Archive for the ‘இராமானுச நூற்றந்தாதி’ Category

ஸ்ரீ அமலனாதி பிரானும் –ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதியும்–

October 10, 2021

அமலனாதி பிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே –1–

இப் பதங்களில் அடைவே ஆழ்வார் அனுபவித்த படி-
1-மோக்ஷ பிரதத்வம் -சம்சார நிவர்த்தக காஷ்டை -அமலன்
2-ஜகத் காரணத்வ காஷ்டை-ஆதி
3-ஜகத் சரண்யத்வ காஷ்டை-ஆதி
4-சர்வ உபகாரத்வ காஷ்டை-பிரான்
5-கிருபா விசேஷத்வ காஷ்டை-அடியார்க்கு ஆட்படுத்த
6-ஸ்வாதந்தர்ய காஷ்டை-என்னை ஆட்படுத்த
7-நித்ய நிர்தோஷத்வ காஷ்டை-விமலன்
8-நித்ய ஸூரி நிர்வாஹத்வ -திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டா ஸ்வாமித்வ காஷ்டை-விண்ணவர் கோன்
9-ஸுலப்ய காஷ்டை-வேங்கடவன்
10-ஸுசீல்ய காஷ்டை-நிமலன்
11-வாத்சல்ய காஷ்டை-நின்மலன்
12-கைங்கர்ய சாதன விசேஷத்வ ப்ராப்ய காஷ்டை-நீதி வானவன்
13-சர்வ ஸ்வாமித்வ ஆஸ்ரித பக்ஷபாத காஷ்டை-அரங்கத்து அம்மான்
14-திருவடிகள் பாவானத்வ காஷ்டை-திருப் பாதம்
15-திருவடிகள் போக்யத்வ காஷ்டை- கமல பாதம்
16-அயத்ன -அநாயாசேந போக்யத்வ காஷ்டை-வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றவே

—————-

ஆசார்ய அபிமானமே உத்தாரகம் .

ஸ்ரீயப்பதியாகிய எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனிடத்தில் நாம் கொள்ளும் அடிமைத்திறம்
முதல் பருவத்தின் நிலை, பிரதமபர்வ நிலை என்றும், ஆசாரியர் திறத்தில் கொண்ட
கடைப்பருவத்தின் நிலை சரமபர்வை நிஷ்டை என்று கூறப்படும்.

இரத்தினத்தின் சிறப்பை உணர உணர, அதனைக் கொடுத்த வள்ளலிடம் மதிப்பு உயர்வது போல,
எம்பெருமானுடைய பெருமையை உணர, உணர,
அவனுக்கு நம்மை ஆளாக்கின ஆசாரியன் திறந்து மதிப்பு ஏறி, அவனுக்கு ஆட்படுதல் இயல்பு.

நிர்ஹேதுமுகமாக, எம்பெருமான், மாதவனால் மயர்வற மதினலம் அருளப்பட்ட ஆழ்வார்கள் அருளிச்செய்த
திவ்யப்பிரபந்தங்கள் எம்பெருமானுடைய புகழைக் கொண்டவைகளாக இருப்பினும்
அவற்றின் சாரமான திரண்ட பொருள் “சரமபர்வ நிஷ்டை என்பதேயாகும்.
அதாவது ஆச்சாரியர் திறத்தில் கொண்ட அடிமைத்திறமேயாகும் .
“ மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சினுள் நிறுத்தினான்”- —
தேவுமற்றறியன் என்று மதுர கவிகள் அருளிச் செய்ததும்,
நின் திருவெட்டெழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை (பெரிய திருமொழி 8.10.3) என்று
திருமங்கையாழ்வார் அருளிச்செய்ததும் இவ்விடம் நோக்கத்தக்கது.

ஆசார்ய அபிமான நிஷ்டன் பகவானை அறவே விட்டவனாக மாட்டான்.
ஆசார்யானது வழிபாட்டிலேயே, எம்பெருமானும் வழிபட்டவன் ஆகின்றான்.
இதை அறுதியிட்டே எம்பெருமானாகிய இராமானுஜரை வழிபட்டனர் முன்னோர்கள் .
இராமானுஜ நூற்றாந்தாதியின் “இருப்பிடம் வைகுந்தம் “ எனும் 106 வைத்து பாசுரம்
இதை மிக அழகாக உணர்த்துகிறது .
இத்தகைய அரிய இராமானுஜ நூற்றந்தாதி,
‘ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்’ என்ற கருத்தினை அழகாக உணர்த்துகிறது.

ஆக, எம்பெருமானாரை பற்றுவதே பிரபத்தி.
“ ராமானுஜ “ எனும் சதுரா க்ஷரியே திருமந்திரம்.
அவரது திருவடிகளிலே பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தம், என்று
நடாதூரம்மாள் அருளிச் செய்தது, இவ்விடம் நோக்கத் தக்கது.
எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருப்பதே நமக்கு கிட்டிய பெரும் பேறு.

மெய்யான தவம் சரணாகதி. அத்தையுடையவர் எம்பெருமானார்.
தம்மைச் சார்ந்தவர்கள் அனைவருடைய பாபங்களை பொறுத்தருளுமாறு பெருமாளிடம் சரணாகதி செய்து வரம் பெற்றுள்ளமையால்,
அத்தகைய வல்லமை அவருக்கு வந்தது. அவர் செய்த பிரபத்தியினாலேயே நாம் அனைவரும் அவர் சம்பத்தை முன்னிட்டு
பிரபன்னர்களாகி வினையினின்றும் விடுபடுகின்றோம் .
பிரபன்ன ஜனங்களாகிய நம் அனைவருக்கும் அவரே கூடஸ்தர் என்று நம்மால் அவர் போற்றப்படுகிறார்.
நம் கூடஸ்தர் நமக்கு வைத்திருக்கும் சொத்து சரணாகதி . அதுவே நமக்கு உஜ்ஜீவனம்.

எவனொருவன் புத்தி கெட்டவனாய் , காமத்தினால் பீடிக்கப்பட்டவனாய் இருப்பினும்,
“ ராமனுஜாய நமஹ என்னும் சொல்லை மட்டும் அடிக்கடி சொல்லி புகுந்தால்,
பகவானைக் சார்ந்தவர்களான யோகியர், எந்த மோஷத்தைப் பெறுவதற்காக ஒதுகின்றனரோ ,
அந்த மோக்ஷத்தை அடைகிறான்.–

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறனடி பணிந்து உய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த விராமானுசன் சரணார விந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -1 –

பூமன்னு மாது ;; பெரிய பிராட்டி.
பொருந்திய மார்பன் ;; பெரிய பெருமாள்
புகழ் மலிந்த பா ;; திருவாய்மொழி
பாமன்னு மாறன் ; வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன், நம்மாழ்வார்.
மாறன் அடி பணிந்து உய்ந்தவன் .’ பகவத் ராமானுஜர்.
மேற்படி ஐந்தும் பஞ்சாம்ருதம் போன்று திருவரங்கத்து அமுதனாரால்
இராமானுஜ நூற்றந்தாதியில் முதல் பாசுரமாக விளக்கப்பட்டுள்ளது .

எம்பெருமானுக்கே உரியவன் நான் என்பது தத்வ ஞானம். எனக்கெற்புடைய வழி,
சித்தோபாயமான எம்பெருமானே என்னும் உணர்வு , ஹித ஞானம்.
அத்தகைய வழியால் பெறப்படும் பேறு, அனுபவித்தற்குரிய கல்யான குணங்களையுடைய எம்பெருமானே என்று அறிந்து
உணர்வு அடையும் ஞானம் ‘புருஷார்த்தம் ஆகும்.
இவ்வாறு தத்வ, ஹித, புருஷார்த்த ஞானம் முதிர்ந்த நிலையில், இம்மூன்றும் ஆழ்வாரே என்று உணர்ந்தவர் எம்பெருமானார்.
அவர் திருவடிகளே அடையவேண்டியதே நமக்கு ப்ராப்யம் ஆகும்.

கள்ளார் பொழில் தென் அரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரான் அடிக்கீழ்
விள்ளாத வன்பன் இராமானுசன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு ஓன்று அறியேன் எனக்குற்ற பேர் இயல்வே – 2-

பெரிய பெருமாளாம், ஸ்ரீ ரங்கநாதனுடைய பாதாரவிந்தங்களிலே சரணாகதி பண்ணுவதற்கு இட்டுப்பிறந்த மனுஷ்ய பிறவியைப் பற்றியும்,
அவன் திருவடிகளில் நெஞ்சு கொள்ளாத மனிதரை விட்டு நீங்கி, குறையலூர் பிரானாகிய திருமங்கையாழ்வாரிடம், அடிபணிந்த இராமானுஜரின்
சீல குணத்தையே தம் நெஞ்சு ஆட்கொண்டதைக் கூறுகிறார்.
அத்தகைய செயலுக்கு தம் நெஞ்சுக்கு அடிபணிந்ததாக சொல்கிறார் இரண்டாம் பாசுரத்தில்.

பேரியல் நெஞ்சே அடி பணிந்தேன் உன்னைப் பேய்ப் பிறவிப்
பூரியரோடு உள்ள சுற்றம் புலத்திப் பொருவரும் சீர்
ஆரியன் செம்மை இராமானுசன் முனிக்கு அன்பு செய்யும்
சீரிய பேறு உடையார் அடிக் கீழ் என்னைச் சேர்ததற்கே -3-

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி மருள் சுரந்த
முன்னைப் பழ வினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என்
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதை வில்லையே -4 –

எம்பெருமானைப் பற்றுதல் ஞானத்தின் முதிர்ந்த நிலை.
அவ்வளவல்லாது எம்பெருமானார் அடியார்களவும் பற்றுதல் ஞானத்தின் முதிர்ச்சிக்கு எல்லை நிலமாகும்.
அப்படியான உயர்ந்த நிலையில் தம்மை வைத்துள்ளார் எம்பெருமானார் என்று அமுதனார் வியக்கிறார் நான்காம் பாசுரத்தில்.

எனக்கு உற்ற செல்வம் இராமானுசன் என்று இசையகில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர்
தனக்குற்ற அன்பர் அவன் திரு நாமங்கள் சாற்றும் என் பா
இனக்குற்றம் காணகில்லார் பத்தி ஏய்ந்த இயல்விது என்றே -5 –

அறிவிலா மாந்தர் உலகில் காணும் செல்வத்தை யன்றி மற்றொன்றைச் செல்வமாக கொள்ளார்.
ஒருக்கால் மனக் குற்றம் சிறிது மாறி சாஸ்திரத்தின் பொருளாகிய ஸர்வேஸ்வரனைச் செல்வமாக ஏற்றுக் கொண்டாலும்,
சாஸ்திரத்தின் உட்பொருளாகிய ‘ஆசார்யனை செல்வமாக இசையவே மாட்டார்கள்.
காரணம் அவர்கள் பகவத் ப்ரசாதத்தால் மனக் குற்றம் நீங்கப்பெறாமையே.
புலமை மற்றும் போதாது. பகவானுடைய அனுக்ரஹமும் வேண்டும், சாஸ்திரத்தின் உட்பொருள் அறிவதற்கு.
அதை உணர்ந்த அமுதனார் , எனக்குற்ற செல்வம் ராமானுஜர் என்கிறார்.

இயலும் பொருளும் இசையத் தொடுத்து ஈன் கவிகள் அன்பால்
மயல் கொண்டு வாழ்த்தும் இராமானுசனை மதியின்மையால்
பயிலும் கவிகளில் பக்தி இல்லாத வென்பாவி நெஞ்சால்
முயல்கின்றனன் அவன் தன் பெரும்கீர்த்து மொழிந்திடவே – 6 –

மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம் கூரத் ஆழ்வான் சரண் கூடிய பின்
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி எல்லா
வழியைக் கடத்தல் எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே -7-

வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செம்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்து அன்று எரித்த திரு விளக்கைத் தன் திரு உள்ளத்தே
யிருத்தும் பரமன் இராமானுசன் எம் இறையவனே -8 –

முழுமை வாய்ந்த ஆசார்யர் எம்பெருமானாரே. ஆதலின் அவரே வேதத்தின் உட்பொருள்.
அவரைப்பற்றி இருத்தலே வேத மார்கம்.
மற்றவர்களையும் அங்ஙனம் பற்றி நிற்கச் செய்வதே, வேதமார்க்கத்தை பிரதிஷ்டாபனம் செய்தல்.
ஆகவே, “ஸ்ரீமத் பிரதிஷ்டாபனச்சார்யார் : என்னும் விருது எம்பெருமானாரையே சாரும்.
அத்தகைய பெருங்குணம் வாய்ந்த இராமானுஜர், தம்மை இப்புவியில் ஒரு பொருளாக ஆக்கியதையும்,
அவரையே தனக்குற்ற செல்வமாகக் கொண்டதையும் தெரிவிக்கிறார்.

இறைவனைக் காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்னும்
நிறை விளக்கு ஏற்றிய பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து
உறைய வைத்து ஆளும் இராமானுசன் புகழோதும் நல்லோர்
மறையினைக் காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே – 9-

பரபக்தியாவது பிரிவில் வருந்தும்படியான நிலையையும் கூடும் போது மகிழும்படியான நிலையையும் விளைவிப்பதான தனிப்பட்ட அன்பு.
பரஞானமானது அத்தகைய அன்பு முதிர்ந்த நிலையில் ஏற்படும் சாஷாத்காரம், நேரடியான தோற்றம்.
பரம பக்தியாவது ஷண காலமும் பிரிவை சஹிக்கமாட்டாது, அனுபவித்தே ஆகவேண்டிய முதிர்ந்த பேரன்பு.
இதுவே ஞானமேன்னும் நிறை விளக்கு என்கிறார் 9ம் பாசுரத்தில்.

மன்னிய பேரிருள் மாண்ட பின் கோவலுள் மா மலராள்
தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்
பொன்னடி போற்றும் இராமானுசற்கு அன்பு பூண்டவர் தாள்
சென்னியில் சூடும் திரு உடையார் என்றும் சீரியரே – 10-

திருக்கோவலூரில் பெரிய பிராட்டியுடன் கூட ஆயனார் எனும் எம்பெருமானைக் காட்டிக்கொடுத்த மூன்றாம் ஆழ்வார் பேயாழ்வார்.
அன்னவரது திருவடிகளை புகழும் இயல்பினரான எம்பெருமானாரிடத்தில் பக்தியுடையவர்களுடைய திருவடிகளைத்
தலைக்கு அணியாகக் கொள்ளும்படியான செல்வத்தை உடையவர்கள் யாரோ,
அவர்கள்தான் என்றைக்கும் நித்ய ஸ்ரீமான்கள் என்கிறார் அமுதனார், தனது பத்தாம் பாட்டில்..

சீரிய நான் மறைச் செம் பொருள் செம் தமிழால் அளித்த
பாரியிலும் புகழ்ப் பாண் பெருமாள் சரணாம் பதுமத்
தாரியல் சென்னி யிராமானுசன் தன்னைச் சார்ந்தவர் தம்
காரிய வண்மை என்னால் சொல்ல ஒண்ணாது இக்கடலிடத்தே – 11-

சிறப்பு வாய்ந்த நான்கு வகைப்பட்ட வேதங்கள் பரம்பொருளாகிய ஸ்வரூபம், ரூபம், குணம், விபூதி(ஐஸ்வர்யம்)
இவைகளை உள்ளபடியே விளங்க வைக்கின்றன. இதுவே வேதத்திற்கு உண்டான சீர்மை.
இதுவே சீரிய நான்மறை என்கிறார் அமுதனார்.
ஸ்வரூபம் என்பது பகவானுடைய திவ்யாத்ம தத்துவம்.
ரூபமாவது உடம்பானது.
குணமானது ஆத்ம தத்வத்தைப் பற்றி நிற்கும் ஞானம், சக்தி, கிருபை முதலிய பண்புகளும் ,
சுடருடம்பைப் பற்றி நிற்கும் அழகு, மென்மை , இளமை முதலியவைகளாகும்.
விபூதியாவது, நித்யவிபூதி என்றழைக்கப்படும் பரமபதமும், லீலாவிபூதி என்றழைக்கப்படும் இவ்வுலங்களும் இறைவனது சொத்தாகும்.
வேதத்தின் இவ்வரிய பொருளை திருப்பாணாழ்வார் “அமலனாதிபிரான் “ என்றும் பாசுரத்தில்,
அமலன், விமலன், நின்மலன்,நீதிவானவன் என்று பல சொற்களால் அருளிச் செய்ததைப் போற்றுகிறார் 11ம் பாசுரத்தில்..

இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப் போது
அடங்கும் இதயத்து இராமானுசன் அம் பொன் பாதம் என்னும்
கடம் கொண்டு இறைஞ்சும் திரு முனிவர்க்கு அன்றி காதல் செய்யாத்
திடம் கொண்ட ஞானியர்க்கே அடியேன் அன்பு செய்வதுவே —12-

ஆழ்வார் ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ என்ற கீர்த்தியை யுடைய திருமழிசை ஆழ்வாரின் திருக் கமலப் பதங்களையே
பற்றியிருக்கும் எம்பெருமானரின் தாள் பற்றி இருப்பவரின் திருப்பதங்களையே பற்றி இருப்பவர்களை ‘திரு முனிவர்’ என்கிறார்.
அத்தகைய ஞானம் கொண்டவற்கே தாம் அன்பு செய்வதாக அமுதனார் கூறுகிறார்.
அதாவது, எம்பெருமானாரின் அடியவர்க்கு அடியவர்களுக்கே அவர் அன்பு செய்ய விரும்புகிறார். (12)

செய்யும் பசும் துளவத் தொழில் மாலையும் செம் தமிழில்
பெய்யும் மறைத் தமிழ் மாலையும் பேராத சீர் ரங்கத்
தய்யன் கழல்க்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா
மெய்யன் இராமானுசன் சரணே கதி வேறு எனக்கே – 13-

காவேரியே விரஜையாறு. ஸ்ரீ ரங்க விமானமே ஸ்ரீ வைகுண்டம். ஸ்ரீ ரங்கநாதனே பரவாசுதேவன்.
ஆக, கண்ணனெதிரே தோன்றும் பரமபதமாகிய ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீ ரங்கநாதனுக்கு
திருத்துழாய் மாலையும், செந்தமிழ் பாக்களால் ஆன சொல் மாலையும் சமர்ப்பித்து வந்த தொண்டரடிப்பொடியாழ்வார்
திருவடிகளையே ஆச்ரயித்த ராமானுஜர் திருவடிகளே தமக்கு சரண் ஆகும் என்கிறார். (13)

கதிக்குப் பதறி வெம்கானமும் கல்லும் கடலும் எல்லாம்
கொதிக்க தவம் செய்யும் கொள்கை ஆற்றேன் கொல்லி காவகன் சொல்
பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமானுசனைச் சொர்விலனே -14 –

ஒரு மாலையில் இடமறிந்து ரத்னங்களைப் பதிப்பது போல ,
குலசேகராழ்வார் அருளிச்செய்த பெருமாள் திருமொழியில் சொற்கள் தக்கவாறு பதிக்கப்பட்டுள்ளன.
அத்தை மனத்தில் கொண்ட எம்பெருமானார் திருவடிகளை பற்றியவரது பாதங்களை தாம் பற்றுவதால்,
கானகத்திலும், மலையிலும், கடல்களிலும் தவம் செய்ய முற்பட வேண்டிய கட்டாயம் தமக்கு இல்லை என்கிறார் அமுதனார். (14 )

சோராத காதல் பெரும் சுழிப்பால் தொல்லை மாலை யொன்றும்
பாராதவனைப் பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள்
பேராத வுள்ளத்து இராமானுசன் தன் பிறங்கிய சீர்
சாரா மனிசரைச் சேரேன் எனக்கு என்ன தாழ்வு இனியே -15 –

எம்பெருமானின் அழகை மட்டும் கண்டு, அவனது ரஷிக்கும் ஆற்றலை காணாமையால் உண்டான அச்சத்தில்
விஷ்ணுசித்தர் என்னும் பெரியாழ்வார் சாதித்தது ‘பல்லாண்டு பல்லாண்டு என்று ‘. இது அஸ்தான பய சங்கை எனப்படும்.
அதாவது, பயமே ஏற்பட வேண்டாத இடத்தில், அன்பு மிகுதியால், என் பெருமானுக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ என்று பயப்படுதல்.
பரம பதத்தில் சாமவேத கோஷ்டி சப்தத்தைக் கண்டு , ஆதிசேஷன் எம்பெருமானுக்கு ஆபத்து வந்ததோ என அஞ்சி சீறுவதுபோல.
அப்படிப்பட்ட பெரியாழ்வாரின் பதம் பணிந்த ராமானுஜரின் பாதம் பணியாத அற்ப மனிதரை சேர மாட்டேன் என்கிறார். (15)

தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே
யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே – -16 –

ப்ரத்யக்ஷம், அனுமானம், சப்தம் என்ற பிரமானங்களில் சப்தப் பிரமானத்தில் அடங்கியது மறை எனப்படும் வேதம்.
அத்தகைய தாழ்வொன்றுமில்லாத வேதம் பிற்காலத்தில் தாழ்வு படுத்தப்பட்டது.
பாஹ்யர்களும் , குத்ருஷ்டிகளும் கலி புருஷனுடைய கையாட்கள்.
வேதம் நித்யமன்று என்று கூறி வேதத்தை ஒப்புகிக்கொள்ளாத புற மதத்தவர்கள் . இவர்கள் பாஹ்யர்கள் எனப்படுவர்.
அவ்வாறன்றி, வேதத்தைப் ப்ரமாணமாக ஒப்புக்கொண்டு உட்புகுந்தாலும், அதன் உண்மைப் பொருளை உணராது ,
தமக்குத் தோன்றிய வகையில் விளக்கமளிக்கும் மனிதர் குத்ருஷ்டிகள் எனப்படுவர்.
இவ்விரு திறத்தாரால் மாசு படுத்தப்பட்ட வேதத்தை ‘கலியும் கெடும் கண்டு கொண்மின்’ என்பதற்கிணங்க,
மறையைத் தாழ்வு நிலையினின்று ‘ஸ்ரீ பாஷ்யம் ‘ மூலமாக மிக உயர்ந்த நிலைக்கு அளித்தருளியவர் இராமானுஜர் .
ஆண்டாளின் அன்புக்கு பாத்திரமானவர். அவள் கிருபையால் வாழ்கின்ற வள்ளல் ‘திருப்பாவை ஜீயர் என அழைக்கப்படும் இராமானுஜர் .(16)

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ண மங்கை நின்றானைக் கலை பரவும்
தனியானைக் தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்
இனியானை எங்கள் இராமானுசனை வெந்து எய்தினரே -17 –

வேதமனைத்தும் தன் ஒருவனையே துதிக்கும் நோக்கமுடையவைகளாய் இருத்தல் பற்றி வந்த செருக்கால்,
ஒப்பற்ற மதம் பிடித்த யானையைப் போல் தோற்றமளிக்கிறான் ,
திருக்கண்ணமங்கை என்கிற திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் பத்தராவிப் பெருமாள்.
அவன் திருமங்கையாழ்வாரின் தமிழ்ப் புலமைக்கு அடியவனாகி, ஆவணி ரோஹிணியில் பெரியவாச்சான் பிள்ளையாக அவதரித்தான் .
திருமங்கையாழ்வாரும் கார்த்திகை கார்த்திகையில் நம்பிள்ளையாக அவதரித்து திராவிட வேதத்தின் பொருளை
ஆச்சார்ய ஸ்தானத்தில் இருந்து அருளிச்செய்ததாக கூறுவர் பூர்வர்.
அத்தகைய குறையல்பிரானடிக்கீழ் அன்புடைய இராமானுஜரிடம் அடிபணிந்தவர்கள் துயரங்கள் முந்தினும் வருந்தார்.
இன்பங்கள் மொய்த்திடினினும் சந்தோஷப்பட மாட்டார்கள். அவைகள் கர்ம பலன்களாக தாமே வந்து போகின்றது என்று அமைதியாக இருப்பர்,(17)

எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தை யுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறு துணையே – 18- –

கீதை அருளிச் செய்வதற்காகவே கண்ணன் அவதரித்தது போலே , திருவாய்மொழி அருளிச் செய்வதற்காகவே அவதரித்தவர் நம்மாழ்வார் .
‘நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளாய், ஆக, யானே பெரியவன் என்று
நம்மாழ்வார் தன்னைப் பெரியன் என்று கூறுகிறார், பெரிய திருவந்தாதி 75ம் பாசுரத்தில்.
அத்தகைய நம்மாழ்வாரையும் தன் உள்ளத்தே ஆசார்யனாய் கொண்ட மதுர கவிகளை ‘பெரியவர்” என்று கூறுகிறார் அமுதனார்.
எம்பெருமானை தம் உள்ளத்திலே வைத்துக்கொண்டு கொள்ளுதல் எல்லா ஆழ்வார்களுக்குமுண்டான முதல் நிலையாகும்.
ஆனால் ஆசார்யனையே முதலும் இறுதியுமாக வைத்துக்கொள்ளல் மதுரகவியாருக்கே உள்ள சீர்மையாக அமைந்தபடியால்
அவரே ‘பெரியவர்’ ஆகிறார். (18)

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆரமுதே – – 19-

எப்படி உன் சரீரம் உன் விருப்பத்திற்கேற்ப பயன்பட்டு , தனக்கொரு பயன் கருதாது உனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறதோ ,
அதுபோல உன் ஆத்மாவை தனக்கு சரீரமாகக் கொண்டுள்ள எம்பெருமானுக்கு,
நீயும் அவன் விருப்பப்படி பயன்பட்டு, உனக்கொரு பயன் கருதாது , அந்த எம்பெருமானுக்கு மகிழ்ச்சியை ஊட்டுதல் வேண்டும்
என்கிற ‘அனன்யார்ஹசேஷத்வ’ ஞானத்தை திருவாய்மொழி உணர்த்துகிறது.
நம்மாழ்வாருக்கு ‘திருமாலிருஞ்சோலை என்கிற 98 வது திருவாய்மொழி முடிய பர பக்தியும்,
99 வது திருவாய்மொழியான ‘சூழ் விசும்பும் பணிமுகில் ‘ பரஞானமும்
100 வது திருவாய்மொழியான ‘முனியே நான்முகனே’ பரம பக்தியும் எம்பெருமான் அருளால் விளங்கியதாக பெரியோர் கூறியுள்ளனர் .
அத்தகைய அரிய திருவாய்மொழி எனும் இந்த திவ்ய அமுதத்தை உலகத்திருக்கு தெரியப்படுத்திய
இராமானுஜரே எமக்கு ஆராவமுது என்கிறார் அமுதனார். (19)

ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திருவாய்
ஈரத் தமிழ் இன் இசை யுணர்ந்தோர்கட்கு இனியவர் தம்
சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால்
வாரிப் பருகும் இராமானுசன் என்தன் மா நிதியே – -20

நாதமுனிகளுக்கு ‘கண்ணினுந் சிறுத்தாம்பு ‘காட்டியவர் , மதுரகவிகள் வம்சத்திலுதித்த பராங்குச நம்பி என்பவர்.
அத்தைக் கொண்டு ‘ஆராவமுது ‘ ஆகிய நாலாயிர திவ்ய பிரபந்தகளையும் நமக்கு காட்டியவர் ஸ்ரீமத் நாதமுனிகள்.
அதுகொண்டே அருள் கொண்ட நாதமுனியை நெஞ்சால் வாரிப் பருகுகியவர் இராமானுஜர்.
அதுபற்றியே அவரை சீலங்கொண்ட நாதமுனிகள் என்கிறார் அமுதனார். (20)

நிதியைப் பொழியும் முகில் என்ன நீசர் தம் வாசல் பற்றித்
துதி கற்று உலகில் துவள் கின்றிலேன் இனித் தூய் நெறி சேர்
எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை அடியாம்
கதி பெற்றுடைய இராமானுசன் என்னைக் காத்தனனே – 21- –

தான் செய்வதாக நினையாமல்,’ பகவான் என்னைக் கொண்டு தன் பணியை தன் உகப்புக்காகச் செய்து கொள்கிறான்’
என்கிற நினைப்போடு, அதாவது, அஹங்காரக் கலப்பில்லாமல் செய்து கொள்வது ‘சாத்வீகத் தியாகம்’ என்று கூறுவர்.
அத்தகைய மேன்மையான குணம் கொண்டு வாழ்ந்து காட்டியவர் யமுனைத் துறைவன் எனும் ஆளவந்தார் –
அவரை இறைவனென்று போற்றுகிறார்.
அவரைப் பற்றி பற்றிய பின்பு, நான் நீசர்கள் வாசல் நின்று
அவர்களை ‘நிதியை பொழியும் முகிலென்று’ கூறமாட்டேன் என்கிறார். (21)

கார்த்திகையானும் கரி முகத்தானும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதிகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –

ஆழ்வார்களையும் ஆச்சார்யர்களையும் போற்றி பணிந்தவர் ராமானுஜர்.
என்றும் அவரை போற்றி பணிந்தவர் தாள்களிலே தாம் அடிபணிவதாக அருளிச்செய்த அமுதனார் 22ம் பாசுரத்தில்.
பாணாசுரனை அழித்த கண்ணனைக் கூறுகிறார்.
அந்த மாய கண்ணனை போற்றும் ரமானுஜனை தனது வைப்பு நிதி என்கிறார்.
“நேர் சரிந்தான், கொடிக் கொழி கொண்டான்” என்றபடி பாணாசுரனை அழித்த கண்ணபிரானின் ‘பரத்வம்’ சொல்லப்படுகிறது.

வைப்பாய வான் பொருள் என்று நல்லன்பர் மனத்தகத்தே
எப்போதும் வைக்கும் இராமானுசனை இரு நிலத்தில்
ஒப்பார் இலாத வுறுவினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து
முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இது அவன் மொய் புகழக்கே -23 –

எம்பெருமானார் திருவடிகளில் அந்நயப் ரயோஜனர்களாய் பக்தி பண்ணுபவர்கள்
கூரத்தாழ்வான் , முதலியாண்டான், எம்பார், பிள்ளையுறங்காவில்லிதாசர் , திருக்குருகைப்பிள்ளான் பிரான் போன்றவர்கள்.
அவர்கள், எம்பெருமானாரை ஆபத்து காலத்தில் உதவும் பொருட்டு சேமித்து வைக்கப்பட்டுள்ள மாநிதியைப் போல வைத்துள்ளனர் .
நல்லன்பர்கள் அங்ஙனம் மனத்தகத்தே வைத்த இராமானுஜன் என்னும் நிதியை
மகா பாபியான நான் வஞ்சித்து வைத்துக் கொள்வது இராமானுஜனுக்கு இழுக்கு உண்டாகாதோ என அமுதனார் அஞ்சுகிறார் . (23)

மொய்த்த வெம் தீ வினையால் பல்லுடல் தோறும் மூத்து அதனால்
எய்த்து ஒழிந்தேன் முன நாள்கள் எல்லாம் இன்று கண்டு உயர்ந்தேன்
பொய்த் தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்து அவிய
கைத்த மெய் ஞானத்து இராமானுசன் என்னும் கார் தன்னையே – 24- –

தேன் கூட்டிலே ஈக்கள் மொய்த்துக் கொண்டிருப்பதுபோலே, ஒரு ஜீவனின் ஆத்ம தத்வத்தை புண்ய பாபங்கள் எனும்
இரு தீய வினைகள் மொய்த்துக் கொண்டுள்ளன.
அனுபவித்ததாலோ, ப்ராயசித்தத்தினாலோ தொலைந்து ஒழியாதபடியுள்ள இந்த அருவினைகள்,
உடல்தோறும் மூத்து,துன்புற்று களைத்துப் போகின்றன .
நீசச் சமயங்ளை அழித்தொழித்து, மறைகளைக் காக்க அவதரித்த எம்பெருமானாரின் திருவடி சம்பந்தம் தமக்கு கிடைக்கப் பெற்று,
தாம் தீய வினைகளினின்று உயர்ந்தமையைக் கூறுகிறார். (24)

காரேய் கருணை இராமானுசா இக்கடல் இடத்தில்
ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான் வந்து நீ என்னை யுத்த பின் உன்
சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே -25 – –

தாமே வந்து தன்னை ஆட்கொண்டதால், எம்பெருமானாரது சௌலப்பியமும்,
தமது தாழ்மையையும் கருதாது ஆட்கொண்டமையால் அவரது சௌசீல்யமும்,
நிர்ஹேதுகமாய் கொண்டதால் ஸ்வாமித்யமும்,
கருணை இராமானுஜ என்றதால் கருபையும் , வாத்சல்யமும் எம்பெருமானாரிடம் தோன்றுகிறது.
இக்குணங்கள் தம் அல்லலைத் தீர்த்து , தித்திக்க வைக்கின்றன என்கிறார்.
அவைகளே தமக்கு தாரகமும் , போஷகமும், போக்யமும் ஆகின என்கிறார். (25)

திக்குற்ற கீர்த்தி இராமானுசனை என் செய்வினையாம்
மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர்
எக்குற்றவாளர் எது பிறப்பே எது இயல்வாக நின்றோர்
அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல்வே நம்மை ஆள் கொள்ளுமே –26- –

பிறப்பாலும், அறிவாலும், நடத்தையாலும் தனக்கு கீழ் பட்டவர்களாக பாகவதர்களை நினைப்பதும் அபசாரமாகும்.
அதுபோல, அவர்களுடைய பெருமைகளை நினையாதிருப்பதும் அபசாரமாகும்.
அதாவது அவர்கள் ஆசார்யனுக்கு சமானவர்கள் என்றும்,
தன்னிலும் , ஈஸ்வரனிலும் அதிகர் என்றும் நினையாதிருப்பதும் அபச்சாரமாக தலைக்கட்டும்
என்று ஸ்ரீ வசன பூஷணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
அவ்வாறே, எம்பெருமானாரைப் பற்றுவதற்கு முன் ஒருவரிடமுள்ள குறை, அறிவினாலோ, பிறப்பினாலோ, நடத்தையினாலோ
உண்டாயிருப்பினும் அதுவே அவரது நலமாகக் கொள்ளப்படும். இவை ஒரு தடையாக இருக்க மாட்டாது.(26)

கொள்ளக் குறைவற்று இலங்கிக் கொழுந்து விட்டு ஓங்கிய உன்
வள்ளல் தனத்தினால் வல் வினையேன் மனம் நீ புகுந்தாய்
வெள்ளைச் சுடர் விடுமுன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று
தள்ளுற்று இரங்கும் இராமானுச என் தனி நெஞ்சமே -27-

மாசு படிந்த தமது கீழ்மையை நோக்காது, எம்பெருமானாருடைய மேன்மையான குணத்தினால், மஹா பாபியான,
அருவருக்கத் தக்க குணங்களை யுடைய தன் மனஸ்ஸிலேயும் புகுந்தார்.
இது அவரது உயர்ந்த குணத்துக்கு இழுக்கு உண்டாகாதோ என அஞ்சுகிறார் 27ம் பாட்டில்.

நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள்
பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா
வஞ்சர்க்கு அரிய இராமானுசன் புகழ் அன்றி என் வாய்
கொஞ்சிப் பரவ கில்லாது என்ன வாழ்வின்று கூடியதே – -28 –

கம்சன் பால் சீற்றம் கொண்ட கண்ணனையும், நப்பின்னை பால் காதல் கொண்ட கண்ணனையும் நண்ணாதவர்கள் வஞ்சகர்களே.
கண்ணனுக்கு பரதந்திரனான நாம் , நம்மை ஸ்வதந்திரனாக நினைப்பது ஆத்ம அபஹாரம்.
அத்தகையவர்களுக்கு கிட்டமுடியாதவர் இராமானுஜர்.
பிரதம பருவம் என்கிற எம்பெருமானின் அடித் திறத்தையும் அறியாத நான் எதிர்பாராது,
சரம பர்வத்தின் எல்லை நிலமான ஆசார்யரைத் துதிக்கப் பெற்றேன்.
அத்தகைய ஆசார்யரின் குணங்களையொழிய என் வாக்கானது மற்றவரை மறந்தும் துதிக்க மாட்டாது.
இது எனக்கு நேர்ந்த ஆச்சர்யமான வாழ்வு என்கிறார். (28)

கூட்டும் விதி என்று கூடும் கொலோ தென் குருகைப் பிரான்
பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த இராமானுசன் புகழ் மெய் உணர்ந்தோர்
ஈட்டங்கள் தன்னை என்னாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே -29 –

திருவாய்மொழியை ஈன்று எடுத்த தாய் சடகோபன். அதனை வளர்த்து , அந்த வளர்ச்சியைக் கண்டு உய்த்தவர் இராமானுஜர்.
கண்ணனைப் பெற்றெடுத்த தேவகியை விட அவனை வளர்த்த யசோதையே இன்பம் அனைத்தும் பெற்றாள்.
அவ்வாறு திருவாய்மொழி என்னும் திராவிட வேதத்தை மறைகளைக் கொண்டு, தெளிவு படுத்திய இராமனுஜரை உள்ளபடி அறிந்திருப்பவர்கள் ,
கூரத்தாழ்வான், எம்பார், முதலியாண்டான் எழுநூறு சந்நியாசிகள், எழுபத்து நான்கு சிம்மாசனதிபதிகள்,
எண்ணற்ற ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆகியோர்.
அவர்களின் திறளான கூட்டங்களை கண்ணால் கண்டு களிக்க வேண்டும் என்கிறார். (29)

இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் எண்ணிறந்த
துன்பம் தரு நிரயம் பழ சூழில் என் தொல் உலகில்
மன் பல் உயிர் கட்கு இறையவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் இராமானுசன் என்னை ஆண்டனனே – -30 –

அனாதியான இவ்வுலகத்தில் எண்ணற்ற ஆத்மாக்களுக்கு சேஷியாக விளங்குபவன் எம்பெருமானே என்று
அருளிச் செய்த வள்ளல் எம்பெருமானார். அவர் என்னை இன்று அடிமைத்திறமாக கொண்டார்.
இனிமேல் எனக்கு இன்பத்தைத்தரும் பெரு வீடான பரமபதம் கிடைத்தால் என்ன ?
அல்லது துயரத்தைத் தரும் ஸம்ஸாரம் என்னும் நரகம் வாய்த்தால் தான் என்ன என்கிறார். (30)

ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலம் எல்லாம் மனமே
ஈண்டு பல் யோநிகள் தோற் உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே
காண்டகு தோள் அண்ணல் தென்னத்தியூரர் கழல் இணைக் கீழ்
பூண்ட அன்பாளன் இராமானுசனைப் பொருந்தினமே – 31-

ஆண்டுகள் நாள் திங்களாய், பலவகைப் பிறப்பிலும், இறப்பிலும் இருந்த பிறவிகள் எண்ணிக்கை யில்லை.
இப்படிப்பட்ட நாம், இப்பிறப்பிலே எம்பெருமானாருடைய நிர்ஹேதுக க்ருபையினாலே அவரை அடைய பெற்றோம்.
அழகிய திருத்தோள்களை உடைய ஸ்வாமியாய், அழகிய திரு அத்தியூரில் எழுந்தருளியுள்ள,
பேரருளாளன், தேவாதி ராஜனின் திருவடிகளில் பக்தி செலுத்துபவருமான எம்பெருமானாரை சேர்ந்து
இப்போது நிலைக்கப் பெற்றோம், என்று களிப்புறுகிறார். (31)

பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த
அரும் தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே – 32-

கலி தோஷத்தினால் துன்புற்ற இந்த ஞாலத்தியுள்ளோரை தன்னுடைய வள்ளல் தனத்தினால் அவதரித்து,
கை தூக்கி விட்டு காப்பற்றியவரும் சரணாகதி என்கிற அரிய தபஸ்ஸை அனுஷ்டிப்பவருமான எம்பெருமானாரையே சேர்பவர்களுக்கு,
தங்கள் தன்மைக் குண்டான மதிப்பும் , பொறுமையும், சாமர்த்தியமும், கீர்த்தியும், நல்ல விலக்ஷணமான அறிவும்,
பக்திச் செல்வமும் தாமாகவே வந்து அடையும். (32)

அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் கை யாழி என்னும்
படையோடு நாந்தகமும் படர் தாண்டும் ஒண் சார்ங்கமும் வில்லும்
படையார் புரி சங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு என்று
இடையே இராமானுச முனியாயின விந் நிலத்தே -33 –

மனம் – சக்கரம், புத்தி – கதை, ஞானம் – நந்தகம், ஸாத்வீக அஹங்காரம்-வில், தாமஸ அஹங்காரம் – சங்கு.
ஆக இவைகள் எம்பெருமானுக்கு ஆயுதங்களாகவும், ஆபரணங்களாகவும் உள்ளன.
பிராட்டியினுடைய சன்னதியில் இந்த திவ்யாயுதங்கள் அழிப்பவனாகவில்லை. காப்பவைகளாகவே உள்ளன.
இவள் இல்லாதபோது ஆயுதங்கள் இராவணனை அழித்தன.
அவள் உள்ளபோது ப்ரம்மாஸ்திரமும் கூட காகத்தை அழிக்கவில்லை. காகம் காக்கப் பெற்றது.
நித்ய ஸூரிகளான இந்த பஞ்சாயுதங்கள், ராமானுஜர் ஆதிசேஷனுடைய ஸாஷாத் அவதாரம் ஆகையினாலே,
அவரது ஆவேச அவதாரமாக வந்து அவதரித்தன இப்பூவுலகில் என்கிறார் 33ம் பாட்டில்.

நிலத்தை செறுத்து உண்ணும் நீசக் கலியை நினைப்பரிய
பலத்தைச் செறுத்தும் பிறங்கிய தில்லை என் பெய் வினைதென்
புலத்தில் பொறித்த வப்புத்தகச் சும்மை பொறுக்கிய பின்
நலத்தைப் பெறுத்தது இராமானுசன் தன நயப் புகழே -34 –

உலகத்திலுள்ளோரை நிலை குலையச் செய்யும் நீசக் கலியை அழித்தத்தினால் எம்பெருமானார் புகழ் ப்ரகாசிக்க வில்லை.
எப்போது அவர் புகழ் பிரகாசித்தது எனில், தாம் எண்ணற்ற பாவங்களை செய்து, அவை சித்திர குப்தனால் புஸ்தங்களாக எழுதப்பட்டு,
அவைகளை ராமானுஜர் , தம்மீது, காரணமில்லாக் கருணை கொண்டு அழித்தபின்னரே, ஏற்பட்டது என்கிறார். (34)

நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தை
புயலே எனக் கவி போற்றி செய்யேன் பொன்னரங்கம் என்னில்
மயலே பெருகும் இராமானுசன் மன்னு மா மலர்த் தாள்
அயரேன் அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே -35 –

தீராத வினைகள் ஏற்பட மூன்று வழியுண்டு.
முதலாவதாக, எம்பெருமான், ஸ்ரீமன் நாராயணனைத் தவிர மற்ற தெய்வங்களைக் கொள்ளுதல்.
‘ஆதிப்பிரான் நிற்க மற்றதெய்வம் நாடுதிறே ‘ என்றபடி.
இரண்டாவது, சேவிக்கத் தகாத மனிதர்களை வேண்டி பொருள் பெற அவர்களை போற்றுதல்.
மூன்றாவது, அழியக்கூடிய சப்தாதி விஷயங்களில் ஈடுபடுதல்.
இவைகள் அருவினை எனப்படும்.
இராமானுஜனை அடைந்த என்னை இந்த அருவினைகள் என்ன செய்யும் என்று கேட்கிறார்.(35)

அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திட தானும் அவ் ஒண் பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமானுசன் தன் படி இதுவே -36 –

அர்ஜுனனை வ்யாஜ்யமாகக் கொண்டு பகவான் கிருஷ்ணன் பெருங்கடலிடையே ரத்தினங்கள் மறைந்து கிடப்பது போல,
வேதமாகிற சமுத்திரத்தில் மறைந்து கிடந்த விலக்ஷணமான வேதார்த்தங்களை ஆராய்ந்து கண்டு அளித்தார், ஸ்ரீமத் பகவத் கீதை மூலமாக.
இப்படி அளித்த பின்னும் உலகத்தவர் தமது அறியாமையினால் இடரின் கண் வீழ்ந்தனர் .
இவர்கள் படும் துன்பத்தை சஹியாதே, எம்பெருமானார் ‘கீதா பாஷ்யம்’ என்ற நூலின் மூலமாக
அரும் பொருளை இலகுவாக அறியும்படி அருளிச் செய்தார் (36).

படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
குடி கொண்ட கோயிலில் இராமானுசன் குணம் கூறும்
கடி கொண்ட மா மலர்த்தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே – 37-

ஆக்கி யடிமை நிலைப்பித்தனை என்னை யின்றவமே
போக்கிப் புறத்திட்ட தென் பொருளா முன்பு புண்ணியர் தம்
வாக்கில் பிரியா விராமானுச நின்னருளின் வண்ணம்
நோக்கில் தெரிவரிதால் உரையாய் இந்த நுண் பொருளே – 38-

இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் எபெருமானாருடைய நெஞ்சில் ஆழமாக புகுந்து தேங்கிக் கொண்டது.
‘ அஹம் சர்வம் கரிஷ்யாமி ‘என்று சகலவித கைங்கர்யங்களையும் பண்ணி இளைய பெருமாள் இளையாழ்வாராக அவதரித்தவரன்றோ?,
இராமானுஜர். அத்தகைய எம்பெருமானாரின் பாதாரவிந்தகளில் மனம் பொருந்தி, அன்பு கணிந்திருக்கும் மஹானுபவர்கள்
தம்மை எம்பெருமானார்க்கு ஆட்படுத்தினார்கள் என்கிறார் அமுதனார்.
ஆக, தானும் பற்றவில்லை. அவரும் சுவீகரிக்கவில்லை. உடையவருடைய சம்பந்த, சம்பந்திகளே, கொண்டு சேர்த்தார்கள்.
அப்படி இன்று நிலைப்பித்த என்னை, இத்தனை காலம் புற விஷயங்களிலே தள்ளி வைத்தது எக்காரணம் பற்றி என்று
ஆதங்கத்துடன் வினவுகிறார் பின் வரும் இரண்டு பாசுரங்களிலே.(37/38)

பொருளும் புதல்வரும் பூமியும் பூம் குழலாரும் என்றே
மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே மற்றுளார் தரமோ
இருள் கொண்ட வெந்துயர் மாற்றித் தன்னீறிலபெரும் புகழே
தெருளும் தெருள் தந்து இராமானுசன் செய்யும் சேமங்களே -39 –

‘தாயே தந்தையே என்றும் தாரமே கிளைமக்களே’ என்றும் இவற்றையே பெரும் பேறாக எண்ணி,
இதற்கு மேல் மேம்பட்டது வேறு ஒன்று உண்டு என்னும் தெளிவற்ற ஞானமின்றி திரிந்த நமக்கு,
அஞ்ஞானமாகிய இருளை நீக்கியவர் இராமானுஜர்.
அதுமட்டும் இன்றி தம்முடைய கணக்கற்ற கல்யாண குணங்களையே சிந்திக்கத் தக்கதான ஞானத்தையும் அருளினார்.
இவை இராமானுஜர் செய்த ஷேமங்களே என்கிறார்.(39)

சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
யாமது காமம் அறம் பொருள் வீடி தற்கென்று உரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே -40 – –

அறம் , பொருள்,வீடு, காமம், என்கிற நான்கு புருஷார்த்தங்களில்
‘ கண்ணனுக்கே ஆனது காமம்’ என்பது ராமானுஜ முனியின் சித்தாந்தம்.
காமமே முக்கிய புருஷார்த்தம் என்பது அவர் தெளிவு.
அக் காமம் தனக்கு இன்பமாயிருக்கும் என்றோ, கண்ணனுக்கு இன்பமாயிருக்கும் என்றோ, எண்ணலாகாது.
கண்ணனுக்கே இன்பமாயிருக்க வேண்டும்.
அவன் இன்புறுவதைக் காண்பதைத் தவிர, தனக்கு வேறு புருஷார்த்தம் இல்லை என்று கருதிச் செலுத்தும் காமமே பரம புருஷார்த்தம்.
எம்பெருமானாரும் பக்தி ரூபமான இந்த பகவத் காமத்தின் விஷேஷத்தை ஸ்ரீ பாஷ்ய முகேன அருளிச் செய்துள்ளார் .(40)

மண் மிசை யோநிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய வப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினரே – 41-

‘அஜாயமானோ பஹுதோ விஜாயதே’ என்கிறபடி, பிறப்பே இல்லாத எம்பெருமான்,
தேவனாக உபேந்தரனாகவும், மனிதனாக இராமனாகவும், க்ருஷ்ணனாகவும், விலங்கினமாக மீனாகவும், ஆமையாகவும், வராஹமுமாகப் பிறந்தான்.
மக்களைக் காப்பதற்கு பிராட்டியாருடன் ‘மாதவனாக’ பிறந்தும் உலகத்தார் அவனை புரிந்து கொள்ளவில்லை.
அவனையும் தம்மைப் போல ஒரு மனிதன் என்று உலகத்தவர் நினைக்கின்றனர் என்று பகவான் ஸ்ரீ மத் பகவத் கீதையில் கூறியுள்ளார்.
ஆனால் பகவத் ராமானுஜர் அவதரித்த பிறகு, ஸ்ரீ பாஷ்யம் போன்ற க்ரந்தங்களாலே தத்துவ, ஹித, புருஷார்த்தங்கள் விளங்கி,
‘ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாமாயன் ‘ நாராயணனே பரம்பொருள் என்பதை
உலகத்தார் உள்ளங்கை நெல்லிக்கனி என அறிந்து ஞானம் பெற்றனர். (41)

ஆயிழையார் கொங்கை தங்கு மக்காத லளற்ற ழுந்தி
மாயும் என்னாவியை வந்து எடுத்தான் இன்று மா மலராள்
நாயகன் எல்லா வுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
தூயவன் தீதில் இராமானுசன் தொல்லருள் சுரந்தே -42 – –

சேற்றிலே விழுந்தவர்களைக் காக்க முற்படுபவர்கள் சாமர்த்தியம் உடையவர்களாய்,
அச் சேற்றிலே பாய்ந்து அதிலே தத்தளிப்பவர்களை எடுப்பது போல
எம்பெருமானார் , நங்கையர்களின் ஸ்தனமாகிய காமச் சேற்றில் விழுந்தவர்களை தாமே வந்து எடுத்து அருளினார்.
“ போலி அழகில் மயங்கி சேற்றில் விழுந்தாயே, அழகுத் தெய்வமாகிய மாமலராள் காதலுறும் நாயகனுடைய
மெய்யழகிலன்றோ ஈடுபட வேண்டும்” என்று பிள்ளை உறங்கா வில்லி தாசரை எம்பெருமானார் திருத்தி அருளின ரன்றோ?.
அங்ஙனமே அனைத்து உலகத்தவரையும் நாராயணனுக்கு சேஷ பூதராக்கினார். (42)

சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாயமுதம்
பரக்கும் இருவினை பற்றவோடும் படியிலுள்ளீர்
உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறு கலியைத்
துரக்கும் பெருமை இராமானுசன் என்று சொல்லுமினே – 43-

நாராயண நாமம் சொல்லச் சொல்ல அமுதமாக இருக்கிறது.
நம்மாழ்வார் நாமம் ஒருகால் சொன்னாலே, நாவிலே அமுதம் ஊறிக்கொண்டே இருக்கிறது என்றார் மதுரகவி ஆழ்வார்.
ஆனால் இராமானுச நாமமோ, சொல்லத் தொடங்கியவுடனே அமுதனார்க்கு நாவில் அமுதம் பாய்கிறதாம்.
அனாதி காலமாக சப்தாதி விஷங்களிலேயே போந்த உங்களுக்கு ஒரு ஹிதம் சொல்கிறேன்.
ராமானுஜ நாமம் என்கிற திருநாமத்தை சொல்லுங்கோள் .
கைங்கர்யம் சம்பத்தும் , ஸ்வரூப ஞானமும் தன்னடைவிலேயே வந்து சேரும் என்கிறார் 43ம் பாட்டில்.

சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை
யில்லா வற நெறி யாவும் தெரிந்தவன் எண்ணரும் சீர்
நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்பிக்
கல்லார் அகலிடத்தோர் எது பேறென்று காமிப்பரே – -44 –

இந்தப் பரந்த உலகில் புருஷார்த்தத்தை தேடி அலைபவர்க்கு இராமானுஜரின் திருநாமமே பரம புருஷார்த்தம் ஆகும் .
இதனை மனதில் கொள்ளாமல், இராமானுச திருநாமத்தின் மீது நம்பிக்கைக் கொண்டு
சொல்லாதவர்களின் தன்மையை நினைந்து வருந்துகிறார் 44ம் பாட்டில்.

பேறு ஓன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அப் பேறு அளித்ததற்கு
ஆறு ஒன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி என்று இப்பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லாற்
கூறும் பரம் அன்று இராமானுச மெய்ம்மை கூறிடிலே – 45- –

“ ராமானுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே” என்று கூரத்தாழ்வானும் எம்பெருமானாரது திருவடிகளையே உபாயமாகப் பற்றினார்.
அவரைப் பற்றி பின்பற்றி , அமுதனாரும், தனக்கு ப்ராப்யம், பிராபகம் இரண்டுமே எம்பெருமானார் திருவடிகளே என்கிறார் 45ம் பாசுரத்தில்.
சரம பர்வத்துக்குண்டான வாசி அறியாதவரக்கே பிரதம பருவம் ப்ராப்யமாகிறது.
அதாவது ஆச்சார்ய அபிமானம் உள்ளவருக்கு, எம்பெருமான் மீது அபிமானமும் இரண்டாம் பக்ஷம் என்கிறபடி.

கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே
மாறன் பணித்த மறை யுணர்ந்தோனை மதியிலியேன்
தேறும்படி என் மனம் புகுந்தானைத் திசை யனைத்தும்
ஏறும் குணனை இராமானுசனை இறைஞ்சினமே -46- –

பௌத்தம், சார்வாஹம், நையாயிகம், ஜைனம், சாங்கியம், யோகம், ஆகிய ஆறு புற சமயத்தினரும் அழியும்படி செய்ய
அவதரித்த இராமானுஜர், நம்மாழ்வார் அருளிச் செய்த தமிழ் வேதமாகிய திருவாய்மொழியை கண்டறிந்தவர்.
‘நீசனேன், நிறைவொன்றுமிலேன்” எனும்படி நீசத்தனத்தில் நிகரற்றவனாக உள்ள நானும்,
அருள் புரிவதில் நிகரற்றவறான தேவரீரும் நிலைத்து ஏன் இணைய மாட்டோம், என்கிறார் அமுதனார்.
அவ்வாறு பகவத் விஷயத்துக்கு கூட இடமின்றி, எம்பெருமானார் அமுதனாரது சிந்தையினுள்ளே நிறைந்திருந்தார் என்றபடி. (46)

இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத்
தரம் செப்பும் அண்ணல் இராமானுசன் என் அருவினையின்
திறம் செற்று இரவும் பகலும் விடாது என் தன் சிந்தை உள்ளே
நிறைந்து ஒப்பற விருந்தான் எனக்காரும் நிகர் இல்லையே – 47- –

கண்ணாலே காணும்படி தன் ஈஸ்வரத்தன்மை வெளிப்பட, தானே வந்து ஸ்ரீ ரங்கத்தில் கண் வளர்ந்தருளுகிற ஸ்ரீரங்கநாதன் என்பார்
எம்பெருமானார். “ராமோ விக்ரஹவான் தர்ம:” என்றும்
க்ருஷ்ணம் தர்மம் சநாதனம்” என்றும்,
அதர்ம வழியிலே போகும் இவ்வுலகத்தாற்கு தர்மோபதேசம் செய்த ராமானுஜரை “ அறம் செப்பும் அண்ணல்” என்கிறார் அமுதனார்.
அத்தகைய பெருமை மிகு எம்பெருமானார் என் சிந்தையில் புகுந்ததினால், எனக்கு நிகர் யாருமில்லை என்று
‘ஸாத்வீக அஹங்காரம்’ தோற்ற கூறுகிறார். (47)

நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றிப்
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அக்தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச இனி நாம் பழுதே
யகலும் பொருள் என் பயன் இருவோருக்கும் ஆன பின்னே – -48 —

“வானவர்க்கு ஈசன் என்றால் தேசமோ திருவேங்கடத்தானுக்கு” என்பது போல்
குற்றமற்றவரை ஏற்பத்தில் அருளுடையொருக்கு சிறப்பில்லை.
குற்றம் நிறைந்தவரை ஏற்றுக்கொள்வதில் தான் அருளுடையோருக்கு சீர்மை.
நான் நீசத்தனத்தில் நிகரற்றவன்.தேவரீர் அருள் புரிவதில் நிகரற்றவர்.
நமது நிகரற்றத் தன்மையில் நம் இருவருக்கும் ஒற்றுமை இருக்கும் போது,
நாம் ஒருவரை விட்டு ஒருவர் அகல தேவையில்லை என்று நைச்சியானந்தம் தோற்றக் கூறுகிறார்.(48)

ஆனது செம்மை யற நெறி பொய்ம்மை அறு சமயம்
போனது பொன்றி இறந்தது வெங்கலி பூம் கமலத்
தேனதி பாய் வயல் தென்னரங்கன் கழல் சென்னி வைத்துத்
தானத்தில் மன்னும் இராமானுசன் இத்தலத்து உதித்தே -49 –

தென்னரங்கத்தில் வயல்கள் நீரால் விளைவன அல்ல.
அவை தம்மிடத்துத் தோன்றிய தாமரை மலரிலிருந்து பெருகும் தேன் பாய விளைவனவாம்.
அத்தகைய ஸ்ரீரங்கத்தில், ‘அரசருக்கு தம்முடி போல இவருக்கு
தென்னரங்கனின் திருமுடிகள் நினைத்தபோது சூடலாம்படி சொந்தமாயின போலும்.
அவர் அவதரித்ததினால் வைதீக மார்க்கம் செழிப்புற்றது.
புல் விளைய களை அழியுமாப் போல, இவர் அவதரிக்கவும் அறு சமயங்கள் அழிந்தது என்கிறார் 49ம் பாட்டில்.

உதிப்பன வுத்தமர் சிந்தையுள் ஒன்றலர் நெஞ்சம் அஞ்சிக்
கொதித்திட மாறி நடப்பன கொள்ளை வன் குற்றம் எல்லாம்
பதித்த வென் புன் கவிப் பாவினம் பூண்டன பாவு தொல் சீர்
எதித்தலை நாதன் இராமானுசன் தன் இணை யடியே – – 50-

அடியைத் தொடர்ந்து எழும் ஐவர் கட்காய் அன்று பாரதப்போர்
முடியப் பரி நெடும் தேர் விடும் கோனை முழுது உணர்ந்த
அடியர்க்கு அமுதம் இராமானுசன் என்னை யாள வந்திப்
படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே –51 –

பார்த்தசாரதியின் திருவருளால் அவதரித்த எம்பெருமானார் தமது அடியார்களுக்கு அம்ருதமாகவே உள்ளாராம்.
அத்தகைய இராமானுஜர் தமக்காகவே அவதாரம் செய்தார் என்கிறார் 51ம் பாட்டில்.

பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப இப் பார் முழுதும்
போர்த்தான் புகழ் கொண்டு புன்மையினேன் இடைத்தான் புகுந்து
தீர்த்தான் இரு வினை தீர்த்து அரங்கன் செய்ய தாள் இணையோடு
ஆர்த்தான் இவை எம் மிராமானுசன் செய்யும் அற்புதமே –52-

அதுமட்டுமன்றி, அதிமானுஷமான செயல்கள் புரிந்து, என்னை ஸ்ரீ ரங்கநாதனின் தாள் பணியச் செய்தார்.
இது இராமானுஜர் செய்யும் அற்புதமே என்கிறார். (52)

அற்புதன் செம்மை இராமானுசன் என்னை யாள வந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய
பற் பல்லுயிர்களும் பல்லுலகி யாவும் பரன தென்னும்
நற் பொருள் தன்னை இந் நானிலத்தே வந்து நாட்டினனே – -53 –

பிரதான பிரதி தந்திரம் என்பது, பிற மதத்தவரால் ஏற்கப்படாது, நம் மதத்தவரால் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்ட
முக்கிய வேதப் பொருள் எனப்படும். அது சித்,அசித் ஈஸ்வரன் என்கிற தத்வத்ரயமும், சரீர,சரீரி பாவமும் ஆகும்.
இது நற்பொருள் என்றும் அத்தைத் தெரிவித்து உலகத்தவரை தெளிவுபடுத்திய
எம்பெருமானாரை ‘என்னை ஆளவந்த கற்பகம்’ என்கிறார்.(53)

நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது தென் குருகை வள்ளல்
வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமானுசன் தன்னியல்வு கண்டே – 54- –

நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன. நாரணைக்காட்டிய வேதம் களிப்புற்றது.
‘ நாராயண பர ப்ரம்ஹ தத்வம் நாராயண; பர;, அந்தர் பஹீச்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித; என்னும்படி.
இப்படியான பேரெழுச்சி எழுந்ததன் காரணம் பூலோகத்தில் திரண்ட சீல குணமுடையவரான
எம்பெருமனாருடைய ஸ்வபாவத்தைப் பார்த்து, என்கிறார் அமுதனார் 54ம் பாசுரத்தில்.
சிங்கத்தைக் கனவில் கண்டாலும் சாமான்யமான மிருகங்கள் தானே நசித்தொழியும்.
அவற்றைக் கொல்வதற்கு சிங்கம் ஒரு முயற்சியும் செய்ய வேண்டா.
அதுபோல நீசச் சமயங்கள் இராமானுஜரின் இயல்பு கண்டவாறே மாண்டன.

கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென்னரங்கன்
தொண்டர் குலாவும் இராமானுசனைத் தொகை யிறந்த
பண்டரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்
கொண்டலை மேவித் தொழும் குடியாம் எங்கள் கோக்குடியே – -55 –

‘என் அமுத்தினைக் கண்ட கண்கள்,மற்றொன்றைக் காணாவே’ என்று பாண் பெருமாள் அருளிச்செய்தபடி ,
கண்டவர் சிந்தையை கவருபவன் , கடிபொழில் தென்னரங்கன்.
‘சர்வ கந்த, சர்வ ரஸ’ எனும்படி வேதங்களாலே போற்றப்படும் அரங்கன் இருக்கும் இடம் தொண்டுக்குப் பாங்கான இடம்.
அத்தகைய அரங்கனை வேதாந்த விழுப் பொருள் என்று ஸ்ரீ பாஷ்யத்தாலே நிரூபித்து,
வேதம் களிப்புறும்படிச் செய்தவர் இராமானுஜர்.
நீர், நிலம், காடு மலை என்று வேறுபாடின்றி மேகமானது மழையைப் பொழிவது போல,
எந்த பயனையும் கருதாது உபகரித்தமையால், இராமானுஜரை ‘கொண்டல்’ என்கிறார்.
அநந்யப் ப்ரயோஜனராய், இவ்வாறு எம்பெருமானரை ஆச்ரயித்தவர்கள் குலமே நம்மை ஆளும் குலம் என்கிறார் 55ம் பாட்டில்.

கோக்குல மன்னரை மூ வெழு கால் ஒரு கூர் மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனம் எங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமானுசனை யடைந்த பின் என்
வாக்குரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே -56-

56ம் பாட்டில் எம்பெருமானின் ஆவேச அவதாரமாகிய பரசுராம அவதாரம் கூறப்படுகிறது.
அவரைப் பற்றி போற்றிய இராமானுஜரை புனிதன் என்கிறார்.
அந்தப் புனிதனை அடைந்த பின் என் வாக்கானது வேறெதையும் பேசாது. நெஞ்சும் நினைவில் கொள்ளாது என்கிறார்.

மற்றொரு பேறு மதியாது அரங்கன் மலரடிக்கா
ளுற்றவரே தனக்குற்றவராய்க் கொள்ளும் உத்தமனை
நற்றவர் போற்றும் இராமானுசனை யின் நானிலத்தே
பெற்றனன் பெற்ற பின் மற்று அறியேன் ஒரு பேதமையே -57-

அரங்கன் மலரடிக்கு ஆளுகையே பேறு .
திருவரங்கத்தில் அரங்கன் திருவடிவாரத்தில் பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தம்.
மற்ற புருஷார்த்தங்கள், புருஷார்த்தங்களாக மதிக்கத் தக்கனவல்ல என்று அரங்கனுக்கு ஆளுற்றவர் கருதுகின்றனர்.
இவர்கள் பரமபதநாதனுக்கு ஆளுகையும் பெரிய பேறாக மதிக்கிலர்.

திருவரங்கத்தில் ஈடுபட்டவர்கள், பரமபதத்தையும் விரும்ப மாட்டார்கள் என்பதனை பெரியவாச்சான் பிள்ளை
‘’ ஸ்ரீ ரங்கத்தில் உள்ளவர்கள் ‘பரமபதம் வரில் என் செய்வதென்’ என்று நடுங்குபவர்கள் போலே காணும் ,
அவ்வூரில் வர்த்திக்கின்றவர்கள் ‘ என்று ரசமாக அருளிச் செய்துள்ளார்.

பராசர பட்டர், ஒரு திருமஞ்சனத்தின் போது எம்பெருமான்,
’ பட்டரே, சீக்கிரம் பரமபதம் போக வேண்டுமே என்று அஞ்சினாயோ’ என்று வினவ,
அதற்கு பட்டர், பரமபதம் போக நான் அஞ்சவில்லை. உம்முடைய குளிர்ந்த முகமும், திருநாமத் தழும்பையும்
இழந்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன் ‘ என்றாராம்.

அதே போல, ஆளவந்தார் மகன் சொட்டை நம்பியும் ‘ ஸ்ரீ வைகுண்டத்தில் சென்றால், நம்பெருமாளுடைய குளிர்ந்த முகம்போல்,
ஸ்ரீ வைகுண்ட நாதனின் முகம் குளிர்ந்ததில்லையாகில், முறித்துக் கொண்டு இங்கு வந்துவிடுவேன்’ அன்று அருளிச் செய்துள்ளார்

அவ்வாறு ஸ்ரீ ரங்கநாதனான மாதவனின் திருவடிகளை உபாயமாகவும், உபேயமாகவும் கொள்ளுமவர், உத்தம அதிகாரி எனப்படுவர்.
தவங்களுள் சிறந்தது சரணாகதி. சரணாகதியைக் கைக் கொண்டும், தம்முடைய உபதேசத்தாலும், நூல்களாலும்
உலகினரை சரணாகதி நெறி ஒழுகச் செய்தும், சரணாகதியை நிலை நிறுத்தின எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பிறகு,
தமது பேதமை விலகியதாக அமுதனார் கூறுகிறார்.(57)

பேதையர் வேதப் பொருள் இது என்று உன்னிப் பிரமம் நன்று என்று
ஓதி மற்று எல்லா வுயிரும் அக்தென்று உயிர்கள் மெய் விட்டு
ஆதிப் பிரானோடு ஒன்றாம் என்று சொல்லும் அவ்வல்லல் எல்லாம்
வாதில் வென்றான் எம் இராமானுசன் மெய்ம் மதிக் கடலே – 58-

கடளவாய திசை எட்டினுள்ளும் கலி யிருளே
மிடை தரு காலத்து இராமானுசன் மிக்க நான்மறையின்
சுடர் ஒளியால் அவ் இருளைத் துரந்திலனேல் உயிரை
யுடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை யுற்று உணர்ந்தே – -59-

‘’அஹம் ப்ரம்மாஸ்மி, தத்வமஸி “ போன்ற சில வேத வாக்கியங்களை மட்டும் எடுத்துக் கொண்டு
அனைத்தும் பிரம்மம் என்றும் கடைசியில் அனைத்தும் ப்ரம்மத்தில் ஐக்கியமாகி விடுகின்றன என்றும்
சில குத்ருஷ்டிகளின் மாயா வாதத்தை இராமானுஜர் முறியடிக்கா விடில்,
நாராயணனே பரம்பொருள் என்று இவ்வுலகத்தார் அறியாமலே போயிருப்பர் என்கிறார் 58,59ம் பாட்டில்.

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம் தொறும் திரு வாய் மொழியின்
மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் இராமானுசன் என்னும் குலக் கொழுந்தே – -60 –

அர்த்த பஞ்சகத்தை உணர்ந்த மெய்ஞ்ஞானியர் கூடுமிடமெல்லாம் புக்கு நிற்கிறார் எம்பெருமானார்.
அதாவது திருவாய்மொழி பாடும் இடங்களில் எல்லாம் பரம ரசிகருமான எம்பெருமானார் தானும் இருக்கிறார்.
மேலும் திருமங்கையாழ்வ்வரைப் போல , பிராட்டியார் நித்ய வாசம் பண்ணக்கூடிய அழகிய மார்பை யுடைய
எம்பெருமான் எழுந்தருளியுள்ள திருப்பதிகள் தோறும் மண்டி அனுபவிக்கப் புகுபவர் எம்பெருமானார்.
அவர் எங்கள் குலக் கொழுந்து என்கிறார் 60ம் பாட்டில்.

கொழுந்து விட்டோடிப் படரும் வெங்கோள் வினையால் நிரயத்
தழுந்தி யிட்டேனை வந்தாட் கொண்ட பின்னும் அரு முனிவர்
தொழும் தவத்தோன் எம் இராமானுசன் தன புகழ் சுடர்மிக்கு
எழுந்தது அத்தால் நல்லதிசயம் கண்ட திரு நிலமே – 61- –

‘ஸ மஹாத்மா ஸு துர்லப’ என்று க்ருஷ்ண பகவான் தான் அவதரித்த விபவாதாரத்துக்குப் பின்பு
நம்மாழ்வார் அவதரிக்கையாலே, அவருடைய காட்சி தமக்கு கிடைக்காமல் போனதே
என்று நினைத்துச் சொன்னான்’ என்று பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம்.
திருக்கண்ணமங்கை எம்பெருமான் கண்ணனும், பெரியவாச்சான் பிள்ளையாக அவதரித்தார் என்று சொல்வர் பெரியோர்.
நம்மாழ்வாரின் க்ருபைக்குப் பாத்திரமான நாதமுனிகளையும் , ஆளவந்தாரையும் அரு முனிகள் என்கிறார்.
அத்தகையோர் தொழுதேத்தும் இராமானுஜனை அடைந்து இவ்வுலகும் அதிசயம் கண்டது . (61)

இருந்தேன் இருவினை பாசம் கழற்றி இன்றி யானிறையும்
வருந்தேன் இனி எம் இராமானுசன் மன்னு மா மலர்த்தாள்
பொருந்தா நிலைவுடைப் புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மை செய்யாப்
பெரும் தேவரைப் பரவும் பெரியோர் தம் கழல் பிடித்தே – -62 –

பெருந்தேவர்கள் என்று கூறப்படும், நித்ய ஸூரிகளுக்கு இணையான, ஸ்ரீ வைஷ்ணவர்கள் கழல் பிடித்த பின்,
தமது இரு வினைகளும் கழிந்தன என்றும்
அவ்வாறு கழிந்த பின் தான் புரிய வேண்டிய செயல்கள் ஏதுமில்லாது ‘க்ருத்க்ருதயனானேன் ‘ என்கிறார்.
அதாவது பேற்றினைப் பெறுவதற்கு செய்ய வேண்டியவைகளைச் செய்து முடித்தவன் ஆனேன் என்கிறார்.
“ ஆதலின் நீ உண்மையாக என்னைப் பற்றிய அறிவிலும், காண்டலிலும் அடைதலிலும் ஐயமற்றவனாய்,
சுகமாய் இரு என்று சரணாகதி கத்யத்தில் எம்பெருமானின் திருவாக்காக இந்த க்ருத க்ருத்யதமே பேசி முடிக்கப்படுகிறது.
சரம ஸ்லோகத்தில் சரண் ஏற்ற எம்பெருமான் ‘மாசுச:(கவலைப்படாதே என்பதற்கும் இதுவே பொருளாம். (62)

பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கிய சீர்
அடியைத் தொடரும் படி நல்க வேண்டும் அறு சமயச்
செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்தோட வந்திப்
படியைத் தொடரும் இராமானுசா மிக்க பண்டிதனே – 63- –

பெண் யானையை, அது எதிர்வழி கொடாத நிலையிலும், பேராத பேரன்பால் அதனையே பின் தொடர்ந்து திரியும்
ஆண் யானையை போல் அடியேன் தேவரீருடைய பிரகாசிக்கும் தன்மை வாய்ந்த குணங்களைக் கொண்ட
திருவடியை பின்பற்றித் திரியும் ஸ்வபாவத்தைத் தந்தருளவேண்டும்.
‘ பகுத்தறிவு அற்றவர்கள் சப்தாதி விஷயங்களில் எத்தகைய பற்று நீங்காது உள்ளனரோ,
அத்தகைய ப்ரீதி உன்னைத் தொடர்ந்து நினைத்த வண்ணம் இருக்க வேண்டும் என்று
பிரகலாதாழ்வான் அச்சுதனிடம் வேண்டியது போல், எம்பெருமானாரிடம் வேண்டுகிறார். (63)

பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம் மெய்ம்மை
கொண்ட நல் வேதக் கொழும் தண்டம் ஏந்திக் குவலயத்தே
மண்டி வந்தேன்றது வாதியர்காள் உங்கள் வாழ்வற்றதே – – 64- –

அன்பு கொண்ட யானையைப் போலல்லாமல்,மதம் கொண்ட வேழமென் இராமனுசமுனி வேழம்,
பசுந்தமிழாகிற திருவாய்மொழி அனுபவத்திலுண்டான ஆனந்தம் மதநீராகிப் பாய்ந்து, வேதமேன்னும் ‘கதை’யை எடுத்துக்கொண்டு
பாஹ்யர்களையும், குத்ருஷ்டிகளையும் வாழ்வறச்செய்தார் என்று அமுதனார் 64ம் பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார் .
தெற்கே திருமாலிருஞ்சோலையில் ஒரு யானையாகவும்,
வடக்கே திருவேங்கடமுடையான் என்று ஒரு யானையும்,
கிழக்கே திருக்கண்ணபுரத்து எம்பெருமானாக ஒரு யானையும்,
மேற்கே ஒரு மதம் பிடித்த யானை சாய்ந்தாற்போலே திருவரங்கத்தில் ஒரு யானையும் ஆகிய
நான்கு யானைகளுக்கு ஒத்தாற்போல் ஐந்தாவது வேழமாக எம்பெருமானார் விளங்குகிறார் என்றபடி. (64)

வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர் தம்
தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது தத்துவ நூல்
கூழற்றது குற்றமெல்லாம் பத்திதா குணத்தினர்க் கந்
நாழற்றது நம்மிராமானுசன் தந்த ஞானத்திலே – – 65-

எம்பெருமானார் அருளிய ஞானத்தாலே, பூமண்டலமானது பாக்யம் பெற்றது, எவ்வாறு எனில்,
களையெடுத்தபின் பயிர் தலை நிமிர்ந்து ஓங்கி வளருமாப்போலே, இவர் அவதரித்தபின் புறச்சமய வாதியர்கள் அழிந்தனர் .
வைதீகர்கள் பூமியெங்கும் தலைநிமிர்ந்து திரிந்தனர். தத்வ சாஸ்திரங்களில் உள்ள சந்தேகங்கள் தீர்ந்து
பொய்ஞானம் அகன்று மெய்ஞானமே விளங்கியது.
குற்றங்களும் தோஷங்களும் தன்னுள் பொதிந்துள்ளவர்கள், அக்குற்றம் நீங்கியவர்கள் ஆயினர். (65)

ஞானம் கனிந்த நலம் கொண்டு நாடொறும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில்
ஈனம் கடிந்த விராமானுசன் தன்னை எய்தினர்க்கத்
தானம் கொடுப்பது தன் தகவென்னும் சரண் கொடுத்தே -66 –

ஞானம் கனிந்து பக்தியாகி அந்த பக்தி ப்ரபத்தியான பின்னரே மாதவன் மோக்ஷம் கொடுக்கிறான்.
எம்பெருமானாரோ, தன் கிருபையை தானே வலிய சென்று அளிக்கிறார்.
பிராட்டியுடன் கூடிய எம்பெருமான் இருவராக அளிக்கும் மோஷப் பிரவாகத்தை,
எம்பெருமானார் தாம் ஒருவராகவே அளித்து உத்தாரக ஆசாரியர் ஆகிறார். (66)

சரண மடைந்த தருமனுக்காப் பண்டு நூற்றுவரை
மரண மடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரண மிவை வுமக் கன்று என்று இராமானுசன் உயிர் கட்
கரணங்கு அமைத்திலனேல் அரணார் மற்று இவ் வார் உயிர்க்கே – 67- –

இந்த தேகமும் அவயவங்களும் அவனுடைய சரணார விந்தங்களைப் பற்றுவதற்காகவே அவனால் கொடுக்கப்பட்டது.
இப்படி சம்சாரத்திலிருந்து விடுபடுவதற்கு சாதனாமாகக் கொடுத்த கரணங்களைக் கொண்டு,
நதியைக் கடக்கக் கொடுத்த தெப்பத்தைக் கொண்டு அத்தைக் கடவாதே வெள்ளதோடு போவாரைப் போல் ,
இந்த கரணங்கள் உங்கள் உபயோகத்துக்காக வைக்கப்பட்டவைகளல்ல என்று உபதேசித்தவர் எம்பெருமானார்.
அத்தகைய ரஷையை அவர் செய்யா விடில் இந்த ஆத்மாவை காப்பது யார் என்கிறார்.
‘ ராமானுஜ என்கிற சாமர்த்தியம் படைத்த நான்கு அக்ஷரங்கள் இல்லாமற்போனால்,
என் போன்ற ஜந்துக்கள் எந்த நிலையை அடைவோம் என்று கூரத்தாழ்வான் சொன்னார்ப் போலே
சொல்லுகிறார் அமுதனார் 67ம் பாசுரத்தில்.

ஆரெனக்கின்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன விராமானுசனைப் பணியும் நல்லோர்
சீரினில் சென்று பணிந்தது என்னாவியும் சிந்தையுமே – 68- –

அரசன் சிம்மாசனத்திலிருந்து செப்புகிறாப்போலே, கண்ணன் தேர்த் தட்டிலிருந்து சொன்ன கீதையின் செம்மைப் பொருளை
இந்த உலகத்தார் அறிய மாட்டாது இடர் பட்டனர்.
எம்பெருமானார் கீதையின் சீரிய பொருளை தெள்ளத் தெளிவாக, தாம் இயற்றிய கீதா பாஷ்யத்தில் அருளிச் செய்தார்.
இந்த சீர்மையை உணர்ந்து எம்பெருமானாரை பணிந்தனர் நல்லவர்கள். அவர்களிடம் எனது ஆவியும் பணிந்தது.
ஆக எனக்கு ஒப்பாவார் யார் என்று சாத்வீக அஹங்காரத்தால் வந்த களிப்பில் கூறுகிறார். (68).

சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன்னாள்
அந்தமுற்றாழ்ந்தது கண்டு அவையென் தனக்கு அன்றருளால்
தந்த வரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து
எந்தை இராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே – 69- –

அரங்கன் தந்தவை இந்த ஊன உடலும் சம்சாரத்தில் விழுந்து உழலுவதற்கு உறுப்பான கரணங்கள்.
ஆனால் எம்பெருமானார் தந்தவைகளோ அந்த அரங்கனின் திவ்ய சரணங்களாகும் என்று 69ம் பாசுரத்தில் கூறுகிறார்.

என்னையும் பார்த்து என்னியல்வையும் பார்த்து எண்ணில் பல் குணத்த
உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் அன்றி என்பால்
பின்னையும் பார்க்கில் நலமுளதே யுன் பெரும் கருணை
தன்னை என் பார்ப்பர் இராமானுசா வுன்னைச் சார்ந்தவரே – 70 –

அரங்கன் தராததையும் தந்த பின்னரும், அனாதிகாலமாக தொடரும் வல்வினையால் வந்த வாசனா லாபம்,
அத்தாலே சப்தாதி விஷயங்களில் தலை தூக்கி வளரும் ருசிகள் ஆகியவையே அமுதனாரது இயல்பாகி விட்டனவாம்.
அவ்வாறிருந்தும் தம்மை ஆட்கொண்ட எம்பெருமானாரது கருணை, பெருங்கருணையாகும்.
இதை ஆராய்ந்து பார்த்தால், இராமானுஜரை ஆஸ்ரயிப்பவர்கள், குறைவாக நினைக்க மாட்டார்களோ என ஆதங்கப்படுகிறார். (70)

சார்ந்த தென் சிந்தை வுன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும்
கூர்ந்த தத் தாமரைத் தாள்களுக்கு உன்தன் குணங்களுக்கே
தீர்ந்த தென் செய்கை முன் செய்வினை நீ செய்வினையதனால்
பேர்ந்தது வண்மை யிராமானுசா ! எம் பெரும் தகையே !–71-

விஷய ப்ரவணனாகிய தாம் எங்கே, சரம சேஷியாகிய தேவரீர் எங்கே?
சபலத் தன்மை வாய்ந்த என் நெஞ்சு தேவரீர் திருவடிக்கீழ் பொருந்தியதென்றால் , அது தேவரீரின் கடாஷத்தாலன்றோ?
திருக்கோஷ்டியூரில் கேட்போரின் தன்மையை ஆராயாது, உபதேசத்தின் சீர்மையை பாராது, தம் பெருந்தன்மைக்கேற்ப,
ஆசையுடையோர்க்கெல்லாம், தாம் அரும்பாடுபட்டு பெற்ற சரம ஸ்லோக அர்த்தத்தை
அருளிச் செய்தமையினால் ‘ எம்பெருத்தகை’ என்கிறார் அமுதனார். (71)

கைத்தனன் தீய சமயக் கலகரைக் காசினிக்கே
உய்த்தனன் தூய மறை நெறி தன்னை என்றுன்னி வுள்ளம்
நெய்த்த வன் போடிருந்தேத்தும் நிறை புகழோருடனே
வைத்தனன் என்னை இராமானுசன் மிக்க வண்மை செய்தே -72- –

அந்த ஓவ்தார்ய குணத்தால் தீய சமயங்கள் அழிந்தன. தூய வேத நெறிகள் நிலைநிறுத்தப்பட்டன.
தம்மையும் அந்த தூய குணங்களையுடைய பெரியோரிடம் சேர்த்து வைத்தார் என்கிறார் தமது 72ம் பாசுரத்தில்.

வண்மை யினாலும் தன் மாதகவாலும் மதி புரையும்
தண்மை யினாலும் இத்தாரணி யோர்கட்குத் தான் சரணாய்
உண்மை நன் ஞானம் உரைத்த விராமானுசனை வுன்னும்
திண்மை யல்லால் எனக்கில்லை மற்றோர் நிலை நேர்ந்திடிலே – – 73- –

அவரே தமக்கும் உலகத்தோர்க்கும் ரஷகர் ஆகிறார். ருசி, விசுவாசம் இல்லாதவரையும் வலுவில்
ருசி, விசுவாசஸங்களை விளைவித்து, சரம உபாயத்துக்கு ஆளாக்கினார் எம்பெருமானார். (73)

தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக்
கூராழி கொண்டு குறைப்பது கொண்டலனைய வண்மை
ஏரார் குணத் தெம்மி ராமானுசன் அவ் எழில் மறையில்
சேராதவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே – -74-

நித்யமாயிருத்தல்,அபௌர்ஷமேயம், ப்ரத்யஷ ப்ரமானம், எல்லா சேதனர்களுக்கும் நல்லதும், தீயதும், உணர்த்தல்,
எம்பெருமானுடைய ஆக்ஜைக்கு உட்பட்டிருத்தல் ஆகிய மிக்க சீர்மையை உடையது வேத சாஸ்திரங்கள்.
அதை மீறுபவர்களை தனது கூராயுதத்தால் அழிப்பது எம்பெருமான்.
ஆனால் எம்பெருமானாரோ, அவ்வப்போத, தமது சிந்தையில் தோன்றும் சிறந்த யுக்திகளைக்கொண்டே,
அவர்களை சிதைக்கிறார் என்க.(74)

செய்த்தலைச் சங்கம் செழு முத்த மீனும் திருவரங்கர்
கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி நம் கண் முகப்பே
மெய்த்தலைத் துன்னை விடேன் என்று இருக்கிலும் நின் புகழே
மொய்த்தலைக்கும் வந்து இராமானுசா ! வென்னை முற்று நின்றே – – 75-

ஆச்சார்ய அபிமானமே உத்தாராகம்’ என்றிருப்பவர்களை மிகவும் உகக்கிறான் சர்வேஸ்வரன்.
உகப்பின் மிகுதியால், அவர்கள் திறத்து தானே மேல் விழுந்து தன் கைச் சக்கரத்து அழகும், வடிவழுகம் காட்டி,
‘உன்னை விடேன்’ என்றாலும் முக்கோலேந்திய எம்பெருமானாரின் கைத்தல அழகு , என்னை ஈடுபடச்செய்கிறது.
சஸ்திரமேந்திய, எம்பெருமானைவிட, சாஸ்திரமேந்திய உடையவரின் கைத்தலமே என்னை ஈரக்கிறதென்கிறார் 75ம் பாட்டில்

நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற்
குன்றமும் வைகுண்ட நாடும் குலவிய பாற் கடலும்
உன்றனக் கெத்தனை இன்பந்தரு முன்னிணை மலர்த்தாள்
என்றனக்கு மது இராமானுசா !இவை ஈந்தருளே – -76 –

கீர்த்தி மிக்க திருவேங்கடப் பொற்குன்றமும், நித்ய ஸூரிகள் சேர்ந்த இடமான ஸ்ரீ வைகுந்தமும்,
சயன திருக்கோலமுடைய திருப்பாற்கடலும் எம்பெருமானார்க்கு ப்ரீதி உள்ள இடங்களாகும்.
அவ்வாறே, அமுதனார்க்கு மிகவும் ப்ரீதி உள்ள இடம்,
எம்பருமானாரின் அழகுமிகுந்த, இணையத் திருவடிகளே என்கிறார் 76ம் பாசுரத்தில்.
‘திருபொலிந்த சேவடி என் சென்னிமேல் பொறித்தாய் ‘ என்றபடி.
எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் நின்ற, வீற்றிருந்த , சயனத் திருக்கோலங்களை கூறுகிறார்.
அவை உடையவருக்கு எவ்வளவு இன்பம் அளிக்குமோ, அவ்வளவு உடையவரது திருத்தாமரையடிகள்
அமுதனார்க்கு இன்பம் பயக்கின்றனவாம்.

ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக் குறும்பைப்
பாய்ந்தனன் அம்மறைப் பல் பொருளால் இப்படியனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை வேர் பறியக்
காய்ந்தனன் வண்மை இராமானுசற்கு என் கருத்து இனியே – 77 –

வினைகளுக்கு வேர் போன்றதான என் வாசனைகளை அறவே போகும்படி விரட்டிய பின்னும்,
உதவுவதற்கு ஏதேனும் உண்டோ என வினவுகிறார் 77ம் பாட்டில்.

கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றிக் கருதரிய
வருத்தத்தினால் மிக வஞ்சித்து நீ யிந்த மண்ணகத்தே
திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் என்னெஞ்சினில்
பொருத்தப்படாது எம்மிராமானுச! மற்றோர் பொய்ப் பொருளே – – 78- –

இப்படி எம்பெருமானார் தன்னை திருமகள் கேள்வனுக்கே ஆக்கிய பின், வேறொரு மெய்ப் பொருள்
இந்த நெஞ்சில் பொறுத்தப் படாது என்கிறார் 78ம் பாட்டில்.

பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து இந்தப் பூதலத்தே
மெய்யைப் புரக்கும் இராமானுசன் நிற்க வேறு நம்மை
உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கி யாதென்று லர்ந்தவமே
ஐயப்படா நிற்பர் வையத்துள்லோர் நல்லறி விழந்தே – – 79- –

ஆதிப்பிரான் நிற்க மற்றத் தெய்வம் நாடுதிறே ‘ என்றார் நம்மாழ்வார்.
பொய்மையைச் சுரக்கும் புற சமயத்தை அழித்தொழித்து, மெய்ம்மையே சுரக்கும் வேதத்தை ஒளி பெறச்செய்த
ராமானுஜர் இருக்க, நம்மை உஜ்ஜீவிக்க நல்லதொரு தெய்வம் எங்கே என்று தேடுகிறார்களே
இவ்வுலகத்தவர் என்கிறார் 79ம் பாட்டில்.

நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்ப
வல்லார் திறத்தை மறவாதவர்கள் யவர் அவர்க்கே
எல்லா விடத்திலும் என்றும் எப்போதிலும் எத் தொழும்பும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே – -80 – –

ராமானுஜ’ என்னும் இந்த திறமை வாய்ந்த நான்கு அக்ஷரங்கள் இல்லை யெனில், என்னைப் போன்ற ஜந்துக்கள்
எந்த நிலைமையை அடைந்திருக்கும் என்று கூரத்தாழ்வான்,
இந்த திருநாமத்தின் சீர்மையை நினைத்து அதன்பால் மஹா விஸ்வாசம் கொண்டு பேசுகிறார்.
அத்தகைய கூரத்தாழ்வான், எம்பார், முதலியாண்டான் போன்ற அடியவர்களையே
தமக்கு உரிய தெய்வமாகக் கொண்டு ‘ஒழிவில் காலமெல்லாம் வழுவிழா அடிமை” செய்வேன் என்கிறார் 80ம் பாசுரத்தில்.

சோர்வின்றி வுன்தன் துணை அடிக்கீழ் தொண்டு பட்டவர் பால்
சார்வின்றி நின்ற வெனக்கு அரங்கன் செய்ய தாளிணைகள்
பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமானுச இனி யுன்
சீரொன்றிய கருணைக்கு இல்லைமாறு தெரிவுறிலே – – 81- –

பாகவத சேஷத்வத்தின் சுவை அறியாதிருந்த எனக்கு, அந்த பாகவதற்கே உரியது
இந்த ஆத்மா என்னும் உணர்வை உண்டு பண்ணினார் , எம்பெருமானார்.
அவ்வித பாகவத சேஷத்வத்திலே ஊறி நின்றவர்க்கே அரங்கதெம்பெருமான் தன் திருவடிகளை
விட்டுப் பிரியாத நிலையை விளைவிக்கிறான்.
அவ்வித பாக்கியத்தை தமக்கு தந்தளித்த எம்பெருமானாரின் மஹத்வம் ஒப்புயர்வற்றது என்கிறார் 81ம் பாசுரத்தில்.

தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது வெந்தீ வினையால்
உருவற்ற ஞானத் துழல்கின்ற வென்னை ஒரு பொழுதில்
பொருவற்ற கேள்வியனாக்கி நின்றான் என்ன புண்ணியனோ !
தெரிவுற்ற கீர்த்தி இராமானுசன் என்னும் சீர் முகிலே – – 82- –

நல்லதை பற்றிய அறிவு தமிடம் இல்லாததால் அல்லதைப் பற்றிய அறிவே என்னிடம் இருந்தது.
அப் பேர்ப் பட்ட என் நெஞ்சிலும் சாஸ்திரத்தின் மிகச் சீரிய உட்பொருள் பதியுமாறு, சாரமாக உபதேசித்து
என்னை ஒப்பற்ற கேள்வி ஞானமுடையவனாக செய்தருளினார் எம்பெருமானார்.
உலகெங்கும் பரவிய கீர்த்தியை உடையவரும், மேகம் போன்ற வள்ளல் தன்மை உடையவருமான
என்ன தார்மீகரோ எம்பெருமானார் என்று வியக்கிறார் 82ம் பாட்டில்.

சீர் கொண்டு பேரறம் செய்து நல்வீடு செறிதும் என்னும்
பார்கொண்ட மேன்மையர் கூட்டனல்லேன் உன் பத யுகமாம்
ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய
கார் கொண்ட வண்மை இராமானுச ! இது கண்டு கொள்ளே – – 83-

பகவானிடம் சரணாகதி பண்ணி நல் வீடாகிய பரம பதத்தை நாடும் பிரபன்னர்கள் நாட்டில் பலர் உள்ளனர்.
அடியேனோ, சரம பருவத்தின் எல்லை நிலமாகிய ஆசார்யராகிய தேவரீரைப் பற்றிக்கொண்டு,
அத்திருவடிகளே , பரமபத்தைவிட விலக்ஷணமான மோக்ஷமாக அடியேனுக்கு அமைந்துள்ளது
என்று தமக்கு பேரின்பம் விளைவிக்கும் எமாபெருமானார் திருவடிகளே மோஷப் ப்ரதாயகம்
என்று கூறுகிறார் அமுதானார் 83ம் பாட்டில்.

கண்டு கொண்டேன் எம் இராமானுசன் தன்னை காண்டலுமே
தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொற்றாளில் என் தொல்லை வெந்நோய்
விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்தின்
றுண்டு கொண்டேன் இன்னுமுற்றனவோ தில் உலப்பில்லையே – -84 – –

கண்டேன் கமலமலர்ப் பாதம்: காண்டலுமே வின்டேயொழிந்தன வினையாயின வெல்லாம் : என்றார் நம்மாழ்வார்.
அவ்வாறே அமுதனாரும் இராமானுசனைக் கண்டு கொண்டேன்.
கண்ட மாத்திரத்திலே அவரோடே நில்லாது அவர்க்கு ஆட்பட்டாருடைய அழகிய திருவடிகளில் அடிமைப்பட்டு விட்டேன்.
எனது அனாதியான கொடிய பாபங்கள் நீங்கப் பெற்றேன். இப்படி தாஸ்யத்திலேயே அன்வயிக்கவே,
எனது அருவினைகள் அனைத்தும் தொலைந்தன .
இன்னும் நான் பெற்ற நன்மைகள் சொல்ல முடிவில்லாதது என்கிறார். . (84)

ஓதிய வேதத்தின் உட் பொருளாய் அதன் உச்சி மிக்க
சோதியை நாதன் என வறியாது உழல்கின்ற தொண்டர்
பேதைமை தீர்த்த விராமானுசனைத் தொழும் பெரியோர்
பாத மல்லால் என்தன் ஆர் உயிர்க்கு யாதொன்றும் பற்று இல்லையே – – 85- –

“ எந்த ப்ராம்மனன் நான்கு வேதங்களையும் நெஞ்சில் தாங்கிக்கொண்டு இருப்பினும் , வாசுதேவனை அறியவில்லையோ ,
அவன் வேதச் சுவையின் பளுவினால் ஆச்ரயிக்கப்பட்ட கழுதை ஆவான். ‘குங்கமப்பூ சுமந்த கழுதை போலாவான்.
வேதத்திலும், வேதாந்தத்திலும் இந்த சரீரம் – ஆத்மா என்னும் சம்பந்தம் காட்டப்பட்டிருப்பதால்
உடல் உயிருக்கே சேஷப்பட்டிருப்பது போல் நாம் அனைவரும் நமது ஆத்மாவான இறைவனுக்கே அடிமைப்பட்டவர்கள் ஆவோம்.
இறைவன் அந்தர்யாமியாக இருந்து எல்லோரையும் நியமிக்கின்றான். அதனால் அவன் எல்லார்க்கும் ஆத்மா.
நாம் அனைவரும் அவனுக்கு அடிமைபட்டவர்கள் என்னும் அனன்யார்ஹசேஷத்வ ஞானம் அறியப் பெறாமையால்
பிறர்க்கே தொண்டுபட காரணமாயிற்று இந்தப் பேதமையை நீக்கியவர் இராமானுஜர் (85)

பற்றா மனிசரைப் பற்றி அப் பற்று விடாதவரே
உற்றார் என உழன்றோடி நையேன் இனி ஒள்ளியநூல்
கற்றார் பரவும் இராமானுசனைக் கருதும் உள்ளம்
பெற்றார் யவர் அவர் எம்மை நின்றாளும் பெரியவரே – – 86-

‘ஊருக்கே உழைத்து ஏழையானேன்’ என்று திருமங்கையாழ்வார் கூறியது போல்,
ஒன்றுக்கும் பற்றாத, அதாவது எதனுக்கும் திறமையற்ற அற்ப மனிதர்களை அண்டி அவர்களையே உறவென்று கருதி,
அலைந்து கஷ்டப்பட்டு, அவர்களைக் காணவேண்டும் என்று ஓடி இனிமேல் நிலைகுலைந்து போகமாட்டேன்.
தத்துவ, ஹித புருஷார்த்தங்களைத் தெள்ளத் தெளிவாக அறிந்து , மிக்க ப்ரேமையால் ,
தங்கள் கல்விக்கு ப்ரயோஜனம் இதுவே என்று எம்பெருமானாரை ஆச்ரயிக்கும் கூரத்தாழ்வான் போன்றவரே
என்னை ஆளும் பெரியவர் என்று அமுதனார் கூறுகிறார்.(86)

பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன் குணம் கட்கு
உரிய சொல்லென்றும் உடையவன் என்று என்றென்று உணர்வில் மிக்கோர்
தெரியும் வண் கீர்த்தி யிராமானுசன் மறை தேர்ந்து உலகில்
புரியு நன் ஞானம் பொருந்தாதவரைப் பொரும் கலியே – – 87- –

கடலில் செல்ல இயலாவிடிலும், தன் சுத்திக்காக கரை யோரத்தில் மூழ்கி எழுவாரைப் போல,
அறிவாற்றல் கொண்டு பேசமுடியாவிடினும் தங்கள் தகுதிக்கு முயன்றவரை,
எம்பெருமானாரை போற்றுபவர்கள் உள்ளனர்.
எம்பெருமானார் என்னும் ஆச்சார்யனாகிற துறையில், சத்வ குணம் தலை யெடுத்து, ஞான ஸ்நானம் செய்தவர்கள்
தூயவர்களாயிருப்பவர்கள் ஆதலாலே, அவரை கலி நலியாது.
அவ்வாறு அடையாதவர்களையே கலிதோஷம் நல்கும் என்கிறார் 87ம் பாசுரத்தில்.

கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமாள்
ஒலி மிக்க பாடலைக் வுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால்
வலி மிக்க சீயம் இராமானுசன் மறைவாதியராம்
புலி மிக்கதென்று இப்புவனத்தில் வந்தமை போற்றுவனே – – 88- –

மிகவும் கொடியவர்களான குத்ருஷ்டிகள் எனும் புலிகள் மிகுந்து சாதுக்களான உலகியனரை நலிந்து திரிய,
அப்புலிகளைத் தொலைக்க வல்ல உயர் மிக்க ஸிம்ஹமாய் வந்து
புவனத்தைக் காக்க முற்படுகின்றார் எம்பெருமானார் என்கிறார் 88ம் பாட்டில்.

போற்றரும் சீலத்து இராமானுச நின் புகழ் தெரிந்து
சாற்றுவனேலது தாழ்வது தீரில் உன் சீர் தனக்கோர்
எற்றமென்றே கொண்டிருக்கிலும் என் மனம் ஏத்தி யன்றி
ஆற்ற கில்லாது இதற்கென்னினைவா என்றிட்டஞ்சுவனே – – -89 – –

நினையார் பிறவியை நீக்கும் பிரானை இந்நீணிலத்தே
எனையாள வந்த விராமானுசனை இருங்கவிகள்
புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந்தொடையல்
வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே – – 90-

பெரிய பெருமாளைச் சரணடைந்து எம்பெருமானார், தம்மோடு ஏதேனும் ஒருவகையில் சம்பந்தம் உடையோர் அனைவருக்கும்
வீடு தரவேண்டி ப்ரார்த்தித்து , அத்தைப் பெற்றவராகையாலே , அவரை நினைப்போர்க்கெல்லாம் பிறவியை நீக்கும் உபகாரத்தை ,
அதாவது மோக்ஷத்தை தரவல்லவராவார்.
ஆனால் அத்தகைய எம்பெருமானரை மனம், வாக்கு, செயல் ஆகிய முக்கரணங்களில்
ஒன்றிலாவது ஈடுபடாமல் இருக்கின்றனர் மாந்தர்.
இவர்கள் ‘உய்ய ஒரே வழி,, உடையவர் திருவடி’ என்று அறியாமல், பிறப்பினால் நேரும் துன்பங்களில் அழுந்தி
துன்புறுவர்களாக உள்ளனர் என்கிறார் 90ம் பாசுரத்தில்.

மருள் சுரந்தாகம வாதியர் கூறும் அவப் பொருளாம்
இருள் சுரந் தெய்தவுலகிருள் நீங்கத் தான் ஈண்டிய சீர்
அருள் சுரந் தெல்லாவுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
பொருள் சுரந்தான் எம்மிராமானுசன் மிக்க புண்ணியனே – – -91 —

எல்லா ஆத்மாக்களுக்கும் தலைவன் பெரிய பெருமாளே என்கிறார் 91ம் பாட்டில்.
வேதம் கூறிய உண்மைப் பொருளைக் கூறாது அவப் பொருளைக் கோரும் ஆகம வாதிகளைச் சாடுகிறார்.
நாராயணனே முதற்பெருங்கடவுள். பிரமன் ருத்ரன் முதலியோர் படைப்புக்கு உட்பட்டவர்களே.
அப்பெருங்கடவுளான, எம்பெருமானே உலகினுக்கு உபாதான காரணமாகவும்,
தானே சங்கல்பித்து மாறுதலினால் நிமித்த காரணமும் அவனே என்பது வேதத்தின் உண்மைப் பொருள்.
அவ்வாறில்லாமல் பரம் பொருளைக் கீழ்ப் படுத்தியும், கீழ்ப் பொருளை பரம் பொருளாக்கியும், கூறுவது அவப் பொருளாகும்.
இந்த உண்மைப் பொருளை உலகுக்கு உணர்த்திய எம்பெருமானார் புண்ணியனே என்கிறார்.

புண்ணிய நோன்பு புரிந்துமிலேன் அடி போற்றி செய்யும்
நுண்ணரும் கேள்வி நுவன்றுமிலேன் செம்மை நூற் புலவர்க்
கெண்ணரும் கீர்த்தி இராமானுச ! இன்று நீ புகுந்ததென்
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற விக் காரணம் கட்டுரையே – – 92–

அர்ச்சா மூர்த்தியின் வழிபாட்டைப் பேசும் பஞ்சராத்ரம் பகவான் திருவடிகளையே உபாயமாய் பற்றும்படி புகழ்கின்றது.
அரங்கனாம் பெரிய பெருமாளும், நீட்டிய திருக்கரத்தாலே தன் திருவடிகளையே உபாயமாய் பற்றும்டி
காட்டிய வண்ணமாய் பள்ளிக் கொண்டிருப்பதாலே, வைகுந்தத்தில் எழுந்தருளியுள்ள
பரவாசுதேவனான நாராயணன், அரங்கனே என்பது எம்பெருமானாரின் சொல்லாகும்.
‘ நீசனேன் நிறைவொன்றுமிலேன் ‘என்கிறபடி நல்லதோர் விரதத்தை அனுஷ்டித்திலேன் .
கேள்வியறிவு ஞானத்தையும் பெற்றிலேன். அவ்வாறிருக்க, இராமானுஜர் தாமாகவே வந்து
அடியேனுடைய கண்ணிலுள்ளும், நெஞ்சினிலும் நிறைந்த நிர்ஹேதுக கிருபையின் காரணத்தைச்
சொல்ல வேண்டும் என்கிறார். 92ம் பாட்டில்.

கட்டப் பொருளை மறைப் பொருளென்று கயவர் சொல்லும்
பெட்டைக் கெடுக்கும் பிரானல்லனே என் பெரு வினையைக்
கிட்டிக் கிழங்கொடு தன்னருள் என்னும் ஒள் வாளுருவி
வெட்டிக் களைந்த இராமானுசன் என்னும் மெய்த்தவனே – – -93 –

மெய்யான தவம் சரணாகதி . அத்தை யுடையவர் எம்பெருமானார்.
தம்மைச் சார்ந்தவர் அனைவருடைய பாபங்களையும் பொறுத்தருளுமாறு பெருமாளிடம் சரணாகதி செய்து
வரம் பெற்றுள்ளமையால் அத்தகைய வல்லமை அவருக்கு வந்தது.
அவர் செய்த பிரபத்தியினாலேயே நாம் அனைவரும் அவர் சம்பந்தத்தை முன்னிட்டு பிரபன்னர்களாகி வினையினுன்றும் விடுபடுகிறோம்.
பிரபன்ன ஜனங்களாகிய நம் அனைவருக்கும் அவரே கூடஸ்தர் என்று நம்மால் அவர் போற்றப் படுகிறார் .
நம் கூடஸ்தர் நமக்கு வைத்திருக்கும் சொத்து சரணாகதி. அதுவே நமக்கு உஜ்ஜீவனம்.
அவரே தமது பெருவினையை கிழங்கோடு தொலையும்படி செய்தார் என்கிறார் அமுதனார் தமது 93ம் பாட்டில்.

தவந்தரும் செல்வம் தகவும் தரும் சரியா பிறவிப்
பவந்தரும் தீவினை பாற்றித் தரும் பரந்தாம மென்னும்
திவந்தரும் தீதிலிராமானுசன் தன்னைச் சார்ந்தவர் கட்கு
உவந்தருந்தேன் அவன் சீரன்றி யான் ஒன்றும் உள் கலந்தே – – – 94- –

அநேக கல்யாண குணங்களையுடைய எம்பெருமானார் தம்மை வந்து அடைந்தவர்களுக்கு சரணாகதி நிஷ்டையை கொடுத்தருளினார்.
அவர்கட்கு பிறப்பினால் ஏற்படும் சம்சாரத்தை உண்டாக்கும் கொடிய கர்மங்களை தூள் தூளாகும்படி செய்தார்.
அதற்கும் மேலே ‘பரந்தாமம்’ என்று சொல்லப்படுகின்ற ஸ்ரீவைகுந்த லோகத்தை கொடுத்தருளுவார்.
ஆயினும் நான் அந்த எம்பெருமானாருடைய குணங்களைத் தவிர வேறொன்றையும்
மனம் மகிழ்வுற்று விரும்பி அநுபவிக்க மாட்டேன் என்கிறார் அமுதனார்.
“ எம்பெருமானாரைப் பற்றுகையே பிரபத்தி. ‘ராமானுஜ என்கிற சதுர்ஷாரியே திருமந்திரம்.
அவர் திருவடிகளிலே பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தம் .
இதுவே முடிவு கட்டின என் சித்தாந்தம்’ என்று அருளிச்செய்தாரென்றோ நடாதூரம்மாள் .
இதுவே அமுதனாரது நிலை. (94)

உண்ணின்று உயிர் களுக்கு உற்றனவே செய்து அவர்க்கு உயவே
பண்ணும் பரனும் பரிவிலனாம் படி பல்லுயிர்க்கும்
விண்ணின் தலை நின்று வீடளிப்பன் எம்மிராமானுசன்
மண்ணின் தலத் துதித்துய் மறை நாலும் வளர்த்தனனே – – -95 – –

அனாதி காலமாக பலப் பல பிறப்புகள் பிறந்து சம்சாரத்திலே உழல்கின்றனர் இந்த ஆத்மாக்கள்.
அவர்களை உய்விக்கும் நோக்கத்துடன், அவர்கள் மேல் கொண்ட வாத்சல்யத்தினால் எம்பெருமான்
அந்தர்யாமியாய் நின்று உற்றனவே செய்து உய்விக்கின்றான்.
நெருங்குவதற்கும் அருவருக்கத்தக்க குற்றங்கள் மலிந்த உயிருக்குள் புகுந்து ,
இவ்வளவு பரிவு வாய்தவனாக எம்பெருமான் இருக்கின்றான்.
இருப்பினும், எம்பெருமானாரோவெனின், பலவகைப்பட்ட உயிர்களுக்கெல்லாம் நேரடியாகவே வீடு அள்ளிப்பதற்காகவே ,
விண்ணகத்தினின்றும் இம்மண்ணகத்திற்கு நேரே வந்து அவதரித்தார் என்கிறார் 95ம் பாட்டில்.

வளரும் பிணி கொண்ட வல்வினையால் மிக்க நல்வினையில்
கிளரும் துணிவு கிடைத்தறியாது முடைத்தலை யூன்
தளருமளவும் தரித்தும் விழுந்தும் தனி திரிவேற்கு
உளரெம் மிறைவன் இராமானுசன் தன்னை வுற்றவரே – – 96- –

நான்கு வேதங்களையும் வளரும்படி செய்தருளினார்,
சேதனர்கள் உய்வதற்கு . அனுபவித்தோ, பரிகாரம் பண்ணியோ, தீராத, தொடர்ந்து வரும், கர்மவினையினால்,
எம்பெருமானார் வழி காட்டிய ப்ரபத்தி மார்க்கத்தில் தமக்கு மஹா விசுவாசம் ஏற்படவில்லை என்கிறார் 96ம் பாட்டில்.

தன்னை வுற்றாட் செய்யும் தன்மையினோர் மன்னு தாமரைத் தாள்
தன்னை வுற்றாட் செய்ய என்னை வுற்றானின்று தன் தகவால்
தன்னை வுற்றாரன்றித் தன்மை வுற்றாரில்லை என்றறிந்து
தன்னை உற்றாரை இராமானுசன் குணம் சாற்றிடுமே – – -97 –

அப்பேர்ப்பட்ட எனக்கு சம்சாரத்தில் தரித்து, தனியாக திரியவிடாமல் எம்பெருமானாரைச் சார்ந்த அடியவர்கள் துணையாக உள்ளார்கள்.
குழியைக்கடக்கும் கூரத்தாழ்வான் போன்றோர், தேவுமற்றறியேன் என்று சம்சாரக் குழியில் விழாது என்னைக் காக்க வல்லவர்கள் என்கிறார்.
தம்மைத்தாமே பற்றியிருக்கும் கூரத்தாழ்வான், எம்பார், முதலியாண்டான் போன்றோருடைய குணநலன்களை உலகரியச் செய்வதர்க்கு,
அவர்களை பற்றி நிற்குமாறு அடியார்களின் அடியார்களை ஆட்கொள்ளச் செய்தார் எம்பெருமானார்.
இவ்வாறு எம்பெருமானார், தம்மை, ஆழ்வானை பற்றியிருக்கச் செய்ததையும் ,
ஆழ்வானும் தமக்கு ஆசாரியன் ஆகிய சம்பவத்தையும், குறிப்பால் உணர்த்துகிறார், 97ம் பாட்டில்.

இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னும் நரகிலிட்டுச்
சுடுமே யவற்றைத் தொடர்தரு தொல்லைச் சுழல் பிறப்பில்
நடுமே யினி நம் இராமானுசன் நம்மை நம் வசத்தே
விடுமே சரணமென்றால் மனமே நையல் மேவுதற்கே – – -98 – –

“ எவனொருவன் புத்தி கெட்டவனாயும் , காமத்தால் பிடிக்கப்பட்ட பட்டவனாயும் இருந்தபோதிலும்,
“ராமானுஜாய நமஹ; எனும் சொல்லை மட்டும் அடிக்கடி சொல்லிப் புகுந்தால்,
பகவானைச் சார்ந்தவர்களான யோகியர்கள் ப்ருக்ருதி மண்டலத்துக்கு அப்பாலுள்ள., எந்த மோஷத்தைப் பெறுவதற்கு ஒதுகின்றனரோ,
அந்த மோஷத்தையே அடைகிறான்” என்று ராமானுஜாஷ்டக சுலோகத்தில் கூறப்பட்டுள்ளது.
எம்பெருமான் சர்வ ஸ்வந்திரனாததால் , நாம் சரணம் செய்தும், நம்முடைய அளப்பரிய வினைப் பயன்களால்,
நரகம் அளிப்பானோ என்று அஞ்ச வேண்டாம்.
காரணம், எம்பெருமானாரைப் பற்றியவர்கள் பேற்றுக்காக வருந்தவேண்டாம் என்கிறார் 98ம் பாசுரத்தில்.

தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன்
சொற் கற்ற சோம்பரும் சூனியவாதரும் நான் மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே
பொற் கற்பகம் எம்மிராமானுச முனி போந்த பின்னே – – 99- –

விசாலமான இப்பூமியில், சிறந்த கற்பக வ்ருஷம் போல உதாரரான ஸ்வாமி எம்பெருமானார் அவதரித்த பின்பு
புற மதத்தவர்களான, வேதத்தை ஒத்துக்கொள்ளாத பாஹ்யர்களும், வேதங்களை பிரமானமாகக் கொண்டும்,
அதை தங்கள் மனம் போனபடி வகுத்தெடுத்துக் கொண்ட குத்ருஷ்டிகளும், அறவே மாண்டனர்.
ஸ்ரீ ராமானுஜர் அருளிச் செய்த ஸ்ரீ பாஷ்யம் இவ்வித பாஹ்யர்களையும், குத்ருஷ்டிகளையும்
அடியோடு அழியச் செய்ததால் எம்பெருரமானாரை “பொன் கற்பகம்” என்கிறார். (99)

போந்ததென் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனதடிப் போதில் ஒண் சீ
ராம் தெளி தேனுண்டமர்ந்திட வேண்டி நின் பாலதுவே
ஈந்திட வேண்டும் இராமானுச இதுவன்றி யொன்றும்
மாந்தகில்லாது இனிமற்றொன்று காட்டி மயக்கிடலே – – 100- –

எனது மனதாகிற பொன் வண்டு தேவரீரின் திருவடிப் பூவினையே விரும்புகிறது.
அத் திருவடிகளிலுள்ள மென்மை , குளிர்ச்சி, மணம் , அழகு போன்ற கல்யாண குணங்களில் ஈடுபட்டு
அங்கேயே நித்யவாஸம் பண்ண வேண்டுமென்று தேவரீரிடம் வந்தது.
மற்றபடி வேறொன்றைக் காண்பித்து என்னை மயங்கப் பண்ணாதேயும் என்று இறைஞ்சுகிறார் 100ம் பாட்டில்.
இங்கு ‘வேறொன்று’ என்று எம்பெருமானின் திருவடியைக் கூறுகிறார்.
இது சரமபர்வ நிஷ்டையான , ஆச்சார்ய நிஷ்டையைக் குறிக்கிறது.

மயக்கு மிருவினை வில்லியிற் பூண்டு மதி மயங்கித்
துயக்கும் பிறவியில் தோன்றிய வென்னைத் துயரகற்றி
உயக்கொண்டு நல்கு மிராமானுச என்ற துன்னை வுன்னி
நயக்கு மவர்க்கி திழுக்கென்பர் நல்லவ ரென்று நைந்தே – – 101- – –

எம்பெருமானாருக்கு இயல்பாக அமைந்த குணங்கள் இரண்டு.
தன்னை அண்டியவர்களின் பாபத்தைப் போக்குவதும், தன்னையே அனுபவிக்கும் போகியத்தவமுமாகும்.
இதுவரையில் தமது பாபங்களாகிய கர்ம வினைகளை எம்பெருமானார் நீக்கியத்தையே பேசி வந்த நான்,
அவரையே அனுபவிக்கக்கூடிய போக்யத்தை அதிகம் பேசாததால்,
மற்றவர்கள் அதை எனது பிசகு என்று கருதுவார்கள் என்று அஞ்சுகிறார் 101ம் பாட்டில்.

நையும் மனமுன் குணங்களை வுன்னி என் நா விருந்தெம்
ஐயன் இராமானுசன் என்று அழைக்கும் அருவினையேன்
கையும் தொழும் கண் கருதிடும் காணக் கடல் புடை சூழ்
வையமிதனில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே – – 102- –

“நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்” “பாவமே செய்து பாவியானேன்” என்கிறபடி,
அனாதி காலமாக என்னை தொடர்ந்து வந்த வல்வினைகள் , எம்பெருமானாரை பற்றியபின் அழிந்துவிட்டது.
“ உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை “ என்கிறபடி,
தமது மெய் , நா, மனம் ஆகிய மூன்றும் எம்பெருமானாரிடத்திலேயே தங்கிவிட்டது என்கிறார்.
எல்லோரையும் மயக்கும் இந்த வள்ளல் தனமும், ஹௌதார்ய குணமும் என்னையும் என் கரணங்களையும் ஈடுபடும்படி செய்தது,
எக்காரணத்தினாலோ? என்று வினவுகிறார் 102ம் பாசுரத்தில்.

வளர்ந்த வெங்கோப மடங்க லொன்றாய் அன்று வாளவுணன்
கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயி ரெழுந்து
விளைந்திடும் சிந்தை யிராமானுசன் என்தன் மெய்வினைநோய்
களைந்து நன்ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே – – 103 –

சிங்கப்பெருமானது சீற்றம் அடியார்க்கு தினந்தோறும் சிந்திப்பதற்கு உரியது. அதுவே உய்யும் வழி.
தன் திறந்து அபராதங்களைப் பொறுக்கும் எம்பெருமான், தனது அடியார் திறத்து செய்யப்பட்ட அபராதங்களைப் பொறுக்காதவனாய்,
அவுணனின் ஆகம் (மார்பு) பிளந்தமை ஆகிய இந்த கீர்த்திகள் எம்பெருமானார் திருவுள்ளத்திலே ஓங்கி வளர்ந்த பயிர்களாக விளைகிறதாம்.
ஆத்திரம் தீர, நகத்தால் முடித்ததோடு நில்லாமல், பிணத்தைப் பார்த்தும் , நாமடித்துக் கோபத்தைக் காட்டுவதே
நரசிங்கனது சீற்றத்தின் எல்லை..
பெரியவாச்சான் பிள்ளை, முதல் திருவந்தாதி 65ம் பாசுர வ்யாக்யானத்தில்
‘’ சரணா கதற்கு தஞ்சமான தனமாவது ஆஸ்ரிதார்த்தமாக இரண்யனைப் பற்றப் பண்ணும் சீற்றம்” என்கிறார்.
நரம் கலந்த சிங்கமான ந்ருஸிம்ஹனே வல்வினை போக்கி தெள்ளறிவுடன் வாழ்விப்பார் என்பது ஞானம்.
அத்தகைய ஞானத்தை உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தருகிறார் எம்பெருமானார் என்கிறார், அமுதனார். (103)

கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டலே – – -104 –

எம்பெருமானாருடைய திருமேனியழகை அனுதினமும் அனுபவிப்பதான க்ருபையை அருளிச் செய்தால்,
கொடிய நரகமாகிய ஸம்ஸாரத்திலும் தரித்திருப்பேன்.
அவ்வனுபவம் கிடைக்கப்பெறாவிடில், பரமபத்திலும் தயாரித்திருக்க மாட்டேன் என்கிறார் 104ம் பாட்டில்.
உள்ளங்கை நெல்லிக்கனியென அந்தக் கண்ணனையே காட்டித் தரிலும் தமக்கு மிகவும் பிரியமானது,
எம்பெருமானாரது திருவடிவழகும், திருமேனியில் விளங்கும் குணங்களுமேயாகும் என்கிறார்.
கருத்த மேகமானது தன்னிடமுள்ள முழுமையான நீரனைத்தையும் பொழிந்த பிறகு, வெளுத்துப் போகும் .
அவ்வாறு செழுமை வாய்ந்த மேகம் போல் இராமானுஜர் உள்ளதால் அவரை “செழுங்கொண்டல் “ என்கிறார்.

செழும் திரைப் பாற்கடல் கண்டுயில்மாயன் திருவடிக் கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நன்ஞானி நல் வேதியர்கள்
தொழும் திருப்பாதன் இராமானுசனைத் தொழும் பெரியோர்
எழுந் திரைத்தாடுமிடம் அடியேனுக் கிருப்பிடமே – – -105 –

“ஸதா பச்யந்தி சூரய; என்றபடி நித்யஸூரிகளிடையே ஸ்ரீ வைகுந்தத்தில் இன்பத்தை அளித்துக் கொண்டிருக்கும் எம்பெருமான்,
ஸம்ஸாரிகளை கைவிடாத வாத்சல்ய குணத்தாலே அங்கிருந்து வந்து இறங்கிய இடம் திருவேங்கட மாமலை.
இரண்டு குழந்தைகளுக்கிடையே கிடந்து பாலூட்டும் தாய் போலே, தரையிலும் இறங்காமல் விண்ணகத்திலும் தங்காமல்
வேங்கட மலை உச்சியில் உள்ளான்.
அவன் மேலும் உகப்படைந்து தன்னைச் சரணடையாதார் திறத்திலும் தானே வலுவாக சென்ற இடம்,திருமாலிருஞ்சோலை .
இவ்விடங்களைக் கோவில் கொண்டது போல், எபெருமானார் இதயத்தையும் கோயிலாகக் கொண்டான், எம்பெருமான்.
அந்த எம்பெருமானார் இப்போது எழுந்தருளியுள்ள இடம் தன்னுடைய இதயத்தினுள் என்கிறார் 106ம் பாட்டில்.

ஆசார்ய சம்பத்தினுடைய மகிமை, அமுதனார் கால் பாவமாட்டேன் என்று ஒதுக்கிய ஸ்ரீ வைகுந்தமும்,
ஆச்சார்யனோடும், அவனுகந்த ஈஸ்வரனோடும் தானாகவே இவரை நாடி வருகின்றன.
இதனால் ஆசார்யனைப் பற்றுகை பகவானைப் பற்றுகையினின்றும் வேறுபட்டதன்று:.
பேற்றினை எளிதில் தர வல்லது என்பது தெளிவாகின்றது.
“ ஈஸ்வனைப் பற்றுகை கையைப் பிடித்து காரியம் கொள்ளுமா போலே, ஆச்சார்யனைப் பற்றுகை
காலைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமாப்போலே” என்று ஸ்ரீ வசன பூஷனம் 47ம் சூர்ணிகையில்
பிள்ளைலோகாச்சார்யார் அருளிச் செய்துள்ளார்.

இன்புற்ற சீலத்து இராமானுச என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோய் உடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
துன்புற்றுவீயினும் சொல்லுவது ஓன்று உண்டு உன் தொண்டர்கட்கே
அன்புற்று இருக்கும்படி என்னை யாக்கி யங்கு யாட்படுத்தே – – – 107-

அடுத்த பாசுரத்தில், (107) அடியேன் செய்யும் விண்ணப்பம் ஒன்றுண்டு என்று கூறி,
வியாதிகளுக்கு இருப்பிடமான சரீரம் தோறும் பிறப்பதும், இறப்பதுமாய் எண்ணரிய துன்பங்களால் தாக்கப்பட்டு,
நாசமடையும் நிலை ஏற்பட்டாலும் தேவரீருடைய அடியவர்களுக்கே அன்புடையவனாக ,ஆட்கொண்டு,
அடியேனை அவ்வடியார்கள் திறத்திலே அடிமையாக அமையும்படி அருள் புரிய வேண்டும் என்று அமுதனார் விண்ணப்பிக்கிறார்.

அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாக மன்னும்
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமானுசனடிப் பூ மன்னவே – – 108-

நீர் உளது எனில் உளது மீன். மார்பு உளது எனின் உள்ளாள் , பெரிய பிராட்டி.
நாரத்தைப் (நீர்) பற்றியுள்ளன கயல் மீன்கள். நாராயணனைப் பற்றியுள்ளாள் பங்கயப்பாவை.
தென்னரங்கனுடைய திருமார்பிலே நித்யவாசம் பண்ணுகிறவளாய், சிறந்த தாமரைப்பூவிலே பிறந்த பாவையான
ஸ்ரீ ரங்க நாச்சியாரை , புருஷாகாரமாகப் போற்றுவோம் என்கிறார் அமுதனார் தமது 108ம் பாசுரத்தில்.

சரமபர்வ நிஷ்டருக்கு ப்ராப்யம் ஆச்சார்ய சரணாவிந்தம் என்பதையும்,
இவ்விடமும் பரமபதத்திலும் கூட அவரது திருவடிகள் சரணம் என்றும்
அது பிரிவின்றி நிரந்தரமாக உள்ளதாக பற்றுபவர்கள் ,
ஆச்சார்ய நிஷ்ட்டைக்கு அதிகாரிகள் என்பதையும் அமுதனார் இங்கு காட்டியுள்ளார்.

“இராமானுஜ சரணாரவிந்தம் நம் தலைமிசை மின்ன, மங்கள வாழ்க்கை பெற்று, நிரந்தரமாக வீற்றிருப்பதற்கு ,
மலர் சூடி , மங்கள வடிவினளான மலர்மகளைப் போற்றுவோம்” என்று
“ பூ மன்னு மாது “ என்று தொடங்கி “
“ கடைசியில் “பங்கய மாமலர்ப் பாவை “ என்று சொல்லி,
“சர்வம் சம்பத்யதே” என்று இராமானுஜருக்கு சரணாகதி அளித்த ஸ்ரீ ரங்கா நாச்சியரைப் போற்றிப் பொலிவு செய்து,
இந்த நூற்றாந்தாதியை தலைக் கட்டி யருளுகிறார் , திருவரங்கத்தமுதனார்.

—————

1-மோக்ஷ பிரதத்வம் -சம்சார நிவர்த்தக காஷ்டை -அமலன்

பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த
அரும் தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே – 32-

அபிபவியா நின்று உள்ள கலி தோஷத்தாலே துக்கப்பட்ட பூமியை -இத்தலையிலே அர்த்தித் வாதி நிரபேஷமாக
தம்முடைய ஒவ்தார்யத்தாலே -வந்து -நிமக்நோத்தாரணம் பண்ணி -ரஷித்தவராய் -பிரபன்ன ஜன கூடஸ்தர் ஆகையாலே –
தஸ்மான் நியாச மேஷாம் தபஸா மதிரிக்த மாஹூ-தைத்ய நாரரா -என்கிறபடியே
சர்வ தபச்சுக்களிலும் மேலாய்க் கொண்டு -துர்லபமாய் இருக்கிற சரணாகதி ரூப தபஸ்ஸை உடையராய்-
எங்களுக்கு தம்மை முற்றூட்டாக தந்த-ஸ்ரீ எம்பெருமானாரை-சேரும் அவர்களுக்கு
ஸ்வரூப அனுரூபமான மதிப்பும்-
வியசன சுகங்களில் அனவ சாதா நுத்தர்ஷ-ஹேதுவான ஷமா குணமும் –
ஜிதேந்த்ரியத்வ ரூபமான பராபிபவன சாமர்த்த்யமும்-
குணவத்தாப்ரதையும்-
தத்வ ஹித புருஷார்த்தங்களை விஷயமாக வுடைத்தாய் ஆகையாலும்-கட்டளைப் பட்டு இருந்துள்ள ஜ்ஞானமும்-
தத் கார்யமான பக்தி ரூப சம்பத்தும்-
ரதிர் மதி –ஸ்ரீ குணரத்னகோசம் -17 – இத்யாதி -ஸ்லோகத்தின் படியே
ஸ்ரீ பிராட்டி கடாஷ லஷ்யமானவர்களுக்கு-அவை தானே மேல் விழும் என்றால் போலே-
இங்கும் அபேஷியாது இருக்க தானே வந்து சேரும் –
பொருந்துதல்-சேருதல்-அதாவது ஸ்வரூப அனுரூபத்வம்
தேசு-மதிப்பு–

ஸ்ரீ உடையவர் நித்ய விபூதியும் -இஹ பர லோக இன்பம் அருளுவார் –
அல் வழக்குகள் போக்கி அடியார்க்கு ஆட்படுத்த வல்லவர் அன்றோ –

—————

2-ஜகத் காரணத்வ காஷ்டை-ஆதி

————

3-ஜகத் சரண்யத்வ காஷ்டை-ஆதி

———–

4-சர்வ உபகாரத்வ காஷ்டை-பிரான்

——————

5-கிருபா விசேஷத்வ காஷ்டை-அடியார்க்கு ஆட்படுத்த

————–

6-ஸ்வாதந்தர்ய காஷ்டை-என்னை ஆட்படுத்த

—————

7-நித்ய நிர்தோஷத்வ காஷ்டை-விமலன்

——————

8-நித்ய ஸூரி நிர்வாஹத்வ -திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டா ஸ்வாமித்வ காஷ்டை-விண்ணவர் கோன்

—————

9-ஸுலப்ய காஷ்டை-வேங்கடவன்

—————-

10-ஸுசீல்ய காஷ்டை-நிமலன்

—————–

11-வாத்சல்ய காஷ்டை-நின்மலன்

——————

12-கைங்கர்ய சாதன விசேஷத்வ ப்ராப்ய காஷ்டை-நீதி வானவன்

—————-

13-சர்வ ஸ்வாமித்வ ஆஸ்ரித பக்ஷபாத காஷ்டை-அரங்கத்து அம்மான்

————-

14-திருவடிகள் பாவானத்வ காஷ்டை-திருப் பாதம்

————–

15-திருவடிகள் போக்யத்வ காஷ்டை- கமல பாதம்

—————

16-அயத்ன -அநாயாசேந போக்யத்வ காஷ்டை-வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றவே

———–

அமலன்- தனக்கு அடிமை -பொருந்திய தேசம்
விமலன் -அடியார்க்கு தன்னை
நிமலன் -நிர்ஹேதுகம் -காரேய்
நின்மலன் -தனக்கு இன்புறவே அடியார்க்கு
இதுக்கும் மேல்
மண் மிசை –நாரணர்க்கு ஆளாயினரே
புண்யம் போத -வகுள பூஷண பாஸ்கரர் போல்
பிராட்டி -லகுதரா ராமஸ்ய கோஷ்ட்டி
காரேய் கருணை -அங்கு உடன் இருந்த ராக்ஷஸிகள் -இவரோ நம் வரை ஏறிப்பாயும்
க்ரந்தஸ்தம் மூலம் -ஆச்சார்ய பரம்பரை மூலம்

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அமுதனார் அருளிச் செய்த ஸ்ரீ ராமானுஜ நாம அமுதம் –ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் —

March 23, 2021

ஸ்ரீ அமுதனார் அருளிச் செய்த ராமானுஜ நாம அமுதம்
ஒன்பது கோணங்கள்
1-கற்பகமாய்
2-கார் முகிலாய்
3-காவலாய்
4-சேம வாய்ப்பு
5-அற்புதமாய் ஆரமுது
6-ஆளுமை
7-உறு துணை
8-ஒப்பு இல்லா மா நிதி -அக்ஷயம் -விருத்தியாகிக் கொண்டே இருக்குமே
9-பரம கதி -உபாய உபேயம்

நவ தானியங்கள் நவ நிதி நவ கிரந்தங்கள் நவ ரத்தினங்கள் -நவ துவாரம் போக்கி

108-1-2-3-ஓன்று மடங்கு ஓன்று பெருக்கி இரண்டு மடங்கு இரண்டு பெருக்கி மூன்று மடங்கு மூன்று

——–

1-கற்பகமாய் –53- அத்புதம் -என்னை ஆளவந்த கற்பகம்

அற்புதன் செம்மை இராமானுசன் என்னை யாளவந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய
பற் பல்லுயிர்களும் பல்லுலகி யாவும் பரன தென்னும்
நற் பொருள் தன்னை இந்நானிலத்தே வந்து நாட்டினனே – -53 –

சகல அபேக்ஷிதங்களையும் அபேஷா நிரபேஷமாக
ராமானுசா சொல்லிக் கொண்டே இருந்தாலே தானே அளிக்கும்
வந்த கற்பகம் -நித்ய விபூதியில் இருந்து லீலா விபூதிக்கு எழுந்து அருளி தேடி வந்த கற்பகம்
மோஷ பிரதம் -உபய விபதி உடையவர்

பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த
அரும் தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே – 32—பட்டியல் –

பொருந்திய தேஜஸ் -ஸ்வரூப அனுரூப பராபிபவன தேஜஸ்ஸூ
பொறை -ஷமா
திறல் -சாமர்த்தியம் -பகவத் பாகவத ஆச்சார்யர் விஷய அஹம் சர்வம் கரிஷ்யாமி செய்ய மனா வலிமை
புலன் அடக்கம்
நல்ல திருந்திய ஞானம் –
செல்வமும் சேரும் -வேத வேதாந்த பாண்டித்யம் கைங்கர்ய ஸ்ரீ –

சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாயமுதம்
பரக்கும் இருவினை பற்றவோடும் படியிலுள்ளீர்
உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறு கலியைத்
துரக்கும் பெருமை இராமானுசன் என்று சொல்லுமினே – 43—இன்னும் பல

சுரக்கும் திருவும் உணர்வும் –
சொலப் புகில் வாய் அமுதம் பரக்கும்
அமுதினிலும் ஆற்ற இனியன்
அண்ணிக்கும் அமுதூறும் நன் நாவுக்கே -பக்தாம்ருதம்
இருவினை பற்று அற ஓடம்
ராம -ரா இரண்டாவது -ம ஐந்தாவது -ராம பத்து -மூன்று தடவை 1000
ஆறு எழுத்துக்கள் வேண்டாம் ராமானுஜ சதுர அக்ஷரீ

தவந்தரும் செல்வம் தகவும் தரும் சரியா பிறவிப்
பவந்தரும் தீவினை பாற்றித் தரும் பரந்தாம மென்னும்
திவந்தரும் தீதிலிராமானுசன் தன்னைச் சார்ந்தவர் கட்கு
உவந்தருந்தேன் அவன் சீரன்றி யான் ஒன்றும் உள் கலந்தே – – – 94- –

தவம் தரும் -ஸத்யமே -அதுக்கும் மேல் தபஸ் தமம் சமம் தானம் வர்ணாஸ்ரம அனுஷ்டானம்-
மக்கள் பேறு -அதிகம் கூடாதே -அக்னி ஹோத்ரம் -திருவாராதனம் -மானஸ ஆராதனம் -மாதவன் தெய்வம் நாட்டி –
தஸ்மாத் நியசம் அதிரிக்த -சமர்ப்பித்தல் – இத்யாதி -ஆருணர்
ப்ரபன்னன் கரைந்து அஞ்சினால் நாஸ்திகனாம் அத்தனை
ப்ரபந்ந காயத்ரி -மனப்பக்குவம் வளர்க்கும்
செல்வம் -கைங்கர்ய ஸ்ரீ
தாகவும் த்வரையும் தரும்
பாற்றி தரும் -கர்மாக்களை பொடி பொடி ஆக்கும்
பரம் தாமம் பரம ஆகாசமும் தரும் –

————–

2-கார் முகிலாய்
வசிஷ்டர் சண்டாள விபாகம் அல்லாமல்
கற்பகம் தேவர்களுக்கு மட்டும் என்று இல்லையே
25- காரேய் கருணை ராமானுசா
26-விளங்கிய மேகம்
82-ராமானுஜன் என்னும் சீர் முகிலே

காரேய் கருணை இராமானுசா இக்கடல் இடத்தில்
ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான் வந்து நீ என்னை யுய்த்த பின் உன்
சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே -25 – –

திக்குற்ற கீர்த்தி இராமானுசனை என் செய்வினையாம்
மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர்
எக்குற்றவாளர் எது பிறப்பே எது இயல்வாக நின்றோர்
அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல்வே நம்மை ஆள் கொள்ளுமே –26- –

தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது வெந்தீ வினையால்
உருவற்ற ஞானத் துழல்கின்ற வென்னை ஒரு பொழுதில்
பொருவற்ற கேள்வியனாக்கி நின்றான் என்ன புண்ணியனோ !
தெரிவுற்ற கீர்த்தி இராமானுசன் என்னும் சீர் முகிலே – – 82- –

அருள் மழை
வேதக்கடல் அருளிச் செயல்கள் கடல்
மும்மாரி
ரஹஸ்ய தத்வ த்ரயம்
கைம்மாறு கருதாமல் -ஆசை உடையாருக்கு வரம்பு அறுத்தார்
முக்தி -தமிழ் நாடு தவம் ஈன்றதே பாரதி தாசன்
பல்கலையோர் தாம் மன்னா -முத்துக்கள் பூஷணம்
மேகம் பயிர் விளைய வானம் பார்த்த பூமி -நான் வானம் நீ பூமி தாரணி தேவி ஆகாச ராஜன் -கல்யாண மந்த்ரம்
கணவன் அன்பு மனைவிக்கு பெரியது –
சரணாகதி பயிர் முளைக்க
பக்தி உழவன் -கார்யகரம் ஆக இந்த மேகம்

ஞானம் கனிந்த நலம் கொண்டு நாடொறும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில்
ஈனம் கடிந்த விராமானுசன் தன்னை எய்தினர்க்கத்
தானம் கொடுப்பது தன் தகவென்னும் சரண் கொடுத்தே -66 –

அத் தானம் கொடுப்பது -சரண் கொடுத்தே –
ஞானம் கனிந்த நலம் -பக்தி முத்த அவன் –
இவரோ தகவு என்னும் சரண் -கருணையே ஒரே புகல்
கஷ்டம் வேண்டாம் இஷ்டம் பட்டாலே போதும்
வண்ணான் -இவனுக்காக அவனைப் பொறுத்து அருள வேணும் –

கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டலே – – -104 –

—————–

3-காவலாய்
வந்தாய் போல் வாராதாய் ஆகுமே
வெள்ளக்கேடும் உண்டாக்கும்
காவலான மேகம் –
21-முகில் என்று -ராமானுஜன் என்னைக் காத்தனனே

நிதியைப் பொழியும் முகில் என்ன நீசர் தம் வாசல் பற்றித்
துதி கற்று உலகில் துவள் கின்றிலேன் இனித் தூய் நெறி சேர்
எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை அடியாம்
கதி பெற்றுடைய இராமானுசன் என்னைக் காத்தனனே – 21- –

அஸ்மத் சரீர -மட்டம் -அந்த ஸ்ரீ வைகுண்டம் -நீசனான அடியேனையும் -என்று கூட சொல்லத்தெரியாத
அதிகாரம் இல்லாதாருக்கு அன்றோ எதிராசா நீ இரங்க வேண்டும் –

நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தை
புயலே எனக் கவி போற்றி செய்யேன் பொன்னரங்கம் என்னில்
மயலே பெருகும் இராமானுசன் மன்னு மா மலர்த் தாள்
அயரேன் அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே -35 –

நயவேன் –மயலே பெருகும் ராமானுசன் –
அருவினை எவ்வ்வாறு என்னை அடர்க்கும்-சிம்மம் கண்ட ஸூத்ர மிருகம் போல் ஓடுமே -ராமானுச நாம மஹிமை

சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன்னாள்
அந்தமுற்றாழ்ந்தது கண்டு அவையென் தனக்கு அன்றருளால்
தந்த வரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து
எந்தை இராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே – 69-

அரங்கனும் தன் சரண் தந்திலன் -தான் அது தந்து -வந்து எடுத்தனன் அன்றோ
ந கர்மணா ந ப்ரஜயா தனேந த்யாகேன –அம்ருதத்வம் -ஸ்ருதி -ஸந்யாஸத்தால் -மட்டுமே
அந்தணர் ஆண் மட்டுமே சந்நியாச அதிகாரி –
ஸூய ரக்ஷணம் பொறுப்பு துறப்பதே சிறந்த துறப்பு – சம்யக் நியாசம் -நன்றாக விடுவதே சன்யாசம் -சர்வாதிகாரம் –
அனைத்து உலகும் வாழப்பிறந்த ராமானுசா -ஜெகதாசார்யர் –

———–

4-சேம வாய்ப்பு
ஆபத்தனம் -சரியான காலத்தில் ரக்ஷணம் -fixed deposit

கார்த்திகையானும் கரி முகத்தானும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதிகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –

ராமானுஜன் என் தன் சேம வைப்பே
பாணன் த்ருஷ்டாந்தம் –
மனம் வங்கி நாக்கு நாமம் சொல்லி slip -deposit வைக்க

———

5-அற்புதமாய் ஆரமுது
ஆபத்து வந்தால் சொல்லுகிறோம் -யாதானும் சொல்லி நீங்கும் விரதம்
ஆரா அமுது அன்றோ

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆரமுதே – – 19-எனக்கு ஆரமுதே

கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டலே – – -104 –

————-

6-ஆளுமை
சுவை -இன்பம் -வழி நடத்துமா
ஆளுமையாகவும்

நையும் மனமுன் குணங்களை வுன்னி என் நா விருந்தெம்
ஐயன் இராமானுசன் என்று அழைக்கும் அருவினையேன்
கையும் தொழும் கண் கருதிடும் காணக் கடல் புடை சூழ்
வையமிதனில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே – – 102- –

உன் வண்மை -முக்கரணங்களையும் ஈடுபத்தி அருளி –
நா இருந்து எம் ஐயன் ராமானுசா என்று அழைக்கும் -சத்தைக்காக –
கையும் தொழும் -கண் கருதிடும் –
அழகைக் காட்டி –

இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் எண்ணிறந்த
துன்பம் தரு நிரயம் பல சூழில் என் தொல் உலகில்
மன் பல் உயிர் கட்கு இறையவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் இராமானுசன் என்னை ஆண்டனனே – -30 –

——–

7-உறு துணை
எங்கோ இருந்து ஆளாமல்

எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தை யுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறு துணையே – 18- –

வேதம் பாற்கடல் -திருவாய் மொழி பக்தாம்ருதம் -பெரியவர் மதுர கவி சீரை

புவியும் இருவிசும்பும் நின்னகத்த நீ என்
செவியின் வழி புகுந்து என்னுள்ளே -அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு––பெரிய திருவந்தாதி-75

ஆச்சார்ய நிஷ்டை யையே -உயிர்கள் எல்லாம் உய்வதற்கு கொடுத்து அருளிய -ருசி உடையோருக்கு எல்லாம் -உபதேசித்து அருளி –
இதுவே உற்ற துணை -கைப்பிடித்து அழைத்து செல்வார்
விபீஷண -அது ராமர் கோஷ்ட்டி இது ராமானுஜர் கோஷ்ட்டி என்றாரே பிள்ளை உறங்கா வல்லி தாஸர் –
திடமான ஸஹாய புத்தர் -ஸ்ரீ வைகுண்டம் அருளும் வரை பர்யந்தம்

——————-

8-ஒப்பு இல்லா மா நிதி -அக்ஷயம் -விருத்தியாகிக் கொண்டே இருக்குமே
எக்காலத்திலும் வழித் துணை

ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திருவாய்
ஈரத் தமிழ் இன் இசை யுணர்ந்தோர்கட்கு இனியவர் தம்
சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால்
வாரிப் பருகும் இராமானுசன் என்தன் மா நிதியே – -20 –

மா நிதி
பிரளயத்தில் அழியாத நிதி -வி லக்ஷணம் -அப்ராக்ருதம் -அத்ர பரத்ர சா அபி

————

9-பரம கதி -உபாய உபேயம்
ஒன்றை அறிந்தால் ஒன்பதையும் அறியலாம்

பேறு ஓன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அப் பேறு அளித்ததற்கு
ஆறு ஒன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி என்று இப்பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லாற்
கூறும் பரம் அன்று இராமானுச மெய்ம்மை கூறிடிலே – 45- –

நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே
முதலிலும் முடிவிலும் –

அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாக மன்னும்
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமானுசனடிப் பூ மன்னவே – – 108-

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறனடி பணிந்து உய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த விராமானுசன் சரணார விந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -1 –

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அழகிய மணவாள தாசர் -ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அருளிச் செய்த –ஸ்ரீ எதிராசர் அந்தாதி –

March 11, 2021

ஸ்ரீ அழகிய மணவாள தாசர் -ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அருளிச் செய்த –ஸ்ரீ எதிராசர் அந்தாதி –
அந்தாதி தொடையால் அமைந்த ஒன்பது கட்டளை கலித்துறை பாடல்கள் கொண்ட திவ்ய பிரபந்தம் –

பூ மான் பிறந்து சிறந்தது வேலை புவி படைத்த
கோ மான் பிறந்து சிறந்தது நான்மறை கூடல் சங்கம்
நா மான் பிறந்து சிறந்தது பண்டு எதிராசன் என்னும்
சீ மான் பிறந்து சரணாகதியும் சிறந்ததுவே –1-

வேலை-கடலானது
பூ மான் -பூவிலே எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ மஹா லஷ்மி
பிறந்து சிறந்தது -பெருமை உள்ளது
புவி படைத்த கோ மான் -புற்றில் இருந்து பூத்த-ஸ்ரீ பூமா தேவி உண்டாக்கிய ஸ்ரீ வால்மீகி பகவான்
பிறந்து சிறந்தது நான்மறை -வேத ப்ராஸேத ஸாதா ஸீத் ஸாஷாத் ராமாயணா மநா —
முனிவனைக் கோமான் என்றது வாக்கின் சீர்மையை நோக்கி -கோ வாக்கு -கோதா என்னுமா போலே –
நா மான் பிறந்து சிறந்தது கூடல் சங்கம் –நா வீறு படைத்த நம்மாழ்வார் -திரு அவதாரம் -மதுரை தமிழ் சங்கம் –
கண்ணன் கழலிணை -அடி பொறித்த முறியைச் சங்கப்பலகை தாங்கிய விருத்தாந்தம்
சேமம் குருகையோ –ஈ யாடுவதோ கருடர்க்கு எதிரே –
பண்டு -இங்கனம் வேலை -நான்மறை கூடல் சங்கம் -முதலியன சிறந்தன ஒவ்வொருவராலே பண்டு –
எதிராசன் என்னும் சீ மான் பிறந்து சரணாகதியும் சிறந்ததுவே -இவர் ஒருவரால் அம்மூன்றும் ஒரு சேரச் சிறப்புற்றதுடன்
சரணாகதியும் சரணாகதி ஸாஸ்த்ரமும் சிறந்த பிரபத்தி ஸாஸ்த்ர பலனும் ஸமஸ்த ஜகத்தும் உஜ்ஜீவிக்கும் படி இவரால் சிறப்புற்றது –
ஆதிசேஷன் அவதாரம் என்பதால் வேலை -திருப்பாற் கடல் சிறப்புற்றது
ஸ்ரீ பாஷ்யம் வேதாந்த சாரம் வேதாந்த ஸங்க்ரஹம் வேதாந்த தீபம் இவற்றால் நான்மறை சிறப்புற்றது
மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் என்பதால் கூடல் சங்கம் சிறப்புற்றது –

————

சிறந்தது செல்வம் சிறவாதது கலி சில் சமய
மறந்தது மாதவன் பேர் வாழ்த்த வைகுந்த மன்னு முனி
திறந்தது வாசல் திறவா நரகம் தெரிந்த வையம்
பிறந்தது பூதூர்ப் பிறவா முனிவன் பிறந்த பின்னே –2-

பிறவா முனிவன்-நம்மைப் போல் கர்ம வஸ்யராய் பிறவாமல் இச்சா மாத்ரத்தால்
ஸங்கல்பித்துக் கொண்டு திரு அவதரித்த எம்பெருமானார்
பிறந்தது பூதூர்-திரு அவதரித்த ஸ்ரீ பெரும் பூதூர்
இவர் பிறந்த பின்னே –
சிறந்தது செல்வம் -கைங்கர்ய ஸ்ரீ சிறப்புற்றது
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட -இத்யாதி
சிறவாதது கலி -கலியின் கொடுமை சிறப்பு இழந்து நலிந்தது -கலியும் கெடும் கண்டு கொண்மின் –
சில் சமயம் -அல்ப சமயமான சைவம்
மறந்தது மாதவன் பேர் வாழ்த்த -பெண்ணை இடப்பக்கம் கொண்ட சிவன் பேரையும் சொல்லக் கை விட்டது –
அதனால் அன்றோ ஆழ்வானும் கண் இழந்தது –
தாழ் சடையான் சொல் கற்ற சோம்பரும் மாண்டனர்
மாதவன் பேர் வாழ்த்த என்று இடை நிலைத் தீவகமாய் ஸ்ரீ யபதியான திரு மாலின் நாமம் பலவும் நவிலச் செய்ய
வைகுந்த வாசல் திறந்தது-
நரகம் வாசல் திறவா-நலியும் நரகமும் நைந்த
தெரிந்த வையம் -லீலா விபூதி காணும் சக்தியைப் பெற்றது -உலகில் நல்லறிவு தலைப்படல் ஆயிற்று –
கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் பண் தான் பாடி நின்றாடிப் பரந்து உலவச் செய்தமையால் வையம் கண் பெற்றது –
முனி மன்னும் -இவ்வளவு அரிய செயல்களை ஆற்றியது எதிராச முனி
மன்னும் -நிலை பெற்று நிற்கும் -தென் ஆனாய் வடவானாய் குடபாலானாய் குணபால மத யானாய் -என்பதற்கு ஏற்ப
ஸ்ரீ ரெங்கம் ஸ்ரீ திருவேங்கடம் ஸ்ரீ திருநாராயண புரம் ஸ்ரீ திருமாலிருஞ்சோலை ஆகிய திவ்ய தேசங்களில் நித்ய வாசம் செய்து அருளும் –

——-

பின்னே தொடரும் பிறவிப் பெரும் பிணி பேர்க்கும் வண்ணம்
இன்னே இதற்கு மருந்து அறிந்தேன் இந்த மேதினியில்
தன்னேர் ஒருவர் ஒவ்வா எதிராசர் சரணம் என்று
சொன்னேன் அறிந்திலையோ மனமே இந்தத் துக்கம் விட்டே -3-

பின்னே தொடரும் பிறவிப் பெரும் பிணி பேர்க்கும் வண்ணம் -எழுமையும் எழு பிறப்பும் பின்னே தொடருவதால் பெரும் பிணி
பேர்த்தல் -வேரோடு கல்லிக் களைந்து எறிதல்
எருத்துக் கொடி யுடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும் ஒருத்தரும் இப் பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவார் இல்லையாய் இருக்க
இவர் மருந்து அறிந்தேன் என்பது
சொன்னேன் அறிந்திலையோ மனமே இந்தத் துக்கம் விட்டே–அறிந்திலையோ -சஞ்சல வியப்பு –
எம்பெருமானார் திருவடிகளே சரணம் – -எதிராசன் சரணம் என்று சொல்வதாலேயே –
பூர்வர்கள் அனைவரும் தங்கள் தங்கள் சிஷ்யருக்கு எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருங்கோள்
என்று அன்றோ உபதேசித்துப் போர்வார்கள்
மேதினி -திருமாலால் வதைக்கப் பட்ட மது கைடபர்களின் மேதசினால் -கொழுப்பினால் நனைந்தது என்றவாறு –

————

விட்டது தீ வினை மாண்டது கோவம் மெய்ஞ்ஞானம் நெஞ்சில்
பட்டது வேறு பர வச்சம் தீர்ந்தது பாவம் எல்லாம்
கெட்டது வீடு தகும் என்று கேசவன் தாள் தலை மேல்
இட்டது எங்கள் ராமானுஜன் என்று இருப்பவர்க்கே –4–

கோவம் -கோபம் -கோபமே பாபங்களுக்குத் தாய் தந்தை யாதலால் -அது மாளவே மெய்ஞ் ஞானம் தத்வ அறிவு தலைப்பெறுமே –
அந்த அறிவினால் பாரமாய பழ வினை யச்சம் தீருமே
பாபம் கெடவே புடமிட்ட பொன் போலாகக் கேசவன் வீடு தகும் என்று திருவடி சம்பந்தம் செய்து தமர் ஆக்குவனே –

————–

இருக்கின் பொருளும் அறிவின் பொருளும் எழுத்து எட்டினால்
உருக்கும் பொருளும் உணர்வின் பொருளும் ஒன்றாக வெல்லாம்
சுருக்கும் பொருளும் துணிவின் பொருளும் துணிந்த பின்பு
செருக்கும் பொருளும் எதிராசன் தெரிந்தனனே –5–

இருக்கின் பொருளும் -ருக்கு என்றது நான்கு வேதங்களுக்கும் உப லக்ஷணம் -கர்ம காண்ட அர்த்தம்
அறிவின் பொருளும் -ஞான காண்ட அர்த்தம்
எழுத்து எட்டினால் உருக்கும் பொருளும் -திருமந்திர பொருளும்
உணர்வின் பொருளும் -த்வயத்தின் ஆழ் பொருளும் -ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –
ஆத்மா முக்கியமாக அறிய வேண்டுவது பிராட்டியாலேயே பேறு என்று உணர்வதுவே –ஆகவே இங்கு த்வயத்திலேயே நோக்கு
ஒன்றாக வெல்லாம் சுருக்கும் பொருளும் -சரம ஸ்லோக பொருளும் -பஞ்சம வேத சார பூத கீத உபநிஷத் தாத்பர்யமே சரம ஸ்லோகம் தானே –
இதனது சார அர்த்தம் அறிவதற்காகவே திருக்கோஷ்டியூர் நம்பி இடம் 18 பர்யாயம் எழுந்து அருளினார் –
துணிவின் பொருளும் -ப்ரஹ்ம ஸூ த்ரத்தின் பொருளும் –
துணிந்த பின்பு -ப்ரஹ்மத்தை இன்னது என்று முடிவு காட்டுவதால் வந்த துணிவு –
செருக்கும் பொருளும் -விசிஷ்டாத்துவைத ஆழ்ந்த தேறின பொருளும் -ப்ரபத்தியே தஞ்சம் -ஆச்சார்ய அபிமானம் -உத்தாரகம்
எதிராசன் தெரிந்தனனே –இவை அனைத்தும் நமக்கும் தெரிய வைத்து அருளினார் எதிகளுக்கு எல்லாம் அரசரான படியால் –

————

தெரியாத வாதியர் தேற்றம் விட்டே திரு எட்டு எழுத்தின்
உரியார் அருள் பெற வேண்டுதிரேல் உடுவும் பிறையும்
பிரியா மதிள் பெரும் பூதூர் முனி சொன்ன பேச்சை நெஞ்சில்
தரியாதவர் அறியார் இனி வேறு இல்லை சத்தியமே –6-

திரு எட்டு எழுத்தின் உரியார் –ஸ்ரீ மன் நாராயணன் -திருமால் –
அவர் அருள் பெற வேண்டுதிரேல் -அவரது கிருபைக்குப் பாத்திரமாக விரும்புவீர் ஆகில்
தெரியாத வாதியர் தேற்றம் விட்டே -தத்வ ஹித புருஷார்த்தங்கள் இன்னவை என்று அறியாத
சமயச் சழக்கர் கத்தும் சூழ் அறவுகளை உதறித் தள்ளி –
உடுவும் பிறையும் -நக்ஷத்ரங்களும் சந்திரனும்
பிரியா மதிள் -விட்டுப் போக முடியாத உயர்ந்த மதிள்களை உடைய
பெரும் பூதூர் முனி சொன்ன பேச்சை நெஞ்சில் தரி-தரியும் -நிலவ நிறுத்துங்கள் –
அங்கன் தரிப்பீர் ஆகில்
யாதவர் அறியார்-தரித்த அவர் அறியாதது ஏதும் உண்டோ -அனைத்தையும் அறிவர்
இனி வேறு இல்லை சத்தியமே –இதுக்கு மாறு கிடையாது -தொட்டுப் பிரமாணம் செய்கிறேன் –

சமய வாதியரால் குழம்பி தத்வ யாதாத்ம்யம் அறியாத சேதனன் ஒருவனைக் குறித்து அருளிச் செய்யும் பாசுரம் இது –

பெரும் பூதூர் முனி சொன்ன பேச்சாவது
சகல வேதங்களிலும் -சகல ஸாஸ்த்ரங்களிலும் -சகலமான அருளிச் செயல்களிலும் -சகல ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகளிலும்
ஏக கண்டமாக -ஒரு அதிகாரிக்கு த்வயம் ஒழிய வேறே மந்த்ரம் இல்லை -மிதுனம் ஒழிய ஒரு வஸ்து இல்லை –
கைங்கர்யம் ஒழிய புருஷார்த்தம் இல்லை -ஆச்சார்ய அபிமானம் ஒழிய மோக்ஷ உபாயம் இல்லை –
பாகவத அபசாரம் ஒழிய மோக்ஷ விரோதம் இல்லை -என்பதே –

————–

சத்தியத்தின் பொருள் தத்துவத்தின் பொருள் தன்னின் உன்னும்
புத்தியத்தின் பொருள் புண்ணியத்தின் பொருள் பூ சுரர் தம்
பத்தியத்தின் பொருள் பற்று அறுக்கும் பொருள் பற்றுதலால்
முத்தியத்தின் பொருள் பூதூர் முனிவன் மொழிந்தனனே –7-

எம்பெருமானார் மொழிந்த அர்த்த விசேஷங்கள் இவை இவை என்று பட்டியல் இட்டுக் காட்டி அருளுகிறார் ஐயங்கார் இதில்

1-சத்தியத்தின் பொருள் -ஸத்யம் -உண்மை -எம்பெருமானார் தரிசனத்தில் தத்வ த்ரயங்கள் மூன்றுமே உண்மையாக இருந்தாலும் மேலே
தத்துவத்தின் பொருள் வருவதால் இங்கு ஸத்யம் என்று ஈஸ்வரனையே சிறப்பாகக் காட்டும் –
ருதம் ஸத்யம் பரம் ப்ரஹ்மம் –
அவனுக்குப் பொருளாவது -அஸங்க்யேய கல்யாண குண கணங்களும் அகில ஹேய ப்ரத்ய நீகத்வமும்

2-தத்துவத்தின் பொருள் -தத்வ த்ரயங்கள் -கீழே ஸத்யம் பொருள் என்று ஈஸ்வர பொருளைப் பார்த்தோம் –
சித் -ஜீவாத்மா -பத்தர் முக்தர் நித்யர் மூவகைப்படும் –
இதன் பொருளாவது
1- கர்ம ஞான இந்த்ரியங்களில் வேறுபட்டு இருத்தல்
2-ஸூயம் ப்ரகாசகமாய் இருத்தல்
3-ஆனந்த மயமாய் இருத்தல்
4-ஸாஸ்வதமாய் இருத்தல் –
5- அணுவாய் இருத்தல்
6-கட் புலனுக்குத் தெரியாமல் இருத்தல்
7-மனத்தினாலும் நினைக்க முடியாது இருத்தல்
8-நிர் அவயவமாய் இருத்தல்
9-நிர் விகாரமாய் இருத்தல்
10-அறிவுக்கு இருப்பிடமாய் இருத்தல்
11-ஈஸ்வரனுக்கு சரீரமாய் -அவன் இட்ட வழக்காய் இருத்தல் –

இனி அசித்தின் பொருளாவது
1-முக் குண வசப்பட்டு இருத்தல்
2-ஞான ஸூந்யமாய் இருத்தல்
3- ஸாஸ்வதமாய் இருத்தல்
4-ஈஸ்வரனுக்கு போக உபகரணமாய் இருத்தல்
5- சதத பரிணாமம் -விகாரம் உடைத்தாய் இருத்தல்
இதனை ப்ரக்ருதி மாயை அவித்யை என்றும் சொல்வர்

3-தன்னின் உன்னும் புத்தியத்தின் பொருள் –
தன்னின் -அசித் தத்துவத்தின் நின்றும் வேறுபட்டு
உன்னும் -நினைவாற்றல் படைத்த
புத்தியம் -புத்தி என்று ஆராய்ந்து தெளியும் அந்தக் கரணம்
புத்தி -அறிவு -சித்துக்கே உரித்தாகை
இதன் பொருளாவது
ஜடமான அசித்துடன் வேறு பட்டு இருந்தே -அஜடமான ஜீவாத்மாவுடன் தான் ஒன்றி இருந்து –
உடல் மிசை உயிர் -எனக் கரந்து இருக்கும் தன்மையை வெளிப்படுத்துவது –
இதனால் பெற வைப்பது -சரீர சரீரி சம்பந்தம் -விழுமிய விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் அசாதாரணம் அன்றோ இது –
உற்று நோக்கினால் சித் ஈஸ்வரனுக்கு சரீரமாகும் தன்மையையே குறிக்கும் –

யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயம் தோறும்
தோய்விலன் புலன் ஐந்துக்கும் சொலப்படான் உணர்வின் மூர்த்தி
ஆவி சேர் உயிரினில் உள்ளாள் ஆதுமோர் பற்று இலாத
பாவனை யதனைக் கூடில் அவனையும் கூடலாமே

ஆக –சத்தியத்தின் பொருள் என்று ஈஸ்வர குணங்களையும் –
தத்துவத்தின் பொருள் என்று சித் அசித் இவற்றின் இயல்புகளையும்
தன்னின் உன்னும் பொருள் -என்றதால் தத்வங்களின் இடையில் உள்ள சரீர சரீரீ சம்பந்தத்தையும் மொழிந்தபடி காட்டிய வாறு –
எனவே இம் மூன்றிலும் ஸ்ரீ பாஷ்யம் குறித்த படி –

4-புண்ணியத்தின் பொருள்
புண்ணியம் -ஸ்ரீ கிருஷ்ணன் -ஸாஷாத் புண்ணியத்துக்கு பாலும் சோறும் இட்டு அன்றோ வளர்க்கிறோம் என்கிற படி
கிருஷ்ணம் தர்மம் ஸனாதனம்
கருத்து ஆகு பெயராலே அவன் வெளியிட்டு அருளிய ஸ்ரீ கீதா ஸாஸ்த்ரத்தைச் சொன்னவாறு –

5-பூ சுரர் தம் பத்தியத்தின் பொருள்
பூ சுரர் -அந்தணர் -வேதியர் -அவரது பத்தியம் -வேதம் -செய்யுள் -வேத மந்த்ரம் -வேதியருக்கு குல தனம் வேதமே
இந்த வேதங்களின் விழுப் பொருளைப் பூதூர் முனிவன்
வேதார்த்த ஸங்க்ரஹம் -வேதார்த்த தீபம் – வேதார்த்த சாரம் -ஆகிய திவ்ய கிரந்தங்களால் மொழிந்தார் –

6-பற்று அறுக்கும் பொருள்
ஸ்ரீ சரணாகத கத்யத்தின் பொருள்கள்
ஸ்ரீ ரங்க கத்யம் சரணாகதி கத்யத்தின் சுருக்கமே

7-பற்றுதலால் முத்தியத்தின் பொருள்
ஸ்ரீ வைகுண்ட கத்யத்தின் பொருள்

பூதூர் முனிவன் மொழிந்தனனே
ஆக பூதூர் முனிவரின்
ஸ்ரீ பாஷ்யம்
ஸ்ரீ கீதா பாஷ்யம்
ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம் -வேதார்த்த சாரம் -வேதார்த்த தீபம் –
சரணாகதி கத்யம் ரெங்க கத்யம்
வைகுண்ட கத்யம்
ஆகிய அஷ்ட கிரந்தங்களை மொழிந்துள்ளார் என்றவாறு –

——————-

மொழிக்கே கரும்பையும் தேனையும் வைத்தந்த மொய் குழலார்
விழிக்கே யகப்பட்டு உழல்கின்றீர்கள் மெய் ஞான நெஞ்சில்
சுழிக்கே கொழிக்கும் யமுனைத் துறை முனி சொலச் சொன்ன
வழிக்கே நினையும் கிடீர் எதிரே வரும் வைகுந்தமே –8-

மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை -மீட்டு அறிவூட்டி அருளிய வாறு –
மொய் குழலார் மொழிக்கே கரும்பையும் தேனையும் வைத்து தந்த விழிக்கே யகப்பட்டு உழல்கின்றீர்கள்-
அவர்கள் பேச்சு -உவமையாகச் சொல்லி வைத்து என்பதால் அநாதரவு தோற்றச் சொன்னவாறு –
மெய் ஞான நெஞ்சில் சுழிக்கே கொழிக்கும் யமுனைத் துறை முனி -தத்வ உணர்வு ஒருங்கே திரண்டு செழிப்பு உறும் —
மால் பால் மனம் சுழிப்ப –
சொலச் சொன்ன வழிக்கே –ஆளவந்தார் சொல்லியது ஆவது
பெரிய நம்பி இளைய ஆழ்வாருக்கு ஸமாச்ரயணம் செய்விக்க வேணும்
திருக்கோட்டியூர் நம்பி சரம ஸ்லோஹார்த்தம் உபதேசித்து அருள வேணும்
திருமாலை யாண்டான் திருவாய் மொழிப் பொருளை உபதேசித்து அருள வேண்டும்
பெரிய திருமலை நம்பி ஸ்ரீ ராமாயணப் பொருளை அருளிச் செய்ய வேணும்
திருவரங்கப் பெருமாள் அரையர் திவ்ய பிரபந்தங்கள் ஸ்தோத்திரங்கள் நல் வார்த்தைகள் அருளிச் செய்ய வேணும்
என்றும் ஆணை இட்டது –

அங்கனம் உபதேசம் பெற்ற எதிராசர் சொன்ன வழிக்கே நினையும் கிடீர் என்று அந்வயம்
வழி -உபாயம் -மார்க்கம் -பிரபத்தி –
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே
வேறு மோக்ஷ உபாயங்கள் கூறுபவரோடு உறவு அறுத்து எப்போதும் பிரபத்தி உபாயத்தையே பின் பற்றி
நினையும் கிடீர் எதிரே வரும் வைகுந்தமே வாழ்வார் உடனே நித்ய வாசம் பண்ணுங்கோள்
உடையவர் அருளிச் செய்த சரம 72 வார்த்தைகளில் -56 வது வார்த்தையை ஸ்மரிக்க வேண்டும்

56-உபாயாந்தரங்களை நாடுவாரை விட்டு பிரபத்தி நிஷ்டர்களுடன் ஸஹ வாசம் கொள்ள வேண்டும்

வழிக்கே -ஏவகாரம்-பிரிநிலையோடு தேற்றம்
கிடீர் -முன்னிலைப் பன்மை உரையசை
பிரபத்தி வழி நினைத்தால் எதிரே வரும் வைகுந்தமே
ஆளவந்தாரோடு நான் கூடி இருந்து குளிரப் பெற்றேன் ஆகில் பரம பதத்துக்குப் படி கட்டி இருப்பேன் என்று பலகாலும் எதிராசர் பணிப்பரே

———-

வையகத்தே தன்னை வள்ளல் என்று ஏத்தினும் வாய் திறவாக்
கையரகத்தே நின்று கண் குளிர்வீர் – கருணா கரணை –
மெய்யகத்தே வைத்த பூதூர் முனி தன் விரை மலர்த் தாள்
பொய்யகத்தே நிற்கினும் அகலாள் மணப் பூ மகளே –9-

வையகத்தே -பொருள்களை வைக்கும் இடம் -பூமிக்குக் காரணப் பெயர்
கையரகத்தே -கையர் கீழ் மக்கள் -மூடர்
கையர் -கை ஆகு பெயராய் ஆளைக் காட்டிற்று -எத்தனை கை வேலை செய்தன என்னுமா போலே
அகம் -வீடு -வாசல் கடை
கண் குளிர்வீர் -விளிச் சொல்
கருணா கரணை -ராம பிரானை
படி கொண்ட கீர்த்தி ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன்

படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
குடி கொண்ட கோயிலில் இராமானுசன் குணம் கூறும்
கடி கொண்ட மா மலர்த்தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே – 37-

இராம பிரானை மெய்யகத்தே வைத்தல் இயல்பே
மெய்யகம் – உண்மை உள்ளம்
கருணாகரன் -திருமால் என்னவுமாம் –
விரை -பரிமளம்
மலர்த்தாள்-உவமைத் தொகை
மெய்யகத்தே வைத்த பூதூர் முனிவன்
பொய்யகத்தே -வஞ்ச உள்ளம்
மணப் பூ மகளே –நறு மணம் வீசும் செந்தாமரையில் எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ மஹா லஷ்மித் தாயார்
அகலாள் -விட்டு நீங்காள்

எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்று மனப் பூர்வகமாக இன்றிப் பொய்யாக நினைத்தாலும் சகல ஸுவ்பாக்யங்களும்
ஸ்ரீ பெரிய பிராட்டியாரது கடாக்ஷ லேசத்தாலே ஏற்படும் என்று மங்கள கரமாக அருளிச் செய்து தலைக் கட்டுகிறார் –

——————-

சந்தார் புயத்து எங்கள் ஆழ்வார் தமக்கும் ததியருக்கும்
அந்தாதி பத்து மணவாள தாசர் அலற்றியதால்
நந்தாத குற்றம் உண்டாகாது அவர்க்கு ஒரு நாய் கங்கை நீர்
தன் தாபம் தீரக் குடித்தாலும் தீர்த்தத்துக்கு தாழ்வு இல்லையே –10-

சந்து -அழகு -மணம் -நாள் கமழ் மகிழ் மாலை மார்பன் –
புயத்து-திருத் தோள்களில்
எங்கள் ஆழ்வார் -நம்மாழ்வார்
தமக்கும் ததியருக்கும் -ஆழ்வாருக்கும் மாறன் அடி பணிந்து உயந்த எதிராசருக்கும் –
அந்தாதி பத்து -ஒன்பதாக இருந்தாலும் அந்தாதி பத்து என்ற அந்தாதி வகையை நோக்கி அருளிச் செய்கிறார்
அழகிய மணவாள தாசர் -திவ்ய கவி -பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
அலற்றியதால் -இடைவிடாமல் முறை இன்றியும் பேசியது
பக்திப் பெருக்கை வெளியிட்டவாறு –
பத்தர் சொன்னவும் பித்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ

முத்தமிழ்த் துறையின் முறை போகிய
உத்தமக் கவிஞர்களுக்கு ஒன்று உணர்த்துவென்
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்
பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ

முத்தமிழ்த் துறையின் முறை போகிய (முத்தமிழ் நூல்களை -இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ்-முறையாகக் கற்றுத் தேர்ந்த)
உத்தமக் கவிஞர்களுக்கு ஒன்று உணர்த்துவென் (சிறந்த புலவர்களுக்கு ஒரு செய்தியைக் கூறிக் கொள்கிறேன்)
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும் (பைத்தியக்காரர்களும், அறிவிலிகளும் சொன்ன வார்த்தைகளையும்)
பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ (பக்தியில் ஆழ்ந்து இருப்பவர்கள் சொன்ன வார்த்தைகளையும் ஆராய முற்படலாமோ? அவை ஆராய தகுந்தவையா? இல்லை!)
பித்தர் – புத்தி சுவாதீனமில்லாதவர்கள். , பேதையர் – நடைமுறை அறிவு இல்லாதவர்கள்; பத்தர் – பக்தியில் தழைத்து அதிலே ஊறி நிகழ் கால வாழ்வு பற்றிய நினைவுகளை இழந்தவர்கள்.

நந்தாத குற்றம் உண்டாகாது அவர்க்கு -அந்த எதிராசருக்கு -கெடாத மறையாத -அவியாத குற்றம் உண்டாகாது –
ஒரு நாய் கங்கை நீர் தன் தாபம் தீரக் குடித்தாலும் தீர்த்தத்துக்கு தாழ்வு இல்லையே –
கங்கை நீரின் புனிதம் -தோஷம் குற்றம் வாராமல் -ஒரே சீராய் இருப்பது போல் –
நஸ்வா வலீடமபி தீர்த்தம் அதீர்த்தம் ஆஹு -ஸ்ரீ வைகுண்டஸ்தவம் போல் இங்கும் –
தன்னைப் பிறர் போல் நாந்தி கூறும் பதிகச் செய்யுள் –தற் சிறப்பு பாசுரம் –

ஜாநந் நபீஹ கில மாம் அந பத்ர பிஷ்ணு
விஷ்ணோ பாத பிரணயி நீம் கிரம் ஆத்ரி யேஹம்
ந ஸ்வ அவ லீடம் அபி அதீர்த்தம் தீர்த்தமாஹு
நோதந்யதாபி ச சுநா கில லஜ்ஜி தவ்யம்–8-

அடியேன் என்னை அஞ்ஞனாய் தெரிந்து கொண்டவனாய் இருந்தும் வெட்கப்படாதவனாய்
எம்பெருமானுடைய திருவடியில் ப்ரேமம் பொருந்திய வாக்கை இங்கு தொடுக்க விரும்புகிறேன் –
இயற்கையாகவே பவித்ரமான கங்கை முதலிய தீர்த்தம் நாயினால் நக்கப்பட்டதே யாகிலும்
அதனைத் தீர்த்தம் அல்லாததாகச் சொல்ல மாட்டார்கள் அல்லவா
தாஹம் கொண்ட நாயினாலும் நாணப் படத் தகுதி இல்லையே

நைச்ய அனுசந்தானத்தில் எல்லையின் நின்று அருளுகிறார்
மா சூணா வான் கோலத்து அமரர் கோமான் வழிப் பட்டால் மா சூணா யுன பாத மலர்ச்சோதி மழுங்காதே –என்று
இருக்க அல்பஞ்ஞரான தாம் ஸ்துதித்தால் நிறக் கேடாகாது என்று சமாதானம்
எனது புல்லிய வாக்கில் புகுந்து புறப்படுவதால் பகவத் விஷய தூய்மை குன்றாதே
வசிஷ்ட சண்டாள விபாகம் இன்றிக்கே எல்லாரும் படிந்து குடைந்து ஆடலாம் படி பரம பவித்ரம்
பகவத் விஷயத்தை பேசி அல்லது தரிக்க கில்லாத அடியேனும் பேசுவதற்கு லஜ்ஜிக்கவும் அவகாசம் இல்லையே
இவர் தாமே ஸ்ரீ ஸ்தவத்தில் –ஷோ தீயா நபி துஷ்ட புத்தி ரபி –என்கிறார்
உதந்யந் –தாக்கமுடையவன் என்றதாயிற்று

க்ஷோதீயா நபி துஷ்ட புத்திரபி நிஸ் ஸ்நேஹோப்ய நீஹோபி தே
கீர்த்திம் தேவி லிஹன்நஹம் ந ச பிபேம் யஜ்ஞோ ந ஜிஹ்ரேமி ச |
துஷ்யேத் ஸாதுந தாவதா ந ஹிஸுனா லீடாபி பாகீரதீ
துஷ்யேச்ச்வாபி ந லஜ்ஜதே ந ச பிபேத் யார்திஸ்து ஶாம்யேச்சுந: ||–ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 5 –

“ஹே மஹாலக்ஷ்மி! உன்னை போற்றிப் பாடுவதற்கு எனக்கு அறிவு இல்லை, அனுஷ்டானமும் இல்லை.
இந்த வரம்புகள் இருந்த போதிலும், என் வாக்கினால் உன்னை பாடிப் போற்றுவதால்
உன்னுடைய புனிதத்துவம் குறைந்து விடுவதில்லை யன்றோ.

நாய் தாகத்தால் கங்கையில் தண்ணீர் குடித்தால் கங்கைக்கும் தோஷம் இல்லை ..அதற்கும் தாகம் தீரும்..
அது போலவே நான் உன்னை பாட முற்படுவது. ராவணனையும் திருத்த முயன்ற தேவியே!
அடியேன் உன்னை பாட முற்பட்டால் அதை ஏற்க மாட்டாயா? லங்கையிலிருந்த ராக்ஷசிகள் சரணம் என்று சொல்லாமலே
அவர்களை ரக்ஷித்த பெருமை யுடையவள் நீ அன்றோ! ” என்று இந்த ஸ்லோகத்தில் ஸ்ரீ கூரத்தாழ்வான் பாடுகிறார்.

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதியில் ஸ்ரீ அமுதனார் திவ்ய தேச மங்களா சாசனம் /ஸ்ரீ விபவ அவதார அனுபவம் /ஸ்ரீ யபதித்தவம் –/ ஸ்ரீ ஸ்வாமி குண அனுபவம் -/ஸ்ரீ ஆழ்வார்கள் ஈடுபாடு /ஸ்ரீ ஸ்வாமி அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்திகள் – —

June 5, 2020

இந்த பிரபந்தத்தில் 9 திவ்ய தேசங்கள் —ஆழ்வார் அவதார ஸ்தலங்கள் -3–மங்களா சாசனம் செய்கிறார் ஸ்ரீ அமுதனார்-

ஆழ்வார் அவதார ஸ்தலங்கள்
திரு மழிசை-மழிசைக்கு இறைவன் 1
திரு கொல்லி நகர் 1
திரு குறையலூர் 1

திவ்ய தேசங்கள்
1-திரு குருகூர் மூன்று பாசுரங்கள்
2-திரு அரங்கம் 14 பாசுரங்கள்
3-திரு வேங்கடம் -2 பாசுரங்கள்
4-திருக் கச்சி- 1 –
5-திரு கோவலூருக்கு -1-
6-திரு மால் இரும் சோலை -1-
7-திரு கண்ண மங்கை நின்றான்–1-
8-திரு பாற்கடல் 2-
9-திரு பரம பதம் -2-

—————-

இராமானுச நூற்றந்தாதியில்-12- திவ்ய தேச மங்களா சாசனம் –

1-திருவரங்கம் –14-பாசுரங்களில் / கள்ளார்-2-/தாழ்வு -16-/ நயவேன் -35-/ஆயிழை -42-/
இறைஞ்சப்படும் -47-/ஆனது -49-/பார்த்தான் -52-/கண்டவர் -55-/மற்றொரு -57-/சிந்தையினோடு -69-/
செய்த்தலை -75-/சோர்வின்றி -81-/மருள் சுரந்து -91-/அங்கயல் -108-

2-திருவேங்கடம் -2-பாசுரங்கள் /நின்ற வண் -76-/இருப்பிடம் -106-

3-திருக்கச்சி -1-பாசுரம் –ஆண்டுகள் -31-

4—திருக் கோவலூர் -1-/ மன்னிய -10-

5—திருக் குறையலூர் -1-/ கலி மிக்க -88-

6—திரு மழிசை -1-/ இடம் கொண்ட -12-

7–கொல்லி நகர் -1-/ கதிக்கு -14-

8—திருமால் இரும் சோலை -1-/ இருப்பிடம் -106-

9—திருக்கண்ண மங்கை -1-/ முனியார் –17-

10—திருக் குருகூர் –3-பாசுரங்கள் /ஆரப் பொழில் -20-/காட்டும் /நாட்டிய -54-

11—திருப்பாற் கடல் -2-பாசுரங்கள் / நின்ற வண் -76-/ செழும் திரை -105-

12—திரு பரம பதம் -2-பாசுரங்கள் / நின்ற வண் -76-/ இருப்பிடம் -106-

மா மலராள் புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி-60-திவ்ய தேச சாமான்ய பாசுரம்
தானுகந்த ஊர் –திரு நெடும் தாண் -6-போலே –

————–

ஸ்ரீ விபவ அவதார அனுபவம்–14-பாசுரங்கள்-

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் -7-பாசுரங்கள்
ஸ்ரீ ராமாவதாரம் -1- பாசுரம்
ஸ்ரீ பரசுராமவதாரம் -1-பாசுரம்
ஸ்ரீ நரஸிம்ஹ அவதாரம் -1-பாசுரம்
ஸ்ரீ திருப் பாற் கடல் -திரு அவதார கந்தம் -2-பாசுரங்கள்
அனைத்து அவதாரங்களும் சேர -2-பாசுரங்கள் –

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் -7-பாசுரங்கள்-

1-கார்த்திகையானும் கரி முகத்தானும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதிகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –

2-நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள்
பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா
வஞ்சர்க்கு அரிய இராமானுசன் புகழ் அன்றி என் வாய்
கொஞ்சிப் பரவ கில்லாது என்ன வாழ்வின்று கூடியதே – -28 –

3-அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திட தானும் அவ் ஒண் பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமானுசன் தன் படி இதுவே -36 –

4-அடியைத் தொடர்ந்து எழும் ஐவர் கட்காய் அன்று பாரதப்போர்
முடியப் பரி நெடும் தேர் விடும் கோனை முழுது உணர்ந்த
அடியர்க்கு அமுதம் இராமானுசன் என்னை யாள வந்திப்
படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே –51 –

5-சரண மடைந்த தருமனுக்காப் பண்டு நூற்றுவரை
மரண மடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரண மிவை வுமக் கன்று என்று இராமானுசன் உயிர் கட்
கரணங்கு அமைத்திலனேல் அரணார் மற்று இவ் வார் உயிர்க்கே – 67- –

6-ஆரெனக்கின்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன விராமானுசனைப் பணியும் நல்லோர்
சீரினில் சென்று பணிந்தது என்னாவியும் சிந்தையுமே – 68-

7-கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டலே – – -104 –

———

ஸ்ரீ ராமாவதாரம்-1-பாசுரம்

1-படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
குடி கொண்ட கோயிலில் இராமானுசன் குணம் கூறும்
கடி கொண்ட மா மலர்த்தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே – 37-

————

ஸ்ரீ பரசுராமவதாரம் -1-பாசுரம்

கோக்குல மன்னரை மூ வெழு கால் ஒரு கூர் மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனம் எங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமானுசனை யடைந்த பின் என்
வாக்குரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே -56-

——————

ஸ்ரீ நரஸிம்ஹ அவதாரம் -1-பாசுரம்

வளர்ந்த வெங்கோப மடங்க லொன்றாய் அன்று வாளவுணன்
கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயி ரெழுந்து
விளைந்திடும் சிந்தை யிராமானுசன் என்தன் மெய் வினை நோய்
களைந்து நன்ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே – – 103-

————–

ஸ்ரீ திருப் பாற் கடல் -திரு அவதார கந்தம் -2-பாசுரங்கள்-

நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற்
குன்றமும் வைகுண்ட நாடும் குலவிய பாற் கடலும்
உன்றனக் கெத்தனை இன்பந்தரு முன்னிணை மலர்த்தாள்
என்றனக்கு மது இராமானுசா !இவை ஈந்தருளே – -76 –

செழும் திரைப் பாற்கடல் கண்டுயில்மாயன் திருவடிக் கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நன்ஞானி நல் வேதியர்கள்
தொழும் திருப்பாதன் இராமானுசனைத் தொழும் பெரியோர்
எழுந் திரைத்தாடுமிடம் அடியேனுக் கிருப்பிடமே – – -105 –

——————

அனைத்து அவதாரங்களும் சேர -2-பாசுரங்கள் –

மண் மிசை யோநிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய வப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினரே – 41-

தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக்
கூராழி கொண்டு குறைப்பது கொண்டலனைய வண்மை
ஏரார் குணத் தெம்மி ராமானுசன் அவ் எழில் மறையில்
சேராதவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே – -74- –

—————-

ஸ்ரீ யபதித்தவம்

அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் ஸ்ரீ வல்லபன் ..
முதலில் பூ மன்னு மாது பொருந்திய மார்பன் -ஆரம்பித்தார் ..கடைசியிலும் சொல்லுவார்.-
ஒவ் ஒரு திருவாய் மொழியிலும் .7 வது பாசுரமாக கொண்டு போனால்
திரு வாய் மொழி-முழுவதிலும் புதுசாக சாராம்சம் கிடைக்கும்-

பூ மன்னு-1- அலர்மகள் கேள்வன் -33-/வானம் கொடுப்பது மாதவன் -66-/ பங்கய மா மலர்ப் பாவை -108-/
திருமகள் சம்பந்தம் விடாமல் அன்றோ அருளிச் செய்கிறார் –

1-பூ மன்னு மாது பொருந்திய மார்பன் -1-
2-கோவிலுள் மா மலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த்தலைவன் -10-
3-அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல் -16-
4-வெறி தரு பூ மகள் நாதனும் விளங்கிய சீர் நெறி தரும் செந்தமிழ் ஆரணமே-19-
5-நாங்கள் பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா வஞ்சர்க்கு அரிய இராமானுசன் -28-
6-அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் -33-
7-மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவன் கண்ணுற நிற்கிலும் காண கில்லா உலகோர்கள்-41-
8-மா மலராள் நாயகன் எல்லா யுயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் தூயவன் -42-
9-மா மலராள் புணர்ந்த பொன் மார்வன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும் குணம் திகழ் கொண்டல் இராமானுசன் -60-
10-ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள் தொறும் நைபவர்க்கு வானம் கொடுப்பது மாதவன் -66-
11-மிக வஞ்சித்து நீ இந்த மண்ணகத்தே திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் -78-
12-அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாகம் மன்னும் பங்கய மா மலர்ப்பாவையைப் போற்றுதும் -108-

———-

சொல்லுவோம் அவன் நாமங்கள் -குணங்களை சொல்வதே திரு நாமம் -அருளிச் செய்த குணங்கள் –

1-மிக்க சீலம் /
2-பொருவரும் சீர் /
3-மன்னிய சீர் /
4-பெரும் கீர்த்தி
5-பிறங்கிய சீர் /
6-வள்ளல் தனம் /
7-நயப் புகழ் /
8-தன் ஈறில் பெரும் புகழ்
9-வாமனன் சீலன் இராமானுசன் /
10-தூயவன் தீதில் இராமானுசன் /
11-திசை அனைத்தும் ஏறும் குணனை
12-தொல் சீர் எதித்தலை நாதன் /
13-அற்புதன் -என்னை ஆள வந்த கற்பகம் /மண்ணுலகில் ஈட்டிய சீலத்து
14-பார்த்து அருளும் கொண்டல் /
15-உத்தமன்
16-புவனம் எங்கும் ஆக்கிய கீர்த்தி
17-சுடர் மிக்கு எழுந்த தொல் புகழ்
18-உன் பெரும் கருணை
19-வண்மை இராமானுசர்
20-மிக்க வண்மை
21-வண்மை –மா தகவு /மதி புரையும் தண்மை/
22-கொண்டல் அனைய வண்மை
23-மொய்த்து அலைக்கும் நின் புகழே
24-சீர் ஒன்றிய கருணை
25-தெரிவுற்ற கீர்த்தி
26-கார் கொண்ட வண்மை
27-சீர் வெள்ள வாரி
28-உணர்வின் மிக்கோர் தெரியும் வண் கீர்த்தி
29-போற்ற யரும் சீலம்
30-ஈண்டிய சீர்
32-அனைத்தும் தரும் அவன் சீர்
33-கடல் புடை சூழ் வையம் இதனில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே
34-மெய்யில் பிறங்கிய சீர்
35-இன்புற்ற சீலம்
36-பொங்கிய கீர்த்தி

———————-

ஸ்ரீ இராமானுசன் குண அனுபவம் –

மிக்க சீலம் அல்லால் உள்ளது என் நெஞ்சு -2-

பொரு வரும் சீர் ஆரியன் செம்மை -3-

அவன் மன்னிய சீர் தனக்கு உற்ற அன்பன் -4-

பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் –7-

பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள் பேராத வுள்ளத்து இராமானுசன் தன் பிறங்கிய சீர்–15-

மெய் ஞானத்து இராமானுசன் என்னும் கார் தன்னையே – 24- –

காரேய் கருணை இராமானுசா–வந்து நீ என்னை யுய்த்த பின் உன் சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே -25 –

என் செய்வினையாம் மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை–26-

உன் வள்ளல் தனத்தினால் வல் வினையேன் மனம் நீ புகுந்தாய்–27-

பின்னை தன் காதலன் பாதம் நண்ணா வஞ்சர்க்கு அரிய இராமானுசன் புகழ்–28-

தென் குருகைப்பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த இராமானுசன் புகழ்–29-

அன்பன் அனகன்–30-

அன்பாளன்–31–

ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த அரும் தவன்–32-

நயப் புகழே -34 –

நின்னருளின் வண்ணம் நோக்கில் தெரிவரிதால் –38-

தன்னீறில பெரும் புகழே தெருளும் தெருள் தந்து இராமானுசன் செய்யும் சேமங்களே -39 –

வாமனன் சீலன்–40-

தூயவன் தீதில் இராமானுசன்–42-

சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை யில்லா வற நெறி யாவும் தெரிந்தவன்–44-

அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லாற் கூறும் பரம் அன்று–45-

மாறன் பணித்த மறை யுணர்ந்தோனை மதியிலியேன்
தேறும்படி என் மனம் புகுந்தானைத் திசை யனைத்தும் ஏறும் குணனை –46-

நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றிப் புகல் ஒன்றும் இல்லை–48-

தேர் விடும் கோனை முழுது உணர்ந்த அடியர்க்கு அமுதம் –51-

அற்புதன் செம்மை இராமானுசன் என்னை யாளவந்த கற்பகம் கற்றவர் காமுறு சீலன் –53–

மண்ணுலகில் ஈட்டிய சீலத்து இராமானுசன்–54-

தொகை யிறந்த பண்டரு வேதங்கள் பார் மேல் நிலவிடப் பார்த்தருளும் கொண்டலை–55–

புனிதன் புவனம் எங்கும் ஆக்கிய கீர்த்தி இராமானுசனை–56-

உத்தமனை நற்றவர் போற்றும் இராமானுசனை–57-

எம் இராமானுசன் மெய்ம் மதிக் கடலே – 58–

குணம் திகழ் கொண்டல் இராமானுசன் என்னும் குலக் கொழுந்தே – -60 –

எம் இராமானுசன் தன புகழ் சுடர்மிக்கு எழுந்தது அத்தால் நல்லதிசயம் கண்ட திரு நிலமே – 61-

மிக்க பண்டிதனே – 63- –

யுன் பெரும் கருணை–70-

வண்மை யிராமானுசா ! எம் பெரும்தகையே !–71-

நிறை புகழோருடனே வைத்தனன் என்னை இராமானுசன் மிக்க வண்மை செய்தே -72-

வண்மை யினாலும் தன் மாதகவாலும் மதி புரையும் தண்மை யினாலும் இத்தாரணி யோர்கட்குத் தான் சரணாய்
உண்மை நன் ஞானம் உரைத்த விராமானுசனை–73-

கொண்டலனைய வண்மை ஏரார் குணத் தெம்மி ராமானுசன்–74-

நின் புகழே மொய்த்தலைக்கும் வந்து இராமானுசா ! வென்னை முற்று நின்றே – – 75-

யுன் சீரொன்றிய கருணைக்கு இல்லைமாறு தெரிவுறிலே – – 81–

என்ன புண்ணியனோ ! தெரிவுற்ற கீர்த்தி இராமானுசன் என்னும் சீர் முகிலே – – 82- –

கார் கொண்ட வண்மை –83-

அவன் சீர் வெள்ள வாரியை–84-

தன் குணம் கட்கு உரிய சொல்லென்றும் உடையவன் என்று என்றென்று உணர்வில் மிக்கோர்
தெரியும் வண் கீர்த்தி யிராமானுசன் –87-

போற்றரும் சீலத்து இராமானுச–89-

தான் ஈண்டிய சீர் அருள் சுரந் தெல்லாவுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
பொருள் சுரந்தான் எம்மிராமானுசன் மிக்க புண்ணியனே – – -91 –

நூற் புலவர்க் கெண்ணரும் கீர்த்தி இராமானுச !–92-

இராமானுசன் என்னும் மெய்த்தவனே – – -93 –

உவந்தருந்தேன் அவன் சீரன்றி யான் ஒன்றும் உள் கலந்தே – – – 94- –

தன் தகவால் தன்னை வுற்றாரன்றித் தன்மை வுற்றாரில்லை என்றறிந்து
தன்னை உற்றாரை இராமானுசன் குணம் சாற்றிடுமே – – -97 –

பொற் கற்பகம் எம்மிராமானுச முனி–99-

உனதடிப் போதில் ஒண் சீராம் தெளி தேனுண்டமர்ந்திட வேண்டி–100-

நையும் மனமுன் குணங்களை வுன்னி என் நா விருந்தெம்
ஐயன் இராமானுசன் என்று அழைக்கும் அருவினையேன்
கையும் தொழும் கண் கருதிடும் காணக் கடல் புடை சூழ்
வையமிதனில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே – – 102-

கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டலே – – -104 –

இன்புற்ற சீலத்து இராமானுச –107-

அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாக மன்னும்
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமானுசனடிப் பூ மன்னவே – – 108-

————————

ஸ்ரீ இராமானுசன் திரு உள்ள மகிமை –

பொய்கைப் பிரான் –அன்று எரித்த திரு விளக்கைத் தன் திரு உள்ளத்தே இருத்தும் பரமன் -8-

பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து உறைய வைத்து ஆளும் இராமானுசன் -9-

மழிசைக்கு இறைவன் இணை அடிப் போது அடங்கும் இதயத்து இராமானுசன் -12-

பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள் பேராத வுள்ளத்து இராமானுசன் தன் பிறங்கிய சீர்–15-

சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால் வாரிப் பருகும் இராமானுசன்–20-

தென் குருகைப்பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த இராமானுசன் புகழ்–29-

பொன்னரங்கம் என்னில் மயலே பெருகும் –35-

ஒண் பொருள் கொண்டு அவர் பின் படரும் குணன்–36-

இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயிலில்–37-

வளர்ந்த வெங்கோப மடங்க லொன்றாய் அன்று வாளவுணன் கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன்
கீர்த்திப் பயி ரெழுந்து விளைந்திடும் சிந்தை யிராமானுசன்–103-

———————–

ஸ்ரீ ஆழ்வார்கள் ஈடுபாடு-

இதத்தாய் ராமானுஜன் –
மறை யதனின் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தான் வாழியே –
மாறன் உரை செய்த தமிழ் மறை வளர்த்தோன் வாழியே –
மா முனிகளாக புனர் அவதாரத்தில் செய்து அருளினாரே

சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத உள்ளம் பெற –
ஏய்ந்த பெரும் கீர்த்தி ராமானுஜ முனி தன்
வாய்ந்த மலர்ப்பாதம் அன்றோ அனந்தாழ்வான் வணங்குகிறார்

இராமானுச முனியே –மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும் தங்கும் மனம்
நீ எனக்குத் தா -எம்பார் பிரார்திக்கிறார்-

இராமானுச நூற்றந்தாதியில் -25-பாசுரங்களில் ஆழ்வார் திருவடிகளில்– அருளிச் செயலில்
திருவாய் மொழியின் மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தோறும் புக்கும் இராமானுசன் –

புகழ் மலிந்த பா மன்னு மாறனடி பணிந்து உய்ந்தவன்–1-

சடகோபனைச் சிந்தை யுள்ளே பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம் உய்தற்கு உதவும் –18-

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும் வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர் அறிதர நின்ற இராமானுசன்–19-

திருவாய் ஈரத் தமிழ் இன் இசை யுணர்ந்தோர்கட்கு இனியவர் தம் சீரைப் பயின்று உய்யும்
சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால் வாரிப் பருகும் –20-

தென் குருகைப்பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த இராமானுசன் புகழ்-29-

மாறன் பணித்த மறை யுணர்ந்தோனை மதியிலியேன்
தேறும்படி என் மனம் புகுந்தானைத் திசை யனைத்தும் ஏறும் குணனை –46-

தென் குருகை வள்ளல் வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமானுசன் தன்னியல்வு கண்டே – 54- –

திரு வாய் மொழியின் மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் மா மலராள் புணர்ந்த பொன் மார்பன்
பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும் குணம் திகழ் கொண்டல் இராமானுசன் என்னும் குலக் கொழுந்தே – -60 –

பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்–64-

—–

குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத வன்பன் –2-

நீலன் தனக்கு உலகில் இனியானை–17-

கலைப் பெருமாள் ஒலி மிக்க பாடலைக் வுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலி மிக்க சீயம் இராமானுசன் –88-

—-

பொய்கைப் பிரான் –அன்று எரித்த திரு விளக்கைத் தன் திரு உள்ளத்தே இருத்தும் பரமன் -8-

பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து உறைய வைத்து ஆளும் இராமானுசன் -9-

மழிசைக்கு இறைவன் இணை அடிப் போது அடங்கும் இதயத்து இராமானுசன் -12-

சீரரங்கத் தய்யன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா மெய்யன்–13-

கொல்லி காவகன் சொல் பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே துதிக்கும் பரமன்–14-

பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள் பேராத வுள்ளத்து இராமானுசன் தன் பிறங்கிய சீர்–15-

சூடிக் கொடுத்தவள் தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல் –16-

சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை யில்லா வற நெறி யாவும் தெரிந்தவன்–44-

—————

ஸ்ரீ ஸ்வாமி அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்திகள் –

தொல் உலகில் மன் பல் உயிர் கட்கு இறையவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் இராமானுசன் என்னை ஆண்டனனே – -30 –

நான்கினும் கண்ணனுக்கே யாமது காமம் அறம் பொருள் வீடி தற்கென்று உரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே -40 –

மா மலராள் நாயகன் எல்லா வுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
தூயவன் தீதில் இராமானுசன் தொல்லருள் சுரந்தே -42 –

இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத் தறம் செப்பும் அண்ணல் இராமானுசன்–47-

கருதரிய பற் பல்லுயிர்களும் பல்லுலகி யாவும் பரன தென்னும் நற் பொருள் தன்னை
இந்நானிலத்தே வந்து நாட்டினனே – -53 –

உயிர்கள் மெய் விட்டு ஆதிப் பிரானோடு ஒன்றாம் என்று சொல்லும் அவ்வல்லல் எல்லாம்
வாதில் வென்றான் எம் இராமானுசன் மெய்ம் மதிக் கடலே – 58-

தன்னை வணங்க வைத்த கரண மிவை வுமக் கன்று என்று இராமானுசன் உயிர் கட்
கரணங்கு அமைத்திலனேல் அரணார் மற்று இவ் வார் உயிர்க்கே – 67- –

மாயன் அன்று ஐவர் தெய்வத் தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன விராமானுசனை–68-

வண்மை யினாலும் தன் மாதகவாலும் மதி புரையும் தண்மை யினாலும் இத்தாரணி யோர்கட்குத் தான் சரணாய்
உண்மை நன் ஞானம் உரைத்த விராமானுசனை–73-

இந்தப் பூதலத்தே மெய்யைப் புரக்கும் இராமானுசன் –79-

தான் ஈண்டிய சீர் அருள் சுரந் தெல்லாவுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
பொருள் சுரந்தான் எம்மிராமானுசன் மிக்க புண்ணியனே – – -91 –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –108–அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாக மன்னும் பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும்-இத்யாதி –

June 5, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

நிகமத்தில்
இப்ப்ரபந்த ஆரம்பத்திலே
ஸ்ரீ இராமானுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ -1 – என்ற ப்ராப்யம்
தமக்கு யாவதாத்மபாவியாம்படி கை புகுருகையும் –
அந்த ப்ராப்ய ருசி ரூப பக்தி பௌஷ்கல்யமே தமக்கு அபேஷிதமாகையாலே –
தத் உபய சித்யர்த்தமாக ஸ்ரீ ஆகையாலே –
தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு என்றும் சார்வு -ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி-100 –என்கிறபடியே
சர்வாத்மாக்களுக்கும் என்றும் ஒக்க சார்வாய் -சம்பத் ப்ரதையான ஸ்ரீ பெரிய பிராட்டியாரை ஆஸ்ரயிப்போம்-என்கிறார் .

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

ஸ்ரீ மதே ரம்ய ஜாமாத்ர முநயே விததே நம யச்மர்திஸ் சர்வ ஸித்தீ நாமந்தராய நிவர்ரணே –
நிகமத்தில் –
கீழ் இரண்டு பாட்டிலும் ஸ்ரீ எம்பெருமானார் தம்மை நிர்ஹேதுகமாக அபிமானித்து தம்முடைய திரு உள்ளத்திலே
எழுந்து அருளி இருந்து நித்ய வாசம் பண்ணுகிற படியையும் –
அநந்தரம் தமக்கு ததீய பர்யந்தமாக ப்ரேமம் பிறந்து -அவர்கள் விஷயத்தில் அசேஷ சேஷ வ்ர்த்திகளும்
பண்ணிக் கொண்டு போரும்படி என்னை கடாஷித்து அருள வேணும் என்று தம்முடைய அபிமத்தை அருளிச் செய்து –
இப்பாட்டிலே –
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகள் ஆகிற செவ்விப்பூவை நம்முடைய தலை மேலே கலம்பகன் மாலை அலங்கரிப்பாரைப் போலே
அலங்கரித்து ஸ்தாவர பிரதிஷ்டையாக நிறுத்தி அருளினார் ஆகையாலே –அந்த பரிக்ரஹ அதிசயத்தை கொண்டு
திவ்ய தம்பதிகளான- ஸ்ரீ -ஸ்ரீயபதிகளை மங்களா சாசனம் பண்ணுவோம் என்று
பக்தி தத்வம் எல்லாம் தன்னளவிலே குடி கொண்டது என்னும்படி அத்ய அபி வர்த்தமான
தம்முடைய திரு உள்ளத்தோடு கூடி-பலத்தை சொல்லித் தலைக் கட்டுகிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

இந்தப் பிரபந்தத்தைப் பூர்த்தி செய்பவராய்த்-தொடங்கும் போது –
ஸ்ரீ இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ -என்று
தாம் அருளிச் செய்த பேறு– தமக்கு ஆத்மா உள்ள அளவும் கைப்படவும் –
அப் பேற்றினைப் பெறும் வேட்கை வடிவமான பக்தி தழைக்கவும் -விரும்பி-
அவ் விரண்டும் தமக்கு கை கூடுவதற்காக –ஸ்ரீ தேவி யாதலின் -அனைவராலும் ஆச்ரயிக்கப் படுவாளாய் –
அதனுக்கு ஏற்ப -தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு என்றும் சார்வு -ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி – 100-என்றபடி
உயரினம் அனைத்துக்கும் சார்வாகிச் செல்வம் அளிப்பவளான-ஸ்ரீ பெரிய பிராட்டியாரை ஆஸ்ரயிப்போம் என்று
ஸ்ரீ அமுதனார் தம் நெஞ்சை நோக்கிக் கூறுகிறார்

அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாக மன்னும்
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமானுசனடிப் பூ மன்னவே – – 108-

பத உரை –
நெஞ்சே -மனமே
பக்தி யெல்லாம் –-பக்தி யானது முழுதும்
தங்கியது என்ன -நம்மிடமே குடி கொண்டு விட்டது என்று சொல்லும்படி
தழைத்து -செழித்து
பொங்கிய -விரிவடைந்த
கீர்த்தி -புகழ் வாய்ந்த
இராமானுசன் -ஸ்ரீ எம்பெருமானார் உடைய
அடிப்பூ-திருவடிகளாகிற மலர்
நம் தலை மிசை –நம்முடைய தலையின் மீது
மன்ன-பொருந்தி எப்பொழுதும் இருக்கும் படியாக
அம் கயல் -அழகிய மீன்கள்
பாய் -பாய்கிற
வயல் -வயல்களை உடைய
தென் அரங்கன் -அழகிய ஸ்ரீ திரு வரங்கத்தின் கண் உள்ள ஸ்ரீ பெரிய பெருமாள் உடைய
அணி ஆகம் -அழகிய திரு மார்பிலே
மன்னும் -எப்பொழுதும் பொருந்தி இருப்பவளும் –
பங்கயம் -தாமரை என்னும்
மா மலர் -சீரிய பூவிலே பிறப்பினை உடையவளுமான
பாவையை -பெண் மணியான ஸ்ரீ ரங்க நாச்சியாரை
போற்றுதும் -ஆஸ்ரயிப்போம்

வியாக்யானம் –
நெஞ்சே -பக்தி தத்வமானது
(ப்ராப்ய ருசியை பக்தி என்கிறார் -கைங்கர்ய உபயோகி என்றபடி -போஜனத்துக்கு ஷூத்து போலே )
நிரவசேஷமாக -(மிச்சம் இல்லாமல் முழுவதுமாக )-நம் அளவிலே குடி கொண்டது என்னும்படி
சம்ருத்தமாய் விஸ்ருதையான கீர்த்தியை உடையரான எம்பெருமானார் உடைய திருவடிகள் ஆகிற செவ்விப் பூ –
(ப்ராப்ய ருசி என்னும் செடி தழைக்க -ராமானுசன் அடி பூ முளைக்க-அத்தை சென்னியில் சூடுவோம் -என்றபடி )
மயிர் கழுவிப் பூ சூட விருப்பாரைப் போலே எப்போதோ என்று
ஆசைப் பட்டு இருக்கிற நம் தலை மேலே நித்ய வாசம் பண்ணும்படியாக –
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கம் -திரு வாய் மொழி -7 2-1- -என்கிறபடியே
ஜல சம்ருதியாலே அழகிய தர்சநீயமான கோயல்கள் உகளா நின்றுள்ள -வயல்களை உடைத்தாய் –தர்சநீயமான கோயிலையே
தமக்கு நிரூபகமாக உடையரான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய அழகிய திரு மார்விலே –
இறையும் அகலகில்லேன் -ஸ்ரீ திரு வாய் மொழி -6 10-10 – என்று நித்ய வாசம் பண்ணா நிற்பாளாய்–
ஸ்லாக்கியமான தாமரைப் பூவை பிறப்பிடமாக வுடையாளாய் – நிரூபாதிக ஸ்த்ரீத்வத்தை வுடையாளான
ஸ்ரீ ரங்க நாச்சியாரை ஆஸ்ரயிப்போம் —

போற்றுதல் -வணங்குதல் –புகழ்தலுமாம்-

அடியில் பூ மன்னு மாது – 1-என்றார் –இங்கே பங்கய மா மலர் பாவை -108- என்றார்
அங்கே பொருந்திய – – என்றார் –இங்கு –அணி யாக மன்னும் — – என்றார்
அங்கு –இராமானுசன் உன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ –1- – என்றார்–
இங்கு –தலை மிசையே இராமானுசனடிப் பூ மன்ன – 108- என்றார் –
அங்கு நெஞ்சே – 1- என்று திரு உள்ளத்தையும் கூட்டிக் கொண்டு உபக்ரமித்தார் –
இங்கு —நெஞ்சே – 108- என்று திரு உள்ளத்தோடு கூட அனுசந்தித்து தலைக் கட்டினார் .

இத்தால்
1-ப்ராப்ய ருசி வ்ருத்தியும்–
ப்ராப்ய சித்தியும் ஆகிற –ஸ்வரூப அநு ரூப சம்பத் சித்திக்கடி –
சகல ஆத்மாக்களுக்கும் -தத் தத் அதிகார அநு குணமாக அபேஷித்த சம்பத் விசேஷங்களை-ஸ்வ கடாஷ விசேஷங்களாலே
உண்டாக்கி யருளும் –ஸ்ரீ பெரிய பிராட்டியார் என்றும் –
2-ப்ராப்யம் தான் ஸ்ரீ ஆசார்ய சரணாரவிந்தம் -என்றும் –
3-அத்ரபரத்ர சாபி நித்யம் -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் – 2- என்கிறபடியே
யாவதாத்மம் விச்லேஷம் அற்று இருக்கை என்றும் –
4-இதுக்கு அதிகாரிகளும் இந்த ப்ராப்யத்தில் சஹ்ருதயமான ப்ராவண்யம் உடையவர்கள் என்றும் சொல்லிற்றாயிற்று –

பங்கய மா மலர் பாவையை போற்றி -அனைத்தும் பெறலாமே –
மண்டல அந்தாதி -திருவில் ஆரம்பித்து திருவில் முடித்து
வீட்டுடைத்த தலைவி தானே ப்ராப்யம் அருளுவாள்-ஆச்சார்ய கைங்கர்யம் -யவாதாத்மபாவி –
ஸ்ரீ பிராட்டிக்கு விசேஷணம் ஸ்ரீ தென்னரங்கன் -பிராட்டி இருப்பிடம் என்றே ஸ்ரீ தென்னரங்கன் –
பிரபை-ஸூரியன்–ஆகம் மன்னும் -மாது பொருந்திய மார்பன் –
பாவையைப் போற்றுதும் -திவ்ய தம்பதியைப் போற்றுதும் -சூழ்ந்து இருந்து ஏத்துவோம் பல்லாண்டு
சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ –இதுவே கர்தவ்யம் -சதாசார்ய பிரசாதத்தால் -திவ்ய தேச கைங்கர்யம் –
நிர்ஹேதுகமாக பரம கிருபையால் பரகத ஸ்வீகார பாத்திரமான பின்பு மங்களா சாசன பரராக இருந்தோம் என்று
திரு உள்ளத்தை குறித்து அருளிச் செய்து இத்தால்
நாமும் இப்பிரபந்தம் சொல்லி இப் பேறு பெறுவோம் என்று அருளிச் செய்கிறார் –
பதஞ்சலி யோகம் பலன் உத்சவங்கள் மூலம் நாம் பெரும் படி பண்ணி அருளிய ஸ்ரீ ஸ்வாமி கீர்த்தி எண் திசையும் பரவி உள்ளதே
திருவடி பூ சென்னியில் மன்ன வேண்டி யன்றோ -பூ மன்னு மாது மார்பிலே பொருந்தி இறையும் அகலகில்லேன் என்று
நித்ய வாசம் செய்து அருளுகிறாள் –

இப் பிரபந்த ஆதியிலே தமக்கு உசாத் துணையாக தம்முடைய மனசைக் கூட்டிக் கொண்டு –
ஸ்ரீ எம்பெருமானார் உடைய திரு நாமத்தை சொல்லுவோம் வா என்று -உத்யோகித்தபடியே செய்து –
அத்தாலே தமக்கு பலித்த அம்சத்தை -இருவர் கூடி ஒரு கார்யத்தை பண்ண ஒருப்பட்டு -அது தலைக் கட்டினவாறே
அதிலே ஒருவன் தனக்கு தோழனான இரண்டாம் அவனுக்கு அந்த செய்தியை சொல்லுமா போலே
இவரும் தமக்கு சகாவான திரு உள்ளத்தை சம்போதித்து சொல்லுகிறார் –
அடியிலே நெஞ்சு என்னும் திரு உள்ளத்தைக் கூட்டிக் கொண்டு உபக்ரமித்தார் ஆகையாலே –
இங்கே நெஞ்சே என்று தம் திரு உள்ளதோடு கூடி அனுபவித்து தலை கட்டுகிறார் –

1-பத்தி எல்லாம் தங்கிய தென்னத்து தழைத்து நெஞ்சே –
பக்தி சப்த வாச்யம் எல்லாம் ஏக ரூபமாய் கொண்டு உன்னளவிலே சேர்ந்து குடி கொண்டு இருந்தது என்னும் படி
சம்ர்த்தமாய் இருக்கிற நெஞ்சே –
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு -உனதடிப் போதில் ஒண் சீராம்-தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி
நின்பால் –என்று இவர் தாமே தம்முடைய திரு உள்ளம் பக்த பரிதம் என்னும் இடத்தை கீழே அருளிச் செய்தார் இறே –

அன்றிக்கே –
2–பக்தி எல்லாம் தங்கிய தென்னத்து தழைத்து -என்கிற இத்தை
ஸ்ரீ எம்பருமானார் திருவடிகளுக்கு விசேஷணம் ஆக்கவுமாம்– –
பக்தி எல்லாம் தங்கிய தென்னத் தழைத்து -சஹ்யத்தில் ஜலம் எல்லாம் கீழே குதித்து ஒரு மடுவாகத் தங்கினால் போலே –
என்னுடைய பக்தி ரசம் எல்லாம் பரம பக்தி ரூபமாய்க் கொண்டு பரி பக்குவமாய் படிந்து –
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே தங்கிற்று -என்னும் படி தழைத்து இருக்கிற –

(பக்தி தங்கினது நெஞ்சிலும் ஸ்ரீ எம்பெருமானார் இடமும் என்று இரண்டு நிர்வாகம் –
ஸ்ரீ ஸ்வாமி தானே ஸ்ரீ அமுதனார் திரு உள்ளத்திலே ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ திருவேங்கடம் ஸ்ரீ திருமால் இரும் சோலை
அவை தன்னோடும் அன்றோ நித்ய வாசம் செய்து அருளுகிறார் )

பொங்கிய கீர்த்தி —
ஏய்ந்த பெரும் கீர்த்தி -என்கிறபடியே பரம பதத்தின் அளவும் வளர்ந்து கொண்டு ஓங்கி இருக்கிற கீர்த்தியை உடையரான –

இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானாருடைய –

உபக்ரமத்திலே -கலை இலங்கு மொழியாளர் –பல்கலையோர் தாம் மன்ன வந்த இராமானுசன் -என்கிறார் ஆகையாலே –
இங்கு பொங்கிய கீர்த்தி இராமானுசன் -என்கிறார் –
அடிப்பூ–கீழ் சொன்ன தழைப்பதோடு கூடி இருக்கிற ஸ்ரீ எம்பெருமானாருடைய-திருவடித் தாமரைகள் –
அடியிலே சரணாரவிந்தம் -என்கிறார் ஆகையாலே -இங்கே அடிப்பூ என்கிறார் -(திருவடியில் உபக்ரமித்து உப சம்ஹாரம் )
யாவதாத்மபாவி ஸூபிரதிஷ்டமாய் இருக்கையாலே —மன்னவே ––

அம் கயல் பாய் வயல் தென்னரங்கன் –
அணி யாகம் மன்னும் -செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய் -என்கிறபடியே உபய காவேரி களினுடையவும்
ஜல சம்ர்த்தியாலே வளர்ந்த மத்ச்யங்கள் உகளா நின்றுள்ள -கேதாரங்களாலே சூழப்பட்டு -அத்யந்த தர்சநீயமான –
அரங்கத்துக்கு நிர்வாஹனாய் -அத்தையே நிரூபகமாக உடையரான -ஸ்ரீ பெரிய பெருமாளையும் –
அவர் தம்முடைய அழகிய திரு மார்பிலே அலங்கார பூதையாய் -இறையும் அகலகில்லேன் -என்றும்
அப்ரமேயம் ஹிதத் தேஜோ யச்யஸா ஜனகாத்மஜா -என்கிறபடியே பிரபையும் ப்ரபாவனையும் போலே –
அப்ர்தக் சித்தையாய்-ஸ்வரூப நிரூபகையாய் -கொண்டு நித்ய வாசம் பண்ணுமவளாய் –
உபக்ரமத்திலே –பொருந்திய மார்பன் -என்றார் ஆகையாலே –இங்கே மன்னும் -என்கிறார் –

அம் -அழகு
கயல்-மத்ஸ்யம் –
பாய்தல்-சலித்தல்
வயல்-கழனி
அணி -அலங்காரம் –
ஆகம்-மார்பு
மன்னுதல் -பொருந்துதல் –

பங்கய மா மலர் பாவையை –
தாமரை மலரிலே பெரிய பிராட்டியார் அவதரிக்கையாலே அத்தை கடாஷித்து அதற்கு ஒரு மகத்வத்தை சொல்லுகிறார் –
அப்படிப்பட்ட தாமரைப்பூவை பிறப்பிடமாகவும் நிரூபகமாவும் உடையவளாய் –
பால்ய யவன மத்யச்தையான ஸ்ரீ ரெங்க நாயகியாரையும் -அலர்மேல் மங்கை என்னக் கடவது இறே –
பாவை -ஸ்திரீ –
அடியிலே பூ மன்னு மாது என்றார் ஆகையாலே இங்கு பங்கய மாமலர் பாவையை -என்கிறார் –

போற்றுதும் –
இப்படி இருந்துள்ள திவ்ய தம்பதிகளை – மங்களா சாசனம் பண்ணுவோம் –
போற்றுதல்-புகழ்தல் –

ஆசார்யன் சிஷ்யனை திருத்துவது –
சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டு -என்கிறபடியே -பகவத் விஷயத்திலே யாவதாத்மா பாவியாக-
மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு போருகை -இறே –
உகந்து அருளின நிலங்களிலே-ஆதர அதிசயமும் -மங்களா சாசனமும் சதாசார்ய பிரசாதத்தாலே வர்த்திக்கும்படி
பண்ணிக்-கொண்டு போரக் கடவன் -என்று ஸ்ரீ வசன பூஷணத்திலே ஸ்ரீ பிள்ளையும் அருளிச் செய்தார் இறே –

ஆக இத்தாலே –
ஸ்ரீ எம்பெருமானார் தம்முடைய நிர்ஹேதுக பரம கிருபையாலே பரகத ஸ்வீகார பாத்ரனான-பின்பு –
அதற்கு பலமாக -இப்படி மங்களா சாசன பரராய் இருந்தோம் என்று –
தாம் பெற்ற பேற்றை-தம் திரு உள்ளத்தை குறித்து அருளிச் செய்து -இப்பிரபந்தத்தை தலை கட்டி அருளினார் ஆய்த்து –

அம் கயல் –போற்றுதும் –
நெஞ்சே பக்தி யெல்லாம் தங்கியது –என்னத் தழைத்து -நம் தலை மிசை -அடிப் பூ மன்ன
பாவையைப் போற்றுதும் -என்று கூட்டிப் பொருள் கொள்க –
ஸ்ரீ திருவரங்கத்தில் நீர் வளம் மிக்கு இருத்தலின் வயல்களிலும் நீர் வற்றாமையினால் அழகிய மீன்கள் –
ஓங்கு பெரும் சென்னலூடு கயல் உகள -ஸ்ரீ திருப்பாவை – 3- என்றபடி உகளா நிற்கின்றன .
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கம் -என்றார் ஸ்ரீ நம் ஆழ்வாரும் .
ஸ்ரீ தென்னரங்கன் அணி ஆகத்தில் இறையும் அகலகில்லாது மகிழ்ந்து மன்னி உறைகிறாள் –பாவை
வயல்களிலே நீரை விட்டு அகலகில்லாது களித்து உகளா நிற்கின்றன -கயல்கள் –
ஜலான் மத்ஸ்யா விவோத்திரு தெவ்-என்று மீனின் இயல்பு கொண்டவளாகப் ஸ்ரீ பிராட்டியும் கூறப்படுவது காண்க .
நீர் உளது எனின் உளது மீன்
மார்பு உளது எனின் உளள் ஸ்ரீ மா மலர்ப் பாவை
நாரத்தை நீரை பற்றி உள்ளன கயல்கள்
ஸ்ரீ நாராயணனைப் பற்றி உளள் ஸ்ரீ பங்கயப் பாவை –

அணி யாகம் மன்னும் -என்கையாலே பகவானை-ஸ்ரயதே –ஆஸ்ரயிக்கிறாள் என்னும் பொருளும்-
போற்றுதும் -என்கையாலே சேதனர்கள் ஆகிற நம்மாலே ஆஸ்ரயிக்கப் படுகிறாள்-என்னும் பொருளும்
ஸ்ரீ சப்தத்துக்கு காட்டப் பட்டன –
இதனால் சேதனர்கள் உடைய விருப்பத்தை இறைவனைக் கொண்டு நிறைவேற்றித் தரும் தன்மை –
புருஷகாரமாய் இருக்கும் தன்மை-ஸ்ரீ பிராட்டி இடம் உள்ளமை உணர்த்தப் படுகிறது ..
தாமரையைப் பிறப்பிடமாக உடையவள் அதனை விட்டு மார்பிலே மன்னி விட்டாள் –
இதனை விட்டு இனி அகலாள்-அதற்கு ஹேது மார்பின் அழகுடைமை
இது தோற்ற அணி ஆகம் -என்றார் –
பாவை பதுமை போல கணவனுக்கு பர தந்திரையாய் இருத்தல் பற்றி -பெண்களுக்கு உவமை ஆகு பெயர் –

ஸ்ரீ தென்னரங்கனை போற்றிடில் ஸ்வ தந்த்ரன் ஆதலின் -ஒரு கால் நம்மை உதறித் தள்ளவும் கூடும் –
ஸ்ரீ பாவையைப் போற்றிடிலோ -உதறித் தள்ள வழி இல்லை –
ஸ்ரீ பகவானுக்கு பர தந்த்ரையாய் -அவனுக்கு குறை நேராதவாறு நடந்து கொள்வாள்
ஆதலின் –போற்றுதல் பயன் பெற்றே தீரும் -என்பது கருத்து .

பக்தி யெல்லாம் தங்கியது என்னத் தழைத்து –
இங்கே பக்தி என்பது பேற்றினைப் பெறற்கு சாதனமாகக் கைக் கொள்ளும் சாதனா பக்தி யன்று -.
போஜனத்திற்கு பசி போலே பேற்றினைத் துய்த்துதற்கு -தேவைப் படுகின்ற வேட்கை யாகும் –
இது ப்ராப்ய ருசி -எனப்படும் –
அந்த ப்ராப்ய ருசி எந்த விதம் யெல்லாம் வர வேண்டுமோ -எவ்வளவு வர வேண்டுமோ –
அவ்விதம் அவ்வளவு -முழுவதும் நிறைவேற வேண்டும் .
பிராப்ய ருசி முழுதும் நம்மிடம் குடி புகுந்து விட்டது -என்று சொல்லலாம்படி தழைத்து இருக்க வேண்டும் –
என்று அமுதனார் ஆசைப் படுகிறார்

இவர்க்கு பிராப்யம் -ஸ்ரீ எம்பெருமானார் அடிப்பூ மன்னுதல் –
அதனுக்கு ஏற்ப பூரணமாக ப்ராப்ய ருசியை வேண்டுகிறார் .
தழைத்து மன்ன -என இயைக்க –
பசித்து உண்ண -என்பது போன்றது இது –
நெஞ்சே -பேற்றினைப் பெற அவாவுகின்ற நெஞ்சே
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனதடிப் போதில் ஒண் சீராம் தெளிதேன் உண்டு அமர்ந்திட வேண்டி -100 –
என்று இப் பேற்றின் சுவையைத் துய்ப்பதற்கு -தம் நெஞ்சு முற்பட்டதை முன்னரே கூறினார் அன்றோ –

நெஞ்சே சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ -என்று தொடங்கினவர்
நெஞ்சே நம் தலை மிசை அடிப்பூ மன்ன -என்று முடிக்கிறார் .
நம் தலை மிசை –அடிப்பூ மன்–நம் தலை மிசை -தலை குளித்து பூசூட விரும்புவர் போன்று சரணாரவிந்தம்
எப்போதோ என்று ஆசைப் பட்டுக் கொண்டு இருக்கிற நம் தலையிலே -என்றபடி
பொங்கிய கீர்த்தி -பரந்த புகழ் –திக்குற்ற கீர்த்தி –என்றார் முன்னம் –

அடிப்பூ நம் தலைமிசை மன்ன –மன்னும் பாவையைப் போற்றுதும் -என்கிறார் –
தான் அணி யாகத்தில் மன்னி இருப்பது போலே நம் தலை மிசை அடிப்பூ மன்னி இருக்கும்படி
செய்வதற்காக பாவையை ஆஸ்ரயிப்போம் என்கிறார் .
போற்றுதல்-ஆஸ்ரயித்தல்-புகழுதலும் ஆம் –
உயரினங்கள் அனைத்துக்கும் தம் தம் தகுதிக்கு ஏற்ப -கோரும் அவ்வச் செல்வங்களை –
தன கருணோக்தங்களால் உண்டாக்கி -அளிக்க வல்லவளான ஸ்ரீ பிராட்டியே
சரம பர்வ நிஷ்டர் – தம் தகுதிக்கு ஏற்ப கோரும் ப்ராப்ய ருசி எனப்படும் –
பக்தியின் வளப்பமும்-ப்ராப்யமான -அடிப்பூவுமாகிற செல்வங்களை தந்து அருளால் வேண்டும் என்பதையும் –
சரம பர்வ நிஷ்டருக்கு ப்ராப்யம் ஆசார்ய சரணாரவிந்தம் என்பதையும் –
அது –அதர பரத்ர சாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதியம் –ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -3 –
இங்கும் பரம பதத்திலும் எவருடைய திருவடிகள் என்றும் எனது சரணாம் -என்றபடி
பிரிவின்றி நிரந்தரமாய் உள்ளதொன்று என்பதையும்
இத்தகைய பேற்றினில் மிக்க ஈடுபாடு உடையோர் ஆசார்ய நிஷ்டைக்கு அதிகாரிகள்
என்பதையும் இங்கே ஸ்ரீ அமுதனார் காட்டி அருளினார் ஆயிற்று –

வந்து அருளி நெஞ்சில் இடம் கொண்டதுக்கு இதுவே பலன்
சரணார விந்தம் நாம் மன்னி வாழ -அடி பூ மன்ன -பலன் பாவையை போற்றுவதே என்கிறார்–

முதல் பாசுரத்தில் தொடங்கிய வண்ணமே -இந்த பாசுரத்திலும் முடித்து இருக்கும் அழகுகண்டு களிக்கத் தக்கது .-
பூ மன்னு மாது தொடக்கத்தில் வருகிறாள் –
பங்கய மா மலர் பாவை முடிவிலே வருகிறாள் .
அங்கே மார்பிலே போருந்தினவல் வருகிறாள்
இங்கே அணி யாகத்திலே மன்னுமவள் வருகிறாள் .
அங்கே மன்னி வாழ சரணாரவிந்தம் வருகிறது –
இங்கே மன்ன அடிப்பூ முடியிலே அடியிட வருகிறது –
இரண்டு இடங்களிலும் நெஞ்சு பாங்காய் அமைகிறது .
இராமானுசன் சரணாரவிந்தம் -நம் தலை மிசை மன்ன -மலர் சூடி மங்கள வாழ்க்கை பெற்று –
நிரந்தரமாக வீற்று இருப்பதற்கு -மங்கள வடிவினளான மலர் மகளை போற்றிடுவோம் என்பது
இந்தப் பிரபந்தத்தின் திரண்ட பொருளாகும்

குருகூரன் மாறன் அடி பணிந்துய்ந்த குருவரன் தான்-தரு கூரன் பார்ந்த திருமலை நல்லவன் தந்தனனால்-
குருகூரர் நாதன் சரண் சேரமுதன் குலவு தமிழ்-முருகூரந்தாதி யமிழ்தினை இப்பார் முழுதுக்குமே – –

குருவரன் -சிறந்த ஆசாரினாகிய ஸ்ரீ எம்பெருமானார் –
கூரன்பு -மிக்க அன்பு
ஆர்தல் -நிறைதல்
திருமலை நல்லவன் -ஸ்ரீ திரு மலை நல்லான்
குருகூர் நாதன்-குருவான ஸ்ரீ கூரத் ஆழ்வான்
அமுதன் -ஸ்ரீ திருவரங்கத் தமுதனார்
குலவுதல்-கொண்டாடுதல் -பழகுதலுமாம்
முருகு -மணம் -தேனுமாம் –
நல்லவன் அமிழ்தினை இப்பார் முழுதுக்கும் தந்தனன் -என்று கூட்டி முடிக்க –

——————–

தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு என்றும் சார்வு -மூன்றாம் திருவந்தாதி – 100-

செங்கயல் பாய் நீர்த் திருவரங்கம் -திரு வாய் மொழி -7 2-1-

நங்கள் திரு (இரண்டாம் திருவந்தாதி -56-திருமாலை முன் பேணிக் காட்டும் -பொன் மேனி காட்டா முன் ) என்றும்
உன் திரு (திரு வாய் மொழி 10-10-2 -மார்வத்து மாலை -உனக்கே திரு என்றும் உன் திரு -விஷ்ணுவுக்கும் சொத்து) –
என்னலாம் படி இரண்டு இடத்திலும் விட ஒண்ணாத பந்தம் உண்டு ..

செல்வர் பெரியர் (நாய்ச்சியார் திருமொழி 10-10-சிறு மானிடர் நாம் )
அவன் எவ் இடத்தான் நான் யார் ( அம்மான் ஆழிப் பிரான்-திரு வாய் மொழி 5-1-7 ) என்றும் –
செய் வினையோ பெரிதால் (திரு வாய் மொழி 4-7-1 ) என்று
(சீலமில்லாச் சிறியனேலும்–ஆத்மா அணு மட்டுமே உள்ளது ஞானம் மறைந்து -செய்வினையோ தத்வத்ரயத்தை விட பெரியதாக இருப்பதால் -)
அவன் பெருமையையும் , தங்கள் தண்மையையும் அபராதத்தின் கனத்தையும் நினைத்து அஞ்சினவர்கள்

இலக்குமணனோடு மைதிலியும் ( பெரிய திரு மொழி 2-3-7 ) என்னும் படி ,
தன்னோடு ஒரு கோவையான இளைய பெருமாளோ பாதி
கீழ் மகன் மற்றோரு சாதி ( பெரிய திருமொழி 5-8-1 ) பிரதம பதார்த்தம் ..

சிறு காக்கை ( பெரியாழ்வார் திரு மொழி 3-10-6 )
புன்மையாளன் (பெரிய திரு மொழி 10-2-8 )
அடியார் ( பெரியாழ்வார் திரு மொழி 4-9-2 ) என்று தண்மை பாராமல்

நாடும் காடும் மேடும் கல்லும் கடலும் ஒரு வெளுப்பாம் படி ,
பங்கயத்தாள் திரு வருள் (திரு வாய் மொழி 9-2-1 ) என்கிற தன்னுடைய காருண்ய வர்ஷத்தைச் சொல்லுகிற

மழைக் கண்களுடைய ( திரு விருத்தம் -52 )
பார் வண்ண மட மங்கையாய் ( ) அசரண்ய சரண்யையான இவளே நமக்கு புகல் என்று
புகுந்து கைங்கர்ய பிராப்த உபாயத்தில் அபேக்ஷிக்கல் தோற்ற விண்ணப்பம் செய்யும் வார்த்தைகளைக் கேட்டு –

அஸ்து தே என்று தொடங்கி இவர்கள் வினைகள் தீர்த்து
தூவி சேர் அன்னமான (பெரிய திருமொழி 3-7-9 ) தன் சிறகிலே இட்டுக் கொண்டு ,
ஈஸ்வரன் இத்தலையிலே பிழைகளை நினைத்து
எரி பொங்கி (நான்முகன் திருவந்தாதி -21 )
அழல விழித்து (பெரியாழ்வார் திருமொழி 1-8-5 )
சலம் புரிந்து ( திரு நெடும் தாண்டகம் -6 ) அங்கு அருள் இன்றிக்கே சீறி – கலங்கின அளவிலே

நன் நெஞ்சவன்ன மன்னமை தோற்ற (பெரிய திருமொழி 7-2-7 ) கால் வாங்கி கடக்க நின்று இரண்டு தலையும் பட்டது பட
நம் கோலரியான குடி இருப்பை முதல் திருத்த வேணும் என்று பார்த்து

ஹிரண்ய வர்ணனையான தன்னுடைய பாண் மொழிகளாலே (பெரியாழ்வார் திரு மொழி 3-10-5 )
பிரிய ஹிதங்கள் குலையாதபடி இடம் அற வார்த்தை சொல்லி ஆர விட்டு

வடி கோல வாள் நெடும் கண்களாலே ( ) தேற்றி

திரு மகட்கே தீர்ந்த வாறு ( முதல் திரு வந்தாதி -42 ) என்னும் படி
திரு உள்ளம் மாறாடின அளவிலே ஓடம் ஏற்றி கூலி கொள்வாரைப் போல அபராதங்களைப் பொறுப்பித்து

பொன் பாவை ஆனமை (நான் முகன் திருவந்தாதி -59 ) தோற்றும் படி விளக்குப் பொன் போல
இரண்டு தலையையும் பொருந்த விட்டு

நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் (திரு வாய் மொழி 4-5-8 ) என்னும் படி ஏக ரசமாக்கி பின்பு
அந்தப்புரத்தில் ஆளாய் நின்று

இரந்து உரைப்பது உண்டு (திருச்சந்த விருத்தம்-101 )
வேறே கூறுவது உண்டு ( பெரிய திரு மொழி 6-3-7 )
நின்று கேட்டு அருளாய் (திரு விருத்தம் -1 )
போற்றும் பொருள் கேளாய் (திருப் பாவை -29 ) என்று இவன் விண்ணப்பம் செய்யும் வார்த்தைகளை

திரு மங்கை தங்கிய (நாய்ச்சியார் திரு மொழி -84)
என் திரு மார்வற்கு (திரு வாய் மொழி 6-8-10 )
ஒரு வாய் சொல் (திரு வாய் மொழி 1-4-7 )
என் வாய் மாற்றம் ( திரு வாய் மொழி 9-7-6) என்னும் படி சேர இருந்து
திருச் செவி சாத்துகையாலே ஸ் ருணோதி /ஸ்ரா வயதி -என்கிற இரண்டாலும்
புருஷகாரமான இவளுடைய செயல்களைச் சொல்லுகிறது ..

செய் தகவினுக்கு இல்லை கைம்மாறு ( பெரிய திருமொழி 5-8-2 ) என்று இரண்டு தலைக்கும் தலை தடுமாறாக உபகரித்து
தன் சொல் வழி போக வேண்டும் படியான திருவடியோடே மறுதலிக்கும் அவள்

தான் முயங்கும் படியான போக்கியதைக்குத் தோற்று (மூன்றாம் திருவந்தாதி -100 ) எத்தைச் செய்வோம் என்று தலை தடுமாறி

நின் அன்பின் வழி நின்று ( பெரியாழ்வார் திரு மொழி 3-10-7)
அதனின் பின்னே படர்ந்தான் ( பெரிய திரு மொழி 2-5-6 ) என்னும் படி ,

விளைவது அறியாதே முறுவலுக்குத் தோற்று தன் சொல் வழி வரும் அவனைப் பொறுப்பிக்கும்
என்னும் இடம் சொல்ல வேண்டா இறே ..

—————————————————————————————————————————————————–———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –107–இன்புற்ற சீலத்து இராமானுச என்றும் எவ்விடத்தும்-இத்யாதி –

June 4, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி தம் பக்கலிலே வ்யாமோஹத்தை பண்ணா நிற்கிற ஸ்ரீ எம்பெருமானார் உடைய திரு முகத்தைப் பார்த்து –
தேவரீருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுவது ஓன்று உண்டு -என்று தம்முடைய அபேஷிதத்தை விண்ணப்பம் செய்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டிலே ஸ்ரீ எம்பெருமானார் தம்முடைய திரு உள்ளத்திலே புகுந்து நிரதிசய ப்ரீதி யோடு கூட
நித்ய வாசம் பண்ணா நின்றார் -என்று தம் அளவிலே அவர் பண்ணின விஷயீ காரத்தை அனுசந்தித்து –
இதிலே
அப்படி பட்ட வியாமோஹத்தையும் நிரவதிக சௌசீல்யத்தையும் உடையவரே என்று சம்போதித்து –
அஸ்திகதமாய் நின்று நலிய கடவ வியாதிகளுக்கு பாஜநமான சரீரங்கள் தோறும் ஜநிப்பது மரிப்பதாய் கொண்டு –
அசங்க்யேயமான துக்கங்களை அனுபவித்து உரு மாய்ந்து முடியிலும் –சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும்—
தேவரீருக்கு அனந்யார்ஹராய் இருக்குமவர்கள் பக்கலிலே அதி வ்யாமுக்தனாய் -அவர்களுக்கு க்ரய விக்ரய அர்ஹனாய்
கொண்டு அடிமைப் படும் படி அடியேனைப் பண்ணி அருள வேண்டும் என்று தம்முடைய அபேஷிதத்தை விண்ணப்பம்-செய்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

தன்னுடைய மேன்மையைப் பாராது -எனது தண்ணிய இதயத்து உள்ளே இன்பமாய் இடம் கொண்டு இருக்க வேண்டுமானால் –
ஸ்ரீ எம்பெருமானாருக்கு என் மீது எவ்வளவு வ்யாமோஹம் இருக்க வேண்டும் என்று –
அவரது வ்யாமோஹத்திலும் சீல குணத்திலும் தாம் ஈடுபட்டமை தோற்ற – அவரை விளித்து –
தாம் ஒரு விண்ணப்பம் செய்யப் போவதாகச் சொல்லி –
எத்தகைய துன்பம் நேரும் காலத்திலும் தேவரீர் தொண்டர்கட்கு அன்புடன் நான் ஆட்படும்படி யாக
அருள் புரிய வேண்டும் என்று தமக்கு வேண்டியதை விண்ணப்பம் செய்கிறார் .

இன்புற்ற சீலத்து இராமானுச என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோய் உடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
துன்புற்றுவீயினும் சொல்லுவது ஓன்று உண்டு உன் தொண்டர்கட்கே
அன்புற்று இருக்கும்படி என்னை யாக்கி யங்கு யாட்படுத்தே – – – 107- –

பத உரை –
இன்புற்ற -தண்ணிய என் இதயத்தில் இடம் பெற்று ஆனந்தம் அடைந்த
சீலத்து -பழகும் இயல்பு வாயந்துள்ள
இராமானுச -ஸ்ரீ எம்பெருமானாரே
சொல்லுவது -தேவரீரிடம் விண்ணப்பம் செய்வது
ஓன்று உண்டு -ஒரு விஷயமிருக்கிறது
அது யாது எனில் –
என்பு உற்ற நோய் -எலும்பைப் பற்றி நின்று வருத்தும் நோய்கள் உடையதான
உடல் தோறும் -ஒவ்வொரு சரீரத்திலும்
பிறந்திறந்து -பிறப்பதும் சாவதுமாய்
எண் அறிய -எண் இல்லாத
துன்பு உற்று –துன்பம் அடைந்து
வீயினும் -ஒழிந்தாலும்
என்றும் -எக் காலத்திலும்
எவ்விடத்தும் -எல்லா இடத்திலும்
உன் தொண்டர்கட்கே -தேவரீருடைய அடியார்களுக்கே
அன்புற்று இருக்கும்படி -அன்பு உடையேனாய் இருக்கும்படியாக
ஆக்கி -செய்து
என்னை-அடியேனை
அங்கு -அவ்வடியார்கள் திறத்திலே
ஆட்படுத்து -அடிமையாம்படி பண்ணி யருள வேணும்

வியாக்யானம் –
எத்தனையேனும் தண்ணியனான என்னுடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்து – அது தன்னைப் பெறாப் பேறாக நினைத்து –
ஆநந்த நிர்பரராய் -எழுந்து அருளி இருக்கிற சௌசீல்யத்தை உடையவரே –
இப்படி இருக்கிற தேவரீருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுவது-ஒரு கார்யம் உண்டு –
அது ஏது என்னில் –
ஐயார் கண்டமடைக்கிலும் நின் கழல் எய்யாது ஏத்த –என்னுமா போலே -ஸ்ரீ திரு வாய் மொழி -2 9-3 – –
தோற்புரையே போமதன்றியிலே அஸ்த்திகதமாய் இன்று நலிய கடவ வியாதிகளுக்கு பாஜனமான சரீரங்கள் தோறும் –
ஜநிப்பது மரிப்பதாய் – அசங்க்யேய துக்கங்களை அனுபவித்து முடியிலும்
சர்வ காலத்திலும் -சர்வ தேசத்திலும் -தேவரீருக்கு அனந்யார்ஹ்ராய் இருக்கும் அவர்களுக்கே மாறுபாடுருவின
ஸ்நேஹத்தை உடையேனாய் இருக்கும்படியாக செய்து என்னை அவர்கள் திருவடிகளிலே அடிமையாம்படி பண்ணி யருள வேணும் .
இதுவே அடியேனுக்கு புருஷார்த்தம் -என்று கருத்து .

இன்பு -சுகம்
சீலமாவது -பெரியவன் தண்ணியன் உடன் புரையறக் கலக்கும் ஸ்வபாவம்
என்பு -எலும்பு
துன்பு -துக்கம் –

தொண்டர்கட்கே –ஏவகாரம் -உமக்கும் ஸ்ரீ ஆழ்வாருக்கும் அவனுக்கும் இன்றி –
அடியார் அடியார் -அவர்க்கே அல்லால் -அவர்க்கே குடிகளாய் செல்லும் நல்ல கோட்ப்பாடு என்னைப் பண்ணி –
அங்கு ஆள்படுத்தே –கிரய விக்ர அர்ஹமாகும் படி –
இப்பொழுது தான் விண்ணப்பம் செய்ய -முன்பு சொன்னது எல்லாம் இதற்கு தயார் பண்ணி –
ஸ்ரீ கீதாச்சார்யன் -அர்ஜுனனை தயார் பண்ணி அருளிச் செய்தால் போலே –குஹ்ய தமம் –
பக்தி பண்ணி சொல்ல -மன்மனா பாவ இத்யாதி –
ஸ்ரீ பெரும் பூதூர் மட்டும் இல்லை -ஸ்ரீ எம்பார் ஸ்ரீ முதலியாண்டான் ஸ்ரீ கூரத் ஆழ்வான் ஸ்ரீ திருப் கட்சி நம்பி
திருவவதார ஸ்தலங்களுக்கு போக வேண்டுமே –
2-பாசுரத்தில் உபக்ரமித்து மிக்க சீலம் அல்லால் இதிலும் -இன்புற்ற சீலத்து இஇராமாநுச என்று உப சம்ஹரிக்கிறர் –
ஆக்கி ஆள்படுத்தி- மனசில் உணரவைத்து கைங்கர்யமும் கொள்ள வேணுமே –
அடியேன் செய்ய விண்ணப்பம் ஸ்ரீ ஆழ்வார் தொடங்கும் பொழுதே பிரார்த்தித்து –
இங்கு ஸ்ரீ அமுதனார் விண்ணப்பம் செய்த உடனே தலைக் கட்டி அருளுகிறார் ஸ்வாமி –
23-பாசுரம் -யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள் -பிரார்த்தனை –அச்சமயத்தில் சொல்லும் அசடு இல்லையே –
29-பாசுரத்தில் உற்றோமே ஆவோம் -உனக்கே ஆட் செய்வோம் –கைங்கர்ய பிரார்த்தனை -சரணாகதிக்கு அப்புறம் தானே –
இங்கு சொல்லுவது ஓன்று உண்டு சொல்லி அடுத்த வரியில் -என்ன என்கிறார் -இன்புற்ற சீலவான் ஸ்வாமி என்பதால் –
தொண்டர்களுக்கே -ஏக -சப்தம் தானும் பிறருமான -தானும் இவனுமான நிலையையும் கழித்து
வெளி உள் இரண்டையும் கழித்து என்றபடி –
உபாய பரமாக இல்லை ப்ராப்ய பரமாக

இன்புற்ற சீலத்து இராமானுசா –
ஸ்ரீ திரு வேம்கட முடையானுக்கும் ஸ்ரீ திரு குறும்குடி நம்பிக்கும்
திரு இலச்சினையும் -ஸ்ரீ பாஷ்யதையும் பிரசாதித்த ஸ்ரீ ஆசார்யராகவும் –
ஸ்ரீ செல்லப் பிள்ளைக்கு பிதாவாயுமாய் இருக்கிற தேவரீருடைய மதிக்கையும் –
அத்யந்த பாபிஷ்டனான என்னுடைய தண்மையையும் பாராதே –
என்னை தேவரீருக்கு அவ்வருவாக எண்ணி -என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து –
அது தன்னையே பெறாப் பேறாக நினைத்து – ஆனந்த நிர்பரராய் எழுந்து அருளி இருக்கிற சௌசீல்யத்தை
உடைய ஸ்ரீ எம்பெருமானாரே –
இன்பு -ஸூகம்
சீலமாவது பெரியவன் தண்ணியரோடு புரை யறப் பரிமாறும் ஸ்வாபம் –
இப்போதாக காணும் இவருடைய-சீலம் அமுதனாருக்கு வெளியாகத் தொடங்கிற்று-

இன்புற்ற சீலத்து இராமானுச
மிகத் தண்ணியனான எனது இதயத்துள்ளே இருப்பதை பெறாப் பேறாக கருதி இன்பத்துடன்
எழுந்து அருளி வுள்ளமையால் -என்னிடம் உள்ள வ்யாமோஹம் வெளிப்படுகிறது
இந்த வ்யாமோஹம் எவ்வளவு குற்றங்கள் நிறைந்து இருந்தாலும் அவற்றை நற்றமாக தோற்றும்படி செய்து விடுகிறது
ஸ்ரீ சர்வேஸ்வரன் சேதனர்கள் இடம் உள்ள வ்யாமோஹத்தாலே அவர்களோடு மிகப் புல்லிய இதயத்திலே குற்றம் தோற்றாமல்
அது நற்றமாக தோன்ற எழுந்து அருளி இருப்பது போன்றது இதுவும் என்க-
அனைவருக்கும் ஈசானன் மத்தியில் இதயத்தில் கட்டை விரல் அளவினனாய் எழுந்து அருளி உள்ளான் .

ஸ்ரீ ஈச்வரனே இருப்பதால் அருவருப்பதில்லை -என்னும் உபநிஷத்தும்
தத பூத பவ்ய ஈச்வரத்வாதேவ வாத்சல்யாதிசயாத் தேக கதாநபி தோஷான் போக்யதயா பச்யதீத்யர்த்த -என்று
ஆகையினாலே முற்காலத்தவருக்கும் பிற்காலத்தவருக்கும் ஸ்ரீ ஈச்வரனே இருப்பதனாலேயே வாத்சல்யம் மிக்கதனால்
தேஹத்தில் உள்ள தோஷங்களையும் போக்யமாகப் பார்க்கிறான் -என்று பொருள்

ஸ்ரீ வேதாந்த தேசிகனும் –
ஔதன்வதே மதி சத்மனி பாசாமானே ச்லாக்க்யே ச திவ்ய சதனே தமஸ பரஸ்தாத்
அந்த களேபரமிதம் சூஷிரம் சூசூஷ்மம் கரீச கதமா தர்ண ஸ்பதம் தே -ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத் – 21-
ஸ்ரீ திருப்பாற்கடலின் கண் உள்ள பெரிய இல்லம் இலங்கிக் கொண்டு இருக்கும் போது –
பிரகிருதி மண்டலத்துக்கு அப்பால் கொண்டாடத் தக்க அப்ராக்ருதமான திரு மாளிகையும் துலங்கிக் கொண்டு இருக்கும் போது –
சரீரத்துக்கு உள்ளே மிகவும் நுண்ணிய இந்தப் பொந்து-ஸ்ரீ அத்திகிரிப் பெருமாளே -எப்படி நீ ஆதரிக்கும் இடம் ஆயிற்று –
என்று அருளிய ஸ்லோகமும் நினைவிற்கு வருகின்றன –

ஸ்ரீ இறைவனும் தம் இதயத்தில் இடம் தேடி வரும்படியான ஏற்றம் வாய்ந்த ஸ்ரீ எம்பெருமானார் –தமது மென்மையை-மேன்மையை –
நோக்காது -மிகத் தாழ்ந்தவனான எனது இதயத்து உள்ளே –பதிந்து உரையும்படியாக -என்னோடு பழகினால் –
அந்த சீல குணத்தை என் என்பது -என்று
வ்யாமோஹம் -அதானாலாய வாத்சல்யம் சீலம் -என்னும் குணங்களில் ஈடுபட்டு இன்புற்ற சீலத்து இராமானுச –என்று விளிக்கிறார் .
தாம் சீரிய புருஷார்த்தத்தை பெற விண்ணப்பிக்கப் போவது வீணாகாது -பயனுறும் -என்னும்
தமது துணிபு தோன்ற இங்கனம் விளிக்கின்றார் -என்று அறிக –
சீலமாவது-பெரியவன் சிறியவனோடு வேற்றுமை தோன்றாமல் பழகுதல் –
மிக்க சீலமல்லால் உள்ளாதென்நெஞ்சு– 2- என்று முதலில் சீல குணத்தில் ஈடுபட்டவர் முடிவிலும் ஈடுபடுகிறார் .

சொல்லுவது ஓன்று உண்டு –
சர்வஞ்ஞாரான தேவரீருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுவது ஓன்று உண்டு –
நத்வே வாஹம் -என்று தொடங்கி- கர்ம ஞான பக்திகளை பரக்க உபதேசித்து கொண்டு போந்து –
சர்வ குஹ்ய தமம்-பூய ஸ்ருணுமே பரமம் வச -என்று உபதேசிக்கும் போது ஸ்ரீ கீதச்சர்யன் அருளிச் செய்தால் போலே இவரும் –
இராமானுசா இது என் விண்ணப்பமே -என்கிறபடியே இவ்வளவும் தம்முடைய அபிநிவேசம் எல்லாம் விண்ணப்பம் செய்து
இப்பாட்டிலே தம்முடைய அபேஷிதத்தை நிஷ்கரிஷித்து அருளிச் செய்கிறார் –
அங்கு சேஷி உடைய உக்தி –இங்கு சேஷ பூதனுடைய அபேஷிதம் –
ஒரு பிரயோஜனம் உண்டு என்றீர் அது என் என்ன –

சொல்லுவது ஓன்று உண்டு
என்றும் எவ்விடத்தும் —அங்கு ஆட்படுத்து –தாம் அறுதி இட்டு இருக்கிற புருஷார்த்தத்தை திரு உள்ளத்திலே இறுதியாகப்
படும்படி செய்து கார்யத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக நயந்து -சொல்லுவது ஓன்று உண்டு -என்கிறார் –
இரந்து உரைப்பது உண்டு -திரு சந்த விருத்தம் – 101- என்று ஸ்ரீ எம்பெருமானிடம் ஸ்ரீ திரு மழிசைப் பிரான்-
விண்ணப்பித்தது போலே விண்ணப்பிக்கிறார் ..
எத்தனை கஷ்டம் நேர்ந்தாலும் சித்தம் சிதறாது தேவரீர் தொண்டர்கள் இடம் அன்பு மாறாமல் அவர்களுக்கே அடிமை
செய்யும்படியான நிலைமையை அடியேனுக்கு அளித்து அருள வேணும் – என்று புருஷார்த்தத்தை வடி கட்டி அபேஷிக்கிறார் .

என்புற்ற நோயுடல் தோறும்-பிறந்து இறந்து எண்ணரிய துன்புற்று –
நோய் -வியாதி -அதாகிறது -ஆத்யாத்மிகாதி துக்கங்கள் –
அந்த நோயானது அந்தர்பஹிந்திரிய வியாபார ரூப ஸ்வ க்ரத கர்ம பலம் ஆகையாலே தோற்புரையே போமது அன்றிக்கே –
அஸ்திகதமாய் கொண்டு இருக்கையாலும் ஆத்மா நாசகம் ஆகையாலும் –என்புற்ற –என்று விசேஷிக்கிறார் –

என்பு -எலும்பு –
உறுகை -அத்தைப் பற்றி நிற்கை –
உடல் தோறும் -அப்படி அஸ்திகதங்களாய் கொண்டு நலியக்-கடவ வியாதிகளுக்கு பாஜநமான சரீரம் தோறும் –
துர்வார துரித மூலம் துஸ்தர துக்காநாம் பந்த நீ ரந்தரம்வபு -என்னக் கடவது இறே –
அன்றிக்கே –
நோயெல்லாம் பெய்ததோர் ஆக்கை –என்கிறபடியே
அந்த வியாதி தானே உருக் கொண்டு இருக்கிற -தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபமான சரீரங்கள் என்று என்னுதல்-
ஜன்ம பரம்பரைகள் தோறும் -என்றபடி-பிறந்து இறந்து என்ற இது மற்ற அவஸ்த தாந்தரங்களுக்கும் உப லஷணம் –
இறப்பு -நாசம் –

என்புற்று நோய் உடல் தோறும்
தோல் அளவோடு நில்லாது எலும்பைப் பற்றி நின்று வாட்டும் தாபம் -ஷயம் முதலிய வியாதிகளுக்கு
இடமான ஒவ்வொரு சரீரத்திலும் -என்றபடி –
நோயெல்லாம் பெய்ததோர் ஆக்கை -ஸ்ரீ பெரிய திரு மொழி – 9-7 7- – என்றார் ஸ்ரீ திரு மங்கை மன்னனும் .
நோய்களினால் நலிவு விரும் உடல் வாய்ந்த பிறப்புக்கள் தோறும் -என்றது ஆயிற்று –
தேவரீர் தொண்டர்கட்கே அன்புற்று ஆட்படுத்தப் பெறுவேன் ஆயின்
நோய்களினால் நலிவுறும் பல பிறப்புக்கள் நேரினும் நல்லதே -என்று கருத்து –

பிறந்து இறந்து எண்ணற்ற துன்புற்று வீயினும் –
அவ்வவ ஜன்மங்களிலே ஜநிப்பது-மரிப்பது தொடக்கமான அவஸ்தா சப்தகத்திலும் விரலை மடக்கி ஓன்று இரண்டு என்று
எண்ணப் புக்கால்-அது கால தத்வம் உள்ள அளவும் எண்ணினாலும் எண்ணித் தலைக் கட்ட அரிதான துக்கங்களை ஒன்றும்-
பிறிகதிர் படாதபடி அனுபவித்து முடியிலும் –
போற்றலும் சீலத்து இராமானுச –என்கிறபடியே
தேவரீர் உடைய-சீல குணத்தை அளவிட்டு சொல்லினும் -இஸ் சரீர அனுபந்தியான துக்கத்தை அளவிட்டு
சொல்ல ஒண்ணாது என்கிறார் காணும் –
துன்பு –துக்கம் –

பிறந்து இறந்து எண்ணரிய -துன்புற்று வீயினும்
பிறப்பு இறப்புகளை சொன்னது ஏனைய இருத்தல் -மாறுபடுதல்-வளர்த்தல் தேய்தல் என்னும்
விகாரங்களுக்கும் உப லஷணம்.
ஆக பொருள்களுக்கு உள்ள ஆறு விகாரங்களும் கூறப் பட்டன ஆகின்றன .
இனி அவஸ்தாசப்தகம் எனப்படும்
கர்ப்பம் ஜன்மம் பால்யம் யவ்வனம் வார்த்தகம் மரணம் நரகம் என்னும் இவைகளைக்
கூறப்பட்டனவாகக் கொள்ளலுமாம் .
இந்த விகாரங்களுக்கு உள்ளாவதோடு எண்ணற்கு அரிய துன்பங்களால் தாக்கப்பட்டு படு-
நாசத்துக்கு உள்ளாக்கும் நிலை ஏற்படினும் ஏற்படுக –
தேவரீர் தொண்டர்கட்கே அன்பனாய்-அடிமை யாக்கப் பெறின் அவைகளும் ஏற்கத் தக்கனவே -என்கிறார் .
இறத்தல் சரீரத்திற்கு நேருவது–வீதல் ஆத்மாவுக்கு நேரிடும் உழலுதலாகிற படு நாசத்தை கூறுகிறது -என்று வேற்றுமை அறிக

நான் பிறப்பு இறப்பு வேண்டாம் துன்புற்று வீதல் ஆகாது என்று தேவரீர் இடம் விண்ணப்பிக்கிறேன் அல்லேன் –
எத்தகைய நிலை ஏற்படினும் தேவரீர் தொண்டர்கட்கே அடிமை செய்யும் படி அருள் புரிய வேணும் -என்று
விண்ணப்பிக்கிறேன் என்றார் ஆயிற்று –
பிராணன் பிரியும் போது கபம் தொண்டையை அடைக்கும் காலத்தும் –
நின் கழல் எய்யா தேத்த அருள்-செய் எனக்கே -திருவாய் மொழி -2 9-3 – என்று ஸ்ரீ நம் ஆழ்வார்
பிரார்தித்ததை இங்கு நினைவு கூர்க–
எம்பெருமானார் தொண்டர்கட்கே ஆட்பட்டோருக்கு – உடல் தோறும் பிறந்து இறந்து துன்புற்று வீதல் நேரவே மாட்டா –
நேரினும் ஆட்படும் இன்பத்தை நோக்க அவைகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து ஒழியும் என்க –

என்றும் –
எல்லா காலத்திலும் –

எவ்விடத்தும் –
எல்லா இடத்திலும் –

என்றும் எவ்விடத்தும் –
இந்த காலம் இந்த இடம் என்கிற வரையறை இன்றி ஆட்படுத்தப்பட வேணும் -என்க

உன் தொண்டர் கட்கே –
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இராதே மோஷ-பிரதான தீஷிதராய் அன்றோ –
இவ்வளவாக திருத்தி என்னுடைய ஹிருதயத்திலே புகுந்து நித்ய வாசம் பண்ணா நிற்கிற தேவரீருக்கு
அனந்யார்ஹ சேஷமாய் இருக்கும் அவர்களுக்கே –
அவதாரணத்தாலே –அந்யயோக வ்யவச்சேதம் பண்ணுகிறார் –
உனக்கே நாம் ஆட் செய்வோம் –
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே —
ஆறேனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் – என்றும்
தமேவ சாத்யம் புருஷம் பிரபத்யே -என்றும் பிரதம பர்வத்தில் சொல்லுகிறபடியே –

குருரேவ பரம் பிரம்ம -என்றும் –
உபாய உபேயே பாவேன தமேவ சரணம் வ்ரஜேத் -என்றும்
தேவு மற்று அறியேன் -என்றும்
தீதில் சரணா கதி தந்த தன் இறைவன் தாளே அரணாக மன்னுமது – என்றும்
சரம பர்வத்தில் சொல்லுகிறபடியே சொல்லுவித்தார் -இறே –

அன்புற்று இருக்கும் படி –
நிரவதிக-பிரேம யுக்தனாய் இருக்கும்படி –
அன்பு -ஸ்நேஹம் –என்னை ஆக்கி -தேவரீருக்கு கிருபா விஷய பூதன் ஆகும் படி என்னைப் பண்ணி –

அங்கு ஆள்படுத்தே –
பவதீயர் திருவடிகளில் விஷயமான எல்லா அடிமைகளிலும் அன்வயித்து-க்ர்த்தார்த்தனாம் படி
பண்ணி அருள வேணும் என்கிறார் –
ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல் நீங்காது ஏத்த அருள் செய் எனக்கே என்று இப்படியே
ஸ்ரீ ஆழ்வாரும் அருளிச் செய்தார் இறே –

உன் தொண்டர்கட்கே
இன்னார் இணையார் என்று இல்லை –
தேவரீர் தொண்டர்களாய் இருத்தலே வேண்டுவது
தேவரீருக்கு பிரியும் தொண்டினையே குறிக் கோளாக கொண்டவர்களுக்கே என்னை
ஆட்படுத்த வேணும் . அன்புற்று இருக்கும் படி –அங்கனம் ஆட்படுதல் நிலை நின்று முதிர்ந்த அன்பினால்
ஆயதாய் இருத்தல் வேண்டும் .

என்னை யாக்கி அங்கு ஆட்படுத்து –
அன்புடையவனாய் இருக்கும்படியும் செய்ய வேணும் –
ஆட்செய்யும்படியாகவும் பண்ண வேணும்
இரண்டும் வேண்டிப் பெற வேண்டிய புருஷார்த்தங்கள் ஆகும் எனக்கு -என்பது கருத்து –

அன்பின் பயனாய் அடிமை தானே அமையாதோ-எனின் –
இவன் அடிமை செய்திடுக -என்று தேவரீர் இரங்கி தந்ததாய் இருத்தல் வேண்டும் என்கிறார் –
உன் அடியார்க்கு ஆட்படுத்தாய் -திரு பள்ளி எழுச்சி – 10- என்னும் ஸ்ரீ தொண்டர் அடிப் பொடியார்
திருவாக்கினை இங்கு நினைவு கூர்க –

தொண்டர்கட்கே –ஆட்படுத்து –
உனக்கே நாமாட் செய்வோம் –திருப்பாவை – 29- என்று ஸ்ரீ ஆண்டாளும்
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -திருவாய் மொழி -2 -9 -4 – என்று ஸ்ரீ நம் ஆழ்வாரும்
போலப் புருஷார்த்தத்தை நிஷ்கர்ஷித்துத் –தொண்டர்கட்கே ஆட்படுத்து -என்கிறார்

முன்னைய பாசுரங்களில் முன்னிலையாகப் பேசி வந்த ஸ்ரீ நம் ஆழ்வார்
புருஷார்த்தத்தை நிஷ்கர்ஷிக்கும் போது மட்டும் ஸ்ரீ எம்பெருமான் திரு முகத்தை நோக்கி முன்னிலையில் கூறாது –
தனக்கேயாக -என்றது –
முகத்தை நோக்கில் புருஷார்த்தத்தில் கொண்ட துணிவு அவ் அழகினால் குலைவுறும்
என்று கவிழ்ந்து இருந்தமையினால் என்று ரசமாக பணிப்பர் ஸ்ரீ ஆச்சார்யர்கள் –
ஸ்ரீ ஆண்டாள் அங்கன் அன்றிப் புருஷார்த்தத்தை நிஷ்கர்ஷிக்கும் போது அதனில் ஊன்றி நிற்பவள் ஆதலின் –
புருஷார்த்தத்தில் தான் கொண்ட துணிவு குலைவுறுமோ என்னும் அச்சம் ஏற்பட வழி இல்லாமையால் –
ஸ்ரீ கோவிந்தன் முகத்தை நோக்கி –
உனக்கே நாம் ஆட்செய்வோம் -என்று நிஷ்கர்ஷம் செய்து அருளினாள் –
ஸ்ரீ அமுதனாரோ -பிரதம பர்வத்தில் ஸ்ரீ ஆண்டாள் நிஷ்கர்ஷித்தது போல சரம பர்வத்தில் எம்பெருமானார்-திரு முகத்தை நோக்கி –
உன் தொண்டர்கட்கே ஆட்படுத்து -என்று நிஷ்கர்ஷிக்கிறார் .

தொண்டர்கட்கே அன்பும் -ஆட்படுதலும் உபயோகப் படுவனவாய் அமைய வேண்டும் .
தொண்டர்கட்கும் பிறர்க்குமாக ஒண்ணாது
தொண்டர் கட்கே யாக வேணும்
தொண்டர்கட்கும் எனக்குமாக ஒண்ணாது
தொண்டர்கட்கே யாக வேணும் என்பது ஸ்ரீ அமுதனார் செய்யும் புருஷார்த்த நிஷ்கர்ஷமாகும் –

தேவு மற்று அறியேன்- சரணாகதி அருளியவன் தாளே அரணாக மன்னும் அது-
பிரேம யுக்தனாய் -அன்பு-ஆக்கி ஆட் படுத்து என்று பிரார்த்திக்கிறார்–

ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்ரீ வரவர முனி சம்பந்திகளின் சம்பந்தம் வேண்டும் என்றார்-

———–

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது –திருப்பாவை -28-

நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா எற்றைக்கும்
ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆள் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று -29-

உனக்குப் பணி செய்து இருக்கும் தவம் உடையேன் இனிப் போய் ஒருவன்
தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய்
புனத்தினை கிள்ளிப் புதுவவி காட்டி உன் பொன்னடி வாழ்க வென்று
இனக்குறவர் புதியது உண்ணும் எழில் மாலிருஞ்சோலை எந்தாய்–பெரியாழ்வார் திருமொழி- 5-3-3-

தனிக்கடலே தனிச்சுடரே தனியுலகே என்று என்று உனக்கு இடமாய் இருக்க என்னை யுனக்கு யுரித்து ஆக்கினையே -5-4-9-

அணி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் அம்மான் தன் அடி இணைக் கீழ் அலர்கள் இட்டு
அங்கு அடியவரோடு என்று கொலோ அணுகு நாளே –பெருமாள் திருமொழி -1-3-

என் அரங்கனுக்கு அடியார்களாய் நாத்தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்பத் தொழுது ஏத்தி
இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே -2-4-

அரங்கன் எம்மானுக்கே மாலையுற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலையுற்றது என் நெஞ்சமே -2-8-

தில்லை நகர்த் திருச் சித்ர கூடம் தன்னுள் அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்
அரசாக எண்ணேன் மற்ற அரசு தானே -10-7-

அத்தனாகி யன்னையாகி ஆளும் எம்பிரானுமாய் ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆள் கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார் எத்தினால் இடர்க் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -திருச்சந்த-115-

மரங்கள் போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால் அரங்கனார்க்கு
ஆள் செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே -திருமாலை-27-

எம்பிராற்கு ஆள் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே -28-

எம்மா வீட்டுத் திறமும் செப்பம்;நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து;ஒல்லை
கைம்மாத் துன்பம் கடிந்த பிரானே!
அம்மா! அடியேன் வேண்டுவது இஃதே–2-9-1-

செய்யேல் தீவினை என்று அருள் செய்யும் என்
கையார் சக்கரக் கண்ண பிரானே!
ஐயார் கண்டம் அடைக்கிலும் நின்கழல்
எய்யாது ஏத்த அருள் செய் எனக்கே–2-9-3-

தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டர் அடிப் பொடி என்னும் அடியனை
அளியன் என்று அருளி யுன் அடியார்க்கு ஆள் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே –திருப் பள்ளி எழுச்சி -11-

குடி குடியாகக் கூடி நின்று அமரர் குணங்களே பிதற்றி நின்று ஏத்த
அடியவர்க்கு அருளி அரவணைத் துயின்ற ஆழியான் -பெரிய திருமொழி-4-10-9-

தாராளும் வரை மார்பன் தண் சேறை எம்பெருமான் உம்பராளும் பேராளன் பேரோதும்
பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே -7-4-4-

தண் சேறை எம்பெருமான் தாளை நாளும் உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என்னுள்ளம் உருகுமாரே -7-4-9-

நோயெல்லாம் பெய்ததோர் ஆக்கை -பெரிய திரு மொழி – 9-7 7- –

அமலன் ஆதி பிரான் அடியார்க்கு என்னை ஆள் படுத்த விமலன் –அமலனாதி -1-
மனக்கே ஆட் செய் எக் காலத்தும்’ என்று,என்
மனக்கே வந்து இடை வீடு இன்றி மன்னித்
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே;
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே–2-9-4-

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற் கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திரு வுடையார் எவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடைதோறு எம்மை ஆளும் பரமரே–3-7-1-

ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னைத்
தோளும் ஓர் நான்குடைத் தூ மணிவண்ணன் எம்மான் தன்னைத்
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர்
நாளும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடை நாதரே–3-7-2-

நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்
போதனைப் பொன்னெடுஞ் சக்கரத்து எந்தை பிரான் தன்னைப்
பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர்
ஓதும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடையார்களே–3-7-3-

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணி வண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம் மடியார் எம் அடிகளே–3-7-9-

அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல் குழவிப் படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம் மடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம் மடியார் அடியோங்களே–3-7-10-

வியன் மூ வுலகு பெறினும் போய்த் தானே தானே ஆனாலும்
புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ்
சயமே அடிமை தலை நின்றார் திருத்தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவியேனுக்கே–8-10-2-

தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் சதிர் மூர்த்தி
அமர் கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டாதி பல்படையன்
குமரன் கோல வைங்கணை வேள் தாதை கோதில் அடியார் தம்
தமர்கள் தமர்கள் தாமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே–8-10-9-

வாய்க்க தமியேற்கு ஊழி தோறு ஊழி ஊழி மா காயாம்
பூக் கொள் மேனி நான்கு தோள் பொன்னாழிக் கை என்னம்மான்
நீக்க மில்லா வடியார் தம் அடியார் அடியார் அடியார் எம் கோக்கள்
அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே–8-10-10-

ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று -10-9-6-

—————————————————————————————————————————————————–———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –106–இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிரும் சோலை யென்னும் பொருப்பிடம்–இத்யாதி –

June 4, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி இவர் தமக்கு -தம் பக்கல் உண்டான அதி மாத்திர ப்ராவண்யத்தை கண்டு –
ஸ்ரீ எம்பெருமானார் -இவர் திரு உள்ளத்தை மிகவும் விரும்பி யருள –
அத்தைக் கண்டு உகந்து அருளிச் செய்கிறார் .

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

திருவடிகளை ஆஸ்ரயித்த மகாத்மாக்கள் -அவர் தம்முடைய குண அனுபவ ஜனித ஹர்ஷ பிரகர்ஷத்தாலே களித்து
ச சம்ப்ர்ம ந்ர்த்தம் பண்ணும் இடம் தமக்கு வாசஸ்தானம் என்று கீழ்ப்பாட்டில் அருளிச் செய்து –
இப்பாட்டிலே –
வேத -தத் உப ப்ரஹ்மணாதிகளாலே பரிசீலனத்தை பண்ணி இருக்குமவர்கள்
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு உகந்து அருளின நிலங்களாக சொல்லுகிற -ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வட திருமலை ஸ்ரீ தென் திருமலை
தொடக்கமான ஸ்ரீ திவ்ய தேசங்களோடு கூட ஸ்ரீ எம்பெருமானாருடைய திரு உள்ளத்திலே அவன் மிக விரும்பி வர்த்திக்குமா போலே –
இப்போது -அந்த ஸ்ரீ திவ்ய தேசங்களோடும் – அந்த ஸ்ரீ திவ்ய தேசங்களுக்கு நிர்வாஹனான ஸ்ரீ சர்வேச்வரனுடனும் கூட வந்து
ஸ்ரீ எம்பெருமானார் தாமும் நிரதிசய சுகமாக எழுது அருளி இருக்கிற ஸ்தலம்
தம்முடைய திரு உள்ளம் என்று அனுசந்தித்து பிரீதர் ஆகிறார்

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

இப்படித் தம்பால் எல்லை கடந்த ஈடுபாட்டினை கண்ட ஸ்ரீ எம்பெருமானார் –
ஸ்ரீ அமுதனாருடைய திரு உள்ளத்தை மிகவும் விரும்பி யருள -அதனை நோக்கி –அக மகிழ்ந்து அருளிச் செய்கிறார்

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிரும் சோலை யென்னும்
பொருப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர் -அவை தன்னொடும் வந்
திருப்பிடம் மாய னிராமானுசன் மனத்தின்றவன் வந்
திருப்பிடம் என் தனி தயத்துள்ளே தனக்கின்புறவே – – 106- –

பத உரை –
நல்லோர் -நல்லவர்
மாயவனுக்கு -ஆச்சர்யப் படும் தன்மை வாய்ந்தவனான ஸ்ரீ சர்வேச்வரனுக்கு
இருப்பிடம்-குடி இருக்கும் இடம்
வைகுந்தம் -ஸ்ரீ வைகுண்டமும்
வேங்கடம் -ஸ்ரீ திரு வேங்கடமும்
மால் இரும் சோலை -ஸ்ரீ திரு மால் இரும் சோலை
யென்னும் -என்று உலகினரால் வழங்கப்படும்
பொருப்பு இடம் -ஸ்ரீ திருமலையாகிற இடமும்
என்பர் -என்று சொல்வார்கள்
மாயன் -அந்த ஆச்சர்யப் படத்தக்க ஸ்ரீ சர்வேஸ்வரன்
அவை தன்னொடும் -அந்த இடங்களோடு கூட
வந்து -எழுந்து அருளி
இருப்பிடம் -குடி கொண்ட இடம்
இராமானுசன் மனத்து -ஸ்ரீ எம்பெருமானார் திரு உள்ளத்திலே
அவன் -அந்த ஸ்ரீ எம்பெருமானார்
இன்று -இப்பொழுது
வந்து -எழுந்து அருளி
தனக்கு இன்புற -தமக்கு இன்பம் உண்டாக
இருப்பிடம் -வசிக்கும் இடம்
என் தன் இதயத்து உள்ளே -என்னுடைய இதயத்துக்கு உள்ளேயாம் –

வியாக்யானம்-
ஸ்வரூப ரூப குண விபூதிகளால் – ஆச்சர்ய பூதனான ஸ்ரீ சர்வேச்வரனுக்கு வச்தவ்ய தேசம்
ஸ்ரீ வைகுண்டமும் -ஸ்ரீ வடக்குத் திரு மலையும் -ஸ்ரீ திரு மால் இரும் சோலை என்று பிரசித்தமான -ஸ்ரீ திருமலை யாகிற –
(என்னும் -திருநாமத்துக்கே -திரு மால் இரும் சோலை மலை என்னே என்னே என் மனம் புகுந்தான் –
அதனால் தான் இதற்கு மட்டும் என்னும் -ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வேங்கடம் -இரண்டுக்கும் சொல்லாமல் -) ஸ்த்தலமுமாக-
வைகுந்தம் கோயில் கொண்ட -திருவாய் மொழி – 8-6 5-
வேங்கடம் கோயில் கொண்டு -திருவாய் மொழி – 2-1 7-
அழகர் தம் கோயில் -திருவாய்மொழி – -2 9-3 – என்று சொல்லா நிற்பவர்கள்-
(நித்யர் / மண்ணோர் திர்யக் -அவனுக்கு என்று இருப்பவர்களுக்கு /
விமுகனுக்கும்-மலையத்வஜனை சேர்த்துக் கொண்டாயே -இப்படி மூன்றும் )
பகவத் தத்வத்தை சாஷாத்கரித்து இருக்கிற விலஷணரானவர்கள் —
அப்படிபட்டு இருந்துள்ள ஸ்ரீ சர்வேஸ்வரன் –
அழகிய பாற்கடலோடும் -ஸ்ரீ பெரிய திருமொழி 5-2 10– என்கிறபடியே
அந்த ஸ்த்தலங்கள் தன்னோடே கூட வந்து எழுந்து அருளி இருக்கிற ஸ்த்தலம் என்னுடைய ஹ்ருதயத்துக்குள்ளே –

ஸ்ரீ பெரிய கோயில் நம்பி -ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் – 74 சிம்ஹாசனபதிகள் பொக்கிஷம் -இந்த ஸ்ரீ பிரபன்ன காயத்ரி உடன் –
சப்தாவரண-புறப்பாடு -ஏழாவது பிரகாரம் சித்திரை விதி -இன்றும் ஸ்ரீ நம் பெருமாள் -இத்தை கேட்டு அருளுகிறார் –
கோஷ்ட்டியில் உடையவரை மடத்தில் விடச் சொல்லி -ஆனந்தமாக கேட்டார் அன்றே
ஸ்ரீ அமுதனார் திரு உள்ளத்தில்– தானான– தமர் உகந்த– தான் உகந்த–எல்லா திருமேனிகளையும் சேவிக்கலாம்
மாயன் ராமானுசன் -சேஷி சேஷ ராமானுசன்-இருவரும் மாயன்-என்பர் –ஸ்ரீ ஆழ்வார்-நல்லோர் -ஸ்ரீ ஆச்சார்யர்கள்
நான் -கேள்வி பட்டேன் -அடியேன் அறிந்தது இப்பொழுது என் நெஞ்சத்துள்
இன்று -நாம் ஆச்சார்ய சம்பந்தம் பெற்ற அன்று -நாமும் இத்தை அனுபவிக்கலாம் -ரஷா பரம் இரங்கி –
திவ்ய தேச ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீ எம்பெருமானார் உடன் மகிழ்ந்து உள்ளே இருப்பார்களே -என் இதயம் -என் தன் இதயம் -தாழ்ந்த நீசன் –
கண்ணுக்கு இனியன கண்டோம் -கலியும் கெடும் -ஸ்ரீ ஆழ்வார் அன்றே ஸ்ரீ எம்பெருமானார் திரு உள்ளத்திலே ஸ்ரீ வைகுண்டம் இத்யாதி கண்டார் என்றுமாம்

சர்வ மங்கள விக்ரஹயா ஸமஸ்த பரிவாரங்கள் உடன் -நித்யம் சொல்லுவோமே –
ஞானி து ஆத்மைவ மே மதம் -நித்ய யுக்தா -ஆதி சேஷனே ராமானுஜர் -படுக்கையில் சயனம் -சாக்ஷி நேரே உண்டே –
சிந்தாமணி -மாணிக்கம் உமிழ்ந்து கண் கொத்தி பாம்பு -பார்த்துக் கொண்டே பரிவாலே –
புறப்பாடு நடந்து ஆஸ்தானம் போகும் வரை அத்யாபகர்கள் பரிந்து —
அடியார் திரு உள்ளமே ஸூ ரக்ஷணமான வாஸஸ் ஸ்தானம் –
என் தன் இதயத்து உள்ளே – தம்முடைய திரு உள்ளம் போல் பக்தி ரச சந்துஷிதமாய் -நிச்ச்சலமாய் – விஷய விரக்தமாய் –
இருக்கை அன்றிக்கே -சுஷ்கமாய் -சஞ்சலமாய் -விஷய சங்கியான உள்ளம் –
திரு முடி சேவை -ஆழ்வார் திருநகரி -பொலிந்து நின்ற பிரான் -அவை தன்னோடும் வந்து இருப்பிடம் காட்டி அருளி –
மற்று எங்கும் திரு வடி தொழுதல் சேவை–சேஷி மாயன் -விபு வானவன் ஏகதேசம் இருப்பதே –சேஷ மாயன் –
பரனும் பரிவிலானாம் படி அன்றோ எல்லா உலகோரையும் விண் மீது அளிப்பான் வீடு திருத்த விண்ணின் தலை நின்றும் மண்ணின் தலை மிசை உதித்தார்

ஸ்ரீ திருப்பேர் நகர் ஸ்வாமித்வம் காட்டி -திருமால் இருஞ்சோலை -இன்று வந்து ஆழ்வார் திரு உள்ளம்–
ஸ்ரீ அயோத்தியை ஸ்ரீ சித்ர கூடம் -ஜடாயு சிறகின் கீழே இருக்க பெருமாள் ஆசை -இப்படி மூன்று மூன்றாக நிறைய பார்க்கலாமே –
ஸ்ரீ வைகுண்டம் -திருப்பாற்கடல் -ஸ்ரீ வடமதுரை -ஸ்ரீ சத்ய லோகம்-ஸ்ரீ அயோத்தியை -ஸ்ரீ ரெங்கம் போலே –
நின்றும் இருந்தும் கிடந்தும் -நெஞ்சமே நீண் நகர் -இடம் இருக்கவே அவை தன்னோடும் வந்து
ஸ்ரீ அமுதனார் இதயத்துக்குள் ஸ்தாவர ப்ரதிஷ்டையாக இருந்தாரே
ஸ்ரீ ஆதிசேஷன் -ஸ்ரீ இளைய பெருமாள் -ஸ்ரீ பலராமன் – கைங்கர்யம் எல்லா அவஸ்தைகளிலும் –
சேஷ சேஷ பாவம் மாறாமல் -யசோதை தாயாக இருந்தாலும் சேஷி தானே –
ஸ்ரீ வைகுண்டம் -ஆதி சேஷன் தானே கைங்கர்யம் -சென்றால் குடையாம் படி -ஸ்ரீ திருவேங்கடம் -சேஷாத்ரி –
ஸ்ரீ அஹோபிலம் -நடு பகுதி ஸ்ரீ கூர்மம் ஸ்ரீ சிம்காசலம் முடிந்து – பிரியாமல் இருந்து கைங்கர்யம் –
ஸ்ரீ வைகுண்டம் கைங்கர்யம் ஆசைப்பட்ட ஆழ்வார் – கீழ் உரைத்த பேறு கிடைக்க –
எம்மா வீட்டில் பேறு-திருமால் இரும்சோலை ஆஸ்ரயிக்கிறார் -முன்னோர் நிர்வாகம் –
ஸ்ரீ எம்பெருமானார் -இருள் தரும் மா ஞாலம் தடங்கல் இல்லாமல் அனுபவிக்க ஸ்ரீ வைகுண்டம் -நித்யர்களும்
அந்த கண்ணும் காதையும் வைத்து அனுபவிக்க முடியாமல் அழுதுண்டு இருக்க -இருக்கும் இடத்திலே –
ஞாலத்தூடே நடத்து உளக்கி பார்த்து இந்த ஏகாந்த ஸ்தலம் -காட்டி அருள – அதற்காக சென்றார் –
காலக் கழிவு செய்யேல் என்றாரே –உகந்து அருளினை நிலம் -ப்ராப்யம் -ஸ்ரீஆச்சார்யர் திருவடி பரம ப்ராப்யம் –

வைகுந்தம் –
அவ்யாஹதளம் கல்பம் வஸ்து லஷ்மி தரம் விது -என்கிறபடியே –
1-சமஸ்த சங்கல்ப்பங்களும் மாறாதே செல்லுக்கைக்கு உடலான தேசமாய் –நலமந்த மில்லதோர் நாடு -என்று
ஸ்லாக்கிக்கப் படுமதான ஸ்ரீ வைகுண்டமும் –
அன்றிக்கே–2- –தர்ம பூத ஞானத்துக்கு திரோதானம் இல்லாத தேசம் என்னுதல் –

வேங்கடம் –
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு தண்ணார் வேம்கட விண்ணோர் வெற்பு -என்றும்
பரன் சென்று சேர் திரு வேங்கட மா மலை -என்றும் சொல்லுகிறபடியே –
இரண்டு பிரஜையை பெற்ற மாதாவானவள் இருவருக்கும் முலை கொடுக்க பாங்காக நடுவே கிடைக்குமா போலே –
நித்ய சூரிகளுக்கும் நித்ய சம்சாரிகளுக்கும் ஒக்க முகம் கொடுக்கைக்காக -அவன் நின்று அருளின திரு மலையும்

மாலிரும் சோலை என்னும் பொருப்பிடம் –
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில் -என்றும் –
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை -என்றும் –
கிளர் ஒளி சேர் கீழ் உரைத்த பேறு கிடைக்க-வளர் ஒளி மால் சோலை மலை –என்றும் சொல்லுகிறபடியே –
திருமால் இரும் சோலை என்னும்-பேரை உடைத்தாய் -ஆழ்வார் பிரார்த்தித்து அருளின படியே உகந்து வர்திக்கைக்கு
ஏகாந்த ஸ்தலம்-என்று அவன் விருப்பத்தோடு வர்த்திக்கிற தென் திருமலை ஆகிய ஸ்தலமும் –
பொருப்பு -பர்வதம்

இருப்பிடம் –
ஆவாஸ ஸ்தானம் –

மாயனுக்கு –
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹா -என்றும்
நமே விதுஸ் ஸூ ர கணா-என்றும் –
பிரபவன்ன மகர்ஷய -என்றும் –
யவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன் –என்றும் சொல்லுகிற படியே அசிந்த்ய ஸ்வபாவனாய்-
ததை ஷத பஹூச்யாம் பிரஜாயேயேதி-என்றும்
தான் ஒரு உருவாய் தனி வித்தாய் -என்றும் -சொல்லுகிறபடியே சர்வ காரண பூதனாய் –
ஸ்வரூப ரூப குண விபூதிகளால் ஆச்சர்ய பூதனான சர்வேஸ்வரனுக்கு –

நல்லோர் –
மகாத்மா ந சதுமாம் பார்த்த தைவீம் ப்ரகர்தி மாஸ்திதா -பஜன்த்ய நன்ய மனசொஜ்ஞாத்வா பூதாதி மவ்யயம் -என்கிறபடியே
பரா வரதத்வயா தாத்ம்ய விதக்ரே ஸ்ரரான மக ரிஷிகள் –

என்பர் –
சொல்லுவார்கள் –
வைகுண்டேது பார் லோகே ஸ்ரீ யா சார்த்தம் ஜகத்பதி –ஆச்தே விஷ்ணுர சிந்த்யா த்மா பக்தைர் பாகவதஸ் சஹா –
இத்யாதியாலே பிரதிபாதிப்பர் -என்றபடி
அன்றிக்கே –
நல்லோர் -மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்வார்கள் என்றுமாம் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும் –
திரு மால் வைகுந்தம் -என்றும் –
தெண்ணல் அருவி மணி பொன் முத்து அலைக்கும் திரு வேம்கடத்தான் -என்றும் –
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில் வளர் இளம் பொழில் சூழ் மால் இரும் சோலை -என்றும் –
விண் தோய் சிகரத் திருவேங்கடம் -என்றும் –
சீராரும் மால் இரும் சோலை –என்றும் –
வேங்கடத்து மாயோன் -என்றும் –
விரை திரை நீர் வேங்கடம் –என்றும் –
மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தான் -என்றும் –
வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் -என்றும் இத்யாதிகளாலே அருளிச் செய்வார்கள் -என்றபடி –

இருப்பிடம் –என்பர் நல்லோர் –
எம்பெருமான் சாந்நித்யம் கொண்டு அருளும் மூன்று திவ்ய ஸ்தலங்கள் இங்கே பேசப்படுகின்றன .-
முதலாவதாகப் பேசப்படுவது ஸ்ரீ வைகுண்டம் —
இது பிரகிருதி மண்டலத்துக்கு அப்பால் உள்ளது -முக்தி பெற்றோர் போய்ச் சேரும் இடமானது –வைகுண்டம் என்பது வடமொழி பெயர் –
விகுண்டருடைய இடம் வைகுண்டம் -விகுண்டர் -மழுங்காத ஞானம் உடையவர்களான நித்ய சூரிகள் –
இவர்களுடைய இடம் ஆதலின் வைகுண்டம் -என்ப-
அடியார் நிலாகின்ற வைகுந்தம் -திரு விருத்தம் -என்பர் நம் ஆழ்வார் .
வைகுண்ட நாடு அவர்கள் உடையதாய் இருத்தல் பற்றியே நித்ய சூரிகள் விண்ணாட்டவர்-எனப்படுகின்றனர்
மாயன் இந்த வைகுந்தத்திலே நித்ய சூரிகள் கண் வட்டத்திலே இருந்து தன்னை மேவினவர்களுக்கு
வீவில் இன்பம் தந்து கொண்டு இருக்கிறான் –

இரண்டாவதாக பேசப்படுவது வேங்கடம்
நித்ய சூரிகளிடையே விளங்கா நிற்கும் மாயன் -சம்சாரிகளையும் விடமாட்டாத வாத்சல்யத்தாலே –
அங்கு நின்று வந்து இறங்கிய இடம் வேங்கடம் .
விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன் -என்றார் பாண் பெருமாள் .
நித்ய சூரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க அருள் புரியும் நோக்கத்துடன் இரண்டு குழந்தைகளுக்கு இடையே கிடந்தது
பாலூட்டும் தாய் போலே – தரையிலும் இறங்காமல் -விண்ணகத்திலும் தங்காமல் -இடையே வேங்கடம் எனப்படும்
வடமா மலையின் உச்சியாய் விளங்குகிறான் அம்மாயன் –
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு -என்றும்
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர் க்குத் தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே -திருவாய் மொழி -1 8- 3- என்றும்
இருவருக்கும் பொதுவாக கூறப்பட்டமை நோக்குக –
வைகுந்தத்தின் நின்றும் திரு வேங்கடத்துக்கு வந்து தன்னை அடைந்தார் திறத்து தன் வாத்சல்யத்தை காட்டி -கொண்டு இருக்கும் –

அம் மாயன் –
உகப்பின் மிகுதியால் சரண் அடையாதவர் இடத்தும் வ்யாமோஹம் வாய்ந்தவனாய் –
வலுவிலே பிடித்து இழுத்து ஆட் கொள்ள வேண்டும் யென்னும் கருத்துடன் –
திரு மால் இரும் சோலையில் கோயில் கொண்டான் –
மலயத்வஜ பாண்டியன் கங்கை நீராடப் போகும் போது – தானே அவனை வலுவில் இழுத்து -நூபுர கங்கையிலே நீராட செய்து –
தன்பால் ஈடுபடும்படி செய்ததாக சொல்லப் படுவதில் இருந்து இவ் உண்மையை உணரலாம் ..
தென்னன் திரு மால் இரும் சோலை -திருவாய் மொழி – 10-7 3- -என்று நம் ஆழ்வாரும்
தென்னன் கொண்டாடும் தென் திரு மால் இரும் சோலையே -பெரியாழ்வார் திருமொழி – 4-2 7- என்று
பெரியாழ்வாரும் இந்த பாண்டியனைப் பற்றி குறிப்பிட்டு உள்ளார்கள் –

கூரத் ஆழ்வான் – இந்த பாண்டியன் விருத்தாந்தத்தை சிறிது விளக்கமாக அருளிச் செய்கிறார்
இதமிமே ஸ்ருணுமோ மலயத்த்வஜம் ந்ருபமிஹா ச்வயமேவஹி சுந்தர சரண சாத்க்ருதவாநிதி
தத்வயம் வனகிரீச்வர ஜாதமநோரதா -சுந்தர பாஹூஸ்தவம் -125 -எனபது அவர் திரு வாக்கு
திரு மால் இரும்சோலைக்கு ஈஸ்வரனாகிய அழகரே – மலயத்த்வஜா பாண்டியனை தானாகவே இங்கே
திருவடிக்கு ஆளாக்கி கொண்ட விருத்தாந்தத்தை நாங்களும் கேள்விப் படுகிறோம் -ஆகையினால் எங்கள்
விருப்பம் அந்த முறையில் நிறை வேறப் பெற்றவர்களாக ஆகி விட்டோம் –
இந்த பாண்டியன் வரலாற்றினாலே உயிர் இனங்களை உறு துயரினின்றும் தானாகவே காப்பதற்கு
என்றே எம்பெருமான் மிக்க அன்புடன் இங்கே எழுந்து அருளி இருக்கிறான் என்பது புலனாகும் .

இங்கு –
மன்பதை மறுக்கத் துன்பம் களைவோன் அன்புதுமேயே யிரும் குன்றத்து இருந்தான் -பரிபாடல் -15 51- 52- –என்னும் பரிபாடலும் –
மால் இரும் சோலை தன்னைக் கருதி உறைகின்ற கார்க்கடல் வண்ணன் அம்மான் தன்னை -என்னும்
பெரியாழ்வார் திருமொழி யும் -4 2-11 –காணத் தக்கன –
திரு மால் இரும் சோலை யென்னும் பெயர் அழகார்ந்ததும் -சோலைகள் நிறைந்துதுமான
மாலின் -அடியாரிடம் வ்யாமோஹம் கொண்டவனின் -பெருமை வாய்ந்த மலை யென்னும் பொருள் கொண்டது .
திரு மால் இரும் சோலை மலை யென்னும் இப் பெயரே தனி இனிமை வாய்ந்தது –
அதன் மகிமை நாடு எங்கும் பரவியது -விரும்பும் பயனைத் தர வல்லது –
இதனைச் சொல்வது விரும்பிய பயனுக்கு விதைப்பதாகும் -விளைவை -பயனை -உடனே எதிர்பார்க்கலாம் என்கிறது பரி பாடல் –

சிலம்பாறு அணிந்த சீர் கெழு திருவில்
சோலை யொடு தொடர் மொழி மாலிரும் குன்றம்
தாம் வீழ் காமம் வித்தி விளைக்கும்
நாமத் தன்மை நன் கனம்படி எழ
யாமத் தன்மையில் வையிரும் குன்றத்து – 15- 22-26 –
அழகு பொருந்திய திரு யென்னும் சொல்லோடும் சோலை யென்னும் சொல்லோடும்
மால் இரும் குன்றம் யென்னும் சொல் தொடர்ந்த மொழி யாகிய திரு மால் இரும் சோலை மலை யென்னும்
நாமத்தினது பெரும் தன்மை நன்றாக பூமியின் கண் பரக்க –
மகளிரும் மைந்தரும் தாம் வீழ் காமத்தை வித்தி விளைக்கும் யாமத்தியல்பை உடைய இவ்வையிரும் குன்றத்து எனக் கூட்டுக –
எனபது பரிமேல் அழகர் உரையாகும் .

பயன் கருதாது இப்பெயரை நம் ஆழ்வார் கூறினமையில் வீடு பேறு பெற்றனர் -என்பர் .’
பெயருக்கு உள்ள இத்தகைய பிரசித்தி தோற்ற –மால் இரும் சோலை -யென்னும் பொருப்பு என்று அருளிச் செய்தார் –

பொருப்பிடம் –
பொருப்பாகிற இடம்- இரு பெயரொட்டுப் பண்புத் தொகை –
வைகுந்தம் வேங்கடம் பொருப்பிடம் யென்னும் இவற்றில் உம்மைகள் தொக்கன –
மாயனுக்கு -ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி -அனைத்திலும் வியக்கத்தக்கவனான சர்வேஸ்வரனுக்கு
மாயனுக்கு வைகுந்தமும் -வேங்கடமும்-பொருப்பிடமும் இருப்பிடம் -என இயைக்க –

என்பர் நல்லோர் –
இம் மூன்று திவ்ய தேசமும் மாயன் கோயில் கொண்டுள்ள இடமாக சொல்லா நிற்பார் -நல்லவர்கள் என்றபடி ..
நல்லவர்கள் சர்வேஸ்வரனை சாஷாத்காரம் செய்ய வல்ல ஆழ்வார்கள் –
வைகுந்தம் கோயில் கொண்ட -திருவாய் மொழி – -8 6-5 – –
வேங்கடம் கோயில் கொண்டு – பெரிய திரு மொழி – 2-1 7- –
அழகர் தம் கோயில் -திருவாய் மொழி – 2-10 2- – என்று
ஆழ்வார்கள் கோயிலாக இம் மூன்றினையும் குறிப்பிட்டு உள்ளமை காண்க –
இம் மூன்று இடங்களையும் ஒக்க எடுத்தது மாயனுக்கும் அடியார்களுக்கும் இன்பம் பயப்பதாய் ப்ராப்யம் -பேறாகப் பெறத் தக்கது –
பிராப்யமாய் ஆம் இடமாய் இருத்தல் பற்றி -என்க-
வைகுண்டத்தில் போலே வேங்கடத்தில் நித்ய சூரிகள் அடிமையினை ஏற்பதோடு அமையாமல் –
நீணிலத்தில் உள்ளார் அடிமையினையும் ஏற்று முக்த அநுபூதியை மாயன் வழங்கிக் கொண்டு இருப்பதால் –
அதுவும் பிராப்ய பூமி ஆயிற்று என்க –
அடிமையில் விடாய் கொண்டவர்கள் மலையேறி வருந்தாது நினைத்த போதே அடிமை செய்யலாம்படி
அம்மாயன் வந்து மலை அடிவாரத்தில் அடிமையினை எதிர்பார்த்து இருக்கும் இடம் திரு மால் இரும் சோலை மலை –

நம் ஆழ்வார் தாம் வடிகட்டின அடிமையை உடனே பெற்றாக வேண்டும் படியான விடாய் கொண்டு –
காலக் கழிவு செய்யேல் –என்று ஆத்திரப் படுவது கண்டு -சரீரம் நீங்கும் வரை அடிமை செய்ய காத்து இருக்க
இவரால் இயலாது என்று சரீரத்தோடேயே- நினைத்த கணத்திலேயே அடிமை கொள்ள இந்த இடம் சால ஏகாந்த ஸ்த்தலமாய்
இருந்தது என்று -திரு மால் இரும் சோலை மலையிலே எழுந்து அருளின நிலையைக் காட்டி
பகவான் அவரை அனுபவிப்பித்து இனியர் ஆக்கினான் -என்று அருளிச் செய்வர் எம்பெருமானார் .
கிளர் ஒளி ஈட்டு அவதாரிகை -காண்க .

அவை தன்னொடும் –
அந்த வைகுண்டம் வேங்கடம் மால் இரும் சோலை தொடக்கமான திவ்ய தேசங்களோடு கூட-வந்து -பர கத சுவீகாரம் —
அழகிய பாற்கடலோடும் –என்கிறபடியே-
அந்த திவ்ய தேசங்களில் –
1–அவரைப் பெறுகைக்கும்-
2-ஜகத் ரஷணம் பண்ணுகைக்கும் -உறுப்பாகையாலே அந்த கிருதக்ஜ்ஜையாலும் –
3-தனக்கு பிராப்யரான-இவர் தம்முடைய ப்ரீதி விஷயங்கள் ஆகையாலும் -அவற்றை பிரிய மாட்டாதே –
அந்த திவ்ய தேசங்களோடு கூடே தானே வந்து –

மாயன் –
சுவையன் என்னும்படி நிரதிசய போக்யனான சர்வேஸ்வரனுக்கு –
1- ஜ்ஞாநீத்வாத் மைவமே மதம் -என்று அவன் தானே சொல்லும்படி –தாரகராய் இருக்குமவர் –
அன்றிக்கே –
2-என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் -என்கிறபடி சர்வேஸ்வரன் தானே வந்து உபகரித்து -படாதன பட்டு –
உபதேசித்தாலும் திருந்தாத ப்ராக்ருத ஜனங்களை எல்லாம்-அநாயாசேன திருத்திப் பணி கொண்ட ஆச்சர்ய பூதர் -என்னுதல் –

இராமானுசன் –
இப்படிப் பட்ட எம்பெருமானாருடைய –

மனத்து –
திரு உள்ளத்திலே வாசஸ்தானமாக எழுந்து அருளி இருந்தார் -என்றபடி –

இன்று–அடியேனை
அந்தரங்கராக கைக் கொண்ட இப்போது –

என் தன் இதயத்து உள்ளே –
தம்முடைய திரு உள்ளம் போல் -1-பக்தி ரச சந்துஷிதமாய் -2–நிச்ச்சலமாய் -3- விஷய விரக்தமாய் -இருக்கை அன்றிக்கே –
1-சுஷ்கமாய் –2-சஞ்சலமாய் –3-விஷய சங்கியான –என்னுடைய ஹ்ருதயத்திலே –

தனக்கு இன்புறவே –
அந்த எம்பெருமானார் தமக்கு -யமைவைஷ வர்நுந்தேதேலப்ய – என்னும்படி நிரவதிக பிரீதி யோடு-எழுந்து அருளி இருக்கும் இடம் —

காமினி உடம்பில் அழுக்கை காமுகன் உகக்குமா போலே என் -பக்கல்-வ்யாமோஹத்தாலே என் ஹ்ர்தயத்தை விட்டு
மற்று ஒன்றை விரும்பார் என்றபடி –
உச்சி உள்ளே நிற்கும் -என்னும் படி சர்வேஸ்வரன் ஆழ்வார் திரு முடிக்கு அவ்வருகு போக்கு இல்லை என்று அங்கே
தானே நின்றால் போலே எம்பெருமானாரும் இவர் திரு உள்ளத்துக்கு அவ்வருகே போக்கு ஓன்று இல்லை என்று திரு உள்ளமாய் –
அங்கே தான் ஸ்தாவர பிரதிஷ்டையாக எழுந்து அருளி இருந்தார் காணும் –

அவை தன்னொடும் வந்து இருப்பிடம் மாயன் இராமானுசன் மனத்து
அர்ச்சிராதி வழியே வந்து உடலம் நீங்கினவர்க்கு அடிமை செய்ய பாங்கான இடம் என்று வைகுந்தத்தையும் –
போவான் வழி கொண்டு – -சிகரம் -வந்தடைந்த நீணிலத்தில் உள்ளார்கட்கும்
அடிமைத் தொழில் பூண்பதற்கு பாங்கான இடம் என்று திரு வேங்கடத்தையும்
போவான் வழிக் கொள்வதற்கும் -சிகரத்தில் ஏறுவதற்கும் -திறன் அற்றார்க்கும் விடாய்த்த உடனே
உடலோடு அடிமை செய்வதற்கு பாங்கான இடம் என்று திரு மால் இரும் சோலை மலையையும்
தனக்கு கோயில்களாக கொண்டது போலே –
மாயன் –எம்பெருமானார் இதயத்தையும் தனக்கு கோயிலாக கொண்டான்

இவ்விடம் ஒரே காலத்தில் பல்லாயிரம் பேர்கள் ஆட்பட்டு அடிமை புரிவதற்கு -பாங்காக அமையும் எனபது மாயனது அவா –
ஆயின் ஏனைய இடங்கள் போன்றது அன்று எம்பெருமானார் உடைய இதயம்
வேங்கடத்தை இடமாக கொண்ட போது -த்யக்த்வா வைகுண்டம் உத்தமம் -சீரிய வைகுண்டத்தை விட்டு –
என்றபடி வைகுண்டத்தை துறந்தான் –
இங்கனமே திரு மால் இரும் சோலையை இடமாக கொள்ளும் போது ஏனைய இரண்டினையும் விட வேண்டியதாயிற்று –
இம் மூன்று இடங்களிலுமே இருப்பவன் மாயன் ஒருவனே -ஆயின் இடங்கள் வெவ்வேறு பட்டன –
அவ்வவ இடங்களிலே வாசம் பண்ணினதன் பயன் இவர் இதயத்தில் வாசம் பண்ண வேண்டியதாயிற்று –
அங்கனம் வாசம் பண்ண வரும் போது –
தான் கோயில் கொண்டு இருந்த மூன்று இடங்களையும் கூடவே கொணர்ந்து இங்கே குடி புகுந்தானாம் அம் மாயன் –

ஏனைய இடங்கள் அவன் இருப்பதற்கே போதுமானவை –மற்ற இடங்களைக் கொணர்ந்தால் இடம் போதாது –
எம்பெருமானார் இதயமோ இன்னும் எத்தனை இடங்களோடு வந்தாலும் இடம் கொடுக்கும் -அவ்வளவு விசாலமானது –
இது போன்ற இதயம் இருப்பிடம் என்னாது -இதயத்து இருப்பிடம் -என்ற அழகு பாரீர் –
வைகுந்தம் முதலியன இருப்பிடமாயின எம்பெருமானார் இதயத்தில் ஒரு பகுதி அவற்றோடு மாயன் இருப்பதற்கு இடம் ஆயிற்று -என்றபடி –
மேலும் பூதத் ஆழ்வார்
தமது உள்ளத்தை -திரு மால் இரும் சோலை மலை -திரு வேங்கடம் இவற்றைப் போலே கோயில் கொள்ளக் கருதியதை
அறிந்து பகவானே நீ என் உள்ளத்தில் குடிபுக பாலாலயமாகக் கொண்ட திருப்பாற்கடலை கை விட்டு விடாதே என்று
வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ் இரண்டும்
நிற்பு என்று நீ மதிக்கும் நீர்மைபோல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளம் கோயில் கை விடேல் என்று – -54 – என்னும் பாசுரத்தில் வேண்டிக் கொண்டதற்கு ஏற்ப
பெரியாழ்வார் திரு உள்ளத்திலே
அழகிய பாற்கடலோடும் -5 -2 10- -புகுந்து பள்ளி கொண்டது போலவும்
கோயில்கொண்டான் திருக் கடித்தானத்தை கோயில் கொண்டான் அதனோடும் என்நெஞ்சகம் –திரு வாய் மொழி -8 6-5 – –
என்றபடி நம் ஆழ்வார் திரு உள்ளத்தில் திருக் கடித்தானத்தோடு கோயில் கொண்டது போலவும் –
எம்பெருமானார் திரு உள்ளத்திலும் அந்த வைகுந்தம் முதலிய வற்றோடு எழுந்து அருளி இடம் கொண்டான் -என்க .

பொருந்தாதவற்றையும் பொருந்த விட வல்ல மாயன் ஆதலின் -அளவிடற்கரிய த்ரிபாத் விபூதியான வைகுந்தத்தையும்
இதயத்துக்கு உள்ளே அடக்க வல்லனாயினான் -என்னலுமாம்

இன்று அவன் வந்து இருப்பிடம் –தனக்கின்புற –
இன்று –
ஈடுபாடு உடையவனாக்கி -என்னை ஆட் கொண்ட இன்று –
அவன்
வைகுந்தம் முதலிய வற்றோடு மாயனை இதயத்திலே ஓர் இடத்திலே ஒதுக்கி வைத்து கொண்டு இருக்கிற எம்பெருமானார் .
அத்தகைய எம்பெருமானார் தாம் இன்புறும்படி –
தாமே வந்து -என் தன் இதயத்துக்கு உள்ளே இடம் கொண்டார் என்கிறார் –
இத்தகைய இதயம் படைத்த பீடு -தோன்ற -என் தன் -இதயம் -என்கிறார் –
மாயன் இருப்பிடம் எம்பெருமானார் இதயத்திலே
அந்த எம்பெருமானார் இருப்பிடம் என்னுடைய இதயத்துக்கு உள்ளே -என்றது கவனிக்கத் தக்கது –
இதனால் எம்பெருமானார் இதயத்திலும் அமுதனார் இதயம் இடம் உடைத்தாய் உள்ளமை புலன் ஆகின்றது அன்றோ

கீழ் இரண்டு பாட்டுக்களாலே
எம்பெருமானார் திரு மேனி குணங்களின் அனுபவம் இன்றேல் ப்ராப்யமான வைகுந்தம் சேரினும்
கால் பாவி நிற்க மாட்டேன் என்றும் –
எம்பெருமானாரைத் தொழும் பெரியவர் களிக் கூத்தாடும் இடமே தனக்கு பிராப்யமான இடம் என்றும்
சர்வேஸ்வரனோடு ஒட்டு அறுத்து பேசினவர் –
இங்கே பிராப்யமான இடத்தோடு மாயனையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு எம்பெருமானார்-தன் இதயத்துக்கு உள்ளே
எழுந்து அருளி இருப்பதாக அருளிச் செய்து இருப்பது கவனத்திற்கு உரியது –
ஆசார்ய சம்பந்த்தினுடைய மகிமை –
இவர் கால் பாவ மாட்டேன் என்று ஒதுக்கின இடமும் –
ஆசார்யனோடும்
அவன் உகந்த ஈச்வரனோடும்
தானாகவே இவரை நாடி வருகிறது –
ஆசார்யன் உகந்த இடமும் -அவன் உகந்த எம்பெருமானும் ஆசார்யன் முக மலர்ச்சிக்காக
நெஞ்சார ஆதரிக்கத் தக்க எய்தி விடுவதை இது புலப் படுத்து கிறது .

இதனால் ஆசார்யனைப் பற்றுகை -பகவானை பற்றுவதினின்றும் வேறு பட்டது அன்று –
பேற்றினை எளிதில் தர வல்லது எனபது தெளிவாகின்றது –
இங்கே -ஈஸ்வரனை பற்றுகை கையைப் பிடித்து கார்யம்கொள்ளுமோபாதி
ஆசார்யனைப் பற்றுகை காலைப் பிடித்து கார்யம் கொள்ளுமோபாதி –-47 – என்னும்
ஸ்ரீ வசன பூஷணமும் அதன் வியாக்யானமும் சேவிக்கத் தக்கன —

—————————————————————————————————————————————————–———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –105–செழும் திரைப் பாற்கடல் கண்டுயில்மாயன் திருவடி-இத்யாதி –

June 3, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

எல்லாரும் சம்சாரம் த்யாஜ்யம் ஸ்ரீ பரம பதம் உபாதேயம் என்று அறுதி இட்டு வஸ்தவ்யதேசம் அதுவே என்று
அங்கே போக ஆசைப்படா நிற்க –
நீர் ஸ்ரீ பரம பதத்தையும் சம்சாரத்தையும் சஹபடியா நின்றீர் –
உமக்கு வஸ்தவ்ய தேசமாக நீர் தாம் அறுதி இட்டு இருப்பது எது -என்ன அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழே -ஸ்ரீ எம்பெருமானார் தமக்கு பண்ணி அருளின உபகாரத்தை அனுசந்தித்து
மகா உதாரரான ஸ்ரீ எம்பெருமானாரே -என்று அவரை சம்போதித்து-தேவரீர் சுலபனான ஸ்ரீ கிருஷ்ணனை
கரதலாமலகமாக பண்ணிக் கொடுத்தாலும் –அவன் நித்ய வாசம் பண்ணுகிற பரம பதத்தையே கொடுத்தாலும் –
அவனுக்கு கிரீடாகந்துக ஸ்தாநீயமான இந்த லீலா விபூதியைக் கொடுத்தாலும் -தேவரீர் உடைய திவ்ய மங்கள விக்ரக
அனுபவம் ஒழிய அவற்றில் ஒன்றும் எனக்கு வேண்டுவது இல்லை -ஆகையால் இவ் அனுபவம் எனக்கு எப்போதும்
நடக்கும்படி கிருபை பண்ணில் தரிப்பன் – இல்லை யாகில் ஜலாதுத்தர்த்த மத்ஸ்யம் போலே தரிக்க மாட்டேன் என்ன –
அத்தைக் கேட்டவர்கள் –
ஜநி ம்ருதி துரித நிதவ் மே ஜகதி ஜிஹா சாந்த்ரஜாம் பிதா பவத -பவ நு ச நபசி பரஸ்மின் நிரவதிக
அநந்த நிர்ப்பரே லிப்ச – என்கிறபடியே
லோகத்தார் எல்லாரும் சம்சாரம் த்யாஜ்யம் என்றும் -ஸ்ரீ பரம பதம் உபாதேயம் என்றும் -அறுதி இட்டு அங்கே போக
ஆசைப்படா நிற்க -நீர் இவ்விரண்டையும் சஹ படித்து சொன்னீர் –
இனி உமக்கு வஸ்தவ்ய தேசமாக அறுதி இட்டு இருப்பது என் என்று கேட்க –
ஸ்ரீ திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய குணங்களில் ஈடுபட்டு –
கலக்கமில்லா நல் தவ முனிவராலே விரும்பப்பட்ட விலஷண ஞானத்தை உடையரான -பரம வைதிகராலே –
தொழுது முப்போதும் -என்கிறபடியே-(உபாயமாக பற்றி -நடு நிலை -மேலே ப்ராப்ய பூதராக)
அநவரதம் சேவிக்கப் படா நின்றுள்ள திருவடிகளை உடைய ஸ்ரீ எம்பெருமானாரை –
தேவும் மற்று அறியேன் – என்று சதா அனுபவம் பண்ணிக் கொண்டு இருக்குமவர்கள் எழுந்து அருளி இருக்குமிடம் அவர்கள்
(ஸ்ரீ ஆழ்வான் போல்வார் அன்றோ ப்ராப்யமாக சதா அனுபவம் பண்ணிக் கொண்டு இருப்பவர்கள் )
அடியேனான-எனக்கு வஸ்தவ்ய தேசம் என்று கீழே தாம் சொன்ன ப்ராப்யத்தை நிஷ்கர்ஷித்து அருளுகிறார் –
(மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலேன் என்றாரே -அத்தை பெற இது அன்றோ வஸ்வ்யம்)-

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

எல்லாரும் தோஷம் நிறைந்த சம்சாரத்தை அருவருத்து -ஸ்ரீ பரம பத்திலே போய் இருக்க ஆசைப்படா நிற்பர் –
நீரோ -சம்சாரத்தையும் ஸ்ரீ பரம பதத்தையும் ஓன்று போலே பேசா நின்றீர் -எங்கு இருப்பினும் சரியே என்றீர் .
நீர் போய் இருக்க ஆசைப்படும் இடம் தான் எது -அதனை சொல்லீர் -என்ன –அது தன்னை அருளிச் செய்கிறார்

செழும் திரைப் பாற்கடல் கண்டுயில்மாயன் திருவடிக் கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நன்ஞானி நல் வேதியர்கள்
தொழும் திருப்பாதன் இராமானுசனைத் தொழும் பெரியோர்
எழுந் திரைத்தாடுமிடம் அடியேனுக் கிருப்பிடமே – – -105 – –

பத உரை –
செழும் திரைப் பாற்கடல் -அழகிய அலைகளை உடைய ஸ்ரீ திருப்பாற் கடலிலே
கண்துயில் மாயன் -உறங்குகிறவன் போல் உள்ள ஆச்ச்சரியப் படத்தக்க ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய
திருவடிக் கீழ் -திருவடிகளின் கீழே
விழுந்து இருப்பார் -மாயன் குணத்திற்கு தோற்று விழுந்து -அந்நிலை யினிலே நிலை நிற்பவர்களான முனிவர்களுடைய
நெஞ்சில் -உள்ளத்தில்
மேவும் -பொருந்தி உள்ள
நல் ஞானி -நல்ல ஞானத்தை உடையவரும்
நல் வேதியர்கள் -சீரிய வைதிகர்கள்
தொழும் திருப்பாதன் -தொழுகின்ற திருவடிகளை உடைய வருமாகிய
இராமானுசனை -ஸ்ரீ எம்பெருமானாரை
தொழும் பெரியோர் -தொழுது கொண்டு இருக்கும் பெரியவர்கள்
யெழுந்து -களிப்பின் மிகுதியால் கிளம்பி
இரைத்து-ஆரவாரம் செய்து
ஆடும் இடம் -கூத்தாடுகின்ற இடம்
அடியேனுக்கு -அன்னார் அடியானான எனக்கு
இருப்பிடம் -குடி இருக்கும் இடமாகும்

வியாக்யானம் –
அழகிய திரைகளை வுடைத்தான ஸ்ரீ திருப்பாற் கடலிலே –
கடலோதம் காலலைப்ப கண் வளரும் -ஸ்ரீ திருவந்தாதி – 16- என்கிறபடியே துடை குத்த உறங்குவாரைப் போலே –
அத் திரைகளானவை திருவடிகளை அநு கூலமாக அசைக்க -கண் வளரா நிற்பானாய் –
உறங்குவான் போல் -ஸ்ரீ திருவாய்மொழி -5 4- 11- – யோகு செய்கிற ஆச்சர்யத்தை உடையவனான
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய குணத்தில் ஈடுபட்டு –
ஜிதந்தே -என்று திருவடிகளின் கீழே விழுந்திருந்த ஸ்வபாவத்துக்கு ஒருகாலும் சலனம் அற்று இருக்கிற
கலக்கமில்லா நல் தவ முனிவரும் -திருவாய் மொழி -8-3 10– இது ஒரு ஞான வைபவமே என்று இத்தையே
(இவரை -சொல்லாமல் இத்தை -ஞானத்தை -மேவுவது ஞானம் ஞானி அல்லன்– ) பல காலும் ஸ்லாகித்துக் கொண்டு
போருகையாலே -அவர்கள் நெஞ்சிலே மேவப்பட்ட விலஷணமான ஜ்ஞானத்தை உடையவராய் –
பரம வைதிகரானவர்கள் ப்ராணாமாத்ய அநு வர்த்தங்களைக் பண்ணா நின்றுள்ள திருவடிகளை வுடையரான ஸ்ரீ எம்பெருமானாரை
நித்யாஞ்சலி புடாஹ்ருஷ்டா -பார மோஷ -என்கிறபடியே சதா அனுபவம் பண்ணா நின்று உள்ள வைபவத்தை உடையவர்கள் –
(தூங்கும் கண்ணன் -கண் துயில் மாயன் -கண் வளரும் கமலக் கண்ணன் -பற்றாமல் உண்டோ கண்கள் துஞ்சுதலே –
இவரை பற்ற அன்றோ அடுப்பது-)-அவ் அனுபவ ஜனித ஹர்ஷ பிரகர்ஷத்தாலே உடம்பு இருந்த இடத்தில் இராதே
கிளர்ந்து கடல் இரைத்தால் போலே இரைத்துக் கொண்டு சசம்பிரம வியாபாரங்களை பண்ணும் இடம்
அவர்கள் அடியனான எனக்கு வஸ்த்வ்ய தேசம்

செழுமை -அழகு பெருமையுமாம்
பாற்கடல் பள்ளி கொள் மாயன் -என்றும் பாடம் சொல்லுவர்–
தன் இருப்பிடம் ஸ்ரீ அமுதனார் சொல்லிக் கொள்ள -போட்டி போட்டு ஸ்ரீ திவ்ய தேச பெருமாள்கள் அடுத்த பாசுரம் –

நீள் ஓதம் வந்து அலைக்கும் -அவன் திருவடி தீண்ட -கண் துயில் மாயன் -உறங்குவான் போல் யோகம் செய்து –
அனைத்தையும் செய்து அருளி –
பாவோ நான்யத்ர கச்சதி –நெஞ்சில் -மேவு நல் ஞானி ஸ்ரீ ராமானுஜன் -திருவடி விழுந்த பலன் ராமானுஜரை
நெஞ்சிலே பிரதிஷ்டை செய்து அருளுவான் -பிரதம பர்வம் பற்றினால் சரம பர்வத்தில் மூட்டும்-
மேவு நல் ஞானம் -ஆராய்ந்து விரும்பிய ஞானம் -படைத்த ஞானி ஸ்ரீ எம்பெருமானார் -அது என்ன ஞானம் -சரம பர்வ நிஷ்டை –
மஹா பாரத ஸாரஸ்வத் -ரிஷிகளும் பரிஹிரத்து -ஸ்ரீ வியாசர் அருளி ஸ்ரீ பீஷ்மர் தொகுத்து -ஸ்ரீ கீதை அர்த்தம் ஏகார்த்தம் இதில் –
சரம ஸ்லோகம் -பற்ற சொல்லி -பக்தியால் கீர்த்தி பண்ணுவதே மேலே ஸ்ரீ சகஸ்ர நாமம் திரு நாம சங்கீர்த்தனம் –
போன்ற ஏற்றம் ஸ்ரீ பட்டர் காட்டி -செழும் பொருள் இதுவே –
துஷ்யந்த ச ரமந்தச சததம் கீர்த்தி யஞ்ச – இதுவே செழும் பொருள் -பிரிய ஞானி அத்யந்த பிரியத்தமம் —

நல் ஞானி -ஸ்ரீ ஆச்சார்ய அபிமான பெருமை உணர்ந்தவர் –
நல் வேதியர் -வேதத்தின் யதார்த்த ஞானம் அறிந்து பாகவத சேஷத்வம் போக்யதை அறிந்தவர் –
அடியோரோடு இருந்தமை –ஸ்ரீ ஆழ்வார் ஆசைப்பட்டார்
தொழும் பெரியோர் -எழுந்து இரைத்து ஆடும் இடமே அடியேனுக்கு இருப்பிடம் —
ஸ்ரீ ராமானுஜனை தொழுதே பெரியோர் ஆனவர்கள் -இரண்டாவது கோஷ்ட்டி -அதனால் பிரித்து அருளுகிறார்
நல் வேதியர் -வேறே -இவர்கள் வேறே -நல் வேதியர் தொழுவார்கள் -தொழுவதனால் பெரியோர் ஆனவர்கள் திருப்பாதம் –
ஸ்ரீ ஆழ்வார் பாசுரம் பிரமாணம் -வேதம் பிரமாணம் -வேதம் தமிழ் செய்த மாறன் –
நல் வேதியர் -தொழாமல் இருக்கலாம் – தொழும் பெரியோர் நல் வேதியராக இருக்காமல் இருக்கலாம்
கடல் ஆர்பரித்தால் போலே ஸ்ரீ எதிராஜா ஸ்ரீ ராமானுஜர் -மால்; கொள் சிந்தையராய் –ஈட்டம்
செழும் –திரைக்கு கடலுக்கும் மாயனுக்கும் -விசேஷணம் -ஏஷ நாராயண ஸ்ரீ மான்
தன்னை உற்றாரை ஆட் செய்ய அன்றோ அவர் அருள் புரிந்தது –
அடியார் எழுந்து இரைத்து ஆடும் இடமே ஸ்ரீ ராமானுஜர் இருப்பிடம் -புலவர் நெருக்கு உகந்த ஸ்ரீ பெருமான் போலே தானே ஸ்ரீ ஸ்வாமியும் –
பாட்டு கேட்கும் இடம் –கூப் பாடு கேட்கும் இடம் வளைத்த இடம் குதித்த இடம் எல்லாம் வகுத்த இடமே-
இது அன்றோ எழில் ஆலி –ஸ்ரீ பரகால நாயகி இருக்கும் இடமே –திருவடி தாமரையே என்று காட்டினானாம் –
இங்கு ஸ்ரீ அமுதனார் ஸ்வாமியை தொழும் பெரியோர் எழுந்து இரைத்து ஆடும் இடமே அடியேனுக்கு இருப்பிடம் என்கிறார்-
ஞானிகள் -பக்தி நிஷ்டர்கள் – ஆச்சார்ய அபிமானம் அறிந்து அனுஷ்டானத்தில் இருந்தவர் -இப்படி மூன்று நிலை –
ஆச்சார்யரைப் பெற்றதே பகவத் அனுக்ரகம் -ஆச்சார்யர் திரு உள்ளம் உகக்குமே –
ஸ்ரீ பகவத் வைபவம் சொல்லியே பாசுரம் தோறும் ஸ்ரீ எம்பெருமானார் வைபவம் பேசுவார் பாட்டு தோறும் —

செழும் திரை பாற்கடல் கண் துயில் மாயன் –
செழும் என்றது -திரைக்கு விசேஷணம் ஆகவுமாம்-கடலுக்கு-விசேஷணம் ஆகவுமாம் —
திரைக்கு விசேஷணம் ஆனபோது –செழுமை –அழகியதாய் -பால் கிளருமா போலே-ஒன்றுக்கு ஒன்றாக திரண்டு வருகிற
இவற்றினுடைய சமுதாய சோபையை சொன்னபடி –
கடலுக்கு-விசேஷணம் ஆன போது-செழுமை -பெருமையாய் -நளி நீர் கடலைப் படைத்து தன் தாளும் தோளும் முடிகளும்-
சமனிலாத பல பரப்பி -என்கிறபடி –
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு இடங்கை வலங்கை கொண்டு கண் வளருகைக்கு-ஈடான பரப்பை உடைய கடல் என்றபடி –
அன்றிக்கே –
செழுமை ஸ்ரீ மாயவனுக்கு விசேஷணம் ஆகவுமாம் –

இப்படிப் பட்ட ஸ்ரீ திரு பாற் கடலிலே –
கடலோதம் கால் அழைப்ப கண் வளரும் –என்கிறபடி துடை குத்த உறங்குவாரைப் போலே –
திரைகளானவை திருவடிகளை அனுகூலமாக அலைக்க – ஊஞ்சலிலே கண் வளருமவனைப் போலே –
கண் வளரா நிற்பானாய் –உறங்குவான் போலே யோகு செய்கிற -ஆச்சர்யத்தை உடையனான ஸ்ரீ சர்வேஸ்வரன் –
ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் -ஷீரார்ணவ நிகேதன -என்றும் –
வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்தினை -என்றும் சொல்லுகிறபடி அநந்த அவதார கந்தமாய்க் கொண்டு
ஸ்ரீ திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ சர்வேஸ்வரன் -என்றபடி –

செழும் திரை பாற்கடல் பள்ளி கொள் மாயன் –என்றும் பாடம் சொல்லுவார்கள் –
திருவடிக் கீழ் விழுந்து இருப்பார் -பாற் கடலான் பாதம் வழுவா வகை நினைந்து – என்கிறபடியே
அப்படிப் பட்ட ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய கல்யாண குணங்களை அனுபவித்து -அவற்றிலே ஈடுபட்டு –
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றபடி –
அவனுடைய திருவடிகளின் கீழே நிழலும் அடி தாறும் போலே பிரியாதே விழுந்து இருக்குமவர்களான –
கலக்கமிலா நல் தவ முனிவராலே —

நெஞ்சில் மேவும் நல் ஞானி –
இது ஒரு ஞான வைபவமே என்று இத்தையே பலகாலும் அவர்கள் ஸ்லாகித்துக் கொண்டு – போருகையாலே அவர்கள்
நெஞ்சிலே வைக்கப்பட்ட ஞான வைலஷன்யத்தை உடையவராய் –
மேவுதல் -விரும்புதல் –

செழும் திரை — மேவு நன் ஞானி
தனக்கு ஸ்ரீ எம்பெருமானார் உபதேசித்த நன் ஞானம் –பாற்கடல் கண் துயிலும் ஸ்ரீ மாயன் குணங்களிலே ஈடுபட்டு –
அதன் கண்ணே நிலை நிற்கும் -ரசிகர்களான ஸ்ரீ சனகாதி முனிவர்களாலும் –
ஸ்ரீ எம்பெருமானாருக்கு வாய்த்த இந்த சாஸ்திர தாத்பர்ய ஞானத்தின் சீர்மை இருந்தபடி என் -என்று
நெஞ்சார எப்பொழுதும் கொண்டாடும்படி உள்ளதாம் – அத்தகைய ஞானம் வாய்ந்தவர் ஸ்ரீ எம்பெருமானார் -என்கிறார் .

ஸ்ரீ எம்பெருமான் கண் துயிலும் ஸ்ரீ திருப்பாற் கடலிலே அலைகள் செழுமை வாய்ந்து உள்ளன –
செழுமை -அழகு -பெருமையுமாம் –
கோலக் கருமேனி செங்கண் மால் திரு மேனியைத் தீண்டப் பெற்ற பெரும் களிப்பினால் –
கைகளைத் தூக்கி ஆரவாரத்துடன் ஆடுவது போன்று உள்ளது அந்தக் கடல் –
அங்கே போய் ஸ்ரீ மாயனை வழி படுகின்றனர் ஸ்ரீ ப்ரஹ்ம பாவனையில் நிற்பவர்களான சனகாதி முனிவர்கள் –
தன்னிடம் வந்து பள்ளி கொண்ட ஸ்ரீ பரமனை கடல் தன் அலைகள் ஆகிற கைகளாலே திருவடிகளை அலைத்து –
ஊஞ்சலில் ஆட்டி உறங்கும்படி -செய்வதனால் ஸ்ரீ எம்பெருமான் கண் துயில்வதாக தோற்றுகிறது -பக்தர்களுக்கு –

கடலோதம் தம் கால் அலைப்ப கண் வளரும் -ஸ்ரீ முதல் திருவந்தாதி – 13- என்றார் ஸ்ரீ பொய்கை ஆழ்வாரும் .
உண்மையில் உறங்குகிறானா அவன் – அவனுறங்கி விட்டால் உலகின் கதி என்னாவது -ஸ்ரீ மாயன் அல்லனோ –
பொய் உறக்கம் கொள்கிறான் -உறங்குவான் போல் உலகு உய்யும் வழியை யோசனை செய்கிறான் –
உறங்குவான் போல் யோகு செய்வதாக கூறுகிறார் ஸ்ரீ திருவாய் மொழியில் ஸ்ரீ நம் ஆழ்வார் –
நித்ராசி ஜாகர்யயா -விழிப்புடன் உறங்குகின்றாய் -ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம் -என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்த படி –
உலகினை காக்கும் விஷயத்தில் விழிப்புடன் உறங்குகின்ற ஆச்சர்யத்தில் ஈடுபட்டு –
ஜிதந்தே புண்டரீகாஷா -ஸ்ரீ தாமரைக் கண்ணனே உன் அழகுக்கு தோற்றோம் -என்றபடி
குணத்திற்கு தோற்று திருவடிகளிலே விழுகிறார்கள் அந்த ஸ்ரீ சனகாதி முனிவர்கள் –

இது ஒரு நாள் நிகழும் நிகழ்ச்சி யன்று –
பாற்கடலான் பாதம் வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை -ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி – 89- என்றபடி
நாள் தோறும் நடை பெரும் நிகழ்ச்சியாகும் –
ஆகவே வரும் போதெல்லாம் வியக்கத்தக்க குணத்திற்கு தோற்று திருவடிக் கீழ் விழுவதும் அவர்கட்கு மாறாத இயல்பாகி விட்டது –
இது தோற்ற -ஸ்ரீ மாயன் திருவடிக் கீழ் விழுந்திருப்பார் -என்று அருளிச் செய்தார் –
ஸ்ரீ மாயன்-ஆச்சர்யப் படத் தக்கவன்
பாற்கடல் பள்ளிகொள் மாயன் -என்றும் ஒரு பாடம் உண்டு

இங்கனம் மாயன் குணத்திற்கு தோற்று திருவடிக் கீழ் வீழ்தலின் இருப்பு உடையார் உள்ள -ஸ்ரீ சனகாதி முனிவர்கள் –
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஸ்ரீ நம் ஆழ்வாரால் –
கலக்கமில்லா நல் தவ முனிவர் -ஸ்ரீ திருவாய் மொழி – 8 3-10 – என்று போற்றப்படும் ஏற்றமுடைய தங்களது நெஞ்சிலே
ஸ்ரீ எம்பெருமானாருடைய நல் ஞானம் மேவுதற்கும் இடம் ஏற்பட்டு விடுகிறதாம் –
பல காலும் அவர்கள் ஸ்ரீ எம்பெருமானார் உடைய நல் ஞானத்தை கொண்டாடிப் பேசுகையாலே –அவர்கள் நெஞ்சிலே
அந்த ஞானம் இடம் கொண்டமை தெரிகிறது .
நூல்களிலே ஸ்ரீ சனகாதி முனிவர் பேச்சுக்களாய் வரும் இடங்களிலே சரம பர்வ விஷயமாக ஸ்ரீ எம்பெருமானார் அளித்த
ஞானமே பலகாலும் கொண்டாடப் பட்டுள்ளமையைக் கண்டு ஸ்ரீ அமுதனார் இங்கனம் கூறுகிறார் -என்க –
மேவு நல் ஞானி ஸ்ரீ எம்பெருமானது குணத்தை ரசித்து அனுபவிக்கும் நெஞ்சிலும் இந்த நல் ஞானம்
ரசிக்க தக்கதாய் இருத்தலின் பலகால் கொண்டாடும்படி இடம் பெறுகிறது .
மேவுவது விசேஷணமான ஞானம்-அதனை உடையவன் ஞானி அல்லன் .

நல் வேதியர் –
பரம வைதிகர் ஆனவர்கள் –தொழும் திருப் பாதன் –
லஷ்மணாய முநயே தஸ்மை நமஸ் குர்மஹே- என்றும் –
தஸ்மை ராமானுஜார்யாய நம பரம யோகினே -என்றும் –
பிரமாணம் லஷ்மண முநி ப்ரதி க்ர்ஹ்ணா து மாமாம் – என்றும் –
ராமானுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்த்நா-என்றும் சொல்லுகிறபடியே
பிரணமாத்ய அனுவர்த்தனந்களை பண்ணா நின்றுள்ள திருவடிகளை உடையனான –

இராமானுசனை –
ஸ்ரீ எம்பெருமானாரை –

தொழும் பெரியோர் –
நித்யாஞ்சலி புடா ஹ்ர்ஷ்டா -என்றும் –
புணர்த்தகையனராய் – என்றும் –
கைகள் கூப்பிச் சொல்லீர் -என்றும் – சொல்லுகிறபடியே சர்வ காலமும் சேவித்துக் கொண்டு இரா நின்றுள்ள பெருமையை உடையவர்கள் –

எழுந் திரைத்தாடுமிடம் –
அவ் அனுபவ ஜநிதமான ஹர்ஷம் உந் மஸ்தகமாய் -அத்தாலே உடம்பு இருந்த இடத்தில் இராதே கிளர்ந்து
கடல் இரைத்தால் போல் இரைத்துக் கொண்டு – ச சம்ப்ரம வியாபாரங்களை பண்ணுமிடம்-

அடியேனுக்கு இருப்பிடமே –
தன்னை உற்றாட் செய்யும் தன்மையினோர்-மன்னு தாமரைத் தாள் தன்னை உற்றாட் செய்ய என்னை உற்றான் -என்கிறபடியே
அவர்களுக்கு-சரமாவதி தாசனான அடியேனுக்கு வஸ்தவ்ய தேசம் –
ஸ்ரீ சிரீதரன் தொல் புகழ் பாடி கும்பிடு-நட்டமிட்டாடி கோகுகட்டுண்டு உழலுகிற -பிரதம பர்வ நிஷ்டரைப் போலே –
இச் சரம பர்வதத்திலும் எழுந்து இரைத்து ஆடுமவர்கள் இருக்குமிடம் அடியேனுக்கு இருப்பிடம் என்கிறார் –

யா வைகுண்ட கதா ஸூ தாரச புஜாம் ரோசேத நோ சேதசே-என்றும் –
வாஸ ஸ்தானம் ததிஹ க்ர்தி-நா பாதி வைகுண்ட கல்பம் –என்றும் –
வஸ்தவ்யம் ஆசார்ய சந்நிதியும் -என்னக் கடவது இறே-

நல் வேதியர்கள் தொழும் திருப்பாதன்-
வேதியர்களான ஸ்ரீ சனகாதி முனிவர்கள் நெஞ்சில் ஸ்ரீ எம்பெருமானாருடைய ஞானம் மாத்ரம் மேவுகிறது —
நல் வேதியர்களோ அந்த ஞானத்தை தங்கள் அனுஷ்டானத்தில் கொண்டு ஸ்ரீ எம்பெருமானார் பாதங்களை-தொழுகின்றனர் –
நல் வேதியர் –
வேதத்தின் தாத்பர்யப் பொருளை உணர்ந்து -சரம பர்வத்தில் நிலை நிற்பவர்கள் .

ஸ்ரீ மாயன் திருவடிக் கீழ் விழுமவர் வேதியர்
ஸ்ரீ எம்பெருமானாரை தொழுமவர் நல் வேதியர் என்றது ஆயிற்று –
ஸ்ரீ மாயன் திருவடிக் கீழ் வேதியர் விழுந்து இருப்பார் .
விழும் திருவடிகளை உடைய ஸ்ரீ மாயனோ கண் துயில்பவன் .
ஸ்ரீ எம்பெருமானார் பாதத்தை தொழுது பணி புரிபவராய் இருப்பர் நல் வேதியர் .
தொழப்படும் ஸ்ரீ எம்பெருமானாரோ -காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே -திரு விருத்தம் – 98- என்றபடி கண் துயிலாதவர் .

இராமானுசனை தொழும் பெரியார் –இருப்பிடம்
எப்பொழுதும் இமையோர்கள் குழாம் -நித்யாஞ்சலி ப்டாஹ்ருஷ்டா -எப்பொழுதும் கை கூப்பினவர்களாய் களிப்புடையவர்களாக -என்றபடி
தொழுவது -சூழ்வது-பிரதஷிணம் செய்வது – முதலிய செய்து -ஸ்ரீ பரம பத நாதனை வழி படுவது போலே –
ஸ்ரீ எம்பெருமானாரை தொழுவது -சூழ்வது – முதலியன செய்து எப்பொழுதும் அனுபவித்து கொண்டே இருக்கும் பெருமை வாய்ந்த பெரியோர்கள் –
அவ் அனுபவத்தால் உண்டான களிப்பு -உள் அடங்காது -இருந்த படியே இருக்க ஒண்ணாது
கிளர்ந்து எழுந்து ஆரவாரங்களைப் பண்ணிக் கொண்டு -பிரதம பர்வத்தில் –
கும்பிடு நட்ட மிட்டாடி – ஸ்ரீ திருவாய் மொழி – 3-5 3- என்றபடி –கூத்தாடுகின்ற இடம் –
அவர்களது அந்நிலைக்கு அடிமை பட்டு விட்டவனாகிய-எனக்கு வாழும் இடம் ஆகும் -என்கிறார் .
அடியார்கள் குழாங்களுடன் அனுபவித்தற்கு ஸ்ரீ வைகுந்தத்தில் வாழ -ஏனையோர் விரும்புவது போலே –
தொழும் பெரியோருடன் ஸ்ரீ எம்பெருமானாரை அனுபவிப்பதற்கு அவர் எழுந்து அருளி உள்ள இடமே-
எனக்கு பேறான மோஷ பூமி -என்றது ஆயிற்று –

நல் வேதியர் ஞானம் கனிந்து பக்தி மார்க்கத்தில் வந்த நல் வேதியர்கள்-
ஸ்ரீ கூரநாத ஸ்ரீ குருகேசர் ஸ்ரீ பிள்ளான் ஸ்ரீ எம்பார் ஸ்ரீ ஆண்டான் ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் ஸ்ரீ வகுட நம்பி போல்வார்-
அங்கு உற்றேன் அல்லேன் இங்கு உற்றேன் அல்லேன்-ஸ்ரீ ஆழ்வார் தவிக்கிறார்
ஸ்ரீ அமுதனார் கதறவில்லை இதே இருப்பிடம் என்கிறார்–எது இருப்பிடம் என்று தைரியமாக அருளுகிறார் இதில்-
பாட்டு கேட்கும் இடம் –கூப் பாடு கேட்கும் இடம் வளைத்த இடம் குதித்த இடம் எல்லாம் வகுத்த இடமே-

—————–

கடலோதம் தம் கால் அலைப்ப கண் வளரும் -முதல் திருவந்தாதி – 13- என்றார் பொய்கை ஆழ்வாரும் .

பாற்கடலான் பாதம் வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை -நான்முகன் திருவந்தாதி – 89-

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?–5-4-11-

கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–8-3-10-

காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே -திரு விருத்தம் – 98-

—————————————————————————————————————————————————–———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –104-கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும்–இத்யாதி –

June 3, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

உபதேச ஜ்ஞான லாப மாத்ரம் ரசிக்கிற படி கண்டால் -ஸ்ரீ பகவத் விஷயத்தை சாஷாத் கரித்தீர் ஆகில்
உமக்கு எப்படி ரசிக்கிறதோ என்று -ஸ்ரீ எம்பெருமானாருக்கு கருத்தாகக் கொண்டு –
பகவத் விஷயத்தை விசதமாகக் காட்டித் தரிலும் –
தேவரீர் திரு மேனியில் பிரகாசிக்கிற குணங்கள் ஒழிய நான் வேண்டேன்
இதுக்கு ஈடான பிரசாதத்தை செய்து அருளில் இரண்டு விபூதியிலும் கால் பாவுவன் –
அல்லது தரியேன் -என்கிறார்

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டில் தத்வ ஹித புருஷார்த்த தத் யாதாம்ய ஞானத்தை சுவ்யக்தமாம்படி
உபதேசித்தார் என்று இவர் இனியராய் இருந்தவாறே –
அத்தைக் கண்டு உபதேச மாத்ரத்துக்கே இப்படி இனியராய்க் கொண்டு ரசித்து இருந்தீர் –
பகவத் விஷயத்தை சாஷாத் கரிக்கும்படி பண்ணிக் கொடுத்தோம் ஆகில் எப்படி ரசித்து இனியராக கடவீரோ
என்று ஸ்ரீ எம்பெருமானாருக்கு கருத்தாக நினைத்து -தேவரீர்-
சகல ஜன மநோ ஹாரி -திவ்ய சேஷ்டிதங்களைப் பண்ணிக் கொண்டு போந்த-ஸ்ரீ கிருஷ்ணனை கரதலாமலகமாக-
காட்டித் தரிலும் தேவரீர் உடைய திவ்ய மங்கள விக்ரகத்திலே பிரகாசியா நின்றுள்ள கல்யாண குணங்களை ஒழிய
அடியேன் வேறு ஒரு விஷயத்தை வேண்டேன் என்ன –
இவன் இப்படி மூர்க்கு பேசலாமோ என்று சீறிப்பாறு செய்து அடியேனை சம்சாரமாகிற நரகத்தில் விழப் பண்ணினாலும் –
நம்மையே பற்றி இருக்கிறான் இறே என்று -கிருபையாலே -நிரவதிக தேஜோ ரூபமான பரம பதத்திலே கொண்டு போய் சேர்த்திடிலும்-
வர்ஷூ கவலாஹம் போலே பரம உதாரரான ஸ்ரீ எம்பெருமானாரே –
தேவரீர் உடைய திவ்ய மங்கள விக்ரகத்தை அனுபவிக்கைக்கு உடலான நிர்ஹேதுக பரம கிருபையாலே தேவரீர்
செய்து அருளின விபூதி த்வயத்திலும் வைத்துக் கொண்டு –
ஏதேனும் ஓர் இடத்தில் கால் பாவி நின்று தரிப்பன் – இல்லை யாகில் தரிக்க மாட்டேன் என்று
ஸ்வ ப்ராப்யத்தை நிஷ்கர்ஷித்து அருளுகிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

உபதேசித்த ஞானமே இப்படி ரசிக்கும்படி இருப்பின் -நேரே ஸ்ரீ கண்ணனைக் காட்டிக் கொடுத்து விட்டால்
எங்கனம் நீர் ரசிப்பீரோ -என்று ஸ்ரீ எம்பெருமானாருக்கு கருத்தாகக் கொண்டு –
ஸ்ரீ கண்ணனை நன்றாக காட்டித் தந்தாலும் -தேவரீர் திரு மேனியில் விளங்கும் குணங்களை ஒழிய நான் வேண்டேன் –
இந் நிலையினுக்கு ஏற்றவாறு அருள் புரிந்தால் –சம்சாரத்திலும் பரம பதத்திலும் கால் பாவி நிற்பன் –
இன்றேல் தரித்து இருக்க வல்லேன் அல்லேன் -என்கிறார் .

கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டலே – – -104 –

பத உரை –
எம் செழும் கொண்டல் -எங்களுக்கு தன் வன்மையை வெளிப்படுத்தி
செழுமை வாய்ந்த மேகம் போல் -விரும்புமவற்றை பொழியுமவரான
இராமானுச -ஸ்ரீ எம்பெருமானாரே
கண்ணனை -எளிமை வாய்ந்த ஸ்ரீ எம்பெருமானை
கையில் கனி என்ன -உள்ளங்கையில் உள்ள நெல்லிக் கனி போலே
காட்டித் தரிலும் -நேரே காணுமாறு செய்து கொடுத்தாலும்
உன் தன் -தேவரீருடைய
மெய்யில் -திரு மேனியில்
பிறங்கிய -விளங்கிய
சீர் அன்றி -குணங்களைத் தவிர
யான் வேண்டிலேன் -நான் விரும்ப மாட்டேன்
நிரயத் தொய்யில் -நரகச் சேற்றிலே
கிடக்கிலும் -கிடந்தாலும்
சோதி -ஒளி மயமான
விண் -பரம பதத்தில்
சேரிலும் -சேர்ந்தாலும்
இ அருள் -இந்த மெய்யில் பிறங்கிய சீரை அனுபவிப்பதற்கு உறுப்பான அருளை
நீ செய்யில் -தேவரீர் செய்து அருளினால்
தரிப்பன் -தரித்து இருப்பேன் –

வியாக்யானம் –
விலஷணமான மேகம் போலே பரமோதாரராய் அது தன்னை எங்களுக்கு பிரகாசிப்பித்தது அருளினவரே —
ஆஸ்ரித சுலபனான ஸ்ரீ சர்வேஸ்வரனை உள்ளங்கை நெல்லிக் கனி போலே சாஷாத் கரிப்பித்து தரிலும்
தேவரீருடைய திவ்ய விக்கிரகத்தில் பிரகாசிக்கிற ஸௌந்தர்யாதி குணங்கள் ஒழிய நான் வேண்டேன் –
சம்சார கர்த்தமத்தில் முழுகி -அழுந்திக் கிடக்க்கவுமாம் –
சுத்த சத்வ குணம் -குண மயம் -ஆகையாலே -நிரவதிக தேஜோ ரூபமான பரம பதத்தை ப்ராபிக்கவுமாம் –
தேவரீருடைய திரு மேனி குணத்தையே அனுபவித்து இருக்கை யாகிற இதுக்கு உறுப்பான பிரசாதத்தை
தேவரீர் செய்து அருளில் ஏதேனும் ஓர் இடத்திலும் கால் பாவி நிற்பன் –
அல்லாத போது தரிக்க மாட்டேன் -என்று கருத்து .

பிறங்குதல்-பிரகாசம்
நிரயம்-விடியா வெந்நரகம் -ஸ்ரீ திருவாய் மொழி-2-9-7 – என்கிற சம்சாரம்
தொய்யில் –சேறு-
தொய்யில் என்கிற இடத்தில் ஏழாம் வேற்றுமை குறைந்து கிடக்கிறது –

நிரயத் தொய்யில் கிடக்கிலென் சோதி விண் சேரிலென் -என்று பாடமாகில்-
சம்சாரத்தில் கிடக்கில் என் -ஸ்ரீ பரம பதத்தில் போகில் என் –
இவை இரண்டும் கொண்டு எனக்கு கார்யம் இல்லை .
சம்சாரத்தின் உடைய தோஷத்தையும் ஸ்ரீ பரம பதத்தின் உடைய வைலஷண்யத்தையும் அனுசந்தித்து
இத்தை விட்டு அத்தைப் பெற விருக்கிறேன் அல்லேன் .
இவ் வனுபவத்தை தேவரீர் தரில் சம்சாரத்திலும் தரிப்பன்
இது இல்லையாகில் ஸ்ரீ பரம பதத்திலும் தரியேன் -என்கை-

செழும் கொண்டல் –பார்த்து பார்த்து அருளுபவர் –செழுமை மாறாத கொண்டல்-கருணை குறையாத -விலஷனமான மேகம்-
ஸ்ரீ வைகுண்டம் சென்றாலும் தவிப்பேன் -அங்கும் உம் திருவடி பெற்றால் தரிப்பேன் –
ஸ்ரீ ராமானுஜர் குண அனுபவம் பெற்றார் சம்சாரமும் நித்ய விபூதியும் ஒன்றாகவே கொள்ளுவார்கள்
உன் தன் மெய்யில் -அவன் பொது -உம்மையே அனுபவிப்பேன் -உம்மாலே கரை மரம் சேர பெற்றேன் –
முமுஷுதை அவனால் பாண்டவர்கள் பெற வில்லை -அவன் தண்டகரன் –உம் அபிமானம் உத்தாரகம் –
ஸ்ரீ ஆச்சார்ய சம்பந்தம் இல்லாமல் உணர்த்துவான் -தாமரை நீரில் இல்லா விடில் ஆதித்யன் உலர்த்தும்

பாலும் சக்கரையும் சேர்த்து -பால் என்கோ-ஆசார்யன் சக்கரை சேர்த்து பருகி இன்பம் -பெற்ற பின் -வெறும் பால் சுவைக்குமோ
கீழ் பாசுரத்தில் ஸ்ரீ நரசிம்ஹர் கீர்த்தி-பின் வாசல் ஸ்ரீ தெள்ளிய சிங்கர்-
இங்கு ஸ்ரீ கிருஷ்ண பக்தி -முன் வாசல்-ஸ்ரீ பார்த்த சாரதி அனுபவம் -ஸ்ரீ ஸ்வாமி தானே அவனும் –
எம்மா வீடு -சிற்றம் சிறுகாலை -இந்த பாசுரம் -மூன்றும் ஏக அபிப்ராயம் -ப்ராப்ய நிஷ்கர்ஷம்-

எங்கும் உளன் கண்ணன் –சர்வ வியாபியை கையில் ஏக தேசத்தில் காட்டித் தரிலும் –
ஸ்ரீ ப்ரஹ்மம் –காட்டித் தரும் வைபவம் உமக்கு அன்றோ –மலை –போல நீர் -நெல்லிக்கனி போலே அன்றோ ஸ்ரீ கண்ணன் –
அதனால் மெய்யில் பிறங்கிய சீர் –ஞானம் தர்சன பிராப்தி -பக்தி தானே காட்டி தரும் -கிருஷ்ண பக்தி தானே ஸ்ரீ ஸ்வாமி –
ஸ்வரூப குணங்கள் -மகரிஷிகள் ஆழ்வார்கள் -நம் போல்வார் மெய்யில் பிறங்கிய சீர் –
ரூப குணங்கள் -ஸ்வரூப குணங்கள் விட ரூப குணங்கள் பெரியதே பக்த பக்தர்களுக்கு தானே உயர்ந்தவற்றை அருளுவீர் –

இவருடைய அவிததத விஷயாந்தரம் இருக்கும் படி -உந்தன் ரூப அனுபவமே -ஸ்ரீ கண்ணன் ரூப அனுபவம் வேண்டாம் –
ஸ்ரீ நம்பியை நான் கண்ட பின் என்னை முனிவது என் -என் நெஞ்சினால் நோக்கி கண்ணீர் -ப்ராப்ய த்வரையில் தலை மகள் –
இருள் தரும் ஞாலத்தில் இருள் அன்ன மா மேனி –அம்போஜ விகாசாய –ஸ்ரீ ராமானுஜ திவாகரர் -ஸ்ரீ அச்யுத பானு –
ஆயர் குலத்தில் தோன்றிய அணி விளக்கு அன்றோ அவனும் -மெய்யில் பிறங்கிய சீர் -ஸ்வரூபத்தால் பிரகாசம் சொன்னாலும் –
ரூபத்தால் -ஒப்புமை என்றபடி -ஸ்வயம் பிரகாசம் -மாலாகாரர் போல்வாருக்கு காட்ட வேண்டிற்றே -இங்கு அப்படி இல்லையே –
சம்சாரப்பற்று பயந்து விட்டேன் அல்லேன் -பரமபதம் வைலஷ்ணண்யம் அறிந்து செல்ல பிரயாசப்பட்டேன் அல்லேன் –
உனது மெய்யில் பிறங்கிய சீர் ஒன்றிலே ஒன்றினேன்

எம் செழும் கொண்டல் –
ஒரு பாட்டம் மழை குறைச்சலாய் இருந்தால் முகம் வாடிக் கிடக்கும்-பயிர் போலே –
வித்யா நயா சில்பனை புணம் – என்கிறபடியே –
செருப்புக் குத்தக் கற்றனவோபாதியான-சாஸ்த்ரங்களையே அப்யசித்துக் கொண்டு போந்து –
சாவித்யா யாவிமுக்யதே -என்கிற தத்வ-ஞானத்தை பிராபிக்க பெறாதே –
வாடினேன் வாடி -என்கிறபடியே உஜ்ஜீவன ஹேது அன்றிக்கே முகம் வாடி கிடக்கிற எங்களுக்கு
ஒரு பாட்டம் மழை பொழிந்தால் போலே விலஷணமான தம் திருவடிகளில் சம்பந்தத்தை உண்டாக்கி –
ஞான உபதேசம் பண்ணி ஜீவனத்தைக் கொடுத்து –சத்தையை உண்டாக்கினவர் ஆகையாலே -செழும் கொண்டல் -என்கிறார் –

தூமஜ்யோ திச்சலில மருதாம் சந்நிபாதத்தாலே உண்டானதாய் ப்ராக்ருதமாய் அபேஷித்தவர்களுக்கு வர்ஷியாதே –
அபேஷியாத சமுத்ராதிகளிலே வர்ஷித்து கொண்டு போருகிற மேகம் போல் அன்றிக்கே –
தத்வ யாதாம்ய ஞானங்களிலே தலைவராய் -அபேஷா நிரபேஷமாக –லோகத்தாரை எல்லாம் உஜ்ஜீவிப்பிக்க கடவோம் என்று-
தீஷித்து கொண்டு -அவதரித்த கல்யாண குண வைலஷண்யத்தை உடையவர் ஆகையாலே-செழும் கொண்டல் -என்கிறார் –

இராமானுசா –
இப்படிப் பட்ட ஸ்ரீ எம்பெருமானாரே –

கையில் கனி யன்ன கண்ணன் காட்டித் தரிலும் –
பத்துடை அடியவர்க்கு எளியவன் -என்கிறபடியே
ஆஸ்ரித பாரதந்த்ர்யனாய்க் கொண்டு -தூத்ய சாரத்யங்கள் பண்ணுகையும் –
கண்ணிக் குரும் கையிற்றால் கட்டுண்டான் காணேடி -என்கிறபடியே –
ஒரு அறுதல் கயிற்றால் கட்டுண்டும் அடி உண்டும் இருக்கையும் –
கொற்றக் குடையாக ஏத்தி நின்ற கோவர்த்தனத்து என்னை உய்த்திடுமின் -என்கிறபடியே
கோவர்த்தன உத்தாராணம் பண்ணுகையும் –
திண்ணன் வீடு முதல் முழுதுமாய் -என்கிறபடியே
சர்வ ஸ்மாத் பரனுமாகிய ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையனான ஸ்ரீ கிருஷ்ணனை உள்ளம் கை
நெல்லிக் கனி போல் சாஷாத் கரிப்பித்து தரிலும் –

கையில் —-காட்டித் தரிலும் –
கண்ணன் –ஸ்ரீ கிருஷ்ணன்
எல்லாருடைய நெஞ்சையும் இழுக்கிறவன்
அத்தகைய பேர் அழகனை கையில் கொடுத்து அனுபவிக்க சொன்னாலும் வேண்டேன் -என்கிறார் –

கண்ணன் -கருப்பன்
இருள் அன்ன மா மேனி எனக்கு வேண்டாம் –
உத்யத்தி நேசனி பமுல்லச தூர்த்த்வ புண்டரம் ரூபம் தவாஸ்து எதி ராஜ த்ருசோர் மமாக்ரே -என்று
உதிக்கும் சூர்யனை ஒத்ததும் திரு மண் காப்பு துலங்குவதுமான தேவரீர்
திரு மேனி ஸ்ரீ எதிராஜரே -என் கண் எதிரே தோன்றுக -என்றபடி
உதிக்கும் கதிரவனை ஒத்த திருமேனியையே நான் அனுபவிக்க வேண்டும் -என்கிறார் –

திரு மகள் கேள்வனாய் பெருமை உடையவனாய் இருப்பினும் கையில் கனி என்ன காட்டித் தருவதற்கு பாங்காய் –
கையாளாய்-எளிமைப்பட்டு இருத்தல் தோன்றக் –கண்ணன் -என்கிறார் –
கண்ணன் -எளிமையில் கையாளானவன்-
ஸ்ரீ திரு விருத்தம் -63 -ஆம் பாசுரத்தில் கண்ணன் திருமால் -என்பதற்கு
ஸ்ரீய பதி யாகையால் ஆஸ்ரிதருக்கு கையாள் ஆனவன் -என்று ஸ்ரீ ஆசார்யர்கள் வியாக்யானம் செய்து இருப்பது காண்க .

எங்கும் உளன் கண்ணன்
கண்ட கண்ட எல்லா இடமும் தனக்கு இருப்பிடமாக கொண்டவன் ஸ்ரீ கண்ணன் -எங்கும் உள்ள வ்யாபகனான ஸ்ரீ கண்ணனை
கையில் கனியைப் போலே உள்ளங்கையில் அடக்கி அனுபவிக்கக் கொடுத்தாலும் நான் வேண்டேன் -என்கிறார் .

உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் –
பதிம் விச்வச்ய -என்றும் –
தேவாநாம் தானவா நாஞ்ச சாமான்ய மதிதைவதம் –என்றும் –
உலகுக்கு ஓர் முந்தைத் தாய் தந்தை – என்றும் சொல்லுகிறபடியே
எல்லாருக்கும் பொதுவானவன் விஷயத்தில் சக்தன் ஆனேனோ –
அனந்யார்ஹ நிஷ்டர்க்கே ஸ்வாமியான தேவரீர் பக்கலில் அன்றோ நான் சக்தன் ஆனது –
எப்போதும் பிரீதி விஷயமான வஸ்துவிலே அன்றோ ருசி பிறப்பது –
ஆகையாலே என்னுடைய ப்ரீதி விஷயமான தேவரீர் திவ்ய மங்கள விக்கிரகத்தில் பிரகாசிக்கிற
சௌந்தர்யா லாவண்யாதி குணங்களை ஒழிய வேறு ஒன்றை நான் அபேஷியேன் –
அத்தை பிரசங்கிப்பதும் செய்யேன் –
பிறங்குதல்-பிரகாசித்தல் –

அது என் -சர்வ சமாஸ்ரயநீயனான ஸ்ரீ சர்வேஸ்வரன் ப்ராப்யன் என்றும்
சேதனரான நீர் ப்ராப்தா என்றும் –
ப்ராப்யஸ்ய ப்ரம்மணோ ரூபம் -இத்யாதி சாஸ்த்ரங்களிலே சொல்லா நிற்க செய்தே -நீர் இங்கனே சொல்லக் கூடுமோ என்னில் –

1–ப்ராப்யனான ஸ்ரீ சர்வேஸ்வரன் நித்யனாய் –
எனக்கு அந்தராத்மாவாய் இருக்கச் செய்தேயும் -அநாதி காலம் பிடித்து இவ்வளவும் நான் சம்சாரத்தின் உடைய
கரை கண்டு கொண்டேன் அல்லேன் –
நான் இன்று தேவரீரை லபித்த பின்பு கரை மரம் சேரப் பெற்றேன் – ஆகையால் தேவரீரே எனக்கு பிராப்யம் என்று கருத்து –

அன்றிக்கே–
2- ஸ்ரீ கிருஷ்ணன் தூத்ய சாரத்யங்களை பண்ணும் தசையில் –
தன்னுடைய விஸ்வ ரூபத்தை-அனுகூல பிரதி கூல விபாகம் அற- தர்சிப்பித்த அளவிலும் –
திருத் தேர் தட்டில் இருந்து –தத்வ ஹித-புருஷார்த்தங்களை உபதேசித்த அளவிலும் -ஒருவருக்கு ஆகிலும் முமுஷை ஜனித்ததில்லை –
தேவரீரை சேவித்த மாத்ரத்திலே ஊமைக்கு முமுஷை பிறந்தவாறே தேவரீர் உடைய விக்ரக வைலஷணயத்தை-சாஷாத்கரிப்பித்து அருளி
அவன் தனக்கு வீட்டை அப்போதே கொடுத்து அருளிற்று என்னும்-இச் செய்தியை ஆழ்வான் கேட்டு அருளி –
இனி நமக்கு பேறு கிடையாது ஆகாதே என்று தம்மை வெறுத்துக்-கொண்டார் என்று பிரசித்தம் இறே –
இப்புடைகளாலே பகவத் விஷயத்துக்கும் தேவரீருக்கும் நெடு வாசி உண்டாகையாலே-இப்படி அத்யவசித்தேன் என்றார் என்னவுமாம் –

அங்கனும் அன்றிக்கே –
3–சுலபனான ஸ்ரீ சர்வேஸ்வரனை காட்டித்-தரிலும் –அவன் தண்டதரன் ஆகையாலே -என் தண்மையை பார்த்து விபரீதனாய் இருப்பான் –
ஆகையால்-தேவரீர் அபிமானமே உத்தாரகம் என்று அத்யவசித்து இருந்தேன் –

நாராயணோ பிவிகிர் திம் குரோ பிரச்யுதஸ் யதுர்புத்தே கமலம் ஜலாத பேதம் சோஷயதிரவிர் ந போஷயதி –என்னக் கடவது இறே –

அன்றிக்கே –
4–பிராப்யன் அவனே யாகிலும் அவனை அனுபவிக்கும் போது –
பகவத் வந்தனம் ச்வாத்யம் குரு வந்தன பூர்வகம் -ஷீரம் சர்கரயா யுக்தம் ஸ்வததே ஹி விசேஷத -என்கையாலே
ரசிகரான நமக்கு ஸ்ரீ ஆச்சார்ய விக்ரகத்தை முன்னிட்டு கொண்டே இறே இருக்க அடுப்பது –
அப்படியே அடியேனும் தேவரீர் உடைய விஷயீகாரத்தாலே இந்த வாசி அறிந்தேன் –

(இப்படி நான்கு வாசிகள் உண்டே-அப்யமக வாதம் -நான்காவது -ஸ்ரீ ஸ்வாமி பேச்சாக கொண்டு –
சக்கரையும் வேணுமே பாலை அனுபவிக்க -குரு வந்தனம் முன்னிட்டு பகவத் அனுபவம் )ஆகையால்
தேவரீர் திவ்ய விக்ரகத்தோடே கூடி அனுபவிக்குமது ஒழிய -தனியே அவனை அனுபவிக்க இசைந்தேன்-அல்லேன் என்கிறார் என்னவுமாம் –

உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் –
உன் தன் மெய் -தேவரீருடைய அசாதாரணமான திரு மேனி -அப்ராக்ருத திருமேனி -என்றபடி –
அதனில் பிறங்கிய சீர்-பிறங்குதல் –பிரகாசித்தல்-சீர் -அழகு மென்மை முதலிய குணங்கள் –
ஸ்ரீ கண்ணன் தன் ஸௌந்தர்யத்தை அக்ரூரர் மாலாகாரர் முதலியவர்களுக்கு வெளிப்படுத்தியது போலே வெளிப்படுத்த வேண்டாம் –
தாமே அவை பிரகாசிக்கின்றன –
இதனால் சிஷ்யன் ஸ்ரீ ஆசார்யனுடைய திருமேனியையே சுபாஸ்ரயமாக கொண்டு பேணி ஆதரித்தல் வேண்டும் -என்னும்
நுண் பொருளை ஸ்ரீ அமுதனார் உணர்த்தினார் ஆயிற்று

இவன் இப்படி ஸ்வரூப அனுரூபமாக ஸ்வா தந்த்ர்யத்தை ஏறிட்டு கொண்டான்-என்று தேவரீர் சீறி அருளி என்னை –
நிரயத் தொய்யில் கிடக்கிலும் –
விடியா வென் நரகான சம்சார கர்த்தமத்திலே அழுந்திக் கிடக்கும் படி பண்ணவுமாம் –
தொய்யில் -சேறு –
நிரயம் என்றது -துக்க கரத்வத்தாலே-சம்சாரத்தை சொல்லுகிறது –

அன்றிக்கே நம்முடையவன் அன்றோ என்று தேவரீர் கிருபை செய்து அருளி என்னை
சோதி விண் சேர்க்கிலும் –
சுத்த சத்வ மயமாகையாலே நிரவதிக தேஜோ ரூபமான பரம பதத்தில் கொண்டு போய் சேர்க்க்கவுமாம் –

நிரயத் தொய்யில் கிடக்கில் என் -சோதி விண் சேரில் என் –என்று பாடமான போது
சம்சாரத்தில் இருக்கில் என் -பரம பதத்தில் போய் சேரில் என் -அவை இரண்டும் கொண்டு எனக்கு
கார்யம் இல்லை என்று பொருளாக கடவது –

நிரயத் தொய்யில் இத்யாதிகளுக்கு –நான் சம்சார கர்த்தமத்தில் மூழ்கிக் கிடக்க்கவுமாம் –
சுத்த சத்வ மயம் ஆகையாலே நிரவதிக தேஜோ ரூபமான பரம பதத்தை ப்ராபிக்க்கவுமாம் என்றும் பொருளாகவுமாம் –

இவ் அருள் நீ செய்யில் தரிப்பன் –தேவரீர் உடைய திவ்ய விக்ரக குணங்களான சௌந்தர்யாதிகளை -முற்றூட்டாக
அனுபவித்துக் கொண்டு இருக்கைக்கு உடலான நிர்கேதுக கிருபையை பொகட்டு என-செய்தனில் தரிப்பேன் –
இவ் அனுபவத்தை தேவரீர் தரில் சம்சாரத்திலும் தரிப்பன் -இல்லையாகில் பரம பதத்திலும் தரியேன் -என்கிறார் காணும் –

தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் – என்றும் –
நதேஹம் ந பிராணான் ந சக சுகமே சேஷாபி லஷிதம் ந சாத்மா நான்யத்கி மபிதவ சேஷத் வபி பவாத் –பஹிர்ப் பூதன்
நாத ஷனமபி சஹேயாது சததா வினர்சந்தத் சத்யம் மதுமதன விஜ்ஞாப நமிதம் -என்றும் –
நரகும் ஸ்வர்க்கவும் நாண் மலராள் கோனைப் பிரிவும் பிரியாமையும் -என்று பிரதம பர்வத்தில்
ஸ்ரீ ஆழ்வாரும் ஸ்ரீ ஆளவந்தாரும் ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானாரும் அனுசந்தித்தாப் போலே
அமுதனாரும் சரம பர்வத்தில் அனுசந்தித்தார் ஆய்த்து –

நிரய —செய்யில் தரிப்பன் –
நிரயம் -நரகம் -சம்சாரத்தை நரகம் என்கிறார்
நிரயோய ஸ்த்வயா விநா-ராம உன்னை விட்டுப் பிரிந்து இருப்பதே நரகம் – என்று ஸ்ரீ சீதா பிராட்டி கூறினது போலே
ஸ்ரீ பகவானுடைய அனுபவத்தை விட்டுப் பிரிந்து இருக்கும் இடம் ஆதலின் சம்சாரம் நரகமாக சொல்லப்படுகிறது –
விடியா வெம் நரகம் -ஸ்ரீ திருவாய் மொழி – 2-7 7- என்று ஸ்ரீ நம் ஆழ்வாரும் சம்சாரத்தை நரகமாக திருவாய் – மலர்ந்து அருளினார்
தொய்யில் -சேறு

தொய்யில் கிடக்கிலும் -தொய்யிலின் கண் கிடக்கிலும் வண் சேற்று அள்ளல் பொய் நிலம் -ஸ்ரீ திரு விருத்தம் -100 –
என்றபடி சம்சார நரக சேற்றிலே தப்ப ஒண்ணாதபடி அழுந்திக் கிடந்தாலும் -என்றபடி –
தேவரீர் திரு மேனியின் குணங்களை அனுபவிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமாயின்
சம்சார சேற்றிலும் வருந்திக் கொண்டு இராது கால் பொருந்தி தரித்து இருப்பேன் -என்பது கருத்து –

சோதி விண் சேரி லும் –
பிரகிருதி மண்டலம் போலே சத்த்வம் ரஜஸ் தமஸ் என்னும் முக்குணங்கள் வாய்ந்ததாய் அல்லாமல்
சுத்த சத்வமாய் -ஒளி மயமாய் -உள்ளமை பற்றி -பரம ஆகாசம் எனப்படும் ஸ்ரீ பரம பதத்தை சோதி விண் -என்கிறார் .
அங்குச் சென்றாலும் தேவரீர் திரு மேனிக் குணங்களை அனுபவிக்கும் வாய்ப்பினை
எனக்கு கிடைக்கச் செய்தால் அள்ளல் இல்லாத இன்ப வெள்ளத்தில் அங்குத் திளைக்காது –
தேவரீர் திரு மேனிக் குணங்களையே அனுபவித்து கால் பாவித் தரித்து இருப்பேன் -என்பது கருத்து –

நிரயத் தொய்யில் கிடக்கிலென் சோதி விண் சேரிலென் -என்றும் ஒரு பாடம் உண்டு
வானுயர் இன்பமே எய்திலென் மற்றை நரகமே எய்திலென் -ஸ்ரீ திருவாய் மொழி -என்னும் ஸ்ரீ நம் ஆழ்வார்
ஸ்ரீ ஸூக்தி யடி ஒற்றியது இந்தப் பாடம் –
சம்சாரத்திலேயே கிடந்தால் என்ன பரம பதத்திற்குப் போனால் என்ன –
எனக்கு இவற்றால் ஒரு தீமையோ அன்றி நன்மையோ இல்லை –இரண்டும் ஒரே மாதிரிதான் –
தொய்யில் என்று சம்சாரத்தை விடுகிலேன்-சோதி விண் என்று பரமபத சீர்மை கண்டு விரும்பப் பற்ற கிலேன் –
எம்பெருமானார் திரு மேனிக் குணங்களை அனுபவிக்க பெறின் சம்சாரத்திலும் தரித்து இருப்பேன் –
அவ் அனுபவம் பெறாவிடில் பரம பதத்திலும் தரித்து இருக்க மாட்டேன் -என்றது ஆயிற்று –

ஸ்ரீ ஆள வந்தார் சேவை கிடைக்க வில்லை என்று ஸ்ரீ அரங்கனை சேவிக்காமல் போனீரே-
உம் படி தான் நடந்தேன் என்கிறார் ஸ்ரீ அமுதனார்–
மற்றை காட்டி மயக்கேல்–இதை கொண்டே தரிப்பேன்-கால் பாவுவேன் எங்கும் –இதுவே புருஷார்த்தம்-

எம் செழும் கொண்டல் –
இதனால் ஸ்ரீ எம்பெருமானாருடைய வண்மையை அனுசந்தித்தார் ஆயிற்று .
அவரது வண்மை இன்றித் தாம் உய்வதற்கு வேறு வழி இல்லாமையினாலே அதனையே ஸ்ரீ அமுதனார்
மீண்டும் மீண்டும் அனுசந்திக்கிறார் .
இவ்வருள் செய்வதற்கு – தன்பால் தகுதி எதுவும் இல்லை –
தம் வண்மை கொண்டே இவ்வருள் புரிதல் வேண்டும் -என்பது கருத்து –

செழும் கொண்டல் –
ஏனைய கொண்டல்கள் தாம் கொண்ட நீரைப் பொழிந்த பின்னர் செழுமை நீங்கி வெளுத்துப் போம் –
ஸ்ரீ எம்பெருமானாரோ எவ்வளவு பொழிந்தாலும் கொண்ட கருணை குறை வுறாமையால் செழுமை மாறாது
பண்டைய வண்ணமே நிற்றலால் செழும் கொண்டல் போன்றவராகக் கூறப் படுகிறார் –

————

சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்
இறப்பில் எய்துக, எய்தற்க; யானும்
பிறப்பு இல் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஒன்று இன்றி என்றும் மகிழ்வனே––திருவாய் மொழி–2-9-5-

இன்பமில் வெந்நரகாகி -3-10-7-

வானுயர் இன்பமே எய்திலென் மற்றை நரகமே எய்திலென் -திருவாய் மொழி -என்னும் நம் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தி

நெடுமாற்கு அடிமை செய்வன் போல் அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்றற்ற தீக் கதிகள் முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்
கொடு மா வினையேன் அவன் அடியார் அடியே கூடும் இது வல்லால்
விடுமாறு எனபது என்னந்தோ வியன் மூ வுலகு பெறினுமே—8-10-1-

வழி பட்டு ஓட அருள் பெற்று மாயன் கோல மலர் அடிக்கீழ்
சுழி பட்டு ஓடும் சுடர்ச் சோதி வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
இழி பட்டு ஓடும் உடலினில் பிறந்து தன் சீர் யான் கற்று
மொழி பட்டு ஓடும் கவி அமுதம் நுகர்ச்சி உறுமோ முழுதுமே–8-10-5-

வன் சேற்று அள்ளல் பொய் நிலம் -திரு விருத்தம் -100 –

————————————————————————–———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –103–வளர்ந்த வெங்கோப மடங்க லொன்றாய் அன்று -இத்யாதி –

June 3, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி சர்வ கரணங்களும் தம் பக்கலிலே ப்ரவண மாகைக்கு உறுப்பாக ஸ்ரீ எம்பெருமானார் தம்முடைய ஔ தார்யத்தாலே
உமக்கு உபகரித்த அம்சத்தை சொல்லீர் -என்ன-
என்னுடைய கர்மத்தை கழித்து – அழகிய ஜ்ஞானத்தை விசதமாகத் தந்து அருளினார் -என்கிறார் .

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டிலே
தம்முடைய சர்வ கரணங்களையும் ஸ்ரீ எம்பெருமானார் தம் விஷயத்தில் அதி பிரவணராகும்படி ( ஸ்ரீ யதி பிரவணர் -என்றுமாம் )-பண்ணி –
அநிதர சாதாரணமாகத் தம்முடைய ஔ தார்யத்தை தம்மிடையே வர்ப்பித்து அருளினார் -என்று சொல்லி வித்தரானவாறே –
ஆக இப்படி சர்வ கரணங்களும் தம் விஷயத்திலே யதி ப்ரவணராம் படி ஈடு படுகைக்கு உடலாக அவருடைய ஔ தார்யத்தாலே
இன்னமும் உமக்கு உபகரித்தமை ஏதாகிலும் உண்டோ என்ன –
இதிலே –
அத்யந்த கோபோவிஷ்டமாய் -அத்விதீயமான ஸ்ரீ நரசிம்ஹ அவதாரத்தை கொண்டாடி -ஸ்வ ஆஸ்ரிதரான தேவதைகளுடைய ஸ்தானங்களை
ஆக்கிரமித்து -லோகத்தை எல்லாம் பாதிக்கைக்காக கட்க ஹஸ்தனாய் தனிக் கோல் செலுத்திக் கொண்டு திரிகிற
ஹிரண்யாசுரனுடைய ஸ்வ ரூபமான சரீரத்தை துரும்பைக் கிழிக்குமா போலே அநாயாசேன கிழித்துப் பொகட்ட
ஸ்ரீ சர்வேச்வரனுடைய திவ்ய கீர்த்தியை தம்முடைய திரு உள்ளத்திலே ஸ்ரீ எம்பெருமானார் –
என்னுடைய -—ஆத்யாத்மிகாதி துக்கங்களை வாசனையோடு ஒட்டி விட்டு -கரதலாமலகமாக -தத்வ ஹித புருஷார்த்த-
யாதாம்ய ஞானத்தை கொடுத்து அருளினார் என்கிறார் –
(இதனாலே தான் நரசிம்ம- கீதாச்சார்யர்-நாராதர் -மூவர் உடைய பெருமையும் ஸ்வாமியிடம் காண்கிறோம் )

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

ஸ்ரீ எம்பெருமானார் தம் வண்மையினால் உமக்கு மட்டும் கரணங்கள் அனைத்தும் தாமே தம்மிடம் ஈடுப்படும்படியாக
உபகரித்தது எவ் வழியாலே என்பாருக்கு என் கருமத்தை நீக்கி உபகரித்து அருளினார் -என்கிறார் .

வளர்ந்த வெங்கோப மடங்க லொன்றாய் அன்று வாளவுணன்
கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயி ரெழுந்து
விளைந்திடும் சிந்தை யிராமானுசன் என்தன் மெய் வினை நோய்
களைந்து நன்ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே – – 103 –

பத உரை –

வளர்ந்த -எல்லை கடந்து மிகுந்த
வெம்கொபம் -கொடிய கோபம் கொண்ட
ஓன்று மடங்கல் ஆய் -ஒப்பற்ற சிங்க உருவாக்கி
அன்று -அக்காலத்திலே
வாள் அவுணன் -வாள் ஏந்திய -ஹிரண்ய -அசுரனுடைய
கிளர்ந்த -பருத்து வளர்ந்த
பொன் ஆகம் -பொன் நிறம் வாய்ந்த உடலை
கீண்டவன் -கிழித்த ஸ்ரீ நரசிம்ஹப் பெருமாளுடைய
கீர்த்திப் பயிர் -புகழாகிற பயிர்
யெழுந்து -மேலும் ஓங்கி வளர்ந்து
விளைந்திடும் -பலித்திடும்
சிந்தை -உள்ளம் படைத்த
இராமானுசன் -ஸ்ரீ எம்பெருமானார்
என் தன் -என்னுடைய
மெய் வினை -சரீரத்தின் தொடர்பினாலாய கர்மங்களின் பயனான
நோய் -துன்பங்களை
களைந்து -போக்கி
கையில் கனி என்ன -கையில் உள்ள கனி என்னலாம் படி
நல் ஞானம் -நல்ல அறிவை
அளித்தனன் -தந்து அருளினார் –

முனைத்த சீற்றம் விண் சுடப்போய்-ஸ்ரீ பெரிய திரு மொழி – 1-7 7- – என்கிற படியே அநு கூலரான
தேவர்களும் உட்பட வெருவி நின்று பரிதபிக்கும்படி -அத்யந்த அபிவிருத்தமாய் அதி க்ரூரமான-ஸ்ரீ நரசிம்ஹமாய் –
சிறுக்கன் மேலே அவன் முழுகின வன்று –
வயிறழல வாளுருவி வந்தான் -என்கிறபடியே சாயுதனாய்க் கொண்டு எதிர்ந்த ஹிரன்யாசுரனுடைய மிடியற வளர்ந்த
ஸ்வர்ண வர்ணமான சரீரத்தை
அஞ்ச வெயிறி லகவாய் மடித்ததென்-ஸ்ரீ முதல் திருவந்தாதி – 93- என்கிறபடியே
மொறாந்த முகத்தையும் நா மடிக் கொண்ட உதட்டையும் -குத்த முறுக்கின கையையும் கண்டு –
விளைந்த பய அக்நியாலே பரிதப்தமாய் பதம் செய்தவாறே –
வாடின கோரையை கிழித்தால் போலே அநாயாசேன கிழித்து பொகட்டவனுடைய திவ்ய கீர்த்தி யாகிய பயிர்
உயர் நிலத்தில் -உள் நிலத்தில் – பயிர் ஓங்கி வளருமா போலே யெழுந்து சபலமாம் படியான
திரு உள்ளத்தை உடையராய் இருக்கிற ஸ்ரீ எம்பெருமானார் –
என்னுடைய சரீர அனுபந்தி கர்ம பலமான துக்கங்களைப் போக்கிக் கரதலாமலகம் போலே சுலபமாய் -ஸூவ்யக்தமுமாய் -இருக்கும்படி
விலஷணமான ஜ்ஞானத்தை தந்து அருளினார் –
இது இறே கீழ்ச் சொன்ன ப்ராவண்யத்துக்கு அடியாக ஸ்ரீ எம்பெருமானார் எனக்கு பண்ணின உபகாரம் என்று கருத்து –

மடங்கல்-சிம்ஹம்
கிளர்ந்த பொன்னாகம் -என்றது மாற்று எழும்பின பொன் போன்ற சரீரம் என்னவுமாம்-

கர்மம் குறைய ஞானம் வளரும் -ஞானம் வர கர்மம் குறையும் -நம்மால் செய்ய முடியாது -அவர் கிருபையால் இரண்டையும் செய்து அருளினார்
கையில் கனி -உள்ளங்கை நெல்லிக்கனி நுட்பமாக அறியும் படி ஞானம் -தெளிந்த யாதாம்யா ஞானம் -தத்வ ஹிதம் புருஷார்த்தங்கள் மூன்றையும்
ஆராதனை பெருமாள் ஸ்ரீ அழகிய சிம்ஹப் பெருமாள் -சேராதத்தை சேர்க்க –அமுதனார் -ஞானம் -சேர்த்து -சேர்ந்த கர்மம் விலக்கி-
இது சர்வம் சமஞ்சயம் -ப்ரஹ்லாதன் அனுக்ரஹம் -ஞானம் கொடுத்து -ஹிரண்யன் அழித்து- கர்மங்கள் அழித்து –
எனக்கு செய்தது சாஹாச செயல் –கீர்த்தி என்னும் பயில் வளர்ந்த நிலம் ஸ்வாமி திரு உள்ளம் –
வேதங்களில் பிரதிபாதிக்கப்பட்ட கீர்த்தி தானே ஸ்ரீ ஸ்வாமி திரு உள்ளம்
கீர்த்தியும் -சீற்றமும் -விண் முழுதும் பரவி ஸ்வாமி திரு உள்ளத்தில் –நீசனான நான் வாழ -ஊரே வாழும்
மெய் வினை -சரீர வினை -கர்மங்களை போக்கி
நல் ஞானம் -சரம பர்வ விஷய ஞானம்
வளர்ந்த வெங்கோபம் -கொண்ட சீற்றம் —அத்யந்த அபி வருத்தம் பயங்கரம் அஸஹ்யமாய் -மொராந்த மோகம் -அட்டகாச சிரிப்பு ,
நா மடி கொண்ட உதட்டையும் குத்த முறுக்கின கையையும் கோரைக் கிழங்கு போலே கிழித்து
ஸ்ரீ நரசிம்மன் இருந்ததே ஒரு முஹூர்த்தம் -பண்ணிக் காட்டியதை உபதேசிக்க -ஸ்ரீ கீதாச்சார்யன் –
மனுஷ்யத்வம் சிங்கமும் -வலிமை -சொல்லும் சாமர்த்தியம் -கிருத யுகம் த்வாபர யுகம் –சீயம் ஆயர் கொழுந்து -ஆச்சார்யத்வம் நாரதத்வம் –
இப்படி சேராச் சேர்க்கைகள் உண்டே -நல் ஞானம் -மெய் ஞானம் – கீண்டவன் -கிழிந்தவன்-பாட பேதங்கள் –

வளர்ந்த வெங்கோப மடங்க லொன்றாய் அன்று வாளவுணன் கிளர்ந்த -பொன்னாகம் கிழித்தவன்
அன்று வாளவுணன் கிளர்ந்த -பொன்னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயி ரெழுந்து- விளைந்திடும் சிந்தை யிராமானுசன்
யிராமானுசன் என் தன் மெய்வினை நோய்-களைந்து நன்ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே -என்று இப்படி பிரித்து கொள்ளலாமே

ஆள் அரி –ஆண் அரி இல்லை -லோகத்து ஆள் போலே இல்லாமல் இரண்டு ஆகாரம் கலந்த ஆள் என்றவாறு
திருமேனியே வளர்ந்த -வெங்கோபம் வளர்ந்த என்றுமாம் -கீர்த்திப் பயி ரெழுந்து விளைந்திடும் –நஞ்சை வயலில் செழித்து வளர்ந்த –என்றபடி –
சினத்தினால் மனத்துக்கு இனியான்-ஓன்று மடங்கலாய் வெம்கோபம் கீர்த்தி –வெங்கோபம் கீர்த்தி இங்கு ஆண்டாள் பாசுரம் ஒட்டியே –
ஆகாசம் -அம்பரம் -செவ்வி மாதிரம் எட்டும் தோள்கள் திசைகள் –மிருகம் சேவி மேல் தூக்கி ஆபத்து வரும் பொழுது இருக்குமே
பரத்வம் உபாகரத்வம் – வியாப்தி ஏக தேசம் – கோப பிரசாதங்கள் சேர்த்து -திவ்ய கீர்த்தி -பிரமனை விஞ்சிய பரமன் அன்றோ –
சேராச் சேர்த்தி -ஓலைப் புறத்தில் மட்டும் கண்டு அறியாமல் பிரத்யக்ஷமாக காட்டி அருளி -சரணாகதர்களுக்கு தனம் -இவர் சினம் தானே –

வளர்ந்த வெம் கோபம் மடங்கல் ஒன்றாய் –
அஸ்மின் ஷனே மகா சப்த ஸ்தம்பேஸ் சம்ஸ்ருயதே ப்ர்சம் – சம்வர்த்தாச -நிசன்காத -ரவவத் ச்புடிதாந்த்ரம்-
தேன சபதே மஹதா தைத்ய ஸ்ரோத்ரா விகாதினா -சர்வே நிபாதிதா பூமவ் சின்ன மூலா இவத்ருமா –
பிப்யந்தி சகலா தேவா மேநிரைவை ஜகத் ஷயம்-தாம் ச்தூணாம் – சதாபித்வா வி நிஷ்க்ராந்தோ மஹா ஹரி –
சகார ஸூ மஹா நாதம் லயாச நிபயஸ்வனம் -தேன நாதேன மஹதா தாரகா பதிதா புவி நரசிம்ஹா வபுராஸ்தாய-
தத்ரை வாவிர பூத்தரி – அநேக கோடி ஸூ ரய அக்நி தேஜஸா மகாதாவ்ருத முகே பஞ்சா நப்ரக்ய சரீரே மானுஷா க்ருதி –
தம்ஷ்ட்ராக ராள வதன ஸ்த்ர்யா ஷஸ்த்ரி சடோத்ர்த -என்றும் –

அம் கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆள் அரியாய் –என்றும் –
முனைத்த சீற்றம் விண் சுடப்போய் -மூ வுலகும் பிறவும் அனைத்து –என்றும் –
மஞ்ச வாள் அரியாய் -என்றும் –
எரித்த பைம் கண் இலங்கு பேழ் வாய் -என்றும் சொல்லுகிறபடியே –
மனுஷர்களோடு தேவர்களும் வாசி யற-அனைவரும் வெருவி விபரிதவிக்கும் படி –அத்யந்த அபி வ்ர்த்தமாய் –
அத்யந்த பயங்கரமாய் -அத்யந்த க்ரூரமாய் –அத்யந்த அசஹ்யமாய் இருந்துள்ள சீற்றத்தை உடையதாய் அத்விதீயமான
அனல் உமிழா நிற்கிற மூன்று கண்களையும்-மோறாந்த முகத்தையும் நாலு திக்குக்கும் ஏறிட்ட உதட்டையும் –
மேல் ஒரு வடிவையும் கீழ் ஒரு வடிவையும்-உடைத்தான ஸ்ரீ நரசிம்ஹமாய் –

மடங்கல் -சிம்ஹம் –

அன்று –
தேவ திர்யங் மனுஷ்யேஷூ ச்தாவரேஷ்வபி ஜந்துஷூ வ்யாபதிஷ்டதி சர்வத்ர பூதேஷ்வபி மகத் ஸூ ச இதி பிரஹ்லாத வசனம்
ஸ்ருத்வா தைத்ய பதிஸ் ததா உவாச ரோஷதாம் ராஷ பர்த்சயன் ஸ்வசூதம் முஹூ அசவ்சர்வதகோ விஷ்ணு ரபிசேத்பரம
புமான் ப்ரத்யஷம் தர்சச்வாத்ய பஹூபி கிம்ப்ரலாபிதை இத்யுக்த்வா சஹசாதைத்ய பிரசாதாத் ஸ்தம்பமாத்மான தாடாயாமா சஹச்தேன
ப்ரஹ்லாத இதமப்ரவீத் -அஸ்மின் தர்சயமே விஷ்ணும் யதிசர்வக தோபவேத் -அந்ய தாத்வம் வதிஷ்யாமி மித்யாவாக்ய ப்ரலாபினம் -என்றும் –
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப -என்றும் சொல்லுகிறபடியே –
தன் படிகளை அடைய வெளி இட்ட சிறுக்கன் மேலே அவன் முறுகி தூணை தன் காலால் உதைத்த அன்று –

வாள் அவுணன் கிளர்ந்த பொன் ஆகம் கிழித்தவன் –
இத்யுக்த்வா சஹசா கட்க மாதாயதிதி ஜேஸ்வர -என்றும் –
(ஸ்ரீ ஆழ்வார்கள் காலால் உத்தைத்தான் என்று சொல்லா மாட்டார்களே -முஷ்டியாலும் கதையாலும் – என்பர் –
திருவடி ஸ்பர்சம் பெற்றால் ஹிரண்யன் பிரகலாதன் உடைய ஸ்வபாவம் பெற்று விடுவானே -திண் கழல் அன்றோ )-
வயிறு அழல வாளுருவி வந்தானை – என்றும் சொல்லுகிறபடியே –
கட்க ஹஸ்தனாய் கொண்டு எதிர்ந்த-ஹிரண்யாசுரனுடைய -இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம் பாதித்து –
அவர்களுடைய ஸ்தானங்கள் அடங்கலும் ஆக்கிரமித்து -அவர்களுடைய ஹவிர்பாகங்களை பலாத்காரேன பறித்துக் கொண்டு
பஷிக்கையாலே மிடியற வளர்ந்து –நிறம் பெற்று ஸ்வர்ணம் போல் இருக்கிற சரீரத்தை –

எவ்வும் வெவ் வேல் பொன் பெயரோனே தலனின்னுயிரை வவ்வி ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம் -என்றும் –
அவுணன் உடல் -என்றும் –
இடந்திட்ட இரணியன் நெஞ்சை இருபிளவாக முன் கீண்டாய் -என்றும் -சொல்லுகிறபடியே
கூரிய நகங்களாலே -அநாயாசேன ஆட்டின்-குடலை கிழித்தால் போலே இரு பிளவாக கிழித்து பொகட்டவனுடைய —

கிளர்ந்த பொன்னாகம் என்றது
மாற்று எழும்பின பொன் போன்ற சரீரம் -என்னவுமாம் –

வளர்ந்த –கீந்தனன் –
சீற்றமில்லாதான் என்று பாடப் பெறும் சீதை மணாளனாம் எம்பெருமானும் -ஒரு கால் மிக்க சீற்றம் கொண்டான் –
ஜிதக்ரோதன் -கோபத்தை வென்றவன் -போர் களத்திலே அநு கூலர்களான தேவர்களும் கூட
அஞ்சும்படி கோபத்திற்கு உட்பட்டவன் ஆனான் –
உயிரையும் உடலையும் -இக்கரையும் அக்கரையுமாக பிரித்த பாபியான ராவணனை நேரே கண்டும் கோபம் கொண்டிராத ராம பிரான் –
அந்த ராவணனால் புண் படுத்தப் பட்ட பக்தனாகிய அனுமானைக் கண்டதும் -கோபத்துக்கு உள்ளானான் அன்றோ –
தன் திறத்து புரியும் அபராதங்களைப் பொறுப்பவனாயினும்-தன் அடியார் திறத்து புரியும்-அபராதத்தை பொறுக்கிலாதவன் –
ஸ்ரீ எம்பெருமான் என்பது இதனால் நன்கு வெளிப்படுகின்றது அன்றோ –

ஸ்ரீ நரசிம்ஹப் பெருமாளும் இது போல் இரணியன் எண்ணிறந்த அபராதங்களை தம் திறத்து புரிந்ததை பொறுப்பினும்-
தம் அடியான் ப்ரஹலாதன் திறத்து அவன் புரியும் அபராதத்தை பொறுக்க கிலாது –
வரம்பின்றி –வளர்ந்த வெம் கோபத்திற்கு உட்பட்டார் –
இரணியனும் ஏனைய அசுரர்களும் மாத்திரமின்றி -அநு கூலர்களான தேவர்களும் அஞ்சி நடுங்கும்படி கோபம்
பெருகினமையின் அது வரம்பின்றி வளர்ந்தது என்க –
முனைத்த சீற்றம் விண் சுடப்போய் மூவுலகும் பிறவும் அனைத்தும் அஞ்ச ஆள் அரியாய் –ஸ்ரீ பெரிய திருமொழி – 1-7 7- –
என்று ஸ்ரீ திரு மங்கை மன்னன் விண்ணகமும் சுடும்படி சீற்றம் முனைந்து இருந்ததாக அருளிச் செய்தது இங்கு அனுசந்திக்கத் தக்கது .
அநு கூலர்கள் உட்பட தபிக்கும்படி இருத்தலின் கோபம் வெங்கியதாயிற்று –

புறப்பட்டது சீயம் விண்ணை முட்டும் வளர்ந்தது-மடங்கல் வளர்ந்த வெம்கொபம்-திரு மேனியும் கோபமும் வளர்ந்ததாம்

மடங்கல் ஒன்றாய் –
ஒரு மடங்கலாய் -என்று மாற்றுக
பெருமை-ஒப்பற்றமை -நரம் கலந்த சிங்கம் –உலகில்வேறு ஓன்று இல்லாமையின் இது ஒப்பற்றதாயிற்று –

அன்று வாள் அவுணன் கிளர்ந்தபொன்னாகம் கிழித்தவன் –
அன்று -ப்ரஹலாதனைப் பெற்ற தகப்பன் அடர்த்த அன்று –
வாள் அவுணன்-வாளை உடைய அவுணன் –
மடங்கலைக் கண்டதும் -வாளை உறையிலிருந்து உருவி மடங்கலோடு போரிட வந்த அவுணன் -என்றபடி
வயிறழல வாள் உருவி வந்தானை -ஸ்ரீ முதல் திருவந்தாதி -95 – என்றார் பொய்கை ஆழ்வாரும்

கீர்த்தி –
திவ்ய கீர்த்தி யாகிற சஹச்ர சீர்ஷா புருஷ சஹஸ்ராஷஸ் சஹச்ர பாத் -சபூமிம் விச்வதொவ்ர்த்வா –
அத்யதிஷ்டத்த்வ சாங்குலம் -புருஷ ஏவேதம் சர்வம் யத்பூதம் யச்ச பவ்யம் உதாம்ர்த்தத்வச்யே சான யதஹ் நே
நாதி ரோஹதி -ஏதாவா நஸ்ய மஹிமா-என்றும் –
யச்ச கிஜ்ஜிஜ் ஜத்யச்மிந்தர் ஸ்யதே ஸ்ரூய தேபிவா அந்தர் பஹிஸ் சதத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித -என்றும் –
வேதாஹமேதம் புருஷம் மகாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் தமேவ வித்வா நம்ரத
இஹபவதி நான்ய பந்தா அயநாய வித்யதே -என்றும் –
ஸ்ரீ வேத புருஷனால் பிரதிபாதிக்கப் பட்ட அப்ரதிம பிரபாவம் – என்றபடி –

பயிர் எழுந்து விளைந்திடும் சிந்தை –
ஸூ ஷேத்ரத்தில் விரை விரைத்தால் ஓங்கி வளர்ந்து சம்ர்த்தியாய் பல பர்யந்தமாக விளையுமா போலே –
ஸ்ரீ அழகிய சிங்கருடைய கீர்த்தி யாகிற பயிர் நித்ய அபிவ்ர்த்தமாய் -லோகம் எல்லாம் வியாபித்து -பல பர்யந்தம் ஆகும்படிக்கு ஈடான
வீரத்தை உடைத்தான திரு உள்ளத்தை உடைய –

இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானார் –

இவருக்கு ஸ்ரீ அழகிய சிங்கர் திரு ஆராதனம் ஆகையாலே இப்படி அருளிச் செய்கிறார் –

என் தன் மெய் வினை நோய் களைந்து –
கர்ம பிரம்மம் பரம் வித்தி -என்றும்
பிரக்ர்த்தே கிரியமாணா நி குணை கர்மாணி சர்வச -என்றும் சொல்லுகிறபடி
அநாதி அவித்யா கர்ம வாசன ருசி பிரக்ர்தி சம்பத்தாலே -பத்தும் பத்தாக பண்ணப்பட்ட துஷ் கர்ம பலமான
துக்கங்களை நிவர்திப்பித்து –

கையிலே கனி யன்னவே –நல் ஞானம் அளித்தனன் –
சர்வ குஹ்ய தமம் பூயா ஸ்ருணுமே பரமம் வச இஷ்டோசி மே த்ரட இதி ததோ வஹ்யாமி தே ஹிதம் – என்கிறபடியே –
கீழ் சொன்ன ப்ராவண்யத்து உடலான தத்வ ஹித புருஷார்த்த தத் யாதாம்ய-ஞானத்தை
கையிலே கனி போலே சுலபமாய் ஸூவ்யக்தமாய் இருக்கும்படி உபதேசித்து-அருளினார் என்றது ஆய்த்து –

கிளர்ந்த பொன்னாகம் கீண்டவன்
பொன்னிறம் கொண்டது அவன் சரீரம் -அடது பற்றியே அவன் ஹிரண்யன் -எனப்படுகிறான்
பொன் பெயரோன் மார்பிடந்த -முதல் திருவந்தாதி -23 -என்பர் ஸ்ரீ பொய்கையாரும்
தடை இன்றி மேலும் மேலும் வளர்ந்து வந்த அவனது ஆகம் சிங்கத்தின் எயிறு இலக வாய் மடுத்து நிற்கும் நிலை
கண்ட அச்சம் என்னும் நெருப்பினாலே வாட்டப் பெற்று பதமானவாறே நாரைக் கிழிப்பது போலே எளிதில் கிழித்தனன் -என்க –

கீர்த்திப் பயிர் யெழுந்து விளைந்திடும் சிந்தை இராமானுசன்
ஸ்ரீ நரசிம்ஹப் பெருமாளுடைய இந்தக் கீர்திகள் -ஸ்ரீ எம்பெருமானார் திரு உள்ளம் ஆகிற நன்செய்யுள் பயிராகி –
ஓங்கி வளர்ந்து விளைகின்றனவாம் –
ஸ்ரீசிங்கப் பிரான் கீர்த்திகள் பெருமை -பரத்வம்
ஆபத்திலே பக்தனுக்கு தோன்றி உதவுதல் –
எல்லாப் பொருள்களிலும் உட்புக்கு நியமிக்கும் அந்தராத்மாவாய் உள்ள தன்மை –
சீற்றம் -அந்நிலையிலேயே அருளுதல் -முதலியவை பல பல – அவைகளை எல்லாம் தம் திரு உள்ளத்திலே
நினைந்து நினைந்து நாள் தோறும் பேணுகிறார் ஸ்ரீ எம்பெருமானார் –

அவர் நெஞ்சுப் பெறும் செய்யுள் பேணப்படும் கீர்த்திப் பயிர்கள் பெரியனவாய் யெழுந்து விளைந்து விடுகின்றன –
ஸ்ரீ சிங்கப் பிரானுடைய குண அனுசந்தானத்தின்-விளைவு தான் எனக்கு அளித்த நல் ஞானம் என்பது ஸ்ரீ அமுதனார் கருத்து .
ஸ்ரீ எம்பெருமானார் சிந்தையிலே விளையும் கீர்த்திப் பயிர்களிலே சிலவற்றை இந்தப் பாசுரத்திலே ஸ்ரீ அமுதனார் காட்டுகிறார் .
முதலாவதாக காட்டுவது –வளர்ந்த வெம் கோபம் -என்பது –
ஸ்ரீ சிங்கப் பிரான் சீற்றம் அடியார்கட்கு தினம் தோறும் சிந்தித்ததற்கு உரியது –அதுவே நமக்கு வுய்வுபாயமுமாகும்
மேவி எரி வுருவமாகி இரணியனது ஆகம் தெரி உகிரால் கீண்டான் சினம் -ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி – 42-
என்னும் ஸ்ரீ பேயாழ்வார் ஸ்ரீ ஸூக்தியையும்
அருளன்று நமக்கு உத்தேச்யம் -ஆஸ்ரித விரோதிகள் பக்கம் அவனுக்கு உண்டான சினம் உத்தேச்யம் –
அச் சினத்தை தெரி -அனுசந்தி -என்று ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அதனுக்கு அருளிச் செய்த வ்யாக்யானத்தையும் காண்க –

பிரகலாதனுடைய பகைவனான இரணியன் பக்கல் உண்டான சினம் அடியார்களது மனத்தை மிகவும் ஈடுபடுத்த வல்லது .
ஏனைய குழந்தைகளுக்கு போல் அல்லாமல் நரசிம்ஹப் பெருமாள் வெளிப்படும் பொழுதே
பிரபல பாலரிஷ்டமாய் இரணியன் கையிலே வாளை வுருவி எடுத்துக் கொண்டு குழந்தையை முடிப்பதற்கு முடிகினான் கோபத்தினாலே –
அதை நினைத்தால் தற்காலத்தில் நடப்பது போல் தோற்றுகிறது அடியார்கட்கு -என்ன ஆகும் -ஐயோ என்று வயிறு எரிகிறது –
நல்ல வேளை குழந்தை விழித்து கொள்கிறது -விழியினால் அனலை சொரிகிறது –
வாள் வுருவி வந்தவனும் அஞ்சும் படியாக –பூவினும் மெல்லியதும் அழகியதுமான திருச் சக்கரம் ஏந்தும் கையினாலே –
செய்ய திருவடியிலே மடியிலே -அவனைப் பிடித்து வைத்து -அழகிய நகங்களினாலே அவனை அழித்து விடுகிறது அக் குழந்தை –
அழித்த பிறகும் கூட அதன் சீற்றம் மாற வில்லை –
எயிறு -பல் -தெரிய வாயை மடுத்துக் கொண்டு இன்னமும் இருக்கிறதே இக் குழந்தை -என்ன காரணம் -என்று
அவதரித்த கோலத்துடன் நேரே காட்சி தரும் ஸ்ரீ நரசிம்ஹ பெருமாளையே நோக்கி வினவுகிறார் ஸ்ரீ பொய்கை ஆழ்வார் –
அவரது அனுபவம் இதோ இந்தப் பாடலில் வெளியாகிறது –

வயிறழல வாளுருவி வந்தானை யஞ்ச
எயிறிலக வாய் மடுத்த தென்னீ-பொறி உகிரால்
பூவடியை யீடளித்த பொன் ஆழிக் கையா நின்
சேவடி மே லீடழியச் செற்று- – 63- இரணியனை முடித்த பின்னும் சீற்றம் மாறாது ஒழிவதே –

சங்கல்ப்பதாலேயோ திரு வாழி யாலேயோ -அவனை முடித்தால் ஆகாதோ
ஆத்திரம் தீர நகத்தினால் முடித்ததோடு அமையாமல் பிணத்தைப் பார்த்ததும்
நா மடித்து கோபத்தைக் காட்டுவதே -இஃது என்ன கோபமோ -என்று ஈடுபடுகிறார் ஸ்ரீ பொய்கையார் .

தன் திறத்து மட்டும் அபசாரப் பட்டு இருப்பின் -அவனை முடித்ததும் சீற்றம் மாறி இருக்கும் .
அடியானாகிய பிரகலாதன் இடத்தில் அபசாரப் பட்டமையால் -அவனை முடித்த பின்பும் சீற்றம் அடங்கின பாடு இல்லை –
என்று உணர்க –
இதனால் ஆத்திரம் அடங்க மாட்டாத அளவில் அடியார் இடம் எம்பெருமானுக்கு உள்ள பரிவுடைமை புலனாகிறது –
இந்த பொய்கையார் பாசுர வ்யாக்யானத்தில் –
சரணா கதிக்கு தஞ்சமான தனமாவது ஆஸ்ரித அர்த்தமாக ஹிரண்யனைப் பற்றப் பண்ணும் சீற்றம் –என்னும்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்து இருப்பதுய் இங்கு அனுசந்திக்கத் தக்கது .

இங்கனம் ஸ்ரீ பொய்கை யாழ்வார் ஈடுபட்ட சீற்றத்தை ஸ்ரீ எம்பெருமானாரும் தம் திரு உள்ளத்தே இருத்தி
வளர்ந்த வெம் கோபம் -கீர்த்திப் பயிரை விளைந்திடச் செய்தார் -என்க .

மடங்கலானதும் ஒரு கீர்த்தி
பிரமன் கொடுத்த வரத்திற்கு ஏற்ப -அவன் படைப்புக்குள் அடங்கும் பிராணிகளில் ஒன்றாகாது –
தனிப்பட்ட நரம் கலந்த சிங்கமானது –பிரமன் வரத்தை மெய்யாக்கின கீர்த்தி படைத்தது அன்றோ –
பிரமன் படைப்புக்குள் ஆகாதாயினும் பொருந்தின அழகிய சிங்கமானது பிரமனுக்கும்
மேற்பட்ட பரமன் இவன் என்னும் கீர்த்தியை பறை சாற்றுகின்ற தன்றோ –

அன்று மடங்கலானதும் –
எங்கும் உளன் என்னும் பிரகலாதனை மெய்யனாக்கிக் காப்பாற்றியதனாலும்
எங்கும் வியாபித்து இருப்பதை ப்ரத்யட்ஷமாக காட்டியதனாலும்
அவனது கீர்த்தியை புலப்படுத்துவதாகும் .
வாள் அவுணன் கிளர்ந்த பொன்னாகம் கிழித்ததும் –
அடியார் அச்சத்தை அகற்றி அவனது எல்லை இல்லா வல்லமையை விளக்கி வலிமை வாய்ந்த அடியார் பகையையும்
அழித்து தரும் ஆற்றலை காட்டுவதனால் கீர்த்தி வாய்ந்ததாகும் .

இவை ஸ்ரீ எம்பெருமானார் திரு உள்ளத்தில் பயிராய் வளர்ந்து விளைகின்றன –
அதாவது
இந்த குண அனுசந்தானங்கள் ஸ்ரீ எம்பெருமானாருக்கும் பலித்து – அவரைச் சார்ந்த எனக்கும் பயன்படுகின்றன –
சரணா கதற்கு தஞ்சமான தனமாக அனுசந்தித்த சீற்றம் -என் மெய் வினை நோயாம் இரணியனை களைவதற்கும் பயன்படுவதாயிற்று –
இங்கனம் அடியார்களைக் காக்கும் திறம் -பரத்வம் -முதலிய பிறவும்
சரண்யனுக்கு வேண்டிய குணங்களாய் அனுசந்திக்கப்பட்டு அச்சம் இன்றி நிறை வுடன் தெள்ளிய அறிவினராய்
வாழும்படி பலித்து -அவரைச் சார்ந்த எனக்கும் நல் ஞானமாய் பயன்படுகின்றன .

என் தன் மெய் வினை நோய் —கனி என்னவே
மெய் -சரீரம் -மாறுபட்டு அளித்தால் பற்றி விபரீத இலக்கணை
மெய் வினை -சரீர சம்பந்தத்தால் வரும் கர்மம்
அக் கர்மத்தின் பலனான துன்பங்கள் மெய் வினை நோய் எனப்படுகின்றன –
நல் ஞானம் –
ஸ்ரீ நரசிம்ஹனே -வன் பகை மாற்றித் தெள்ளறிவுடன் வாழ்விப்பவன் -என்பது ஞானம்
அங்கனம் வாழ்பவரே நமக்கு நல்லன நீக்கி நல்லன நல்குவர் என்னும் துணிவு நல் ஞானம் -என்க
இத்தகைய நல்ல ஞானம் மிக எளிதாக விளங்கும்படி கை இலங்கு நெல்லிக் கனி போலே தந்து அருளினார் -என்கிறார்
என்னவே -கரணங்களும் ஈடுபடும்படியான ஆர்வம் விளையுமாறு-கர்மங்களை நீக்கிக் பண்ணின உபகாரம்
இது என்பது கருத்து ஆயிற்று —

உபபத்யச – உபலப்த்யச்ச ச -கர்மாவும் அநாதி -ஈஸ்வரன் திரு உள்ளத்தில் ப்ரீதி அப்ரீதி ரூபத்துடன் ஒட்டி கொண்டு இருக்கும்
ஞானம் அவித்யையால் மூட பட்டு மீண்டும் கர்மம் சேர்கிறான்-
உடைக்க -காமாதி தோஷ கரம்- ஸ்வாமி திருவடிகளில் பற்றி ஒழிக்க வேண்டும்
உமி களைந்து அரிசி கொடுப்பது போல அஞ்ஞானம் போக்கி ஞானம் கொடுத்தார்-

ஸ்ரீ நரசிம்கர்-ஸ்ரீ அழகிய சிங்கர் சேராத இரண்டை சேர்த்தார்-
ஸ்ரீ நரசிம்கரையும் ஸ்ரீ கீதாச்சர்யரும் கலந்தது ஸ்ரீ ஸ்வாமி
ஸ்ரீ நரசிங்கர் பண்ணினதை -ஸ்ரீ கீதாசார்யன் போல உபதேசித்து–எடுத்து சொல்லும் தன்மை-
இரண்டையும் அருளினவர் ஸ்ரீ ஸ்வாமி-
உகிரே ஸ்வாமி /பஞ்ச ஆயுதங்களும் சேர்ந்து தானே ஸ்ரீ ஸ்வாமி

ஞானம்-ஸ்ரீ நரசிம்ஹர் பற்றிய ஞானம் –
நல் ஞானம்—அவரை திரு உள்ளத்தில் கொண்ட ஸ்ரீ ஸ்வாமி பற்றிய ஞானம்-
ஏற்றி இருப்பாரை வெல்லுமே மற்றவரை சாத்தி இருப்பவர் தவம் –

——————-

ஸ்ரீ நரஸிம்ஹாவதாரம்
வடி யுகிரால் ஈர்ந்தான் இரணியானதாகம் –பொய்கையார் –17-
தழும்பு இருந்த பூங்கோதையாள் வெருவப் பொன் பெயரொன் மார்பிடந்த —23-
கீண்டானை –25-
பூரி ஒரு கை பற்றி ஓர் பொன்னாழி ஏந்தி அரியுருவும் ஆளுருவுமாகி –எரியுருவ வண்ணத்தான் மார்பிடந்த மாலடியை–31-
முன்னம் தரணி தனதாகத் தானே இரணியனைப் புண்ணிரந்த வள்ளுகிரால் பொன்னாழிக் கையால் –36-
மேல் அசுரர் கோன் வீழக் கண்டுகந்தான் குன்று –40-
களியில் பொருந்தாதவனைப் பொரலுற்று அரியாய் இருந்தான் திரு நாமம் எண்–51-
வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம் சிரித்தால் வணங்கானாம் என்றே உரத்தினால்
ஈரரியாய் நேர் வலியோனாய விரணியனை ஓரரியாய் நீ இடந்த தூன்—90-
வயிறு அழல வாள் உருவி வந்தானை பொறி யுகிரால் நின் சேவடி மேல் ஈடழியச் செற்று—93-
கோளரியாய் ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்து –பூதத்தார் —18-
மாலை அரி உருவன் பாத மலர் அணிந்து காலை தொழுது எழுமின் கைகோலி–47-
வரம் கருதி தன்னை வணங்காத வன்மை உரம் கருதி மூர்க்கத்தவனை
நரம் கலந்த சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே –பூதத்தார் -84-
பற்றிப் பொருந்தாதான் மார்விடந்து –94-
தானவனை வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன் -95-
இரணியானதாகம் அவை செய்தரி யுருவமானான் –பேயார்-31-
மேவி யரியுருவமாகி இரணியனதாகம் தெரி யுகிரால் கீண்டாம் சினம் —42-
செற்றதுவும் சேரா இரணியனை –49-
அங்கற்கு இடர் இன்றி யந்திப் பொழுதத்து மணக்க இரணியனதாகத்தை பொங்கி அரியுருவமாய் பிளந்த எம்மானாவானே —65-
புகுந்து இலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய் இகழ்ந்த விரணியனதாகம் –பிளந்த திருமால் திருவடியே வந்தித்தது என்நெஞ்சமே –95-
தொகுத்த வரத்தனனாய் தோலாதான் மார்வம் வ
மாறாய தானவனை வள்ளு
தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை அவம் செய்த ஆழியாய் யன்றே –19-
இவையா அரி பொங்கிக் காட்டும் அழகு –21-
அழகியான தானே யரி யுருவம் தானே —22-
வானிறத்தோர் சீயமாய் வளைந்த வாள் எயிற்றவன் ஊநிறத்துகிர் தலம் அழுத்தினாய் –திருச்சந்த –23-
சிங்கமாய தேவ தேவ —24-
வரத்தினால் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன் உரத்தினில் கரத்தை வைத்து உகிர்த் தளத்தை ஊன்றினாய்–25-
திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும் இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் என்பது உன்னையே -62-
பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட –அமலனாதி –8-
அந்தியம் போதில் அரியுருவாகி அறியாய் அழித்தவனை–திருப்பல்லாண்டு -6-
மறம் கொள் இரணியன் மார்வை முன் கீண்டான் –பெரியாழ்வார் –1–2–5-
கோளரியின்னுருவம் கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி எழக் கூர் உகிரால் குடைவாய் -1–5–2-
அளந்திட்ட தூணை அவன் தட்ட அங்கே வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்க யுருவாய்
உளம் தொட்டு இரணியன் ஒண் மார்பகலம் பிளந்திட்ட கைகளால் சப்பாணி –1-6–9-
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவாக முன் கீண்டாய் –2–7–7-
முன் நரசிங்கமதாகிய அவுணன் முக்கியத்தை முடிப்பான் —3–6–5-
அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய் உதிரம் அளைந்த கையோடு
இருந்தானை அல்லவா கண்டார் உளர் —4- -1–1-
நாதனை நரசிங்கனை நவின்று ஏத்துவார் உழக்கிய பாத தூளி படுத்தலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே –4–4–6-
நம்பனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால் எம்பிரான்
தன் சின்னங்கள் இவரிவர் என்று ஆசைகள் தீர்வேனே –4–4–9-
வாள் எயிற்றுச் சீயமுமாய் –அவுணனை இடந்தானே –4–8–8-
உரம் பற்றி இரணியனை உகிர் நுதியால் ஒள்ளிய மார்புறைக்க யூன்றிச்
சிரம் பற்றி முடியிடியக் கண் பிதுங்க வாய் அலறத் தெழித்தான் கோயில் — 4–9–8-
நாதனே நரசிங்கமதானாய் –5–1–9-
சிங்கப் பிரானவன் எம்மான் சேரும் திருக் கோயில் கண்டீர் -5–2–4-
ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்–நாச்சியார் -8–5-
அப்பொன் பெயரோன் தடம் நெஞ்சம் கீண்ட பிரானார் –திருவிருத்தம் –46-
அன்று அங்கை வன் புடையால் பொன் பெயரோன் வாய் தகர்த்து மார்விடந்தான்–பெரிய திருவந்தாதி -35-
வழித் தங்கு வால் வினையை மாற்றானோ நெஞ்சே தழிஇக் கொண்டு போர் அவுணன் தன்னைச் சுழித்து எங்கும்
தாழ்விடங்கள் பற்றிப் புலால் வெள்ளம் தானுகள வாழ்வடங்க மார்விடந்த மால் –57-
போரார் நெடு வேலோன் பொன் பெயரொன் ஆகத்தைக் கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு
ஆரா எழுந்தான் அரியுருவாய்–சிறிய திரு மடல் –
ஆயிரம் கண் மன்னவன் வானமும் வானவர் தம் பொன்னுலகும் –தோள் வலியால் கைக் கொண்ட தானவனை பின்னோர் அரியுருவாகி
எரி விழித்து –தான் மேல் கிடத்தி அவனுடைய பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ் படைத்த வீரனை –பெரிய திருமடல்
எங்கும் நாடி நாடி நரசிங்கா என்று வாடி வாடும் இவ் வாணுதலே –திருவாய் –2—4–1-
உன்னைத் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட எண் முன்னைக் கோளரியே—2–6–6-
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப் பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே —2—8–9-
அவன் ஒரு மூர்த்தியாய் –சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக் கீழ் புக நின்ற செங்கண் மால் –3–6–6-
கிளர் ஒளியால் குறைவில்லா அரியுருவாய்க் கிளர்ந்து எழுந்து கிளர் ஒளிய இரணியனது அகல் மார்பம் கிழித்து உகந்த –4–8–7-
அந்திப் போது அவுணன் உடல் இடந்தானே –7–2–5-
அப்பன் ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறு—7–4–6-
அல்லல் அமரரைச் செய்யும் இரணியன் ஆகத்தை மல்லல் அரியுருவாய்ச் செய்த மாயம் அறிந்துமே—–7–5–8-
புக்க வரியுருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த சக்கரச் செல்வன் தன்னை —-7–6–11-
கோளரியை –7–10–3-
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கையுகிராண்ட வெங்கடலே–8-1-3-
ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர் ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் –9–3–7-
வானவர் தானவர்க்கு என்றும் அறிவது அரிய அரியாய அம்மானே –9–4–4-
மிகுந்தானவன் மார்வகலாம் இரு கூறா நகந்தாய் நரசிங்கமதாய யுருவே —9–4–7-
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன் —9–10–6-
வன் நெஞ்சத்து இரணியனை மார்விடந்த வாட்டாற்றான் –10–6–4-
அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று —10–6–10-
அவுணன் ஆர் உயிரை யுண்ட கூற்றினை –திருக் குறும் தாண் –2-
மறம் கொள் ஆளரி உருவென வெருவர ஒருவனது அகல் மார்வம் திறந்து வானவர் மணி முடி பனி தர —-1–2–4-
மன்னவன் பொன்னிறத் துரவோன் ஊன் முனிந்தவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து —-1- -4–8-
ஏனோர் அஞ்ச வெஞ்சமத்துள் அரியாய்ப் பரிய இரணியனை ஊனார் அகலம் பிளவெடுத்த ஒருவன் —1–5–7-
அங்கண் மா ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆளரியாய் அவுணன் பொங்கவாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் இடம்
பைம்கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக் கீழ் செங்கணாளி யிட்டு இறைஞ்சும் சிங்க வேள் குன்றமே –1–7–1-
அலைத்த பேழ்வாய் வாள் எயிற்றோர் கோளரியாய் அவுணன் கொலைக் கையாளன் நெஞ்சிடந்த –1–7–2-
அவுணன் வாய்ந்த வாகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம் —1—7–3-
எவ்வும் வெவ்வேல் பொன் பெயரோன் ஏதலன் இன்னுயிரை வவ்வி ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த –1–7–4-
மென்ற பேழ்வாய் வாள் எயிற்றோர் கோளரியாய் அவுணன் பொன்ற வாகம் வள்ளுகிரால் போழ்ந்த –1–7–5-
எயிற்றொடி தெவ்வுரு வென்று இரிந்து வானோர் கலங்கியோட இருந்த வம்மான் —-1–7–6-
மூ உலகும் பிறவும் அனைத்தும் அஞ்ச வாள் அரியாய் இருந்த —1–7–7-
நாத் தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால் ஏத்த அங்கோர் ஆளரியாய் —1–7–8-
தூணாய் அதனூடு அரியாய் வந்து தோன்றி பேணா வவுணன் உடலம் பிளந்திட்டாய் –கலியன் –1–10–5-
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் –பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப –
தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திரு வல்லிக்கேணிக் கண்டேனே —2–3–8-
அவுணன் அவன் மார்பகலம் உகிரால் வகிராக முனிந்து அரியாய் கீண்டான் –2–4–2-
தங்காததோர் ஆளரியாய் அவுணன் தனை வீட முனிந்து —2–4–4-
அடிப் பணியாதவனைப் பணியால் அமரில்–நெஞ்சிடந்தான்–2- 4–7-
பூணாகம் பிளவெடுத்த போர் வல்லோனை —2–5–7-
பிறை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை –2–5–8-
அன்று அவுணர் கோனைப் பட வெகுண்டு —2–5–10-
எரியன கேசரி வாள் எயிற்றொடு இரணியனாக மிரண்டு கூறா அரியுருவாம் இவர் –2–8–1-
திண் படைக் கோளரியின் உருவாய்த் திறலோன் அகலம் செருவில் முன நாள் புண் படப் போழ்ந்த பிரான் –2–9–6-
மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல்லவுணன் தன் மார்வகம் இரு பிளவாக்
கூறு கொண்டவன் குல மகற்கு இன்னருள் கொடுத்தவன் –3–1–4-
பொங்கி யமரில் ஒருகால் பொன் பெயரோனை வெருவ –சிங்க உருவில் வருவான் –3–3–8-
பொன்னன் பைம் பூண் நெஞ்சிடந்து குருதியுக உகிர் வேலாண்ட நின்மலன் தாள் அணைகிற்பீர் –3–4–4-
சலம் கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு —3–9–1-
திண்ணியதோர் அரியுருவாய்த் திசையனைத்தும் நடுங்கத் தேவரோடு தானவர்கள் திசைப்ப
இரணியனை நண்ணியவன் மார்வகலத்து உகிர் மடுத்த நாதன் —-3–9–2-
ஓடாத வாளரியின் உருவமது கொண்டு அன்று உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனைப் பற்ற
வாடாத வள்ளுகிரால் பிளந்தவன் தன் மகனுக்கு அருள் செய்தான் வாழுமிடம் –3–10–4-
ஓடாத வாளரியின் யுருவாகி இரணியனை வாடாத வள்ளுகிரால் பிளந்து அளைந்த மால் –4–1–7-
உளைய ஒண் திறல் பொன் பெயரோன் தனது உரம் பிளந்துதிரத்தை அளையும்—4–2–7-
முடியுடை அமரர்க்கு இடர் செய்யும் –அசுரர் தம் பெருமானை அன்று அரியாய் மடியிடை வைத்து மார்வை முன் கீண்ட மாயனார்—4—10–8-
வெய்யனாய் யுலகு ஏழுடன் நலிந்தவன் உடலகம் இரு பிளவா –கையில் நீளுகிர் படையது வாய்த்தவனே —5–3–3-
தரியாது யன்று இரணியனைப் பிளந்தவனை —5–6–4-
வெங்கண் வாள் எயிற்றோர் வெள்ளி மா விலங்கல் விண்ணுறக் கனல் விழித்து எழுந்தது –அங்கனே ஓக்க அரியுருவானான்–5–7–5-
வானோர் புக்கு அரண் தந்து அருளாய் என்னப் பொன்னாகத்தானை–நக்கரி யுருவமாகி
நகம் கிளர்ந்து இடந்து உகந்த சக்கரச் செல்வன் –5–9–5-
முனையார் சீயமாகி அவுணன் முரண் மார்வம் புனை வாள் உகிரால் போழ் பட வீழ்ந்த புனிதனூர்—6–5–2-
பைம் கண் ஆளரி யுருவாய் வெருவ நோக்கிப் பருவரைத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி
அங்கை வாள் உகிர் நுதியால் அவனதாகம் அங்குருதி பொங்குவித்தான் -6-6-4-
வேரோர் அரி யுருவாய் இரணியனதாகம் கீண்டு வென்றவனை விண்ணுலகில் செல உய்த்தார்க்கு –6–6–5-
ஓடா வரியாய் இரணியனை ஊனிடந்த—6–8—4-
ஓடா வாள் அரியின் உருவாய் மருவி என் தன் மாடே வந்து அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா —7–2–2-
பொன் பெயரோன் நெஞ்சம் அன்று இடந்தவனை –7–3–9-
முந்திச் சென்று அரி யுருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால் —7–4–5-
சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த சங்கமிடத்தானைத் தழல் ஆழி வலத்தானை—7–6–1-
விண்டான் விண் புக வெஞ்சமத்து அரியாய்ப் பரி யோன் மார்வகம் பற்றி பிளந்து —7–7–5-
சினமேவும் அடல் அரியின் உருவமாகித் திறல் மேவும் இரணியதாகம் கீண்டு –7–8–5-
அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய வணி யுகிரால் உடல் எடுத்த பெருமானுக்கு —8–3–6-
சீர் மலிகின்றதோர் சிங்க யுருவாய் –8–4–4-
உளைந்த வரியும் மானிடமும் உடனாயத் தோன்றி ஒன்றுவித்து விளைந்த சீற்றம் விண் வெதும்ப வேற்றோன்
வாள் அவுணன் பூணாகம் கீண்டதுவும் –8–10–10-
பரிய இரணியானதாகம் அணி யுகிரால் அரி யுருவாய்க் கீண்டான் –9–4–4-
சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த –9–9–4-
துளக்கமில் சுடரை அவுணன் உடல் பிளக்கும் மைந்தனை —10–1–4-
வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போல் அவுணன் உடல் வள்ளுகிரால் அளைந்திட்டவன் காண்மின் –10–6–3-
தளர்ந்திட்டு இமையோர் சரண் தா எனத் தான் சரணாய் முரணாயவனை உகிரால் பிளந்திட்டு
அமரர்க்கு அருள் செய்து உகந்த பெருமான் –10–6–4-
பொருந்தலனாகம் புள்ளு வந்தேற வள்ளுகிரால் பிளந்த வன்று —10–9–8-
அங்கு ஓர் ஆளரியாய் அவுணனைப் பங்கமா இரு கூறு செய்தவன் –11–1–5-
அளவெழ வெம்மை மிக்க அரியாகி அன்று பரியோன் சினங்களவிழ வளை யுகிர் ஆளி மொய்ம்பில் மறவோனதாகம் மதியாது
சென்று ஓர் உகிரால் பிள எழவிட்ட குட்டமது வையமூடு பெரு நீரின் மும்மை பெரிதே —11–4–4-
கூடா இரணியனைகே கூர் உகிரால் மார்விடந்த ஓடா அடல் அரியை உம்பரார் கோமானை —11–7–4-
முனைத்த சீற்றம் விண் சுடப்போய் மூவுலகும் பிறவும் அனைத்தும் அஞ்ச ஆள் அரியாய் –பெரிய திருமொழி – 1-7 7- –

கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயி ரெழுந்து விளைந்திடும் சிந்தை யிராமானுசன்

————————————————————————–———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-