ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -8–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

ஸம்ஸாரிகள் தேஹத்தைப் பூண் கட்டிக் கொள்ள விருக்கிறார்களே யன்றி எம்பெருமானை
மருவி வாழ்வாரில்லையே! என வருந்திப் பேசுகிறார்.

வானிடைப் புயலை மாலை வரை யிடைப் பிரசமீன்ற
தேனிடைக் கரும்பின் சாற்றைத் திருவினை மருவி வாழார்
மானிடைப் பிறவி யந்தோ மதிக்கிலர் கொள்க தந்தம்
ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டினாரே-8-

பதவுரை

வானி்டை புயலை–ஆகாசத்திலே வாழ்கிற மேகம் போன்ற வடிவுடையவனும்
மாலை–(அடியார் திறத்தில்) வியாமோஹமுடையவனும்
வரையிடே–மலையிலே
பிரசம் ஈன்ற–தேனீக்களாலே சேர்க்கப்பட்ட
மானிடம் பிறவி–(தாங்கள் மிக அருமையான) மநுஷ்ய ஜன்மமெடுத்திருப்பதை
மதி்க்கிலர்–எண்ணுகிறார்களில்லை;
அந்தோ–ஐயோ! ;
தம் தம்–தங்கள் தங்களுடைய
தேன் இடை–தேனீலே முளைத்த
கரும்பின்–கரும்பினுடைய
சாற்றை–சாறு போலப் பரம போக்யனும்
திருவினை–திருவுக்குந் திருவாகிய செல்வனுமான எம்பெருமானை
மருவி–ஆச்ரயித்து வாழ மாட்டார்கள்–
ஊனிடை குரம்பை வாழ்க்கைக்கு–மாம்ஸமயமான சரீரத்தில் வாழ்வதற்கு
உறுதியே–உறுதியையே
வேண்டினார்–விரும்பி நிற்கின்றார்கள்;
கொள்க–(இதை நீங்கள்) அறிந்து வைப்பது.

வானிடைப்புயலை =
ஆகாசத்தினிடையே நீர் கொண்டெழுந்து வந்து தோற்றுகிற காள மேகம் வடிவழகை யுடையவனை.
வானிடை யென்று விசேஷித்ததற்குக் கருத்து என்னென்னில்;
ஒரு + ஆலம்பனமுமில்லாத ஆகாசத்தை மேகம் பற்றினாப் போலே புகலொன்றில்லா வடியேனை விஷயீகரித்தான் என்றவாறு.

அப்படி விஷயீகரிப்பதற்கு ஹேது ஏதென்ன
‘மாலை‘ என்கிறார்;
வியாமோஹமே வடிவெடுத்தவனாதலால் என்க.

(வரையிடைப் பிரசமீன்ற தேனிடைக் கரும்பின் சாற்றை)
எம்பெருமானுடைய போக்யதை லோக விக்ஷணமென்று காட்டுதற்காக அபூர்வமானதொரு கரும்பை சிக்ஷிக்கிறார்;
தண்ணீர் பாய்ச்சப் பெற்று வளர்கின்ற கரும்பினன சாறு போன்றவனென்றால் சிறிதும் த்ருப்தி பிறவாமையாலே
‘வரையிடைப் பிரசமீன்ற தேனிடைக்கரும்பு‘ என்று புதிதாக வொரு வஸ்துவை வளர்ந்த கரும்பு இருக்குமானால்
அதன் சாறு போன்றவ னெம்பெருமான் என்னலாம் என்பது கருத்து.

(திருவினை)
‘திரு‘ என்னுஞ் சொல்லால் சொல்லப்படுகிறவள் பிராட்டியாகையாலே அவளைச் சொல்லுகிற சொல்லினால்
இங்கு எம்பெருமானைச் சொன்னது திருவுக்குந் திருவாகிய செல்வனென்றபடி.
எல்லார்க்கும் மேன்மையைத் தருமவளான பிராட்டிக்கும் தான் மேன்மை தருமவன் என்றவாறு.

ஆக இப்படிப்பட்ட எம்பெருமானை மருவி வாழ்ந்து போகலாமாயிருக்க,
அந்தோ!
அப்பெருமான்றானே வந்து மேல் விழச் செய்தேயும் விலக்கித் தள்ளுபவரான பாவிகளுண்டாவதே! என்று வெறுக்கிறார்.

(மானிடப் பிறவியந்தோ மதிக்கிலர்)
உலகத்தில் பிரம ஸ்ருஷ்டி பலவகைப்படும். பூச்சிகளும் புழுக்களும் பறவைகளும் மிருகங்களுமாகப் பிறத்தலே
பெரும்பான்மையாக வுள்ளது; மானிடப்பிறவி பெறுதல் மிக அரிது.
ஆனது பற்றியே –துர்லபோ மாநுஷோ தேஹ” என்றது. அதுவென்?
கோடிக்கணக்கான மனிதர்களும் உலகிற் காணப்படா நிற்க, மானிடப்பிறவி அரிதென்று எங்ஙனே
சொல்லலாமென்று பலர் கேட்கக் கூடும்;

ரத்ன வியாபாரி வீதிகளில் குவியல் குவியலாக ரத்னங்கள் காணக் கிடைக்கின்ற மாத்திரத்தினால்
‘அவை அரியவையல்ல, எளியவவை தான்‘ என்று யாரேனும் சொல்லக் கூடுமோ?
உலகத்திலுள்ள மானிடர்கள் எல்லோருடையவும் தொகைக் குறிப்பைக் கண்டு பிடித்து விடலாம்;
ஒரு சிறு கிராமத்திலுள்ள அஃறிணை யுயிர்களின் தொகையைக் கண்டுபிடித்தல் சிறிதும் எளிதன்று என்பது
குறிக் கொள்ளப் படுமேல் ‘மானிடப்பிறவி அரிது‘ என்னுமிடம் தன்னடையே தெளிந்ததாகும்.

இப்படி அருமையான மானிடப் பிறவியைப் பெற்றவர்கள் அதற்குத் தக்கவாறு வர்த்திக்க வேண்டாவோ?
உணவு களையுண்டு வயிறு நிரப்புகை, விஷயபோகங்கள் செய்கை, உறங்குகை முதலிய காரியங்களையே
செய்வதற்கோ மானி்டப் பிறவி படைத்தது?
இக் காரியங்கள் பசுக்களுக்கும் மானிடர்க்கும் பொதுவையாகையாலே இனி மானிட ரென்கிற ஏற்றம் பெற வேண்டில்
எம்பெருமானை மருவி வாழ்தலன்றோ வரியது;
அந்தோ!
உலகர் இவ்விஷயத்தில் கருத்தூன்றாதே தங்கள் தங்கள் தேஹத்தைப் பூண் கட்டிக்கொள்ளவே
தேடுகிறார்களத்தனை யன்றி வாழ்ச்சிக்கு வழி தேடுவாராருமில்லையே யென்று உலக வியற்கைக்கு வயிறு பிடிக்கிறாராயிற்று.

“மானிடப் பிறவியந்தோ மதிக்கிலர்” என்பதற்கு வேறு வகையாகவும் பொருள் கூறுவர்;
* தீண்டா வழும்பும் செந்நீரும் சீய நரம்பும் செறி தசையும் வேண்டா நாற்றம் மிகுமுடலாகிய
மநுஷ்ய சரீரத்தைப் பெற்றுவைத்தும் அந்தோ! திவ்ய சரீரம் பெற்று விட்டதாக மார்பு நெறித்திருக்கின்றார்களே! என்று.

‘குரம்பை‘ என்று குடிசைக்குப் பெயர்;
தேஹமானது ஆத்மா வஸிங்குங் குடிசையாதல் அறிக.
இவ்வுலகத்துப் பாமரர்கள் அநித்யமான தேஹம் வாடாமல் வதங்காமல் தளிர்த்திருந்தால் போதுமென்று
பார்க்கிறார்களே யன்றி
நித்யமான ஆத்ம வஸ்து உஜ்ஜீவிக்கும் வழியைச் சிறிதும் நாடுகின்றார்களில்லையே என்பதாம்.

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading