ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி-8-21 -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்

வருத்தும் புற விருள் மாற்ற, எம் பொய்கைப் பிரான் மறையின்

குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்

திரித்தன் றெரித்த திரு விளக்கைத் தன் திருவுள்ளத்தே

இருத்தும் பரமன் இராமானுசனெம் இறையவனே.-8-

 

பதவுரை

வருத்தும்

வருத்தத்தை யுண்டு பண்ணக் கூடிய பாஹ்ய விஷயங்களைப் பற்றின அஜ்ஞானமாகிற இருளை
மாற்ற

போக்குவதற்காக
எம் பொய்கைப் பிரான்

நமது குலத் தலைவரான பொய்கை யாழ்வார்
அன்று

முற் காலத்தில்
மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்ற திரித்து

வேதாந்தங்களிற் பதிந்து கிடக்கும் பொருள்களையும் செந்தமிழ்ச் சொற்களையுங்கூட்டி இரண்டையும் ஒன்று சேர ஒரு திரியாக்கி
எரித்த திரு விளக்கை

ஜ்வலிக்கக்செய்த (முதல் திருவந்தாதியாகிற) திருவிளக்கை
தன் திரு உள்ளத்தே

தமது திருவுள்ளத்தே
இருத்தும்

வைத்துக் கொண்டிரா நின்ற
பரமன் இராமாநுசன் எம் இறையவன்

மஹா வைபவசாலியான எம்பெருமானார்
எம் இறையவன்

நமக்கு ஸ்வாமி

பகவத் பாகவத விஷயம் அந்தரங்க விஷயமென்றும் சப்தாதி விஷயங்கள் பாஹ்ய விஷயம் (அதாவது-புறவிஷயம்) என்றும் சொல்லப்படும்.

அந்த பாஹ்ய விஷயங்களைப்பற்றின அஜ்ஞாநாந்தகாதலிலே ஸுக ரூபம்போல் தோற்றினாலும் பிறகு மிக்க வருத்தத்தை விளைக்கக் கூடியது; அப்படிப்பட்ட கொடியஇருளை அகற்றுவதற்காகப் பொய்கையாழ்வார் “வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காக” என்று தொடங்கித் திருவந்தாதி திவ்ய ப்ரபந்தமென்னாம் ஒருவிளக்கை எற்றியருளினார்.

அவ்விளக்குக்கு எதைத் திரியாக்கினார் என்றால், வேதாந்தங்களில் திரண்டு கிடக்கும் ஸாரப் பொருள்களையும் இனிய தமிழ்ச்சொற்களையும் ஒன்று சேர்த்துத் திரித்தார்.

அப்படிப்பட்ட திருவிளக்கை எம் பெருமானார் தமது திருவுள்ளத்தினுள்ளே எப்போதும் அணையாதபடி ஸ்தாபித்தருளினார்;

அவரே அடியேனுக்கு ஸ்வாமி என்றாராயிற்று.

——————

இறைவனைக் காணும் இதயத் திருள் கெட ஞானமென்னும்

நிறை விளக் கேற்றிய பூதத் திருவடி தாள்கள்,நெஞ்சத்

துறைய வைத் தாளும் இராமா னுசன் புகழ் ஓதும் நல்லோர்

மறையினைக் காத்த இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே.–9-

 

பதவுரை

இறைவனை

ஸரவ ஸ்வாமியான எம் பெருமானை
காணும்

ஸாக்ஷாத் கரிப்பதற்கு உபகரணமான
இதயத்து

ஹ்ருயத்திலுள்ள
இருள் கெட

அஜ்ஞாநமாகிற அந்தகார மானது நசிக்கும் படியாக
ஞானம் என்னும் நிறை விளக்கு எற்றிய

ஞானமாகிற பூர்ண தீபத்தை ப்ரகாசிப்பித் தருளி இரண்டாந் திருவந்தாதியை அருளிச் செய்த
பூதத் திருவடி

பூதத்தாழ்வாருடைய
தாள்கள்

திருவடிகளை
நெஞ்சத்து

தமது திரு வுள்ளத்திலே
உறைய வைத்து

சாச்வதமாக ஸ்தாபித்து
ஆளும்

(அவற்றையே) அநுபவிக்கின்ற
இராமரநுசன்

எம்பெருமானாருடைய
புகழ்

திவ்ய குணங்களை
ஒதும்

இடைவிடாது அநுஸந்திக்கின்ற
நல்லோர்

விலக்ஷண புருஷர்கள் தாம்
இந்த மண் அகத்தே

இப் பூ மண்டலத்திலே
மறையினை

வேதங்களை
காத்து

ரக்ஷித்து
மன்ன வைப்பவர்

என்றைக்கும் அழிவில்லாத படி ப்ரதிஷ்டாபனம் பண்ண வல்லவர்கள்

‘ஸ்ரீமத் வேதமார்க்க ப்ரதிஷ்டாபநாசார்யர்’ என்னும் விருது இராமாநுசனுடையார்க்கே ஏற்குமென்கிறார்.

ஸர்வ ஸ்வாமியான எம்பெருமானை ஸாக்ஷாத்கரிப்பதற்கு எல்லார்க்கும் உபகரணமாக யிராநின்ற ஹருதயமானது

அஜ்ஞாநாந்தகாரத்தாலே இருண்டு கெட்டுப்போகாதபடி பரஜ்ஞாநமாகிற பூர்ண தீபத்தை எற்றினவரான

பூதத்தாழ்வாருடைய திருவடிகளைத் தமது திருவுள்ளத்திலே இடைவிடாது வைத்துக்கொண்டு

அவற்றையே அனுபவிக்கும் எம்பெருமானாருடைய குண கீர்த்தநமே போது போக்காக இருக்கும் விலக்ஷணர் யாரோ

அவர்கள் தாம் வேதத்தை நன்றாக ரக்ஷித்து இந்நிலவுலகத்தில் நிலை நிறுத்த வல்ல மஹான்கள் என்றாராயிற்று

பூதத்தாழ்வார்  ஏற்றிய ஞானமென்னாம் நிறைவிளக்காவது – இரண்டாந் திருவந்தாதியாகிற அவருடைய அருளிச்செயல்

பூதத்திருவடி = திருவடியென்று இங்கே ஸ்வாமிக்கு வாசகம்; பூதத்தாரென்னாம் ஸ்வாமி என்றபடி.

(மறையினைக் காத்து மன்ன வைப்பவர்) எம்பெருமானார் ஸம்பந்தம் பெறாத மற்றையோர்கள் “வேதம் ப்ரமாணமே யல்ல” என்று சொல்லுவாரும், அதனைப் பிரமாணமாக ஒப்புக் கொண்டும் அபார்த்தங்கள் பண்ணுவாருமாய் இருப்பதால் அவர்கள் யாவரும் வேத மார்க்க வித்வம்ஸிகள்; இராமாநுசனாடையார் தாம் ஸ்ரீமத் வேத மார்க்க ப்ரதிஷ்டாபநாசார்யர்கள் என்றபடி

——————.

மன்னிய பேரிருள் மாண்ட பின் கோவலுள் மா மலராள்

தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்

பொன்னடி போற்றும் இராமானுசற் கன்பு பூண்டவர் தாள்

சென்னியிற் சூடும் திருவுடை யாரென்றும் சீரியரே.-10-

 

பதவுரை

மன்னிய

ஒருவாரலும் பேர்க்க முடியாத படியாதபடி நிலைத்து நின்ற
பேர் இருள்

(அஜ்ஞாநமாகிற பெருத்த இருளானது
மாண்ட பின்

முற்பட்ட ஆழ்வார்களிருவரும் ஏற்றின திரு விளக்காலே) நனறாக நீங்கின பின்பு,
கோவலுள் ஆயனை

திருக் கோவலூரில் ஆயனாரை
மா மலராள் தன்னொடும்

பிராட்டியோடு கூட
கண்டமை

தாம் ஸேவித்த படியை
காட்டும்

“திருக்கண்டேன்” இத்யாதி ப்ரபந்த முகத்தாலே) வெளியிட்டருளி
தமிழ் தலைவன்

தமிழ்க்குத் தலைவரான பேயாழ்வாருடைய
பொன் அடி

அழகிய திருவடிகளை
போற்றும்

புகழுமவரான
இராமாநுசற்கு

எம்பெருமானார் திறத்தில்
அன்பு பூண்டவர்

பக்தியையுடையவர்களினது
தாள்

திருவடிகளை
சென்னியில் சூடும் திரு உடையார்

சிரோ பூஷணமாகக் கொள்ளுஞ் செல்வமுடையோர் தாம் என்றும் சீரியா என்றைக்கும் ஸ்ரீமான்கள்.

பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் ஏற்றின இரண்டு திருவிளக்குகளாலும் இருள் நீங்கவே, “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று திருக்கோவலூராயனாரைப் பிராட்டியோடு கூட ஸேவிக்கப் பெற்றார் பேயாழ்வார்.

தாம் அப்படி ஸேவித்ததாக மூன்றாந்திருவந்தாதி முகத்தால் வெளியிட்டருளின அவ் வாழ்வாருடைய திருவடிகளைக் துதிக்குமவரான எம்பெருமானார் திறத்தில் பக்தியை யுடையவர்கள் யாரோ, அவர்களுடைய திருவடிகளைச் சிரோ பூஷணமாகக் கொள்வதையே அழியாச் செல்வமாக நினைத்து ஸ்ரீராமாநுஜ பக்தர்களுடைய திருவடியைச் சிரமேற் கொள்ளுமவர்கள் தாம் நித்திய ஸ்ரீமான்கள் என்றாராயிற்று.

இப்பாட்டில் பேயாழ்வார் “தமிழ்த் தலைவன்” என்று சிறப்பித்துக் கூறப்பட்டார்.

—————-

சீரிய நான் மறைச் செம் பொருள் செந்தமிழா லளித்த

பாரியலும் புகழ்ப் பாண் பெருமாள்சரணாம் பதுமத்

தாரியல் சென்னி இராமானுசன் றனைச் சார்ந்தவர் தம்

காரிய வண்மை, என்னால் சொல்லொணாது இக் கடலிடத்தே.–11–

 

பதவுரை

சீரிய நால் மறை செம் பொருள்

சிறந்த நால் வேதங்களிலுள்ள செவ்வியபொருள்களை
செம் தமிழால்

அழகிய தமிழ்ப் பாசுரங்களினால்
அளித்த

அருளிச் செய்தவரும்
சரண் ஆம் பதுமம் தார் இயல்சென்னி

திருவடிகளாகிற தாமரைப் பூவாலே அலங்கரிக்கப்பட்ட திரு முடியை யுடையரான
இராமாநுசன் தன்னை

எம்பெருமானாரை
சார்ந்தவர் தம்

ஆச்ரயமாகப் பற்றினவர்களுடைய
பார் இயலும் புகழ்

பூமி யெங்கும் பொருந்தின புகழை யுடையவருமான
பாண் பெருமாள்

திருப்பாணாழ்வாருடைய
காரியம் வண்மை

அநுஷ்டாந வைலக்ஷண்யமானது
இக்கடல் இடத்து

கடல் சூழ்ந்த இப் பூமியில்
என்னால் சொல்ல ஒணாது

(இப்படிப்பட்ட வைபவ முடையதென்று) என்னால் சொல்லித் தலைக் கட்ட முடியாதது.

எம்பெருமானாடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை யெல்லாம் விசதமாகப் பேசுகையாலே சிறந்தவையான நால் வேதங்களில் பொதிந்து கிடக்கும் நற்பொருள்களை “அமலனாதி பிரான்” என்னும் திவ்ய ப்ரபந்தத்தில் சுருக்கி அருளிச் செய்தவராய் நாடெங்கும் பரவின புகழை யுடையரான திருப்பாணாழ்வாருடைய சரணாரவிந்தங்களாலே அலங்கரிக்கப்பட்ட திருமுடியை யுடையவரான எம்பெருமானாரை அடி பணிந்தவருடைய ஆசார வைலக்ஷ்ண்யமானது என் வாய் கொண்டு வருணிக்க முடியாதபடி மிகவும் சிறந்தது என்றாராயிற்று.

—————-

இடங்கொண்ட கீர்த்தி மழிசைக் கிறைவன் இணை யடிப் போ

தடங்கும் இதயத்தி ராமா னுசன், அம் பொற்பாத மென்றுங்

கடங் கொண் டிறைஞ்சும் திரு முனி வர்க் கன்றிக் காதல் செய்யாத்

திடங் கொண்ட ஞானியர்க்கே அடியே னன்பு செய்வதுவே.–12-

 

பதவுரை

இடம் கொண்ட கீர்த்தி

பூமியெங்கும் வியாபித்த கீர்த்தியை யுடையரான
மழிசைக்கு இறைவன்

திருமழிசைப் பிரானாடைய
இணை அடி போது

உபய பாதார விந்தங்கள்
அடங்கும்

குடி கொண்டிருக்கப் பெற்ற
இதயத்து

திரு வுள்ளத்தை யுடையரான
இராமாநுசன்

எம்பெருமானாடைய
அம் பொன் பாதம் என்றும்

மிகவும் அழகிய திருவடிகளை
என்றும்

எக்காலத்திலும்
கடம் கொண்டு இறைஞ்சும் திரு

இதுவே நமக்கு ஸ்வரூப மென்கிற புத்தியோடே ஆச்ரயிக்கையாகிற செல்வத்தை யுடையரான
முனிவர்க்கு அன்றி

மஹான்களுக்குத் தவிர மற்றவர்களுக்கு
காதல் செய்யா

அன்பு பூண்டிராக
திடங் கொண்ட ஞானியாக்கே

மிக்க உறுதியை யுடையரான ஞானிகளுக்குத் தான்
அடியேன் அன்பு செய்வது

அடியேன் பக்தனாயிருப்பேன்

உலகமெங்கும் பரவின புகழையுடையரான திருமழிசைப் பிரானாடைய பாதார விந்தங்கள் அடங்கி யிருக்கப் பெற்ற திருவுள்ளத்தை யுடையரான எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளை ஸ்வரூப ப்ராப்தத்வ புத்தி யோடே அநவரதம் ஆச்ரயிக்கின்ற மஹா பாகவதர்கட்குத் தவிர வேறொருவர்க்கும் விதேயப்படாத மா ஞானிகளுக்கே அடியேன் அன்பனாயிருப்பன் என்கிறார் இப்பாட்டால், ‘

ஸ்ரீராமாநுஜ பக்த பக்தன் அடியேன், என்றாராயிற்று.

கடங் கொண்டு – கடமையாகக் கொண்டு

———————-

செய்யும் பசுந் துளபத் தொழில் மாலையும் செந்தமிழில்

பெய்யும் மறைத் தமிழ் மாலையும் பேராத சீரரங்கத்

தையன் கழற் கணியம் பரன் தாளன்றி ஆதரியா

மெய்யன் இராமானுசன் சரணே கதி வேறெனக்கே.–13-

 

பதவுரை

செய்யும்

(தொண்டரடிப் பொடி யாழ்வாராகிற தம்மாலே) செய்யப் பட்ட தாய்
பசும் துளவம்

பசுமை தங்கிய திருத் துழாய் மயமாய்
தொழில்

வேலைப் பாடுகளையுடைத்தான
 மாலையும்

பூ மாலைகளையும்
செம் தமிழில்

அழகிய தமிழ்ப் பாஷையிலே
பெய்யும்

உண்டாகப் பட்டதாய்
மறை

வேத ஸத்ருசமான
தமிழ் மாலையும்

திருமாலை திருப் பள்ளி யெழுச்சி யென்கிற திவ்ய ப்ரபந்தங்களாகிற சொல் மாலைகளையும்
பேராத சீர் அரங்ககத்து ஐயன் கழற்கு அணியும்

நித்ய ஸித்தமான கல்யாண குணங்களை யுடையரான ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளிலே சாத்தினவருமான
பரன்

தொண்டரடிப் பொடி யாழ்வாராகிற பெரியவருடைய
தாள் அன்றி ஆதரியா

திருவடிகளைத் தவிர மற்றொன்றையும் விரும்பாத
மெய்யன்

ஸத்யசீலரான
இராமாநுசன்

எம்பெருமானாருடைய
சரணே

திருவடிகளே
எனக்கு

அடியேனுக்கு
வேறு கதி

விலக்ஷணமான ப்ராப்ய வஸ்துவாம்,

தொண்டரடிப் பொடி யாழ்வார் திருவடிகளை யன்றி மற்றொன்றில் ஆதரம் அற்றிருக்கிற எம்பெருமானார் திருவடிகளே நமக்குச் சரணமென்கிறார் இதில்

தொண்டரடிப் பொடி யாழ்வார் ஸ்ரீரங்கநாதன் திருவடிகளில் இரண்டு மாலைகளைச் செய்து ஸமர்ப்பித்தனரென்று சாடூக்தியாகச் சொல்லுகிறார் அமுதனார். ‘துளபத்தொண்டாய தொல்சீர்த் தொண்டரடிப்பொடி” என்றும்’

“தொடையொத்த துளபமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி” என்றும் தாமே அருளிச் செய்த படிக்குப் பொருந்தத்

திருத்துழாய் மாலைகளையும், திருமாலை திருப்பள்ளியெழுச்சி யென்கிற திவ்ய ப்ரபந்தங்களாகியற சொல் மாலைகளையும் அரங்கத்தையன் கழல்களிலே ஸமர்ப்பித்தவரீறே தொண்டரடிப்பொடியாழ்வார்.

“துளபத்தெழில் மாலையும்” என்றும் சிலர் பாடங்கூறுவர்; துளபத்து – துளஸியினாலாகிய, எழில் மாலை – அழகிய என்றபடி.

இப் பாடல் அழகிய தேயாயினாம் வியாக்கியானத்தில் ஆதரிக்கப்பட்ட பாடமன்றாதலால் உபேக்ஷிக்கத் தக்கதென்க.

—————

கதிக்குப் பதறி வெங் கானமும் கல்லும் கடலுமெல்லாம்

கொதிக்கத் தவம் செய்யும் கொள்கை யற்றேன்,கொல்லி காவலன்சொல்

பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே

துதிக்கும் பரமன் இராமானுச னென்னைச் சோர்விலனே.–14-

பதவுரை

கொல்லி காவலன்

குல சேகரப் பெருமாளாலே அருளிச் செய்யப் பட்டதாய்
கலை சொல் பதிக்கும்

சாஸ்திரச் சொற்கள் அமையப் பெற்றதான பொருமாள் திருமொழிப் பரசுரங்களை
பாடும் பெரியவர்

பாடுகின்ற பெரியோர்களது
பாதங்களே

திருவடிகளையே
துதிக்கும்

ஸ்தோத்ரம் செய்பவராய்
பரமன்

உத்க்ருஷ்டரான
இராமானுசன்

எம்பெருமானார்
என்னை சோர்விலன்

என்னை விட்டு நீங்குகிறாரில்லை; (ஆதலால்) ப்ராப்ப லாபந்துக்காக வரைந்து
கதிக்கு பதரி

அத்யுஷ்ணமான காடுகளிலும் மலைகளிலும்
கடலும்

கடல்களிலும் (நின்றுகொண்டு)
எல்லாம் கொதிக்க

எல்லா அவயங்களும்
தவம் செய்யும் கொள்கை

தபஸ்ஸூ பண்ணும் ஸ்வபாவத்தை
அற்றேன்

விட்டொழித்தேன்

ஸகல சாஸ்த்ரங்களின் ஸாரப் பொருள்களையும் திரட்டி ஸ்ரீ குலசேகரப்பெருமான் அருளிச் செய்த பெருமாள் திருமொழி  என்னும் திவ்ய ப்ரபந்தத்தை அநுஸந்திக்கின்ற பெரியவர்களது திருவடிகளையே போற்று மியல்வினரான எம்பெருமானார் வந்து தாமே என்னை ஸ்வீகரித்தாராதலால் இனி ஒரு நாளும் அவர் அடியேனைக் கைவிடமாட்டார்;

ஆன பின்பு நமக்கு ப்ராப்யம் வேறு ஒன்று மில்லாமையாலே, வந பர்வத ஸமுத்ர தீரங்களில் நின்று க்ரூரமாகச் செய்யும் தவங்களில் இனி எனக்கு அந்வய மில்லை யென்றாராயிற்று.

“எல்லாங் கொதிக்கத் தவஞ்செய்யுங் கொள்கை” என்றதற்கு – இவனுடைய தவத்தின் கொடுமையைக் கண்டு கானமும் கல்லும் கடலும் பரிதபிக்கும்படியாக அந்தந்த ஸ்தலங்களிலே நின்று தபஸ்ஸூ பண்ணும் ஸ்வபாவம் என்று பொருள் கூறுவாருமுளர்.

சோர்வு இலன் – பிரிவிலன் என்றபடி.

——————

சோராத காதல் பெருஞ்சுழிப்பால், தொல்லை மாலை யொன்றும்

பாராதவனைப் பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன் தாள்

பேராத வுள்ளத் திராமா னுசன் றன் பிறங்கிய  சீர்

சாரா மனிசரைச் சேரேன் எனக்கென்ன தாழ்வினியே?–15-

 

பதவுரை

சோராத காதல் பெரு சுழிப்பால்

ஒருநாளும் குறைவுபடாத ப்ரேமத்தில் பெருஞ்சுழிப் படுகையாலே
தொல்லை மாலை  ஒன்றும் பாராது

நித்யனான எம்பெருமான்  படியைச் சிறிதும் நிரூபியாமல்
அவனை

அவ்வெம்பெருமானை  நோக்கி
பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன்

பல்லாண்டு பல்லாண் டென்று மங்ளாசாஸநம் பண்ணுகையையே நித்ய ஸவபாவமாக வுடையரான பெரியாழ்வாருடைய
தாள் பேராத உள்ளத்து

திருவடிகள் விட்டகலாத திருவுள்ளத்தை யுடையரான
இராமாநுசன் தன்

எம்பெருமானாருடைய
பிறங்கிய சீர்

மிக்க திருக் குணங்களை
சாரா

தங்களுக்கு அநுபாவ்யமாகக் கொள்ளாத
மனிசரை

மநுஷ்யர்களை
சேரேன்

பற்ற மாட்டேன்
இனி

இப்படிப் பட்ட உறுதி பிறந்த பின்பு
எனக்கு என்ன தாழ்வு

அடியேனுக்கு என்ன குறை?.

பாண்டிய ராஜனுடைய பண்டித சபையில் எழுந்தருளி  “எம்பெருமானே பரதத்தும்” என்று ஸ்தாபநம் செய்து கிழி யறுத்து விட்ட காலத்து, அப் பாண்டியன் தம்மை யானை மேலேற்றி ஊர்வலம் வருவிக்கையில் தம் வைபவத்தைக் காண வந்து ஆகாசத்திலே கருடாரூடனாய் நின்ற திருமாலைச் சேவித்து அப்பெருமானிடத்துள்ள பெருங்காதலாலே ரக்ஷய பூதரான தம்மையம் ரக்ஷகனான் அவனையும் மறந்து, தம்மை ரக்ஷகராகவும் அவனை ரக்ஷ்யனாகவு மெண்ணி அவனுக்குப் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்” டென்று தொடங்கி மங்களாசாஸநம் செய்தருளின பெரியாழ்வாருடைய திருவடிகளையே அநவரதம் தியானித்தருளும் எம்பெருமானாருடைய குணங்களைச் சிந்திக்க  கில்லாத மனிசரோடு நான்ஸஹவாஸம் செய்ய மாட்டேண்; இந் நினைவு பிறந்தபின் இனி எனக்கு ஒரு குறையுமில்லை – என்றாராயிற்று.

முன்னிரண்டடிகளிற் குறிக்கப்பட்டுள்ள சரிதையின் விரிவு பெரியாழ்வார் வைபவத்திற் காணத் தக்கது

————

தாழ்வொன்றில்லா மறை தாழ்ந்து தல முழுதுங் கலியே

ஆள்கின்ற நாள் வந் தளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி

சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல்லருளால்

வாழ்கின்ற வள்ளல் இராமா னுசனென்னும் மா முனியே.–16–

 

பதவுரை

அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையை

ஸ்ரீ ரங்கநாதனுடைய திரு முடியிலே சாத்தக் கடவதான பூமாலையை
சூடி கொடுத்தவள்

தனது திருக்குழலிலே அணிந்து வாஸித மாக்கிக் கொடுத்தவளான ஆண்டாளுடைய
தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல்

அவ்யாஜமான அருளாலே வாழ்பவரும் உதாரருமான
இராமாநுசன் என்னும் மா முனி

ஸ்ரீ ராமாநுஜ முனியானவர் (எப்படிப் பட்டவரென்றால்)
தாழ்வு ஒன்று இல்லா மறை

ஒரு குறையுமில்லாதிருந்த வேதமானது
தாழ்ந்து

(குத்ருஷ்டிகளாலே)இழிவு பெற
தலம்

முழுதும் பூமியெங்கும்
கலியே ஆள்கின்ற நாள்

கலியே ஸாம்ராஜ்யம் பண்ணுகிற காலத்திலே
வந்து

இங்கே வந்தவதரித்து
அளித்தவன் காண்மின்

(அந்த வேதத்தை உத்தரிப்பித்து உலகத்தை)ரக்ஷித்தருளினவர்.

—————-

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்

கனியார் மனம் கண்ண மங்கை நின்றானைக் கலை பரவும்

தனி யானையைத் தண் டமிழ் செய்த நீலன் றனக்குலகில்

இனியானை எங்கள் இராமானுசனை வந் தெய்தினரே.–17-

 

பதவுரை

கலை பரவும் தனி ஆனையை

ஸகல சாஸ்த்ரங்களாலும் துதிக்கப் பெற்ற அத்விதீயமான மத்த கஜம் போன்ற
கண்ண மங்கை நின்றானை

திருக்கண்ண மங்கையிலே நிற்கும் பத்தராவிப்பெருமாளைக் குறித்து
உலகில்

இவ்வுலகில்
தண் தமிழ் செய்த

ஸம்ஸார தாப ஹரமான திவ்ய ப்ரபந்தத்தைச் செய்தருளின
நீலன் தனக்கு

திருமங்கையாழ்வார் பக்கல்
இனியானை

ப்ரேம முடையவராய்
எங்கள்

எங்களுக்குத் தலைவரான
இராமாநுசனை

எம்பெருமானாரை
வந்து எய்தினர்

வந்து பணிந்த மஹான்கள்
துயரங்கள் முந்திலும் முனியார்

தாப த்ரயம் செறிந்தாலும் வருத்தப் பட மாட்டார்கள்
இன்பங்கள் மொய்த்திடினும் மனம் கனியார்

ஸுகங்கள் செறிந்தாலும் களிப்படைய மாட்டார்கள்

ஸகல சாஸ்த்ர ப்ரதிபாத்யனான எம்பெருமானைத் தம்முடைய திவ்ய ப்ரபந்தங்களிலே அமைத்துப் பாடின திருமங்கை யாழ்வார்க்கு அந்தரங்க பக்தரான எம்பெருமானாரை ஆச்ரயித்த மஹான்கள் ஸுக துக்கங்கள் மேலிடுங் காலத்தில் மற்ற ஸம்ஸாரிகளைப் போல் ஹர்ஷ சோகங்களை யடையாமல் எவ்வித விகாரமும் அற்றிருப்பர்கள்;

நீங்களும் ஹர்ஷ சோகங்களில் கலங்கவேண்டா என்றபடி

கண்ண மங்கை நின்றானை = திருப்பதிகட்கும் புக்குக் கவி பாடின கலியன் என்றபடி.

நீலன் = திருமங்கையாழ்வாருடைய திருநாமங்களில் ஒன்று.

———–

எய்தற் கரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்

செய்தற் குலதில் வரும் சட கோபனைச் சிந்தையுள்ளே

பெய்தற் கிசையும் பெரியவர் சீரை உயிர்களெல்லாம்

உய்தற் குதவும் இராமா னுசனெம் உறு துணையே.–18-

 

பதவுரை

எய்தற்கு அரிய மறைகளை

அதிகரிக்க முடியாத (அளவற்ற) வேதங்களை
இன் தமிழ் ஆயிரத்தால்

இனிய தமிழாவாகிய ஆயிரம் பாசுரங்களினால்
செய்தற்கு உலகில் வரும்

அருளிச் செய்வதற்காக  இவ்வுலகில் வந்துதித்த
சடகோபனை

நம்மாழ்வாரை
சிந்தை உள்ளே

தமது ஹிருதயத்தினுள்ளே
பெய்தற்கு இசையும்

த்யானிப்பதற்கு இணங்கின
பெரியவர்

ஸ்ரீ மதுரகவிகளுடைய
சீரை

ஜ்ஞாநாதி குணங்களை
உயிர்கள்  எல்லாம் உய்தற்கு உதவும்

ஸகலாத்மாக்களும் உஜ்ஜீவிக்குமாறு உபகரித்தருளா நிற்கிற
இராமாநுசன்

எம்பெருமானார்
எம் உறு துணை

எமக்கு உற்றதுணை

வேதந் தமிழ் செய்த மாறன் சடகோபனையே வாழ்த்தும் ஸ்ரீ மதுரகவிகளின் பக்தரான எம் பெருமானார் நமக்கு உற்ற துணை யென்றாராயிற்று.

இப்பாட்டில் ஸ்ரீ மதுரகவிக்ள பெரியவர் என்று சிறப்பித்துக் கூறப்பட்டமை நோக்கத்தக்கது.

“புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ யென் செவியின் வழிபுகுந்து என்னுள்ளாய் அவிவின்றி யான் பெரியன் நீ பெரியை யென்பதனை யாரறிவார், ஊன்பருகு நேமியாயுள்ளு” (பெரிய திருவந்தாதி) என்று பெரிதான பரப்ரஹமத்தை உள்ளடக்கின பெரியவரை (நம்மாழ்வாரையும்) உள்ளடக்கின பெரியவரிறே மதுரகவிகள்.

————

 

உறு பெருஞ் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்

வெறி தரு பூமகள் நாதனும் மாறன் விளங் கியசீர்

நெறி தரும் செந்தமிழ் ஆரணமே யென்றிந் நீணிலத்தோர்

அறி தர நின்ற, இராமா னுசனெனக் காரமுதே.–19-

 

பதவுரை

உறுபெரு செல்வமும் தந்தையும் உயர் குருவும்

சிறந்த பெரிய ஸம்பத்தும் மாதா பிதாக்களும் ஸதாசார்யனும்
வெறி தரு பூமகள் நாதனும்

மணம் மிக்க பூவைப் பிறப்பிடமாக வுடைய பெரிய பிராட்டியாருக்குக் கொழுநனான ஸர்வேச்வரனும் (ஆகிய எல்லாம்
மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று

நம்மாழ்வார் (தமக்கு) ப்ரகாசித்த பகவத் குணங்களின் அடைவே அருளிச் செய்த செந்தமிழ் வேதமே யென்று
இ நீள் நிலத்தோர் அறிதர நின்ற

இப் பெரிய வுலகிலுள்ளார் யாவரும் அறியும்படி நின்ற
இராமாநுசன்

எம்பெருமானார்
எனக்கு

அடியேனுக்கு
ஆர் அமுது

பரம போக்யர்

நம்மாழ்வாரருளிச்செய்த திருவாய் மொழி தான் நமக்கு ஸர்வ ஸ்வம்’ என்கிற அத்ய வஸாய முடைய உடையவர் திருத்து அடியேன் அநந்ய போக்யத்வ புத்தியை யுடையேன் என்றாராயிற்று.

மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செந்தமிழாரணம் ஸ்ரீ திருவாய் மொழியில் ஒவ்வொரு திருவாய்  மொழியிலும் எம்பெருமானாடைய ஒவ்வொரு திவ்யகுணத்தை வெளியிட்டிருக்கிறார்;

அது வெளியிட்டவாறு என்னென்னில்,

எம்பெருமான் ஆழ்வார்க்கு எந்த க்ரமமாகக் குணங்களை அநுபவிப்பித்தானோ அந்த க்ரமமாகவே இவர் வெளியிட்டாரென்க.

—————

ஆரப் பொழில் தென் குருகைப் பிரான்,அமுதத் திருவாய்

ஈரத் தமிழின் இசை யுணர்ந் தோர்கட்கு இனியவர் தம்

சீரைப் பயின்றுய்யும் சீலங்கொள் நாத முனியை நெஞ்சால்

வாரிப் பருகும் இராமானுசனென் றன் மா நிதியே.–20-

.

பதவுரை

ஆரம் பொழில்

சந்தனச் சோலைகளை யுடைய
தென் குருகை

அழகிய திருக் குருகூரிலே (அவதரித்த)
பிரான்

மஹோபகாரகரான ஆழ்வாருடைய
அமுதம் திருவாய்

பரம போக்யமான திருப் பவளத்தில் பிறந்த
ஈரம் தமிழன் இசை

ஈரச் சொல்லாகிய திருவாய்மொழியின்  இசையை
உணர்ந்தோர்கட்கு

அறிந்தவர்களுக்கு
இனியவர் தம்

இஷ்டராயிருப்பவர்களுடைய
சீரை

குணங்களை
பயின்று

அப்யஸித்து
உய்யும் சீலம் கொள்

ஸத்தை பெறும் சீலத்தை யுடையரான
நாதமுனியை

நாத முனிகளை
நெஞ்சால்

தம் திருவுள்ளத்தாலே
வாரி பருகும்

அபி நிவேசத்தோடு அனுபவிக்கின்ற
இராமாநுசன்

எம்பெருமானார்
என் தன் மாநிதி

எனக்கு அக்ஷயமான நிதி.

—————

நிதியைப் பொழியும் முகில் என்று நீசர் தம் வாசல் பற்றித்

துதி கற் றுலகில் துவள்கின்றிலேன், இனித் தூய் நெறி சேர்

எதிகட் கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்

கதி பெற்றுடைய இராமா னுச னென்னைக் காத்தனனே.-21–

 

பதவுரை

தூய் நெறி சேர்

பரிசுத்தமான அனுட்டானமுடைய யதிகளுக்கு
இறைவன்

தலைவரான
யமுனைத் துறைவன்

ஆளவந்தாருடைய
இணை அடி ஆம் கதி

உபய பாதங்களாகிற ப்ராப்யத்தை
பெற்று

பெற்று (அ தனாலே)
உடைய

உலகத்தார்க் கெல்லாம் ஸ்வாமியாயிருக்கிற
இராமாநுசன்

எம்பெருமானார்
என்னை காத்தனன்

என்னை ரக்ஷித் தருளினார்; (ஆன பின்பு)
இனி

இனிமேல்,
நிதியை பொழியும் முகில் என்று

“நிதிகளை வர்ஷிக்கிற மேகமே!” என்று
துதி கற்று

ஸ்தோத்ரங்களைப் பண்ணிக் கொண்டு
உலகில்

இவ்வுலகத்தில்
நீசர் தம்

நீசராயிருப்பவருடைய
வாசல் பற்றி

வாசலைப் பற்றி நின்று
துவள்கின்றிலேன்

வருந்த மாட்டேன்

நேற்று வரையிலும் நான் கண்டபேர்களுடைய வாசற் கடைகளிலும் போய் நின்று வாயைக் காட்டி வயிற்றைக் காட்டி “மஹாநிதிகளைப் பொழிகின்ற மேகமே!” என்று பொய்யான நரஸ் துதிகளைச் செய்து துவண்டேன்;

இன்று முதல் எந்நாளும் இனி நான் அவ்வாறு துவள மாட்டோன்; ஒரு நீசனுடைய வாசலையும் பற்றமாட்டேன்.

இன்று நான் எம்பெருமானாருடைய ஸம் ரக்ஷணைக்கு ஆளாய்விட்டேன்;

அவரோ, எதிரிகளுக்குத் தலைவரான ஆளவந்தாருடைய ஸம்ரக்ஷணையைப் பெற்று உய்ந்தவர்;

அவராலே ஸம் ரக்ஷிக்கப் பெற்றேனான பின்பு இனி நான் எதுக்காக ஒரு நீசன் வாசலைப் பற்றித் துவளகிறேன்.

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading