Archive for February, 2021

ஸ்ரீமத் திருக்கச்சி நம்பி-ஸ்ரீ தேவராஜ அஷ்டகம்-

February 22, 2021

ஸ்ரீ ந்யாய வேதாந்த வித்வான் தாமல் வங்கீபுரம் ஸ்ரீ உ வே பார்த்தஸாரதி ஐயங்கார் ஸ்வாமி
இந்தப் ப்ரபந்தத்திற்குத் தமிழில் ஒரு எளிய பொழிப்புரை அருளியுள்ளார்.

தனியன்கள்:-

ஸ்ரீமத் காஞ்சீ முனிம் வந்தே கமலாபதி நந்தனம் |
வரதாங்க்ரி ஸதா ஸங்க ரஸாயன பராயணம் ||

ஸ்ரீ கமலாபதி என்பவரின் புதல்வரும் ஸ்ரீ பேரருளாளன் திருவடிகளில் இடைவிடாத பற்று என்னும்
ரசாயநத்தையே கதியாகக் கொண்டவருமான ஸ்ரீமத் திருக்கச்சி நம்பியை வணங்குகிறேன்.

தேவராஜ தயா பாத்ரம் ஸ்ரீ காஞ்சீ பூர்ணமுத்தமம் |
ராமாநுஜ முநேர் மாந்யம் வந்தேஹம் ஸஜ்ஜநாச்ரயம் ||

ஸ்ரீ தேவப் பெருமாள் க்ருபைக்குப் பாத்ரமானவரும் ஸ்ரீ ராமாநுஜ முநி என்னும் எம்பெருமானாருடைய
மதிப்பைப் பெற்றவருமான நல்லவர்கள் ஆச்ரயிக்கத் தகுந்த ஸ்ரீ திருக்கச்சி நம்பியை வணங்குகிறேன்.

சென்னை அருகிலுள்ள பூவிருந்தவல்லியில், 1009ம் ஆண்டு ஸ்ரீ வீரராகவர், ஸ்ரீ கமலாயர்
தம்பதிகளுக்கு நான்காவதாக பிறந்தவர் ஸ்ரீ கஜேந்திர தாசர்

ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் அருளிச் செய்த ஒரே கிரந்தம் ஸ்ரீ தேவராஜ அஷ்டகம்;

8 ஸ்லோகங்களைக் கொண்டது.தம் ஆசார்யரும், ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜரின் பரமாசார்யருமான ஸ்ரீஆளவந்தார்
அருளிய “ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்” என்னும் கிரந்தத்தின் ஸாரத்தைக் கொண்டு
நித்யாநுஸந்தேமாயும்,ஸுலபமாயும்,ஸுக்ரமாயும்,சர்வ வர்ணார்ஹமாயும் ஆன ஸ்ரீ தேவராஜ அஷ்டகம் என்னும்
ஸ்தோத்ர மாலையை அருளிச்செய்தார்.

ஸ்லோகம்-1:
“நமஸ்தே! ஹஸ்திசைலேச!
ஸ்ரீமந் அம்புஜலோசன;
சரணம் த்வாம் ப்ரபன்னோஸ்மி
ப்ரணதார்த்திஹரா அச்யுத!!”

ஸ்ரீ ஹஸ்திகிரிக்கு நாதனே! ஸ்ரீபதியே! தாமரைக் கண்ணனே! உனக்கு வணக்கம்.
தன்னை வணங்கினவர்களின் துக்கத்தைப் போக்குபவனே! நழுவ விடாதவனே! உன்னைச் சரணமாக அடைந்திருக்கிறேன்.

ஸ்ரீபெருந்தேவித் தாயாருக்கு, வல்லபன் ஆனவனே,ஸ்ரீ அத்திகிரி என்னும் குன்றின் அதிபதியே!
அரவிந்தநிவாஸிநியான ஸ்ரீ பெருந்தேவித் தாயாரையும், அவருடைய ஆசனமான தாமரையையும்
பார்த்துப் பார்த்து,அவர் உருவத்தைத் தம் கண்மலர்களில் கொண்டவனே!
உன் திருவடிகளில் சரணமடைந்தோர் அனைவருடைய வருத்தங்களையும் நாசம் செய்பவனே!
உன்னை அண்டியவர்களை விடாதவனே! அச்சுதனாய், ப்ராப்யனாய்,
என் எதிரே அர்ச்சாவதரமாய், ஸுலபனாய் நிற்கிற உன்னையே-
சரணமாக-உபாயமாகப் பற்றுகிறேன்.நின் திருவடிகளில் தண்டம் சமர்ப்பிக்கிறேன்.

இந்த முதல் ஸலோகத்தில் அர்த்த பஞ்சகமும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
i)ஹஸ்திசைலேச–சர்வேஸ்வரத்வத்தைக் கொண்ட சர்வ காரணத்வம்-ப்ராப்யம்.
ii)ஸ்ரீமந் அம்புஜலோசன- ப்ராப்ய அநுரூபமான ஸ்வரூபம்-அபாத்யத்வம்.
iii)சரணம்- ஸ்வரூப அநுரூபமான உபாயத்வம்.
iv)அச்சுதா-உபாய பலமான ப்ராப்ய ப்ராப்தி
v)ப்ரணதார்த்தி ஹர-விரோதி ஸ்வருப நிரஸநம்.

1)ஸ்ரீமந்-பரத்வம்
2)ஸ்ரீ ஹஸ்திசைலேச–அர்ச்சாவதாரம் .
3 )ஸ்ரீ அம்புஜலோசன- தாமரைக்கண்ணன்-ராமம் கமலலோசனன் -விபவ அவதாரம்
4)ஸ்ரீ அச்சுதா-அந்தர்யாமித்வம்
5)ஸ்ரீ ப்ரணதார்த்தி ஹர-கூப்பீடு கேட்க்கும் வ்யூஹம்

———-

ஸ்லோகம் 2-8:
கீழே பர ஸ்வரூபத்தை பஞ்ச பிரகாரமாக அனுபவித்து
இந்த 7 ஸ்லோகங்களால் ப்ராப்ய, உபாய விரோதி நிராகரணத்தைப் பிரார்த்தித்து,
ஸ்வ ஸ்வரூபத்தைக் காட்டுகிறார்.

ஸ்லோகம் 2:
“சமஸ்த ப்ராணி ஸந்த்ராண ப்ரவீண கருணோல்பன;
விலசந்து கடாக்ஷாஸ் தே, மய் யஸ்மின் ஜகதாம்பதே!!”

எல்லா ப்ராணிகளையும் காப்பதில் திறமை உள்ளவனே! நிறைந்த கருணை உள்ளவனே!
உலகத்திற்கு ஸ்வாமியே! உனது பார்வை இந்த என்னிடம் மலரட்டும்.

உலகங்களுக்கு எல்லாம் ஸ்வாமியானவனே!எல்லா ஜீவராசிகளுக்கும் ரக்ஷ்ணம்/ஸமுஜ்ஜீவனம் அளிக்கும்
அளவற்ற சக்தியும்,கருணையும் உடையவனே!
பலத்தை-வரத்தைக் கொடுக்கத் தன்னையும்,பெருக்கி விஞ்சி கடாக்ஷங்களாய் நிற்பவனே!
உன்னுடைய கடாக்ஷமான பார்வை,நின் எதிரே சேவித்து நிற்கும் அடியேன் மீது முழுதும்
நன்றாக இருக்க வேண்டுகிறேன்.

இங்கு ஸமஸ்த ப்ராணி என்றது
அனைத்து ஜீவன்களுக்கும்-தேவதைகள்,மனிதர்கள்,பசுக்கள்,பட்சிகள்,செடி/கொடி மரங்கள்-என்று அனைத்தும்;
“லோகாஸ்ஸமஸ்தா:ஸுகிநோ பவந்து”என்கிறபடியே,

வரதரின் வரமும்,கடாஷமும் நம்பிகளிடம் வந்தால்,அதனால் உலகம் எல்லாம் வாழும்.
அப்படியே வரதர் அருளிய அந்த ‘ஆறு வார்த்தைகளை’ நம்பிகள் எம்பெருமானாருக்கு அளிக்க,
அவர் உலகோர் எல்லோருக்கும் அளித்து தர்சன ஸித்தியாலே வாழும்படி செய்தார்.

நம்பிகளின் ஆல வட்டக் கைங்கர்யமும்,
உடையவரின் தீர்த்தக் கைங்கர்யமும்,(சாலைக் கிணற்றிலிருந்து)
ஊருக்காகவும்,உலகத்துக்காகவும் பலன் தரவே யாகும்.

————

ஸ்லோகம் 3:
“நிந்தித ஆசார கரணம் நிர்வ்ருத்தம் க்ருத்யகர்மண:
பாபீயாம்ஸம் அமர்யாதம் பாஹி மாம் வரத ப்ரபோ!”

நல்லவர்களால் வெறுக்கப்பட்ட செயல் புரிபவனும், செய்ய வேண்டியதைச் செய்யாதவனும்,
பாபிஷ்டனும், மரியாதை இல்லாதவனுமான என்னை ஹே வரதராஜ! ரக்ஷிப்பாயாக.

நல்ல வரங்களைக் கொடுக்க வேண்டுமென்று, இங்கே எழுந்தருளியுள்ள ஸ்வாமி யானவனே!
நல்லவர்கள் விலக்கச் சொல்லும்,ஆசார நடைமுறைகளையே செய்யுமவனான,
செய்ய வேண்டும் என்பவற்றை செய்யாதவனான,
அவர்களை-அவைகளைப் பார்க்காமல் பின் காடடிப் போகிறவனான என்னை,
பாபங்களையே எல்லா வடிவிலும் நெஞ்சிலும்/வாயிலும் கொண்ட என்னை,
(லோகத்திலும் சாஸ்த்ரத்திலும் சொல்லுகிற) எந்தவொரு நியமத்துக்கும் கட்டுப்படாத என்னை
(‘என்னை’ என்று அஹங்காரத்தோடு சொல்லுமவனை)
இனி தேவரீர் ஸ்வாமிகளே காப்பாற்ற வேண்டும்.

———–

ஸ்லோகம் 4-8: இந்த 5 ஸ்லோகங்களால் ஆகிஞ்சந்யாதிகளை,முன்னிட்டு,
அபராத ஸஹஸ்ர பாஜநத்தை விளக்கி,சரணாகதத்தையும் விரிவாக்கிக் கொண்டு சொல்கிறார்.
இந்த ஸ்லோக வரிசையை குளகம் என்று கூறுவார்கள்.

ஸ்லோகம் 4:
“ஸம்ஸார மருகாந்தாரே துர் வியாதி ஆக்ரபீஷணே;
விஷய க்ஷத்ரகுல்மாட்யே த்ருஷ்ணாபாதபசாலினி !! ”

ஸம்ஸாரம் என்னும், நிதமும் நாம் வாழும் வாழ்க்கை, கொடிய பாலை வனங்களில் அங்கங்கே இடைப்படும்
காட்டினைப் போன்றது. தினமும் நமக்கு ஏற்படும் வித விதமான மனம் மற்றும் உடல் சம்பந்தப்பட்ட
நோய்களின் தீவிரம் காட்டுப் புலிகளினுடைய தாக்குதலுக்கு ஒப்பானது.

காட்டிலே மேலாக புற்களால் நிரப்பப்பட்ட புதர்களான ஆழப் பள்ளங்கள் அவற்றின் மேல் நடப்பவரை
உள்ளுக்குள் இழுத்துக் கொள்ளும் வண்ணம், நம்முடைய பல வித ஆசைகளும் அங்கங்களின் உணர்வுகளும்
கொடிய புதர்களாக நாம் வெளியே வர முடியாத வண்ணம் உள்ளே இழுத்துக் கொள்ளும் தன்மை யானவை. .

‘ஸம்ஸார மருகாந்தாரே’ என்னும் பதத்திற்கு ஸம்ஸார பாலை வனம் என்று பொருள்.
‘த்ருஷாபாதபசாலினி’ என்பது மரம் செடி கொடிகளைக் (பனை/ஈச்ச மரம்,முட்புதர்கள்) குறிப்பது.

நம்பிகள் இந்த வேறுபட்ட இரண்டு பதங்களைப் பிரயோகிக்கக் காரணம்,
பாலை வனத்து வெறுமையும் காட்டுப் பகுதியின் அந்தகாரமும், அடர்த்தியும் ஒன்று சேர்ந்தால்
எவ்வளவு கொடுமையாக இருக்குமோ,
அத்தகையது இந்த இருள் தரு மா ஞாலம் என்பதைக் குறிப்பிடத்தான்.

————

ஸ்லோகம் 5:
“புத்ர தார க்ருஹ க்ஷேத்ர, ம்ருகத் த்ருணாம்பு புஷ்கலே!
க்ருத்ய ஆக்ருத்ய விவேகாந்தம் பரிப்ராந்தம் இதஸ் தத:”

இப் பிறப்பில் நமக்கு ஏற்படும் புத்ர-புத்ரிகள் இல்லாள்(ன்), வீடு, நிலம் முதலிய சொந்த பந்தங்கள்,
காடுகளில் காணப்படும் கானல் நீரைப் போன்று தொடர்ந்து நம்மை ஏமாற்றிக் கிடக்கும்.
இந்த சொந்தங்களின் நலத்திற்கான ஒரே நோக்கில் எதைச் செய்தல்,எதை விலக்குதல் என்ற
ஞான விவேகங்கள் அற்று, இங்கும் அங்கும் சுழன்று கொண்டே இருப்போம்.

அருளிச் செயல் சொன்ன வண்ணம் ‘தாயே தந்தை என்றும், தாரமே கிளை மக்களென்றும்’ என்னும்
வகையில் வாழ்ந்து என்ன பயன்?
பந்துக்களைக் கண்டால் பாம்பைக் கண்டாற் போலவும்,
பாகவதர்களைக் கண்டால் பந்துக்கள் போலவும் இருக்க வேண்டும் என்பது பூர்வர்கள் உபதேசம்.

நம் ஆத்மாவின் உற்ற நிரந்தர உறவினன், எம்பெருமான் ஒருவனே என்று உணர்ந்திடும் சமயத்தில் தான்,
நாம் துக்கங்களிலிருந்து கரையேற முடியும், என்று நம்பிகள் விளிக்கிறார்.

————

ஸ்லோகம் 6:
“அஜஸ்ரம் ஜாத த்ருஷ்ணார்த்தம் அவஸந்நாங்கமக்ஷமம்;
க்ஷீண சக்த்தி,பலாரோக்யம் கேவலம் க்லேச சம்ச்ரயம்!”

எப்போதும் இடைவிடாத படி விஷ்யாந்தரங்களை விரும்பி அநுபவித்துக் கொண்டும்,
அவற்றை விட முடியாமல் வருந்திக் கொண்டும்,வேறு நல்ல காரியம் எதுவும் செய்யாமலும்,
வெறும் அங்கங்களை உடையவனாயும்,
ஆத்மஞானம்-பகவத் த்யானம் பெறாதவனாயும், குறைந்த சக்தி-பலம் உடையவனாய்,
ஆரோக்கியம் இருந்தும் எதற்கும் உதவாமல்,அடியேன், கேவலம் கஷ்டங்களிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்.

————-

ஸ்லோகம் 7:
“சம் தப்த்தம் விவிதைர் துஃகை: துர்வசைரேவம் ஆதிபி:
தேவ ராஜ தயா ஸிந்தோ தேவ தேவ ஜகத் பதே!!”

இப்படிப்பட்ட பலவித துக்கங்களினால் சூழப்பட்டு, தாபங்கள் மிகுந்தவனாக வாழும் அடியேனை,
தேவாதி தேவர்களின் தேவனான, ஸ்ரீ தேவராஜ மஹா பிரபுவான
உந்தன் கருணையின் குளிர்ச்சி தான் சீர்படுத்த வேண்டும்.

———–

ஸ்லோகம் 8:
“த்வ தீக்ஷண ஸுதா ஸிந்து வீசிவிக்ஷேப கரை:
காருண்ய மாருதா நீதை ஸ்ஸீகரைர் அபிஷிஞ்ச மாம்!!”

காருண்யம் என்னும் மாருதத் தென்றலால் தள்ளப்பட்ட உம்முடைய கடாக்ஷம்,
குளிர்ச்சியுள்ள கடல் அலைகளில்-நீர்வீழ்ச்சிகளில், அடியேனை,உம்முடைய கைங்கர்யமாகிற ஸாம்ராஜ்யத்தில்
பட்டாபிஷேகம் செய்யும்படி நன்றாக திருமஞ்சனம் செய்து வைக்க வேண்டுகிறேன்.

இப்படி’நமஸ்தே’ என்று முதலில்,
ஜீவாத்ம ஸ்வரூப அநுரூபமான கைங்கர்யத்தையே,அநந்ய ப்ரயோஜன மாகக் காட்டி,
அந்த கைங்கர்ய சாம்ராஜ்யத்திலே பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்று முடிவிலே பிரார்த்திக்கிறார்;
மண்ணுலகிலும்,விண்ணுலகிலும் எங்கும் ஜீவாத்மாவுக்குக் கைங்கர்யமே தஞ்சமான புருஷார்த்தம் என்று
பரம காருணிகரான திருக்கச்சி நம்பி,நமக்கெல்லாம் தெரிவித்து
“ஸ்ரீ தேவராஜ அஷ்டகம்” என்னும் இந்தத் திவ்ய ப்ரபந்தத்தைக் தலைக் கட்டுகிறார்

தம் ஆசார்யர் ஸ்ரீ ஆளவந்தாருக்கு உத்தம சிஷ்யராய் இருந்து,
(ஸ்ரீ எம்பெருமானாருக்கு) அவரின் பிரதிநிதியாய் இருந்து,
ஸ்ரீ தேவப் பெருமாளுக்கு அந்தரங்கக் கைங்கர்யங்களைச் செய்து கொண்டு,
ஆழ்வார்கள் போலவே பகவானுடன் வார்த்தையாடிக் கொண்டிருந்து,
பரி பூர்ணராய் தம் ஸ்வரூபத்தையும், ஆர்த்தியையும்,உள்ளே அடக்கி வைக்க முடியாதே,
இந்த ஸ்தோத்ரத்தில் வெளிப்படுத்தினார்.

4-8 – இந்த ஐந்து ச்லோகங்களால் தமது நிலையை ஓர் உருவகத்தின் மூலம் விளக்கி,
தமது ரக்ஷணத்தை தேவப்பெருமாளிடத்தில் இரக்கிறார்.

ஸம்ஸாரம் என்பது ஒரு பாலைவனம், அந்த வனத்தில் புலிகள் போன்ற பயங்கரமான வியாதிகள்.
பாலைவனத்தில் முட்புதர்கள் போல் அற்ப சுகங்கள் நிறைந்திருக்கின்றன.
ஆசை என்னும் மரங்கள், மக்கள், மனைவி வீடு நிலம் இவைகள் கானல் நீர் போல் நிறைந்திருக்கின்றன.
இப்படிப்பட்ட வனத்தில் செய்யவேண்டியவை, செய்யத்தகாதவை என்னும் பகுத்தறிவில்லாத குருடனாகவும்
இங்காங்கும் அலைந்து இடைவிடாது பேராசை உடையவனும், மெலிந்து வாடிய அவயவங்களுடன் கூடினவனும்,
திறமையற்றவனும், தேஹ திடம், மநோ திடம், தேஹ ஆரோக்யம் இவைகளும், இவைகளால் குறைந்தவனும்
க்லேசத்துக்கே இருப்பிடம் ஆனவனும் இப்படி சொல்லத் தகாத பல வகை துக்கங்களால் தாபத்தை அடைந்தவனுமான
என்னை ஸ்ரீ தேவராஜனே! கருணைக்கடலே! தேவர்களுக்கும் தேவனே! உலகத்துக்கு ஸ்வாமியே!
உன் பார்வை என்னும் அமுத ஆற்றின் அலைகளைப் போடுவதால் உண்டான திவலைகளால்
கருணை என்னும் காற்றுடன் குளிர்ந்து கடாக்ஷிப்பாயாக.
குளிர்ந்த கருணை என்னும் காற்று கொண்டு வந்து உன் பார்வை என்னும் அமுத ஆற்றின் அலை ஏறிப்பதால்
ஏற்பட்ட துளிகளால் நனைப்பாயாக –
குளிரக் கடாக்ஷிக்க வேணும் என்பது பொருள்.

இந்த ஸ்ரீ தேவராஜாஷ்டகம் தன் 16 பகுதிகளில், ஒரு புருஷ ஸுக்தத்துக்கு சமமாய்
ஸம்ப்ரோஷணாதிகளில் சுத்தி மந்திரமாய் ஸம்பரதாயத்திலே விளங்குவதால்,
ஸகல ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் உபாதேயம்!!

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே பார்த்தஸாரதி ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்கச்சி நம்பி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரும் தேவித் தாயார் சமேத ஸ்ரீ பேர் அருளாளர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -15–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

எம்பெருமானை நீராட்டுதல் பூச்சூட்டுதல் முதலிய வழிபாடுகளால் நேராக
உகப்பித்து உய்ந்தாள் யசோதைப் பிராட்டி;
அவள் செய்த படிகளை அநுகரித்துப் பேசி உய்ந்தார் பெரியாழ்வார்;
இவ் வாழ்வார் தாமும் அங்ஙனே சில வழிபாடுகள் செய்யப் பெறவேணுமென்று பாரித்து
மாநஸிகமாகவே நீராட்டுதலும் பூச்சூட்டுதலுஞ் செய்து மகிழ்கிறார் இப் பாட்டிலும் மேற் பாட்டிலும்.

முன்பொலா ராவணன் தன் முது மதிள் லங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு
என்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே –15-

பதவுரை

முன்-முன் பொருகால்
பொலா–பொல்லாதவனான
இராவணன் தன்–இராவணனுடைய
முது மதிள் இலங்கை–வலிய மதிள்களை யுடைத்தான இலங்கா புரியை
வேவித்து–சுடுவித்து
அனுமன்–சிறிய திருவடி
அன்பினால் வந்து–மகிழ்ச்சியுடனே வந்து
ஆங்கு–கிஷ்கிந்தையாலே
அடி இணை பணிய–உபய பாதங்களையும் தொழும்படியாக
நின்றாற்கு–நின்ற பெருமானுக்கு
அடியனேன்–அடியேன்
என்பு எலாம்–எலும்பெல்லாம்
உருகி–உருகி
உக்கிட்டு–இற்றுப் போய்
என்னுடை–என்னுடைய
நெஞ்சம் என்னும்–நெஞ்சென்று சொல்லப் படுகிற
அன்பினால்–ஆர்வத்தினால்
ஞானம் நீர் கொண்டு ஆட்டுவன்–ஞானமாகிற தீர்த்தத்தைக் கொண்டு திருமஞ்சனம் செய்வேன்.

எம்பெருமான் பரம ஸந்தோஷமாக எழுந்தருளியிருந்த ஒரு ஸமய விசேஷத்தை யெடுத்துரைத்து
அந்த நிலைமையிலேயே நீராட்டங் கொண்டருளச் செய்கிற னென்கிறார்.
பிராட்டியிருக்கும் இடத்தைத் தேடித் தெரிந்து வருமாறு ஸ்ரீராமபிரானால் நியமித்து விடுக்கப்பட்ட
வாநர முதலிகளிலே தலைவரான சிறிய திருவடி இலங்கையிலே வந்து கண்டு

அப்பிராட்டி கையிலே “இத்தகையாலடையாளமீதவன் கை மோதிரமே“ என்று
ஸ்ரீராம நாமாங்கிதமான மோதிரத்தைக் கொடுத்து, சூடாமணியையும் பெற்று,

‘எதிரிகளி்ன் வலிமை எப்படிப்பட்டது? என்று பெருமாள் கேட்டால் அது தெரியாதென்று சொல்ல
வொண்ணாதாகையால் அதையும் தெரிந்து கொண்டு செல்வோமென்று கருதி அதற்காகச்
சில சேஷ்டிதங்களைச் செய்து தன் வாலில் நெருப்பாலே இலங்கையைச் சுடுவித்து

“கண்டேன் சீதையை“ என்று மீண்டு வந்து விண்ணப்பஞ்செய்த ஸமயத்திலே
ஆனந்தக் கடலிலே ஆழ்ந்துகிடந்த பெருமாளுக்கு, அந்நிலையை நினைத்து ஈடுபட்டவனாகி,
அப்படிப்பட்ட எம்பெருமான் விஷயமான ப்ரேமமே எனது நெஞ்சாக வடிவெடுத்திருப்பதனால்
என்னுடைய நெஞ்ச மென்னு மன்பினால் ஞானமாகிற திருமஞ்சனத்தால் நீராட்டுவேன் என்கிறார்.

தீர்த்தத்திற்குப் பரிமள த்ரவ்யம் ஸம்ஸ்காரமாவது போல் இங்கு ஞான நீருக்கு அன்பு ஸம்ஸ்காரமாகக் கொள்ளப்பட்டது.
இதனால் மாநஸிகமான திருமஞ்சனத்தைனச் சொன்னவாறு.

“முன் = அதுவுமொரு காலமே! என்று வயிறு பிடிக்கிறார்“
என்ற வியாக்யமான ஸ்ரீஸூக்தி உணரத்தக்கது.

பொலா – பொல்லா என்றபடி தொகுத்தல்
* சுரி குழற் கனிவாய்த் திருவினைப் பிரிந்த கொடுமையிற் கடுவிசை யாக்கனாகையாலே பொல்லாதவன்
என்ற பொதுவிலே கொடுமையிற் கடுவிசை யரக்கனாகையாலே பொல்லாதவன் என்று பொதுவிலே
சொல்லாமத்தனை யொழியப் பிரித்துப் பாசுரமிடப் போகாதென்க.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -14–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

கீழ்ப் பாட்டில் “கரும்பினைக் கண்டுகொண்டு என் கண்ணினை களிக்கு மாறே“ என்று
ஆனந்த பரவசராய்ப் பேசினவர்,
ஐயோ! பழுதே பல பகலும் போயினவே யென்று கழிவிரக்கங்கொண்டு,
கீழ் நாள்களெல்லாம் வாளாவிருந்தொழிந்து பாவியானேனெயென்று முடி மேல் மோதிக் கொள்ளுகிறார்.

காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி நாளும்
பாவியேனாக எண்ணி அதனுள்ளே பழுத்து ஒழிந்தேன்
தூவி சேர் அன்னம் மன்னும் சூழ் புனல் குடந்தையானை
பாவியேன் பாவியாது பாவியேன் ஆயினேனே –

பதவுரை

காவியை–கரு நெய்தல் மலரை
வென்ற–தோற்பித்த
கண்ணார்–கண்களை யுடையரான மாதர்களினது
கலவியே–கலவியையே
கருதி–நினைத்துக் கொண்டு
நாளும்–அநாதி காலமாக
பாவியேன் ஆக எண்ணி–மஹா பாபியாகும்படி மநோ ரதித்து
அதனுள்ளே–அந்தப் பாவப் படு குழியிலேயே
பழுத்தொழிந்தேன்–பரி பக்குவனாய் விட்டேன;
தூவி சேர்–(அழகிய) சிறகையுடைய
அன்னம் மன்னும்–அன்னப் பறவைகள் பொருந்தி வாழ்கிற
சூழ் புனல்–சுற்றிலும் ஜல ஸம்ருத்தியை யுடைத்தான
குடந்தை யானை–திருக்குடந்தைக்குத் தலைவனான எம்பெருமானை
பாவியேன்–பாவியான நான்
பாவியாது–சிந்தியாமல்
பாவியேன் ஆயினேன்–(மேலும்) மஹா பாபியானேன்.

“கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி, நீண்ட வப்பெரியவாய கண்கள்
என்னைப் பேதைமை செய்தனவே!“ என்று ஈடுபட வேண்டிய திருக் கண்களை விட்டொழிந்து,
பிளிச்சைக் கண்ணிகளையெல்லாம் காவியை வென்ற கண்ணாராக ப்ரமித்து
அவர்களோடு கூடி வாழ்வதே பரம புருஷார்த்தமென்று கருதி, ஸுக்ருத லேசமும் பண்ணாத
மஹா பாபி யாவதற்கே வழி தேடி,

(தசரத சக்ரவர்த்தி வெண் கொற்றக் குடை நிழலிலே பழுத்தாற் போலவும்,
நம்மாழ்வார் “உனது பாலேபோற் சீரில் பழுத்தொழி்ந்தேன்“ என்று பகவத் குணங்களிலேயே பழுத்தாற் போலவும்)
அந்தப் பாவங்களிலேயே பழுத்தொழிந்தேன்

நான் பரம போக்யமான திருக் குடந்தைமா நகரிலே திருக் கண் வளர்ந்தருள்கின்ற ஆராவமுதாழ்வாரைச்
சிறிதாகிலும் நெஞ்சில் நினைத்திருந்தேனாகில் பாவங்கள் தொலையப் பெற்றிருப்பேன்.
அது செய்யாமை யன்றோ படுபாவியானேனென்றாராயிற்று.

தூவிசேரன்ன மன்னுங் குடந்தை =
ஞானம் அனுட்டானம் ஆகிய இரண்டு சிறகுகளமைந்த ‘ஹம்ஸர்‘ என்னும்படியான
மஹான்கள் வாழுமிடமென்று ஸ்வாதேசார்த்தங் கூறுவர்.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -13–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

‘இரும்பு அனன்று உண்ட நீரும் போதரும் கொள்க என் தன்
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டுச்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே–13-

பதவுரை

இரும்பு

இரும்பானது
அனன்று

பழுக்கக் காய்ச்சப் பெற்று
உண்ட

உட் கொண்ட
நீரும்

ஜலமும்
போதரும்

வெளியிலே வந்து விடும்;
கொள்க

(இதை) உறுதியாக நினையுங்கோள்;
என் தன்

என்னுடையவையாய்
அரு

போக்கமுடியாதவையாய்
பிணி பாவம் எல்லாம்

நோய்களுக்கு அடியான பாவங்களெல்லாம்
என்னை விட்டு அகன்றன

என்னை விட்டு நீங்கிப் போயின
கரும்பு அமர்

வண்டுகள் பொருந்திய
சோலை சூழ்ந்த

சோலைகளாலே சூழப்பட்ட
மா அரங்கம்

மாட்சிமை தங்கிய ஸ்ரீரங்கத்தை
கோயில் கொண்ட

இருப்பிடமாகக் கொண்டு வாழ்கிற
கரும்பினை

பரம போக்யனான எம்பெருமானை
என் கண் இணை

எனது இரண்டு கண்களும்
கண்டு கொண்டு

பார்த்த வண்ணமாய்
களிக்கும் ஆறு ஏ

மகிழ்ச்சி யடையும் விதம் என்னே! (என்று வியக்கிறார்)

தம்மை விட்டு ஒருகாலும் பிரிக்கக்கூடாமலிருந்த அரும்பிணி பாவமெல்லாம் அகன்று போன ஆச்சரியத்தினால்

இரும்பனன்றுண்ட நீரும் போதரும் என்கிறார்.

இரும்பானது பழுக்கக் காயந்து நீரைக்குடித்தால் குடித்த நீரடங்கலும் இரும்பிலே சுவறிப் போமத்தனை யொழிய

அந்த இரும்பில் நின்றும் வெளிப்படுத்தியெடுக்க முடியாதென்பது லோகாது பவஸித்தமே யாகிலும்,

அந்த நீரும் அந்த இரும்பில் நின்று வெளிப்பட்டுவிடுமென்று நிச்சயிக்கலாம்;

ஏனென்றால்,

அனன்ற இரும்பு போன்ற என்னிடத்திலே தனித்துப் பிரித்துக் களைந்தொழிக்க வொண்ணாதபடி மங்கிக் கிடந்த

அரும்பிணி பாவங்கள் வெளிப்பட்டனவன்றோ; ஆதலால் இதுபோல் அதுவும் நேரலாம் என்கிறாராயிற்று.

அரும்பிணி பாவமெல்லாம் அகலவே, திருவரங்கம் பெரிய கோயிலிலே நித்ய ஸந்நிதி பண்ணி யிருக்கின்ற

பரம போக்யனான பெருமானைக் கண்ணாரக் கண்டு களிக்கப் பெற்றே னென்கிறார் பின்னடிகளில்.

தகாத விஷயங்களைக் கண்டு களித்த என் கண்கள் இன்று ஸ்வரூபாநுரூபமான விஷயத்தைக் கண்டு களிக்கப் பெற்றமை என்ன பாக்கியம்! என்று அதிசயப்படுகிறார்.

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -11–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

என்னுடைய மனத் துயரங்களை நானே தீர்த்துக் கொள்ளப் போமோ?
நீயே அருள் புரிய வேணுமென்று எம்பெருமானை நோக்கிப் பிரார்த்திக்கிறார்–

தொண்டெல்லாம் பரவி நின்னைத் தொழுது அடி பணியுமாறு
கண்டு நான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியாய் எந்தாய்
அண்டமா எண் திசைக்கும் ஆதியாய் நீதியான
பண்டமாம் பரமசோதி நின்னையே பரவுவேனே –11-

பதவுரை

எந்தாய்–எம்பெருமானே!,
தொண்டு எல்லாம்–எல்லாவகையான அடிமைகளையும்
பரவி–(செய்யவேணும் செய்ய வேணுமென்பதாக) வாயாரப் பேசி
நின்னை தொழுது–உன்னை வணங்கி
அடி பணியும் ஆறு கண்டு–திருவடிகளிலே பணிவிடை செய்யும் படிகளை மநோ ரதித்து
தான் கவலை தீர்ப்பான் ஆவதே–நான் மனக் கவலை தீர்த்துக் கொள்ள முடியுமோ?
பணியாய்–அருளிச் செய்ய வேணும்;
அண்டம் ஆய்–அண்டங்களிலுள்ளாரெல்லார்க்கும் தலைவனாய்
எண் திசைக்கும் ஆதி ஆய்–எட்டுத் திசைகளிலுள்ள தேவதை கட்கும் காரண பூதனாய்
நீதி ஆன பண்டம் ஆம்–முறைமையான செல்வமாயிருப்பவனான
பரம சோதி–பரஞ்சோதியே!
நின்னையே–உன்னையே
பரவுவேன்–ஸ்தோத்ரம் பண்ணுவேன்.

(தொண்டெல்லாம் பரவி)
”ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்யவேண்டும். நாம்“ என்று நம்மாழ்வாரும்,
பவாம்ஸ்மு ஸஹ வைதேஹயா கிரிஸாநஷுரம்ஸ்யதே,
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வபதச்சதே.“ என்று இளைய பெருமாளும்
பாரித்துப் பேசினாப் போலே அடியேனும் எல்லாத் தொண்டுகளையும் செய்திடுவோமென்று
பாரிப்புக் கொண்டு தேவரீரைத் திருவடி தொழ வேணு மென்றும் மநோ ரதங்கொண்டிருக்குமளவால்-

என்னுடைய மனத் துன்பங்களை நான் போக்கிக் கொண்டேனாக வழியுண்டோ?
தேவரீர் திறத்திலே கைங்கரியம் செய்வதோ, தேவரீர் திருவடிகளைத் தொழுது பணிந்து நிற்பதோ
எல்லாம் தேவரீருடைய திவ்ய ஸங்கல்பத்தினால் நடைபெற வேண்டியவையே யன்றி
எலி யெலும்பனான நீசனேன் நினைத்தபடி எது தான் ஆகும்? ஒன்றுமாகாது;
என் கவலையை நானே தீர்த்துக் கொள்ளவல்லனோ? அல்லேன்.

தொண்டு செய்தலும் நின்னைத் தொழுதபடி பணிதலும் தலைக் கட்டப் பெற்றால் கவலை தீரத் தட்டில்லை;
அவை தலைக் கட்டுவது தேவரீருடைய ஸங்கல்பத்தாலாகுமத்தனை யாதலால் அங்ஙனே
தேவரீர் ஸங்கல்பித் தருளவேணுமென்று தேவரீரையே துதித்துப் பிரார்த்திக்கின்றனென்கிறார்.

“பரந்த சிந்தையொன்றி நின்று நின்ன பாத பங்கயம், நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்கவேண்டுமே“
என்ற திருமழிசைப்பிரான் பாசுரத்தின் கருத்தை இங்குக் காண்க.

எண்டிசைக்கு மாதியாய் =
அஷ்டதிக் பாலகர்களுக்கும் பாலகன் என்றபடி.

நீதியான பண்டம் =
பண்டமாவது தனம்; நீதியான பண்டமானது, முறைமைப்படி ப்ராப்தமான தனம்,
“சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும் மேலாத் தாய் தந்தையுமவரே“ என்கிறபடியே
எமக்கு ப்ராப்தமான செல்வம் தேவரீரே யென்றவாறு.

நின்னையே பரவுவேன் =
என்னுடைய கவலைகளை நானே தீர்த்துக் கொள்ள முடியாதாகையால்
நீயே தீர்க்க வேணுமென்று நின்னையே பரவுகின்றேனென்கை.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -10–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

ஸம்ஸாரத்தின் கொடுமைக்கு அஞ்சி தேவரிருடைய திருவடிகளைப் பற்றின வளவேயோ?
தாங்க வொண்ணாத பரமபக்தியும் உண்டாயிற்றே! என்கிறார்.

சித்தமும் செவ்வை நில்லாது என் செய்கேன் தீ வினையேன்
பக்திமைக்கு அன்புடையேன் ஆவதே பணியாய் எந்தாய்
முத்தொளி மரகதமே முழங்கொளி முகில் வண்ணா என்
அத்த நின் அடிமை அல்லால் யாதும் ஒன்றும் அறிகிலேனே–10-

பதவுரை

சித்தமும்–நெஞ்சமும்
செவ்வை நில்லாது–தரித்து நிற்கிறதில்லை;
தீ வினையேன்–மஹா பாபியான நான்
என் செய்கேன்–என்ன பண்ணுவேன்?
எந்தாய்–எம்பெருமானே!
பத்திமைக்கு–அளவிறந்து பெருகிச் செல்லுகின்ற) பக்தியின் ஸ்தானத்திலே
அன்பு உடையேன் ஆவதே–(கீழ்ப்படியான) அன்பை உடையேனாம்படி
பணியாய்–செய்தருளவேணும்;
முத்து–முத்துப் போன்றவனே!
ஒளி மரகதமே–ஒளி பொருந்திய மரகதப்பச்சை போன்றவனே!
முழங்கு ஒளி முகில் வண்ணா–கர்ஜிப்பதும் ஒளிபொருந்தியது மான காளமுகம் போன்றவனே!
என் அத்த–என் நாயனே!
நின் அடிமை அல்லால்–உன் பக்கல் கைங்கரியம் தவிர
யாது ஒன்றும் அறிகிலேன்–வேறொன்றும் (புருஷார்த்த மாக) அறியமாட்டேன்.

(சித்தமும் செவ்வை நில்லாது)
கடலிலே நீந்த வேணுமென்று புகுந்து முதலடியில் தானே தெப்பத்தை இழக்குமா போலே,
அநுஸந்திக்கப் புகுந்து தரித்து நிற்க மாட்டாதே நெஞ்சு பறியுண்டதென்கிறார்.
“உருகுமால் நெஞ்சமுயிரின் பரமன்றிப், பெருகுமால் வேட்கையுமென்செய்கேன் தொண்டனேன்“ என்ற
நம்மாழ்வாரைப் போலே கதறுகிறார்.
பக்திப் பாரவச்யத்தாலே அநுபவிக்கப் போகாமால் நெஞ்சை யிழக்கும்படியான பாபத்தைப் பண்ணின
நான் என்ன செய்வேனென்கிறார்:

(பத்திமைக்கு அன்புடையேனாவதே பணியாய்)
ஜந்ம தரித்ரனுக்கு அளவு கடந்த பசியுண்டானால் பசிக்குத் தக்கபடி உணவு கிடைக்கப் பெறாதொழியில்
‘பசி மந்தித்துப் போவதற்கு மருந்து கொடுப்பாருண்டோ?‘ என்று விசாரிக்குமா போலே
ஆழ்வாரும் தம்முடைய பேராசைக்குத் தக்கபடி அநுபவிக்கப் பெறாமையாலே
ஆசையை அளவுபடுத்தினால் போது மென்கிறார்.

அளவுகடந்த ஆசை நிலைமைக்குப் பத்திமை யென்று பெயர்;
ஓரளவிலே நிற்கிற ஆசை நிலைமைக்கு அன்பு என்று பெயர் என்பதாகக் கொள்க.

இப்போது ஆழ்வாருடைய ஆசையின் நிலைமை எல்லை கடந்த அவஸ்தையிலே நிற்பதால்
‘இப்படிப்பட்ட பத்திமையைக் கொண்டு என்னால் பாடாற்றப் போகவில்லை,
இந்த நிலைமையை மாற்றி வெறும் அன்பு நிலைமையையே தந்திடாய்‘ என்று வேண்டிக் கொள்ளுகிறார்.

”என்றனளவன்றால் யானுடையவன்பு” என்னுமாபோலே அளவுகடந்து செல்லுகின்ற
ஆசைப் பெருக்கத்தைக் குறைத்து ஓரளவிலே அமைத்திடாய் என்கை.

பசிக்குத்தக்க சோற்றையாவது இடு; அல்லது,
பசியையாவது உள்ள சோற்றுக்குத் தகுதியாக அமைத்திடு என்பாரைப்போலே சொல்லுகிறார்.

“கண புரத்துப் பொன் மலைபோல் நின்றவன்றன் பொன்னகலம் தோயாவேல்,
என்னிவை தான் வாளாவெனக்கே பொறையாகி, முன்னிருந்து மூக்கின்று மூவாமைக் காப்பதோர்,
மன்னு மருந்தறிவீரில்லையே” என்ற பெரிய திருமடலும் இக் கருத்துப் பட நின்றமை உணர்க.

இங்ஙனே தமக்கு அளவுகடந்த பக்திப் பெருங்காதல் விளைவதற்கு அடி இன்னதென்கிறார்
முத்தொளி மரதகமே! முழங்கொளி முகில்வண்ணா! என்ற விளியினால்,
முத்துப் போலே குளிர்ந்ததாயும் மரதகம் போலே சாம நிறத்ததாயிருக்கின்ற திருமேனி யழகில் ஈடுபட்டதனால்
இப்படிப்பட்ட பக்தி யுண்டாயிற்றென்றவாறு.

வடிவழகிலே யீடுபடுமவர்கள்
”தோள் கண்டார் தோளே கண்டார் தொடுகழற் கமலமன்ன தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாருமஃதே”
என்றாற்போல ஒவ்வொரு திவ்யாவபவத்திலும் நெஞ்சு நீர்ப்பண்டமா யுருகி ஈடுபட்டிருக்குமத்தனை யொழிய,
தரித்து நின்று கைங்கரியம் பண்ண முடியாதாதலாலும், தமக்குக் கைங்கரியம் பண்ணுவதிலேயே
அதிகமான ஆவல் இருப்பதனாலும்
”பக்திமைக்கு அன்புடையேனாவதே பணியாயெந்தாய்!” என்று வேண்டும்படி யாயிற்றென்பதை
ஈற்றடியினால் விளங்கக் காட்டினாராயி்ற்று.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -9–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

நாட்டார் எக் கேடு கெட்டாலும் கெட்டுப் போகட்டும்; நானும் அவர்களிலொருவனாய்க் கெட்டுப் போகாதே
மருவி வாழப் பெற்றனே யென்று மகிழ்ந்து
எம்பெருமானையே துணையாகக் கொண்டிருக்கும் தமது அநந்ய கதித்வத்தை வெளியிடுகிறார்.

என் உள்ளமானது ஜனன மரணங்களை நினைத்து உருகா நின்றது;
இதற்கு நான் செய்து கொள்ளக் கூடிய பரிஹார மொன்றுமில்லை;
நீயே துணை நிற்க வேணும் என்று எம்பெருமானை நோக்கி விண்ணப்பஞ் செய்கிறார்.

உள்ளமோ ஒன்றில் நில்லாது ஓசையில் எரி நின்று உண்ணும்
கொள்ளி மேல் எறும்பு போலக் குழையுமால் என்தன் உள்ளம்
தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம் தேவராய் உலகம் கொண்ட
ஒள்ளயீர் உம்மை யல்லால் எழுமையும் துணை யிலோமே–9-

பதவுரை

உள்ளமோ–மனமோ வென்னில்
ஒன்றில் நில்லாது–ஒரு விஷயத்திலும் பொருந்தி நிற்கிறதில்லை;
ஓசையின் எரி–ஓசையோடு கூடின அக்னி
நின்று உண்ணும்–கவ்வி நின்று உண்ணப் பெற்ற
கொள்ளிமேல்–கொள்ளியில் அகப்பட்ட
எறும்பு போல–எறும்பு போலே
என் தன் உள்ளம்–எனது நெஞ்சானது
குழையும்–நைகின்றது;
ஆல்-அந்தோ! ;
(இப்படி யிருப்பதனால்):
தெள்ளியீர்–தெளிந்த ஸ்வபாவத்தை யுடையீராய்
தேவர்க்கு எல்லாம் தேவர் ஆய்–தேவாதி தேவனாயிருந்து வைத்து
ஒள்ளியீர்–தேஜஸ்வி யானவரே!
எழுமையும்–எந்த நிலைமையிலும்
உம்மை அல்லால்–தேவரீரைத் தவிர்த்து
துணை இலோம்–வேறு துணை யற்றவர்களாய் இருக்கின்றோம்.

உள்ளமோ ஒன்றில் நில்லாது =
ஊர்வசீஸாலோக்யம் வேணுமென்று நாட்டங்கலும் தவம் புரியா நிற்க,
அந்த ஊர்வசி தானே அர்ஜுநனிடம் வந்து நின்று ‘எனக்கு நீ நாயகனாகக் கடவை‘ என்ன;
கையெடுத்துக் கும்பிட்டு ‘மாதே! எனக்கு நீ தாய் முறையாகிறாய்; இந்த விருப்பம் உனக்குத் தகாது:
‘கடக்கநில்‘ என்றான் அர்ஜுநன்
தானே கீதையில் கண்ணபிரானை நோக்கி
சஞ்சலம் ஹி மந க்ருஷ்ண! என்கிறான்;

அவனே அவ் வார்த்தை சொல்லும் போது நாமெல்லாம் எந்த மூலைக்கு! என்கிறார் போலும்,
கெட்ட விஷயங்களையே பற்றினாலும் அவற்றிலாவது நெஞ்சு நிலைத்து நிற்கிறதோ;
அதிலும் தோள் மாறுகின்றது, ஒன்றிலும் நிலைத்து நிற்பதில்லை;
இப்படிப்பட்ட நெஞ்சைப் படைத்திருக்கையாலே
தீக் கதுவின கொள்ளிக் கட்டையில் அகப்பட்டுக் கொண்ட எறும்பு போலே துடியா நின்றேன் என்கிறார்.

தெள்ளீயிர்
எனக்குக் கலங்குகை இயற்கையானாப் போலே தேவரீர்க்குத் தெளிந்திருக்கை இயற்கை யன்றோ வென்கிறார்
தெள்ளீயிர் என்ற விளியினால்.
ஒரு மேட்டைக் கொண்டு ஒரு பள்ளத்தை நிரப்புமா போலே தேவரீருடைய தெளிவைக் கொண்டு
என்னுடைய கலக்கத்தைத் தொலைக்க வேணுமென்பது உட்கோள்.

(தேவர்க்கெல்லாம் தேவராய் உலகங்கொண்ட ஒள்ளியீர்)
அடியவர்கட்குக் காரியம் செய்வதென்று வந்து விட்டால் தேவரீருடைய பெரு மேன்மையைச் சிறிதும் பார்ப்பதில்லை யன்றோ?
‘தேவாதி தேவனாகிய நானோ யாசகனாய்ச் செல்வேன்?‘ என்று இறாய்க்காதே,
‘எவ் விதத்தாலும் அடியாருடைய அபேக்ஷிதம் தலைக் கட்டுவதே நன்று‘ என்று திருவுள்ளம் பற்றினவரன்றோ தேவரீர்!
அப்படி யாசகத் தொழில் செய்ததனால் உம்முடைய தேஜஸ்ஸுக்கு ஏதேனும் குறை யுண்டாயிற்றே?
அதனால் மேன் மேலும் தேசு பொலியப் பெற்றீரன்றோ,
இப்படிப்பட்ட ஆச்ரித பஷ பாதத்தைத் தேவரீரிடத்திற் கண்டவர்கள்
எற்றைக்குமேழேழ் பிறவிக்கும் வேறொருவரைத் துணையாகக் கொள்வரோ? என்றாராயிற்று.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -8–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

ஸம்ஸாரிகள் தேஹத்தைப் பூண் கட்டிக் கொள்ள விருக்கிறார்களே யன்றி எம்பெருமானை
மருவி வாழ்வாரில்லையே! என வருந்திப் பேசுகிறார்.

வானிடைப் புயலை மாலை வரை யிடைப் பிரசமீன்ற
தேனிடைக் கரும்பின் சாற்றைத் திருவினை மருவி வாழார்
மானிடைப் பிறவி யந்தோ மதிக்கிலர் கொள்க தந்தம்
ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டினாரே-8-

பதவுரை

வானி்டை புயலை–ஆகாசத்திலே வாழ்கிற மேகம் போன்ற வடிவுடையவனும்
மாலை–(அடியார் திறத்தில்) வியாமோஹமுடையவனும்
வரையிடே–மலையிலே
பிரசம் ஈன்ற–தேனீக்களாலே சேர்க்கப்பட்ட
மானிடம் பிறவி–(தாங்கள் மிக அருமையான) மநுஷ்ய ஜன்மமெடுத்திருப்பதை
மதி்க்கிலர்–எண்ணுகிறார்களில்லை;
அந்தோ–ஐயோ! ;
தம் தம்–தங்கள் தங்களுடைய
தேன் இடை–தேனீலே முளைத்த
கரும்பின்–கரும்பினுடைய
சாற்றை–சாறு போலப் பரம போக்யனும்
திருவினை–திருவுக்குந் திருவாகிய செல்வனுமான எம்பெருமானை
மருவி–ஆச்ரயித்து வாழ மாட்டார்கள்–
ஊனிடை குரம்பை வாழ்க்கைக்கு–மாம்ஸமயமான சரீரத்தில் வாழ்வதற்கு
உறுதியே–உறுதியையே
வேண்டினார்–விரும்பி நிற்கின்றார்கள்;
கொள்க–(இதை நீங்கள்) அறிந்து வைப்பது.

வானிடைப்புயலை =
ஆகாசத்தினிடையே நீர் கொண்டெழுந்து வந்து தோற்றுகிற காள மேகம் வடிவழகை யுடையவனை.
வானிடை யென்று விசேஷித்ததற்குக் கருத்து என்னென்னில்;
ஒரு + ஆலம்பனமுமில்லாத ஆகாசத்தை மேகம் பற்றினாப் போலே புகலொன்றில்லா வடியேனை விஷயீகரித்தான் என்றவாறு.

அப்படி விஷயீகரிப்பதற்கு ஹேது ஏதென்ன
‘மாலை‘ என்கிறார்;
வியாமோஹமே வடிவெடுத்தவனாதலால் என்க.

(வரையிடைப் பிரசமீன்ற தேனிடைக் கரும்பின் சாற்றை)
எம்பெருமானுடைய போக்யதை லோக விக்ஷணமென்று காட்டுதற்காக அபூர்வமானதொரு கரும்பை சிக்ஷிக்கிறார்;
தண்ணீர் பாய்ச்சப் பெற்று வளர்கின்ற கரும்பினன சாறு போன்றவனென்றால் சிறிதும் த்ருப்தி பிறவாமையாலே
‘வரையிடைப் பிரசமீன்ற தேனிடைக்கரும்பு‘ என்று புதிதாக வொரு வஸ்துவை வளர்ந்த கரும்பு இருக்குமானால்
அதன் சாறு போன்றவ னெம்பெருமான் என்னலாம் என்பது கருத்து.

(திருவினை)
‘திரு‘ என்னுஞ் சொல்லால் சொல்லப்படுகிறவள் பிராட்டியாகையாலே அவளைச் சொல்லுகிற சொல்லினால்
இங்கு எம்பெருமானைச் சொன்னது திருவுக்குந் திருவாகிய செல்வனென்றபடி.
எல்லார்க்கும் மேன்மையைத் தருமவளான பிராட்டிக்கும் தான் மேன்மை தருமவன் என்றவாறு.

ஆக இப்படிப்பட்ட எம்பெருமானை மருவி வாழ்ந்து போகலாமாயிருக்க,
அந்தோ!
அப்பெருமான்றானே வந்து மேல் விழச் செய்தேயும் விலக்கித் தள்ளுபவரான பாவிகளுண்டாவதே! என்று வெறுக்கிறார்.

(மானிடப் பிறவியந்தோ மதிக்கிலர்)
உலகத்தில் பிரம ஸ்ருஷ்டி பலவகைப்படும். பூச்சிகளும் புழுக்களும் பறவைகளும் மிருகங்களுமாகப் பிறத்தலே
பெரும்பான்மையாக வுள்ளது; மானிடப்பிறவி பெறுதல் மிக அரிது.
ஆனது பற்றியே –துர்லபோ மாநுஷோ தேஹ” என்றது. அதுவென்?
கோடிக்கணக்கான மனிதர்களும் உலகிற் காணப்படா நிற்க, மானிடப்பிறவி அரிதென்று எங்ஙனே
சொல்லலாமென்று பலர் கேட்கக் கூடும்;

ரத்ன வியாபாரி வீதிகளில் குவியல் குவியலாக ரத்னங்கள் காணக் கிடைக்கின்ற மாத்திரத்தினால்
‘அவை அரியவையல்ல, எளியவவை தான்‘ என்று யாரேனும் சொல்லக் கூடுமோ?
உலகத்திலுள்ள மானிடர்கள் எல்லோருடையவும் தொகைக் குறிப்பைக் கண்டு பிடித்து விடலாம்;
ஒரு சிறு கிராமத்திலுள்ள அஃறிணை யுயிர்களின் தொகையைக் கண்டுபிடித்தல் சிறிதும் எளிதன்று என்பது
குறிக் கொள்ளப் படுமேல் ‘மானிடப்பிறவி அரிது‘ என்னுமிடம் தன்னடையே தெளிந்ததாகும்.

இப்படி அருமையான மானிடப் பிறவியைப் பெற்றவர்கள் அதற்குத் தக்கவாறு வர்த்திக்க வேண்டாவோ?
உணவு களையுண்டு வயிறு நிரப்புகை, விஷயபோகங்கள் செய்கை, உறங்குகை முதலிய காரியங்களையே
செய்வதற்கோ மானி்டப் பிறவி படைத்தது?
இக் காரியங்கள் பசுக்களுக்கும் மானிடர்க்கும் பொதுவையாகையாலே இனி மானிட ரென்கிற ஏற்றம் பெற வேண்டில்
எம்பெருமானை மருவி வாழ்தலன்றோ வரியது;
அந்தோ!
உலகர் இவ்விஷயத்தில் கருத்தூன்றாதே தங்கள் தங்கள் தேஹத்தைப் பூண் கட்டிக்கொள்ளவே
தேடுகிறார்களத்தனை யன்றி வாழ்ச்சிக்கு வழி தேடுவாராருமில்லையே யென்று உலக வியற்கைக்கு வயிறு பிடிக்கிறாராயிற்று.

“மானிடப் பிறவியந்தோ மதிக்கிலர்” என்பதற்கு வேறு வகையாகவும் பொருள் கூறுவர்;
* தீண்டா வழும்பும் செந்நீரும் சீய நரம்பும் செறி தசையும் வேண்டா நாற்றம் மிகுமுடலாகிய
மநுஷ்ய சரீரத்தைப் பெற்றுவைத்தும் அந்தோ! திவ்ய சரீரம் பெற்று விட்டதாக மார்பு நெறித்திருக்கின்றார்களே! என்று.

‘குரம்பை‘ என்று குடிசைக்குப் பெயர்;
தேஹமானது ஆத்மா வஸிங்குங் குடிசையாதல் அறிக.
இவ்வுலகத்துப் பாமரர்கள் அநித்யமான தேஹம் வாடாமல் வதங்காமல் தளிர்த்திருந்தால் போதுமென்று
பார்க்கிறார்களே யன்றி
நித்யமான ஆத்ம வஸ்து உஜ்ஜீவிக்கும் வழியைச் சிறிதும் நாடுகின்றார்களில்லையே என்பதாம்.

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -7–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

கீழ்ப்பாட்டில் ”அமரர் சென்னிப் பூவினை” என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்
‘ஆழ்வீர்! என் குறைப்படுகிறீர்? உம்முடைய தலைக்கும் நாம் அணியாக வீற்றிருப்போம், தலையைக் காட்டும்‘ என்ன;
என் தலைக்கு நீ வேண்டா; உன் சீலத்தைச் சிந்தை செய்யுந் தொண்டர்களே
என் தலை மிசை மன்னுதற்கு உரியார் என்கிறார் போலும்.

இம்மையை மறுமை தன்னை எமக்கு வீடாகி நின்ற
மெய்மையை விரிந்த சோலை வியன் திருவரங்கம் மேய
செம்மையைக் கருமை தன்னைத் திருமலை யொருமையானைத்
தன்மையை நினைவார் என் தன் தலைமிசை மன்னுவாரே

பதவுரை

எமக்கு–நமக்கு
இம்மையை–இவ் வுலகத்து இன்பத்தைத் தருமவனும்
மறுமை தன்னை–பரலோகத்து இன்பத்தைத் தருமவனும்
விரிந்த சோலை–பரந்த சோலைகளை யுடையதாய்
வியன்–ஆச்சரியமான
திரு அரங்கம்–ஸ்ரீரங்கத்திலே
மேய–நித்ய வாஸம் பண்ணுமவனும்
செம்மையை கருமை தன்னை திருமலை–(யுக பேதத்தாலே) செந் நிறத்தையும் கரு நிறத்தையுங் கொண்டுள்ளவனும்
திருமலை–திருவேங்கடமலையிலே நின்று கொண்டு
ஒருமையானை–(மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும்) ஒருமைப்பட்டிருப்பவனுமான எம்பெருமானுடைய
தன்மையை–சீலத்தை
நினைவார்–நினைக்க வல்லவர்கள்
என் தன்–என்னுடைய
தலை மிசை–தலையிலே
மன்னுவார்–பொருந்தத் தக்கவர்கள்

இம்மையை மறுமை தன்னை –
இஹ லோக ஸுகம், பர லோக ஸுகம் என்ற இருவகை யின்பத்தையும் அளிப்பவனென்றபடி.
எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளைப் பற்றின ஞான விகாஸம் பெற்றுக் களிப்பதே
ஆழ்வார் திருவுள்ளத்தினால் இம்மையின்பமாகும்;
திருவனந்தாழ்வானைப்போலே ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வாவஸ்த்தைகளிலும் அந்தரங்க கைங்கரியம்
பண்ணப் பெற்றுக் களிப்பதே மறுமையின்பமாகும்;
ஆக, இஹ லோகத்திலே தன்னைப் பற்றின ஞான விகாஸத்தையுண்டாக்கி இன்பம் பயந்தும்,
பர லோகத்திலே நித்ய கைங்கரியத்திலே மூட்டி இன்பம் பயந்தும் அடியார்களை வாழ்விப்பவன் எம்பெருமான் என்றதாயிற்று.

எமக்கு வீடாக நின்ற மெய்ம்மையை-
இங்கு வீடு என்றது இலக்கணையால் மோக்ஷாபாயத்தைச் சொன்னபடி.
கீழ்ச் சொன்ன பிராப்யங்களுக்கு ப்ராபகனாயிருப்பவனென்கை.
அவ் வுபாயம் ஸுலபமான விடத்தைப் பேசுகிறார் வியன் திருவரங்க மேய என்று.

செம்மையைக் கருமை தன்னை –
எம்பெருமான் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு நிறத்தைக் கொள்வன்;
கிருத யுகத்திலுள்ளவர்கள் ஸத்வ குணம் நிறைந்தவர்களாய் சுத்தமான நிறத்தை உகக்குமவர்களாகையாலே
அவர்கட்காகப் பால் போன்ற நிறத்தைக் கொள்வன்;
த்ரேதா யுகத்திலே சிவந்த நிறத்தைக் கொள்வன்,
த்வாபர யுகத்திலே பசுமை நிறத்தைக் கொள்பவன்;
கலி யுகத்தில் எந்த நிறங்கொண்டாலும் ஈடுபடுவாரில்லாமையாலே இயற்கையான நீல நிறத்தோடிருப்பவன்.

(இது ”பாலினீர்மை செம்பொனீர்மை” என்ற திருச்சந்த விருத்தப் பாசுரத்திலும்
”நிகழ்ச்தாய் பால் பொன் பசுப்புக் கார்வண்ணம் நான்கும்” என்ற நான்முகன் திருவந்தாதிப் பாசுரத்திலும்
திருமழிசைப் பிரானாலும் அருளிச் செய்யப்பட்டுள்ளது.)

இங்கு ”செம்மையைக் கருமை தன்னை” என்று இரண்டு யுகங்களின் நிறத்தைச் சொன்னது
மற்றவர்க்கும் உபலக்ஷணமென்க.

திருமலை யொருமையானை =
”தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே வானோர்க்குத் தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே”
என்றும் சொல்லுகிறபடியே திருமலையிலே நின்று நித்ய ஸூரிகளுக்கும் நித்ய ஸம்ஸாரிகளுக்கும் ஒக்க
முகங்கொடுக்கும் அவன் என்றவாறு.

ஒருமையான் –
ஒருமைப்பட்டிருப்பவன், பொதுவாயிருப்பவன்,
திருமலையானது நித்ய விபூதிக்கும் லீலா விபூதிக்கும் நடு நிலை என்பதாகத் திருவுள்ளம்.
இங்குள்ளார் சென்று பரத்வ குணத்தை அநுபவிப்பர்கள்;
அங்குள்ளார் வந்து சீல குணத்தை அநுபவிப்பர்கள்; ஆக இருபாடர்க்கும் வைப்பாயிருப்னென்க.

தன்மையை நினைவார் =
கீழும் இரண்டாம் வேற்றுமையாய் இங்கும் இரண்டாம் வேற்றுமையாயிருத்தால் எங்ஙனே அந்வயிக்குமென்னில்;
கீழிலவற்றை உருபு மயக்கமாகக் கொள்க;
திருமலை யொருமையானுடைய தன்மையை என்றவாறு.
எம்பெருமானடைய தன்மையாவது, அடியவர்களிட்ட வழக்காயிருக்குந் தன்மையென்க.
அதனை அநுஸந்தித்து ஈடுபடுமவர்கள் என் தலை மேலார் என்றாராயிற்று.

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -6–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

பகவத் விஷயத்தை அநுபவிக்கப் புகுமவர்கள் வாயாலே ஏதோ சில பாசுரங்களைச் சொல்லிப் புகழ்கின்றார்களே,
என்ன பாசுரஞ் சொல்லிப் புகழ்வது! பெரு வெள்ளத்திலே புகுந்து முழுகுமவர்கள் குமிழ் நீருண்டு கிடக்குமத்தனை போல,
பகவத் விஷய ஸாகரத்திலும் அழுந்திக் கிடக்கலாமே யொழிய ஏதேனும் பாசுரமிட்டுச் சொல்லப் போமோ? என்கிறார்.

மூவரில் முதல்வ நாய ஒருவனை யுலகங் கொண்ட,
கோவினைக் குடந்தை மேய குருமணித் திரளை, இன்பப்
பாவினைப் பச்சைத் தேனைப் பைம்பொன்னை யமரர் சென்னிப்
பூவினை, புகழும் தொண்டர் எஞ்சொல்லிப் புகழ்வர் தாமே?–6-

பதவுரை

மூவரில்–த்ரி மூர்த்திகளுள்
முதல்வன் ஆய ஒருவனை-முதற் கடவுளாகிய அத்விதீயனும்
உலகம் கொண்ட கோவினை–(மாவலியிடத்தில்) உலகங்களை இரந்து பெற்ற ஸ்வாமியும்
குடந்தை மேய–திருக்குடந்தையில் நித்ய வாஸம் செய்பவனும்
குரு மணி திரளை–சிறந்த நீல ரத்னக் குவியல் போன்றவனும்
இன்பம் பாவினை–இன்பந்தரும் பாட்டுக்களைப் போலே சுவை மிக்கவனும்
பச்சை தேனை-பசுந்தேன் போலே நாவுக்கு இனியனும்
பைம் பொன்னை–பசும் பொன் போல் விரும்பத் தக்க கவனும்
அமரர் சென்னி பூவினை–நித்ய ஸூரிகளுக்குத் தலை மேலணியும் பூவாயிருப்பவனுமான பெருமானை
புகழும்–புகழ்கின்ற
தொண்டர் தாம்–தொண்டர்கள்
என் சொல்லி புகழ்வர்-எதைச் சொல்லிப் புகழ்வார்கள்?

மூவரில் முதல்வனாய வொருவனை –
ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களுக்குக் கடவர்களென்றும் த்ரிமூர்த்திகளென்றுஞ் சொல்லப்படுகிற
அரி அயன் அரன் என்னுமிவர் தம்முள் முழுமுதற் கடவுளாயிருப்பவன். அன்றியே,
ஏகமேவ அத்வதீயம் ப்ரஹ்ம -என்ற சுருதியின்படி
இந்திரனைக் கூட்டி மூவராக்கி அம்மூவர்களிற் காட்டிலும் முழுமுதற் கடவுளாயிருப்பவன்
என்றும் பொருள் கூறுவர்.

உலகங் கொண்ட கோவினை – மூவர்க்கும் முதற்கடவுளாயிருந்தால் அவர்களுக்கு ஆக வேண்டிய
காரியத்தைத் தலைக் கட்டிக் கொடுக்க வேணுமே;
அவர்களுள் ஒருவனான இந்திரனுக்குக் காரியஞ்செய்து கொடுத்தமை சொல்லுகிறது.
மஹாபலி அபகரித்த பூமியை மீட்டுக்கொடுத்தமை சொன்னடி.

குடந்தை மேய குருமணித் திரளை – இன்னும் ஸம்ஸாரிகள் இடர்ப் பட்டாருண்டாகிலும் துவளலாகாதென்று
அவர்கட்குக் கதியாகத் திருக் குடந்தையிலே படுக்கை பொருந்திப் பள்ளி கொள்ளும் நிலையை நோக்குங்கால்
சிறந்த நீல ரத்னங்களைக் குவிந்திருக்குமா போலே புகர்த்து விளங்கும்படி.
‘குரவ் ’ என்னும் வடசொல் குருவென்று கிடக்கின்றது. சிறந்த வென்று பொருள்.

இன்பப் பாவினை –
”அந்தமிழினின்பப் பாவினை” என்றார் குலசேகரப் பெருமாளும்.
அருளிச் செயல் போலே செவிக்குத் தித்திப்பவன் எம்பெருமான் என்றவாறு.

பச்சைத் தேனை –
செவிக்கு மாத்திரமன்றியே நாவுக்கும் இனியனா யிருப்பவன்;
நாள் பட்ட தேன் போலல்லாமல் அப்போதுண்டான தேன் போலே பரம போக்யன்.

பைம் பொன்னை –
உடம்புக்கு அணையலாம்படி விரும்பத் தக்கவனென்க.

அமரர் சென்னிப் பூவினை-நித்ய ஸூரிகள் தலைமேற் புனைந்து கொண்டாடும் தத்துவம்.
”எம்மா வீட்டுத் திறமும் செப்பம், நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து …….. அம்மா வடியேன் வேண்டுவதே”
என்று நாமெல்லாரும் பிரார்த்தித்துப் பெற வேண்டிய பேறு சிலர்க்குக் கை வந்திருக்கின்றதே யென்று தலை சீய்க்கிறார்.

ஆக இப்படிப் பட்ட எம்பெருமானைப் புகழ்கின்ற தொண்டர்கள் என் சொல்லிப் புகழ்வரென்கிறார்.
இத்தால், தாம் பாசுரம் பேசுவதும் எம்பெருமானுடைய பெருமையின் எல்லையைக் கண்டன்று;
போது போக்க வேண்டியத்தனை என்றதாம்.

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –