருவன் இடம் பிரதிஷடை பெற்று இருக்கின்றனவோ

ஜகத் த்ரயே யோ
நல்ல கோட்ப்பாட்டுலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த அல்லிக் கமலக்கண்ணன் -என்கிறபடியே
யாவன் ஒருவன் மூன்றின் உள்ளும் ப்ரதிஷ்டிதனாய் இரா நிற்கிறானோ

தத் புருஷ ஸமாஸமும் பஹு வரீஹீ ஸமாஸமும் உண்டே

யஸ் ஜகதஸ் ச ஹேது
ஸகல ஜகத் காரண பூதனும் யாவன் ஒருவனோ
தான் ஓர் உருவே தனி வித்தாய்
வேர் முதல் வித்தாய்
உபாதான நிமித்த ஸஹ காரியாய்
சேதன அசேதன விஸிஷ்ட வேஷத்தால் உபாதான காரணமாய்
ஞான சக்த்யாதி விஸிஷ்ட வேஷத்தால் ஸஹ காரியாய்
ஸங்கல்ப விஸிஷ்ட வேஷத்தால் நிமித்த காரியாய்
ஹேது -என்கிற பதமே த்ரிவித காரணமாய் இருப்பதைக்க காட்டும்

ஜகத் ச பாத் யத்தி ச யஸ் ச
காரண பூதன் ஒருவனாய் ரக்ஷண பூதன் வேறே ஒருவனாய் ஸம்ஹார கர்த்தா மற்று வேறு ஒருவனாய் இருக்கை அன்றிக்கே
ஸ்திதி ஸம்ஹார கரனும் அவனே
ஸம்ஹரதி என்னாதே அத்தி என்றது ஸ்ருதி ஸூத்ர சாயையாலே

ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி —
ஆக ஸகல ஜகத்துக்கும் ஆதார பூதனாயும் ஆதேய பூதனாயும்
ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ஸம்ஹார காரகனாயும் இரா நின்ற
ஸர்வேஸ்வரன் எனக்கு மங்கள்ய வ்ருத்தி பிரதானன் ஆக வேணும் என்றதாயிற்று

ஸர்வதா -மூன்றாம் பாதத்திலும் நான்காம் பாதத்திலும் அந்வயம்

————-

வ்யோம அம்பு வாய் வக்னி மஹீ ஸ்வரூபைர் விஸ்தார வான் யோ அணுதரோணு பாவாத்
அஸ்தூல ஸூஷ்மஸ் சததம் பரேஸ்வரோ மமாஸ்து மாங்கல்ய வ்ருத்தயே ஹரி –6-

நீராய் நிலனாய் தீயாய்க் காலாய் நெடு வானாய் -என்கிறபடி விரிந்தும்
அணோர் அணீ யான் -என்கிறபடி சுருங்கியும்
ஸ்தூல வஸ்துவாயும் ஸ்தூல இதர வஸ்துவாயும்
ஸூஷ்ம வஸ்துவாயும் ஸூஷ்ம இதர வஸ்துவாயும் இருக்கும் பரம புருஷன் எனக்கு மங்கள்ய விருத்தியைத் தர வேணும் –

சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் பெருக்குவாராய் இன்றியே பெருக்கம் எய்த பெற்றியோய் -திரு மழிசைப்பிரான்

பாவ ஸப்தம் பதார்த்த வாசகம்-

————

யஸ்மாத் பரஸ்மாத் புருஷாத் அநந்தாத் அநாதி மத்யா ததிகம் ந கிஞ்சித்
ஸ ஹேது ஹேதுஸ் பரமேஸ்வரேஸ்வரோ மமாஸ்து மாங்கல்ய வ்ருத்தயே ஹரி –7-

அநந்தாத்-அந்நதத்வமாவது பரிச்சேத ரஹிதத்வம் -த்ரிவித பரிச்சேத ராஹித்யத்தைச் சொல்கிறது -தேச வஸ்து கால பரிச்சேதம்
எப்பொருளும் தானாய் -இருக்கையாலே வஸ்து பரிச்சேத ரஹிதன்

அநாதி மத்யாத் -ஆதியும் அந்தமும் இல்லாதபோது மத்யமும் இல்லை என்பது அர்த்தாத் ஸித்தம்

ஸ ஹேது -கார்ய பதார்த்தங்களை சொல்லும்

————-

ஹிரண்ய கர்ப்ப அச்யுத ருத்ர ரூபீ ஸ்ருஜத்ய சேஷம் பரிபாதி ஹந்தி ச
குணாக் ரணீர் யோ பகவான் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய வ்ருத்தயே ஹரே –8-

நான்முகனை ஆவேசித்து ஸ்ருஷ்ட்டியையும்
ஸ்வேந ரூபேண ஸ்திதியையும் பூர்வார்த்தம் சொல்கிறது
இரண்டாம் பாதத்தில் உள்ள மூன்று கிரியா பதங்களையும் முதல் பாதத்தில் உள்ள மூன்று வியக்திகளோடே அடைவே யோஜிக்க வேணும்
ஹிரண்ய கர்ப்ப ரூபீ சந் அசேஷம் ஹந்தி ச -என்று யோஜனை

குணா க்ரணீ -இங்கு குண ஸப்தம் குணவான்களை சொல்லுகிறது -குணவான்களுக்குள்ளே தலைவன் என்றவாறு
ஸமஸ்த கல்யாண குண அம்ருதமாய் இருப்பவனே எனக்கு மங்கள்ய வ்ருத்தி பிரதன் –

——————-

பரஸ் ஸூராணாம் பரமோஸ் ஸூராணாம் பரோ யதிநாம் பரமோ முனீ நாம்
பரஸ் தமஸ் தஸ்ய ச யஸ் ச ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய வ்ருத்தயே ஹரே –9-

—————–

இந்த ஸ்தோத்ரம் ஸ்ரீ விஷ்ணு தர்மோத்தரத்தில் உள்ளது—-50 ச்லோகங்கள்

இந்த ஸ்தோத்ரம் ஸ்ரீ தால்ப்யர் என்கிற மஹரிஷி கேட்க,

ஸ்ரீ புலஸ்த்ய மஹரிஷி சொல்வதாக, விஷ்ணு தர்மோத்தரத்தில் உள்ளது.

இது, ஸ்ரீமந் நாராயணின் பரத்வத்தையும், அவனே ஜகத் காரணன் என்பதையும்,

அனைத்துப் பாபங்களையும் ,த்வம்சம் செய்யும் திவ்ய மங்கள தேவதை அவன் என்றும்

இவ்வுலகத்தில் மட்டுமல்லாமல், கலங்காப் பெருநகரான வைகுண்டத்திலும்

ஸகல ஸௌபாக்கியங்களையும் அளிப்பவன் என்றும், உபதேசிக்கிறது—-

பகவானின்

ஸ்ரீ வராஹாவதாரம்,

ஸ்ரீ ந்ருஸிம்ஹாவதாரம்

ஸ்ரீ வாமனாவதாரம்

ஸ்ரீ மத்ஸ்யாவதாரம்

ஸ்ரீ பரசுராமாவதாரம்

ஸ்ரீ ராமாவதாரம்

ஸ்ரீ க்ருஷ்ணாவதாரம்

இவற்றை

ஓரிரு ச்லோகங்களில் சொல்லி, அப்படிப்பட்ட ”ஹரி ”

மங்களங்களை அருள்வாராக என்று வேண்டப்படுகிறது—

பல ச்ருதி –கடைசி 7 ச்லோகங்கள்

இந்த ஸ்ரீ மாங்கள்ய ஸ்தவம் என்கிற ஸ்தோத்ரம் ,

ஆண் ,பெண் , குழந்தைகள் என்கிற வித்தியாசமின்றி , தினமும் பாராயணம் செய்து,

அன்றாட வாழ்க்கையில் அல்லல் தவிர்த்து

,அனைத்து ஸௌபாக்கியங்களையும் பெற்றிட , அருமையான ஸ்தோத்ரம்

ஸ்ரீ மாங்கள்ய ஸ்தவம்
—————————————–

ஸ்ரீ தால்ப்ய :——-

1 மற்றும் 2. கார்யாரம்பேஷு ஸர்வேஷு து : ஸ்வப்னேஷு ச ஸத்தம |

அமங்கள்யேஷு த்ருஷ்டேஷு யஜ்ஜ்ப்தவ்யம் ததுச்யதாம் ||

யே நாரம்பாச்ச ஸித்த்யந்தி து :ஸ்வப்நச்சோப சாந்தயே |

அமங்களாநாம் த்ருஷ்டாநாம் பரிஹாரச்ச ஜாயதே || –

தால்ப்யர் சொல்கிறார் ———

ப்ரஹ்மத்தை உணர்ந்தவருள் மிகப் பெரியவரே —-
கார்யங்களைத் தொடங்கும்போதும், துஸ்வப்னம் மற்றும் அமங்களம் நேரும்போது
எதை ஜபிக்க வேண்டும் ? தொடங்கும் கார்யங்கள், எதனால் இனிமையாக
நிறைவேறுகின்றன ? கெட்ட கனவுகள் எதனால் பலனற்றுப் போகின்றன ?
யாம் காணுகின்ற அசுபங்களுக்குப் பரிஹாரம் எதனால் உண்டாகிறது ?

ஸ்ரீ புலஸ்த்ய :——

3. ஜநார்தநம் பூதபதிம் ஜகத்குரும் ஸ்மரந் மநுஷ்யஸ் ஸததம் மஹாமுநே |

துஷ்டாந்யசேஷாண்ய பஹந்தி ஸாதயதி அசேஷ கார்யாணி ச யாந்யபீப்ஸதி ||—-2

ஸ்ரீ புலஸ்த்யர் பதில் :—

மஹாமுனிவரே ——பிறவிச் சங்கிலியை அறுக்க வல்லவரும், எல்லா உலகங்களிமுள்ள
எல்லாப் பொருள்களுக்கும் சொந்தக்காரரும் ,மிக உயர்ந்தவரும் ஆன எம்பெருமானை
த்யானித்துக்கொண்டிருக்கும் மனுஷ்யன் , தீயவற்றை யெல்லாம் போக்கி, தான் விரும்பிச் செய்யும்
எல்லாச் செயல்களும் நற்பயன் அளிக்கும்படி , எம்பெருமானால் ,அருளப்படுகிறான்

4. ச்ருணுஷ்வ சாந்யத் கததோ மமாகிலம் வதாமியத்தே த்விஜவர்ய மங்களம் |

ஸர்வார்த்த ஸித்திம் ப்ரததாதி யத் ஸதா நிஹந்த்யசேஷாணி ச பாதகாநி ||

ஹே –ப்ராஹ்மண ச்ரேஷ்டரே —-எது உமக்கு சுபமளிக்க வல்லதோ , எது
வேண்டிய பலன்களை யாவும் கொடுக்க வல்லதோ, எது தீவினைகள் எல்லாவற்றையும்
அழிக்க வல்லதோ, அத்தகைய ஸ்தோத்ரத்தை உமக்குச் சொல்கிறேன் —
அதை முழுவதுமாகக் கேட்பீராக

5. ப்ரதிஷ்டிதம் யத்ர ஜகத் சராசரம் ஜகத்த்ரயே யோ ஜகதச்ச ஹேது ; |
ஜகத் ச பாத்யத்தி ச யஸ்ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி : ||

மூன்று உலகங்களிலும் , எவர் ஜங்கம ,ஸ்தாவர ரூபங்களுக்குக் காரணமோ ,
எவரிடத்தில், இவை கீழே விழாது நிலைத்துத் தாங்கப்படுகிறதோ,
எவர் இவற்றையெல்லாம் ரக்ஷிக்கிறாரோ, ப்ரளய சமயத்தில் , எவர் இவற்றையெல்லாம்
உணவைப்போலத் தனக்குள் ஒடுங்கும்படி செய்கிறாரோ அனைத்துப் பாபங்களையும்
போக்கும் அந்த ஹரி , மங்களங்கள் பொங்கிப் பெருக ,எனக்கு அருள்வாராக

6.வ்யோமாம்பு வாய்வக்நி மஹீஸ்வரூபை : விஸ்தாரவாந் யோணுதரோணு பாவாத் |
அஸ்தூல ஸூக்ஷ்மஸ் ஸததம் பரேச்வரோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி : ||

நீர், நிலம், காற்று, நெருப்பு , ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களால் , தம்மைப்
பெருக்கிக்கொண்டவரும் , சிறிய பொருட்களிலெல்லாம் மிகச் சிறிய நுட்பமானவரும் ,
சிறிய, பெரிய என்று உள்ள அளவில்லாப் பொருட்களில் இருந்து வேறுபட்டு , தனித்
தன்மை உள்ளவருமான ஹரி எல்லாக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக
அருள்வாராக

7. யஸ்மாத் பரஸ்மாத் புருஷா தநந்தாத் அநாதிமத்யா ததிகம் ந கிஞ்சித் |
ஸ ஹேது ஹேது : பரமேச்வரேச்வரோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி : ||
||

காலம்,இடம், குணம், இவற்றாலெல்லாம் அளவிட முடியாதவரும், பிறப்பு இல்லாதவரும் ,
முடிவு இல்லாதவரும், தம்மிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லாதவரும் படைத்தல் தொழில்
செய்பவரையும் படைப்பவரும், தேவர்களுக்கு எல்லாம் தேவரான ஹரி
எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக

8. ஹிரண்ய கர்ப்பாச்யுத ருத்ர ரூபி ஸ்ருஜத்யசேஷம் பரிபாதி ஹந்தி |
குணாக்ரணீர் யோ பகவான் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி : ||

ப்ரஹ்மாவுக்கு அந்தராத்மாவாக இருந்து, உலகங்களைப் படைத்தும்,
தானே அச்யுதனாக இருந்து அவற்றையெல்லாம் காத்தும், ருத்ரனுக்கு ஆத்மாவாக
இருந்து, எல்லாவற்றையும் அழித்தும், முதல் குணசாலியாகவும் , அளப்பரிய ஞானம்,
படைக்கும் பொருளாக ஆகும் ஆற்றல், எல்ல உலகங்களையும் தளர்ச்சி இல்லாமல்
தாங்கும் வலிமை ,எல்லோரையும் தன இஷ்டப்படி இயக்கும் மிடுக்கு, பிற பொருள்கள் எல்லாவற்றையும்,
ஸூர்ய ஒளியில் விளக்கு பிரகாசிப்பது போல, பேரொளி உடையவரும்
குற்றம் என்பதே இல்லாதவருமான ஹரி எனக்கு எப்போதும் சுபங்கள் பெருக அருள்வாராக

9. பரஸ் ஸுராணாம் பரமோஸுராணாம் பரோ யதீநாம் பரமோ முநீநாம் |
பரஸ் ஸமஸ்தஸ்ய ச யஸ் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி : ||

தேவர்கள், அஸுரர்கள் , துறவிகள், முனிவர்கள் இப்படி எல்லாருக்குமே மிகமிக
உயர்ந்தவரான ஹரி எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக

10. த்யாதோ முநீநா மபகல்மஷைர் யோ ததாதி முக்திம் பரமேச்வரேச்வர : |
மனோபிராம :புருஷஸ் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி : ||

எல்லாக் காலங்களிலும் தன்னையே நினைத்து குற்றமில்லா உள்ளத்தால்
சதா சிந்தனை செய்து இருப்பவர்களுக்கு மோக்ஷ ஸாம்ராஜ்யத்தை அளிப்பவரும்,
உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் வனப்புள்ளவரும் எல்லாப் பலன்களையும்
தர வல்லவருமான ஹரி எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

 

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி-81-108 -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்

July 5, 2022

சோர்வின்றி உன்றன் துணை யடிக் கீழ்த்,தொண்டு பட்டவர் பால்

சார்வின்றி நின்ற எனக்கு, அரங்கன் செய்ய தாளிணைகள்

பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமானுச! இனி யுன்

சீரொன்றிய கருணைக்கு, இல்லை மாறு தெரிவுறிலே.–81-

 

பதவுரை

உன் தன் துணை அடி கீழ் சோர்வு இன்றி

தேவரீருடைய உபய பாதங்களின் கீழே
தொண்டு பட்டவர் பால்

சோராமல் அடிமைப் பட்டவர்கள் விஷயத்தில்
சார்வு இன்றி நின்ற எனக்கு

பொருத்த மில்லாமலிருந்த எனக்கு
இன்று

இன்றைத் தினத்தில்
அரங்கன் செய்ய தாள் இணைகள்

பெரிய பெருமாளுடைய சிவந்த திருவடி யிணைகளே
பேர்வு இன்றி பெறுத்தும் இராமா நுசா

ஒரு காலும் விட்டு நீங்காத படி சிரோ பூஷணமாகத் தந்தருளின எம்பெருனாரே!
இனி

இப்படியான பின்பு
தெரிவுறில்

ஆராயுமளவில்
உன்

தேவரீருடைய
சீர் ஒன்றிய கருணைக்கு

சிறந்த திருவருளுக்கு
மாறு இல்லை

ஒப்பு இல்லை

 

————-

தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது,வெந் தீவினையால்

உருவற்ற ஞானத் துழல்கின்ற என்னை, ஒரு பொழுதில்

பொருவற்ற கேள்விய னாக்கி நின் றானென்ன புண்ணியனோ!

தெரிவுற்ற கீர்த்தி, இராமா னுசனென்னும் சீர் முகிலே.–82-

 

பதவுரை

தெரிவு உற்ற ஞானம் செறிய பெறாது

தெளிவான ஞானத்தைச் சேரப் பெறாமல்
வெம் தீ வினையால்

மிகவுங் கொடிகான கருமத்தாலே
உரு அற்ற ஞானத்து உழல்கின்ற என்னை

உபயோகமற்ற ஞானத்தை யுடையனாய (ஒன்றிலும் நிலை யில்லாமல்) திரிகிற என்னை
ஒரு பொழுதில்

ஒரு க்ஷண காலத்தில்
பொருவு  அற்ற கேள்வியன் ஆக்கி நின்றான்

ஒப்பற்ற பஹூ ச்ருதனாக ஆக்கி யருளினவரும்
தெரிவு உற்ற கீர்த்தி

ப்ரஸித்தமான புகழை யடையவரும்
சீர் முகில் என்னும்

(ஔதார்யத்தில்) சிறந்த மேகமென்னத் தக்க வருமான
இராமாநுசன்

எம்பெருமானார்
என்ன புண்ணியனோ

என்ன தார்மிகரோ? (ஒப்பற்ற தர்மிஷ்டரென்றபடி.)

———

சீர் கொண்டு பேரறம் செய்து,நல் வீடு செறிதும் என்னும்

பார் கொண்ட மேன்மையர் கூட்டனல்லேன்,உன் பத யுகமாம்

ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய

கார் கொண்ட வண்மை இராமா னுச! இது கண்டு கொள்ளே.–83-

 

பதவுரை

இராமநுசா

எம்பெருமானாரே!,
சீர் கொண்டு

சமம் தமம் முதலிய குணங்களை யுடையராய்
பேர் அறம் செய்து

சிறந்த தருமமாகிய சரணாகதி யோகத்தை யநுஷ்டித்து
நல் வீடு செறிதும் என்னும்

பரம புருஷார்த்தமான மோக்ஷத்தை அடைந்திடுவோம் என்றிருக்கிற
பார் கொண்ட மேன்மையர் கூட்டன் அல்லேன்

ப்ரஸித்தமான ப்ரபாவத்தையுடைய  ப்ரபந்நர்களுடைய கோஷ்டியில் நான் சேர்ந்தவனல்லேன்;
உன் பத யுகம் ஆம்

தேவரீருடைய உபய பாதங்களாகிற
ஏர் கொண்ட வீட்டை

பரம விலக்ஷணமான மோக்ஷத்தை
எளிதினில் எய்துவன்

ஸுலபமாக அடைந்திடுவேன்;
கார் கொண்ட

(ஔதார்யத்தில்) மேகத்தை வென்றிருக்கிற தேவரீருடைய
வண்மை இது

ஔதார்யம் இப்படிப்பட்டது;
கண்டுகொள்

தேவரீரே இதனைக் கண்டு கொள்ளலாம்.

(அடியேன் சொல்ல வேணுமோ?)

 

சரம ச்லோகத்திலே கண்ணபிரான் நியமித்தபடியே நாம் சரணாகதியை அநுஷ்டித்து விட்டோமாகையால்

நமக்கு மோக்ஷம் கைபுகுந்துவிட்ட தேயாமென்று அறுதியிட்டிருக்கும் மஹான்களில் அடியேன் சோர்ந்தவனல்லேன்;

அப்படி அடியேன் ஒன்றும் அநுஷ்டிக்கவில்லை.

தேவரீருடைய திருவடிகளாகிற மோக்ஷத்தை அடைந்திடத் தடையில்லை யென்கிற மனவுறுதியே அடியேனுக்குள்ளது என்றாராயிற்று.

———

கண்டு கொண் டேனெம் இராமா னுசன் றன்னை காண்டலுமே

தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொற் றாளில் என் தொல்லை வெந் நோய்

விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்தின்று

உண்டு கொண்டேன், இன்னம் உற்றன ஓதில் உவப்பில்லையே.–84-

 

பதவுரை

எம் இராமாநுசன் தன்னை

ஸ்வாமி எம்பெருமானாரை
இன்று கண்டு கொண்டேன்

இன்று (உள்ளப்படி தெரிந்து கொண்டேன்;
காண்டலுமே

இப்படி தெரிந்து கொண்டவளலிலே
அவன் தொண்டர் பொன் தாளில்

அவரது பக்தர்களுடைய அழகிய திருவடிகளில்
தொண்டு கொண்டேன்

அடிமைப் பட்டேன்; (அதனால்)
என் தொல்லை வெம் நோய்

எனது பழைய கொடு வினைகளை
விண்டு கொண்டேன்

நீக்கிக் கொண்டேன்,
அவன் சீர் வெள்ளம் வாரியை

அவருடைய கல்யாண குண ப்ரவாஹமாகிற கடலை
வாய் மடுத்து உண்டு கொண்டேன்

வாயார அநுபவிக்கப் பெற்றேன்;
இன்னம் உற்றன

இப்படியாக இன்னமும் நான் பெற்ற நன்மை களை
ஒதில்

சொல்லத் தொடங்கினால்
உலப்பு இல்லை

(அதுக்கு) ஒரு முடிவு கிடையாது.

—————-

ஓதிய வேதத்தின் உட் பொருளாய், அதன் உச்சி மிக்க

சோதியை நாதன் என வெறியா துழல் கின்ற தொண்டர்

பேதைமை தீர்த்த இராமா னுசனைத் தொழும் பெரியோர்

பாத மல்லாலென்றன் ஆருயிர்க்கு யாதொன்றும் பற்றில்லையை.–85-

 

பதவுரை

ஓதிய வேகத்தின் உள் பொருள் ஆய்

அத்யயநம் பண்ணப்படுகிற வேதங்களின்

உட் பொருளாயும்

அதன் உச்சி மிக்க சோதியை

அந்த வேதங்களின் முடிவாகிய உபநிஷத்துககளிலே மிகவும் விளங்குபவனாயுமிள்ள ஸ்ரீ மந் நாராயணனை
நாதன் என அறியாது

ஸர்வ சேஷி யென்று தெரிந்து கொள்ளாமல்
உழல்கின்ற தொண்டர்

கண்ட விடங்களிலும் அடிமை செய்து திரிகின்ற பாமரர்களுடைய
பேதைமை

அவிவேகத்தை
தீர்த்த

போக்கடித்த
இராமாநுசனை

எம்பெருமானாரை
தொழும்

ஸேவிக்கின்ற
பெரியோர்

மஹான்களுடைய
பாதம் அல்லால்

திருவடிகள் தவிர
என் தன் ஆர் உயிர்க்கு

எனது அருமையான ஆத்மாவுக்கு
யாது ஒன்றும் பற்று இல்லை

வேறு ஏதேனும் புகலிடமில்லை.

கீழ்ப் பாட்டிற் கூறின அத்யவஸாயம் எனக்கு கலியன் கொடுமையினால் ஒருகாலத்தில் மாறி விடக் கூடுமென்று நினைக்கிறீர்களோ,

அப்படி நினைக்க வேண்டா; இராமாநுசனடியார் திறத்தில் கலி புருஷன் ஒரு கொடுமையும் செய்ய முடியாதவன்;

மற்றவர்களைத் தான் கலி புருஷன் கெடுப்பன். எனது அத்யவஸாயம் நெடுநாளளவும் நிலை நிற்கக் கூடியதே என்றாராயிற்று.

———-

பற்றா மனிசரைப் பற்றி, அப் பற்று விடாதவரே

உற்றா ரென வுழன்றோடி நையேனினி, ஒள்ளிய நூல்

கற்றார் பரவும் இராமா னுசனைக் கருது முள்ளம்

பெற்றார் எவர், அவரெம்மை நின்றாளும் பெரியவரே.–86-

 

பதவுரை

பற்றா மனிசரை பற்றி

உபயோக மற்ற மநுஷ்யர்களைப் பற்றி
அப் பற்று விடாது

அந்தப் பற்றுதலை விடாமல்
அவரே உற்றார் என

அவர்களையே உறவினராகக் கொண்டு
உழன்று

அவர்கள் பினனே அலைந்து
ஓடி

அவர்களிட்ட காரியங்களைச் செய்ய ஓடி
இனி நையேன்

இனி மேல் துவள மாட்டேன்;
ஒள்ளிய நூல் கற்றார்

சிறந்த சாஸ்த்ரங்களைக் கற்றவர்களாலே
பரவும்

கொண்டாடப் படுகிற
இராமாநுசனை

எம்பெருமானாரை
கருதும் உள்ளம் பெற்றார் யவர்

அநுசந்திக்கும்படியான நெஞ்சை யுடையோர் யாவரோ,
அவர்

அந்த மஹான்களே
எம்மை

நம்மை
நின்று ஆளும் பெரியவர்

சாஸ்வதமாக அடிமை கொள்ளும் மஹாத்மாக்கள்.
ஒள்ளிய நூல்

“சுடர்மிகு சுருதி” என்றார் ஆழ்வாரும்.

———–

பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன்குணங்கட்

குரிய சொல் என்றும் உடையவன் என்றென்று உணர்வில் மிக்கோர்

தெரியும் வண் கீர்த்தி இராமா னுசன் மறை தேர்ந்துலகில்

புரியு நன் ஞானம் பொருந்தாதவரைப் பொரும் கலியே.–87-

 

பதவுரை

பெரியவர் பேசிலும்

ஞான சக்திகளால் நிறைந்த மஹான்கள் பேசினாலும்
பேதையர் பேசிலும்

ஒன்றுந் தெரியாதவர்கள் பேசினாலும்
தன் குணங்கட்கு உரிய சொல் என்றும் உடையவன் என்று என்று

தனது திருக்குணங்களுக்கு ஏற்ற சொற்களை எப்போதும் உடையவரென்று பலகாலுஞ் சொல்லி
உணர்வில் மிக்கோர் தெரியும்

சிறந்த ஞானிகள் அநுஸந்திக்கிற
வண் கீர்த்தி

திவ்ய கீர்த்தியை யுடையரான
இராமாநுசன்

எம்பெருமானார்
மறை தேர்ந்து

வேதங்களை ஆராய்ந்து
உலகில்

இவ் வுலகத்தில்
புரியும்

உபதேசித்தருளின
நல் ஞானம் பொருந்தாதவரை

நல்ல ஞானத்தில் சேராதவர்களை
கலி பொரும்

கலி புருஷன் பீடிப்பன்.

கீழ்ப்பாட்டில் “அவன் சீர் வெள்ளவாரியை வாய்மடுத்து. உண்டு கொண்டேன்” என்றும்

“அவன் தொண்டர் பொற்றாளில் தொண்டு கொண்டேன்” என்றும் சொன்ன இரண்டு விஷயங்களுள்

முதற்சொன்ன விஷயமே (அதாவது-ஸ்ரீராமாநுஜ பக்தர்களுக்கு பக்தனாயிருப்பதே) எனக்குள் சிறந்த உத்தேச்யமென்றாகிறார் இதில்.

(பெரியவர் பேசிலும் இத்யாதி) இதன் கருத்து யாதெனில்-

எம்பெருமானாருடைய திருக்குணங்களை மஹா ஞானிகள் தாம் பேசி முடிக்க வல்லவர்கள்;

அற்பஞானிகள், நம்மால் பேசமுடியாதென்று பின் வாங்கக் கூடியவர்கள்; என்பதில்லை;

“ தங்களன்பாரத் தமது சொல்வலத்தால் தலைத்தலைச் சிறந்து பூசிப்ப” என்றும்

“பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே வாச மலர்த் துழாய் மாலையான் -வடிவு” என்றும் சொன்னாற்போல,

பெரியோர் சொன்னாலும் சிறியோர் சொன்னாலும் அவரவர் களுடைய யோக்யதைக்குத் தக்கபடி சொல்லித்

துதிக்கத் தகுந்தவர் எம்பெருமானார் என்று பெரியோர்கள் தெரிந்துகொண்டு,

நாம் நமது சக்திக்குத்தக்கபடி ஸ்தோத்ரம் பண்ணுவோமென்று துதிக்கின்றார்களென்கை.

அப்படி துதிக்கப்படுகின்ற எம்பெருமானார் உபதேசித்த ஞானத்தை அநாதரித்து

அவ் வுபதேசத்தின்படி நடவாதவர்களே கலி தோஷத்தினால் வருந்துவார்களென்றதாயிற்று.

———

கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான்

ஒலி மிக்க பாடலை உண்டு தன் னுள்ளம் தடித்து, அதனால்

வலி மிக்க சீயம் இராமா னுசன் மறை வாதியராம்

புலி மிக்க தென்று, இப் புவனத்தில் வந்தமை போற்றுவனே.-88

 

பதவுரை

கலி மிக்க

நில வளம் மிகுந்த
செந்நெல் கழனி

செந்நெல் கழனிகளை யுடைய
குறையல்

திருக் குறையலூரில் அவதரித்தவராய்
கலை பெருமான்

சாஸ்த்ர மென்னும்படியான திவ்ய ப்ரபந்தகளை யருளிச் செய்த திரு மங்கை யாழ்வாருடைய
மிக்க ஒலி பாடலை

அதிசயித்த இசையை யுடைய பெரிய திருமொழியை
உண்டு

அநுபவித்து
தன் உள்ளம் தடித்து

தமது திருவுள்ளம்
அதனால் வலி மிக்கம்

அத்தால் மிடுக்கு அதிகரித்த
சீயம்

சிங்கம் போன்ற
இராமாநுசன்

எம்பெருமானார்,
மறை வாதியர் ஆம் புலி மிக்கது என்று இப்புவனத்தில் வந்தமை

வேதத்தில் துர்வாதங்கள் பண்ணுகிற குத்ருஷ்டிகளாகிற புலிகள் அதிகமாய் விட்டன வென்று (அவற்றைத் தண்டிப்பதற்காக ) இவ்வுலகில் அவதரித்த படியை
போற்றுவன்

புகழ்ந்திடக் கடவேன்.

கலிமிக்க செந்நெற்கழனி = கலியாவது ஆரவாரம்; உழுவது நடுவது அறுப்பதாய்ச் செல்லுகிற கோலாஹலம்.

————

போற்றருஞ் சீலத் திராமானுச,நின் புகழ் தெரிந்து

சாற்றுவ னேலது தாழ்வது தீரில்,உன் சீர் தனக்கோர்

ஏற்றமென் றே கொண் டிருக்கிலுமென் மனம் ஏத்தி யன்றி

ஆற்றகில்லாது, இதற் கென்னினைவா யென்றிட் டஞ்சுவனே.–89-

 

பதவுரை

போற்ற அரு சீலத்து

புகழ்ந்து தலைக் கட்ட முடியாத சீல குணத்தையுடைய
இராமாநுச

எம்பெருமானாரே;
நின் புகழ்

தேவரீருடைய திருக் குணங்களை
தெரிந்து சாற்றுவனேல்

உணர்ந்து பேசுவேனாகில்
அது

(நீசனாகிய நான் ) பேசுகிறவது
தாழ்வு

(தேவரீருக்கு) அவத்யமாம்;
அது தீரில்

அப்படி நான் பேசுவது தவிர்த்தல்
உன் சீர் தனக்கு ஒர் ஏற்றம்

தேவரீருடைய திருக் குணங்களுக்கு மேன்மை யாகும்
என்றே கொண்டு இருக்கிலும்

என்று நான் தெரிந்து கொண்டிருந்தாலும்
என் மனம்

எனது நெஞ்சானது
ஏத்தி அன்றி

(தேவரீருடைய திருக் குணங்களைப்) புகழ்ந்தல்லது
ஆற்ற கில்லாது

தரித்திருக்க மாட்டாது;
இதற்கு

இவ்விஷயத்திலே
என் நினைவாய் என்றிட்டு அஞ்சுவன்

தேவரீர் என்ன நினைக்குமோ வென்று பயப்படுகிறேன்.

———-

நினையார் பிறவியை நீக்கும் பிரானை,இந் நீணிலத்தே

எனையாள வந்த இராமா னுசனை இருங்கவிகள்

புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந்தொடையல்

வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள்சுரந்தே.–90-

 

பதவுரை

பிறவியை நீக்கும் பிரானை

ஸம்ஸாரத்தை யொழிக்கும் உபகாரகராயும்
இ நீள் நிலத்தே

இப் பெரிய பூமியிலே
எனை ஆள

என்னை அடிமை கொள்வதற்கே
வந்த

அவதரித்தவராயுமுள்ள
இராமாநுசனை

எம்பெருமானாரை
நினையார்

சிந்தியாதவர்களாயும்,
இரு கவிகள் புனையார்

(அவர் விஷயமாக) நல்ல பாடல்களையும் பாடாதவர்களாயும்
புனையும் பெரியவர் தாள்களில்

(ஏதோ பாக்கியத்தாலே) பாடல்களைப் பாடுகிற மஹான்களின் திருவடிகளில்
பூ தொடையல்வனை யார்

புஷ்ப மாலைகளை ஸமர்ப்பியாதவர்சளாயுமுள்ள
மாந்தர்

மனிசர்கள்
மருள் சுரந்து

அஜ்ஞானம் அதிகமாகப் பெற்று
பிறப்பில் வருந்துவர்

ஸம்ஸாரத்ததிற் கிடந்து துன்பப்படுவர்கள்.

கீழ்ப்பாட்டில் அஞ்சுவனே என்ற விவருடைய அச்சம் தீரும்படி குளிரக் கடாக்ஷித்தார் எம்பெருமானார்;

அந்தக் கடாக்ஷ வைபவத்தாலே அச்சம் தீரப்பெற்றுத் தேறுதலடைந்து,

மநோவாக்காயங்களில் ஏதேனாமொன்றால் எம்பெருமான்றால் எம்பெருமானார் விஷயத்தில் ஒரு நன்மை செய்து

வாழ்ந்து போகலாமாயிருக்க, பாவிகள் அதுசெய்யாதே பாழாய்ப் போகிறார்களே! என அநுதபிக்கிறார் இதில்.

———–

மருள் சுரந் தாகம வாதியர் கூறும்,அவப் பொருளாம்

இருள் சுரந் தெய்த்த உலகிருள் நீங்கத்,தன் ஈண்டிய  சீர்

அருள் சுரந் தெல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும்

பொருள் சுரந் தான், எம் இராமா னுசன் மிக்க புண்ணியனே.–91-

 

பதவுரை

ஆகம வாதியர்

(சிவன் சொன்ன) சைவ ஆகமத்தைப் பிரமாணமாகக் கொண்டு வாதம் பண்ணுகிற பாசுபதர்கள்
மருள் சுரந்து

அஜ்ஞானம் அதிகரிக்கப் பெற்று
கூறும்

(சிவனுடைய பரத்துவ விஷயமாகச் சொல்லுகிற
அவம் பொருள் ஆம் இருள் சுரந்து

நீசமான அர்த்தங்களாகிற இருள் மேலிட்டு (அதனால்)
எய்த்த

கெட்டுப் போன
உலகு

உலகத்தவர்களுடைய
இருள்

அஜ்ஞாநாந்தகாரமானது
நீங்க

போகும்படியாக
தன்

தம்முடைய
ஈண்டிய சீர் அருள் சுரந்து

விலக்ஷணமான க்ருபையைப் பெருக்கி
எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள்

“எல்லாப் பிராணிகளுக்கும் ஸ்வாமி ஸ்ரீரங்க நாதனே’ என்கிற அர்த்தத்தை
சுரந்தான்

வெளியிட்டவரான
எம் இராமாநுசன்

ஸ்வாமி எம்பெருமானார்
மிக்க புண்ணியன்

சிறந் புண்ணியாத்மா

இந்த ஸம்ஸாரிகளுடன் இப்படி விமுகராயிருக்கச் செய்தேயும் இவர்களைத் தம்பேற்க. உஜ்ஜீவிக்கச் செய்வதற்காக எம்பெருமானார் முயன்றதைச் சிந்தித்து அவரைக் கொண்டாடுகிறார்.

மிக்க புண்ணியனான எம்மிராமாநுசன் பொருள் சுரந்தான் என்றும், பொருள் சுரந்தவனான எம்மிராமாநுசன் மிக்க புண்ணியன் என்றும் இரண்டுபடியும் யோஜிக்கலாம்;.

———-

புண்ணிய நோன்பு புரிந்துமிலேன்,அடி போற்றி செய்யும்

நுண்ணருங் கேள்வி நுவன்றுமிலேன்,செம்மை நூற் புலவர்க்

கெண்ணருங் கீர்த்தி இராமா னுச! இன்று நீ புகுந்தென்

கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற விக் காரணம் கட்டுரையே.–92-

 

பதவுரை

செம்மை நூல் புலவர்க்கு

நல்ல சாஸ்த்ரங்களைக் கற்றுக் கவி சொல்ல வல்லவர்களுக்கும்
எண்ண அரு கீர்த்தி இராமாநுச

அளவிட முடியாத கீர்த்தியை யுடைய
இராமாநுச

எம்பெருமானாரே!,
புண்ணியம் நோன்பு புரிந்தும் இலேன்

புண்ணியமான ஒரு விரதத்தையும் அடியேன் அநுஷ்டிக்க வில்லை;
அடி போற்றி செய்யும்

தேவரீருடைய திருவடிகளை வாழ்த்துகைக்கு உறுப்பான
நுண் அரு கேள்வி

ஸுக்ஷ்மமாய் அருமையான ஸ்ரவணத்தை
நுவன்றும் இலேன் இன்று

(செய்ய வேணு மென்று வாயாலே) சொல்லவுமில்லை (அப்படி யிருந்தும் இன்று
 

 
என் கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும்

அடியேனது கண்ணினுள்ளேயும் நெஞ்சினுள்ளேயும்
புகுந்து நின்ற இக் காரணம் கட்டுரை

புகந்து எழுந்தருளி யிருப்பதற்குக் காரண மருளிச் செய்ய வேணும்.

———–

கட்டப் பொருளை மறைப் பொரு ளென்று கயவர் சொல்லும்

பெட்டைக் கெடுக்கும் பிரானல்லனே,என் பெரு வினையைக்

கிட்டிக் கிழங்கொடு தன்னருள் என்னு மொள் வாளுருவி

வெட்டிக் கிளைந்த இராமா னுசனென்னும் மெய்த்தவனே.–93-

 

பதவுரை

கிட்டி

அடியேன் பக்கல் வந்து நெருங்கி
தன் அருள் என்னும் ஒரு வாள் உருவி

தம்முடைய கிருபையாகிற அழகிய வாளை உறையில் நின்றும் கழற்றி (அதனால்)
என் பெரு வினையை கிழங்கொடு வெட்டி களைந்த

எனது மஹா பாபங்களை வேரோடே அறுத்தொழித்த
இராமாநுசன் என்னும் மெய் தவன்

எம்பெருமானா ரென்கிற மா முனிவர் எப்படிப் பட்டவரென்றால்
கயவர்

துஷ்டர்களான குத்ருஷ்டிகள்
கட்டம் பொருனை மறை பொருள் என்று சொல்லும் பெட்டை

தப்பான அர்த்தங்களை வேதங்களின் அர்த்தமாகக்கொண்டு சொல்லுகிற பிரட்டுப் பேச்சுகளை
கெடுக்கும் பிரான் அல்லனே

கண்டித் தொழித்த மஹா நுபவரமனறோ.

கட்டம்-கஷ்டம்; கட்டப்பொருளொன்றது கஷ்டப்பட்டுச் சொல்லும் பொருள் என்றபடி;

மதாந்தரஸ்தர்கள் சொல்லும் பொருள்கள் அஸ்வரஸமாகையால் க்லிஷ்டங்களாயிருக்குமென்க.

கயவர்-நீசர்,

துஷ்டர் பெட்டு = பிறரை வஞ்சிக்கச் சொல்லும் பொய்ப் பேச்சு.

மெய்த்தவனே-மெய்த்–தவமாவது சரணாகதி யோகம்.

———–

தவந் தரும் செல்வம் தகவும் தரும்,சரியாப் பிறவிப்

பவந் தரும் தீவினை பாற்றித் தரும்,பரந் தாமமென்னும்

திவந் தரும் தீதில் இராமானுசன் தன்னைச் சார்ந்தவர்கட்

குவந்தருந்தேன், அவன் சீரன்றி யானென்றும் உள் மகிழ்ந்தே.–94-

 

பதவுரை

தீது இல் இராமாநுசன்

எவ்வகைக் குற்றமும் அற்றவரான எம்பெருமானார்
தன்னை சார்ந்தவர்கட்கு

தம்மை வந்து அடைந்த வர்களுக்கு
தவம் தரும்

சரனாகதி நிஷ்டையைக் கொடுத்தருள்வர்;
சரியா பிறவி பவம் தரும் தீவினை

நிவர்த்திக்க முடியாத ஜந்ம ஸம்ஸாரங்களை உண்டாக்குகின்ற கொடு வினைகளை
பாற்றி தரும்

போக்கடித் தருள்வர்;
பரம் தாமம் என்னும் திவம் தரும்

பரமபத மென்று சொல்லப்படுகிற வானுலகத்தை அளிப்பர்; (ஆன பின்பு)
யான்

அடியேன்
அவன் சீர் அன்றி

அவ் வெம்பெருமானாருடைய திருக்குணங்களைத் தவிர்த்து
ஒன்றும்

வேறொன்றையும்
உள் மகிழ்ந்து உவந்து அருந்தேன்

மனக் காதலோடே விரும்பி அநுபவிக்க மாட்டேன்.

இப்பாட்டில், தரும் என்னும் பதம் ஐந்து இடங்களில் வருகின்றது.

இரண்டாமடியின் முதலிலுள்ள தரும் என்பது மாத்திரம் தீவினைக்கு விசேஷணம்;

மற்ற நான்கும் எம்பெருமானார் பக்கல் அந்வயிக்குமட் வினைமுற்றுக்கள்.

“சலியாப்பிறவி, சரியாப்பிறவி” என்பன பாட பேதங்கள்.

பவம். வடசொல்.

பரந்தாம. வடசொல்.

திவம். வடசொல் விகாரம்.

———

உண்ணின் றுயிர்களுக் குற்றனவே செய்து அவர்க்குயவே

பண்ணும் பரனும் பரிவில னாம்படி பல் லுயிர்க்கும்

விண்ணின் தலை நின்று வீடளிப்பானெம் இராமானுசன்

மண்ணின் தலத்துதித்து உய் மறை நாலும் வளர்த்தனனே.–95-

 

பதவுரை

உயிர்களுக்கு உள் நின்று

எல்லா ஆத்மாக்களுக்கும் அந்தர்யாமி யாயிருந்து கொண்டு
உற்றனவே செய்து

ஹிதமானவற்றையே நடத்திக் கொண்டு
அவர்க்கு

அவ் வாத்மாக்களுக்கு
உயவே பண்ணும் பரனாம்

உஜ்ஜீவநத்தையே பண்ணிக் கொண்டிருக்கிற எம்பெருமானாம்
பரிவு இலன் ஆம படி

(ஆத்மாக்களிடத்தில் எம்பெருமானாரைப் போல்) ப்ரதியுடையவனால்லன் என்ன வேண்டும் படியா
பல் உயிர்க்கும்

ஸகல ஆத்மாக்களுக்கும்
வீடு அளிப்பான்

மோக்ஷத்தை அருள்வதற்காக
எம் இராமாநுசன்

ஸ்வாமி எம்பெருமானார்
விண்ணின் தலை நின்று

ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும்
மண்ணின் தலத்து உதித்து

இப் பூதலத்திலே அவதரித்து
உய் மறை நாலும்

எல்லார்க்கும் உஜ்ஜீவந ஹேதுவான நான்கு வேதங்களையும்
வளர்த்தனன்

குறைவின்றி வளரச் செய்தருளினார்.

*இப்பாட்டின் ஈற்றடியை “மண்ணின் தலத்துதித்து மறை நாலும் வளர்த்தனனே” என்றே அத்யாபகர்கள் ஒதுவர்கள்.

“நேர் பதினாறே” என்ற கட்டளைக் கலித் துறையின் இலக்கணப்படி பதினாறெழுத்து ஒத்திருந்தாலும் தளை தட்டுகிறபடியாலும்,

மணவாளமாமுனி களுரையில் “ஸர்வோஜ்ஜீவந சாஸத்ரமான” என்கிற ஒரு வாக்கியம் வ்யர்த்தமாக வேண்டி வருகையாலும்

இவ்விரண்டு குறைகட்கும் இடமறும்படி “ உய் மறைநாலும்” என்கிற ப்ராசீந பாடம் கொள்ளத்தக்கது:

உய் என்பதற்குப் பொருளாகவே மணவாள மாமுனிகள் ஸர்வோஜ்ஜீவந சாஸ்த்ரமான” என்கிற வாக்கியமருளிச் செய்தாரென்க.

———-

வளரும் பிணி கொண்ட வல் வினையால்,மிக்க நல் வினையில்

கிளரும் துணிவு கிடைத் தறி யாது முடைத் தலை யூன்

தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனி திரிவேற்

குளரெம் இறைவர் இராமா னுசன் றன்னை உற்றவரே.–96-

 

பதவுரை

வளரும் பிணி கொண்ட வல் வினையால்

அளவற்ற துன்பங்களை யுண்டாக்க வல்ல கொடிய கருமங்களாலே
மிக்க நல் வினையில் கிளரும் துணிவு கிடைத் தறியாது

மஹா விச்வாஸம் கிடைக்காததனால்
முடை தலை ஊன் தளரும் அளவும்

கெட்ட நாற்றங்களுக்கு இருப்பிடமான சரீரம் கட்டுக் குலையும் வரையில்
தரித்தும் விழுந்தும்

ஒருவாறு தரித்திருந்தும் (சப்தாதி விஷயங்களிலே) போய் விழுந்தும்
தனி திரிவேற்கு

துணை யின்றித் திரிகிற எனக்கு
இறைவர்

ஸவாமிகள் (யாரென்றால்,
எம் இராமாநுசன் தன்னை உற்றவர்

நம் எம்பெருமானாரை ஆச்ரயித்த மஹான்கள்
உளர்

இருக்கிறார்கள்.

————-

தன்னை யுற்றாட் செய்யும் தன்மையினோர்,மன்னு தாமரைத் தாள்

தன்னை யுற் றாட் செய்ய என்னை யுற் றானின்று தன் தகவால்

தன்னை யுற்  றாரன்றித் தன்மை யுற் றாரில்லை என்றறிந்து

தன்னை யுற் றாரை இராமா னுசன் குணம் சாற்றிடுமே.–97-

 

பதவுரை

இராமாநுசன்

எம்பெருமானாரானவர்,
தன்னை உற்றார் அன்றி தன்னை உற்றாரை குணம் சாற்றிடும் தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து

தம்மைப் பற்றி யிருப்பாருண்டே யொழிய தம்மைப் பற்றிய யிருப்பவர்களுடைய குண கீர்த்தனம் பண்ணும் ஸ்வ பக்த பக்தர்கள் ஒருவருமில்லை யென்று திரு வுள்ளம் பற்றி
என்னை

அடியேனை
இன்று

இன்றைத் தினத்தில்
தன் தகவால்

தமது அருளாலே

(என்ன செய்தாரென்றால்)

தன்னை உற்று ஆள் செய்யும் தன்மையினோர்

தம்மை யடைந்து கைங்கரியம் பண்ணும் ஸ்வபாவ முடையரான ஸ்வ பக்தர்களுடைய
மன்னு தாமரை தாள் தன்னை உற்று ஆள் செய்ய

ஒன்றோடொன்று சேர்ந்த திருவடித் தாமரைகளை நான் அடைந்து ஆட் செய்யும்படி
உய்த்தான்

வைத்தருளினார்.

எம்பெருமானார் என்னைத் தம்மிடத்து ஆட்படுத்திக் கொள்ளாமல் தம்மை அடுத்தவர்கள் பக்கல் என்னை ஆட்படுத்தினார்.

இதற்கு என்ன காரண மென்கிறீர்களோ?

எல்லாரும் நம்மையே நேராக வந்து ஆச்ரயிக்கிறார்களே யொழிய நம்மை ஆச்ரயித்தவர்களை ஆச்ரயிப்பார் ஆருமில்லையே,

இவ்வமுதனார், நம்மை ஆச்ரயித்தவர்களை ஆச்ரயிக்கிற அதிகாரியாக இருக்கட்டும் – என்று திருவுள்ளம் பற்றிச் செய்தார்.

இப்பாட்டின் அந்வய க்ரமம் சிறிது வருத்தப்படுத்தும்;  ஜாகரூகராயிருந்து அந்வயித்துக்கொள்க;-

தன்னையுற்றாரன்றித் தன்னை யுற்றாரைக் குணம் சாற்றிடுந் தன்மை யுற்றாரில்லை யென்றறிந்து, இராமாநுசன்,

தன்னை யுற்றாட்செய்யுந் தன்மையினோர் மன்னு தாமரைத் தாள் தன்னை யுற்று ஆட்செய்யத் தன் தகவால் இன்று என்னை யுய்த்தான்-என்று அந்வயம்.

சாற்றிடும் என்கிற விசேஷண பதம் பாட்டின் முடிவில் வந்து நின்றது அபூர்வப் பிரயோகமென்பர்.

என்னை யுற்றான் என்று ஓதுவர்கள்.

———–

இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னம் நரகிலிட்டுச்

சுடுமே யவற்றைத் தொடர் தரு தொல்லைச் சுழல் பிறப்பில்

நடுமே யினி நம் இராமா னுசன் நம்மை நம் வசத்தே

விடுமே சரண மென் றால், மனமே! நையல் மேவுதற்கே?–98-

 

பதவுரை

நம் இராமாநுசன்

நம் எம்பெருமானார்,
சரணம் என்றால்

உமது திருவடிகளே சரணமென்று நாம் சொல்லி விட்டோ மானால்
இனிய சுவர்க்கத்திலே இடுமே

(சிலர்க்கு) இனிதாகத் தோற்றுகிற ஸ்வர்க்கத்திலே நம்மைக் கொண்டு சேர்த்திடுவரோ?
இன்னம்

அல்லது
நரகில் இட்டு சுடுமே

நரகத்திலே கொண்டு தள்ளி தஹிக்கச் செய்வரோ?
அவற்றை தொடர் தரு

அந்த ஸ்வர்க்க நகரங்களைத் தொடர்ந்து கிடக்கிற
தொல்லை சுழல் பிறப் பில்

அநாதியாயும் சுழன்று வருவதாயுமுள்ள ஜன்மத்திலே
நடுமே

நிறுத்துவரோ?
இனி

மேலுள்ள காலங்களில்
நம்மை

நம்மை
நம் வசத்தே விடுமே

நாம் போகிற வழியே விட்டு வைப்பரோ?

(இவை செய்ய மாட்டாரான பின்பு)

மனமே!

ஒ நெஞ்சே!
மேவுதற்கு

பேறு பெறும் விஷயமாக
நையல்

நீ கரைய வேண்டா.

————-

தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன்

சொற்கற்ற சோம்பரும் சூனிய வாதரும் நான் மறையும்

நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே

பொற் கற் பகம், எம் இராமா னுச முனி போந்த பின்னே.-99–

 

பதவுரை

தற்கம் சமணரும்

தர்க்கம் பண்ணுகிற சமணர்களும்
பேய்

பேய் போலே பிடித்த பிடி விடாதே நிற்கிற
சாக்கியர்களும்

பௌத்தர்களும்
தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும்

ருத்ரனாடைய சொல்லாகிய சைவ மதத்தைக் கற்ற தாமஸர்களான சைவர்களும்
சூனிய வாதரும்

சூந்நிய வாதிகளும்
நால் மறையும் நிற்க

நான்கு வேதங்களும் விளங்கிக் கொண்டி ருக்கச்செய்தே
குறும்பு செய் நீசரும்

(அவற்றுக்குச் சேராத) அபார்த்தங்களைப் பண்ணுகிற குத்ருஷ்டிகளும்
மாண்டனர்

ஒழிந்தார்கள்;

(எப்போது ? என்றால்)

பொன் கற்பகம் எம் இராமாநுச முனி

சிறந்த கல்ப வ்ருக்ஷம் போலே உதாரான ஸ்வாமி எம்பெருமானார்
நீள் நிலத்தே போந்த பின்

விசாலமான இப் பூமியிலே திரு வவதரித்த பின்பு.

———

போந்த தென் னெஞ்சென்னும் பொன் வண்டு உன தடிப் போதில் ஒண் சீர்

ஆம் தெளி தேனுண் டமர்ந்திட வேண்டி, நின் பாலதுவே

ஈந்திட வேண்டும் இராமா னுச! இது அன்றி யொன்றும்

மாந்தகில் லாது, இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே.–100-

 

பதவுரை

இராமாநுச

எம்பெருமானாரே!
என் நெஞ்சு என்னும் பொன் வண்டு

எனது நெஞ்சாகிற அழகிய வண்டானது
உனது அடி போதில்

தேவரீருடைய திருவடித் தாமரைகளில்
ஒண் சீர் ஆம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி

அழகிய குணங்களாகிற தேனைப் பருகி நித்ய வாஸம் பண்ண விரும்பி
நின் பால்

தேவரீரிடந்தில்
போந்தது

வந்து சேர்ந்தது;
அதுவே

அத் திருக்குணங்களையே
ஈந்திட வேண்டும்

அளித்தருள வேணும்;
இது அன்றி

இத் திருக்குணங்களைத் தவிர
ஒன்றும்

வேறொன்றையும்
மாந்த கில்லாது

(நெஞ்சு) புஜிக்க மாட்டாது;
இனி

இப்படியான பின்பு
மற்று ஒன்று காட்டி

வேறொரு விஷயத்தைக் காட்டி
மயக்கிடல்

மயக்க வேண்டா

ஸ்வாமிந்! அடியேனுடைய நெஞ்சு தேவரீருடைய திருக் குணங்களையே எப்போதும் அநுபவிக்க விருப்பங் கொண்டு மேல் விழுந்து தேவரீரிடம் வந்து சேர்ந்தது. இது இனி வேறொன்றை விரும்பாது; தேவரீரும் இனி இதை ஸம்ஸாரத்தில் போக வொடட்டாமல் தேவரீனிடத்திலேயே நிலை நிறுத்திக் கொள்ள வேணும். என்றாராயிற்று.

தமது நெஞ்சை ஒரு வண்டாக ரூபணம் பண்ணினதற்கு ஏற்ப எம்பெருமானாருடைய திவ்ய குணங்களை மதுவாக ரூபணம் பண்ணினார்.

இந்த வண்டுக்கு அந்தந் தேன் தவிர வெறொன்றும் ரஸிக்க மாட்டாது.

மயக்கிடல் = முன்னிலை யெதிர் மறை வினை முற்று. –மயக்காதே என்றபடி

———-

மயக்கும் இருவினை வல்லியிற் பூண்டு மதி மயங்கித்

துயக்கும் பிறவியில் தோன்றிய என்னைத் துயரகற்றி

உயக் கொண்டு நல்கும் இராமா னுச! என்ற துன்னை யுன்னி

நயக்கும் அவர்க்கி திழுக்கென்பர், நல்லவர் என்றும் நைந்தே.–101-

 

பதவுரை

மயக்கும்

“அஜ்ஞானத்தை விளைக்க வல்ல
இரு வினை

புண்ய பாப மென்னும் இரு கருமங்களாகிற
வல்லியல்

விலங்கில்
பூண்டு

அகப்பட்டுக் கொண்டு
மதி மயங்கி

அறிவுகெட்டு
துயக்கும்

ப்ரமிச்கச் செய்கிற
பிறவியியல்

ஸம்ஸாரத்திலே
தோன்றிய என்னை

சிறந்த அடியேனை
துயர் அகற்றி உய கொண்டு

துக்கங்களைப் போக்கி உஜ்ஜீவிக்கச் செய்து
நல்கும்

அருள்செய்கின்ற
இராமாநுச

எம்பெருமானாரே!
என்றது இது

என்று தேவதீருடைய பாவநத்வத்தைப்பேசு கையாகிற ஈது
உன்னை உன்னி நைந்து

தேவரீரை அநுஸந்தித்து உருகி
என்றும் நயக்கு

எப்போதும் ஆசையுடனிருப் பவர்களுக்கு
இழுக்கு என்பர் நல்லவர்

தகாதது என்று ஸத்துக்கள் சொல்லுவர்கள்.

எம்பெருமானார்க்கு பாவநத்வம் என்றும் போக்யத்வம் என்றும் இரண்டு படிகள் உண்டு.

பாவநத்வமாவது-பக்தர்களுடைய பாவங்களைப்போக்கிப் பரிசுத்தப்படுத்தல்.

போக்யத்வமாவது எப்போதும் அநுபவிக்கக் கூடியவராயிருக்கை.

இவ்விரண்டில் பாவநத்வத்தைவிட போக்யத்வமே சிறந்தது;

ஏனென்றால், நம்முடைய பாவங்களைப் போக்கினாரென்கிற காரணத்தாலே நாம் அவரைப் பாவநர் என்று அநுஸந்திக்க வேண்டும்;

இது ஒரு உபாதியைப்பற்றி வருவது;

போக்யத்வத்தை அநுஸந்திப்பதோ இப்படிப்பட்டதல்ல. அது ஸ்வரூப ப்ரயுக்தம்.

ஆகையாலே, பாவநத்வத்தை அநுஸந்திப்பதைவிட யோக்யதையை அநுஸந்திப்பதே சிறந்தது.

அப்படி யிருக்க இவ்வமுதனார் இப் பிரபந்தத்தில் அடிக்கடி எம்பெருமானாருடைய பாவநத்வத்தை அநுஸந்தித்தார்;

‘என்னுடைய பாவங்களை யெல்லாம் போக்கினார், என்னுடைய குற்றங்களை யெல்லாம் நீக்கினார்’ என்று அடிக்கடி சொல்லி யிருக்கிறார்.

அப்படி சொன்னதற்கு அநுதாபப்படுகிறார் இப்பாட்டில்,

போக்யதையில் ஈடுபட்டுப் பேசவேண்டியிருக்க, பாவநத்வத்தில் ஈடுபட்டமை தோற்றப் பேசினது பிசகு என்று பெரியோர்கள் சொல்லுவர்கள் என்றாராயிற்று.

———-

நையும் மனமும் குணங்களை உன்னி, என் நா விருந்தெம்

ஐயன் இராமா னுசனென் றழைக்கும் அரு வினையேன்

கையும் தொழும் கண் கருதிடுங் காணக் கடல் புடை சூழ்

வையம் இதனில், உன் வண்மை யென் பாலென் வளர்ந்ததுவே?–102-

 

பதவுரை

(எம்பெருமானாரே!)

மனம்

எனது நெஞ்சானது
உன் குணங்களை உன்னி

தேவரீருடைய திருக் குணங்களைச் சிந்தித்து
நையும்

கரைகின்றது;
என் நா

எனது வாக்கானது
இருந்து

நிலை நின்று
எம் ஐயன் இராமாநுசன் என்று அழைக்கும்

எமக்கு ஸ்வாமியான எம் பெருமானாரே! என்று அழைகின்றது.
அரு வினையேன்

மஹா பாபியான என்னுடைய
கையும்

கைகளும்
தொழும்

அஞ்ஜலி பண்ணு கின்றன;
கண்

கண்களானவை
காண கருதிடும்

(தேவரீரை) ஸேவிக்க ஆசைப்படுகின்றன;
கடல் புடை சூழ் வையம் இதனில்

சுற்றிலும் கடல் சூழப்பெற்ற இப்பூமண்டலத்தினாள்ளே
உன் வண்மை

தேவரீருடைய ஔதார்ய குணம்
என்பால் வளர்ந்தது என்

அடியேன் மீது (இவ்விதமாக) வளர்ந்ததற்குக் காரணம் யாதோ?.

—————

வளர்ந்த வெங் கோப மடங்க லொன் றாய்,அன்று வாளவுணன்

கிளர்ந்த பொன் னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயிரெழுந்து

விளைந்திடும் சிந்தை இராமா னுசனென்றன் மெய் வினை நோய்

களைந்து நன் ஞானம் அளித்தனன் கையிற் கனி யென்னவே.–103-

 

பதவுரை

அன்று

முன்னொரு காலத்தில்
வளர்ந்த வெம் கோபம் மடங்கல் ஒன்று ஆய்

கடூரமான கோபம் மேலிடப் பெற்ற ஒரு நரசிங்க மூர்த்தியாகி
வாள் அவுணன்

வாளை யுடைய ஹிரண்யா ஸுரனது
கிளர்ந்த

செருக்கினால் நெறித்திருந்த
பொன் ஆகம்

பொன் போன்ற மார்வை
கிழித்தவன்

கிழித்துப் பொகட்டவனான எம்பெருமானாடைய
கீர்த்தி பயிர் எழுந்து

திருப்புகழ்களாகிற பயிர் வளர்ந்து
விளைந்திடும் சிந்தை

விளையப் பெற்ற திரு வுள்ளத்தை யுடையரான
இராமாநுசன்

எம்பெருமானார்
என் தன் மெய் வினை நோய் களைந்து

எனது உடலைப் பற்றி யிருக்கிற வினை நோய்களை யெல்லா மொழித்து
கையில் கனி என்ன

கை யிலங்கு நெல்லிக் கனி போலே ஸுலபமாக
நல் ஞானம் அளித்தனன்

விலக்ஷணமான ஞானத்தைத் தந்தருளினார்

—————-

கையிற் கனி யென்னக் கண்ணனைக் காட்டித் தரிலும்,உன்றன்

மெய்யிற் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்,நிரயத்

தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ் வருள் நீ

செய்யில் தரிப்பன் இராமானுச! என் செழுங்கொண்டலே!–104-

 

பதவுரை

செழு கொண்டல்

ஔதார்யத்தில்) விலக்ஷணமான மேகம் போன்ற
என் இராமாநுச

எம்பெருமானாரே!

(தேவரீர்)

கண்ணனை

எம்பெருமானை
கையில் கனி என்ன

உள்ளங்கை நெல்லிக் கனி போலே
காட்டி தரிலும்

காட்டிக் கொடுத்தாலும்
உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி யான் வேண்டிலன்

தேவரீருடைய திருமேனியில் விளங்குகிற ஸௌந்தரியமும் முதலிய குணங்களைத் தவிர வேறொன்றிலும் நான் கண் வைக்க மாட்டேன்;
நிரயம் தொய்யில்

ஸம்ஸார நரகக் குழியில்
கிடக்கிலும்

அழுந்திக் கிடந்தேனாகிலும்
சோதி விண் சேரிலும்

சோதி மயமான பரம பதத்தை அடைந்தேனாகிலும்
இவ் அருள்

(தேவரீருடைய திரு மேனி யழகை அநுபவித்திருக்கைக்கு உறுப்பான) கிருபையை
நீ செய்யில்

தேவரீர் செய்தருளினால் தான்
தரிப்பான்

(ஸம்ஸாரத்திலோ மோக்ஷத்திலோ) கால் பாவி நிற்பேன்.

நிரயத் தொய்யில் = நிரயமாவது நரகம்.

இந்த ஸம்ஸார நிலமே நரகமெனப்படும்.

தொய்யில்-சேறு. ஏழனாருபு தொக்கி யிருக்கிறது. தொய்யல் என்பாருமுளர்.

—————

செழுந் திரைப் பாற் கடல் கண்டுயில் மாயன் திருவடிக் கீழ்

விழுந்திருப் பார் நெஞ்சில் மேவு நன் ஞானி,நல் வேதியர்கள்

தொழுந்திருப் பாதன் இராமா னுசனைத் தொழும் பெரியோர்

எழுந்திரைத் தாடும் இடமடி யேனுக் கிருப்பிடமே.–105-

 

பதவுரை

செழு திரை பால் கடல்

அழகிய அலைகளை யுடைய திருப்பாற் கடலில்
கண் துயில்

பள்ளிகொண்டிராநின்ற
மாயன்

ஸர்வேச்வரனாடைய
திரு அடி கீழ்

திருவடிகளின் கீழே
விழுந்து இருப்பார்

விழுந்துகிடக்கும் மஹான்களுடைய
நெஞ்சில்  மேவும்

ஹருதயத்திலே பொருந்தி யெழுந்தருளி யிருக்கிற
நல் ஞானி

சிறந்த ஞானியாயும்
நல்வேதியர்கள் தொழும் திரு பாதன்

நல்ல வைதிகர்களால் ஸேவிக்கப்பட்ட திருவடிகளை யுடையரா யுமிருக்கிற
இராமாநுசனை

எம்பெருமானாரை
தொழும்

ஸேவிக்கின்ற
பெரியோர்

மஹாத்மாக்கள்
எழுந்து இரைத்து ஆடும் இடம்

உடம்பு இருந்த விடத்தில் இராமல் கிளர்ந்து கோஷித்துக் கொண்டு கூத்தாடும் இடம்
அடியேனுக்கு இருப்பு இடம்

அடியேன் வஸிக்குமிடமாகும்.

கீழ்ப்பாட்டில் “ நிரயத் தொய்யில் கிடக்கிலும் சோதிவிண் சேரிலும்” என்று ஸம்ஸாரத்தையும் பரமபதத்தையும் வாசியற்றதாகச் சொன்ன அமுதனாரை நோக்கிச் சிலர், ‘உலகத்தில் எல்லாரும் ஸம்ஸாரத்தை வெறுத்துப் பரமபதத்தை ஆசைப்படா நிற்க நீர் ஸம்ஸாரத்தையும் பரமபதத்தையும் துன்பமாகக் கருதிப் பேசுகின்றீரோ, உமக்கு உத்தேச்யமான ஸ்தானம் எது? சொல்லும், என்ன; ஸ்ரீராமாநுஜபக்தர்கள் களித்துக் கூத்தாடுகின்ற இடமே எனக்குப் பரமோத்தேச்யமான ஸ்தானம் என்றார்.

———–

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ் சோலை யென்னும்

பொருப்பிடம் மாயனுக் கென்பர் நல் லோர், அவை தன்னொடு வந்

திருப்பிடம் மாயன் இராமானுசன் மனத் தின்றவன்வந்

திருப்பிடம் என்றன் இதயத்துள்ளே தனக் கின்புறவே.–106-

 

பதவுரை

மாயனுக்கு

ஸர்வேச்வரனுக்கு
இருப்பு இடம்

வாஸஸ்தானம் (எவை யென்றால்)
வைகுந்தம்

பரம பதமும்
வேங்கடம்

திருவேங்கட மலையும்
மாலிருஞ் சோலை என்னும் பொருப்பு இடம்

திருமாலிருஞ் சோலை யென்கிற திருமலையும் (ஆகிய இவையும்)
என்பர் நல்லோர்

என்று ஸத்துக்கள் சொல்லுவர்கள்.
மாயன்

(இவற்றை இருப்பிடமாக வுடைய) ஸர்வேச்வரன்
அவை தன்னொடும்

அந்த ஸ்ரீவைகுண்டம் முதலியவற்றோடே கூட வந்து எழுந்தருளி யிருப்பது
வந்து இருப்பிடம்

எம்பெருமானாருடைய
இராமாநுசன் மனத்து

திரு வுள்ளத்திலேயாம்;
அவன்

அவ் வெம்பெருமானார் தாம்
இன்று வந்து

இப்போது வந்து
தனக்கு இன்பு உற இருப்பிடம்

தமக்கு ஆநந்தமாக எழுந்தருளி யிருப்பது
என் தன் இதயத்து உள்ளே

அடியேனுடைய ஹ்ருதயத்தினுள்ளேயாம்.

கீழ்ப் பாட்டிற் கூறிய படியே அமுதனாருடைய எல்லை கடந்த ப்ராவண்யத்தை அறிந்த எம்பெருமானார் ‘நம்மேல் இவ்வளவு காதல் கொண்டிருக்கிற இவருடைய நெஞ்சை நாம் விட்டு நீங்கலாகாது, என்று கொண்டு அமுதனாருடைய திருவுள்ளத்தை மிகவும் விரும்பி யருள, அதனைக் கண்டு மகிழ்ந்து பேசுகிறார்.

————

இன்புற்ற சீலத் திராமானுச, என்றும் எவ் விடத்தும்

என்புற்ற நோயுடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய

துன்புற்று வீயினும் சொல்லுவ தொன்றுண்டுன் தொண்டர்கட்கே

அன்புற் றிருக்கும் படி, என்னை யாக்கி யங் காட்படுத்தே.-107–

 

பதவுரை

இன்பு உற்ற

ஆநந்த பூர்ணரா யெழுந்தருளி யிருக்கிற ஸௌசீல்ய குணமுடைய
சீலத்து இராமாநுசா

எம்பெருமானாரே!
சொல்லுவது ஒன்று உண்டு

தேவரீரிடத்தில் அடியேன் விஞ்ஞாபிக்க வேண்டிய விஷயம் ஒன்றுண்டு
என்பு உற்ற நோய் உடல் தோறும்

எலும்பிலே உறைந்து நலியக் கூடிய வியாதிகளுக்கு இருப்பிடமான சரிரங்களிலெல்லாம்
பிறந்து இறந்து

பிறப்பதும் இறப்பதுமாகி
எண்ண அரிய துன்பு

எண்ண முடியாத துன்பங்களை யநுபவித்து
உற்ற வீயினும்

முடிந்து போனாலும்
என்றும்

எல்லாக் காலங்களிலும்
எவ் இடத்தும்

எல்லா விடங்களிலும்
உன் தொண்டர்கட்கே

தேவரீருடைய பக்தர்கள் விஷயத்திலேயே
அன்பு உற்று இருக்கும்

பக்தனா யிருக்கும் படி
படி என்னை ஆக்கி

அடியேனைச் செய்தருளி
அங்கு

அந்த பக்தர்களிடத்தில்
ஆள் படுத்து

(அடியேனை) ஆட் படுத்தி யருள வேணும்;

(இதுவே அடியேனுடைய வேண்டுகோள்)

—————

அங்கயல் பாய் வயல் தென்னரங்கன், அணி ஆக மன்னும்

பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்

தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே! நந் தலை மிசையே

பொங்கிய கீர்த்தி இராமா னுசனடிப் பூ மன்னவே.–108–

 

பதவுரை

நெஞ்சே

ஓ மனமே!
பக்தி எல்லாம் தங்கியது என்ன தழைத்து

பக்தி யெல்லாம் நம் மிடத்திலே குடி கொண்ட தென்று சொல்லும் படியாக வீறு பெற்று,
பொங்கிய கீர்த்தி இராமாநுசன் அடி பூ

பரந்த புகழை யுடையரான எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகள்
நம் தலை மிசையே மன்ன

நமது தலை மேலே நித்ய வாஸம் பண்ணும் படியாக,

(நாம் செய்ய வேண்டிய காரியம் என்ன வென்றால்)

அம் கயல் பாய் வயல் தென் அரங்கன்

அழகிய கயல் மீன்கள் பாய்கிற கழனிகள் சூழ்ந்த தென்னரங்கத்தில் உறையும் பெருமானாடைய
அணி ஆகம் மன்னும்

அழகிய திருமார்பிலே நித்ய வாஸம் பண்ணுகிறவளாய்
பங்கயம் மா மலர் பாவையை

சிறந்த தாமரைப் பூவில் பிறந்தபதுமை போன்றவளான ஸ்ரீ மஹா லக்ஷ்மியை
போற்றதும்

வாழ்த்துவோம்.

இப் பிரபந்தத்தின் தொடக்கத்தில் “இராமாநுசன் சரணாவிந்தம் நாம் மன்னிவாழ” என்று எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளைப் பொருந்தி வாழ்வதே தமக்குப் பரம புருஷார்த்தமாக அருளிச் செய்தவராகையாலே அந்தப் புருஷார்த்தம் நமக்கு யாவஜ்ஜீவம் ஹித்திக்கும்படியாக -எல்லாச் செல்வங்களையும் அளிக்க வல்ல பெரிய பிராட்டியாரைப் பிரார்த்திப் போமென்கிறார்-முடிவான இப்பாட்டில்.

ஸாமாந்ய ஸம்பத்தை அளிக்க வல்ல பிராட்டியே இந்த விசேஷ ஸம்பத்தையும் அளிக்கக் கடவுள் என்றதாயிற்று.

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி-57-80 -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்

July 5, 2022

மற்றொரு பேறு மதியாது, அரங்கன் மலரடிக் காள்

உற்றவரே தனக் குற்றவ ராய்க் கொள்ளும் உத்தமனை

நற்றவர் போற்றும் இராமா னுசனை யிந் நானிலத்தே

பெற்றனன் பெற்ற பின் மற்றறி யேனொரு பேதைமையே.–57-

 

பதவுரை

மற்று ஒரு பேறு

ப்ரயோஜநாந்தரங்களை
மதியாது

கணிசியாமல்
அரங்கன் மலர் அடிக்கு

அழகிய மணவாளனாடைய திருவடித் தாமரைகளுக்கு
ஆள் உற்றவரே

அடிமை பட்டவர்களையே
தனக்கு உற்றவர் ஆ

தமக்கு ஆத்ம பந்துக்களாக
கொள்ளும்

திரு வுள்ளம் பற்றுகிற
உத்தமனை

உத்தம புருஷராயும்
நல் தவர் போற்றும்

ப்ரபந்நர்களாலே புகழப் பட்டவரா யுமிருக்கிற
இராமாநுசனை

எம்பெருமானாரை
,நானிலத்தே பெற்றனன்

இந்த லோகத்திலே அடியேன் ஆச்ரயிக்கப் பெற்றேன்;
பெற்ற பின்

ஆச்ரயித்த பின்பு
மற்று ஒரு பேதைமை அறியேன்

(வேறு விஷயங்களை விரும்புகை முதலிய) எவ்வித அஜ்ஞான கார்யமும் அறிய மாட்டேன்

“இனி என் வாக்குரையாது, என்மனம் நினையாது மற்றொன்றை” என்று எப்படி நீர் சொல்லக்கூடும்?

இருள் தருமா ஞாலத்தில் இருக்கிறீராகையாலே அவிவேகம் வந்து மூடிக்கொள்ள எத்தனை நாழிகை செல்லும்? என்று சிலர் கூற,
எம்பெருமானாரை இந்த லோகத்திலே நான் ஆச்ரயித்தேனான பின்பு இனியொரு நாளும் அவிவேகியாக ஆகமாட்டேனென்கிறார்.

நல்தவர் போற்றும் = ப்ரபத்தியாகிற நல்ல தபஸ்ஸைக் கைப் பற்றினவாகளாலே போற்றப் படுவர்.

————–

பேதையர் வேதப் பொருளிதென் னுன்னிப் பிரமம் நன்றென்

றோதி மற் றெல்லா உயிரும் அஃதென்று உயிர்கள் மெய் விட்

டாதிப் பரனொடொன் றாமென்று சொல்லுமவ் வல்லலெல்லாம்

வாதில் வென்றான், எம் இராமா னுசன் மெய்ம் மதிக் கடலே.–58-

 

பதவுரை

பேதையர்

(வேதத்தைப் பிரமாணமாகக் கொள்ளாத) அவிவேகிகள்
இது வேதப் பொருள் என்ற உன்னி

நாங்கள் சொல்லுகிற இது தான் வேதத்தின் அர்த்தம்’ என்று நிரூபித்துக் கொண்டு
பிரமம் நன்று என்று ஒதி

ப்ர ப்ரஹமமான எவ்லாவற்றிலும் விலஷணம்’  என்று சொல்லி
மற்று எல்லா உயிரும் அஃது என்று

அந்தப் ப்ரஹ்மந் தவிர மற்ற எல்லா ஜீவ ராசிகளும் அந்த ப்ரஹமமே’ என்று சொல்லி
உயிர்கள் மெய் விட்டு

‘ஜீவாத்மாக்கள் தேஹத்தை விட்ட பின்பு
ஆதி பரனொடு ஒன்று ஆம் என்று சொல்லும் அவ் அல்லல் எல்லாம்

ஸர்வ காரண பூதுனான பரம புரஷனோடே ஐக்கியத்தை யடைகின்றன’  என்று சொல்லுகின்ற அந்த கோலா ஹலங்களையெல்லாம்.
மெய்  மதி கடல்

தத்வ ஜ்ஞாநக் கடலாகிய
எம் இராமாநுசன்

ஸ்வாமி எம்பெருமானார்
வாதில் வென்றான்

வாதத்தில் நிரஹித்து வெற்றி பெற்றார்.

எம்பெருமானார் குத்ருஷ்டிகளின் குத்ஹிதமான வாதங்கனைக் கண்டித்த படிகளில் ஒருபடியைச் சொல்லி ஈடுபடுகிறார்.

சில மூர்க்கர்கள் தாங்கள் சொல்லுவதே வேதங்களின் உண்மையான பொருள் என்று கொக்கரித்துக்  கொண்டு அபார்த்தங்களைப் பிதற்றுவர்கள்.

பரப்ரஹமம் ஸர்வ லிலக்ஷணம்; ஜீவாத்மாக்களெல்லாம் பரப்ரஹ்மத்தில் ஒர் பகுதி;

இப்போது உபாதியினால் வெவ்வேறாகத் தோன்றுகின்றன;

அவ் வுபாதி கழிந்தபின் ஜீவாத்மாக்கள் பரப்ரஹ்மத்தோடு ஒற்றுமை அடைந்துவிடுகின்றன என்று மூர்க்கர் பிதற்றும் பிதற்றல்களை யெல்லாம் தத்வ ஜ்ஞான நிதியான எம்பெருமானார் வாதத்தில் கண்டித்து உண்மைப் பொருளை ஸ்தாபித்து வெற்றி பெற்றாரென்கிறது.

பிரமம் – ப்ரஹமம் என்ற வடசொல் விகாரம்

உயிர்கள் மெய்விட்டு ஆதிப்பரனொடு ஒன்றாம் = ஜீவரத்மாககள் பரப்ரஹ்மத்தோடு ஐக்கியப்படுவது தான் மோக்ஷம் என்று குத்ருஷ்டிகள் உபபாதிப்பார்கள்;

“தத் த்வமஸி” என்றும் “ப்ரஹ்ம வேத ப்ரஹ்மை பவதி” என்றுமுள்ள வேத வாக்கியங்களுக்கு இப்படி அபார்த்தம் பண்ணுவார்கள்.

வென்றான்  என்பதை வினை முற்றாகக் கொள்ளாமல் வினையாலணையும் பெயராகக் கொண்டு வாதில் வென்றவராகிய எம்பெருமானார், மெய்ம் மதிக் கடல் ஸத்ய ஜ்ஞாந ஸமுத்ரமா யிருப்பவர் என்று முடிப்பதாக வுரைத்தலுமாம்.

——————

கடலள வாய திசை யெட்டி னுள்ளும் கலி யிருளே

மிடை தரு காலத் திராமா னுசன்மிக்க நான் மறையின்

சுடரொளி யா லவ் விருளைத் துரத்தில னேல் உயிரை

உடையவன், நாரணன் என்றறிவா ரில்லை உற்றுணர்ந்தே.–59-

 

பதவுரை

கடல் அளவு ஆய திசை எட்டினுள்ளும்

நான்கு ஸமுத்ரங்கள் சூழ்ந்த எல்லா விடங்களிலும்
கலி இருளே மிடைதரு காலத்து

கலி புருஷனாகிற அந்த காரமே நெருங்கிக் கிடந்த காலத்தில்
இராமாநுசன்

எம்பெருமானார் (திருவவதரித்து)
நால் மறையின்

நான்கு வேதங்களின்
மிக்க சுடர் ஒளியால்

அளவற்ற தேஜஸ்ஸைக் கொண்டு
அவ் விருளை துரந்திலனேல்

அந்த கலி தோஷத்தைப் போக்கியிராமற் போனால்
உயிரை உடையவன் நாரணன் என்று

‘எல்லா ஆத்மாக்களுக்கும் சேஷி ஸ்ரீமந் நாராயணனே என்று
உற்று உணர்ந்து

யாரும் தெரிந்து கொண்டிருக்க மாட்டார்கள்.

என்னப் பனித்த ராமாநுசன் திருவலதரித்து வேதார்த்தங்களை விளங்கக் காட்டியருளா விடில் இவ்வுலகமனைத்தும் அஜ்ஞாநமயமாகவே கிடக்கும்; தைவாதீநமாக என்னப்பன் திருவவதரித்து எங்கும் வியாபித்துக் கிடந்த கலிபுருஷனுடைய தோஷங்களைத் தொலைத்து வேதச் சுடர் விளக்கேற்றி அஜ்ஞாநாந்தகாரங்களைப் போக்கடிக்கவே எல்லாரும் ஸ்ரீமந் நாராயணனே ஸர்வசேஷி யென்கிற பர மார்த்தத்தைத் தெரிந்து உய்வுபெறலாயிற்று என்றார்.

மிடை தருதல் – நெருங்கி யிருத்தல் இடைவிடாது எங்கும் பரவியிருத்தல்.

———–

உணர்ந்த மெய்ஞ் ஞானியர் யோகந் தொறும்,திரு வாய்மொழியின்

மணந் தரும் இன்னிசை மன்னும் இடந் தொறும் மா மலராள்

புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு  நிற்கும்

குணந்திகழ் கொண்டல் இராமானுசனெங் குலக் கொழுந்தே.–60-

 

பதவுரை

குணம் திகழ்

ஆத்ம குணங்களால் விளங்குபவரும்
கொண்டல்

(ஔதார்யத்தில்) காள மேகத்தை ஒத்த வரும்
எம் குலம் கொழுந்து

எங்கள் குலத்துக்குத் தலைவருமான
இராமாநுசன்

எம்பெருமானார்

(எங்கே எழுந்தருளி யிருப்பரென்றால்)

உணர்ந்த மெய் ஞானியர் யோகம் தொறும்

கற்றுணர்ந்த தத்வஜ ஞானிகளுடைய கோஷடிகளெங்கும்
திருவாய் மொழியின் மணம் தரும் இன் இசை மன்னும் இடம் தொறும்

திருவாய் மொழியினுடைய பரிமளம் மிக்க இனிய இசையுள்ள இடங்களெங்கும்
மா மலராள் புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதிதொறும்

பிராட்டி நித்ய வாஸம் பண்ணுகிற அழகிய மார்பை யுடைய திருமால் எழுந்தருளி யிருக்கிற திவ்ய தேசங்களெங்கும்
புக்கு நிற்கும்

எழுந்தருளியிருப்பார்.

ஞானம் தலையெடுத்த மஹான்களுடைய திரள் எங்கெங்கும் இருக்கின்றதோ அங்கெல்லாம் எழுந்தருளியிருப்பவரும். திருவாய்மொழியின் பரம போக்யமான இசை எங்கெங்கு நிகழ்கின்றதோ அங்கெல்லாம் ஸேவை ஸாதிப்பவரும்

ஸ்ரீயபதியான ஸர்வேச்வரன் எங்கெங்கு ஸந்நிதாநம் பண்ணுகிறாறோ அந்தத் திருப்பதிகளெங்கும் புகுந்து நிற்பவருமான

எம்பெருமானார் அஸ்மத் குல கூடஸ்தராயிற்று.

————

கொழுந்து விட் டோடிப் படரும் வெங் கோள் வினையால்,நிரயத்

தழுந்தி யிட் டேனை வந் தாட் கொண்ட பின்னும், அரு முனிவர்

தொழுந் தவத் தோனெம் இராமானுசன் தொல் புகழ் சுடர் மிக்

கெழுந்தது, அத்தால் நல்லதிசயங் கண்ட திருநிலமே.–61-

 

பதவுரை

அரு முனிவர் தொழும்

அருமையான நிஷ்டையை யுடைய மஹான்களாலே ஸேவிக்கப் பெற்றவராயும்
தவத்தோன்

ப்ரபத்தி யாகிற தபஸ்ஸை யுடையவராயு மிருக்கிற
எம் இராமாநுசன்

ஸ்வாமி எம்பெருமானாருடைய
தொல் புகழ்

நித்யமான கல்யாண குணங்கள்
கொழுந்து விட்டு ஒடி படரும் வெம்கோள் வினையால்

மேன்மேலும் அதிகமாகப் பெருகுகின்ற க்ரூரமாய்ப் பரப்லமான துஷ்கர்மத்தாலே
நிரயத்து அழுந்தி யிட்டேனை

ஸம்ஸாரமாகிற நரகத்திலே அழுந்திக் கிடந்த என்னை
வந்து ஆள் கொண்ட பின்னும் சுடர் மிக்கு எழுந்தது

வந்து ஆட் படுத்திக் கொண்ட பின்பும் ஒளி குன்றாதே  முன்னிலும் விசேஷமாக விளங்கா நின்றன:
அத்தால்

அதைக் கண்டு
இரு நிலம்

விசாலமான இப் பூ மண்டலம்
நல்ல அதிசயம் கண்டது

மிக்க ஆச்சரியங் கொண்டது.

எம்பெருமானாருடைய குணங்கள் மஹாபாபியான என்னை ஆட் படுத்திக் கொண்டவளவோடு த்ருப்தி பெற்று விடமால்

இப்படிபட்ட பாபிகள் இன்னும் யாரேனும் கிடைப்பாருண்டோ? கிடைப்பாருண்டோ? என்று

இன்னமும் நாக்கு நீட்டிக்கிளர்ந்து செல்லுகின்றன – என்றும் கருத்தாகும்.

————-

இருந்தேன் இரு வினைப் பாசம் கழற்றி இன்றி யான் இறையும்

வருந்தேன் இனி யெம் இராமானுசன்,மன்னு மா மலர்த் தாள்

பொருந்தா நிலை யுடைப் புன்மையி னோர்க்கொன்றும் நன்மை செய்யாப்

பொருந் தேவரைப் பரவும், பெரியோர் தம் கழல் பிடித்தே.-62-

 

பதவுரை

எம் இராமாநுசன்

ஸ்வாமி எம்பெருமானாருடைய
மன்னா மா தாள் மலர் பொருந்தா நிலை உடை புன்மையினோர்க்கு

சிறந்த திருவடித் தாமரைகளில் சேராத ஸ்வபாவத்தை யுடையவர்களான  நீசர் களுக்கு
ஒன்றும் நன்மை செய்ய

ஒரு விதமான உபகாரமும் செய்யாத
பெரு தேவரை

பெரிய பெருமாளை போற்றுகின்ற
பெரியோர் தம்

ஆழ்வானாகிற மஹானாடைய
சுழல் இன்று பிடித்து

திருவடிகளை இன்று ஆச்ரயித்தேனான பின்பு
இரு வினை பாசம் கழற்றி இருந்தேன்

புண்ணியம் பாவமென்று இரண்டு வகையான கரும பாசங்களினின்று விடுபட்டவனானேன்;
யான்

இப்படி நிர்மலனாகப் பெற்ற அடியேன்
இனி இறையும் வருந்தேன்

இனிமேல் கொஞ்சங்கூட வருத்தப்பட்ட மாட்டேன்.

ஸ்ரீ ராமநுஜ பக்தர்களான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே ஸர்வ ஸ்வதாநம் பண்ண வல்ல பெரிய பெருமாளைப் போற்றா நின்ற கூரத்தாழவானை அடைந்து உஜ்ஜீவித்த அடியேனுக்கு இனி ஒரு வருத்தமும் விளையக் காரணமில்லை யென்று தம்முடைய க்ருதக்ருத்யத்வத்தைக் கூறினாராயிற்று.

இருவினைப் பாசங்கழற்றி = பாவம் போலலே புண்ணியமும் பர கதிக்குப் பிரதிபந்தகம் என்பதை உணர்க.

பாவம் இரும்பு விலங்கென்றும் புண்ணியம் பொன் விலங்கென்றும் சாஸ்திரங்கள் கூறும்.

————–

பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கிய சீர்

அடியைத் தொடரும் படி நல்க வேண்டும் அறு சமயச்

செடியைத் தொடரும் மருள் செறிந் தோர் சிதைந் தோட வந்திப்

படியைத் தொடரும் இராமா னுச! மிக்க பண்டிதனே!–63-

 

பதவுரை

அறு சமயம் செடியை தொடரும் மருள் செறிந்தோர்

பாஹ்யமான ஆறு மதங்களாகிற தூறுகளிலே படிவதற்குக் காரணமான அவிவேகம் நிறைந்த மூடர்கள்
சிதைந்து ஒட

பங்கமடைந்து வெருவி ஒடும்படியாக
வந்து இப் படியை தொடரும்

இப் பூமியிலே வந்து அவதரித்து (நம்போல் வாரை விஷயீ கரிப்பதற்குப்) பின் தொடர்கின்ற
மிக்க பண்டிதன்

மஹா பண்டிதரான
இராமாநுச

எம்பெருமானாரே!,
பிடியை தொடரும் களிறென்ன யான்

யானைப் பேடையைப் பின் பற்றித் திரிகின்ற ஆண் யானை போல
யான்

அடியேன்
சீர்  பிறங்கிய உன் அடியை தொடரும்படி நல்க வேண்டும்

ஸௌந்தரியம் முதலிய குணங்கள் விளங்குகின்ற தேவரீரது திருவடிகளைப் பின் பற்றும்படி கிருபை செய்தருள வேணும்.

ஸ்வாமி! யானை யானது தன் பேடையினிடத்துப் பெருங்காதல் கொண்டு அதனையே பின் பிற்றித் திரிவது போல் அடியேன் தேவரீருடைய அழகிய திருவடிகளையே அளவற்ற அபிநிவேசத் தோடு அநுவர்த்தித்துச் செல்லும்படியாக அருள் புரிய வேணுமென்று வேண்டினாராயிற்று.

————-

பண்டரு மாறன் பசுந் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்

விண்டிட எங்கள் இராமா னுச முனி வேழம் மெய்ம்மை

கொண்ட நல் வேதக் கொழுந் தண்ட மேந்திக் குவலயத்தே

மண்டி வந் தேன்றது வாதியர் காள்! உங்கள் வாழ்வற்றதே.–64-

 

பதவுரை

எங்கள் இராமநுச முனி வேழம்

எங்களுக்கு விதேயமான ஸ்ரீராமாநுஜ முனியாகின்ற மத்த கஜமானது.
மாறன்

நம்மாழ்வார்
பண்

இசைகளாலே
தரு

அருளிச் செய்த
பசுந்தமிழ் ஆனந்தம்

செந்தமிழான திருவாய்மொழியில் விளைந்த ஸந்தோஷம்
பாய் மதம் ஆய் விண்டிட

பெருகு மத நீராக ஒழுகப் பெற்று
மெய்ம்மைகொண்ட நல்வேதம் கொழு தண்டம் எந்தி

ஸத்திய வாதியான நல்ல வேதமாகிற பெரிய தடியைத் தூக்கிக் கொண்டு
குவலயத்தே

இப் பூ மண்டலத்திலே
மணடி வந்து என்றது

உங்களுடைய பிழைப்பு
உங்கள் வாழ்வு அற்றது

உங்களுடைய பிழைப்பு போயிற்று

குத்ஹித வாதங்கள் பண்ணுகிற துர்வாதிகளே! இனி நீங்கள் பிழைக்க வழியில்லை யென்று நிச்சயித்துக் கொள்ளுங்கள்;

ஏன் என்கிறீர்களோ; எம்பெருமானாரென்னும் ஒரு மதயானை யானது உங்களைப் புடைப்பதாகப் பெரிய தடியை யெடுத்துக்கொண்டு எதிரிட்டு வாரா நின்றது; இதற்குத் தப்பிப் பிழைக்க உங்களாலாகாது-என்கிறார்.

யானைக்கு மதநீர் பெருகுமே; இந்த ஸ்ரீராமாநுஜ கஜராஜனாக்கு எது மதநீர் என்ன; முதலடியிற் கூறுகிறார்.

திருவாய் மொழியின் அறுபவத்தாலுண்டான ஆநந்தஸேமே இந்த கஜராஜனாக்கு மதநீர்ப் பெருக்காம்.

இதனால்,எம்பெருமானார் எப்போதும் திருவாய் மொழியை அநுபவித்துக் களிப்புறுவர் என்றதாகிறது.

—————–

வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர் தம்

தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது, தத்துவ நூல்

கூழற்றது குற்ற மெல்லாம் பதித்த குணத்தினர்க்கந்

நாழற்றது, நம் இராமா னுசந் தந்த ஞானத்திலே.–65-

 

பதவுரை

நம் இராமாநுசன்

ஸ்வாமி எம்பெருமானார்
தந்க ஞானத்தில்

அருளின ஞானத்தினால் துர்வாதிகளுக்கு வாழ்ச்சி அற்றுப் போயிற்று;
மறையவர் தம் தாழ்வு

வைதிகர்களுடைய குறை
என்றும் அற்றது

இனி ஒருநாளும் இல்லாதபடி யாயிற்று
தாரணி

பூ மண்டவமானது
தவம் பெற்றது

பாக்கியம் பெற்றது;
தத்துவம் நூல்

தத்வ பரமான சாஸ்திரங்கள்
கூழ் அற்றது

ஸந்தேஹமற நிச்சயமான பொருளைத் தெரிவிப்பவை யாயின;
குற்றம் எல்லாம்பதித்த குணத்கினார்க்கு

பலவகைக் குற்றங்களும் நிறைந்த ஸ்வபாவத்தை யுடைய ஜனங்களுக்கு
ஆ நாழ் அற்றது

அந்தக் குற்றங்கள் தீர்ந்தன;

எம்பெருமானார் இவ்வுலகில் அவதரித்து உபதேசாதி முகத்தாலே உண்டாக்கின தத்துவ ஞானத்தால் பலித்த அம்சங்கள் எவை யென்றால்; துர்வாதிகளுடைய வாழ்வு மாண்டது;

வைதிகர்களுக்கு இருந்த ஸங்கடங்கள் அற்றுப்போயின;

பூமண்டலம் மஹாபாக்கம் பெற்றது;

தத்வ சாஸ்த்ரங்களில் எவ்விதமான ஸந்தேஹமும்  உண்டாகாதபடி நிச்சய ஞானமே உண்டாயிற்று;

பாவிகளின் பாவங்களெல்லாம் தொலைந்துபோயின;

ஆகிய இவை எம்பெருமானாரருளித்த தத்துவஞானத்தின் பயனாகத் தேறினவை – என்றாராயிற்று.

தொல்லைவாதியர் = வைதிகர்தாம் அநாதியாகவுள்ளவர்;

துர்வாதிகளும் அநாதியாக உண்டோவெனில்;

பயிருள்ளபோதே தொடங்கிக் களையுமுண்டாவதுபோல, பாஹ்யர் குக்ருஷ்டிகள் என்கிற வாதிகளும் பழையராகவே யுண்டென்க.

தரணி என்ற வடசொல் தாரணியென நீட்டல் விகாரம் பெற்றது.

கூழ்-ஸந்தேஹம் நாழ் – குற்றம்.

———-

ஞானம் கனிந்த நலங் கொண்டு நாடொரும் நைபவர்க்கு

வானம் கொடுப்பது மாதவன் வல் வினையேன் மனத்தில்

ஈனம் கடிந்த இராமா னுசன் தன்னை எய்தினர்க்குத்

தானம் கொடுப்பது தன் தக வென்னும் சரண் கொடுத்தே.–66-

 

பதவுரை

மாதவன்

திருமால்
வானம் கொடுப்பது

மோக்ஷம் அளிப்பது

(எப்படிப் பட்டவர்களுக்கு கென்றால்)

ஞானம்  கனிந்த நலம் கொண்டு நாள் தொறும் நைபவர்க்கு

ஞானம் பக்தி ரூபமாகப் பரீபக்வமாகி அந்த பக்தியினால் நித்யம் உருகுகிறவர்களுக்கேயாம்;
வல் வினையேன் மனத்தில் ஈனம் கடிந்த இராமாநுசன்

மஹா பாபியான எனது ஹ்ருதயத்திலிருந்த கல்மஷங்களைப் போக்கடித்த எம்பெருமானார்
தன்னை எய்தினர்க்கு

தம்மைப் பற்றினவர்களுக்கு
அத் தானம் கொடுப்பது

அந்த மோக்ஷ ஸ்தானத்தை அளிப்பது
(எவ்விதமாக வென்றால்)

 
தன் தகவு என்னும் சரன் கொடுத்து

தம்முடைய க்ருபையாகிற ஸாதனத்தை (அவர்களுக்குக் கைம் முதலாகக் கொடுத்து (தமது திவ்ய க்ருபையாலே)

 

அடியார்களுக்கு மோக்ஷமளிக்கிற அதிகாரம் எம்பெருமானாக்குமுண்டு, எம்பெருமானார்க்கு முண்டு.

எம்பெருமான் அளிப்பது மிகவும் ச்ரமப்படுத்தியே;

எம்பெருமானார் அளிப்பது கேவலம் தம்முடைய திருவருளாலே என்கிறார் இதில்.

ஞானமாது நன்றாகக் கனிந்து அது பக்தி பரமபக்தி பரமபக்தி என்னும்படியான அவஸ்தை களையடைந்து,

அதனால் இந்த ஸம்ஸாரத்தில் க்ஷணகால மிருப்பதும் அஸஹ்யமாய் ஆழ்வார்களைப்போல

“{ஒரு பகலாயிணரமூழியாலோ’ என்று துடிப்பவர்களுக்குத்தான்; எம்பெருமான் முக்தியளிப்பது;

எம்பெருமானாரோ வென்னில் –

க்ருபா மாத்ர ப்ரஸந்நாசார்யராகையாலே அடியார்களிடத்தில் எவ்விதமான க்லேசத்தையும் எதிர்பாராமல்

தமது திருவருளைக் கொண்டே அவர்களைக் கயரயேற்றுவர் என்றதாயிற்று.

வல்வினையேன் மனத்திலீனங்கடிந்த என்பதற்கு – மாதவனை அடி பணிந்து வருந்துகையாகிற ஈனத்தை எனக்குத் தவிர்த்த எம்பெருமானார் என்று உரைக்கவுமாம்.

——–

சரணம் அடைந்த தருமனுக்காப் ,பண்டு நூற்றுவரை

மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த

கரணவை யுமக் கன்றென்றி ராமா னுச னுயிர்கட்கு

அரணங் கமைத்திலனேல், அரணார் மற்றிவ் வாருயிர்க்கே?–67-

 

பதவுரை

சரணம் அடைந்த தருமனாக்கு ஆ

தன்னைச் சரணம் பற்றின தர்ம புத்ரருக்காக
பண்டு

முற் காலத்திலே
நூற்றுவரை

துரியோதனன் முதலிய நூறு பேர்களை
மரணம் அடைவித்த மாயவன்

சாகும்படி செய்த எம்பெருமான்
தன்னை வணங்க வைத்த கரணம் இவை

தன்னை வழிபடுவதற்காகவே எற்படுத்தி வைத்த இந்திரியங்களாம் இவை;
உமக்கு அன்று

உங்களுக்கு உரிமைப் பட்டவையல்ல;
என்று

என்று இவ்வாறாக உபதேசித்து
இராமாநுசன்

எம்பெருமானார்
உயிர்கட்கு

ஆத்மாக்களுக்கு
அரன் அமைத்திலனேல்

ரக்ஷையைக் கற்பித்தில ராகில்
,ஆர் உயிர்க்கு

இந்த அருமையான ஆத்மாக்களுக்கு
மற்று அரண் ஆர்

வேறு ரஷகராவார் ஆர்? (ஆருமில்லை.)

——————

ஆரெனக் கின்று நிகர் சொல்லில் மாயனன் றைவர்த் தெய்வத்

தேரினிற் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்

பாரினிற் சொன்ன இராமா னுசனைப் பணியும் நல்லோர்

சீரினிற் சென்று பணிந்தது, என்னாவியும் சிந்தையுமே.–68-

 

பதவுரை

மாயன்

ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடைய எம்பெருமான்
அன்று

முற் காலத்தில்
ஐயர்

பஞ்ச பாண்டவர்களுடைய
தெய்வம் தேரினில்

தெய்வத் தன்மை பொருந்திய தேரின் மீது (இருந்து கொண்டு)
செப்பிய

அருளிச் செய்த
கீதையின்

பகவத் கீதையினுடைய
செம்மை பொருள்

ஸ்வ ரஸமான அர்த்தத்தை
தெரிய

(அனைவரும் எளிதாகத்)தெரிந்து கொள்ளும் படி
பாரினில்

இப் பூமிலே
சொன்ன

(கீதா பாஷ்ய முகத்தாலே) அருளிச் செய்த
இராமாநுசனை

எம்பெருமானாரை
பணியும்

ஆச்ரயித்திருக்கும்
நல்லோர்

விலக்ஷண புருஷர்களுடைய
சீரினில்

கல்யாண குணங்களிலே
என் ஆவியும் சிந்தையும்

எனது ஆத்மாவும் மநஸ்ஸூம்
சென்று பணிந்தது

சென்று சேர்ந்து விட்டன;
சொல்லில்

சொல்லுமளவில்
இன்று

இக் காலத்தில்
எனக்கு ஆர் நிகர்

எனக்கு ஆர் ஒப்பாவார்?

———————-

சிந்தையி னோடு கரணங்கள் யாவும் சிதைந்து, முன்னாள்

அந்த முற் றாழ்ந்தது கண்டு,இவை என்றனக் கன்றருளால்

தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து

எந்தை இராமானுசன் வந் தெடுத்தனன் இன்றென்னையே.–69-

 

பதவுரை

முன் நாள்

ஸ்ருஷ்டிருக்கு முற் காலத்தில்
சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து

சிந்தையும் இந்திரியங்களு மெல்லாம் அழிந்து
அந்தம் உற்று ஆழ்ந்தது கண்டு

உப ஸம்ஹாரத்தை யடைந்து அசேதந ப்ராயமா யிருப்பதைப் பார்த்து
என் தனக்கு

(அப்படி அசேதந ப்ராயராய்க் கிடந்தவாகளில் ஒருவனான) எனக்கு
அவை

அந்த சரண களேபரங்களை
அன்று

அக் காலத்தில்
அருளால் தந்த அரங்கனும்

க்ருபையாலே உண்டாக்கின எம்பெருமானும்
தன்  சரண் தந்திலன்

தனது திருவடிகளைக் காட்டிக் கொடுத்து உஜ்ஜீவிப்பிக்கவில்லை;

(அக் குறை நீங்க)

எந்தை இராமாநுசன்

ஸ்வாமி எம்பெருமானார்
தான் வந்து

தாமாகவே வந்து
அது தந்து

அந்தத் திருவடிகளைத் தந்தருளி
இன்று என்னை எடுத்தனன்

இன்று என்னை ஸம்ஸாரத்தில் நின்றும் உத்தரிப்பித்தார்.

—————

என்னையும் பார்த்தென் இயல்வையும் பார்த்து,எண்ணில் பல் குணத்த

உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் அன்றி யென்பால்

பின்னையும் பார்க்கில் நலமுளதே?உன் பெருங்கருணை

தன்னை யென் பார்ப்பர் இராமானுச! உன்னைச் சார்ந்தவரே?–70-

 

பதவுரை

இராமா நுச

எம்பெருமானாரே!
என்னையும் பார்த்து

(ஒரு குணமில்லாமல் குற்றமே நிறைந்திருக்கிற) என்னையும் நோக்கி
என் இயல்வையும் பார்த்து

(இனி மேலும் எவ்வித நன்மையும் ஸம்பாதித்துக் கொள்ள முடியாமலிருக்கிற) என்னுடைய தன்மையையும் நோக்கி
எண இல் பல் குணத்த உன்னையும் பார்க்கில்

எண்ணிறந்த பல திருக் குணங்களை யுடைய தேவரீரையும் நோக்கு மளவில்
அருள் செய்வதே நலம்

(இப்போது – எப்போதும்) அருள் செய் திருப்பதே நல்லது;
அன்றி

இதுவொழிய மேலும் ஆராயுமளவில்
என் பால் நலம் உளதே

என்னிடத்தில் ஏதாவது நன்மை யுண்டோ? (சிறிதும் இல்லை)

(நன்மையொன்று மில்லாவிடில் நாம் அருள் செய்யலாகாதென்று திருவுள்ளம் பற்றினால்)

உன்னை சார்ந்தவர்

தேவரீரை ஆச்ரயித்தவர்கள்
உன் பெரு கருணை தன்னை என் பார்ப்பர்

தேவரீருடைய கிருபையைப் பற்றி என்ன நினைப்பர்கள்?) இளப்பமாக நினையார்களோ.)

—————-

சார்ந்த தென் சிந்தை யுன் தாளிணைக் கீழ், அன்பு தான் மிகவும்

கூர்ந்த தத் தாமரைத் தாள்களுக்கு உன் றன் குணங்களுக்கே

தீர்ந்த தென் செய்கை முன் செய் வினை நீ செய் வினையதனால்

பேர்ந்தது வண்மை இராமானுச! எம் பெருந் தகையே.–71-

 

பதவுரை

வண்மை

ஔதார்ய முடையரும்
எம்

எமக்கு ஸ்வாமியும்
பெரு தகை

பெருந்தன்மை யுடையருமான
இராமாநுசா

எம்பெருமானாரே! எனது நெஞ்சு
உன் தாள் இணை கீழ் சார்ந்தது அன்புதான்

தேவரீருடைய உபய பாதங்தளின் கீழ் அமர்ந்து விட்டது பக்தியும்
அத் தாமரை தாள்களுக்கு

அந்தத் திருவடித் தாமரைகள் விஷயத்திலேயே
மிகவும் கூர்ந்தது

மிகவும் அதிகரித்தது.
என் செய்கை

எனது செயலும்
உன் தன் குணங்களுக்கே தீர்ந்தது

தேவரீருடைய திருக் குணங்களுக்கே அற்றுத் தீர்ந்தது;
முன் செய் வினை

முன்னே செய்த பாவங்களெல்லாம்
நீ செய் வினை அதனால் பேர்ந்தது

தேவரீர் செய்தருளின் (கடாக்ஷமாகிற) காரியத்தாலே தொலைந்து போயின.

——-

——–

கைத்தனன் தீய சமயக் கலகரைக் காசினிக்கே

உய்த்தனன் தூய மறை நெறி தன்னை,என்றுன்னி யுள்ளம்

நெய்த்தவன் போடிருந் தேத்தும் நிறை புக ழோருடனே

வைத்தனன் என்னை இராமானுசன் மிக்க வண்மை செய்தே.–72-

 

பதவுரை

இராமாநுசன்

எம்பெருமானார்
மிக்க வண்மை செய்து

தமது ஒளதார்ய குணத்தை அதிகமாகக் காட்டி,
தீய சமயம கலகரை

தீய மதங்களிலிருந்து கொண்டு கலஹஞ் செய்கிறவர்களை
கைத்தனன்

ஒழித்து விட்டார்;
தூய

பரிசுத்தமான
முறை நெறி தன்னை

வேத மார்க்கத்தை
காசினிக்கு உய்த்தனன்

பூமியிலே ஸ்தாபித்தருளினார்;
என்று உன்னி

என்று அநுஸந்தித்து
உள்ளம் நெய்த்து

நெஞ்சு கனிந்து
அவ் வன்போடு இருந்து

அந்த ப்ரிதியோடே கூடியிருந்து
ஏத்தும்

(அவரை) ஸ்தோத்ரம் பண்ணுகிற
நிறை புகழோருடனே

புகழ் நிறைந்த மஹான்களோடே
என்னை வைத்தனன்

(என்னையும் ஒருவனாக எண்ணும்படி) என்னை வைத்தருளினார்.
நிறை புகழோருடனே வைத்தனன்:

அஸத்தக்களோடே பழகிக் கிடந்த என்னை ஸத்துக்களோட கூட்டி வைத்தார் என்னவுமாம்.

————–

வண்மையினாலுந் தன் மாதக வாலும் மதி புரையும்

தண்மையி னாலு மித் தாரணி யோர்கட்குத் தான்  சரணாய்

உண்மை நன் ஞானம் உரைத்த இராமா னுசனை யுன்னும்

திண்மை யல் லாலெனக் கில்லை, மற்றோர் நிலை தேர்ந்திடிலே.–73-

 

பதவுரை

தன் வண்மையினாலும்

தம்முடைய ஔதார்ய குணத்தாலும்
மா தகவாலும்

பரம க்குபையாலும்
மதி புரையும் தண்மையினாலும்

சந்திரனை யொத்த திருவுள்ளக் குளிர்ச்சியாலும்
இத் தரணியோர்கட்கு

இப் பூமியிலுள்ளவர்களுக்கு தாமே ரஷகராய்க் கொண்டு
உண்மை நல் ஞானம் உரைத்த இராமாநுசனை

யதார்த்தமாய் விலக்ஷணமான ஞானத்தை உப தேசிக்கிற எம்பெருமானாரை
உன்னும் திண்மை அல்லால்

சிந்திப்பதாகிற அத்யவஸாய மொன்று தவிர
தேர்ந்திடில்

ஆராயமளவில்
எனக்கு மற்று ஒர் நிலை இல்லை

அடியேனுக்கு வேறெரு அத்யவஸாய மில்லை.

————-

தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக்

கூராழி கொண்டு குறைப்பது கொண்டல் அனைய வண்மை

ஏரார் குணத் தெம் இராமா னுசனவ் வெழில் மறையில்

சேராதவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே.–74-

 

பதவுரை

மறையின்  திறம் தேரார் என்று

(இப் பாலிகள்) வேதஞ் சொல்லிகிற வழியை நிரூபித்திகிற தில்லையென்று
தீயவரை

பாவிகளை
மாயவன்

எம்பெருமான்
குறைப்பது

தண்டிப்பது
கூர் ஆழி கொண்டு

கூர்மையான தனது திருவாழியாலே;
கொண்டல் அனையவண் மை

மேகம் போன்ற ஔதார்ய குண முடையவரும்
ஏர் ஆர் குணத்து

(மற்றும்) பல நல்ல குணங்களுடையவருமான
எம் இராமாநுசன்

ஸ்வாமி எம்பெருமானார்
அ எழில் மறையில் சேராதவரை சிதைப்பது

அந்த சிறந்த வேதத்தில் அந்வயியாதவர்களே பங்கப் படுத்துவது (எப்படி யென்றால்)

எம்பெருமான் தனது ஆஜ்ஞா ரூபமான வேதங்களின் கட்டளைப்படி நடவாத கொடியவர்களைத் தனது திருவாழியைக் கொண்டு த்வம்ஸம் பண்ணிவிடுவன்;

எம்பெருமானாரோவென்னில் அவ்வளவு ஆயாஸம் எடுத்துக்கொள்வதில்லை;

வேதங்களை அடியோடு ஒப்புக்கொள்ளாத பாஹ்யர்களையும்,

வேதங்களைப் பிரமாணமாக ஒப்புக்கொண்டு அவற்றில் அபார்த்தங்களைப் பண்ணுகிற குத்ருஷ்டிகளையும்

வாதப் போரில் அப்போதப்போது திரு வுள்ளத்தில் ஸ்புரிக்கின்ற நல்ல யுக்கிகளைக் கொண்டு கண்டித்து விடுவர் என்கை.

————

செய்த்  தலைச் சங்கம் செழு முத்தம் ஈனும் திருவரங்கர்

கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி, நங் கண் முகப்பே

மெய்த்தலைத் துன்னை விடேனென் றிருக்கிலும் நின் புகழே

மொய்த் தலைக்கும் வந்து இராமா னுச! என்னை முற்று நின்றே.–75-

 

பதவுரை

செய் தலை

வயல்களில்
சங்கம்

சங்குகளானவை
செழு திரு முத்தம்

அழகிய முத்துக்களை
ஈனும் திரு அரங்கர்

உண்டாக்கு மிடமான திருவரங்க மா நகரில் எழுந்தருளி யிருக்கும் பெருமாள்
கைத்தலத்து

தமது திருக் கையிலே
ஆழியும் சங்கமும் எந்தி

திருவாழி திருக்கையிலே தரித்துக் கொண்டு
நம் கண் முகப்பே

நமது கண்ணெதிரில்
மொய்த்து

வந்து நெருங்கி
அலைத்து

புத்தியைக் கெடுத்து
உண்னை விடேன் என்று இருக்கிலும்

உன்னை விட மாட்டேன் என்று இருந்தாலும்
இராமாநுசா

எம்பெருமானரே
நின் புகழே

தேவரீருடைய திவ்ய குணங்களே
என்னை வந்து முற்றம் மொய்த்து  நின்று

என் பக்கல் வந்து சூழ்ந்து கொண்டு
அலைக்கும்

ஆகர்ஷிக்கின்றன

எம்பெருமான் தனது விலக்ஷணமான அழகைக் காட்டிக் கொண்டு வந்து என் கண்னெதிரே நின்றாலும்,

என்னை விடாதே வலியப் பற்றினாலும் அவனது அழகில் நான் மோஹிக்கப் பெறுவதில்லை;

தேவரீருடைய திருக் குணங்களே என்னை ஈடுபடுத்துகின்றன

பகவத் குணங்களை நான் ஈடுபடுவதில்லை;

தேவருடைய திருக் குணங்களே என்னை ஈடுபடுத்துகின்றன.

பகவத் குணங்களுக்கு நான் ஈடுபடுவதில்லை யென்றாராயிற்று.

“செய்த் தலைச் சங்கம் செழு முத்தம் ஈனும்” என்கிற விசேஷணம்-திருவரங்கர் என்பதன் பகுதியாகிய திருவரங்கத்தில் அந்வயிக்கும்.

திருவரங்கம் எப்படிப்பட்டதென்றால், முத்துக்களை யுதிர்க்கும் சங்குகள் நிறைந்த வயல் சூழ்ந்தது என்றவாறு.

ஈனுதல்-பிரஸவித்தல்.

———–

நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும்,நிறை வேங்கடப் பொற்

குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்

உன்றனக் கெத்தனை இன்பந் தரும் உன் இணை மலர்த்தாள்

என்றனக் கும் அது,இராமா னுச! இவை யீந்தருளே.–76-

 

பதவுரை

இராமாநுச

எம்பெருமானாரே!
நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை

நிலை நின்ற பெரும் புகழும் அதிகமான நீர்ப் பெருக்கும் நிறைந்துள்ள
வேங்கடம் பொன் குன்றமும்

திருவேங்கட மென்னும் அழகிய திருமலையும்
வைகுந்தம் நாடும்

ஸ்ரீ வைகுண்டமாகிய திருநாடும்
குவலிய பால் கடலும்

கொண்டாடத் தக்க திருப் பாற் கடலும்
உன் தனக்கு

தேவரீருக்கு
எத்தனை இன்பம் தரும்

எவ்வளவு ஆநந்த்தை விளைக்குமோ
உன் இணை மலர் தாள்

தேவரீருடைய உபய பாதாரவிந்தங்கள்
என் தனக்கும் அது

எனக்கும் அவ்வளவு ஆநந்தத்தை யுண்டாக்கும்;
இவை

இப்படிப்பட்ட திருவடிகளை.
ஈந்தருள்

அடியேனுக்குத் தந்தருள வேணும்.

கீழ்ப்பாட்டில் அமுதனார்  விளக்கிய பரமபக்தியை அறிந்த எம்பெருமனார் மிகவும் உகந்தருளி

‘இவருக்கு நாம் எதை செய்வோம்’ என்றிருப்பதாகக் கண்ட அமுதனார்,

ஸ்வாமிந்! அடியேனுக்கு தேவரீர் வேறொன்றும் செய்தருள வேண்டர்

அடியேனுக்கு ஸர்வஸ்மாகிய இந்தத் திருவடித் தாமரைகளைச் தந்தருள வேண்டுமத்தனை யென்கிறார்.

———–

ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக் குறும்பைப்

பாய்ந்தனன் அம் மறைப் பல் பொருளால்,இப்படிய னைத்தும்

ஏய்ந்தனன் கீர்த்தியினா லென் வினைகளை வேர் பறியக்

காய்ந்தனன் வண்மை இராமா னுசற் கென் கருத்தினியே?–77-

 

பதவுரை

ஈயாத

(இதற்கு முன்பு ஒருவர்க்கும்) அருளாத
இன் அருள்

விலக்ஷணமான க்ருபையை
ஈந்தனன்

அடியேனுக்குச் செய்தருளின வரும்
எண் இல் மறை குறும்பை

எண்ணிறந்த      வேத விரோதி மதங்களை
அம் மறை பல் பொருளால் பாய்ந்தனன்

அந்த வேதங்களின் அர்த்தங்களையே கொண்டு கண்டித்தவரும்
கீர்த்தியினால்

தமது கீர்த்தியாலே
இப்படி அனைத்தும் ஏய்ந்தனன்

இப் பூமி யெங்கும் வியாபித்தவரும்
என் வினைகளை

எனது கருமங்களை
வேர் பறிய காய்ந்தனன்

வேரோடே அரும் படி போக்கினவரும்
வண்மை

ஔதார்யமே வடிவு கொண்ட வருமான
இராமாநுசற்கு

எம்பெருமானார்க்கு
இனி என் கருத்து

இன்னமும் (செய்யத் தக்கதாகத்) திருவுள்ளத்தில் ஏதேனா முண்டோ?

கீழ்ப் பாட்டில் தாம் அபேக்ஷித்தபடியே திருவருளைத் தந்தருளப் பெற்று, க்ருத க்ருத்ய ராய், அவர் செய்தருளின உபகாரங்களை அநுஸந்தித்து, இவை யெல்லாம் செய்த பின்பு இன்னமும் செய்தருள்வதாகத் திருவுள்ளம் பற்றிருப்பது எதுவோ என்கிறார்.

மறைக்குறும்பாவது- வேதத்திற்கு மாறாகச் சொல்லும் தப்புப் பொருள்கள்.

ஈந்தனன் பாய்த்தனன், எய்ந்தன், காய்ந்தனன், என்பவற்றை வினை முற்றாகலே கொண்டு உரைத்தலுமாம்.

————-

கருத்திற் புகுந்துள்ளிற் கள்ளம் கழற்றிக் கருதரிய

வருத்தத்தி னால் மிக வஞ்சித்து நீ யிந்த மண்ணகத்தே

திருத்தித் திருமகள் கேள்வனுக் காக்கிய பின்னென்னெஞ்சில்

பொருத்தப் படாது, எம் இராமா னுச! மற்றோர் பொய்ப் பொருளே.–78-

 

பதவுரை

எம் இராமாநுச

எம்பெருமானைரை!
நீ

தேவரீர்
கருத அரிய வருத்தத்தினால் மிக வஞ்சித்து

நெஞ்சால் நினைக்க முடியாத பரிச் ரமங்கள் பட்டு என்னை நன்றாக ஏமாத்தி
கருத்தில் புகுந்து

(எனது) நெஞ்சிலே வந்து புகுந்து
உள்ளில் கள்ளம் கழற்றி

உள்ளே யிருந்த ஆத்மாப ஹார தோஷத்தைப் போக்கி
திருத்தி

சிக்ஷித்து
இந்த மண் அகத்தே

இந்த லோகத்திலே
திருமகள்  கேள்வனுக்கு

திருமாலுக்கு ஆளாம்படி
ஆக்கிய பின்

பண்ணிண பின்பு
மற்று ஒர் பொய்

(இதற்கு மாறான ) வேறு எந்த தப்பு விஷயமும்
பொருள் என் நெஞ்சில்

என் மனத்தில்
பொருத்தப் படாது

பொருந்த மாட்டாது.

எம்பெருமானார் தம்மைத் திருத்துகைக்காகப் பட்ட பாடுகளை எடுத்துச் சொல்லி,

இப்படி என்னைத் திருத்தி உத்தேச்யமான விஷயத்திலே ஆட்படுத்தின பின்பு

இனி வேறு எந்த விஷயமும் என்னெஞ்சுக்கு இசையமாட்டாதென்கிறார்.

————

பொய்யைச் சுரக்கும் பொருளைத் துறந்து,இந்தப் பூதலத்தே

மெய்மைப் புரக்கும் இராமா னுசன் நிற்க, வேறு நம்மை

உய்யக் கொள வல்ல தெய்வமிங் கியாதென் றுலர்ந்தவமே

ஐயப் படா நிற்பர் வையத்துள்ளோர் நல் லறிவிழந்தே.–79-

 

பதவுரை

பொய்யை சுரக்கும் பொருளை துரந்து

பொய்யான விஷயத்தையே மேன் மேலும் வெளிப் படுத்துகிற (புற மதத்தவர்களின) அர்த்தங்களைக் கண்டித்து
இந்த பூதலத்தே

இப் பூமியிலே
மெய்யை புரக்கும்

ஸத்யத்தை ரக்ஷிக்கிற
இராமாநுசன்

எம்பெருமானார்
நிற்க

எழுந்தருளி யிருக்கும் போது

(இவரைக் கணிசியாமல்)

வையத்து உள்ளோர்

இப் பூமியிலுள்ளவர்கள்
நம்மை உய்யக் கொள்ள வல்ல

நம்மை உஜ்ஜீவிக்கச் செய்யக் கூடிய
வேறு தெய்வம் இங்கு யாது என்று

வேறு எதாவது தேவதை இவ்வுலகில் உண்டோ என்று விசரித்துக் (கொண்டு)
உலர்ந்து

மன வருத்தத்தாலே உடம்பு உலர்ந்து
நல் அறிவு இழந்தே

(எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்றிருக்கையாகிற) நல்ல ஞானம் பெறாமல்
அவமே

வீணாக
ஐயம் படா நிற்பர்

ஸம்சயப் படா நின்றார்கள் ஐயா!

பொய்யைச் சுரக்கும் பொருள் என்றது -பொய் தவிர வேறில்லாத அர்த்தம் என்றபடி

“ஸர்வம்அஸத்யம்” என்கிறாவர்களாகையாலே அஸத்யமயம்.

மெய்யைப் புரக்கு மிராமாநுசன் = “யதார்த்தம் ஸர்வ விஜ்ஞாநம்” என்று ஸ்தாபித்தருளினவர்.

புரத்தல்- காப்பாற்றுதல்.

————-

நல்லார் பரவும் இராமா னுசன்,திரு நாமம் நம்ப

வல்லார் திறத்தை மறவாதவர்கள் எவர், அவர்க்கே

எல்லா விடத்திலும்  என்றுமெப் போதிலும் எத் தொழும்பும்

சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே.–80-

 

பதவுரை

நல்லார் பரவும் இராமாநுசன்

ஸத்துக்களாலே கொண்டாடப் படுகிற எம் பெருமானாருடைய
திரு நாமம்

திரு நாமத்தை
நம்ப வல்லார் திறத்தை

(தங்களுக்குத் தஞ்சமாக நம்பி யிருக்க வல்லவர்களுடைய படிகளே
மறவாதவர்கள் எவர்

மறவாமல் எப்போதும் சிந்திப்பவர்கள் யாரோ,
அவர்க்கே

அப்படிப்பட்ட ஸ்ரீராமாநுஜ பக்த பக்தர்களுக்கே
எல்லா இடத்திலும்

ஸகல தேசங்களிலும்
என்றும்

ஸகல அவஸ்தைகளிலும்
எத் தொழும்பும்

ஸகலவித கைங்கரியங்களையும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால்

மன மொழி மெய்களென்னும் த்ரிகரணங்களாலும்
சோர்வு இன்றி செய்வன்

பிரியாதே யிருந்து செய்வேன்.

தம்முடைய நிலைநின்ற நிஷ்டையைப் பேசுகிறார் இதில்.

ஸத்துக்களனைவரும் கொண்டாடும்படியான எமபெருமானுடைய திருநாமங்களையே

தங்களுக்குத் தஞ்சமாக நம்பியிருக்கிற மஹான்களையே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கிற

ஸ்ரீராமாநுஜ பக்தபக்தர்களுக்கே அடியேன் –

ஒமிவில் காலமெல்லாம் உடனய் மன்னி வழுவிலா வடிமைகள் செய்யக்கடவே னென்றாராயிற்று.

தொழும்பு = அடிமை.

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி-34-56 -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்

July 4, 2022

நிலத்தைச் செறுத்துண்ணும் நீசக் கலியை, நினைப்பரிய

பலத்தைச் செறுத்தும் பிறங்கிய தில்லை, என்

புலத்தில் பொறித்த வப் புத்தகச் சும்மை பொறுக்கிய பின்

நலத்தைப் பொறுத்தது இராமா னுசன் றன் நயப் புகழே.–34-

 

பதவுரை

இராமாநுசன் தன்

எம்பெருமானாருடைய
நயம் புகழ்

கல்யாண குணங்களானவை
நிலத்தை செறுத்து உண்ணும் நீசம்

பூலோகத்தை ஹிம்ஹித்ததுத் தின்கிற நீசனான
கலியை

கலி புருஷனாடைய
நினைப்பு அரிய பலத்தை செறுத்தும்

இவ்வளவென்று நினை முடியாதபடி அளவற்றதான பராக்ரமதைத் தொலைத்த வளலும்
பிறங்கியது இல்லை

பிரகாசிக்கவில்லை;

(பின்னை எப்போது பிரகாசித்தன? என்னில்;)

என் பெய் வினை

என்னாலே செய்யப்பட்ட பாவங்களை
தென் புலத்தில்

யம லோகத்தில்
பொறித்த

எழுதிவைத்த
அப் புத்தகம் சும்மை

அந்த புஸ்தகக் கட்டுகளை
பொறுக்கிய பின்

கொளுத்தி விட்ட பின்பு
நலத்தை பொறுத்தது

விளக்கம் பெற்றன.

எம்பெருமானாருடைய ஞானம், சக்தி முதலிய திருக்கல்யாண குணங்கள் எப்போது பிரகாசித்தனவென்றால்,

இந்நிலவுலகத்தில் கலிபுருஷன் செங்கோல் செலுத்த முடியாதபடி அவனுடைய வலிமையைத் தொலைத்துக்

கிருதயுக தர்மமே எங்கும் நடைபெறும் படி செய்தருளினவாதே

“இவர் மஹா புருஷர்; அரிய பெரிய ஞான சக்திகனை யுடையவர்” என்று உலகத்தா ரனைவரும் போற்ற நேர்ந்ததனால்

கலியின் கொடுமையைக் கெடுத்தது காரணமாகவே இவருடைய திருக்கல்யாண குணங்கள்; நன்றாக விளங்கின – என்பர் சிலர்;

அது தகுதியல்ல;

கலிதோஷத்தைப் போக்கினவளவிலும் எம்பெருமானாடைய திருக்குணங்கள் பொலிவு பெறவில்லை.

பின்னை எப்போது பொலிவு பெற்றனவென்றால்,

எனது அளவற்ற பாவங்களை யெல்லாம் சிந்திர குப்தன் எழுதி வைத்திருந்த பெரிய புத்தகச் சுமையைக் கொளுத்தி விட்டு

என்னை நிஷ்கல்மஷனாக்கி அடிமைகொண்டாரென்ற விஷயம் வெளி வந்த பிறகு தான்

அவருடைய திருக்குணங்கள் ஆச்சரியமாக விளங்கின என்கிறார்.

இதனால் தம்முடைய பாவங்கள் ஸர்வசக் தனாலும் போக்க முடியாதவை என்பதும்,

கலியின் கொடுமையிற் காட்டிலும் கொடுமையிற் காட்டிலும் தமது கொடுமை வலிதாயிருந்ததென்பதும்,

இப்படி மஹா பாபிஷ்டாராயிருக்க தம்மை க்ஷமித்தருளி உஜ்ஜீவிக்கச் செய்தமையைக் கண்டு

உலகத்தாரனைவரும் ஆச்சரியப்பட்டார்க ளென்பதும் தெரிவிக்கப் பட்டன.

—————-

நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தைப்

புயலே எனக் கவி போற்றி செய்யேன், பொன் னரங்கமென்னில்

மயலே பெருகும் இராம னுசன் மன்னு மா மலர்த் தாள்

அயரேன் அருவினை என்னை யெவ்வா றின் றடர்ப்பதுவே?–35–

 

பதவுரை

ஒரு தெய்வம்

வேறொரு தெய்வத்தை
நயவேன்

விரும்ப மாட்டேன்
நால் நிலத்தே

இவ் வுலகில்
சில மானிடத்தை

சில நீச மனிதர்களைக் குறித்து
புயலே என

‘மேகம் போலே வர்க்ஷிக்கிற உதாரனே!’என்று அதிவாதமாகச்) சொல்லி
கவி போற்றி செய்யேன்

கவிகள் கட்டி ஸ்தோத்ரம் செய்ய மாட்டேன்;
பொன் அரஙகம் என்னில்

‘திருவரங்கம்’ என்று சொன்னவாறே
மயலே பெருகும்

அளவற்ற வயாமோஹத்தை யடைகின்ற
இராமாநுசன்

எம்பெருமானாருடைய
மன்னு மா  மலர் தாள்

பொருந்திய சிறந்த திருவடித் தாமரைகளை
அயரேன்

மறக்க மாட்டேன்;

(ஆன பின்பு)

அயரேன்

கொடிய பாவங்கள்
என்னை

என்னை
இன்று

இன்று முதலாக
எவ்வாறு அடர்ப்பது

எப்படி ஆக்ரமிக்கக் கூடும்?

—————–

அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன் றாரணச்சொல்

கடல் கொண்ட ஒண் பொருள் கண்டளிப்பப்,பின்னும் காசினியோர்

இடரின் கண் வீழ்ந்திடத் தானு மவ் வொண் பொருள் கொண்டவர் பின்

படரும் குணன், எம் இராமா னுசன்றன் படியிதுவே.–36-

 

பதவுரை

அடல் கொண்ட நேமியன்

(ஆச்ரித விரோதிகளை அழிக்க வல்ல) மிடுக்கையுடைய திருவாழியை ஏந்தினவனாய்
ஆர் உயிர் நாதன்

ஸகல ஆத்மாக்களுக்கும் சேஷியான எம்பெருமான்
அன்று

அர்ஜுனனுக்கு ஸாரதி யாயிருந்த வக் காலத்தில்
ஆரணச் சொல் கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப

வேதங்களாகிற கடலில் மறைந்து கிடந்த நல்ல அர்த்தங்களை ஆராய்ந்து கீதா மூலமாக) உபதேசிக்க
பின்னும்

அதற்குப் பின்பும்
காசினியோர்

பூமியிலுள்ளவர்கள்
இடரின் கண் வீழ்ந்திட

ஸம்ஸார துக்கத்தில் அழுந்திக் கிடக்க,
தானும்

(எம்பெருமானாராகிற தாமும்
அ வொண் பொருள் கொண்டு

(முன்பு ஸர்வேச்வரனருளிச் செய்த) அந்தச் சிறந்த அர்த்தங்களைக் கொண்டு
அவர் பின் படரும் குணன்

அந்த ஸர்ஸாரிகளைப்பின் எம்பெருமானாருடைய
படி இது

ஸ்வபாவம் இது.

முன்பு பகவான் பல சிறந்த அர்த்தங்களை ஸ்ரீ பகவத் கீதா முகத்தாலே வெளிப்படுத்தின வளவிலும் பாழும் ஸம்ஸாரிகள் அவ் வர்தங்களைத் தெரிந்து கொண்டு உஜ்ஜீவிக்க மாட்டாமல் மேன்மேலும் ஸம்ஸாரத்தையே பெருக்கிக்கொண்டு அதோ கதியை யடைந்து விடவே,

“ஐயோ! இப்படி நிந்ய ஸம் ஸாரிகளாய்க் கெட்டுப்போகிறார்களே!” என்று அநுதாபங்கொண்ட  எம்பெருமானார்

அந்த கீதா சாஸ்த் ரத்திலுள்ள பொருள்களையே விளங்க உரைத்துக் கொண்டு,

இது கேட்டுத் திருந்துவார் ஆரேனு முண்டோ? என்று ஸம்ஸாரிகளைப் பின் தொடர்ந்து செல்லுகிறார்;

நம்மைப் பெறுகற்கு அவர் தாமே முயற்சி செய்துகொண்டு – ஆள் பார்த்து உழிதருகின்றார்;

இந்தக் திருக்குணம் உங்களுக்குப் தெரிய வில்லையா? என்கிறார்.

தானும் அவ் வொண் பொருள் கொண்டு = கீதா பாஷ்யம் அருளிச் செய்து என்று கருத்து

திருக்கோட்டியூர்  நம்பி பக்கலிலே சரம ச்லோகார்த்தத்தை ஏகாந்தமாகக் கேட்டு அதனை யெல்லாரு மறிந்து உஜ்ஜீவிக்குமாறு கோபுரத்தின் மேலேறி விளம்பரப்படுத்தின திருக் குணத்தை இப்பாட்டில் பேசுகின்றாரென்னவுமாம்.

————–

படி கொண்ட கீர்த்தி இராமாயண மென்னும் பத்தி வெள்ளம்

குடி கொண்ட கோயில் இராமா னுசன் குணங் கூறும், அன்பர்

கடி கொண்ட மா மாலர்த் தாள் கலந் துள்ளங் கனியும் நல்லோர்

அடி கண்டு கொண்டுகந்து என்னையும் ஆளவர்க் காக்கினரே.–37-

 

பதவுரை

படி கொண்ட கீர்த்தி

உலக மெங்கும் பரந்த புகழை யுடைத்தான
இராமாயணம் என்னும்

ஸ்ரீ ராமாயண மென்கின்ற
பக்தி வெள்ளம்

பக்தி ஸமுத்திரம்
குடி கொண்ட கோயில்

நித்ய வாஸம் பண்ணுகிற திவ்ய ஸ்தாநமாயிருக்கின்ற
இராமாநுசன்

எம்பெருமானாருடைய
குணம் கூறும் அன்பர்

திருக் குணங்களைப் பேசுகின்ற பக்திமான்களுடைய
கடி கொண்ட மா தாள் மலர்

மணம் மிக்குச் சிறந்த பாதாரவிந்தங்களில்
உள்ளம் கலந்து

நெஞ்சு பொருந்தி
கனியும்

ஸ்நேஹித்திருக்கின்ற
நல்லோர்

மஹாநுபவர்கள்
அடி கண்டு கொண்டு

(இவ் வாதம வஸ்துவானது உடையவர்க்கு சேஷப்பட்ட தென்கிற) மூலப் பொருளைத் தெரிந்து  கொண்டு
உகந்து

ஆதரித்து
என்னையும்

அடியேனையும்
அவர்க்கு

அவ்வெம்பெருமானார்க்கு
ஆள் ஆக்கினர்

ஆட்படுத்தினார்கள்

இப்படிப்பட்ட எம்பெருமானாரை நீரே சென்று பற்றினீரோ? அன்றி அவர் தாமே  ஸ்வீகரித்தருளினாரே? என்று அமுதனாரைச் சிலர் கேட்க, நானாம் பற்றவில்லை, அவரும் ஸவீகரிக்க வில்லை; அவருடைய ஸம்பந்த ஸம்பந்திகள் என்னைக் கொண்டு சேர்த்தார்கள் என்கிறார்.

அடி கண்டு கொண்டு = அடியாவது  மூலம்; எம்பெருமானார்க்கு  உரித்தா யிருக்கையாகிற மூலத்தைத் தெரிந்து கொண்டு சேர்த்தார்கள் – மருமறிந்து காரியஞ்செய்தார்க்ளென்றவாறு-

———-

ஆக்கி யடிமை நிலைப்பித்தனை யென்னை இன்று, அவமே

போக்கிப் புறத்திட்ட தென் பொரு ளா?முன்பு புண்ணியர் தம்

வாக்கிற் பிரியா இராமானுச! நின் அருளின் வண்ணம்

நோக்கில் தெரிவரி தால், உரை யாயிந்த நுண்பொருளே.-38-

 

பதவுரை

(ஸ்வாமிந்!)

என்னை

(நெடுநாளாக அஹங்காரியாய்க் கிடந்த) என்னை
இன்று

இன்றைகத் தினத்தில்
ஆக்கி

ஒரு பொருளாக்கி
அடிமை

சேஷத்வத்தில்
நிலைப்பித்தனை

நிலை நிறுத்தினீர்; (இன்று இப்படி செய்தருளின தேவரீர்)
முன்பு

முற்காலமெல்லாம்
அவமே போக்கி

வீணுகப் போக்கி
புறந்து இட்டது

வெளி விஷயங்சளிலே தள்ளி விட்டு வைத்தது
என்பொருளா

என்ன நிமித்தாக?
புண்ணியர் தம்

(தேவரீரை இடைவிடாது அநுபவிக்கும்) பாக்கியசாலிகளுடைய
வாக்கில் பிரியா

வாக்கை விட்டுப் பிரியாத
இராமாநுச

எம்பெருமானாரே!
தெரிவு அரிது

அறிய முடியாததாய் இரா நின்றது;
இந்த நுண் பொருள்

இந்த ஸுக்ஷ்மமான விஷயத்தை
உரையாய்

தேவரீரே அருளிச் செய்யவேணும்

கூரத்தாழ்வானைக் கொண்டு அடியேனை இன்று திருத்திப் பணி கொண்ட தேவரீர் இதற்கு முற்கால மெல்லாம் இந்த சேஷத்வ ரஸத்தை அடியேனுக்கு ஊட்டாமல் வீணாக விஷயாந்தரங்களிலே அகல வைத்திருந்ததற்கு என்ன காரணம்?

இன்று இங்ஙனே திருவுள்ளம் பற்றும்படியாக என்னிடத்தில் என்ன ஸுக்ருக முண்டாயிற்று? ஒன்றுமில்லை;

அப்படியிருக்கச் செய்தேயும் தேவரீர் தம்முடைய நிர்ஹேதுக க்ருபையைக் கொண்டே யன்றோ இன்று ஆட்படுத்திக் கொண்டது.

ஹா ஹா! இப்படியும் ஒரு க்ருபையுண்டோ? இவ்வருளின் திறத்தை அறிவாரார்! ஆறிந்த தேவரீரே அருளிச் செய்யவேணும் என்றாராயிற்று.

நிலைப்பித்தனை = முன்னிலை யொருமை வினைமுற்று

அவம் – வீண்.

“இன்று என்னை ஆக்தி அடிமை நிலைப்பித்தனை; முன்பு அவமே போக்கிப் புறத்திட்டது என் பொருளா!”

இன்று ஸ்வீகரித்ததற்கும் இத்தனை நாள் ஒதுக்கி வைத்ததற்கும் என்ன காரணம்?

———–

பொருளும் புதல்வரும் பூமியும் பூங்குழ லாருமென்றே

மருள் கொண் டிளைக்கும் நமக்கு நெஞ்சே! மற்று உளார் தரமோ?

இருள் கோண்ட வெந்துயர் மாற்றித் தன் ஈறில் பெரும் புகழே

தெருளும் தெருள் தந்து இராமா னுசன் செய்யும் சேமங்களே.–39-

 

பதவுரை

பொருள் என்றும்

த்ரவ்யம் என்று சொல்லிக் கொண்டும்
புதல்வர் என்றும்

புத்திரர்கள் என்று சொல்லிக் கொண்டும்
பூமி என்றும்

க்ஷேத்ரமென்று சொல்லிக் கொண்டும் (அர்த்த புத்திராதிகளையே விரும்பி)
மருள் கொண்டு

அறிவு கெட்டு
இளைக்கும் நமக்கு

வருந்திக் கொண்டு கிடக்கிற நமக்கு
இருள் கொண்ட

அஜ்ஞாநத்தோடு கூடிய க்ரூரமான துக்கங்களை
மாற்றி

போக்கடித்து
தன் ஈறு இல் பெரு புகழே தெருளும் தெருள்

தம்முடைய முடிவில்வாத சிறந்தகல்யாண குணங்களையே சிந்திக்கக் கடவதான ஞானத்தை
தந்து

அருளித்தருளி
இராமாநுசன்

எம்பெருமானார்
செய்யும் சேமங்கள்

செய்கிற க்ஷேமங்களானவை
நெஞ்சே

ஒ மனமே!
மற்று உளார் தரமோ

மற்ற பேர்களுக்குச் செய்கிற மாதிரியோ (அல்ல; விலக்ஷணம் என்ற படி.)

எம்பெருமானாருடைய திருவருளாலே தாம் பெற்ற நன்மைகளை நினைத்து நினைத்து ஆநந்தமுள்ளடங்காமல் அவ்வாநந்தத்தை நெஞ்சோடே கூடி உலாவுகிறார்.

நெஞ்சே! – அன்னை அத்தன் என் புத்திரர் பூமி வாசவார் குழலாள் என்று மயங்கிப் புத்ர தார க்ருஹ க்ஷேத்ரங்களுக்கு மேற்படி வேறொன்று மறியாமல் உடலுக்கே கரைந்து நைந்து கிடந்த நமக்கு அஜ்ஞாநங்களையும் அது காரணமாக வரும் பாவங்களையும் தொலைத் தருளித் தமது திவ்ய கீர்த்திகளையே அநவரதம் பேசும்படியான நிலைமையிலே நம்மைக் கொண்டு நிறுத்தினார் எம்பெருமானார்;

இப்படியாக அவர் நமக்குச் செய்தருளும்  க்ஷேமங்கள் இவ்வுலகில் வேறு யார்க்காவது கிடைக்கக்கூடியதோ? நம்முடைய பாக்கியமே பாக்கியமன்றே என்றாராயிற்று.

மற்றுளார் தரமோ?  என்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் கொள்ளலாம்; இப்படிப்பட்டக்ஷேமங்களை நமக்கு எம்பெருhனார் தவிர வேறு யாரேனும் அளிக்கக் கூடுமோ? என்றும்

இப்படிப்பட்ட க்ஷேமங்கள்  நமக்குத் தவிர வேறு ஆர்க்கேனும் கிடைக்கத் தகுமோ? என்றும்.

—————

சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற்

காமமும் என்றிவை நான்கென்பர், நான்கினும் கண்ணனுக்கே

ஆமது காமம் அறம் பொருள் வீடுதற் கென்றுரைத்தான்

வாமனன் சீலன், இராமானுசனிந்த மண் மிசையே.–40-

 

பதவுரை

சேமம் நல் வீடும்

(அனைவர்க்கும்) க்ஷேம ரூபமான சிறந்த மோக்ஷம்
பொருளும்

அர்த்தமும்
தருமமும்

தர்மமும்
சீர்ய நல் காமமும்

மிகவுஞ் சிறந்த காமமும்
என்ற இவை

ஆக இப்படி சொல்லப்பட்டுள்ள இவை
நான்கு என்பர்

நான்கு புருஷார்த்தங்கள் என்று (வைதிகர்கள்) கூறுவார்கள்;
நான்கினும்

இந்த நான்கு புருஷார்த்தங்களுள்
காமம்

காமமாவது
கண்ணனுக்கே ஆமது

எம்பெருமான் விஷயத்திலேயே உண்டாமது;
அறம் பொருள் வீடு

தர்ம அர்த்த மோக்ஷங்கள் மூன்றும்
இதற்கு என்று

இந்தக் காம புருஷார்த்தததிற்கு சேஷ பூதங்கள் என்று
வாமநன் சீலன் இராமாநுசன்

வாமநாவதாரம் செய்த பெருமானொடு ஒத்த சீலத்தை யடையரான எம்பெருமானார்
இந்த மண் மிசை உரைத்தான்

இவ் வுலகத்தில் அருளிச் செய்தார்

எம்பெருமானார் இவ்வுலகத்தார்க்கு உபதேசித்தருளின அர்த்தங்களில் ஒரு அர்த்த விசேஷத்தை இப்பாட்டில் எடுத்துரைக்கின்றார்:-

ஸகல சாஸ்த்ரங்களாலும் பிரதி பாதிக்கப்படுமவை தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் என நான்கு புருஷார்த்தங்களாம்;

அந்த நான்கினுள் காமமென்பது பகவத்விஷய காமம்; விஷயாந்தரங்களைப் பற்றின காமம் சிற்றின்ப மாதலால் அது புருஷார்த்தமன்று;

பேரின்பமாகிய பகவத் காமமே காமம். அதுவே புருஷார்த்தம். மற்ற மூன்று புருஷார்த்தமன்று; சொன்ன காம புருஷார்த்தத்திற்கு சேஷப் பட்டவைகள்; காமமே ப்ரதாந சேஷியான புருஷார்த்தம் என்று உலகத்தாரெல்லார்க்கும் உபதேசித்தருளினர் எம்பெருமானார் என்றாராயிற்று.

சேம நல் வீடு மென்று தொடங்கி அறம் பொருள் வீடிதற்கு என்னுமளவும் எம்பெருமானாருடைய உபதேச வடிவம்

கண்ணுக்கே யாமது காமம் = காம க்ரோதங்களைக் கெட்ட குணமாகத் கூறி யிருப்பது தகாத விஷயங்களில் காமம் கூடாதென்பது பற்றி பகவத் விஷயத்தில் காமம்  சாஸ்த்ர விஹிதம். ஆழ்வார் =ஸுக்திகளில் இக் காமமே பொலியும்.

வாமநன் சீலன் = வாமன அவதாரம் செய்த எம்பெருமானாருடைய சீலம் போன்ற சீலத்தை யுடையவர் என்கை.

ஒருவரும் அபேக்ஷியா திருக்கத் தன் பேறாக எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்து திரிவிக்ரம அவதாரத்தாலே போலவே தனது சீல குணத்தை வெளியிடுபவர் எம்பெருமானார் என்கிறது.

————–

மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே

கண்ணுற நிற்கிலும் காணகில்லா, உலகோர் களெல்லாம்

அண்ணல் இராமா னுசன் வந்து தோன்றிய அப்பொழுதே

நண்ணரு ஞானம் தலைக் கொண்டு, நாரணற் காயினரே.–41–

 

பதவுரை

எங்கள் மாதவனே

நமக்கு நாதனான திருமால் தானே
மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து

(இப் பூமியிலுள்ள மநுஷ்யாதி) யோனிகள் தோறும் அவதரித்து
கண் உற நிற்கிலும் காண கில்லா உலகோர்கள் எல்லாம்

எல்லாருடைய கண்ணுக்கும் தன்னை இலக்காக்கிக் கொண்டு நின்ற விடத்திலும் (அவனை நம்முடைய நாதனென்று) காண மாட்டாதிருக்க இவ் வுலகத்தாரெல்லாரும்
அண்ணல் இராமாநுசன வந்து தோன்றிய அப்பொழுதே

ஸர்வ ஸ்வாமியான எம்பெருமானார் இங்கே வந்தவதரித்தவுடனே
நண்ண அரு ஞானம் தலைக் கொண்டு

பெறுதற்கரிதான ஞானம் அதிகரிக்கப் பெற்று
நாரணற்கு ஆயினர்

ஸ்ரீமந் நாராயணனுக்கு சேஷப்பட்டனர்.

எம்பெருமானுடைய அவதாரத்திற்காட்டிலும் எம்பெருமானாருடைய அவதாராமே சிறப்புற்ற தென்கிறார்.

எம்பெருமான் பலபலயோனிகளிற் பலவகைப் பிறவி பிறந்து கண் காண வந்து நின்று உபதேசங்களாலே ஸ்வ ஸ்வரூபத்தைக் காட்டிக் கொடுத்த விடத்திலும் யாரும் அவனை லக்ஷியம் பண்ணவில்லை;

“அவஜாநந்தி மாம் மூடா:” (என்னை மூடர்கள் அவமானப்படுத்துகிறார்கள்) என்று அவன்றானே சொல்லிக் கொண்டு வருத்தப்பட வேண்டிற்றாயிற்று

ஆகையாலே பகவானுடைய அவதாரம் ஸம்ஸாரிகளுடைய தெள்ளறிவுக்கு உறுப்பாகவில்லை.

எம்பெருமானாருடை அவதாரமோ வென்னில்; பயன் பெற்றது.

இவர் தாம் திருவவதரித்த வுடனே எல்லா வுலகத்தாரும் ஆச்சரியமான ஞானத்தைப் பெற்று உஜ்ஜீவித்தார்கள் – என்றாராயிற்று.

————–

ஆயிழையார் கொங்கை தங்கும் அக் காதல் அளற்றழுந்தி

மாயுமென் ஆவியை வந்தெடுத் தானின்று மாமலராள்

நாயகன் எல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும்

தூயவன் தீதில் இராமா னுசன் தொல் லருள் சுரந்தே.–42-

 

பதவுரை

மா மலராள் நாயகன்

லக்ஷ்மீ பதியான
அரங்கன்

பெரிய பெருமாள்
எல்லா உயிர்கட்கும் நாதன் என்னும்

ஸகல ஆத்துமாக்களுக்கும் சேஷி என்று உபதேசிப்பவரும்
தூயவன்

பரம பரிசுத்தரும்
தீது இல்

எவ்வகைக் குற்றமுமில்லாதவருமான
இராமாநுசன்

எம்பெருமானார்;

(என்னசெய்தாரென்றால்)

ஆய் இழையார் கொங்கை தங்கும் அக்காதல் அளறு அழுந்தி மாயும் என் ஆவியை

அழகிய ஆபரணங்களணிந்த ஸ்த்ரிகளுடைய கொங்கைத் தடத்தில் தங்கும் ஆசையாகிற சேற்றிலே அழுந்தி) நசித்துப் போகிற என் ஆத்மாவை
தொல் அருள் சுரந்து வந்து இன்று எடுத்தான்

இன்று நிர்ஹேதுக க்ருபை பண்ணி வந்து உத்தரித் தருளினார்.

பகவானுடைய அவதார காலங்களில் திருந்தாத ஸம்ஸாரிகளும் எம்பெருமானார் காலத்தில் திருந்திவிட்டார்களென்று கீழ்ப் பாட்டில் கூறியதற்கு வேறு  த்ருஷ்டாந்தம் காட்ட வேணுமோ?

என்னைத் திருத்திப் பணி கொண்ட விஷயமொன்றே போராதோ வென்பார் போலத் தம்மைத் திருத்தினதைச் சொல்லி ஆநந்தப்படுகிறார்.

————-

சுரக்கும் திருவும் உணர்வும் சொலப் புகில் வாயமுதம்

பரக்கும் இரு வினை பற்றற வோடும் படி யிலுள்ளீர்

உரைக்கின் றனனுமக் கியானறஞ் சீறும் உறு கலியைத்

துரக்கும் பெருமை இராமா னுசனென்று சொல்லுமினே.–43-

 

பதவுரை

படியில் உள்ளீர்

இப்பூமியிலுள்ளவர்களே!
யான் உமக்கு உரைக்கின்றனன்

நான் உங்களுக்கு (ஒரு    ஹிதம்) சொல்லுகிறேன்; (என்னவென்றால்)
அறம் சீறும் உறு கலியை துரக்கும் பெருமை இராமாநுசன் என்று சொல்லுமின்

தர்ம மார்க்கத்தில் சீற்றமுடையத் தாய் ப்ரபலமான கலியை ஒட்டி விடும் எம்பெருமானாருடைய திருநாமத்தைச் சொல்லுங்கள்; (அப்படி சொன்னால்)
திருவும்

பக்திப் பெருஞ்செல்வமும்
உணர்வும்

ஞானமும்
சுரக்கும்

மேன் மேலும் பெருகும்
சோல புகில்

அந்தத் திருநாமத்தைச் சொல்லத் தொடங்கும் போதே
வாய்  அமுதம் பரக்கும்

வாக்கிலே அம்ருதரஸம் வியாபிக்கும்
இரு வினை

மஹாபாபங்கள்
பற்று அற ஓடும்

அடியோடே போய் விடும்.

உலகத்தாரை நோக்கி நீங்களெல்லாரும் ஸ்ரீ ராமாநுஜ திவ்ய நாயத்தை வாயாரச் சொல்லுங்கள்,

உங்களுக்கு எல்லாவிதமான நன்மைகளும் உண்டாகுமென்கிறார்.

ஓ ஜனங்களே! உங்களுக்கு ஓர் அருமையான அர்த்தத்தை உபதேசிக்கிறேன், கேளுங்கள்,

எம்பெருமானுடைய ஸம்பந்தமுள்ள தேசத்தில் தருமத்திற்கு மாறான கலி புருஷன் நிற்கப் பெற மாட்டான்;

அன்னவரது திருநாமங்களை நீங்கள் அநுஸந்தாநம் பண்ணுங்கள்;

உங்களுக்கும் ஜ்ஞாந பக்திகள் தலையெடுக்கும் பாவங்களும் தொலையும்.

அத்திரு நாமங்கள் நாவுக்கும் இனிதாயிருக்கும். சொல்லிப்பாருங்கள்.

உமக்கு-யான், உமக்கியான். “யவ்வரீன் இய்யாம்” என்பது நன்னூல்.

நேர்பதினாறே நிரைபதினேழென் றோதினர் கலித்துறையோரடிக் கெழுத்தே” என்ற இலக்கணத்திற்கு மாறாக இப்பாட்டின் மூன்றாமடியில் (ஒற்றொழித்துப்) பதினெட்டெழுத்து வந்தது என்னெனில்; உமக்கியான் என்ற விடத்தில் ககரத்தின் மேலேறின இகரம் குற்றிய விகர மாகையாவே வண்ணங்கெடாமைக்குக் கழித்து கீழோடே ஒன்றுவித்துப் பதினேழெழுத்தாகவே எண்ணத்தக்கது.

கம்பர் இயற்றிய சடகோபரந்தாதியில்  “என் முடியா தெனக்கியாதே திரா வணன்றன்” என்ற இருபத்தொன்பதாம் பாட்டிலும் இப்படியே பிரயோகம் வந்தமை காண்க.

இந்த நூற்றந்தாதியிலும் மேல் ஐம்பத்து மூன்றாம் பாட்டில் “பற்பல்லுயிர்களும் பல்லுலகியரவும் பரனதென்றும்” என்ற விடத்திலும் இங்ஙனமே கொள்க.

———–

சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்கு மெல்லை

இல்லா அற நெறி யாவும் தெரிந்தவன் எண்ணருஞ்சீர்

நல்லார் பரவும் இராமா னுசன் திரு நாமம் நம்பிக்

கல்லார் அகலிடத்தோர், எது பேறென்று காமிப்பரே.–44-

 

பதவுரை

அகல் இடத்தோர்

விசாலமான இப் பூமி யிலுள்ளவர்கள்,
சொல் ஆர் தமிழ் ஒரு மூன்றும்

சொல் நிரம்பிய இயல் இசை நாடகம் என்கிற ஒப்பற்ற முத்தமிழையும்
சுருதிகள் நான்கும்

நான்கு வேதங்களையும்
எல்லை இல்லா அறம் நெறி யாவும்

கணக்கில்லாத தரும சாஸ்திரங்களையும் மற்றும் எல்லாக் கலைகளையும்
தெரிந்தவன்

அறிந்தவராயும்,
எண் அரு சீர்

எண்ண முடியாத குணங்களை வுடையவராயும்
நல்லார் பரவும்

ஸத்துக்களான் துதிக்கப் படுபவராயு மிருக்கிற
இராமாநுசன்

எம்பெருமானாருடைய
திருநாமம்

திரு நாமத்தை
நம்பி கல்லார்

(என் வார்த்தையை) நம்பிக் கற்கின்றார்களில்லை;

(ஸ்ரீ ராமாநுஜ நாமஸங்கீர் த்தநமே புருஷார்த்த மென்று அறியாதவர்களாய்)

எது பேறு என்று காமிப்பரே!

நமக்குப் புருஷார்த்தம் எது? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஐயோ!

சொல் ஆர் தமிழொரு மூன்றும் = இயல் இசை நாடகம் என மூவகைப்படும் தமிழ் –

‘எழுத்துப் பதின்மூன்று இரண்டசை சீர்முப்பதேழ் தளை ஐந்து, இழுக்கிலடிதொடை நாற்பதின் மூன்று ஐந்துபா இனம் மூன்று, ஒழுகிய வண்ணங்கள் நூறு ஒன்பது ஒண்பொருள் கோள் இருமூ, வழுக்கில் விகாரம் வனப்பெட்டு யாப்புள் வகுத்தனவே” என்று தொகுத்து உணர்த்தப்படும் இயற்றமிழின் இலக்கணங்கள்

குறிஞ்சி, செருந்தி, இந்தளம், கொல்லி, நாமரம், தக்கேசி, பஞ்சமம், கைசிகம் காந்தாரம் பாலை யாழ் முதலிய பண்களைக் கொண்டுள்ள தமிழ் இசைத்தமிழாம்

இயலுக்கும் இசைக்கும் பொது வானது நாடகத் தமிழாம் தராவிட சாஸ்த்ரங்களெல்லாவற்றையும் அறிந்தவர் எம்பெருமானார் என்கிறது.

சுருதிகள் நான்கும் = ருக்கு, யஜூஸ், ஸாமம், அதர்வணம் என வேதங்கள் நான்காம்.

எல்லை யில்லா அறநெறி = தர்மசாஸ்த்ரங்கட்கு அளவே யில்லை.

யாவும் = கீழ்ச் சொன்னவற்றையும் மற்றுமுள்ள கலைகளையும்.

————-

பேறொன்று மற்றில்லை நின் சரண் அன்றி, அப் பேறளித்தற்

ஆறொன்று மில்லை மற்றச் சரண் அன்றி,என்றிப் பொருளைத்

தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லால்

கூறும் பரமன்று இராமானுச! மெய்ம்மை கூறிடிலே.-45-

 

பதவுரை

இராமாநுச

எம்பெருமானாரே!
நின் சரண் அன்றி

தேவரீருடைய திருவடிகளைத் தவிர
மற்று பேறு ஒன்றும் இல்லை

உபேயம் வேறொன்று மில்லை;
அப்பேறு அளித்தற்கு

தேவரீர்  திருவடிகளாகிற அந்த உபேயத்தைத் தருவதற்கு
அச் சரண் அன்றி

அத் திருவடிகள் தவிர
மற்று ஆறு ஒன்றும் இல்லை

வேறு உபாயம் ஒன்று மில்லை;
என்ற இப் பொருளை

என்கிற இவ்வுண்மைப் பொருளை

உபாயமும் உபேயமும் எம்பெருமானார் திருவடிகளே’ என்றிருக்கும் மஹான்களுக்கும் தேவரீர் எவ்வாறு அருள் புரிகின்றதோ அவ்வாறாகவே சிறிதும் வாசி வையாமல் பாவியேனுக்கும் அருள் புரிகின்றதே!

இஃது என்ன பெருங்குணம்!!

த்ருட விச்வாஸ முடைய ஆழ்வான் ஆண்டான் போல்வாரை அடிமை கொள்வது போலவே அவிச்வாஸியான என்னையும் அடிமை கொள்வதே!

இச் செம்மைக் குணத்தின் பெருமையைப் பாசுரமிட்டுச் சொல்ல எனக்கு சக்தி யில்லையே யென்று தடுமாறுகின்றார்.

———–

கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே

மாறன் பணித்த மறை யுணர்ந்தோனை மதியிலியேன்

தேறும் படியென் மனம் புதுந்தானைத் திசை யனைத்தும்

ஏறும் குணனை இராமானுசனை இறைஞ்சினமே.–46-

 

பதவுரை

கூறும் சமயங்கள் ஆறும் குலைய

மனம் போன படி சொல்லிக் கொண்டிருக்கிற ஆறு பாஹ்ய மதங்களும் தலை மடங்கும்படி
குவலயத்தே

இப் பூ மண்டலத்திலே
மாறன் பணித்த மறை

நம்மாழ்வார் அருளிச் செய்த தமிழ் வேதத்தை
உணர்ந்தோனை

கற்று அறிந்தவராயும்
மதியிலியேன் தேறும்படி

ஜ்ஞாந ஹீநனான நானும் தெளியும் படியாக
என் மனம் புகுந்தானை

என் ஹ்ருதயத்தலே வந்து புகுந்தவராயும்
திசை அனைத்தும் ஏறும் குணனை

எல்லாத் திக்குக்களிலும் பரவிய திருக் குணங்களை யுடையவராயு மிருக்கிற
இராமாநுசனை

எம்பெருமானாரை
இறைஞ்சினம்

வணங்கினோம்.

எம்பெருமானார் செய்தருளின அரிய பெரிய உபகாரங்கள் நெஞ்சில் ஊற ஊற, பரவசராய்த் திருவடிகளிலே வணங்குகிறார்:-

உலகத்தில் பிரமாணமில்லாமலும் யுக்தியில்லாமலும் மனம் போனபடி சொல்லிக் கொண்டு திரிகிற மத’ ந்தரஸ்தர்களை யெல்லாம் பங்கப் படுத்துவதற்காக நம்மாழ்வார் அருளிச் செய்த தமிழ் வேதமானது திருவாய்மொழியை ஒதியுணர்ந்தவரும்,

அவிவேகியான நான்கூடத் கேறுதலடையும்படி என் நெஞ்சினுள்ளே புகுந்து என் ஸக்தையை நோக்குபவரும்,

திசைகளெங்கும் பரவிய புகழையுடையருமான எம்பெருமானாரை வணங்கினொமென்றாராயிற்று.

சமயங்கள் ஆறும் = தேஹாத்மவாதி; தேஹ பரீணமாத்மவதி, விஜ்ஞாநத்மவாதி, சூந்யவாதி, அத்வைதவாதி, சிவபரத்வவாதி என்றிப்படி ஆறுமதஸ்தர்களுண்டு.

வேறு வகைகளும் உண்டு

எல்லாமதங்களும் திருவாய் மொழியில நெற்; செய்யப் புல் தேயுங்கணக்கிலே தொலைக்கப்பட்டனவென்க.

குவலயம் – வடசொல்,

தேறும்படி – ‘ஒரு வழியாலும் நாம் உஜ்ஜீவிக்க வகையில்லையே! என்செய்வோம், என்று தடுமாறிக் கிடந்த

நானாம் ‘இனி நமக்கொரு குறையுமில்லை’ என்று தேறி மார்விலே கை வைத் துறங்குபடியாக என்கை.

————–

இறைஞ்சப் படும் பரன் ஈசன் அரங்கனென்று இவ்வுலகத்

தறம் செப்பும் அண்ணல் இராமானுசன்,என் அருவினையின்

திறம் செற்றிரவும் பகலும் விடாதென் றன் சிந்தையுள்ளே

நிறைந் தொப்பற விருந்தான், எனக் காரும் நிகரில்லையே!–47-

 

பதவுரை

இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று

‘எல்லாராலும் வணங்கத் தக்க பர தெய்வம் (எது வென்றால்) ஈசனாகிய ஸ்ரீரங்க நாதனேயாம்’ என்று
இ உலகத்து

இப் பூ மண்டலத்திலே
அறம் செப்பும்

ஸாக்ஷாத் தர்மத்தை அருளிச் செய்யுமவராய்
அண்ணல்

ஸர்வ ஸ்வாமியான
இராமாநுசன்

எம்பெருமானார்
என் அரு வினையின் திறம் செற்று

என்னுடைய போக்க முடியாத கர்ம ஸமூஹத்தைப் போக்கி
பகலும் இரவும் விடாது

ஸர்வ காலத்திலும்
என் தன் சிந்தை

என் ஹ்ருதயத்தினுள்ளே
நிறைந்து

பரி பூர்ணராகி
ஒப்பு அற இருந்தான்

(இவ் விருப்புக்கு) ஒப்பில்லாதபடி எழுந்தருளி யிருக்கிறார்;
எனக்கு

இப்படிப் பட்ட அருளைப் பெற்ற  எனக்கு
ஆரும் நிகர்இல்லை

ஒப்பாவார் ஆருமில்லை.

ஸ்ரீரங்கநாதனே எல்லாரும் வணங்கத்தக்க பர தெய்வமென்னும் உண்மையை உலகத்தார்க்கு உபதேசித்து

எல்லாரையும் பகவத் ஸமாச்ரயணத்தில் ருசி யுடையவர்களாக்கிப் போருகின்ற எம்பெருமானார்

என்னுடைய தீவினைகளை வேரோடே களைந்தொழித்து அநவரதமும் எனது ஹருதயத்தினாள்ளே பரிபூர்ணரா யெழுந்தருளிராநின்றார்;

இப்படிப் பட்ட பரம பாக்கியம் பெற்றவன் இவ் வுலகில் நானொருவனேயாகையால் – இல்லை யெனக் கெதிரில்லை யெனக் கெதிரே.

————

நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னரு ளின் கணன்றிப்

புகலொன்று மில்லை அருட்குமஃ தே புகல் புன்மையிலோர்

பகரும் பெருமை இராமானுச! இனி நாம் பழுதே

அகலும் பொருளென், பயனிரு வோமுக்கு மான பின்னே?–48-

 

பதவுரை

புன்மையிலோர் பகரும் பெருமை இராமாநுச

மஹான்கள் பேச வேண்டும் படியான பெருமையை யுடைய எம்பெருமானாரே!
நிகர்இன்றி நின்ற என்நீசதைக்கு

என்னுடைய ஒப்பற்ற தாழ்மைக்கு
நின் அருளின் கண் அன்றி

தேவரீருடைய க்ருபை யினிடத்தில் தவிர
புகல் ஒன்றும் இல்லை

வேறு எவ்விடத்திலும் ஒதுங்க இடமில்லை
அருட்கும்

தேவரீருடைய அந்த க்ருபைக்கும்
அஃதே புகல்

(என் போல்வாருடைய) அந்தத் தாழ்மையே சரணம்; (ஆக இவ்வகையாலே)
இருவோமுக்கும் பயன் ஆன பின்

அடியேனால் தேவரீருக்குப் பயன், அடியேனுக்குப் பயன் என்று ஸித்தமான பின்பு
இனி

இனி மேலும்
பழுதே

வியர்த்தமான
அகலும் பொருள் என்ன

பிரிந்திருக்கைக்குக் காரணம் என்ன?

“எனக்காரும் நிகரில்லையே” என்று களித்துக் கூறின அமுதனாரை நோக்கி எம்பெருமானார்

“இக் களிப்பு உமக்கு எத்தனை நாளைக்கு நிற்கும்? நான் உம்மை விட்டுவிடவுங் கூடும்; நீர் என்னை விட்டுவிடவுங்கூடும், இரண்டத் தொன்று நேர்ந்தால் இக்களிப்பு மாறக்கூடாது தானே” என்ன -;

இனி நாம் வீணுக விட்டுப் பிரிவதற்குக் காரணமே யில்லை யென்கிறார்.

(“ததஹம் த்வத்ருதேந நாதவாந் மத்ருதே  த்வம் தயநீயவாந் நச-விதிநிர்மிதமேதத்ந்வயம் பகவந் பாலய மாஸ்மஜீஹப:”) என்ற ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்ந ச்லோகமும் இப்பொருள் கொண்டதே.

(ஆளவந்தார் “உன்னுடைய அருளை வேண்டும் எனக்கும் அருளை உடைய உனக்கும் உள்ள இந்த ஸம்பந்தம்,
தேவரீருடைய கருணையினாலே ஏற்பட்டது; ஆகையால் இதைக் கை விடாமல் நீ காக்க வேண்டும்” என்கிறார்.

ததஹம் த்வத்ருதே ந நாதவாந்
மத்ருதே த்வம் தயநீயவாந் ந ச |
விதி நிர்மிதம் ஏததந்வயம்
பகவந்! பாலய மா ஸ்ம ஜீஹப: ||-ஶ்லோகம் 51 –

ஞானம் நிறைந்த ஸ்வாமியே! ஆதலால் உன்னைத் தவிர எனக்கு வேறு ஒரு ஸ்வாமி கிடையாது;
அதே போல உன்னுடைய கருணைக்கும் என்னைத் தவிர வேறு யாரும் சரியான பாத்திரம் கிடையாது.
உன்னுடைய கருணையால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஸம்பந்தம் காக்கப்பட வேண்டும்; அதை நழுவ விடாதே.)

அருட்கும் அஃதே புகல் = நீசர்கள் விஷயத்தில் க்ருபை பண்ணினா லன்றோ அருள் விளங்குவதும் பயன் பெறுவதும்.

——–

ஆனது செம்மை அற நெறி பொய்ம்மை அறு சமயம்

போனது பொன்றி யிறந்தது வெங் கலி பூங்கமலத்

தேனதி பாய் வயல் தென்னரங்கன் கழல் சென்னி வைத்துத்

தானதில் மன்னும் இராமா னுசனித் தலத்துதித்தே.–49-

 

பதவுரை

பூ கமலம்  தேன்

தாமரைப் பூக்களிலுண்டான மகரந்தமானது
நதி பாய்

ஆறாகப் பெருகப் பெற்ற
வயல்

கழனிகளையுடைய
தென் அரங்கன்

ஸ்ரீரங்கத்திலே எழுந்தருளியிருக்கிற பெரிய பெருமாளுடைய
கழல்

திருவடிகளை
சென்னி வைத்து

சிரஸா வஹித்துக் கொண்டு
தான் அதில் மன்னும்

தாம் அத் திருவடிகளிலேயே  ப்ரவணாயிருக்கிற
இராமாநுசன்

எம்பெருமானார்
இ தலத்து உதித்து

இப் பூமியிலே திருவவதரித்ததனால்
செம்மை அறம் நெறி

ருஜூவான தர்ம மார்க்கமானது
ஆனது

ஸத்தை பெற்றது;
பொய்ம்மை அறு சமயம்

பொய்யே நிறைந்து கிடக்கிற அறு சமயங்களும்
பொன்றி போனது

நாசமடைந்தன;
வெம் கலி இறந்தது

கொடிய கலியுகமும் மாண்டது

எம்பெருமானார் திருவவதரித்தனாலே இவ்வுலகத்துக்கு உண்டான நன்மைகளை அருளிச் செய்கிறார்  இதில்.

முன்பு குத்ருஷ்டிகளினால் அழிந்து கிடந்த தர்ம மார்க்கம் மீண்டு நிலை பெற்றது;

சாஸ்த்ர விருத்தமான புறமதங்களெல்லாம் தலை சாய்ந்தன; கலிதோஷமும் கெட்டுப் போயிற்று.

—————–

உதிப்பன வுத்தமர் சிந்தையுள் ஒன்னலர் நெஞ்சமஞ்சிக்

கொதித்திட மாறி நடப்பன கொள்ளை வன் குற்றமெல்லாம்

பதித்த வென் புன் கவிப் பாவினம் பூண்டன பாவு தொல் சீர்

எதித்தலை நாதன் இராமானுசன் றன் இணை யடியே.–50-

 

பதவுரை

பரவு தொல் சீர்

உலகமெங்கும் பரவின நித்ய கலயாண குணங்களை யுடையவரும்
எதி தலை நாதன்

யதிகளுக்குத் தலையான நாயகருமான
இராமாநுசன் தன்

எம்பெருமானாருடைய
இணை அடி

திருவடியிணைகள்

(எப்படிப் பட்டவை யென்றால்)

உத்தமர் சிந்தையுள் உதிப்பன

உத்தமாதிகாரிகளுடைய திருவுள்ளங்களிலே ப்ரகாசிப்பவை;
ஒன்னலர் நெஞ்சம்

பிரதிபக்ஷிகளுடைய நெஞ்சானது
அஞ்சி கொதித்திட

பயப்பட்டுப் பரீதவிக்கும்படி
மாறி நடப்பன்

மாறி மாறி யிட்டு நடக்குந்தன்மை யுடையன;
கொள்ளை வன்  குற்றம் எல்லாம் பதித்த

அபாரமான வலிய தோஷங்கள் யாவும் அழுந்திக் கிடக்கிற
என் புன் கவி

என்னுடைய க்ஷுத்ரமான  கவியாகிய
பா இனம் பூண்டன

பாசுரங்களைப் (ஸ்தோத்ரமாகப்) பெற்றுக் கொண்டவை.

தமக்குப் பரமப்ராப்யமான எம்பெருமானார் திருவடிகளை வருணிக்கிறார் இதில்

வடுக நம்பி போல்வாரான உத்தமாதிகாரிகளாலே இடைவிடாது சிந்திக்கப்படுவன;

பிரதி பக்ஷிகளுடைய நெஞ்சிலே பரீதாபத்தை உண்டுபண்ணுவன;

பல் வகைக் குற்றங்கள் நிறைந்த எனது கவிகளையும் ஏற்றுக் கொள்வன – அத்திருவடிகள், என்றாராயிற்று.

ஒன்னவர் நெஞ்ச மஞ்சிக் கொதித்திட மாறி நடப்பன – பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரஸிப்பதற்காதப் பல இடங்களிலும் ஸஞ்சரித்தருளினமை அறிக.

மாறி நடத்தல் – ஒரு அழகான நடை. –நம்பெருமாள் நடை போலே.

————–

அடியைத் தொடர்ந்தெழும் ஐவர்கட் காய் அன்று பாரதப் போர்

முடியப் பரி நெடுந் தேர் விடுங் கோனை முழுதுணர்ந்த

அடியர்க் கமுதம் இராமா னுச னென்னை ஆள வந்திப்

படியிற் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே.–51-

 

பதவுரை

அன்று

முற் காலத்தில்
அடியை தொடர்ந்து

திருவடிகளை அவலம்பித்து
எழும்

செருக்கிக் கிளர்ந்த
ஐவர்கட்கு ஆய்

பஞ்ச பாண்டவர்களுக்காக (பக்ஷ பாதம் பூண்டு)
பாரதப் போர்

பாரத யுத்தத்திலே
முடிய

(துரியோதநாதிகள்) மாளும்படியாக
பரி நெடு தேர்

குதிரை பூண்ட பெரிய தேரை
விடும்

நடத்தின
கோனை

ஸர்வேச்வரனை
முழுது உணர்ந்த

(ஸ்வரூப ஸவபாவங்களில் ஒன்றுங் குறையாதபடி) பூர்த்தியாகத் தெரிந்து கொண்ட
அடியர்க்கு

பாகவதர்களுக்கு
அமுதம்

பரம போக்யமான
இப்படியில்

இப் பூமண்டலத்தில்
வந்து பிறந்தது என்னை ஆள

வந்து அவதரித்தது  (எதற்காக வெனில்) அடியேனை ஆட் கொள்ளுகைக்காகவேயாம்;

பார்த்திடில் மற்று காரணம் இல்லை    –    ஆராய்ந்து பார்க்குமளவில் இது தவிர வேறொரு காரணமில்லை.

————-

பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப, இப் பார் முழுதும்

போர்த்தான் புகழ் கொண்டு புன்மையி னேனிடைத் தான் புகுந்து

தீர்த்தான் இரு வினை தீர்த்தரங்கன் செய்ய தாளிணையோ

டார்த்தான் இவை யெம் இராமா னுசன் செய்யும் அற்புதமே.–52-

 

பதவுரை

(எம்பெருமானாரானவர்)

அறு சமயங்கள்

(வேத பாஹ்யங்களான) ஆறு தர்சநங்களும் துடிக்கும் படியாக
பதைப்ப பார்த்தான்

திருக் கண் செலுத்தினார்;
இப் பார் முழுவதும்

இப் பூ மண்டலம் முழுவதையும்
புகழ் கொண்டு

தமது கீர்த்தியினாலே
போர்த்தான்

மூடி விட்டார்;
புன்மையினேனிடை

நீசனான அடியேன் பக்கலிலே
தான் புகுந்து

தாமாகவே (நிர்ஹேதுக க்ருபையினால்) வந்து புகுந்து
இரு வினை

பெரிய பாவங்களை
தீர்த்தான்

போக்கி யருளினார்;
தீர்த்து

பாவங்களைப் போக்கினது மன்றியில்
அரங்கன்

ஸ்ரீ ரங்கநாதனுடைய
செய்ய தாள் இணையோடு ஆர்த்தான்

அழகிய திருவடிகளோடே (என்னை)அந்வயிப்பித்தார்;
இவை

ஆகிய இக் காரியங்களெல்லாம்
எம் இராமாநுசன் செய்யும் அற்புதம்

எமக்கு ஸ்வாமியான எம்பெருமானார் செய்தருளின ஆச்சரியச் செயல்களாம்

எம்பெருமானாருடைய ஆச்சரியமான சில செயல்களை எடுத்துக் கூறுகின்றார்:-

சாகயர் உலூக்யர் பௌத்தர் சார்வாகர் பாசுபதர் காணுதர் என்றிப்படி சொல்லப்படுகிற புற மதத்தவர்களையெல்லாம் நடுங்கச்செய்தார்;

இப் பூமண்டலமெங்கும் தமது திருப்புகழே பரவும்படி செய்தார்;

இப் பூ மண்டலமெங்கும் தமது திருப்புகழே பரவும்படி  செய்தார்;

ஆத்ம குணமொன்றில்லாத என்னுடைய ஹ்ருதயத்திலே பகுந்து என் பாவங்களைப் போக்கி அழகிய மணவாளனுடைய  பாதங்களிலே என்னை ஆச்ரயிக்கச் செய்தார்;

இப்படியாக எம்பெருமானார் செய்தருளுமவை யெல்லாம் மிக அற்புதமானவை.

————

அற்புதன் செம்மை இராமானுசன், என்னை ஆள வந்த

கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய

பற் பல் லுயிர்களும் பல்லுல கியாவும் பரனதென்னும்

நற் பொருள் தன்னை, இந் நானிலத்தே வந்து நாட்டினனே.–53-

 

பதவுரை

என்னை ஆள வந்த

என்னை ஆட் கொள்வதற்காக அவதரித்த
கற்பகம்

உதாரரும்
கற்றவர் காமூது சீலன்

ஞானிகள் ஆசைப் படும் படியான சீல குணத்தை யுடையவரும்
அற்புதன்

ஆச்சரிய சேஷ்டிதங்களை யுடையவரும்
செம்மை

ருஜூவாயிருக்குந் தன்மை பொருந்திய வருமான
இராமாநுசன்

எம்பெருமானார்,
கருத அரிய பல் பல் உயிர்களும்

நினைக்கவும் முடியாத படி எண்ணிறந்திருக்கிற ஆத்ம வர்க்கங்களும்
பல் உலகு யாவும்

அவ் வாத்மாக்களுக்கு இருப்பிடமான) அளவிறந்த எல்லா வுலகங்களும்
பரனது என்னும் நல் பொருள் தன்னை

எம்பெருமானாடைய ஸொத்துக்களாம் என்கிற ஸாரர்த்தத்தை
இ நானிலேததே

இவ் வுலகத்திலே
வந்து

வந்தவதரித்து
நாட்டினன்

ஸ்தாபித்தருளினார்.

எம்பெருமானார் மதாந்தரங்களைக் கண்டித்து நிலைநாட்டிய ஸித்தாந்தம் இன்னதென்கிறார்.-

சிறந்த ஞானிகளனைவரும் கொண்டாடுதற்குரிய திருக் குணங்களையும் அதி மாநுஷ வ்யாபாரங்களுக்கு இருப்பிடமாயுள்ள ஸகல லோகங்களும் ஸ்ரீமந் நாராயணனாக்கே உரிமைப் பட்டவை” என்கிற பரமார்த்தத்தை நிலை நாட்டி யளினர் என்கை.

உலகு- யாவும், உலகியாயும்; “யவ்வரீனிய்யாம்” என்பது நன்னூல் விதி.

—————

நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன, நாரணனைக்

காட்டிய வேதம் களிப்புற்றது,தென் குருகைவள்ளல்

வாட்டமிலா வண் டமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்

ஈட்டிய சீலத்து இராமா னுசன் றன் இயல்வு கண்டே.–54-

 

பதவுரை

மண் உலகில் ஈட்டிய சீலத்து இராமாநுசன் தன்

இப் பூ லோகத்தில் மேன் மேலும் திரட்டிக் கொண்ட சீல குணத்தை யுடையரான எம்பெருமானாருடைய
இயல்வு

ஸ்வபாவத்தை
கண்டு

பார்த்து,
நாட்டிய நீச சமயங்கள் மாண்டன

(துஷ்ட யுக்திகளாவே) நிலை நிறுத்தப் பட்டிருந்த ஷூத்ர மதங்களெல்லாம் ஒழிந்தன;
நாரணனை காட்டிய

ஸ்ரீமந் நாராயணனைப் பிரதிபாதிக்க
வேதம்

வேதங்களானவை
களிப்பு உற்றது

(நமக்கு இனி ஒரு குறையுமில்லை யென்று) செருக் கடைந்தன;
தென் குருகை வள்ளல்

அழகிய திருக்குருகூரில் அவதரித்த உதாரரான ஆழ்வார் (அருளிச்; செய்த)
வாட்டம் இலா

ஒரு குறையுமற்ற
வண் தமிழ் மறை

சிறந்த தமிழ் வேதமான திருவாய்மொழி
வாழ்ந்தது

வாழ்வு பெற்றது.

சிங்கத்தைக் கனவில் கண்டாலும் ஸாமன்ய மிருகங்கள் நசித்தொழியும்;

அவற்றைக் கொல்லுவதற்காகச் சிங்கம் ஒரு முயற்சி  செய்யவேண்டா

அதுபோல, இவ் வுலகில் கிளர்ந்து கிடந்த பஹ்ய குத்ருஷ்டி மதங்களைத் தொலைப்பதற்காக எம்பெருமானார்

ஒரு பிரயத்நமும் எடுத்துக் கொள்ள வில்லை;

அவை மாளவே ஸ்ரீ மந் நாராயண பரங்களான வேதங்களின் ஸாரமாகிய அருளிச் செயல்களும் பொலிவு பெற்று ஒங்கின – என்றாராயிற்று.

————-

கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென்னரங்கன்

தொண்டர் குலாவும் இராமா னுசனைத், தொகை யிறந்த

பண்டரு வேதங்கள் பார் மேல் நிலவிடப் பார்த்தருளும்

கொண்டலை மேவித் தொழும், குடி யாமெங்கள் கோக்குலமே.–55-

 

பதவுரை

தொகை இறந்த

கணக்கில்லாத
பண் தரு வேதங்கள்

ஸ்வர ப்ரதாநங்களான வேதங்கள்
பார்  மேல்

இப் பூமியிலே
நிலவிட

ஒங்கி வளரும்படி
பார்த்தருளும்

செய்தருளினவரும்
கொண்டலை

பரம உதாரரும்,
கண்டவர் சிந்தை கவரும்

கணடவர்களின் நெஞ்சைக் கவர்கின்ற
கடி பொழில்

மண மிக்க சோலைகள் சூழ்ந்த
தென் அரங்கன்

தென்னரங்கத்திற்குத் தலைவரான பெரிய பெருமாளுக்கு அடிமைப் பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களால்
குலாவும்

கொண்டாடப் படுபவருமான
இராமாநுசனை

எம்பெருமானாரை
மேவித் தொழும் குடி

பொருந்தி ஆச்ரயிக்கிற குலம்
எங்கள் கோக்குலம் ஆம்

எங்களுக்கு ஸ்வாமியாகக் கூடிய குலமாம்.

எம்பெருமானாரை அடிபணிந்து உஜ்ஜீவிக்கும் மஹான்கள் தாம் அடியேனை ஆள்வற்கு உரியவர்கள் என்றாராயிற்று

ஸ்ரீ ராமாநுஜ பக்தர்களுக்கு அடியேன் தாஸனாயிருப்பேன் என்றாவது

இராமாநுனை மேவித் தொழுங்குடி எங்கள் கோக்குலமாம்

ஸ்ரீ எம்பெருமானாரன்று எமக்கு ஸ்வாமி; அவரை ஆச்ரயிப்பவர்களே எமக்கு ஸ்வாமிகள்.

கோ என்பதற்கு மேன்மையென்றும் பொருள் உண்டாதலால், எங்கள் கோக்குலம் – எங்களுடைய மேன்மையான குலம் (எப்படிப்பட்டதென்றால்), இராமாநுசனை மேவித் தொழுங்குடியாம் -, என்பதாகவும் உரைக்கலாம்.

“எங்கள் கோக் குடியே” என்றும் பாடமுண்டு; பொருள் ஒன்றே.

——–

கோக்குல மன்னரை மூ வெழு கால், ஒரு கூர் மழுவால்

போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனமெங்கும்

ஆக்கிய கீர்த்தி இராமானுசனை அடைந்தபின், என்

வாக்குரையாது, என் மனம் நினை யாதினி மற்றொன்றையே.–56-

 

பதவுரை

கோக்குலம் மன்னரை

க்ஷத்திரிய குலத்து அரசர்களை
மூ எழு கால்

இருபத்தொரு தலைமுறையளவும்
ஒரு கூர் மழுவால்

கூர்மை பொருந்திய ஒரு மழுவாலே
போக்கிய

(பரசுராமாவதாரத்தில்) தொலைத்தருளின
தேவனை

எம்பெருமானை
போற்றம்

துதிக்கின்ற
புனிதன்

பரம பரிசுத்தரும்,
புவனம் எங்கும் ஆக்கிய கீர்த்தி

உலகமெங்கும் பரவின புகழை யுடையவருமான
இராமாநுசனை

எம்பெருமானாரை
அடைந்த பின்

ஆச்ரயித்த பின்பு
இனி

மேலுள்ள காலமெல்லாம்
மற்று ஒன்றை

வேறு எந்த விஷயத்தையும்
என் வாக்கு

எனது வாக்கானது
உரையாது

சொல்லமாட்டாது;
என் மனம்

எனது மனமும்
நினையாது

நினைக்கமாட்டாது.

அடைந்ததற்பின் வாக்குரையாது என்மனம் நினையாது” என்றும் பாடமுண்டாம்.

——————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி-22-33 -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்

July 4, 2022

கார்த்திகையானும் கரி முகத் தானும் கனலும் முக்கண்

மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு மூவுலகும்

பூத்தவனே! என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த

தீர்த்தனை யேத்தும் இராமானுச னென்றன் சேம வைப்பே.–22-

பதவுரை

கார்த்திகையானும்

ஸுப்ரஹமண்யனும்

கரிமுகத்தானும்

கணபதியும்

கனலும்

(அவர்களுக்குத் துணையாய் வந்த) அக்நியும்

முக்கண்மூர்க்தியும்

சிவனும்

மோடியும்

துர்க்கையும்

வெப்பும்

ஜ்வரதேவதையும்

முதுகு இட்டு

முதுகு காட்டி ஒடிப் போன பின்பு (அநந்ய கதியான பாணாஸுரனானவன்

மூ உலகும் பூத்தவனே என்று போற்றிட

“மூன்று உலகங்களையும் திரு நாபிக் கமலத்திலே உண்டாக்கின பெருமானே!” (என்னைக் காத்தருள்) என்று போற்ற

வாணன் பிழை பொறுத்த

(அந்த) பாணாஸுரனுடைய அபராத்தை க்ஷமித்தருளின

தீர்த்தனை

பாவநனான ஸர்வேச்வரனை

ஏத்தும்

நித்யம் துதிக்கின்ற

இராமாநுசன்

எம்பெருமானார்

என் தன் சேமவைப்பு

எனக்கு ஆபத் தநம்.

ஐச்வர்யம் சங்கராதிச்சேத் ஆரோக்யம் பாஸ்கராத் ததா

சிவன் பக்கல் செல்வம்பெற விரும்ப வேண்டும்; ஸூர்யன் பக்கல் ஆரோக்யம் பெற விரும்ப வேண்டும்) என்று

ஸாமாந்யமாகச் சிலர் சொல்லுவதுண்டே;

அதனைக்கொண்டு ஒருவன் அமுதனாரை நோக்கி ‘ஒய்! நீர் எம்பெருமானாரைப் பற்றினால் உம்முடைய தாரித்ரியம் நீங்குமோ?

சிவனைப் பற்றினாலன்றே செல்வம் மிகும்’ என்று கூற

அந்தச் சிவன் பட்ட பரிபவங்களை விளக்கும் ஒரு இதி ஹாஸத்தைப் பரக்கப் பேசிக் கொண்டு,

‘எம்பெருமானார் தாம் தமக்கு ஆபத்தனம்’ என்கிற திண்ணிய அத்யவஸாயத்தை உறுத்திக் கூறுகின்றார் இதில்.

————–

வைப்பாய வான் பொருள் என்று,நல் லன்பர் மனத்தகத்தே

எப்போதும் வைக்கும் இராமானுசனை இரு நிலத்தில்

ஒப்பார் இலாத உறு வினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து

முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இது அவன் மொய் புகழ்க்கே!-23-

 

பதவுரை

நல் அன்பர்

விலக்ஷண பக்தி யுடையவர்கள்
வைப்பு ஆய வான் பொருள் என்று

“எம்பெருமானார் தாம் நமக்கு ஆபத் ரக்ஷகமான அக்ஷ தநம்” என்று கொண்டு
இராமாநுசனை

எம்பெருமானாரை
இரு நிலத்தில்

இந்தப் பெரிய வுலகத்திலே
ஒப்பார் இலாத உறு வினையேன்

ஒப்பற்ற மஹா பாபியான அடியேன்
வஞ்சம் நெஞ்சில் வைத்து

(என்னுடைய) க்ருத்ரிமமான நெஞ்சிலே  வைத்து
முப்போதும் வாழ்த்துவன்

ஸர்வ காலமும் ஏத்த நின்றேன்;
இது

மிகப் பெரிய அவரை நீசனாகிய நான் வாழ்த்துகையாகிற இது
அவன்

அவ் வெம்பெருமானானாருடைய
மொய் புகழ்க்கு

சிறந்த கீர்த்திக்கு
என் ஆம்

என்னாகுமோ? (அவத்யமமோ?)

“வளவேழுலகின் முதலாய” என்ற திருவாய்மொழியில் ஆழ்வார் நைச்யாநு ஸந்தானம் பண்ணினது போல, இப்பாட்டில் இவ்வமுதனாரும் நைச்யாநுஸந்தாநம் பண்ணுகிறார்;.

—————-

மொய்த்த வெந் தீ வினையால் பல் லுடல் தொறும் மூத்து, அதனால்

எய்த்தொழிந்தேன் முன நாள்களெல்லாம்,இன்று கண்டுயர்ந்தேன்

பொய்த் தவம் போற்றும் புலைச் சம யங்கள் நிலத்தவியக்

கைத்த மெய்ஞ் ஞானத்து இராமா னுசனென்னும் கார் தன்னையே.–24-

 

பதவுரை

முன நாள்கள் எல்லாம்

கீழ்க் கழிந்த அநாதி காலமெல்லாம்
பல் உடல் தொறும்

பல பல சரீரங்கள் தோறும்
மொய்த்த வெம் தீ வினையால் மூத்து

ஆத்மாவை மொய்த்துக் கொண்டிருக்கின்ற அதி க்ரூரமான கர்மத்தாலே கிழத்தனம் வருமளவும் வாஸஞ்செய்து
அதனால்

அத்தாலே
எய்த்து ஒழிந்தேன்

மிக்க பரிதாப மடைந்தேன்;
பொய் தவம் போற்றும் புலைச் சமயங்கள்

கபடமான அநுஷ்டாநங்களை நடத்திப் போருகிற நீச மதஸ்தர்கள்
நிலத்து அவிய

இந் நிலவுலகத்திலே வோற்றொழியும்படி
கைத்த

நிரஸித்தருளின
மெய் ஞானத்து

உண்மை ஞான முடையரான
இராமாநுசன் என்னும் கார் தன்னை

எம்பெருமானாராகிற காள மேகத்தை
இன்று கண்டு

இன்று அடியேன் ஸேவிக்கப் பெற்று
உயர்ந்தேன்

சிறந்தவனானேன்.

நெடுநாளாக ஸம்ஸாரத்திலிருந்து பலபல கருமங்களைப் பண்ணி, அக் கருமங்களின் பலனாகப் பலபல பிறவிகளிற் பிறந்து படாதனபட்டு இப்படியாகவே அநேக பர்யாயம் அவஸந்நனாய்க் கிடந்தேன் நான்;

இப்பொழுது பரம உதாரான எம்பெருமானார் இப்பூமியிலவதரித்துப் பல துர் மதங்களை வெறுத்தொழித்தது போல

எனது கருமங்களையும் வேரறுத்தொழித்துத்  தம்முடைய நிர்ஹேதுக க்ருபையாலே தம்மைக் காட்டி யருளக் கண்டு கிருதார்த்தனானேனென்கிறார்.

பொய்த்தலம் போற்றும் புலைச்சமயங்கள் = ராவண ஸம்ந்யாஸம், காலநேமிஜபம் முதலியவை போலே மதாந்தரஸ்தர்கள் க்ருத்ரிமமான ஆசாரங்களை அனுஷ்டிப்பார்கள் என்க.

மெய்ஞ் ஞானத்திராமாநுசன் – “யதார்த்தம ஸர்வ விஜ்ஞாநம்”என்று ஸ்தாபித்தருளினவர்

————-

காரேய் கருணை இராமானுச,இக் கடலிடத்தில்

ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு

நேரே யுறைவிடம் நான் வந்து நீ யென்னை உய்த்த பின்

சீரே யுயிர்க் குயிராய், அடியேற்கின்று தித்திக்குமே.–25-

 

பதவுரை

காரேய் கருணை இராமாநுச!

மேகத்தை யொத்த கருணையை யுடைய எம்பெருமானாரே!
நான்

அடியேன்
அல்வலுக்கு நேரே உறைவு இடம்

துக்கங்களுக்கு நேரே வாஸஸ்தான மாயிருப்பவன்;
என்னை

இப்படிப்பட்ட அடியேனை
நீ வந்து உற்ற பின்

ஸ்வீகரித் தருளின பின்பு
உன் சீரே

தேவரீருடைய கல்யாண குணங்களே
உயிர்க்கு உயிர் ஆய்

ஆத்மாவுக்கு தாரகமாய்
அடியேற்கு

அடியேனுக்கு
இன்று தித்திக்கும்

இன்று ரஸியா நின்றது;
நின் அருளின் தன்மை

தேவரீருடைய க்ருபையின் ஸ்வபாவத்தை
இ கடல் இடத்தில்

கடல் சூழ்ந்த இப் பூ மண்டலத்தில்
ஆரே அறிபவர்

அறியக் கூடியவர்கள் ஆருமில்லை.

ஜல ஸ்தல விபாகம் பாராமல் ஸர்வத்ர ஸமமாக வர்ஷிக்கின்ற மேகம் போலலே, தாழ்ந்தோர்  உயர்ந்தோர் என்னும்  வாசி பாராமல் எல்லார் திறத்தும் அருள் புரிகின்ற எம்பெருமானாரே!

மிகக் கொடிய துக்கங்களுக்கெல்லாம் இருப்பிடமான என்னை தேவரீர் தாமே வந்து விஷயீகரித்த பின்பு தேவரீருடைய திருக்கல்யாண குணங்களே எனக்குப் பரம போக்யமாய்  ஆத்ம தாரகமுமாய்விட்டது.

தேவரீர் க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யர் என்னுமிடத்தை இவ் வுலகில் உள்ளபடியே ஒருவருமறியார்கள்.

—————–

திக்குற்ற கீர்த்தி இராமானுசனை, என் செய் வினையாம்

மெய்க் குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர்

எக் குற்ற வாளர் எது பிறப்பேதியல்வாக நின்றோர்

அக் குற்றம் அப் பிறப்பு அவ்வியல்வே நம்மை யாட்கொள்ளுமே.–26-

 

பதவுரை

என் செய்வினை ஆம்

என்னாலே செய்யப்பட்ட  வினையாகிற
மெய் குற்றம் நீக்கி

நிலை நின்ற தோஷங்களைப் போக்கி
விளங்கிய

(இவனுடைய தோஷங்களைப் போக்கப் பெற்றோமென்னாம் மகிழ்ச்சியாலே உஜ்வலரான
மேகத்தை

பரம உதாரராய்
திக்கு உற்ற கீர்த்தி

திசைகள் தோறும் விரிந்த புகழையுடையரான
இராமாநுசனை

எம்பெருமானாரை
மேவும்

பொருந்தி யிருக்கின்ற
நல்லோர்

விலக்ஷணர்கள்
எக் குற்றவாளர்

யாதொரு குற்றத்தை யுடையராகவும்
எது பிறப்பு

யாதொரு ஜன்மத்தை யுடையராகவும்
எது இயல்பு ஆக

யாதொரு சரிதையை யுடையவராகவும்
நின்றோர்

முன்பு நின்றார்களோ,
அக்குற்றம்

அந்தக் குற்றமும்
அப் பிறப்பு

அந்த ஜன்மமும்
அ இயல்வே

அந்த சரிதையுமே
நம்மை

நம்மை
ஆள் கொள்ளும்

அடிமைப் படுத்திக் கொள்ளவற்று.

ராமாநுஜ பக்தர்களுடைய ஜாதி முதலியவை ஏதாயினும் அவர்களெல்லாரும் அப்படியே நமக்கு உத்தேச்யர்கள்  என்று காட்டியவாறு.

————

கொள்ளக் குறைவற்றிலங்கிக் கொழுந்து விட் டோங்கிய வுன்

வள்ளல் தனத்தினால் வல் வினையேன் மனம் நீ புகுந்தாய்

வெள்ளைச் சுடர் விடும் உன் பெரு மேன்மைக் கிழுக்கிதென்று

தள்ளுற் றிரங்கும் இராமானுச! என் தனி நெஞ்சமே!–27-

 

பதவுரை

இராமாநுச

எம்பெருமானாரே!
கொள்ள குறைவு அற்று இலங்கி

கொள்ளக் கொள்ளக் குறையாமல் தானே விளங்கி
கொழுந்து விட்டு ஓங்கிய

மேன் மேலும் இளகிப் பதித்து வளர்ந்திருப்பதான
உன் வள்ளல் தனத்தினால்

தேவரீருடைய ஔதார்ய குணத்தாலே
வல்வினையேன் மனம்

மஹாபாபியான எனது நெஞ்சிலே
நீ புகுந்தாய்

(தேவரீருடைய பெருமை பாராதே) வந்து புகுந்தருளிற்று;
இது

(வஸிஷ்டின் சண்டாள க்ருஹத்தில் புகுந்தாற் போலே) புகுந்தவிது,
வெள்ளை

பரிசுத்தமாய்
சுடர் விடும்

பரிசுத்தமாய் விளங்கா நின்றுள்ள
உன் பெரு மேன்மைக்கு

தேவரீருடைய ப்ரபாவத்திற்கு
இழுக்கு என்று

அவத்யாவஹம் என்று
என் தனி நெஞ்சம்

எனது துணையற்ற நெஞ்சானது
தள்ளுற்று இரங்கும்

தளர்ந்து ஈடுபடா நின்றது.

ஸ்வாமிந்! தேவரீருடைய பெருமையையும் அடியேனுடைய சிறுமையையும் சிறிதும் பாராமல் “இவன் நம் அடியார் விஷயத்திலே சுபலனாயிரப்பானொருவன்” என்கிற இவ்வளவையே கொண்டு பாபிஷ்டமான என் ஹ்ருதயத்திலே தேவரீர் புகுந்தளிற்று:

வஸிஷ்டன் சண்டாளர் மனையிற் புகுந்தாற்போல் தேவரீர் என் நெஞ்சில் புகுந்த விது, தேவரீருடைய பரிசுத்தமாய் விளங்கும் மஹிமைக்கு என்ன அவத்யத்தை விளைத்திடுமோவென்று அஞ்சா நின்றேன்,

—————

நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள்

பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா

வஞ்சர்க் கரிய இராமா னுசன் புகழ் அன்றி யென் வாய்

கொஞ்சிப் பரவ கில்லாது என்ன வாழ்வின்று கூடியதே!–28-

 

பதவுரை

நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனை

நெஞ்சிலே கல்மிஷத்தை யுடை யனாயிருந்த கம்ஸனை
காய்ந்த

முடித்த
நிமலன்

ஹேய ப்ரத்ய நீகனாய்,
நங்கள் பஞ்சி திருவடி

ஆச்ரிதர் பக்கல் அபிமாநமுடையளாய் பஞ்சு போல் மெல்லிய திருவடிகளையுடையளான
பின்னை தன் காதலன்

நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபனான கண்ண பிரானாடைய
பாதம் நண்ணா

திருவடிகளை ஆச்ரயியாத
வஞ்சர்க்கு

ஆத்மாபஹாரக் கள்வர்களுக்கு
அரிய

துர் லபரான
இராமாநுசன்

எம்பெருமானாருடைய
புகழ் அன்றி

குணங்களை யொழிய (மற்றொன்றை)
என் வாய்

என் வாக்கானது
கொஞ்சி பரவகில்லாது

குலாவி ஏத்த மாட்டாது;
இன்று கூடியது வாழ்வு

இன்று (எனக்கு) நேர்ந்த வாழ்ச்சியானது
என்ன

ஆச்சரியமானது

நேற்று வரை அபதார்த்தமாய்க் கிடந்த அடியேன் இன்று ஸத்தை பெற்று வாழ்ந்த அதிசயம் சொல்லி முடியுமோ?

இன்று உமக்குவந்த அதிசயம் என்னவென்று கேட்கிறீர்களோ?

எம்பெருமானாருடைய குண கீர்த்தநத்தில் நேற்றுவரை உதாஸீநமாய்க்கிடந்த என் வாயானது

இன்று அவருடைய திவ்ய கீர்த்திகளையன்றி வேறொன்றையும் அநுசந்திக்கமாட்டேனென்று

அது தன்னிலே  ஊன்றிக் கிடக்கிறதே, இதைவிட அதிசய முண்டோ? என்கிறார்.

————–

கூட்டும் விதி யென்று கூடுங்கொலோ,தென் குருகைப்பிரான்

பாட்டென்னும் வேதப் பசுந்தமிழ் தன்னைத் தன் பத்தி யென்னும்

வீட்டின் கண் வைத்த இராமா னுசன் புகழ் மெய் யுணர்ந்தோர்

ஈட்டங்கள் தன்னை, என் நாட்டங்கள் கண்டின்ப மெய்திடவே?–29-

 

பதவுரை

தென் குருகை பிரான்

நம்மாழ்வாருடைய
பாட்டு என்னும்

பாசுரங்கள் என்று ப்ரஸித்தமாய்
வேதம்

வேத ரூபமாய்
பசும் தமிழ் தன்னை

செந்தமிழாயிருக்கின்ற திருவாய் மொழியை
தன் பத்தி என்னும் வீட்டின் கண் வைத்த

தம்முடைய பக்தியாகிற மாளிகையிலே ஸ்தாபித்தருளிய
இராமாநுசன்

எம்பெருமானாருடைய
புகழ்

கல்யாண குணங்களை
மெய் உணர்ந்தோர்

உள்ளபடி அறிந்திருக்கு மவர்களுடைய
ஈட்டங்கள் தன்னை

கோஷ்டிகளை
என் நாட்டங்கள் கண்டு

என் கண்களானவை ஸேவித்து
இன்பம் எய்திட

ஸூகிக்கும் படியாக
கூட்டும் விதி

அமைக்க வல்ல (அவருடைய) க்ருபையானது
என்று கூடுங்கொவ்

என்றைக்கு வாய்க்குமோ?

நம்மாழ்வா ரருளிச்செய்த தமிழ் வேதத்தைப் பத்தியுடன் பரவும் எம்பெருமானாருடைய திருக்கல்யாண குணங்களை உள்ளபடி உணர்ந்து ஈடுபட்டிருக்கும் மஹான்களுடைய கோஷ்டிகளை அடியேன் ஸேவித்து ஆநந்திக்கும் படியான பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ என்கிறார்.

தன் பத்தி யென்னும் வீட்டின் கண் வைத்த = விலை யுயர்ந்த மாணிக்கத்தைச் செப்பிலே வைத்துக் கொண்டிருப்பாரைப்போலே அநர்க்கமான அருளிச் செயலைத் தம்முடைய பக்தியாகிற உயர்ந்த மாளிகையிலே வைத்துப் பேணிக் கொண்டிரா நின்ற உடையவர் என்றபடி.

நாட்டம் – கண்.

—————–

இன்பந் தரு பெரு வீடு வந் தெய்திலென்? எண்ணிறந்த

துன்பந் தரு நிரயம் பல சூழிலென்? தொல்லுலகில்

மன் பல் லுயிர்கட் கிறையவன் மாயன் என மொழிந்த

அன்பன் அனகன் இராமானுச னென்னை ஆண்டனனே.–30-

 

பதவுரை

தொல் உலகில்

‘அநாதியான இவ் வுலகத்தில்
மன் பல் உயிர்கட்கு இறையவன் மாயன்

நித்யரான எல்லா ஆத்மாக்களுக்கும் சேஷியாவன் விஷ்ணுவே’
என மொழிந்த

என்று (=பாஷ்ய முகத்தாலே) அருளிச் செய்த
அன்பன்

பரம காருணிகராய்
அனகன்

நிர்த் தோஷரான
இராமாநுசன்

எம்பெருமானார்
என்னை ஆண்டனன்

என்னை அடிமைகொண்டருளினார்;

(ஆன பின்பு)

இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என்

ஆநந்தாவஹமான மோக்ஷம் வந்து ஸித்தித்தாலெனன?
எண்  இறந்த துன்பம் தரு பல நிரயம் சூழில் என்

அளவற்ற துக்கங்களைத் தருகிற பல நரகங்கள் வந்து சூழ்ந்து கொண்டால் தான் என்ன?

எம்பெருமானார் என்னை அடிமை கொண்டருளப் பெற்ற பின்பு எனக்கு மோக்ஷம் கிடைத்தாலென்ன? பல பல நரகங்கள் நேர்ந்தாலென்ன? எனக்கு எது பரம ப்ராப்யமோ அது கிடைத்து விட்டது! சரக்கறப் பேசுகிறார்.

நிரயம்-வடசொல். அனகன்-வடசொல் விகாரம்:ஹேய ப்ரதிபடர் என்றபடி.

————

ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ்கால மெல்லாம் மனமே!

ஈண்டு பல் யோனிகள் தோறு ழல் வோம் இன்றோ ரெண்ணின்றியே

காண்டகு தோளண்ணல் தென்னத்தியூரர் கழலிணைக் கீழ்ப்

பூண்ட வன்பாளன் இராமா னுசனைப் பொருந்தினமே.–31-

 

பதவுரை

மனமே

நெஞ்சே!
நாள் ஆய்

நாள்களாகவும்
திங்கள் ஆய்

மாதங்களாகவும்
ஆண்டுகள் ஆய்

வருஷ்ங்களாகவும்

(இப்படி)

நிகழ் காலம் எல்லாம்

நடந்து செல்லுகிற ஸர்வ காலங்களிலும்
ஈண்டு பல் யோனிகள் தோறும

திரண்டு பல்வகைப் பட்ட யோனிக்ள தோறும்
உழல்வோம்

தட்டித் திரிந்த நாம்
இன்று ஒர் எண் இன்றியே

இன்று ஒரு நினைவு மில்லாதிருக்கச் செய்தே (அகஸ்மாத்தா)
காண்  தகு தோள் அண்ணல் தென் அத்தியூரர் கழல் இணைக்கீழ் பூண்ட அன்பு ஆளான் இராமாநுசனை பொருந்தினம்

கண்ணாரக் காணத் தக்க  தோள்களை யுடைய ஸ்வாமியான பேரருளாளனாடைய திரு வடிகளில் அன்பு பூண்ட எம்பெருமானாரைச் சேரப் பெற்றோம் (என்ன பாக்கியம்!,)

—————

பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும்,நல்ல

திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால்

வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந் தெடுத்தளித்த

அருந்தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே.–32-

 

பதவுரை

 

செறு கலியால்

(தரும நெறியைத் திரஸ்கரிக்கின்ற கலியினாலே
வருந்திய

துக்கப் பட்ட
ஞாலத்தை

பூமியை
வண்மையினால் வந்து எடுத்து அளித்த

தமது நிர்ஹேதுக க்ருபையாலே வந்து உத்தரித்து ரக்ஷித்தவரும்
அருந்தவன்

சரணாகதி யென்கிற அரிய தபஸ்ஸை அநுஷ்டித்தவரும்
எங்கள்

எமக்கு ஸ்வாமியுமான
இராமாநுசனை

எம்பெருமானாரை
அடைபவர்க்கு

ஆச்ரயிக்கு மவர்களுக்கு
பொருந்திய தேசும்

ஸ்வரூபாது ரூபமான தேஜஸ்ஸூம்
பொறையும்

க்ஷமா குணமும்
திறலும்

ஜிதேந்த்ரியத்வமாகிற பலமும்
புகழும்

கீர்த்தியும்
நல்ல திருந்திய ஞானமும்

பரம விலக்ஷணமான அறிவும்
செல்வமும்

பக்தியாகிற ஸம்பத்தும்
சேரும்

தானே வந்து சேரும்.

 

——————

அடையார் கமலத் தலர் மகள் கேள்வன் கை யாழி யென்னும

படையொடு நாந்தகமும் படர் தண்டும்,ஒண் சார்ங்க வில்லும்

புடையார் புரி சங் கமு மிந்தப் பூதலம் காப்பதற்கென்று

இடையே இராமானுச முனி யாயின இந் நிலத்தே.–33-

 

பதவுரை

அடை ஆர் கமலத்து அலர் மகள் கேள்வன்

தளங்கள் நெருங்கிய தாமரைப் பூவிற் பிறந்த பெரிய பிராட்டியார்க்கு வல்லபனான எம்பெருமானுடைய
கை ஆழி என்னும் படையோடு

திருக்கையிலே (விளங்கா நின்ற திருவாழி யென்கிற திவ்யா யுதத்தோடே
நாந்தகமும்

நந்தக வாளும்
படர் தண்டும்

ரக்ஷணத்தொழிலிலே பரந்திரா நின்ற கதையும்
ஒண் சார்ங்கம் வில்லும்

அழகிய ஸ்ரீ சார்ங்க மென்கிற வில்லும்
புடை ஆர் புரி சங்கமும்

ஒருபக்கத்துக்குத் தானே ஆபரணமாகப் போரும்படியான அழகிய ஸ்ரீ பாஞ்சஜந்யமும்
(ஆக இப் பஞ்சாயுதாழ்வார்கள்)இந்த பூதலம் காப்பதற்கு என்று

இப் பூமண்டலத்திலே இராமாநுச முனி இடையே ஆயின

இந்தப் பூமியை ரக்ஷிக்கைக்காக

 

இந்நிலத்து எம்பெருமானார் பக்கலிலே ஆயினர்

 

ஸ்ரீ பஞ்சாயுதாழ்வார்களும் லோக ரக்ஷணார்த்தமாக எம்பெருமானார் பக்கலிலே வந்து குடி கொண்டனர் என்கிறார் இப்பாட்டில்.

“அடையார் + புரிசங்கமும் இந்தப் பூதலங் காப்பதற்கென்று இந்நிலத்தே இராமாநுச முனியிடையே ஆயின” என்று அந்வயித்தவாறு.

ஸ்ரீ பஞ்சாயுதாழ்வார்கள்  இவர் பக்கலிலே ஆகையாவது – இவருடைய நினைவைக் கடாக்ஷித்து நின்று இவர் அதிகரித்த காரியத்திற்குத் துணை செய்கையாம். -அம்பரீஷனாக்குத் திருவாழியாழ்வான் ஸஹகரித்தது போல.

இப் பாட்டை மற்றொரு வகையாகவும் அந்வயிக்க இடமுண்டு:-

அடையார் +புடையார்  புரிசங்கமும் இந்தப் பூதலங் காப்பதற்கென்று இந்நிலத்திடையே இராமாநுசமுனியாயின” என்று

இப்பக்ஷத்தில் ஸ்ரீ பஞ்சாயுதாழ்வார்களே இந் நிலவுலகைக் காக்க எம்பெருமானாராக வந்து திருவவதாரித்தார்க ளென்றதாகிறது.

இப்பாட்டினால், எம்பெருமானார் பஞ்சாயுதாழ்வார்களுடைய திருவவதாரமென்று விளங்கா நன்றமையால்

திருவனந்தாழ்வானாடைய அவதாரமென்று சொல்வது எங்ஙனே? என்று சங்கிக்கு மவர்கள்

நமது சேஷாவதாரச் செல்வனே இவை அனைத்தும் செய்து அருளும் ஷேம கார்யங்களை செய்தார் என்றதாயிற்று –

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி-8-21 -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்

July 4, 2022

வருத்தும் புற விருள் மாற்ற, எம் பொய்கைப் பிரான் மறையின்

குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்

திரித்தன் றெரித்த திரு விளக்கைத் தன் திருவுள்ளத்தே

இருத்தும் பரமன் இராமானுசனெம் இறையவனே.-8-

 

பதவுரை

வருத்தும்

வருத்தத்தை யுண்டு பண்ணக் கூடிய பாஹ்ய விஷயங்களைப் பற்றின அஜ்ஞானமாகிற இருளை
மாற்ற

போக்குவதற்காக
எம் பொய்கைப் பிரான்

நமது குலத் தலைவரான பொய்கை யாழ்வார்
அன்று

முற் காலத்தில்
மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்ற திரித்து

வேதாந்தங்களிற் பதிந்து கிடக்கும் பொருள்களையும் செந்தமிழ்ச் சொற்களையுங்கூட்டி இரண்டையும் ஒன்று சேர ஒரு திரியாக்கி
எரித்த திரு விளக்கை

ஜ்வலிக்கக்செய்த (முதல் திருவந்தாதியாகிற) திருவிளக்கை
தன் திரு உள்ளத்தே

தமது திருவுள்ளத்தே
இருத்தும்

வைத்துக் கொண்டிரா நின்ற
பரமன் இராமாநுசன் எம் இறையவன்

மஹா வைபவசாலியான எம்பெருமானார்
எம் இறையவன்

நமக்கு ஸ்வாமி

பகவத் பாகவத விஷயம் அந்தரங்க விஷயமென்றும் சப்தாதி விஷயங்கள் பாஹ்ய விஷயம் (அதாவது-புறவிஷயம்) என்றும் சொல்லப்படும்.

அந்த பாஹ்ய விஷயங்களைப்பற்றின அஜ்ஞாநாந்தகாதலிலே ஸுக ரூபம்போல் தோற்றினாலும் பிறகு மிக்க வருத்தத்தை விளைக்கக் கூடியது; அப்படிப்பட்ட கொடியஇருளை அகற்றுவதற்காகப் பொய்கையாழ்வார் “வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காக” என்று தொடங்கித் திருவந்தாதி திவ்ய ப்ரபந்தமென்னாம் ஒருவிளக்கை எற்றியருளினார்.

அவ்விளக்குக்கு எதைத் திரியாக்கினார் என்றால், வேதாந்தங்களில் திரண்டு கிடக்கும் ஸாரப் பொருள்களையும் இனிய தமிழ்ச்சொற்களையும் ஒன்று சேர்த்துத் திரித்தார்.

அப்படிப்பட்ட திருவிளக்கை எம் பெருமானார் தமது திருவுள்ளத்தினுள்ளே எப்போதும் அணையாதபடி ஸ்தாபித்தருளினார்;

அவரே அடியேனுக்கு ஸ்வாமி என்றாராயிற்று.

——————

இறைவனைக் காணும் இதயத் திருள் கெட ஞானமென்னும்

நிறை விளக் கேற்றிய பூதத் திருவடி தாள்கள்,நெஞ்சத்

துறைய வைத் தாளும் இராமா னுசன் புகழ் ஓதும் நல்லோர்

மறையினைக் காத்த இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே.–9-

 

பதவுரை

இறைவனை

ஸரவ ஸ்வாமியான எம் பெருமானை
காணும்

ஸாக்ஷாத் கரிப்பதற்கு உபகரணமான
இதயத்து

ஹ்ருயத்திலுள்ள
இருள் கெட

அஜ்ஞாநமாகிற அந்தகார மானது நசிக்கும் படியாக
ஞானம் என்னும் நிறை விளக்கு எற்றிய

ஞானமாகிற பூர்ண தீபத்தை ப்ரகாசிப்பித் தருளி இரண்டாந் திருவந்தாதியை அருளிச் செய்த
பூதத் திருவடி

பூதத்தாழ்வாருடைய
தாள்கள்

திருவடிகளை
நெஞ்சத்து

தமது திரு வுள்ளத்திலே
உறைய வைத்து

சாச்வதமாக ஸ்தாபித்து
ஆளும்

(அவற்றையே) அநுபவிக்கின்ற
இராமரநுசன்

எம்பெருமானாருடைய
புகழ்

திவ்ய குணங்களை
ஒதும்

இடைவிடாது அநுஸந்திக்கின்ற
நல்லோர்

விலக்ஷண புருஷர்கள் தாம்
இந்த மண் அகத்தே

இப் பூ மண்டலத்திலே
மறையினை

வேதங்களை
காத்து

ரக்ஷித்து
மன்ன வைப்பவர்

என்றைக்கும் அழிவில்லாத படி ப்ரதிஷ்டாபனம் பண்ண வல்லவர்கள்

‘ஸ்ரீமத் வேதமார்க்க ப்ரதிஷ்டாபநாசார்யர்’ என்னும் விருது இராமாநுசனுடையார்க்கே ஏற்குமென்கிறார்.

ஸர்வ ஸ்வாமியான எம்பெருமானை ஸாக்ஷாத்கரிப்பதற்கு எல்லார்க்கும் உபகரணமாக யிராநின்ற ஹருதயமானது

அஜ்ஞாநாந்தகாரத்தாலே இருண்டு கெட்டுப்போகாதபடி பரஜ்ஞாநமாகிற பூர்ண தீபத்தை எற்றினவரான

பூதத்தாழ்வாருடைய திருவடிகளைத் தமது திருவுள்ளத்திலே இடைவிடாது வைத்துக்கொண்டு

அவற்றையே அனுபவிக்கும் எம்பெருமானாருடைய குண கீர்த்தநமே போது போக்காக இருக்கும் விலக்ஷணர் யாரோ

அவர்கள் தாம் வேதத்தை நன்றாக ரக்ஷித்து இந்நிலவுலகத்தில் நிலை நிறுத்த வல்ல மஹான்கள் என்றாராயிற்று

பூதத்தாழ்வார்  ஏற்றிய ஞானமென்னாம் நிறைவிளக்காவது – இரண்டாந் திருவந்தாதியாகிற அவருடைய அருளிச்செயல்

பூதத்திருவடி = திருவடியென்று இங்கே ஸ்வாமிக்கு வாசகம்; பூதத்தாரென்னாம் ஸ்வாமி என்றபடி.

(மறையினைக் காத்து மன்ன வைப்பவர்) எம்பெருமானார் ஸம்பந்தம் பெறாத மற்றையோர்கள் “வேதம் ப்ரமாணமே யல்ல” என்று சொல்லுவாரும், அதனைப் பிரமாணமாக ஒப்புக் கொண்டும் அபார்த்தங்கள் பண்ணுவாருமாய் இருப்பதால் அவர்கள் யாவரும் வேத மார்க்க வித்வம்ஸிகள்; இராமாநுசனாடையார் தாம் ஸ்ரீமத் வேத மார்க்க ப்ரதிஷ்டாபநாசார்யர்கள் என்றபடி

——————.

மன்னிய பேரிருள் மாண்ட பின் கோவலுள் மா மலராள்

தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்

பொன்னடி போற்றும் இராமானுசற் கன்பு பூண்டவர் தாள்

சென்னியிற் சூடும் திருவுடை யாரென்றும் சீரியரே.-10-

 

பதவுரை

மன்னிய

ஒருவாரலும் பேர்க்க முடியாத படியாதபடி நிலைத்து நின்ற
பேர் இருள்

(அஜ்ஞாநமாகிற பெருத்த இருளானது
மாண்ட பின்

முற்பட்ட ஆழ்வார்களிருவரும் ஏற்றின திரு விளக்காலே) நனறாக நீங்கின பின்பு,
கோவலுள் ஆயனை

திருக் கோவலூரில் ஆயனாரை
மா மலராள் தன்னொடும்

பிராட்டியோடு கூட
கண்டமை

தாம் ஸேவித்த படியை
காட்டும்

“திருக்கண்டேன்” இத்யாதி ப்ரபந்த முகத்தாலே) வெளியிட்டருளி
தமிழ் தலைவன்

தமிழ்க்குத் தலைவரான பேயாழ்வாருடைய
பொன் அடி

அழகிய திருவடிகளை
போற்றும்

புகழுமவரான
இராமாநுசற்கு

எம்பெருமானார் திறத்தில்
அன்பு பூண்டவர்

பக்தியையுடையவர்களினது
தாள்

திருவடிகளை
சென்னியில் சூடும் திரு உடையார்

சிரோ பூஷணமாகக் கொள்ளுஞ் செல்வமுடையோர் தாம் என்றும் சீரியா என்றைக்கும் ஸ்ரீமான்கள்.

பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் ஏற்றின இரண்டு திருவிளக்குகளாலும் இருள் நீங்கவே, “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று திருக்கோவலூராயனாரைப் பிராட்டியோடு கூட ஸேவிக்கப் பெற்றார் பேயாழ்வார்.

தாம் அப்படி ஸேவித்ததாக மூன்றாந்திருவந்தாதி முகத்தால் வெளியிட்டருளின அவ் வாழ்வாருடைய திருவடிகளைக் துதிக்குமவரான எம்பெருமானார் திறத்தில் பக்தியை யுடையவர்கள் யாரோ, அவர்களுடைய திருவடிகளைச் சிரோ பூஷணமாகக் கொள்வதையே அழியாச் செல்வமாக நினைத்து ஸ்ரீராமாநுஜ பக்தர்களுடைய திருவடியைச் சிரமேற் கொள்ளுமவர்கள் தாம் நித்திய ஸ்ரீமான்கள் என்றாராயிற்று.

இப்பாட்டில் பேயாழ்வார் “தமிழ்த் தலைவன்” என்று சிறப்பித்துக் கூறப்பட்டார்.

—————-

சீரிய நான் மறைச் செம் பொருள் செந்தமிழா லளித்த

பாரியலும் புகழ்ப் பாண் பெருமாள்சரணாம் பதுமத்

தாரியல் சென்னி இராமானுசன் றனைச் சார்ந்தவர் தம்

காரிய வண்மை, என்னால் சொல்லொணாது இக் கடலிடத்தே.–11–

 

பதவுரை

சீரிய நால் மறை செம் பொருள்

சிறந்த நால் வேதங்களிலுள்ள செவ்வியபொருள்களை
செம் தமிழால்

அழகிய தமிழ்ப் பாசுரங்களினால்
அளித்த

அருளிச் செய்தவரும்
சரண் ஆம் பதுமம் தார் இயல்சென்னி

திருவடிகளாகிற தாமரைப் பூவாலே அலங்கரிக்கப்பட்ட திரு முடியை யுடையரான
இராமாநுசன் தன்னை

எம்பெருமானாரை
சார்ந்தவர் தம்

ஆச்ரயமாகப் பற்றினவர்களுடைய
பார் இயலும் புகழ்

பூமி யெங்கும் பொருந்தின புகழை யுடையவருமான
பாண் பெருமாள்

திருப்பாணாழ்வாருடைய
காரியம் வண்மை

அநுஷ்டாந வைலக்ஷண்யமானது
இக்கடல் இடத்து

கடல் சூழ்ந்த இப் பூமியில்
என்னால் சொல்ல ஒணாது

(இப்படிப்பட்ட வைபவ முடையதென்று) என்னால் சொல்லித் தலைக் கட்ட முடியாதது.

எம்பெருமானாடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை யெல்லாம் விசதமாகப் பேசுகையாலே சிறந்தவையான நால் வேதங்களில் பொதிந்து கிடக்கும் நற்பொருள்களை “அமலனாதி பிரான்” என்னும் திவ்ய ப்ரபந்தத்தில் சுருக்கி அருளிச் செய்தவராய் நாடெங்கும் பரவின புகழை யுடையரான திருப்பாணாழ்வாருடைய சரணாரவிந்தங்களாலே அலங்கரிக்கப்பட்ட திருமுடியை யுடையவரான எம்பெருமானாரை அடி பணிந்தவருடைய ஆசார வைலக்ஷ்ண்யமானது என் வாய் கொண்டு வருணிக்க முடியாதபடி மிகவும் சிறந்தது என்றாராயிற்று.

—————-

இடங்கொண்ட கீர்த்தி மழிசைக் கிறைவன் இணை யடிப் போ

தடங்கும் இதயத்தி ராமா னுசன், அம் பொற்பாத மென்றுங்

கடங் கொண் டிறைஞ்சும் திரு முனி வர்க் கன்றிக் காதல் செய்யாத்

திடங் கொண்ட ஞானியர்க்கே அடியே னன்பு செய்வதுவே.–12-

 

பதவுரை

இடம் கொண்ட கீர்த்தி

பூமியெங்கும் வியாபித்த கீர்த்தியை யுடையரான
மழிசைக்கு இறைவன்

திருமழிசைப் பிரானாடைய
இணை அடி போது

உபய பாதார விந்தங்கள்
அடங்கும்

குடி கொண்டிருக்கப் பெற்ற
இதயத்து

திரு வுள்ளத்தை யுடையரான
இராமாநுசன்

எம்பெருமானாடைய
அம் பொன் பாதம் என்றும்

மிகவும் அழகிய திருவடிகளை
என்றும்

எக்காலத்திலும்
கடம் கொண்டு இறைஞ்சும் திரு

இதுவே நமக்கு ஸ்வரூப மென்கிற புத்தியோடே ஆச்ரயிக்கையாகிற செல்வத்தை யுடையரான
முனிவர்க்கு அன்றி

மஹான்களுக்குத் தவிர மற்றவர்களுக்கு
காதல் செய்யா

அன்பு பூண்டிராக
திடங் கொண்ட ஞானியாக்கே

மிக்க உறுதியை யுடையரான ஞானிகளுக்குத் தான்
அடியேன் அன்பு செய்வது

அடியேன் பக்தனாயிருப்பேன்

உலகமெங்கும் பரவின புகழையுடையரான திருமழிசைப் பிரானாடைய பாதார விந்தங்கள் அடங்கி யிருக்கப் பெற்ற திருவுள்ளத்தை யுடையரான எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளை ஸ்வரூப ப்ராப்தத்வ புத்தி யோடே அநவரதம் ஆச்ரயிக்கின்ற மஹா பாகவதர்கட்குத் தவிர வேறொருவர்க்கும் விதேயப்படாத மா ஞானிகளுக்கே அடியேன் அன்பனாயிருப்பன் என்கிறார் இப்பாட்டால், ‘

ஸ்ரீராமாநுஜ பக்த பக்தன் அடியேன், என்றாராயிற்று.

கடங் கொண்டு – கடமையாகக் கொண்டு

———————-

செய்யும் பசுந் துளபத் தொழில் மாலையும் செந்தமிழில்

பெய்யும் மறைத் தமிழ் மாலையும் பேராத சீரரங்கத்

தையன் கழற் கணியம் பரன் தாளன்றி ஆதரியா

மெய்யன் இராமானுசன் சரணே கதி வேறெனக்கே.–13-

 

பதவுரை

செய்யும்

(தொண்டரடிப் பொடி யாழ்வாராகிற தம்மாலே) செய்யப் பட்ட தாய்
பசும் துளவம்

பசுமை தங்கிய திருத் துழாய் மயமாய்
தொழில்

வேலைப் பாடுகளையுடைத்தான
 மாலையும்

பூ மாலைகளையும்
செம் தமிழில்

அழகிய தமிழ்ப் பாஷையிலே
பெய்யும்

உண்டாகப் பட்டதாய்
மறை

வேத ஸத்ருசமான
தமிழ் மாலையும்

திருமாலை திருப் பள்ளி யெழுச்சி யென்கிற திவ்ய ப்ரபந்தங்களாகிற சொல் மாலைகளையும்
பேராத சீர் அரங்ககத்து ஐயன் கழற்கு அணியும்

நித்ய ஸித்தமான கல்யாண குணங்களை யுடையரான ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளிலே சாத்தினவருமான
பரன்

தொண்டரடிப் பொடி யாழ்வாராகிற பெரியவருடைய
தாள் அன்றி ஆதரியா

திருவடிகளைத் தவிர மற்றொன்றையும் விரும்பாத
மெய்யன்

ஸத்யசீலரான
இராமாநுசன்

எம்பெருமானாருடைய
சரணே

திருவடிகளே
எனக்கு

அடியேனுக்கு
வேறு கதி

விலக்ஷணமான ப்ராப்ய வஸ்துவாம்,

தொண்டரடிப் பொடி யாழ்வார் திருவடிகளை யன்றி மற்றொன்றில் ஆதரம் அற்றிருக்கிற எம்பெருமானார் திருவடிகளே நமக்குச் சரணமென்கிறார் இதில்

தொண்டரடிப் பொடி யாழ்வார் ஸ்ரீரங்கநாதன் திருவடிகளில் இரண்டு மாலைகளைச் செய்து ஸமர்ப்பித்தனரென்று சாடூக்தியாகச் சொல்லுகிறார் அமுதனார். ‘துளபத்தொண்டாய தொல்சீர்த் தொண்டரடிப்பொடி” என்றும்’

“தொடையொத்த துளபமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி” என்றும் தாமே அருளிச் செய்த படிக்குப் பொருந்தத்

திருத்துழாய் மாலைகளையும், திருமாலை திருப்பள்ளியெழுச்சி யென்கிற திவ்ய ப்ரபந்தங்களாகியற சொல் மாலைகளையும் அரங்கத்தையன் கழல்களிலே ஸமர்ப்பித்தவரீறே தொண்டரடிப்பொடியாழ்வார்.

“துளபத்தெழில் மாலையும்” என்றும் சிலர் பாடங்கூறுவர்; துளபத்து – துளஸியினாலாகிய, எழில் மாலை – அழகிய என்றபடி.

இப் பாடல் அழகிய தேயாயினாம் வியாக்கியானத்தில் ஆதரிக்கப்பட்ட பாடமன்றாதலால் உபேக்ஷிக்கத் தக்கதென்க.

—————

கதிக்குப் பதறி வெங் கானமும் கல்லும் கடலுமெல்லாம்

கொதிக்கத் தவம் செய்யும் கொள்கை யற்றேன்,கொல்லி காவலன்சொல்

பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே

துதிக்கும் பரமன் இராமானுச னென்னைச் சோர்விலனே.–14-

பதவுரை

கொல்லி காவலன்

குல சேகரப் பெருமாளாலே அருளிச் செய்யப் பட்டதாய்
கலை சொல் பதிக்கும்

சாஸ்திரச் சொற்கள் அமையப் பெற்றதான பொருமாள் திருமொழிப் பரசுரங்களை
பாடும் பெரியவர்

பாடுகின்ற பெரியோர்களது
பாதங்களே

திருவடிகளையே
துதிக்கும்

ஸ்தோத்ரம் செய்பவராய்
பரமன்

உத்க்ருஷ்டரான
இராமானுசன்

எம்பெருமானார்
என்னை சோர்விலன்

என்னை விட்டு நீங்குகிறாரில்லை; (ஆதலால்) ப்ராப்ப லாபந்துக்காக வரைந்து
கதிக்கு பதரி

அத்யுஷ்ணமான காடுகளிலும் மலைகளிலும்
கடலும்

கடல்களிலும் (நின்றுகொண்டு)
எல்லாம் கொதிக்க

எல்லா அவயங்களும்
தவம் செய்யும் கொள்கை

தபஸ்ஸூ பண்ணும் ஸ்வபாவத்தை
அற்றேன்

விட்டொழித்தேன்

ஸகல சாஸ்த்ரங்களின் ஸாரப் பொருள்களையும் திரட்டி ஸ்ரீ குலசேகரப்பெருமான் அருளிச் செய்த பெருமாள் திருமொழி  என்னும் திவ்ய ப்ரபந்தத்தை அநுஸந்திக்கின்ற பெரியவர்களது திருவடிகளையே போற்று மியல்வினரான எம்பெருமானார் வந்து தாமே என்னை ஸ்வீகரித்தாராதலால் இனி ஒரு நாளும் அவர் அடியேனைக் கைவிடமாட்டார்;

ஆன பின்பு நமக்கு ப்ராப்யம் வேறு ஒன்று மில்லாமையாலே, வந பர்வத ஸமுத்ர தீரங்களில் நின்று க்ரூரமாகச் செய்யும் தவங்களில் இனி எனக்கு அந்வய மில்லை யென்றாராயிற்று.

“எல்லாங் கொதிக்கத் தவஞ்செய்யுங் கொள்கை” என்றதற்கு – இவனுடைய தவத்தின் கொடுமையைக் கண்டு கானமும் கல்லும் கடலும் பரிதபிக்கும்படியாக அந்தந்த ஸ்தலங்களிலே நின்று தபஸ்ஸூ பண்ணும் ஸ்வபாவம் என்று பொருள் கூறுவாருமுளர்.

சோர்வு இலன் – பிரிவிலன் என்றபடி.

——————

சோராத காதல் பெருஞ்சுழிப்பால், தொல்லை மாலை யொன்றும்

பாராதவனைப் பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன் தாள்

பேராத வுள்ளத் திராமா னுசன் றன் பிறங்கிய  சீர்

சாரா மனிசரைச் சேரேன் எனக்கென்ன தாழ்வினியே?–15-

 

பதவுரை

சோராத காதல் பெரு சுழிப்பால்

ஒருநாளும் குறைவுபடாத ப்ரேமத்தில் பெருஞ்சுழிப் படுகையாலே
தொல்லை மாலை  ஒன்றும் பாராது

நித்யனான எம்பெருமான்  படியைச் சிறிதும் நிரூபியாமல்
அவனை

அவ்வெம்பெருமானை  நோக்கி
பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன்

பல்லாண்டு பல்லாண் டென்று மங்ளாசாஸநம் பண்ணுகையையே நித்ய ஸவபாவமாக வுடையரான பெரியாழ்வாருடைய
தாள் பேராத உள்ளத்து

திருவடிகள் விட்டகலாத திருவுள்ளத்தை யுடையரான
இராமாநுசன் தன்

எம்பெருமானாருடைய
பிறங்கிய சீர்

மிக்க திருக் குணங்களை
சாரா

தங்களுக்கு அநுபாவ்யமாகக் கொள்ளாத
மனிசரை

மநுஷ்யர்களை
சேரேன்

பற்ற மாட்டேன்
இனி

இப்படிப் பட்ட உறுதி பிறந்த பின்பு
எனக்கு என்ன தாழ்வு

அடியேனுக்கு என்ன குறை?.

பாண்டிய ராஜனுடைய பண்டித சபையில் எழுந்தருளி  “எம்பெருமானே பரதத்தும்” என்று ஸ்தாபநம் செய்து கிழி யறுத்து விட்ட காலத்து, அப் பாண்டியன் தம்மை யானை மேலேற்றி ஊர்வலம் வருவிக்கையில் தம் வைபவத்தைக் காண வந்து ஆகாசத்திலே கருடாரூடனாய் நின்ற திருமாலைச் சேவித்து அப்பெருமானிடத்துள்ள பெருங்காதலாலே ரக்ஷய பூதரான தம்மையம் ரக்ஷகனான் அவனையும் மறந்து, தம்மை ரக்ஷகராகவும் அவனை ரக்ஷ்யனாகவு மெண்ணி அவனுக்குப் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்” டென்று தொடங்கி மங்களாசாஸநம் செய்தருளின பெரியாழ்வாருடைய திருவடிகளையே அநவரதம் தியானித்தருளும் எம்பெருமானாருடைய குணங்களைச் சிந்திக்க  கில்லாத மனிசரோடு நான்ஸஹவாஸம் செய்ய மாட்டேண்; இந் நினைவு பிறந்தபின் இனி எனக்கு ஒரு குறையுமில்லை – என்றாராயிற்று.

முன்னிரண்டடிகளிற் குறிக்கப்பட்டுள்ள சரிதையின் விரிவு பெரியாழ்வார் வைபவத்திற் காணத் தக்கது

————

தாழ்வொன்றில்லா மறை தாழ்ந்து தல முழுதுங் கலியே

ஆள்கின்ற நாள் வந் தளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி

சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல்லருளால்

வாழ்கின்ற வள்ளல் இராமா னுசனென்னும் மா முனியே.–16–

 

பதவுரை

அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையை

ஸ்ரீ ரங்கநாதனுடைய திரு முடியிலே சாத்தக் கடவதான பூமாலையை
சூடி கொடுத்தவள்

தனது திருக்குழலிலே அணிந்து வாஸித மாக்கிக் கொடுத்தவளான ஆண்டாளுடைய
தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல்

அவ்யாஜமான அருளாலே வாழ்பவரும் உதாரருமான
இராமாநுசன் என்னும் மா முனி

ஸ்ரீ ராமாநுஜ முனியானவர் (எப்படிப் பட்டவரென்றால்)
தாழ்வு ஒன்று இல்லா மறை

ஒரு குறையுமில்லாதிருந்த வேதமானது
தாழ்ந்து

(குத்ருஷ்டிகளாலே)இழிவு பெற
தலம்

முழுதும் பூமியெங்கும்
கலியே ஆள்கின்ற நாள்

கலியே ஸாம்ராஜ்யம் பண்ணுகிற காலத்திலே
வந்து

இங்கே வந்தவதரித்து
அளித்தவன் காண்மின்

(அந்த வேதத்தை உத்தரிப்பித்து உலகத்தை)ரக்ஷித்தருளினவர்.

—————-

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்

கனியார் மனம் கண்ண மங்கை நின்றானைக் கலை பரவும்

தனி யானையைத் தண் டமிழ் செய்த நீலன் றனக்குலகில்

இனியானை எங்கள் இராமானுசனை வந் தெய்தினரே.–17-

 

பதவுரை

கலை பரவும் தனி ஆனையை

ஸகல சாஸ்த்ரங்களாலும் துதிக்கப் பெற்ற அத்விதீயமான மத்த கஜம் போன்ற
கண்ண மங்கை நின்றானை

திருக்கண்ண மங்கையிலே நிற்கும் பத்தராவிப்பெருமாளைக் குறித்து
உலகில்

இவ்வுலகில்
தண் தமிழ் செய்த

ஸம்ஸார தாப ஹரமான திவ்ய ப்ரபந்தத்தைச் செய்தருளின
நீலன் தனக்கு

திருமங்கையாழ்வார் பக்கல்
இனியானை

ப்ரேம முடையவராய்
எங்கள்

எங்களுக்குத் தலைவரான
இராமாநுசனை

எம்பெருமானாரை
வந்து எய்தினர்

வந்து பணிந்த மஹான்கள்
துயரங்கள் முந்திலும் முனியார்

தாப த்ரயம் செறிந்தாலும் வருத்தப் பட மாட்டார்கள்
இன்பங்கள் மொய்த்திடினும் மனம் கனியார்

ஸுகங்கள் செறிந்தாலும் களிப்படைய மாட்டார்கள்

ஸகல சாஸ்த்ர ப்ரதிபாத்யனான எம்பெருமானைத் தம்முடைய திவ்ய ப்ரபந்தங்களிலே அமைத்துப் பாடின திருமங்கை யாழ்வார்க்கு அந்தரங்க பக்தரான எம்பெருமானாரை ஆச்ரயித்த மஹான்கள் ஸுக துக்கங்கள் மேலிடுங் காலத்தில் மற்ற ஸம்ஸாரிகளைப் போல் ஹர்ஷ சோகங்களை யடையாமல் எவ்வித விகாரமும் அற்றிருப்பர்கள்;

நீங்களும் ஹர்ஷ சோகங்களில் கலங்கவேண்டா என்றபடி

கண்ண மங்கை நின்றானை = திருப்பதிகட்கும் புக்குக் கவி பாடின கலியன் என்றபடி.

நீலன் = திருமங்கையாழ்வாருடைய திருநாமங்களில் ஒன்று.

———–

எய்தற் கரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்

செய்தற் குலதில் வரும் சட கோபனைச் சிந்தையுள்ளே

பெய்தற் கிசையும் பெரியவர் சீரை உயிர்களெல்லாம்

உய்தற் குதவும் இராமா னுசனெம் உறு துணையே.–18-

 

பதவுரை

எய்தற்கு அரிய மறைகளை

அதிகரிக்க முடியாத (அளவற்ற) வேதங்களை
இன் தமிழ் ஆயிரத்தால்

இனிய தமிழாவாகிய ஆயிரம் பாசுரங்களினால்
செய்தற்கு உலகில் வரும்

அருளிச் செய்வதற்காக  இவ்வுலகில் வந்துதித்த
சடகோபனை

நம்மாழ்வாரை
சிந்தை உள்ளே

தமது ஹிருதயத்தினுள்ளே
பெய்தற்கு இசையும்

த்யானிப்பதற்கு இணங்கின
பெரியவர்

ஸ்ரீ மதுரகவிகளுடைய
சீரை

ஜ்ஞாநாதி குணங்களை
உயிர்கள்  எல்லாம் உய்தற்கு உதவும்

ஸகலாத்மாக்களும் உஜ்ஜீவிக்குமாறு உபகரித்தருளா நிற்கிற
இராமாநுசன்

எம்பெருமானார்
எம் உறு துணை

எமக்கு உற்றதுணை

வேதந் தமிழ் செய்த மாறன் சடகோபனையே வாழ்த்தும் ஸ்ரீ மதுரகவிகளின் பக்தரான எம் பெருமானார் நமக்கு உற்ற துணை யென்றாராயிற்று.

இப்பாட்டில் ஸ்ரீ மதுரகவிக்ள பெரியவர் என்று சிறப்பித்துக் கூறப்பட்டமை நோக்கத்தக்கது.

“புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ யென் செவியின் வழிபுகுந்து என்னுள்ளாய் அவிவின்றி யான் பெரியன் நீ பெரியை யென்பதனை யாரறிவார், ஊன்பருகு நேமியாயுள்ளு” (பெரிய திருவந்தாதி) என்று பெரிதான பரப்ரஹமத்தை உள்ளடக்கின பெரியவரை (நம்மாழ்வாரையும்) உள்ளடக்கின பெரியவரிறே மதுரகவிகள்.

————

 

உறு பெருஞ் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்

வெறி தரு பூமகள் நாதனும் மாறன் விளங் கியசீர்

நெறி தரும் செந்தமிழ் ஆரணமே யென்றிந் நீணிலத்தோர்

அறி தர நின்ற, இராமா னுசனெனக் காரமுதே.–19-

 

பதவுரை

உறுபெரு செல்வமும் தந்தையும் உயர் குருவும்

சிறந்த பெரிய ஸம்பத்தும் மாதா பிதாக்களும் ஸதாசார்யனும்
வெறி தரு பூமகள் நாதனும்

மணம் மிக்க பூவைப் பிறப்பிடமாக வுடைய பெரிய பிராட்டியாருக்குக் கொழுநனான ஸர்வேச்வரனும் (ஆகிய எல்லாம்
மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று

நம்மாழ்வார் (தமக்கு) ப்ரகாசித்த பகவத் குணங்களின் அடைவே அருளிச் செய்த செந்தமிழ் வேதமே யென்று
இ நீள் நிலத்தோர் அறிதர நின்ற

இப் பெரிய வுலகிலுள்ளார் யாவரும் அறியும்படி நின்ற
இராமாநுசன்

எம்பெருமானார்
எனக்கு

அடியேனுக்கு
ஆர் அமுது

பரம போக்யர்

நம்மாழ்வாரருளிச்செய்த திருவாய் மொழி தான் நமக்கு ஸர்வ ஸ்வம்’ என்கிற அத்ய வஸாய முடைய உடையவர் திருத்து அடியேன் அநந்ய போக்யத்வ புத்தியை யுடையேன் என்றாராயிற்று.

மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செந்தமிழாரணம் ஸ்ரீ திருவாய் மொழியில் ஒவ்வொரு திருவாய்  மொழியிலும் எம்பெருமானாடைய ஒவ்வொரு திவ்யகுணத்தை வெளியிட்டிருக்கிறார்;

அது வெளியிட்டவாறு என்னென்னில்,

எம்பெருமான் ஆழ்வார்க்கு எந்த க்ரமமாகக் குணங்களை அநுபவிப்பித்தானோ அந்த க்ரமமாகவே இவர் வெளியிட்டாரென்க.

—————

ஆரப் பொழில் தென் குருகைப் பிரான்,அமுதத் திருவாய்

ஈரத் தமிழின் இசை யுணர்ந் தோர்கட்கு இனியவர் தம்

சீரைப் பயின்றுய்யும் சீலங்கொள் நாத முனியை நெஞ்சால்

வாரிப் பருகும் இராமானுசனென் றன் மா நிதியே.–20-

.

பதவுரை

ஆரம் பொழில்

சந்தனச் சோலைகளை யுடைய
தென் குருகை

அழகிய திருக் குருகூரிலே (அவதரித்த)
பிரான்

மஹோபகாரகரான ஆழ்வாருடைய
அமுதம் திருவாய்

பரம போக்யமான திருப் பவளத்தில் பிறந்த
ஈரம் தமிழன் இசை

ஈரச் சொல்லாகிய திருவாய்மொழியின்  இசையை
உணர்ந்தோர்கட்கு

அறிந்தவர்களுக்கு
இனியவர் தம்

இஷ்டராயிருப்பவர்களுடைய
சீரை

குணங்களை
பயின்று

அப்யஸித்து
உய்யும் சீலம் கொள்

ஸத்தை பெறும் சீலத்தை யுடையரான
நாதமுனியை

நாத முனிகளை
நெஞ்சால்

தம் திருவுள்ளத்தாலே
வாரி பருகும்

அபி நிவேசத்தோடு அனுபவிக்கின்ற
இராமாநுசன்

எம்பெருமானார்
என் தன் மாநிதி

எனக்கு அக்ஷயமான நிதி.

—————

நிதியைப் பொழியும் முகில் என்று நீசர் தம் வாசல் பற்றித்

துதி கற் றுலகில் துவள்கின்றிலேன், இனித் தூய் நெறி சேர்

எதிகட் கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்

கதி பெற்றுடைய இராமா னுச னென்னைக் காத்தனனே.-21–

 

பதவுரை

தூய் நெறி சேர்

பரிசுத்தமான அனுட்டானமுடைய யதிகளுக்கு
இறைவன்

தலைவரான
யமுனைத் துறைவன்

ஆளவந்தாருடைய
இணை அடி ஆம் கதி

உபய பாதங்களாகிற ப்ராப்யத்தை
பெற்று

பெற்று (அ தனாலே)
உடைய

உலகத்தார்க் கெல்லாம் ஸ்வாமியாயிருக்கிற
இராமாநுசன்

எம்பெருமானார்
என்னை காத்தனன்

என்னை ரக்ஷித் தருளினார்; (ஆன பின்பு)
இனி

இனிமேல்,
நிதியை பொழியும் முகில் என்று

“நிதிகளை வர்ஷிக்கிற மேகமே!” என்று
துதி கற்று

ஸ்தோத்ரங்களைப் பண்ணிக் கொண்டு
உலகில்

இவ்வுலகத்தில்
நீசர் தம்

நீசராயிருப்பவருடைய
வாசல் பற்றி

வாசலைப் பற்றி நின்று
துவள்கின்றிலேன்

வருந்த மாட்டேன்

நேற்று வரையிலும் நான் கண்டபேர்களுடைய வாசற் கடைகளிலும் போய் நின்று வாயைக் காட்டி வயிற்றைக் காட்டி “மஹாநிதிகளைப் பொழிகின்ற மேகமே!” என்று பொய்யான நரஸ் துதிகளைச் செய்து துவண்டேன்;

இன்று முதல் எந்நாளும் இனி நான் அவ்வாறு துவள மாட்டோன்; ஒரு நீசனுடைய வாசலையும் பற்றமாட்டேன்.

இன்று நான் எம்பெருமானாருடைய ஸம் ரக்ஷணைக்கு ஆளாய்விட்டேன்;

அவரோ, எதிரிகளுக்குத் தலைவரான ஆளவந்தாருடைய ஸம்ரக்ஷணையைப் பெற்று உய்ந்தவர்;

அவராலே ஸம் ரக்ஷிக்கப் பெற்றேனான பின்பு இனி நான் எதுக்காக ஒரு நீசன் வாசலைப் பற்றித் துவளகிறேன்.

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி-1-7 -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்

July 3, 2022

ஸ்ரீ பெரிய கோயில் நம்பி என்ற இவர் அருளிச் செய்த திவ்ய பிரபந்தத்தைத் திருச்செவி சாத்தி அருளி-அமுதன் என்ற திருநாமமும் பிரசாதித்து அருள ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் ஆனார்

அந்தாதி -அந்தத்தையே ஆதியாகக் கொண்டது -அந்த ஆதி -எழுத்து அசை சீர் அடி -ஏதாவது அந்தமும் ஆதியும் -பொருள் அந்தாதியும் உண்டே

ப்ரபந்ந சாவித்ரி காயத்ரி என்று பூர்வர்கள் கொண்டாடுவார்கள்

சரம திவ்ய பிரபந்தம் -கைங்கர்யத்தில் களை அறுப்பதான இயற்பாவில் சேர்த்தார்கள்

மூன்று சாற்றுப் பாசுரங்கள் கொண்டு வீறு பெற்று இருக்கும் திவ்ய பிரபந்தம் இது

———-

ஸ்ரீ வேதப்பிரான் பட்டர் அருளிச் செய்த தனியன் –

முன்னை வினை அகல மூங்கில் குடி யமுதன்
பொன்னம் கழல் கமலப் போது இரண்டும் -என்னுடைய
சென்னிக்கு அணியாகச் சேர்த்தினேன் தென் புலத்தார்க்கு
என்னுக் கடவுடையேன் யான்

தெற்குத் திக்கில் உள்ள யம கிங்கர்கட்க்கு ஏதுக்காகப் பிராப்தி யுடையேன் -என் அருகில் வர ப்ரஸக்தியே இல்லையே –
என்னுக்கு கடவுடையேன் -என்னுக் கடவுடையேன் -கடைக்குறை -கடவு -பிராப்தி -உரிமை

———-

நயம் தரு பேர் இன்பம் எல்லாம் பழுது என்று நண்ணினர் பால்
சயம் தரு கீர்த்தி ராமானுஜ முனி தாளிணை மேல்
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்து அமுது ஓங்கும் அன்பால்
இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சே

நயம் தரு பேர் இன்பம் எல்லாம் -விஷயங்களால் தரப்படும் சிற்றின்பங்கள் யாவும்
பிரமித்து இருப்பார் கருத்தால் பேர் இன்பம் என்கிறார்
நாணாமை நள்ளேன் நயம்-63- -முதல் திருவந்தாதி என்ற இடத்திலும் நயம் -விஷயாந்தரங்கள்

தோளவனை யல்லால் தொழா என் செவி யிரண்டும்
கேள்வன தின் மொழியே கேட்டிருக்கும் -நா நாளும்
கோணா கணையான் குரை கழலே கூறுவதே
நாணாமை நள்ளேன் நயம்  ——-63-நயம்–சப்தாதி விஷயங்களை

நாணாமை நள்ளேன் நயம்  —–ஆசைப்படுவதான-சப் தாதிகளை லஜ்ஜியாதே கிட்டேன் –-ஹாஸ்யமான விஷயம் என்றுமாம் –

பழுது என்று நண்ணினர் பால் -வியர்த்தங்கள் என்று அவற்றை விட்டு ஒழிந்து தம்மை ஆஸ்ரயித்தவர்கள் விஷயத்தில்
சயம் தரு கீர்த்தி -ஸம்ஸார ஜயத்தைப் பண்ணிக் கொடுக்கும் புகழுடையரான
ராமானுஜ முனி தாளிணை மேல் -எம்பெருமானார் திருவடி இணைகள் விஷயமாக
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்து அமுது ஓங்கும் அன்பால் -சிறந்த குணசாலியான அமுதனார் கொழுந்து விட்டு ஓங்கிய பக்தியினால்
இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சே -அருளிச் செய்த இப்பிரபந்தம் அத்யயனம் செய்ய சம்மதித்து இருக்கக் கடவை
நெஞ்சுடைய அனுகூல்யம் பெறப் பாரிக்கிறார்

ஆயிழையார் கொங்கை தங்கும் அக்காதல் அளற்ற அழுந்தி மாயும் என் ஆவியை வந்து எடுத்தான் இன்று -அமுதனாரும்

மதந கதநைர் ந க்லிஸ்யந்தே யதீஸ்வர ஸம்ஸ்ரயா -தேசிகன்

காமாதி தோஷ ஹரம் ஆத்ம பதாஸ்ரிதாநாம் -மா முனிகள்

பழுதின்றி நண்ணினம்பால் -என்றும்
பழுதின்றி நண்ணி நன் பால் -என்றும் பாடபேதங்கள்

சயம் -ஜயம் -நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே -போல் மீசை முறுக்கிச் சொல்லப் பண்ணுகை

முதல் சீர் நான்கும் வெண்டளை பிழையாக் கடை ஒரு சீரும் விளங்காயாகி நேர் பதினாறே நிறை பதினேழு -என்று ஓதினர் கலைத் துறைக்கு ஓர் அடிக்கு எழுத்தே –
முதல் நான்கும் ஈர் அசைச் சீர்கள் –
பெரும்பாலும் ஏகார ஈற்றும் சிறு கால் ஓ கார ஈற்று
இப்பிரபந்தத்தில் ஏகார ஈற்று
திருவிருத்தத்தில் -கோலப் பகல் களிறு ஓன்று கற்புய்ய-40 பாசுரம் ஒன்றே ஓ கார ஈற்று-

சொல் தொடர் நிலை அந்தாதி-

————–

சொல்லின் தொகை கொண்டு உனதடிப் போதுக்குத் தொண்டு செய்யும்
நல் அன்பார் ஏத்தும் உன் நாமம் எல்லாம் என் தன் நாவினுள்ளே
அல்லும் பகலும் அமரும்படி நல்கு அறு சமயம்
வெல்லும் பரம இராமானுசா இது என் விண்ணப்பமே

கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே வந்து அருளின ஸ்வாமி

தேவரீருடைய திருவடிவாரத்தில் சீலமில்லாச் சிறியேன்
செய்யும் விண்ணப்பம் ஈது ஒன்றே

தங்கள் அன்பர் ஆரத் தமது சொல் வலத்தால் தலைத்தலைச் சிறந்து பூசிப்ப -திருநாம சங்கீர்த்தனம் பண்ணுவார்கள் அன்றோ –
அத்திரு நாமங்கள் இடைவிடாது என் நாவிலே திகழும்படி அனுக்ரஹித்து அருள வேணும் –
இது ஒன்றே யாய்த்து அடியேனுடைய பிரார்த்தனை –

தொகை -ஸங்க்யை -நூற்று எட்டு பாசுரங்கள் பாட வேணும் என்கிற ஸங்கல்பம்

எங்கள் கதியே ராமானுஜ முனியே சங்கை கெடுத்தாண்ட தவராசா
பொங்கு புகழ் மங்கையர் கோன் ஈந்த மறை ஆயிரம் அனைத்தும்
தங்கும் மனம் எனக்குத் தா -போல் இதுவும்

———-

மற்ற ஒரு தனியன் மேல் நாட்டில் அனுசந்திக்கப் படுகிறது-

இனி என் குறை நமக்கு எம்பெருமானார் திரு நாமத்தால்
முனி தந்த நூற்று எட்டுச் சாவித்ரி என்னும் நுண் பொருளைக்
கலி தந்த செஞ்சொற் கலித்துறை யந்தாதி பாடித் தந்தான்
புனிதன் திருவரங்கத்து அமுதாகிய புண்ணியனே

ஸர்வேஸ்வரன் ஸங்கல்ப பூர்வகமாக உலகத்தைப் படைத்து சதுர்முக ப்ரஹ்மாவுக்கு சாவித்ரியை உபதேசித்தான்
இந்த அமுதனார் அந்த சாவித்ரியின் சாரார்த்தத்தை எடுத்து இராமானுசன் என்னும் திரு நாமத்துடன் இணக்கிக் கட்டளை கலித்துறையிலே வைத்து
தனது அனுபவ பரிவாஹ ரூபமாக இந்த நூற்றந்தாதியை நமக்கு உபகரித்து அருளினார்
இனி நமக்கு ஐஹிக ஆமுஷ்மிகங்களிலே ஒரு குறையும் இல்லையே

திருப்பெயரால் -என்ற பாடம் வெண்டளைக்குச் சேரும் –

————

ஸகல சாஸ்த்ரங்களுக்கும் ஸங்க்ரஹம் திரு அஷ்டாக்ஷரம்
அதனுடைய பரம தாத்பர்யமாயும்
ஆழ்வார்களின் அருளிச் செயல்களின் ஸாரார்த்தமாயும்
பூர்வாச்சார்யர்கள் உபதேச பரம்பரையாலே ப்ராப்தமாயும்
சேதனர்கள் அனைவருக்கும் இன்றியமையாத ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களின் நிஷ்க்ருஷ்ட வேஷமாயும்
பரம ரஹஸ்யமாயும் இறே
இருப்பது சரம பர்வ நிஷ்டை

அஃது இருக்கும்படியை திருவரங்கத்து அமுதனாருக்கு எம்பெருமானார் தனது நிர்ஹேதுக கிருபையினாலேயே

கூரத்தாழ்வான் திருவடிகளில் தம்மை ஆஸ்ரயிப்பித்து அருளி -அவர் முகமாக உபதேசித்து அருளினார்
அந்த உபதேச ப்ராப்தமான சீரிய பொருளை அனவ்ரதம் பாவனை பண்ணி எம்பெருமானார் திருவடிகளை

சேவித்துக் கொண்டு போந்த அமுதனார்
அவருடைய திருக்கல்யாண குணங்களைத் தம்முடைய பக்திப் பெரும் காதலுக்குப் போக்குவீடாகப் பேசி

அனுபவித்துத் தீர வேண்டிய அவஸ்தை பிறந்து சரம பர்வ நிஷ்டையே சீரியது என்னும் பரம அர்த்தத்தை

சேதனர்களுக்கு உணர்த்த வேணும் என்னும் கிருபா மூலகமான திரு உள்ளத்தாலும்
எம்பெருமானாருடைய திவ்ய குண சேஷ்டிதாதிகளை ப்ரேமத்துக்குத் தகுதியான பாசுரங்களாலே பேசி
மதுரகவி நிஷ்டையை உபதேசிக்கும் முகத்தால் ஆச்சார்ய அபிமான நிஷ்டர்களுக்கு அறிந்து கொள்ளத் தக்க அர்த்தங்களை

எல்லாம் இந்த திவ்ய பிரபந்த முகத்தால் அருளிச் செய்கிறார்

————

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறன் அடி பணிந் துய்ந் தவன் பல் கலையோர்
தாம் மன்ன வந்த இராம னுசன் சரணாரவிந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே! சொல்லு வோமவன் நாமங்களே.–1-

 

பதவுரை

நெஞ்சே!

ஓ மனமே!
பூ மன்னு மாது

தாமரைப் பூவில் பொருத்த முடையளாயிருந்த பிராட்டி
பொருந்திய மார்பன்

(அப் பூவை விட்டு வந்து) பொருந்துகைக்குறுப்பான போக்யதையை யுடைய  திருமார்பை யுடையனான பெருமானுடைய
புகழ் மலிந்த பா

திருக் கல்யான குணங்கள் நிறைந்த தமிழ்ப் பாசுரங்களிலே
மன்னு மாறன்

ஊற்றமுடையவரான நம்மாழ்வாருடைய
அடி

திருவடிகளை
பணிந்து

ஆச்ரயித்து
உய்ந்தவன்

உஜ்ஜீவித்தவரும்
பல் கலையோர் தாம் மன்ன வந்த

ஓதின மஹான்கள் நிலை பெறும்படி (இவ் வுலகில்) வந்தவதரித்த வருமான
இராமாநுசன்

எம்பெருமானுடைய
சரணாரவிந்தம்

திருவடித் தாமரைகளை
நாம் மன்னி வாழ

நாம் ஆச்ரயித்து வாழ்வதற்குறுப்பாக
அவன் நாமங்களே

அவ் வெம்பெருமானாரது திருநாமங்களையே
சொல்லுவோம்

ஸங்கீர்த்தநம் பண்ணுவோம்

தாமரை மலரிற் பிறந்த பெரிய பிராட்டியார் அப்பூவைவிட்டு “அகலகில்லேன் இறையும்” என்று வந்து மிக்க விருப்பத்துடன் வஸிக்கப் பெற்ற திருமார்பை யுடையனான திருமாலினது திவ்ய குணசேஷ்டிதங்களை நிறைத்துக்கொண்டிருக்கிற திருவாய்மொழி முதலான திவ்ய ப்ரபந்தங்களை அருளிச் செய்த நம்மாழ்வாருடைய திருவடிகளைதொழுது ஸத்தை பெற்றவாயும்,

பலபல சாஸ்த்ரங்களைக்கற்றும் உஜ்ஜீவநோபாயத்தில் த்ருடாத்யவஸாயமின்றியே ஸம்சய விபர்யயங்கள் கொண்டு தடுமாறு கின்றவர்களை ஒரு நிச்சயஜ்ஞானத்திலே நிலை நிறுத்தி வாழ்விக்கவந் ரதவதரித்தவராயுமிருக்கிற

எம்பெருமானாருடைய திருவடிகளை நாம் ஆச்ரயித்து உஜ்ஜீவிக்குமாறு அவருடைய திருநாமங்களை வாயாரப் பேசுவோமென்று தமது திருவுள்ளத்தை நோக்கிச் சொல்லுகிறாராயிற்று.

பல் கலையோர் தாம் மன்ன = நாநா சாஸ்த்ரங்களைக் கற்று வல்லவர்களான ஆழ்வான் ஆண்டான் எம்பார் முதலிய மஹான்கள் ப்ரதிஷ்டிதராகைக்காக என்றுமாம்.

எம்பெருமானாருடைய சரணாரவிந்த ப்ராப்திக்கும் ஸாதநம் அவருடைய திருநாம ஸங்கீர்த்தநமேயாம் என்பது இப்பாசுரத்தின் கருத்து

பூ -மங்கள சொல் முதலில்
திருச்சந்த விருத்தத்தில் ஸப்த சக்தியால் மங்களம் -அர்த்தத்தில் பூமி அங்கு

ஆழ்வார் திருவடிகளில் ப்ராவண்யத்தையே பெரிய வைபவமாக அத்யவசித்து இருப்பார் என்பதால் மாறன் அடி பணிந்து உய்ந்தவன் என்கிறார்
ஸ்ரீ மாதவ அங்க்ரி ஜலஜத்வய நித்ய ஸேவா ப்ரேமா விலாஸய பராங்குச பாத பக்தம் –மா முனிகள்

பா மன்னு மாறன்
ஆழ்வார் தாமும் -பாவின் இன்னிசை -அருளிச் செயல்களின் இனிமையைக் கண்டு ஊற்றம் உடையராய் –
தன் சீர் யான் கற்று மொழி பட்டோடும் கவி யமுத நுகர்ச்சி யுறுமோ முழுவதுமே -என்றும்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன் மாலைகள் சொன்னேன் -என்றும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே -என்றும்
தாமே அருளிச் செய்தார் இறே

மாறன் -லோக வியாபாரத்துக்கு மாறாக இருந்தவர்
வலிய வினைகட்க்கு மாறாக இருந்தவர்

————-

கள்ளார் பொழில் தென் னரங்கன் கமலப் பதங்கள்நெஞ்சிற்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரானடிக் கீழ்
விள்ளாத அன்பன் இராமானுசன் மிக்க சீலமல்லால்
உள்ளாதென் னெஞ்சு ஒன்றறியேன் எனக்குற்ற பேரியல்வே.-2-

பதவுரை

கள் ஆர் பொழில் தென் அரங்கன்

தேன் நிறைந்த சோலைகளை யுடைய தென் திருவரங்கத்திலே பள்ளி கொள்ளும் பெருமானுடைய
கமலம் பாதங்கள்

தாமரை போன்ற திருவடிகளை
நெஞ்சில் கொள்ளா

தமது நெஞ்சிலே வையாத
மனிசரை நீங்கி

மனிதர்களை விட்டொழித்து,
குறையல் பிரான் அடி கீழ் விள்ளாத அன்பன்

திருமங்கை மன்னனுடைய திருவடிகளிலே என்றும் விட்டு நீங்காத பக்தியை யுடையரான
இராமாநுசன்

எம்பெருமானாருடைய
மிக்க சீலம் அல்லால்

சிறந்த சீல குணத்தைத் தவிர
ஒன்று

வேறொன்றையும்
என் நெஞ்சு உள்ளாது

எனது நெஞ்சானது நினைக்க மாட்டாது;

(இவ்வாறாக)

எனக்கு உற்ற பேர் இயல்வு

எனக்கு ஸித்தித்ததொரு சிறந்த ஸ்வபாவத்திற்கு
ஒன்று அறியேன்

ஒரு காரணத்தையும் அறிகின்றிலேன்.

ஸ்ரீ ரங்கநாதனுடைய திருவடித் தாமரைகளை நெஞ்சாலும் நினையாத பாவிகளொடு நெடுங்காலம் பழகிக் கிடந்த என் நெஞ்சானது இன்று அப் பாவிகளோடு உறவை ஒழித்து விட்டு, திருமங்கையாழ்வாருடைய திருவடிகளையே அநவரதம் இறைஞ்சுமவரான எம்பெருமானாருடைய சிறந்த சீலகுணமொன்றையே சிந்தியா நின்றது;

இப்படிப்பட்டதொரு பெருந் தன்மை எனக்கு நேர்ந்ததற்குக் காரணம் அவ்வெம்பெருமானாருடைய நிர்ஹேதுக  க்ருபா கடாக்ஷமே யொழிய வேறொன்றுண்டாக நானறிகின்றிலேன் என்றவாறு.

நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்கள் என்ற உடனே ஆழ்வார் திரு உள்ளம் ராமாநுசருடைய சீல குணத்தில் ஆழ்ந்தது பற்றி விஸ்மயப் படுகிறார்
இப்படிப்பட்ட பெரும் தன்மைக்குக் காரணம் அவரது நிர்ஹேதுக கிருபா கடாக்ஷமே

மண்ணியில் நீர் தேங்கும் குறையலூர் சீர்க் கலியன் தோன்றிய வூர்–உபதேச ரத்ன மாலை

குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன் என்கிற விசேஷம் வீறு பெறும்படி திருவாலி திரு நகரியில்
திருமங்கை மன்னன் பாதார விந்த பீடத்தின் கீழ் எம்பெருமானார் திருக்கோலம் ஏறி அருளப்பட்டு இருப்பது ஸேவிக்கத் தக்கது –

சீலம் -மஹான் மந்தமதி -நீசனான தம்மோடு புரையறக் கலந்த சீர்மை –
இது எனக்கு ஸித்தித்த பெரிய விரகு -பேர் இயல்வு

ஓன்று -கீழும் மேலும் அந்வயிக்கும்
மிக்க சீலம் அல்லால் ஓன்று உள்ளாது என்றும்
எனக்குற்ற பேர் இயல்வு ஓன்று அறியேன் -என்றும் கொள்ளலாம்-

—————-

பேரியல் நெஞ்சே! அடி பணிந் தேனுன்னைப் பேய்ப் பிறவிப்
பூரிய ரோடுள்ள சுற்றம் புலத்திப் பொரு வருஞ்சீர்
ஆரியன் செம்மை இராமா னுசமுனிக் கன்பு செய்யும்
சீரிய பேறுடை யார் அடிக் கீழென்னைச் சேர்த்ததற்கே.–3-

பதவுரை

பேர்இயல் நெஞ்சே!

மிகவும் கம்பீரமான மனமே!
உன்னை அடிபணிந்தேன்

உன்னை வணங்குகின்றேன்; (எதற்காக என்னில்;
பேய் பிறவி

ஆஸுரப் பிறப்பை யுடையவர்களான
பூரியரோடு உள்ள சுற்றம்

நீசர்களோடு (எனக்கு) இருந்த உறவை
புலர்த்தி

போக்கடித்து
பொருவு அரு சீர்

ஒப்பற்ற குணங்களை யுடையவரும்
ஆரியன்

சிறந்த அநுஷ்டாக முடையவரும்
செம்மை

(ஆச்ரிதரோடு) ருஜூவாகப் பரீமாறுந்தன்மை வாய்ந்தவருமான
இராமாநுச முனிக்கு

எம்பெருமானார் திறத்தில் அன்பு செய்யும் சீரிய பேறு
உடையார்

பக்தி பண்ணுவதையே  பரம புருஷார்க்தமாக வுடையவர்களான  கூரத்தாழ்வான் போல்வாருடைய
அடிக் கீழ்

திருவடிகளின் கீழே
என்னை

(பரம நீசனாயிருந்த) என்னை
சேர்த்ததற்கே

கொண்டு சேர்த்த மஹோபகாரத்திற் காகவே (உன்னை அடி பணிந்தேன்)

பரம நீசர்களோடு எனக்கிருந்த ஸம்ஸர்க்கத்தைப் போக்கடித்து, ஒப்பற்ற குணசாலியான எம் பெருமானாருடைய

திருவடிகளின் ப்ராவண்யமாகிற பரம புருஷார்த்தத்தைப் பெற்றுள்ள ஆழ்வான் போல்வாருடைய திருவடிகளின் கீழே

என்னைக் கொண்டு சேர்த்த நெஞ்சே!

இப் பெரு நன்றி புரிந்த உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?

“தலை யல்லால் கைம்மாறிலேனே” என்றாற் போல உன்னைத் தலையால் வணங்குவது தவிர

வேறோரு கைம்மாறு நான் செய்யகில்லேன் என்றாராயிற்று.

பூரியர் -இழி பிறப்பாளர்.

புலர்த்துதல் – உலாச்செய்தல்; அதாவது போக்கடித்தல்;

பொருவு – ஒப்பு.

இராமாநுசனடிக் கன்புசெய்யுஞ் சீரிய பேறுடையார்” என்றவிடத்து -ராமாநுஜ பக்தர்களெல்லாரையும் விவக்ஷிக்கிறார். என்றலும்,

கூரத்தாழ்வானை விசேஷித்துக் கருதுகின்றா ரென்றலும் ஒக்கும்.

மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ -நெஞ்சு உடன்பட்டதுக்கு நமஸ்கரிக்கிறார்

ஆரியன் -கர்தவ்யம் ஆசரன் காமம் அகர்தவ்யம் அநா சரன் திஷ்டாதி ப்ரக்ருதா சாரே சது ஆர்ய இதி ஸ்ம்ருத

செம்மை -ஆர்ஜவம் -ருஜு -கௌடில்யத்துக்கு எதிர்மறை -உள்ளத்தை உள்ளபடி சொல்லுகையும் செய்கையும்
ஆஸீத் தசராதோ நாம ராஜா -இத்யாதி பெருமாள் சூர்பணைக்கும் நேராக உத்தரம் சொன்னது போல் –

————-

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி மருள் சுரந்த
முன்னைப் பழ வினை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமுமென்
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கேதும் சிதைவில்லையே.–4-

பதவுரை

ஊழி முதல்வனையே

காலம் முதலிய ஸகல பதார்த்தங்களுக்கும் காரண பூதனான எம் பெருமானையே
பன்ன

(எல்லாரும் விவேகித்து) அநுஸந்திக்கும்படி
பணித்த

(ஸ்ரீபாஷ்ய முகத்தாலே) அருளிச் செய்த
பரன் இராமாநுசன்

ஸர்வோத்க்ருஷ்டரான எம்பெருமானார்
புவியில்

இந்தப் பூமியிலே
என்னை ஒரு பொருள் ஆக்கி

(அபதார்த்தமாய்க் கிடந்த) என்னை ஒரு பதார்த்தமாக்கி
மருள் சுரந்த முன்னை பழை வினை வேர் அறுத்து

அஜ்ஞான மூலகங்களாய் மிகவும் அநாதிகளான (எனது) பாவங்களை வேரறநீக்கி
பாதமும்

தமது திருவடிகளையும்
என் சென்னி

எனது தலையிலே
தரிக்க வைத்தான்

நான் உகந்து தரிக்கும் படியாக வைத்தருளினார்; (இவ்வளவு மஹா ப்ரஸாதம் பெற்றோனான பின்பு)
எனக்கு

அடியேனுக்கு
ஏதும் சிதைவு இல்லை

எவ்விதமான ஹாநியும் இனி உண்டாக வழியில்லை.

எம்பெருமானாருடைய நிர்ஹேதுக விஷயீகாரத்திற்கு ஆளான நான் இனி ஒருநாளும் எவ்விதமான ஹாநியையும் அடைமாட்டேன் என்கிறார், பதார்த்த கோடியில் சேராமல் துச்சனாயிருந்த எனது கருமங்களை யெல்லாம் வேரற நீக்கி, தமது பாதார விந்தங்களையும் என் தலைமேலே வைத்தருளினார் எம்பெருமானார்; இப்பேறு பெற்ற எனக்கு  இனி ஒரு குறையுமில்லை என்றாராயிற்று.

மருள் சுரந்த – அஜ்ஞாந்த்தாலே செய்யப்பட்ட என்கை; மருளாலே சுரக்கப்பட்ட என்றவாறு.

(ஊழி முதல்வனையே பன்னப் பணித்த) ஊழி முதல்வனான எம்பெருமானையே பரவும்படி அமுதனாராகிய தம்மைச் செய்தருளின – என்று அர்த்தமல்ல; பகவத் விமுகரா யிருந்தவர்களை யெல்லாம் உபதேசாதி முகத்தாலே பகவத் ப்ரவணராம்படி செய்தருளினவர் என்று பொதுப் படையாகச் சொன்னபடி. ஊழி முதல்வன் – பிரளய காலத்தில் முழு முதற் கடவுளாயிருந்தவன் என்றுமாம்.

பரன் என்று பரம புருஷனான எம்பெருமானையே சொல்லி
அவனுடைய திருவடிகளையும் எனது சென்னியில் தரிக்க வைத்தான் என்றதாகவுமாம்
பரன் பாதம் என சென்னித் தரிக்க வைத்தான் –என்றும் பாட பேதம்

————–

எனக்குற்ற செல்வம் இராமானுச னென்று இசைய கில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர்
தனக்குற்ற அன்பர் அவந்திரு நாமங்கள் சாற்றுமென்பா
இனக் குற்றம் காண கில்லார், பத்தி ஏய்ந்த இயல்வி தென்றே.–5-

பதவுரை

எனக்கு உற்ற செல்வம் இராமாநுசன் என்று

‘நமக்கு ப்ராப்தமான ஸம்பத்து எம்மெருமானாரே’ என்று
இசைய கில்லா

அத்யவஸாயங் கொண்டிருக்க மாட்டாத
மனக் குற்றம் மாந்தர்

துஷ்ட ஹ்ருதயர்களான மனிசர்
பழிக்கில்

(இந்நூலைப்) பழிப்பவர்களானால்
புகழ்

(அன்னவர்களுடைய பழிப்பே இதற்குப்) புகழாய் விடும்;
அவன்

அவ்வெம்பெருமானாருடைய
மன்னிய சீர் தனக்கு

நித்ய ஸித்தமான கல்யாண குணங்களுக்கு
உற்ற

தகுதியான
அன்பர்

தகுதியான அன்பை யுடையவர்களான மஹான்கள்
பத்தி ஏய்ந்த இயல் விது என்று

இந்நூலானது பக்தியோடு கூடின ப்ரவ்ருத்தியை யுடையதென்று (திருவுள்ளம் பற்றி)
அவன் திருநாமங்கள் சாற்றும் என் பா இனம் குற்றம் காணகில்லார்

அவ்விராமாநுசனுடைய திரு நாமங்களைக் சொல்லுகின்ற என்னுடைய (இந்தப்) பாசுர மாலைகளிலுள்ள குற்றங்களைக் காண மாட்டார்கள்.

உலகத்தில் ஓரு பிரபந்தம் பிறந்தால் அதனைத் தூஷிப்பார் பலரும், பூஷிப்பார் சிலரும் ஏற்படுவது வழக்கம். உண்மையில் தோஷங்கள் இல்லாதிருந்தாலும் எதையாவது சொல்லித் தூஷித்தே தீருவர்கள்; குற்றங் குறைகள் இருந்துவிட்டால் தூஷகர்களின் உத்ஸாஹம் கேட்கவே வேண்டியதில்லை. அறிவிலியான  நான் இயற்றும் இந்நூலில் தோஷங்கள் தான் மிகையாக இருக்கக் கூடும்; அவற்றைக் கண்டு சிலர் நிந்திப்பர்களாகில், அன்னவருடைய தூஷணம் நமக்கு பூஷணமேயா மித்தனை என்கிறார்.

‘பிறருடைய பழிப்பு நமக்கு அப்ரயோஜகம்’ என்று சொல்ல வேண்டியிருக்க, அவர்களுடைய பழிப்புத் தானே நமக்குப் புகழாம் என்கைக்குக் கருத்தென்? அவர்களது பழிப்பு இவர்க்கு எப்படி புகழாய் விடும்? என்று சிலர் சங்கிக்கக்கூடும். அவர்கள் தெளியுமாறு சொல்லுகிறோம்;-

அமுதனாராம் ஒருவர்; அவர் இராமாநுச நுர்ற்றந்தாதி என்றொரு பிரபந்தம் பாடினாராம்; அதில் ஒவ்வொருபாட்டிலும் இராமாநூசன் என்று சொன்னதையே சொல்லிக் கொண்டு கிடக்கிறார். தவிரவும் சாஸ்திரங்களில் புருஷார்த்தமாகச் சொல்லப்பட்டுள்ள ஐச்வர்யம் முதலானவற்றை இகழ்ந்துரைக்கிறார்; ஸகல புருஷார்த்தங்களும் தமக்கு உடையவர் தானாம்; எம்பெருமானைக் கூட அவர் கண்ணெடுத்துப் பார்க்கமாட்டாராம். என்றிவை போல்வன சிலவார்த்தைகளைச் சொல்லிப் பழிப்பார்கள்.

வாஸ்தவத்தில் இவையெல்லாம் குணமேயாதலால் குணகீர்த்தநத்தில் சேர்ந்து புகழ்ச்சியேயாய் முடியக் குறையில்லையென்க.

எம்பெருமானைப் பழித்த சிசுபாலாதிகளும் பர்யாயேண குண கீர்த்தநம் பண்ணினார்களாக வன்றோ உய்ந்து போனது.

அலகை முலை சுவைத்தாற்கு அன்பர் அடிக்கு அன்பர் திலதம் எனத் திரிவார் தம்மை -உலகர் பழி தூற்றில் ஸ்துதி யாகும் -அருளாளப் பெருமாள் எம்பெருமானார்

கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான் பற்றி உரலிடை யாப்பும் உண்டான் -என்று
பாவிகள் ஏசுவது எல்லாமே அன்புடையாருக்குக் குண கீர்த்தனமே அன்றோ –

ஊரார் கவ்வை எரு விட்டு –

உத்தம அதிகாரிகளுடைய அத்யவசாயம் எல்லாம் சாமான்ய ஞானிகளுக்கு இகழ்ச்சிக்கு உறுப்பாகுமே

—————

இயலும் பொருளும் இசையத் தொடுத்து, ஈன் கவிகளன்பால்
மயல் கொண்டு வாழ்த்தும் இராமா னுசனை,மதியின்மையால்
பயிலும் கவிகளில் பத்தியில் லாதவென் பாவிநெஞ்சால்
முயல்கின்றனன் அவன் றன் பெருங் கீர்த்தி மொழிந்திடவே.–6-

பதவுரை

ஈன் கவிகள்

விலக்ஷணரான கவிகள்
அன் பால்

ப்ரீதியினாலே
இயலும் பொருளும்

சப்தமும் அர்த்தமும்
இசைய

நன்கு பொருந்தும் படியாக
தொடுத்து

கவனம் பண்ணி பாடல்களிலே
பக்தி இல்லாத

பக்தியற்றதான
என் பாவி நெஞ்சால்

என்னுடைய பாபிஷ்டமான நெஞ்சினாலே
அவன் தன்

அவ்வெம்பெருமானாருடைய
மயல்

வ்யாமோஹம் தலையெடுத்து
வாழ்த்தும் இராமானாசனை பயிலும்

துதிக்கும்படி நின்ற எம்பெருமானாருடைய வருணிக்கின்ற
பெரு கீர்த்தி

அளவற்றகீர்த்திகளை
மொழிந்திட

பேசுவதாக
மதி இன்மையால் முயல்கின்றன

புத்தி யில்லாமையினாலே ப்ரவர்த்திக்கின்றேன்.

“பக்தியேய்ந்த வியல்விதென்றே” என்று கீழ்ப்பாட்டிற் சொன்னவிவர், அப்படிப்பட்ட பக்தி தமக்கு உண்டோவென்று பார்த்தார், ‘

அந்தோ! நாமோ அவ்வெம்பெரு மானாரைத் துதிக்க இழிந்தது! என்று தம்மைத் தாமே வெறுத்துக் கொள்ளுகிறார் இதில் –

இன் கவி பாடும் பரம கவிகளான சில மஹான்கள் சொல்லின்பமும் பொருளின்பமும் நன்கு பொருந்துமாறு கவி பண்ணி ஆந்தரமான அன்பினாலே வ்யாமோஹித்து இராமாநுசனை வாழ்த்தா நிற்பர்கள்;

அன்னவர்களுடைய பக்தி பரீவாஹ ரூபமான கவிகளில் ஆதரமற்ற எனது பாவி நெஞ்சால் அவ்விராமாநுசனுடைய பெருப் பெருத்த புகழ்களை யெல்லாம் பேசுவதாக நான் முயல்கின்றேனே! இஃது என்ன புத்தி கெட்ட தன்மை! என்று வெறுத்துக் கொள்ளுகிறார்.

கவிகள் வாழ்த்தும் இராமானுஜனை -கவிகளால் மங்களா ஸாஸனம் பண்ணப்படுகிற என்றபடி
மயல் -மையல் -வியாமோஹம் -அறிவு கேடு
மங்களா சாசனம் பண்ணும் போது அறிவு கேடு வேணும் இறே
அறிவு உள்ளபடி கிடந்ததாகில் -வாழி -பல்லாண்டு -ஜய விஜயீ பவ -இத்யாதி சப்தங்கள் வெளிவர ஒண்ணாதே
மதியின்மையால் -நான்காம் அடியில் அந்வயிக்கக் கடவது –

—————

மொழியைக் கடக்கும் பெரும் புகழான், வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடிய பின்
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி யல்லா
வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்தமன்றே.

பதவுரை

மொழியை கடக்கும்

வாய் கொண்டு வருணிக்க முடியாதபடி வாசா மகோசரமான
பெரு புகழான்

பெரிய புகழை யுடையவரும்
முக் குறும்பு ஆம் வஞ்சக் குழியை கடக்கும்

கல்விக் செருக்கு, செல்வச் செருக்கு குலச் செருக்கு என்னும் மூவகைக் குறும்புகளாகிற படு குழியைக் கடந்திருப்பவரும்
நம்

நமக்கு நாதருமான
கூரத்து ஆழ்வான்

கூரத்தாழ்வானாடைய
சரண்

திருவடிகளை
கூடிய பின்

நான் ஆச்ரயித்த பின்பு
பழியை கடத்தும்

ஸர்வபாப நிவர்த்தகரான
இராமாநுசன்

எம்பெருமானாருடைய
புகழ் பாடி

நற் குணங்களைப் பாடி
அல்லா வழியை கடத்தல்

ஸ்வரூபத்திற்குச் சேராத தீய வழிகளைத் தப்பிப் பிழைக்கையான
எனக்கு

அடியேனுக்கு
இனி

இனி மேலுள்ள கால மெல்லாம்
யாதும் வருத்தம் அன்று

ஈஷத்தும் ப்ரயாஸ ஸாத்யமன்று; (எளிதேயாம்)

 

எம்பெருமானாருடையத் துதிப்பதற்குத் தாம் யோக்யதையற்றவர் என்று பின்வாங்கப் பார்த்த அமுதனார், தமக்குள்ள ஆழ்வான் திருவடி ஸம்பந்தத்தை நினைத்து இஃது வாய்கொண்டு வருணிக்க முடியாத பெரும் புகழ் படைத்தவரும், கல்வி, செல்வம், குலம் என்ற மூன்றுவகை ஸம்பத்தும் புஷ்கலமாயிருந்தும் அவற்றால் இறைவும் அஸங்கார மடையாதவருமான கூரத்தாழ்வானாடைய சரணாரவிந்தங்களை ஆச்ரயித்து க்ருத க்ருத்யனான வெனக்கு எம்பெருமானாருடைய திருக் குணங்களைப் பாடுதலும் அதுவே காரணமான அர்ச்சிராதிகதி யொழிந்த மற்ற கதிகளிற் போகாதபடி அவ்வழியே போதலும் மிகவுமெளிதேயாம் என்றாராயிற்று.

குலம் ரூபம் வயோ வித்யா தனம் -ஐந்தும் இருந்தாலும் இவை மூன்று அஹங்காரங்களும் கொடியவை அன்றோ

நம் பூருவாசாரியர்கள் எல்லாருமே சிறந்த புகழுடையராயினாம் ஆழ்வானாடைய புகழ் அத்யந்த விலக்ஷணமென்பது ப்ரஸித்தமான விஷயம்;.

நம் தர்சந்ததுக்கு மஹாத்ரோஹியான நாலூரானாக்குக் கொடிய நரகங்களைக் கொடுக்க வேணுமென்று பகவத் ஸந்தியிலே ப்ரார்த்திக்க வேண்டி யிருக்க, பேரருளாளன் திருமுன்பே வரதராஜஸ்தவத்தை விண்ணப்பம் செய்து கண் தெரியும்படி வரம் வேண்டிக் கொள்ளீர் என்ற வரம் வேண்டிக் கொள்ளும்படி விசாலமான திருவுள்ளம்பெற்ற ஆழ்வானாடைய புகழை நாம் என்சொல்வோம்!

“மொழியைக் கடக்கும் பெரும் புகழான்” என்றுசொல்வது தவிர வேறு வாசக மில்லை காணும்.

வாசா மகோசர மஹா குண தேசிக அக்ர்ய கூர நாதர் அன்றோ

(வஞ்ச முக்குறும் பாமித்யாதி) கல்விச் செருக்கு, செல்வச் செருக்கு, குலச் செருக்கு என்ற இம்மூன்று அஹங்காரங்கள் மிகக்கொடியவை; இவற்றைக் கடத்தல் ஆர்க்கும் அரிது;

இவற்றைக் கடந்தவர் என்னும் ஏற்றம் ஆழ்வானொருவர்க்கே அஸாதாரண மென்பதாக எம்பெருமானார் காலத்திலேயே ப்ரஸித்தமாயிற்று.

திருவாய் மொழியில் “பலரடியார் முன்பருளிய பாம்பணையப்பன்” என்றவிடத்து ஈடு முப்பத்தாறாயிரத்தில் ஆழ்வான் விஷயமான அருளிச் செய்யப்பட்ட தொரு ஐதிஹ்யம் குறிக் கொள்ளத்தகும்.

மற்றும் பல இதிஹாஸங்களும் பன்னி யுரைக்குங்காற் பாரதமாம்.

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –