திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -49-60–-திவ்யார்த்த தீபிகை சாரம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

மலையாமை மேல் வைத்து வாசுகியைச் சுற்றி
தலையாமை தானொரு கை பற்றி -அலையாமல்
பீறக்கடைந்த பெருமான் திரு நாமம்
கூறுவதே யாவர்க்கும் கூற்று —49-

பதவுரை

மலை–மந்தர பர்வதத்தை
ஆமை மேல் வைத்து–கூர்ம ரூபியான தன் மேல் வைத்து
வாசுகியை–வாஸுகி நாகத்தை
சுற்றி–(கடை கயிறாகச்) சுற்றி
அலையாமல்–நீர் வெளியில் புரளாமல்
பீற–(அமுதம்) புறப்படும்படியாக
கடைந்த–(கடலைக்) கடைந்தருளின
பெருமான்–எம்பெருமானுடைய
ஆமை–கூர்ம ரூபியாகத் திருவவதரித்த தானே
ஒரு கை பற்றி–(மலையினுச்சியை) ஒருகையாலே பிடித்தமுக்கி
திருநாமம்–திருநாமங்களை
கூறுவதே–வாய்விட்டுச் சொல்லுவதே
யாவர்க்கும்–அனைவர்க்கும்
கூற்று–வாய்ப் பேச்சாகக் கடவது

கீழே வானவரைக்காப்பான் மலை -என்றார் -அப்படி ரஷித்த ஒரு சேஷ்டிதத்தை அருளிச் செய்கிறார்
தலையாமைதான் ஒரு கை பற்றி -ஆமையான தான் இரு கை தலைப் பற்றி -என்றபடி
மேலே கொந்தளியாத படி மந்திரத்தின் உச்சியை ஒரு கையால் அமுக்கின படி –
இப்படி பரோபகாரமே போது போக்கானவன் திரு நாமங்களை வாயாராகி கூறுவதே வாய் பெற்ற பிரயோஜனம் –

துர்வாஸ மாமுனிவர் தேவேந்திரனுக்கு அன்புடன் அளித்திட்ட பூமாலையை அவன் அலக்ஷியஞ் செய்ததுகண்டு
‘இப்படி செல்வச்செருக்குற்ற உன்னுடைய செல்வமெல்லாம் கடலில் ஒளிந்து போகக்கடவன‘ என்று சபிக்கவே,
அப்படியே போய்விட, அசுரர் வந்து பொருது அமரை வென்றுவிட்டனர். பிறகு தேவர்களெல்லாரும் திரண்டுவந்து
எம்பெருமானைச் சரணமடைய, திருமால் திருவருள்கூர்ந்து கடல்கடைந்து அமுதமளித்து வாழ்வித்தனன் என்பது பிரஸித்தம்.

அப்போது மந்தரமலையை பூட்டிக் கடைந்தனன். மந்தாகிய மந்தரமலை கடவிலுள்ளே அழுந்தி விட,
தேவர்கள் வேண்டுகோளினால் திருமால் பெரியதோர் ஆமை வடிவமெடுத்து அம்மலையின்கீழே சென்று
அதனைத் தனது முதுகின்மீது கொண்டு தாங்கி அம்மலை கடலில் அழுந்திவிடாமற் கடைதற்கு உபயோகமாம்படி
அதற்கு ஆதாரமாக எழுந்தருளியிருந்தனன் என்பத்தும் அறியத்தக்கது.

“தலையாமை தானொருகைபற்றி“ என்ற இரண்டாமடியை ‘ஆமை (யான) தான் ஒருகை தலைபற்றி‘ என்று அந்வயித்து உரைப்ப.
முதலில் கடல் கடையும்போது வாஸுகியின் வாலைப்பிடித்துக்கொண்ட தேவர்களும் தலையைப் பிடித்துக்கொண்ட
அசுரர்களும் ஆகிய இருதிறத்தாரும் அதனை வலியப் பிடித்திழுத்துக்கடைய வல்லமையில்லாதவராய்நிற்க,
அது நோக்கி அத்திருமால் தான் ஒரு திருமேனியைத்தரித்துத் தேவர்கள் பக்கத்திலும் வேறொரு திருமேனியைத் தரித்து
அசுரர் பக்கத்திலும் நின்று கடைந்தருளினமை கூறப்படுகின்றதென்க.
மேலே கொந்தளியாதபடி மலையினுச்சியை ஒரு கையா லமுக்கினபடியைக் கூறுகின்ற தென்றலுமாம்.

ஆக விப்படி பரோபகாரமே போது போக்கான பெருமானுடைய திருநாமங்களை வாயாரக் கூறுவதே
வாய் படைத்த பலனாகுமென்றாராயிற்று.

————————————————————————

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வகை யறிந்தேன் -ஆற்றங்
கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு –50-

பதவுரை

கடல்–திருப்பாற் கடலிலே
கிடக்கும்–(பிரமன் முதலியோர்க்கு ஆச்ரயணீயனாய்க் கொண்டு) திருக்கண் வளர்ந்தருள்கிற
மாயன்–ஆச்சரியபூதனாய்
ஆறு கரை–திருக் காவேரிக் கரையான கபிஸ்தலத்திலே
கிடக்கும்–திருக்கண் வளர்ந்தருள்கிற
கண்ணன்–எம்பெருமானுடைய
உரை–ஸ்ரீஸூக்தியாகிய சரமச்லோகம்
எனக்கு–என்னுடைய
உள்ளத்து–நெஞ்சிலே
கிடக்கும்–பதிந்திருக்கின்றது
(ஆனபின்பு)
கூற்றமும் சாரா–மிருத்யு பயம் அணுகாமலும்
கொடு வினையும் சாரா–கொடிய பாவங்கள் அணுகாமலும்
தீ மாற்றமும் சாரா வகை–கெட்ட விஷயங்களொன்றும் அணுகாமலுமிருக்கத் தக்க உபாயத்தை
அறிந்தேன்–அறிந்தவனானேன்.

திரு கபிஸ்தலம் பள்ளி கொண்ட பெருமாளை மங்களா சாசனம் அருளிச் செய்கிறார்
காணியும் இல்லமும் கைப்பொருளும் ஈன்றோரும் பேணிய வாழ்க்கையும் பேர் உறவும் -சேணில் புவித்தலத்து இன்பமும்
-பொங்கு அரவம் ஏறிக் கவித்தலத்தில் கண் துயில்வோன் கால் –பிள்ளை பெருமாள் ஐயங்கார் -நூற்று எட்டு திருப்பதி அந்தாதி
இந்த ஆற்றம் கரைக் கிடக்கும் கண்ணன் அருளிச் செய்த சரம ஸ்லோகமே நெஞ்சில் பதிந்து இருப்பதால் ஒரு வகைக் கெடுதலும் வராதே –

“ஆற்றங்கரை கிடக்குங்கண்ணன்“ என்று திருக்காவேரியின் கரையிலுள்ள கபிஸ்தல மென்னுந் திருப்பதியிற்
பள்ளி கொண்ட திருக்கோலமான எம்பெருமானை மங்களாசாஸநஞ் செய்வதாகப் பூர்வாசாரியர்கள் அருளிச்செய்வர்.
அத்திருப்பதிக்குப் பாடலான பாசுரம் நாலாயிரத் திவ்யப்ரபந்தங்களுள் இஃதொன்றேயாம்.
இப்பாசுரத்தில் கபிஸ்தலமென்கிற திருநாமம் ஸ்பஷ்டமாக இல்லையாயினும் ஆழ்வார் திருவுள்ளக் கருத்தைக் கண்டறிந்து கூறும்
பேராற்றலுடைய ஸ்ரீமந்நாதமுனிகள் ஆளவந்தார். எம்பெருமானார் பட்டர் முதலான ஆசாரியர்கள்
இது திருக்கவித்தலத்தை நோக்கின பாசுரமேயாகுமென்று நிர்வஹித்து வந்தார்களென்பது பெரியவாச்சான் பிள்ளைக்கு
முற்பட்டவரான பிள்ளைப் பெருமாளையங்காராலும் தமது நூற்றெட்டுத் திருப்பதி யந்தாதியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“காணியு மில்லமுங் கைப்பொருளுமீன்றோரும், பேணிய வாழ்க்கையும் பேருறவும் –
சேணிற், புவித்தலத்திலின்பமும் பொங்கரவமேறிக், கவித்தலத்திற்கண்டுயில்வோன் கால்“ என்கிற செய்யுள் அவ்வந்தாதியிலுள்ளது. *
பதின்மருரைத்த பதியொரு நூற்றெட்டுக் துதிசெய்யப் பிறந்த அவ்வந்தாதியில் கவிஸ்தல விஷயமான இப்பாசுரம் சேர்ந்துள்ளதனால்
“ஆற்றங்கரை கிடக்குங் கண்ணன்“ என்கிற இத்திருமழிசைப்பிரான் பாடல்கொண்டே அது கூறினர் என்பது விளங்கிற்றாம்.

பிரமன் முதலிய தேவர்களுக்கு ஆச்ரயணீயனாய்க் கொண்டு திருப்பாற்கடலில திருக்கண் வளர்ந்தருள்பவனே
திருக் கவித்தலத்தில் ஸந்நிதிபண்ணியிரா நின்றான், இப்பெருமானே பண்டொருகால் பாரதப்போரில் தேர்த்தட்டில் நின்று
அர்ஜுநனை வியாஜஸமாகக் கொண்டு அனைவர்க்கும் உஜ்ஜீவநமாக சரமச்லோகத்தை யருளிச்செய்தன்,
அந்த திவ்யஸூக்தி எனது நெஞ்சிற்பதிந்திருப்பதனால் இனி நான் ஒருவகையான கெடுதலையும் அடையவழியில்லை என்றாராயிற்று.

கண்ணபிரான் சரமச்லோகத்தில் நியமித்தபடியே ஸர்வ தர்மபரித்யாக பூர்வகமாய்ச் சரணாகதி பண்ணினவர் பக்கலில்
‘ஸர்வபா பேப்யா மோக்ஷயிஷ்யாமி‘ என்கிற தன்னுடைய பிரதிஜ்ஞை தவறமாட்டாதவனாகையாலும்,
அப்படியே நான் நிவ்ருத்தி தர்ம நிஷ்டனாயிருப்பதாலும் இனி ஒரு பாபமும் என்ன யணுக ப்ராப்தியில்லை யென்றாவது.

———————————————————————————————–

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்று அல்லால் -புனக்காயா
வண்ணனே யுன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு
விண்ணெல்லாம் உண்டோ விலை –51-

பதவுரை

புனம்–தன்னிலத்திலே வளர்கிற
காயா–காயாம்பூவினுடைய
வண்ணனே–நிறம் போன்ற நிறமுடைய பெருமானே!
எனக்கு–(உன்னுடைய நிர்ஹேதுக கடாக்ஷத்திற்குப் பாத்ர பூதனான) எனக்கு
ஆவார் ஆர் ஒருவரே–ஒப்பாகுபவர் எவரொருவரிருக்கின்றனர்? (எவருமில்லை)
எம்பெருமான்–ஸர்வேச்வரனாகிய நீயும்
தானே தனக்கு ஆவான் அல்லால்–தனக்குத் தானே ஒப்பாயிருப்பவனே யன்றி
மற்று–எனக்கு ஒப்பாக வல்லையோ?
உன்னை பிறர் அறியார்–நான் தவிர வேறொருவரும் உன்னை யறிய மாட்டார்கள்,
என் மதிக்கு–(உன்னை நன்றாக அறிந்திருக்கிற) என்னுடைய புத்திக்கு
விண் எல்லாம் விலை உண்டோ–மேலுலக மெல்லாம் கூடினாலும் ஒப்பாகப் போருமோ?

நிர்ஹேதுக கடாக்ஷ பூதனான எனக்கு ஒப்பார் உண்டோ -நீ அருளிச் செய்த மயர்வற மதி நலத்துக்கும் ஒப்பு உண்டோ –
சரம ஸ்லோகத்தின் படியே புறம்புள்ள உபாயங்களை ருசி வாசனைகளோடே விட்டு ஒழிந்து  உன்னையே பற்றி
நிர்ப்பரனாயும் நிர்ப்பயனாயும் உள்ளேனே
அநந்ய உபாயத்வ அத்யவசாயம் உடைய எனக்கு –ஸ்வ பிரயத்தனம் கொண்டு உன்னை
அடையப் பார்ர்க்கும் உலகோர் ஒப்பில்லை
சேஷத்வ பாரதந்தர்ய காஷ்டையில் நிற்கும் எனக்கு சேஷித்வ ரக்ஷகத்தில் நிற்கும் நீயும் ஒப்பில்லை
அடிமைச் சுவடு அசாதாரணம் என்றவாறு
உன்னையே சகல புருஷார்த்தமாக கொண்டு உன் வடிவு அழகிலே ஈடுபட்ட
நீ அருளிய மயர்வற மதி நலம் பெற்ற நான் விலஷணன் அன்றோ -என்றவாறு –

எம்பெருமானும் ‘நானே ஸர்வரக்ஷகன்‘ என்றிருப்பதனால் அவனைப்போன்ற ரக்ஷகன் வேறொருவனு மில்லாமையால்
ரக்ஷகத்வத்தில் தனக்குத் தானே ஒப்பாகுமவனேயன்றி, சேஷத்வபாரதந்திரிய காஷ்டையில் நிற்குமெனக்கு ஒப்பாவானல்லன்.
சேஷியாயிருக்குந் தன்மையிற்காட்டிலும் சேஷபூதனா யிருக்குந்தன்மை சிறந்ததாதலால் அப்படிப்பட்ட அடிமைச்சுவடு எனக்கே
அஸாதாரணமாயிருப்பதால் எம்பெருமானிலும் நான் மேற்பட்டவன் என்றவாறு. இப்படி எம்பெருமானது அடிமையிலீடுபட்டு
தன் மூலமான செருக்கைக் கொள்ளுதல் அடிக்கழஞ்சு பெறுதலால்தான் “எனக்கினியார் நிகர் நீணிலத்தே“ என்றும்
“எனக்காரும் நிகரில்லையே“ என்றும் மற்றையோரு மருளிச்செய்வது.
இவ்வஹங்காரம் ஹேயமன்று, உபாதேயமாம். ஸாத்விகாஹங்காரமெனப்படும்.

தனக்குரிய நிலத்தில் தோன்றி காயாம்பூவின் நிறம்போன்றழகிய நிறங்கொண்ட பெருமானே!
நான் தவிர உன்னை உள்ளபடியறிவாரார்? எல்லாரும் உன்னைக்கொண்டு வேறு புருஷார்த்தங்களை
ஸாதித்துக் கொள்ளப் பார்ப்பவர்களேயன்றி உன்னையே ஸகல புருஷார்த்தமுமாகக்கொள்வாராருமில்லையே,
உனது வடிவழகிலீடுபடுவாருமில்லையே, உலகத்தாருடைய புத்தியைப் போன்றதோ என்னுடைய புத்தி?
மேலுலகத்திலுள்ளார்க்கும் அரிதான புத்தியன்றோ என்னுடையது இப்படி விலக்ஷணமான புத்தியைப் பெற்ற
நான் ஒப்பற்றவன் என்னத் தட்டுண்டோ?

இந்நிலத்திலுள்ளவர்கள் உன்னையே பரமபிரயோஜநமாகக் கொள்ளாமல் அற்ப்பலன்களை நச்சி
அவற்றுக்கு உபாயமாக உன்னைப்பற்றுமவர்களாகையாலே இவர்கள் உன்னுடைய உபேயத்வாகாரத்தை அறிந்திலர்
அங்குள்ள நித்யஸூரிகளோவென்னில் பலன் கைபுகுந்தவர்களாகையாலே உன்னுடைய உபேயத்வாகாரத்தை அறிந்தவர்களேயன்றி
உபாயத்வாகாரத்தைச் சிறிது மறிந்தவர்களல்லர்,
நானோவென்னில், உன்னையே பரமபுருஷார்த்தமாகக் கொண்டவனாகையாலும் உன்னுடைய உபாயோபேய
த்வாகாரங்களிரண்டையும் நன்கறிந்தவனாகிறேன்,
ஆகையாலே எனக்கு உபயவிபூதியிலும் நிகரில்லை – என்றது நன்கு பொருந்தும்.

——————————————————————————————–

விலைக்காட்படுவர் விசாதி ஏற்று உண்பர்
தலைக்காட் பலி திரிவர் தக்கோர் -முலைக் கால்
விடமுண்ட வேந்தனையே வேறாக வேத்தாதார்
கடமுண்டார் கல்லாதவர்–52-

பதவுரை

தக்கோர்–அறிவு முதலியவற்றால் பெருமை பெருந்தியவராகத் தங்களை அபிமானித்திருக்கும் நீசர்கள்
விலைக்கு ஆள்படுவர்–ஜீவனத்திற்காகப் பிறர்க்கு அடிமைப் பட்டிருப்பர்கள்
விசாதி ஏற்று உண்பர்–(மிகுதி தானங்கள் வாங்கும் முகத்தால் பிறருடைய) வியாதிகளைத் தாம் வாங்கி அநுபவிப்பர்கள்
தலைக்கு ஆள்பலி திரிவர்–ஒருவன் தலைக்காகத் தம் தலைமை அறுப்பதாகச் சொல்லி நரபலியாகத் திரிவர்கள்
முலைக்கால்விடம் உண்ட வேந்தனையே–(பூதனையின்) முலையிடத் துண்டான விஷத்தை உட்கொண்ட பெருமானையே
வேறுஆ எத்தாதார்–விலக்ஷணமாகத் துதிக்கமாட்டாதவர்களாய்
கல்லாதவர்–அறிவு கெட்டவர்களாய்க் கொண்டு
கடம் உண்டார்–பாபங்களை யநுபவிப்பவர்களாயிரா நின்றார்கள்.

இவ்வுலகத்தோர் படியை விரித்து அருளிச் செய்கிறார்
பரம நீசர்கள் என்பதை -தக்கோர் -என்று இழிவு சிறப்பு -ஷேப யுக்தி -மஹா வியாபர்களாக நினைத்து இருக்கும் சம்சாரிகள்
-விலைக்காட்படுவர்-திருமந்திரத்தின் பொருளுக்கு எதிர்த்தடையாக வயிற்று பிழைப்புக்கு பிறர்க்கு அடிமை பட்டு
-காசுக்கும் கூறைக்கும் கற்றை நெல்லுக்கும் தங்களை விற்று இருப்பர்
விசாதி ஏற்று உண்பர்-தங்கள் வியாதி நோய் மட்டும் இன்றி பிறர் நோய் வியாதி தீர எருமைக்கடா தானம் செய்ய
அத்தை நாலு நாள் ஜீவனத்துக்கு என்று வேறே ஏற்பார்கள் -அவ்வழியால் அவர்கள் வியாதியையும் அனுபவிப்பார்கள் –
தலைக்காட் பலி திரிவர் –பிழைத்தால் பிரஜை தலை அறுத்துக் கொடுப்பதாக ஷூத்ர தேவதைகளுக்கு பிரார்த்தித்து
அப்படியே அறுத்துக் கொடுத்து ஒழிவர்-
அபிராப்த விஷயங்களில் சக்தனானவன் அது லபிக்க வேணும் என்று இரா நின்றால்-ப்ராப்த விஷய
ப்ரவணனுக்குச் சொல்ல வேண்டா இறே -ஸ்ரீ வசன பூஷணம்
இதற்கு மா முனிகள் -கொடுத்த கதை உண்டே –
அதாவது – ஒரு தாஸியினிடத்தில் ஒருவன் மிக்க அன்புடையவனாயிருக்கையில் அவளுக்குக் கடுமையான நோய்
தலையை அரிந்து தருகிறேன்‘ என்று ஒரு தேவதைக்குப் பிரார்த்தனை பண்ணிக்கொண்டு பின்பு
அப்படியே தன் தலைமை அறுத்துக் கொடுத்த கதை உண்டே –

முலைக் கால்–முலை வழியே
முலைக்கால் விடமுண்ட வரலாறு. –ஸ்ரீகிருஷ்ணனைப்பெற்ற தாயான தேவகியினது உடன் பிறந்தவனாய்
அக் கண்ண புத்திரன் ஒளித்து வளர்கின்றான்பதை யறிந்து அக் குழந்தையை நாடி யுணர்ந்து கொல்லும் பொருட்டுப்
பல அசுரர்களையேவ, அவர்களில் ஒருத்தியான பூதனையென்னும் ராக்ஷஸி நல்ல பெண்ணுருவத்தோடு இரவிலே
திருவாய்ப்பாடிக்கு வந்து அங்குத் தூங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணசிசுவை யெடுத்துத் தனது விஷந்தடவினமுலையை
உண்ணக் கொடுத்துக் கொல்லமுயல, பகவானான குழந்தை அவ்வரக்கியின் தனங்களைக் கைகளால் இறுகப்பிடித்துப்
பாலுண்ணுகிற பாவனையிலே அவளுயிரையும் உறிஞ்சி அவள் பேரிரைச்சலிட்டுக் கதறி உடம்பு நரம்புகளின் கட்டெல்லாம் நீங்கி
விழுந்து இறங்கும்படி செய்தனன் என்பதாம். இப்படிப்பட்ட விரோதி நிரஸநசீலனான எம்பெருமானை விலக்ஷணமாக
ஸ்துதி செய்ய மாட்டாத அறிவு கேடர்கள் பாப்பலன்களை அநுபவிப்பதற்கென்றே ஜன்மமெடுத்தவர்க ளென்றவாறு.

விடமுண்ட வேந்தனையே வேறாக -மற்றப் பேர் ஸ்துதிப்பதில் காட்டிலும் விலக்ஷணமாக
-வேறாக -பாட பேகம் ஒவ்வாது -தளை கெடுவதால் –

——————————————————————————————

கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்த
னல்லால் ஒரு தெய்வம் நான் இலேன் –பொல்லாத
தேவரைத் தேவர் அல்லாரைத் திரு இல்லாத்
தேவரைத் தேறேல்மின் தேவு-53-

பதவுரை

கல்லாதவர் இலங்கை–அறிவு கெட்ட ராக்ஷஸருடையதான இலங்கா புரியை
கட்டு அழித்த–அரணழித்த
காகுத்தன் அல்லால்–இராமபிரானை யல்லது
ஒரு தெய்வம்–வேறொரு தெய்வத்தை
யான் இலேன்–நான் தெய்வமாகக் கொள்வேனல்லேன்
பொல்லாத தேவரை–கண் கொண்டு காணக் கூடாத தேவதைகளையும்
தேவர் அல்லாரை–(உண்மையில்) தெய்வத் தன்மை யற்றவர்களாயும்
திரு இல்லா தேவரை–பிராட்டியின் ஸம்பந்த மல்லாமலே தேவரென்று பேர் சுமப்பவர்களாயும் வுள்ள சிலரை
தேவு–தெய்வங்களாக
தேறேல்மின்–நீங்கள் நினைக்க வேண்டா.

கல்லாதவர் இலங்கை
இலங்கையிலிருந்த அரக்கர்களனைவரும் தங்களுடைய கெட்ட நடத்தைகளினாலேயே தமது அறிவின்மையை
வெளிப்படுத்திக் கொண்டவர்களாதலால் “கல்லாதவரிலங்கை“ என்றார்.
கற்றுணர்ந்த மஹாநுபாவன் ஒருவன் (விபீஷணாழ்வான்) இருந்தானே யென்னில், அவனை யடித்துத்துரத்தினார்களிறே

பொல்லாத-தேவரைத் -அமங்களுக்கு கொள்கலம் –ச்மாசானமே இருப்பிடம் –எலும்பு மாலை -விருபாக்ஷன் –
கண் கொண்டு காணக்-அமங்களங்களை ஸஹித்துக் கொண்டாலும் ஸ்வ தந்திரமாக
கார்யம் செல்ல வல்லமை இல்லாதவர்கள் அன்றோ

திரு இல்லாத்-தேவரைத் தேறேல்மின் தேவு—ஸ்ரீ யபதித்தவம் இல்லாதவர்கள் -இவர்களைத் தெய்வங்களாக நினைக்க வேண்டாம்
காணிலும் உருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார் -பேணிலும் வரம் தர மிடுக்கிலாத தேவரை -ஆணம் என்று
அடைந்து வாழும் மாதர்கள் -எம்மாதி பால் -பேணி நும் பிறப்பு எனும் பிணக்கு அறுக்க கிற்றிரே –திருச் சந்த விருத்தம்

———————————————————————————

தேவராய் நிற்கும் அத்தேவும் அத்தேவரில்
மூவராய் நிற்கும் முது புணர்ப்பும் –யவராய்
நிற்கின்றது எல்லாம் நெடுமால் என்று ஓராதார்
கற்கின்றது எல்லாம் கடை –54-

பதவுரை

தேவர் ஆய் நிற்கும் அத்தேவும்–(அக்நி இந்திரன் முதலிய) தேவதைகளாய்க் கொண்டு நிற்கிற தெய்வமும்,
முது புணர்ப்பும்–அநாதியான நிலைமையும்
யாவர் ஆய் நிற்கின்றது எல்லாம்– மற்றும் மனிதர் முதலியனவாய்க்கொண்டு நிற்கிற ஸகல பதார்த்தங்களும் (ஆகிய எல்லாம்)
அத் தேவரில்–அந்த தேவர்களுக்குள்ளே
மூவர் ஆய் நிற்கும்–த்ரிமூர்த்தியாய் நிற்பதாகிற
நெடுமால் என்று ஓராதார்–ஸர்வேச்வர ப்ரகாரமே என்று ஆராய்ந் துணர மாட்டாதவர்கள்
கற்கின்றது எல்லாம் கடை–பேசும் பேச்செல்லாம் உபயோகமற்றது.

சகல தெய்வங்களும் சகல பதார்த்தங்களும் எம்பெருமானுக்கு சேஷ பூதம் என்று
அறிய மாட்டாதார்கள் எவ்வளுவு கற்றாலும் பயன் இல்லையே
தேவராய் நிற்கும் அத்தேவும் -நெடுமால் —
அத்தேவரில்-மூவராய் நிற்கும் முது புணர்ப்பும் நெடுமால்
–யவராய்-நிற்கின்றது எல்லாம் நெடுமால் -என்று அறியவாருடைய கல்வியே பயன் பெற்றதாம்
அனைத்துக்கும் அந்தர்யாமி அவன் அன்றோ -த்ரி மூர்த்தி அவதாரம் எடுத்ததும் திருமாலே
இப்படி பிரித்து பிரித்து சொல்லுவான் என் –சர்வம் அவனே என்ற
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் நிலையே கற்று உணர்ந்தார் நிலை என்றவாறு –

———————————————————————————————

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் –புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் எவர் -55-

பதவுரை

அமரர் கடை நின்று–(இவ்வுலகத்தவர்கள்) தேவதாந்தரங்களின் வாசல்களைப் பற்றி நின்று
நாளும்-நெடுங்காலம் வரையில்
கழல் தொழுது–(அவர்களுடைய) காலில் விழுந்து (பரம புருஷார்த்தம் பெற மாட்டாமல்)
இடை நின்ற இன்பத்தர் ஆவர்–நடுவே கிடக்கிற (சுவர்க்கம் முதலிய) சுகத்தைப் பெற்றொழிவர்கள்
குடை நின்ற நீர் ஓதம் மேனி நெடுமாலே–(இவ் வுலகத்தைச்) சூழ்ந்து கிடக்கிற கடல் போன்ற திருமேனியை யுடைய ஸர்வேச்வரனே!
நின் அடியை–உனது திருவடிகளை
ஓத வல்லாரவர் ஆர்–அநுஸந்திக்க வல்லார் ஆரேனுமுண்டோ? (யாருமில்லையே!)

தேவதாந்தர பஜனம் செய்து அல்ப அஸ்திர பயன்களை பெற்று போவார் மலிந்து உன்னை உணர்ந்து
ஆஸ்ரயித்து உஜ்ஜீவிப்பார் இல்லையே என்று வருந்தி அருளிச் செய்கிறார் –
அமரர் கடை -மனை வாசல் -நின்று கழல் தொழுகிறார்கள் –
கடை நின்ற அமரர் -தாழ்ந்த தெய்வங்கள் என்றுமாம் –
இடை நின்ற இன்பத்தராவார் -அல்ப அஸ்திரத்தவாதி -இன்பம் என்றது பிரமித்தவர்களின் கருத்தால்
இடை -சம்சார ஸூகமும் இன்றி –நிரதிசய மோக்ஷ ஸூகமும் இன்றிக்கே
ஸ்வர்க்க ஸூ கத்தை யுடையவர் -என்பது வியாக்கியான ஸ்ரீஸூக்தி.

——————————————————————————–

அற்ப பலன்களைத் தருமவர்களான ருத்ரன் முதலியோர் தங்களைப் பற்றினவர்களுக்கு ஒரு ஆபத்து வந்தால்
அப்போது முதுகு காட்டி ஓடுமவர்களேயன்றி நிலைநின்று ரக்ஷிக்கவல்ல திறமையரல்லர்
என்று முதலித்துக் காட்டுகிறார்.

அவரிவர் என்று இல்லை யனங்க வேள் தாதைக்கு
எவரும் எதிரில்லை கண்டீர் –உவரிக்
கடல் நஞ்சம் உண்டான் கடன் என்று வாணற்கு
உடன் நின்று தோற்றான் ஒருங்கு-56

பதவுரை

அவர் இவர் என்று இல்லை–பெரியார் சிறியார் என்று ஒருவாசி யில்லை
அனங்கவேள் தாதைக்கு–காமனுக்குத் தந்தையான் கண்ண பிரானுக்கு
எவரும்–ஒருவரும்
எதிர் இல்லை கண்டீர்–எதிர் நிற்க வல்லாரில்லை காண்மின்
உவரிக் கடல் நஞ்சம் உண்டான்–கடலில் தோன்றின விஷத்தை உட் கொண்டவனான சிவன்
வாணற்கு–பாணாஸுரனுக்கு
கடன் என்று–‘உன்னை ரக்ஷிக்க நான் கடமைப் பட்டவன்‘ என்று சொல்லி
உடன் நின்று–அவனோடு கூடவே யிருந்து
ஒருங்கு தோற்றான்– குடும்பத்தோடே தோற்று ஓடிப்போனான்.

அல்ப பலன் தருமவர்களே ஆகிலும் ரக்ஷிக்க வல்லவர்கள் இல்லை என்பதை பாணாஸூர விருத்தாந்தத்தால் காட்டி அருளுகிறார்
அவர் இவர் என்று இல்லை -உயர்ந்தவர்கள் – தாழ்ந்தவர்கள் என்றவாறு
தாழ்ந்தவர்களான நம்போலியர் எம்பெருமானுக்கு எப்படி எதிராக முடியாதோ, அப்படியே,
உயர்ந்தவர்களென்று கருதப்படுகின்ற ருத்ராதிகளும் எம்பெருமானுக்கு எதிராக முடியாததென்றுணர்த்தியவாறு.

அநங்க வேள் தாதை -மன்மதன் -ப்ரத்யும்னனுக்கு ஜனகன் –
கண்ணபிரான் மன்மதனுடைய அம்சமாகிய ப்ரத்யும்நனுக்கு ஜநகனாதல் அறிக.
மன்மதன் ஒருகால் பரமசிவனது தவநிலையைக் குலைக்கமுயன்றபோது அவனுடைய நெற்றிக் கண்ணால்
கொளுத்தப்பட்டு உடலிழந்ததனால் அனங்கனென்று பெயர் பெற்றான்.

ருத்ர தாண்டவத்துக்கு பாணன் மத்தளம் தட்ட மகிழ்ந்து ஆயிரம் கைகளையும் நெருப்பு மதிலையும் வலிமை செல்வம் அருளி
ச பரிவாரனாய்க் கொண்டு வாசலில் காவலும் செய்தான் -பரிவாரங்களோடு தோற்றதால் —ஒருங்கு தோற்றான் -என்கிறார் –

கடல்நஞ்சமுண்டான் வாணற்குடனின்று தோற்ற வரலாறு வலி சக்ரவர்த்தியின் ஸந்ததியிற் பிறந்த பாணாஸுரனுடைய
பெண்னாகிய உஷையென்பவள், ஒருநாள் ஒரு புருஷனோடு தான் கூடியிருந்ததாகக் கனாக்கண்டு,
முன் பார்வதி அருளியிருந்தபடி அவனிடத்தில் மிகுந்த ஆசைபற்றியவளாய்த் தன் உயிர்த்தோழியான சித்திரலேகைக்கு
அச் செய்தியைத் தெரிவித்து அவள் மூலமாய் அந்தப்புருஷன் கிருஷ்ணனுடைய பௌத்திரனும்
ப்ரத்யும்நனுடைய புத்திரனுமாகிய அநிருத்தனென்று அறிந்துகொண்டு ‘அவனைப் பெறுதற்கு உபாயஞ்செய்யவேண்டும்‘ என்று
அத் தோழியையே வேண்ட, அவள் தன் யோகவித்தை மகிகையினால் துவாரகைக்குச் சென்று அநிருத்தனைத் தூக்கிக்கொண்டு வந்து
அந்த புரத்திலேவிட, உஷை அவனோடு போகங்களை அநுபவித்துவர, இச்செய்தியைக் காவலாளராலறிந்த அந்தப்பாணன்
தன் ஸேனையுடன் அநிருத்தனை யெதிர்த்து மாயையினாலே பொருது நாகாஸ்த்ரத்தினால் கட்டிப்போட்டிருக்க,
துவாரகையிலே அநிருத்தனைக் காணாமல் யாதவர்களெல்லாருங் கலங்கியிருந்தபோது,
நடந்த வரலாறு நாரதமுனிவனால் சொல்லப்பெற்ற ஸ்ரீகிருஷ்ணபகவான், பெரிய திருவடியை நினைதருளி,
உடனே வந்து நின்ற அக்கருடாழ்வானது தோள்மேலேறிக்கொண்டு பலராமன் முதலானாரோடு கூடப் பாணபுரமாகிய
சோணிதபுரத்துக்கு எழுந்தருளும்போதே அப்பட்டணத்தின் ஸமீபத்தில் காவல் காத்துக்கொண்டிருந்த சிவபிரானது
பிரமதகணங்கள் எதிர்த்துவர அவர்களையெல்லாம் அழித்து, பின்பு சிவபெருமானால் ஏவப்பட்டதொரு ஜ்வரதேவதை
மூன்றுகால்களும் மூன்று தலைகளுமுள்ளதாய் வந்து பாணனைக் (ஒரு காலத்தில் பரமசிவன் கூத்தாடுகையில்
பாணாஸுரன் அந்த நடனத்தைக்கண்டு அதற்குத் தகுதியாகத் தன் இரண்டு கைகளால் மத்தளம் தட்ட,
சிவன் மகிழ்ந்து அவனுக்கு ஆயிரம் கைகளையும் நெருப்பு மதிளையும் அளவிறந்த வலிமையையும் மிக்க செல்வத்தையும்,
தான் ஸபரிவாரனாய்க்யும் தந்தருளி அப்படியே சிவன் தனது குடும்பத்தோடு
அவன் மாளிகை வாசலிற் காத்துக் கொண்டிருந்தனன் என்பது இங்கு அறியத்தக்கது.)

காப்பாற்றும் பொருட்டுத் தன்னோடு யுத்தஞ்செய்ய, தானும் ஒரு ஜ்வரத்தை யுண்டாக்கி அதன் சக்தியினாலே அதனைத் துரத்திவிட்ட
பின்பு, சிவபிரானது அநுவரர்களாய்ப் பணாஸுரனது கோட்டையைச் சூழ்ந்துகொண்டு காத்திருந்த அக்நிதேவர் ஐவரும்
தன்னோடு எதிர்த்துவர அவர்களையும் நாசஞ்செய்து பாணாஸுரனோடு போர் செய்யத்தொடங்க,
அவனுக்குப் பக்கபலமாகச் சிவபெருமானும் ஸுப்ரஹ்மண்யன் முதலான பரிவாரங்களுடன் வந்து எதிர்த்துப்போரிட,
கண்ணன் தான் ஜ்ரும்பணாஸ்த்ரத்தைப் பிரயோகித்துச் சிவன் ஒன்றுஞ் செய்யமாட்டாமல் கொட்டாவி விட்டுக்கொண்டு
சோர்வடைந்து போம்படிசெய்து ஸுப்ரஹ்மண்யனையும் கணபதியையும் உங்காரங்களால் ஒறுத்தி ஒட்டி, பின்னர்,
அனேகமாயிரஞ்கித்து அப்பாணனது ஆயிரந் தோள்களையும் தாரைதாரையாய் உதிரமொழுக அறுத்து
அவனுயிரையும் சிதைப்பதாக விருக்கையில் பரமசிவன் அருகில் வந்து வணங்கிப் பலவாறு பிரார்த்தித்ததனால்
அவ்வாணனை நான்கு கைகளோடும் உயிரோடும் விட்டருளி, பின்பு அவன் தன்னைத் தொழுது
அநிருத்தனுக்கு உஷையைச் சிறப்பாக மணம்புரிவிக்க, அதன்பின் கண்ணபிரான் துவாரகைக்கு சிறப்பாக மணம்புரிவிக்க,
அதன் பின் கண்ணபிரான் துவாரகைக்கு மீண்டெழுந்தருளினன்.
இவ்வரலாற்றினால் அனங்கவேள்தாதைக்கு எவருமெதிரில்லை யென்னுமிடம் நன்கு விளக்கப்பட்டதாம்.

பாணாஸுரயுத்தத்தில் சிவன் தனது பாரிவாரங்களோடு தோற்றனனாதலால் “ஒருங்கு தோற்றான்“ என்றார்.

திருப் பாற் கடலை உவரிக் கடல் என்றது -சமுத்திர சாம்யத்தைப் பற்ற -என்பது
பூருவர்களின் வியாக்கியான வாக்கியம்.
பாற்கடல் கடையும்போது அதில் நின்றும் விஷம் உண்டாக, அதனை
எம்பெருமானுடைய நியமனத்தினால் பரமசிவன் உட்கொண்டானென்க.

—————————————————————————————-

ஒருங்கிருந்த நல்வினையும் தீவினையும் ஆவான்
பெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் -மருங்கிருந்த
வானவர் தாம் தானவர் தாம் தாரகை தான் என்நெஞ்சம்
ஆனவர் தாம் அல்லாதது என் -57-

பதவுரை

பேசில்–உண்மை பேசப் புகுந்தால்
பெரு குருந்தம் சாய்த்தவனே–பெரிய குருந்தமரத்தை வேர் பறியத் தள்ளி முறித்த கண்ணபிரானே
ஒருங்கு இருந்த நல் நினையும் தீ வினையும் ஆவான்–உடன் நிற்கும் புண்ய பாபங்களுக்கு நிர்வாஹகன்,
மருங்கு இருந்த–ஸமீபத்திலுள்ள (அந்தரங்கரான)
வானவர் தாம்–தேவர்களும்
தானவர் தாம்–அசுரர்களும்
தாரகை தான்–இப் பூமியும் (ஆகிய இவையெல்லாம்)
என் நெஞ்சம் ஆனவர் தாம்–என் நெஞ்சினுள் உறைகின்ற ஸர்வேச்வரனேயாம்
அல்லாத்து என்–அந்த ஸர்வேச்வரனல்லாத வஸ்து என்ன இருக்கிறது

புண்ணியம் பாவம் முதலான ஸகல பதார்த்தங்களும் எம்பெருமானிட்ட வழக்காயிருக்கும்,
அவனிட்ட வழக்காகாத வஸ்து ஒன்றுமேயில்லை யென்கிறார்.
நல்வினையும் தீவினையும் அவனேயாவான் என்கிற விதன் கருத்து யாதெனில், சுருதியின்படியே தன்னுடைய அநுக்ரஹத்துக்கு
இலக்காக வேண்டினாரைக் கொண்டு நல்வினைகளைச் செய்வித்தும், தன்னுடைய நிக்ரஹத்துக்கு இலக்காக
வேண்டினாரைக்கொண்டு தீவினைகளைச் செய்வித்தும் போருகிறவன் என்கை.

நலவினைகளின்பயனாகத் தேவயோநியிற் விறப்பதும், தீவினைகளின் பயனாக அஸுரயோநியிற் பிறப்பதும்
இவ்விருவினைகளினுடையவும் பயனாக இப்பூமியிற் பிறப்பது மெல்லாம் பகவத் ஸங்கல்பாதீன மென்கிறது பின்னடிகளால்.

குருந்தம் சாய்ந்த வரலாறு – கண்ணபிரான் யமுனையில் நீராடும் ஆயர் மங்கைகளின் துகிலையெடுத்துக் கொண்டு
அதன் கரையிலுள்ள குருந்த மரத்தின் மேலேறுகிற வழக்கத்தைக் கண்டிருந்தவனும் கம்ஸனா ஏவப்பட்டவனுமான
ஓர் அஸுரன் கண்ணனை நலிவதற்காக அக் குருந்த மரத்தை ஆவேசித்துக் கிடந்தான்,
அதையறிந்த கண்ணபிரான் அந்த மரத்தை முறித்தொழித்தனன் என்பதாம்.

எம்பெருமானுக்குப் பல திருநாமங்கள் இருப்பதுபோல் “என்னெஞ்ச மானவர்“ என்பதும்
ஒரு திருநாமம் போலும் ஆழ்வார் திருவுள்ளத்தால். என்னெஞ்சத்திலே ஸத்தை பெற்றிருப்பவர் என்றபடி.
அன்றியே அஃறிணையான நெஞ்சையே கௌரவந்தோற்ற “நெஞ்சினார்“ என்பதுபோல இங்கு “நெஞ்சமானவர்“ என்று
சொல்லியிருப்பதாகக்கொண்டு தம் திருவுள்ளத்தையே குறிப்பதாகவும் உரைக்கலாம்,
அப்போது, வானவர் தானவர் தாரகை என்னெஞ்சு (ஆகிய எல்லாம்) பெருங்குருந்தம் சாய்ந்தவனே என்றவறாம்.

————————————————————————

என் நெஞ்சமேயான் இருள் நீக்கி எம்பிரான்
மன்னஞ்ச முன்னொரு நாள் மண்ணளந்தான் -என்னெஞ்சு
மேயானை இல்லா விடையேற்றான் வெவ்வினை தீர்த்து
ஆயானுக்கு ஆக்கினேன் அன்பு –58 –

பதவுரை

என் நெஞசம் மேயான்–என்னுடைய நெஞ்சிலே நித்ய வாஸம் செய்பவனும்
இருள் நீக்கி எம்பிரான்–(நெஞ்சிலுள்ள) அஜ்ஞான விருளைப் போக்குமவனான உபகாரகனும்
முன் ஒருநாள்–முன்பொரு காலத்தில்
மன் அஞ்ச–மஹாபலி சக்ரவர்த்தி பயப்படும் படியாக
மண் அளந்தான்–பூமியை அளந்து கொண்டவனும்
என் நெஞ்சம் மேயானை–(அந்த திருக் கோலத்துடனே) என்னெஞ்சை விடாமலிருப்பவனுமான எம்பெருமானை
இல்லா–நெஞ்சில் உடையனாகாத
விடை ஏற்றான்–ரிஷப வாஹநனான ருத்ரனுடைய
வெம் வினை–மஹா பாதகத்தை
தீர்த்து–தொலைத்து
ஆயானுக்கு–(அதனால்) ஸத்தை பெற்றவனான பெருமானுக்கு
அன்பு ஆக்கினேன்–என் அன்பைச் செலுத்தினேன்.

“என்னெஞ்சமேயான்“ என்பது இரண்டிடத்தில் வந்துள்ளது.
பொருள் ஒன்றேயாயினும் கருத்தில் வாசியுண்டு, முதலடியில் என்னெஞ்சமேயான் என்றது பொதுவான வ்யாப்தியைச் சொன்னபடி.
இரண்டாமடியில் “மண்ணளந்தானென்னெஞ்ச மேயான்“ என்றது உலகளந்த திருக்கோலம் தம் நெஞ்சிலே பொலியும்படி
காட்சி தந்தருள்கின்றமையைச் சொன்னவாறு.

“இருள் நீக்கி“ என்றது வினையெச்சமன்று, பெயர்ச்சொல், இருளை நீக்குகின்றவன் என்கை.
விளையெச்சமாக்கொண்டால், இருனை நீங்கச் செய்து அதனால் எம்பிரான் – எனக்கு உபகாரகனானவ் என்க.
தன் நெஞ்சத்தில் அஞ்ஞானம் போக்கி அங்கே நிரந்தர வாசம் பண்ணி அருளும் ஆபத் ரக்ஷகன் –
பக்கல் அன்பு விளைந்தமையை அருளிச் செய்கிறார்

இருள் நீக்கி -வினை எச்சம் அன்று -பெயர்ச் சொல் -இருளை நீக்குகின்றவன் என்றபடி –
அத்தாலே எம்பிரான் -உபகாரகன் -ஆனான் –

இப்படிப்பட்ட எம்பெருமான் நெஞ்சிற்கொள்ளமாட்டாத (துர்மாநியான) ரிஷபவாஹநனாகிய ருத்ரனுடைய
வெவ்வினையுண்டு ப்ரஹ்மஹத்யாரூபமான பாபம், அதனைத்தீர்த்து, தன் காரியம் ஆனதுபோல்
உவந்தவனான எம்பெருமானுக்கு என்னுடைய அன்பைச் செலுத்தினேன் என்றாராயிற்று.

———————————————————————————

அன்பாவாய் ஆரமுதமாவாய் அடியேனுக்கு
இன்பாவாய் எல்லாமும் நீ யாவாய் -பொன் பாவை
கேள்வா கிளரொளி என் கேசவனே கேடின்றி
ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் -59-

பதவுரை

அன்பு ஆவாய்–(என் பக்கல்) ப்ரீதியே வடிவெடுத்தவன் போலிருப்பவனே!
ஆர் அமுதம் ஆவாய்–பரம போக்யனாயிருப்பவனே!
அடியேனுக்கு இன்பு ஆவாய்–(உன்னுடைய அநுபவமாகிய) ஸுகத்தை அடியேனுக்கு உண்டாக்கினவனே!
என் கேசவனே–எம்பெருமானே!
கேடு இன்றி–ஒரு குறையுமில்லாமல்
ஆள்வாய்க்கு–ரக்ஷிக்க வல்லவுனுக்கு
எல்லாமும் நீ ஆவாய்–மற்றுமுள்ள ஸுகங்களு மெல்லாம் எனக்கு நீயே யாயிருப்பவனே!
பொன் பாவை கேள்வா–திருமகள் நாதனே!
கிளர் ஒளி–(அத் திருமகளின் சேர்த்தியினால்) கொழுந்து விட்டு வளர்கின்ற காந்தியையுடைய
நான் அடியேன்–நான் அடிமைப் பட்டவனா யிருக்கிறேன்
ஆள்–(அடியேனைக் காத்தருள்)

அன்பு ஆவாய் – “அன்பு“ என்பது வேறொன்றாய், அதை நீ உடையவனாயிருக்கின்றாய் எனறு சொல்லவேண்டாமல்,
நீயே அன்புதானாக வடிவெடுத்திருக்கின்றாய் என்கை.
என்பக்கல் அளவற்ற அன்புவைத்திருக்கின்றாயென்றவாறு.
ஆரமுதமாவாய் அடியேனுக்கு-இன்பாவாய் எல்லாமும் நீ யாவாய்–தாய் தந்தை மக்கள் மனைவி மற்றும் அனைவராலும்
உண்டான ஆனந்தம் உன்னை அடைந்து பெற்றேன் –இப்படியெல்லாமும் ஆவதற்கு ஆதி ஸ்ரீ யபதி–

லக்ஷமீபதித்வமே யென்கைக்காகப் பொன்பாவை கேள்வா! என விளித்தார்.
பிராட்டியைக் கைப்பிடித்ததனால் ஒரு விலக்ஷணமான தேஜஸ்ஸு விளைகின்றதென்பது தோன்ற
“பொன்பாவை கேள்வா கிளரொளி“ என்றார்.
அப்ரமேய ஜனகாத்மஜாயா–மாரீசவசநமும் காண்க.
என் கேசவனே கேடின்றி-ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள்
ஆள் என்பதை முன்னிலை வினைமுற்றாக கொள்ளாமல், அடியேனான நான் ஆள்பட்டேன் -காத்து அருள்வாய் -என்கிறார் –

—————————————————————————

ஆட் பார்த்து உழி தருவாய் கண்டு கொள் என்றும் நின்
தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை -கேட்பார்க்கு
அரும் பொருளாய் நின்ற வரங்கனே உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்–60–

பதவுரை

கேட்பார்க்கு–ஸ்வ யத்நத்தாலே கேட்டறிய விரும்புவர்களுக்கு
அரு பொருள் ஆய் நின்றி அரங்கனே–அறிய வொண்ணாத பரம் பொருளான அரங்க நாதனே!
ஆள் பார்த்து உழிதருவாய்–நமக்கு ஆட்படுமவன் யாரேனும் கிடைக்கக் கூடுமோ என்று தேடித் திரிகிறவனே!
நின் தாள் பார்த்து உழி தருவேன்–உனது திருவடிகளின் ஸேவைக்காக அலைந்து திரிகின்ற என்னுடைய
தன்மையை–இந்த ஸ்வபாவத்தை
என்றும்–என்றைக்கும் நிலைத்திருக்கும் படியாகக் கடாக்ஷித் தருள வேணும்
உன்னை விரும்புவதே–நான் உன்னையே ஆசைப்பட்டிருக்குந் தன்மையை
மனம்–நெஞ்சில்
விள்ளேன்–தவிராதவனா யிருக்கின்றேன்.

ஆட் பார்த்து உழி தருவாய்-நம்மைத் தேடிப்பிடிக்க அலைந்து திரிகின்றானே –
ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே

-ஞாஎம்பெருமானை நோக்கி “ஆள்பார்த்து உழிதருவாய்!“ என்று விளிக்கிற விளியின் அழகை என் சொல்லுவோம்.
வேதாந்தங்கள் எம்பெருமானை நாம் தேடிப் பிடிக்கவேணுமென்று ஓதுகின்றன,
அப்படியிருந்தும் எம்பெருமான் நம்மைத் தேடிப் பிடிப்பதற்கு அலைந்து திரிகின்றானென்கிறார் காண்மின்.
எம்பெருமான் ஸர்வ ஸ்வாமி யென்பதும் சேதநாசேதநங்களடங்கலும் அவனுடைய ஸொத்து என்பதும் தேர்ந்த விஷயம்.
ஸொத்து தவறிப் போனால் அதனைத் ஸ்வாமியான தன்னுடைய திருவடிகளில் நின்றும் தவறிப்போன தானேயாகையால்
இந்த விளி மிகப் பொருந்தும். ஸ்ரீவசநபூஷணத்தில் “ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்குகப்பானுமவனே“ என்றருளிச் செய்த்தும்
இதுபோன்ற அருளிச் செயல்களை அடியொற்றியேயாம்.

ஞானம் லப்தவா –பரமார்த்தத்தை வெளியிட்டு அருளுகிறார்
நம் வலையில் சிக்குவார் என்று நீ திரிய -யாதிருச்சிகமாக சிக்கிக் கொண்ட என்னை விட்டு விடலாகாது -என்கிறார்
கண்டு கொள் என்றும் நின்-தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை
இப்போது உன் திருவடிகளையே நோக்கிக் கொண்டு
இருக்கும் நிலைமையை என்றுமே இருப்பதாக நீ கடாக்ஷித்து அருள வேணும்

கேட்பார்க்கு-அரும் பொருளாய் நின்ற–நீயே காட்டக் கண்டு -உன் திருவருளால் அறியும் அத்தனை –
வரங்கனே உன்னை-விரும்புவதே விள்ளேன் மனம்
இத்தை கண்டு கொள் –என்று கூட்டிப் பொருள் கொள்க –

நான் உன்னையே ஆசைப்பட்டிருக்குந் தன்மையை நெஞ்சில் தவிராதவனா யிருக்கும்படியாக
நீயே கடாக்ஷித் தருளவேணும் என்பதாம். இது தாத்பர்ய வ்ருத்தியாகும்.

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading