திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -85-96–-திவ்யார்த்த தீபிகை சாரம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

எம்பெருமான் திரு நாம சங்கீர்த்தனம் எனக்கு நித்ய கர்ம அனுஷ்டானம் -மாற்று வேறு ஒன்றில் நெஞ்சு
செலுத்த ஒண்ணாதபடி -எம்பெருமான் என் நெஞ்சுக்குள்ளே உறைகின்றான் காண்மின் -என்கிறார்

தொழில் எனக்கு தொல்லை மால் தன் நாமம் ஏத்த
பொழுது எனக்கு மற்றதுவே போதும் -கழி சினத்த
வல்லாளன் வானவர் கோன் வாலி மதன் அழித்த
வில்லாளன் நெஞ்சத்து உளன் –85-

பதவுரை

கழி சினத்த–மிகக் கோபத்தை யுடையவனும்
வல்லாளன்–மிக்க வலிமை யுடையவனும்
வானார் கோன்–குரங்குகட்கு அரசனுமாகிய
வாலி–வாலியினுடைய
மதன்–மதத்தை (கொழுப்பை
அழித்த–தொலைத்த
வில் ஆளன்–சார்ங்க வில்லை ஆள்பவனான இராமபிரான்
நெஞ்சத்து–எனது நெஞசிடத்து
உளன்–எழுந்தருளி யிருக்கின்றான்
எனக்கு–(அந்த இராம பிரானுடைய திருக் குணங்களில் அகப்பட்ட) எனக்கு
தொழில்–நித்ய கருமம்
தொல்லை மால் தன் நாமம் ஏத்த–புராணனான அந்த ஸர்வேச்வரனுடைய திருநாமங்களை வாயாரப் புகழ்வதாம்
எனக்கு–(உலகத்தாரில் வேறு பட்டவனான) எனக்கு
மற்றதுவே–கீழ்ச் சொன்ன ஸ்ரீராமநாம ஸங்கீர்த்தனத்தினாலேயே
பொழுது போதும்–போது போகும்.

வானரக் கோன் — -வெள்ளி மலை பறித்த பெரு வீரனான இராவணனையும் வாலிலே கொண்டு திரிந்த வாலி –
கழி சினத்த வல்லாளன் -மிக்க கோபத்தை யுடைய -மிக்க வலிமை யுடைய -மதன் -மதத்தை -கொழுப்பை –

சூது சதுரங்கமாடியே போதைப் போக்கும் சில லௌகிகர்கள் ‘ஆழ்வாரே! எங்களோடே ஒருகை ஆடவருவீரோ?! என்றழைக்க,
அவர்கட்கு மறுமொழிகூறும் பாசுரமிது என்று விநோதமாகப் பெரியவாச்சான்பிள்ளை யருளிச்செய்வது காண்மின், –
“எதிரிகள் சதுரங்கம் பொரப் போருவீரோ என்றழைக்க இவர் சொல்லும்படி“ என்று.

எம்பெருமானுடைய திருநாமங்களை ஸங்கீர்த்தநம் பண்ணுவதே எனக்கு நித்யகர்மாநுஷ்டாநம்,
என்போதெல்லாம் அதிலே போகின்றது, அதற்கே போது போராதிருக்க வேறொன்றுக்குப் போதுகிடைக்குமோ?
வேறொன்றிலே நெஞ்சைச் செலுத்தவுமொட்டாதபடி.. எம்பெருமான் என்னெஞ்சினுள் உறைகின்றான் காண்மின் என்றாராயிற்று.

வானார் + கோன், வானரக்கோன். மதன் –மதம், மகரனகரப்போலி.
வெள்ளிமலை பறித்த பெருவீரனான இராவணனையும் வாலிலே கொண்டு திரிந்தவனான வாலிக்கு
‘கழிசினத்த, வல்லாளன்‘ என்ற அடைமொழிகள் பொருந்தும். (வாலி மதனழித்த வரலாறு, கீழ் இருபத்தெட்டாம் பாட்டினுரையிற் காண்க.)

இராமபிரான் வாலியைக் கொன்றவிதனில் ஸாமாந்யர் சில ஆக்ஷேபங்கள் கூறுவதுண்டு, அவையும் அவற்றுக்கு ஸமாதானங்களும் வருமாறு. –
‘இராவணவதத்திற்கு உதவி தேடுகிற இராமன் இராவணை எளிதில் வெல்லவல்ல வாலியைக் கொன்று விட்டு,
பயங்கொள்ளியான ஸுக்ரீவனை உதவிசெய்து கொண்டது என்ன புத்திசாலித்தனம்!‘ என்பர் சிலர், கேண்மின் –
வாலி முன்னமே இராவணனுடன் அக்நிஸாக்ஷிகமாக ஸ்நேஹங் கொண்டிருந்தமைபற்றி அவனைத்தான் உதவிகொண்டால்
இராவணன் முதலிய துஷ்டர்களைத் தொலைக்க வகையில்லாமையால் இராமன் ஸுக்ரீவனை நண்பனாகக் கொண்டு
அவன் வேண்டுகோளின்படி வாலியை வதைத்திட்டனன். இனிச் செய்ய வேண்டிய ராவண ஸம்ஹாரமாகிற தேவகாரியத்திற்கு
இவ்வாலி வதம் அங்கமெனக் கருதத்தக்கது, எவ்வகைப் பெருந்தீங்கு செய்திருந்தாலும் சரணமடைந்தால்
அவர்களைப் பாதுகாப்பதென்ற சிறந்த தருமத்தை மேற்கொண்டு நடப்பவனான இராமபிரான், அத்தருமத்தை முழுதும் விட்டவனும்
ஸுக்ரீவன் சரணமடைந்த பின்னரும் அவனை மிக வருந்திக் கொல்லத் தொடங்கி அந்தத் தருமத்திற்கு
எதிரானவனுமான வாலியைக் கொன்றது பொருந்தும். அன்றியும், பிறர் மனைவியைக் காதலித்துக் கவர்தலும்,
தம்பியிடம் பகை பாராட்டுதலும், வலியழிந்து முதுகுகாட்டி ஓடுகின்றவனைத் துரத்தி துரத்திக் கொல்லத் தொடங்குதலும்
முதலிய தீச்செயல்கள் வாலியினிடம் இருந்ததனாலும் பரமதார்மிகனான இராமன் வாலியை அழிக்கலானான்.
இராமபிரான் தான் ஏகபத்நீ விரதமுடையனாய், தம்பியரைத் தன்னுயிர்போலக் கொள்பவனாய், வலியிழந்த பகைவனை
‘இன்றுபோய் நாளைவா‘ என்று அன்போடு சொல்லி விடுத்தருளும் மஹாவீரனாவான்.

இஃதெல்லாமிருக்கட்டும், மறைந்து நின்று அம்பு எய்தது கூடுமோ? எனின், இது அரசர் கொடிய விலங்குகளைப் பதுங்கி
நின்று அழிக்கும் வேட்டைமுறையா லென்பர். “***“ என்று அதிமாநுஷஸ்வத்தில் ஆழ்வானருளிச் செய்ததுங்காண்க.
வேறு வகையான ஸமாதானங்களும் உள்ளன. முதலில் சரணமடைந்த ஸுக்ரீவனுக்கு அபயமளித்து வாலியைக் கொல்வதாக
வாக்குதத்தஞ் செய்துவிட்ட பெருமாள் பின்னர் வாலியினெதிரில் நின்று போர்செய்தால் இப்பெருமானது திறத்தைக் கண்டு
அஞ்சி வாலியும் இவனைச் சரணமடைந்திருவனாயின் தஞ்சமடைந்தவனைக் கொலை செய்யக்கூடாமை பற்றி
அவனைக் கொல்லாதுவிட நேர்ந்தால் முன்னைய வாக்கு (ஸுக்ரீவனுக்கு அளித்த வாக்கு)த் தவறி விடுமேயென்ற நோக்கம் முக்கிய காரணமாம்.
அன்றியும், எதிர்ந்தார் வலிமையிற் பாதி தன்னிடம் வந்து கூடும்படி வாலி சிவபிரானிடத்துப் பெற்றிருக்கின்ற வரம்
பழுது படாமலிக்குமாறு மறைந்து நின்று அம்பெய்தனன் என்றலு மொன்று. அவரவர்கள் தேவதாந்தரங்களிடத்துப் பெற்ற வரங்கள்
பழுதுபடாதபடியன்றோ எம்பெருமான் காரியஞ்செய்வது. இங்ஙனம் பல காரணங்களுள. இங்கு விரிப்பிற் பெருகும்.
ஸ்ரீராமாயணம் அதன் வியாக்கியானங்கள் வல்லார்வாய்க் கேட்டுணர்க.
கடவுளரது நியாயம் நுட்பமனாதும் அறிதற்கு அரியதுமாதலால் அது மனிதரது நியாயத்தோடு ஒப்பு நோக்கி
ஆராய்தற்கு உரியதன்றென்பது உணரத்தக்கது நிற்க.

————————————————————————————-

ஆழ்வார் தம்முடைய ஆஸ்திக்யத்தின் உறைப்பை நன்கு வெளியிட்டு அருளுகிறார் 

உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு
என்னொப்பார்க்கு ஈசன் இமை-86-

பதவுரை

நல் நெஞ்சை–எனக்குப் பாங்கான மனமே!
உத்தமன்–புருஷோத்தமனான எம்பெருமான்
உளன் கண்டாய்–(நம்மை ரக்ஷிப்பதனாலே) ஸத்தை பெற்றிருப்பவன் காண்
தன் ஒப்பான்–(தனக்குப் பிறரொருவரும் ஒப்பில்லாமையாலே) தனக்குத்தானே ஒத்திருப்பவனான அந்த எம்பெருமான்
தமியேற்கு–ஒரு கைம்முதலுமற்றவனான எனக்கும்
என்றும் உளன் கண்டாய்–எக்காலத்திலும் (நம்மை ரக்ஷிப்பதிலே தீக்ஷை கொண்டு) இருக்கிறான் காண்க.
உள்ளுவார் உள்ளத்து–ஆஸ்திகர்களுடைய மனத்திலே
உளன் கண்டாய்–நித்யவாஸம் பண்ணுமவன் காண்
என் ஒப்பார்க்கு–என்னைப் போலே உபாய சூந்யராயிருப்பவர்கட்கும்
தான் ஈசன் ஆய் உளன் காண்–தானே நிர்வாகனாயிருக்கிறான் காண்
இமை–இதனை அறி.

உத்தமன் உளன் கண்டாய் -ரக்ஷிப்பதாலேயே சத்தை பெற்று இருக்கும் புருஷோத்தமன்
உள்ளூர் உள்ளத்து உளன் கண்டாய் -ஆஸ்ரிதர் மனசிலே நித்ய வாசம் பண்ணி அருளுபவர் காண் –
என்றும் உளன் கண்டாய் -எக்காலத்திலும் ரக்ஷிப்பதற்கு தீக்ஷை கொண்டு இருக்கிறான் காண் –
என்னொப்பார்க்கு தான் ஈசனாய் உளன் காண் இமை–என்னைப் போல் உபாய ஸூன்யராய் இருப்பாற்கடக்கும் தானே
நிர்வாஹகானாய் இருக்கிறான் என்பதை புத்தி பண்ணு –
நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் -என்றபடி கைம்முதல் இல்லாதார்க்கு கைமுதலும் அவனே
என்னொப்பார்க்கு–மற்றுள்ள ஆழ்வார்களைக் கூட்டிக் கொள்ளுகிறபடி –

————————————————————————–

சர்வ ரக்ஷகன் அவனே என்பதை மூதலிக்கிறார் —

இமயப் பெரு மலை போல் இந்திரனார்க்கு இட்ட
சமய விருந்துண்டார் காப்பான் -சமயங்கள்
கண்டான் அவை காப்பான் கார்கண்டன் நான்முகனோடு
உண்டான் உலகோடு உயிர்-87-

பதவுரை

இமயம் பெரு மலை போல்-பெரிய இமயமலை போன்றிருக்கும்படி
இந்திரனார்க்கு இட்ட–இந்திரனுக்காகச் சமைத்து வைத்த
சமயம் விருந்து–வழக்கமான ஆராதனையை
உண்டு–உட் கொண்ட போது (நேர்ந்த கல்மழையாலாகிய ஆபத்தில் நின்றும்)
கார்க்கண்டன் நான்முகனோடு காப்பான் ஆர்–சிவனையும் பிரமனையும் (பெரிய ஆபத்துக்களில் நின்றும்) ரக்ஷிப்பவன் யார்?
ஆர் காப்பார்–காப்பாற்றினது யார்?
சமயங்கள்–வைதிக மதங்களை
கண்டான்–பிரவர்த்திப்பித்தவன்
ஆர்–யார்?
அவை காப்பான்–அவற்றை (நிலை குலையாதபடி) ரக்ஷிப்பவன்
ஆர்–யார்?
உலகோடு உயிர் உண்டான் ஆர்–
உலகங்களையும் (உலகங்களிலுள்ள ஜீவராசிகளையும் (பிரளயத்தில்) உண்டு ரக்ஷித்தவன் யார்?
(எல்லாம் எம்பெருமானே யன்றோ)

ஸர்வரக்ஷகன் எம்பெருமானே யென்பதை மூதலிக்கிறார். பண்டு திருவாய்ப்பாடியில் கண்ணபிரானுடைய
அதிமாநுஷ சீலவ்ருத்த வேஷங்களைக் கண்டு ஆயர்களனைவரும் ‘இவனே நம் குலக்கொழுந்து,
இவன் கட்டளைப்படியே நாம் நடக்கவேண்டும்‘ என்று நிச்சயித்திருந்தனர். இங்ஙனமிருக்கையில் சரத்காலம் வந்தது,
அப்போது இடையர்கள் வருஷந்தோறும் நடத்துவதுபோல் வழக்கபடி இந்திரனுக்குப் பூஜைசெய்யப் பற்பல வண்டிகளில்
சோறும் தயிரும் நெய்யும் காய்கறிகளும் மற்றுமுள்ள பூஜாத்ரவ்யங்களுமாகிய இவற்றைச் சேகரிப்பதைக் கண்டு
கிருஷ்ணன் ‘ஓ பெரியோர்களே! நாமும் நம்முடைய பசுக்களும் எதனால் ஜீவிக்கிறோமோ அதற்குப் பூஜை செய்வதன்றோ தகுதி,
இக் கோவர்தனகிரியே பசுக்களுக்குப் புல்லுந் தண்ணீருங் கொடுத்துக் காப்பாற்றுகின்றது, இந்திரனால் நமக்கு என்ன பயணுன்டு?
ஒன்றுமில்லை, ஆகையால் நீங்கள் இப்பூசனை யனைத்தையும் இம்மலைக்கே இடுங்கள்‘ என்ன,
இடையர்கள் இதைக்கேட்டு அங்ஙனமே செய், கண்ணபிரான் தானே ஒரு தேவதாரூபங்கொண்டு அவற்றைமுற்றும் அமுது செய்தருள,
அவ்விந்திரன் மிகக்கோபத்தோடு புஷ்கலாவர்த்தம் முதலிய பல மேகங்களை ஏவி, கண்ணன் விரும்பியமேய்க்கிற
கன்று கட்கும் பசுக்கட்கும் இடையர்க்கும் இடைச்சியர்க்கும் தீங்குதரும் படி கல்மழையை ஏழுநாள் இடைவிடாது பெய்வித்தபொழுது,
கண்ணபிரான் கோவர்த்தனமலையை யெடுத்துக் குடையாகப் பிடித்து மழையைத் தடுத்து எல்லாவுயிர்களைங் காத்தருளினன்
என்ற வரலாறு முன்னடிகட்கு அறியதக்கது.

இடையர் இந்திரனுக்கு இட்ட பூஜை “அட்டுக்குவி சோற்றுப் பருப்பதமும் தயிர்வாவியும் நெய்யளறும்“ என்னும்படியாகப்
பெரியமலை போன்றிருந்ததனால் ‘இமய பெருமலைபோல்‘ என்றார்.

சமயவிருந்து – ‘ஸமயம்‘ என்னும் வடசொல்லுக்குள்ள பல பொருள்களில் ‘ஸங்கேதம்‘ என்கிற பொருள் இங்கு விவக்ஷிதம்,
வினாச்சுட்டு மேல் ஒவ்வொரு வினையிலும் அந்வயிக்கவுரியது.

வைதிகமதங்களை ஏற்படுத்தினவன் யார்?
பாஹ்யகுத்ருஷ்டி மதங்களாலே அவற்றுக்குக் குலைதல் வாராதபடி அவற்றைப் பரிபாலனம் செய்தருள்பவன் யார்?
சிவனுக்கு நேர்ந்திருந்த பிரமஹத்தியாகிற ஆபத்தை நீக்கிக் காத்தவன் யார்?
வேதங்களை அசுரர்க்குப் பறி கொடுத்துக் கண்கெட்டு நின்று தவித்த பிரமன் துயரைத் தீர்த்தது யார்?
உலகங்களைப் பிரளங்கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்து நோக்கினவன் யார்?
எல்லாவகை ரக்ஷணங்களுஞ் செய்தவன் எம்பெருமானே யென்று தெளிவித்தபடி.
ஆளவந்தார் இப்பாசுரத்தையே திருவுள்ளம்பற்றி ஸ்தோத்ரத்நத்தில் மூன்று ச்லோகங்களருளிச் செய்தன ரென்னலாம்.

கார்கண்டன் நான்முகனோடு-காப்பான் ஆர் – உண்டான் உலகோடு உயிர்-உண்டான் ஆர் -தனியாகவும்
-கார்கண்டன் நான்முகனோடு- உலகோடு உயிர்-உண்டான் ஆர் -என்று ஒரே வாக்யமாகவும் யோஜிக்கவுமாம் –
அன்று எல்லாரும் அறியாரோ-எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் –பெரிய திருமொழி -11 -6 -2 –
இந்த பாசுரம் கொண்டே ஆளவந்தார் -க ஸ்ரீ –தொடங்கி மூன்று ஸ்லோகங்கள் -அருளிச் செய்தார் –

—————————————————————————————-

உயிர் கொண்டு உடல் ஒழிய ஓடும் போது ஓடி
அயர்வு என்று தீர்ப்பான் பெயர் பாடி -செயல் தீரச்
சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறு சமயப்
பந்தனையார் வாழ்வேல் பழுது-88-

பதவுரை

உடல் ஒழிய–சரீரத்தைப் போட்டு விட்டு
உயிர் கொண்டு–ஆத்மாவைப் பிடித்துக் கொண்டு
ஓடும்போது–(யமபடர்கள்) ஓடும்போது
ஓடி–(எம்பெருமானாகிய தானே) ஓடிச் சென்று
செயல் தீர–பேற்றுக்காக நாம் செய்ய வேண்டிய செயல் (ப்ரவ்ருத்தி) ஒன்றுமில்லை யென்று
சிந்தித்து–ஸ்வரூபத்தை யுணர்ந்து
வாழ்வாரே–வாழ நினைப்பவர்களே
வாழ்வார்–வாழ்ச்சி பெறுவர்
அயர்வு என்ற–கஷ்ட மென்று சொல்லப் படுகிற எல்லாவற்றையும்
தீர்ப்பான்–தீர்க்குமவனான எம்பெருமானுடைய
பேர்–திருநாமங்களை
பாடி–வாய்விட்டுப் பாடி
சிறு சமயம் பந்தனையார்–அற்பங்களாய் பல நியமங்களோடு கூடினவையாய் ஸம்ஸார பந்தத்திற்கே
காரணமாக வுள்ளவையான உபாயங்களைப் பற்றினவர்களுடைய
வாழ்வு ஏல்–வாழ்ச்சியோ வென்றால்
பழுது–உபயோகமற்றது.

உபாடாந்தரங்களை அனுஷ்ட்டிக்கும் ப்ரவ்ருத்தி தர்ம நிஷ்டர்கள் போல் அன்றிக்கே -ஸ்வரூப உசிதங்களான-திரு விளக்கு எரிக்கை
திருமாலை எடுக்கை போன்ற பிரவ்ருத்திகளையும் உபாய புத்தி இன்றிக்கே ஸ்வயம் புருஷார்த்த புத்தியுடன் அனுஷ்ட்டித்து
அவன் நிர்ஹேதுக கிருபை அன்றி பேற்றுக்கு உபாயம் இல்லை என்று அத்யவசித்து
-காம்பறத் தலை சிரைத்து அவன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பர்-
அகிஞ்சனராய் இருக்கும் நிவ்ருத்தி தர்ம நிஷ்டர் -இவர்களுக்கு தானே நேரில் சென்று அயர்வுகளை தீர்க்கும் எம்பெருமான்
திரு நாமங்களையே மகிழ்ந்து பாடி வாழ்வதே வாழ்வு
தீர்ப்பான் பெயர் பாடி -பாட பேதம் -வெண்டளை பிறழும் –பேர் பாடி ப்ராசீன பாடமே பொருந்தும்
பந்தனையாய் -பந்தம் உடையவர் -கால் கட்டுக்களை யுடையவர் என்றவாறு –
சிறு சமய பந்தனையார் -அல்ப மாயும் நியமங்கள் உடன் கூடிய தாயும் –
சம்சார பந்தத்தத்துக்கு காரணமாயும் உள்ள உபாயாந்தரங்களை பற்றினவர் –

—————————————————————————————————

எம்பெருமானை ஆச்ரயிப்பதுபோல் காட்டிலும் பாகவதர்கள் பாதம் பணிதல் பாங்கு என்னும் பரம ரகஸ்யார்த்தை
வெளியிட்டு அருளுகிறார் -கீழே மாறாய தானவனை 18-பாசுரத்தில் மேலும் இத்தையே அருளிச் செய்கிறார்-
சித்திர்ப் பவதி வா நேதி சம்சய வுச்யுதஸேவி நாம் ந சம்சயோஸ்தி தத் பக்த பரிசர்ய ஆரதாத்மநாம் -மோக்ஷ ஏக ஹேது அன்றோ
-மார்பிலே கை வைத்து உறங்கலாம் -அதனால் -பழுதாகது ஓன்று அறிந்தேன்-என்று கம்பீரமாக அருளிச் செய்கிறார் –

பழுதாகது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –89-

பதவுரை

பழுது ஆகாது ஒன்று–பழுதுபடாத (சிறந்த) ஒரு உபாயத்தை
அறிந்தேன்–தெரிந்து கொண்டேன் (அது என்னவென்றால் கேண்மின்)
பால் கடலான் பாதம்–க்ஷீராப்தி நாதனுடைய திருவடிகளை
வாழுவா வகை நினைத்து–தப்பாதபடி அநுஸந்தித்து
வைகல் தொழுவாரை–எப்போதும் வணங்குமவர்களை
கண்டு இறைஞ்சி–கண்டு வணங்கி
வாழ்வார்–வாழ்பவர்கள் (பாகவத பக்தர்கள்)
கலந்த வினைகெடுத்து–ஆத்மாவோடு சேர்ந்த தீவினைகளைத் தொலைத்து
விண் திறந்து–பரமபத வாசலைத் திறந்து
மிக்கு–சிறப்புடனே
வீற்றிருப்பார்–எழுந்தருளி யிருக்கப் பெறுவர்

கலந்த வினை கெடுத்து--ஆத்மாவுடன் சேர்ந்த தீ வினைகளைத் தீர்த்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –பரமபத வாசலைத் திறந்து சிறப்புடனே எழுந்து அருளி இருக்கப் பெறுவர்
பாற்கடலான் பாதத்தை கண்டு இறைஞ்சுக்கை அன்றிக்கே -பாற் கடலான பாதம் தொழுவாரை
கண்டு இறைஞ்சுமவர் நல் வாழ்வு பெறுவார் என்றதாயிற்று –
ஸ்ரீ வசன பூஷணம் -பழுதாகாது ஓன்று அறிந்தே –என்பதை பூர்வ உபாயத்துக்கு பிரமாணம் என்றும்
-நல்ல வென் தோழி/ மாறாய தானவனை -பாட்டுக்களை
ஆச்சார அபிமானம் உத்தாரகம் என்பதற்கு பிரமாணம் –
என்று அருளிச் செய்வது அறிக

—————————————————————————————————-

வீற்று இருந்து விண்ணாள வேண்டுவார் வேங்கடத்தான்
பால் திறந்து வைத்தாரே பன் மலர்கள் -மேல் திருந்து
வாழ்வார் வருமதி பார்த்து அன்பினராய் மற்று அவர்க்கே
தாழ்வாய் இருப்பார் தமர்-90-

பதவுரை

விண்–பரமபதத்தில்
வீற்றிருந்து–பெருமை பொலிய இருந்து
ஆள வேண்டுவார்–ஆட்சி செய்ய விரும்பி அப்படியே பேறு பெற்றவர்கள்
வேங்கடத்தான் பால்–திருவேங்கட முடையான் பக்கலில்
பல் மலர்கள்–பலவகைப்பட்ட மலர்களை
திருந்த–நன்றாக
வைத்தாரே–ஸமர்ப்பித்தவர்களே யாவர் (பகவானை ஆராதித்தவர்களே விண் ஆள்வர் என்கை)
வரும் மதி பார்த்து–(எம்பெருமானுடைய திருவுள்ளத்தில்) ஓடுகின்ற கருத்தை யறிந்து
அன்பினர் ஆய்–பக்தியை யுடையவர்களாய்
மற்றவற்கே–அந்த எம்பெருமானுக்கே
தாழ்வு ஆய் இருப்பார்–அடிமைப்பட்டிருப்பவர்களுக்கு
தமர்–அடிமைப்பட்டவர்கள்
மேல் திருந்த வாழ்வார்–முன்னடிகளிற் சொல்லப்பட்டவர்களிற் காட்டிலும் விலக்ஷணராக வாழ்பவராம்.

வீற்று இருந்து விண்ணாள வேண்டுவார் வேங்கடத்தான்
பால் பன் மலர்கள் திறந்து வைத்தாரே -பரம பதத்தில் பெருமை பொலிய இருந்து ஆட் செய்ய விரும்பி அப்படியே
பேறு பெற்றவர்கள் திருவேங்கடமுடையான் பக்கலிலே பல வகைப்பட்ட மலர்களை நன்றாக சமர்ப்பித்தவர்களே யாவர் –
பகவானை ஆராதித்தவர்கள் வின் ஆழ்வார் -என்றபடி
வருமதி பார்த்து அன்பினராய் மற்று அவர்க்கே
தாழ்வாய் இருப்பார் தமர்-மேல் திருந்து வாழ்வார் -எம்பெருமான் திரு உள்ளத்திலே
ஓடுகிற கருத்தை அறிந்து -பக்தி யுடையவர்களாய் -அந்த எம்பெருமானுக்கே அடிமைப் பட்டு இருப்பவர்களுக்கு அடிமை பட்டவர்கள் –
முன்பு சொல்லப் பட்டவர்களில் காட்டிலும் விலக்ஷணராக வாழ்வார்
பாகவத அங்கீ காரமே உத்க்ருஷ்டம் -என்றவாறு
திருந்த -பாடமே ஏற்கும் –திருந்து பாட பேதம் ஒவ்வாது –

——————————————————————————————–

எம்பெருமான் திருவடிகளே உபாய உபேயங்கள் என்று உறுதி கொண்டு இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்
உபய விபூதில் உள்ளார்க்கும் நிர்வாஹகராகும் படியான பெருமையை யுடையவர்கள் -என்கிறார் –

தமராவர் யாவர்க்கும் தாமரை மேலார்க்கும்
அமரர்க்கும் ஆடு அரவத் தார்க்கும் -அமரர்கள்
தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால் வண்ணன்
தாள் தாமரை அடைவோம் என்று-91-

பதவுரை

மால் வண்ணன்–கரியமேனியனான எம்பெருமானுடைய
தாள் தாமரை–திருவடித் தாமரைகளில்
மலர்கள் இட்டு–புஷ்பங்களை ஸமர்ப்பித்து
இறைஞ்சி–வணங்கி
தாள் தாமரை அடைவோம் என்று–அத்திருவடித் தாமரைகளை யடைவோமென்று
தமர் ஆவார்–பக்தராயிருக்குமவர்கள்
தாமரை மேலாற்கும்–திருநாபிக் கமலத்திற் பிறந்த பிரமனுக்கும்
ஆடு அரவு ஆர்த்தாற்கும்–ஆடுகின்ற ஸர்ப்பங்களை (ஆபரணமாக உடம்பிலே) கட்டிக் கொண்டிருக்கும் சிவனுக்கும்
அமரர்க்கும்–நித்ய ஸூரிகளுக்கும்
யாவர்க்கும்–மற்றுமெல்லார்க்கும்
அமரர்கள்–மேற்பட்டவராவர்

ஆடு அரவு ஆர்த்தார்க்கும் -ஆடரவத்தார்க்கும்–ஆடுகின்ற சர்ப்பங்களை ஆபரணமாக உடம்பில் கட்டிக் கொண்டு இருக்கும் சிவனுக்கும் –
தாருக வன முனிவர் தன்னை மதியாமல் இருக்க -அவர்கள் கர்வத்தை பங்கம் செய்யவும் -அவர்கள் மனைவிகளின் கற்பைப் பரிசோதிக்கவும்
ஒரு காமுகன் வடிவைக் கொண்டு பிஷாடணம் செய்து தன் மேல் காதல் கொண்ட முனி பத்தினிகள் கற்பு நிலையைக் கெடச் செய்ய
கோபம் கொண்ட முனிகள் அபிசார யாகம் செய்து ஹோமத்தீயில் இருந்து எழுந்த நாகங்கள் -பூதங்கள் மான் புலி முயலகன் வெண்டலை
-முதலவற்றை சிவனை கொல்ல ஏவ -சிவபெருமான் நாகங்களை ஆபரணங்களாகவும் -பூதங்களை கணங்களாகவும்
-மானைக் கையில் ஏந்தி புலி தோல் உடுத்து முயலகன் முதுகில் காலூன்றி
வெண்டலையைக் கையால் பற்றி சிரம் மேல் அணிந்து அவற்றை பயன் இல்லாதனவாகச் செய்தான் என்பர் –

——————————————————————————–

நான் கர்ப்ப வாசம் பண்ணும் போதே தொடங்கி எம்பெருமான் என்னை ரஷித்திக் கொண்டு
வருகையால் ஒரு காலும் அவனை மறந்து அறியேன் என்கிறார் –

என்றும் மறந்தறியேன் என்நெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும் நெடுமாலை -என்றும்
திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்
கருவிருந்த நாள் முதலாக் காப்பு-92-

பதவுரை

கரு இருந்த நாள் முதலா–(நான்) கர்ப்பத்திலிருந்த நாள் தொடங்கி
காப்பு–(எம்பெருமானாலே) ரக்ஷை பெற்றவனாகையாலே
திரு என்றும் இருந்த மார்வன் சிரீதரனுக்கு–பிராட்டி நித்யவாஸம் பண்ணப்பெற்ற திருமார்வை யுடைய அந்தத்திருமாலுக்கு
ஆள் ஆய்–ஆட்பட்டவனாய்
நெடு மாலை–(அந்த) ஸர்வேச்வரனை
என் நெஞ்சத்து–என்னுடைய ஹ்ருதயத்திலே
வைத்து–ஸ்தாபித்து
நின்றும் இருந்தும் என்றும்–நிற்றல் இருத்தல் முதலிய எல்லா நிலைமைகளிலும்
மறந்தறியேன்–மறவாமல் (அவனையே) சிந்திப்பவனா யிருக்கின்றேன்.

நான் கர்ப்பவாஸம் பண்ணும்போதே தொடங்கி எம்பெருமான் என்னை ரக்ஷித்துக் கொண்டு வருகையாலே
ஒரு காலும் நான் அவனை மறந்தறியேனென்கிறார்.

இவ்வாழ்வார் கீழ்க்கழிந்த காலங்களில் பல சமயங்களிலும் புகுந்து பல தெய்வங்களையும் வழிப்பட்டவரா யிருந்து வைத்து,
திருமாலை ஒரு நாளும் மறந்தறியேனென்று சொல்வது பொருந்துமோ? என்று சங்கிப்பர் சிலர் உண்மை கேண்மின்,
எம்பெருமானுக்கு ஆட்பட்டிருக்குந் தன்மையானது ஸகல ஆத்மாக்களுக்கும் இயற்கையாகவே யுள்ளது,

ஆட்பட்டு இருப்பது அனைவருக்கும் இயற்க்கை அன்றோ -அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன்
அபிமான துங்கன் செல்வனைப் போலே நானும் உனக்கு பழ வடியேன் –
மாணிக்கத்தின் ஒளி அழுக்கினால் மழுங்கி இருந்து ஒரு நாள் அளவில் அழுக்கு நீங்கி விளங்கினாலும் அவ்வொளி இயற்க்கை என்னத் தட்டில்லை —
இடையில் அடிமையை இழந்தால் -வயிறு எரிந்து -பொழுதே பல காலும் போயின என்று அஞ்சி அழுதேன் -என்றும்
பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுது போய் ஒழிந்தன நாள்கள் –என்றும் அன்று நான் பிறந்திலேன் -என்பர்
நிற்கும் இருந்தும் –எல்லா நிலைகளிலும் என்றபடி —
நிற்கும் போதும் இருக்கும் போதும் நடக்கும் போதும் படுக்கும் போதும்

நாராயணா என்றால் உங்கள் தலையில் இடி விழுமோ -என்றானே ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் –

—————————————————————————————–

காப்பு மறந்தறியேன் கண்ணனே என்று இருப்பன்
ஆப்பு ஆங்கு ஒழியவும் பல் உயிர் க்கும் –ஆக்கை
கொடுத்தளித்த கோனே குணப்பரனே உன்னை
விடத் துணியார் மெய் தெளிந்தார் தாம்-93-

பதவுரை

அங்கு–அந்தப் பிரளய காலத்தில்
பல் உயிர்க்கும்–எல்லா ஆத்மாக்களுக்கும்
ஆப்பு ஒழியவும்–சரீரங்கள் அழிந்து போயிருந்தாலும் (மறுபடியும்)
ஆக்கை கொடுத்து–சரீரங்களைக் கொடுத்து
அளித்த–அருள்செய்த
கோனே–ஸ்வாமிந்!
காப்பு–(நீ செய்தருளும்) ரக்ஷைணை
மறந்தறியேன்–ஒருநாளும் மறக்கமாட்டேன்
கண்ணனே என்று இருப்பன்–எல்லாம் கண்ணனே என்று உறுதிகொண்டிருப்பேன்
குணம்–திருக்குணங்களினால்
பரனே–சிறந்த பெருமானே!
மெய் தெளிந்தார் தாம்–உள்ளபடி (ஸ்வரூபத்தைத்) தெளிவாக அறிந்தவர்கள்
உன்னைவிட துணியார்–உன்னை விட மாட்டார்கள்.

ஆப்பு ஒழியவும் -சரீரங்கள் அழிந்து போய் இருந்தாலும்
ஆப்பு ஆங்கு ஒழியவும் பல் உயிர் க்கும் –ஆக்கை
கொடுத்தளித்த கோனே-பிரளய தசையில் இறகு ஒடிந்த பறவை போலே இருக்க கரண களேபரங்களை
இழந்த ஆத்மாக்களுக்கு மீண்டும் கொடுத்தமை சொல்லிற்று
கண்ணனே என்று இருப்பன் –எல்லாம் கண்ணனே என்று உறுதி கொண்டு இருப்பேன்
குணம் பரனே -திருக் குணங்களால் சிறந்த பெருமானே
மெய் தெளிந்தார் -உள்ளபடி ஸ்வரூபத்தை அறிந்தவர்கள் –
உன் சம்பந்தத்தையும் உன் அரிய பெரிய திருக் குணங்களையும் உணருமவர்கள்
காப்பு மறந்தறியேன்–எம்பெருமான் ரக்ஷித்து அருளியதை மறந்தறியேன் என்றும் நான் எம்பெருமானுக்கு
மங்களா சாசனம் பண்ணுவதை மறந்தறியேன் -என்றுமாம் –

இவ்வாழ்வார் வாழ்ந்தகாலத்தில் குணபரன் என்னுமோரரசன் இருந்ததாகவும்,
எம்பெருமானுக்கே ஏற்றிருக்கத்தக்கதான அந்த நாமத்தை அவ்வரசன் தரித்திருப்பது பொருந்தாதென்று அதில் வெறுப்புக்கொண்டு,
“அஃது அனந்த கல்யாணகுண பரிபூர்ணனான எம்பெருமானுக்கெ உரியதாம்“ என்ற திருவுள்ளத்தை வெளியிட வெண்டி
இப்பாசுரத்தில் “கோனே குணபரனே“ என்று எம்பெருமானை இவர் அழைத்திருப்பதாகவும் இக்காலத்துச் சில ஆராய்ச்சிக்காரர். கூறுகின்றனர்.
இக்கூற்றின் பொருத்தமின்மையைத் தனிப் புத்தகத்தில் விரித்துரைப்போம் நிற்க.

மெய்தெளிந்தார்தாம் உன்னை விடத் துணியார் – உன்னோடுண்டான உறவையும் உனது அரிய பெரிய திருக்குணங்களையும்
உள்ளபடி உணருமவர்கள் உன்னை விடமாட்டார்கள் என்றவிதனால் தாம் எம்பெருமானை விடமாட்டாமையைத் தெரிவித்தாராவர்.

———————————————————————————————–

மெய் தெளிந்தார் என் செய்யார் வேறானார் நீறாக
கை தெளிந்து காட்டிக் களப்படுத்து -பை தெளித்த
பாம்பின் அணையாய் அருளாய் அடியேற்கு
வேம்பும் கறியாகும் என்று-94-

பதவுரை

வேறு ஆனார்–வேறுபட்டவர்களான (பகைவர்களான) துரியோதநாதிகள்
நீறு ஆக–சாம்பலாய் ஒழிந்து போம்படியாக
தெளிந்து–(ஆச்ரித விரோதிகளைக் கொல்லுதல் தருமமே என்று) தேறி
தெளிந்த பை பாம்பு இன்அணையாய்–விளங்குகின்ற படங்களை யுடைய ஆதிசேஷனாகிற இனிமையான படுக்கையைச் சென்று சேர்ந்த பிரானே!
அடியேற்கு–அடியேனுக்கு
அருளாய்–அருள் புரிய வேணும்
என்று–வேணுமென்று விரும்பினால்
கைகாட்டி–(பாண்டவர்களுக்கு) வேண்டிய உதவிகளைச் செய்து
களம படுத்து–(அந்த எதிரிகளைப் போர்களத்தில் கொன்றொழித்து) (இவ்வகையாலே மண்ணின் பாரம் நீக்கி)
வேம்பும் கறி ஆகும்–வேப்பிலையும் கறியாகச் சமைத்துக் கொள்ள கூடியதே
மெய் தெளிந்தார்–உள்ளதை உள்ளபடியறியுமவர்கள்
என் செய்யார்–எதுதான் செய்யமுடியாதவர்கள் (எது நினைத்தாலும் செய்யக் கூடியவர்களே)

வேறானார் நீறாக தெளிந்து –பகைவர்களாக துர்யோதனாதிகள் சாம்பலாய் ஒழிந்து போம் படியாக
-ஆஸ்ரித விரோதிகளை கொல்லுவது தர்மமே என்று தேறி
ஆஸ்ரித விரோதிகள் என்பதால் எம்பெருமான் தனக்கு விரோதிகள் என்று கொள்வான் அன்றோ –
கை காட்டிக்–பாண்டவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து –
களப்படுத்து -அந்த எதிரிகளை போர் களத்திலே கொன்று ஒழித்து -இவ்வகையாலே மண்ணின் பாரம் நீக்கி –
-பை தெளித்த-பாம்பின் அணையாய் அருளாய் அடியேற்கு
வேம்பும் கறியாகும் என்று-சீலமில்லாச் சிறியேனாயினும் அடியேன் பக்கல் அருள் செய்ய வேண்டும் –
குற்றமே வடிவாக உள்ளவர்களை இகழ்ந்து ஒழிய வேண்டுமே அன்றி கைக் கொள்வது தகாது என்று திரு உள்ளம் பற்றலாகாது –
வேப்பிலை கைக்கும் என்றாலும் இத்தை கறியாகச் சமைத்து உட் கொள்ள வேணும் என்னும் விருப்புடையார்க்கு
அது கறி யாகும் அன்றோ -அப்படியே தெரிந்தவர்கள் என்னைக் கைக் கொள்ளுவார்கள் –
மெய் தெளிந்தார் என் செய்யார் –எது நினைத்தாலும் செய்யக் கூடியவர்களே
அடியேனுடைய குற்றங்களை நற்றமாகவே கொண்டோ -அல்லது அவற்றில் திருக் கண் செலுத்தாமலோ
அடியேனை விஷயீ கரித்து அருள வேணும் –

—————————————————————————————-

ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை
ஆன்றேன் அமரர்க்கு அமராமை –ஆன்றேன்
கடனாடும் மண்ணாடும் கை விட்டு மேலை
இடநாடு காண வினி–95-

பதவுரை

அடிமை–அடிமையை
என்றேன்–ஏற்றுக் கொண்டேன்
பிறப்பு இடும்பை–ஸம்ஸார துக்கங்களில் நின்றும்
இழிந்தேன்–நீங்கினேன்
அமரர்க்கு–பிரமன் முதலிய தேவர்களுக்கும்
அமராமை–என் அருகு நாடாவெண்ணாதபடி
ஆன்றேன்–(ஞானம் பக்தி முதலிய வற்றால்) நிரம்பினேன்
கடன்நாடும்–ஸ்வர்க்கம் முதலிய லோகங்களையும்
மண் நாடும்–இப் பூலோகத்தையும்
கை விட்டு–உபேக்ஷித்து
மேலே–எல்லாவற்றுக்கும் மேற்பட்டுள்ளதாய்
இடம்–(அடியார்கள் குழாங்களுக்குத் தகுதியாக) இட முடைத்தான்
நாடு–திருநாட்டை
காண–கண்டு அநுபவிக்கலாம்படி
இனி–இப்போது
ஆன்றேன்–(பரம பக்தி) நிரம்பப் பெற்றேன்

ஏன்றேன் அடிமை-அடிமையை ஏற்றுக் கொண்டேன் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்ற
இளைய பெருமாளை போலே உத்ஸாஹம் கொண்டு பாரித்தேன்
இழிந்தேன் பிறப்பு இடும்பை-சம்சார துக்கங்களில் நின்றும் நீங்கினேன்-தாபத்த்ரயத்தில் நின்றும் விட்டு நீங்கப் பெற்றேன்
ஆன்றேன் அமரர்க்கு அமராமை -ப்ரஹ்மாதி தேவர்கள் என் அருகில் நாட ஒண்ணாத படி ஞான பக்தாதிகளாலே நிரம்பினேன்
அவர்கள் கூசி அகல வேண்டும் படி பெரும் பதம் பெற்றேன் –
கடனாடும் மண்ணாடும் கை விட்டு–ஸ்வர்க்காதி லோகங்களையும் பூ லோகத்தையும் உபேக்ஷித்து –
பண்ணிய புண்யங்களுக்கு பலம் அனுபவித்தே தீர்க்க வேண்டும் பட்ட -கடனை தீர்ப்பது போலே
புண்ய பலன் அனுபவிக்கும் ஸ்வர்க்கத்தையும் -புண்ணியம் திரட்டும் இடமான பூ லோகத்தையும் வெறுத்து
மேலை-இடநாடு காண வினி–எல்லாவற்றுக்கும் மேல் பட்டுள்ளதாய் -அடியார் குழாங்களுக்குத் தகுதியான இடமுடைத்தான
திரு நாட்டை கண்டு அனுபவிக்கலாம் படி இப்போது –
ஆன்றேன்– – -திரு நாட்டில் சேருவதற்கு பாங்காக-பரம பக்தி நிரம்பப் பெற்றேன்-
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே -என்றால் போலே –
வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் என்றுமாம் –

—————————————————————————————-

இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-

பதவுரை

எம்பெருமான்–எம்பெருமானே!
உன்னை–உன்னை
ஈசற்கும்–ருத்ரனுக்கும்
நான் முகற்கும்–பிரமனுக்கும்
தெய்வம்–தெய்வமாக
இனி அறிந்தேன் இனி அறிந்தேன்–இப்போது திடமாகத் தெரிந்து கொண்டேன்
காரணன் நீ–ஸகல ஜகத்துக்கும் காரண பூதன் நீ
கற்றவை நீ–இதற்கு முன்பு அறியப்பட்ட பொருள்களெல்லாம் நீ
கற்பவை நீ–இனிமேலறியப்படும் பொருள்களும் நீ (என்கிற இதனையும்)
நல் கிரிசை–நிர்ஹேதுகரக்ஷண மாகிற நல்ல வ்யாபாரத்தை யுடையனான
நாரணன் நீ–நாராயணன் நீ
நான் நன்கு அறிந்தேன்–நான் நன்றாகத் தெரிந்து கொண்டேன்

எம்பெருமான் உன்னை – ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்-இனி அறிந்தேன்-இனி அறிந்தேன்-எம்பெருமானே உன்னை இப்போது
ருத்ரனுக்கும் பிரமனுக்கும் தெய்வமாக திடமாகத் தெரிந்து கொண்டேன்
காரணன் நீ –சகல ஜகத்துக்கும் காரண புதன் நீ –
கற்றவை நீ-இதற்கு முன்பு அறியப் பட்ட பொருள்கள் எல்லாம் நீ
கற்பவை நீ -இனி மேல் அறியப் படும் பொருள்களும் நீ
இனி அறிந்தேன்-என்பனவற்றை எல்லாம் அறிந்தேன்
நற்கிரிசை-நிர்ஹேதுக ரக்ஷணம் ஆகிய நல்ல வியாபாரத்தை யுடைய
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –நாராயணன் நீ -நன்றாகத் தெரிந்து கொண்டேன்

சகல பிரபஞ்சத்துக்கும் காரணனான நாராயணனே பர தெய்வம் என்று முதல் பாட்டிலே ப்ரதிஜ்ஜை பண்ணி
சுருதி ஸ்ம்ருதி இதிகாசம் நியாயம் இவற்றாலும் -ஸ்ரீ யபதித்தவாதி சின்னங்களாலும் அத்தையே நெடுக உபபாதித்திக் கொண்டு வந்து
அடியில் பண்ணின ப்ரதிஜ்ஜைக்குத் தகுதியாக ஸ்ரீ மன் நாராயண பரத்வத்தை நிலை நாட்டித் தலைக் கட்டுகிறார்
தேவதாந்த்ர பரத்வப்ரமத்தை தவிர்த்து ஸ்ரீ மன் நாராயணன் இடத்திலே பரத்வத்தை ஸ்தாபிப்பதிலேயே இப்பிரபந்தத்தின் முழு நோக்கு –

————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading