மனக்கேதம் சாரா மதுசூதன் தன்னை
தனக்கே தான் தஞ்சமாகக் கொள்ளில் -எனக்கே தான்
நின்று ஒன்றி நின்று உலகை ஏழ் ஆணை ஓட்டினான்
சென்று ஒன்றி நின்ற திரு -61-
பதவுரை
மதுசூதன் தன்னை–மதுவென்னும் அசுரனைக் கொன்றொழித்த பெருமானை
மனம் கேதம்–மன வருத்தங்கள்
சாரா–வந்து சேராவாம்
ஒன்றி நின்று–பொருந்தி நின்று
ஏழ் உலகை–ஸப்த லோகங்களிலும்
ஆணை ஒட்டினான்–(தன்னுடைய) செங்கோலைச் செலுத்துமவனான) எம்பெருமான்
இன்று–இப்போது
தனக்கே தஞ்சம் ஆ தான் கொள்ளில்–தனக்கே ரக்ஷகனென்று ஒருவன் கொண்டால்
சென்று–(நிர்ஹேதுகமாக என்னிடம்) வந்து
ஒன்றி நின்ற திரு–(என்னிடத்தில்) பொருந்தி நிற்பதாகிய செல்வமானது
எனக்கே தான்–என்னொருவனுக்கொழிய வேறொருவற்குமில்லை.
எம்பெருமான் நிர்ஹேதுக விஷயீ காரம் பெற்ற பாக்யம் தன்னத்தே என்கிறார் –
மதுவை அளித்த எம்பெருமானை மனசில் கொண்டால் துக்கம் வாராது –
அப்படி செய்ய வேண்டி இல்லாமல் தானே தம்மை விஷயீ கரித்தான் என்கிறார்-
நீர் மதுசூதனையே தஞ்சமாகக் கொண்டிருக்கிறீரோ? என்று சிலர் கேட்க, அப்பெருமானை நான் தஞ்சமாகக்
கொள்ளவேண்டும்படி அவன் எனக்கு ஒரு காரியம் வைக்கவில்லை அவன்றானே என்னெஞ்சில் வந்து குடிகொண்டான்,
இப்படிப்பட்ட பாக்கியம் எனக்கே அஸாதாரணமாக அமைந்தது என்றார் பின்னடிகளில்.
நின்று ஒன்றி நின்று உலகை ஏழ்–இன்று ஒன்றி நின்று உலகை –
சமஸ்த லோகத்தையும் விடாதே நின்று-தன் ஆஞ்ஞை செல்லும்படி நடத்தினவன்
தானே வந்து அபிநிவிஷ்டனான சம்பத்து எனக்கு உள்ளது –
மூன்றாமடியின் முதற்பதம் ‘நின்று‘ என்பதாகவே பலரும் ஓதுவர்கள், பல அச்சுப்பிரதிகளிற் பாடமுமிதுவே.
இஃது இடையில் மாறுபட்ட பாடமாகும். “இன்றொன்றி நின்றுலகை“ என்றே பூர்வவ்யாக்யான பாடம்
“ஸமஸ்த லோகத்தையும் விடாதே நின்று தன் ஆஜ்ஞை செல்லும்படி கடத்தினவன் தானேவந்து
அபிநிவிஷ்டனான ஸம்பத்து எனக்கேயுள்ளது, அது தானும் இன்று“ என்ற பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்மின்.
மோனையின்பமும் பொருட்பொருத்தமும் இப்பாடத்திற்கே இணங்கும்.
பாசுரத்தை யெழுதும்போது அடிகளில் நிறுத்தாமல் மேலடியோடு ஸந்திசெய்தே யெழுதுகிற வழக்கப்படி
பழைய எட்டுப் பிரதிகளில் “எனக்கேதானின்றொன்றிநின்றுலகை“ என்றெழுதி யிருந்த்தன்பயனாக
“நின்றொன்றி நின்றுலகை“ என்றபாடம் நிகழ்ந்தது போலும்.
“ஏழுலகை ஒன்றிநின்று ஆணையோட்டினான் சென்று ஒன்றி நின்ற திரு இன்று எனக்கேதான்“ என்று அந்வயிப்பது.
எவ்வுலகத்தும் தன்னுடைய செங்கோலே செல்லும்படியாகத் தனியாக புரிகின்ற திருமால் தானே யெழுந்தருளிப் பொருந்தி
நெஞ்சிலே வாழும்படியான செல்வம் இன்று எனக்கே வாய்த்தது என்றவாறு.
—————————————————————————–
திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்
கரு நின்ற கல்லார்க்கு உரைப்பர் -திருவிருந்த
மார்பில் சிரீதரன் தன் வண்டுலவு தண்டுழாய்
தார் தன்னைச் சூடித் தரித்து–62–
பதவுரை
திரு இருந்த மார்வன்–பெரிய பிராட்டியார் எழுந்தருளியிருக்கப்பெற்ற திருமார்வை யுடையனாய் (அதனாலே)
சிரீதரன் தன்–‘ஸ்ரீதரன்‘ என்று திருநாமம் பெற்றவானான எம்பெருமானுடைய
வண்டு உலவு தண் துழாய் தார் தன்னை–வண்டுகளுலாவப் பெற்ற குளிர்ந்த திருத்துழாய் மாலையை
சூடி–தலைக்கு அலங்காரமாக அணிந்து
தரித்து–அதனால் ஸத்தை பெற்று,
திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்–‘பிராட்டி பொருந்தி யிருக்கப் பெற்ற வலப் பக்கத்தை யுடைய
வஸ்துவே பரதத்துவம்!‘ என்று துணிந்தறிய மாட்டாதவர்கள்.
கரு நின்ற–(தங்களைப் போலே) கர்ப்ப வாஸம் பண்ணிப் பிறக்கின்ற சிலரை
கல்லாக்கு உரைப்பர்–(பரதெய்வமாக) மூடர்களுக்கு உபதேசிப்பர்கள்.
திருமாலின் தேன் மிக்க திருத் துழாய் மாலையை அணிந்து கொள்ளப் பெற்றால் -ஸ்ரீ யபதியே சிறந்த தெய்வம் -என்று அறியலாகும் –
திருவிருந்த-மார்பில் சிரீதரன் தன் வண்டுலவு தண்டுழாய்
தார் தன்னைச் சூடிப் பெறாமையாலே
திரு நின்ற பக்கம் திறவிது என்று -உணரப்பெற்றிலர்-என்ற கருத்தை உய்த்து உணர வேண்டும்
அபாங்க பூயாம் சோ யதுபரி பரம் ப்ரஹ்ம ததபூத்-பிராட்டி உடைய நிரம்பிய கடாக்ஷம் பட்ட வஸ்துவே பரப்ரஹ்மம் ஆனது -பட்டர் –
(பிராட்டியின் நிரம்பிய கடாக்ஷம் பட்ட வஸ்து பரப்ரஹ்மமாய் விட்டது என்பது இதன் கருத்து.)
கரு நின்ற -கரு நின்றவர்களை -கர்ப்பப் பையில் தாங்கிப் பிறப்பது இறப்பது -இப்படிப் பட்டவர்களை
பரதெய்வம் என்று கற்றார் இடம் சொன்னால் முகம் சிதறப் புடைப்பார்கள் ஆதலால் அன்னவர்கள் இடம்
வாய் திறவாமல் கல்லார்க்கு உரைப்பாராம் -கல்லார் -கல்வி பயிலாத மூடர் –
——————————————————————————————-
தரித்து இருந்தேனாகவே தாரா கணப் போர்
விரித்துரைத்த வென்னாகத்துன்னை-தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது-63-
பதவுரை
தாராகணம்–நக்ஷத்ரகணங்களினுடைய
போர்–(சுபாசுப நிமித்தமான) ஸஞசாரத்தை
விரித்து உரைத்த–(ஜ்யோதிச்சாஸ்தர முகத்தாலே) விஸ்தாரமாக வெளியிட்டவனும்
வெம் நாகத்து உன்னை–(பிரதிகூலர்க்குத் தீக்ஷ்ணனுமான திருவனந் தாழ்வாரனுக்கு அந்தராத்மாவாகிய உன்னை
தெரித்து–அநுஸந்தித்தும்
எழுதி–எழுதியும்
வாசித்தும்–(எழுதினவற்றைப் படித்தும்)
கேட்டும்–(ஆங் காங்கு) ச்ரவணம் பண்ணியும்
வணங்கி–நமஸ்காரம்பண்ணியும்
வழிபட்டும்–உபசாரங்களைச் செய்தும்
பூசித்தும்–பூஜித்தும்
போது போக்கினேன்–காலத்தைக் கழத்துக் கொண்டிருக்கிறேன் (இப்படி செய்வது எதுக்காக வென்னில்)
தரித்திருந்தேன் ஆகவே–ஸத்தை பெறுவதற்காக.
தாரா கணப் போர்-நக்ஷத்ரங்களுடைய சுப அசுப நிமித்தமான சஞ்சாரத்தை
விரித்துரைத்த -ஜ்யோதிஸ் சாஸ்த்ர முகத்தால் வெளியிட்டு அருளினவனும்
வென்னாகத்துன்னை-பிரதிகூலருக்கு தீக்ஷணமான திருவனந்த ஆழ்வானுக்கு அந்தராத்மா ஆகிய உன்னை –
தெரித்து -அனுசந்தித்து –
எழுதி-வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்-பூசித்தும் போக்கினேன் போது–எதுக்கு என்னில்
தரித்து இருந்தேனாகவே–சத்தை பெறுவதற்காக -சாதன அனுஷ்டான ரூபமாக அல்ல –
தம்முடைய போதுபோக்கைப் பேசுகிறார். எம்பெருமானை அநுஸந்திக்கை, அவனது திருப்புகழைப் புத்தகமாக எழுதுகை,
அவற்றை வாசிக்கை, செவித்தினவுகெடச் சொல்லுவார் பக்கல் கேட்கை, வணங்குகை, தம்மாலியன்ற உபசாரங்களைப் பண்ணுகை,
அர்ச்சிக்கை முதலிய தொழில்களால் தம்முடைய போதுபோவதாக அருளிச் செய்தாராயிற்று.
இப்படி செய்வனவெல்லாம் ஸாதநாநுஷ்டாந ரூபமாக அல்ல,
ஆத்மா ஸத்தை பெறுவதற்காக ஸ்வயம் புருஷார்த்தமாய்ச் செய்வன என்பதை வெளியிடுகிறார் “தரித்திருந்தேனாகவே“ என்பதனால்.
(“தாராகணப்போர் விரித்துரைத்த வெந்நாகத்துன்னை“) இக்காலத்துப் புதிய ஆராய்ச்சிக்காரர் சிலர் வெளியிட்டுள்ள
‘ஆழ்வார்கள் காலநிலை‘ என்னுமோர் புத்தகத்தில் இப்பாசுரத்தை ஆராய்ச்சி செய்யப் புகுந்து.
“இதன் முதலிரண்ட்டிகட்கு –‘நக்ஷத்ரகதியாயிருக்கிற ஜ்யோதிஸ் –சாஸ்திரத்தைச்சொன்ன திருவனந்தாழ்வானுக்கு
ஆத்மா வாயிருக்கிற உன்னை‘ என்பது பூர்வவியாக்கியானம்.
இதன்படி ‘தாராகணப்போர் விரித்துரைத்த‘ என்ற விசேடணம் ஆதிசேடனுக்கு உரியதாகும்.
ஆனால் அவனை இவ்வாறு விசேடிப்பதற்குரிய நேரான பொருத்தமொன்றுங் காணப்படவில்லை.
ஆதிசேடன் செய்த சோதிடநூல் இன்னதென்பதுந் தெரிந்திலது.
அதனால், ‘வெந்நாகத்துன்னை‘ என்றுள்ள பாடம்
‘விரித்துரைத்த வென்னாகத்துன்னை‘ என்றிருந்த பழம் பாடத்தினின்றும் மாறியதோ என்று கருத இடந்தருகின்றது.
‘(சோதிட நூலை) விரித்துரைத்த (என்-ஆகத்து) எனது நெஞ்சிடமாகவுள்ள, உன்னை‘ என்பது இப்பாடப்படி பொருளாகும்-
இங்ஙனம் ‘தாராகணப்போர் விரித்துரைத்த‘ என்பது ஆழ்வார்க்குரிய விசேடணமாயின், தம்மாற் செய்யப்பெற்ற
சோதிடநூலொன்றைப்பற்றி அவர் குறிப்பிட்டனராவர். அத்தகைய நூல் யாது என்பது ஆராய்ந்து அறிதற்குரியது. என்று எழுதியுள்ளார்.
இதனாற் சொல்லிற்றாகிறதென்னென்னில், பகவத் கிருபையாலும் ஸதாசார்ய கடாக்ஷத்தாலும் ஆழ்வார்களருளிச் செயல்களின்
உண்மைப் பொருள்களை நன்குணர்ந்து அருளிச் செய்தவரும், இற்றைக்குச் சற்றேறக் குறையத் தொள்ளாயிரம் ஆண்டுகட்கு முன்பு
ஸர்வஜ்ஞராயப் புகழ்பெற்று விளங்கின வருமான பெரியவாச்சான் பிள்ளை பிழையான பாடமொன்றைக் கொண்டனரென்றும்,
அப்பாடப்படி உரைக்கும் பொருள் பொருத்தமற்றதென்றும் சொல்லிற்றாகிறது.
“வெம் நாகத்து“ என்பது பெரிய வாச்சான் பிள்ளை உரைசெய்தருளின பாடம்.
“என் ஆகத்து“ என்பது இப்புதிய புலவர் கற்பிக்கும் பாடம்.
பழைய பாடத்திற் பொருத்தமின்மை கூறப்புகுமவர் தாங்கூறும் பாடத்தில் ஒரு பொருத்தம்காட்டித் தீரவேண்டும்.
ஆதிசேஷன் செய்த சோதிட நூல் இன்னதென்று தெரியவில்லை யென்னுமிவர்
திருமழிசைப்பிரான் செய்த சோதிட நூல் இன்னதென்று தெரிந்து கொண்டவராதல்வேண்டும்.
“பார்க்கவம் பிருகு சூத்திர முதலிய கணித சோதிட கிரந்தங்கள் உள்ளன,
இவை போன்றதொன்றே பிருகு வமிசத்தவரான ஆழ்வார் அருளிச்செய்ததாக வேண்டும்.“ என்று அநுமானங் கூறுகின்றார்.
இத்தகைய அநுமானம் ஆதி சேஷன் பக்கல் கூடாமைக்குக் காரணமறிகின்றிலோம்.
வேதாங்கங்களுள் ஒன்றான ஜ்யோதிக்ஷத்திற்கு ஆதிசேஷன் ப்ரவர்த்தகன் என்னுமிடத்தை பல பிரமாணங்களினால், நன்கறிந்தே
பூருவர்கள் மிகப் பொருத்தமாக வியாக்கியானஞ் செய்தருளினர்.
இவ்விஷயமாகச் சில வாண்டுகட்கு முன்னர் நாம் பலவிடங்களிலும் பல பெரியோர்களை விசாரித்து வருகையில்,
மலை நாட்டில் திருவனந்தசயனத்தில் மலையாளிச் சோதிட நிபுணரொருவர் எடுத்துரைத்த ச்லோகம் மேற்குறித்தது.
புராதநமான சோதிடநூலொன்றின் வியாக்கியானத்தில் மங்களச்லோகமாக அமைந்ததாமிது.
இன்னமும் ஊன்றி ஆராயப்புகில் இத்தகைய ஆதாரங்கள் ஆகரத்துடன் பல கிடைக்கக் குறையில்லை. இது நிற்க.
திருமழிசைப்பிரான் பல மதங்களிலும் புகுந்து அந்தந்த மதங்கட்குச் சார்பாகப் பல நூல்களும் இயற்றினரென்னும்
ப்ரஸித்தியிருந்தாலும் சோதிட நூல் இயற்றியருளினராக எங்குங்கூறப்படவில்லை.
அங்ஙனே ஏதேனுமொருநூல் தாம் செய்தருளியிருந்தாலும் அதனை இங்கு அநுவதித்தருளிச் செய்தற்கு ப்ரஸக்தியொன்றுமில்லை.
இவ்வண்ண மருளிச்செய்யும் வழக்கம் ஆழ்வார்களின் திவ்யப்ரபந்தங்களி லொன்றிலுமில்லை.
ஆகவே ‘என் ஆகத்து‘ என்று பாடத்தை மாறுபடுத்தல் பயனற்றது. ஸர்வஜ்ஞர்களான பூர்வாசார்யர்களின் வியாக்கியான ஸ்ரீஸூக்திகளில்
அல்பஜ்ஞரான நாம் குறைகூறுதற்குச் சிறிது மதிகாரமுடையோமல்லோம்.
பூருவர்கள் ப்ரமித்தார்களெனினும் அந்த ப்ரமமே நமக்கும் தஞ்சமகாத்தக்கது.
ஸ்ரீமந்நாதமுனிகள் தொடங்கி ஸ்ரீமணவாளமாமுனிகள் வரையிலுள்ள ஸதாசார்யர்களின் ஸ்ரீஸூக்திகள் வேதவாக்கினுஞ் சிறந்து
பிரமாணமாவனவென்று திண்ணிதாகக் கொள்வாரது திருவடிகளே சரணம். பூருவர்களருளிச்செய்த பொருள் கட்கு முரண்படாமல்
விசேஷார்த்தங்களை விவேகித்துக்கூறின் குறையொன்றுமில்லை. இதுவே கலையறக்கற்ற மாந்தர்பணியாம்.
தாராகணப்போர் –‘தாராகணம்‘ என்னும் வடசொல் தொடர் நக்ஷத்ரஸமுஹமெனப் பொருள்படும்.
அவற்றின் ஸஞ்சாரத்தை ஜ்யோதிச் சாஸ்த்ரமுகத்தால் விரித்துரைத்தவரான திருவனந்தாழ்வானுக்கு அந்தாரத்மாவாயிருக்கிற வுன்னை.
வேதம், பஞ்சராத்ரம், இதிஹாஸ புராணம் முதலிய வேதோபப்ரும்ஹணங்கள் முதலானவற்றை, தன் முகமாகவும்
பிரமன் முகமாகவும் சில முனிவர்க்குத் தான் அந்தராத்மாவாயிருந்து அவர்கள் முகமாகவும் வெளியிட்டதுபோல்
ஆதிசேஷனுக்கு அந்தராத்மாவாயிருந்து ஜ்யோதிஸ் சாஸ்த்ரத்தை வெளியிட்டருளினன் என்னும் உண்மையை
வெளியிடுதலே இவ்விசேஷணத்திற்குப் பிரயோஜன மென்க.
நாகம் – வடசொல் திரிபு, ஸர்ப்பம் ‘வெம்‘ என்ற அடைமொழி இயற்கை பற்றியது.
———————————————————————————————–
தம் கால ஷேப க்ரமத்தை அருளிச் செய்தார் கீழ் இதில் பிறர் கால ஷேப க்ரமம் உபதேசிக்கிறார்
அவன் திருவடிகளில் புஷபங்களை பரிமாறி திரு நாமங்களை சொல்லி ஏத்தி இறைஞ்சுவதே வேண்டும் என்கிறார்
போதான விட்டு இறைஞ்சி ஏத்துமினோ பொன் மகரக்
காதானை ஆதிப் பெருமானை –நாதானை
நல்லானை நாரணனை நம் ஏழ் பிறப்பு அறுக்கும்
சொல்லானை சொல்லுவதே சூது –64-
பதவுரை
பொன் மகரம் காதானை–அழகிய மகர குண்டலங்களைத் திருக்காதுகளில் அணிந்துள்ளவனும்
ஆதி–ஜகத் காரண பூதனும்
பெருமானை–பெருமை பொருந்தியவனும்
நாதனை–(அனைவர்க்கும்) நாதனாயிருப்பனும்
நல்லானை–(ஆச்ரிதர் பக்கல்) வாத்ஸல்ய முடையவனும்
நாரணனை–நாராயணனென்று ப்ரஸித்தி பெற்றவனும்
நம் ஏழ்பிறப்பு அறுக்கும் சொல்லானை–நம்முடைய ஜன்ம பரம்பரைகளை அறுக்க வல்ல திருநாமங்களை யுடையவனுமான ஸர்வேச்வரனைக் குறித்து
போது ஆன இட்டு இறைஞ்சி ஏத்துமின்–புஷ்பமென்று பேர் பெற்றவற்றை ஸமர்ப்பித்து வணங்கித் துதி செய்யுங்கள்
சொல்லுவதே–(அவனுடைய திருநாமங்களை வாயாரச்) சொல்லித் துதிப்பதே
சூது–நல்ல வாய்ப்பு
‘போதுகளை யிட்டிறைஞ்சி‘ என்னாமல் ‘போதான விட்டிறைஞ்சி‘ என்றதன் கருத்து யாதெனில்,
எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க வேணுமென்கிற சுத்தபாவத்துடனே கொள்ளுகிற புஷ்பம் எதுவாயினுங் குற்றமில்லை,
‘செண்பக மல்லிகைமொரு பூவாயிருக்கலாம் என்பதாம்.
பெரியவாச்சான் பிள்ளையும் இவ்விடத்து வியாக்கியானத்தில் – “இன்ன புஷ்பமென்று நியதியில்லை,
பூவானதை யெல்லாவற்றையுங்கொண்டு திருவடிகளிலே ஸமர்ப்பித்து வணங்கி ஸ்தோத்ரம் பண்ணுங்கோள்“ என்றருளிச்செய்தது காண்க.
இதனால், இன்ன பூ என்று நிர்ப்பந்த மில்லாமையால் பூவென்று பேர்பெற்றிருக்கு மத்தனையே வேண்டுமென்றதாயிற்று.
திருவாய்மொழியில் (1-6-1) “பரிவதிலீசனைப் பாடி விரிவது மேவலுறுவீர், பிரிவகையின்றி நன்னீர்தூய்ப் புரிவதுவும் மேவலுறுவீர்,
பிரிவகையின்றி நன்னீர்தூயப் புரிவதும் புகைபூவே“ என்ற பாசுரத்தை ஸ்ரீபட்டர் உபந்யஸிக்கும் போது
“புரிவதுவும் புகைபூவே“ என்ற சப்த ஸ்வாரஸ்யத்தைத் திருவுள்ளம்பற்றி
‘இவ்விடத்தில் அகில்புகையென்றாவது, கருமுகைப்பூ என்றாவது சிறப்பித்துச் சொல்லாமையாலே
ஏதேனும் ஒரு புகையும் ஏதேனுமொருபூவும் எம்பெருமானுக்கு அமையும், செதுயிட்டுப் புகைக்கலாம்,
கண்ட காலிப்பூவும் சூட்டலாம்‘ என்று உபந்யஸித்தருளினராம்,
அதை நஞ்சீயர் கேட்டு “ந கண்ட காரிகா புஷ்பம் தேவாய விநிவேதயேத்“ (கண்டகாலிப்பூவை எம்பெருமானுக்குச் சாத்தலாகாது)
என்று சாஸ்த்ரம் மறுத்திருக்க, இப்படி அருளிச்செய்த ரஸோக்தி – ‘சாஸ்த்ரம் மறுத்தது மெய்தான், கண்டகாலிப்பூ
எம்பெருமானுக்கு ஆகாதென்று மறுக்கவில்லை, அடியார்கள் அப்பூவைப்பறித்தால் கையில் நிஷேதித்ததேயன்றி
எம்பெருமானுக்கு ஆகாத பூ எதுவுமில்லை, என்றாம். திருவாய்மொழிக்குப் பதினெண்ணாயிரமுரைத்த பரகால ஸ்வாமி
இந்த ஸம்வாதத்தைக் கொண்டு ரஸியாமல் திரஸ்கரித்துரைத்தது கிடக்க.
(பக்தி எல்லை கடந்தால் நூல்வரம்பில்லை) என்றதையும் அருளிச்செயல் தொடையழகையும் நோக்கி
ரஸப் பொருளுரைத்தவற்றில் குதர்க்கவாதஞ்செய்கை விவேகிகட்குப் பணியன்று.
பொன்மகரக் காதானை – மகரமென்றது மரக்குழைக்கு ஆகுபெயர்.
சுறாமீன் வடிவமாகச் செய்யப்படுவதோர் காதணி மகரகுண்டல மெனப்படும்.
நாதானை…. ‘நாதனை‘ என்பதன் நீட்டல். * செய்யுள் வேண்டுழி வந்த விகாரம்.
நம்மேழ்பிறப்பறுக்குஞ் சொல்லானை – ஒன்றின்பின் ஒன்றாக இடையறாது நிகழ்ந்து செல்கின்ற நமது ஜன்மங்களைப்
போக்கவல்ல திருநாமங்களையுடையவன் எம்பெருமான்.
‘ஏழ்பிறப்பு‘ என்பதற்குப் பலவகையாகப் பொருள்கூறுவதுண்டு.
கர்ப்பவாஸஞ் செய்யும் கஷ்டம், கர்ப்பத்தினின்று வெளிப்படுங் கஷ்டம், பல பிணிகளை யநுபவிக்குங் கஷ்டம்,
கிழத்தன மநுபவிக்குங்கஷ்டம், மரண வேதனைகள் படுங்கஷ்டம், மரணமடையுங் கஷ்டம்,
நரகயாதனைகளை யநுபவிக்குங் கஷ்டம் ஆகிய ஏழுவகைக் கஷ்டங்களுக்குக் காரணமாகிய பிறப்பு என்பர் சிலர்
1. “பெருங்களிற்று வட்டம், பெருமணல் வட்டம், ஏரியின் வட்டம் புகையின் வட்டம், இருளின் வட்டம் பெருங்கீழ் வட்டம்,
அரிபடை வட்டமென்றெழுவகை நரகம்“ என்னப்பட்ட ஏழு நரகங்களிலும் புகுவதற்கு ஏதுவான பிறப்பு என்பர் சிலர்.
‘ஏழு‘ என்றது உபலக்ஷணமாய்ப் பலவகைப் பிறப்புகளென்றபடி என்பர் சிலர்.
மற்றும் பல வகைகளுங் காண்க.
ஏழுவகைத் தோற்றத் தின்னாப்பிறப்பின்“ “ஏழுபிறப்பி லடியவரை யெழுதாப் பெரியபெருமானை“ (திருவரங்கக்கலம்பகம்)
என்றவையுங் காண்க. சூது – உற்றது.
——————————————————————————–
சூதாவது என்னெஞ்சத்து எண்ணினேன் சொன்மாலை
மாதாய மாலவனை மாதவனை –யாதானும்
வல்லவா சிந்தித்து இருப்பேற்கு வைகுந்தத்து
இல்லையோ சொல்லீர் இடம்–65-
பதவுரை
மாது ஆய–அழகுதான் ஒரு வடிவகொண்டாற்போலே யிருப்பனும்
மாலவனை–(ஆச்ரிதர் பக்கல்) வ்யாமோஹமுடையவனுமான
மாதவனை–திருமாலைக் குறித்து
சொல் மாலை–இச்சொல் தொடைகளை (சொல்லி)
யாதானும் வல்ல ஆ சிந்தித்து இருப்பேற்கு–ஏதோ சக்தியுள்ள வளவு அநுஸந்தித்திருக்கிற எனக்கு
வைகுந்தத்து இடம் இல்லையோ சொல்லீர்–ஸ்ரீவைகுண்டத்தில் இடம் இல்லையோ?
சொல்லீர்–சொல்லுங்கள்
சூது ஆவது–இதுவே நமக்கு நல்லவாய்ப்பு என்று
என் நெஞ்சத்து எண்ணினேன்–என்மனத்தில் உறுதி கொண்டேன்.
எம்பெருமான் விஷயமாக இப்படிப்பட்ட சொல் மாலைகளை சிந்தித்து இருப்பதுவே நமக்கு உற்றது என்ற அத்யவசாயம் கொண்டேன் –
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் 9 -1 -7 –கண்டீர்கள் அந்தோ —-குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே —
மாதவனை சொல்மாலைகள் கொண்டு யாதேனும் வல்லவா சிந்தித்து இருக்கிற தமக்கே வைகுந்தம் உண்டு -மற்றையோர்க்கு இல்லை –
மாதாயா--மாது -அழகுக்குப் பெயர் -தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன தாள் கண்டார்
தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே-
மாதா -தாய் போலே அளிப்பவன் என்றுமாம் -/ மாலவனை-மாயவனை -பாட பேதம் –
———————————————————————————————
கீழே -யாதானும்-வல்லவா சிந்தித்து இருப்பேற்கு வைகுந்தத்து-இல்லையோ சொல்லீர் இடம்–என்றதுமே எம்பருமான்
நம் இருப்பிடத்தை இவர் ஆசைப்படுவது என் -இவர் நெஞ்சு அன்றோ நமக்கு உத்தேச்யம் -என்று
இவர் திரு உள்ளத்தே புகுந்து அருள -அத்தை அருளிச் செய்கிறார் –
இடமாவது என்நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு
பட நாகணை நெடிய மாற்கு -திடமாக
வையேன் மதி சூடி தன்னோடு அயனை நான்
வையேன் ஆட்செய்யேன் வலம்–66–
பதவுரை
பண்டு–என்னைத் திருத்திப் பணி கொள்வதற்கு முன்பு
படம் நாக அணை நெடிய மாற்கு–படங்களை யுடைய சேஷ சயனத்தில் பள்ளி கொண்டருள்பவனாயிருந்த ஸர்வேஸ்வரனுக்கு
இன்று–இப்போது முதலாக
எல்லாம்–மேலுள்ள காலமெல்லாம்
இடம் ஆவது–வாஸ ஸ்தானமாவது
என் நெஞ்சம்–எனது நெஞ்சமாகும்
மதி சூடி தன்னோடு–பிறைச் சந்திரனத் தலையிலே சூடியிருக்கிற ருத்ரனையும்
அயனை–பிரமனையும்
திடம் ஆக–பரம் பொருளாக
வையேன்–மனத்திற்கொள்ள மாட்டேன்
வையேன் நான்–(தத்துவமின்னதென்று கண்டறியத்தக்க) ஸூக்ஷ்ம புத்தியுடையேனான நான்
ஆள் செய்யேன்–(அந்த தேவதாந்தரங்களுக்குத்) தொண்டு செய்யவும் மாட்டேன்
(இப்படி நான் சொல்லுவதற்குக் காரணமென்னவெனில்)
வலம்–(திருமாலின் பரிக்ஹமாயிருக்கப் பெற்ற) மிடுக்கேயாம்.
இதற்கு முன்னே சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் -சகல வித கைங்கர்யங்களுக்கும் உரிய திரு வனந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளி
இன்று முதலாக மேலுள்ள காலம் எல்லாம் எனது நெஞ்சையே தனக்கு இடமாக அமைத்துக் கொண்டான் ஆயிற்று –
இப்படி அவன் தானே வந்து விரும்பப் பெற்ற பாக்யத்தால் -அடியேன் நளிர் மதிச் சடையனாவது நான் முகக் கடவுளையோ
நெஞ்சில் கொள்ளவோ வாங்கவோ இனி பிராப்தி எது -எம்பெருமானை அண்டை கொண்ட மிடுக்கு எனக்கே அன்றோ
திடமாக வையேன்-பரம் பொருளாக மனத்தில் கொள்ள மாட்டேன் / வையேன் நான் ஆள் செய்யேன் –-பரதத்வம் இன்னது என்று
கண்டு அறியத்தக்க ஸூஷ்ம புத்தி யுடையேனான நான் அந்த தேவதாந்தரங்களுக்கு தொண்டு செய்யவும் மாட்டேன் —வை -கூர்மை -என்றவாறு –
இப்படி சொல்வதற்கு காரணம் – வலம் -திருமாலின் பரிக்ரஹமாய் இருக்கப் பெற்ற மிடுக்கே யாம் –
மதிசூடி –தக்ஷமுனிவனது சாபத்தால் க்ஷயமடைபவனாய்க் கலைகுறைந்து வந்து சரணடந்த சந்திரனை முடியின்மீது
கொண்டு வரமளித்துப் பாதுகாத்தமையால் சிவன் மதிசூடியாயினன்.
இப்பாட்டில் ‘வையேன்‘ என்பது இரண்டிடத்து வந்துள்ளது, ஒன்று எதிர்மறை வினைமுற்று,
மற்றொன்று உடன்பாட்டு வினையாலணையம் பெயர்
வை-கூர்மை, கூர்மை தங்கிய மதியுடையேன் என்றவாறு.
தேவதாந்தரப் பற்றையொழித்து ஸ்ரீமந்நாராயணனையே பரதெய்வமாகக் கடைப்பிடித்த தமது மதியைத் தாம் சிறப்பித்துக் கூறுதல் ஏற்குமென்க.
ஆட்செய்யேன் வலம் –ஆட்செய்யேன், வலஞ்செய்யேன் என்று யோஜித்து, (அவர்களைப்) பிரதக்ஷிணம் செய்யமாட்டேன் என்றுரைக்கவுமாம்.
————————————————————————————-
வலமாக மாட்டாமை தானாக வைகல்
குலமாக குற்றம் தானாக -நலமாக
நாரணனை நா பதியை ஞானப் பெருமானைச்
சீரணனை ஏத்தும் திறம்-67–
பதவுரை
நாரணைனை–ஸ்ரீமந் நாராயணனாய்
நாபதியை–(என்னுடைய) நாவுக்கு ப்ரவர்த்தகனாய்
ஞானம் பெருமானை–அறிவிற்பெயரியவனாய்
வைகல் நலம் ஆக ஏத்தும் திறம்–எப்போதும் நன்றாகத் துதி செய்கையாகிற இந்த
வலம் ஆக–நன்மை தருவதாகிலுமாகுக
சீர்அணனை–நற் குணங்களை பொருந்தி யிருக்கப் பெற்றவனான ஸர்வேச்வரனை
மாட்டாமை தான் ஆக–நன்மை தர மாட்டாதாகிலுமாகுக,
குலம் ஆக–நற் குலத்தைத் தருவதாகிலுமாகுக
குற்றம் தான் ஆக–கெடுதலை யுண்டாக்குவதாகிலுமாகுக (எத்துவதை நான் தவிரமாட்டேன்)
எம்பெருமானை ஸ்துதிப்பதே நன்மை -நல் குலம் தரும் என்று நான் விஸ்வஸித்து இருக்கிறேன் -இதற்கு விபரீதமாக
கெடுதலை விளைத்தலும் ஆனாலும் -எம்பெருமானை எத்தகையே உத்தேச்யம் –
வலமாக -குலமாக-அன்றிக்கே மாட்டாமை தானாக -இருந்தாலும்
ஸ்வயம் புருஷார்த்தமாக எம்பெருமானை ஸ்துதிப்பேன் -என்கிறார் –
குலம் தரும் செல்வம் தந்திடும் –வலம் தரும் மற்றும் தந்திடும் –நாராயணா என்னும் நாமம் —
—————————————————————————————
திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தரை -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு–68-
பதவுரை
நமனும்–யமனும்
தன் தூதுவரை–தனது சேவகர்களை
கூவி–அழைத்து
செவிக்கு–(அவர்களுடைய) காதில் (என்ன சொன்னானென்றால்)
திருவடி தன்–ஸர்வேச்வரனுடைய
நாமம்–திருநாமத்தை
மறந்தும்–மறந்தொழிந்தாலும்
புறம் தொழாமாந்தர்–தேவதாந்தர பஜநம் பண்ணாத மனிசர்களைக் (கண்டால்)
திறம்பேல் மின் கண்டீர்–(ஓ சேவகர்களே!) (இப்போது நான் உங்களுக்கு இடும் ஆணையைத்) தவறவேண்டா
இறைஞ்சி–வணங்கி
சாதுவர் ஆய் போதுமின்கள் என்றான்–(கொடுமை தவிர்ந்து) ஸாதுக்களாய் வர்த்திக்களாய் வர்த்திக்க கடவீர்கள் என்று சொன்னான்.
யமனுடைய தூதர்கள் பாசங்களைக் கையிற்கொண்டு தங்கள் கடமையைச் செலுத்தப் புறப்படும்போது
யமன் அத்தூதர்களை யழைத்து, ரஹஸ்யங்கள் சொல்லுமாபோலே காதோடே ஒரு வார்த்தை சொன்னான்,
அஃதென்னென்னில், ‘ஓ தூதர்களே! நீங்கள் பாகவதர்களிடத்தில் சிறிதும் அதிகாரஞ் செலுத்த வேண்டா,
அவர்களருகில் நீங்கள் செல்லவே கூடாது, ஒருகால் அவர்கள் நேர்பட்டால் வணங்கி வலஞ்செய்து
பரம ஸாத்விகர்களாய் விலகுங்கோள்‘ என்றானாம். இதனால் பாகவதர்கட்கு யமபய ப்ரஸக்தியே யில்லையென்றதாம்.
ஸ்வ புருஷ மபீ வீஷ்யே பாச ஹஸ்தம் வததி யம-கில தஸ்ய கர்ண மூல –பரிஹர மது ஸூதன ப்ரபந்நான்
பிரபுரஹம் அந்நிய ந்ரூணாம் ந வைஷ்ணவானாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் –3 -7 -14 –
அவன் தமர் எவ்வினையாராகிலும் எம் கோன் அவன் தமர் என்று ஒழிவது அல்லால் -நமன் தமரால் ஆராயப்பட்டு
அறியார் கண்டீர் -அரவணை மேல் பேராயற்கு ஆட்பட்டார் பேர் -பொய்கையார் –
கெடுமிடராய வெல்லாம் கேசவா என்ன நாளும் கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்–நம்மாழ்வார்
மூவுலகு யுண்டு உமிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற ஆவலிப்புடைமை கண்டாய் -நாவலிட்டுழி தருகின்றோம்
நமன் தமர் தலைகள் மீதே -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்
ஏத்தியுன் சேவடி எண்ணி இருப்பாரைப் பார்த்திருந்து அங்கு நமன் தமர் பற்றாமல் சோத்தம் நாம் அஞ்சுதம் என்று
தொடாமை நீ காத்தி போய்க் கண்ண புரத்துறை யம்மானே-திரு மங்கை ஆழ்வார் –
திறம்பேல்மின் கண்டீர் -ஞாபகப் பிசகினால் அந்த தூதர்கள் அதிகாரம் செலுத்தினால் அனர்த்தம் விளையும்
திருவடி தன் நாமம்-மறந்தும் புறம் தொழா மாந்தரை –திருவடி -அடி -அடிகள் –ஸ்வாமிக்கு வாசகம் –
தேவதாந்த்ர பற்று இல்லாமையே முக்கியம் -அந்நிய சேஷத்வம் ஒழிவதே பிரதானம் -தேவர்களுக்கு சேஷமான
புரோடாசத்தை நாய்க்கு இடுமா போலே ஈஸ்வர சேஷமான ஆத்மவஸ்துவை சம்சாரிகளுக்கு சேஷமாக்குகை –
மாந்தரை-பாட பேதம் -தப்பாகும் வெண்டளை பிறழும்
ராஜ மஹிஷியிடம் காதல் கொள்ளாதே என்பதை ரகசியமாக சொல்லுவது போலே இங்கும்
காதில் சொல்ல வேணும் -பிறர் அறிந்தால் பொல்லாது ஆகுமே –
முமுக்ஷுப்படியில் உகாரார்த்தம் விவரிக்குமிடத்து “அந்யசேஷத்வம் கழிகையே ப்ரதாநம், தேவர்களுக்கு சேஷமான புரோடாசத்தை
நாய்க்கிடுமாபோலே ஈச்வரசேஷமான ஆத்ம வஸ்துவை ஸம்ஸாரிகளுக்கு சேஷமாக்குகை.
பகவத் சேஷத்வத்திலும் அந்ய சேஷத்வம் கழிகையே ப்ரதாநம், ‘மறந்தும் புற்தொழா மாந்தர்‘ என்கையாலே“ என்றருளிச் செய்த
ஸ்ரீஸூக்திகள் இங்குக் குறிக் கொள்ளத் தக்கன.
————————————————————————–
கீழே எம்பெருமான் திருநாம பாவானத்வம் அருளிச் செய்து இதில் அதன் போக்யத்தை அருளிச் செய்கிறார் –
தோளாத மா மணியைத் தொண்டர்க்கு இனியானைக் கேளாச் செவிகள் செவியல்ல கேட்டோம் –பெரிய திரு -11 -7 -2 –
செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண் மால் நாமம்
புவிக்கும் புவி யதுவே கண்டீர் -கவிக்கும்
நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன் பார்க்கில்
மறைப் பொருளும் அத்தனையே தான் -69-
பதவுரை
செவிக்கு இன்பம் ஆவதுவும்–கர்ணாமிருதமாயிருப்பதும்
செம் கண்மால் நாமம்–புண்டரீகாக்ஷனான எம்பெருமானுடைய திருநாமமே
புவிக்கு–பூமியிலுள்ள ரெல்லார்க்கும்
புவியும் அதுவே–(நிழல்பெற ஒதுங்குவதற்கு) இடமாவதும் அத் திருநாமமே
கவிக்கு நிறை பொருள் ஆய் நின்றானே–பாசுரத்திற்கு நிறைந்த பொருளாயிருக்குமெம் பெருமானை
நேர் பட்டேன்–தெய்வாதீனமாக அடையப் பெற்றேன்,
பார்க்கில்–ஆராய்ந்து பார்த்தால்
மறை பொருளும் அத்தனையே தான்–வேதங்களில் தேர்ந்த பொருளும் அவ்வளவே.
புவிக்கும் புவி யதுவே கண்டீர் -பூமியில் உள்ளவர்க்கு எல்லாம் நிழல் ஒதுங்க இடம் ஆவதும் புண்டரீகாக்ஷன் திரு நாமமே –
கவிக்கும்-நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன்–எம்பெருமானை யாதிருச்சிகமாகக் கிட்டப் பெற்றேன்
-நான் கிருஷி பண்ணி பெற்றேன் அல்லேன் -விதி வாய்த்தது
வேதார்த்த ரகஸ்ய சாரார்த்தமும் இதுவே
கவிக்கும்-நிறை பொருளாய் நின்றானை –மற்றவர்களை பாட நினைத்தால் சொற்களையும் பொருள்களையும் திருட வேண்டும் –
-இவனே ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் -அன்றோ –
——————————————————————————————–
தான் ஒருவனாகித் தரணி இடந்து எடுத்து
ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும் –யானொருவன்
இன்றா வறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அடிப்படுத்த சேய்-70-
பதவுரை
தான் ஒருவன் ஆகி–(விஷ்ணுவாகிய) தான் ஒப்பற்ற ஸர்வேச்வரனாயிருந்து
சென்று–(மஹாபலியி னிடத்தில் யாசகனாய்ச்) சென்று
ஆங்கு–அந்த மாவலியின் யாக பூமியிலே
இரு நிலத்தை–விசாலமான இந்நிலத்தை
அடிப்படுத்த–திருவடியினளவாக ஆக்கிக் கொண்ட (அளந்து கொண்ட)
சேய்–சிறு பிள்ளையானவன்
ஏன் ஒருவன் ஆய்–விலக்ஷண வராஹ ரூபியாய்
தரணி–பூமியை
இடந்து அடுத்து–(அண்டபித்தியில் நின்றும்) ஒட்டுவிடுவித்தெடுத்து
எயிற்றில்–(தனது) கோரைப் பல்லின்மீது
தாங்கியது–தரித்தமையை
யான் ஒருவன்–நானொருவன் மாத்திரம்
இன்றா–இன்றாக
அறிகின்றேன் அல்லேன்–அறிகிறேனில்லை. (நெடுநாளாகவே அனைவருமறிவர்)
லோக பிரசித்தம் அன்றோ –
தான் ஒருவனாகித் தரணி இடந்து எடுத்து–தான் ஒருவனாகி—ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும்–
தான் ஒருவனாகி—இரு நிலத்தைச்-சென்று ஆங்கு அடிப்படுத்த சேய்–மூன்று இடங்களிலும் அன்வயம் –
யானொருவன்- வறிகின்றேன் அல்லேன் –உலகம் எல்லாம் அறியும் -அன்றோ –
————————————————————————————————-
சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று
ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்-71-
பதவுரை
சிறியன்–(ஸ்ரீகிருஷ்ணனென்கிற) சிறு பிள்ளையாய்க் கொண்டு
அணியன்–ஸுலபனாயும்
மிக பெரியன்–(அந்நிலையிலேயே) மிகவும் பெரியவனாய்க் கொண்டு
சேயன்–எட்டாதவனாயும் (இவ்விரண்டு படிகளுக்கும் உதாரணமாக)
ஆயன் ஆய் நின்ற–இடைப்பிள்ளையாய்ப் பிறந்த சிறுமையை யுடையனாயும்
துவரை கோன் ஆய் நின்ற–த்வாரகாபுரிக்குத் தலைவனாய் நின்ற பெரு மேன்மையை யுடையவனாயு மிருந்த
மாயன்–எம்பெருமான்
அன்று–(பாரத யுத்தம் நடந்த) அக் காலத்தில்
ஓதிய–(திருத் தேர்த் தட்டில் அர்ஜுநனைக் குறித்து) அருளிச் செய்த
வாக்கு அதனை–(சரம ச்லோகமாகிய) அந்தத் திரு வாக்கை
கல்லார்–அதிகரிக்கப் பெறாதவர்கள்
மெய் ஞானம் இல்–தத்துவ வுணர்ச்சி யற்ற
ஏதிலர் ஆம்–பகவத் விரோதிகளாவர்.
துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று-ஓதிய வாக்கதனை கல்லார்–சரம ஸ்லோகத்தையும்-அதன்-பொருளையும்
-அறியப் பெறாதவர்கள் -தத்வ ஞானம் பெறாதவர்கள் –
பாரதயுத்தத்து முதனாட்போரில் “உற்றாரையெல்லாம்“ என்றெண்ணி, ஸவதர்மத்தில் அதர்மபுத்தியால் போர்புரியேனென்று
காண்டீவம் கைநெகிழத் தேர்த்தட்டின் மீதேதிகைத்து நின்ற அர்ஜுநனுக்கு ஸ்ரீகிருஷ்ணன் தத்வோபதேசஞ் செய்து
அவனது கலக்கத்தைப்போக்க உபதேசித்ததாதலால் கீதை சிறந்தது. அதில் முதலிலே அர்ஜுநனுக்கு சேஹாத்ம விவேகத்தைப் போதித்து
அதன் மூலமாக கர்மயோகம் புருஷோத்தமவித்யை அவதார ரஹஸ்ய்ஜ்ஞானம் முதலியவற்றை உபதேசிக்க,
அர்ஜுநன் அந்த எம்பெருமான் உபதேசித்த உபாய விசேஷங்களைக்கட்டு அவை செயற்கரியனவென்றும்
ஸ்வரூப விரோதிகளென்றும் வுயாயாங்களீலும் மேபட்ட பிரபத்தியுபாயத்தை யுபதேசிப்பத்து
(நீ என்னையே சரணமாகப் பற்றினால் நான் உன்னை எல்லாப் பாபங்களினின்றும் விடுவிப்பேன், கலங்கவேண்டா) என்று
அவனது கலக்கத்தைப் போக்கினது சரமச்லோகத்தினாலென்க
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்துரைத்த நிறை ஞானத் தொரு மூர்த்தி –
-உபநிஷத் சாரம் -இதுவே -இத்தை அறியாதவர் -மெய்ஞ்ஞானம் இல்ல்லாத ஏதிலாராம் —
சம்பந்தம் இல்லாதவர் -பகைவர் என்றபடி -த்விஷத-என்றபடி –
‘ஏதலர்‘ என்றாலும் ‘ஏதிலர்‘ என்றாலும் பகைவர், ஏது இலர் – யாதொரு ஸம்பந்தமுமில்லாதவர் என்கை.
ஆகவே பகைவரைக் குறிக்கும். பகவத்கீதையில் (16-19) ச்லோகத்தில் ‘த்விஷத‘ என்று அப்பெருமான்றனே சொன்னதைத்
திருவுள்ளம்பற்றி இங்கு ‘எதிலராம்‘ என்றனரென்னலாம்
இப்பாட்டில் சேயன் என்பது மிகப் பெரியன் என்பதோடு அந்வயிக்கும்,
அணியன் என்பது சிறியன் என்பதோடு அந்வயிக்கும்,
எம்பெருமான் எளியனாயு மிருப்பன் அரியனாயு மிருப்பன் என்றவாறு.
சேயன்–மிகப் பெரியன் –அணியன் -சிறியன்–அரியனாயும் எளியனாயும் இருப்பான் என்றவாறு –
———————————————————————————-
இல்லறம் இல்லேல் துறவறம் இல் என்னும்
சொல்லறம் அல்லனவும் சொல்லல்ல -நல்லறம்
ஆவனவும் நால் வேத மாத்தவமும் நாரணனே
ஆவது ஈதன்று என்பார் ஆர்-72-
பதவுரை
(முக்திமார்க்கம் தெரியாமல் ஸம்ஸாரத்தில் உழல்கின்ற ஆத்மாக்களுக்கு)
இல்லறம் என்னும் சொல்லும்–க்ருஹஸ்த தர்மமாக சாஸ்த்ரஜித்தமான கர்ம யோகம் தஞ்சமென்று சொல்லுகிற பிரமாணங்களும்
சொல் அல்ல–பிரமாணமல்ல
இல்லேல்–அங்ஙனன்றிக்கே,
துறவறம் என்னும் சொல்லும்–ஜ்ஞாந யோகம் தஞ்சமென்று சொல்லுகிற பிரமாணங்களும்
சொல் அல்ல–பிரமாணமல்ல
இல்லேல்–அங்ஙனுமன்றிக்கே
அல்லன அறம் என்னும் சொல்–(பக்தி யோகம் தேச வாஸம் திருநாம ஸங்கீர்த்தனம் முதலான) மற்ற உபாயங்கள்
தஞ்சமென்று சொல்லுகிற பிரமாணங்களும்
சொல் அல்ல–பிரமாணமல்ல
நல் அறம் ஆவனவும்–நல்ல தருமங்களாகிய திருநாம ஸங்கீர்த்தநாதிகளும்
நால் வேதம் மா தவமும்–நான்கு வேதங்களிலும் பிரதிபாதிக்கப்பட்ட பெரிய கருமங்களுமெல்லாம்
நாரணனே ஆவது–ஸ்ரீமந்நாராயணனுடைய அநுக்ரஹத்தாலே பயனளிப்பனவாகின்றன.
ஈது–இவ்வுண்மையை
அன்று என்பார் அது–மறுப்பாருண்டோ? (இவ்வுலகம் அனைராலும் அங்கீகரிக்கத் தக்கது.
‘இல்லறம் என்னும் சொல்லும் சொல் அல்ல. இல்லேல் துறவறம் என்னும் சொல்லும் சொல் அல்ல,
இல்லேல் அல்லன அறம் என்னும் சொல்லும் சொல் அல்ல‘ என்று இங்ஙனே மூன்று வாக்யார்த்தமாக முன்னடிகளை அந்வயித்துக்கொள்க.
‘அல்லன்வும்‘ என்றவிடத்துள்ள உம்மை இரண்டாமடியின் முதலிலுள்ள ‘சொல்‘ என்ற சொல்லோடு கூட்டிக்கொள்ளப்பட்டது.
கர்மயோகம், ஜ்ஞாநயோகம், பக்தியோகம் ஒன்றும் தஞ்சமல்ல என்பன முன்னடிகள். எந்த யோகமும் எம்பெருமானடியாகவே
பயன் தருவனவாதலால் ஸாக்ஷாத்தாக அவனையே உபாயமாகக் கொள்ளுதல் சிறக்கும் என்பன பின்னடிகள்.
இல்லறம் என்னும் சொல்லும் சொல் அல்ல –க்ருஹஸ்தனாயிருந்துகொண்டு அநுஷ்டிக்கவுரிய தருமங்களாகிய யஜ்ஞதாநதப,
ப்ரப்ருதிகளான கர்மயோகம் இங்கு இல்லற மெனப்படுகிறது. “ஸ்ர்வதர்மாந் பரித்யஜய“ இத்யாதி சரமச்லோகாதிகாரிக்குக்
கர்மயோக விதாயகங்களான சாஸ்த்ரங்கள் தஞ்சமல்ல என்கை.
இல்லேல் துறவறம் என்னுஞ் சொல்லும் சொல்லல்ல – ‘துறவறம்‘ என்று ஸந்ந்யாஸத்தைச் சொல்வது ப்ரஸித்தம்,
கீதையில் ஸந்ந்யாஸ சப்தத்தால் ஜ்ஞாநயோகத்தை வ்யவஹரிப்பது காண்க.
(ஐந்தாவது அத்யாயத்தில் ஒன்று, இரண்டு, ஆறு முதலிய ச்லோகங்களிற் காணலாம்)
கர்மத்தைவிட பற்ற வேண்டியதான ஞானயோகம் ஸந்ந்யாஸமென்றும் தறவறமென்றும் பெயர் பெற்றதாகும் என்றதுணர்க.
சரமச்லோகதிகாரிக்கு இந்த ஜ்ஞாநயோக விதாயக சாஸ்த்ரங்களும் தஞ்சமல்ல என்கை.
அல்லன அறம் என்னும் சொல்லும் சொல் அல்ல – கீழ்ச்சொன்ன கர்மயோக ஜ்ஞாநயோகங்களையொழிந்த பக்தியோகமும்,
அவதாரரஹஸ்யஜ்ஞாநம் புருஷோத்தம வித்யை தேசவாஸம் திருநாமஸங்கீர்த்தநம் திருவிளக்கெரிக்கை திருமாலையெடுக்கை முதலான
(உபாயபுத்தியோடு செய்யும) வையும் இங்கு ‘அல்லன அறம்‘ என்றதனால் கொள்ளத்தக்கன.
ஆக இவை யொன்றும் தஞ்சமல்ல என்கையாலே எம்பெருமானையே உபாயமாக வரிப்பதாகிற ப்ரபத்தி யோகமே தஞ்சமென்னுமிடம் பெறப்பட்டதாகும்.
ஆளவந்தார் ஸ்தோத்ர ஸூக்தி இதற்குச் சார்பாக இங்கு அநுஸந்தேயம்.
(வரதராஜஸ்தவம் – 93) ஆழ்வான் ஸ்ரீஸூக்தி அநுந்தேயம். எந்த யோகத்தைப் பற்றினாலும் முடிவில் அந்நதந்த யோகங்களினால்
திருவுற்றமுவக்கும் எம்பெருமானே பலன் பெறுவிக்கவல்லவன் ஆதலால் அவனது திருவருளையே தஞ்சமாகக் கொள்ளுதல் ஏற்குமென்றவாறு.
ஈது அன்று என்பாரார்? – இவ்வர்த்தம் ஸகல சாஸ்த்ரங்களிலும் பொதிந்து கிடக்கையாலே இது ஸர்வஸம்மதமாகவற்று என்கை.
முத்தி மார்க்கம் தெரியாமல் சம்சாரத்தில் உழலும் ஆத்மாக்களுக்கு
இல்லறம் -என்னும்-சொல்லறம்--க்ருஹஸ்த விஹித தரமமாக -கர்மா யோகம் தஞ்சம் என்று சாஸ்திரம் சொல்வதும்
சொல் அல்ல -பிரமாணம் அல்ல
இல்லேல் துறவறம் இல் என்னும் சொல்லும் -அன்றிக்கே ஞான யோகம் தஞ்சம் என்று சொல்லும் பிரமாணங்களை
சொல் அல்ல -பிரமாணம் அல்ல -ஞான யோகம் சன்யாசம் என்றும் துறவறம் எண்டும் சொல்லக் கடவது இ றே –
இல்லேல் அல்லற அறம் என்னும் சொல்லும் -பக்தி யோகம் -தேச வாசம் திரு நாம சங்கீர்த்தனம்
-இவை உபாயங்கள் தஞ்சம் என்று சொல்லும் பிரமாணங்களும்
சொல் அல்ல -பிரமாணம் அல்ல –
-நல்லறம் ஆவனவும் -நல்ல தர்மங்களான திரு நாம சங்கீர்த்தநாதிகளும்
நால் வேத மாத்தவமும் –நான்கு வேதங்களில் பிரதிபாதிக்கப்பட்ட பெரிய கருமங்கள் எல்லாம் –
நாரணனே-ஆவது-ஸ்ரீ மன் நாராயணன் உடைய அனுக்ரஹத்தாலே பயன் அளிப்பன ஆகின்றன –
ஈதன்று என்பார் ஆர்-இவ்வுண்மையை மறுப்பார் யுண்டோ -அனைவராலும் அங்கீகரிக்கத் தக்கதே –
எந்த யோகத்தைப் பற்றினாலும் -முடிவில் அந்த அந்த யோகங்களினால் திரு உள்ளம் உகக்கும்
எம்பெருமானே பலன் பெறுவிக்க வல்லவன் -என்பதால் -அவன் திருவருளையே தஞ்சமாக கொள்ளுதல் ஏற்கும்
-இவ்வர்த்தம் சகல சாஸ்த்ர சித்தம்-சர்வ சம்மதம் -என்பதை –ஈதன்று என்பார் ஆர்–என்கிறார்
——————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-