இராமானுஜரது திரிதண்டம், பவித்ரம் என்று சொல்லப்படும் பிரதம சீடர்களான முதலியாண்டான், கூரத்தாழ்வான் என்ற இருவரில் முதலில் காண இருப்பது கூரத்தாழ்வான் வைபவம்.ஜீவ காருண்யம், ஆச்சார்ய பக்தி, பகவத் பக்தி, வைராக்யம், பாண்டித்யம், ஸத்கர்மானுஷ்டானம் (நல்ல காரியங்களையே செய்தல்) முதலிய எண்ணிறந்த நற் குணங்களுக்கும் பிறப்பிடமென்ன அமைந்த கூரத்தாழ்வானது திவ்ய சரிதத்தை, தினந்தோறும் அனுசந்திப்பது ஸ்ரீவைஷ்ணவர்களது கடமையாகும்.
கச்சிமாநகருக்கு வடமேற்கிலுள்ள கூரம் என்னும் நகரில் முன்னோர் அனுசந்தித்தபடி கலியுகம் 4180-ம் ஆண்டில் செளம்ய வருஷத்தில் தைமாதம் அஸ்த நட்சத்திரத்தில் வடமான் குலத்தில் இம் மகான் அவதரித்தார். இவரது இயற்பெயர் திருமறுமார்பன் என்பது. இவரது தகப்பனார் அனந்தர். தாயார் பெருந்தேவி நாயகி தேவியார் – ஆண்டாள். பகவத் விஷயத்திலே மிக்க ஊக்கமுடையவரான போதிலும் எம்பெருமானாருக்குத் தாம் சிஷ்யராகையால், அவருக்கு நேர் ஸ்தானத்தில் குருவாக இருந்து உபதேசிக்க விரும்பாமல் ஏனைய முதலிகளுக்கு (சீடர்களுக்கு) உபதேசிக்க, அவர்கள் அதைக்கேட்டு அப்படியே எம்பெருமானார் முன் விண்ணப்பம் செய்வதாக ஒரு நியதி ஏற்பட்டு, முதலிகளுக்கு ‘உயர்வற உயர்நலம்’ உடையவன் என்ற திருவாய்மொழிப் பாசுரம் தொடங்கினவாறே மதியெலாமுள் கலங்கி மயங்கித் தரையில் விழுந்தார்.
பர சமயவாதிகள் பிரஹ்மத்திற்குக் குணமென்பதே கிடையாது. நிர்குணமென்கிறார்களே, ஆழ்வார் முதலடியிலேயே உயர்வற உயர்நலமுடையவன் என்கிறபடி என்னே! என்று சொல்லிக் கொண்டே மோஹித்தவாறு மூர்ச்சித்து விழ முதலிகள் ஓடிச்சென்று இராமானுசரிடம் விவரத்தைக்கூற, அவரும் ஒடிவந்து ‘எத்திறம் உரலினோடு இணைந்திருந்தேங்கிய எளிவே, என்று ஆறு மாதம் மோகித்துக் கிடந்த நம்மாழ்வாரைக் காணப் பெறாத குறைதீர, இன்று கண்ணாரக் காணப் பெற்றோமே என ௨ள்ளமெலாமுருகிக் குரல் தழுத்து ஆழ்வான், ஆழ்வான் எனக்கூவித் தட்டி எழுப்பி உணர்த்தத், தொடங்கும்போதே உயர்வற உயர்நலமுடையவனென்பதே என்று சொல்லிக் கொண்டே எழுந்தார். உருக்கத்திலே நம் ஆழ்வாரைப் போன்றே இருந்தமையால் எம்பெருமானார் ‘ஆழ்வான்’ என்று ஏக வசனமாகத் தட்டி எழுப்பினார். அது முதல் இவருக்கு ஆழ்வான் என்று திருநாமம் வழங்கலாயிற்று. கூரத்தில் பிறந்தமையால் கூரத் தாழ்வான் என்று அழைக்கப்பட்டார்.ஆழ்வானின் வைபவத்தைக் காட்டிலும் அவரது தேவியார் ஆண்டாளின் வைபவம் அளவற்றிருக்கும். சாஸ்திரங்களில் தமக்கு ஏதாவது சந்தேகம் தோன்றினால் தேவியாரைக் கேட்டுத் தெரிந்து கொள்வது வழக்கம் என்று பெரியோர் கூறுவர். கூரம் மா நகரில் பெருஞ்செல்வராக வாழ்ந்த இவர் தம் செல்வத்தினால் பல ஏழைகளையும், சாதுக்களையும் மற்றும் பலரையும் பலவகையால் போஷித்துக் கொண்டு மகா தர்மவானாய் இருந்து வந்தார். நாள் தோறும் பெருமாள் கோயில் (காஞ்சி) திருக்கதவுகள் இரவில் மூடப்பட்ட பின்பே இவரது மாளிகைக் கதவுகள் இரவில் மூடப்படும்.ஒரு நாள் திருவிழாவை முன்னிட்டு கோயில் கதவு மூடுவதற்குத் தாமதமாயிற்று. ஆனால் ஆழ்வார் பணியாட்கள் குறித்த நேரத்தில் அவர் வீட்டுக் கதவை மூடி விட்டனர். அந்த மணியோசையைக் கேட்ட பேரருளாளன் தனக்கு ஆலவட்டக் கைங்கர்யம் செய்யும் திருக்கச்சி நம்பியிடம் நமது இரவுத் திருவாராதனம் முடியு முன்பே கதவுகள் சாத்தப்படுகின்றனவே என்று கேட்க, அவர் கூரத்தாழ்வானது வீட்டுக் கதவுகள் மூடப்பட்டன என்று சொன்னாராம்.அதைக் கேட்ட தேவர்பிரான் ஆழ்வான் செல்வமோ நம்மை இவ்வாறு மயக்கிற்று என்றாராம். இந்த உரையாடலைப் பின்னர் கேட்டறிந்த கூரத்தாழ்வான் தமது அந்திம காலத்துக்கு வேண்டிய சிறிதளவு செல்வத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு பாக்கியை யெல்லாம் ஏழை எளியவர்களுக்கு தானம் செய்து விட்டு இனித் தான் ஒர் நல்லாசிரியரை அடைந்து உய்வு பெற விரும்பி, விசிஷ்டாத்வைத சித்தாந்த ஸ்தாபகரான உடையவர் இராமானுஜ முனிவரைச் சரணடைந்து, பஞ்ச சம்ஸ்காரங்களைப் பிரார்த்தித்துப் பெற்று அவரது திருவடிகளை விட்டு நீங்காமல், சாமான்ய சாஸ்திரங்களையும், அத்யாத்ம சாஸ்திர சம்பிரதாயங்களையும் ஓதியும், ஒதுவித்துக் கொண்டும் வாழ்ந்து வருவாராயினார்-இவ்வாறு இருக்கும் காலத்தில் திருவரங்கப்பெருமாள் அரையர், இராமானுசரைத் திருவரங்கம் அழைத்துச் சென்ற பொழுது,அவரை விட்டகல முடியாத கூரத்தாழ்வானும், அவருடையே பிரதான சீடராய், சகல சாஸ்திர நிபுணர் என்று எல்லோராலும் போற்றப்படுபவராய், அவரோடேயே வாழ்ந்து வந்தாராதலால்,அவர் முன்னர் தம் ஊரிலே தம் அந்திம காலத்துக்காகச் சேமித்து வைத்த சிறு பொருளையும், அவசியமற்றது என்று கருதியதால்,இராமானுசரது அனுமதி பெற்றுக் கூரம் நகருக்கு வந்து அப்பொருளைப் பரம பாகவதர்களுக்கு தானம் செய்து விட்டுத் தமது தேவியாரான ஆண்டாளையும் கூட்டிக் கொண்டு, திருவரங்கத்துக்கு நம்பெருமாள் சந்நிதிக்கு வரும் வழியில், மதுராந்தகம் சமீபத்தில் காட்டு வழியில் தேவியார் பயமாக இருக்கிறதே என்று கூற,மடியில் கனம் இருந்தாலல்லவா வழியில் பயம் வரும். நீ ஏதேனும் விலை மதிப்புள்ள பொருள் வைத்திருக்கிறாயா? என்று கேட்க ஆண்டாளும், தாங்கள் வழக்கமாக உணவு கொள்ளும் பொன் வட்டிலை மட்டும் கொணர்ந்தேன் என்று கூறவே, ஆழ்வானும் அப் பொன் வட்டிலை வாங்கத் தூர எறிந்து விட்டு, மதுராந்தகத்து ஏரி காத்த பெருமாளைத் தொழுது ‘த்வயம்’ விளைந்த இடம் என்று அந்த மகிழ மரத்தைச் சேவித்துப்பின் மறுநாள் தொடங்கி பயண கதியாய், வழியிலுள்ள திருப்பதிகளைச் சேவித்துக் கொண்டு திருவரங்கம் சென்று முன் போலவே உடையவர் பாதத்தில் அத்தாணிச் சேவகராய் வாழ்ந்து வந்தார். பொன் வட்டில் தனை எறிந்த புகழினைப் பெற்றார்.
ஒரு நாள் கோயில் கொத்தி(ஊழியர்கள்)லுள்ள வர்களுக்குத் தலைவராயிருந்த திருவரங்கத்தமுதனார் உடையவரை அணுக),மகா பாபியான என்னைத் திருத்திப் பணி கொள்ளத் தக்க ஒரு சாத்விகரை நியமித்தருள வேண்டும் என்று வேண்டிக் கொள்ள உடையவரும் ஆழ்வானை அக் காரியத்திற்கு நியமித்தார். இவருடைய தாழ்வுகளைப் பாராமல் இவரை அனுகூலராக்க, நம் பக்கலிலே கொண்டு வந்து சேரும் என்று கட்டளையிட, ஆழ்வானும் அவரை ஆறுமாத காலம் உபதேசம் பண்ணி பரிபக்குவராக்கி உடையவரிடம் அழைத்து வர, உடையவரும் அவ்வமுதனாரை, ஆழ்வான் திருவடிகளில் ஆஸ்ரயிப்பித்தார். இந்நன்றியை மொழியைக் கடக்கும் பெரும்புகழான் வஞ்சமுக்குறும்பாங் குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடிய பின் என்று குறிப்பிடுகிறார். தாம் அருளிய இராமானுச நூற்றந்தாதியில். அமுதனார் ஆழ்வானது சீடனாகி வாழ்ந்து வருகிற காலத்திலே, அமுதனாரது தாயார், ஆச்சாரியன் திருவடி யடையவே(இறந்துவிடவே) பத்து நாளும் கடந்த பின் ஏகாஹத்துக்கு (ஈமச்சடங்கின்போது ஆத்மா நற்கதி பெற வேண்டிச் செய்ய வேண்டியஒரு சடங்கு] ஒருவரை அனுப்புமாறு வேண்ட, உடையவரும் ஆழ்வானை நீர் போய் வாரும் என்ன, ஆழ்வானும் சிறிதும் தயங்காமல் சென்றார். அமுதனாரும் ஆச்சாரியார் இங்கனே எழுந்தருளுவதே என்று மிகவும் தாழ்ந்து, ஏஹாக்கரத்திலே அமுதுசெய்யப் பண்ணுவித்து, அபரிமிதமான பொருள்களைச் சமர்ப்பிக்க,ஆழ்வானும் அவற்றை யெல்லாம் அங்கீகரித்து பின் அவற்றைத் தெருவிலே பொன் மழையாக இறைத்து விட்டு காவேரியிலே நீராடி திருமண் காப்பிட்டு உடையவர் முன் வந்து சேவித்து நிற்கவே, உடையவரும் அங்கு இடைத்தது என்ன என்று கேட்கவே, ஆழ்வானும் அவை அனர்த்தமாகையாலே அப்பொழுதே கழிந்து போயின என்று நடந்தவற்றைக் கூறினார். இவ்வாறு பணத்தாசையே யில்லாத ஒருவர் இருக்கிறாரே என்று உடையவரும் மிகவும் ஆனந்தமடைந்தார். அவர் அமுதனார் வீட்டிற்கு ஆழ்வானை அனுப்பியதற்குக் காரணம் நம் பெருமாள் கோயில் திறவுகோல் அமுதனாரது கை வசம் இருந்ததனால் அதை உடையவர் ஒரு உபாயமாகக் கைப்பற்ற எண்ணி, ஆழ்வானிடம் நீர் போய் ஏகாஹத்தில் புசித்து முடிவில் சந்நதித் திறவு கோலைப் பெற்றாலன்றி சர்வம் சம்பூர்ணம் என்று சொல்ல வேண்டாம் என்று நியமித்தனுப்ப ஆழ்வானும் அப்படியே செய்து திறவு கோலை அமுதனாரிடமிருந்து பெற்று வந்து உடையவரிடம் சமர்ப்பித்தார்.
எம்பெருமானார் கோஷ்டியில் உபய வேதாந்த கிரந்த காலட்சேபம் நடக்கையில், ஆத்மாவுக்கு ஞானானந்தங்களும் சேஷத்வமும் நிருபகமாகச் சொல்லப்பட்டது. இவற்றுள் அந்தரங்க நிரூபகம் எது என்ற சர்ச்சை எழ, எம்பெருமானார் இதை ஆச்சார்யார் மூலமாக வெளியிடக்கருதி ஆழ்வானை திருக்கோஷ்டியூர் நம்பியிடம் சென்று அறிந்து வாரும் என்று அனுப்பி விட நம்பியும் ஆறுமாத காலமாக ஆழ்வான் காத்திருந்தும் பதிலனுப்பாததால், தான் உடையவர் பக்கம் போகப் போவதாக ஆழ்வான் சொல்லவே நம்பி அவரை அழைத்து மயர்வற மதிநல மருளப் பெற்ற நம்மாழ்வார்.-அடியேனுள்ளான் என்றருளிச் செய்தபடி கண்டாயே’ என்று மொழிந்தருள, ஆழ்வானும் ‘தந்யோஸ்மி என்றெழுந்தருளினார்.-இதன் கருத்து யாதெனில் அடியேனுள்ளான் என்ற பாசுரம் திருவாய்மொழி (9-8-2)ம்பாட்டு. ஆத்மாவிலுள்ளான் என்று சொல்லாமல், என்னுள்ளான் என்றும் சொல்லாமல், அடியேனுள்ளான் என்று அடிமையை விட்டு ஆத்மாவை நிரூபித்தமை தோற்ற அருளிச் செய்ததாலே, ஆத்மாவுக்கு ஞானானந்தங்களைக் காட்டிலும் சேஷத்வமே மகத்தான நிரூபக மென்றதாயிற்று. அதாவது ஞானத்தை விட சரணாகதியே பிரபத்தியே, சிறந்ததாயிற்று என்பதாகும்.
ஆழ்வான் எந்நாளும். மாதுகரம் (உஞ்ச விருத்தி) பண்ணின பொருளை வைத்தே தேக யாத்திரை (வாழ்வது) நடத்துவது வழக்கம். ஒருநாள் விடாமல் மழை பெய்ததால் வெளியே செல்ல முடியாமல் நாண் மலர், கொண்டு உன் பாதம் நண்ணா நாள் எனக்குப் பட்டினி நாளே என்றபடியே அருளிச்செயல் அனுசந்தானமே தாரகமாகக் கொண்டு வேறு உணவின்றியே கண் வளர்ந்திட, அன்றிரவு பெரிய பெருமாள் அமுது செய்கிற பொழுது திருச்சின்ன ஒலி கேட்ட ஆழ்வானது தேவி ஆண்டாள், உமது பக்தர் பட்டினியா யிருக்க நீர் குலவிக் குலவி அமுது செய்கிறீரே என்று மனத்தளவில் நினைத்ததை உணர்ந்த எம்பெருமான் தனக்குக் கைங்கர்யம் செய்கிற உத்தம நம்பிக்கு அர்ச்சகர் மூலம் தாம் அமுது செய்த அக்கார அடிசிலை ஆழ்வானுக்குக் கொடுக்குமாறு கட்டளையிட கோயில் மரியாதைகளுடன் அவர்கள் கொண்டு வருவதைக் கண்ட ஆழ்வான் பதறி எழுந்து எதிர் கொண்டு தனக்கும் தேவிக்குமாக இரு திரளைகளை எடுத்துக் கொண்டு மிகுதியை அனுப்பி விட்டார். தசரதனது பத்தினியர் புத்திர காமேஷ்டி யாகத்தில் பெற்ற பாயசத்தை உண்டதால் ராம லட்சுமணாதிகள் பிறந்ததைப் போல, இப்பொழுது இவர்க்கும் திரு பராசர பட்டர் திரு வேத வியாச பட்டர் (ஸ்ரீராமப்பிள்ளை] என்ற இரு திருக் குமாரர்கள் .பிறக்க ஏதுவாயின.-சோழ ராஜ சபையில் நேர்ந்த கஷ்டங்களுக்குப் பிறகு திருவரங்கம் திரும்பிய ஆழ்வான், அரங்கனைச் சேவிக்கக் கோயிலுக்குச் சென்ற பொழுது சோழனது காவலர்கள் இராமானுஜரது சம்பந்தம் உள்ளவர்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று தடுத்து விட ஆழ்வான் எல்லோருக்கும் உண்டாகும் ஆத்ம குணம் ஆச்சார்ய சம்பந்தத்துக்கு ஏதுவாக இருந்தது. என்னுடைய ஆத்ம குணம் ஆச்சார்ய சம்பந்தத்தை அறுத்துக் கொள்ள ஏதுவாகி விட்டதே என்று வருந்தி அன்றே கோயில் வாசத்தை விட்டொழித்து திருமாலிருஞ் சோலைக்கு தேவியோடு பயண கதியாய்ப் புறப்பட்டு வழியிலே தங்கள் மனக் கவலையை மறக்குமாறு பகவானது ஸ்வரூப, ரூப குண விபூதிகளை நினைந்து நெஞ்சு கனிந்து ஸ்ரீவைகுண்ட ஸ்தவம், அதிமானுஷ ஸ்தவம் என்ற இரு ஸ்தோத்ரங்களை அருளிச் செய்தார். நூறு ஸ்லோகங்களைக் கொண்ட ஸ்ரீவைகுண்ட ஸ்தவம்.-இவர் அருளிய பஞ்ச ஸ்தவங்களில் முதலானது. இதனை அடுத்த அதிமானுஜ ஸ்தவத்தில், நரசிம்மரது அவதாரங்களைச் சுருக்கமாகவும் இராம கிருஷ்ணாவதாரங்களைப் பெருக்கமாகவும் பேசி அனுபவித்தார். இது வரை உலகில் வெளிவந்த சம்ஸ்கிருத வாங்மயங்களில் இவற்றுக்கு ஈடில்லை என்னும்படி சொல் நோக்கு,பொருள் நோக்கு, தொடை நோக்கு, நடை நோக்கு அமைந்துள்ளது என்று வித்வத் ரஸிக விவேகிகள் (சகல கலா: வல்லுநர்கள்!ஒரு முகமாக விளம்பி யுள்ளனர்.-இவ்வாறு அழகர் கோயிலை அடைந்து, அடி வாரம் தன்னில் அழகர் வடிவழகைப் பற்றி, முடியும் அடியும் படிகலனும் முற்றும் அனுபவித்து அவ்வெம்பெருமான் விஷயமாக 148 ஸ்லோகங்கள் கொண்ட ‘சுந்தரபாஹு ஸ்தவம்’ அருளிச் செய்து திருவரங்க மாநகர் சோழன் கொடுமையிலிருந்து விடுபட்டு எம்பெருமானார் திரும்பி வந்து அவர் திருவடி நிழலில் தாம் வாழ வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு 18 வருட காலம் அங்கு வாழ்ந்து வந்தார்.சோழ மன்னன் மாண்டானென்று கேள்விப்பட்டு ஆழ்வான் அழகர் கோவிலை விட்டு மீண்டும் திருவரங்கம் வந்தார். சோழன் உபத்திரவத்திற்குப் பயந்து திருநாராயண புரத்திலிருந்த எம்பெருமானாரும் சோழன் மடிந்ததை அறிந்து, அங்கிருந்து புறப்பட்டு,கோயிலுக்கு எழுந்தருளி, ஆழ்வானைப் பார்க்க அவர் திருமாளிகைக்கு வர, ஆழ்வானும், உடையவரை எதிர் கொண்டு அவர் காலடியில் விழுந்து கிடக்க, இருவரும் வார்த்தை ஒன்றும் பேச இயலாமல் இருந்த பின் உடையவர் ஆழ்வானிடம் இந்த வைணவ தர்சனத்திற்குக் கண் போன்றவரான உமக்குக் கண் போனதே என்று வருந்திப் பின் அவரையும் அழைத்துக் கொண்டு மடத்திற்குச் சென்றார். ஆழ்வான் தாம் அருளிய மூன்று ஸ்தவங்களையும் படிக்கக் கேட்டு மகிழ்ந்தவராய் அவரைப் பார்த்து நாம் காஞ்சிக்குச் சென்று பேரருளாளரிடம் உமக்குக் கண் பார்வை தருமாறு வேண்டி வருவோம் என்று கூறி காஞ்சியில் வரதராஜ ஸ்தவத்தைப் பேரருளாளர் திரு முன்பு விண்ணப்பஞ் செய்து முடிக்கிற போது உடையவர்,கவனியாதிருக்கும் பொழுது, ஆழ்வான் உடையவர் திரு உள்ளப்படி தனக்குக் கண் வேண்டிக் கொள்ளாமல் நான் பெறும் பேறு நாலூரானும் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். ௮ச் சோழ ராஜனை அடுத்திருந்த நாலூரானுடைய முயற்சியே பெரியநம்பி திருநாடு அலங்கரிப்பதபற்கும் (இறப்பதற்கும்] ஆழ்வான் கண் இழப்பதற்கும் காரணமாகும். அத்தகைய படுபாவியான நாலூரானுக்குக் கொடிய நரகம் நிச்சயம் கிடைக்குமாதலால்,வைணவ குலத்தில் பிறந்த ஒருவன் படுகுழியில் விழலாகாது என்று இரக்கமுற்று, நம்மாலல்லது அவன் உய்வு பெற வழியில்லை என்று அறுதி யிட்டு, பரம துரோகியான அவனுக்கும் நற் கதி வேண்டினார். இச் சிறந்த குணம் ஆழ்வான் ஒருவனுக்கே அசாதாரணமாக அமைந்துள்ளது என்பது மிகத் தெளிவான உண்மையாகும்.-ஆழ்வான் பிரார்த்தித்ததை பேரருளாளன் அங்கீ கரித்ததைக் கேட்ட எம்பெருமானார் பதறி பேரருளாளரான நீர் என் நினைவைத் தலைக்கட்ட வில்லையே என்றும், ஆழ்வானை நோக்கு, ‘நீர் ஸ்வதந்திரராய் என் நினைவைத் தலைக் கட்டாதே உபயோகமற்ற ஒன்றை வேண்டிக் கொண்டீரே என்றும் வெறுத்துரைத்து இனி என் செய்வது என்று மனக்குறைபட்டு நிற்க, அதனை உணர்ந்த பேரருளாளன், ‘இராமானுஜா’ ஆழ்வான். நம்மையும் உம்மையும் காணு மிடத்து உட் கண்ணால் காணக் கடவன்’ என்று வரமருளினார்.அவ்வாறு இருப்பதைச் சோதித்துத் தேர்ந்து தெளிந்த உடையவர் திரு உள்ள முகந்தவராய் ஆழ்வானுடன் மீண்டும் கோயிலுக்கே எழுந்தருளினார். ஒருநாள் ஸ்ரீவைஷ்ணவர்கள் சிலர் ஆழ்வானிடம் மகா பாபியான நாலூரானுக்கு நற்கதி வேண்டிக் கொண்டதற்குக் காரணம் வினவ, அப்படிப்பட்ட பாவிகளுக்கன்றோ இரங்க வேண்டுவது, மீனுக்குத் தண்ணீர் வார்த்துப் பலனென்ன என்றார். இதைக் கேட்டவர்கள் எம்பெருமானாரிடத்தில் கூடக் காணக் கிடைக்காத நற் குணங்கள் ஆழ்வானிடத்தில் அழகாக அமைந்திருப்பதைக் கண்டார்கள்.ஆழ்வானுடைய சிஷ்யர்கள் பலரில் பிள்ளைப் பிள்ளையாழ்வான் என்பவர் நற்குல நற் செல்வத்தால் மேன்மை பெற்ற செருக்கினால், பாகவதர்களிடம் வினயமின்றிக்கே அபசாரப் பட்டுக் கொண்டே யிருந்தார். இவரைத் திருத்திப் பணிக் கொள்ளத் தீர்மானித்த ஆழ்வான், ஒரு புண்ணிய தினத்திலே நீராடின பின்பு, அவரிடம் பிள்ளைப் பிள்ளாய் எல்லாரும் புண்ணிய காலமென்று தானம் வழங்குவார்கள். நீர் நமக்கு ஒரு தானம் வழங்க மாட்டீரோ என்று கேட்க, நான் எதைத் தானம் பண்ணுவது? எல்லாமே சாமியினுடையதே யன்றோ என்று கூறினார். அதற்குப் பதிலாக அவ்வளவு போதாது. மனமொழி, மெய்களால் பாகவத அபசாரப் படாமல் இருக்க வேண்டும் என்று கேட்டு அப்படியே அவரும் வாக்குறுதி செய்தார். பின்பு ஒரு நாள் அவர் மானசீகமாக, ஒரு பாகவதரிடத்தில் அபசாரப் பட நேர்ந்தது. ஆனால் மிகவும் வருந்தியவர் மள,மொழி, மெய்களால், அபசாரப் படாதபடி இப் பொல்லா அழுக்குடம்புடனே இருப்பது அரிதாய் இருக்கிறது என்று வருந்தவே இத்தனை நற்குணம் இவருக்கு உண்டாயிற்றே என்று ஆழ்வானும் மகிழ்ந்து பிள்ளைப் பிள்ளாய், நெஞ்சினால் நினைத்தற்கு அனுதாப முண்டாகிய படியால் எம்பெருமான் பொறுத்தருள்வான். ராஜ தண்டம் நேருமென்ற அச்சத்தினால் சரீர மூலமாக ஒருவரையும் நலியமாட்டீர். ஆன பின்னர் மானஸீகமாகப் பட்ட அபசாரத்தை உமக்குக் கழித்துத் தந்தோம். இனி வாக்கை மாத்திரம் நன்றாகக் குறிக் கொண்டு நல்ல முறையில் வாழக் கடவீர்’ என்று கூறினார்.
எம்பெருமானின் அருளினாலே, ஆழ்வானுக்கு இரண்டு புத்திரர்கள் பிறந்தமையை முன்னரே கண்டோம்.-அக் குழந்தைகளைக் காண வேண்டி உடையவர் ஆழ்வான் திரு மாளிகைக்குச் சென்று தம் சிஷ்யரான எம்பாரை நோக்கிக் குழந்தைகளை எடுத்துக் கொண்டு வருமாறு சொன்னார். அவரும் பிரபந்ந குலக் கொழுந்தான அக் குழந்தைகளை எடுத்து வரும் பொழுது காப்பாக ‘த்வயம்”* மந்திரத்தை அனுசந்தித்து வாழ்த்திக் கொண்டே வந்து குழந்தைகளை எம்பெருமானாருக்குக் காட்டினார். அவரும் மிக மகிழ்ந்து,இக் குழந்தைகளிடம் ‘த்வயம்’ பரிமளிக்கின்றதே, காரணம் என்ன’ என்று கேட்க, எம்பாரும் குழந்தைகளுக்குக் காப்பாகத் ‘த்வயானுசந்தானம்” செய்து கொண்டு வந்தேன்’ என்று சொன்னார். அவ்வாறு எம்பார் காப்பிட்டதற்கு உகந்து எம்பாரிடம் அக் குழந்தைகளை உய்யும் வகையை நாடிச் சென்று முற்பட்டீராதலில் நீரே இவர்கட்கு ஆச்சாரியராகக் கடவீர் என்று நியமித்தார். அதன் படியே அத் திருக் குமாரர்களுக்கு எம்பாரே ஆச்சார்ய கிருத்யங்கள் செய்தருளினாரென்றும், இது பற்றியே எம்பெருமானார், எம்பார், பட்டர்,நஞ்சீயர், நம்பிள்ளை என்றபடி ஆச்சார்ய பரம்பரை வருகிற தென்பது பிரசித்தமாயிருக்கும்.-இவ்வாறிருக்க ஆழ்வானுக்கும் ஆச்சார்ய பரம்பரையில் அனுப் பிரவேசம் (இடம்) உண்டானதே, அது எங்கனம் என்று கேட்டால், ஆழ்வான் தம் திருக் குமாரர்கட்குத் திருவாய்மொழிக்குப் பொருள் கற்பித்து வரும் பொழுது ‘எண்பெருக்கந்நலத் தொண்பொருள் ஈறில, வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே‘ என்ற பாசுரம் வந்தது. அந்த அளவிலே இது திருமந்திர வார்த்தையை விவரிக்கிறதாகையாலே இம் மந்திரத்தின் அர்த்தத்தை ஆச்சாரியரி னிடத்திலேயே கேட்டறிய வேண்டியதாகையால், தான் அவர்களுக்குச் சொல்லாது நிறுத்தி, இதனை உங்கள் ஆச்சாரியரிடம் சென்று கேட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்ல, அதனை விரைவில் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலினால் அவர்கள் உடனே எழுந்து ஆச்சாரியரான எம்பாரிடத்திற்குப் போகப் புறப் பட்டார்கள்.ஆனால் ஆழ்வான் அவர்களைத் தடுத்து நிறுத்தி ‘மின்னின் நிலையில் மன்னுயிராக்கைகள்’ என்றபடி யாக்கை நிலையாமையைத் திரு உள்ளத்தில் கொண்டு அவர்களை அழைத்து இருந்து கேளுங்கள் என்று கூறித் திருமந்திரத்தைச் சொல்லி, இப் பாட்டின் பொருளையும் விவரித்து, இப் பாசுரத்தைத் திருமந்திரத்தின் அர்த்தமாக நினைத்திருங்கள் என்று பணித்தருளினமையால் தம் இரு குமாரர்களுக்கு ஆழ்வானும் ஒரு ஆச்சாரியராக அமைந்தருளினார்.
ஆகவே தான் பட்டர் ஸஹஸ்ரநாம பாஷ்யமருளிச் செய்த பொழுது ஆசார்ய வந்தனம் செய்கிற முதல் ஸ்லோகத்தில் ‘வந்தே கோவிந்த தாதெள என்று எம்பாரையும் திருத் தகப்பனாரையும் தொழுகின்றேன் என்றருளிச் செய்து உபய ஸம்பந்தம் தமக்கு உண்டான வழியைக் காட்டுகிறார்.-பட்டர் சிறுவராக இருந்த காலத்தில் ஒருநாள் தம் தகப்பனாரான ஆழ்வானிடத்தில் திருவாய்மொழி அனுசந்திக்கும் பொழுது
‘உறுமோ பாவியேனுக்கே’ (8.10.3) என்ற பாசுரத்தில் ‘சிறு மா மனிசராய் என்னை ஆண்டாரிங்கே திரியவே! என்றதைக் கேட்டு, சிறுமை பெருமை இரண்டும் ஒரு சேர எவ்வாறு ஒரு பொருளுக்குப் பொருந்தும் என்று பட்டர் வினா எழுப்ப ஆழ்வான் வடிவு சிறுத்து மகிமை பெருத்தவர்களும் மனிதரென்று பார்க்கும் பொழுது சிறுமை தோன்றினாலும், பகவத் பக்தி, ஞானம்,அனுஷ்டானம் முதலிய நற் குணங்களை நோக்கும் அளவில் நித்ய முக்தர்களுக்கு நேர் மேன்மை பெற்று விளங்குகிறவர்கள். அத்தகைய மகா புருஷர்களையே ஆழ்வார் சிறுமாமனிசர் என்று குறிப்பிடுகிறார் என்று விளக்க, பட்டர் அது தகும் என்று இசைவு கொண்டார்.
ஆழ்வானுடைய குடும்ப காரியங்கள் அனைத்தையும் எதிராசரே நிர்வஹித்து (நடத்தி) வந்தார். ஆழ்வானது குமாரர்கள் இருவருக்கும் சகல வித்யைகளையும் புகட்டுவித்த பின் அவர்கள் விவாகத்துக்குரிய பருவத்தை அடைந்த அளவில் ஆண்டாள் ஆழ்வானைப் பார்த்து, இவர்களுக்கு விவாகம் செய்விக்க வேண்டாமோ என்று வினவ, ஆழ்வானும் உடையவரிடம் சென்று இப் புத்திரர்களுக்கு விவாகம் செய்விக்க வேண்டும் என்று சொல்கிறார்களே என்று விண்ணப்பம் செய்ய, அவரும் பெரிய நம்பி உறவினருக்குப் பெண் கொடுக்கும்படி வேண்ட முதலில் மறுத்தவர்கள் பின்னர் பெருமாள் தாமே கனவில் தோன்றி கன்னிகைகளைக் கல்யாணம் செய்து கொடுக்கும்படி கட்டளை யிட அவர்களும் இசைந்து, ஆழ்வான் குமாரர்களுக்கு தங்கள் குமாரத்திகளை கன்னிகா தானம் செய்து கொடுத்துச் சிறப்பாக விவாகமும் நடந்தேறியது. இதனால் ஆழ்வானுடைய குடும்ப கார்ய மனைத்தும் எம்பெருமானார் தலையில் கடந்தது என்பது விளங்கும்.
நம் ஆச்சாரியார்கள் எல்லோரும் சகல சாஸ்திரங்களிலும் வல்லவராக இருந்த போதிலும், ஆழ்வார்களுடைய ஈரச் சொற்களையே கொணடு, சகல சாஸ்த்ரார்த்தங்களையும் அருளிச் செயல்களிலேயே நயிப்பித்து அனுபவிப்பார்கள். இந்த அனுபவம் ஆழ்வானுக்கு அதிகமாகவே இருக்கும். திவ்யப் பிரபந்தங்கவில் பல பாசுரங்களில் ஆழ்வானுடைய நிர்வாகம் அருமையாகக் கொண்டாடப்படும். உதாரணமாக,திருவாய் மொழியில் ஆழ்வார் நாயகி பாவனையிலே பேசுகின்ற பாசுரங்களில் மாசறுசோதி (5:83) என்ற
பாசுரத்தை உபந்யசிக்கும் போது தலையால் வணங்கவுமாங்கொலோ தையலார் முன்பே (5:3:7] என்ற ஈற்றடியின் பொருளை விவரிக்குமளவில் ஆமருவி நிரை மேய்த்தான் நம்பியார் என்ற பெரியவர் எழுந்து தலைவி, தலைவனைத் தலையில் வணங்குவதுண்டோ என்று கேட்க, ஆழ்வான் ஸீதாப் பிராட்டி, சிறிய திருவடியிடத்தில் சந்தேகம் சொல்லி அனுப்பும் பொழுது எனக்காக அவரைத் தலையால் வணங்கு என்று சொன்னது கண்டீரே என்று கூறியதைக் கேட்டு அப்பெரியவர் மகிழ்ச்சியடைந்தார். இதைப்போன்ற பல விஷயங்களைப் பிரபந்த வியாக்யானங்களில் காணலாம்.
திருமாலிருஞ்சோலை யாத்திரையில் அருளிய மூன்று ஸ்தவங்களும் பின்பு எம்பெருமானார் நியமனத்தால் அருளிய வரதராஜஸ்தவமும் பின்னர் அருளிய ஸ்ரீஸ்தவமும் ஆக மொத்தம் ஐந்து ஸ்தவங்களாகும். இவை தவிர வேறு வேறு சில ஸ்தோத்ரங்களும் அருளிச் செய்தார் என்பதை பட்டர் தம் தகப்பனார் அருளிச் செய்ததாகச் சொல்லும் ஸ்தோத்திரங்களிலிருந்தும் தெரிகிறோம். இவை தவிர பட்டரும் ஆழ்வானும் தாங்கள் அருளிச் செய்த நித்ய கிரந்தங்களில் என்று இருக்கக் காண்கையில் ஆழ்வான் நித்யக் கிரந்தம் ஒன்றும் அருளியிருப்பதாக விளங்குகிறது. இவ்விடத்திலேயே ஆழ்வானுடைய சரமஸ்லோக வியாக்யானத்தையும் நாம் குறிப்பிட வேண்டும். ஆனால் சரம ஸ்லோக வியாக்யானம் நமக்குக் கிடைக்கவில்லை.ஆழ்வான் திருநாட்டுக்கு ஏக வரம் பெற்றதைக் கேட்டு வருந்திய உடையவர் முன்னர் தான் தம் ஆச்சாரியார் திருக் கோஷ்டியூர் நம்பியிடம் பட்ட அபசாரத்தால் நமக்கு நரகமே கிட்டும் என்று வருந்தினேன். ஆனால் இப்பொழுது ஆழ்வானோடு சம்பந்தமுடையார் அனைவருக்கும் மேல் வீடு கிட்டும் என்று நம் பெருமாள் நியமித்தபடியால், நமக்கு ஆழ்வானோடு சம்பந்தமுண்டாதலால் ஒரு குறைவுமில்லை என்று களிப்புற்றுத் தம் காஷாயத்தை ஆகாயத்திலே வீசி யெறிந்து மகழ்ச்சிக்குப் போக்கு விட்டதாகவும் சொல்வர்.-ஆனாலும் தனக்குயிரான ஆழ்வானைப் பிரிந்து எங்கனம் உயிர் தரிப்பது என்று திருஉள்ளம் நொந்து ‘இப்படிச் செய்தீரே,எங்களையும் அரங்கனையும் மறந்து மேல்நாடு போகத் தீர்மானித்தது ஏன் என்று கேட்க ஆழ்வானும் உடையவருக்கு முன்னே போய் உடையவரை எதிர் கொண்டழைக்கவே என்று கூற இப்படியும் ஒரு ஆச்சார்ய பக்தி உண்டோ என்று வியந்து ‘உம்முடைய பேற்றுக்கு நாம் விலக்காகலாமோ? சுகமாக நித்யவிபூதி யேற எழுந்தருளுவீர்: என்று சொல்லிச் செவியிலே த்வயத்தை அருளிச் செய்தார். பின்னர் ஆழ்வானது திருமுதுகைத் தடவி அஞ்சலித்து விடை கொடுத்தருளினார்.உடையவரின் நிரூபணம் பெற்ற ஆழ்வான் உடையவரின் திருவடித் தாமரைகளைக் கண்களிலும் மார்பிலும் ஒற்றிக் கொண்டு ஸ்ரீ பாத தீர்த்தம் கொண்டு ‘இனி மடமேறி எழுந்தருள வேண்டும்”என விண்ணப்பம் செய்ய, வடவாற்றங்கரை வழியாக உடையவர் பின்னே செல்ல, இனி நில்லும் எனத் தண்டம் சமர்ப்பித்து மீண்டும் ஆழ்வான் திருமாளிகைக்கு அருகிலிட்ட திருக்காவணத்தின் நடுவே எழுந்தருளி யிருந்து தம் தேவியார் ஆண்டாளைப் பார்த்து என்ன நினைத்திருக்கிறாய் என்று கேட்க, தேவரீர் திரு உள்ளத்தைப்
பின் செல்வதன்றி வேறு நினைவுண்டோ என்று கூறி விட ஆழ்வானும், பட்டரையும் ஸ்ரீராம பிள்ளையையும் அருகிலழைத்து பெருமாளும் நாச்சிமாரும் எழுந்தருளி யிருக்க உங்களுக்கு ஒரு குறையுமில்லை. நம் பெருமாள் பெற்று வளர்த்தார் என்று இறுமாந்திராதே, எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்றிருங்கள்.ஆண்டாளுக்குக் குறைவு வராமல் நடந்து கொள்ளுங்கள். பாகவத அபசாரப்்படாமல் அவர்களை ஆதரித்துப் போங்கள் என்று உபதேசித்து அவர்கள் கண்ணீரைத் துடைத்து நீங்கள் பிராக்ருத சம்பந்தத்தை நினைத்து வருந்தினீர்களானால் உடையவர் திருவடி சம்பந்தத்தைத் தூஷித்தவர் ஆவீர்கள். ஆத்ம ஸம்பந்தத்தை நினைத்து வருந்துவீர்களானால் நம்முடைய ஒழிக்க ஒழியாத உறவை அறிந்திலீர்கள் ஆவீர்கள் என்று அவர்களைத் தேற்றிப் பின் கோயிலுக்கு நேரே, பிள்ளைப் பிள்ளை யாழ்வான் மடியிலே திருமுடியையும்,ஆண்டாள் மடியிலே திருவடிகளையும் வைத்துக் கொண்டு, ஆளவந்தார் திருவடிகளைச் சிந்தை செய்து கொண்டு அன்றே திருநாட்டுக்கு எழுந்தருளினார். பின்னர் எம்பெருமானார் எழுந்தருளித் திருக் குமாரர்களைக் கொண்டு சரம கைங்கர்யங்களைப் பெருக்க நடத்தி யருளினார். மொழியைக் கடக்கும் பெரும் புகழாகிற திருமேனியோடும் அர்ச்சாவதாரத் திருமேனியோடும் இவ் விபூதி எங்கும் நிறைந்து விளங்குகிறாராகையால் நாமும் கண்கள் துஞ்சாதே கண்ணாரக் கண்டு களிக்கும் பாக்யம் பெற்றோம்.
சீராருந் திருப்பதிகள் சிறக்க வந்தோன் வாழியே.
தென்னாங்கர் சீரருளைச் சேருமவன் வாழியே.
பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே.
பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே.
நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே.
நாலூரான் தனக்கு முக்தி நல்கினான் வாழியே.
ஏராருந் தையிலத்துத் திங்குவந்தான் வாழியே.
எழில் கூரத்தாழ்வான் தன் இணையடிகள் வாழியே.
திருவரங்கத்தமுதனார் -அவதாரஸ்தலம் திருவரங்கம். தகப்பனார் அணியரங்கத் தமுதனார். இவரது இதர நாமங்கள் மூங்கில் குடி யமுதனார். இவரது நட்சத்திரம் பங்குனி ஹஸ்தம். இவர் 138 வருஷம் வாழ்ந்திருந்தார் என்பன இவரது வாழ்க்கைக் குறிப்புகள். ஸ்ரீயப்பதியான ஸர்வேஸ்வரனை அடைவதற்கு அடி நிலையாகச் சொல்லப்படுவது ஆச்சார்ய சம்பந்தம். அத்தகைய ஆச்சார்ய சம்பந்தம் பெற்று உய்ந்து போனவர் திருவரங்கத் தமுதனார். இவர் பல கலைகளும் பயின்று கோயிலில் புரோஹிதராய் செல்வாக்குடன் பெரிய கோயில் நம்பி என்னும் பெயருடன் திகழ்ந்து வந்தார். பெரிய கோயிலில் உடையவர் பெரிய பெருமாளால் உபய விபூதிகளும் இஷ்டப்படி உபயோகித்துக் கொள்ளலாம்படி வழங்கப்பட்டமையால் கோயில் காரியங்களை உடையவர் ஆராய்ந்து வரலானார். அக் காலத்தில் பெரிய கோயில் நம்பி ரஜோ குணம் மிக்கவராய் உடையவருக்குக் கீழ்ப்படியாமல் கோயில் நிர்வாஹத்திற்கு இடையூறுகள் பல செய்து வந்தார். அதனால் உடையவர் மனம் உடைந்து பெரிய கோயில் நம்பியைக் கோயிலின்றும் வெளியேற்றத் திருஉள்ளம் கொண்டிருந்தார். ஒரு நாள் பெருமாள் புறப்பாட்டிற்காகக் காத்திருக்கும் பொழுது, உடையவர் கனவிலே பெருமாள் முதிய வேதியனாகத் தோன்றி, பெரிய கோயில் நம்பி வெகு நாட்களாக நம்மையே நம்பி இருக்கிறார். பிறகு தேவரீர் திரு உள்ளம் என்று கூறி மறைந்தார். உடையவர் தான் கண்ட கனவினைக் கூரத்தாழ்வானிடம் சொல்லி நம் திறத்துப் பகைமை பாராட்டும் பெரிய கோயில் நம்பியை வெளியேற்றலாகாது. இங்கேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்பது பெருமாள் திரு உள்ளம் போலும்.-நம்மால் அவனோடு நிர்வாகம் நடத்த இயலாது. ஆகையால் நாம் பெருமாள் கோவிலுக்கே போய் விடுவோம் என்று கூறினார்.-அதைக் கேட்டு ஆழ்வான் இவ் விதம் அருளிச்செய்த பெருமாளுக்குப், பெரிய கோயில் நம்பியைத் திருத்திப் பணி கொள்ள வேண்டும் என்பது தான் திருஉள்ளமாக இருக்க வேண்டும் என்று கூறினார். உடையவர் அவ்வாறாயின் நீரே அவரைத் திருத்தும் என்று கூறினார். ஆச்சாரியன் கட்டளையைத் தலைமேற் கொண்டு, ஆழ்வானும் புலமை வாய்ந்த பெரிய கோயில் பெரிய நம்பியை மெல்ல மெல்லச் சீர்திருத்தினார். திருத்தப்பட்ட நம்பியை ஆழ்வான் உடையவர் திருவடிகளிலே பொருத்தமுறச் சேரவிட்டார்.-நம்பியை உடையவர் அகமகிழ்ந்து முகமலர்ந்து ஏற்றுக் கொண்டார்.-பெரிய கோயில் நம்பி ஆத்ம ஹித சிந்தனையில் தம்மிலும்
மேம் பட்டவராய் விளங்கனமையால், ஆழ்வான் திருவடிகளையே அவர் குருவாகப் பற்றும்படி செய்தருளினார் உடையவர். அரங்கனுக்குச் சேஷப்பட்டு அவன் செய்ய தானிணைகள் பேர்வின்றிஇருந்தாலும், தொண்டு பட்டவர் பால் சார்வின்றி நின்றதாகத் தம்மைப் பற்றி (இராமானுஜ நூற்றந்தாதி (80)) இவர் கூறிக் கொள்வதால் இவர் அரங்கனுக்குச் சேஷப்பட்டவராய் பணிவிடை புரிந்துகொண்டிருந்தாலும், எம்பெருமானார் அடியார்கள் விஷயத்தில் அனுகூலராய் இல்லாமலிருந்தமை புலனாகிறது.
அன்பார்ந்த இன்பம் ததும்பும்படி யமைந்த பெரிய கோயில் நம்பியின் சொல்லின் இனிமையை நுகர்ந்த உடையவர் இவருக்கு-அமுதன்’ என்று திருநாமம் சூட்டினார். அதிலிருந்து இவருக்குத் திருவரங்கத்தமுதனார் என்ற பெயர் வழங்கலாயிற்று. நம்மாசாரியர்கள், இவரிடத்திலுள்ள நம் மதிப்புத் தோன்ற ‘பிள்ளை அமுதனார்! என்று இவரைக் குறிப்பிடுவார்கள். ஈட்டிலும் பெரிய ஜீயர் மணவாள மாமுனி இராமானுஜ நூற்றந்தாதிக்கு இயற்றிய உரையிலும், ஸ்ரீவசன பூஷணத்திற்கு அவரருளிய வியாக்யானத்திலும்(சூத்திரம் 416) பிள்ளை யமுதானாரென்று தான் வழங்கப்பட்டுள்ளது.-சில நாட்களுக்குப் பின்னர் அமுதனார் தாயாருக்குச் சரம கைங்கர்யம் செய்ய நேர்ந்தது. ஏகாதிஹ்த்திற்கு ஆள் வேண்டி உடையவரிடம் விண்ணப்பித்துக் கொண்டார். பூரியரோடுள்ள சுற்றம் புலத்திக் கொண்டவராதலால், மற்றெவருமே துணிந்து ஏற்காத இப் பணியை உடையவர் கட்டளைப்படி ஆழ்வான் துணிந்து ஏற்றுக் கொண்டார். ஆழ்வான் அமுது செய்து திருப்தி கூறும் காலத்தில் அமுதனாருடைய கோயில் புரோகிதத்தையும், புராண படநதையும்தானம் செய்யச் சொல்லி அவற்றைப் பெற்று உடையவரிடம் ஒப்படைத்தார். உடையவர் நியமனத்தினால் கோயிற் புரோகிதமும்,புராண படநமும் ஆழ்வானாலே நிர்வஹிக்கப்பட்டு வந்தன.
உடையவர் கோயிற் பணியை ஆழ்வானுக்குத் தானமாக வழங்கி விட்டபடியால், கோயிலிலே ஒட்டற்றிருந்தார் அமுதனார். இந்நிலையினை நோக்கிய, உடையவர் வித்வானான அமுதனார் இப்படி ஓய்ந்திருக்கலாகாது என்று எண்ணி, பிள்ளை திருவரங்கப்பெருமாள் அரையர் திருமாளிகைக்கு எழுந்தருளி, இயற்பா, ஸ்ரீகோசத்தை தானமாகக் கேட்டு வாங்கி இன்று முதல் ஸந்நிதியில் இயற்பாவை நீங்கள் சேவிக்க வேண்டாம் என்று கூறி, அதனை அமுதனாரிடம் கொடுத்து, ஒர்உரு இயற்பாவினைச் சாதித்து, இயற்பா ஆயிரமும் ஸந்நிதியில் சேவிக்கும் அந் நாட்களிலே அரையருக்கு நடப்பவைகளான மரியாதைகளனைத்தையும் நடத்தும்படி ஏற்பாடு செய்தார். நாச்சியார் ஸந்நிதி முதலிய இடங்களிலும், அமுதனார் இயற்பாவை தொடங்க,ஸ்ரீவைஷ்ணவர்கள் தொடர்ந்து அனுசந்திக்கும்படி நியமித்தருவினார். திவ்யப் பிரபந்தங்களிலே இயற்பா நீங்கலாக மற்ற இசைப் பாக்கள் அனைத்தும் அரையராலேயே அனுசந்திக்கப் படுகின்றன. இவ்வாறு உடையவர் திட்டம் செய்த சில நாட்களுக்குப் பிறகு
அமுதனார் எம்பெருமானார் விஷயமாக, காயத்ரியை உரு எண்ணும் கணக்கில் நூற்றெட்டுக் கட்டளைக் கலித்துறையில் அமைந்த அந்தாதி நூலை அருளிச் செய்து பெருமாளிடம் விண்ணப்பம் செய்தார். பெருமான் ஒரு ஸப்தாபரணத் திருநாளிலே, உடையவரை நம்முடன் கூட, வர வேண்டாம் என்று நியமித்து திரு வீதி யிலே சகல வாத்யங்களையும் நிறுத்தி, ஸ்ரீ வைஷ்ணவர்கள் இதை அனுசந்திக்கக் கேட்டு போர உகந்தருளினார். அதுமுதல் பெருமாள் நியமனத்தாலே பெரிய ஸந்நிதியில் இயற்பா அனுசந்தித்தவுடனே நூற்றந்தாதியைப் பெருமாள் வரிசையுடன் கேட்டருள்கிறார். நாச்சியார் சன்னிதியிலும் அப்படியே பெருமாள் திருஉள்ளத்தை அனுசரித்து எம்பெருமானார் முதலாயிரத்திலே கண்ணி நுண் சிறுத்தாம்பினைப்போல இயற்பாவின்
இறுதியில் இராமானுஜ நூற்றந்தாதியையும் சேர்த்து ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனைவரும், இந்த நூற்றந்தாதியை பிரபந்ந காயத்ரியாக நாடோறும் அனுசந்திக்க வேண்டுமென்று கட்டளையிட்டருளினார்.-இந்த இராமானுஜ நூற்றந்தாதி ஆச்சார்ய அபிமான நிஷ்டர்களுக்கு அறிய வேண்டிய விஷயங்கள் அனைத்தையும் விரிவாகவிளக்கிக் காட்டுகிறது. ஆச்சார்ய அபிமான நிஷ்டன் பகவானை அறவே விட்டவனாக மாட்டான். ஆசார்ய வழிபாட்டிலேயே, எம்பெருமானும் வழிபட்டவனாகி விடுகிறான் என்னும் உண்மையைப் பிரபந்தத்தைக் கொண்டு அறுதியிட்டு எம்பெருமானாரையே வழிபடுவார்களாயினர் முன்னோர்கள். இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்: (106) என்னும் பாசுரம் இவ்வுண்மையை உணர்த்தும்.நம்மாழ்வாருக்கு மதுரகவிகள்போல எம்பெருமானாருக்கு அமுத னார் அமைந்துள்ளார். இருவரும் ஆச்சார்யன் திறத்துத் தங்கள் நிலையை விளக்கியும் பிறருக்கு உபதேசித்தும் உய்வுறுத்தும் பொருள்களை உலகற்கு வெளியிட்டு உதவுகின்றனர். ஆயினும் மதுரகவிகளைப் போலச் சுருங்கக் கூறாது, அமுதனார் பரக்கக் கூறிப் பரமோபகாரம் புரிவதை நன்குணர்ந்து நாம் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.-இங்கனம் அறிவில் முதிர்ந்தோர்களால், முக்கிய பிரமாணமாக ஏற்கப்பட்ட இப்பிரபந்தத்தை வைணவர்களனைவரும் பிரபந்நகாயத்ரியாக நாடோறும் அனுசந்திக்க வேண்டுமென்று உடையவர் இட்ட கட்டளைக்கு ஏற்பவும் அவரது மறு அவதாரமான மணவாள மாமுனிகள் உபதேசித்ததற் கேற்பவும் இந்த இராமானுஜ நூற்றந்தாதியை ஒதி ௨ய்வுறுவோமாக.
நயந்தரு பேரின்பமெல்லாம் பழுதென்று நண்ணிதைபால்
சுயந்தரு கீர்த்தி இராமானுச முனி தாளிணைமேல் உயர்ந்த குணத்தத் திருவரங்கத்தமுது ங்கும் அன்பால் இயம்பும் கலித்துறை யந்தாதி ஓத இசை நெஞ்சமே.
எந்தாதை கூரேசர் இணையடியோன் வாழியே.
எழில் மூங்கிற்குடிவிளங்க இங்கு வந்தோன் வாழியே.
நந்தாமல் எதிராசர் நலம் புகழ்வோன் வாழியே.
நன்மதுர கவிநிலையை நண்ணினோன் வாழியே.
பைந்தாம அரங்கன் பதம் பற்றினான் வாழியே.
பங்குனியில் அத்தநாள் பாருதித்தான் வாழியே.
அந்தாதி நூற்றெட்டும் அருளினான் வாழியே. அணியரங்கத்தமுதனார் அடியிணைகள் வாழியே.
உடையவர் மேல்நாட்டிலே சைவர்கள் மிகுந்திருந்த கோவையூரிலே ஒரு புஷ்கரணியிலே நீரெடுக்கும் துறையிலே முதலியாண்டானைத் திருவடி விளக்கி வரச்செய்தார். அந்த ஸ்ரீபாத தீர்த்தப் பிரபாவத்தாலே அவ்வூரார் அனைவரும் எம்பெருமானை ஆஸ்ரயித்தனர். அவ்வூருக்கு ஸ்ரீ சாளக்கிராமம் என்று திருநாமம் வழங்கினார். அங்கிருந்துதான் வடுகநம்பிக்கு தர்ஸநார்த்தங்களை அருளிச்செய்தார். வடுநம்பியின் தகப்பனார் பெயர் ஸாலக்ராம ஐயன். பிறந்த நட்சத்திரம் ஸர்வ ஜீத் வருஷம் மாசிப் புனர்பூசம். திருநாமங்கள் ஸாலக்ராம ஐயன். வடுக நம்பி பஞ்சமோபாய சம்பந்தர் முதலியன. இவர் 895 வருடம் வாழ்ந்திருந்தார். இவர் பரமஏகாந்தியாய் ஆச்சார்ய அபிமான நிஷ்டராகையாலே இவருக்கு
இருப்பிடம் எம்பெருமானார் சந்நிதியே. வடுகநம்பி எம்பெருமானார் திருவடிகளே உபாயோபேயம் என்று விஸ்வசித்து அவர் திருவடிநிலைகளையே திருவாராதனம்
பண்ணிப் போகுவார்.-இவ்வாறிருக்கையில் ஒரு நாள் உடையவர்
திருவாராதனத்தையும், தன்னுடைய திருவாராதனத்தையும் (வணங்கும் கடவுள்) சேர எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வர உடையவர் கண்டு, ‘வடுகா இது என் செய்தாய் என்ன?” இவரும் உங்கள் தேவரில் எங்கள் தேவருக்கு வந்த குறையென்’ என்றார்.-வடுகநம்பி உடையவருடன் பெருமாளைச் சேவிக்கப் போனாலும், உடையவர் விக்கிரகத்தையே சேவித்துக் கொண்டு போவார். ஒரு நாள் எம்பெருமானார் பெரிய பெருமாள் திருக்கண்ணழகைப் பாராய் என்ன இவரும் உடையவர் திருக்கண்ணழகையும் பெரிய பெருமாள் கண்ணழகையும் பார்த்து என்னமுதினைக் கண்ட கண்கள், மற்றொன்றினைக் காணாவே என்ன உடையவரும் இதொன்றிருந்தபடி என், என உகந்து பூரண கடாட்சம் செய்தருளினார்.-வடுகநம்பி எம்பெருமானார் அமுது செய்தருளி பிரஸாதம் ஸாதித்தால், இரண்டு கைகளாலும் ஏற்றுக்கொண்டு ஸ்வீகாரம் பண்ணித் தம் திருமுடிமிலே கைகளைத் தடவிக்கொள்வார். இதைக் கண்டு உடையவர் மிகவும் கோபித்து வடுகா கையைக் கழுவிக்கொள் என்ன கழுவிக் கொண்டு மற்ற நாள் நம்பெருமாள் பிரஸாதத்தை உடையவர் தாமும் ஸ்வீகரித்து இவருக்கும் பிரஸாதிக்க வாங்கி ஸ்வீகரித்து கைகழுவிக் கொண்டார்உடையவர் இதைப் பார்த்து என் செய்தாய் என்ன வடுக நம்பி நேற்று அருளிச்செய்தபடி செய்தேன் என்றார். இதைக்கேட்ட உடையவர் வடுகா உமக்குத் தோற்றோம் என்றார். மற்றொரு நாள் வடுகநம்பி உடையவருக்குப் பால் காய்ச்சும் பொழுது, பெருமாள் பெரிய திருநாளில் உடுத்து முடித்துப் பூண்டு புறப்பட்டுவர உடையவரும் நம்பியைத் தம்மோடு பெருமாளை சேவிக்க வருமாறு அழைத்தார். வடுகநம்பியும் உம்முடைய பெருமாளைச் சேவிக்க வந்தால் என் பெருமாளது பாலமுது பொங்கப்போகும், வரக்கூடாது என்று கூறினார். வடுக நம்பியகத்தே, பூர்வ சம்பந்திகளாயிருப்பவர்கள் வந்து தங்கிப்போக, அகத்தையெல்லாம் சுத்தி பண்ணி, உபயோகித்த பாத்திர பண்டங்களையும் தூர எறிந்துவிட்டுப் பிராயச்சித்தமாக ஸ்ரீ வைஷ்ணவனான முதலியாண்டான் புழக்கடையில் கழித்துக் இடந்த பாத்திரங்களைக் கொண்டு போய் ஒரு பக்தனுடைய எச்சில் நமக்குப் பிரசாதம் என்று உபயோகித்தார். இவர் உடையவர் ஸ்ரீ பாத தீர்த்தமல்லால் மற்றொருவர் ஸ்ரீ பாத தீர்த்தம் கொள்ளார். உடையவர் ஸ்ரீ பாத தீர்த்தத்தை
சாளக்கிராமத்திலே தாம் சேர்த்த தனமாகச் சேமித்து உடையவர் திருவடிகளையே தஞ்சமாகக் கொண்டு தமது சரம தசையிலும் தமக்கு அந்தரங்கரான பந்துக்களுக்கும், தஞ்சமாகக் காட்டிக் கொடுத்து சீர்த்ததனமிது வருந்தியும் பேணிக் கொண்டு போங்கள் என்றுஅடைக்கலங்காட்டிக் கொடுத்தருளினார்.
உன்னையொழிய ஒரு தெய்வம் மற்றறியா
மன்னுபுகழ்சேர் வடுகநம்பி தன்நிலையை
என் தனக்கு நீ தந்து எதிராஜா எந்நாளும் உன்தனக்கே ஆட்கொள் உகந்து: (ஆர்.பி.ர 11)
வடுகநம்பி தாம் எழுதிய ஸ்ரீ யதிராஜ வைபவம் என்ற நூலின் இறுதியில்; தனது அந்தரங்க சிஷ்யர்களில் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கைங்கர்யத்தில் நியமித்த எதிராஜர் மிகவும் தகுதியற்ற என்னையும் தமக்குப் பால் காய்ச்சும் கைங்கர்யத்தில் நியமித்தருளினார். அத்துடன் தம் அடியார்க்கு அடியார்க்கு, அடியார்க்கு அடியனாகவும், தமக்கு நல்லது செய்பவனாகவும் கொண்டு என்னையும் ரட்சிக்கிறவரான அவர் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறார். இறுதியில் பல ஸ்ருதியில் எதிராஜரின் வைபவத்தை விளக்குவதாய், கலியின் குற்றங்களைப் போக்குவதான இந்நூலை எவர்கள் படிக்கிறார்களோ அவர்கள் உபய விபூதி நாயகராவார்கள் என்பது உறுதி என்று நூலின் பயனையும் கூறி முடிக்கிறார்.
முதலியாண்டான் திரு அவதார ஸ்தலம், தொண்டை மண்டலத்தில் ஸ்ரீபுருஷமங்கலம். திரு நக்ஷத்திரம் ப்ரபவ வருஷ சித்தரை மாதம் 85-ம்தேதி கிருஷ்ண பக்ஷ தஸமி வியாழக் கிழமை, புனர் பூசம், தகப்பனார். ஆனந்த தீஷிதர், தாயார், நாச்சியாரம்மன்; குலம்- வடமான் வாதூல கோத்ரம். திருநாமங்கள்:-தாஸரதி, ராமானுஜன் பொன்னடி, ஸ்ரீவைஷ்ணவதாசர், திருமறுமார்பன் முதலியன. குமாரர் -கந்தாடை யாண்டான். ஆசாரியார் – எம்பெருமானார். திருவாராதனம் – அழகிய சிங்கர்.-இருப்பிடம். கோயில் பிரபந்தங்கள்-அருளிச் செய்தவர் திருத்தகப்பனார். இவர் எம்பெருமானாருக்குத் திருமருமகனாராய், திருவடிகளுமாய்த் த்ரிதண்டமுமாயிருப்பார்.-இவர் அருளிய பிரபந்தம் ரஹஸ்யத்ரயம். இவர் கந்தாடை திருவம் ஸத்துக்கெல்லாம் கூடஸ்தர். இவர் 150 ஆண்டுகள் வாழ்ந்திருந்தார்.-இராமானுஜர் (இளையாழ்வார் சுவாமிகள்) சந்யாச தர்மத்தை மேற்கொண்ட பின்னர் வாதூல குலத்து வந்த முதலியாண்டானும், கூரத்தாழ்வானும் அவரை ஆஸ்ரயித்து அவரது சீடர்களானார்கள், முதலியாண்டானைத் தன்னுடைய தண்டமாகவும் கூரத்தாழ்வானைத் தன்னுடைய பலித்ரமாகவும் கருதி ஏற்றுக் கொண்டார் இராமானுஜர். அவர் பதினெட்டு முறை திருக்கோஷ்டியூர் நம்பி திருமாளிகைக்கு அலைந்த பின்னர் அவர் மனமிரங்கித் திருமந்தரத்தை உபதேசிக்கத் தீர்மானித்து நீர் மட்டும் தனியாக வாரும் என்று சொல்லி யனுப்ப உடையவர் முதலியாண்டானையும், ஆழ்வானையும் உடன் அழைத்துச் சென்று, ஆண்டானை இவர் என் திரிதண்டம் என்றும் ஆழ்வானை இவர் என் பவித்ரம் என்றும் கூறி அவர்களுக்கும் அப்பேறு கிடைக்குமாறு செய்தமை நமக்குத் தெரிந்ததே. பின்னர் சரமஸ்லோக அர்த்தத்தையும் உபதேசிக்க எண்ணி நீர் ஒருவர் மாத்திரம் வாரும் என்று கூறிட ஆழ்வானுக்கு நான் இதை வெளியிடாதிருக்க முடியாதே என்று கூறவே, நம்பியும் அவரது அத்யாவஸியத்தை (தகுதியை)ப்பரீஷித்தறிந்து உபதேசியும் என்றார். ஆகவே ஆழ்வானின் தகுதியைச் சோதித்து அவரது மாஸோபவாஸம் கடந்த பின் அவ்வர்த்தத்தை உபதேசித்தார். பிறகு முதலியாண்டானும் வந்து தொழுது பிரார்த்திக்க நீர் நம்பி பக்கல் அனுமதி பெற்று வாரும் என்றிட ஆண்டானும் திருக்கோட்டியூர் சென்று ஆறுமாத காலம் அவருக்கு அடிமை செய்து காத்திருந்தும், பெறாமையால் வருந்தி, ஒருநாள் நம்பியை உபதேசம் செய்யுமாறு கனக்கப் பிராத்திக்கைமில், முக்குறும்பும் போனால் எம்பெருமானார் தாமே பிரஸாதிப்பார்-போய்க் கேளும் என்று விடை கொடுத்து அனுப்பிவிட ஆண்டானும் மிக ஆவலோட எம்பெருமானாரிடம் யாசித்த பின்னர் மிகவும் மகிழ்வோடு ஆண்டானுக்கு அதை உபதேசித்தருளினார்.-எம்பெருமானார் வடநாட்டு யாத்திரை சென்ற பொழுது அவரது யாத்ரா சகாவாக உடன் சென்றவர் முதலியாண்டான். அவர்கள் யாத்திரையின் போது வஹ்நி புஷ்கரிணியாகிற கிராமத்திற்குச் சென்று தங்கிவிட்டு, அருகிலுள்ள மிதிலாபுரி சாளக்கிராமத்துக்குச் சென்ற பொழுது அவ்வூர் ஜனங்கள் அனைவரும் பிரச்சந்த விரோதிகளாகையாலே (வேறு மதத்தவர்கள் உடையவரை ஆதரிக்கவில்லை. உடையவர் முதலியாண்டானிடம், நீர் போய் அவ்வூரார் நீர் முகக்கும் துறையிலே உம்முடைய ஸ்ரீபாதத்தை நீட்டிக் கொண்டிரும் என்று சொல்ல, அவரும் அப்படியே செய்ய, அவரது ஸ்ரீபாத தீர்த்த விசேஷத்தால் மக்கள் மனம் தெளிந்து உடையவரிடம் வந்து ஆஸ்ரயித்தனர். இவரது பெருமையை விளக்கும் மற்றொரு சம்பவம் வடுகநம்பியின் செயலாகும். அதை நாம் வடுக நம்பி வைபவத்திலேயே கண்டோம்.
எதிராஜருடைய பாதுகைகள் எவருடைய பெயராலே (முதலியாண்டான் என்று) வழங்கப்படுகின்றனவோ, தாஸரதி என்னும் திருநாமமுடைய அந்த முதலியாண்டானின் திருவடிகளை யான் தலையிலே தரிக்கிறேன் என்கிறார் குரு பரம்பராப் பிராமணத்திரட்டு என்ற நூலின் ஆசிரியர்.ஓராண் வழி ஆச்சார்ய பரம்பரையில் கூரத்தாழ்வானை யடுத்து வருபவர் முதலியாண்டானாகும்.
அத்தகிரி யருளாள ரடிபணிந்தான் வாழியே.
அருட் பச்சை வாரணத்தில் அவதரித்தான் வாழியே.
சித்திரையிற் புனர்பூசம் சிறக்க வந்தான் வாழியே. சீபாடிய மீடுமுதல் சீர் பெறுவோன் வாழியே.
உத்தமமாம் வரதூலம் உயர வந்தான் வாழியே.
ஊர் திருந்தச் சீர்பாத மூன்றினான் வாழியே.
முத்திரையும் செங்கோலும் முடிபெறுவோன் வாழியே.
முதலியாண்டான் பொற்பதங்கள் ஊழிதோறும் வாழியே.
எம்பெருமானாரது சகோதரியின் புதல்வரான ஸ்ரீவத்ஸ கோத்தரத்தில் வந்த வரத விஷ்ணு என்னும் பெயர் கொண்ட நடதாராழ்வான், எம்பெருமானாரது எழுபத்து நான்கு ஸ்ரீ பாஷ்ய ஸிம்ஹாஸ னாதிபதிகளில் ஒருவர். அணுவான ஆத்ம ஸ்வரூபம் முக்தி தசையில் விபுவாகி விடுகிறது என்ற இவரது வாதத்தை அதிவாதம் என்று வேதாந்த தேசிகர் கூறியுள்ளார். எம்பெருமானார் சிஷ்யர்களி டையிலேயே சில கருத்து வேற்றுமைகள் உண்டென்பதும் அதை எம்பெருமானாரே தடை செய்யாமல் விட்டிருந்தார் எனவும்தேசிகர் அருளியுள்ளார்.
திருவெள்ளறையில் ஸ்ரீ விஷ்ணு சித்தர் என்ற பெயருடன் சித்தரை ரோஹினியில் அவதரித்தவர் இவர். கூரத்தாழ்வான் கண்ணை இழந்த பின்பு அவருக்குப் பதிலாக, ஸ்ரீபாஷ்யத்தின் எஞ்சிய பகுதியை எம்பெருமானார் எழுதி முடிக்க உறு துணையா யிருந்தவர். இவர் ஆழ்வாரைப் போலவும் கூரத்தாழ்வானைப் போலவும் அறிவாளியாயிருந்ததால் உடையவர் ‘எங்கள் ஆழ்வானோ’ என்று அபிமானித்தார் என்பது கர்ண பரம்பரைச் செய்தி.
“இன்னவாறு திருப்பதிகள் எங்கும் வாழ்வித்து எதிராஜன்
தன்னதாக்கித் தரிசனமும் தரணியெங்கும் விளங்குவித்து
முன்னமுரைத்த பாடியத்தின் முற்றமூன்றத் தொருகூறு
தன்னைச், சென்றாண்டாயிரந்தாங் கெழுபத் தேழில் -சாற்றினான் -என்று ராமானுஜர் மேல் நாட்டிலிருந்து திரும்ப வந்து ஏழெட்டு வருடங்கள் கழிந்த பின்பே ஸ்ரீ பாஷ்யத்தில் மூன்றிலொரு பகுதியைப் பூர்த்தி செய்தார் என்று குறித்திருப்பது கர்ண பரம்பரைச் செய்தியை வலியுறுத்துகிறது-74-ஸிம்ஹஸனாதிபதிகளில் இவரும் ஒருவர். இவர் மணிப் பிரவாள நடையில் எழுதிய ஸர்வார்த்த சதுஷ்டயம் வார்த்தாமாலையில் உள்ளது. நடதூராழ்வானது பேரரான வாத்ஸ்ய வரதாசார்யார் என்னும் நடதூரம்மாள் இவருடைய சிஷ்யர்களில் முதன்மை யானவர்.நடதூராழ்வான், நடதூரம்மாளுக்குத் தக்கபடி காலட்சேபம்
சொல்லுவது தம்மால் இயலாது என்பதை உணர்ந்து, திருவெள்ளறைக்கு எங்களாழ்வானிடம் பாடம் கேட்க அனுப்பினார். ஆனால் எங்களாழ்வான், ‘நான் என்னும் அகங்காரம் செத்த பின் வா, என்றும் எனக்கு சரம கைங்கர்யம் (அந்திம காலச்சடங்கு) செய்ய உன் தாய் தந்தையர் அனுமதி தர வேண்டும் என்றும் பலமுறை திருப்பி அனுப்பிய பின் தாய் தந்தையர் அனுமதி பெற்று எங்களாழ்வானிடம் நீண்ட நாட்கள் திருவெள்ளறையிலேயே தங்கி இருந்து ஸ்ரீ பாஷ்யார்த்தங்கள் அனைத்தையும் கற்றார். இவ்வாறு அம்மாளுக்கு ஆச்சார்யரானபடியாலே அம்மாளாசார்யார் என்றழைக்கப்பட்டார். எங்களாழ்வான். இன்றும் அப்பட்டத்தால் அந்தவம்சத்தினர் அழைக்கப்படுகின்றனர்.
எங்களாழ்வான் எம்பெருமானாரை விட மிகவும் இளையவராக இருக்க வேண்டும். இவர் நூறு வயதுவரை வாழ்ந்திருந்தார்.
கி.பி. 12-ம் நூற்றாண்டின் பெரும்பகுதி வாழ்ந்தவராதலால் நம்பிள்ளை காலம் வரை இவர் வாழ்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது.-சகல சாஸ்திரங்களும் வல்லவர் எங்களாழ்வான் என்று நம்பிள்ளை அருளியதாகக் கூறுவர். எங்களாழ்வானது கடைசிக் காலத்தில் அவரது பூட்டனான வரதாசாரியார் என்பவரை ஸ்வீகார புத்திரராக்கி நடாதூரம்மாள் சகல அர்த்தங்களையும் கற்பித்து வந்தார்.
எம்பெருமானாரது சிஷ்யர்களில் ஒராண் வழிக் குரு பரம்பரையில் இடம் பெறுபவர் எம்பார் ஒருவரே. எம்பெருமானாருக்குப் பின் திருவரங்கத்தில் தர்சன நிர்வாகராயிருந்து தமது சிஷ்யரான பட்டரிடம் அதை ஒப்பித்தவர் எம்பாரே யாவார். எம்பெருமானார்
அவதரித்து எட்டு வருடங்களுக்குப் பின் குரோதன வருஷத்தில் கி.பி. 1026-ல் ஸ்ரீ பெரும்புதூரை அடுத்த வட்ட மணிக்குடியில் உடையவரது சிறிய தாயாரான பெரிய பிராட்டி ஸ்ரீதேவிக்கும் அவரது கணவர் கமலநயன பட்டருக்கும் குமாரராக கோவிந்தன் என்னும் திருநாமத்துடன் அவதரித்தவர் எம்பார். இவர் அருளிய பிரபந்தம் விஜ்ஞானஸ்துதி என்பது-நல்லொழுக்கமுடையவராய், எம்பெருமானாரது சகமாணவராய் இருந்த கோவிந்த பட்டரும் யாதவப் பிரகாசனுடைய கெட்ட எண்ணத்தை நடுக்காட்டில் ராமானுஜருக்கு அறிவித்து அவரை நிறுத்தித் தாம் மட்டும் யாதவரோடு யாத்திரை செல்லும் கோஷ்டியோடு தொடர்ந்து சென்றார் என்ற விபரம் முன்னரே கூறப்பட்டது.
யாதவாது மந்திர சக்திக்குக் கட்டுப்பட்ட கோவிந்தரும் கங்கையில் நீராடும்பொழுது தமது உள்ளங்கையில் சிவலிங்கத்தைப் பெற்றவராய் தமது கிராமமான மதுர மங்கலத்துக்குச் சென்று அந்த லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து காளஹஸ்தி சென்று அங்குள்ள
சிவாலயக் கைங்கர்யங்களில் ஈடுபட்டவராய் வசித்து வந்தார் என்பதையும் முன்னரே கண்டோம்.-இராமானுசருடைய பிரார்த்தனைக்கு இரங்கி அவருடைய மாதுலரான பெரிய திருமலை நம்பி காளஹஸ்திக்குச் சென்று இவரை மறுபடியும் வைஷ்ணவராகத் திருத்தினார். இவ்வாறு திருந்திய ஸ்ரீ கோவிந்தப் பெருமாள் திருமலைநம்பி திருமாளிகையில் சகல கைங்கர்யங்களும் செய்து வந்தார்.-ஒருநாள் நம்பிக்குப் படுக்கை விரித்து அதில் முதலில் தாம்படுத்துறங்குவதைக் கண்ட எம்பெருமானார் அவரது அடாத
செயலை நம்பிக்குத் தெரிவிக்க அவர் கூப்பிட்டு விசாரித்த பொழுது, கோவிந்தர் ஆசார்யரது அபசாரத்திற்காகத் தனக்கு நரகமே கிடைததாலும் தேவரீர் திருமேனியில் ஒன்றும் ஊறுதல், உறுத்தல் செய்யக் கூடாது என்று எண்ணினேன் என்றார். அவரது ஆச்சார்ய பக்தியைக் கண்டு எல்லோரும் வியந்தனர். மற்றொரு நாள் உடையவர் நம்பியின் நந்தவனத்தில் உலவி வந்த சமயம் ஓரிடத்திலே கோவிந்தப் பெருமாள் ஒரு பாம்பின் வாயிலே கையிட்டு, அதன் நாக்கில் இருக்கும் முள்ளை எடுத்து விட்டு நீராடி ஏனைய கைங்கர்யத்தைச் செய்தார். இராமானுசரும் அவரது பூத தயை கண்டு
வியந்து மகிழ்ந்தார். எம்பெருமானார் முதல்முறை திருமலைக்குச் சென்ற போது கோவிந்தரைத் தானமாகப் பெற்றுத் தம் சிஷ்யராக அழைத்துச் சென்றார். அவ்வாறு அவர்கள் திரும்பி வரும் வழியில் கடிகாசல மேறி மிக்கார் வேத விமலர் விரும்பும் ௮க்காரக்கனியையும் சேவித்துக் களித்து மீண்டும் திருக்கச்சி நம்பி, ஸந்நிதியில்
எழுந்தருளியிருந்தார். கோவிந்தரை அழைத்துக் கொண்டு திருவரங்கம் செல்லும் போது வழியில் கோவிந்தரது முகம் வாடி வெளுத்திருப்பதை கண்டு திருமலை நம்பியைப் பிரிந்து வந்ததின் விளைவு ஈதென்று அனுமானித்து, திரும்பவும் அவரைப் போய்ச் சேவித்து வாரும் என்று கோவிந்தரைத் துணையோடு திருமலை நம்பியிடமே அனுப்பி வைத்தார். ஆனால் திருமலை நம்பி அவரை வர விடாமல் விற்ற பசுவுக்குப் புல்லிடுவாருண்டோ, பித்தனைப் போகச் சொல்லுங்கள் என்று சொல்லித் தாம் முகம் கொடாமல் வெறுத்து அனுப்பி விட்டார். ஆகவே நம்பியைக் காணும் ஆசையைத் துறந்து சிறிதும் தாமதிக்காமல் எம்பெருமானாரிடம் திரும்பி, அவர் காலடியே தஞ்சமென்று விழுந்து கிடக்க, நடந்ததை யெல்லாம் கேட்டறிந்த உடையவர், நம்பி நம் நினைவறிந்து நடந்து கொண்டாரே என்று வியந்து உகந்தார். கோவிந்தரை எடுத்தணைத்துக் குளிர நோக்கி உடன் அழைத்துக் கொண்டு ஸ்ரீரங்கம் சென்றடைந்து பெருமாளையும் நாச்சியாரையும் சேவித்து மகிழ்ந்தார் உடையவர்.திருவரங்கத்தில் உடையவரையே தமக்கு மாதா, பிதா, ஆசார்யன் தெய்வம் எல்லாமாகக் கொண்டு அவர் திருமேனி யழகிலும் ஆத்மகுணங்களிலும் ஈடுபட்டு அவருக்கு ஆட்செய்வதையே பணியாகக் கொண்டு வாழ்ந்து வரலானார் கோவிந்தர். கோவிந்தருடைய ஞானம் ஆசார்ய பக்தி வைராக்யம் (பற்றின்மை) முதலான பண்புகள் நாளுக்கு நாள் வளர்ந்து வரவே கண்டவர் யாவரும் அவரை நேருக்கு நேராகவே கொண்டாடிப் பேசினார்கள். அவரும் இவை யாவும் ஒக்கும் ஒக்கும் என்று தம்மைத் தாமே மெச்சிக் கொண்டார். இதைக் கண்ட உடையவர் “பலரும் உம்மைப் பாராட்டினால்’ நீர் நைச்சிய வார்த்தை (தகுதியின்மை) தாழ்மை தெரிவிப்பது) சொல்லாமல், உம்மை நீரே போற்றிக் கொள்ளுதல் தகுமோ என்று கேட்க அவர் ‘ஐயோ அவர்கள் அடியேனைக் கொண்டாடுவதென்றால் காளஹஸ்தியில் சிவ வேடத்தில் இருந்த பொழுது கொண்டாடினால் தான் என்னைக்கொண்டாடியதாகும். ௮டியேனைத் திருத்திப் பணிக் கொள்ள தேவரீர் பண்ணிய கிருஷி பலனை (சுபமான எண்ணம், அதற்கேற்றசெயல் இவற்றின் பயன்) கொண்டாடுபவை யன்றோ? இதை அடியேனும் சேர்ந்து நன்றிப் பெருக்கோடு கொண்டாடுவதன்றோ முறை என்றார். இதைக் கேட்ட உடையவர் மகிழ்ந்து உமது உயர்ந்த ஆத்ம குணங்கள் நமக்கும் படியும்படி உமது நெஞ்சினால்நம்மை அணைத்துக் கொள்வீர் என்று கூறித் தம்பியை வாரி யெடுத்து அணைத்துக் கொண்டு அதனால் தாம் தூய்மை பெற்றதாகக் கருதினார் இராமானுஜர்-ஒருநாள் திருவரங்கத்து வீதி ஒன்றில் ஒரு (தேவதாசி) அடியாள் வீட்டு வாசலில் கோவிந்தர் தம் வேலைகளைப் புறக்கணித்து விட்டு நெடுநேரம் நின்று உள்ளிருந்து வந்த இனிமையான குரலில்
அமைந்த இராமானுசரது தாலாட்டைக் கேட்டு மெய்மறந்திருந்தார்.-இவரைத் தப்பாகப் புரிந்து கொண்டவர்கள் இந்நிகழ்ச்சியை உடையவருக்குத் தெரியப்படுத்தினர். கோவிந்தரை அழைத்துவிசாரித்து உண்மையைத் தெரிந்துகொண்டவர்கள் அவரது யதிராஜ பக்தியைக் கண்டு வியந்து கொண்டாடினர். இந்த நிலை நாளுக்கு
நாள் முதிர்ந்து வந்தது. இராமானுஜர் குணானுபவமும், அவர் திருமேனி யழகில் ஈடுபாடும் கோவிந்தருக்கு உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் என்ற நிலை நாளுக்குநாள் முதிர்ந்தது.
எம்பெருமானார் வடிவழகில் ஈடுபட்ட எம்பார் எழுதியபாசுரம்
பற்பமெனத் திகழ் பைங்கழலுன்றன் பல்லவமே விரலும்
பாவனமாகிய பைந்துவராடை பதித்த மருங்கழகும்
முப்புரி நூலோடு முன்கையிலேந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல்நிலாவழகும்
கற்பகமே விழி கருணை பொழிந்திடு கமலக்க ண்ணழகும்,
காரி சுதன் கழல் சூடிய முடியும் கனக நற்சிகை முடியும்,
எப்பொழுதும் எதிராசன் வடிவழகென்னிதயத் துளதால்
இல்லையெனக்கெதிரில்லையெனக்கெதர் இல்லையெனக்கெதிரே.–என்பதாகும்.
கோவிந்தர் இராமானுசன் மிக்க சீலமல்லால் உள்ளாது என் நெஞ்சு என்றபடியே வாழ்ந்து வருகையில் அவரது தாயார் கோவிந்தா, நம் குடும்பம் விளங்க மாட்டுப் பெண் வாழ ஒரு குழந்தை வேண்டாமோ என்று கேட்க, அவரும் தான் தனியாய் இருக்கும் போது அவகாசம் பார்த்து அவளை அனுப்பி வையும் என்றார். தாயார் பல நாள் காத்திருந்தும் அப்படியொரு அவகாசம் காணாமையாலே உடையவரிடம் முறையிட்டாள். உடையவர் தம்பியை அழைத்து ‘கோவிந்தரே நம் ஆணை. நல்ல வேளையில் மனையாளுடன் கிருஹஸ்த தர்மம் நடத்துவீராக என்றார். கோவிந்தரும் தம் மனையாளை அழைத்து ஓரிரவு பூராவும் அவளுக்கு அந்தர்யாமியான பகவானைக் காட்டித் தந்து பகவத் குணானுபவத்தைப் பண்ணி வைக்க வேறு எதற்கும் வாய்ப்பில்லாமல் போயிற்று. இவ்விருப்பை மருமகள் சொல்லி யறிந்த தாயார் மகனிடம் தம் விருப்பம் நிறைவேறாமைக்கு வருத்தப்பட அவரும்
அந்தர்யாமி ஒளிவிட்டு விளங்க அழிச்சாட்டம் கூடவில்லையே என்று கூறி விட்டதால் மீண்டும் உடையவரிடமே முறையிட்டாள். அவரும் தம்பியை அழைத்து விசாரிக்க இவரும் அந்தர்யாமி
பிரகாசிக்கும்போது இதற்கு இருட்டேது? தனிமை யேது? அடியேன் செய்யக்கடவது என் என்றார்.ஆச்சாரியரும் இவரது பற்றற்ற நிலை கண்டு மகிழ்ந்து உமக்கு
விஷயாந்திர விரக்தி இந்த அளவுக்கு உள்ளதாகில் உத்தமாஸ்ரமம் தானே (துறவுநிலை) கைக்கொள்ளும் என்று நியமித்து, அவருக்குத் திரிதண்டம் காஷாயங்களை யணிவித்து, தம்மைப் போன்றே முக்கோற் பகவராக்கி யருளினார். அப்புதிய துறவிவிக்கு எம்பெருமானார் என்று தமது பெயரையே தாஸ்ய நாமமாகச் சூட்டினார்.
பெயரைப் பெற்றவரோ இத்திருநாமம் அடியேனால் சுமக்க முடியாது. சுவாமிக்கு நிழலும் அடி தாறுமாய் உள்ளவனுக்கு பொருந்தும்படி பெயரருள வேண்டும் என்று வேண்ட சுவாமியும் அப்பெயரைச் சுருக்கி ‘எம்பார்’ என்று பெயரைச் சூட்டினார். பின்னர் எம்பார் கூரத்தாழ்வான் குமாரரான பராசர பட்டருக்கு ஆசாரியராகி பட்டரால் அருளுப்பட்ட பின் வரும் தனியனைப் பெற்றார்.
“ராமானுஜ பதச்சாயா கோவிந்தாஹ்வாக பாயிநீ
த்தாயத்ததஸ்வ ரூபாஸகஜீயாத் மத்விச்ர மஸ்தவி’
எம்பெருமானார் என்ற பெயரைச் சுருக்கிப் பெற்ற திருநாமத்தை எம்பார் எமக்கு இளைப்பாறுமிடம்’ என்று பொருள் கொண்டு“மத் விச்ரமஸ் தவீ” என்று தனியனிட்டது பட்டரின் மாமேதைக்கு எடுத்துக் காட்டாகும். அந்தர்யாமி பிரகாசித்துக் கொண்டிருக்கையில் அழிச்சாட்டம் கூடுமா என்று எம்பார் கூறியது முழுதும் உண்மை யென்று உடையவர் மற்றவர்களுக்குக் காட்ட விரும்பிச் செய்த செயல் குருபரம்பரைச் செய்திகளில் கூறப்பட்டுள்ளது. கோவிந்தர் முன்னிரவக்கமித்த ஓர் இருட்டறையில் ஒரு ஊசியை எறிந்துவிட்டு அங்குள்ள ஊசியைக் கொண்டு வாருங்கள் என்று சிஷ்யர்களுக்குக் கட்டளை இட அவர்களால் ஒளிமிக்க விளக்குடன் சென்று தேடியும் ஊசி இடைக்க வில்லையாம். பின்னர் கோவிந்தரை அழைத்து அவ்வறையில் தரையில் ஏதாவது பொருள் இருந்தால் எடுத்து வாரும் என்று அனுப்ப அவர் கையில் விளக்கேதுமில்லாமலேயே சென்று அங்கு ஊசியிருக்கக் கண்டு எடுத்து வந்து ‘இதுவே அங்கு தரையில்இருந்தது என்று கொடுத்தாராம்.-அந்தர்யாமியான எம்பெருமான் ஒளி விட்டுப் பிரகாசித்ததால் அவ் வூசியை அவரால் எளிதில் கண்டு பிடிக்க முடிந்தது.-ஆச்சாரியார் தமக்குத் துணையாக சைவத்தனின்றும் மீட்டுக்கொண்டு வரப்பட்ட இவரைக் கொண்டாரென்றும் ஸ்வாமிக்கு அணுக்கராய் பல குற்றேவல்களை இவர் புரிந்திருந்தார் என்றும் ஊஹிக்கிறோம்.-எம்பெருமானாருக்கும் இவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. எதிராஜர் அமுது செய்ததும் நூறு அடி நடப்பதுஎன்ற பழக்கத்தைக் கொண்டவர். இப்படி உலாவுகையில் ஸ்வாமி ஆழ்வார்களின் பாசுரங்களை மனதில் அனுசந்திப்பது வழக்கம்.-ஒருநாள் வழக்கமாகச் செல்லும் தூரம் செல்லாமல் சடக்கெனத் திரும்பக் கண்ட எம்பார் திருமாலிருஞ் சோலையாகாதே திரு ௨ள்ளத்தில் ஓடுவது என்றாராம். மடித்தேன் மனை வாழ்க்கையினில் நிற்பதோர் மாயையை என்று சொல்லி மடித்தேன் என்று திரும்ப
இந்தப் பாசுரம் சுவாமி மனதில் ஓடுகின்றது என்று கண்டு கொண்ட செய்தி அதிசயமாக இருக்கிறது.-சரணாகதி கத்யம் எம்பெருமானாருக்கும் எம்பெருமானுக்கும் நடந்த உரையாடலாக அமைந்துள்ளது. எக்காலமும் தேவரீருக்கடிமை செய்திருப்பவனாக வேண்டும் என்று எம்பெருமானார் வேண்டிட; என்றும் எனக்காட் செய்பவராக இருப்பீராக. ‘த்வயத்தை அர்த்தத்துடன் அனுசந்தித்துக் கொண்டு இத் திருவரங்கத்தே இனிதிரும் என்று பெருமாள் ஸ்வாமியை நியமித் தருளியதாகத் தெரிகிறது. இப்படிப் பெரிய பெருமாள் அருளிச் செய்தார் என்பதை நாங்கள் நம்புவது எப்படி என்று எம்பார் கேட்க, எனக்குப் பெரிய பெருமாள் தனது சவ்லப்யாதி குணங்களை கையில் நெல்லிக்கனியாகக் காட்டித்தந்து அவர் சொல்லிக்கச் சொன்ன வார்த்தையாகையாலே அவர் அருளிச் செய்த வார்த்தை என்று எடுத்துக் கொள்ளத் தடையில்லை என்று எம்பெருமானார் அருளினார். எம்பாருக்கு
உடையவர் திருவாக்கில் நம்பிக்கை இல்லை என்று அர்த்தமில்லை. நம் போல்வார் நெஞ்சில் தோன்றும் ஐயப்பாட்டை ஸ்வாமி திருவாக்கைக் கொண்டே போக்க வேண்டுமென்றேஎம்பார் இக் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டும். சாமான்யமாக ஒரு சிஷ்யன் தன் ஆச்சாரியரைக் கேட்கக் கூடாத கேள்வியை எம்பார் இங்கு கேட்டிருக்கிறார். எந்த அர்த்தத்தையும் ஆச்சார்யர் மூலமாய் வெளியிட்ட பெரியோர்கள் பாங்கறிந்து பின்பற்றத்தக்கது. எம்பார் திருவாக்கான பாசுரம் ஒன்று
எங்கள் கதியே இராமானுசமுனியே சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்குபுகழ் மங்கையர் கோனீந்த மறையாயிரமனைத்தும் தங்கு மனம் நீ எனக்குத் தா-என்ற பாசுரத்தைப் போலவே எம்பாரின் பிரிய சிஷ்யர் பட்டர் திருவாய்மொழி தங்கு மனத்தை எம்பெருமானாரிடத்தில் வேண்டிப் பாசுரம் சாதித்துள்ளது, ஏய்ந்த பெருங்கீர்த்தி…..
என்பது இவர்கள் கருத்தில் ஆழ்வார்களின் அருளிச் செயல்களை ஆச்சாரியரான உடையவர் அருளினால் தான் மனதில் தரிக்க முடியும் என்பது தெரிூறது.-முன்பொருகால் ஆழ்வார் திருநகரியில் ஒரு சலவைத்தொழிலாளி தன் குழந்தைகளைத் தனித் தனியே சடகோபா, காரிமாறா ,குருகூர் நம்பி என்று நம்மாழ்வாரின் இனிய பெயர்களை யிட்டு,
அழைத்ததைக் கேட்ட உடையவர் தமக்கு இந்தப் பாக்கியம் கிடைக்வில்லையே என்று நினைத்து வருந்தியதாகச் சொல்வதுண்டு.-அது போலவே “இராமானுஜ பதச் சாயா’ என்று ராமானுஜரின் நிழலும் அடி தாறுமான எம்பார் ராமானுஜர் என்றழைத்து அந்த
நாமத்தின் அமுதச் சுவையைப் பருக தனக்கு ஒரு சிறுவன் இல்லையே என்று ஏங்கினாராம். இவ் விஷயத்தைக் கேள்விப்பட்ட இராமானுஜர் எம்பாரை அழைத்து, அழகான திருவாழி, திருச்சங்கு, திருமண்காப்பு இவைகளால் அலங்கரிக்கப்பட்ட தம்முடைய உப பாத்திரத்தை (பஞ்ச பாத்திரம்) அவருக்குத் தந்தருளி இத்தை நமது பெயரால் அழைப்பீராக! என்று நியமிக்க எம்பார்
அப்பாத்திரத்தை நிதி எனப்பெற்று அதை இராமானுஜன் என்று அழைத்து வரலானார். அது முதலாக ஸ்ரீ வைஷ்ணவர்கள் தாம் கையாளும் உபபாத்திரத்தை ராமானுஜன் என்றே அழைத்து வருகின்றனர்.-நம் பெருமாள் நம் மணவாளமாமுனிகளுக்கிட்ட தனியனில்
ஸ்வாமியை ‘தீபக்யாதி குணார்ணவம்’ என்று போற்றுகிறார்.-ராமானுஜர் உட்பட பூர்வாசாரியார்கள் அனைவரும் மெய்யறிவு, பகவான் மற்றும் ஆச்சாரியார்களிடம் அளவு கடந்த பிரேமை,விஷய வைராக்யம் முதலான குணங்களைக் கடல் போன்று பெற்றுள்ளவர்கள். எம்பெருமானார் எம்பாருக்கு அறிய வேண்டிய அர்த்தங்களை யெல்லாம் தாமே புகட்டினார். கூரத்தாழ்வானுக்கும்,
முதலியாண்டானுக்கும் எம்பெருமானார் அவர்கள் தகுதியைச் சோதித் தறிந்த பின்னரே உபதேசம் பண்ணினார். ஆகவே அவர்கள் அதைப் பெற அரும்பாடு பட வேண்டியதாயிற்று . ஆனால் எந்தவிதமான சிரமமும் வைக்காமல், எவ்விதச் சோதனைகளுக்கும் உள்ளாக்காமல் தாமே எம்பாருக்கு உபதேசித்தார்-மேலும் ஆண்டான் ஆழ்வானுக்கில்லாத ஒரு தனிப் பெருமையும் எம்பாருக்கு உண்டு. ஓராண் வழி ஆச்சார்ய பரம்பரையிலன்வயம்
லஷ்மி நாத ஸமாரம்பாம் நாத யாமுந மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்-என்று ஆழ்வான் அருளிய பிரசித்தமான தனியன், திருமகள்
கேள்வனான, பெரிய பெருமாள், பெரிய பிராட்டி, சேனை முதலியார், நம்மாழ்வார், நாத முனிகள், உய்யக் கொண்டார், மணக்கால்நம்பி, ஆளவந்தார் பெரிய நம்பி எம்பெருமானார் எம்பார் என்று ஆழ்வான் அனுசந்திக்கும் ஆசார்ய பரம்பரையில் இடம் பெறுகிறார் எம்பார்.-அருளிச்செயல் வியாக்யானங்களில் பலப் பல இடங்களில்
பட்டர் நிர்வாஹம் என்று மிகவும் சுவையான பொருள்கள் காட்டப்பட்டுள்ளன. இவற்றுக்குத் தோற்றுவாய் பட்டரின் ஆச்சாரியராக எம்பெருமானாரால் நியமிக்கப்பட்ட எம்பாரும், திருத்தகப்பனாரான கூரத்தாழ்வானுமே யாகும். ‘எம்பார் நிர்வாஹம்’ என்று திவ்யப் பிரபந்த வியாக்யானங்களில் காணப்படுபவை
பொருட் சுவை மிக்குள்ளவை. உதாரணமாக ‘நாச்சியார் திருமொழி
(4.11) ஊடல், கூடல், உணர்தல் புணர்தலை, நீடு நின்ற நிறை புகழாய்ச்சியர் என்ற இடத்தில் ஆய்ச்சியருக்கு நிறை புகழாவது கிருஷ்ணனை இன்னவள் பட்டினி கொண்டாள் என்ற புகழ் காணும் என்கிறார் எம்பார். ஆயர் மகளீர் கண்ணனிடம் ஊடுவது அடிக்கடி நிகழும் நிகழ்ச்சியாகும். வாசுதேவன் வரவு பார்த்துக் காத்திருப்பவர் பல பெண்கள். ஒருத்தி, ஒரே வேளையில் சினம் தீர்ந்து கண்ணனை அழைப்பாள். ஒருத்தி கோபம் நான்கு நாட்கள் வரை நீடிக்கும். இவனும் அது வரை பொறுத்துக் கடப்பது அந்த ஆய்ச்சியின் ரூபம், குணம், இவற்றால் கவரப்பட்டதால் தான். இப்படிக்
கண்ணனைக் காக்க வைப்பது அவர்கள் நிறை புகழ் என்பார் எம்பார்.
பூவளரும் திருமகளார் பொலிவுற்றேசன் வாழியே.
பொய்கை முதல் பதின்மர் கலைப் பொருளுரைப்போன்வாழியே.
மாவளரும் பூதூரன் மலர்ப் பதத்தான் வாழியே.
மகரத்திற் புனர் பூசம் வந்துதித்தான் வாழியே.
தேவு மெப்பொருளும் படைக்கத் திருந்தினான் வாழியே.
திருமலை நம்பிக் கடிமை செய்யுமவன் வாழியே.
பாவையர்கள் கலவி யிருள் பகலென்றான் வாழியே.
பட்டர் தொழும் எம்பார் பொற்பதமிரண்டும் வாழியே.
தம்முடைய தரிசனத்தில் எம்பெருமானாருடைய பதவியை வஹித்தவராய் அவரினும் விஞ்சிய ஞான, வைராக்கியத்தை உடையவரான பட்டர் என்னும் ஆச்சாரியாரது வைபவத்தைக் காண விழைகின்றோம். இவர் கூரத்தாழ்வான் திருக் குமாரர் என்றும் ஸ்ரீ
ரங்கநாதனுடைய திருக்குமாரர் என்றும் வழங்கப்படுவார். இவரது பிறப்பு வரலாற்றை நாம் கூரத்தாழ்வான் வைபவத்திலேயே விரிவாகக் கண்டுள்ளோமாதலால் இங்கு குறிக்கப் படவில்லை. கூரத்தாழ்வான் திருக்குமாரர்கள் இருவரின் திருநாமங்கள் முறையே ஸ்ரீபராசரபட்டர், ஸ்ரீ ராமப்பிள்ளை என்ற வேத வியாச பட்டர் என்பதாகும். பெயர் பராசரபட்டர் என்ற போதிலும் பட்டர் என்றே சுருக்கமாக இவ்வாச்சாரியார் வழங்கப்படுவார். பட்டர் என்ற சொல் வேத விற்பன்னர்களையும் ஸ்தோத்திரம் சொல்பவர்களையும் குறிக்கும் பொதுச்சொல். விளையும் பயிர் முளையிலே தெரியும், என்றபடி பட்டர் என்ற பெயருக்குப் பொருத்தமாக இவரும் சர்வஞ்ஞராய் விளங்கிப் புகழ் பெற்று எம்பெருமானாருடைய சத்ய சங்கல்பத்தை நிலை நாட்டினார். இவர் 105 திருநட்சத்திரம் வாழ்ந்திருந்தார்.-இவர் பிறந்த உடனேயே இவரை எம்பெருமானார் பார்க்குமுன்னரே இவருக்கு ‘த்வயம்’ என்னும் மந்திரம் காப்பாக எம்பாரால் அனுசந்திக்கப்பட்டது என்பதும் எம்பெருமானார் நியமனப்படி எம்பாரே இவருக்கு ஆச்சாரியராக விளங்கினார் என்பதும் முன்னரே கண்டோம். ஆகவே பட்டருக்கு ஆச்சாரிய கிருத்யங்கள் எம்பாரே செய்தருளினார். இருந்தும் ஆழ்வானும் பட்டருக்கு ஒரு
ஆச்சாரியராயினார் என்பதும் முன்னரே குறிப்பிடப்பட்டுள்ளது.பட்டரை இளங்குழந்தைப் பருவத்திலேயே ஸ்ரீரங்கநாதன் தனது புத்திரனாக அங்கீ கரித்துத் தன்னுடைய சந்நிதியிலேயே திருமணத் தூணினருகே தொட்டிலில் விடுவித்து, ஸ்ரீரங்கநாச்சியாரும் தானுமாகச் சீராட்டி வளர்க்க, அங்கனம் வளர்கின்ற ௮க்குழந்தை தவழ்ந்து சென்று, பெருமாள் அமுது செய்வதற்கு வைத்துள்ள அடிசிலைக் கைகளால் அள்ளி அளைந்து துழாவ,பெருமாள் அது கண்டு உகந்தருளி, அந்த இன்னடி சிலை பிரியமாக அங்கீகரிப்பாராம். இப்படி ஸ்ரீ ரங்கநாதன் இவரைப் புத்திர ஸ்வீகாரம் செய்தருளியபடியால், பட்டர் ஸ்ரீ ரெங்கநாத புத்திரர் என்றழைக்கப்பட்டார். -‘வானிட்ட கீர்த்தி வளர் கூரத்தாழ்வான் மகிழ வந்த தேனிட்டதா நம் பெருமாள் குமாரர் பட்டர்’ என்று இவரது சிஷ்யரான பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் தமது திருவரங்கக் கலம்பகக் காப்புச் செய்யுட்களில் ஒன்றில் கூறியுள்ளார். பட்டர் தாமும் (ஸ்ரீ ரங்கவாஜ ஸ்தவத்தில் 17-ம் ஸ்லோகத்தில் ‘ஸ்ரீரங்கராஜ கமலாபத லாலி தத்வம் என்ற பதத்தினால் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இப் பேராசிரியர் சகல சாஸ்திரங்களிலும் அபாரமான பாண்டித்யம் பெற்றவர் என்பதை இவர் அருளிய விஷ்ணு ஸகஸ்ரநாம பாஷ்யம் ஒன்று கொண்டே உணரலாம். இவர் கவித் திறமையில் ஒத்தாரும் மிக்காரும், இல்லாதவர் என்பதை இவரது ஸ்ரீரங்கராஜஸ்தவம் ஸ்ரீகுணரத்ந கோசாதிகளால் உணரலாம்.-அருளிச் செயல்களில் அற்புதமான விசேஷார்த்தங்களை அருளிச் செய்வர் என்று பெரியவாச்சான் பிள்ளை முதலானோர் அடிக்கடி கூறுவதுண்டு. உதாரணமாக ஒன்றை மட்டும் காணலாம்.
திருநெடுந்தாண்டகத்தில் ‘அறுகாலச் சிறுவண்டே’ தொழுதேனுன்னை‘ என்ற பாசுரத்தில் வண்டுக்கு ஆறு கால்கள் உள்ளமையை எதற்காகச் சொல்லலாயிற்று என்பதை விளக்கப் புகுந்து இரண்டு காலாகவும், நாலு காலாகவும் இன்றி விரைந்து செல்லுகைக்கு உறுப்பாக ஆறு கால்கள் இருக்கப்பெற்ற பாக்யம் என்னே என்று வியந்து கூறுவதாகச் சிலர் பொருள் கூறுவார்கள். இந்தக் கூற்று அவ்வளவு பொருத்தமானதாகத் தெரியவில்லை. வண்டு பறந்து செல்வதற்குச் சாதனம் சிறகே யன்றிக் கால்களில்லை. ஆகவே ஆறுகாலே என்ற அடைமொழிக்கு அவ்வாறு கருத்துரைத்தல் பொருத்தமில்லை என்று பட்டர் அருளிச் செய்வது. தொழுதேனுன்னை என்று தொடர்ந்து கூறுவதால் என் தலையில் வைப்பதற்கு ஆறு கால்கள் உள்ளனவே என்று வியந்து சொல் கறைபடியாகும். தூது சென்று திரும்பி வந்தால் வண்டின் கால்களைத் தலையில் வைத்துக் கொண்டு கூத்தாடிக் குதூகலித்திருப்பதனால் அதற்குப் பொருத்தமாக இவ்வாறு கருத்துரைப்பதாகும்.–வழக்கமாக வண்டாகச் சொல்வது ஆச்சாரியர்களையே. ஆச்சாரியனும், அவருடைய தேவியாரும் அவர்களுடைய திருக்குமாரரும் ஆக மூவருக்கும் சேர்த்து ஆறு திருவடிகளாதலால் அக்கருத்துத் தோன்றவே ‘அறுகாலச் சிறுவண்டே’ என்றது என்பது பட்டர் வியாக்யானம். கொங்கார் பூந்துழாய்முடி என்குடக் கூத்தற்கென் தூதாய் நும்கால்கள் என் தலைமேல், எழுமிநோநுமரோடே ‘ என்று திருவாய்மொழிப் பாசுரத்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது இவ் விளக்கம்.-பட்டருடைய அதி ஞான பக்தி வைராக்யங்களை விளக்கும் வேறொரு நிகழ்ச்சியும் சொல்லப்படுவதுண்டு. அவர் ஐந்து வயதுப் பாலகனாய் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கையில் ஒருவன் ‘ஸர்வஜ்யபட்டன் வந்தான் என்று எக்காள மூதிக் கொண்டு வர, உடையவர் ஆழ்வான் ஆண்டான் போன்றவர்கள் இருக்க இவன் யார் தன்னைச் சர்வஜ்யபட்டன் என்று சொல்வது என்று மனதில் எண்ணி இருகைகளிலும் மண்ணை அள்ளிக் கொண்டு அவனைப் பார்த்து நீ ஸர்வஜ்யனன்றோ? இது எத்தனை சொல்? என்று கேட்க அவன் ஒன்றும் சொல்ல மாட்டாது வெட்டித் தலைகுனிய இது ஒருகைப்புழுதி மண் என்று கூடத்தெரியாத நீ என்ன ஸர்வஜ்யன் என்று அவமானப்படுத்தி அனுப்பினார் என்பது கர்ண பரம்பரைச் செய்தி. திரிபுவன வீர தேவராயன் என்ற அரசன் பட்டர் வைபவத்தைக் கண்டும், கேட்டும், அவரிடத்து மதுப்புக் கொண்டு அவரைச் சன்மானிக்க எண்ணியவனாய் பட்டரே, அரண்மனைக்கு வந்து போம் என்றழைக்க பட்டர் அதற்குச் சிறிதும் இணங்காமல் ‘நம் பெருமாள் அஞ்சல் என்ற கை மறித்தாலும் அவர் வாசலொழிய வேறு போக்கிடமுண்டோ எமக்கு என்று சொல்லி மறுத்துவிட்டார். தன்னைத் தஞ்சடைந்தவர்களுக்கு ஆவன வெல்லாஞ் செய்து,அவர்களைப் பாதுகாத்தலையே விரதமாகக் கொண்டு அவர்களுக்கு அபயமளிப்பவனான பரம புருஷனுக்கு அடிமைப்பட்ட நாம் சில சிற்றரசரின் வாசலிலே கிடந்து துவளக் கூடவோ மல்லோம் என்ற அவரது திண்ணிய தீர்மானத்தையே காட்டுகிறது-இந்தச் செயல்.
தென்னரங்கர் மைந்தனெனச் சிறக்க வந்தோன் வாழியே.
திருநெடுந்தாண்டகப் பொருனைச் செப்புமவன் வாழியே.
அன்னவயல் பூதூரானடி பணிந்தோன் வாழியே.
அனவரதம் எம்பாருக்காட் செய்வோன் வாழியே.
மன்னுதிருக்கூரனார் வளமுரைப்போன் வாழியே.
வைகாசியனுடத்தில் வந்துதித்தோன் வாழியே.
பன்னுகலை நால் வேதப்பயன் தெரிவோன் வாழியே.
பராசரனாம் சீர்பட்டர் பாருலகில் வாழியே.
நஞ்சீயர் ஆதியில் அத்வைதியாக இருந்தவர். மாதவாச்சாரியார் என்பது இவரது பூர்வீகத்திருநாமம். வேதாந்தி என்பது இவரது சிறப்புத் திருநாமம். ஆறு சமயங்களுக்கு ஆறு ஆசனமிட்டு நிகரற்ற வித்வானாக மேல்நாட்டில் எழுந்தருளியிருந்தார். பல பிற மத வித்வான்௧ளைத் திருத்துப் பணி கொண்ட உடையவர் இவரையும் திருத்திப் பணி கொள்ள விரும்பினார். ஆனால் அவரது வாழ் நாளில் அது முடியாமற் போகவே தனது அந்திம காலத்தில் தனது தர்சன வாரிசான பட்டரிடம் மேல் நாட்டிலுள்ள வேதாந்தியைத் திருத்திப் பணி கொள்வீர் என்று நியமித்தார். பட்டரும் அதனை நிறைவேற்றுவதற்குச் சமயம் பார்த்துக் காத்திருந்தார்.இந் நிலையில் மேல் நாட்டிலிருந்து வந்த ஒரு அந்தண யாத்ரிகர் பட்டரிடம் மேல் நாட்டிலும் உம்மைப் போலவே சகல கலைஞானங்களும் அறிந்த வேதாந்தி ஒருவர் இருக்கிறார் என்று கூறினார். பின்னர் அவர் திரும்பித் தன் ஊருக்குச் சென்ற பொழுது வேதாந்தியிடம், ‘ஸ்ரீரங்கத்தில் பட்டர் என்றொரு வித்வான் இருக்கிறார். அவரது பக்தியும் ஞானமும் சொல்லிலடங்கா. அவரது சிஷ்யர்களின் பெருமை அளவிட முடியாது என்று கூறினார். வேதாந்தி, ‘அவர் நமக்கு ஒத்த வித்வான் தானோ? என்று கேட்க, அவர் உம்மிலும் மேம்பட்டவர் என்று யாத்ரிகர் சொல்லவே, நம்மில் மிக்கார் யாருமில்லையென்றிருந்தோம்.-பட்டர் நம்மிலும் மிக்கார் என்று சொல்கிறாரே என்று கவலையோடு இருந்தார். இந்தச் சம்பவத்தை அந்த யாத்ரிகர் திரும்ப ஸ்ரீரங்கம் வந்தபொழுது பட்டரிடம் தெரிவிக்கப் பட்டர் அவரிடம் நமக்குத் திருநெடுந் தாண்டக சாஸ்திரம் தெரியும் என்று சொன்னீரா என்று கேட்க, அந்தணரும் அப்படியே சொல்கிறேன் என்று வேதாந்தியிடம் சென்று பட்டருக்குத் திருநெடுந்தாண்டக சாஸ்திரம் அசாதாரணம் என்று கூற அந்த சாஸ்திரம் இன்னதென்றறியாத வேதாந்தி அது என்னவோ என்று வியந்து கொண்டிருந்தார். இவ்வாறு சிலநாள் சென்றபின் உடையவர் நியமனத்தை நிறைவேற்ற வேண்டி வேதாந்தியைத் திருத்திப் பணிகொள்ள நம் பெருமாள் ஸந்நிதியிலே நியமனம் பெற்றுப் கோலாகலமாகப் பரிவாரங்களோடு புறப்பட்டு, மேல்நாட்டில் எழுந்தருளிச் சிறுபுத்தூர் என்ற இடத்திற்கு அருகில் செல்கையில் அங்கு திருமலையிலிருந்து உடையவர் சிஷ்யர் அனந்தாழ்வான் வந்து பட்டரைச் சேவித்து, அவர் காடும், மலையும் கடந்து வந்த காரணம் கேட்க,பட்டரும் வேதாந்தியைத் திருத்துவதற்காகத் தன்னை உடையவரும் நம் பெருமாளும் நியமித்திருப்பதாகவும் அதை நிறைவேற்றத் தான் வந்திருப்பதையும் கூறினார். அதைக்கேட்ட அனந்தாழ்வான் மிகவும் மகிழ்ந்து பட்டரையும் அவரது பரிவாரங்களையும் திரு நாராயண புரத்திற்கு அழைத்துச் சென்று அங்கு மங்களாசாசனம் செய்வித்த பின் வேதாந்தி இருக்கும் ஊருக்கும் அழைத்துச் சென்றார்.சிஷ்ய கோஷ்டிகளுடனும், பரிவார சேனைகளுடனும் இவர் எழுந்தருளுவதைக் கண்ட அங்குள்ள அந்தணர்கள் பட்டரிடம் நீர் இப்படி வந்தால் வேதாந்தியைக் காண இயலாது. அவரது சிஷ்யர்கள் உம்மை வாசலிலேயே நிறுத்தி அனுப்பி விடுவார்கள். ஆனால் வேதாந்தி மிகப்பெரிய செல்வராதலால் தினம் பிராமண போஜனம் செய்விக்கிறார். அங்கு புசிக்க வருகிறவர்களுடன் கலந்து தேவரீரும் சென்றால் அவரைக் காணலாம் என்று வழி சொன்னார்கள்.-அதன்படியே பட்டரும் போஜன சாலைக்குள் சென்று பந்தியில் சென்று சேராமல் வேதாந்திகள் பக்கத்திலேயே நிற்க, அவரும் அவர் வந்த காரணத்தை வினவ பட்டரும் ‘நான் அன்ன பிட்சைக்கு வரவில்லை. உம்முடனே தர்க்க பிட்சை கேட்டு வந்துள்ளேன்: என்றார்.-இதைக்கேட்ட வேதாந்தி திடுக்கிட்டு ‘நீர்தாம் பட்டரோ:என்று வினவ இவரும் ‘ஆம்’ என்ன, இவருடைய வித்யானுபவம் காண்போமென்று தீர்மானித்து இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் ஒன்பது நாள் தர்க்கித்தனர். பத்தாம் நாள் பட்டர் அத்வைதத்தைக் கண்டித்து, விசிஷ்டாத்வைதத்தை ஸ்தாபித்துத் திருநெடுந்தாண்டக பாசுரத்தின் விழுமிய பொருளையும் அற்புதமாக விளக்கியருள, வேதாந்திகள் மிகவும் மூழ்ந்து கூப்பிய கரங்களுடன் நின்று உம்மை மனிதராகவே எண்ணி யிருந்தேன்.-உமக்கும் நம்பெருமாளுக்கும் வாசி (வேறுபாடு)யில்லை. ‘உறங்கும் பெருமாள் அவர். உலவும் பெருமாள் நீர்: என்று பலவாறு துதித்து அடியேனை அங்கீ கரித்தருள வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய, பட்டரும் தம் காரியம் பலித்ததென்று மகிழ்ந்து,வேதாந்திகளுக்கு பஞ்ச ஸமஸ்காரம் பிரசாதித்து, மகாபாகவதோத்தமராக்கி, எம்பெருமானார் தர்சனத்தை நிர்வஹித்துப் போரீர் என்று நியமித்து விரைந்து திருவரங்கம் திரும்பி அன்று மாலையே நம்பெருமாள் திருமுன்பு வணங்கி நிற்க, பெருமாளும் ‘பட்டரே நீர் போன காரியம் என்ன ஆயிற்று! என்று வினவ, பட்டரும், வேதாந்திகள் தேவரீருடைய திருவடிகட்கு அடியவராயினார் என்று கூறி நடந்தவற்றையெல்லாம் கூறவே ‘எங்கனே’ என்று கேட்க திருநெடுந்தாண்டகத்தைத் திருவோலக்கத்திலே பட்டர் உபதேஸித்தார். அன்று தொட்ஙகி இன்று வரை நம் பெருமாள் ஸன்னிதியில் திரு அத்யயன உத்ஸவத் தொடக்கத்திற்கு முன்னால், திருநெடுந் தாண்டகத் திருநாள் என்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பின்னர் பட்டர் இக் கைங்கர்யத்தை அரையருக்கு அளித்தாராம்.-இது இங்கனமிருக்க வேதாந்திகள் தன் தேசத்திலே திருமாலடியார்களைப் பூசித்து வரும் நாளில் சம்சாரத்தில் விரக்தி ஏற்பட்டு,பட்டர் திருவடிகளை ஆஸ்ரயித்து (சரணடைந்து) சந்யாச தர்மம் பூண்டு அவரது தாசனாக வாசம் செய்ய விரும்பி, கோயிலுக்கு எழுந்தருளும் வழியில் சிறுபுத்தூாரிலே அனந்தாழ்வானைக்கண்டு,
அவர் ஆட்சேபித்ததையும் புறக்கணித்து கோயிலுக்கு எழுந்தருளியதைக் கண்ட பட்டர் மிகவும் உகந்தருளி, நம் ஜீயர் வந்தார் என்று சொல்லித் தம் திருவடிகளில் விழுந்து கிடக்கும் வேதாந்தகளை எடுத்தணைத்து அவருக்கு சகல அர்த்தங்களையும் ஓதுவித்துப் பிரஸாதித்தருள, ஜீயரும் பட்டரை யன்றித் தேவு மற்றறியேன் என்றிருந்தார். பட்டர் நம்முடைய ஜீயர் என்று சொல்லி அணைத்துக் கொண்டதால் அன்று முதல் வேதாந்திகளுக்கு நஞ்சீயர் என்ற பெயர் வழங்கலாயிற்று.
நம்பெருமாள், நம்மாழ்வார், நஞ்சீயர், நம்பிள்ளை
என்பர் அவரவர் தம் ஏற்றத்தால் அன்புடையோர்
சாற்று திரு நாமங்கள் தானென்று நன்னெஞ்சே
ஏற்று அதனைச் சொல்லி நீ இன்று (உ.தே.மா. 66)
நஞ்சீயருடைய ஆச்சாரிய பக்தி மிகவும் போற்றுதற்குரியது.-ஒரு கைசிக ஏகாதசி யன்று பட்டர் திருவீதி அலங்கரிக்கப் புறப்பட்டவாறே நஞ்சீயரும் ஸ்ரீபாதம் தாங்கப்புக, அங்குள்ளோர் திரிதண்ட தாரியான (சந்யாசி) உமக்கு இது தகாது என்று ஆட்சேபிக்க எனக்கு உறுதுணையாகி என்னை ரட்சிக்க வேணும் என்ற பொருளுடைய ‘ஸகாமா கோபாய” என்ற மந்திரம் சொல்லி அளிக்கப்பட்ட இந்த முக்கோல் எனக்கு விரோதியாமாகில் எனக்கு அது வேண்டாம் என்று தூர வீசப் போக, எல்லோரும் அவரது பக்தி விசேஷத்தைக் கண்டு வியந்தனர். பட்டர் ஒரு நாள் பகலெல்லாம்
வழிநடந்த களைப்பால் ஒருமரத்தடியில் நஞ்சீயர் மடியில் தலையை வைத்துக் கண்வளர்ந்தருள இரவு முழுவதும் அசையாமல் இருந்தார் என்பதும் இவரது ஆச்சார்ய பிரேமத்தின் சிறப்பினை நன்கு விளக்குகிறது.-நஞ்சீயர் வெகுநாள் வரை அருளிச் செயல்களின் வாசனையையும் அறியாதவரா யிருந்தும் பட்டரால் தடுத்தாட் கொள்ளப்பட்ட பின்னர் அவரது அருள் நோக்கால் திவ்யப் பிரபந்தங்களை ஒதித் தரித்து, அவற்றின் விசேஷார்த்தங்களை நிர்வஹிப்பதில் நல்ல விரகராய் இருந்தார் என்பது அதிசயிக்கத் தக்கதாகும். அவட்கு மூத்தோனை வெந்நரகம் சேராவகையே சிலை குனித்தான்’ என்ற பதத்திற்கு நஞ்சீயர் சாதாரணப் பொருள் கூற ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் இந்தப் பதத்திற்கு பட்டர் வெகு அழகாகப் பொருள் கூறுவர் என்று சொல்லி அவர் கூறும் பொருளைக் கூறவே, அதைக் கேட்ட ஜியர், இவ்வாறு பொருள் கூற வல்ல பட்டரை சேவிக்க வேண்டும் என்ற காதல் வளர்ந்ததாலேயே அவர் ஸ்ரீரங்கத்திற்கு வந்து பட்டரைக் கண்டு அவர் திருவடியில் சரணடைந்தார் என்று கூறுவர்.
இவரது திருஅவதார ஸ்தலம் மேல்நாட்டில் திருநாராயணபுரம். திரு நக்ஷத்திரம் விஜய வருஷம் பங்குனி மாதம் உத்தரம். குலம், வடமான். திருநாமங்கள் வேதாந்தி, நிகமாந்த யோகி ,ஸ்ரீமாதவர், நஞ்சீயர். இருப்பிடம் கோயில், ஆசார்யர் பெரிய பட்
டர். திருவாராதனம் கிருஷ்ண விக்ரகம் சிஷ்யர் நம்பிள்ளை. இவர் செய்தருளின கிரந்தங்கள். திருவாய்மொழிக்கு வியாக்யானம் 9000படி. திருப்பாவைக்கு வியாக்யானம் ஈராயிரப்படி திருப்பல்லாண்டு, கண்ணி நுண் சிறுத்தாம்பு திருவந்தாதிகளுக்கு உரை,
ரஹஸ்ய த்ரய விவரமான நூற்றெட்டு, ஸரணாகதி கத்ய வியாக்யானம், திருவாய்மொழி நூறுரு வியாக்யானம் செய்கையாலே நஞ்சீயர், ஸதாபிஷேகம் பண்ணினார் என்பது பிரசித்தம். இவர் தொண்ணூற்றஞ்சு திருநட்சத்திரம் வாழ்ந்திருந்தார் என்பன இவரைப் பற்றிய முக்ய குறிப்புகள்.
தெண்டிரை சூழ் திருவரங்கம் செழிக்க வந்தான் வாழியே.
சீமாதவனென்னும் செல்வனார் வாழியே.
பண்டை மறைத் தமிழ்ப் பொருளைப் பகர வந்தோன் வாழியே.
பங்குனியில் உத்தரதாள் பா ன் வாழியே.
ஒண்டொடியான் கலவி தன்னை ஒழித்திட்டான் வாழியே.
ஒண்பதினாயிரப் பொருளை ஓதுமவன் வாழியே.
எண்டிசையும் சீர் பட்டரிணை யடியோன் வாழியே–
நம்பிள்ளைக்குத் திருவவதார ஸ்தலம் சோழ மண்டலத்தில் நம்பூர். திருவவதார நக்ஷத்திரம் பிரபவ வருஷம் கார்த்திகை மாதம் கிருத்திகை.-குலம் – வடமான் குடி-நம்பூர். இவரது திருநாமங்கள் வரதராஜன்,திருக்கலிகன்றிதாஸர், கலிவைரிதாஸர், நம்பிள்ளை, லோகாசார்யார், ஜகதாசார்யார், உலகாரியர் முதலியன. தேவியர்கள் -ஸ்ரீரங்கநாச்சியாரும், ஆண்டாளுமாகும். இருப்பிடம். கோயில் திருவாராதனம் – வயலாலி மணவாளர். ஆசார்யர் – நம் ஜீயர்குமாரர் – ராமானுஜாசார்யார்.
நஞ்சீயர் சிஷ்யர்களில் முதன்மையானவர் நம்பிள்ளை. அவரது இயற்பெயர் நம்பூர் வரதராஜாசாரியார் என்பது. அவருக்கு நம்பிள்ளை என்ற பெயர் வரக்காரணம் வருமாறு:நஞ்சீயர், பட்டர் நியமனப்படி (உத்தரவின்) திருவாய்மொழியின் அர்த்தங்களை உபந்யாசம் செய்வதையே பொழுது போக்காகக் கொண்டு வாழ்ந்து வந்தார். திருவரங்கம் பெரியகோயிலில் அவரது உபந்யாசத்தைக் கேட்க வருபவர்களில் நம்பூர் வரதராஜாசார்யரும் ஒருவர். இவர் நீறு பூத்த நெருப்புப் போல இருந்த படியால் இவருடைய பக்தி ஞான வைராக்யம் போன்ற பெருமைகளை யாரும் அறியாதிருந்தனர். இப்படி யிருக்கையில் பட்டர், நஞ்சீயரிடம் திருவாய்மொழிக்குத் திருக்குருகைப்பிரான் பிள்ளானது(எம்பெருமானார் ஞானபுத்திரன்) ஆறாயிரப்படி வியாக்யானத்தை விட விரிவாக ஒரு வியாக்யானமிடும்படி கட்டளையிட்டபடியால், அதைச் செவ்வையாகப் பட்டோலை எடுக்கவல்லார் யாரென்று விசாரிக்க; அவரது அந்தரங்கர்கள் நம்பூர் வரதராஜாச்சாரியார் என்றொருவர் ஸ்வாமியின் காலட்க்ஷேப கோஷ்டிக்குத் தவறாது வருகிறார். அவர் நல்ல விரகர்,எழுத்திலும் வல்லவர். அவரைக் கொண்டு இப் பணியை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றனர். ஆகவே அவரை அழைத்துஆரார்ந்து பார்க்கையில் அவரது திறமை தெரிய வந்தது. அதனால் மகிழ்ந்த ஜீயர் அவரிடம் கருணை காட்டி தம்முடைய ஒன்பதினாயிரப்படியை வரியடைவே அவருக்கு விளக்கிக் காட்டி அதை எழுதித்
தரும்படி ஸ்ரீகோசத்தை அவரிடம் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்டு தம் ஊருக்குப் போகையில் வழியில் காவேரியில் நீந்திச் செல்கையில் அந்த ஸ்ரீகோசம் நெகிழ்ந்து விழுந்து வெள்ளத்தில் போய் விடவே மிகவும் வருந்தியவர், அந்த வியாகயானத்தைச் ஜீயர் சொல்லக் கேட்டிருந்தபடியால் அவரது கிருபையால், அவரது திருவடிகளைச் சிந்தித்துக் கொண்டே தம் நினைவிலிருந்தே பட்டோலை எடுத்து அந்த ஸ்ரீகோசத்தை ஆசாரியரிடம் சமர்ப்பித்தார். நான் கொடுத்த ஏடு எங்கே? என்று நஞ்சியர் கேட்கவே நடந்தவற்றை விவரிக்க வேண்டியதாயிற்று. பின்னர் நஞ்சியர் ஸ்ரீகோசத்தை விரித்துப் பார்க்கையில் தாம் அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்திகள் விடாமலும், தம்மிடம் அவர் கேட்டிருந்த அர்த்த விசேஷங்கள் ஈடும் பொருத்தமாக அமைந்தும் விரிவுமில்லாமல் இருந்த அழகுக்கு மிகவும் உகந்து ‘வாரீர் நம்முடைய பிள்ளையே” என்று எடுத்தணைத்துக் கொண்டார். அது முதல் நம்பிள்ளை என்றே இவர் அழைக்கப்பட்டார். திருக்கலிகன்றிதாசர் என்பதும் இவருக்கு நஞ்சீயர் சாத்தின திருநாமமாகும். திவ்யப் பிரபந்தங்களுக்கும் இதிகாச புராணாதிகளுக்கும் ஆழ்ந்த இன்சுவையே வடிவெடுத்த அர்த்தங்களை அருளிச் செய்வதில் இவருக்கு ஒத்தாரும் மிக்காரும் இல்லை என்று பெரிய வாச்சான் பிள்ளை போன்ற பிரபல வைஷ்ணவ சீலர்களும் கூறியுள்ளனர்.-லோகாச்சார்யார் என்ற திருநாமமும் இவருக்குண்டு. இவர் கோயிலில் வாழ்ந்த காலத்தில் சகல ஸ்ரீவைஷ்ணவர்களும் இவருடைய சீடர்களாகி ஸகல அர்த்தங்களையும் கேட்டு வந்தனர். நம்பெருமாள் கோஷ்டியோ, நம்பிள்ளை கோஷ்டியோ என்னும்படி ஸம்பத்துடன் வாழ்ந்து வந்தார்.அப்பொழுது முதலியாண்டான் பேரனான கந்தாடை தோழப்பர் தாம் வித்வானாயிருந்தும் தம்மிடம் யாரும் பாடங்கேட்க வரவில்லையே என்ற பொறாமையில் இழிந்த வார்த்தைகளால் பரிபவித்து விட்டுத் தன் வீட்டிற்குச் சென்றார். வீட்டில் அவருடைய மனைவியார் இப்படியும் ஆச்சாரியாரை நிந்திப்பீரோ? உமக்கு உய்வும் உண்டோ என்று பலவுஞ்சொல்லி அவரது தவறை உணர்த்த தோழப்பரும் நம்பிள்ளையிடம்
மன்னிப்புப் பெறவேண்டுமென்று காத்திருந்தார்.-அதற்குள் நம்பிள்ளை தாமே தோழப்பர் வீட்டிற்குச் சென்று தேவரீருடைய திருஉள்ளம் வருந்தும்படி நடந்துகொண்ட அடியேனுக்கு தேவரீருடைய மன்னிப்பைத் தவிர வேறு கதியில்லை என்று அவர் திருவடிகளில் விழுந்து வேண்டவே, தோழப்பர் அந்த சீல குணத்திற்கு வியந்து ஸ்வாமி இதுநாள் வரை நான் தங்களைச் சில பேர்களுக்கே ஆச்சாரியார் என்றிருந்தேன். இப்போது லோகத்துக்கெல்லாம் தேவரீர் ஆச்சாரியார் என்று அறிந்து கொண்டேன் என்றார்.-அது முதல் லோகாசார்யார் என்ற திருநாமமும் வழங்கி வந்தது.
துன்னு புகழ் கந்தாடை தோழப்பர் தம்முகப்பால்
என்ன உலகாரியனோ என்றுரைக்க – பின்னை
உலகாரியனென்னும் பேர் நம்பிள்ளைக்கு ஓங்கி
விலகாமல் நின்றது என்றும் மேல் (உ.தே.மா. 51)
பின்பழகராம் பெருமாள் ஜீயர். பெருந் திவத்தில்
அன்பதுவுமற்று மிக்க ஆசையினால் – நம்பிள்ளைக்கு
ஆன அடிமைகள் செய் அந் நிலையை நன்னெஞ்சே
ஈனமற எப்பொழுதும் ஓர் (உ.தே.மா.66) -நம் பிள்ளைக்குப் பல சிஷ்யர்கள் இருந்த போதிலும், பின்பழகிய பெருமாள் ஜீயர் பக்தி ஒப்பற்றது.
இப்பேராசிரியரிடம் சகல அர்த்தங்களையும் கேட்டுத் தரித்த வடக்குத் திருவீதிப் பிள்ளையும் பெரியவாச்சான் பிள்ளையும் உலகுக்குச் செய்திருக்கும் உபகாரம் நிகரற்றது. பட்டர் ஸந்ததியில் தோன்றிய மகா வித்வான் நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டரும், தோழப்பரைப் போலவே பொறாமை கொண்டிருந்தார். அவர் ஒரு நாள் ராஜ சபைக்குச் சென்றிருந்த பொழுது, அந்த ராஜா ‘ஸ்ரீராமன் தன்னுடைய பரத்வத்தை மறைத்துக் கொண்டு மனிதனாக அவதரித்திருக்கையில் ஜடாயுவுக்கு முக்தியளித்தது எவ்வாறு பொருந்தும் என்று கேட்க விடையளிக்க முடியாமல் ஆலோசிக்க வேண்டியதாயிற்று. அந்நேரத்தில் ௮ங்கு வந்த ஒரு ஸ்ரீவைஷ்ணவரிடம் இந்தக் கேள்விக்கு நம்பிள்ளை எப்படிப் பதிலளிப்பார் என்று கேட்டார். ஏனெனில் அந்த ஸ்ரீ வைஷ்ணவர் நம்பிள்ளையிடம் அந்த விஷயங்களை ஏற்கெனவே கேட்டறிந்தவர். அவர் ‘ஸத்யேக லோகாந் ஜயதி’ என்ற ஸ்லோகத்தைக் கொண்டு பதிலளிப்பார் என்று சொல்ல, அதை மனதில் நன்றாக வாங்கிக் கொண்டு ராஜாவுக்கு விடை யளித்தார். அரசனும் மிகவும் மகிழ்ந்து விசேஷமாகப் பரிசுகள் வழங்கினான். அவற்றை நம்பிள்ளை திருவடிகளில் அர்ப்பணித்து தேவரீருடைய சிந்திப்போன ஸ்ரீ ஸூக்த்திகளில் ஒரு சொல்லுக்குப் பெற்ற பரிசு இது. இதைத் தாங்கள் அங்கீ கரித்து என்னை வாழ்விக்க வேண்டுமென்று பணிவுடன் வேண்டினார். நம் பிள்ளையும் அவரையும் தம் கோஷ்டியில் சேர்த்துக் கொண்டு உய்வித்தார். நடுவில் திருவீதிப்பிள்ளை நம்பிள்ளையின் விஷயார்த்தங்களை விளக்கி ஒரு லட்சம் கிரந்தம் எழுதியிருந்தார். ஆனால் அதை நம்பிள்ளை பிரசாரத்திற்கு அனுமதிக்கவில்லை. நம் பிள்ளையின் அர்த்த விசேஷங்கள் திவ்யப்பிரபந்த வியாக்யானங்களிலும் வார்த்தாமாலை முதலியவற்றிலும் பாக்யசாலிகளால் உய்த்து உணரப்படுகின்றன.
இந்திரன் வார்த்தையு நான்முகன் வார்த்தையு மீசனுடன்
கந்தன் சொல் வார்த்தையுங் கற்பவ ராரிந்தக் காசினிக்கே
நந்தினமுத்தெறி நம்பூர் வரதர் தம் மாளிகையிற்
சிந்தின வார்த்தை கொண்டே சில நாடு திரை கொள்ளுவரோ -என்று -நம்பிள்ளை வைபவத்தை ஸ்ரீபாதத்து முதலிகள் அனுசந்தித்தனர்.
வாழி பதின்மருடன் ஆண்டாள் மதுரகவி
வாழிய நாதன்முதலா மாமறையோர் – வாழி
யொருக் கோலரை நெருக்கி வேட்டு மெதிராசன்
திருத்தாள் வணங்கினார் சீர்.
தேமருவும் செங்கமலத் திருத்தாள்கள் வாழியே.
திருவரையில் பட்டாடை சேர் மருங்கும் வாழியே.
தாம மணி வடமார்பும் புரிநூலும் வாழியே.
தாமரைக்கை இணையழகும் தடம்புயமும் வாழியே.
பாமருவுந் தமிழ் வேதம் பயில் பவளம் வாழியே.
பாடியத்தின் பொருள் தன்னைப் பகர் நாவும் வாழியே.
நாமநுதல் மதிமுகமும் திருமுடியும் வாழியே.
நம்பிள்ளை வடிவழகும் நாடோறும் வாழியே.
மாதகவா வெவ்வுயிர்க்கும் வாழ்வளித்தான் வாழியே.
மதிஅரங்க ரோலக்கம் வளர்த்திட்டான் வாழியே.
நாதமுனி யாளவந்தார் நலம் புகழ்வோன் வாழியே.
நம்பிள்ளை திருவடிகள் நாடோறும் வாழியே.
காதலுடன் நஞ்சீயர் கழல் தொழுவான் வாழியே.
கார்த்திகை கார்த்திகை யுதித்த கலிகன்றி வாழியே.
போதமுடன் ஆழுவார் சொற் பொருளுரைப்போன் வாழியே.
பூதூரன் பாடியத்தைப் புகழுமவன் வாழியே.
பெரியாழ்வாரைப் போல ஆனியில் சோதியில் அவதரித்தவர் இவர். ஸ்ரீவசன பூஷணம், முழுக்ஷப்படி முதலிய அஷ்டதச ரகஸ்யங்களை அருளிச்செய்த பிள்ளை லோகாசாரியருக்கும் ஆச்சார்ய ஹிருதயம் அருளிச் செய்த அழகிய மணவாளப் பெருமாள் நாயனாருக்கும் திருத்தந்தையார் இவர், இவருடைய இயற்பெயர் ஸ்ரீ கிருஷ்ண மஹாகுரு என்பது. இந்தத் இருநாமமே பெரியவாச் சான் பிள்ளை என்ற மற்றொரு ஆச்சாரியருக்கும் இருந்ததால், நம்பிள்ளை சிஷ்யர்களான இவர்களுக்குள் வாசி (வித்யாசம்) தெரிவதற்காக இவர் வடக்குத் திருவீதிப்பிள்ளை என அழைக்கப் பட்டார். திருவரங்கம் பெரிய கோயிலில் வடக்குத் திருவீதியில் வாழ்ந்து வந்ததே இப் பெயர் வந்ததற்குக் காரணம். இவருடைய ஞானப்பெருமைகள் மிகப்பல. பகவத் விஷயமென வழங்கப்படுகிற (திருவாய்மொழி வியாக்யானமான) ஈடு 36,000 படியை இவரே பட்டோலை கொண்டவர்.
தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறிதன்னை,
வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை
இந்த நாடறிய மாறன் மறைப்பொருளை நன்குரைத்தது
ஈடு முப்பத்தாறாயிரம்
நம் பிள்ளை அருளிய ஈடு சொல் நயமும் பொருளாழமும் உடையது. ஈட்டின் (பங்க்தி ஸந்நிவேசம்) விளக்கம் வேறு எந்தக் கிரந்தத்தலும் கண்டறியாததும் காண முடியாததுமான அத்வீதிய விலக்ஷண சந்தர்ப்பம். தமிழ் வித்வான்௧ஞம் ஸமஸ்க்ருத வித்வான்களும் தனித்தனியே உள் குழையத் தக்க உயர்ந்த ரசனாவிசேஷம். ககனம், ககநாகாரம், ஸாகரஸ் ஸாக ரோபம்” என்கிறாப் போல ஈட்டுக்கு ௨வமை ஈடே. பெரிய புலவர்கள் பத்தெட்டு வரிகளில் எழுத வேண்டியவற்றை ஒரு வரியில் கம்பீரமாக அடக்கி எழுதும் திறன் இவ்வாசிரியர்க்கே அமைந்தது.-மணவாள மாமுனிகள் இவ்வாகிரியரை வள்ளல் என்று
குறிப்பிடுகிறார். திருக்குருகைப்பிரான் பிள்ளான் அருளிய ஆறாயிரப்படி வியாக்யானம் நஞ்சியர் அருளிய ஒன்பதினாயிரப்படி வியாக்யானம் இருந்த போதிலும் ரசிகர்களுக்குப் பரிபூரணத் திருப்தியை விளைவிக்கப் போதாதவை. நம்பிள்ளை தம் நல்லருளால் ஏவி விட பெரியவாச்சான் பிள்ளை யருளிய 24,000 படி வியாக்யானம் சிறிது விரிவாக இருக்கும் -, ஸ்ரீ ராமாயணம் போன்ற இதிகாஸ புராணங்களிலிருந்து மேற்கோளாக ஸ்லோகங்கள் எடுத்துக் கையாளப்பட்டிருப்பதாலும் இது சிறப்படைந்துள்ளது. திருவிருத்தத்துற்கும் ஈடு வியாக்யானம் அருளி யுள்ளார். தவிர அஷ்டாக்ஷர தீபிகை என்ற கிரந்தமும் இவ்வாசிரியரது படைப்பு என்று தெரிய வருகிறது. இவையெல்லாவற்றிற்கும் மேலாக உலகுக்கெல்லாம் உயிரான பிள்ளை லோகாச்சாரியாரையும், அவர் தம்பி அழகிய மணவாளப்பெருமாள் நாயனாரையும் பெற்றுக் கொடுத்தருளியதேயாகும்.
ஆனிதனில் சோதிநாள் அவதரித்தான் வாழியே.
ஆழ்வார்கள் கலைப்பொருளை ஆய்ந்துரைப்போன் வாழியே,
தாணுகந்தநம்பிள்ளை தாள் தொழுவோன் வாழியே.
சடகோபன் தமிழ்க்கீடு சாற்றினான் வாழியே.
நானிலத்தில் பாடியத்தை நடத்தினான் வாழியே.
நல்ல உலகாரியனை நமக்களித்தான் வாழியே.
ஈனமற எமையாளும் இறைவனார் வாழியே.
எங்கள் வடவீதிப்பிள்ளை இணையடிகள் வாழியே.
பிள்ளை லோகாச்சாரியாரும் அவர் தம்பி அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் நைஷ்டிகப் பிரமச்சாரிகள். ஐப்பசியில் திருவோணத்தவதரித்த பரம காருணிகரான இவர் கிருபா மாத்ரப் பிரஸந்நாச்சாரியார். அனுவர்த்தப் பிரஸன்னாச் சாரியர்களைப் போலன்றி
சிஷ்யப் பிரார்த்தனையைச் சிறிதும் எதிர் பார்க்காமல் பயனன்றாகிலும், பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்தப் பணி கொள்பவர்கள். நமது ஆச்சார்ய கோஷ்டியில் எம்பெருமானாரே முதல் கிருபா மாத்ரப் பிரசன்னாசாரியார் ஆவர். அவர் பிரஹ்ம ஸூத்திரத்திற்கு (பாஷ்யம்) அர்த்தத்தை விளக்கும் நூல்கள் எழுதியபோதிலும் ரகஸ்யார்த்த விவரணமாக ஒரு சிறு நூலும் எழுதவில்லை.பின்னால் இன்னுமொரு திருக் கோலம் பூண்டு (மணவாள மாமனிகளாக) செய்யலாம் என்று விட்டு விட்டார் போலும். அக்குறையைத் தீர்க்கவே பிள்ளை லோகாச்சாரியார் தோன்றி ஸ்ரீ வைஷ்ணவ மண்டலிக்கு பேருபகாரம் செய்துள்ளார். இவர் தகப்பனார் இவருக்குத் தமது ஆச்சாரியரான நம் பிள்ளையின் பெயரான உலோகாச்சாரியார் என்றே திருநாமம் சாத்தினார். வாசி தெரிவதற்காக பிள்ளைலோகாச்சாரியார் என்று வழங்குதல் நிகழ்ந்தது என்பதை உபதேச
ரத்ன மாலையில்.
பின்னை வடக்குத் திரு வீதிப்பிள்ளை – அன்பால் அன்ன திருநாமத்தை ஆதரித்து – மன்னு புகழ். மைந்தர்க்குச் சாற்றுகையால் வந்து பரந்தது எங்கும்
இந்தத் திருநாமம் இங்கு (உ.தே.மா. 52) -என்கிறார்.
இவர் அருளிச் செய்த நூல்கள் அஷ்டாதச ரகஸ்யம். அவற்றுள் ஸ்ரீவசன பூஷணம், தத்வத்ரயம், முமுக்ஷப்படி என்ற மூன்றும் ஸூத்திர வடிவில் அமைந்தவை. ஸ்ரீவசன பூஷணத்தின் பெருமையை, மணவாள மாமுனிகள் உபதேச ரத்னமாலையில் ஏழு பாசுரங்களில் கொண்டாடியுள்ளார். ஆசார்ய பரம்பரப் பிராப்தமான அர்த்தங்களில் முன்னோர்கள் ரகசியமாக உபதேசித்துப் போந்தமையால், அந்த அர்த்த விசேஷங்களை பின்புள்ளோர் இழக்க ஒண்ணாதபடி தன்னுடைய கிருபையோடு பெருமாளும் ஸ்வப்பனத்தில் நியமித்தபடியால் ஸ்ரீவசன பூஷணமாகிய பிரபந்தத்தை அருளிச் செய்தவர். முன்பே பேரருளாளப் பெருமாள் கிருபையால் மணப் பாக்கத்தில் இருப்பாரொரு நம்பியாருக்கு விசேஷக் கிருபை பண்ணி தஞ்சமாயிருப்பதான சில விசேஷ அர்த்தங்களை விளக்கி, அவரைத் திருவரங்கத்தில் போய்க் காத்திரும், அங்கு நாம் உமக்கு விசேஷ அர்த்தங்களைச் சொல்லுவோம் என்று அருளினார்.-ஆகவே அவரும் திருவரங்கத்தில் ஏகாந்தமாக ஒரு கோயிலிலே காத்திருந்தார், பிள்ளை லோகாச்சாரியாரும் அந்த இடத்திற்கு வந்து ரகஸ்யார்த்தங்களை அருளிச் செய்து கொண்டிருந்தார்.-கோயிலிலிருந்த நம்பியும் வெளியே வந்து அவர் பாதங்களில் தண்டனிட, அவரும் மிகவும் மகிழ்ந்து முன்னரே காஞ்சியில் வாக்களித்தபடி அவரையும் தம் சீடராகக் கொண்டு பெருமாள் கட்டளைப்படி பிரபந்தமிட்டருளினார் என்பது பிரசித்தம் என்பவை மணவாள மாமுனிகள் வியாக்யானம்.திவ்யப் பிரபந்தங்களுக்கோ ஸ்தோத்ரங்களுக்கோ உரையிடாமல் (அஷ்டதச ரகஸ்யங்கள்) பதினெட்டு ரகஸ்யங்களை அருளிய இவர் இந்த நூல்களில் விசிஷ்டாத்வைத ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தக் கொள்கைகளையும் திவ்யப் பிரபந்த வியாக்யாதாக்கள் அருளிய ரஹஸ்ய கிரந்தங்களையும் விரிவாக விளக்கி யுள்ளார். வாழ் நாள் முழுவதும் திருமணமும் செய்து கொள்ளாமல், வைஷ்ணவ தர்சனத்துக்காகவே வாழ்ந்து முகமதியர் படையெடுப்பின்போது அரங்கனைக் காப்பாற்றுவதற்காக உயிரையும் அர்ப்பணித்த மஹானுபாவர் இவர்,அன்ன புகழுடும்பை அண்ணல் உலகாசிரியன் இன்னருளால் செய்த கலையாவையிலும் – உன்னில் திகழ் வசன பூடணத்தின் சீர்மை ஒன்றுக்கில்லை புகழல்ல இவ்வார்த்தை மெய் இப்போது (உ.தே.மா. 53)இவரது அஷ்ட தச ரகஸ்யங்களில் பல இவரது தம்பியாலும்,நாயனாராச்சான்பிள்ளை (சமகாலத்தவர்)யாலும் அடுத்து வந்த மணவாள மாமுனிகளாலும் தமது நூற்களில் மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ள. ஆகவே அஷ்டதச ரகஸ்ய நூல்களில், பல அவற்றின் ஆசிரியர் காலத்திலேயே மிகப்புகழ் பெற்று விட்டன எனத் தெரிகிறது. இந்நூல்களில் முமுஷுப்படியே காலத்தால் முற்பட்டது.-சிறப்பால் முற்பட்டதுமாகும் எனத் தெரிகிறது. பிள்ளை லோகாச்சாரியார் தாமே தமது ரகஸ்யங்கவில் முற்பட்டவை சிலவற்றைப் பிற்பட்ட ரகஸ்யங்களில் குறிப்பிட்டுள்ளதாகச் சொல்கிறார். மணவாள மாமுனிகள் உபதேச ரத்னமாலையில் அன்ன புகழ் முடும்பை அண்ணல் உலகாசிரியன் இன்னருளால் செய்த கலை யாவையிலும், திகழ் வசன பூடணத்தின் சீர்மை ஒன்றுக்கில்லை இவ்வார்த்தை மெய் இப்போது என்று தொடங்கி உ.தே.மா.(59-59) முடிய 7 பாசுரங்களால் பிள்ளை லோகாச்சாரியார் அருளிய ரகஸ்யக் கிரந்தங்கள் அனைத்திலும் தலைசிறந்தது ஸ்ரீவசன பூஷணமே என்று நிரூபிக்கிறார்.-ஆக பதினெட்டு ரகஸ்யங்கவில் உரையிடுவதன் மூலமும் மேற்கோள் காட்டுவதின் மூலமும் மற்ற ஆசார்யர்களால் கையாளப்பட்டிருப்பவை முறையே 1) முமுஷுப்படி 2) தத்வத்திரயம்,3] ஸ்ரீ வசன பூஷணம், 4) ஸார ஸங்கரஹம், 5) நவரத்ன மாலை,6) யாத்ருச்சிகப்படி, 7) பரந்தபடி, 8) ஸ்ரீயப்பதிப்படி, 9) தத்வ சேகரம், 10) அர்ச்சசாதி ஆகியவை பிள்ளை லோகாச்சாரியராலேயே குறிப்பிடப்பட்டவை. பிரபந்ந பரித்ராணம், தத்வ சேகரம், அர்ச்சராதி பிள்ளைலோகம் ஜீயர் உரையிட்டது. அர்த்த பஞ்சகம் அழகிய மணவாள நாயனாரால் எடுத்தாளப்பட்டது. முன்னோர்களால் கையாளப்பட்ட இந்த ரகஸ்யங்களுடன், ஸம்ஸார ஸாம்ராஜ்யம்,நவவித ஸம்பந்தம், தனித் த்வயம், தனிப் பிரவணம் என்னும் நான்கையும் சேர்த்து நெடுங்காலமாகப் பிள்ளை லோகாச்சாரியார் அருளிய அஷ்டதச ரகஸ்யம் என்று சொல்லப்பட்டு வருகிறது.-இவை தவிர இவர் தனிச்சுலோகமும் கத்ய வியாக்யானமும் அருளியிருப்பதாக மாமுனிகள் மேற்கோள் காட்டுகிறார். ஆனால் அவை இப்போது கிடைக்கவில்லை.
அத்தகிரியருளாள ரனுமதியோன் வாழியே.
ஐப்பசியில் திருவோணத்தவதரித்தான் வாழியே.
முக்திநெறி மறைத்தமிழால் மொழிந்தருள்வோன் வாழியே.
மூதரிய மணவாளன் முன்புதித்தான் வாழியே.
நித்தியம் நம்பிள்ளை பதம் நெஞ்சில் வைப்போன் வாழியே.
நீள்வசன பூடணத்தால் நியமித்தான் வாழியே.
உத்தமமாம் முடும்பை நகருதித்த வள்ளல் வாழியே.
உலகாரியன் பதங்கள் ஊழிதோறும் வாழியே.
நம்பிள்ளை சீடர்களில் பெரியவாச்சான் பிள்ளை, நடுவில் திருவீதிப்பிள்ளை, ஸ்ரீ கிருஷ்ண என்னும் வடக்குத் திருவீதிப்பிள்ளை, பின்பழகிய பெருமாள் ஜீயர், ஈயுண்ணி மாதவப் பெருமாள் முதலியோர் முக்கியமானவர்கள். இவர்களில் பின்பழகிய பெருமாள் ஜீயர், ஊணும் உறக்கமுமின்றியே பிள்ளை திருவடிகளிலே வழுவிலா அடிமை செய்து கொண்டு வாழ்ந்திருந்தார். இங்கனம் மிருக்கையில் பிள்ளையிடம் இவ்வாத்மாவுக்கு, ஸ்வரூப, உபாய, புருஷார்த்தங்கள் எவையென்று அருளிச் செய்ய வேண்டுமென்று விண்ணப்பிக்க, பிள்ளை இச்சை ஸ்வரூபம், இரக்கமே உபாயம், இனிமை உபயம் என்று அருளிச் செய்ய, அதை மறுத்து ஜீயர், தேவரீர் திருவடிகளே தஞ்சமென்றிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு, அடிமையாய் இருக்கையே ஸ்வரூபம், அவர்களது அபிமானமே உபாயம் அவர்களது முக மலர்ச்சியே உபேயம் என்று நினைத்திருப்பேன் என்றார். பின்பழகிய பெருமாள் ஜீயர் திருநட்சத்திரம் ஐப்பசி சதயம். அவர் அருளிய கிரந்தம் குரு பரம்பராப் பிரபாவம் என்பது.
அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் வடக்குத் திருவீதிப் பிள்ளையின் இரண்டாவது குமாரர். இவர் பிறந்த நட்சத்திரம் மார்கழி அவிட்டம். இவரது ஆச்சாரியார் இவரது தமையனார் பிள்ளை லோகாச்சாரியார். இவர் அருளிய கிரந்தம், ஆசார்ய ஹிருதயம், திருப்பாவை வியாக்யானம், திருவந்தாதி; கண்ணி நுண் சிறுத்தாம்பு வியாக்யானம், அருளிச் செயல் ரகஸ்யம் முதலியன. இவர் சிஷ்யர் கூர குலோத்தம தாஸர்.
பெரிய வாச்சான்பிள்ளை கிபி. 1167ல் பிறந்தார் அவதார ஸ்தலம், சோழ நாட்டுச்
சங்கநல்லூர், நட்சத்திரம் ஸர்வஜித் ஆவணி மாத கிருஷ்ணாஷ்டமி ரோஹிணி. குலம் பூர்வசிகை. இவர் தகப்பனார் யாமுனா தேசிகர். தாயார் நாச்சியாரம்மன். இவரது இதர திரு நாமங்கள் பெரியவாச்சான் பிள்ளை, அபயப் ப்ரத ராஜர், ஸ்ரீமத் கிருஷ்ணர் முதலியன.
திருவாராதனம்: கிருஷ்ண விக்கிரஹம். இருப்பிடம்: பெரியகோயில். இவர் செய்தருளின கிரந்தங்கள் திருவாய்மொழி 24,000 படி.-மற்ற பிரபந்தங்களுக்கும் அவர் ஒருவரே வியாக்யானம் செய்தவர்.-ஆகவே ஸ்ரீரங்கநாதனால் அபயப் ப்ரதராஜா என்று அழைக்கப்பட்டார். ஸகல பிரமாணதாத்பர்யம், உபகார ரத்னம் கத்ய த்ரய வியாக்யானம், அபயப் பிரதான வியாக்யானம், சரம ரஹஸ்யம், அனுசந்தான ரஹஸ்யம், நியமனப்படி, மாணிக்கமாலை, நவரத்ன மாலை, ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னம், முதலியன. இவர் 95 வருடம் வாழ்ந்திருந்தார். இவரது சிஷ்யர்கள் பரகால தாஸர், பின் பழகிய
பெருமாள் ஜீயர், ஸ்ரீ ரங்காச்சாரியார் முதலியோர்.
ஸ்ரீ ராமாயாண விசேஷார்த்தங்களை தனிச்சுலோக வியாக்யானமாகவும் அருளி ஸ்ரீராமாயணப்பெருக்கர் என்று புகழ் பெற்றவர்.-கலிகன்றியாகிய திருமங்கையாழ்வார், கலிகன்றிதாஸரான நம்பிள்ளையாகவும் கிருஷ்ண பரமாத்மாவுக்குச் சமானமாக (கிருஷ்ணஸுரி) எனும் பெரியவாச்சான் பிள்ளையாகவும் அவதரித்தனர்
என்பர் பெரியோர். நம் பிள்ளைக்குப் பின்னர் ஸ்ரீரங்கத்தில் தர்ஸனம் நிர்வகித்தவர் இவரே. இவரது தீர்த்தம் இறந்த காலம் (கி பி.1262) எனக் கொள்ளலாம்.
நஞ்சீயர் செய்த வியாக்கியைகள் நாலிரண்டுக்கு
எஞ்சாமை யாவைக்குமில்லையே – தம் சீரால்
வைய குருவின் தம்பி மன்னு மணவாளமுனி
செய்யுமவை தாமும் சில. (உ.தே.மா. 47).
பெரியவாச்சான் பிள்ளை பின்புள்ள வைக்கும்
தெரிய வியாக்கியைகள் செய்வரால் – அரிய
அருளிச் செயற் பொருளை ஆரியர்கட்கு இப்போது
அருளிச் செயலாய்த் தெரிந்து (உ.தே.மா. 46)-என்று மாமுனிகள் அருளிச் செய்தபடி இவராலேயே பின்புள்ளோர் அனைவரும் அருளிச் செயலின் பொருளை யறிந்து ஆசார்ய பதம் நிர்வஹித்தார்கள்.
தன்மை சிங்கம் ரோகினிநாள் தழைக்க வந்தோன் வாழியே.
தாரணியில் சங்கநல்லூர் தானுடையோன் வாழியே.
பூன்மை தவிர் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே.
பூதூர் எதிராசர்தாள் புகழுமவன் வாழியே.
மன்புகழ்சேர் சடகோபர் வளமுரைப்போன் வாழியே.
மறைநாலின் பொருள்தன்னைப் பகுத்துரைத்தோன் வாழியே.
அன்புடன் உலகாரியர் தம் அடியிணையோன் வாழியே.
அபயப்ரதராசர் தாள் அனவரதம் வாழியே.
வாதிகேஸரி அழகிய மணவாளப் பெருமான் ஜீயர்-அவதாரஸ்தலம் தென் தேசத்தில் பிரமதேசம் மன்னார் கோவில். இவரது திருநட்சத்திரம் ஆனிமாதத்து ஸ்வாதியாகும்.-பஞ்ச ஸமஸ்காரங்களும், நித்யானுசந்தானங்களும் அருளிய ஆச்சாரியார் பெரியவாச்சான் பிள்ளை. திருவாய்மொழி முதலிய பிரபந்தங்களும் ஈடு முதலான வியாக்யானங்களும் ஸ்ரீ பாஷ்யாதி கிரந்தங்களும் தத்வத்ரயாதி ரஹஸ்யங்களும் அருளியவர் நாயனாராச்சான் பிள்ளை. திருவாராதனம். அழகிய சிங்கர். இருப்பிடம்-கோயில். சிஷ்யர் திருமாலை யாண்டான். பின் சென்ற வில்லி ஜீயர்-
அருளிச் செயல்கள். திருவிருத்தத்துக்கு உரை (பாவனத்வ பிரபோதகை)-திருவாய்மொழிக்கு உரை 18,000 படி. இருபத்தி நாலாயிரப் பிரமாணத் திரட்டு, கீதா சாரம், சதுஸ்லோகி , தமிழ்க்கவி-முதலியன இவரது திருநாமங்கள்; வரதராஜர் சுந்தர ஜாமாத்ரு முனி முதலியன.
நாயனாராச்சான் பிள்ளை-பெரியவாச்சான் பள்ளியின் தத்து புத்திரர். இவரது அவதாரஸ்தலம் சங்க நல்லூர்.-செய்தருளிய கிரந்தங்கள் ஜ்ஞாநார்ணவம்,
தத்வத்ரய விவரணம் சரமோபாய நிர்ணயம், முக்த போகாவளி-முதலியன.
ஓராண் வழி ஆசார்யர் வரிசையில் பிள்ளை லோகாசாரியரை யடுத்து வருபவர் கூர குலோத்தம தாசர். இவரது திருவவதார ஸ்தலம்-கோயில். இருப்பிடம் கோயில். குலம் பூர்வசிகை. திருநக்ஷ்த்திரம்-ஐப்பசி மாதம் திருவாதிரை. பஞ்ச ஸம்ஸ்காரங்களும் நித்யானுசந்தானங்களும் சாதித் தருளியவர் ஆசார்யார் வடக்குத் திருவீதிப்
பிள்ளை. திருவாய்மொழி முதலான பிரபந்தங்களும் ஈடு முதலான
வியாக்யானங்களும் ஸ்ரீ பாஷ்யாதி கிரந்தங்களும் சாதித்தருளியவர்
ஆசார்யார் பிள்ளை லோகாச்சாரியார், தத்வத்ரயாதி ரஹஸ்யங்களும், ஸகல ரஹஸ்யார்த்தங்களும் அருளியவர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாராசார்யர். திருவாராதனம் ஸ்ரீரங்கராஜர்,
சிஷ்யர்கள், திருவாய்மொழிப்பிள்ளை, மணவாள மாமுனிகள் (பெரிய ஜீயர்) முதலானவர்கள்.
சந்ததமுமாழ்வார்கள் தமிழ் வளர்த்தோன் வாழியே.
தாரணியிற் சிறுநல்லூர் தானுடையோன் வாழியே.
எந்தை உலகாரியனை யிறைஞ்சுமவன் வாழியே.
இலகு துலா ஆதிரையிலிங்குதித்தான் வாழியே.
இந்த வுலகத்தோர்க்கிதமுரைத்தோன் வாழியே.
எழில் வசனபூடணத்துக்கினிமை செய்தான் வாழியே.
குந்திநகர் சிந்தை கொண்ட செல்வனார் வாழியே.
கூரகுலேத்தமதாசர் குரைகழல்கள் வாழியே.
திருவாய்மொழிப்பிள்ளை அவதாரஸ்தலம் பாண்டிய நாட்டிலுள்ள குந்திகை .
இவரது நட்சத்திரம் விபவ வருஷம் வைகாசி விசாகம். இவரது திருநாமங்கள் திருமலை யாழ்வார், திருவாய்மொழிப்பிள்ளை, ஸ்ரீசைலேசர் முதலியன. பஞ்ச ஸம்ஸ்காரங்களும் பிரபந்தங்களும் அருளியர் இவரது ஆச்சாரியார் பிள்ளை லோகாச்சாரியார். ஈடு முதலான பகவத் விஷயங்களை அருளியவர், நாலூராச்சான் பிள்ளை, கூரகுலோத்தமதாஸர், விளாஞ்சோலைப் பிள்ளை முதலானோர். இவர் அருளிய வியாக்யானம் பெரியாழ்வார் திருமொழி.
இருப்பிடம் திருநகரி. இவர் செய்த கைங்கர்யம் ஆழ்வார் திருநகரி கோயில் ஜீரணோத்தாரணம் (புதுப்பிக்கப்படுதல்) இவர் சிஷ்யர்கள், பெரிய ஜீயர் (மணவாளமாமுனி) எம்பெருமானார் ஜீயர், சடகோப ஜீயர் முதலானோர். இவர் 105 ஆண்டுகள் வாழ்ந்திருந்தார்..
வையக மெண்சடகோபன் மறைவளர்த்தோன் வாழியே.
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே.
ஐயணருண் மாரிகலை ஆய்ந்துரைப்போன் வாழியே.
அழகாரு மெதிராசரடி பணிவோன் வாழியே.
துய்யவுலகாரியன் தன் துணைப்பதத்தோன் வாழியே.
தொல்குருகா புரியதனைத் துலக்கினான் வாழியே.
தெய்வநகர் குந்திதன்னில் சிறக்க வந்தோன் வாழியே.
திருவாய்மொழிப்பிள்ளை திருவடிகள் வாழியே.
மணவாள மாமுனிகள் (பெரிய ஜீயர்)அவதாரஸ்தலம் பாண்டிநாட்டில் உள்ள கடாரம் என்ற ஊர். இவரது திருநட்சத்திரம் ஐப்பசியில் திருமூலம். இவரது திருஅவதாரத்தை எம்பெருமானாரது இரண்டாவது அவதாரம் என்பர். இவரது திருத்தகப்பனார் பிள்ளை லோகாச்சாரியாரது சிஷ்யரான திகழக்கிடந்தான். திருநாவீறுடைய பிரான் தாதரண்ணன். தாயார் ஸ்ரீ ரங்கநாச்சியார். திருத்தம்பியார் திருமலையாழ்வார். இருப்பிடம் கோயில். திருவாய்மொழி முதலான பிரபந்தங்களும் ஈடு முதலான வியாக்யானங்களும் அருளியவர் திருவாய்மொழிப்பிள்ளை. ஸ்ரீ பாஷ்யாதி. கிரந்தங்களை அருளியவர் கிடாம்பி திருமலை ஐயங்கார், கூரகுலோத்தமதாஸர் முதலியோர். இவரது திருவாராதனப் பெருமாள் ஸ்ரீ ரங்கராஜர். இவரது திரு நாமங்கள்-பெரிய ஜீயர், மணவாள மாமுனி, இராமானுசன் பொன்னடி,யதீந்திர பிரவணர், வரயோகி, வரவரமுனி போன்று பதினொரு நாமங்கள். இவர் அருளிய கிரந்தங்கள் முறையே தத்வத்ரயம்,ரகஸ்யத்திரயம், ஸ்ரீவசன பூஷணம், ஆசார்ய ஹிருதயம் ஞானசாரம், பிரமேயசாரம், பெரியாழ்வார் திருமொழி, திருவாய்மொழி நூற்றந்தாதி ஆகிய எட்டுப் பிரபந்தங்களுக்கு வியாக்யானமும், ஈட்டுக்கு பிரமாணத்திரட்டு, (ஆறாயிரம்) தத்வத் திரயம் பிரமாணத் திரட்டு, ஸ்ரீவசன பூஷண பிரமாணத் திரட்டு, ஆர்த்தி பிரபந்தம் – யதிராஜவிம்ஸதி, உபதேசரத்னமாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி திருவாராதன கிரமம் முதலான பிரபந்தங்கள் முதலியன.எம்பெருமானாருடைய புனரவதாரமான பெரிய ஜீயர்,பூப் பிரதட்சணம் பண்ணி அனேக ஸ்தலங்களில் உள்ள கோயில்களுக்கு ஜீரணோத்தாரணம் பண்ணி யருளினார். திருநகரியில் திருவாய்மொழிப் பிள்ளைக்குத் தன்னுடைய நிஜஸ்வரூபமான ஸேஷாவதாரத்தைக் காட்டினார். பரமத நிரஸன சுப மத ஸ்தாபனம் பண்ணினார். (பிற மதங்களைக் கண்டித்து வைஷ்ணவக் கொள்கைகளைப் பரப்பினார்) ஸர்ப்பாதி ஸ்தாவர ஜங்கமாதிகளுக்கு மோக்ஷம் சாதித்தருளினார். வடமதுரையில் ஜீரணோத்தாரணம் பண்ணினார். நம்
பெருமாளுக்கு ஒரு வருஷமாக திருவாய்மொழி ஈடு விண்ணப்பஞ் செய்கையாலே பெரிய ஜீயர் என்று நம் பெருமாள் திருநாமம் சாத்தியருளினார்.ஆகவே இவர் எல்லோருக்கும் உத்தேஸ்யர் (தலைமையானவர்) இவர் திரு மேனி ஸ்வேதவர்ணம், (வெள்ளை) ஆகையால் வெள்ளை ஜியர் என்ற திருநாமமுண்டு. இவரது திருவடிகளை ஆஸ்ரயித்தவர்கள் வானமாமலை ஜீயர், பத்தங்கி பரவஸ்நு, பட்டர்பிரான் ஜீயர், திருவேங்கட ஜீயர், கோயில் கந்தாடையண்ணன், பிரதிவாதி பயங்கர மண்ணா, எறும்பியப்பா, அப்பிள்ளை,அப்பிள்ளான். இவரெல்லாரும் அஷ்ட திக்கஜங்கள், சேனை முதலியாண்டான் நாயனார், நாலூர் சிற்றாத்தான், கந்தாடை போரேற்று நாயன் போன்றவர்கள் நவரத்னங்கள். திருப்பாணாழ்வார் தாஸர், வடுகநம்பி ஜீயர், நாயனார் தொடக்கமானவர்கள்-சிஷ்யர்கள், கோயில் கந்தாடையண்ணன் உடையவருக்கு முதலியாண்டானைப்போல இவருக்கு மெய்க்காப்பாளர். எறும்பியப்பா வடுகநம்பியைப் போல தேவுமற்றறியாத அத்யந்த அபிமானி. பிரதிவாதி பயங்கர மண்ணா கூரத்தாழ்வானைப்போல உசாத் துணையா யிருப்பார். அப்பிள்ளார் மடத்தில் ஸர்வ பரங்களையும் நடத்திக் கொண்டு போவார். வானமாலை ஜீயர், ஆஸ்ரயித்த நாளிலிருந்து பிரியாது ஆட்செய்திருப்பார். பட்டர் ஜீயர் எம்பாரைப் போல திருவடியாக இருப்பார். ஜீயர் நாயனார் திருக்குருகைப்பிரான் பிள்ளானைப் போல ஞானகுமாரராய் இருப்பர். இவர்கள் எல்லோருக்கும் ஸ்வரூபோபாய புருஷார்த்தங்கள் சாதித்துக் கொண்டு பெரிய ஜீயர் நம்பெருமாள் கோயிலில் 72 ஆண்டுகள் வாழ்ந்து திருநாட்டுக்கு எழுந்தருளினார். என்ற விபரங்கள் கோயில் கந்தாடை நாயன் அருளிய பெரிய திருமுடி அடைவிலிருந்து தெரிந்து கொள்கிறோம். மணவாள மாமுனிகளைப் போலவே ராமானுஜ தர்சனத்தின் சரணாகதி தத்துவத்தை எங்கும் பரவச் செய்தவர் அகோபில மட ஸ்தாபகரான ஸ்ரீ சடகோப யதீந்தர ஜீயர்
இனி மணவாள மாமுனிகள் சீடர்களான, வானமாமலைஜீயர், பட்டர் பிரான்ஜீயர், திருவேங்கட ஜீயர் எறும்பயப்பா, அப்பிள்ளை, ராமானுஜரென்னும் அப்பிள்ளான் கோயில் கந்தாடையண்ணன், கந்தாடை போரேற்றுநாயனார், ஸ்ரீசைல நரசிம்மாச்சாரியார், மணவாள மாமுனி தாமே விரும்பி மறுபடி அவதரித்தாரோ எனும் படியான அவரது பேரர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், ஸ்ரீநிவாசாச்சாரியார் என்ற கோயில் கந்தாடை யப்பன்,ஆத்தான், ராமானுஜம் பிள்ளை, அழகிய மணவாள சீயர், கந்தாடை அண்ணனின் பிள்ளையான கந்தாடை நாயன் போன்று பலர் உள்ளனர் என்ற விவரங்கள் கோயில் கந்தாடை அண்ணன் அருளிய பெரிய திருமுடி அடைவு பிரபந்தத்திலிருந்து தெரிந்து
கொள்கிறோம்.
இப்புவியில் அரங்கேசர்க்கீடளித்தான் வாழியே.
எழில் திருவாய் மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே.
ஐப்பசியில் திருமூலத்தவதரித்தான் வாழியே.
அரவரசப் பெருஞ்சோதி அனந்தனென்றும் வாழியே.
எப்புவியும் ஸ்ரீசைல மேத்தவந்தான் வாழியே.
ஒராரு மெதிராசரென வுதித்தான் வாழியே.
முப்புரிநூல் மணிவடமும் முக்கோல் தரித்தான் வாழியே.
மூதரிய மணவாள மாமனிகள் வாழியே.
செந்தமிழ் வேதியர் சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடுவான்
சீருலகாரியர் செய்தருள் நற்கலை தேசு பொலிந்திடுநாள்
மந்தமதிப்வி மானிடர் தங்களை வானிலுயர்ந்திடுநாள்
மாசறு ஞானியர் சேரெதிராசர்தம்வாழ்வு முளைத்திடுநாள்
கந்தமலர்ப் பொழில்சூழ் குருகாதிபன் கலைகள் விளங்கிடுநாள்
காரமர் -மேனியரங்கநகர்க்கிறைகண்கள் களித்திடுதாள்
அந்தமில்சீர் மணவாள முனிப்பரனவதாரம் செய்திடுநாள்
அழகுதிகழ்ந்திடுமைப்பசியில் திருமூலமதெனுநாளே
—————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply