Archive for February, 2021

ஸ்ரீ திருவாசிரியம்–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை–பாசுரம் -2–

February 24, 2021

உலகு படைத் துண்ட எந்தை, அறை கழல் சுடர்ப்பூந் தாமரை சூடுதற்கு,
அவாவா ருயிருகி யுக்க,நேரிய காதல் அன்பி லின்பீன் தேறல்,
அமுத வெள்ளத் தானாம் சிறப்பு விட்டு, ஒரு பொருட்கு
அசைவோர் அசைக, திருவொடு மருவிய இயற்கை, மாயாப் பெருவிற லுலகம்
மூன்றினொடு நல் வீடு பெறினும், கொள்வதெண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே?

பதவுரை

உலகு–உலகங்களை
படைத்து–ஸ்ருஷ்டித்து
உண்ட–(பிரளய காலத்தில்)விழுங்கிய
எந்தை–ஸர்வேச்வரனுடைய
அறை கழல் சுடர் பூ தாமரை–ஆபரண வொலி பொருந்திய திருவடிகளாகிற அழகிய தாமரை மலர்களை
சூடுதற்கு–சிரோ பூஷணமாக அணிவதற்கு
அவாவு–ஆசைப் படுகின்ற
ஆர் உயிர்–அருமையான ஆத்மாவானது
உருகி உக்க–நைந்து சிதிலமாக
நேரிய–(அந் தத்யானத்தால்) ஸம்பவித்த பக்தியாகிய
அன்பில்–ஆசைப் பெருக்கத்தில் உற்பவித்து
இன்பு ஈன் –இன்பத்தைக் கொடுக்கிற
தேறல்-தேன் போலிருக்கிற (அல்லது, தேனாகிய)
அமுதம் வெள்ளத்தான் ஆம் சிறப்பு விட்டு–அமிருத ப்ரவாஹத்தில் மூழ்கி யிருக்கையாகிற பெருமையை விட்டிட்டு
ஒரு பொருட்டு அசைவோர்–க்ஷூத்ரமான வொரு பலனுக்காக அலைகின்றவர்கள்
அசைக–அப்படியே அலையட்டும்; (அவர்களைப் பற்றி நமக்கென்ன கவலை?)
திருவோடு மருவிய இயற்கை–செல்வத்தோடு எப்பொழுதும் சேர்ந்திருக்கையாகிற நித்ய ஐச்வர்ய நிலைமை யென்ன.
மாயா பெரு விறல்–அழியாத பெரு மிடுக்கென்ன
உலகம் மூன்றினொடு–மூவுலகுக்கும் நாயகனாயிருக்கை யென்ன
நல்வீடு–உத்தமமான மோக்ஷ பதவி யென்ன (ஆகிய இவற்றை)
பெறினும்–பெறுவதாயிருந்தாலும்
தெள்ளியதோர்–விவேகிகளுடைய
குறிப்பு-அந்தரங்கமானது
கொள்வது எண்ணுமோ–பெற்றுக்கொள்ள நினைக்குமோ?

[உலகு படைத்து.]
கீழ்ப் பாட்டில் எம்பெருமானுடைய விலக்ஷணமான திருமேனி யழகை அநுஸந்தித்த ஆழ்வார்,
இப்படி பரம விலக்ஷணனான எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளைச் சென்னியிற் சூட வேணும் என்று
ஆவல் கொண்டிருப்பதே யன்றோ புருஷார்த்தம்;

இவ் வுலகிலுள்ள பாவிகள் இதனை யறியாதே
‘பிள்ளை வேணும் குட்டி வேணும் சேலை வேணும் செல்வம் வேணும்’ என்ரு க்ஷுத்ர பலன்களை யெல்லாம் விரும்பி
இவை கொடுப்பாரென்று கண்டவிடமெங்கும் அலைந்து திரிகிறார்களே! அந்தோ! இஃது என்ன கொடுமை!
என்று முதலிலே திருவுள்ளம் நொந்து அப்படிப்பட்ட க்ஷுத்ரர்களைப் பற்றி நாம் ஏன் கவலைப் பட வேணும்!
அவர்கள் இஷ்டப்படி அலைந்துழலட்டும்,
*உண்டியே உடையே உகந்தோடுமிம்மண்டலத்தாரைப் பற்றி நாம் சிந்திக்கவே வேண்டா,

பகவத் பக்தி தலை யெடுத்த மஹான்களும் இப் பூமியின் கண் இருக்கிறார்களன்றோ
அவர்களுடைய அத்யவஸாயத்தைக் கண்டு நாம் உகப்போம் – என்று பரம பக்தர்களுடைய
அந்தரங்க வுறுதியைப் பேசி மகிழ்கிறார் இப் பாட்டில்.

திருச் சந்த விருத்தத்தில் –
“கேடில் சீர் வரத்தனாங் கெடும் வரத்தயனரன், நாடினோடு நாட்ட மாயிரத்தனோடு நண்ணினும்,
வீடதான போகமெய்தி வீற்றிருந்த போதிலும் கூடுமாசை யல்ல தொன்று கொள்வனோ குறிப்பிலே“ என்று
திருமழிசைப் பிரான் அருளிச் செய்த பாசுரத்தைப் பெரும்பாலூந் திருவுள்ளத்திற் கொண்டு
இப் பாசுரமருளிச் செய்கிறாரென்பது உய்த்துணரத் தக்கது.

எம்பெருமானைக் கிட்டி அநுபவிப்பதிலுங்காட்டில்
அவ்வநுபவத்தைப் பற்றின மனோ ரதமே நித்யமாய்ச் செல்லுமாகில்
அதுவே சிறக்குமென்பது ஆழ்ந்த பக்தி யுடையவர்களுடைய ஸித்தாந்தம்,
அதைத்தானருளிச் செய்தார் திருமழிசைப் பிரான்.

ப்ரஹ்ம லோக ஸாம்ராஜ்யம் கிடைத்தாலும் ருத்ர லோக ஆதி பத்யம் கிடைத்தாலும்
இந்திர லோகமாளும் பாக்கியம் வாய்ந்தாலும், பரம புருஷார்த்தமாகிய ஒன்றான பரமபதாநுபவமே கிடைப்பதானாலும்
இவற்றையெல்லாம் ஒரு புருஷார்த்தமாகவே மதிக்க மாட்டேன்.

பின்னே எனக்கு எதிலே ஊற்றமென்றால்
‘எம்பெருமானோடு கூட வேணும் எம்பெருமானோடு சேர வேணும் என்று மனோ ரதங்கொண்டிருப்பதுண்டே
அதுதான் எனக்குப் பரம போக்யம் என்றார்.

இஷ்டமான விஷயத்தை அநுபவிப்பதிற்காட்டிலும் அநுபவிப்போம் என்னும் மனோ ரதமே சிறந்ததாமென்பதை
அனுபவ ரஸிகர்கள் எளிதில் உணர்வர். தேனூறி எப்பொழுதுந் தித்திக்கும்படியானது மனோரதமேயாம்.
திருவரங்கஞ்சென்று நம்பெருமானை ஸேவிக்க வேணுமென்று ஒருவனுக்கு ஆவல் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள்,
ஒருநாள் போய் ஸேவித்து வந்து விட்டால் அவ்வளவிலே ஆசை தீர்ந்து விட்டதாகும்.
அங்ஙனல்லாமல் மனோரதமேயாய்ச் செல்லுமாகில் அது நெடு நாளைக்கு ரஸவத்தரமாயிருக்கும்.
சந்தனம் பூசிக் கொள்ளுதல், புஷ்பஞ் சூட்டிக்கொள்ளுதல், பஞ்சகச்ச வேஷ்டி உடுத்துக் கொள்ளுதல் முதலிய
அலங்கார கார்யங்களில் பிரமசாரிகளுக்கு உள்ள ஆவல் க்ருஹஸ்தர்களுக்கு இல்லாமையும் இங்கு ஒரு உதாஹரணமாகக் காட்டத் தகும்.
ஆகவே அனுபவ நிலைமையிற் காட்டிலும் அநுபவப் பாரிப்பு நிலைமையே சிறந்ததென்பது விளங்கும்.

ஆதியில் உலகங்களைப் படைத்தும்
பிரளயம் வந்தவாறே அவற்றைத் திருவயிற்றிலே வைத்தருளி ரக்ஷித்தும் வருகிற
எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளை நாம் சிரமேல் அணிந்து கொள்ள வேணுமென்று ஆவல் கொண்டு,
அந்த ஆவலினால் நெஞ்சு நீர்ப் பண்டமாக உருகி, மேன் மேலும் பரபக்தி பரம பக்திகள் தலையெடுத்து,
அப்படிப்பட்ட பரம பக்தி நிலைமையிலே அமர்ந்திருக்கை தானே பரம போக்யமானது,
எம்பெருமானது திருவடிகள் தலைமேல் வந்து சேர வேண்டா, திருநாடும் எய்த வேண்டா,
வழுவிலாவடிவமை செய்யப் பெறவேண்டா, இவை நமக்கு வாய்க்க வேணும்” என்கிற ஆவல் ஒன்று மாத்திரம்
அநவரதம் நெஞ்சில் நடையாடுமேல் போதுமானது, இந்த ஆவல் தான் அமுத வெள்ளம்.

இப்படிப்பட்ட ஆவல் பூண்டு
“என் கண்ணனைக் ளென்று கொலோ களிக்கும் நாளே“
“மாயோனை மணத் தூணே பற்றி நின்று என் வாயார என்று கொலோ வாழ்த்து நாளே”
“அங்கடியவரோடு என்று கொலோ அணுகுநாளே“
என் மலர்ச் சென்னி என்று கொலோ வணங்கு நாளே“
“அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள் இன்பமிகு பெருங்குழுவு கண்டு
யானுமிசைந்துடனே என்று கொலோ இருக்குநாளே“ என்றிவை போல்வன பல பாசுரங்களை
வாய் வெருவிக் கொண்டு இதுவே ஒரு ஆனந்தமாகப் போது போக்க ப்ராப்தமாயிருக்க,
இந்தப் போது போக்கை விட்டிட்டுக் கூறை சோறு முதலிய அற்ப்ப் பலன்களை அபேக்ஷித்து
அங்குமிங்கும் அலைந்துழல்கின்ற பாமரர்கள் அப்படியே அலையட்டும்,
அவர்கள் எக் கேடு கெட்டால் நமக்கென்ன! என்கிறார் ஒருபொருட்கசைவோர் அசைக என்னுமளவால்.

தெளிந்த ஞானமுடைய மஹான்கள் இப்படிப்பட்ட க்ஷுத்ர பலன்கள் கையிலே ஸித்தமாக வந்து சேர்ந்தாலும்
உதறித் தள்ளி விடுவர்கள், கீழ்ச்சொன்ன அமுத வெள்ளத்திலேயே அவர்கள் ஊன்றியிருப்பார்கள் என்கிறார் மேல்.

திருவொடு மருவிய இயற்கை பெறிலும், மாயாப் பெரு விரல் பெறினும், உலகம் மூன்று பெறினும்,
நல்வீடு பெறினும் தெள்ளியோர் குறிப்பு (இவற்றைக்) கொள்வதெண்ணாது.
“கூடுமாசை யல்ல தொன்று கொள்வனோ குறிப்பிலே“ என்ற படி எம்பெருமானோடு கூட வேணுமென்கிற
ஆசை யொன்றையே தெள்ளியோர் குறிக் கொண்டிருப்பர் என்றவாறு.
இங்குத் தெள்ளியோர் என்றது திருமழிசைப் பிரானையும் அவர் போல்வாரையும்.

“அவாவாருயிருருகியுக்க“ என்று தொடங்கி “சிறப்பு விட்டு“ என்ற வரையில்
அவர் காதல் அன்பு இன்பு தேறல் அமுதம் என்று ஒரு பொருட் பன்மொழிகளை இனைத்துத் தொடுத்திருப்பதனால்
பகவானுடைய திருவடிகளை முடிமேலணிந்து கொள்வதை ஆசைப் படும் விஷயத்தில் ஆழ்வார்க்குண்டான
ஆதரம் அளவற்ற தென்பது நன்கு வெளிப்படும்.
அவாவாருயிர் என்றவிடத்து “அவா ஆர்“ என்றும் பிரிக்கலாம், ஆசை நிரம்பிய என்று பொருளாம்.

ஒரு பொருட்கு அசைவோர் அசைக –
ஸம்ஸாரிகள் விரும்பும் பொருள்களை ஆழ்வார் தமது திரு வாக்காலே சொல்லவும் கூசி ஒரு பொருட்டு என்கிறார்.

திருவொடு மருவிய இயற்கை –
நாலு நாளில் அழிந்து போகக் கூடிய ஐச்வரியமல்லாமல் எப்போதும் ஸ்திரமாயிருக்கக் கூடிய
ஐச்வரியத்தைப் பெற்றாலும் என்றபடி.
மருவுதல் – எப்போதும் கூடியிருத்தல்.
இயற்கை – கன்மை,
ஐச்வரியத்தோடு எப்போதுங் கூடியிருக்குந் தன்மையாவது நித்ய ஸ்ரீமனாக இருக்கை.
அப்படிப்பட்ட நிலைமையையும் தெள்ளியோர் குறிப்பு வேண்ட மாட்டாதாம்.

மாயா பெரு விறல் –
ஐச்வரியம் அளவற்றிருந்தாலும் அவற்றை அநுபவிப்பதற்கு உறுப்பான சக்தி
பூர்ணமாக இல்லாவிடில் பயனில்லையே
அந்த சக்தியும் கூடவே கிடைக்கப் பெற்றாலும் அப்போதும் வேண்டார்கள் என்றபடி.

மாயா –மாய்தலாவது அழிதல், அழியாத என்கை.
உலகம் முன்றினொடு கீழே சொன்ன நித்யமான ஐச்வரியம் என்ற மாத்திரமே யல்ல,
மூவுலகத்தையும் ஆளும்படியான பெருஞ்செல்வம் கை புகுந்தாலும் வேண்டார்களென்கை.

பலசொல்லி என்! ஸகல ஐச்வர்யங்களுக்கும் மேற்பட்டதான மோக்ஷ ஸரமராஸ்யந்தானும்
பெறுவதாயிருந்தாலும் “எம்மா வீட்டுத் திறமும் செப்பம்“ என்றும்.
“இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகமாளும் அச்சுவை பெறினும் வேண்டேன்“ என்றும்
(பாவோ நாத்யத்ர கச்சதி) (வைகுண்டவாஸேபி ந மேபிலாஷ) என்றும்
சொல்லுகிறபடி அந்த மோக்ஷந்தன்னையும் ஒரு பொருளாக மதியார்களென்கை.

ஆக இப் பாட்டால் –
ஸம்ஸாரி களைப் போலே க்ஷுத்ர பலன்களை விரும்பி அலையாமல்
விவேகங்களைப் போலே பகவத் விஷயத்தில் அநு ராகம் மிக்கியிருப்பதே நமக்கு ப்ராப்தம் என்றாராயிற்று.

———————————————–————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ திருவாசிரியம்–தனியன்-அவதாரிகை- -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை–பாசுரம் -1–

February 24, 2021

முன்னுரை

இது – மயர்வற மருளப்பெற்ற ஆழ்வார்களுள் தலைவரும், ப்ரபந்தந ஜந கூடஸ்தருமான நம்மாழ்வார் அருளிச்செய்த நான்கு திவ்யப்ரபந்தங்களுள் இரண்டாவதான பிரபந்தம்.

திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி, திருவாய்மொழி என்ற நான்கு வேதங்களின் ஸாரமாம்.

நாலாயிரப் பிரபந்தத்தில் மூன்றாவது ஆயிரமாகிய இயற்பாவில் இது ஆறாவதாகும். யஜுர்வேத ஸாரமுமாம்.

ஆழ்வார் தமது ஞானக் கண்ணுக்கு இலக்கான எம்பெருமானை நோக்கி. ‘தேவரீரை அநுபவிப்பதற்கு இடையூறான தேஹ ஸம்பத்த்தை அறுத்துத் தந்தருளவேணும்‘ என்று ஸம்ஸார ஸம்பந்த நிவ்ருத்தியை அபேக்ஷித்தார் – முதற் பிரபந்தமாகிய திருவிருத்தத்தில்.

ஆழ்வார் அப்படி பிரார்த்தித்த போதிலும், எம்பெருமான் இவ்வாழ்வாரைக் கொண்டு நாட்டுக்கு நன்மையாகச் சில திவ்ய ப்ரபந்தங்களை வெளியிடுவித்து சம்சாரிகளைத் திருத்திப் பணி கொள்ளத் திருவுள்ளம் பற்றினவனாகையாலே

“பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கு மழுக்குடம்புமிந்நின்ற நீர்மை இனியாமுறாமை“ என்று இவர் அபேக்ஷித்த இந்த ஸம்ஸாரத்தை விட்டு விலகி ஒரு

* நலமந்தமில்லதோர் நாட்டிலே போய்ச்சேரவேணுமென்று பாரிப்பது நம்முடைய குணங்களை அநுபவிப்பதற்காகவேயன்றி வேறொன்றுக்காகவன்றே : அந்த குணாநுபவத்தை இவர்க்கு நாம் இவ்விடத்திலேயே வாய்க்கச் செய்வோம்,

இங்கே தானே இவர் குணானுபவனம் பண்ணிக் களித்தாராய், அவ்வநுபவம் உள்ளடங்காமல் புறவெள்ளமிட்டுப் பிரபந்தங்களாகப்பெருகி லோகோபகாரமும் செய்தாராகட்டும்“ என்று எம்பெருமான் திருவுள்ளம் பற்றித் தனது ஸ்வரூப ரூபகுண விபூதிகளைக் காட்டிக்கொடுக்க

ஆழ்வார் அவற்றைக் கண்டு பரமானந்ந்தம் பொலிய அநுபவிக்கிறார் இத்திருவாசிரியத்தில்.

ஸம்ஸார ஸம்பந்தங் கழிந்து பரமபத்த்திலே போனபின்பு அநுபவிக்க்க்கூடிய எம்பெருமானது

மேன்மையையும் நீர்மையையும் வடிவழகையும் இங்கிருந்துகொண்டே சுருக்கமாக ஏழு பாட்டாலே அநுபவிக்கிறாராயிற்று.

ஆசிரியப் பாக்களினாலமைந்த இத்திவ்யப் பிரபந்த்த்திற்குத் திரு ஆசிரியம் எனத் திருநாமம் வழங்கலாயிற்று.

அடியொன்றுக்கு நான்கு சீராய் இயற்சீர் பயின்றும் வெண்சீர் விரவியும் மூன்றாமடிக்குக் குறையாமல் பலவடிகளால் அகவலோசையுற்று இறுதியில் ஏ யென்னும் அசையுடன் முடிவது ஆசிரயப்பாவாம்.

இது –நேரிசை யாசிரியப்பா, நிலை மண்டில வாசிரியப்பா முதலிய நான்கு வகைகளையுடையது,

எல்லாவடிகளும் நாற்சீராய் ஈற்றயலடி முச்சீராய் முடிவது நேரிசை யாசிரியப்பா.

எல்லாவடிகளும் நான்கு சீராலேயே முடிவது நிலை மண்டில வாசிரியப்பா.

இப்பிரபந்தத்தில் 1,2,3,6-ஆம் பாசுரங்கள் நேரிசையாசிரியப்பாக்கள்.

4,5,7-ஆம் பாசுரங்கள் நிலைமண்டில வாசிரியப்பாக்கள்.

அந்தத்தித் தொடையால் அமைந்ததாம் இப்பிரபந்தம்.

————–

அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளி செய்த தனியன்-
————————————————————————–
காசினியோர் தாம் வாழ கலி யுகத்தே வந்து உதித்து
ஆசிரியப் பா வதனால் அரு மறை நூல் விரித்தானை
தேசிகனை பராங்குசனை திகழ வகுளத் தாரானை
மாசடையா மனத்து வைத்து மறவாமல் வாழ்த்துதுமே-

காசினியோர் தாம் பூலோகத்திலுள்ளவர்கள்
வாழ உஜ்ஜீவிப்பதற்காக
கலியுகத்தே இக் கலியுகத்தில்
வந்து உதித்து இந் நிலத்தில் வந்து அவதரித்து
அருமறை நூல் விரித்தானை தெரிய வரிதான வேத சாஸ்த்ரங்களை விவரித்தவரும்
தேசிகனை ஆசார்யரும்
திகழ் வகுளம் தாரானை விளங்குகின்ற மகிழ் மாலையை அணிந்துள்ளவருமான
பராங்குசனை நம்மாழ்வாரை
மாசு அடையா மனத்து வைத்து அஹங்கார மமகாரங்களாகிற குற்றங்களற்ற மனத்திலே வைத்து
மறவாமல் ஒருகாலும் மறவாமல்
வாழ்த்துதும் மங்களாசாஸநஞ்செய்வோம்.

————————————————————————–
பர-எதிரிகளை அங்குசம் -புற சமய வாதிகளை–தேசிகன்-ஆசார்யன்-
வெண்பா போல் ஆசிரிய பா -ஒரு வகை–அரு மறை-அரிய வேதம்-
காசினி-பூமி-தானே பிரகாசிக்கும் காசினி-

பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் தனியனுக்கு –
மணி பிரவாளம்-முத்து பவளம்-ஹாரம் போல்-கண்டத்துக்கு மேல் ஓன்று அறியாத காசினியோர்
ஆத்ம ஷேமம் பார்க்காமல்–கலி கோலாகலம் குறைக்க -யுவ வர்ண -கிரமம் படி உதித்தார்–ஆவிர்பூதம் ஆனார்-
உதயம்-சூர்யன்-வகுள பூஷண பாஸ்கரன் –அஞ்ஞானம் இருட்டு விலக்க –
கிருத யுகம் பிராமண-தத்தாத்ரியன் — திரேதா -ஷத்ரியன்- ராமன் –துவாபர -வைஸ்யன் -கண்ணன் -கலி -பராங்குசன்
லோகாந்தரத்தில் இருந்து வந்து உதித்தார் –

அவதரித்து செய்த கார்யம்–ஆசிரிய பா இனத்தில் -விஸ்தாரம்-புரியும் படி அரிய வேதத்தை விரித்து
அதுவே நிரூபகம் ஆகும் படி-விரித்தான்-என்கிறார்–
தொண்டு வைத்தே அருள பாடு போல்..–

வண் தமிழ் நூல் ஆக்கினார்—எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் –
மூன்று ஏற்றம்-ஆயிரம்-தமிழ்-இனிமை-
வேதார்த்த தரிசியான பராங்குச தேசிகன்-தன் துளவ தாரானை போல் வகுள தாரானை –
கண்ணன் கழலினை ..திண்ணம் நாரணமே -சங்க பலகை ஏற்றி–
சங்க புலவர் –சேமம் குருகையோ செய்ய திரு பாற்கடலோ
நாமம் பராங்குசனா நாரணனா-..தாமம் துளவமோ வகுளமோ
தோள்கள் இரண்டோ நான்கும் உளவோ பெருமாள் உனக்கு -என்ன கடவரே

பாவின் இன் இசை பாடி திரிவனே–
மாசற்றார் மனது உளானை -வணங்கி நாம் இருப்பது அல்லால்–திரு மாலை-பாசுரம்
மனன் அகம் மலம் அற -தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே –நிர்மல மனஸ்–ஆசை கொண்டு மனத்தில் வைக்க வேண்டும்

இசைவித்து என்னை உன் தாள் இணை கீழ் இருத்தும் அம்மான்-
தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே –
மனக்கே வந்து இடை வீடு இன்றி மன்னி-

பரி விராஜர் பரம ஹம்சர் –நல்லது தீயது விலக்கி- சரண் நடந்து காட்டி-
பக்தர் ஹிருதய தாமரை அமர்ந்து—நாள் கமழ வகுள் மார்பினன்-
சுப ஆஸ்ர்யம் -மங்களமான புகல் இடம்-பவித்ராணாம் பவித்ரம் மங்களானாம் மங்களம் –சத்வ குணம் வளரும்-
மறவாமல் மங்களா சாசனம் பண்ணுவோம்..
நம்மை திருத்த பாடி அருளினார் –வாழ்த்த வேண்டும்- ஆழ்வார் –திவ்ய மங்கள விக்ரகமே ஸூபாஸ்ரயம் —

இவ்விருள் தருமாஞாலத்திலே ஸம்ஸாரிகளாய்த் தடு மாறுகிற நம்போல்வாரை உஜ்ஜீவிக்கச் செய்வதற்காக இக்கலியுகத் திலே இப்பூமண்டலத்திலே வந்து திருவவதரித்துத் திருவாசிரிய மென்னுமித் திவ்யப்ரபந்தத்தை அருளிச்செய்து இதன் மூலமாக வேதார்த்தங்களை வெளியிட்டவரும்,

” ஆத்யஸ்ய ந: குலபதே : ” என்று ஆளவந்தாரருளிச்செய்தபடி ஸ்ரீவைஷ்ணவகுல கூடஸ்த ராய்க்கொண்டு ப்ரதமாசார்யரும்,

மகிழ்மாலையை நிரூபகமாகச் சாத்திக்கொண்டிருப்பவரும்,

புறமதத்தவர்களைக் கண்டித்து ஒழித்த தனாலே பராங்குசர் என்று திருநாமம் பெற்றவருமான நம்மாழ்வாரை நிஷ்கல்மஷமான நெஞ்சிலேவைத்து நித்தியம் வாழ்த்துவோமென்றதாயிற்று.

பராங்குசன் என்பதற்கு மாஞானிகள் சொல்லும் அர்த்தமும் ஒன்றுண்டு ; பரர்கட்கு அங்குசம் (மாவட்டி) போன்றவர்,- மதாந்தரஸ்தர்களை அடக்குகிறவர் என்கிற பொருள் ஒருபுறமிருக்கட்டும். பரன் என்று பரமபுருஷனான எம்பெருமானைச் சொல்லுகிறது. அவனைத் தம்முடைய ஸ்ரீஸுக்திகளாகிற மாவட்டியினால் வசப்படுத்திக்கொள்ளவல்லவர் என்கை. *

“வலக்கையாழி இடக்கைச் சங்கமிவையுடை மால்வண்ணனை, மலக்கு நாவுடையேற்கு” என்று தாமே அருளிச்செய்தார்.

சில குத்ருஷ்டிகள் மறை குலையச் சாது சனங்களடங்கத் தருக்கச் செருக்காலே எம்பெருமானுடைய பாத்வத்தை இல்லை செய்தவளவிலே ஸர்வேச்வரன் அதுகண்டு நடுங்கி “நான் பரதத்வமல்லேன், நான் பரதத்வமல்லேன்’ என்று பின் வாங்க,

ஆழ்வார், “ஒன்றுந்தேவுமுலகும்” என்கிற திருவாய்மொழி யாகிற மாவட்டியையிட்டு அவ்வெம்பெருமானாகிற களிற்றை ஓடவொட்டாதே நிலை நிறுத்திப் பரத்வஸ்தாபனம் பண்ணினபடியாலே பராங்குசரென்கிறது என்று கருத்து.

————————————————————————–
அவதாரிகை-
இது யஜூர் வேத சாரமாகும்
திரு விருத்தத்தில் ஸ்வரூப ரூப குண விபூதி காட்டி கொடுக்க – உபய விபூதிகளை அனுசந்தித்து –
நித்ய விபூதி உள்ளோர் -நித்ய சம்சாரிகளை
வீட்டை திருத்த -கலியும் கெடும் கண்டு கொண்மின் –
கர்ம பர தந்த்ராய் இதர விஷய போக -தேக -யாத்ரையிலே கழித்து —
சர்வேஸ்வரன் உடன் நித்யர் போல் இருக்க தமக்கு யோகியதை இருந்தும்
மோகம் சர்வ பூயோஷம்–இழந்ததை அனுசந்தித்து –தேக சம்பந்தம் கழித்து கொள்ள வழி தம் பக்கம் இல்லாமல்–கர்மாதீனம் பிறந்து–
மேலும் கர்மா சேர்த்து-பிறவி மாறி மாறி-அவனை திரு அடிகளில் விண்ணப்பம் செய்து-
இனி உறாமை-அருளி–அழுந்தார் பிறப்பாம் -இறுதி பாசுரமும் அருளி-
இப் பிர பந்தத்திலும் அதுவே தாத்பர்யம்-

உறாமை உடன் உற்றேன் ஆக்காமல்-அலற துடிக்க அழ பிராத்திக்க வைத்து –
நச்சு பொய்கை ஆகாது இருக்க /பிர பந்தம் தலை கட்ட/நாடு திருத்த /–தன் குழந்தை பட்டினி போட்டு நம்மை வாழ வைக்க-
பிறந்த ஆற்றாமை தீர பாசுரம் அருளுகிறார் —
அம்பு படுக்கை சம்சாரம் பீஷ்மர் பஞ்ச பாண்டவர் போல்-
ஆழ்வார் நமக்கு அருள-இங்கு வைக்கலாம் படி அல்ல இவர் த்வரை–
இது தாழ்ந்தது என்று அறிந்த ஆழ்வாரை கொண்டே பாட வைத்து –
இருபது தடவை இனி இனி கூப்பிட வைத்தார்-பல நீ காட்டி-குண அனுபவம் இங்கே கொடுத்து திவ்ய தேசம் காட்டி-தேகம் தோஷம் –
அங்கே போய் அனுபவம் கேட்க வேண்டாம் படி அனுபவம் அதிகம் இங்கே காட்டி–அவற்றை அந்ய பரராய் அனுபவிக்கிறார்-

அந்தமில் பேரின்பம் அடைய துடிப்பது
நமது குணாநுபவம் செய்ய என்று அறிந்து கொண்டு
அவை எல்லாம் இங்கேயே காட்டி அருள
இங்கேயே பண்ணிக் களித்தாராய்
அந்த அனுபவம் உள்ளடங்காமல்
புற வெள்ளம் இட்டுப் பெரு வெள்ளம் இட்டு பிரபந்தங்களாக பெருகி
லோகம் எல்லாம் உஜ்ஜீவிக்க திரு உள்ளம் பற்றி
தனது ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டிக் கொடுக்க

அவனது
மேன்மையையும்
நீர்மையையும்
வடிவு அழகையும்
ஏழு பாசுரங்களாலே
அருளிச் செய்கிறார் –

————————————————————————–
செக்கர் மா முகில் உடுத்து மிக்க செம் சுடர்
பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு
பல சுடர் புனைந்த பவள செவ்வாய்
திகழ பசும் சோதி மரகத குன்றம்
கடலோன் கை மிசை கண் வளர்வது போல்
பீதக ஆடை முடி பூண் முதலா
மேதகு பல் கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீது இட்டு
பச்சை மேனி மிக பகைப்ப
நச்சு வினை கவர் தலை அரவின் அமளி ஏறி
எரி கடல் நடுவுள் அறி துயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வ குழாங்கள் கை தொழ கிடந்த
தாமரை வுந்தி தனி பெரு நாயக
மூ வுலகு அளந்த சேவடியோயே –1-

————————————————————————–

பதவுரை

பவளம் செம் வாய்–பவழங்களாலே சிவந்த இடங்களை யுடையதும்
திகழ் பசும் சோதி–விளங்குகின்ற பசுமையான நிறத்தை யுடையதுமான
மரகதம் குன்றம்–ஒரு பச்சை மா மலையானது,
செக்கர் மா முகில் உடுத்து–சிவந்த பெரிய மேகத்தை அரையில் உடுத்துக் கொண்டும்
மிக்க செம் சுடர் பரிதி சூடி–மிகவும் சிவந்த தேஜஸ்ஸையுடைய ஸூர்யனை சிரஸ்ஸில் அணிந்து கொண்டும்
அம்சுடர் மதியம் பூண்டு–குளிர்ந்த ஒளியையுடைய சந்திரனைக் கண்ட பூக்ஷணமாக அணிந்து கொண்டும்
பல சுடர் புனைந்து–(நக்ஷத்திரங்களாகிற) பல தேஜஸ்பதார்த்தங்களையும் (பலவகை ஆபரணங்களாக) அணிந்து கொண்டும்
கடலோன் கைமிசை–கடலரசனுடைய கை மேலே
கண்வளர்வதுபோல்–படுத்துக் கொண்டிருப்பது போல
பீதக ஆடைமுடி பூண் முதலா மேதகு பல்கலன் அணிந்து–பீதாம்பரம், திருவபிஷேகம் கண்டிகை முதலான
சிறந்த பல திருவாபரணங்களைச் சாத்திக்கொண்டு
சோதி வாயவும் கண்ணனும் சிவப்ப–அழகிய வாயும் கண்களும் சிவந்திருக்கப் பெற்று
பச்சை-பசுமையான
மேனி-திவ்யமங்கள விக்ரஹத்தின் நிறமானது
மீதிட்டு மிக பகைப்ப–மற்ற ஒளிகளெல்லாவற்றிற் காட்டிலும் மேலோங்கி மற்ற ஒளிகளோடு
போர் செய்து கொண்டு விளங்கப் பெற்று
எறி கடல் நடுவுள்–அலை யெறிகின்ற கடலினிடையே
நஞ்சு வினை–விஷத் தொழிலையும்
கவர் தலை-கப்புவிட்டுக் கிளர்கின்ற(பல) தலைகளையுமுடைய
அரவு-திருவனந்தாழ்வானாகிற
இன் அமளி ஏறி-போக்யமான சயனத்தின் மீது ஏறி
அறி துயில் அமர்ந்து -யோக நித்திரையில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வம் குழாங்கள்-சிவன் பிரமன் இந்திரன் முதலிய எல்லாத் தேவ ஸமூஹங்களும்
கை தொழ கிடந்த-ஸேவிக்கும்படியாகப் பள்ளி கொண்டிருக்கிற,
தாமரை உந்தி தனி பெரு நாயக-தாமரைப் பூவைத் திருநாபியிலே உடைய அத்விதீய ஸர்வேச்வரனே!
மூ உலகு அளந்த-மூன்று லோகங்களையும் அளந்த
சே அடியோய்-அழகிய திருவடிகளை யுடையவனே! (வாழ்ந்திடுக!)

[செக்கர் மா முகில்.]
ஆழ்வார், கீழ்ப்பிரபந்தமாகிய திருவிருத்தத்தின் முதற்பாட்டில் “அழுக்குடம்பும்” என்று
தம்முடைய சரீரத்தின் தண்மையைப் பேசினார்;
இந்த முதற் பாட்டில் எம்பெருமானுடைய திருமேனியின் வைலக்ஷண்யத்திலீடு பட்டுப் பேசுகிறார்.
அப்ராக்ருதமாய் ஒப்புயர்வற்றதான பகவத் திவ்ய மங்கள விக்ரஹத்திற்கு ப்ராக்ருத வஸ்துக்களிலே
ஒன்றை உபமானமாக எடுத்துக் கூறுவதானது
ஒட்டுரைத் திவ்வுலகுன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும், பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதீ என்றபடி
அவத்யமேயாயினும், ஓர் உபமானத்தையிட்டே அநுபவித்துத் தீர வேண்டியிருப்பதாலும்,
வேதாந்தங்களிலும் அப்படியே உபமானங்களை யிட்டே நிரூபித்திருப்பதாலும்
இவ்வாழ்வார் தாமும் இங்கு ஓர் உபமானத்தை யிட்டுப் பேசி அநுபவிக்கிறார்.

‘ப்ரஸித்தோபமை’ என்றும் ‘அபூதோபமை’ என்றும் உவமை இரண்டு வகைப்படும்;
முகம் சந்திரனைப் போன்றது-திருவடி தாமரையைப் போன்றது-என்றிங்ஙனே பேசுதல் ப்ரஸித்தோபமையாம்;
இனி அபூதோபமையாவது-
தமிழில் இல் பொருளுவமை எனப்படும்.
ப்ரஸித்தமல்லாத ஒரு விஷயத்தைக் கவிகள் தம் புத்தி சமத்காரத்தாலே ஏற்படுத்திக் கொண்டு
அதனை த்ருஷ்டாந்தமாக்கிக் கூறுதல் அபூதோபமையாம்.
இப்படிப்பட்ட அபூதோபமையைக் கூறுவதன் கருத்து-
உபமேயப் பொருளானது ஒப்பற்றது என்பதைத் தெரிவிப்பதேயாம்.

இப்பாசுரத்தில் அபூதோபமை வருணிக்கப்படுகிறது.
எம்பெருமான் திரு வரையில் திருப் பீதாம்பரம் சாத்திக் கொண்டும்
திரு முடியில் திருவபிஷேகமணிந்து கொண்டும்
இப்படியே மற்றும் பலபல திருவாபரணங்களைப் பூண்டு கொண்டும்,
செந்தாமரை போன்ற திருவாயும் திருக்கண்களும் விளங்கவும்,
ச்யாமமான திருமேனி நிறமானது மற்ற சோபைகளெல்லாவற்றையுங்காட்டில் விவேக்ஷித்து விளங்கவும்
கடலினிடையே திருவனந்தாழ்வானெனும் திருவணையின் மீதேறித் திருக் கண் வளர்ந்தருளாகிறபடிக்கு
த்ருஷ்டாந்தமாக வருணிக்கப் பொருத்தமான பிரஸித்தோபமை ஒன்றில்லாமையால் அபூதோபமை அருளிச் செய்கிறார்.

மரகதப் பச்சை மயமான ஒரு மலையானது
செந்நிறமான மேகத்தைப் பீதக வாடையாக உடுத்துக் கொண்டும்,
கிரீடத்தின் ஸ்தானத்திலே ஸூர்யனை அணிந்து கொண்டும்,
கண்டிகை ஸ்தானத்திலே சந்திரனை அணிந்து கொண்டும்,
முத்து ஸரம் முதலான மற்றும் பல திருவாபரணங்களின் ஸ்தானத்திலே நக்ஷத்திரங்களைப் புனைந்து கொண்டும்
திரு அதரம் திருக் கண்களின் ஸ்தானத்திலே பவழ மயமான பிரதேசங்களை யுடைத்தாகியும்
ஒரு கடலிலே பள்ளி கொண்டிருந்தால் எப்படி யிருக்குமோ அப்படி யிரா நின்றது
தேவரீர் திருக்கோலமுந்தாமுமாகத் திருப்பள்ளி கொண்டருளுகின்றமை-என்றாராயிற்று.

செக்கர் என்று சிவப்பு நிறத்துக்கும் செவ் வானத்துக்கும் பெயர்;
இங்கே, சிவந்த மேகமென்றும், செவ் வானத்தில் தோன்றிய மேகமென்றும் பொருள் கொள்ளலாம்.
மேகங்கள் மலைச் சாரலிற் படியுமாதலாலும்,
செக்கர் மா முகில் படிந்திருந்தால் பீதக வாடை யுடுத்தாற் போலிருக்கு மாதலாலும் “செக்கர்மா முகிலுடுத்து” எனப்பட்டது.
எம்பெருமான் உபமேயம்; மலை உபமானம்; பீதாம்பரம் உபமேயம், செக்கர் மா முகில் உபமானம்.

“கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத்த நீண் முடியன்” என்று திருவபிஷேகத்திற்கு ஸூர்யனை
ஒப்புச் சொல்லுவதுண்டாதலால் “மிக்க செஞ்சுடர்ப் பரிதி சூடி” எனப்பட்டது.
எம்பெருமானுடைய கிரீடத்திற்கு ஸாதாரண ஸூர்யன் உபமானமாகப் போராமையால்
மிக்க செஞ்சுடர் என விசேஷிக்கப்பட்டது.

பரிதி என்கிற வட சொல் ஸக்ஷாத்தாக ஸூர்யனைச் சொல்லாதாகிலும் தமிழில் இலக்கணையால்
ஸூர்யனுக்குப் பேராயிருக்கும்.
இங்கு உபமானமாகிய மலை ஸூர்ய மண்டலம் வரை ஓங்கியிருப்பதாகக் கொண்டால்
ஸூர்யன் கிரீடத்தின் ஸ்தானத்திலே ஆவன்.

மார்பில் அணிந்து கொள்ளும் ஆபரணங்களில் ‘சந்த்ர ஹாரம்’ என்பது ஒன்று;
அது சந்திரன் வடிவமாக அமைக்கப்படுமாதலால் அப் பெயர் கொண்டதாகிறது.
சந்திரனுக்கு மலையினோடு ஸம்பந்தம் கீழ்ச் சொன்னபடியிலேயாம்:
ஸூர்ய சந்த்ர மண்டலம் வரையில் ஓங்கின மலை என்று கொள்க. மதி-சந்திரன்; அம்-சாரியை.

பல சுடர் என்றது
ஆகாசத்திலுள்ள மற்றும் பல நக்ஷத்ராதி தேஜஸ் ஸமூஹங்களைச் சொன்னபடி.
திருவாபரணங்களில் நக்ஷத்ர ஹார மென்பதுமொன்று.

புனைந்த என்று பாடமான போது
பெயரெச்சமாகி மரகதக் குன்றத்திற்கு விசேஷணமாகக் கடவது!

பவளச் செவ்வாய்- ‘ப்ரவாளம்’ என்ற வடசொல் பவளமெனத் திரியும்.
வாய் என்று இடங்களைச் சொன்னபடி.
மலையிற் பல இடங்களில் பவளமுண்டாதலால் பவளங்களாற் சிவந்த இடங்கள்
“கை வண்ணந் தாமரை வாய் கமலம் போலும் கண்ணிணையுமரவிந்தம் அடியுமஃதே” என்றும்
“பவள வாய் கமலச் செங்கண்” என்றும் சொல்லப்படுகிற திவ்ய அவயவங்களுக்கு உபமானமாகக் கூறப்பட்டன.

திகழ் பசுஞ்சோதி மரகதக் குன்றம்-
பசுமை நீலம் கருமை என்ற நிறங்களை அபேதமாகக் கூறுவது கவி மரபாதலால்
எம்பெருமானுடைய காளமேகத் திருவுருவத்திற்கு மரகதக் குன்றத்தை[-பச்சைமாமலையை] உவமை கூறினார்.
ஸாதாரண மலையானது எம்பெருமானுடைய துளக்கலாகா நிலைக்கும் வளர்த்திக்கும் ஒப்பாகுமேயன்றி,
காணப் புக்கவர்களின் கண்ணையும் நெஞ்சையும் குளிர்வித்து
அவர்களுடைய ஸம்ஸார பந்தங்களை யெல்லாம் போக்குந்தன்மையும்
எப்போதும் தியானஞ்செய்வதற்கு உரியதாயிருத்தலும்
பெருங்கருணைக்கு இருப்பிடமாயிருத்தலும் முதலிய குண விசேஷங்களில் ஒப்பாக மாட்டாமையால்,
திகழ் பசுஞ்சோதி மரகதம் என்று குன்றம் விசேஷிக்கப்பட்டது.

ஆக இப்படிப்பட்டதொரு குன்றம் உலகில் எங்குமில்லை;
இருந்தாலும் அது கடலோன் கை மிசைக் கண் வளர்வது அஸம்பாவிதம்;
ஆக இத்தனையும் ஸம்பாவிதமாகில் எம்பெருமான் படிக்குப் போலி சொல்லலாமாய்த்து.

செக்கர் மா என்று தொடங்கி, கண் வளர்வது என்னுமளவும் உபமானத்தை சிக்ஷித்து முடித்து,
இனி பீதக வாடை என்று தொடங்கி உபமேயமான எம்பெருமானுடைய அநுபவத்தில் இழிகிறார்.

செக்கர் மா முகிலுக்கு உபமேயம் பீதக வாடை;
மிக்க செஞ்சுடர்ப் பரிதிக்கு உபமேயம் முடி(அதாவது-கிரீடம்);
அஞ்சுடர் மதிக்கும் பல சுடர்கட்கும் உபமேயம் பூண் முதலா மே தகு பல்கலன்.
பூண் என்பது ஆபரண ஸாமாந்யத்துக்குப் பேராயினும்
இங்கே சந்த்ரஹார மென்கிற ஆபரண விசேஷத்தைக் குறிக்குமென்க.

மேதகு-மேவத்தகு என்றபடியாய், (திருமேனிக்குப்) பொருந்தத் தக்கன என்றதாம்.
மெய்தகு என்றும் பாடமுண்டாம்;
மெய்-திருமேனி.
கலன் –ஆபரணம்.

மீதிட்டுப் பச்சை மேனி மிகப் பகைப்ப-
எம்பெருமானுடைய திருமேனியில் பீதக வாடையின் சோதி ஒரு நிறமாகவும்,
திருவபிஷேகத்தின் சோதி மற்றொரு நிறமாகவும்,
திவ்ய பூஷணங்களின் சோதி வேறொரு நிறமாகவும்
திருவாய் திருக்கண் முதலிய அவயவங்களின் சோதி மற்றுமோர் நிறமாகவும்
இப்படிப் பலவகை நிறச்சோதிகள் இருந்தாலும் திருமேனியின் நிறமாகிய
பாசியின் பசும் புறம் போன்ற மற்ற எல்லாச் சோபைகளோடும் போரிட்டு வெற்றி பெற்று விளங்குகின்றதாம்.

மேனி என்று உடலுக்கும் நிறத்துக்கும் பேர்; இங்கு நிறத்தைச் சொல்லுகிறது. பசுமை நிறமானது;

(மீதிட்டு மிகப் பகைப்ப-மிகப் பகைத்து மீதிட என்று விகுதி மாற்றிக் கூட்டி யுரைக்கலாம்.)
என்னுடைய சோபையின் முன்னே உங்களுடைய சோபை எப்படி விளங்கலாம் என்று போராடித் தானே மேற்பட்ட தாயிற்றாம்.
மீதிடுதல்-வெற்றி பெறுதல் என்னலாம்.

ஆக இவ்வளவும் எம்பெருமானுடைய திவ்ய சோபைகளை வருணித்தாராயிற்று.
இனி பள்ளி கொள்ளுமழகைப் பேசுகிறார்.

க்ஷீர ஸாகர மத்தியில் திருவனந்தாழ்வான் மேல் துயில் கொண்டருளி,
சிவன் பிரமன் இந்திரன் முதலான தேவர்களால் தொழப்படுமவனே!
தாமரை பூத்த திரு நாபியை யுடைய ஸர்வேச்வரனே!
பண்டொரு கால் மாவலி பக்கல் நிரேற்று மூவுலகுமளந்தவனே! ஜய விஜயீ பவ-என்றாராயிற்று.

திருமேனி யழகிலும் துயில் கொண்ட அழகிலும் இவ்வாழ்வார் நெஞ்சைப் பறி கொடுத்தாராகையாலே
ஒரு வினை முற்றோடே பாசுரத்தை முடிக்க மாட்டாமல்
“மூவுலகளந்த சேவடியோயே!” என்று கண்ணாஞ் சுழலையிட்டுக் கிடக்கிறார்.

நஞ்சு+வினை-நச்சு வினை;
சத்துருக்கள் மேல் விஷத்தை உமிழும் தொழிலை யுடையவனிறே திருவனந்தாழ்வான்.

கவர் தலை-கப்புவிட்டுக் கிளர்கின்ற தலைகளை யுடைய என்று சப்தார்த்தம்;
பலபல தலைகளை யுடைய என்பது தார்ப்பரியம்.

அமளி-படுக்கை.
அறி துயில்-யோக நித்திரை.
சேவடியோய்-சேவடியோன் என்பதன் விளி.

————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ திருவரங்கம் திருக் கோயிலின் பெருமை மிகு வரலாறு–ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ. கிருஷ்ணாமாசார்யர் ஸ்வாமிகள்–

February 24, 2021

திருவரங்கத்தை பெரிய கோயில் என்றே குறிப்பிடுவர் பெரியோர்கள்.
இங்கே பள்ளி கொண்டு அருள்பவன் “பெரிய பெருமாள்” என்று அழைக்கப்படுகிறார்.
அவர் பத்தினியும் “பெரிய பிராட்டியார்” என்று அழைக்கப்படுகிறார்.
மதியம் ஸமர்ப்பிக்கப்படும் தளிகைக்கு “பெரிய அவசரம்” என்று கூறுகின்றனர்
இங்கு நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்கு “பெரிய திருநாள்” என்ற பெயர் வழங்குகிறது.
இராமானுசருக்கு பிறகு திருக்கோயில், நிர்வாகம் முறையை சீரமைத்த ஸ்ரீமணவாள மாமுனிகளை “பெரிய ஜீயர்” என்று கொண்டாடுகிறோம்.

ஏழு திருச்சுற்றுகளையும், அடைய வளஞ்சான் திருமதிலையும் உடைய ஒரே கோயில் திருவரங்கமே ஆகும்.
அடையவளந்தான் திருசுற்றின் நீளம் 10,710 அடிகள் ஆகும்.
அனைத்து மதிள்களின் மொத்த நீளம் 32592 அடிகள் அல்லது 6 மைல்களுக்கும் மேல் ஆகும்.
திருவரங்கம் பெரிய கோயில் மொத்தம் 156 சதுர ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.
திருவரங்கநாதன் திருவடிகளில் காவிரி ஆறு திருவரங்கத்தின் இரு மருங்கிலும் பாய்ந்து சென்று திருவடியை வருடிச் செல்கின்றது.
தென்கிழக்கு ஆசியாவிலேயே 216 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் 13 நிலைகள் கொண்டது இந்த திருத்தலத்தில் தான் அமைந்துள்ளது.

18 தொகுப்புகள் கொண்டதும், 7200 பக்கங்கள் நிறைந்துள்ளதுமான கோயிலொழுகு
திருவரங்க கோயிலுக்கு ஓர் அரணாக அமைந்துள்ளது. திருவாய்மொழியும், ஸ்ரீராமாயணமும் ஆகிய இரு நூல்கள்
இருக்கும் வரை ஸ்ரீவைஷ்ணவத்தை யாரும் அழிக்க முடியாது,
‘என் அப்பன் அறிவிலி’ என்று 2-ம் குலோத்துங்கனின் (ஆட்சி ஆண்டு 1133-1150) மகனான 2-ஆம் ராஜராஜன் (ஆட்சி ஆண்டு 1146-1163) கூறினானாம்.
இவனுக்கு வீழ்ந்த அரிசமயத்தை மீண்டெடுத்தவன் என்ற விருது பெயர் அமைந்து உள்ளது.
அதுபோல 7200 பக்கங்கள் கொண்ட கோயிலொழுகு இருக்கும் வரை வரலாற்றிற்கு புறம்பாகவோ,
குருபரம்பரை செய்திகளை திரித்தோ, திருவரங்கம் பெரியகோயிலின் வரலாற்றை அவரவர் மனம் போனபடி திரித்துக் கூறமுடியாது.

கி.பி. 1310-ல் மாலிக்காபூர் திருவரங்கத்தின் மீது படையெடுத்தான். அதற்குக் காரணம் 2-ஆம் சடையவர்மன்
சுந்தர பாண்டியன் (ஆட்சி ஆண்டு 1277-1294) தனது ஆட்சிக் காலத்தில் ப்ரணாவாகார விமானத்திற்கு பொன்வேய்ந்தான்.
பொன் வேய்ந்த பெருமாள் மற்றும் சேரகுல வல்லி ஆகியோருடைய பொன்னாலான விக்ரஹங்களை
சந்தன மண்டபத்தில் பிரதிஷ்டை செய்திருந்தான்.

இரண்டாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் பொன்னாலான கொடிமரம் மற்றும் கொடியேற்ற மண்டபத்தில்
அமைந்துள்ள மரத்தாலான தேருக்கு பொன் வேய்ந்தான். இவற்றைத் தவிர பெருமாளுக்கும், தாயாருக்கும்
துலாபாரம் (கஜதுலாபாரம்) சமர்ப்பித்து ஏராளமான தங்க நகைகளை அளித்து இருந்தான்.

வ்யாக்ரபுரி என்றழைக்கப்படும் சிதம்பரத்தை கொள்ளையடித்த மாலிக்காஃபூரிடம் சில ஒற்றர்கள் திருவரங்கத்தில்
ஏராளமான செல்வம் குவிந்து கிடப்பதாக கூறினர். நாகப்பட்டினம் வழியாக மேற்கு கடற்கரைக்கு செல்லவிருந்த
மாலிக்காஃபூர் தன் திட்டத்தை மாற்றிக்கொண்டு யாரும் எதிர்பாராத வேளையில் கோயிலைத் தாக்கினான்.
அளவிட முடியாத அளவிற்கு செல்வத்தை சூறையாடினான். அப்போது வெள்ளையம்மாள் என்ற தாஸி மாலிக்காஃபூரின்
படைத்தலைவனை தன் அழகால் மயக்கி தற்போதைய வெள்ளைக் கோபுரத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்று
அந்த படைத்தலைவனை கீழே தள்ளிக் கொன்றாள். அவளும் கீழே விழுந்து உயிர் விட்டாள்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வெள்ளை வண்ணத்தில் கோபுரம் மாற்றம் பெற்று “வெள்ளைக் கோபுரமாயிற்று”.

புராதனமான யுகம் கண்ட பெருமாளான அழகிய மணவாளன் மீண்டும் திருவரங்கத்திற்கு எழுந்தருளியதால்
அவருக்குப் பதிலாக திருவாராதனம் கண்டருளிய புதிய அழகிய மணவாளன் திருவரங்க மாளிகையார்
என்ற பெயரில் யாக பேரராக இன்றும் அழகிய மணவாளனுக்கு இடது திருக்கரப் பக்கத்தில் இன்றும் எழுந்தருளி உள்ளார்.
யாக சாலையில் ஹோமங்கள் நடைபெறும் போது யாக பேரரான திருவரங்க மாளிகையார் எழுந்தருள்வதை இன்றும் காணலாம்.
அர்ச்சுன மண்டபத்திற்கு அழகிய மணவாளன் எழுந்தருளும் போதெல்லாம் துலுக்க நாச்சியாருக்கு
படியேற்ற ஸேவை அரையர் கொண்டாட்டத்துடன் நடைபெறும். இது துளுக்க நாச்சியாருக்காக நடைபெறும் ஓர் மங்கள நிகழ்ச்சியாகும்.

கி.பி. 1310 ஆம் ஆண்டு படையெடுப்புக்குப் பிறகு கி.பி. 1323ஆம் ஆண்டு முகமது பின் துக்ளக் என்று
அறியப்படும் உலூக்கானுடைய படையெடுப்பு நடைபெற்றது. கோயிலொழுகு தரும் செய்திகளின் அடிப்படையில்
அந்த நிகழ்ச்சிகள் தொகுத்து அளிக்கப்படுகின்றன. அழகிய மணவாளன் பங்குனி ஆதி ப்ருஹ்மோற்சவத்தில் 8ஆம் திருநாளன்று
கொள்ளிடக் கரையில் அமைந்திருந்த பன்றியாழ்வார் (வராகமூர்த்தி) ஸந்நிதியில் எழுந்தருளி இருந்தார்.
உலூக்கான் படைகளோடு திருவரங்கத்தை நோக்கி வருவதை ஒரு ஈரங்கொல்லி (சலவைத் தொழிலாளி)
பிள்ளைலோகாச்சாரியரிடம் தெரிவித்தான்.

உலூக்கானுடைய படைவீரர்கள், மருத்துவமணையாய் இயங்கி வந்த தன்வந்த்ரி ஸந்நிதியை தீக்கிரையாக்கினர்.
இதன் நோக்கமாவது மருத்துவர்கள் யாரும் காயம் அடைந்த திருமாலடியார்களுக்கு உரிய மருத்துவ பணியை
மேற்கொள்ளக் கூடாது என்பதாகும். தன்வந்த்ரி ஸந்நிதி தீக்கிரையாக்கப்பட்ட செய்தியும்,
தன்வந்த்ரி ஸந்நிதி புனர் நிர்மாணம் செய்யப்பட்டதையும், அங்கே ஆதூரசாலை (மருத்துவமணை) செயல்பட துவங்கியதையும்,
16ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட இறந்த காலம் எடுத்த உத்தம நம்பி காலத்து கல்வெட்டு எண்
(வீரராமநாதன் காலத்திய கல்வெட்டு எண் – 226 (அ.கீ. Nணி: 80 ணிஞூ -1936-1937) தெரிவிக்கின்றது.

திருவாய்மொழிப்பிள்ளை தனது ஆசார்யனான கூரக்குலோத்தும தாஸரை திருப்பள்ளிப்படுத்தி,
‘திருவரசு’ என்ற நினைவு மண்டபமும் கட்டி வைத்தார்.
சிக்கில் கிடாரம் செல்பவர்கள் கூரக்குலோத்துமதாஸர் திருவரசை கண்டு ஸேவிக்கலாம்.
மேலும் திருவாய்மொழிப்பிள்ளை வாஸம் செய்த திருமாளிகையின் மிகப் பெரியதான அடித்தளத்தைக் காணலாம்.
இந்த சிக்கில் கிடாரத்தில் தான் ஸ்ரீமணவாள மாமுனிகளின் திருத்தகப்பனாரான திருநாவீருடைய தாதர் அண்ணர் வாஸம் செய்து வந்தார்.

முந்திரிக்காடு என்னும் பள்ளத்தாக்கில் மிக ஆழமான பள்ளம் தோண்டி அந்த நிலவறைக்குள்
அழகிய மணவாளனையும், நம்மாழ்வாரையும் எழுந்தருளப் பண்ணி அங்கேயே திருவாராதனம் கண்டருளினர்.
அந்தப் பள்ளத்தின் மேலே மரப்பலகைகளை வைத்து, செடி, கொடிகளை அதன்மேல் இட்டு, சில ஆண்டுகள்
அழகிய மணவாளனையும், நம்மாழ்வாரையும் காப்பாற்றி வந்தனர்.
நம்மாழ்வாருடன் முந்திரிக் காட்டிற்கு வந்த தோழப்பர் என்பார் ஒருநாள் நிலவறைக்கு சென்று திருவாராதனம் ஸமர்ப்பித்த பிறகு
மேலிருந்து கீழே விடப்பட்ட கயிற்றினை பிடித்துக் கொண்டு மேலே வரும்போது கயிறு அறுந்து கீழே விழுந்த தோழப்பர் பரமபதித்தார் (இறந்தார்).
இந்த செயலின் அடிப்படையில் தோழப்பர் வம்சத்தவர்களுக்கு ஆழ்வார் திருநகரியில் “தீர்த்த மரியாதை” அளிக்கப்படுகிறது.
சில ஆண்டுகள் கழித்து அழகிய மணவாளனையும், நம்மாழ்வாரையும் திருக்கணாம்பி என்ற மலைப்பிரதேசத்திற்கு எடுத்துச் சென்றன.
அங்கே இருந்த வரதராஜ பெருமாள் திருக்கோயிலினுள் எழுந்தருளப் பண்ணினர்.
சுமார் 10 ஆண்டுகள் திருக்கணாம்பியில் அழகிய மணவாளனும், நம்மாழ்வாரும் எழுந்தருளி இருந்தனர்.
இந்தத் திருக்கணாம்பி எனும் ஊர் தற்போதைய மைசூர் சத்தியமங்கலம் மலைப்பாதையில் நடுப்பகுதியில் அமைந்துள்ளது.
நம்மாழ்வார் எழுந்தருளிய இடத்தை வட்டமணை இட்டு, இன்றும் அடையாளம் காண்பிக்கிறார்கள்.

திருவாய்மொழிப்பிள்ளை ராமானுஜ சதுர்வேதி மங்கலத்தை நிர்மாணித்து அங்கே இராமானுசரை ப்ரதிஷ்டை செய்தார்.
வேதம் வல்ல திருமாலடியார்களை அந்த சதுர்வேதி மங்கலத்தில் குடியமர்த்தினார்.
எம்பெருமானார் ஸந்நிதியில் கைங்கர்யங்களை மேற்பார்வை செய்வதற்காக ஜீயர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.
இந்த எம்பெருமானார் ஜீயர்மடத்தின் 7வது பட்டத்தை அலங்கரித்த ஜீயர் ஸ்வாமியிடம் கி.பி. 1425ஆம் ஆண்டு
ஸ்ரீமணவாள மாமுனிகளின் சந்நியாஸ ஆச்ரமத்தை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஹோபில மடத்தை அலங்கரித்த முதல் ஜீயரிடம் ஸ்ரீமணவாள மாமுனிகள் துறவறத்தை ஏற்றுக் கொண்டார்
என்று கால ஆராய்ச்சியின் அடிச்சுவடு கூட தெரியாதவர்கள் கூறி வருகிறார்கள்.
அஹோபில மடம் விஜயநகர துளுவ வம்சத்து, கிருஷ்ணதேவராயர் காலத்தில் தான் தோன்றியது.
கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக் காலம் 1509-1529 ஆகும். மணவாள மாமுனிகள் சந்நியாஸ ஆச்ரமம் ஏற்றுக்கொண்டது 1425.
ஆகவே அஹோபில மடத்தின் முதல் ஜீயர் ஸ்ரீமணவாள மாமுனிகளுக்கு சந்நியாஸ ஆச்ரமம் அளித்தார் என்பது உண்மைக்குப் புறம்பான செய்தியாகும்.

கி.பி. 1323ஆம் ஆண்டு நடந்த உலூக்கான் படையெடுப்பின் விளைவாக தமிழகம் முழுவதும்
காஞ்சிபுரத்தைத் தவிர முகமதியர்களின் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது.
உலூக்கான் தனது அந்தரங்கத் தளபதியான ஷரீப் ஜலாலுதீன்அஸன்ஷாயிடம் தமிழகத்தை ஆட்சி செய்யும் பொறுப்பை
ஒப்படைத்து விட்டு டில்லிக்கு விரைந்து சென்றான்.
48 ஆண்டுகள் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தனர் மதுரை சுல்தான்கள்.
அவர்களை எதிர்த்துப் போரிட்ட ஹொய்சாள மன்னனான வீர வல்லாளன் போரில் கொல்லப்பட்டான்.
அவனது இறந்த உடலில் வைக்கோலைத் திணித்து மதுரையில் உள்ள தனது கோட்டை வாசலில் தொங்க விட்டான்.
சுல்தான்களை எதிர்ப்பவர்கள் இந்த கதியைத் தான் அடைவார்கள் என்று முரசு கொட்டி தெரிவித்தான்.
மதுரை செல்பவர்கள் கோரிப்பாளையம் என்ற பேருந்து நிறுத்தத்தை காண்பார்கள்.
அங்கே தான் சுல்தான்களின் அரண்மனை இருந்தது. வீரவல்லாளனின் உடல் தொங்க விடப்பட்டிருந்ததால்
அந்த இடம் கோரிப்பாளையம் என அழைக்கப்படலாயிற்று. (கோரி என்ற ஹிந்தி சொல்லுக்கு காணச் சகிக்க இயலாத என்பது பொருள்).

தமிழகம் முழுவதும் மதுரை சுல்தான்களுடைய கொடுங்கோல் ஆட்சி நடைபெற்று வந்தது.
கி.பி. 1336ஆம் ஆண்டு துங்கபத்திரை நதிக்கரையில் சங்கம குலத்தைச் சார்ந்த ஹரிஹரர் அவருடைய தம்பி புக்கர்
ஆகிய இருவரும் சிருங்கேரி சாரதா பீடத்தைச் சார்ந்த வித்யாரண்யர் என்பாருடைய ஆசியுடன் விஜயநகரப் பேரரசை தோற்றுவித்தனர்.
அவர்களிடம் இருந்தது ஒரு சிறு படையே. இந்த படைபலத்தைக் கொண்டு மதுரை சுல்தான்களை எதிர்த்துப் போராடமுடியாது
என்ற எண்ணத்துடன் தமது படைபலத்தை பெருக்கலாயினர்.
விஜயநகர பேரரசின் தோற்றத்திற்குப் பிறகு சில ஆண்டுகளில் ஹரிஹரர் இறந்து விட்டார்.
அவருக்குப் பிறகு அவரது தம்பியான முதலாம் புக்கர் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார்.
முதலாம் புக்கரின் மூத்த குமாரன் வீரக்கம்பண்ண உடையார் ஆவர். புக்கரின் ஆணைப்படி கி.பி. 1358ஆம் ஆண்டு 36 ஆயிரம்
படை வீரர்களோடு தெற்கு நோக்கிப் புறப்பட்டான் வீரக்கம்பண்ண உடையார்.
இதனிடையே திருப்பதிக் காடுகளில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த அழகிய மணவாளனை செஞ்சி மன்னனான கோபணாரியன்
திருமலையில் ஸ்ரீவெங்கடேச பெருமாள் ஸந்நிதியில் முகப்பு ராஜகோபுரத்திற்கு உட்புறம் உள்ள மண்டபத்தில் கொண்டு சேர்த்தான்.
திருமலையிலிருந்து திருவரங்கம் நோக்கி புறப்பட்ட போது செஞ்சிக்கு அண்மையில் உள்ள
சிங்கபுரத்திற்கு (தற்போதைய பெயர் சிங்கவரம்) அழகிய மணவாளன் எழுந்தருளினார்.
அங்கே அழகிய மணவாளனுக்கு அத்யயன உத்வசத்தை கொண்டாடினர்
திருமலையில் அழகிய மணவாளன் எழுந்தருளியிருந்த மண்டபமே தற்போது “ரெங்க மண்டபம்” என்று அழைக்கப்பட்டு வருகிறது.

செஞ்சி மன்னனான கோபணாரியரின் தலைமையில் ஒரு சிறு படையோடு திருவரங்கம் நோக்கிப் புறப்பட்டார்.
அப்போது, சுல்தான்களுடனான போர் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டு இருந்ததால்
சில நாட்கள் கொள்ளிடம் வடகரைக்கு வடக்கே ஒரு கிராமத்தில் எழுந்தருளியிருந்தார்.
அந்த கிராமமே தற்போது அழகிய மணவாளன் கிராமம் என்று அழைக்கப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் பழுதுபட்ட நிலையில் சில நாட்கள் அழகிய மணவாளன் தங்கியிருந்த திருக்கோயில்
புனர் நிர்மாணம் செய்யப்பட்டு சம்ப்ரோஷணமும் (கும்பாபிஷேகம்) செய்யப்பட்டது.
இந்த ஊரில் ஓடும் ராஜன் வாய்க்கால் கரையில் பல நூற்றாண்டுகளாக திருமாலடியார்கள் 1323ஆம் ஆண்டு
படையெடுப்பின் போது உயிர்நீத்த திருமாலடியார்களுக்கு எள்ளும், நீரும் இறைத்து பொதுமக்கள் “தர்ப்பணம்” செய்கிறார்கள்.
தர்ப்பணம் எனும் நீத்தார்கடனை செய்து வருகின்றனர் ஊர் பொதுமக்கள்.

கண்ணனூர் போரில் வீரக்கம்பண்ணர் வெற்றிக்கொண்ட பின் 48 ஆண்டுகள் கழிந்து அழகிய மணவாளன்
உபயநாச்சிமார்களோடும், ஸ்ரீரங்க நாச்சியாரோடும் திருவரங்கம் திருக்கோவிலை சென்று அடைந்தார்.
அந்த நாள் கி.பி. 1371ஆம் ஆண்டு பரீதாபி வருடம் வைகாசி மாதம் 17ஆம் நாள் ஆகும்.
(வைகாசி 17 என்பது ஜூன் மாதம் 2 அல்லது 3ஆம் தேதியைக் குறிக்கும்.)

அழகிய மணவாளனை தற்போது பவித்ரோற்சவம் கண்டருளும் சேரனை வென்றான் மணடபத்தில்
கோபணாரியன், சாளுவ மங்கு போன்ற படைத்தலைவர்கள் எழுந்தருளப் பண்ணினர்.
திருவரங்க மாநகரில் பலர் கொல்லப்பட்டதாலும் மற்றும் ஆசார்ய புருஷர்களும், முதியோர்களும் அச்சம் கொண்டு
திருவரங்க மாநகரைத் துறந்து, வெளி தேசங்களுக்குச் சென்று வாழ்ந்து வந்தனர்.
பராசர பட்டர் வம்சத்வர்களும், முதலியாண்டான் வம்சத்தவர்களும் வடதிசை நோக்கி அடைக்கலம் தேடிச்சென்றனர்.
பெரிய நம்பி வம்சத்தவர்கள் தெற்கு நோக்கி அடைக்கலம் தேடிச் சென்றனர்.
தற்போது திருவரங்க நகரை வந்தடைந்த அழகிய மணவாளன் உடன் 1323ஆம் வருடம் அழகிய மணவாளன்
உடன் சென்றவர்களில் மூவரே மிஞ்சியிருந்தனர். அவர்களாவர் திருமணத்தூண் நம்பி, திருத்தாழ்வரை தாஸன் மற்றும் ஆயனார்.

அழகிய மணவாளனுக்கு திருமஞ்சனம் ஸமர்ப்பிக்கப்பட்டு அந்த ஈரங்கொல்லிக்கு ஈர ஆடை தீர்த்தம்
ஸாதிக்கப்பட்டது (கொடுக்கப்பட்டது). அதைப் பருகியவுடன் அந்த ஈரங்ககொல்லி
“இவரே நம்பெருமாள், இவரே நம்பெருமாள்” என்று கூவினான்.
அன்றிலிருந்து அழகிய மணவாளனுக்கு “நம்பெருமாள்” என்ற பெயர் அமையப்பெற்றது.
ஈரங்கொல்லி நம்பெருமாள் என்று மகிழ்ச்சி பொங்க கூறிய இந்த பெயர் நிலைத்து விட்டது.

நம்பெருமாள் திருவரங்கத்திற்கு மீண்டும் வந்து ப்ரதிஷ்டை கண்டருளிய நிகழ்ச்சியை மீண்டு வந்து
ப்ரதிஷ்டை கண்டருளிய நிகழ்ச்சியை ராஜ மகேந்திரன் திருச்சுற்றின் மேற்குப் பகுதியில் காணலாம்.
இந்தக் கல்வெட்டை தொல்லியல் துறை படியெடுத்து. ”South Indian Temple Inscription Volume 24″ – À R number 288 (A.R. No. 55 of 1892).

ஸ்வஸ்திஸ்ரீ: பந்துப்ரியே சகாப்தே (1293)
ஆநீயாநீல ச்ருங்கத் யுதி ரசித ஜகத் ரஞ்ஜநாதஞ்ஜநாத்ரே:
செஞ்ச்யாம் ஆராத்ய கஞ்சித் ஸமயமத நிஹத்யோத்தநுஷ்காந் துலுஷ்காந்
லக்ஷ்மீக்ஷ்மாப்யாம் உபாப்யாம் ஸஹநிஜநகரே ஸ்தாபயந் ரங்கநாதம்
ஸம்யக்வர்யாம் ஸபர்யாத் புநரக்ருத தர்ப்பணோ கோபணார்ய:

(புகழ் நிறைந்த கோபணார்யர் கறுத்த கொடுமுடிகளின் ஒளியாலே உலகை ஈர்க்கும் திருமலையிலிருந்து
ரங்க நாதனை எழுந்தருளப் பண்ணி வந்து தன் தலைநகரமான செஞ்சியில் சிறிதுகாலம் ஆராதித்து
ஆயுதமேந்திய துலுக்கர்களை அழித்து ஸ்ரீதேவி பூதேவிகளாகிய உபயநாச்சிமார்களோடு கூட
திருவரங்கப் பெருநகரில் ப்ரதிஷ்டை செய்து, சிறந்த திருவாராதனங்களை மறுபடி தொடங்கி வைத்தார்.)
இந்தக் கல்வெட்டை பிள்ளைலோகம் ஜீயர் தம்முடைய “யதீந்த்ர ப்ரணவ ப்ரபாவம்” என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

திருவரங்கத்தின் மீதான மூன்றாம் படையெடுப்பு கி.பி. 1328ஆம் ஆண்டு குரூஸ்கான் என்பவனால் நிகழ்த்தப்பட்டது.
ஏற்கெனவே கொள்ளையடிக்கப்பட்ட திருவரங்க மாநகரில் உலூக்கானால் எடுத்துச் சொல்லப்படாத பொருட்கள்
இவனால் கொள்ளையடிக்கப்பட்டன. இவனுடைய படையெடுப்பைப் பற்றிய மேலும் விவரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை.

அழகிய மணவாளன் 1371ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் நாள் திருவரங்க நகருக்கு 48 ஆண்டுகள் கழித்து
திரும்ப எழுந்தருளியதை ஒரு பெருவிழாவாகக் கொண்டாட வேண்டும்

————

திருவரங்கம் திருமதில்கள்:

1.பெரிய கோயிலின் ஏழு திருச்சுற்றுகட்கு அமைந்த பெயர்களையும் அவற்றை நிர்மாணித்தோர்
அல்லது செப்பனிட்டோர் பற்றிய குறிப்பினை இந்தப் பாடல் கூறுகின்றது.

மாட மாளிகை சூழ் திரு வீதியும் மன்னு சேர் திரு விக்கிரமன் வீதியும்
ஆடல் மாறன் அகளங்கன் வீதியும் ஆலி நாடன் அமர்ந்துறை வீதியும்
கூடல்வாழ் குலசேகரன் வீதியும் குலவி ராசமகேந்திரன் வீதியும்
தேடரிய தர்ம வர்மாவின் வீதியும் தென்னரங்கர் திருவாவரணமே.

இந்தப் பாடலை இயற்றியவர் யார் என்று அறிவதற்கில்லை.
கோயிலொழுகு “பூர்வர்கள் திருவரங்கம் திருப்பதியை இவ்வாறு அனுபவித்தார்கள்” என்று குறிப்பிடுகிறது.
திருக்கோயில் அமைப்பில் உத்தமோத்தம லக்ஷணமாக ஏழு பிரகாரங்கள் கொண்ட கோயிலைக் கொள்கிறார்கள்.
எந்த திருக்கோயிலுக்கும் அமைந்திராத பெருமை ஸ்வயம்வ்யக்த (தானாகத்தோன்றின) க்ஷேத்திரங்களுள்
தலைசிறந்ததான திருவரங்கம் ஸப்தபிரகாரங்களைக் கொண்டிருப்பது அதன் பெருமையைக் காட்டுகின்றது.

வரலாற்று அடிப்படை கொண்டு நோக்கின் அவை ஒன்றுக்கொன்று முரண்பாடாக அமைந்து உள்ளது.
ஆனால், புராதனமாக அமைந்திருந்த திருவீதிகளைப் பழுதுபார்த்துச் செப்பனிட்டவர்கள் பெயரால்
வழங்கப்படுகிறது என்று கொள்ள வேண்டும். இந்தப் பாடல் ஏழாம் திருச்சுற்றுத் தொடங்கி,
முதலாம் திருச்சுற்று வரை அமைந்துள்ள திருச்சுற்றுக்களின் பெயர்களைக் கூறுகின்றது.

ஏழாம் திருச்சுற்று – மாடமாளிகை சூழ்த் திருவீதி:
இந்தத் வீதிக்கு தற்போதைய பெயர் சித்திரை வீதி.
இந்த வீதியினைக் கலியுகராமன் திருவீதி என்றும் அழைப்பர். கலியுகராமன் என்று பெயர்கொண்ட
மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன் (கி.பி.1297-1342) இந்த வீதியைச் செப்பனிட்டான் என்று அறியப்படுகிறது.

ஆறாம் திருச்சுற்று – திருவிக்கிரமன் திருச்சுற்று,
ஐந்தாம் திருச்சுற்று, அகளங்கன் திருச்சுற்று – முதலாம் குலோதுங்கனுடைய மகன் விக்ரமசோழன் (கி.பி.1118-1135)
இவன் பெயரிலே இந்தத் திருவீதி அமைந்துள்ளது.
அடுத்த ஐந்தாம் திருச்சுற்றுக்கு அகளங்கன் திருவீதி என்று பெயரிடப்பட்டுள்ளது.
விக்கிரம சோழனுக்கு வழங்கிய சிறப்புப் பெயர்களில் அகளங்கன் என்பதுவும் ஒன்றாகும்.
இவனுக்கே உரியவையாய் வழங்கிய இரண்டு சிறப்புப் பெயர்கள் கல்வெட்டுகளிலும் விக்கிரம சோழன் உலாவிலும் காணப்படுகின்றன.
அவை, ‘தியாக சமுத்திரம்,’ ‘அகளங்கன்’ என்பனவாகும்.
இம்மன்னன் தன் ஏழாம் ஆட்சியாண்டில் திருவிடைமருதூர் சென்றிருந்த போது, அந்நகரைச் சார்ந்த
‘வண்ணக்குடி’ என்ற ஊரைத் தியாக சமுத்திர சதுர்வேதி மங்கலம் என்று பெயர் மாற்றித்
திருவிடை மருதூர் கோயிலுக்கு இறையிலி நிலமாக அளித்தான் என்று அவ்வூர்க் கல்வெட்டொன்று கூறுகிறது.
(ARE 272, 273 of 1907, 49 of 1931) (விக்கிரம சோழன் உலாவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. Ula-II, 431, 632.)

‘அகளங்கன்’ என்னும் சிறப்புப்பெயர் ஜயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணியில் காணப்படினும்
அதன் பாட்டுடைத் தலைவனான முதலாம் குலோத்துங்கனை குறிப்பதன்று.
(The Kalingattupparani calls Kulantaka Virudarajabhayankara, Akalanka, Abhaya and Jayadhara. Ref: The Colas – K.A.N.Sastri, p.330).
அது விக்கிரம சோழனுக்கே வழங்கிய சிறப்புப் பெயர் என்பது கல்வெட்டுகளால் நன்கு தெளிவாகிறது.
கல்வெட்டுகளில் குலோத்துங்கனுக்கு அப்பெயர் காணப்படவில்லை.
ஒட்டக் கூத்தர் தனது ‘விக்கிரமசோழன் உலாவில்,’ 152, 182, 209, 256, 284, முடிவு வெண்பா ஆகிய கண்ணிகளில்
விக்கிரமனை அகளங்கன் என்று கூறியிருப்பது கொண்டு, அப்பெயர் இவனுக்கே சிறப்புப் பெயராக வழங்கியது என்பதை அறியலாம்.
‘எங்கோன் அகளங்கன் ஏழுலகும் காக்கின்ற செங்கோல் கொடுங்கோல் சிலர்க்கென்றாள்’ என்று அவர் குறிப்பிடுவதால்
விக்கிரம சோழனே அகளங்கன் ஆவான். இவனது சிறப்புப் பெயரில் ஒரு திருச்சுற்றும்,
இயற்பெயரில் ஒரு திருச்சுற்றும் இவனே நிறுவினான் என்றும் கொள்வதே பொருத்தமுடையது.

திருவரங்கம் கோயிலில் விக்ரமசோழன் காலத்துக் கல்வெட்டுகள் பதினான்கு அமைந்துள்ளன.

பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த திருந்நெடுந்தாண்டகம் வியாக்யானத்தில் விக்ரமசோழனைப் பற்றிய
குறிப்பொன்று அமைந்துள்ளது – திருநெடுந்தாண்டகம் 25-ஆம் பாட்டு ‘மின்னிலங்கு’.
“விக்கிரம சோழ தேவன் எனும் அரசன் தமிழிலக்கியங்களில் மிகவும் ஈடுபாடுடையவன்.
சைவ வைணவப் புலவர்கள் பலர் அவனது சபையில் இருந்தனர். அவ்வப்போது அவரவர்களுடைய சமய இலக்கியங்களைப்
பற்றிக் கூறச் சொல்லிக் கேட்பதுண்டு. ஒரு சமயம் அவன், ‘தலைமகனைப் பிரிந்த வருத்தத்தோடு இருக்கிற
தலைமகள் கூறும் பாசுரங்கள் சைவ வைணவ இலக்கியங்களில் எப்படி இருக்கிறது? என்று கூறுங்கள் கேட்போம்” என்றான்;
உடனே சைவப் புலவர், சிவனாகிய தலைமகனைப் பிரிந்த நாயகி “எலும்பும் சாம்பலும் உடையவன் இறைவன்” என்று வெறுப்புத் தோற்ற,
சிவனைப் பற்றிக் கூறும் நாயன்மார் பாடல் ஒன்றைக் கூறினார்.
வைணவப் புலவரோ, எம்பெருமானைப் பிரிந்த வருத்தத்தில் பரகாலநாயகி கூறுகின்ற ‘மின்னிலங்கு திருவுரு’ என்ற
திருநெடுந்தாண்டகப் பாசுரத்தைக் கூறினார்.
இரண்டையும் கேட்ட விக்கிரமசோழ தேவன், ‘தலைமகனைப் பிரிந்து வருந்தியிருப்பவள், கூடியிருந்தபோது
தன் காலில் விழுந்த தலைமகனைப் பற்றிக் கூறும்போதும், ‘மின்னிலங்கு திருவுரு’ என்று
புகழ்ந்து கூறியவளே சிறந்த தலைமகள். ‘எலும்பும் சாம்பலும் உடையவன்’ என்று கூறிய
மற்றொரு தலைமகள் பிணந்தின்னி போன்றவள்” என்றானாம்.

இவனுடைய திருவரங்கக் கல்வெட்டுகளில் சிதம்பரத்தில் நடராஜருடைய விமானத்திற்குப்
பொன்வேய்ந்ததைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாம் இராசேந்திரன் புதல்வி மதுராந்தகியே முதலாம் குலோத்துங்கனின் மனைவி.
முதலாம் குலோத்துங்கனுடைய ஏழு புதல்வர்களில் விக்கிரமசோழன் நான்காமவன். (Ref: The Colas by K.A.N.Sastri, p.332).

நான்காம் திருச்சுற்று – ஆலிநாடன் திருச்சுற்று:
திருமங்கையாழ்வார் ஆடல்மா என்ற குதிரையின் மீதேறிச் சென்று பகைவர்களை வென்றார்.
பல திவ்யதேசங்களை மங்களா சாஸனம் செய்தருளி திருவரங்கத்திலே பல ஆண்டுகள் எழுந்தருளியிருந்து
திருமதில் கைங்கர்யங்களைச் செய்து வந்தார். அவரால் ஏற்படுத்தப்பட்ட திருமதிலுக்கு உட்பட்ட திருச்சுற்றிற்கு
ஆலிநாடன் திருவீதி என்று பெயர். பாட்டின் இரண்டாம் அடியில் ஆடல்மாறன் அகளங்கன் என்னும் சொற்றொடரில்
உள்ள ஆடல்மா என்ற சொல் ஆலி நாடன் அமர்ந்துறையும் என்ற சொல்லோடு கூட்டிக் கொள்ள வேண்டும்.

மூன்றாம் திருச்சுற்று – குலசேகரன் திருச்சுற்று :
குலசேகராழ்வார் தமது பெருமாள் திருமொழியில் முதன் மூன்று பத்துக்களாலே (30 பாசுரங்கள்) கொண்டு
திருவரங்கனை மங்களாசாஸனம் செய்துள்ளார்.
அணியரங்கன் திருமுற்றத்தை குறிப்பிடும் குலசேகராழ்வார், மூன்றாம் திருச்சுற்றான குலசேகரன் திருச்சுற்றினை
அமைத்தார் என்று கொள்வது பொருத்தம்.
மூன்றாம் பிரகாரத்தில் சேனை வென்றான் மண்டபம் கட்டி அந்தப் பிரகாரத்தினை நிர்மாணம் செய்தார்.

இரண்டாம் திருச்சுற்று – இராசமகேந்திரன் திருச்சுற்று:
இவன் முதலாம் இராசேந்திரனுடைய மூன்றாவது மைந்தன். இவனுடைய ஆட்சிக்காலம் கி.பி.1058-1062.
மும்முடிச் சோழன் என்ற பெயர் பெற்றவன்.
இராசமகேந்திரன், ஆகமவல்லனை (முதலாம் சோமேƒவரன்) முடக்காற்றில் புறமுதுகிட்டு ஓடும்படி
செய்த பெருவீரன் என்று, அவன் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் உணர்த்துகின்றன
பாடரவத் தென்னரங்கமே யாற்குப் பன்மணியால் ஆடவரப்பாயல் அமைத்தோனும்” என்னும்
விக்கிரம சோழன் உலா (கண்ணி – 21) அடிகளால் இவன் திருவரங்கநாதரிடம் அன்பு பூண்டு,
அப்பெருமானுக்குப் பொன்னாலும் மணியாலும் அரவணை ஒன்று அமைத்தான் என்பதும் அறியப்படுகின்றது.

முதலாம் திருச்சுற்று – தர்மவர்மா திருச்சுற்று: தர்மவர்மா என்ற சோழமன்னன் இந்தத் திருச்சுற்றினை அமைத்தான்
என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த மன்னனைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் நமக்கு கிடைக்கவில்லை.

———-

ஸ்ரீரங்கராஜஸ்வதவம் பூர்வ சதகத்தில் (35) ஸ்ரீபராசர பட்டர் கோயிலைச் சுற்றி ஸப்த பிரகாரங்கள் இருப்பது
ஸப்த சாகரங்களை ஒக்கும் என்று அருளிச் செய்துள்ளார்.

ப்ராகாரமத்யாஜிரமண்டபோக்த்யா ஸத்வீபரத்நாகர ரத்நசைலா
ஸர்வம்ஸஹா ரங்கவிமாநஸேவாம் ப்ராப்தேவ தந்மந்திரமாவிரஸ்தி >

(யாதொரு ஸ்ரீரங்க மந்திரத்தில் திருமதிள்கள், இடைகழி, திருமண்டபங்க ளென்னும் வியாஜத்தினால்
ஸப்த த்வீபங்களோடும் ஸப்த ஸாகரங்களோடும் மஹாமேருவோடுங் கூடின பூமிப் பிராட்டியானவள்
ஸ்ரீரங்கவிமான ஸேவையை – அடைந்தனள் போலும்; – அந்த ஸ்ரீரங்க மந்திரம் கண்ணெதிரே காட்சி தருகின்றது.)
ஸ்ரீரங்கமந்திரம் பூமிப்பிராட்டி போன்றிருக்கிறதென்கிறார். ஸ்ரீரங்க விமானத்தை ஸேவிப்பதற்காகப்
பூமிப்பிராட்டி தன் பரிவாரங்களோடு இங்கு வந்து சேர்ந்திருக்கிறாள் போலும்.
கடல்களும் கடலிடைத்தீவுகளும் சிறந்த மலைகளும் பூமிப்பிராட்டியின் பரிவாரங்களாம்.
கோயிலைச்சுற்றி ஸப்தப்ராகாரங்கள் இருப்பது ஸப்த ஸாகரங்களை ஒக்கும்;
ஒவ்வொரு திருமதிலுக்கும் இடையிலுள்ள ப்ரதேசம் ஸப்த த்வீபங்கள்போலும். திருமண்டபங்கள் ரத்நபர்வதங்கள் போலும்.
ஆக இப்பரிவாரங்களுடனே பூமிப்பிராட்டி வந்து சேர்ந்து ஸ்ரீரங்க விமானஸேவையைப் பெற்றிருப்பதுபோல்
மந்திரம் தோன்றுகின்ற தென்றாராயிற்று.

————-

நிஹமாந்த மஹா தேசிகன் அருளிச் செய்துள்ள ‘ஹம்ஸஸந்தேஸம்’ என்னும் நூலில்
‘ஸ்ரீரங்கம் என்னும் பெயர் பெரிய பெருமாள் இங்கு எழுந்தளிய பிறகு ஏற்பட்டது.
அவர் இவ்விடத்திற்கு வருமுன் சேஷபீடம் என்ற பெயர் இவ்வூருக்கு வழங்கி வந்தது.
சந்திரபுஷ்கரணிக்கு அருகில் அச்சேஷபீடம் அமைந்திருந்தது. ஸ்ரீரங்க விமானம் அங்கு வந்ததற்குப் பின்
ஸ்ரீரங்கம் என்ற பெயர் ஏற்பட்டது” போன்ற செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

————-

ஸ்ரீ ராமாநுஜரைப் பற்றி தனிப்பாடல்கள் –

திக்கு நோக்கித் திரும்பித் திரும்பியே தேவராசர் தம் கோயிலை நோக்கியே
செக்கர் மேனி மிகப் பெருங் கைகளால் சோர்ந்த கண்கள் பனி நீர் தெளித்திட
மிக்க கோயில் பெருவழி தன்னிலே வேதம் வல்ல மறையோர்கள் தம்முடன்
புக்ககத்துக்குப் போகிற பெண்கள் போல் போயினார் பெரும் பூதூர் முனிவனார்

சந்ததியில்லா மனைமகள் போலே தடமுலையில்லா மடமகள் போலே
செந்தணலில்லா ஆகுதி போலே தேசிகனில்லா ஓதுகை போலே
சந்திரனில்லாத் தாரகை போலே இந்திரனில்லா உலகம் போலே
எங்கள் இராமானுசமுனி போனால் இப்புவி தான் இனி எப்படி யாமோ?

———–

1.மார்கழி மாத கிருஷ்ணபக்ஷ ஏகாதசி – உத்பத்தி ஏகாதசி
2.மார்கழி மாத சுக்லபக்ஷ ஏகாதசி – வைகுண்ட ஏகாதசி (மோக்ஷ ஏகாதசி)
3.தை மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – ஸபலா ஏகாதசி
4.தை மாத சுக்லபக்ஷ ஏகாதசி – புத்ரதா ஏகாதசி
5.மாசி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – ஷட்திலா ஏகாதசி (மோக்ஷ ஏகாதசி)
6.மாசி மாத சுக்லபக்ஷ ஏகாதசி – ஜயா ஏகாதசி
7.பங்குனி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – விஜயா ஏகாதசி (மோக்ஷ ஏகாதசி)
8.பங்குனி மாத சுக்லபக்ஷ ஏகாதசி – ஆமலகி ஏகாதசி
9.சித்திரை மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – பாபமோசனிகா ஏகாதசி
10.சித்திரை மாத சுக்லபக்ஷ ஏகாதசி – காமதா ஏகாதசி
11.வைகாசி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – வரூதினி ஏகாதசி
12.வைகாசி மாத சுக்லபக்ஷ ஏகாதசி – மோஹினி ஏகாதசி
13.ஆனி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – அபரா ஏகாதசி
14.ஆனி மாத சுக்லபக்ஷ ஏகாதசி – நிர்ஜலா ஏகாதசி
15.ஆடி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – யோகினி ஏகாதசி
16.ஆடி மாத சுக்லபக்ஷ ஏகாதசி – சயன ஏகாதசி( ஸ்ரீ மஹா விஷ்ணு சயனிக்கும் நாள்)
17.ஆவணி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி -காமிகா ஏகாதசி
18.ஆவணி மாத சுக்லபக்ஷ ஏகாதசி – புத்ரதா ஏகாதசி
19.புரட்டாசி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – அஜா ஏகாதசி
20.புரட்டாசி மாத சுக்லபக்ஷ ஏகாதசி – பத்மநாப ஏகாதசி
21.ஐப்பசி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – இந்த்ர ஏகாதசி
22.ஐப்பசி மாத சுக்லபக்ஷ ஏகாதசி – பாபாங்குசா ஏகாதசி
23.கார்த்திகை மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – ரமா ஏகாதசி
24.கார்த்திகை மாத சுக்லபக்ஷ ஏகாதசி – பிரபோதினி ஏகாதசி
25.கமலா ஏகாதசி

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ. கிருஷ்ணாமாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..

ஸ்ரீ அழகிய மணவாளன்–ஸ்ரீ கோபுரப்பட்டி ஸ்ரீ பால சயனப் பெருமாள்-

February 24, 2021

ஸ்ரீ அழகிய மணவாளன்’ எனப் பெயர்பெற்ற அரங்கன் தான் சிறுவன் வடிவில் சென்று பிரசாதம் வழங்கியுள்ளான்
என உணர்ந்து கொண்ட ராமாநுஜர்,“நான் யாரையும் அனுப்பவில்லை.
‘பூதப்ருத்’ என்ற திருநாமத்துக்கு எல்லா உயிர்களுக்கும் உணவளிப்பவன் என்று பொருள்.
‘பூதப்ருதே நம:’ என ஜபம் செய்த உமக்கு ‘பூதப்ருத்’ ஆன அரங்கன், தானே வந்து சத்துள்ள உணவளித்து
மெலிந்திருந்த உங்களை இன்று நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வைத்திருக்கிறான்!” என அந்த ஏழையிடம் சொல்லி,
அரங்கனின் லீலையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்.
“பூதப்ருதே நம:” என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் ஆறாவது திருநாமத்தை ஜபிக்கும்
அடியார்களுக்கெல்லாம் அரங்கனே நல்ல உணவளித்து அவர்களைச் சத்துள்ளவர்களாக ஆக்கிடுவான்.
இதுவே ராமாநுஜர் காட்டிய சத்துணவுத் திட்டம்.

————

காவேரி-கொள்ளிடத்திற்கு இடையே ரங்கன் அனந்த சயனத்தில் இருப்பது போலவே மாற்றொரு ரங்கன்
பெருவளவன்-கம்பலாறு தீப கற்பத்தில் பள்ளி கொண்டிருக்கிறான்.
பெருவளவனாறு இப்போது பெருவளை வாய்க்காலாக சுருங்கி விட்டது.
கொல்லி மலையிலிருந்து புறப்பட்டு பெருக்கெடுத்து ஓடிய கம்பலாறு தடம் மாறி இன்று தடயம் மட்டுமே மிஞ்சி இருக்கிறது.
தற்சமயம் அங்கு தென்படுவது புள்ளம்பாடி வாய்க்கால் என அழைக்கப் படுகிறது.
கல்வெட்டுக்களில் புதுக்கிடையில் ஜல சயனத்துப் பெருமாள் ஸ்ரீ ஆதி நாயகப் பெருமாள் என்று இந்த ரங்கன்
அறியப்படுவதில் இருந்து பழைய கிடைக்கை திருவரங்கம் என்பதை உணர முடிகிறது.
இத்தலம் இருக்கும் ஊர், அழகிய மணவாளத்திற்கு அருகாமையில் உள்ள கோபுரப்பட்டி.
இந்த இரண்டு சிற்றூர் களுக்கிடையே சரித்திர தொடர்புகள் உண்டு.
இங்கு சலசலத்துக் கொண்டிருக்கும் பெருவள வாய்க்காலின் கரையில் தான் 12,000 பேர்களுக்கு ஒருசேர
ஆடி அமாவாசை அன்று திதி கொடுக்கப் பட்டு ஆதி நாயகப் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் இன்றும் நடக்கிறது.

மணச்சநல்லூரை கடந்து திருப்பைஞ்சலி செல்லும் வழியில் தற்செயலாக அழகிய மணவாளம் எனும் ஊரில் காரை நிறுத்தினேன்.
அது பல வகையில் மிகப் பெரிய அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். அதிகம் வீடுகள் இல்லாத அந்த கிராமத்தில்
பதினெட்டு அடி உயரத்தில் சுந்தர ராஜ பெருமாளின் திருமுக மண்டலம். இரண்டு அடிக்கு கீழே இரு தாயர்களும்.
குறுக்கு வழியில் நடந்து போனால் பத்து நிமிடத்தில் அடையக்கூடிய தொலைவில் தான் கோபுரப்பட்டி.
அளக்கும் படியை தலைக்கு வைத்து பால சயனத்தில் ரங்கன். ஆதி நாயகப் பெருமாள் எனும் திரு நாமம்.

திருவரங்க சரித்திரத்தின் ஏடுகளில் இடம் பெற்றவை இவ்விரு ஊர்களும்.
1323ல் உலுக் கான் படையெடுப்பில் ரங்கனை காக்கும் பணியில் உயிர் நீத்த பன்னிரண்டு ஆயிரம் வீர வைஷ்ணவர்களுக்கு
இங்கிருக்கும் ஓடைக் கரையில்தான் ஒவ்வொரு ஆடி அமாவாசை அன்று ஒரு சேர திதி கொடுக்கப் படுகிறது.
அது மட்டும் இந்த சிற்றூர்களின் புகழுக்கு காரணமல்ல. இங்கு தான் சுல்தான் படைகளின் வெறியாட்டத்திலிருந்து
தப்பி வந்தவர்கள் குடியேறி நாற்பத்தி எட்டு வருடங்களுக்கு பின்னால் மிக அசாத்தியமான கார்யங்களை செய்தார்கள்.
தம் முன்னோர்களின் அர்பணிப்புகளை நினைத்தும் வருவோரிடம் எடுத்துரைத்தும் இன்றும் பெருமை கொள்கிறது இக்கிராமங்கள்.

யார் இந்த 12,000 பேர்? எதற்காக ஒரே நாளில் பிதுர் கிரியை?
இதை அறிய சுமார் 700 ஆண்டுகள் பின் நோக்கி செல்ல வேண்டும். வாருங்கள், போவோம்.

1323ம் வருடம்-திரு அரங்கம் அரண்டு கிடக்கிறது. புயலென சீறிப் பாய்ந்து வரும் டெல்லி சுல்தானின் படைகள்
வழி எங்கும் எதிரிப் போர் வீரர்கள் மட்டுமல்லாது சாதாரண மக்களையும் ரத்த வெறி கொண்டு வேட்டையாடி,
ரத்தினங்களை கொள்ளையடித்து, மாபெரும் நகரங்களை நிர்மூலமாக்கி, தீக்கிரையிட்டு இடும் காடுகளாக்கி
இப்போது ரங்க செல்வத்தை குறி வைத்து வந்து கொண்டிருப்பதாக செய்திகள் வந்ததே அதற்கு காரணம்.

ரங்கன் கோவில் வாசலில் கூட்டம். பிள்ளை லோகாச்சார்யர் தலைமை.
‘குலசேகரன் வழியின் மேல் கல் சுவர் எழுப்பி கருவறையில் பள்ளி கொண்டிருக்கும் ரங்கனை மறைத்து விடுவோம்.
நான், உற்சவர் அழகிய மணவாளனை எடுத்துக் கொண்டு தெற்கு நோக்கி செல்கிறேன்.
விருப்பம் இருப்பவர்கள் என்னுடன் வரலாம். சிறு குழுவாக புறப்படுவோம். நிலைமை சரியானவுடன் அரங்கம் திரும்புவோம்.
என்ன சொல்கிறீர்கள்?’. ‘வாழ்வோ, சாவோ எதுவாயினும் சரி, ரங்கனை பிரியோம், ரங்கத்தை விட்டு செல்ல மாட்டோம்’ என
சூளுரைத்து ஒரு கூட்டம் சேருகிறது. (கட கட வென்று பெரிதாகி அடுத்த சில தினங்களில் 12,000 பேர் அங்கேயே தங்கி விடுகின்றனர்).
‘சரி, இந்த இரு பிரிவிலும் சேராத குடும்பங்கள்
திருப்பாச்சில், கோவர்த்தனக்குடி, திருவரங்கப்பட்டி, அழகிய மணவாளம், கோவிந்தபுரம் ஆகிய பகுதிகளில் குடியேரட்டும்’ என முடிவாகிறது.

ரங்கன் கோவிலை காக்கும் பணியில் போரிட்டு மடிந்த அந்த 12,000 பேருக்கே
ஆடி அமாவாசை அன்று பெருவளை வாய்க்காலின் கரையில் ஒன்றாக திதி கொடுக்கப்படுகிறது. எப்பேர்பட்ட தியாகம் !

1311ல் மதுரை, சிதம்பரம், ஸ்ரீரங்கத்தை சூறையாடினானே கில்ஜியின் பிரதிநிதியான மாலிக் கபூர்
அவன் இயற் பெயர் என்ன தெரியுமா? – சந்த் ராம்.
திருவரங்கத்தை தாக்கி செல்வத்தையெல்லாம் கொள்ளை அடிக்கிறான். அதில் ரங்கன் சிலையும் உண்டு.
டில்லி சுல்தானுக்கு நாடு பிடிக்கும் ஆசையெல்லாம் கிடையாது. அவனுக்கு தெரியும்,
ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து ஒரு ராஜ்ஜியத்தை ஆள முடியாதென்று.
அவனுடைய நோக்க மெல்லாம் பொக்கிஷங்களை சூறையாடுவது தான். மாலிக் கபூர் டில்லி திரும்புகிறான்.
(நிற்க. இக்கட்டுரை பூலோக வைகுந்தமான ரங்கத்தை மட்டுமே மையமாக வைத்து எழுதப்பட்டது.
ஆகவே, மாலிக் கபூர் மற்றும் உல்லு கான் தரை மட்டமாக்கிய காஞ்சி, மதுரை போன்றவை இதில் சேர்க்கப்படவில்லை).
அலாஉதின் கில்ஜி அவற்றை பங்கிட்டு கொடுக்கும் போது ஒரு சிற்றரசனிடம் ரங்கன் சிலை சேருகிறது.
அவனுடைய புதல்வி சுரதானிக்கு ரங்கனை மிகவும் பிடித்து விடுகிறது.

இங்கு, திருக்கரம்பனூர் பெண் ஒருத்தி ரங்கனை காணாமல் உணவு உட்கொள்வதில்லை எனும் விரதத்தை மேற்கொண்டு வருகிறாள்.
சுல்தானியப் படைகளுடன் சென்று உளவறிந்து ரங்கம் திரும்பி செய்தி சொல்கிறாள்.
நாட்டியத்தில் தேர்ச்சி பெற்ற குழுவொன்று டில்லி செல்கிறது. பாதுஷா அவர்களின் திறமைகளில் மகிழ்ந்து நிறைய பரிசுகள் கொடுக்கிறார்.
அவர்கள், அவை வேண்டாம் ரங்கன் சிலைதான் வேண்டும் என்று சொல்கிறார்கள். பாதுஷாவும் அதற்கு அனுமதி தருகிறார்.
அந்தப் புரத்தில் நுழையும் அந்நாட்டிய பெண்கள், சுரதானி ரங்கன் பிரேமையில் இருப்பதை கண்டு
அவளுக்கு மயக்க மருந்து கலந்து கொடுத்து சிலையை கவர்ந்து செல்கின்றனர். மயக்கம் தெளிந்த சுரதானி அழுது புலம்புகிறாள்.
பாதுஷா நாட்டியக் குழுவை பிடித்து சிலையை மீட்டு வரச் சொல்கிறார். இதை முன்பே ஊகித்திருந்த அவர்கள் மாற்று வழியில் செல்கின்றனர்.
ரங்கம் வரை வந்த சுரதானி சிலையை காணாமல் மனமொடிந்து உயிர் விடுகிறாள்.
அதன் பின் ரங்கன் சிலை திருவரங்கம் திரும்புகிறது.
சுரதானியின் நினைவாக அவள் ஓவியம் இரண்டாவது பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் தீட்டப்பட்டு
இன்றும் அவள் துளுக்க நாச்சியாராக வணங்கப் படுகிறாள்.

(இச்சம்பவத்தை வைணவத்தை சீரமைத்த பிரதம ஆச்சார்யர் ராமனுஜரோடு இணைத்தும் கூட கதைகள் உண்டு.
ஆனால், அவர் வாழ்ந்த காலத்தில் டில்லி சுல்தானோ, தென்னக படையெடுப்போ கிடையாது).

அபரஞ்சி தங்கத்தால் ஆன அழகிய மணவாள உற்சவ விக்ரஹத்தையும், பொக்கிஷங்களையும் பத்திரமாக எடுத்துக் கொண்டு
ஒரு குழு ரங்கத்தை விட்டு போய்விட்டதென அறிந்த சுல்தான் படை உபதளபதி கண்ணில் பட்டவர்களையெல்லாம்
வெட்டி வீழ்த்துமாறு கட்டளை இட்டு அக்கூட்டத்தை பிடித்து வரவும் ஏற்பாடு செய்தான்.
நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த எம்பெருமான் அடியார்களில் ஒருத்தியான வெள்ளாயி அவன் முன்னே
பல மணி நேரங்கள் ஆடி அவனை மயக்கி, தனியில் காதல் மொழி பேசி, போதை கொள்ள வைத்து பின்னர்
கிழக்கு கோபுரத்திற்கு மேலே கூட்டிச் சென்று கீழே தள்ளி கொன்று தானும் குதித்து தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டாள்.
நாற்பத்தியெட்டு ஆண்டுகளுக்கு பின் ரங்கத்தில் முதல் முறையாக, வெற்றி வீரனாக காலடி எடுத்து வைத்த
விஜய நகர அரசன் கம்பணா அவள் செய்த த்யாகத்தையும் வீர சாகசத்தையும் போற்றி
அந்த எம்பெருமான் அடியாளின் நினைவாக அக்கோபுரத்துக்கு அவள் பெயரையே சூட்டினான்.

இவையெல்லாம் நடந்து முடிந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பின்னரே
காக்கத்திய மன்னன் பிரதபருத்திரனை அடக்கும் பொருட்டு உல்லு கான் தலைமையில் ஒரு பெரும் படை
வாரங்கல் கோட்டையை தாக்கி அப்போரில் வெற்றில் பெற்ற களிப்பில் மீண்டும் தமிழகத்தில் நுழைந்தது.

பிள்ளை லோகாசார்யரும், ஸ்வாமி வேதாந்த தேசிகரும் இச்சமயத்தில் தான் ரங்கனை காக்கும் பணியில் ஈடு பட்டனர்.
வேதாந்த தேசிகருக்கு அடுத்ததாக வருபவரே மணவாள மாமுனிகள்.

சுதர்சன ஆச்சார்யர்’தேசிகரே, யாம் பெற்ற செல்வங்கள் மூன்று. அதோ, தூணுக்கு பின்னால் இருளில்
மறைந்து நிற்கிறார்களே இரு சிறுவர்கள், அவர்கள் எம் புதல்வர்கள்.
மூன்றாவது, என் வஸ்திரத்தில் ஒளித்து வைத்திருக்கும் சுருதப் பிரகாசிகை*. இம்மூன்றையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்’
என்று கேட்டுக் கொள்கிறார். அவரது உயிர் கூட்டை விட்டு பிரிந்து ரங்கனின் திருவடிகளை அடைகிறது.

*சுருதப் பிரகாசிகை : பிரம்ம சூத்திரத்துக்கு ராமானுஜர் வடமொழியில் எழுதிய உரை தான் ஸ்ரீ பாஷ்யம்.
அந்நூலுக்கு நடாதூர் அம்மாள் எழுதிய விளக்கம் தான் சுருதப் பிரகாசிகை.
ரங்கனுக்கு நைவேத்யம் செய்யப்படும் பாலை சூடு சரியாக இருக்கிறதா என்று கொஞ்சம் தொண்டையில் இட்டுப் பார்ப்பாராம் அவர்.
அதன் காரணமாகவே அவருக்கு அப்பெயர் வந்ததாம்.

ஸ்வாமி தேசிகர் சுதர்சன ஆச்சார்யருக்கு ஈமக் கிரியைகளை செய்ய முடியாமல் போனதே என்ற வருத்தத்துடன்
அந்த இரு இளம் தளிர்களை தம்முடன் கூட்டிக் கொண்டு சுல்தான் படைகளின் கண்ணில் படாமல் நடந்தே
கொங்கு நாட்டின் சத்யமங்கல காட்டுப் பகுதிக்குள் சென்று விட்டார்.
அவர் ரங்கன் தரிசனத்திற்கு மேல்கோட்டை வருவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும்.

ரங்கன், மதுரையை கடந்து, திருக்குருகூர் (நம்மாழ்வார், மணவாள மாமுனிகள் அவதாரத் தலம்) வழியாக
நாகர்கோவில் சென்றடைந்து, பின் திரு அனந்தன் புரம் எழுந்தருளி, கோழிக்கூட்டில் நம்மாழ்வாரை சந்தித்து,
திரு நாராயண புரம் (மேல்கோட்டை) – சத்தியமங்கலம் – திரு நாராயண புரம் வந்தடைந்து,
இதோ இப்போது நாம் அறியா பாதை வழியே திருமலைக் காடுகளில் புகுந்து விட்டார்.
பத்தொன்பது ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு, இன்னும் பல இடங்களில் தங்கி 1371ல் தான்
மறுபடி அரங்கம் எழுந்தருளப் போகிறார்.

இந்த கடைசி பத்து ஆண்டுகள் ஒரு பிரசித்தி பெற்ற சாம்ராஜ்யத்தின் ஏடுகளில் மிக முக்கிய மானவை.
அதில் சில தாள்கள் (ஓலைகள்) கங்கா தேவியால் எழுதப்பட்டு 1916ல் திரு அனந்தன் புரத்தின் ஒரு நூலகத்தில்
வேறு ஏடுகளுக்கு இடையே கிடைக்கப் பெற்றவை. யார் இந்த கங்கா தேவி? அந்த ஓலைகளில் என்ன எழுதப்பட்டிருந்தது?

ஹரிஹரனும், புக்கனும். அவர்கள் தோற்றுவித்த சாம்ராஜ்ஜியம் தான் விஜய நகரம்.
அவர்களின் குருவான வித்யாரண்யர் தான் அந்த சாராத பீட ஆச்சார்யர்.
அவர் பெயராலேயே – வித்யா நகரம் – ஸ்தாபிக்கப்பட்டு பின்னாளில் அது மருவி மிகப் பொருத்தமாக விஜய நகரம் ஆயிற்று
ஹரிஹரன் தான் அதன் முதல் மன்னன். அவன் இறந்ததும் புக்கன் ராஜ்ஜிய பாரத்தை தன் தோள்களில் ஏற்றுக் கொண்டான்.
அவனுடைய புதல்வனே கம்பணன். முள்வாய் (முல்பாகல்) பட்டண அரசன்.
அவனுடைய சர்வ சைன்யாதி பதியே கோபணா.
இவர்கள் தான் பின்னாளில் அரங்கத்தை மீட்டு அழகிய மணவாளனை மறுபடி அவன் இருப்பிடம் கொண்டு சேர்க்கப் போகிறவர்கள்.
இவர்களின் வீர சாகசங்களை மதுர காவியமாக படைத்தவளே கங்கா தேவி, கம்பணனின் மனைவி.

இன்றைக்கு சுமார் அறுநூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்னால் கம்பணாவின் மனைவி கங்கா தேவியினால்
‘மதுரா விஜயம்’ நூலில் எழுதப்பட்டவை. அவள் எழுதிய ஏடுகள் 1916ம் ஆண்டு திரு அனந்தன் புரத்தில்
ஒரு தனியார் நூலகத்தில் வேறு முக்கியமில்லாத ஓலைகளுக்கு இடையே கண்டு எடுக்கப் பட்டவை.
கங்கா தேவி தன் கணவனுடனேயே போர்க்களம் சென்று தன் கண்ணால் கண்டதை வீர கம்பராய சரித்திரமாக தொடுத்ததுதான் ‘மதுரா விஜயம்’.

அகிலாண்டேஸ்வரி மீனாக்ஷி பேச ஆரம்பித்தாள்.
கம்பணா , இதோ இந்த குறுவாளை பெற்றுக்கொள். இது விஸ்வகர்மாவினால் சிவபிரானிடம் கொடுக்கப்பட்டது.
அவர் இதனை பாண்டியர்களிடம் கொடுத்தார்.
அவர்களும் இதை வைத்துக்கொண்டு காலத்தால் அழிக்க முடியாத கீர்த்தியை அடைந்தார்கள்.
ஆனால், அவர்கள் புகழ் மங்குவதை உணர்ந்த அகத்திய மாமுனி இக்குறுவாளை உனக்கு கொடுத்துள்ளார்.
நீ, இயல்பிலேயே தைர்யசாலி. இவ்வாள் உன்னிடம் இருந்தால் நீ பராக்ரமசாலியாவாய்.
இதை தரித்திருக்கும் வரையில் எந்த ஆபத்தும் உன்னை அணுகாது. உனக்கு தோல்வி ஏற்படாது.
கடவுளர்கள் கூட உன்னை எதிர்க்க முடியாது. நீ, உடனே மதுரைக்கு புறப்படு.
அன்று வட மதுரையில் கண்ணன் கம்சனை கொன்றது போல் நீ அந்த யவன அரசனை கொல்வாய்.
துருக்கியர்களை விரட்டியடித்து தர்மத்தை நிலை நிறுத்துவாய். அவர்கள் ரத்தத்தை ஆறாய் ஓடவைப்பாய்.
சேதுக்கரைக்கு சென்று ஜய ஸ்தம்பம் நாட்டுவாய். தமிழ் பேசும் நாட்டை ஆளத் தொடங்குவாய்.
உன் ஆட்சியில் காவேரி பழக்கப்பட்ட யானை போல் அமைதியாய் ஓடுவாள். ஜய விஜயீ பவ’.

கருணை பொங்கும் அகன்ற விழிகளுடன் கம்பணாவை ஆசிர்வதித்த படியே அந்த சர்வேஸ்வரி அவன் புறக் கண்களிலிருந்து
மறைந்து ஹ்ருதயத்துக்குள் உறைந்தாள். சுற்றிலும் இருள் சூழினும் தன் அகத்தினுள்ளே பிரகாசத்தை உணர்ந்தான் கம்பணா.

371. பரிதாபி ஆண்டு, வைகாசி திங்கள் 17ம் நாள். ரங்க நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது.
நாற்பத்தியெட்டு வருடங்களுக்கு முன்னால் தன் இருப்பிடத்திலிருந்து அவசரஅவசரமாய் வெளியேறிய அழகிய மணவாளன்
காவிரியின் தென்கரையை அடைந்து, பின் தொண்டைமான் காட்டிற்குள் புகுந்து, திருக்கோஷ்டியூர், திருமால் இருஞ்சோலை,
யானைமலை, மதுரை, திருக்குருகூர், நாகர்கோவில், திருஅனந்தன்புரம், கோழிக்கூடு, திருநாராயணபுரம்,
திருமலைக் காடுகள், திருமலை, செஞ்சி, அழகிய மணவாளம் வழியாக தென் தேசங்களை பிரதக்ஷணம் செய்து
இப்போது காவிரியின் வடகரை கடந்து ரங்கத்திற்குள் மீண்டும் பிரவேசிக்கிறார்.
கேட்க வேண்டுமா ரங்கத்தினர் உற்சாகத்திற்கு? வீட்டு வாசல்கள் தெளிக்கப்பட்டு மாக்கோலங்கள். வாழைகள்.
மாவிலைத் தோரணங்கள். பூ மாலைகள். மேள தாளத்துடன் மங்கல இசை. விண்ணைப் பிளக்கும் வேத கோஷங்கள்.
தமிழ் மறை பிரபந்தங்கள். போரில் வெற்றி கண்ட கம்பண, கோபணருக்கு ஜய கோஷங்கள்.
வீதியெங்கும் மகிழ்ச்சி கூத்தாடல்கள். பல்லக்கில் நெஞ்சு நிறைந்து பவனி வரும் ரங்கனுக்கும்,
அதை சுமக்கும் விஜய நகர அரசன், படைத் தளபதிகளுக்கு ஆரத்திகள், அவர்கள் அனைவரின் மீதும் வாரி இறைக்கப் படும் பூக்கள்,
கொட்டும் முரசுகளின் பேரொலிகள் என திருவரங்கம் அதிர்ந்து கொண்டிருந்தது.

இக்கொண்டாட்டங்களை எல்லாம் பார்த்துக் கொண்டும், குழுமி இருந்த ஜன சமுத்திரத்தின் ‘ரங்கா, ரங்கா’
(அரை நூற்றாண்டுகளுக்கு முன்னால் இதே ரங்கா, ரங்கா முழக்கத்தோடு அவனுக்காக உயிர் துறந்த
ரங்க வீரர்களின் வம்சா வழி வந்தவர்களே இவர்கள்) எனும் சந்தோஷ கூச்சல்களை கேட்டுக் கொண்டும்,
அவர்களின் ஊடே புன்னகை தவழும் முகத்துடன் ஊர்வலமாய் சென்று தன் சாம்ராஜ்ஜிய பீடத்தில்
ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக புளகாங்கிதமாய் எழுந்தருளினார் அரங்கன்.
(காணாமல் போன நாச்சியார் உற்சவ பேரங்கள் இப்போது எப்படி வந்தன?
இவ்விக்ரஹங்கள் வேறு. இவை, அழகிய மணவாளர் திருமலையில் தங்கி இருந்த போது சந்திரகிரி அரசர் யாதவராயரால் செய்து வைக்கப் பட்டவை).

இச்சமயத்தில்தான் விஜய நகரத்தார் போரில் வெற்றி பெற்றதை ஸ்வாமி வேதாந்த தேசிகரிடம் நேரில் கூறி
அவரை திருவரங்கம் அழைத்து வந்திருந்தனர். எவர் முன்னிலையில் நாற்பத்தியெட்டு ஆண்டுகளுக்கு முன்னால்
மூலவரை மறைக்கும் வகையில் குலசேகரன் வாயிலில் சுவர் எழுப்பப்பட்டதோ, நூறு பிராயத்தை கடந்திருந்த அவரே
இப்போது முன் நின்று அக்கற்தடுப்பை தகர்த்து ரங்கனை மீண்டும் உலகத்தாருக்கு வெளிப்படுத்தினார்.
அரங்கனை முதன் முறையாய் தரிசித்தவர்கள் பரவசமாகி ‘ரங்கா, ரங்கா’ என கூக்குரலிட்டனர்.
பலரின் விழிகளில் ஆனந்தக் கண்ணீர். பிறகு, ரங்கனுக்கு முறைப்படி வெகு விமர்சையாக பூஜைகள் நடந்தது.
ஸ்வாமி தேசிகர், சுல்தானுக்கு எதிரான போரில் விஜய நகர படைகளுக்கு தலைமை வகித்து வெற்றி கண்ட
கோபணரை போற்றி ஒரு ஸ்லோகம் எழுதினர். அது கல்லில் பொறிக்கப்பட்டு இன்றும் காணக் கிடைக்கிறது.

ரங்கன் மட்டும் அல்ல, நாச்சியாரும் கூட, தற்காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டவரும்,
வில்வ மரத்தின் கீழே புதைக்கப்பட்டு இப்போது வெளியே எடுக்கப்பட்டவருமாக இருவராயினர்.
மறுபடி விவாதம். கடைசியில், இருவரையுமே வைத்துக் கொள்ளலாம் என முடிவாயிற்று.

கோபுரப்பட்டி பால சயனப் பெருமாள்: இப்பகுதி ‘மேல் தலைக்காவிரி பூம்பட்டினம்’, ‘ராஜராஜ வள நாடு’, ‘புராதன புரி’
என்று பல்வேறு பெயர்களால் அறியப்பட்டது. 1342ல், வீர வள்ளாலன் கண்ணூர் கொப்பத்தை முற்றுகை இட்ட போதும்,
பின்னர் 1498ல் இலங்கை உலகன் என்ற தோழப்பானாலும் திருப்பணிகள் செய்யப் பட்டுள்ளது.
இக்கோவில் மூலவர் புதுக்கிடையில் ஜலசயனத்து பெருமாள் என்று கல்வெட்டுக்கள் மூலம் அறியப்படுவதால்
பழைய கிடை திருவரங்கம் என தெளிவாகிறது.

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் —

ஸ்ரீ வேதாந்த தேசிகர் மஹாத்மியம் —

February 23, 2021

ஸ்ரீ தூப்புல் வேதாந்த மஹாதேசிகன் :

செல்ல வேண்டிய திசையை சரியாக காட்டுபவனே தேசிகன்.

ஆசார்யன் என்பதும் இதை போலவே.
சாரி என்றால் சஞ்சரிப்பவன்.
பாத சாரி காலால் நடந்து செல்பவன்.
கஜாச்சாரி யானை மேல் செல்பவன்.
எனவே சரியான பாதையில் நடந்து சென்று மற்றவர்க்கு வழிகாட்டுபவன் ஆசார்யன்.

ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஒரு தேசிகன் பெயருக்காக உயர்ந்தவர் என்றால்
அவரே
நிகமாந்த தேசிகன் என்றும்
சுவாமி தேசிகன் என்றும் பெயர் கொண்ட தூப்புல் வேதாந்த மஹாதேசிகன்.

இவர் ஒரு மஹா ஆசார்யனாய் இருந்து வைணவ சமயம் காத்த உத்தமர்.

ஶ்ரீ தூப்புல் வேதாந்த தேசிகனாகப்பட்டவர்
அனந்தசூரியார் – தோத்தாத்ரி அம்மை தம்பதிக்கு திவ்ய குமாரனாய்
தொண்டைமண்டல
காஞ்சி மாநகரில்
பொய்கையாழ்வார் அவதரித்த விளக்கொளி எம்பெருமான் ஆலய பகுதியான
தூப்புல் எனும்
திருவிடத்தே திருமலை வேங்கடவன் கோயில் மணியின் அம்சமாக
கி.பி. 1268 ஆம் ஆண்டு,
விபவ வருஷம்,
புரட்டாசி மாஸம்,
சிரவணம் நட்சத்திரத்ரம கூடிய
புதன்கிழமையில்
அவதரித்தார்.

ஒரு வெண்கல மணியை பெருமாள் தனக்கு கொடுத்து அதை தான் விழுங்கியதாக கனவு கண்டாள் அவர் தாய்.

ஸ்ரீ ராமானுஜரைப் போன்று இவரால் கணீரென்று வேத நாதம் எங்கும் ஒலிக்க பிரகாசிப்பார் என்று பெருமாளே அருளினார்.
அதனால் தான் பெருமாள் சந்நிதியில் மணி கிடையாது. திருவாராதனம் போது வெளியே உள்ள மணி மட்டும்
இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் ஸ்ரீ வேங்கடநாதன் என்பதாம்.

பின்னாளில் இவர் ‘சுவாமி தேசிகன்’,
‘தூப்புல் நிகமாந்த தேசிகன்’,
‘தூப்புல் பிள்ளை’,
‘உபய வேதாந்தாசாரியர்’
‘சர்வ தந்திர சுதந்திரர்’
மற்றும்
‘தூப்புல் வேதாந்த மஹாதேசிகன்’
என்னும் பெயர்களால் அழைக்கப் பெற்றார்.

ஸ்ரீ இராமனுசரின் உறவினரான நடாதூர் அம்மாளின் நேரடிச் சீடரும்
இவரது தாய்மாமனுமான ஸ்ரீ கிடாம்பி அப்புள்ளாரிடம் வடமறையான வேதங்களும்,
தென் மறையான
திவ்ய பிரபந்தமும்,
புராணங்களும் மற்றும்
சாத்திரங்களையும் குறைவறக் கற்றார்.

ஏழாம் வயதில் ஸ்ரீ கிடாம்பி அப்புள்ளாரினால் உபநயனம் செய்விக்கப் பட்டதோடு,கல்வியும் கற்றவர்,
தன் இருபத்தோராம் வயதில் திருமங்கை என்றழைக்கப்பட்ட கனகவள்ளி எனும் மங்கையை மணம் புரிந்தார்.
தன்னுடைய இருப்பத்தேழாம் வயதில் வைணவ குரு எனும் நிலையை அடைந்த இவர்
தன்னுடைய குருவான கிடாம்பி அப்புள்ளாரின் ஆணைப்படி கடலூருக்கு அருகில் உள்ள திருவஹீந்தரபுரம் சென்று சில காலம் வாழ்ந்தார்.
திருப்பதி,
மேல்கோட்டை,
காஞ்சிபுரம்,
அயோத்தியா,
பிருந்தாவனம்,
பத்ரிநாத்,
திருவரங்கம்
உள்ளிட்ட எண்ணற்ற தலங்களுக்கு சென்று ஜெகத்குரு இராமனுசரின் தத்துவங்களை பரப்பினார்.
இறுதியில் தன் மகனான குமார வரத தேசிகனோடு திருவரங்கம் வந்தவர் இப்புவியில் 101 வருஷங்கள் வாழ்ந்தார்.

ஸ்ரீ இராமனுசரின் தத்துவங்களை பரப்புவதையே முழுப்பணியாக கருதியவர் சுமார் நூற்றிருப்பத்து நான்கு நூல்களை
தமிழ், வடமொழி, பிராகிருதம், மணிப்பிரவாள நடையில் அருளியுள்ளார்.

அவர் தமிழில் :
அடைக்கலப்பத்து,
மும்மணிக்கோவை,
நவமணிமாலை,
அதிகார சங்கிரகம்,
ஆகார நியமம்,
அம்ருதரஞ்சனி,
அம்ருதஸ்வாதினி,
அர்த்த பஞ்சகம்,
சரமஸ்லோக சுருக்கு,
த்வய சுருக்கு,
கீதார்த்த சங்கிரகம்,
பரமபத சோபனம்,
பிரபந்த சாரம்,
ஸ்ரீவைஷ்ணவ தினசரி,
திருச்சின்னமாலை,
திருமந்திர சுருக்கு,
உபகார் சங்கிரகம்,
விரோத பரிகாரம்,
பன்னிருநாமம்

வடமொழியில் :
பாதுகா சஹஸ்ரம்,
கோதாஸ்துதி,
யதிராஜ சப்ததி,
வைராக்ய பஞ்சகம்,
அபீதிஸ்தவம்,
ஆதிகாரண சாராவளி,
அஷ்டபுஜ அஷ்டகம்,
பகவத் தியான சோபனம்,
பூஸ்துதி,
சதுஸ்லோகி
பாஷ்யம்,
தசாவதார ஸ்தோத்திரம்,
தயாசதகம்,
வரதராஜ
பஞ்சாசத்,
தெய்வநாயக பஞ்சாசத்,
திவயதேச மங்களாசனம்,
கருட பஞ்சாசத்,
ஹயக்ரீவ ஸ்தோத்திரம்,
தேசிக மங்களம்,

மணிப்ரவாளத்தில் :
அம்ருதரஞ்சனி ரஹஸ்யம்,
அஞ்சலி பிரபாவம்,
ஹஸ்திகிரி மஹாத்ம்யம்,
குருபரம்பரா சாரம்,
முனிவாகன போகம்,
ஆராதன காரிகா,
ஊசல்பா

ப்ராக்ருதத்தில் :
அச்யுதசதகம்
என பல நூல்களை எழுதியுள்ளார்.

மாமன் அப்புள்ளார் ஐந்து வயதில் அவரை நடாதூர் அம்மாள் பிரசங்கத்திற்கு அழைத்து சென்ற போது
அவர் ஒரு கணம் சிறுவனைப் பார்த்து பிரமித்து
”எங்கே பிரசங்கத்தை நிறுத்தினோம்” என்பதை மறந்து போனார்.
மீண்டு யோசிக்கையில், சரியாக அந்த ஸ்லோகத்தை எடுத்து சொன்னார் தேசிகர்.

20 வயதில் சகல சாஸ்திரங்களும் அறிந்தார். அப்புள்ளாரிடம் கருட மந்திர உபதேசம் பெற்றார்.

திருவஹீந்த்ரபுரம் என்ற பெயர் இப்போது சுருங்கி திருவந்திபுரம் ஆகிவிட்டாலும் தேசிகரின் சரித்திரம் கொஞ்சமும் சுருங்கவில்லை.
இங்கு தான் ஒரு சிறு குன்றில் பலநாள் அன்ன ஆகாரமின்றி கருட மந்த்ரம் ஜபித்தார்.
ஶ்ரீ ஹயக்ரீவ மந்திரம் ஜபிக்வே எம்பெருமானும்
திவ்ய தரிசனம் தந்துஅவருக்கு ஹயக்ரீவ மந்திராபதேசம் செய்து
ஶ்ரீ தேசிகன் விருப்பப்படி அவரது நாவில் குடிகொண்டார்.
தனது சிலா ரூபத்தையும் கொடுத்தார்.
அந்த ஹயக்ரீவ விக்ரஹத்தை இன்றும் தேவநாத பெருமாள் சந்நிதியில் காணலாம்.

காஞ்சி விஜயம் செய்து பிறகு பல திவ்ய தேச யாத்ரை சென்ற தேசிகன் ”பிரபத்தி’ எனும் சரணாகதி தத்தவத்தை
விளக்கி வைஷ்ணவ சமூகம் பயன்பெற செய்தவர்.
நியாச விம்சதி,
நியாச தசகம்,
நியாச திலகம் என்று வடமொழியிலும்,
அடைக்கலப் பத்து,
அர்த்த பஞ்சகம் என்று தமிழிலும் அளித்த பெரிய ஞானி.
சகல கலைகளும் கைதேர்ந்து சர்வ தந்திர ஸ்வதந்திரர் என்று அழைக்கப் பட்டார்..

திருப்பதி சென்று தயா சதகம் இயற்றினார். பெருமாளால் வேதாந்தாச்சார்யா என்று கௌரவிக்கப் பட்டவர்.

ஸ்ரீ ரங்கம் போகும் வழியில் ஸ்ரீ பெரும்புதூர் சென்று ஸ்ரீ ராமானுஜரை வழிபட அங்கே யதிராஜ சப்ததி என்ற ஸ்லோகம் உருவானது.

ஸ்ரீ ரங்கத்தில் ரங்கநாதர் மகிழ்ந்து அளித்த பெயர் தான் வேதாந்த தேசிகர் என்று நாம் இன்றும் அவரை அறிவது..
ரங்கநாயகி தாயார் அளித்த பெருமை தான் சர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர்.

1327ல் அலாவுதினின் தளபதி மாலிக் காப்பூர் தெற்கே பல ஆலயங்களை அழித்தபோது
ஸ்ரீரங்க பெருமாள் திருப்பதிக்கு எடுத்து செல்லப்பட்டும் ஸ்ரீ பாஷ்ய க்ரந்தங்கள் கர்நாடகத்துக்கும் எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த பொறுப்பை தேசிகன் ஏற்றார். ஒரு இரவு செத்த பிணங்களோடு பிணமாக கிடந்து மிலேச்சர்களிடம் இருந்து
அரிய வைஷ்ணவ செல்வங்களை காப்பாற்றியவர் ஶ்ரீ மஹா தேசிகன்

”ஸ்ரீ ரங்கம் மீண்டும் பழம் பொலிவை பெற நீ அருள்வாய்” என்று பெருமாளை அவர் பாடியதே அபிதி ஸ்தவம் என்ற ஸ்லோகம்.

ஸ்ரீ ரங்கத்தில் ஆழ்வார்களின் விக்ரஹ பூஜை கூடாது அவர்களில் பலர் பிராமணர்களே அல்ல, என்றும்
திவ்ய பிரபந்தம் சமஸ்க்ருதம் அல்ல அதை ஓதக்கூடாது” என்றும் பத்தாம் பசலிகள் சிலர் தடுக்க
அனைவருக்கும் ஆழ்வார்கள் பெருமையை எடுத்துரைத்து, திவ்யப்ரபந்தம் வேத சாரம் என்று நிருபித்து
இனியும் இம்மாதிரி எதிர்ப்புகள் வரக்கூடாதே என்று முன் யோசனையாக கல்வெட்டுகளில் பதித்து
ராப்பத்து
பகல் பத்து உத்சவ மகிமையை இன்றும் நமக்கு விளங்கச் செய்தவர் நம் தேசிகர்.

தேசிகர்
ஸ்ரீ ரங்கத்தில் தான் பெருமாள் திருவரங்கனை பாதாதி கேசம் வரை வர்ணித்த பகவத் த்யான சோபனம் ஸ்தோத்ரம் இயற்றினார்.
இதை படிக்கும் போது திருப்பாணாழ்வாரின் அமலனாதி பிரான் பாசுரங்கள் படிப்பதுபோல் எண்ணம் தோன்றுகிறது.

”தேசிகா, என் பாதுகையிலிருந்து ஆரம்பியேன் ” என்று ஸ்ரீ ரங்கநாதனே எடுத்துக் கொடுக்க, விடிகாலை 4 மணிக்கு எழுத்தாணியை பிடித்தார்.
மூன்றே மணி நேரத்தில் 1008 பாதுகா ஸ்துதி ஸ்லோகம் உருவானது. அதை உச்சரிக்கவே குறைந்தது 7 மணி நேரம் ஆகும் நமக்கு.
மறுநாள் காலை பண்டிதர்கள் அனைவரும் மூக்கில் மேல் விரலை வைக்க மறந்தாலும் தேசிகரை ”கவிதார்க்கிக சிம்ஹம்” என்ற
பட்டத்தை அவருக்கு அளித்து கௌரவிக்க மறக்கவில்லை.

ஸ்ரீ வில்லிப்புத்தூரில் ஆண்டாளை வழிபாட்டு கோதா ஸ்துதி உருவானது.
ஆண்டாள் உத்சவத்தின் போது திவ்ய பிரபந்தத்துடன் ஆண்டாளின் விருப்பப் படியே,
கோதாஸ்துதி ஸ்லோகங்கள் சொல்லப்பட்டு வருகிறதே.

காசு, தங்கம், நாணயம் இதெல்லாம் தேசிகர் பார்த்ததில்லை, வாங்கிக்கொள்ள மாட்டார்.
எனவே உஞ்சவ்ரித்தியில் வாழ்ந்த அவருக்கு அரிசியோடு தங்கமணிகளை கலந்து கொடுத்து,
அதை அவர் மனைவியிடம் கொடுத்து சமைக்க சொல்ல, அவளோ இதெல்லாம் என்ன அரிசியோடு என்று கேட்க,
ஏதாவது பூச்சி முட்டையாக இருக்கும் என்று கையால் கூட தங்கத்தை தொடாமல் தர்ப்பையால் அவற்றை ஓதுக்கி வெளியே எறிந்து விட்டார்.

தேசிகரின் பால்ய நண்பன் வித்யாரண்யன்
விஜயநகர சாம்ராஜ்யத்தில் பெரிய பதவியில் இருந்ததால்,

”தேசிகா, நீ எதற்காக ஏழ்மையில் வாடுகிறாய், வா என்னிடம், இங்கு உனக்கு நிறைய பரிசு வழங்க
ஏற்பாடு செய்கிறேன் என்றான் ” வித்யாரண்யனுக்கு அவர் பதிலாக எழுதியதே நமக்கு பொக்கிஷமாக கிடைத்த
”வைராக்ய பஞ்சகம்”.

”வித்யாரண்யர் நமக்கல்லவோ மிகப்பெரிய பரிசை அளித்துவிட்டார்.”.

ஆதி சங்கரர் ஒரு ஏழைப் பெண்ணுக்கு பொன் மழை பெய்ய வைத்த கனக தாரா ஸ்தோத்ரம் தெரியுமல்லவா.
அதே போல் இன்னொன்றும் காஞ்சியில் நடந்திருக்கிறதே.

காஞ்சிபுரத்தில் தேசிகர் வாழ்ந்தபோது, அவரை அவமானப் படுத்த சில விஷமிகள்,

ஒரு ஏழைப்பையன் தனது திருமணத்துக்கு உதவி கேட்டபோது
”தம்பி நீ தேசிகர் என்று ஒருவர் ரெண்டு தெரு தள்ளி வசிக்கிறார். பணக்காரர்.
யார் கேட்டாலும் பணம் தருவாரே, அவரைப் போய் கேள்” என்று அனுப்ப,
அந்த அப்பாவி அவரது எளிய வாழ்க்கை நெறி தெரியாமல் அவரை நிதி உதவி கேட்க, அவனை அழைத்துக்கொண்டு
நேராக வரதராஜ பெருமாள் கோவில் சென்று தாயாரின் சந்நிதியில் அவளை உதவி செய் என வேண்டினார் தேசிகர்.

”அவரது மனதைத் தொடும்
”ஸ்ரீ ஸ்துதி” தாயாரை உடனே அங்கே ஒரு பொன்மழை பெய்ய வைக்க காரணமானது..

ஒரு பாம்பாட்டி தேசிகரிடம் ”என்னுடைய விஷ பாம்புகளை உங்களால் சமாளிக்க முடியுமா?” என்று சவால் விட,
அவர் தரையில் ஒரு கோடு போட்டு
” உன் பாம்புகள் இந்த கோட்டைத் தாண்டட்டும்” என்றார்.
சில விஷ பாம்புகள் கோட்டைத் தாண்ட முயன்றபோது தேசிகர் உச்சரித்த கருட மந்திர ஸ்லோகம் கேட்ட கருடன் வந்து
அத்தனை பாம்புகளையும் அன்றைய காலை உணவாகத் தூக்கிக் கொண்டு போய் விட்டான்.

பாம்பாட்டி அவர் காலில் விழுந்து ”என் பிழைப்பே இந்த பாம்புகள் தான் ” தயவு செய்து அவற்றை திரும்ப தரவேண்டும்
என்று கெஞ்சினதால், மீண்டும் கருட மந்த்ரம் சொல்லி கருடனை அந்த பாம்புகளை திரும்ப தர வைத்தார் .

”உங்களால் எல்லாமே செய்ய முடியும் என்கிறார்களே, என்னைப்போல் கட்ட முடியாவிட்டாலும்
ஒரு சாதாரண கிணறு கட்ட முடியுமா உங்களால்?” என்று ஏளனமாக கேட்டானாம் ஒரு மேஸ்திரி.

”சரியப்பா கட்டுகிறேன்”

‘ நான் கொடுக்கும் கற்களை மட்டுமே கொண்டு அதைக் கட்டவேண்டும்”

”ஆஹா அப்படியே.’ என்ற தேசிகர் அவன் கொடுத்த அளவு சரியில்லாத கோணா மாணா கற்களைக் கொண்டே கட்டிய
அந்த வினோத கிணறு இன்றும் திருவஹிந்திர புரத்தில் இருக்கிறது.
எங்கே நீர் வற்றினாலும் அந்த கிணற்றில் நீர் வற்றுவதில்லை. சுவையிலும் குன்றவில்லை.

மற்றொரு சிற்பி தனது பங்குக்கு அவரை சவாலுக்கு இழுக்க, அவன் விரும்பியவாறே, அவன் அமைத்த பீடத்தில்
தனது உருவத்தையே தத் ரூபமாக சிலையாக வடித்துக் காட்டியபோது அசந்து போனான்.
அவனமைத்த பீடம் போதாததால் அங்கங்கே அவர் உருவச்சிலையை உளியால் வெட்டும்போது அவன் வெட்டிய பாகங்கள்
அவருடைய உடலிலிருந்து ரத்தத்தை சிந்த வைக்க, பயந்தே போய் அவர் காலடியில் விழுந்து மன்னிக்க வேண்டினான் அந்த சிற்பி.

தனது உருவத்தை தானே தேசிகர் வடித்த சிலாரூபம் இன்றும் தேவநாதர் ஆலயத்தில் இருக்கிறதே.
மேலே சொன்ன அவர் கட்டிய கிணறையும் பார்க்க தவறவேண்டாம்.
கோவிலுக்கு அருகாமையில் சற்று தள்ளி ஒரு மண்டபத்தில் உள்ளது.

நமது தூப்புல் குலமணியும் ஸாக்ஷாத் திருமலைமால் கண்டாவதாரமும் ராமானுஜ முனி அபராவதாரமாவார்.
அவர் ஆழ்வார் மீது வைத்திருக்கும் பற்றை அளவிடமுடியாது,
வேறு எந்த ஆசார்யனும் தன்னை “சந்தமிகு தமிழ் மறையோன்” என்று பறைசாற்றி கொண்டதில்லை.
அவர் காலத்தில் அத்வைத சித்தாந்தம் தலைஓங்கி நிற்க அதை நிஷ்கர்ஷித்து உண்மை பொருளை நிலை நாட்ட இவர்களுக்கு
ஆழ்வார் ஸ்ரீஸூத்திகள் துணைபுரிந்தன. அதையும் நம் ஸ்வாமி “தெரியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே” என்றுசாதித்தார்.
ஆளவந்தார் இராமானுஜ முனிகாலம் தொடங்கி தேசிகறது காலம் ஏன் இன்றைய அளவிலும் ஆங்காங்கே
பூர்வபக்ஷம் தலை ஓங்குகிறது அப்பொழுது அவர்கள் வேத வேதாந்தத்தை கொண்டேவாதம் செய்கிறார்கள்.
நமது ஆசார்யர்களோ ஆழ்வார்களோ திவ்ய பிரபந்தங்களைக்கொண்டு உண்மை பொருளை உணர்த்துகின்றனர்.
இது நமது சித்தாந்துக்கே உரிய சிறப்பு.

——-

இந்த குரு பரம்பரை
ஸ்ரீ ராமானுஜர்
கிடாம்பி ஆச்சான் -ப்ரணதார்த்தி ஹரர்
அவர் குமாரர் -ராமானுஜாச்சார்யார்
அவர் குமாரர் ரங்க ராமானுஜாச்சார்யார்
அவர் குமாரர் ராமானுஜாச்சார்யார் என்னும் அப்புள்ளார்
இவரே வாதி ஹம்ஸ அம்பு வாஹர் என்றும் காஞ்சி கடாம்பூ என்றும் சொல்லப்படுபவர்
இவர் ஸகோதரி -தோதாரம்பை -என்பவளை
அநந்த ஸூரி -என்பவரை திருமணம் செய்தவர்
அநந்த ஸூரி -காஞ்சியில் உள்ள புண்டரீகாக்ஷ ஸூரி யுடைய திருக்குமாரர் –
இந்த தம்பதிக்கே -வேதாந்தச்சார்யார் -திருக்கண்ட அம்சமாக அவதாரம்
அநந்த ஸூரி -74 சிம்ஹாசனாதிபதிகளில் ஒருவராக இருந்தும் தமது மாதுலரான அப்புள்ளார் இடம் ஆஸ்ரயிக்கச் செய்தார்
அப்புள்ளார் ஆச்சார்யரான நடாதூர் அம்மாளும் சிறிய வயதிலேயே அவரைக் கடாக்ஷித்து அருளினார்

தேசிகருக்குப் பின்
ப்ரஹ்ம தந்த்ர ஸ்வ தந்த்ர ஜீயர் -பரகால ஸ்வாமி மடத்துக்கு முதல் ப்ரவர்த்தகர்
தேசிகர் திருக்குமாரர் நாயனாச்சார்யர்
அவர்க்குப் பின்பு
கடிகாசலம் அம்மாள் -இவர் இடம் தான் அஹோபில மட ஸ்தாபகர் ஆதி வண் சடகோப ஸ்வாமி கால ஷேபாதிகள் பெற்றார்
கடிகாசல அம்மாள் திருக்குமாரர் வரத விஷ்ணு வாச்சாரியார்

பரத்வாதி பஞ்சகத்தில் நடாதூர் அம்மாள்
ஸ்ரீ ரெங்கஸ்தல வேங்கடாத்ரி கரிகிர் தயாதவ் சஷ்டோத்தரே
ஸ்தாநே க்ராம நிகேதனேஷு ச ஸதா ஸாந்நித்யமாஸே துஷே
அர்ச்சா ரூபிணாம் அர்ச்சக அபிமதிதஸ் ஸ்வீ குர்வதே விக்ரஹம்
பூஜாம் சாகில வாஞ்சிதான் விதரதே ஸ்ரீ ஸாய தஸ்மை நம
என்று அர்ச்சா மூர்த்திக்கு மங்களா ஸாஸனம் செய்துள்ளார்

வடக்கு திரு வீதிப்பிள்ளை சிஷ்யர் கிடாம்பி ஸ்ரீ ரெங்காச்சார்யார்
அவர் குமாரரும் சிஷ்யரும் கேசவாச்சார்யர்
அவர் குமாரரும் சிஷ்யரும் ஸ்ரீ நிவாஸாச்சார்யார்
அவர் குமாரரும் சிஷ்யரும் கேசவாச்சார்யர்
அவர் குமாரரும் சிஷ்யரும் ஸ்ரீநிவாஸாச்சார்யார்
இவர் திரு நாராயண புரத்தில் அவதாரம் -இவரே ஆதி வண் சடகோப யதீந்த்ர மஹா தேசிகன்
அஹோபில மட மூலஸ்தர் –
இவர் நடாதூர் அம்மாளின் திருப்பேரனான ஸ்ரீ வரத விஷ்ணு வாசர் இடம் கிரந்த காலஷேபம் பண்ணினார்
இவர் காலம் -கிபி 1379-1458

—————

தேசிகர் 101 வருஷம் வாழ்ந்தார். தனது அந்திம நேரம் நெருங்கியதை உணர்ந்த தேசிகர் தனது குமாரர்
குமார வரதாசாரியாரை அழைத்து அவர் மடியில் தலை வைத்து, அவரை
”திருவாய் மொழி, உபநிஷத் எல்லாம் சொல்லப்பா. கேட்டுக்கொண்டே செல்கிறேன்” என்றார். பரமபதம் அடைந்தார்.
தாயார் ரங்கநாயகி தன்னருகே ஒரு சந்நிதியில் தேசிகரை இருத்திக் கொண்டாள்.
வேறு யாருக்கும் இங்கு இடமில்லை என்ற அவள் ஆணை இன்றும் நிலுவையில் இருக்கிறது.

”ராமானுஜ தயா பாத்ரம், ஞான வைராக்ய பூஷணம்,
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ”

ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகரே ! வேதாந்த தேசிகரே ! வேதாந்தாசார்யரே !
சீரார் தூப்புல் பிள்ளையே !இன்னும் ஒரு நூறாண்டிரும் !

—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -20–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 23, 2021

வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும்
தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை
மான வேல் கலியன் சொன்ன வண் தமிழ் மாலை நாலைந்தும்
ஊன மதி இன்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே-20-

பதவுரை

வானவர் தங்கள் கோனும்–தேவேந்திரனும்
மலர்மிசை அயனும்–பூவிற் பிறந்த பிரமனும்
நாளும்–நாள் தோறும்
தே மலர் தூவி–தேன்மிக்க புஷ்பங்களைப் பணிமாறி
ஏத்தும்–துதிக்கும் படியாக வுள்ள
சே அடி–செவ்விய திருவடிகளை யுடையனாய்
செம் கண்–செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையனான
மாலை–ஸர்வேச்வரனைக் குறித்து,
மானம் வேல்–பெருமை தங்கிய வேற் படையை யுடையரான
கலியன்–திருமங்கையாழ்வார்
சொன்ன–அருளிச்செய்த
வண் தமிழ் – செந்தமிழினாலாகிய
மாலை நாலைந்தும்–இப்பாசுரமிருபதையும்
ஊனம் அது இன்றி–குறையொன்று மில்லாமல்
வல்லார் தாம்–கற்று வல்லவர்கள்
ஒளி விசும்பு–பரமபதத்தை
ஆள்வர்–ஆளப்பெறுவர்

தேவர்கட்கு இறைவனான இந்திரனும் திருநாபிக் கமலத்தில் தோன்றிய நான் முகக் கடவுளும்
இடைவிடாது நன் மலர்களைப் பணிமாறி ஸ்துதிக்கப் பெற்றிருக்கின்ற
செங்கண்மால் விஷயமாகக் கொற்ற வேற் பரகாலன் கலியன் சொன்ன இவ்விருபது பாசுரங்களையும்
ப்ரயோஜநாந்தரங்களை விரும்புதலாகிற ஊனமின்றியே அநந்யப்ரயோஜநராய்க்
கற்று வல்லவர்கள் தெளிவிசும்பான திருநாட்டை ஆளப் பெறுவர்களென்று
பயனுரைத்துத் தலைக் கட்டினாராயிற்று.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -19–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை திரி தந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே –19-

பதவுரை

பிண்டி ஆர் மண்டை ஏந்தி–உளுத்த பொடிகள் உதிருகிற தலை யோட்டைக் கையிலேந்திக் கொண்டு
பிறர் மனை–அயலாருடைய வீடுகளிலே
திரி தந்து–திரிந்து (பிச்சை யெடுத்து)
உண்ணும்–ஜீவித்த
முண்டியான்–மொட்டையாண்டியான ருத்ரனுடைய
சாபம்–ப்ரஹ்ம ஹத்தி சாபத்தை
தீர்த்த–போக்கின
ஒருவன்–அத்விதீயனான் எம்பெருமானுடைய
ஊர்–திருப்பதிகளாய்
உலகம் ஏந்தும்–உலகத்தவர்களால் கொண்டாடப்பட்டன வாயு முள்ள
கண்டியூர்–திருக்கண்டியூரென்ன
அரங்கம்–திருவரங்கமென்ன
மெய்யம்–திருமெய்யமென்ன
கச்சி–திருக்கச்சியென்ன
பேர்–திருப்பேர்நகரென்ன
மல்லை–திருக் கடன்மல்லை யென்ன
என்று–ஆகிய இத் திருப்பதிகளைப் பேசிக் கொண்டு
மண்டினார்–அவகாஹிக்குமவர்கள்
உய்யல் அல்லால்–உஜ்ஜீவிக்கலாமத்தனை யொழிய
மற்றையார்க்கு–அல்லாதவர்களுக்கு
உய்யல் ஆமே–உஜ்ஜீவிக்க வழியுண்டோ? (இல்லை)

எம்பெருமானுகந்தருளின திவ்ய தேசங்களிலெங்கும்
“பதியே பரவித் தொழுந்தொண்டர்“ என்னும்படியாக அவகாஹித்திருக்கும் அவர்கள்
உஜ்ஜீவிக்க வழியுண்டே யல்லது அல்லாதவர்களுக்கு ஒருநாளும் உஜ்ஜீவிக்க வழியில்லை யென்கிறார்.
வேதமானது எம்பெருமானை உள்ளபடி யறிந்தார்க்கல்லது உய்ய விரகில்லை யென்றது.
அதனை மறுத்து, திவ்ய தேசங்களிலீடுபடுவார்க்கன்றி மற்றையோர்க்கு உய்ய வழி யில்லை யென்கிறாரிவ்வாழ்வார்.

“உண்ணும் முண்டியான்“ ‘உண்ணும் உண்டியான்“ என்பன பாட பேதங்கள்
உண்டி-உணவு; பிச்சை யெடுத்து உண்ணப் பட்ட உணவை யுடையவன் என்றபடி.

“இளைப்பினையியக்கம் நீக்கி“ என்ற கீழ்ப்பாட்டிற்படியே
வீணாக க்லேசப்படாதே
“காம்பறத் தலை சிரைத்து உன் கடைத்தலை யிலிருந்து வாழுஞ் சோம்பரை யுகத்திபோலுஞ் சூழ் புனலரங்கத்தானே!“
என்கிறபடியே திவ்ய தேசாநுபவமே போது போக்காக இருப்பவர்கட்கே
எம்பெருமானுடைய அநுக்ரஹம் அளவற்றிருக்கு மென்றதாயிற்று.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -18–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

எம்பெருமானை ஸ்வ ப்ரயுத்நத்தால் காண விரும்பும் அவர்களின் விருப்பம்
ஒரு நாளும் கை கூடா தென்கிறார்.

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–18-

பதவுரை

இளைப்பினை இயக்கம் நீக்கி–க்லேசங்களினுடைய ஸஞ்சாரத்தைத் தவிர்த்து (ஓர் ஆஸனத்தில்)
இருந்து–அசைவின்றி யிருந்து
முன் இமையை கூட்டி–மேல் இமையைக் (கீழிமையோடே) சேர்த்து
அளப்பு இல் ஐம்புலன் அடக்கி–அளவிறந்த பஞ்சேந்திரியங்களைப் பட்டி மேய வொட்டாதபடி தடை செய்து
அவர் கண்–எம்பெருமான் விஷயத்திலே
துளக்கம் இல் சிந்தை நெய்து அன்பு வைத்து–இடை வீடில்லாத ஸ்ம்ருதி ஸந்ததி ரூபமான பக்தியைப் பண்ணி
ஆங்கு–அந்த நிலைமையிலே
சுடர் விட்டு தோன்றலும்–ஜ்வலித்துக் கொண்டு தோன்றுமளவிலே
விளக்கினை–விளக்காகிய எம்பெருமானை
விதியில்–சாஸ்திர விதிப்படியே
காண்பார்–காண வேணுமென்றிருக்கிற உபாஸகர்கள்
மெய்ம்மையே–உள்ளபடியே
காண்கிற் பாரே–காண வல்லவராவரோ? (காணகி்ல்லார் என்றபடி)

இளைப்பினை இயக்கம் நீக்கி =
இளைப்பாவது க்லேசம்; க்லேசமாவது ஐவகைப்படும்.-
க்லேசமிதா ராகத்வேஷாபிநிவேசா‘ க்லேசா“ என்று பாதஞ்சல தர்சனத்தில் சொல்லப்பட்டது;
அவித்யை யாவது அஜ்ஞாநம்.
அஸ்மிதையாவது அஹங்காரம்.
ராகமாவது இச்சா விசேஷம்;
த்வேஷமாவது பகை;
அபிநிவேசமாவது மரண பயம். (என்று குஸுமாஞ்சலியில் விவரணம் செய்யப்பட்டுள்ளது.)

ஆக இப்படிப்பட்ட க்லேசங்களின் ஸஞ்சாரத்தைத் தவிர்த்து (இருந்து) காற்றாடி போலே
எப்போதும் பறந்து கொண்டே யிருக்குமியல்வினர்க்கு ஓரிடத்தே யிருப்பது அருமை யாகும்;
அப்படிப்பட்ட அருந்தொழிலாகிய இருப்பைச் செய்து

(முன்னிமையைக்கூட்டி)
ஒரு திக்கையும் நோக்காமல் தன் மூக்கின் நுனியையே நோக்கிக் கொண்டிருக்க வேணுமென்று
சொல்லி யிருக்கிறபடி செய்து என்றவாறு. மேலிமையைக் கீழிமையோடு சேர்த்தலே இந்த நிலைமையாகும்.

(அளப்பில் ஐம்புலனடக்கி)
அளவில்லாத விஷயாந்தரங்களிலே பட்டி மேயக் கூடிய பஞ்சேந்திரியங்களை உள் விஷயத்தோடே நிற்கும் படிசெய்து.

(அன்பு அவர் கண்ணே வைத்துத் துளக்கமில் சிந்தை செய்து)
தைல தாரை போலே அவிச்சிந்ந ஸ்ம்ருதி ஸந்தான ரூபமான பக்தியை பகவத் விஷயமாகப் பண்ணி என்றவாறு.

(ஆங்கே சுடர் விட்டுத் தோன்றலும் இத்யாதி)
ஆக விப்படிப் பட்ட முறையிலே ஜாஜ்வல்ய மாநமாய்க் கொண்டு தோன்றுகிற ஞானத்தாலே
வேத விளக்காகிய எம்பெருமானை சாஸ்திரங்களில் விதித்தபடியே உபாஸனை பண்ணி
ஸாக்ஷாத்கரிக்க வேணுமென்று பெரு முயற்சி செய்பவர்கள் அவனை மெய்யாகக் காண முடியுமோ?

அப்பெருமான் தானே தனது நிர்ஹேதுக க்ருபையினால் தன்னைக் காட்டிக் கொடுத்தருளினால் காணலாமத்தனை யொழிய
ஊன் வாட வுண்ணாதுயிர் காவலிட்டு உடலிற் பிரியாப் புலனைந்தும் நொந்து தாம் வாட வாடத்
தவஞ் செய்கையாகிற ஸ்வ ப்ரயத்நங்களாலே அவனை ஸாக்ஷத்கரிக்கை எளிதோ? என்றாராயிற்று.

“பெண்ணுலாஞ் சடையினானும் பிரமனுமுன்னைக் காண்பான், எண்ணிலா வூழியூழி தவஞ் செய்தார் வெள்கிநிற்ப,
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கன்றருளை யீந்த“ என்கிறபடியே
பல்லூழி யூழிகாலமாகத் தவம் புரிந்து வருந்தி நின்றவர்களெல்லாம் வெட்கப்பட்டு நிற்கும்படியாக
ஸ்ரீ கஜேந்திராழ்வான் போல்வார் திறத்திலே பரம க்ருமை செய்தருள்பவனான எம்பெருமானுடைய
ஸ்வபாவத்திற்கு இணங்க இப் பாட்டுக்கு இங்ஙனே உரையிடுதல் மிகப் பொருந்தும்.

பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் இங்ஙனே விரிவாக உரையிட்டருளின பின்,
“அதவா,
இப்படி யோக சாஸ்த்ரத்தில் சொல்லுகிறபடியே உபாஸித்துக் காண்பார்க்குக் காணலாமென்றுமாம்“ என்கிற
மற்றொரு நிர்வாஹமும் அருளிச் செய்யப்பட்டுள்ள காண்க.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -17–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

எம்பெருமானுடைய பெருமையைப் பேசுகின்ற பக்தர்களும் நல் வீடு பெறுகிறார்கள்;
அப்பெருமானை ஏசுகின்ற சிசுபாலாதிகளும் நல் வீடு பெறுகிறார்களென்று சாஸ்திரங்களினால் தெரிகின்றது;
இவ்விரு வகுப்பிலும் எனக்கு அந்வயமில்லை;
எம்பெருமானுடைய பெருமையை அறிவிலியான நான் என்ன பேசப் போகிறேன்; என்னால் பேச முடியுமோ?
முடியாததால் * பேருளான் பெருமை பேசிப் பிறவி நீத்தாருடைய கோஷ்டியிலே அந்வியக்கப் பெற்றிலேன் நான்.

இனி, சிசுபாலாதிகளைப்போலே ஏசி உய்ந்து போகலாமோ வென்னில்,
ஏசிப் பெறும் மோக்ஷம் எனக்கு வேண்டா; மோக்ஷம் போகாமல் நரகம் போனாலும் போகிறேன்,
எம்பெருமானை ஏசாதிருந்தேனாகில் போதும்;
சிசுபாலாதிகளின் செயலும் எனக்கு வேண்டா; அவர்கள் பெற்ற பேறும் எனக்கு வேண்டா;

ஆக இரண்டு வகையாலும் மோக்ஷம் பெறுவதற்கு ப்ராப்தியில்லை யாயிற்று;
ஆயினும், மோக்ஷம் பெற வேணுமென்கிற ஆசையோ அபாரமாகவுள்ளது;
அவனுடைய வடிவழகு என்னைத் துவக்குகின்றது, என் செய்வே னென்கிறார்.

பேசினார் பிறவி நீத்தார் பேருளான் பெருமை பேசி
ஏசினர் உய்ந்து போனார் என்பது இவ் உலகின் வண்ணம்
பேசினேன் ஏச மாட்டேன் பேதையேன் பிறவி நீத்தேற்கு
ஆசையோ பெரிது கொள்க அலைகடல் வண்ணர் பாலே–17-

பதவுரை

பேர் உளான்–திருப்பேர் நகரில் எழுந்தருளி
பெருமை–பெருமையை
பேசினார்–பேசினவர்கள்
உய்ந்து போனார்–உஜ்ஜீவித்தார்கள்.
என்பது–என்று சொல்வது
இ உலகின் வண்ணம்–சாஸ்த்ர மர்யாதையாகும்;
பேதையேன்–அறிவு கேடனான நானோவென்
பேசியேன்–(அவன் பெருமையைப் பேச வல்லவனொ!)
ஏச மாட்டேன்–(சிசுபாலாதிகளைப் போலே) ஏசவும் மாட்டேன்;
பிறவி நீத்தார்–ஸம்ஸாரத்தைக் கடந்து முக்தரானார்கள்;
பேசி ஏசினார்–அப் பெருமையைப் பேசிப் பரிஹஸித்த சிசுபாலாதிகளும்
பிறவி நீத்தற்கு–இந்த ஸம்ஸாரத்தை விட்டு நீங்குதற்கு
அலை கடல் வண்ணர் பால்–அலை யெறிகின்ற கடல் போன்ற நிறத்தனான எம்பெருமான் விஷயத்திலே
ஆசையோ பெரிது–ஆதரமோ அதிகமாயிருக்கின்றது;
கொள்க–இதனை உணர்க.

(பேருளான் பெருமை பேசினார் பிறவி நீத்தார்)
‘அப்பக்குடத்தான் ஸந்நிதி என்று ப்ரஸித்த பெற்ற திருப்புர் நகர் ஒன்றைச் சொன்னது
மற்றெல்லாத் திருப்பதிகட்கும் உப லக்ஷணம்.
திருப்பேர் முதலான திவ்ய தேசங்களில் நித்ய ஸந்நிதி பண்ணி யிருக்குமவனான எம்பெருமானுடைய
பெருமையைப் பேசுமவர்கள் உஜ்ஜீவித்தமைக்கு உதாரணம் காட்ட வேணுமோ?

(ஏசினார் உய்ந்து போனார்)
‘ஏசினாரும்‘ என்று உம்மை தொக்கிற்றாகக் கொள்க.
“கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்,
பற்றி யுரலிடை யாப்பு முண்டான் பாவிகாள் உங்களுக்கேச்சுக் கொலோ“ என்று ஆண்டாள் வயிறெரிந்து
பேசும்படியாக தூஷித்தவர்களில் தலைவனான சிசுபாலன் முதலானவர்கள் ‘ஏசினார்‘ என்பதாற் கொள்ளப்படுவர்;

வைகிறவனுக்கும் பேர் சொல்லி வைய வேண்டி யிருப்பதால் ஏதேனுமொரு படியாலே
நம்முடைய திரு நாமத்தைச் சொன்னானென்று கொண்டு எம்பெருமான் ஏசுகிறவர்களுக்கும் நற் கதி நல்குவதுண்டு.
சிசுபாலனுக்கு மோக்ஷங்கிடைத்தென்பதைப் பராசர மஹர்ஷி பகர்ந்து வைத்தார், என்பது ஸ்ரீவிஷ்ணு புராணம்.
‘கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும், சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன்,
திருவடி தாட்பாலடைந்த“ என்றார் நம்மாழ்வாரும்.

என்பது இவ்வுலகின் வண்ணம் =
லோகமென்கிற சொல்லால் சாஸ்த்ரத்தைவ் சொல்லுகிற வழக்கமுண்டு.
“எல்லீரும் வீடுபெற்றால் உலகில்லை யென்றே“ என்ற திருவாய்மொழி வியாக்கியானங்களிலும்,
ஆளவந்தார், ஸ்தோத்ர வியாக்யானங்களிலுங் காணலாம்.
ஆகவே இங்கு உலகின் வண்ண மென்று சாஸ்த்ர மர்யாதையைச் சொன்னபடி.
(சாஸ்த்ரமறிந்த) உலகத்தவர்கள் சொல்லுவார்கள் என்று பொருள் கொண்டாலுங் கொள்ளலாம்.

பேசினேன் –
எம்பெருமானுடைய பெருமையை நான் பேசினேனென்பதாகப் பொருள்படுவதன்று;
‘ஆ! நாம் வெகு நன்றாகப் படித்து விட்டோம் என்றால், படிக்கவில்லை யென்று பொருளாவது போல
இங்கும் எதிர் மறையாகக் கொள்ளத்தக்கது.
எம்பெருமான் பெருமையைப் பேச வல்ல அதிகாரி நானோ என்று இழித்துச் சொல்லுகையில் திருவுள்ளம்.

இங்கே வியாக்யான ஸ்ரீஸூக்தி காண்மின்;-
‘உண்ணப் புக்கு மயிர்ப் பட்டு அழகிதாக உண்டெனென்னுமா போலே“ என்பதாம்.
ஏச மாட்டேன் – ஏசி்ப் பெறக்கூடிய மோக்ஷம் வேண்டா என்றபடி.

மோக்ஷம் பெறுவதற்கு இரண்டு வழிகளே சாஸ்த்ரங்களிற் காண்கின்றன;
எம்பெருமானது பெருமைகளைப் பேசியாவது மோக்ஷம் பெற வேணும்,
சிசுபாலதிகளைப் போலே ஏசியாவது மோக்ஷம் பெற வேணும்;
எனக்கோ பேசத் தெரியாது; ஏசவோ இஷ்டமில்லை; அந்தோ! இழந்தேபோமித்தனையோ.
மோக்ஷம் பெற வேணுமென்கிற ஆசையோ அளவு கடந்திருக்கின்றது! நான் செய்வதேன்? என்றதாயிற்று.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -16–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

கீழ்ப்பாட்டிலே திருமஞ்சனம் பண்ணினார்;
இப்பாட்டிலே திருமாலை சூட்டுகிறார்.
முன்னடிகளிலே எம்பெருமானுடைய நான்கு அவதாரங்களைக் குறிக்கிறார்;
“மாயமான் மாயச் செற்று“ என்றதனால் ஸ்ரீராமாவதாரம்;
“மருதிறநடந்து“ என்றதனால் ஸ்ரீ க்ருஷ்ணாவதாரம்.
“வையம்தாய்“ என்றதனால் ஸ்ரீ திரிவிக்ரமாவதாரம்.
“அம்மா பரவைபொங்கத் தடவரை திரித்து வானோர்க்கீயும்“ என்றதனால் ஸ்ரீ கூர்மாவதாரம்.

மாயமான் மாயச் செற்று மருது இற நடந்து வையம்
தாய மா பரவை பொங்கத் தடவரை திரித்து வானோர்க்கு
ஈயுமால் எம்பிரானார்க்கு என்னுடைச் சொற்கள் என்னும்
தூய மா மாலை கொண்டு சூட்டுவன் தொண்டனேனே -16-

பதவுரை

மாயம்–மாயச் செய்கையை யுடைய
மான்–மாரீசனாகிற மான்
மாய–முடியும்படி
செற்று–கொன்றவனாயும்
மருது–(இரட்டை) மருத மரங்கள்
இற–முறிந்து விழும்படி
நடந்து–நடை கற்றவனாயும்
வையம் தாய்–(த்ரிவிக்ரமனாகி) உலகங்களை யளந்து கொண்டவனாயும்
அப்படி–அப்படிப்பட்ட
மா–பெரிதான
பரவை–கடலானது
பொங்க–பொங்கும் படியாக
தட வரை–பெரிதான மந்தர பர்வதத்தை
திரித்து–சுழலச் செய்து
(அமுதமெடுத்து)
வானோர்க்கு–தேவர்களுக்கு
ஈயும்–கொடுத்தவனாயுமுள்ள
மால்–ஆச்ரித வ்யாமோஹ சாலியான
எம் பிரானாருக்கு–எம்பெருமானுக்கு
சொற்கள் என்னும்–வாய்மொழிகளாகிற
தூய–பரிசுத்தமான
மா மாலை கொண்டு–சிறந்த மாலையைக் கொண்டு
தொண்டனேன்–அடியேன்
சூட்டுவேன்–சூட்டுவேன்

முன்பே விச்வாமித்ரருடைய யாகத்தில் மாரீசனை உயிர் மாய்த்திருக்க வேணும்;
அப்போது விட்டிட்டதனாலன்றோ இப்போது இவ்வநர்த்தம் விளைக்க வந்தானென்று
உயிர் மாயத் தொலைத்தானாயிற்று.

பொய்ம் மாய மருதான அசுரரை -பெரியாழ்வார்

வையம் தாய் = ‘தாய்‘ என்றது தாவி யென்றபடி.
“பாயோரடி வைத்ததன் கீழ்ப் பரவை நிலமெல்லாந் தாய்“ என்ற திருவாய்மொழியுங் காண்க.

“அம்மா“ என்பது அமா எனத் தொகுத்தலாயிற்று.

ஆக இப்படிப்பட்ட எம்பெருமானுக்கு எனது தமிழ்ப் பாசுரங்களாகிய தூய மா மாலையைக் கொண்டு
சூட்டுவேனென்றாயிற்று.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –