ஸ்ரீ திரு மாலை-20-பாயு நீர் அரங்கம் தன்னுள்-ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள்அருளிய -வியாக்யானம் –

பாயுநீ ரரங்கந் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திரு நன் மார்பும் மரகத வுருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவரிதழ் பவள வாயும்
ஆய சீர் முடியும் தேசும் அடியரோர்க் ககல லாமே.

பதவுரை

பாயும் நீர்–பாயாநின்றுள்ள காவிரி சூழ்ந்த
அரங்கம் தன்னுள்–கோயிலிலே
பாம்பு அணை–சேஷ சயநத்திலே
பள்ளி கொண்ட–கண் வளர்ந்தருளா நின்ற
மரகதம் உருவும்–மரகத மணி போன்ற திருமேனி நிறமும்
தோளும் –திருத் தோள்களும்
தூய தாமரை கண்களும்–பரிசுத்தமான தாமரை மலர்போன்ற திருக்கண்களும்
துவர் இதழ்–சிவந்த அதரமும்
பவளம் வாயும்–பவளம் போன்ற வாயும்
மாயனார்–ஆச்சரிய சக்தி வாய்ந்த எம் பெருமானது
திரு நல் மார்வும்–பிராட்டி வாழ்கின்ற விலக்ஷணமான மார்பும்.
ஆய சீர் முடியும் –வேலைப்பாடுள்ள அழகிய திருமுடியும்
தேசும்–(இவற்றாலுண்டான) தேஜஸ்ஸும்.
அடியரோர்க்கு–ஸ்வரூப ஜ்ஞான முடைய தாஸர்களுக்கு
அகலலாமோ–இழக்கத் தகுமோ?

விளக்க உரை

கீழ் “பனியரும்பு உதிருமாலோ என் செய்கேன் பாவியேனே” என்றும்,
“உடலெனக் குருகுமாலோ என் செய்கேனுலகத்தீரே” என்றும்
கதறின ஆழ்வாரை நோக்கிச் சில ஸம்ஸாரிகள் “ஓய்! பகவத் விஷயத்திலே அகப்பட்டு ஏன் இங்ஙன கதறுகிறீர்?
அதில் ஊற்றத்தை விட்டு எங்களோடே கூடினீராகில் என் செய்கேன்! என் செய்வேன்!! என்று வாய்
வெருவ வேண்டாதபடி தரித்து ஸுகமே வாழலாமே! உம்முடைய ஸ்வயம் க்குருதாநத்தம் மிகவ மழகிறது! என்றாற்போலே சில சொல்ல;

அது கேட்ட ஆழ்வார், ‘ பாவிகாள்! கண் வளர்ந் தருளுகிற அழகைக் கண்டு வைத்து
இவ்வழகெல்லாம் நமக்காகவாயிற்று? என்று களிக்கும் படியான ஸ்வரூப ஜ்ஞாநமுடைய:எங்களுக்கு,
“அஹம்-மம” என்றிருக்கிற உங்களைப்போல் அகலமடியுமோ? என்கிறார்.

எம்பெருமானுடைய அதிஸயங்களை வெறும் ஏட்டுப் புறத்தில் கேட்டுப் போகை யன்றிக்கே
பரம பாவநமான திருவரங்கந் திருப்பதியிலே திருவனந்தாழ்வான் மீது
“தன் தாளுந் தோளும் முடிவுகளும் சமனிலாத பல பரப்பி” என்றபடி ஸகலாவயவ ஸெளந்தரியமும் நன்கு விளங்கும்படி
சாய்தருள்கின்ற எம்பெருமானது திவ்ய தேஜஸ்ஸைக் காணப் பெற்றவர்களும் மீண்டு கால் பேர்ந்து விலகமடியுமோ? என்க.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading