Archive for February, 2022

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவேங்கடத்தந்தாதி –61-80-

February 21, 2022

பண்டை இருக்கும் அறியாப் பரம பதத்து அடியார்
அண்டை இருக்கும் படி வைக்கும் அப்பனை அண்டத்துக்கும்
தண் தையிருக்கும் மலர்ந்த செவ்வாயனை தாள் வணங்கா
மண்டை யிருக்கும் விடுமோ சனன மரணமுமே –61-

(இ – ள்.) பண்டை இருக்கும் அறியா – பழமையான வேதங்களும் முழுதும் அறியமாட்டாத,
பரம பதத்து – (தனது உலகமாகிய) ஸ்ரீவைகுண்ட த்தில்,
அடியார் அண்டை இருக்கும்படி – (நித்தியமுக்தர்களாகிய) அடியார்களின் அருகில் இருக்கும்படி,
வைக்கும் – (தன்னைச்சரணமடைந்தவர்களை) வைத்தருள்கின்ற,
அப்பனை – திருவேங்கடமுடையானும்,
அண்டத்துக்கும் தண் தயிருக்கும் மலர்ந்த செவ் வாயனை – (பிரளயகாலத்தில்) உலகங்களை விழுங்குதற்கும்
(கிருஷ்ணாவதாரத்திலே) குளிர்ச்சியான தயிரை யுண்ணுதற்கும் திறந்த சிவந்த திருவாய்மலரை யுடையவனுமான எம்பெருமானை,
தாள் வணங்கா – திருவடிதொழாத,
மண்டையிருக்கும் – தலையையுடைய வர்களாகிய உங்களுக்கும்,
சனனம் மரணமும் விடுமோ – பிறப்பும் இறப்பும் நீங்குமோ? (நீங்கா என்றபடி); (எ – று.)

வேதம் ஒருகாலத்தில் தோன்றியதன்றி நித்தியமாதலால், “பண்டையிருக்கு” எனப்பட்டது.
பண்டு – பழமைகுறிக்கும் இடைச்சொல். பண்டை – ஐயீற்றுடைக் குற்றுகரம். உம் – உயர்வுசிறப்பு.
தயிர் – தையிர் என இடைப்போலிபெற்றது, திரிபுநயத்தின்பொருட்டு. “மலர்ந்த” என்ற வினையின் ஆற்றலால், வாய், மல ரெனப்பட்டது.
மண்டையிர் – முன்னிலைப்பன்மைக் குறிப்பு வினையாலணையும் பெயர்; இர் – விகுதி;
அப்பெயரின்மேல், உ – சாரியை, கு – நான்கனுருபு; உம் – இழிவுசிறப்பு.
“கோளில்பொறியிற் குணமிலவே யெண்குணத்தான், தாளை வணங்காத் தலை” என்றபடி இறைவனது திருவடிகளை
வணங்காத தலை பயன்படாதாதலின், அதனது இழிவு தோன்ற, தலையோட்டைக்குறிக்கிற, ‘பண்டை’ என்ற சொல்லாற் குறித்தார்.
ஓ – எதிர்மறை. பரம பதம் – (எல்லாப்பதவிகளினும்) மேலான ஸ்தாநம்; வடமொழித்தொடர்.

———–

மரணம் கடக் குஞ்சரம் நீங்க வாழ்வித்து வல் அரக்கர்
முரண் அங்கு அடக்கும் சர வேங்கடவ கண் மூடி அந்தக்
கரணம் கடக்கும் சரமத்து நீ தருகைக்கு எனக்கு உன்
சரணம் கடக்கும் சரண் வேறு இல்லை தந்து தாங்கிக் கொள்ளே –62-

(இ – ள்.) கடம் குஞ்சரம் – மதத்தையுடைய யானை,
மரணம் நீங்க – (முதலையினால்) இறத்தலை யொழியும்படி,
வாழ்வித்து – (அக்கஜேந்திராழ்வானை) உயிர்வாழச்செய்து,
வல் அரக்கர் முரண் அங்கு அடக்கும் – வலிய இராக்கதர்களுடையபலத்தை அக்காலத்தில் (ஸ்ரீராமாவதாரத்தில்) அடக்கிவிட்ட,
சர – அம்புகளையுடையவனே!
வேங்கடவ – திருவேங்கடமுடையானே! –
கண் மூடி – கண்கள் இருண்டு,
அந்தக்கரணம் கடக்கும் – மனம் அழியும்படியான,
சரமத்து – (எனது) அந்திமதசையில்,
நீ எனக்கு தருகைக்கு – நீ எனக்கு அளித்தற்கு,
உன்சரணம் கடக்கும் சரண் வேறு இலை – உனது திருவடியன்றி வேறுரக்ஷகம் இல்லை;
தந்து தாங்கிக்கொள் – (அதனை) அளித்து (என்னை) ஏற்றுக்கொள்; (எ – று.)

அங்கு – அவ்விடத்தி லெனினுமாம். அந்த:கரணம் – வடசொல்; அகத்துஉறுப்பு. சரமம், சரணம் – வடசொற்கள்.
சரண் – சரணமென்ற வட சொல்லின் விகாரம். எனக்கு உன்சரணங்கடக்குஞ் சரண் வேறு இலை –
“உன் சரணல்லாற் சரணில்லை” என்றார் குலசேகராழ்வாரும்.

————-

தாங்கு அடல் ஆழி வளை தண்டு வாள் வில்லில் தானவரை
ஈங்கு அட வீசி குறித்து அடித்து துணித்து எய்து வெல்லும்
பூங்கடல் வண்ணன் நிலை கிடை வந்தது போக்கு இடுப்பு
வேங்கடம் வேலை அயோத்தி வெங்கானகம் விண்ணுலகே –63–

(இ – ள்.) தாங்கு – (தனதுதிருக்கைகளில்) ஏந்திய,
அடல் – வலிமை யையுடைய,
ஆழி – சக்கரமும்,
வளை – சங்கமும்,
தண்டு – கதையும்,
வாள் – வாளும்,
வில்லின் – வில்லும் ஆகிய பஞ்சாயுதத்தால், (முறையே),
தானவரை – அசுரர்களை,
ஈங்கு – இவ்வுலகத்தில்,
அட – அழிக்குமாறு,
வீசி – சுழற்றிவீசியும்,
குறித்து – ஊதிமுழக்கியும்,
அடித்து – அடித்தும்,
துணித்து – அறுத்தும்,
எய்து – அம்பெய்தும்,
வெல்லும் – சயிக்குந்தன்மையனான,
பூ கடல் வண்ணன் – அழகிய கடல்போன்ற திருநிறமுடைய திருமால்,
நிலை – நின்ற திருக்கோலமாய் எழுந்தருளியிருக்கிற இடமும்,
கிடை – பள்ளிகொள்கிற இடமும்,
வந்தது – வந்துதிருவவதரித்த இடமும்,
போக்கு – நடந்துசென்ற இடமும்,
இருப்பு – வீற்றிருக்கின்ற இடமும், (முறையே),
வேங்கடம் – திருவேங்கடமலையும்,
வேலை – திருப்பாற்கடலும்,
அயோத்தி – அயோத்யாபுரியும்,
வெம் கானகம் – வெவ்விய காடும்,
விண் உலகு – பரமபதமுமாம்.

ஆழியின்வீசி, வளையிற்குறித்து, தண்டின் அடித்து, வாளின் துணித்து, வில்லின்எய்து என முதலடியோடு இரண்டாமடியும்;
நிலைவேங்கடம், கிடைவேலை, வந்தது அயோத்தி, போக்குக்கானகம். இருப்புவிண்ணுலகு என மூன்றாமடியோடு நான்காமடியும்
முறைநிரனிறைப்பொருள்கோளாதல் காண்க. இச்செய்யுளில், முன்னிரண்டடியும், பின்னிரண்டடியும் – தனித்தனி கிரமாலங்காரம்;
(மேல் 80 – ஆஞ் செய்யுளில் நான்கடிகளிலுந் தொடர்ந்து வருகிற கிரமாலங்காரத்தோடு இதற்குள்ள வேறுபாட்டை உணர்க.)
வந்தது – இராமனாய்த் திருவவதரித்தது. இராமவதாரத்திற் பதினான்கு வருடம் வனவாசஞ்சென்றதும்,
கிருஷ்ணாவதாரத்திற் கன்றுகாலிகளைமேய் த்தற்பொருட்டு வனத்திற்சென்றதும், “போக்கு வெங்கானகம்” என்றதற்கு விஷயம்.

தண்டு – தண்டமென்ற வடசொல்லின் விகாரம். பூங்கடல்வண்ணன் – தாமரைமலர் பூக்கப்பெற்றதொரு
வடிவமுடையானுமாம்; “அம்பரந்தாமரை பூத்தலர்ந்தன்ன வவயவர்” என்றாற் போல.
கிடை – கிடக்கும்இடம் – அயோத்யா என்ற வடசொல் – (பகைவராற்) போர்செய்து வெல்லமுடியாத தென்று காரணப்பொருள்படும்.

—————

உலகம் தர உந்தி பூத்திலையேல் சுடர் ஓர் இரண்டும்
இலகு அந்தரமும் புவியும் எங்கே அயன் ஈசன் எங்கே
பலகந்தரமும் உணவும் எங்கே பல் உயிர்கள் எங்கே
திலகம் தரணிக்கு என நின்ற வேங்கடச் சீதரனே –64-

(இ – ள்.) தரணிக்கு திலகம் என நின்ற – பூமிக்குத் திலகம்போல அழகுசெய்துநின்ற,
வேங்கடம் – திருவேங்கடமலையிலெழுந்தருளியிருக்கிற,
சீதரனே – திருமாலே! – (நீ),
உலகம் தர – உலகங்களைப் படைக்க,
உந்தி பூத்திலை ஏல் – திருநாபித்தாமரை மலர்ந்திராயாயின், –
சுடர் ஓர் இரண்டும் – (சூரியசந்திரராகிய) இருசுடர்களும்,
இலகு அந்தரமும் – அவைவிளங்கு மிடமான ஆகாயமும்,
புவியும் – பூமியும்,
எங்கே – எவ்விடத்தே தோன்றும்?
அயன் ஈசன் எங்கே – பிரமனும் சிவனும் எவ்விடத்தே தோன்றுவர்?
பல கந்தரமும் உணவும் எங்கே – பலமேகங்களும் (அவற்றாலாகிற) உணவுகளும் எவ்விடத்தே தோன்றும்?
பல் உயிர்கள் எங்கே – பலவகைப்பிராணி வர்க்கங்கள் எங்கே தோன்றும்? (எ – று.)
சராசரப்பொருள்கள்யாவும் உளவாகா என்பதாம்.

“உண்டிறக்கும்புவ னங்களை மீளவுமிழ்ந்திலையேற், பண்டிறக்கும்பதுமத்தோன்புரந்தரன்பைந் தழல்போற்,
கண்டிறக்குஞ்சங்கரன் முதலோர்களைக் கண்டவரார், திண்டி றக்குஞ்சரஞ்சேர் சோலைமாமலைச் சீதரனே” என்ற
அழகரந்தாதிச் செய்யுளோடு இச்செய்யுளை ஒப்பிடுக.
“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத், துப்பாயதூஉ மழை” என்றபடி பிராணிகளின் பசி தாகங்களை
நீக்கும் உணவுக்கெல்லாம் மேகம் ஏதுவாதலால், அக்காரணகாரியமுறைப்படி ‘கந்தரமுமுணவும்’ என்றார்.
ஈற்றடி = “திலதமுலகுக்காய்நின்ற திருவேங்கடத் தெம்பெருமானே” என்ற திருவாய்மொழியடியை அடியொற்றியது;
“ஸ்த்ரீகளுக்குப் பூரணமான ஆபரணம்போலே யாய்த்து, பூமிக்குத் திருமலை’ என்று அங்கு வியாக்கியானமிட்டனர் நம்பிள்ளை.
திலகம் – நெற்றிப்பொ ட்டு; அது நெற்றிக்கு அழகுசெய்வதுபோல, பூமிக்கு அழகுசெய்வது திரு வேங்கட மென்க.

உலகம் – லோக மென்ற வடசொல்லின் விகாரம்; (இதனைத் தமிழ் மொழியேயா மென்பர், ஆசிரியர் நச்சினார்க்கினியர்.)
அந்தரம், புவி, தரணீ, ஸ்ரீதரன் – வடசொற்கள். தரணி – (பொருள்களைத்) தரிப்பது. ஸ்ரீதரன் – திருமகளை (மார்பில்) தரிப்பவன்.

————-

சீவார் கழலை இரண்டையும் செப்பு என்று தீங்கு உளவி
னாவார்கழலைப் பயில் செங்கையார் நலம் பேணும் ஐவர்
ஆவார் கழல் ஐ இரண்டாம் அவத்தையின் அன்று எனக்கு உன்
பூவார் கழலை அருள் அப்பனே அண்ட பூரணனே –65-

(இ – ள்.) அப்பனே – திருவேங்கடமுடையானே!
அண்ட பூரணனே – அண்டமுழுவதிலும் வியாபித்து நிறைந்திருப்பவனே! –
கழலை பயில் செம் கையார் – கழற்சிக்காயையாடுகிற சிவந்த கைகளையுடையவர்களான மகளிரது,
சீ வார் கழலை இரண்டையும் – சீஒழுகுகின்ற கழலைக்கட்டியாகிய தன மிரண்டையும்,
செப்பு என்று – கிண்ணங்களென்று புனைந்துரைத்து,
தீங்கு உள வினாவார் – (அவர்களிடத்து) உள்ளனவான தீமைகளை விசாரித்தறி யாதவர்களாய்,
நலம் பேணும் – (அவர்களுடைய) இன்பத்தை விரும்புகிற,
ஐவர்ஆவார் – பஞ்சேந்திரியங்கள்,
கழல் – (தம்தமதுஆற்றல்) ஒழியப்பெறுகிற,
ஐ இரண்டு ஆம் அவத்தையின் அன்று – பத்தாம்அவத்தையாகிய மரணம் நேர்கிற அந்நாளில்,
எனக்கு – உன் பூ ஆர் கழலை – உனது தாமரை மலர்போன்ற திருவடிகளை,
அருள் – தந்தருள்; (எ – று.)

“ஈச்சிறகன்னதோர் தோலறினும் வேண்டுமே, காக்கை கடிவதோர் கோல்” என்ப வாதலால்,
மார்பில் திரண்டெழுந்து பால்பெருகுந்தனங்களை அருவருப்புத்தோன்ற ‘சீ வார் கழலை யிரண்டு’ என்றார்;
(“சிலந்திபோலக் கிளைத்துமுன்னெழுந்து, திரண்டுவிம்மிச் சீப்பாய்ந்தேறி, யுகிராற்கீற வுலர்ந் துள்ளுருகி,
நகுவார்க்கிடமாய் நான்றுவற்றும், முலையைப் பார்த்து முளரி மொட்டென்றுங், குலையுங் காமக்குருடர்” என்றார் பிறரும்.)
உள – பலவின் பாற்பெயர். வினாவார் – எதிர்மறைப்பலர்பால்முற்றெச்சம்; வினாவல் – உசாவுதல்.
இனி, தீங்கு உள வினாவார் என்பதற்க – தீமைவிளைக்கின்ற சொற்களையுடையவரென்று உரைத்து,
மகளிர்க்கு அடைமொழியாக்குதலு மொன்று.
இனாஎன்று எடுத்தால் பரிகாசவார்த்தையென்றும், இன்னா என்பதன் தொகுத்த லெனக்கொண்டால்
இனியவையல்லாத செயல் களென்றும் பொருள்படுமாதலால், அவற்றையுடையவரெனினுமாம்.
தீம் குளம் வினாவார் என்று பிரித்து இனிமையான வெல்லம்போன்ற சொற்களையுடையவரென்றும்,
தீங்கு உளவின் ஆவார் என்று பிரித்துக் கொடியவஞ்சனையிற் பொருந்துபவ ரென்றும் உரைக்கவும்படும்.
“தீங்குழலினாவார்” என்ற பாடத்துக்கு – தீம் – இனிமையான, குழலின் – புள்ளாங்குழலி னிசைபோன்ற,
நாவார் – நாவினாற்பேசுஞ்சொற்களையுடையவர் என்று பொருள் காண்க.
கழல் என்ற கொடியின் பெயர் – அதன்காய்க்கு முதலாகுபெயர். ‘கழலைப் பயில்செங்கையார்’ என்றது –
கவலையின்றி விளையாடுபவ ரென்றும், தம் விளையாட்டினால் ஆடவரை வசீகரிப்பவரென்றும் கூறியவாறாம்.

“ஐவராவார்” என்றவிடத்து, “ஆவார்” என்றது – முதல்வேற்றுமைச் சொல்லு ருபாய் நின்றது.
நினைவு பேச்சு இரங்கல் வெய்துயிர்த்தல் வெதுப்பு துய்ப்பனதெவிட்டல் அழுங்கல் மொழிபலபிதற்றல் மிகுமயக்கு
இறப்பு என்ற மந்மதபாணாவஸ்தை பத்தில் ஈற்றதாதல் கொண்டு, இறத்தல் ‘ஐயிரண்டாமவத்தை’ எனப்பட்டது.
மன்மதாவஸ்தை பத்து – காட்சி அவா சிந்தனை அயர்ச்சி அரற்றல் நாணொழிதல் திகைத்தல் மோகம் மூர்ச்சை இறந்துபடுதல்
எனக் கூறவும்படும். ஐயிரண்டு – பண்புத்தொகை. அவத்தை – அவஸ்தா என்ற வடசொல்லின் விகாரம்.
அண்டபூர்ணன் – வடமொழித்தொடர்.

பூவார்கழல் என்றவிடத்து, ‘ஆர்’ என்றது – உவமவாசகமாய் நின்றது; ஆர்தல் – பொருந்துதல்:
இனி, ‘பூவார்கழல்’ என்ற தொடர் – (அடியார்கள் அருச்சித்துஇட்ட) மலர்களால் எப்பொழுதும் நிறைந்துள்ள
திருவடிக ளென்றும் பொருள்படும்:
‘வானவர்வானவர்கோனொடுஞ், சிந்துபூமகிழுந் திருவேங்கடம்” என்றபடி பரமபதத்திலுள்ளார் பூமாரிசொரியு மிட மாதலாற்
புஷ்பமண்டபமெனப்படுகிற திருமலையில் எழுந்தருளியுள்ள எம்பெருமானது திருவடிகள்,
அப்பரமபதவாசிகள் அர்ச்சிக்கின்ற அப்ராக்ருத புஷ்பங்களும், தேவர்கள் அர்ச்சிக்கின்ற கற்பகமலர்களும்,
முனிவர்கள் அர்ச்சிக்கின்ற கோட்டுப்பூ முதலியனவும், தொண்டைமான்சக்கரவர்த்தி அர்ச்சித்த ஸ்வர்ணபுஷ்பங்களும்,
குரவைநம்பி அர்ச்சித்த மண்பூவும் பொருந்தப்பெறு தலால், “பூவார்கழல்” என்று சிறப்பாக வழங்கப்படும்;
“தேவாசுரர்கள் முனிக்கணங்கள் விரும்புந் திருவேங்கடத்தானே,
பூவார்கழல்க ளருவினை யேன் பொருந்துமாறு புணராயே” என்ற திருவாய்மொழியையும்,
“வேங்கடமே….. பூவார்கழலார்பொருப்பு” என்ற திருவேங்கடமாலையையும், இந்நூலின் 70 – ஆஞ் செய்யுளையுங் காண்க.

————–

பூரணன் ஆரணன் பொன்னுலகு ஆளி புராரி கொடி
வாரணன் ஆர் அணன் வாழ்த்தும் பிரான் வட வேங்கடத்துக்
காரணன் ஆர் அணங்கு அனா இறைவி கணவன் மண் ஏழ்
பாரணன் நாரணன் என்பார்க்கு நீங்கும் பழுது அவமே –66-

(இ – ள்.) பூரணன் – எங்கும் நிறைந்தவன்:
ஆரணன் – பிரமனும்,
பொன் உலகு ஆளி – பொன்மயமான சுவர்க்கலோகத்தை அரசாள்பவனான இந்திரனும்,
புர அரி – திரிபுரசங்காரஞ்செய்தவனான சிவனும்,
கொடி வாரணன் – துவசத்திற் கோழிவடிவையுடையவனான சுப்பிரமணியனும்,
ஆர் அணன் – (அவனுக்குப்) பொருந்திய தமையனான விநாயகனும்,
வாழ்த்தும் – பல்லாண்டு பாடித் துதிக்கிற,
பிரான் – பிரபு:
வட வேங்கடத்து – வடக்கின்கணுள்ள திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கிற,
காரணன் – (அனைத்துக்குங்) காரணமானவன்:
ஆனா – (தன்னை) விட்டுநீங்காத,
இறைவி தலைவியாகிய,
ஆர் அணங்கு – அருமையான திருமகளுக்கு, கணவன் -;
மண் ஏழ் பாரணன் – ஏழுவகையுலகங்களையும் உண்டவன்:
நாரணன் – நாராயணன்:
என்பார்க்கு – என்று (எம்பெருமானுடைய குணஞ்செயல்களையும் மகிமையையும் திருநாமத்தையுங்) கருதிச் சொல்பவர்க்கு,
பழுது அவம் நீங்கும் – (அவர்கள் முன்புசெய்த) தீவினைகளெல்லாம் பயன் தராதனவாய் ஒழியும்; (எ – று.)

ஆரணம் – வேதம்; அதனை ஓதுபவன் – ஆரணன். ஆளி, இ – கருத் தாப்பொருள்விகுதி. புராரி – புர + அரி;
தீர்க்கசந்திபெற்ற வடமொழித் தொடர்: திரிபுரத்துக்குச் சத்துரு. கொடிவாரணன் – கோழிக்கொடியோன்;
“கொடிக்கோழிகொண்டான்” என்றார் நம்மாழ்வாரும். ஆர் அணன் – வினைத்தொகை; அணன் – அண்ணன்: தொகுத்தல்.
காரணன் – ஆதிமூலப்பொருள். அணங்கு – மகளிரிற் சிறந்தவள், தெய்வப்பெண். ஆனாமை – நீங்காமை.
“அகலகில்லேனிறையுமென்று அலர்மேன்மங்கையுறை மார்பா,….. திருவேங்கடத்தானே” என்றபடி
திருமகள் திருமாலை ஒரு பொழுதும்விட்டுப்பிரியாமையால், “ஆனாவிறைவி” எனப்பட்டாள்.
இறைவி – தேவி. மண்ஏழ் – பூலோகம் புவர்லோகம் ஸுவர்லோகம் மகர்லோகம் ஜநலோகம் தபோலோகம் சத்தியலோகம்
என்ற மேலேழுலகங்களும், அதலம் விதலம் ஸுதலம் தராதலம் ரஸாதலம் மகாதலம் பாதாலம் என்ற கீழேழுலகங்களும் ஆகிய ஈரேழுலகங்கள்;
மண் என்ற பூமியின்பெயர், இங்கு உலகமென்ற மாத்திரமாய் நின்றது: சிறப்புப்பெயர், பொதுப்பொருளின் மேலது.
பழுது – எழுவாய். ‘ஆரணங்காணாவிறைவி’ என்று பாடமோதி, வேதங்களும் கண்டறியமாட்டாத திருமக ளென்பாரு முளர்.

————–

பழுத்தெட்டி பொன்ற நடுச் செல்வர் பின் சென்று பல் செருக்கால்
கொழுத்து எள் தினை அளவு எண்ணம் அற்றீர் குவடு ஏறி மந்தி
கழுத்து எட்டி அண்டர் பதி நோக்கும் வேங்கடக் காவலனை
எழுத்து எட்டினால் எண்ணி ஏத்தீர் பரகதி ஏறுவதற்கே –67–

(இ – ள்.) பழுத்த எட்டி போன்ற – பழுத்தஎட்டிமரம்போன்ற (பிறர்க் குப்பயன்படாத),
நடு செல்வர் பின் – (பரம்பரையாக அமைந்த செல்வ மன்றி) இடையிலே வந்த செல்வத்தை யுடையவர்களின் பின்னே,
சென்று – தொடர்ந்து சென்றும்,
பல் செருக்கால் கொழுத்து – பலவகைச் செருக்குக் களினாற் கொழுத்தவர்களாகியும்,
எள் தினை அளவு எண்ணம் அற்றீர் – எள்ளளவு தினையளவேனும் (கடவுளைப்பற்றின) சிந்தனை யில்லாதவர்களே!-
(இனியாயினும் நீங்கள் பழுதே பலபகலும்போக்காமல்),
பர கதி ஏறுதற்கு – (எல்லாவுலகங்கட்கும்) மேலுள்ளதான பரமபதத்தில் ஏறிச்சென்று சேர்தற் பொருட்டு, –
மந்தி குவடு ஏறி கழுத்து எட்டி அண்டர் பதி நோக்கும் வேங் கடம் காவலனை – பெண்குரங்குகள் சிகரத்திலேறிக் கழுத்தைத்
தூக்கி மேலுள்ள தேவலோகத்தை எட்டிப்பார்க்கப்பெற்ற திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கிற ஸ்வாமியை,
எழுத்து எட்டினால் எண்ணி ஏத்தீர் – அஷ்டா க்ஷரமகாமந்திரத்தைக்கொண்டு தியானித்துத் துதியுங்கள்; (எ – று.)

பழுத்தஎட்டியென்பது பழுத்தெட்டி யெனப் பெயரெச்சவீறு தொ குத்தல்விகார மடைந்தது.
தொன்றுதொட்டு வறியராயிருந்து இடையே செல்வங்கிடைக்கப்பெற்றவர் அச்செல்வத்தினருமையைக்கருதிப்
பிறர்க்கு உதவாது லோபிகளாயிருத்தலும், “அற்பன் பணம்படைத்தால் அர்த்தராத் திரியிற் குடைபிடிப்பான்” என்றபடி
பிறரைமதியாத இறுமாப்புடையரா யிருத்தலும் பெரும்பான்மை யாதலால், அந்நடுச்செல்வரை எடுத்துக்கூறி னார்.
பிறர்க்குஉதவாமைபற்றி, அவர்க்கு, பழுத்தஎட்டி உவமைகூறப்பட்டது;
(“ஈயாதபுல்ல ரிருந்தென் னபோயென்ன எட்டிமரம், காயாதிருந்தென்ன காய்த்துப் பலனென்ன” என்பர் பிறரும்.)
செல்வர்பின்செல்லுதல், தாம் அவராற் செல்வம் பெறலாமென்னும் நசையினால். எள் தினை என்ற தானி யங்கள்,
சிறுமைக்கு அளவையாக எடுத்துக்காட்டப்பட்டன. குவடு – மரக் கிளையுமாம்.
மந்தி – குரங்கின் பெண்மைப்பெயர்; ஆண்மைப்பெயர் – கடுவன்.
‘குவடேறி மந்தி கழுத்தெட்டி யண்டர்பதி நோக்கும் வேங்கடம்’ என்றது, மலையின் உயர்வை விளக்குந் தொடர்புயர்வுநவிற்சியணி.
இவ் வருணனை கூறியது, அங்குச்சேர்கிற அனைத்துயிரும் உயர்கதியைப்பெறு மென்ற குறிப்பு.
எழுத்துஎட்டு – எட்டுஎழுத்துக்களையுடைய பெரியதிருமந்திரம். எழுத்தெட்டினா வெண்ணியேத்தீர் பரகதியேறுதற்கே –
“எட்டெழுத்து மோதுவார்கள் வல்லர் வானமாளவே” என்பது பெரியார்பாசுரம்.

————–

ஏறு கடாவுவர் அன்னம் கடாவுவர் ஈர் இரு கோட்டு
உறு கடா மழை ஓங்கல் கடாவுவர் -ஓடு அருவி
ஆறு கடாத அமுது எனப் பாய அரிகமுகம்
தாறுகள் தாவும் வட வேங்கடவரைத் தாழ்ந்தவரே –68-

(இ – ள்.) ஓடு அருவி ஆறு – நதிகளாக விரைந்து செல்லுகின்ற நீரருவிகள்,
கடாத அமுது என – கடுக்காத (இன்சுவையுடைய) அமிருதம் போல,
பாய – பாய்ந்துவர, (அவற்றிற்கு அஞ்சி),
அரி – குரங்குகள்,
கமுகம் தாறுகள் தாவும் – பாக்கு மரக்குலைகளின் மேல் தாவியேறப்பெற்ற,
வடவேங்கட வரை – வடக்கின் கணுள்ள திருவேங்கடமலையி லெழுந்தருளியிருக்கிற பெருமானை,
தாழ்ந்தவர் – வணங்கினவர்கள், –
ஏறு கடாவுவர் – ருஷபத்தை வாகனமாகக்கொண்டு ஏறிநடத்துவர்;
அன்னம் கடாவுவர் – அன்னப்பறவையை வாகனமாகக்கொண்டு ஏறிநடத்துவர்;
ஈர் இரு கோடு – நான்கு தந்தங்களையுடையதும்,
ஊறு கடாம் மழை – மேன்மேற்சுரக்கின்ற மதநீர்ப்பெருக்கையுடையதுமான,
ஓங்கல் – மலைபோன்ற (ஐராவத) யானையை,
கடாவுவர் – ஏறிநடத்துவர்; (எ – று.)

திருவேங்கடமுடையானை வணங்கினவர் அதன்பயனாக மறுமையில் ருத்திரபதவி பிரமபதவி இந்திரபதவிகளை யடைவ ரென்பதாம்.
ருத்திர பதவி முதலியவற்றை யடைவ ரென்ற பொருளை “ஏறுகடாவுவர்” என்பது முதலியசொற்களாற் குறித்தது,
பிறிதினவிற்சியணியின் பாற்படும். ருஷபம் சிவனுக்கும், அன்னப்பறவை பிரமனுக்கும், ஐராவதயானை இந்திரனுக்கும் வாகனமாம்.
“ஊறுகடாமழை யோங்கல” எனவே யானையென்றும், “ஈரிரு கோட்டுஓங்கல்” எனவே ஐராவதயானை யென்றும் ஆயிற்று.
ஐராவதம், இரு புறத்தும் இரட்டைத்தந்த முடையது.

ஏறு – பசுவின் ஆண்மைப்பெயர். அன்னம் – ஹம்ஸ மென்ற வடசொல் லின் சிதைவு.
ஈரிருகோடு – பண்புத்தொகைப்பன்மொழித்தொடர். கடாம் – கடமென்பதன் விகாரம்.
ஓங்கல் – உயர்ச்சி; மலைக்குத் தொழிலாகுபெயர்: அல் – கருத்தாப்பொருள்விகுதி யென்றுங் கொள்ளலாம்;
யானைக்கு உவமை யாகுபெயர். கடாத – இன்னாச்சுவை பயவாத; கடு – பகுதி.
தாபந்தவிர்த் துக் களிப்பையளிக்கும் மலையென்று பின்னிரண்டடிகளால் விளங்கும்.

—————-

தாழ்ந்த அருக்கம் தரு ஒக்குமோ பல தாரகையும்
சூழ்ந்த அருக்கன் சுடர் ஒக்குமோ தொல் அரக்கர் என்று
வாழ்ந்த வருக்கம் களைந்தான் வடமலை மால் அடிக்கீழ்
வீழ்ந்தவருக்கு அன்பருக்கு ஒப்பரோ அண்டர் மெய்த்தவரே –69-

(இ – ள்.) தாழ்ந்த – இழிவான,
அருக்கம் – எருக்கஞ்செடியானது,
தரு ஒக்குமோ – பெரிய மரத்துக்கு ஒப்பாகுமோ?
பல தாரகையும் – பல நக்ஷத்திரங்களும்,
சூழ்ந்த அருக்கன்சுடர் ஒக்குமோ – சுற்றிலும் பரவுகின்ற சூரியனது ஒளிக்கு ஒப்பாகுமோ? (ஒப்பாகா: அவைபோல),
அண்டர் – தேவர்களும்,
மெய்தவர் – உண்மையான தவத்தையுடைய முனிவர்களும், –
தொல் அரக்கர் என்று வாழ்ந்த வருக்கம் களைந்தான் – பழமையான இராக் கதர்க ளென்று பிரசித்திபெற்று
வாழ்ந்த கூட்டங்களையெல்லாம் வேரோடழித்தவனான,
வட மலை மால் – திருவேங்கடத்துறைவானது,
அடிக்கீழ் – திருவடிகளில்,
வீழ்ந்தவருக்கு – வீழ்ந்துவணங்கின அடியார்கட்கு,
அன்பருக்கு – அன்பு பூண்டொழுகுபவர்க்கு,
ஒப்பரோ – ஒப்பாவரோ? (ஆகார் என்றபடி); (எ – று.)

பாகவதர்க்கு அடிமை பூண்பவர் தேவரிஷிகணங்களினும் மேம்பட்டவ ரென அவர்கள்மகிமையை எடுத்துக்கூறியவாறாம்.
முதலிரண்டுவாக்கியங் கள் – உபமானம்; மூன்றாவதுவாக்கியம் – உபமேயம்: உபமான உபமேயவாக் கியங்களினிடையில்
உவமவுருபுகொடாமற் கூறினமையால், எடுத்துக்காட் டுவமையணி.

அர்க்கம், தரு, தாரகா, அர்க்கன், வர்க்கம் – வடசொற்கள். ஓகாரங் கள் – எதிர்மறை. மெய்த் தவம் – பழுதுபடாத தவம்;
கூடாவொழுக்கமொழிந்த தவம். அண்டம் – வானம், மேலுலகம்; அதிலுள்ளவர், அண்டர் சூழ்ந்த – திரண்டனவாயினும் எனினுமாம்.

————-

மெய்த்தவம் போர் உக வெஞ்சொல் இராமன் வில் வாங்கி வளைத்து
உய்ந்த அம் போர் உகம் நாலும் செய்தோர் உயர் வேங்கடத்து
வைத்த அம் போருகப் பூ ஆர் கழலை மறை மனு நூல்
பொய்த்த வம்போர் உகவார் காமம் வேட்டுப் புரளுவரே –70-

(இ – ள்.) மெய் தவம் – உண்மையாகச்செய்த தவம்,
போர் – யுத்தத்தில் உக – பழுதுபட்டொழியுமாறு,
வெம் சொல் இராமன் வில் வாங்கி வளைத்து உய்த்த அம்போர் – கடுஞ்சொற்களைப்பேசிவந்த பரசுராமனுடைய
வில்லை (அவன்கையினின்று தம்கையில்) வாங்கி வளைத்து எய்த அம்பையுடைய வரும்,
உகம் நாலும் செய்தோர் – நான்குயுகங்களையுஞ் செய்தவருமான திருமால்,
உயர் வேங்கடத்து வைத்த – உயர்ந்த திருவேங்கட மலையில் வைத்துநின்ற,
அம்போருகம் பூ ஆர் கழலை – தாமரைமலர்போன்ற திருவடிகளை,
மறை மனு நூல் பொய்த்த வம்போர் – வேதங்களையும் மநுதர்மசாஸ்திரத்தையும் பொய்யென்று கூறுகிற வம்புப் பேச்சையுடையவர்கள்,
உகவார் – விரும்பாதவர்களாய்,
காமம் வேட்டு புரளுவர் – சிற்றின்பத்தை விரும்பிப் புரண்டுவருந்துவர்; (எ – று.) – ஈற்றுஏகாரம் – கழிவிரக்கம்: அந்தோ! என்றபடி.

சீதாகலியாணத்தின்பின் தசரதசக்கரவர்த்தி திருக்குமாரர்களுடனே மிதிலையினின்று அயோத்திக்கு மீண்டுவருகையில்,
பரசுராமன் வலியச்செ ன்று எதிர்த்து ‘முன்பு ஹரிஹரயுத்தத்தில் இற்றுப்போன சிவதநுசை முறித்த திறத்தை அறிந்தோம்!
அதுபற்றிச் செருக்கடையவேண்டா: இந்த ஸ்ரீ மகாவிஷ்ணுதநுசை வளை, பார்ப்போம்’ என்று அலட்சியமாகச்
சொல்லித் தான் கையிற்கொணர்ந்த ஒருவில்லைத் தசரதராமன்கையிற் கொடுக்க,
அப் பெருமான் உடனே அதனைவாங்கி எளிதில்வளைத்து நாணேற்றி அம்புதொ டுத்து ‘இந்தப்பாணத்துக்கு இலக்கு என்?’ என்று வினாவ,
பரசுராமன் அதற்கு இலக்காகத் தனது தபோபலம் முழுவதையுங் கொடுக்க, அவன்
க்ஷத்திரியவம்சத்தைக் கருவறுத்தவனாயிருந்தாலும் வேதவித்தும் தவவிரதம் பூண்டவனுமா யிருத்தல்பற்றி
அவனைக் கொல்லாமல் அவனதுதவத்தைக் கவர்ந்தமாத்திரத்தோடு ஸ்ரீராமன் விட்டருளின னென்ற வரலாறு, இங்கு முதல்விசேஷணத்திற் குறிக்கப்பட்டது.

“என்வில்வலிகண்டுபோ வென் றெதிர்வந்தான், தன்வில்லினோடுந் தவத்தை யெதிர்வாங்கி” என்றார் பெரி யாழ்வாரும்.
விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஆறாமவதாரமான பரசுராமனும் ஏழாமவதாரமான தசரதராமனும் ஒருவரோடொருவர் பொருதலும்,
அவர்களில் ஒருவர்மற்றொருவரைவெல்லுதலும் பொருந்துமோ? எனின், –
துஷ்டர்களாய்க் கொழுத்துத்திரிந்த அரசர்களைக் கொல்லுதற்பொருட்டுப் பரசுராமனிடத்தில் ஆவேசித்திருந்த
விஷ்ணுசக்தி அக்காரியம் முடிந்த பின்பு அவ்விஷ்ணுவின் அவதாரமான தசரதராமனாற் கவர்ந்துகொள்ளப் பட்ட தாதலிற் பொருந்து மென்க.
இதனால், ஆவேசாவதாரத்தினும் அம் சரவதாரத்துக்கு உள்ள ஏற்றம் விளங்கும்.
வெஞ்சொல் – “இற்றோடியசிலையின்றிற மறிவென் னினியா னுன்,
பொற்றோள்வலிநிலை சோதனைபுரி வா னசையுடையேன்,
செற்றோடிய திரடோளுறு தினவுஞ் சிறிதுடை யேன்,
மற்றோர் பொருளிலை யிங்கிதென்வரவென்றன னுரவோன்” என்றது முதலாகக் காண்க.
“வெஞ்சொலிராமன்” எனவே, பரசுராமனாவன்; தசரதராமன் பிறர் கடுஞ்சொற்கூறினாலும் தான் கடுஞ்சொற்கூறுதலின்றி
எப் பொழுதும் இன்சொல்லே பேசுபவ னென்பது பிரசித்தம்: (வால்மீகிராமா யணம், அயோத்தியாகாண்டம், 1 – 10.)
பரசுராமன், பிறப்பிலேயே கோப மூர்த்தியாதலால், வெஞ்சொல்லுக்கு உரியன்.

யுகம் நான்கு – கிருதயுதம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்பன. காலம் நித்தியமாயிருக்கவும்.
‘உகநாலுஞ் செய்தோர்’ என்றது, காலத்துக்குநியாமகன் கடவு ளென்ற கருத்துப்பற்றி;
அன்றியும், காலத்தின்அளவு பகவானது சிருஷ்டிக்கு உட்பட்ட சூரியசந்திராதியரால் நிகழ்தலுங்காண்க.
உய்த்த அம்போர் = அம்புய்த்தோர். உகம் – யுகமென்ற வடசொல்லின் விகாரம்.
நான்கு என்பது, ஈற்றுஉயிர்மெய்கெட்டு னகரமெய் லகரமாய் நால் என நின்றது.
அம்போருஹம் என்ற வடசொல் – நீரிற்பிறப்பதென்று காரணப்பொருள்பெறும்; அம்பஸ் – ஜலம்.
மனுநூல் – மநுவென்னும்அரசனாற் செய்யப்பட்ட அறநூல். வம்போர் – வம்பர்; நேரில்லார்.

—————

புரண்டு உதிக்கும் உடற்கே இதம் செய் பொருள் ஆக்கையின் நால்
இரண்டு திக்கும் தடுமாறும் நெஞ்சே இனி எய்துவம் வா
திரண்டு திக்கும் அரன் வேள் அயனார் முதல் தேவர் எல்லாம்
சரண் துதிக்கும் படி மேல் நின்ற வேங்கடத் தாமத்தையே –71-

(இ – ள்.) புரண்டு உதிக்கும் – நிலைநில்லாது மாறிமாறித்தோன்றுந் தன்மையுள்ள,
உடற்கே – உடம்புக்கே,
இதம் செய் – நன்மையைச் செய்கிற,
பொருள் – செல்வத்தை,
ஆக்கையின் – சம்பாதித்தற்காகு,
நால் இரண்டு திக்கும் தடுமாறும் – எட்டுத் திசைகளிலும் திரிந்துஉழலுகின்ற,
நெஞ்சே – (எனது) மனமே! – இனி – –
திக்கும் அரன் – (நெற்றிக்கண்ணின் நெருப்பினால்) எரிக்குந்தன்மையுள்ள சிவனும்,
வேள் – சுப்பிரமணியனும்,
அயனார் – பிரமதேவரும்,
முதல் – முதலிய,
தேவர் எல்லாம் – தேவர்களெல்லாரும்,
திரண்டு – ஒருங்குகூடி,
சரண் துதிக்கும்படி – (தனது) திருவடிகளைத் தோத்திரஞ்செய்யும்படி,
வேங்கடம் மேல் நின்ற – திருவேங்கடமலையின் மேல் நின்றதிருக்கோலமாக எழுந்தருளியிருக்கிற,
தாமத்தை – ஒளிவடிவமுள்ள கடவுளை, எய்துவம் – அடைவோம்: வா -; (எ – று.)

புரண்டு உதித்தல் – இறப்பதும் மீண்டும் பிறப்பது மாதல். யாக்கை நிலையாமையை விளக்குவார், “புரண்டுஉதிக்கும் உடல்” என்றார்.
எய்துதல் – இடைவிடாது நினைத்தல்; (“மாணடி சேர்ந்தார்” என்றவிடத்தில், “சேர்தல்” போல.)
மனத்தை வசப்படுத்தினா லன்றி நன்முயற்சி இனிது நிறைவேறா தாதலால், அதனை முன்னிலைப்படுத்தி அறிவுறுத்துகிறார்.
திரண்டு துதிக்கும்படி என இயையும். தீக்கும் என்பது, திக்கும் எனக் குறுக்கலென்னுஞ் செய்யுள்விகாரமடைந்தது;
(“திருத்தார் நன்றென்றேன் தியேன்” என்றதில் “தீயேன்” என்பது ‘தியேன்’ என்றும்,
“பரிதியொ டணிமதிபனி வரைதிசைநில, மெரிதியொ டெனவினவியல்வினர் செலவினர்” என்றவிடத்து
“தீ” என்பது “தி” என்றுங் குறுகினமை காண்க.
( அரன் வேள் அயனார் முதல் தேவர்எல்லாம் சரண் துதிக்கும்படி மேல்நின்ற வேங்கடத்தாமம் –
“நீலார்கண்டத்தம்மானும் நிறைநான்முகனு மிந்திரனுஞ், சேலேய் கண்ணார்பலர் சூழ விரும்புந் திருவேங்கடத்தானே”,
“நிகரி லமரர் முனிக்கண ங்கள் விரும்புந் திருவேங்கடத்தானே” என்பன திருவாய்மொழி.

————–

பிரிவாற்றாத தலைவி தோழியரை நோக்கி இரங்கிக் கூறுதல் –

தாம் மத்து அளை வெண்ணெய்உண்ட அந்நாள் இடைத் தாயார் பிணி
தாமத் தளை உவந்தார் வேங்கடாதிபர் தாமரைப் பூந்
தாமத்தளை அணியும் மணி மார்பில் நல் தண் அம் துழாய்த்
தாமத்து அளைவது என்றோ மடவீர் என் தட முலையே –72-

(இ – ள்.) மடவீர் – மடமையையுடையவர்களே! –
மத்து அளை வெண்ணெய் – மத்துக்கொண்டு கடைந்தெடுக்கப்பட்ட வெண்ணெயை,
தாம் உண்ட – தாம் (களவுசெய்து) விழுங்கிய,
அ நாளிடை – அந்த நாளிலே (கிருஷ்ணாவதாரஞ்செய்துவளர்ந்த இளம்பருவத்திலே),
தாயர்பிணி – வளர்த்த தாயாரான யசோதைப்பிராட்டி கட்டின,
தாமம் தளை – கயிற்றினாலாகிய கட்டை,
உவந்தார் – விரும்பி யேற்றுக்கொண்டவரான,
வேங்கட அதிபர் – திருவேங்கடமுடையானுடைய,
தாமரை பூ தாமத்தளை மணியோடு அணி மார்பில் – தாமரைமலரை இடமாகவுடையளான திருமகளையும்
(கௌஸ்துப மென்னும்) இரத்தினத்தையும் அணிந்த திருமார்பில் (தரித்த),
நல் தண் அம் துழாய் தாமத்து – சிறந்த குளிர்ந்த அழகிய திருத்துழாய்மாலையில்,
என் தட முலை அளைவது – எனது பெரிய தனங்கள் பொருந்துவது, என்றோ – எந்நாளோ? (எ – று.)

தலைவனைப்பிரிந்த தலைவி, இனித் தலைவனது சேர்க்கை நேர்வது எக்காலமோ வென்று இரங்கிக் கூறினள்.

கண்ணன் இளம்பிராயத்தில் திருவாய்ப்பாடியிலுள்ள ஆயர்மனைகளிற் சென்று அவர்களுடைய
பால் தயிர் வெண்ணெய் முதலியவற்றைக் களவு செய்து உண்டமையை ஆய்ச்சியர் சொல்ல அறிந்த யசோதை
அக் குற்றத்துக்கு ஒரு தண்டனையாகக் கண்ணனை வயிற்றிற் கயிற்றினாற்கட்டி உரலோடு பிணித்துவைத்தனள்
என்ற வரலாறு, முதல்விசேஷணத்திற் குறிக்கப்பட்டது.
“பத்துடையடியவர்க்கெளியவன் பிறர்களுக்கரியவித்தகன்” என்றபடி தேவாதிதேவனான சர்வேசுவரன் திருவருளினால்
இங்ஙனம் எளிமைபூண்டு கட்டுப்பட்டதாகிய சௌலப்யகுணாதிசயத்தில் ஈடுபட்டு “தளையுவந்தார்” என்றார்.
அப்பொழுது முதலில் யசோதை கட்டத்தொடங்கிய கயிறு சிறிதளவுபோதாதாம்படி கண்ணன் இடைபருத்துக்காட்டி,
அது கண்டு அத்தாய் இடையர்வீடுகளிலுள்ள தாம்புகளையெல்லாங் கொணர்ந்துசேர்த்து ஒன்றாக
முடிந்து கட்டப்புகுந்தோறும் அதுவும் போதாதாம்படி அத்திருமகன் வளர்ந்துவந்து, பின்பு அவள் கை
சலித்து மெய்வேர்த்துக் கண்பிசைந்து வருந்தக் கண்டு உடல்சிறுத்துக் கட்டுண்டனன் என்ற விவரமும்,
“உவந்தார்” என்றதனாற் குறிக்கப்படும்.

தாயர் – உயர்வுப்பன்மை. நாள் இடைத்தாயர் என்றும் பிரிக்கலாம். திருமால் திருமகளை வலத் திருமார்பிலும்,
கௌஸ்துபமென்னுந் திவ்வியரத் தினத்தை இடத்திருமார்பிலுந் தரித்துள்ளான்.
மடமை – மகளிர்க்குச் சிறந்த பேதைமை யென்னுங் குணம்;
அது, நாணம் முதலிய மற்றைப்பெண் குணங்கட்கும் உபலக்ஷணம்: இளமையுமாம்.

எம்பெருமானது பிரிவை யாற்றாத ஐயங்கார், “எனதுபக்தி அப்பெருமா னோடுசேர்ந்து இனிமையை நுகர்தற்குப்
பாங்காவது எக்காலமோ” என்று, தம்பக்கல் பரிவுள்ள அன்பர்களை நோக்கிக் கூறுதல், இதற்கு உள்ளுறை பொருள்.
அந்யாபசேத்தில் “முலை” என்றது, ஸ்வாபதேசத்தில் பக்தியாம். மகளிருறுப்பாய்ச்சிறக்கின்ற இது,
அடியார்க்கு இலக்கணமாய்ச் சிறக்கின்ற அதனைக் குறிப்பிக்கும்.
தலைவனைச் சேர்ந்து அனுபவித்தற்கு உபகரணமாதல் இரண்டுக்கும் உண்டு.
“தடமுலை” என்றது, பக்குவமாய் முதிர்ந்த பக்தி யென்றவாறு: பரமபக்தி யென்க. ஸ்வாபதேசத்தில்,
துழாய் – இனிமை. விஸ்தாரம் ஆய்ந்து உணர்க.

இது, யமகச்செய்யுள்.

———–

தடவிகடத் தலை வேழ முன் நின்றன சாடு உதைத்துப்
படவிகள் தத்து அலை ஈர் எழ் அளந்தன பூந்திரு வோடு
அடவி கடத்தலை வேட்டன -வேங்கடத்து அப்பன் புள்ளைக்
கடவி கடத்தலை நெய் உண்ட மாதவன் கால் மலரே –73-

(இ – ள்.) புள்ளை கடவி – (கருடப்) பறவையை வாகனமாகக் கொண்டு ஏறி நடத்துபவனும்,
கடத்தலை – குடத்தில் வைத்திருந்த,
நெய் – நெய்யை,
உண்ட – அமுது செய்த,
மாதவன் – மதுகுலத்துத் தோன்றியவனுமான,
வேங்கடத்து அப்பன் – திருவேங்கடமுடையானுடைய,
கால் மலர் – தாமரை மலர் போன்ற திருவடிகள், –
தட – பெரிய,
விகடம் தலை – (கும்ப ஸ்தலங்களையுடைமையால் மேடுபள்ளங்கொண்டு) மாறுபாடுற்ற தலையை யுடைய,
வேழம் முன் – (கஜேந்திராழ்வானாகிய) யானையின் முன்னிலையில்,
நின்றன – சென்று நின்றன;
சரடு உதைத்து – சகடாசுரனை உதைத்துத் தள்ளி,
தத்து அலை புடவிகள் ஈர் எழ் அளந்தன – பாய்ந்து வருகின்ற அலைகளை யுடைய கடல் சூழ்ந்த பூமி முதலிய உலகங்கள் பதினான்கையும் அளந்தன;
பூ திருவோடு – தாமரை மலரில் வாழ்கின்ற திருமகளின் அவதாரமான சீதாபிராட்டியுடனே,
அடவி கடத்தலை வேட்டன – வனத்தைக்கடப்பதை விரும்பி நடந்தன; (எ – று.)

இது, இந்நூலின் முதற்செய்யுள் போன்ற பாதவகுப்பு.

பூலோகத்தையளந்ததில் அதன்கீழுலகங்களேழும், மேலுலகத்தையள ந்ததில் புவர்லோகம்முதலிய ஆறும் அடங்குதலால்,
“புடவிகளீரேழளந்தன” என்றார்.
திருமால் இராமனாகத் திருவவதரித்துபோது திருமகள் சீதையாகவும்,
அப்பெருமான் கண்ணனாகத் திருவவதரித்தபோது அப்பிராட்டி ருக்மிணியாகவும் அவதரித்தன ளென்று புராணங் கூறுதலால்,
“பூந்திரு” என்றது – ஜாநகியைக் குறித்தது. தாய் தந்தையர்சொற் காத்தற்பொருட்டு வனவாசஞ் செய்தலே யன்றித்
தண்டகாரணியங்கடந்து இராவணவதத்தின் பொருட்டு இலங்கைக்குச் செல்லவேண்டுமென்னும் உத்தேசமும் இராமபிரானுக்கு இருத்தலால்,
“அடவிகடத்தலை வேட்டன” என்றார்; பெருமானது விருப்பத்தை அவனதுதிருவடியின்மே லேற்றிக் கூறினது, உபசாரவழக்கு.

சாடு – சகடமென்பதன் விகாரம். “தத்தஅலை” என்பது – வினைத்தொகையன்மொழியாய், கடலின்மேல் நின்றது.
கடவி, இ – கருத்தாப்பொருள்விகுதி: சங்கேந்தி, உலகாளி, குடமாடி என்ற பெயர்களிற் போல. கடம் – வடசொல்; தலை – ஏழனுருபு.

————–

கானகம் உண்டு அதில் போம் என்னின் நீங்கிக் கடும் பிணி காள்
தேன் அக முண்டகத் தாள் வேங்கடேசனை சென்று இரக்கும்
போனாக முண்ட வெண் நீற்றான் அயனொடும் பூமியொடும்
வானகம் உண்ட பெருமானை இன்று என் மனம் உண்டதே –74-

(இ – ள்.) சென்று இரக்கும் போனகம் – (பலவிடங்களிலுஞ்) சென்று யாசித்துப் பெறும் பிச்சை யுணவைக் கொள்கிற,
முண்டம் – (பிரம) கபாலத்தையேந்திய,
வெள் நீற்றான் – வெண்ணிறமாகிய விபூதியைத் தரித்தவனான சிவனும்,
அயனொடும் – பிரமனும் ஆகிய இருமூர்த்திகளோடும்,
பூமியொடும் வானகம் – நிலவுலகத்தையும் மேலுலகங்களையும் (ஆகிய அனைத்தையும்),
உண்ட – (பிரளயகாலத்தில்) உட்கொண்டருளிய,
பெருமானை – பெருமையை யுடையவனான,
தேன் அகம் முண்டகம் தாள் வேங்கட ஈசனை – தேனைத் தனது அகத்தேயுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளையுடைய திருவேங்கடமுடையானை,
இன்று – இப்பொழுது,
என் மனம் உண்டது – எனது மனம் உட்கொண்டது; (ஆதலால்),
கடும் பிணிகாள் – கொடியநோய்களே! (நீங்கள்),
என்னின் நீங்கி – என்னை விட்டு நீங்கி,
கானகம் உண்டு அதில் போம் – காடு உளது அதிற் செல்லுங்கள்; (எ – று.)

இச்செய்யுள், கீழ் 6 – ஆஞ்செய்யுள்போலவே வியாதிகளை முன்னிலைப் படுத்திக்கூறியது.
இதனை, “ஒங்காரவட்டத்து மாசுணப்பாயி லுலோகமுண்ட,
பூங்கார் விழிக்குப் புலப்பட்டதா லெப்பொழுதுமென்னை,
நீங்காதிடர்செயுந்தீவினைகா ளினிநின்று நின்று,
தேங்காது நீரு மக்கானிடத்தே சென்றுசேர்மின்களே” என்ற திருவரங்கத்துமாலைச் செய்யுளோடு ஒப்பிடுக.
எம்பெருமான் எல்லாநோய்க்கும் மருந்தாவ னென்பது போதரும்.
‘நீற்றானயனொடும் பூமியொடும் வானகமுண்ட பெருமானை மனமுண்டது’ என்ற விடத்துச்
சிறிய ஆதாரத்திற் பெரிய ஆதேயம் அடங்கியதாகச் சொன்னது,பெருமையணியின் பாற்படும்;

“சூழ்ந்ததனிற்பெரிய பரநன்மலர்ச்சோதீயோ,…… சூழ்ந்ததனிற்பெரியவென்னவா” என்பது நம்மாழ்வார் பாசுரம்.
“கானகமுண் டதிற்போம்” என்ற முன்வாக்கியத்தை “பெருமானையென்மனமுண்டது” என்ற பின்வாக்கியம் சாதித்து நிற்பது,
தொடர்நிலைச்செய்யுட்குறியணி.
நீங்கி அதிற்போம் என்ற விடத்து, “கானகமுண்டு” என்ற வாக்கியம் இடைப்பிறவரலாய் நின்றது. அகம் – உள்ளிடம்.

————-

மனம் தலை வாக்கு உற எண்ணி வணங்கி வழுத்தும் தொண்டர்
இனம் தலைப் பெய்தனன் ஈது அன்றியே இமையோரும் எங்கள்
தனம் தலைவா எனும் வேங்கடவாண தடம் கடலுள்
நனந்தலை நாகணையாய் அறியேன் அன்பும் ஞானமுமே –75–

(இ – ள்.) இமையோரும் – தேவர்களும்,
‘எங்கள் தனம் – எங்கட்குச் செல்வம்போன்றவனே!
(எங்கள்) தலைவா – எங்கள் தலைவனே!’
எனும் – என்று துதிக்கப்பெற்ற,
வேங்கட வாண – திருவேங்கடமுடையானே!
தட கடலுள் – பெரிய (திருப்பாற்)கடலில்,
நனந் தலை நாக அணையாய் – பரந்த இடமுள்ள ஆதிசேஷனாகிய சயனத்தை யுடையவனே! –
மனம் தலை வாக்கு – மனமும் தலையும் வாக்கும் ஆகிய திரிகரணங்களாலும்,
உற – தகுதியாக, (முறையே),
எண்ணி வணங்கி வழுத்தும் – (உன்னைத்) தியானித்து நமஸ்கரித்துத் துதிக்கின்ற,
தொண்டர் – (உனது) அடியார்களுடைய,
இனம் – கூட்டத்தோடு,
தலைப்பெய்தனன் – சேர்ந்தேன்;
ஈது அன்றியே – இதுவே யல்லாமல்,
அன்பும் ஞானமும் அறியேன் – ஞானபக்திகளின் தன்மையை (அடியேன்) அறிகிறேனில்லை; (எ – று.)

அன்புஞானங்களை அறியேனாயினும், அவற்றையறிந்து திரிகரணத்தாலும் நின்னைவழிபடுகிற
மெய்யடியார்களோடு சேர்ந்தேனாதலால், அச்சம்பந்தத்தையே வியாஜமாகக்கொண்டு என்னைக் காத்தருளவேண்டு மென்பதாம்.
முதலடியில் மனத்தினால் எண்ணி, தலையினால் வணங்கி, வாக்கினால் வழுத்தும் என முறையே சென்று இயைதல்,
முறைநிரனிறைப்பொருள்கோள். உற – மனம் முதலியவற்றைப் பெற்றதன் பயன்சித்திக்க என்றபடி.
தலைப்பெய்தல் – ஒரு சொல்; இதில், தலைஎன்பது – தமிழுபசர்க்கம்: பெயர்க்கும் வினைக்கும் முன் அடையாய் நின்று
பொருள் தராதும் அப்பெயர்வினைப் பொருளை வேறுபடுத்தியும் வரும் இடைச்சொல் வடமொழியில் உபசர்க்கமெனப்படும்;
கைகூடல், தலைப்பிரிதல், கண்தீர்தல், மேற்கொள்ளல், பரிமாறல், பாதுகாத்தல் என்றவற்றில் –
கை, தலை, கண், மேல், பரி, பாது என்பன தமிழுபசர்க்கமாம். ஈது – சுட்டு நீண்டது. ஈதன்றியே, ஏ – பிரிநிலை.

இமையோர் – கண்இமையாதவர்; எதிர்மறை வினையாலணையும்பெயர். எதிர்மறை ஆகாரம் புணர்ந்துகெட்டது.
விகுதிமுதல்ஆகாரம் ஓகாரமாயிற்று. இமையோர் – ஞானசங்கோசமில்லாத நித்தியசூரிகளுமாம். உம் – உயர்வுசிறப்பு.
அதனால், பிறர்துதித்தல் தானே பெறப்படும். தனம் – அண்மைவிளியாதலின், இயல்பு.
ஆபத்துக்காலத்தில் உதவுதல்பற்றியும், விருப்பத்துக்கிடமாதல்பற்றியும், “எங்கள்தனம்” என்றார்.

“கறங்காழி நாலெட்டிலக்கமியோசனை கட்செவியின், பிறங்காக மும்மையிலக்க மியோசனை பேருலகி,
லிறங்காழிமேகமெனவேயரங்கத்திலெந்தையதி, லுறங்காகநீளமைந்தைம்பதினாயிரமோசனையே” என்பது நூல்துணிபாதலால்,
“தடங்கடலுள் நனந்தலைநாகணையாய்” என்றார்.
ஆசிரியர் நச்சினார்க்கினியர் பத்துப்பாட்டுள் முல்லைப்பாட்டில் “நனந்தலை யுலகம்” என்றதற்கு
“அகலத்தை இடத்தேயுடைய உலகம்” என்றும், மதுரைக்காஞ்சியில் “நாளங்காடிநனந்தலை” என்றதற்கு
“அகற்சியையுடைத்தாகிய இடத்தினையுடைய நாட்காலத்துக்கடை” என்றும் உரைத்தமை உணர்க.
தொல்காப்பியத்து “நனவேகளனும் அகலமுஞ் செய்யும்” என்ற உரிச்சொல்லியற்சூத்திரத்தால்,
நனவென்னும் உரிச்சொல் அகலமென்னும் பொருளை யுணர்த்துதல் காண்க.
நாகவணை என்பது நாகணை யெனத் தொகுத்தல்விகாரப்பட்டது;
“நஞ்சுபதி கொண்ட வளநாகணை” எனச் சீவக சிந்தாமணியிலும்,
“நச்சுநாகணைக் கிடந்த நாதன்” எனத் திருச்சந்தவிருத்தத்திலும்,
“நாராயணாவோ மணிவண்ணா நாகணையாய்” எனச் சிறியதிருமடலிலுங் காண்க.
காரியகாரணமுறைபற்றி, ‘அன்புஞானமும்’ என்றார்.
மநோ வாக் காயமென்ற முறைபிறழக் கூறினார், செய்யுளாதலின்: யமகநயத்தின்பொருட்டென்க.
மெய்யென்னுமிடத்துத் தலையைக் கூறினது, உத்தம அங்கமாதலின்.

———-

ஞானக் கண் தா கனவு ஒக்கும் பவம் துடை நஞ்சு இருக்கும்
தானக் கண்டா கனற்சோதி என்று ஏத்தும் வன் தாலமுடன்
வானக் கண் தா கன வண்ணா என்று ஒது ஒலி வந்து அடையா
ஈனக் கண்டா கனற்கு ஈந்தான் பர கதி என் அப்பனே –76-

(இ – ள்.) “நஞ்சு இருக்கும் – விஷம் தங்குகின்ற,
தானம் – இடமாகிய,
கண்டா – கழுத்தையுடையவனே!
கனல் சோதி – அனற்பிழம்பின் வடிவமானவனே!
ஞானம் கண் தா – (எனக்கு) ஞானமாகிய கண்ணைக் கொடு;
கனவு ஒக்கும் பவம் துடை – கனாத்தோற்றத்துக்குஒப்பான பிறப்பை (எனக்கு) ஒழித்தருள்வாய்,”
என்று – என்றுசொல்லி,
ஏத்து – (சிவபிரானைத்) துதிக்கிற,
வல் தாலமுடன் – வலிய நாவினுடன் (கூடி),
வானக்கண் தாகனம் வண்ணா என்று ஓது ஒலி வந்து அடையா – “வானத்தில் தாவிச் செல்லுகிற மேகம் போன்ற
நிறத்தையுடையவனே!” என்று (திருமாலைத்) துதித்துச்சொல்லும் ஓசை தன் (செவிகளில்) வந்துநுழையப் பெறாத,
ஈனம் கண்டாகனற்கு – இழிவையுடைய கண்டாகர்ணனென்னும் பூதகணநாதனுக்கும்,
என் அப்பன் – எனது தலைவனான திருவேங்கடமுடையான்,
பரகதி ஈந்தான் – பரமபதத்தைத் தந்தருளினன்; (எ – று.)தாலமுடன் அடையா என்று இயையும்.

“எந்தைவானவர்க்கும், வணங்கரியா னன்றிக் காப்பாரில்லாமை விண்மண்ணறியும்,
வணங் கரியானவர் வாணன் கண்டாகனன் மார்க்கண்டனே” என்றபடி
ஸ்ரீமந்நாராயணனே பரம்பொருளென்று சாதித்தற்குச் சாக்ஷியாகிற திவ்வியசரித்திரங்களுள் முதலிற்
சிவபக்தியோடு விஷ்ணுத்வேஷமும் மேலிட்டிருந்த கண்டாகர்ணன் பின்புசிவனால் முத்திபெறமாட்டாது
கண்ணபிரானாற் பெற்றனனென்ற வரலாறு சிறத்தலால், அதனை இங்கு எடுத்துக்காட்டினர்,
‘திருமாலினிடத்து இத்துணைக்காலமாக மனப்பதிவில்லாது பெரும்பாதகராய் மாறுபாடுகொண்டிருந்த நாம் இப்பொழுது
அப்பிரானைச் சரண்புக்கால் அவன் காப்பனோ? காவானோ?’ என்று ஐயுறுவாரது சந்தேகத்தைப் போக்கக் கூறியதாக
இச்செய்யுட்குச் சங்கதி காணலாம்.
(“பாதகக்கண்டா கன்னனெனுமியக்கன் பத்தியற் றுன்பெரும்புகழைக்கேளோமென்று,
காதிரண்டிற் சத்தமிகு மணியைக் கட்டிக் கணப்பொழுதுமோயாம லசைத்திருக்கத்,
தீதுநினைந்தானென்றுன்மனத்தெண்ணாமற் சிந்தையினான் மறவாமல் தியானித்தானென்று,
ஏதமற வவனுக்குமவன் தம்பிக்கு மிரங்கி முத்தியளித்தனையே யெம்பிரானே” என்றார் பின்னோரும்.)

தத்துவப்பொருள்களை உள்ளபடிகாணுதற்குக் கருவியாதலால், ஞானம் ‘கண்’ எனப்பட்டது.
காண்பது கண் எனக் காரணக்குறி. ‘கனவொக்கும் பவம்’ என்றது, சொப்பனத்திலே காணப்பட்ட பொருள் போலப்
பிரபஞ்சவாழ்க்கை சிறிதும் நிலைபேறின்றி அழியுந்தன்மையதாதலால்;
“கண்டகனாவின் பொருள்போல யாவும்பொய்” என்பது திருவரங்கத்தந்தாதி.
பிறப்பை ஒழித்தருளுதலாவது – இனிப் பிறவியில்லாதபடி மீளாவுலகமாகிய முத்தியை யளித்தல்.

திருப்பாற்கடல்கடைகையில் அதனினின்று எழுந்ததோர் அதிபயங்கரமான பெருவிஷத்தைக் கண்டமாத்திரத்தில்
அதன்கொடுமையைப் பொறுக்கமாட்டாமல் அஞ்சியோடிச் சரணமடைந்த தேவர்களின் வேண்டுகோளினால்
அவ்விஷத்தைச் சிவபிரான் அமுதுசெய்து கண்டத்தில் நிறுத்தி அனைவரையும் பாதுகாத்தருளின னென்றும்,
தாம்தாம் கடவுளென்னுங் கருத்துக்கொண்டு ஒருவர்க்கொருவர் பகைமைபூண்டு போர்தொடங்கிய
பிரமவிஷ்ணுக்களின் மாறுபாட்டை யொழித்தற்பொருட்டுப் பரமசிவன் அவ்விருவர்க்கும் நடுவில்
ஒரு பெரிய சோதிமலைவடிவமாய்த் தோன்றி நின்றனனென்றும் சைவபுராணங்களிற் கூறப்படுகிற வரலாறுகளை
யுட்கொண்டு சைவர்கள் சிவனைத் துதிக்கிற மரபின்படி மகாசைவனாயிருந்த கண்டாகர்ணன்
“நஞ்சிருக்குந்தானக்கண்டா, கனற்சோதி” என்று ஏத்தினனென்றார்.
“கனச்சோதி” என்ற பாடமும் – திரண்ட சோதிவடிவானவனே யெனப் பொருள்படும்.
“விஷகண்டா! தழல்வண்ணா!” என்று கடுஞ்சொற்களால் துதிப்பவன் “முகில்வண்ணா! என்ற செவிக்கினிய
சொல்லைக் கேட்கவும் மாட்டாத வனாயின னெனக் கண்டாகர்ணனது இழிபை விளக்கியவாறு;
இங்கு “காணிலும்முருப்பொலார் செவிக்கினாதகீர்த்தியார்,
பேணிலும்வரந்தரமிடுக்கிலாத தேவரை,
யாணமென்றடைந்துவாழுமாதர் காளெம்மாதிபாற்,
பேணிநும்பிறப்பெனும் பிணக்கறுக்ககிற்றிரே” என்ற திருச்சந்தவிருத்தம் கருதத்தக்கது.

தாடையைக்குறிக்கிற “தாலு” என்ற வடசொல், தமிழில் நாவென்ற பொருளில் வருதலை “தமிழிலே தாலை நாட்டி” எனக்
கம்பராமாயணச் சிறப்புப்பாயிரத்திலுங் காண்க. தாலம், அம் – சாரியை, தா கனம் – வினைத்தொகை;
கீழ் 11 – ஆஞ்செய்யுளின் ஈற்றடியில் “தாமரை” என்றது போல, “வானக்கண் தா” என்றது, மேகத்துக்கு அடைமொழி;
மேகவண்ணனுக்கு அடைமொழியாகக் கொண்டால், உலகளந்த வரலாற்றைக் குறிக்கும்.

———–

என் அப்பன் ஆகத்துப் பொன் நூலன் வேங்கடத்து எந்தை துயில்
மன் அப்பன் நாகத்துக்கு அஞ்சல் என்றான் பல் மணி சிதறி
மின்னப் பல் நாகத்துப் பாய்ந்தான் கதை அன்றி வெவ்வினைகள்
துன்னப் பல் நா கத்துப் பொய்ந்நூல் புகா என் துளைச் செவிக்கே –77–

(இ – ள்.) என் அப்பன் – எனது ஸ்வாமியும்,
ஆகத்து பொன் நூலன் – திருமார்பிலே பொன்னினாலாகிய பூணூலைத் தரித்தவனும்,
துயில் மன் அப்பன் – சயனித்துத் துயில் பொருந்துதற் கிடமாகிற கடலையுடையவனும்,
நாகத்துக்கு அஞ்சல் என்றான் – (“ஆதிமூலமே” என்ற) யானைக்கு ‘அஞ்சாதே’ என்று சொல்லி அபயமளித்து (அதனை)ப் பாதுகாத்தவனும்,
பல்மணி சிதறி மின்ன – (பல முடிகளிலுமுள்ள) பலமாணிக்கங்கள் தெறித்து மின்னல்போல விளங்கும்படி,
பல் நாகத்து பாய்ந்தான் – பற்களையுடைய (காளியனென்னும்) பாம்பின்மீது வலியப்பாய்ந்திட்டவனுமான,
வேங்கடத்து எந்தை – திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானுடைய,
கதை அன்றி – திவ்வியசரித்திரங்கள் என்காதுகளிற் செல்லுமேயல்லாமல், –
வெவ்வினைகள் துன்ன – கொடிய தீவினைகள் நெருங்க,
பல் நாகத்து – (பரசமயத்தாரது) பலநாக்குக்கள் கத்துதலையுடைய,
பொய் நூல் – பொய்யான சமயநூல்களின் பொருள்கள்,
என் துளை செவிக்கு புகா – எனது செவித்தொளைகளில் நுழையா; ( எ – று.)

“மறந்தும் புறந்தொழா மாந்தர்” என்றபடி தேவதாந்தரங்களிடத்தில் தமக்கு உள்ள உபேக்ஷையையும்,
பரதேவதையினிடத்தில் தமக்குஉள்ள அபேக்ஷையையும் இங்ஙனங் கூறி வெளியிட்டார்.

“ஆகத்துப் பொன்நூலன்” என்பது – திருமார்பிலே பொன்னையும் (திருமகளையும்) பூணூலையும் உடையவனென்றும் பொருள்படும்.
உபவீதத்தைப்போலவே பெரியபிராட்டியையும் எப்பொழுதும் நீங்காது தரிப்பவனென்க.
துயில் மன் அப்பன் – அப்பில் துயில் மன்னுபவன்; அப்பு – ஜலம்; இங்கு, பிரளயப்பெருங்கடல்; அப் – வடசொல்.
நாகத்தின் விஷப்பற்கள், காளி காளாத்திரி யமன் யமதூதி எனப் பெயர்பெறும்.

கத்து – முதனிலைத்தொழிற்பெயர்; இரண்டாம் வேற்றுமையுருபும்பயனுமுடன் தொக்கதொகை;
கத்துகிற என வினைத்தொகையாகக் கொண்டால், கத்துப்பொய்ந்நூல் என வருமொழிமுதல்வலிமிகாது,
துளைச்செவிக்கு – உருபுமயக்கம்.
“கேட்பினுங் கேளாத்தகையவே கேள்வியாற், றோட்கப்படாத செவி” என்றபடி நூற்கேள்வி யில்லாதசெவி
செவிட்டுச் செவியாதலால், அங்ஙனமன்றிப் பெரியோரிடத்து நுண்ணியபொருளைக் கேட்ட செவியென்பார், “துளைச்செவி” என்றார்.

———–

நாரை விடு தூது

செவித்தலை வன்னியன் சூடு உண்ட வேய் இசை தீப்பதும் யான்
தவித்து அலை வன்மயலும் தமர் காப்பும் தமிழ்க் கலியன்
கவித்தலைவன் திரு வேங்கடத்தான் முன் கழறுமின் பொன்
குவித்து அலை வந்து உந்து கோனேரி வாழும் குருகினமே –78-

(இ – ள்.) அலை – அலைகள்,
பொன் குவித்து வந்து உந்து – பொன்னைக் கொழித்துக்கொண்டுவந்து (கரைகளில்) மோதப்பெற்ற
கோனேரி – கோனேரியில்,
வாழும் – வாழ்கிற,
குருகு இனமே – நாரைகளின் கூட்டங்களே! –
வன்னியின் சூடுண்ட வேய் இசை – நெருப்பிற் சுடப்பட்ட மூங்கிலினாலாகிற புள்ளாங்குழலின் இசைப்பாட்டு,
செவித்தலை தீப்பதும் – (எனது) காதுகளினிடத்தைச் சுடுவதையும்,
யான் தவித்து அலைவல் மயலும் – யான் விரகதாபங்கொண்டு வருந்துகிற வலிய (எனது) மோகத்தையும்,
தமர் காப்பும் (பாங்கியர் செவிலியர் முதலிய) உற்றார் (சைத்யோபசாரஞ்செய்து என்னைப்) பாதுகாக்கும் வகையையும்,
தமிழ் கலியன் கவி தலைவன் திருவேங்கடத்தான் முன் கழறுமின் – தமிழ்ப்பாஷையில் தேர்ந்த திருமங்கை யாழ்வார் பாடிய
பாட்டுக்களுக்குத் தலைவனான திருவேங்கடமுடையானது முன்னிலையிற் (சென்று) சொல்லுங்கள்; (எ – று.)

தலைவனைப் பிரிந்த தலைவி அப்பிரிவாற்றாது வருந்தும்போது, அங்ஙனம் இரங்குமிடம் நெய்தல்நில மாதலால்,
திருவேங்கடமலையின் மீதுள்ள கோனேரியெனப்படுகிற ஸ்வாமிபுஷ்கரிணியில் வாழ்கிற குருகென்னும்
நீர்வாழ்பறவைகள் அந்நெய்தனிலத்துக்கழிக்கரையில் இரைதேடுதற்குவர அவற்றைநோக்கி
“எனது நிலைமைகளை எனது தலைவனான திருவேங்கடமுடையான் பக்கல் சொல்லுதற்கு
நீங்கள் எனக்குத் தூதாகவேண்டும்” என வேண்டுகிறாள்.

கூடினநிலையில் இன்பஞ்செய்யும் பொருள்கள்யாவும் பிரிந்தநிலையில் துன்பஞ்செய்தல் இயல்பாதலால்,
வேய்ங்குழலின் இனியசங்கீதம் தன் செவிகளைச் சுடுகிறதென்றாள்.
இடையர் மாலைப்பொழுதிற் பசுக்களை ஊர்க்கு ஓட்டிவரும்போது ஊதுகிற வேய்ங்குழலின்இசை அம்மாலைப்
பொழுதுக்குச்சூசகமாய்க் காமோத்தீபகமாகிப் பிரிந்தாரைவருத்து மென்பதை உணர்க;
“தீங்குழலீரூமாலோ” என்பது நம்மாழ்வார்பாசுரம்.
‘வன்னியிற் சூடுண்ட’ என்றது, வேய்க்கு அடைமொழி; பதப்படுதற்காக மூங்கிலை நெருப்பிற் காய்ச்சுதல் இயல்பு.
வேயிசைக்கு அடைமொழியாக்கொண்டு, நெருப்புப்போலச்சுடுதல் கொண்ட வேய்ங்குழலிசை யெனினுமாம்.
மயல் – ஆசை நோயாலாகிய மயக்கம். தோழியர்முதலியோர் செய்யுஞ் சீதோபசாரங்கள் விரகதாபத்தைத் தணிக்க
மாட்டாமையையு முட்படச் சொல்லுங்க ளென்பாள், “தமர்காப்புங் கழறுமின்” என்றாள்.

கோனேரி – கோன்ஏரி; ஸ்வாமி புஷ்கரிணி: திருவேங்கடமலையின்மேல் திருக்கோயிலுக்கு அருகிலுள்ள பிரதாநமான திவ்வியதீர்த்தம் இது.
திருவேங்கடமுடையானுக்கு அருகில் வாழ்கின்ற வாதலால் அவன் சந்நிதியிற் சொல்லுதற்கு உரியனவா மென்று உட்கொண்டு,
“திருவேங்கடத்தான்முன் கழறுமின் கோனேரிவாழுங்குருகினமே” என்றாள்.
‘கோனேரிவாழுங் குருகினமே’ என விளித்ததனால், அப்பறவைகள்போலத் தானும் திருவேங்கடமுடையான் கருணைக்கு
இலக்காகி அவனருகில் கோனேரிதீரத்தில் வாழ்தலை வேண்டினாளாம்.

ஐயங்காரது ஞானக்கண்ணுக்கு இலக்கான எம்பெருமான் மறைந்த வளவிலே, அவனது நிரந்தராநுபவத்தைப் பெற
விரும்பிய ஐயங்கார் தமது நிலைமையை அப்பெருமான் சந்நிதியில் விண்ணப்பஞ்செய்யும்படி
ஆசாரியர்களைப் பிரார்த்தித்தல், இதற்கு உள்ளுறைபொருள்.
வெண்ணிறமுடையனவாய் இரண்டு இறகுகளுடன்கூடி எங்குங் கவலையற்றுத்திரிந்து தம்மையே யன்றித்
தமது பரிவாரத்தையும் பாதுகாப்பனவாய்க் கருமமேகண்ணாயிருந்து உத்தேசித்தகாரியத்தைச் சமயம் வாய்க்கும்போது
தவறாதுசெய்து முடித்துக்கொள்வனவான நாரைகளை, சுத்தசத்துவகுணமுடைமையால் உள்ளும்புறமும்
ஒக்க நிர்மலஸ்வபாவராய் ஞானம் ஒழுக்கம் என்ற இரண்டு சாதனங்களுடன் கூடித் திவ்விய தேசங்களிலெல்லாம்
கவலை யற்றுயாத்திரை செய்பவராய்த் தம்மையேயன்றித் தம்மையடுத்தவர்களையும் பாதுகாப்பவராய்க் காரியமே
கருத்தாயிருந்து அதனை உரியகாலத்தில் தவறாதுசெய்து முடிக்கவல்ல ஆசாரிய ரென்னத்தகும்.

“செவித்தலை வன்னியிற்சூடுண்ட வேயிசைதீப்பது” என்றது, பிரபத்தி மார்க்கத்தில் நிற்கிற தமக்குப்
பிரபஞ்ச விஷயங்கள் வெறுப்பைவிளைத்தலைக் கூறியவாறாம்.
“யான்தவித்தலை வன்மயல்” என்றது, தாம் அடைந்திருக்கிற மோகாந்தகாரத்தை உணர்த்தும்.
“தமர்காப்பு” என்றது, பரிவுடையாரும் ஞானிகளுமான அன்பர்கள் தம்மை ஆதரித்தலை.
“கோனேரிவாழுங் குருகினம்” – எம்பெருமானது திருக்கலியாணகுணங்களில் மூழ்கி ஆனந்தமடைகிற ஆசாரியரென்றபடி.
பாகவதர்கள் ஸ்வாமி புஷ்கரிணியில் நீராட்டஞ்செய்து களிப்பவராதலாலும்,
அவர்களை “கோனேரிவாழுங் குருகினம்” என்னலாம்.
இதனால், திருமலைவாஸத்தில் ஐயங்கார்க்குஉள்ள அபேக்ஷை குறிப்பிக்கப்பட்டதாம்;
பெருமாள்திருமொழியில் “வேங்கடத்துக், கோனேரிவாழுங் குருகாய்ப் பிறப்பேனே” என்றதும்,
அதன் வியாக்கியானத்தில் “வர்த்திக்குமென்கிற விடத்துக்கு வேறே வாசகசப்தங்கள் உண்டாயிருக்கச்செய்தே
“வாழும்” என்கிற சப்தத்தை இட்டபடியாலே, அங்குத்தைவாஸந்தானே போகரூபமாயிருக்கு மென்கை’ என்றதும் அறியத்தக்கவை. விரிப்பிற் பெருகும்.

திருவேங்கடமுடையான் திருமங்கையாழ்வாரது பாடல் பெற்றவனாதலால், “கலியன்கவித்தலைவன்” என்றார்.
நான்குவேதங்கட்கு ஆறுஅங்கங்கள்போல, நம்மாழ்வார் அருளிச்செய்த நான்கு பிரபந்தங்கட்கு ஆறு அங்கங்களாகத்
திருமங்கையாழ்வார் திருவாய்மலர்ந்தருளிய பெரியதிருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம்,
திருவெழுகூற்றிருக்கை, சிறியதிருமடல், பெரியதிருமடல் என்ற ஆறு திவ்வியப்பிரபந்தங்களுள்
திருக்குடந்தையின் விஷயமான திருவெழுகூற்றிருக்கையொன்றிலன்றி மற்றை ஐந்திலும் திருவேங்கடமுடையான் பாடப்பட்டுள்ளதனால்,
“கலியன்கவித்தலைவன் திருவேங்கடத்தான்” என்றல் தகும்.

“என்னாவிலின்கவி யானொருவர்க்குங் கொடுக்கிலேன்,
தென்னாதெனாவென்று வண்டுமுரல் திருவேங்கடத்து,
என்னானையென்னப்ப னெம்பெருமானுளனாகவே” என நம்மாழ்வார் தமது திவ்யப்பிரபந்தங்களின் தலைவன்
திருவேங்கடமுடையானே யென அறுதியிட்டுள்ளதனால், அவற்றின் அங்கங்களான கலியனது திவ்வியப்பிரபந்தங்கட்கும்
திருவேங்கடமுடையானே தலைவனென்னலா மென்பர் ஒருசாரார்.
கலியன் – மிடுக்குடையவன். சோழமண்டலத்தில் திருமங்கையென்னும்நாட்டிற் சோழராசனுக்குச் சேனைத்தலைமைபூணும்
பரம்பரையில் தோன்றி நீலனென்னும்பெயருடையராய்ப் படைக்கலத்தேர்ச்சி பெற்று அவ்வரசனுக்குச் சேனாபதியாகிப்
பகைவென்று அம்மன்னன்கட்டளைப்படி மங்கைநாட்டுக்கு அரசராகிய இவர்,
குமுதவல்லியென்னுங் கட்டழகியை மணஞ்செய்துகொள்ளுதற்பொருட்டு அவள்சொற்படி நாள்தோறும்
ஆயிரத்தெட்டு ஸ்ரீவைஷ்ணவர்களை அமுதுசெய்வித்து வருகையில், கைப்பொருள் முழுதும் செலவாய்விட்டதனால்,
வழிபறித்தாகிலும் பொருள்தேடிப் பாகவத ததீயாராதநத்தைத் தடையறநடத்தத்துணிந்து வழிச்செல்வோரைக்
கொள்ளையடித்துவரும்போது, ஸ்ரீமந்நாராயணன் இவரை ஆட்கொள்ளக்கருதித் தாம் ஒருபிராமணவேடங்கொண்டு
பல அணிகலங்களைப் பூண்டு மணவாளக்கோலமாய் மனைவியுடனே இவரெதிரில் எழுந்தருள,
இவர் கண்டு களித்து ஆயுதபாணியாய்ப் பரிவாரத்துடன்சென்று அவர்களைவளைந்து வஸ்திராபரணங்களையெல்லாம் அபகரிக்கையில்,
அம்மணமகன் காலிலணிந்துள்ள மோதிரமொன்றைக் கழற்றமுடியாமையால் அதனையும் விடாமற் பற்களாலே கடித்துவாங்க
அம்மிடுக்கை நோக்கி எம்பெருமான் இவர்க்கு “கலியன்” என்றுபெயர் கூறினான்.
பின்இவர் பறித்த பொருள்களையெல்லாம் சுமையாகக்கட்டிவைத்து எடுக்கத்தொடங்குகையில்,
அப்பொருட்குவை இடம்விட்டுப்பெயராதிருக்க, கண்டு அதிசயித்து அவ்வந்தணனைநோக்கி
“நீ என்ன மந்திரவாதம் பண்ணினாய்? சொல்” என்று விடாது தொடர்ந்து நெருக்க,
அப்பொழுது அந்த அழகிய மணவாளன் “அம்மந்திரத்தை உமக்குச் சொல்லுகிறோம் வாரும்” என்று
இவரை அருகில் அழைத்து அஷ்டாக்ஷரமகாமந்திரத்தை இவர்செவியில் உபதேசித்தருளி உடனே
கருடாரூடனாய்த் திருமகளோடு இவர்முன் சேவைசாதிக்க,
அத்திருவுருவத்தைத் தரிசித்ததனாலும், முன்பு காலாழிவாங்கியபொழுது பகவானுடைய திருவடியில் வாய்வைத்ததனாலும்,
இவர் அஜ்ஞாநம் ஒழிந்து தத்துவஞானம் பெற்றுக் கவிபாடவல்லராகிச் சிறந்த ஆறுபிரபந்தங்களைப் பாடினர்.
இவர் “நாலுகவிப்பெருமாள்” என்ற பிருது பெறும்படி தமிழ்வல்ல ராதலால், “தமிழ்க்கலியன்” எனப்பட்டனர்.
கலியனது தமிழ்க்கவி யென்று இயைப்பினுமாம்.

————–

குருகூரர் அங்க மறைத் தமிழ் மாலை குலாவும் தெய்வ
முருகு ஊர் அரங்கர் வட வேங்கடவர் முன் நாள் இலங்கை
வரு கூரர் அங்கம் துணித்தார் சரணங்கள் வல்வினைகட்கு
இரு கூர் அரங்கள் கண்டீர் உயிர்காள் சென்று இரவுமினே –79-

(இ – ள்.) உயிர்காள் – பிராணிகளே! –
அங்கம் – (திருமங்கையாழ்வார் அருளிச்செய்த ஆறுபிரபந்தங்களாகிய ஆறு) அங்கங்களையுடைய,
குருகூரர் மறை தமிழ் மாலை – நம்மாழ்வார் அருளிச்செய்த நான்குதமிழ்வேதமாகியபாமாலைகளில்,
குலாவும் – பொருந்திய,
தெய்வம் முருகு – தெய்வத்தன்மையுள்ள நறுமணம்,
ஊர் – வீசப் பெற்ற,
அரங்கர் – ஸ்ரீரங்கநாதரும்,
முன்நாள் இலங்கை வரு கூரர் அங்கம் துணித்தார் – முற்காலத்திலே இலங்காபுரியில் வந்துசேர்ந்த கொடியவர்களான இராக்கதர்களுடைய உடம்புகளைச் சேதித்தவருமான, வடவேங்கடவர் – வடதிருவேங்கடமுடையானது,
சரணங்கள் – திருவடிகள்,
வல் வினைகட்கு இரு கூர் அரங்கள் கண்டீர் – வலியஇருவினைகளையும் அறுத்தற்கு இரண்டு கூரிய வாள்விசேடங்களாம்;
சென்று இரவுமின் – (எம்பெருமான் பக்கல்)சென்று (உங்கள்வினைகளை அறுக்குமாறு அத்திருவடிகளைப்) பிரார்த்தியுங்கள்; (எ – று.) – கண்டீர் – தேற்றம்.

நம்மாழ்வாரது பாடல்களைப் பெற்றவ ரென்பது, முதல்விசேடணத்தினால் தேர்ந்தபொருள்.
பிரபந்தங்களை “தமிழ்மாலை” என்றதற்குஏற்ப, அவற்றின் சம்பந்தம் பெற்று விளங்குதலை முருகூர்தலாகக் குறித்தார்;
ஊர்தல் – பரத்தல். சிக்ஷை வியாகரணம் சந்தஸ் நிருக்தம் ஜ்யோதிஷம் கல்பம் என்ற ஆறுசாஸ்திரங்களும்
நான்கு வேதங்கட்கு அங்கமாதல்போல, நம்மாழ்வாரது நான்குபிரபந்தங்கட்குத் திருமங்கையாழ்வாரது ஆறுபிரபந்தங்களும் அங்கமென்க.
“முன்னா ளிலங்கைவரு கூரரங்கந் துணித்தார்” என்றது – இராமாவதாரத்தில் இராவணன் முதலியராக்ஷசர்களை அழித்ததையேயன்றி,
அதற்குமுன்பு இலங்கையில் வாழ்ந்த மாலிமுதலிய பூர்விகராக்ஷசர்களைத் திருமாலின்வடிவமான உபேந்திரமூர்த்தி அழித்திட்டதையுங் குறிக்கும்.
இருதிறத்தரக்கர்களும் இலங்கையிற்பிறந்தவரன்றி அங்குக்குடியேறினவ ராதலால், ‘இலங்கைவருகூரர்’ எனப்பட்டனர்.
கூரர் – க்ரூரர் என்ற வடசொல்லின் விகாரம். அரம் – இரும்பு முதலிய வலியபொருள்களை அராவி
யழிக்குந்தன்மையுள்ள ஒருவகைவாள்.
இங்கு எம்பெருமான் திருவடிகள் கொடிய கருமங்களையொழிப்பனவாதலால், “வல்வினைகட்கு இருகூரரங்கள்” எனப்பட்டன;
உருவகவிசேடம். சரண் நங்கள் என்று பிரித்தும் பொருள் கொள்ளலாம்.

————–

இரணிய நாட்டன் இரணியன் ஈர் ஐந் தலையன் கஞ்சன்
முரணிய கோட்டின் நகத்தின் சரத்தின் முன் தாளின் துஞ்சத்
தரணியில் குத்தி இடந்து எய்து உதைத்தவன் சர்ப்ப வெற்பன்
அரணிய கேழல் அரி ராகவன் கண்ணன் ஆகி வந்தே –80-

(இ – ள்.) சர்ப்ப வெற்பன் – சேஷகிரியென்று ஒருபெயர் பெற்ற திருவேங்கடமலை யிலெழுந்தருளி யிருப்பவனான திருமால், –
அரணிய – அரண்போல அடுத்தவர்களைக் காக்குந்தன்மையுள்ள,
கேழல் – வராகமூர்த்தியும்,
அரி – சிங்கப்பிரானும்,
ராகவன் – ஸ்ரீராமனும்,
கண்ணன் – கிருஷ்ணனும், ஆகி வந்து -, – (முறையே), –
இரணியநாட்டன் – ஹிரண்யாக்ஷனும்,
இரணியன் – ஹிரண்யனும்,
ஈரைந்தலையன் – பத்துத்தலைகளையுடையவனான இராவணனும்,
கஞ்சன் – கம்ஸனும், –
முரணிய – வலிமையுள்ள,
கோட்டின் – கொம்பினாலும்,
நகத்தின் – நகங்களினாலும்,
சரத்தின் – அம்புகளாலும்,
முன் தாளின் – முந்திநீட்டிய காலினாலும்,
துஞ்ச – இறக்கும்படி, -(அவர்களை) தரணியில் – பூமியிலே,
குத்தி – குத்தியும்,
இடந்து – பிளந்தும்,
எய்து – தொடுத்தும்,
உதைத்தவன் – உதைத்தவனாவன்; (எ – று.)

கேழலாகி வந்து இரணிய நாட்டன் துஞ்சக் கோட்டினாற் குத்தியவன், அரியாகி வந்து இரணியன் துஞ்ச நகத்தினால் இடந்தவன்,
ராகவனாகி வந்து ஈரைந்தலையன் துஞ்சச் சரத்தினால் எய்தவன், கண்ணனாகி வந்து கஞ்சன் துஞ்ச முன்தாளினால் உதைத்தவன்
என நான்கடிகளிலும் முறையே இயைந்து பொருள்படுதலால், நிரனிறையணி.

ஹிரண்யாக்ஷன் என்ற பெயர் – பொன்னிறமான கண்களையுடையவனென்று பொருள்படுதலால்,
அதன் பரியாயநாமமாக “இரணியநாட்டன்” என்றார்; நாட்டம் – கண்; நாடுதற்கருவி.
ராகவன் – சூரியகுலத்துப் பிரசித்திபெற்ற ரகுவென்னும் அரசனது மரபில் தோன்றியவன்; தத்திதாந்தநாமம்.
ஆகிவந்து – இங்ஙனம் திருவவதரித்து என்றபடி. “சரத்தின்” என்றவிடத்து, “கரத்தின்” என்றும் பாடமுண்டு;
அப்பொழுது, கரத்தின் – கைகளால், எய்து – அம்புதொடுத்து என்க. அரண் – கோட்டை, மதிள், காவல். அரண்ய என்ற வடசொல்,
அரணிய என்று விகாரப்பட்ட தெனக்கொண்டு, காட்டிலே (சஞ்சரிக்குந்தன்மையுள்ள) என்று உரைத்தலு மொன்று.
சரண்ய என்ற வடசொல் அரணிய என்று விகாரப்பட்டுவந்த தெனக்கொண்டால், ரக்ஷகமான என்று பொருள்படும்.

—————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவேங்கடத்தந்தாதி –41-60-

February 21, 2022

கருத்து ஆதரிக்கும் அடியேனைத் தள்ளக் கருதிக் கொலோ
திருத்தாது அரிக்கும் ஐவர்க்கு இரை ஆக்கினை செண்பகத்தின்
மருத்தாது அரிக்கும் அருவி அறா வட வேங்கடத்துள்
ஒருத்தா தரிக்கும் படி எங்கனே இனி உன்னை விட்டே –41-

(இ – ள்.) செண்பகத்தின் – சண்பகமலர்களினுடைய,
மரு – வாசனை யுள்ள,
தாது – மகரந்தப்பொடிகளை,
அரிக்கும் – அரித்துக்கொண்டுவருகிற,
அருவி – நீரருவிகள்,
அறா – எந்நாளும்இடைவிடாது பெருகப்பெற்ற,
வட வேங்கடத்துள் – வடக்கின்க ணுள்ள திருவேங்கடமலையில் எழுந்தருளி யிருக்கின்ற,
ஒருத்தா – ஒப்பற்றகடவுளே! –
கருத்து ஆதரிக்கும் – மனத்தில் (உன்னையே) விரும்புகின்ற,
அடியேனை – தாசனான என்னை,
தள்ள – (உன் பக்கல் சேர்த்துக்கொள்ளாது) தள்ளிவிட,
கருதிக்கொல்ஓ – எண்ணியோ,
திருத்தாது – (ஆட்கொண்டு) சீர்திருத்தாமல்,
அரிக்கும் ஐவர்க்கு இரை ஆக்கினை – கெடுக்கின்ற பஞ்சேந்திரியங்களுக்கு (என்னை) உணவாக்கிவிட்டாய்;
இனி உன்னை விட்டு தரிக்கும்படி எங்ஙனே – இனி (நான்) உன்னையின்றி உய்யும்வகை எவ்வாறோ? (எ – று.)

இங்ஙனம் தனது அநந்யகதித்வத்தை (அதாவது – திருவேங்கடமுடை யானையன்றி வேறொருரக்ஷகனை யின்றிருப்பதை) வெளியிட்டார்.
“செண்பகத்தின்மருத்தா தரிக்குமருவியறா” என்றது, மலைவளத்தை யுணர்த்தும். கருதிக்கொலோ, கொல் – அசை.
இரையாக்கினை – இலக்காக்கினை யென்ற படி. சம்பகமென்றவடசொல்லின்விகாரமான சண்பக மென்பது,
மோனைத் தொடையின்பொருட்டு, செண்பகம் என்று விகாரப்பட்டது. இந்த மரத்தின்பெயர் – இங்குப் பூவுக்கு முதலாகுபெயர். ஒருத்தன் – ஏகமூர்த்தி.

————-

உன்னைக் கரிய மிடற்றன் அயன் முதல் உம்பர் எல்லாம்
பொன்னைக் கரி ஒத்த போதும் ஒவ்வார் புகழ்க் கோசலை ஆம்
அன்னைக்கு அரிய முத்தே அப்பனே உன்னை அன்றி பின்னை
முன்னைக் கரி அளித்தாய்க்கு உவமான மொழி இல்லையே –42-

(இ – ள்.) புகழ் – கீர்த்தியையுடைய,
கோசலை ஆம் – கௌசல்யையாகிய,
அன்னைக்கு – தாய்க்கு,
அரிய முத்தே – அருமையான முத்துப்போன்ற குமாரனே!
அப்பனே – திருவேங்கடமுடையானே! –
கரி பொன்னை ஒத்த போதும் – கரியானது பொன்னை யொத்தபோதிலும்,
கரிய மிடற்றன் அயன் முதல் உம்பர் எல்லாம் உன்னை ஒவ்வார் – நீலகண்டனான சிவன் பிரமன்
முதலிய தேவர்களனைவரும் உன்னை யொக்கமாட்டார்கள்; (ஆதலால்), –
முன்னை கரி அளித்தாய்க்கு – முன்பு கஜேந்திராழ்வானைப் பாதுகாத்தவனான உனக்கு,
உன்னை அன்றி பின்னை உவமானம் மொழி இல்லை – உன்னையே உபமானமாகக் கூறுவதன்றி
வேறோர்உபமானங் கூறும்வகை இல்லை; (எ – று.) – ஈற்றுஏகாரம் – தேற்றம்.

“தன்னொப்பா ரில்லப்பன்”,
“ஒத்தாரை மிக்காரை யிலையாய மாமாயா”,
“ஈடுமெடுப்புமிலீசன்” என்ற திருவாய்மொழியையும்,
“தனக்குவமை யில்லாதான்” என்ற திருக்குறளையுங் காண்க.
கரியமிடற்றன் – நஞ்சுண்ட தனாற் கறுத்த கழுத்தையுடையவன். உம்பர்என்ற மேலிடத்தின்பெயர் – அங்குள்ள தேவர்க்கு இடவாகுபெயராம்;
இதில், உகரச்சுட்டு – மேலிடத்தைக் குறித்தது: இதன் எதிர்மொழி – இம்பர் (இவ்விடம்), அம்பர் என்பன.
புகழ் – “என்னநோன்பு நோற்றாள்கொலோ இவனைப் பெற்ற வயிறுடை யாள்,”
“செம்மலைப் பயந்த நற்றாய் செய்தவ முடையள்” என்றபடி நற்குணநற்செய்கைகளிற் சிறந்த புருஷோத்தமனான
இராமபிரானைப் பெற்ற தனா லாகிய கீர்த்தி. கோசலை – கௌஸல்யா என்ற வடசொல்லின் விகாரம்;
கோசலதேசத்தரசனது மக ளென்பது பொருள்: தத்திதாந்தநாமம். கோசலம் – உத்தரகோசலம் தக்ஷிணகோசலம் என இரண்டு பிரிவுள்ளது;
அவற்றில் தக்ஷிணகோசலத்தரசன் மகள் இவள்: (தசரதன், உத்தரகோசலத்து அரசாண்டவன்.)
முத்துப்போ லருமையான மகனை “முத்து” என்றது, உவமையாகுபெயர். உபசாரவழக்கு;
தெளிவுக்கும் நீர்மைக்கும் குளிர்ச்சிக்கும் முத்து உவமைகூறப்படும்:
மேலும் (92-ஆங் கவியில்) “பாவையிரங்கு மசோதைக்கு முத்து” என்பர். “பின்” என்ற இடைச்சொல் – வேறு என்ற பொருளில் வந்தது.
முன் – காலமுன். இவற்றில், ஐ – சாரியை. பின்னை முன்னை என்ற மாறுபட்ட சொற்கள் தொடர்ந்து வந்தது, தொடைமுரணின்பாற்படும்.

————–

இல்லைக் கண்டீர் இன்பம் துன்பம் கண்டீர் கண்ட ஏந்திழையார்
சொல்லை கண்டு ஈர் அமுது என்னும் தொண்டீர் தொல் அசுரன் நிறம்
கல் ஐக் கண்டீரவத்தை திரு வேங்கடவக் காவலனை
மல்லைக் கண் தீர் தரத் தேய்த்தானை வாழ்த்துமின் வாழுகைக்கே –43-

(இ – ள்.) கண்ட – கண்ணுக்கு இலக்காகிய,
ஏந்து இழையார் – தரித்த ஆபரணங்களையுடைய மகளிரது,
சொல்லை – சொற்களை,
கண்டு ஈர் அமுது என்னும் – (இனிமையினாற்) கற்கண்டு என்றும் குளிர்ந்த அமிருதம் என்றும் சொல்லுகிற,
தொண்டீர் – (அவர்கட்குத்) தொண்டுபூண்டொழுகுபவர்களே! –
இன்பம் இல்லை கண்டீர் – (அவ்வாறுஒழுகுதலில் உண்மையான) இன்பம்இல்லை யென்று அறிவீர்கள்;
துன்பம் கண்டீர் – பலவகைத்துன்பமே உண் டென்றும் அறிவீர்கள்;
வாழுகைக்கு – (இனி நீங்கள்) பேரின்பவாழ்வு பெறுகைக்காக, –
தொல் – பழமையான,
அசுரன் – இரணியாசுரனுடைய,
நிறம் – மார்பை,
கல் – கீண்ட,
ஐ கண்டீரவத்தை – அழகிய சிங்கமூர்த்தியா னவனும்,
மல்லை – மல்லர்களை,
கண் தீர்தர தேய்த்தானை – கண்கெடும்படி சிதைத்தவனுமான,
திருவேங்கடம் காவலனை – திருவேங்கடமுடையானை, வாழ்த்துமின் – பல்லாண்டுபாடித் துதியுங்கள்; (எ – று.)

முதலடியில் இரண்டிடத்து உள்ள “கண்டீர்” என்ற சொல் – தேற்றமு முணர்த்திற்று. கண்ட – பார்த்த.
ஏந்து இழையார் – செய்கையழகினால் மேனிமினுக்குபவர் என்றபடி.
“தொல்லசுரன்” என்றது, நெடுங்காலமாக அழிக்கப்படாது கொழுத்துச் செருக்கித்திரிந்த தேவசத்துரு என்றவாறு.
கல் ஐக்கண்டீரவம் – வினைத்தொகை; கல்லுதல் – இடத்தல். கண்டீரவம் என்ற வடசொல் – மிடற்றில்தொனியுடைய தென்று பொருள்படும்;
கண்டம் – கழுத்து, ரவம் – ஓசை. திருவேங்கடக்காவலன் – திருவேங்கடமலைக்குத் தலைவன்,
காவலன் – அரசன்; இது, கா வலன் என்று பிரிந்து காத்த லில்வல்லவ னென்றும்,
காவல் அன் என்று பிரிந்து காத்தற்றொழிலையுடை யவ னென்றும், பொருள்படும்.
மல் – மற்போர்; ஆயுதங்கொண்டன்றித் தேகபலங்கொண்டு செய்யும் போர்: அதனையுடையவர்க்கு ஆகுபெயர்.
கண் தீர்தர என்பதற்கு – கண்ணோட்டமில்லாம லென்று பொருள்கொள் ளினுமாம்.
இனி, கை கால் தலை என்பனபோல, கண்என்பதை உபசர்க்க மென்றலும் ஒன்று.

————-

கைத்தனு மோடுஇசை வெற்பு எனக் காண வெவ்வாணன் என்னும்
மத்தன் நுமோடு இகல் செய்வன் என்றே வந்துவை உறு வேல்
அத்தனும் மோடியும் அங்கியும் ஓட என் அப்பனுக்குப்
பித்தனும் ஓடினன் அங்கத்துத் தான் என்றும் பெண்ணன் என்றே –44-

(இ – ள்.) கை தனு – கையிலேந்திய வில்லானது,
மோடு இசை வெற்பு என காண – உயர்ச்சி பொருந்திய மலைபோலத் தோன்ற,
வெவ் வா ணன் என்னும் மத்தன் – கொடிய பாணாசுரனென்கின்ற உன்மத்தன்,
உமோடு இகல் செய்வன் என்றே வந்து – “உம்முடனே போர்செய்வேன்” என்று வீரவாதங்கூறிக்கொண்டே (கண்ணபிரானுடன் போர்க்கு) வந்த போது, –
என் அப்பனுக்கு – எம்பிரானாகிய அத்திருவேங்கடமுடையானுக்கு முன்,
வை உறு வேல் அத்தனும் – கூர்மைமிக்க வேலாயுதத்தை யேந்திய கையையுடையவனான முருகக்கடவுளும்,
மோடியும் – துர்க்கையும்,
அங்கியும் – அக்கினியும்,
ஓட – தோற்றுஓட,
பித்தனும் – பித்தனாகிய சிவனும்,
அங்கத்து தான் என்றும் பெண்ணன் என்று ஓடினன் – உடம்பில் தான் எப்பொழுதும் பெண்ணையுடையவ னென்றுசொல்லிக்கொண்டு ஓடி னான்; (எ – று.)

“மோடி யோட வங்கி வெப்பு மங்கியோட வைங்கரன், முடுகியோட முருகனோட முக்கணீசன் மக்களைத்,
தேடியோட வாணனாயிரம்புயங்கள் குருதிநீர், சிந்தியோட நேமி தொட்ட திருவரங்கராசரே” என்றார் திருவ ரங்கக்கலம்பகத்திலும்.

“பெண்ணென்றாற் பேயு மிரங்கும்” ஆதலின், எதிர்த்துப் பொருகின்ற கண்ணபிரான் தன்னையழியாமல் உயிரோடு விட்டிடுமாறு
அப்பெருமானுக்கு இரக்கமுண்டாதற்பொருட்டுச் சிவபிரான் “அங்கத்துத் தான் பெண்ணன்” என்று சொல்லிக் கொண்டு ஓடின னென்க.
“அங்கத்துத் தான் என்றும் பெண்ணன்” என்ற தொடரில் – உடம்பில் (ஒருபாதி) தான் எப்போதும் பெண்வடிவையுடையவனான
நபும்ஸக னென்ற பொருளும் தொனிக்கும்: ஒருசார் ஆணுறுப்பும் ஒருசார் பெண்ணுறுப்பும் விரவி ஒருவகையாயினும்
நிரம்பாமல் நிற்றல் பேட்டின்இலக்கணமாதல் காண்க; தான் ஆண்மை நிரம்பாதவ னென்று தெரிவித்துக்கொண்டு ஓடினனென்பது போதரும்.
முருகன் வேற்படையிற் சிறந்தவனாய் வேலனென்று ஒருபெயர் பெறுதலால், “வையுறுவேல் அத்தன்” எனப்பட்டான்;
இவன், சிவபிரானது இளையகுமாரன்: (மூத்தவன் – விநாயகன்.) துர்க்கை – பார்வதியின் அம்சமானவள்.
“உம்மோடு” என்ற முன்னிலைப்பன்மை, கண்ணபிரானுடன் சென்ற பலராமன் பிரத்யும்நன் முதலாயினாரை உளப்படுத்தியது.

மத்தன் – கொழுத்தவன்: புலன்வேறுபட்டவன்; வடசொல். வந்து = வர: எச்சத்திரிபு;
“சொல்திரியினும் பொருள்திரியா வினைக்குறை” என்பது நன்னூல்.
அத்தம் – கை; ஹஸ்த மென்ற வடசொல்லின் விகாரம்; அதனை யுடையவன்,
அத்தன், பித்தன் – மதிமயங்கியவன்; செய்வன தவிர்வன அறியாதவன்; தமோகுணதேவதை. உம் – இறந்ததுதழுவியது.

————–

பெண் ஆக்கு விக்கச் சிலை மேல் ஒருதுகள் பெய்த பொற்றாள்
அண்ணாக்கு விக்கல் எழும் போது எனக்கு அருள்வாய் பழிப்பு
நண்ணாக் குவிக்கச்சு இள முலைப் பூ மகள் நாயகனே
எண் ஆக குவிக்கக் குழல் ஊதும் வேங்கடத்து என் கண்ணனே –45-

(இ – ள்.) பழிப்பு நண்ணா – யாதொருநிந்தனையும் அடையாத,
குவிகச்சு இள முலை பூ மகள் – குவிதலையுடையனவும் கச்சணிந்தனவும் என்றும் இளமை மாறாதனவுமான
தனங்களையுடையவளும் செந்தாமரைமலரில் வாழ்பவளுமாகிய திருமகளுக்கு,
நாயகனே – கணவனே!
எண் ஆ குவிக்க – பேரெண்ணையுடைய (மிகப்பலவான) பசுக்களை ஒருங்குசேர்த்தற்பொருட்டு,
குழல் ஊதும் – புள்ளாங்குழலை ஊதியருளிய,
வேங்கடத்து என் கண்ணனே – திருவேங்கடமலையில்எழுந்தருளியிருக்கிற எனதுகண்ணபிரானே! –
பெண் ஆக்குவிக்க சிலை மேல் ஒரு துகள் பெய்த பொன் தாள் – (ஒருகல்லை அகல்யையென்னும்) பெண்ணாகச் செய்விக்குமாறு
அக்கல்லின்மேல் ஒருதூளியை யிட்ட (நினது) அழகிய திருவடிகளை,
அண்ணாக்கு விக்கல் எழும்போது எனக்கு அருள்வாய் – உள்நாக்கிலிருந்து விக்குள் உண்டாகும் போது (அந்திமகாலத்தில்) அடியேனுக்குத் தந்தருள்வாய்; (எ – று.)

“திருவடியே வீடாயிருக்கும்” என்ற கோட்பாடுபற்றி, “தாள் எனக்கு அருள்வாய்” என்றன ரென்க.
நினதுதிருவடியை என்மீது வைத்தருள்வா யென்றும், என்னை நினதுதிருவடியிற் சேர்த்தருள்வா யென்றுங் கொள்ளலாம். முதலடியினால்,
மிகவலிய கல்லையும் மிகமெல்லிய பெண்ணாக்கவல்ல தெனத் திருவடியின் சிறப்பை விளக்கினார்.

பலவிடங்களிற் பரவிமேய்கின்ற பசுக்கூட்டங்களை ஒருங்குசேர்த்தற் பொருட்டும் அவற்றை மகிழ்வித்தற்பொருட்டும்
கண்ணன் வேய்ங்குழலூதி னமை, பிரசித்தம்.
“பூவிற்குத் தாமரையே” என்றபடி எல்லாமலர்களிலும் தாமரை சிறத்தலால், அது வாளா “பூ” எனப்பட்டது;
“பூவெனப்படுவது பொறிவாழ்பூவே” என்றார் பிறகும்: (பொறி – இலக்குமி.) இரட்டுறமொழித லென்னும் உத்தியால்,
பூமகள் என்பதற்கு – பூமிதேவியென்றும் பொருள் கொள்ளலாம்; (“வாயுமனைவியர் பூமங்கையர்” என்பர் நூற்றெட்டுத்திருப் பதியந்தாதியிலும்:)
இப்பொருளில், பூ – வடசொல். குவி – முதனிலைத்தொ ழிற்பெயர்; இரண்டாம்வேற்றுமையுருபும்பயனுந்தொக்கதொகை;
குவிகிற என்று பொருளுரைத்து, வினைத்தொகை யென்ன லாகாது;
வினைத்தொகையில் “குவிக்கச்சு” என வருமொழிமுதல்வலி மிகா தாதலின். கச்சு – கஞ்சுக மென்ற வடசொல்லின் சிதைவு.
எண் – தொகை; இங்குப் பெருந்தொகை. இனி, எண் – நன்குமதிக்கத்தக்க, ஆ – பசுக்க ளெனினுமாம்.

—————

கண் நனையேன் நெஞ்சு உருகேன் நவைகொண்டு என் கண்ணும் நெஞ்சும்
புண் அணையேன் கல் அணையேன் என்றாலும் பொற் பூங்கமலத்
தண் அனையே நல்ல சார்வாக வேங்கடம் சார்ந்து மணி
வண்ணனையே அடைந்தேற்கு இல்லையோ தொல்லை வைகுந்தமே –46-

(இ – ள்.) கண் நனையேன் – (பக்திமிகுதியாலாகிற ஆநந்தக் கண்ணீரினாற்) கண்கள் நனையப்பெறுகிறேனில்லை;
நெஞ்சு உருகேன் – மனமுருகப் பெறுகிறேனில்லை;
அவை கொண்டு – அக்கண் நனையாமையையும் நெஞ்சுருகாமையையுங் கொண்டு,
என் கண்ணும் நெஞ்சும் புண் அனையேன் கல் அனையேன் – எனது கண்ணும் மனமும் (முறையே) புண்களுக்கு
ஒப்பானவ னாயினேன் கல்லுக்கு ஒப்பானவனாயினேன்;
என்றாலும் – இங்ஙனம் ஆனாலும். –
பொன் பூ கமலம் தண் அனையே நல்ல சார்வு ஆக – அழகிய செந் தாமரைப்பூவில்வீற்றிருக்கின்ற தண்ணளியையுடைய
தாயான பெரியபிராட் டியாரையே நல்லதுணையாகக் கொண்டு,
வேங்கடம் சார்ந்து மணி வண்ணனையே அடைந்தேற்கு – திருவேங்கடமலையை யடைந்து (அங்குஎழுந்தருளியிருக்கிற)
நீலமணிபோலுந் திருநிறமுடையவனான எம்பெருமானையே சரண்புக்கவனாகிய எனக்கு,
தொல்லை வைகுந்தம் இல்லையோ – அநாதியான பரமபதம் கிடையாமற்போகுமோ? (போகாது: நிச்சயமாய்க் கிடைக்கும் என்றபடி); (எ – று.)

பக்திவசப்படுதலாலாகும்மெய்ப்பாடுகளிற் குறைவுற்றிருந்தாலும், பிரா ட்டிபுருஷகாரமாகப் பெருமாள்பக்கல் சரண்புக்கது
பழுதுபடாது பரகதிபெறுவிக்கு மென்பதாம்.
கண்ணும் நெஞ்சும் புண்ணனையேன் கல்லனை யேன்” என்ற தொடர் – கண் புண் அனையேன், நெஞ்சு கல்அனையேன்
என முறையே சென்றுஇயைதலால், முறைநிரனிறைப்பொருள்கோள்.
பகவத் விஷயத்தில் ஈடுபட்டு ஆநந்தபாஷ்பம்பெறாதஊனக்கண்களின் இழிவுதோ ன்ற அவற்றை “புண்” என்றும்,
அவ்விஷயத்தில் இளகாத மனத்தை “கல்” என்றுங் கூறினார். நவைகொண்டு என்று பதம்பிரித்து,
(கண்நனையாமையும் நெஞ்சு உருகாமையுமாகிய) குற்றங்களைக் கொண்டு என்றலு மொன்று.
மூன்றாமடியில், அனை – அன்னையென்பதன் தொகுத்தல். நல்ல சார்வு – பரகதிக்கு உற்றதுணை.

—————

வைகுந்தம் ஆய விழி மாதர் வேட்கையை மாற்றி என்னை
வைக்கும் தம் ஆய வினை நீக்கிய முத்தர் மாட்டு இருத்தி
வை குந்தம் மாய ஒசித்தாய் வட திரு வேங்கடவா
வைகுண்ட மாயவனே மாசு இலாத என் மா மணியே –47-

(இ – ள்.) குந்தம் மாய ஒசித்தாய் – குருந்தமாம் அழியும்படி முறித்திட்டவனே!
வட திருவேங்கடவா – வடக்கின்கணுள்ள திருவேங்கடமலையில் எழுந்தருளியிருப்பவனே!
வைகுந்தம் மாயவனே – ஸ்ரீவைகுண்டத்துக்குத் தலைவனான திருமாலே!
மாசு இலாத – குற்றமில்லாத,
என் மா மணியே – எனது தலைவனான சிறந்த மாணிக்கம்போன்றவனே! –
வை குந்தம் ஆய விழி மாதர் வேட்கையை மாற்றி – கூரிய வேற்படை போன்ற கண்களையுடைய மகளிர்
பக்கல் (உண்டாகிற) ஆசையை (எனக்கு) ஒழித்து,
என்னை -, வைகும் தம் ஆயம் வினை நீக்கிய முத்தர்மாட்டு இருத்திவை – தங்கிய தமது தொகுதியான
கருமத்தைப் போக்கிய முக்தர்களில் ஒருவனாக இருக்கச்செய்துவைத்தருள்வாய்; (எ – று.)

குந்தம் – வடசொல், ஆய – உவமஉருபு; இத்தெரிநிலைப்பெயரெச்சத்தில் ய் – இறந்தகாலஇடைநிலை.
முக்தர் – முத்திபெற்றவர்; வடசொல். மாணிக்கம் – ஒளிக்கும், பெறற்கருமைக்கும் உவமை.
என்மாமணியே – “என்தன்மாணிக்கமே” என்பது திருவிருத்தம்.

—————–

பிரிவாற்றாகத தலைவியின் துயர் கண்ட செவிலித்தாய் இரங்கல் –

மணி ஆழி வண்ணன் உகந்தாரைத் தன் வடிவு ஆக்கும் என்றே
துணி ஆழிய மறை சொல்லும் தொண்டீர் அது தோன்றக் கண்டோம்
பணி யாழின் மென்மொழி மாலாகி பள்ளி கொள்ளாமல் சங்கோடு
அணி ஆழி நீங்கி நின்றாள் வேங்கடேசனை ஆதரித்தே –48-

(இ – ள்.) தொண்டீர் – அன்பர்களே! –
“மணி ஆழி வண்ணன் – நீல மணியும் கடலும் போன்ற திருநிறமுடையவனான திருமால்,
உகந்தாரை – தன்னை விரும்பினவர்களை,
தன் வடிவு ஆக்கும் – தன்னைப் போன்ற வடிவமுடையவராகச் செய்துவிடுவான்,’ என்றே -.
துணி ஆழிய மறை சொல்லும் – (பொருள்களைத்) துணிந்துகூறுவதும் ஆழ்ந்தபொருளுள்ளது மான வேதம் சொல்லும்;
அது தோன்ற கண்டோம் – அத்தன்மை இங்குக் கட்புலனாகத் தெரியப் பார்த்தோம்; (எங்ஙனமெனின், –)
பணி யாழின் மெல் மொழி – நுனிவளைந்த வீணையின் இசைபோன்ற மென்மையான சொற்களை யுடைய இப்பெண், –
வேங்கடேசனை ஆதரித்து – திருவேங்கடமுடையானான அத்திருமாலை விரும்பி, (அவனைப்போலவே),
மால் ஆகி பள்ளி கொள்ளாமல் சங்கோடு அணி ஆழி நீங்கி நின்றாள் – ; (எ – று.)

திருமால் தன்னையுகந்தவரைத் தன்வடிவாக்குதலாவது –
தனது அன்பர்க்குத் தான் முத்திநிலையில்தந்தருள்கிற ஸாலோக்யம் ஸாமீப்யம் ஸாரூப்யம் ஸாயுஜ்யம் என்ற நான்கு நிலைமைகளில்
ஸாரூப்யநிலையினால் அவர்களைத் தன்வடிவுபோன்ற வடிவமுடையவராகச் செய்தல்.
(ஸாலோக்யம் – கடவுளின் உலகத்தில் வாழ்தல். ஸாமீப்யம் – கடவுளினருகில் வாழ்தல்.
ஸாரூப்யம் – கடவுளின் உருவம்போன்ற உருவத்தைப் பெறுதல்.
ஸாயுஜ்யம் – கடவுளோடு ஒன்றிவாழ்தல்.)

தலைமகளுக்கு – மாலாகுதல் – ஆசைமயக்கமுடையவளாதல்;
பள்ளிகொள்ளாமை – விரகவேதனையால் எப்பொழுதும்படுக்கை கொள்ளாமை;
சங்கோடு அணிஆழி நீங்கிநிற்றல் – (பிரிவுத்துயரால் உடல் மெலிந்தமைபற்றிக் கைகளிலணிந்த) சங்கவளைகளும்
விரலிலணிந்த மோதிரமும் கழன்றுவிழப்பெறுதல்.
திருவேங்கடமுடையானுக்கு – மாலாகுதல் – திருமாலென்னும்பெயருடையனாதல்;
பள்ளிகொள்ளாமல் நிற்றல் – சயனத்திருக்கோலமாகவன்றி நின்றதிருக்கோலமாய் எழுந்தருளியிருத்தல்;
சங்கோடு அணி ஆழி நீங்கியமை – தனதுசங்கசக்கரங்களைத் தொண்டைமான் சக்கரவர்த்திக்குக் கொடுத்துவிட்டதனாற்
சிலகாலம் திருக்கைகளில் திருவாழி திருச்சங்கு இன்றியிருந்தமை;

முன்னொருகாலத்தில் திருவேங்கடமுடையான் தன்மெய்த்தொண்டனான தொண்டைமான் சக்கரவர்த்திக்கு அரியபகைவர்களை
வெல்லுதற்பொருட்டுத் தனது சங்கசக்கரங்களைத் தந்தருளி அதற்கு அடையாளமாகப் பின்பு அவனது வேண்டுகோளால்
அவற்றை அங்கு விக்கிரகரூபத்தில் வெளிப்படையாகக்கைக் கொள்ளாதிருந்தன னென்பதும்;
ஸ்ரீபாஷ்யகாரர் சிஷ்யர்களுடன் திவ்வியதேசயாத்திரையிலே திருமலைக்கு எழுந்தருளினவளவில், அங்குச் சைவர்கள்
திருவேங்கடமுடையானைத் தங்கள்தெய்வமென்று வழக்குப்பேச, உடையவரும்,
‘சூலடமருகங்களையும் ஸ்ரீசங்கசக்கரங்களையும் எம்பெருமான் திருமுன்னர் வைப்பது; அவைகளில் அப்பெருமான்
எவற்றைத் தரித்தருள்கின்றனனோ, அதுகொண்டு அவனை இன்னகடவுளென்று நிச்சயித்துக்கொள்வது’ என்று அருளிச்செய்ய,
அந்த இராமாநுசன்வார்த்தைக்கு அனைவரும் சம்மதித்து அங்ஙனமே செய்ய, ஸ்ரீநிவாஸன் இளையாழ்வார் திருவுள்ளத்தின்படி
திருவாழிதிருச்சங்கு தரித்தபடியைக் கண்டு எல்லாரும் ஆனந்தித்துத் திருவேங்கடமுடையானைத் திருமாலென்றே நிச்சயித்தன ரென்பதும்,
இங்கு அறியத்தக்க கதைகள்.

திருமாலுக்கும் தலைமகளுக்கும் உவமைகாட்டுதற்குப் பொதுத்தன்மையாய் வந்த
“மாலாகிப் பள்ளிகொள்ளாமற் சங்கோடணியாழி நீங்கி நின்றாள்” என்ற தொடர்,
இங்ஙனம் இருபொருள்பட்டுச் சிலேடைக்கு உபகாரமாகநின்றதனால்,
இது, சிலேடைபற்றிவந்த உவமையணியின் பாற்படும்; செம்மொழிச்சிலேடை.

தொண்டீர்என்றது, தலைவியின் தோழியரை விளித்தது. மறைசொல்லும் அதுதோன்றக் கண்டோம் –
பிரதியக்ஷம் அநுமானம் உபமானம் ஆகமம் என்ற பிரமாணங்களில் ஆகமப்பிரமாணத்திற்கண்ட விஷயத்தைப் பிரதியக்ஷத்திற்கண்டோ மென்றபடி.
(பிரளயத்தில் உலகத்தை) அழிப்பதுஎன்பது பற்றியாவது, ஆழ்ந்துள்ளது என்பது பற்றியாவது ஆழியென்று கடலுக்குப் பெயர்வந்ததென்க.
துணிதல் – பொருள்களின்நிலைமையை ஐயந்திரிபற உள்ளபடி சித்தாந்தஞ்செய்து வெளியிடுதல். ஆழிய – இறந்தகாலப்பெயரெச்சம்;
இதில், “இன்” என்ற இடைநிலை ஈறுதொக்கது.
(சிலசாதியார்க்கும் பெண்பாலார்க்கும் ஓதுவிக்கவும் ஓதவும் கேட்கவும் ஆகாதென்று) மறுக்கப்படுதலாலும்,
(எளிதில் உணரலாகாதபடி) மறைந்த ஆழ்பொருளுடைமையாலும், மறையென்று வேதத்திற்குக் காரணக்குறி.
பணியாழின்மென்மொழி – அவ்வகைமொழியையுடைய பெண்ணுக்கு அடையடுத்த சினையாகுபெயர்;
இப்பெயரை அன்மொழித்தொகையென்றல் பொருந்தாது;
“ஐந்தொகைமொழிமேற் பிறதொக லன்மொழி” என்றல் இலக்கணமாதலும், யாழின்என்பது ஐந்தாம்வேற்றுமைவிரியாதலுங் காண்க.
யாழ் – அதன்இசைக்கு முதலாகு பெயர். பணி – யாழ்க்கு அடைமொழி. பணி – பணிவுள்ள என்று உரைத்து,
அதனை மொழிக்கு அடைமொழியாக்குதலு மொன்று. சங்கு – சங்கவளைக்குக் கருவியாகுபெயர். ஆழி – வட்டவடிவமுடையது.
வேங்கடேசன் – வேங்கட + ஈசன்; குணசந்திபெற்ற வடமொழித்தொடர்; “அஆமுன்இஈவரின் இரண்டுங் கெட ஓர் ஏகாரம் தோன்றும்:
” திருவேங்கடமலைக்குத் தலைவனென்பது பொருள். ஆதரித்து – ஆதரமென்ற பெயர்ச்சொல்லின் மேற்பிறந்த இறந்தகாலவினையெச்சம்.

எம்பெருமானை நிரந்தராநுபவம்பண்ணவேண்டு மென்று அபேக்ஷை கொண்டு அவ்வவா உடனே நிறைவேறப்பெறாமையால்
வருந்துகிற ஐயங்காரது நிலைமையை நோக்கிய ஞானிகள், அன்பர்களைநோக்கி, இவர்க்கு இத் தன்மைகள்
எம்பெருமான் அநுக்கிரகித்த ஸாரூப்யபதவியினால் நேர்ந்தன போலுமென்று உரைத்தல், இதற்கு உள்ளுறைபொருள்.
பணியாழின்மென்மொழி – விநயத்தோடுபேசும் செவிக்குஇனிய செஞ்சொற்களை யுடையவர்.
மாலாகுதல் – வியாமோகங்கொள்ளுதல். பள்ளிகொள்ளாமை – கவலையற்றிராமை.
சங்கோடணியாழி நீங்குதல் – பரதந்திரமாயிருத்தல் முதலிய ஆத்மாலங்காரமான குணங்கள் நிலைகுலையப்பெறுதல். விவரம் உணர்ந்து கொள்க.

————–

ஆதரிக்க பட்ட வாள் நுதல் மங்கையர் அங்கை மலர்
மீ தரிக்கப் பட்ட நின் அடியே வெள் அருவி செம்பொன்
போது அரிக்கப் பட்டம் சூழ் வேங்கட வெற்ப போர் அரக்கர்
தீது அரிக்க பட்ட கானகத்தூடு அன்று சென்றதுவே –49-

(இ – ள்.) வெள் அருவி – வெண்ணிறமான நீரருவிகள்,
செம் பொன் – சிவந்த பொன்னையும்,
போது – மலர்களையும்,
அரிக்க – அரித்துக்கொண்டுவர,
பட்டம் சூழ் – நீர்நிலைகள் சூழப்பெற்ற,
வேங்கட வெற்ப – திருவேங்கடமலையையுடையவனே! –
பட்டம் வாள் நுதல் – பொற்பட்டத்தையணிந்தபிரகாசமான நெற்றியையுடைய,
மங்கையர் – பட்டத்து மனைவியர்,
ஆதரிக்க – அன்புசெய்யவும்,
அம் கை மலர் மீ தரிக்க – அழகிய தாமரைமலர்போன்ற தங்கள்கைகளின்மீது தாங்கவும்,
பட்ட – பெற்ற,
நின் அடியே – உனது திருவடியே, –
அன்று – அந்நாளில் (இராமாவதாரத்தில்),
போர் அரக்கர் தீது அரிக்க – போர்செய்யவல்ல (இராவணன்முதலிய) இராக்கதர்களா லாகிய தீங்கை யழிப்பதற்கு,
பட்ட கானகத்தூடு சென்றது – உலர்ந்த காட்டிற் சென்றது! (எ – று.) – ஈற்று ஏகாரம் – இரக்கம்.

பட்டமகிஷிகளால் அன்போடு கைம்மலர்மீதுகொண்டு வருடப்படுனவான நினதுதிருவடிகள் துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலனஞ்செய்தற்
பொருட்டுக் கொடியவனவாசஞ்செய்தனவே! என்று இரங்கிக்கூறியவாறாம்.
பட்டமங்கையர் என்றது, ஸ்ரீவைகுண்டத்திலும் திருப்பாற்கடலிலும் ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி வீரலக்ஷ்மி விஜயலக்ஷ்மி
முதலிய தேவிமாரையும், இராமாவதாரத்திற் சீதாபிராட்டியையும்,
கிருஷ்ணாவதாரத்தில் ருக்மிணி ஸத்யபாமை ஜாம்பவதி ஸத்யை மித்ரவிந்தை சுசீலை ரோகிணி லக்ஷணை என்ற
எட்டுப்பட்ட மகிஷிகளையும் குறிக்கும். பட்டகானகம் – நிழலில்லாதபடி மரங்கள் பட்டுப்போகப்பெற்ற கொடுஞ்சுரம்.

வாள் – ஒளியையுணர்த்துகையில், உரிச்சொல். ‘வெள்ளருவி செம்பொன்’ – முரண்தொடை.
அரக்கர் – ரக்ஷஸ் என்ற வடசொல்லின் சிதைவு. அடியென்பது – சாதியொருமையாதலால், சென்றது என்ற ஒருமை முற்றைக்கொண்டது.

————

கிள்ளை விடு தூது –

சென்ற வனத்து அத்தை மைந்தரை வாழ்வித்து தீய மன்னர்
பொன்ற அனத்தத்தைச் செய்த பிரான் புகழ் வேங்கடத்துள்
நின்றவன் அத்தத்துஜ ஆயுதன் பாதத்துஎன் நேசம் எல்லாம்
ஒன்ற வனத்தத்தை காள் உரையீர் அறம் உண்டு உமக்கே –50-

(இ – ள்.) வனம் தத்தைகாள் – அழகிய கிளிகளே! –
சென்ற வனத்து – (பன்னிரண்டுவருஷம்) வனவாசஞ்சென்ற காட்டினிடத்து,
அத்தை மைந்தரை வாழ்வித்து – தனது அத்தையான குந்தியின் புத்திரர்களாகிய பாண்டவர்களை (த் தீங்கின்றி) வாழச்செய்து,
(பின்பு), தீய மன்னர் பொன்ற அனத்தத்தை செய்த – கொடிய (துரியோதனன்முதலிய) அரசர்கள் அழியு மாறு (அவர்கட்குக்) கேட்டை விளைத்த,
பிரான் – பிரபுவும்,
அத்தத்து ஐ ஆயுதன் – திருக்கைகளில் ஐந்துஆயுதங்களை யுடையவனுமான,
புகழ் வேங்கடத்துள் நின்றவன் – கீர்த்தியையுடைய திருவேங்கடமலையில் நின்றதிருக் கோலமாக எழுந்தருளியிருக்கிற எனதுதலைவனுடைய,
பாதத்து – திருவடிகளில்,
என் நேசம் எல்லாம் – எனதுஅன்புமுழுவதையும்,
ஒன்ற உரையீர் – பொருந்தச் சொல்லுங்கள்:
உமக்கு அறம் உண்டு – உங்கட்குப் புண்ணிய முண்டு; (எ – று.)

தலைவனைப்பிரிந்த தலைவி, இங்ஙனஞ்சொல்லி, தலைவனிடத்துக் கிளிகளைத் தூதுசெல்லவேண்டுகிறாள்.
“இயம்புகின்றகாலத்து எகினம் மயில்கிள்ளை, பயம்பெறு மேகம் பூவை பாங்கி –
நயந்தகுயில், பேதைநெஞ்சம் தென்றல் பிரமரம் ஈரைந்துமே, தூதுரைத்து வாங்குந் தொடை” என்ற இரத்தினச் சுருக்கத்தால்,
தூதிற்கு உரியவை இன்னவை யெனக் காண்க.
பிரிந்த தலைவன் வந்திடுவனென்று ஆறியிருக்கவொண்ணாதே அதன்வரவுக்கு விரைந்து ஆள்விடும்படியாயிற்று, ஆற்றாமைமிகுதி.

“கானகமருங்கில் மேவலன் பணியாற் கடும்பசியுடன் வருங் கடவுண்,
மானவமுனிவன் தாபமுஞ் சாபவருத்தமு முறாவகை யொழித்தாய்” என்ற படி பாண்டவர் வனவாசஞ்செய்கையில்
துரியோதனன் துர்வாசமுனிவனைக் கொண்டு அவர்கட்குச் சாபம்பெறுவித்து அவர்களை அழிக்கமுயன்றபோது
அதற்குக் கண்ணபிரான் தக்கபரிகாரஞ்செய்து அவர்களைச் சாபம்பெறாத படி பாதுகாத்தது முதலிய வரலாறுகள்பற்றி
“சென்றவனத்து அத்தை மைந்தரை வாழ்வித்து” எனப்பட்டது. அவ்வரலாறு வருமாறு: –

“சாபத்தாலும் சாபமொழி தன்னால்வளருந் தவத்தாலும், கோபத்தாலும் பேர்படைத்த கொடிய” துர்வாசமுனிவன்
பாண்டவர் வனவாசகாலத்தில் ஒருநாள் பல முனிவர்களோடும் துரியோதனனரண்மனைக்குச்சென்று அறுசுவையமைந்த
அருவிருந்துண்டு மகிழ்ந்து “உனக்குவேண்டும்வரம் வேண்டுக” என்ன, அவன் செல்வச்செருக்கினாலும் பாண்டவர்களை
இம்முனிவர்சாபத்துக்கு உட்படுத்த வேண்டு மென்னுங் கருத்தினாலும் “இன்றைக்கு எமது மனையில் அமுது செய் ததுபோலவே
நாளைக்குப் பாண்டவர்பக்கல்சென்று அமுதுசெய்யவேண்டு வதே எனக்குத்தரும் வரம்” என்ன,
அங்ஙனமே அம்முனிவன் அநேகமுனி வர்களோடு அடுத்தநாள் மத்தியான மானபொழுது பாண்டவர் இருந்த
ஆச்சிரமத்துக்கு வந்துசேர்ந்து “இன்றைக்குஎங்கட்குநல்லுணவு இடவேண்டும்” என்றுசொல்ல,
அதற்குமுன்னமே பலமுனிவர்களோடும் வேண்டியவாறு உண்டு சூரியனருளின அக்ஷயபாண்டத்தைக் கழுவிக் கவிழ்த்துவிட்ட
பாண்டவர்கள் அம்முனிவர்களை நீராடிவரச் சொல்லியனுப்பிவிட்டு “இதற்கு என் செய்வது!” என்று மனங்கலங்கித்
திரௌபதியுந்தாமுமாகக் கிருஷ்ணனைத் தியானிக்க,

அப்பெருமான் உடனே அங்குஎழுந்தருளிப் பாண்டத்தைக் கொணரச் சொல்லி அதிலுள்ளதொரு சோற்றுப்பருக்கையைத்
தான்உண்டமாத் திரத்தில், அம்முனிவர்யாவரும் வயிறுநிரம்பிப் பசிதணிந்து தெவிட்டித்தேக் கெறிந்து மிகமகிழ்ந்து
பாண்டவர்க்கு ஆசீர்வாதஞ்செய்து போயினர் என்பதாம்.

மற்றும், அமித்திரனென்னும் முனிவனுக்கென்றே பழுக்கின்றதொரு நெல்லிப்பழத்தை வனவாசகாலத்தில் திரௌபதியின்
விருப்பத்தின்படி அருச்சுனன் அம்பெய்து கொய்து அவட்குக் கொடுக்க, அதுகண்ட அங்குள்ளார் பலரும்
“இதனை அம்முனிவன்காணில் அவன்சாபத்தால் உங்கள்கதி என்னாகுமோ!” என்று இரங்கிச்சொல்ல,
அதுகேட்டு அஞ்சிய பஞ்சபாண்டவரும் திரௌபதியும் “இதற்கு என்செய்வது?” என்று பலவாறு ஆலோசித்து
அதற்குப் பரிகாரம் வேறொன்றுங் காணாது கண்ணபிரானைத் தியானிக்க,

உடனே அங்குஎழுந்தருளி நிகழ்ந்தசெய்திசொல்லக்கேட்ட அப் பெருமான்
“நீவிர் அறுவரும் நும்நும்மனத்தினுட்கொண்ட கோட்பாட்டை உரைப்பீராயின், இக்கனி மீண்டும்
அம்மரக்கிளையிற் போய் ஒட்டிக்கொள்ளும்” என்று அருளிச்செய்தபடி தருமன்முதலியஅறுவரும் தம்தம்கருத்து நிகழ்ச்சியை
உண்மையாகச்சொல்ல, ஸ்ரீகிருஷ்ணபகவானது சங்கல்பத் தின்படியே அப்பழம் அம்மரக்கொம்பிற் சென்று சேர்ந்து பழையபடி யிருக்க,
பாண்டவர் அபாயத்தினின்று நீங்கின ரென்ற வரலாறு முதலியன வும் இங்குப் பொருந்தும்.

தீயமன்னர் பொன்ற அனத்தத்தைச் செய்தது – மகாபாரதயுத்தத்திற் கண்ணன் பாண்டவர்க்குப் பலவாறு உதவி அவர்களைக்
கொண்டு துரியோதனாதி துஷ்டராசர்களைத் தொலைத்தமை.
வேங்கடத்துக்குப் புகழ் – “எப்பூதலமும் இறைஞ்சித் திசைநோக்கி மெய்ப்பூசனை புரி”யப்படுந் திறம்.
“ஆழி வளை வாள் தண்டு வில்” என்ற திருமாலின் பஞ்சாயுதங்களுள் சக்கரம் சுதர்சநமென்றும், சங்கம் பாஞ்சஜந்யமென்றும்,
கதை கௌமோதகியென்றும், வாள் நந்தகமென்றும், வில் சார்ங்கமென்றும் பெயர்பெறும்.
“குலமகட்குத் தெய்வங் கொழுநனே” என்றபடி உயர்குலத்திற்பிறந்தவளான தான் தனதுதலைமகனையே தெய்வமாகக் கொண்டு
அவனது திருவடிகளிற் பக்திசெய்யுந்திறந் தோன்ற, ‘ஐயாயுதன்பாதத்து’ என்றாள்.
ஒன்ற உரையீர் – சமயமறிந்து தக்கபடி சொல்லியுணர்த்துங்கள் என்றவாறு.

எல்லாம் என்பது, இங்குப் பொருட்பன்மை குறியாது எஞ்சாமை குறித்தது. பிரான் – உபகாரகன்.

ஐயங்கார் தமது ஆற்றாமையை ஆசாரிய மூலமாக எம்பெருமானுக்குத் தெரிவித்துத் தமது துயரந்தணியக்கருதி
அவர்களைத் தமக்குப்புருஷகாரமா கும்படி வேண்டுதல், இதற்கு உள்ளுறைபொருள்.
ஸ்வாபதேசத்தில் “தூது என்பது, கடகமான ஆசார்யவிஷயத்தை” என்றனர் ஆன்றோர்.
பிரிந்த தலைவிதலைவரைச் சேர்த்தற்குத் தூதர்போலப் பிரிந்துநின்ற ஜீவாத்மபர மாத்மாக்களைச் சேர்த்தற்கு
ஆசாரியர் உரியவராதல் காண்க. தம்மையாத ரிப்பவர்பக்கல் அன்புடைமையாலும் அன்பர்கட்கு எளிமையினாலும்
எடுப்பார் கைப்பிள்ளையாகிச் செவிக்கினிய செஞ்சொற்களைக் கொஞ்சிப்பேசுந் தன்மையராய் எம்பெருமானது
பசுஞ்சாமநிறத்தை ஸாரூப்யத்தாற்பெறும் ஆசாரியரைக் கிளியென்னத்தகும். பறவைகட்கு இரண்டு இறகுகள்போல,
ஆசாரியர்க்கு ஞானமும் அநுட்டானமும் உயர்கதிச்செலவுக்கு உறுதுணை யென்க. விவரம் நோக்கிக்கொள்க.

———————

தலைவி செவிலியர்க்கு அறத்தொடு நிற்றல்

உண்ட மருந்து கைக்கும் அன்னை மீர் மதன் ஓர் ஐந்து அம்பும்
கொண்டு அமர் உந்து கைக்கும் குறு காமுனம் கொவ்வைச் செவ்வாய்
அண்டம் அருந்து கைக்கும் திறந்தான் அப்பன் போல் பரியும்
எண் தமரும் துகைக்கும் பொடி காப்பு இடும் இன்று எனக்கே –51-

(இ – ள்.) அன்னைமீர் – தாய்மார்களே! –
உண்டமருந்து – உண்ணப்படு கிற அமிருதமும்,
கைக்கும் – (எனக்குக்) கசக்கும்:
மதனும் – மன்மதனும்,
ஓர் ஐந்து அம்பும் கொண்டு – (தனது) ஒப்பற்ற ஐந்துஅம்புகளையுங் கொண்டு,
அமர் உந்துகைக்கு குறுகா முனம் – போர்செய்வதற்கு வந்துநெருங்குதற்குமுன்பு, –
இன்று – இப்பொழுதே, – எனக்கு – , –
கொவ்வை செவ் வாய் – கோவைப்பழம்போன்ற சிவந்த வாயை,
அண்டம் அருந்துகைக்கும் திறந்தான் – (கிருஷ்ணாவதாரத்தில் வெண்ணெய்முதலியன உண்ணுதற்கே யன்றிக் கற்பாந்தகாலத்தில்)
அண்டகோளங்களை விழுங்குதற்காகவும் திறந்தவனான,
அப்பன் போல் – திருவேங்கடமுடையான் போலவே,
பரியும் – (உயிர்கள்பக்கல்) அன்புகொள்ளுகின்ற,
எண் தமரும் – மதிக்கத்தக்க அடியார்கள்,
துகைக்கும் – மிதிக்கின்ற,
பொடி – திருவடிப்புழுதியை,
காப்பு இடும் – காப்பாக இடுங்கள்; (எ – று.)

குறுகாமுனம் இடும் என இயையும். இரண்டாமடியில் ‘உந்துகைக்கும்’ என்ற உம்மை, எடுத்து முதலடியில் “மதன்” என்பதனோடு கூட்டப்பட்டது.
நான்காமடியில் “தமரும்” என்ற உம்மை – அசைநிலை.

திருவேங்கடமுடையானாகிய தலைவனைக் களவொழுக்கத்தாற் கூடிப் பிரிந்த தலைவி அப்பிரிவாற்றாமையாற் பலவாறு நோவுபட,
அத்துயரமாத் திரத்தையேகண்ட செவிலித்தாயர் அந்நோயின்காரணமும் அதற்குப்பரிகா ரமும்,
இன்ன வென்று உணராது வேறுபலவகையாக ஆராய்ந்து பரிகாரஞ் செய்யத்தொடங்கியபோது,
நோயொன்றும் மருந்தொன்று மாதலாலே அந்நோய் தீராது வளர, அதனையாற்றமாட்டாத அத்தலைவி நாணந்துறந்து
தானே தனது நோயையும் நோயின் காரணத்தையும் அந்நோய்தீர்க்கும் மருந்தையும் அம்மருந்தைப் பிரயோகிக்கும் விதத்தையும் உணர்த்துதல்,
இச்செய்யுளிற் கூறிய விஷயம்.

இங்ஙனம் களவை வெளிப்படுத்துதலின் காரணம், தன்கருத்தைச் செவிலித்தாயர்மூலமாக நற்றாய்க்கும்
அவள்மூல மாகத் தந்தைக்கும் மற்றும்பெரியோர்க்குந் தெரிவித்துத் தன்னை அவனுக்கே விரைவில் வெளிப்படையாக
மணஞ்செய்துவைக்கும்படி செய்து கொள்ளும் விருப்பம்.
(“வாராயினமுலையாளிவள் வானோர்தலைமகனாஞ்,
சீராயின தெய்வநன்னோயிது தெய்வத்தண்ணந்துழாய்த்,
தாராயினுந் தழையாயினுந் தண்கொம்பதாயினுங் கீழ்,
வேராயினும் நின்றமண்ணுயினுங் கொண்டு வீசுமினே” என்றபடி)
தலைவனோடு நேரிலாவது இடையிட்டாவது சம்பந்தம் பெற்ற பொருள் இந்நோய்க்குப் பரிகாரமா மென்பாள்
அப்பன் போற் பரியுந் தமர் துகைக்கும் பொடி காப்பிடும்” என்றாள்.
அன்றியும், தன்னைப் போலவே தலைவன்பக்கல் அன்புகொண்டவர்களுடைய சம்பந்தம் தனது நோய்க்குப் பரிகார மென்றுகருதி
இங்ஙனங் கூறினாளுமாம்;
(“தணியும் பொழுதில்லைநீரணங்காடுதிரனனைமீர், பிணியுமொழிகின்றதில்லை பெருகு மிதுவல்லால்,
மணியிலணிநிறமாயன், தமரடிநீறுகொண், டணியமுயலின் மற்றில்லைகண்டீ ரிவ்வணங்குக்கே” என்ற திருவாய்மொழிப் பாசுரத்தையும்,
அதன்வியாக்கியாநங்களில்
“அழகுக்கு ஈடுபட்ட இவளுக்குப் பரிஹாரம், அத்துறையிலகப்பட்டாருடைய அநுபந்தமே யென்றபடி,”
“சௌந்தர்ய சீலாதிகளிலேயாய்த்து இவள் மோகித்தது: நீங்களும், சௌந்தர்யசீலாதிக ளிலே தோற்றிருக்கும்
ஸ்ரீவைஷ்ணவர்களுடைய பாதரேணுவைக்கொண்டு பரிஹரிக்கப் பாருங்கோள்; பொடிபடத் தீரும்” என்ற வாக்கியங்களையுங் காண்க.

மன்மதனம்பு ஐந்து – தாமரைமலர், மாமலர், அசோகமலர், முல்லை மலர், நீலோற்பலமலர் என்பன.
இவற்றின் பெயர் – முறையே உந்மத்தம், மதநம், சம்மோகம், சந்தாபம், வசீகரணம் எனப்படும்.
இவை செய்யும் அவத்தை – முறையே சுப்பிரயோகம், விப்பிரயோகம், சோகம், மோகம், மரணம் என்பன.
அவையாவன – சுப்பிரயோகம் – சொல்லும், நினைவும்;
விப் பிரயோகம் – வெய்துயிர்த்திரங்கல்;
சோகம் – வெதுப்பும், துய்ப்பன தெவிட்டலும்;
மோகம் – அழுங்கலும், மொழிபலபிதற்றலும்; மரணம் – அயர்ப்பும், மயக்கமும்.
“நினைக்கும்அரவிந்தம் நீள்பசலைமாம்பூ, அனைத்துணவு நீக்கும்அசோகு –
வனத்திலுறு, முல்லைகிடைகாட்டும் மாதே முழுநீலம், கொல்லும் மதனம்பின்குணம்” என்ற இரத்தினச் சுருக்கத்தையுங் காண்க.
இவற்றில் மூன்றாவதான அசோகமலரின் அவத்தையாகிய துய்ப்பனதெ விட்டல், “உண்ட மருந்து கைக்கும்” என வெளியிடப்பட்டது.
“மதன் ஐந்தம்புங்கொண்டு அமர்உந்துகைக்குக் குறுகாமுனம்” என்றது, பிரிந்தாரைக் கொல்லும் ஐந்தாம் அம்பான
நீலோற்பலமலரு முட்பட எல்லா அம்புகளையும் மன்மதன் பிரயோகித்தற்குமுன்பு என்றபடி;
அவன் மரணவேதனைப் படுத்திக் கொல்லாதமுன் என்றவாறு. “கொவ்வைச் செவ் வாய்” என்றது, வாயழகில் ஈடுபாடு.

‘மருந்து என்றவிடத்து உயர்வுசிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. மதன் – மதநன் என்ற வடசொல்லின் விகாரம்;
அது, (பிராணிகளைக்காதலாற்) களிக்கச் செய்பவனென்று பொருள்படும்: “மந்மதன்” என்பதன் முதற் குறையுமாம்.
கொவ்வை என்ற கொடியின் பெயர், அதன் பழத்துக்கு முதலாகுபெயர். அண்டமருந்துகைக்கும் என்ற உம்மை – எச்சப்பொருளது.
காப்பு – காத்தல்; ரக்ஷக மென்ற பொருளில், தொழிலாகுபெயர்.

எம்பெருமான் ஒருகால்வந்துகாட்சிகொடுத்து மறைய, பின்பு பிரிவாற்றாதுவருந்துகிற ஐயங்கார், தம்பக்கல்பரிவுடைய ஞானிகளை நோக்கி, (“நாதனைநரசிங்கனைநவின்றேத்துவார்க ளுழக்கிய, பாததூளி படுதலா லிவ்வுலகம் பாக்கியஞ்செய்ததே,”
“தொண்டரடிப்பொடி, யாடநாம்பெறிற்கங்கை நீர்குடைந்தாடும்வேட்கை யென்னாவதே”,
“தொண்டர்சேவடிச் செழுஞ்சேறு என்சென்னிக் கணிவனே” என்றபடி)
அதிபரிசுத்திகரமான பாகவதபாததூளியைக் கொணர்ந்து என்மேல்இட்டு என்னை ரக்ஷிக்கப் பாருங்கள்
என்று பிரார்த்தித்தல், இதற்கு உள்ளுறைபொருள்.

ஆராவமுதான எம்பெருமான்பக்கல் ஈடுபட்டு
“உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாங், கண்ண னெம்பெருமான் என்று” கருதி யிருப்பவர்க்குத்
தேவாமிருதத்தினினிமையும் ஒருபொருளாகத்தோன்றா தாதலால், “உண்ட மருந்து கைக்கும்” என்றன ரென்க.
(“தாயொக்குமன்பின்” என்றபடி) தம்பக்கல் பேரன்புடைமையும், தம்மைக் கொண்டு செலுத்த வல்ல திறமுடைமையும்பற்றி,
ஞானிகள் “தாயரே!” என விளிக்கப்பட்டனர். மதன் ஓரைந்தம்புங் கொண்டு அமருந்துகைக்குக் குறுகாமுனம் –
பேரின்பமயனான சர்வேசுவரன் மறைந்தசமயம்பார்த்துக் காமதேவன் வந்துபுகுந்து என் மனத்தைச் சிற்றின்பவழியிற்
செலுத்தாதமுன்பு என்க. ஜீவகாருண்யத்தில் பகவானும் பாகவதருமே ஒருவர்க்கொருவர் ஒப்பானா லுண்டன்றி
வேறுஒப்புமை காணப்பெறாமையால், “அப்பன்போற் பரியு மெண் தமர்’ எனப்பட்டனர். பகவானிடத்துப்போலவே
பாகவதரிடத்தும் ஐயங்கார்க்கு உள்ள பரமபக்தி இங்கு வெளியாகின்றது.

————

எனக்குப் பணியப் பணி ஒரு கால் இரு காலும் நல்க
உனக்குப் பணி இங்கு இருவேம் பணியில் என் ஓர் பணியும்
நினக்குப் பணி வித்துக் கொண்டு உம் பணி நீ பணித்திலை என்
தனக்குப் பணி வெற்பின் மீது ஓங்கி நின்ற தனிச் சுடரே –52-

(இ – ள்.) பணி வெற்பின்மீது ஓங்கி நின்ற – சேஷகிரியெனப்படுகிற திருவேங்கடமலையின்மேல் உயர்ந்து நின்றதிருக்கோலமாய் எழுந்தருளி யிருக்கிற,
தனி சுடரே – ஒப்பற்ற ஒளிவடிவமானவனே! –
ஒரு கால் பணிய எனக்கு பணி – (தலைவனான உன்னை) ஒருதரம் வணங்குதல் (அடியவனான) எனக்கு உரிய தொழில்;
இரு காலும் நல்க உனக்கு பணி – (அடியவனான எனக்கு உனது) இரண்டு திருவடிகளையுங் கொடுத்தல் (தலைவனான) உனக்கு உரிய தொழில்:
இங்கு இருவேம் பணியில் – இவ்வாறுகுறித்த நம்இருவரது வேலைகளில்,
என் ஓர் பணியும் நினக்கு பணிவித்துக்கொண்டு – (ஒருகால் பணிதலாகிய) எனதுதொழிலைமாத்திரம் (உனக்கு நீ) செய்வித்துக்கொண்டு,
உன் பணி என் தனக்கு நீ பணித்திலை – (இருகாலையும்நல்குதலாகிய) உனதுதொழிலை எனக்கு நீ செய்கின்றாயில்லை; (எ – று.)

யான் உன்னை ஒருகால்சரணமடைந்தே னாதலால், நீ எனக்கு முத்தி தந்தருளவேண்டும் என்பதாம்.
பரமபதநாதனதுகட்டளையின்படி அவனுக்குப் பலவகைக்கைங்கரியங்களைச் செய்யும் ஆதிசேஷனே அப்பெருமான்
இனிஎழுந்தருளியிருத்தற்கு மலைவடிவமானதனாலும், மேருமலையினிட மிருந்து ஆதிசேஷனுடனே வாயுவினாற்
கொணரப்பட்ட மலை யாதலாலும், திருவேங்கடத்துக்கு ‘சேஷகிரி’ என்ற பெயர் வாய்த்தது;
‘பணிவெற்பு’ என்றது, அதன்பரியாயநாமமாக நின்றது. சூரியன் சந்திரன் அக்கினி முதலிய சோதிகளெல்லாவற்றினும்
மேம்பட்ட சோதி யென்பார், ‘தனிச்சுடரே’ என்றார்; அகவிருளொழிக்கும்ஆதித்த னென்க. சுடர்என்றது,
நித்தியமாய் ஸ்வயம்பிரகாசமான ஞானத்தைக் குணமாகவும் சொரூபமாகவும் உடையவ னென்றபடி.

எனக்கு, உனக்கு என்ற நான்கனுருபுகள் – தகுதிப்பொருளன. பணிய, நல்க என்ற செயவெனெச்சங்கள் – தொழிற்பெயர்த்தன்மைப்பட்டு
‘பணி’ என்ற பெயர்ப்பயனிலைக்கு எழுவாயாய்நின்றன; ஒருகால், இருகால்’ என்ற விடத்து முரண்தொடை காண்க.
இருவேம் – தன்மைப்பன்மைக்குறிப்புவினை யாலணையும்பெயர்; முன்னிலையை உளப்படுத்திய தன்மைப்பன்மை.
(‘ஒரு கால்பணிய’ எனத் தென்கலைசம்பிரதாயமே உரைக்கப்பட்ட தென்பர்.)
பணிஎன்ற சொல் ஒரேபொருளிற் பலமுறைவந்தது, சொற்பொருட்பின் வருநிலையணி; பணியப்பணி,
ஒருகாலிருகாலும் என வந்தமை – பிராசமெ ன்னுஞ் சொல்லணி: இவ்விரண்டுஞ் சேர்ந்துவந்தது, சேர்வையணி.

————-

தலைவியின் பிரிவாற்றாமை கண்ட செவிலி இரங்கல் –

தனித் தொண்டை மா நிலத்தே புரிவார்க்கு அருள் தாள் உடையாய்
தொனித் தொண்டைமான் நெடுவாய் பிறந்தாய் துங்க வேங்கடவா
முனித் தொண்டை மான் கையில் சங்கு ஆழி நல்கி என் மூரல் செவ்வாய்க்
கனித் தொண்டை மான் கையில் சங்கு ஆழி கோடல் கருமம் அன்றே –53-

(இ – ள்.) மால் நிலத்தே – பெரிய நிலவுலகத்திலே,
தனி தொண்டை புரிவார்க்கு – ஒப்பற்ற அடிமைத்தொழிலைச் செய்யும் மெய்யடியார்கட்கு,
அருள் – தந்தருளுகிற,
தாள் உடையாய் – திருவடியை (பரமபதத்தை) யுடையவனே! –
தொனி தொண்டை மான் – கனைக்கின்ற குரலையுடைய தொண்டையையுடைய குதிரையினது,
நெடு வாய் – பெரிய வாயை,
பிளந்தாய் – பிளந்தவனே!
துங்கம் வேங்கடவா – உயர்ந்த திருவேங்கடமலையில் எழுந்த ருளியிருப்பவனே! – (நீ),
முனி தொண்டைமான் கையில் சங்கு ஆழி நல்கி – ராஜரிஷியான தொண்டைமான்சக்கரவர்த்தியின் கையிலே (நினது)
சங்காழிகளை (சங்கசக்கரங்களை)க் கொடுத்தருளி,
என் மூரல் செவ் வாய் கனி தொண்டை மான் கையில் சங்கு ஆழி கோடல் – புன்சிரிப்புள்ள சிவந்த வாயாகிய
தொண்டைப் பழத்தையுடைய மான்போன்றவளான என்மகளது கைகளிலுள்ள சங்குஆழிகளை
(சங்குவளையல்களையும் மோதிரங்களையும்) கவர்ந்துகொள்ளுதல்,
கருமம் அன்று – செய்தக்கசெயலன்று; (எ – று.)

இப்பாட்டுக்குத் துறைவிவரணம், கீழ் 15 – ஆஞ் செய்யுட்குக் கூறிய வாறே கொள்க.
பின்னிரண்டடியிற்கூறிய விஷயம், கீழ் 46 – ஆஞ் செய்யுளில் “சங்கோடணியாழி நீங்கி” என்றதற்கு கூறிய உரைகளால் விளங்கும்.
தொண்டைமான்சக்கரவர்த்தி க்ஷத்திரியசாதியா னாயினும் தவவொ “க்கத்திற்சிறந்து முனிவரையொக்கும்பெருமைவாய்ந்து
திருவேங்கடமு டையான்பக்கல் பக்திமேலிட்டு அப்பெருமானை எப்பொழுதுஞ்சேவித்துக் கொண்டு திருமலையிலேயே
வாசஞ்செய்திருத்தலை யுணர்ந்த பகையரசர்கள் அவனதுநாட்டைக் கைக்கொள்ள, தொண்டைமான் அதனைத்
திருவேங்கடமுடையான்சந்நிதியில் விண்ணப்பஞ்செய்து வணங்கிநிற்க,
பெரு மான் தனது திவ்வியாயுதங்களாகிய சங்சசக்கரங்களைக் கொடுத்து ‘இவற்றைக்கொண்டு, நீ,
பகையரசரைத் தவறாது வென்றிடுக’ என்று சொல்லியருள, தொண்டைமான் அங்ஙனமே பகைவென்று அரசு பெற்றன னென்ற வரலாற்றை,
வேங்கடாசலமாகாத்மியத்திற் பரக்கக் காண்க.

தலைவனது பிரிவு தலைவிக்கு மெலிவைவிளைத்து அவள்கையினின்று வளைகளும் விரல்களினின்று மோதிரங்களும்
கழன்று விழும்படிசெய்தலை அத்தலைவன்மேலேற்றி, “என்மான்கையிற் சங்காழிகோடல் கருமமன்று” என்றாள்:
(“கைப் பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் காவிரிநீர், செய்ப்புரளவோடுந் திருவரங்கச்செல்வனார்” என்பது நாச்சியார்திருமொழி.)
ஒருவரிடத்துப் பொருளைக்கொடுத்தால் மீண்டும் அப்பொருளை அவரிடத்தினின்றே வாங்க வேண்டியதாயிருக்க
அப்பொருளை வேறொருவரிடத்தில் வாங்குகின்றா யெனத் தொடர்பின்மையணி தோன்றக் கூறியவாறு. ஈற்றுஏகாரம் – தேற்றத்தோடு இரக்கம்.

தொனி – த்வநி யென்ற வடசொல்லின் விகாரம். தொண்டை – மிடறு. தொண்டைமான் – தொண்டைநாட்டரசன்.
மூரல் – பற்களுமாம். கனித் தொண்டை – கோவைப்பழம். மான் – அதுபோன்ற பெண்ணுக்கு உவமையாகு பெயர்; பார்வையில் உவமம்.

எம்பெருமானது பிரிவை யாற்றாது வருந்துகிற ஐயங்காரது நிலைமைக ளைக் கண்ட பரிவுடையறிவுடையாளர்,
அப்பெருமானைநோக்கி “நினக்கு ஆபரணகோடியிற்சேர்கிற ஆயுதங்களை நின்பக்கல் மெய்யன்பு
செய்தவ னுக்கு அருள்பவனான நீ இவரது ஆத்மாலங்காரமான பாரதந்திரியம் முதலிய குணங்களை நிலைகுலையச் செய்தல் நீதியன்று”
என்று அவனுக்கு இவர் பக்கல் இரக்கமுண்டாகுமாறு விண்ணப்பஞ்செய்தல், இதற்கு உள்ளுறை பொருள்;
பெருக்கம் ஆய்ந்துஉணர்க. முதல் விளி – சிஷ்டபரிபாலநஞ் செய்தலையும், இரண்டாம் விளி – துஷ்டநிக்கிரகஞ்செய்தலையும் விளக்கும்.

“களிகொண்டெமக்கருள் வேங்கடவா வெதிகட்கரசன்,
அளிகொண் டளித்த வளையாழி வாங்கினை யற்புதமா,
நளிகொண்டபூங்குழற்பெண்ணர சாயினநங்கை செங்கை,
ஒளிகொண்டவால்வளையாழி கைக்கொள்வ துசித மன்றே” என்ற திருவேங்கடக்கலம்பகச்செய்யுள், இதனை ஒருசார் அடி யொற்றியது.

———

பிரிவாற்றாத தலைவி பிறை கண்டு வருந்துதல்

கரு மாதவா இருந்து ஆவன செய்து என் கருத்து இருளைப்
பொரும் ஆதவா விருந்தா வனத்தாய் பொற் சவரி என்னும்
ஒரு மாது அவா விருந்தா வனக்கா உயர் வேங்கடத்து எம்
பெருமா தவா இரும் தாவு அனல் ஏயும் பிறைக் கொழுந்தே –54-

(இ – ள்.) கரு மாதவா – கரிய திருநிறமுள்ள மாதவனென்னுந் திருநா மத்தையுடையவனே!
என் கருத்து இருந்து – எனது மனத்தில் வந்து வீற்றிருந்து,
ஆவன செய்து – (எனக்கு) ஆகவேண்டிய நன்மைகளைச் செய்து,
இருளை பொரும் – அகவிருளாகிய அஜ்ஞாநத்தை மோதியொழித்தற்கு உரிய,
ஆதவா – சூரியனாயுள்ளவனே!
விருந்தாவனத்தாய் – பிருந்தாவனத்தில் விளையாடினவனே!
பொன் சவரி என்னும் – உத்தமகுணமுள்ள சபரியென்கிற,
ஒரு மாது – ஒருபெண்ணுக்கு,
அவா விருந்தா – விரும்பப்பட்ட விருந்தினனானவனே!
வனம் கா உயர் – அழகிய சோலைகள் உயர்ந்திருக்கப் பெற்ற,
வேங்கடத்து – திருவேங்கடமலையி லெழுந்தருளியிருக்கிற,
எம்பெருமா – எமது தலைவனே! –
பிறை கொழுந்து – இளம்பிறையானது, –
தவா – கெடாத,
இரு – பெரிய,
தாவு – தாவியெரிகின்ற,
அனல் – நெருப்பை,
ஏயும் – ஒத்துச்சுடுகின்றது; (எ – று.)

இயற்கைப்புணர்ச்சி முதலியவகைகளால் தலைவியைக் களவிற்கூடி நின்ற தலைவன் அங்குப் பழியெழுந்ததென்று
தோழியால் விலக்கப்பட்ட பின்னர் அப்பழியடங்கச் சிலநாள் ஒருவழிப்பிரிந்துறைதல், ஒருவழித்தண த்த லெனப்படும்.
அங்ஙனம் பிரிந்துறைகின்ற சமயத்தில் அப்பிரிவையாற்றாதுவருந்துகிற தலைவிக்கு
“காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலை மலரு மிந்நோய்” என்றபடி கலவிக்கு உரிய காலத்தின் தொடக்கமான
மாலையிலே விரகவேதனை வளர, அப்பொழுது விளங்கிய இளம்பிறையும் பிரிந்தார்க்குத் துயர்க்கேதுவான
பொருள்களு ளொன்றாதலால் இவளை இன்னும் அதிகமாக வேதனைப்படுத்த,
அத்தாபத்தை யாற்றாத அத்தலைவி தனது நினைப்புமிகுதியால் தலைவனை எதிரில்நிற்கின்றவாறு போலப்பாவித்து,
அங்ஙனம் உருவெளித்தோற்றத்திலே வெளிப்பட்ட அத்தலைவனை முன்னிலைப்படுத்தி இரங்கிக் கூறியது, இது.

ஒருவழித்தணந்து வந்த தலைவன் சிறைப் புறமாக அதனையுணர்ந்த தோழி அவனை முன்னிலையாக்கிக்கூறிய தென்று
இதற்குத் துறைகொள்ளுதலு மொன்று. மற்றும், இது, சந்திரோபாலம்பநத்தின் பாற்படும்; அதாவது –
விரகநோய்கொண்டதலைவி சந்திரனை நிந்தித்தல், கூடினாரை மகிழ்விக்குந் தன்மையதான பிறை பிரிந்து
நிற்கிறஎன்னை இங்ஙனம் தவித்திடாதபடி விரைந்துவந்து வரைந்தருள்வாய் என்பது, குறிப்பு.

விருந்தாவனம் என்பது – கண்ணன் அவதரித்த வடமதுரைக்குச் சிறிது தூரத்தில் யமுநாநதிதீரத்திலுள்ள இடம்.
கண்ணன்வளர்ந்தஇடமான கோகுல மெனப்படுகிற திருவாய்ப்பாடியிலுள்ள நந்தகோபர்முதலான ஆயர்கள்,
அங்குப் பூதனைவந்துஇறந்தது. சகடுமாறிவீழ்ந்தது இரட்டைமருதமரம் முறிந்தது முதலியவற்றை உற்பாதங்களெனக்கொண்டு
அஞ்சி மஹாவநமெ னப்படுகிற அவ்விடத்தை விட்டுக் கன்றுகாலிமுதலிய எல்லாப்பொருள்க ளோடும்
பிருந்தாவனத்திற் சென்று குடியேறினர். நெருஞ்சிற்காடாய்க் கிடந்தஅந்தப்பிருந்தாவனம், கிருஷ்ணபகவான் குளிர்ந்த
திருவுள்ளத்தோடு அநுக்கிரகித்ததனால், பசுக்கள்முதலானவை விருத்தியடைதற்குஏற்ப மிகச் செழிப்புற்றது.
பின்பு அங்கு நெடுநாள் கண்ணன் கன்றுகளையும் பசுக்களையும் மேய்த்தல் முதலிய பலதிருவிளையாடல்கள்
செய்துகொண்டுவளர்ந் தனனாதலால், “விருந்தாவனத்தாய்” என்று விளிக்கப்பட்டனன்.
விருந்தாவனம் – ப்ருந்தாவந மென்ற வடசொல்லின் விகாரம்; நெருஞ்சிக்கா டென்பது பொருள்.

சவரி – ரிசியமூககிரியில் மதங்காச்சிரமத்தில் மதங்கமுனிவரது சிஷ்யர்களுக்கு உபசாரஞ்செய்துகொண்டு
வசித்துவந்த துறவறம்பூண்ட ஒருதவப் பெண்.
க்ஷத்திரியஜாதிஸ்திரீயினிடம் வைசியசாதிபுருஷனுக்குப் பிறந்த பிரதி லோமசாதியார், சபர மெனப்படுவர்; இச்சாதியாரது தொழில் –
தேன்கொ ணர்ந்துவிற்றல். சபரனென்பதன் பெண்பால் – சபரீ; அவ்வடசொல், சவரி யென்று விகாரப்பட்டது.
யோகப்பயிற்சியுள்ள அச்சபரி, தான்வசிக்கும் மதங்காச்சிரமத்துக்கு இராமலக்ஷ்மணர் எழுந்தருளுஞ்செய்தியை
முன்னமே அறிந்து எதிர்நோக்கி, அவ்வனத்திலுள்ள நல்லகனிகளைச் சேர்த்துவைத் துக்கொண்டிருந்து,
அவர்கள் அவ்வாச்சிரமத்துக்கு எழுந்தருளியவுடன் அப்பழங்களை அவர்கட்குச் சமர்ப்பித்து உபசரித்து,
இராமபிரானருளால் தனதுபிறப்பை யொழித்து நற்கதியடைந்தன ளென்பது, இராமாயணவரலாறு;
அதுபற்றி, “பொற்சவரி யென்னும் ஒருமாது அவாவிருந்தா” என்றார்.

ஆவன – பெயர். கருதுவது கருத்து எனக் காரணக்குறி. விருந்தன் = விருந்தினன்.
விருந்து – புதுமை; பண்புப்பெயர்: புதியனாய்வருபவன், விருந்தன்; “இன்” சாரியை பெறாது நின்றது.
அது ஈறுகெட்டு ஈற்றயல்நீண்டு விளியேற்று ‘விருந்தா’ என்று ஆயிற்று. கா – காக்கப்படுவது என்பது
பற்றிச் சோலைக்கு வந்த காரணக்குறி. தவா என்ற ஈறுகெட்ட எதிர்மறைப்பெய ரெச்சத்தில், தபுஎன்பதன் மரூஉவான தவு – பகுதி.
இருந் தா வனல் – இருமையென்ற பண்புப்பெயர் ஈறுபோய் இனமெலி மிக்கது. தாவனல் – வினைத்தொகை.
ஏயும் – உவமவாசகம். பிறப்பது பிறை யெனக் காரணக் குறி; ஐ – கருத்தாப்பொருள்விகுதி:
பிற என்ற பகுதியின் ஈற்றுஅகரம் தொக்கது. “கொழுந்து” என்றது, இளமைகுறித்தது.

பேறுகிடைக்குந் தருணத்தில் மகிழ்ச்சிசெய்வதான ஞானவிளக்கம் உரியகாலத்திற் பேறுகிடையாமையாலே நலிவுசெய்ய,
ஐயங்கார் தாம் அடைந்த தாபத்தை எம்பெருமானைக்குறித்து விண்ணப்பஞ்செய்தல், இதற்கு உள்ளுறைபொருள்.
இத்தளர்ச்சிநீங்க விரைவில் உன்பக்கல் என்னைச் சேர்த்துக்கொள்ளவேண்டுமென்பது, குறிப்பு.
பிறைக்கொழுந்து என்றது – ஸ்வாபதேசத்தில், ஞானோதயத்தையாம். பிறவும் நோக்கிக்கொள்க.

———–

பிறை மாலையால் ஒரு பேதை நைந்தாள் அந்த பேதைக்கு நின்
நறை மாலை தா என்று மானிடம் பாடிய நா வலர்காள்
நிறை மாலை அற்று கவி மாலையால்நினையீர் திரு வெள்
ளறை மாலை வேங்கடத்தே உறை மாலை அரங்கனையே –55-

(இ – ள்.) “பிறை மாலையால் – பிறைச்சந்திரனது தோற்றத்தையுடைய மாலைப்பொழுதினால்,
ஒரு பேதை நைந்தாள் – (உன்பக்கல் காதல்நோய் கொண்ட) ஒருபெண் மெலிவுற்றாள்:
அந்த பேதைக்கு – அப்பெண்ணுக்கு,
நின் நறை மாலை தா – உன்னுடைய வாசனையுள்ள பூமாலையைக் கொடு,” என்று –
மானிடம் பாடிய – (அகப்பொருட்டுறையமைத்து) மனிதர்களின் மேற் கவிபாடிய,
நாவலர்காள் – புலவர்களே! – (நீங்கள்),
நிறை மாலை அற்று – (இங்ஙனம் உங்கள்மனத்தில்) நிறைந்த மயக்கத்தை நீங்கி,
கவி மாலையால் – பாமாலை கொண்டு,
திருவெள்ளறை மாலை அரங்கனை வேங்கடத்தே உறை மாலையே நினையீர் – திருவெள்ளறைலி லெழுந்தருளியிருக்கிற பெரியோனும்
ஸ்ரீரங்கநாதனும் ஆகிய திருவேங்கடமலையிலெழுந்தருளியிருக்கிற எம்பெருமானையே கருதிப் பாடுவீராக; (எ – று.)

பகவத்குணாநுபவத்திலாசையுடைய ஐயங்கார், லௌகிகரைப்பார்த்து, “நரஸ்துதிபண்ணினால் என்னபயன் உண்டாகும்?
வேண்டியபயன்களை வே ண்டியவாறே பெறும்படி, என்னோடொப்ப எம்பெருமானை ஸ்தோத்ரம்பண் ணுங்கள்” என்று
இதோபதேசஞ் செய்கின்றார்.
“சொன்னாவில்வாழ் புலவீர் சோறுகூறைக்காக மன்னாதமானிடரை வாழ்த்துதலால் –
என்னாகும், என்னுடனேமாதவனை யேத்தும்” என்ற அருளிச்செயலையுங் காண்க.
“கவி பாடலாகாது” என்ற நிஷேதசாஸ்திரத்துக்கு இலக்கு அஸத்விஷயத்திலாதலும்,
‘கவிபாடுதல் புகழ்முதலியபலவற்றைப் பயக்கும்’ என்ற விதிசாஸ்தி ரத்துக்கு இலக்கு ஸத்விஷயத்திலாதலுமாகிய வேறுபாடு காணத்தக்கது.

கவி தனக்குப் பிரபுவின்பக்கல் உள்ள அன்பை, ஒரு தலைவி அத்தலை மகனிடத்துக் காதல்கொண்டு வருந்த
“அவள்வருத்தத்தை யாற்றுமாறு நின்தோளிற் சாத்திய மாலையை நீ அவட்குக்கொடு’ என்று தூதுசென்ற வித்தகர்
பேசுங் கிளவித்துறைவகையாற் பாடி வெளியிடும் இயல்பைக் குறிப்பிட்டு முதலிரண்டடியில் விளித்தார்.
பிறைமாலையால் – மாலைப்பிறையால் என மொழிமாற்றினுமாம். பேதை – பேதைமையுடைய பெண்ணுக்குப் பண்பாகுபெயர்.
நறை – தேனுமாம். மாநுஷரென்ற வடசொல்லின் விகாரமான மானிடரென்பது –
(காசியபமுனிவனது மனைவியருள்) மநுவென்பவளதுமரபினரான மனிதரையுணர்த்தும்; தத்திதாந்தநாமம்.
இங்கு “மானிடம்” என்றது, சாதிவாசகமாய் நின்றது; மனிதர்களிலும் உயர்ந்தவர் தாழ்ந்தவ ரெனப் பகுத்து
உணராது கண்டவரையெல்லாம் ஒருநிகராகப்பாடுபவ ரென்பது போதரும்:
அன்றியும், இழிப்புப்பற்றி அஃறிணையாகக்கூறின ரென்றுங் கொள்க;
(திருவாய்மொழியில் “வளனாமதிக்கு மிம்மானிடத்தைக் கவி பாடியென்” என்றவிடத்து,
நம்பிள்ளை ‘மநுஷ்யரென்றுசொல்லவும் பாத்தங்காண்கிறிலர் காணும்! அசேதநங்களைச் சொல்லும்படியிலே சொல்லுகிறார்.
தன்னை மெய்யாக அறியாதவன் அசித்பிராய னிறே’ என்று வியாக்கியாந மிட்டமையுங் காண்க.)
நாவலர் – கவிபாடுதல்முதலிய நாவின்வல்ல மையை யுடையவர். மால் – மயக்கம். கவிமாலை – பிரபந்தம். நினையீர் = பாடீர்;
காரணம், காரியமாக உபசரிக்கப்பட்டது. திருவெள்ளறை – சோழநாட்டுத் திருப்பதிகளில் ஒன்று.

————

அரங்கம் குடந்தை குருகூர் குறுங்குடி அட்டபுய
கரம் கண்ண மங்கை நறையூர் கடல் மலை கச்சி கண்ண
புரம் கண்டியூர் தஞ்சை மாலிருஞ்சோலை புல்லாணி மெய்யம்
தரங்கம் பரமபதம் வேங்கடேசற்குத் தானங்களே –56-

(இ – ள்.) அரங்கம் குடந்தை குருகூர் குறுங்குடி அட்டபுயகரம் கண்ண மங்கை நறையூர் கடன்மல்லை
கச்சி கண்ணபுரம் கண்டியூர் தஞ்சை மாலி ருஞ்சோலை புல்லாணி மெய்யம் தரங்கம் (திருப்பாற்கடல்)
பரமபதம் (ஸ்ரீவைகுண்டம்)என்பன, திருவேங்கடமுடையானுக்கு உரியதலங்களாம்.

“ஈரிருபதாஞ்சோழம் ஈரொன்பதாம் பாண்டி, ஓர்பதின்மூன்றா மலை நாடு ஓரிரண்டாஞ் – சீர்நடுநாடு,
ஆறோடீரெட்டுதொண்டை அவ்வடநா டாறி ரண்டு, கூறுதிருநா டொன்றாக் கொள்” என்று வகுக்கப்பட்ட
நூற்றெட்டுத் திருமால் திருப்பதிகளுட் சோழநாட்டுத் திருப்பதிகள் நாற்பதிற் சேர்ந்தவை –
திருவரங்கம் திருக்குடந்தை திருக்கண்ணமங்கை திருநறையூர் திருக்கண்ணபுரம் திருக்கண்டியூர் திருத்தஞ்சை என்பன.
பாண்டியநாட்டுத் திருப்பதிகள் பதினெட்டிற் சேர்ந்தவை – திருக்குருகூர் திருக்குறுங்குடி திருமா லிருஞ்சோலைமலை திருப்புல்லாணி திருமெய்யம் என்பன. தொண்டைநாட்டுத்திருப்பதிகள் இருபத்திரண்டிற் சேர்ந்தவை – திருவட்டபுயகரம் திருக்கடன்மல்லை திருக்கச்சி என்பன.
வடநாட்டுத்திருப்பதிகள்பன் னிரண்டிற் சேர்ந்தது – திருப்பாற்கடல். திருநாடு – பரமபதம்.
இச்செய்யுளில் அரங்கம்முதற் பரமபதம்ஈறாகப் பதினேழுதிவ்வியதேசங்களின் பெயரை அடைமொழியில்லாதபடி
அடக்கிவைத்திருக்கின்ற அழகு அறியத்தக்கது. வேங்கடேசன், ஸ்தாநம் – வடசொற்கள்.

————-

தான அல் நாக மருப்பு ஒசித்தானுக்கு தான் உகந்தது
ஆன வல் நாக முடியில் நின்றானுக்கு தாள் வணங்காத்
தானவன் ஆகம் இடந்தானுக்கு ஆள் என்று தனை எண்ணா
தான் அவனாக நினைந்திருப்பாற்கு என்றும் தான் அவனே –57-

(இ – ள்.) தானம் – மதத்தையுடைய,
அல் – இருள்போன்ற – (கருநிறமுள்ள),
நாகம் – (குவலயாபீடமென்ற) யானையின்,
மருப்பு – தந்தங்களை,
ஒசித்தானுக்கு – ஒடித்தவனும்,
தான் உகந்தது ஆன – தான் விரும்பிய இடமான,
வல் நாகம் – வலிய திருவேங்கடமலையினது,
முடியில் – சிகரத்தில்,
நின்றானுக்கு – நின்றதிருக்கோலமாக எழுந்தருளியவனும்,
தாள் வணங்கா – (தனது) திருவடிகளை வணங்காத (தானே தெய்வமென்று செருக்கிய),
தானவன் – அசுரனான இரணியனது,
ஆகம் – மார்பை,
இடந் தானுக்கு – பிளந்தவனுமான எம்பெருமானுக்கு,
ஆள் என்று – அடிமையென்று,
தன்னை எண்ணா – தன்னைநினையாமல்,
தான் அவன் ஆக நினைந்திருப்பாற்கு – (ஜீவாத்மாவாகிய) தானே அப்பரமாத்மாவாக நினைத்திருக்கிற விபரீதஞானிக்கு,
என்றும் தான் அவனே – எப்பொழுதும் அப்பெருமான் பயன்படாதவனேயாவன்; (எ – று.) –
அவன் – பயனின்மை; அங்ஙனமாகுபவன், அவன்: ஏ – தேற்றம்.

சித் அசித் ஈசுவரன் என்ற தத்துவம்மூன்றில் சித்எனப்படுகிற ஜீவாத்மாவுக்கு ஈசுவரனெனப்படுகிற பரமாத்மா
நியாமகனும் தாரகனுமாய்த் தலைவனாதலும், அப்பரமாத்மாவுக்கு ஜீவாத்மா நியாம்யமும் தார்யமுமாய் அடிமையாதலும்
முதலிய மிக்கவேறுபாடுகள் சாஸ்திரப்பிரசித்தமாக இருக்க, அவற்றையெல்லாம்கருதித் தன்னை
எம்பெருமானுக்கு ஆளென்று எண்ணாமல், “உண்மையாகவுள்ள பரமாத்மாவாகிய பொருளொன்றே மாயையாற்
பிரபஞ்சமாகக் காணப்படுகின்றதே யன்றி ஜீவாத்மாவென்றுஒரு பொரு ளில்லை” என்று துணிந்துகூறும் அத்வைதி,
“ஜீவாத்மாவென்னும் நான் அப்பரமாத்மா” என்னும் பாவனை யுடைய னாதலால்,
“ஆளென்று தன் னையெண்ணாத் தானவனாக நினைந்திருப்பான்” எனப்பட்டான்.
அங்ஙனம் ஜீவாத்மபரமாத்மசொரூபங்களைப் பகுத்துணர்ந்து சர்வேசுவரனுக்கு ஆட் படாதவனுக்கு
அப்பெருமான் அருள்புரியா னென்பது, “என்றும் தான் அவனே” என்பதனால் விளக்கப்பட்டது.
சர்வேசுவரனது திருவடிகளை வணங்காமல் தானே சர்வேசுவர னென்று சொன்ன இரணியனை அப்பெ ருமான் நிக்கிரகித்ததும்,
சர்வேசுவரனுக்கு அடிமையென்று தன்னை யெண் ணிய இரணியபுத்திரனானபிரகலாதனை அப்பெருமான் அநுக்கிரகித்ததும் பிரசித்தம்;
ஆகவே, “தாள்வணங்காத் தானவனாக மிடந்தானுக்கு” என்ற விசேஷ்யம் இங்கு ஓர் அபிப்பிராயத்தோடு கூறப்பட்ட தாகுதலால்,
கருத் துடையடைகொளியணி. தான் அவனாக நினைந்திருக்கின்ற ஜீவாத்மாவுக் குப் பரமாத்மா அந்நினைப்பிற்கு
ஏற்பத் தான் அவனேயாவன்என ஒருசமத் காரந்தோன்றக் கூறினார்; “அவன்” என்பதை இருவகைப்பொருள்படவைத்த நயம், இங்குக் கருதத்தக்கது:
(இதனை, “கழல்வளையைத் தாமுங் கழல்வளையே யாக்கினரே” என்றாற்போலக் கொள்க.)
இது – பிரிநிலைநவிற்சியணி யின்பாற்படும்; பெயர்ச்சொற்களுக்கு உறுப்பாற்றலால் வேறொரு பொருளைத் தந்துரைத்தல்,
இதன் இலக்கணம். அவனாக – எம்பெருமான்போல ஸ்வதந்திரனாக என்றுங் கொள்க.

நாகம – யானையென்ற பொருளில், நகத்தில்வாழ்வ தென்று காரணப் பொருள்படும்: நகம் – மலை.
திருவேங்கடம் எம்பெருமானது திருவுள்ளத்துக்கு மற்றையெல்லாத் திவ்விய தேசங்களினும் மிகப்
பாங்கான வாஸஸ்தாந மாதலால், “உகந்ததான நாகம்” எனப்பட்டது;
அங்ஙனஞ் சிறப்புடையதாதல், புராணங்களினாலும் விளங்கும். “நாகமுடியினின்றானுக்கு” என்பதற்கு –
காளியனென்னும் பாம்பினது தலையின்மேல்நின்று நடனஞ்செய்தவனுக்கு என்று பொருள்கூறுதல் பொருந்தாது;
அங்ஙனங்கொள்ளின், இவ்வகைப்பிரபந்தத்திற் செய்யுள்தோறும் பிரபந்தத்தலைவன்பெயரையேனும்
அவனது ஊர்ப்பெயரையேனுங் கூறும் மரபு இச்செய்யுளில் தவறிய தாய்விடும்;
“உகந்ததான” என்ற அடைமொழியின் உரிமையையும் உய்த்துணர்க. தானவனென்பது, அசுரனென்றமாத்திரமாய் நின்றது;
இரணியன் காசியபமுனிவர் மனைவியருள் திதியென்பவளது மகனாதலின்.

இது, யமகச்செய்யுள்.

————–

தானவர் ஆகம் தடிவார் வடமலைத் தண் அம் துழாய்
ஞான வராகர் தரும் அண்டம் யாவையும் நண்ணி அவர்
கால் நவராக விரல் தோறும் அத்திக் கனியின் வைகும்
வானவர் ஆக இருப்பார் அவற்றுள் மசகங்களே –58-

(இ – ள்.) தானவர் – அசுரர்களுடைய,
ஆகம் – உடம்பை,
தடிவார் – துணிப்பவரான,
வட மலை தண் அம் துழாய் ஞானம் வராகர் – திருவேங் கடமலையில்எழுந்தருளியிருக்கிற குளிர்ந்த அழகிய
திருத்துழாய்மாலையை யுடைய ஞானவராகமூர்த்தியான எம்பெருமான்,
தரும் – படைத்த,
அண்டம் யாவையும் – அண்டகோளங்களெல்லாம், –
அவர் கால் நவ ராக விரல்தோறும் – அவருடைய திருவடிகளின் புதிய செந்நிறமாகத்தோன்றுகின்ற விரல்கள்தோறும்,
அத்தி கனியின் – அத்திப்பழங்கள் (அம்மரத்தில் ஒட்டிக்கிடத்தல்) போல,
நண்ணி வைகும் – பொருந்தித் தங்கும்;
வானவர் ஆக இருப்பார் – (அவ்வண்டங்களில்) தேவர்களாக விளங்குபவர்கள், –
அவற்றுள் மசகங்களே – அவ்வத்திப்பழங்களில் மொய்த்துக்கிடக்கின்ற கொசுகுகள் போல்வர்; (எ – று.)

“ஆழிப்பிரானடிக்கீ “ற்பவித்தழியும், பரவையில்மொக்குளைப்போற் பலகோடி பகிரண்டமே” என்றதனாலும்,
அண்டகோளங்கள் எம்பெருமான்திருவடியில் தோன்றுவனவாதல் அறிக.
பிரளயப்பெருங்கடலில்மூழ்கி யிருந்த பூமியை மேலேயெடுக்கநினைத்துத் திருமால் பன்றிவடிவுகொண் டருளிக் கோட்டு
நுனியாற் பூமியையெடுத்துவந்து பூமிதேவியை இடுப்பில் ஏந்திக்கொண்டு அவட்கு ஞானோபதேசஞ்செய்கிற வியாஜத்தால்
தத்துவப் பொருள்களை உலகத்துக்குஉணர்த்தியருளியதனால், “ஞானவராகர்” எனப் பட்டனர்.

தாநவர் என்ற வடமொழிப்பெயர் – (காசியபமுனிவரது மனைவியருள்) தநுவென்பவளது சந்ததியா ரென்று பொருள்படும்;
தத்திதாந்தநாமம். ஜ்ஞாநவராஹர், நவராகம், மசகம் – வடசொற்கள். கனியின், இன் – ஐந்தனுருபு, ஒப்பு – உவமையணி.

இதனால், எம்பெருமானது விராட்ஸ்வரூபத்தின் பெருமையையும், மற்றைத்தேவர்களின் சிறுமையையும் உணர்த்தினார்.
நால்வகைத்தோற்றத்து எழுவகைப்பிறப்பினுட் சிறந்த தேவர்களை மசகங்க ளென்றதனால், மற்றையுயிர்களின் இழிவு தானே விளங்கும்.

—————

பாங்கி வெறி விளக்கிச் செவிலியர்க்கு அறத்தொடு நிற்றல்

மசகம் தரம் என்னல் ஆய நிலையா உடல் வாழ் உயிரை
அசகம் தர வல்லதோ அன்னைமீர் அண்டம் உண்டு உமிழ்வா
ரிசசுந்தர வண்ணர் வேங்கட வாணர் இலங்கையர் கோன்
தெகந்தரம் அறுத்தார் திருப் பேர் சொல்லும் தீங்கு அறவே –59-

(இ – ள்.) அன்னைமீர் – தாய்மார்களே! –
மசகம் தரம் என்னல் ஆய் – கொசுவுக்குச்சமான மென்று சொல்லத்தக்கதாய்,
நிலையா – நிலையில்லாத தாகிற,
உடல் – உடம்பில்,
வாழ் – (விதிவசத்திற்குஏற்ப) வாழ்கிற, உயிரை -,
அச கம் தர வல்லதோ – ஆட்டின்தலையானது கொடுக்கவல்லதோ? (அன்று என்றபடி); (இனி நீங்கள்),
தீங்கு அற – (இத்தலைவிக்கு நேர்ந்துள்ள) துன்பம் ஒழியுமாறு, –
அண்டம் உண்டு உமிழ் வாரிச கந்தர வண்ணர் – அண்ட கோளங்களை (ப்பிரளயகாலத்திலே) வயிற்றினுட்கொண்டு,
(பிரளயம்நீங்கினவாறே) வெளிப்படுத்தியவரும் தாமரை பூத்ததொரு மேகம் போன்ற வடிவமுடையவரும்,
இலங்கையர்கோன் தெச கந்தரம் அறுத்தார் – இலங்காபுரி யில்வாழ்ந்த இராக்கதர்க்கு அரசனாகிய இராவணனது பத்துத்தலைகளையும் துணித்திட்டவருமான,
வேங்கட வாணர் – திருவேங்கடத்துறைவாரது,
திரு பேர் – திருநாமங்களை,
சொல்லும் – சொல்லுங்கள்; (எ – று.) – தீங்கறச் சொல்லும் என இயையும்.

களவொழுக்கத்தால் தலைமகளைக்கூடிய தலைமகன் பின்பு அவளை வெளிப்படையாக மணஞ்செய்துகொள்ளும்பொருட்டுப்
பொருள்தேடிவருதற்காக அவளைப் பிரிந்துசெல்ல, அந்நிலையிற் பிரிவாற்றாது மிகவருந்திய தலைமகளைச் செவிலித்
தாய்மார் எதிர்ப்பட்டு அவளது வடிவுவேறுபாட்டை நோக்கி இவள் இங்ஙனம் மெலிதற்குக்காரணம் என்னோ?’ என்று
கவலையுற்றுக் கட்டுவிச்சியைக் குறிகேட்க,
அவளும் தன் மரபின்படி ஆராய்ந்து ‘இவளுக்கு’முருகக்கடவுள் ஆவேசித்ததொழியப் பிறிதொன்றுமில்லை’ என்றுகூற,
அது கேட்ட செவிலித்தாயர் உடனே தலைமகள்பக்கல் தமக்குள்ள அன்பின்மிகுதியால் ஏதேனும் ஒரு தெய்வத்தை வழி
பட்டாகிலும் இவளை உயிர்த்திருக்கப் பெறில் அதுவே நமக்கு ஆத்மலாப மென்றெண்ணி வழியல்லாவழியிலே யிழிந்து
அதற்குப் பரிஹாரமாக வேலனெனப்படுகிற வெறியாட்டாளனை யழைப்பித்து அவனைக்கொண்டு ஆவேசம் ஆடுவித்து
ஆடுபலியிடுதல், கள்ளிறைத்தல், இறைச்சிதூவல், கருஞ்சோறுசெஞ்சோறுவைத்தல் முதலிய காரியங்களை இடைவிடாது
ஒன்றன் மேலொன்றாகச் செய்யத்தொடங்க நோயொன்றும் மருந்தொன்று மாதலால் தான்காதலித்த புருஷோத்தம னான
தலைமகனது தகுதிக்கு ஏலாத அச்செயல்களை நோக்கித் தலைமகள் மேன்மேல் மிகவருந்த,
அவளது துன்பத்தின் மெய்க்காரணத்தை யறிந்த தோழி அச்சமயத்திற் செவிலியரை நோக்கிச் சிலகூறி
வெறிவிலக்கித் தலைவியினது துன்பத்தின் உண்மைக்காரணத்தை யுணர்த்துகின்ற துறை, இது.
இதன் மெய்ப்பாடு, பெருமிதத்தைச்சார்ந்தநகை, பயன் – அறத்தொடுநிற்றல்.

ஆடுபலிகொடுத்தல், இவளுடம்பினின்று உயிர்நீங்காதபடிசெய்து மரண வேதனைப்படுகிற இவளைப்
பிழைப்பிக்கமாட்டாது என்ற பொருளை “உடல் வாழுயிரை அச கம் தரவல்லதோ’ என்றாள்;
தான் கரையேறாதவன் பிறரைக் கரையேற்றமாட்டாமைபோல, தான் கழுத்தறுப்புண்டு இறக்கின்ற ஆடு
இவளுயிரைப் பிழைப்பிக்கமாட்டா தென்க:
“வீழ்வார்க்கு வீழ்வார் துணை” என்றபடி இறக்கிற ஓர்உயிரோ மற்றோர் இறக்கிற உயிரைக் காத்தற்குத் துணையாகும்! என்றாள்.
க்ஷுத்ரதேவதையின் ஆவேசத்தால் வரும் நோய்க்குப் பரிஹாரமாகிற, இவ்விழிப்பொருள் பரம்பொருளிலீடு பாட்டினால்
வந்த நோய்க்குப் பரிஹரமாகா தென்றவாறு.
அற்பப்பிராணியான மசகத்தை உவமை கூறினது, யாக்கைநிலையில்லாமையை விளக்குதற்கு.
அன்னை மீர் – உண்மைக்காரணமுரைக்கப்படுதற்கு உரிமையையும் இவளியல்பிற்கு ஏற்றபடி நன்மைசெய்யும்
வாற்சலியத்தையும் உடையவர்களேயென்றபடி. லோகஸம்ரக்ஷணத்தில் எம்பெருமானுக்கு உள்ள ஆதரத்தையும்,
அற்புதசக்தியையும் குறித்தற்கு, ‘அண்டமுண்டுமிழ் வேங்கடவாணர் இலங்கையர் கோன்தெசகந்தரமறுத்தார்’ என்றார்.
‘வாரிச கந்தர வண்ணர்’ என்றது, தலைவனது திருமேனியழகில் ஈடுபாடு.
அத்தன்மையானவரது திருநாமத்தைச் சொல்லு மென்றது, உலகமுழுவதுக்கும்வந்த நோயைப் பரிஹரித்தவனது
பெயர் தானே இவள்நோயைப்பரிகரித்தற்குத் தக்கதென்றபடி.
நம்மாழ்வார் திருவாய்மொழியில் வெறிவிலக்குத்திருப்பதிகத்தில்
“மருந்தாகுமெ ன்றங்கோர் மாயவலவைசொற்கொண்டு நீர்,
கருஞ்சோறும் மற்றைச்செஞ்சோறும் களனிழைத் தென்பயன்,
ஒழுங்காகவேயுலகேழும் விழுங்கியுமிழ்ந் திட்ட, பெருந்தேவன்பேர் சொல்லகிற்கில் இவளைப்பெறுதிரே’ என்று அருளிச்செய்தமை அறிக.
இந்நோய்தீர்த்தற்குத் தலைவனது திருநாமம் தக்கமந்திரமென்க. அம்மந்திரமாகிய மருந்தை இவள் செவியின்
வழியாகச் செலுத்துங்க ளென்றாள்.
திருமாலாகிய தலைமகனால் நேர்ந்த நோய்க்கு அவனது நாமசங்கீர்த்தனமொழிய வேறுபரிகார மில்லை யென்றாள்.

“வாநிசகந்தரவண்ணர்’ என்பதற்கு – கீழ் 11 – ஆஞ் செய்யுளில்
“அம்பரந்தாமரைபூத்தலர்ந்தன்னவவயவர்” என்றதற்கு உரைத்தாங்கு உரைக்க.
அஜகம், வாரிஜகந்தரவர்ணர், தசகந்தரம் என்ற வடமொழித்தொடர்கள் விகாரப்பட்டன.
வாரிஜம் – நீரில்தோன்றுவது: தாமரைக்குக் காரண விடுகுறி: மலர்க்கு முதலாகுபெயர்.
கந்தரம் என்பது – மேகமென்ற பொருளில் நீரைஉட்கொண்ட தென்றும்,
கழுத்தென்றபொருளில் தலையைத்தரி ப்ப தென்றும் காரணப்பொருள்பெறும்: கம் – நீர், தலை. ஒ – எதிர்மறை.
வேங்கடவாணர் – திருவேங்கடமலையில் வாழ்பவர். வாழ்நர்என்பது, வாணர் என மருவிற்று.
தெசகந்தர மென முதலில் எகரம் பெற்றது, மோனைத் தொடையின் பொருட்டு.

எம்பெருமானது சேர்க்கையைப் பெறாமல் வருந்துகின்ற ஐயங்காரது துயரத்தைக்கண்ட ஞானிகள், அவர் பக்கல்
வைத்தபரிவா லுண்டான கலக்கத்தால், எம்பெருமான் உபாயாந்தரங்களால்அடையத்தக்கவனல்ல னென்பதை மறந்து,
தேவதாந்தரபஜநத்தாலாவது இவரது ஆற்றாமையைத் தணிப்பிக்கலாமோவென்று தொடங்கியநிலையில்,
ஐயங்காரதுதன்மையை அறிந்த அன்பர்கள் விலக்கிக்கூறும் வார்த்தை, இதற்கு உள்ளுறைப்பொருள்.
ஞானிகள் தாம் அங்ஙனம் வழியல்லாவழியிலே இழிவார்களோ வென்னில், – ஐயங்கார்பக்கல் தாம்கொண்ட பரிவின்
மிகுதி தம்மைக் கலங்கப்பண்ணு கையால், அமார்க்கங்களாலேயாகிலும் பரிஹரிக்கப்போமோ வென்று முயன்றன ரென்க;
(இதனை, “அயோத்தியாபுரியிலுள்ள சனங்களெல்லாரும் இராமனுடையக்ஷேமத்தின் பொருட்டு எல்லாத்
தேவர்களையும் வணங்கினர்’ என்றதனோடு ஒப்பிடுக.)
“அன்னைமீர்’ என்று விளித்ததனால், முதியரானநீர் இளையரானஎமது வார்த்தையை உபேக்ஷிக்கலாகாதென்று குறிப்பித்தபடி.
“அண்டமுண்டுமிழ்…. திருப்பேர்சொல்லும்’ – காக்குங்கடவுளின்நாமோச் சாரணமே துயரனைத்தையுந் தீர்க்கு மென்றதாம். பிறவுங் கண்டுகொள்க.

—————-

தீங்கு அடமால் அத்தி முன் நின்று காலிப்பின் சென்ற கொண்டல்
வேங்கடமால் கழலே விரும்பார் விலை மாதர் மல
ஆம் கடம் மால் செய மாலாய் அவர் எச்சில் ஆகம் நச்சி
தாங்கள் தமால் அழிவார் இருந்தாலும் சவப் பண்டமே –60-

(இ – ள்.) தீங்கு அட – (முதலையினாலாகிய) தீமையை அழிக்குமாறு,
மால் அத்தி முன் நின்று – (கஜேந்திராழ்வானாகிய) பெரியயானையின் எதிரிலே வந்துநின்று,
காலி பின் சென்ற – (கிருஷ்ணாவதாரத்தில்) பசுக்களை மேய்த்தற்பொருட்டு அவற்றின்பின்னேபோன,
கொண்டல் – நீர்கொண்ட காளமேகம்போன்றவனான,
வேங்கடம் மால் – திருவேங்கடமலையி லெழுந் தருளியிருக்கின்ற திருமாலினது,
கழலே – திருவடிகளையே,
விரும்பார் – விரும்பாதவர்களாய், –
விலை மாதர் – வேசையருடைய,
மலம் ஆம் கடம் – அசுத்தம்நிறைந்த பாண்டம் போன்ற உடம்பு,
மால் செய – மயக்கத்தைச் செய்ய,
மால் ஆய் – (அவர்கள்பக்கல்) மோகங்கொண்டு,
அவர் எச்சில்ஆகம் நச்சி – அவர்களுடைய எச்சிலாகிய உடம்பை விரும்பி,
தாங்கள் தமால்அழிவார் – தாங்கள் தங்கள் குணக்கேட்டினாலேயே அழிபவர்கள், –
இருந்தாலும் – (இறவாமல் உலகத்தில்) உயிர்வாழ்ந்திருந்தாலும்,
சவம் பண்டமே – பிணமாகிய பொருளே யாவர்; (எ – று.)

பகவத்விஷயத்தில் ஈடுபடாது விஷயாந்தரத்தில் ஈடுபட்டவர்களுடைய சன்மம் வீண் என்பதாம்.
மனிதசன்மமெடுத்ததன்பயனான நற்கதிப் பேற்றை அவர்கள் அடையாமையால், அவர்களுயிர்வாழ்க்கை பழுதெனப் பட்டது.
விலைமாதர் – விலைகொடுப்பவர்யாவர்க்கும் தம்நலத்தை விற்கும் பொதுமகளிர்.
மலம் ஆம் கடம் மால் செய மாலாய் அவராகம் நச்சி –
“ஊறியுவர்த்தக்கவொன்பதுவாய்ப்புலனுங், கோதிக்குழம்பலைக்குங்கும்பத் தைப் – பேதை,
பெருந்தோளி பெய்வளா யென்னும் மீப்போர்த்த, கருந் தோலாற் கண்விளக்கப்பட்டு” என்ற நாலடியாரைக் காண்க.
எச்சிலாவது – உண்டு எஞ்சியது; (எஞ்சு – பகுதி, இல் – பெயர்விகுதி, வலித்தல் – விகாரம்.)
விலைமாதருடம்பு, பலரும்விரும்பி நுகர்ந்துவிட்ட தாதலால், ‘எச்சிலாகம்’ எனப்பட்டது.
“நன்னிலைக்கட் டன்னை நிறுப்பானுந் தன்னை, நிலைகலக்கிக் கீழிடுவானும் –
நிலையினும், மேன்மே லுயர்த்து நிறுப்பானும் தன்னைத், தலையாகச் செய்வானும் தான்” என்றபடி
தம்தம் உயர்வுதாழ்வுகட்கு அவரவரு டையசெயலே காரண மாதலால், ‘தாங்கள் தமால்அழிவார்’ என்றார்.
கொண்டல் – எம்பெருமானுக்கு, நிறத்தினாலன்றி, குளிர்ச்சி கைம்மாறுகருதாது கருணைமழைபொழிதல்
தாபந்தீர்த்தல் முதலிய குணங்களாலும் உவமை.

அத்தி – ஹஸ்தீயென்ற வடசொல்லின் விகாரம்; ஹஸ்தம் – கை: இங்கே, துதிக்கை;
அதனையுடையது ஹஸ்தீ எனக் காரணக்குறி. முதலடியில், “முன்நின்று பின்சென்ற” என்றவிடத்து முரண்தொடை காண்க.

—————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவேங்கடத்தந்தாதி –21-40-

February 21, 2022

இருபது மந்தரத் தோளும் இலங்கைக்கு இறைவன் சென்னி
ஒருபதும் அந்தரத்தே அறுத்தோன் அப்பன் உந்தி முன் நாள்
தருபதுமம் தர வந்தன நான்முகன் தான் முதலா
வருபதுமம் தரம் ஒத்த பல் சீவனும் வையமுமே –21-

(இ – ள்.) இலங்கைக்கு இறைவன் – இலங்காபுரிக்கு அரசனான இராவணனுடைய,
இருபது மந்தரம் தோளும் – மந்தரமலைபோன்ற இருபது தோள்களையும்,
சென்னி ஒருபதும் – பத்துத்தலைகளையும்,
அந்தரத்தே அறுத்தோன் – ஆகாயத்தே அறுத்திட்டவனான,
அப்பன் – திருவேங்கடமுடையானுடைய,
உந்தி முன் நாள் தரு பதுமம் – திருநாபி ஆதிகாலத்திற்பூத்த தாமரைமலர்,
தர – படைக்க, –
நான்முகன் தான் முதல் ஆ வரு – பிரமன் முதலாக வருகின்ற,
பதுமம் தரம் ஒத்த – பதுமமென்னுந் தொகையளவினவான,
பல் சீவனும் – பலபிராணிவர்க்கங்களும்,
வையமும் – உலகங்களும்,
வந்தன – தோன்றின; (எ – று.)

“ஒருநாலுமுகத்தவனோ டுலகீன்றா யென்பரதுன், திருநாபிமலர்ந்ததல் லால் திருவுளத்தி லுணராயால்” என்றார்
திருவரங்கக்கலம்பகத்தும்.
குலபர்வதங்களிலொன்றாய்ப் பாற்கடலைக்கடைந்த மலையாகிய மந்தரம், போரிற் பகைவர்சேனைக்கடல்கலக்கவல்ல
வலிய பெரியதோள்களுக்கு உவமை கூறப்பட்டது.
இறைவன் – இறைமையென்றபண்பினடியாப் பிறந்த பெயர்; வ் – பெயரிடைநிலை.
இராவணனது தோள்களும் தலைகளும் ஆகாயத்தை யளாவிவளர்ந்துள்ளன வாதலால், அவற்றை “அந்தரத்தேயறுத்தோன்” என்றார்.
“அந்தரத்தே யறுத்தோன்” என்பதற்கு – (உடம்பினின்று) வேறுபடும்படி அறுத்திட்டவ னென்றும்,
(போரின்) இடையிலே அறுத்திட்டவ னென்றும் பொருள்கொள்ளலாம்; அந்தரம் – ஆகாயம்,
வேறுபாடு, இடை. பத்மம், ஜீவன் – வடசொற்கள். நான்முகன் – நான்குதிசையையும் நோக்கிய நான்குமுக முடையவன்.
தான் – அசை. பதுமமென்பது – ஒரு பெருந்தொகை; அது, கோடியினாற் பெருக்கிய கோடி. ஒன்று, பத்து, நூறு, ஆயிரம்,
பதினாயிரம், நூறாயிரம் (லக்ஷம்), பத்துலக்ஷம், நூறுலக்ஷம் (கோடி), பத்துக்கோடி, நூறுகோடி, ஆயிரங்கோடி, பதினாயிரங்கோடி,
லக்ஷங்கோடி, பத்துலக்ஷங்கோடி, நூறுலக்ஷங்கோடி என முறையே எண்வகுப்புக் காண்க:
இங்ஙனம் ஒன்றுமுதற் பதினைந்தாவதுதானமான நூறுலக்ஷங்கோடியே பதுமமென வழங்கும்; (100000000000000).
கோடாகோடி யெனவும் படும். இங்குப் பதுமமென்றது, பெருந்தொகை யென்றவாறாம். வையம் – (பொருள்களை) வைக்கும் இடம்.

———–

வையம் அடங்கலும் ஓர் துகள் வாரி ஒருதிவலை
செய்ய மடங்கல் சிறு பொறி மாருதம் சிற்றுயிர்ப்பு
துய்ய மடங்கல் இல் ஆகாயம் தான் விரல் தோன்றும் வெளி
வெய்ய மடங்கல் வடிவான வேங்கட வேதியற்கே –22-

(இ – ள்.) வெய்ய மடங்கல் வடிவு ஆன – பயங்கரமான நரசிங்கவடிவ மாகிய,
வேங்கட வேதியற்கு – திருவேங்கடமலையில் எழுந்தருளியிருப்பவனும் வேதங்களினால் எடுத்துரைக்கப்படுபவனுமான எம்பெருமானுக்கு, –
(ஐம்பெரும்பூதங்களில்), வையம் அடங்கலும் – பூமிமுழுவதும்,
ஓர் துகள் – ஒருதூசியாம்:
வாரி – ஜலம்முழுவதும்,
ஒரு திவலை – ஒரு நீர்த்துளியாம்;
செய்ய மடங்கல் – செந்நிறமான அக்கினிமுழுவதும்,
சிறு பொறி – சிறிய ஓர் அனற்பொறியாம்;
மாருதம் – காற்றுமுழுவதும்,
சிறு உயிர்ப்பு – சிறிய ஒருமூச்சாம்;
துய்ய மடங்கல் இல் ஆகாயம் தான் – சுத்தமானதும் மடங்குதலில்லாது பரந்ததுமான ஆகாயம் முழுவதும்,
விரல் தோன்றும் வெளி – விரல்களினிடையே தோன்றுகின்ற சிறிய வெளியிடமாம்; (எ – று.)

இரணியனைச் சங்கரித்தற்பொருட்டு நரசிங்கவடிவங்கொண்ட திருமால் விசுவரூபமாய்வளர்ந்த வடிவத்தின்
பெருமையை யெடுத்துக்கூறுவார், அப்பெருவடிவுக்கு முன் பஞ்சமகாபூதங்கள் மிகச்சிறுபொருளாகத் தோன்றுதலை விளக்கினார்.
மற்றநான்குபூதங்களும் தன்னுள் ஒடுங்கப்பெற்றுநிற்கும் பெருமைதோன்ற,
ஆகாயத்திற்கு “மடங்கலில்” என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது. தான் – அசை. வாரி, மாருதம், ஆகாசம் – வடசொற்கள்.
மடங்கல் – (பிடரிமயிர்) மடங்குதலையுடைய தென ஆண்சிங்கத்துக்குக் காரணக்குறி; தொழிலாகுபெயரென்றாவது,
அல் – கருத்தாப் பொருள்விகுதியென்றாவது இலக்கணங் காண்க. வேதியன் – வேதவேத்யன், வேதப்ரதிபாத்யன்.
“அடங்கலும்” என்பதை எல்லாப்பூதங்கட்கும் எடுத்துக் கூட்டுக. துய்ய என்ற குறிப்புப்பெயரெச்சத்தில்,
தூய்மையென்ற பண்புப்பகுதியின் ஈறு போய் முதல்நெடில் குறுகிற்று.

இச்செய்யுளில், பஞ்சபூதங்களும் முறைபிறழாமற் சொல்லப்பட்டது, அரதனமாலையணி;
வடநூலார் ரத்நாவளியலங்கார மென்பர்: சொல்லும் பொருள்களை முறைவழுவாதுவரச்சொல்லுதல், இதன் இலக்கணம்.

———–

வேதா வடம் அலை வெங்காலன் கையில் விடுவித்து என்னை
மாதா வடம் அலை கொங்கை உண்ணாது அருள் -மண் அளந்த
பாதா வடம் அலை மேல் துயின்றாய் கடற் பார் மகட்கு
நாதா வட மலையாய் அலர் மேல் மங்கை நாயகனே –23-

(இ – ள்.) மண் அளந்த பாதா – பூமியை யளந்த திருவடியை யுடைய வனே!
அலைமேல் வடம் துயின்றாய் – பிரளயப்பெருங்கடலில் ஆலிலை யின்மீது பள்ளிகொண்டு யோகநித்திரைசெய்பவனே!
கடல் பார் மகட்கு நாதா – கடல்சூழ்ந்த நிலவுலகத்தின் அதிதேவதையான பூமிப்பிராட்டிக்குத் தலைவனே!
வட மலையாய் – வடக்கிலுள்ள திருவேங்கடமலையில் எழுந் தருளியிருப்பவனே!
அலர்மேல் மங்கை நாயகனே – அலர்மேல்மங்கைப் பிராட்டிக்குக் கணவனே! – என்னை -,
வேதா வடம் அலை வெம் காலன் கையில் விடுவித்து – பிரமனும் பாசத்தாற்கட்டிவருத்துகிற கொடிய யமனும் என்கிற
இவர்களது கைகளினின்று விடுதல்பண்ணி,
மாதா வடம் அலைகொ ங்கை உண்ணாது – (யான் இனி) ஒருதாயினது ஆரங்கள்புரளப்பெற்ற தனங் களின் பாலை உண்ணாதபடி,
அருள் – கருணைசெய்வாய்; (எ – று.)

படைத்தற்கடவுளான பிரமனது கைவசத்தினின்று விடுவித்தலாவது – பிறப்புத்துன்பமில்லாதபடி செய்தல். பிராணிகளை
யழிப்பவனான யமனது கைவசத்தினின்று விடுவித்தலாவது – மரணவேதனையும் நரகத்துன்பமுமில் லாதபடி செய்தல்.
மாதாகொங்கை யுண்ணாதருளுதலாவது – மீளவும் பிறப் பில்லாதபடி செய்தல். எனக்கு ஜநந மரணதுக்கங்களைப் போக்கி
யான் மீண்டும் ஒருபிறப்பெடுக்கவேண்டாதபடி எனதுகருமங்களையெல்லாந் தொலைத்து மீளாவுலகமாகியமுத்தியை
எனக்குத்தந்தருளவேண்டு மென்ற பொருளை இங்ஙனம் வேறுவகையாற்கூறினது, பிறிதினவிற்சியணி.
வேதாஎன்றவட மொழிப்பெயர் – விதித்தற்கடவுளென்றும், காலன் என்ற வடமொழிப்பெயர் –
(பிராணிகளின்) ஆயுட்காலத்தைக் கணக்கிடுபவ னென்றும் காரணப் பொருள்படும்.
வடம் – கயிற்றுவடிவமான யமனாயுதம். வடம் மலை என்றும் பதம்பிரிக்கலாம்: மலைதல் – பொருதல்.
கையில் – இல் – ஐந்தனுருபு, நீக்கம். வடம் – மணிவடம். அலர்மேல்மங்கை என்றது, திருவேங்கடமுடையானது தேவியாரின் திருநாமம்;
“அகலகில்லேனிரையுமென் றலர்மேன் மங்கை யுறைமார்பா,…… திருவேங்கடத்தானே” என்ற திருவாய்மொழியைக் காண்க:
தாமரைமலரின்மேல் வாழ்கின்றவ ளென்பது பொருள்; பத்மாவதீ என்ற வடமொழித்திருநாமமும் இப்பொருள்படுவதே.
“பார்மகட்கு நாதா” என்பதற்கு – பூமிதேவியின் பெண்ணான (பூமியினின்று தோன்றியவளான)
சீதாபிராட்டிக்குக் கொழுநனே யென்றும் உரைக்கலாம்.

———-

நாயகராத் திரியும் சில தேவர்க்கு நாண் இலை கொல்
தூய கராத்திரி மூலம் எனாமுனம் துத்திப் பணிப்
பாயக ராத்திரி மேனி அம்மான் பைம்பொன் வேங்கடவன்
தீய கராத்திரி சக்கரத்தால் கொன்ற சீர் கண்டுமே –24-

(இ – ள்.) தூய கராத்திரி – பரிசுத்தமான யானை,
மூலம் எனா முனம் – ஆதிமூலமேயென்றுகூப்பிடுதற்குமுன்னமே (கூப்பிட்டவுடனே வெகுவிரைவில் என்றபடி),
துத்தி பணி பாயகம் ராத்திரி மேனி அம்மான் பைம் பொன் வேங்கடவன் – புள்ளிகளையுடைய படமுள்ள ஆதிசேஷனாகிய சயநத்தையும் இருள்போலுங் கரியதிருமேனியையுமுடைய தலைவனும் பசும் பொன்விளையுந்திருவேங்கடமலையில் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமான்,
தீய கரா – (அந்தயானையைக்கௌவியிருந்த) கொடிய முதலையை,
திரி சக்கரத்தால் கொன்ற – சுழற்றிவிட்ட சக்கராயுதத்தினாற் கொன்ற,
சீர் – சிறப்பை,
கண்டும் – பார்த்திருந்தும், –
நாயகர் ஆ திரியும் சில தேவர்க்கு நாண் இலைகொல் – கடவுளரென்று திரிகின்ற வேறுசில தேவர்களுக்கு வெட்கமில்லையோ? (எ – று.)

திருமாலே பரம்பொரு ளென்ற உண்மையை இங்ஙனங் காரணங் காட்டி வெளியிட்டார்.
கஜேந்திராழ்வான் இன்னதெய்வமென்று பெயர் குறியாது “ஆதிமூலமே!” என்று பொதுப்படக் கூப்பிட்டபொழுது
திருமாலல்லாத பிறதேவரெல்லாரும் தாம்தாம் அச்சொல்லுக்குப் பொருளல்ல ரென்று கருதி யொழிய,
அதற்குஉரிய அத்திருமால்தானே வந்து அருள் செய்தமை கருதத்தக்கது;

“அழைத்தது செவியிற்கேட்டும் அயனரனாதியாயோர்,
புழைக்கைவெங்கரிமுன் காப்பப் புகுந்தில ராதியாகித்,
தழைத்த காரணனேயென்ற தனிப்பெயர்ப்பொருள் யாமல்லோம்,
இழைத்தகாரியம் யாமாவோ மென்செய்துமாலின் றென்றார்” என்ற ஸ்ரீபாகவதத்தையுங் காண்க.

“கானேந்துதாமரைவாவியுளானை கராவினயர்ந்து,
ஊனேந்திமூலமெ ன்றோதியநாட்சென்றுதவுகையால்,
தேனேந்து சோலையரங்கனல்லால் தெய்வமில்லையென்றே,
மானேந்துகையன் மழுவேந்தினா னிந்தமாநிலத்தே”,

“மத்தக் கரியைக் கராப்பற்றிநின்றதொர் வாவியுள்ளே,
சித்தந்தெளிந்து முறையிடும்போது செழுந்துளவக்,
கொத்துக்கிளர்முடிக் கோவிந்தவென் றதுகூப்பிட்டதோ,
செத்துக்கிடந்தனவோ கெடுவீ ருங்கள்தெய்வங்களே”,

“வெங்கண்வேழமூலமென்ன வந்த துங்கள்தேவனோ” என்று இவ்வாசிரியர் பிறவிடங்களிற் கூறியவை இங்கு ஒப்புநோக்கத்தக்கன.

மூலமென்றவுடனே கொன்றவென விரைவுகுறித்தற்பொருளில் ‘மூலமெனாமுனம் கொன்ற’ எனக் காரணத்தின்
முன் காரியம் நிகழ்ந்ததாகக் கூறினது, மிகையுயர்வுநவிற்சியணி.
ஆக, இல்லை, என்னா, முன்னம் என்பன – ஆ. இலை, எனா, முனம் என்று தொகுத்தல்விகார மடைந்தன.
பரம்பொருளுணர்ச்சி கைகூடப் பெற்றதனால், ‘தூயகராத்திரி’ என்று சிறப்பித்துக் கூறினார்.
கராத்திரி – தீர்க்கசந்திபெற்ற வடமொழித்தொடர்; கரஅத்ரி என்றுபிரிந்து, துதிக்கையையுடையமலை யென்றுபொருள்படும்:
எனவே, யானையாயிற்று; ‘கைம்மலை’ என்பது, இப்பொருள்கொண்ட தமிழ்ப் பெயர்; பிறகுறிப்பு.
பணம் – படம்; அதனையுடையது பணீ என வடமொ ழிக்காரணக்குறி; இது ஈயீறு இகரமாய்ப் பணியென நின்றது.
பாய் அகம் – பாயின்இடம். ராத்ரி, க்ராஹம், சக்ரம், ஸ்ரீ என்ற வடசொற்கள் விகாரப் பட்டன. ராத்திரிமேனி –
“இருளன்னமாமேனி” ராத்திரி இருளுக்குக் காலவாகுபெயர். அம்மான் – அந்த மகான்.
பொன் குறிஞ்சி நிலத்துக் கருப் பொருள்களுள் ஒன்றாதலின், ‘பைம்பொன்வேங்கடம்’ எனப்பட்டது;
“பொன்னும்மணியும் பொலிந்தோங்கிப் பார்மகட்கு, மின்னுமணிமுடியாம் வேங்கடமே” என்றார் திருவேங்கடமாலையிலும்,
தீய கரா – கொண்டது விடாத மூர்க்ககுணமுடைய முதலை. கண்டும், உம் – உயர்வுசிறப்பு.

———-

கண்டவன் அந்தரம் கால் எரி நீர் வையம் காத்து அவை மீண்டு
உண்டவன் அம் தரங்கத்து உறைவான் உயர் தந்தை தமர்
விண்டவன் அந்த மேலவன் வேங்கடமால் அடிமை
கொண்ட அனந்தரத்து உம்பர் நினைக்கவும் கூற்று அஞ்சுமே –25–

(இ – ள்.) அந்தரம் – ஆகாயம்,
கால் – காற்று,
எரி – நெருப்பு,
நீர் – ஜலம்,
வையம் – பூமி,
(என்ற ஐம்பெரும்பூதங்களையும்),
கண்டவன் – படைத்தவனும்,
அவை – அவற்றை,
காத்து, பாதுகாத்து,
மீண்டு – பின்பு (கற்பாந்தகாலத்தில்),
உண்டவன் – உட்கொண்டு தன்வயிற்றில் வைத்தருளியவனும்,
அம் தரங்கத்து உறைவான் – அழகிய (திருப்பாற்) கடலிற் பள்ளி கொண்டிருப்பவனும்,
உயர் தந்தை தமர் விண்டவன் – சிறந்த தந்தையும்மற்றையுறவினரும் இல்லாதவனும்,
அந்தரம் மேலவன் – பரமபதத்தி லெ “ந்தருளியிருப்பவனும், (ஆகிய),
வேங்கடம் மால் – திருவேங்கடமலையில் வாழ்கின்ற திருமாலுக்கு,
அடிமை கொண்ட அனந்தரத்து – (நீங்கள்) அடிமை செய்தலை மேற்கொண்டபின்பு,
உம் பேர் நினைக்கவும் கூற்று அஞ்சும் – உங்கள்பெயரை நினைத்தற்கும் யமன் அஞ்சுவான்; (எ – று.) – ஈற்றுஏகாரம் – தேற்றம்.

அனைவரையும் அஞ்சுவிப்பவனான யமன் திருமாலடியார்க்கு அஞ்சுவன்: ஆதலால், நீங்கள் எம்பெருமானுக்கு அடிமை
பூண்டு உய்யக்கடவீர் என்று உலகத்தார்க்கு உபதேசித்தபடியாம்.
“நரகந்தரம்புவி யிம்மூன்றி டத்துநனிமருவு, நரகந்தரங்கித்து வெங்காலற்கஞ்சுவர் நாயகவா,
நரகந்தரம் புட்பிட ரே றரங்கர் நல்லாய்க்குலத்தி,ந ரகந்தரங்கமுற்றா ரடியார்க்கு நமனஞ்சுமே” என்றார் திருவரங்கத்தந்தாதியிலும்.
அடியார்கள் பிறவுயிர் கள்போலக் கருமபந்தமுடையவரல்ல ராகுதலால், கர்மிகளைத் தண்டிப்பவனான யமனுக்கு அஞ்சாராக,
அவர்களைக் குறித்து அவன் அஞ்சுவ னென்க. திருமாலடியார்க்கு யமன் அஞ்சுதலை
“திறம்பேன்மின் கண்டீர் திருவடி தன்னாமம், மறந்தும் புறந்தொழா மாந்த – ரிறைஞ்சியுஞ்,
சாதுவராய்ப் போதுமின்க ளென்றான் நமனுந் தன், தூதுவரைக் கூவிச்செவிக்கு” என்ற அருளிச்செயலினாலும் அறிக.

“ஒருகாலத்தில், பாசத்தைக் கையிலெடுத்துக் கொண்டு பிராணிகளைக் கொண்டுவரும்படி புறப்பட்ட தன்சேவகனை
யமதருமராசனானவன் அந்தரங்கத்தில் அழைத்து “ஓ படனே! நீ உன்தொழிலை நடத்திவருகையில்
ஸ்ரீமதுசூதநனை ஆசிரயித்தவரைத் தொடாதே, விட்டுவிடு; நான் மற்றவர்கட்குப்பிரபுவேயல்லது வைஷ்ணவர்கட்குப்பிரபு வல்லேன்……
“கமலநயன! வாசுதேவ! விஷ்ணுவே! தரணிதர! அத்சுத! சங்கசக்ரபாணி! நீ அடியேங்களுக்குச் சரணமாகவேண்டும்” என்று
எவர்கள் சொல்லிக்கொண்டேயிருப்பார்களோ, அப்படிப்பட்டமகா பரிசுத்தபுருஷரை ஓபடனே! நீ கண்ணெடுத்துப்பாராமல் தூர ஓடிப்போ;
விகார நாசாதிகளில்லாமல் சத்தியஞாநாநந்தமயனாய்ப் பிரகாசிக்கின்ற அந்த எம் பெருமான் எவனுடைய
இருதயகமலத்தில் வாசஞ்செய்துகொண் டிருப்பனோ, அந்தமகாபுருஷனுடைய கடாக்ஷம் பிரஸரிக்கு மிடங்களிலெல்லாம்
நீ செல்லத்தக்கவனல்லை: நானும் செல்லத்தக்கவனல்லேன்; பதறிச்சென் றால், அவ்வெம்பெருமானுடைய திருவாழியின்
தேஜோவிசேஷத்தினாலே பதராக்கப்படுவோம்; அந்தமகாபுருஷன் ஸ்ரீவைகுண்ட திவ்வியலோகத்துக்கு எழுந்தருளத்தக்கவன்”
என்று கூறினன்” என்ற வரலாற்றை ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் யமகிங்கரசம்வாதரூபமான வைஷ்ணவப்பிரபாவத்திற் பரக்கக் காணலாம

படைத்தல் காத்தல் ஒடுக்குதல் என்னும்முத்தொழிலையுஞ் செய்தருள் பவன் திருமாலே யென்பதை,
“கண்டவன்… காத்து அவை மீண்டு உண்டவன்” என்று விளக்கினார்.
கண்டவன்என்பது – செய்தவனென்னும் பொருளதாதலை, “முற்பகற் கண்டான் பிறன்கேடு” என்றவிடத்துங் காண்க;
உண்டாக்கிப் பார்த்தவ னென்க. அந்தரங் கா லெரி நீர் வையம் என்ற ஐம்பூதமுறைமை, உற்பத்திக்கிரமம்பற்றியது;
ஆகாயத்திலிருந்து வாயுவும், வாயுவிலிருந்து அக்கினியும், அக்கினியிலிருந்து ஜலமும், ஜலத்திலிருந்து பூமியும் உண்டானதாக வேதம் ஓதும்.
அந்தரங்கத்து உறைவான் என்று எடுத்து, (அடியார்களுடைய) உள்ளத்தில் வாழ்பவனெனினும் அமையும்.
சீவகசிந்தாமணியில் “உயர்தந்தை” என்றவிடத்து ஆசிரியர் நச்சினார்க்கினியர்
“பிள்ளை யுயர்ச்சிமிகுதிக்குக் காரணமான தந்தை” என உரைத்துள்ளார். தமது – கிளைப் பெயர்.
பரமாத்மாவாகிய எம்பெருமான் துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலநத்தின்பொருட்டுத் தனது இச்சையினால் இராமகிருஷ்ணாதி
அவதாரங்கள் கொள்ளும்போதன்றி இயல்பிலே ஜீவாத்மாக்கள்போலக் கருமவசத்தாலாகும் பிறப்பையும்
தந்தை தாய் மக்கள் தம்பி தமையன் முதலிய சுற்றத்தவரையு முடையவனல்ல னென்பது, “தந்தை தமர் விண்டவன்” என்பதன் கருத்து.

“உயரத்தமமர்விண்டவன்” என்ற பாடத்துக்கு – உயர் அத்தம் – சிறந்த அர்த்தத்தை (பரமார்த்தமாகிய ஞானப்பொரு ளடங்கிய கீதையை),
அமர் – பாரதயுத்தத்தில், விண்டவன் – (அருச்சுனனுக்குத்) திருவாய்மலர்ந்தருளிய வன் என்று பொருள் காண்க.
அதன்விவரம்: மகாபாரதயுத்தத்தில் முதல் நாட்போர்த்தொடக்கத்தில் எதிர்வந்துநின்ற வீரர்களெல்லாரும் பாட்டனும்
அண்ணன்தம்பிமாரும் மாமனும் உறவினரும் கல்விபயிற்றிய ஆசாரியரும் மனங்கலந்தநண்பரு மாகவே யிருக்கக் கண்டு
“உற்றாரையெல்லாம் உடன்கொன்று அரசாளப், பெற்றாலும் வேண்டேன் பெருஞ்செல்வம்” என்றுஎண்ணிப் போர்
புரியேனென்று காண்டீவம்கைந்நெகிழத் தேர்த்தட்டின்மீதே திகைத்துநின்ற அருச்சுனனுக்குக் கண்ணன் தத்துவோபதேசஞ் செய்து
தனது விசுவரூபத்தைக்காட்டி அவனது மயக்கத்தை ஓட்டி அவனைப் போர்புரியுமாறு உடன்படுத்தினன் என்பதாம்.
அப்பொழுது உபதேசித்த தத்துவப்பொருளே, ஸ்ரீபகவத்கீதையென வழங்கப்படுகின்ற நூலாம்.
அர்த்தம், ஸமரம் என்ற வடசொற்கள் – அத்தம், அமர் என்று விகாரப்பட்டன.

நம் தரம் மேலவன் என்று பதம்பிரித்து, ஜீவாத்மாக்களாகிய நம்முடைய தகுதிக்கெல்லாம் மேம்பட்ட
நிலைமையுடைவனென்று உரைத்தலுமொன்று. மால் அடிமைகொண்ட அநந்தரத்து என்பது,
திருமால் ஆட் கொண்டபின்பு என்றும் பொருள்படும். கூற்று – (பிராணிகளின் உடலையும் உயிரையும் வெவ்வேறு)
கூறாக்குந் தேவன். கூற்று அஞ்சும் – செய்யுமென்முற்று – ஆண்பாலுக்கு வந்தது.

————

அஞ்சு அக்கர வட மூலத்தன் போதன் அறிவு அரிய
செஞ்சக்கர வட வேங்கட நாதனை -தேசத்துள்ளீர்
நெஞ்சக் கரவடம் நீக்கி இன்றே தொழும் நீள் மறலி
துஞ்சக் கரவடம் வீசும் அக்காலம் தொழற்கு அரிதே –26-

(இ – ள்.) தேசத்து உள்ளீர் – நாட்டிலுள்ளவர்களே! –
அஞ்சு அக்கரம் வடம் மூலத்தன் – பஞ்சாக்ஷரமந்திரத்துக்குஉரியவனும் ஆலமரத்தினடியில்வீற்றிருந்தவனுமான சிவபிரானும்,
போதன் – பிரமதேவனும்,
அறிவு அரிய – அறிதற்கு அரியவனான,
செம் சக்கரம் வட வேங்கடம் நாதனை – சிவந்தசக்கராயுதத்தையேந்திய வடதிருவேங்கடமுடையானை,
நெஞ்சம் கரவடம் நீக்கி இன்றேதொழும் – மனத்திலுள்ளவஞ்சனையைஒழித்து இப்பொழுதே (நீங்கள்) வணங்குங்கள்; (ஏனென்றால்,-)
நீள் மறலி – பெரியவடிவமுடைய யமன்,
துஞ்ச – (நீங்கள்) இறக்கும்படி,
கரம் வடம் வீசும் அ காலம் – தன்கையிற் கொண்ட பாசாயுதத்தை (உங்கள்மேல்) வீசும் அந்தஅந்திமகாலத்தில்,
தொழற்கு அரிது – வணங்குதற்கு இயலாது; (எ – று.) – ஈற்றுஏகாரம் – தேற்றம்.

“ஒற்றைவிடையனும் நான்முகனும் உன்னையறியாப் பெருமையோனே,”
“பெண்ணுலாஞ்சடையினானும் பிரமனு முன்னைக்காண்பா, னெண்ணிலாவூரியூழிதவஞ்செய்தார்வெள்கிநிற்ப” என்ற
ஆழ்வார்களருளிச்செயல்களைப் பின்பற்றி “வடமூலத்தன் போத னறிவரிய நாதன்” என்றும்,
“எய்ப்பென்னைவந்துநலியும்போ தங்கேது நானுன்னை நினைக்கமாட்டேன், அப்போதைக் கிப்போதே சொல்லிவைத்தேன்”
என்ற ஆழ்வாரருளிச்செயலைப் பின்பற்றி
“இன்றேதொழும் மறலிவடம்வீசுமக்காலம் தொழற்கரிது” என்றும் கூறினார்.
முன்னொருகாலத்திற் சிவபிரான் தக்ஷிணாமூர்த்தியென் னுங்குருவடிவமாய்க் கைலாசகிரியில் தென்சிகரத்திலே
கல்லாலமரத்தின் கீழ்வீற்றிருந்து பிரமபுத்திரரான ஸநகர் ஸநந்தநர் ஸநத்குமாரர் ஸநத்ஸுஜாதர் என்ற முனிவர்
நால்வர்க்கும் ஞானோபதேசஞ்செய்தன னாதலால், “வடமூலத்தன்” எனப்பட்டான்;
“ஆலநிழற்கீ ழறநெறியை நால்வர்க்கு, மேலையுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன் –
ஞால, மளந்தானை யாழிக்கிட ந்தானை யால்மேல், வளர்ந்தானைத் தான்வணங்குமாறு,”
“ஆலமரநீழலற நால்வர்க்கன்றுரைத்த, ஆலமமர்கண்டத்தரன்” என்றார் பெரியாரும்.
இங்குக் கூறிய நால்வர் – அகஸ்த்ய புலஸ்த்ய தக்ஷ மார்க்கண்டேய ரென்றலுமுண்டு.

அக்ஷரம், வடமூலம், சக்ரம், தேசம், கரம், காலம் – வடசொற்கள். கரவடம் – கபடம். மறல் – கொடுமை: அதனையுடையவன்,
மறலி; இ – பெயர்விகுதி. துஞ்சுதல் – தூங்குதல். இறத்தலைத் துஞ்சுதலென்பது, மங்கல வழக்கு;
மீளஎழுந்திராத பெருந்தூக்க மென்க. தொழற்குஅரிது என்ற விடத்து, நான்கனுருபு – கருத்தாப்பொருளில் வந்தது.

————-

தொழும் பால் அமரர் தொழும் வேங்கடவன் சுடர் நயனக்
கொழும் பாலனை ஒரு கூறு உடையான் நந்த கோபன் இல்லத்து
அழும் பாலன் ஆகிய காலத்து பேய்ச்சி அருத்து நஞ்சைச்
செழும் பால் அமுது என்று உவந்தாற்கு என் பாடல் சிறக்கும் அன்றே –27–

(இ – ள்.) சுடர் நயனம் கொழும் பாலனை – நெருப்புக்கண்ணைக் கொழுமையுள்ள நெற்றியி லுடையனான சிவபிரானை,
ஒரு கூறு உடையான் – (தனது திருமேனியில்) ஒரு பாகத்திலே (வலப்பக்கத்திலே) கொண்டவனும்,
நந்தகோபன் இல்லத்து – நந்தகோபனுடைய திருமாளிகையில்
அழும் பாலன் ஆகிய காலத்து – அழுகின்ற குழந்தையாய்த் தான் வளர்ந்தகாலத்தில்,
பேய்ச்சி அருத்து – பேய்மகளாகிய பூதனை ஊட்டிய,
நஞ்சை – விஷத்தை,
செழும் பால் அமுது என்று உவந்தான் – செழித்த பா லாகியஉண வென்று விரும்பி யுட்கொண்டவனுமான,
தொழும்பால் அமரர் தொழும் வேங்கடவற்கு – அடிமைத்தன்மையால் தேவர்கள் வணங்கப்பெற்ற திருவேங்கடமலையின் தலைவனுக்கு, –
என் பாடல் சிறக்கும் அன்றே – என்னுடைய கவியும் சிறந்ததாகுமன்றோ? (எ – று.) –
அன்றே – தேற்றம்.

தமோகுணதேவதையாகையால் உக்கிரமூர்த்தியான விஷகண்டனைத் தனது திருமேனியில் ஒருபக்கத்திலே ஏற்றுக்
கொண்டருளியவனும், வஞ்ச னையிற்சிறந்தபூதனை உண்பித்த விஷத்தை அமுதுபோல உட்கொண்டவனு மாகிய திருமால்,
அவ்வாறே, யான்பாடும் இழிவானசெய்யுள்களையும் குற்றம் பாராது இனியனவாக அங்கீகரிப்பன் என்பதாம்.
சுடர்நயனக் கொழும்பால னையொரு கூறுடையான், பேய்ச்சியருத்துநஞ்சைச் செழும்பாலமுதென்றுவந்தான் என்ற விசேஷணங்கள்
ஒருகருத்தை யுட்கொண்டன வாதலால், கருத்துடையடைமொழியணி. “உவந்தாற்கு” என்பதி லுள்ள நான்கனுருபு,
பிரித்து “வேங்கடவன்” என்பதனோடு கூட்டப்பட்டது. சுடர்நயனக் கொழும்பாலனை யொருகூறுடையான் –
“வலத்தனன் திரிபுரமெரித்தவன்”,
“பிறைதங்குசடையானை வலத்தேவைத்து” என்றார் ஆழ்வார்களும்.
அமரர் – “அயர்வறுமமரர்களதிபதி” என்ற திருவாய்மொழியிற் போல நித்தியசூரிக ளெனினுமாம்.

இச்செய்யுள், எம்பெருமானது திருவருட்சிறப்பைக் கூறு முகத்தால் அவையடக்கங் கூறியவாறாம்.

நயனம், பாலம், பாலன் – வடசொற்கள். பாலமுது – இருபெயரொட் டுப்பண்புத்தொகை; ஒருபொருட்பன்மொழியுமாம்.
அழும்பாலன் – சிறுகுழந்தை யென்றபடி; இன்னகாரணமென்று உணரவொண்ணாதபடியும் எளிதிற்
சமாதானப்படுத்தமுடியாதபடியும் அழுதல், சிறுகுழந்தையினியல்பு.

————

சிறக்கும் பதம் தருவார் திருவேங்கடச் செல்வர் செய்ய
நிறக்கும் பதம் தொழுது உய்ய எண்ணீர் -நெறியில் பிழைத்து
மறக்கும் பதந்தியும் சேலும் அசுணமும் வண்டினமும்
பறக்கும் பதங்கமும் போல் ஐவரால் கெடும் பாதகரே –28–

(இ – ள்.) மறம் கும்பம் தந்தியும் – கோபகுணத்தையும் மஸ்தகத்தையு முடைய யானையும்,
சேலும் – மீனும்,
அசுணமும் – அசுணமென்ற பறவையும்,
வண்டு இனமும் – வண்டுவகைகளும்,
பறக்கும் பதங்கமும் – பறக்கின்ற விட்டிற்பறவையும்,
போல் -, நெறியின் பிழைத்து – நன்னெறியினின் றுதவறி,
ஐவரால் கெடும் – பஞ்சேந்திரியங்களால் அழிந்துபோகின்ற,
பாதகரே – தீவினையுடையவர்களே! – (நீங்கள்),
சிறக்கும் பதம் தருவார் – (எல்லாப்பதவிகளினுஞ்) சிறந்த பரமபதத்தைத் (தம்அடியார்க்குத்) தந்தருள் பவரும்,
திருவேங்கடம் செல்வர் – திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக் கின்றவரும் எல்லாச்செல்வங்கட்கும் உரியதலைவருமான எம்பெருமானுடைய,
செய்ய நிறக்கும் பதம் – சிவந்த நிறமமைந்த திருவடிகளை,
தொழுது – வணங்கி,
உய்ய – ஈடேறுமாறு,
எண்ணீர் – நினையுங்கள்; (எ – று.)

ஐம்பொறிகட்கு உரியசப்த ஸ்பர்ச ரஸரூப கந்தமென்னும் ஐம்புலன்க ளிலாசையாற் கெடுதற்கு,
யானை முதலிய ஐந்து பிராணிகள் உவமைகூறப்பட்டன. அதன் விவரம் –
யானை பரிசத்தால் அழியும்: எங்ஙனமெனின், – யானை பிடிக்கும்வேடச்சாதியர் யானைக்காட்டிற்சென்று அங்கு
ஒருபெரும்பள்ளம் பறித்து அதன்இப்புறத்தில் தாம்பழக்கியபெண்யானையை நிறுத்திவைக்க,
அப்புறத்திலுள்ள ஆண்யானை அதனோடுசேரும் விருப்பத்தால் ஓடிவருகையில் அப்படுகுழியில்வீழ்ந்து மேலேறமாட்டாது அகப்பட்டுக்கொள்ள,
அதனை அவ்வெயினர்கள் பின்பு தந்திரமாக விலங்கிட்டு மேலேற்றித் தம் வசப்படுத்திக்கொள்வர்;
இது, மெய்யென்னும் பொறிக்குஉரிய ஊற்றின்பத்திலாசையால் அழிந்தது.

மீன் ரசத்தால் அழியும்; எங்ஙனமெனின், –
செம்படவர் மீன்பிடித்தற்பொருட்டு நீர்நிலையிலிட்டதூண்டிலில் வைத்துள்ள தசையை யுண்ணவேண்டுமென்னும்
அவாவினால் மீன்விரைந்துவந்து அதில் வாய்வைத்து, அத்தூண்டில்முள் தன்வாயில்மாட்டிக் கொள்ளுதலால் மீள மாட்டாதாக,
அதனை வலைஞர் எடுத்துப் பறியிற்போகட்டுக்கொள்வர்;
இது, வாய்என்னும் பொறிக்கு உரிய சுவையின்பத்தி லாசையால் அழிந்தது.

அசுணம் சப்தத்தால் அழியும்; எங்ஙனமெனின், –
இசையறிவிலங்காகிய அசுணமென்னுங் குறிஞ்சிநிலப்பறவையைப் பிடிக்கக்கருதிய அந்நிலத்துமக்கள் செழுமையுள்ள
மலைச்சாரலிலே நிலாவிளங்கும் மாலைப்பொழுதில் வேய்ங்குழல்முதலியவற்றால் இனியஇசைபாட,
அச்சங்கீதத்தைக்கேட்டு ஆனந்தமடையவிரும்பி அப்பறவைகள் அருகில்வந்து அவ்வின்னிசையைச் செவியிலேற்றுப்
பரவசப்பட்டிருக்கிறசமயத்தில் அக்கொலையாளர் பறைகொட்ட அக்கொடியஓசையைக்கேட்டவுடன் அப்பறவைகள் இறந்துபடும்.
அவற்றை அவர் எடுத்துச்செல்வர்; இது, செவியென்னும்பொறிக்கு உரிய ஓசையின்பத்தி லாசையால் அழிந்தது.

வண்டு கந்தத்தால் அழியும்; எங்ஙனமெனின், –
வண்டுகள் மலர்களின் நறுமணத்தை அவாவித் தாமரைமுதலிய பெருமலர்களினிடையே புக்கிருக்கும்போது அவை குவிந்துகொள்ள,
அங்கு அகப்பட்டு வருந்தும்; அன்றியும், சண்பகமலரின் நறுமணத்தையும் அதன்நறுந்தேனையும் நுகரும் அவாவினால்
அதனை அணுகிமொய்த்து அதன் உஷ்ணம் தாக்கப் பொறாது இறந்துபடும்;
மற்றும், நறுமணவிருப்பினால் தேனிலேமொய்த்து அதனை மிகுதியாகஉண்டு மயங்கி மீளமாட்டாது சிக்கியழிதலும் உண்டு;
இது, மூக்கு என்னும் பொறிக்கு உரிய நாற்றவின் பத்திலாசையால் அழிந்தது.

விட்டில் ரூபத்தால் அழியும்; எங்ஙனமெனின், –
விட்டிற்பறவை விளக்கொளியைக் கண்டவுடனே அதனிடத்து அவாவோடு ஓடிவந்து விழுந்து இறக்கும்;
இது, கண்ணென்னும் பொறிக்கு உரிய ஒளியி லாசையால் அழிந்தது. ஐம்புல நுகர்ச்சியில் ஒவ்வொன்றால் அழிகின்ற
யானை முதலிய ஐந்து பிராணிகளையும், ஐம்புலன்களையும் ஒருங்கு நுகரத்தொடங்கி அழிகின்ற பாவிகட்கு உவமைகூறினார்.
“மணியிசைக்காவந்திடுமாச் செவியான்மாயும் மகிழ்புணர்ச்சிக்காகஇபம் மண்ணிற்சிக்கும்,
கணில்விளக்கைக்கண்டு விட்டில் வீழ்ந்து பொன்றும் கடுந்தூண்டிற்கவ்வி மச்சம் வாயான்மாளும்,
அணுகி யளி நாசியிற் செண்பகமோந்தெய்க்கும் ஐம்பொறியுமுடைய நா னலைந்திடாமல்,
இணையிலுபதேசத்தால் திருத்திக்காக்கைக்கு எழிற்குருவா யுதித்தனையே யெம் பிரானே,”
“அழுக்குடைப்புலன்வழி யிழுக்கத்தினொழுகி, வளைவாய்த் தூண்டிலினுள் ளிரைவிழுங்கும்,
பன்மீன்போலவும், மின்னுறுவிளக்கத்து விட்டில்போலவு, மாசையாம்பரிசத்தி யானைபோலவு,
மோசையின்விளிந்த புள்ளுப்போலவும், வீசியமணத்தின் வண்டுபோலவு, முறுவதுணராச் செறுவுழிச் சேர்ந்தனை” என்பவை இங்குக் காணத்தக்கன.

அசுணமென்பது ஒருவகைமிருக மென்றும், அது மானில் ஒருவகை யென்றும், அது வேடர்கள்பாடும்இனிய இசையைக்கேட்டு
ஆனந்தமடையவிரும்பி அருகில் ஓடிவந்து அவ்வின்னிசையைச் செவியிலேற்றுப் பரவசப்பட்டுநிற்கையில்
அவர்களாற் கவர்ந்து கொள்ளப்பட்டு அழியு மென்றுங் கூறுதலு முண்டு.

பதம், கும்பதந்தீ, பதங்கம், பாதகம் – வடசொற்கள். செல்வர் – இம்மை மறுமைவீடுகளில் அனுபவிக்கப்படுஞ்
செல்வங்கட்கெல்லாம் உரியதலைவர். திருவேங்கடச்செல்வர் செய்யநிறக்கும்பதம் தொழுது நெறியிற்பிழைத்து
(சந்மார்க்கத்தில் வாழ்ந்து) உய்ய எண்ணீர்: (அவர் உங்கட்குச்) சிறக்கும்பதந்தருவார் என்றுகூட்டிப் பொருள் கொள்ளினுமாம்.
பிழைத்துஎன்ற விடத்து “பிறழ்ந்து” என்றும் பாடமுண்டு.
“யானை, யறிந்தறிந்தும் பாகனையே கொல்லும்” என்றபடி தீராக்கோபமுடைய தாதலால், “மறம்” அதற்கு அடைமொழியாக்கப்பட்டது.
கும்பம் – யானைத்தலையிற் குடங்கவிழ்த்தாற் போலுள்ள உறுப்பு. தந்தமுடையது தந்தீ எனக் காரணக்குறி.

———-

பாதம் அரா உறை பாதளத் தூடு பகிரண்டத்துப்
போது அமர் ஆயிரம் பொன் முடி ஓங்கப் பொலிந்து நின்ற
நீதமர் ஆனவருக்கு எவ்வாறு -வேங்கடம் நின்றருளும்
நாத மராமரம் எய்தாய் முன் கோவல் நடந்ததுவே –29-

(இ – ள்.) வேங்கடம் நின்று அருளும் நாத – திருவேங்கடமலையில் நின்ற திருக்கோலமாக எழுந்தருளியிருந்து
(எல்லாவுயிர்கட்கும்) அருள்புரிகின்ற தலைவனே!
மராமரம் எய்தாய் – ஏழு மராமரங்களை அம்பெய்து துளைத்தவனே! –
பாதம் – திருவடிகள்,
அரா உறை பாதாளத்தூடு – பாம்புகள் வசிக்கின்ற பாதாளலோகத்திலும்,
போது அமர் ஆயிரம் பொன் முடி – (சூட்டிய) மலர்கள் பொருந்திய அழகிய ஆயிரந்திருமுடிகள்,
பகிர் அண்டத்து – இவ்வண்டகோளத்தின் மேன்முகட்டுக்கு வெளியிலும்,
ஓங்க – வளர்ந்துதோன்ற,
பொலிந்து நின்றாய் – (விசுவரூபத்தில்) விளங்கிநின்றவனான, நீ -,
முன் – முற்காலத்தில்,
தமர் ஆனவர்க்கு – நினது அடியார்களான முதலாழ்வார்கட்குக் காட்சிகொடுத்தற்பொருட்டு,
கோவல் நடந்தது – திருக்கோவலூரில் (அவர்களிருந்தவிடத்துக்கு) நடந்துசென்றது, எ ஆறு – எங்ஙனமோ? (எ – று.)

இச்செய்யுளின்கருத்து 82-ஆஞ் செய்யுளின் கருத்தோடு ஒப்பிடுக.
(“அன்றையிலும் வையமகன்றதோ வல்லவென்று, குன்றெடுத்து நீதிருத்திக் கொண்டாயோ – என்றும்,
அடைந்தாரைக் காக்கு மகளங்கா துங்கா, நடந்தாயே காலாறடி” என்பதும் இதுபோன்ற கருத்துக் கொண்டதே.)
இச் செய்யுளில் ஆதாரமாகிய கோவலூரினும் ஆதேயமாகிய திருமாலுக்குப் பெருமை கூறியிருப்பது, பெருமையணியின்பாற்படும்:
உலகுநிறைய உயர்ந்தோங்கினவன் உலகின் ஒருபகுதியில் நடந்தா னென்று குறித்திருப்பது, முரண்விளைந்தழிவணி;
இது திருமாலின் சொல்லொணாமகிமையைவிளக்கும்.

திருக்கோவலூர் – நடுநாட்டிலுள்ள திருமால்திருப்பதியிரண்டில் ஒன்றும்,
தென்பெண்ணையாற்றின் தென்கரையிலுள்ளதுமான ஒருதிவ்வியதேசம்.

பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் என்ற முதலாழ்வார் மூவரும், ஓடித்திரியும் யோகிகளாய், செஞ்சொற்கவிகளுமாகி,
தம்மில் ஒருவரையொருவர் அறியாமல் தனித்தனியே பலவிடத்தும் சஞ்சரித்து வருகையில், ஒருநாள்
சூரியாஸ்தமனமானபின் பொய்கையாழ்வார் திருக்கோவலூரையடைந்து அங்கு மிருகண்டுமுனிவரது திருமாளிகையிற் சென்று
அதனது இடைகழியிற் சயனித்துக்கொண்டிருந்தார்.
பின்னர் பூதத் தாழ்வாரும் அவ்விடத்திலே சென்று சேர, பொய்கையாழ்வார் “இவ்விடம் ஒருவர் படுக்கலாம்: இருவர் இருக்கலாம்” என்று
சொன்னபின், அவ்வாறே அவ்விருவரும் அங்கு இருந்தனர்.
அதன்பிறகு பேயாழ்வாரும் அவ்விடத்தை அடைந்திட, முன்னையரிருவரும்
“இவ்விடம் ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்” என்றுகூற, அங்ஙனமே அம்மூவரும்
அவ்விடத்திலே நின்றுகொண்டு எம்பெருமானுடைய திருக்கலியாணகுணங்களை ஒருவரோடொருவர்
சொல்லிக்கொண்டும் கேட்டுக்கொண்டும் மகிழ்ந்திருந்தனர். அவர்களை ஆட்கொண்டு அவர்களால் உலகத்தை உய்விக்கவேண்டு
மென்று நினைத்து அம்மூவரையும் ஓரிடத்திற் சேர்த்த திரிவிக்கிரம மூர்த்தி, அவர்களை அநுக்கிரகிக்கும்பொருட்டு
அப்பொழுது பேரிருளையும் பெருமழையையும் உண்டாக்கித் தான் சென்று அவர்களுடன் நின்று பெரு வடிவுகொண்டு
பொறுக்க வொண்ணாத அதிக நெருக்கத்தைச் செய்தருளினான்.
அவர்கள் “முன்இல்லாத நெருக்கம் இப்பொழுது உண்டானது என்னோ? பிறர் எவரேனும் இந்தஇடைகழியிற் புகுந்தவர் உண்டோ?” என்று
சங்கிக்கையில், பொய்கையாழ்வார் பூமியாகிய தகழியில் கடல்நீரை நெய்யாகக்கொண்டு சூரியனை விளக்காக ஏற்ற,
பூதத்தாழ்வார் அன்பாகியதகழியில் ஆர்வத்தை நெய்யாகவும் சிந்தையைத் திரியாகவுங் கொண்டு ஞான தீபத்தை ஏற்ற,
இவ்விரண்டன் ஒளியாலும் இருள் அற்றதனால், பேயாழ்வார் பெருமானைத் தாம் கண்டமை கூறியவளவிலே,
மூவரும் எம்பெருமானுடைய சொரூபத்தைக் கண்ணாரக்கண்டு சேவித்து அனுபவித்து ஆனந்தமடைந்து,
அப்பெருங்களிப்பு உள்ளடங்காமையால் அதனைப் பிரபந்தமுகமாக வெளியிட்டு உலகத்தாரைவாழ்விக்கக்கருதி,
பொய்கையாழ்வார் “வையந் தகளியா” என்று தொடங்கி முதல் திருவந்தாதியைப் பாடியருள,
பூதத்தாழ்வார் “அன்பே தகளியா” என்று தொடங்கி இரண்டாந் திருவந் தாதியை அருளிச்செய்ய,
பேயாழ்வார் “திருக்கண்டேன்” என்று தொடங்கி மூன்றாந்திருவந்தாதியைத் திருவாய்மலர்ந்தருளினார் என்பது
இங்கு அறிய வேண்டிய வரலாறு.
பாதம், பாதாளம், பஹிரண்டம் – வடசொற்கள். ஆயிரமென்றது, எண்ணிறந்த பலவென்றமாத்திரமாய் நின்றது.

———-

நடைக்கு அலங்கார மடவார் விழிக்கு நகைக்கு செவ்வாய்க்கு
இடைக்கு அலங்கு ஆர முலைக்கு இச்சையான இவன் என்று என்னை
படைக்கலம் காணத் துரந்தே நமன் தமர் பற்றும் அன்றைக்கு
அடைக்கலம் காண் அப்பனே அலர் மேல் மங்கை அங்கத்தனே –30-

(இ – ள்.) அப்பனே – ஸ்வாமீ!
அலர்மேல் மங்கை அங்கத்தனே – அலர்மேன்மங்கைப்பிராட்டியைத் திருமேனியில் (திருமார்பில்) உடையவனே! –
அலங்காரம் மடவார் – (இயற்கையும் செயற்கையுமான) அழகுகளையுடைய இளமங்கையரது,
நடைக்கு – நடையழகுக்கும்,
விழிக்கு – கண்ணழகுக்கும்,
நகைக்கு – புன்சிரிப்பினழகுக்கும்,
செம் வாய்க்கு – சிவந்த வாயினழகுக்கும்,
இடைக்கு – இடையினழகுக்கும்,
அலங்கு ஆரம் முலைக்கு – புரளுகின்ற ஆரங்களை யணிந்த தனங்களி னழகுக்கும்,
இச்சை ஆன – விரும்பியீடுபட்ட,
இவன் -, என்று -,
எண்ணி – (என்னை) நினைத்து,
நமன் தமர் – யமதூதர்கள்,
படைக்கலம் – ஆயுதங்களை,
காண – (யான்) கண்டு அஞ்சும்படி,
துரந்து – (என்மீது) செலுத்தி (பிரயோகித்து),
பற்றும் – (என்னைப்) பிடித்துக்கொண்டுபோகும்,
அன்றைக்கு – அந்த அந்திமகாலத்தில் என்னைப்பாதுகாத்தற்பொருட்டு,
அடைக்கலம் காண் – (நான் இன்றைக்கே உனக்கு) அடைக்கலப்பொருளாகிறேன்காண்; (எ – று.) – காண் – தேற்றம்.

“வம்புலாங்கூந்தல்மனைவியைத் துறந்து பிறர்பொருள் தார மென்றி வற்றை,
நம்பினா ரிறந்தால் நமன்தமர்பற்றி யெற்றிவைத் தெரியெழுகின்ற,
செம்பினாலியன்றபாவையைப் பாவீ தழுவென மொழிவதற்கஞ்சி,
நம்பனே வந் துன்திருவடி யடைந்தேன்”,
“வஞ்சவுருவி னமன்றமர்கள் வலிந்து நலிந்தென்னைப் பற்றும்போது,
அஞ்சலமென் றென்னைக் காக்கவேண்டும்” என்ற அருளிச்செயல்களை அடியொற்றி இதுகூறினார்.
அடைக்கலம் – பாதுகாக்கப்படுதற்கு உரியதாகும் பொருள். எனக்கு நீ அடைக்கல மென்றுங் கொள்ளலாம்;
அப்பொழுது, அடைக்கல மென்பது – சரணமடையப்படு பொருள்: அதாவது – ரக்ஷக னென்ற பொருளை யுணர்த்தும்.

அலங்காரம், ஹாரம், இச்சா, அங்கம் – வடசொற்கள். மடவார் – மடமையையுடையவர்: மடமை – இளமை;
மாதர்க்கு அணிகலமான பேதைமையென்னுங் குணமுமாம். ஆரம் – பொன் மணிகளாலாகிய மார்பின்மாலை.
படைக்கலம் – போர்க்கருவி. நமன் – யமன் என்ற வடசொல்லின் சிதைவு.

————–

அங்கம் அலைக்கும் வினையால் அலமரவோ உனக்கும்
அம் கமலைக்கும் அடிமைப் பட்டேன் அரவு ஆனபரி
அங்க மலைக் குடையாய் அக்கராவுடன் அன்று அமர் செய்
அங்க மலைக்கு முன் நின்றருள் வேங்கடத்து அற்புதனே –31-

(இ – ள்.) அரவு ஆன – ஆதிசேஷனாகிய,
பரியங்க – கட்டிலையுடையவனே!
மலை குடையாய் – கோவர்த்தன மலையைக் குடையாகக் கொண்டு பிடித்தவனே!
அ கராவுடன் – அந்த முதலையுடனே,
அன்று – அக்காலத்தில்,
அமர் செய் – போர்செய்த,
அங்கம் மலைக்கு – அவயவங்களையுடைய மலைபோன்றதான யானைக்கு,
முன் – எதிரில்,
நின்று – சென்று நின்று,
அருள் – (அதனைப்) பாதுகாத்தருளிய,
வேங்கடத்து அற்புதனே – திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கின்ற ஆச்சரியகரமான குணஞ்செயல்களை யுடையவனே! –
அங்கம் அலைக்கும் வினையால் அலமரவோ – உடம்பை வருத்துகிற தீவினையினால் வருந்துதற்காகவோ,
உனக்கும் அம் கமலைக்கும் அடிமைப்பட்டேன் – உனக்கும் (உனது மனைவியான) அழகிய திருமகளுக்கும் அடிமைப்பட்டேன், (யான்)? (எ – று.)

கருணாநிதியான உனக்கும் புருஷகாரபூதையான பெரியபிராட்டிக்கும் யான் அடிமைப்பட்டபின்னரும் வினையினால்
வருந்துதல் ஏலா தாதலால், அங்ஙனம் வருந்தாதபடி எனக்கு அருள்புரியவேண்டு மென்பதாம்.

கமலை – கமலா என்ற வடசொல் ஆவீறுஐயாயிற்று; தாமரைமலரில் வாழ்பவள். பர்யங்கம் – வடசொல்; படுக்கை.
அக் கரா – தேவலனென் னும்முனிவனது சாபம்பெற்ற ஹூஹூஎன்ற கந்தருவனாகிய முதலை
அங்கமலை – துதிக்கை முதலிய உறுப்புக்களையுடைய மலை; எனவே, யானையாயிற்று.
இனி, அமர் செய் அங்கு – போர்செய்த அவ்விடத்தில் (நீர்நிலையில்), அ மலைக்கு – அந்த மலைபோன்ற யானைக்கு
என்று உரைகூறுதலு மொன்று; இப்பொருளுக்கு, அம்மலையென்பது அமலை யெனத் தொக்க தென்க.
முன் – இடமுன். அத்புதன் – வடசொல்.

இரண்டாமடியினிறுதியில் பரியங்கம் என்ற ஒருசொல்லைப் பரி அங்கம் என்றுபிரித்துப் பிரயோகித்தது, யமக நயத்தின்பொருட்டு.
(அதற்கு அறிகுறியாக மூலத்தில் இரண்டாமடியீற்றில் (-) இக்குறி இடப்பட்டது.) இங்ஙனம் சொல்லணிக்காகப் பிரித்துக்
காட்டியிருந்தாலும் பொருள்நோக் கும்பொழுது பரியங்க வென்று சேர்த்துப் படித்துக்கொள்க.
பர்யங்கம் என்ற வடசொல் பகுபதமாதலும், அது பிரிக்குமிடத்துப் பரி அங்கம் என்று பிரிதலுங் காண்க.

———-

அற்ப ரதத்து மடவார் கல்வியும் ஆங்கு அவர்கள்
நல் பரதத்து நடித்தலும் பாடலும் நச்சி நிற்பார்
நிற்ப ரத்தத்துக் கதிர் தோயும் வேங்கடம் நின்றருளும்
சிற் பரதத்துவன் தாள் அடைந்தேன் முத்தி சித்திக்கவே –32-

(இ – ள்.) அற்ப ரதத்து – சிற்றின்பத்தையேயுடைய,
மடவார் – இள மகளிரது,
கலவியும் – சேர்க்கையையும்,
அவர்கள் – அவ்விளமங்கையர்,
நல்பரதத்து நடிப்பதும் – நல்ல பரதசாஸ்திரமுறைப்படி நர்த்தநஞ்செய்வதையும்,
பாடலும் – (அவர்கள்) பாடுகின்ற இசைப்பாட்டையும்,
நச்சி நிற்பார் – விரும்பிநிற்கின்ற பேதையர்,
நிற்ப – நிற்க, (நான் அவர்களோடுசேராமல்),-
முத்தி சித்திக்க – பரமபதம் (எனக்கு) வாய்க்கும்படி, –
ரதத்து கதிர் தோயும் வேங்கடம் நின்று அருளும் சித் பர தத்துவன் தாள் அடைந்தேன் -தேரின் மேல்வருகிற சூரியன்
தவழப்பெற்ற திருவேங்கடமலையில் நின்றதிருக் கோலமாய் எழுந்தருளியிருந்து கருணைசெய்கிற ஞானமயமான
பரதத்வப் பொருளாகிய திருமாலினது திருவடிகளைச் சரணமடைந்தேன்; (எ – று.)

“நூலினேரிடையார்திறத்தே நிற்கும், ஞாலந்தன்னொடுங் கூடுவதில் லையான்,
ஆலியா வழையா வரங்கா வென்று, மாலெழுந்தொழிந்தே னென் றன்மாலுக்கே” என்றபடி,
விஷயாந்தரப்ரவணரோடு சேர்ந்து கெடாமல் பகவத்விஷயத்தில் ஈடுபட்டு வாழ்வுபெறுபவனானே னென்பதாம்.

அல்பரஸம், பரதம், ரதம், சித்பரதத்வம், முக்தி – வடசொற்கள். பாவம் ரஸம் தாளம் என்ற மூன்றையு முடைமைபற்றி,
இம்மூன்றுசொற்களின் முதலெழுத்துக்குறிப்புக்கள் தொடர்ந்து பரத மென்று நாட்டியத்திற்குப் பெயராயிற் றென்பர்.
சீவகசிந்தாமணியில் “ராசமாபுரி”, “ரவிகுலதிலகன்” என்றவை போல,
இங்கு ‘ரதம்’ என்பது, “ரவ்விற்கு” அம்முதலா முக்குறிலும்,….. மொழிமுதலாகிமுன்வருமே” என்றபடி
முதலில் இகரம்பெ றாது நின்றது. முக்தி – பற்றுக்களை விட்டு அடையுமிடம்; வீடு என்ற தமிழ்ப் பெயரும் இப்பொருள் கொண்டதே.
கலவி – கலத்தல்; ‘வி’ விகுதி பெற்ற தொழிற்பெயர். பாடல் – சங்கீதம். ரதத்துக் கதிர் – ஒற்றைத்தனியாழித் தேரையுடைய சூரியன்.
“கதிர்தோயும் வேங்கடம்” என்றது, மலையின் உயர்வை விளக்குந் தொடர்புயர்வுநவிற்சியணி.
பரதத்வன் – எல்லாப் பொருளுக்கும் மேம்பட்ட மெய்ம்மைப்பொருளாயுள்ளவன்.
சித்பரதத்வன் – உணர்ச்சியுடையதாதலால் “சித்” எனப்படுகிற ஜீவாத்மாவென்னுந் தத்வத்தைக் காட்டிலும்
மேம்பட்ட பரமாத்மதத்வமாயுள்ளவன் என்றுமாம். ஆங்கு – அசை.

———–

சித்திக்கு வித்து அதுவோ இதுவோ என்று தேடி பொய்ந்நூல்
கத்திக் குவித்த பல் புத்தகத்தீர் கட்டுரைக்க வம்மின்
அத்திக்கு இத்தனையும் உண்ட வேங்கடத்து அச்சுதனே
முத்திக்கு வித்தகன் என்றே சுருதி முறையிடுமே -33-

(இ – ள்.) சித்திக்கு வித்து – வீடுபேற்றிற்கு மூலம்.
அதுவோ – அப் பொருளோ,
இதுவோ – இப்பொருளோ,
என்று தேடி – என்று ஆராயத் தொடங்கி,
பொய் நூல் கத்தி – பொய்யான பரசமயநூல்களைத் தொண்டை நோகக் கதறிப்படித்து,
குவித்த – தொகுத்த,
பல் புத்தகத்தீர் – பல புத்தகங்களையுடையவர்களே! –
கட்டுஉரைக்க வம்மின் – (மோக்ஷசாதநமான பரம்பொருள் இன்னதென்ற உண்மைப்பொருளை யான்) உறுதியாகச் சொல்ல (அதுகேட்டு) உய்யவாருங்கள்: –
“அத்தி கு இத்தனையும் உண்ட – கடல் சூழ்ந்த உலகமுழுவதையும் (பிரளயகாலத்தில்) உட்கொண்டருளிய,
வேங் கடத்து அச்சுதனே – திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கின்ற திருமாலே,
முத்திக்கு வித்தகன் – வீடுபேற்றுக்குச்சாதநமான ஞானசொரூபி,
“என்றே -, சுருதி முறையிடும் – வேதங்கள் பலமுறை வற்புறுத்திக்கூறி முழங்குகின்றன; (எ – று.)

“பரந்ததெய்வமும் பல்லுலகும் படைத் தன்றுடனேவிழுங்கிக்,
கரந்து மிழ்ந்து கடந்திடந்தது கண்டுந் தெளியகில்லீர்,
சிரங்களாலமரர்வணங்குந் திருக்குருகூரதனுட்,
பரன்திறமன்றிப் பல்லுலகீர் தெய்வம்மற்றில்லை பேசுமினே” என்றாற்போன்ற பாசுரங்களின் வாய்பாட்டைக் கொண்டது, இச்செய்யுள்.
“கத்தி” என்ற வினையின் ஆற்றலாலும், பொய்ந்நூல்களை யோதிய தெல்லாம் வீ ணென்பது விளங்கும்.
கட்டுரைக்க வம்மின் என்பதற்கு – நுமக்கு வல்லமையுண்டானால் எம்மோடு வாதஞ்செய்ய வாருங்க ளென்று சொற்போர்க்குப்
பிறரை வலியஅறைகூவியழைக்கின்றதாக வுரைத்தலு மொன்று;
இங்ஙனம் அழைத்தற்குக் காரணம், தாம் தவறாது பரமதநிரஸ நம்பண்ணி ஸ்வமதஸ்தாபநஞ்செய்து வாதப்போரில்
வெல்லலா மென்னுந் துணி வென்க. பிரளயகாலத்தில் எல்லாத் தெய்வங்களையும் வயிற்றில் வைத்துப் பாதுகாத்த
தேவாதிதேவ னென்பது தோன்ற, “அத்திக்குவித்தனை யும்முண்ட வேங்கடத்தச்சுதன்” என்றார்;
இது, முத்திக்குவித்தகனாதற்கு உரியவ னென்ற கருத்தை விளக்குதலால், கருத்துடையடைமொழியணி.
சரணமடைந்தவர்களைக் கைவிடாதவ னென்றும் அழிவில்லாதவ னென்றும் பொருள்படுகிற
“அச்யுதன்” என்ற திருநாமத்தாற் குறித்ததும் இச்சந் தர்ப்பத்திற்கு ஏற்கும்.

ஸித்தி, புஸ்தகம், அப்தி, அச்யுதன், ச்ருதி என்ற வடசொற்கள் விகா ரப்பட்டன.
அப்திஎன்பது – நீர்தங்குமிட மென்றும் (அப் – நீர்), ச்ருதி என் பது – (எழுதாக்கிளவியாய்க் குருசிஷ்யக்கிரமத்திலே கர்ணபரம்பரையாகக்)
கேள்வியில் வழங்குவ தென்றும் காரணப்பொருள் பெறும். கு – வடசொல். வித்து – விதை; இங்குக் காரண மென்றபடி.
இத்தனையும் – இவ்வளவும். இத்தனையும்முண்ட, மகரவொற்று – விரித்தல்.

————

முறையிடத் தேசம் இலங்கை செற்றான் முது வேங்கடத்துள்
இறை இடத்தே சங்கு உடையான் இனி என்னை ஆண்டிலனேல்
தறை இடத்தே உழல எல்லாப் பிறவி தமக்கும் அளவு
உறை இடத் தேய்ந்திடும் இவ்வந்தி வானத்து உடுக்குலமே –34-

(இ – ள்.) தேசம் முறையிட – உலகத்தவர்பலரும் குறைகூறிவேண்ட,
இலங்கை செற்றான் – இலங்கையிலுள்ள அரக்கர்களை அழித்தவனும்,
இடத்தே சங்கு உடையான் – இடக்கையிலே சங்கத்தை யுடையவனுமாகிய,
முது வேங்கடத்துள் இறை – பழமையான திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கிற பெருமான்,
இனி என்னை ஆண்டிலன் ஏல் – அவனை நான் சரணமடைந்தபின்பும் என்னை ஆட்கொள்ளாது விடுவனானால், –
தறையிடத்தே உழல் எல்லாப் பிறவிதமக்கும் – நிலவுலகத்திலே யான் மாறிமாறிப்பிறந்து திரியும் பலவகைப்பட்ட பிறப்புக்களுக்கெல்லாம்,
அளவு உறை இட – உறையிட்டுத் தொகைசெய்தற்கு,
இ அந்தி வானத்து உடு குலம் தேய்ந்திடும் – மாலைப்பொழுதிலே வானத்தில்விளங்குகின்ற இந்த நக்ஷத்திரக்கூட்ட மெல்லாம் (போதாது) குறைந்திடும்; (எ – று.)

இறைவன் என்னை ஆட்கொள்ளாவிட்டால், இன்னமும் அளவிறந்த பலசன்மங்களெடுத்து உழன்றுவருந்துவே னென்றபடி.
உறையிடுதலாவது – பொருள்களைக் கணக்கிடும்போது ஞாபகத்தின்பொருட்டு ஒவ்வொருபெ ருந்தொகைக்கு
ஒன்றாக இடுவதோர் இலக்கக்குறிப்பு.
இந்த நக்ஷத்திரங்க ளின்தொகை எனதுபிறவிகளின் தொகைக்கு உறையிடவும் போதாதென்று அப்பிறப்புக்களின்
வரம்பின்மையை விளக்கியவாறாம்.
“இராமன்கை, யம்பினுதவும் படைத்தலைவரவரை நோக்கி னிவ்வரக்கர்,
வம்பின்முலையா யுறையிடவும் போதார் கணக்குவரம்புண்டோ” என்ற கம்பராமாயணமும்,
“அன்றுபட்டவர்க் குறையிடப் போதுமோ வநேகநாளினும் பட்டார்” என்ற வில்லிபுத்தூரார் பாரதமும் இங்கு நோக்கத்தக்கவை.

தேசம் – இலங்கை – இடவாகுபெயர்கள். இறை – இறைவன்; பண் பாகுபெயர். “இனி” எதிர்காலங்குறிப்பதோர் இடைச்சொல்.
தரா என்ற வடசொல்லின் விகாரமான தரையென்பது இங்கு எதுகைநோக்கித் தறை யென்று விகாரப்பட்டது.
தறையிடத்து ஏய் உழல் என்று பதம் பிரித்து, மண்ணுலகத்திற் பொருந்தியுழலுதற்கு இடமான என்று உரைத்தலு மொன்று.

————-

உடுக்கும் உடைக்கும் உணவுக்குமே உழல்வீர் இன் நீர்
எடுக்கும் முடைக்குரம்பைக்கு என் செய்வீர் இழிமும் மதமும்
மிடுக்கும் உடைக்குஞ்சரம் தொட்ட வேங்கட வெற்பர் அண்ட
அடுக்கும் உடைக்கும் அவர்க்கு ஆட்படுமின் அனைவருமே -35-

(இ – ள்.) உடுக்கும் உடைக்கும் உணவுக்குமே உழல்வீர் – உடுத்துக் கொள்ளும் ஆடையையும் உண்ணும் உணவையும் தேடிப்பெறுதற்காகவே அலைகின்றவர்களே! –
இனி நீர் எடுக்கும் – இனிமேலும் நீங்கள் எடுக்கவே ண்டிய,
முடை குரம்பைக்கு – முடைநாற்றத்தையுடைய உடம்புகளை (பிறப்புக்களை) யொழிப்பதற்கு,
என் செய்வீர் – என்ன உபாயஞ் செய்வீர் கள்?
இழி மும் மதமும் – ஒழுகுகின்ற மூன்றுவகைமதஜலங்களையும்,
மிடுக் கும் – வலிமையையும்,
உடை – உடைய,
குஞ்சரம் – யானையை (கஜேந்தி ராழ்வானை),
தொட்ட – (தாம் அதற்கு அபயப்ரதாநஞ்செய்தற்கு அறிகுறி யாகத் தமதுதிருக்கையை அதன் தலைமேல்வைத்துத்) தொட்டருளிய,
வேங்கட வெற்பர் – திருவேங்கடமலையை யுடையவரும்,
அண்டம் அடுக்கும் உடைக்கும் அவர் – அண்டகோளங்களின் வரிசைகளையெல்லாம் (சங்கார காலத்தில்) அழிக்கின்றவருமான எம்பெருமானுடைய,
அடி – திருவடிகளை,
அனைவரும் காண்மின் – நீங்களெல்லாரும் தரிசியுங்கள்; (எ – று.)

தரிசித்தால் இனிப் பிறவியெடாது முத்திபெற்று உய்வீ ரென்பது, குறிப்பு. உடை – உடுக்கப்படுவது. முடை – புலால்நாற்றம்.
குரம்பை – சிறு குடிசை; உயிர் சிலநாள்தங்குஞ் சிறுகுடிசை போலுதலால், உடல், குரம்பை யெனப்பட்டது: உவமையாகுபெயர்.
“ஊனிடைச்சுவர்வைத்து என்பு தூண்நாட்டி உரோமம்வேய்ந்து ஒன்பதுவாசல், தானுடைக்குரம்பை” என்றார் திருமங்கையாழ்வாரும்.
மும்மதம் – கன்னமிரண்டும் குறியொன்றுமாகிய மூன்றிடத்தினின்றும் பெருகுவன;
கர்ணமதம் கபோலமதம் பீஜமதம் என்றலும் உண்டு. குஞ்சரந் தொட்ட வேங்கடவெற்பர் –
“ஆடியசிரசின் மீதில் அரிமலர்க்கையை வைத்து,
வாடினை துயரமெய்தி மனமொருமித்து நம்மை,
நாடினை யினியோர்நாளு நாசமேவாராதென்று,
நீடியவுடலைக்கையால் தடவின னெடியமாலும்” என்னுஞ் கஜேந்திரமோக்ஷமும் காண்க.
காண்மின் அனைவரும் என்றது, முன்னிலையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி; காண்மின் அனைவிரும் என்பது, வழாநிலையாம்.

————-

வரும் மஞ்சு ஆனவன் ஒருவனையே உன்னி வாழ்ந்தும் தொண்டீர்
கருமம் சனனம் களைந்து உய்ய வேண்டில் கருதிற்று எல்லாம்
தரும் அஞ்சன வெற்பன் தாள் தாமரையைச் சது முகத்தோன்
திரு மஞ்சனம் செய் புனல் காணும் ஈசன் சிரம் வைத்தே –36-

(இ – ள்.) தொண்டீர் – அடியார்களே! –
கருமம் சனனம் களைந்து உய்ய வேண்டில் – ஊழ்வினையினாலாகிற பிறப்புக்களை (நீங்கள்) ஒழித்து
(மீளாவுலகமாகிய முத்திபெற்று) வாழவேண்டுவீராயின்,
வரு மஞ்சு அனவன் ஒருவனையே உன்னி வாழ்த்தும் – (மழைபொழிய) வருகிற நீர்கொண்ட காளமேகத்தைப்
போன்றவனான ஒப்பற்ற திருமாலையே தியானித்துத் துதியுங்கள்:
கருதிற்று எல்லாம் தரும் – (அடியார்கள்) நினைத்த பொருள் களையெல்லாம் (அவர்கட்குக்) கொடுத்தருள்கிற,
அஞ்சன வெற்பன் – திரு வேங்கடமுடையானாகிய அந்த ஸ்ரீமந்நாராயணனுடைய,
தாள் தாமரையை – தாமரைமலர்போன்ற திருவடியை,
சதுமுகத்தோன் – நான்குமுகங்களை யுடையவனான பிரமன்,
திருமஞ்சனம் செய் – திருமஞ்சனஞ்செய்த,
புனல் காணும் – தீர்த்தமன்றோ,
ஈசன் சிரம் வைத்தது – சிவபிரான் தலையில் தரித்தது? (எ – று.)

திருமால் உலகமளந்தகாலத்தில் மேலே சத்தியலோகத்துச்சென்ற அப்பிரானது திருவடியைப் பிரமன் தன் கைக்
கமண்டலதீர்த்தத்தாற் கழுவி விளக்க, அந்தஸ்ரீபாததீர்த்தமாகப்பெருகிய கங்காநதியைச் சிவபிரான் தனது
முடியிலேற்றுக்கொண்டு பின்பு பூமியில்விட்டன னென்பது, இங்கு அறியவேண்டியகதை.
(“குறைகொண்டு நான்முகன் குண்டிகை நீர்பெய்து, மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்திக் –
கறைகொண்ட, கண்டத்தான் சென்னிமே லேறக் கழுவினான், அண்டத்தான் சேவடியையாங்கு,”
“சதுமுகன்கையிற் சதுப்புயன்றாளிற் சங்கரன் சடையினிற் றங்கிக்,
கதிர்முகமணி கொண்டிழிபுனற்கங்கை” என்ற ஆழ்வார்களருளிச் செயல்களையும்,
“அண்ட கோளகைப்புறத்ததா யகில மன் றளந்த, புண்டரீக மென் பதத்திடைப் பிறந்து பூமகனார்,
கொண்ட தீர்த்தமா யரன்கொளப் பகிரதன்கொணர, மண்டலத்துவந்தடைந்த திம்மாநதிமைந்த” என்ற கம்பராமாயணத்தையும்,
“உலகந்தாய வுயரடிநின்றிழிந்து, அலரின்மேலவ னங்கைதவழ்ந்து பொற், றிலகவாணுதல்பங்கன்றிரள்சடை,
சுலவிவீழ்ந்தது தூநதி யிங்ஙனே” என்ற பாகவதத்தையுங் காண்க.)
“திரிமூர்த்திகளில் ஒருமூர்த்தி திருவடியைநீட்ட, மற்றொருமூர்த்தி அங்கு ஸ்ரீபாததீர்த்தம் சேர்க்க,
வேறொரு மூர்த்தி அத்திருவடித்தீர்த்தத்தைச் சிரமேற்கொண்டு புனிதனாயினன்: இவர்களிற் பெரியோன் யாவன்?
நீங்களே ஆராய்ந்தறிந்து சொல்லுங்கள்” என்று உலகத்தாரைநோக்கி உரைத்துப் பரம்பொருள் இன்னதென்று காரண
பூர்வமாக அறுதியிடுகின்ற கருத்து அமைய,
“அஞ்சனவெற்பன் றாட் டாமரையைச் சதுமுகத்தோன் திருமஞ்சனஞ்செய்புனல்காணும் ஈசன்சிரம் வைத்ததே” என்றார்.
(“தன்றாதை யவர் தாமரைத்தாள்விளக்கும் அலையாறு சூடும்,”
“செங்கண்மால்கழல்மஞ்சனம் விழுந் தொட்டி சங்கரன் தலைகளே”,
“மங்கைபாகன் சடையில் வைத்த கங்கை யார் பதத்து நீர்” என இவ்வாசிரியர் பிறவிடங்களிற் கூறியனவுங் காண்க.
“கேசவனார் சேடகிரிமா யர்க் கைந்துமுகத், தீச னதிபத்த னிதுசரதம் –
நேசமிகச், சங்கங்கை யேந்துமவர் தாட்புனலென்றே தினமு, மங்கங்கை சென்னிவைத்தானால்” என்ற திருவேங்கடக்கலம்பகச்செய்யுள்,
இதனை அடியொற்றியது போலும்.)

தம்நெஞ்சார எம்பெருமானுக்கு அடிமைப்படாத உயிர்களும் இயல்பில் அப்பெருமானுக்கு அடிமையே யாதலால்,
“தொண்டீர்” என்று விளித்தார். அனவன் – அன்னவன் என்பதன் தொகுத்தல். ஒருவன் – அத்விதீயன்.
கர்மம், ஜநநம், சதுர்முகம், மஜ்ஜநம், சிரஸ் என்ற வடசொற்கள் விகாரப் பட்டன.
கருதிற்று – ஒன்றன்பா லிறந்தகால வினையாலணையும்பெயர்; சாதியொருமை. கருதிற்று எல்லாம் – ஒருமைப்பன்மைமயக்கம்.
காணும் என்ற ஏவற்பன்மை முற்று, தேற்றப்பொருள்பட நின்றது. புனல்காண் நும்ஈசன் சிரம்வைத்தது என்று பிரித்து உரைத்து,
தொண்டீர் என்பதற்கு – சிவனடியார்களே யென்று பொருள்கொள்வாரு முளர்.

————

சிரம் தடிவான் இவனோ என்று அயன் வெய்ய தீய சொல்ல
கரம் தடிவான் தலை கவ்வ பித்து ஏறலின் கண்ணுதலான்
இரந்து அடி வீழ துயர் தீர்த்த வேங்கடத்து எந்தை கண்டீர்
புரந்து அடியேனைத் தன் பொன் அடிக்கீழ் வைக்கும் புண்ணியனே –37-

(இ – ள்.) “சிரம் தடிவான் இவனோ – (எனது) தலையைக் கொய்பவன் இவனோ?” என்று -,
அயன் – பிரமன், வெய்ய தீய சொல்ல – கொடிய தீச்சொற்களைக் கூறி யிகழ,
கரம் – (சிவபிரானது) கை,
தடி வான் தலை கவ்வ – தசையையுடைய பெரிய (பிரமனது) தலையைக் கொய்திட (அதுபற்றி),
பித்து ஏறலின் – பைத்தியங்கொண்டதனால்,
கண் நுதலோன் – நெருப்புக் கண்ணை நெற்றியிலுடையனான அச்சிவபிரான்,
இரந்து அடி வீழ – பிச்சையேற்றுவந்து திருவடிகளில் விழுந்து வணங்க,
துயர் தீர்த்த – (அவனது) துன்பத்தைப் போக்கியருளிய,
வேங்கடத்து எந்தை கண்டீர் – திருவேங்கட மலையில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானன்றோ,
அடியேனை – தாசனான என்னை,
புரந்து – பாதுகாத்து,
தன் பொன் அடி கீழ் வைக்கும் -தன்னுடைய அழகிய திருவடியில் வைத்தருளும்,
புண்ணியன் – பரிசுத்த மூர்த்தியாவான்; (எ – று.)

ஒருகாலத்திலே, பரமசிவன் தன்னைப்போலவே பிரமனும் ஐந்துதலை யுடையனாயிருப்பது பலரும் பார்த்து மயங்குதற்கு
இடமாயிருக்கின்ற தென்றுகருதி, அவனது சிரமொன்றைக் கிள்ளியெடுத்துவிட,
அக்கபாலம் அப்படியே சிவன்கையில் ஒட்டிக்கொள்ளுதலும், அவன் “இதற்கு என் செய்வது?” என்று கவலைப்பட,
தேவர்களும் முனிவர்களும் “இப்பாவந்தொ லையப் பிச்சையெடுக்க வேண்டும்:
என்றைக்குக் கபாலம் நிறையுமோ, அன்றைக்கே இது கையை விட்டு அகலும்” என்று உரைக்க,
சிவபிரான் பலகாலம் பலதலங்களிலுஞ் சென்று பிச்சையேற்றுக்கொண்டே வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நீங்காதாக,
பின்பு ஒருநாள் பதரிகாச்சிரமத்தையடைந்து அங்குஎழுந்தருளியுள்ள நாராயணமூர்த்தியை வணங்கி இரந்தபோது,
அப்பெருமான் “அக்ஷயம்” என்று பிக்ஷையிட, உடனே அது நிறைந்து கையை விட்டு அகன்றது என்ற வரலாறு, இங்கு அறியத்தக்கது.

இவ்வரலாற்று முகத்தால், எம்பெருமானுடைய பரத்வத்தை வெளியிட்டு அப்படிப்பட்ட ஸர்வேச்வரனே யான்வழிபடுங்கடவு ளென்றார்.
(“பிண்டியார்மண் டையேந்திப் பிறர்மனைதிரிதந்துண்ணு, முண்டியான்சாபந்தீர்த்த வொருவனூர்,…..,
மண்டினாருய்யலல்லால் மற்றையார்க்குய்யலாமே” என்பது, திருமங்கையாழ்வார் பாசுரம்.
“அஞ்சக்கரத் தலைக்கங்கைய னேற்றலு மஞ்சிறைய,
அஞ்சக் கரத்தலைக் குண்டிகையான் மண்டை யங்கைவிட்டே,
அஞ்சக் கரத்தலைச் செய்து பித்தேக வரு ளரங்கன்,
அஞ்சக்கரத்தலைவன் றாளலான் மற்றரணில்லையே” என்றார் திருவரங்கத்தந்தாதியிலும்.
“வையத்தார் வானத்தார் மழுவாளிக் கன்றளித்த, ஐயத்தாற் சிறிதையந் தவிர்ந்தாரு முளரையா” எனக் கம்பர்கூறியதுங் காண்க)
பிரமன்தலையைச் சிவன் கொய்யவந்தபோது பிரமன் அவனை இகழ்ந்துபேசியதை முதலடியில் விளக்கினார்.

அஜன் என்ற வடசொல் – திருமாலிடத்தினின்று தோன்றியவ னென்று பொருள்படும்; அ – திருமால்.
தீய – பலவின்பாற் குறிப்புவினையாலணையும் பெயர். கண்டீர் என்ற முன்னிலைப்பன்மை யிறந்தகாலமுற்று,
இடைச் சொல்தன்மைப்பட்டுத் தேற்றப்பொரு ளுணர்த்தும்.
தடிதல் – துணித்தல். தடி – தசை. எந்தை – எமது சுவாமி. அடிக்கீழ், கீழ் – ஏழனுருபு.

————-

புண்ணியம் காமம் பொருள் வீடு பூதலத்தோர்க்கு அளிப்பான்
எண்ணி அம் காமன் திருத்தாதை நிற்கும் இடம் என்பரால்
நண்ணி அங்கு ஆம் அன்பரைக் கலங்காத் திரு நாட்டு இருத்தி
மண் இயங்காமல் பிறப்பு அறுத்து ஆளும் வடமலையே –38-

(இ – ள்.) நண்ணி – விரும்பி,
அங்கு – அவ்விடத்து (தன்னிடத்து),
ஆம் – வந்துசேர்கின்ற,
அன்பரை – பக்தர்களை,
கலங்கா திருநாடு இருத்தி – (எக்காலத்தும்) நிலைகலங்குதலில்லாத சிறந்த இடமாகிய பரமபதத்திலேஇருக்கவைத்து,
மண் இயங்காமல் – (மீண்டும்) நிலவுலகத்தில்உழலாதபடி,
பிறப்பு அறுத்து – (அவர்களுடைய) பிறப்பை யொழித்து,
ஆளும் – (அவர்களை) ஆட்கொள்ளுகின்ற,
வட மலை – வடக்கின்கண்உள்ள திருமலையாகிய திருவேங்கடத்தை, –
அம்காமன் திரு தாதை – அழகியமன்மதனது சிறந்த தந்தையான திருமால்,
புண்ணியம் காமம் பொருள் வீடு – அறம் இன்பம் பொருள் வீடு என்ற நான்கு உறுதிப் பொருள்களையும்,
பூதலத்தோர்க்கு அளிப்பான் – நிலவுலகத்தில்வாழ்கிற சனங்கட்குக் கொடுத்தருள,
எண்ணி – நினைத்து,
நிற்கும் – எழுந்தருளிநிற்கிற, இடம் -,
என்பர் – என்றுசொல்வர், (ஆன்றோர்); (எ – று.) –
ஆல் – ஈற்றசை; (செய்யுளிறுதியில் நிற்பதேயன்றிச் செய்யுளடியினிறுதியிலும் பயனிலையினீற்றிலும் நிற்கிற
இடைச்சொல்லும் பொருள்தராதாயின் ஈற்றசை யெனப்படும்.)

இச்செய்யுள் – இடம் அல்லது பதி என்னுந் துறையின்பாற் படும்.

திருவேங்கடத்தையடைந்து எம்பெருமானைச்சேவித்தவர் தாம்வேண்டியபடி இம்மைமறுமைகளில் அறம் பொருளின்பங்களைப்
பெறுதலன்றிப் பின்பு கருமமொழியப் பிறப்பற்று மீளாவுலகமாகிய முத்தியையும் பெற்று வாழ்வ ரென்பது கருத்து;
“திருவேங்கடம் நங்கட்குச், சமன்கொள்வீடு தருந் தடங்குன்றமே,”
“குன்றமேந்திக் குளிர்மழைகாத்தவ, னன்றுஞால மளந்தபிரான் பரன்,
சென்றுசேர்திருவேங்கடமாமலை, யொன்றுமே தொழ நம்வினையோயுமே” என்ற அருளிச்செயல் இங்குக் கருதத்தக்கது.

சதுர்வித புருஷார்த்தங்களைத் தருமம் அர்த்தம் காமம் மோக்ஷம் என முறைப்படுத்தி நிறுத்துவது மரபாயினும்,
இங்குச் செய்யுள்நோக்கி முறை பிறழ வைத்தார்; அன்றியும், அறம்போலவே இன்பமும் பொருளின் பயனாதலால்,
சாதநமான பொருளைச் சாத்தியமான அறம் இன்பம் என்பவற்றின்பின் வைத்தன ரென்று காரணங்காணலாம்.
கண்ணபிரானது மனைவியும் திருமகளின் திருவவதாரமுமான ருக்மிணிப்பிராட்டியினிடம் மன்மதன் பிரத்யும்நனென்னுங்
குமாரனாகத் தோன்றியதுபற்றி, திருமால் “காமன்தாதை” எனப்படுவன்.
காமன் – (எல்லாவுயிர்கட்கும்) சிற்றின்பவிரு ப்பத்தை விளைப்பவன்; (யாவராலுங்) காமிக்கப்படும் (விரும்பப்படும்) கட் டழகுடையவன்.
இங்கு “காமன்திருத்தாதை” என்றது, காமனுக்குநியாமகன் என்றபடி,
“சிறுகாவயிலா நிவயோ திரியா குறுகா நெடுகா குணம்வேறுபடா,
உறுகால்கிளர்பூதமெலா முகினும், மறுகாநெறி” என்றபடி பரமபதம் என்றும் ஒருதன்மைத்தாயிருத்தல் தோன்ற
“கலங்காத் திருநாடு” எனப் பட்டது;
“கலங்காப் பெருநகரம்” என்றார் பேயாழ்வாரும்; புக்கவர் கலக்கம் ஒழியப்பெறுகிற திருநா டெனினுமாம்.
கலங்கா – ஈறுகெட்ட எதிர்மறை ப்பெயரெச்சம்; ஈறுகெட்ட எதிர்மறைவினையெச்சமாகக் கொண்டு,
கலங்கா (மல்) – கலங்காதபடி திருநாட்டிலிருத்தி யென்று உரைப்பாரு முளர்.

“என்பர்” என்ற முற்றுக்கு ஏற்றபடி தோன்றா எழுவாய் வருவிக்கப்பட் டது. செய்யுளாதலின்,
“அங்கு” எனச் சுட்டுப்பெயர் “வடமலை” என்ற இயற் பெயர்க்கு முன் வந்தது. இயங்குதல – உலாவுதல்.

—————-

வடம் அலை அப்பன்னகம் சேர்ந்தவன் இடை மங்கை கொங்கை
வடம் அலையப் பன் அரும் போகம் துய்த்தவன் மாயன் கண்ணன்
வடமலை அப்பன் அடி போற்றி ஐவர் மயக்கு கர
வடம் அலையப் பன்னிரு நாமம் நாவின் மலக்குவனே –39-

(இ – ள்.) வடம் – (பிரளயப்பெருங்கடலில்) ஆலிலையிலும்,
அலை அ பன்னகம் – (திருப்பாற்) கடலில் (ஆதிசேஷனாகிய) அந்தப்பாம்பினிடத்தி லும்,
சேர்ந்தவன் – படுத்துக்கண்வளர்ந்தவனும்,
இடை மங்கை கொங்கை வடம் அலைய – இடையர்சாதிப்பெண்ணான நப்பின்னைப்பிராட்டியினது தனங்களில் அணிந்த ஆரங்கள் அசையும்படி,
பன் அரும் போகம் துய்த்தவன் – சொல்வதற்குஅரிய (அளவிறந்த) இன்பத்தை யனுபவித்தவனும்,
மாயன் – அற்புதசக்தியுள்ளவனும்,
கண்ணன் – கிருஷ்ணாவதாரஞ்செய்தவனு மான,
வடமலை அப்பன் – திருவேங்கடமுடையானது,
அருள் – திருவருளை,
போற்றி – துதித்து, –
ஐவர் மயக்கு கரவடம் அலைய – பஞ்சேந்திரியங்கள் (மனத்தை) மயங்கச்செய்கிற வஞ்சனை ஒழியுமாறு,
பன்னிரு நாமம் – (அப் பெருமானுடைய) பன்னிரண்டு திருப்பெயர்களையும்,
நாவின் மலக்குவன் – நாவினால் விடாமற்சொல்வேன், (யான்); (எ – று.)

துவாதசநாமம் – கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதநன், திரிவிக்கிரமன், வாமநன்,
ஸ்ரீதரன், ஹ்ருஷீகேசன், பத்மநாபன், தாமோதரன் என்பன.
நாவின் மலக்குதல் – நாவினால் இடை விடாது உச்சரித்து அடிப்படுத்துதல்; பயிற்றுதல்.
“அலை” என்பதை மத்தி யமதீபமாக “வடம்” என்பதனோடுங் கூட்டுக. அப் பன்னகம், அகரச்சுட்டு – பிரசித்தியைக் காட்டும்.
பந்நகம் என்ற வடசொல் – பத் ந கம் என்றுபிரிந்து, கால்களால் நடவாதது என்று காரணப்பொருள்படும்.
இடை – சாதிப்பெயர். பன் – பன்னுதற்கு; முதனிலைத்தொழிற்பெயர்: நான்காம்வேற்றுமைத்தொகை.
போகம், நாமம் – வடசொற்கள். அலைய – நிலைகுலைய.

இது,யமகச்செய்யுள்.

———

மலங்கத் தனத்தை உழன்று ஈட்டி மங்கையர் மார்பில் வடம்
அலங்கத் தனத்தை அணைய நிற்பீர் அப்பன் வேங்கடத்துள்
இலங்கு அத்தன் அத்தை மகன் தேரில் நின்று எதிர் ஏற்ற மன்னர்
கலங்க தன் நத்தைக் குறித்தானைப் போற்றக் கருதுமினே –40-

(இ – ள்.) மலங்க – மனங்கலங்க,
தனத்தை – செல்வத்தை, உழன்று ஈட்டி – (பலவிடத்தும்) அலைந்து சேர்த்து,
மங்கையர் மார்பில் வடம் அலங்க – இளமகளிரது மார்பிலணிந்துள்ள ஆரங்கள் புரளும்படி,
தனத்தை அணைய – (அவர்களது) கொங்கையைத் தழுவ,
நிற்பீர் – முயன்று நிற்பவர்களே! –
அப்பன் – ஸ்வாமியும்,
வேங்கடத்துள் இலங்கு அத்தன் . திருவேங்கடமலையில் எழுந்தருளிவிளங்குகின்ற தலைவனும்,
அத்தை மகன் தேரில் நின்று – அத்தைமுறையான குந்தியின் குமாரனாகிய அருச்சுனனது தேரில் (பாகனாய்) நின்று,
எதிர் ஏற்ற மன்னர் கலங்க தன் நத்தை குறித்தானை -எதிரிற் பகைத்து வந்துநின்ற அரசர்கள் நடுங்கும்படி
தனது (பாஞ்சசந்ய மென்னுஞ்) சங்கத்தை ஊதிமுழக்கினவனுமான எம்பெருமானை,
மேவ – சரணமடைய,
கருதுமின் – நினையுங்கள்; (எ – று.)
என்று உலகத்தார்க்கு இதோபதேசஞ் செய்தபடியாம்.

கண்ணபிரானது தந்தையான வசுதேவனுக்கு உடன்பிறந்தவ ளாதலால், குந்தி, கண்ணனுக்கு அத்தையாவள்,
அருச்சுனனது வேண்டுகோளின்படி கண்ணன் திருவருளால் மகாபாரதயுத்தத்தில் அவனுக்குத் தேரூர்ந்து
பார்த்தசாரதி யென்று பெயர்பெற்றமை, பிரசித்தம்.
அப்பொழுது கண்ணன் தனதுசங்கி னொலியாற் பகைவரை அஞ்சுவித்து அழித்தனன்;
“தருணவாணிருபர் மயங்கிவீழ்தர வெண்சங்கமு முழக்கி” என்பது பாரதம்.
ஈட்டுதல் சம்பாதித்துத்தொகுத்தல்.

இச்செய்யுளின் முன்னிரண்டடி – யமகம்; பின்னிரண்டடி – திரிபு.

—————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவேங்கடத்தந்தாதி –1-20-

February 21, 2022

“திரு” என்னும் பலபொருளொருசொல் – வடமொழியிலே “ஸ்ரீ” என் பதுபோல, தமிழிலே தேவர்கள் அடியார்கள்
ஞானநூல்கள் மந்திரங்கள் புண்ணிய ஸ்தலங்கள் புண்ணியதீர்த்தங்கள் முதலிய மேன்மையையுடைய
பலபொருள்கட்கும் விசேஷணபதமாகி, அவற்றிற்குமுன்னே மகிமைப் பொருளைக் காட்டிநிற்கும்;
ஸ்ரீமகாவிஷ்ணு ஸ்ரீபக்திசாரர் ஸ்ரீராமாயணம் ஸ்ரீஅஷ்டாக்ஷரம் ஸ்ரீரங்கம் ஸ்ரீகைரவிணி ஸ்ரீபாதம் எனவும்,
திருமால் திருமழிசைப்பிரான் திருவாய்மொழி திருவெட்டெழுத்து திருவரங்கம் திரு வல்லிக்கேணி திருவடி எனவும் வழங்குமாற்றால் அறிக.
இது, வேங்கடத் துக்கு அடைமொழி; அந்தாதிக்கு அடைமொழியாகவுமாம்.

வேங்கடம் என்பது – திருமாலின் திவ்வியதேசங்கள் நூற்றெட்டனுள் ஒன்றும், வடநாட்டுத்திருப்பதிகள் பன்னிரண்டனுள் முதலதும்,
“கோயில் திருமலை பெருமாள்கோயில்” என்று சிறப்பாக எடுத்துக்கூறப்படுகிற மூன்று தலங்களுள் இடையது மாகிய தலம்.
தன்னையடைந்தவர்களுடைய பாவ மனைத்தையும் ஒழிப்பதனால், “வேங்கடம்” எனப் பெயர்பெற்றது; வடசொல்.
வேம் – பாவம், கடம் – எரித்தல் எனப் பொருள் காண்க.
(இதனை “அத்திருமலைக்குச் சீரார் வேங்கடாசல மெனும்பேர்,
வைத்தன ரதுவேதென்னில் வேமெனவழங்கெழுத்தே,
கொத்துறுபவத்தைக் கூறும் கடவெனக்கூ றிரண்டாஞ்,
சுத்தவக்கரங் கொளுத்தப்படு மெனச் சொல்வர் மேலோர்”,
“வெங்கொடும்பவங்களெல்லாம் வெந்திடச்செய்வதால் நல், மங்கலம் பொருந் துஞ் சீர்வேங்கடமலையான தென்று”
என்னும் புராணச் செய்யுள்களாலும் அறிக.)

ஸ்ரீசைலத்தின் மேற்கிலுள்ள நந்தனபுர மென்னும் ஊரில் புரந்தரனென்னும் பிராமணோத்தமனது குமாரனாகிய
மாதவ னென்பவன் தன்மனைவியாகிய சந்திரரேகையென்பவளோடு பூஞ்சோலை யிற்சென்று விளையாடிக்கொண்டிருக்கையில்
மாலினியென்பாளொரு சண்டாளகன்னிகையின் கட்டழகைக் கண்டு காமுற்று அவளோடு சேர்ந்து மனையாளைத்துறந்து
அப்புலைமங்கையுடனேசென்று புலால்நுகர்ந்தும் கட் குடித்தும் கைப்பொருள்முழுவதையும் இழந்து பின்பு
வழிபறித்தல் உயிர்க் கொலை முதலிய கொடுந்தொழில்புரிந்து பொருள்சேர்த்து அவட்குக்கொ டுத்துவந்து முடிவில்
வறியவனாகிப் பலநோய்களையும்அடைந்து அவளால் அகற்றப்பட்டவனாய்ப் பலபாவமுந்தொடரப் பித்தன்போல அலைந்து திரிந்து
இத்திருமலையை அடைந்த மாத்திரத்தில் தனது தீவினையெல்லாம் சாம்ப லாகப் பெற்று முன்னைய
பிரமதேஜசைப்பொருந்தி நல்லறிவுகொண்டு திரு மாலைச்சேவித்து வழிபட்டுப் பரமபதமடைந்தன னாதலால்
இதற்கு “வேங் கடாசலம்” என்னும் பெயர் நிகழ்ந்தது என்று வடமொழியில்
ப்ரஹ்மாண்ட புராணத்திலும் பவிஷ்யோத்தர புராணத்திலும் கூறப்படுதல் காண்க.

அன்றி, “வேம் என்பது – அழிவின்மை, கடம் என்பது – ஐசுவரியம்; அழிவில்லாத ஐசுவரியங்களைத் (தன்னையடைந்தார்க்குத்)
தருதலால் வேங்கட மெனப் பெயர்கொண்டது” என்று வராகபுராணத்திற் சொல்லப்பட்ட வாறும்உணர்க.
திருஎன்பதற்கு – மேன்மையான என்று பொருள்கொண்டால் திரு வேங்கடம்என்ற தொடர் பண்புத்தொகையும்,
மேன்மையையுடைய என்று பொருள்கொண்டால் இரண்டாம்வேற்றுமை யுருபும்பயனுமுடன் தொக்க தொகையுமாம்.

வேங்கடத்தந்தாதி என்ற தொடர் – வேங்கடத்தினது சம்பந்தமான அந்தாதி யென்று விரித்து வேங்கடத்தின்விஷயமாக
அந்தா தித்தொடையாற்பாடப்பட்ட தொருநூலென்று பொருள்கொண்டு ஆறாம் வேற்றுமைத்தொகையாகவும்,
வேங்கடத்தைப்பற்றிய அந்தாதியென்று விரித்துப் பொருள்கொண்டு இரண்டாம்வேற்றுமையுருபும்
பொருளுந்தொக்க தொகையாகவும் உரைக்கத்தக்கது.
வேங்கடத்தந்தாதி யென்ற தொடரில் அத்துச்சாரியையின் முதல் அகரம் மவ்வீறுஒற்றழிந்துநின்ற அகரத்தின்முன் கெட்டது.
அத்துச்சாரியையின் ஈற்றுஉகரம் உயிர்வர ஓடிற்று.

அந்தாதி – அந்தத்தை ஆதியாக வுடையது: அன்மொழித்தொகை; வடமொழித்தொடர், தீர்க்கசந்தி:
அந்த ஆதி எனப் பிரிக்க. அந்தாதியாவது – முன்நின்றசெய்யுளின் ஈற்றிலுள்ள எழுத்தாயினும் அசையாயினும்
சீராயினும் அடியாயினும் அடுத்துவருஞ்செய்யுளின் முதலாக அமையும்படி பாடுவது;
இங்ஙனம் பாடும் நூலினது ஈற்றுச்செய்யுளின் அந்தமே முதற் செய்யுளின் ஆதியாக அமையவைத்தல், மண்டலித்த லெனப்படும்.
இது, தொண்ணூற்றாறுவகைப் பிரபந்தங்களுள் ஒன்றாம். பதிற்றந்தாதி நூற்றந்தாதி என்ற வகைகளில் இந்நூல் நூற்றந்தாதியாம்.
அதாவது – நூறுவெண் பாவினாலேனும் நூறுகட்டளைக்கலித்துறையினாலேனும் அந்தாதித்தொடையாற் கூறுவது.
இந்நூல், அந்தாதித்தொடையா லமைந்த நூறு கட்டளைக் கலித்துறைகளையுடையது.
சொற்றொடர்நிலைச்செய்யுள், பொருட்டொடர் நிலைச்செய்யுள் என்ற வகையில் இது சொற்றொடர்நிலை;
“செய்யுளந்தாதி சொற்றொடர்நிலையே” என்றார் தண்டியலங்காரத்தும்.

எனவே, திருவேங்கடத்தைப்பற்றிப் பாடியதொரு பிரபந்த மென்பது பொருள்;
திருவேங்கடத்தில் எழுந்தருளி யிருக்கின்றவரும் ஸ்ரீநிவாஸன் என்று வடமொழியிலும் அலர்மேல் மங்கையுறைமார்பன்
என்று தென் மொழியிலும் திருநாமங் கூறப்படுபவருமான எம்பெருமானைக் குறித்துப் பாடியதொரு நூலென்பது கருத்து.

ஆசிரியர் தொல்காப்பியனார் செய்யுளியலில் “விருந்தேதானும், புது வதுகிளந்த யாப்பின்மேற்றே” என்பதனால்,
“விருந்துதானும் பழங்கதை மேலதன்றிப் புதிதாகத்தாம் வேண்டியவாற்றால் தொடுக்கப்படுந் தொடர் நிலைமேலது” என்று
கூறினமையின், இந்நூல், அங்ஙனங்கூறிய விருந்தாம் என்று உணர்க.
அச்சூத்திரவுரையில் அந்தாதியும் கலம்பகமும் முதலாயின உதாரணங் காட்டப்பட்டுள்ளவாறுங் காண்க.
இனி, இதனைச் சிறுகாப்பியத்துள் அடக்குவர் பிற்காலத்தார். இப்பிரபந்தம், தோத்திரரூபமானது.

இந்நூலிலுள்ள கலித்துறைகள் யாவும் பெரும்பாலும் திரிபு என்னுஞ் சொல்லணியையும்,
சிறுபான்மை யமகம் என்னுஞ் சொல்லணியையும் உடையன. திரிபாவது – ஒவ்வோரடியிலும் முதலெழுத்து மாத்திரம் வேறுபட்டிருக்க,
இரண்டுமுதலிய பலஎழுத்துக்கள் ஒன்றிநின்று பொருள்வேறு படுவது; இதனையும் யமகவகையில் அடக்குவர் ஒருசாரார்.
யமகமாவது – பலஅடிகளிலாயினும் ஓரடியிற் பலஇடங்களிலாயினும் வந்த எழுத்துத்தொ டர்களே மீண்டும்வந்து பொருள்வேறுபடுவது;
இது, தமிழில் மடக்குஎனப் படும். இந்நூற்செய்யுள்களிற் சிறுபான்மை காணப்படுகிற யமகங்கள், பல அடிகளில் வந்தவை.

———-

சிறப்பு பாசுரம் -தனியன் -அபியுக்தர் அருளியது என்பர் –

இக்கரை யந்திரத்துத் பட்ட தென்ன இருவினையுள்
புக்கரை மா நொடியும் தரியாது உழல் புண் பிறப்பாம்
எக்கரை நீக்கிப் படித்தாரை அந்த இரு விரசைக்கு
அக்கரை சேர்க்கும் மணவாள தாசன் அருங்கவியே –

(இதன்பொருள்.) மணவாளதாசன் – அழகியமணவாளதாசரது,
அருங் கவி – அருமையான பாடல்களானவை, –
படித்தாரை – (தம்மை) ஓதினவர்களை, –
இக்கு – கரும்பானது,
அரை யந்திரத்துள் பட்டது என்ன -(தன்னுள் அகப்பட்ட பொருளை) நசுக்குகின்ற ஆலையென்னும்
யந்திரத்தி னுள்ளே அகப்பட்டுக் கொண்டாற்போல,
இரு வினையுள் புக்கு – (நல்வினை தீவினைகளாகிய) இருவகை வினைகளினுள்ளே (ஆன்மா) அகப்பட்டுக்கொண்டு,
அரை மா நொடியும் தரியாது – அரைமாநொடி யென்னுஞ் சிறிதளவு பொழுதேனுங் கவலையற்று நிற்காமல்,
உழல் – அலைந்துதிரிதற்கு இடமாகிற,
புல் பிறப்பு ஆம் – இழிவான பிறப்புக்களாகிய,
எக்கரை – மணல்மேட்டை,
நீக்கி – கடக்கச்செய்து, –
அந்த இரு விரசைக்கு அக்கரை சேர்க்கும் – அந்தப் பெரிய விரஜாநதிக்கு அக்கரையிலுள்ள பரமபதத்திற் சேர்த்துவிடும்; (என்றவாது)

மணவாளதாசனருங்கவி, படித்தாரை, புன்பிறப்பாம் எக்கரை நீக்கி விரசைக்கு அக்கரை சேர்க்கும் என அந்வயங் காண்க.
அழகிய மணவாள தாசரால் இயற்றப்பட்ட திருவேங்கடத்தந்தாதிச் செய்யுள்களைப் படித்தவர்கள் ஒழித்தற்கு அரிய
பிறப்பை யொழித்துப் பிரகிருதிசம்பந்தமற்று விரஜாநதியில் நீராடிப் பரமபதஞ் சேர்வரென இந்நூற்பயன் கூறு முகத்தால்,
இந்நூலின் சிறப்பையும், இந்நூலாசிரியரது தெய்வப்புலமையையும் தெரிவித்தவாறாம்.
அநந்த கோடிபிரமாண்டங்களடங்கிய மூலப்பிரகிருதிக்கு அப்புறத்தே விரஜாநதிக்கு அப்பால் ஸ்ரீமந்நாராயண னெழுந்தருளியிருக்கும்
பரமபதம் உள்ள தாதலால், “அந்த இருவிரசைக்கு அக்கரைசேர்க்கும்” எனப்பட்டது.
“இக்கரை …….. உழல்” என்றது, பிறப்புக்கு அடைமொழி.
உயிர் இருவினையுள் அகப்பட்டுத் தன்வசமின்றிப் பரவசமாய் வீடுபெறாது வருந்துதற்கு, கரும்பு ஆலையிலகப்பட்டு
நொருங்கிச்சிதைதலை உவமைகூறினார்.
நல்வினையும் பிறத்தற்குஏதுவாதலால் அதனையுஞ்சேர்த்து “இருவினை யுட்புக்கு” என்றார்;
“இருள்சே ரிருவினையுஞ் சேரா இறைவன், பொருள்சேர் புகழ்புரிந்தார்மாட்டு” என்றார் திருவள்ளுவனாரும்.
தேவசன்மம் நல் வினைப்பயனாற் பெரிதும் இன்பநுகருமாறு நேர்வதாயினும் அத்தேவர்க ளும் நல்வினைமுடிந்தவளவிலே
அவ்வுடம்புஒழிய மீளவும் இவ்வுலகத்திற் கருமவசத்திற்குஏற்ப வேறுபிறவிகொள்பவராதலும்,
உயிரைப்பந்தப்படுத் துவதில் பொன்விலங்கும் இருப்புவிலங்கும் போலப் புண்ணியசன்மமும் பாவசன்மமும் சமமேயாதலும்,
எல்லாக்கருமங்களையும் முற்றும்ஒழித்தவர் களே சிற்றின்பத்துக்கும் பெருந்துன்பத்துக்குமே இடமான
எழுவகைப் பிறப்புக்களிலும் புகுதாமற் பேரின்பத்துக்கேஇடமான மீளாவுலகமாகிய முத்தியிற் சேர்ந்து
மீளவும்பிறத்தலிலராவ ரென்பதும் உணர்க.

மா என்பது – எண்ணலளவைகளில் ஒன்று; அது, இருபதில் ஒன்று அதிற்பாதி, அரைமா.
நொடி – மனிதர் இயல்பாக ஒருமுறை கைந்நொடி த்தற்கு வேண்டும் பொழுது; ஒருமாத்திரைப்பொழுது; உம் – இழிவுசிறப்பு.
பிறப்புக் கடத்தற்கு அரிதென்பது தோன்ற, அதற்கு மணல்மேடு உவமை கூறப்பட்டது. எக்கர் = எக்கல்: ஈற்றுப்போலி.
யந்திரம் யமன் யதியது யஜ்ஞம் யஜுர் என்ற வடசொற்கள் –
தமிழில் எந்திரம் எமன் எதி எது எச்சம் எசுர் என்று விகாரப்பட்டுவருதல்போல, யக்ஷர் என்ற வடசொல் எக்கர் என்று
விகாரப்பட்ட தெனக்கொண்டு, “புன்பிறப்பாம்எக்கரை நீக்கி” என்பதற்கு – இழிந்தபிறப்புக்களாகிய யக்ஷர்களை (பூதகணங்களை)
விலக்கி யென்று பொருளுரைத்தலு மொன்று. தன்னில்மூழ்குபவர் ரஜோகுணம் தீரப்பெறு மிட மாதலால், விரஜா என்று பெயர்.
இக்ஷு, யந்த்ரம், விரஜா என்ற வடசொற்கள் விகாரப்பட்டன. கவி – வடசொல்;
பாடுபவனது பெயராகிய இது, இலக்கணையாய், அவனாற்பாடப்பட்ட பாடல்களின்மேல் நிற்கும்;
கர்த்தாவாகுபெயர். என்ன – உவமவுருபு. இருவினை – இரண்டு + வினை. இருவிரசை – இருமை + விரசை:
இருமையென்ற பண்பு, பெருமையின்மே லது.
“இக்கரையந்திரத்துட் பட்டதென்ன விருவினையுட்புக் கரைமாநொ டியுந்தரியா துழல்” என்றது, உவமையணி.
“புன்பிறப்பாம் எக்கரை நீக்கி” என்றது உருவகவணி. படித்தாரை எக்கரை நீக்கி – இரண்டுசெயப்படு பொருள் வந்த வினை.
அந்த என்ற சேய்மைச்சுட்டு – பிரசித்தியையும், மேன்மையையுங் குறிக்கும். அக்கரை – அந்தக்கரை: (எதிர்மொழி – இக்கரை.)

ஒருபெயரின் ஒரு பகுதியைக்கொண்டு அப்பெயர்முழுவதையுங் குறி ப்பதொரு மரபுபற்றி,
அழகியமணவாளதாசரை “மணவாளதாசன்” என்றார். “மணவாளதாசனருங்கவி” என்றவிடத்துத் தொக்குநின்ற ஆறனுருபு –
செய்யுட்கிழமைப்பொருளில் வந்தது; “கபிலரகவல்”, “கம்பராமாயணம்” என்ற விடங்களிற் போல:
(வேங்கடத்தந்தாதி என்றவிடத்துத் தொக்கு நின்ற ஆறனுருபின்பொருளோடு இப்பொருளுக்கு உள்ளவேறுபாடு கருதத் தக்கது;
அங்கு ஆறனுருபு – விஷயமாக வுடைமையாகிய சம்பந்தப்பொரு ளில் வந்தது: “விஷ்ணுபுராணம்”, “விநாயகரகவல்” என்றவற்றிற்போல.)

இக்கவி – அபியுக்தரி லொருவர் செய்ததென்பர். இது, வைஷ்ணவ சம்பிரதாயத்தில் தனியன் எனப்படும்.
(நூலினுள்அடங்காது தனியே பாயிரமாய் நிற்றல்பற்றியது, அப்பெயர்; “அன்” விகுதி – உயர்வுப்பொருளது.)

—————–

காப்பு காத்தல்; அது, இங்கு, காக்கின்ற கடவுளின் விஷயமான வணக்கத்தைக் குறிக்கும்:
ஆகவே, கவி தமக்குநேரிடத்தக்க இடையூறுகளை நீக்கித் தமது எண்ணத்தை முடிக்கவல்ல தலைமைப் பொருளின்
விஷயமாகச் செய்யுந் தோத்திர மென்பது கருத்து. இக்காப்புச்செய்யுள்,
ஆழ்வார்கள் பன்னிருவருட் பிரதானரான நம்மாழ்வாரைப் பற்றியது. ஸ்ரீவைஷ்ணவ சமயத்தவரான இந்நூலாசிரியராற் கூறப்பட்ட
இக்காப்புச்செய்யுள், விஷ்ணு பக்தர்களிற்சிறந்த ஆழ்வாரைக்குறித்ததாதலால், வழிபடுகடவுள்வணக்க மாம்.
தம்தமது மதத்துக்கு உரிய கடவுளை வணங்குதலேயன்றி அக்கடவுளின் அடியார்களை வணங்குதலும்
வழிபடுகடவுள்வணக்கத்தின் பாற்படுமென அறிக. அவ்வாழ்வாரால் வெளியிடப்பட்ட திவ்வியப்பிரபந்தங்களின்
சொற்பொருட்கருத்துக்களமைய அம்முதனூலுக்கு வழி நூல்போலச் செய் யப்படுவது இப்பிரபந்த மென்பதுபற்றி,
இந்நூலின் இக்காப்புச்செய்யுளை ஏற்புடைக்கடவுள்வணக்க மென்று அரிதிற்கொள்ளவும் அமையும்.

காப்பு –

நல்ல அந்தாதி திரு வேங்கடவற்கு நான் விளம்பச்
சொல் அவம் தாதின் வழு பொருள் சோர்வு அறச் சொல் வித்தருள்
பல்ல வந்தாதிசை வண்டார் குருகைப் பர சமயம்
செல்ல வந்து ஆதி மறைத் தமிழால் செய்த வித்தகனே –

(இ – ள்.) பல்லவம் – (சோலைகளிலுள்ள மரங்களின்) தளிர்களிலும்,
தாது – பூந்துகளிலும்,
இசை வண்டு ஆர் – (நறுமணத்தையுட்கொள்ளும் பொருட்டு) இசைபாடுகிற வண்டுகள் மொய்க்கப்பெற்ற,
குருகை – திருக்குரு கூரென்னுந்திருப்பதியிலே,
பர சமயம் வெல்ல வந்து – (ஸ்ரீவைஷ்ணவ மதமல்லாத) அயல்மதங்களை வெல்லுமாறு திருவவதரித்து,
ஆதி மறை தமி ழால் செய்த – பழமையான வடமொழிவேதங்களைத் தமிழ்ப்பாஷையினால் (திவ்வியப்பிரபந்தங்களாகச்) செய்தருளிய,
வித்தகனே – ஞானசொரூபியா யுள்ளவனே! –
நல்ல அந்தாதி – நல்ல அந்தாதியென்னும் பிரபந்தத்தை,
திருவேங்கடவற்கு – திருவேங்கடமுடையான்விஷயமாக,
நான் விளம்ப – நான் பாடுமாறு,
சொல் அவம் – சொற்குற்றங்களும்,
தாதின் வழு – வினைப் பகுதிகளின்குற்றங்களும்,
பொருள் சோர்வு – பொருட்குற்றங்களும்,
அற – சிறிதுமில்லாதபடி,
சொல்வித்து அருள் – சொல்வித்தருள்வாய்; (எ – று.)

சொற்குற்றம் பொருட்குற்ற மின்றிக் கவிபாடுமாறு எனக்கு நல்ல கவநசக்தியை அருள்புரிக வென்று பிரார்த்தித்தார்.
“என்னாவிலின்கவி யா னொருவர்க்குங் கொடுக்கிலேன்,
தென்னாதெனாவென்று வண்டுமுரல் திருவேங்கடத்து,
என்னானை யென்னப்ப னெம்பெருமா னுளனாகவே” என்று நம்மாழ்வார் அறுதியிட்டு ஆதிமறை தமிழாற் செய்த வித்தக ராதலால்,
தாம் திருவேங்கடமுடையான் விஷயமாகத் தமிழ்நூல்செய்தற்கு அவ்வாழ்வாரருளை வேண்டின ரென்க.

குருகை – பாண்டிநாட்டுத் திருமால்திருப்பதி பதினெட்டில் ஒன்று. ‘பல்லவந்தாதிசைவண்டார’ என்ற அடைமொழி,
ஆழ்வாரது திருவவதார ஸ்தலமான அத்திருக்குருகூரினது வளத்தை விளக்கும். தாது – பூந்தாது, மகரந்தப்பொடி.
ஆழ்வார் தமதுபிரபந்தங்களிற்கூறிய தத்துவார்த்தங்க ளைக்கொண்டு பிறமதங்களாகிய யானைகளைச் செருக்கடக்கி
அவற்றிற்குத் தாம் மாவெட்டியென்னுங்கருவிபோன் றவராய்ப் பராங்குசரென்று ஒரு திருநாமம்பெறுதல் தோன்ற
‘பரசமயம்வெல்ல வந்து’ என்றும், வேதம் அபௌருஷேயமும் நித்யமுமாய்ச் செய்யாமொழி யெனப்படுகிற சிறப்புத் தோன்ற
‘ஆதிமறை’ என்றும், ஆழ்வார் இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்ற நான்குவேதங்களின் சாரார்த்தங்கள் முறையே
அமையத் திருவிருத்தம் திருவாசிரியம் திருவாய்மொழி பெரிய திருவந்தாதி என்ற நான்குதிவ்வி யப்பிரபந்தங்களைத்
திருவாய்மலர்ந்தருளி உலகத்தைஉய்வித்தமை தோன்ற ‘மறை தமிழாற்செய்த’ என்றும்,
ஆழ்வார் அஜ்ஞாநத்துக்குக்காரணமான சடமென்னும்வாயுவை ஒறுத்துஓட்டிச் சடகோபரென்று பெயர்பெற்றுப் பிறந்தபொழுதே
தொடங்கித் தத்துவஞானவிளக்கம் என்றுங்குறைவற விளங்கப்பெற்ற ஞானக்கனி யாதல் தோன்ற ‘வித்தகனே’ என்றும் கூறினார்.
பின்பு ‘தாதின்வழு’ என்று முதனிலைக்குற்றங்களைத்தனியே எடுத்துக் கூறுதலால், முன்பு ‘சொல்லவம்’ என்றது,
அவையொழிந்த மற்றைச் சொற்குற்றங்களின்மேல் நிற்கும். தாது – வினைப்பகுதியைக்குறிக்கும்போது, வடசொல்.
விண்டுவின், சம்புவின், இந்துவின் என்றாற்போல வடமொழிக் குற்றியலுகரம் உயிர்வரக் கெடாது தாதுவின் என வரற்பாலது,
இங்குத் திரிபுநயம்நோக்கி, உயிர்வரினுக்குறள்மெய்விட்டோடி ‘தாதின்’ என நின்றது.
பல்லவம், பரசமயம், ஆதி – வடசொற்கள். விளம்புதல் – சொல்லுதல். ஆர்தல் – தங்குதல். ஆர் குருகை – வினைத்தொகை.

————

திருவேங்கடத்து நிலை பெற்று நின்றன சிற்றன்னையால்
தரு வேம்கடத்துத் தரை மேல் நடந்தன தாழ் பிறப்பின்
உருவேங்கள் தத்துக்கு உளத்தே இருந்தன உற்று அழைக்க
வருவேம் கடத்தும்பி அஞ்சல் என்று ஓடின மால் கழலே –1-

(இ – ள்.) கடம் – மதத்தையுடைய,
தும்பி – யானையாகிய கஜேந்திராழ்வான்,
உற்று – (முதலையினாற் பற்றப்பட்டுத்) துன்பமுற்று,
அழைக்க – (ஆதிமூலமே யென்று) கூப்பிட, (அதனைத் துன்பந்தீர்த்துப் பாதுகாத்தற் பொருட்டு),
வருவேம் அஞ்சல் என்று ஓடின – ‘(யாம் இதோ) வருகிறோம் (நீ) அஞ்சவேண்டா’ என்று (அபயவார்த்தை) சொல்லிக்கொண்டு
(தனது இருப்பிடமான ஸ்ரீவைகுண்டத்திலிருந்து அவ்யானையினிடத்துக்கு) விரைந்து சென்ற,
மால் – திருமாலினது,
கழல் – திருவடிகள், –
திருவேங்கடத்து – திருவேங்கடமலையில்,
நிலை பெற்று நின்றன – நிலையாக நின்றுள்ளன;
சிறுஅன்னையால் – சிறியதாயாகிய கைகேயியின் கட்டளையால்,
தரு வேம் கடத்து தரைமேல் நடந்தன – மரங்கள் வேகப்பெற்ற கடுஞ்சுரத்து நிலத்தின் மேல் நடந்துசென்றன;
தாழ் பிறப்பின் உருவேங்கள் – இழிந்தபிறப்பின் வடிவத்தையுடைய எங்களது,
தத்துக்கு – ஆபத்தை நீக்குதற்பொருட்டு
உளத்தே இருந்தன – (எங்கள்) மனத்திலே வந்து எழுந்தருளியிருந்தன; (எ – று.) – ஏ – ஈற்றசை.

இது, பாதவகுப்பு என்னும் பிரபந்தத்துறைகூறியவாறாம்: இந்நூலின் 73 – ஆஞ் செய்யுளும் காண்க.
பாதவகுப்பு – பிரபந்தத் தலைவனது திரு வடிகளின் சிறப்புக்களைக் கூறுவது;
(இங்ஙனமே புயவகுப்பும் உண்டு. அது, பிரபந்தநாயகனது தோள்களின் சிறப்பைக் கூறுவது; இந்நூலின் 93 – ஆஞ் செய்யுளை நோக்குக.)
“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தா, ரிறைவனடி சேராதார்” என்றபடி சரணமடைகிற உயிர்கட்கெல்லாம்
உஜ்ஜீவநகரமா யிருப்பது திருமாலின் திருவடி யாதலால், நூலின்தொடக்கத்தில் அதன் ஏற்றத்தை எடுத்துக்கூறின ரென்க.

திருவேங்கடத்தில் எம்பெருமான் நின்றதிருக்கோலமாக எழுந்தருளி யிருத்தலால், “திருவேங்கடத்து நிலைபெற்றுநின்றன” என்றார்.
சீதாகல்யாண த்தின்பிறகு தசரதசக்ரவர்த்தி இராமபிரானுக்குப் பட்டாபிஷேகஞ் செய்ய யத்தனிக்கையில்,
மந்தரைசூழ்ச்சியால் மனங்கலக்கப்பட்ட கைகேயி தன் கொழுநரான தசரதரை நோக்கி முன்பு அவர்தனக்குக்
கொடுத்திருந்த இரண்டுவரங்களுக்குப் பயனாகத் தன்மகனான பரதனுக்குப் பட்டங்கட்டவும் கௌசல்யைமகனான
இராமனைப் பதினான்குவருஷம் வனஞ்செலுத்தவும் வேண்டுமென்றுசொல்லி வற்புறுத்த, அதுகேட்டு
வருந்தின தசரதர் சத்திய வாதியாதலால், முன்பு அவட்குவரங் கொடுத்திருந்த சொல்லைத் தவறமாட்டாமலும்,
இராமன்பக்கல் தமக்கு உள்ளமிக்க அன்பினால் அவ்வரத்தை நிறைவேற்று மாறு அவனைவனத்துக்குச் செல்லச்
சொல்லவும் மாட்டாமலும் கலங்கி வாய் திறவாதிருக்கிறசமயத்தில், கைகேயி இராமனை வரவழைத்து
“பிள்ளாய்! உங்கள்தந்தை பரதனுக்கு நாடுகொடுத்துப் பதினான்குவருடம் உன்னைக் காடேறப்போகச்சொல்லுகிறார்” என்றுசொல்ல,

அச்சொல்லைத் தலைமேற்கொண்டு அந்தமாற்றாந்தாயின் வார்த்தையையும், அவட்குத்தனது தந்தைகொடுத்திருந்த
வரங்களையும் தவறாது நிறைவேற்றி மாத்ருபித்ருவாக்யபரிபாலநஞ் செய்தலினிமித்தம் இராமபிரான் இலக்குமணனோடும் சீதையோடும்
அயோத்தியைவிட்டுநீங்கி நடந்துவனவாசஞ்சென்றன னென்றவரலாறு பற்றி, “சிற்றன்னையால் தருவேங் கடத்துத் தரைமேல் நடந்தன” என்றார்;

“தொத்தலர்பூஞ்சுரிகுழற் கைகேசிசொல்லால் தொன்னகரந்துறந்து துறைக்கங்கைதன்னைப்,
பத்தியுடைக்குகன்கடத்த வனம்போய்ப்புக்கு,”
“கூற்றுத் தாய்சொல்லக் கொடியவனம்போன, சீற்றமிலாதான்” என்றார் ஆழ்வார்களும்.
இராமபிரான் திருமாலின் திருவவதார மாதலால், அப்பெருமானது செய்கை இங்குத் திருமாலின்செய்கையாக
ஒற்றுமைநயம்பற்றிக் கூறப்பட்டது; இதனை, இதுபோல வருமிடங்கட்கெல்லாங் கொள்க.
பரத்வம் வியூகம் விபவம் அந்தர்யாமித்வம் அர்ச்சை என்ற ஐந்தும் எம்பெருமானது ஐவகை நிலைகளாம்.
அவற்றில், இங்கு “திருவேங்கடத்து நிலைபெற்று நின்றன” என்றது, அர்ச்சாவதாரத்தை; அதாவது – விக்கிரகரூபத்தில் ஆவிர்ப்பவித்தல்.
“சிற்றன்னையால் தருவேங்கடத்துத் தரைமேல் நடந்தன” என்றது, விபவத்தை; அது, ராமகிருஷ்ணாதி அவதாரங்கள்.
“தாழ் பிறப்பினுருவேங்கள் தத்துக்கு உளத்தேயிருந்தன” என்றது, அந்தர்யாமித் வத்தை;
அது – சராசரப்பொருள்களெல்லாவற்றினுள்ளும் எள்ளினுள் எண்ணெய்போல மறைந்துவசித்தலையும், அடியார்கள்மனத்தில் வீற்றிருத்தலையும் குறிக்கும். “உற்றழைக்கவருவேங்கடத்தும்பி யஞ்சலென்றோடின மால் கழல்” என்றது, பரத்வத்தோடு சௌலப்யத்தையுங் காட்டும்;
பரத்வமாவது – பரமபதத்தில் எழுந்தருளியிருக்கும் நிலை: சௌலப்யம் – அடியவர்க்கு எளியனதால்,
வியூகம் மேல்வருமிடத்துக் காண்க; அது, திருப்பாற்கடலில் எழுந்தருளியிருக்கும் நிலை.

“தரு வேம்” என்ற அடைமொழி, காட்டின் கொடுமையை விளக்கும். தரு – வடசொல்.
வேம் – வேகும் என்ற செய்யுமெனெச்சத்து ஈற்று உயிர் மெய் சென்றது. தரை – தரா என்ற வடசொல்லின் விகாரம்.
ரூபமென்ற வடமொழி, உரு வெனச் சிதைந்தது. தாழ்பிறப்பின் உருவேங்கள் – இழிவான பிறப்புக்களிற் பிறத்தலையுடைய நாங்கள் என்றபடி,
உருவேம் – உரு என்ற பெயர்ச்சொல்லின்மேற் பிறந்த தன்மைப்பன்மைக் குறிப்புவினையா லணையும்பெயர்; கள் – விகுதிமேல்விகுதி.
தன்னைப்போன்ற அடியார்களை யுங் கூட்டிக்கொண்டு உளப்பாட்டுத் தன்மைப்பன்மையாக “தாழ்பிறப்பினு ருவேங்கள்” என்றார்.
தத்துக்கு என்ற நான்கனுருபு – பகைப்பொருளது: “துன்பத்திற்கி யாரே துணையாவார்” என்றவிடத்துப் போல.
“மலர்மிசை யேகினான்” என்றபடி அன்பால் நினைபவரது உள்ளக்கமலத்தின் கண் எம் பெருமான் அவர் நினைந்த
வடிவோடு விரைந்து சென்று சேர்தலால், “உளத் தேயிருந்தன” என்றார். உற்று – துன்புற்று; உறு என்ற பகுதியின் சம்பந்த முள்ள
ஊறு இடையூறு என்ற சொற்களை நோக்குக. வருவேம் – தனித்தன் மைப்பன்மை. கடம் – வடசொல்; இந்த யானைக்கன்னத்தின்பெயர்,
அதனி னின்றுவழியும் மதநீர்க்கு இடவாகுபெயராம். தும்பி என்பதை இயல்பாக வந்த அண்மைவிளியாகவுங் கொள்ளலாம்.
அஞ்சல் – எதிர்மறையொருமை யேவல். ஓடின – பெயரெச்சம், மாலுக்கு அடைமொழி.
இதனைப் பலவின் பால்முற்றாகக்கொண்டு உரைத்தலும் ஒன்று;
இங்ஙனங்கொள்ளுமிடத்து, “வருவேம் கடத்தும்பி யஞ்சல்” என்றதைக் கழலின் வார்த்தையாக் கூறுதல், உபசாரவழக்காம்.
மால் – பெருமை, அடியார்கள்பக்கல் அன்பு, திரு மகளிடத்துக் காதல், மாயை, கருநிறம் இவற்றையுடையவன்.
“கழல்” – பால்பகா அஃறிணைப்பெய ராதலால், ‘நின்றன’ முதலிய பலவின்பால்முற் றுக்களைக்கொண்டன.
ஒரு விலங்கினாலே மற்றொருவிலங்கிற்கு நேர்ந்த துன்பத்தைத் தான் இருந்தவிடத்தி லிருந்தே தீர்ப்பது
ஸர்வசக்தனான எம்பெருமானுக்கு மிகவும் எளிதாயினும் அப்பெருமான் அங்ஙனஞ்செய்யா மல் தனதுபேரருளினால்
அரைகுலையத் தலைகுலைய மடுக்கரைக்கே வந்துஉதவின மகாகுணத்தில் ஈடுபட்டு,
‘உற்றழைக்க வருவேம் கடத்தும்பி அஞ்சலென்றோடின மால்கழல்’ என்றார்.
உற்றழைக்க வருவேங்கடத் தும்பி யஞ்சலென்றோடின மால் – “முன் தவித்து ஆனை வாவென வந்தான்” என்பர் அழகரந்தாதியிலும்.

நின்றன, நடந்தன, இருந்தன, ஓடின என்ற மாறுபட்ட சொற்கள் நான்கையும் நான்கடிகளிலும் நிறுத்தினது,
முரண்தொடை யென்னும் செய்யுளிலக்கணத்தின்பாற்படும்.
நிற்றல் முதலிய செயல்களை இடவேறு பாட்டினாலும் காலவேறுபாட்டினாலும் ‘மால்கழல்’ என்ற ஒருபொருளுக்கே
ஏற்றி யுரைத்தது முரண்விளைந்தழிவணியாதலும்,
‘மால்கழல்’ என்பது ஈற்றில்நின்று ‘நின்றன’ ‘நடந்தன’ ‘இருந்தன’ என்னுஞ் சொற்களோடு இயைதல்
கடைநிலை விளக்காதலும் அறியத்தக்கவை.
எல்லாநூல்களும் மங்கலமொழி முதல்வகுத்துக்கூறவேண்டுவது மரபாதலால், “திரு” என்று தொடங்கினார்.
கீழ்க் காப்புச்செய்யுளை “நல்ல” என்று தொடங்கினதும் இதன்பாற்படும்.

—————

மாலை மதிக்குஞ்சி – ஈசனும் போதனும் வாசவனும்
நூலை மதிக்கும் முனிவரும்-தேவரும் நோக்கி அந்தி
காலை மதிக்குள் வைத்து– ஏத்தும் திருமலை கைம்மலையால்
வேலை மதிக்கும் பெருமான் உறை திரு வேங்கடமே –2-

(இ – ள்.) மாலை – அந்திமாலைப்பொழுதில் விளங்குகின்ற,
மதி – பிறைச் சந்திரனைத் தரித்த,
குஞ்சி – தலைமயிர்முடியையுடைய,
ஈசனும் – சிவபிரானும்,
போதனும் – பிரமதேவனும்,
வாசவனும் – தேவேந்திரனும்,
நூலை மதிக்கும் முனிவரும் – சாஸ்திரங்களை ஆராய்ந்தறிகிற முனிவர்களும்,
தேவரும் – தேவர்களும்,
அந்தி – மாலைப்பொழுதிலும்,
காலை – காலைப்பொழுதிலும்,
நோக்கி – தரிசித்து,
மதிக்குள் வைத்து – தமது அறிவில் வைத்து (மனத்திற்கொண்டு தியானித்து),
ஏத்தும் – துதிக்கப்பெற்ற,
திரு மலை – சிறந்த மலை, (எதுவென்றால்-,)
கை மலையால் வேலை மதிக்கும் பெருமான் உறை திருவேங்கடமே – (தனது) கைகளாகிய மலைகளைக்கொண்டு
திருப்பாற்கடலைக் கடைந்த திருமால் எழுந்தருளியிருக்கிற திருவேங்கடமலையேயாம்; (எ – று.)

இச்செய்யுள், ஊர் அல்லது பதி எனப்படுகிற பிரபந்தத்துறை அமை யக் கூறியது;
“இன்னசிறப்புடையது பிரபந்தத்தலைவனதுவாழிடம்” என்ற வாய்பாடுபொருந்தக் கூறுதல், இதன்இலக்கணமாம்.
திருவேங்கடமுடையான் தேவாதிதேவனான திருமாலாதலால், மற்றைத் தேவர் முனிவர் முதலியயாவரும்
அவனெழுந்தருளியிருக்கிற அவ்விடத்தைச் சந்தியாகாலமிரண்டிலும் தரிசித்துத் தியானித்துத் துதித்து வழிபடுவரென்க.
இங்ஙனஞ்சிறப்புடைய மலையாதல்பற்றித் திருமலையென்று தென்மொழியிலும்,
ஸ்ரீசைல மென்றுவடமொழியிலும் திருவேங்கடத்துக்குச் சிறப்பாகப்பெயர்வழங்கும்.

மாலைமதி யெனவே பிறையாயிற்று; கொன்றைமாலையையும் சந்தி ரனையுந் தரித்த சடைமுடி யென்று உரைப்பாரு முளர்:
மாலைபோல மதி யையணிந்த முடி யெனினுமாம். சந்திரன் தக்ஷமுனிவனது புத்திரிகளாகிய அசுவிநிமுதலிய
இருபத்தேழு நக்ஷத்திரங்களையும் மணஞ்செய்துகொண்டு அவர்களுள் உரோகிணியென்பவளிடத்து மிகவுங்காதல்கூர்ந்து
அவளுடனே எப்பொழுதுங் கூடிவாழ்ந்திருக்க, மற்றைமகளிரின் வருத்தத்தை நோக்கி முனிவன்
அவனை “க்ஷயமடைவாயாக” என்று சபிக்க, அச்சாபத்தாற் சந்திரன் பதினைந்துகலைகளுங்குறைந்து
மற்றைக்கலையொன்றையும் இழப்பதற்கு முன்னம் சிவபிரானைச் சரணமடைய,
அப்பெருமான் அருள் கூர்ந்து அவ்வொற்றைக்கலையைத் தன்தலையிலணிந்து மீண்டும் கலைகள் வளர்ந்துவரும்படி
அநுக்கிரகித்தன னென்ற வரலாறுபற்றி, “மாலைமதிக் குஞ்சியீசன்” என்றார்.
திருப்பாற்கடல் கடைகையில் அதனினின்று உண்டான பலபொருள்களுடனே விஷமும் சந்திரனும் தோன்ற,
திருமால் அவற்றில் விஷத்தைச் சிவபிரானுக்குக் கொடுத்து உண்ணச்சொல்லி அதனால் அப்பிரானுக்கு
வெப்பமுண்டாகாமல் தணிந்திருக்கும்பொருட்டு உடனே சந்திரனையுங்கொடுக்க, அதனை அப்பெருமான்
சிரமேற்கொண்டனனென்றும் வரலாறு கூறப்படும்.

மதி – (பலராலும் நன்கு) மதிக்கப்படுவ தெனப் பொருள்படுங் கார ணக்குறி. குஞ்சி – ஆண்மயிர்.
(குடுமி சிகை பங்கி என்பனவும் இது, ஐம்பால் ஓதி கூந்தல் கோதை என்பன, பெண்பால்மயிரின்பெயர்.)
ஈசன், வாஸவன், தேவர், மதி (அறிவு), வேலா – வடசொற்கள். ஈசன் – ஐசுவரிய முடையவன்.
போது – பூ; இங்குச் சிறப்பாய்த் தாமரைமலரைக் குறித்தது. திருமாலினது நாபித்தாமரைமலரில் தோன்றியதனால்,
பிரமனுக்குப் போதன் என்று பெயர். போதம் – அறிவு; வடசொல்; அதனையுடையவன் போதனென்று
காரணப்பெயராக உரைத்தலு மொன்று. வாஸவன் என்ற பெயர் – அஷ்டவசுக்களுக்குத் தலைவனென்றும்,
ஐசுவரியமுடையவனென்றும் காரணப்பொருள்படும்; வசு – தேவர்களில்ஒருபகுப்பினரும், செல்வமுமாம்.
தேவர் – விண்ணுலகத்தில் வாழ்பவர். அந்தி – ஸந்த்யா என்ற வடசொல்லின் சிதைவு.
காலைச்சந்திக்கும் மாலைச்சந்திக்கும் பொதுவான இது, இங்குச் சிறப்பாய் மாலைச்சந்தியின்மேல் நின்றது.

(கைம்மலையால் வேலைமதிக்கும் பெருமான் – “தானவ ரும்பருள்ளாய், ஈருருநின்று கடைந்தது” என்ற
திருவரங்கத்துமாலையையும், “தாமரைக் கைந்நோவ, ஆழிகடைந்து” என்ற கம்பராமாயணத்தையுங் காண்க.)
வேலை மதித்த வரலாற்றால், தன்சிரமம் பாராமல் தன்னைச் சரணமடைந்தாரைப் பரிபாலிக்கும் பகவான துகருணை வெளியாம்.
கைம்மலை யென்பதை முன் பின்னாகத்தொக்க உவமைத்தொகை யெனக்கொண்டு, கைம்மலையால் என்பதற்கு –
மலைகள்போன்ற கைகள்கொண்டுஎன்று கருத்துக்காண்க;
தனது கைவசப்படுத்தின மந்தரகிரியால் என்று பொருள் கொள்ளுதலும் அமையும்.
பெருமான் – பெருமையையுடையவன்; மான் – பெயர்விகுதி. ஈற்றுஏகாரம்.

பிரிநிலை; அதனால், இத்திருப்பதி எம்பெருமானது திருவுள்ளத்துக்கு மற்றை யெல்லாத் திவ்வியதேசங்களினும்
மிகப்பாங்கான வாஸஸ்தாநமென் னுங்கருத்து அமையும்: அங்ஙனஞ்சிறப்புடையதாதல், புராணங்களினாலும் விளங்கும்.

————-

வேங்கட மாலை அவியா மதி விளக்கு ஏற்றி அங்கம்
ஆம்கடம் ஆலயம் ஆக்கி வைத்தோம் அவன் சேவடிக்கே
தீங்கு அட மாலைக் கவி புனைந்தோம் இதின் சீரியதே
யாம் கட மால்ஐயி ராவதம் ஏறி இருக்குமதே –3-

(இ – ள்.) அங்கம் ஆம்கடம் ஆலையம் ஆக்கி – உறுப்புக்களையுடையதான (எமது) உடம்பைத் திருக்கோயிலாக அமைத்து,
அவியா மதிவிளக்கு ஏற்றி கெடாத அறிவாகிய திருவிளக்கை (அங்கு) ஏற்றி,
வேங்கடம் மாலை வைத்தோம். திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கிற திருமாலை
(அவ்வுடம்பினுள் அந்தக்கரணமாகிற மனமாகிய கர்ப்பகிருகத்தில்) எழுந்தருளப்பண்ணி வைத்தோம்;
தீங்கு அட – (எமது) பிறவித் துன்பங்களை (அப்பெருமான்) அழிக்குமாறு,
அவன் சேஅடிக்கே கவி மாலை புனைந்தோம் – அப்பரமனுடைய செவ்விய திருவடிகளிலே பாமாலையாகிய பூமாலையைத் தொடுத்துச்சாத்தினோம்; யாம் -,
கடம் மால் ஐயிராவதம் ஏறி இருக்கும் அது – மதமயக்கத்தையுடைய ஐராவதமென்னுந் தேவலோகத்து
அரசயானையின் மேல் (தேவராசனாய்) ஏறி வீற்றிருக்கப் பெறுவோமாயின் அதுவும்,
இதின் சீரியதே – இதைக்காட்டிலும் சிறந்ததாமோ? (ஆகாது என்றபடி); (எ – று.) – ஏ – ஈற்றசை.

பேரின்பத்துக்கு இடமாகுமாறு எம்பெருமானை மனத்திற்கொண்டு தியானித்து அறிவுமுழுதையும் அவன்பக்கலிலே
செலுத்தி அவனதுசொரூ பத்தையுணர்ந்து அவன்மேற்பாமாலைபாடி இங்ஙனம் எல்லாக்கரணங்களாலும்
அவனை வழிபடுதலினும், சிற்றின்பத்துக்கேஇடமான தேவேந்திரபதவி சிறிதும்சிறவாது என்பதாம்.
“இதின் சீரியதே” என்பதற்கு – இதுபோலச் சிறந்ததாகாதென்றும் பொருள்கொள்ளலாம்.
“இன்” என்ற ஐந்தனுருபு – முந்தின உரைக்கு உறழ்பொருவென்னும்எல்லைப்பொருளதும்,
இவ்வுரைக்கு உவமப்பொருவென்னும் ஒப்புப்பொருளதுமாம்.
இங்ஙனங்கூறியதனால், பகவத்கைங்கரியத்தில் இவ்வாசிரியர்க்கு அன்புமிக்கிருத்தல் நன்குவிளங்கும்.

“அன்பேதகளியா ஆர்வமேநெய்யாக, இன்புருகுசிந்தை யிடுதிரியா – நன்புருகி, ஞானச்சுடர்விளக்கேற்றினேன் நாரணற்கு”,
“மார்வமென்ப தோர் கோயிலமைத்து மாதவனென்னுந் தெய்வத்தை நாட்டி”,
“புனையுங் கண்ணி யனதுடைய வாசகஞ்செய்மாலையே,ழுழுசெய்யசுடராழியானடிக்கே சூட்டினேன் சொன்மாலை” என்ற
ஆழ்வார்க ளருளிச்செயல்களை அடி யொற்றி,
“அங்கமாங்கடமாலையமாக்கி அவியாமதிவிளக்கேற்றி வேங்கடமா லைவைத்தோம், அவன்சேவடிக்கே மாலைக்கவிபுனைந்தோம்” என்றார்.

காற்றினால் அவியுந் தன்மையதாய்ப் புறவிருளையே யொழிக்கின்ற சாதாரண விளக்கினும் எவ்வாற்றாலும் நிலை
குலையாது அகவிருளையொழிக்கிற ஞானமாகிய சுடர்விளக்கிற்கு உள்ள விசேடந் தோன்ற, “அவியாமதிவிளக்கு” எனப் பட்டது;
வேற்றுமையணி. அங்கமாங்கடமாலயமாக்கி – முகம் கை கால் முதலிய அவயவங்களோடுகூடிய உடம்பைக்
கோபுரம் மதில் வாயில் முத லிய உறுப்புக்களோடுகூடிய கோயிலாகவும்,
அவ்வுடம்பின் அகத்துறுப்பாகிய மனத்தை அக்கோயிலினுள்ளே எம்பெருமானை யெழுந்தருளப் பண்ணுமிடமாகவுங் கருதுக.
முதல்மூன்றடிகள், உருவகவணியின்பாற்படும்.

விளக்கு – (பொருள்களை) விளங்கச்செய்வது என்று பொருள்படுங் காரணக்குறி.
அங்கம், கடம், ஆலயம், மாலா, ஐராவதம் – வடசொற்கள். கடம் – பானை; பலவகைப் பண்டங்கள் நிறைந்ததொரு
கொள்கலம் போலுதலால், கடம்என்பது – உடம்புக்கு உவமையாகுபெயராக வழங்கும்.
ஆலையம், ஐயிராவதம் என்ற போலிகள், திரிபுநயம்பற்றியன. ஐராவதம் – இந்திரனது வெள்ளையானை; நான்கு தந்தங்களையுடையது.
வைத்தோம், புனைந்தோம், யாம் – தனித்தன்மைப்பன்மைகள். சேவடி – செம்மை + அடி. திருவடி சிவந்திருத்தல், உத்தமவிலக்கணம்.
சீரியதே, ஏ – எதிர்மறை. மால் -மயக்கம்.

————

இருக்கு ஆரணம் சொல்லும் எப்பொருள் இன்பமும் எப்பொருட்கும்
கருக் காரணமும் நல் தாயும் நல் தந்தையும் கஞ்சச் செல்வப்
பெருக்கு ஆர் அணங்கின் தலைவனும் ஆதிப் பெருந் தெய்வமும்
மருக்கு ஆர் அணவும் பொழில் வட வேங்கட மாயவனே –4-

(இ – ள்.) இருக்கு ஆரணம் சொல்லும் – ருக் முதலிய வேதங்களாற் சொல்லப்படுகின்ற,
எ பொருள் இன்பமும் – எல்லாவகைப் பொருள்களும் எல்லாவகையானந்தங்களும்,
எ பொருட்கும் கரு காரணமும் – எவ்வகைப் பொருள்களுக்கும் உற்பத்திகாரணமும்,
நல் தாயும் – நல்ல தாயும்,
நல் தந்தையும் – நல்ல தந்தையும்,
கஞ்சம் செல்வம்பெருக்கு ஆர் அணங்கின் தலைவனும் – செந்தாமரைமலரில் வீற்றிருப்பவளும் ஐசுவரியசமிருத்தி நிரம்பிய வளுமான திருமகளின் கணவனும்,
ஆதி பெரு தெய்வமும் – (எல்லாத்தெய்வங்கட்கும்) முதன்மையான பெருமையையுடைய தெய்வமும், (ஆகிய அனைத்தும்),
மரு கார் அணவும் பொழில் வட வேங்கடம் மாயவனே – வாசனையை யுடையனவும் மேகமண்டலத்தை
யளாவுவனவு மான சோலைகளை யுடைய வடக்கின்கண்உள்ள திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கிற திருமாலேயாம்; (எ – று.)

நான்குவேதங்களுள் இருக்குவேதம் முதல தாகையால், அதனைத் தலைமையாக எடுத்து “இருக்காரணம்” என்றார்.
“மெய்ப்பொருளின்பமும்” என்ற பாடத்துக்கு – உண்மைப் பொருளாகிய ஆநந்தஸ்வரூபமு மென்று பொருள்காண்க.
“எப்பொருள்” என்பதில், எகரவினா – எஞ்சாமைப்பொருளது; உம்மை – முற்றும்மை.
நற்றாய் – “தாயொக்கு மன்பின்” என்றபடி மக்களிடத்து அன்பிற்சிறந்த தாய். நற்றந்தை – “உயர்மிக்க தந்தை,”
“சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே” என்றபடி பிள்ளையின் உயர்ச்சி மிகுதிக்குக்காரணமான தந்தை.
தம்மக்கட்கு ஆவன வெல்லாவற்றையும் அன்போடு செய்துமுடித்து மகிழ்கிற தாய்தந்தையர்போல,
எம்பெருமான் தன் அடியார்க்கு ஆவனவெல்லாம் அன்போடுசெய்து மகிழ்வனென்க.
திருமழிசைப்பிரான் “அத்தனாகி யன்னையாகி” என்றாற்போல, “நற்றாயு நற்றந்தையும் மாயவனே” என்றார்.
“ஹிதமேப்ரவர்த்திப்பிக்கும் பிதாவுமாய், ப்ரிய மேப்ரவர்த்திப்பிக்கும் மாதாவுமாய்,
பிதாசெய்யும்உபகாரத்தை மாதாசெய் யமாட்டாள்; மாதாசெய்யும் உபகாரத்தைப் பிதா செய்யமாட்டான்:
இரண்டு வகைப்பட்ட உபகாரத்தையும் அவன்தானே செய்யவல்லனாயிருக்கை;
“ஸர்வேஷாமேவ லோகாநாம் பிதா மாதாச மாதவ:” என்றும்,
“உலகுக்கோர் முந்தைத்தாய்தந்தை” என்றும் சொல்லக்கடவதிறே” என்ற வியாக்கியாந வாக்கியங்கள் இங்கு நோக்கத்தக்கன.
இது, ஸர்வவித பந்துவுமாயி ருத்தற்கு உபலக்ஷணம்; “எம்பிரானெந்தை யென்னுடைச்சுற்றம்” என்றார் திருமங்கையாழ்வார்.

ருக், கர்பம், கஞ்ஜம், தைவம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன. ஆரணம், காரணம், ஆதி – வடசொற்கள்.
கஞ்சம் – நீரில் தோன்றுவது: கம் – நீர். காரணவும்பொழில் – சோலையின்உயர்வைவிளக்குந் தொடர்புயர்வு நவிற்சியணி.
“வடவேங்கடம்” என்றது, இயற்கைவிளக்கவந்த அடைமொழி புணர்ந்தது; அடைமொழி இடம்விலக்கவந்ததன்று.
வேங்கடம் தமிழ்நாட் டிற்கு வடவெல்லையென்பதுதோன்ற “வடவேங்கடம்” என்றதாகவுங்கொள்ளலாம்.
மாயவன் – மாயையை யுடையவன்; மாயையாவது – செய்தற்கு அரியனசெய்யுந் திறம்:
பிரபஞ்சகாரணமான மூலப்பிரகிருதியுமாம்; ஆச்ச ரியகரமான குணங்களுஞ் செயல்களு மென்னலுமாம்.

———-

மாயவன் கண்ணன் மணி வண்ணன் கேசவன் மண்ணும் விண்ணும்
தாயவன் கண் நன் கமலமொப்பான் சரத்தால் இலங்கைத்
தீயவன் கண்ணன் சிரம் அறுத்தான் திரு வேங்கடத்துத்
தூயவன் கண் அன் புடையார்க்கு வைகுந்தம் தூரமன்றே –5-

(இ – ள்.) மாயவன் – மாயையையுடையவனும்,
கண்ணன் – கிருஷ்ணாவதாரஞ்செய்தவனும்,
மணி வண்ணன் – நீலமணிபோன்ற நிறமுள்ளவனும்,
கேசவன் – கேசவனென்னுந் திருநாமமுடையவனும்,
மண்ணும் விண்ணும் தாயவன் – நிலவுலகத்தையும் மேலுலகத்தையும் அளந்தவனும்,
கண் நல் கமலம் ஒப்பான் – கண்கள் நல்லசெந்தாமரைமலர்போ லிருக்கப்பெற்றவ னும்,
இலங்கை தீய வன்கண்ணன் சிரம் சரத்தால் அறுத்தான் – இலங்கா புரியில் வாழ்ந்த கொடிய தறுகண்மை யுடையவனான
இராவணனது தலைகளைத் தனதுஅம்பினால் துணித்திட்டவனுமாகிய,
திருவேங்கடத்து தூயவன் கண் – திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கிற பரிசுத்தமூர்த்தியான எம்பெருமான் பக்கல்,
அன்பு உடையார்க்கு – பக்திப்பேரன்பை யுடையவர்க ளான பாகவதர்களுக்கு,
வைகுந்தம் – முத்தியுலகமாகிய ஸ்ரீவைகுண்டமெ னப்படுகிற பரமபதம்,
தூரம் அன்று – சேய்மையிலுள்ளதன்று (மிக்கசமீபத் திலுள்ள தென்றபடி); (எ – று.) – ஈற்று ஏகாரம் – தேற்றம்.

திருவேங்கடமுடையானிடம் பக்திசெய்தொழுகுவார்க்கு மிகஎளிதில் தவறாது முத்தி சித்திக்கு மென்பதாம்.
“மாயவன்” முதலியன – ஒருபொ ருளின்மேல்வந்த பலபெயர்கள். கண்ணன் – க்ருஷ்ணன் என்ற வடசொல்லின் சிதைவு;
அப்பெயர் – கருநிறமுடைய னென்றும், (யாவர்மனத்தையும்) இழுப்பவ னென்றும், (எல்லாவற்றையுஞ்) செய்பவ னென்றும்,
மற்றுஞ் சிலவகையாகவும் பொருள்படும்.
மணிஎன்பது – நவமணிகட்கும் பொதுப் பெயராகவும், நீலமணிக்குச் சிறப்புப்பெயராகவும் வழங்கும்.
வர்ணம் என்ற வடசொல், வண்ண மெனச் சிதைந்தது.
கேசவன் என்ற திருநாமத்துக்கு – பிரமனையும் சிவனையும் தன்அங்கத்திற் கொண்டவ னென்றும் (க – பிரமன், ஈச – சிவன்),
கேசியென்னும் அசுரனைக் கொன்றவ னென்றும் , மயிர்முடி யழகுடையவ னென்றும் (கேசம் – மயிர்) பொருள்கொள்ளலாம்.
மண்ணும் விண்ணுந் தாவியது, திரிவிக்கிரமாவதாரத்தில்.
இவ்வரலாற்றால், கொடிய வரை யடக்குதற்கு வேண்டிய தந்திரம் வல்லவ னென்றவாறு.

கண் நன்கமலமொப்பான் – புண்டரீகாக்ஷன். நன் கமலம் – நீர்வளம் மிக்க தடாகத்தில் அன்றுஅலர்ந்த செழித்த செந்தாமரைமலர்.
இலங்கை யரசனாய் நல்லோர்க்கெல்லாம் பொல்லாங்குசெய்துவந்த இராவணனைத் திருமால் இராமாவதாரத்தில்
தலைதுணிந்துஅழித்திட்டமை, பிரசித்தம்.
தாயவன் – தா – பகுதி; இதுவே தாவு என உகரம்பெற்று வழங்குவது: ய் – இடைநிலை, அ – சாரியை.
வன்கண்மை – எதற்கும் தான்அஞ்சாமை; அனைவரையுந் தான் அஞ்சுவித்தல்: கண்ணோட்டமில்லாத கொடுந்தன்மை.
லங்கா, சிரஸ், வைகுண்டம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன. இலங்கை – கடல்சூழ்ந்த தீவு. தூரம் – வடசொல்.

————-

தூர இரும்புண் தரிக்கும் இக்காயத்தைச் சூழ் பிணிகாள்
நேர் அவிரும் புண்டரர்க்கு அருள்வான் நெடு வேங்கடத்தான்
ஈர இரும்புண்ட ரீகப் பொற் பாதங்கள் என் உயிரைத்
தீர இரும்பு உண்ட நீர் ஆக்குமாறு உள்ளம் சேர்ந்தனவே –6-

(இ – ள்.) நேர் அவிரும் புண்டரர்க்கு அருள்வான் – (குறுக்காகவன்றி) நேர்மையாக விளங்குகிற
திருமண்காப்பையுடையவர்களான ஸ்ரீவைஷ்ண வர்களுக்கு அருள்செய்பவனாகிய,
நெடு வேங்கடத்தான் – நெடிய திருவேங் கடமலையிலெழுந்தருளியிருக்கிற எம்பெருமானுடைய,
ஈரம் இரும் புண்டரீகம் பொன் பாதங்கள் – குளிர்ச்சியான பெரிய செந்தாமரைமலர்போன்ற பொலிவுபெற்ற திருவடிகள், –
என் உயிரை – எனது உயிரை,
தீர – முழுவதும்,
இரும்பு உண்ட நீர் ஆக்கும் ஆறு – (காய்ந்த) இரும்பு உட்கொண்ட நீர் போலாக்கும்படி (தம்மிடத்து லயப்படுத்தும்படி),
உள்ளம் சேர்ந்தன – என் மனத்திற் சேர்ந்துவிட்டன; (ஆதலால்),
புண் தரிக்கும் இ காயத்தை சூழ்பிணிகாள் – மாமிசத்தைக்கொண்ட (எனது) இந்த உடம்பைச் சூழ்ந்துள்ள நோய்களே!
தூரம் இரும் – (நீங்கள் என்உடலைவிட்டுத்) தூரத்திற் போய்ப் பிழையுங்கள்; (எ – று.)

நான் இடைவிடாது எம்பெருமானது திருவடிகளைத் தியானஞ்செய் யத்தொடங்கிக் கருமமனைத்துந் தொலையுமாறு
அவனது கருணைக்கு இலக்காகிவிட்டே னாதலால் இனி என்னைக் கருமத்தினால்வருவனவான வியாதிகளால் ஒன்றும்
நலிவுசெய்யமுடியாது என்ற துணிவுகொண்டு, நோய்களை விளித்து, நீங்கள் விரைந்தோடிப்போங்க ளென்று அச்சுறுத்திப்பேசுகிறார். “நெய்க்குடத்தைப்பற்றியேறுமெறும்புகள்போல் நிரந்தெங்கும்,
கைக்கொண்டுநிற்கின்ற நோய்காள் காலம்பெறவுய்யப்போமின்,
மெய்க்கொண்டுவந்து புகுந்து வேதப்பிரானார் கிடந்தார்,
பைக்ங்கொண்டபாம் பணையோடும் பண்டன்று பட்டினங்காப்பே” என்பது முதலாகக்கூறும் ஆழ்வாரருளிச்செயலை அடியொற்றியது, இச்செய்யுள்;
“வ்யாதிகளைப் பார்த்து, “பண்டைதேகமும் ஆத்மாவும் என்றிருக்கவேண்டா: அவன் உகந்தருளினநிலங்களிற் பண்ணும்
விருப்பத்தையெல்லாம் என்தேகத்திலும் ஆத்மாவிலும் பண்ணிக்கொடு வந்துபுகுந்தான்;
நீங்கள் உஜ்ஜீவிக்கவேண்டியிருந்தீராகில், போகப்பாருங்கோள்” என்கிறார்” என்ற வியாக்கியாநவாக்கியம் இங்குங் கொள்ளத்தக்கது.
இந்நூலின் 74 – ஆஞ் செய்யுளும் இப்பொருளுடையதே.

புண்டரம் – நெற்றிக்குறி. நேர் அவிரும் புண்டரம் – திர்யக்புண்டர மாகவன்றி ஊர்த்துவபுண்டரமாக மேல்நோக்கி யிடுந் திருமண்;
அதனை யுடையவர், ஸ்ரீவைஷ்ணவர்: “நீறுசெவ்வேயிடக்காணில் நெடுமாலடியா ரென்றோடும்” என்பது காண்க.
இனி, “நேரவிரும்புண்டரற்கு அருள்வான்” என்று பாடங்கொண்டு, அதற்கு –
(குறுக்காக வடிவம்அமையப்பெற்றிருத்த லால் திர்யக்என்று கூறப்படுகிற விலங்கின்சாதிக்கு உரிய
குணஞ்செயல்க ளைக் கொள்ளாது ராமலக்ஷ்மணரிடத்தும் சீதையினிடத்தும்) நேர்மையான குணஞ்செயல்களோடு ஒழுகிய
கழுகாகிய சடாயுவுக்கு அருள்செய்தவ னென்று உரைத்தலும் ஒன்று;
புண்டரமென்பது கழுகென்னும் பொருளில் வருதலை
“வரும்புண்டரம் வாளியின் மார்புருவிப், பெரும்புண்திறவாவகை பேருதிநீ,
இரும்புண்டநிர்மீள்கினு மென்னுழையிற், கரும்புண்டசொல்மீள்கிலள் காணுதியால்” எனக் கம்பராமாயணத்திலுங் காண்க:
“இருந்தபுண் டரமே கங்கம் எருவையே பவணையோடு, கருஞ்சிறை யுவண மைந்துங் கழுகென்ப சகுந்தமும் போ” என்ற நிகண்டும் நோக்கத்தக்கது.

விலங்கினமாகிய கழுகுசாதியில் தோன்றிய சடாயுவை “புண்டரன்” என உயர்திணையாகக்கூறுதல் ஒக்குகமோவெனின், –
உயர்திணை அஃறிணை யென்ற பகுப்பிற்குக் காரணம் முறையே அறிவின் நிறைவும் குறைவுமே யாதலால்,
அவ்வறிவிற்குறைவின்றி ஐம்பொறியறிவோடு பகுத்தறிவையுங் கொண்டு மனிதர்போலவே தொழில்திறமமைந்த
அருணபுத்திரனான தெய்வக்கழுகை உயர்திணையின் பாற்படுத்துதல் ஒக்குமென்க;
வாநரசாதி யாகிய அநுமான் வாலி சுக்கிரீவன் முதலியோரையும், கரடியாகிய ஜாம்பவானையும்,
பறவையரசான கருடனையுங் உயர்திணையாகவழங்குதல் காண்க.
“புண்டரர்க்கு” என்ற பாடத்துக்கும் உயர்வுப்பன்மையாக இப்பொருள்கொள்ளலாம்;
ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் சடாயு “பெரியவுடையார்” என்று மேம்படுத்தி வழங்கப்படுவர்.

புண்டரீகமென்பது வெண்டாமரையின் பெய ரென வடமொழி நிக ண்டுகளிற் கூறப்பட்டிருப்பினும் அது இங்குத் திருமாலின்
திருவடிகட்கு உவமையாகவந்ததனால், செந்தாமரையை யுணர்த்திற்று.
திருவடிக்குத்தாம ரைமல ருவமை – செம்மை மென்மை யழகுகட்கு என்க.
பழுக்கக்காய்ச்சிய இரும்பில் நீரைவார்த்தால் அந்நீர் அவ்விரும்பிற்சென்று லயப்பட்டு மீண்டும் வெளிப்படாது;
இது மீளாமைக்கு உவமைகூறப்படுதலை, மேற்காட்டிய “வரும்புண்டரம்” என்ற கம்பராமாயணச்செய்யுளின் பின்னிரண்டடிகளி லுங் காண்க;
காய்ந்தஇரும்பு அக்காய்ச்சல்தீர நீரை முற்றும் உட்கொள்ளுதல்போல, எம்பெருமான்திருவடிகள் என்உயிரைத்
தம்மிடத்துலயப்படுத்திக்கொள்ளுமாறு அன்போடு என்மனத்திற் சேர்ந்திட்டன வென்ற இது,
“போரவிட்டிட் டென்னை நீ புறம்போக்கலுற்றாற் பின்னை யான்,
ஆரைக் கொண் டெத்தை யந்தோ எனதென்பதென் யானென்பதென்,
தீரவிரும் புண்டநீரதுபோல வென்னாருயிரை,
யாரப்பருக வெனக்காராவமுதானாயே” என்ற திருவாய்மொழிப்பாசுரத்தை அடியொற்றியது.

தூரஇரும் என்பது, “தூற்றாதே தூரவிடல்” என்றாற்போல நின்றது. இரும் – “உம்” விகுதி பெற்ற ஏவற்பன்மைமுற்று.
“புண்தரிக்கும்” என்ற அடைமொழி, காயத்தின்அசுத்தியை விளக்கும். காயம், புண்டரம், பாதம் – வடசொற்கள்.
அருள்வான் என்பதில், வகரவிடைநிலை – காலமுணர்த்தாது தன்மையுணர்த்திற்று. நெடுமை – உயர்ச்சி.

———–

சேர்ந்து கவிக்கும் முடி கவித்தாய் சிறியேன் இதயம்
சார்ந்து உகவிக்கும் வரம் அளித்தாய் கொண்டல் தண்டலை மேல்
ஊர்ந்து கவிக்கும் வடமலையாய் பஞ்சு ஒழுக்கிய பால்
வார்ந்து உகவிக்கும் பொழுதில் அஞ்சேல் என்று வந்து அருளே –7-

(இ – ள்.) சேர்ந்து – (கிட்கிந்தைநகரத்தைச்) சார்ந்து (அல்லது அடுத்து நண்புபூண்டு),
கவிக்கும் – குரங்கினமான சுக்கிரீவனுக்கும்,
முடி கவித்தாய் – மகுடாபிஷேகஞ் செய்தவனே!
சிறியேன் இதயம் சார்ந்து – (அறி வொழுக்கங்களிற்) சிறியவனான எனது மனத்திற் சேர்ந்துநின்று,
உகவிக்கும் வரம் அளித்தாய் – மகிழ்விக்கின்ற வரங்களை (எனக்கு)க் கொடுத்தருள் பவனே!
கொண்டல் தண்டலைமேல் ஊர்ந்து கவிக்கும் – மேகங்கள் சோ லைகளின்மேல் தவழ்ந்து கவிந்துகொள்ளப்பெற்ற,
வட மலையாய் – வடக்கிலுள்ள திருவேங்கடமலையில் எழுந்தருளியிருப்பவனே! –
பஞ்சு ஒழுக்கிய பால் வார்ந்து உக – பஞ்சைப் பாலில்நனைத்து அதுகொண்டுபிழிந்து ஒழுக விட்ட பாலும்
(கண்டம்அடைத்ததனால் உள்ளேயிறங்கிச்செல்லமாட்டாது கடைவாயினின்று) வழிந்துபெருக,
விக்கும் பொழுதில் – விக்கலெடுக்கின்ற அந்திமதசை (எனக்கு) நேரும்பொழுதில்,
அஞ்சேல் என்று வந்து அருள் – “அஞ்சாதே” என்று (அபயவார்த்தை) சொல்லிக்கொண்டு (என்முன்) எழுந்தருளி (எனக்கு) நற்கதியருள்வாய்; (எ – று.)

“எனைக்கைக்கொள் உடல், கைக்குஞ்சரமதசையி லஞ்சேலென்றென் கண்முன்வந்தே,.
“பொறியைந்தழியுமக்கால, லத் திரங்கா யரங்கா வடியே னுன்னடைக்கலமே” என்றார் திருவரங்கத்தந்தாதியிலும்.
“எய்ப்பென்னை வந்துநலியும்போ தங்கேது நானுன்னை நினைக்கமாட்டேன்,
அப்போ தைக்கிப்போதேசொல்லிவைத்தே னரங்கத்தரவணைப்பள்ளியானே,”
“சாமிடத்தென்னைக் குறிக்கொள்கண்டாய் சங்கொடு சக்கரமேந்தினானே” என்ற பெரியாழ்வார்திருமொழி இதற்கு மூலம்.
பஞ்சுஒழுக்கியபால் வார்ந்துஉக – “பாலுண்கடைவாய்படுமுன்னே” என்றார் பட்டணத்துப்பிள்ளையும்;
இதனை “வாயிலட்டிய கஞ்சியும் மீண்டே, கடைவழி வார” என்ற பெரியாழ்வாரருளிச்செயலோடுஒப்பிடுக.
விக்கும் பொழுதில் – “நாச்செற்று விக்குள்மேல்வாராமுன்” என்றார் திருவள்ளுவரும்.

கவி – கபி யென்ற வடசொல்லின் விகாரம். கவிக்கும் என்ற உம்மை – இழிவுசிறப்பு; எதிரதுதழுவியஎச்சமாகக்கொண்டு,
பின்பு விபீக்ஷணனுக்கு இலங்கையில்முடிசூட்டியதையும் அமைத்துக்கொள்ளலாம்.
சேர்ந்து கவிக்கும் முடி கவித்தாய் என்பதிலுள்ள சொல்நயங் காண்க;
“கவித்தானைமன் னற்கு நட்பாய் முடிகவித்தான்” என்பர் அழகரந்தாதியிலும்.
கவிக்கும் முடி, மகரவொற்று – விரித்தல்விகாரம். இதயம் – ஹ்ருதயம் என்ற வடசொல்லின் சிதைவு.
உகவித்தல் – உகத்தல் என்பதன் பிறவினை; வி – பிறவினைவிகுதி.
இரண்டாமடியில், கவிக்கும் என்று பதம்பிரித்து, நின்மேற் கவிசொல்லுகைக்கும் வரங்கொடுத்தா யென்று உரைப்பாரு முளர்.
கொண்டல் – நீர்கொண்டமேகம்; தொழிலாகுபெயர். தண்டலையென்பது – தண்தலை என்று பிரிந்து,
குளிர்ச்சியான இடத்தையுடையது என்று பொருள்படும்; பண்புத்தொகையன்மொழி. கவித்தல் – மூடுதல்.

———–

வந்திக்க வந்தனை கொள் என்று கந்தனும் மாதவரும்
சிந்திக்க வந்தனை வேங்கட நாத பல் சீவன் தின்னும்
உந்திக் கவந்தனைச் செற்றாய் உனக்கு உரித்தாய் பின்னும்
புந்திக்கு அவம் தனிச் செய்து ஐவர் வேட்கையொரும் என்னையோ –8-

(இ – ள்.) “வந்திக்க – (அடியோம்) வணங்க,
வந்தனை கொள் – அவ் வணக்கத்தை அங்கீகரிப்பாய்”,
என்று – என்று பிரார்த்தித்து,
கந்தனும் – முருகக்கடவுளும்,
மாதவரும் – பெருந்தவமுடையவரான முனிவர்களும்,
சிந்திக்க. தியானிக்க,
வந்தனை – (அவர்கட்குப்) பிரதியக்ஷமாக வந்துதோன் றினாய்;
வேங்கடம் நாத – திருவேங்கடமலைக்குத் தலைவனே!
பல் சீவன் தின்னும் உந்தி – பலபிராணிகளையும்தின்கிற வயிற்றையுடைய,
கவந்தனை – கவந்தனென்னும் அரக்கனை,
செற்றாய் – கொன்றவனே!
உனக்கு உரித்து ஆய பின்னும் – (எனதுஉயிர்) உனக்குஉரியதானபின்பும்,
ஐவர் வேட்கை – பஞ்சஇந்திரியங்களின்சம்பந்தமான ஆசை,
புந்திக்கு அவம்தனை செய்து – (எனது) அறிவுக்கு அபாயத்தைச்செய்து,
என்னை பொரும் – என்னைத்தாக்கி வருத்தும்: (இது என்ன அநீதி! என்றபடி); (எ – று.) – ஈற்றுஏகாரம் – இரக்கத்தைக் காட்டும்.

என்னை என்பதற்கு – என்ன தகுதியின்மை யென்று பொருள்கொண்டு,
பொரும் என்பதற்கு “என்னை” என்ற செயப்படுபொருள் வருவித்தலு மொன்று.
யான் உனக்கு அடிமைப்பட்டபின்பும் என்அறிவைக்கெடுத்து என்னை ஐம்பொறியாசை நலியலாமோ?
நலியாதபடி அருள்செய்யவேண்டும் என்பது குறிப்பு;
“உண்டுகேட்டுற்றுமோந்துப்பார்க்கு மைவர்க்கே, தொண்டு படலாமோ வுன்தொண்டனேன்” என்பர் நூற்றெட்டுத்திருப்பதியந்தாதியிலும்.
மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும் ஐம்பொறிகளை “ஐவர்” என உயர்திணையாக்கூறியது,
இழிப்புப்பற்றிய திணைவழுவமைதி;
தொல்காப்பியவுரையில் நச்சினார்க்கினியர் “தாம்வந்தார் தொண்டனார்” என்பது,
உயர்சொல் குறிப்புநிலையின் இழிபு விளக்கிற்று” என்றது, இங்கு உணரத்தக்கது.
ஐவர்வேட்கை – ஐம்பொறிகளின்வழியாகச் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும்
ஐம்புலன்களையும் வேண்டியபடியெல்லாம் அனுபவிக்கவிரும்பும் ஆசை.

கவந்தன் – தநுவென்னும் யக்ஷனது மகன்; இவன் – ஸ்தூலசிரஸ் என்னும் முனிவனது சாபத்தால் அரக்கனாகிப்
பிரமனருளால் தீர்க்காயுள்பெற் றுத் தேவேந்திரனோடுஎதிர்த்து அவனது வச்சிராயுதத்தாற் புடைபட்டுத்
தனதுதலை வயிற்றிலழுந்தியமைபற்றிக் கவந்தம்போலுந் தோற்றமுடைய னானதனால், இப்பெயர் பெற்றான்.
கபந்தமென்ற வடசொல்லுக்கு – தலையற்றதும் தொழிலுடன் கூடியதுமான உடலென்பது பொருள்.

வந்தநா, ஸ்கந்தன், நாதன், ஜீவன் – வடசொற்கள். புந்தி – புத்தியென்ற வடசொல்லின் மெலித்தல்விகாரம்.
கொள்ளுதல் – ஏற்றுக்கொள்ளுதல். உந்தி – நாபி; வயிற்றுக்கு இலக்கணை.
உனக்கு உரித்தாயபின்னும், உம் – உயர்வுசிறப்பு. அவம் – தீங்கு; அதன்மேல், தன் – சாரியை, ஐ – இரண்ட னுருபு.

————–

தலைவனைப் பிரிந்து மாலை பொழுதுக்கும் அன்றில் பறவைக்கும் வருந்தும் தலைவிக்கு ஆற்றாது தோழி இரங்கல்

பொரு தரங்கத்தும் வடத்தும் அனந்தபுரத்தும் அன்பர்
கருது அரங்கத்தும் துயில் வேங்கடவ கண் பார்த்தருள்வாய்
நிருதர் அங்கத்து நிறம் போல் வரும் அந்தி நேரத்து அன்றில்
ஒரு தரம் கத்தும் பொழுதும் பொறாள் என் ஒரு வல்லியே –9-

(இ – ள்.) பொரு தரங்கத்தும் – மோதுகின்ற அலைகளையுடைய திருப் பாற்கடலிலும்,
வடத்தும் – ஆலிலையிலும்,
அனந்தபுரத்தும் – திருவனந்தபுர மென்னுந் திவ்வியதேசத்திலும்,
அன்பர் கருது அரங்கத்தும் – அடியார்கள் தியானிக்கின்ற திருவரங்கமென்னுந் திருப்பதியிலும்,
துயில் – பள்ளி கொண்டு யோகநித்திரை செய்தருள்கின்ற,
வேங்கடவ – திருவேங்கடமுடையானே! –
நிருதர் அங்கத்து நிறம் போல் வரும் – இராக்கதர்களுடையஉடம் பின்நிறம்போல (இருண்டு கறுத்துப் பயங்கரமாய்) வருகிற,
அந்தி நேரத்து – அந்தி மாலைப்பொழுதில்,
அன்றில் ஒரு தரம் கத்தும் பொழுதும் – அன்றிற்பறவை ஒருதரம்கத்துகிற பொழுதளவேனும்,
என் ஒரு வல்லி பொறாள் – என்னுடைய தனித்த பூங்கொடிபோன்ற இம்மங்கை சகிக்கமாட்டாள்;
(ஆதலால்), கண்பார்த்துஅருள்வாய் – (இவள்பக்கல்) கடாக்ஷம்வைத்து அருள்செய்வாயாக; (எ – று.)

கீழ் எட்டுப்பாசுரங்களில் திருவேங்கடமுடையானுடைய பலவகைப் பிரபாவங்களைக் கூறி அப்பெருமானது திவ்விய
சௌந்தரியத்தில் ஈடுபட்டு அவனது உத்தமபுருஷத்தன்மையைக் கருதியதனாலே,
அப்பொழுதே அவ னைக்கிட்டவேண்டும்படியான ஆசை யுண்டாய், அங்ஙனம் அவனைக்கிட்டப் பெறாமையாலே,
ஐயங்கார் ஆற்றாமைமீதூர்ந்து தளர்ந்தார்; அத்தளர்ச்சியாலே தாமானதன்மை குலைந்து ஆண்பெண்ணாம்படியான
நிலைமை தோன்றி ஒருபிராட்டிநிலையை யடைந்தார்; ஆண் பெண்ணாதல் கூடுமோ வெனில், –
“கண்ணிற் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவுந் தோளினாய்,”
“வாராக வாமனனே யரங்கா வட்டநேமிவலவா ராகவா உன்வடிவு கண்டால் மன்மதனும் மடவாராக ஆதரஞ்செய்வன்” என்ப வாதலாலே, இதுகூடும்:

தண்டகாரணியவாசிகளான முனிவர்கள் இராமபிரானதுசௌ ந்தரியாதிசயத்தில் ஈடுபட்டுத் தாம் பெண்தன்மையைப்
பெறவிரும்பி மற்றொருபிறப்பில் ஆயர்மங்கையராய்க் கண்ணனைக் கூடின ரென்ற ஐதிகியமும் உணர்க.
“கண்ணனுக்கே யாமது காமம் அறம்பொருள்வீ டிதற்கென் றுரைத்தான்,
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண்மிசையே” என்பதன் பொருளும் அறியற்பாலது.
(“பெண்டிரும் ஆண்மைவெஃகிப் பேதறு முலையினாள்,”
“வாண்மதர்மழைக்கணோக்கி ……… ஆண்விருப்புற்று நின்றார் அவ்வளைத்தோளினாரே” எனப் பெண் ஆணாகும் இடமும் உண்டு.)
அங்ஙனம் ஆண் பெண்ணாகிலும் சாதாரணப்பெண்மையையேயன்றி எம் பெருமானுக்கு உரியவளாகும் ஒருபிராட்டியின்
நிலைமையை அடையுமாறு எங்ஙனமெனில், – பரமாத்மாவினது தலைமையும், ஜீவாத்மாவினது அடிமையும்,
ஜீவாத்மா பரமாத்மாவுக்கே உரியதாயிருக்கையும், புருஷோத்தம னாகிய எம்பெருமானது பேராண்மைக்கு முன் உலகமுழுவதும் பெண்தன்மையதாதலும், ஜீவாத்மாவினதுஸ்வாதந்திரியமின்மையும், பாரதந்திரியமும், தாம் எம்பெருமானது சேர்க்கையால் இன்பத்தையும் பிரிவினால் துன்பத்தையும் அடைதலும்,
அவனையே தாம் கரணங்களெல்லாவற்றாலும் அனுபவித்து ஆனந்தித்தலும் முதலிய காரணங்களால்,
தம்மைப் பிராட்டிமா ரோ டொக்கச் சொல்லத் தட்டில்லை.
தோழிநிலைமையும் தாயார்நிலைமையும் முதலியன ஆகிறபடி எங்ஙனேயென்னில், –
தாம் விரும்பிய பொருளின் வரம்பின்மையால் அங்ஙனமாகு மென்க.

தோத்திரப்பிரபந்தங்களில் அகப்பொருட் கிளவித்துறைகளை இடையிடையே கூறுதல் கவிசமயமாதலை இலக்கியங்கள்கொண்டு உணர்க.
சிருங்காரரசப்பிரதானமான அகப்பொருட்கிளவித்துறைகளை ஞானநூலாகிய தோத்திரப்பிரபந்தங்களிற்கூறுதற்குக் காரணம்,
கடுத்தின்னாதானைக் கட்டி பூசிக் கடுத்தின்பிப்பார் போல, சிற்றின்பங்கூறும்வகையாற் பேரின்பத்தைக் காட்டி நாட்டுதல் என்பர்.
இங்ஙனம் வெளிப்படைப்பொருளால் அந்யாபதேசமாகக்கூறுகிற சிற்றின்பத்துறைச்செய்யுள்கட்கெல்லாம்
ஸ்வாப தேசமாகப் பேரின்பத்தின்பாற்படுத்தும் உள்ளுறைபொருள் உண்டென்பதையும் உணர்க.
அன்றியும், இங்குக்கூறியது, உலகவாழ்கைச் சிற்றின்பமன்று:
“நான்கினுங் கண்ணனுக்கே ஆமது காமம்” என்றபடி எம்பெருமானைச் சேரவேண்டுமென்று அவன்பக்கலிலே
யுண்டாகின்ற அபேக்ஷையையே கூறியது.
“கோவிந்தா எற்றைக்கும் ஏழேழ்பிறவிக்கும் உன்தன்னோடு, உற்றோமேயாவோம் உனக்கே நாமாட்செய்வோம்,
மற்றை நங்காமங்கள் மாற்று” என்றபடி லோகநாயகனுடைய சேர்க்கையை அபேக்ஷிக்கின்ற பேரின்பக்காதல்
வேதாந்தநிர்ணயத்தின்படி அன்புசெலுத்தவேண்டிய இடத்தில் அன்புசெலுத்திய தாதலால், சிற்றின்பக்காதல்போலன்றி,
சகலபாபநிவ்ருத்திக்கும் வீடுபேற்றுக்குமே காரணமாம். கண்ணபிரான்பக்கற்கொண்ட காமத்தால்
கோபஸ்திரீகள் முத்திபெற்றன ரென்று புராணங்கூறுதலுங் காண்க.

ஓர்உத்தமபுருஷன் பரிவாரத்துடன் வேட்டையாடுதற்குப் புறப்பட்டு வனத்துக்குச் சென்றவனாய்,
ஓர் உத்தமகன்னிகையும் தோழியருடன் பூக்கொய்து விளையாடுதற்கென்று பூஞ்சோலையிற் சேர்ந்தவளவிலே,
ஒவ்வொரு வியாஜத்தால், தோழியர் பிரிய அக்கன்னிகை அங்குத் தனித்துநின்ற சமயத்திலே,
ஒவ்வொரு வியாஜத்தாற் பரிவாரங்கள் பிரியத் தனிப்பட்டவனாய் அப்புருஷன் அங்குவந்துசேர,
இருவரும் ஊழ்வினைவசத்தால் இங்ஙனம் தற்செயலாய் ஓரிடத்திலே சந்தித்து ஒருவரையொருவர் கண்டு காதல் கொண்டு
காந்தருவவிவாகக்கிரமத்தாற் கூடி உடனே பிரிய, பின்பு மற்றுஞ்சில களவுப்புணர்ச்சிக்குஉரிய வகைகளால்
அத்தலைமகனது கூட்டுறவைப் பெற்று, பிறகு பிரிந்து, அப்பிரிந்தநிலையிலே பிரிவுத்துயரையாற்றாமல்
விரகதாபத்தால் வருந்துகிற தலைமகளது தளர்ச்சியைக் கண்ட தோழி தானும் தளர்ந்து பாவனையால்
தலைமகனை எதிரிற்கொண்டு முன்னிலைப்படுத்தித் தன்னிலேயுரைத்தது,
இது. அன்றி, தோழி தலைமகனை எதிர்ப்பட்டுத் தலைமகளது ஆற்றாமையை அவனுக்குக்கூறியுணர்த்துவ தெனினுமாம்.
இதனை, மாலைப்பொழுதுகண்டு இரங்கிய செவிலித்தாயின் வார்த்தையாக உரைத்தலும் ஒன்று.

அன்றிலென்பது, ஒருபறவை. அது, எப்பொழுதும் ஆணும்பெண்ணும் இணைபிரியாது நிற்கும்.
கணப்பொழுது ஒன்றை ஒன்று விட்டுப்பிரிந்தாலும் அத்துயரத்தைப்பொறாமல் ஒன்றையொன்று இரண்டு மூன்றுதரம் கத்திக்கூவி
அதன்பின்பும் தன்துணையைக் கூடாவிடின் உடனே இறந்துபடும். இதனை வடநூலார் க்ரௌஞ்சம் என்பர்.
எப்பொழுதும் இணையாகவுள்ள அந்த அன்றிற்பறவையும், அது இருட்பொழுதிற் பார்வைகுறைந்து துணையையிழந்து
நலிந்து எழுந்து பறந்து வருந்துதலும், ஆணும்பெண்ணுமான அன்றில் இணைபிரியாமல் நெருங்கி ஒன்றோடொன்று
வாயலகைக் கோத்துக்கொண்டு உறங்கும்பொழுது அவ்வுறக்கத்திலே வாயலகு தன்னில்நெகிழ்ந்தவளவிலே
துயிலுணர்ந்து அப்பிரிவைப்பொறாமல் மெலிந்து பெருந்தொனியாகக்கத்துகிற மிகஇரங்கத்தக்க சிறுகுரலும்
காமோத்தீபகமாய்ப் பிரிவாற்றாமைத்துயரை வளர்த்துப் பிரிந்தகாமுகரை வருத்து மென்றல், கவிமரபு.
மாலைப்பொழுது கலவிக்குஉரிய காலமான இரவின் தொடக்கமாதலால், அதுவும் பிரிந்தார்க்குத் துயர்க்கு ஏதுவாம்.

கவலையின்றிப் பலவிடத்தும் இனிதுகண்ணுறங்குகிற நீ இவ்விளமகள் துயில்பெறாது வருந்துதலை மாற்றவேண்டாவோ? என்ற
குறிப்புத் தோன்ற “பொருதரங்கத்தும் வடத்தும் அனந்தபுரத்தும் அன்பர்கருதரங்கத்தும் துயில் வேங்கடவ கண்பார்த்தருள்வாய்” என்றாள்.
கண்பார்த்தருளல் – கண்ணோட்டங் கொண்டு மீளவும்வந்து இவளை வெளிப்படையாக மணஞ்செய்து கொள்ளுதல்.
“ஒரு” என்றது – தனிமையையும், “வல்லி” என்றது – துயர் பொறுக்கமாட்டாத மெல்லியலா ளென்பதையுங் காட்டும்.
ஆலிலையிற்கண் வளர்தல், பிரளயப்பெருங்கடலில். திருவனந்தபுரம் – மலைநாட்டுத் திருப்பதி பதின்மூன்றில் ஒன்று.
அரங்கம் – சோழநாட்டுத் திருப்பதிநாற்பதில் ஒன்று; நூற்றெட்டுத் திவ்வியதேசங்களுள் தலைமைபூண்டது.

தரங்கம், வடம், அநந்தபுரம், ரங்கம், அங்கம், வல்லீ – வடசொற்கள். நிருதர் – நைருதரென்ற வடசொல்லின் விகாரம்;
நிருருதியென்ற தென் மேற்குத்திக்குப்பாலகனது மரபின ரென்பது பொருள்.
“பொரு தரங்கம்” என்பதை அடையடுத்த சினையாகுபெய ரென்றாவது, வினைத்தொகையன் மொழி யென்றாவது கொள்க.
வடம் என்ற ஆலமரத்தின் பெயர் – அதன் இலைக்கு முதலாகு பெயர்.
அரங்கு என்ற சொல்லுக்கு உள்ளிடமென்று ஒரு பொரு ளுள்ளதனால், “அன்பர்கருதரங்கத்து” என்பதற்கு –
மெய்யன்புடைய ரான அடியார்கள் தியானிக்கின்ற மனத்திலும் என்றும் பொருள் கொள்ளலாம்.
நான்காமடியில், உம் – இழிவுசிறப்பு. வல்லி – கொடி; பெண்ணுக்கு உவமையாகுபெயர்:
மெல்லியதாய் ஒல்கியொசியும் வடிவில் உவமம். “கண்பார்த்தருளாய்” என்பதும் பாடம்.

திருவேங்கடமுடையான் ஒருகால் ஐயங்காரது ஞானக்கண்ணுக்கு இலக்கானபொழுதே அவனைக்கிட்டி
முத்தியின்பமனுபவிக்கும்படியான ஆசை கொண்ட அவரை அப்பெருமான் அப்பொழுதே சேர்த்துக்கொள்ளாது மறைய,
அதனாலுண்டான துயரத்தால் ஐயங்கார் லௌகிகபதார்த்தங்களைக் குறித்து வருந்த,
அதுகண்ட அன்பர்கள் அவருடைய அத்தன்மையை எம்பெருமான்பக்கல் விண்ணப்பஞ்செய்து,
இனி இவரை வருந்தாதபடி விரைவிற்சேர்த்துக்கொள்ளவேண்டு மென்று பிரார்த்தித்தல், இதற்கு உள்ளுறைபொருள்; விவரம் கேட்டு உணர்க.

———–

தலைவனைப் பிரிந்த தலைவி கடலோடு புலம்புதல் –

ஒரு மாது அவனி ஒரு மாது செல்வி உடன் உறைய
வரும் ஆ தவனின் மகுடம் வில் வீச வடமலை மேல்
கரு மாதவன் கண்ணன் நின் பால் திரு நெடும் கண் வளர்க்கைக்கு
அருமா தவம் என்ன செய்தாய் பணி எனக்கு அம்புதியே –10-

(இ – ள்.) அம்புதியே – கடலே! –
ஒரு மாது அவனி – ஒருமனைவியான பூதேவியும்,
ஒருமாது செல்வி – மற்றொருமனைவியான ஸ்ரீதேவியும்,
உடன் உறைய – (தன்னைவிட்டுப்பிரியாது எப்பொழுதும்) தன்னுடன் இருக்கவும்,
வரும் ஆதவனின் மகுடம் வில் வீச – உதயமாகிவருகின்ற சூரியன் போலக் கிரீடமானது ஒளியைவீசவும்,
வடமலைமேல் கரு மாதவன் கண்ணன் – வடக்கின்கணுள்ள திருவேங்கடமலையின் மீது வாழ்கிற
கரியதிருமேனியையுடைய மாதவனென்றும் கிருஷ்ணனென்றுந் திருநாமங்களையுடைய திருமால்,
நின்பால் திரு நெடுங் கண் வளர்கைக்கு – உன்னிடத்திலே அழகிய நீண்ட திருக்கண்களை மூடி நித்திரைசெய்தற்காக,
அரு மா தவம் என்ன செய்தாய் – (நீ) அரிய பெரிய எவ்வகைத்தவத்தைச் செய்தாய்? எனக்கு பணி – எனக்குச் சொல்வாய்; (எ – று.)

“போக்கெல்லாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி, ஆக்கஞ்சேரூடல் அணி மருதம் –
நோக்குங்கால், இல்லிருக்கை முல்லை இரங்கல் நறுநெய்தல், சொல்லிருக்கு மைம்பால்தொகை” என்றபடி
இரங்கல் நெய்தல் நிலத்துக்கு உரியதாதலாலும், அந்நெய்தனிலந்தான் கடலும் கடல்சார்ந்தஇடமு மாதலாலும்,
அந்நிலத்திலே தலைமகனைப் பிரிந்து வருந்துகின்ற தலைமகள் அருகிலுள்ள கடலை முன்னிலைப்படுத்தி,
“திருமால் எப்பொழுதும் உன்னிடத்திலே பொருந்தி இனிதுகண்துயிலுமாறு நீ என்ன தவஞ்செய்தாய்? சொல்” என்று இரங்கிக்கூறின ளென்க.
நீ அதனைச்சொல்லினையாயின், அவனோடு ஒரோசமயத்துக் கூட்டுறவுபெற்றுப்பின்பு பிரிந்து வருந்துகின்ற யானும்
அவ்வகைத்தவத்தைச்செய்து அப்பெருமான் என்றும் என்னைவிட்டுப்பிரியாது என்பக்கல் இனிதுகண்துயிலும்படி பெறுவே னென்பது, குறிப்பு.

“மாலுங்கருங்கடலே யென்னோற்றாய் வையகமுண், டாலினிலைத்துயின்ற வாழியான் –
கோலக், கருமேனிச்செங்கண்மால் கண்படையு ளென்றுந், திருமேனி நீ தீண்டப்பெற்று” என்ற ஆழ்வாரருளிச்செயலை அடியொற்றியது இது.
தலைமகனோடுகூடியுறைகின்ற தலைவியரைக் கண்டு பொறாமை கொள்ளுதல், தலைவனைப் பிரிந்துறைகின்ற தலைவியரியல்பு:
அக்குறிப்பு இப்பாட்டில் “ஒருமாதவனி யொருமாதுசெல்வி யுடனுறைய” என்ற வார்த்தையில் தோன்றுதல் காண்க;
ஸ்ரீதேவியும் பூதேவியும் போலத் தானும் எம் பெருமானுக்குஉரிய ஒருபிராட்டிநிலையைப் பெறுமாறு
வேண்டின ளென்பதும் அவ்வார்த்தையிற் புலனாம்.
“உவர்க்குங்கருங்கடல்நீருள்ளான்” என்னும்படி திருமால் கடல்கள்தோறுங் கண்வளர்ந்தருளு மென்று ஒரு
பிரமாணசித்தியுண்டாகையாலே, திருப்பாற்கடலையேயன்றி இக்கருங்கடலையே இங்ஙனம் வினாவின ளென்க.
“வருமாதவனின் மகுடம் வில்வீச” என்றது, திருமுடியும் கிரீடமும் சேர்ந்த சேர்த்தியா லாகிய செயற்கையழகில் தலைவி ஈடுபட்டதைக் காட்டும்.

உறைய, வீசக் கண்வளர்கைக்கு என்று இயையும். உறைய, வீச – வினைச் செவ்வெண்.
மாது – விரும்பப்படும் அழகுடைய பெண். அவநி, ஆதபன், மகுடம், மாதவன், மஹாதபஸ், அம்புதி – வடசொற்கள்.
அவநி – (அரசராற்)பாதுகாக்கப்படுவது; அவநம் – ரக்ஷணம். செல்வி – எல்லாச்செல்வங்கட்கும் உரியவள், திருமகள்.
ஆதபன் – நன்றாகத் தபிப்பவன். மா தவன் – ஸ்ரீய: பதி; மா – இலக்குமிக்கு, தவன் – கணவன்;
இத்திருநாமம் – (சந்திரவம்சத்தில்) மதுவென்றஅரசனது மரபில் (கண்ணனாகத்) திருவவதரித்தவ னென்றும் பொருள்படும்;
அப்பொழுது, தத்திதாந்தநாமம்; மது – யதுவின் மூத்த குமாரன். அம்புதி – நீர்தங்குமிடம்; அம்பு – நீர்.
கண்ண னென்ற திருநாமத்துக்கு – கண்ணழகுடையவ னென்றும், கண்ணோட்டமுடையவ னென்றும் பொருள்கொள்ளலாம்.
பணி – வினைப்பகுதிதானே ஏவலொருமையாய் நின்றது.
இச்செய்யுளின் பின்னிரண்டடிகளில் முதலைந்தெழுத்துக்கள் ஒத்துவந்தது, யமகவகையின்பாற்படும். முன்னிரண்டடி – திரிபு.

எம்பெருமான் ஐயங்கார்க்கு ஒருகால் காட்சிதந்து மறைய, அப்பெருமானது இடைவிடாச்சேர்க்கையை விரும்பிய ஐயங்கார்
அங்ஙனம் அவனது நிரந்தரஸம்ச்லேஷத்தைப் பெற்றுநின்ற ஆழ்ந்தகருத்துடைய மகான்களை நோக்கி
“நீங்கள் நிரந்தராநுபவம்பெற்றவகையை எனக்குக் கூறுவீராக” என்று வேண்டுதல், இதற்கு உள்ளுறைபொருள்; விவரம் உய்த்து உணர்க.

———–

அம்பரம் தாமரை பூத்து அலர்ந்தன்ன அவயவரை
அம்பரந்தாமரை அஞ்சன வெற்பரை ஆடகம் ஆம்
அம்பரம் தாம் அரை சூழ்ந்தாரை வாழ்த்திலர் ஐம்புலன் ஆம்
அம்பரம் தாம் மரை போல் திரிவாரை அகல் நெஞ்சமே –11-

(இ – ள்.) அம்பரம் – கடலினிடத்து,
தாமரை பூத்து அலர்ந்து அன்ன – செந்தாமரைமலர்கள் தோன்றி மலர்ந்தாற் போன்ற,
அவயவரை – திருமே னியுறுப்புக்களை யுடையவரும்,
அம் பரந்தாமரை – அழகிய பரமபதத்துக்கு உரியவரும்,
ஆடகம் ஆம் அம்பரம் தாம் அரை சூழ்ந்தாரை – பொன்மயமான ஆடையை (பீதாம்பரத்தை)த் தாம் இடையில் உடுத்துள்ளவருமாகிய,
அஞ்சனவெற்பரை – திருவேங்கடமுடையானை,
வாழ்த்திலர் – துதியாதவர்களாய்,
ஐம்புலன் ஆம் அம்பரம் – ஐம்புலன்களாகிய வெட்டவெளியிலே,
தா மரை போல் திரிவாரை – தாவுகின்ற மான்கள் போலத் துள்ளியோடித் திரிபவர்க

பேரின்பத்துக்குஉரிய பகவத்விஷயத்திற் செல்லாமல் சிற்றின்பத்துக்கு உரிய விஷயாந்தரங்களிலே வரம்பின்றி ஓடி
உழன்று அலைகின்ற பேதையரோடு கூட்டுறவுகொள்ளலாகாதென்று தம்மனத்துக்கு அறிவுறுத்துகிற வகையாற்
பிறர்க்கு உணர்த்துகின்றா ரென்க.
கடல் – கரிய திருமேனிக்கும், அதில் தோன்றி மலர்ந்த செந்தாமரைமலர்கள் – கண் கை கால் முகம் வாய் உந்தி என்ற
அவயவங்கட்கும் உவமையாகுதலால், “அம்பரந் தாமரை பூத்தலர்ந்தன்ன அவயவர்” என்றார்.
அம்பரம் – மேகம் எனினுமாம்; “கருமுகில் தாமரைக்காடு பூத்து” என்றார் கம்பரும்.

பரந்தாமர் என்ற பெயர் எல்லாப்பதவிகட்கும்மேலான இடத்தையுடையவ ரென்றும்,
எல்லாவொளிகளினுஞ்சிறந்த ஒளியையுடையவ ரென்றும் பொருள்படும்; தாமம் – இடமும், ஒளியும்.
கேசரியென்னும் வாநரசிரேஷ்டனது மனைவியாகிய அஞ்சநாதேவி திருவேங்கடமலையை அடைந்து பலகாலம் தவம்புரிந்து
அநுமானாகிய புத்திரனைப் பெற்றதனால், இம்மலை, அஞ்சநாசலமென்று ஒரு பெயர்பெற்ற தெனப் புராணங்கள் கூறுகின்றன.
ஆடகமாம் அம்பரம் – பொற்பட்டாடை. மூன்றாமடியில், தாம் – அசை. சூழ்தல் – சுற்றிலும்தரித்தல்.
எம்பெருமானை வாழ்த்துதல் மிக்கஅன்பின்செயலாதலை, பெரியாழ்வார் பல்லாண்டுபாடியதுகொண்டும் உணர்க.

“அம்பரம் கூறையும் கடலும் ஆகாயமும்” என்ற திவாகரம், இங்கு உணரத்தக்கது. தாமரை – தாமரஸ மென்ற வடசொல்லின் விகாரம்.
அவயவம், பரந்தாமர், ஹாடகம், அம்பரம் – வடசொற்கள்.
அவயவரை, தாமரை, வெற்பரை, சூழ்ந்தாரை என்பன – ஒருபொருளின் மேல்வந்த பலபெயர்கள்.
விசேஷணம் விசேஷ்யம் என்ற இரண்டிலும் வேற்றுமையுருபு விரித்தது,
வடமொழிநடை. அஞ்சனவெற்பர் – விசேஷ்யம்; மற்றவை – விசேஷணங்கள்.
அரை என்ற எண்ணலளவுப்பெயர் – உடம்பின் நடுவிலுள்ள உறுப்புக்கு ஆகுபெயராம்.
வாழ்த்திலர் – எதிர்மறைப்பலர்பால் முற்றெச்சம்.
ஐம்புலவின்பங்களினாசைக்கு எல்லையில்லை யென்பது தோன்ற, “ஐம்புலனாமம்பரம்” என்றார்.
தா மரை – வினைத்தொகை; தாம் மரை யென்று பிரித்து, தாம் என்பதைத் தாவும் என்ற செய்யுமெனெச்சத்து
ஈற்று உயிர்மெய்சென்றதாகவுங் கொள்ளலாம்.
ஐம்புலன் – ஐம்புலங்களாலாகிற, நாமம் – அச்சம், பரந்து – மிகப்பெற்று, ஆ – ஐயோ! மரைபோல் திரிவாரை என்று பொருள்கூறுதல்,
க்லிஷ்டகற்பனை (நலிந்துபொருள் கொள்ளுதல்) என்னுங் குற்றத்தின்பாற் படுமென விடுக்க.

இச்செய்யுளில் நான்கடிகளிலும் முதலெழுத்துக்கள் சில ஒன்றிநின்று வெவ்வேறுபொருள்விளைத்தல்,
இடையிட்டுவந்த முதல் முற்றுமடக்கு எனப்படும் யமகமாம்;
மேல் – 20, 31, 39, 47, 57, 72, 89 ஆஞ் செய்யுள்களிலும் இது காண்க.
செய்யுளடிகளினிறுதியில் சந்தி அநித்தியமென்பது இலக்கணநூலார்துணி பாதலின், நின்ற அடியின் ஈற்றோடு வருமடியின்
முதல் சேருமிடத்துப் புணர்ச்சி கொள்ளப்பட்டிலது, யமகவமைப்பின் பொருட்டு; இதனை, இங்ஙனம் வரு மிடங்கட்கெல்லாங் கொள்க.

———–

தலைவி தோழியர்க்கு அறத்தொடு நிற்றல்

நெஞ்சு உகந்தத்தை உமக்கு உரைத்தேன் இற்றை நீடு இரவு ஓன்று
அஞ்சு உகம் தத்தை விளைக்கும் என் ஆசை அது ஆம் இதழ் சொல்
கிஞ்சுகம் தத்தை அனையீர் இங்கு என்னைக் கெடாது விடும்
விஞ்சு கந்தத்தை விளைக்கும் துழாய் அண்ணல் வேங்கடத்தே –12-

(இ – ள்.) இதழ் – வாயிதழும்,
சொல் – சொல்லும், (முறையே),
கிஞ்சுகம் – முருக்கமலரையும்,
தத்தை – கிளிகொஞ்சிப்பேசும் பேச்சையும்,
அனையீர் – ஒத்திருக்கப்பெற்றவர்களே! –
நெஞ்சு உகந்தத்தை – (என்) மனம் விரும்பியதை,
உமக்கு உரைத்தேன் – உங்கட்குச் சொல்லுகின்றேன்:-
இற்றை நீடு இரவு ஒன்று – இன்றைத்தினத்து நீண்ட இராத்திரி யொன்றுமே,
அஞ்சு உகம் – ஐந்துயுகமாக வளர்ந்து,
தத்தை விளைக்கும் – துன்பத்தை மிகுவிக்கின்றது;
அது என் ஆசை ஆம் – அது யான்கொண்ட காதலின் காரியமாம்;
இங்கு என்னை கெடாது – (இனி நீங்கள்) என்னை இங்கேயே (வைத்திருந்து) கெடுத்திடாமல்,
விஞ்சு கந்தத்தை விளைக்கும் துழாய் அண்ணல் வேங்கடத்தேவிடும் – மிக்க நறுமணத்தைவீசுகின்ற திருத்துழாய்
மாலையைத் தரித்த தலைவனுடைய திருவேங்கடமலையினிடத்தே (என்னைக் கொண்டுபோய்ச்) சேர்த்திடுங்கள்; (எ – று.)

தலைமகனைக் களவொழுக்கத்தாற் கூடிப் பிரிந்த தலைமகள் அப்பிரிவுத் துயரை ஆற்றியடக்கும் வல்லமையிலளாகித்
தனது நிலைமையை அன்புடைத் தோழியர்க்கு வெளிப்படையாகவுரைத்து
“இனி நான் பிழைத்திருக்கவேண்டில், என்னை நீங்கள் அத்தலைவன் முன்னிலையிற் கொண்டுபோய்ச்சேர்த்திடுங்கள்” என்று
வேண்டுகின்றாளென்க.
என்மனத்திலுள்ளதை என்மனத்தோடொத்த உயிர்ப்பாங்கியரான உங்கட்குமாத்திரமே அந்தரங்கமாகச் சொல்லுகின்றேன்;
என்பக்கல் அன்பிலரான பிறர் அறியவேண்டா என்பது, “நெஞ்சுகந்தத்தை யுமக்குரைத்தேன்” என்றதன் குறிப்பு.
“ஊழிபல வோரிரவாயிற்றோவென்னும்,”
“ஊழியிற்பெரிதால்நாழிகையென்னும்ஒண்சுடர்துயின்றதாலென்னும்”,
“இது ஓர் கங்கு லாயிரமூழிகளே” என்றபடி கூடியநிலையில் ஒருகணமாகக்கழிகிற இரவு பிரிந்தநிலையில்
அநேக யுககாலமாக நீட்டித்துத்தோன்றுகின்றமைபற்றி, “நீடிரவொன்று அஞ்சுகம்தத்தை விளைக்கும்” என்றாள்.

“இற்றைநீடிரவு” என்றதனால், தலைவனைப்பிரிந்து அப்பிரிவுத்துயரையாற்றாமல் பகலினும் இரவில்மிகவருந்தி
அரிதிற்சிலநாள் கழித்த தலைவி அவ்வருத்தம் நாளுக்குநாள் மிகுதலால் இரவும் ஒருநாளைக்கொருநாள்
மிகநீட்டித்ததாகத் தோன்றக் கண்டு, முன்பு ஒரு நாளாயும் ஒரு மாதமாயும் ஒரு வருடமாயும் ஒரு யுகமாயும்
படிப்படியாகவளர்ந்து தோன்றிவருத்தி வந்த இரவு இன்றைக்குப் பலயுகங்களாகத் தோன்றிவருத்துகின்றது
என்று ஒருநாளிரவிற் கூறினளாம். தன்விருப்பத்தை நிறைவேற்றுதற்பொருட்டுத் தோழியரைக் கொண்டாடியழைப்பவளாய்,
“இதழ்சொல் கிஞ்சுகந் தத்தை யனையீர்” என்று புனைந்துரைத்து விளித்தாள்.
தான் இனி ஒருபொழுதேனும் இங்குஇருந்து பிழைக்கும் வகையிலளானமை தோன்ற, “இங்குஎன்னைக் கெடாது” என்றாள்.

தலைவன் தானாகவருமளவும் பார்த்து ஆறியிருக்கின்ற இயல்பை இழந்து அவனுள்ளவிடத்தேசென்று
அவன்முகத்தைக் கண்டு பிழைக்கலாமென்றும், அவன்கண்ணெதிரிற்சென்றுநின்றால் அவன்கண்ணோட்டத்தைப்
பெறலா மென்றுங் கருதி விரைவில் அங்குச்செல்லவிரும்பிய தலைவி, தனக்குக் கால்நடைதாராதபடி
வலியழிவுமிக்கதனால் தான் அங்குச்சென்று சேரமாட்டாது, தன்கண்வட்டத்திலேநின்று தன்நிலையை நோக்கிக்
கால்நடைதளராததோழியரைத் தன்னை அங்குக்கொண்டுபோய் விடுமாறு வேண்டினள்;
நீங்கள் என்குறிப்பறிந்து என்துயர்தீர்த்திலிராயினும் நான் வெளிப்படையாச்சொல்லுகிறேன், அதன்படியாயினுஞ் செய்யுங்க ளென்றாள்.
“மதுரைப்புறத் தென்னையுய்த்திடுமின்,”
“ஆணையால் நீரென்னைக்காக்கவேண்டி லாய்ப்படிக்கேயென்னையுய்த்திடுமின்” என்பவை முதலாகிய அருளிச்செயல்களைக் காண்க.

உகந்தது என்ற வினையாலணையும் பெயர், இரண்டனுருபையேற்கையில் இடையிலே தகரவொற்று விரிந்து
உகந்தத்தை யென்று நின்றது. அஞ்சு = ஐந்து; முழுப்போலி. தத்து – துன்பம். கெடாது – இங்குப் பிறவினை; இழவாமல் எனினுமாம்.
கிம்சுகம் என்ற பலாச மரத்தின்பெயர் – அதன்பூவுக்கும், தத்தை என்ற கிளியின் பெயர் – அதன்மொழிக்கும் முதலாகுபெயராம்.
பலாசமலர் – உதட்டுக்குச் செம்மை மென்மை அழகுகளிலும், கிளிமொழி – சொல்லுக்கு இனிமையிலும் உவமம்.
இதழ் சொல் கிஞ்சுகம் தத்தை அனையீர் என்றது, இதழ் கிஞ்சுகத்தையும், சொல் தத்தையையும் அனையீர் என
முறையே சென்று இயைதலால், முறைநிரனிறைப்பொருள்கோள்.

எம்பெருமானை இடையீடின்றிச் சேரப் பெறாத நிலையில் காலவிளம்பம் பொறுக்கமாட்டாமையாற் காலம்நீட்டித்ததாகத் தோன்ற
வருந்துகிற ஐயங்கார் தமதுஅன்பர்களைநோக்கி “இனி யான் எம்பெருமானது நிரந்தராநுபவம் பெற்று உய்யுமாறு
என்னை நீங்கள் அவனுகந்தருளின திருப்பதியிற் கொண்டுபோய்ச் சேர்த்திடுங்கள்” என்று வேண்டுதல்,
இதற்கு உள்ளுறை பொருள்; விவரம் கண்டுகொள்க.

————–

வேங்கடத்து ஆரையும் ஈடேற்ற நின்றருள் வித்தகரைத்
தீங்கு அடத் தாரைப் புனைந்து ஏத்திலீர் சிறியீர் பிறவி
தாம் கடத்தாரை கடத்தும் என்று ஏத்துதிர் தாழ் கயத்துள்
ஆம் கடத்தாரை விலங்கும் அன்றோ சொல்லிற்று ஐயம் அற்றே –13-

(இ – ள்.) சிறியீர் – (அறிவொழுக்கங்களிற்) சிறியவர்களே! –
ஆரையும் ஈடேற்ற – எல்லாரையும் (பிறவிப்பெருங்கடலினின்று) கரையேற்றிப் பாதுகாத்தற்பொருட்டு,
வேங்கடத்து நின்றருள் – திருவேங்கடமலையில் நின்ற திருக்கோலமாய் எழுந்தருளியிருக்கின்ற,
வித்தகரை – ஞானசொரூபியான எம்பெருமானை,
தீங்கு அட தாரை புனைந்து ஏத்திலீர் – (உங்கள்) பிறவித் துன்பங்களை (அவன்) அழிக்குமாறு
(அவனுக்குப் பிரியமான திருத்துழாய் முதலிய) மாலைகளைச் சாத்தித் துதிக்கின்றீரில்லை; (மற்று),
பிறவி தாம் கடத்தாரை – (தங்கள்) பிறவியைத் தாங்கள் விலக்கிக்கொள்ள மாட்டாத சிறுதெய்வங்களை,
கடத்தும் என்று ஏத்துதிர் – (எங்களைத் துன்பத்தினின்று) ஈடேற்றுவீராக” என்றுசொல்லிப் பிரார்த்தித்துத் துதிக்கிறீர்கள்;
தாழ் கயத்துள் ஆம் – ஆழ்ந்த தடாகத்திலே (முதலைவாயில்) அகப்பட்டுக் கொண்ட,
கடம் தாரை விலங்கும் அன்றோ – மதநீர்ப்பெருக்கையுடைய மிருகசாதியாகிய யானையுமல்லவோ,
ஐயம் அற்று சொல்லிற்று – சந்தேகந்தீர்ந்து (ஸ்ரீமந்நாராயணனை ஆதிமூலமே யென்று கூப்பிட்டு) உண்மைப் பொருளை யுணர்த்திற்று; (எ – று.)

தேவதாந்தரங்களை வழிபடுதலை விட்டுப் பரதேவதையை வழிபட்டுக் கஜேந்திராழ்வான்போலத் துயர்தீர்ந்து முத்திபெறுவீ ரென்றபடி.
ஸ்ரீமகா விஷ்ணுவே பிரஹ்மருத்ரேந்த்ராதி தேவர்கட்கெல்லாம் முதற்பெருந்தேவ னென்ற மறைபொருள்,
அப்பெருமானைக் கஜேந்திராழ்வான் மற்றையபெ யர்களாற்குறியாமல் ஆதிமூலமேயென்று குறித்து விளித்ததனால்
இனிது வெளியாயிற்று என்பது, இறுதிவாக்கியத்தின் கருத்து.
“தான் மூலமென்பது அறிவித்திடான், அக்கரவு அம்புவிமேல் வேழமே வெளியாக்கியதே” என்றார் திருவரங்கத்தந்தாதியிலும்.
பகுத்தறிவிற்குறைவுள்ள இயல்பின தான ஐயறிவுயிராகிய விலங்குக்கு இருந்த விவேகந்தானும் ஆறறி
வுயிராய்ப் பகுத்தறிவுநிரம்புதற்கு உரியரான உங்கட்கு இல்லையாயிற்றே யென்று ஏசுவார், “சிறியீர்” என்று விளித்தார்.
யாற்றுநீர்ப்பெருக்கு முதலியவற்றைத் தான் கடக்கமாட்டாதவன் பிறரை அதுகடத்துவது உண்டோ?
தமது பிறவித் துன்பத்தை விலக்கிக்கொள்ள மாட்டாத தேவதாந்தரங்களை நீங்கள் உங்கள் துன்பத்தையொழித்துப்
பிறவிக்கடல் கடத்துமாறு வேண்டுதல் பேதைமையன்றோ? வீழ்வார்க்கு வீழ்வார் துணையாவரோ? என்று உறுத்திக் கூறுவார்,
“பிறவிதாங்கடத்தாரைக் கடத்துமென் றேத்துதிர்” என்றார்.
“வந்தவினை தீர்க்க வகையறியார் வேளூரர், எந்தவினை தீர்ப்பா ரிவர்” என்பர் பிறரும்.
(“இறைவ னிவனென வறியா திதரதேவ ரிணையடியைப் பணிந்துதிரி யேழையீர் நா,
னறைவ னிதுதிட மாதிமூலமேயென்று அஞ்சிறு கண்மதயானை யழைத்தபோ தஞ்,
சிறைவனசத்திருமுகப் புள்ளூர்ந்து வந்து செகமறியும்படியளித்த தேவதேவன்,
நறைவனவஞ்சனகிரிமாலல்ல னோகாண் நாடியவற்றொழுது கதிநண்ணுவீரே” என்ற திருவேங்கடக்கலம் பகமுங் காண்க.

வேங்கடத்து நின்றருள் என்றும், கயத்துளாம்விலங்கு என்றும், இயையும். தாரா – வடசொல்.

————–

ஐயா துவந்தனை நாயேனை அஞ்சன வெற்ப என்றும்
கையாது உவந்தனை நின்னை அல்லால் கண்ணுதல் முதலோர்
பொய்யாது வந்து அனையார் முகம் காட்டினும் போற்றி உரை
செய்யாது வந்தனை பண்ணாது வாக்கும் என் சென்னியுமே –14-

(இ – ள்.) ஐயா – ஐயனே!
அஞ்சன வெற்ப – அஞ்சநாத்ரி என்னும் ஒருபெயரையுடைய திருவேங்கடத்தி லெழுந்தருளியிருக்கின்றவனே!
துவந் தனை – இருவினைத்தொடர்புடையேனாகிய,
நாயேனை – நாய்போற்கடைப் பட்டவனான என்னை,
என்றும் கையாது – எக்காலத்தும் வெறுத்திடாத படி,
உவந்தனை – மகிழ்ந்து அடியவனாக அங்கீகரித்தாய்;
நின்னை அல்லால் – (இங்ஙனம் அடியேனை ஆட்கொண்டருளிய தேவாதிதேவனான) உன்னை(த் துதித்தலும் வணங்குதலும்) அல்லாமல், –
கண்நுதல் முதலோர் – சிவன்முதலிய தேவர்கள்,
பொய்யாது வந்து – மெய்யாகவே (என்முன்) வந்து பிரதிய க்ஷமாகி
அனையார் முகம் காட்டினும் – அவர்களுடைய முகத்தை வலியக் காட்டினாலும்,
என் வாக்கும் சென்னியும் போற்றி உரை செய்யாது வந்தனை பண்ணாது – எனது வாயும் தலையும் (முறையே அவர்களைத்)
துதித்து உரைத்தல் செய்யாது வணங்காது; (எ – று.)

“மறந்தும்புறந்தொழாமாந்தர்” என்றபடி தேவதாந்தரபஜநஞ் செய் யாமையில் தமக்குஉள்ள உறுதியை வெளியிட்டார்.
அனையார் முகங்காட் டினும் என்பதற்கு – பெற்றதாயார்(போல அன்பொழுகும் இனிய) முகத்தைக் காட்டினாலும்
என்று உரைத்தலும் உண்டு: அனையார் = அன்னையார்.
போற்றி யுரை செய்யாது வந்தனை பண்ணாது வாக்கும் சென்னியும் என்பது, போற்றியுரை செய்யாது வாக்கு,
வந்தனை பண்ணாது சென்னி என முறையே சென்று இயைதலால், முறைநிரனிறைப்பொருள்கோள்.
“வாக்கு மென் சென்னியும்” என்றவிடத்து இடைநின்ற “என்” என்றது முன்நின்ற “வாக்கு” என்றதனோடும்,
பின்நின்ற “சென்னி” என்பதனோடும் சென்று இயைதல், மத்திமதீபம் (இடைநிலைவிளக்கு).
மனம் மொழி மெய் என்னுந் திரி கரணங்களுள் மொழிமெய்கள் தேவதாந்தர வழிபாடு செய்யாமையைக் கூறவே,
அவற்றின்தொழிற்குக் காரணமான மனம் அவர்களைக்கருதா தென் பதும் பெறப்படும்;
“உலகமுண்ட, திருக்கந்தரத்தனை யல்லா தெண்ணே னொருதெய்வத்தையே” என்பர் அழகரந்தாதியில்.
ஐயா -ஆர்யன் என்ற வடசொல் பிராகிருதபாஷையில் அய்யன்என்று விகாரப்பட்டுத் தமிழிற் போலிவகையால்
ஐய னென்று வழங்கி ஈறுகெட்டு ஈற்றயல் நீண்டு விளி யேற்றது. த்வந்த்வம் என்ற வடமொழி, துவந்த மென்று விகாரப்பட்டது;
(தொந்தமெனச்சிதைந்தும் வழங்கும்;) இரட்டையென்பது,பொருள்; இங்கு இருவினையின்மேல் நின்றது:
அதனையுடையவன், துவந்தன்; அதன்மேல் ஐ – இரண்டனுருபு. கண்ணுதல் – நெருப்புக் கண்ணை நெற்றி யிலுடையவன்;
வேற்றுமைத்தொகை யன்மொழி. அனையார் என்பது அவர் என்று பொருள்படும்போது,
அகரச்சுட்டு – பகுதி;ன் ஐ – சாரியைகள், ஆர் – பலர் பால்விகுதி. முகங்காட்டினும் என்ற உம்மையால்,
முகங்காட்டாதபோது வழிபடுதலின்மை தெற்றென விளங்கும். செய்யாது, பண்ணாது – எதிர்மறை யொன்றன்பால்முற்றுக்கள்.
வாக் – வடசொல். “நின்னையல்லால்” என்பது, “போற்றியுரைசெய்யாது,” “வந்தனைபண்ணாது” என்பவற்றோடு இயையும்.

————-

தலைவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமை கண்ட செவிலித்தாய் இரங்கல்

சென்னியில் அங்கை குவிக்கும் உயிர்க்கும் திகைக்கும் நின்னை
உன்னி இலங்கு ஐயில் கண் உறங்காள் உயர் வீடணனை
மன்னி இலங்கையில் வாழ்க என்ற வேங்கட வாண மற்று ஓர்
கன்னி இலம் கைக்கில் நின் பேர் கருணைக் கடல் அல்லவே –15-

(இ – ள்.) உயர் – (அறிவொழுக்கங்களினால்) உயர்ந்த,
வீடணனை – வீபீஷணனை,
மன்னி இலங்கையில் வாழ்க என்ற – “நிலைபெற்று இலங்கா புரியில் அரசனாய் வாழ்வாயாக” என்று சொல்லி முடி சூட்டி அநுக்கிரகித்த,
வேங்கட வாண – திருவேங்கடமலையில் வாழ்பவனே! – (உன்னைக் கூடிப் பிரிந்த இந்த எமது மகள்),
நின்னை உன்னி சென்னியில் அம் கை குவிக்கும் – (தான் வேண்டியதைப்பெறுதற்காக) உன்னைக் குறித்துத்
தன் தலையின் மேல் அழகிய கைகளைக் கூப்பி வைத்துத் தொழுவாள்;
உயிர்க்கும் – (தன்னுடைய துயரம் பொறுக்க மாட்டாமையால்) பெருமூச்சுவிடுவாள்;
திகைக்கும் – (பரிகார மொன்றும் பெறாமையால்) மோகித்துக்கிடப்பாள்;
(நின்னை உன்னி) – உன்னையே சிந்தித்தலால்,
இலங்கு ஐயில் கண் உறங்காள் – பிரகாசிக்கின்ற வேலாயுதம்போன்ற கண்களை மூடித் துயில்கொள்ளாள்;
மற்று ஓர் கன்னி இலம் – (நாங்கள் இவளையன்றி) வேறொருபெண்ணை உடையோமல்லோம்; (ஆதலால்),
கைக்கின் நின் பேர் கருணைக்கடல் அல்ல – (எங்கள் ஏக புத்திரியான இவள் பக்கல் இரங்கி இவளை அங்கீகரியாமல் நீ)
வெறுத்து விடுவை யானால் நினதுபெயர் தயாசிந்து என்பது தகுதியுடையதாகாது; (எ – று.) – ஈற்றுஏகாரம் – தேற்றம்

தலைமகனோடு கூடிப்பிரிந்த தலைமகள் பிரிவாற்றாமையாற்படுகிற பல வகைத் துன்பங்களையுங் கண்டு
ஆற்றமாட்டாளான செவிலித்தாய் தன்ஆற் றாமைமிகுதியால் அத்தலைமகனை எதிரில்நிற்கின்றவாறுபோலப் பாவித்து
அவனைவிளித்து அவன்முன்னிலையிலே இவளுடைய நிலைமைகளையெல்லாஞ் சொல்லி
இவள்பக்கல் இரங்கவேண்டுமென்று வேண்டிய பாசுரம்,இது. இதனை நற்றாயிரங்கலென்றலு முண்டு
நம்மாழ்வார் திருவாய்மொழியில் “கங்குலும்பகலும்” என்றதொடக்கத்துத் திருப்பதிகத்தில்
“கங்குலும்பகலுங் கண்டுயிலறியாள்”,
“இவள்திறத்து என்செய்கின்றாயே”,
“வெவ்வுயிர்த்து யிர்த்துருகும்”,
“சிந்திக்குந் திசைக்குந் தேறுங் கைகூப்பும்” என்று அருளிச்செய்தமை காண்க.

ரஜோகுண தமோகுணங்களால் மிக்குத் தீயனவே செய்யுங்கொடிய அரக்கர்கோஷ்டியில் ஒருவனாயிருந்தும்
சத்வகுணமேமிக்கு நல்லனவேசெய்யுமியல்பினனான விபீஷணனது ஞானசீலங்களின் மேன்மை தோன்ற, “உயர் வீடணன்” என்றார்.
இராமபிரான் இராவணாதியரை அழித்தற்பொருட்டுப் பெரியவாநரசேனையைச் சித்தப்படுத்திக்கொண்டு புறப்பட்டுக்
கடற்கரைசேர்ந்தவளவில், இராவணன் தம்பியான விபீஷணன் தான்சொன்ன நல்லறிவைக் கொள்ளாத தமையனை விட்டு
வந்து இராமபிரானைச் சரணமடைய, அப்பெருமாள் அவனுக்கு அபயமளித்து அப்பொழுதே அவனை இலங்கைக்கு
அரச னென முடிசூட்டி அவனால் இலங்கையின் நிலைமையையறிந்து அவனுடனே கடல்கடந்து இலங்கைச்
சார்ந்து அங்குப் பெரும்போர்புரிந்து இராவணனைச் சேனையோடும் புத்திரமித்திராதிய ரோடும் கொன்று,
முன் சொன்னபடி விபீஷணனை இலங்கையரசனாக்கிச் சீதையை மீட்டுக்கொண்டு மீண்டன னென்ற வரலாறுபற்றி,
“வீடணனை மன்னியிலங்கையில்வாழ்கென்ற வேங்கடவாண” என்றாள்.
இவ்விளியினால், பகைவர்கோட்டியிற்சேர்ந்த வலிய ஓர் ஆண்மகனை நின்னைச் சரணமடைந் தவனென்ற
மாத்திரம்பற்றி ஆட்கொண்டு வாழ்வளித்த நீ உனது உறவைப் பெற்று உன்னையன்றி வேறுகதியிலளாகிய
மெல்லியலாளான இப்பெண் மகள் பக்கல் இரக்கங்கொண்டு இவளைப் பரிபாலிக்க வேண்டாவோ? என்ற குறிப்புத் தோன்றும்.
நினது கருணைக்கடல் என்ற பெயர் பொருளுள்ளதாம்படி இவளிடத்துக் கண்ணோட்டஞ் செய்தருளுதல்
கடமை யென்பாள் “கைக்கின் நின்பேர் கருணைக்கடலல்லவே” என்றாள்.

அங்கை – அகங்கையுமாம்; “அகமுனர்ச்செவிகைவரி னிடையன கெடும்” என்பது விதி.
குவிக்கும், உயிர்க்கும், திகைக்கும் – செய்யுமென்முற் றுக்கள் பெண்பாலுக்கு வந்தன. திகைத்தல் – அறிவழிதல்.
“நின்னையுன்னி” என்பது, மத்திமதீபமாகக்கொண்டு முன்னும் பின்னுங் கூட்டப்பட்டது.
ஐயில் = அயில்; திரிபுநயத்தின்பொருட்டுவந்த முதற்போலி. அயிற்கண் – உவமத்தொகை.
மகளிர் கண்ணுக்கு வேல்உவமை, கூரியவடிவிலும் ஆடவர்க்கு நோய்செய்தலிலு மென்க.
“கண்ணுறங்காது” என்ற பாடத்துக்கு – இவளுடைய கண்கள் உறங்காவென்க; சாதியொருமை.
விபீஷணன், கந்யா, கருணா என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
விபீஷணன் என்ற பெயர் – (பகைவர்க்கு) மிகவும்பயங்கர னென்றும் நல்லோர்க்குச் சாந்த மூர்த்தியாய்ப்
பயங்கரனாகாதவ னென்றும் காரணப்பொருள் படும். வாண, பேர் – வாழ்ந, பெயர் என்பவற்றின் மரூஉ.
இன்மை – இல்லாமை யெனக் கொண்டால் செயப்படுபொருள்குன்றியவினையும்;
உடையதாகாமை யெனக்கொண்டால் செயப்படுபொருள்குன்றாதவினையுமாம்;
“கன்னியிலம்” என்ற விடத்து, இன்மை – செயப்படுபொருள் குன்றாததாய்நின்றது. அல்ல என்ற எதிர்மறைப்பலவின்பால்முற்று,
(வேறு இல்லை உண்டு என்பன போல) இருதிணைனயம்பால் மூவிடத்துக்கும் பொதுப்பட
வழங்குதலை இலக் கியங்களிற் காண்க; இது, புதியனபுகுதல்.

எம்பெருமானது பூர்ணாநுபவத்தைப் பெறாதபோது பலவாறு வருந்துகிற ஐயங்காரது நிலைமைகளை
அவர்பக்கல்அன் புடையரான அறிவுடையாளர் அப்பெருமானது சந்நிதியில் விண்ணப்பஞ்செய்து,
இவர்பக்கல்திருவருள் புரிகவென்று பிரார்த்தித்தல், இதற்கு உள்ளுறைபொருள்.
“அயிற்கண்உறங் காள்” என்றது, அவரது கூரியஞானம் சங்கோசமடையாத தன்மையைக் குறிக்கும்.
“உயர்வீடணனை மன்னியிலங்கையில் வாழ்கென்றவேங்கடவாண” என்றது,
எம்பெருமானது சரணாகதரக்ஷணத்வத்தில் ஈடுபாட்டினால். இந்த ஐயங்கார்போல ஆத்ம ஸ்வரூப பூர்த்தியுடைய
அடியாரைப் பெறுதலரிதென் பார், “மற்றோர்கன்னி யிலம்” என்றாரென்க. விவரம் சம்பிரதாயம்வல்லார் வாய்க் கேட்டுஉணர்க.

————–

கடமா மலையின் மருப்பு ஒசித்தாற்கு கவி நடத்தத்
தடம் ஆம் அலைவற்ற வாளி தொட்டாற்கு என் தனி நெஞ்சமே
வடமா மலையும் திருப் பாற் கடலும் வைகுந்தமும் போல்
இடம் ஆம் அலைவு அற்று நின்றும் கிடந்தும் இருப்பதற்கே –16-

(இ – ள்.) கடம் – மதத்தையுடைய,
மா – பெரிய,
மலையின் – மலைபோன்ற (குவலயாபீடமென்னும்) யானையினது,
மருப்பு – தந்தங்களை,
ஒசித்தாய்க்கு – ஒடித்திட்டவனும், –
கவி நடத்த – வாநரசேனைகளை நடத்தியழைத்துக்கொண்டு (இலங்கைக்குச்) செல்லுதற்பொருட்டு,
தடம் ஆம் அலைவற்ற – பெரிதான கடல் வற்றுமாறு,
வாளி தொட்டாய்க்கு – ஆக்நேயாஸ் திரத்தைப் பிரயோகித்தவனுமான உனக்கு, –
வட மா மலையும் திருப்பாற் கடலும் வைகுந்தமும் போல் – வடக்கின்கணுள்ள சிறந்த திருமலையான
திருவேங்கடமலையும் திருப்பாற்கடலும் ஸ்ரீவைகுண்டமும் (நிற்றற்கும் கிடத்தற்கும் இருத்தற்கும் தனித்தனிஇடமாதல்) போல, –
என் தனி நெஞ்சமே – எனது மனமொன்றுதானே,
அலைவு அற்று நின்றும் கிடந்தும் இருப்பதற்கு இடம் ஆம் – ஸ்திரமாக நின்ற திருக்கோலமாக
எழுந்தருளியிருத்தல் சமநத்திருக்கோலமாக எழுந்தருளியிருத்தல் வீற்றிருந்த திருக்கோலமாக
எழுந்தருளியிருத்தல் என்ற மூன்றுக்கும் ஒருங்கேஉரிய இடமாம்; (எ – று.)

நின்றதிருக்கோலமாகவும் கிடந்ததிருக்கோலமாகவும்வீற்றிருந்த திரு க்கோலமாகவும் எம்பெருமானை அடியேன்
அன்போடு தியானித்தல்பற்றி அப்பெருமான் நான்நினைத்தபடியெல்லாம் எனது மனத்தில் வந்து
எழுந்த ருளியிருக்கின்றன னென்பது தோன்ற, இங்ஙனங் கூறினார்.
(“நிற்பதும் மொர்வெற்பகத் திருப்பு விண் கிடப்பதும், நற்பெருந்திரைக்கடலுள் நானி லாதமுன்னெலாம்,
அற்புதன் னனந்தசயன னாதிபூதன் மாதவன், நிற்பதும் மிருப்பதுங் கிடப்பதும் மென்னெஞ்சுளே,”
“கல்லுங் கனைகடலும் வைகுந்தவானாடும், புல்லென்றொழிந்தனகொ லேபாவம் –
வெல்ல, நெடி யான் நிறங்கரியான் உள்புகுந்துநீங்கான், அடியேன துள்ளத்தகம்” என்ற
ஆழ்வார்களருளிச் செயல்களை அடியொற்றியது, இது.

“அத்திருப்பதிகளைக் காற்கடைக்கொண்டு அவ்விடங்களில் நின்றும் இருந்தும் கிடந்தும் செய்தருளின நன்மை
யெல்லாம் என்நெஞ்சிலேஆய்த்து. நிஹீநாக்ரேஸரனான என்னை விஷயீகரித்தவாறே திருமலையில்
நிலையும் மாறி என்நெஞ்சிலே நின்றருளினான்; தன் திருவடிகளில் போக்யதையை எனக்கு அறிவித்த பின்பு
பரமபதத்திலிருப்பைமாறிஎன்நெஞ்சிலேபோகஸ்தாநமாயிருந்தான்; ……
திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருளினபடியைக்காட்டி என்னுடைய ஸாம்ஸாரிகமானதாபத்தைத்தீர்த்தபின்பு
திருப்பாற்கடலிற்கிடையை மாறி என் நெஞ்சிலே கண்வளர்ந்தருளித் தன்விடாய்தீர்ந்தான்;
இப்படி என்பக் கல்பண்ணினவியாமோகம் என்னால்மறக்கலாயிருக்கிறதில்லை யென்கிறார்” என்ற
வியாக்கியாநவாக்கியங்கள் இவ்விடத்துக்கும் பொருந்தும்.

“பருப்பதம் தாம்மன்னிநிற்பது பாற்கடல் பள்ளிகொள்வது,
இருப்பது அந்தா மம் பண்டு இப்போதெலாம் இளஞாயிறன்ன,
உருப்பதம்தாமதர்க்கீயாம லன்பர்க்குதவழகர்,
திருப்பதம் தாமரைபோல்வார் உகப்பது என்சிந்தனை யே” என்ற அழகரந்தாதிச் செய்யுளோடு இதனை ஒப்பிடுக.)
திருவேங்கட த்திலே நின்றதிருக்கோலமாகவும், திருப்பாற்கடலிலே கிடந்ததிருக்கோல மாகவும்,
வைகுந்தத்திலே வீற்றிருந்ததிருக்கோலமாகவும் எம்பெருமான் எழுந்தருளியிருத்தலை முறையே சென்று இயைந்து குறித்தலால், பின்னி ரண்டடி – முறைநிரனிறைப்பொருள்கோளின்பாற்படும்.

தனிநெஞ்சம் – ஒப்பற்ற மனமெனினுமாம்: திருவேங்கடம்முதலிய மூன்று திவ்வியதேசங்கள் போல
நிற்றல் கிடத்தல் இருத்தல் என்ற மூன்றில் ஒவ்வொன்றற்கே உரியதாதலன்றி நெஞ்சம் அம்மூன்றற்கும் தான்
ஒன்றே உரியதாதல்பற்றி “தனிநெஞ்சம்” என்று சிறப்பித்துக்கூறியதாகக் கொள்க; இது வேற்றுமையணியின்பாற்படும்.
மூன்றாமடியில், மா – அழகுமாம். கடம்மாமலை – மதசலத்தையுடைய பெரியமலை; எனவே, யானையாயிற்று.
இங்கு, மலையென்பதை உவமையாகுபெய ரென்னலாம்.
வலியபெரியவடிவிலும், மதவருவிசொரிதலிலும் யானைக்கு மலை உவமை. அலை – கடலுக்குச் சினையாகுபெயர்.

————

இருப்பது அனந்தனில் எண்ணில் இல் வைகுந்தத்து என்பர் வெள்ளிப்
பருப்பதன் அம் தண் மலரோன் அறிகிலர் பார் அளந்த
திருப்பதன் நந்தன் மதலை நிற்கும் திரு வேங்கடம் என்
பொருப்பு அது அனந்தல் தவிர்ந்து உயிர்காள் தொழப் போதுமினே –17-

(இ – ள்.) உயிர்காள் – சேதநர்களே! –
“இருப்பது – (எம்பெருமான் தனது தலைமை தோன்ற) அரசுவீற்றிருக்கின்றது,
எண்ணல் இல் வைகுந்தத்து – (இன்னதன்மையதென்று) சிந்தித்தற்கும் இயலாத ஸ்ரீவைகுண்டத்தில்,
அனந்தனில் – ஆதிசேஷனாகிய திவ்வியசிங்காதனத்தின்மீது,”
என்பர் – என்றுசொல்வர் (மெய்யுணர்ந்த ஆன்றோர்);
(அத்திருக்கோலத்தை), வெள்ளி பருப்பதன் – வெள்ளிமலையாகிய கைலாசத்தி லிருப்பவனான சிவனும்,
அம் தண் மலரோன் – அழகிய குளிர்ந்த (அத்திருமாலின் நாபித்) தாமரை மலரில் தோன்றியவனான பிரமனும்,
அறிகிலர் – கண்டறியுந் தர முடை யாரல்லர்; (அதுநிற்க): –
பார் அளந்த திரு பதன் – உலகங்களை அளந்த திருவடிகளை யுடையவனும்,
நந்தன் மதலை – நந்தகோபன் வளர்த்தகுமாரனுமான திருமால்,
நிற்கும் – (யாவரையும் ஈடேற்றுதற்கு அடியவர்க்கெளியனாய்) நின்ற திருக்கோலமாக எழுந்தருளியிருக்குமிடமான,
திருவேங்கடம் என் பொருப்பு அது – திருவேங்கடமென்ற மலையை,
அனந்தல் தவிர்ந்து தொழ – சோம்பலொழிந்து வணங்குதற்கு, போதுமின் – வாருங்கள்; (எ – று.)

திருப்பதியாத்திரைசென்று திருவேங்கடமுடையானைச்சேவித்து வாழ்வுபெறுதற்கு அனைவரையும் உடனழைக்கிறார்;
தம்மைப்போலவே உல கத்தாரும் உய்யவேண்டு மென்னும் பரசமிருத்தி யுடையவராதலால்.
“சென்றாற்குடையாம் இருந்தாற் சிங்காதனமாம், நின்றால் மரவடியாம் நீள்கடலுள் – என்றும்,
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும், அணையாந் திருமாற்கு அரவு” என்றபடி
ஆதிசேஷன் திருமாலுக்குப் பலவகைக் கைங்கரியங்கள் புரிதலால், “இருப்ப தனந்தனில்” எனப்பட்டது;
“தண் அநந்தசிங்காதன” என்றார் திருவரங்கத்தந்தாதியிலும்.
மீளாவுலகமாகிய பரமபதம் சிந்தையும் மொழியுஞ் செல்லா நிலைமைத் தாதலின், “எண்ணலில் வைகுந்தம்” எனப்பட்டது;
“முந்தமறையினின்றல்லாதெத்தேவர்க்கு முன்னவரிது,
அந்தமிலது அரங்கன்மேவு வைகுந்தமானதுவே” என்றார் திருவரங்கத்துமாலையிலும்.
திரிமூர்த்திகளில் மற்றையிருமூர்த்தியரும் அறி கில ரெனவே, பிறர்அறியாமை சொல்லவேண்டாதாயிற்று;
“பத்துடை யடியவர்க் கெளியவன் பிறர்களுக் கரிய வித்தகன்” என்பதுங் காண்க.

நந்தன் – கண்ணனை வளர்த்த தந்தை. வசுதேவனும் தேவகியும் கம்ச னாற் சிறையிலிருத்தப்பட்டு வடமதுரையில்
தளைபூண்டிருக்கையில், திரு மால் தேவகியினிடம் எட்டாவது கருப்பத்திற் கண்ணனாய் அவதரிக்க,
அக்குழந்தையைக் கம்சன் கொல்லக்கூடு மென்ற அச்சத்தால் தாய்தந்தையர் அத்தெய்வக்குழவியின்
அநுமதி பெற்று அந்தச்சிசுவை அதுபிறந்தநடுராத் திரியிலேயே திருவாய்ப்பாடியிலுள்ள இடையர்க்கெல்லாந்
தலைவனான நந்தகோபனது திருமாளிகையிலே இரகசியமாகக் கொண்டுசேர்த்துவிட்டு,
அங்கு அப்பொழுது அவன்மனைவியான யசோதைக்கு மாயையின் அம்சமாய்ப் பிறந்திருந்த தொரு
பெண்குழந்தையை எடுத்துக்கொண்டுவந்துவிட, அதுமுதற் கம்சனைக் கொல்லுகிறவரையிற்
கண்ணபிரான் அக்கோ குலத்திலேயே நந்தகோபன்குமரனாய் யசோதைவளர்க்க வளர்ந்தருளின னென்று உணர்க.

அநந்தன் என்ற வடசொல் – ந அந்த என்று பிரிந்து, பிரளயத்திலும் அழிவில்லாதவ னென்று காரணப்பொருள்படும்.
பருப்பதம் – பர்வதமென்ற வடசொல்லின் சிதைவு. பொருப்பது என்பதில், “அது” என்பது – பகுதிப் பொருள்விகுதி.

————–

போதார் அவிந்த வரையும் புகா அண்ட புற்புதத்தின்
மீது ஆர இந்த வினை தீர்க்க வேண்டும் -மண் விண்ணுக்கு எல்லாம்
ஆதார இந்தளம் தேன் பாடும் வேங்கடத்து அப்ப நின் பொற்
பாதார விந்தம் அல்லால் அடியேற்கு ஒரு பற்று இல்லையே –18-

(இ – ள்.) விண் மண்ணுக்கு எல்லாம் ஆதார – விண்ணுலகத்துக்கும் மண்ணுலகத்துக்கும் மற்றெல்லாவுலகங்கட்கும் ஆதாரமாயுள்ளவனே!
தேன் இந்தளம் பாடும் வேங்கடத்து அப்ப – வண்டுகள் இந்தளமென்னும் பண்ணைப்பாடுதற்கிடமான
(சோலைகள்சூழ்ந்த) திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கிற சுவாமீ! –
நின் பொன் பாத அரவிந்தம் அல்லால் – உனது பொலிவுபெற்ற திருவடித்தாமரைமலரே யன்றி,
அடியேற்கு ஒரு பற்று இல்லை – தாசனான எனக்கு வேறொருபற்றுக்கோடு இல்லை;
போதார் அவிந்த வரையும் புகா – பிரமர்கள் அழியுமளவும் ஒடுங்குதலில்லாத (பிரமன்அழியும்போது உடனழியும் இயல்பினவான),
அண்ட புற்புதத்தின் – நீர்க்குமிழிகள் போன்ற அண்டகோளங்களுக்கு,
மீது – மேலேயுள்ளதான பரமபதத்தில்,
ஆர – (யான்சென்று) சேருமாறு,
இந்தவினை தீர்க்கவேண்டும் – (என்னால் ஈட்டப்பட்ட) இக்கருமங்களையெல்லாம் (நீயே) ஒழித்தருளவேண்டும்.

“போதார்” என்பதற்கு, கீழ் 2 – ஆம்பாட்டில் “போதன்” என்றதற்குக் கூறிய காரணப்பொருளைக் கொள்க.
அண்டங்கள் அநந்த மென்றும், அவை ஒவ்வொன்றற்கும் ஒவ்வொருபிரமனுள னென்றும்,
அவையெல்லாம் ஆதியிற் பிரமனுடன் தோன்றி அந்தத்திற் பிரமனுடனே யொடுங்கு மென்றும்,
இப்படிப்பட்ட அநந்தகோடி பிரமாண்டங்க ளடங்கிய மூலப்பிரகிருதிக்கு மேலுள்ளது எம்பெருமான்
எழுந்தருளியிருக்கின்ற முத்தியுலகமாகிய பரம பத மென்றும் உணர்க.
“பிரமர்வாழண்டங்கள்மீதாம் பரனார்” என்றார் திருவேங்கடமாலையிலும்.
அண்டங்கள் நீரிற்குமிழிபோலத் தோன்றியழியும் இயல்பின வாதலால், “அண்ட புற்புதம்” எனப்பட்டன;
(“ஆழிப்பிரா னடிக்கீழுற்பவித்தழியும், பரவையின்மொக்குளைப்போற் பலகோடிபகிரணடமே” என்ற திருவரங்கத்தந்தாதியையும்,
“வாரித்தலமுங் குலபூதரங்க ளும் வானு முள்ளே,
பாரித்துவைத்த வில்வண்டங்கள்யாவும் படைக்கமுன்னாள்,
வேரிப்பசுந்தண்டுழாயரங்கேசர் விபூதியிலே,
மூரிப்புனலிற் குமிழிகள்போல முளைத்தனவே” என்ற திருவரங்கத்துமாலையையுங் காண்க.)
“புற்புதம்” என்பதற்கு ஏற்ப, “புகா” எனப்பட்டது; தான் தோன்றிய விடத்திலேயே புக்கு ஒடுங்குதல் நீர்க்குமிழியின் இயல்பாதல் காண்க.
“நிலமிசை நீடுவாழ்வார்” என்றாற்போல, “அண்டபுற்புதத்தின் மீதுஆர” என்றார்.
அழியு மியல்பினவான எல்லாவுலகங்கட்கும் மேலாயது அழியாவியல்பினதான வீட்டுலக மென்க.
விந்தம் வினை என்று பதம்பிரித்து, விந்தியமலைபோன்ற வினைத்தொகுதி யெனினுமாம்.

எல்லாவுலகங்கட்குங் கீழே எம்பெருமான் ஆதிகூர்மரூபியாயிருந்து கொண்டு அவற்றையெல்லாம் தாங்குதலும்,
பிரளயகாலத்தில் அனைத்துல கத்தையும் அப்பெருமான் வயிற்றில்வைத்திருந்து பாதுகாத்தலும்,
பகவானது திவ்வியசக்தியின் உதவியினாலன்றி யாதொருபொருளும் எங்கும்நிலை பெறாமையும் பற்றி,
“விண்மண்ணுக்கெல்லாம் ஆதார” என்றார்;
“தலமேழுக்கு மாதாரா” என்றார் திருவரங்கத்தந்தாதியிலும். ஸ்வாமீ என்று வடமொழியிலும்,
அப்பன் என்று தென்மொழியிலும் திருவேங்கடமுடையா னுக்குத் திருநாமம் வழங்கும்.
பற்று – புகலிடம், கதி, ரக்ஷகம். அண்டபுத் புதம், பாதாரவிந்தம் – முன்பின்னாகத் தொக்க உவமைத்தொகை; வட மொழித்தொடர்.

———–

தலைவனைப் பிரிந்த தலைவியின் வருத்தம் கண்டு ஆற்றாத தோழி சந்த்ரனை நோக்கி இரங்கி கூறல் –

பற்றி இராமல் கலை போய் வெளுத்து உடல் பாதி இரா
வற்றி இராப்பகல் நின் கண் பனி மல்கி மாசு அடைந்து
நிற்றி இராக மொழிச்சியைப் போல் நெடு வேங்கடத்துள்
வெற்றி இராமனை வேட்டாய் கொல் நீயும் சொல் வெண் மதியே –19-

(இ – ள்.) வெள் மதியே – வெண்ணிறமான சந்திரனே! –
பற்றி இராமல் – (ஓரிடத்திலே) நிலைத்துத்தங்கியிராமல் (எங்கும்உழன்றுகொண்டு),
கலை போய் – ஒளிமழுங்கப்பெற்று அல்லது உடல்மெலிதலால் ஆடைசோரப்பெற்று (கலைகள் குறைந்து நீங்கப்பெற்று),
வெளுத்து – நிறம்வெளுத்து,
உடல் பாதி இரா வற்றி – வடிவம் (முன்பு இருந்தவளவிற்) பாதியும் இராதபடி தேயப்பெற்று,
இரா பகல் – இரவிலும் பகலிலும்,
நின் கண் பனி மல்கி – உனதுகண்கள் நீர்நிரம்பப்பெற்று (உன்னிடத்துப் பனிநிரம்பப்பெற்று),
மாசு அடைந்து – (நீராடாது தரையிற்புரளுதலால் உடம்பில்) தூசிபடியப் பெற்று (களங்கமுற்று),
இராகம் மொழிச்சியை போல் நிற்றி – இசைப் பாட்டுப்போ லினிய சொற்களையுடையவளான இத்தலைமகளைப் போன்று நிற்கிறாய்:
(அவள்போலவே), நீயும் -, நெடு வேங்கடத்துள் வெற்றி இராமனை வேட்டாய் கொல் – உயர்ந்த திருவேங்கடமலையில்
எழுந்தருளியிருக்கிற சயத்தையுடைய இராமனாய் அவதரித்தவனான திருமாலை விரும்பினையோ?
சொல் – சொல்வாய்; (எ – று.)

“நைவாயவெம்மேபோல் நாண்மதியே நீ யிந்நாள், மைவானிருளகற்றாய் மாழாந்து தேம்புதியால்,
ஐவாயரவணைமே லாழிப்பெருமானார், மெய் வாசகங்கேட் டுன்மெய்ந்நீர்மைதோற்றாயே” என்ற திருவாய்மொழியைத் தழுவியது இது.
அது, தலைவிகூற்று; இது, அவ்வாறே தோழிகூற்றாக நிகழ்ந்தது. இத்துறை, தன்னுட்கையாறெய்திடுகிளவி யெனப்படும்;
அதாவது – தமக்குநேர்ந்த துன்பத்தைத் தம்ஆற்றாமையாற் பிறிதொன்றன்மேலிட்டுச் சொல்லுஞ் சொல்.
இது தலைவி தோழி என்னும் இருவர்க்கும் உரியதென்பதை, இறையனாரகப்பொருளுரைகொண்டும் உணர்க.
(ஆயின், தம்முட் கையாறெய்திடுகிளவி யென்று பன்மையாற்சொல்லாது
தன்னுட்கையா றெய்திடுகிளவியென ஒருமையாற்சொல்லியது எற்றிற்கோ வெனின், –
தோழி தலைமகள் என இருவரையும் வேறுபடுத்திக்கருதாது ஒருவராகக் கருதற்பொருட்டாக ஒருமையாற்புணர்த்தா ரென்க.)
இங்ஙனஞ்சொல்லுதலின் பயன், களவுப்புணர்ச்சியொழுக்கத்திலேநின்று சிறைப்புறத்தானாகிய தலைமகன் கேட்டு
விரைவில் வெளிப்படையாகவந்து இத்தலைமகளை மணஞ்செய்து கூடுபவனதால், தோழிக்குத் தலைவி
பக்கலுள்ள பேரன்பினால் அவள் தலைவனைப்பிரிந்துவருந்துகின்றபொழுது கட்புலனாகும்
பொருளெல் லாம் அவள்போலவேவருந்துகின்றனவாகத் தோன்றுதலால்,
சந்திரனை நோக்கி “நீயும் வேட்கைநோயால் ஈடுபடுகின்றனையோ?” என்றாள்.

இச்செய்யுளில் சிலேடையுவமையணி காண்க; அதாவது – சொற் பொதுமைகாரணமாக வரும் ஒப்புமை.
உபமானமாகிய தலைவிக்கு –
பற்றியிராமை – விரகதாபத்தால் ஓரிடத்து நிலைகொள்ளாமை;
கலைபோதல் – ஒளிகுறைதல்; அல்லது, உடல்மெலிய ஆடைசோர்தல்; வெளுத்தல் – மேனி நிறம்மாறுதல்;
உடல்பாதியிராவற்றுதல் – உடம்புமெலிதல்: இராப்பகல் கண் பனிமல்குதல் – அல்லும்பகலும் அநவரதமும் கண்ணீர்பெருகப் புலம்புதல்;
மா சடைதல் – பிரிந்தகாலத்தில் உடல்மாசு தீர நீராடுதலின்றித்தரையிற் புரளுதலால் உடம்பில் தூசிபடிந்திருத்தல்.
உபமேயமாகிய சந்திரனுக்கு –
பற்றியிராமை – ஒருபொழுதேனும் அசைவற்று ஓரிடத்துநில்லாமல் வானவீதியில் எப்பொழுதுஞ் சஞ்சரித்தல்;
கலைபோதல் – கிருஷ்ணபக்ஷத்தில் நாளடைவிலே கலைகுறைதல்; (கலை – சந்திரன்பங்கு.)
வெளுத்தல் – இயற்கை நிறம்; உடல்பாதியிராவற்றுதல் – கிருஷ்ணபக்ஷத்தில் தேய்தலால்;
இராப்பகல் கண் பனி மல்குதல் – எப்பொழுதும் பனிபோலக்குளிர்ந்தகிரணங் களைத் தன்னிடத்திலே யுடையவனாதல்.
சந்திரனுக்கு வடமொழியில் “ஹிமகரன்” என ஒருபெயர்வழங்குதலுங் காண்க. மாசுஅடைதல் – களங்கமுடைமை.
இது, செம்மொழிச்சிலேடை; சொற்கள் வெவ்வேறுவகையாகப் பிரியாது ஒருவகையாகவே பிரிந்து இருபொருள்பட்டதனால்.

முதலடியிறுதியில், இரா என்பது – இராமல் என்பதன் விகாரம்: ஈறு கெட்ட எதிர்மறைவினையெச்சம்.
பாதி – பகுதி யென்பதன் மரூஉ. ராகம்,
ராமன் – வடசொற்கள். மொழிச்சி – பெண்பாற் பெயர். ராமன் என்ற திருநாமம் – தனது திருமேனியழகினாலும்
நற்குணநற்செய்கைகளாலும் யா வரையும் தன்பக்கல் மனங்களித்திருக்கச்செய்பவ னென்று காரணப்பொ ருள்படும்.
“ஆடவர் பெண்மையை யவாவுந் தோளினாய்” என்றபடி இராம மூர்த்தி சௌந்தரியாதி கலியாண குண கண
பரிபூர்ணனான உத்தமநாயகனாதலால், அவனை யெடுத்துக்கூறினாள்.

எம்பெருமானோடுபூர்ணாநுபவத்தைப்பெறாமையால் ஐயங்கார் வருந்தி ஒருநிலைகொள்ளாது ஒளிகுறைய நிறம்மாறி
உடல்மெலிந்து இரவும்பகலும் கண்ணீர்பெருகக் கீழ்விழுந்துபுரண்டு மாசுபடிய நின்ற நிலையைக் கண்ட அன்பர்கள்
அவர்பக்கல் தமக்குஉள்ள அன்புமிகுதியால் தம்கண்ணெதிர்ப் படுகின்ற பொருள்களையெல்லாம்
எம்பெருமானைப்பிரிந்துவருந்துகின்றன வாகக்கொண்டு சந்திரனைநோக்கி
“நீயும் இவர்போலப் பகவத்விச்லேஷத் தால் நோவுபடுகின்றனையோ?” என்று வினவுகின்றன ரென
இதற்கு உள்ளுறைபொருள் காண்க; விவரம் தானே விளங்கும்.

————–

மதி ஆதவன் கதிர் மின்மினி போல் ஒளிர் வைகுந்தம் தா
மதியாது அவன் தர வாழ்ந்திருப்பீர் வட வேங்கடவன்
மதியாத வன் கடத்துள் தயிர் வாய் வைத்த மாயப் பிரான்
மதியாதவன் உரம் கீண்டான் கழல் சென்னி வைத்திருமே –20-

(இ – ள்.) கடத்துள் – குடத்தில் வைத்திருந்த,
மதியாத வல் தயிர் – கடையாத கட்டித்தயிரை,
வாய்வைத்த – (கிருஷ்ணாவதாரத்திற்களவுசெய்து) உண்டருளிய,
மாயம் பிரான் – மாயையையுடைய பெருமானும்,
மதியாதவன் உரம் கீண்டான் – (தன்னை) மதியாதவனான இரணியாசுரனுடைய மார்பை (க் கைந்நகத்தால்) இடந்தவனுமான,
வட வேங்கடவன் – வடக்கின்கணுள்ள திருவேங்கடமலையை யுடையானது,
கழல் – திருவடிகளில்,
சென்னி வைத்திரும் – தலையைவைத்து வணங்குங்கள்; (அங்ஙனம் வணங்குவீராயின் அதன்பயனாக), –
மதி ஆதவன் கதிர் மின்மினி போல் ஒளிர் வைகுந்தம் – சந்திரன் சூரியன்என்ற இருசுடர்களின் ஒளியும்
(தனதுபேரொளியின்முன்) மின்மினிப்பூச்சிபோலாகும்படி (திவ்வியதேஜோமயமாய்) விளங்குகின்ற ஸ்ரீவைகுண்டத்தை,
தாமதியாது அவன்தர – காலதாமசஞ்செய்யாமல் அப்பெருமான் (உங்கட்குக்) கொடுத்தருள,
வாழ்ந்துஇருப்பீர் – (பெற்று நீங்கள் அங்கு என்றும்) நிலையாக வாழ்வீர்கள்; (எ – று.)

“சரணமாகுந் தனதா ளடைந்தார்க்கெல்லாம், மரணமானால் வைகுந்தங்கொடுக்கும் பிரான்” என்ப வாதலால்,
“தாமதியாது தர” என்பதற்கு – இப்பிறப்பின்முடிவிலேகொடுக்க என்று பொருள்கொள்க.
மின்மினி . இருளில்மின்னுவதொரு பறக்கும்பூச்சி. வன்மையைக்கடத்துக்கும் அடைமொழி யாக்கலாம்.
“அவன்” என்ற சுட்டுப்பெயர் “வடவேங்கடவன்” என்ற இயற்பெயரின் முன் வந்தது, செய்யுளாதலின்;
“செய்யுட்கு ஏற்புழி” என்பர் நன்னூலாரும்.

—————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவேங்கட மாலை –81-100-

February 20, 2022

நாரியர் தம் கூந்தலினும் நாலும் அருவியினும்
வேரினறும் சாந்து ஒழுகும் வேங்கடமே -பாரினுளார்
அற்ப சுவர்க்கத்தார் அறிவு அரியார் முன் மேய்த்த
நல்பக வர்க்கத்தார் நாடு –81-

(இ – ள்.) நாரியர்தம் கூந்தலினும் – மாதர்களுடைய கூந்தலினின்றும்,
வேரி நறு சாந்து ஒழுகும் – வாசனையையுடைய நல்லமயிர்ச்சாந்து ஒழுகப்பெற்ற:
நாலும் அருவியினும் – கீழ்நோக்கி வருகின்ற நீரருவிகளிலும்,
வேரின் அறும் சாந்து ஒழுகும் – வேரோடும்அற்ற சந்தனமரங்கள் அடித்துக்கொண்டு ஓடிவரப்பெற்ற:
வேங்கடமே -,-
பாரின் உளார் – பூமியி லுள்ளவர்களாலும்,
அற்ப சுவர்க்கத்தார் – இழிவாகிய சுவர்க்கலோகத்தி லுள்ளவர்களாலும்,
அறிவு அரியார் – அறியமுடியாதவரும்,
முன் – முன்பு (கிருஷ்ணாவதாரத்தில்), மேய்த்த -,
நல் பசு வர்க்கத்தார் – நல்லபசுக்களின் தொகுதியையுடையவருமான திருமாலினது,
நாடு – திவ்வியதேசம்; (எ – று.)

“வேரினறுஞ்சாந்து” என்ற தொடரின் முதற்பொருளில் சிறப்பு னக ரத்தைப் பொதுநகரமாக அமைத்துக்கொள்ளவேண்டும்;
பொது நகரமும் சிறப்புனகரமும் ஒலிவடிவில் அபேதமாயிருத்தல்பற்றி, இவ்வாறு புணர்த்தினார்.
இங்ஙனமே வரும் மற்றைப்பாடல்களும் காண்க. மயிர்ச்சாந்து – மயிரிற் பூசப்படும் வாசனைக்கலவை; வாசனைத் தைலமுமாம்.
நாலும் என்ற எதிர்காலப் பெயரெச்சத்தில், நால் – வினைப்பகுதி. மலையருவி வெள்ளத்தின் விசையால் அங்குள்ள
சந்தனம் முதலிய மரங்கள் வேரோடு அறுத்துத் தள்ளப்பட்டு வருதல் இயல்பு .
பாரினுளார் – மனிதர். சுவர்க்கத்தார் – தேவர். சிற்றின்பத்தையே யுடையதான சுவர்க்கம் நிரதிசயப்
பேரின்பத்தையுடைய பரம பதத்தை நோக்க எளிமைப்படுதலால், “அற்பம்” எனப்பட்டது.
அல்ப ஸ்வர்க்கம், பசுவர்க்கம் – வடசொற்றொடர்கள். கண்ணன் திருவாய்ப்பாடியில் வளர்ந்தபொழுது
தான் வளர்கிற குலத்திற்கு ஏற்ப ஆநிரை மேய்த்தமை பிரசித்தம்.

————-

மாதரார் கண்ணும் மலைச் சாரலும் காமர்
வேத மாற்கம் செறியும் வேங்கடமே -பாதம் ஆம்
போதைப் படத்து வைத்தார் போர் வளைய மாற்றரசர்
வாதைப் படத்து வைத்தார் வாழ்வு –82-

(இ – ள்.) மாதரார் கண்ணும் – மகளிர்களுடைய கண்களும்,
காமர் வேதம் மாற்கம் செறியும் – காமநூல்வழியைப் பொருந்தப்பெற்ற:
மலை சாரலும் – மலைப்பக்கங்களும்,
காமர் வே தமால் கம் செறியும் – அழகிய மூங்கில்கள் தமது உருவத்தால் வானத்தை நெருங்கப்பெற்ற:
வேங்கடமே -,-
பாதம் ஆம் போதை – (தமது) திருவடிகளாகிய தாமரைமலர்களை,
படத்து வைத்தார் – (காளியனென்னும் பாம்பின்) படத்தில் ஊன்றவைத்தவரும்,
போர் – யுத்தத்தில்,
மாறு அரசர் வளைய – பகையரசர்கள் வளைந்து கொள்ள,(அவர்களை),
வாதை பட துவைத்தார் – துன்பப்படுமாறு அழித்தவருமான திருமால்,
வாழ்வு – எழுந்தருளியிருக்குமிடம்; (எ – று.)

“மாதர் காதல்” என்ற தொல்காப்பிய உரியியற் சூத்திரத்தால் மாதர் என்பது – ஆசையென்னும்பொருளை
யுணர்த்தும் உரிச்சொல்லாதல் அறிக. மாதரார் – விரும்பப்படும் அழகுடையார். காமர் – காமன்; மன்மதன்: உயர் வுப்பன்மை:
அவனுடைய வேதமென்றது, காமசாஸ்திரத்தை. மாதர்கண்கள் காமவேதமார்க்கம் செறிதலாவது – பார்வையழகால் ஆடவரைக்
காம வசப்படுத்துதல். மார்க்கம் என்ற வடசொல், சிலேடைநயம்நோக்கி மாற்கம் என விகாரப்பட்டது.
தமால் – தம்மால்; தொகுத்தல். கம் – வடசொல்.

பாதமாம் போது – உருவகம். திருவடிக்குத் தாமரையுவமை, செம்மை மென்மை அழகுகளில்.ழுபாதத்தைப்படத்துவைத்தார்” என்றது,
காளியன் முடியில் தமதுதிருவடிபதிந்த தழும்பு என்றும்நிலையாக இருக்கும்படி அழுந்த வைத்தவரென்ற பொருளை விளக்கும்;
“ஓ சர்ப்பராசனே! நீ கருடனுக்குப் பயப்படவேண்டாம்; உன் சிரசில் என் திருவடி பொறித்த வடு இருத்தலைக் கண்டு
உன்னை அவன் ஒன்றும் செய்யமாட்டான்” என்று கண்ணன் காளியனுக்கு வரமளித்தமை காண்க.
இந்நூலின் முதற்செய்யுளில் “பையரவின் சூட்டிற் சிரமபதநாட்டினான்” என்றதிலும் இக்கருத்து அமைந்துளது.
“போர்” என்றது – பாரதயுத்தம் முதலியவற்றையும், “மாற்றரசர்” என்றது – துரியோதனாதியர் முதலியோரையுங் குறிக்கும்.
“போர்விளைய” என்ற பாடத்துக்கு – போர் உண்டாக என்க. மாற்றரசர் – மாறுபாட்டையுடைய அரசர்.
பாதா என்ற வடமொழி, வாதையென விகாரப்பட்டது.

——————

எத்திக்கும் காம்பும் எயினரும் ஆரத்தினையே
வித்திக் கதிர் விளைக்கும் வேங்கடமே –தித்திக்கும்
காரி மாறன் பாவார் காதலித்தார் தம் பிறவி
வாரி மாறு அன்பு ஆவார் வாழ்வு –83-

(இ – ள்.) எ திக்கும் – (அம்மலையின்) எல்லாப்பக்கங்களிலும், –
காம்பும் – மூங்கில்களும்,
ஆரத்தினையே வித்தி கதிர் விளைக்கும் – முத்துக்களையே உண்டாக்கி ஒளியைவீசப்பெற்ற:
எயினரும் – வேடர்களும்,
ஆர தினையே வித்தி கதிர் விளைக்கும் – மிகுதியாகத் தினையையே விதைத்துக் கதிர்களை விளையச்செய்தற் கிடமான:
வேங்கடமே -,-
தித்திக்கும் – இனிமையான,
காரி மாறன் பாவார் – காரியென்பவரது திருக்குமாரரான நம்மாழ்வாருடைய பாசுரத்தைப் பெற்றவரும்,
காதலித்தார்தம் – (தம்மை) விரும்பின அடியார்களுடைய,
பிறவி வாரி – பிறப்பாகிய கடல்,
மாறு – நீங்குதற்குக் காரணமான,
அன்பு ஆவார் – அருளின் மயமாகுபவருமான திருமால்,
வாழ்வு – எழுந்தருளியிருக்குமிடம்; (எ – று.)

“எத்திக்கும்” என்பதை, சிலேடைப்பொருளிரண்டுக்குங் கூட்டுக. சிறந்த சாதி மூங்கில் முற்றினபொழுது
அதன் கணுக்கள் வெடிக்க அவற்றினின்று நல்லமுத்துப் பிறக்குமென்றல், கவிமரபு.
(முத்துப்பிறக்கு மிடங்கள்இன்னவையென்பதை, “தந்தி வராகமருப் பிப்பி பூகந் தழைகதலி, நந்து சலஞ்சல மீன்றலை
கொக்கு நளின மின்னார், கந்தரஞ் சாலி கழை கன்னலா வின்பல் கட்செவி கார்,
இந்து வுடும்பு கரா முத்தமீனு மிருபதுமே” என்பதனால் அறிக.)
ஆரம் – ஹாரம் என்ற வடசொல்லின் விகாரம். தினை – ஒருவகைத்தானியம். ஏ – இசைநிறை.
தினைவித்திக் கதிர்விளைத்தல் – தினைப் பயிரிடுதல்.

பாண்டிய நாட்டில் தாமிரபர்ணி நதிதீரத்தி லுள்ள திருக்குருகூரிலே வேளாள வருணத்தவரான திருவழுதி வளநாட ரென்பவரது
சந்ததியில் காரியென்பவர்க்கு உடைய நங்கையாரது திருவயிற்றிலே அவதரித்தவ ராத லால், நம்மாழ்வார், “காரிமாறன்” எனப்பட்டனர்.
இவர் பிறந்தபொழுதே தொடங்கி அழுதல் பால்குடித்தல் முதலிய லோகவியாபாரம் ஒன்றுமின்றி உலகநடைக்கு மாறாக இருந்ததனால்,
இவர்க்கு மாற னென்று திருநாம மாயிற்று. வலிய வினைகளுக்கு மாறாக இருத்தலாலும், பாண்டிய நாட்டில் தலைமையாகத்
தோன்றியதனாலும் வந்த பெய ரென்றலும் உண்டு;
மாறன்பா – திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி, திருவாய் மொழி என்னும் நான்கு திவ்வியப்பிரபந்தங்கள்.
காதலித்தார் – காதலென்னும் பெயரினடியாகப் பிறந்த தெரிநிலை வினையாலணையும் பெயர். வாரி – வடசொல்:
நீர்; கடலுக்கு இலக்கணை. காரணகாரியத் தொடர்ச்சியாய் எல்லைகாண வொண்ணாது மாறிமாறி வருதலாலும்,
அச்சந்தருதலாலும், கடத்தற் கரிதாதலாலும், பிறப்பு, கடலெனப்பட்டது. மாறு என்ற வினைத்தொகை, இங்குக் காரியப்பொருளில் வந்தது.

————–

பார் ஓடு கான்யாரும் பல் களிறும் நந்தவனம்
வேரோடலைத் தீர்க்கும் வேங்கடமே –கார் ஓதம்
சுட்ட கருவில் படையார் தொண்டரை மீண்டு ஏழு வகைப்
பட்ட கருவில் படையார் பற்று –84-

(இ – ள்.) பார் ஓடு கான் யாறும் – (அம்மலையினின்று) பூமியைநோக்கி ஓடிவருகிற காட்டாறுகளும்,
நம் தவனம் வேர் ஓடலை தீர்க்கும் – நமது தாகம் நிலைத்திருத்தலை நீக்கப்பெற்ற:
பல் களிறும் – பல மதயானைகளும்,
நந்தவனம் வேரோடு அலைத்து ஈர்க்கும் – பூந்தோட்டத்திலுள்ள மரங்களை வேருடன் அசைத்து இழுக்கப்பெற்ற:
வேங்கடமே -,-
கார் ஓதம் சுட்ட – கரு நிறமான கடலை வெதும்பச்செய்த,
கரு வில் படையார் – பெரிய வில்லாகிய ஆயுதத்தை யுடையவரும்,
தொண்டரை – (தமது) அடியார்களை,
மீண்டு – மறுபடி –
ஏழு வகை பட்ட கருவில் படையார் – ஏழுவகைப்பட்ட பிறப்பில் தோன்றச் செய்யாதவரு மான திருமால்,
பற்று – விரும்பி யெழுந்தருளி யிருக்குமிடம்; (எ – று.)

ஓடு – வினைத்தொகை. தவனம் – தபநமென்ற வடசொல்லின் விகாரம். நந்தவனம் – ஆனந்தத்தை விளைக்குஞ் சோலை.
காட்டாறுகள், வனம் நந்த – காடுகள் வளர. வேர் ஓடலை தீர்க்கும் – (அருகில் வருவாரது உடம்பில்)
வேர்வையோடுதலை (த் தனது தண்மையால்) ஒழிக்கப்பெற்ற என்று உரைத்தலும் ஒன்று.
வனம் நந்த – காடுகள் அழிய எனினுமாம். நந்தல் – அழிதலும், வளர்தலும். வேர்ஓடலைத்தீர்க்கும் – சிரமஹரமாயிருக்கும் என்றபடி.
இனி, காட்டாறுகள் பூந்தோட்டம் வேரூன்றுதலை யொழிக்கு மென்றும், யானைகள் நந்தவனமென்னும்
இந்திரனது பூஞ்சோலையை வேருடன் அசைத்து இழுக்கு மென்றும் உரைத்தலுமாம்;
இவ்வுரைக்கு, நந்தநவன மென்பது நந்தவனமென விகாரப்பட்ட தென்க.

விற்படை – இருபெய ரொட்டுப் பண்புத்தொகை. இராமனது வில், கோதண்ட மெனப்படும்.
அடியார்கட்கு மீளவும் பிறப்பில்லாதபடி கருமமொழித்து முத்தியளிப்பவரென்பது கருத்து.
கரு – கர்ப்பமென்னும் வட சொல்லின் சிதைவு.
எழுவகைப்பிறப்பு – தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்பன.
படையார் என்பது – மூன்றாமடியில் படையென்னும் பெயரின்மேற் பிறந்த உடன்பாட்டுக் குறிப்புவினையா லணையும்பெயரும்,
நான்காமடியில் படையென்னும் வினைப்பகுதியின்மேற் பிறந்த எதிர்மறைத் தெரிநிலை வினையாலணையும் பெயருமாம்.

—————

நன்காமர் வண்டினமும் நல்வாய் மதகரியும்
மென்காமர முழக்கும் வேங்கடமே -புன்காமம்
ஏவார் கழலார் எனது உளத்தில் என் தலைவை
பூ ஆர் கழலார் பொருப்பு –85-

(இ – ள்.) காமர் நல் வண்டு இனமும் – அழகிய சிறந்த சாதி வண்டுக ளின் கூட்டமும்,
மெல் காமரம் முழக்கும் – இனிமையான இசையை வாய் விட்டுப் பாடப்பெற்ற:
நால்வாய் மதம் கரியும் – தொங்குகிற வாயையுடைய மதயானைகளும்,
மெல் கா மரம் உழக்கும் – அழகிய சோலைகளிலுள்ள மரங்களைப் பெயர்த்து அசைக்கப்பெற்ற:
வேங்கடமே -,-
புல் காமம் ஏவார் – (தமது அடியார்களை) இழிவான காமவழியிற் செல்ல விடாதவரும்,
எனது உளத்தில் கழலார் – (அடியவனான) என்னுடைய மனத்தினின்று நீங்காத வரும்,
என் தலை வை பூ ஆர் கழலார் – அடியேனுடைய தலையின்மேல் வைத்த தாமரைமலர் போன்ற திருவடிகளை யுடையவருமான திருமாலினது,
பொருப்பு – திருமலை; (எ – று.)

நல்வண்டு – நல்ல மணத்தே செல்லும் வண்டு. மென்மை – செவிக்கு இனிமை. காமரம் – பண்.
முழக்கும் – முழங்கு மென்பதன் பிறவினை. நால்வாய் – வினைத்தொகை: நான்றவாய், நால்கிற வாய், நாலும் வாய் என விரியும்;
நால் – வினைப்பகுதி: நாலுதல் – தொங்குதல். கரம் – கை; இங்கே துதிக்கை: அதனையுடையது கரீ என வடமொழிக் காரணக்குறி.
அது, கரியென ஈயீறு இகரமாய் நின்றது. இதற்கு – கருமையுடையதெனத் தமிழ் வகையாற் காரணப்பொருள் கூறலாகாது,
வடசொல்லாதலின். மென்மை – கண்ணுக்கு இனிமை; குளிர்ச்சியுமாம். கா – பாதுகாத்தற்கு உரியது.
உழக்கும், உழக்கு – பகுதி; உழக்குதல் – கலக்குதல், வருத்தல்;
இதனை உழ என்னும் தன்வினைப்பகுதி “கு” என்னும் விகுதி பெற்ற பிறவினை யென்னலாம்.

புல்காமம் ஏவார் – தமது அடியார்களை இழிந்த சிற்றின்ப வழியிற் செல்ல விடாமல் உயர்ந்த பேரின்பநெறியிற் செலுத்துபவ ரென்க.
மேவார் எனப் பதம் பிரித்து உரைத்தல் மோனைத்தொடைக்குப் பொருந்தாது. “மலர் மிசையேகினான்” என்றபடி
அன்பால் நினைவாரது உள்ளக்கமலத்திற் கடவுள் அவர் நினைந்த வடிவத்தோடு சென்று வீற்றிருத்தலால்,
‘கழலா ரென துளத்தில்’ என்றார். ‘பூவார்கழல்’ என்பது – திருவேங்கட முடையானது திருவடிக்குச் சிறப்பாக வழங்கும்.
கழலார் என்பது – மூன்றாமடியில் கழல் என்னும் வினைப்பகுதியின்மேற் பிறந்த எதிர்மறைத் தெரிநிலை
வினையா லணையும் பெயரும், நான்காமடியில் கழல் என்ற பெயரின்மேற் பிறந்த உடன்பாட்டுக் குறிப்பு வினையாலணையும் பெயருமாம்.

————-

பாம்பும் குளிர் சந்தின் பக்கத்தில் நிற்கின்ற
வேம்பும் மருத்துவக்கும் வேங்கடமே காம்புகரம்
ஆனவரை நன்குடையார் ஆளாய்த் தொழுது ஏத்தும்
மானவரை நன்கு உடையார் வாழ்வு -86-

(இ – ள்.) பாம்பும் – பாம்புகளும்,
மருத்து உவக்கும் – காற்றை விரும்பி உணவாகக் கொள்ளப்பெற்ற:
குளிர்சந்தின் பக்கத்தில் நிற்கின்ற வேம்பும் – குளிர்ந்த சந்தனமரங்களின் அருகிலே நிற்கின்ற வேப்பமரங்களும்,
மரு துவக்கும்- (அவற்றின் சேர்க்கையால்) நறுமணம் வீசத்தொடங் கப்பெற்ற:
வேங்கடமே -,-
கரம் காம்பு ஆன – தமது கையையே காம்பாகக் கொண்ட,
வரை நல் குடையார் – கோவர்த்தந கிரியாகிய நல்ல குடை யையுடையவரும்,
ஆள் ஆய் தொழுது ஏத்தும் மானவரை நன்கு உடையார் – (தமக்குத்) தொண்டராய் வணங்கித் துதிக்கின்ற
மனிதர்களை மிகுதி யாகவுடையவருமான திருமால்,
வாழ்வு – வாழுமிடம்; (எ – று.)

பாம்பு வாதாசந மாதலால், ‘மருத்துஉவக்கும்’ என்றார்; அது இம்மலையி னின்று வீசுகின்ற நறுமணமுள்ள
குளிர்ந்தகாற்றை நல்லுணவாக விரும்பி யேற்று உட்கொள்ளு மென்க.
சந்தின்பக்கத்தில் நிற்கின்ற வேம்பும் மருத்துவக்கும் – “சந்தனத்தைச் சார் தருவும் தக்கமணங் கமழு” மென்க.
துவக்கும், துவக்கு – பகுதி; துவக்குதல் – தொடங்குதல்.

‘காம்புகரமான வரை நன்குடையார்’ –
“செப்பாடுடைய திருமாலவன் தன்செந்தாமரைக்கைவிர லைந்தினையுங்,
கப்பாகமடுத்து மணிநெடுந்தோள் காம்பாகக்கொடுத்துக் கவித்த மலை,…… கோவர்த்தனமென்னுங் கொற்றக் குடையே” என்ற
பெரியாழ்வார்திருமொழியை அறிக.
நன்குடை – எத்தனை மழைக்குஞ் சலியாத குடை; மிகப்பல ஆயர்களையும் ஆக்களையும் வருந்தாத படி பாதுகாத்த குடை;
பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் எட்டிமேயலாம் படி புல்முதலிய உணவுகளைக் கொடுத்த குடை.
மாநவர் – காசியபமுனிவனது மனைவியருள் மநுவென்பவளது மரபில் தோன்றியவர்; வடமொழித் தத்திதாந்தநாமம்.

————–

சாரும் அருவிதவழ் சாரலும் செஞ்சனத்தின்
வேரும் அரவம் அறா வேங்கடமே -நேரும்
மதுகையிடவர்க் கறுத்தார் மா மலரோன் சாபம்
மதுகை இடவர்க்கு அறுத்தார் வாழ்வு –87-

(இ – ள்.) சாரும் அருவி தவழ் சாரலும் – பொருந்திய நீரருவிகள் பெருகப்பெற்ற மலைப்பக்கங்களும்,
அரவம் அறா – ஓசை நீங்காதிருக்கப் பெற்ற:
செம் சந்தனத்தின் வேரும் – செந்நிறமான சந்தனமரங்களின் வேரும்,
அரவம் அறா – பாம்புகள் நீங்காதிருக்கப்பெற்ற:
வேங்கடமே -,-
நேரும் – எதிர்த்த,
மது கையிடவர் – மது கைடபன் என்னும் அசுரர்களை,
கறுத்தார் – கோபித்து அழித்தவரும்,
மா மலரோன் சாபம் – சிறந்த (திரு நாபித்) தாமரைமலரில் தோன்றிய பிரமனது சாபத்தை,
மதுகை இடவர்க்கு அறுத்தார் – வலிமையுள்ள ருஷபத்தையுடையவராகிய சிவபிரானுக்கு நீக்கினவருமான திருமால்,
வாழ்வு – வாழுமிடம்; (எ – று.)

அரவம் – ஒலியென்னும் பொருளில், ரவம் என்ற வட சொல்லின்விகாரம், மதுகைடப ரென்பவர், ஆதிசிருஷ்டிகாலத்தில் தோன்றினவர்.
மகா பலசாலிகளான இவ்வசுரரிருவரும் செருக்கிக் கடலில் இழிந்து திருமாலை யெதிர்த்துப் பெரும்போர்புரிய,
இவர்களை அப்பெருமான் துடையால் இடுக்கிக் கீழேதள்ளிக் கால்களால் மிதித்துத் துவைத்து வதைத்தனனென வரலாறு உணர்க.

மதுகைடபர் என்ற வடமொழித்தொடர், யமகநயத்திற்காக மதுகையி டவரென விகாரப்பட்டது.
இத்தொடர், உயர்திணையும்மைத்தொகையாத லால், பன்மைவிகுதிபெற்றது.
மதுகைடவர்க்கறுத்தார் – உயர்திணைப் பெயரின்முன் வலிமிக்கது, இரண்டாம்வேற்றுமைத்தொகை யாதலால்; “இயல்பின் விகாரம்.
” கரு என்ற பண்படி கறுஎன விகாரப்பட்டு வினைத்தன்மை யடையும்போது கோபித்தலென்னும் பொருளையும் உணர்த்துதலை
“கறுப்பும் சிவப்பும் வெகுளிப்பொருள” என்ற தொல்காப்பியத்தால் அறிக.

மலரோன்சாபம் இடவர்க்கு அறுத்தார் – பிரமனிட்டசாபத்தாற் கையை விட்டு நீங்காமல் ஒட்டிக்கொண்ட பிரமக
பாலத்தை யேந்திச் சிவபிரான் உலகமெங்கும் அலைந்து இரத்தலைத் திருமால் தவிர்த்தருளினன்.
(திருக் கண்டியூரில் எழுந்தருளியிருக்கின்ற திருமாலின் திருநாமம், “அரன்சாபந்தீர் த்த பெருமாள்” என வழங்கும்.
“பிண்டியார் மண்டையேந்திப் பிறர்மனை திரிதந்துண்ணு, முண்டியான் சாபந்தீர்த்த வொருவன்” என்றார் திருமங்கை யாழ்வாரும்.)
சாபம் மதுகை – சாப வலிமையை, இடவர்க்கு அறுத்தார் என்றலும் ஒன்று.
இனி, மலரோன்சாபமது – அந்தப்பிரமனது சாபத்தை, இடவர்க்கு – சிவனுக்கு, கை – கையினின்று,
அறுத்தார் – தவிர்த்தவர் என்று உரைப்பாருமுளர். “மாமரையோன்” என்றும், “மாமறையோன்” என்றும் பாடங்க ளுண்டு.
சாபம் – வடசொல். ருஷபம் என்ற வடசொல், இடப மென விகாரப்பட்டது; அதனையுடையவர், இடவ ரென்க.

————-

மண் மட்டுத் தாழ் சுனையும் வட்டச் சிலா தளமும்
விண் மட்டுத் தாமரை சேர் வேங்கடமே எண் மட்டுப்
பாதம் உன்னி நைந்தார் பரம பதம் சேர்க என்று
போதமுன் நினைந்தார் பொருப்பு –88-

(இ – ள்.) மண் மட்டு தாழ் சுனையும் – தரையளவும் ஆழ்ந்துள்ள சுனைகளும்,
விள் – மலர்ந்த,
மட்டு – தேனையுடைய,
தாமரை – தாமரைமலர்,
சேர் – பொருந்தப்பெற்ற:
வட்டம் சிலாதலமும் – வட்டவடிவமான கல்லினிடமும்,
விண்மட்டு – மேலுலகத்தினளவும்,
தாம் – தாவுகிற,
மரை – மான்,
சேர் – பொருந்தப்பெற்ற:
வேங்கடமே -,-
பாதம் – (தமது) திருவடியை,
எள் மட்டு உன்னி – எள்ளளவேனும் தியானித்து,
நைந்தார் – மனமுருகினவர்கள்,
பரமபதம் சேர்க – பரமபதம் அடையக்கடவர், என்று -,
போதம் – தமது அறிவினால் (தமது திருவுள்ளத்தில்),
முன் – முன்பு (அநாதிகாலமாக),
நினைந்தார் – எண்ணியருளிய திருமாலினது, பொருப்பு –
திருமலை; (எ – று.)

விள் – வினைத்தொகை. வட்டச்சிலாதலம் மரை சேர் – “வண்மைதிகழ் வெண்பளிங்கு வட்டத்திற் கண்டுயில் மான்” என்றார். 50 – ஆஞ் செய்யுளிலும்.
சிலாதலம் – வடமொழித்தொடர். தாம் – தாவும் என்னுஞ் செய்யுமெ னெச்சத்து ஈற்றுயிர்மெய் சென்றது.
எள் – மிக்க சிறுமைக்கு எடுத்துக் காட்டிய அளவை “காண விரும்பினர்மேல் நான் மடங்காம் ஆர்வத்தார்” என்றபடி
அடியவரது பக்தியினளவினும் பலமடங்கு அதிகமான பரமகாரு ணியத்தையுடைய கடவுளாதலால்,
தமது திருவடியை எள்ளளவேனும் சிந்தித்து உருகியவர் பரமபதஞ்சேர்வாராக வென்று திருவுள்ளம்பற்றும் இயல்பினரென்க.
முன்னியென்றும் பதம்பிரித்து உரைக்கலாம். “பாதமுன்னி நைந்தார்,” “போதமுன்னினைந்தார்” என்றவிடத்து
நகரவேறுபாடு திரிபு நயத்தின்பொருட்டுக் கொள்ளப்பட்டிலது. பரமபதம் – சிறந்தஇடம். போத எனப் பதம்பிரித்து, மிகுதியாக என்றலும் ஒன்று.
முன் – அவர் எண்ணுவதற்கு முன்னமே யென்றுமாம். போத முன் – அவர்கள் வருவதற்கு முன் என்றுமாம்.

————-

போதா இரு சுடரும் போதுதற்கும் ஓதுதற்கும்
வேதா வினால் முடியா வேங்கடமே -மாதாவின்
வீங்கு தனத்துக்கு இனியான் விம்மி அழாது ஆட்கொண்டான்
தாங்கு தன் நத்துக்கு இனியான் சார்பு –89-

(இ – ள்.) போதா – (கற்பகாலமளவும்) அழியாத,
இரு சுடரும் – சூரிய சந்திரர் இருவரும்,
போதுதற்கும் – (ஆகாயவீதியிலே) செல்லுவதற்கும்,
வே தாவினால் முடியா – மூங்கில்கள் அளாவி வளர்தலால் இயலாத:
ஓதுதற்கும் – (தனது மகிமையைச்) சொல்லுவதற்கும்,
வேதாவினால் முடியா (நான்கு முகமுடைய) பிரமனாலும் நிறைவேறாத:
வேங்கடமே -,-
மாதாவின் – தாயினது,
வீங்கு தனத்துக்கு – பருத்த தனங்களை யுண்ணுதற்பொருட்டு,
இனி யான் விம்மி அழாது – இனிமேல் நான் ஏங்கி யழாதபடி,
ஆள்கொண்டான் – (என்னை) அடிமைகொண்டவனும்,
தாங்கு தன் நத்துக்கு இனியான் – கையி லேந்தியுள்ள தனது (பாஞ்சஜந்ய மென்னுஞ்) சங்கத்துக்கு இனியவனுமான திருமால்,
சார்பு – சார்ந்திருக்குமிடம்; (எ – று.)

போதா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்: போது – பகுதி.
இதற்கு – (அல்லும் பகலும் அநவரதமும் சஞ்சாரம்) ஒழியாத என்று உரைப்பினுமாம். சுடர் – ஒளி, சோதி.
தாவினால் – தாவு என்ற முதனிலைத் தொழிற் பெயரின் மூன்றாம்வேற்றுமை விரி; இன் – சாரியை;
இதனை எதிர்கால வினையெச்சமாகக் கொள்ளின் சிறவாது. முடிதல் – இயலுதலும், முற்றுதலும், வேதா, மாதா – வடசொற்கள்.

இனி எனக்குப் பிறப்பில்லாதபடி அடிமைகொண்டவ னென்பது, மூன்றாமடியின் கருத்து.
“வீங்கு தனம்” என்றது, வெறுப்பைக் காட்டும். நந்து என்பது நத்துஎன மென்றொடர் வன்றொடராயிற்று.
“நத்துக்கு இனியான்” என்றது, அதனை எப்பொழுதும் கைவிடாமையும், வேண்டும்பொழு தெல்லாம் வாய்
வைத்துக் கொள்ளுதலும் முதலியன பற்றி. இச்சிறப்பை வெளியிட்டு ஆண்டாள்
“சந்திரமண்டலம்போல் தாமோதரன் கையில், அந் தரமொன்றின்றி யேறி யவன்செவியில்,
மந்திரங்கொள்வாயே போலும் வலம்புரியே, இந்திரனு முன்னோடு செல்வத்துக்கேலானே” என்றும்,
“உன் னோ டுடனே யொருகடலில் வாழ்வாரை, இன்னாரினையாரென் றெண்ணு வாரில்லைகாண்,
மன்னாகிநின்ற மதுசூதன்வாயமுதம், பன்னாளு முண்கின் றாய் பாஞ்சசன்னியமே” என்றும்,
“உண்பதுசொல்லி லுலகளந்தான் வாயமுதம், கண்படைகொள்ளிற் கடல்வண்ணன் கைத்தலத்தே,
பெண்படையா ருன்மேற் பெரும்பூசல் சாற்றுகின்றார், பண்பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே” என்றும்,
“பாஞ்சசன்னியத்தைப் பற்பநாபனோடும், வாய்ந்த பெருஞ் சுற்றமாக்கிழுக் கூறியமை காண்க.
இனி, தாங்கு தனத்துக்கு இனியான் என்று எடுத்து, கைகளில் நிரம்பக்கொண்டு செலுத்திய காணிக்கைப் பொருளுக்கு
இனியவனென்று உரைப்பினும் அமையும்;
அடியார்கள் பிரார்த்தனையாகக் கொடுக்கும் பொருளைக் கைம்மாறாகப் பெற்றுக்கொண்டு
அவர்கட்கு வேண்டும் பயனை யளித்தல், திருவேங்கட முடையானது சங்கல்பம்.

—————

பேய்க்கும் ஒரு பேய் போன்று பித்து ஆயத் திரிவோர்க்கும்
வேய்க்கும் அணி முத்து வரும் வேங்கடமே -வாய்க்கு அமுது ஊர்
வண்மைப் பேர் ஆயிரம் தான் மன்னினான் மாவலி பால்
தண்மைப் பேராய் இரந்தான் சார்பு –90-

(இ – ள்.) பேய்க்கும் ஒரு பேய் போன்று பித்து ஆய் திரிவோர்க்கும் – பேயின் கண்ணுக்கும் ஒருபேய்போலத் தோன்றுமாறு
பெரும் பைத்தியங் கொண்டு திரிகிறவர்களுக்கும்,
அணி முத்தி வரும் – (அங்குவந்த மாத்திரத் தால்) அழகியமோக்ஷம் சித்திக்கும்படியான:
வேய்க்கும் – மூங்கில்களிலும்,
மணி முத்து இவரும் – அழகிய முத்துக்கள் மிகுதியாகத் தோன்றப்பெற்ற:
வேங்கடமே -,-
வாய்க்கு அமுது ஊர் – (உச்சரிப்பவருடைய) வாய்க்கு அமிருதம்போன்ற இனிமை சுரக்கிற,
வண்மை பேர் ஆயிரம் – வளமான ஆயிரந்திருநாமங்கள்,
மன்னினான் – பொருந்தியவனும்,
மாவலிபால் – மகாபலியி னிடத்து,
தண்மை பேய் ஆய் இரந்தான் – எளியவனாய் (மூன்று அடிநிலத்தை) யாசித்தவனுமான திருமால்,
சார்பு – சாருமிடம்; (எ – று.) – தான் – அசை.

பேய்க்குமொருபேய்போன்று – பெரும்பேய்போல என்றபடி. அங்ங னம் பித்தாய்த் திரிவோர்க்கும் வேங்கடமலைக்கு வந்த
மாத்திரத்தில் முத்தி சித்தித்தலை, இந்நூலுரைத் தொடக்கத்திற் காட்டிய மாதவனென்னும் அந்தணனது வரலாற்றினாலும் அறிக.
இனி, “பேயரே யெனக்கு யாவரும் யானு மோர், பேயனே எவர்க்கும் இதுபேசியென்,
ஆயனே யரங்காவென் றழைக்கின்றேன், பேயனாயொழிந்தே னெம்பிரானுக்கே”,
“அரங்கனுக் கடியார்களாகி யவருக்கே, பித்தராமவர் பித்தரல்லர்கள் மற்றையார் முற்றும்பித்தரே” என்றபடி
பேயாழ்வார்போன்று உலகநடையிற் கலவாமல் பகவத்பாகவத விஷயங்களிற் பக்திப்பித்துக்கொண்டு திரிகின்ற
அடியார்களுக்கு முக்தி கைவருவதற்கு இடமான என்று உரைப்பினும் அமையும்.
முக்தி என்ற வடசொல் – பற்றுக்களைவிட்டு அடையு மிடமெனப் பொருள் படும்.
வேய்க்கு என்பதில் நான்கனுருபு ஏழனுருபின் பொருளில் வந்தது, உருபுமயக்கம்.

பேர்க்கு வண்மை – உச்சரித்தமாத்திரத்தில் அருவினைதொலைத்து நற்பயன்பலவும் அளிக்குந்திறம்;
அதனை, “குலந்தரும் செல்வந்தந்திடும் அடி யார்படு துயராயினவெல்லாம்,
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அரு ளொடு பெருநிலமளிக்கும்,
வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்றதாயினு மாயினசெய்யும்,
நலந்தருஞ் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னு நாமம்” என்று திருமங்கையாழ்வார் வெளியிட்டுள்ளார்.
பேர்ஆயிரம் – ஸஹஸ்ரநாமம். மாவலி – வடசொற்சிதைவு, தண்மைப்பேராய் – யாசகனாய், எளிய வாமநனாய்.

————–

வாழ்க்கை மனை நீத்தவரும் வாளரியும் மாதங்க
வேட்கை மறந்திகழும் வேங்கடமே –தோள் கை விழ
மா கவந்தனைக் கவிழ்த்தார் வாழ் இலங்கைப் பாதகரை
லோக வந்தனைக்கு அழித்தார் ஊர் –91-

(இ – ள்.) மனை வாழ்க்கை நீத்தவரும் – இல்லறவாழ்வைத் துறந்த முனிவர்களும்,
மாது அங்கம் வேள் கைமறந்து இகழும் – மாதர்களின்உடம் பினிடத்துக் காதலை முற்றும் ஒழித்து அதனை இகழப்பெற்ற:
வாள் அரியும் – கொடியசிங்கங்களும்,
மாதங்கவேட்கை மறம் திகழும் – யானையைக் கொல்ல வேண்டுமென்னும் விருப்பத்தோடு வீரம் விளங்கப்பெற்ற:
வேங்கடமே -,-
மா கவந்தனை – பெரிய கபந்தனென்னும் அரக்கனை,
தோள் கை விழ கழித்தார் – தோள்களோடு கூடிய கைகள் அற்று விழும்படி வெட்டித் தள்ளின வரும்,
இலங்கை வாழ் பாதகரை – இலங்காபுரியில் வாழ்ந்த பாவிகளானராவணன் முதலியோரை,
லோகவந்தனைக்கு அழித்தார் – உலகத்தார் தம்மை வழிபட்டதற்கு இரங்கிக் கொன்றவருமான திருமாலினது,
ஊர் – திருப்பதி.(எ – று)

மாது அங்க வேள் கைமறந்து இகழும் – பெண்ணாசையை அறக்கை விட்ட என்றபடி.
மா தங்கம் வேள் கைமறந்து இகழும் எனக்கொண்டு மிக்க பொன்னாசையை அறத்தொலைத்த வென உரைப்பினுமாம்.
கைமறந்து என்பதில், கை என்பது – தனியே பொருளொன்றுமுணர்த்தாமல் வினைக்குமுன் வந்த தமிழுபசர்க்கம்;
கைவிடுதல், கைகூடுதல் என்பவற்றிலும் இது. வாள் அரி – ஒளியையுடைய சிங்கமுமாம். ஹரி – வடசொல்;
யானை முதலிய விலங்குகளை அரிப்பது: அரித்தல் – அழித்தல்.
மாதங்கம் என்ற வடசொல் – யானையைக் குறிக்கும்போது மதங்க முனிவரிடத்தினின்று ஆதியில் உண்டானதெனக் காரணப்பொருள்படும்.

கவந்தன் – தநுஎன்னும் யக்ஷனதுமகன்; இவன் ஸ்தூலசிரஸ்என்னும் முனிவரது சாபத்தால் அரக்கனாகிப்
பிரமனருளால் தீர்க்காயுசு பெற்றுத் தேவேந்திரனோடு எதிர்த்து அவனது வச்சிராயுதத்தாற் புடைபட்டுத்
தனது தலை வயிற்றில் அழுந்தியமைபற்றிக் கவந்தம் போலத் தோற்ற முடையனா யிருந்ததனால், இப்பெயர் பெற்றான்.
கபந்தம் என்ற வடசொல்லுக்கு – தலை யற்றதும் தொழிலுடன் கூடியதுமான உடலென்பது பொருள்.
“உலக மென்பது உயர்ந்தோர் மாட்டே” என்பதற்கு ஏற்ப, இங்கே “லோகவந்தனைக்கு” என்பதற்கு –
தண்டகாரணியவாசிகளான மகாமுனிவர்களுடைய வேண்டுகோளினாலென்க. வந்தனைக்கு – உருபுமயக்கம்.

————-

கூட்டு தவத்தரும் கோளரிகளின் தொகையும்
வேட்டு வரம் பொழியும் வேங்கடமே –மோட்டு மதத்
தந்திக்கு அமலத்தார் தாம் பெறூ உம் வீடு அளித்தார்
உந்திக் கமலத்தார் ஊர் –92-

(இ – ள்.) கூட்டு தவத்தவரும் – மேன்மேற் செய்துசேர்த்த தவத்தை யுடைய முனிவர்களும்,
(அப்பெருந்தவத்தின் சித்தியால்),
வேட்டு வரம் பொழியும் – விரும்பி (அன்புடனே) (தம்மிடம் வேண்டுவார் வேண்டிய வரங்களை மிகுதியாகக்கொடுத்தற்கிடமான:
கோள் அரிகளின் தொகையும் – வலிமையுள்ள சிங்கங்களின் தொகுதியும்,
வேட்டுவர் அம்பு ஒழியும் – வேடர்கள் எய்கிற பாணங்கள் (தம்மேற்படாதபடி தந்திரமாக அவற்றிற்கு) விலகப் பெற்ற:
வேங்கடமே -,-
மோடு மதம் தந்திக்கு – உயர்ச்சியையுடைய மத யானைக்கு,
அமலத்தார்தாம் பெறூஉம் வீடு அளித்தார் – நிர்மலரான ஞானிகள் பெறுதற்கு உரிய முத்தியைக் கொடுத்தருளியவரும்,
உந்தி கமலத்தார் – திருநாபித்தாமரையையுடையவருமான திருமாலினது,
ஊர் – திருப்பதி.

கூட்டு – பிறவினை வினைத்தொகை. வேட்டுவர் – வேடுஎன்னுந் தொழிலையுடையார்;
வேடு – மிருகபக்ஷிகளைப் பிடித்துவருத்துதல். வேட்டுவரம்பு ஒழியும் – வேடர்களுடைய அம்புகள் பட்டதனால் அழியப்பெற்ற எனினுமாம்.
தந்தீ என்ற வடசொல் – தந்தத்தை யுடைய தென்று காரணப்பொருள்படும்.
அமலத்தார் – காமம் வெகுளி மயக்க மென்னும் மலங்க ளில்லாதவர்; மலம் – குற்றம். தாம் – அசை.
பெறூஉம் – செய்யுளோ சைகுன்றாதவிடத்தில் இன்னிசைதருதற்பொருட்டுக் குறில் நெடிலாய் நீண்டு அளபெடுத்தது.

————-

வஞ்சம் மடித்திருப்பார் வாக்கும் கலைக்கோடும்
விஞ்ச மடித்திருக்கு ஆர் வேங்கடமே –கஞ்சப்
பிரமா நந்த தான் பிரபஞ்சம் மாய்த்த
பரமா நந்தத்தான் பதி –93-

(இ – ள்.) வஞ்சம் மடித்து இருப்பார் வாக்கும் – வஞ்சனையையொழித் திருக்கின்ற அந்தணர்களுடைய வாயும்,
விஞ்ச – மிகுதியாக,
மடித்த இருக்கு ஆர் – மடித்து மடித்துச் சொல்லப்படுகின்ற வேதங்கள் நிரம்பப்பெற்ற:
கலை கோடும் – கலைமான்கொம்பும்,
விஞ்ச – மிகுதியாக,
மடி திருக்கு ஆர் – வளைவோடுகூடிய முறுக்குப் பொருந்தப்பெற்ற:
வேங்கடமே -,-
கஞ்சம் பிரமா நந்த – (தனது நாபித்) தாமரைமலரில் தோன்றிய பிரமனும் அழிய,
தான் -,
பிரபஞ்சம் மாய்த்த – (கல்பாந்தகாலத்தில்) உலகங்களை அழித்த,
பரம ஆநந்தத்தான் – எல்லா ஆனந்தங்களிலும் மேலான பேரானந்தத்தை யுடையவனான திருமாலினது,
பதி – ஊர்; (எ – று.)

வஞ்சம் அடித்து என்றும் பதம் பிரிக்கலாம்; அடித்தல் – ஒழித்தல். வாக் – வடசொல்.
மடித்த இருக்கு என்பது, மடித்திருக்கு எனப் பெயரெச்ச வீறு தொக்கது; வேட்டகம், புக்ககம், வந்துழி என்றவற்றிற் போல.
க்ரமம், ஜடை, கநம் முதலிய சிலவகைகளால் வேதச்சொற்கள் மடித்து மடித்துச் சொல்லப்படுதலால், “மடித்திருக்கு” எனப்பட்டது.
ருக் என்ற வடமொழி, இருக்கு என விகாரப்பட்டது;
இது, நான்குவேதங்களில் ஒன்றற்குப் பெய ராதலேயன்றி எல்லாவேதங்களுக்கும் பொதுப்பெயராகவும் வழங்கும்.
கஞ்சம் என்ற வடசொல் – நீரில் தோன்றியதென்று காரணப் பொருள்படும்; தாமரைக்குக் காரணவிடுகுறி.
ப்ரஹ்மா, ப்ரபஞ்சம், பரமாநந்தம் – வட சொற்கள். பரமாநந்தம் – தீர்க்கசந்தி பெற்றது.
பரமாநந்தத்தான் – பரம பதத்து நிரதிசய இன்பத்தைத் தனது அடியார்க்குத் தருபவன்.

————-

சேல் அஞ்சும் கண் மடவார் தேம் குழலும் கோங்கினமும்
மேலஞ்சு வர்க்கம் ஆர் வேங்கடமே -கோலம் சேர்
மாரில் அலங்கு அரத்தார் மற்றும் பல பூண் அணிந்த
காரில் அலங்காரத்தார் காப்பு –94-

(இ – ள்.) சேல் அஞ்சும் கண் – சேல் மீன்கள் (ஒப்புமைக்கு முன் நிற்கமாட்டாமல்) அஞ்சி விலகத்தக்க கண்களையுடைய,
மடவார் – மாதர் களின்,
தேம் குழலும் – நறுமணமுள்ள கூந்தலும்,
மேல் அஞ்சு வர்க்கம் ஆர் – மேன்மையான ஐந்துவகை பொருந்தப்பெற்ற:
கோங்கு இனமும் – கோங்குமரங்களின் தொகுதியும்,
மேல் அம் சுவர்க்கம் ஆர் – (மிக்கஉயர்ச்சி யால்) மேலேயுள்ள அழகிய சுவர்க்கலோகத்தை அளாவப்பெற்ற:
வேங்கடமே -,-
கோலம் சேர் மாரில் அலங்கு ஆரத்தார் – அழகு பொருந்திய திருமார்பில் அசைகின்ற ஆரங்களை யுடையவரும்,
மற்றும் பல் பூண் அணிந்த – (அவ்வாரம் மாத்திரமே யன்றி) மற்றும் பல ஆபரணங்களைத் தரித்த,
காரில் அலங்காரத்தார் – காளமேகம் போன்ற அழகுடையவரு மான திருமால்,
காப்பு – (உயிர்களைப்) பாதுகாக்கு மிடம்; (எ – று.)

சேலஞ்சுங்கண் – பிறழ்ச்சியிலும் அழகிலும் சேலைவென்றகண். மடவார் – மடமையை யுடையவர்;
மடமை – இளமை, அல்லது மகளிர்க்கு உரியதான பேதைமைக்குணம்.
அஞ்சு வர்க்கம் – முடி, குழல், கொண்டை, பனிச்சை, சுருள் என்னும் மயிர் முடியின் வகைகள்:
மயிரை உச்சியில் முடித்தல், முடி. சுருட்டி முடித்தல், குழல், மயிரை முடிந்துவிடுதல், கொண்டை. பின்னி விடுதல்,
பனிச்சை, பின்னே செருகல், சுருள், வர்க்கம், ஸ்வர்க்கம், ஹாரம், அலங்காரம் – வடசொற்கள்.
அலங்கு ஆரம் – வினைத்தொகை. ஆரம் – பொன் மணி மலர்களா லாகிய மாலை.
திருமாலின் திருமேனிக்குக் காளமேகம் நிறத்தில் உவமம்.

—————

கொய்யும் மலர்ச்சோலைக் கொக்கும் பிணி யாளர்
மெய்யும் வடுத்த விரும் வேங்கடமே -நையும்
சனனாந் தகனார் தலையிலி தோள் சாய்த்த
சினநாந் தகனார் சிலம்பு –95-

(இ – ள்.) கொய்யும் மலர் சோலை கொக்கும் – பறித்தற்கு உரிய மலர்களையுடைய சோலையிலுள்ள மாமரமும்,
வடுத்து அவிரும் – பிஞ்சுவிட்டு விளங்கப்பெற்ற:
பிணியாளர் மெய்யும் – நோயாளிகளுடைய உடம்பும்,
வடு தவிரும் – (அங்கு வந்தமாத்திரத்தால்) உடற்குற்றமாகிய அந்நோய் நீங்கப் பெற்ற:
வேங்கடமே -,-
நையும் சனன அந்தகனார் – (உயிர்கள்) வருந்துதற்குக் காரணமான பிறப்பை (அடியார்க்கு) ஒழிப்பவரும்,
தலை இலி தோள் சாய்த்த – கபந்தனுடைய தோள்களை வெட்டித்தள்ளின,
சினன் – கோபத்தையுடைய,
நாந்தகனார் – நந்தகமென்னும் வாட்படையையுடையவருமான திருமாலினது,
சிலம்பு – திருமலை; (எ – று.)

மாமரத்தை “கொக்கு” என்பது – துளுவநாட்டார் வழங்குங் திசைச் சொல். வடுத்தல் – இளங்காய் அரும்பல்.
நையும்என்ற பெயரெச்சம் – காரியப் பொருளது. ஜநநாந்தகன் – பிறப்புக்கு யமனாகவுள்ளவன்;
பிறப்பையொழித்து முத்தி யருள்பவ னென்றபடி; தீர்க்கசந்திபெற்ற வடமொழித்தொடர்.
தலையிலி – தலையில்லாதவன்; தலை வெளித்தெரியாது வயிற்றினுள் அடங்கியமைபற்றி, கவந்தன் தலையிலி யெனப்பட்டான்.
சினன் – சினம் என்பதன் இறுதிப்போலி. நந்தகமென்ற வடசொல், நாந்தகமென விகாரப்பட்டது.
பிணியாளர் மெய் வடுத்தவிர்தல் –
“பித்து மல டூமை முடம் பேய் குருடு கூன் செவிடு, மெய்த்துயர் நோய் தீர்த்தருளும் வேங்கடமே” என முன்னர்க் கூறப்பட்டது.

————

நேர்க்க வலை நோயினரும் நீடு சிலை வேடுவரும்
வேர்க்க வலை மூலம் கல் வேங்கடமே –கார்க்கடல் மேல்
தாண்டும் காலத்து இறப்பார் தம்மை விழுங்கி கனி வாய்
மீண்டும் காலத் திறப்பார் வெற்பு –96-

(இ – ள்.) நேர் கவலை நோயினரும் – மிகுதியான கவலையைத் தருகிற நோயையுடையவர்களும், (அந்நோய் நீங்குதற்பொருட்டு),
வேர்க்க – (பக்தி மிகுதியால் தம் உடல்) வியர்வையடைய,
அலை மூலம் கல் – திருப்பாற்கடலிற் பள்ளிகொண்டருளுகிற ஆதிமூலப்பொருளைத் துதிக்கப்பெற்ற:
நீடு சிலை வேடுவரும் – நீண்ட வில்லையுடைய வேடர்களும்,
வேர் கவலை மூலம் கல் – வேரோடு கவலைக் கிழங்கைத் தோண்டப்பெற்ற:
வேங்கடமே -,-
கார் கடல் – கருநிறமுடையதான கடல்,
மேல் தாண்டும் – பொங்கி மெலெழுந்து பரவுகிற,
காலத்து – பிரளயகாலத்தில்,
இறப்பார்தம்மை விழுங்கி – இறக்கிற உயிர்களையெல்லாம் உட்கொண்டு தமது திருவயிற்றினுள் வைத்து,
மீண்டும் கால – (பிரளயம் நீங்கியபொழுது) மீளவும் (அவற்றை) வெளிப்படுத்துமாறு,
கனி வாய் திறப்பார் – கொவ்வைப்பழம்போற் சிவந்த (தமது) திருவாயைத் திறந்தருள்பவரான திருமாலினது,
வெற்பு – திருமலை; (எ – று.)

கவலை – கவற்சி; கிலேசம்; ‘ஐ’ விகுதி பெற்ற தொழிற்பெயர். வேர்த்தல் – பக்திமிகுதியாலாகும் மெய்ப்பாடு.
அலை – கடலுக்குச் சினையாகுபெயர். மூலம் – முதற்பொருள். கற்றல் – திருநாமங்களை இடைவிடாமல் உருவிட்டு ஜபித்தல்.
குறிஞ்சிநிலக் கருப்பொருளாகிய கவலையென்னுங் கொடியின்கிழங்கு, அந்நிலத்துமாக்கட்கு உணவாவதற்கு உரியது.
இறப்பார் என்ற உயர்திணை, அஃறிணைக்கும் உபலக்ஷணம். கால – செயவெனெச்சம்.

————-

தண் தாமரைச் சுனையில் சாதகமும் வேடுவரும்
விண்டாரை நாடும் வேங்கடமே –தொண்டு ஆக்கி
ஏவத் தனக்கு உடையார் என்னை முன் நாள் எடுத்த
கோவத்தனக் குடையார் குன்று –97-

(இ – ள்.) தண் தாமரை சுனையில் – குளிர்ந்த தாமரையை யுடைய சுனையில் வாழ்கின்ற,
சாதகமும் – சாதகமென்னும் பறவையும்,
விண் தாரை நாடுகின்ற – மேகத்தின் மழைத்தாரையை விரும்பி உணவாகக்கொள்ளப் பெற்ற:
வேடுவரும் – வேடர்களும்,
விண்டாரை நாடுகின்ற – (உடற்கொழுப் பினாற் போர் செய்தற்குப்) பகைத்தவரைத் தேடப்பெற்ற;
வேங்கடமே -,-
தொண்டு ஆக்கி ஏவ – தாசனாக்கி அடிமைகொள்ளுமாறு,
என்னை தனக்கு உடையார் – என்னைத் தமக்கு உடைமையாக்கிக்கொண்டவரும்,
முன் நாள் எடுத்த கோவர்த்தனம் குடையார் – முன்னாளில் (கிருஷ்ணாவதாரத்தில்) எடுத்துப் பிடித்த
கோவர்த்தநமலையாகிய குடையையுடையவருமான திரு மாலினது,
குன்று – திருமலை; (எ – று.)

மேகத்தினின்று தரையில் விழுந்த நீர் சாதகப்புள்ளுக்கு விஷமாகுத லால், அப்பறவை அந்நீரை உட்கொள்ளாது
மேகத்தினின் றுவிழும் மழைத்தாரையை நாவில் ஏற்றுப்பருகும்.
விண்டார் – இறந்தகாலவினையாலணையும் பெயர்; விள் – பகுதி; விள்ளுதல் – மனம் மாறுபடுதல்.
தனக்கு உடையார் – ஒருமைப் பன்மை மயக்கம். ஏவ – குற்றேவல் செய்யுமாறு கட்டளையிட,
கோவர்த்தநம் என்ற வடமொழிப் பெயர் – பசுக்களை வளர்ப்ப தென்று பொருள்படும்.
எடுத்த கோவத்தனக் குடையார் – கோவர்த்தநகிரியைக் குடையாக எடுத்துப் பிடித்தவர்.

————-

வாழ் அரியும் சந்தனம் தோய் மாருதமும் தாக்குதலால்
வேழ மருப்புகுதும் வேங்கடமே –நீழல் அமர்
பஞ்சவடி காட்டினான் பார் அளப்பான் போல் எவர்க்கும்
கஞ்ச அடி காட்டினான் காப்பு –98-

(இ – ள்.) வாழ் அரியும் – (வலிமைகொண்டு) வாழ்கின்ற சிங்கங்களும்,
தாக்குதலால் – மோதியடித்தலால்,
வேழம் மருப்பு உகுதும் – யானைகளின் தந்தம்சிந்தப்பெற்ற:
சந்தனம்தோய்மாருதமும் – சந்தனமரத்தின் மேற்பட்டு வருகிற காற்றும்,
தாக்குதலால் – மேற்படுதலால்,
வேழம் மரு புகுதும் – மூங்கில்களும் நறுமணம் பொருந்தப்பெற்ற:
வேங்கடமே -,-
நீழல் அமர் – நிழல் பொருந்திய,
பஞ்சவடி காட்டினான் – பஞ்சவடியென்னுங் காட்டிடத்தில் வசித்தவனும்,
பார் அளப்பான் போல் – உலகங்களை அளப்பவன்போல,
எவர்க்கும் – எல்லோர்க்கும்,
கஞ்சம் அடி – தாமரைமலர்போன்ற திருவடியை,
காட்டினான் – காட்சிதந்தருளியவனு மான திருமால்,
காப்பு – (உயிர்களைப்) பாதுகாக்குமிடம்; (எ – று.)

“சந்தனந்தோய்மாருதந் தாக்குதலால் வேழம்மருப்புகுதும்” என்றதை 86 – ஆம் பாட்டில்
“குளிர்சந்தின் பக்கத்தில் நிற்கின்ற வேம்பும் மருத்துவவக்கும்” என்பதனோடு ஒப்பிடுக. மாருதம் – வடசொல்.
உகுதும், புகுதும் என்றவற்றில், து – சாரியை. பஞ்சவடீ – ஐந்து ஆலமரங்களின் தொகுதி;
அதனையுடைய இடத்துக்கு ஆகுபெயர்: இது, தண்டகாரணியத்தில் அகண்ட கோதாவரிக் கரையில்
நாசிகாதிரியம்பகத்துக்குச் சமீபத்தி லுள்ளது. இராமபிரான் வனவாசஞ்செய்கையில் அகஸ்தியமுனிவர் சொன்னபடி
இவ் விடத்தில் நெடுநாள்வசித்தனன். பஞ்சவடிக்காட்டினான் என வரற்பாலது, திரிபுநயம் நோக்கிக் ககரவொற்றுத் தொக்கது.
காட்டினான் என்பது – மூன்றாமடியில் காடுஎன்ற பெயரின்மேற் பிறந்த குறிப்பு வினையாலணையும் பெயரும்,
நான்காமடியில் காட்டு என்ற பிறவினைப் பகுதியின்மேற் பிறந்த இறந்தகாலத் தெரிநிலை வினையாலணையும் பெயருமாம்.

————

எவ்விடமும் ஆறு தோய்ந்து எல்லாரும் பல் பாம்பும்
வெவ்விடரின் நீங்கி எழும் வேங்கடமே –தெவ்விடை ஏழ்
அட்டவன் நாகத்து அணையான் ஆதி மறை நூல் மார்க்கம்
விட்டவன் ஆகத்து அணையான் வெற்பு –99-

(இ – ள்.) எல்லோரும் -, எ இடமும் – (அம்மலையில்) பலவிடத்தும் உள்ள,
ஆறு – நதிகளில்,
தோய்ந்து – முழுகி. (அம்மாத்திரத்தால்,)
வெம் இடரின் நீங்கி எழும் – கொடிய (பிறவித்) துன்பத்தினின்று நீங்கி எழப்பெற்ற:
பல் பாம்பும் – பலபாம்புகளும்,
வெம் விடரின் நீங்கி எழும் – வெவ்வியமலை வெடிப்புக்களினின்று புறப்பட்டு மேலெழுந்து வரப்பெற்ற:
வேங்கடமே -,-
தெவ் விடை ஏழ் அட்டவன் – பகைமையையுடைய ஏ” எருதுகளை வலியழித்து வென்றவனும்,
நாகத்து அணையான் – ஆதிசேக்ஷனாகிய சயநத்தை யுடையவனும்,
ஆதி மறை நூல் மார்க்கம் விட்டவன் ஆகத்து அணையான் – பழமையான வேதசாஸ்திரங்களிற்கூறிய நன்னெறியை
விலகினவனுடைய மனத்திற் சேராதவனுமாகிய திருமாலினது,
வெற்பு – திருமலை; (எ – று.)

“ஆறு தோய்ந்து இடரின் நீங்கி யெழும்” எனவே, அங்குள்ள ஆறுகள் தம்மிடத்து ஒருகால் மூழ்கினவளவிலே
வினைத்துன்பங்களை யெல்லாம் தீர்க்கும் மகிமையுடையனவென்று விளங்கும்.
வெவ் – வெம்மையென்ற பண் புப்பெயர் ஈறுபோய் முன்நின்ற மகரமெய் வகரமாயிற்று.
எல்லோர் – எல்லார் என்பதன் ரகர வீற்றயல் ஆகாரம் ஓவாயிற்று. தெவ் – பகைமையுணர்த்தும் உரிச்சொல்;
“தெவ்வுப் பகையாகும்” என்பது, தொல்காப்பியம்.

விடையே ழடர்த்த விவரம்: – கண்ணன் நப்பின்னைப் பிராட்டியைத் திருமணஞ் செய்துகொள்ளுதற்காக,
அவளது தந்தை கந்யாசுல்கமாகக் குறித்தபடி, யாவர்க்கும் அடங்காத அசுராவிஷ்டமான ஏழெருதுகளையும்
ஏழுதிருவுருவக்கொண்டு சென்று வலியடக்கித்தழுவின னென்பதாம். விடை – வ்ருஷம் என்ற வடசொல்லின் சிதைவு.
நாகம் என்ற வடசொல் – கால்க ளால் நடவாத தென்றும், மலைகளில் அல்லது மரங்களில் வாழ்வ தென்றும் காரணப்பொருள் படும்.
வேத சாஸ்திரங்களிற் கூறியபடி நடவாதவரை உபேட்சித்தல், திருமாலின் இயல்பு.
அணையான் என்பது – மூன்றாமடியில் அணைஎன்னும் பெயரின்மேற் பிறந்த உடன்பாட்டுக்குறிப்பு
வினையாலணை யும்பெயரும், நான்காமடியில் அணைஎன்னும் வினைப்பகுதியின்மேற் பிறந்த
எதிர்மறைத் தெரிநிலை வினையாலணையும் பெயருமாம்.

———-

பாடும் மதுகரமும் பச்சைத் தழைக் குடிலின்
வேடும் மணம் மருவும் வேங்கடமே -நீடு
மகராலயம் கடந்தார் வாழ் வாசு தேவர்க்கு
மகர் ஆலயங்கள் தந்தார் வாழ்வு –100-

(இ – ள்.) பாடும் மதுகரமும் – இசைபாடுவதுபோல ஒலிக்கின்றவண்டு களும்,
மணம் மருவும் – (மலர்களின்) நறுமணம் பொருந்தப்பெற்ற:
பச்சை தழை குடிலின் – பசுமையான தழைகளால் அமைக்கப்பட்ட குடிசைகளில்,
வேடும் – வேடர்களும்,
மணம் மருவும் – கலியாணம் செய்யப்பெற்ற:
வேங்கடமே -,-
நீடு – நீண்ட,
மகராலயம் – கடலை,
கடந்தார் – தாண்டியவரும்,
வாழ் வசுதேவர்க்கு மகர் – வாழ்வையுடைய வசுதேவர்க்குப் புதல்வரானவரும்,
ஆலயங்கள் தந்தார் – கோயில்களைத் தந்தருளியவருமான திருமால்,
வாழ்வு – வாழுமிடம்; (எ – று.)

மதுகரம் – வடசொல்; தேனைச் சேர்ப்ப தென்று காரணப்பொருள்படும். பச்சை – ஐவிகுதிபெற்ற பண்புப்பெயர்:
பசு என்ற பண்படி தன்னொற்று இரட்டிற்று. வேடு – சாதிப்பெயர். வேடர்கள் குடிசைகளில் அடிக்கடி மணம் நிகழ்கின்றன வென்க.
மகராலயம் என்ற வடசொல் – மகர ஆலயம் என்று பிரிந்து, மகரங்களுக்கு இடமான தென்று பொருள்படும்;
மகரம் – சுறாமீன். கடல் கடந்தது, இராமாவதாரத்தில் இலங்கைக்குச் செல்லுதற்பொருட்டு.
வசுதேவர் – கண்ணனைப்பெற்ற தந்தை. மகர் – மகன் என்பதன் உயர்வுப்பன்மை.
ஆலயங்கள்தந்தார் – பலவிடங்களிற் கோயில் கொண்டு எழுந்தருளியிருந்து சேதநர்க்குச் சேவைசாதிப்பவர்.

————-

நாந்திச் செய்யுள் –

ஆதி திருவேங்கடம் என்று ஆயிரம் பேரான் இடம் என்று
ஓதிய வெண்பா ஒரு நூறும் -கோதில்
குணவாள பட்டர் இரு கோகனைத் தாள் சேர்
மணவாள தாசன் தன் வாக்கு —

(இ – ள்.) ஆதி திருவேங்கடம் என்று – சிறப்புள்ள திருவேங்கடமென் றும்,
ஆயிரம் பேரான் இடம் என்று – ஆயிரந்திருநாமங்களை யுடையவனான திருமாலினது இடமென்றும்,
ஓதிய – சொன்ன,
வெண்பா ஒரு நூறும் – நூறு வெண்பாக்களும், –
கோது இல் – குற்றமில்லாத,
குணம் ஆள – நற்குணங்களை யுடையவரான,
பட்டர் – பராசரபட்ட ரென்னும் ஆசாரிய ருடைய,
இரு கோகனகம் தாள் – தாமரைமலர்போன்ற இரண்டு திருவடிகளை,
சேர் – சரணமாக அடைந்த,
மணவாளதாசன்தன் – அழகியமணவாள தாசனுடைய,
வாக்கு – வாய்மொழியாம்; (எ – று.)

“ஆதிதிருவேங்கடம்” என்றது – இந்நூற் செய்யுள்களின் முன்னிரண் டடியின் வாய்பாட்டையும்,
“ஆயிரம்பேரா னிடம்” என்றது – பின்னிரண் டடியின் வாய்பாட்டையுங் குறிக்கும்.
குணவாளர் + பட்டர் = குணவாள பட்டர்; உயர்திணைப் பெயரீறு கெட்டது.
கோகநதம் என்ற வடசொல் – சக்கரவாகப் பறவைகள் தன்னிடம் விளையாடப் பெறுவ தென்று காரணப் பொருள்படும்;
கோகம் – சக்கரவாகம். தாசன்றன், தன் – சாரியை.

இச்செய்யுள், நூலாசிரியர் தாமே தம்மைப்பிறன்போலும் பதிகங்கூறியது; பிரயோகவிவேகநூலார்,
“இது, தன்னைப் பிறன்போலும் நாந்தி கூறுகின்றது”,
“வடநூலார் தாமே பதிகமும் உரையும் செய்வார்,”
“இனிச் சம்பந்தர் சடகோபர் முதலாயினாரும் திவாகரரும் பதினெண்கீழ்க்கணக்குச் செய்தாரும்
முன்னாகப் பின்னாகப் பதிகங்கூறுவதும் காண்க” என்றவை காண்க.

————–

திருவேங்கடமாலை முற்றிற்று.

—————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவேங்கட மாலை –61-80-

February 20, 2022

நன் முலை போல் வெண் நகையார் நாயகர் மேல் வைத்த நெஞ்சும்
மென் முலையும் கற்பூரம் சேர் வேங்கடமே -முன் மலைந்து
தோற்ற மாரீசனார் தோற்றி மாயம் புரிய
சீற்றம் ஆர் ஈசனார் சேர்வு –61-

(இ – ள்.) நல் முலை போல் வெள் நகையார் – அழகிய முல்லையரும்பு போன்ற வெண்மையான பற்களையுடைய மகளிர்,
நாயகர்மேல் வைத்த – தம் தம் கணவரிடத்திற் செலுத்திய,
நெஞ்சும் – மனமும்,
கற்பு உரம் சேர் – பதி விரதா தருமத்தின் வலிமை பொருந்தப்பெற்ற:
மெல் முலையும் – (அம்மகளிருடைய) மென்மையானதனங்களும்,
கற்புரம் சேர் – பச்சைக்கற்பூரம் பூசப் பெற்ற:
வேங்கடமே -,-
முன் மலைந்து தோற்ற மாரீசனார் – முன்பு எதிர்த்துத் தோற்றோடின மாரீசன்,
தோற்றி மாயம் புரிய – மீண்டும்வந்து மாயை செய்ய,
சீற்றம் ஆர் – (அவனிடத்துக்) கோபங்கொண்ட,
ஈசனார் – (எல்லா வற்றுக்குந்) தலைவரான திருமால்,
சேர்வு – சேர்ந்திருக்கு மிடம்; (எ – று.)

எதுகைநயம்நோக்கி, முல்லை யென்பது, “முலை” என இடைக்குறை விகார மடைந்தது;
(“முலையணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ” எனக் கலித்தொகையிலும்,
“முலையேயணிந்த முகிழ்நகையீர்” என மதுரைக்கலம்பகத்திலும்,
“அம்முலைக் கொடியா ரலர்தூற்றவே” எனத் திரு வேங்கடக் கலம்பகத்திலும்,
“பயிற்சியும் வனமுலைப்பாலே” என அழகர் கலம்பகத்திலும் காண்க.)
முல்லை – அதன் அரும்புக்கு முதலாகுபெயர். பல்லுக்கு முல்லையரும்பு உவமை – அழகிய வடிவிற்கும், வெண்மைக்குமாம்;
நாயகர் – தற்சம வடசொல். கற்பாவது – கணவனைத் தெய்வமெனக் கொண்டு ஒழுகும் ஒழுக்கம்.
திருக்குறளில் “கற்பென்னுந் திண்மை” என்றாற் போல, “கற்பு உரம்” என்றார். உரம் – கலங்காத நிலைமை.
கர்ப்பூரமென்ற வடசொல், கற்புரமென விகாரப்பட்டது. திருவேங்கடத்தில்வாழும் மாதர்களது உள்ளும் புறமும் ஒத்துள்ளன
வெனச் சொல்லொப்புமையாற் சமத் காரந்தோன்றக் கூறியவாறு காண்க.

மாரீசன் – தாடகையின் மகனும், சுபாகுவின் உடன் பிறந்தவனும், மாயையில் மிக வல்லவனுமான ஓர்அரக்கன்.
இராவணனுக்கு மாமன்முறை பூண்டவன்; விசுவாமித்திரமுனிவர் தமது யாகத்தைப் பாதுகாத்தற்பொருட்டு
ஸ்ரீராமலக்ஷ்மணர்களை அழைத்துச்செல்லும் வழியிடையே தாடகை வந்து எதிர்த்து இராமனாற் கொல்லப்பட்டு இறந்தபின்,
மாரீசன் சுபாகுவி னுடனும் மற்றும்பல அரக்கருடனும் வந்து விசுவாமித்திரருடைய வேள்வியை அழிக்கத் தொடங்கியபொழுது,
இராமபிரான் அம்புகளால் அரக்கரைக் கொன்று ஓர் அஸ்திரத்தாற் சுபாகுவை வதைத்து
மற்றோர் அஸ்திரத்தால் மாரீசனைக் கடலிலே தள்ளிவிட்டார். இங்ஙனம் தப்பிப்பிழைத்த இவன் சிலகாலங்கழித்து,
இராமன் தண்டகாரணியம் புகுந்தபொழுது பழைய வைரத்தால் வேறு இரண்டு அரக்கருடனே மான்வேடம்பூண்டு
இராமனைத் தன் கொம்புகளால் முட்டிக் கொல்லக் கருதி நெருங்குகையில் இராமன் எய்த அம்புகளால் உடன்வந்த அரக்கர் இறக்க,
இவன்மாத்திரம் தப்பியோடி உய்ந்து இலங்கைசேர்ந்தனன். இவ்வாறு ஒருமுறைக்கு இருமுறை எதிர்த்துத் தோற்றுத் தப்பிப்
பிழைத்தமைபற்றி, “முன்மலைந்துதோற்ற மாரீசனார்” என்றார். “ஆர்” விகுதி – மாயையில் அவனுக்குஉள்ள சிறப்பை நோக்கினது.
பின்பு சீதையைக் கவர்ந்துசெல்லக் கருதிய இராவணனது தூண்டுதலால் மாரீசன் மாயையாற் பொன்மானுருவங் கொண்டு
தண்டகாரணியத்திற் பஞ்சவடியிலே சீதையின் எதிரிற் சென்று உலாவுகையில், அப்பிராட்டியின் வேண்டுகோளின்படி
அதனைப் பிடித்தற்குத் தொடர்ந்து சென்ற இராமபிரான் நெடுந்தூரம் ஓட்டங்காட்டிய அம்மானை மாயமானென்று
அறிந்த வளவிலே அதன்மேல் அம்பெய்து வீழ்த்தினனென்ற வரலாறு இங்குக்குறிக்கப்பட்டது.
கொன்ற என்ற பொருளில். “சீற்றம் ஆர்” என்றது – காரியத்தைக் காரணமாக உபசரித்தவாறு.
மாயம் – மாயா என்ற வடசொல்லின் விகாரம். ஈசன் – வடசொல்: ஐசுவரியமுடையவன்.
“தோற்றமாயம்புரிய” என்று பாடமோதி, மாரீசன் -, ஆர் தோற்றம் – பொருந்திய தோற்றத்தையுடைய,
மாயம் – மாயையை, புரிய – செய்ய என்று உரைத்தலும் ஒன்று; மெய்த்தோற்றம்போன்ற பொய்த்தோற்றத்தைக் கொள்ள; என்க.

————

கூறும் கிளி மொழியார் கொங்கை என்றும் கண் என்றும்
வீறு மருப்பிணை சேர் வேங்கடமே -நாறும்
துளவ மலர்க் கண்ணியார் தொண்டாய்த் தமக்கு அன்பு
உள அமலர்க்கு அண்ணியார் ஊர் –62-

(இ – ள்.) கூறும் கிளிமொழியார் கொங்கை என்று – (கொஞ்சிப்) பேசு கின்ற கிளியின் சொற்போன்ற இன்சொற்களையுடைய மகளிரது தனங்க ளென்று,
வீறு – பெருமையுற்ற,
மருப்பு இணையும் – இரட்டையான யானைத் தந்தங்களும்:
கண் என்று – (அவர்களுடைய) கண்களின் நோக்க மென்று,
வீறு மரு – சிறப்புப்பொருந்திய,
பிணையும் – பெண்மானும்.
சேர் – பொருந்திய,
வேங்கடமே -,-
நாறும் துளவம் மலர் கண்ணியார் – பரிமளம் வீசுகின்ற திருத்துழாய் மலர்களாலாகிய மாலையை யுடையவரும்,
தொண்டு ஆய் – (தமக்கு) அடிமையாகி,
தமக்கு அன்பு உள – தம்பக்கல் பக்தியுள்ள,
அமலர்க்கு – குற்றமற்ற அடியார்களுக்கு,
அண்ணியார் – சமீபிக்கின்றவரு மாகிய திருமாலினது,
ஊர் – வாசஸ்தாநம்; (எ – று.)

“கொங்கை யென்று வீறு மருப்பிணை” என்பதற்கு – கொங்கையாகிய யானைத்தந்த மென்றும்,
“கண்ணென்று வீறுமருப்பிணை” என்பதற்கு – கண் பார்வையாகிய பெண்மான் பார்வை யென்றும் உருவகமாகக் கருத்துக் கொள்க;
அன்றி, கொங்கைபோன்று யானைத் தந்தமும், கண்போன்று பெண்மான்விழியும் பொருந்திய என,
எதிர்நிலையுவமையாகக் கருத்துக் கொள்ளினுமாம்.
கிளி – அதன்சொல்லுக்கும், பிணை – அதன் நோக்கத்துக் கும் முதலாகுபெயர். மரு – மருவு என்பதன் விகாரம்.
பிணை – பெண்மைப் பெயர். துளவம் – துளஸீ என்ற வடசொல்லின் சிதைவு. திருத்துழாய் மலர் மாலை, திருமாலுக்கு உரியது.
துளவமலர்க்கண்ணி – துளவினாலும் மலர் களினாலுமாகிய மாலையுமாம்.
“தமக்கு” என்பதை மத்திமதீபமாக “தொண்டாய்” என்பதனோடுங் கூட்டுக.
உள = உள்ள: தொகுத்தல். ந + மலம் + அர் – அமலர்; பரிசுத்தர்; வடமொழிச்சந்தி.
அண்ணியார் – அண்என்னும் வினைப் பகுதியினடியாப் பிறந்த இறந்தகாலவினையாலணையும்பெயர்:
“இன்” என்ற இடைநிலை ஈறுதொக்கது. அன்போடு தமக்குத் தொண்டுபூண்ட தூயோரது உள்ளத்தில் உவந்து
வந்தெழுந்தருளி யிருத்தலுமன்றி, அவர்கட்குக் கட்புலனாய் அருகில் தோன்றி நின்று ஆவனசெய்தலு முடையரென்பது,
“தொண்டாய்த் தமக்கன்புள வமலர்க் கண்ணியார்” என்பதன் கருத்து.

————–

மாதர் அம் பொன் மேனி வடிவும் அவர் குறங்கும்
மீது அரம்பையைப் பழிக்கும் வேங்கடமே -பூதம் ஐந்தின்
பம்பர மாகாயத்தார் பாடினால் வீடு அருளும்
நம் பர மா காயத்தர் நாடு –63-

(இ – ள்.) மாதர் – மகளிரது,
அம் பொன் மேனி வடிவும் – அழகிய பொன்னிறமான உடம்பின் தோற்றமும்,
மீது அரம்பையை பழிக்கும் – மேலுலகத்திலுள்ள ரம்பை யென்னுந் தேவமாதை இழிவு படுத்தப்பெற்ற:
அவர் குறங்கும் – அம்மகளிரது தொடையும்,
மீது அரம்பையை பழிக்கும் – மேன்மையுள்ள (செழித்த) வாழைத்தண்டை வெல்லப்பெற்ற:
வேங்கடமே -,-
பூதம் ஐந்தின் – பஞ்சபூதங்களினாலாகிய,
பம்பரம் – சுழல்கிற பம்பரம் போல விரைவில் நிலைமாறுவதான,
மா காயத்தார் – பெரிய உடம்பையுடைய சனங்கள்,
பாடினால் – துதித்தால்,
வீடு அருளும் – (அவர்கட்கு) முத்தியை அளிக்கின்ற,
நம் பரம ஆகாயத்தார் – நமது தலைவரும் பரமாகாசமெனப்படுகின்ற பரமபதத்தை யுடையவருமான திருமாலினது,
நாடு – ஊர்; (எ – று.)

திருவேங்கடமலையில் வாழும் மகளிர் அரம்பை யென்னும் தேவமாதினும் மேம்பட்ட வடிவழகையும்,
வாழைமரத்தண்டினும் அழகிதாகத்திரண்டு உருண்டு நெய்ப்பமைந்த தொடையையும் உடைய ரென்றவாறு.
மாதர் – விரும்பப்படும் அழகுடையோர். அரம்பை யென்பது – இருபொருளிலும் ரம்பா என்ற வடசொல்லின் விகாரம்.
பழிக்கும் என்பது – உவமையுருபுமாம். பூதம் ஐந்து – நிலம், நீர், தீ, காற்று, வானம்.
காயம், பரமாகாசம் – வடசொற்கள். மாகாயம் – ஸ்தூலசரீரம். வீடு – (பற்றுக்களை) விட்டு
அடையு மிடம்; இச்சொல் – “முக்தி” என்னும் வடசொல்லின் பொருள் கொண்டது. பரமாகாசம் – சிறந்த வெளியிடம்.

———-

கோள் கரவு கற்ற விழிக் கோதையர்கள் பொற்றாளும்
வேள் கரமும் அம்பஞ்சு ஆர் வேங்கடமே -நீள் கரனார்
தூடணனார் முத்தலையார் துஞ்ச எய்து துஞ்சாரைக்
கூடு அணனார் முத்து அலையார் குன்று –64-

(இ – ள்.) ) கோள் – (ஆடவரை) வருத்துந்தன்மையையும்,
கரவு – (அவர்கள் மனத்தை) வஞ்சனையாகக் கவருந் தன்மையையும்,
கற்ற – பயின்ற,
விழி – கண்களையுடைய,
கோதையர்கள் – மகளிரது,
பொன் தாளும் – அழகியபாதமும்,
அம் பஞ்சு ஆர் – அழகிய செம்பஞ்சுக்குழம்பு ஊட்டப்பெற்ற:
வேள்கரமும் – மன்மதனது கையும்,
அம்பு அஞ்சு ஆர் – பஞ்சபாணங்கள் பொருந்தப்பெற்ற:
வேங்கடமே -,-
நீள் – பெரிய,
கரனார் – கரனும்,
தூடணனார் – தூஷணனும்,
முத்தலையார் – திரிசிரசும்,
துஞ்ச – இறக்கும்படி,
எய்து – அம்பு செலுத்தி,
துஞ்சாரை கூடு – உறங்காதவரான இலக்குமணனைச் சேர்ந்த,
அணனார் – தமையனாராகவுள்ளவரும்,
முத்து அலையார் – முத்துக்களையுடைய கடலிற்பள்ளிகொள்ளுகின்ற வருமானதிருமாலினது,
குன்று – மலை; (எ – று.)

கோள் கரவு – உம்மைத்தொகை. கரவு – காத்தல்; தொழிற்பெயர். கோதையர் – மாலைபோல் மென்மையான தன்மையுடையார்;
கோதை – மாலை; கள் – விகுதிமேல்விகுதி. கரம் – வடசொல்.
“கண் களவுகொள்ளுஞ் சிறுநோக்கம்,”
“யான் நோக்குங் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால், தான்நோக்கி மெல்லநகும்” என்றபடி
காதலன் தன்னைநோக்கும்பொழுது தான் எதிர்நோக்காது நாணித் தலைவணங்கி நிலத்தை நோக்கியும்,
அவன் தன்னை நோக்காத பொழுது தான் அவனை உற்றுநோக்கியும் வருகிற விழி யென்பார், “கரவு கற்ற விழி” என்றார்.
அதற்குக் கோள் கற்றலாவது – காதற்குறிப்பை வெளிப்படுத்துகின்ற நோக்கினாலும்,
பொதுநோக்கின் அழகினாலும் ஆடவர்க்கு வேட்கை நோயை விளைத்தல்.

வடிவின்பருமையோடு தொழிலின்மிகுதியும் உடைமை தோன்ற, “நீள்கரன்” என்றார்.
கரனார், தூடணனார், முத்தலையார் என்ற உயர்வுப்பன்மைகள், அவர்களுடைய வலிமைத்திறத்தை விளக்கும்.
கரனென்ற வடசொல் – கொடியவனென்றும், தூஷண னென்ற வடசொல் – எப்பொழுதும் பிறரைத் தூஷிப்பவ னென்றும் பொருள்படும்.
முத்தலையார் – மூன்று தலைகளை யுடையவனென்று பொருள்படும்; த்ரிசிரஸ் என்ற வடசொல்லின் பொருள் கொண்டது.

கரன் – இராவணனுக்குத் தாய்வழி யுறவில் தம்பிமுறையில் நிற்கின்ற ஓர் அரக்கன்;
தண்டகாரணியத்திலே சூர்ப்பணகை வசிப்பதற்கென்று குறித்த ஜநஸ்தாந மென்னு மிடத்தில் அவட்குப் பாதுகாவலாக
இராவணனால் நியமித்து வைக்கப்பட்ட பெரிய அரக்கர்சேனைக்கு முதல் தலைவன்.
இலக்குமணனால் மூக்கறுக்கப்பட்டவுடனே இராமலக்குமணரிடம் கறுக்கொண்டு சென்ற சூர்ப்பணகை,
கரன்காலில் விழுந்துமுறையிட, அதுகேட்டு அவன் பெருங்கோபங்கொண்டு, மிகப்பெரியசேனையோடும்
அறுபது லட்சம் படைவீரர்களோடும் சேனைத்தலைவர் பதினால்வரோடும் தூஷணன் திரிசிரஸ் என்னும்
முக்கிய சேனாதிபதிகளோடும் புறப்பட்டு வந்து போர் தொடங்குகையில், இராமன் லக்ஷ்மணனைச் சீதைக்குக் காவலாகப்
பர்ண சாலையில் நிறுத்தித் தான் தனியேசென்று எதிர்த்துப் பெரும்போர் செய்து அவ்வரக்கரையெல்லாம் துணித்து
வெற்றிகொண்டு மீண்டு பர்ணசாலையிற் காவல்செய்துநின்ற இலக்குமணனைச் சார்ந்தனனென்ற வரலாறு, இங்கே குறிக்கப்பட்டது.

இறக்க என்ற பொருளில் “துஞ்ச” என்றல் – மங்கலவழக்கு; மீளவும் எழுந்திராத பெருந்தூக்கங் கொள்ள வென்க.
இராமன் வனவாசஞ்செய்த பதினான்கு வருடத்திலும் இலக்குமணன் தூங்காது அல்லும் பகலும் அநவரதமும்
இராமனுக்கும் சீதைக்கும் பாதுகாவலாய் விழித்தபடியேயிருந்தன னாதலால், அவனுக்கு “துஞ்சார்” என ஒருபெயர் கூறினார்.
அணனார் = அண்ணனார்: தொகுத்தல். துஞ்சார் – இளையபெருமாள். அண்ணனார் – பெருமாள்.
திருப்பாற்கடலிலும் பிரளயப் பெருங்கடலிலும் திருமால் பள்ளிகொள்ளுதல்பற்றி, “அலையார்” என்றார்.
அலை – கடலுக்குச் சினையாகு பெயர். முத்து – முக்தா என்ற வடசொல்லின் விகாரம்; (சிப்பியினின்று) விடுபட்ட தெனப் பொருள்படும்.

————

கொங்கைக் கோடு ஏறிக் குலுக்கும் அரியும் கரியும்
வேங்கைக் கோடாதரிக்கும் வேங்கடமே -பூங்கைக்குள்
மெய்த்தவளைச் சங்கு எடுத்தார் மேகலை விட்டு அங்கை தலை
வைத்தவள் அச்சம் கெடுத்தார் வாழ்வு –65-

(இ – ள்.) கோங்கை – கோங்குமரத்தை,
கோடு ஏறி குலுக்கும் – கிளைகளின் மேலேறி மிகஅசைக்கின்ற,
அரியும் – குரங்கும்,
வேங்கை கோடு ஆதரிக்கும் – (அங்கிருந்து அருகிலுள்ள) வேங்கைமரத்தின்கிளையை விரும்பித் தாவிப் பிடிக்கப்பெற்ற:
கரியும் – யானைகளும்,
வேங்கைக்கு ஓடாது அரிக்கும் – புலிகளுக்கு அஞ்சியோடாமல் (எதிர்த்துநின்றுபொருது அவற்றை) அழிக்கப்பெற்ற:
வேங்கடமே -,-
பூ கைக்குள் – அழகிய திருக்கையினிடத்து,
மெய் தவளம் சங்கு எடுத்தார் – உருவம் வெண்மையான சங்கத்தை ஏந்தியவரும்,
மேகலை விட்டு அம் கை தலை வைத்தவள் அச்சம் கெடுத்தார் – தனது ஆடையைப் பற்றுதலை விட்டு அழகியகைகளைத்
தன்தலைமேல் வைத்துக் கூப்பி வணங்கினவளான திரௌபதியினது பயத்தைப் போக்கியவருமான திருமால்,
வாழ்வு – வாழுமிடம்; (எ – று.)

மரக்கிளைகளிலேறிக் குலுக்குதலும், ஒருமரத்திலிருந்து மற்றொருமரத் தை விரும்பித்தாவுதலும், குரங்கினியல்பு.
கோங்கைக்குலுக்குமென இயையும். ஹரி, கரீ என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
ஹரி – (பிறர்கைப் பொருளைக்) கவர்வதெனக் காரணப்பொருள்படும்.
கரம் – கை; இங்கே, துதிக்கை; அதனையுடையது கரீ எனக் காண்க.
கரி என்பதற்கு – கருமையுடையதெனத் தமிழ்வகையாற் காரணப்பொருள்கூறுதல். பொருந்தாது, வடசொல்லாதலின்.
வேங்கை – ஓர்மரமும், புலியும். வேங்கடமலையிலுள்ள யானைகள் புலிகட்கு அஞ்சியோடாது எதிர்நின்று பொருது
அவற்றை அழிப்பனவென அவற்றின்கொழுமையை விளக்கியவாறு. அரித்தல் – ஹரித்தல்.

தவளம் – வடசொல். துரியோதனன் சொன்னபடி துச்சாதனன் திரௌபதியைச் சபையிற் கொணர்ந்து
துகிலுரியத் தொடங்கியபோது அவள் கைகளால் தனது ஆடையை இறுகப்பற்றிக்கொண்டே எம்பெருமானைக்
கூவியழைத்தபொழுது, அப்பெருமான் அருள்செய்யாது தாழ்த்து நின்று பின்பு துச்சாதனன் வலியஇழுக்கையில்
ஆடையினின்று கைந்நெகிழ அவள் இருகைகளையும் தலைமேல்வைத்துக் கூப்பி வணங்கித் துதித்த வுடனே
எம்பெருமான் அவளுடைய ஆடை மேன்மேல் வளருமாறு அருள் செய்து மானங்காத்தன னாதலால்,
“மேகலைவிட் டங்கை தலைவைத்தவ ளச் சங்கெடுத்தார்” என்றார்.
எம்பெருமானைச் சரணமடைவார்க்கு ஸ்வாதந்தி ரியம் சிறிதும் இருக்கக்கூடாதென்பதும்,
தன் முயற்சி உள்ளவளவும் பெருமான் கருணைபுரியா னென்பதும், இங்கு விளங்கும்.
மேகலை – எட்டுக் கோவை இடையணியுமாம்.

———-

மாவில் குயிலும் மயிலும் ஒளி செய்ய
மேவிப் புயல் தவழும் வேங்கடமே -ஆவிக்குள்
ஆன அருள் தந்து அடுத்தார் ஆன் நிரைக்காகக் குன்று ஏந்தி
வானவருடம் தடுத்தார் வாழ்வு –66-

(இ – ள்.) மாவில் – மாமரத்தில்,
குயிலும் – குயில்களும்,
ஒளி செய்ய – ஒளித்துக் கொள்ளும்படியும்: (அங்கு),
மயிலும் – மயில்களும்,
ஒளி செய்ய – பிரகாசமடையும்படியும்:
மேவி – பொருந்தி,
புயல் – மேகம்,
தவழும் – சஞ்சரிக்கப்பெற்ற,
வேங்கடமே -,-
ஆன அருள் தந்து – பொருந்தின கருணையைச் செய்து,
ஆவிக்குள் அடுத்தார் – (எனது) உயிரினுள் சேர்ந்தவரும்,
ஆன் நிரைக்கு ஆ – பசுக்கூட்டங்களைக் காக்கும்பொருட்டு,
குன்று ஏந்தி – (கோவர்த்தன) கிரியை எடுத்துக் குடையாகப் பிடித்து,
வான வருடம் தடுத்தார் – மேகங்களின் மழையை (ஆநிரையின் மேலும் ஆயர்களின் மேலும் விழாமல்) தடுத்தவருமான திருமால்,
வாழ்வு – வாழுமிடம்; (எ – று.)

வசந்தகாலத்திற் களிப்புக்கொண்டு இனிதாகக் கூவி விளங்குந்தன்மை யனவான குயில்கள் மேகங்களின்
வருகையைக் கண்டு கொண்டாட்ட மொழிந்து வருந்திப் பதுங்குதலும்,
மயில்கள் மேகங்களின் வருகையைக் கண்டவுடனே மகிழ்ச்சியடைந்து கூத்தாடிக்கொண்டு விளங்குதலும் இயல்பாதலால்,
“குயிலும் மயிலும் ஒளிசெய்யப் புயல் மேவித்தவழும்” என்றார்.
ஒன்றுக்குஒன்று எதிரான தன்மையுடைய குயிலும் மயிலும் புயல்வருகையில் ஒருநிகரான தன்மையை
அடைகின்றன வென்று “ஒளிசெய்ய” என்ற சொல்லின் ஒற்றுமையாற் சமத்காரந்தோன்றக் கூறியவாறு. “மாவில்” என்றதனால்,
இவ்விரண்டுக்கும் மாமரம் தங்குமிடமாதல் அறிக. ஒளி – மறை

தலும், விளக்கமும்: முந்தினபொருளில் முதனிலைத் தொழிற்பெயர். பிந்தின பொருளில் பண்பு உணர்த்தும் பெயர்.
செய்ய என்ற வினையெச்சம் – இங்குக் காரியப்பொருளதாதலால், எதிர்காலம்.
ஆவிக்குள் – எல்லாவுயிர் களினுள்ளும் என்றுமாம்; என்றது, அந்தரியாமித்துவங் கூறியவாறாம்.
ஆவி – மனமுமாம். வான் என்ற ஆகாயத்தின் பெயர் – இடவாகுபெயராய், மேகத்தைக் குறிக்கும்;
அம் – சாரியை. வருடம் – வர்ஷமென்ற வடசொல் லின் விகாரம்.

————

கானொடு அருவி கனகமும் முத்தும் தள்ளி
மீனோ வெனக் கொழிக்கும் வேங்கடமே -வானோர்கள்
மேகன் அயன் அம் கொண்டு ஆர் வேணி அரன் காண்பு அரியார்
காக நயனம் கொண்டார் காப்பு –67-

(இ – ள்.) கான் ஓடு அருவி – காடுகளின்வழியாக ஓடிவருகின்ற நீர்ப் பெருக்குக்கள்,
கனகமும் முத்தும் தள்ளி – பொன்னையும் முத்தையும் அலைத்தெறிந்து,
மீனோ என கொழிக்கும் – நக்ஷத்திரங்களோவென்று (காண்கின்றவர்கள்) சொல்லும்படி (பக்கங்களில்) ஒதுக்கப்பெற்ற:
(அவ்வருவிகள்), மீ நோவு எனக்கு ஒழிக்கும் – மிகுதியான (பிறவித்) துன்பத்தை எனக்குப்போக்குதற்கு இடமான:
வேங்கடமே -,-
வானோர்கள் – மேலுலகில் வசிப்பவர்களான தேவர்களும்,
மேகன் – மேகத்தை வாகனமாகவுடையவனான இந்திரனும்,
அயன் – பிரமனும்,
அம் கொண்டு ஆர் வேணி அரன் – நீரை (கங்கா நதியின் வெள்ளத்தைத்) தரித்துப் பொருந்திய (கபர்த்தமென்னும்) சடை முடியையுடைய சிவபிரானும்,
காண்பு அரியார் – காணவொண்ணாதவரும்,
காகன் நயனம்கொண்டார் – காகாசுரனுடைய கண்ணைப் பறித்தவருமான திருமால்,
காப்பு – (எழுந்தருளிநின்று உயிர்களைப்) பாதுகாக்குமிடம்; (எ – று.)

மீன் ஓ என கொழிக்கும் என்பதற்கு – மீன்கள் ஓவென்று அலறித்துள் ளும்படி கொழிக்குமென்று உரைப்பாரு முளர்.
மலையருவிகள் அங்கு உண்டாகிற பொன்னையும் முத்துக்களையும் தள்ளிக் கொழித்து வருதல் இயல்பு.
கான் – காநக மென்ற வடசொல்லின் விகாரம். கநகம் – வடசொல். திரு வேங்கடமலையி லுள்ள அருவிகளின்
வடிவமான பாபவிநாசம் ஆகாசகங்கை முதலிய புண்ணியதீர்த்தங்கள் தம்மிடம் நீராடுகின்றவர்களுடைய
பிறவித் துன்பங்களையெல்லாம் போக்கவல்ல மகிமையுடையன வாதலால், “அருவி மீநோவு எனக்கு ஒழிக்கும்” என்றார்.
பொதுநகரத்துக்கும் சிறப்புனகரத்துக்கும் வரிவடிவில் மிக்கவேறுபாடு இருப்பினும் ஒலிவடிவில் மிக்கவேறுபாடு இல்லாமையால்,
சிலேடை யமகம் திரிபு இவற்றில் நகரனகரங்களை அபேதமாகக் கொண்டு அமைத்தல் மரபாதல்பற்றி, “மீனோவென்” எனப்பட்டது.
மேகம், அஜன், வேணீ, ஹரன்காகன், நயநம் – வடசொற்கள். அஜன் – அ – திருமாலினின்று, ஜன் – தோன்றினவன்;
ஹரன் – சங்காரக்கடவுள். அங்கு ஒள்தார்வேணி எனப்பிரித்து, ஒள்தார் என்பதற்கு – பிரகாசமான (கொன்றை) மாலையைத்
தரித்த என்றுஉரைத்து, அங்கு என்பதை அசையாகக் கொள்ளுதலும் ஒன்று.

“சித்திரகூடத்திருப்பச் சிறுகாக்கை முலைதீண்ட, அத்திரமே கொண் டெறிய வனைத்துலகுந் திரிந்தோடி,
வித்தகனே யிராமாவோ நின்னபய மென்றழைப்ப, அத்திரமே யதன் கண்ணை யறுத்தது மோரடையாளம்” என்ற
பெரியாழ்வார் திருமொழி – நான்காமடிக்கு மேற்கோள்.

————-

கண்டு அடைந்த வானவரும் காந்தள் குல மலரும்
விண்ட விர்ந்து நிற்கின்ற வேங்கடமே -தொண்டருக்கு
வைகுந்தம் நாட்டான் மருவு உருவம் ஈந்து வைக்கும்
வைகுந்த நாட்டான் வரை –68-

(இ – ள்.) கண்டு – (அத்திருமலையின் அழகைக்) கண்டு,
அடைந்த – (அதனிடத்தில்) வந்துசேர்ந்த,
வானவரும் – தேவர்களும்,
விண் தவிர்ந்து நிற்கின்ற – (மிகவும் இனிமையான அவ்விடத்தை விட்டுச்செல்ல மனமில்லாமையால்) தேவலோகத்தை நீங்கி
நிற்றற்குக் காரணமான
குலம் காந்தள்மலரும் – சிறந்தசாதிக் காந்தட்செடிகளின் மலர்களும்,
விண்டு அவிர்ந்து நிற்கின்ற – இதழ்விரிந்து மலர்ந்து விளங்கி நிற்றற்கு இடமான:
வேங்கடமே -,-
தொண்டருக்கு – தன் அடியார்களுக்கு,
வை குந்தம் நாட்டான் – கூரியசூலா யுதத்தை (யமன்) நாட்டாதபடி (அருள்) செய்பவனும்,
மருவு உருவம் ஈந்து – பொருந்திய தனது உருவத்தை (அவ்வடியார்கட்கு)க் கொடுத்து,
வைக்கும் வைகுந்தம் நாட்டான் – (அவர்களை) ஸ்ரீவைகுண்டமென்னுந் தனது தேசத்தில் நிலையாக வைப்பவனுமான திருமாலினது,
வரை – திருமலை; (எ – று.)

“கண்டுஅடைந்த வானவரும் விண்தவிர்ந்து நிற்கின்ற” என்றதனால், புண்ணிய லோகமாய்ச் சுகானுபவத்துக்கே யுரிய
தேவலோகத்தினும் திரு வேங்கடம் மிக இனிய வாசஸ்தாநமாகு மென்பதனோடு தேவர்கட்குப் புகலிட மாகுமது வென்பதும் விளங்கும்.
காந்தள்மலரைக் கூறினது, மற்றைக் குறிஞ்சி நிலத்து மலர்களுக்கெல்லாம் உபலக்ஷணம்.
குலம் – கூட்டமுமாம். விண்டு – வாய்விண்டு; விள் – பகுதி.

தன்அடியார்செய்த தீயகருமங்களையெல்லாம் தீர்த்தருளுதலால் அவர்கட்கு யமதண்டளை யில்லாதபடி செய்பவனென்பது,
“தொண்டருக்கு வை குந்தநாட்டான்” என்பதன் கருத்து. யமனுக்கும் அந்தராத்மாவாய் நின்று தொழில் செய்பவன் திருமாலேயாதலால்,
அவனதுதொழிலைத் திருமாலின் மேலேற்றிக் கூறினார்.
“வையே கூர்மை” என்ற தொல்காப்பியஉரியியற் சூத்திரத்தால், வை என்பது – கூர்மை யுணர்த்துகையில், உரிச்சொல்லென அறிக.
குந்தம் – வடசொல்: வேல், ஈட்டி, சூலம். நாட்டான் – நாட்டு என்னும் வினைப்பகுதியின்மேற் பிறந்த
எதிர்மறைத் தெரிநிலைவினையாலணையும் பெயர். எம்பெருமான் தனதுவடிவம்போன்ற வடிவத்தைத் தன் அடியார்கட்குக்
கொடுத்தலாகிய ஸாரூப்யநிலை “மருவுருவமீந்து” என்றதனாலும்,
தான்வசிக்கிற உலகத்தைத் தன்அடியார்கட்கு வாசஸ்தானமாகத் தருதலாகிய ஸாலோக
நிலை “வைக்கும் வைகுந்தநாட்டான்” என்றதனாலும் கூறப்பட்டன.
வைக்கும் வைகுந்த நாட்டான் – வைகுந்தநாட்டில் வைப்பவன் என விகுதி பிரித்துக் கூட்டுக.
நாட்டான் – நாடு என்ற இடப்பெயரின் மேற் பிறந்த உடன்பாட்டுக் குறிப்பு வினையாலணையும்பெயர்.

“மருவுருவமீந்துவைக்கும்” என்றவிடத்து “மருதினிடையே தவழும்” என்றும் பாடமுண்டு;
அதற்கு – மருதமரங்களின் நடுவிலே தவழ்ந்து சென்ற என்று பொருள்; இது, நாட்டானுக்கு அடைமொழி.

————-

வாழ் அம புலியினொடு வான் ஊர் தினகரனும்
வேழங்களும் வலம் செய் வேங்கடமே -ஊழின் கண்
சற்று ஆயினும் இனியான் சாராவகை அருளும்
நல்தாயினும் இனியான் நாடு –69-

(இ – ள்.) வாழ் – (கற்பகாலமளவும் அழிவின்றி) வாழ்கின்ற,
அம் புலியினொடு – சந்திரனுடனே,
வான் ஊர் தினகரனும் – ஆகாயத்திற் சஞ் சரிக்கின்ற சூரியனும்,
வலம் செய் – பிரதக்ஷிணஞ் செய்யப்பெற்ற:
வேழங் களும் – யானைகளும்,
வலம் செய் – வலிமை கொள்ளப்பெற்ற:
வேங்கடமே -,-
இனி – இனிமேல்,
யான் -, ஊழின்கண் – கருமவசத்திலே,
சற்று ஆயினும் சாரா வகை – சிறிதும் பொருந்தாதபடி,
அருளும் – (எனக்குக்) கருணைசெய்த,
நல் தாயினும் இனியான் – நல்ல தாயைக்காட்டிலும் இனிய வனான திருமாலினது,
நாடு – திவ்வியதேசம்; (எ – று.)

நாள்தோறும் கிழக்கில் உதித்து மேற்கில் அஸ்தமித்துவருகின்ற சந்திர சூரியர்களின் சஞ்சாரம்,
பூமியில் உயர்ந்து தோன்றுகிற திருவேங்கடமலை யைப் பிரதக்ஷிணஞ் செய்தல் போலத் தோன்றுதலாலும்,
தேவாதிதேவனான திருமால் எழுந்தருளியிருக்கிற திருவேங்கடமலையைச் சந்திரசூரியாதி தேவர்கள்
எப்பொழுதும் பிரதக்ஷிணஞ் செய்தல் மரபாதலாலும், “அம்புலியினொடு தினகரனும் வலஞ்செய்” என்றார்.
வலஞ்செய்தல் – வலப்புறத்தாற் சுற்றிவருதல்.
“வாழ்”, “வானூர்” என்ற அடைமொழிகள் – அம்புலி, தினகரன் என்ற இருவர்க்கும் பொருந்தும்.
திநகரன் என்ற வடசொல் – பகலைச் செய்பவ னென்று பொருள்படும். குறிஞ்சிநிலத்துப் பெருவிலங்காகிய யானைகள்
அம்மலையின் வளத்தால் மிக்ககொழுமைகொண்டு ஒன்றோடொன்று பொருதும் பிறவற்றோடு பொருதும்
தம்வலிமையையும் வெற்றியையுங் காட்டுதல் தோன்ற, “வேழங்களும் வலஞ்செய்” என்றனரென்க.
வலம் – பலமென்ற வடசொல்லின் விகாரம்.

ஊழாவது – இருவினைப்பயன் செய்த உயிரையே சென்று அடைதற்கு ஏதுவாகிய நியதி.
எனது கருமங்களை யெல்லாம் ஒழித்து எனக்கு முத்தியையருளும் பேரன்புடைய கடவுளென்பது, பிற்பாதியின் கருத்து.
சற்று, இனி – இடைச்சொற்கள். நல்தாய் – பெற்றதாய்.
தான்பெற்ற குழந்தைகட்கு ஆவனவெல்லாம் செய்யும் இயல்பு தோன்ற, “நல்தாய்” என்றார்.

———–

நாட்கமலப் பூஞ்சுனைக்கும் சாயகங்கள் கொய் துதிரி
வேட்கும் வடிவு இல்லா வேங்கடமே வாட் கலியன்
நா வியப்பு ஆம் பாட்டினர் நச்சு மடுவைக் கலக்கித்
தாவி அப்பாம்பு ஆட்டினார் சார்பு –70-

(இ – ள்.) தாள் – நாளத்தோடு கூடிய,
கமலம் – தாமரையையுடைய,
பூ – அழகிய,
சுனைக்கும் – சுனைகளுக்கும்,
வடிவு இல்லா – நீர்குறைதல் இல்லாத:
சாயகங்கள் கொய்து திரி வேட்கும் – (தனக்குஅம்புகளாகிற) மலர்களைப் பறித்துக்கொண்டு திரிகிற மன்மதனுக்கும்,
வடிவு இல்லா – உருவம் இல்லாத:
வேங்கடமே -,-
வாள் – வாட்படையை ஏந்திய,
கலியன் – திரு மங்கையாழ்வாருடைய,
நா – நாவினின்றுவருகிற,
வியப்பு ஆம் பாட்டினார் – அதிசயிக்கத்தக்க பாடல்களையுடையவரும்,
தாவி – குதித்து,
நஞ்சு மடுவை கலக்கி – விஷத்தையுடைய மடுவைக் கலங்கச்செய்து,
அ பாம்பு ஆட்டினார் – அந்த(க் காளியனென்னும்) பாம்பை ஆட்டினவருமான திருமால்,
சார்பு – சார்ந்திருக்கு மிடம்; (எ – று.)

சுனை – நீரூற்றுள்ள மலைக்குளம். அதற்கு வடிவுஇல்லையென வேங்கடத்தின் நீர்வளச்சிறப்பை உணர்த்தியவாறாம்.
வடிவு – வடிதல்; ‘வு’ விகுதி பெற்ற தொழிற்பெயர்.
சிவபிரானது நெற்றிக்கண்ணின் நெருப்புக்கு இரையாய் அங்கம் இழந்து அநங்கனான மன்மதன்,
தனக்கு அம்புகளாகின்ற தா மரைமலர் அசோகமலர் மாமலர் முல்லைமலர் நீலோற்பலமலர் என்பன
அம்மலையிற் செழித்திருத்தலால் அவற்றைப் பறித்தெடுத்துக் கொள்ளுதற் பொருட்டு அங்குத் திரிகின்றன னென்பார்
“சாயகங்கள்கொய்துதிரி வேட்கும் வடிவில்லா” என்றார்.
கொய்து என்ற வினையினால், “சாயகங்கள்” என்றது, மலர்களென விளங்கும். கமலம், ஸாயகம் – வடசொற்கள்.

திவ்யமான பாசுரங்களைத் திருமங்கையாழ்வார்பாடும்படி அருள்செய் தவர் திருமாலாதலாலும்,
திருவேங்கடமுடையான் திருமங்கையாழ்வாரது பாடல் பெற்றவ ராதலாலும், “கலியன் நாவியப்பாம் பாட்டினார்” என்றார்.
சோழமண்டலத்தில் திருமங்கையென்னும் நாட்டில் சோழராசனுக்குச்சேனை த்தலைமைபூணும்பரம்பரையில் தோன்றி
நீலனென்னும் இயற்பெயர் பெற்ற இவர், தம்குடிக்கு ஏற்ப இளமையிலேயே படைக்கலத் தேர்ச்சிபெற்று
அவ் வரசனுக்குச் சேனாதிபதியாய் அமர்ந்து வலக்கையில் வாளையும் இடக்கையில் கேடகத்தையும் ஏந்திச்சென்று
பகைவரோடு பொருதுவென்று பரகாலனெ ன்றுபெயர்பெற்ற பராக்கிரமம் தோன்ற, “வாட்கலியன்” என்றார்.

“மாயோ னைவாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன்”,
“தென்னரங்கன்றன்னை வழிபறித்தவாளன்” என்றபடி இவர் எம்பெருமானை வழிபறித்தபோது
கையிற்கொண்டவாளைக்காட்டி அச்சுறுத்தி அப்பெருமானிடம் மந்திரோப தேசம்பெற்றமை தோன்ற, “வாட்கலியன்” என்றாருமாம்.

சோழராசன்கட்டளைப்படி மங்கைநாட்டுக்கு அரசனாகிய இவர் குமுதவல்லியென்னும் கட்டழகியை மணஞ்செய்து
கொள்ளுதற்பொருட்டு அவள்சொற்படி நாள்தோறும் ஆயிரத்தெட்டு ஸ்ரீவைஷ்ணவர்களை அமுதுசெய்வித்து வருகையில்,
பொருள்முழுவதும் செலவாய் விட்டதனால் வழிபறித்தாகிலும் பொருள் தேடிப் பாகவததீயாராதநத்தைத் தடையற நடத்தத் துணிந்து
வழிச்செல்வோ ரைக் கொள்ளையடித்துவரும்போது ஸ்ரீமந்நாராயணன் இவரையாட்கொள் ளக்கருதித்
தான் ஒருபிராமணவேடங்கொண்டு பல அணிகலங்களைப் பூண்டு மணவாளக்கோலமாய் மனைவியுடன் இவரெதிரில் எழுந்தருள,
இவர் கண்டு களித்து ஆயுதபாணியாய்ப் பரிவாரத்துடன் சென்று அவர்களை வளைந்து வஸ்திராபரணங்களையெல்லாம் அபகரிக்கையில்,
அம்மணமகன் காலில் அணிந்துள்ள மோதிரமொன்றைக் கழற்றமுடியாமையால் அதனையும் விடாமற் பற்களாலே கடித்துவாங்க,
அம்மிடுக்கை நோக்கி எம்பெருமான் இவர்க்கு “கலியன்” என்று ஒருபெயர்கூறினானென்றும்;

பின்புஇவர்பறித்த பொருள்களையெல்லாம் சுமையாகக்கட்டிவைத்து எடுக்கத்தொடங்குகையில், அப்பொருட்குவை இடம்விட்டுப்
பெயராதிருக்கக் கண்டு அதிசயித்து அவ்வந்தணனைநோக்கி “நீ என்ன மந்திரவாதம் பண்ணினாய்? சொல்” என்று
விடாதுதொடர்ந்து நெருக்க, அப்பொழுது அந்த அழகியமணவாளன்,
“அம் மந்திரத்தை உமக்குச் சொல்லுகிறோம்; வாரும்” என்று இவரை அருகில் அழைத்து அஷ்டாக்ஷர மகா மந்திரத்தை
இவர் செவியில் உபதேசித்தருளி உடனே கருடாரூடனாய்த் திருமகளோடு இவர்முன் சேவை சாதிக்க,
அத் திருவுருவத்தைத் தரிசித்ததனாலும், முன்பு காலாழி வாங்கியபொழுது பகவானுடைய திருவடியில் வாய்வைத்ததனாலும்
இவர் அஜ்ஞாநம் ஒழிந்து தத்துவஞானம் பெற்றுக் கவிபாட வல்லவராய்,
பெரிய திருமொழி, திருக் குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரியதிருமடல்
என்ற ஆறு திவ்வியப்பிரபந்தங்களைத் திருவாய் மலர்ந்தருளினரென்றும் வரலாறு அறிக.
“வியப்பாம்” என்ற அடைமொழி – அப்பாசுரங்களின் அருமைபெருமைகளை உணர்த்தும்.

மடு – ஆற்றினுட்பள்ளம். “அப்பாம்பு” எனச்சுட்டினது, கதையை உட்கொண்டு.
அன்றி, அகரச்சுட்டு – கொடுமையிற் பிரசித்தியை விளக்குவது மாம்.
ஆட்டினார் – ஆட்டிவருத்தியவர்; பிறவினை யிறந்தகாலத் தெரிநிலை வினையாலணையும்பெயர்.
இனி, பாம்புஆட்டினார் – பாம்பின்மேற் கூத்தாட் டையுடையவ ரெனினுமாம்;
இப்பொருளில், இச்சொல் – குறிப்புவினையா லணையும்பெயர்: இன் – சாரியை.
ஆட்டு – ஆடுதல்; ஆடு என்ற முதனிலை திரிந்த தொழிற்பெயர். கண்ணன் காளியனுடைய முடியின்மேல் ஏறி
நர்த்தநஞ்செய்தருளும்போது ஐந்துதலைகளையுடைய அந்நாகம் எந்தெந்தப்படத்தைத் தூக்குகின்றதோ
அந்தந்தப்படத்தைத் துவைத்து நர்த்தநஞ்செய்து நின்று அப்பாம்பின் வலிமையை யடக்கி
அதனை மூர்ச்சையடையச் செய்கையில் பலவகை நடனத்திறங்களைச் செய்து காட்டியமை தோன்ற, “பாம் பாட்டினார்” என்றனரென்க.

————–

ஆயும் துறவறத்தை அண்டின முத் தண்டினரும் வேயும்
கிளை விட்ட வேங்கடமே -தோயும்
தயிர்க்காத்தாம் கட்டுண்டார் தாரணியில் தந்த
உயிர்க்காத்து ஆங்கு அட்டு உண்டார் ஊர் –71-

(இ – ள்.) ஆயும் – (சிறந்ததென்று நூல்களினால்) ஆராய்ந்து கூறப்பட்ட,
துறவு அறத்தை – சந்நியாசாச்சிரமத்தை,
அண்டின – பொருந்திய,
முத் தண்டினரும் – திரிதண்டத்தையேந்திய முனிவர்களும்,
கிளை விட்ட – சுற்றத்தாரைப் பற்றறக் கைவிடுதற்கிடமான:
வேயும் – மூங்கில்களும்,
கிளை விட்ட – கிளைகளை வெளிவிட்டுச் செழித்து வளர்தற்கிடமான:
வேங்கடமே -,-
தோயும் தயிர்க்கு ஆ – தோய்ந்த தயிரைக் களவுசெய்து உண்டதற்காக,
தாம் கட்டுண்டார் – தாம் கட்டுப்பட்டவரும்,
தாரணியில் – உலகத்தில்,
தந்த – (தம்மாற்) படைக்கப்பட்ட,
உயிர் – உயிர்களை,
காத்து – பாதுகாத்து,
ஆங்கு – அதன்பின்பு,
அட்டு – அழித்து,
உண்டார் – விழுங்கியவருமான திருமாலினது, ஊர் -; (எ – று.)

மூன்று முங்கில்களை ஒருங்குசேர்த்துக் கட்டினதாகிய திரிதண்டத்தைக் கையிற்கொள்ளுதல், வைஷ்ணவ சந்யாசிகளின் இயல்பு.
துறவிகள் முக்கோல்பிடித்தல் காமம்வெகுளி மயக்க மென்னும் முப்பகையையும் மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை
யென்னும் ஈஷணாத் திரயங்களையும் வென்று அடக்கியதற்கும், சித் அசித் ஈசுவரன் என்னும் தத்துவத்திரயத்தைக்
கைப்பற்றினமைக்கும் அறிகுறியாகுமென்பர். ஆயுந்துறவறம் – தத்துவப்பொருளை ஆராய்தற்கு உரிய துறவறமுமாம்:
துறவறம் – பற்றுக்களைத் துறந்து செய்யும் ஒழுக்கம். தண்டு – தண்டமென்ற வடசொல்லின் விகாரம்.
“முத்தண்டினர் கிளைவிட்ட” என்றதனால், அவர்களுடைய ஒழுக்கச்சிறப்பை உணர்த்தியவாறு. வேய்க்குக் கிளைவிடுதல் – கப்புவிடுதல்.

ஆ – விகாரம். கட்டுண்டார் என்பதில், உண் என்ற துணைவினை – செயப்பாட்டுவினைப்பொருளை யுணர்த்தும்.
கண்ணன்இளமைப்பிராயத்தில் திருவாய்ப்பாடியிலுள்ள ஆயர்மனைகளிற் சென்று அவர்களுடைய பால் தயிர் வெண்ணெய்
முதலியவற்றைக் களவுசெய்து உண்டமையை ஆய்ச்சியர் சொல்ல அறிந்த யசோதை அக்குற்றத்துக்கு ஒருதண்டனையாகக்
கண்ணனை வயிற்றிற் கயிற்றினாற் கட்டி உரலோடு பிணித்துவைத்தன ளென்பது அறிக.
நித்தியமான உயிர்களை “தந்தவுயிர்” என்றது, அவற்றிற்கு உடலுறுப்புக்களைத் தந்தமை பற்றி யென்க.
திரிமூர்த்தி சொரூபியாய் நின்று படைத்தல் காத்தல் அழித்தல் செய்பவரும், பிரளயகாலத்தில் அனைத்துயிரையும் வயிற்றினுள்
வைத்துப் பாதுகாப்பவரும் திருமாலேயாதலால், “தாரணியில் தந்த வுயிர்க் காத்து ஆங்கு அட்டு உண்டார்” என்றார்.
உயிர் காத்து என இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வலிமிகாமல் வரவேண்டிய தொடர்,
திரிபுநயம்நோக்கி “உயிர்க்காத்து” என வலிமிக்கது; இது, விரித்தலென்னுஞ் செய்யுள்விகாரத்தின்பாற் படும்.

————

தொண்டொடு மெய்யன்பு உடையார் தூய மனமும் சந்தனமும்
விண்டொரு பொற் பாம்பணை சேர் வேங்கடமே -தண்டொடு வாள்
கோல் அமரும் கார் முகத்தார் கோடு -ஆழியார் குழையின்
கோலம் மருங்கு ஆர் முகத்தார் குன்று –72-

(இ – ள்.) தொண்டொடு – பணிவிடை செய்தலுடனே,
மெய் அன்பு உடையார் – உண்மையான பக்தியை யுடைய அடியார்களது,
தூய் மனமும் – பரிசுத்தமான உள்ளமும்,
விண்டொடு பொன் பாம்பு அணை சேர் – திருமாலுடனே அழகிய ஆதிசேஷ சயநத்தைத் தியானிக்கப் பெற்ற:
சந்தனமும் – சந்தனமரங்களும்,
விண் தொடு பொற்பு ஆம் பணை சேர் – (உயர்ச்சியால்) ஆகாயத்தை அளாவிய பொலிவான கிளைகள் பொருந்தப்பெற்ற:
வேங்கடமே -,-
தண்டொடு – கதாயுதத்துடனே,
வாள் – வாளாயுதத்தையும்,
கோல் அமரும் கார்முகத்து – அம்புகள் பொருந்திய வில்லையும்,
ஆர் கோடு – ஒலிக்கின்ற சங்கத்தையும்,
ஆழியார் – சக்கரத்தையும் உடையவரும்,
குழையின் கோலம் மருங்கு ஆர் முகத்தார் – குண்டலங்களின் அழகு (இரண்டு) பக்கங்களிலும் பொருந்திய
திருமுகத்தை யுடையவருமான திருமாலினது,
குன்று – திருமலை; (எ – று.)

தொண்டு – கைங்கரியம். மெய்யன்பு – மனப்பூர்வமாகிய பக்தி. ஆதி சேஷனாகிய சயனத்திற் பள்ளி கொண்டிருக்கின்ற
திருமாலை அடியார்கள் உள்ளத்திற்கொண்டு தியானிக்கின்றன ரென்க. விஷ்ணு என்ற வடசொல், விண்டு எனச் சிதைந்தது.
சேர்தல் – இடைவிடாது நினைத்தலாதலை, திருக்குறளில் “மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்” என்றவிடத்துப்
பரி மேலழகருரையாலும் அறிக. கிளைகளுக்கும் வானத்துக்கும் சம்பந்தமில்லா திருக்கச் சம்பந்தத்தைக் கூறினது, தொடர்புயர்வுநவிற்சியணி;
இது, கிளைகளின் மிக்கஉயர்வை விளக்கும். பொற்பு – உரிச்சொல்.

திருமாலின் பஞ்சாயுதங்களுள், கதை கௌமோதகி யென்றும், வாள் நந்தக மென்றும், வில் சார்ங்க மென்றும்,
சங்கம் பாஞ்சஜந்ய மென்றும், சக்கரம் சுதர்சநமென்றும் பெயர்பெறும். கார்முகம் – வடசொல்;
கர்மத்தில் (அதாவது (போர்த்) தொழிலில்) வல்லதென்று பொருள்படும். ஆர் கோடு – வினைத்தொகை; ஆர்த்தல் – ஒலித்தல்.
கோடு, வளை என்பன – பரியாய நாமம். ஆழி – (பகைவரை) அழிப்பது; அல்லது, வட்டவடிவமானது.
ஆர்முகம் – வினைத்தொகை; ஆர்தல் – பொருந்துதல்.

இச்செய்யுளின் பின்னிரண்டடியில் யமகம் அமைந்திருத்தல் காண்க.

————-

கிட்டும் நெறி யோகியரும் கிள்ளைகளும் தம் கூடு
விட்டுமறு கூடு அடையும் வேங்கடமே -எட்டுமத
மாவென்று வந்தான் வர நாளை வா இன்று
போ என்று உவந்தான் பொருப்பு –73-

(இ – ள்.) கிட்டும்நெறி யோகியரும் – (முத்தியை) விரைவிற் சேரும் உபாயமான யோகத்திற் பயில்கிற முனிவர்களும்,
தம் கூடு விட்டு மறு கூடு அடையும் – தமது சரீரத்தை விட்டு வேறு சரீரத்திற் புகப்பெற்ற;
கிள்ளைகளும் – கிளிகளும்,
தம் கூடு விட்டு மறுகு ஊடு அடையும் – தாம்வசிக்கிற கூண்டை விட்டு நீங்கி வீதிகளிற் சேரப்பெற்ற:
வேங்கடமே -,-
மதம் எட்டு மாவென்று வந்தான் – மதம்பிடித்த அஷ்டதிக்கஜங்களைச் சயித்துவந்தவனான இராவணன்,
வர – (தன் எதிரிற் போருக்கு) வர, (அவனை உடனே எளிதில் வென்று),
இன்று போ நாளை வா என்று – “இன்று போய் நாளைக்கு வா” என்று சொல்லி,
உவந்தான் – (அவனிடத்து) அன்புகாட்டிய வனான திருமாலினது, பொருப்பு – திருமலை; (எ – று.)

நெறி – மார்க்கம். யோகியர் தம் கூடுவிட்டு மறுகூடு அடைதல் – தம் உயிர் தம் உடம்பைவிட்டுநீங்கி
வேறோருடம்பினுட் புக்குத் தொழில்செய்யு மாறு செய்தல்; இது, பரகாயப்பிரவேச மென்னுஞ் சித்தி.
பறவைகள் வசிக்குங் கூடுபோல உயிர் தங்குமிடமாதலாலும், உயிர்கூடுமிட மாதல்பற்றியும்,
உடம்பு “கூடு” என்று பெயர்பெறும். கிள்ளை – பெயர்த்திரிசொல். மறுகூடு, ஊடு – ஏழனுருபு.
அடைதல் – உட்புகுதலும், சேர்தலும்.

இராவணன் திக்விஜயகாலத்தில் இந்திரன் முதலிய தேவர்களோடு பொருகையில் ஐராவதம் முதலிய
திக்கஜங்களை யெதிர்த்து அவற்றின் தந்தங்களை ஒடித்து அவற்றை வலிதொலைத்தனென அறிக.
இராமபிரான், முதல்நாட்போரில் தன்சேனை முழுவதும் படைக்கலமனைத்தும் அழியத் தனியனாய் அகப்பட்ட இராவணனது
எளிமையை நோக்கி இரங்கி மேலும் போர்செய்யாது நிறுத்தி “இன்றுபோய் நாளை நின்படையொடு வா” என்று
கூறி விட்டன னென்பது வரலாறு;
“ஆளையா வுனக் கமைந்தன மாருத மறைந்த,
பூளையாயின கண்டனை யின்றுபோய்நீ போர்க்கு,
நாளைவாவென நல்கினன் நாகிளங் கமுகின்,
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்” என்ற கம்பராமாயணச்செய்யுள் இங்கே காணத்தக்கது.
இங்ஙனம் பகைவனிடத்து அருள்கொண்டு அவனைவிடுதல், தழிஞ்சி யென்னும் புறப்பொருள் துறையாம்;
அது, வலியிழந்தவர்மேற் போர்க்குச் செல்லாமல் அவர்க்கு உதவிசெய்து தழுவுவது.
இதனால், இராமபிரானது காம்பீரியம், கருணை, அறத்தின்வழிநிற்றல் முதலிய திருக்கலியாணகுணங்கள் விளங்கும்.

“மதமா” எனவே, யானையாயிற்று; விலங்கின் பொதுப்பெயராகிய “மா” என்பது – “மதம்” என்ற அடைமொழியால்,
சிறப்பாய் யானையை உணர்த்திற் றென்க.
எட்டுமதமா – ஐராவதம், புண்டரீகம், வாமநம், குமுதம், அஞ்சநம், புஷ்பதந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் எனப் பெயர் பெறும்;
இவற்றைக் கிழக்கு முதலாக முறையே கொள்க. நாளை, இன்று என்பன முறையே
எதிர்காலத்தையும் நிகழ்காலத்தையுங் காட்டும் இடைச்சொற்கள்.
மூன்றாமடியில் உவந்தான் எனப் பதம்பிரித்துக் களிப்புக்கொண்டவனென்று பொருளுரைத்து,
நான்காமடியில் வந்தான் என்று பதம்பிரித்துப் போரொழிந்து மீண்டானென்று பொருளுரைப்பினும் அமையும்.

————

மட்டு வளர் சாரலினும் மாதவத்தோர் சிந்தையினும்
விட்டு மதி விளங்கும் வேங்கடமே -கட்டு சடை
நீர்க் கங்கை ஏற்றான் இரப்பு ஒழித்தான் நீள் குறள் ஆய்ப்
பார்க்கு அங்கை ஏற்றான் பதி –74-

(இ – ள்.) மட்டு வளர் சாரலினும் – (மலர்களினின்றும் கூண்டுகளினின்றும்) தேன் பெருகி வழியப் பெற்ற (அம்மலையின்) பக்கங்களிலும்,
மதி விட்டுவிளங்கும் – சந்திரன் (ஒளியை) வீசி விளங்கப்பெற்ற:
மா தவத்தோர் சிந் தையினும் – பெருந்தவத்தையுடைய முனிவர்களது மனத்திலும்,
விட்டு மதி விளங்கும் – திருமாலை விஷயமாகக் கொண்ட ஞானச்சுடர் விளங்கப்பெற்ற:
வேங்கடமே -,-
கட்டு சடை – தொகுத்துக் கட்டிய சடையில்,
நீர் கங்கை – கங்கைநீரையுடைய,
ஏற்றான் – ரிஷபவாகனனான சிவபிரானது,
இரப்பு – யாசித்தலை,
ஒழித்தான் – நீக்கியருளியவனும்,
நீள் குறள் ஆய் – (பின்பு) நீண்டு வளருந்தன்மையுள்ள வாமந வடிவங்கொண்டு,
பார்க்கு – உலகத்தைப் பெறும்பொருட்டு,
அம் கை ஏற்றான் – அழகிய கையில் (மகாபலி தந்தநீரை) ஏற்றுக்கொண்டவனுமான திருமாலினது,
பதி – திவ்வியதேசம்; (எ – று.)

பதி – திருப்பதி.
மட்டு வளர் சாரல் – மலர்களின் நறுமணம் வீசப் பெற்ற மலைப்பக்கமுமாம்.
சாரல் – சார்தல்; மலையைச் சார்ந்த பக்கத்துக் குத் தொழிலாகுபெயர். சாரலிற் சந்திரன் விளங்குமென
அம்மலையின் உயர்வை விளக்கியவாறு. மதி – சந்திரனென்னும் பொருளில், (பலராலும்) மதிக்கப்படுவதென்று
காரணப்பொருள்படும்; அறிவைக் குறிக்கையில், வட சொல். விஷ்ணு என்ற வடசொல், விட்டு என விகாரப்பட்டது.

ஏற்றான் என்றது – மூன்றாமடியில் ஏறு என்ற பெயரின்மேற் பிறந்த குறிப்பு வினையாலணையும் பெயரும்,
நான்காமடியில் ஏல் என்ற வினைப் பகுதியின்மேற் பிறந்த இறந்தகாலத் தெரிநிலை வினையாலணையும் பெயருமாம்.
ஏறு – பசுவின் ஆண்மைப்பெயர். நீள் குறள் – இனி நீளுங் குறள் என எதிர்கால வினைத்தொகை.
குறள் – குறுகிய வடிவம். “நீள்குறள்” என்றது, “ஆலமர்வித்தி னருங்குற ளானான்” என்றபடி மிகப்பெரிய
திரிவிக்கிரம வடிவத்தை உட்கொண்ட மிகச்சிறிய வாமநவடிவ மென்க.
பார் -பார்க்கப்படுவது, அல்லது பருமையுடையது எனக் காரணப்பொருள்படும்.

———-

புக்கு அரு மாதவரும் பூ மது உண் வண்டினமும்
மெய்க்க வசம் பூண்டு இருக்கும் வேங்கடமே -ஒக்க எனை
அன்பதினால் ஆண்டார் அரிவையொடும் கான் உறைந்த
வன்பதினால் ஆண்டார் வரை –75-

(இ – ள்.) புக்க – அங்கு வருகின்ற,
அரு மா தவரும் – அரிய பெரிய தவத்தையுடைய முனிவர்களும்,
மெய் கவசம் பூண்டு இருக்கும் – சத்தியமாகிய கவசத்தைத் தரித்திருக்கப்பெற்ற:
பூ மது உண் வண்டு இனமும் – மலர்களிலுள்ள தேனைக் குடிக்கின்ற வண்டுகளின் கூட்டமும்,
மெய்க்கு அவசம் பூண்டு இருக்கும் – (அம்மதுபானத்தாலாகிய மயக்கத்தால் தமது) உடம்பில் தம்வசம்
தப்பிப் பரவசமாந்தன்மையைக் கொண்டிருக்கப்பெற்ற:
வேங்கடமே -,- ஒக்க – (தமது மெய்யடியாரை) ஒப்ப,
எனை – (அடிமைத்திறமில்லாத) என்னையும்,
அன்பு அதினால் ஆண்டார் – அன்பினால் ஆட்கொண்டவரும்,
அரிவையொடும் – சீதாபிராட்டியுடனே,
கான் உறைந்த – வனத்தில் வசித்த,
வல் பதினால் ஆண்டார் – கொடிய பதினான்கு வருடங்களையுடையவருமான திருமாலினது,
வரை – திருமலை; (எ – று.)

கவசம் – இரும்பு முதலியவற்றாலாகின்ற உடம்பின்மேற் சட்டை; அது உடம்பைப் பாதுகாப்பது போலச்
சத்தியம் உயிரைப் பாதுகாத்தலால், “மெய்க்கவசம்” எனப்பட்டது.
முனிவர்கட்கு வாய்மையுடைமை இன்றி யமையாத ஒழுக்கமாதலால், “புக்க அருமாதவர் மெய்க்கவசம்பூண்டிருக்கும் வேங்கடம்” எனப்பட்டது.
கவசம், மது, அவசம் – வடசொற்கள். மெய்க்கு என்பதில் நான்கனுருபு ஏழனுருபின் பொருளில் வந்தது, உருபுமயக்கம்.
ந + வசம் = அவசம். வடமொழிச்சந்தி. புக்க அருமாதவர், மெய்க்கு அவசம் பூண்டு இருக்கும் – பரம்பொருளை அனுபவிக்கும்
ஆனந்தமிகுதியால் தம் உடம்பு தம்வசமிழந்து பரவசமாகப்பெற்ற என்றும்; மலர்களில் மதுவை யுண்ட வண்டினம்,
மெய்க்கவசம் பூண்டு இருக்கும் – (அம்மலர்களின் தாதுக்கள் மேற்படிதலால்) உடம்புக்குக் கவசம்
பூண்டிருக்கப்பெற்ற என்றும் உரைப்பாரும் உளர்.

“அன்பதினால்” என்பதில், “அது” என்பது – பகுதிப்பொருள் விகுதி; இன் – சாரியை.
ஆண்டார் என்பது – மூன்றாமடியில் ஆள் என்னும் வினைப் பகுதியின்மேற் பிறந்த இறந்தகாலத்தெரிநிலை வினையாலணையும்பெயரும்,
நான்காமடியில் ஆண்டுஎன்னும் பெயரின்மேற் பிறந்த குறிப்புவினையாலணை யும்பெயருமாம்.
அரிவையென்பது – இங்குப் பருவப்பெயராகாமல் பெண்ணென்ற மாத்திரமாய் நின்றது;
அப்பருவத்துக்கு வயதெல்லை – இருபது முதல் இருபத்தைந்தளவும். அரிவையொடும், உம் – இசைநிறை.
“வன்பதினாலாண்டு” என்றது, கொடியவனத்தில் வசிக்குங் காலம் கழித்தற்கு அரிதாத லாலும்,
அவ்வனவாசகாலத்திற் பிரானுக்கும் பிராட்டிக்கும் பலஇடையூறுகள் நேர்ந்ததனாலு மென்க.
இராமபிரான் தனது சிறியதாயான கைகேயிக்குத் தனது தந்தையாகிய தசரதன் கொடுத்திருந்த வரங்களை
நிறைவேற்றுதற்பொருட்டு அக்கைகேயியின் மகனான பரதனுக்கு உரியதாம்படி இராச்சியத்தைக் கைவிட்டுச் சீதையுடனே சென்று
பதினான்கு வருடகாலம் வனவாசஞ் செய்தமை பிரசித்தம். “அரிவையொடும் கானுறைந்த வன் பதினாலாண்டார்” என்றது,
வடமொழிநடை; கொடிய கானில் அரிவையுடனே பதினாலாண்டு உறைந்தவ ரென்க.

———-

தக்க மறையோர் நாவும் தண் சாரலின் புடையும்
மிக்க மனு வளையும் வேங்கடமே -அக்கு அரவம்
பூண்டார்க்கு மால் துடைத்தார் பொங்கு ஓத நீர் அடைத்து
மீண்டு ஆர்க்கு மாறு உடைத்தார் வெற்பு –76-

(இ – ள்.) தக்க மறையோர் நாவும் – தகுதியையுடைய அந்தணர்களின் நாக்கும்,
மிக்க மனு அளையும் – சிறந்த மந்திரம் (உச்சாரணத்தாற்) பொருந் தப்பெற்ற:
தண் சாரலின் புடையும் – குளிர்ந்த அம்மலைச்சாரல்களின் பக்கங்களும்,
மிக்க மனு வளையும் – மிகுதியான மனிதர்கள் பிரதக்ஷிணஞ்செய் யப்பெற்ற:
வேங்கடமே -,-
அக்கு அரவம் பூண்டார்க்கு – எலும்புமாலையையும் சர்ப்பங்களையும் ஆபரணமாகத்தரித்த சிவபிரானுக்கு,
மால் துடைத்தார் – (பிரமகத்திதோஷத்தாலாகிய) மயக்கத்தைப் போக்கியருளியவரும்,
பொங்கு ஓதம் நீர் – பொங்குகிற அலைகளையுடைய கடலை,
அடைத்து – அணை கட்டி மறித்து,
மீண்டு – பின்பு,
ஆர்க்கும் ஆறு – ஆரவாரிக்கும்படி,
உடைத்தார் – (அத்திருவணையை) உடைத்தருளினவருமான திருமாலினது,
வெற்பு – திருமலை; (எ – று.)

மனு – காசியபமுனிவரது மனைவியருள் ஒருத்தி; இச்சொல் – இங்கு இலக்கணையாய், அவளினிடமாகத் தோன்றிய
மனிதர்களை உணர்த்திற்று. வளைதல் – சூழ்தல். அக்கு – ருத்திராக்ஷமாலையுமாம்.
அக்கரவம் பூண்டார் க்கு மால் துடைத்தார் – சிவபிரானது கையில் ஒட்டிய கபாலத்தை விடுவித் தவர்;
அன்றி, சிவபிரானுக்கு அஜ்ஞாநமயக்கம் நீங்குமாறு தத்துவஞானத்தை உபதேசித்தவ ரெனினுமாம்.

இராமபிரான் இராவணாதியரை அழித்தற்பொருட்டு இலங்கைக்குச் செல்லவேண்டி அதற்கும் இந்தப்பூமிக்கும்
இடையிலுள்ள கடலில் வானரங்களைக்கொண்டு மலைகளால் அணைகட்டி அதன்வழியாக இலங்கைபுக்கு
அரக்கரைத் தொலைத்து மீளுகையில், இராக்கதராசதானியான இலங்கையி லுள்ளார்க்கும் இப்பூமியிலுள்ள
மனிதர்க்கும் போக்குவரவு இல்லாமலிருத் தற்பொருட்டும், கடலிடையே மரக்கலமியங்குதற்பொருட்டும்
அச்சேதுவை உடைத்தன ரென்ற வரலாற்றை இங்கு அறிக.

—————

நீடு கொடு முடியும் நீதி நெறி வேதியர்கள்
வீடும் மகம் மருவும் வேங்கடமே –கோடும்
கருத்துள் அவ மாலையார் காணாமல் நின்ற
மருத்துளவ மாலையார் வாழ்வு –77–

(இ – ள்.) நீடு கொடுமுடியும் – உயர்ந்த அம்மலைச் சிகரங்களும்,
மகம் மருவும் – (வானத்திற்செல்லும்) மகநட்சத்திரம் பொருந்தப்பெற்ற:
நீதி நெறி வேதியர்கள் வீடும் – நியாயமார்க்கத்தில் நடக்கின்ற அந்தணர்களுடைய கிருகங்களும்,
மகம் மருவும் – யாகங்கள் பொருந்தப்பெற்ற:
வேங்கடமே -,-
கோடும் கருத்துள் – நேர்மைதவறிய மனத்தில்,
அவம் மாலையார் – வீண்எண்ணங்களின் வரிசைகளை யுடையவர்கள் (அடிமைக்கருத்தில்லாதவர்கள்),
காணாமல் – (தமது சொரூபத்தைக்) காணவொண்ணாதபடி,
நின்ற – (அவர்கட்குப் புலப்படாது) நின்ற,
மரு துளவம் மாலையார் – நறு மணமுள்ள திருத்துழாய் மாலையை யுடையவரான திருமால்,
வாழ்வு – எழுந்தருளி யிருக்குமிடம்; (எ – று.)

நீடு கொடுமுடி – வினைத்தொகை. மலைச்சிகரத்தைக் கொடுமுடியென் றல், மேல்வளைந்திருத்தலால்;
கொடுமை – வளைவு. “கொடுமுடி மகம்மருவும்” என்றது, அம்மலைச்சிகரங்களின் மிக்கஉயர்வை விளக்கும்
தொடர்புயர்வு நவிற்சியணி. மகம் என்றது, மற்றை நக்ஷத்திரங்களுக்கும், கிரகங்களுக்கும் உபலக்ஷணம்.
வேதியர் – வேதம் வல்லவர்; கள் – விகுதிமேல்விகுதி. “அவர்கள்வீடு மக மருவும்” எனப் பிரித்து,
அவர்கள் வீடு புத்திரபாக்கியம் பொருந்தப்பெற்ற என்று உரைப்பினும் அமையும்.

அந்தர்யாமியாகிய கடவுள், உள்ளன்புடைய ஞானிகளுக்குப் புலப்படு வனேயன்றி மனத்தூய்மையில்லாத
அஜ்ஞாநமயக்கமுடையார்க்குப் புலனாகானென்பது, பின்னிரண்டடியில் விளங்கும்.
“அவ மலையார்” என்பதற்கு – வீணான மயக்கத்தை யுடையவர்களென்று உரைப்பாருமுளர்.
மால் – மயக்கம்: ஐ – சாரியை. “மாலையான்” என்று பாடமோதி,
வீணெண்ணங்களின் தொடர்ச்சியையுடைய நான் என்று உரைப்பர் ஒருசாரார்.

————

சீதம் கொள் சாரலினும் சீர் மறையோர் இல்லிடத்தும்
வேதம் கணால் வளரும் வேங்கடமே -போதன்
சிரித்துப் புரம் துடைத்தான் தேவரொடும் அண்டம்
விரித்துப் புரந்து உடைத்தான் வெற்பு –78-

(இ – ள்.) சீதம் கொள் சாரலினும் – குளிர்ச்சியைப் பெற்ற அம்மலைப் பக்கங்களிலும்,
வே தம் கணால் வளரும் – மூங்கில்கள் தம்முடைய கணுக்க ளோடு வளரப்பெற்ற;
சீர் மறையோர் இல் இடத்தும் – சிறந்த அந்தணர்களுடைய வீடுகளிலும்,
வேதங்கள் நால் வளரும் – நான்குவேதங்களும் (ஓதப்பட்டு) வளர்தற்கு இடமான:
வேங்கடமே -,-
போதன் – பிரமனும்,
சிரித்து புரம் துடைத்தான் – நகைத்துத் திரிபுரத்தை அழித்தவனான சிவனும்,
தேவரொடும் – மற்றைத் தேவர்களும் ஆகிய அனைவருடனே,
அண்டம் – அண்டகோளங்களை,
விரித்து – வெளிப்படுத்தி (படைத்து),
புரந்து – காத்து,
உடைத்தான் – அழிக்குந்தன்மையனான திருமாலினது,
வெற்பு – திருமலை.

வே – வேய் என்பதன் விகாரம். -கணால் – கண்ணால்: தொகுத்தல்;
கண் – கணு: இதில் ஆல் என்னும் மூன்றனுருபு, உடனிகழ்ச்சிப் பொருளில் வந்தது.
சீர் – ஸ்ரீ என்னும் வடமொழியின் சிதைவென்பர். வேதம் என்ற சொல் – (நன்மைதீமைகளை விதிவிலக்குகளால்)
அறிவிப்பது என்று பொருள்படும்; வித் – அறிவித்தல்.
வேதங்கள் நால் – இருக்கு, யஜுஸ், ஸாமம், அதர்வணம் என்பன. நால் – நான்கு என்பதன் விகாரம்.
பிரம ருத்தி ரேந்திராதி தேவர்களுடனே எல்லா அண்டங்களையும் படைத்துக் காத்து அழிப்பவன் திருமாலென்பது, பிற்பாதியில் விளங்கும்.
உடைத்தான் என்பதில், இடைநிலை காலமுணர்த்தாது தன்மையுணர்த்தும் போதன் – திருமாலின் நாபித்தாமரைமலரில் தோன்றியவன்; போது – பூ.

—————

நன்கோடு போலும் முலை நாரியரும் சண்பகத்தின்
மென்கோடும் கற்பகம் சேர் வேங்கடமே -வன்கோடு
கூரு இடு வராகனார் கோகனகை பூமி என்னும்
ஓர் இருவர் ஆகனார் ஊர் –79-

(இ – ள்.) நல் கோடு போலும் முலை நாரியரும் – அழகிய யானைத்தந்தத் தைப்போன்ற தனங்களையுடைய மாதர்களும்,
கற்பு, அகம் சேர் – பதிவிரதா தருமம் மனத்தில் அமையப்பெற்ற:
சண்பகத்தின் மெல் கோடும் – சண்பக மரத்தினது அழகிய கிளைகளும்,
கற்பகம் சேர் – (மிக்க உயர்ச்சியால் தேவலோகத்துக்) கற்பகவிருட்சத்தை அளாவப்பெற்ற:
வேங்கடமே -,-
வல்கோடு கூர் இரு வராகனார் – வலிய கொம்பு (கோரதந்தம்) கூர்மையாக இருக்கப்பெற்ற பெரிய பன்றி வடிவமானவரும்,
கோகனகை பூமி என்னும் ஓர் இருவர் ஆகனார் – ஸ்ரீதேவியும் பூதேவியும் என்னும் ஒப்பற்ற இருவரையுந் தழுவும் திருமார்பை யுடையவருமான திருமாலினது,
ஊர் – திருப்பதி.(எ – று)

கோடு – மலைச்சிகரமுமாம். நாரி, சண்பகம், கற்பகம் – நாரீ, சம்பகம், கல்பகம் என்ற வடசொற்களின் விகாரம்.
சண்பகத்தின் கிளைக்கு மென்மை, கண்ணுக்கு இனிமை. அகம் – உள்ளுறுப்பு;
அந்த:கரணம் கல்பகம் – வேண்டுவார்க்கு வேண்டும் பொருள்களைக் கல்பிப்பது; இது, தேவதரு.
கோடு – வாயின் இருபுறத்தும் வளைந்து வெளித்தோன்றும் எயிறு. கோக நகை – தாமரைமலரில் வாழ்பவள்;
கோகநதா என்ற வடசொல் கோகநகை யென விகாரப்படும். ஆகம் – மார்பு; அதனையுடையவன்,
ஆகன்; அதன்மேல் “ஆர்” என்ற பலர்பால்விகுதி உயர்வுபற்றி வந்தது.

————-

கோடு அஞ்சும் கோதையர்கள் கொங்கையினும் குஞ்சரத்தும்
வேடன் சரம் துரக்கும் வேங்கடமே -சேடன் எனும்
ஓர் பன்னகத்திடம் தான் உற்றான் இரணியனைக்
கூர் பல் நகத்து இடந்தான் குன்று –80-

(இ – ள்.) கோடு அஞ்சும் – மலைச்சிகரம் (ஒப்புமைக்கு எதிர்நிற்க மாட்டாமல்) அஞ்சும்படியான,
கோதையர்கள் கொங்கையினும் – மாதர்களுடைய தனங்களிலும்,
வேள் தன் சரம் துரக்கும் – மன்மதன் தனது புஷ்ப பாணத்தைச் செலுத்தப்பெற்ற:
குஞ்சரத்தும் – யானைகளின்மீதும்,
வேடன் சரம் துரக்கும் – வேட்டுவன் அம்புகள் செலுத்தப்பெற்ற:
வேங்கடமே -,-
சேடன் எனும் – ஆதிசேஷனென்கிற,
ஓர் பன்னகத்து இடம் – ஒப்பற்ற தொரு பாம்பினிடத்தில்,
உற்றான் – பொருந்தியவனும்,
இரணியனை – இரணி யாசுரனை,
கூர் பல் நகத்து இடந்தான் – கூரிய பல கைந்நகங்களினால் (மார்பைப்) பிளந்தவனுமான திருமாலினது,
குன்று – திருமலை; (எ – று.)

கோடு – யானைத் தந்தமுமாம் “அஞ்சும்” என்பதை உவமவுருபாகவுங் கொள்ளலாம்.
சேஷன் என்ற வடசொல் – (பிரளயகாலத்திலும் அழிவின்றி) மிச்சமாய் நிற்பவ னென்றும்,
பந்நகம் என்ற வடசொல் – பத் ந கம் என்று பிரிந்து கால்களால் நடவாதது (மார்பினால் ஊர்வது) என்றும்,
ஹிரண்யன் என்ற வடசொல் – பொன்னிறமானவ னென்றும் காரணப்பொருள்படும்.
“சென்றாற் குடையாம் இருந்தாற் சிங்காசனமாம், நின்றால் மரவடியாம் நீள்கடலுள் – என்றும்,
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும், அணையாம் திருமாற்கு அரவு” என்றபடி
ஆதிசேஷனால் அநேகவித கைங்கரியஞ் செய்யப்பெறுபவ னென்பது தோன்ற,
“சேடனெனு மோர் பன்னகத்திடம் தான்உற்றான்” என்றார். தான் – அசை.
இடந்தான் என்பதில், இட – பகுதி; இடத்தல் – கீளுதல்.

—————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவேங்கட மாலை –41-60-

February 20, 2022

வன் குறிஞ்சி மாதர் பால் வானோர் மருந்துக்கு
மென் குறிஞ்சித் தேன் மாறும் வேங்கடமே -நன்கு உறிஞ்சி
பேய்த்தநம் சுவைத்தார் பிறர்க்கு அமுது ஈந்து ஈசனுக்கு
வாய்த்த நஞ்சு வைத்தார் வரை –41-

(இ – ள்.) வல் குறிஞ்சி மாதர்பால் – வலிய குறிஞ்சிநிலத்து மகளிராகிய குறத்தியரிடத்து,
வானோர் – தேவர்கள்,
மருந்துக்கு – அமிருதத்துக்கு,
மெல் குறிஞ்சி தேன் மாறும் – குறிஞ்சிமரத்திற் கட்டிய இனிய தேனைப் பண்டமாற்றலாற் கொள்ளப்பெற்ற,
வேங்கடமே – , –
பேய் தநம் – பேய்மகளாகிய பூதனையினது முலையை,
நன்கு உறிஞ்சி சுவைத்தார் – நன்றாக உறிஞ்சிப் பால்குடித்தவரும்,
பிறர்க்கு அமுது ஈந்து – மற்றைத்தேவர்களுக்கு அமிருதத்தைக் கொடுத்து,
ஈசனுக்கு – சிவனுக்கு,
வாய்த்த நஞ்சு வைத்தார் – பொருந்தின விஷத்தை உண்ணவைத்தவரு மாகிய திருமாலினது,
வரை – திருமலை; (எ – று.)

தம்மிடத்து மிகுதியாகவுள்ள பண்டத்தை விலையாகக் கொடுத்து அதற்கு ஈடாகத் தமக்கு வேண்டிய அருமையான பொருளை
வாங்கிக் கொள்ளுகிற பண்டமாற்று முறைப்படி மேலுலகத்திலுள்ள தேவர்கள் திருவேங்கட மலையின்மீது
உள்ள குறிஞ்சி நிலத்து மகளிரிடம் அமிருதங் கொடுத்து அதற்கு ஈடாகத் தேன் பெற்றுக்கொள்கின்றனரென்ற இதில்,
தேவலோகத்துக்கு மிக்க சமீபமாயிருக்கும்படி இத்திருமலை ஓங்கியுயர்ந்துள்ள தென்பதும்,
தேவர்களுடைய சஞ்சாரம் இம்மலையில் நிகழ்கின்ற தென்பதும் விளங்குதலோடு, அமிருதத்தை யுண்பவரான
தேவர்கள் அதனை வெறுத்து ஒழித்து அதனினும் இனிய தென்று விரும்பிப் பெற்றுக்கொள்ளும்படி யுள்ளது
அந்நிலத்துத் தேனினது மிக்கசுவை யென்பதும் தோன்றும். மலையும், மலைசார்ந்த இடமும் – குறிஞ்சிநிலம்.
அந்நிலம், குறிஞ்சிமரத்தை யுடைமையால், அப்பெயர் பெற்றது.

திருமால், திருப்பாற்கடல்கடைகையில் அதனினின்று உண்டான பல பொருள்களுள் விஷத்தைச்
சிவபிரானுக்குக் கொடுத்து உண்ணச்சொல்லி, அதனால் அப்பிரானுக்கு வெப்பமுண்டாகாமல் தணிந்திருக்கும்
பொருட்டு உடனே சந்திரனையுங் கொடுத்து அதனைச் சிரமேற்கொள்வித்து, தேவர் கட்கெல்லாம் அமிருதத்தையும்,
அவர்களில் இந்திரன் முதலிய சிலர்க்கு மற்றுஞ் சிலபொருள்களையுந் தந்து, தான் சில பொருள்களைக்
கொண்டரு ளின னென்ற வரலாறுபற்றி, “பிறர்க்கு அமுதீந்து ஈசனுக்கு வாய்த்தநஞ்சு வைத்தார்” என்றார்;
“வெருவு மாலமும் பிறையும் வெவ்விடையவற்கீந்து” என்றார் கம்பரும்.
சிவபிரானாகிய பாத்திரத்தைக்கொண்டு திருமால் தானே தனது திவ்வியசக்தியால் விஷத்தை அமுதுசெய்தன னென்பர்.
வாய்த்த – தகுதிக்கு ஏற்ற என்றபடி. உறிஞ்சி, உறிஞ்சு – பகுதி. நன்கு – பண்புப்பெயர்; கு – விகுதி.

————–

வாவுகவின் மந்தி நுகர் மாங்கனிக்குக் கற்பகத்தின்
மேவு கவி கை நீட்டும் வேங்கடமே –தாவு கடல்
வேவ இலங்கைக்கு ஒண் தார் வீடணனை வைத்து ஒழிந்தார்
சாவவில் அங்கைக் கொண்டார் சார்பு –42-

(இ – ள்.) வாவு – தாவிச்செல்லும் இயல்புள்ள,
கவின் மந்தி – அழகிய பெண்குரங்கு,
நுகர் – (கைக்கொண்டு) உண்கின்ற,
மா கனிக்கு – மாம்பழத்துக்கு,
கற்பகத்தில் மேவு கவி கை நீட்டும் – கற்பகவிருக்ஷத்திற் பொருந்திய ஆண்குரங்கு கைநீட்டப்பெற்ற,
வேங்கடமே – , –
தாவு கடல் வேவ – அலைபொங்கி யெழு மியல்புள்ள கடல் கொதிப்படையும்படியும்,
ஒள் தார் வீடணனை இலங்கைக்கு வைத்து – பிரகாசமான ஆரத்தை யணிந்த விபீஷணனை இலங்காபுரிக்கு (அரசனாக) வைத்து,
ஒழிந்தார் சாவ – அவனல்லாத அரக்கர் பலரும் இறக்கும்படியும்,
வில் அம் கை கொண்டார் – (கோதண்டமென்னும்) தமது வில்லை அழகியகையில் ஏந்தியவராகிய திருமால்,
சார்பு – சாருமிடம்; (எ – று.)

மேலுலகத்துக் கற்பகச்சோலையிலுள்ள குரங்கு திருவேங்கடமலையின் மாஞ்சோலையிலுள்ள குரங்கை நோக்கிப்
பழங்கேட்கும்படி திருவேங்கட மலையும் அம்மலையில் வளம்பெற்ற சோலைகளும் ஓங்கியுயர்ந்துள்ளன வென்ற பொருளோடு,
கற்பகச்சோலையிலிருந்து வேண்டியவைபெற்று உண்ணும் அக்குரங்கு அவ்விடத்துப் பழங்களினும்
மிகஇனியதென்று விரும்பிக் கைநீட்டி இரக்கும்படி யுள்ளது திருவேங்கடமலைச்சோலையின்
மாம்பழத்துச் சுவை மிகுதி யென்ற கருத்தும், இதில் தோன்றும்.
அணைகட்டுதற்கு இடங்கொடாத சமுத்திரராசனைச் செருக்கடக்கும்பொருட்டு அவன் மீது ஆக்நேயாஸ்திரத்தைப் பிரயோகித்தற்காக
ஒருமுறையும், சாதுவான விபீஷணனை யொழிந்த இராவணன் முதலிய கொடிய அரக்கர் அனைவரையும் அழித்தற்காக
அம்பு எய்தற்கு மற்றொருமுறையும் வில்லையெடுத்து வளைத்தன னென்பார்,
“தாவுகடல் வேவ இலங்கைக் கொண்டார் வீடணனை வைத் தொழிந்தார் சாவ விலங்கைக்கொண்டார்” என்றார்.
இதனை “கடல்வழிவிட நிசிசரர் பொடிபட விருகண்சீறி” என்றாற்போலக் கொள்க.
இராமபிரான், போர்செய்து இராவணாதியரைத் தொலைத்தற்பொருட்டு வாநரசேனையோடு புறப்பட்டுத்
தென்கடற்கரை சேர்கையில், தன்னை வந்து சரணமடைந்த இராவணனது தம்பியான விபீஷணனுக்கு அபயமளித்து
அப்பொழுதே அவனுக்கு இலங்காபுரியி னரசாட்சியை முன்னதாகவே அளித்து முடிசூட்டிவைத்துப் பின்பு
சேதுபந்தனஞ் செய்து கடல் கடந்து இலங்கைபுக்கு அரக்கர்களை அழித்தபின் முன்சங்கற்பித்தபடி மீட்டும்
இலங்கையில் விபீஷணனுக்குப் பட்டாபிஷேகஞ்செய்வித்தன னென்பது,
“இலங்கைக்கு வீடணனை வைத்து ஒழிந்தார் சாவ வில் அங்கைக் கொண்டார்” என்றதனால் விளக்கப்பட்டது.
வீடணன் – விபீஷணன் என்ற வடசொல்லின் விகாரம்; அப்பெயர் – (பகைவர்க்கு) மிகப்பயங்கரனானவனென்று பொருள்படும்.

கவி – கபி யென்ற வடசொல்லின் திரிபு. “வேக,” “சாக” என்ற பாடங்களுக்கு, கு – சாரியை யென்க.

———

வெள்ளிய கல் மீதே விடர் முளைத்த செங்காந்தள்
வெள்ளி அகல் விளக்கு ஆம் வேங்கடமே –வெள்ளி எனும்
வேதியன் நாட்டம் கெடுத்தார் மேதினியைப் பாதலம் என்று
ஒது இயல் நாடு அங்கு எடுத்தார் ஊர் –43-

(இ – ள்.) வெள்ளிய கல்மீதே – வெண்ணிறமான வட்டப்பளிங்குக் கல்லின்மேலே,
விடர் முளைத்த – அக்கற்பிளப்பிலே முளைத்தெழுந்த,
செம் காந்தள் – செந்நிறமான காந்தளின்மலர்,
வெள்ளி அகல் விளக்கு ஆம் – வெள்ளியினாலாகிய தகழியில் ஏற்றப்பட்ட விளக்குப் போலத் தோன்றப் பெற்ற,
வேங்கடமே – , –
வெள்ளி எனும் வேதியன் – சுக்கிரனென்னும் அந்தணனது,
நாட்டம் – கண்ணை,
கெடுத்தார் – போக்கினவரும்,
மேதினியை – பூமியை,
பாதலம் என்று ஓது இயல் நாடு அங்கு எடுத்தார்–பாதாளமென்று பெயர்சொல்லப்படுகிற இயல்பையுடைய உலகமாகிய
அவ்விடத்தினின்று எடுத்தவருமான திருமாலினது, ஊர் – திருப்பதி; (எ – று.)

பளிங்கு வட்டத்து நடுப்பிளப்பில் முளைத்தெழுந்த காந்தட்செடியின் சிவந்த மலருக்கு,
வெள்ளித்தகழியில் ஏற்றிய விளக்கு உவமை கூறப்பட்டது; வடிவுவமை.
வெள்ளிய – வெண்மையென்னும் பண்பினடியாப் பிறந்த குறிப்புப்பெயரெச்சம்; இ – சாரியை.
வெள்ளி – வெண்ணிறமுடையது; இ – பெயர்விகுதி. அந்நிறமுடைமைபற்றியே, சுக்கிரனுக்கு வெள்ளி யென்று பெயர்.
விடர் – கற்பிளப்பு. காந்தள் – மலர்க்கு முதலாகுபெயர். “செங்காந்தள்” என்பதில், செம்மை – ஆகுபெயர்ப்பொருளுக்கு ஏற்ற அடைமொழி.
வேதியன் – வேதம்வல்லவன். நாட்டம் – நாடுதற்குக் கருவியானது; அம் – கருவிப்பொருள்விகுதி; பகுதி இடையொற்று இரட்டியது, விரித்தல்.
மேதிநீ – வடசொல்; (திருமாலாற் கொல்லப்பட்ட மதுகைடபரது) மேதசினால் (உடற்கொழுப்பினால்) நனைந்தது. என்று காரணப்பொருள்.
தேசமென்னும் பொருள்தருகிற “நாடு” என்ற சொல், இலக்கணையால், லோகமென்றபொருளில் உபயோகிக்கப்பட்டது.

வெள்ளியெனும் வேதியன் நாட்டங்கெடுத்தார்
“மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில், தக்கதிதன்றென்று தானம்விலக்கிய,
சுக்கிரன் கண்ணைத் துரும்பாற் கிளறிய, சக்கரக் கையன்–என்ற பெரியாழ்வார் திருமொழியையுங் காண்க.

“ஓதிய நாட்டங்கு” என்று பாடமாயின், ஓதப்பட்ட அந்நாட்டினின்று என்று பொருள்கொள்க;
அப்பொழுது, அதற்கு ஏற்ப மூன்றாமடியிலும் “வேதியநாட்டம்” என்று பாடங்கொள்ளவேண்டும்:
அத்தொடரில் வேதியன் என்ற உயர்திணைப்பெயரின் ஈற்றுனகரம் வருமொழிப் புணர்ச்சியில்
“சிலவிகாரமா முயர்திணை” என்றதனாற் கெட்ட தென்க. இனி, திரிபு யமகங்களிலே பொருள்நோக்கில் நகரவேறுபாடு
காணப்படினும் அதனை அமைதியாகக் கொள்ளல் மரபு;
அதற்குக்காரணம், வரிவடிவில் மிக்க வேறுபாடு இருப்பினும் ஒலிவடிவில் மிக்கவேறுபாடு இல்லாமை.

————

அல்லி மலர்க் காந்தளின் மேல் ஆடும் சுரும்பினங்கள்
மெல்லியலார் கைக்கழங்கு ஆம் வேங்கடமே -மல்லினரைப்
பண்டு அறைந்த வன்புடையார் பார்த்தனுக்குத் தத்துவ நூல்
விண்டு அறைந்த அன்பு உடையார் வெற்பு –44-

(இ – ள்.) அல்லி – அகவிதழ்கள் நிறைந்ததான,
மலர் காந்தளின் மேல் – செங்காந்தள் மலரின்மேல்,
ஆடும் – அசைந்தசைந்து மொய்த்து எழுகின்ற,
சுரும்பு இனங்கள் – வண்டுகளின் கூட்டங்கள்,
மெல்லியர்கள் கை கழங்கு ஆம் – மகளிர்களாற் கையிற்கொண்டு ஆடப்படுகின்ற கழற்காய் போன்றிருக்கப்பெற்ற,
வேங்கடமே – , –
பண்டு – முன்பு,
மல்லினரை – மற்போர்வீரர்களை,
அறைந்த – தாக்கியழித்த,
வன்பு உடையார் – வலிமை கெடாதவரும்,
பார்த்தனுக்கு – அருச்சுனனுக்கு,
தத்துவம் நூல் – தத்துவசாஸ்திரமாகிய கீதையை,
விண்டு அறைந்த – வெளியிட்டுக் கூறியருளிய,
அன்பு உடையார் – அன்பையுடையவருமாகிய திருமாலினது,
வெற்பு – திருமலை; (எ – று.)

மெல்லியர் – மென்மையான தன்மையையுடையவர். மகளிரது சிவந்த கை – செங்காந்தளுக்கும்,
திரண்டுஉருண்ட கழற்சிக்காய் – வண்டுக்கும், மகளிர் கைகளிற்கொண்டு ஆடும்போது அக்காய்கள்
அக்கைகளின்மேல் எழுந்தெழுந்து ஆடி மீண்டும் அவற்றில்விழுதல் – காந்தள்மலரின்மேல் வண்டு விழுந்து
எழுந்தெழுந்து மொய்த்தற்கும் உவமை; வடிவுந் தொழிலும் பற்றியது. ஆம் – உவமவுருபு.
மெல்லியர், இ – சாரியை. மல்லினர் – மல்லர்: இன் – சாரியை.
மற்போராவது – படைக்கலமின்றி உடல்வலிமைகொண்டு பலவகையாகச் செய்யும் போர். “பண்டு” என்றது, கிருஷ்ணாவதாரத்தை.

பார்த்தனுக்குத் தத்துவநூல் ஓதியது: – மகாபாரதயுத்தத்தில் முதல் நாட்போர்த்தொடக்கத்தில் எதிர்வந்துநின்ற வீரர்களெல்லாம்
பாட்டனும் அண்ணன் தம்பிமாரும் மாமனும் உறவினரும் கல்வி பயிற்றிய ஆசாரியரும் மனங்கலந்த
நண்பரு மாகவே யிருக்கக் கண்டு “உற்றாரையெல்லாம் உடன்கொன்று அரசாளப், பெற்றாலும் வேண்டேன் பெருஞ்செல்வம்” என்று
எண்ணிப் போர்புரியேனென்று காண்டீவம் கைந்நெகிழத் தேர்த்தட்டின் மீதே திகைத்துநின்ற அருச்சுனனுக்குக்
கண்ணன் தத்துவோபதேசஞ் செய்து தனதுவிசுவரூபத்தைக்காட்டி அவனது மயக்கத்தை ஓட்டி
அவனைப் போர்புரியுமாறு உடன்படுத்தினன் என்பதாம்.
அப்பொழுது உபதேசித்த தத்துவப்பொருளே, ஸ்ரீபகவத்கீதையென வழங்கப்படுகின்ற நூலாம். தத்வம் – வடசொல்; உண்மைப்பொருள்.
தத்துவநூல் – ஜீவாத்மா பரமாத்மா இவர்கட்குஉள்ள சம்பந்தம், கர்மம், பிறப்பு, முத்தி முதலியவற்றின் உண்மையான
தன்மையை உரைத்த சாஸ்திரம். பார்த்தன் – அருச்சுனன்; பிருதையின் மகன்: பிருதை – குந்தி.

விண்டு, விள் – பகுதி. உடையார் என்ற சொல் இரண்டனுள்,
முந்தி னது – உடையென்னும் வினைப்பகுதியின் மேற் பிறந்த எதிர்மறைத்தெரி நிலைவினையாலணையும்பெயரும்,
பிந்தினது – உடைமை யென்னும் பண்பி னடியாப் பிறந்த உடன்பாட்டுக்குறிப்புவினையாலணையும் பெயருமாம்.
இரண்டு அடியிலும் உடையவரென்றே பொருள்கொள்ளுதல், திரிபிலக்கணத் துக்கு ஒவ்வாது.
அல்லி யென்பதன் எதிர்மொழி – புல்லி; அது, புறவிதழைக் குறிக்கும்.

——–

காந்தள் இரவலர் போல் கை ஏற்ப கொன்றை கொடை
வேந்தன் எனப் பொன் சொரியும் வேங்கடமே –பூந்துளவின்
கான் மடங்கா மார்வத்தார் காண விரும்பினர் மேல்
நான் மடங்கு ஆம் ஆர்வத்தார் நாடு –45-

(இ – ள்.) காந்தள் – செங்காந்தள்மலர்,
இரவலர் போல் கை ஏற்ப – யாசகர் யாசித்தற்கு ஏற்கின்ற கை போன்று இருப்ப,
கொன்றை – கொன்றைமரம்,
கொடை வேந்தன் என பொன் சொரியும் – ஈகைக்குணமுடைய அரசன் (அந்த யாசகர்கையிற்)
பொன்னைச் சொரிவதுபோல (க் காந்தள் மலரின்மேல்) பொன்னிறமான தன்மலர்களைச் சொரிதற்கு இடமான,
வேங்கடமே – , –
பூ துளவின் – அழகிய திருத்துழாயினது,
கான் – வாசனை,
மடங்கா – மாறாத,
மார்வத்தார் – திருமார்பையுடையவரும்,
காண விரும்பினர்மேல் – (தம்மைச்) சேவிக்க விரும்பின மெய்யடியார்களிடத்து,
நால் மடங்கு ஆம் ஆர்வத்தார் – பலமடங்கு அதிகமாக வைக்கும் அன்பையுடைய வருமாகிய திருமாலினது,
நாடு – திவ்வியதேசம்; (எ – று.)

முன்னிரண்டடி – வடிவுபற்றிவந்த உவமையணி. கைபோலும் மலரை “கை” என்றும்,
பொன்போலும்மலரை “பொன்” என்றுங் கூறியது, உவமையாகுபெயர்.
கொடை – ‘ஐ’ விகுதி பெற்ற தொழிற்பெயர். இரவலர் – இரத்தலில் வல்லவர்; விடாது இரப்பவரென்க.
பூந்துளவின் கான்மடங்கா மார்வத்தார் – மிக்கபரிமளத்தையுடைய திருத்துழாய்மலையைத் திருமார்பில் எப்பொழுதும் சாத்தியுள்ளவர்.
நான்மடங்கு என்பதில், நான்கு என்பது – பலவென்னும் பொருளின்மேல் நின்றது;
இனி, தம்மிடத்து அடியார்கள் ஒருபங்கு அன்புவைத்தால் அவர்கள் பக்கல்தாம் அவ்வன்பினளவுக்கு
நான்கு பங்காக அன்புவைப்பவ ரென்றும் பொருளாம்.

———-

நாகத்தின் மேல் குறவர் நன்கு எறிந்த மாணிக்கம்
மேகத்தின் மின் புரையும் வேங்கடமே -மாகத்தின்
மாத்தாண்ட மண்டலத்தார் வாய் உண்டு உமிழ்ந்து அளந்து
காத்து ஆண்ட மண் தலத்தார் காப்பு –46-

(இ – ள்.) நாகத்தின்மேல் – யானையின்மேல்,
குறவர் – குறிஞ்சிநில மாக்கள்,
நன்கு எறிந்த – நன்றாக வீசியெறிந்த,
மாணிக்கம் – மாணிக்கமென் னும் இரத்தினங்கள்,
மேகத்தின் மின் புரையும் – மேகத்தினிடத்துக் காணப்படுகிற மின்னல்போல விளங்குதற்கு இடமான,
வேங்கடமே -,-
மா கத்தின் – பெரிய வானத்தில் விளங்குகின்ற,
மாத்தாண்ட மண்டலத்தார் – சூரியமண்டலத்தில் எழுந்தருளியிருப்பவரும்,
வாய் உண்டு – (யுகாந்தகாலத்தில்) வாயினாலே உட்கொண்டு,
உமிழ்ந்து – (பிரளயம் நீங்கின பொழுது மீண்டும்) வெளிப்படுத்தி,
அளந்து – (திரிவிக்கிரமாவதாரத்தில் திருவடியால்) அளந்து,
காத்து – (தாமான நிலையிலே) பாதுகாத்து,
ஆண்ட – (ஸ்ரீராமாவதாரத்தில்) அரசாளப்பட்ட,
மண் தலத்தார் – பூமியையுடையவரும் ஆகிய திருமால்,
காப்பு – (உயிர்களைப்) பாதுகாக்குமிடம்; (எ – று.)

கருநிறமுள்ள பெரிய மதயானைக்குக் காளமேகமும், செந்நிறமுடைய தாய் விளங்குகின்ற மாணிக்கத்துக்கு
மின்னலும் உவமை யெனக் காண்க. மாணிக்கம் என்ற வடசொல், திரிந்தது. புரையும் – உவமவுருபு.
மாகம் -மஹாகம் என்ற வடசொல்லின் விகாரம். மார்த்தாண்டமண்டலம் என்ற வடமொழித்தொடர், விகாரப்பட்டது.
எம்பெருமான் திவ்வியமான உருவத்துடன் சூரியமண்டலத்தில் எழுந்தருளியிருத்தல்பற்றி, “மாகத்தின் மாத்தாண்டமண்டலத்தார்” என்றார்.
ஆண்ட என்பதற்கு – மனைவியாக ஆட் கொள்ளப்பட்ட என்றும் பொருளுரைக்கலாம்; பூமி தேவியாதல் காண்க.
“பாரிடந்து பாரையுண்டு பாருமிழ்ந்து பாரளந்து பாரையாண்ட, பேராளன்” என்ற திருநெடுந் தாண்டகம் இங்குக் காணத்தக்கது.

————

செம்பதும் ராகச் சிலை சூழ் பெரும் பாந்தள்
வெம்பரிதி ஊர் கோள் ஆம் வேங்கடமே -உம்பர் உலகு
ஓதத்தின் அப்பு உற தான் ஓர் ஆலிலைத் துயின்றான்
வேதத்தின் அப்புறத்தான் வெற்பு –47-

(இ – ள்.) செம் – செந்நிறமான,
பதுமராகம் சிலை – பதுமராகக்கல்லை,
சூழ் – சுற்றிக்கொண்ட,
பெரு பாந்தள் – பெரிய மலைப்பாம்பு,
வெம் பரிதி ஊர்கோள் ஆம் – வெவ்விய சூரியமண்டலத்தைச் சுற்றிக் காணப்படும் பரி வேஷம் போன்று தோன்றப் பெற்ற,
வேங்கடமே – , –
ஓதத்தின் அப்பு – பிரளய சமுத்திரத்தின் நீர்வெள்ளம்,
உலகு உம்பர் உற – எல்லாவுலகங்களையுங் கவிந்து அவற்றின்மேற் சென்று பரவ,
தான் ஓர் ஆல் இலை துயின்றான் – (அப்பெருங்கடலில்) ஓர் ஆலிலையின்மேல் தான் யோகநித்திரை கொள்கின்றவனும்,
வேதத்தின் அப்புறத்தான் . வேதங்களுக்கு எட்டாமல் அப்பாற்பட்டவனுமான திருமாலினது,
வெற்பு – திருமலை; (எ – று.)

பத்மராகம் – வடசொல்; செந்தாமரைமலர்போலச் செந்நிறமுடைய தென்று பொருள்படும்; இது, நவரத்தினங்களுள் ஒன்று.
செந்நிறமுள்ளதாக மிகவிளங்குகிற பதுமராக ரத்தினத்துக்கு – அங்ஙனம் விளங்குகிற சூரிய மண்டலமும்,
அவ்விரத்தினத்தைச் சுற்றிக்கொண்ட பெரும்பாம்புக்கு – சிற்சிலசமயங்களில் சூரியமண்டலத்தைச் சுற்றி அருகிற்
காணப்படுகிற ஊர் கோள்வட்டமும் உவமைகூறப்பட்டன. பரிதி – வடசொல்.
ஊர்கோள் – ஊர்ந்துகொள்வது எனப் பொருள்படும் காரணக்குறி; ஊர்தல் – வளைதல்.
உம்பருலகு உற என்றுஎடுத்து, மேலுள்ள தேவலோகங்களுக்கும் மேலே பொருந்த என்று உரைத்தலும் ஒன்று.
இனி, தேவலோகமுமுட்பட யாவும் கடல்வெள்ளத்தினுள்ளே அகப்பட எனினும் அமையும்.
வேதங்கட்கும் எட்டாதபடியுள்ளது எம்பெருமானது ஸ்வரூபமென்பது, வேதங்களினாலேயே விளங்குகின்றது.

————

கோல மணிப் பாறையில் பாய் கோடரங்கள் செங்கதிரோன்
மேல் அனுமன் பாய்ந்தனைய வேங்கடமே –நாலு மறை
ஆய்ந்த பர தத்துவம் தான் ஆனான் குடம் ஆடல்
வாய்ந்த பரதத்து உவந்தான் வாழ்வு –48-

(இ – ள்.) கோலம் – அழகிய,
மணி பாறையில் – மாணிக்கப்பாறையின் மேல்,
பாய் – பாய்கின்ற,
கோடரங்கள் – குரங்குகள்,
செங் கதிரோன் மேல் அனுமன் பாய்ந்து அனைய – சிவந்த சூரியமண்டலத்தின்மேல் அனுமான் பாய்ந்தாற்போலத் தோன்றுதற்கு இடமான,
வேங்கடமே – ,
நாலு மறை – நான்கு வேதங்களாலும்,
ஆய்ந்த – ஆராய்ந்து கூறப்பட்ட,
பர தத்துவம் – (எல்லாவற்றுக்கும்) மேலான உண்மைப்பொருள்,
தான் ஆனான் -தானேயானவனும்,
குடம் ஆடல் வாய்ந்த பரதத்து – குடமெடுத்து ஆடுதல் பொருந்தின கூத்தைச் செய்வதிலே,
உவந்தான் – திருவுள்ள முகந்தவனுமாகிய திருமால்,
வாழ்வு – வாழுமிடம்; (எ – று.) –
மணி – செம்மணி.

சுமேருபர்வதத்தில் கேசரியென்ற வாநர வீரனது மனையாளான அஞ்சனாதேவி வாயுதேவனது அநுக்கிரகத்தால்
ஒரு குமாரனைப்பெற்றுக் கனிகள் கொணர்தற்குக் காட்டிற்குச் செல்ல, அக்குமாரன் பசி பொறுக்கமாட்டாமல்
காலையிலுதித்த ஆதித்த பிம்பத்தைக் கனியெனக்கருதித் கவர்வான் எழுந்து, தந்தையாகியவாயுவினது உதவிகொண்டு
அச்சூரியமண்டலத்தின் மீது பாய்ந்தனனென்ற வரலாறு, இங்கு அறியத்தக்கது.
“செழுமலர்த்திரு வனையதாய் செழுங்கனிநாடிப், பழுவமுற்றிடப் பசியினாற்பதைபதைத் திரங்கி,
யழுதாற்றிய பாலக னன்னை முன்னுரைத்த, பழம் நமக்கிதுவாமென ப்பரிதிமேற் பாய்ந்தான்” என்றார் ஒட்டக்கூத்தரும்.
அப்பொழுது சூரியனைப் பிடிக்கவந்த இராகு இவ்வாநரனைக் கண்டு அஞ்சியோடி இந்திரனிடம் முறையிட,
இந்திரன் சினங்கொண்டு வந்து வச்சிராயுதத்தால் மெல்லப்புடைக்க, அக்குரங்கு கன்னத்தில் அடிபட்டுக் கன்னம் சிதையப் பெற்றதனால்,
அதற்கு, பிறகு “ஹநுமாந்” என்ற பெயர் இந்திரனால் வைக்கப்பட்டது.
ஹநுமாந் என்ற வடசொல் – கன்னத்தில் விசேஷமுடையவ னென்று பொருள்படும்;
ஹநு – கன்னம், மாந் – உடைமைப்பொருள் காட்டும் வட மொழிப்பெயர்விகுதி. அப்பெயர், அனுமன் என விகாரப்பட்டது.
செந்நிறமாக விளங்கும் சூரியமண்டலத்தின்மீது பாய்ந்த அநுமானென்னும் தெய்வக்குரங்கை,
செந்நிறமான மாணிக்கப் பாறையின்மேற் பாயும் குரங்குகட்கு உவமை கூறினார்.

நாலு – நான்கு ஈறுகெட்டு னகரம் லகரமாய் உகரச்சாரியைப் பெற்றது. பரதத்வம் – பரம்பொருள்.
குடமாடல் வாய்ந்த பாரதம் – குடக்கூத்து; அதாவது – இடையர்கள் செல்வச்செருக்கினால் தமது மகிழ்ச்சிக்குப்
போக்குவீடாகக் குடங்களையெடுத்து மேலேயெறிந்து மீண்டும்ஏந்தி ஆடுவதொரு கூத்து.
பஞ்சலோகங்களாலும் மண்ணாலுங்குடங் கொண்டு ஆடுவதென்பர். கண்ணபிரானுக்கு அக்கூத்தில் மிகவும்பிரியமாதலை
“குடங்களெடுத் தேறவிட்டுக் கூத்தாடவல்ல எங்கோவே” என்ற பெரியாழ்வார் திருமொழியினாலும் உணர்க.
இப்பாசுரத்தின் வியாக்கியாநத்தில் “பிராமணர் ஐசுவரியம் விஞ்சினால் யாகாதிகள் பண்ணுமாபோலே
இடையர் ஐசுவரியம் விஞ்சினால் செருக்குக்குப் போக்குவிட்டு ஆடுவதொரு கூத்தாய்த்து, குடக்கூத்தாவது,”
“இடையர்க்கு ஐசுவரியந்தானாவது – கோஸம்ருத்தியிறே: அந்த ஸம்ருத்தி குறைவறவுள்ளது தனக்கே யாகையாலே,
அத்தால் வந்த செருக்குக்குப் போக்குவிட்டுக் குடக்கூத்தாடினபடி சொல்லுகிறது; தலையிலே அடுக்குக் குடமிருக்க,
இரண்டுதோள்களிலும் குடங்களிருக்க, இரண்டுகைகயிலும் குடங்களையேந்தி ஆகாசத்திலேயெறிந்து
ஆடுவதொரு கூத்தாய்த்து, குடக்கூத்தாவது” என்ற வாக்கியங்கள் இங்கு உணரத்தக்கன.
குடம் – தயிர்த்தாழி. “குடத்தால் குன்றெடுத்தோ னாடல்,” “நீணிலமளந்தோ னாடிய குடம்” என்றார் பிறரும்.
பரதம் – வடசொல்; பாவம், ரஸம், தாளம் இம் மூன்றையு முடைமைபற்றி, பரதமென்று நாட்டியத்துக்குப் பெயரென்பர்.

———-

கொம்பின் இறால் வாங்க நிமிர் குஞ்சரக்கை அம்புலி மேல்
வெம்பி எழும் கோள் அரவு ஆண் வேங்கடமே -தும்பி பல
போர் காதும் ஈர்ந்தார் புனை அரக்கி மூக்கினொடு
வார் காதும் ஈர்ந்தார் வரை –49-

(இ – ள்.) கொம்பின் – மரக்கொம்பிற்கட்டிய,
இறால் – தேன்கூட்டை,
வாங்க – எடுத்தற்கு,
நிமிர் – உயரத்தூக்கிய,
குஞ்சரம் கை – யானையினுடைய துதிக்கை,
அம்புலிமேல் வெம்பி எழும் கோள் அரவு ஆம் – சந்திர மண்டலத்தைப் பற்றுதற்கு அதன்மேல் கறுக்கொண்டு
எழுகின்ற கரும்பாம்பு வடிவமான (இராகுவென்னும்) கிரகம்போலத் தோன்றப்பெற்ற,
வேங்கடமே -,-
தும்பி பல போர் காதும் – பல வண்டுகள் நெருங்கி மொய்த்து ஒன்றோடு ஒன்று தாக்கப்பெற்ற,
ஈர் தார் – (தேனினாற்) குளிர்ந்த மலர்மாலையை,
புனை – தரித்த,
அரக்கி – சூர்ப்பணகையினது,
மூக்கினொடு – மூக்கையும்,
வார் காதும் – நீண்ட காதையும்,
ஈர்ந்தார் – அறுத்தவராகிய திருமாலினது,
வரை – திருமலை; (எ – று.)

இறாலுக்குச் சந்திரனும், அதன்மீது எடுத்த யானைத் துதிக்கைக்குச் சந்திரன்மீது எழும் இராகுவென்னும் பாம்பும்
வடிவில் உவமம் குஞ்சரம் – வடசொல்; காட்டுப்புதர்களிற் சஞ்சரிப்பது என்றும், துதிக்கையையுடையது என்றும் காரணப் பொருள்படுவது.
கிரகணகாலத்திற் சூரியனை மறைக்கின்ற சந்திரன் சாயையும், சந்திரனை மறைக்கின்ற பூமியின்சாயையும்
இராகு கேதுக்களென்னும் பாம்புவடிவமான கிரகங்க ளெனப்படும். பாற்கடல் கடைகையில் உண்டான அமிருத
கலசத்தை யெடுத்துக்கொண்ட திருமால் மிகவும் அழகிய மோகினியென்னும் பெண்வடிவத்தால்
அசுரர்களை மயக்கித் தேவர்களுக்கே அமிருதத்தைப் பங்கிட்டுக் கொடுத்து வருகையில், இராகுவென்னும் ஓரசுரன் தான்
இருத்தற்குஉரிய அசுரர் கூட்டத்தைவிட்டு வஞ்சனையாகத் தேவர்கூட்டத்தினிடையிலே புக்குக் கையேற்று அமிருதத்தை வாங்கி யுண்ண,
அதனைச் சூரியசந்திரர் குறிப்பித்த மாத்திரத்தில் எம்பெருமான் அவனை அகப்பையால் அடித்துத் தலைவேறு உடல்வேறாக்க,
அமிருத முண்டதனால் உயிர்நீங்காத அந்தத் தலையும் உடம்பும் விஷ்ணுவின் அனுக்கிரகத்தால் இராகு கேதுக்களென்ற
இரண்டு கிரகங்களாகிச் சூரியன்முதலிய ஏழு கிரகங்களோடு சேர்ந்து கரும்பாம்பு செம்பாம்புவடிவுபெற்று,
தம் மேற்கோள்சொன்ன சூரிய சந்திரர்க்குப் பகையாய்ச் சிற்சிலகாலத்தில் அவர்களைப் பிடித்துக்கொள்கின்றன வென்பது, புராணவரலாறு.

மலர்களின் தேனை யுண்ணுதற்பொருட்டுப் பல வண்டுகள் நெருங்கி மொய்க்கும்போது, நான்முன்னே நான்முன்னே யென்று
ஒன்றன்மேலொன்றாக விழு மென்பது, “தும்பியல போர்காதும்” என்பதன் கருத்து;
இது, தார்க்கு அடைமொழி; அரக்கிக்கு அடைமொழியாகக்கொண்டு, பலயானைகளோடு போர்செய்யும் வலிமையுடைய
என்று பொருள்கொள்ளவும் இடமுண்டு.
ஈர்ந் தார் – குளிர்ச்சியாகிய மாலை யெனக் கொண்டால் பண்புத் தொகையும், குளிர்ச்சியையுடைய மாலையெனக் கொண்டால்
இரண்டனுருபும் பொருளுந் தொக்கதொகையுமாம். ஈர் + தார் = ஈர்ந்தார்; “யரழமுன்னர்” என்னுஞ் சூத்திர விதி.
சூர்ப்பணகை இராமலக்ஷ்மணரிடம் வரும்பொழுது அழகியவடிவங்கொண்டு ஆடையாபரணாதிகளால் தன்னை
யலங்கரித்து வந்தமை தோன்ற, “தும்பிபல போர்காது மீர்ந்தார் புனையரக்கி” என்றார்;
“அறலோதிப், பூ முரலும் வண்டு மிவை பூசலிடு மோசை” என்ற கம்பராமாயணத்தையுங் காண்க.

சூர்ப்பணகையை அங்கபங்கப்படுத்தியது இராமபிரானது திருத்தம்பி யான இளையபெருமாளினது செய்கையாயினும்,
அதனைப் பெருமான் மேல் ஏற்றிச் சொன்னது, இராமபிரானது கருத்திற்கு ஏற்ப அவன் கட்டளையிட்டபடி.
இவன்செய்தன னாதலின் ஏவுதற்கருத்தாவின் வினையாதல்பற்றி யென்க.
அன்றியும், இளையபெருமாளும் திருமாலினது திருவவதாரமே யாதலால், அங்ஙனஞ் சொல்லத் தட்டில்லை.
மற்றும், “ராமஸ்ய தக்ஷிணோபாஹு:” என்றபடி இராமனுக்கு இலக்குமணன் வலத்திருக்கை யெனப்படுதலால்,
அங்ஙனம் கையாகிற இலக்குமணனது செயலை இராமன் மேல் ஒற்றுமைநயம்பற்றி ஏற்றிச்சொல்லுதல் தகுதியே.
“அரக்கிமூக்கை நீக்கிக் கரனோடுதூடணன் தனுயிரை வாங்கி” என்று குலசேகராழ்வாரும்,
“தன் சீதைக்கு, நேரவைனென்றோர் நிராசரிதான் வந்தாளைக்,
கூரார்ந்த வாளாளாற் கொடிமூக்குங் காதிரண்டும்,
ஈராவிடுத் தவட்குமூத்தோனை வெந்நரகஞ், சேராவரையே சிலைகுனித்தான்” என்று திருமங்கையாழ்வாரும் அருளிச்செய்தமையுங் காண்க.
“தம்முடைய கையாலேயிறே தண்டிப்பது; …… தம்முடைய தோளாயிருக்கிற இளையபெருமாளை
இடுவித்துத் தண்டிப்பித்தார்” என்ற வியாக்கியாந வாக்கியமும் உணரத்தக்கது.

———-

வண்மை திகழ் வெண் பளிங்கு வட்டத்தில் கண் துயில் மான்
விண் மதியில் மான் ஏய்க்கும் வேங்கடமே -ஒண் மதியால்
நூலைத் தாம் ஒது அரனார் நோக்க அரி யார் துளவ
மாலைத்தா மோதனார் வாழ்வு –50-

(இ – ள்.) வண்மை திகழ் – அழகியதாக விளங்குகின்ற,
வெள் பளிங்கு வட்டத்தில் – வெண்ணிறமான வட்டவடிவுள்ள பளிக்குப்பாறையில்,
கண் துயில் – படுத்துத்தூங்குகிற,
மான் -, விண் மதியின்மான் ஏய்க்கும் – வானத்துச் சந்திரமண்டலத்தின் நடுவிலே காணப்படுகிற மான்வடிவத்தை யொத்திருக்கப்பெற்ற,
வேங்கடமே -,-
ஒள் மதியால் – சிறந்த புத்தியினால் (தமது புத்திவிசேஷத்தால்),
நூலை தாம் ஓது – பல நூல்களைத் தாம்ஓதிய,
அரனார் – சிவபெருமானாலும்,
நோக்க அரியார் – கட்புலனாகக் கண்டு தரிசிக்க முடியாதவரும்,
துளவம் மாலை – திருத்துழாய்மாலையையணிந்த,
தாமோதரனார் – தாமோதரனென்ற ஒருதிருநாம முடையவருமாகிய திருமால்,
வாழ்வு – வாழுமிடம்; (எ – று.)

பளிங்கு வட்டத்துக்குச் சந்திரமண்டலமும், அதனிடையே அசையாது துயில்கிற மானுக்குச் சந்திரமண்டலத்தின் நடுவிலே
அசைவின்றிக் காணப் படுகிற மான்வடிவமும் உவமை; வடிவு பற்றியது.
பளிங்கு – ஸ்படிகம். வ்ருத்த மென்னும் வடமொழி, வட்டமெனச் சிதைந்தது. ஏய்க்கும் – உவமவுருபு.
மதி – அறிவைக் குறிக்கையில், வடசொல். தாம் – அசை. ஓதுதல் – கற்றலும், கற்பித்தலும், நூலியற்றலும்.
தாமோதர என்ற வடசொல். தாம + உதர எனப் பிரிந்து, (வெண்ணெய் களவாடினதற்கு ஒருதண்டனையாக யசோதையாற் கட்டப்பட்ட)
கயிற்றை வயிற்றிலுடையவனென்று காரணப் பொருள்படும் தாமம் – கயிறு, உதரம் – வயிறு.

——————

சிலேடைகள்
காதல் இற்றுச் சார்ந்தவர்க்கும் காமியத்தைச் சார்ந்தவர்க்கும்
வேதனைக் கூற்றைத் தவிர்க்கும் வேங்கடமே -போதகத்தை
மோதி மருப்பு ஒசித்தார் முன் பதினாறாயிரவர்
ஓதி மருப்பு ஒசித்தார் ஊர் –51-

(இ – ள்.) காதல் இற்று சார் தவர்க்கும் – (பிரபஞ்சவாழ்வில்) ஆசை (முழுவதும்) ஒழிந்து (தன்னிடம் வந்து) சேர்ந்த முனிவர்களுக்கும்,
வேதனை கூற்றை தவிர்க்கும் – பிரமனையும் யமனையும் விலக்குகின்ற:
காமியத்தை சார்ந்தவர்க்கும் – பிரபஞ்சவாழ்வுகளை விரும்பியவர்களுக்கும்,
வேதனை கூற்றை தவிர்க்கும் – துன்பங்களின் வகைகளை ஒழிக்கின்ற:
வேங்கடமே -,-
போதகத்தை – யானையை,
மோதி – தாக்கி,
மருப்பு ஒசித்தார் – அதன் தந்தங்களை முறித்தவரும்,
முன் – முற்காலத்தில் (கிருஷ்ணாவதாரத்தில்),
பதினாறாயிரவர் – பதினாறாயிரம் இளமங்கையருடைய,
ஓதி – கூந்தலின்,
மரு – நறுமணத்தை,
பொசித்தார் – மோந்து நுகர்ந்தவருமான திருமாலினது,
ஊர் – வாசஸ்தாநமாம்; (எ – று.)

“வேதனைக்கூற்றைத் தவிர்க்கும்” என்ற தொடர் – வெவ்வேறுவகையாகப் பிரியாது ஒருவகையாகவே பிரிந்து
இருபொருள்பட்டதனால், செம்மொழிச்சிலேடை; இது, வடமொழியில் அபிந்நபதச்லேஷா எனப்படும்:
பிறவும் இங்ஙனம் வருவன காண்க.
காதலிற்றுச்சார்ந்தவராவார் – எல்லாவகைப்பற்றுக்களையும் முற்றத்துறந்து முத்திபெறுதற்பொருட்டுத் திருவேங்கடமுடையானை
வந்து சரணமடைகிற முனிவர்கள்: அவர்கட்குப் பிரமனையும் யமனையும் விலக்குகின்ற என்றது –
பிரமனால்வரும் பிறப்பையும், யமனால்வரும் இறப்பையும் போக்கி முத்தியளிக்கிற மகிமையையுடைய என்றபடி.
வேதன் என்றது – அவனது காரியமான ஜநநத்துக்கும், கூற்று என்றது – அவனது காரியமான மரணத்துக்கும் இலக்கணை.
காமியத்தைச் சார்ந்தவராவார் – அழியுந்தன்மையனவான இம்மை மறுமைப்பேறுகளை விரும்பி வந்து சேர்பவர்கள்.
அவர்கட்குத் துன்பவகைகளை ஒழிக்கின்ற என்றது –
“பித்து மலடூமை முடம் பேய் குருடு கூன் செவிடு, மெய்த்துயர்நோய் தீர்த்தருளும் வேங்கடமே” என்றவாறு
அவர்களுடைய உடற்குற்றங்களையும் நோய்களையும் மகப்பேறின்மை முதலிய மநோவியாதிகளையும் நீக்கி
அவர்கள் வேண்டிய பயன்களை அவர்கட்கு வேண்டியவாறே உண்டாகச் செய்கின்ற சிறப்பையுடைய என்றபடி.
பற்றற்று வந்தவர்க்கும். பற்றறாதுவந்தவர்க்கும் சமமாக இடையூறகற்றியருள்கின்ற வேங்கடமெனச் சொல் நயத்தாற்
சமத்காரந் தோன்றக் கூறியவாறு காண்க.

கண்ணபிரான் இளமையில் திருவாய்ப்பாடியில்வளரும்போது தன்னிடங் காதல்கொண்ட பதினாறாயிரம் கோப
ஸ்த்ரீகளோடுகூடி இன்பம்நுகர்ந்தமையும், கண்ணன் நரகாசுரனைச் சங்கரித்தபின்பு அவனாற் சிறை
வைக்கப் பட்டிருந்த தேவசித்தகந்தருவாதி கன்னிகைகள் பதினாறாயிரம் பேரையும் பதினாறாயிரம் வடிவமெடுத்து
விவாகஞ்செய்துகொண்டு அவர்களோடு கூடி இன்பம் நுகர்ந்தமையும் பற்றி, “பதினாறாயிரவரோதி மருப்பொசித்தார்” என்றார்.
“ஓதிமருப்பொசித்தார்” என்றது – அவர்களுடைய கூந்தலில் உத்தம இலக்கணமாக இயற்கையில் அமைந்துள்ள
நறுமணத்தையும் நறுநெய்பூசி நன்மலர் சூடுதலாற் செயற்கையில் அமைந்த நறுமணத்தையும், உட்கொண்டு உளங்களித்தவ ரென்றபடி.
ஐம்பொறிகளாலும் அனுபவிக்கும் இன்ப வகைகளுள் இங்கு மூக்கினாற் புலம்நுகர்ந்ததைக் கூறியது,
பிறவாறு இன்பம் நுகர்ந்ததற்கும் உபலக்ஷணம்.

உம்மைகள் – எண்ணுப்பொருளன, இற்று என்ற வினையெச்சத்தில், இறு என்ற குறிலிணைப்பகுதி இடை ஒற்று இரட்டி இறந்தகாலங் காட்டிற்று.
சார்தவர் – வினைத்தொகை. தவர் – தவஞ்செய்பவர். “காதலித்துச்சார்ந்தவர்” என்று பாடமோதி, (பரமபதத்தைப்பெற) விரும்பித்
தன்னைவந்தடைந்தவர் என்று உரைப்பாரும் உளர். காம்யம் – வடசொல்; விரும்பப்படும் பொருள்.
வேதன் – வேதங்களை ஓதியவன்; அன்றி, வேதா என்னும் வடசொல்லின் விகார மெனக்கொண்டால், விதிக்குங் கடவு ளென்று ஆகும்;
விதித்தல் – படைத்தல். கூற்று – (உடலையும் உயிரையும் வெவ்வேறு) கூறாக்குபவன்.
இரண்டாம் பொருளில் வேதநா என்ற வடசொல் வேதனையென விகாரப்பட்டது.
கூற்றை என்றது – கூறுஎன்பதன் இரண்டாம் வேற்றுமை விரி.
“தவிர்க்கும் வேங்கடம்” என்றதில், நிலைமொழியிறுதியில் நின்ற மகரவொற்று – வகரத்தின்முன் வந்ததனால், மகரக்குறுக்கம்;
மாத்திரை – கால். போதகம் – வடசொல். போதகத்தை மோதி மருப்பொசித்தார் – போதகத்தை மருப்புஒசித்து மோதினார் என விகுதி பிரித்துக் கூட்டலுமாம்.
முன் – காலமுன்; இதனை, மத்திமதீபமாக முன்நின்ற “ஒசித்தார்” என்பதனோடும் இயைக்கலாம்.
ஒசித்தார். பொசித்தார் – உயர்வுப்பன்மை. பதினாறாயிரவர் -எண்ணடியாப்பிறந்தபெயர்; இங்கே, தொகைக்குறிப்பு.
ஓதி – பெண்மயிர். பொசித்தல் = புஜித்தல். புசித்தல், உண்ணல், நுகர்தல், துய்த்தல் என்பன – ஒருபொருளன.
“ஊர்” என்றது – திருமாலுக்குத் திருவேங்கடம் இயல்பிலுரியதாதலை விளக்கும்.

————–

கேள்வித் துறவோரும் கேடு அற இல் வாழ்வோரும்
வேள்விக்கின மாற்றும் வேங்கடமே -மூள்வித்து
முன்பாரத முடித்தார் மொய் வேந்தர் வந்து அவிய
வன் பாரதம் முடித்தார் வாழ்வு –52-

(இ – ள்.) கேள்வி துறவோரும் – ஞானக்கேள்விகளையுடைய துறவிகளும்,
வேள் விக்கினம் மாற்றும் – மன்மதனால் வரும் இடையூற்றை நீக்குதற்கு இடமான:
கேடு அற இல் வாழ்வோரும் – தீங்கில்லாமல் இல்லற வொழுக்கத்தில் வாழ்பவர்களும்,
வேள்விக்கு இனம் ஆற்றும் – யாகத்துக்கு இனமான நற்செயல்களைச்செய்தற்கு இடமான:
வேங்கடமே – , –
முன்பு ஆ – முற்காலத்தில்,
ரதம் முடி தார் மொய் வேந்தர் வந்து அவிய – தேரையும் கிரீடத்தையும் மாலையையும் உடைய வலிய அரசர்கள் வந்து (பொருது) இறக்கும்படி,
வல் பாரதம் – கொடிய பாரதயுத்தத்தை,
மூள்வித்து முடித்தார் – மூட்டிநிறைவேற்றியவராகிய திருமாலின்,
வாழ்வு – வாசஸ்தாநம்; (எ – று.)

“வேள்விக்கினமாற்றும்” என்ற தொடர் – வெவ்வேறுவகையாகப் பிரிந்து இருபொருள்பட்டதனால், பிரிமொழிச்சிலேடை;
இது, வடமொழியில் பிந்நபதச்லேஷா எனப்படும்: பிறவும் இங்ஙனம் வருவன காண்க.
கேள் வித்துறவோர் – “ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவேயுடையவனான குரு” வினிடத்து உபதேசமொழிகளைக் கேட்டு
உணர்ந்து பற்றுக்களைத் துறந்தவ ரென்றபடி. முத்தியளித்தற்குஉரிய முதற்பொருளை உணர்வதற்கு ஏற்ற உபாயங்களான
கேள்வி விமர்சம் பாவனை என்ற மூன்றனுள் முதலதும், மற்றை இரண்டற்குங் காரணமுமான கேள்வியையுடைமை கூறப்பட்டது.
கேள்வி யெனினும், சிரவண மெனினும் ஒக்கும்.
துறவோர் – துறவையுடை யோர்; துறவாவது – புறமாகிய செல்வத்தினிடத்தும் அகமாகிய உடம்பி னிடத்தும் உளதாகிய பற்றை விடுதல்.
அவர்கள் வேள் விக்கின மாற்றுதல் – எக்காரணத்தாலும் காமஅவாவைக் கொள்ளாமை.
கேடு – துன்பமும், குற்றமும். இல்வாழ்வோர் வேள்விக்கு இனம் ஆற்றுதல் – பிரமயஜ்ஞம், தேவயஜ்ஞம், மநுஷ்யயஜ்ஞம்,
பித்ருயஜ்ஞம், பூதயஜ்ஞம் என்ற பஞ்சமகா யஜ்ஞங்களைத் தவறாதுசெய்தல்;
(பிரமயஜ்ஞம் – வேதமோதுதல் தேவயஜ்ஞம் – ஓமம்வளர்த்தல். மநுஷ்யயஜ்ஞம் – விருந்தினரை உபசரித்தல்.
பித்ருயஜ்ஞம் – தர்ப்பணஞ்செய்தல். பூதயஜ்ஞம் – பலியீதல்.) இவை இல்லறத்தார்க்குஉரிய ஐம்பெருவேள்வி யெனப்படும்.
துறவறத்தாரும் இல்லறத்தாரும் சமமாக அவரவர் தொழிலைச் செய்யப்பெற்ற வேங்கட மெனச் சொல் நயத்தாற் சமத்காரந்தோன்றக் கூறியவாறு காண்க.

துஷ்டர்களையெல்லாம்சங்கரித்துப் பூமிபாரநிவிருத்தி செய்தற்பொருட் டுத் திருவவதரித்த கண்ணபிரான் அதற்கு உபயோகமாகப்
பாண்டவர்க்குத் துணைநின்று பலபடியாகஉதவிப் பாரதயுத்தத்தை ஆதியோடந்தமாகநடத்தி முடித்தமை, மகாபாரதத்திற் பிரசித்தம்
சூதுபோரில் இழந்த இராச்சியத்தை மீளவும் மோதுபோர்செய்து பெறுவதில் தருமபுத்திரனுக்கு உபேக்ஷையுண்டான பொழுதெல்லாம்
அங்ஙனம் வெறுப்புக் கொள்ளாதவண்ணம் பலவாறுபோதித்துப் போர்தொடங்கும்படி தூண்டியும்,
பின்பு போர்த்தொ டக்கத்தில் “உற்றாரையெல்லா முடன்கொன் றரசாளப், பெற்றாலும்வேண்டேன் பெருஞ்செல்வம்” என்று
சொல்லிப் போரொழிந்த அருச்சுனனுக்குக் கீதையை உபதேசித்து அவனைப்போர்புரிய உடன்படுத்தியும்
கண்ணபிரானே பாரதப்போரை மூட்டியவனாதல் காண்க.

கேள்வி – கேட்டல்: ‘வி’ விகுதி பெற்ற தொழிற்பெயர். இல் – வீடு, இல்லறம்.
வேள் – (ஆடவர்க்கும் மகளிர்க்கும்) விருப்பத்தை விளைக்குந்தேவன்; அல்லது, விரும்பப்படும் அழகையுடையவன்:
காமனென்ற வட மொழிப்பெயரும் இவ்விருபொருள்படும். விக்நம் – வடசொல்.
மாற்றும் வேங்கடம், ஆற்றும் வேங்கடம் – பெயரெச்சம், இடப்பெயர் கொண்டது. ‘முன்பா’ என்றது – அவிய,
மூள்வித்து, முடித்தார் என்றவற்றோடு இயையும். முன்பு, பு – சாரியை. ஆ – ஆக என்பதன் விகாரம்.
ரதம் – வடசொல். சிந்தாமணியில், ‘ரவிகுலதிலகன்’ என வடமொழியிற் பிறந்தவண்ணமே தற்சமமாகக் கூறினாற்போல,
இங்கு இரதமெனத் திரியாமல் ரதமென்றே கூறினார். ‘ரதவேந்தர்’ என்றது – அதிரத மகாரத சமரத அர்த்தரத வீர ரென்றவாறு.
முடிவேந்தர் – கிரீடாதிபதிகளான அரசர். தார் என்றது, இங்கு – அடையாளப்பூமாலையோடு போர்ப்பூமாலையையுங் குறிக்கும்.
பாரதம் – பரதவமிசத்தாருள் நிகழும் போர். வாழ்வு என்ற சொல்லின் ஆற்றலால்,
திருவேங்கடம் திருமாலின் திருவுள்ளத்துக்கு மிகப்பாங்காயிருத்தல் விளங்கும்.

————

பொய் ஆம் வினையேனைப் போல்வாரும் அன்பரும் செய்
மெய் ஆம் வழுத்தேயும் வேங்கடமே செய்யாள்
தனத்து வசப் பொற்பு உள்ளார் தானவரை மோதும்
சினத்து வசப் பொற் புள்ளார் சேர்வு –53-

(இ – ள்.) பொய் ஆம் வினையேனை போல்வாரும் – பொய்கலந்த தொழிலையுடைய என்னைப் போன்ற நீசர்களும்,
செய் – செய்த,
மெய் ஆம் வழு – சரீரசம்பந்தத்தாலாகிய குற்றங்கள் (கருமங்கள்),
தேயும் – நீங்குதற்கு இடமான:
அன்பரும் – உள்ளன்புடைய அடியார்களும்,
செய் – செய்கின்ற,
மெய் ஆம் வழுத்து – உண்மையான தோத்திரங்கள்,
ஏயும் – பொருந்தப்பெற்ற:
வேங்கடமே -,-
செய்யாள் தனத்து வசம் – திருமகளினது தனத்துக்கு வசப்பட்ட,
பொற்பு உள்ளார் – அழகையுடையவரும்,
தானவரை மோதும் – அசுரர்களைத் தாக்குகின்ற,
சினம் – கோபத்தையுடைய,
துவசம் – கொடியான,
பொன் புள்ளார் – பொன்னிறமான கருடனென்னும் பறவையையுடையவருமாகிய திருமால்,
சேர்வு – (திருவுள்ளமுவந்து) சேருமிடம்; (எ – று.)

பொய்யாம்வினை – உள்ளன்பின்றி அகமொன்று புறமொன்றாக வெளி வேடங்கொண்டு செய்யும் வஞ்சனைச்செயல்.
“பொய்யாம் வினையேனைப் போல்வார்” என்று தம்மைத் தாம் இழித்துக் கூறினார், விநயத்தால்.
மெய்யாம் வழுத்து – மனப்பூர்வமாகச் செய்யுந் தோத்திரம். போலியன்பரும் உண்மையன்பரும் ஒருநிகராக இருக்கப்பெற்ற
வேங்கடமெனச் சொல்நயத் தாற் சமத்காரந்தோன்றக் கூறியவாறுகாண்க.
முன்னிரண்டடியில் “பொய்யாம்”, “மெய்யாம்” என மாறுபட்ட சொற்கள் வந்தது, முரண்தொடை.

“செய்யாள் தனத்து வசம்” என்றது – பொற்புள்ளார்க்கு அடைமொழி.
இத்தொடர் – திருமகளினது திருமேனியழகில் திருமால் ஈடுபடுதலையும். அத்திருமகளை ஈடுபடுத்தவல்ல
திருமாலின் திவ்வியசௌந்தரியத்தையும் விளக்கும்.
துவசப்பொற்புள்ளார் – பக்ஷிராஜனான கருடனை வாகனமுங் கொடியுமாக உடையவர்.
கருடாழ்வானது திருத்தோளின்மேல்ஏறித் திருமால் அசுரசேனையோடு போர்செய்யும்பொழுது, அக்கருடனும் எதிர்க்கிற
அசுரர்மீது கோபம்மூண்டு தன்சிறகுகளினாலும் மூக்கினாலும் கால்களினாலும் அவர்களைத் தாக்கியழித்தல் இயல்பு.

வழுத்து – முதனிலைத்தொழிற்பெயர். செய்யாள் – செந்நிறமுடையவள்; செம்மையென்னும் பண்புப்பகுதி ஈறுபோய்
முன்நின்ற மகரம்யகரமாத் திரிந்தது. ஸ்தநம், வசம், தாநவர், த்வஜம் – வடசொற்கள். தாநவர் –
(காசியப முனிவனது மனைவியருள்) தநுஎன்பவளிடம் பிறந்தவர்: தத்திதாந்தநாமம். “பொற்பே பொலிவு” என்ற
தொல்காப்பியத்து உரியியற்சூத்திரத்தால், பொற்பு என்பது – உரிச்சொல்லென அறிக. “சேர்பு” என்றும் பாடமுண்டு.

———–

கோடல் இலா உள்ளத்துக் கோது இல் அடியவரும்
வேடரும் அங்கைவரை வெல் வேங்கடமே -மூடர்
மனம் ஆம் மனைக்கு ஒன்றார் வன் கஞ்சன் என்னும்
சின மா மனைக் கொன்றார் சேர்பு –54-

(இ – ள்.) கோடல் இலா – கோணுதலில்லாத (நேர்வழிப்பட்ட),
உள்ளத்து – மனத்தையுடைய,
கோது இல் – குற்றமில்லாத,
அடியவரும் – அடியார்களும்,
அங்கு ஐவரை வெல் – அவ்விடத்துப் பஞ்சேந்திரியங்களை வெல்லுதற்கு இடமான:
வேடரும் – வேடர்களும்,
அம் கை வரை வெல் – அழகிய துதிக்கையையுடைய மலைபோன்றயானையை வெல்லுதற்கு இடமான
வேங்கடமே -,-
மூடர் மனம் ஆம் மனைக்கு ஒன்றார் – மூடர்களுடைய உள்ளமாகிய வீட்டில் வந்து பொருந்தாதவரும்,
வல் கஞ்சன் என்னும் சினம் மாமனை கொன்றார் – கொடிய கம்சனென்கிற கோபத்தையுடைய மாமனைக் கொன்றவருமாகிய திருமால்,
சேர்பு – சேருமிடம்; (எ – று.)

“அங்கு” என்பது – அசையுமாம். ஐம்பொறிகளை “ஐவர்” என உயர்திணையாற்கூறியது, இழிபுபற்றிய திணைவழுவமைதி.
ஐந்து என்னும் எண்ணினடியாப்பிறந்த ஐவரென்ற பெயர் – இங்கே தொகைக்குறிப்பு.
“கைவரை” என்றார், யானையை; “கைம்மலை” என்றாற்போல. மூடர், மநஸ் – வடசொற்கள்.
“மூடர் மனமாம் மனைக்கு ஒன்றார்” என்றது – “மலர்மிசையேகினான்” என்றபடி,
அன்பு கொண்டு தியானிக்கின்ற அறிவுடையாரது உள்ளக்கமல த்தைத் தாம் உகக்குமிடமாகக்கொண்டு
அங்கு அவர்நினைத்தவடிவத்துடன் விரைந்து சென்று வீற்றிருக்குந் தன்மைய ரென்ற எதிர்மறைப்பொருளை நன்குவிளக்கும்.
மனைக்கு என்ற நான்கனுருபு ஏழனுருபின் பொருளில் வந்ததனால், உருபுமயக்கம். கஞ்சன் – வடசொற் சிதைவு.

மாமன் – இங்கு, தாயுடன்பிறந்தவன். கம்ஸன் – கண்ணனது தாயான தேவகிக்குத் தமையனாதலால்,
கண்ணனுக்கு மாமனாவன். தன்னைக்கொல் லப்பிறந்த தேவகீபுத்திரன் யசோதையினிடம் ஒளித்து வளர்தல் முதலிய
விருத்தாந்தங்களை நாரதர் சொல்லக் கேட்டுக் கம்சன் அதிககோபங்கொண்டு கிருஷ்ணனைக் கொல்ல நிச்சயித்து
வில்விழாவென்கிற வியாஜம் வைத்துக் கண்ணனை மதுரைக்கு வரவழைத்துப் பலவகையில் வதைக்க வழிதேடுகை யில்,
கம்சசபையில் கிருஷ்ணபகவான் வேகமாக எழும்பிக் கம்சனது மஞ்சத்தின்மே லேறி அவனது கிரீடம் கழன்று கீழேவிழும்படி
அவனைத் தலை மயிர் பிடித்துத் தரையில் தள்ளி அவன்மேல் தான் விழுந்து அவனைக் கொன்று ஒழித்தன னென்பது, இங்குக் குறித்த வரலாறு.

———–

மொய்வதன மங்கையர்கள் முன்கையும் யோகியர் தம்
மெய்வயதும் அஞ்சுகம் ஆர் வேங்கடமே -பெய் வளையார்
பால் திருப்பாது அஞ்சி வந்தார் பற்றினார் புன் பிறப்பை
மாற்று இருப் பாதம் சிவந்தார் வாழ்வு –55–

(இ – ள்.) மொய் – (அழகு) மிக்க,
வதனம் – முகத்தையுடைய,
மங்கையர்கள் – மகளிரது,
முன் கையும் – முன்னங்கையும்,
அம் சுகம் ஆர் – அழகிய கிளி (உணவுண்ணுதற்கு) இடமாகப்பெற்ற:
யோகியர்கள் மெய் வயதும் – யோக நிட்டையிலிருக்கின்ற முனிவர்களுடைய உடம்பின் ஆயுளும்,
அஞ்சு உகம் ஆர் – ஐந்துயுகமாகப் பொருந்தப்பெற்ற:
வேங்கடமே -,-
பெய் வளையார் பால் திருப்பாது – அணிந்த வளையல்களையுடைய மகளிர்பக்கல் (மனத்தைச்) செலுத்தாமல்,
அஞ்சி – அச்சங்கொண்டு,
வந்தார் பற்றினார் – தம்மிடம் வந்து சரணமடைந்தவர்களுடைய,
புல் பிறப்பை – இழிவான சன்மத்தை,
மாற்று – நீக்குகின்ற,
இரு பாதம் – தமது இரண்டு திருவடிகளும்,
சிவந்தார் – சிவந்திருக்கப்பெற்றவரான திருமால்,
வாழ்வு – வாழுமிடம்; (எ – று.)

“மொய்தவனம்” என்பதற்கு – (தாமரைமலரென்று மயங்கி வண்டுகள்) மொய்க்கப்பெற்ற முகமென்று உரைத்தலும் ஒன்று.
மங்கையர் – இளமகளிர்; மங்கைப்பருவத்துக்கு வயதெல்லை – பன்னிரண்டுமுதற் பதின்மூன்றளவும்.
வயஸ், வதநம், சுகம், பாதம் – வடசொற்கள். அஞ்சு – ஐந்து என்பதன் முழுப் போலி.
திருவேங்கடமலையிலுள்ள மகளிர்கையிற் கிளியைவைத்துக் கொண்டு அதற்கு உணவூட்டி அதனோடு கொஞ்சிவிளையாடுதலும்,
அங்குள்ள யோகிகள் அவ்யோகபலத்தால் நீடூழிகாலம் வாழ்தலும், இங்குக் குறிக்கப்பட்டன. யுகமென்பது, உகமெனவிகாரப்பட்டது.
ஆர்தல் – உண்ணுதலும், பொருந்தலும். பெய்வளை – வினைத்தொகை. வந்தார் – முற்றெச்சம்.
இருபாதம் என்ற தொடர் “இருப்பாதம்” என வருமொழி முதல்வலி மிக்கது, திரிபுநயம் நோக்கி யென்க.
இதனைச் சிறுபான்மை எதுகைநயத்தின் பொருட்டு “ஒருக்கால்” என வருதல்போலக் கொள்க:
அன்றி, முற்றியலுகரவீறாகிய எண்ணுப்பெயரின்முன் வலிமிகாமை காண்க.
“செம்” என்ற பண்படிப்பகுதி வினைத்தன்மைப் படும்போது “சிவ” என விகாரப்படும். பாதம்சிவந்திருத்தல், உத்தமஇலக்கணம்.
புன்பிறப்பு என்றது, கர்மசம்பந்த முடைமைபற்றி. பிறப்பைமாற்றுதல் – மீளவும் பிறக்க வேண்டாதபடி முத்திதருதல்.
திருப்புதலென்றவினைக்கு மனத்தையென்ற செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது,
அவாய்நிலையால்; (அவாய்நிலையாவது – ஒருசொல் மற்றொருசொல்லை வேண்டிநிற்றல்.)

———

இல்லக் குறத்தியரும் யாக்கை நிலை வேட்டவரும்
மெல்லக் கிழங்கெடுக்கும் வேங்கடமே -நல்ல
புதுப் பூவை வண்ணத்தான் போர் முகத்துச் செவ்வாய்
மதுப்பூவை வள் நத்தான் வாழ்வு –56-

(இ – ள்.) இல்லம் குறத்தியரும் – (தமக்கு உரிய) வீட்டில் இருக்கின்ற குறப்பெண்களும்,
மெல்ல கிழங்கு எடுக்கும் – மென்றுதின்னும்பொருட்டுக் கிழங்குகளைத் தோண்டி எடுக்கப்பெற்ற,
யாக்கை நிலை வேட்டவரும் – உடம்பு (அழிதலின்றி நெடுநாள்) நிலைத்திருத்தலை விரும்பிய சித்தர்களும்,
மெல்ல கிழம் கெடுக்கும் – மெதுவாக (நாளடைவில்) முதுமைப்பருவத்தை ஒழிக்கப்பெற்ற;
வேங்கடமே -,-
நல்ல புது பூவை வண்ணத்தான் – சிறந்த புதிய (அன்றுமலர்ந்த) காயாம்பூப் போன்ற கரியதிருநிறத்தையுடையவனும்,
போர்முகத்து – யுத்தகளத்தில்,
செம் வாய் மது பூ வை – சிவந்த தனது திருவாயாகிய தேனையுடைய தாமரைமலரில் வைத்துஊதுகின்ற,
வள் நத்தான் – மேன்மையுள்ள (ஸ்ரீபாஞ்சஜந்ய மென்னுந் திவ்விய) சங்கத்தை யுடையவனுமாகிய திருமால்,
வாழ்வு – வாழுமிடம்; (எ – று.)

இல்லம், அம் – சாரியை. குறத்தியர் – குறிஞ்சிநிலத்துமகளிர்; குறவ ரென்பதன் பெண்பால்.
யாக்கை – (எலும்பு நரம்பு முதலியவற்றாற்) கட்டப்பட்ட தெனப் பொருள்படுங் காரணப்பெயர்;
யா – பகுதி; யாத்தல் – கட்டுதல்: ஐ – செயப்படுபொருள்விகுதி, கு – சாரியை, க் – சந்தி. நிலை – நிற்றல்;
‘ஐ’ விகுதிபெற்ற தொழிற்பெயர். வேட்டவரென்ற இறந்தகால வினையாலணையும் பெயரில், வேள் – பகுதி.
“மெல்ல” என்றது. முந்தியபொருளில், மெல்என்ற வினைப்பகுதியடியாப் பிறந்த எதிர்காலச்செய வெனச்சமும்;
பிந்தின பொருளில், மென்மை என்ற பண்பினடியாப் பிறந்த குறிப்புவினையெச்சமுமாம்.
பூவை யென்ற செடியின்பெயர், இங்கு அதன் மலர்க்கு முதலாகு பெயர். வாயாகிய பூ எனறது உருவகம்.
வாய்க்குத் தாமரை மலர் உவமை – செம்மையும் மென்மையும் அழகும் பற்றி. உபமானமாகிய வாய்க்குச் சுவையினிமைகொள்க.
வை – வினைத்தொகை. வர்ணமென்ற வடமொழி வண்ணமெனச் சிதைந்தது. வள்நத்து – பண்புத்தொகை.
திருமால் போர்க்களத்தில் பகைவரை அஞ்சுவித்தற்காகவும், தனது வெற்றிக்கு அறிகுறியாகவும்
சங்கத்தைவாயில்வைத்து முழக்குதல் இயல்பு. மது – வடசொல்.

————-

தேன் இயலும் கூந்தலார் செங்கரமும் மாதவத்தோர்
மேனியும் ஐயம் பொழியும் வேங்கடமே -ஞானியர்கள்
தாம் குறி எட்டு அக்கரத்தார் தாள் உரல் மேல் வைத்து வெண்ணெய்
தாங்கு உறி எட்டு அக்கரத்தார் சார்பு –57-

(இ – ள்.) தேன் இயலும் கூந்தலார் – (சூடிய மலர்களினின்று சொரிகின்ற) தேன்பொருந்திய கூந்தலையுடைய மகளிரது,
செம் கரமும் – சிவந்த கைகளும்,
ஐயம் பொழியும் – (இரப்பவர்க்கு மிகுதியாகப்) பிச்சையிடப்பெற்ற:
மா தவத்தோர் மேனியும் – சிறந்ததவத்தையுடைய முனிவர்களது உடம்பும்,
ஐ அம்பு ஒழியும் – (மன்மதனது) பஞ்சபாணம் பொருந்தாதிருக்கப்பெற்ற:
வேங்கடமே -,-
ஞானியர்கள் குறி – (தத்துவ) ஞானமுடையவர்கள் குறிக்கொண்டு தியானிக்கின்ற,
எட்டு அக்கரத்தார் – அஷ்டாக்ஷரமகாமந்திரத்துக்கு உரியவரும்,
உரல்மேல்தாள் வைத்து – உரலின்மேற்காலைவைத்து ஏறி,
வெண்ணெய்தாங்கு உறி எட்டு – வெண்ணெய் வைத்துள்ள உறியை எட்டிப்பிடித்த,
அ கரத்தார் – அழகிய கையை யுடையவருமாகிய திருமால்,
சார்பு – (திருவுள்ளமுவந்து) சார்ந்திருக்குமிடம்; (எ – று.) – தாம் – அசை.

தேன்இயலும்கூந்தல் – நல்லமணத்தே செல்லும் இயல்புள்ள தேனென் னும் உத்தமசாதிவண்டுகள் இயற்கை
நறுமணத்தின் பொருட்டும் செயற்கை நறுமணத்தின் பொருட்டும் மிகுதியாக மொய்க்கப்பெற்ற கூந்தலெனினுமாம்.
மாதவத்தோர் மேனி ஐயம்பொழிதலாவது – அவர்கள் காமவசப்படாதிருத்தல்; மன்மத பாணம் அவர்களுடம்பைத்
துளைத்துவருத்த மாட்டாதனவா யினவென்க. ஐ அம்பு – தாமரைமலர், அசோகமலர், மாமலர், முல்லைமலர், நீலோற்பலமலர்
என்ற ஐந்துபூக்களும் மன்மதனுக்குப் பாணங்களாம். ஜ்ஞாநீ என்ற வடசொல், “ஞானி” என விகாரப்பட்டது. குறி – வினைத்தொகை.
எட்டக்கரம் – திருவெட்டெழுத்தாகிய பெரியதிருமந்திரம். அக்ஷரமென்ற வடசொல், அக்கரமென விகாரப்பட்டது.
கரம் – வடசொல். “அம்” என்பதுபோல “அ” என்பதும் அழகிய என்னும் பொருளதாதலை, பத்துப்பாட்டு நச்சினார்க்கினியருரையிற் காண்க. “பொத்தவுரலைக்கவிழ்த்ததன்மேலேறித், தித்தித்தபாலுந் தடாவினில்வெண்ணெயும்,
மெத்தத்திருவயிறாரவிழுங்கிய, லப்பன்” என்ற பெரியாழ்வார்திருமொழியும்,
“தந்த முறியி லவர் வைத்த தயிர்பால்வெண்ணெ யெட்டாமற், குந்தி யுரலின்மிசை யேறி” என்ற வில்லிபுத்தூரார்வாக்கும்,
இங்கு ஒப்புநோக்கத்தக்கன. “சார்வு” என்றும் பாடம்.

——————

காணை -காண்ஐ-யிலார் சொற்கேட்ட கந்தருவரும் தவரும்
வீணை இராகத்தை விடும் வேங்கடமே –கோணை
இருங்குண்டை ஓட்டினான் ஏற்பு ஒழித்தான் கூனி
மருங்கு உண்டை ஓட்டினான் வாழ்வு –58-

(இ – ள்.) காண் ஐயிலார் சொல் கேட்ட – பார்க்கின்ற வேல்போன்ற கண்களையுடைய மகளிர் பேசுகின்ற சொற்களைச் செவியுற்ற,
கந்தருவரும் -கந்தர்வரென்னுந் தேவசாதியாரும்,
வீணை இராகத்தை விடும் – (அச்சொற் களின் இனிமைக்குமுன் தாம் பாடும் இசையின்இனிமை சிறவாதென்னுங் கருத்தினால்)
வீணையில் இசைவாசித்தலை ஒழியப்பெற்ற:
தவரும் – தவவொழுக்கத்தையுடைய முனிவர்களும்,
வீணை இராகத்தை விடும் – பயனில்செய் கைகளையும் ஆசையையும் துறக்கப்பெற்ற:
வேங்கடமே – , –
கோணை இரு குண்டை – வலிமையையுடைய பெரியஎருதை வாகனமாகவுடைய,
ஓட்டினான் – (கையிற்) கபாலமேந்தியவனான சிவபிரானது,
ஏற்பு – இரத்தல்தொழிலை,
ஒழித்தான் – நீக்கியருளியவனும்,
கூனிமருங்கு உண்டை ஓட்டினான் – (கிருஷ்ணாவதாரத்திற்) கூனியினிடத்து உள்ள உண்டையைப் போக்கியவனுமான திருமால்,
வாழ்வு – வாழுமிடம்; (எ – று.)

காணையி லெனவே, கண்ணாயிற்று, கண்ணுக்கு வேல் உவமை – கூரிய வடிவுபற்றியேயன்றி,
ஆடவரை ஆசைநோய்ப்படுத்தி வருத்துதல்பற்றியுமாம்.
காணையிலார் என்றது – அம்மலையில்வாழும் மகளிரது கண்ணழகின் சிறப்பை விளக்கும்.
அயிலென்பது “ஐயில்” என முதற்போலி. கந்தர்வர் – எப்பொழுதும் கையில் வீணைவைத்துக் கொண்டு இசைபாடித்திரியுந் தேவசாதியார்.
வீணா, ராகம் – வடசொற்கள். இரண்டாம்பொருளில், வீண் ஐ இராகத்தை விடும் எனப் பிரித்து –
பயனற்ற ஐம்புலவாசைகளை ஒழிக்கப்பெற்ற என்று உரைத்தலும் ஒன்று.

கோணை – முசுப்பெனப்படுகிற முதுகின்வளைவுமாம். இருங்குண்டை – பண்புத்தொகை; இருமை – பெருமை. குண்டை – ரிஷபம்.
ஓட்டினான் – ஓடு என்னும் பெயரினடியாகப் பிறந்த ஆண்பாற் குறிப்பு வினையாலணையும் பெயர்; ஓடு – மண்டையோடு.
இனி, “குண்டை யோட்டினான்” என்பதற்கு – ரிஷபத்தை ஏறிச் செலுத்தியவனென்று உரைத்தல் திரிபிலக்கணத்துக்குப் பொருந்தாதாம்;
நான்காம் அடியில், “ஓட்டினான்” என்பது – ஓடச்செய்தவ னென்னும் பொருளதாதல் காண்க.
ஏற்பு – ஏற்றல்; ‘பு’ விகுதி பெற்ற தொழிற்பெயர்: ஏல் – பகுதி.

கூனி – கூனையுடையவள்; இவள் – நைகவக்ரையென்னும் பெயருடையவள்; இவளது கூனை நிமிர்த்தது,
கிருஷ்ணாவதாரத்தில். “கூனிமருங் குண்டை” என்றது அவளுடம்பிலுள்ள கோணலையும், முதுகுவளைவையுங் குறிக்கும்.
உண்டை = உருண்டை. இனி, “கூனிமருங்கு உண்டை யோட்டினான்” என்பதற்கு –
இராமாவதாரத்தில் மந்தரையென்னுங்கூனியின் முதுகின்புறத்திலே வில்லினால் மண்ணுண்டையைச் செலுத்தியவன் என்றும் உரைக்கலாம்;
“கொண்டை கொண்ட கோதைமீது தேனுலாவு கூனி கூன்,
உண்டை கொண்டரங்க வோட்டி யுண்மகிழ்ந்த நாதன்,”
“கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா” என்ற ஆழ்வார் அருளிச்செயல்கள் இங்கு அறியத்தக்கன.

————

முந்நூல் மறையவர் நா மூது அரம்பை மாரின் நடு
மெய்ந்நூல் நலங்க வரும் வேங்கடமே — பொய்ந்நூலால்
அச்சமயக் கத்தினார் ஆதரிக்கத் தெய்வங்கள்
வைச்ச மயக்கத்தினார் வாழ்வு –59-

(இ – ள்.) முந்நூல் – முப்புரிநூலைத் தரித்த,
மறையவர் – பிராமணர் களுடைய,
நா – நாவானது,
மெய் நூல் நலம்கவரும் – (பொருள்களின்) உண்மையைச் சொல்லுகிற தத்துவசாஸ்திரங்களின் நற்பொருள்களை (ஓதி)க்கிர கித்தற்கு இடமான:
மூது அரம்பைமாரின் நடு – பழமையான தேவமாதர்களினுடைய இடையானது,
மெய் நூல் நலங்க வரும் – (தனதுவடிவத்தின் நுண்மையால்) பஞ்சுநூல் (தனக்கு ஒப்பாகமாட்டாது) கெடும்படி பொருந்திய:
வேங்கடமே -,-
பொய் நூலால் – பொய்ம்மையைக்கூறுகிற சாஸ்திரங்களைக் கொண்டு,
அ சமயம் கத்தினார் – அந்தந்த மதக்கோட்பாடுகளைப் பிதற்றுந் தன்மையுள்ளவர்கள்,
ஆதரிக்க – விரும்பிக்கொண்டாடும்படி,
தெய்வங்கள் வச்ச – பலதெய்வங்களை உண்டாக்கிவைத்த,
மயக்கத்தினார் – மாயையை யுடையவரான திருமால்,
வாழ்வு – வாழுமிடம்; (எ – று.)

வடமும், வடத்தினுள் புரியும், புரியினுள் இழையும் மும்மூன்றா யிருத் தல்பற்றி, உபவீதத்துக்கு “முந்நூல்” என்று பெயர்.
“நூலே கரக முக்கோல் மணையே, ஆயுங்காலை யந்தணர்க் குரிய” என்ற தொல்காப்பியவிதிபற்றி,
முந்நூல் மறையவர்க்கு அடைமொழியாக்கப்பட்டது.
வேதங்களை ஓதுதலோடு ஓதுவித்தற்கும் உரியவர் அந்தணரேயாதலால், அவர் “மறையவர்” எனப்பட்டனர்.
சிலசாதியார்க்கும் பெண்பாலார்க்கும் ஓதுவிக்கவும் ஓதவும் கேட்கவும் ஆகாதென்று மறுக்கப்படுதல் பற்றியும்,
ஓதியுணர்ந்த குருவினிடம் உபதேசங்கேட்டாலன்றித் தெரிதற்குஅரிய மறைந்தபொருளையுடைமைபற்றியும், “மறை” என்று பெயர்
மூதரம்பைமார் – முதுமையென்னும் பண்புப்பெயர் ஈறுபோய் ஆதிநீண்டது. அரம்பை – ரம்பா என்னும் வடசொல்லின் விகாரம்.
அரம்பைமார் – ரம்பை முதலியோர்; மார் – பலர்பாற்பெயர்விகுதி.
தமக்கு உரிய தேவலோகத்தினும் திருவேங்கடம் வசித்தற்கு இனியதால் பற்றியும், அம்மலை உயர்ச்சியால்
தங்களுலகத்துக்கு அருகிலாதல்பற்றியும், திருவேங்கடமுடையானைச் சேவித்தற்பொருட்டும்,
தேவமாதர்கள் அங்கு வந்து தங்குதலால், அவர்கள் அம்மலைக்கு உரியபொருளாகச் சொல்லப்பட்டனர்.
அவர்களிடை நூலினும் நுண்ணிதென்பது கருத்து. நடு – இடையுறுப்பு.

கத்தினார் – கத்து என்னும் முதனிலைத் தொழிற்பெயரின்மேற் பிறந்த பலர்பாற்குறிப்பு வினையாலணையும்பெயர்;
இன் – சாரியை. ஸமயம், தைவம் – வடசொற்கள். வச்ச – வைத்த என்பதன் முழுப்போலி. மயக்கம் – பிறரை மயங்கச்செய்வது;
அம் – கருத்தாப்பொருள்விகுதி.
“வணங்குந் துறைகள் பலபல வாக்கி மதிவிகற்பாற்,
பிணங்குஞ் சமயம் பலபலவாக்கி யவையவை தோறு,
அணங்கும் பலபலவாக்கி நின்மூர்த்தி பரப்பிவைத்தாய்” என்று ஆழ்வார் அருளிச்செய்தபடி,
எம்பெருமான் ரஜோகுணதமோகுணங்களால் மிக்கவர் கருமகதியால் தன்பக்கல் வாராது வெவ்வேறு துணிவுகொள்ளும் படி
தனது அமிசத்தாற் பலபலதெய்வங்களையும், பலபல மதக்கோட்பாடுகளையும், பல உபாசனை விதங்களையும்
அமைத்து வைத்த விசித்திரசக்தியை வெளியிட்டார்.
சிவபிரான் ஜிநன் புத்தன் முதலியோர் திருமாலின துரூப பேதமாதலையும், அவரவரைத் தலைமையாகக் கொள்ளும்
மதங்கள் ஒவ்வொரு சமயத்தில் அத்திருமாலினாலேயே வெளியிடப்பட்டனவாதலையும் அறிக.

“முந்நூன்மறையவரு மூதரம்பைமாரு நடு” என்ற பாடத்துக்கு – மறையவர் நடுவுநிலைமையாகத் தத்துவநூல்களின்
நற்பொருள்களைக் கிரகிக்கிற எனவும், அரம்பையர் இடையின்வடிவினால் பஞ்சுநூல் கெடும்படிவருகின்ற எனவும் உரைக்க.

————

ஓதும் மறை யோர் புறமும் உள்ளும் கலையின் அரு
மேதை அகலா இருக்கும் வேங்கடமே -கோதை குழல்
சுற்றாத தார் அணியார் தூய திருத்தாள் ஊன்றப்
பற்றாத தாரணியார் பற்று –60-

(இ – ள்.) ஓதும் – வேதமோதுகின்ற,
மறையோர் – அந்தணர்களுடைய,
புறமும் – உடம்பும்,
அரு கலையின் மேதை அகலா இருக்கும் – பெறுதற்கு அரிய மான்தோல் நீங்காதிருக்கப்பெற்ற:
உள்ளும் – (அவர்களுடைய) மனமும்,
கலையின் அருமேதை அகலா இருக்கும் – சாஸ்திரங்களின் நுட்பமான அறிவு பரந்திருக்கப்பெற்ற:
வேங்கடமே -,-
கோதை குழல் சுற்றத்தார் அணியார் – ஆண்டாள் தனது கூந்தலில் சூடாத மாலையை அன்புடன் அணிந்துகொள்ளாதவரும்,
தூயதிரு தாள் ஊன்ற பற்றாத தாரணியார் – பரிசுத்தமான சிறந்த தமதுபாதங்களில் ஒன்றை ஊன்றியளத்தற்கு
இடம்போதாத நிலவுலகத்தையுடையவருமாகிய திருமால்,
பற்று – விரும்பிவாழுமிடம்; (எ – று.)

வேதமோதுகிற பிராமணப்பிரமசாரிகள் மான்தோலுபவீதந் தரித்தல், மரபு;
(“முப்புரிநூலொடு மானுரியிலங்கும், மார்பினி னிருபிறப் பொருமா ணாகி” என்ற திருவெழுகூற்றிருக்கையுங் காண்க.)
புறம் – புறத்து உறுப்பு. உள் – அகத்து உறுப்பு. நூல் என்ற பொருளில், கலை என்பது – கலா என்ற வடசொல்லின் விகாரமும்.
அறிவு என்ற பொருளில் மேதை என்பது – மேதா என்ற வடசொல்லின் விகாரமுமாம்.
அகலாஎன்பது – அகலாம லென்னும் பொருளில் ஈறுகெட்டஎதிர்மறைவினையெச்சமும்;
அகன்றென்னும் பொருளில் செய்யா என்னும் வாய்பாட்டு உடன்பாட் டிறந்தகால வினையெச்சமு மாம்.
அகலுதல் – நீங்குதலும், பரத்தலும். வேதாத்தியயனஞ் செய்பவரது புறமும் உள்ளும் ஒருநிகராக வுள்ளன வெனச்
சொல்நயத்தாற் சமத்காரந் தோன்றியவாறு காண்க.

“கோதை குழல் சுற்றாத தார்அணியார்” என்றது – ஆண்டாள் தனது கூந்தலிற் சூடிக்கொடுத்த மாலையையே
திருவுள்ளமுகந்து அணிபவர் என்ற வாறு.
ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை விட்டு வேறு திருமாலையை அமைத்துப் பெரியாழ்வார் எம்பெருமானுக்குச்சமர்ப்பிக்க,
அதனைப் பெருமான் “இந்த மாலை கோதைமணம் பெறவில்லை” என்று வெறுத்தனனென வரலாறு கூறுதலும் உண்டு.
கோதையென்பது – உயர்திணைப்பெய ராதலின், அதன்முன் வலிமிகவில்லை.

“தாளூன்றப் பற்றாத தாரணியார்” என்றது – உலகமளந்த சமயத்தில் நிலவுலகத்தினும் திருவடிபரந்துநின்றதாதலின்.
அப்பொழுது காலளவிற்கு உலகம் இடம் போதாமையை
“மண்ணும் விண்ணும் என்காற்களவின்மைகாண்மினென்பா னொத்து வான் நிமிர்ந்த” என்ற திருவிருத்தத்தாலும்,
“நின்றகால் மண்ணெலாம் நிரப்பி யப்புறம், சென்று பாவிற்றிலை சிறிது பாரெனா”,
“உலகெலா முள்ளடி யடக்கி” என்ற கம்பராமாயணத்தாலும் அறிக.
“தூயதிருத்தாளூன்றப் பற்றாத தாரணியார்” என்றது – வடமொழி நடை;
அன்றியும், இங்ஙனம் கூறியதில் தமக்கு உரிய பொருளைத் தமக்கு உரியதாக்கிக் கொண்டவர் என்ற கருத்துத் தோன்றும்.
தாரணி – தரணி யென்ற வடசொல்லின் விகாரம். “பற்றாத தாரணியார் பற்று” என்ற அடியில் முரண்தொடை யிருத்தல் காண்க.

—————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவேங்கட மாலை –21-40-

February 20, 2022

கொல்லைக் குறவர் குளிர் மதி மானைக் ககன
வில்லைக் குனித்து எய்யும் வேங்கடமே –கல்லை
அரிவை வடிவு ஆக்கினான் அன்னம் ஆய் வேத
விரிவை வடிவாக்கினான் வெற்பு –21-

(இ – ள்.) கொல்லை – தினைக்கொல்லையைக் காக்கின்ற,
குறவர் – குறவர்கள்,
குளிர் மதி மானை – குளிர்ந்த சந்திரனிடத்து உள்ள (களங்கத்தோற்ற மாகிய) மான்வடிவை,
(தினைப்பயிரை மேயவருகின்ற மானென்று எண்ணி),
ககனம் வில்லை குனித்து எய்யும் – வானத்திற்காணப்படுகிற வில்வடிவமான தநுரிராசியைக் கை வில்லாகக்
கொண்டு வளைத்து அதுகொண்டு அம்பு எய்ய முயலுதற்கு இடமான,
வேங்கடமே – , –
கல்லை அரிவை வடிவு ஆக்கினான் – (சாபத்தாற்) கல்வடிவமாய்க் கிடந்த அகலிகையைப் பெண்வடிவமாகச் செய்தவனும்,
அன்னம் ஆய் – அன்னப் பறவையின் வடிவங்கொண்டு,
வேதம்விரிவை வடி – மிகப்பரந்ததான வேதத்தை (ப் பிரமனுக்கு)த் தெளிவாகக் கூறியருளிய,
வாக்கினான் – திருவாக்கையுடையவனுமாகிய திருமாலினது,
வெற்பு – திருமலை; (எ – று.)

சந்திரனிடத்து உள்ள களங்கத்தை மானென்று கூறுவார் கொள்கை, இங்குக் கொள்ளப்பட்டது.
“ககனவில்லைக் குனித்து எய்யும்” என்பதற்கு – வானத்திற்காணப்படுகிற இந்திர தனுசை வளைத்து
அம்பெய்ய முயலும் என்று உரைப்பாரும் உளர்; முன்னும் பின்னும் உள்ள செய்யுள்களிலெல்லாம் பன்னிரண்டு மாசங்களுக்கு
உரிய இராசிகளையே கூறிவருகிற சந்தர்ப்பத்தை நோக்கின், அங்ஙனம் உரைத்தல் இவ்விடத்துக்குப் பொருந்தாமை தெற்றென விளங்கும்.
தநுரிராசி, மார்கழிமாதத்துக்கு உரியது. அரிவை என்பது – இங்குப் பருவப்பெயராகாமல் பெண்என்ற மாத்திரமாய் நின்றது;
அப்பருவத்துக்கு வயதெல்லை – இருபதுமுதல் இருபத்தைந்தௌவும். பாலையும் நீரையுங் கலந்துவைத்தால் நீரைப்பிரித்துப்
பாலையே உட்கொள்ளும் இயல்பினதான அன்னப்பறவை ஸாராஸாரவிவேக முடைமைக்கு உவமை கூறப்படுமாதலின்,
அத்தன்மையதான அன்னப்பறவையின் வடிவைக் கொண்டு அஸாரத்தைக் கழித்து ஸாரத்தை
யுணர்த்தியருளின னென்பது, “வடி” என்ற சொல்லின் ஆற்றலால் விளங்கும்;
வடித்தல் – தேர்ந்தெடுத்துக்கொடுத்தல். வாக் – வடசொல்; சொல்என்னும் பொருளது: வாய்க்கு இலக்கணை.
வேதம் அநந்தமாதலால், “வேதவிரிவு” எனப்பட்டது.

————–

தேன் ஏறி தேன் வைக்கும் திண் கழை மேல் விண் மகர
மீன் ஏறி வேள் கொடி ஆம் வேங்கடமே -வான் ஏறித்
தீ முக நாகத்து இருப்பார் சேவடிக்கு ஆள் ஆனவனைக்
காமுகனாகத் திருப்பார் காப்பு –22-

(இ – ள்.) தேன் – வண்டுகள்,
ஏறி – உயரப்பறந்து சென்று சேர்ந்து,
தேன் வைக்கும் – தேனைச் சேர்த்துவைக்கப்பெற்ற,
திண் கழைமேல் – வலிய மூங்கிலின்மேல்,
விண் மகரம் மீன் ஏறி – வானத்திற்செல்லுகிற சுறாமீன் வடிவமான மகரராசி வந்து தங்குகையில்,
வேள் கொடி ஆம் – மன்மதனது துவசம்போலத் தோன்றப்பெற்ற,
வேங்கடமே – , –
வான் – பரமபதத்தில்,
தீ முகன் நாகத்து – விஷாக்கினியைச் சொரியும் முகங்களையுடைய ஆதிசேஷன்மீது,
ஏறி இருப்பார் – ஏறிவீற்றிருப்பவரும்,
சே அடிக்கு ஆள் ஆனவரை – (தமது) சிவந்த திருவடிகளுக்கு அடிமைப்பட்டவர்களை,
காமுகன் ஆக திருப்பார் – காமமுடையவனாகச் செல்லவிடாதவரும் ஆகிய திருமால்,
காப்பு – (உயிர்களைப்) பாதுகாக்கும் இடம்; (எ – று.)

மன்மதன் சுறாமீன்வடிவத்தைக் கொண்ட கொடியையுடையவனென அறிக; அவனுக்கு வடமொழியில் “மகரத்வஜன்” என்றும்,
தென்மொழியில் “சுறவக்கொடியோன்” என்றும் பெயர்கள் உண்டு. “தேனேறித் தேன் வைக்குந் திண்கழை” என்று
அம்மலையின் மூங்கிலை அடைமொழி கொடுத்துச் சிறப்பித்ததனால், அம்மலையின் வளத்தை விளக்கியவாறாம்.
வானத்தையளாவிமிகஓங்கிவளர்ந்துள்ள மூங்கிலுக்கு நேராக வருகிற மகரராசி, மன்மதனது துவசதண்டத்தின்மேற்
காணப்படுகின்ற சுறாமீன்வடிவம் போலு மென்க. மகரராசி, தைமாதத்துக்கு உரியது.
வேள் – (ஆண்பாற்கும் பெண்பாற்கும்) விருப்பத்தை விளைப்பவன்; காமதேவன்: அன்றி, விரும்பப்படும் மிக்க அழகையுடையவன்.
வேள் என்ற வினைப்பகுதி – விரும்புதலென்று பொருள் தரும்; அது இங்குப் பெயர்த்தன்மைப்பட்டது.

வான் நாகத்து ஏறியிருப்பாரென இயையும். வான்ஏறி நாகத்துஇருப் பார் என்றே இயைத்துப் பொருள்கொண்டால்,
பரமபதத்திலிருப்பு வந் தேறி யென்னும்படி யுள்ளது திருவேங்கடத்தில் நிலைத்திருக்கின்ற இருப்பு என்று கருத்து விளங்கும்.
“தீமுகன்” என்றது, நாகத்துக்கு இயற்கை யடைமொழி. முகன் – முகம் என்பதன் போலி.
“சென்றாற் குடையாம் இருந்தாற் சிங்காசனமாம், …… திருமாற்கு அரவு” என்றபடி திருவனந் தாழ்வான்
எம்பெருமான் வீற்றிருத்தற்கு இடமாகுமாறு திவ்வியசிங்காசன மாய் அமைதலால், “நாகத்துஇருப்பார்” என்றார்.
தமக்கு அடிமைப்பட்டவர் களைப் பின்பு காமம் முதலிய தீநெறியில் மனஞ்செலுத்தவிடாதபடி குறிக்கொண்டு
தம்வழிப்படுத்தி யாளுபவ ரென்பது, “சேவடிக்காளானவரைக் காமுகனாகத் திருப்பார்” என்றதன் கருத்து.
“ஆளானவரை” என்ற பன்மை க்கு ஏற்ப, “காமுகராக” என்னாது “காமுகனாக” என ஒருமையாகக்கூறியது, பன்மையொருமை மயக்கம்;
தனித்தனி காமுகனாக வென்க. இது, திரிபுநய த்தை நோக்கியது. “ஆளானவெனை” என்றும் பாடம். காமுகன் – வடசொல்.

—————-

ஒண் கொம்பின் தேன் இறால் ஊர் பிறைக் கோட்டால் உடைந்து
விண் கும்ப வாய் நிறைக்கும் வேங்கடமே –வண் கும்ப
கம்பத்து ஆனைக்கு அடுத்தார் கார் அரக்கர் போர் மாளக்
கம்பத்தானைக் கடுத்தார் காப்பு –23-

(இ – ள்.) ஒள் – ஓங்கிவிளங்குகின்ற,
கொம்பில் – மரக்கொம்புகளிற் கட்டப்பட்டுள்ள,
தேன் இறால் – தேன்கூண்டு,
ஊர் பிறை கோட்டால் உடைந்து – (வானத்திற்) செல்லுகிற பிறைச்சந்திரனது வளைந்த வடிவமாகிய கொம்பு படுதலால் உடைந்து,
விண் கும்பம் வாய் நிறைக்கும் – வானத்தி லுள்ள குடவடிவமான கும்பராசியின் வாயளவும் (தேனைச் சொரிந்து) நிறைத்தற்கு இடமான,
வேங்கடமே – , –
வள் கும்பம் – (இயல்பிற்) கொழுமையுள்ள மத்தகத்தையுடையதும்,
கம்பத்து – (முதலைவௌவியதனா லாகிய) நடுக்கத்தையுடையதுமாகிய,
ஆனைக்கு – கஜேந்திராழ்வானுக்கு,
அடுத்தார் – அருகில் ஓடிவந்து அபயமளித்தவரும்,
கார் அரக்கர் போர் மாள – கருநிறமுடைய இராக்கதர்கள் போரில் இறக்க,
கம் பத்தானை கடுத்தார் – பத்துத்தலைகளையுடையவனான இராவணனைக் கோபித்து அழித்த வருமாகிய திருமால்,
காப்பு – (உயிர்களைப்) பாதுகாக்கும் இடம்; (எ – று.)

பிறைக்கோட்டால் என்பதற்கு – வளைந்தவடிவமுடைய பிறையினது நுனி படுதலால் என்று உரைப்பினும் அமையும்.
கும்பராசி, மாசிமாதத்துக்குஉரியது. திருவேங்கடமலையிலுள்ள கொம்பு கும்பராசிக்கு மேலுள்ள தென்றும்,
தன்மீது பிறைச்சந்திரன் படப்பெறுவதென்றும் கூறியதனால், அதனது உயர்வை விளக்கி மலைவளத்தை வருணித்தபடியாம்.
கும்பம் – குடம்; இரண்டுகுடம் கவிழ்த்தாற்போன்ற யானைத்தலையிலுறுப்புக்குப் பெயராக வழங்கும்.
அடுத்தல் – சமீபித்தல். ரக்ஷஸ் என்ற வடசொல், அரக்க ரெனச் சிதைந்தது. கம் – தலை; வடசொல்.

————–

கூனல் இள வெண் குருகு கோனேரியில் விசும்பு ஊர்
மீன நிழலைக் கொத்தும் வேங்கடமே –கானகத்துப்
பொன் ஆர் உழை எய்தார் பூங்கழலே தஞ்சம் என
உண்ணா ருளை எய்தார் ஊர் –24-

(இ – ள்.) கூனல் இள வெள் குருகு – (கழுத்து) வளைவையுடைய இளமையான வெண்ணிறமுள்ள குருகென்னும் நீர்ப்பறவை,
கோனேரியில் – கோனேரிதீர்த்தத்தில்,
விசும்புஊர்மீனம் நிழலை – வானத்திற் செல்லுகின்ற மீன்வடிவமான மீனராசியினது நிழல் தெரிய அதனை,
கொத்தும் – (அந் நீரிற்செல்லுகிற உண்மையான மீனென்றே கருதி உண்ணும்பொருட்டு மூக்கினாற்) குத்துதற்கு இடமான,
வேங்கடமே – , –
கான் அகத்து – தண்ட காரணியத்திலே,
பொன் ஆர் உழை – பொன்னிறமாய்ப் பொருந்திய (மாரீசனாகிய) மாயமானை,
எய்தார் – அம்புஎய்து வீழ்த்தியவரும்,
பூ கழலே தஞ்சம் என உன்னாருழை எய்தார் – தமது திருவடித்தாமரை மலர்களையே சரணமென்று
நினையாதவரிடத்திற் சென்றுசேராதவரு மாகிய திருமாலினது,
ஊர் – திருப்பதி; (எ – று.)

கூன் நல் எனப்பிரித்து, வளைவுள்ள அழகிய என்றும் பொருளுரைக்க லாம்.
குருகு – நாரை, கொக்கு. கோன் ஏரி – வடமொழியில், ஸ்வாமிபுஷ் கரிணி யென்று வழங்கும்.
திருவேங்கடமலையின்மேல் திருக்கோயிலுக்கு அருகிலுள்ள பிரதானமான திவ்வியதீர்த்தம் இது.
மீனராசி, பங்குனி மாதத்துக்கு உரியது. கொத்துதலெனினும், குத்துதலெனினும் ஒக்கும்.
மீனராசியின் நிழலை மீனென்று மயங்கியதாகக் கூறியது, மயக்கவணி. சீதையைக் கவர்ந்து செல்லக் கருதிய
இராவணனது தூண்டுதலால் அவனுக்கு மாமன்முறையுள்ள மாரீசனென்ற ராக்ஷசன் மாயையாற் பொன் மானுயிருவங் கொண்டு
தண்டகாரணியத்திற் பஞ்சவடியிலே சீதையினெதிரிற் சென்று உலாவுகையில், அப்பிராட்டியின் வேண்டுகோளின்படி
அவனைப் பிடித்தற்குத் தொடர்ந்துசென்ற இராமபிரான், நெடுந்தூரம் ஓட்டங்காட்டிய அம்மானை மாயமானென்று
அறிந்தவளவிலே அதன்மேல் அம்புஎய்து வீழ்த்தின னென்பது பிரசித்தம்.
ஆருழை – வினைத்தொகை; பண்புத்தொகை யாகக் கொண்டால், (பெறுதற்கு) அரிய மானென்று பொருள்படும்.
எய்தார் என்பது – மூன்றாமடியில் எய் என்னும் பகுதியின்மேற் பிறந்த உடன் பாட்டு இறந்தகால வினையாலணையும் பெயரும்,
நான்கா மடியில் எய்து என்னும் பகுதியின் மேற் பிறந்த எதிர்மறை வினையாலணையும் பெயருமாம்.
கழலே தஞ்சமென வுன்னாருழை யெய்தார் – தமக்கு அடிமைபூணாதவரிடத்தில் அன்போடு சென்றுசேராதவர்;
எனவே, கழலே தஞ்சமென்று உன்னுவாரிடத்து எய்துபவ ரென்பது அருத்தாபத்தியால் விளங்கும்.

————–

மண் மூலம் தா என்று மந்தி கடுவற்கு உரைப்ப
விண் மூலம் கேட்டு எங்கும் வேங்கடமே -ஒண் மூல
வேதத்து இருக்கு உழையார் வெய்யோன் இரண்டு அனைய
சீதத் திருக் குழையார் சேர்வு –25-

(இ – ள்.) மண் மூலம் தா என்று மந்தி கடுவற்கு உரைப்ப – “மண்ணி லிருக்கிற கிழங்கை (உண்ணுதற்காகப் பெயர்த்தெடுத்துக்)
கொடு” என்னும் பொருளில் “மூலம்தா” என்று பெண்குரங்கு ஆண்குரங்கை நோக்கிச் சொல்ல,
விண் மூலம் – வானத்திலுள்ள மூலநட்சத்திரம்,
கேட்டு – (அச்சொல்லைக்) கேட்டு,
ஏங்கும் – (தன்னைப்பிடித்துக் கொடுக்கச் சொன்னதாகக் கருதி) அஞ்சிக் கலங்குதற்கு இடமான,
வேங்கடமே – , –
ஒள் – (எல்லாப் பிரமாணங்களிலும்) சிறந்த பிரமாணமாக வுள்ளவையும்,
மூலம் – (எல்லா நூல்களுக்கும்) முதல்நூலாகவுள்ளவையுமான,
வேதத்து – வேதங்களின்,
இருக்கு – மந்திரங்களை,
உழையார் – தமக்கு இடமாகக் கொண்டு அவற்றில் (பொருள் வடிவமாகப்) பொதிந்திருப்பவரும்,
வெய்யோன் இரண்டு அனைய – சூரியமண்டலம் இரண்டு உளவாயின் அவற்றைப் போன்ற (மிக விளங்குகிற),
சீதம்திரு குழையார் – குளிர்ந்த ஒளியுள்ள சிறந்த திவ்விய குண்டலங்களை யணிந்தவருமான திருமால்,
சேர்வு – சேர்ந்து தங்குமிடம்; (எ – று.)

மந்தி “மூலந்தா” என்று வேண்டியதனால், அதனிடத்து மிக்கஅன்பு கொண்ட கடுவன் தன்னைப்பிடித்து மந்தியின்
கையிற் கொடுத்து விடுமேயெ ன்று மூலநக்ஷத்திரம் அஞ்சு மென்க.
இவ்வர்ணனையில், அம்மலை வானத்து நட்சத்திர வீதிக்கு அருகாம்படி ஓங்கிய தென்பதனோடு,
அம்மலைக்குரங்கு தேவகணமும் அஞ்சத்தக்க வலிமையுடையதென்பதும் விளங்கும்.
மண்மூலம் என்றவிடத்து “வண்மூலம்” என்றும் பாடம் உண்டு; அது சிறக்கும்: செழிப் பான மூலமென்க.
மந்தி – குரங்கின் பெண்மைப்பெயர். கடுவன் – அதன் ஆண்மைப்பெயர்: கடுமையுடையது.
“மூலம்” என்ற பெயர்கொண்டு சமத்காரங் கற்பிக்கப்பட்டது.
இருக்கு – ருக் என்ற வடசொல்லின் விகாரம். “வெய்யோனிரண்டனைய” என்றது, இல்பொருளுவமை.

———

நாலா விட்ட பொன் ஊசல் நன்னுதலார் உந்து தொறும்
மேல் அவிட்டம் தொட்டு இழியும் வேங்கடமே –ஆலம் இட்ட
பொற்புக் களம் கறுத்தார் போர் சரியாய் வாணன் தோள்
வெற்புக்கள் அங்கு அறுத்தார் வீடு –26-

(இ – ள்.) நால விட்ட – தொங்கவிடப்பட்டுள்ள,
பொன் ஊசல் – பொன்னினாலாகிய ஊஞ்சல்,
நல் நுதலார் உந்துதொறும் – அழகிய நெற்றியை யுடைய மகளிர் வீசித்தள்ளியாட்டுந்தோறும்,
மேல் அவிட்டம் தொட்டுஇழி யும் – வானத்திலுள்ள அவிட்ட நக்ஷத்திரத்தின்மீது பட்டு இறங்குதற்கு இடமான,
வேங்கடமே – , –
ஆலம் இட்ட – விஷத்தை உட்கொண்ட,
பொற்பு களம் – பொலிவையுடைய கண்டம்,
கறுத்தார் – கருநிறமடைந்தவ ரான சிவபிரான்,
போர் சரிய – யுத்தத்திலே பின்னிட,
வாணன் – தோள் வெற்புக்கள் – பாணாசுரனுடைய தோள்களாகிய மலைகளை,
அங்கு – அப் பொழுது (அல்லது அப்போர்க்களத்தில்),
அறுத்தார் – துணித்தவரான திருமாலினது,
வீடு – வசிக்குமிடம்; (எ – று.) –
எதுகையமைதி நோக்கி, அவிட்டத்தைக் கூறினார்.

முன்னிரண்டடியில் திருவேங்கடத்தின் உயர்வும், பின்னிரண்டடியில் திருவேங்கடமுடையானது பரத்வமும் குறிக்கப்பட்டன.
நுதல் – புருவமு மாம். ஹாலம், பாணன் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
பொற்பு – பொலிவையுணர்த்தும் உரிச்சொல். களம் – வடசொல்.
கருமை யென்ற பண்பினடியாகிய கருஎன்பது, கறு என விகாரப்பட்டு வினைத்தன்மைய டையும்.
திருமாலின் கட்டளைப்படியே தேவர்கள் அசுரர்களைத் துணைக் கொண்டு திருப்பாற்கடல் கடைகையில் அதனினின்று
எழுந்ததோர் அதி பயங்கரமான பெருவிஷத்தைக் கண்டமாத்திரத்தில் அதன் கொடுமையைப் பொறுக்கமாட்டாத
தேவர்களின் வேண்டுகோளினாலும், திருமாலின் கட்டளையினாலும், அவ்விஷத்தைச் சிவபிரான் அமுதுசெய்து
கண்டத்தில் நிறுத்தியதனால், அப்பெருமானது கண்டம் கருநிறமடைந்த தென அறிக.

————

பால் நிறம் கொள் தெங்கின் இளம் பாளை விரிய சுனையில்
மீன் இனம் கொக்கு என்று ஒளிக்கும் வேங்கடமே –வான் நிமிர்ந்த
வெள்ளத்துக் கப்பு ஆலான் மெய்ப்பரம யோகியர் தம்
உள்ளத்துக்கு அப்பாலான் ஊர் –27-

(இ – ள்.) பால் நிறம் கொள் – வெண்மைநிறத்தைக் கொண்ட,
தெங்கின் இள பாளை – தென்னமரத்தினது இளமையான பாளை,
விரிய – மலர, (அதுகண்டு),
சுனையின் மீன் இனம் – சுனைநீரி லுள்ள மீன்கூட்டங்கள்,
கொக்கு என்று – (அதனைக்) கொக்கென்று கருதி,
ஒளிக்கும் – அஞ்சி மறைதற்கு இடமான,
வேங்கடமே – , –
வான் நிமிர்ந்த – வானத்தையுங் கடந்து பொங்கி மேலெழுந்த,
வெள்ளத்து – பிரளயப் பெருங்கடல்வெள்ளத்திலே,
கப்பு ஆலான் – கிளைகளையுடையதோர் ஆலமரத்தினது இலையிற் பள்ளி கொண்டிருப்பவனும்,
மெய் பரம யோகியர்தம் உள்ளத்துக்கு அப்பாலான் – உண்மையான சிறந்த யோகப்பயிற்சியையுடைய
மகான்களுடைய மனத்துக்கும் முழுவதும் எட்டாமல் கடந்துள்ளவனுமான திருமாலினது,
ஊர் – திருப்பதி; (எ – று.)

முன்னிரண்டடி – மயக்கவணி. கொக்கு மீனைக்குத்தியுண்ணுந் தன்மைய தாதலால், அதற்கு அஞ்சியொளித்தல், மீனுக்கு இயல்பு.
சுனை – மலையிலுள்ள நீருற்றுடைய குளம். எல்லாம் அழிந்துபோகின்ற யுகாந்தகாலத்தில் கடல் பொங்கி உலகங்களை மூடிக்கொள்ள,
எங்கும் ஏகார்ணவமான அந்த மகாப்பிரளய சமுத்திரத்தில் ஓர் ஆலமரம் தோன்ற, ஸ்ரீமகாவிஷ்ணு சிறுகுழந்தை வடிவமாய
ஆதிசேஷாம்சமான அம்மரத்தின் இலையொன்றன் மீது பள்ளிகொண்டு தனது மாயாசொரூபமான
யோக நித்திரையைக்கைக் கொண்டு திருக்கண்வளர்ந்தருளுகின்றனனென அறிக.
கப்பு – ஆலமரத்துக்கு அடைமொழி. இச்சொல்லுக்கு – கவர் என்றும் பொருள்உண்டு; அதாவது – கிளைபிரியுமிடம்.
மெய் என்ற அடைமொழி, யோகியரது பொய்யொழுக்க மின்மையை உணர்த்தும். மனமொழி மெய்களைக் கடந்தவ னாதலால்,
“மெய்ப்பரமயோகியர்த முள்ளத்துக்கு அப்பாலான்” என்றார்.

————

கொம்பு அணியும் தேமாங்குயில் கருடன் போல் கூவ
வெம்பணிகள் புற்று அடையும் வேங்கடமே –வம்பு அணியும்
விண்ணின் ஐந்து காப்பார் மிசை வைத்தார் பத்தரைத்தம்
உள் நினைந்து காப்பார் உவப்பு –28-

(இ – ள்.) கொம்பு அணியும் தே மா குயில் – கிளைகள் அழகியனவாகப் பெற்ற இனிய மாமரத்தின் மேல் இருக்கிற குயிலென்னும் பறவை,
கருடன் போல் கூவ – (அத்தேமாமரத்தின் இனியதளிரை நிரம்பஉண்டதனாலாகிய கொழுமைவளத்தால் பக்ஷிராஜனான) கருடன்போலக் கூவி யொலிசெய்ய,
(அதுகேட்டு), வெம் பணிகள் புற்று அடையும் – (கருடனுக்கு அஞ்சும் இயல்பினவான) கொடியபாம்புகள் அஞ்சிப் புற்றினுள்ளே நுழைதற்கு இடமான,
வேங்கடமே – , –
வம்பு அணியும் – வாசனையை மிகுதியாகக் கொண்ட,
விண்ணின் ஐந்து கா – தேவலோகத்திலுள்ள பஞ்சதருக்களுள் ஒன்றை,
பார் மிசை வைத்தார். (சத்தியபாமைக்காக) நிலவுலகத்திற் கொணர்ந்துநாட்டிய வரும்,
பத்தரை – தமது அடியார்களை,
தம் உள் நினைந்து காப்பார் – தமது உள்ளத்தில் நினைத்துக் குறிக்கொண்டு பாதுகாப்பவருமாகிய திருமால்,
உவப்பு – திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்கும் இடம்; (எ – று.)

சிறியோரும் கொழுமைவாய்ந்தால் பெரியோர்போலக் கம்பீரமாகக் குரல் வாய்விடுதல். இயல்பு;
அவ்வாறே பறவைகளி லொன்றான குயில் பறவைக்கரசனான கருடன்போலக் கூவ என்றார்.
திருமாலுக்கு வாகனமான கருடன் திருமலையிற் பயிலுந்தோறும் அதன் குரலைச் செவியுற்ற பழக்கத்தால்
குயில் கருடன்போலக் கூவு மென்க. “கொம்பணியுந்தேமா” என்ற அடைமொழி, குயிற்குக் கொழுமைவாய்ந்ததன் காரணத்தை விளக்கிற்று.
தேமா – தேன்போல் இனிய காய்கனிகளையுடைய ஒருவகை மாமரம். தேன் + மா = தேமா; தேன்மொழி மெலிவர இறுதியழிந்தது.
மாங்குயில் – மரப்பெயர் முன்னர் இனமெல்லெழுத்து வரப்பெற்றது.
“கருடன்பேர்கூவ” என்று பாடமோதி, தங்கட்கு அரசனான கருடனது திருநாமத்தை உச்சரிக்க என்று உரைப்பாரு முளர்.
ஐந்து தேவதருக்கள் – சந்தாநம், மந்தாரம், பாரிஜாதம், கற்பகம், அரிசந்தநம் என்பன.
இவை, இந்திரனது நந்தனவனத்தி லுள்ளன. உவப்பு – தொழிலாகுபெயர்.

————

தெங்கு இள நீர் வீழச் சிதறும் மணி யைக் கரிகள்
வெங்கனல் என்று அஞ்சிப் போம் வேங்கடமே –பைங்கழையின்
மாண் தாரைப் பண் தழைத்தார் மா மறையோன் பால் தோன்றி
மாண்டாரைப் பண்டு அழைத்தார் வாழ்வு –29-

(இ – ள்.) தெங்கு – தென்னமரத்தினது,
இளநீர் – இளநீர்க்காய்கள்,
வீழ – விழுதலால்,
சிதறும் – சிதறுகின்ற,
மணியை – இரத்தினங்களை,
கரிகள் – யானைகள்,
வெம் கனல் என்று – வெவ்விய நெருப்பு என்று கருதி,
அஞ்சி போம் – அச்சங்கொண்டு விலகிச் செல்லுதற்கு இடமான,
வேங்கடமே – , –
பைங் கழையின் – பசிய வேய்ங்குழலின்,
மாண் தாரை பண் – மாட்சிமைப்பட்ட ஒழுங்கான கீதம்,
தழைத்தார் – செழிக்க ஊதின வரும்,
மா மறையோன்பால் தோன்றி மாண்டாரை – சிறந்த ஓர் அந்தண னிடத்திற் பிறந்துஇறந்த மக்களை,
பண்டு – முன்பு (கிருஷ்ணாவதாரத்தில்),
அழைத்தார் – மீட்டு அழைத்து வந்தவரு மாகிய திருமால்,
வாழ்வு – வாழுமிடம்; (எ – று.)

இளநீர் – தெங்கின் இளங்காய். இரத்தினங்கள், அம்மலையி லுள்ளவை. முன்னும் “பொன்னு மணியும், பொலிந்தோங்கி” என்றார்.
சிவந்து மிகவிளங்குகிற ஒளியினால் இரத்தினங்கள் நெருப்பென்று கருதப்பட்டன; மயக்கவணி.
தீக்கு அஞ்சி விலகுதல், யானையின் இயல்பு. கழை – மூங்கில்; வேய்ங்குழலுக்குக் கருவியாகுபெயர்.
பண் – இசை. அதற்கு மாட்சி – செவிக்கு இனியதாதல்; ஒழுங்கு – இலக்கணம் அமைதல். வாழ்வு – தொழிலாகுபெயர்.

“மீளாப்பதம்புக்க பாலரை நீயன்று மீட்டது” என்பர் திருவரங்கத்து மாலையிலும்.
“பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும்,
இறைப்பொழுதிற் கொணர்ந்துகொடுத் தொருப்படுத்த வுறைப்பனூர்” என்ற பெரியாழ்வார் திருமொழியையுங் காண்க.

————

அங்கு அயலில் மேகம் அதிர பெரும் பாந்தள்
வெங்கயம் என்று அங்காக்கும் வேங்கடமே -பங்கயனோடு
அம்புவனங்கள் தந்தார் அம்புயத்து மங்கையொடு
வெம்பு வனம் கடந்தார் வெற்பு –30-

(இ – ள்.) அங்கு – அவ்விடத்து,
அயலில் – அருகிலே,
மேகம் – மேகங்கள்,
அதிர – இடிமுழங்க,
பெரும் பாந்தள் – (அம்முழக்கத்தைக் கேட்ட) பெரிய மலைப்பாம்புகள்,
வெம் கயம் என்று – வெவ்விய மதயானைகள் பிளிறிக் கொண்டுவருகின்றன வென்றுகருதி,
அங்காக்கும்- (அவற்றைவிழுங்குதற்கு) வாய்திறத்தற்கு இடமான,
வேங்கடமே – , –
பங்கயனோடு – பிரமனுடனே,
அம் புவனங்கள் – அழகிய உலகங்களை,
தந்தார் – (தமது திருநாபிக் கமலத்தினின்று) தோன்றுவித்தவரும்,
அம்புயத்து மங்கையொடு – தாமரை மலரில் வீற்றிருக்கிற என்றும் மாறாத இளமைப்பருவத்தையுடைய திருமகளினது அவதாரமான சீதாதேவியுடனே,
வெம்பு வனம் கடந்தார் – வெப்பங்கொண்ட காட்டைக் கடந்துசென்றவரும் ஆகிய திருமாலினது,
வெற்பு – திருமலை; (எ – று.)

இதுவும், மயக்கவணி. வேங்கடமலையிலுள்ள பெரிய மலைப்பாம்புகள் யானையை விழுங்குந்தரத்தன வென்று
மலைவளத்தை வருணித்தவாறு. கஜம், பங்கஜம், அம்புஜம் என்ற வடசொற்களின் ஜகரம் யகரமாகத் திரிந்தது.
பங்கஜம் – சேற்றில் முளைப்பது; அம்புஜம் – நீரில்தோன்றுவது; இரண்டும் – தாமரைக்குக் காரணவிடுகுறி;
அதன் மலர்க்கு முதலாகுபெயர். மேகம், புவநம், வநம் – வடசொற்கள்.
திருமால் இராமபிரானாகத் திருவவதரித்த போது அதற்கு ஏற்பத் திருமகள் சீதையாகத் திருவவதரித்தனள்.
பித்ரு வாக்ய பரியிலநத்திற்காக இராமபிரான் ஜாநகியுடன் பதினான்கு வருஷம் வனத்திற்சென்று வசிப்பவனாகித்
தண்டகாரணியமுதலியவற்றைக் கடந்து இலங்கையளவும்போய் மீண்டமை பிரசித்தம்.
வெம்புஎன்ற அடைமொழி, வனத்தின் கொடுமையை விளக்கும்.

—————-

திங்கள் இறுமாந்து உலவ தீம் பாற் கவளம் என்று
வெங்களிறு கை நீட்டும் வேங்கடமே –பொங்கு அமரில்
ஆர்த்த வலம் புரியார் ஆட்பட்டார் செய்த பிழை
பார்த்து அவலம் புரியார் பற்று –31-

(இ – ள்.) திங்கள் – சந்திரன்,
இறுமாந்து – செருக்கி (கலைநிறைதலாற் களித்து என்றபடி),
உலவ – அருகிலே வானத்திற்சஞ்சரிக்க, (அதனை),
தீம் பால்கவளம் என்று – இனியபாலினாற்கலந்த உணவுத்திரளை யென்றுஎண்ணி,
வெம் களிறு கை நீட்டும் – வெவ்விய மதயானை (அதனை உண்ணும்பொருட்டுப் பற்றுதற்காகத்) துதிக்கையை நீட்டுதற்கு இடமான,
வேங்கடமே – , –
பொங்கு அமரில் – உக்கிரமான போரிலே,
ஆர்த்த – முழக்கின,
வலம் புரியார் – (பாஞ்சஜந்யமென்னும்) வலம்புரிச்சங்கையுடையவரும்,
ஆள் பட்டார் செய்த பிழை பார்த்து அவலம் புரியார் – (தமக்கு) அடிமைப்பட்டவர்கள் செய்த குற்றத்தைக் கண்டு
(அதற்கு ஏற்ப அவர்கட்குத்) துன்பத்தைச் செய்யாதவரு மாகிய திருமால்,
பற்று – விரும்பித் தமதுஇடமாகக் கொண்டு எழுந்தருளியிருக்குமிடம்; (எ – று.)

இதுவும் மயக்கவணி. பாற்கவளத்தை விரும்புதல், யானையின் இயல்பு. இறுமாந்து, இறுமா – பகுதி.
கவளம் – கபள மென்ற வடசொல் திரிந்தது. மகாபாரதயுத்தத்திலும், மற்றும் பல யுத்தங்களிலும் கண்ணபிரான்
தனது திவ்விய சங்கத்தை வாயில்வைத்து ஊதி முழக்கி, அதன் ஒலிகேட்டவளவிற் பகைவர்
அஞ்சி நடுங்கி யழியும்படி செய்தமை, பிரசித்தம்;
“நிருபர் மயங்கி வீழ்தர வெண்சங்கமு முழக்கி” என்ற வில்லிபுத்தூரார் பாரதத்தையும்,
“அரங்கர்சங்கோசையிலண்டமெல்லாம், வெருட்கொண்டிடர்படமோகித்து வீழ்ந்தனர்” என்ற திருவரங்கத்துமாலையையுங் காண்க.
தனக்கு அடிமைப்பட்டவர் பிழைசெய்தால் அதனைப் பொறுத்தலும், குற்றமாகப் பாராட்டாது விடுதலே யன்றிக் குணமாகக் கொள்ளுதலும்,
எம்பெருமானுக்கு இயல்பு;
“தன்னடியார்திறத்தகத்துத் தாமரையாளாகிலுஞ் சிதகுரைக்குமேல்,
என்னடியா ரதுசெய்யார் செய்தாரேல் நன்றுசெய்தா ரென்பர் போலும்,
மன்னுடைய விபீடணற்காய் மதிளிலங்கைத் திசைநோக்கி மலர்க்கண்வைத்த,
என்னுடைய திருவரங்கர்க் கன்றியு மற்றொருவர்க் காளாவரே” என்ற பெரியாழ்வார் திருமொழிப் பாசுரம் காண்க.
அப்பாசுரத்து வியாக்கியாநத்தில் “செய்தாரேல் நன்று செய்தார்” என்ற இடத்தில்
“நாம் உண்டு என்றும், ஒரு பிரமாணம் உண்டு என்றும், நாம்பொறுப்போம் என்றும் நினைத்துச் செய்தார்களாகில்
அழகிதாகச் செய்தார்கள்; ஒரு தருமாதருமமும் பரலோகமும் இல்லை யென்று செய்தார்களன்றே;
பிராமாதிகத்துக்கு நாம் உளோம் என்றன்றோ செய்தது?” என்று எம்பெருமான் திருவுள்ளமாக உரைத்ததும் உணரத்தக்கது.
பற்று – பற்றப்படும் இடம்; செயப்படுபொருள் விகுதி புணர்ந்து கெட்ட பெயர்.

—————-

அம்புலியின் வாழ் மான் அதிரும் குரற் பகுவாய்
வெம்புலியைக் கண்டு ஏங்கும் வேங்கடமே –நம்பும் எனை
வீங்கு ஊத்தைக் கண் திருப்பார் விண்ணோர் நரர் பிறந்து
சாம் கூத்தைக் கண்டு இருப்பார் சார்பு –32-

(இ – ள்.) அம்புலியின் வாழ் மான் – சந்திரனிடத்தில் வாழ்கின்ற மான்,
அதிரும் குரல் பகு வாய் வெம் புலியை கண்டு எங்கும் – கர்ச்சிக்கின்ற குரலையும் திறந்த வாயையு முடைய கொடிய புலியைப் பார்த்துப் பயப்படுதற்குக் காரணமான,
வேங்கடமே – , –
நம்பும் எனை – (தம்மையே சரணமென்று) நம்பிய என்னை,
வீங்கு ஊத்தைக்கண் திருப்பார் – மிக்க அசுத்தமான பிறப்பிலே திரும்பிச் செல்ல விடாதவரும்,
விண்ணோர் நரர் பிறந்து சாம் கூத்தை கண்டு இருப்பார் – தேவர்களும் மனிதர்களும் பிறந்து இறக்கின்றமை யாகிய கூத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவருமாகிய திருமால்,
சார்பு – சார்ந்துள்ள இடம்; (எ – று.)

சந்திரமண்டலத்திற் காணப்படுகின்ற களங்கவடிவத்தை மானென்பா ரது கொள்கைபற்றி, இவ்வருணனை கற்பிக்கப்பட்டது.
அருகிற் புலியைக் கண்டால் அஞ்சுதல் மானின் இயல்பாதலின், இங்ஙனங் கூறினார்.
இதில், மலையினுயர்வு விளங்கும். கொடியஜந்துக்கள் அகப்பட்ட பிராணிகளையெல் லாம் வௌவித்தின்னும் பொருட்டு
எப்பொழுதும் வாய்திறந்திருத்தல் இயல் பாதலின், “பகுவாய்” என்ற அடைமொழி புலிக்குக் கொடுக்கப்பட்டது.
தமக்கு அடிமைப்பட்ட என்னை மறுபடி பிறப்பெடுக்கவேண்டாதபடி கருமமொழித்து முத்தியிற் சேர்த்துக்கொள்வர்
கருணாநிதியான எம்பெருமானென்ற துணிவு தமக்கு இருத்தல்பற்றி, “நம்புமெனை வீங்கூத்தைக்கண் திருப்பார்” என்றார்.
எனை – என்னை; தொகுத்தல். ஊத்தைக்கண், கண் – ஏழனுருபு.
“உலகம் யாவையுந் தாமுள வாக்கலும், நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா,
அலகிலா விளையாட்டுடையா ரவர், தலைவ ரன்னவர்க்கே சரணாங்களே” என்றபடி
உயிர்களைப் படைத்தலும் காத்தலும் அழித்தலும் எம்பெருமானுக்குத் திருவிளையாட்டாதலால்,
“விண்ணோர் நரர் பிறந்து சாங் கூத்தைக் கண்டிருப்பார்” என்றார்.
கூத்தாடிகள் அரங்கில் வெளிப்பட்டுத் தம்தமது வேடத்திற்கு ஏற்பச் சிறிதுபொழுது ஆடியொழிதல் போல,
பிராணிகள் உலகில் பிறப்பெடுத்துப் புடைபெயர்ந்து அழியுமென்க. நரர் – வடசொல். இருப்பார் – உவந்திருப்பவர்;
தாம் பிறப்பு இறப்பு இன்றி என்றும் ஒருபடிப்பட இருப்பவர்; பொழுதுபோக்காகக் கண்டுகொண்டிருப்பவர்.
திருப்பார் – எதிர்மறை; இருப்பார் – உடன்பாடு. மனிதராகப் பிறந்து செய்த நல்வினையால் மறுமையில்
தேவராகத் தோன்றினும் அவர்க்கும் அந்நல்வினைமுடிவில் அத்தேவவடிவம் நீங்க மறுபிறப்பு நேர்தல் இயல்பு;
அதுவே இங்குச் சாதலாகக் குறிக்கப்பட்டது. பகு வாய் – வினைத் தொகை; பக்க பகுகிற பகும் வாய் என விரியும்.

———–

கண்ணால் வெடித்த கழை முத்தம் கார் துளைத்து
விண் ஆலியோடு உதிரும் வேங்கடமே –எண்ணார்
கலங்க வரும் அஞ்சனையார் கான் முளையை ஊர்ந்தார்
சலம் கவரும் மஞ்சு அனையார் சார்பு –33-

(இ – ள்.) கண்ணால் – கணுக்களிலே,
வெடித்த -, கழை – மூங்கில்களினின்று வெளிச்சிதறிய,
முத்தம் – முத்துக்கள்,
கார் துளைத்து – மேகத்தைத் தொளைசெய்து,
விண் ஆலியோடு உதிரும் – அந்தமேகத்தினின்று வெளிப்படுகிற மழைநீர்க்கட்டியுடனே கீழ்ச்சிந்துதற்கு இடமான,
வேங்கடமே – , –
எண்ணார் கலங்க வரும் – பகைவர்கள் உறுதிநிலைகலங்கும்படி செல்லுகின்ற,
அஞ்சனையார் கான்முளையை – அஞ்சநாதேவியினது புத்திரனான அநுமானை,
ஊர்ந்தார் – வாகனமாகக்கொண்டு ஏறிநடத்தியவரும்,
சலம் கவரும் மஞ்சு அனையார் – நீரைநிரம்ப மொண்டுகொண்ட காளமேகத் தைப் போன்றவருமாகிய திருமால்,
சார்பு – சார்ந்துள்ள இடம்; (எ – று.)

சிறந்தசாதிமூங்கில் முற்றினபொழுது அதன்கணுக்கள் வெடிக்க அவற் றினின்று முத்துப் பிறக்குமென்றல், கவிமரபு.
அங்ஙனம் திருவேங்கடமலை யின்மீது உள்ள மூங்கிலினின்று சிதறிய முத்து அருகிலுள்ள மேகத்தின் மீது தெறித்து
அதனைத் தொளைபடுத்தி அத்துளையின்வழியாக அம்மேகத்தி னின்று விழும் ஆலாங்கட்டியுடனே தானும்
கீழ்விழும் என அம்மலையின் உயர்வை வருணித்தவாறு.
கண்ணால் என்பதில் “ஆல்” என்னும் மூன்றனுருபு ஏழனுருபின் பொருளில் வந்தது, உருபுமயக்கம்.
கேசரியென்னும் வாநரவீரனது மனைவியான அஞ்சனையென்பவளிடத்தில் வாயுதேவனால் உதித்தவன் அநுமான்;
ஆதலால், அவனுக்கு, ஆஞ்சநேயன் என்று ஒருபெயர் வழங்கும்.
“எண்ணார்கலங்கவரும்” என்ற அடைமொழி, அந்த அநுமானுடைய பல பராக்கிரமங்களின் தோற்றத்தை விளக்கும்.
எண்ணார் – ஒரு பொருளாக மதியாதவர்; எதிர்மறை வினையாலணையும் பெயர்.
இங்கு “எண்ணார்” என்றது, இராக்கதர்களை. அஞ்சனையார் – உயர்வுப்பன்மை.
கால் முளை – சந்ததியில் தோன்றியவன்; பிள்ளைக்குக் காரணக்குறி. இராமபிரான் அநுமானை வாகனமாகக் கொண்டு
அவன்மேல் ஏறிப் போர்க்குச் சென்றமை, பிரசித்தம். நீர் கொண்டமேகம் – எம்பெருமானது திருமேனிக்கு,
நிறத்திலும் அழகிலும் குளிர்ந்த தோற்றத்திலும் உவமம்;
கைம்மாறுகருதாது கருணைமழைமொழிபொழிந்து உதவுங் குணத்தில் உவம மென்னவுமாம்.

————

செல்லுக்கு மேல் செல்லும் திண்ணிய வேய் வசவனார்
வில்லுக்கு வாளி ஆம் வேங்கடமே -எல்லுக்குள்
அந்தகாரம் படைத்தார் ஆர் அழல் வாய் அம்பினால்
வெந்த கார் அம்பு அடைத்தார் வெற்பு –34-

(இ – ள்.) செல்லுக்கு மேல் செல்லும் – மேகத்திற்குமேலாக வளர்ந்து செல்லுகின்ற,
திண்ணிய வேய் – வலிமையையுடைய மூங்கில்,
வாசவனார் வில்லுக்கு வாளி ஆம் – (வானத்தில்தோன்றுகிற) இந்திர தனுசுக்கு அம்பு போன்றிருக்கப்பெற்ற,வேங்கடமே – , –
எல்லுக்குள் – பகற்பொழுதினுள்ளே,
அந்தகாரம் படைத்தார் – இருளை உண்டாக்கினவரும்,
ஆர் அழல் வாய் அம்பினால் – நிறைந்த அக்கினியை வாயிலுடைய அஸ்திரத்தினால் (ஆக்நேயாஸ்திரத்தினால்),
வெந்த – தவிப்படைந்த,
கார் அம்பு – கருநிற மான கடலை,
அடைத்தார் – அணைகட்டி அணைத்தவருமான திருமாலினது, வெற்பு – திருமலை; (எ – று.)

திருவேங்கடமலையின்மீது மேகமண்டலத்தையளாவி ஓங்கிவளர்ந்துள்ள மூங்கில், வானத்தில்தோன்றும்
இந்திரவில்லில் தொடுத்தற்கு அமைந்த அம்புபோலு மென்க; தற்குறிப்பேற்ற உவமையணி.
செல் – (வானத்திற்) செல்வது என்று பொருள்படுங் காரணக்குறி.
திண்ணிய – திண்மையென்னும் பண்பினடியாப் பிறந்த குறிப்புப்பெயரெச்சம். வாசவனார் – உயர்வுப்பன்மை.
செல்லுக்கு என்பதில் நான்கனுருபு ஐந்தனுருபிற்குரிய எல்லைப்பொருளில் வந்ததனால், உருபுமயக்கம்.
வில்லுக்கு என்பதில், நான்கனுருபு – தகுதிப்பொருளது. அந்தகாரம் – வடசொல்.
அம்பு என்ற சொல் இரண்டனுள், பிந்தினது வடமொழி. அம்பு – நீர்; கடலுக்கு இலக்கணை.
ஆர் அழல் – தணித்தற்குஅரிய நெருப்புமாம்; அருமை கருமை என்ற பண்புப்பெயர்கள், ஆர் கார் என விகாரப்படும்.
வாய் – நுனி. இனி, அழல்வாயம்பு – நெருப்பு வாய்ந்த அம்பு எனினுமாம்; வாயம்பு – வினைத்தொகை.

—————-

பொன் கமழும் கற்பகத்தின் பூங்கா வனத்துக்கு
மென் கமுகம் காலாகும் வேங்கடமே -நன்கமரும்
ஊர் அத்தி கிரியார் ஊதும் திகிரியார்
வீரத் திகிரியார் வெற்பு –35-

(இ – ள்.) மெல் கமுகு – காட்சிக்கு இனிய பாக்குமரங்கள்,
பொன் கமழும் கற்பகத்தின் பூ காவணத்துக்கு – பொன்மயமானதும் வாசனைவீசுவது மான மேலுலகத்துக் கற்பகச்சோலையாகிய பொலிவுபெற்ற பந்தலுக்கு,
அம் கால் ஆகும் – அழகிய கால்கள் நாட்டியவை போன்றிருக்கப்பெற்ற,
வேங்கடமே – , –
நன்கு அமரும் – நன்றாகப்பொருந்திய,
ஊர் அத்தி கிரியார் – அத்திகிரியென்னுந் திருப்பதியையுடையவரும்,
ஊதும் திகிரியார் – ஊதிஇசைக்கின்ற வேய்ங்குழலையுடையவரும்,
வீரம் திகிரியார் – பகையழிக்குந்திறமுள்ள (சுதரிசனமென்னுஞ்) சக்கராயுதத்தை யுடையவரும் ஆகிய திருமாலினது,
வெற்பு – திருமலை; (எ – று.)

பொன்னுலகத்திலுள்ளவை யாவும் பொன்மயமானவை யென்ற கருத்தினால், கற்பகத்துக்கு ”
பொன்” என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.
கல்பகம் என்ற வடமொழி – வேண்டுவார்க்கு வேண்டுபவற்றைக் கல்பிப்பது என்று பொருள்படும்;
கல்பித்தல் – உண்டாக்குதல். கமுகு – க்ரமுகம் என்றவடசொல்லின் சிதைவு.
பாக்கு மரங்கள் மேலுலகத்து நந்தனவனத்தை யளாவி வளர்ந்துள்ளன வென்று, மலையின் உயர்வையும் வளத்தையும் உணர்த்தியவாறாம்.
கால் – பந்தற்கால். அத்திகிரி – காஞ்சீபுரியிலுள்ள பெருமாள்கோவி லென்னும் பிரதானமான தலம்.
திகிரி – மூங்கில்; வேய்ங் குழலை யுணர்த்தும்போது, கருவியாகுபெயர்.
பின்னிரண்டடியில் “திகிரி” என மூன்று முறை வந்தது, சொற்பின்வருநிலையணி.

———-

தண் இலைக்கண் மூங்கில் தலை கொடுத்த தேன் இறால்
விண் நிலைக்கண் ஆடி ஆம் வேங்கடமே –உள் நிலைக்கும்
சோதி வணம் கரியார் தூய சன காதியரும்
ஓதி வணங்கரியார் ஊர் –36-

(இ – ள்.) தண் இலைகண் மூங்கில் தலை – குளிர்ந்த இலைகளையும் கணுக்களையுமுடைய மூங்கிலின் உச்சியிலே,
தொடுத்த – கட்டிய,
தேன் இறால் – தேன்கூடு,
விண் நிலை கண்ணாடி ஆம் – தேவருலகத்து நிலைக்கண்ணாடிபோல விளங்கப்பெற்ற,
வேங்கடமே – , –
உள் நிலைக்கும் – அன்பருள்ளத்தில் நிலைபெற்றிருக்கின்ற,
சோதி – ஒளிவடிவமானவரும்,
வணம் கரியார் – திருமேனிநிறம் கருமையுள்ளவரும்,
தூய சனக ஆதியரும் ஓதி வணங்கு அரியார் – (திரிகரண) சுத்தியையுடைய ஸநகர்முதலிய மகாயோகிகளும் துதித்து
வணங்குதற்கு அருமையானவருமாகிய திருமாலினது,
ஊர் – திருப்பதி; (எ – று.)

விண் நிலைக்கண்ணாடி – தேவர்கள் தம் அழகுகாண்டற்கு நிறுவிய கண்ணாடி. தேனிறாலுக்கும் நிலைக்கண்ணாடிக்கும் ஒப்புமை,
வடிவத்தோற்றம் பற்றியது. ஆம் – உவமவுருபு. வணம் – வர்ணம் என்ற வடசொல்லின் திரிபாகிய வண்ணம் என்பதன் தொகுத்தல்.
ஸநகாதியர் – ஸநகர், ஸநந்நகர், ஸநத்குமாரர், ஸநத்ஸுஜாதர் என்னும் நால்வர்;
இவர்கள், பிரமனது குமாரர். வணங்கு – முதனிலைத்தொழிற்பெயர்; நான்காம் வேற்றுமைத் தொகை.

————

தண் கமுகின் பாளை தடம் கதிரின் செல்வனுக்கு
வெண் கவரி போல் அசையும் வேங்கடமே ஒண் கடல் சூழ்
வண் துவரை நாட்டினான் மத்தாக வாரிதியுள்
பண்டு வரை நாட்டினான் பற்று -37-

(இ – ள்.) தண் கமுகின் பாளை – குளிர்ந்த பாக்குமரத்தின் (வெண்ணிற மான) பாளைகள்,
தட கதிரின் செல்வனுக்கு – மிக்க ஒளிகளைச் செல்வமாக வுடையவனான சூரியனுக்கு,
வெள் கவரி போல் – (உபசாரமாக இருபுறத் தும் அசைக்கப்படுகின்ற) வெண்சாமரம்போல,
அசையும் – அசையப்பெற்ற,
வேங்கடமே – , –
ஒள் கடல் சூழ் – பெரிய கடலினாற் சூழப்பட்ட,
வள்துவரை – வளப்பமுள்ள துவாரகையாகிய,
நாட்டினான் – நாட்டையுடையவனும்,
பண்டு – முற்காலத்தில்,
வாரிதியுள் – கடலிலே,
வரை – மந்தரமலையை,
மத்து ஆக நாட்டினான் – கடைகருவியாக இட்டவனுமாகிய திருமால்,
பற்று – விரும்பி வாழுமிடம்; (எ – று.)

கமுகம்பாளையை வெண்சாமரம்போலசையு மென்றது, நிறமும் வடிவும் பற்றியது; உயர்வுமிகுதியால், சூரியனுக்கு வெண்சாமர மென்றார்.
கண்ணபிரான் வடமதுரையில் வசிக்கையில், பகைவர் பலர் ஒருங்கு போர்க்குவந்து சூழ்தலை நோக்கி,
அச்சமயத்தில் தனது நகரத்துக்குடிகள் அழியாதபடி காக்கக் கருதி, மேல்கடலினிடையே துவாரகை யென்ற த்வீபத்தை நிருமித்து,
அங்கு இச்சனங்களையெல்லாம் குடியேற்றித் தானும் அவ்விடத்துக்கு எழுந்தருளின தன்மையை,
“ஒண்கடல்சூழ் வண்டுவரைநாட்டினான்” என்று குறித்தார். த்வாரகா மந்தம் என்ற வடசொற்கள், துவரை மத்து எனச் சிதைந்தன.
வாரிதி – நீர் தங்கு மிடம்; வடசொல்; இங்கே பாற்கடலுக்கு வழங்கப்பட்டது. பண்டு – இடைச்சொல்.
துர்வாசமுனிசாபத்தால் இந்திரனது செல்வமனைத்தும் கடலில்ஒளித்துவிட்ட சமயம் பார்த்து வந்துபோர்செய்த
அசுரர்க்குத் தோற்றதேவர்கள் திருமாலைச்சரணமடைந்தபோது அப்பெருமான் அவர்கட்கு அபயமளித்து
மந்தரமலையை மத்தாகக் கொண்டு பாற்கடல் கடையும்படி கட்டளையிட, அங்ஙனமே தேவர்கள் அம்மலையை
அக்கடலில் மத்தாக நாட்டிக் கடைவாராயினர்;
அத்தன்மையை ஏவுதற்கருத்தாவின் வினையாக எம்பெருமான் மேல் ஏற்றி “மத்தாக வாரிதியுள் பண்டு வரைநாட்டினான்” என்றார்.

———–

அங்கு அதிரும் கான்யாற்று அடர்திவலை யால் நனைந்து
வெங்கதிரும் தண் கதிர் ஆம் வேங்கடமே –செங்கதிர் வேற்
சேந்தன் அத் தம் ஐந்தான் திருத் தாதை விற்கு இளையாள்
பூந்தனத்து அமைந்தான் பொருப்பு –38-

(இ – ள்.) அங்கு – அவ்விடத்து,
அதிரும் – ஆரவாரிக்கின்ற,
கான்யாறு – காட்டாறுகளின்,
அடர் திவலையால் – மிக்க நீர்த்துளிகள் தன்மேல் தெறித்தலினால், நனைந்து -,
வெம் கதிரும் – இயல்பில் உஷ்ணகிரணங்களை யுடையவனான சூரியனும்,
தண் கதிர் ஆம் – குளிர்ந்த கிரணங்களை யுடையவனாதற்குக் காரணமாகின்ற,
வேங்கடமே – , –
செம் கதிர் – சிவந்த ஒளியையுடைய,
வேல் – வேலாயுதத்தையுடைய,
சேந்தன் – சுப்பிரமணியனுக்கும்,
அத்தம் ஐந்தான் – ஐந்துகைகளையுடையவனான, விநாயகனுக்கும்,
திரு தாதை – சிறந்த தந்தையான சிவபிரானுடைய,
விற்கு – வில்லுக்கு,
இளையாள் – இளையவளான சீதையினது,
பூ தனத்து – அழகிய கொங்கைகளிலே,
அமைந்தான் – விரும்பிப் பொருந்தியவனான திருமாலினது,
பொருப்பு – திருமலை; (எ – று.)

தண்கதிர் ஆம் – சீதகிரணனான சந்திரன் போல்கின்ற என்க. சூரிய மண்டலத்தின்மீது கான்யாற்றுத்திவலை
தெறிக்கும்படி யுள்ள தென்றதனால் அத்திருமலையின் உயர்வும், மிகப் பெரிய வடிவமுடைய சூரியமண்டலத்தைக்
கான்யாற்றுத் திவலைகள் குளிரச்செய்கின்றன வென்றதனால் அந்நீர்த்திவலைகளின் மிகுதியும்,
மிக்க குளிர்ச்சி தருந்தன்மையும் தோன்றும். வெங்கதிர், தண்கதிர் – பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகைகள்.
ஓரடியில் இவ்வாறு மாறுபட்ட சொற்கள் வந்தது, தொடைமுரண். நான்குதிருக்கைகளோடு யானைவடிவத்துக்கு
உரியதான துதிக்கையுமாக ஐந்து கைகளை யுடைமையால், விநாயகன், ‘அத்த மைந்தான்’ எனப்பட்டான்.
ஹஸ்தம் என்ற வடசொல், அத்தம் எனத் திரிந்தது. சிவபிரானுக்கு விநாயகன் மூத்தகுமாரனும், முருகன் இளையகுமாரனு மாவர்.
தாதை – தாத என்ற வடசொல்லின் விகாரம்.

‘சிவன் விற்கிளையாள்’ என்றதிற் குறித்த வரலாறு:- விசுவகருமனால் நிருமிக்கப்பட்ட இரண்டு விற்களில் ஒன்றை
ஸ்ரீமகாவிஷ்ணுவும், மற்றொன்றைப் பரமசிவனும் எடுத்துக்கொண்டு தேவர்களின் வேண்டுகோளின் படி தம்மிற் போர்செய்கையில்,
சிவபிரான் எடுத்த வில் சிறிதுமுறியவே, போர் நிறுத்தப்பட்டது;
அவ்வில்லை அப்பெருமான் நிமிகுலத்துத் தேவராத னென்னும் மகாராசனிடம் ஒப்பிக்க, அவ்வரசன் அதனை
வெகுசாக்கிர தையாகப் பாதுகாத்துவந்தான். பின்பு அக்குலத்தில் தோன்றிய ஜநகனென்னும் அரசன் யாகசாலை
அமைத்தற்காகப் பூமியை உழுதபொழுது அவ்வுழு படைச்சாலில் தோன்றிய லக்ஷ்மியம்சமான பெண்ணை
அவ்வரசன் தனது மகளாகக்கொண்டு சீதையென்று பெயரிட்டு வளர்த்து
“அச்சிவதநுசை யெடுத்து வளைத்து நாணேற்றுபவனுக்கே இம்மகளை மணஞ்செய்துகொடுப்பேன்” என்று
அதனைக் கன்னியாசுல்கமாக நியமிக்க, பற்பலர்முயன்று முடியாதபின், விஷ்ணுவினது திருவவதாரமான ஸ்ரீராமன்
அவ்வில்லை யெடுத்து வளைத்து நாணேற்றி அப்பெண்ணை மணஞ்செய்துகொண்டான்.
இங்ஙனம் நிமிகுலத்தில் சிவதநுசு முன்பு வந்துசேர, பின்பு சீதை வந்து சேர்ந்ததனால்,
அவள் சிவபிரானது வில்லுக்கு இளையவ ளெனப்பட்டனள். இளையாள் – பின்தோன்றினவள்.
இனி, சிவபிரானது வில்லுக்கு இளைக்காதவளென்றுபொருளுரைப்பாரும் உளர்; சீதை தோழிகளோடு பந்து
விளையாடிக் கொண்டிருக்கையில் அப்பந்து அங்கு வைக்கப்பட்டிருந்த சிவதநுசின் கீழ்ப் போய்விழ,
அவள் அவ்வில்லை இடக்கையால் தூக்கிப் பந்தை யெடுத்துக் கொண்டன ளென்று ஒருவரலாறு வழங்குதல் காண்க.
முந்தினபொருளில், இளையாள் என்பது – இளமையென்னும் பண்பினடியாப்பிறந்த உடன்பாட்டுக் குறிப்பு
வினையாலணையும்பெயரும், பிந்தினபொருளில் இளையென்னும் வினைப்பகுதி யடியாப் பிறந்த
எதிர்மறைத் தெரிநிலை வினையாலணையும் பெயருமாம். இனி, வில் கிளையாள் என்று பதம்பிரித்து,
சிவபிரானது வில் வந்துசேர்ந்த குடும்பத்தில் தோன்றியவளென்று உரைப்பாரும்உளர்; கிளை – உறவினம்.
விற்கிளையாள் பூந்தனத்து அமைந்தான் – “நப்பின்னை கொங்கை மேல் வைத்துக்கிடந்த மலர்மார்பா.”
“மலராள்தனத்துள்ளான்” என்றாற் போலக் கொள்க.

—————

கேன் உளவு திங்கள் எனும் சித்தச வேள் வெண் குடைக்கு
வேணு ஒரு காம்பாகும் வேங்கடமே -கோணும் மனத்து
என்னை ஆளாக தான் இன் அருள் செய்தான் கமல
மின்னை ஆள் ஆகத்தான் வெற்பு –39-

(இ – ள்.) சேண் உலவு – வானத்திற் சஞ்சரிக்கின்ற,
திங்கள் ஏனும் – சந்திரனாகிய,
சித்தச வேள் வெள் குடைக்கு – சித்தஜனான மன்மதனதுவெண்கொற்றக்குடைக்கு,
வேணு – மூங்கில்,
ஒரு காம்பு ஆகும் – காம்பு போல் அமையப்பெற்ற, வேங்கடமே – , –
கோணும்மனத்து என்னை – செவ்வைப்படாத மனத்தை யுடைய என்னை,
ஆள் ஆக – (செவ்வைப்பட்டுத் தனக்கு) அடிமையாகும்படி,
தான் இன் அருள் செய்தான் – தானாக இனிய கருணையைச் செய்தருளியவனும்,
கமலம் மின்னை – செந்தாமரைமலரில் வாழ்கின்ற மின்னல்போல விளங்குகிற திருமகளை,
ஆள் – கொண்ட,
ஆகத்தான் – திருமார்பையுடையவனுமாகிய திருமாலினது,
வெற்பு – திருமலை; (எ – று.)

மன்மதன் – காமத்துக்கு உரிய தேவன். வெண்ணிறமாய் வட்டவடி வங்கொண்டு விளங்குகின்ற பூர்ணசந்திரமண்டலம்,
காதலைவளர்க்குந் தன்மைய தாதலால், மன்மதனது வெண்கொற்றக்குடை யென்று கூறப்படும்;
“ஆலைக்கரும்பு சிலை ஐங்கணை பூ நாண் சுரும்பு, மாலைக்கிளி புரவி மாருதம் தேர் –
வேலை, கடிமுரசங் கங்குல் களிறு குயில் காளம், கொடி மகரம் திங்கள் குடை” என்ற இரத்தினச் சுருக்கத்தையுங் காண்க.
திருவேங்கடமலையின்மீது வானத்தையளாவி ஓங்கிவளர்ந்துள்ள மூங்கில் சந்திரமண்டலமாகிய குடைக்கு ஏற்ப
இட்ட காம்பு போலு மென்று, அம்மூங்கிலின் உயரத்தோடு வலிமையையும் பருமையையும் விளக்கியவாறாம்.
சித்தஜன் – மனத்தினின்று தோன்றியவன்; திருமாலினது திருவுள்ளத்தினின்று மன்மதன் ஆதியில் தோன்றியதனாலும்,
ஆசைவடிவமான காமன் யாவர்மனத்தையும் இடமாகக்கொண்டு அங்குநின்று எழுதலாலும்,
சித்தஜ னென்று ஒருபெயர் பெறுவன். குமரவேளை விலக்குதற்கு, “சித்தசவேள்” என்றார்.
வேணு – வடசொல். கோணும் மனம் – வக்கிரத் தன்மையையுடைய மனம்; அதாவது –
தீ நெறியிற்செல்லும் மனம். இங்ஙனம் செவ்வையில்லாத மனத்தையுடைய யான் ஆட்கொள்ளப்படுதற்கு
உரியனல்லே னாயினும் என்னைத் தனது காரணமின்றியெழுங் கருணையால் திருத்திப் பணிகொண்டருளியவன் என்பார்,
“கோணுமனத் தென்னை யாளா கத்தான் இன்னருள்செய்தான்” என்றார்.
கமலமின்னையாளாகத்தான் – திருமகளைத் தனது திருமார்பில் வீற்றிருக்க வைத்துக்கொண்டவன்.

———–

தேவர் உடை ஐந்தருவின் செந்தேன் இறால் கிழிய
மீவருடை பாய்கின்ற வேங்கடமே –மூவடி மண்
போய் இரந்தார் அத்தர் புனையும் ஒரு பதினாறு
ஆயிரம் தாரத்தர் அகம் -40-

(இ – ள்.) தேவருடை – தேவர்களுடைய,
ஐந் தருவின் – ஐவகைக் கற்பக விருட்சங்களிற் கட்டிய,
செம் தேன் இறால் – செவ்விய தேன்கூடு,
கிழிய – கிழிபடும்படி,
மீ வருடை பாய்கின்ற – தன்மேலுள்ள வரையாடுகள் தாவிப் பாயப்பெற்ற,
வேங்கடமே – , –
மூ அடி மண் – – மூன்றடி நிலத்தை,
போய் இரந்தார் – (மகாபலிசக்கரவர்த்தியி னிடத்திற்) சென்று யாசித்தவரும்,
அத்தர் – (எல்லாவுயிர்கட்குந்) தந்தையாகின்றவரும்,
புனையும் – அலங்காரம் பெற்ற,
ஒரு பதினாறாயிரம் தாரத்தர் – ஒப்பற்ற பதினாறாயிரம் மனைவியரையுடையவருமாகிய திருமாலினது,
அகம் – இருப்பிடம்; (எ – று.)

திருமலையின் உயர்ச்சியோடு அம்மலையிலுள்ள ஆட்டின் கொழுமையும் விளங்கும்.
இந்திரன் முதலிய அனைவரையும் வென்று மூவுலகையும் தன் வசப்படுத்திச் செருக்கி உலகத்தை வருத்திய
மகாபலியென்னும் அசுரராசனது கர்வத்தைப் பங்கஞ் செய்யும் பொருட்டுத் தேவர்களின் வேண்டுகோளின்படி
திருமால் குள்ளவடிவமான வாமநாவதாரங்கொண்டு, அவ்வசுரன் யாகஞ் செய்துகொண்டிருக்கையிற் சென்று
தன் காலடியால் மூவடி மண் வேண்டி, அது கொடுத்தற்கு அவன் இசைந்தவுடனே திரிவிக்கிரமாவதாரஞ்செய்து,
ஓரடியால் மண்ணையும் மற்றோரடியால் விண்ணையும் அளந்து, மூன்றாமடிக்கு ஈடாக அவனது முடியில்
தனது அடியை வைத்து அவனைப் பாதாளத்தில் அழுத்தி யடக்கின னென்ற வரலாறு பிரசித்தம்.
கண்ணபிரான் இளமையில் திருவாய்ப்பாடியில் வளரும்போது தன்னிடம் காதல்கொண்ட பதினாறாயிரம் கோப ஸ்திரீகளோடு
கூடி விளையாடினமையும், கண்ணன் நரகாசுரனைச் சங்கரித்தபின்பு அவனால் மந்தரபருவதசிகரமான மணிபருவதத்திற்
சிறை வைக்கப்பட்டிருந்த தேவ சித்த கந்தருவாதி கன்னிகைகள் பதினாறாயிரம் பேரையும் பதினாறாயிரம் வடிவமெடுத்து
விவாகஞ்செய்துகொண்டு அவர்களோடு தனித்தனி கூடி வாழ்ந்துவந்தமையும் பற்றி, “பதினாறாயிரந் தாரத்தர்” என்றார்.
“புனையும்” என்றது, அம் மங்கையருடைய இயற்கையழகோடு ஆடையாபரணாதிகளாகிய செயற்கை யழகையும் விளக்கும்.
“புனையும்” என்ற இடத்து “புணரும்” என்றும் பாடமுண்டு. அத்தர் – மைந்தரைத் தந்தை அன்போடு பாதுகாப்பது போல
எல்லா வுயிர்களையும் அன்போடு பாதுகாத்தருள்பவர்; பிராணிகளின் உற்பத்திக்குக் காரணமானவர்.
“போயிரந்தாரத்தார்” என்றும், “ஆயிரந்தாரத்தார்” என்றும் பாடமோதுவாரு முளர்;
அப்பொழுது, அத்தார் புனையும் என்று எடுத்து, அழகிய மணமாலையைத் தரித்த என்று பொருள் கொள்க; மற்றது ஒக்கும்.

—————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே —சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவேங்கட மாலை –1-20-

February 20, 2022

ஸ்ரீ வேங்கடம் என்பது – திருமாலினது திவ்வியதேசங்கள் நூற்றெட்டனுள் ஒன்றும்,
வடநாட்டுத் திருப்பதிகள் பன்னிரண்டனுள் முதலதும், “கோயில் திருமலை பெருமாள்கோயில்” என்று சிறப்பாக
எடுத்துக் கூறப்படுகின்ற மூன்று ஸ்தலங்களுள் இடையது மாகிய தலம்.
தன்னை அடைந்தவர்களது பாவமனைத்தையும் ஒழிப்பதனால், “வேங்கடம்” எனப் பெயர் பெற்றது;
வடசொல். வேம் – பாவம், கடம் – எரித்தல் எனப் பொருள் காண்க.
இதனை,
“அத்திருமலைக்குச் சீரார் வேங்கடாசல மெனும் பேர், வைத்தன ரதுவே தென்னில்
வேமென வழங்கெழுத்தே, கொத்துறு பவத்தைக் கூறுங் கடவெனக் கூறிரண்டாஞ்,
சுத்தவக்கரங் கொளுத்தப்படு மெனச் சொல்வர் மேலோர்”,
“வெங்கொடும்பவங்களெல்லாம் வெந்திடச் செய்வதால் நல், மங்கலம் பொருந்துஞ் சீர்
வேங்கடமலை யான தென்று” என்னும் புராணச்செய்யுட்களாலும் அறிக.

ஸ்ரீசைலத்தின் மேற்கிலுள்ள நந்தநபுரமென்னும் ஊரில் புரந்தரனென்னும் பிராமணோத்தமனது குமாரனாகிய
மாதவனென்பவன் தன்மனைவியாகிய சந்திரரேகையென்பவளோடு பூஞ்சோலையிற் சென்று விளையாடிக்கொண்டிருக்கையில்
மாலிநியென்பாளொரு சண்டாள கன்னிகையின் கட்டழகைக் கண்டு காமுற்று அவளைக் கூடி மனையாளைத் துறந்து
அப்புலைமங்கையுடனே சென்று புலால் நுகர்ந்தும் கட்குடித்தும் கைப்பொருள் முழுவதையும் இழந்து பின்பு
வழிபறித்தல் உயிர்க்கொலை முதலிய கொடுந்தொழில் புரிந்து பொருள்சேர்த்து அவளுக்குக்கொடுத்து வந்து
முடிவில் வறியவனாகிப் பலவகை நோய்களையும் அடைந்து அவளால் அகற்றப்பட்டவனாய்ப் பல பாவமுந் தொடரப்
பித்தன்போல அலைந்து திரிந்து இத்திருமலையை அடைந்த மாத்திரத்தில் தனது தீவினையெல்லாம் சாம்பலாகப்பெற்று
முன்னைய பிரமதேஜசைப் பொருந்தி நல்லறிவுகொண்டு திருமாலைச் சேவித்து வழிபட்டுப் பரமபத மடைந்ததனால்
இதற்கு “வேங்கடாசலம்” என்னும் பெயர் நிகழ்ந்ததென்று வடமொழியிலே ப்ரஹ்மாண்ட புராணத்திலும்,
பவிஷ்யோத்தரபுராணத்திலும் கூறப்படுதல் காண்க.

அன்றி, “வேம் என்பது – அழிவின்மை, கடம் என்பது – ஐசுவரியம். அழிவில்லாத ஐசுவரியங்களைத்
(தன்னையடைந்தார்க்குத்) தருதலால், வேங்கடமெனப் பெயர் கொண்டது” என்று வராகபுராணத்திற் சொல்லப்பட்டவாறும் உணர்க.
இனி, தமிழ்மொழியாகவே கொண்டால், வெவ்விய காடுகளை யுடைய தெனப் பொருள்படு மென்க.

திரு என்பதற்கு – மேன்மையான என்று பொருள்கொண்டால் திரு வேங்கடம் என்ற தொடர் –
பண்புத்தொகையும், மேன்மையையுடைய என்று பொருள்கொண்டால் இரண்டாம்வேற்றுமை உருபும்பயனும்
உடன் தொக்க தொகையுமாம். வேங்கடமாலை என்ற தொடர் – வேங்கடத்தினது சம்பந்தமான மாலை யென்று விரித்து
வேங்கடத்தின் விஷயமான பிரபந்த மென்று பொருள்கொண்டு ஆறாம்வேற்றுமைத்தொகையாகவும்,
வேங்கடத் தைப்பற்றிய மாலையென்று விரித்துப் பொருள்கொண்டு இரண்டாம் வேற்றுமை உருபும்
பொருளும் தொக்கதொகையாகவும் உரைக்கத்தக்கது.
மாலா என்ற வடமொழி, மாலையென விகாரப்பட்டது; “ஆவீறு ஐயும்.” மலர்கள் கொண்டு தொடுக்கப்பட்ட பூமாலைபோலச்
சொற்கள்கொண்டு தொடுக்கப்பட்ட பாமாலையாகிய பிரபந்த மென்க; எனவே, மாலையென்பது – உவமையாகு பெயராம்.

மாலையென்பது – பலவகைப்பிரபந்தங்களுள் ஒன்று. அதன் இலக்கணம் – ஒருவிஷயத்தைக்குறித்துப் பலசெய்யுள் கூறுவது.
ஸ்ரீநிவாஸ னென்று வடமொழியிலும், அலர்மேல்மங்கையுறைமார்ப னென்பது தென்மொழியிலும் திருநாமங்கூறப்படுகின்ற
திருவேங்கடமுடையானது திருவடிகளிலே சூட்டும் திருமாலை போலுதலால். திருவேங்கடமாலை எனப்பட்டது;
“அடிசூட்டலாகு மந்தாமம்,”
“செய்யசுடராழியானடிக்கே சூட்டினேன் சொன்மாலை”,
“கற்றினம்மேய்த்த கழலிணைக்கீ, “ற்ற திருமாலை பாடுஞ் சீர்” என்றார் பெரியாரும்.
இங்கு வேங்கடமென்பது – அத்திருப்பதியில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமானையுங் குறிக்கும்; உபலக்ஷணம்.
“தேச்யரான பெருமாளைச் சொன்னதெல்லாம் உபஸர்ஜநகோடியிலே யாய் அத்தேசமே யாய்த்து இத்திருமாலைக்கு விஷயம்.

ஆசிரியர் தொல்காப்பியனார் செய்யுளியலில் “விருந்தேதானும் புதுவது கிளந்த யாப்பின்மேற்றே” என்பதனால்,
“விருந்துதானும், பழங்கதைமேல தன்றிப் புதிதாகத் தாம் வேண்டியவாற்றால் தொடுக்கப்படும் தொடர்நிலை மேலது”
என்றுகூறினமையின், இம்மாலை அங்ஙனம் கூறிய விருந்தாமென்று உணர்க.
இனி, இதனைச் சிறுகாப்பியத்துள் அடக்குவர் பிற்காலத்தார்.

நூலின் புறமாக முதலிற் கூறப்பட்ட காப்புச்செய்யுள் இரண்டும்,
அவையடக்கச் செய்யுள் ஒன்றும்,
நூலின் இறுதியிற் கூறப்பட்ட
“ஆதிதிரு வேங்கடமென் றாயிரம்பேரா னிடமென்,
றோதிய வெண்பா வொருநூறுங் கோதில்,
குணவாளபட்ட ரிருகோகனகத்தாள் சேர்,
மணவாள தாசன் றன் வாக்கு” என்ற சிறப்புப்பாயிரச்செய்யுளொன்றும் நீங்கலாக நூறு செய்யுளுடையது,

இந்நூல். வெண்பாவினால் அமைந்தது. இந்நூற்செய்யுள்களெல்லாம் – முன்னிரண்டடியில் திருவேங்கடத்தின் சிறப்பையும்,
பின் னிரண்டடியில் திருவேங்கடமுடையானது சிறப்பையுங் கூறி “ஊர்” என்னுந் துறை யமைய
“திருவேங்கடமென்பது திருமாலின் திருப்பதி” என்னும் வாய்பாடு பொருந்த இயற்றப்பட்டுள்ளன.
இந்நூலின் பிற்பாதியாகிய ஐம்பது செய்யுள்களின் முன்னிரண்டடிகள் – இத்தன்மையோடு சிலேடை யென்னும் அலங்காரமு முடையன.
இந்நூற் செய்யுள்க ளெல்லாவற்றிலும் பின்னிரண்டடிகள் – பெரும்பாலும் திரிபு என்னுஞ் சொல்லணியும்,
சிறு பான்மை யமகம் என்னுஞ் சொல்லணியும் அமையக் கூறப்பட்டுள்ளன.

—–

காப்பு – காத்தல். அது, இங்கு, காக்கின்ற கடவுளின் விஷயமான வணக்கத்தைக் குறிக்கும்.
ஆகவே, கவி தமக்குநேரிடத்தக்க இடையூறுகளை நீக்கித் தமது எண்ணத்தை முடிக்கவல்லதோர்
கடவுளின் விஷயமாகச் செய்யுந் தோத்திர மென்பது கருத்து.
இக்காப்புச்செய்யுள், ஆழ்வார்கள் பன்னிருவருட் பிரதானரான நம்மாழ்வாரைப் பற்றியது.
ஸ்ரீவைஷ்ணவ சமயத்தவரான இந்நூலாசிரியராற் கூறப்பட்ட இக்காப்புச் செய்யுள், விஷ்ணு பக்தர்களிற் சிறந்த
ஆழ்வாரைக் குறித்த தாதலால், வழிபடுகடவுள்வணக்க மாம். தம்தமது மதத்துக்கு உரிய கடவுளை வணங்குதலே யன்றி
அக்கடவு ளின் அடியார்களை வணங்குதலும் வழிபடுகடவுள் வணக்கத்தின் பாற்படு மென அறிக.
அவ்வாழ்வாரால் வெளியிடப்பட்ட திவ்வியப்பிரபந்தங்களின் சொற் பொருட் கருத்துக்க ளமைய அப்பிரபந்தங்கள்
போலச் செய்யப் படுவது இப்பிரபந்த மென்பதுபற்றி, இந்நூலின்
இக்காப்புச்செய்யுளை ஏற்புடைக்கடவுள் வணக்கமென்று அரிதிற்கொள்ளவும் அமையும்.

காப்பு -நம்மாழ்வாரைக் குறித்து அருளிச் செய்கிறார் –

திண்பார் புகழும் திருவேங்கட மாலை
வெண்பா வானூரும் விளம்புதற்குக் கண் பாராய்
நாராயணா வடியேனாடும் தமிழ் வேதப்
பாராயணா சடகோபா –

(இதன்பொருள்.) நாராயணா – நாராயணனே!
அடியேன் நாடும் – உனது அடியவனாகிய என்னால் மிகவும் விரும்பப்படுகிற,
தமிழ்வேத பாராயணா – தமிழ் வேதங்களாகிய திவ்வியப்பிரபந்தங்களைக் கூறியருளியவனே!
சடகோபா – சடகோப னென்னுந் திருநாமமுடையவனே! –
திண் பார் புகழும் – வலிய பூலோகத்திலுள்ளவர்கள் எல்லாராலும் புகழப்படுகின்ற,
திருவேங்கடம் – திருவேங்கடமென்னுந் திருப்பதியின் விஷயமான,
மாலை – மாலை யென்னும் பிரபந்தரூபமாக,
நூறும் – நூறுசெய்யுள்களையும்,
வெண்பாவால் – வெண்பாவென்னும் யாப்பினால்,
விளம்புதற்கு – (அடியேன்) சொல்லும்படி,
கண் பாராய் – கிருபைசெய்தருள்வாய்; (என்றவாறு.)

அடியேன் – அடிமை யென்னும் பண்பி னடியாகப் பிறந்த தன்மை யொருமைக் குறிப்பு வினையாலணையும்பெயர்.
“அடியேனாடும்” என்றது.தமிழ்வேதத்துக்கும், தமிழ்வேதபாராயணனுக்கும் அடைமொழியாகத் தக்கது.
இந்த அடைமொழியினால், இந்நூலாசிரியர்க்குத் திவ்வியப்பிரபந் தங்களினிடத்திலும் ஆழ்வாரிடத்திலு முள்ள அன்பு விளங்கும்.

திருமாலடியார்களிற் சிறந்த ஆழ்வார்கள் பன்னிருவருள் ஐந்தாமவராகிய நம்மாழ்வார், மற்றையாழ்வார்கள் போல
லௌகிகவிஷயஞானம் நடை யாடுகையில் எம்பெருமானருளால் ஒருகாலவிசேஷத்தில் தத்துவஞானாதிகள்
தோன்றப்பெற்று அந்தப்பகவானை அனுபவிப்ப தன்றி, திருத்துழாய் பரிமளத்துடனே அங்குரிப்பது போல
இயற்கையிலேயே விலக்ஷணமான ஞானபக்திகளையுடைய ராதலால், மிகுந்த ஏற்றமுள்ளவராய்த்
தத்துவ ஞானப்பிரவர்த்தநத்தில் பிரதம ஆசாரிய ராகக் கொள்ளப்படுவர்.
இவரைப் பகவானுடைய அம்சமென்று பாத்மபுராணம் கூறுகின்றதனால், “நாராயணா” என்று எம்பெருமான்
திருநாமத்தினால் விளித்தார். இவர்க்கு் இருப்பிடமான திருப்புளியமரம், எம்பெருமானுக்குத் திருப்பள்ளி
மெத்தையான ஆதிசேஷனது அம்சமென்று பிரமாண்டபுராணத்திற் கூறப்பட்டிருக்கிறது.

நூற்றெட்டுத் திருமால் திருப்பதிகளுள் பாண்டிய நாட்டுத் திருப்பதி பதினெட்டில் ஒன்றும்
தாமிரபர்ணிநதிதீரத்திலுள்ளதுமான திருக்குருகூ ரென்கிற திவ்வியதேசத்திலே காரியென்பவர்க்கு உடைய நங்கையாரது
திருவயிற்றிலே திருவவதரித்த இவர் பிறந்தபொழுதே தொடங்கி
அழுதல் பால்குடித்தல் முதலிய குழந்தைச்செய்கை யொன்றையுங் கொள்ளாமலே வாட்டமின்றிப் பரிபூர்ணராயிருக்கிற
ஆச்சரியத்தைத் தாய்தந்தையர்கண்டு இவரை அத்திருப்பதியிலுள்ள திருமாலின் திருக்கோயிலுள் கொண்டுபோய்விட,
இவர் அங்குஇருந்த ஒரு புளியமரத்தின்கீழ்ச் சென்று வீற்றிருந்து பதினாறு பிராயமளவும் கண்திறவாமல் மௌனமாய்
எழுந்தருளியிருந்த பின்பு, மதுரகவிகள் இவ்வாழ்வாருடைய மகிமையை அறிந்து வந்து அடைந்து
அடிமைத்தொழில் செய்துவருகையில், ஆழ்வார் இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்ற நான்கு வேதங்களின்
சாரார்த்தங்கள் முறையே அமையத் திருவிருத்தம் திருவாசிரியம் திருவாய்மொழி பெரியதிருவந் தாதி என்ற
நான்கு பிரபந்தங்களை அருளிச்செய்து உலகத்தை உய்வித்தன ரென்ற வரலாறு அறிக;
அத்தன்மைபற்றி, “தமிழ்வேதபாராயணா” என்று விளித்தார்.

பாராயணம் – நியமத்தோடு ஓதுதல். ஸம்ஸ்கிருத வேதங்கள் போலவே தமிழ்வேதங்களும் எவராலும் இயற்றப்படாமல்
நித்தியமாயுள்ளவை யென்றும், அந்த வடமொழி வேதங்கள் ஆதிகாலத்தில் பிரமனது வாக்கினின்று வெளிப்பட்ட
மாத்திரத்தைக்கொண்டு “முன்னந் திசைமுகனைத் தான்படைக்க மற்றவனும், முன்னம்படைத்தனன் நான்மறைகள்” என்று
அவ்வேதங்களை அவன் படைத்தா னென உபசாரமாகச் சொல்வது போலவே,
ஆழ்வாருடைய திருவாய்மலரினின்று ஆதியில் இத்தென்மொழி வேதங்கள் வெளிப்பட்ட மாத்திரத்தைக்கொண்டு
“வேதந் தமிழ்செய்த மாறன் சடகோபன்” என்று இவ்வேதங்களை இவர் இயற்றியதாகச் சொல்லுதல்
உபசார வழக்கென்றும் சித்தாந்த மென்பது, “தமிழ்வேதபாராயணா” என்ற சொல்லின் ஆற்றலால் விளங்கும்.

இனி, பாராயணம் என்ற வடசொல்லுக்கு – முழுவதும் என்று ஒருபொரு ளுள்ளதனால்,
தமிழ் வேதங்க ளெல்லாவற்றையும் வெளியிட்டவ ரென்றும் பொருள் கொள்ளலாம்;
பிற்காலத்தில் அர்ச்சாவிக்கிரகரூபியாயிருந்த இவ்வாழ்வாரை நாதமுனிகள் தக்கபடி உபாசிக்க,
அவர்க்கு ஆழ்வார் பிரசன்னராய்த் தமது நான்கு திவ்வியப் பிரபந்தங்களையும் மற்றுமுள்ள ஆழ்வார்கள்
அருளிச் செய்த வேதப்பொருளமைந்த திவ்வியப்பிரபந்தங்க ளெல்லாவற்றையும் சொல்லியருளின ரென்கிற வரலாறு காண்க.

கர்ப்பத்தி லிருக்கும்பொழுது ஞானமுடையனவாயிருக்கின்ற குழந்தை களைப் பிறந்தவுடனே தனது
ஸ்பர்சத்தால் அஜ்ஞாநத்துக்கு உள்ளாக்கி அழுதல் அரற்றுதல் முதலியன செய்யும்படி பண்ணி விடுந் தன்மையதான
சட மென்னும் வாயு, இவ்வாழ்வார் அவதரித்தபொழுது இவரையும் தொடுதற்கு வர,
அப்பொழுது இவர் அதனை உங்காரத்தால் ஒறுத்து ஓட்டி யொழித்ததனால், சடகோபரென்று இவர்க்குத் திருநாமமாயிற்று.
மாறன், பராங்குசன், நம்மாழ்வார் முதலிய திருநாமங்களும் இவர்க்கு உண்டு.

நாராயணன் – பாராயணன், சடகோபன் என்ற வடமொழிப் பெயர்கள், ஈறுகெட்டு ஈற்றயல் நீண்டு விளியேற்றன.
பார் – இடவாகுபெயர். பார் என்பது – இங்கு மற்றையுலகங்களுக்கும் உபலக்ஷண மென்றாவது,
பார் என்ற சிறப்புப்பெயர் பொதுப்பட உலகமென்ற மாத்திரமாய் நின்ற தென்றாவது கொள்க;
“வேங்கடமே, வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு,”
“உலகுக்கெல்லாம், தேசமாய்த் திகழும் மலைத் திருவேங்கடம்” என்பவாதலின்.
“வெண்பாவாநூறும்” என்ற பாடத்துக்கு – வெண்பா வாகிய நூறுகவியையு மென்க.
கண் பார்த்தல் – கடாக்ஷித்தருளுதல்; ஆய் – ஏவலொருமை வினைமுற்று விகுதி.

———-

இதுவும் அது -திருவேங்கடமுடையானைக் குறித்து அருளிச் செய்கிறார்

மூலமே யென்ற கரி முன் வந்திடர் தொலைத்து
நீலமேகம் போலே நின்றானைப் பாலாய
வேலை நடு விற்றுயிலும் வித்தகனை வேங்கடத்து
மாலை யன்றிப் பாடாதென் வாய்

(இ – ள்.) மூலமே என்ற – ஆதிமூலமே யென்று முறையிட்ட,
கரிமுன் – கஜேந்திராழ்வானுடைய முன்னிலையிலே,
வந்து – எழுந்தருளி,
இடர் தொலைத்து – (அதற்கு முதலையினாலுண்டான) துன்பத்தை நீக்கி,
நீல மேகம் போல நின்றானை – நீலநிறமுள்ள மேகம் போலக் காட்சிதந்து நின்றருளியவனும்,
பால் ஆய வேலை நடுவில் துயிலும் வித்தகனை – பால்மயமான கடலின் நடுவில் யோக நித்திரைகொண்டருளுகிற ஞானசொரூபியுமாகிய,
வேங்கடத்து மாலை – திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கிற திருமாலை,
அன்றி – அல்லாமல், (வேறொருகடவுளை),
என் வாய் பாடாது – எனது வாயானது பாடித் துதியாது; (எ – று.)

ஆசீர்வாதம் நமஸ்காரம் வஸ்துநிர்த்தேசம் என்று வடமொழியிலும், வாழ்த்து வணக்கம் வருபொருளுரைத்தல் என்று தமிழிலுங்
கூறப்படுகிற மூன்றுவகை மங்களங்களுள் வருபொருளுரைத்த லென்னும் வஸ்துநிர்த் தேசரூபமான மங்களமாகும்,
இச்செய்யுள். “தேவு மற்றறியேன்,”
“வேறொன்றும் நானறியேன்” என்றாற்போல,
“மாலையன்றிப்பாடாதுஎன்வாய்” என்று தமது உறுதியான கொள்கையை வெளியிட்டார்;
மறந்தும் புறந்தொழா மாந்தராதலால். பரதேவதையாகிய நாராயணனை வழிபடுதலே யன்றி க்ஷுத்ர தேவதைகளாகிய
பிறதேவதைகளை வழிபடாமை ஸ்ரீவைஷ்ணவர்க்குச் சிறந்த லக்ஷணமென்க.
எம்பெருமானைப்பாடுவதே யன்றித் தனிகர்களான மனிதர்களுமுட்பட மற்றெவரையும் பாடாது
என் வா யென்பதும் இதன் தேர்ந்த கருத்தாகலாம்.
“சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவன், கேண்மினோ,
என்னாவி லின்கவி யானொருவர்க்குங் கொடுக்கிலேன்,
தென்னா தெனா வென்று வண்டு முரல் திருவேங்கடத்து,
என்னானை யென்னப்ப னெம்பெருமா னுளனாகவே” என்று ஆழ்வார் அருளிச் செய்தமை அறிக.
ஒருகால் யான் பாடக்கருதினாலும் என்வாய் பாடாது; அது எம்பெருமானையே பாடப்பழகியதும் பிறரைப் பாடப்
பழகாததும் ஆதலால் என்னுங் கருத்து அமைய, “பாடாது என்வாய்” என வாயின்மேல் ஏற்றிக் கூறினார்;
இதனை, “பொய்ம்மைமொழி புகன்றறியேம் புகல மன மெண்ணுகினும்,
மெய்ம்மையலது உரையா நா வேதநவில் பயிற்சியால்” என்ற நைடதத்தோடு ஒப்பிடுக.

நின்றான், வித்தகன், மால் என்ற மூன்றும் – ஒருபொருளின்மேல் வந்த பலபெயர்கள்.
இவற்றில், முந்தின இரண்டையும் விசேடணமாகவும், பிந்தினதை விசேடியமாகவும் கொள்க.
தனக்கு அடிமைப்பட்ட உயிர்களைப் பாதுகாத்தலில் எம்பெருமானுக்கு உள்ள மிக்க ஆதரமும்,
அந்த எம்பெருமான் எப்பொழுதும் இடைவிடாமல் லோகீரக்ஷணசிந்தனை செய்துகொண்டிருத்தலும்,
அப்பெருமான் அடியார்களுக்கு எளிதில் அருள்செய்தற்பொருட்டுத் திருவேங்கடத்தில் எழுந்தருளியிருத்தலும் தோன்றக் கூறினார்.

கஜேந்திராழ்வான் ஆதிமூலமே யென்று பொதுப்படக் கூப்பிட்ட பொழுது எம்பெருமானல்லாத பிறதேவரெல்லோரும்
தாம்தாம் அச் சொல்லுக்குப் பொருளல்ல ரென்று கருதி யொழிய, அதற்கு உரிய திருமால் தானேவந்து
அருள் செய்தன னென நூல்கள் கூறும்.
ஒரு விலங்கினாலே மற்றொரு விலங்குக்கு நேர்ந்த துன்பத்தைத் தான் இருந்தவிடத்திலிருந்தே தீர்ப்பது
சர்வசக்தனான எம்பெருமானுக்கு மிகவும் எளிய தாயினும் அப்பெருமான் அங்ஙனஞ் செய்யாமல் தனது
பேரருளினால்அரைகுலையத் தலைகுலைய மடுக்கரைக்கே வந்து உதவின மகாகுணத்தில் ஈடுபட்டு,
அதனை இங்ஙனம் முதலிற் கூறினார். இவ்வரலாற்றில், திருமாலே பரம்பொருளாந்தன்மை வெளியாம்.

“பாலாய வேலை நடுவில் துயிலும் வித்தகன்” என்றது, பரத்வம் வியூகம் விபவம் அர்ச்சை அந்தர்யாமித்வம் என்ற
எம்பெருமானது ஐவகை நிலைகளுள் வியூக நிலையை உணர்த்தும்.
பாலாயவேலை – திருப்பாற்கடல். ஆய, ய் – இறந்தகால இடைநிலை.

—————

அவையடக்கம் –

அவையடக்கமாவது – கற்றோர்சபைமுன் கவி தன்னைப்பற்றித் தாழ்த்திக் கூறுதல்.
அவை – ஸபா என்ற வடசொல்லின் சிதைவு. அடக்கம் – தொழிற்பெயர்;
அடங்கு – பகுதி, அம் – விகுதி, வலித்தல் – விகாரம்.

ஆழ்வார்கள் செந்தமிழை யாதரித்த வேங்கடம் என்
தாழ்வான புன் சொல்லும் தாங்குமால் ஏழ் பாரும்
வெல்லும் கதிர் மணியும் வெம்பரலும் செஞ்சாந்தும்
புல்லும் பொறுத்தமையே போல் –

(இ – ள்.) ஏழ் பாரும் – ஏழு உலகங்களையும்,
வெல்லும் – (தமக்கு) விலையாகக் கொள்ளும்படியான,
கதிர் மணியும் – ஒளியையுடைய இரத்தினங்களையும்,
வெம் பரலும் – வெவ்விய பருக்கைக்கற்களையும்,
செம் சாந்தும் – சிவந்த சந்தன மரங்களையும்,
புல்லும் – புற்களையும்,
பொறுத்தமையே போல் – தான் தரிக்கின்ற தன்மையே போல, –
ஆழ்வார்கள் செந் தமிழை ஆதரித்த வேங்கடம் – ஆழ்வார்கள் அருளிச் செய்த செவ்விய
தமிழ்ப் பாசுரங்களை அன்புடன் ஏற்றுக் கொண்ட திருவேங்கடமலையானது,
என் தாழ்வு ஆன புல் சொல்லும் தாங்கும் – என்னுடைய மிகவும் இழிவாகிய பாடல்களையும் ஏற்றுக் கொள்ளும்; (எ – று.) –
ஆல் – ஈற்றசை; தேற்றப் பொருளதுமாம்.

மிகச்சிறந்த இரத்தினங்களோடு ஒப்ப மிகவும் இழிவான பருக்கைக் கற்களையும், சிறந்த சந்தனமரங்களோடு ஒப்பச்
சிறப்பில்லாத புற்களையும் திருவேங்கடமலை தன்மேற் கொள்ளும் இயல்பின தாதலால்,
அவ்வாறே அம்மலை ஆழ்வார்களுடைய மிகச் சிறந்த தமிழ்ப்பாசுரங்களோடு ஒப்ப எனது
மிகத் தாழ்ந்த பாடல்களையும் அங்கீகரிக்கும் என்னுந் துணிவுபற்றி, யான் இப்பிரபந்தம் பாடத் தொடங்கினேன் என்பதாம்
உபமான உபமேயங்க ளில் முறைநிரனிறை இருத்தல் காண்க.

பகவானுடைய திவ்விய மங்கள குணங்களாகிய அமுதவெள்ளத்திலே முழுகி மிகவும் ஈடுபட்டு
நன்றாக ஆழ்ந்திடுபவ ராதலால், இவர்களுக்கு, ஆழ்வார் என்று திருநாமம்.
ஸ்ரீவைஷ்ணவமதத்திற் சிறந்தமெய்யடியார்க ளென்று கொண்டாடப்படுகின்ற ஆழ்வார்கள் பன்னிருவர்; அவராவார் –

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், (அவரதுசிஷ்யரான) மதுரகவியாழ்வார்,
குலசேகராழ்வார், பெரியாழ்வார், (அவர்வளர்த்த திருமகளாரான) ஆண்டாள், தொண்ட ரடிப்பொடியாழ்வார்,
திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் என இவர்.
இவர்களில் தொண்டரடிப்பொடியாழ்வாரும் மதுரகவியாழ்வாரும் தவிர்ந்த மற்றைப்பதின்மரும் திருவேங்கடத்தைப் பாடினரென அறிக.
“ஏழ்பாரும் வெல்லுங் கதிர்” என்பதற்கு – எல்லாவுலகங்களிலுஞ் சென்று பரவி இருளை வென்று அகற்றும்
ஒளியை யுடைய என்று உரைப்பினும் அமையும்.
ஏழ்பாரும் வெல்லும் – ஏழுஉலகங்களிலும் (எல்லாஇரத்தினங்களினும்) மேம்பட்ட என்றுமாம்.
தமிழ் சொல் – பாடல்களுக்குக் கருவியாகு பெயர். தாழ்வான, புல் – ஒருபொருட்பன்மொழி.
ஏழ்பார் – கீழேழும் மேலேழும் ஆக ஈரேழுலக மென்க. செந் தமிழ் – சுத்தமான தமிழ்.

————–

பொன்னும் மணியும் பொலிந்து ஓங்கி பார்மகட்கு
மின்னும் மணி முடி ஆம் வேங்கடமே -மன்னும்
பரமபத நாட்டினான் பை அரவின் சூட்டில்
சிரம பதம் நாட்டினான் சேர்வு –1-

(இ – ள்.) பொன்னும், – மணியும் – நவரத்தினங்களும்,
பொலிந்து – (தன்மீது) விளங்கப்பெற்று,
ஓங்கி – தான் உயர்ந்திருத்தலால்,
பார்மகட்கு மின்னும் மணி முடி ஆம் – பூமிப்பிராட்டிக்கு விளங்குகின்ற இரத்தின கிரீடம் போலிருக்கிற,
வேங்கடம் – திருவேங்கடமலையானது, –
மன்னும் – நிலை பெற்ற,
பரமபதம் நாட்டினான் – பரமபதமென்னுந் திருநாட்டையுடையவனும்,
பை அரவின் சூட்டில் – படத்தையுடைய (காளியனென்னும்) பாம்பினது முடியிலே,
சிரம பதம் நாட்டினான் – ஆட்டப்பயிற்சியையுடைய திருவடிகளை நிறுத்தி நடனஞ்செய்தவனுமாகிய எம்பெருமான்,
சேர்வு – (திரு வுள்ளமுவந்து) சேர்ந்திருக்குமிடமாம்; (எ – று.) – ஆம் – உவமவுருபு.

வேங்கடம் சேர்வு என முடிக்க; இம்முடிபு, இந்நூற்செய்யுளெல்லாவற்றுக்கும் ஒக்கும்.
ஏ – ஈற்றசை; பிரிநிலையாகக்கொள்ளின், இத்திருப்பதி எம்பெருமானது திருவுள்ளத்துக்கு மற்றையெல்லாத் திவ்விய
தேசங்களினும் மிகவும் பாங்கான வாசஸ்தானமென்னுங் கருத்துஅமையும்;
அங்ஙனம் சிறப்புடையதாதல், புராணங்களினாலும் விளங்கும். முன்னிரண்டடி – வடிவுபற்றி வந்த உவமையணி.
பரமபதம் என்றும் அழிவில்லாது நித்தியமாயிருத்தலால், அதற்கு, “மன்னும்” என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.
பரம பதம் – சிறந்த ஸ்தாநம். பரமபத நாடு – பரமபதமாகியநாடு; இருபெயரொட்டு.

வருந்துதலென்னும் பொருளைத் தருகின்ற ச்ரமம் என்னும் வடசொல்லின் திரிபாகிய சிரமம் என்பது –
“சிலைக்குரு விறற்குருகுலகுமரருக்கு வரு சிரமநிலை காண்மி னெனவே” என்ற வில்லிபுத்தூரார் பாரதச் செய்யுளில்
படைக்கலப்பயிற்சி யென்னும் பொருளில் வந்தது போல, இங்கு நடனப்பயிற்சி யென்னும் பொருளில் வந்தது.
கண்ணன் காளியனுடைய முடியின்மேல் ஏறி நர்த்தநஞ்செய்தருளும்போது ஐந்துதலைகளையுடைய அந்நாகம்
எந்தெந்தப்படத்தைத் தூக்குகின்றதோ அந்தந்தப்படத்தைத் துவைத்து நர்த்தனஞ்செய்து நின்று
அப்பாம்பின்வலிமையை யடக்கி அதனை மூர்ச்சையடையச் செய்கையில் பலவகை நடனத்திறங்களைச் செய்து காட்டியமை தோன்ற,
“சிரமபதநாட்டினான்” என்றார்;
அத்தன்மையை, “சுவாமிநர்த்தனமுறைமையில் வட்டமாய்ச் சுற்றுவது முதலான பிராந்தி கதிகளினாலும்,
ஒருபக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்துக்குப் போவது முதலான ரேசககதிகளினாலும், பாதத்தை முன்நீட்டிவைப்பதாகிய
தண்ட பாதகதியினாலும், அந்தச் சர்ப்பராசன் நசுங்கி மிகுந்த உதிரத்தையுங் கக்கினான்” என்ற விஷ்ணுபுராணவாக்கியத்தால் நன்கு அறிக.
“கானகமாமடு விற் காளிய னுச்சியிலே, தூயநடம்பயிலுஞ் சுந்தர”,
“காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட் டவ, னீண்முடி யைந்திலு நின்று நடஞ்செய்து,
மீள வவனுக் கருள் செய்த வித்தகன்” என்ற ஆழ்வாரருளிச் செயல்களையுங் காண்க.

இனி, சிரமபதம் நாட்டினான் என்பதற்கு – வருத்தத்தன்மையை உண்டாக்கியவ னென்றும்,
சிரமத்தை நீக்குகின்ற திருவடியை நிறுத்தியவ னென்றும், மற்றுஞ் சிலவாறும் நலிந்துபொருள் கொள்ளுகின்ற
உரைக ளெல்லாம் சிறவாமை காண்க.
நாட்டினான் – தனது திருவடிபதிந்ததழும்பு என்றும் நிலையாக இருக்கும்படி அழுந்த வைத்தவன்;
“ஓ சர்ப்பராசனே! நீ கருடனுக்குப் பயப்படவேண்டாம்; உன் சிரசில் என்திருவடி பொறித்த வடு இருத்தலைக் கண்டு
உன்னை அவன் ஒன்றுஞ் செய்யமாட்டான்” என்று கண்ணன் காளியனுக்கு வரமளித்தமை காண்க.

சேர்வு – தொழிலாகுபெயர். “சேர்பு” என்றும் பாடம். நாட்டினான் என்பது – மூன்றாமடியில் நாடு என்னும் பெயரினடியாகப்
பிறந்த குறிப்பு வினையா லணையும் பெயரும், நான்காமடியில் நாட்டு என்னும் பிறவினைப் பகுதியடியாப் பிறந்த
தெரிநிலைவினையாலணையும் பெயருமாம்; முந்தினதில், இன் – சாரியை; பிந்தினதில், இன் – இறந்த காலவிடைநிலை.

எல்லா நூல்களும் மங்கலமொழி முதல்வகுத்துக் கூறவேண்டுவது மர பாதலால், “பொன்” என்று தொடங்கினார்.
மங்கலச் சொற்கள் இன்ன வென்பதை “சீர் மணி பரிதி யானை திரு நில முலகு திங்கள், கார் மலை சொல்லெழுத்துக்
கங்கை நீர் கடல் பூத் தேர் பொன், ஏருறுமிவைமூவாறு மிதிற் பரியாயப்பேரும்,
ஆரு மங்கலச்சொற் செய்யுளாய்ந்து முன்வைக்க நன்றாம்” என்ற நிகண்டினால் அறிக.

—————-

சோதி மதி வந்து தவழ் சோலை மலை யோடிரண்டாய்
மேதினியாள் கொங்கை நிகர் வேங்கடமே –போதில்
இருப்பாற் கடலானிப மூர்ந்தார் கெட்டாத்
திருப் பாற் கடலான் சிலம்பு –2-

(இ – ள்.) சோதி மதி வந்து தவழ் – ஒளிநிறைந்த சந்திரன் வந்துதவ ழப்பெற்ற (மிகவும்உயர்ந்த),
சோலைமலையோடு – திருமாலிருஞ்சோலைமலை யோடு சேர்ந்து,
இரண்டு ஆய் – இரண்டாகி,
மேதினியாள் கொங்கை நிகர் – பூமிப்பிராட்டியினது இரண்டுதனங்கள் போல்கின்ற,
வேங்கடமே -, –
போதில் இருப்பாற்கு – தாமரைமலரில் இருப்பவனான பிரமதேவனுக்கும்,
அடல் ஆன் இபம் ஊர்ந்தார்க்கு – வலிமையையுடைய ருஷபத்தையும் ஐராவதயானையையும் (முறையே வாகனமாகக்கொண்டு)
ஏறிச்செலுத்துபவரான சிவபிரானுக்கும் தேவேந்திரனுக்கும்,
எட்டா – எட்டாத,
திருபால் கடலான் – திருப்பாற்கடலிற் பள்ளிகொண்டிருப்பவனான திருமாலினது,
சிலம்பு – திருமலை; (எ – று.)

“சோதிமதிவந்துதவழ் சோலைமலை” என்றது, தொடர்புயர் வுநவிற்சியணி.
“சோலைமலையோ டிரண்டாய் மேதினியாள் கொங்கை நிகர் வேங்கடம்” என்றது, உவமையணி.
சிறப்பும் உயர்வு முள்ள வடக்குத் திருமலையாகிய திருவேங்கடமும், தெற்குத்திருமலையாகிய திருமாலிருஞ்சோலை மலையும்,
பூமியாகிய பெண்ணின் இரண்டு தனங்களாக வருணிக்கப்பட்டன.
பருத்த வடிவத்தையும், மிக்க வலிமையையும், பூமிதேவியின் நாயகனான திருமால் விரும்புமிட மாதலையும் விளக்கும் உவமை.
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரியதிருமடலில்
“தென்ன னுயர்பொருப்பும் தெய்வ வடமலையும்,
என்னு மிவையே முலையா வடிவமைந்த, அன்ன நடைய அணங்கு” என்றதை அடியொற்றியது,
இவ்வருணனை, அதன் வியாக்கியாநத்தில், “மேரு மந்தராதிகளைச் சொல்லாதே திருமலைகளைச் சொல்லுவா னென் னென்னில், –
முலைகளாகின்றன, காந்தன் விரும்பி விடாதே படுகாடுகிடக்குமவையாய்த்து; ஸர்வேச்வரன்விரும்பி நித்ய வாசம்
பண்ணுமிடங் களிறே இரண்டு திருமலைகளும்” என்ற வாக்கியம் இங்கு உணரத்தக்கது.
“பொதியமு மிமயமும் புணர்முலை யாக” என்ற பெருங்கதையோடும்,
“கொங்கையே பரங்குன்றமுங் கொடுங்குன்றும்” என்ற திருவிளையாடற் புராணத்தோடும் இதனை ஒப்பிடுக.
மிகப்பலவான சோலைகளையுடையதாதலால், சோலைமலையென்று திருநாமம்: “வநகிரி” என்று வடமொழிப்பெயர்;
“ஆயிரம் பூம்பொழிலுமுடை மாலிருஞ் சோலையதே” என்றார் பெரியாழ்வாரும். இத்திருமலை, பாண்டியநாட்டி லுள்ளது.

“பத்துடைய டியவர்க் கெளியவன் பிறர்களுக்கு அரிய, வித்தகன்” என்றபடி எம்பெருமான் அன்புமிக்க அடியார்கட்கு
எளியவனாவனேயன்றி அகங்காரத்தோடு “நாம் தேவர்” என்கிற அமரர்கட்கு எளியவனல்ல னென்பது, பின்னிரண்டடியில் விளக்கப்பட்டது.
எட்டாமை – மனத்தினால் நினைத்தற்கும், மொழியினாற் சொல்லுதற்கும், மெய்யினாற் சேர்தற்கும் இயலாதபடி இருத்தல்.
எட்டாஎன்றது, திருப்பாற்கடலானுக்கு அடைமொழி. ஆன் என்ற பொதுப்பெயர் – இங்கு, பசுவின் ஆணின்மேல் நின்றது.
போது – சிறப்பாய்த் தாமரையைக் குறித்தது.

————

மாலைக்கோ லித்திரியும் வையகத்தோர் தம் பிறவி
வேலைக்கோர் வங்கமாம் வேங்கடமே சோலைத்
தருமா தரை நாட்டான் தண் முல்லை யாயர்
தருமா தரை நட்டான் சார்பு –3-

(இ – ள்.) மாலை – மயக்கத்தை,
கோலி – தம்மிடத்திலே கொண்டு,
திரியும் – (பலவிடங்களிலும்) அலைகின்ற,
வையகத்தோர்தம் – நிலவுலகத்தி லுள்ளாருடைய,
பிறவி – பிறப்பாகிய,
வேலைக்கு – கடலுக்கு,
ஓர் வங்கம் ஆம் – ஒரு மரக்கலம் போன்ற, வேங்கடமே – , –
சோலை தரு – (தேவேந்திரனது நந்தனவனமென்னும்) பூஞ்சோலையி லுள்ள பாரிசாத விருட்சத்தை,
மா தரை நட்டான் – பெரிய பூமியிற் கொணர்ந்து நாட்டியவனும்,
தண் – (நீர்வளத்தாற்) குளிர்ச்சியான,
முல்லை – முல்லைநிலத்தில் வசிக்கின்ற,
ஆயர் – இடையர்கள்,
தரும் – பெற்ற,
மாதரை – பெண்களை (கோபஸ்திரீகளை),
நட்டான் – விரும்பிக் கூடியவனு மாகிய திருமால்,
சார்பு – (திருவுள்ள முவந்து) சார்ந்திருக்கு மிடமாம்; (எ – று.) –
கடற்கு – கடல்கடத்தற்கு.

மால் – மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை முதலியன. கோலி என்ற இறந்தகாலவினையெச்சத்தில்,
கோல் – வினைப்பகுதி. மாலைக் கோலித் திரியும் வையகத்தோர் என்பதற்கு – எம்பெருமானை நாடித் திவ்விய தேசயாத்திரை
செய்கின்ற நிலவுலகத்தாரென்றும் பொருள்கொள்ளலாம்.
காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி மேன்மேல் வருதலாலும், அச்சந்தருதலாலும்,
கடத்தற்கு அரிதாதலாலும், பிறப்புக் கடலெனப்பட்டது.
கடலி லிறங்கியவர் அக்கடலைக் கடந்து அக்கரை சேர்தற்கு மரக்கலம் கருவியாவதுபோலப் பிறப்பில் அகப்பட்டவர்
அதனையொழித்து முத்தி பெறுதற்குத் திருவேங்கடமலை சாதனமாகு மென்க.
எனவே, வேங்கடம் தன்னையடைந்தார்க்கு வினையொழித்து வீடுதரவல்ல தென்றதாம்.

சத்தியபாமையின் பொருட்டுக் கண்ணன் தேவலோகத்திலிருந்து பாரி ஜாத தருவைத் துவாரகைக்குக் கொணர்ந்து
நாட்டின வரலாறும், கண்ணபிரான் திருவாய்ப்பாடியில் வளர்ந்தருளியபொழுது தன்னிடங்காதல்கொண்ட
பல கோபகன்னிகைகளைத் தானும் காதலித்து அவர்களோடு கூடிக் குலாவினமையும், பாகவதத்திற் பிரசித்தம்.
முல்லை – காடும், காடுசார்ந்த இடமும். ஆயர் – பசுக்களுக்கு உரியவர்.
நட்டான் – இறந்தகால வினையாலணையும்பெயர்; முறையே நடு, நள் – பகுதிகள். சார்பு – தொழிலாகுபெயர்.

இச்செய்யுளின் பின்னிரண்டடியில் யமகம் அமைந்திருத்தல் காண்க.

————-

நாலு திசை முகமு நண்ணுதலால் ஒண் கமல
மேலுறலால் வேதாவாம் வேங்கடமே சாலுறையு
மண் மயக்கம் தேற்றுவித்தான் மாற்றுதல் போல் ஆரியனால்
உள் மயக்கம் தேற்றுவித்தானூர் –4-

(இ – ள்.) நாலு திசை முகமும் நண்ணுதலால் – நான்கு திசைகளையும் நோக்கிய நான்கு முகங்கள் பொருந்தியிருத்தலால்
(நான்குதிக்கினிடங்களிலுள்ளாராலும் விரும்பி வந்து சேவிக்கப்படுதலால்),
ஒள் கமலம் மேல் உற லால் – பிரகாசமான தாமரைமலரின்மேல் தோன்றியதனால்
(சிறந்த புண்ணிய தீர்த்தங்கள் தன்மேல் தங்கப்பெறுதலால்),
வேதா ஆம் – பிரமனைப் போன்ற, வேங்கடமே – ,-
சால் உறையும் மண் மயம் கம் – பாத்திரத்திற் பொருந்திய மண்ணோடுகலந்த நீரை,
தேற்று வித்தால் மாற்றுதல் போல் – தேற்றாங்கொட்டையைக் கொண்டு அத்தன்மையை மாற்றித் தெளியச்செய்தல் போல,
ஆரியனால் – ஆசாரியனைக்கொண்டு,
உள் மயக்கம் தேற்றுவித்தான் – (எனது) மனத்தின் தடுமாற்றத்தைத் தெளியச்செய்தவ னான திருமாலினது,
ஊர் – வாசஸ்தாநமாம்; (எ – று.)

முன்னிரண்டடி – பிரமனுக்கும் வேங்கடத்துக்கும் செம்மொழிச்சிலே டைபற்றிவந்த உவமையணி.
(செம்மொழிச் சிலேடையாவது – சொற்கள் வெவ்வேறு வகையாகப் பிரிக்கப்படாமல் பலபொருள்படுவது.)
நாற்புறமும் நோக்கிய நான்கு முகமுடையவனாய்த் திசைமுகனென்றும் நான்முகனென்றும் பெயர்பெறுதலும்
திருமாலினது திருநாபித் தாமரைமலரினின்று தோன்றியமையும் பிரமனுக்கும்,
எத்திசையிலுள்ளோராலும் தொழுது ஏத்தியிறைஞ்சப்படுதலும் அநேக புண்ணியதீர்த்தங்களை யுடைமையும்
திருவேங்கடத்துக்கும் அமையும்.
சால் – நீர்கொள்ளும் மட்பாத்திரம். தேற்றாமரத்தின் விதையைத் தேய்த்து அத்தேய்வையை நன்றாகக்குழம்பிய
நீரிற் கரைத்தால் அந்நீர் கலக்கந்தெளிதல், இயல்பு. ஞானம் அநுட்டானம் இவை நன்றாகவேயுடையனான நல்லாசிரியன்
நேர்ந்து தத்துவஞானோ பதேசஞ்செய்து மனத்தைத் தெளிவித்தல் எம்பெருமானது திருவருளின்
வாய்ப்பினா லன்றி அமையா தாதலின், அதனை அப்பெருமான்மேல் ஏற்றி,
“மண்கலந்தநீரைத்தேற்றாங்கொட்டையைக்கொண்டு தெளிவித்தாற்போல, மயங்கிய மனத்தை ஆசிரியனைக்
கொண்டு தெளிவித்தவன்” என்றார்;
உயிர்கட்கு ஆவனசெய்தல் இறைவனது செய லென்க. குழம்பிய நீர் – கலங்கிய மனத்துக்கும்,
தேற்றாம்வித்து – ஆசிரியனுக்கும் உவமையாம். ம்ருண்மயம் என்ற வடசொல், மண்மயம் என விகாரப்பட்டது.
கம், ஆர்யன் – வடசொற்கள். தேற்றுவித்தால், ஆரியனால் என்றவற்றில் – “ஆல்” உருபு – கருவிப்பொருளது.

————–

பாணி பிறை கொன்றை பணி சூடி மானேந்தி
வேணியரனைப் பொருவும் வேங்கடமே -யாணி நிறப்
பீதாம் பரனார் பிரமர் வாழ் அண்டம் கண்
மீதாம் பரனார் விருப்பு -5-

(இ – ள்.) பாணி – நீரையும்,
பிறை – சந்திரனையும்,
கொன்றை – கொன்றையையும்,
பணி – பாம்பையும்,
சூடி – மேற்கொள்ளுதலாலும்,
மான் ஏந்தி – மானைத் தரித்தலாலும்,
வேணி அரனை பொருவும் – சடை முடியையுடைய சிவபிரானைப் போல்கின்ற,
வேங்கடமே -, –
ஆணி நிறம் பீதஅம்பரனார் – ஆணிப்பொன்னிறமுள்ள பீதாம்பரமென்னும் பொற் பட்டாடையை யுடுத்தவரும்,
பிரமர் வாழ் அண்டங்கள் மீது ஆம் பரனார் -பிரமதேவர் வாழ்கின்ற அண்டங்களுக்கு மேலாகிய பரமபதத்தில் எழுந் தருளியிருக்கிறவரும் ஆகிய திருமால்,
விருப்பு – திருவுள்ளமுவந்து வந்து எழுந்தருளித் தங்கியிருக்குமிடம்; (எ – று.)

சிவபிரானுக்கும் திருவேங்கடத்துக்கும் செம்மொழிச்சிலேடையுவமை.
சிவபிரான் பகீரதனது வேண்டுகோளினால் கங்கையை முடிமீதுகொண்ட மையும், தக்ஷமுனிவனது சாபத்தினால்
க்ஷயமடைபவனாய்க் கலைகுறைந்து வந்து சரணமடைந்த சந்திரனை முடியின்மீது கொண்டு வரமளித்துப் பாது காத்தமையும்,
கொன்றைமலரை அன்போடு சூடிக்கொள்ளுதலும், தாருகவன முனிவர்களாலேவப்பட்டுத் தன்னைக்
கொல்லவந்த நாகங்களையும் மானையும் வலியடக்கி நாகங்களை ஆபரணமாகக்கொண்டு மானை இடக்கையிலேந்தினமையும் காண்க.

திருவேங்கடமலையும் திவ்வியதீர்த்தங்களும் கொன்றை மரங்களும் நாகங்களும் மான்களும் இருத்தலும்,
மிகவுயர்ந்த அம்மலையின் முடியின்மேல் சந்திரன்வருதலும், இயல்பு.
சிவபிரானுக்கு வேணியையுடையமை கூறியதற்கு ஏற்ப, வேங்கடத்துக்கு அடர்ந்தவனத்தொகுதியை யுடைமை கொள்க.

ஆணிப்பொன் – மாற்றுக்குறைவற்ற பொன். பீதாம் பரமென்பது – பீத அம்பரம் எனப்பிரிந்து,
பொன்னிறமான ஆடையெனப் பொருள்படும்; தீர்க்கசந்தி. அண்டங்கள் அநந்தமென்றும், அவை ஒவ்வொன்றுக்கும்
ஒவ்வொரு பிரமன் உளனென்றும், அவ்வண்டங்களுக்கெல்லாம் மேலுள்ளதான பரமபதத்தில் எம்பெருமான்
எழுந்தருளியிருக்கின்றன னென்றும், அந்நிலை ஐந்துவகை நிலையுள் பரத்துவமெனப்படு மென்றும் அறிக.

“ஆர்” என்னும் பலர்பால் விகுதி, இரண்டிடத்தும் உயர்வுப்பொருளில் வந்தது.
பிரமர் – பொருட்பன்மை; உயர்வுப்பன்மையன்று. விருப்பு – முதனிலைதிரிந்த தொழிலாகுபெயர்.

————–

மாலாய்ச் சசி தழுவி வச்சிர மேந்திப்பு கர்மா
மேலாய்ப் புரந்தரனாம் வேங்கடமே -நாலாய்க்
கிளர்வாகு மந்தரத்தான் கேட்ட மாதர் வேட்டுத்
தளர்வாகு மந்திரத்தான் சார்பு –6–

(இ – ள்.) மால் ஆய் – மால்என்னும் ஒரு பெயரைக் கொண்டு (பெரு மையையுடையதாய்),
சசி தழுவி – இந்திராணியைக் கூடி (சந்திரன் தன் மீது பொருந்தப்பெற்று),
வச்சிரம் ஏந்தி – வச்சிராயுதத்தைக் கைக்கொண்டு (வச்சிர ரத்தினக் கற்களைத் தன்மேலுடையதாய்),
புகர் மா மேல் ஆய் – (உத்தம விலக்கணமாகிய) செம்புள்ளிகளையுடைய (ஐராவதமென்னும்) யானைமேல் ஏறுதலால்
(செம்புள்ளிகளையுடையயானைகள் தன்மேல்தங்கப்பெறுதலால்),
புரந்தரன் ஆம் – இந்திரனை யொத்த,
வேங்கடமே – , –
நால் ஆய் கிளர் – நான்காய் விளங்குகின்ற,
வாகுமந்தரத்தான் – மந்தரமலைபோன்ற தோள்களை யுடையவனும்,
அமரர் – தேவர்கள்,
கேட்டு – (தனது சிறப்பைக்) கேள்வி யுற்று,
வேட்டு – (தாம்தாம் சென்றுசேர) விரும்பி,
தளர்வு ஆகும் – (தமக்கு அதுஎளிதிற்கிடைத்திடாமையால் தாம்) தளர்ச்சியடைதற்குக் காரணமான,
அந்தரத்தான் – (பரமாகாசமெனப்படுகின்ற) பரமபதத்தை யுடையவனாகிய திருமால்,
சார்பு – சார்ந்திருக்கு மிடம்; (எ – று.)

இந்திரனுக்கும் திருவேங்கடத்துக்கும் செம்மொழிச்சிலேடையுவமை.
மால்என்பது – இந்திரனுக்கு ஒருபெயராதல், “வாசவன் அமரர்கோன்மால் முகிலூர்தி” என்ற திவாகரத்தாலும் விளங்கும்.
மாலாய்ச் சசிதழுவி என்ப தற்கு – ஆசைகொண்டு இந்திராணியை யணைத்து என்றும் பொருள்கொள் ளலாம்.
வடமொழித்திரிபாகிய சசி யென்பது – சந்திரனைக் குறிக்கையில், முயல்வடிவத்தையுடையதென்று காரணப்பொருள்படும்;
சசம் – முயல்: சந்திரனிடத்துக் காணப்படுகின்ற களங்கத்தை முயலென்றல், ஒருவகைக் கவி மரபு.
வஜ்ரம் என்ற வடசொல், வச்சிரமெனத் திரிந்தது. செம்புள்ளிகளை யுடைமை யானைக்கு நல்லிலக்கணமாதலை,
“தீயுமிழ் சிறுகணுஞ் செம்புகரு முடைத்தாய்” என்ற அரசயானையிலக்கணத்தினாலும் அறிக.
புரந்தரன் – வடசொல்; (பகைவர்களுடைய) நகரங்களையழிப்பவ னென்று காரணப்பொ ருள்படும்: புரம் – பட்டணம்.
நால் – நான்கு என்பதன் விகாரம். வாகு – பாஹு என்ற வடசொல்லின் திரிபு.
அழித்தற்கு அரிய வலிமையும் பருமையும் பற்றி, தோளுக்கு மலை உவமைகூறப்படும்.
எட்டுக்குலமலைகளுள் ஒன்றாய் மிகப்பெரியதும் வலியதுமாதல்பற்றி, மந்தரத்தை யெடுத்துக்கூறினார்.
அதனை உவமைகூறியதனால், அம்மலை பாற்கடலைக் கடைந்தமைபோல இத்தோள்கள் பகைவருடைய
போர்க்கடலை எளிதிற் கடக்கவல்லன வென்க.
வேட்டு, வேள் – பகுதி. பரமபதம் தேவர்க்கும் செல்லுதற்கு எளியதன்றென்பது, “கேட்டமரர் வேட்டுத் தளர்வாகு மந்தரம்” என்றதன் கருத்து.

—————

வள்ளி புணர்ந்த ஆறுமுக மன்னி மயில் மேல் கொளலால்
வெள்ளிலை வேல் வேள் போலும் வேங்கடமே –உள்ளினரைத்
தங்கமலப் பார்வையால் தன்னடியார் மேல் வைக்கும்
செங்கமலப் பார்வையான் சேர்வு –7-

(இ – ள்.) வள்ளி புணர்ந்து – வள்ளிநாயகியோடு கூடி (வள்ளிக்கொடி கள் பொருந்தப்பெற்று),
ஆறு முகம் மன்னி – ஆறு முகம் அமையப்பெற்று (நதிகள் தன்னிடத்திலே அமையப்பெற்றதாய்),
மயில் மேல் கொளலால் – மயிலை வாகனமாகக்கொண்டு அதன்மேல் ஏறுதலால் (மயில்களைத் தன் மேற்கொண்டிருத்தலால்),
வெள் இலை வேல் வேள் போலும் – வெள்ளிய இலைவடிவமாகிய வேலாயுதத்தையுடைய முருகக் கடவுளை யொக்கின்ற,
வேங்கடமே – , –
உள்ளினரை – (தன்னைத்) தியானித்த அடியார்களை,
மலம் பார் – (காம வெகுளி மயக்கங்களாகிய) மும்மலங்கள் பொருந்திய உலகத்தில்,
தங்க வையான் – இருக்க வைக்காமல் தனது பரமபதத்திற் சேர்த்துக் கொள்பவனும்,
தன் அடியார்மேல் வைக்கும் – தனது அடியார்க ளிடத்து வைக்கின்ற,
செம் கமலம் பார்வையான் – செந்தாமரைமலர் போன்ற திருக்கண்களின் நோக்கத்தை யுடையவனு மாகிய திருமால்,
சேர்வு – சேருமிடம்; (எ – று.)

சுப்பிரமணியனுக்கும் வேங்கடத்துக்கும் செம்மொழிச்சிலேடைபற்றி வந்த உவமை.
வள்ளி – சுப்பிரமணியனது மனைவியர் இருவருள் ஒருத்தி. (மற்றொருத்தியின் பெயர் – தேவயானை.)
வள்ளிக்கிழங்கின் கொடியை மிகுதியாகவுடைமையால் வள்ளிமலை யென்று பெயர்பெற்ற கிரியில்
வள்ளிக் கொடிகளுள்ள இடத்திற் பிறத்தலால், இவளுக்கு, வள்ளி யென்று பெயர்.
“ஆறுமுகமன்னி” என்பதற்கு – (திருவேங்கடத்துக்குச் சேருங்கால்) சண்முகதீர்த்தமென்னும்
திவ்வியதீர்த்தம் பொருந்தி என்றும் பொருள் கொள்ளலாம்.
மூன்றாமடியில், வையான் வைக்கும் என வந்தது. முரண்தொடை; “மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே” என்றது காண்க.

——————-

புள்ளரவ நீரரவம் போர் மா வரவமறா
வெள்ளரவ வெற்பாகும் வேங்கடமே ஒள்ளரியாய்
மாகனகம் பத்தினர் வாய் கண் கை யுந்தி பதம்
கோகனகம் பத்தினார் குன்று –8-

(இ – ள்.) புள் அரவம் – பறவைகளின் ஒலியும்,
நீர் அரவம் – அருவி நீர்பெருகிய ஒலியும்,
போர் மா அரவம் – போர்செய்கின்ற யானை முதலிய விலங்குகளின் ஓசையும்,
அறா – நீங்காததாய்,
வெள் அரவ வெற்பு ஆகும் – சுத்தமான அரவவெற்பென்று ஒருபெயர்பெற்ற,
வேங்கடமே – , –
ஒள் அரி ஆய் – விளங்குகின்ற சிங்கவடிவமாய்,
மா கன கம்பத்தினார் – ஓங்கிய பருத்த தூணினின்று தோன்றியவரும்,
வாய் கண் கை உந்தி பதம் – வாய் ஒன்றும் கண்கள் இரண்டும் கைகள்நான்கும் நாபிஒன்றும் பாதம் இரண்டும் ஆகிய, கோகனகம் பத்தினார் – பத்துத்தாமரைமலர்களையுடையவ ருமாகிய திருமாலினது,
குன்று – திருமலை; (எ – று.)

அரவம் என்பது – ஓசையென்னும் பொருளில் ரவம்என்ற வடமொழி முதலில் அகரம்பெற்றதும்,
பாம்பென்ற பொருளில் அராஎன்னும் தென்மொழி குறுகி அம்சாரியை பெற்றதுமாம்.
சேஷகிரியென்பதன் பரியாயநாமமாக அப்பொருளில் திருவேங்கடமலைக்கு அரவவெற்பு என்று ஒருபெயர் வழங்கும்;
அப்பெயர்க்கு – புள்ளரவம் முதலிய பலவகையரவங்கள் (ஒலிகள்) நீங்காததாய் அரவவெற்பாகுமென்று
வேறொருவகைக்காரணங் கற்பித்துக் கூறினது, நிருக்தியலங்காரம்; தமிழில் பிரிநிலைநவிற்சியணி யெனப்படும்:
அதன் இலக்கணம் – பெயர்களுக்கு உறுப்பாற்றலால் மற்றொருபொருளைத் தந்துரைத்தல்.
திருமால் நரசிங்கவடிவமாய்த் தூணினின்று வெளிப்பட்டு இரணியனைக்கொன்று பிரகலாதனைப் பாதுகாத்தமை, பிரசித்தம்.
அரி – ஹரி; சிங்கம்; (யானை முதலியவற்றை) அழிப்பது. ஸ்தம்பம், கோகநதம் என்ற வடசொற்கள் – கம்பம், கோகநகம் என விகாரப்பட்டன.
வாய்முதலியவற்றுக்குத் தாமரைமலர் மென்மையழகுகளில் உவமம். ஆய்என்ற வினையெச்சம்.
கம்பத்தினார் என்ற குறிப்புவினையாலணையும் பெயரில் தொக்குநின்ற “தோன்றியவர்” என்பதைக் கொள்ளும்.
பரமபதநாதனது கட்டளையின்படி அவனுக்குப் பலவகைக்கைங்கரியங்களைச் செய்யும் ஆதிசேஷனே இம்மலையுருவானதனாலும்,
மேருமலையினிடமிருந்து ஆதிசேஷனுடனே வாயுவினால் இம்மலை கொணரப்பட்டதனாலும், இதற்கு “சேஷகிரி” என்று பெயர் வாய்த்தது.

————-

துய்ய செம் பொற் கோயில் சுடர் எறிப்பக் கண் முகிழ்ந்து
வெய்ய வன்றேர் மாவிடறும் வேங்கட மேயையிருநூ
றான முகப் பாம்பணையா ரானிரைப்பி னூதி வரும்
கானமுகப் பாம்பணையார் காப்பு –9-

(இ – ள்.) துய்ய – சுத்தமான (மாசற்ற),
செம் பொன் – சிவந்தபொன் மயமான,
கோயில் – திருக்கோயிலினது,
சுடர் – காந்தி,
எறிப்ப – வீசுதலால்,
வெய்யவன் தேர் மா – சூரியனுடைய தேரிற் கட்டிய குதிரைகள்,
கண் முகிழ்த்து – கண்கள் மூடப்பெற்று,
இடறும் – (அதனால்) கால் இடறுதற்குக் காரணமாகின்ற,
வேங்கடமே – , –
ஐ இரு நூறு ஆன முகம் பாம்பு அணையார் – ஆயிரந்தலைகளையுடைய ஆதிசேஷனைத் திருப்பள்ளி மெத்தையாகவுடையவரும்,
ஆன் நிரை பின் ஊதி வரும் – பசுக்கூட்டத்தின் பின்னே ஊதிக்கொண்டுவருகின்ற,
கானம் – சங்கீதம்,
உகப்பு ஆம் – (எல்லாப் பிராணிகட்கும்) ஆநந்தகரமாம்படியான,
பணையார் – வேய்ங் குழலையுடையவருமாகிய திருமால்,
காப்பு – (உயிர்களைப்) பாதுகாத்தருளும் இடம்; (எ – று.)

முன்னிரண்டடி – அதிசயோக்தி. திருவேங்கடமலையிலுள்ள பொன் மயமான திருக்கோயிலின் ஒளி மிகுதியாக வீசுதலால்
சூரியன் தேர்க்குதிரைகள் கண்கூச்சமடைந்து கண்விழிக்கமாட்டாமல் கண்மூடிக்கொண்டு அம் மலையின் உயர்வினால்
அதிற்காலிடறுமென வருணித்தது, பொற்கோயிலின் சிறப்பையும் மலையின் உயர்வையும் விளக்கியவாறாம்.
துய்ய – தூய் என்னும் பண்பினடி முதல்குறுகிற்று. ஐயிருநூறு – பண்புத்தொகைப் பன்மொழித் தொடர்.
பலவிடங்களிற் பரவிமேய்கிற பசுக்கூட்டங்களை ஒருங்குசேர்த்தற் பொருட்டும், அவற்றை மகிழ்வித்தற்பொருட்டும்
கண்ணன் வேணுகரநஞ் செய்தபொழுது அவ்வின்னிசையைச் செவியுற்று அனைத்துயிர்களும் அளவற்ற ஆனந்தத்தை யடைந்தமை, பிரசித்தம்.
கோயில் – கோ + இல்; கடவுளின் இடம்: வகரம்பெறாது யகரம்பெற்றது, இலக்கணப்போலி.
பணை – மூங்கிலின் பெயர், குழலுக்குக் கருவியாகுபெயராய் நின்றது. காநம் – வடசொல்.

—————

மாண்டு பிறக்கும் துயர் போய் வைகுந்தம் புக்கவரும்
மீண்டு தொழக் காதலிக்கும் வேங்கடமே -பாண்டு மகன்
ஏறு இரதப் பாகனார் ஏத்தும் அடியார் நாவில்
ஊறு இரதப் பாகு அனார் ஊர் –10-

(இ – ள்.) மாண்டு – இறந்து,
பிறக்கும் துயர் போய் – (மறுபடி இவ்வுலகிற்) பிறப்பெடுத்தலா லாகிற துன்பம் நீங்கி,
வைகுந்தம் புக்கவரும் – ஸ்ரீவைகுண்டலோகத்தை யடைந்தவர்களும்,
மீண்டு தொழ காதலிக்கும் – (அங்கு நின்று) மீண்டுவந்து வணங்க ஆசைப்படும்படியான,
வேங்கடமே – , –
பாண்டுமகன் ஏறு இரதம்பாகனார் – பாண்டுவினது குமாரனான அருச்சுனன் ஏறிய தேரைச் செலுத்தும் சாரதியானவரும்,
ஏத்தும் அடியார் நாவில் – (தம் மைத்) துதிசெய்கின்ற அடியார்களுடைய நாக்கிலே,
ஊறு – மேன்மேற்சுரக் கின்ற,
இரதம் பாகு அனார் – சுவையுள்ள சர்க்கரைப்பாகு போன்றவரும் ஆகிய திருமாலினது, ஊர் -; (எ – று.)

ஒருபிறப்பின் முடிவிலே கருமமனைத்தும் தொலைந்து முத்திபெற்றவர்க்கு மீண்டும் பிறத்தல் இல்லை யென்றும்,
முத்திபெற்றவர் மீண்டு இவ்வுலகில்வரு தல்இல்லையென்றும் அறிக.
அங்ஙனம் இவ்வுலகினின்று பிறப்புத்துயரமொ ழிந்து மீளாவுலகமாகிய பரமபதத்தை யடைந்தவரும்
திருவேங்கடத்தின் சிறப்பையும் திருவேங்கடமுடையான் பேரானந்தந்தருந் தன்மையையும் கருதி அங்குநின்று மீண்டு
இங்குவந்து தொழவிரும்புவரென வேங்கடத்தின் மகிமையை விளக்கியவாறாம்.
வைகுந்தம் – வடமொழித்திரிபு. பாண்டு மகன் – பாண்டவன்; பொதுப்பெயர் இங்குச் சிறப்புப்பொருளின் மேல்நின்றது.
மகாபாரதயுத்தத்திற் கண்ணன் திருவருளால் அருச்சுனனுக்குத் தேரூர்ந்து அதனால் பார்த்தசாரதியென்று ஒருதிருநாமம்பெற்றமை, பிரசித்தம்.
இரதம் என்பது – தேர்என்ற பொருளில் ரத மென்ற வடசொல்லின் விகாரமும், இனிமை என்ற பொருளில் ரஸமென்ற வடசொல்லின் விகாரமுமாம்.
அடியார்கள் நாப்படைத்தபயன்பெற அதுகொண்டு துதிக்கத் துதிக்க எம்பெருமான் ஆராதவமுமாய் மேன்மேல்
இனியனாகிச்சுவைமயமா யுள்ளவ னென்பது, “ஏத்துமடியார்நாவிலூறு இரதப்பாகுஅனார்” என்பதன் கருத்து;
“அமுதம்பொதி யின்சுவைக் கரும்பினைக் கனியை” என்றார் திரு மங்கையாழ்வாரும்.

—————

கோலியொரு நான்கு குலமறையும் நால் திசையும்
வேலி என நின்று ஏத்தும் வேங்கடமே –வாலி தனை
நண்பாவை யாது அரித்தான் ஞான முதலாழ்வார்கள்
வெண்பாவை ஆதரித்தான் வெற்பு –11-

(இ – ள்.) ஒரு நான்கு குலம் மறையும் – ஒப்பற்ற சிறப்புள்ள நான்கு வேதங்களும்,
நால் திசையும் – நான்கு பக்கங்களிலும்,
வேலி என கோலி நின்று – வேலிபோலச் சூழ்ந்து,
ஏத்தும் – துதிக்கப்பெற்ற, வேங்கடம் – , –
வாலிதனை நண்பு ஆ வையாது அரித்தான் – வாலியை நண்பனாகக் கொள்ளாமல் (பகையாகக் கொண்டு) கொன்றிட்டவனும்,
ஞானம் முதலாழ்வார்கள் வெண்பாவை ஆதரித்தான் – தத்துவஞானத்தையுடைய முதலாழ்வார்கள் மூவரும் இயற்றிய
வெண்பாவினாலாகிய பிரபந்தங்களை அன்போடு ஏற்றுக் கொண்டவனுமான திருமாலினுடைய, வெற்பு – மலை; (எ – று.)

வேங்கடம் வேதப்பிரதிபாத்தியமாய் மகிமைபெறுந் தன்மை, முன்னிர ண்டடியில் விளக்கப்பட்டது.
நாற்றிசையும் என்பதற்கு – நான்குதிக்கிலுள்ளாரும் என்று உரைப்பாரும் உளர்.
வாலீ என்ற வடசொல் வாலியென ஈயீறு இகாரமாயிற்று. இப்பெயர் – வாலில் வலிமையுடையவ னென்றும்,
வாலினின்று பிறந்தவனென்றும் காரணப்பொருள் படும். இவன் – இந்திரன் மகன்; சுக்கிரீவனது தமையன்;
கிஷ்கிந்தா நகரத்தையாண்ட வாநரராசன்; தன்னை யெதிர்த்தாரது வலிமையிற் பாதி தன்னிடம் வந்து கூடும்படி வரம் பெற்றவன்;
இராவணனை ஒருகால் வென்று பின்பு அவனது வேண்டுகோ ளின்படி அவனோடு அக்கினிசாக்ஷியாக நண்புகொண்டவன்.
இராமபிரான் வனவாசஞ்செய்கையில் இராவணன் சீதையை யெடுத்துக்கொண்டுபோன பின்பு அப்பிராட்டியைத் தேடிக்கொண்டு
இலக்குமணனுடனே செல்லுகையில் வழியிலெதிர்ப்பட்ட அநுமான்மூலமாகச் சுக்கிரீவனோடு நண்பு கொண்டு
அவன் வேண்டுகோளின்படி அவனது தமையனும் வாநரராசனு மான வாலியைத்தந்திரமாகக்கொன்று
சுக்கிரீவனுக்குக்கிஷ்கிந்தையில் முடிசூட்டி வைத்தபின் அவனது உதவியால் இராவணாதியரைக் கொன்று
பிராட்டியை மீட்டன னென வரலாறு அறிக.
வாலி முன்னமே இராவணனுடன் அக்கினிசாட்சியாக நட்புக்கொண்டிருந்ததுபற்றி அவனை இராமபிரான் உதவி யாகக்கொண்டால்
இராவணாதி துஷ்டர்களைத் தொலைக்க வகையில்லாமை யால், வாலியை நண்பாகக்கொள்ளாமல் சரணமடைந்த
சுக்கிரீவனது வேண்டுகோளின்படி அவ்வாலியை வதைத்திட்டா னென்க;
வாலியை நண்பா வையாது அரித்ததற்கு மற்றுஞ்சிலகாரணமுங் கூறப்படும். ஆ – ஆக: விகாரம்.

முதலாழ்வார்கள் – பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், இவர்கள்மூவரும் மற்றையாழ்வார்களுக்கெல்லாம்
முன்னே திருவவதரித்தத னாலும், பின்பு உண்டாகும் பிரபந்தங்களுக்கெல்லாம் இலக்கணமாம்படி ஆதியில்
திருவந்தாதி திவ்வியப்பிரபந்தங்களைத் திருவாய்மலர்ந்தருளிய தனாலும், முதலாழ்வார்க ளென்று பெயர்பெற்றனர்.
(“மற்றுள்ள வாழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து,
நற்றமிழால் நூல்செய்து நாட்டையுய்த்த –
பெற்றிமையோ, ரென்று முதலாழ்வார்களென்னும்
பெயரிவர்க்கு, நின்ற துலகத்தே நிகழ்ந்து” என்ற உபதேசரத்தினமாலையையுங் காண்க.)
இம்மூவரும் நூறுநூறு வெண்பாக்களினாற்பாடிய திவ்வியப்பிரபந்தங்கள், முறையே முதல் திருவந்தாதி, இரண்டாந்திருவந்தாதி,
மூன்றாந்திருவந்தாதி யெனப் பெயர்பெறும். வெண்பா – அதனாலாகிய பிரபந்தத்துக்குக் கருவியாகுபெயர்.
தலைமைபற்றி, முதலாழ்வார்கள் வெண்பாவையாதரித்தமையை எடுத்துக்கூறினார்;
அன்றியும், அவர்கள் நூற்றெட்டுத்திருப்பதிகளுள்ளும் திருவேங்கடத்தை மிகுதியாகப் பாராட்டிக் கூறியமையுங் காண்க.

————-

தெள்ளியது ஓர் வீடு அருளும் சீர் கேட்டு பொன் மலையும்
வெள்ளி மலையும் பணியும் வேங்கடமே –புள்ளின்
கொடி வா கனத்தான் குளிர்ந்த இருண்ட காரின்
வடிவு ஆகன் நத்தான் வரை –12-

(இ – ள்.) தெள்ளியது ஓர் வீடு அருளும் சீர் கேட்டு – தெளிவுள்ள தான ஒப்பற்ற பரமபதத்தைக் கொடுத்தருளுகிற சிறப்பைக் கேள்விப்பட்டு,
பொன் மலையும் வெள்ளி மலையும் பணியும் – பொன்மலையான மகாமேருவும் வெள்ளிமலையான கைலாசமும் வணங்கப்பெற்ற,
வேங்கடமே – , –
புள்ளின் கொடி வாகனத்தான் – பக்ஷிராசனாகிய கருடனது வடிவமெழுதிய கொடியையும் அக்கருடனாகிய வாகனத்தையு முடையவனும்,
குளிர்ந்து இருண்டகாரின் வடிவு ஆகன் – குளிர்ச்சியுள்ளதாய்க் கறுத்துள்ள மேகத்தினது வடிவம் போன்ற திருமேனியையுடையவனும்,
நத்தான் – (பாஞ்சசந்நிய மென்னுஞ்) சங்கத்தையையுடையவனுமாகிய திருமாலினது,
வரை – மலை; (எ – று.)

கர்மபந்தத்தொடர்ச்சியின்றி ஞானாநந்தங்களையேதருந்தன்மையதான முத்தியுலகைத் தன்னையடைந்தார்க்குத்
தந்தருளும் மகிமை திருவேங்கட மலைக்கு இருத்தலை அதன் புகழினாற்செவியுற்று அறிந்து,
அத்தன்மையில்லா தனவான பொன்மலையும் வெள்ளிமலையும் தமதுதாழ்வையும் அம்மலையின் உயர்வையும்நோக்கி
அதற்குத்தாம் கீழ்ப்படிந்து அதனைவணங்கிக் கிடக்குமென்க.
பொன்மலைக்கும் வெள்ளிமலைக்கும் “நாம் பொன்மயமாகவும் வெள்ளி மயமாகவும் இருக்கிறோம்” என்ற
இறுமாப்பு ஒழிதற்குக் காரணமாயிற்று, வேங்கடத்தின் வீடளிக்குந்திற மென்க.
வீடு – (பற்றுக்களை) விட்டு அடையுமிடம்; முக்தி. புள் – இங்குப் பொதுப்பெயர் சிறப்புப் பொருளின் மேலது.
காண்பவர் கண்களுக்குக் காணுமளவிலே குளிர்ச்சியைத் தந்து அவர்களுடைய எல்லாச் சிரமங்களையும்
பரிகரிக்குந் திருமேனியின் தோற்றமுடையா னென்பார், “குளிர்ந்திருண்ட காரின்வடிவாகன்” என்றார்.
ஆகம் – மேனி; அதனையுடையவன் – ஆகன்.

—————–

எப்பூ தலமும் இறைஞ்சி திசை நோக்கி
மெய்ப்பூ சனை புரியும் வேங்கடமே கொப்பூழ்
இலகும் முண்டகம் தர தான் ஈன்று அளிக்கும் ஈர் ஏழ்
உலகும் உண்ட கந்தரத்தான் ஊர் –13-

(இ – ள்.) எ பூதலமும் – நிலவுலகத்தில் எவ்விடத்திலுள்ளவரும்,
திசை நோக்கி – திக்குநோக்கி,
இறைஞ்சி – வணங்கி,
மெய் பூசனை புரியும் – உண்மையான பூசையைச் செய்யப்பெற்ற,
வேங்கடமே – , –
கொப்பூழ் – திருநாபியில்,
இலகும் – தோன்றி விளங்கிய,
முண்டகம் – தாமரை மலர்,
தர – அளிக்க,
தான் ஈன்று – தான்பெற்று,
அளிக்கும் – பாதுகாக்கிற,
ஈரேழ் உலகும் – பதினான்குலோகங்களையும்,
உண்ட – அமுதுசெய்த,
கந்தரத்தான் – கண்டத்தையுடைய திருமாலினது, ஊர் -; (எ – று.)

உலகத்தில் எத்திசையிலுள்ளாரும் திருவேங்கடத்தின் மகிமையைக் கருதி அத்திருப்பதியிருக்கின்ற திசையை நோக்கி
வணங்கி வழிபடுவரென அத்தலத்தின் சிறப்பை விளக்கியவாறு. பூதலம் – இடவாகுபெயர்.
“பந்திக் கமலத் தடஞ்சூ ழரங்கர் படைப்பழிப்புச்,
சிந்தித்திடுவது மில்லைகண்டீ ரத் திசைமுகனோடு,
உந்திக் கமலம் விரிந்தால் விரியு முகக்கடையில்,
முந்திக் குவியி லுடனே குவியு மிம்மூதண்டமே” என்பது சித்தாந்த மாதலால்,
“கொப்பூழிலகு முண்டகந் தரத் தானீன்று” என்றார். பிரமன் முதலானசகலதேவர்களுமுட்பட யாவும் அழிந்துபோகின்ற
யுகாந்தகாலத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு அண்டங்களையெல்லாம் தன்வயிற்றில் வைத்து அடக்கிக் கொண்டு
யோகநித்திரை செய்தருளுகின்றன னென்பது, நூற்கொள்கை
எல் லாவற்றையும் படைத்துக்காத்து அழிக்கின்ற முழுமுதற்கடவுள் திருமாலே யென்ற ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தம்,
பின்னிரண்டடியில் விளக்கப்பட்டது. கந்தரம் – வடசொல்; தலையைத் தரிப்ப தென்று காரணப்பொருள்படும்; கம் – தலை

————–

நோவினையும் நோயினையும் நோய் செய் வினையினையும்
வீவினையும் தீர்த்து அருளும் வேங்கடமே –மூ வினை செய்
மூவடிவு ஆய்ப் பச்சென்றான் முன்னாள் அகலிகைக்குச்
சேவடி வாய்ப் பச்சென்றான் சேர்பு –14-

(இ – ள்.) நோவினையும் – (பிறத்தலாலாகின்ற) துன்பத்தையும்,
நோயினையும் – (வாழும்நாளில் வருத்தஞ்செய்கிற) வியாதிகளையும்,
வீவினையும் – மரணவேதனையையும்,
நோய் செய் வினையினையும் – எல்லாத்துன்பங்களையும் உண்டாக்குகிற காரணமான கருமங்களையும்,
தீர்த்து அருளும் – (தன்னை யடைந்தவர்க்கு) நீக்கியருளுகின்ற,
வேங்கடமே – , –
மூ வினை செய் – (படைத்தல் காத்தல் அழித்தல் என்னும்) மூன்று தொழில்களைச் செய்கின்ற,
மூ வடிவு ஆய் – (அயன் அரி அரன் என்னும்) திரிமூர்த்திகளின் வடிவமாய்,
பச்சென்றான் – (அவற்றுள் தானானவடிவத்தில்) பசுமைநிறத்தையுடையவனும்,
முன் நாள் – முற்காலத்தில்,
அகலிகைக்கு – அகலிகையென்னும் பெண்ணுக்கு,
சே அடி வாய்ப்ப – சிவந்த தனது திருவடி சித்தியளிக்கும்படி,
சென்றான் – நடந்தருளியவனுமாகிய திருமால்,
சேர்பு – சேருமிடம்; (எ – று.)

பிறக்குங்காலத்தும் வளர்ந்து உயிர்வாழுங் காலத்தும் இறக்குங்காலத்தும் உண்டாகிற பலவகைத் துன்பங்களும்,
அவற்றிற்கெல்லாம் காரணமான கருமங்களும் தன்னையடைந்தார்க்கு இனி இல்லையாம்படி
தன்மகிமையாற் செய்யுந்தரத்தது திருவேங்கடமென்க.
இனி, நோவு – மனோவியாதி; அதாவது – மனக்கிலேசம் என்றும், நோய் – தேகவியாதி யென்றும் உரைத்தலு முண்டு.
“நோய்செய்வினை” என்றதில் நோய் என்றது, பசி தாகம் பயம் கோபம் முதுமை துன்பம் முதலிய பலவகை
உடற்குற்றங்களையும் பொதுப்பட உணர்த்து மென்க. நோவு, நோய், வீவு – தொழிற்பெயர்கள்.

அகலிகை – அஹல்யா என்ற வடசொல்லின் திரிபு; அப்பெயர் – அழகில்லாமை யில்லாதவ ளென்று பொருள்படும்:
மிக்க அழகுள்ளவ ளென்று கருத்து; ஹல்யம் – அழகின்மை. இவள், கௌதமமுனிவனது மனைவி.
அவளது கல்வடிவமான சாபம் இராமபிரானது திருவடித்துகள் பட்டமாத்திரத்தில் தீர்ந்த தன்மை இராமாயணத்திற் பிரசித்தம்.

————

பித்து மலடு ஊமை முடம் பேய் குருடு கூன் செவிடு
மெய்த்துயர் நோய் தீர்த்து அருளும் வேங்கடமே -பத்தருக்கு
வந்த துக்கம் காப்பான் மலர் உந்தியின் உலகம்
தந்து அதுக்கு அங்காப்பான் தலம் –15-

(இ – ள்.) பித்து – பைத்தியம் பிடித்தலும்,
மலடு – பிள்ளைப்பேறில்லாக் குறையும்,
ஊமை – பேசாமையும்,
முடம் – கைகால்களின் குறைவும்,
பேய் – பேய்பிடித்தலும்,
குருடு – கண்தெரியாமையும்,
கூன் – உடல்வளைதலும்,
செவிடு – காதுகேளாமையும் ஆகிய உடற்குற்றங்களையும்,
மெய் துயர் நோய் – மற்றும் வருத்தத்தைத் தருகின்ற வியாதிகளையும்,
தீர்த்து அருளும் – (தன்னையடைந்தார்க்கு) நீக்கியருளுகின்ற வேங்கடமே – , –
பத்தருக்கு வந்த துக்கம் காப்பான் – தன் அடியார்களுக்கு வந்த துன்பங்களை நீக்கி (அவற்றினின்று அவர்களைப்) பாதுகாப்பவனும்,
மலர் உந்தியின் (உந்திமலரின்) – தனது நாபித்தாமரைமலரின்று,
உலகம் தந்து – உலகத்தை உண்டாக்கி,
அதுக்கு – அவ்வுலகத்தையுண்ணும்பொருட்டு,
அங்காப்பான் – வாய்திறப்ப வனுமாகிய திருமாலினது,
தலம் – இடமாம்; (எ – று.)

திருவேங்கடமலையினது வரப்பிரசாதசக்தி, முன்னிரண்டடியில் விளக்கப்பட்டது.
முதலடி – பெயர்ச்செவ்வெண். பக்தர், து:கம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
காத்தல் – தடுத்தல், பரிகரித்தல். உந்தியின் – ஐந்தனுருபு, நீக்கம்.
உலகம் – சாதியொருமை; ஆனதுபற்றி, “அதுக்கு” என ஒருமையாக் கூறினார்.
அங்காப்பான், அங்கா – பகுதி. மலருந்தியின் உலகந் தந்து அதுக்கு அங்காப்பான் – உலகத்தைப் படைப்பவனும்,
அளிப்பவனும், அழிப்பவனும் அவனே யென்றபடி.

————-

வாடப் பசித்த வரி உழுவை வால் ஆட்டி
மேடத்தைப் பார்த்து உறுக்கும் வேங்கடமே -கூடத்துக்
கம்பவள மா வென்றான் காசினிக்கும் வெண்ணெய்க்கும்
செம்பவளம் ஆ வென்றான் சேர்வு –16-

(இ – ள்.) வாட – வாட்டமுண்டாம்படி,
பசித்த – பசியடைந்துள்ள,
வரி உழுவை – உடற்கோடுகளையுடைய புலிகள்,
மேடத்தை பார்த்து – (வானத்திற் செல்லுகின்ற ஆட்டின்வடிவமான) மேஷராசியைப் பார்த்து,
வால் ஆட்டி உறுக்கும் – (அந்த ஆட்டைக் கொன்று தின்னக் கருதித்) தன்வாலை யசைத்துக் கொண்டு கோபித்து அதனோடுமாறுபடுதற்கு இடமான,
வேங்கடமே – , –
கூடத்து – யானைச்சாலையில்,
கம்பம் – தறியிற் கட்டிவைக்கத் தக்க,
வளம் மா – மதக் கொழுமையையுடைய (குவலயாபீடமென்ற) யானையை,
வென்றான் – கொன்று சயித்தவனும்,
காசினிக்கும் – (யுகாந்தகாலத்தில்) உலகத்தை உண்ணுதற்காகவும்,
வெண்ணெய்க்கும் – (கிருஷ்ணாவதாரத்தில்) வெண்ணெயை உண்ணுதற்காகவும்,
செம் பவளம் ஆ என்றான் – சிவந்த பவழம்போன்ற தனது திருவாய்மலரை ஆவென்று திறந்தவனுமாகிய திருமால்,
சேர்வு – சேர்ந்திருக்குமிடம்; (எ – று.)

பசித்த புலி ஆட்டுக் கடாவை நோக்கி அதனைக் கொல்லச் சீறிமுயலுதல், இயல்பு;
திருவேங்கடமலையிலுள்ள புலி வானத்து மேஷராசியைப் பார்த்து உறுக்கு மென மலையின் உயர்ச்சியை உணர்த்தியபடியாம்.
இது, தொடர்புயர்வுநவிற்சியணி. புலி குறிஞ்சிநிலத்து விலங்காதலால், அதனை யெடுத் துக்கூறினார்.
இனி வருஞ் செய்யுள்களில் இதுபோல வருகின்ற வருணனைகளுக்கெல்லாம் இங்ஙனமே கண்டுகொள்க.
“மேடத்தைப்பார்த்திருக்கும் வேங்கடமே” என்ற பாடத்திற்கு – புலியானது அடுத்துவரும் தனது ஆகாரத்திற்கும்
வலிமைக்குந் தகுந்ததாகிய விருஷபராசியை எதிர்நோக்கிக் கொண்டு அவ்வகை வலிமையில்லாத
மேஷராசியைக் கண்டு உபேக்ஷித்திருக்கு மென்று பொருள். வாலாட்டுதல், கோபக்குறி.
மேஷம் – வடசொல். மேஷ ராசி, சித்திரைமாதத்துக்கு உரியது.
கூடத்து என்பதற்கு – வஞ்சனையாகக் கொல்லுந்தன்மையுள்ள என்றும்,
கம்பம் என்பதற்கு – அசையுந்தன்மையதான என்றும் பொருள் கொள்ளலாம்; கூடம், கம்பம் – வடசொற்கள்.
“யானை, யறிந்தறிந்தும் பாகனையே கொல்லும்” என்றபடி தீராக்கோப முடையதாய் அக்கோபத்தை மறைத்து
வைக்க வேண்டியகாலத்தே மறைத்து வைத்து வெளிப்படுத்தவேண்டிய காலத்தே வெளிப்படுத்தலும்,
“தூங்குங் களிறு” என்றபடி எப்பொழுதும் அசைதலும் யானையின் இயல்பு.

காசினி – பூமி; காச்யபீ என்ற வடசொல் திரிந்தது; இது – இங்கு மற்ற உலகங்களுக்கும் உபலக்ஷணம்.
பவளம் – வாய்க்கு, நிறம்பற்றிய உவமை யாகுபெயர்; திருப்பவளமென்கிற வழக்கும் உண்டு.

————

தாவி வரும் வானரங்கள் தண் குவட்டில் கற்கடகம்
மேவி வரக் கண்டு ஓடும் வேங்கடமே -காவிரி சூழ்
பொன் திரு அரங்கத்தான் போதன் சிவன் என்னும்
மற்று இருவர் அங்கத்தான் வாழ்வு –17-

(இ – ள்.) தாவி வரும் – தாவிக்கொண்டேவருகின்ற,
வானரங்கள் – குரங்குகள்,
தண் குவட்டில் – குளிர்ச்சியான சிகரத்தில்,
கற்கடகம் மேவி வர – (நண்டுவடிவமான) கர்க்கடகராசி பொருந்திவர,
கண்டு – (அதனைப்) பார்த்து,
ஓடும் – அஞ்சியோடுதற்கு இடமான,
வேங்கடமே – , –
காவிரி சூழ் – காவேரிநதி சூழ்ந்த,
பொன் திரு அரங்கத்தான் – அழகிய திருவரங்க மென்னுந் திருப்பதியி லெழுந்தருளியிருப்பவனும்,
போதன் சிவன் என்னும் மற்று இருவர் அங்கத்தான் – (திரிமூர்த்திகளுள்) பிரமன் சிவன் என்னும் மற்றை யிருவரையுந்
தனது அங்கத்தில் உடையவனுமாகிய திருமால்,
வாழ்வு – எழுந்தருளியிருக்குமிடம்; (எ – று.)

வாநரம் என்ற வடசொல் – கொஞ்சங்குறைய மனிதர்போல்வதென்று காரணப்பொருள்படும்.
கர்க்கடகம் – வடசொல். கர்க்கடகராசி, ஆடிமா தத்துக்கு உரியது. திருவரங்கம் – ஸ்ரீரங்கம்;
திருமால்திருப்பதிக ளெல்லாவற்றுள்ளும் இது தலைமையான தாதலால், இதனை யெடுத்துக்கூறினார்.
பொற்றிருவரங்கம் – பொன்மயமான மதில் முதலியவற்றையுடைய திருவரங்கமுமாம்;
“செம்பொன்மதிலேழுடுத்த திருவரங்கப் பெருங்கோயி, லா ணிப்பொற்
றகடுரிஞ்சுமணிக்கதவ நீள்வாயில்” என்பர் திருவரங்கக்கலம்பகத்தும்.
போது – பூ; இங்குத் தாமரைமலர்; அதில் தோன்றியவன், போதன். சிவம் – சுபம்: அதனைச் செய்பவன்,
சிவன். பிரமனைத் தனது திருநாபியிலும், சிவனைத் தனது திருமேனியின் வலப்புறத்திலும் திருமால் கொண்டுள்ளான்;
இத்தன்மை, “பிறைதங்கு சடையானை வலத்தே வைத்துப், பிரமனைத் தன்னுந்தியிலே தோற்றுவித்துக்,
கறைதங்கு வேற்றடங்கண் திரு வை மார்பிற் கலந்தவன்”,
“வலத்தனன் திரிபுரமெரித்தவன் இடம்பெறத் துந்தித், தலத்தெழு திசைமுகன்” என்ற ஆழ்வாரருளிச் செயல்களாலும் விளங்கும்:
“கேசவன்” என்ற திருநாமம் இப்பொருள் கொண்டதே. வாழ்வு என்ற சொல்லின் ஆற்றலால்,
திருவேங்கடம் திருமாலின் திருவுள்ளத்துக்கு மிகப்பாங்காயிருத்தல் விளங்கும்.

———–

ஒண் சிந்துரத்தை வெறுத்து ஊடும் பிடி வேழம்
விண் சிங்கம் கண்டு அணைக்கும் வேங்கடமே –எண் சிந்தைக்கு
ஓரா இருந்தான் ஒரு நாள் விதூரனுக்கு
வாரா விருந்தான் வரை –18-

(இ – ள்.) ஒள் சிந்துரத்தை – ஒளியுள்ளதாகிய ஆண்யானையை, வெறுத்து -,
ஊடும் – பிணங்குகின்ற,
பிடி வேழம் – பெண்யானையானது,
விண் சிங்கம் கண்டு – வானத்தில்வருகின்ற சிங்கவடிவமான சிங்கராசியைப் பார்த்து,
அணைக்கும் – (அச்சங்கொண்டு ஆண்யானையைத் தானே வலியச் சென்று) தழுவுதற்கு இடமான,
வேங்கடமே – , –
எண் சிந்தைக்கு ஓரா இருந்தான் – (உலகத்தாருடைய) எண்ணுகின்ற மனத்துக்கு அறியப்படாமல் இருந்தவனும்,
ஒரு நாள் – ஒருநாளில்,
விதுரனுக்கு -,
வாரா விருந்தான் – வருதற்குஅரிய விருந்தினனாய் வந்தவனு மாகிய திருமாலினது,
வரை – திருமலையாம்; (எ – று.)

ஊடுதலாவது – ஆண்பாலோடு பெண்பால் அன்புவகையாற்சிறிதுமாறு படுதல்; பிரணயகலகம்.
இங்ஙனம் வலியக்கொள்ளுங் கோபம் இன்பத்தை மிகுவிப்பது என்னுங் கோட்பாட்டை
“ஊடுதல் காமத்திற்கு இன்பம்” என்ற திருக்குறளினாலும் அறிக. பிடி – யானையின் பெண்மைப்பெயர்; இதன் ஆண்மைப்பெயர் – களிறு.
களிற்றினிடத்து ஏதோ ஒரு குற்றத்தைக் கற்பித்து அதுகாரணமாக அதனிடம் வெறுப்புக்காட்டிப் பிடி ஊடிவிலகிநிற்கு மளவில்,
சிங்கராசியைக் கண்டதனால் அஞ்சி அவ்வச்சமிகுதியால் ஊடலை மறந்து தானே ஓடி ஆண்யானையைப் பற்றுக்கோடாகக் கொண்டு
அதனை வலியத்தழுவிய தென்க. ஹிந்துரம், ஸிம்ஹம் என்ற வடசொற்கள் விகாரப் பட்டன. சிங்கராசி, ஆவணிமாதத்துக்கு உரியது.
“எண் சிந்தைக்கு ஓரா இருந்தான்” என்றதனால், எம்பெருமானதுசொரூபம் எவர்க்கும்மனத் தினாற் சிந்தித்து
முற்றும் அறியமுடியாத தென விளங்கும்.
விதுரன் – திருதராட்டிரனுக்கும் பாண்டுவுக்கும் தம்பிமுறையாகிறவன்; விசித்திர லீரியன்மனைவியாகிய அம்பிகையால்
ஏவியனுப்பப்பட்ட தாதியினிடம் வியாச முனிவனருளாற் பிறந்தவன்; பாண்டவர்க்கும் துரியோதனாதியர்க்கும் சிற் றப்பன்.
கண்ணன் பாண்டவர்க்காகத் துரியோதனாதியரிடம் தூதுபேசுபவனாய் அத்தினாபுரிக்குப்போனபோது அங்குவேறு
யாருடைய வீட்டிற்கும் செல்லாமல் ஞானபக்திகளிற்சிறந்த விதுரனுடைய திருமாளிகையினுட் புக்கு,
அங்கு அவனால் மிக்கஅன்புடன் அமைக்கப்பட்ட விருந்துணவை அமுது செய்தருளின னென்பது பிரசித்தம்.
விருந்து – புதுமை; விருந்தான் – புதியனாய்ச் செல்பவன். வாரா – ஈறுகெட்டஎதிர்மறைப் பெயரெச்சம்.

————-

மாது மடக் கன்னி கழை வந்து அணுகி கம்பத்தின்
மீது நடிப பாள் ஒக்கும் வேங்கடமே -ஊது குழல்
பாலன் பால் ஆக்குவித்தான் பஞ்சவர்க்கா நூற்றுவரைக்
காலின் பால் ஆக்குவித்தான் காப்பு –19-

(இ – ள்.) மாது மடம் கன்னி – அழகையும் மடமையையு முடைய இளம்பெண்வடிவமான கந்யாராசி,
கழை வந்து அணுக – மூங்கிலுக்குநேராக வந்து பொருந்தும்போது,
கம்பத்தின் மீது நடிப்பாள் ஒக்கும் – (நாட்டிய) கழைக்கோலின்மேல் ஏறிக்கூத்தாடும்மங்கையை ஒத்தற்கு இடமான,
வேங்கடமே – , –
ஊது குழற்பால் அன்பால் – (தான்) ஊதுகின்ற வேய்ங் குழலின் இனிய இசையினிடத்து அன்பினால்,
ஆ குவித்தான் – பசுக்கள் தன்னைச்சுற்றிவந்து ஒருங்குதிரளும்படி செய்தவனும்,
பஞ்சவர்க்கு ஆ – பஞ்சபாண்டவர்களுக்காக,
நூற்றுவரை காலன்பால் ஆக்குவித்தான் – துரியோதனாதியர் நூறு பேரையும் யமனிடத்திற் சேர்ப்பித்தவனு மாகிய திரு மால்,
காப்பு – (உயிர்களைப்) பாதுகாக்கும் இடம்; (எ – று.)

அம்மலையிலுள்ள மூங்கிலுக்கு மேல்பெண்வடிவமான கந்யாராசி வரும் போது கழைக்கூத்திபோலுமென்க.
மூங்கிலின்உயர்ச்சியை இங்ஙனங்கூறி யதனால், மலையின்வளத்தை எடுத்துக்காட்டியவாறு.
கந்யா என்ற வடசொல், கன்னியென விகாரப்பட்டது. கந்யாராசி, புரட்டாசிமாதத்துக்கு உரியது.
கண்ணன் குழலூதுகையில் அதன்இசையின் இனிமைக்கு மகிழ்ந்து பசுக்கள் யாவும் அப்பெருமானைச் சூழ வந்து திரளும்.
குழற்பால், பால் – ஏழனுருபு. ஊது குழல் பாலன் பால் ஆ குவித்தான் என்று பிரித்து, குழலூதுகின்ற இடைச்சிறுவனானவனும்
பால்கறக்கும் பசுக்களை ஒருங்குதிரளச் செய்தவனும் என்று உரைப்பாரும் உளர்.
பஞ்சவர் – ஐவர்; பஞ்ச என்னும் வடமொழியெண்ணுப்பெயரினடியாப் பிறந்த பெயர். பஞ்சவர், நூற்றுவர் – தொகைக்குறிப்பு.
காலன் – பிராணிகளின் ஆயுட்காலத்தை வரையறுப்பவன், கண்ணபிரான், தனக்கு உயிர்நிகரான பாண்டவர்களைப்
பாதுகாத்தற் பொருட்டு, அவர்கட்கு பங்காளிகளும் பகையாளிகளு மான துரியோத னாதியரனைவரும்
மகாபாரதயுத்தத்தில் வேரோடுஅழியும்படி பலவகையுதவி புரிந்தமை, பிரசித்தம்;
காலன்பா லாக்குவித்தான் – வீமனைக்கொண்டு கொல்வித்தான்.
ஆக்குவித்தான் என்பதில், கு வி என்ற இரண்டும் – இணைந்துவந்த பிறவினைவிகுதிகள்.

———–

மன்னு குடிக் குறவர் வான் ஊர் துலாத்திடையே
மின்னு மணி நிறுக்கும் வேங்கடமே –என் உள்
அரவிந்தப் போது அகத்தான் அன்பால் அழைத்த
கரவிந்தப் போதகத்தான் காப்பு –20-

(இ – ள்.) மன்னு குடி குறவர் – (குறிஞ்சிநிலத்து) நிலைபெற்ற குடிக ளாகிய குறவர்கள்,
வான் ஊர் துலாத்து இடையே – வானத்திற்செல்லுகிற (நிறைகோல்வடிவமான) துலாராசியினிடத்திலே,
மின்னும் மணி நிறுக்கும்- பிரகாசிக்கிற இரத்தினங்களை வைத்துநிறுத்து எடையறிதற்கு இடமான,
வேங்கடமே – , –
என் உள் அரவிந்தம் போது அகத்தான் – அடியே னுடைய மனமாகிய தாமரைமலரினிடத்தில் எழுந்தருளியிருப்பவனும்,
அன்பால் அழைத்த – பக்திகொண்டு (ஆதிமூலமே யென்று) கூப்பிட்ட,
கரம் விந்தம் போதகத்தான் – துதிக்கையையுடைய விந்தியமலையைப் போன்ற யானையையுடையவனுமாகிய திருமால்,
காப்பு – (உயிர்களைப்) பாதுகாக்கும் இடம்; (எ – று.)

துலாத்து, அத்து – சாரியை. துலாராசி, ஐப்பசிமாதத்துக்கு உரியது. மணிகள், மலையி லுள்ளவை.
“மலர்மிசை யேகினான்” என்றபடி எம்பெருமான் அன்பால் நினைவாரது உள்ளக்கமலத்தில் அவர்நினைந்தவடிவோடு
விரைந்து சென்று வீற்றிருத்தலால், “என்உள் அரவிந்தப்போதகத்தான்” என்றார்.
“அன்பால் அழைத்த போதகத்தான்” என்பது, வடமொழிநடை; கஜேந்திராழ்வானால் அன்போடு அழைக்கப்பட்டவ னென்பது கருத்து.
விந்தியகிரி முன்ஒருகால் மகாமேருகிரியோடு மாறுபட்டு மிகப்பெரியதாய் ஓங்கிவளர்ந்தமைபற்றி,
அதனை, யானையின் பருமைக்கும் வலிமைக்கும் உவமையெடுத்துக்கூறினார்.
அரவிந்தம், போதகம் – வடசொற்கள். விந்தம் – வடசொல்திரிபு.
பத்துப்பிராயத்துானைக்குட்டியைப் போதக மென்பர்; அச்சிறப்புப்பெயர் – இங்குப் பொதுப்பட யானையென்ற மாத்திரமாய் நின்றது.

—————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே —சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கக் கலம்பகம் –81-101-

February 19, 2022

பாண்
81- விடாது பூடந்தைமார் விரும்ப ஆயர் மாதர் தோள்
வியந்து முன் நயந்தவர்க்கு விற்கும் எங்கள் கொங்கை தான்
அடாதது அன்று பாண இன்னம் அங்கன் அன்றி இங்கனம்
அரங்கர் அன்பு கூர இன்பமாக வல்ல அல்லவே
எடாது இருக்கின் வாய் திறக்கும் எங்கள் ஐயன் உச்சி தோய்
எண்ணெய் பட்ட மெயில் இட்ட முத்தும் உத்தரீயமும்
படா முகம் திறந்து அசைந்து மழலை வாயின் மணம் அறாப்
பசு நரம்பு புடை பரந்து பால் சுரந்த முலையுமே –81-

(இ – ள்.) பாண – பாணனே! –
பூமடந்தைமார் – திருமகளும் நிலமகளும்,
விடாது – சிறிதும் விட்டுப்பிரியாமல்,
விரும்ப – விரும்பிக் கூடியிருக்கவும், (அவர்களைவிட்டு),
ஆயர் மாதர் தோள் – இடைப்பெண்ணான நப்பின்னையினது தோள்களை,
முன் – முன்னே (கிருஷ்ணாவதாரத்தில்),
வியந்து – அதிசயித்து,
நயந்தவர்க்கு – விரும்பிக் கூடிய தலைவர்க்கு,
விற்கும் எங்கள் கொங்கை – விலைக்கு விற்கின்ற எங்களது தனம்,
அடாததுஅன்று – தகாத தன்று;
இன்னம் – இன்னமும்,
அங்ஙன் அன்றி – அவ்வாறல்லாமல்,
இங்ஙனம் – இவ்வாறு,
எடாது இருக்கின் – எடுத்துப் பால் கொடாதிருந்தால்,
வாய் திறக்கும் – வாய்திறந்தழுகின்ற,
எங்கள் ஐயன் – எங்கள் குழந்தையினது,
உச்சி நோய் – உச்சியிற் பொருந்திய,
எண்ணெய் பட்ட – எண்ணெய் படப்பெற்ற,
மெய்யில் – எங்கள்உடம்பில்,
இட்ட – இடப்பட்ட,
முத்தும் – முத்துமாலையும்,
உத்தரீயமும் – மேலாடையும்,
படாம் முகம் திறந்து. (அக்குழந்தையால்) மேலாடை சிறிது வாங்கப்பட்டு,
அசைந்து -,
மழலை வாயின் மணம் அறா – மழலைச்சொற்களையுடைய (அக்குழந்தை) வாயினது வாசனை நீங்கப் பெறாமல்,
பசு நரம்பு புடை பரந்து – பச்சைநரம்புகள் புறத்தே பரவப்பெற்று,
பால் சுரந்த – பாலைச் சுரக்கின்ற,
முலையும் – தனங்களும், அரங்கர் -,
அன்பு கூர – அன்பு மிகும்படி,
இன்பமாக வல்ல அல்லவே – இன்பமாகத்தக்கனவேயாகும்; (எ – று.)

பரத்தையரைப் புணர்தற்பொருட்டுத் தலைமகளைப் பிரிந்து சென்ற தலைமகனால் தலைமகளது கருத்தை அறிந்து
அவளைச் சமாதானப்படுத்தி அவளிடம் தான் வரும்படி பேசிவருமாறு அனுப்பப்பட்ட பாணனுக்குத் தலைவி வெகுண்டு கூறியது இது;
“பாணனொடுவெருளுதல்” என்னுந் துறை. ஸ்ரீ பூமி தேவிகள் மனைவியராய் அமைந்திருக்க,
ஓரிடைப்பெண்ணை மணந்த தலைமகன் தான் முன்னர்க் கூடிய எங்களை இப்போது இழிவாக நினைப்பது
அத்தலைமகனுக்குச் சிறிதுந் தக்கதன்றென்று வெகுண்டு கூறின ளென்க.

பூமடந்தை யென்பதற்கு – இரட்டுறமொழிதலால், தாமரைப்பூவிலுள்ள ஸ்ரீதேவியென்றும், பூ வடசொல்லாய்ப் பூதேவியென்றுங் கொள்க;
“போதின்மங்கை பூதலக்கிழத்தி தேவி,”
“ஆயனாகி யாயர்மங்கை வேயதோள்விரும்பினாய்” என்று திருமழிசைப்பிரான்பாசுரம்.
“வாயு மனைவியர் பூ மங்கையர்க ளெம்பிராற்கு” என்றார் நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியிலும்.
பாணன் – பாடுபவன். அங்ஙனன்றி யிங்ஙன மென்பதற்கு – அவ்விடத்திலே யல்லாமல் இவ்விடத்தில் வந்தென்றுமாம்.
அல்லவேயென்பது, தேற்றப்பொரு ளுணர்த்தி நின்றது. குழந்தையை ஐயனென்றது, உவகை பற்றிய மரபுவழுவமைதி.
உச்சி – நடுத்தலை. படாம் – படமென்னும் வட சொல்லின் விகாரம்; கச்சுமாம்.
இனி, படாமுகந்திறந்தென்பதற்கு – சாயாத முகந்திறந்தென்று உரைத்து, பால்சுரந்த வென்பதனோடு – கூட்டவுமாம்.
“எங்கைகொங்கை” என்னும் பாடத்துக்கு, தோழி கூறிய தென்க.

இதற்குச் செய்யுளிலக்கணம், 39 – ஆங் கவியிற் கூறியது.

————-

தலைமகள் இளமைக்குச் செவிலி இரங்கல்
82-முலை கொண்ட பால் மணம் வாய் மாறிற்றிலை-அம் மொய் குழலோ
அலை கொண்டது இன்னம் என்கை அணையே அலை ஆழி வற்றச்
சிலை கொண்ட செங்கை அரங்கேசர் தாள் கொண்ட தேசம் எல்லாம்
விலை கொண்ட வாள் விழியாள் சென்றவாறு எங்கன் வெஞ்சுரமே –82-

(இ – ள்.) (இச்சிறுமகளுக்கு) இன்னம் -,
முலை கொண்ட பால் மணம் – தாய்முலையிற் கொண்ட பாலினது வாசனை,
வாய் மாறிற்று இல்லை – வாயினின்றும் நீங்கிற்றில்லை;
அம் மொய் குழலோ – அழகிய நெருங்கிய கூந்தலோ,
அலை கொண்டது – அலைந்துகொண்டே யிருக்கின்றது (மயிர் முடி கூடிற்றில்லை) ;
என் கை அணையே – என் கையே படுக்குமிடமாயிருக்கின்றது; (இங்ஙனமிருக்கவும்), –
அலை ஆழி வற்ற – அலைகளையுடைய கடல்வற்றிப்போம் படி,
சிலை கொண்ட – (ஆக்நேயாஸ்திரத்தை விடுத்தற்குக்) கோதண்டத்தை யெடுத்த,
செங் கை – சிவந்த திருக்கையையுடைய,
அரங்கேசர் – ரங்கநாதரது,
தாள் – திருவடியால்,
கொண்ட – அளந்துகொள்ளப்பட்ட,
தேசம் எல்லாம் – உலகமுழுவதையும்,
விலை கொண்ட – தனக்கு விலையாகக் கொண்ட,
வாள் விழியாள் – வாள்போன்ற (கூரிய) கண்களையுடைய இவள்,
வெம்சுரம் – கொடிய பாலைநிலவழியில்,
சென்ற ஆறு – (தலைவன் இருக்குமிடத்தை நோக்கிப்) போன வகை,
எங்ஙன் – எவ்வாறோ? (எ – று.)

களவுப்புணர்ச்சிக்கண் தலைவி தலைமகனைப்புணர்ந்து பின்னர் அவனுடன் போக்கிற் சென்றனளாக, அதனையறிந்த செவிலி
“பேதைப்பருவத்தளான இவட்குத் தலைவனுடன் போக்கிற்கு இசையும் முதுக்குறைவு வந்தவாறு என்னோ!” என்று இரங்கிக்கூறியது, இது.
இதனை நற்றாய்வார்த்தையாகக் கொள்வாரு முளர்.
தலைவி யௌவநபருவத்தை யடைந்திருந்தும் இவள்தாய்மார்க்கு அன்புமிகுதியால் இவளது மிக்க இளமையே தோற்றுவதென்க.
தலைமகனை வசப்படுத்துவது முலையழகாலேயாதல் மயிர்முடியழகாலேயாதல் சொற்சாதுரியத்தாலேயாதல் கூடுவதாயிருக்க,
முலையும் அரும்பாதே குழலும்முடிகூடாதே சொல்லுங்குதலையாயுள்ள இந்தப்பேதைக்கு இப்படி
தலைவனிடம் அன்புண்டானவாறு என்கொல்? என்று அதிசயப்பட்டனளென்க.
“முலையோ முழுமுற்றும்போந்தில மொய்பூங்குழல் குறிய,
கலையோவரையில்லை நாவோகுழறும் கடன்மண்ணெல்லாம்,
விலையோ வெனமிளிருங்கணிவள் பரமே பெருமான்,
மலையோ திருவேங்கடமென்று கற்கின்றவாசகமே” என்ற நம்மாழ்வார் பாசுரம் இங்கு நோக்கத்தக்கது.

“வாயிற் பல்லுமெழுந்தில மயிரும் முடிகூடிற்றில,
சாய்விலாத குறுந்தலைச் சிலபிள்ளைகளோ டிணங்கித்,
தீயிணக்கிணங் காடிவந்திவ டன்னன்ன செம்மைசொல்லி,
மாயன் மாமணிவண்ணன்மே லிவண் மாலுறு கின்றாளே” என்றார் பெரியாழ்வாரும்.
“அடியளந்தான் றாஅய தெல்லாம்” என்றாற்போல, ‘அரங்கேசர் தாள்கொண்ட தேசமெல்லாம்’ என்றாள்

இது, நிரையசை முதற் கட்டளைக் கலித்துறை.

———–

தலைமகன் தலைமகளது இயல் கூறல்
83- வெஞ்சமும் கருதும் கஞ்சனும் எருதும் வேழமும் பரியும் வீழ முன் பொருதார்
தஞ்சம் என்றவருக்கு அஞ்சல் என்று அருளும் தாயில் அன்பு உடையார் கோயிலின் புடை ஆர்
மஞ்சும் வண்டினமும் துஞ்சு தண்டலை வாய் வல்லி ஓன்று அதிலே எல்லியும் திகழும்
கஞ்சம் உண்டு அதிலே நஞ்சம் உண்டு அதிலே கள்ளம் உண்டு அது என் உள்ளம் உண்டதுவே –83-

(இ – ள்.) வெம் சமம் கருதும் – கொடிய போரை விரும்புகின்ற,
கஞ்சனும் – கம்ஸனும்,
எருதும் – (அவனாற் கொல்லும்படி யேவப்பட்ட) எருதினுருவங் கொண்டுவந்த அரிஷ்டாசுரனும்,
வேழமும் – (குவலயாபீடமென்னும்) பட்டத்துயானையும்,
பரியும் – குதிரைவடிவாய்வந்த (கேசியென்னும்) அசுரனும்,
வீழ – இறந்துவிழும்படி,
முன் – முன்னே (கிருஷ்ணாவதாரத்திற்குழந்தைப்பருவத்தில்),
பொருதார் – போர்செய்தவரும்,
தஞ்சம் என்றவருக்கு – அடைக்கல மென்று கூறி வந்து சரணமடைந்தவர்களுக்கு,
அஞ்சல் என்று அருளும் – அஞ்சற்கவென்று சொல்லி (அபயப்பிரதானஞ் செய்து) காக்கின்ற,
தாயில் அன்புடையார் – (உயிர்களிடத்துத்) தாயினும் அன்பினையுடையவருமாகிய நம்பெருமாளது,
கோயிலின் புடை – பெரிய கோயிலின் புறத்தில்,
ஆர் – பொருந்திய,
மஞ்சு வண்டு இனமும் துஞ்சு தண்டலைவாய் – மேகக்கூட்டங்களும் வண்டுக்கூட்டங்களுந் தங்குகின்ற சோலையினிடத்தில்,
வல்லி ஒன்று (உண்டு) – கொம்பொன்று (மகள் ஒருத்தி) உண்டு;
அதிலே – அதனிடத்திலே,
எல்லியும் திகழும் கஞ்சம் – இராக்காலத்துங் குவியாமல் மலர்ந்து விளங்குகின்ற தாமரைமலர் (முகம்), உண்டு -;
அதிலே, – நஞ்சம் – விஷம் (கண்கள்), உண்டு -;
அதிலே -, கள்ளம் – கள்ளத்தனம், உண்டு -;
அது -, என் உள்ளம் – என்மனத்தை, உண்டது – கவர்ந்தது; (எ – று.)

இது, தெய்வப்புணர்ச்சி புணர்ந்த தலைமகன், தன்னை எதிர்ப்பட்டு நோக்கி ‘நீ இவ்வாறு மெலிவுறுதற்குக் காரணமென்னோ?’
என்று வினாவின பாங்கனுக்கு, ‘நேற்றுத் திருவரங்கங்கோயிற் சோலையிற் சென்றேன்; அவ்விடத்து ஒரு கொடிபோல்வாளது
விழிநோக்கால் இவ்வாறாயினேன்’ எனத் தனக்கு உற்றது உரைத்தது.

“வல்லியொன்று” என்பது முதல் “கள்ளமுண்டு” என்றதுவரையில் உபமேயப் பொருள்களை உபமானப்
பொருள்களாகவே மறைத்துக் கூறியது, உருவகவுயர்வுநவிற்சியணி; வடநூலார் ரூபகாதிஸயோக்தி யென்பர்.
ப்ராஸமென்னுஞ் சொல்லணியும் இச்செய்யுளி லுள்ளது.

இது, முதல் மூன்று ஐந்து ஏழாஞ்சீர்கள் கூவிளச்சீர்களும், மற்றை நான்கும் புளிமாச்சீர்களுமாகிய எண்சீராசிரியவிருத்தம்.

————

தலைவி இரங்கல்
84-உண்டு உமிழ் வாசமுடன் தண்டலை மாருதம் வந்து உலவி சாளரமும் குலவிய வாள் நிலவும்
விண்டு அலர் பூ அணையும் மென்பனி நீர் புழுகும் வேனிலிலும் முதிரா வேனிலும் ஆகியவால்
அண்டர் தொழும் பெருமாள் அம்புயமின் பெருமாள் அருமறையின் பெருமாள் அழகிய நம் பெருமாள்
புண்டரிகம் கமழும் தண் துறை ஓதிமமே புன்னைகள் சிந்து அலரே இன்னமும் வந்திலரே –84-

(இ – ள்.) புண்டரிகம் கமழும் – தாமரைமலர்மணம் நாறுகின்ற,
தண்துறை – குளிர்ந்த தடாகத்தினிடத்தே யுள்ள,
ஓதிமமே அன்னமே! –
புன்னைகள் சிந்து அலரே – புன்னைமரங்கள் சொரிகின்ற பூவே! –
உண்டு உமிழ் வாசமுடன் – உட்கொண்டு வெளிவீசுகின்ற வாசனையோடு,
தண்டலை மாருதம் – பூஞ்சோலையின்கண் உள்ள இளங்காற்று,
வந்து உலவிய – வந்துவீசுகின்ற,
சாளரமும் – பலகணிகளும்,
குலவிய வாள் நிலவும் – விளங்குகின்ற நிலாவினொளியும்,
விண்டு அலர் பூ அணையும் – விரிந்துமலர்கின்ற புஷ்பசயனமும்,
மெல் பனிநீர் புழுகும் – குளிர்ந்த பனிநீருங் கஸ்தூரிப்புழுகும்,
வேனிலிலும் – இருவகைவேனிற்காலத்துள்ளும்,
முதிரா வேனிலும் – (இவற்றையுடைய) இளவேனிற்காலமும்,
ஆகிய – ஆயின;
இன்னமும் – அங்ஙனமாகவும்,
அண்டர் தொழும் பெருமாள் – தேவர்கள்வணங்குகின்ற சுவாமியும்,
அம்புயம்மின் பெருமாள் – தாமரைமலரிலுள்ள மின்னற்கொடிபோன்ற திருமகளுக்குத் தலைவரும்,
அரு மறை இன் பெருமாள் – அறிதற்கரிய வேதங்களாற் புகழப்படுகின்ற இனிய பெருமையையுடையவருமாகிய,
அழகிய நம்பெருமாள் – நமது அழகிய மணவாளப்பெருமாள்,
வந்திலரே – வந்தாரில்லையே; (எ – று.) – ஆல் – ஈற்றசை.

இதற்குத் துறை முன்னர்க் கூறப்பட்டது.

பனிநீர் – ஓர்வகை வாசனைநீர். முதிராவேனிலு மாகிய என்றது – இளவேனிற்பருவங் கழிந்து முதுவேனிற்பருவமும் வந்த தென்றபடி.

இது, முதல் மூன்று ஐந்து ஏழாஞ் சீர்கள் விளச்சீர்களும், மற்றை நான்குங் கூவிளங்காய்ச்சீர்களு மாகிய எண்சீராசிரியவிருத்தம்.

————

தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு வருந்தி உரைத்தல்
85-இன் இசை வேயினர் மன்னிய கோயிலை எய்தார் போல்
பொன் நினைவால் அவர் போன இடத்தினில் போகாதோ மின்னிய
முகில் துளி என்று என் மேல் எலாம்
வன்னியின் பொறிகளை வழங்கும் வாடையே –85-

(இ – ள்.) மின்னிய முகில் துளி என்று – மின்னுகின்ற மேகங்களின் மழைநீர்த்துளியென்று பெயர்வைத்து,
என் மேல் எலாம் – என்னுடம்பு முழுவதும்,
வன்னியின் பொறிகளை – நெருப்புப்பொறிகளை,
வழங்கும் – வீசுகின்ற,
வாடை – வாடைக்காற்றானது, –
இன் இசை வேயினர் – இனிய இசையினையுடைய வேய்ங்குழலையுடைய நம்பெருமாள்,
மன்னிய – எழுந்தருளியிருக்கின்ற,
கோயிலை – திருவரங்கத்தை,
எய்தார்போல் – அடையாதவர் போல,
பொன் நினைவால் – பொருள்தேடும் நினைவினால்,
அவர் – அத்தலைவர், போன -, இடத்தினில் -, போகாதோ – போகின்றதில்லையோ? (எ – று.)

தலைவனைப் பிரிந்து அப்பிரிவுத்துயரை யாற்றாத தலைவி தென்றல் வரவுக்கு ஒருசார் வருந்தி இரங்கிக்கூறிய வார்த்தைஇது.
எல்லாவுயிர்கட்கும் இயற்கையிற்குளிர்ச்சியைச் செய்யுந்தன்மையதும் மழைநீர்த்துளியைவீசுவதுமான தென்றற்காற்று
தலைவனைக்கூடியிருக்கும் நிலையில் மேல்வீசும்போது அமிருதம்போல இனிமையாயிருந்து
அதுதானே தணந்திருக்குஞ் சமயத்தில் வீசும்போது விஷம்போல மிக்கவருத்தத்தைச் செய்கின்றது.
அதுவேயுமன்றி, தாபசாந்தியான மழைநீர்த்துளியும் தாபத்தைத் தணியாமல் வெவ்விய தழலாகத் தோற்றி
விரகவேதனையை மிகுவிப்பதாகி மிக்கவெப்பஞ்செய்ய, அதனால், மிகவருந்திய தலைமகள் அவற்றைக்குறித்து வெறுத்துக் கூறினளென்க.

கோயிலை அடைந்தவர்க்கு மீண்டும் விரைவில் வாராதிருத்தல் இயல்பன்றாதலால் எய்தார்போ லென்றும்,
வாடை போகுமாயின் அவரும் என்னைப்போலவே பிரிவாற்றாமையால் வருந்தி விரைந்து வந்திருப்பரென்னுங்கருத்தாற் போகாதோ வென்றும்,
மழைத்துளிகள் தணந்திருக்கின்ற தனக்கு அனற்பொறிபோல வெப்பத்தையுண்டாக்குதலால்
முகிற்றுளியென்று வன்னியின் பொறிகளை வழங்கு மென்றுந் தலைவி கூறினாள்.
முகிற்றுளியென்று வன்னியின் பொறிகளை வழங்குமென்ற தொடரில் – உண்மையில் வன்னியின் பொறிகளா யிருக்க
அவற்றிற்கு முகிற்றுளியென்று வாடை பேர்வைத்து மறைத்திருக்கின்ற தெனக் கூறியது, கைதவாபநுதியென்னு மலங்காரம்.
எய்தார்போ லென்பதற்கு – மீண்டும் வாராதவர்போன் றென்றுமாம். எல்லாமென்பது, ஈண்டு “மேனியெல்லாம் பசலையாயிற்று”
என்பதிற்போல ஒருபொருளின் பலவிட முணர்த்திற்று.

இது, நான்கடியாய், முதலிரண்டடியும் – முதல்நான்குசீருங் கூவிளச்சீர்களும், ஈற்றுச்சீர் தேமாங்காய்ச்சீருமாய் வந்த நெடிலடிகளாய்,
பின்னிரண்டடியும் – மூன்றாஞ்சீரொன்று மாச்சீரும் மற்றைமூன்றுசீர்களும் விளச்சீர்களுமாய்வந்த அளவடிகளாய்,
முன்னிரண்டடியும் ஓரோசையாய், ஏனையடிகள் வேறோசையாய் வந்த வேற்றொலிவெண்டுறை.

———–

கால மயக்கு
வாடையாய் இரு பனியும் ஆய் வேனிலாய் வந்தது கார் என்றே
பேடை மா மயில் சாயலாய் அன்பர் மேல் பிழை கருதிடல் செம்பொன்
ஆடை நாயகன் திருமகள் நாயகன் அரங்க நாயகன் ஏறும்
ஓடை மா இது மதம் இது பிளிறிய ஒலி இது மழை அன்றே –86-

(இ – ள்.) பேடை மா மயில் சாயலாய் – அழகிய மயிற்பேடுபோன்ற சாயலையுடையவளே! –
‘வாடை ஆய் – கூதிர்காலம் கழிந்து,
இரு பனியும் ஆய் – (முன்பனி பின்பனியென்னும்) இரண்டு பனிக்காலங்களும் கழிந்து,
வேனில் ஆய் – (இளவேனில் முதுவேனில் என்னும் இரண்டு) வேனிற்காலங்களும் கழிந்து,
கார் வந்தது – மழைக்காலமும் வந்தது,’
என்றே – என்று எண்ணியே,
அன்பர்மேல் – அன்பினையுடைய தலைவர்மீது,
பிழை கருதிடல் – குற்றம்நினைக்காதே; இது -,
செம் பொன் ஆடை நாயகன் – செம்பொன்மயமான பீதாம்பரத்தையுடைய தலைவனும்,
திருமகள் நாயகன் – ஸ்ரீய: பதியுமாகிய, அரங்க நாயகன் -,
ஏறும் – ஏறிநடத்துகின்ற,
ஓடை மா – முகபடாத்தையுடைய யானை; இது -,
மதம் – (அவ்யானையின்) மத நீர்ப்பெருக்கு; இது -,
பிளிறிய ஒலி – (அவ்யானை) வீரிடுகின்ற ஓசை; (ஆகையால்),
மழை அன்று – (இது) கார்காலமன்று; (எ – று.)

கார்காலத்து மீண்டுவருவதாகக் காலங்குறித்துத் தலைவியைப்பிரிந்து சென்ற தலைமகன் அக்கார்காலம் வந்தவளவிலும்
தான் வாராதொழியவே, அக்காலவரவை நோக்கி வருந்துகின்ற தலைவியைத் தோழி,
“இது, அவன் சொல்லிப்போன கார்காலம் வந்ததன்று; வானத்திற் கறுத்துச்செல்வது மேகமன்று,
திருமால் ஊர்ந்துசெல்லும் மதக்களிறாகும்; வானத்தினின்று நீர்சொரிவது அக்களிற்றின் மதநீராம்;
பேரிடிபோலத் தோன்றும் ஒலி அம் மதக்களிற்றின் பிளிறலாம்” என்று காலத்தை மாறுபடக்கூறி ஆற்றுவித்தனனென்க.
“காரெனக் கலங்கு மேரெழிற் கண்ணிக்கு, இன்றுணைத்தோழியன்றென்று மறுத்தது” என்பது காண்க.
இது, “பருவமன்றென்றுகூறல்” என்றும் வழங்கும். இத்துறை – திருக்கோவையாரில் “காலமறைததுரைத்தல்” என்றும்,
தஞ்சைவாணக்கோவையில் “இகுளைவம்பென்றல்” என்றும்,
தணிகைப்புராணத்துக் களவுப்படலத்தில் “ஆயிடைத்தோழியழிந்தியற்பழித் தல்” என்றும் கூறப்பட்டுள்ளது.

“பொய்ம்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த, நன்மை பயக்கு மெனின்” என்பவாதலால், இது, பொய்ம்மைக்குற்றத்தின்பாற்படாது;
அங்கு ‘குற்றந்தீர்ந்த நன்மைதருதலாவது – பெருந்தீங்கையாயினும் மரணத்தை யாயினும் அடையநின்றதோர்
உயிர்தான் கூறுஞ் சொற்களின் பொய்ம்மையால் அத்துன்பத்தினின்று நீங்கி இன்பமடைதல்’ என்றபடி
இங்குப் பிரிவாற்றாமையால் தலைமகளுக்கு உண்டாகும் அபாயத்தைப் புனைந்துரையால் ஒழித்தவாறு காண்க.

இருபனி யென்பதி லுள்ள இரண்டை வேனிலோடுங் கூட்டுக. முகப டாத்தையுடைய மாவெனவே, யானையாயிற்று.
ஓடை கூறியது, மேகத்திலுள்ள மின்னலைக் கருதி.

இது, முதற்சீர் தேமாச்சீரும், ஈற்றுச்சீர் காய்ச்சீரும், மற்றைநான்கும் விளச்சீர்களுமாகிய அறுசீராசிரியவிருத்தம்.

—————

தழை
மழை போல் மரகதம் போல் எம்பிரான் வளர் கோயில் அன்னீர்
பிழை போம் இவர்க்கு இதை யார் உரைப்பார் இவர் பின் வந்து எய்த
தழை யோய் உறைத்த வருத்தம் பொறாமை கொல் சங்கரன் பால்
உழை யோய் ஒதுங்க முயல் போய் மதி புக்கு ஒளித்ததுவே –87-

(இ – ள்.) மழைபோல் – கார்மேகம்போலும்,
மரகதம்போல் – நீல மணிபோலும்,
எம்பிரான் – நம்பெருமாள்,
வளர் – திருக்கண்வளர்ந்தருளு கின்ற,
கோயில் – திருவரங்கத்தை,
அன்னீர் – ஒத்திருப்பவர்களே! –
பிழை போம் இவர்க்கு – தவறுசெய்துபோன இத்தலைவருக்கு,
இதை – இவ்வரலாற்றை,
யார் உரைப்பார் – யாவர் சொல்லுபவர்? (எவருமில்லை); (அவ்வ வரலாறு என்னையெனின்), – இவர் -,
பின் வந்து எய்த – தொடர்ந்துவந்து பிரயோகித்த,
தழை – தழையானது,
போய் உறைத்த – சென்று பட்ட,
வருத்தம் – வருத்தத்தை,
பொறாமைகொல் – பொறுக்கமாட்டாமையினாலன்றோ,
சங்கரன்பால் – சிவனிடத்தில்,
உழை – மானானது,
போய் ஒதுங்க – சென்று ஒளிக்க, –
முயல் – முயலானது, போய் -,
மதி புக்கு – சந்திரனிடத்திற் சேர்ந்து, ஒளித்தது – மறைந்திட்டது; (எ – று.)

இயற்கைப்புணர்ச்சியும் பாங்கற்கூட்டம் அல்லது இடந்தலைப்பாடும் நிகழ்ந்தபின்பு தோழிக்குத் தன்கருத்தைப் புலப்படுத்தி
அவன்மூலமாகத் தலைமகளைச்சேர்தலாகிய தோழியிற்கூட்டத்திற் கருத்துவைத்த தலைமகன் அத்தோழியைத் தனியே
கண்டு தன்கருத்தை வெளிப்படையாக விரையக் கூறியிரவாமல் குறிப்பாகக் கூறக்கருதித் தலைமகளும் தோழியும்
ஒருங்குநிற்குஞ் செவ்விநோக்கித் தழையுங்கண்ணியுமாகிய கையுறைகளை யேந்திச் சென்று அவர்களைநோக்கி
வேட்டைக்குவந்தவன்போலச் சிலமொழிகளைப் புகல, தலைவியின் மனநிலையை யறிதற்பொருட்டு அத்தலைமகனது
நிலையைத் தோழி தலைமகளோடு நகைத்துக் கூறியது, இது.
தழை – மலர்களை யிடையிட்டுத் தளிர்களாற் செய்வதோ ருடைவிசேடம்;
இங்ஙனந்தொடுத்த தழையை ஆடையாக உடுத்துக்கொள்ளுதல், குறிஞ்சிநிலத்துமகளிரியல்பு.

அங்குவந்த தலைமகன் “இங்கு யானெய்த மான் வந்த துண்டோ?” என்று வினவினனாக,
தோழி “கையில் தழையைவைத்துக்கொண்டு இவர் வேட்டையாடுபவர்போல வினவுகின்றாரே!
இவர் இவ்வாறு வம்புக்காக வினவுவது பிழையென்று இவரிடத்து யார்சொல்வது?
இவர் இத்தழையைக்கொண்டு எய்ததனால்தான் கானகத்திலுள்ள மான் அவ்வருத்தம் பொறாது சங்கரனிடம்போய்ச் சேர்ந்தது;
அவ்வாறே முயலொன்று சந்திரனிடத்துப் போய்ச்சேர்ந்தது” எனப் பரிகசித்துக்கூறுகின்றனளென்க.
இதனை, தலைமகள் தோழியர்க்கு உரைத்ததாகக் கொள்வாருமுளர்.

“பித்தினர் போலப் பல தொடுத்தார் பிறங்கெக்கலைக்கும்,
வித்தினர்போல விடையும் விடுத்தனர் மெய்ம்மையுளம்,
பொத்தினர்போல வுரைக்கொத்தவில்லினரல்லர் பொற்பூங்,
கொத்தினர் யாவர்கொல் சேயருமல்லாக் குறிப்பினரே”,

“மின்னே தழைகொண்டு வேழமெய்தா ரந்த வேழம்வந்து,
பின்னே பிணைபிரியுங்கலையானது பேசி லின்னங்,
கொன்னேபுகழுங் குறுமுயலாகவுங் கூடுங்கொல்லோ,
வென்னே யுலகிலிவனையொப்பாரில்லை யேவினுக்கே” என்ற பாடல்கள் இங்குக் கருதத்தக்கன.

அன்னீர் – அன்னாரென்பதன் விளி. பிழைபோம்இவர்க்கு என்பதற்கு, குற்றமற்ற இவர்க்கு என்றும்,
தவறானவழியிலே வந்துவிட்ட இவர்க்கு என்றும் பொருள் கொள்க. சந்திரனிடத்துள்ள களங்கத்தை முயலென்பது, கவிமரபு.

இது, நிரையசைமுதலதான கட்டளைக்கலித்துறை.

————-

கார்காலம் -தலைவி இரங்கல் –
88-ஒளிக்கும் இரு சுடர்க் கவளம் விழுங்கும் பேழ்வாய் உரும் முழக்கத்து இந்திரவில் ஓடை நெற்றி
துளிக்கும் மழை மதக் கொண் மூக்களிற்றை மின்னல் தோட்டி மாருதப் பாகர் துரக்கும் காலம்
அளிக் குலங்கள் இசைபாட கத்த மஜ்ஞை ஆடு பொழில் திரு அரங்கர் அணையாக் காலம்
விளிக்கும் அலைக் கரும் கடலும் ஒறுக்கும் காலம் வினையேற்கு விழி துயிலை மேவாக் காலம் –88-

(இ – ள்.) ஒளிக்கும் – விளங்குகின்ற,
இரு சுடர் – சூரிய சந்திரர்களாகிய,
கவளம் – கபளங்களை,
விழுங்கும் – விழுங்குகின்ற,
பேழ் வாய் – பிளவுபட்டவாயையும்,
உரும் முழக்கத்து – இடியாகிய முழக்கத்தையும்,
இந்திரவில் ஓடை நெற்றி – இந்திர தனுசாகிய முகபடாத்தையணிந்த நெற்றியையும்,
துளிக்கும் மழை மதம் – பெய்கின்ற மழைநீராகிய மதநீரையுமுடைய,
கொண்மூ களிற்றை – மேகமாகிய யானையை,
மின்னல் தோட்டி – மின்னலாகிய அங்குசத்தால்,
மாருதம் பாகர் – காற்றாகிய பாகர்கள்,
துரக்கும் – செலுத்துகின்ற, காலம் -;
அளி குலமும் – வண்டுகளின் கூட்டமும்,
களிக்கும் மயில் குலமும் – களிக்கின்ற மயில்களின் கூட்டங்களும்,
பாடி ஆடு – முறையே பாடியாடுகின்ற,
பொழில் – சோலையையுடைய,
திருவரங்கர் – ஸ்ரீரங்கநாதர்,
அணையா – வந்து சேராத, காலம் -; (அதனால்),
விளிக்கும் அலை கருங்கடலும் – ஆரவாரஞ் செய்கின்ற அலைகளையுடைய கரியகடலும்,
ஒறுக்கும் – நோய்செய்கின்ற, காலம் -;
வினையேற்கு – தீவினையையுடைய எனக்கு,
விழிகள் – கண்கள்,
துயில்மேவா – தூக்கம்பொருந்தாத, காலம் -; (எ – று.)

பருவங்குறித்துச்சென்ற தலைமகன் கார்காலம் வந்தவளவிலும் மீண்டுவாரானாக, தலைவி
அக்கார்காலத்தைக்கண்டு இரங்கிக் கூறியது, இது. இத்தன்மைய கார்காலத்தில் எனது அரங்கநாயகர் அணைவராகில்,
கடலும் ஒறுக்கவேண்டுவதில்லை; கண்ணும் உறங்காமை வேண்டுவதில்லை யென்றவாறு.

முன்னிரண்டடிகளில் உருவகவணி காண்க. மூன்றாமடி – நர்த்தனஞ் செய்பவர் ஆடப் பாடகர் பாடத் தாம்
அவ்வின்பத்தைக் கண்டுகளிக்கின்றாரேயன்றி, எனது துன்பத்தைக் காண்கின்றில ரென்ற குறிப்பு.
கவளம் – வடசொற்றிரிபு, உணவுத்திரளை. தோட்டி – மாவெட்டி. பாகர் – யானை யோட்டுபவர்.
மேகம் தான் சூரியசந்திரர்களை மறைத்தலால், ‘ஒளிக்குமிரு சுடர்க்கவளம் விழுங்கும் பேழ்வாய்’ என்ற
அடைமொழி கொடுத்துக் கூறப்பட்டது. காற்று மேகங்களைச் செலுத்துதலால், பாகராக உருவகப்படுத்தப்பட்டது.
கடலொலிக்கு வருந்தலுங் கண்ணுறங்காமையுங் கணவனைப்பிரிந்தார்க்கு இயல்பென்க.

இதற்குக் கவியிலக்கணம் 15 – ஆங் கவியிற் கூறியதே.

————-

இள வேனில் காலம் -தலைவி இரங்கல் –
மேவலர் வாழ் தென்னிலங்கை மலங்க ஒரு கால் இரு கால் வில் குளித்து எய்
ஏவலர் வாழ் திரு அரங்கத்து எமை இருத்திப் போனவர் நாட்டு இல்லை போலும்
கோவலர் வாய்க் குழல் ஓசைக்கு ஆ நிரைகள் செவி ஏற்கும் குறும்புன் மாலை
பூ அலரின் மணம் பரப்பி இள வேனில் வர வந்த பொதியத் தென்றல் –89-

(இ – ள்.) இளவேனில்வர – இளவேனிற்காலம் வர, (அப்பொழுது),
கோவலர் வாய் குழல் ஓசைக்கு – இடையர்கள் வாயினாலூதுகின்ற வேய்ங்குழலினது ஒலிக்கு,
ஆ நிரைகள் – பசுக்கூட்டங்கள்,
செவி ஏற்கும் – காது கொடுக்கின்ற (கேட்கின்ற),
குறும் புன் மாலை – சிறிய புல்லிய மாலைப் பொழுதில்,
பூ அலரின் மணம் பரப்பி – மலர்ந்த மலர்களின் வாசனையை வீசிக்கொண்டு, வந்த -,
பொதியம் தென்றல் – மலையமலையினின்றும் வருகின்ற தென்றற்காற்று, –
மேவலர் வாழ் – பகைவர்கள் (அரக்கர்கள்) வாழ்கின்ற,
தென்இலங்கை – தெற்கிலுள்ள இலங்காபட்டணம்,
மலங்க – கலங்கும்படி,
ஒரு கால் – ஒருதரம்,
வில் இரு கால் – கோதண்டத்தின் இரண்டுகோடிகளையும்,
குனித்து – வளைத்து,
எய் – எய்த,
ஏ வலர் – அம்பில் வல்ல நம்பெருமாள்,
வாழ் – வாழ்கின்ற,
திருவரங்கத்து – ஸ்ரீரங்கத்தில்,
எமை – என்னை,
இருத்தி – தனியேவிட்டு,
போனவர் – பிரிந்துசென்றவர் (போன),
நாடு – நாட்டில், இல்லைபோலும் -; (எ – று.)

தலைமகனைப் பிரிந்த தலைமகள் இளவேனிற்காலம் வரக்கண்டு இரங்கிக்கூறியது, இது.

இந்த இளந்தென்றற் காற்று அங்கு இருக்குமாயின், எனது தலைவர் உடனேவந்திருப்பரென்றபடி.
மேவலர் – விரும்பாதவர். ஒருகால் – காலினாலென்றுமாம். கோவலர் – கோபாலரென்பதன் சிதைவு;
பசுக்களைக் காப்பவரென்று பொருள்; இனி, பசுக்களைக்காத்தலில் வல்லவரென்றுமாம்.

இதற்கு யாப்பிலக்கணம் 4 – ஆங் கவியிற் கூறியது கொள்க.

————-

தோழி இரங்கல்
தென்றலைக் குங்குமச் சேற்றைப் பொறாள் சிறியாள் பெரிய
துன்று அலைக்கும் துடிக்கும் என் செய்வாள் துயரால் அழைத்த
வன்தலைக் குஞ்சரம் காத்தாய் இலங்கை மலங்க வளைத்து
அன்று அலைக்கும் சரத்தாய் அரங்கா அண்டர் ஆதி பனே –90

(இ – ள்.) துயரால் – (முதலை கவர்ந்த) வருத்தத்தால்,
அழைத்த – (ஆதிமூலமே யென்று) கூப்பிட்ட,
வல் தலை குஞ்சரம் – வலிய தலையையுடைய கஜேந்திராழ்வானை,
காத்தாய் – பாதுகாத்தவனே!
இலங்கை -, மலங்க – கலங்கும்படி,
வளைத்து – (வில்லை) வளைத்து,
அன்று – அந்நாளில் (ஸ்ரீராமாவதாரத்தில்),
அலைக்கும் – அலையச்செய்த,
சரத்தாய் – அம்புகளையுடையவனே!
அரங்கா – அரங்கனே!
அண்டர்ஆதிபனே – தேவர்தலைவனே! –
சிறியாள் – சிறிய என்மகள்,
தென்றலை – தென்காற்றையும்,
குங்குமம் சேற்றை – குங்குமப்பூவோடு கலந்த சந்தனக்குழம்பையும்,
பொறாள் – பொறுக்கமாட்டாள்;
பெரிய துன்று அலைக்கும் – நீண்டு உயர்ந்த நெருங்கிய அலைகளுக்கும்,
துடிக்கும் – வருந்துவாள்;
என் செய்வாள் – என்ன பரிகாரஞ் செய்யமாட்டுவாள்; (எ – று.)

தலைமகளை ஒருவழித்தணந்த தலைமகன் மீண்டுவந்து சிறைப்புறமாக நிற்றலை யறிந்த தோழி,
தலைமகள் தென்றல் முதலியவற்றிற்கு ஆற்றாது ஒருபடியாலும் தேறுதலின்றி மிகவருந்துதலைத் தலைமகன் கேட்பக் கூறுவது,
இது. தலைமக ளாற்றாமைகண்டு வருந்துந்தோழி தன்னாற்றாமையாலே தலைமகளை யுட்கொண்டு விளித்து
முன்னிலைப்படுத்தியதென்றுங் கொள்ளலாம். இதனைச் செவிலியிரங்கலாகக் கொள்வாரு முளர்.

இலங்கை – ஆகுபெயர். ஆதிபன் – அதிபனென்பதன் விகாரம். அண்ட ராதிப னென்பதற்கு –
நித்தியசூரிகளுக்குத் தலைவ னென்றும்; இடையர்களுக்குத் தலைவனென்றுங் கொள்ளலாம்.
வண் தரா அதிப னெனப் பிரித்து, வளப்பம் பொருந்திய நிலமகளுக்குத் தலைவ னென்றுமாம்.

இது, நேரசை முதலதாகிய கட்டளைக்கலித்துறை.

————

தலைவி கூற்று
அண்டர் போற்றும் திரு அரங்கேசனார் அணி அரங்கத் திரு முற்றம் எய்தினால்
பண்டு போனவனை ஆழி வாங்குவேன் பாலியாது பரா முகம் பண்ணினால்
தண்டும் வாளும் சிலையும் இருக்கவே சங்கும் ஆழியும் தாரும் என் பேன் அவை
தொண்டருக்கு ஒற்றி வைத்தோம் என்று ஓதினால் துளவ மாலையைத் தொட்டுப் பறிப்பனே –91-

(இ – ள்.) அண்டர் போற்றும் – தேவர்களெல்லாம் வணங்கித் துதிக்கின்ற,
திருவரங்கேசனார் – ஸ்ரீரங்கநாதரது,
அணி அரங்கம் திரு முற்றம் – அழகிய அரங்கமாகிய திருமுன்றிலை,
எய்தினால் – (யான்) அடைந்தால், –
பண்டு போன – முன்னே கவர்ந்துகொண்டுபோன,
வளை ஆழி – சங்குவளையையும், மோதிரத்தையும்,
வாங்குவேன் – (மீளவும்) பெற்றுக்கொள்வேன்; (அவர்),
பாலியாது – (அவற்றைக்) கொடுத்தருளாமல்,
பராமுகம் பண்ணினால் – அலட்சியஞ் செய்தால், (அவ்வளையாழிகளுக்கு ஈடாக),
தண்டும் வாளும் சிலையும் இருக்கவே – (உமதுபஞ்சாயுதங்களுக்குள்) கதையும் வாளும் வில்லு மிருக்கவே,
சங்கும் ஆழியும் – சங்கையுஞ் சக்கரத்தையும்,
தாரும் என்பேன் – கொடுமென்று சொல்வேன்;
அவை – அவற்றை,
தொண்டருக்கு – அடியார்களுக்கு,
ஒற்றி வைத்தோம் – ஈடாக வைத்துவிட்டோம் (திருவிலச்சினையிட்டு வைத்துவிட்டோம்),
என்று ஓதினால் – என்று சொன்னால்,
துளவ மாலையை – திருத்துழாய்மாலையை,
தொட்டு பறிப்பென் – திருமேனி தீண்டிப் பிடுங்கிக்கொள்வேன்; (எ – று.)

தலைவனைப் பிரிந்து தலைவி அப்பிரிவாற்றாமையால் மெலிந்தனளாக, அவ்வுடன்மெலிவைக்கண்டு தோழியர்
முதலியோர் காரணம் இன்னதென உணராது வெவ்வேறாகச் சங்கித்து அவ்வவற்றிற்கு ஏற்ப வெவ்வேறான
செய்கைகளைச் செய்யத்தொடங்க, தலைவி அத்தொழில்களை விலக்கி
“மற்றிருந் தீர்கட் கறியலாகா மாதவ னென்பதோ ரன்புதன்னை,
யுற்றிருந்தேனுக் குரைப்பதெல்லா மூமையரோடு செவிடர் வார்த்தை,
பெற்றிருந்தாளையொ ழியவேபோய்ப்பேர்த்தொருதாயில்வளர்ந்த நம்பி,
மற்பொருதாமற்களமடைந்த மதுரைப்புறத்தென்னை யுய்த்திடுமின்” என்றாற்போலச் சொல்லி அறத்தொடு நின்று,
பிறகு தான் அங்குச்சென்றாற் செய்யுந்தொழிலை இதனால் தெரிவிக்கின்றன ளென்க.

தலைவனைத் தணந்த தலைவிக்கு அப்பிரிவாற்றாமையால் உடம்பு மெலிதலால் வளையும் மோதிரமுங் கழன்று
விழுந்து விடுதலாலும், மீண்டுந் தலைவனைப்புணர்ந்தால் அவை கழலவொண்ணாதபடி உடம்பு தணிந்து பூரித்து விடுதலாலும்,
“பண்டு போன வளையாழி வாங்குவேன்” என்றாள். பராமுகம் பண்ணுதல் – முகந்திரும்பிப்பார்த்தலுஞ் செய்யாது அசட்டை பண்ணுதல்.

இது, கட்டளைக்கலிப்பா; இலக்கணம் முன்னர்க் கூறப்பட்டது.

————-

தொட்டு உண்ட தயிர் வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி உரலோடு சூழ்ந்து கட்டக்
கட்டுண்டு கழல விரகு அறியாமல், இருந்து அழுத கள்வன் யாரோ
கட்டுண்டான் அரங்கன் எனக் கட்டுரைப் பாரானாலும் கங்கை சூடி
மட்டு உண்ட கொன்றை யான் மலர் மேலோன் அறிவரிய வடிவன் அன்றே –92-

(இ – ள்.) தொட்டு உண்ட – எடுத்துப்புசித்த,
தயிர் வெண்ணெய்க்கு – தயிர்க்கும் வெண்ணெய்க்குமாக,
அன்று – அந்நாளில் (கிருஷ்ணாவதாரத்தில்),
ஆய்ச்சி – இடைச்சி (யசோதை),
உரலோடு சூழ்ந்து கட்ட – உரலோடு பிடித்துச் சுற்றிக் (கடைகயிற்றாற்) கட்டிவிட,
கட்டுண்டு – கட்டப்பட்டு,
கழல – விலகிப்போக,
விரகு – உபாயத்தை,
அறியாமல் – தெரியாமல்,
இருந்து அழுத – (அங்கேயே) அழுதுகொண்டிருந்த,
கள்வன் – கள்ளத்தனமுடையவன், யாரே – யார்? (நம்பெருமாளன்றோ); அரங்கன் -,
கட்டுண்டான் என – கட்டுப்பட்டானென்று,
கட்டுரைப்பார் ஆனாலும் – உறுதிப்பட (இழித்து)ச் சொல்லுவாரானாலும், (அவன்),
கங்கை சூடி – கங்காநதியைச் சடையில் தரித்து,
மட்டுஉண்ட கொன்றையான் – வாசனையைக் கொண்ட (தேன் நிறைந்த) கொன்றைப் பூமாலையை யுடைய உருத்திரனும்,
மலர் மேலான் – தாமரைப் பூவில் தங்குகின்ற பிரமனும்,
அறிவு அரிய – அறிதற்கரிய, வடிவன் அன்றே – வடிவத்தை யுடையவனன்றோ? (எ – று.)

இப்பாட்டில், தங்களில் தோழமையாயிருப்பா ரிருவர்மகளிரது பேச்சாலே, ஒருத்தி பரத்வத்தை அநுசந்திக்க,
ஒருத்தி சௌலப்பியத்தை அநுசந்தித்து இவனது தாழ்வுகளைச் சொல்ல, ‘அப்படி தாழ்வுகள்செய்தானாயினும்
எல்லார்க்கும் மேலானவனன்றே இப்படிசெய்கிறான்’ என்று இருவர் பேச்சாலுமாக,
எம்பெருமானுடைய பரத்வத்தையும் சௌலப்பியத்தையும் பேசுகிறார்;
“வண்ணக் கருங்குழ லாய்ச்சியான் மொத்துண்டு,
கண்ணிக் குறுங்கயிற்றாற் கட்டுண்டான் காணேடீ,
கண்ணிக் குறுங்கயிற்றாற் கட்டுண்டானாகிலும்,
மெண்ணற் கரிய னிமையோர்க்குஞ் சாழலே” என்றார் திருமங்கையாழ்வாரும்.
இவ்வாறு இரண்டுபிராட்டிமார்தசை ஏககாலத்திற் கூடுவது எம்பெருமான் திருவருளினாலாகு மென்று பெரியோர் கூறுவர்.

இதற்கு யாப்பிலக்கணம் 4 – ஆங் கவியிற் கூறியதே.

——————

வடியாத பவக் கடலும் வடிந்து மூல மாயை கடந்து அப்பால் போய் வைகுந்தம் சேர்ந்து
அடியார்கள் குழாம் கூடி உனதடிக்கீழ் அடிமை செயும் அக்காலம் எக்காலம் தான்
கொடியாடு மணி மாட அயோத்தி மூதூர் குடி துறந்து திருவரங்கம் கோயில் கொண்ட
நெடியோனே அடியேன் நான் முயற்சி இன்றி நின்னருளே பார்த்திருப்பேன் நீசனேனே –93-

(இ – ள்.) கொடி ஆடும் – துவசங்கள் அசைகின்ற,
மணி மாடம் – இரத்தினங்களிழைத்த மாளிகைகளையுடைய,
அயோத்தி முதுஊர் – திருவயோத்தியென்கிற பழையநகரத்தில்,
குடி – தங்குதலை,
துறந்து – விட்டு,
திருவரங்கம் – ஸ்ரீரங்கத்தை,
கோயில்கொண்ட – இருப்பிடமாகக்கொண்டு எழுந்தருளியிருக்கின்ற,
நெடியோனே – பெரியோனே! –
வடியாத பவம் கடலும் – வற்றிப்போகாத பிறவிப்பெருங்கடலும்,
வடிந்து – வற்றப்பெற்று,
மூல மாயை கடந்து – மூலப்பிரகிருதியைத் தாண்டி,
அப்பால் போய் – அதற்கப்புறஞ் சென்று,
வைகுந்தம் சேர்ந்து – ஸ்ரீவைகுண்ட மடைந்து,
அடியார்கள் குழாம் கூடி – தொண்டர்களது கூட்டத்தோடு சேர்ந்து,
உனது அடிக்கீழ் – உன்னுடைய திருவடியின்கீழ்,
அடிமை செயும் – கைங்கரியஞ் செய்திருக்கின்ற,
அக்காலம் -, எக்காலந்தான் – எப்பொழுதோ?
அடியேன் – (உனது) அடியவனும்,
நீசனேன் – கடைப்பட்டவனுமாகிய, நான் -,
முயற்சி இன்றி – பிரயத்தனஞ் சிறிது மில்லாமல்,
நின் அருளே – உனது திருவருளையே,
பார்த்திருப்பன் – எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்; (எ – று.)

எம்பெருமானது திருவருணோக்கம் பதிதலால் இருவினைகள் நீங்கி அவைகாரணமாகத்தோன்றும் பிறவியற,
பின்பு இந்தப்பிரகிருதிமண்டலத்தைக் கடந்துபோய் ஸ்ரீவைகுண்டமாநகரில் அடியார்கள் குழாங்களுடன் சேர்ந்து
எம்பெருமானுக்குத்திருத்தொண்டுபுரியவேண்டுங்காலம்எப்போது கிட்டுமோ? என்று அக்காலத்தைப்பார்த்திருக் கின்றனரென்க.
“அடியார் குழாங்களையுடன் கூடுவதென்றுகொலோ,” “என்றுகொல் சேர்வதந்தோ
அரன் நான்முக னேத்துஞ் செய்யநின்திருப்பாதத்தை” என்றார் நம்மாழ்வாரும்.
சூரியகுலத்துத்தோன்றிய இக்ஷ்வாகுசக்கரவர்த்தி பிரமதேவனைக் குறித்துப் பலநாள் பெருந்தவஞ்செய்ய,
அப்பிரமன் அத்தவத்திற்கு மகிழ்ந்து தான்பலகாலமாய் ஆராதித்துவந்த எம்பெருமானை விமானத்துடன் பிரசாதித்தருள,
திருவயோத்தி சேர்ந்து அவ்விக்ஷ்வாகுவினாலும் பின்னுள்ள அக்குலத்தரசர்களாலுந் திருவாராதநஞ் செய்யப்பட்டுவந்த
நம்பெருமாள், ஸ்ரீராமபிரானால் இராவணவதம்முடிந்து திருவபிடேகம்செய்துகொண்டகாலத்தில்
விபீஷணாழ்வானுக்குக் கொடுத்தருளப்பட்டுத் திருவரங்கஞ் சேர்ந்ததனால்,
“அயோத்திமூதூர் குடிதுறந்து திருவரங்கங் கோயில்கொண்ட நெடியோன்” என்றார்.

இதற்குச் செய்யுளிலக்கணம் 15 – ஆங் கவியிற் கூறியதே.

————-

நீசச் சமர்க்கும் சூனிய வாதர்க்கும் நீதி அற்ற
பூசற் பவுத்தர்க்கும் சைவர்க்கும் யார்க்கும் புகலுகின்றேன்
நாசப் படா உயிர் எல்லாம் முதல் தந்த நாதன் கண்டீர்
ஆசு அற்ற சீர் அரங்கத்து ஆதி மூலத்து அரும் பொருளே –94-

(இ – ள்.) நீசம் சமணர்க்கும் சூனியவாதர்க்கும் – கீழ்மையையுடைய சமணர்களுக்கும் நாஸ்திகவாதிகளுக்கும்,
நீதி அற்ற பூசல் பவுத்தர்க்கும் சைவர்க்கும் – நியாயமல்லாத வாதஞ்செய்கிற பௌத்தர்களுக்கும் சைவர்களுக்கும்,
யார்க்கும் – மற்றைப் புறச்சமயத்தவர் யாவர்க்கும்,
புகலுகின்றேன் – சொல்லுகின்றேன்; –
நாசம் படா உயிர் எல்லாம் – அழிவில்லாத சீவன்களையெல்லாம்,
முதல் தந்த – ஆதியிற் படைத்த,
நாதன் – தலைவன்,
ஆசு அற்ற – குற்றமில்லாத,
சீர் அரங்கத்து – ஸ்ரீரங்கத்தி லெழுந்தருளி யிருக்கின்ற,
ஆதி மூலத்து – ஆதி மூலமாகிய,
அரும் பொருளே – அறிதற்கரிய பரவஸ்துவே;
கண்டீர் – அறியுங்கள்; (எ – று.)

சமணர் – ஜைநர்; இவர்கள் – காரியகாரணரூபத்தால் இந்த உலகம் நித்யாநித்யமாயும் பிந்நாபிந்நமாயும்
ஸத்யாஸத்யமாயுமிருக்கு மென்றும், ஆத்மாக்கள் இருவினைப்பயனால் வரும் தேகத்தின் பரிமாணங்களையுடையனவா மென்றும்,
மலதாரணம் அஹிம்ஸைமுதலிய செயல்களாலும் ஆத்ம ஜ்ஞாநத்தினாலும், இந்த ப்ரக்ருதியை விட்டு நீங்கி
மேலுலகத்தை யடைகையே மோஷமென்றும் இவ்வாறாகத் தமக்குத் தோற்றியபடியே வேதவிருத்தங்களான
விஷயங்களைத் தமது வாயில் வந்தபடியே பரக்கச்சொல்வார்கள்.
சமணர் – க்ஷபணர்; இவர்கள் – பௌத்தர்களை ஒருபுடை யொத்தலும் ஒவ்வாமையு முடையவர்.
சூனியவாதர் – சூனியமே தத்வமென்றிருக்கிற மாத்யமிகர்; இவர்கள் – ப்ரமாணமும் ப்ரமேயமும்
(ப்ரமாணத்தினால் அறியப்படும் பொருளும்) ப்ரமாதாவும் (ப்ரமாணத்தையறிபவனும்) ஆகிய இவையுண்டென்றறிவது
மதிமயக்கத்தின் செயலே யென்றும், ஸத்துமன்றாய் அஸத்துமன்றாய் ஸதஸத்துமன்றாய் ஸதஸத்விலக்ஷணமுமன்றாய்
இந்நான்கு எல்லையையும் கடந்திருப்பதொன்றே தத்வமென்றும், சூந்யத்திலே சூந்யமென்று அறிகையே மோக்ஷமென்றும் பிதற்றுவார்கள்.

மறுபிறப்பும் இருவினைப்பயனுங் கடவுளும் இல்லையென்று வாதஞ்செய்வர்.
இவர்களும் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர்களெனினும் இவர்களுடைய மதத்தின் கொடுமையைப்பற்றி
இவர்களைத் தனியே பிரித்துக்கூறின ரென்க.
இவ்வாறே “தர்க்கச்சமணரும் சாக்கியப்பேய்களும் தாழ்சடையோன், சொற்கற்ற சோம்பரும் சூனியவாதரும்” என்று
திருவரங்கத்தமுதனார் அருளிச்செய்திருத்தலுங் காண்க.
பௌத்தர் – வைபாஷிகள் ஸௌத்ராந்திகள் யோகாசாரன் மாத்யமிகன் என நால்வகைப்படுவர்:
இந்நால்வருள் மாத்யமிகனைச் சூனியவாதியென்று முற்கூறியதனால், “பூசற்பவுத்தர்” என்றது. மற்றை மூவரையுங் காட்டும்.
இவர்களுள், வைபாஷிகன் – பரமாணுத்திரளின் வடிவாய்க்கட்புலனாவதே உலகமென்றும், அவ்வுலகத்தைப்பற்றித்
தோன்றும் உணர்வு க்ஷணிகமென்றும், உணர்வுக்குப் புலனாகும் பொருள்களெல்லாம்
ஒரு நொடிப்பொழுதிற்குள்ளே தோற்றக்கேடுகளைப் பெறுமென்றும், எல்லாம் க்ஷணிகமென்று உண்டாகின்ற
விஜ்ஞாநத்தின் தொடர்ச்சியே ஆத்மாவென்றும், இதில் நிலையானதென்ற எண்ணமே ஸம்ஸாரம் நிலையிலதென்ற
எண்ணமே மோஷ மென்றுங் கூறுபவன்;
ஸௌத்ராந்திகன் – பொருள்கள் யாவும் உணர்விலே தங்களுடைய வடிவைப் படைத்துத் தாங்கள் உடனே நசித்துவிட
அவ்வுணர்வினாலுண்டான ஆகாரத்தினாலேயே அவ்வப்பொருள்கள் அநுமாநிக்கப்படுகின்றன வென்றும்,
ஆகவே பொருள்களின் பன்மையே பலவகை ஞானங்கள் தோன்றுவதற்குக் காரணமென்றும்,
அநுமாநத்தினால் உலகம் சித்திக்குமென்றும், அவ்வுலகத்தைக் குறித்த ஞானமும் க்ஷணிகம்,
அந்த க்ஷணிகவிஜ்ஞாநமே ஆத்மா, இதில் ஸ்திரமென்ற புத்தியே ஸம்ஸாரம், அஸ்திரமென்ற
புத்தியே மோக்ஷமென்றுங் கூறுபவன், யோகாசாரன் – ஞானமென்ற ஒன்றேயுள்ளது என்றும்,
அந்த ஞானமே பலவடிவங்களைப் பெற்றுப் பலபண்டங்கள் போலத் தோன்றுகின்றதென்றும்,
அந்த ஞானம் க்ஷணிகமென்று அறிகையே மோக்ஷமென்றுஞ் சொல்லுபவன்.
சைவர் – தன்னை ஈஸ்வரனென்று மயங்கி உலகமெல்லாம் வணங்கவேண்டுமென்று விரும்பி அதற்குத்தகப்
பகவானுடைய கட்டளையைப்பெற்று மோகசாஸ்திரங்களைப் பிரசாரஞ்செய்த ருத்ரனுடைய ஆகமத்தையே முக்கியமாகக் கொண்ட பாசுபதர்.

“ஒன்றுந்தேவு முலகு முயிரும் மற்றும் யாதுமில்லா,
வன்று நான்முக ன்றன்னொடு தேவருலகோ டுயிர் படைத்தான்”
“இலிங்கத்திட்ட புராணத்தீருஞ் சமணருஞ் சாக்கியரும்,
மலிந்துவாதுசெய்வீர்களும் மற்றுநுந் தெய்வமுமாகி நின்றான்,
மலிந்துசெந்நெற்கவரிவீசுந் திருக்குருகூரதனுள், பொலிந்துநின்றபிரான் கண்டீ ரொன்றும் பொய்யில்லை போற்றுமினே” என்றார் நம்மாழ்வாரும்.

நீசத்துவம் – வேதத்துக்குப் புறம்பாயிருத்தலும், காணப்படும் பொருள்களெல்லாங் கணிகமென்பதும் முதலாயின.
பௌத்தர் – புத்தனைத் தெய்வமாகக் கொண்டவர்; சைவர் – சிவனைத் தெய்வமாகக்கொண்டவர்; தத்திதாந்த வடமொழிகள்.
“மன்னுயிர்” என்றாற்போல, “நாசப்படாவுயிர்” என்றார். ஆதிமூலம் – முதற்பொருள்களுக்கெல்லாம் முதற்பொருள்.

இது, நேரசைமுதலாக வந்த கட்டளைக்கலித்துறை.

———-

அரும்புண்ட ரீகத்து அடி இணைக்கே நெஞ்சு
இரும்பு உண்ட நீர் ஆவது என்றோ விரும்பி
அறம் திருந்தும் கோயில் அரங்கா உனை நான்
மறந்திருந்தும் மேல் பிறவாமல் –95-

(இ – ள்.) விரும்பி அறம் திருந்தும் கோயில் அரங்கா – எல்லாத்தருமங்களுந் திருத்தமாகச்செய்யப்படுகின்ற
திருவரங்கம் பெரியகோயிலில் திருவுள்ளமுகந்து எழுந்தருளியிருப்பவனே! –
உனை – உன்னை,
நான் -, மறந்திருந்தும் – மறந்திருந்தாலும்,
மேல் பிறவாமல் – இனிப் பிறவியெடாதபடி,
அரும் புண்டரீகத்து அடி இணைக்கு – பெறுதற்கரிய தாமரைமலர் போன்ற (உன்னுடைய) உபய திருவடிகளுக்கு,
என் நெஞ்சம் – எனதுமனம்,
இரும்பு உண்ட நீராவது – (பழுக்கக்காய்ச்சிய) இரும்பு உட்கொண்ட நீர் போல மீண்டுவாராமல் லயமடைவது,
என்றோ – எந்நாளோ? (எ – று.)

இனிப் பிறவியுண்டாகாதவாறு, பழுக்கக்காய்ந்த இரும்பில் நீர் சென்று லயிப்பதுபோல என்நெஞ்சம் உனது
திருவடித் தாமரைகளில் லயிப்பது எந்நாளோ? என்று எம்பெருமானது திருவடிகளில்
தமது மனம் பதியுங்காலத்தை வேண்டுகின்றனரென்க. பழுக்கக்காய்ச்சிய இரும்பில் நீரைவார்த்தால் அந்நீர்
அவ்விரும்பிற்சென்று வயப்பட்டு மீண்டும் வெளிப்படாது; இது மீளாமைக்கு உவமை கூறப்படுதலை,
“இரும்புண்டநீர் மீன்கினு மென்னுழையிற், கரும்புண்டசொன்மீள்கிலன்காணுதியால்” என்ற கம்பராமாயணச் செய்யுளிலுங் காண்க.
“நெடுவேங்கடத்தா, னீர விரும்புண்டரீகப்பொற் பாதங்க ளென்னுயிரைத்,
தீர விரும்புண்ட நீராக்குமா றுள்ளஞ் சேர்ந்தனவே” என்பர் திருவேங்கடத்தந்தாதியிலும்.
“தீர விரும்புண்ட நீரது போல வென்னாருயிரை யாரப்பருக வெனக் காராவமு தானாயே,”
“இரும்பனன்றுண்டநீர்போ லெம்பெருமானுக்கு என்ற, னரும்பெறலன்பு புக்கிட்டடிமைபூண்டுய்ந்துபோனேன்” என்பன பெரியோர் பாசுரங்கள்.

நாளென்னும்வாய்பாட்டால் முடிந்த இருவிகற்பநேரிசைவெண்பா.

—————

பிறவி எனும் கடல் அழுந்தி பிணி பசியோடு இந்திரியச்
சுறவம் நுங்க கொடு வினையின் சுழல் அகப்பட்டு உழல்வேனோ
அறம் உடையாய் என் அப்பா அரங்கா என் ஆர் உயிருக்கு
உறவு உடையாய் அடியேனை உயக் கொல்வதுய் ஒரு நாளோ –96-

(இ – ள்.) அறம் உடையாய் – எல்லாத் தருமங்களையு முடையவனே!
என் அப்பா – எனது சுவாமியே! அரங்கா -!
என் ஆருயிருக்கு – எனது அரிய ஆத்துமாவுக்கு,
உறவு உடையாய் – உறவினனானவனே! –
பிறவி எனும் கடல் – பிறப்பென்கிற பெரிய கடலில்,
அழுந்தி – மூழ்கி,
பிணி பசியோடு இந்திரியம் – நோயும் பசியும் பஞ்சேந்திரியங்களுமாகிய,
சுறவம் – சுறாமீன்கள்,
நுங்க – விழுங்கும்படி,
கொடு வினையின் சுழல் – கொடிய இருவினைகளாகிய நீர்ச்சுழியில்,
அகப்பட்டு – உட்பட்டுச் சிக்கிக்கொண்டு,
உழல்வேனோ – சுழலக்கடவேனோ? அடியேனை -,
உய கொள்வது – உஜ்ஜீவிக்கும்படி ஆட்கொள்வதாகிய,
ஒரு நாளே – ஒருதினமும் (உளதாகுமோ) ? (எ – று.)

கரைகாணவொண்ணாதிருத்தலால் பிறவியைக் கடலாகவும், கடலில் வீழ்ந்தவரைச் சுறாமீன்கள் கொத்தித் தின்பது
போலப் பிணி பசி முதலியவை பிறவியிலுழல்கின்ற ஆத்மாவை வருத்துதலால் அப்பிணி பசி
முதலிய வற்றைச் சுறாமீன்களாகவும், சுழலிலகப்பட்டவர் அச்சுழலினின்று தப்புதலரிதாவதுபோல
இருவினையி லகப்பட்டவன் அதனினின்று மீளுத லரிதாதலால் இருவினைகளைச் சுழலாகவும் உருவகஞ்செய்தனர்; உருவகவணி.
இதனால், திருமாலாகிய தோணியொன்றே, பிறவிக்கடலினின்று மீண்டு கரையேறுதற்கு ஏற்ற உபாயமா மென்றவாறு.

“ஸம்ஸாரார்ணவ மக்நாநாம் விஷயாக்ராந்த சேதஸாம் – விஷ்ணு போதம்விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம்,”
“துன்பக்கடல் புக்கு வைகுந்தனென்பதோர் தோணி பெறா துழல்கின்றான்” என்பன காண்க.
“சென்மந் தரங்கங் கருமஞ் சுழிபிணி சேலினங்கு, சென் மந்த ரங்கதிர் பொன்கோள்கண் மாரி திண்கூற்றசனி,
சென்மந்த ரங்கவற்றுள் விழுவோர் கரைசேர்க்கும் வங்கஞ், சென்மந் தரங் கவின் றோளா ரரங்கர் திருப்பதமே” என்பர்
திருவரங்கத்தந்தாதியிலும்.
“ஒன்று சொல்லி யொருத்தனில் நிற்கிலாத லோரைவர்வன்கயவரை,
யென்று யான் வெல்கிற்ப னுன் றிருவருளில்லையேல்” என்றார் நம்மாழ்வார்.

இது, எல்லாச்சீரும் காய்ச்சீர்களாகிய கொச்சகக்கலிப்பா.

—————–

ஒரு பொருள் அல்லேன் இரு வினை உடையேன் உனது தொண்டு எனும் துறை குளித்து உன்
பெருகு தணணளியின் பாசம் தொட்டு இழிந்து பெரியது ஓர் முத்தி யான் பெற்றேன்
திருவும் மா மணியும் சங்கமும் ஏந்தி செய்ய தாமரை பல பூத்து
கரு நிறம் உடைத்தாய் நதி பொரு தரங்கம் கலந்தது ஓர் கருணை வாரிதியே –97-

(இ – ள்.) திருவும் – ஸ்ரீமகாலக்ஷ்மியையும் (நிதிகளையும்),
மா மணியும் – அழகிய கௌஸ்துபரத்தினத்தையும் (பெரிய ரத்தினங்களையும்),
சங்கமும் – பாஞ்சசன்னியத்தையும் (சங்குகளையும்),
ஏந்தி – தரித்து,
செய்ய தாமரை பல பூத்து – சிவந்த பல தாமரைமலர்போன்ற திருவவயவங்கள் விளங்கப்பெற்று (பலசெந்தாமரைமலர் பூக்கப்பெற்று),
கருநிறம் உடைத்தாய் – கறுத்தநிறத்தையுடையதாய்,
தரங்கம் பொரு நதி கலந்தது – அலைமோதுகின்ற காவேரியாற்றினிடஞ் சேர்ந்ததாகிய (அலைமோதுகின்ற நதிகள் சேரப்பெற்றதாகிய),
ஓர் – ஒப்பற்ற,
கருணை வாரிதியே – அருட்கடலே! –
ஒரு பொருள் அல்லேன் – ஒருபொருளாக மதிக்கப்படாதவனும் (செல்வஞ் சிறிதுமில்லாதவனும்),
இருவினை உடையேன் – (நல்வினை தீவினையென்னும்) இரண்டுவினைகளையு முடையவனும் (மிக்க முயற்சியையுடையேனும்) ஆகிய, யான் -,
உனது -, தொண்டு எனும் – கைங்கரியமாகிய,
துறை – வழியில் (இறங்குமிடத்தில்),
குளித்து – பிரவேசித்து (மூழ்கி),
உன் – உனது,
பெருகு தண் அளியின் – மிக்க குளிர்ந்த திருவருளாகிய,
பாசம் – கயிற்றை,
தொட்டு – பிடித்துக்கொண்டு,
இழிந்து – இறங்கி,
பெரியது ஓர் முத்தி – பெரியதொரு பரமபதத்தை (பெரியதோர் முத்து – சிறந்ததொரு முத்தை), பெற்றேன் -; (எ – று.)

ஒன்றுக்கும் பற்றாதவனாய் இருவினைகளையுமுடைய யான் உனக்கு அடிமை பூண்டு உனது தண்ணளியையே பற்றாசாகக்
கொண்டு முத்தியைப் பெற்றே னென்பதாம். இதில், நிதிகளையும் இரத்தினங்களையும் சங்கத்தையுமுடையதாய்ப்
பலதாமரைமலர்கள் மலரப்பெற்றுநதிகள் வந்துசேர்தற்கு இடமாகிய கடலிலே, வறியவனாகிய யான்பெருமுயற்சியோடு
பெருங்கயிற்றைப் பற்றிக்கொண்டு முத்துக்குளிக்குந் துறையில் இறங்கிக் குளித்து முத்துக்களைப் பெற்றே னென்ற
ஒருபொருளும் தொனிக்கின்றது. சருங்கச்சொல்லலணி; இதற்கு உருவகவணி அங்கமாய் நின்றது.

இருவினையுடையேனென்பதற்கு – பிறத்தலு மிறத்தலுமாகிய இரண்டு தொழில்களையு முடையே னென்றுமாம்.
முத்தி – முத்தென ஈறுதிரிந்தது; பக்தி – பத்து, ஸந்தி – சந்து என்றாற்போல, வாரிதி – நீர்தங்குமிடம்.
நீர் நிரம்பிய கடல்போலக் கிருபை நிறைந்தவ ரென்றற்குக் கருணைவாரிதியே யென்றார்.
பெற்றேன் என இறந்தகாலத்தாற் கூறியது, துணிவுபற்றிய காலவழுவமைதி.

இதற்குச் செய்யுளிலக்கணம், 38 – ஆங் கவியிற் கூறப்பட்டது.

——————

வாரி அரங்கம் வரு திருப் பாவைக்கும் மண் மகட்கும்
சீரியர் அம் கண் வளர் திருக் கோலமும் தென் திருக் காவேரி அரங்க
விமானமும் கோயிலும் மேவித் தொழார்
பூரியர் அங்கு அவர் கண் இரண்டாவன புண் இரண்டே –98-

(இ – ள்.) வாரிஅரங்கம்வரு – திருப்பாற்கடலினிடத்தினின்றுந் தோன்றிய,
திருப்பாவைக்கும் – திருமகளுக்கும்,
(வாரி அரங்கம் வரு) – கடலாற் சூழப்பட்ட –
மண்மகட்கும் – நிலமகளுக்கும்,
சீரியர் – சிறந்த கணவராகிய நம்பெருமாள்,
அம் கண் வளர் – அழகாகத் திருக்கண்வளர்ந்தருளுகின்ற,
திரு கோலமும் – திருக்கோலத்தையும்,
தென் திரு காவேரி – அழகிய திருக்காவேரியின் மத்தியிலுள்ள,
அரங்க விமானமும் – ஸ்ரீரங்கவிமானத்தையும்,
கோயிலும் – பெரியகோயிலையும்,
மேவி தொழார் – விரும்பி வணங்காதவர்கள், –
பூரியர் – கீழ்மக்களாவர்;
அங்கு அவர் கண் இரண்டு ஆவன – அத்தன்மையையுடைய அவர்களது இரண்டு கண்களும்,
புண் இரண்டே – இரண்டு புண்களேயாகும் (கண்களல்லவாம்); (எ – று.)

உரைமெழுக்கிற் பொன்போல ஆத்துமாக்கள் மூலப்ரக்ருதியிலே ஒட்டிக்கொண்டு இறகொடிந்த பட்சிபோலே
கரணகளேபரங்களின்றி நலிவுபடுவதைக் கண்டு எம்பெருமான் ஒருகருணை கொண்டு இவர்கட்குக்
கண் கை கால் முதலிய உறுப்புக்களைத் தந்து தன்னையறிந்து கரைமரஞ்சேரும் படி சாஸ்திரங்களையும் அளித்தனனாதலால்,
அவ்வாறுதந்த பயனைப் பெறாதவர்களது கண்கள் கண்களல்ல, புண்ணாகு மென்பதாம்;
“பூணாரமார்பனைப் புள்ளூரும் பொன்மலையைக்,
காணாதார்கண்ணென்றுங்கண்ணல்லகண்டாமே” என்றார் திருமங்கையாழ்வாரும். கண்ணைக்கூறியது,
மற்றைய உறுப்புக்கட்கும் உபலக்ஷணம்.
இச்செய்யுளில், திரிபு என்னுஞ் சொல்லணி காண்க. கண்படைத்தபயன் பெறாததனால்,
“கண்ணிரண்டாவன புண்ணிரண்டே” என்றார்.
இதனை “கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு, புண்ணுடையர் கல்லா தவர்” என்பதனோடு ஒப்பிடுக.

வாரி – நீர்; கடலுக்கு இலக்கணை. ‘வாரியரங்கம்வரு’ என்பது, இரட்டுறமொழிதலாய்ப் பொருளுரைத்து
மண்மகளோடுஞ் சேர்க்கப்பட்டது.

இது, நேரசை யாதியான கட்டளைக்கலித்துறை.

————-

புண் ஆர் உடல் பிறவி போதும் எனக்கும் உனக்கும்
எண்ணாது இருந்தது இனிப் போதும் கண்ணா
குழற்காளாய் தென் அரங்கக் கோயிலாய் நின் பொற்
கழற்கு ஆளாய் நின்றேனைக் கா –99-

(இ – ள்.) கண்ணா – கிருஷ்ணனே!
குழல் காளாய் – வேய்ங்குழலையுடைய காளைபோன்றவனே!
தென் அரங்கம் கோயிலாய் – தென்திருவரங்கங்கோயிலையுடையவனே! – இனி -,
எனக்கும் -, புண் ஆர் உடல் பிறவி – மாமிசம் நிறைந்த உடம்பையெடுத்துப் பிறக்கும் ஜன்மம்,
போதும் -; உனக்கும் -, எண்ணாது இருந்தது – (என்னை) நினையாமலேயிருந்தது, போதும் -;
(இனியாயினும்), நின் பொன் கழற்கு – உனது அழகிய திருவடிகளுக்கு,
ஆள் ஆய் நின்றேனை – அடிமையாய்நின்ற என்னை,
கா – ரக்ஷித்தருள்; (எ – று.)

எல்லையில்லாத காலமாக உன்னைநினையாமலே பிறந்துபிறந்து இளைத்துப்போனேன்; இது என்மீது பெருங்குற்றமே;
நான் நினைக்குமாறு நிர்ஹேதுகமான திருவருளினாற் செய்யவேண்டியவன் நீயே யாதலால், இத்தனை காலமாக
அடியேனைப்பற்றித் திருவுள்ளத்துக்கொள்ளாமல் வீணேபொழுதுபோக்கியது உனதுகுற்றமே;
இவ்விஷயத்தைக்குறித்து இப்போது தர்க்கித்துக்கொண்டிருத்தலிற் பயனில்லை; உனது திருவருளினால் உன் திருவடித்
தொண்டனாய் நிற்கும் அடியேனை இனியாவது கைந்நழுவவிடாமற் பாதுகாக்கவேண்டு மென்பதாம்;
“அக்கரை யென்னு மனத்தக்கடலுளழுந்தி யுன்பேரருளால்,
இக்கரையேறியிளைத்திருந்தேனை யஞ்சே லென்று கைகவியாய்” என்றார் பெரியாரும்.
காளாய் – காளையென்பதன் விளி. காளை – இளவெருது; உவமாகுபெயர்; உவமை – நடைக்கும், காம்பீரியத்துக்கும், வலிமைக்கும்.

இது, நாளென்னும் வாய்பாட்டான் முடிந்த இருவிகற்பநேரிசை வெண்பா.

——————–

காவிரி வாய்ப் பாம்பு அணை மேல் கரு முகில் போல் கண் வளும் கருணை வள்ளல்
பூ விரியும் துழாய் அரங்கர் பொன் அடியே தஞ்சம் எனப் பொருந்தி வாழ்வார்
யாவரினும் இழி குலத்தோர் ஆனாலும் அவர் கண்டீர் இமையா நாட்டத்
தேவரினும் முனிவரினும் சிவன் அயன் என்று இருவரினும் சீரியோரே –100-

(இ – ள்.) காவிரிவாய் – உபயகாவேரிமத்தியில்,
பாம்பு அணைமேல் – சேஷ சயனத்தில்,
கரு முகில்போல் – காளமேகம்போல,
கண்வளரும் – திருக்கண் வளர்ந்தருளுகின்ற,
கருணை வள்ளல் – திருவருளையுடைய வரையாது கொடுப்பவராகிய,
பூ விரியும் துழாய் அரங்கர் – பொலிவுமிக்க திருத்துழாய்மாலை யையுடைய ரங்கநாதரது,
பொன் அடியே – அழகிய திருவடிகளையே,
தஞ்சம் என – அடைக்கலமாகக் கொண்டு,
பொருந்தி – சரணமடைந்து,
வாழ்வார் – வாழ்பவர்கள், –
யாவரினும் இழி குலத்தோர் ஆனாலும் – எல்லோரினும் தாழ்ந்த குலத்தில் தோன்றியவராயினும்,
அவர் கண்டீர் – அவரன்றோ,
இமையாநாட்டம் தேவரினும் – இமையாத கண்களையுடைய தேவர்களினும்,
முனிவரினும் – முனிவர்களினும்,
சிவன் அயன் என்ற இருவரினும் – சிவனும் பிரமனுமென்கிற இரண்டுபேரினும்,
சீரியோரே – சிறப்பினையுடையோராவர்.

எம்பெருமானது திருவடிகளே தஞ்சமென்ற உறுதியையுடைய சாத்துவிகர்கள் அகங்காரமமகாரங்கள் மண்டி
நிற்கப் பெற்றதேவர் முதலியோரினும் உயர்ந்தவராவரென்றவாறு.

இதற்குச் செய்யுளிலக்கணம், 15 – ஆங் கவியிற் கூறியதே.

————————–

மழை முகில் எனவே பணா முகம் திகழ் விரி யரவணை ஏறி வாழ் அரங்கர் தம்
எழில் பெறும் இரு தாளிலே கலம்பகம் எனும் ஒரு தமிழ் மாலை தான் அணிந்தனன்
குழல் இசை அளி மேவு கூரம் வந்தருள் குரு பரன் இரு பாத போதடைந்தவன்
அழகிய மணவாள தாசன் என்பவன் அடியவர் அடி சூடி வாழும் அன்பனே –101-

(இ – ள்.) பணா முகம் திகழ் – படங்களோடுகூடிய (ஆயிர) முகங்கள் விளங்குகின்ற,
வரி அரவு அணை – புள்ளிகளையுடைய திருவனந்தாழ்வானாகிய சயனத்தில்,
மழை முகில் என – கார்காலத்து மேகம் போல,
ஏறி வாழ் – பள்ளிகொண்டருளுகின்ற,
அரங்கர்தம் – ரங்கநாதரது,
எழில் பெறும் – அழகு பெற்ற,
இரு தாளிலே – உபயதிருவடிகளிலே,
கலம்பகம் எனும் – கலம்பகமென்கிற,
ஒரு தமிழ்மாலை – தமிழாலாகிய தொரு மாலையை (பிரபந்தத்தை),
அணிந்தனன் – சூடினான்; (யாரென்னின்), –
குழல் இசை அளி மேவு – வேய்ங்குழலினிசைபோலும் பாட்டிசையையுடைய வண்டுகள் விரும்பிமொய்க்கின்ற,
கூரம் – கூரமென்னும்பதியில்,
வந்தருள் – திருவவதரித்த,
குரு பரன் – சிறந்த ஆசாரியராகிய ஆழ்வானது,
இரு பாத போது – உபயதிருவடித்தாமரைகளை,
அடைந்தவன் – அடைந்தவனும்,
அடியவர் அடி சூடி வாழும் – அடியார்களது திருவடிகளை(த் தலைமேல் வைக்கும் மாலையாகக் கொண்டு) சூடிவாழ்கின்ற,
அன்பன் – பக்தனுமாகிய,
அழகிய மணவாள தாசன் என்பவன் – அழகிய மணவாளதாச னென்கிற திவ்வியகவி பிள்ளைப்பெருமாளையங்கார்; (எ – று.)

இது, தன்னைப் பிறன்போலும் பதிகங் கூறியது; வடநூலாரும், சடகோபர் சம்பந்தர் முதலாயினாரும்,
திவாகரரும், பதினெண்கீழ்க்கணக்குச்செய்தாரும் முன்னாகப் பின்னாகத் தாமே பதிகங் கூறுமாறு காண்க.

“குருபரனிருபாதபோதடைந்தவன்” என்பதற்கு – கூரத்தாழ்வானது உபயபாதங்களாகிய பராசரபட்டர் வேதவியாசபட்டர்
என்னும் இரண்டு திருக்குமாரர்களை ஆசிரியராக அடைந்தவ னென்றவாறு; குருபரன் – பரமகுரு, தனதுகுருக்களுக்குக் குரு.

———

திருவரங்கக்கலம்பகம் முற்றிற்று.

—————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே —சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்