ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -9–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

நாட்டார் எக் கேடு கெட்டாலும் கெட்டுப் போகட்டும்; நானும் அவர்களிலொருவனாய்க் கெட்டுப் போகாதே
மருவி வாழப் பெற்றனே யென்று மகிழ்ந்து
எம்பெருமானையே துணையாகக் கொண்டிருக்கும் தமது அநந்ய கதித்வத்தை வெளியிடுகிறார்.

என் உள்ளமானது ஜனன மரணங்களை நினைத்து உருகா நின்றது;
இதற்கு நான் செய்து கொள்ளக் கூடிய பரிஹார மொன்றுமில்லை;
நீயே துணை நிற்க வேணும் என்று எம்பெருமானை நோக்கி விண்ணப்பஞ் செய்கிறார்.

உள்ளமோ ஒன்றில் நில்லாது ஓசையில் எரி நின்று உண்ணும்
கொள்ளி மேல் எறும்பு போலக் குழையுமால் என்தன் உள்ளம்
தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம் தேவராய் உலகம் கொண்ட
ஒள்ளயீர் உம்மை யல்லால் எழுமையும் துணை யிலோமே–9-

பதவுரை

உள்ளமோ–மனமோ வென்னில்
ஒன்றில் நில்லாது–ஒரு விஷயத்திலும் பொருந்தி நிற்கிறதில்லை;
ஓசையின் எரி–ஓசையோடு கூடின அக்னி
நின்று உண்ணும்–கவ்வி நின்று உண்ணப் பெற்ற
கொள்ளிமேல்–கொள்ளியில் அகப்பட்ட
எறும்பு போல–எறும்பு போலே
என் தன் உள்ளம்–எனது நெஞ்சானது
குழையும்–நைகின்றது;
ஆல்-அந்தோ! ;
(இப்படி யிருப்பதனால்):
தெள்ளியீர்–தெளிந்த ஸ்வபாவத்தை யுடையீராய்
தேவர்க்கு எல்லாம் தேவர் ஆய்–தேவாதி தேவனாயிருந்து வைத்து
ஒள்ளியீர்–தேஜஸ்வி யானவரே!
எழுமையும்–எந்த நிலைமையிலும்
உம்மை அல்லால்–தேவரீரைத் தவிர்த்து
துணை இலோம்–வேறு துணை யற்றவர்களாய் இருக்கின்றோம்.

உள்ளமோ ஒன்றில் நில்லாது =
ஊர்வசீஸாலோக்யம் வேணுமென்று நாட்டங்கலும் தவம் புரியா நிற்க,
அந்த ஊர்வசி தானே அர்ஜுநனிடம் வந்து நின்று ‘எனக்கு நீ நாயகனாகக் கடவை‘ என்ன;
கையெடுத்துக் கும்பிட்டு ‘மாதே! எனக்கு நீ தாய் முறையாகிறாய்; இந்த விருப்பம் உனக்குத் தகாது:
‘கடக்கநில்‘ என்றான் அர்ஜுநன்
தானே கீதையில் கண்ணபிரானை நோக்கி
சஞ்சலம் ஹி மந க்ருஷ்ண! என்கிறான்;

அவனே அவ் வார்த்தை சொல்லும் போது நாமெல்லாம் எந்த மூலைக்கு! என்கிறார் போலும்,
கெட்ட விஷயங்களையே பற்றினாலும் அவற்றிலாவது நெஞ்சு நிலைத்து நிற்கிறதோ;
அதிலும் தோள் மாறுகின்றது, ஒன்றிலும் நிலைத்து நிற்பதில்லை;
இப்படிப்பட்ட நெஞ்சைப் படைத்திருக்கையாலே
தீக் கதுவின கொள்ளிக் கட்டையில் அகப்பட்டுக் கொண்ட எறும்பு போலே துடியா நின்றேன் என்கிறார்.

தெள்ளீயிர்
எனக்குக் கலங்குகை இயற்கையானாப் போலே தேவரீர்க்குத் தெளிந்திருக்கை இயற்கை யன்றோ வென்கிறார்
தெள்ளீயிர் என்ற விளியினால்.
ஒரு மேட்டைக் கொண்டு ஒரு பள்ளத்தை நிரப்புமா போலே தேவரீருடைய தெளிவைக் கொண்டு
என்னுடைய கலக்கத்தைத் தொலைக்க வேணுமென்பது உட்கோள்.

(தேவர்க்கெல்லாம் தேவராய் உலகங்கொண்ட ஒள்ளியீர்)
அடியவர்கட்குக் காரியம் செய்வதென்று வந்து விட்டால் தேவரீருடைய பெரு மேன்மையைச் சிறிதும் பார்ப்பதில்லை யன்றோ?
‘தேவாதி தேவனாகிய நானோ யாசகனாய்ச் செல்வேன்?‘ என்று இறாய்க்காதே,
‘எவ் விதத்தாலும் அடியாருடைய அபேக்ஷிதம் தலைக் கட்டுவதே நன்று‘ என்று திருவுள்ளம் பற்றினவரன்றோ தேவரீர்!
அப்படி யாசகத் தொழில் செய்ததனால் உம்முடைய தேஜஸ்ஸுக்கு ஏதேனும் குறை யுண்டாயிற்றே?
அதனால் மேன் மேலும் தேசு பொலியப் பெற்றீரன்றோ,
இப்படிப்பட்ட ஆச்ரித பஷ பாதத்தைத் தேவரீரிடத்திற் கண்டவர்கள்
எற்றைக்குமேழேழ் பிறவிக்கும் வேறொருவரைத் துணையாகக் கொள்வரோ? என்றாராயிற்று.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading