தாண்டகம் -இலக்கணக் குறிப்புகள் —

அறுசீரடி அல்லது எண்சீரடி பயின்ற செய்யுளினால்  கடவுளரை பாடுவதற்குரியது தாண்டகம் எனும் சிற்றிலக்கிய வகை (பிரபந்தம்).
அறுசீரடியினாலாகிய தாண்டகத்தினைக் குறுந்தாண்டகம் என்றும்
எண்சீரடியால் அமைந்ததினை நெடுந்தாண்டகம் என்றும் பன்னிரு பாட்டியல் பகருகிறது.

  • பாடலின் ஒவ்வொரு அடியும் இடையிலே தாண்டுவதை இந்தப் பாடல்களில் காணலாம். பாடலின் அகத்தே தாண்டுவது தாண்டகம்.
  • தாண்டகம் என்பது ஒருவகைச் செய்யுள் யாப்பு ஆகும். தாண்டக யாப்பினால் இயற்றப்பட்டவை தாண்டகம் என்னும்
    இலக்கிய வகையாகப் பெயர் பெறுகின்றன.

    இதனை முறையே யாப்பருங்கல விருத்தியாலும் (95-ம் நூற்பா உரை)வீரசோழியத்தாலும் (129) அறிய முடிகின்றது.
    இவ்வகையான நூல்களையும் பக்தி இலக்கியம் தான் நமக்கு முதலில் அறிமுகம் செய்கின்றது.
    திருநாவுக்கரசரின் ஆறாம் திருமுறை முழுவதும் இத்தாண்டக யாப்பே.
    981 பாடல்கள் கொண்ட அவரது 99 பதிகங்கள் திருத் தாண்டகம் என்றே வழங்குகின்றன

———-

திவ்வியப் பிரபந்தத்தில் திருமங்கையாழ்வார் பாடிய
திருத் தாண்டகங்கள் பாவின் குறுமை, நெடுமை ஆகிய அளவு கருதி முறையே
திருக்குறுந்தாண்டகம்,திருநெடுந்தாண்டகம் எனப் பெயர் பெறுகின்றன.
வடமொழித் தாண்டகத்தையே தமிழுக்குரிய தாண்டகமாக்கி வீரசோழியமும் யாப்பருங்கல விருத்தியும் குறிப்பிடுகின்றன.
இங்கு ஒரு வேறுபாடு எண்ணத்தகும்.
வீரசோழியம் தண்டகம் என்றே குறிக்க யாப்பருங்கல விருத்தி மட்டும் தாண்டகம் எனக் கூறுகிறது.
வடமொழி யாப்புப்படி விருத்தம் என்னும் பொதுப்பெயர்,
அளவொத்த  நான்கடியையும் அனைத்துச் செய்யுளையும் குறிக்கும்.
அடிகளிற் பயிலும் எழுத்துகளின் எண்ணிக்கை அடிப்படையில் விருத்தங்களைச் சந்தம் எனவும், தண்டகம் எனவும் பிரிப்பர்.
ஓரெழுத்து முதல் இருபத்தாறு எழுத்தளவும் உடைய அடிகளால் ஆகிய செய்யுள் சந்த விருத்தமாம்.
இருபத்தேழு  எழுத்துகளுக்கு மேல்வரின் அது தண்டக விருத்தமாகும்.
இதனையே தாண்டக விருத்தம் எனப் பெயரிட்டு விளக்குகிறது
யாப்பருங்கல விருத்தி.
ஆழ்வாரின் திருநெடுந்தாண்டகத்தில் சிற்சில அடிகள் 27 எழுத்துகளும்
அவற்றின்மிக்கு 28, 29 எழுத்துகளும் பெற்று வருகின்றன.
முப்பது பாசுரத்திற்கும் மொத்தம் உள்ள நூற்றிருபது அடிகளில் இவ்வாறு தாண்டக  அடிகளாக வருவன 24 அடிகள் மட்டுமே.
எனினும் ஒரு பாசுரம் கூட முழுவதும் தாண்டக அடிகளைக்  கொண்டிருக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
உதாரணத்திற்கு முதல் பாசுரத்தில் முதலாம் அடியில் 26 எழுத்துகள், 2-ம் அடியில் 27 எழுத்துகள், 3-ம் அடியில் 28
எழுத்துகள், 4-ம் அடியில் 27 எழுத்துகள் அமைந்துள்ளன.
இவ்வாறு எழுத்துகளைக் கணக்கிட்டால், திருநெடுந்தாண்டகத்தில் தாண்டக அடிகளாக
அதாவது 27 முதலாக அவற்றின் மிக்க எழுத்துகளைப் பெற்று வருவன 24 அடிகள் மட்டுமே.
(எழுத்துகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும் போது, குற்றியலுகரமும், ஒற்றும் நீங்கலாகக் கணக்கிடப்படும்)
யாப்பருங்கல விருத்தி கூறும் தாண்டக யாப்பு, தமிழில் உள்ள திருத்தாண்டகங்களுக்குப் பொருந்தி வரவில்லை
இனித் தாண்டகம் தமிழ் யாப்பே என்பார் கூற்றினை நோக்குவோம். அதற்கு முன்னர் ஆழ்வார் பாடிய
திருத்தாண்டகங்களின் யாப்பமைதி பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆழ்வார் காலத்திற்குப் பின்னர் வளர்ச்சியுற்ற யாப்பிலக்கணத்தின்படி நோக்கினால்,
ஆழ்வாரின் திருநெடுந்தாண்டகம் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் முப்பது கொண்டதாகும்.
இவ்வகை விருத்தத்தில் 1,2,5,6 ஆகிய நான்கு சீர்களும் காய்ச்சீர்களாகவும் 3,4,7,8 ஆகிய நான்கு சீர்களும் இயற்சீர்களாகவும் வரும்.
இயற்சீர் நான்கினுள் 3,7 ஆகிய சீர்கள் புளிமா, அன்றித் தேமாவாக வரும். 4,8 ஆகிய சீர்கள் தேமாவாக மட்டுமே அமையும்.
எனவே இவ்வகை விருத்தம்
காய்-காய்-மா-தேமா-காய்-காய்-மா-தேமா–என்னும் வாய்பாடு கொண்டதாகும்.
இப்போது திருக்குறுந்தாண்டகத்தை நோக்குவோம். இவ்வகை விருத்தத்தில் எல்லாச் சீர்களும் இயற்சீர்களாகவே வரும்.
சிறுபான்மை காய்ச்சீர் வருதலுமுண்டு. பெரும்பாலும் 1,4 ஆகிய சீர்கள் விளச்சீராகவும், 2,3,5,6 ஆகிய சீர்கள் மாச்சீர்களாகவும் வரும்.
சுருங்கக் கூறின்,
விளம்-மா-தேமா-விளம்-மா-தேமா–என்னும் வாய்பாடு கொண்டதாகும்.
தாண்டக யாப்பு தமிழ் மரபினதே எனக் கூறும் க.வெள்ளை வாரணன், தொல்காப்பியர் கருத்துப்படி
அதனை எண்சீரான் வந்த கொச்ச ஒரு போகு என்பர்.
ஆதலின் இயல்வகை குறித்த தாண்டகம் என்னும் இப்பெயரினை பெறாவாயின என விளக்குகிறார்.
மேலும், அவர் திருநாவுக்கரசரது திருத்தாண்டக யாப்பு, கழிநெடிலடிக்கு மேலெல்லையாகிய இருபது எழுத்தென்னும் அளவினைக்
கடந்து இருபத்தேழு எழுத்திற்கு உட்பட்டு வருவதாகும்.
யாப்பருங்கல விருத்தியில் தாண்டகம் என்ற பெயராற் குறிக்கப்பட்ட தாண்டக யாப்பு இருபத்தேழு எழுத்து முதலாக
அவற்றின் மிக்க எழுத்துகளை பெற்று வருவதாகும் என இரண்டனுக்குமுள்ள வேற்றுமையையும் எடுத்துக் காட்டுகிறார்.
இங்குத் தாண்டகம் தமிழ் யாப்பின் வழிப்பட்டதே என்பதற்கு அவர் கூறும் விளக்கமும்
யாப்பருங்கல விருத்தியில் கூறப்படும் தாண்டகம் வேறு,
திருநாவுக்கரசரின் தாண்டகம் வேறு என்பதற்கு அவர் சில காரணங்களைக் காட்டுகிறார்.
மேற்குறித்தவாறு திருநாவுக்கரசரின் திருத்தாண்டகத்தைத் தமிழ் மரபினதாகக் காட்டும் வெள்ளைவாரணன்,
திருமங்கையாழ்வாரின் திருத்தாண்டகங்களையும் தமிழ் யாப்பு வழிப்பட்டதாகவே ஏற்றுக் கொள்கிறார்.
அவர் கருத்துப்படி, ஆழ்வாரின் நெடுந்தாண்டகம் அப்பரின் திருத்தாண்டகத்துக்கும்,
ஆழ்வாரின் குறுந்தாண்டகம் அப்பரின் திருநேரிசைக்கும் இணையாகின்றன.
திருநாவுக்கரசரின் திருநேரிசைப் பதிகங்களும், ஆழ்வாரின் குறுந்தாண்டகமும் ஒரே வகை யாபில் அமைந்தவை.
அதாவது, விளம்-மா-தேமா, விளம்-மா-தேமா என்னும் வாய்பாடு கொண்ட அறுசீர் விருத்தங்கள் அவை.
இங்ங்கனமாக, ஒன்று திருநேரிசை எனவும், மற்றொன்று திருக்குறுந்தாண்டகம் எனவும் வெவ்வேறு பெயர் பெறுகின்றன.
இப் பெயர் மாற்றத்துக்கு என்ன காரணம்?
அறுசீரில் இருபது பாசுரங்கள் கொண்ட தாண்டகமும் எண்சீரில் முப்பது பாசுரங்கள் கொண்ட தாண்டகமும் ஆழ்வார் பாடினார்.
எண்சீரினும் ச்றுசீர் குறியது.
அன்றியும் அறுசீர் யாப்பிலான பாடற்பகுதி, எண்சீர் யாப்பிலான பாடற்பகுதியினும் குறைந்த எண்ணிக்கை கொண்டது.
ஆதலின் அவை குறுந்தாண்டகம், நெடுந்தாண்டகம் என வேறுபடுத்தப்பட்டன எனலாம்.
இவ்வமைதி ஆழ்வாரின் இரண்டு தாண்டகங்களைப் பொறுத்தவரை ஏற்கத்தக்கதாகும்.
ஆயின் அப்பரின் திருநேரிசைப் பதிகங்கள் குறுந்தாண்டகமாகக் கொள்ளப்படவில்லையே. இது ஏன்?என்னும் வினாவுக்கு
விடை காண இயலவில்லை. மற்றொரு சிக்கலும் உண்டு.
குறுந்தாண்டகம் என்று அழைக்கப்படும் ஆழ்வாரின் பாடற்பகுதி முதலில் தாண்டகம் ஆகுமா? என்பதுவே அச் சிக்கலாகும்.
ஆழ்வாரின் குறுந்தாண்டகப் பாடல்களும், அப்பரின் திருநேரிசைப் பாடல்களும் இருபது எழுத்துக்கு மேற்படாது
அடங்கிவரும் அடிகளையுடைய அறுசீர் விருத்த யாப்பினமாகும்.
அங்ஙனமாயின் க.வெள்ளைவாரணன் தாண்டகத்துக்குக் கூறிய இலக்கணப்படி
அடிக்கு இருபது எழுத்துகளைத் தாண்டாத இவை தாண்டகமாகா.
வடமொழி மரபுப்படி இருபத்தேழு எழுத்து என்னும் எல்லைக்கு இங்கு இடமே இல்லை.
ஆகத் தமிழ்மரபு வடமொழி மரபு ஆகிய இரண்டினாலும் தாண்டகமாகாத ஆழ்வாரின் பாடற்பகுதி
குறுந்தாண்டகம் எனப் பெயர் பெற்றது எவ்வாறு என்பது விளங்கவில்லை.
இயற்சீர் = ஈரசைச் சீர்= அகவற்சீர் . பழம் பெயர் தான்.
“ ஈரிசை கூடிய சீரியற் சீர் ; அவை  ஈரிரண் டென்ப இயல்புணர்ந்  தோரே “
இயலல்- பொருந்துதல்
  • பின்வந்த பாட்டியலாரும் இச் சிக்கலுக்கு ஓர் தீர்வினைத் தந்திடவில்லை.
    மூவிரண் டேனும் இருநான் கேனும்
    சீர்வகை நாட்டிச் செய்யுளி னாடவர் 
    கடவுளர்ப் புகழ்வன தாண்டகம் அவற்றுள்
    அறுசீர் குறியது நெடியதெண் சீராம்-எனப் பன்னிருபாட்டியல் கூறுகின்றது.
  • இந்நூற்பாவில் தாண்டகத்துக்குரிய எழுத்தெண்ணிக்கை பற்றிய குறிப்பு இல்லை.
    அன்றியும் ஆழ்வார் அறுசீர் யாப்பில் பாடியவற்றைக் குறுந்தாண்டகம் என ஏற்றுக்கொண்டே இந்நூற்பா இலக்கணம் கூறுகின்றது.
  • பன்னிரு பாட்டியலார் கூறும் இவ்விலக்கணம் திருமங்கையாழ்வார் முறையே அறுசீரிலும் எண்சீரிலும்
    பாடிய இலக்கியங்களுக்கான இலக்கணம் ஆகின்றது. அஃதாவது இலக்கியம் கண்டதற்கு அமைந்த இலக்கணம் இது.
    எனினும் தாண்டக சதுரர் எனச் சிறப்பிக்கப் பெற்ற திருநாவுக்கரசரின் ‘தாண்டக இலக்கியம்’ பற்றிப் பன்னிரு பாட்டியல் குறிப்பிடவில்லை.
    ஆழ்வாரின் திருத்தாண்டகப் பாசுரங்களினும் (30+20) திருநாவுக்கரசரின் திருத்தாண்டகப் பாடல்கள் எண்ணிக்கையில் (981)
    பன்மடங்கு மிக்கன.
  • போற்றித் திருத்தாண்டகம், காப்புத் திருத்தாண்டகம், நின்ற திருத்தாண்டகம், தனித் திருத்தாண்டகம்,
    வினா விடைத் திருத்தாண்டகம் எனப் பொருளடிப்படையில் பலவாறு பெயர் பெறுவன. இவ் வியல்புகளைப் பாட்டியல்கள்
    கருத்திற்கொண்டு இலக்கணம் கூறாததற்கான காரணம் தெரியவில்லை. திருநாவுக்கரசர், திருமங்கையாழ்வார் ஆகிய
    இருவரது தாண்டகங்களையும் ஒப்ப வைத்தும் உறழ்ந்து நோக்கியும் பாட்டியல் நூலார் இலக்கணம் கூறியிருந்தால்
    இன்று நமக்கு எழக்கூடிய சிக்கல்கள் தோன்றியிருக்க மாட்டா.
    பின்வந்த முத்து வீரியம் தாண்டக யாப்புக்குரிய இலக்கணத்தையும் பின்வருமாறு கூறுகின்றது.
    இருபத்தேழு எழுத்து ஆதி யாக
    உயர்ந்த எழுத்தடி யினவாய் எழுத்தும்
    குருவும் இலகுவும் ஒத்து வந்தன
    அளவியல் தாண்டகம் எனவும் அக்கரம்
    ஒவ்வாதும் எழுத்தலகு ஒவ்வாதும் வந்தன
    அளவழித் தாண்டகம் எனவும் பெயர்பெறும் —என்பது அந்நூற்பாவாகும்.
  • (நூற்பா-1115) வீரசோழியம், யாப்பருங்கல விருத்தி ஆகிய நூல்கள் புகுத்திய புதுமரபிற்கேற்ப
    முத்து வீரியம் இங்குத் தாண்டகத்திற்கு இலக்கணம் கூறுகின்றது.
  • அளவியல் தாண்டகம், அளவழித் தாண்டகம் ஆகிய
    இரு வகைகளையன்றி குறுந்தாண்டகம், நெடுந்தாண்டகம் என்னும் பகுப்புமுறை இங்கு இடம் பெறாமை கவனிக்கத்தக்கது.
  • ஆக பாட்டியல்கள் கூறும் தாண்டக இலக்கணம் இரு வகையில் அமைகின்றது.
    1. பன்னிருபாட்டியல் இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் கூறியது ஒரு வகை
    2.முத்துவீரியம், யாப்பருங்கலவிருத்தியைத் தழுவிப் புதிய மரபில் இலக்கியம் காண்பதற்கு இலக்கணம் கூறியது மற்றொரு வகை.
    மற்றொரு வகை.
    இங்ங்னம் தாண்டகம் பற்றிய கருத்துகள் தமிழ் இலக்கண ஆசிரியர்களிடம் மாறுபட்டும் குழம்பியும் காணப்படுவதால்
    அதனை நாம் இன்று தெளிவாக உணர முடிவதில்லை.
  • ஆழ்வார் பாசுரங்களுக்கு யாப்பு வகை குறித்த திவ்யபிரபந்தப் பதிப்பாசிரியர்களும் தாண்டகம் பற்றித் தெளிவான விளக்கம் தரவில்லை.
  • “பகவானுடைய திவ்ய சேஷ்டிதங்களைத் தாண்டக ரூபத்தில் நிரூபிக்கிறபடியால் . . . ” இத்திருநாமம் பெற்றதாகக் கூறுவர் கோமடம் எஸ்.எஸ்.ஐயங்கார். இங்கு அவர் தாண்டக ரூபம் என்றாரே தவிர அதன் ரூபம் (வடிவம்) பற்றியோ இலக்கணம் பற்றியோ எதுவும் கூறாதது
    கவனிக்கத்தக்கது.
  • திருமங்கையாழ்வாரின் தாண்டகங்களைப் பொறுத்தவரை மற்றொரு தடையும் உண்டு. எண்சீரும் அறுசீருமாகப் பாடிய
    பாசுரப்பகுதிகள் திவ்யபிரபந்தத்தில் உள்ளன.
    விளம்-மா-தேமா, விளம்-மா-தேமா –என்பது குறுந்தாண்டக யாப்பு
    காய்-காய்-மா-தேமா, காய்-காய்-மா-தேமா–என்பது நெடுந்தாண்டக யாப்பு.
    இதே வாய்பாடில் இதே ஆழ்வார் எழுதிய பாடல்கள் அனைத்தும் தாண்டகம் எனப்பெயர் பெறாமை கவனிக்கத்தக்கது.
    தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய திருமாலை முழுவதும் குறுந்தாண்டகம் போல அறுசீர் ஆசிரிய விருத்த  யாப்பிலானதே.
  • மேலும் திருமாலை, குறுந்தாண்டகம் ஆகிய இவ்விரு நூல்களிலும் முறையே 17, 13 ஆம் பாசுரங்களின்
    ஈற்றடிகள் மிகுதியும் ஒத்திருத்தலும் இங்குச் சுட்டத்தக்கது.
    விரும்பிநின் றேத்த மாட்டேன் விதியிலேன் மதியொன் றில்லை
    இரும்புபோல் வலிய நெஞ்சம் இறையிறை உருகும் வண்ணம்
    சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட
    கரும்பினைக் கண்டு கொண்டென் கண்ணிணை களிக்கு மாறே (திருமாலை-17)
    இரும்பனன் றுண்ட நீரும் போதரும் கொள்க என்றன்
    அரும்பிணி பாவ மெல்லாம் அகன்றன என்னை விட்டு
    சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட
    கரும்பினைக் கண்டு கொண்டென் கண்ணிணை களிக்கு மாறே (திருக்குறுந்தாண்டகம்-13)
    3,4 ஆம் அடிகள் முற்றிலும் ஒத்திருந்தாலும் திருமாலை ஏன் தாண்டகம் என்ற பெயர் பெறவில்லை?
    சைவத்திலும் இந்நிலையுண்டு.
  • அப்பர் தாண்டகத்துக்குக் கையாண்ட அதே எண்சீர் யாப்பில் திருஞானசம்பந்தர் 11 பதிகங்களும், சுந்தரர் 27 பதிகங்களும், மாணிக்கவாசகர் 6 பதிகங்களும் பாடியுள்ளனர்.
  • ஒன்பதாம் திருமுறையில் 11 பாடல்களும், பதினொராந்திருமுறையில் 36 பாடல்களும் அதே யாப்பில் அமைந்துள்ளன.
  • எனினும் அவை தாண்டகம் எனக் குறிக்கப் பெறாமையை அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
    இந்நிலையில் யாப்பருங்கல விருத்தியுரை காரர் தரும் ஒரு குறிப்பு, சிறிது வெளிச்சம் காட்டுகிறது.
  • தாண்டகம் என்பது தொல்காப்பியரால் கொச்சக ஒருபோகு எனவும், காக்கைபாடினியார் போன்ற ஒருசார் ஆசிரியரால் பாவினமாகவும்
    கொள்ளப்பட்டது என்பது அவர் தரும் குறிப்பாகும்.
  • அதன்படி தாண்டகத்துக்குப் பயன்பட்ட அறுசீர் யாப்பு, ஒருசார் ஆசிரியரால்ஆசிரியப்பாவின் இனமான விருத்தமாகக் கொள்ளப்பட்டது என்பது உறுதி ஆகின்றது. அவ்வகை விருத்தங்கள் வடமொழித் தாண்டகத்தின் தனித்தன்மைகளுள் ஏதேனும் ஒன்றைப் பெற்றுத் தமிழில் தாண்டகம் எனப்பெயர்
    பெற்றிருக்கலாம் எனக் கருத இடமுள்ளது. அளவொத்த நான்கு அடிகளைக் கொண்ட வடமொழித் தாண்டக யாப்பு, ஓர்
    அடிக்கு 27 முதல் 999 வரை நீண்டு சென்று முடியும் என்பர். அவ்வகை நீட்சி காரணமாக எச்சங்களைத் தொடர்ந்து
    செல்லும் போக்குத் தண்டக விருத்தங்களில் அமைந்தது. குறிப்பிடத்தக்க இத்தனித் தன்மையைத் தமிழ்த் தாண்டகப் பாக்களிலும் காண முடிகின்றது.
    தேசிகரின் கருட தண்டகத்தையும், காளிதாசனின் சியாமளா தண்டகத்தையும் எழுத்தெண்ணிக்கை பார்த்ததில்,
    கருட தண்டகத்தில் ஒவ்வொரு பாடலும் 108 எழுத்துகள் இருக்கின்றன.
  • அடிமுடி தெரியாதலால், ஒரு அடிக்கு சராசரி 27 எழுத்துக்கள் என்று கொள்ளலாம்.
    சியாமளா தண்டகத்தில் என்னிடம் உள்ள பதிப்பில் பாடல்கள் தொடர்ச்சியாக உரைநடைபோல் தட்டச்சு
    செய்யப்பட்டிருப்பதால் எழுத்தெண்ணிக்கையை அறுதியிட்டுக் கூற முடியவில்லை.
  • ஒரு மாதிரியாக, பகுத்துப் பார்த்ததில் ஒரு சீரான எழுத்தெண்ணிக்கை வரவில்லை என்றுதான் தோன்றுகிறது.
  • வேறு பதிப்புகளில் பாடல் ஒவ்வொன்றும் சரியாகப் பகுத்துக் கொடுக்கப் பட்டிருந்தால் அன்பர்கள் எழுத்தெண்ணிக்கையைச் சரி பார்க்கவும்.
    எச்சங்களாகத் தொடர்ந்து செல்லும் போக்கு நெடுந்தாண்டகத்தில் எவ்வாறு அமைந்துள்ளது என்று பார்ப்போம்.
    மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்
    . . விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்
    பின்னுருவாய் முன்னுருவில் பிணிமூப் பில்லாப்
    . . பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணா தெண்ணும் 
    பொன்னுருவாய் மணியுருவில் பூத மைந்தாய்
    . . புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி
    தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை
    . . தளிர்புரையும் திருவடியென் தலைமே லவே
     (ஈற்றுச்சீர் தேமாவாக இருக்க லாவே என்றிருக்கலாம். ஆயின் மூலத்தில் இப்படித்தான் உள்ளது)
    என்னும் திருநெடுந்தாண்டகத்தில் முதற்பாகத்தைக் கவனித்தால் பாசுர அடிகளின் இடையிலோ முடிவிலோ முற்றின்றி,
    வினையெச்சமாய்த் தொடர்ந்து இறுதியிலேயே முற்றுப் பெறுதலைக் காணலாம். பெரும்பாலான பாசுரங்கள் இவ்வகைப்
    போக்கிலேயே3 அமைந்து உள்ளமை கவனிக்கத்தக்கது.
  • திருநெடுந்தாண்டகத்தில் முதல் பத்துப் பாசுரங்கள் தாமான  தன்மையிலும்,
  • அடுத்த பத்துப் பாசுரங்கள் தாய் கூற்றிலும்,
  • இறுதிப்பத்துப் பாசுரங்கள் மகள் கூற்றிலும் அமைந்தன  என்பர்.
  • இங்ங்னம் கூற்றுநிலை மாறுபட்டபோதும் மேற்குறித்த அமைப்பு மாறுபடவில்லை.
    இப்போது தாய் கூற்றாக அமைந்த ஒரு பாடலை ஆராய்வோம்.
    கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய் என்னும்
    . . காமருபூங் கச்சியூ ரகத்தாய் என்னும்
    வில்லிறுத்து மெல்லியள்தோள் தோய்ந்தாய் என்னும்
    . . வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே என்னும்
    மல்லடர்த்து மல்லரையன் றட்டாய் என்னும்
    . . மாகீண்ட கைத்தலத்தென் மைந்தா என்னும்
    சொல்லெடுத்துத் தன்கிளியைச் சொல்லே என்று
    . . துணைமுலைமேல் துளிசோரச் சோர்கின் றாளே
    என்னும் பாசுரத்தில் மகள் கூற்று தனித் தனியாக முற்றுப் பெறுவதுபோல் தோன்றினும் தாய் அதனை மீண்டும் எடுத்துச் சொல்லும் போக்கில்,
    கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய் என்னும்
    . . காமருபூங் கச்சியூ ரகத்தாய் என்னும்
    இடையறாத் தொடர்ச்சியுடன் கூற்று அமைதல் காணலாம்.
  • இப்போது மகள் கூற்றாக அமைந்த ஒரு பாடலின் பகுதியைக் காண்போம்.
    மைவண்ண நறுங்குஞ்சிக் குழல்பின் தாழ
    . . மகரம்சேர் குழையிருபா டிலங்கி யாட
     
    எய்வண்ண வெஞ்சிலையே துணையா யிங்கே
    . . இருவராய் வந்தாரென் முன்னே நின்றார்
    என்னும் பாசுரப்பகுதி மகள் கூற்றாக அமைவது.
  • இதன்கண், இருவராய் வந்தார்என் முன்னே நின்றார் என்பதில் வந்தார் என்னும் முற்று வந்து என எச்சப் பொருளே தந்து தொடர்தலும் நோக்குதற்குரியது.
    வந்தார் என்பது வந்தவர் என்னும் பொருள்படும். மேற்படி  சொன்னவண்ணம் வந்தவராகிய அவர் என்றும் கொள்ளலாம்]
திருக்குறுந்தாண்டகத்தில் இத் தன்மை மிகுந்து காணப்படுகிறது.
நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டுமுன் அண்ட மாளும்
மதியினை மாலை வாழ்த்தி வணங்கியென் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகி லேனே–என்பது முதற்பாசுரம்.
இப் பாசுர முடிவில் விதியினை என்பதற்குப் பின்னர் முற்றாக வருகின்ற (கண்டு . . விடுகிலேனே)
பகுதிகளை விலக்கி, அடுத்துவரும் மூன்று பாசுரங்களிலும் இம்முறையே மேற்கொண்டால் ஆழ்வார் இறைவனைத் தொடர்ச்சியாக அடுக்கிப் போற்றுதல் பின்வருமாறு அமையும்.
“நிதியினை, பவளத்தூணை, நினைய வல்லார் கதியினை, அண்டமாளும் மதியினை, மாலை, விதியினை, காற்றினை,
புனலை, தீயை, இலங்கை செற்ற ஏற்றினை, எழில்மணித்திரளை, இன்ப ஆற்றினை, அமுதம் தன்னை, அவுணர்
கூற்றினை, வானோர்க்கு அமுதம் கொண்ட அப்பனை, எம்பிரானை, மாலிருஞ்சோலை மேய மைந்தனை, கேழலாய்
உலகங்கொண்ட பூக்கெழு வண்ணனை, வேட்கை மீதூர விழுங்கினேன்”
என்பது முதல் நான்கு பாசுரங்களின் பொருட்சுருக்கம் ஆகும்.
இடையில் 5-ஆம் பாசுரம் ஒன்று தவிர 6,7,8 ஆகிய  பாசுரங்களிலும் இவ்வகையான தொடர் அடுக்கினைக் காணலாம்.
9 முதல் 11 முடியவுள்ள பாசுரங்கள் இறைவனை முன்னிலைப்படுத்திப் பேசும் முறையில் உள்ளன.
12 முதல் 20 முடியவுள்ள எஞ்சிய பாசுரங்களில் ஆழ்வார் தமது
பலவாறான இறையனுபவங்களைச் சொல்லி இப்பிடபந்தத்தைத் தலைக்கட்டுகிறார்.
இவ்வாறு கூற்றுநிலை மாறுபடினும்  எச்சங்களை வருவித்து அடுக்கிக்கூறும் தொடர்ச்சிப் போக்கு நூல் முழுதும் ஒத்திருக்கின்றது.
எனவே இத்தகையதொரு தனித்தன்மை ஒன்றினால் அறுசீர் விருத்தங்களால் ஆன பிற நூல்களினின்றும் வேறுபடுத்தி
இவை தாண்டகம் என அழைக்கப் பெற்றன போலும். அன்றியும் இசையும் ஒரு காரணமாய் இருந்திருக்கக் கூடும்.
ஆழ்வாரின் தாண்டகங்கள், பெரிய திருமொழியின் இறுதியில் இடம் பெறுகின்றன.
திவ்யபிரபந்தத்தில் இயற்பா நீங்லாக  உள்ள ஏனைய மூன்று ஆயிரங்களும் இசைப்பாக்கள் என்பது இங்கு மனக்கொள்ளத்தக்கது.
திருநெடுந்தாண்டகப் பாசுரம்  ஒன்றில் “நைவளம் ஒன்றாயா நம்மை நோக்கா” என்னும் தொடர் காணப்படுகின்றது.
இதில் வரும் நைவளம் என்னும் பண்ணைக் குறித்துப் பின்வருமாறு விளக்கம் தருவார் பெரியவாச்சான்பிள்ளை.
“கேட்டாரோடும் சொன்னாரோடும்  வாசியற நைவிக்கும் படியான அழகையுடைத்தான பண்ணை நுணுங்கி” என்பது அவர் தரும் விளக்கம்.
இதனால், உள்ளத்தை உருக்கும் அந்தப்பண்ணின் இயல்பினை அறியலாம்.
நைவளம் என்னும் பண் நாட்டக்குறிஞ்சி என்று சொல்கிறார். கண்ணன்
குழலூதும் போது இந்தப் பண்ணை மிக உகந்து குழலூதுவான் என்றும், அதுகேட்ட சேதன, அசேதனப் பொருட்கள் யாவும்
இப்பண்ணில் மயங்கி நிற்கும் என்பார். இப்படிப்பட்ட பண்ணில் பாடி, பரகால நாயகியை (ஆழ்வாரை) ஆட்கொள்ளக்
கண்ணன் வந்தபோதும் பாராமுகமாக ஆழ்வார் இருந்துவிட்டார் என்று இந்தப் பாடலில் பொருள் வருகின்றது. அதாவது
சேதன, அசேதனப் பொருட்களையும் மயக்கவல்ல பண்ணிற்கும் மயங்காமல் என் மனம் கல்லாகிப் போனதே என்ற வருத்தம் தோன்றப் பாடிய பாசுரம்]
ஆழ்வாரின் தாண்டகத்தில் இடம்பெறும் இசை பற்றிய இக்குறிப்பு மட்டுமன்றிக் குரு பரம்பரை கூறும் மற்றொரு செய்தியும் இங்குச் சுட்டத் தகும். திருமங்கையாழ்வார் தாமே தமது திருநெடுந்தாண்டகப் பாசுரங்களைத் திருவரங்கன்
சன்னிதியில் மனமுருகிப் பாடினார் எனக் குருபரம்பரை கூறுகின்றது.
எனவே இவற்றைப் பாடுதற்கென்று அந்நாளிற் பின்பற்றப்பெற்ற ஒருவகை இசைமரபு பற்றியும் இவை,
தாண்டகம் எனப் பெயர் பெற்றிருக்கலாம். அம்மரபினை இன்று நாம் அறியமுடியவில்லை.
மேலும் ஒன்று; தாண்டகம் இசைப்பாட்டே என்றும் அதில் சிறப்பாகக் கையாளப்படும் இலக்கியக்கொள்கை
இறைவனிடம் விண்ணப்பம் செய்து கொள்வதற்கு இசைப்பாட்டைப் பயன்படுத்துவதாகும் என்று கூறுவர்.
இதுவரைக் கூறிய வற்றால், தாண்டகம் என்பதே தனிவகையான யாப்பு என்பது புலப்படும்.
ஆனால், இதுவரை அச்சான திவ்யபிரபந்தப் பதிப்புகளில் திருக்குறுந்தாண்டகம் அறுசீர்விருத்தமென்னும்
திருநெடுந்தாண்டகம் எண்சீர் விருத்தமென்னும் குறிக்கப் பட்டுள்ளன.
கால ஓட்டத்தில் தாண்டகம் பற்றிய கருத்து தமிழ் இலக்கிய உலகில் மறைந்தது போலும்.
எனவே கடந்த நூற்றாண்டு தொட்டு, திவ்யபிரபந்தப் பதிப்பாசிரியர்கள் தாண்டகத்தை ஆசிரிய விருத்தமாகக்
கொண்டுள்ளனர். அவர்தம் கொள்கை இற்றைநாள் திறனிகளுக்குத் தாண்டகத்தைத் தனி யாப்பாக அறிய உதவவில்லை.
தாண்டகம் என்பது ஒருவகை யாப்பே ஆகும். தாண்டக யாப்பினைப் பற்றிய கருத்துகள் தமிழ் இலக்கண ஆசிரியர்களிடம்
மாறுபட்டும் தெளிவின்றியும் காணப்படுவதால் இன்றைய நிலையில் அதனை நாம் முழுமையாக அறிய முடியவில்லை.
‘பாசுரங்களில் எச்சங்களாகத் தொடர்ந்து செல்லும் போக்கு’ அவற்றைப் பாடுதற்குப் பின்பற்றிய ‘ஒருவகை இசை மரபு’
ஆகிய தனித்தன்மைகளால் தாண்டக யாப்பு முன்னாளில் வேறுபடுத்தி அறியப்பட்டிருக்கலாம்.
 அவை பற்றிய விளக்கமான குறிப்புகள் இன்று நமக்குக் கிடைக்கவில்லை.
தாண்டக யாப்பினைத் தனியே கருத்திற் கொள்ளாமல் திருக்குறுந்தாண்டகம் அறுசீர் விருத்தமென்றும்,
திருநெடுந்தாண்டகம் எண்சீர் விருத்தமென்றும் திவ்யப்ரபந்தப் பதிப்பாசிரியர் சிலர் யாப்புவகை காட்டியது பொருத்தமாகத் தோன்றவில்லை.
திருமங்கையாழ்வார், திருநாவுக்கரசர் ஆகியோரது தாண்டகங்களுக்குப் பிறகு தமிழில் தாண்டக இலக்கியங்கள் தோன்றவில்லை.
எனவே, தமிழில் பிற்றைநிலை வளர்ச்சி பெறாத ஓர் இலக்கிய வகையாகத் திகழ்வது தாண்டகம் எனலாம்.

திருநாவுக்கரசர் பாடிய திருத்தாண்டகங்களுக்குள் கிடைக்கப்பெற்றனவற்றுள் முதலாகப் பாடப்பெற்ற பதிகம் 

மறுமாற்றத் திருத்தாண்டகம்‘ (6.98).

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
.. நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
.. இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
.. சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
.. கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே.–6.98.1

வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்
.. வெய்ய வினைப்பகையும் பைய நையும்
எம்பரிவுந் தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்
.. எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம்
அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி
.. அனலாடி ஆன்அஞ்சும் ஆட்டு கந்த
செம்பவள வண்ணர்செங் குன்ற வண்ணர்
.. செவ்வான வண்ணரென் சிந்தை யாரே.-6.95.2

சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து
.. தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
.. மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
.. ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
.. அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே.–6.95.10

அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும் மடி
.. அழகெழுத லாகா அருட்சே வடி
சுரும்பித்த வண்டினங்கள் சூழ்ந்த வடி
.. சோமனையுங் காலனையுங் காய்ந்த வடி
பெரும்பித்தர் கூடிப் பிதற்றும் மடி
.. பிழைத்தார் பிழைப்பறிய வல்ல வடி
திருந்துநீர்த் தென்கெடில நாடன் னடி
.. திருவீரட் டானத்தெஞ் செல்வன் னடி.–6.6.4-

—-
தருமை ஆதீனம் வெளியிட்ட ஆறாம் திருமுறை உரைநூலின் முன்னுரைகளில் காண்பது:

“…..நாவரசர் அருளிய தேவாரம் நம்மை இறைவன் திருவருளிலே அழுந்தச் செய்யும் மந்திரங்கள்.

தேவாரத் திருமுறைகள் பண்ணாங்கம்சுத்தாங்கம் என இரண்டு பிரிவுகள் உடையன.

அவற்றுள் பண்ணாங்கம் தாள அமைப்புடன் கூடிய பதிகங்களாகும்.

திருநாவுக்கரசர் தேவாரத்தில் திருவிருத்தம்திருத்தாண்டகம் ஆகியன சுத்தாங்கமாகப் பாடுவதற்கு உரியன. …. …

திருவிருத்தம் நான்காம் திருமுறையில் அமைந்துள்ளது.

திருத்தாண்டகம் ஆறாம் திருமுறையாக விளங்குகிறது.

பன்னிரு திருமுறைகளில் தாண்டகம் என்ற யாப்பு வகையில் திருமுறை அருளியவர் திருநாவுக்கரசு சுவாமிகளே ஆவார்.

அதனால் இவர் தாண்டக வேந்தர்தாண்டகச் சதுரர் எனப் போற்றப்படுகிறார்.

இறைவன் புகழை விளங்க விரித்துரைக்கும் முறையில் தாண்டக யாப்பு வகை இவருக்குப் பெரிதும் துணை செய்துள்ளது. …..”

பெரிய புராணத்தில்:
நாமார்க்குங் குடியல்லோ‘ மென்றெடுத்து நான்மறையின்
கோமானை நதியினுடன் குளிர்மதிவாழ் சடையானைத்
தோமாலைச் செந்தமிழின் செழுந்திருத்தாண் டகம்பாடி
யாமாறு நீரழைக்கு மடைவிலமென் றருள்செய்தார்.

தேமாலைச் செந்தமிழின் செழுந் திருத்தாண்டகம் – திருத்தாண்டகப் பதிகத்தைப் பற்றிக் கூறநேர்ந்த இடம் இதுவே முதலாதலின் அதன் தன்மையை இவ்வாறு விரித்தனர்.

தேம் – சொல்லினிமையும் ஓசையினிமையும்,

மாலை – ஒரு பாட்டினுள்ளே பல பெயரும் தொடர்ந்துவந்து ஓரிடத்து முடிபுறும் தன்மையும்,

செந்தமிழ் – நிரம்பிய தமிழினிமையும்,

இன் – பொருளினிமையும்,

செழுமை – பயனினிமையும்,

திரு – இறைவனது தன்மை பற்றிய நிலையும்,

தாண்டகம் – யாப்பும் பண் வகையும் உணர்த்தின.

இங்குக் கூறிய அடைமொழிகள் தாண்டகங்கட்குப் பொதுவாகவும்இப்பதிகத்துக்குச் சிறப்பாகவும் உரியன.

தேவாரத்தினைத் தாண்டகச் செய்யுளால் திருநாவுக்கரசர் ஒருவரே யருளியிருத்தலால் அவர்க்குத் தாண்டக வேந்தர் என்று பெயராயிற்று.

—————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading