ஆவியயை யரங்க மாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால்,
தூய்மையில் தொண்டனேன் நான் சொல்லினேன் தொல்லை நாமம்,
பாவியேன் பிழைத்தவாறு என் என்று அஞ்சினேற்கு அஞ்சல் என்று
காவி போல் வண்ணர் வந்தென் கண்ணுளே தோன்றினாரே.–12-
பதவுரை
| ஆவியை |
– |
உலகங்கட்லெல்லாம் ஓருயிராயிருப்பவனும் |
| அரங்கம் மாலை |
– |
திருவரங்கத்தி லுள்ளவனுமான எம்பேருமானைக் குறித்து, |
| அழுக்கு உடம்பு எச்சில் வாயால் |
– |
இவ் வழுக்குடம்பின் எச்சில் வாயினால் |
| தூய்மை இல் தொண்ட நான் |
– |
அபரிசுத்தனும் கண்ட விடங்களில் தொண்டு பட்டவனுமான நான் |
| தொல்லை நாமம் |
– |
அநாதியான திருநாமங்களை |
| சொல்லினேன் |
– |
சொன்னேன்; |
| பாவியேன் பிழைத்த ஆறு என்று அஞ்சினேற்கு |
– |
பாவியான நான் பிழை செய்த விதம் என்னே!“ என்று அநுதாபமுற்ற வெனக்கு |
| அஞ்சல் என்று |
– |
அபயமளித்து |
| காவி போல் |
– |
கருங் குவளை நிறத்தரான |
| வண்ணர் வந்து என் கண் உள்ளே தோன்றினார் |
– |
என் கண்களினுள்ளே ஸேவை ஸாதித்தார். |
பரம புருஷனான எம்பெருமானை மிகவும் அபரிசுத்தனான நான் எனது எச்சில் வாயால் ஸங்கீர்த்தனம் பண்ணி ‘
ஐயோ! இப்படி அபசாரப்பட்டோமே!‘ என்று அஞ்சின என்னுடைய அச்சம் தீர
அப்பெருமான் வந்து என் கண்ணுள்ளே தோன்றி அபயமளித்தானென்கிறார்.
ஆவியை – “ஓருயிரேயோ உலகங்கட்கெல்லாம்” என்கிறபடியே அனைத்துலகுக்கும் பிராணனாயிருப்பவன் எம்பெருமான்.
இப்படிப்பட்டவனை யன்றோ என்னுடைய எச்சில் வாயில் கொண்டு கெடுத்தேனென்கை.
(அரங்கமாலை) கண்ணுக்குத் தோன்றாதபடி நிற்கிற உயிர் போலன்றியே எல்லாருங் காணலாம்படி
திருவரங்கம் பெரிய கோயிலிலே காட்சி தந்து
ஆச்ரிதர் பக்கலில் வியாமோஹமே வடிவெடுத்தவன் போலிருக்கிற எம்பெருமானையன்றோ நான் தூஷித்தேனென்கை.
தூஷிக்கையாவது எச்சில் வாயிற் கொள்ளுகை. அதனைச் சொல்லுகிறார். அழுக்குடம்பேச்சில் வாயால் என்று.
கண்டவர்களின் காலிலும் விழுந்து உடம்பு அழுக்காயிற்று;
கண்டவர்களையும் தோத்திரம் பண்ணி வாய் எச்சிலாயிற்று.
‘ஐயோ! தப்பாக இவை செய்தோம்‘ என்கிற அநுதாபமு மில்லாமையாலே தூய்மையற்ற தொண்டனாயினேன்.
இப்படிப்பட்ட நான். இவ்வழுக் குடம்பிலமைந்த எச்சில் வாயினால் (சொல்லினேன் தொல்லைநாமம்)
‘தொல்லை நாமம்‘ என்றது – அநாதிகாலமாக நித்யஸூரிகள் முதலானார்க்கு ஜீவனமாயிருக்கின்ற திருநாமம் என்றபடி.
பல பெரியோர்களுக்கு உதவும் படியான வஸ்துவை அநியாயமாக நான் வாய் வைத்துக் கெடுத்து விட்டேனே!,
இனி அவர்கள் எங்ஙனே ஜீவிக்கப் போகிறார்கள்! என்று நைச்யாநுஸந்தானமாகப் பேசுகிறபடி.
தொல்லை நாமங்களை அழுக்குடம்பெச்சில் வாயால் நான் சொன்னது மாத்திரமன்றியே
”நானுஞ் சொன்னேன் நமருமுரைமின்“ என்று நமர்களையும் சொல்லுவித்தன்றோ கெடுத்தேன்;
ஆ ஆ! என்ன அபசாரப்பட்டோம்!, என்ன அபசாரப்பட்டோம்!!, இனி நமக்கு உய்யும் வழியுண்டோ?” என்று
நான் அஞ்சினவளவிலே
‘ஆழ்வீர்! அஞ்சவேண்டா‘ என்று வடிவழகைக் காட்டி மருந்தை யிட்டுப் பொருந்தவிட்டான் எம்பெருமான் என்றாராயிற்று.
———————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply