ஸ்ரீ திரு மாலை-22–பேசிற்றே பேசல் அல்லால்-ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

நினைக்க முடியாதாகில் வாய்விட்டுப் பேசினாலோவென்ன
“மந: பூர்வோ வாகுத்தர:” என்றன்றோ சொல்லியிருப்பது;
மநஸ்ஸாலே பரிச்சேதிக்க வொண்ணாத விஷயத்தை பாசுரமிட்டு முடிக்கப் போமோ என்கிறார்.

பேசிற்றே பேச லல்லால் பெருமை யொன் றுணர லாகாது
ஆசற்றார் தங்கட் கல்லால் அறியலா வானு மல்லன்
மாசற்றார் மனத்து ளானை வணங்கிநா மிருப்ப தல்லால்
பேசத்தா னாவ துண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய்

பதவுரை

பேதை நெஞ்சே-விவேகமற்ற மனமே
பேசிற்றே–(வேதங்களும் வைதிக புருஷர்களும்) பேசின பேச்சுக்களையே
பேசல் அல்லால்–(நாமும்) பேசுவதே யல்லாமல்
பெருமை–(எம்பெருமானது) மேன்மையிலே
மாசு அற்றார் மனத்து உளானை–குற்றமற்ற பெரியோர்களின் நெஞ்சில் நித்யவாஸம் செய்யுமவனே
நாம் வணங்கி இருப்பது அல்லால்–நாம் வணங்கிக் கொண்டு காலங்கழிக்கலா மத்தனை யொழிய
ஒன்று–ஏக தேசமும்
உணரல் ஆகாது–அறிய முடியாது;
ஆசு அற்றார் தங்கட்கு அல்லால்–உபாயாந்தரப்பற்றாகிற குற்ற மற்றவர்களுக்கு தவிர (மற்றையோர்க்கு)
அறியல் ஆவானும் அல்லன்–அறிய முடியாதவனா யுமிரா நின்றான் (அவன்;)
பேச தான் ஆவது உண்டோ–(அவன் பெருமைக் கீடாகப்) பாசுரமிட்டுப் பேசும் படியா யிராநின்றதோ? நீ சொல்லாய்

விளக்க உரை

பேசமுடியாதென்றால் பேசுவதைவிட்டு விலகி வாய்மூட வேண்டாவோ?
பின்னையும் பேசிக்கொண்டே இருக்கிறதென்? என்ன;
ஊமையாகப் பிறவாமல் நாலாறு வார்த்தைகள் சொல்லும்படியாகப் பிறந்தோமாதலால்,
வேதங்களும் வைதிகோத்தமர்களும் சொல்லிப் போன பேச்சுக்களில்
ஏதோ சிலவற்றைச் சொல்லிகொண்டிருக்கிறோமே யொழிய,
எம்பெருமானுடைய பெருமைகளை யெல்லாம் அறிந்து பேசுகிறபடியன்று என்கிறார் முதலடியில்:

“நிற முயர் கோலமும் பேருமுருவு மிவையிவை யென்று,
அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலு மங்கங்கெல்லாம்,
உறவுயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றதன்றி யொன்றும்,
பெற முயன்றா ரில்லையால் எம்பிரான் பெருமையையே” என்ற திருவிருத்தத்தை ஒரு புடை ஒத்திருக்கும் இது.

அன்றியே;
”யதோ வாசோ நிவர்த்தந்தே” என்று
வேதம் பேசினபடியே நாமும் “எம்பெருமானுடைய பெருமையைப் பேசமுடியாது” என்று
பேசுமத்தனை யல்லது பெருமை அறிய முடியாது என்றும் பொருள்படும்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading